[]                     வஸந்த கோகிலம் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்        அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப் - mrishansha@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் பதிப்புரை 5  வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7  இலக்கிய சாதனையாளர் 8  தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் 11  தமிழ்த் திரையில்... முதல் நாவல் 13  வஸந்த கோகிலம் 14  அங்கம் 1 காட்சி 1 14  அங்கம் 1, காட்சி 2 29  அங்கம் 1 காட்சி 3 44  அங்கம் 1 காட்சி 4 53  அங்கம் 2 காட்சி 1 65  அங்கம் 2 காட்சி 2 74  அங்கம் 2 காட்சி 3 82  அங்கம் 2 காட்சி 4 86  அங்கம் 3, காட்சி 1 100  அங்கம் 3, காட்சி 2 111  அங்கம் 3 காட்சி 3 121                            []   வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (1880-1942)  எழுதிய நாவல் "வஸந்த கோகிலம்"  vacanta kOkilam (novel) of vatuvUr turaicAmi aiyangkAr In tamil script, unicode/utf-8 format   Acknowledgements:  This work has been prepared using the Google Online OCR tool to generate the machine-readable  text by K. Kalyanasundaram and subsequent proof-reading by Thamizharasu.  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.  © Project Madurai, 1998-2016. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.  வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல்  "வஸந்த கோகிலம்"  Source: வஸந்த கோகிலம் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஜெனரல் பப்ளிஷர்ஸ்  244, (ப. எண்) ராமகிருஷ்ணா மடம் சாலை,  மயிலாப்பூர், சென்னை - 600 004. உரிமைப் பதிப்பு  முதற் பதிப்பு : 2006 © ஆசிரியர் விலை: ரூ. 90.00 Laser Typeset by : Chengamalam Enterprises, Chennai 600 004  Printed at : Sri Jai Ganesh Offset Printers, Chennai 600 004 -----------------    பதிப்புரை   பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார். அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட திகம்பர சாமியார் இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது. 'இவ்வளவு வருடங்கள் ஆகி விட்டதே! போர் அடிக்காதா?' என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன்றாக உள்ளது. வடுவூர் துரைசாமி ஐயங்கார் இப்படிப்பட்ட நாவல்களை எழுதியதால் ஏராளமான நற்சாட்சிப் பத்திரங்களையும், தங்க மெடல்களையும் பெற்று உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இந்த நாவல்களைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டும், போற்ற வேண்டும், நாங்களும் நிறைய புத்தகங்களை விற்க வேண்டும். இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? இந்தப் புத்தகங்களை வாங்கும் அனைவருமே புத்திசாலிகள்தான். இந்த நாவல்களை வெளியிடும் முயற்சியில் எங்களுக்கு மிகவும் உதவியாக எங்களது நீண்ட நாள் நண்பரான, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவரான  திரு. இரா. முத்துக்குமாரசாமிக்கும், நூலின் பழைய பிரதிகளைக் கொடுத்து உதவிய (காஞ்சிபுரம்) அன்பர்களுக்கும், மேலும் இந்த நூல்களை, அந்தக் காலத்திலேயே ஏராளமாக விற்பனை செய்து, பெரும் பணியாற்றி தற்போது எங்களுக்கு உரிமையை வழங்கிய இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 'வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? மீண்டும் வருமா?' என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நூல்களை ’புரூப்’ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வாசகர்கள், பரூப் படிக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாமதப்படுத்தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள். அன்று 007 இன்று ஜேம்ஸ்பாண்டு - ஆனால் அன்றும் இன்றும் என்றும் "திகம்பர சாமியார்”         அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன் ----------------                                                      வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்   வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் 'மனோரஞ்சனி' என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர். கலைமகள் கம்பெனி, விற்பனை நிலையமாகும். நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷு, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமை யோடிருக்க மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை.மு.கோ., எஸ்.எஸ். வாசன் வந்து போவர். மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி, புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஒய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன், வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி’ சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்குதொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவமானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்! இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின. திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார். வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.         - நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச. விமலானந்தம்) ------------------              இலக்கிய சாதனையாளர்   முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தார் என் றும், முன்னிருவரும் தாங்களும் அறியாமலே வாசகர் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்ல வேண்டும். ஜே.ஆர். ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பரபரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. ’வரதராஜனின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு’ என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என் றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார். ரங்கராஜூவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம், விலாஸ்வதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரஸமான விஷயங்களையும்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில்  சந்தேகத்துக்கிடமேயில்லை. ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தவறவில்லை. அதே போல கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகச் செய்திருக்கிறார். இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளி வந்த வடுவூராரின் விலாஸ்வதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும் பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன். வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல்லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ்சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகையில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரிகையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான்  வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன்மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள். இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசபட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான வைதேகியின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்ததாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகரமாக வை.மு.கோ. துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான சமூக நாவல்களுக்கு நகர்ந்தார் என்றும் சொல்லுவார்கள். 1930-ல் என்று எண்ணுகிறேன். பைகிராப்ட்ஸ் ரோடு கோடியில் மரினா பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வேங்கடரங்கம் பிள்ளை தெரு பைகிராப்ட்ஸ் ரோடைச் சந்திக்கிற இடத்தில் இருந்த வீட்டை வாங்கி வடுவூரார் புதுப்பித்து வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு கிரஹப் பிரவேசம் நடத்தியபோது, மாலையில் பாண்ட் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் சென்னையில் இருந்தேன். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனேன். அந்த ஒரு தடவை மட்டுமே அவரை நான் சந்தித்திருக்கிறேன். என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், பேச்சு பூராவும் தன் பக்கத்தில் அவர் நாவல்களைப் பற்றியும், அவருடைய தழுவல் முறைகளைப் பற்றியும் அவர் நடையைப் பற்றிய வரையிலும்தான் என்று நான் நினைவு கூர்கிறேன். தன் நாவல்களில் பெரும் பகுதி தழுவல்கள்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், மேனகாவும் திலோத்தமை என்று ஒரு ஐந்து அங்க நாடகமும் தன் சொந்த எழுத்து என்று சொல்லி எனக்கு திலோத்தமா ஒரு பிரதி அன்பளிப்பாக அளித்தார். அதை வெகுநாள் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத் தவிர அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இந்தச் சரித்திர உண்மையில் இருந்த அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புஸ்தகம் விற்கவில்லை. அச்சுக்கும், பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு, பேசாமல் கிராமத்துக்குப் போய்விட்டார் என்று எண்ணுகிறேன். இந்தப் புஸ்தகமும் என்னிடம் வெகு நாள் இருந்தது.  'காங்கிரஸ் கமலம்’ அல்லது ’ஆணென்று அணைய அகப்பட்ட பெண் புதையல்' என்கிற நாவலை சுதேச மித்திரனில் தொடராக எழுதி வெளியிட்டார். இதுதான் பழைய வடுவூர் பாணியில் அவர் கடைசி முயற்சி என்று எண்ணுகிறேன். அதற்குப் பிறகு அவர் முப்பதுகளில் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை. மாசத்துக்கு ஒரு நாவல் என்று எழுதி, நாவலுக்கு நூறு ரூபாய் என்று கூலி வாங்கிக் கொண்டு ஏழெட்டு ஆண்டுகள்  இருந்து பிறகு இறந்து விட்டார் என்று எண்ணுகிறேன். சேலம் பட்டுக் கரை வேஷடியும், காதில் டால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்றுகூட நினைவுகூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்பட வில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.         - நன்றி - இலக்கியச் சாதனையாளர்கள் - க.நா.சு. ---------------                                                    தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்   ஆரணி குப்புசாமி முதலியாரைத் தொடர்ந்து அவர் பாணியில் தழுவல்களாக எழுதியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தழுவல் நாவல்களாயிருந்த போதிலும் தமிழ்நாட்டு இடப் பெயர், மக்கள் பெயர்களை வைத்தே ஜனரஞ்சகமாக எழுதப்பட்டதால், இவரது நாவல்கள்தான் தமிழ்நாட்டில் ஒரு பரந்த வாசகர் உலகத்தைச் சிருஷ்டித்து வைத்தன. புத்தகம் படிக்கும் பழக்கம் இந்த நாவல்களால் ஏற்பட்டது ஒரு புறமிருக்க, கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்யக் காரணமாய் இருந்ததும் வடுவூரார் நாவல்கள் தான். ஆக, அக்காலச் சூழ்நிலையை ஒரு விமர்சகர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்: 'அச்சுப் பொறி மலிந்து காகித வர்த்தகம் பெருகி வரும் இக்காலத்தில் நாவல்களும் புற்றீசல்போல் தோன்றித் தொடங்கி விட்டன. மக்களின் ஆசாரங்கள் சீர் பெறவும், பாஷை வளர்ச்சியுறவும் நாவல்கள் பெரிதும் உதவி புரியும் என்பது உண்மையே. ஆனால், தடியெடுத்தோரெல்லாம் வேட்டைக்காரர் என்றபடி தமிழ் உலகத்திலே  இறகோட்டிகளெல்லாம் நாவலாசிரியர்களாய் முன்வந்திருப்பதால் தற்கால நாவல்கள் பெரும்பாலானவற்றால் விளையும் தீமைகள் அற்ப சொற்ப மன்று. ‘ர’கர ‘ற’கரங்களைச் சரியாய் வழங்க அறியாதவர்களும் தமிழ் எழுத்தாளராகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி திசையென்றே கூற வேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள், இரண்டோ மூன்றோ நாணமற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவிந்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் - தமிழ் நாவல் பூர்த்தியாகி விடுகிறது. தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல்லாம் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன. நாவல்களின் தன்மை இன்னதென்றறியாத தமிழ் மக்களும் இந்த நாவல் புற்றீசல்களைக் கோழி விழுங்குவதுபோல் விழுங்கித் திருப்தி அடைகின்றனர் (லக்ஷ்மி, செப். 2 முத்து மீனாட்சி நாவலுக்கு மதிப்புரையில்) வடுவூர் துரைசாமி ஐயங்கார் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கதைகளைத் தழுவி எழுதியதோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் சமகால சமுதாயத்தைச் சித்திரிக்கும் சொந்த நாவல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். இவருடைய சொந்த முயற்சிகளில் சிறந்தவை மேனகா, கும்பகோணம் வக்கீல் என்பவையாகும். கையில் எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் ரசனை மிகுந்த கதைகளை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் பின்னர் கல்கி போன்றவர்களின் கதைகளைப் படிக்கத் தயாரான ஆயிக்கரணக்கான வாசகர்களைத் தோற்றுவித்த முன்னோடியாகவே விளங்கினார். இந்தப் பெருமையை ஆரணி குப்புசாமி முதலியாரும், ரங்கராஜூவும் பகிர்ந்து கொண்டனர். துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக் குறிப்பு காணப்படுகிறது: 'சம்பசிவையங்கார், மேனகா என்பவை உண்மைப் பெயர்களை  மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'  என்று அந்தக் குறிப்பு விளக்குகிறது. இன்றைய நாவல்களில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. உண்மை மனிதர்களையும் சம்பவங்களையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற சட்ட அடிப்படையில் முன்கூட்டியே விளக்கம் சொல்லிக் கொள்வது நடப்பியல் சித்திரங்களில் இன்றியமையாத நிபந்தனையாக அமைவதற்கு மாறாக, வடுவூராரின் குறிப்பு, மேனகா கதை உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்பதை உணர்த்துகிறது. மர்மங்களும் துப்பறிதலும் நிறைந்த இந்த நாவலில் வாசகர் மனதை ஈர்க்கும் சம்பவங்கள் பல கையாளப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளின் உச்ச நிலையைத் தொடும் சம்பவங்களுக்கும் குறைவில்லை. பல அல்லல்களுக்குட்படும் மேனகா, ஒரு முஸ்லிம் பெண்ணின் உதவியினால் தன் கணவனை மீண்டும் அடைவது லட்சிய கதை மாந்தர்களின் செயலின் விளைவாக அமைகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் சமகாலச் சூழ் நிலை 1920களில் எழுதப்பட்ட இந்த நாவலில் தத்ரூபமாக விளங்குகிறது.  வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப் பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்பது. பல மர்மங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சைப் பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்படுகிறது. கதையின் ஆரம்பமே பின்வருமாறு அமைந்திருக்கிறது: 'திருக்கண்ணமங்கை' என்னும் சிற்றுர் தஞ்சை ஜில்லாவிலுள்ள மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தமது தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த தென்னஞ்சோலைகளுக்கிடையில், அச்சிற்றுரின் வேளாளரது தெரு அமைந்திருந்தது. அத்தெருவினிடையிலிருந்த ஒரு பெருத்த மச்சு வீட்டின் கூடத்தில் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு ஸ்திரீ தென்னங்கீற்று முடைந்து கொண்டிருந்தாள். அவளது கைகள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனவோ அவ்வளவு சுறுசுறுப்பாகவே அவளது வாயிலிருந்து சொற்களும் வெளிப்பட்டு பக்கத்து அறையில் வாழைப் பூவை அரிவாள்மணையில் வைத்து நறுக்கிக் கொண்டிருந்த ஒர் அழகிய பெண்மணியின் செவிகளில் தாக்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு அழகாக சில காட்சிகளை வருணிக்கும் துரைசாமி ஐயங்கார் எழுத்திலே வாசகரைக் கவரும் உத்தி எங்கும் சிறந்து நிற்கிறது. 'கல்கிக்கு முன் அவ்வளவு தெளிவுடனும், அழகுடனும் வசனம் எழுதியவர்கள் வடுவூராரைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம். தமிழ் வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அறிந்து எழுதியவர்களில் காலத்தால் முதன்மையானவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார்...' என்பது  க.நா. சுப்பிரமணியத்தின் மதிப்பீடு (படித்திருக்கிறீர்களா?-2). வடுவூர் துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, குடும்பச் சூழ்நிலையை வைத்து, ஜனரஞ்சகமான நாவல்களை எழுதியவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்.         நன்றி: தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்          - சிட்டி, சிவபாதசுந்தரம். -------------                            தமிழ்த் திரையில்... முதல் நாவல்   புராணக் கதைகளும், இதிகாசக் கதைகளும், ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரையின் தொடக்க காலத்தில்... முதன்முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா. அந்நாளின் புகழ் பூத்த எழுத்தாளர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல் இது. திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு மேனகா நாவல், நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டு பல தடவை மேடையேறி புகழ் பெற்றது. அப்போது, நடிகர்  எம்.கே. ராதாவின் தந்தையார் எம். கந்தசாமி முதலியார், மேனகா நாடகத்திற்கு வசனம் எழுதினார் (டி.கே. சண்முகம் சகோதரர்கள்தான் இந்நாடகத்தைத் தயாரித்து வழங்கியவர்கள்). 1935-இல் மேனகா நாவலைப் படமாக்கிய பொழுது அதில் டி.கே. பகவதி, டி.கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, டைன். சிவதாணு ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத் தக்க செய்தி. எம்.எஸ். விஜயா, கே.டி. ருக்மணி ஆகியோரும் நடித்த இப்படத்தை இராஜா சாண்டோ இயக்கினார். பாரதியாரின் பாடல் முதன் முதலாக ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேருகிறது.         நன்றி - பதிப்புத் தொழில் உலகம், ஜூலை 2004 ---------------------                                    வஸந்த கோகிலம் அங்கம் 1 காட்சி 1   இடம்: மங்களபுரியில் ஒரு வீதி.  மாதவராயருடைய மாளிகை எதிரில் காணப்படுகின்றது. பொழுது இரவு ஏழரை மணி சமயம். ஸோமேசன் : (மாதவராயருடைய மாளிகையின் வாசலில் நின்று கொண்டு தனக்குள்)  ஸோமேசா! நீ எவ்வளவு கேவல நிலைமைக்கு வந்துவிட்டாய் மாதவராயர் பெருத்த தனவந்தராய் இருந்த காலத்தில் நீ எப்படி இருந்தாய்! ஆகா! என்ன போஜனம் என்ன பரிபக்குவ பதார்த்தங்கள்! என்ன உபசரணை! என்ன தாம்பூலம்! இந்த மாளிகைக்கு வரும் விருந்தினர் எத்தனை பேர் எல்லாம் கனவோ நினைவோவென்று நினைக்கும்படி ஒழிந்து போய்விட்டனவே! நான் கோயிற் காளையைப் போல, மூக்கின் வழியாக நெய்யும், பருக்கையும் வரும் வரையில் உண்டு, மதோன்மத்தனாய் இந்தத் திண்ணையில் உள்ள திண்டில் ஒய்யாரமாய் சாய்ந்தும் படுத்தும் புரண்டிருந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ? அப்பொழுது எனக்கு என்ன குறைவாயிருந்தது? பசியும் மனக் குறையுமே குறைவாய் இருந்தன. இப்பொழுது என் கதி எப்படி இருக்கிறது? ஒரு நெல் எவ்விடத்தில் அகப்படுமோ என்று நாள் முழுதும் அலைந்து திரியும் பறவையைப் போல, எவன் போஜனத்திற்கு அழைப்பான். எப்படி ஒரு வேளை கழியும் என்பதே நினைவாகவும், பசியே நீங்காத் துணைவனாகவும் பெற்று வருந்தி அலைகிறேன். என்ன செய்கிறது எல்லாம் கால வித்தியாசம் என்னுடைய ஆப்தமித்திரராகிய மாதவராயருடைய செல்வம் எல்லாம் எவ்விதம் குறைந்த போதிலும், அவரிடத்தில் எனக்குள்ள அன்பும், ஆசையும் நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன எந்நன்றி கொன்றவர்க்கும் உய்யும் வழி உண்டு. செய்ந் நன்றி கொன்ற அந்தப் பாவத்தைத் தொலைப்பதற்கு வழி ஏது? என் நண்பரிடத்தில் போய் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறேன். அவர் குடும்ப தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் சமயமாய் இருக்கலாம் (உள்ளே நுழைகின்றான்), (மாதவராயரும், கோமளவும் பூஜைத்தட்டு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வருகின்றனர்). தேவாரம்: தேசிகதோடி - ரூபகம்  மாத :  (1) வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழற்  பாடலால வாயிலாய் பரவநின்ற பண்டனே! காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதிட்  கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே! (2) பட்டிசைந்த மேனியாள் பாவையாளோர் பாகமா யொட்டிசைந்த தன்றியும் முச்சியா ளொருத்தியாக்  கொட்டிசைந்த வாடலாய்க் கூடலால வாயிலா  யெட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையோ!  மாத: (பெருமூச்சுவிட்டு) ஆகா! என்ன காலவித்தியாசம்! என்னுடைய உன்னத திசையில் நான் கொடுத்த பலி பிண்டத்தை எத்தனையோ காகங்களும், அன்னங்களும், மற்றப் பறவைகளும் என் மாளிகை வாசலில் வந்து நிறைந்து வாறிக் கொண்டு போய்க் குதுகலமாகத் தின்றன. இப்பொழுது நான் அர்ப்பணம் செய்வது புல்லில் இருக்கும் எறும்புகளுக்கும் போதாமல் அவ்வளவு அற்பமாய்ப் போய்விட்டதே! ஈசுவரா இதுவும் உன் அருளோ (கீழே உட்காருகிறார்) ஸோமே : ஸ்வாமி! நமஸ்காரம்! மாத: மங்களம் உண்டாகட்டும். மித்திர ரத்தினமே! வா; உட்கார். ஸோமே: ஆக்ஞை, (உட்காருகிறான். மாதவராயர் ஏதோ யோசனை செய்கிறார்) என்ன யோசனை செய்கிறீர்கள்? மாத: மித்திரா! விருத்தம் : சங்கராபரணம்  என்னென வுரைப்பே னன்பா! இன்மையின் கொடுமைதன்னை  முன்னுள புகழை நட்பை மொழிகளின் மதிப்பை நீக்கும்  உன்னினு முடலைத் தீய்க்கு மொண்மையு மிளமை போக்கும்  அன்னையும் பகைமை கொள்ளும்; அலகிலாச் சிறுமை நல்கும்.  துக்கத்தை அடுத்தாற்போலத் தொடர்ந்து வரும் சந்தோஷம், இரவிற்குப் பின் சூரியப் பிரகாசம் உண்டாகி அதை ஓட்டுவதைப் போல் இருக்கிறது. ஆனால், செல்வத்தில் இருந்து தரித்திர நிலைமையை அடைபவன், பார்வைக்கு மனிதனைப் போல் இருந்த போதிலும் அவன் நடைப் பிணமே ஒழிய வேறில்லை. இந்நிலைமையைக் காட்டிலும் கொடியது வேறு என்ன இருக்கிறது! ஸோமே : அப்படியானால் தரித்திர நிலைமையில் இருப்பவர்கள் யாவரும் உயிரை விட்டு விட வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? மாத: என் விருப்பத்தின்படிக் காரியம் நடப்பதாய் இருந்தால், இவ்விதம் உயிர் வாழ்தலைக் காட்டிலும், உயிரைத் துறப்பதையே உத்தமமாகக் கொள்வேன். பிராணனை விடுவது சொற்பக் கஷ்டமேயாகும். தரித்திரனாய் இருப்பது ஆயுட்காலம் முழுதும் ஒழியா வேதனையைத் தரக் கூடியதல்லவோ ஸோமே : ஸ்வாமீ! விருத்தம்: தோடி  உயிரினு மரிய நண்பீர்! உருகிநீர் வானங் காணாப்  பயிரினு மதிகம் வாடிப் பரிபவ முறுத லென்னோ?  செயிரினை யடையா நன்மைச் செல்வமே நிதிக்கு மேலாம்;  துயரினை விடுப்பீர் கானத் துடித்தனே னினிய அன்பீர்!  நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் ஏழ்மை நிலைமையை அடைந்ததினாலேயே உங்களுக்குத் தாழ்மையும் இகழ்ச்சியும் உண்டாய் விடுமோ? நண்பர்களுக்கும் இல்லை என்று வந்த யாசகர்களுக்கும் வாறி வாறிக் கொடுத்து, ஐசுவரியத்தை எல்லாம் இழந்ததினால் உங்களுடைய கீர்த்தி அதிகரித்ததே ஒழிய அதனால் உங்களுக்கு யாதொரு மானஹானியும் உண்டாக வில்லை. சந்திரன் தேய்ந்து, தேய்ந்து, அற்பத்திலும் அற்பமாய்த் தோன்றும் சமயமாகி மூன்றாம் பிறையில்தானே அது மிகவும் நேத்திரானந்தமாய்க் காணப்படுகிறது. மாத: நண்பா என்னுடைய சொந்த உபயோகத்திற்கு ஐசுவரியம் இல்லை என்று நான் சிறிதும் விசனிக்கவில்லை. விருத்தம்: மோகனம்  கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்  விருப்புற் றமுதளிக்கு மெய்யன்-உருப்பெற்றால் ஊடடி வளர்க்கானோ? ஓகெடுவா யன்னாய்! கேள்  வாட்ட முனக்கேன் மகிழ்.  என்று யாவராலும் ஸ்தோத்திரம் செய்யப் பெற்ற ஸர்வேசுவரனுடைய மகிமையை நீ அறிய மாட்டாயா? நாம் பத்து மாத காலம் அன்னையின் வயிற்றில் இருந்தோமே; அப்பொழுது நமக்குத் தேவையான ஆகாரத்தையும், பிறவற்றையும் சமயம் பார்த்துக் கொடுத்துக் காப்பாற்றியது யார்? பிறகு நாம் குழவியாய் இருந்தோம்; குழந்தைக்குப் பல் இல்லையே. அதன் வாய் புஷ்பத்திலும் மிருதுவானது அல்லவா. அதற்குத் தகுந்த உணவைச் சேகரம் செய்து, சுலபமாக ஊட்டுவிக்க வேண்டும் என்று கவலை கொண்டு, அன்னையின் தேகத்தில் மிருதுவான ஓரிடத்தில் தேக ஆரோக்கியமான பாலை உண்டாக்கி வைப்பவன் யார்? நம்முடைய வேண்டுகோள் இல்லாமலே நம்மைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்டு, நம்மைக் காப்பாற்றிய ஸர்வேசுவரன் நாம் பெரியவர்களாய் விட்டவுடன் நம்மை மறந்து விடுவான் என்று நினைக்கிறாயா? ஆகையால் நான் என் சொந்த விஷயத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. முன் போலவே அநேகருக்கு உதவி செய்து பல ஆன்மாக்களுக்கும் ஆனந்தத்தை உண்டாக்கக் கூடிய நிலைமையில் நான் இல்லாததே என்னுடைய விஸன காரணம். இதற்கு முன் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்த விருந்தினர், இப்போது இந்த மாளிகையைத் தேடி வராமல் இருப்பதே எனக்குப் பெரிதும் வேதனையை உண்டாக்குகிறது. தேன் வற்றி உலர்ந்து போன மலரை நன்றி கெட்ட வண்டுகள் எப்படித் தேடிப் போவதில்லையோ அப்படியே முடிந்தது என்னுடைய நண்பரின் அன்பும். ஸோமே : இப்பொழுது தானென்ன? அவர்கள் இங்கு வர மாட்டோம் என்கிறார்களா? நீங்கள் போஜனம் அளிப்பதாய் இருந்தால் முதல் பந்திக்குத் தயாராக வந்து விடுவார்கள். அதைப் பற்றி நீங்கள் சந்தேகித்தலே தேவையில்லை. மாடு மேய்ப்பவன் புதிது புதிதான புல், பூண்டுகளின் பேரில் மாடுகளை மேய விட்டுக் கொண்டே போவதைப் போல, இவர்களும் பசுமையாய் இருக்கும் இடத்திலேயே தங்கள் மனத்தைச் செலுத்திச் செல்கிறார்கள். இலாபம் இல்லாத காரியத்தை யார் தாம் செய்வார்கள்? இதில் என்ன குற்றம்? மாத: ஆம்! உண்மை தான்; இலாபத்திலும், சுய நலத்திலுமே கண்ணும் கருத்துமாய் இருப்பவருக்கு உற்றார், பெற்றார், அன்பினர், பகைவர் என்னும் பேதமெப்படி உண்டாகும்! கல்லினும் அல்ல எஃகினுங் கடிய அவர் மனது எவ்விதமான பற்றினாலும் இளகுமோ? ஒரு நாளும் இல்லை. ஸோமே : அவர்கள் விஷயத்தில் நம்முடைய பொருட்களைச் செலவழித்தது போதாதென்று இவ்விதம் நம்முடைய பொழுதையும் அவர்களைப் பற்றி நினைப்பதில் வீணாக்குவானேன். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமோ? தினந் தினம் இதைப் பற்றி ஓயாமல் வருந்தி மனத்தை ஏன் வதைத்துக் கொள்ளுகிறீர்கள்? மாத : ஆஹா என்ன செய்வேன்?  (சிவலோக நாதனைக்கண்டு' என்ற பட்டின் வர்ணமெட்டு)  செஞ்சுருட்டி – ரூபகம்  ப. இதுவோ நின் சோதனை?  இன்னம் ஏன் இக்கொடுமை? ஈசா! அ. விதிவயம் இதுவாமோ? - பவ விதைகள் அளித்த பயனாகுமோ? (இது) ச. பணமே தெய்வம் பாழுமுலகில்; பாதகங்களைச் செய்யும்; பிணமே தனமில்லாமல், ஏனோ பிறந்தே னில்லாதவன். (இது) 2. இல்லான் முகமில்லான் முதல் எவரும் விரும்பிப்பாரார்; சொல்லார் மொழி; விலகி நடப்பார்,  பொல்லாத விஷமெனவே வெறுப்பர். (இது)   விசனம் நெருப்பைப் போல என் மனத்தை வேக வைத்து என்னை வதைக்கிறதே ஒழிய, என் தேகத்தை எரித்துச் சாம்பலாக்காமல் இருக்கிறதே! சே! தரித்திரக் கொடுமையினும் கொடிது வேறொன்றுமே இல்லை. நம்மிடத்தில் பரம ப்ரீதி கொண்டவர்களைப் போல் நடித்தவர்கள் எல்லோரும் இப்பொழுது நம்மை அவமதித்து ஏளனம் செய்வதைக் காண, மனிதனுக்கு உண்மையில் ஒரு யோக்கியதையும் இல்லை என்பதும், பெருமையும் சிறுமையும் செல்வத்தினாலேயே ஏற்படுகிறது என்பதும் நன்றாய் விளங்குகிறது. மனிதர்களுடைய குணம் எப்படி இருக்கிறது? ஒருவன் தனவந்தனாய் இருந்தால் அவனைப் பார்த்துப் பிறர் பொறாமை அடைந்து வயிற்றெரிச்சல் கொள்வது; அவன் ஏழையாய் விட்டால் அவனைப் பார்த்து ஏளனம் செய்வது. அதிருக்கட்டும், தயவு செய்து இந்தப் பலி பிண்டத்தை எடுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் வைத்து விட்டு வா. ஸோமே : ஸ்வாமி! நான் போக மாட்டேன். மாத: (புன்சிரிப்புடன்) ஒரு நாளும் இப்படிச் சொல்ல மாட்டாயே! இன்றைய தினம் ஏன் இப்படிச் சொல்லுகிறாய்? ஸோமே :   இல்லையோ புவியில் தெய்வ மிதுவரை நீவிர் பாழுங்  கல்லையோ தொழுதீர்? செய்த காரியம் விழலுக் கீத்த  தில்லையோ? கடவுள் செய்தி யிங்ஙணமாக, மாந்தர்  புல்லியோ ராதல் சாலப் புதுமையோ! விடுப்பீர் யாவும்  இதனால் என்ன பலன். நீங்கள் எவ்வளவோ காலமாகத் தெய்வங்களை ஆராதனை செய்து கொண்டிருக்கிறீர்களே, அவைகள் உங்களுக்கு என்ன நன்மை செய்தன? மனிதருக்கு நன்றி இல்லையென்று சொன்னோமே. தெய்வங்களுக்கே நன்றி இல்லாத பொழுது, மனிதர் விஷயம் ஒரு பொருட்டா? தெய்வங்களை ஆராதிப்பது விழலுக்கு இறைத்த நீரே ஒழிய வேறு இல்லை. மாத : அப்பா ஸோமேசா தெய்வங்களைத் தூஷிக்காதே! நமக்குத் துன்பம் உண்டாவதற்கு நாமே காரணமின்றி அது தெய்வத்தின் குற்றமன்று. நாம் நன்மை செய்தால் நன்மையைப் பெறுகிறோம். தீமை செய்தால் தீமையையே கைம்மாறாய்ப் பெறுகிறோம். தெய்வத்தை ஆராதிப்பது வீணாகுமென்று நினையாதே. மாரடித்த கூலி மடிமேலே என்பார்களே அவ்விதம் இதில் நாம் உடனே பலனை விரும்பலாமோ? அரசன் அன்று தரும்! தெய்வம் நின்று தரும். நமக்கு எது நன்மையோ அது கடவுளுக்கு நன்றாய்த் தெரியும். அவர் அதை அவசியம் செய்வார். நேரமாகிறது. இருள் அதிகமாகச் சூழ்கிறது. சீக்கிரம் போய் விட்டு வந்து விடு. ஸோமே : இந்த இருளில் வெளியில் போக எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஊரில் துஷ்டர்களும், துன்மார்க்கர்களும், திருடர்களும் அதிகரித்து விட்டனர். இப்பொழுது அவர்கள் அலைந்து திரியும் சமயம். நான் இந்த இருளில் வெளியில் போவேனாகில் தேரைக்காகக் காத்துக் கொண்டிருந்த பாம்பின் வாயில் வந்து விழுந்த சுண்டெலியைப் போல நான் துன்பப்பட வேண்டி வரும். மாத : சரி. அப்படியானால் கொஞ்ச நேரம் உட்கார் ஜெபம் செய்து விட்டு நானும் வருகிறேன். இரண்டு பேருமாய்ப் போகலாம்.  ஸோமே : அப்படியே! (இருவரும் ஒரு பக்கமாய் போகிறார்கள்.) (அந்தத் தெருவில் வஸந்தஸேனை முன்னால் ஓடி வர, அவளைத் துரத்தியவண்ணம் வீரஸேனனும், அவன் தோழனும் சேவகனும் வருகின்றனர்.) வீர: அடி வஸந்தஸேனை! ஓடாதே! நில் நில். தோழ: வஸந்தஸேனை ஏன் இந்தப் பாடுபட்டு ஓடுகிறாய்! இப்படி ஓட உனக்கு நாணம் இல்லையா? பரத நாட்டியத்தில் அழகாய் உபயோகப்படுத்த வேண்டிய உன்னுடைய பாதங்களை ஏன் இப்படி வதைத்துக் கொள்கிறாய்? வேடனால் துரத்தப்படும் மான் நாற்புறங்களையும் பார்த்துப் பயந்து மருண்டு ஓடுவதைப் போலச் செல்கின்றாயே! நில் நில்! பயப்படாதே. வீர : ஆஹா ஒவ்வொரு அடியிலும் தடுமாறி விழுகிறாயே! ஐயோ பாவம்! ஏன் உனக்கு இவ்வளவு சிரமம்? நான் பேயா? பூதமா? என்னைக் கண்டு ஏன் இவ்விதம் அஞ்சியோட வேண்டும். நான் உன்னைத் தின்று விடுவேனா? உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் அல்லவோ இவ்விதம் வருகிறேன். உன் நினைவினால் என் மனம் தணலாய் எரிய, அனலில் இடப் பட்ட புலாலைப் போல என்தேகம் முழுதும் கருகுகிறதே! அடி வஸந்தஸேனா ஓடினது போதும். நில்! நில்! சேவன் : அடியாத்தே! என்னமா ஓடியாறாங்கறேன் பய மவ! ஏகுட்டி! எம்பிட்டு துரந்தான் ஓடினே! ஒன்னை உட்டுடுவாங்கன்னு நெனைக்காதே! ஏன் சொம்மா ஓட்றே நில்லு! நில்லு! வீணாக் கெட்டுப் போவாதே! வீர: அடி சுந்தரி இப்படி ஓடினால் புஷ்பத்திலும் மெல்லிய உன்னுடைய பாதங்கள் எப்படி வருந்தா! உன்னையே நினைந்து உருகும் காதலை வெறுத்து விலக்கி ஏன் இப்படி ஓடுகிறாய்? பகலிலோ எனக்கு நித்திரையே இல்லாமற் செய்து விட்டாய். இரவிலோ என் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்கிறாய். என்றைக்கும் உன் தந்திரம் பலிக்கும் என்று நினைக்காதே! என்னிடத்தில் நீ ஒருகாலும் தப்ப மாட்டாய். இராவணன் கையில் திரெளபதி அகப்பட்டுக் கொண்டது போல நீ எப்படியும் என்னிடத்தில் அகப்பட்டுக் கொள்வாய். ஏன் வீண் முயற்சி செய்கிறாய்? தோழ : கருடனைக் கண்ட நாகம் ஓடி ஒளிவதைப் போல இப்படி ஏன் பெருத்த அச்சத்தை அடைய வேண்டும்? கரும்புத் தின்னக் கூலி கேட்பாரும் உண்டோ? இராஜாவின் மைத்துனர் இச்சிக்கும் பாக்கியம் யாருக்காயினும் எளிதில் கிடைக்கக் கூடியதா? உனக்கு என்ன பைத்தியமா? நீ படித்தவள் அல்லவா? நன்றாய் யோசித்துப் பார் ஓடினது போதும். வீர : கீசகனைக் கண்டு சாவித்ரி ஒடுவதைப் போல நீ எவ்வளவுதான் ஓடிய போதிலும் சுபத்திரா தேவியின் பேரில் அநுமான் பாய்ந்து பிடித்துக் கொண்டதைப் போல நான் உன்னை இதோ பிடித்துக் கொள்கிறேன் பார். வஸந்தஸேனை : (தனக்குள்) ஐயோ! இப்படி எவ்வளவு துரந்தான் ஓடுவேன். இந்தச் சண்டாளர்கள் விடாமல் துரத்திக் கொண்டு வருகிறார்களே! என்னுடன் ஓடி வந்த பணிப் பெண்களைக் கூடக் காணேனே! அடி மல்லிகா! அடி வத்சலா! எங்கே போய் விட்டீர்கள்? நான் இதோ இருக்கின்றேன்; ஒடி வாருங்கள்; ஒடி வாருங்கள். வீர : அடே நண்பா அவள் யாரோ ஆட்களை உதவிக்கு அழைக்கிறாள்! நாம் என்னடா செய்கிறது? தோழ : பயப்பட வேண்டாம். நானிருக்கிறேன். வஸ : அடி மல்லிகா! எங்கே மாயமாய் மறைந்து விட்டீர்கள்? தோழ : நல்ல புத்திசாலி! தன் பணிப்பெண்களை யல்லவா கூப்பிடுகிறாள். வீர : அப்படியா! நல்லவேளை தான்; நான் நூறு மனிதரை அடிக்கக் கூடிய வீரன் அல்லவா? அதனால் தானே நான் பிறந்த பொழுதே எனக்கு வீரஸேனன் என்று பெயர் கொடுத்தார்கள். இந்த ஸ்திரீகள் என்னை என்ன செய்யக் கூடும்? வரட்டும் ஒரு கை பார்க்கிறேன். வஸ : (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயோ! என் பணிப் பெண்களில் ஒருத்தியாயினும் வரக் காணேனே என் செய்வேன்! இன்னமும் ஓடித்தான் தப்ப வேண்டும். (ஓடுகிறாள்.) வீர : நீ எங்கு ஓடினாலும் உன்னை நான் விடப் போகிறதில்லை.  வஸ : பெரிய மனிதர்களே! நான் சக்தி இல்லாத அபலை ஸ்திரீ என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்கள்? வீர : உன்னை நான் கொல்ல நினைக்கவில்லை. சுகமாய் என்னுடன் வாழலாம். ஏன் பயந்து ஓடுகிறாய்? தோழ : ஓடுவது உன்னுடைய குற்றமல்லவா? உன்னை நாங்கள் ஓடச் சொன்னோமா? வஸ : (தனக்குள்) என்ன நற்குணமப்பா! இவர்களுடைய உபசார வார்த்தைகளே இவ்வளவு பயங்கரமாய் இருக்கின்றனவே! இவர்களுக்குக் கோபம் வந்தால் அது எப்படி இருக்குமோ? (அவர்களை நோக்கி) ஐயா! உங்களை வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு என்னுடைய ஆபரணங்கள் தேவையானால் இதோ யாவற்றையும் கொடுத்து விடுகிறேன். வாங்கிக் கொண்டு போங்கள். தோழ : சே! உன்னுடைய ஆபரணங்கள் எங்களுக்கு எதற்காக வேண்டும்? பூங்கொடியில் அழகாய் மலர்ந்திருக்கும் புஷ்பங்களை அழகின் மகிமையை அறியாத மூடர்கள் அல்லவோ பறிப்பார்கள். வஸ : அப்படியானால் உங்களுடைய தேவைதான் என்ன? வீர : பேஷ் வழிக்கு வந்தாயா சரி. இதோ பார், நான் யாரைப் போல் இருக்கிறேன்? அந்த மன்மதனும் அழகில் எனக்கு இணையாக மாட்டான். அவ்வளவு மேன்மை பொருந்திய நான் உன்னுடைய பிரியத்தைத்தான் வேண்டுகிறேன். வஸ : அழகு! அழகு போதும், நில்லுங்கள். இது வீண் பேச்சு ஒரு நாளும் என்னிடத்தில் செல்லாது. தோழ : அடி வஸந்தஸேனை நீ உன்னுடைய ஜாதிக் கிரமத்திற்கு விரோதமாக நடக்கிறாயே! வேசியின் வீடு பால்யர்களுக்குப் புகலிடம் அல்லவோ நீங்கள் பாட்டைக்கு அருகில் படரும் கொடிக்குச் சமானமானவர்கள் உங்களுடைய தேகமும், பிரியமும் விலைக்கு அகப்படக் கூடிய பொருள்கள் அல்லவோ? நீங்கள் சந்நியாசியையும், பைத்தியக்காரனையும், பிராம்மணனையும், பறையனையும், அழகுடையவனையும், குரூபியையும், சிறுவனையும், கிழவனையும் ஒரே விதமான ஆசையோடு விரும்பக் கூடியவர்கள் ஆயிற்றே! அப்படி இருக்க நீ அன்னிய புருஷர் முகம் பாராத குல ஸ்தீரியைப் போலவும், படி தாண்டாப் பத்தினியைப் போலவும் ஆண் வாடை அடிக்கக் கூடாதென்று ஒடுகிறாயே! வஸ: ஐயா! நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஸ்திரீயினுடைய பிரியத்தை யோக்கியதையினால் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய மிருகத்தின் முரட்டுத் தன்மையை உபயோகித்துப் பெற முடியுமா? வீர : அடே உண்மை இன்னதென்று நீ அறிந்து கொள்ளவில்லை. இந்த வேசி நித்திய தரித்திரனாகிய மாதவராயன் பேரில் மோகம் கொண்டிருக்கிறாள் என்று நான் கேள்விப் பட்டேன். அவனுடைய வீடு இதோ சமீபத்தில் இருக்கிறது. அதனாலே தான் இவ்வளவு தைரியமாய்ப் பேசுகிறாள். தப்பித்துக் கொண்டு இந்த வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போகிறாள்; ஜாக்கிரதை. தோழ : (தனக்குள்) மூடர்களில் இவனுக்குத்தான் முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். அவளுக்குத் தப்பிப் போகும் வழியை இவனே சொல்லிக் கொடுக்கிறான். வஸ : (தனக்குள்) ஆஹா! அப்படியா என் துரை மாதவராயருடைய மாளிகை இதுவா? அவரை நான் சந்திக்கும்படி இவர்கள் செய்ததும் நன்மை தான். இந்த மாளிகைக்குள் போகிறேன். வீர : அடே நண்பா எங்கே அவளைக் காணோமே? இந்த இருளில் எப்படி அவளை அடையாளங் கண்டுபிடிக்கப் போகிறோம்? தோழ : அவளுடைய ஆபரணங்கள் கலீர் கலீரென்று ஒலிப்பதினாலும், அவளுடைய உடம்பில் அணிந்து கொண்டிருக்கும் பரிமள கந்தம், புஷ்பம் முதலியவற்றின் வாசனையினாலும் அறிந்து கொள்ளலாம். வீர : அவளுடைய புஷ்பமாலையின் வாசனையை மாத்திரம் இந்த இருளில் என் நாசி முகருகிறது! ஆபரணங்களின் ஒளி கண்ணிற்குப் புலப்படவில்லையே! எங்கு போய் விட்டாளோ தெரியவில்லையே. அவளை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்? வஸ : ஆஹா அப்படியா என்னுடைய மாலையைக் கழற்றி எறிந்து விடுகிறேன். சப்திக்கும் ஆபரணங்களையும் வாங்கிக் கையில் வைத்துக் கொள்கிறேன். அதுதான் மாளிகையின் கதவு. (கதவைக் கையால் தடவிப் பார்க்கிறாள்.) கதவு சாத்தப் பட்டிருக்கிறதே! என்ன செய்யப் போகிறேன் வேறு ஏதாவது வாசலில் இருக்கிறதோ பார்க்கிறேன். மாத : (மாளிகைக்குள்) ஸோமேசா ஜெபம் செய்தாய் விட் டது. நானும் அவசியம் வரத்தான் வேண்டுமோ? நீ போகக் கூடாதா? ஸோமே : நான் உண்மையை முன்னமேயே தெரிவித்தேனே! மாத : ஆஹா ஈசுவரா என்னுடைய நிலைமை இப்படியா ஆய்விட்டது மற்ற நண்பர்தாம் என்னை அலட்சியமாய் செய்து விட்டதாக நின்னத்தேன். நீயும் அப்படியே செய்கிறாய். இது உன்னுடைய குற்றமல்ல இது தரித்திர நிலைமையின் சுபாவம். தரித்திரனுடைய வார்த்தைக்கு மதிப்பேது? பூலோகத்தில் அவனை யார் மதிக்கப் போகிறார்கள்? ”இல்லானை இல்லாளும் வேண்டாள்" என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா இந்தப் பயனற்ற உடலைச் சுமந்து பூமிக்குப் பாரமாய் இருத்தலைவிட, உயிரை விட்டு விடுவதே உத்தமம். ஸோமே : ஸ்வாமி! நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் இதோ போகிறேன். என்னுடன்கூட உங்களுடைய பணிப் பெண் கோமளாவை ஆயினும் அனுப்புங்கள். மாத : கோமளா இவருடன் கூடப் போய்விட்டு வா. கோம : உத்தரவுப்படி செய்கிறேன். (ஸோமேசன் கையில் ஒரு தடியை எடுத்துக் கொள்கிறான். மாளிகையின் கதவைத் திறந்து வைத்து விட்டு இருவரும் வெளியில் போகிறார்கள்.) வஸ : (தனக்குள்) இதுவும் நல்ல அதிர்ஷ்டந்தான். இவர்கள் சமயத்தில் கதவைத் திறந்து வைத்தார்கள். மெதுவாய் நான் உள்ளே போகிறேன். ( வஸந்தஸேனை மாளிகைக்குள்ளே போய் விடுகிறாள்; ஸோமேசனும், கோமளாவும் இருளில் நடந்து வெளியில் போகிறார்கள்.) தோழ : போங்கள் போங்கள் நிற்க வேண்டாம். வீர : (தேடுகிறான்) எந்த இடத்திலும் காணோமே ஆஹா இதோ அகப்பட்டாள் (இருளில் தோழனைக் கட்டிக் கொள்கிறான்.) தோழ : அடடா! எவ்வளவு சாமர்த்தியமாய் என்னைப் பிடித்துக் கொண்டீர்கள். விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள். என்னைப் பிடித்த மாதிரி வஸந்தஸேனையைக் கட்டிப் பிடித்திருந்தால், அவளுடைய உயிர் போயிருக்கும் போதும் முதலில் என்னை விடுங்கள். வீர : அப்படியானால் போ அப்பால். இது யார்? அகப்பட்டாள்! அகப்பட்டாள்! இதோ அகப்பட்டாள்! (சேவகனைப் பிடித்துக் கொள்கிறான்.) சேவ : ஐயோ! எசமாங்களே! என்னைல்ல கட்டிக்கிட்டீங்க இது என்னாங்கிறேன் வெக்கக் கேடு! உடுங்க, உடுங்க, நசுக்காதிங்க, ஐயோ செத்தேன்!  வீர : அடடா! நீயா போ; (விட்டு விடுகிறான்) இப்படித் தானே போனாள் எங்கே போயிருப்பாள்? ஆஹா! இப்பொழுது தான் அந்தச் சிறுக்கியைப் பிடித்தேன். (முன்னாக வந்த கோமளாவின் தலை மயிரைப் பிடித்துக் கொள்கிறான்.) ஓடவா பார்க்கிறாய்! நான் சூரப்புலி என்பது உனக்குத் தெரியாதோ! உன் சாமர்த்தியம் என்னிடத்திலா செல்லும்! அடே நண்பா! இதோ அகப்பட்டாள் வேசி! கிருஷ்ணன் சீதையின் தலைமயிரைப் பிடித்துச் சபைக்கு இழுத்து வந்ததைப் போல, நான் இவளைப் பிடித்துக் கொண்டேன். தோழ : ஸ்திரீயே! பால்யர்களான நாங்கள் ஓடி வரும்போது எங்களை ஏமாற்ற உன்னால் முடியுமா? கோம : ஆகா இதென்ன அநியாயம் என்னை ஏன் பிடித்துக் கொண்டீர்கள்? விடுங்கள் விடுங்கள் ஒய்! ஸோமேசரே? வாரும்! வாரும்! தோழ : இதென்ன ஆச்சரியம்! வேறு குரலாய் இருக்கிறதே! வீர : பூனை வெண்ணெயைத் திருடப் போகும் சமயத்தில் பல விதமாகத் தன் குரலை மாற்றிக் கொள்வதைப் போல ஸ்திரீகளுக்கும் தம் குரலை மாற்றிக் கொள்ளும் வல்லமை உண்டு அல்லவா! (ஸோமேசன் கையில் தீபத்துடன் வருகிறான்.) ஸோமே: (தனக்குள்) காற்றில் விளக்கு அணைந்து விடும் போல் இருக்கிறதே! இருளாய் இருக்கிறதென்று தீபத்தை எடுத்து வரப் போனேன். அதற்குள் கோமளா முன்னால் போய் விட்டாளே! (யாவரையும் பார்த்து விட்டு) யார் இவர்கள்? இங்கென்ன செய்கிறார்கள்? (உரக்க) கோமளா! கோமளா! வீர : அடே யாரோ மனிதன் வந்து விட்டான்! ஸோமே : ஆஹா! கோமளா! இதென்ன இது? கோம : ஸோமேசரே! வாரும் வாரும்! இவர்கள் என்னை உபத்திரவிக்கிறார்கள். ஸோமே : யாரையா நீங்கள்? இதென்ன அநியாயம்? மாதவராயர் ஏழ்மை நிலைமைக்கு வந்து விட்டதினாலேயே அவரை இவ்விதம் அவமானப்படுத்தலாமா? இதென்ன அக்கிரமம்? கோம : ஸோமேசரே! இதோ பாரும் என்னை இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். ஸோமே : இது உனக்கு மட்டுமல்ல; எங்களையும் அவமானப்படுத்திய மாதிரி அல்லவா! இவர்களுக்கு எவ்வளவு துணிவு! நம்முடைய வீட்டு வாசலிலே இப்படி அக்கிரமமான காரியம் செய்யும் இவரைத் தக்கபடி தண்டிக்கா விட்டால் நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது. ஒரு நாய்கூடத் தன் கொட்டத்து அருகில் வருபவர் பேரில் குலைத்துக் கொண்டு போய் விழுகிறதே. பிராம்மணனாகிய நான் இதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பேனா! - (தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு) சே! நான் இதை ஒரு க்ஷணமும் சகிக்க மாட்டேன்! என்னுடைய அதிர்ஷ்டத்தைப் போலக் கோணிக் குறுகி இருக்கும் இந்தத் தடியால் இத்துஷ்டர்களின் மண்டையைச் சுக்கல் சுக்கலாய் உடைத்து எறிகிறேன் பார். ஸோமே : (தோழனைப் பார்த்துத் தனக்குள்) குற்றவாளி இவனல்ல. துன்பம் செய்பவன் அதோ நிற்கிறான். அடே துஷ்டா அந்தப் பெண்ணை விடுகிறாயா அல்லது ஒரே அடியில் உன் மண்டையை உடைக்கட்டுமா? அடாடா? இவன் இராஜனுடைய மைத்துனன் அல்லவோ! ஐயா! பெரிய மனுஷ்யாளுடைய யோக்யதை இது தானோ? மாதவராயர் எவ்வளவு தான் ஏழையாய்ப் போன போதிலும், அவரைச் சேர்ந்தவர்களை இப்படி அவருடைய மாளிகை வாசலிலேயே வருத்தி அவமதிக்க எப்படித் துணிந்தீர்? துரதிர்ஷ்டமும், ஏழ்மைத் தனமும் உண்டாவது அவமானமல்ல! இவ்விதமான கெட்ட காரியம் செய்வதே கேவலம் அவமானத்தை உண்டாக்கக்கூடிய விஷயம். ஒருவன் தனவந்தனாய் இருந்தாலென்ன? அவனிடத்தில் கண்ணியம் இல்லாவிட்டால், அவன் ஒரு நாளும் பெரிய மனுஷ்யனாக மாட்டான். அவனை எவ்விதம் இகழ்ந்தாலும் குற்றமாகாது. தோழ: ஓய் பிராமணரே! மன்னித்துக் கொள்ளும். அடையாளம் தெரியாமையால் செய்து விட்டோம். உங்களை அவமானப் படுத்த வேண்டுமென்று நாங்கள் மனதில் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஸ்திரீயைத் தேடி வந்தோம்.  ஸோமே : இவளையா? தோழ : இல்லை இல்லை. எங்களை ஏமாற்ற நினைத்து, இங்கு ஓடி வந்த வேறொரு மங்கையை நாடி வந்தோம். இருட்டில் ஆள் மாறாட்டமாய் இவளைப் பிடித்தோம். க்ஷமிக்க வேண்டும். இது மனதாரச் செய்த குற்றமல்ல. நீர் எங்களை எவ்விதம் வேண்டுமானாலும் தண்டிக்கலாம். (தன் கத்தியை நீட்டி அவரை மண்டியிட்டு வணங்குகிறான்.) ஸோமே : நீ மிகுந்த புத்திமான். எழுந்திரு. நான் முதலில் உன்னுடைய நற்குணத்தை அறிந்து கொள்ளாமல் துடுக்காய்ப் பேசி விட்டேன். போதும் எழுந்திரு. தோழ : ஸ்வாமி! நான் கேட்பதற்கு சம்மதிப்பதானால் எழுந்திருக்கிறேன். ஸோமே : என்ன வேண்டும்? தெரிவி. தோழ : வேறொன்றுமில்லை! நடந்தவைகளை மாதவராயரிடம் தெரிவிக்காமல் இருத்தல் வேண்டும். ஸோமே சரி. அப்படியே ஆகட்டும். நான் அவரிடம் ஒன்றும் சொல்வதில்லை. தோழ : பிராம்மணரே இந்த உபகாரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சகல விதமான உத்தம குணங்களையும் நீர் ஆயுதமாகத் தரித்திருக்க, உம்மை வெல்லக் கூடிய ஆயுதம் வேறு என்ன இருக்கிறது! வீர : (கோமளாவை விட்டு விடுகிறான்) அடே நண்பா! என்ன இது! கைகளைக் கூப்பிக் கொண்டு கேவலம் தரித்திரனான இவன் காலில் விழுகிறாயே! தோழ : எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது. வீர : எதற்காக? தோழ : மாதவராயருடைய நற்குணங்களுக்காக. வீர : உண்மைதான்! வருபவருக்கு ஒரு வயிறு சோறு போடும் வல்லமை இல்லாதிருப்பது உத்தம குணந்தான்! தோழ : அப்படிச் சொல்வது தவறு. அவர் தன்னுடைய உதார குணத்தினாலேயே ஏழையானார். வழிப் போக்கர்களின் தாகத்தைத் தீர்ப்பதினாலேயே கோடை காலத்தில் ஏரி வற்றிப் போவதைப் போலானார். அவர் தனவந்தராய் இருந்த காலத்தில் அப்படி இருந்தமையாற்றான், அவரை இப்பொழுதும் மரியாதைப் படுத்தாதவரே இல்லை. இந்த நகரத்தில் அவரைப் போற்றாதவரும் உண்டோ! வீர : அவனைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்தத் துரும்பு யார்! இவனென்ன பெருத்த போர் வீரனா? இவன் சீதையின் புத்திரன் துரியோதனனா! அல்லது இராவணனுடைய மகன் தரும புத்திரனோ? தோழ : ஆகா! நல்ல புத்திமான்! போதும் நாம் போவோம் வாரும். மாதவராயருடைய யோக்கியதையை இந்த ஊரில் அறியாதவர் இல்லை. அவர் வயதில் மிகவும் பாலியராய் இருந்த போதிலும் அவருடைய முதிர்ச்சி யாருக்கு வரும்! நல்லோரைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுபவர். புத்திமான்களுக்குக் கண்ணாடி போன்றவர். தீமை செய்தவருக்கும் நன்மையே செய்பவர். நற்குணங்கள் நிறைந்த பொக்கிஷ சாலை. மரியாதைக் கடல். பக்திக்கு உறை கல். புருஷரில் உத்தமன். புத்திமான். தயாளு. தரும புத்திரன். அணுவளவும் சத்தியம் தவறாதவர். இந்த ஊரில் அவர் ஒருவரே ஸ்தோத்திரத்திற்கு அருகமானவர். அவ்வளவு சிறந்த யோக்கியரை நாம் அவமானம் செய்தது பெரும் பிழை. நாம் இனி இவ்விடத்தில் நிற்பது தவறு போகலாம். வீர : என்ன வஸந்தஸேனையை விட்டு விட்டா? தோழ : அவள்தான் எங்கேயோ காணாமல் போய் விட்டாளே! வீர : அவள் எப்படி காணாமல் போய் விடுவாள். பார்க்கலாம் ஒரு கை. அவளைக் கண்டுபிடிக்கிற வரையில் நான் இவ்விடத்தை விட்டு வரமாட்டேன். தோழ : என்ன பிரயோசனம் நாம் எந்த அருமையான காரியத்தையும் செய்து விடலாம். காட்டானையைப் பிடித்து அடக்கி விடலாம். சிங்கம், புலி முதலிய துஷ்ட விலங்குகளைப் பிடித்துக் கட்டிப் பழக்கிவிடலாம். ஆனால் ஸ்திரீகளின் பிரியத்தை மாத்திரம் அவர்களுடைய மனதிற்கு விரோதமாகத் திருப்ப முடியாது என்பது தெரியாதா? இதனாலே காரியம் ஒரு நாளும் பலிக்காது. பழம் தானாய் பழுக்க வேண்டுமே யொழியத் தடியால் அடித்தால் பழுக்குமா? போகலாம் வாரும். வீர : உனக்கு விருப்பமானால் நீ போகலாம். நான் இங்கே தான் இருப்பேன். தோழ : நல்லது நான் போகிறேன். (போகிறான்) வீர: இவன் போனால் போகட்டும். கோழி கூப்பிடா விட்டால் பொழுது விடியாதோ! என்ன பிரமாதம்! (ஸோமேசனை பார்த்து) அடே! முஷ்டி வாங்கும் பிராம்மணா! என்ன சொன்னாய்? உன் பல்லை உடைக்கிறேன். ஒரே உதையில் உன்னைக் கீழே வீழ்த்துகிறேன் பார். ஸோமே : நாங்கள்தாம் ஏற்கெனவே கீழே வீழ்த்தப் பெற்றிருக்கிறோமே! வீர : யாரால்? ஸோமே : தலை விதியால். வீர : அப்படியானால் எழுத்திரு; பார்க்கலாம். ஸோமே : எழுந்திருக்கத்தான் பார்க்கிறோம். வீர : எப்பொழுது?  ஸோமே : நல்ல காலம் திரும்பி வரும் பொழுது. வீர : அப்படியானால் அதுவரையில் அழு. ஸோமே : அப்படித்தான் செய்கிறோம். வீர : எதற்காக அழுகிறீர்கள்? ஸோமே : எங்களுடைய கால கதியை நினைத்து அழுகிறோம். வீர : அப்படியானால் சிரி முட்டாள். ஸோமே : அப்படியே ஆகட்டும். வீர: எப்பொழுது? ஸோமே : மாதவராயர் திரும்பவும் தனவந்தராகும் பொழுது ஆகட்டும். வீர : அடே ஸபிண்டி போதும் வாயை மூடு எனக்கு கோபம் வரும் போல் இருக்கிறது. கடைசி முடிவாக நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். நீ போய் அதை மாதவராயனிடம் தெரிவி! கேவலம் விலைமகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடிவரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால், எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்கு அவன் அருகனாக வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா? ஸோமே : தெரியும். அப்படியே ஆகட்டும். வீர : சரி! போ; நான் இந்த மூலையில் இருக்கிறேன்.  (அவனும் சேவகனும் ஒரு மூலையில் மறைகிறார்கள்) ஸோமே : கோமளா இராஜாவின் மைத்துனன் உன்னை இங்கு அவமானப்படுத்தியதை மாதவராயரிடம் சொல்ல வேண்டாம். அவர் ஏற்கெனவே தன் சொந்த விஷயங்களைப் பற்றி வருந்திக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சங்கதியையும் கேள்விப்படுவாரானால் அவருடைய துக்கமும், துன்பமும் இரட்டிக்கும். கோம : ஸோமேசரே! எனக்குத் தெரியாதா! இதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா! இதை அவரிடம் தெரிவிப்பதில் இலாபம் என்ன? அவருக்கு இதனால் வியாகூலந்தான் உண்டாகும். (இருவரும் வீட்டிற்குள் போகிறார்கள்.) மாத : (உள்ளே வந்த வஸந்தஸேயனையைப் பார்த்துத் தனக்குள்) கோமளா என்ன இதற்குள் வந்து விட்டாளே இவள் ஸோமேசனுடன் போகவில்லையோ (உரக்க) கோமளா குழந்தை சிசுபாலன் குளிர் காற்றில் நெடுநேரமாய் நித்திரை செய்து கொண்டிருக்கிறான். அதிகக் குளிர் உண்டாவதற்குள் இவனை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே படுக்கையில் விடு. வஸ : (தனக்குள்) ஒகோ என்னை இவர் தன்னுடைய பணிப்பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்வேன்! நான் இன்னாள் என்று எப்படித் தெரிவிப்பேன்! ஒருவருக்கும் தெரியாமல் நான் உள்ளே வந்ததைப் பற்றி இவர் என் மீதில் என்ன அபிப்பிராயம் கொள்வாரோ! என்ன இவருடைய பேரழகு கோமளாங்கன் என்றாலும் இவருக்கே தகும். இவருடைய தேகத்தின் அழகிற்கு ஒத்தவாறு இவருடைய குணமும் புகழத் தக்கதாய் இருக்கிறது! இவரைக் கணவனாய் அடைபவளே உண்மையில் பாக்கியசாலி. மாத : என்ன? கோமளா நான் சொன்னது காதில் படவில்லையா? ஏன் பேசாமல் நிற்கிறாய்? சீக்கிரம் குழந்தையை எடுத்துக் கொண்டு போ. வஸ : (தனக்குள்) ஐயோ! என்னை இன்னாளென்று அறிந்து கொள்ளாமல் இவர் சொல்லுகிறாரே. நான் பிராமணர் வீட்டின் உட்புறத்தில் போகக் கூடாதவளாய் இருக்கிறேன். இதென்ன தரும சங்கடமாய் இருக்கிறது! ஈசுவரா! நீதான் இந்த சமயத்தில் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். மாத : கோமளா என்ன மெளனமாக நிற்கிறாய்? ஆகா! இதுவும் கால வித்தியாசமோ? நீயும் என்னை ஏழை என்று அவமதிக்க ஆரம்பித்து விட்டாயோ? உன்னுடைய பிரியமும் வெறுப்பாய் மாறிவிட்டதோ? கொடிது கொடிது இல்லாமையே கொடிது. தரித்திரத்தைக் காட்டிலும் பெரிய துன்பம் உலகத்தில் வேறு ஒன்றுமில்லை. (ஸோமேசனும் கோமளாவும் வருகிறார்கள்) ஸோமே : ஸ்வாமி உத்தரவை நிறைவேற்றி விட்டு வந்தோம். கோமளாவை ஜாக்கிரதையாய் இதோ கொண்டு வந்து சேர்த்தேன். மாத : இதென்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந்தவள் யாவள்? அவளை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், குழந்தையை எடுத்துக் கொண்டு போகும்படிக் கட்டளை இட்டேனே! என்ன என்னுடைய புத்திக் குறைவு! ஒருவரும் நாடாத என் மாளிகையைத் தேடி வந்து என்னைக் கெளரவப்படுத்திய ஸ்திரியை நான் அவமரியாதையாய் நடத்தினேனே ஆகா! வஸ : (தனக்குள்) இது அவமரியாதையா இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! இந்தப் பணிவிடை என்னுடைய ஆயுட் காலம் முழுதும் கிடைக்காதா? என்று நான் இராப் பகலாய் என் குலதெய்வத்தை வேண்டித் தவம் செய்கிறேனே! ஸோமே : அவள் வேறு யாரும் இல்லை. நம்முடைய நகரத்திய எல்லா மடந்தையரிலும் அழகில் சிறந்தவள் என்று புகழப்படும் வஸந்தஸேனை என்னும் ஸ்திரீ ரத்னம். அவள் வேறு யார் மீதிலும் இச்சை கொள்ளாமல் தங்கள் நற்குணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தங்களையே அடைய வேண்டும் என்று காதல் கொண்டிருக்கிறாளாம். மாத : உண்மையில் வஸந்தஸேனையா வந்தவள். என்ன ஆச்சரியம்! அவள் என்னை விரும்பவாவது அவளுடைய செல்வ மென்ன! சிறப்பென்ன! கேவலம் தரித்திரனாகிய என்னை அவள் எதற்காக நாடப் போகிறாள். தவிர நான் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயை மணந்து கொண்டிருப்பவன் ஆயிற்றே! நான் பிரம்மசாரி அல்லவே! நீ சொல்வதில் ஏதோ பிசகிருக்கிறது! ஸோமே : நான் சொன்னது உண்மையே! அதில் யாதொரு பிசகுமில்லை. இராஜாவின் மைத்துனன் தங்களுக்கு என் மூலமாய் ஒரு சங்கதி சொல்லி அனுப்பி இருக்கிறார். மாத : எனக்கா? என்ன சங்கதி? ஸோமே : கேவலம் விலை மகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடி வரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால் எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்குப் பாத்திரனாதல் வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல் உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா? என்று இராஜாவின் மைத்துனன் சொன்னான். மாத : ஆஹா! என்ன ஆச்சரியம்! அப்படியா சொல்லி அனுப்பினான்! வஸந்தஸேனையின் குணமல்லவோ குணம்! நற்குணமில்லை என்று அரண்மனையையே அவள் வெறுக்கிறாளே! இந்த உலகத்தில் பணத்தைக் காட்டிலும் குணத்தை விசேஷமாய்க் கொள்பவரும் இருக்கிறார்களா! இது பெரிதும் விந்தையாய் இருக்கிறது! இவளைக் கோவிலில் வைத்துத் தெய்வமாகக் கொண்டாடினாலும் தகும். இவள் பொருட்டாகத் தானே அவன் என்னை அவ்வளவு ஏளனமாய்ப் பேசினான். அதனால் எனக்கு யாதொரு குறைவுமில்லை! (அவள் இருந்த இடத்திற்குப் போய்) வஸந்தஸேனா! உன்னை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், என்னுடைய பணிப்பெண் என்று நினைத்து ஏவினதை மன்னித்துக் கொள்ள வேண்டும். அரண்மனையைப் போன்ற உன்னுடைய மாளிகையை விட்டு நீ இவ்வளவு தூரம் இந்தக் குடிசையை நாடி வந்தது அபூர்வமாக இருக்கிறதே!  வஸ : பிரபு! நானல்லவோ தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேன்மைக்கு இருப்பிடமாகிய இவ்விடத்தில் ஒரு யோக்கியதையும் இல்லாதவளான நான் தங்கள் அனுமதியின்றி நுழைந்ததற்குத் தாங்கள் என்னை க்ஷமிக்க வேண்டும். ஸோமே : நீங்களிருவரும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் உபசாரம் நன்றாய் இருக்கிறது. நன்றாய் முற்றித் தலை வணங்கும் நெற்கதிரைப் போல இருவரும் குனிந்து நிற்கிறீர்கள். ஒட்டகத்தின் முழங்காலைப் போன்ற வளைக்க முடி யாத என் சிரத்தால் தாழ்ந்து நானும் வணங்குகிறேன். போதும் உபசாரம் நிமிர்ந்து நில்லுங்கள். மாத : ஆம்! உண்மைதான். அதிக உபசாரம் எதற்கு? வஸ : (தனக்குள்) ஆகா! விருத்தம்: ஆனந்த பைரவி  எண்பெறு பிறவி கோடி யியற்றிய தவங்கள் கூடிக்  கண்பெறு விருந்தே யென்ன அளித்தவோ குமர வேளைப்  பெண்பெறு துறக்க மீதோ? பெறலரு குணத்தின் குன்றோ?  புண்பெறு மனத்தி னாட்குப் புகலெனத் தோன்றி னாரோ!  என்ன குணம்! என்ன தோற்றம்! கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்று சொல்வது உண்மை என்று இப்பொழுதே தெரிகிறது! இவரைவிட்டு எப்படிப் பிரிந்து என் வீட்டிற்குப் போவேன்! போனால் இத்தகைய சமயம் திரும்ப எப்பொழுது வாய்க்கும்! என்னுடைய மாட மாளிகை, ஆபரணங்கள் முதலிய சகலமும் போவதாய் இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். இவருடன் சதா காலமும் இருக்கப் பெற்றால் அந்த ப்ரும்மானந்தம் ஒன்றே போதும். பிறவிக் குருடன் திடீரெனக் கண்ணை பெற்று உலகத்தில் உள்ள வினோதக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, திரும்பவும் பார்வையை இழக்க நேர்ந்ததைப் போலானதே என் கதி! இருக்கட்டும் ஒரு தந்திரம் செய்கிறேன். (உரக்க) ஸ்வாமி! நான் உங்களுடைய கருணா கடாட்சத்தைப் பெற்றது உண்மை யானால் என்னுடைய ஆபரணங்களை இப்பொழுது இவ்விடத்திலேயே வைத்து விட்டுப் போக அனுமதி தர வேண்டும். இவற்றை அபகரிக்கும் பொருட்டே இத்துஷ்டர்கள் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தார்கள். மாத : ஸ்திரீ ரத்னமே! அவ்விதமான நம்பிக்கையை வைப்பதற்கு இந்த வீடு அருகமானது அல்லவே! என்ன செய்கிறது! வஸ : பிரபு நாம் நம்புவது மனிதரையே அன்றி வீட்டை அல்லவே! ஆகையால் நீங்கள் இவ்விதம் சொல்லக் கூடாது. தயவு செய்ய வேண்டும்.  மாத : ஸோமேசா! அப்படியானால் இந்த ஆபரண மூட்டையை வாங்கிக் கொள். வஸ : இந்த உபகாரம் செய்தீர்களே இதுவே போதும். உங்களுக்கு ஸ்வாமி ஒரு குறைவையும் வைக்க மாட்டார். ஸோமே : (வாங்கிக் கொண்டு) ஸ்திரீயே இந்த உபகாரத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். இனி எங்களுக்கு என்ன குறைவு இருக்கிறது?  மாத : ஸோமேசா! உனக்கே கொடுத்து விட்டதாக நினைக்கிறாயோ! நீ மிகவும் சமர்த்தன்தான்! இன்றிரவு முழுதும் இவற்றைப் பாதுகாத்துத் திரும்பவும் சொந்தக்காரரிடத்தில் ஒப்புவித்தல் வேண்டும்.  ஸோமே : (இரகசியமாக) நம்மிடத்தில் இருப்பது நம்முடைய பொருள்தானே? மாத : போதும் விளையாட்டு. வஸ : (வணக்கமாக) எனக்கு இன்னொரு உதவி செய்தல் வேண்டும். உங்களுடைய நண்பராகிய இவரை என்னுடன் கூடத் துணையாக என் வீடுவரையில் தயவு செய்து அனுப்ப வேண்டும். மாத : அதுதானா பிரமாதம்! ஸோமேசா! கூடப் போய் விட்டு வா. ஸோமே ; இதற்குத் தகுந்தவர்கள் நீங்களே! அன்னப் பேடையோடு துணை செல்வதற்குக் காக்கைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நான் ஏழைப் பிராமணன். எலும்புத் துண்டை நாய் கெளவுவதைப் போல என்னை இந்தக் காமாதூரர் பிடித்துப் பொடியாக்கி விடுவார்கள். மாத : சரி, நானே போகிறேன். வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பந்தம் தயார் செய்யச் சொல்லு. ஸோமே : அடே குணசீலா! குண : ஸ்வாமி! ஸோமே : சீக்கிரம் பந்தம் கொளுத்து. குண : எண்ணெய் இல்லாமல் பந்தம் எரியுமானால், கொளுத்தத் தடை இல்லை. ஸோமே : (மாதவராயரிடத்தில் தனிமையில்) நம்முடைய வீட்டுப் பந்தம் வேசியின் குணத்தை உடையது. அது ஏழைகள் வீட்டில் பிரகாசிப்பது இல்லை. தனவந்தரைத்தான் அது மதிக்குமே யன்றி நம்மை மதிக்காது. மாத : சரி! அப்படியானால் அதையும் நாம் மதிக்க வேண்டாம். மிகவும் பிரகாசத்தோடு ஆகாயத்தில் அதோ சந்திரன் இருக்க, நமக்கு என்ன கவலை? அவன் ஏழையையும்  தனவந்தனையும் சமமாக மதிப்பதனாலே அவனுக்கு மதி என்று பெயர் வந்திருக்கிறது. வாருங்கள் போவோம். (மூவரும் நடந்து வெளியில் போகிறார்கள்.) -------------------------                                 அங்கம் 1, காட்சி 2   இடம் : மங்களபுரியில் வேறொரு வீதி. பொழுது : மறுநாள் பகல். முன்னால் ஒருவன் ஓடி வருகிறான்; பின்புறம் சற்று தூரத்தில், ”உடாதே! உடாதே அதோ ஓட்றான்! அதோ ஓட்றான்! அடே சூதாடிப் பயலே! எங்கே ஓட்றே? நீ அந்த எம லோகத்துக்கு போனாலும் ஒன்னை உட மாட்டோம். அடே மகிபாலா! நீ இந்த முண்டங்கிட்ட தப்பற தேதுடா; நில்லுடா நில்லுடா!” என்று ஒரு கூச்சல் கேட்கிறது. மகிபாலன் : (தனக்குள்) ஆகா இந்தப் பாழும் சூதாட்டத்தில் எனக்கு என்ன இவ்வளவு பைத்தியம்! இந்தக் கெட்ட புத்தி எப்பொழுதுதான் என்னை விட்டு விலகுமோ தெரியவில்லையே! கையில் பணமில்லா விட்டால் கடனாவது வாங்கி ஆடும்படி மனது தூண்டுகிறதே. சூதாட்டத்தில் உட்கார்ந்தால், சோறு வேண்டாம்; நீரும் வேண்டாம், வீடு, பெண்சாதி, பிள்ளைகள் முதலிய எல்லா ஞாபகமும் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. நான் இவர்களிடத்தில் சூதாடக் கடன் வாங்கிய 10 ரூபாயையும் திரும்பிக் கொடுக்கும்படி என்னை அடித்து உபத்திரவிக்கிறார்களே! நான் என்ன செய்வேன்! என்னிடத்தில் இப்பொழுது ஒரு செப்புக் காசும் இல்லையே! இந்த இரண்டு நாய்களும் இப்பொழுது என் உயிரை வாங்கி விடும் போல் இருக்கிறதே! ஐயோ! அதோ வந்து விட்டார்களே! அடுத்த க்ஷணத்தில் என்னைப் பிடித்துக் கொள்வார்களே (நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) நல்ல வேளையாக இதோ ஒரு பாழுங் கோவில் இருக்கிறது! இதற்குள் ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன். (பின்புறமாக நடந்து கோவிலுக்குள் நுழைந்து கொள்கிறான்.) (முண்டன் திண்டன் என்னும் இரண்டு சூதாடிகள் ஒடி வருகிறார்கள்.) முண் : உடாதே! உடாதே புடிச்சுக்கிங்க! புடிச்சுக்கிங்க!  திண்: அடே! நீ அந்தச் சாச்சாத் கடவுளுக்கிட்டப் போயி ஒளிச்சுக்கினாக்கூட ஒன்னை உடப் போவதில்லையடா! அடே அண்ணே! காலடியைப் பாருடா! கோணக் கோணலா இக்குதுடா!  முண் : என்னாத்துனாலே அப்படி இக்குதுன்னு ஒனக்கு அம்புட்டு ரோசனை புரியல்லே பாத்தியா பயத்துனாலேடா அது அவன் ஒடம்பு நடுக்க மெடுத்துக்கிச்சு! காலு தாறு மாறாய்ப் போயிக் கெடக்குதுடா! திண் : காலடி இத்தோடே நின்னு போச்சே! இதென்னடா ஒவித்திரியம்! எங்கிட்டோ மாயமாப் பறந்து பூட்டாண்டா சனியம் புடிச்சவன். முண்: காலடியைத் திருப்பி வச்சுக்கிறாண்டா! என்னா சாமார்த்தியமுண்டா பயமவனுக்கு! முதுவுப் பக்கமா திருப்பிக்கினு கோயிலுக்குள்ளற போயிருக்கிறாண்டா என்னை ரோசனைடா இவனுக்கு கோயிலுக்குள்ளற நாம்ப வரமாட்டோமுன்னு நெனெச்சுக் கினாண்டா இவன்! வாடா உள்ளற போயிக் கோளிக் குஞ்சேப் பிராந்து அமுக்கறாப்லே குபீருன்னு புடிச்சுக்கலாம். (உள்ளே போகிறார்கள்.) மகிபாலன் : (தனக்குள்) இவர்கள் இங்கேயும் வருகிறார்களே என்ன செய்கிறது? இங்கு அதிகமாய் வெளிச்சம் இல்லாமல் மங்கலாக இருக்கிறது. நான் ஒரு கல் விக்கிரகத்தைப் போல அசையாமல் நிற்கிறேன். இருவர்கள் என்னை விக்கிரக மென்று நினைத்துக் கொண்டு போய் விடுவார்கள். (அப்படியே நிற்கிறான்; உள்ளே வந்த அவ்விருவரும் அவனைக் கண்டு பரிகாசமாகத் தமக்குள் சைகை செய்து கொள்கிறார்கள்.) . முண் : அடே திண்டா! அந்தாலே சாமி இக்குது பாத்தியாடா மனிசனெப் போல இக்குதுறா! திண் : சாமி எம்பிட்டுப் பெரிசுடா! அண்ணே! அது மரத்துலே செஞ்சதுறா! திண்: (மகிபாலனை அசைத்த வண்ணம்) இல்லேடா இது கல்லு மாதிரி இக்குதுறா! ரவையுண்டு கிள்ளிப் பாக்கிறேண்டா. (கிள்ளுகிறான்.) திண் : எல்லாக் கோயில்லெயும் சாமி கல்லுலேயும் மண்லேயுங் கட்டேலெயுந் தாண்டா இக்குது! அடிச்சா அளத் தெரியாதுறா. இந்தச் சாமி உயிருள்ள சாமி மாதிரி புச்சா இருக்கு.  முண் : ஆமுண்டா! இந்தச் சாமிக்கு புதுமாதிரிச் பூசெ, நிமித்தியம் எல்லா பண்ணணும்டா. இந்தச் சாமிக்கு அடிச்சா அளத் தெரியுமான்னு பாக்கறேண்டா. (முதுகில் ஓங்கி அடிக்கிறான். திண் : சாமி அளுவல்லெடா! நல்ல சாமிடா பொறுமைப் பொறுத்தவருடா; பூலோவம் ஆண்டவருடா! தப்புதம்! தப்புதம்! சாமி ஒன்னே அடிச்சேன்னு கோவிச்சுக்காதே! கன்னத்திலே போட்டுக்றேன். (மகிபாலனுடைய இரு கன்னங்களிலும் அடிக்கிறான்.) முண் : அதெல்லாம் இக்கட்டும். நாம்ப ரெண்டு பேரும் இந்த உயிருச்சாமிக்கு மின்னாலே சூதாடலாம் வா! சாமி எங்கப்பன் நம்ப தகராரைத் தீப்பாரு. திண் : சரி ஒக்காரு; ஒனக்காச்சு எனக்காச்சு! ஒரு கை பார்க்கலாம்; சாமிகூட கொஞ்சூண்டு கண்ணைத் தொறந்து அதோ என்னெப் பாக்குதுடா! முண் : சாமி என்னெப் பாக்க மாட்டேங்குதே! இந்தச் சாமிக்குச் சூதாட்டத்துலே நொம்ப பிரியண்டா! நொம்ப பத்தியோடே சூதாட்ற சீசாக்களைக் கண்ணாலே பாத்து முத்தி  கொடுக்கும்டா பேசற சாமிடா இது! (இருவரும் எதிரில் உட்கார்ந்து கொண்டு சூதாடுகிறார்கள். அதைப் பார்த்திருந்த மகிபாலனுக்கு ஆட்டத்தில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது.) மகி: (தனக்குள்) நாட்டை இழந்த அரசனுக்குப் பேரிகை வாத்தியத்தின் முழக்கம் எவ்வளவு மனோ வேதனையை உண்டாக்குமோ, அவ்விதமே பாய்ச்சிக் கைக் காய்களின் ஓசை  பணமில்லாத தரித்திரனாகிய என்னை மிகவும் வருத்துகிறதே! கோகிலத்தின் சங்கீதம் காதில் படுவது எவ்வளவு இன்பமாக இருக்குமோ அப்படி இருக்கிறதே இந்தக் காய்களின் ஒலி! இனி சூதாடக் கூடாதென்று எவ்வளவு உறுதி செய்து கொண்டாலும் பிறர் ஆடுவதைப் பார்த்தால் என் மனோ திடமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகிறதெ! திண்: இந்தா இருக்காப் பன்னெண்டு பாத்துக்க! கெலிப்பு என்னோடே. முண் : போவட்டும் இந்தாலே பாரு பகடெ பன்னண்டு. சாமி! பகடெ பன்னண்டு விளனும்! நீ எம்பக்கத்திலெ இரு; நீ கண்ணு இக்கா தெய்வமானாப் பார்த்துக்க! இந்தா பகடெ பன்னண்டு உளுந்திச்சு! போடு துட்டே! மகி : (தன்னை மறந்து பீடத்தில் இருந்து கீழே குதித்து) இல்லை இல்லை நன்றாய்ப் பார்! இது இருக்கா லெட்டர் அல்லவா. திண் : அம்புட்டுக் கிட்டாண்டா ஆளு! முண்: (மகிபாலனைப் பிடித்துக் கொண்டு) அடே ரோக்கியா! மாட்டிக்கினியா? போடு பணத்தெ! என்னெ ஆருன்னு பார்த்துக் கிட்டெ? சொம்மா ஏமாத்திப் புடலாமுன்னு பார்த்தியா? கழட்டுறா ரூவாயெ; ஒங்க பாட்டன் வூட்டுப் பணமோ ஓட்றியா? செவிட்டுலே குடுக்கறேன் பாரு. (அடிக்கிறான்.) திண் : முளிக்கிறாண்டா ஆடு திருடின கொறவன் மாதிரி! தோண்டுறா முளியே. (அடிக்கிறான்.) மகி : (நயந்து) அப்பா! என்னை அடிக்க வேண்டாம். இன்றைக்குள் எப்படியாவது பணத்தைக் கொடுத்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.  முண் : இப்பவே குடுக்கணும்; இல்லாமெப் போனா உட மாட்டேன் ஒன்னை. மகி : ஐயா! கோபித்து கொள்ள வேண்டாம். இத்தனை நாள் பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னம் கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? என் கையில் இருந்தால் கொடுக்க மாட்டேனா! என்னை அடித்தால் பணம் வந்து விடுமா? முண் : ஒதவாது. ஒன்னைக் கொஞ்சூண்டுகூட நம்பவே மாட்டேன். ஓங்கிட்ட ரோக்கிதையே இல்லே. இப்பத்தான் பணம் ஓணும்; போடு பணத்தெ! மகி : ஐயோ! நான் என்ன செய்வேன் என்னிடத்தில் ஒரு காசுகூட இல்லையே. நான் இப்பொழுது எப்படி 10-ரூபாய் கொடுப்பேன். எனக்கு மயக்கம் வருகிறதே. என் தலை சுற்றுகிறதே! (மயங்கினவனைப் போலக் கீழே விழுகிறான். இருவரும் அடிக்கிறார்கள்.) முண் : அடியாத்தே! மயக்கமாவா வருது? எம்பிட்டு சாலங்கிறேன்! திண் : சாமிக்குச் சன்னதம் வந்துக்கிது. பூசெ போட்டாச் சரியாப் போவும். (அடிக்கிறான்.) மகி : (அடியைப் பொறுக்க முடியாதவனாய்) எழுந்து ஐயோ! உயிர் போகிறதே! அடிக்க வேண்டாம். அடே அடிக்க வேண்டாம்! இனி அடித்தால் பிராணன் போய்விடும். பிறகு பணமும் போய்விடும். சத்தியமாய் இன்றைக்குள் எப்படி யாவது பணத்தைக் கொடுத்து விடுகிறேன். கொஞ்சம் சாவகாசம் கொடுங்கள். என்னிடத்தில் இப்பொழுது பணமே இல்லை. சோதனை செய்து பாருங்கள். திண் : பணம் இல்லாத முண்டே ஏண்டா கடன் வாங்கினே? முண் : பணமில்லாட்டி எதெனாச்சும் அடகு வைடா களுதே! மகி : (திண்டனைத் தனியாய் அழைத்துப் போய்) ஐயா உம்மை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். ஒரு உதவி செய்ய வேண்டும். முண் : என்னடா செய்யனும்? மகி : என்னிடத்தில் இப்பொழுது பணமில்லை. பாதி கொடுத்து விடுகிறேன். இன்னொரு பாதியைத் தள்ளிக் கொடுத்து விடுகிறீரா? முண் : சரி சம்மதித்தான்! அதையாச்சும் வை கீளே. மகி : (முண்டனைத் தனியாக அழைத்துப் போய்) அடே! ஒரு உபகாரம் செய். என்னிடத்தில் சிறிய நகை ஒன்றிருக்கிறது. அது பாதிக் கடனுக்குத்தான் சரியாகும். அதைக் கொடுக்கிறேன். இன்னொரு பாதிக் கடனை மன்னித்து விடுகிறாயா? முண் : சரி! அப்படியே ஆவட்டும் கொண்டா நவையெ. மகி : (முண்டனைப் பார்த்து உரக்க) நீபாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறது நிச்சயந்தானே? முண் ; நிச்சியந்தான். மகி : (திண்டனைப் பார்த்து உரக்க) உனக்கும் சம்மதந்தானே! நீயும் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறாயா? திண் : சரி. மகி : சந்தோஷம்! இப்படி யார் உதவி செய்யப் போகிறார்கள்! நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவர்கள். இந்த உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்.) முண் : எங்கிட்டு வேகமாப் போறே? நில்றா நில்லு.  மகி: ஏன் ஐயா! நிற்கச் சொல்லுகிறாய்? நீ பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தாய்; திண்டன் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தான். கடன் முழுதும் தீர்ந்து போய் விட்டது. நான் போகிறேன். என்னை ஏன் திரும்பவும் வதைக்கிறீர்கள்? முண் : சவாசப்பா! அடே! என்னெ யாருன்னு பாத்துக் கிட்டே; ஒன் சூச்சமெல்லாம் எங்கிட்டச் செல்லாது. எனக்குக் காதா குத்ரே? என் காதைப் பாத்தியா எம்பிட்டுப் பெரிய தொளே மின்னயே குத்தியாச்சுடா பூராப் பணத்தியும் கீளே வச்சுப்பிட்டு அந்தாண்டே போ. அதுக்கு மின்னே அப்பாலே இப்பாலே நகந்தின்னா முட்டியைப் பேத்துப்புடுவேன் சாக்கிறதே. மகி : நான் இங்கே பணம் யாரிடத்தில் வாங்கிக் கொடுப்பேன்? முண் : ஆருக்கிட்ட வாங்கினா எனக்கென்னடா? வெக்கங் கெட்ட நாயே! ஒங்கப்பனை வித்துக் குட்றா! மகி : என் தகப்பன் இறந்து போய் விட்டானே! எமனுக்குத் தான் சீட்டு எழுத வேண்டும். முண் : இல்லாமே போனா ஒங்கம்மாளை வித்துக் குட்றா. மகி : அவள் என் தகப்பனைத் தேடிக் கொண்டு போய் 3 வருடமாய் விட்டதே! அவளை நான் எங்கே காணப் போகிறேன்? அவள் இருக்கிற இடத்தைக் காட்டினால் அவளை விற்றுத் தருகிறேன். திண் : போடு பல்லு மேலே; பேசராண்டா வெறும் பேச்சு! இன்னும் செத்தே நேரத்துலே பணம் வராமெப் போனா நீ ஒங்கம்மா இக்கற வெடத்துக்கு போயிருவே. ஆச்சேபனை இல்லை. பேசாமே ரொக்கத்தெக் கீளே வச்சீன்னாப் பொளெச்சே. முண்: இல்லாமெப் போனா ஒன்னையே வித்துக் குட்றா. மகி : சரி! அப்படியே ஆகட்டும். என்னை இராஜ வீதிக்கு அழைத்துக் கொண்டு போங்கள். முண்: போகலாம் வா! (போகிறார்கள்) திண் : (உரக்க) பத்து ரூவாய்க்கி இந்த மனிசனை விக்கிறோம்; வாங்கறவங்க வாங்கலாம். (பலதரம் கூவுகிறான்.) ஒரு வழிப்போக்கன் : என்னையா கூச்சல்? மகி : பத்து ரூபாய் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிக் கொள்ளும். நான் உமக்கு அடிமையாய் இருந்து ஊழியம் செய்கிறேன். வழி: சரிதான்! உனக்கு யார் சோறு போடுகிறது? எனக்கு வேண்டாம். (போய் விடுகிறான்) மகி : அடாடா போய் விட்டானே! இன்னொரு முறை கூவிப் பார்க்கிறேன். (உரக்க) என்னை 10 ரூபாய்க்கு வாங்குவாருண்டோ? என்னை அடிமையாக வாங்கிக் கொள்வார் உண்டோ? (தனக்குள்) அடாடா ஒருவரும் வரவில்லயே! ஆகா! அதிர்ஷ்ட ஹீனனே! எப்பொழுது மாதவராயர் தரித்திரரானாரோ அப்பொழுதே எல்லாருக்கும் தரித்திரம் வந்துவிட்டது. முண் : ஏண்டா சொம்மா நிக்கிறே? எங்கிடா பணம்? வைடா கீளே! (பிடித்துத் தள்ளுகிறார்கள்) மகி: நான் நினைத்தவுடன் பணம் எங்கிருந்து வரும். பிர்ம்மாவாக இருந்தால் உடனே சிருஷ்டி செய்யலாம். (கீழே விழுகிறான். இருவரும் இவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள்)  மகி : ஐயையோ அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! ஐயோ! கேள்வி முறை இல்லையா? இந்த நகரம் அதிகாரி இல்லாமல் பாழாய்ப் போய் விட்டதா? இந்த அக்கிரமத்தைத் தடுப்பவரில்லையா? (கமலேசன் வருகிறான்.) கமலே : (தனக்குள்) இதென்னடா எயவாகீது! இந்தச் சூதாடிப் பயவ ஏன் இங்கிட்டு நிக்கிறாங்க? சூதாடிப் பயவளுக்கு எசமான் முண்டனும் இன்னொருத்தனும் மகிபாலனை என்னாத்துக்கோ தெரியல்லே கீழே போட்டு இளுத்துக்கிட்டு வாராங்களே! சூதுலே இருக்கிற இம்பம் எதுலே வருங்கிறேன்! அந்த இம்பம் கறி சோறு திங்கறத்தலே கூட வராதே; நான் முண்டன் ஊட்டுக்குப் போயி ஆட்டம் ஆடி எத்தினி நாளாச்சு! பணமில்லாமே எம் பெஞ்சாதியெப் பதினஞ்சி ரூவாக்கி வச்சு ஆடின. பொறவாலே நான் போகவே இல்லையே; என்னெக் கண்டாக்கா ஏன் வல்லென்னு முண்டன் கோவிச்சுக்கினா என்னா செய்றது? அவனே பாக்காமே மூஞ்சிலே துணியெப் போட்டு மூடிக்கினு இந்த வழியா போறேன். (தன் வஸ்திரத்தைப் பிரிக்கிறான்) ஆகாகா முளுக்கக் கந்தலால்ல இக்குது! இதுலே எத்தினி கண்ணு! எத்தினி ஒட்டு! இதுவும் ஒரு மாதிரி அளவுதான்! இல்லே இல்லே! இந்தத் துணியோடே சோக்கைப் பாத்துப்புட்டு எம்புட்டுப் பேரு கண்ணெப் போட்டுட்டாங்கறேன். இதெல்லாம் அந்தக் கண்ணுங்க. இதெப் பிரிச்சுப் போட்டுக்கினா இன்னம் கண் போட்றுவாங்க. மடிச்சே வச்சுக்கறேன். (மடித்து வைத்துக் கொள்ளுகிறான்.) என்னே முண்டன் பார்த்தான் என்ன செஞ்சுடுவான்? போயிப் பார்க்கறேன். (வருகிறான்.) முண்: எங்கேடா ரூவா?  மகி: எங்கிருந்து வரப்போகிறது? கமலே : அடே முண்டா என்ன விசேசம்? சொகமா இக்கிறாயா? முண் : இந்தச் சமயத்துலே நீ எங்கிட்டுறா வந்தே? இந்தக் களுதே 10-ரூவா தரனும். ஏம்மாத்தராண்டா. கமலே : அதுக்கா இம்புட்டு பெறமாதம்! முண் : (கமலேசனுடைய அங்கவஸ்திரத்தைப் பிடிங்கிப் பிரித்து) ஆகா! பலே! பாருங்கையா ஆயிரம் கண்ணோடையாளே! இந்த அளவான துணியைப் போட்ட இந்த பெபுரவுக்கு  10-ரூவா பெரமாதம் இல்லையாம். கமலே : போடாமுட்டாளே! நான் எத்தினியோ பத்து ரூபாயே ஒரு கண நேரத்துலே சூதாடித் தோத்திருப்பேண்டா முண்டே! மனிசன் பணத்தே என்னாத்துக்குடா மூட்டையாக் கட்டி வைக்கிறது? பணத்தைத் திங்க முடியுமாடா? கொலபாதவண்டா! நீ 10-ரூவாக்காவ இந்த மனிசனேப்போட்டு இப்புடித் தானாடா நசுக்கறது! ஒனக்கு நெஞ்சுலே எரக்கமில்லியடா? முண் : அடே! நீ பெரபு தாண்டா! ஒன்னெத் தெரியுண்டா இதாண்டா வளி; நீ போய்த்து வாடா. கமலே : அடே! இவனெச் சொம்மாப் போட்டு ஒவித்திரம் பண்ணாதே! நான் ஒண்ணு சொல்றேன். அந்த மாதிரி கேளு! இன்னும் 10-ரூவா இவனுக்கு கடனாக்குடு. அதை வச்சு ஆடி ஒன் கடனைத் தீத்துடுவான். முண் : எப்பிடிடா? கமலே : இவன் கெலிச்சா நீ பணம் குடுக்க வாணாம். முண் : தோத்தான்னா? கமலே: அப்பவும் குடுக்க வாணாம். முண்: புத்திசாலிடா நீ என்னே யாருன்னு பாத்துக்கிட்டே!  பொறந்தது மொத ஒன்னைப் போலே நான் எம்பிட்டுப் பேரெப் பார்த்தவனாச்சே! நான் அம்புட்டுப் பேரையும் ஏமாத்தரவனாச்சே! அடே ரோக்கிதே இல்லாத பயலே! ஒங்கிட்ட நான் பயப்பட்டவன்? கமலே : ஆர்றா ரோக்கிதே இல்லாதவன்? முண் : நீதாண்டா? கமலே : ஒங்கப்பன், பாட்டன், முப்பாட்டன் இவிங்க தாண்டா ரோக்கித இல்லாதவிங்க. (ஓடிப் போகும்படி கமலேசன் மகிபாலனுக்குச் சைகை காட்டுகிறான்.) முண் : அடே! களுதே! இனிமேலே பேசினின்னா பல்லு கில்லெல்லாம் ஒடஞ்சி போவும். ஆருன்னு பாத்துக்கிட்டே? அடே, மகிபாலா! எங்கிடா பணம்? வைடா கீளே! (இழுக்கிறான்.) மகி : ஐயா! ஐயா! இன்றைக்குள் எப்படியாவது கொடுத்து விடுகிறேன். என்னை ஏன் இப்படிக் கொல்லுகிறாய்? இனி மேல் உபத்திரவித்தால் என் உயிர் போய்விடும். கமலே : (கோபத்தோடு) அடே தேவிடியா மகனே. அவனேத் தொடாதேங்கிறேன். போட்டு இளுக்கிறீயா? அவன் மேலே இன்னமேக் கை போட்டீன்னா ஒன் முதுகு தோலைப் பேத்துடுவேன். சாக்கிரதே! அடியாத்தே ஆருன்னு ரோசனை பண்ணிக் கிட்டே? (முண்டன் மகிபாலனுடைய மூக்கின் அடிக்க இரத்தம் வடிகிறது. அதைக் கண்ட மகிபாலன் சோர்ந்து கீழே விழுகிறான்.) கமலே : இதோ பாருடா ஒரே ஒதலே ஒன் தலை கிலேல்லாம் எகிரிப் போவுது (முண்டனை அடிக்கப் போகிறான்.) முண் : வாடா ஒரு கை பார்க்கலாம். ஒம் பொஞ்சாதி புள்ளெங்களுக்கு ஒரு எலும்புகூட இல்லாமெப் பண்ணிப் புட்றேன். (அடிக்கிறான்.) கமலே : ஆகா! அப்படியா ராசவீதிலே பட்டப் பகல்லே நீ என்னே அடிக்கிறியா? ஒருத்தரும் ஒன்னெக்கேக்றவங்க இல்லேன்னு நெனச்சுட்டியா? இப்பவே ஒங்க பாட்டன் ஒங்கம்மா புருசன் நாயாதபிதி இக்கிறான் பாரு அவன் கிட்டப் போயிச் சொல்லி ஒன்னே எங்கிட்டுப் பாக்கனுமோ அங்கிட்டுப் பார்க்கறேன். பயப்படாதே! முண் : அடே இந்தப் பூச்சிக்கெல்லாம் இந்த முண்டன் பயந்துடுவான்னு நெனெச்சிக் கிட்டியாடா? கையாலே ஆவாத முண்டே இப்பவே போயி சொல்லிக் கோடா! நானும் ஒன்னெப் பாக்கறேண்டா எனக்கும் சாமி குடுத்த கண்ணு இக்குதுடா! கமலே : நீயுமா பாக்கப் போறே? அடே எப்புடிடா பாப்பே? அந்த அளவெக் கொஞ்சூண்டு காட்டுறா பார்க்கலாம். முண் : இப்படித் தாண்டா பாப்பேன் (முண்டன் தன் கண்களை நன்றாய்த் திறந்து கொண்டு முகத்தை நீட்டுகிறான்.) கமலே : இந்தா நல்லாப் பாருடா (கமலேசன் ஒரு பிடி மண்ணை எடுத்து முண்டன் கண்களில் போட்டு விடுகிறான். அவன் கண்களை மூடிக்கொண்டு தவிக்கிறான்.) முண் : அடேடே! கண்ணு போச்சுடா! அடே திண்டா! இங்கிட்டு ஓடியாடோய்! என் கண்ணுலே ஊதுடோய்! (அந்தச்சமயத்தில் மகிபாலன் எழுந்திருக்கிறான். அவனுக்குக் கமலேசன் சைகை செய்ய, அவன் ஓட்டம் பிடிக்கிறான்.) கமலே : (தனக்குள்) சரி நம்ப ஆளு தப்பிச்சுக்கிட்டான். இந்த முண்டன் ராசாவுக்கு ரொம்ப வேண்டியவன். இவன் நம்ப தலெக்கிக் கல்லு வச்சுடுவான். பிரதாபன் என்கிற எடையன் ராசாவாகப் போரான்னு சோசியக்காரன் சொல்லிப் புட்டானாம். சானாபேரு அவங்கிட்டப்போயிச் சேந்துட்டாங்களாம். நானும் போயிச் சேந்துக்கறேன். (போய் விடுகிறான்.) (வஸந்தஸேனையின் மாளிகை: ஒரு மஞ்சத்தின் மீது அவள் ஏதோ சிந்தனையின் ஆழ்ந்தவளாய்ச் சாய்ந்திருக்க, அவளுடைய பணிப்பெண் மல்லிகா விசிறியால் வீசுகிறாள்.) மல்லி : அம்மா! இன்று பூஜைக்குத் தாங்கள் வர முடிய வில்லை என்று தங்கள் தாயிடத்தில் தெரிவித்து விட்டேன். வஸ : (தன் யோசனையில் இருந்து திடுக்கிட்டு) ஆகா! மல்லிகா! நீயா? என்ன சொல்லுகிறாய்? மல்லி : பூஜை விஷயமாய் தாங்கள் செய்த உத்திரவைத் தெரிவித்து விட்டேன் என்றேன். வஸ : சந்தோஷம் (திரும்பவும் யோசனையில் ஆழ்கிறாள்.) விருத்தம்: எதுகுல காம்போதி மல்லி :  அன்னையே! அரியநங்காய்! அகத்தினை வருத்திச் சால நின்னையே வதைக்கு மெண்ண மென்னென வுரைப்பா யென்பால்  பொன்னையே நிகர்த்த மேனி பொலிவெலா மிழக்கச் சோமன்  தன்னையே பழித்த வாமத் தண்முக மிழந்த கோலம்.   அம்மா! என்ன விசேஷம்? தாங்கள் அடிக்கடி எதை நினைத்தோ கவலைப்பட்டு வருந்துகிறீர்களே. நான் கேட்டால் கோபித்துக் கொள்வீர்களோ? என்று இதுவரையில் கேட்காமல் இருந்தேன். முகமெல்லாம் வெளுத்துப் போய்விட்டது! அடிக்கடி மெய்மறந்து ஏதோ விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்த வண்ணமாகவே இருக்கிறீர்கள். ஊணுறக்கம் முதலியவற்றையும் அலட்சியம் செய்கிறீர்கள். மாந்தளிரையும் வாழையின் குருத்தையும் போன்ற உங்களது மெல்லிய அழகிய தேகத்தை ஏதோ ஒரு மனப்பிணி வருத்திக் கருக்குகின்றதே! தயவு செய்து என்னிடத்தில் தெரிவியுங்கள். எந்த காரியத்தையும் மனதிலேயே இரகசியமாய் வைத்துக் கொண்டு தனிமையில் வியாகூலப் படுவானேன்? ஆப்தர்களான என்னைப் போன்றவர்கள் எதற்காக இருக்கிறோம்? விசேஷமென்ன என்பதைத் தெரிவித்தால் இதில் என்னால் ஏதாவது உதவி செய்யக் கூடுமானால் அதைச் செய்கிறேன். வஸ : (நாணத்துடன்) அப்படி ஒன்றையும் காணேனே! நான் சாதாரணமாக எப்பொழுதும் இருப்பதைப் போலத் தானே இருக்கிறேன். சர்க்கரை கசப்பது சர்க்கரையின் குற்றமல்லவே! வாயின் குற்றமல்லவா. ஆகையால் உன் கண்களிலேதான் ஏதோ மாறுபாடு உண்டாயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மல்லி: அம்மா! (சங்கல்பமே என்ற கீர்த்தனையின் வர்ணமெட்டு)  ப. ஸஞ்சலமே யாதோ மனதில்? தாயே நீ ரதை யினிப் போக்குவீர் (ஸ்) அ. நஞ்சானவே ஆகாரந்துயிலும்; நங்கை நீ விர் வருந்தயான் சகிப்பெனோ? ச. என்ன வேதனையோ? இனியும் நாணமோ? என்ன கோலமெனது தேகம் பதைக்குதே!  அன்னாய்! துயர்போது மித்தொடு,  என்ன தேவை வருத்துதோ கூறுவீர். (ஸ்)  அம்மணி! எப்போதும் என்னைப் பரிகாசம் செய்வதைப் போல இப்போது செய்வது தவறு. யாவரிலும் உயர்ந்து ஆகாயத்தில் உலவும் அழகிய சந்திரனுக்குத் தன்னிடத்திலுள்ள களங்கத்தை அறிந்து கொள்ளும் வல்லமை இல்லை. அதை நாமல்லவோ அறிந்து கொள்ளுகிறோம். என்னிடத்தில் சொல் வதில் வெட்கமென்ன? நானும் தங்களைப் போல ஒரு ஸ்திரீ தானே! தாய்க்கு ஒளித்த சூலுண்டோ என்று சொல்லுவார்கள். தங்களை வருத்தும் நோய் இன்னதென்று ஒருவாறு எனக்குத் தெரிகிறது. அதுதானோ? என்று நிச்சயமாய் அறிந்து கொள்ள விரும்புகிறேன். எந்த நோயானாலும் அதை விலக்க மருந்திருக்கிறதே! வியாதியைப் போக்க முயலாமல் ஏன் அனாவசியமாய் அதை அதிகரிக்க விடவேண்டும்? தயவு செய்து தங்களுடைய மனோ வியாதியை வெளிப்படுத்துங்கள். அம்மணி! வஸ : சில விஷயங்களில் உலகத்தாரின் அபிப்பிராயம் தவறாய்த் தோன்றுகிறது. அவர்கள் எதை நல்லதென்று நினைக் கிறார்களோ அது கெட்டதாக இருக்கிறது; எதைக் கெட்டது என்று மதிக்கிறார்களோ அது நல்லதாக இருக்கிறது. மல்லி : அப்படியானால் உலகத்தார் யாவரும் மூடர்களோ? எந்த விஷயத்தில் அப்படித் தவறாக அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள்? தெரிவியுங்கள் கேட்கலாம். விருத்தம்: கானடா  வஸ:  மங்கையே என்றனாவி மல்லிகா உண்மைத் தோழி! சங்கையை வதைத்துச் சாலச் சலனமே தரும்பொருட்கள்  எங்ஙன முயர்ந்த வாகு மெழிலினாற் குணத்தாற் கூறாய்  பங்கமார் பொருளே யன்றிப் பிறிதெனப் பகர லாமோ?   எது மிகவும் அழகானது, எது மிகவும் நற்குணமுடையது என்று சொல்லப்படுகிறதோ, அது பெரிதும் துன்பத்தைத் தருவதாய் இருக்கிறது. குணமும் அழகுடைய பொருள் நமது மனதைக் கவர்ந்து நம்மை ஓயாக் கவலையிலும் ஒழியா மனோ வேதனையிலும் ஆழ்த்துகிறது. செல்வமென்பது சிந்தையின் அமைதி அல்லவா? எல்லாச் செல்வத்திலும் அருமையானதும் மேலானதும் மனதின் திருப்தி ஒன்றே! அவ்வித அருமையான திருப்தியைக் குலைத்து மனதைப் பாழாக்குகின்ற பொருளை நல்லதென்று சொல்லலாமோ? நம்முடைய பஞ்சேந்திரியங்களுக்கும் மனதிற்கும் எது இன்பத்தை ஊட்டுகின்றதோ அதையல்லவோ அழகுடைய பொருள் என்றும் நற்குணமுடைய பொருள் என்றும் கொள்ள வேண்டும். மல்லி : அழகான ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது எதனால்? அந்தப் பொருள் இன்பம் தருவதைக் காணவே, அதை நாமடைதல் வேண்டுமென்று மனதில் உண்டாகும் பேராசையினால் நமக்கு மனோ வேதனை உண்டாகிறது. நம்முடைய துன்பத்திற்கு நமது மனதே காரணமின்றி அந்தப் பொருள் இன்பத்தையே தருகிறது! இது யாருடைய குற்றம்? அந்தப் பொருளை அடைய நாம் அவ்வளவு ஆத்திரப்படுவானேன்? எல்லாவற்றினிடத்திலும் அதிக விருப்பும் வெறுப்பும் இல்லாமல் இருந்தால் நம் மனதில் அவ்வளவு வேதனை ஏன் உண்டாகிறது? ஆகையால் இன்பமும் துன்பமும் நம்முடைய மனதிலேயே இருக்கின்றன. நாம் நம்முடைய மனதை அடக்கி நடத்துவதில் இருந்து அவை ஏற்படுகின்றன. வஸ : உலகத்தில் எல்லோரும் சந்நியாசியைப் போல மனோ உறுதியைக் கொள்ள முடியுமா? எல்லா மனிதரும் துறவிகளாய் விட்டால், இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் மாயா ரூபமான சிருஷ்டிப் பொருட்கள் யாவும் அனாவசியமாய் விடும். அவற்றைப் படைத்த ஈசுவரனுக்கும் ஒரு வேலையும் இல்லாமல் போய் விடும். உலகப் பற்றை ஒழித்த யோகியும் அழகென்று சொல்லப் படும் அந்த வஞ்சகப் பொருளின் மாய வலையில் பட்டுத் தத்தளிக்கிறான் என்றால், மற்றவரின் தன்மையைப் பற்றி சொல்வானேன். ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது அந்தப் பொருளின் குற்றமாய் இருந்தால் என்ன? எவ்விதத்திலும் நாம் அந்த பொருளைப் பற்றி வருந்த நேருகிறது. ஆகையால் நம்மைத் துன்புறுத்தும் பொருட்களை நல்ல பொருட்கள் என்று சொல்வது தவறு. எது நம்முடைய மனதில் சலனம் உண்டாக்காமல் இருக்கிறதோ அதுவே நல்ல பொருள். அதையே விசேஷித்ததாய் நாம் கொண்டாட வேண்டும். ஆனால் ஜனங்கள் பின்னதை அலட்சியமாக மதிக்கிறார்கள். அதிருக்கட்டும்; நீ என் மனோ வியாதியின் காரணத்தைக் கொஞ்சம் அறிந்து கொண்டதாய்த் தெரிவித்தாயே! எங்கே? இன்னதென்று சொல் பார்க்கலாம். மல்லி : (’மருவே செறித்த' என்ற திருப்புகழ் வர்ணமெட்டு) ஆனந்த பைரவி  அகமோவிளைக்க முகமோ வெளுக்க அழகே யொளித்த திதுதீது,  அறிவேனனைத் துமதவேள் விடுத்த கணையேவகுத்து குறியாகும்.  இச்சின்னங்கள் எல்லாம் காதல் நோய்க்குத்தான் உண்டாகும். என்னை ஏன் இப்படிப் பரீட்சிக்கிறீர்கள். தயவு செய்து இரகசியத்தை என்னிடத்தில் தெரிவியுங்கள். அநியாயமாய்த் தங்களுடைய மெல்லிய மேனி வதைபடுகின்றதே எந்த இராஜ குமாரன் தங்களுடைய மனதை இப்படிக் கவர்ந்தான்? உண்மையைச் சொல்லுங்கள். வஸ : (மேற்படி வர்ணமெட்டு) - கல்யாணி  ஸகியே! கணத்திற்பலமாதை நத்துநிருபோர் மணத்தல் ஸரியாமோ?  ஸகியே எனக்கு விதியோ? மனத்தும் நினையேன் சலிக்கும்-மகிபோரை  இருந்திருந்து இராஜகுமாரன் பேரிலா காதல் கொள்ள வேண்டும்? அவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் மனையாட்டி ஆயிற்றே அவர்கள் காதல் நிலைத்ததல்லவே! அவர்களை நம்பினோர்களின் கதி அதோ கதியல்லவோ இன்றைக்கு என்னை விரும்புவார்கள் நாளைக்கு வேறு ஒருத்தியின் பேரில் மோகம் கொண்டு என்னை அலட்சியம் செய்வார்களே! அவர்களை நம்புவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போன்றதே! மல்லி : (மேற்படி வர்ணமெட்டு) – ஆபேரி   மயிலே பழித்த இயலே செழித்த மணியே இனித்த மடமானே  மறையோர் குலத்தி லெழிலா ரொருத்தர் மனமீ திருத்தல் நிஜமாமே.  அப்படியானால் தங்கள் மனதிற் குடிகொண்ட புண்ணியவான் யாராவது பிராம்மணராய்த்தான் இருத்தல் வேண்டும். தாங்கள் சாதாரணமானவர்களின் மீது இச்சை கொள்வீர்களா? அவர் சகல விதமான கல்வியிலும் தேர்ச்சி பெற்றவரும் யெளவனப் பருவமுடையவருமான அந்தணராய்த் தான் இருக்க வேண்டும். ஆம், அதோ பாருங்கள்! உங்கள் முகத்தில் ஒருவிதப் புன்னகை உண்டாகிறதே! வஸ: (மேற்படி வர்ணமெட்டு) - காம்போதி  கயலே பழித்த விழியாய்! படித்த மறையோர் மணத்தல் கருதார்கள்  அவரோ துதித்துப் பணிவோடிருத்த துருகான முற்று-மறிவோர்கள்.  பிராம்மணர்கள் வணங்கப்படுவதற்கு அருகரே ஒழியக் காதலிக்கப்படக் கூடியவர்கள் அல்லரே அதற்கென்ன செய்கிறது? மல்லி : அப்படியானால் அவர் வைசிய ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கலாமோ? அந்த ஜாதியாரிடத்திலேயே பொருள் குன்று குன்றாய்க் குவிந்திருப்பதால் அதுவும் ஒரு விதத்தில் நல்ல சம்பந்தந்தான். வஸ: அடி மல்லிகா ஏதேது? நீ என்னை விட மாட்டாய் போல் இருக்கிறது! ஒவ்வொரு ஜாதியாய்க் கேட்டுக் கொண்டே வருகிறாயே! கடைசியாக நல்ல வார்த்தை சொன்னாய்! வெட்கக் கேடு, வைசியனை யாராவது கணவனாய் அடைவார்களோ? திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி அவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்லவோ? இரவிலும் பகலிலும் விழிப்பிலும் துயிலிலும், அவர்களால் வணங்கப்படும் கடவுள் பணமே. அவர்கள் மனிதரிடத்தில் சிறிதும் பிரியம் வைக்க மாட்டார்களே! அவர்கள் ஓயாமல் தூர தேசத்திற்குப் போவதிலும் கடைகளைக் கட்டியழுது கொண்டிருப்பதிலும் தம் ஆயுட் காலத்தைக் கழிப்பவர்கள் அல்லவோ. ஸ்திரீகளின் மனது குளிர அவர்கள் வாயில் இருந்து ஒரு அன்பான மொழியும் வராதே. ஆகையால் வைசியர் பேரில் எந்த ஸ்திரீ ஆசை வைப்பாள்! மல்லி : அப்படியானால் உங்கள் காதலர் பிராம்மணரும் அல்ல, க்ஷத்திரியருமல்ல, வைசியருமல்ல, வேறு யார்? வஸ: அடி மல்லிகா நீ ஒன்றையும் அறியாதவளைப் போல மிகவும் அவசரமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறாயே! நாம் இரண்டொரு மாசத்திற்கு முன் ஸ்வாமி கோவிலுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவரைப் பார்த்து அவர் யாரென்று நான் உன்னைக் கேட்டதை மறந்து விட்டாயா? மல்லி: ஓகோ அப்படியா? அறிந்து கொண்டேன்! அறிந்து கொண்டேன்! நேற்றிரவு நீங்கள் ஒளிந்து கொண்டதாகச் சொன்னீர்களே. அது அவருடைய மாளிகை அல்லவோ? ஆனால் அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாய் ஜனங்கள் சொல்லிக் கொள்கிறார்களே! அவர் பேரிலா இச்சை கொண்டீர்கள்? வஸ: (’எந்துகுவாடலகிநாடு' என்ற பாட்டின் வர்ண மெட்டு) தோடி - ரூபகம்  ப. ஸுந்தரனால் எனதுமேனி சோர்ந்ததேவாடி அ. இந்து வதனங் கினிமை காண  எந்தமாது மாசைமீற வந்து பாதம் போற்றிடுவாள் (ஸு) ச. எந்த நாளும் நிறையில்மீறா நீர்மையும் நலமும் சொந்தமான தனமேயாக - ஸுகமோ செல்வமே!  மனத்தின் பெருமை பணத்திற் காமோ!  மாரன்வாம மேனிகாணத் தீமையாரு நீங்கியோடும் (ஸூ)  அவர் தனத்தில் ஏழையாய் இருந்த போதிலும் குணத்தில் அவரைவிட மேலான தனிகர் உண்டோ? கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்பார்களே. அதற்கு இணங்க அவருடைய அழகு கண்கொள்ளா காட்சி அல்லவா? யோக்கியதையைக் கருதாமல் பணத்தையே தாசியர் நாடு வார்கள் என்று சொல்லப்படும் தூஷணை எனக்கு இல்லாமற் போகட்டுமே. மல்லி : அம்மணி! மாமரத்தின் புஷ்பங்களெல்லாம் உதிர்ந்து போன பிறகு, அதை வண்டுகள் நாடுதல் உண்டோ? வஸ : ஆகையினாலேதான் வண்டிற்குக் காமன் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. அறிவில்லா வண்டுகள் அப்படி நன்றி அற்றதாயும், சுயநலம் உடையதாயும் இருந்தால் நன்றாய்ப் பகுத்தறிவைப் பெற்ற நாமும் அதைப் போலச் செய்தல் வேண்டுமா? மல்லி : அப்படியானால் அவரை அடையும் வழியைப் பற்றி யோசனை செய்யத் தடையென்ன? வஸ : அதற்காக நான் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். அதை ஹேதுவாக வைத்துக் கொண்டு அவரிடம் திரும்பவும் போய்ப் பார்க்கலாம். ஆனால் அவருடைய பிரியத்தைப் பெறுவது சுலபமான காரியம் அல்ல, என்ன செய்கிறது? மல்லி : (புன்சிரிப்புடன்) ஓகோ இந்த எண்ணத்தினாலே தான் ஆபரணங்களை அவருடைய மாளிகையில் வைத்து விட்டு வந்தீர்களோ? வஸ : (திடுக்கிட்டு) இதென்ன சப்தம்? யார் ஓடி வருகிறார்கள். யார் இந்த மனிதன்? (மகிபாலன் அவர்களிருந்த இடத்திற்குள் வேகமாய் ஓடி வந்து வஸந்தஸேனையின் காலில் விழுகிறான்.) மகி : அம்மணி! அபயம்! அபயம்! இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். வஸ : கொடுத்தேன் அபயம்! எழுந்திரு! மல்லிகா! வாசற் கதவை மூடிவிடு. (மல்லிகா போகிறாள் யாரைக் கண்டு இப்படி ஓடி வருகிறாய்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? மகி : கடன்காரனுக்காக பயந்து ஓடி வருகிறேன். வஸ: அடி மல்லிகா கதவைத் தாளிட்டு விடு. மகி : (தனக்குள்) ஆகா கடன்காரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் இவள் என்னைக் காட்டிலும் அதிகமாய்ப் பயப்படுகிறாளே! இதுவும் அதிர்ஷ்டந்தான் ஏராளமான செல்வமும், நற்குணமும் பெற்ற இந்த ஸ்திரீ எனக்கு உதவி செய்யாமல் இருக்க மாட்டாள். பார்க்கலாம். (வீட்டிற்கு வெளியின் முண்டன், திண்டன் இருவரும் வருகிறார்கள்.) முண் : அவன் எங்கிட்டுத்தான் போனான். அவனே உடப் போறதில்லை! நமக்காச்சு அவனுக்காச்சு! பார்க்கலாம் ஒரு கையி. திண் : அவனாவது இன்னமே ஆப்புடவாவது! அவன் என்ன சாகசீகம் சேஞ்சுப்புட்டுப் போய்த் தாங்கிறேன். முண் : அவன் மூக்கே கீழே போட்டுத் தேச்சு மூஞ்சிலே மோடு பள்ளம் இல்லாமெ நெரவிப்புட்டேனே! இந்தாலே பாரு இன்னம் நெத்தம் சொட்டிக்கினே ஓடிக்கிறான். திண் : நெத்தம் இந்த ஊட்டுக்குள்ளே போயிருக்குதுடா ஆப்புட்டுக்கிட்டாண்டா ஆளு. இந்த ஊட்டுக்குள்ளற ஒளிச்சிக் கினுக்கிறாண்டா திருடன். முண் : கதவே இடிக்கலாண்டா! (உட்புறத்தில்) மல்லி : (மகிபாவனைப் பார்த்து) ஏனப்பா நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன தொழில் செய்பவன்? நீ பயந்து ஓடி வந்த காரணமென்ன? என்னுடைய எஜமானி அம்மாளுக்குத் தெரியும்படி சொல். மகி : அம்மா என்னுடைய சொந்த தேசம் குஸ்ஸும புரம். நான் ஒரு ஏழையின் மகன். எனக்குக் கால் பிடிக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும். வஸ: அது ஸ்திரீகள் செய்யக் கூடிய தொழில் அல்லவா! அதையா கற்றுக் கொண்டாய்? மகி : ஆம்! என்ன செய்கிறது! வயிறு வளர்க்க வேண்டுமே! வஸ : ஸரி! மேல் விருத்தாந்தங்களைத் தெரிவி. மகி : அந்த தேசத்தில் பிழைப்பதற்கு வழி இல்லாமையால் இந்த மங்களபுரத்திற்கு வந்து ஒரு பிரபுவினிடத்தில் வேலைக்கு அமர்ந்தேன். அவருடைய தேகத்தின் அழகைப் போலவே அவ ருடைய குணத்தின் அழகும் பொருந்தி இருக்கிறது. அவருடைய அன்பும் தயாளமும் என்னவென்று சொல்வேன்! பிறர்க்கு உதவு வதற்கு என்றே தனக்குப் பொருள் இருப்பதாக நினைப்பவர். மல்லி : அப்படியா? அவர் முழுத் திருடராய் இருக்கிறாரே. மகி : அம்மா! அப்படிச் சொல்ல வேண்டாம். பாவம் வந்து சம்பவிக்கும். அவரைத் தூஷிக்கும் நாக்கு அழுகிப்போம். மல்லி : என்னுடைய எஜமானி அம்மாளின் குணங்கள் யாவற்றையும் திருடி அணிந்து கொண்டிருக்கும் அவரை வேறு எவ்விதமாய் மதிப்பது அவ்வளவு மேன்மை பொருந்தியவர் யாரப்பா?. வஸ : ஆம் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்று எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. தெரிவி. மகி : அம்மா அவர் தன்னுடைய தயாள குணத்தினாலும் ஈகையினாலும்... வஸ : தன்னுடைய தனத்தை எல்லாம் செலவு செய்து விட்டாரோ!  மகி : அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது. நான் இன்னம் சொல்லவில்லையே!  வஸ : அதைச் சொல்லவும் வேண்டுமா செல்வமும் நற்குணமும் ஒன்றாய்க் கூடி இருப்பது அபூர்வமல்லவோ. உலோபிகளிடத்திலேயே பொருள் யாவும் நிறைந்திருப்பது உலக வழக்கம். சாக்கடைக் குழியில் தானே அருந்துவதற்கு அருகமற்ற ஜலம் உச்சி விளிம்பு வரையில் நிறைந்திருக்கும். மல்லி : அவருடைய பெயரைத் தெரிவி. மகி : குளிர்ந்த முகத்தை உடையவராதலால் பூலோக சந்திர னென்று யாவரும் அவரை அழைக்கிறார்கள். அவர் பெயர் மாதவராயர். வஸ : (திடுக்கிட்டுத்தன் ஆசனத்தை விட்டெழுந்துஅடி! மல்லிகா! இவருக்கு ஆசனம் கொண்டு வந்து போடு. ஐயா இது உம்முடைய வீடு; தயவு செய்து உட்கார்ந்து கொள்ளும். அடி மல்லிகா விசிறி கொண்டு வா அந்தச் சரீரத்தைத் தொட்டு வருடும் பாக்கியத்தை உடைய இவர் எவ்வளவோ தவம் செய்திருத்தல் வேண்டும்! இவருடைய பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! விசிறியால் வீசு! அபூர்வமாக வந்த நம்முடைய விருந்தினர் களைத்துப் போயிருக்கிறார். மகி : ஆகா! மாதவராயருடைய பெயரைச் சொன்னதற்கு இவ்வளவு மரியாதையா! மெச்சினேன் சிரேஷ்டரே! உலகில் உதித்தால் இப்படிப் புகழுடன் உதித்தல் வேண்டும். இல்லை யாயின் பிறக்காமல் இருப்பதே உத்தமம். நீர் ஒருவரே உயிருடன் இருப்பவர்; மற்றவர்கள் நடை பிணங்களே. தனிகர்களை அடுத்த நாய்க்கும் வண்டியேற்றம் கிடைப்பதைப் போல், அவரால் எனக்கும் இந்தப் பெருமையோ அம்மா! தாங்கள் நிற்க வேண்டாம் உட்காருங்கள். வஸ : (உட்கார்ந்து) உமக்குக் கடன் கொடுத்த பிரபுவின் பெயரென்ன? மகி : பணம் இருந்ததினாலேயே எல்லாரும் பிரபுவாய் விடுவார்களா? எவனிடத்தில் குணத்தழகும், பிறரை எவ்விதம் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் உணர்வும் இருக்கின்றனவோ அவனே பிரபு! வஸ : சரி! உண்மைதான்; அது போகட்டும்; உமது கடன்காரன் பெயரைச் சொல்லும். மகி : நான் மாதவராயப் பிரபுவின் வேலைக்காரனாய் இருந்தேன். அவர் ஏழ்மைத் தனம் அடைந்த பிறகு நானும் அவருக்குப் பாரமாய் இருக்கக் கூடாதென்று நினைத்து, அவரை விட்டு வந்து விட நேர்ந்தது. பிழைக்க வழி வேறு இல்லாமையால் நான் சூதாட ஆரம்பித்தேன். அதில் 10-ரூபாய் தோற்றேன். (வெளியில் இரண்டு சூதாடிகளும் கதவை இடிக்கிறார்கள்) மகி : (திடுக்கிட்டு) ஆகா! அவர்கள் வந்து விட்டாற் போல் இருக்கிறதே! ஐயோ என்ன செய்யப் போகிறேன். வஸ : அடி மல்லிகா! இதோ இந்தக் காப்பை எடுத்துக் கொண்டு போய் 10-ரூபாய்க்குப் பதிலாய்க் கொடுத்து விட்டு வா. இவரே கொடுத்ததாகத் தெரிவி. மல்லி : ஏனையா! உமது கடன்காரன் பெயரென்ன? மகி : அவன் பெயர் முண்டன். (உடனே மல்லிகா வெளியிற் போய்க் கதவைத் திறக்கிறாள்.) முண் : அடே! ஆரோ கதவெத் தொறக்கிறாடா! திண் : அவன் எங்கிட்டோ போயி நொளஞ்சிட்டாண்டா! இன்னமேலே நம்ம கையிலே சிக்க மாட்டாண்டா போவோம்டா! மல்லி : யார் நீங்கள்? கதவை இப்படித் தானா இடிக்கிறது! இரண்டு பேரில் முண்டன் யார்? திண் : அடே அண்ணே! இவ எம்பிட்டு அளவாக்கிறாடா! ஒன்னெத்தாண்டா கேக்கறா! முண் : முண்டனே நீ என்னாத்துக்கு தேட்றே? அவுனுக்கு நொம்ப வருசத்துக்கு மின்னெயே கண்ணாளம் ஆயிப் போச்சே! திண் : இல்லாமெப் போனா, அவனோடெ கூடச் சூதாடலாமான்னு தேட்றியா? . முண் : இம்புட்டுச் சோக்கான பொண்ணு என்னை என்னாத்துக்குத் தேட்றே? நாந்தான் முண்டன்; ஆசையா தேட்றியே எனக்கு என்ன தரப் போறே? சொல்லேன். மல்லி : உனக்கு யாராவது பணம் தரவேண்டுமா? முண் : ஆமா, ஒரு களுதெ 10-ரூபா குடுக்கணும். அய்யோக்கிய முண்டே. அந்த நாயி இந்த ஊட்டுக்குள்ளற நொளஞ்சிதே அவன் ஒனக்கு என்ன சொந்தம்? ஆசெ நாயகனா? திண் : அந்தப் பொணத்தெக் கட்டிக்கினா வாள்ந்து பூடுவே! மல்லி : அடெ! ஏது வார்த்தைகள் வர வர அதிகரிக்கின்றன? போதும் நிறுத்துங்கள் அதிகப் பிரசங்கத்தை. இதோ இந்தக் காப்பை அவர் உன்னுடைய கடனுக்காக கொடுக்கச் சொன்னார். எடுத்துக் கொண்டு இங்கு நிற்காமல் நடவுங்கள். முண் : ஆகா! சந்தோசம்! அப்படியானா ரோக்கியந்தான்! அவன்மேலே எங்கிளுக்கு ஒரு கோவமுமில்லெ! எப்போ ஓணாமின்னாலும் இனிமேலே வந்து சூதாடட்டும். அடே! வாடா போவோம். திண் : அடே இவன் எம்புட்டு அளவான பணக்காரக் குட்டியை சம்பாறிச்சுக் கிட்டான் பாத்தியாடா இவ மேலே நவெ ஜிலுஜிலுன்னு மின்னுதுடா  (போகிறார்கள்) (மல்லிகா உள்ளே வருகிறாள்) மல்லி : அம்மா அவர்கள் காப்பை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்ப் போய்விட்டார்கள். வஸ : ஐயா! நண்பரே! நீர் திரும்பி வராததைப் பற்றி உம்முடைய மனைவி மக்கள் வருந்தியிருப்பார்கள். சீக்கிரம் போய் அவர்களுடைய ஆவலை நீக்கும். மகி : அம்மணி எனக்கு மனைவி ஏது? பிள்ளை ஏது? ஒன்றுமில்லை நான் ஏகாங்கி. நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஈசுவரன் உங்களைக்  காப்பாற்றுவான். உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்) (வெளியில் வந்து தனக்குள்)  ஆகா! இந்தத் தொழில் எவ்வளவு மானக் கேட்டையும் துன்பத்தையும் கொடுத்தது. சே! இப்படித் திக்கில்லாமல் அலைவதை விடப் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பதே நல்லது. என்ன உலகம்! நாணயமாய் வேலை செய்து இந்த ஒரு வயிற்றை வளர்ப்பதற்கு இந்த ஊரில் ஒரு வேலை அகப்படாமற் போய் விட்டதே! இவ்வளவு திடமான சரீரத்தை வைத்துக் கொண்டு நான் பிச்சை எடுக்கப் போனால் எவன் ஒரு பிடி சோறு போடுவான் தடியை எடுத்து வந்து மண் டையை உடைத்து அனுப்புவான். நல்லது! நான் இப்பொழுது காஷாயம் முதலியவற்றைப் பெற்றுச் சந்நியாசியாகிறேன். அதைவிடக் குறைந்த மனக்கவலை உடைய நிலைமை பூமியில் வேறொன்றுமில்லை. ஆகையால் அப்படியே செய்கிறேன்.  (போகிறான்) ---------------               அங்கம் 1 காட்சி 3   இடம் : மாதவராயருடைய மாளிகை. காலம்: மறு நாள் இரவு. குணசீலன் : (தனக்குள்) ஏழையாய் இருந்த போதிலும் யோக்கியதையும் நற்குணமுடைய எஜமானரிடத்தில் சேவகம் செய்வதே வேலைக்காரர்களுக்குப் பரம சந்தோஷம். அகங்காரமும் கடுகடுப்பும் உள்ளவனும், பணத்தைத் தவிர மற்ற எவ்விதமான யோக்கியதையும் இல்லாதவனுமான தலைவனிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் ஓயாத் துன்பம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. எதை மாற்றினாலும் மாற்றலாம். பிறவிக் குணத்தை எப்படி மாற்ற முடியும்? நாம் எவ்வளவுதான் முயன்றாலும் பட்டி மாடு வயலில் நுழைந்து பயிரைத் தின்பதையும், பிறனுடைய மனைவியின் பேரில் மனத்தை வைப்பவன், குடிப்பவன் முதலியோரின் குணத்தை மாற்ற யாரால் முடியும்? இப்பொழுது நேரம் எவ்வளவு இருக்கலாம், நடு இரவாய் விட்டதே! இன்னும் எஜமானர் திரும்பி வரவில்லையே! பாட்டுக் கச்சேரி இன்னும் முடியவில்லையோ? எனக்கோ நித்திரை வருகிறது; அவர் வருமுன் தூங்குவதும் தவறு. அதோ கதவு தட்டுகிற சப்தம் கேட்கிறது. வந்து விட்டார்கள்.  (மாதவராயரும் ஸோமேசனும் சம்பாஷித்த வண்ணம் வருகிறார்கள்.) மாத : ஸோமேசா! திலோத்தமா எவ்வளவு மாதுரியமாய்ப் பாடினாள் வீணையைப் போன்ற வாத்தியம் வேறு என்ன இருக்கிறது! ஆப்த நண்பர்களைப் போல, அது விசனத்தினால் வருந்தும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! அதைத் தேவர்களின் வாத்தியம் என்பதற்குத் தடையேயில்லை.  ஸோம : சங்கீதத்தின் இன்பத்தில் பொழுது போனதே தெரியவில்லை! ஆஹா எவ்வளவு நேரமாய் விட்டது! சந்திரன் அஸ்தமனமாகப் போகிறதே! நாய்கள் கூடக் குலைக்காமல் நித்திரை செய்கின்றனவே! நீங்கள் இனிமேலும் தாமதிக்காமல் சயனித்துக் கொள்ளுங்கள் அதிகம் கண் விழித்தால் உங்கள் தேகத்திற்குக் கெடுதலாய் முடியும். மாத : ஐயோ பாவம் நமக்காகக் குணசீலனும் நெடு நேரமாய் நித்திரை இல்லாமல் இருக்கிறான். (அன்போடு) அடே குணசீலா! நேரமாகிறது; நீ போய்ப் படுத்துக் கொள். கதவுகளை ஜாக்கிரதையாகப் பார்த்து மூடித் தாளிட்டு விட்டுப் படுத்துக் கொள். குண : ஸோமேசரே! இந்த நகை மூட்டையைப் பகலெல்லாம் நான் வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது உம்முடைய முறை. இதோ வாங்கிக் கொள்ளும். (கொடுக்கிறான்) ஸோமே : நல்ல வேளையாய் இன்று பகல் ஜாக்கிரதையாய்க் கழிந்தது. இந்த இரவு எப்படிக் கழியப் போகிறதோ தெரியவில்லை. இந்த மங்களபுரத்தில் திருடர்கள் இல்லாமல் இருந்தால் இப்பொழுது எனக்கு இவ்வளவு கவலை இராது; நானும் நன்றாய்த் தூங்கலாம். இனி எனக்கு நித்திரை எங்கு வரப் போகிறது? போய்ப் படுத்துப் பார்க்கிறேன். மாத : மித்திரா! இது நம்பிக்கையின் பேரில் நம்மிடத்தில் வைக்கப்பட்டது. இது சொந்தக்காரரிடத்திற் போய்ச் சேரும் வரையில், இதை நாம் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும், பார்த்துக் கொள். (சயனித்துக் கொள்கிறார்) (தனக்குள் ஆகா! அந்த சங்கீதம் இன்னமும் என் காதில் சப்தித்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு இனிமை (தூங்குகிறார்) (ஸோமேசனும் வேறொரு பக்கத்திற் படுத்துத் துயிலும் பொழுது கனவு கண்டு உளறுகிறான்.) ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன பாட்டு! நல்ல வீணை! திலோத்தமாவின் அழகே அழகு! திலோத்தமா! உன் தேகத்தில் உள்ள ஆபரணங்கள் பத்திரம்! திருடன்! திருடன்; பிடியுங்கள்! பிடியுங்கள்! ஆகா!! ஓட முடியவில்லையே? கால் பூமியை விட்டுக் கிளம்பவில்லையே! (சற்று மெளனம்) (சசிமுகன் என்னும் திருடன் கையிற் கன்னக் கோலுடன் மெதுவாக மார்பினால் நகர்ந்துகொண்டு வருகிறான்.) (தனக்குள் மெதுவாக) அப்பா தோட்டத்தின் சுவரைத் தாண்டி உள்ளே வந்து சேர்ந்தேன். (மேலே பார்த்து)  சரி! சந்திரன் அஸ்தமனமாகும் சமயத்தில் இருக்கிறது; இதுவும் அதிர்ஷ்டந்தான்! சந்திரனும் திருடருக்கு அனுகூலமானவன்தான்! என்னைப் போன்ற புண்ணியவான்களுக்கு இரவானது இருளைக் கொடுத்து உதவுவதைப் போல, ஒரு தாய் கூடத் தன் குழந்தைக்கு உதவி செய்ய மாட்டாள். தோட்டத்திற்குள் வந்தது ஒரு பெரிய காரியம் அல்ல. இனி இந்த மாளிகைக்குள் நுழைவதே அருமையான விஷயம். பிறர் தூங்கும் பொழுது ஜெயம் பெறுவதும், தந்திரத்தினால் பொருளை அபகரிப்பதுமான இந்த உத்தியோகத்தைக் கெட்ட தொழில் என்று ஜனங்கள் சொல்லுகிறார்களே! முட்டாள் ஜனங்கள்! இது அவ்வளவு வீரத் தனமல்ல என்றாலும் பிறருக்கு அடிமைத் தொழில் செய்யாமல் சுவதந்திரத்தோடு இருக்கக் கூடிய அலுவல் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. பாரத யுத்தத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பகைவரை அசுவத்தாமன் இரகசியமாகப் போய்க் கொன்று வெற்றி அடையவில்லையோ! ஆகையால் இது குற்றமாகாது. (நாற்புறங்களையும் உற்று நோக்கி) எங்கே கன்னம் வைக்கலாம்! எங்கே துளை போட லாம்! ஈரத்தினால் எந்த இடம் தளர்ந்து உப்புப் பூத்திருக்கிறதோ பார்க்கலாம். மனிதர் சமீபத்தில் இல்லாத இடமாக இருக்க வேண்டும். கல், மண் முதலியவை விழுவதின் ஒசை ஒருவருக்கும் காதிற்படக் கூடாது. (சுவற்றைத் தடவிப் பார்க்கிறான்.)  பேஷ் இதுதான் சரியான இடம்! இங்கு உப்பறித்திருக்கிறது! அதோடு ஒரு எலி வளையும் இருக்கிறது! இது நல்ல சகுனந்தான். சொத்து நிச்சயமாய் அகப்படும்; தடையில்லை. கன்னம் வைப்பதில் நான்கு வகைகளுண்டு. சுட்ட செங்கல்லைப் பெயர்த் தெடுப்பது, சுடாத கற்சுவரைக் கடற்பாறையால் தோண்டுவது, மண் சுவராய் இருந்தால் தண்ணிர் விட்டுத் தோண்டுவது, மரப் பலகை உட்புறத்தில் வைக்கப்பட்ட சுவராய் இருந்தால், அதை வாளினால் அறுப்பது, இது சுட்ட செங்கற் சுவர். கற்களை ஒவ்வொன்றாய் பெயர்த்து எடுத்து விடுகிறேன். இதில் என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுகிறேன். துளையைத் தாமரைப் புஷ்பத்தைப் போலச் செய்யலாமா? அல்லது பூரண சந்திரனைப் போலச் செய்யலாமா? இல்லாவிட்டால் தண்ணீர்ப் பானையைப் போலச் செய்யலாமா? இதைப் பார்த்து விட்டு வீட்டுக்காரர்கள் மூக்கில் கையை வைத்து ஆச்சரியப்பட வேண்டும். திருடப் போனாலும் பிராம்மணன் சாஸ்திரப்படியும் புத்திசாலித்தனமாயும் தன் வேலையைச் செய்வான் என்று இதைக் காண்போர் சொல்ல வேண்டும் நான் உள்ளே போய்த் திருடிக் கொண்டு வெளியில் வருகிற வரையில் அந்தக் கந்தனே என்னைக் காப்பாற்ற வேண்டும்! (கை குவித்து) ஊர்த் தெய்வங்களை எல்லாம் வணங்குகிறேன். எனக்கு இந்த அருமையான வித்தையைக் கற்றுக் கொடுத்தவரான குருவின் பாதமே துணை! அவர்தாம் எனக்கு இந்த மாத்திரைக் கோலை கொடுத்தவர். இதை வைத்துக் கொண்டு போனால் என்னை எவரும் பிடிக்க முடியாதாம். சே! என்ன வெட்கக்கேடு? அளப்பதற்குத் தேவையான நூலை எடுத்துக் கொண்டுவர மறந்து விட்டேனே! (யோசித்து நல்ல வேளையாய்ப் பிராம்மணன் ஜாதியிற் பிறந்தேன். என்னுடைய பூணுலை நான் இத்தனை வருஷமாய்த் தூக்கிச் சுமந்ததற்கு இந்தச் சமயத்திற்குத்தான் அது உபயோகப்படப் போகிறது. என்னைப் போன்ற உத்தமப் பிராம்மணருக்குப் பூணூல் இல்லாவிட்டால் என்ன யோக்கியதை இருக்கிறது. சுவற்றின் உயரம், கனம் முதலியவை எவ்வளவு இருக்கின்றன என்பதை சுலபத்தில் இதனால் அறிந்து கொள்ளலாம். காப்பு முதலிய கெட்டியான நகைகளை இழுத்து விலக்குவதற்கும், துளைக்குள் விட்டுத் தாழ்ப்பாளைத் திறப்பதற்கும், பாம்பு கடித்து விட் டால் விஷம் ஏறாமல் உடனே இறுகக் கட்டுவதற்கும் இதைப் போல உதவி செய்யக் கூடிய சமய சஞ்சீவி வேறு என்ன இருக்கிறது?  (பூணூலால் சுவரை அளக்கிறான்)  சரி இன்னும் ஒரே செங்கல் மிகுதி இருக்கிறது! இதோ எடுத்து விட்டேன். (உள்ளே பார்க்கிறான்) ஒரே விளக்கு மங்கலாய் எரிகிறது. அதைப் பற்றிக் கவலையில்லை. உள்ளே போகிறேன். என்னைப் பாதுகாக்க அந்தக் கார்த்திகேயன் இருக்க எனக்கு என்ன கவலை?  (உள்ளே நுழைகிறான்)  யாரோ இரண்டு மனிதர் தூங்குகிறார்கள். நானோ ஒருவன். தப்பித்துக் கொண்டு வெளியில் ஓடுவதற்கு அநுகூலமாக முதலில் வெளிக் கதவைத் திறந்து வைக்கிறேன். (கதவைத் திறக்கிறான்) அடாடா! கோமுட்டி வீட்டுக் கதவைப் போல் கிரீச் என்று ஓசை செய்கிறதே! இதற்கு என்னிடத்திலா மருந்தில்லை! இரும்பு துருப்பிடித்திருக்கும் இடத்தில் கொஞ்சம் தண்ணிரை விட்டால் சப்தம் இல்லாமல் போகிறது. (எதிரில் இருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்து விடுகிறான்) சரி இப்பொழுது சரியாய்ப் போய்விட்டது இவர்கள் உண்மையில் நித்திரை செய்கிறார்களா அல்லது பாசாங்கு செய்கிறார்களா என்று பரீட்சை செய்து பார்க்கிறேன். இவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள். மூச்சை அவசரம் இல்லாமல் ஒழுங்காய் விடுகிறார்கள். கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். உடம்பு சோர்ந்து கிடக்கிறது, கணுக்கள் எல்லாம் தளர்ந்திருக்கின்றன. (நெருப்புக் குச்சியைக் கிழித்து அவர்களின் முகத்திற்கு நேரில் பிடிக்கிறான்) பொய்த் தூக்கமாய் இருந்தால் வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் அதைப் பொறுக்கக் கூடாமையால், முகத்தில் சலனம் உண்டாகும். கண்களிலும் அசைவுண்டாகும். சரி. இவர்கள் நன்றாய் நித்திரை செய்கிறார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எல்லாம் சரியாய் இருக்கிறது! இதென்ன தம்புரு, வீணை, புஸ்தகங்கள் முதலியவை இருக்கின்றனவே! இது தாசியின் வீடோ அல்லது பாடகன் வீடோ தெரியவில்லை. இதை ஒரு பிரபுவின் வீடென்று நினைத்தல்லவோ மதிமோசம் போய் இதற்குள் நுழைந்து விட்டேன். இல்லாவிட்டால் வேறு எங்கேயாயினும் போயிருப்பேனே! விடியா மூதேவிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படுவதில்லை என்பதைப் போலாயிற்றே என்னுடைய பிழைப்பு. இது வாஸ்தவத்தில் ஏழ்மைத் தனமா? அல்லது வெளி வேஷமா அல்லது திருடனுக்காவது அரசனுக்காவது பயந்து தன் சொத்தை எல்லாம் ஒளித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே! பூமிக்குள் புதைத்து வைத்திருப்பானோ? இந்த மணிகளைக் கீழே உருட்டிப் பார்த்தால் மேடு பள்ளம் இருப்பதும், சமமாய் இருப்பதும் தெரியும். அதனால் பூமி வீடு கட்டப்பட்ட பிறகு தோண்டப் பட்டதா என்பது நன்றாய்த் தெரியும். (உருட்டுகிறான்) சீ! இவன் நித்திய தரித்திரன்! இங்கே ஒன்றும் அகப்படாது! இவ்வளவு வீண் பாடுதான். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்) ஸோமே : (கனவு கண்டு தானே உளறுகிறான்) ஒ மாதவராயரே! திருடர்கள் கன்னம் வைக்கிறார்கள் நகை மூட்டையைத் திருட வருகிறார்கள்! இதோ இந்த மூட்டையை நீரே வைத்துக் கொள்ளும்.  சசிமுகன் : (திடுக்கிட்டு) உண்மையில் விழித்துக் கொண்டானோ? என்னைப் பார்த்து விட்டானோ? ஒன்றுந் தெரியவில்லையே! இது மாதவராயருடைய வீடா தான் மிகுந்த ஏழை என்பதை எனக்குத் தெரிவிக்க இவ்விதமாகப் பரிகாசம் செய்து இடித்துக் காட்டுகிறானோ? (நெருங்கிப் பார்க்கிறான்) இல்லை. இல்லை. இவன் கனவு காண்கிறான் போல் இருக்கிறது. இவன் தலையின் கீழ் ஏதோ ஒரு துணி மூட்டை இருக்கிறது! சே! ஏற்கெனவே பரம தரித்திர நிலைமையில் இருக்கும் இவனுடைய சொத்தைத் திருடி இவனை மேலும் வருத்துவது பாவம். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்) ஸோமே : ஐயா! நீர் இதை உடனே எடுத்துக் கொள்ளும். இல்லாவிட்டால் இது போய்விடும். பிறகு என்னைக் கேட்கக் கூடாது.  சசி: மிகவும் அந்தரங்க விசுவாசத்துடன் இவ்வளவு வேண்டிக் கொள்ளும் இவனுடைய வார்த்தையை மரியாதை படுத்தாமல் நான் எப்படி மறுத்துப் போகிறது? நான் இந்தக் காணிக்கையை அவசியம் பெற்றுக் கொண்டு இந்தப் பரம பக்தனை இரட்சிக்க வேண்டும். இந்த விளக்கின் வெளிச்சம் நம்மை ஒருவேளை காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் விளக்கு இவர்களுக்கு அருகில் இருக்கிறது. இந்தச் சிமிழில் அடைத்துக் கொணர்ந்திருக்கும் விட்டிற் பூச்சிகளை இதோ பறக்க விடுகிறேன். (பூச்சிகளைப் பறக்க விடுகிறான்) பலே! அதோ விளக்கின் அருகில் போய்விட்டன! உம் ஆகட்டும் சீக்கிரம், பலே! அதோ அணைத்து விட்டன! என்ன இருள்! என்னுடைய உயர் குலத்தின் பிரகாசம் இந்தக் கேவலத் தொழிலினால் எப்படி மழுங்கிற்றோ அப்படி அல்லவோ இருள் மூடிக் கொண்டது. நான் பிராம்மணனுடைய புத்திரன். நான்கு வேதங்களையும் படித்தவன். பிறரிடத்தில் நான் என்ன நிலைமைக்கு வந்து சேர்ந்தேன்! என்ன தொழிலில் அமர்ந்தேன்! மல்லிகாவை எப்படியாவது நான் அடைய வேண்டும் என்னும் ஆசை அல்லவோ என்னை இப்படித் தூண்டுகிறது. என்ன செய்கிறது! இதெல்லாம் பூர்வஜென்ம வாசனை! இது தவறென்று தெரிகிறது. என் மனது இதைச் செய்யக் கூடாது என்று தடுத்த வண்ணமிருக்கிறது. தேகம் மாத்திரம் தானாக இவைகளைச் செய்து கொண்டே போகிறது! அதைத் தடுக்க என்னால் முடியவில்லையே. ஆகா! இந்த பிராம்மணன் நமக்கு எவ்வளவு மரியாதை செய்து நம்மை உபசரிக்கிறான்! வேதங்களைப் படித்த திருடன் சம்பாதனை இல்லாமல் வெறுங் கையனாய்த் திரும்பக் கூடாதென்னும் நல்ல எண்ணம்! என்ன இவனுடைய மேன்மைக் குணம்! (அருகில் போகிறான்) ஸோமே : (அரைத் துக்கத்தில் திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு) நண்பரே! என்ன உம்முடைய கை இவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது? சசி : (தனக்குள்) சே! நான் சுத்த முட்டாள் தண்ணீரில் கையை வைத்ததினால் என் கை குளிர்ந்திருப்பதை மறந்து விட்டேன். (கைகளை ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துச் சூடு உண்டாக்கிக் கொண்டு நகை மூட்டையை எடுக்கிறான்.) ஸோமே : (அரை நித்திரையில்) மூட்டையை எடுத்துக் கொண்டீரா? . சசி : (தனக்குள்) ஆகா இந்தப் பிராம்மணோத்தமரின் உபகாரத்தை என்ன என்று சொல்வேன்! (உரக்க) ஆம்! எடுத்துக் கொண்டேன். ஸோமே : (தித்திரை மயக்கத்தில்) அப்பா கவலை ஒழிந்தது! இனி நன்றாய்த் துங்குகிறேன். (தூங்குகிறான்) சசி : (தனக்குள்) பிராம்மணோத்தமரே! தூங்கும்! இப்படியே நூறு வருஷம் எழுந்திருக்காமல் நன்றாய்த்துங்கும். சரி! எனக்கு நேரமாகிறது. இந்த மூட்டையை வஸந்தஸேனையின் வீட்டிற்குக் கொண்டு போய் மல்லிகாவின் கிரயத்தைக் கொடுத்து அவளுடைய அடிமைத் தன்மையை நீக்கி அவளை மீட்டுக் கொண்டு போகிறேன். (திடுக்கிட்டு) இதென்ன காலடியோசை கேட்கிறதே! யார் வருகிறார்கள்? அதோ யாரோ ஒருவன் வருகிறான். அவன் கூச்சலிடுமுன் அவனைக் குத்திக் கொன்று விடுகிறேன். (கோமளா வருகிறாள்) கோமளா : (தனக்குள்) இதென்ன ஓசை இது திருடனாய் இருக்குமோ! எங்கும் இருளாய் இருக்கிறதே விளக்கை ஏற்றுகிறேன். (விளக்கை ஏற்றுகிறாள்) சசி : (தனக்குள்) இவள் யாரோ ஒரு ஸ்திரீயல்லவோ சே! இவளைக் குத்தக் கூடாது! என் வேலை முடிந்து விட்டது. மெதுவாகப் போய் விடுகிறேன். (மறைந்து விடுகிறான்) கோமளா : கூ! கூ! திருடன்! திருடன்! வாருங்கள் திருடன்! திருடன்! ஒடுகிறான்! ஒடுகிறான்! ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து) என்ன அது! என்ன அது! கோமளா! ஏன் அப்படிக் கூச்சலிடுகிறாய்? கோமளா : திருடன்! திருடன்! வாரும்! வாரும்!  ஸோமே : திருடனாவது இங்கு வருவதாவது! என்ன கனவோ?  கோமளா: இல்லையில்லை! இதோ பாரும் வாசற்கதவு திறந்திருக்கிறது!  மாதவ : ஸோமேசா! இதென்ன இங்கே இவ்வளவு கூச்சல்! ஸோமே : திருடன் வந்துவிட்டுப் போயிருக்கிறான்!  மாத: எப்படி உள்ளே வந்தான்? ஸோமே : இதோ பாருங்கள் துவாரத்தை! மாத : ஆகா! இந்தத் துளை எவ்வளவு அழகாய் இருக்கிறது! திருடன் மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறானே! ஸோமே : நல்ல இடம் பார்த்துத் திருட வந்தான் முட்டாள்! மாத : இவன் இந்த ஊர்த் திருடனாய் இருக்க மாட்டான். இவன் அந்நிய தேசத்தான். இந்த வீட்டின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து நுழைந்திருக்கிறான். நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்பது இந்த ஊரில் யாருக்குத்தான் தெரியாது! திருட்டிலும் அதிர்ஷ்டம் வேண்டும். நான் நல்ல ஸ்திதியில் இருந்த பொழுது இவன் திருட வந்திருக்கக் கூடாதா! இவன் சிரமத்திற்கு ஏதாவது பொருள் கிடைத்திருக்குமே! இவன் தன்னுடைய நண்பரிடத்தில் என்னை இகழ்ந்தல்லவோ பேசுவான். ”இவ்வளவு இடம்பமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறான். உள்ளே ஓட்டைச் சட்டிக்கும் வழி இல்லை” என்று சொல்லுவானே! ஸோமே : ஐயோ பாவம்! அவன் இவ்வளவு பாடுபட்ட தும் வீணாய்ப் போயிற்றே என்று விசனப்படுகிறீர்களே! நான் உங்களிடம் கொடுத்த வஸந்தஸேனையின் நகை மூட்டையில் தாம்பூலம் வைத்து அவனுக்குத் தத்தங் செய்து விடுகிறது தானே! மாத : நகை மூட்டையை என்னிடத்தில் கொடுத்தாயா? என்ன விளையாடுகிறாய்? ஸோமே : (சந்தோஷமாக) நல்ல வேளை! நான் அதை உங்களிடம் கொடுக்காமல் இருந்தால், அதை அடித்துக் கொண்டு போயிருப்பான். எருமைக் கடாவைப் போல நான் தூங்கி விட்டேன் என்று சொல்லுவீர்கள்; தப்பினேன். மாத : என்ன ஸோமேசா? இன்னமும் தூக்கக் கலக்கமா? இதுதானா பரிஹாஸம் பண்ணும் சமயம்? நகை மூட்டை ஜாக்கிரதையாய் இருக்கிறது அல்லவா? என் மனதிற் கவலை உண்டாய் விட்டது. ஹாஸ்யம் செய்யாமல் உண்மையாய்ப் பேசு. ஸோமே : இதென்ன ஆச்சரியம்! நீங்கள் தான் பரிஹாஸம் செய்கிறீர்கள்! வீணில் என்னோடு வாக்குவாதம் செய்யாமல் நகை மூட்டை இருக்கிறதா என்று முதலிற் பாருங்கள். மாத : நீ என்னிடத்தில் எப்பொழுது கொடுத்தாய்?  ஸோமே : உங்கள் கை குளிர்ச்சியாய் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டே சற்று முன்பாகக் கொடுத்தேனே! மாத : (தனக்குள்) ஓகோ! அப்படித்தான் இருக்க வேண் டும் (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்து) மித்திரா! உன்னுடைய உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். ஸோமே : ஆபத்து சமயம் என்பதை அறிந்து மூட்டையை உங்களிடத்தில் கொடுத்தேன். இது ஒரு உபகாரமா? மாத : நீ செய்தது உபகாரமல்ல. ”தரித்திரன் வீட்டிற்குள் நுழைந்தேனே, ஒன்றும் அகப்படவில்லையே” என்று திருடன் என்னைத் துஷிக்காமல் இருக்கச் செய்தாயே! அதுதான் உதவி! (யோசனை செய்கிறார்) ஸோமே : என்ன ஆச்சரியம்? மூட்டை திருட்டா போய் விட்டது! எப்படிப் போயிற்று? நம்மை நம்பி அவள் நம்மிடத்தில் ஒப்புவித்தாளே! மாத : (பெரிதும் விசனத்துடன்) ஆஹா! நம்பிக்கை மோசம் செய்து விட்டேனே! அவள் வந்து கேட்டால் என்ன சொல்வேன்? ஈவரா! (மூர்ச்சிக்கிறார்) ஸோமே : ஸ்வாமி! வருத்தப்பட வேண்டாம். நகைகளைத் திருடன் கொண்டுபோய்விட்டால் அதற்கு நாமென்ன செய்கிறது? இதைப் பற்றி நீங்கள் இவ்வளவு விசனப்படுவானேன்? மாத : அடே மித்திரா! திருட்டுப் போய் விட்டதென்று சொன்னால் என்னை யார் நம்புவார்கள்! எனக்கு என்னமோ பெருத்த துன்பம் சம்பவிக்கப் போகிறது! தரித்திரனிடத்தில் சந்தேகம் உதிப்பதே இந்த உலக இயற்கை. இதுவரையில் நான் ஏழ்மைத் தன்மையினால் வருந்தி இருந்தேன்! இப்பொழுது என்னுடைய பரவிய கீர்த்திக்கும் அழிவு காலம் வந்துவிட்டதே! விருத்தம்: முகாரி  போனதோ பெருமை யின்று! புகழெலா மழியக்கால  மானதோ! பொருளிலான் சொல் யாவரே மதிப்பர்? தீமை  யானதோ புரிந்தே னிந்த அலக்கணிற் கருக னாத  லேனிதோ முன்னாட் டீமை? எங்ஙணம் பொறுப்பே னேழை.  ஐயோ! தெய்வமே! என்ன செய்யப் போகிறேன்? ஸோமே : இதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை வேண்டுவதில்லை. அவள் நம்மிடத்தில் ஒப்புவித்ததை பார்த்தவர் யார்? அதற்கு ஸாஷியும் இல்லை ஒன்றும் இல்லை. நம்மிடத்திற் கொடுக்கவில்லை என்று நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம். மாத : (செவிகளை மூடிக் கொண்டு) ஆகா! விருத்தம்: மோகனம்  என்னசொன் மொழிந்தாய் என்னுயி ரழிந்திட்டாலும்  இன்னமு மனைத்து நீங்க இழிதக வெய்திட்டாலும்  முன்னுள துறக்க மென்னு முயர்கதி மொழிந்திட்டாலும் சொன்னசொன் மறுப்பதுண்டா? உன்னலும் பாவ மன்றோ!  எத்தகைய பாவ மொழிகளைச் சொல்லுகிறாய்! இவ்விதம் பொய் சொல்ல நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். இதனால் என் உயிர் போனாலும் கவலையில்லை. வீடு வீடாய்ப் பிச்சை எடுத்தாயினும் இந்தக் கடனைத் தீர்ப்பேனே யொழியப் பிறரை நான் இவ்விதம் ஒரு நாளும் வஞ்சிக்க மாட்டேன். (பெருத்த விசனத்துடன் ஒரு புறமாகப் போய் விடுகிறார்) ஸோமே : (ஒரு புறமாக) ஐயோ! என்ன ஆபத்து வந்து விட்டது! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது சரியாய்ப் போய் விட்டதே! அதோ யார் வருகிறார்கள்? ஓகோ! எஜமானி அம்மாள் வருகிறார்கள் (கோகிலமும் கோமளாவும் வருகிறார்கள்) கோகி : அடி கோமளா! என் பிராணபதி எங்கிருக்கிறார்? அவருடைய திருமேனிக்கு யாதொரு துன்பமும் சம்பவிக்கவில்லையே! அவர் செளக்கியந்தானே? அவருடைய நண்பர் ஸோமேசருக்கு யாதொரு கெடுதலுமில்லையே? கோமளா : தாயே! இருவரும் க்ஷேமமே! ஆனால் தாசியினால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகை மூட்டை மாத்திரம் திருட்டுப் போய்விட்டது. கோகி : ஆகா! என்ன ஆச்சரியம்! நகை மூட்டை போய் விட்டதா அவர் தேகத்திற்கு யாதொரு விபத்துமில்லாமல், தப்பித்ததுகூட எனக்கு சந்தோஷமாகத் தோன்றவில்லையே. பிராணனிலும் மானம் அல்லவோ பெரிது! அவருக்கு இதனால் பெருத்த அபவாதம் வந்து விடுமே தன் ஏழ்மைத் தனத்தினால், நகைகளை அவரே எடுத்துக் கொண்டதாய் அல்லவா ஜனங்கள் நினைப்பார்கள். பொழுது விடிந்ததும் இந்த அபவாத மொழியைக் கேட்பதைவிட இப்பொழுதே நாங்கள் இருவரும் நாவைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விடுவதே நல்லது (சிறிது யோசனை செய்கிறாள்) ஓகோ! இதோ என் கழுத்தில் ஒரு வைர ஸரம் மிகுதியாய் இருக்கிறது. என்னுடைய ஆபரணங்கள் எல்லாம் போயும், இது விலை மதிப்பற்றது என்று இதை மாத்திரம் விலக்காமல் வைத்திருக்கிறேன். திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதைக் கொடுத்து விடுகிறேன். அதோ ஸோமேசர் நிற்கிறார்! அவர் மூலமாக இதை அனுப்புகிறேன்! ஓய்! ஸோமேசரே! நம்முடைய எஜமானர் எங்கிருக்கிறார்? ஸோமே : அம்மணி! அவர் சகிக்க முடியாத விசனத்துடன் தன் சயன அறைக்குப் போய்விட்டார். கோகி : (தனக்குள்) தன் வாலின் மயிரில் ஒன்று முள்ளில் மாட்டிக் கொண்டாலும், அந்த அவமானத்தைப் பொறுக்க முடி யாமல், அதன் பொருட்டு உயிரை விடும் கவரி மான் அல்லவோ என் பிராண காந்தர்! அவர் என்ன செய்து கொள்வாரோ தெரியவில்லை. நான் நேரில் அவரிடம் போய் இந்த வைர சரத்தைக் கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். (உரக்க) ஸோமேசரே! நாம் பேசாமல் இருந்தால் நம்முடைய எஜமானர் தன் உயிருக்கு ஹானி தேடிக் கொள்வார். ஆகையால் உடனே இந்த வைர ஸரத்தை அவரிடத்திற் கொண்டு போய்க் கொடுத்துத் திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதை அனுப்பச் சொல்லும். இதை அவர் எப்படியாவது ஏற்றுக் கொள்ளும்படி செய்யும். ஸோமே : (சந்தோஷத்தோடு வங்கிக் கொண்டு) அப்படியே ஆகட்டும். (கோகிலமும் கோமளாவும் போய் விடுகிறார்கள்) மாத :(தனக்குள்) (பாதிமதிநதி போதுமணிசடை - என்ற திருப்புகழின் மெட்டு)  1. பூமி நிறைபல தீமைகளில்மிடி போலலுதை துயர் எதுவேறு? போக செறிபுகழ் யாவரொருமொழி கூறவருபவர் புவிமீது? 2. மான மணியென நாடுமனிதர்கள் வாழ இடமிது சரியாமோ? தான தவமெனு மோது பலவகை யான அறியவை உளவாமோ. 3. மாது வயிறுறு காலமுதலிது வாதுதருதுயர் நிலையாகும்?  மாலை தனிலுறு காலன் வரும்வரை யாவரிடரினில் அழிவாரோ?  4. பாவியெனையினி யாவதளியொடு பாதமலருற அருளீசா? பாவவுலகினில் வாழல்பெருமிடர் போதுமடி யிணைதருவாயே.  "மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே!” என்று சொன்னவர் அதிமேதாவியென்பது இப்பொழுதே பரிஷ்காரம் ஆயிற்று. ஸோமேசன் தன்னுடைய மனோ வேதனையில் ஏதாவது அக்கிரமமான காரியத்தைச் செய்துவிடப் போகிறானோ என்று என் மனம் கவலைப்படுகிறது! ஸோமேசா! ஸோமேசா! அங்கு என்ன செய்கிறாய்? (ஸோமேசன் வருகிறான்.) ஸோமே : ஸ்வாமி! களவு போன நகைகளுக்குப் பதில் நகை செய்கிறேன். மாத : என்னுடைய மூடத்தனத்திற்காக நகை செய்கிறாயோ? அல்லது என் விதியை நினைத்து நகை செய்கிறாயோ? ஸோமே : நம்மை அவமானப்படுத்த எண்ணும் விதியைப் பார்த்து இந்த வைர ஸரம் நகை செய்கிறதைப் பாருங்கள். மாத : (திடுக்கிட்டு) ஸோமேசா இதென்ன இது? என்ன காரியம் செய்தாய்? எங்கிருந்து இந்த நகையை அபகரித்துக் கொண்டு வந்தாய்? ஸோமே : நான் எங்கிருந்தும் அபகரிக்கவில்லை. புருஷனுடைய யோக்கியதைக்குத் தகுந்த உத்தம குண மனைவியர் செய்யக் கூடிய காரியமே இது! காணாமற் போன நகைகளுக்குப் பதிலாய் இதை அனுப்பும்படி தங்கள் பிராண பத்தினி இதை அனுப்பினார்கள். தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள். மாத : ஆகா! விருத்தம்: காம்போதி  வறுமையிற் சிறிதுமாறா அன்பினையுடைய பெண்டீர்  உறுகணி லுதவுநேயர் உயரற நெறியிற் சேறல்  பெறுபவ ரெனைய பொல்லாங் கெய்தினும் வறியராகார்  சிறுமையு மலக்கண்யாவு மென்செயு மகன்று போமால்.  நான் ஒரு ஏழையென்றல்லவோ என்னை மதித்து வருந்தினேன். நான் ஒரு நாளும் ஏழையாக மாட்டேன். புருஷனுடைய செல்வம் எல்லாம் அழிந்தும், தன் அன்பைத் துறக்காத மனைவியும், நம் சுகதுக்கங்களைத் தன்னுடையவையாகப் பாவிக்கும் உண்மை நண்பனும், ஏழ்மைத் தனத்தினால் மழுங்காத நீதி நெறியும் ஆகிய மூன்றும் எனக்கிருக்க, நான் எப்படி ஏழையாவேன்? என்றாலும் நான் இந்த வைர ஸரத்தை வாங்கிக் கொள்ள மாட்டேன். ஆகா ஒரு ஸ்திரீயினிடத்தில் பொருள் உதவி பெறும் படியாக வந்து விட்டதா என் கதி? அவளுடைய பொருள் எனக்கு வேண்டாம். ஸோமே : ஸ்வாமி! இந்த சமயத்தில் தாங்கள் இப்படிச் சொல்லக் கூடாது. எஜமானி அம்மாளே தங்களுடைய பொருள் ஆயிற்றே. அப்படியிருக்க, அவர்களுடைய பொருளெல்லாம் உங்களுடையவை தாமே. தவிர எவ்வளவோ விலை உயர்ந்த காணாமற் போன நகைகளின் பெறுமானத்தை நாம் இந்தக் கேவல நிலைமையில் எப்படிச் சம்பாதிக்க முடியும்? ஆகையால் இதை வாங்கிக் கொள்ளுங்கள். மாத : (சிறிது யோசனை செய்து) சரி! நீ சொல்வதும் நியாயந்தான்! சீக்கிரம் நீரே வஸந்தஸேனையிடம் போய், நான் அவளுடைய நகைகளைச் சூதாடித் தோற்று விட்டதாகவும், அதற்குப் பதிலாக இந்த ஸரத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும் தெரிவித்துக் கொடுத்துவிட்டு வாரும்! ஸோமே : முழு ஸரத்தையுமா கொடுக்கச் சொல்லுகிறீர்கள்? நன்றாய் இருக்கிறதே! அவளுடைய நகைகளை நாம் தின்று விட்டோமா? அல்லது நாமே அபகரித்துக் கொண்டோமா? திருடன் கொண்டு போய்விட்டால் அதற்கு நாம் என்ன செய்கிறது? சூதாடி இழந்து விட்டதாகச் சொல்லுவானேன்? திருட்டுப் போய் விட்டதென்று சொல்லி அதற்குப் பதில் நாலைந்து வைரங்களை அனுப்பினால் போதுமே ஏழு சமுத்திரங்களையும் கடைந்தெடுத்த சாரத்தை யொத்த இந்த ஸரம் முழுவதையுமா அவளிடத்திற் கொடுக்கிறது? மாத : ஸோமேசா! என்ன நீ உலோபியைப் போலப் பேசுகிறாயே! ஸோமே : தரித்திரன் எப்படி உலோபியாவான்? மாத : சரி நேரமாகிறது! நான் சொன்னதைச் செய்! பொழுது விடியும் சமயமாய் விட்டது; நான் நித்திய கர்மானுஷ்டானம் செய்யப் போகிறேன்.  (போகிறார்)  ஸோமே : (தனக்குள்) கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது என்றேனும் பொய்க்குமோ? ஒரு நாளும் இல்லை. -----------------------       அங்கம் 1 காட்சி 4   இடம் வஸந்தஸேனையின் மாளிகை.  மேன் மாடியில் வஸந்தஸேனை சோபாவிற் சாய்ந்து கொண்டிருக்கிறாள்.  சசிமுகன் வெளியில் இருந்து மாளிகைக்குள் நுழைகிறான். காலம் மேற்படி தினம் விடியற்காலை.  சசிமுகன் : (தொண்டிச் சிந்து: நந்தன் சரித்திரம் ”பழன மருங்கனையும்” என்ற பாட்டின் வர்ண மெட்டு)  1. எனதே உயிர்நிலையாம் - அந்த இந்திர சந்திரரும் இணையோ!  2. மனதே நினைப்பதெல்லாம் - இந்த மாத்திரைக் கோலினால் யான் பெறுவேன் 3. இரவே எனது நகர் - அதில் நித்திரையே படை யான் அரசன் 4. குறைவே திருட்டிலில்லை - கலை  கற்றலுங் கண்ணையிழத்தலு மேன்?  (தனக்குள்) என்னுடைய உத்தியோகமும் சந்திரனுடைய உத்தியோகத்தைப் போலவே இரவில் பிரகாசிப்பதும் பகலில் ஒளியை இழந்து ஒடுங்குவதுமாய் இருக்கிறது! இதனாலே தான் எனக்கு சசிமுகன் (சசி = சந்திரன்) என்று பெயர் கொடுத்தார்களோ! நான் இந்த மேன்மையான உத்தியோகத்தைச் செய்வேன் என்று நான் பிறந்த பொழுதே எப்படி அறிந்து கொண்டார் களோ தெரியவில்லை. என்னுடைய காரியம் சோம்பலே நிறைந்த இரவை அவமானப்படுத்தி, நித்திரா தேவியைத் தோற்கடித்து, ஏமாந்த காவலை ஏளனம் செய்கிறதல்லவா! ஆனால் நான் ஒருவருக்கும் தெரியாமல் எவ்வளவோ சாமர்த்தியமாய் இந்தக் காரியத்தை முடித்த போதிலும், என் செய்கைகளை எல்லாம் பார்த்த வண்ணம், என்னுடன் தொடர்ந்தும் நடந்தும் ஓடியும் வருபவ னும், எல்லாத் திருட்டையும் தன் கண்ணால் காண்பவனும், எவராலும் ஏமாற்ற முடியாத அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தனான கடவுளை நினைக்க, என் அச்சம் அதிகரிக்கிறது. என் மனதே இது குற்றம் இதுகுற்றமென்று நீதி போதனை செய்த வண்ணம் இருக்கிறது, என்ன செய்வேன்? என் மனதில் முற்றிலும் குடி கொண்ட அந்த யெளவன மங்கையின் பொருட்டல்லவோ நான் இப்படி இரவைப் பகலாக்கி, எவ்வளவோ தந்திரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் வஸந்தஸேனையின் மாளிகை. மல்லிகா எங்கிருப்பாளோ தெரியவில்லையே! தன்யாசி-ரூபகம்  ப: எவ்விடங் காண்பேனோ? என் ரதியை எத்தினமடைவேனோ? அ. செவ்விய மேனியள், ஜெகத்திலிணையே இல்லாள்  ஒவ்வொரு நொடிவளர் சுந்தரவல்லியை (எவ்) ச. 1 நொடியுக மானது; நோயெனைத் தீய்த்தது; வடிவழகியை யடை நற்றினம் வருமோ? (எவ்) 2 இப்பெரு நிதியினுக் கிந்திர லோகமும் ஒப்புயர் வாகுமோ? உரைத்திடப் பெறுமோ? (எவ்)  (கையில் ஒரு விசிறியுடன் மல்லிகர வருகிறாள்) ஆகா! அதோ வந்து விட்டாள் என் சுந்தரி! அவளை அரை கணம் காணாவிட்டால் என் மனம் படும் பாட்டை என்ன என்று சொல்வேன்? என் உயிரே துடித்துப் போகிறது. ஜூரமடித்த உடம்பில் சந்தனக் குழம்பைப் பூசினால் அது எவ்வளவு இன்பமாய் இருக்குமோ, அப்படி அல்லவோ இருக்கிறது! நெருப்பைப் போல எரிந்து தகிக்கும் என் மனத்தைக் குளிரச் செய்ய அதோ வந்துவிட்டாள் என் இரதி மல்லிகா! சரியான பெயர்தான்! மல்லிகைப் புஷ்பம் எப்படித் தன் வாசனையினால் மனிதரைப் பரவசப்படுத்துகிறதோ அவ்விதமே இவள் என் பஞ்சேந்திரி யங்களுக்கும் பிரும்மானந்தம் ஊட்டுகிறாள். (மெதுவாக) அடி மல்லிகா! மல்லி : யார் அது? ஓகோ! சசிமுகரா! வாரும் வாரும் இவ்வளவு விடியற் காலத்தில் எங்கிருந்து வருகிறீர்? என்ன விசேஷம்? சசி : (புன்முறுவலோடு) – கண்ணே! எல்லாவற்றையும் தெரிவிக்கிறேன். சமீபத்தில் வா! மல்லி : உஸ்! கூச்சலிடாமல் பேசும். என் எஜமானி அம்மாள் காதில் விழப் போகிறது. வஸந்த : (மேன் மாடிவில் தனக்குள்) என்ன! மல்லிகா விசிறி எடுத்துக் கொண்டு வரப் போனவள் இன்னம் வரவில்லையே! எங்கு போயிருப்பாள் (ஜன்னலின் வழியாகக் கீழே பார்க்கிறாள்) என்ன ஆச்சரியம்! யாரோ ஒரு புருஷனோடு பேசிக் கொண்டிருக்கிறாளே! ஒருவருக்கு ஒருவர் மிகவும் பிரியமாய்ப் பேசுவதாகத் தெரிகிறது! இதற்கு முன் பழகி அறிந்தவர்களைப் போலக் காணப்படுகிறது! சே! அவளை அவன் முத்தமிடுகிறானே! ஓகோ! காதலர்களோ! மல்லிகாவும் என்னைப் போல் யெளவன ஸ்திரீயல்லவா? இருக்காதா! உண்மைக் காதலை நாம் ஏன் கெடுக்க வேண்டும். அவர்கள் இச்சைப்படி செய்து கொள்ளட்டும். அவள் திரும்பி வரும் போது வரட்டும். கஷ்டப் பட்டவர்களுக்கு அல்லவா காதலின் துன்பம் தெரியும். மல்லி : சரி! நேரமாகிறது. நான் போக வேண்டும். விஷயத்தைச் சொல்லும். (அவன் நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) ஏன் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பார்க்கிறீர்? என்ன பயம்! என் எஜமானி அம்மாள் மெத்தையில் இருக்கிறாள். சசி : நான் உன்னிடத்தில் ஒரு இரகசியம் தெரிவிக்க வேண் டும், இங்கே சமீபத்தில் வேறு யாருமில்லையே.  மல்லி : ஒருவரும் இல்லை. சொல்லலாம். வஸந்த : (தனக்குள்) இரகஸியமா! அப்படியானால் நான் இனிமேல் இவர்கள் பேசுவதைக் கவனித்தல் கூடாது. சசி : வஸந்தஸேனை உன்னை அடிமைத் தன்மையில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு பொருள் கேட்பாள்? வஸந்த : (தனக்குள்) அவன் என் பெயரைச் சொல்லுகிறானே! இந்த இரகசியத்தில் நானும் சம்பந்தப்படுவதாய்த் தோன்றுகிறது. ஆகையால் இந்த ஜன்னலுக்கு சமீபத்தில் மறைந்திருந்த வண்ணம் கேட்கிறேன். மல்லி : தான் இந்த மாளிகைக்கு அதிகாரியாகும் பொழுது யாதொரு பணமும் பெறாமல் என்னை விடுவிப்பதாக என் எஜமானி அம்மாள் பல தடவைகளில் தெரிவித்திருக்கிறார்கள். அதிருக்கட்டும், என்னை மீட்கத் தேவையான அவ்வளவு பொருள் உம்மிடத்தில் எது? சசி : விருத்தம்: எதுகுலகாம்போதி  என்னரு மணியே! யுன்னை யெத்தின மடைவே னென்று  பன்னரு துயரி லாழ்ந்து பரிபவ மடைந்தேன்-வேண்டிற் பொன்னொரு பொருட்டோ? தீமை புரியினும் பெரியதாமோ?  நின்னரு வேட்கை நாடி லெவ்வினை முடிக்க கில்லேன்.   பொருள் இல்லாமலா கேட்பேன்? அருமையான ஒரு வஸ்துவைப் பெற விரும்பினால் எவ்விதமான ஹீனத் தொழில் செய்தாயினும் அதற்குத் தேவையான திரவியத்தை சம்பாதித்தல் வேண்டாமா? உன் பேரில் நான் கொண்டிருக்கும் மோகம் இலேசானதா? அக்கிரமக் காரியம் செய்து பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? வஸ : இவன் பார்வைக்கு நல்ல மனிதனாய் இருக்கிறானே! என்ன அக்கிரமக் காரியம் செய்திருப்பான்? மல்லி : விருத்தம்: சஹானா  ஐயனே! நன்றே சொன்னீ ரறிவினர்க் குரிய தாமோ?  மெய்யென நாடி யற்ப வின்பநீர் விரும்பி முற்றும்  பொய்யனாய்க் குலத்தின் மேன்மை புகலருங்கலையின் ஞானம்  வெய்யனாய் விலக்கித் தீய வியற்றிடல் தகுதியாகுமோ?  ஒரு க்ஷணத்தில் ஒழியும் அற்ப சுகத்தை உத்தேசித்து நீர் அருமையான இரண்டு பொருட்களுக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிரே! சசி : இரண்டு பொருள்கள் எவை? மல்லி : உம்முடைய தேகம் ஒன்று. பெயர் ஒன்று.  சசி : நீ பெரிய முட்டாள். இந்த காலத்தில் துணிந்து செய்பவருக்குத்தான் அதிர்ஷ்டம் உண்டாகிறது! அது உனக்கென்ன தெரியும்?  மல்லி : (ஏளனமாய்) நீர் செய்தது கொஞ்சமும் குற்றம் இல்லாத காரியம்! என்பேரில் உமக்கு இருக்கும் காதலினால் நீர் இந்த அக்கிரமம் செய்தீர். ஆகையால் இது அக்கிரமமாகாது; மிகவும் நீதியான விஷயம்! சசி : அடி தங்கமே! கோபித்துக் கொள்ளாதே! இந்த நகைகளை நான் ஒரு வீட்டில் இருந்து அபகரித்துக் கொண்டு வந்தேன். மல்லி : (வள்ளி சரித்திரம்: ”நெஞ்சையடைக்குதே நான் என்ன செய்குவேன் - நஞ்சை கொடுத்தாயோடி” என்ற பாட்டின் மெட்டு.) அடானா - சாப்பு  நல்ல வினை செய்தீர்! ஐயா! இனி இங்கு நில்லாமல் ஏகுவீர்.  தீயவர் செய்திடும் காரியமல்லாவோ போம் போம் நீர்.  சசி :  என்ன மொழி சொன்னாய்? எங்ஙனஞ் செய்குவேன்! கன்னியர் மாமணியே  நின்னையடைத்திட இவ்வினை செய்தேன் சொன்னது நீதி யன்றே?  மல் :  எந்தப் பிறப்பினு மேலென வோதிடும் அந்தணர் செய்வினையோ?  இந்தக் குணமுடையாரை விரும்பிடேன் வந்தவழி இதுவே  சசி :  சுந்தரியே எனதாருயிர் நீ யெனை நிந்தித்தலோ முறையே?  சொந்த மனைவி யென நின்னை நாடினேன் கோபம் விடுவிப்பாயே.  அக்கிரமம் செய்தாலும் நான் நன்றாய் யோசித்துத்தான் செய்வேன். நான் ஸ்திரீகள் குழந்தைகள் முதலியோரிடத்தில் இருந்து திருடவில்லை. தானதருமங்களுக்காகச் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாடவில்லை. விலைக்கு விற்று விடும் பொருட்டுக் குழந்தைகளைத் திருடிக் கொண்டு வந்து விடவில்லை. இதோ நான் கொணர்ந்திருக்கும் ஆபரணங்களை உன் எஜமானியிடம் கொடுத்து உன்னை விடுவித்துக் கொண்டு வந்துவிடு. ஆனால் இவற்றை எப்பொழுதும் பெட்டிக்குள் ஜாக்கிரதையாக மறைத்து வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும். மல்லி : அணிந்துக் கொள்ளத் தகாத ஆபரணங்களால் என் எஜமானி அம்மாளுக்கு என்ன பிரயோஜனம்? எங்கே? நகைகளைக் காட்டும்; பார்க்கலாம். சசி : இதோ பார் (காட்டுகிறான்) மல்லி : ஹா! இதென்ன ஆச்சரியம்! இவைகளை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே! (யோசனை செய்கிறாள்) நீர் எங்கிருந்து இவற்றை எடுத்து வந்தீர்! சசி : அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? உன்னை வடை தின்னச் சொன்னார்களா? அல்லது அதில் இருக்கும் துளைகளை எண்ணச் சொன்னார்களா? கேள்வி ஒன்றும் கேட்காமல் எடுத்துக் கொண்டு போ. மல்லி : (கோபமாக) என்னிடத்தில் உமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை, நான் மாத்திரம் உமக்குத் தேவையோ? அப்படியானால் என்னை ஏன் விரும்புகிறீர்? சசி : மாதவராயரென்று ஒரு பிரபு இருக்கிறார். அவரை உனக்குத் தெரியுமா? மல்லி : ஹா! என்ன ஆச்சரியம்! வஸ : ஹா! என்ன ஆச்சரியம்! (வஸந்தஸேனையும் மல்லிகாவும் ஒரே சமயத்தில் மூர்ச்சிக்கிறார்கள்) சசி : (மல்லிகாவைத் தாங்கி) மல்லிகா! ஏன் மயங்குகிறாய்? விழித்துக் கொள். (தனக்குள்) இவளுக்கென்ன துன்பம் சம்பவித்ததோ தெரியவில்லையே! கை கால்கள் எல்லாம் துவண்டு போயின. கண்கள் பயங்கரமாய்க் காணப்படுகின்றன. அடி மல்லிகா! இது தான் உன் பிரியமோ? என்னுடன் வந்துவிட நினைப்பதே இவ்வளவு பயமாய் முடிந்ததோ? மல்லி : (கோபமாக) என் முன் நிற்காதேயும், துன்மார்க்கரே! போய்விடும்; இதை அபகரிக்கு முன், அந்த வீட்டில் இருந்த மனிதர்களில் எத்தனை பேரைக் கொன்றீர், உண்மையைச் சொல்லும். சசி : நான் ஒருவரையும் தொடக் கூடவில்லை.  மல்லி : உண்மைதானா? சசி : நிச்சயம்! சத்தியம் உன் தலையில் அடிக்கிறேன். வஸ : ஆகா! உயிர் வந்தது. சசி : அடி மல்லிகா! நீ என்ன இந்த விஷயத்தில் இவ்வளவு கவலையைக் காட்டுகிறாய்! உன் பேரில் வைத்த ஆசையினால் அல்லவோ, எவ்வளவோ உயர்ந்த பரிசுத்தமான குலத்தில் உதித்த நான் இதைச் செய்தேன். அடிமை நிலையில் இருந்து உன்னை விலக்கி, ஆயுட் காலம் எல்லாம் சுதந்திரத்தையும், என் மனப் பூர்வமான பிரியத்தையும் உனக்குக் கொடுத்ததற்கு, என்னை நீ ஏளனம் செய்வதும், வேறொருவனைப் பற்றி நீ கவலைப் படுவதும் பதில் உபகாரமோ? புஷ்பிக்கும் பாலிய காலமாகிய உன்னத மரமானது வீணிற் பழங்களைச் சுமந்து, வேசைகளாகிய பறவைகளுக்கு அல்லவோ அவற்றை இரை ஆக்குகின்றது! செல்வமும் புருஷத்வமும் இன்னம் நாம் விசேஷமாய் மதிப்பன யாவும், அடக்க முடியாத காமாக்கியினால் நாசம் அடை கின்றன. ஆகா! எப்பொழுதும் சலனப்படும் குணமுடைய ஸ்திரீகளிடத்திலும், எப்பொழுதும் மாறும் நமது அதிர்ஷ்டத்திலும் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் எவ்வளவு மடையர்கள்! ஏழைகளை ஸ்திரீகளும் அலட்சியம் செய்வதாய் இருந்தால், அவர்கள் பேரில் பிரியம் வைப்பதை விட நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் நாயின் பேரில் அந்த அன்பை வைத்தால், அது எவ்வளவோ நன்றியுடையதாய் இருக்கும்! முதலில் அவர்களே நம் மீதில் ஆசையைக் காட்டினால், அவர்கள் அவ்விதம் இருக்கும் வரையில் நாமும் பிரியத்தைக் காட்டிப் பிறகு பேசாமல் விட்டு விடுவது நல்ல காரியம்! ஸ்திரீகள் பணத்தின் பொருட்டு, நினைத்தால் அழுவார்கள்; நினைத்தால் சிரிப்பார்கள்; தம்மால் விரும்பப்படாதவனாய் இருந்தாலும், இவர்கள் தமது பாசாங்கினால், அவனுடைய நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வார்கள். ஆகையால், நற்குலத்தில் உதித்த யோக்கியதை உடைய யெளவன புருஷர், ஸ்மசானத்தில் உண்டாகும் புஷ்பங்களைப் போல ஏராளமாகக் காணப்படும் பரத்தையரின் வலையிற் படாமல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சமுத்திரத்தின் அலைகள் கூட ஸ்திரீகளின் பிரியத்தைக் காட்டிலும் சிறிது நேரம் நிலைத்தவையாய் இருக்கும். மாலை நேரத்தில் வானத்தில் உண்டாகி மாறும் நிறங்கள் கூடச் சற்று உறுதியானவை என்று நினைக்கலாம். பணமே அவர்களுடைய நோக்கம்; பணமே அவர்களுடைய ஆகாரம், பானம், இன்பம் முதலியன. ஆனால் ஒருவனுடைய செல்வம் ஒழிந்து போய்விட்டால், அவனை உடனே ஓட்டி விட வேண்டியதே காரியம்! அதுவே அவர்களுடைய குல தருமம். மின்னலின் ஒளி தோன்றி மறைதலைப் போன்றது அவர்களுடைய மோகம். மனதில் ஒருவன்மீது ஆசையை வைத்துக் கொண்டு, வேறொருவனிடத்தில், தான் அவனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து விட்டதாய்ப் பாசாங்கு செய்வார்கள். ஒருவனை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கையில் வேறொருவனை நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள். தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியப் போகிறதா? இயற்கையிலேயே இல்லாததை விரும்பினால் அது எப்படிக் கிடைக்கும்? கற்பாறையின் மீது தாமரைப் புஷ்பம் எப்படி உண்டாகும்? அல்லது குதிரையின் பாரத்தைக் கழுதை சுமக்குமோ? வரகு தானியத்திற்குள் அரிசி எப்படி உண்டாகும்? ஸ்திரீகளின் மனதில் ஏதாவது ஒரு நற்குணம் இருக்குமோ என்று எவ்வளவு சோதனை செய்தாலும் உள்ளே இருப்பது குதிரைக் கொம்புதான். அந்த துஷ்டன் மாதவராயனையா நீ விரும்புகிறாய்? இந்த சங்கதி முன்னால் தெரிந்திருந்தால், அவனை ஒரே குத்தில் கொன்று விட்டு வந்திருப்பேனே! இப்பொழுதே போய் அவன் உயிரை வாங்கி விட்டு வருகிறேன். (புறப்படுகிறான்) மல்லி : (அவனைப் பிடித்துக் கொண்டு) என்ன பிரமாதமாக உளறுகிறீரே! தலை கால் தெரியாமல் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்? உயர் குலத்திற் பிறந்த பிராமணராய் இருந்தும், திருடினேன் என்றும் குத்துகிறேன் என்றும் சொல்லுகிறதற்கு வெட்கமில்லையா? (முகத்தில் இடிக்கிறாள்) சசி : எல்லாம் யார் பொருட்டு? உனக்காகத்தானே! நான் உனக்காக இவ்வளவு தாழ்வடைவதையும் நீ நினைக்காமல் மாதவராயனுக்குப் பரிந்து பேசுகிறாயே! மல்லி : உண்மை அதுவல்ல. இந்த ஆபரணங்கள் என்னுடைய எஜமானி அம்மாளுக்கு சொந்தமானவை. சசி : என்ன ஆச்சரியம்! உன் எஜமானியின் நகைகள் அங்கு போனதின் காரணமென்ன! மல்லி : ஒரு நாளிரவு திருட்டுக்குப் பயந்து, மாதவராயரிடத்தில் வைத்து விட்டு வந்தார்கள். சசி : அப்படியா! உன்னுடைய எஜமானியின் நகைகளா இவைகள் ஆகா! தெரியாமலல்லவோ திருடி விட்டேன்! என்ன செய்வேன்? வஸ : (தனக்குள்) எவ்வளவோ கெட்டவனாய் இருந்தாலும் இவனிடத்திற் கழிவிரக்கங்கூட இருக்கிறதே! சே! மோகம் பொல்லாதது! அதனால் எவ்வளவு நற்குணமுடையவன் கூட, என்னென்ன தீய காரியங்களைச் செய்ய நேருகிறது! மோகத்தினால் நான் படும் பாட்டில் இருந்தே இவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பது நன்றாய்த் தெரிகிறது! ஐயோ பாவம்! என்ன செய்வான்! சசி : அடி என் பிரிய மல்லிகா! இப்பொழுது நான் என்ன செய்கிறது?  மல்லி : அது உமக்குத்தான் தெரிய வேண்டும். சசி : அப்படி அல்ல! ஸ்திரீகளுக்கு இயற்கை சுபாவமே குரு. கல்வி மதங்கொண்ட புருஷர் புஸ்தகங்களில் இருந்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்படுபவைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரக் கூடாமல் தீய காரியங்களைச் செய்கிறார்கள். ஸ்திரீகள் எல்லாவற்றையும் தாமாக அறிந்து கொள்வதோடு, அவற்றை அனுபவத்திற்குக் கொண்டு வருபவர்களாயும் அதிகப் புத்திக் கூர்மை உடையவர்களாகவும் ஆகின்றனர். தானாய்க் கனியும் வாழைப் பழத்திற்கும் புகை போட்டுப் பழுக்க வைக்கும் வாழைப் பழத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! நீ தான் இப்பொழுது ஒரு யோசனை சொல்ல வேண்டும்!  மல்லி : அப்படியானால் நீர் உடனே திரும்பிப் போய் நகைகளை மாதவராயரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வருவதே உத்தமமான காரியம்! வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! கேவலம் அடிமையாய் இருந்தாலும் உனக்கு எவ்வளவு கண்ணியமான புத்தி! ஆகா! அதிர்ஷ்டம் ஒன்று தான் பக்ஷபாதமுடையது. அது தனவந்தர்களிடத்திலேயே விருப்போடு செல்கிறது! அது ஏழைகளிடத்திலும் இருக்கிறது. தனவான்களிடத்திலும் இருக்கிறது! நன்றாய் ஆழ்ந்து பார்த்தால் ஏழைகளிடத்திலேயே நற்குணம் அதிகமாய் இருக்கிறது! சசி : மல்லிகா! நல்ல யோசனை சொன்னாய்! நான் திருடனென்று நேரில் அங்கு போனால் என்னை உடனே அதிகாரிகளிடம் ஒப்புவித்துவிட மாட்டாரா? மல்லி : ஆகா! நல்ல பைத்தியம்! சந்திரன் எப்பொழுதாகிலும் சுடுதலுண்டோ? ஒரு நாளுமில்லை. சசி : அவருடைய சாந்த குணத்தைப் பற்றி நான் சந்தேகப் படவில்லை. தவிர நான் எந்தக் காரியத்தைத் துணிந்து செய்கிறேனோ அதனால் உண்டாகும் பலன் எதுவாய் இருந்தாலும் அதை அனுபவிக்க நான் கடமைப்பட்டவனே! ஆனால் இப்படிச் செய்ய வெட்கமாய் இருக்கிறது! வேறு ஏதாவது யோசனை சொல். மல்லி : நீர் ஒன்று செய்யும். இவைகளை எஜமானி அம்மாளிடம் திருப்பிக் கொடுக்கும்படி மாதவராயரால் அனுப்பப்பட்ட தூதனைப் போல் நீர் பாசாங்கு செய்து இவைகளை என் எஜமானி அம்மாளிடம் சேர்த்துவிடும். சசி : அப்படிச் செய்தால்?  மல்லி : நீர் திருடனாக மாட்டீர்; நகைகள் சொந்தக்காரரைச் சேர்ந்து விடும், மாதவராயருக்கும் நஷ்டமில்லாமற் போய் விடும். மூன்று பேருக்கும் இதனால் அனுகூலம்! சசி : என் சம்பாத்தியத்தை இப்படி அபகரிப்பது திருட்டு அல்லவா? மல்லி : ஒரு பொருள் அதன் சொந்தக்காரரைச் சேர்வது எப்படித் திருட்டாகும்? நீர் சொந்தக்காரருக்குத் தெரியாமல் இவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டதினாலேயே இவை உம்முடையவையாய் விட்டனவோ? வேண்டாம். வீண் வாதம் செய்யாமல் நான் சொல்வதைக் கேளும். இப்பொழுதும் மிஞ்சிப் போகவில்லை. நாம் செய்தது தவறு என்று தெரிந்தால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிவர்த்திக்கலாம். மானத்தையும் கீர்த்தியையும், யாவற்றையும் இழந்து பாவ மூட்டையை ஏன் சம்பாதித்துக் கொள்ளுகிறீர்? நான் சொல்வதைச் செய்யும். இது உமக்கு நன்மை தரும் இதன் பொருட்டு நானும் உம்மிடம் முன்னிலும் பதின்மடங்கு அதிகம் ஆசை வைப்பேன். வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! உண்மை நண்பனைப் போல நன்றாய் இடித்துப் புத்தி சொல்லுகிறாய்! இவ்வளவு மேன்மைக் குணம் உன்னிடத்தில் இருக்கும் என்று நான் இது வரையில் நினைக்கவே இல்லை. சசி : கண்ணே! மல்லிகா! நீ சொல்வது எல்லாம் உண்மையே! நான் ஏழ்மைத்தனத்தினால் இவ்விதம் செய்து விட்டேன்? செய்ததற்கு மிகவும் விசனப்படுகிறேன்! இனி நீ எப்படி நடக்கச் சொன்ன போதிலும் அப்படியே நான் செய்கிறேன், தடையில்லை. மல்லி : சரி நீர் இவ்விடத்திலே இரும். நீர் வந்திருப்பதாக எஜமானி அம்மாளுக்குத் தெரிவித்து வருகிறேன். (வஸந்தளேயனையிடம் போய்)  அம்மணி! மாதவராயரிட மிருந்து ஒரு பிராம்மணர் வந்திருக்கிறார். வஸ : (புன்சிரிப்புடன்) அப்படியா! சீக்கிரம் மேலே அழைத்து வா. (மல்லிகா திரும்பிப் போய் பிராம்மணனை அழைத்து வருகிறாள்.) வஸ : சுவாமி! நமஸ்காரம்! வரவேண்டும். சசி : ஸுகீபவா! மங்களானி பவந்து! வஸ : சுவாமி இப்படித் தயவு செய்யுங்கள். இந்த ஆசனத் தில் உட்கார வேண்டும். சசி : இல்லை, இல்லை. நான் அவசரமாய்ப் போக வேண் டும். மாதவராயர் இந்த ஆபரண மூட்டையைத் தன் மாளிகையில் வைத்திருப்பது ஜாக்கிரதைக் குறைவென்றும், இதனால் தான் பெரிதும் கவலைப்படுவதாயும் தெரிவித்து இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார். (மல்லிகாவினிடம் கொடுத்து விட்டுப் போகிறான்.) வஸ : சுவாமி! தயவு செய்து கொஞ்சம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். இவற்றை அனுப்பிய பிரபுவுக்கு நான் ஒரு வஸ்துவைக் கொடுக்கிறேன், சிரமத்தை மன்னித்து அதை ஏற்றுக் கொண்டு போக வேண்டும். சசி : (தனக்குள்) நானாவது இனி அவரிடம் போகிறதாவது நான் எங்கே கொண்டு போகப் போகிறேன்! (வெளிப்படை யாக) என்ன வஸ்து அது? வஸ : மல்லிகா! மல்லி : ஏன் அம்மணி! வஸ : உன்னைக் கூப்பிடவில்லை? இவர் கேட்டதற்குப் பதில் சொன்னேன். சசி : சொன்ன பதில் இன்னதென்று விளங்கவில்லையே! வஸ : ஏன் விளங்கவில்லை! விவரமாய் சொல்லுகிறேன் கேளும். நானும் மாதவராயரும் எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டோம். இவ்வாபரணங்களை அவர் யார் மூலமாய் எனக்கு அனுப்புகிறாரோ அவருக்கு மல்லிகாவை நான் சன்மானமாகக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆகையால் தயவு செய்து இந்த மடந்தையை ஏற்றுக் கொண்டு, இந்தப் பாக்கியம் பெற்றதற்காக மாதவராயரை மனதாற் துதியும். இப்பொழுது நன்றாய் விளங்குகிறதா? சசி : (திடுக்கிட்டு) தனக்குள் ஓகோ! இரகசியம் தெரிந்து போய் விட்டால் போல் இருக்கிறதே! இதுவும் பாக்கியந்தான் (வெளிப்படையாக) மாதவராயருக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும். உண்மை யோக்கியதை இல்லாத அரசனைக் காட்டி லும் அதைப் பெற்ற தரித்திரனே பெருத்த தனவந்தனாகையால், நற்குண நல்லொழுக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது மனிதருடைய முதற் காரியம். அதை உடையவனுக்குக் கிடைக்காத பொருள் இல்லை. பிரகாசம் பொருந்திய சந்திரன் தன்னுடைய யோக்கியதையினால் அல்லவோ, பரம சிவனுடைய சிரசில் இருக்க இடந்தேடிக் கொண்டான். ஆகா! கடைத்தேறினேன். சற்குருவாகிய உன்னால் நான் இப்பொழுது நல்லொழுக்கத்தின் மகிமையை உணர்ந்தேன். இனி நான் நீதி நெறி பிசகாமல் ஒழுகுவேன். இது சத்தியம். வஸ : பிரியஸ்கி மல்லிகா! இவருடன் புறப்படு நான் உன்னை இவருக்குச் சன்மானம் செய்து விட்டேன். எங்கே நிமிர்ந்து பார் என்னை மறந்து விடாதே. (கண்ணீர் ததும்புகிறது) மல்லி : (அழுதவண்ணம்) ஐயோ! அம்மணி! என் பேரில் தங்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லையே! என் அருமைத் தாயே! என்னை இப்படி விலக்க வேண்டாம். நான் ஏதாவது பிழை செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும். (காலில் விழுந்து வணங்குகிறாள்) மல்லி : (நந்தன் சரித்திரம்: ”வருகலாமோ” என்ற பாட்டின் வர்ண மெட்டு) மாஞ்சி - ரூபகம்  ப. தருமமாமோ? அம்மா - இந்தச் சிறுமியின் மீதுமக் கேனிந்தக் கோபமோ? அ. இருவருமோருயி ரென்னவே - என்று மிருந்ததையாயினு மெண்ணவே - உந்த  மிருடா தங்கள் யான் பணிந்தெத்தினேன் தேவியே! (தரு) ச. தாயென உம்மையான் - அடைந்தேனே - நொடி தப்பாம லருகினில் இருந்தேனே.  நாயென நன் றியைச் - சுரந்தேனே - என்றன்  ஆவியே யுமதென - மதித்தேனே - என்ன  விதியோ! யென்றன்தீ மையிதாகுமோ? ஞாயமோ? (தரு)  வஸ : அப்படி ஒன்றுமில்லை எழுந்திரு மல்லிகா! மனப் பூர்வமான உன்னை இவருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் ஆசையினாலேயே இப்படிச் சொல்லுகிறேனே யொழிய வேறு வித்தியாசமில்லை. (அன்பொழுக) எழுந்திரம்மா! இவருடன் போய் ஸெளக்கியமாக வாழ்ந்து கொண்டிரு. என்னை மாத்திரம் உன் ஞாபகத்தில் வைத்துக் கொள். சசி : (வஸந்தஸேனைக்கு) ஸ்திரீ ரத்னமே! உனக்கு ஈசுவரன் சகல மங்களமும் அளிக்கட்டும். அடி மல்லிகா! உனக்கு சுதந்திரமும், மனைவி என்னும் மேன்மை நிலைமையும் அளித்த பேருபகாரியாகிய உன் எஜமானியை நன்றி பெருக வணங்கி விடை பெற்றுக் கொள். வஸ : பிரிய மல்லிகா! சுகமாய்ப் போ! (”ஷாஜமான்” என்ற இந்துஸ்தானியின் மெட்டு) மல்லி : பெண்மணீ! சென்று வருவேன் தல்லியே! வஸ : கண்மணீ! சென்று-வருவாய் மல்லிகா! மல்லி : காணக் கிடைக்காத வென்றன் - மானே!  நற்றேனே! என்னன்பே - என்னாவியே! வஸ : ஆசைக்குகந்த வென்றன்மாதே! நற்கோதே!  கவலாதே! மறவாதே! மல்லி : சுந்தராங்கி! நின்னையினி - மறவேன். வஸ : சொன்னமே! நின் நன்மையினி - மறவேன். (மல்லிகா விசனத்துடன் வணங்கச் சசிமுகன் அவளை அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வரு கிறான். அந்த சமயத்தில் இராஜபாட்டையில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்.) ”துடும், துடும், துடும், துடும்,  இதனால் சகலமான ஜனங்களுக்கும் அறிவிப்பது யாதெனில்:- பிரதாபன் என்னும் இடையன் அரசனாகப் போகிறேனென்று ஜோசியர்கள் மூலமாய்த் தெரிகிறபடியால், அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கும்படி நமது மகாராஜன் உத்தரவளித்து இருக்கிறார். அவனைக் காண்போர் உடனே பிடித்து ஆஜர் செய்விக்க வேண்டும். ஜனங்கள் இந்த விஷயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தம் தம் வீட்டில் இருக்க வேண்டும்.  துடும், துடும், துடும், துடும்.” சசி : (மல்லிகாவிடத்தின்) என்ன ஆச்சரியம்! என்னுடைய பிரிய நண்பனாகிய பிரதாபனை அரசன் சிறைப்படுத்த முயலும் சமயத்தில் நான் இப்படி ஸ்திரீ விஷயத்தில் என் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேனே! இந்த உலகத்தில் மனிதருக்கு மிகவும் அருமையானவர்கள் மனைவியும், நண்பனுமே என்ற போதிலும் நூற்றுக்கணக்கான பெண்மணிகளினும் ஸ்நேகிதனே மேலானவன்; ஆகையால் முதலில் அவனிடம் போய் எங்கேயாவது மறைந்து கொள்ளும்படி சொல்லி விட்டு வர வேண்டியது என்னுடைய கடமை. போகிறேன். மல்லி : நில்லும் நில்லும்! நீர் போக வேண்டுமானால், முன்னால் என்னை யோக்கியமான ஸ்நேகிதர் யார் வீட்டிலாயினும் வைத்து விட்டுப் போம். இப்படி என்னை விடுத்துப் போனால் நான் என் செய்கிறது?  சசி : பிரிய சுந்தரி கோபித்துக் கொள்ளாதே! உன்னை ஒரு இடத்தில் சுகமாக வைத்து விட்டு நான் போகிறேன். (போய் விடுகின்றனர்) (வேறொரு வேலைக்காரி வளந்தஸேனையிடம் வருகின்றாள்) வேலை : (குதுகலமாக) இது உண்மையில் சுபதினமே அவரை உபசரித்து மரியாதையோடு உள்ளே அழைத்து வா! வேலை : ஆக்ஞை! (போய் ஸோமேசனுடன் வருகிறாள்.)  ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன உன்னதமான மாளிகை! என்ன செல்வம்! அரண்மனையும் இதற்கு ஈடாமோ? எத்தனை தாதிமார்! எத்தனை வேலைக்காரர்! இந்த இடத்தின் சுகம் சுவர்க்கத்திலும் கிடைக்குமோவென்பது சந்தேகம். வஸ : ஸ்வாமி! ஸோமேசரே! நமஸ்காரம்; வர வேண்டும். ஸோமே : மங்களானி பவந்து! ஸுகிபவா! வஸ : தயவு செய்து இந்த ஆசனத்தில் உட்காரும். ஸோமே : நீயும் உட்கார். வஸ : எஜமானர் க்ஷேமந்தானே?  ஸோமே: க்ஷேமந்தான்! இவ்விடத்தில் எல்லாரும் செளக்கியந்தானே? வஸ : தங்கள் ஆசீர்வாதத்தால் க்ஷேமமே. கெளரவமென்னும் விதை முளைத்து, நாணம் என்னும் அடி மரமாய் வளர்ந்து, நற்குணங்கள் என்னும் கிளைகளாய்ப் படர்ந்து, நல்லொழுக்க மென்னும் இலைகளாய் விடுத்து, தயாள குணத்தை மலர்களாய்ப் புஷ்பித்து, நன்மை என்னும் பழங்களைச் சொரியும் மரமாகிய இந்த மாளிகையில், பிரியமாகிய பறவைகள் ஆனந்தமாய் தங்கி வசிக்கின்றன. ஸோமே : (தனக்குள்) ஆகா! எவ்வளவு இலக்ஷணமாகவும் புத்தி நுட்பமாகவும் பேசுகிறாள். (வெளிப்படையாக) அப்படியா! மிகவும் சந்தோஷம்! மாதவராயர் தன்னுடைய ஆசீர்வாதத்தையும் பிரியத்தையும் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார். வஸ : (வணங்கி) அவருடைய ஆக்ஞையை வணங்கிச் சிரசினால் ஏற்றுக் கொண்டேன். (வணங்குகின்றாள்) ஸோமே ; ஆனால்... வஸ : என்ன ஆனால்? ஸோமே : ஒரு விசேஷம். வஸ : என்ன அது? ஸோமே : சொல்ல நாவெழவில்லை. வஸ : அதென்ன சங்கதி? என்னுடைய பிரபுவுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்ததா? சீக்கிரம் தெரிவித்தல் வேண்டும். ஸோமே : ஒன்றுமில்லை. நகை மூட்டை...  வஸ : நகை மூட்டைக்கு என்ன? திருட்டுப் போய்விட்டதா?  ஸோமே : இல்லை. எஜமானர் சூதாடி தோற்றுவிட்டார்.  வஸ : (தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! நகை மூட்டைத் திருட்டுப் போயிருக்கச் சூதாட்டத்தில் தோற்று விட்டதாகத் தெரிவிக்கிறாரே அவர் பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது! அவர் சொல்லும் இந்தப் பொய்கூட நான் அவர் பேரில் கொண்ட மோகத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஸோமே : நகைகளைப் பற்றி வருத்தப்படாதே! காரியம் மிஞ்சிப் போய் விட்டது! என்ன செய்கிறது! அவர் சூதாடுகிறவரல்ல என்னமோ பொல்லாத வேளை இப்படி ஆனது! இதோ இந்த வைர ஸரத்தை அவற்றிற்குப் பதிலாக ஏற்றுக்கொள். வஸ : (தனக்குள்) ஆகா இது இன்னமும் அதிக ஆச்சரியத்தை விளைவிக்கிறது! என்னிடத்தில் வந்து விட்ட நகைகளைக் காட்டி விடலாமா? (யோசித்து) இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஸோமே : என்ன பேசாமல் இருக்கிறாய்? பதிலாக அனுப்பப்பட்ட இதை வாங்கிக் கொள்ள மாட்டாயா? வஸ : (புன்சிரிப்புடன்) ஏன் மாட்டேன்? (வைர ஸரத்தை வாங்கித் தன் மார்பில் வைத்துக் கொண்டு) இதென்ன அதிசயம் மாமரத்தில் இருந்து புஷ்பங்கள் எல்லாம் உதிர்ந்து போன பிறகு அமிர்தத் துளி விழுதலுண்டோ? நல்லது ஸோமேசரே! நான் இன்று சாயங்காலம் எஜமானர் வீட்டிற்கு வந்து பார்த்துப் பேசுவதாய்த் தெரிவியும். ஸோமே : (தனக்குள்) அப்படியா! அவரிடத்தில் இன்னம் அதிகமாகப் பொருள் பெற உத்தேசிக்கிறாள் போல் இருக்கிறது! இன்னம் கேட்டால் என்ன செய்வார்? பாவம் இதுவும் அவருக்குத் தலை விதியா! இரவில் வந்தாளே என்று உதவி செய்யப் போக, இந்தத் துன்பம் சம்பவித்தது! (வெளிப்படையாய்) அப்படியே தெரிவிக்கிறேன் அம்மா! வஸ : நமஸ்காரம்; போய் வாருங்கள். (விஸனத்துடன் போகிறான்) வஸ : (தனக்குள்) விருத்தம்: பியாக்  எங்ஙன முரைப்பேனிந்த வள்ளலின் பெருமை தன்னைச்  சிங்கவே றனைய ஆண்மை தெவிட்டிடா இனிய பான்மை  மங்கினு மகலாத் தூய்மை இடுக்கணு மதியா வாய்மை  துங்கமே யுருவாய் வந்த சுந்தரம் பொலிந்த மேனி.  ஆகா! என்ன உத்தம குணம்! எவனோ திருடிக் கொண்டு போனதை என்னிடத்தில் தெரிவிக்காமல் தான் சூதாடியதாகச் சொல்லித் தன் யோக்கியதையைக் குறைத்துக் கொண்டாயினும் தன் பேரில் வைத்த நம்பிக்கைக்குக் குறைவு வராமல் நடந்து கொண்டிருக்கிறாரே! இவர் அல்லவோ புருஷ சிங்கம்! இவர் அல்லவோ புருஷரில் சிரேஷ்டர்! தேகத்தில் மாத்திரம் அழகைப் பெற்று, அதை ஆபரணங்களினாலும், உடைகளினாலும், பரிமள கந்தங்களினாலும் அலங்கரித்துக் கொண்டு, செல்வச் செருக்கை அடைந்து இறுமாந்திருக்கும் போலிப் பிரபுக்கள், குணத்தழகைப் பெற்ற இந்த வள்ளலின் பாத தூசிக்கும் ஒப்பாவரோ! புருஷனை அடைவதாய் இருந்தால் இவரையே அடைதல் வேண்டும். இல்லா விட்டால் இந்தத் தேகத்தை அக்கினிக்கு இரையாக்க வேண்டும். இருக்கட்டும்; இன்று சாயங்காலம் போய் முயன்று பார்க்கிறேன். -------------------------       அங்கம் 2 காட்சி 1   இடம் : மாதவராயருடைய மாளிகைக்குள் ஒரு சிறிய பூஞ்சோலை. காலம் : மாலை. (ஸோமேசன் வருகிறான்) (தனக்குள்) மாதவராயர் வஸந்தஸேனையின் வரவை அதிக ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார். இவருக்கு அவள் பேரில் இவ்வளவு ப்ரேமை உண்டாகக் காரணமென்ன! அவள் கேவலம் அற்ப புத்தியும் பேராசையுமுடைய தாஸி அல்லவோ! எவ்வளவு ஐசுவரியத்தைப் பெற்றிருந்த போதிலும் அவளுடைய ஜாதிக் குணமாகிய நிர்தாக்ஷண்யம் போகவில்லையே! வைர ஸ்ரத்தைப் பார்த்தவுடனே, வெளி வேஷமாகவாவது ஒரு உபசார வார்த்தைக்கூடச் சொல்லாமல், உடனே அதை ஆத்திரத்தோடு பிடுங்கிக் கொண்டாளே! வேசைக்குக் காசின் மேலாசை என்பது சரியாய்ப் போய் விட்டதே! அவளுக்கு எவ்வளவோ செல்வம் இருந்தும் மேன்மேலும் அபகரிக்கும் புத்தி இருக்கிறதே யொழியத் தயை, இரக்கம் ஈகை முதலிய குணங்கள் இல்லையே! தண்டில்லாத தாமரையும், தஸ்கரம் செய்யாத தட்டானும், சண்டையில்லாத சங்கமும், பேராசை இல்லாத தாஸியும் இல்லையென்று பெரியோர் சொல்வது நிஜமே! இவை ஒன்றை விட்டொன்று என்றும் இணை பிரியாத் துணைப் பொருள்கள். அவள் இன்று வரவேண்டிய காரணம் என்ன? எனக்கு இது மிகவும் சந்தேகத்தைத் தருகிறது. கபடமே அறியாத மாதவராயரை அவள் ஒருவேளை தன் வலையில் விழச் செய்வாளோ ஏழையாய் வருந்தித் தவிக்கும் இவர் இன்னம் அதிகமாகத் துன்புற்றுத் துயரக் கடலில் மூழ்க நேரிடுமோ! இரக்கட்டும்; நான் உடனே போய் இவர் அவள் பேரில் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை மாற்ற முயலுகிறேன். மாத : ஸோமேசா! இன்னம் வஸந்தசேனையின் வண்டி வரவில்லையா? ஸோமே : இல்லை. (ஒருவித வெறுப்போடு) உம்! என்னமோ! எனக்கொன்றும் பிடிக்கவில்லை.  மாத : உனக்கு என்ன பிடிக்கவில்லை. ஸோமே : அபாத்திரமான மனிதரிடத்தில் நீங்கள் இவ்வளவு அபிமானம் வைப்பது? கேவலம் அற்ப குணத்தைக் கொண்ட தாஸியிடத்தில் உங்களுக்கு இவ்வளவு சபலம் உண்டானது மிகவும் தவறு. தவிர நான் போயிருந்த போது அவளும் அவளுடைய பணிப் பெண்களும் என்னை எவ்வளவு ஏளனம் செய்தார்கள் தெரியுமா? தாஸியின் உறவானது காலில் தைத்த முள்ளைப் போன்றது. முதலில் நுழைவதே தெரியாது. அதைப் பிறகு நாம் எவ்வளவு வருந்திப் பிடிங்கி எடுத்தல் வேண்டும் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. தாஸி நுழைந்த வீடும், சனியன் நுழைந்த வீடும் ஒழியா விஸனத்தை அடை யும். ஆகையால், அவளை நீங்கள் பார்ப்பதும் அவளுடன் சம்பாஷிப்பதும் பிறகு துயரைத் தரும். ஆகையால் அவளைப் பார்க்க இப்பொழுது சந்தர்ப்பமில்லையென்று சொல்லியனுப்பி விடுங்கள். மாத : விருத்தம்: பைரவி  நண்பனே ஏனோ வந்த நங்கையை நினைத்த வாறு புண்படு மொழியாலேசிப் புகன்றனை நவைகள் சால? எண்படு தனத்தி னோர்க்கே விலைமகள் கூற்ற மாவள்  திண்கொடு மிடியர் தம்மைத் தெரிவையர் நினைத்தலுண்டோ?  சே! அவளை அக்கிரமமாகத் துஷிக்காதே; இதனால் எனக்கு யாதொரு துன்பமும் வராமல் இருப்பதற்கு என்னுடைய ஏழ்மைத் தனமே ஒரு பாதுகாப்பல்லவா? பணத்தாசை உள்ள தாஸி ஏழையை ஏன் விரும்புவாள்? தவிர கற்பிற்கு அரசியாகிய என் மனைவி கோகிலத்திற்கு நான் துரோகம் செய்ய நினைப்பேனோ! என்னுடன் நீ இவ்வளவு காலம் பழகியும் என் மனோ உறுதியையும், நான் எவ்வித நடத்தை உடையவன் என்பதை யும், அறிந்து கொள்ளவில்லையே! அவள் ஏதோ நம் மீதுள்ள அன்பினால் நம்மைக் காண விரும்புகிறாள். நாம் அதைத் தடுப்பது தருமமாமோ? அவள் எதற்காக வருகிறாளோ! அதைப் பற்றி நாம் இப்பொழுது எவ்விதம் ஊகிக்க முடியும்? ஸோமே : அவள் வைர ஸரத்தைப் பெற்றதோடு திருப்தி அடைந்ததாய்க் காணப்படவில்லை. மேலும் ஏதாவது அபகரிக்கலாம் என்னும் எண்ணத்துடன் வருவதாகத் தோன்றுகிறது! நான் சொல்வதைக் கேளுங்கள். பிறகு துன்பப்பட நேரும். (தனபாலன் ஒரு பக்கமாய் வருகிறான்) (தனக்குள்) இதோ மாதவராயர் இருக்கிறார்; நேரில் அவரிடம் போக வெட்கமாக இருக்கிறது. ஒருவித அச்சமும் என்னை வதைக்கிறது. அதோ அந்த ஸோமேசனும் இருக்கிறான். மெதுவாகச் சைகை செய்து அவனை கூப்பிடுகிறேன். (ஒரு மண் சட்டியை எடுத்து ஸோமேசன் பேரின் மெதுவாக எறிகிறான்) ஸோமே : (திடுக்கிட்டு மேலே பார்த்து) ஆகா! யார் என் பேரில் கல்லைப் போட்டது? மாத : மதிளின் மீது இருக்கும் புறாக்கள் தம் விளையாட்டில் தள்ளி விட்டிருக்கலாம். ஸோமே : (மேலே பார்த்து) ஏ போக்கிரிப் புறாக்களே! உங்களுக்கு இவ்வளவு குறும்பா! புளியம் பழங்களை உலுக்கி விடுவதைப் போல் உங்களை இந்தத் தடியால் மதிளில் இருந்து ஓட்டி விடுகிறேன். . மாத : சோமேசா! போனால் போகிறது; உட்கார்ந்து கொள். சாந்தமே உருவாகி வந்த புறாக்களை வருத்தாதே! அவைகள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து கொஞ்சிக் குலாவிக் கும்காரம் செய்து எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன! அவைகளைப் பிரித்து விடாதே. தன : (தனக்குள் புன்சிரிப்புடன்) முட்டாள் பிராம்மணன்! மேலே புறாக்களைப் பார்க்கிறானே ஒழிய என் பக்கமாகத் திரும்பவில்லை! இவனுக்கு இன்னொரு வந்தனம் அளிக்கிறேன். (இன்னொரு மண்கட்டியை எறிகிறான்) ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து திரும்பிப் பார்த்து) இதென்ன மறுபடியும் விழுகிறதே! (கொஞ்ச துரம் அப்பால் போய்) அதோ நிற்கிறவன் யார்? தனபாலனல்லவோ? (சமீபத்தில் போய்) அடே தனபாலா! வாவா. தன : ஸ்வாமி! தெண்டம் வருகிறது!  ஸோமே : என்ன தெண்டம் கொணர்ந்து வைக்கப் பார்க்கிறாய்? இங்கே ஏதாவது பொருள் இருந்தால் அல்லவோ தெண்டம் எங்களை வருத்தப் போகிறது! அதைப் பற்றிக் கவலை இல்லை. என்ன சமாசாரம்! ஏதேனும் விசேஷமும் உண்டா? தன : அவர்கள் வந்திருக்கிறார்கள் ஸோமே : எவர்கள்? . தன . அவர்கள்தான் தெரியாதா? ஸோமே : எனக்குத் தெரியவில்லையே! அது யார் அந்தச் சுவர்கள்? பெயரைச் சொல்லேன். தன : உமக்கு எதுதான் தெரியும்! நூறு வடையை ஒரு நொடியில் உள்ளே முழுசு முழுசாகத் தள்ளி விடத் தெரியும்! எந்தப் பள்ளிக் கூடத்திலும் கற்காமல் அந்த வித்தை மாத்திரம் சுலபமாகவே வந்து விட்டது. ஆச்சரியந்தான். அது இருக்கட்டும் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லும். இந்த மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? அதாவது தெரியுமா?  ஸோமே : என்ன என்னைப் பரீட்சிக்கிறாயோ? ஆனி ஆடி மாசங்களில் புஷ்பிக்கும். இது தெரியாதா முட்டாள்! தன : அந்தப் பெயர் உமக்குத்தான் நன்றாய்ப் பொருந்துகிறது. அப்பா சாஸ்திரி வீட்டில் பிறந்து குப்பா சாஸ்திரி வீட்டில் வாழ்க்கைப்பட்ட எனக்கு லவணம் என்றால் எருமைச் சாணம் என்று தெரியாதோ? என்று அழுத்தம் திருத்தமாய் ஒருத்தி சொல்லிக் கொண்டு இலையில் பரிமாறினாளாம். அதைப் போல் இருக் கிறது நீர் சொல்வது. ஸோமே : அதென்ன அப்படிச் சொல்கிறாய்! நான் சொன்னது ஒருநாளும் தவறாது! நீ இவ்விடத்திலேயே இரு. இதோ எஜமானரிடம் போய்க் கேட்டுக் கொண்டு வருகிறேன். (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? தயவு செய்து தெரிவியுங்கள். மாத : அது எதற்காக இப்பொழுது? வசந்த காலத்தில் புஷ்பிக்கும். ஸோமே : (திரும்பி வந்து) அடே! அது வசந்த காலத்தில் புஷ்பிக்கும். மாத : அப்படியானால் நீர் சமர்த்தர்தான்! உள்ளே போய் எஜமானரிடங் கேட்டு அறிந்து கொண்டு வந்து சொன்னால், இது உமக்கு முன்னமேயே தெரிந்ததாய் விட்டதோ? நீர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். இந்தப் பிரவேசப் பரிட்சையில் நீர் தவறிப் போனீர். இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காவது நீரே பதில் சொல்லும் பார்க்கலாம். தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்? ஸோமே : (அலட்சியமாக) மகா பெரிய கேள்வியோ இது? அரசன் பாதுகாக்கிறான்? தன : அப்படியானால் உம்முடைய மூளையில் அழுக்குப் படிந்திருக்கிறது. அதை வண்ணானுக்குப் போட வேண்டியது தான் சரியான சிகிச்சை. இன்னொரு முறை எஜமானரிடம் போய் இந்த மடமைக்கு மருந்தை அறிந்து வாரும். ஸோமே: (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்? மாத : இவை என்ன கேள்விகள்? உமக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதோ? பட்டினத்தைக் காப்பது சேனை என்பது கூட உனக்குத் தெரியாதா? ஸோமே : (திரும்பி வந்து) தனபாலா! பட்டினத்தைச் சேனை காக்கிறது என்பது கூடத் தெரியாதா? முட்டாள்! இதெல்லாம் என்ன கேள்வி! யார் வந்திருப்பவர் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. பைத்தியக்காரனைப் போல் ஏதேதோ உளறுகிறாயே! நான் கேட்டதற்கு நீ சொன்னதற்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தாராளமாய் இருக்கிறது. தன : ஐயோ பாவம் புத்திக்கு எட்டவில்லை! மிகவும் உயரம் போல் இருக்கிறது! ஒரு ஏணியாவது வைத்து ஏறிப் பார்க்கக் கூடாதா! அதற்கு இவ்வளவு பீடிகை எதற்காக? எஜமானரிடம் போய்த் தெரிவிக்கிறேன். (போகிறான்) ஸ்வாமி! கடன்காரி வந்துவிட்டாள்!  மாத : எனக்குக் கடன்காரி யார் இருக்கிறாள்? ஸோமே : பலே! நன்றாய் இருக்கிறதே! நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை இதற்குள் மறந்து விட்டீர்களே! வஸந்த ஸேனைக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது நினைவிற்கு வர வில்லையா? மாத : என்ன விளையாடுகிறாயோ? ஸோமே : இல்லை இல்லை; நிஜமே. இதோ தனபாலன் வந்திருக்கிறான். வேண்டுமானால் அவனைக் கேளுங்கள். மாத : தனபாலா! வஸந்தஸேனை வந்திருப்பது நிஜந்தானா? தன : ஆம், ஸ்வாமி! மாத : ஆகா! சந்தோஷ சங்கதி கொண்டு வந்தவர் வெறுங் கையோடு போகக் கூடாது. இதோ எனது அங்க வஸ்திரத்தை உன் சிரமத்திற்காக எடுத்துக் கொள். (கொடுக்கிறார்) போ! சீக்கிரம் உள்ளே அழைத்து வா. தன : உத்தரவு! (போகிறான்) ஸோமே : நான் சொன்னது உண்மை என்று இப்பொழுதாவது மனதில் பட்டதா? அவள் எதற்காக வருகிறாள் என்பது தெரிகிறதா? மாத : எதற்காக வருகிறாள்?  ஸோமே : அவளுடைய ஆபரணங்களின் கிரயம் நம்முடைய வைர ஸரத்தைக் காட்டிலும் அதிகமானது. அந்த அதிகத்தைப் பெறும் பொருட்டு வந்திருக்கிறாள். மாத : அப்படியானால் அவள் வந்தது நியாயந்தானே! அதைக் கொடுப்பது நம்முடைய கடமை அல்லவோ வரட்டும்; அவள் இச்சையைப் பூர்த்தி செய்து அனுப்புகிறேன். (வஸந்தஸேனை ஒரு தோழியுடன் வருகிறாள்)  வஸ : ஸோமேசரே! எங்கே நம்முடைய ஜூதர்?  ஸோமே ; (தனக்குள்) ஆம் ஜூதர்தான்! நல்ல கெளரதையான பட்டப் பெயர் பெற்றார் (உரக்க) அம்மா! அவர் அதோ சோலைக்குள்ளிருக்கிறார். வஸ : அடி ஸகி! நான் அவரிடத்தில் எப்படிப் பேசுகிறது? எனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கிறதே! தோழி : வெட்கமென்ன! ஜூதரே! நமஸ்காரம் என்று சொல்லுங்களேன்! வஸ : அவ்விதம் சொல்ல எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்? தோழி : சந்தர்ப்பத்தில் தைரியம் தானாக ஏற்படும். (வஸந்தஸேனை நாணத்துடன் மாதவராயரிடம் நெருங்கிப் புஷ்பங்களை அவர் பேரில் விசிறி) ஸ்வாமி! நமஸ்காரம்! மாத : ஆகா! வஸந்தஸேனா! வரவேண்டும்! வரவேண்டும்! இந்த தினம் ஸுதினம் ஒரு நாளும் கிடைக்காத கெளரவம் இன்று கிடைத்ததல்லவா! வஸ : இந்த உபசார வார்த்தைகள் என் வாயில் இருந்தல்லவோ வர வேண்டியவை! ஸோமே : (மாதவராயரிடம் தனிமையில்) நண்பரே வந்த காரணமென்ன என்பதை விசாரிக்கட்டுமா! மாத : மரியாதையாகக் கேள்! ஸோமே : வஸந்தஸேனா சகல சுக போகங்களும் நிறைந்த உன்னுடைய மாளிகையை விட்டு இவ்வளவு தூரம் வரும்படியான சிரமத்தை ஏற்றுக் கொண்ட காரணமென்ன? தோழி : (ஸோமேசனிடம்) ஐயா! நீர் கொடுத்த வைரசரத்தின் கிரயம் எவ்வளவு என்று அறிந்து கொள்ள எஜமானி அம்மாள் விரும்புகிறார்கள்.  ஸோமே: (மாதவராயரிடம் தனிமையில்) நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா! சரியாய்ப் போய்விட்டது பார்த்தீர்களா? தோழி : அதைக் கேட்பதின் காரணம் என்ன என்றால், அவர்கள் அதை சூதாட்டத்தில் தோற்று விட்டார்கள். ஆகையால் அதன் விலையை அறிந்து கொள்ள விரும்புகிறார்.  ஸோமே : (தனக்குள்) ஓகோ! பதிலுக்குப் பதிலோ!  தோழி : இழந்த சரத்திற்குப் பதிலாக இவ்வாபரணங்களை வைத்துக் கொள்ளுங்கள்! (திருட்டுப் போன நகைகளைக் கொடுக்க, ஸோமேசன் ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.) தோழி : என்ன அப்படிச் சோதனை செய்து பார்க்கிறீரே! இதற்கு முன்னால் இவற்றைப் பார்த்திருக்கிறீரோ? ஸோமே ; இதென்ன ஆச்சரியம்! தட்டானுடைய திறமை நம் கண்களை ஏமாற்றி விட்டதே! தோழி: இல்லையில்லை; உம்முடைய கண்ணின் பார்வைதான் சற்றுக் குறைவாகத் தோன்றுகிறது. இதற்குமுன் நீர் பார்த்த ஆபரணங்களே இவைகள்! ஸோமே : (மாதவராயரிடம் எடுத்துக் கொண்டு போய்) ஆகா! நண்பரே! நம்மிடத்தில் இருந்து திருட்டுப் போன ஆபரணங்களைப் பார்த்தீர்களா? மாத : ஆகா! அப்படியா! சந்தோஷம்! அதுவும் நமது நல்ல காலந்தான்! இவைகள் எவ்விதம் இவர்களிடம் வந்திருக்கக் கூடும்? ஸோமே: (தோழியிடம்இரகசியமாக) உண்மையில் அப்படித்தானா?  தோழி : (இரகசியமாக) உண்மையில் அவைகளே! ஸோமே : நிச்சயந்தானா? தோழி : சத்தியமாய் அவைகளே!  ஸோமே : (சந்தோஷத்துடன்) ஸ்வாமி! சந்தேகமே இல்லை.  மாத: ஸகி! உன் வாயால் சொல். இது நிஜந்தானா?  தோழி : நிஜமே!  மாத : (சந்தோஷத்துடன்) ஆகா! நல்ல சங்கதி தெரிவித்தாய் என்னிடத்தில் எவர் சந்தோஷ சங்கதியைத் தெரிவிக்கிறார்களோ, அவரை நான் வெறுங்கையுடன் அனுப்புவதே இல்லை. இதோ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொள். (தன் விரலில் மோதிரம் இருப்பதாய் நினைத்து, இழுக்கப் பார்க்கிறார். இல்லை என்றறிந்து வெட்கமடைகிறார்) வஸ : (ஒருபுறமாக) ஆகா! *தனத்தை வைத்துக் கொள்வதற்கு இவர் அல்லவோ அருகமானவர்! என்ன தாராள குணம். அதனாலேதான் சீக்கிரத்தில் ஏழையாய் விட்டார்! பணத்தில் ஏழையான போதிலும் தயையில் மாத்திரம் இவர் முன் போலவே கோடீசுவரராய் இருக்கிறார். இவரை நான் என் மனதார நினைத்து விட்டுப் புருஷனாக அடையா விட்டால், இந்த ஜென்மமே வியர்த்தம்! மாத : (தனக்குள் விசனத்தோடு) தன் சந்தோஷமும் கோபமும் யாதொரு பயனுமில்லாமல் போகும் நிலைமையில் நித்திய தரித்திரனாய் இருந்து வாழ்வதும் ஒரு வாழ்வாமோ! இறகுகளை இழந்த பறவைகளும், இலைகளை உதிர்த்த மரங்களும், இடிந்த வீடும், பிறருக்குக் குதுகலமாக விருந்தளிக்கும் நிலைமையில் இல்லாத தரித்திரனுக்கு சமானமானவை. ஸோமே : அம்மா நகைகள் களவு போன போது இவற்றை என் அங்கவஸ்திரத்தில் மூட்டைக் கட்டி வைத்திருந்தேன். தயவு செய்து என் வஸ்திரத்தைக் கொடுத்து விடுங்கள். வஸ : (புன்சிரிப்போடு) ஒரு வஸ்திரந்தானா வேண்டும். ஒன்பது வஸ்திரங்கள் தருகிறேன்! (வஸந்தஸேனை தோழியைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட ஸோமேஸனை அழைத்துக் கொண்டு மறைவாகப் போய் விடுகிறாள்) வஸ: ஸ்வாமி நகை மூட்டை திருட்டுப் போயிருக்க அதற்குப் பதிலாக வேறொன்றை ஏன் அனுப்ப வேண்டும்? அப்படிச் செய்வது அனாவசியமல்லவா? மாத :விருத்தம்: செஞ்சுருட்டி   மங்கையே! நன்மை மிக்க மானினி அவனி தன்னில்  மங்கிய வறியன் சொல்லை மதிப்பவ ருளரோ? முற்றும்  சங்கையே யடைவர் வாய்மை சாற்றினும் பொய்யா மின்னம்  பங்கமே புரிவா ரெள்கிப் பதரெனக் கொள்வ ரன்னோர்!   ஸ்திரீ ரத்னமே! இதை நான் அனுப்பாவிட்டால் என்னை இனி யார் மதிப்பார்கள்? திருட்டுப் போய்விட்டதென்று நான் சொன்னால் அதை யாராவது நம்புவார்களா? ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா? தனம் இருந்தால் மாத்திரம் மனிதனுக்குக் கெளரவமே ஒழிய, பொருளில்லாதவனுக்குப் புகழும் இல்லை மதிப்புமில்லையே! அவன் உண்மையைச் சொன்ன போதிலும், அது பொய்யாகவே தோன்றுமே! வஸ: விருத்தம்: சங்கராபாணம்   மறையவர் மணியே! நுங்கள்மதிப்பிலாத்தனங்கள் யாவும் மறைந்தன வேனுமென்று மகலுமோ புகழும் பேரும்? நிறைவழா வரிய நீர்மை நீங்கிடாச் செல்வ மாகக்  குறைவினி யுங்கட் குண்டோ கோதிலாக் குணத்தின் மேலோய்  பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. உலகத்தில் யாவரும், தனவந்தர்களையே மதிக்கிறார்கள் என்பதும் ஏழைகளை இகழ்ந்து அவமதிக்கிறார்கள் என்பதும் முற்றும் நிஜமல்ல. ஒருவன் பரம தரித்திரனாய் இருந்த போதிலும் அவனிடத்தில் நற்குண நல்லொழுக்கமும் நீதி நெறி வழுவாமல் நடக்கும் மனோதிடமும் இருக்குமாயின், ஜனங்கள் அவனை எவ்வளவோ பாராட்டிப் பெருமைப்படுத்துகிறார்கள். ஒரு தனிகனிடத்தில் நற்குணம் இல்லாவிட்டால், ஜனங்கள் வெளிக்கு அதைக் காட்டாமல் அவனை மேன்மைப்படுத்தின போதிலும், உள்ளுற அவனை இகழ்வதே உலக இயல்பு. ஆகையால், தங்கம் குப்பையில் கிடந்த போதிலும் அதன் அருமை பெருமைகள் ஒரு நாளும் அதற்கில்லாமல் போகா. எவரோ நன்றியற்ற சிலர் உங்களை மறந்த போதிலும், இந்த நகரத்தினர் பெரும் பாலரும் உங்களுடைய மேன்மையை நினைத்த வண்ணம் இருக்கின்றனர். ஸ்வாமி பிறருக்குக் கொடுக்கப் பொருள் இல்லையே என்று தாங்கள் இனிச் சிறிதும் கவலைப்பட வேண் டாம். இந்த அடிமைக்கு ஏராளமாக பொருள்கள் தேவைக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். அவற்றை இனித் தங்கள் இச்சைப் படி உபயோகித்துக் கொள்ளலாம். தாங்கள் இதற்காகச் சிறிதும் வருந்த வேண்டாம். மாத : (தனக்குள்) ஆகா! என்ன மேன்மைக் குணம் கற்பாறையில் தாமரை பூத்ததைப் போலவும், ஆலகால விஷத்தைக் கொண்ட ஸர்ப்பத்தின் தலையில் மாணிக்கம் உண்டானது போலவும், ஈவிரக்கம் என்பதே இல்லாத தாஸியின் குலத்தில் இவ்விதமான உத்தமி வந்துதித்தது விந்தையிலும் விந்தையே! (உரக்க) ஹே! பெண்மணி வஸந்தஸேனை! உன்னுடைய அழகிய மொழியைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தேன்! இவ்வளவு தயை எவருக்கு உண்டாகும் நற்குணவதியாகிய நீ, நீடுழி இன்பம் அனுபவித்து வாழ அந்த ஈசுவரன் அனுக்கிரகிப்பானாக! மாதே நான் இதுவரையில் பிறருக்குக் கொடுத்தறிவேனே யொழிய எவரிடத்தும் வாங்கி அறியேன். எப்பொருளையும் நாம் நியாயமான வழியில் சம்பாதித்துச் செலவு செய்தல் வேண்டுமே ஒழிய அன்னியருடைய செல்வத்தை நாம் இப்படிக் கவருதல் திருட்டாகும். ஆகா! நல்ல காரியம் செய்யச் சொல்லுகிறாய்! என்னிடத்தில் அந்தரங்க அபிமானம் வைத்தவளாய்க் காணப்படும் நீ எனக்கு இவ்விதமான தீங்கை நினைக்கலாமா? நீ எனக்கு உதவி செய்வதாய் வாயினால் சொன்ன அந்த அன்பான மொழியும், நினைத்த நல்ல நினைவுமே போதும். நான் அவற்றை அடைந்து தனிகனானதிலும் அதிகம் பெருமகிழ்ச்சி அடைந்தேன். வஸ : ஸ்வாமி என்னை அன்னியளாகப் பாவிக்கக் கூடாது! நான் சதா காலமும் இடைவிடாமல் தங்கள் உருவத்தையே என் மனதில் வைத்து அதையே தெய்வமாக மதித்து வழிபட்டுத் தங்களைப் பற்றி மனனஞ் செய்வதையே பேரின்பமாய் மதித்து வருகிறேன். தங்களைப் பார்த்துத் தங்கள் மேன்மையைப் பற்றி உணர்ந்த பின் இந்தச் சரீரத்தைத் தங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விட்டேன். ஆகையால் என்னை அங்கீகரித்துத் தங்களுக்குப் பணி புரிபவளாய் வைத்துக் கொண்டு என்னை ஈடேற்ற வேண் டும். தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் தங்களிடத்தில் சென்ற மனது இனி வேறு யாரிடத்திலும் இந்த உயிரழிவதாய் இருந்தாலும் செல்லாது. என்னுடைய ஏராளமான செல்வத்தையும் என்னுடைய ஸ்ரீதனமாக ஏற்றுக் கொண்டு இனித் தாங்கள் துன்பத்தையும், மனக் கவலையும் நீக்கி இன்புற்று வாழலாம்.  மாத : என்ன ஆச்சரியம்! இது எங்கும் நடக்காத விந்தையாய் இருக்கிறதே! பரம தரித்திரனாகிய என்னைக் குல ஸ்திரீயும் மணக்க இச்சைப்பட மாட்டாளே. அப்படி இருக்கப் பணத்திலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள தாஸி குலத்தில் உதித்த நீ விரும்புவது நம்பத் தகுந்ததாய் இல்லையே! உன்னுடைய பேரழகைக் கண்டு மயங்கி உன்மீது ஆசை கொண்டு எத்தனையோ தனவந்தர்கள் உன் மாளிகையின் வாசலில் உனது தயவிற்காகக் காத்திருப்பார்களே! அரசன் மைத்துனன் என்றால் நகரமே நடுங்கும். அவனையும் அவமதிக்கிறாய்! இதென்ன வினோதம்! இவ்வளவு மேன்மைகளை அலட்சியம் செய்து விட்டு என்னை நாடுவதின் காரணமென்ன? இது கனவோ? அல்லது நினைவு தானோ? இப்படியும் நடக்குமோ? இதுவரையில் நீ என்னிடத்தில் உண்மையாய்ப் பேசியதாக நினைத்தேன். இப்பொழுதே அதை உள்ளபடி அறிந்தேன். நான் தரித்திரன் என்று நீயும் என்னை ஹேளனம் செய்கிறாய் போல் இருக்கிறது. வஸ : (காதைப் பொத்திக் கொண்டு) அடாடா! எவ்வளவு கடுரமான வார்த்தைகள்! ஸ்வாமி! நான் சொன்னது எல்லாம் உண்மையே அன்றி அணு அளவும் பொய்யல்ல. முற்றிலும் சத்யம். தங்கள் விரோதியும் தங்களுக்கு மனக் கவலை உண்டாக்க அஞ்சிப் பின்வாங்குவானே. அப்படி இருக்க, நான் அதைச் செய்வேனா? தங்களுடைய பாத சாஷியாகச் சொல்கிறேன். நான் தங்கள் பேரிலேயே காதல் கொண்டு நெடு நாளாய் இதே நோயால் வாடி வதங்கிக் கிடக்கிறேன். தாங்கள் என்னை உல்லங்கனம் செய்து விட்டால் எனக்கு வேறு புகலில்லை. நான் மற்றவர்களைப் போலப் பணத்திற்காக விரும்புபவள் அல்ல குணத்திற்காக விரும்புகிறேன் என்னை எப்படியாயி னும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இனிமேல் திரும்பி என் மாளிகைக்குப் போக மாட்டேன். மாத : மாதரசி! எத்தனையோ கோடி தவம் செய்து அதன் பயனாய்க் கிடைக்கத் தகுந்த உன்னையும் உன் ஐசுவரியத்தையும் வேண்டாமென்று நான் சொல்ல வேண்டி இருப்பதைப் பற்றிப் பெரிதும் வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும். வஸ : பிரபோ! பிறர் காலில் கேவலம் ஒரு முள் தைப்பதைக் கண்டு பொறாமல் வருந்தி இளகும் தங்களுடைய தயாளமானது என் விஷயத்தில் மாத்திரம் ஏன் இரக்கம் கொள்ள வில்லை? இது என் அதிர்ஷ்ட ஹீனமோ? ஏன் என்னிடத்தில் தங்களுக்கு இவ்வளவு விருப்பமின்மை! என்னிடத்தில் யாதாயினும் குற்றம் குறைபாடுகளைக் கண்டீர்களோ? நான் கற்பில் தவறி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களோ? எங்கும் நிறைந்திருக்கும் ஸர்வேசுவரன் ஸாக்ஷியாகச் சொல்லுகிறேன். நான் அறிவு பெற்ற முதல் இதுவரையில் தங்களை அன்றி பிற புருஷரை மனதினால் நினைத்ததும் இல்லை; வாயால் குறித்ததும் இல்லை; தேகத்தால் பரிசித்ததும் இல்லை; இது உறுதி! இது சத்தியம்! தாங்களே எனக்கு நாதன்; தாய்; தந்தை; நண்பர்; உறவினர் முதலிய யாவரும் தாங்களே! நான் தொழும் கடவுளும் தாங்களே! இந்தப் பிறப்பில் நான் தங்களை அன்றி வேறு எவரையும் விரும்பேன். தங்கள் மேற்கொண்ட ஆசையென்னும் தீயால் கருகித் துவளும் எனக்கு உயிர்ப் பிக்ஷை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். தருமப் பிரபோ! மாத : ஆகா என்ன செய்வேன்? ஈசுவரா இதென்ன என்னை இவ்விதமான தரும சங்கடத்தில் வைத்துச் சோதனை செய்கிறாய்? ஹே! மங்கையர்க்கரசி! வருந்த வேண்டாம். உன்னிடத்தில் ஏதோ களங்கம் இருக்கிறதென்று நினைத்து உன்னை மறுக்கவில்லை. உன்னைப் போன்ற உத்தமியை அடைவதை அரசர்களும் கிட்டாத பாக்கியமாக மதிப்பார்களே! அப்படி இருக்க நான் வேண்டாமென்று சொல்வேனோ! வஸ : அப்படியானால் உயர் குலத் துதித்தோராகிய அந்தணர் கேவலம் தாழ்ந்த வகுப்பிற்குரிய என்னை அங்கீகரிப்பது தவறு என்று மதிக்கிறீர்களோ? மாத : பெண்மணி! அப்படியல்ல! கடவுளால் படைக்கப்பட்ட யாவரும் சமமானவர்களே! உயர் குலத்தினரிடத்திலும், பறையரிடத்திலும், பெண்பாலரிடத்தும், குழந்தைகளிடத்தினும், ஈசுவரனுடைய் அம்சமாகிய ஜீவாத்மாவே இருக்கின்றது. நமக்கு மாயையால் வெவ்வேறாகத் தோன்றினும் ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே. இந்த உண்மையை அறிந்து எல்லாரையும் சமமாக மதித்து யாவரிடத்தும் தயையோடும் அன்போடும் நடந்து கொள்பவர்களே அந்தணர். அந்தணர் என்பது குளிர்ந்த அழகிய தன்மை உடையவர்களுக்குக் காரணப் பெயர். ஆதலால் அவர்கள் கீழ் வகுப்பிலுள்ள பிறரைத் தம் வழிகளில் திருப்பி, புலால் மறுத்தல், கற்றல் முதலிய நல்லொழுக்கங்களில் பயிற்றிக் காலக் கிரமத்தில் அவர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளக் கடவர்கள் என்பது பற்றி, அவர்கள் மற்ற மூன்று வருணத்தார்களிடத்திலும் மணம் புரிந்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் நான் குலத்தின் உயர்வு தாழ்வைப் பற்றி நினைக்கவே இல்லை. நான் ஏற்கெனவே ஒருத்தியை மணந்த கிரகஸ்தன் என்பது உனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். சகல உத்தம குணங்களும் நிறைந்த மனைவியிருக்க, இந்தக் காரியத்தைச் செய்து அவள் மனதிற்கு ஆறாத் துயரைத் தருவது தருமமாகுமா? இதை நீயே யோசனை செய்து பார். வஸ : (மிக வருந்தி) என் பிராண நாதா தாங்கள் என்னை இப்படிச் சோதனை செய்தால், பேதையாகிய நான் என்ன செய்யக் கூடும்? ஒரே புருஷனை நினைத்து மணக்க வேண்டும் என்பது ஸ்திரீகளுக்கு மாத்திரமே ஒழியப் புருஷர்கள் ஒரு மனைவி உயிருடன் இருக்கையிலேயே, மற்றவரை முறைப்படி மணந்து கொள்ளலாம் அல்லவோ! ஒரு ஸ்திரீ தன் கணவன் இருக்கும் பொழுது வேறொருவனை மணத்தல் முடியாது. இந்த விஷயத் தில் ஸ்திரீ புருஷர்களுக்கு வித்தியாசம் உண்டு. ஆகையால், என்னை ஏற்றுக் கொள்வது சாஸ்திரத்திற்கும் விரோதம் ஆகாது. என்னை அலட்சியம் செய்து மறுத்து விட்டால், நான் இந்த உயிரைச் சுமந்து வருந்தி வாழ வேண்டும். தங்களையே நினைத்து நினைத்து தங்கள் பொருட்டாகவே உயிரை விட்டு விடுவதே உறுதி. ஆகா! தாங்கள் மறுக்க மறுக்க, என் மனம் படும் பாட்டை என்னவென்று விவரிப்பேன் என் உயிர் இப்பொழுதே போய் விடும் போல் இருக்கிறது! என் ஆருயிர் நாதா! உன் இச்சைப் படி ஆகட்டும் என்று தங்கள் இனிய வாயால் ஒரு மொழி கூறி என்னை இந்த இடர்க் கடலில் இருந்து கை தூக்கி விடக் கூடாதா? ஏழையின் முகத்தைப் பாருங்கள். பிரபு தங்களையே எண்ணி எண்ணிப் புண்ணான என் மனதை ஏற்றுக் கொண்டேன் என்னும் அந்த மொழி அமுதைச் சொரிந்து உய்விக்கக் கூடாதா? இதோ தங்களை ஆயிரம் தடவை சேவித்து வணங்குகிறேன்.  மாத: ஹா. ஈசுவரா கருணாநிதி! இதுவும் உன் சோதனையோ? கற்பிற்கு அரசியாகிய என் பிராண சுந்தரியின் மனதை வருத்த நினைப்பேனோ? இவள் படும் பாட்டைக் காண என் மனம் தத்தளிக்கிறதே என்ன செய்வேன்: ஹா. ஜெகதீசா! (மூர்ச்சித்து விழுகிறார்)  வஸ : (துடிதுடித்து) ஐயோ! என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே என் துரை மூர்ச்சித்து விழுந்து விட்டாரே! ஓய் ஸோமேசரே! அடி தோழி! சீக்கிரம் வாருங்கள் (கையைப் பிசைந்து கொண்டு) சீக்கிரம் வாருங்கள் நமது எஜமானர் மயங்கி விழுந்து விட்டார். (யாவரும் ஓடி வருகிறார்கள்) -----------------------                                       அங்கம் 2 காட்சி 2   இடம் : மாதவராயருடைய மாளிகை. காலம் : மறுநாள் காலை. (வஸந்தஸேனை ஒரு சயனத்தில் நித்திரை செய்யத் தோழி அருகில் நிற்கிறாள்.) தோழி : அம்மா பொழுது விடிந்து நெடுநேரமாய் விட் டதே! விழித்துக் கொண்டு பாருங்கள். வஸ : (கண்ணைத் துடைத்துக் கொண்டு விழிக்கிறாள்) ஆகா! இப்பொழுது தானே சயனித்துக் கொண்டேன். இதற்குள் பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகி விட்டதே! என்ன வெட்கக் கேடு! நான் இவ்வளவு நேரம் துயிலுவதைக் கண்ட நமது எஜமானர், என்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண் டாரோ தெரியவில்லையே! அவர் தேகம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே! இரவில் அவரை மூர்ச்சை தெளிவித்துச் சயனத்தில் படுக்கச் செய்து நெடுநேரம் நான் அவருக்கு அருகில் சைத்தியோபசாரம் செய்து கொண்டிருந்தேன். நான் நிற்பதைப் பொறாமல், என்னையும் நித்திரை செய்யும்படி அனுப்பினார். அவரைத் திரும்பவும் பாராமல் நான் நெடுநேரம் தூங்கி விட் டேனே! நீ உடனே போய் அவர் விழித்துக் கொண்டாரா என்று பார்த்து விட்டு வா! (தோழி போகிறாள்) வஸ : (தனக்குள்) ஆகா! என்ன இவருடைய மனோவுறுதி! இவர் ஏக பத்தினி விரதத்தைப் பூண்டவராக இருக்கிறாரே! இவர் மனதை நான் எப்படி மாற்றப் போகிறேன்? ஈசுவரா! திக்கற்ற ஏழையான எனக்கு நீர்தான் துணை இருந்து என் இச்சையைப் பூர்த்தி செய்விக்க வேண்டும். (தோழி வருகிறாள்) தோழி: அம்மா! அவர் நம்முடைய நகரத்திய பூஞ்சோலைக்கு அருகில் இருக்கும் தன்னுடைய உத்தியான வனத்திற்குப் போய் விட்டார். நீங்கள் இரவில் அவருக்குச் செய்த உபசரணைகளுக்கு அவர் பெரிதும் நன்றி பாராட்டுகிறாராம். வெளியில் போகுமுன் உங்களுடன் தெரிவித்துப் போக நினைத்தாராம். நித்திரையில் இருந்த உங்களை எழுப்ப மனம் இல்லாதவராய்ப் போய் விட்டாராம். நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால் தனது பெட்டி வண்டியில் வைத்து அவ்விடத்திற்கு அழைத்து வரும்படி தன்னுடைய வேலைக்காரனுக்குக் கட்டளை இட்டுப் போய் இருக்கிறாராம். வஸ : மிகவும் சந்தோஷம். அவருடைய தேஜோ மயமான அழகை நான் இன்னம் பூர்த்தியாக என் கண்ணாரப் பார்க்க வில்லை. இன்று என் கண்களுக்கு நல்ல விருந்து செய்கிறேன். இது எந்த இடம்? பொக்கிஷம் வைக்கும் இடத்தைப் போலக் காணப்படுகிறதே! ஆகா! அவர் என் பேரில் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் மிகவும் அந்தரங்கமான இடத்தில் அல்லவோ நுழைந்து சயனித்துக் கொண்டிருக்கிறேன். தோழி : அந்தரங்கமான இடத்தில் மாத்திரம் அல்ல: ஒவ்வொருவருடைய ஹிருதயத்திற்குள்ளும் நுழைந்து விட்டீர்கள்! வஸ: இல்லை, இல்லை. இவரைச் சேர்ந்தவர்கள் என் பேரில் கோபம் கொண்டிருப்பார்களோ என்னமோ தெரியவில்லை! தோழி: அவர்களுக்கு இனிமேலேதான் ஒரு வேளை வருத்தம் உண்டாகும்.  வஸ : ஏன்? தோழி : நீங்கள் புறப்பட்டுப் போவதினால். வஸ : ஆகா! அப்படியா! மற்றவர்களும் என்னை அவ்வளவு விரும்புகிறார்களா அதுவும் ஒரு பாக்கியந்தான். அவருடைய மனைவியாகிய உத்தமி என்னை இரவில் பார்த்த பொழுது, என்னிடத்தில் அன்பான முகத்தைக் காட்டி எனக்கு எவ்வளவு உபசாரம் செய்தார்கள். புருஷனுக்குத் தகுந்த மனைவியே! நற்குணமே நிறைந்த இவர்களை விட்டுப் பிரிந்து போக சகிக்கவில்லை. அடி ஸகி! இதோ இந்த வைர ஸரத்தை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய அரிய சகோதரியாகிய கோகிலத்தினிடம் சேர்ப்பித்து, நான் மாதவராயருடைய பணிப் பெண் என்றும், கோகிலத்தின் அடிமை என்றும் தெரிவித்து, இந்த மாலை எந்தக் கழுத்திற்கு உரியதோ அதை இந்த ஸரத்தால் அலங்கரித்துக் கொள்ள நான் வேண்டியதாய்க் கேட்டுக் கொள். தோழி : நமது எஜமானருக்கு இது திருப்தியாய் இராதே. வஸ : அவர் என்மீது ஒருகாலும் வருத்தப்பட மாட்டார். நான் சொல்வதைச் சொல். . தோழி : ஆக்ஞை! (போய்த் திரும்பி வருகிறாள்) தோழி: அம்மணி ஸரத்தை வாங்கிக் கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். தான் தன் கணவனையும் கற்பையுமே ஆபரணங்களாக மதிப்பதாகவும், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படவில்லை என்றும் சொல்லித் தடுத்தார்கள் நான் வற்புறுத்திக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதோ பார்த்தீர்களா நம்முடைய எஜமானரின் குழந்தை வருகிறார்! (சிசுபாலன் என்னும் குழந்தை விசனத்துடன் வருகிறான். கோமளா ஒரு மண் வண்டியை இழுத்துக் கொண்டு வருகிறாள்) கோம : குழந்தாய்! வண்டியில் உட்கார்ந்து கொள் நான் இழுக்கிறேன். குழந்தை : (கோபத்துடன்) எனக்கு இந்த வண்டி வேண்டாம் போ! அடுத்த வீட்டு வாஸுதேவன் பொன் வண்டி வைத்திருக்கிறான் எனக்கு மாத்திரம் மண் வண்டியோ! எனக்கு வேண்டாம் போ. (அழுகிறான்) கோம : குழந்தை! அழாதே அப்பா! அடுத்த வீட்டுக்காரன் கோடீசுவரன். அவனுக்கு பொன் நிறைய இருக்கிறது. பொன் வண்டி செய்து கொடுத்திருக்கிறான். பொன்னுக்கு நாம் எங்கே போகிறது? உன்னுடைய தந்தை மறுபடியும் தனவந்தராகும் வரையில் பொறுத்துக் கொள். உடனே உனக்கும் பொன் வண்டி வாங்கிக் கொடுப்பார். அழாதே! வேண்டாம்! அதோ பார்; அங்கே யார் நிற்கிறார்கள் பார் அவர்களை உனக்குத் தெரியுமா? குழ : (கோபத்தோடு) நான் பார்க்க மாட்டேன் போ. வஸ : ஆகா! என்ன அழகு! யாரே அழகுக்கு அழகு செய்வார்? சரியான ஆடை ஆபரணங்கள் ஒன்றும் இல்லா விட்டா லும் இவனுடைய இயற்கை அழகும் முகவசீகரமும் யாருக்கு வரும்? (கைகளை நீட்டி) கண்ணே! இங்கே வா! (எடுத்து மடி யில் வைத்துக் கொண்டு முத்தமிடுகிறாள்) ஆகா! தன் பிதாவைப் போலவே இருக்கிறானே! குழந்தை எங்கே ஒரு முத்தங் கொடு. குழ : (கோபத்தோடு) மாட்டேன் போ. கோம : அவனுக்கு இப்பொழுது கோபவேளை; அடுத்த வீட்டு வாஸுதேவன் வைத்திருக்கும் பொன்வண்டியைப் போலத் தனக்கும் வேண்டுமாம். அதற்காக அழுகிறான். நான் செய்து கொடுத்த அந்த மண் வண்டி வேண்டாமாம். வஸ :பெற்றோரின் ஏழ்மையை குழந்தை எப்படி அறியப் போகிறது! கண்ணே! அழாதே; உனக்குப் பொன் வண்டி தானே வேண்டும்? நான் வாங்கித் தருகிறேன். எங்கே ஒரு முத்தங் கொடு.  குழ : அம்மா! இந்தம்மாள் யார்? வஸ : நான் உன் பிதாவின் மேன்மைக் குணமான ஐசுவரியத்தினால் விலைக்கு வாங்கப்பட்ட பணிப்பெண். கோம : குழந்தை! இவர்களும் உன்னுடைய அம்மாள்தான்.  குழ : நீ பொய் சொல்லுகிறாய். என்னுடைய அம்மாளாய் இருந்தால், அழகான இத்தனை ஆடையாபரணம் இருக்காதே!  வஸ : ஆகா! நம்முடைய எஜமானர் செல்வாக்கில் இருந்ததை இவன் கண்டதில்லை அல்லவா! ஏழ்மை நிலைமையிலேயே பிறந்து வளர்ந்தவன். (தன்ஆபரணங்களை எல்லாம் கழற்றி விடுகிறாள்) இப்பொழுது பார்த்தாயா என்னை? இப்பொழுது உனக்கு நான் அம்மாளைப் போல இருக்கிறேனா? இந்த ஆபரணங்களை நீ எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (அவனை மார்பில் அனைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள்) குழ: நீதான் நகைகளைக் கொடுக்கிறதற்காக அழுகிறாயே! எனக்கு வேண்டாம் போ! வஸ : (கண்ணைத்துடைத்துக் கொண்டு) கண்ணே! பாக்கியமே! நான் அழவில்லை. நீ இவைகளை எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (நகைகளை வண்டியில் நிறப்புகிறாள்)  குழ: நீ இப்பொழுது கொடுப்பாய்; திரும்பக் கேட்பாய்; எனக்கு வேண்டாம். வஸ : நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். நிச்சயம்.  குழ : இந்த நகைகளால் வண்டி எப்படிச் செய்கிறது! என்னுடைய அம்மாள் கோபித்துக் கொள்வாள். எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.  வஸ : அம்மாள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இவைகளைத் தட்டானிடம் விற்று விட்டுப் பொன் வாங்கி வண்டி செய்து கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போ. குழ : சரி; அப்படியானால் எடுத்துக் கொண்டு போகட்டுமா? நீ அழ மாட்டாயே. அழுதால் எனக்கு வேண்டாம். வஸ : ஆகா! பிதாவைப் போலப் பிறர் மனம் வருந்த சகியாதவன். – கண்ணே! நான் அழவில்லை. நீ எடுத்துக் கொண்டு போ! நான் மறுபடி வரும் போது நீ எனக்கு பொன் வண்டியைக் காட்ட வேண்டும்! காட்டுகிறாயா? குழ : (சந்தோஷத்துடன்) காட்டுகிறேன். இதை அம்மாளிடம் காட்டப் போகிறேன். (ஆபரணங்களுடன் வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாய்ப் போய் விடுகிறான். கோமளாவும் அவனைத் தொடர்ந்து சென்று சற்று நேரத்தில் திரும்பி வருகிறாள்.) கோம : அம்மா! வாசலில் குணசீலன் பெட்டி வண்டியைத் தயார் செய்து வைத்திருக்கிறான். ഖஸ : என்னுடைய உடைகளைச் சீர்திருத்திக் கொண்டு இதோ வந்து விட்டேன். (மறைவில் போகிறாள்) (வீட்டு வாசலில் குணசீலன் வண்டியுடன் நிற்கிறான்) குணசீலன் : (தனக்குள் அடாடா! வண்டிக்குள் போடும் மெத்தையைப் போட்டுக் கொண்டு வர மறந்து விட்டேன்; நல்ல வேளை; சமயத்தில் நினைவிற்கு வந்தது. எருதுகள் ஓடுவதற்குத் துடிக்கின்றன. வண்டியை நிறுத்தி விட்டுப் போக முடி யாது, என்னுடைய வீட்டிற்குப் *போய் மெத்தையைப் போட்டுக் கொண்டு இதோ வந்து விடுகிறேன். (வண்டியை ஓட்டிச் செல்கிறான்) அந்த சமயத்தில் வீரசேனனுடைய வேலைக்காரன் பத்மநாபன் வேறொரு பெட்டி வண்டியை ஒட்டிக் கொண்டு மாதவராயருடைய வீட்டு வாசலிற்கு வருகிறான். பத்ம : (தனக்குள்) என்ன என்னுடைய முட்டாள்தனம்! எஜமான் அவசரமாகப் பூஞ்சோலைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தேன். வெற்றிலை புகையிலை எல்லாம் எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வாய்க்கு ஒன்றும் இல்லாமல் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறது. கொஞ்சதூரத்தில் ஒரு கடைஇருந்ததைப் பார்த்தேன். இதோ மாதவராயருடைய மாளிகை இருக்கிறது. இதன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டுக் கடைக்குப் போய் வருகிறேன். (வண்டியை மாதவராயர் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டுப் போகிறான். அந்த சமயத்தின் வஸந்தஸேனையும் கோமளாவும் அதற்கு அருகில் வருகிறார்கள்.) கோம: அம்மா! இதோ வண்டி தயாராக நிற்கிறது, ஏறிக் கொள்ளுங்கள். (வண்டியின் கதவைத் திறக்கிறாள்) வஸ: (ஏறிக் கொண்டு) சரி! நீ உள்ளே போ; நான் கதவை மூடிக் கொள்கிறேன். நகைகளைக் கொடுத்ததைப் பற்றி என் னுடைய சகோதரி கோபித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள். அடி தோழி! நீ நம்முடைய வீட்டிற்குப் போய், நான் கூடிய சீக்கிரம் வருவதாகச் சொல். கோம : சரி! உத்தரவுப்படி செய்கிறேன். கதவை மூடிக் கொள்ளுங்கள். (வஸந்தஸேனை கதவை மூடிக் கொள்ள, கோமளா வீட்டிற்குள் போய் விடுகிறாள்.) (பத்மநாபன் திரும்பி வருகிறான்)  (தனக்குள்) அப்பா இந்த வெற்றிலை போடா விட்டால் என் பாடு ஆபத்தாய் விடுகிறது! நான் கடைக்குப் போனதினால் கால தாமஸமாய் விட்டது. எஜமான் கோபித்துக் கொண்டு அடிக்க வருவான்; வேகமாய் ஓட்டலாம். (வண்டியில் ஏறிக் கொள்கிறான்) (அந்த சமயத்தில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்)  ”துடும், துடும், துடும், துடும். சிறைச் சாலையில் விலங்கிடப் பட்டிருந்த பிரதாபன் என்னும் இடையன் காவற்காரனைக் கொன்று விட்டுத் தப்பி வெளியில் ஓடி வந்தவன் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனைக் காண்போர் உடனே பிடித்து, அரசனிடம் ஒப்புவித்தல் வேண்டியது. அப்படிச் செய்பவர்களுக்குப் பெருத்த வெகுமதி அளிக்கப்படும். துடும், துடும், துடும், துடும்.”  பத்ம : (தனக்குள் இங்கு என்னமோ பெருத்த குழப்பமாய் இருக்கிறது. இந்தப் பறையின் சத்தத்தைக் கேட்டு எருதுகள் பயந்து துடிக்கின்றன. நான் வேகமாய் வெளியில் போய் விடுவதே நல்லதே. (வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்)  (அறுபட்ட சங்கிலியுடன் பிரதாபன் ஓடி வருகிறான்) பிரதா : (தனக்குள்) அப்பா இந்தச் சங்கிலியுடன் ஓடி வருவது எவ்வளவு கடினமாக இருக்கிறது! கொடுங்கோல் மன்னனாகிய இந்த அரசனுடைய சிறைச் சாலையில் இருந்து என்னை அந்தச் சசிமுகனே விடுத்தான்! அவன் அல்லவோ உண்மையான நண்பன்! இவ்வித அக்கிரமம் எந்தத் தேசத்தில் நடக்கும் எவனோ ஒரு ஜோஸியன் நான் அரசனாகப் போகிறேன் என்று சொல்லி விட்டானாம்! அதற்காக என்னைச் சிறையில் அடைத்து விடுவதாம்! நன்றாய் இருக்கிறது ஜோஸியன் சொல்லி விட்டால் அதற்கு நான் என்ன செய்வேன்? இது என் பேரில் எப்படி குற்றம் ஆகும்? நான் என் குடிசையில் சுயேச்சையாக இருந்தேன். இப்பொழுது காராக்கிரக வாசம் கிடைத்ததே; இதுதான் கை கண்ட பலன். நான் விதிவசத்தினால் அரசனானால் என் விதியை அல்லவோ சிறைச்சாலையில் அடைக்க வேண்டும். அல்லது இந்த தேசத்தரசன் தன் அரசை இழக்க நேர்ந்த தன்னுடைய தலைவிதியை நினைத்து அல்லவோ அழ வேண்டும். நல்ல காரியம் செய்தான்! நான் இப்பொழுது எங்கே ஒளிந்து கொள்கிறது என்னைத் துரத்திக் கொண்டு பின்னால் அநேகர் ஓடி வருகிறார்கள் இந்தப் பெருத்த மாளிகையின் வாசல் திறந்திருப்பது என்னை உள்ளே வரும்படி அழைப்பதைப் போல் இருக்கிறது. இதில் நுழைந்து கதவின் மூலையில் சற்று மறைந்து கொள்ளுகிறேன். துரத்திக்கொண்டு வருபவர் போய் விடட்டும்.  (மாதவராயருடைய வீட்டின் கதவு மூலையின் மறைந்து கொள்கிறான். சற்று நேரத்தில் குணசீலன் வாசலில் பெட்டி வண்டியுடன் வந்து நிற்கிறான்.) குண : (உரக்கக் கூவி) கோமளா வண்டி வந்து விட்டது! வஸந்தஸேனை அம்மாளை வரச்சொல் நேரமாகிறது. எஜமானர் பங்களாவில் காத்துக் கொண்டிருப்பார். பிரதா : (தனக்குள்) சரி! நல்ல வேளைதான். இதோ இந்த மூடு பெட்டி வண்டி நமக்காகத்தான் கடவுளால் அனுப்பப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இதுவும் பாக்கியந்தான். நல்லது ஒரு காரியம் செய்கிறேன். இதில் யாரோ ஒரு ஸ்திரீ ஏறிக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் பங்களாவிற்குப் போகிறாள் போல் இருக்கிறது! நான் இதற்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். அவள் வந்து ஏறினால் என்னை ஊருக்கு வெளியில் கொண்டு போய் விடும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். (பிரதாபன் பின்புறமாக வண்டிக்குள் ஏறிக் கொள்கிறான். அவன் பேரில் இருந்த சங்கிலியின் ஓசையைக் கேட்ட குணசீலன், வஸந்தவேனை ஏறிக் கொண்டதாக நினைக்கிறான்.) குண: (தனக்குள்) இந்த வஸந்தஸேனையின்பேரில் எத்தனை ஆபரணங்கள் கலீர் கலீர் என்னும் சப்தம் எவ்வளவு தூரம் கேட்கிறது! ஐசுவரியம் இருந்தால் என் பெண்சாதிக்குக்கூட உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நகைகளை மாட்டி விடுவேன். ஏழையாய் இருக்கும் நம்முடைய எஜமானருக்கு இது நல்ல காலந்தான். நல்ல கறவைப் பசு வந்து வலையில் அகப்பட்டது. சரி நேரமாகிறது, ஓட்டிக் கொண்டு போகிறேன். (வண்டியை ஓட்டிக் கொண்டு வேறொரு தெருவிற்கு வருகிறான். அங்கு காவற்காரர்களின் தலைவன் வீரகனும் சில காவற்காரர்களும் வருகிறார்கள்.) வீரகன் : அடே! ஓடி வாருங்கள்! சீக்கிரம் ஓடி வாருங்கள்! அந்தத் துஷ்டன் எங்கே போன போதிலும் விடக்கூடாது. நீங்கள் கோட்டையின் நான்கு வாசல்களிற்கும் போய் வளைத்துக் கொள்ளுங்கள். அவன் எப்படி நகரை விட்டு வெளியில் போகிறான் பார்க்கலாம். (காவற்காரர்கள் போய் விடுகிறார்கள். இன்னொரு காவல் தலைவன் சந்தானகன் வேறு சிலருடன் இன்னொரு புறமாக வருகிறான்.) சந்தா : ஓடுங்கள்! ஓடுங்கள்! நாம் இராஜ்யத்தை ஒரு நாளும் வேறொருவனுக்கு விடக்கூடாது. வீதிகள், தெருக்கள், சந்துக்கள், தோட்டங்கள் முதலிய எந்த இடத்தையும் பாக்கி விடாமல் தேடுங்கள். அவனைக் கண்டுபிடிப்பவனுக்கு நல்ல சன்மானமும் வாங்கித் தருகிறேன். வீர : அவன் தனியாக எப்படித் தப்பித்துக் கொண்டு போகக் கூடும். அவனுடைய யாராவது துணைவர் இருந்திருக்க வேண்டும். சந்தா : அவன் இராத்திரியே போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்குள் மாயமாய்ப் பறந்தா போய்விட்டான். (குணசீலன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான்) சந்தா : ஆகா! அதோ ஒரு பெட்டி வண்டி போகிறதைப் பார்த்தாயா? அது யாருடையது; எங்கே போகிறதென்று விசாரி. வீர : அடே! வண்டிக்காரா நிறுத்து. அது யாருடைய வண்டி? உள்ளே இருப்பது யார்? எங்கே ஒட்டிக் கொண்டு போகிறாய்? குண : ஐயா! இது மாதவராயருடைய வண்டி! இதற்குள் வஸந்தஸேனை இருக்கிறாள். அவருடைய பங்களாவிற்கு அழைத்துப் போகிறேன். சந்தா : சரி! அப்படியானால் போகட்டும். வீர : என்ன! சோதனை செய்து பார்க்கலாமா? சந்தா : ஏன் சோதனை செய்ய வேண்டும்? வீர :என்ன நம்பிக்கையின் பேரில் விடுகிறது? சந்தா :மாதவராயருடைய யோக்கியதையே போதுமான நம்பிக்கையல்லவோ அவர் சம்பந்தப்படும் விஷயத்தில் சந்தேகப்படலாமோ? வீர : மாதவராயராவது, வஸந்தஸேனையாவது! நல்ல காரியம் செய்தாய்! நம்முடைய உத்தியோகம் சம்பந்தப்பட்ட வரையில் எவராயிருந்த போதிலும் நமக்கென்ன? நாம் கண்டிப்பாய் இருக்க வேண்டியதே நம்முடைய கடமை. சந்தா : நல்ல கடமையைக் கண்டு விட்டாய்! மனுஷ்யாளுடைய யோக்கியதையைக் கூடப் பாராமலே நாம் நம் கட மையை நிறைவேற்றினால் தலைக்குக் கல் வந்து சேரும். அவருடைய பெருமை என்ன வஸந்தஸேனையின் மேன்மை என்ன அவர்கள் இருவரையும் அறியாதவர்கள் யார்? அவள் போகும் வண்டியை நாம் சோதனை செய்யவாவது! உனக்கு என்ன பைத்தியமோ அந்தக் காரியத்தை நான் செய்ய மாட் டேன். இராஜனுக்கு நீ மிகவும் வேண்டியவன். எது சம்பவித்த போதிலும் உனக்குப் பயமில்லை. நீயே வண்டிக்குள் சோதனை செய். வீர : அதென்ன அப்படிச் சொல்கிறாய்? இராஜனுக்கு நீ வேண்டியவனில்லையோ! நீயே வண்டிக்குள் பார்; இதில் ஏதாவது துன்பம் நேரிட்டால் அதற்கு நான் உத்தரவாதியாய் இருக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சந்தா : அடே வண்டியை நிறுத்து! பிரதா : (தனக்குள்) இதுவும் துரதிர்ஷ்டமா! ஆகா! இவ்வளவு பிரயாசைப்பட்டுத் தப்பித்து வந்ததும் பயனில்லாமல் போய் விடும் போல் இருக்கிறதே! என்னிடத்தில் ஒரு கத்திகூட இல்லையே! திரும்பவும் கைதியாகச் சிறைச்சாலையில் அடைப்பட்டிருப்பதைவிட உயிரை விடுவதே மேலானது. நல்லது வரட்டும். பீமசேனனைப் போல என் கைகளால் முஷ்டி யுத்தம் செய்கிறேன். (சந்தானகன் வண்டிக்குள் எட்டிப் பார்க்கிறான்)  பிரதா : (கைகூப்பி மெதுவான குரலில், ஐயோ! அபயம்! காப்பாற்ற வேண்டும் இப்பொழுது என்னுடைய உயிர் உம்முடைய கையில் இருக்கிறது. சந்தா : பயப்பட வேண்டாம் அபயம் என்றவரை அவசியம் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா! (தனக்குள்) புறாவானது இராஜாளிப் பட்சியினிடத்தில் தப்பித்து வேடனுடைய வலையில் விழுந்ததைப் போல இவன் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேளையாக வீரகன் என்னைப் பார்க்கத் தூண்டினான். இதுவும் தெய்வச் செயல்தான். (கதவை மூடி விட்டு விரகனிடம் வந்து வீரகா நான் பிரதாபனை - இல்லை - வஸந்தஸேனையைப் பார்த்தேன். வண்டிக்காரன் சொன்னது உண்மைதான். மாதவராயர் காத்திருப்பார்; வண்டியைத் தாமசப்படுத்தாமல் ஓட்டிக் கொண்டு போகட்டும். வீர : சந்தானகா! கோபித்துக் கொள்ளாதே; நீ சொல்லிய விதத்தில் இருந்து எனக்கு ஒருவித சந்தேகம் உதிக்கிறது. சந்தா : என்ன சந்தேகம்?  வீர : வண்டியில் இருந்து நீ திரும்பிய போது உன் முகம் மாறுபட்டது. தவிர, முதலில் நீ பிரதாபன் என்றாய்; பிறகு அதை வஸந்தஸேனை என்று மாற்றினாய். நீ இதைச் சொன்ன பொழுது உன்னுடைய குரல் தடுமாறியது. சந்தா : நன்றாய் இருக்கிறது! அதற்காகத்தான் நீயே போக வேண்டுமென்று முதலிலேயே சொன்னேன்! நாம் பிரதாபனைத் தேடுகிறபடியால் அவன் அகப்படவில்லை என்று சொல்ல ஆரம்பித்தேன்; இதில் சந்தேகமென்ன? பெட்டி வண்டிக்குள் தனியாய் இருந்த ஸ்திரீயை நான் பார்த்ததைப் பற்றி அவள் என்னைக் கடிந்து கொண்டாள். அதனால் என் முகம் மாறுபட்டிருக்கலாம்.  வீர : அப்படியானால் அவளை நான் ஒரு தரம் பார்க்கிறேன். அரசனுடைய கட்டளையை நிறைவேற்றும் நம்மைக் கோபித்துக் கொள்வதாவது நான் போகிறேன். என்ன செய்கிறாள் பார்க்கலாம்.  சந்தா : அடே முட்டாள்! நான் பார்த்தாய் விட்டதென்று சொல்லுகிறேன். நீ எதற்காகத் திரும்பவும் பார்க்கிறது? என்னை விட யோக்கியதையிலும், உண்மை பேசுவதிலும் நீ மேலானவனோ? என்னைப் பற்றி சந்தேகப்பட நீ யாரடா? வீர : என்னைக் கேட்க நீ யாரடா? அடே வண்டிக்காரா! நிறுத்து. ஓட்டாதே; நான் வண்டியைப் பார்க்க வேண்டும். (வீரகன் வண்டிக்கு அருகில் போகிறான். சந்தானகன் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்துப் பின்புறமாகத் தள்ளி உதைக்கிறான்.) வீர : (கோபத்துடன் எழுந்து) அடே இப்படிச் செய்ய உனக்கு அவ்வளவு துணிவா! இதோ இப்பொழுதே நான் இராஜனிடம் தெரிவித்து உன் சிரசை அடுத்த க்ஷணத்தில் வாங்கா விட்டால் நான் வீரகன் அல்ல. (போகிறான்) சந்தா : சீக்கிரம் போடா! நாயே! நீ சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்! நீ மிகவும் பெரிய மனுஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? (குணசீலனைப் பார்த்து வேகமாய் ஓட்டிக் கொண்டு போ; வேறு யாராவது தடுத்தால் வண்டியை வீரகனும் சந்தானகனும் சோதனை செய்தாய் விட்டது என்று தெரிவி. (வண்டியைத் திறந்து)  அம்ம வஸந்தஸேனை! நீங்கள் இந்த அடையாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். (தன் வாளைப் பிரதாபனிடம் கொடுக்கிறான்) (இரகசியமாக ஐயா! சந்தானகனை மறக்க மாட்டீர் என்று நினைக்கிறேன். இதைப் பிரியத்தினால் கேட்கிறேனே ஒழியப் பிரதி பலனாகக் கேட்கவில்லை.  பிரதா : என்பூர்வ புண்ணியத்தின் பலனே நீ இன்று எனக்கு உதவி செய்தாய். அந்த ஜோசியன் சொன்னது உண்மையானால் நீ எனக்கு உயிர் கொடுத்ததற்குத் தகுந்த கைம்மாறு அப்பொழுது செய்து விடுகிறேன். சந்தா : உமக்கு ஈசுவரன் உதவி செய்து உம்முடைய இடர்களை நீக்குவான். நேரமாகிறது நான் போகிறேன். (வண்டியை மூடிவிட்டு வண்டிக்காரனுக்குச் சைகை செய்ய, அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்.) சந்தா : (தனக்குள் வீரகன் இப்பொழுது இராஜனிடம் போகிறான். அவனுக்கு முன்னால் நான் போய் அவன் பேரில் குற்றம் சாட்டுகிறேன். (போய் விடுகிறான்) -----------------------                 அங்கம் 2 காட்சி 3   இடம் : மாதவராயருடைய உத்தியாவனச் சோலை;  மாதவராயரும் ஸோமேசனும் வருகிறார்கள். காலம் : காலை. (தகதீரமாரி இந்தினே கைஸேபதில் ஹயே - என்ற இந்துஸ்தானிப் பாட்டின் மெட்டு.) ஸோமே :  அதிவேகமாகவோடுகின்ற மானை நோக்கு வீர் மதியே கவர்ந்து சென்றதே! என்னாசை நண்பரே  மாத:  அகமோ குளிர்ந்த திங்கணுள்ள யாவு மின்பமே! சுகமாக வாழலாகுமிங்கு ஸொர்க்க போகமே!  ஸோமே :  கனியே சொரிந்த மாபலா கதலி கொள்ளையாய்; இனியேது தேவை? யோடு திங்கு தேனும் வெள்ளமாய்  மாத :  தவயோகியோரு மாசைகொண்டு தங்குகானிது பவமேகப் பாவம் போக்கும். நன்மை யாவுமிங்குள.  ஸோமே : இந்தச் சோலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நம்முடைய மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் இது ஒன்றுதான் நம்மிடம் எப்பொழுதும் ஒரே விதமான அபிமானத்துடன் இருக்கிறது. தனவந்தன், ஏழை என்னும் பேதமில்லாமல் இது எப்பொழுதும் குளிர்ந்த நிழலையும், பழங்களையும், இன்பத்தையும் கொடுக்கிறது. மாத : உண்மைதான்; பகுத்தறிவைப் பெற்ற மனிதனைக் காட்டிலும், அதைப் பெறாத மரஞ்செடி கொடிகளே மேலானவை; அதைப் பற்றி சந்தேகமென்ன? (ரகுவம்ச சுதா என்ற கீர்த்தனையின் மெட்டு) கதனகுதுகலம் – ஆதி ஸோமே :  ப. பலவாய்க்கூடின பறவை யாடின! மலர்வாய் வண்டினம் மோகனம் பாடின  மாத:  அ. குழலோ நாதமே குயிலின் கீதமே! மழலை மொழியால் அஞ்சுகம் கொஞ்சின.  ஸோமே :  செவிக்கோர் பெரும் விருந்தே யிது. உவப்பெயர் தினேனே ஓகோவின்பமே!  மாத :  பாவம் போக்கிடும் இடமே இது, தவம் புரிந்தோமோ யாமிங்கேகவே!  ஸோமே ; அதோ கல்மேடை இருக்கிறது. அதில் கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேற்றிரவு எல்லாம் உங்களுடைய தேகம் அஸெளக்கியமாய் இருந்தது அல்லவா? ஆகையால் உட்கார்ந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். ஆகா அந்த வஸந்தஸேனையின் குணமே குணம் தங்கள் பொருட்டு அவள் எவ்வளவு பாடுபட்டாள். இரவு முழுதும் அவளுக்கு நித்திரையே இல்லையே! மாத : (முகம் மாறுகிறது) நாம் காலையில் இங்கு வருவதற்குப் புறப்பட்ட பொழுது அவள் அலுத்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமலும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலும் வந்து விட்டேன். அவள் எழுந்திருந்து என்னைப் பற்றி எவ்விதமான எண்ணம் கொள்வாளோ தெரியவில்லை. விருந்தாக நமது மாளிகைக்கு வந்திருக்கும் அவளை நாம் அலட்சியம் செய்து வந்து விட்டோம் என்று நினைப்பாளோ? கூடிய சீக்கிரம் வந்து விடுவதாயும், அதற்குமுன் அவள் போக வேண்டு மென்றால், அவளை நமது பெட்டி வண்டியில் வைத்து இவ்விடம் அழைத்து வரும்படியாகவும் சொல்லி விட்டு வந்தேன். நேரமாகிறது நாம் வீட்டிற்குப் போகலாம். அவள் ஒருவேளை நமது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். ஸோமே : அதோ பார்த்தீர்களா? நமது பெட்டி வண்டி வருவதை? மாத: ஆம்! ஆம்! அவளே இங்கு வந்து விட்டாள். வந்ததற்குப் பலனாக இந்த உத்தியானவனத்தைப் பார்த்துக் கொஞ்ச நேரம் சுகமாய் இருந்து விட்டுப் போகட்டும். (தனக்குள்) இவளுடைய எண்ணம் நிறைவேறப் போகிறதில்லை. நான் என்ன செய்வேன்? பதிவிரதா சிரோன்மணியாகிய என் மனைவி கோகிலத்தின் மனத்தில் விசனம் உண்டானால் அதனால் நான் நாசமடைந்து விடுவேனல்லவா? ஆனால், இந்தப் பெண்மணி என் பொருட்டு அரசனையும் அலட்சியம் செய்து வெறுத்து, ஒரே மனதாய் என்னையே காதலித்திருப்பதை நான் எப்படி மாற்றுவேன்? இருக்கட்டும்; எவ்விதமாயினும் முயன்று இவள் மனதை மாற்ற முயன்று பார்க்கிறேன். (குணசீலன் வண்டியுடன் வருகிறான்) ஸோமே : அடே குணசீலா! வண்டியில் யார் வந்திருக்கிறார்கள்? குண : வஸந்தஸேனை அம்மாள். ஸோமே : (வண்டியின் அருகில் சென்று) நேரமானதால் நீங்கள் வரவில்லையென்று நினைத்து நாங்களே வீட்டிற்கு வர நினைத்தோம்; நல்ல வேளையாய் சமயத்தில் வந்து சேர்ந்தாய். குண : ஸ்வாமி மன்னிக்க வேண்டும். வண்டிக்கு அடியில் போடும் மெத்தையைப் போட மறந்து வந்து விட்டேன். பிறகு நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்த் திரும்பி வந்து வஸந்தஸேனை அம்மாளை அழைத்து வந்தேன்; தாமசத்திற்கு நானே காரணம்; மன்னிக்க வேண்டும். மாத : சரி போகட்டும்; வஸந்தஸேனையைக் கீழே இறக்கி விடுவோம்.  ஸோமே : (ஒருபுறமாக) நாம் இறக்கி விடுவானேன், இவளை கால் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறதோ? ஏன் தானாக இறங்கக் கூடாதோ? இவளுக்கு எவ்வளவு மரியாதை? மாத : (வண்டியின் கதவைத் திறந்து பார்த்துச் சற்று அப்பால் விலகி) ஆகா என்ன ஆச்சர்யம்! யார் இது? வஸந்தஸேனையைக் காணோமே! கம்பீரமான தோற்றத்தை உடைய ஒரு புருஷன் அல்லவோ இருக்கிறான். (பிரதாபன் கீழே இறங்கி மாதவராயரை வணங்குகிறான்) பிரதாபன் : ஸ்வாமி எதிர்பார்க்காத விருந்தாக நான் இந்த வண்டியில் வந்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆபத்திற்குப் பாபம் இல்லை என்று நியாயம் உண்டல்லவா? நான் இந்த வண்டியில் வந்திராவிட்டால் என் உயிரே போயிருக்கும்; ஆகையால் இந்தப் பிழையைத் தாங்கள் மன்னிக்க வேண்டும். (வணங்குகிறான்)  குண: (நடுநடுங்கி) இதென்ன ஆச்சரியம்! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல, இவன் வண்டிக்குள்ளிருந்து வருகிறானே யார் இவன்? இதற்குள் எப்படி நுழைந்தான்? வஸந்தஸேனை எங்கே? (கையைப் பிசைந்து கொண்டு ஒரு மூலையில் நிற்கிறான்) மாத : (பிரதாபனைப் பார்த்து) அப்படியானால் நீ வண்டியில் வந்ததைப் பற்றிச் சந்தோஷமே! நீ யார்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? இந்த வண்டியில் நீ எப்படி ஏறிக் கொண்டாய்? பிரதா : நான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன் என் பெயர் பிரதாபன். மாத : ஒகோ! நீ தானோ பிரதாபன்? போதும் போதும்; சங்கதிகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். போகட்டும்; எப்படியாவது நீ உயிர் தப்பி வந்தாயே; அதுவே போதும். உனது விதியே நட்பாயிருந்து உன்னை இங்கு கொண்டு வந்தது. பிரதா : நான் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந்தேன். என்னைப் பலர் துரத்தி வந்தனர். கடைசியாக தங்கள் மாளிகைக் கதவின் மறைவில் ஒளிந்து கொண்டேன். இந்தப் பெட்டி வண்டி வந்தது. அதில் வந்து ஏறிக் கொண்டேன். குண : இந்த சங்கிலியின் ஓசையை வஸந்தஸேனையின் ஆபரணங்களின் ஒசையென்று நினைத்து ஓட்டிக் கொண்டு வந்து விட்டேன் முட்டாளாகிய நான். மாத : குணசீலா கவலைப்படாதே! நீ செய்தது பெருத்த உபகாரம்; கடவுளே இவ்விதமாக நடக்கும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார். நல்லது; இவரை இதிலேயே உட்கார வைத்து இவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவா. (பிரதாபன் பேரில் இருந்த சங்கிலியை விலக்கி நீக்குகிறார்) பிரதா : ஆகா! ஸ்வாமி! தங்களுடைய குணத்தைப் புகழாதவர்களே இல்லை. அதை நான் இப்பொழுதே நேரில் காண்கிறேன். நீங்கள் விலக்கிய சங்கிலியைக் காட்டிலும் அதிக வலியுடையதும் எப்பொழுதும் நீடித்து நிற்கக் கூடியதுமான வேறு ஒரு சங்கிலியால் என் மனதைக் கட்டி விட்டீர்கள். இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். (வண்டிக்குள் உட்காருகிறான்) உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன். மாத : சரி சுகமாய்ப் போகலாம்; அடே குணசீலா! அரசனுடைய காவலர் வந்தாலும் வரலாம். சீக்கிரமாக ஓட்டிக் கொண்டு போ.  (குணசீலன் வண்டியை ஓட்டிக் கொண்டு போகிறான்) மாத : நாம் இப்பொழுது செய்த காரியம் அரசனுக்குத் தெரிந்தால், நம்மை உடனே சிரச்சேதம் செய்து விடுவான். அந்தச் சங்கிலியைக் கிணற்றில் போட்டு விடுவோம். நேரமாகிறது. வஸந்தஸேனை நம்முடைய மாளிகையிலேயே இருப்பாள். நாம் சீக்கிரம் போய் அவளை வீட்டிற்கு அனுப்புவோம்; வா போகலாம். (போய் விடுகிறார்கள்) ----------------------                                                      அங்கம் 2 காட்சி 4   இடம் : உத்தியான வனத்திற்குச் சமீபத்தில் இருந்த அரசனுடைய சோலை.  மகிபாலன் காஷாயம் பெற்றுச் சந்நியாசியாக வருகிறான். காலம் : மேற்படி காலை. மகி : (தனக்குள்) பண் செஞ்சுருட்டி – ஆதி  1. தலையே! நீ வணங்காய் தலை-மாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய் (த) 2. கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பிரான்றன்னைக் (கண்) 3. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவளம் எரிடோல் மேனிப்பிரான் றிறமெப்போதும் (செ)  4. வாயே வாழ்த்து கண்டாய்-மத யானை யுரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்றன்னை (வா) 5. கைகால் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்று பைவாய் பாம்பரை யாத்தபரமனைக் (கை) 6. நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும்மாலை மங்கை மணாளனை (நெ). 7. தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான் முகனுந் தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே (தே)  நான் சந்நியாசியான பிறகு என் மனக் கவலை எவ்வளவு குறைந்து விட்டது! தெரியாமலா யாரும் இந்த நிலைமையைப் புகழுகிறார்கள். புதியதாய்க் காவியில் நனைந்த இந்த வஸ்திரம் மிக பளுவாக இருக்கிறது. இந்தச் சோலையில் ஒரு நீரோடை இருக்கிறது. அதில் இதை நனைத்துக் கசக்கிவிட்டால் பிறகு இலேசாக இருக்கும். இந்தச் சோலை மனத்திற்கு எவ்வளவு இரமணியமாக இருக்கிறது. ஆகையினாலே தான் இராஜாவின் மைத்துனன் வீரசேனன் இதிலேயே எப்பொழுதும் குடியாக இருக்கிறான். அவனுக்குச் சந்நியாசி என்றால் மிகவும் கோபம் உண்டாவது வழக்கம்; உடனே கத்தியால் அவனுடைய மூக்கை அறுத்து விடுவான். நான் நீரோடையில் வஸ்திரத்தை கசக்கிக் கொண்டு அவன் கண்ணில் படாமல் அப்பால் போய் விடுகிறேன். (சற்று துரம் போகிறான்) (விரசேனன் உருவிய வாளுடன், தன் தோழன் சேவகன் முதலியோருடன் வருகிறான்) வீர : (மகிபாலனை நோக்கி) அடேதுஷ்டா நில்லடா! எங்கே போகிறாய்? இதை விட்டு நகர்ந்தால் முள்ளங்கியின் இலையை ஒடிப்பதைப் போல, உன் தலையை முறித்து எறிவேன். தோழன் : வேண்டாம்; வேண்டாம். சந்நியாசியை வருத்துவது பெருத்த பாவம். இருக்க இடம் அற்றவர்களுக்கு நிழலைத் தர மரங்களையும், இங்கு வருபவர்களுக்கு இன்பந்தர வேண்டும் என்னும் எண்ணத்துடன் இந்தச் சோலையையும் ஏற்படுத்திய நீங்கள் இப்படிச் செய்வது அடாது. வேண்டாம், ஏழையை ஏன் ஹிம்சிக்க வேண்டும். பாவம். மகி : ஐயா! இந்த நகரத்திற்கே நீர் இரக்ஷகன். யாதொரு புகழும் இல்லாத இந்த ஏழைச் சந்நியாசியின் பேரில் கோபிக்க வேண்டாம். வீர : இந்த போக்கிரி என்னை வைவதைக் கேட்டாயா!  தோழ : பலே! உங்களுக்கு நல்ல காது. மதுரைக்கு வழி ஏதென்றால் குதிரைக்குச் சுழி நன்றாயில்லை என்பதைப் போல் இருக்கிறதே. இவன் தன்னை மன்னிக்கும்படி அல்லவோ உங்களை நயந்து வேண்டிக் கொள்ளுகிறான். வீர :அடே !முண்டனம்! உன் தலை எப்பொழுது மொட்டை ஆயிற்று? உன் புருஷன் இறந்து எத்தனை நாளாயிற்று? மொட்டை அடித்துக் கொண்டால்தான் சந்நியாசியோ? அப்பொழுதுதான் சுவர்க்கம் நேரில் தெரியுமோ? முட்டாள் உனக்கு இந்தச் சோலையில் என்ன வேலை? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?  சந்நி : ஐயா! இந்த நீரோடையில் என்னுடைய காஷாய வஸ்திரத்தை அலசும் பொருட்டு வந்தேன். வேறு எதற்கும் வரவில்லை. வீர: ஓகோ! இந்த இழி தொழிலுக்காகத்தான் இந்தச் சோலை ஏற்பட்டதோ? உன் ஆபாசக் கந்தையைக் கசக்க இதுதான் இடமோ?  சந்நி : பிரபு! நான் இப்போது சமீப காலத்திலே தான் சந்நியாசியானேன். தெரியாமல் செய்த பிழையை மன்னித்துக் கொள்ள வேண்டும். வீர : ஏன் இப்படிச் செய்தாய்? ஏனடா போக்கிரிப் பயலே! நீ பிறக்கும் பொழுதே சந்நியாசியாய்ப் பிறக்கவில்லை? (அடிக்கிறான்) சந்நி : ஹா! ஈசுவரா இதெல்லாம் உனக்கு சம்மதியானால் சரிதான்! தோழன் : (விலக்கி விட்டு) அடே சந்நியாசி! ஓடிப்போ! இங்கே நிற்காதே. (வீரசேனன் உதைக்கிறான்; சந்நியாசி போய் விடுகிறான்)  வீர: அடே! இந்தச் சோலைக்கு வரும் போதெல்லாம் எனக்கு அந்த வஸந்தஸேனையின் நினைவே உண்டாகிறதே! என்ன செய்வேன்? நம்முடைய உடம்பில் உண்டாகும் புண் எப்படி நோகுமோ, அப்படி அல்லவோ அவளுடைய நினைவு என்னை வருத்துகிறது! இந்தச் சோலைக்கு அவளை அழைத்து வர எத்தனை நாட்களாய் முயன்றும் அது பலிக்கவில்லை! அவள் இங்கு வந்து விட்டால், ஒன்று அவள் என் சொற்படி இணங்க வேண்டும். அல்லது அவளை இவ்விடத்திலேயே வெட்டிப் புதைத்து விடவேண்டும். தோழ : (தனக்குள்) ஒரு நாளும் அவ்விதம் நடக்கப் போகிறதில்லை. (வஸந்தஸேனை இருந்தப் பெட்டி வண்டியை ஓட்டிக்கொண்டு பத்மநாபன் வருகிறான்) வீர : அடே பத்மநாபா? வந்தாயா?  பத்ம : ஸ்வாமி வந்தேன்.  வீர : ஏன் வந்தாய்?  பத்ம : வண்டி கொண்டுவர உத்தரவானதே.  வீர : எங்கே வண்டி?  பத்ம : அதிலேதான் உட்கார்ந்திருக்கிறேன். வீர : எருதுகள்?  பத்ம : இதோ நிற்கின்றனவே.  வீர : நீ? பத்ம : பிரபு! நாமெல்லோரும் ஒன்றாய்த் தானே இருக்கிறோம். வீர : அப்படியானால் சந்தோஷம்; ஓட்டு உள்ளே!  பத்ம : எந்த வழியில் ஓட்டுகிறது?  வீர: அதோ தெரிகிறதே இடிந்த சுவர்; அதன் பேரில் ஓட்டு.  பத்ம : அது எப்படி முடியும்? எருதுகளின் உயிர் போய் விடும்; வண்டி ஒடிந்து நொருங்கிப்போம்; என்னுடைய கழுத்தும் முறிந்து போம். வீர: அந்தக் குட்டிச் சுவருக்கு அவ்வளவு தைரியமா? நான் இராஜாவின் மைத்துனன் என்று உனக்குத் தெரியாது? எருதுகள் செத்தால் வேறு வாங்கிடலாம். பழைய வண்டி ஒடிந்தால் புது வண்டி வருகிறது. உன்னுடைய கழுத்து ஒடிந்தால் வேறொரு கழுத்து வாங்கித் தருகிறேன். பயப்படாதே; ஒட்டு! பத்ம : சரிதான். பழையவற்றிற்குப் புதியவை சம்பாதித்து விடலாம். எனக்குப் பதில் என் பெண்சாதி பிள்ளைகள் என்னை எப்படிச் சம்பாதிப்பார்கள்? வீர: அதற்கு நான் இருக்கிறேன்; நீ ஒருவன் போனால் ஒன்பது மனிதரை நான் உன் மனைவிக்குச் சம்பாதித்துத் தருகிறேன். பயப்படாதே; அதெல்லாம் உனக்கென்ன கவலை? ஓட்டு. பத்ம : சரி? அப்படியானால் ஓட்டுகிறேன்! இதோ வந்து விட்டேன். நல்ல வேளை ஒரு கெடுதலும் உண்டாகவில்லை.  வீர : போக்கிரிப் பயலே! முதலில் பொய் சொன்னாய் அல்லவா? பத்ம : நிஜன்தான் மகாப் பிரபு!  வீர : (தோழனைப் பார்த்து) அடே! நீ முன்னால் ஏறிக் கொள்.  தோழ : சரி! அப்படியே ஏறுகிறேன்.  வீர : நில்! நில்! நானல்லவோ வண்டியின் சொந்தக்காரன். உனக்கா முதல் மரியாதை? நான் முதலில் ஏறுகிறேன். நீ முதலில் ஏறக் கூடாது. தோழ : நீங்கள் கட்டளை இட்டபடியால் நான் ஏறப் போனேன். மன்னிக்க வேண்டும். வீர : இருக்கலாம். ஆனால் முதலில் நான் ஏறும்படி நீ என்னை வேண்டிக் கொண்டிருக்க வேண்டும். தோழ : மகாப் பிரபு! நீங்கள் தயவு செய்து முதலில் ஏறிக் கொள்ளுங்கள். வீர: அதுதான் சரி ஏறுகிறேன். (வண்டிக் கதவைத் திறந்து ஏறி, உடனே வேகமாய்க் கீழே இறங்கித் தோழன் கையைப் பிடித்துக் கொண்டு) ஐயையோ மோசம் வந்தது. பேயோ! பிசாசோ திருடனோ எதுவோ வண்டியில் இருக்கிறது! திருடனாக இருந்தால் நம்முடைய சொத்தைக் கொள்ளையடித்து விடுவான். பேயாயிருந்தால் நம்மை இப்படியே விழுங்கி விடும். தோழ : என்ன ஆச்சரியம்! திருடனாவது பேயாவது வண் டிக்குள் வரவாவது! வீர : நீயே போய்ப் பார். அது ஒரு பெண்ணைப் போல் இருக்கிறது. வஸ : (தனக்குள்) இதென்ன மோசமாய் இருக்கிறதே! இங்கே அந்தப் பாதகன் வீரசேனன் அல்லவோ இருக்கிறான்! எவ்விடத்திலும் என் துரதிருஷ்டம் முன்னால் வந்து நிற்கிறதே! இவனால் என்ன துன்பம் சம்பவிக்குமோ தெரியவில்லையே! ஈசுவரா என்ன செய்வேன்? தோழ : (உள்ளே பார்த்து) இதென்ன அதிசயம்? புலிக் கூண்டிற்குள் இந்த மான் எப்படி வந்தது? பேடன்னம் தன் அழகிய ஜோடியை விடுத்துக் காக்கையை நாடி இங்கு வந்ததோ? இது என் மனத்திற்கு நன்றாகத் தோன்றவில்லையே இலாபத்தின் பேரிலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள, உன் தாயின் உபத்திரவத்தைப் பொறுக்க முடியாமல் அருவருப்புடன் வந்தாயோ? பிறரிடத்தில் வெறுப்பைக் கொண்டிருந்தாலும் உங்கள் ஜாதி வழக்கம் அதை வெளியில் காட்டுகிறது இல்லை. அப்படியே நீயும் செய்யத் துணிந்தாயே? வஸ : ஐயா! என்னைப் பற்றி அப்படி நினைக்க வேண் டாம். என் தாய் மூலமாக இவர் எவ்வளவோ ஐசுவரியத்தைத் தருவதாய்ச் சொல்லி அனுப்பி எவ்வளவோ முயன்றும் அதற்கு நான் சிறிதும் இணங்கவில்லை. வண்டி தவறி இதில் ஏறி விட்டேன் போல் இருக்கிறது! அதனால் இந்தப் பெரும் பிழை நேர்ந்தது. நீர்தான் இந்த சமயத்தில் எனக்கு உதவி செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஐயா! உமக்கு அநேக கோடி நமஸ்காரம். மிகவும் புண்ணியமுண்டு. தோழ : பயப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்ளுகிறேன். ஒரு நொடியில் இந்த மடையனை நான் ஏமாற்றி விடுகிறேன், (வீரசேனனிடம் வந்து) ஆம்! இதில் உண்மையில் ஒரு பெரும் பேய் தானிருக்கிறது! அப்பாடா! எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது! வீர : இருக்கட்டும். அது பேயாய் இருந்தால் உன்னை விழுங்காமல் எப்படி விட்டது?  தோழ : உங்களை விட்ட மாதிரி என்னையும் விட்டது. அது எப்படியாவது போகட்டும். இங்கே இருந்து நம்முடைய அரண்மனை வரையில் இரு பக்கங்களிலும் குளிர்ந்த நிழலைத் தரும் மரங்களைக் கொண்ட பாட்டை இருக்கிறது; நாம் சுகமாக நடந்து போகலாம் வாருங்கள். வீர : ஏன் நடக்க வேண்டும்.  தோழ : நடந்தால் நமக்கும் தேக ஆரோக்கியம்; களைத்துப் போன எருதுகளுக்கும் ஒருவித ஆறுதல். வீர : ஆனால் அப்படியே செய்வோம்! பத்மநாபா வண்டியைப் பின்னால் ஓட்டிக் கொண்டு வா! (சற்று நடக்கிறான்) சே! நில்! நான் ஒரு நாளும் நடந்ததே கிடையாதே. இன்று ஏன் நடப்பேன்? நான் யார் தெரியுமா? நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா? ஏழையைப் போல நான் பாட்டையின் வழியாக நடப்பதா? சீ! அது அவமானம். ஜனங்கள் என்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்வார்கள். நான் வண்டியிலே தான் வர வேண்டும். தோழ : (தனக்குள்) இந்த ஆபத்துக்கு என்ன செய்கிறது; மார்க்கம் ஒன்றும் தோன்றவில்லையே! இருக்கட்டும் ஒன்று செய்யலாம். (பலமாக) நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்கள் அதை இப்படித்தானா நம்புகிறது? நீங்களாவது நடப்பதாவது தங்களை நடக்கச் சொல்ல யார் துணிவார்கள்? வண்டியில் இருப்பது பேயல்ல. வஸந்தஸேனை தங்களைப் பார்க்க வந்திருக்கிறாள். அந்த சந்தோஷத்தினால் வேடிக்கையாக ஒரு பொய் சொன்னேன்.  வீர : அப்படியா பலே! இன்றைக்கு எனக்கு நல்ல வேட்டை தான் அன்றைக்கு ஓடினவள் இப்பொழுது தானாக வந்திருக்கிறாள். பார்த்தாயா என்னுடைய சாமர்த்தியத்தை? நான் அனுமானைப் போல எவ்வளவு அழகாயிருக்கிறேன் பார்? தோழ : சந்தேகம் என்ன! உங்கள் புத்திக்கு நீங்களே இணை! ஏன், உங்கள் அழகுக்கு அனுமானே இணை! வீர : அதனாலேதான் இணையே இல்லாத இந்தத் தேவ ரம்பை என்னை நாடி வந்திருக்கிறாள். நான் அன்று இவளுக்கு அதிருப்தியாக நடந்து கொண்டேன். அதைப் பற்றி இவளுக்கு மனதில் வருத்தம் இருக்கலாம். நான் போய் இவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். தோழ : நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள். வீர : (போய் முழந்தாள் இட்டு வணங்கி) ஏ, தெய்வ மாதா! நான் சொல்வதைக் கேட்டருள வேண்டும் தாமரை மலர் போன்ற உன் கண்களால் என்னைப் பார். ஏ, கந்தர்வ ஸ்திரீயே! உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் நான் செய்த குற்றத்தை மன்னித்து என்னை உன் அடிமையாகவும் வேலைக்காரனாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்மணி! வஸ: போம்போம்! உம்முடைய உபசரணைகள் எல்லாம் எனக்கு முற்றிலும் வெறுப்பைத் தருகின்றன. எழுந்து அப்பால் நடவும். வீர : (கோபத்துடன் எழுந்து) ஆகா! தெய்வத்தைக்கூட ஒரு நாளும் வணங்கியறியாத நான் உன்னை வணங்கினேன். அதற்குப் பதிலாக நீ இப்படியா அவமதிக்கிறாய்? அட பத்மநாபா இவளை எங்கிருந்து வண்டியில் ஏற்றி வந்தாய்? . பத்ம : ஸ்வாமி உண்மையைச் சொல்லுகிறேன். நான் வந்த போது வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வண்டியை மாதவராயருடைய வீட்டின் வாசலில் சற்று நிறுத்தி விட்டு, சமீபத்தில் இருந்த கடைக்குப் போய், வெற்றிலை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வந்தேன். அந்தச் சமயத்தில் அவர் வீட்டிற்கு உள்ளேயிருந்து இந்த ஸ்திரீ வந்து தவறுதலாய் வண்டியில் ஏறிக் கொண்டாள் போல் இருக்கிறது! வீர : தவறுதலாகவா வந்தாள்? ஆனால் என்னை நாடி வர வில்லையா? அடி வஸந்தஸேனை கீழே இறங்கு, இந்த வண்டி என்னுடையது என்பது தெரியாதோ? நான் மாத்திரம் உனக்குப் பிடிக்கவில்லை. என் வண்டி மாத்திரம் நன்றாய் இருக்கிறதா? இறங்கு கழுதை, இல்லாவிட்டால் எட்டி உதைப்பேன். வஸ : ஐயா! மன்னிக்க வேண்டும். நான் மாதவராயருடைய சோலைக்குப் போகிறேன். இது அவருடைய வண்டி என்று ஏறி விட்டேன். வீர : அந்த நித்திய தரித்திரனிடம் போக என் வண்டியை உபயோகித்துக் கொண்டாயோ நாயே? இறங்கு கீழே! வஸ : எது உமக்கு இகழ்வாகத் தோன்றுகிறதோ அது எனக்கு மிகவும் மேன்மையாகத் தோன்றுகிறது. அவரவர்களின் விருப்பம்! எல்லாம் தலை விதியின்படி நடக்கிறது. வீர : விருத்தம் - மோகனம்   வேசையே வஸந்தசேனை! பிடிவாதம்விடுத்தா யில்லை, காசையே மதிக்குந் தாஸி யகத்தினிலுதித்துங் கற்பி  லாசையே வைத்தாயென்று மன்னியர் வதனங் காணக்  கூசுமோர் நீர்மை பெற்ற குலமக ளெனவே சொற்றாய்!  ஜெடாயு பலியின் மனைவியினுடைய தலை மயிரைப் பிடித்திழுத்ததைப் போல இதோ உன்னை வெளியில் இழுத்து விடுகிறேன் பார்! தோழ : பிரபு! பொறுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலில் கையை வைக்க வேண்டாம். மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் புஷ்பக் கொடியை யாராவது பிடித்திழுத்து அறுப்பார்களா? இவளை விட்டு விடுங்கள்; நான் கீழே இறக்கி விடுகிறேன். இவள் தேவையான இடத்திற்குப் போகட்டும். நாம் வண்டியில் ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போவோம். (அவளைக் கீழே இறக்கி விடுகிறான்) வீர : (தனக்குள்) ஆகா! இவள் என்னிடம் எவ்வளவு அவமதிப்பாய்ப் பேசுகிறாள். இவள் பேரில் என் மனதில் எழுந்து பொங்கும் கோபத்தை எப்படி அடக்குவேன்? அவளுக்கு ஒரு அடியாவது, குத்தாவது, உதையாவது கொடுக்காவிட்டால் என் கோபம் கொஞ்சமும் தணியாது. இவள் உயிரை வாங்க வேண் டும். அடே நண்பா! இவளை உடனே கொன்று விட்டு மறு வேலை பார். தோழ : (காதை மூடிக் கொண்டு) ஆகா! நன்றாய்ச் சொன்னீர்கள் இந்த மங்களபுரிக்கே பெருமையாய் விளங்கி ஒப்பற்ற அழகு, நற்குண நல்லொழுக்கம் முதலியவற்றைக் கொண்டுள்ளவளும் யாதொரு குற்றமும் செய்யாதவளுமான இந்த யெளவன மங்கையையா கொல்லுவது? இருந்திருந்து ஸ்திரீ ஹத்தியா செய்ய வேண்டும்! இதனால் ஆயுட்கால முழுவதும் நான் அனுபவிக்க வேண்டிய மனோ வேதனையையும், இதனால் உண்டாகும் பாபமுமாகிய பெரிய சமுத்திரத்தையும் எப்படிக் கடப்பேன்? வீர : பயப்படாதே! உனக்கு நான் ஒரு தெப்பம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சீக்கிரம் ஆகட்டும்; தனிமையாக இந்த இடத்தில் உன்னை யார் பார்க்கப் போகிறார்கள். தோழ : பிரம்மனுடைய சிருஷ்டிப் பொருள்கள் யாவும், அவற்றிற்கு மத்தியில் உள்ள இடைவெளியும், இந்த வனத்தில் உள்ள தேவதைகளும், சூரியனும், பஞ்சபூதங்களும், நமது மனமும், எங்கும் நிறைந்த கடவுளும் நாம் செய்யுங் காரியத்திற்குச் சாட்சியல்லவோ? இவைகளுக்குத் தெரியாமல் நாம் இந்தக் காரியத்தை எப்படிச் செய்ய முடியும்? வீர: அப்படியானால் இவள் பேரில் ஒரு துணியைப் போட்டு மறைத்து விடுகிறேன். பிறகு வேலையை முடித்து விடு. இவளை ஒருவரும் பார்க்க முடியாது. தோழ : இது பைத்தியந்தான்.  வீர : நீ ஒரு முட்டாள்! உனக்கொன்றும் தெரியாது. நீ போ அப்பால். பத்மநாபனைச் செய்யச் சொல்லுகிறேன். அடே பத்மநாபா எங்கே ஆகட்டும். உனக்குத் தங்கக் காப்பு இனாம் தருகிறேன். பத்ம : மகாப் பிரபு! சந்தோஷம்; கொடுங்கள் கையில் அணிந்து கொள்ளுகிறேன். - வீர : தவிர, உனக்கு இன்று என்னுடன் முதல் தரமாக போஜனம் அளிக்கிறேன். பத்ம : வஞ்சனை இல்லாமல் வயிறு நிறைய போஜனம் செய்கிறேன். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீர : உன்னை வேலைக்காரர்களுக்கு எல்லாம் எஜமானன் ஆக்குவேன். பத்ம : அப்படியானால் தங்கள் தயவினால் நான் பெரிய மனிஷ்யனாகிறேன். வீர : நான் சொல்வதைச் செய்ய வேண்டும்.  பத்ம : தடை என்ன! சொல்லுங்கள் அவசியம் செய்கிறேன்.  வீர : இந்த வஸந்தஸேனையை உடனே கொன்று விடு.  பத்ம : மகாப் பிரபு! இதுதானா ஒரு பிரமாதம். இதைத் தவிர நீங்கள் எந்தக் காரியம் செய்யச் சொன்ன போதிலும் நான் செய்யாமல் இருப்பேனோ? அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் நன்றி கெட்டவன் யார்? வீர : அடே போக்கிரிப் பயலே! நான் உன்னுடைய எஜமானனல்லவா? பத்ம : ஸ்வாமி உண்மைதான். தாங்கள் என் சரீரத்திற்கு எஜமானே. ஆனால் என்னுடைய பாவ புண்ணியத்திற்கு நான் தானே எஜமான். இதைச் செய்ய என் மனமும் கையும் துணிய வில்லை. மன்னிக்க வேண்டும். வீர : என்னுடைய வேலைக்காரனாகிய நீ வேறு எவனுக்கு இப்படிப் பயப்படுகிறாய்? பத்ம : வருங்காலத்திற்கு.  வீர : வருங்காலமென்பவன் யாரடா அவன்? பத்ம அவன் நம்முடைய நன்மை தீமைகளுக்குத் தகுந்த விதம் நமக்குப் பதில் செய்பவன். வீர : நன்மை செய்தால் என்ன பதில் கிடைக்கும்?  பத்ம : தங்களுடையதைப் போன்ற செல்வமும் சிறப்பும் கிடைக்கும். வீர : தீமைக்கு? பத்ம : என்னைப் போல அடிமைத் தொழில் செய்வதே அதற்குப் பலன். ஆகையால் மேலும் தீமை செய்ய மாட்டேன்.  வீர: உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவரை அது அடிமையாக்கும். நீதான் அடிமையாய் இருக்கிறாயே. உன்னை அது என்ன செய்யப் போகிறது? பயப்படாதே. நான் சொல்வதைச் செய்.  பத்ம : நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள் அடிமையானால் அடிமை இன்னும் எந்த விதமானதாழ்ந்த நிலைமைக்குப் போக வேண்டுமோ! அதை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டாமா? வீர : (அடிக்கிறான்) போக்கிரி மறுத்து மறுத்துப் பேசுகிறாயா? உனக்கு அவ்வளவு துணிபா பத்ம : என்னை அடித்தாலும் சரி! கொன்றாலும் சரி! செய்யத் தகாத காரியத்தை நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன். வஸ (தோமுனைப் பார்த்து) ஐயா! இந்த ஆபத்தில் நீர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். (வணங்குகிறாள்) தோழ : மகாப் பிரபு கோபிக்க வேண்டாம். பத்மநாபன் சொல்வது சரியான விஷயம். எவ்வளவோ புண்ணியம் செய்து பெற்ற இந்த மேன்மையை ஏன் இழக்கப் பார்க்கிறீர்கள்? வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளும் இதைச் செய்ய அஞ்சிப் பின் வாங்குகிறார்கள். இராஜாவின் மைத்துனனாகிய என்னை எதிர்காலம் என்ன செய்யப் போகிறது. (கோபத்தோடு)  அட பத்மநாபா! என் முன்பாக நிற்காதே போ அப்பால்! (உதைக்கிறான்) பத்ம : இதோ போய் விடேன். (அப்பால் போகிறான்)  வீர : (தன் அங்க வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டு) அடி வஸந்தஸேனை! வா இப்படி; விடு உன் பிராணனை: (அவளைப் பிடிக்கப் போகிறான். தோழன் அவனைத் தடுக்கும் பொருட்டு பிடிக்கிறான்; அவன் கீழே விழுகிறான்). வீர : (எழுந்து) அடே! துஷ்டா! உன் எஜமானைக் கொல்லவா நினைக்கிறாய்? இவ்வளவு காலம் என்னுடைய அன்னத்தைத் தின்று வளர்ந்த நீ எனக்கு விரோதமாக நடக்கிறாய் அல்லவா? (தனக்குள்)இவன் இருந்தால் காரியம் முடியாது. இவனையும் அனுப்பி விடுகிறேன். - அடே பைத்தியக்காரா நான் சொன்னது இன்னதென்பதை நீ சரியாக உணரவில்லையே! இதுதானா உன்னுடைய புத்திசாலித்தனம் இவ்வளவு உயர்ந்த குலத்தில் பிறந்த நான் கேவலம் இந்த இழிவான காரியத்தைச் செய்ய உண்மையில் விரும்புவேனோ என்பதை அறிந்து கொள்ளக் கூடவில்லையே! இவள் பயந்து கொண்டு என் இச்சைக்கு இணங்கட்டும் என்று இப்படிச் சொன்னேன். இவ்வளவுதானா உன் புத்தி கூர்மை? தோழ : உயர் குலத்திற்குத் தகுந்த குணவொழுக்கம் இல்லா விட்டால், மேலான பிறப்பைப் பற்றி புகழ்ந்து ஆத்ம ஸ்துதி செய்து கொள்வதில் பயனென்ன? வீர : உண்மை என்னவென்றால் நீ இங்கிருப்பதனால் இவள் வெட்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரையும் தனியாக விட்டுப் போ. அந்த முட்டாளும் எங்கேயோ ஓடிப் போய் விட்டான். நீ போய் அவனையும் தேடி அழைத்து வா. அதற்குள் இவள் இணங்கி விடுவாள். தோழ : (தனக்குள்) அப்படியும் இருக்கலாம். நான் சற்று நேரம் அப்பால் போகிறேன். ஐயா! உத்தரவுபடி நான் போகிறேன். வஸ : (அவன் வழியை மறைத்து) ஐயா! என்னை இங்கு தனியாக விட்டுப் போக வேண்டாம். உம்மைத் தவிர இங்கு எனக்கு வேறொரு துணையுமில்லை. காப்பாற்ற வேண்டும். தோழ : நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். (வீரசேனனைப் பார்த்து, ஐயா! வஸந்தஸேனையை உம்மிடம் ஒப்புவித்துப் போகிறேன். நான் திரும்பி வரும் போது ஜாக்கிரதையாக இவளை என்னிடம் ஒப்புவிக்க வேண்டும்.) வீர : சரி. அப்படியே ஆகட்டும்.  தோழ : உண்மைதானா? வீர : சத்தியம். தோழ (தனக்குள்) இவன் ஒருவேளை என்னை ஏமாற்றினாலும் ஏமாற்றி விடுவான்; நான் மறைவில் இருந்து இவன் செய்வதைக் கவனிக்கிறேன். (போய் மறைந்து கொள்கிறான்) வீர : (தனக்குள்) போய் விட்டான்; இனி இவளை ஒழித்து விடுகிறேன். (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்க்கிறான்.) ஓகோ இவன் ஒளிந்து கொண்டிருக்கிறானா? அப்படியா என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? உன்னை நான் ஏமாற்றுகிறேன் பார்! (வீரசேனன் புஷ்பங்களை எடுத்துத் தன் பேரில் அணிந்து கொள்கிறான்.) வஸந்தஸேனை! என் அருகில் வா கண்மணி! ஏன் என் பேரில் உனக்கு இவ்வளவு கோபம் வாவா! போதும்! என் கண்ணாட்டி அல்லவோ! எங்கே ஒரு முத்தம் கொடு. தோழ : (தனக்குள்) சரி அவள் பேரில் காதலைத்தான் காட்டுகிறான்; சந்தேகமில்லை! நான் இனிமேல் நிற்பது பிசகு; போகிறேன். (போப் விடுகிறான்) வீர : அடி வஸந்தஸேனை, உனக்கு எவ்வளவு ஐசுவரியம் தேவையான போதிலும் சரி, மழைப் போல வருவிக்கிறேன்; உன்னையே என் குலதெய்வமாக மதித்துக் கொண்டாடுகிறேன். என் தலைப் பாகையை உன் காலடியில் வைத்து வணங்குகிறேன். எங்கே என் அருகில் வா!  வஸ: விருத்தம் – தோடி  ஐயனே! வீணிலென்னை யலைத்துநீர் வருத்து கின்றீர்! தையலர் மனதை நீவிர் சற்றெனு மறியீர் போலும். வைதெனை யுரப்பியென்ற னன்பினைப் பெறுத லாமோ?  கைதவ நினையா திந்த ஆசையை விடுப்பீ ரின்றே.  ஐயா! நீர் எவ்வளவுதான் தெரிவித்த போதிலும் எனக்கு உம்மீது சற்றும் விருப்பம் உண்டாகவில்லை. உம்முடைய செல்வம் யாருக்கு வேண்டும்? தாமரைப் புஷ்பத்தின் இதழ்களில் சேறு படிந்து அழுக்கடைந்து இருந்த போதிலும், வண்டுகள் அந்தப் புஷ்பத்தை விட்டு அகலாது அல்லவோ! அதைப் போல ஏழ்மைத் தன்மையோடு கூடியிருந்த போதிலும் யோக்கியதா பட்சம் யாரிடத்தில் இருக்கிறதோ அந்தப் பூமானையே என் மனம் நாடுகிறது! அவருக்கு நான் ஒருக்காலும் வஞ்சம் செய்ய நினைக்க மாட்டேன். என்னை வீணில் வருத்துவதில் என்ன பயன்?  வீர :ஆகா! அப்படியா கேவலம் நித்திய தரித்திரனாகிய மாதவராயனை என்னைக் காட்டிலும் அதிகமாய் விசேஷித்தா பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு அகம்பாவமா? அவன் பேரில் உனக்கு அவ்வளவு ஆசையா? வஸ : என் ஹிருதயத்திலேயே குடியிருக்கும் அவரை நான் எப்படி மறப்பேன்? வீர: நீ சொல்வது நிஜந்தானா சமீபத்தில் வா. உன்னுடைய ஹிருதயத்தில் அவன் இருக்கிறானா என்று பார்க்கிறேன். அடி! வஸந்தஸேனை! பிச்சை எடுக்கும் பிராம்மணனுடைய பிரிய சகியல்லவோ நீ!  வஸ : ஆகா! கர்னாமிருதமான மொழிகள்! என்னுடைய பெருமையே பெருமை! அவரைப் பற்றி நீர் பேசப் பேச என் மனதில் பிரம்மானந்தம் உண்டாகிறது. இன்னம் பேசலாம். வீர: அவனால் இந்த சமயத்தில் உன்னை பாதுகாக்க முடியவில்லை. அப்பேடியை நீ மிகவும் புகழ்ந்து பேசுகிறாயே! வஸ : அவர் இங்கிருந்தால் எனக்கு இந்த அவமானம் நேர அவர் பார்த்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மாத்திரமல்ல; இன்னும் யாராயிருந்த போதிலும், அநாதைகளுக்குத் தீங்கு சம்பவித்தால் தன் உயிரைக் கொடுத்தாயினும் அவர்களைக் காப்பாற்றுவாரே! வீர : ஆகா! அவன் அவ்வளவு பலசாலியா! அவனல்ல அவன் பாட்டன் வந்த போதிலும் உன்னைத் தப்புவிக்க முடியாது. பாஞ்சாலியை இராமர் பிடித்ததைப் போல இதோ உன்னை நான் பிடித்துக் கொல்லுகிறேன் பார். (அவளுடைய கழுத்தைப் பிடித்துக் கொள்ளுகிறான்) வஸ : ஐயோ! இங்கு ஒருவருமில்லையா? இங்கு அநாதையாகத் தவிக்கிறேனே! இந்தக் கொலை பாதகன் என்னை ஹிம்சிக்கிறானே! ஹே! பிராண துரையே! நீர் எங்கிருக்கிறீரோ தெரியவில்லையே! என்னுடைய மனோரதம் இன்னம் நிறைவேறவில்லையே; இதற்குள் என்னுடைய உயிர் போய் விடும் போல் இருக்கிறதே ஒரு நாளாயினும் உம்மோடு கூடி வாழவில்லையே! இப்பொழுது இறந்தால் என் மனம் வேகுமோ ஹே! சுந்தராங்கா! இங்கு வர மாட்டீரா! இந்தக் கொலை பாதகனுக்குத் தக்க சிட்சை விதிக்க மாட்டீரா! ஏ, பக்ஷிகளா! ஏ, வண்டினங்களா! நீங்களாயினும் என் பேரில் இரக்கம் கொண்டு உடனே அவரிடம் போய்ச் சொல்லி அழைத்து வர மாட்டீர்களா? என் மனதைக் கொள்ளை கொண்ட என் துரையை நான் எப்படி மறந்து இறப்பேன்? நேற்று இரவெல்லாம் தங்களுக்குப் பணிவிடை செய்த அந்தப் பாக்கியம் திரும்பக் கிடைக்குமா என்று நினைத்திருந்தேனே! ஹா! தெய்வமே நீதான் ஏழையைக் காப்பாற்ற வேண்டும். வீர.: இன்னம் அவனை நினைக்கிறாயா? எங்கே இனிமேல் நீ வாயைத் திறந்து பேசுவதைப் பார்க்கிறேன். (அவளுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் இருகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் அழுத்துகிறான். வஸந்தஸேனை பேச முடியாமல் துடி துடித்துக் கீழே விழுகிறாள்.) வீர: ஓகோ இன்னம் துடிக்கிறாயா? ஒழிந்து போ! வேசிக் கழுதை (கைகளால் மேலும் தொண்டையை இறுகப் பிடித்து அழுத்துகிறான். அவள் மூர்ச்சித்து கீழே விழுகிறாள்.) வீர : ஒழிந்தாள் வேசி; முடிந்தது காரியம்; என் கவலையும் தீர்ந்தது! இந்தப் பாப மூட்டை இந்த வஞ்சக மண்டபம் கடைசியில் அழிந்தது. என்னைக் கையாலாகதவன் என்றா நினைத்தாய்? இப்பொழுது எப்படி இருக்கிறது? நான் இராஜாவின் மைத்துனன் என்னுடைய தயவிற்கு எத்தனையோ ஸ்திரீகள் காத்திருக்கிறார்கள்; நான் எவ்வளவு நயந்து வேண்டியும் என்னை அவமதித்தா பேசுகிறாய்! நீ எந்த விஷயத்தில் மற்ற ஸ்திரீகளைக் காட்டிலும் உயர்ந்தவள்? கந்தருவ ஸ்திரீயோ? அல்லது தேவ ரம்பையோ? எனக்கு உபயோகப்படாத உன் தேகம், பூச்சி புழுக்களுக்கு உபயோகப்படட்டும். எவ்வளவோ பெரிய மனுஷ்யனான எனக்கு ஒரு முத்தம் கொடுக்க மாட்டேனென்றாயே. இனி நாய் நரிகளெல்லாம் உன்னைத் தேவையான வரையில் முத்தமிடப் போகின்றன. இங்கு எவரும் இல்லை. நான் உன்னை அனுபவித்து ஆனந்தப்பட நீ சம்மதிக்கவில்லை அல்லவோ நீ அருமையாய் வளர்த்த உன்னுடைய மாமிசத்தை நாய் நரி கழுகுகள் சந்தோஷமாய்த் தின்பதையாயினும் மறைவில் இருந்து பார்த்து ஆனந்தம் அடைகிறேன். இந்தப் பிணத்தை யாரும் அறியாமல் இங்கே உதிர்ந்து கிடக்கும் சரகுகளால் மறைத்து விடுகிறேன். (மிகுதியிருந்த அவளுடைய ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு அவளைச் சருகுகளால் மறைத்து விடுகிறான்.) (தோழனும் பத்மநாபனும் வருகிறார்கள்) தோழ : மகாப் பிரபு! பத்மநாபனை இதோ அழைத்து வந்தேன். வஸந்தஸேனையை ஒப்புவித்தேனே! அவள் எங்கே இருக்கிறாள்? காணோமே! வீர : அவள் அப்பொழுதே போய் விட்டாளே!  தோழ : எங்கே போனாள்?  வீர : உனக்குப் பின்னால் வந்தாளே!  தோழ : அந்தத் திக்கிலேயே அவள் வரவில்லையே!  வீர : நீ எந்தத் திக்கில் இருந்தாய்? தோழ நான் கிழக்குத் திக்கில் இருந்தேன். வீர : அப்படியானால் சரிதான்; அவள் தெற்குத் திசையில் அல்லவோ போனாள். தோழ : நான் தென் புறத்திலும் போனேனே! வீர : அப்படியானால் அவள் வடக்குப் பக்கமாய்ப் போய் இருக்க வேண்டும்.  பத்ம : நான் வடக்குப் பக்கத்திலேயே இருந்தேனே! ஒருவரையும் காணவில்லையே! வீர : மிகுதி இருப்பது மேற்குத்தானே சரிதான் அப்படித்தான் போனாள். இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது! இந்தச் சோலையில் சூரியனிருக்குமிடம் தெரியாமையால் கிழக்கு மேற்கு தெரிகிறதில்லை. தோழ : என்ன இது? நீங்கள் சொல்வது எனக் கொன்றும் விளங்கவில்லையே! நன்றாய்த் தெரிவியுங்கள். வீர : உன் தலை, என் கால், சாட்சியாகச் சொல்லுகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். உனக்குப் பயமென்பதே தேவை இல்லை. நான் அவளை அனுப்பி விட்டேன். தோழ : எங்கே அனுப்பினர்கள்? வீர : அவள் இந்த உலகத்தையே விட்டுப் போய் விட்டாள்.  தோழ: இதென்ன ஆச்சரியம்!  வீர: ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சருகின் கீழ் சயனித்துக் கொண்டிருக்கிறாள் பார். (பிரித்துக் காட்டுகிறான்) தோழ : ஆகா! என்ன அக்கிரமம் (மூர்ச்சித்து விழுகிறான்) வீர : இதென்ன! இவனும் இறந்து விட்டானா என்ன? அவளிடத்தில் இவனுக்கென்ன இவ்வளவு பிரியம்? இவர்கள் இருவருக்கும் ஒரு வேளை ஸ்நேகம் இருக்குமோ? ஆம், ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும். பத்ம : (தோழனைப் பார்த்து) ஐயா! எழுந்திரும்! இத்தனைக்கும் நானே காரணம்! இவளை நான் அல்லவோ இங்கு அழைத்து வந்தேன். இந்தப் பழி எனக்கு அல்லவோ வந்து சேரும். தோழ :(மிகவும் விசனத்து) ஐயோ வஸந்தஸேனா! அன்பாகிய ஆறு வறண்டு போய் விட்டதோ? அழகானது, இந்தத் தேசத்தை விட்டுத் தனது இருப்பிடத்திற்குப் பறந்து போய் விட்டதோ? ஆகா! என்ன சாந்த குணம் என்ன குதூகலமான மொழி குழந்தையைப் போல் விளையாடுவாயே! இன்பங்களே நிறைந்த பெட்டியைத் திருடன் உடைத்து விட்டானே! இந்தப் பழி வீண் போகுமோ? ஸ்திரீ ஹத்தி தோஷம் விலகுமோ? அழகான யெளவன ஸ்திரீயை யாதொரு குற்றமும் இன்றி கொல்வது என்றால், தெய்வம் இந்த ஊரில் இருக்குமோ? தலையில் இடி விழாதோ? (தனக்குள் இந்தக் கொலை பாதகன் இந்தக் குற்றத்தை என் பேரில் சுமத்தினாலும் சுமத்துவான். இங்கிருப்பது பிசகு, நான் போய் விடுகிறேன். (விரசேனன் அவனைப் பிடித்துக் கொள்ளுகிறான்) என்னை ஏன் தடுக்கிறீர்! உம்முடன் நான் தோழனாக இருந்தது போதும்; நான் போகிறேன். இனி உமக்குத் தகுந்த வேறொருவனை வைத்துக் கொள்ளும். நான் போகிறேன். வீர : அப்படியா! நீ மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறாயே! இந்த ஸ்திரீ ரத்னத்தை இங்கு கொன்றதுமன்றி நான் கேட்டால் என்னைத் தூஷிக்கிறாயா?  தோழ : அழகு! அழகு! யோக்கியமான காரியம்! இவ்வளவு மேலான குணம் யாருக்கு வரும்? வீர: வாவா! கோபிக்காதே கோபம் பொல்லாதது அல்லவா? அதில் இவ்விதமான காரியம் செய்வது மனிஷ்ய ஸ்வபாவந் தானே உனக்குத் தேவையான பொருள் தருகிறேன். வா போக லாம். தோழ : ஐயா! போதும்! உம்முடைய வெகுமதியும் வேண்டாம்; உம்முடைய நட்பும் வேண்டாம்! இனிமேல் நாம் இருவரும் விரோதிகளாக இருப்போம். அவமானத்தை உண்டாக்கும் நட்பு எனக்குத் தேவையில்லை. நாம் இருவரும் இனி ஒருக்காலும் சேருவது இல்லை. இத்துடன் நமது ஸ்நேகம் ஒழிந்தது. வீர : பிரிய நண்பா! என்ன இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்! நேரமாகிறது; ஸ்நானத்திற்குப் போவோம் வா! தோழ : நீர் குற்றமற்றவராய் இருந்த போது உமக்கு நான் எவ்வளவோ பணிந்து நடந்தேன். குற்றவாளியை இனி நான் ஒருக்காலும் பணிய மாட்டேன். அதிலும் ஸ்திரீயைக் கொன்றவனோடா நட்புக் கொள்ள வேண்டும். ஆகா வஸந்தஸேனா உன்னுடைய நற்குணத்திற்கு நீ அடுத்த ஜென்மத்திலாவது சுகம் பெறுவாய். உன்னைக் கொலை செய்ததற்கு ஈசுவரன் எப்படியும் பழி வாங்கி விடுவான். (போகிறான்) வீர : கொலை செய்து விட்டு எங்கே ஓடப் பார்க்கிறாய்? இராஜாவினிடம் போக வேண்டும். வா என்னுடன்; அங்கு வந்து உன்னுடைய நியாயத்தைச் சொல்லித் தப்பித்துக் கொள். (பிடிக்கிறான்) தோழ : முட்டாளே! போ அப்பால். (கோபத்தோடு தன் கத்தியை உருவுகிறான்.) வீர : (அஞ்சிப் பின் வாங்கி) சரி, சரி உனக்கு அச்சமாய் இருந்தால் நீ போய் விடு. இங்கே நிற்காதே. தோழ : (தனக்குள் நான் இந்த நகரத்தில் இருந்தால், இந்தப் படுபாவி என் பேரில் இந்தக் குற்றத்தைச் சுமர்த்தி என்னைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குவான். நான் இந்த ஊரை விட்டுப் போய் பிரதாபனுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். (போய் விடுகிறான்) வீர : அடே பத்மநாபா என்ன நீ கூடவா பயப்படுகிறாய்? பத்ம : ஸ்வாமி! இது மிகவும் கொடிய விஷயம் அல்லவா? வீர : நீயும் என்னைத்தூஷிக்க ஆரம்பித்தாயா? இதோ இந்த ஆபரணங்களை வெகுமதியாக எடுத்துக் கொள். நான் நன்றாய் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் நீயும் எனக்குத் தகுந்த படி இருக்க வேண்டாமா? நேரமாகிறது, நீ வண்டியை ஓட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போ; நான் பின்னால் வருகிறேன். பத்ம : அப்படியே செய்கிறேன். (போய் விடுகிறான்) வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளையும் அரண்மனைக்குப் போனவுடன் ஒருவரும் அறியாமல் சிறைச்சாலையில் அடைத்து விடுகிறேன்; பிறகு இந்த இரகசியம் எப்படி வெளியில் வரப் போகிறது. இவள் உயிர் போய் விட்டதா அல்லது இன்னம் நன்றாய்க் கொல்ல வேண்டுமோ பார்க்கிறேன். சரி ஒழிந்துப் போய் விட்டாள்! சருகுகளை நன்றாய்ப் போட்டு மூடுகிறேன். நான் உடனே நியாயாதிபதியினிடம் போய் வஸந்தஸேனையின் ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு மாதவராயன் இவளைக் கொன்று விட்டதாகப் பிராது கொடுக்கிறேன்! நல்ல யோசனை நல்ல தந்திரம் மாதவராயனும் ஒழிந்து விடுவான் சரி போகிறேன். (போப் விடுகிறான்) (ஈர வஸ்திரத்துடன் சந்தியாசி வருகிறான்.) (தனக்குள்) சனியன் ஒழிந்தான்! இவ்விதமான துஷ்டர்களை அந்தக் கடவுள் ஏன் படைக்கிறானோ தெரியவில்லை! சந்நியாசி என்றால் இவனுக்கு எவ்வளவு கோபம் உண்டாகிறது! இவன் போகட்டும் என்று இதுவரையில் ஒரு மறைவில் இருந்து, இப்பொழுதே என்னுடைய காஷாய வஸ்திரத்தைக். கசக்கினேன். இவன் இனித் திரும்பி வர மாட்டான். வஸ்திரத்தை இந்த மரக்கிளையில் கட்டி உலர்த்துகிறேன். சே! குரங்குகள் இருக்கின்றன; கிழித்தாலும் கிழித்து விடும். கீழே தரையில் காய வைத்தால் மண் ஒட்டிக் கொள்ளும். என்ன செய்கிறது? அதோ இலைச் சருகுகள் முட்டாகக் குவிந்திருக்கின்றன. அதன் பேரில் காய வைக்கிறேன். (வஸந்தஸேனை கிடந்த இடத்தின் பேரில் துணியை விரித்து விட்டு அருகில் உட்காருகிறான். ஆகா! இந்த உலகத்தில் என்ன இருக்கிறது) திருவருட்பா - தோடி   விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது       விம்முகின்ற குழவியினு மிகப்பெரிதுஞ் சிறியேன்  அளக்கறியாத் துயர்க்கடலில் அழுந்தி நெடுங்கால       மலைந்தலைந்து மெலிந்து துரும் பதனின் மிகத்துரும்பேன். கிளக்கறியாக் கொடுமையெலாம் கிளைத்த பழுமரத்தேன்       கொடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்  களக்கரியாப் புவியிடை நானேன் பிறந்தே னந்தோ!        கருணை நடத்தரசே! நின் கருத்தை யறியேனே.  ஆழ்ந்து நினைத்துப் பார்த்தால் இவ்வுலகில் துன்பத்தையும் துயரத்தையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. இங்கு நாம் இருப்பதும் அநித்தியம். இந்த அற்ப வாழ்வும் மோசம் நாசம் கம்பளி வேஷமாக இருக்கிறது. சே! இது யோக்கியர்கள் இருப்பதற்கே தகாத உலகம். கொஞ்சங் கொஞ்சமாய் ஆகாரத்தைக் குறைத்து தேகத்தை ஒடுக்கிக் கடைசியில் என் பிராணனை விட்டு விடுவதே நல்ல முடிவு. ஈசுவரனுடைய திருவடியையே சதா காலமும் நினைத்த வண்ணமிருப்பதே நமக்குப் பெருத்த தனம்; அதுவே பாக்கியம். அதுவே பேரானந்தம்; அதுவே யாவும். இந்த உலகில் யாதொரு பற்றுமில்லை. யாரை விட்டுப் போவதில் என்ன விசனம்? ஒருவரும் இல்லை. ஆனால் எனக்குக் கடைசியாக உதவி செய்த அந்த வஸந்தஸேனையை மாத்திரம் நான் ஒரு நாளும் மறந்ததில்லை. அவளுக்கு ஏதாவது ஒரு பதில் உதவி செய்து விட்டால் போதும்; என்னுடைய கடைசி விருப்பம் நிறைவேறிப் போம். அவளுக்கு எவ்விதமான உதவி செய்யப் போகிறேன் (திடுக்கிட்டு) இதென்ன ஆச்சரியம்! இந்தத் துணியின் கீழ் புஸ் என்று பெரு மூச்சு விடும் சத்தத்தைப் போலக் கேட்டதே! ஒருவேளை ஸர்ப்பம் கடித்து நான் இறந்தால் நல்லதுதான். (ஒரு கையை வெளியில் நீட்டுகிறான்) ஓகோ ஸர்ப்பத்தைப் போலத் தான் இருக்கிறது. ஸர்ப்பமல்ல! தந்தத்தினால் செய்யப்பட்டகையைப் போல் இருக்கிறதே! (வஸ்திரத்தை எடுத்து விட்டு) இதென்ன ஆச்சரியம்! ஒரு ஸ்திரீயின் அழகிய கரமல்லவோ தெரிகிறது! இது விநோதமாக இருக்கிறதே! (சருகுகளை விலக்குகிறான்) ஆகா! என்ன காந்தி! ஒரு பெண்மணி அல்லவோ படுத்துக் கொண்டிருக்கிறாள்! என்ன வஞ்சகமோ தெரியவில்லையே! எந்தப் பாதகன் இப்படிச் செய்தானோ தெரியவில்லையே. உயிர் இருக்கிறது. (நன்றாய்ப் பார்த்து) ஆகா! எனக்கு உதவி செய்த உத்தமியான வஸந்தஸேனையைப் போல் இருக்கிறது. என் மனதின் பொய்த் தோற்றமோ! சீ இல்லை! இல்லை! அந்த மாதுசிரோன் மணியே இவள்! இங்கு வந்த காரணம் என்ன? அதோ திரும்புகிறாள்? கண்ணைத் திறக்கிறாள்! (தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்கிறாள்) சந் : (தனக்குள்) சமீபத்தில் நீரோடை இருக்கிறது. ஜலத்தை எப்படி எடுத்துக் கொண்டு வருகிறது? திருவோடு கூட என்னிடத்தில் கிடையாது; இதோ மாமரம் இருக்கிறது. அதன் இலைகளைத் தொன்னையாகத் தைத்து அதில் எடுத்து வருகிறேன். (போய் ஜலம் கொணர்ந்து அருந்துவித்து ஈரத் துணியால் முகத்தைத் துடைத்து அதனால் விசிறுகிறான்.) வஸ : (எழுந்து) ஸ்வாமி நமஸ்காரம்! இந்த உதவி செய்த தங்களை ஈசுவரன் அவசியம் காப்பாற்றுவார். சந் : அம்மா! நான் யார் என்று உங்கள் நினைவிற்கு வரவில்லையா? வஸ் : (யோசனை செய்து ) அடையாளம் தெரியவில்லையே! சொல்லுங்கள். சந் : முன்னொரு நாள் இரண்டு சூதாடிகளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து என்னை மீட்டது நினைவிற்கு வருகிறதா? வஸ : ஆம், ஆம்! ஞாபகம் இருக்கிறது! அதற்குப் பின் காஷாயம் வாங்கிக் கொண்டாற் போல் இருக்கிறது! சந்: ஆம். நீங்கள் இவ்விதம் இங்கிருக்க வேண்டிய காரணம் என்ன? எந்தப் பாதகன் இப்படிச் செய்தான்? விவரத்தைத் தெரிவிக்கலாமோ? . வஸ : எனக்கு இப்பொழுது மிகவும் களைப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் என் வீட்டிற்குப் போய்ப் பிறகு தெரிவிக்கிறேன். தயவு செய்து என்னை என் வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்த்தால் உமக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும். சந் : அப்படியே செய்யலாம். மெதுவாக நடந்து வாருங்கள். அருகில் உள்ள நீரோடைக்கு முதலில் போய் ஜலம் அருந்தி மரத்தடியில் சிறிது உட்கார்ந்து சிரமப் பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மெதுவாக நடந்து இப்படி வாருங்கள். --------------------                 அங்கம் 3, காட்சி 1   இடம் : நியாய ஸ்தலம்.  (நியாபதி வக்கீல், விசாரணை கர்த்தா முதலியோர் உட்கார்ந்து இருக்கிறார்கள்.  வெளியில் சேவகர்கள் கட்டிய தடிகளுடன் நிற்கிறார்கள்) விசா : அடே சேவகா! பிராது மனுக்கள் கொடுக்க வந்திருப்பவர்களைக் கூப்பிடு. சேவ : பிராது, மனுக்கள் கொடுக்கிறவர்கள் கொடுக்கலாம். (மூன்று தரம் உரக்கக் கூவுகிறான்) (விரசேனன் வருகிறான்) வீர: அடே! சேவகப் பயலே! நான் ஒரு பிராது கொடுக்க வேண்டும். எங்கே நியாயாதிபதி? சேவ : ஸ்வாமி! இங்கேயே இருங்கள். நான் போய் நியாயாதிபதியிடம் தெரிவிக்கிறேன். வீர : ஆகா! அப்படியா! சேவகப் பதரே! நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா! நான் இவ்விடத்திலா நிற்க வேண்டும்? சேவ : ஸ்வாமி கோபித்துக் கொள்ள வேண்டாம். (சேவகன் நியாயாதிபதியிடம் போகிறான்.) நியா : இராஜாவின் மைத்துனரா? தூமகேது என்னும் வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதாவது ஒரு தேசத்தின் நாசத்தைக் காட்டும் என்பார்கள். இந்தப் பிரபு வந்தது யாருடைய கேட்டிற்கு அறிகுறியோ தெரியவில்லை. இருக்கட்டும். இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதாகவும், நாளைக்கு வரும் படியும் தெரிவித்து அனுப்பு. சேவ : (வெளியில் வந்து) மகாப் பிரபு இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதால் நாளைய தினம் வரும்படி உத்தரவானது. நாளைக்கு வாருங்கள். வீர : என்னுடைய விசாரணையை விட மற்றது அவசரமோ? இந்த நியாயாதிபதி முழு முட்டாள். என் சகோதரியின் புருஷனாகிய இராஜனிடம் போய்த் தெரிவித்து இந்தக் கழுதையை வாலறுத்து ஓட்டி விடுகிறேன். (போகிறான்) சேவ : ஸ்வாமி ஒரு க்ஷணம் பொறுங்கள்; நான் போய் நியாயாதிபதியிடம் மறுபடியும் தெரிவித்துப் பார்க்கிறேன் (உள்ளே போய்) நியாயாதிபதிகளே! அவர் மிகவும் கோபித்துக் கொள்ளுகிறார். இன்றைக்குத் தன் பிராதை விசாரிக்காததைப் பற்றி இராஜாவிடத்தில் தெரிவித்து தங்களை வேலையில் இருந்து நீக்கி வேறு நியாயாதிபதியை நியமிக்கப் போகிறாராம். நியா : பாம்பு அற்பமான ஜெந்துவாய் இருந்த போதிலும் அதன் விஷம் எவரையும் கொல்லும் அல்லவோ! நல்லது; அவரை வரச் சொல் அவர் பிராதை விசாரிக்கலாம். சேவ : (வெளியில் போய்) மகாப் பிரபு! வரலாம்; உங்கள் பிராதை இன்று விசாரிக்கப் போகிறார்கள். வீர : ஓகோ! முதலில் விசாரிக்க முடியாது: இப்பொழுது முடியும். நல்லது, இவன் என்னிடத்தில் கொஞ்சம் பயம் வைத்துக் கொண்டிருக்கிறான். நான் சொல்வதைச் செய்கிறானா இல்லையா பார்க்கலாம். நியா: ஐயா! அப்படி உட்கார்ந்து கொள்ளும். வீர: சந்தேகம் என்ன? இந்த ஸ்தலமே என்னுடையது. நான் உட்காருவதற்கு உம்முடைய உத்தரவு வேண்டுமோ? எங்கே உட்கார விருப்பமோ அங்கே நானே உட்காருகிறேன். (விசாரணை கர்த்தாவிடம் போய்) இங்கேதான் உட்காருவேன். இல்லை, இல்லை. இன்னம் உயரத்தில் உட்காருவேன். (நியாபாதிபதிக்குப் பக்கத்தில் போய் உட்காருகிறான்.) நியா : ஐயா! உம்முடைய பிராது என்ன? சொல்லிக் கொள்ளும். வீர : சொல்லும் சமயம் எனக்குத் தெரியும் அதிருக்கட்டும். நீர் முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் யார் தெரியுமா? சிறந்த குடும்பத்தில் உதித்தவன். என் தந்தை இராஜாவின் மாமனார். இராஜாவோ என் தகப்பனாருடைய மருமகன். நான் இராஜாவின் மைத்துனன். இராஜா என்னுடைய சகோதரியின் கணவன். நியா : இதெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும்; குடும்பப் பெருமையைப் பற்றி அதிகமாய்ச் சொல்ல வேண்டாம். பிராதைத் தெரிவியும். வீர : இதோ சொல்லுகிறேன். ஆனால் அதில் என் பேரில் யாதொரு குற்றமும் இல்லை. என் மைத்துனனாகிய இராஜன், நான் விளையாடி, சந்தோஷமாய்ப் பொழுது போக்க, எனக்குப் பூஞ்சோலை ஒன்றைக் கொடுத்து இருக்கிறார். நான் தினம் தினம் அங்கு போயிருந்து விட்டு வருவது வழக்கம். இன்றைய தினம் அங்கு போனேன். ஆகா! எதைக் கண்டேன் தெரியுமா? என் கண்களையே நம்பக்கூட இல்லை! ஒரு யெளவன ஸ்திரீ யின் சவம் கிடக்கக் கண்டேன். நியா : அது யாருடையது என்பது அடையாளம் தெரிந்ததா? வீர: நன்றாய்த் தெரிந்தது. அவள் நம்முடைய நரகத்திற்கே அழகாய் இருந்தவள்; யாவராலும் புகழப்பட்ட வஸந்தஸேனை. அவளுடைய ஆடை ஆபரணங்களைக் கண்டு பேராசை கொண்ட எந்தக் கொலை பாதகனோ அவளைத் தனிமையான அந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். அங்கு அவளுடைய தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டான். ஆனால் நானல்ல. நியா : ஆகா! பாராக்காரர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள். விசாரணை கர்த்தா இதை எழுதிக் கொள்ளும், ”ஆனால் நானல்ல" என்பதையும் எழுதிக் கொள்ளும். விசா : சரி, எழுதிக் கொண்டேன். வீர (தனக்குள்) என்ன முட்டாள்தனம் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலப் பேசி விட்டேனே சரி, சொல்லியாய் விட்டது இனி என்ன செய்கிறது! ஐயா! நியாயாதிபதி அதிக மேதாவியாகிய தாங்கள் இந்த அற்ப விஷயத்தைப் பற்றி இவ்வளவு பிரமாதம் செய்கிறீர்களே! ஆனால் நானல்ல இச்செய்கையைப் பார்த்தவன் என்று சொல்ல உத்தேசித்தேன்.  நியா: அப்படியானால் அவளுடைய ஆடை ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு யாரோ அவள் தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டதாக உமக்கு எப்படித் தெரிந்தது? வீர : அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். ஏனென்றால் அவளுடைய கழுத்து வீங்கிப் போய் இருந்ததோடு ஆபரணங்களும் போயிருந்தன. நியா: இருக்கலாம். வீர (தனக்குள்) உயிர் வந்தது? நியா: சரி, வஸந்தஸேனையின் தாயை முதலில் விசாரிக்க வேண்டும். அடே சேவகா! அவளை வரவழை. சேவ : உத்தரவு. (போய் அழைத்துக் கொண்டு வருகிறான்) சேவ : அம்மா! இப்படியே வா! இதுதான் வழி. தாய்க்கிழவி : (தனக்குள்) என்னுடைய குழந்தை வஸந்தஸேனை தன் நண்பர் வீட்டிற்கு நேற்றிரவு போனவள் இன்னம் வந்து சேரவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இவன் நியாயாதிபதி அழைப்பதாகச் சொல்லுகிறான். என்ன காரணமோ, என்ன சம்பவித்ததோ தெரியவில்லை. என் மனம் பதைக்கிறது. என்ன செய்வேன்? போனால் உண்மை தெரிகிறது.  ( நியாயாதிபதியை நோக்கி) ஸ்வாமி! நமஸ்காரம். நியா : வா! அப்படி நில்லு. வீர : ஓகோ தாய்க் கிழவியா! வந்தாயா சரி. நியா : நீ வஸந்தஸேனையின் தாயா? தாய் :ஆம். நியா: உன் மகள் இப்பொழுது எங்கிருக்கிறாள்.  தாய்: ஒரு நண்பர் வீட்டிற்குப் போயிருக்கிறாள். நியா : அவருடைய பெயர் என்ன? தாய் : ஸ்வாமி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வெட்கமாய் இருக்கிறது! - நியா: நியாய ஸ்தலத்தில் சொல்லுவதினால் யாதொரு குற்றமும் இல்லை. இங்கே வெட்கப்பட்டால் காரியம் எப்படி ஆகும்? கேட்பதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். தாய் : நற்குணமே அணியாகப் பெற்ற மாதவராயருடைய மாளிகைக்குள் போனாள். வீர : இவள் சொன்னதைக் கேட்டீர்களா? இதை எழுதிக் கொள்ளுங்கள். மாதவராயன்தான் குற்றவாளி.  நியா : அவளுடைய நண்பர் எப்படிக் குற்றவாளி ஆவார்? அவரையும் வரவழைத்து விசாரிப்போம். அடே சேவகா! மாதவராயரை அழைத்து வா! (போய் அழைத்து வருகிறான்) மாத : (தனக்குள் இந்த நியாய ஸ்தலம் சமுத்திரத்தைப் போல் இருக்கிறதே! இதைப் பார்க்க என் மனதில் ஒரு வித சஞ்சலம் உண்டாகிறது. வழியில் பலவிதமான கெட்ட சகுனங்கள் தோன்றின. என்ன தீங்கு சம்பவிக்குமோ தெரியவில்லை. (நிலைப்படியில் தலை இடிபடுகிறது) ஆகா! மேலும் அபசகுனம் உண்டாகிறது. நல்லது ஈசுவரன் இருக்கிறான். எல்லாம் விதியின்படி நடக்கிறது. நியா : (தனக்குள் அதோ மாதவராயர் வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்த்து அவர் இவ்விதமான குற்றம் செய்யக் கூடியவர் என்று யார் சொல்லுவார்கள்? ஒரு மனிதனுடைய அகத்தின் அழகை அவனது முகம் கண்ணாடி போலக் காட்டுமல்லவா! மாத : நியாயாதிபதிகளே! சித்தத்தின்படி இதோ வந்தேன். அடியேனை அழைத்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். நியா : மாதவராயரே வாரும்; இந்த ஆசனத்தில் உட்காரும்.  வீர : ஸ்திரீ ஹத்தி செய்தவரே! வாரும்.  நியா : மாதவராயரே! உமக்கும்! இந்த ஸ்திரீயின் புத்திரிக்கும் நட்புண்டா? மாத : எந்த ஸ்திரீ? நியா ” இதோ நிற்பவள் வஸந்தஸேனையின் தாய்.  மாத : (எழுந்து வணக்கமாக) ஓகோ அப்படியா! நான் இது வரையில் பார்த்ததில்லை. அம்மா! ஸந்தஸேனை வீடு வந்து சேர்ந்தாளா? தாய் : அப்பா குழந்தாய்! இன்னம் வரவில்லை. நீ நீடுழி வாழ வேண்டும். (தனக்குள்) இவர்தாம் மாதவராயரா ஆகா! என் புத்திரியின் பாக்கியமே பாக்கியம். நல்ல சீலரையே விரும்பினாள். என்ன அழகு! என்ன மேன்மைக் குணம் இவர் அவளுக்குக் கிடைப்பாரானால் அவள் ஜன்மம் கடைத்தேறி விடும். நியா : மாதவராயரே! இவளுடைய பெண்ணாகிய தாஸி வஸந்தஸேனைக்கும் உமக்கும் நட்புண்டா? (மாதவராயர் திடுக்கிட்டு வெட்கிக் கீழே குனிகிறார்)  வீர: என்ன பாசாங்கு செய்கிறான்! தான் செய்த குற்றத்தை மறைக்க இது நல்ல தந்திரம் சாமர்த்தியசாலிதான் நியா : மாதவராயரே! உம்மீது பெருத்த குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் யோசனை செய்யாமல் சொல்லும். மாத: அப்படியா! அவள் இப்பொழுதுதான் சமீப காலத்தில் சாதாரணமாகப் பரிச்சியம். அதனால் குற்றம் என்ன? ஸ்திரீ புருஷர்களுக்கே பாலியத்தில் விளையாட்டுக்கள் இருப்பது சகஜந்தானே! நியா: ஐயா! மாதவராயரே மறை பொருளாய்ப் பேசுவதை விட்டு வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும். நான் இங்கு சட்டப்படி கேட்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். . மாத : என் பேரில் குற்றம் சுமத்துகிறவர் யார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டுகிறேன். வீர : இதோ! நான்தான். மாத : நீங்களா! அப்படியானால் விஷயம் பெரிதாக இருக்க வேண்டும். வீர: ஆம், தடை என்ன. இவ்வளவு கீர்த்திப் பெற்ற வஸந்தஸேனையைக் கொன்று அவளுடைய ஆபரணங்களை அபகரித்துக் கொண்டால் அது ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்தாயோ!  மாத : உமக்கென்ன புத்தி மாறாட்டம் கொஞ்சம் உண்டா? நியா : சரி! போதும்; வஸந்தஸேனை இப்பொழுது எங்கு இருக்கிறாள்? மாத : தன் வீட்டிற்குப் போயிருக்க வேண்டும்.  வீர: தன் வீட்டிற்கா போயிருக்க வேண்டும் ஆகா! என்ன துணிபு? நீ அவளை என்னுடைய சோலைக்கு இரகசியமாய் அழைத்து வந்து கழுத்தை இறுகப் பிடித்துக் கொன்று அவளுடைய நகைகளை அபகரித்துக் கொள்ளவில்லையா? தன் வீட்டிற்குப் போயிருப்பாள் என்று எப்படிச் சொல்லுகிறாய். மாத : (காதில் கையை வைத்து மூடிக் கொண்டு) ஆகாகா! ஈசுவரா என்ன வார்த்தைகளைக் கேட்கும்படி வைத்தாய்; இந்த வார்த்தை என் காதில் நாராசம் நுழைந்ததைப் போல் அல்லவோ இருக்கிறது. போதுமையா உம்முடைய விளையாட்டு; நிறுத்தும். இனி எனக்குக் கோபம் உண்டாகும். தாய் : ஆகா! என் மகள் இறந்து போய் விட்டாளா? ஐயோ! இனி என்ன செய்யப் போகிறேன். (ஒரு பக்கமாக நின்று அழுகிறாள்) நியா: (தனக்குள் எவ்வளவோ கீர்த்தி பெற்ற இவர் பேரில் ஒரு சிறிய மாசைக் கற்பிப்பதைக் காட்டிலும், ஹிமய மலையைத் தூக்கி நிறுத்துவதும், சமுத்திரத்திற்குக் கரை கட்டுவதும், காற்றைக் கையால் பிடிப்பதும், எளிதில் முடியும். (உரக்க) எவ்வளவோ கீர்த்தியைப் பெற்ற இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.  வீர : அவருடைய கட்சியை நீரே எடுத்துக் கொண்டாற் போல் இருக்கிறதே? நியா : நடுப் பகலில் சூரியனை எதிர்த்துப் பார்த்தால் நம்முடைய கண்ணொளி மழுங்கி விடாதோ? நெருப்பில் கையை நீட்டினால் கை அல்லவோ எரிந்து போம் அவர் பேரில் அநியாயமாக அவதூறு சொன்னால் தெய்வத்திற்கு சம்மதம் ஆகுமோ? தலையில் இடியல்லவோ விழும் இவர் சாதாரணமான மனிதரா சமுத்திரத்தை ஒத்த தன் ஐசுவரியத்தை எல்லாம் பரோபகாரத்தின் பொருட்டுத் தருமம் செய்து செலவிட்டவரும், சிறந்தவரிற் சிறந்தவரும் தயாள குணத்தையே பூஷணமாக அணிந்தவருமான இவர் கேவலம் அற்பப் பொருளை உத்தேசித்து கொடிய பாதகர் செய்யக் கூடிய இந்தப் பாவத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.  வீர: ஓகோ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேண்டியவர்கள் போல் இருக்கிறது. உமது வேலை பிராதை விசாரிக்க வேண்டியதே ஒழிய ஜோசியம் சொல்வதல்ல. எனக்கு நேரமாகிறது; விசாரணை நடக்கட்டும். தாய் : (தனக்குள்) இதென்ன மோசமோ தெரியவில்லையே! என் அருமைப் பெண் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ தெரியவில்லையே! இவரை ஏன் இப்படி வருந்துகிறார்கள்? (திபாயாதிபதிக்கு) நியாயாதிகளே இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார். இவர் ஒரு எறும்பைக்கூட வதைப்பவர் அல்லவே! தன் உயிர் போவதாய் இருந்தாலும், பிறருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாரே! இவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், இவருடைய மேன்மை ஒரு நாளும் போகாது. என் மகள் தன் ஆபரணங்களை ஒரு நாளிரவு இவரிடம் வைத்து வந்தாள். அவைகள் களவு போய் விட்டன; இவர் அவற்றைவிட எவ்வளவோ விலை உயர்ந்த ஒரு வைர மாலையைக் கொடுத்தார். அப்படி இருக்க, இவர் அற்ப நகைகளுக்காகக் கொலை செய்தாரென்பது முழுதும் பொய். நியா : மாதவராயரே! அவள் உம்முடைய மாளிகைக்கு எப்பொழுது வந்தாள். மாத : நேற்று சாயங்காலம்.  நியா : பிறகு எப்பொழுது போனாள், நடந்து போனாளா, அல்லது வண்டியில் போனாளா? மாத : அந்த விவரம் எனக்குத் தெரியாது; அவள் இன்று காலையில் தன் வீட்டிற்குப் போகுமுன் நான் எழுந்து என் உத்தியான வனத்திற்குப் போய் விட்டேன்.  (வீரகன் அவசரமாக வருகிறான்.)  வீர :நியாயாதிபதிகளே! நமஸ்காரம்.  நியா : வீரகா! எங்கு வந்தாய்; என்ன விசேஷம்?  வீர : ஒரு பிராது சொல்லிக் கொள்ள வந்தேன்.. நியா : இன்று காலையில் பிரதாபனைத் தேடிக் கொண்டு போன போது, ஒரு பெட்டி வண்டி ஊருக்கு வெளியில் அவசரமாகப் போனதைக் கண்டேன். என்னுடன் வந்த சந்தானகன் வண்டியை நிறுத்தி அதற்குள் பார்த்தான். அதன் பிறகு, நானும் உட்புறம் யார் இருந்தார்கள் என்பதைப் பார்க்கப் போனேன். அவன் என்னைத் தடுத்துக் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி உதைத்தான். அதை இராஜனிடம் தெரிவிக்குமுன் தங்களிடம் சொல்லிக் கொள்ளலாமென்று வந்தேன். நியா : அந்த வண்டி யாருடையது? வீர. : அது மாதவராயருடையதென்றும், அவருடைய உத்தியான வனத்தில் சந்திக்கும் பொருட்டு அதில் வஸந்தஸேனை போவதாயும் வண்டிக்காரன் தெரிவித்தான். வீர : பார்த்தீரா உண்மையை? நியா : மாசற்ற சந்திரனைக் கிரகணம் பிடிக்கும் போல் இருக்கிறதே! நல்லது; வீரகா! உன் பிராதை விசாரிக்கிறேன். நீ குதிரையின் பேரில் ஏறிக் கொண்டு இவருடைய பூஞ்சோலைக்குப் போய், அங்கே கொலை செய்யப்பட்ட ஒரு ஸ்திரீயின் பிணம் கிடக்கிறதோ என்று பார்த்து விட்டு வா? வீர : அப்படியே இதோ வந்து விட்டேன். (போய்த் திரும்பி வருகிறான்) வீர: ஒரு ஸ்திரீயின்பிரேதத்தைக் காட்டு மிருகங்கள் இழுத்துக் கொண்டு போயிருக்கக் கண்டேன். நியா: ஸ்திரீ என்பது எப்படித் தெரிந்தது. வீர : அங்கு கிடந்த தலை மயிரின் நீட்சி, அழகு முதலியவற்றாலும் கால் கைகளின் அடையாளங்களினாலும் கண்டு பிடித்தேன். நியா: வாரும்; மாதவராயரே உண்மையைச் சொல்லி விடும். மாத : என்ன ஆச்சரியம்! என்ன அநியாயம்! தன் உயிரைக் காட்டிலும் அதிகமாக என்மீது அன்பையும் ஆசையையும் கொண்டவளும், நீதியிலும் அரியவளுமான அந்த சுந்தராங்கியின் சிரத்திலுள்ள ஒரு சிறிய உரோமத்திற்கும் தீங்கு செய்ய எனக்கு மனம் வருமா? என்னையும் என் குணத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்களா? இன்ப சாகரமாகிய வஸந்தஸேனையைக் கொல்ல அவளுடைய விரோதி கூட நினைக்க மாட்டானே? வீர : ஐயா! நியாயாதிபதி இந்தக் குற்றவாளியை இனியும் இவ்விடத்தில் உட்கார வைத்தால், நீங்கள் இருவரும் நண்பர்கள் என்று மதிக்கப்படுவீர்கள். நியா : மாதவராயரே! எழுந்து நில்லும். மாத : நியாயாதிபதிகளே! அப்படியே நிற்கிறேன். நீங்கள் நன்றாய் யோசனை செய்யுங்கள். வீர : (மாதவராயருக்கு அருகில் போய் நின்று கொண்டு) ஏ மாதவராயா! என்னைப் பார் நிஜத்தைச் சொல்லி விடு. வஸந்தஸேனையைக் கொன்று விட்டதாக நாணயமாக ஒப்புக் கொள். மாத : துஷ்டா! என்னுடன் பேசாதே; போ அப்பால். (தனக்குள்) என்னுடைய உண்மை மித்திரம் ஸோமேசன் இந்த அவதுறைக் கேட்டால் எப்படி விசனப்படுவானோ? மேலான குலத்தில் உதித்த பரிசுத்த ஸ்வரூபியான என் அரிய நாயகி இதைக் கேட்க சகிப்பாளோ? ஆகா குழந்தாய் உன்னுடைய பாலிய விளையாட்டில், உன் பிதாவுக்கு வந்திருக்கும் மானக் கேட்டை நீ எங்கே அறியப் போகிறாய்? எனக்கு இந்த மான ஹானி வந்ததைப் பற்றிக்கூட நான் வருந்தவில்லை. இதனால் என் உயிர் போவதாய் இருந்தாலும் கவலை இல்லை. பதிவிரதா சிரோன்மணியான வஸந்தஸேனை உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் மனதை வருத்தி வதைக்கிறது. அவள் உண்மையில் இறந்திருப்பாள் என்பதை என் மனது இன்னமும் நம்பவில்லை. அவள் என் குழந்தைக்குக் கொடுத்து விட்டுப் போன ஆபரணங்களைத் திரும்ப அவளிடம் கொடுத்து விட்டு வரும்படி ஸோமேசனை அனுப்பினேன். அவனும் திரும்பி வரவில்லை. ஈசுவரா! கருணாநிதே! என்ன செய்யப் போகிறேன். (ஸோமேசன் ஆபரணங்களுடன் நியாய ஸ்தலத்திற்கு வெளியில் வருகிறான்.) ஸோ : (தனக்குள்) வஸந்தஸேனை அவள் மாளிகையில் காணப்படவில்லையே? வேறு எங்கு போய்த் தேடுகிறது. என் மித்திரரை நியாய ஸ்தலத்திற்கு அழைத்துப் போயிருப்பதாய்க் கேள்விப்பட்டேன். நியாய ஸ்தலம் இதோ இருக்கிறது. உள்ளே போய் விசேஷம் என்ன என்பதை அறிந்து கொண்டு பிறகு வஸந்தஸேனையைத் தேடுகிறேன். (உள்ளே போய்) ஆ!மித்திர ரத்னமே! என்ன விசேஷம்? இங்கு வந்த காரணமென்ன? மாத : ஸோமேசா! நான் கொலை பாதகன்; என்னைக் காதலித்த மங்கையைக் கொன்ற படுபாவி நான். ஸோ : ஆகா! என்ன சொன்னீர்கள்! உங்களை இப்படிச் சொல்லத் துணிந்தவன் யார்? மங்கையையாவது கொலை செய்யவாவது? மாத : அதோ நிற்கும் கொடியவனே என் விதியை நிறை வேற்றும் கருவியாக வந்திருக்கிறான். (ஸோமேசன் காதில் விவரத்தைச் சொல்லுகிறார்) ஸோ : அவள் தன் மாளிகைக்குப் போய் விட்டதாகச் சொல்லி விடுகிறதுதானே. மாத : நான் என்ன சொன்ன போதிலும் பயனில்லை; ஏழையின் சொல்லை யார் நம்புவார்கள்? ஸோ: நியாயாதிபதிகளே இதென்னஅநியாயம்? நம்முடைய நகரத்தைக் கோவில்களாலும், தடாகங்களாலும், சாலைகளாலும், மண்டபங்களாலும், ஊற்றுக்களாலும், வாவிகளாலும் அலங்கரித்த இந்த மகானுபாவரா கேவலம் அற்பமான கொலை பாதகம் செய்பவர்? நன்றாய்த் தீர்க்காலோசனை செய்து பாருங்கள். அடே வீரசேனப் பதரே! மனிதரை வருத்தி வயிறெரியச் செய்யும் பரம பாதகா ஒரு கொடியிலுள்ள புஷ்பத்தைப் பறிப்பதைக் கூட பாவமென்று மதிக்கும் இந்தப் புருஷோத்தமர், இகத்திற்கும் பரத்திற்கும் இகழையும் துன்பத்தையும் தரும் இந்த மகா பாதகத்தைச் செய்தார் என்று எங்கே எனக்கு முன்பாகத் தெரிவி! இதோ இந்தத் தடியால் துற்புத்தியே நிறைந்த உன் தலை ஆயிரம் சுக்கலாகும்படி உடைக்கிறேன். வீர : எல்லோரும் இதைக் கேட்டீர்களா எனக்கும் மாதவராயருக்கும் உள்ள வித்தியாசத்தில் இவன் தலையிட இவனுக்கு என்ன அதிகாரம்? அடே! இதோ பார், நான் உன் தலையை உடைக்கிறேன். (இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாய்த்து கட்டிப் புரளுகின்றனர். ஸோமேசன் மடியில் வைத்திருத்த ஆபரணங்கள் கீழே விழுகின்றன.) வீர : (அவற்றை எடுத்துக் காட்டி) இதோ பார்த்தீர்களா அவள் மேலிருந்து அபகரித்த ஆபரணங்கள். நான் சொன்னது நிஜமாய்ப் போய் விட்டது பார்த்தீர்களா! அவனுக்கு இவனும் உடந்தை. ( நிதிபாயாதிபதி தன் சிரத்தைக் கீழே போட்டுக் கொள்ளுகிறார்.) மாத: (ஸோமேசனிடம்) என்னுடைய கால வித்தியாசத்திற்குத் தகுந்த விதம் இந்த சமயத்தில் இவ்வாபரணங்களும் விழ வேண்டுமா இது என்னுடைய கர்மவினை எப்பொழுது இவைகள் விழுந்தனவோ, அப்பொழுது நானும் விழுந்தேன். தப்புவதில்லை. ஸோ: நடந்த விவரங்களை நன்றாய் விளங்கச்சொல்கிறது தானே.  மாத : சந்தேகத்தைத் தரக்கூடிய இத்தனை சங்கதிகளுக்கு மத்தியில் உண்மை இன்னதுதான் என்பதை அறிய இராஜ பீடத்திற்கு வல்லமை இல்லை. என்ன செய்கிறது! இவ்விதமாக அவ மானப்பட்டு நான் உயிரை விடவேண்டும் என்று இருந்தால், அதை நாம் எப்படித் தடுக்கக் கூடும்? நடப்பது நடக்கட்டும். நியா : (தாய்க் கிழவிக்கு) ஸ்திரியே இந்த ஆபரணங்கள் உன் மகளுக்குச் சொந்தமானவைகளா? தாய் : அவைகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் அல்ல. வீர : ஏ கிழ முண்டமே! என்ன உளறுகிறாய்? நிஜத்தைச் சொல். தாய் : புரட்டனே! போ அப்பால்!  வீர : அடி! ஜாக்கிரதையாகப் பேசு. இவைகள் உன் மகளுடையவைகளா இல்லையா? தாய் : நியாயாதிபதிகளே! தட்டான் தன்னுடைய ஸாமர்த்தியத்தினால் ஒன்றைப் போல மற்றொன்றைச் செய்யக் கூடும் அல்லவா! அவை என் மகளுடைய நகைகள் என்று நிச்சயமாக எப்படிச் சொல்லுவேன்? நியா : ஆம். நிஜந்தான் அப்படியும் இருக்கலாம். மாதவராயரே இவ்வாபரணங்கள் உம்முடையவைகளா?  மாத : இல்லை.  நியா : அப்படியானால் யாருடைய ஆபரணங்கள்?  மாத : வஸந்தஸேனையினுடைய ஆபரணங்களே.  நியா : சொந்தக்காரியிடம் இருந்து உம்மிடம் இவை எப்படி வந்தன! மாத : அவளே கொடுத்தாள். நியா : மாதவராயரே! நீர் உண்மையைப் பேச வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்ல வேண்டுவதில்லை. பொய் சொல்ல வேண்டாம். மாத : நான் சொல்வதைப் பொய்யென்று நினைப்பானேன்?  வீர : அவளைக் கொன்ற பிறகு அவ்வாபரணங்களை அவள் தேகம் கொடுத்தது? இவர் சொல்வதும் உண்மைதான். நியா : மாதவராயரே! நிஜத்தைப் பேசும்; இல்லாவிட்டால் துன்பம் வந்து சம்பவிக்கும். மாத : சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே பொய் என்றால் பிறகு நான் சொல்வதில் பயன் என்ன? குற்றம் என்பதே இன்னது என்று அறியாத குலத்தில் உதித்த நான் என் முன்னோர்களுக்கு அவமானம் வரக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்பவனல்ல. குற்றமற்றவனைக் குற்றவாளியென்று ஸந்தேகித்தால், வருவதை நான் அனுபவிக்க வேண்டுவதுதான் முடிவு. வீர : இன்னம் ஸந்தேகமாக ஏன் பேச வேண்டும்? கொன்றேனென்று சொல்லி விடு. மாத : எனக்குப் பதிலாக நீர்தாம் சொல்லி விட்டீரே! நான் கூடச் சொல்ல வேண்டுமா? வீர : கேட்டீர்களா இவரே ஒப்புக் கொள்கிறார்; இவர் வாக்குமூலத்தினாலேயே சந்தேகம் நீங்கிவிட்டது. இனி தண்டனை விதிக்கலாம். ஐயோ பாவம்! மாதவராயரைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது! இவர் இந்தக் குற்றம் செய்யாமல் இருந்தால் நன்றாய் இருக்கும். இதை வேறு யாராயினும் செய்திருக்கலாகாதா? நியா : மாதவராயரே! இப்பொழுது ஏற்பட்ட சாட்சியங்களால் நீர் வஸந்தஸேனையைக் கொன்று இருக்கலாம் என்று ஸ்ந்தேகம் ஏற்படுகிறது நீர்கொல்லவில்லை என்பதற்கோஅல்லது வேறு யாராவது அவளைக் கொன்றார்கள் என்பதற்கோ உமக்கு சாட்சிகள் இருக்கிறார்களா? மாத : இந்த ஆபரணங்களை வஸந்தஸேனை கொடுத்தாள் என்பதற்கு என் பணிப் பெண் சாட்சி இருக்கிறாள். தவிர, இன்று காலையில் இருந்து, என்னுடைய நண்பன் ஸோமேசன் என்னுடன் கூடவே இருந்திருக்கிறான். இவ்விருவரும் தான் சாட்சிகள். வீர: இவர்கள் உனக்கு அனுகூலமானவர்கள். உன் வேலைக்காரியும், நண்பனும் உன் உயிரைத் தப்புவிக்க ஏன் பொய் சொல்ல மாட்டார்கள்? ஆகையால் இவர்களுடைய சாட்சியம் சிறிதும் உபயோகம் இல்லை. நியாயாதிபதி! நீர் இவர்களை விசாரித்த போதிலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நியா : மாதவராயரே! இவர்களைத் தவிர வேறு சாட்சிகள் இருக்கிறார்களா? மாத : இல்லை. வீர : அப்படியானால் நியாயாதிபதி இனி தண்டனை விதிக்க வேண்டியதுதான். தாய் : ஐயோ! என் அருமை மகனே! உனக்கு என்ன பொல்லாத காலமோ தெரியவில்லையே! நல்ல மனிதருக்கு இப்படியும் ஆபத்து வருமோ? நியாயாதிபதிகளே! என் மகளுக்காக இந்தப் பிராதில் நான் அல்லவோ வாதியாக வரவேண்டும்? இவர் பேரில் எனக்கு யாதொரு வியாச்சியமும் இல்லை. இவரை விட்டு விடுங்கள். வீர : கிழப் பிணமே! போ அப்பால்! எங்களுக்குத் தெரியாததற்கு நீயே சொல்லிக் கொடுக்கிறாய்! நியா : கொலைக் குற்றத்திற்கு சர்க்காரே வாதி. ஆகையால், உன்னைப் பற்றிக் கவலை இல்லை. நீ போகலாம். தாய் : இதென்ன அநியாயம்! யாதொரு குற்றத்தையும் செய்யாத புண்ணிய புருஷர் மீது அடாப்பழி சுமத்துகிறார்களே! இது தெய்வத்திற்கு சம்மதமாகுமோ? நியாயாதிபதிகளே இது தர்மமல்ல என் மகள் ஏதோ தலை விதியினால் இறந்தாள். அதற்காக யாதொரு களங்கமும் அற்ற உத்தம குணமுடைய இவரைத் தண்டிக்க வேண்டாம். விட்டு விடுங்கள். நியா : சரி! நீ போகலாம். (சேவகர்கள் அவளை வெளிப்படுத்துகிறார்கள்)  வீர: நேரமாகிறது! தண்டனை விதியும். நியா : ஐயா! இது கொலைக் குற்றம்; அதிலும் குற்றவாளி பிராம்மணர். ஆகையால் இதை நான் தீர்மானித்தல் கூடாது. மனு நீதிப்படி இதில் அரசனே தீர்மானம் சொல்ல வேண்டும். ஆகையால் என்னுடைய விசாரணை கர்த்தாவை நான் அரசனிடம் அனுப்பி, விசாரணையில் ஏற்பட்ட விஷயங்களைத் தெரிவிக்கச் சொல்லுகிறேன். (விசாரணை கர்த்தாவை நோக்கி) நீர் உடனே அரசனிடம் போய், விவரங்களைத் தெரிவித்து அவருடைய தீர்மானத்தை அறிந்து வாரும். பிராம்மணர் கொலைக் குற்றம் செய்தால், அவரைக் கொல்லக் கூடாதென்றும், அவரை இந்தத் தேசத்தை விட்டு வேறு தேசத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்பதும் சாஸ்திரம் என்று தெரிவியும். வீர (தனக்குள் அப்படியானால் நான் முன்னால் அரசனிடம் போய் அவனை சரிப்படுத்தி வைக்கிறேன். (போய் விடுகிறான்) வி-க : உத்தரவுப்படி செய்கிறேன். (போய்த் திரும்பி வந்து), நியாயாதிபதிகளே! அரசனிடம் தெரிவித்தேன். வஸந்தஸேனையின் ஆபரணங்களை இவர் கழுத்தில் போட்டு இவருக்கு எருக்க மாலை அணிவித்து பறை முழக்கத்தோடு இவரை ஊரைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியில் உள்ள மைதானத்தில் கழு மரத்தில் ஏற்றும்படி உத்தரவு பிறப்பித்தார். இவ்விதக் குற்றத்தை இனி ஜனங்கள் செய்யாமல் இருக்க, இது ஒரு உதாரணமாக இருத்தல் வேண்டுமாம். ஸோ ; ஹா! தெய்வமே! (மாதவராயர் மீது சாய்கிறான்) மாத : யோசனையும் நியாயமும் இல்லாத அரசன் இப்படித்தான் துற்புத்தி மந்திரிகளின் உபதேசத்திற்கு இணங்கி அக்கிரமங்களைச் செய்து நாசமடைகிறான். யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே! கேடு வரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே! விதியின் வலியைத் தடுக்க யாரால் முடியும்? முன் ஜென்மத்தில் நான் செய்த பாவத்தினால் இது சம்பவித்தது. இதைப் பற்றி யார் பேரில் குற்றம் சுமத்துகிறது? ஆகையினால் நண்பா! கவலைப்படாதே! என்ஆருயிர்மித்திரா! நான் போகிறேன். இதுவரையில் நீ என் மீது வைத்திருந்த அன்பை மறந்து விடாதே! ஆதரவற்ற என் குடும்பத்தை உன் வசத்தில் ஒப்புவித்தேன். என் மனைவியையும் குழந்தையை யும் இனி நீ தான் காப்பாற்ற வேண்டும். ஸோ : ஐயா! மித்ர ரத்னமே! அடிவேர் போன பின் மரம் உயிருடன் இருப்பதும் உண்டோ? ஒரு நாளும் இல்லை. உங்களுக்கு முன் என் உயிர் இதோ போய் விடும் போலிருக்கிறது. மாத : நண்பா! அப்படி அல்ல! தகப்பன் இறந்த போதிலும் அவன் பிள்ளையின் ஸ்வரூபமாக உயிருடன் இருக்கிறான் என்பது சாஸ்திரம். ஆகையால், என்னிடம் இருந்த விதமே நீ என் குழந்தையிடத்திலும் இருந்து அவனை ஆதரிக்க வேண்டுகிறேன். இதுதான் என் கடைசி வேண்டுகோள். நான் இறக்குமுன் என் குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். நீ போய் அவனை அழைத்து வா. இந்த விஷயத்தை நான் இறந்த பின் என் நாயகியினிடத்தில் தெரிவிக்கலாம். நியா : அடே! சேவகா! இவரைச் சண்டாளர்களிடம் ஒப்புவித்து அரசனுடைய கட்டளையை நிறைவேற்றச் சொல்லி விடு. சேவ : இப்படி வாரும் ஐயா!  (மாதவராயரை வெளியில் அழைத்து வருகிறான்)  மாத : ஜெகதீசா! இனி உன்னுடைய துணையையன்றி எனக்கு வேறொரு துணையுமில்லை. (நிறுவினா கதிலேதுரா - என்ற பாட்டின் மெட்டு)   ப. நினையலால் கதியேதையா ஈசா! ஜெகதீசா! பரமேசா! ஸர்வேசா!  அ. நாதனே! உன் சோதனையோ! பேதையினேன் ஏது செய்வேன்?  நாதா! குணநீதா! பொற்பாதா! ஜகந் நாதா! (நி)  (தனக்குள்) ஆகா! இதுதான் பூலோகத்தின் நீதியோ இது தான் அரசாட்சியோ? இதுதான் செங்கோலோ? ஒரு மயிரிழையும் தவறாத சர்வ வல்லமையுடைய ஈசுவரனால் படைக்கப் பட்ட இந்த உலகில் இப்படி நடப்பது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது! இவ்விதம் நடப்பதற்கு விதி என்னும் ஒரு மூல காரணம் இருந்த போதிலும் இப்பொழுது நேரில் பார்ப்பவர்களுக்குக் கடவுளிடத்து ஒருவித அவநம்பிக்கையும், தூஷணையும், ஒரு விதக் களங்கமும், ஏற்படுகின்றன அல்லவா? எவ்வளவு பெருத்த குற்றம் எவ்வளவு சுருக்கமான விசாரணை எவ்வளவு துரிதமான தீர்மானம்! நல்ல நியாய ஸ்தலம் தீர்மானம் செய்த அரசனும் நல்லவனே ஒரு விரோதியின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் உலகத்தில் மனிதருக்குப் பாதுகாப்பேது? அரசனே! இப்படிக் குற்றமற்றவர்களை வருத்தி நீ எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளை ஒக்கும் அல்லவோ! அரசனே, உனக்கு நரகம் ஆயத்தமாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது; கவலைப்படாதே! சேவகர், வா போகலாம். (போகிறார்கள்) -----------                            அங்கம் 3, காட்சி 2   இடம் : இராஜ வீதி.  இரண்டு சண்டாளர் மாதவராயரைக் கழுமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகும் சமயம்.  ஜனங்கள் நெருங்குகிறார்கள்.  மாதவராயர் பாடிக் கொண்டு வருகிறார். நாதநாமக்கிரியை - திரிபுடை  ப. இதுவோ தலைவிதியோ? எனது காலகதியோ? அ. பொதுளும் பொரு ளிழந்தும் உறுவோர் தலையிழந்தும் துதியும் புகழிழந்தும் மதியாச் சிறுமைதன்னில்  பதியும் மனையும் சேயும் அகலக் கொலைஞனானேன்;  கதியே திணிக் கருணாநிதியே யெனது துணை (இது)  1 சண் : இதென்ன இம்பிட்டுக் கூட்டம் போங்கையா அப்பாலே. ஒங்கிளுக்கெல்லாம் இங்கிட்டு என்னய்யா சோலி? 2 சண் : பட்டிக்காட்டான் முட்டாயிக் கடையெப் பாக்கராப்புலே என்னையா இப்படிப் பார்க்கிறீங்க? என்னமோ பாவம் பெரிய வீட்டுப்புள்ளே தலைவிதியினாலே போறாரு. கூட்டங்கூட வாணாம் போங்கய்யா. மாத : (ஒருபுறமாக மனிதனுடைய சத்ருவாகிய கர்ம வினையின் மாறுபாட்டை யார்தாம் அறிவர். எனக்கு இவ்விதமான கால வித்தியாசம் ஏற்படப் போகிறதென்று நான் ஒரு நாளும் நினைக்கவே இல்லை; வீதியின் வழியாகக் கட்டி இழுக்கப்படும் நிலைமைக்கு வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னைக் காணும் நகரத்தினர் யாவரும் கண்ணிர் விட்டு அழுகின்றனர். நரகத்தின் மத்தியில் ஒரு துளி தேன் வாயில் விழுந்ததைப் போல, இதைக் காண என் மனம் சற்று ஆறுதலடைகிறது. யாவரும் என்னைக் காப்பாற்றும்படி ஈசுவரனைப் பிரார்த்திக்கிறார்கள். 1 சண் : அடியாத்தே! ஊர்ச்சனங்கள்ளாம் இப்படியா அளுவும் கண் கொண்டுதான் பார்க்க  முடியலியே! 2 சண் : அடே அந்தாலே பாருடா! ஊட்டு சன்னல்லே நிக்கிற பொட்டச்சிகள்ளாம் அளுவுறாங்கடா! 1 சண் : (தண்டோராப் போடுகிறான் துடும், துடும், துடும், துடும். ஊரு ஜனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால், நகராதிபதி ஊட்டு மாதவராயரு, தேவிடியா  வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு, அவளொட நவையெல்லாம் எடுத்துக்கிட்டாராம். அதுக்காவஅவரைநம்ம மவராசா கொன்னுட ஆக்கினைப் பண்ணிப் புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலை போயிடும்.துடும், துடும், துடும், துடும். மாத : (காதில் கைகளை வைத்து மூடிக் கொண்டு) ஹா! ஈசுவரா! விருத்தம் - முகாரி   ஈசனே! யேழை யிந்தத் தூஷணை பெறவோ வந்தேன்?  மாசிலா நெறியே நின்றேன், மரித்திடல் மதியே னிந்த ஏசுறு மொழியைக் கேட்க எங்ஙனஞ் சகிப்பேன்றாழ்ந்த  நீசரா லிறக்குங் கால நேர்ந்ததோ? சதியே யாமோ?  என்ன கதிக்கு ஆளாக்கினாய்! என்ன கர்ன கடூரம்! இம் மொழிகள் என் காதில் விழ நான் என்ன மகா பாவம் செய்தேனோ என் தந்தை தன் கச்சேரிக்குப் போனது வீதியில் அவர் வரவைக் கட்டியக்காரர் புகழ்ந்து தெரிவித்ததற்குப் பதிலாக எனக்கு இவ்விதமான கீர்த்தி ஏற்பட்டதோ! ஹா! புண்யாத்மாவாகிய என்னுடைய தந்தையின் பெயரைக் கெடுக்கப் பாதகனாகிய நானேன் பிறந்தேன்? கம்பீரச் சின்னங்களுடன் என் பிதா இந்த வீதியில் போன காலத்தில், தன் மகனுக்கு இதே இடத்தில் இவ்வித மரியாதை கிடைக்கப் போவதை அறிந்திருப்பாரானால், அவருடைய பெருமையும் குதூகலமும் எங்கு போயிருக்கும்! ஓகோ! அதோ என் மித்திரன் ஸோமேசனும், என்னருமைக் குழந்தை சிசுபாலனும் வருகிறார்கள். (சண்டாளரிடம்) நண்பர்களே! நீங்கள் எனக்கு ஒரு அனுமதி தரவேண்டும். 1 சண் : என்னையா ஓனும்? சொல்லையா ஒடனே தாரோம். உங்க நல்ல கொணம் ஒண்ணே போதுமே! நம்ம ராசாவுக்குக் கூட ஒன்னொட ரோக்கிதே வருமா? கேளையா. 2 சண் : எத்தினி தரம் எங்களுக்குக்கூட! சோறு துணியெல்லாம் ஒங்க வளவலேந்து கெடச்சதே! அதெல்லாம் மறப்பமா? நாங்க சின்ன சாதிப் பறையராய் இருந்தாலும், நீங்க சேஞ்ச ஒவகாரம் நெனைக்காமப் போனா குடிக்கிற கஞ்சீலே ஆண்டவன் மண்ணு போட மாட்டாரா? மாத : அதோ என் குழந்தை வருகிறான், அவனுடன் கடைசியாக ஒரு முறை பேச அனுமதி தரவேண்டும். 1 சண் : இத்தானா பெரமாதம்! பேசுங்க சாமி! செனங்கள் எல்லாம் அப்பாலே போங்க, கொழந்தைக்கு வளி வுடுங்க. (ஸோமேசனும் சிசுபாவனும் வருகிறார்கள்) ஸோ : குழந்தாய்! அதோ பார் உன் பிதாவை. சிசு : ஹா! அப்பா! அப்பா! (ஆவலோடு தகப்பன் பேரில் விழுகிறான்) மாத : வாடா! என் செல்வமே. (வாரி அணைத்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு) ஆகா, விருத்தம் – ஸஹானா  சேயனே! கண்ணே! இந்தச் செவ்விளங் கரத்தினால் நீ  தீயெனக் கிடவோ பாவி யென்சுத னாக வந்தாய்? மாய நீ யென்செய் வாயோ! மலிபுகழ் செல்வம் யாவும்  நீ யென மதித்தே வந்த நினைவினி யகன்ற தையோ!  அழகிய இந்தச் சிறிய கையால் எனக்குக் கொள்ளி வைக்கப் போகிறாயா? ஐயோ! குழந்தைப் பருவத்திலேயே என்னை நீ இழந்து விட்டால் இன்னும் சில வருஷங்களில் என்னுடைய நினைவே இல்லாமல் போய் விடுமே! ஒரு தகப்பன் இருந்தான் என்பதை உனக்கு நினைப்பூட்ட நான் உனக்கு என்ன பொருளை வைத்திருக்கிறேன்! பொருள்களை வாரிக் கொடுத்து ஊரில் யாவருக்கும் நன்மை செய்தேன். அதனால் உனக்கு மாத்திரம் மீளாத் துன்பத்தைக் கொடுத்தேன். ஆகையால், நான் உனக்கு மாத்திரமே விரோதியானேன். நீ பிற்காலத்தில் தரித்திரத்தால் வருந்தும் போது, இந்தப் பாவி வயிற்றில் ஏன் பிறந்தேன் என்று துஷிப்பாய். அதையெல்லாம் கேட்க நான் கடமைப்பட்டவனே இப்பொழுது நான் என்னுடையது என்று உனக்குத் தரக் கூடியது என்னுடைய பூணுரல் ஒன்றுதான். இதைத் தருகிறேன். தங்கம், நவமணி, முதலியவற்றால் செய்த ஆபரணங்கள் எல்லாம் பிராம்மணனுக்கு பூணூலைப் போல அவ்வளவு பெருமையான பூஷணம் அல்ல. இதனால் நாம் தெய்வங்களுக்கும் இருஷிகளுக்கும் ஆராதனை செய்யும் மேன்மையைப் பெறுவதால் இது ஒன்றே நமக்குப் போதுமான ஐஸ்வரியம் சாஸ்திரக் கிரகப்படி நான் உனக்குப் பூணுரல் கல்யாணம் செய்து வைக்கக் கொடுத்து வைக்காப் பாவியான போதிலும் இப்பொழுது இதைக் கழுத்தில் தரித்துப் பார்க்கிறேன். (தன் பூணூலை எடுத்து அவன் கழுத்தில் போடுகிறார்) 1 சண்: சாமி நேரமாவுது; ராசா கோவிச்சுக்குவாரு போதும், போவலாம். சிசு : அடே! சண்டாளப் பயலே! என் அப்பாவை எங்கே கூப்பிடுகிறாய்? மாத : அப்பா! கண்மணி! நான் உயிரை விடப் போகிறேன். இமயன் வந்து காத்துக் கொண்டிருக்கிறான். என் காலம் முடிந்து விட்டது. என்னை இனி பார்க்க மாட்டாய். எங்கே என்னைக் கட்டிக் கொண்டு ஒரு முத்தங் கொடு. 2 சண் : அடே கொளந்தே! சின்ன சாதிலே பொறந்தவங்கள்ளாம் சண்டாளர் ஆவமாட்டாங்க; நல்ல புண்ணியவாங்களை வதைக்கறாங்க பாரு அவங்கதான் சண்டாளரு. சிசு : அப்படியானால் என்னுடைய அப்பாவை ஏனடா கொல்ல நினைக்கிறாய்? 1 சண் : அது ராசா உத்தரவு! நாங்க என்ன பண்ணுவம்? பாவ புண்ணியம் அவுருது. சிசு : அப்படியானால் நான் வருகிறேன்; என்னைக் கொன்று விடு. அப்பாவை விட்டு விடு. அப்பாவைப் பார்க்காமல் போனால் அம்மா சாப்பிடாமல், அழுது உயிரை விட்டு விடுவாள். அப்பாவைக் கொல்லக் கூடாது. என்னை அழைத்துக் கொண்டு போங்கள். 2 சண் : ஆகா! புலி வவுத்துலே பூனை பொறக்குமா? கொளந்த என்ன தகிரியசாலி! நீ சேனா நாளைக்கு சொகமாய் இருக்க அந்த சாச்சாத்துக் கடவுளு செய்வாரப்பா! மாத: (குழந்தையை அணைத்து) ஆகா! தன்யனானேன்! இதுவல்லவோ உண்மைச் செல்வம்! உற்றார் உறவினர் நம்மிடத்தில் காட்டும் ஆசாபாசத்தைக் காட்டிலும் இன்பம் தரக் கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது! ஸோ : ஹே நண்பர்களே! என்னுடைய சிநேகிதரை விட்டு விடுங்கள். உங்களுக்கு ஒரு சரீரந்தானே வேண்டும்; இதோ என்னுடைய தேகத்தை உங்கள் வசம் ஒப்புவித்தேன்; என்னைக் கொண்டு போங்கள். 1 சண் : இதென்ன பைத்தியம்! ராசா ஆக்கினையை மீறி வேறே மனிசரைக் கொண்டு போவ முடியாது; நேரமாச்சு; போவலாம். (யாவரும் போகின்றனர். மறுபடியும் ஒருதரம் முன்மாதிரி பறை சாற்றுகின்றனர்) (அதற்கருகில் இருந்த அரண்மனை மேன் மாடியில் ஒரு அறையில் அன்டபட்டிருந்த பத்மநாபன் தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! இப்படியும் அநியாயம் செய்வதுண்டா ஒரு பாவத்தையும் அறியாத மாதவராயரைக் கொல்வதா? நான் சோலையில் இருந்து வந்தது முதல் என்னை வஞ்சித்து இந்த அறையில் போட்டு அடைத்து இருக்கிறான் கொலை பாதகன். நான் இந்தச் சமயம் எப்படி வெளியில் போவேன்? (உரக்க) நில்லுங்கள்! நில்லுங்கள்! வஸந்தஸேனையைப் பாவியாகிய நானே சோலைக்கு அழைத்துப் போனேன். அங்கே வீரசேனன் சொல்லிற்கு அவள் இணங்கவில்லை. ஆதலால் அவனே கொன்றவன். இந்த புண்ணியவான் அல்ல; இவரை விட்டு விடுங்கள். (தனக்குள்) நான் சொல்வது இவர்கள் காதில் விழவில்லையோ? போகிறார்கள்! நான் இந்த சமயத்தில் சும்மா இருந்தால் நிரபராதியான ஒரு பெரிய மனிதருடைய உயிர் போய் விடும். நான் எப்படி வெளியில் போவேன்? கதவை வெளியில் பூட்டியிருக்கிறானே. இந்த ஜன்னலின் வழியாகக் குதிக்கிறேன். இதனால் இறந்தாலும் சரி. நல்ல விஷயமானதால் மோக்ஷமாயினும் கிடைக்கும். (கீழே குதிக்கிறான்) ஹா! உயரம் அதிகமானதால் நன்றாய் அடிபட்டு விட்டது! ஐயோ! எழுந்திருக்க முடியவில்லையே! அவர்கள் போய் விடுகிறார்களே! என்ன செய்வேன்? என் உயிர் இதனால் போனாலும் போகிறது. (மெதுவாக எழுந்திருக்கிறான்)  ஓடிப் போய் உண்மையைத் தெரிவித்து அவரை விடுவிக்கிறேன். அதன் பிறகு என் உயிர் போவதானாலும் கவலையில்லை. (அடிபட்டு வருந்தும் தேகத்துடன் மெதுவாக எழுந்து தட்டித் தடுமாறிக் கொண்டு ஓடி வருகிறான்.) 1 சண் : சற்று தூரத்தில்) என்ன ஆச்சரியங்கறேன்! நம்பளே ஆரோ அளெக்கிறானே! என்னாத்துக்கோ தெரியலையே! பத்ம : நான் சொல்லுவதைக் கேளுங்கள். மாதவராயர் குற்றவாளி அல்ல. நானே வஸந்தஸேனையைப் பூஞ்சோலைக்கு அழைத்துப் போனவன். அங்கே என் எஜமானனே அவளைக் கொன்றவன். 2 சண்: அடியாத்தே! புதுமையாக்கீதே! நீ சொல்றது. நெசந்தானாய்யா? பத்ம : சத்தியம்; நான் நியாய ஸ்தலத்திலேயே இதைச் சொல்லியிருப்பேன். என்னை என் எஜமானன் ஒரு அறைக்குள் விட்டுப் பூட்டி விட்டார். (வேறொரு பக்கமாக வீரசேனன் ஏப்பம் விட்டுக் கொண்டு வருகிறான்) வீர : (தனக்குள்) இன்றைக்கு முதல் தரமான சாப்பாடு! வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லையே! என் விருப்பத்திற்கு இணங்காத வஸந்தஸேனையை ஒழித்தேன்! அவள் ஆசை வைத்த மாதவராயன் பேரில் பழியைச் சுமத்தினேன். இது ஸுதினமானதால், நல்ல விருந்து சாப்பிட்டேன். அதோ சண்டாளர் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள். நானும் அவனைக் கொல்வதைப் பார்த்து என் கண்களுக்கும் விருந்து செய்விக்கிறேன். (கொஞ்சதுரம் போய்) அதோ பத்மநாபன் போகிறானே அவனை நான் சிறையில் அல்லவோ அடைத்து வைத்திருந்தேன்! அவன் உண்மையை வெளியில் சொல்லி விடுவானோ என்னவோ தெரியவில்லையே! நானும் போய் சமயத்திற்குத் தகுந்த விதம் நடந்து கொள்ளுகிறேன். (வருகிறான்) பத்ம : இதோ வந்தார் என் எஜமானர்! 1-2 சண் : சாமி தெண்டம்! வீர: அடே பத்மநாபா நீ எங்கே போகிறாய்? வா என்கூட. பத்ம : நல்ல யோக்கியர்! வஸந்தஸேனையை கொன்றதும் அன்றி, மகா உத்தமரான மாதவராயரையும் கொல்ல வழி தேடினீரோ) வீர : அடே! எவ்வளவோ யோக்கியனான நானா ஒரு ஸ்திரீயைக் கொல்வேன்? . ஜனங்கள் : ஆம்! நீதான் அவளைக் கொன்றவன்; மாதவராயர் அல்ல. வீர : அப்படி எவன் சொன்னவன்? ஜனங்கள் : இந்த நற்குணமுள்ள மனிதனே சொல்லுகிறான். நீதான் கொன்றிருப்பாய். வீர : ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவன் என்னுடைய அடிமை! இவனுக்குத் திருட்டுக்கை அதிகம்! அதற்காக இவனைத் தண்டித்து ஒரு இடத்தில் தனியாக பூட்டி வைத்திருந்தேன். இந்த குரோதத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லுகிறான். அடே! பத்மநாபா! உண்மையைச் சொல்; நான் சொல்வது சரிதானே (தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை அவருக்குத் தெரியாமல் கழற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் போய் அதை அவன் கையில் இரகசியமாகக் கொடுத்து) இதை நீ எடுத்துக் கொள். முன் சொன்னதை மாற்றிச் சொல்லி விடு. பத்ம : (மோதிரத்தை ஜனங்களுக்குக் காட்டி) இதோ பாருங்கள். இந்த மோதிரத்தை இலஞ்சம் கொடுத்துப் பேசாமல் இருக்கச் சொல்லுகிறார். வீர : (மோதிரத்தை பிடுங்கி) பார்த்தீர்களா! பார்த்தீர்களா! இதுதான் திருட்டுப் போன மோதிரம்! இதற்காகத்தான் இவனைத் தண்டித்தேன். இவன் முதுகைப் பாருங்கள்; இவனுக்கு எத்தனை அடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன். 1 சண் : சரிதாங்க! இவன் பொய்தான் சொல்றான் பத்ம : ஆகா! அடிமையாய் இருப்பதன் இகழ்வு இதுதான்! நான் நிஜத்தைச் சொன்ன போதிலும் ஒருவரும் நம்ப மாட் டேன் என்கிறார்கள். (மாதவராயர் காலின் விழுந்து ) பிராம்மணோத்தமரே! என்னாலான பாடுபட்டேன். ஒன்றும் பலிக்கவில்லை. குற்றமற்ற உங்களைக் கொண்டு போகிறார்களே! என்ன செய்வேன்? உங்களை அந்த ஈசுவரனே காப்பாற்ற வேண்டும். மாத : நல்ல மனிதனுக்கு அநியாயமாய் ஆபத்து வந்து விட் டதே என்று மனதிரக்கம் கொண்டு உன்னாலான உதவியைச் செய்ய முயன்றாய். என் தலைவிதி குறுக்கே நின்று வழி மறிக்கிறது. நீ அதற்கென்செய்வாய்? கவலைப்படாதே! எழுந்திரப்பா! நீ மகா யோக்கியன்! ஸ்வாமி உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த நற்கதி அளிப்பார். உன் கடமையை நீ செய்து விட்டாய்; எழுந்திரு. வீர : ஹே! சண்டாளப் பயல்களா! ஏன் இப்படித் தாமசம் செய்கிறீர்கள்? உடனே அழைத்துப் போய் இராஜனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். இனித் தாமதித்தால், நீங்களும் தண்டனை பெறுவீர்கள். சிசு : ஐயோ! என் தந்தையை விட்டு விடுங்கள். அவருக்குப் பதிலாக நான் போகிறேன். வீர : இரண்டு பேரையும் கொன்று விடுங்கள். அப்பனும் மகனும் கூண்டோடு கைலாசம் போகட்டும். மாத : இவனுடைய இச்சைப்படியே எல்லாம் நடக்கிறது! அப்பா கண்மணி! நீ உன் தாயாரை அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு என்னால் உண்டான இந்த அவமானம் காதில் படாத வேறோரிடத்திற்குப் போய் செளக்கியமாக இருங்கள். மித்ரா இவனை அழைத்துக் கொண்டு போ. ஸோமே : (விசனத்துடன்) ஐயா! உமக்குப் பிறகு நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்க வேண்டும். மாத : ஸோமேசா! ஜீவாத்மா நம்முடைய கைக்குட்பட் டது அல்ல. உன்னுடைய உயிரை விடவும், வைத்துக் கொள்ளவும், நீயா அதற்கு நாதன். அதற்கு அதிகாரி வேறு ஒருவன் இருக்கிறான். இந்த உலகத்திற்கு வந்த காரியம் முடியும் வரையில் எவனும் இதை விட்டு ஈசுவரனுடைய அனுமதியின்றிப் போக முடியாது. அவசரப்படாதே. நன்றாய் யோசனை செய்து பார். அநாதையான இவர்களை, நீ காப்பாற்ற வேண்டும். என் னுடைய கடைசி வேண்டுகோளைச் செய். நேரமாகிறது, போ! ஸோமே : (தனக்குள்) இவர் சொல்வது நியாயமாய் இருந்த போதிலும், இவர் இறந்தபின் நான் இதை எப்படி சகித்துக் கொண்டிருப்பேன்? முதலில் இவருடைய மனைவியைத் தேற்றி விட்டுப் பிறகு என் உயிரை விடுகிறேன். (அவரை நோக்கி) சரி ஸ்வாமி! இதுதான் கடைசியாக உங்களுடைய சுந்தர முகத்தை நான் பார்ப்பதோ?  (அவரை ஆலிங்கனம் செய்து குழந்தையை எடுத்துக் கொள்ளுகிறேன். குழந்தை அப்பா அப்பா! வென்று அழுகிறான்.) வீர : அடே நான் அந்தப் பையனையும் கொல்லச் சொன்னேனே! 1 சண் : (அழுத்தமாக) ராசா உத்திரவில்லீங்க; நாங்க கொல்ல மாட்டோம். இவரை மட்டுந்தான் கொல்லச் சொன்னாரு. (ஸோமேஸன் குழந்தை இருவரை விட்டு மற்றவர் மேலும் போகின்றனர்) 2 சண்: சரி! இதுதான் எடம். களுவு மரம் அதோ பாத்தியா? இதுலே தூக்கிப் போட்றது ஒன்னொட மொறை.  1 சண் : என்னொட மொறையானா நான் மெதுவாத்தான் போடுவேன். எங்கப்பன் செத்துப் போனப்ப என்னெக் கூப்பிட்டு, அப்பா ஆரெனாச்சும் கொல்ல உத்தரவானா, அவசரப்படாமே நிதானி. ராசாவுக்குப் புள்ளே கிள்ளே பொறந்திச்சின்னா, குத்தவாளியெ உடச் சொல்லிப் புடுவாங்க. அப்படி இல்லேன்னா, குத்தவாளி தப்புதம் செய்யல்லேன்று ஏதாச்சும் நல்ல சாக்கி கெடச்சு உட்டுட உத்தரவாவலாம். அப்படி இல்லாமெப் போனா ஒரு ராசா போயி இன்னொரு ராசா வரலாம். அதுக்காவ உட்டுடலாம் இன்று எங்கப்பன் சொன்னான். வீர: (ஒரு புறமாக) ஓகோ இராஜன் மாறப் போகிறானோ! சண்டாளப் பயலே! இருக்கட்டும். 1 சண் : சரி சேனா நேரமாச்சு ஆவட்டும் நிக்காதே. 2.சண்: கைகுவித்து ஐயரே! நாங்க ராசா உத்தரவைச் செய்யரோம். எங்க பேருலே தப்புதமில்லே; எங்க பேருலே வருத்தப் படாதே! ஏதாச்சும் சொல்லிக்கினுமானா சொல்லிக்க. நாங்க ஒரு பாவத்தையும் அறியாதவங்க. குத்தங் கொறையிருந்தா மன்னிச்சுக்கோ மவராசா! (வணங்குகிறான்) மாத: ஆகா! என்ன இவர்களுடைய நற்குணம் பலரைக் கொன்று, ஹிருதயம் கல்லாய் இருக்கப் பெற்ற சண்டாளரே ஆயினும், என் விஷயத்தில் நிரம்ப இரக்கம் உடையவராய் இருக்கிறார்கள்! நான் குற்றவாளியல்ல என்பது சாதாரணப் பாமர ஜனங்களுக்கு எல்லாம் இயற்கையிலேயே தெரிந்து போயிருக்கிறது! அந்த நியாயாதிபதிக்கும் அரசனுக்கும் மாத்திரம் உண்மையை அறிந்து கொள்ளும் திறமை இல்லாமற் போனது தான் ஆச்சரியம் தருமமே ஜெயமென்பது பொய்யாகுமோ? இதோ என்னைக் கொல்லப் போகிறார்கள். அதர்மமே ஜெயமடையும் போல் இருக்கிறது. விதியானது என்னைப் பலமாக இழுத்துச் செல்லும் பொழுது நான் எவ்வளவு முயன்ற போதிலும் என்ன பயன்? இந்தக் கழுமரத்தில் என்னைப் போடப் போகிறார்கள்! ஆகா! ஈசுவரா! திருவருட்யா – எதுகுலகாம்போதி  பதியேயெம் பரனேயெம் பரமனே யெமது பரா       பரனே-யானந்த பதந்தரு மெய்ஞ்ஞான  நிதியே மெய்ந்நிறைவே மெய்ந்நிலையே மெய்யின்ப       நிருத்தமிடும் தனிமை நிபுண மணிவிளக்கே  கதியே யென்கண்ணே யென்கண்மணியே யெனது        கருத்தே என் கருத்திலுற்ற கனியே செங்கனியே  துதியே யென்றுரையே! யென்றோழா வென்னுளத்தே        சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே!   உயர் குலத்தில் பிறந்ததும், நகராதிபதியின் புதல்வனாய் உதித்ததும், நற்குண நல்லொழுக்கத்தைப் பெற்று யாவரும் துதிக்கும் பாக்கியத்தை அடைந்ததும், இந்தப் பெருமையைப் பெறுவதற்குத் தானோ? ஆகா! கொடிது கொடிது!! மேலான நிலைமையில் பிறந்து, பற்பல புகழைப் பெற்று இவ்விதம் பாதாளத்தில் வீழ்வதைவிட, ஒரு ஏழையாய்ப் பிறந்து, யாதொரு இடைஞ்சலும் இல்லாமல் இருப்பது எவ்வளவு மேலான பதவி. மலையின் பேரில் ஆகாயத்தை அளாவி பெருத்த மரமாய் வளர்ந்து புயற்காற்றால் முறிபட்டுப் பாதாளத்தில் விழுவதைக் காட்டிலும் தரையில், கட்டைப் புல்லாயிருந்து பலர் கால்களாலும் மிதிப்படும் தன்மையில் இருப்பது மேல். ஏனென்றால், அந்தப் புல் காய்ந்து கட்டையாய் இருந்த போதிலும் அதற்கு அழிவில்லை. ஒரு மழை பெய்தால், அழகாய்த் துளிர்த்துக் கொள்ளும் அல்லவா! மகா பாவியான நான் ஏன் நல்லவர்கள் வயிற்றில் பிறந்தேன்? என்னால் அவர்களுக்கும் அல்லவோ என்றும் மாறாத அவமானமும் இழிவும் உண்டாயின. (அப்படியே கண்களை மூடி விசனித்து நிற்கிறார்)  (வஸந்தஸேனையும் சந்தியாசியும் வருகிறார்கள்)  சந்: அம்மா! நகருக்கு சமீபத்தில் வந்தோம். எங்கே அழைத்துப் போக வேண்டும்? வஸ : என் ஆருயிர்க் காதலராகிய மாதவராயருடைய வீட் டிற்கு முதலில் போக வேண்டும். சந்திரனைக் கண்டு அல்லி மலர்வதைப் போல, அவர் முகத்தைக் கண்டால் என்னுடைய உயிர் திரும்பி வரும். சந் : சரி இப்படியே போகலாம். இதென்ன சமுத்திர கோஷத்தைப் போல் இருக்கிறதே! வஸ: பெருத்த கூட்டமாக இருக்கிறதே காரணம் என்ன என்று விசாரியும். 1 சண் : சரி! கடைசி முறை பறை சாற்றுகிறேன்; துடும், துடும், துடும், துடும்; ஊரு சனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால் நகராதிபதி ஊட்டு மாதவராயரு தேவிடியா வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு அவளொடெ நகை எல்லாம் எடுத்துக்கிட்டாரு; அதுக்காவ, அவரை நம்ப மவராசா கொன்னுப்புட ஆக்கினை பண்ணிப்புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலே போயிடும். துடும் துடும் துடும்.  வஸ: ஆகா இதென்ன இது? என் செவிகள் எதைக் கேட்டன.  சந் : அம்மணி! இதென்ன அதிசயம்! உங்களை மாதவராயர் கொன்றாராம். அதற்காக அவருடைய உயிரை வாங்கப் போகி றார்களாமே! வஸ : ஆகா! பாதகி என்னால் என் துரைக்கு என்ன ஆபத்து நேர்ந்தது சீக்கிரம், சீக்கிரம்! என்னை அங்கே அழைத்துப் போம்.  சந் : இப்படியே வாருங்கள். வேகமாய் வாருங்கள்! வஸ : விலகுங்கள். விடுங்கள்.  (மாதவராயர் முதலியோர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்)  (மாதவராயரைக் கழுவிலிடத் துக்குகிறான்)  வஸ : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! கொல்லப்பட்டவள் இதோ வந்தேன்! நிறுத்துங்கள். 2 சண் : ஆருடா இது? வஸ : ஆகா! ஸ்வாமி! பாவியாகிய என்னால் உங்களுக்கு இந்தக் காலகதி வந்ததோ! (வந்து அவர் மார்பில் விழுந்து ஆலிங்கனம் செய்ய, அவர் சற்று அப்படியே இருந்து விலகுகிறார்) ஜன : வஸந்தஸேனை! வஸந்தஸேனை!! 2 சண் : வஸந்தஸேனையா? என்ன ஆச்சரியம்! சந் : நல்ல காலந்தான் இவர் இதுவரையில் உயிரோடு இருந்தது! 1 சண் : ஐயா இன்னும் நூறு வருசம் உயிரோடெ இருக்கட்டும். வீர : இதென்ன அதிசயம்; வஸந்தஸேனை எப்படியோ உயிருடன் வந்து விட்டாளே! நான் இனிமேல் இங்கிருப்பது பிசகு, ஓடிப் போக வேண்டும். (ஓடுகிறான்) 1 சண் : அண்ணே அவனெ உடாதே! ஓடறான்! (இருவரும் ஜனங்களும் அவனைத் தொடர்ந்து ஓடுகிறார்கள்) மாத : காயும் பயிரில் மழை பெய்ததைப் போல் கழுவிற்கு மேல் உயர்த்தப்பட்ட என்னைக் காப்பாற்றியது யார்? இவள் வஸந்தஸேனை தானோ? அல்லது அவளைப் போல ஒரு உருவம் என்னைக் காக்கும் பொருட்டே ஆகாயத்தில் இருந்து குதித்ததோ! நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனோ? அல்லது கனவு காண்கின்றேனோ! என் புத்தி மாறாட்டம் அடைந்ததோ! என்னை இந்த விபத்தில் இருந்து விலக்கும் பொருட்டு அவளே தெய்வலோகத்தில் இருந்து மனித சுவரூபத்துடன் தோன்றினாளோ? வஸ : (அவர் பாதத்தில் விழுந்து) எவ்வளவோ மேன்மையைப் பெற்ற தங்களுக்கு, இந்தத் தீங்கு சம்பவிக்கக் காரணமாய் இருந்தவள் எவளோ அவளே வந்தனள்! மாத : ஆகா! கடைசியில் தருமமே ஜெயமடைந்ததோ! ஈசுவரனுடைய மகிமையே மகிமை! இந்தச் சந்நியாசி யார்? வஸ : இவரே என் உயிரைக் காப்பாற்றியவர். மாத : அப்படியா! ஸ்வாமீ! நமஸ்காரம்! தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். (அருகில் பெருத்த சத்தம் உண்டாகிறது) ”பிரதாப ராஜனுக்கு ஜெயம் உண்டாகட்டும். புதிய அரசன் நீடுழி வாழ்வாராக.” (சசிமுகன் வருகிறான்) (தனக்குள்) இந்த தேசத்து அரசன் செய்த அக்கிரமச் செயல்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனை இந்தக் கைகளே கொன்றன. மூவுலகத்தையும் கவரக்கூடிய வல்லமை பெற்ற பிரதாபனுடைய குணமே குணம்! அவன் சிம்மாசனம் ஏறியவுடன் செய்த முதல் காரியத்தில் இருந்தே அவனுடைய மனதின் மேன்மை நன்றாகத் தெரிகிறது. இதுதான் இடம். மாதவராயர் இங்குதான் இருப்பார்! ஆகா! அதோ வஸந்தஸேனையும் நிற்கிறாளே! (மாதவராயரை வணங்கி) ஸ்வாமி நமஸ்காரம். மாத: ஐயா! தாங்கள் யார்? சசி :உங்கள் மாளிகையில் கன்னம் வைத்து, உங்களிடம் வஸந்தஸேனையால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடியவன் நான்தான். என்னுடைய குற்றத்தைத் தங்களிடத்தில் ஒப்புக் கொண்டு, தங்களுடைய மன்னிப்பைப் பெற வந்தேன். மாத :அப்படியா! சந்தோஷம்! நீர் செய்தது குற்றமல்ல! நல்ல காரியமே செய்தீர். வேறு ஏழையின் வீட்டில் திருடி அவனை வருத்துவது இதனால் இல்லாமல் போயிற்றல்லவோ. சசி : ஆகா! எப்பொழுதும் மேன்மைக் குணமே! ஸ்வாமி! தங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். யாவருக்கும் தீமை செய்து வந்த நமது கொடுங்கோல் அரசனைக் கொன்று விட்டோம். அவனுக்குப் பதிலாகப் பிரதாபன் சிம்மாசனம் ஏறிவிட்டான். உயர்குலப் பிறப்பும் நற்குணமும் பெற்ற தங்களுக்குத் தன் மரியாதையைச் செலுத்த என்னை அனுப்பினான். மாத : அதிசயம்! என்ன இதுதான் சர்வ வல்லமை உடைய கடவுளின் செயலோ? சசி : கடைசியாக உங்களுடைய வண்டியில் ஏறிப் போன அந்த உதவியை அவன் மறக்கவே இல்லை; இனி எப்போதும் மறப்பதில்லை என்றும் தெரிவித்தான். நீங்கள் செய்த பேருதவிக்குச் சன்மானமாகத் தங்களை முதல் மந்திரியாக்கி இருக்கிறான். மாத: ஹா! கருணாநிதியே! உன்னுடைய திருவிளையாட்டை என்ன என்று சொல்லுவேன்? ஜனங்கள் : அவனை இப்படி இழுத்துக் கொண்டு வாருங்கள்; இப்படி இழுத்து வாருங்கள், துஷ்ட ராஜனுக்குத் தகுந்த மைத்துனன்; உதையுங்கள்; கொல்லுங்கள், குத்துங்கள். (ஜனங்கள் வீரசேனனைக் கட்டி இழுத்து வருகிறார்கள்) வீர : ஐயோ! ஐயோ! நாயை அடிப்பதைப் போல அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! என்ன செய்வேன்? யாரிடத்தில் உதவிக்குப் போவேன்? விரோதிகள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டார்களே! ஒன்றும் தோன்றவில்லையே! அதோ மாதவராயர் இருக்கிறார்! அவரை வேண்டிக் கொள்கிறேன். (அவர்காலில் விழுந்து) ஐயா! என்னை நீரே காப்பாற்ற வேண்டும். இவர்கள் என்னைக் கொல்லுகிறார்கள். ஜனங்கள் : ஸ்வாமி! அவனை இப்பால் உதைத்துத் தள்ளுங்கள். துஷ்டனை ஒழித்து விடுகிறோம். வீர : ஒ மாதவராயரே! இந்தச் சமயத்தில் எனக்கு உம்மைத் தவிர யாவரும் துணை இல்லை. காப்பாற்ற வேண்டும்! அபயம்! மாத :வீரசேனா பயப்படாதே! நீ என்னை விரோதியாக மதிக்கிறாய். நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை. சசி : இந்தக் கொலைப் பாதகனை அப்பால் இழுத்துக் கொண்டு போங்கள். ஸ்வாமி! இந்தப் பரம பாதகனை ஏன் காப்பாற்ற வேண்டும் - ஜனங்களே! இவனைக் கட்டி யானைக் காலில் உருட்டி விடுங்கள். இல்லாவிட்டால் வாளால் இவன் தேகத்தை இரண்டாய்ப் பிளவுங்கள். இவன் உயிருடன் இருந்தால், எத்தனையோ ஏழை ஜனங்களை வயிறெரியச் செய்வான். மாத : பொறுங்கள்! பொறுங்கள்! நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள். வீர : நற்குணமே நிறைந்த உத்தமரே! உம்மையே அடைக்கலமாய் நம்பி வந்தேன். என் உயிரைக் காப்பாற்றும். இனி உமக்கு நான் யாதொரு தீங்கும் நினைப்பதே இல்லை. ஜனங்கள் : இவனைக் கொல்லுங்க; மகா பாவியாகிய இவனை உயிருடன் விடக்கூடாது. (மாதவராயருடைய கழுத்தில் இருந்த எருக்க மாலையை வஸந்தஸேனை கழற்றி வீரசேனனுடைய கழுத்தில் போடுகிறாள்) வீர : ஹா! வஸந்தஸேனை பெண்மயிலே! என் பேரில் இரக்கம் கொள். இனி நான் உன்னை நினைப்பதே இல்லை. சசி : இவனை உயிருடன் விட்டால் நகரத்திற்குப் பெரிதும் துன்பம் உண்டாகும். இன்னம் யாருக்கு இவன் எவ்விதத் தீமை செய்வானோ இவனுடைய உயிரை வாங்குங்கள். மாத : ஐயா! இப்படி வாரும் சொல்வதைக் கேட்பீரா? சசி ஆட்சேபனை என்ன?  மாத : அப்படியானால் இவனை விட்டு விடுங்கள். சசி: நல்ல காரியம்; வஸந்தஸேனையை கொல்ல *நினைத்ததும் அல்லாமல் உங்களுடைய உயிருக்கும் உலை வைத்தானே! இந்தப் படுபாவியையா உயிருடன் விடுகிறது? மாத : எவ்வளவு விரோதியான போதிலும் இவன் மனப் பூர்வமாக அபயம் என்று நம்முடைய காலில் விழுந்த பிறகு இவன் பேரில் நம்முடைய வாள் படலாமா? நான் இவனுக்குக் காட்டும் தயையே இவனுக்குப் பெருத்த தண்டனையாகும். ஆகையால் இவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள். சசி : ஆகா! இதுவல்லவோ உத்தம குணம்! சரி. உங்கள் சித்தம் போல ஆகட்டும். (ஆட்களை நோக்கி) இவனை விட்டு விடுங்கள். (வீரசேனன் விடப்படுகிறான்) வீர : அப்பா தப்பிப் பிழைத்தேன்! (தனக்குள்) இந்த நித்திய தரித்திரப் பார்ப்பானுக்கு இவ்வளவு பெருமையா! (சந்தானகன் ஓடி வருகிறான்) சந்தா: ஸ்வாமி! மோசம் வந்து விட்டது! உடனே புறப்பட வேண்டும். ஒரு க்ஷணம் தாமதித்தால் விபத்து சம்பவிக்கும். மாத : சந்தானகா என்ன இது! சந்தா : என்னோடு வாருங்கள்; உங்கள் மாளிகைக்குப் போக ஒரு கூடிணம் தாமதமானால் பதிவிரதா சிரோன்மணியான உங்கள் நாயகியை உயிரோடு காண முடியாது. மாத : ஆகா! என் ஆருயிரே! என் பொருட்டு என்ன காரியம் செய்ய நினைத்தாய்! (யாவரும் தாறுமாறாப்ப் போப் விடுகிறார்கள்) -----------        அங்கம் 3 காட்சி 3   மாதவராயருடைய மாளிகை.  அக்னி வளர்க்கப் பட்டு இருக்கிறது.  அதற்கு அருகில் மஞ்சள் புடவை உடுத்திக் கொண்டு கோகிலம் நிற்கிறாள். குழந்தை சிசுபாலன் அவளுடைய இடுப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். ஸோமேசன் வேறொரு புறமாக நிற்கிறான். கோகி : அப்பா! கண்ணே! என்னை விட்டு விடு! நான் சொல்வதைக் கேள். உன் பிதாவுக்கு இவ்வளவு மான ஹானி வந்தபின் நான் இந்த உடம்பை வைத்திருக்கக் கூடாது. வீணாய்த் தடுக்காதே. சிசு : அம்மா! அப்பாவும் போய் விட்டார். நீங்களும் நெருப்பில் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன்? இனி நான் யாரை அம்மாவென்று கூப்பிடுவேன்? நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிரோடு இருப்பேன்? என்னை இனிமேல் தினம் யார் கூப்பிட்டு, ஆகாரம் பட்சணம் எல்லாம் கொடுப்பார்கள்! அம்மா! நீங்கள் நெருப்பில் விழக்கூடாது. ஸோ : அம்மணி! பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியம் பாவத்தைத் தரும். பிராம்மணனுடைய மனைவி தனிக்காஷ்டம் ஏறுவது தவறு என்று நம்முடைய சாஸ்திரங்கள் முறையிடுகின்றன. கோகி : என்னுடைய நாதனுக்கு வந்த பழிச் சொல்லை கேட்பதைவிட நான் இந்த பாவத்தைச் செய்வதே உத்தமமானது. என்னுடைய குழந்தையை மாத்திரம் தயவு செய்து நீர் அப்பால் அழைத்துக் கொண்டு போம். இவன் என்னைத் தடுக்கிறான்.  ஸோ : அம்மணி! மன்னிக்க வேண்டும். நீங்கள் உயிரை விடத் தீர்மானித்தால், முதலில் நான் விழுவதற்கு அனுமதி தாருங்கள். சிசு : அம்மா! நான் முதலில் விழுந்து விடுகிறேன். எல்லாரும் என்னைத் தனியாக இங்கே விட்டுப் போகப் பார்க்கிறீர்களோ? கோகி : கண்மணி குழந்தாய்! பிடிவாதம் செய்யாதே, நான் சொல்வதைக் கேள். இறந்து போன உன் பிதாவுக்கும், எனக்கும் நீ உயிருடனிருந்து கவனிக்க வேண்டிய கிரியைகள் எவ்வளவோ இருக்கின்றன. நீ இருந்து அவைகளைச் செய்யா விட்டால், எங்களுக்கு நல்ல கதி கிடைக்காது. என் தங்கமே! போ! அப்பால்! நான் சொல்வதைக் கேள். (மாதவராயர் முதலிலும் வஸந்தஸேனை, சந்தானகன், கோமளா முதலியோர் பின்னாலும் ஓடி வருகிறார்கள்.) மாத : (தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார்) அப்பா கண்ணே! உன்னைத் திரும்பவும் காணக் கிடைத்ததே! கோகி : ஆஹா! இவர் யார்? அவர்தானே! (உற்றுப் பார்த்து)ஆம், அவரே! என் ஆருயிர்க் கணவரே வந்து விட்டார். குழந்தை : (சந்தோஷத்தோடு) அம்மா! இதோ பார் அப்பா வந்து விட்டார். இனிமேல் அழாதே! சந்தோஷமாயிரு! மாத : (தன் மனைவியை அணைத்துக் கொண்டு) பிரிய சுந்தரி கோகிலம் உன் நாதன் உயிருடன் இருக்கும் பொழுது, நீ உயிரைவிட நினைத்தாயே! என்ன பைத்தியம்! சூரியன் ஆகாயத்தில் பிரகாசிக்கும் வரையில் தாமரைப் புஷ்பம் தன் இதழ்களை மூடுவது உண்டோ? கோகி : சூரியனைக் கிரஹணம் பிடித்தமையால் அவனை இனிக் காண முடியாது என்னும் எண்ணத்தினால் தாமரை தன் இதழ்களை மூடப்பார்த்தது; அதற்குள் நல்ல காலமாய்க் கிரஹணம் நீங்கியது; இனி அதன் வாட்டமும் ஒழிந்தது. ஸோமே : இதென்ன கனவோ! என் கண்கள் நிஜமாகவே பார்க்கின்றனவோ! என் ஆப்த நண்பர்தாமோ இவர்! மேன்மை பொருந்திய மனைவியின் பதிவிரதா தர்மம் தலை காத்ததோ? இவள் நெருப்பில் விழ நினைத்ததே இவளைத் தன் புருஷ னுடன் சேர்ப்பித்ததோ! ஆகா! மாத : ஸோமேசனையும், ஆலிங்கனம் செய்து கொண்டு அப்பா ஸோமேசா! மெச்சினேன்! உன்னைப் போல ஆபத்தில் உதவும் நண்பன் கிடைப்பானோ? உன்னைப் பெற்ற எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்! கோம : ஸ்வாமீ! நமஸ்காரம். (காலில் விழுகிறாள்) மாத : கோமளா! எழுந்திரம்மா! (அவள் தோள் மேல் கை வைக்கிறார்) நான் உயிருடன் திரும்பி வராவிட்டால் என் பேரில் பிரியம் வைத்த இத்தனை பேர்களின் நிலைமை என்ன ஆகுமோ! ஈசுவரன் சர்வேக்ஞன் அல்லவா; நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா? கோகி : (வஸந்ஸேனையைப் பார்த்து) வஸந்தஸேனா! பிரிய சகோதரி! நீ வந்திருப்பதை நான் பார்க்கவில்லை! ஆகா! உயிருடன் திரும்பி வந்தாயே! உன் பேரழகைத் திரும்பவும் நான் பார்க்கப் போகிறேனா என்றல்லவோ ஏங்கி இருந்தேன். (இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள்) கோகி : வஸந்தஸேனா! உன்னுடைய விருப்பம் இன்னது என்பதை நான் நன்றாய் அறிவேன். அன்றிரவு உனக்கும் என் கணவருக்கும் நடந்த சம்பாஷணை எனக்கு முற்றிலும் தெரியும். வஸந்த : அக்காள்! தங்கள் நற்குணத்தைப் போல இந்த உலகில் வேறு எவரிடத்திலும் இருக்குமோ! எந்த விஷயத்திலும் தங்கள் மனம் கோணக் கூடாது என்பதே என்னுடைய ஓயாக் கவலை. என்னைத் தங்களுடைய பணிப்பெண்ணாக நீங்கள் இனி மதிக்க வேண்டுகிறேன்.  கோகி : ஆகா! நல்ல வார்த்தை சொன்னாய். நீ எனக்கு அருமையான சகோதரி அல்லவா! நாம் இருவரும் ஈனி நமது நாதனுக்குப் பணிப்பெண்கள். (வஸந்தஸேனையின் கரத்தைப் பிடித்து மாதவராயர் வலக் கரத்தில் வைத்து) ஸ்வாமீ. வஸந்த ஸேனையையும் இனி என்னைப் போல மனைவியாக ஏற்றுக் கொண்டு எங்கள் இருவரையும் பணிப்பெண்களாக மதிக்க வேண்டும். மாத : எல்லாம் வல்லவனும் சர்வ மங்கள ரூபியான சர்வ ஜெகதீசனுக்கு அல்லவோ நாமெல்லோரும் பணம் செலுத்த வேண்டியவர்கள். வாருங்கள். நாம் எல்லோரும் அவருடைய பெருமையைப் பற்றி ஸ்தோத்திரம் செய்து விட்டு பிறகு நம்முடைய புதிய அரசனிடம் போவோம். எனக்கு இந்த இராஜ்யத்தில் முதல் மந்திரி உத்தியோகம் கிடைத்து இருக்கிறதாம். கோகி : ஆகா! அப்படியா எல்லாம் ஜெகதீசன் செயல்! (காட்சி முடிகிறது)  நிறைந்தது  வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல்கள்  ஆங்கிலத்தில் ஷெர்லாக்ஹோம்ஸ் / நவீன காலத்தில் 007 ஜேம்ஸ்பாண்டு  அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் திகம்பர சாமியார் 1. பூர்ண சந்திரேதயம் பாகங்கள் 1- 5 2. கும்பகோணம் வக்கீல் - பாகங்கள் 1 - 2 3. மாயா வினோதப் பரதேசி - பாகங்கள் 1 - 3 4. மேனகா - பாகங்கள் 1- 2 5. செளந்திர கோகிலம் - பாகங்கள் 1 -4 6. மதன கல்யாணி - பாகங்கள் 1 - 3 7.வித்யாசாகரம் 8. வசந்த மல்லிகா  9. வசந்த கோகிலம் 10. தங்கம்மாள் அல்லது - தீரபுருஷனின் தியாக கம்பீரம்  11. பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் - பாகங்கள் 1, 2 12. பன்னியூர் படாடோபசர்மா  13. திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும்  14. திவான் லொடபடசிங் பகதுர் -- இதற்கு மேலும் வருவார். -----------