[] [வலிமைக்கு மார்க்கம்] வலிமைக்கு மார்க்கம் வ.உ.சி FreeTamilEbooks.com [CC0] To the extent possible under law, வ.உ.சி has waived all copyright and related or neighboring rights to வலிமைக்கு மார்க்கம், except where otherwise noted. உரிமை : Public Domain பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை This book was produced using Pressbooks.com. Contents - பொருளடக்கம் (முகப்பு) - 1. முதனூற் பாயிரம் - 2. பாயிரம் - 3. சில சொற்களின் பொருள்கள் - 4. காப்பு - 5. ஜேம்ஸ் ஆலன் - சரித்திரச் சுருக்கம் - 6. துன்பத்தின் கற்பனை - 7. உலகம் மனத்தின் பிரதிபிம்பம் - 8. விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி - 9. நினைப்பின் மௌன வலிமை - 10. ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும் - 11. வளரும் இன்பத்தின் மர்மம் - 12. வலிமையை அடைதல் 1 பொருளடக்கம் (முகப்பு) Acknowledgements: Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2013. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. []                 வலிமைக்கு மார்க்கம் வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழிபெயர்ப்பு source: வலிமைக்கு மார்க்கம் (ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு) வ.உ. சிதம்பரம் பிள்ளை பூம்புகார் பதிப்பகம், சென்னை 2004 ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power”என்ற நூலின் முதல் பகுதி “The Path of Prosperity” ஆகும். அதனை வ.உ.சி. “வலிமைக்கு மார்க்கம்” என்று 1916-ல் மொழி பெயர்த்தார். ——————————– வலிமைக்கு மார்க்கம் பொருளடக்கம் (முகப்பு) 1. முதனூற் பாயிரம் 2. பாயிரம் 3. சில சொற்களின் பொருள்கள் 4. காப்பு முதலியன 5. ஜேம்ஸ் ஆலன் சரித்திரச் சுருக்கம் 6. துன்பத்தின் கற்பனை 7. உலகம் மனத்தின் பிரதிபிம்பம் 8. விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி 9. நினைப்பின் மௌன வலிமை 10. ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும் 11. வளரும் இன்பத்தின் மர்மம் 12. வலிமையை அடைதல்   உரிமை : Public Domain பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை   மின்னூலாக்கம் – அருண் – arun2010g@gmail.com [pressbooks.com] 1 முதனூற் பாயிரம் வலிமைக்கு மார்க்கம் 1. முதனூற் பாயிரம் உலகத்தைச் சுற்றிப் பார்த்தேன். அது துன்ப நெருப்பால் சுடப்பட்டுத் துக்கப் புகையால் மூடுண்டிருக்கக் கண்டேன். அதன் காரணத்தைக் காண நினைத்தேன். அதனை உலகமெல்லாம் தேடினேன்; அதனை அங்குக் கண்டிலேன். நூல்களுள் தேடினேன்; அதனை அங்கும் கண்டிலேன். அகத்துள் தேடினேன்; அதனையும் அது அவரவரால் ஆக்கப்பட்டுள்ள தன்மையையும் அங்குக் கண்டேன். மறுபடியும் அகத்துள் ஆழ்ந்து நோக்கினேன்; அதனைப் பரிகரிக்கும் மருந்தினைக் கண்டேன். அம்மருந்தாவது ஒரு சட்டம்; அன்பாகிய சட்டம். அஃது ஓர் ஒழுக்கம்; அச்சட்டத்திற்கு அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அஃது ஓர் உண்மை, மனத்தை வென்று கீழ்ப்படுத்தி அமைதியாக்கும் உண்மை. புருஷர்களும் ஸ்திரீகளும், வலியராயினும் எளியராயினும், கற்றாராயினும் கல்லாராயினும், இல்வாழ்வாராயினும் துறவிகளாயினும், சகல வெற்றிகளுக்கும், சகல சித்திகளுக்கும், சகல இன்பங்களுக்கும், சகல சுகங்களுக்கும், சகல உண்மைகளுக்கும் மூலமாயுள்ள பொருளைத் தமது அகத்துள் காண்டற்கு உதவி புரியும் ஒரு நூலை எழுதுவதாக ஒரு கனவு கண்டேன். அக்கனவு நீண்ட காலமாக என் உள்ளேயிருந்தது. அது கடைசியில் நனவாய் வெளிப்பட்டு விட்டது. உலகத்தின் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்கி, அதற்கு இன்பத்தையும் சுகத்தையும் அளிக்குமாறு அதனை இப்பொழுது அனுப்புகின்றேன். ஜேம்ஸ் ஆலன். 2 பாயிரம் 2. பாயிரம் இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் அரிய நூல்களில் “எளிமையிலிருந்து வலிமைக்கு” எனப் பொருள்படும் ஓர் அழகிய நூலினது முதற் பாகத்தின் மொழிப் பெயர்ப்பு. முதனூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரிற் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலிற் குறிப்பதால் பயனில்லையென்று கருதி, அதற்குப் பதிலாகப் ‘பாரதக் கதை’ என்று குறித்துள்ளேன். முதனூலின் கருத்துக்களை நம்மவர்கள் எளிதில் உணருமாறு, சிற்சில இடங்களில், சில சொற்களைச் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும், இம்மொழி பெயர்ப்பைச் செய்துள்ளேன். முதனூலில் கண்ட ஆங்கிலச் செய்யுள்களைத் தமிழ்ச் செய்யுள்களாக்கி இதன்கண் சேர்த்துள்ளேன். முதனூலிற் கண்ட விவிலிய நூல் கோட்பாடுகளும் மேற்கோள்களும் இதர மத நூல்களின் கோட்பாடுகளுக்கும் மேற்கோள்களுக்கும் ஒத்திருக்கின்றமையால் அவற்றை அவ்வாறே மொழி பெயர்த்துள்ளேன். இந்நூலில் நான் உபயோகித்துள்ள சில சொற்கள் குறிக்கும் பொருள்களையும் குறித்திருக்கிறேன். நான் இதுவரையில் பார்த்துள்ள இலக்கியங்களில் காணப்படாத ‘எஃது’ என்பது போன்ற ஒன்றிரண்டு சொற்களைப் புதியன புகுதலாக இதில் உபயோகித்துள்ளேன். ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு, முக்கியமாக நம் தேசத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம் அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூலில் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக்கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மனிதர் அடையக்கூடிய மேலான நிலைகளையெல்லாம் அடைவரென்பது திண்ணம். ஆதலால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அந்நூல்களால் நன்மை அடைய வேண்டும் என்பதே நான் அவற்றை மொழி பெயர்த்தற்குக் காரணம். வ.உ.சிதம்பரம் பிள்ளை கோவிற்பட்டி, 25-7-30. 3 சில சொற்களின் பொருள்கள் 3. சில சொற்களின் பொருள்கள் ‘ஆன்மா’ என்பது ‘யான்’ ‘எனது’ எனக் கருதாது உலக நன்மையையே கருதுகின்ற பேரறிவு. ‘ஜீவன்’ என்பது ‘யான்’ ‘எனது’ எனக் கருதித் தனது நன்மையையே கருதுகின்ற சிற்றறிவு. ‘மனிதன்’ என்பவன் சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளோடு கூடி நின்று நினைக்கின்ற ஜீவன். ‘மனம்’ என்பது ஒரு சூக்ஷ்ம அல்லது சூக்ஷ்ம ஸ்தூல உடம்போடு கூடி நிற்கின்ற ஜீவனது நினைப்பு. ‘சூக்ஷ்ம உடம்பு’ என்பது ஸ்தூல உடம்பின் பொறிகள் வழியாகக் காண முடியாத ஓர் உடம்பு. ‘ஸ்தூல உடம்பு’ என்பது அப்பொறிகள் வழியாகக் காணத்தக்க ஓர் உடம்பு. ‘அகம்’ என்பது சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளில் மனம் சஞ்சரிக்கின்ற இடம். ‘புறம்’ என்பது ஸ்தூல உடம்பிற்கு வெளியில் மனம் சஞ்சரிக்கின்ற இடம். ‘பரோக்ஷஞானம்’ என்பது கேள்வியால் அல்லது கல்வியால் அடையப்பட்ட அறிவு. ‘அபரோக்ஷஞானம்’ என்பது மனத்தால் அல்லது பொறிகளால் காணப்பட்ட அறிவு. ‘துன்பம்’, ‘துக்கம்’ என்பன முறையே ‘பொறிவருத்த’த்தையும் ‘மனவருத்த’த்தையும் குறிக்கும். ‘இன்பம்’, ‘சுகம்’ என்பன முறையே ‘பொறிக்களிப்பை’யும், ‘மனக்களிப்பை’யும் குறிக்கும். ‘போட்டி’ என்பது ஒருவரின் மற்றொருவர் மேம்பட வேண்டுமென்று செய்யும் முயற்சி முதலியன. 4 காப்பு 4. காப்பு   எளிமைக்கு மூலம் எனஇகழ நிற்பேன் வலிமைக்கு மார்க்கம் வரைய-எளிமைக்கு மூலம் என இரந்து மூவுலகும் காத்தரசாய்க் காலமிடம் நீத்துநிற்பான் காப்பு. ஒழுக்கம் ஒழுக்கத்தாற் சீர்சால் புயர்வெல்லாம் எய்தும்; ஒழுக்கத்தால் மெய்ப்பொருளின் ஓர்வும்-பழுக்கும் ”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”. அறம் ”சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங் காக்கம் எவனோ உயிர்க்”கே-”அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.” பொருள் “பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை தன்னின் ஆகும் தரணி; தரணியின் பின்னை யாகும் பெரும்பொருள்; அப்பொருள் துன்னும் காலைத் துன்னாதன இல்லையே.” முயற்சி “நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான்.” ——- 5 ஜேம்ஸ் ஆலன் - சரித்திரச் சுருக்கம் 5. ஜேம்ஸ் ஆலன் – சரித்திரச் சுருக்கம் ஜேம்ஸ் ஆலன் என்பவர் இங்கிலாந்து தேசத்தில் லீஸ்டர் என்னும் நகரத்தில் 1864-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி பிறந்தார். அவர் இளமைப் பருவத்திலேயே கல்வியில் மிக்க அவாவுடையவர்; அடிக்கடி தனித்த இடத்திற்குச் சென்று நூல்களை வாசித்துச் சிந்தித்திருப்பவர்: அவர் தமது தந்தையாரிடம் ஜீவதத்துவங்களைப்பற்றி வினவுவர். அவரது தந்தையார் அவ்வினாக்களுக்கு விடைகள் கூற இயலாது தயங்குவர். அப்பொழுது அவரே தமது வினாக்களுக்கு விடைகள் கூறுவர். அவற்றைக் கேட்டு அவரது தந்தையார், ”மகனே! இவ்வளவு அறிவு ஒரு பிறப்பில் கற்ற கல்வியால் வரத்தக்கதன்று; நீ முன் பல பிறப்புகளில் கற்றிருக்கின்றாய் போலும்” என்று கூறுவர். ஆலனது இளமைப் பருவத்தில் அவரது சரீரம் மிகத் துர்பலமாயிருந்தது. அப்படியிருந்தும் அவர் விஷயங்களை அதிகமாக ஆலோசனை செய்து ஆராய்ச்சி செய்வது வழக்கம். அதைப் பார்த்த பலர், ”நீர் இவ்வளவு தூரம் ஆலோசனை செய்து ஆராய்ச்சி புரிவதால் உமது சரீரத்திற்குத் தீங்கு விளையக் கூடும்” என்று கூறுவதுண்டு. அவரது தந்தையாரும், ”ஆலனே! நீ இவ்வளவு தூரம் உன் மனத்திற்கு வேலை கொடுப்பாயானால், நீ சீக்கிரம் மரணம் அடைவாய்” என்று பல முறை கூறினதுண்டு. இவரது இவ்வார்த்தைகள் பிற்காலத்தில் ஆலனது ஞாபகத்திற்கு வந்தபோதெல்லாம் அவர் புன்சிரிப்பாகச் சிரித்துக் கொள்வர். ஆலன் எதை எதை எந்த எந்த நேரத்திற் செய்ய வேண்டுமோ, அதை அதை அந்த அந்த நேரத்தில் தமது முழுமனத்தோடும் செய்து முடிப்பர். அவர் எதிலும் தமது மனத்தை அரைகுறையாகச் செலுத்துவதில்லை; எதையும் அறைகுறையாகச் செய்வதுமில்லை. அவர் எதைச் செய்தாலும் திருத்தமாகவும் பூர்த்தியாகவும் செய்வார். அரவது ஏகாக்கிரக சித்தமே அவர் அடைந்த உன்னதப் பதவிக்கெல்லாம் அடிப்படை. படித்தல், விளையாடல், உண்ணல், உறங்கல் முதலிய சகல செயல்களையும் அவர் கிரமமாகவும் ஒழுங்காகவும் செய்து முடிப்பர். அவர் வாலிபப் பருவத்தை அடைந்த பின்னர் தமது சிநேகிதரோடு நீண்ட தூரம் உலாவச் செல்வர். அவர் தமது மார்க்கத்தில் இயற்கைப் பொருள்களைப் பார்த்துக் களிப்புறுவர்; துஷ்டமிருகங்களையும் நெருங்கி, அவற்றின் குணாதிசயங்களைக் கவனித்து அவற்றினிடத்து அன்பு பாராட்டுவர். அத்துஷ்ட மிருகங்களும் அவரிடத்தில் நெருங்கி வந்து அவர் வார்த்தைக்குப் பணிந்து இணங்கி நிற்கும். அவருடைய பதினைந்தாவது வயதில் அவர் தந்தையாரின் ஐசுவரியமெல்லாம் போய் விட்டன. அவரது தந்தையார் தமது குடும்பத்தின் அன்ன வஸ்திராதிகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்றனர். அங்குப் போய்ச் சேர்ந்த இரண்டு தினங்களுள் நியூயார்க் நகர் ஆஸ்பத்திரியில் அவர் இறந்து போயினர். அவரிடமிருந்து நமது ஆலன் குடும்பத்திற்குக் கிடைத்த செல்வமெல்லாம்அவர் நெடுங்காலமாக வைத்திருந்த வெள்ளிக் கைக் கடிகாரம் ஒன்றே. அவரது மரணத்திற்குப் பின்னர் ஆலன் நாள்தோறும், பதினைந்து மணிநேரம் வேலை செய்து தமது தாயாரையும் தமது இரண்டு சகோதரரையும் பாதுகாத்து வந்தார். அக்காலத்தில் அவர் தினந்தோறும் மூன்று நான்கு மணி நேரம் நூல்களை வாசித்து வருவர். ”கருமம்செய ஒருவன் கைதூவேன் என்னும், பெருமையிற்பீடுடையதில்” என்று நம் வள்ளுவர் கூறியதுபோல அவரும் ”அதிகம் கஷ்டப்பட்டு வேலை செய்தல் அநேகம் பாஷைகளைக் கற்பதோ டொக்கும்” என்று அடிக்கடி கூறுவர். ஆலன் பதினேழாவது வயதில் ஆங்கில நாடகக் கவிசிரேஷ்டராகிய ஷேக்ஸ்பியரின் நாடக நூல்களைக் கற்கத் தொடங்கி, அவற்றில் பெரும் பாகங்களை மனப்பாடம் செய்து முடித்தார், அக்காலத்திலும் மற்றைக் காலத்திலும் அவரது லட்சியம் மெய்யுணர்தல் ஒன்றே. அவர் அதற்காகவே பல நூல்களைக் கற்றார், இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாகச் சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவரது துணிவு. அவர் ஒழுக்கத்தை ஓர் ஆபரணமாக எக்காலத்தும் கொண்டிருந்தார். அவர் ஜாதியில் ஆங்கிலேயராயிருந்தும் புலாலுண்ணல், மதுவுண்ணல், அந்நிய ஸ்திரீகளுடன் உலாவச் செல்லல் முதலிய கெட்ட பழக்கங்களை ஒருபோதும் கைகொண்டவரல்லர். அவர் வாக்கினின்று வரும் வார்த்தைகளெல்லாம் பொருள் நிறைந்தனவாயும் இன்பம் பயப்பனவாயும் இருக்கும். அவரைக் கண்ட தீயோரும் நல்லோராய் விடுவர். இதற்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்று;- அவர் ஒரு காலத்தில் வேலை பார்த்து வந்த ஓரிடத்தில் சதா காலமும் கெட்ட வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த பல வேலைக்காரர்கள் அவர் அங்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களுள் அவ்வார்த்தைகளை அடியோடு நிறுத்தி விட்டார்கள். அவர் தமது இருபத்து நான்காம் வயதில், ”ஆசிய தீபம்” (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு அவர் நமது நாட்டு நூல்களை மிகுதியாக வாசிக்கத் தொடங்கினர்ர். நமது நாட்டு நூல்களில் அவருக்கிருந்த விருப்பம் வேறு எந்த நாட்டு நூல்களிலும் இல்லை. அவர், ”கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அடிக்கடி கூறுவதுண்டு. அவர் வாக்கினின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும். ஒழுக்கம் ஒன்றே மெய்யுணர்வுக்கும் மற்றைய சகல உயர்ந்த பதவிகளுக்கும் மார்க்கம் என்பது அவருடைய சித்தாந்தம். அதுபற்றி அவர் எஞ்ஞான்றும் ஒழுக்கத்தைத் தம் உயிரினும் அதிகமாக ஓம்பி வந்தார். அவர் தமது முப்பதாம் வயதில் லில்லி ஆலன் என்னும் ஓர் ஆங்கில மாதை மணம் புரிந்தார். அவ்வம்மையார் அவரது உடம்பு, மனம், ஆன்மா என்ற மூன்றிற்கும் ஓர் ஒப்பற்ற துணையாக அவரோடு கூடி வாழ்ந்து வந்தனர். அவரது முப்பதிரண்டாம் வயதில் அவருக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு நோரா ஆலன் என்று பெயரிட்டனர். அவள் பிறந்த நாள், முதற்கொண்டு அவர் விஷய இச்சையை விட்டுவிட்டனர். அவர் காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து தியானத்தில் இருப்பர்; குன்றுகளின் மீது தனித்துச் சென்று ஆன்மா தத்துவங்களை சிந்திப்பர்; அவரை அடுத்தோர்களுக்கு ஆன்ம ஞானத்தை உபதேசிப்பர். ”மனிதனது புற நிலைமைகளெல்லாம் அவனது அக நிலைமைகளிலிருந்தே வருகின்றன” என்பதும், ”புற நிலைமைகைளத் திருத்த வேண்டும்” என்பதும் அவருடைய முக்கிய உபதேசங்கள். அவர் இயற்றியுள்ள பல நூல்கள் அவருடைய பெயர் இவ்வுலகில் என்றென்றும் நின்று நிலவும்படிக்கும் அவரது அறிவையும் ஆற்றலையும் சொல்வன்மையையும் எல்லாரும் புகழும்படிக்கும் செய்கின்றன. அவர், ”புத்தி விளக்கம்” (The Light of Reason) என்று ஒரு மாதாந்திரப் பத்திரிகை நடத்தி வந்தார். அதனை வேறொரு பெயருடன் அவரது மனைவியார் நடத்தி வந்தார். அவர் சரீர ஆரோக்கியம் குன்றிய காலத்தும் அவரது கடைசிக் காலத்தும், அவர்தமது தியானத்தையாவது, தெய்வ சிந்தனையையாவது, பரோபகார வேலையையாவதுநிறுத்தியதுமில்லை; குறைத்ததுமில்லை. அவரது சரீர ஆரோக்கியத்தைக் கருதிஅவரது மனைவியார் முதலியோர் அவரது வேலைகளைக் குறைக்கவேண்டுமென்றுஅவரிடத்திற் கூறிய பல சமயங்களிலும், ”வேலை செய்வதற்காகவே யான் உடலோடுகூடிப்பிறந்தேன். வேலை செய்வதற்காகவே உடலோடு கூடி வாழ்கிறேன்; என் வேலைமுடிந்தவுடனே இவ்வுடலை யான் விட்டுவிடுவேன்; நீங்கள் என் வேலையைத்தடுக்கவேண்டாம்” என்று கூறியிருக்கின்றனர். அவர் கடைசியாக 1912-ஆம் வருஷம்ஜனவரி மாதம் 12-ஆம் தேதி, ”எனது வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டேன். யான் இது முதல் தந்தைபாற் செல்வதற்குச் சித்தமாகின்றேன்” என்றுகூறித் தமது வேலைகளை விட்டு நீங்கித் தமது மனைவியார் முதலியோர்களிப்படையும்படி பல நல்ல காரியங்களைப்பற்றி அவருடன் சம்பாஷித்துக்கொண்டிருந்து, அம்மாதம் 24-ம் தேதி பரமபதம் அடைந்தார். அவரது சரீரம் நமதுநாட்டு வழக்கப்படி காஷ்டத்தில் வைத்து எரிக்கப்பட்டது. அவரது ஆவி அறிவுவடிவமாக எங்கும் நிறைந்து விளங்குகிறது. 6 துன்பத்தின் கற்பனை 6. துன்பத்தின் கற்பனை கவலையும் துன்பமும் துக்கமும் வாழ்க்கையின் சாயைகள். உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை; துன்பத்தால் துடியாத மனமே இல்லை; துக்கத்தால் துளியாத கண்ணே இல்லை. உலகத்தில் பிணியும் மரணமுமாகிய எமதூதரால் உயிர்க்குயிராகிய உறவினர் பிரிக்கப்பட்டுத் துக்கமாகிய இருட் போர்வையால் மூடப்படாத குடும்பம் இல்லை. வலியதாகவும் எளிதில் அறுக்க முடியாததாகவும் தோற்றுகிற தீமைவலையில் சகல மனிதரும் முன்னர்ச் சிக்கிப் பின்னர்க் கவலையாலும் துன்பத்தாலும் துக்கத்தாலும் வருந்துகின்றனர். இவ்வருத்தத்திலிருந்து தப்புவதற்காகப் புருஷர்களும் ஸ்திரீகளும் எண்ணிறந்த உபாயங்களைச் செய்கின்றனர்; எண்ணிறந்த மார்க்கங்களிற் பிரவேசிக்கின்றனர்; அவற்றால் அழிவில்லாத ஓர் சுகத்தை அடையலாமென்று நம்புகின்றனர். சிலர் மதுபானம் செய்தும், விபச்சாரம் செய்தும் திரிகின்றனர்; சிலர், உலகக் குழுவை விட்டு நீங்கித் தனித்த ஓர் இடத்தை அடைந்து, தம்மைச் சுற்றிப் பல போக்கியப் பொருள்களை அமைத்துக் கொண்டு வசிக்கின்றனர்; சிலர் பொருளையோ புகழையோ அவாவி, அவற்றை அடைதற்காக மற்றைய எல்லாற்றையும் கீழ்ப்படுத்துகின்றனர்; சிலர் மதசம்பந்தமான சடங்குகளைச் செய்து திருப்தியடைகின்றனர். அவாவிய சுகம் எல்லாருக்கும் கிடைப்பது போலத் தோன்றுகின்றது; ஆன்மா சிறிது காலம் துன்பத்தை மறந்து இன்பத்துள் களிக்கின்றது. அதனால் கடைசியில் ஒருநாள் ஒரு பெரும் நோயோ, துக்கமோ, கவலையோ கேடோ தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத ஆன்மாவைத் திடீரெனத் தாக்குகின்றது; ஆன்மா அதுவரையில் கொண்டிருந்த இன்பம் சிதறுண்டு போகின்றது. அப்படியே ஞானத்தால் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத மனிதனுடைய ஆன்மாவின்மீது எந்த நிமிஷத்திலும் விழுந்து அதனை அழித்துவிடத்தக்க ஒரு கூரிய வாள் ஒவ்வொரு பொறியின்பத்தின் தலைமீதும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கிவிடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது. அப்படியானால் துன்பத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் தப்புவதற்கு மார்க்கம் இல்லையா? தீமையின் கட்டுகளை அறுப்பதற்கு உபாயங்கள் இல்லையா? ஸ்திரமான அமைதியும் நிலையுள்ள செல்வமும் நித்திய சுகமும் வெறுங் கனவுகளா? இல்லை. ஒரு மார்க்கம் இருக்கிறது; அதனால் தீமையை வேரோடு களைந்து விடலாம். ஓர் உபாயம் இருக்கிறது; அதனால் பிணியையும் மற்றைய பிரதிகூல நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் அடியோடு நீக்கி விடலாம்; ஒரு முயற்சி இருக்கின்றது; அதனால் வறுமை வருமோ என்ற அச்சமே உண்டாகாத ஸ்திரமான செல்வத்தை அடையலாம். ஓர் அப்பியாசம் இருக்கின்றது; அதனால் முடிவும் அழிவும் இல்லாத அமைதியையும் சுகத்தையும் அடையலாம். இப்பெரும் பேற்றை அடையச் செய்யும் மார்க்கத்தின் தொடக்கம் துன்பத்தின் தன்மையைச் சரியாக அறிதலேயாம். துன்பத்தை வெறுத்தலோ கவனியாதிருத்தலோ போதாது; அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தல் போதாது; அஃது எதன் பொருட்டு வந்திருக்கிறதென்றும், அஃது எதனை உங்களுக்குக் கற்பிக்க நிற்கிறதென்றும் நீங்கள் அறியவேண்டும். உங்களைப் பந்தப்படுத்துகிற விலங்குகளைப் பார்த்து நீங்கள் பெருமூச்சு விடுவதாலும், சத்தமிடுதலாலும், அழுவதாலும் யாதொரு பயனும் இல்லை; அவை எதற்காக உங்களைப் பந்தப்படுத்தியிருக்கின்றனவென்றும் நீங்கள் அறிய வேண்டும். ஆதலால் நண்பர்களே! நீங்கள் உங்களுக்கு அந்நியராக நின்று கொண்டு, நீங்கள் உங்களை ஆராய்ந்தறிதற்குத் தொடங்க வேண்டும்; அநுபவம் என்னும் கலாசாலையில் நீங்கள் கீழ்ப்படிதலில்லாத மாணவராயிருப்பதை விட்டு, நீங்கள் பணிவோடும் பொறுமையோடும் உங்கள் அபிவிர்த்திக்கும் பூர்ணத்துவத்திற்கும் அத்துன்பம் கொண்டிருக்கும் பாடங்களைக் கற்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், துன்பமானது சரியாக அறியப்பட்ட காலையில் அது பிரபஞ்சத்தில் அளவற்ற ஒரு சக்தியன்றென்றும் தத்துவமன்றென்றும், ஆனால் கழிந்து போகக்கூடிய ஒரு மனித அநுபவமென்றும் தெரியவரும்; ஆதலால், துன்பமானது கற்க விரும்புகிறவர்களுக்கு ஓர் ஆசிரியன் போல உதவுகின்றது. துன்பமானது உங்களுக்குப் புறத்திலுள்ள ஒரு பொருளன்று; அஃது உங்கள் அகத்தின் ஓர் அநுபவம்; நீங்கள் உங்கள் அகத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து பார்த்து ஒழுங்குபடுத்துவதால் நீங்கள் துன்பத்தின் மூலத்தையும் தன்மையையும் நாளடைவில் காண்பீர்கள்; பின்னர் அஃது உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். ஒவ்வொரு துன்பத்தையும் திருத்தலும் பரிகரித்தலும் கூடும்; ஆதலால், அது நிலையில்லாதது. அது பொருள்களின் உண்மையான இயற்கையையும் சம்பந்தத்தையும் அறியாத அஞ்ஞானத்தால் வேரூன்றியிருக்கிறது; அவ்வஞ்ஞான நிலைமையில் நாம் இருக்குங் காலமெல்லாம் நாம் துன்பத்திற்கே ஆளாகியிருக்கிறோம். பிரபஞ்சத்திலுள்ள சகல துன்பங்களும் அஞ்ஞானத்தின் காரியங்கள்; அவற்றின் கற்பனைகளை நாம் கற்றுக் கொள்வதற்கு விருப்பமுடையவராகவும் தயாராகவும் இருப்போமானால், அவை நம்மை முற்றிலும் உயர்ந்த அறிவாளிகளாக்கிவிட்டு நீங்கி விடும். ஆனால் மனிதர் எப்பொழுதும் துன்பத்தில் இருக்கின்றனர்; அஃது அவரை விட்டு நீங்குவதில்லை. ஏனெனில் அஃது அவருக்குக் கற்பிக்கக் கொண்டிருக்கும் பாடங்களை அவர் கற்பதற்குத் தயாராகவும் விருப்பமுடையவராகவும் இல்லை. யான் ஒரு குழந்தையை அறிவேன். அதன் தாய் அதனை இராக் காலத்தில் படுக்கைக்கு கொண்டு போனபோதெல்லாம் எரிகின்ற மெழுகுவர்த்தியுடன் அது விளையாட விரும்பி அழுவதுண்டு. ஓர் இரவில் தாய் வெளியிற் போயிருந்த சமயத்தில் குழந்தை மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்தது. அது குழந்தையின் கையைச் சுட்டு விட்டது. அக்காலம் முதற்கொண்டு அக்குழந்தை மெழுகுவர்த்தியுடன் விளையாட ஒருபோதும் விரும்பியதில்லை. அது தனது ஒரு மடச்செய்கையினால் பெற்றோர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற பாடத்தைப் பூர்த்தியாகப் படித்துக் கொண்டது; நெருப்பு சுடுமென்ற ஞானத்தையும் அடைந்துவிட்டது. சகல துன்பங்களுடைய இயல்புகளையும், நோக்கங்களையும் முடிவுகளையும் பூர்த்தியாக விளக்குவதற்கு இவ்வொரு சம்பவமே போதுமானது. குழந்தை நெருப்பின் உண்மையான இயல்பை அறியாத அஞ்ஞானத்தால் வருந்தியது போலப் பெரிய குழந்தைகளாகிய மனிதர், தாம் அடைந்தபோது தமக்கு வருத்ததைக் கொடுக்கும் பொருள்களின் உண்மையான இயல்புகளை அறியாத தமது அஞ்ஞானத்தால் அவற்றை அடைய அலாவியும் அழுதும் அடைந்து வருந்துகின்றனர். இரண்டிற்கும் ஒரே ஒரு வேற்றுமை உண்டு. பெரிய குழந்தைகளாகிய மனிதரின் அஞ்ஞானமும் துன்பமும் அதிக ஆழத்தில் வேரூன்றியனவாகவும் எளிதில் நீக்க முடியாதனவாகவும் இருக்கின்றன. நன்மைக்கு ஒளியையும் தீமைக்கு இருளையும் உபமானங்களாகக் கூறுகின்றனர். இவ்வுபமானங்கள் நன்மை தீமைகளுடைய முழு அர்த்தத்தையும் உண்மையையும் விளக்கத்தக்கவை. ஒளி பிரபஞ்சமெல்லாம் விளங்கும் சூரியனது உண்மைத் தோற்றம். அதுபோல, நன்மை பிரபஞ்சமெல்லாம் பரவி உயிர்களைக் காக்கும் மெய்ப்பொருளினது உண்மைத்தோற்றம். இருள்சூரியனது ஒளியின் ஒரு பாகத்தை மறைக்கும் பூமியினது நிழலாகிய இன்மைப் பொருள். அதுபோலத் தீமை மெய்ப்பொருளினது நன்மையின் ஒரு பாகத்தை மறைக்கும் ஜீவனது நிழலாகிய இன்மைப் பொருள். இரவு தனது கருப்புப் போர்வையால் நமது பூமியின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைக்கிறது. அது மற்றைய பாகங்களிலெல்லாம் ஒளி விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல, அஞ்ஞானம் தனது கேடும் துன்பமும் துக்கமுமாகிய கருப்புப்போர்வையால் மெய்ப்பொருளின் ஒரு பாகத்தை மாத்திரம் மறைக்கிறது; அதன் மற்றைய பாகங்களிலெல்லாம் ஆக்கமும் இன்பமும் சுகமும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஒளிமயமான சூரியனைப் பூமி மறைப்பதால் அஃது இருளால் மூடப்படுகின்றது. அப்படியே ஞானமயமான மெய்ப்பொருளை ஜீவன் மறைப்பதால் ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப்படுகின்றது. இருளால் மூடப்பட்ட புவியினர்கள் நல்ல வழியையும் தீய வழியையும் அறியமாட்டாது தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர். அவ்வாறே, அஞ்ஞானத்தால் மூடப்பட்ட ஜீவர்கள் நன்மையையும் தீமையையும் பகுத்தறிய மாட்டாது தீமையைப் புரிந்து கேட்டையும் துன்பத்தையும் துக்கத்தையும் அடைந்து வருகின்றனர். இரவின் இருளையடைந்தே பகலின் ஒளிக்குச் செல்ல வேண்டும். அவ்வாறே, அஞ்ஞானத்தின் துன்பத்தை அநுபவித்தே ஞானத்தின் இன்பத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், “சிலர் துன்பத்தின் வழியாகச் செல்வானேன்?” என்று வினவல் கூடும். அஞ்ஞானத்தால் நீங்கள் அவ்வழியிற் பிரவேசித்திருக்கிறீர்கள்; நீங்கள் அவ்வழியாகச் செல்வதனால் இன்பத்தின் பெருமையை நன்கு அறிவீர்கள்; இருள் வழியாகச் செல்பவர் ஒலியின் பெருமையை நன்கு அறிவது போல் துன்பம் அஞ்ஞானத்தின் நேரான காரியமாதலால் துன்பத்தின் கற்பனைகளைப் பூரணமாய் கற்று முடித்தபொழுது அஞ்ஞானம் நீங்கி விடுகிறது; அதன் இடத்தில் ஞானம் வந்து அமருகிறது, ஆனால் கீழ்ப்படிதல் இல்லாத ஒரு குழந்தை தனது பள்ளிக்கூடத்துப் பாடங்களைப் படியாமல் எப்பொழுதும் மடமையில் இருந்து கொண்டு மேன்மேலும் சிட்சை அடைந்து கொண்டிருத்தல் போல், மனிதரிற் சிலர் துன்பங்களின் கற்பனைகளைக் கல்லாமல் எப்பொழுதும் அஞ்ஞானத்தில் இருந்துகொண்டு நோயும் ஆசாபங்கமும் துக்கமுமாகிய சிட்சைகளை மேன்மேலும் அடைந்துகொண்டிருத்தல் கூடும். எவன் தன்னைச் சூழ்ந்திருக்கிற துன்பத்தினின்று நீங்கிக் கொள்ள விரும்புகிறானோ, அவன் துன்பத்தின் கற்பனைகளைக் கற்றுக்கொள்வதற்கு விருப்பமுடையவனாகவும் கடுமையான முயற்சி செய்யத் தயாராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், கடுமையான முயற்சியின்றி ஞானத்தையாவது சாந்தியையாவது நிலையான சுகத்தையாவது ஒரு சிறிதும் அடைய முடியாது. ஒரு மனிதன் ஓர் இருட்டறையுள் போய் அதன் கதவை அடைத்துக்கொண்டு உலகத்தில் ஒளியென்பதே இல்லையென்று சொல்லலாம்; ஆனால், ஒளி, வெளியில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருள் அவனுடைய சிறிய அறையில் மாத்திரம் இருக்கிறது. அப்படியே நீங்களும் மெய்ப்பொருளின் ஒளி உங்கள் மீது படாமல் மறைத்துக் கொள்ளலாம்; அல்லது உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிற வெறுப்பு, சுயநலம், பாவம் முதலிய மதில்களை இடித்துச் சர்வ வியாபகமான பேரொளியைக் காணற்குத் தொடங்கலாம். நீங்கள் உங்களை ஆண்மையோடு ஆராய்ந்து பார்த்து துன்பமானது கழிந்துபோகும் ஒரு நிலைமையென்றும், அஃது உங்களால் உண்டு பண்ணப்பட்டதென்றும், உங்களுடைய சகல கேடுகளும்; துன்பங்களும், துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்கள்பால் வந்திருக்கின்றனவென்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும், அவற்றை நீங்கள் அடைவதற்கு அருகர்களானதாலும் அவை உங்களைச் சார்ந்திருக்கின்றனவென்றும், அவற்றை முன்னர் அநுபவித்துப் பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும் ஞானமும் மேம்பாடும் அடைவீர்களென்றும் நீங்கள் அபரோட்சகமாக அறியுங்கள். அவ்வபரோட்ச ஞானத்தை நீங்கள் பூர்த்தியாக அடைந்தபொழுது, நீங்கள் உங்கள் நிலைமைகளைத் திருத்திக் கொள்ளவும், சகல துன்பங்களையும் இன்பங்களாக மாற்றிக் கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கிக் கொள்ளவும் வல்லவர்களாவீர்கள். நேரிசை வெண்பா நீளிரவில் துன்புற்று நெஞ்சுடையும் காவலனே! வாளொளியைப் பார் அந்த மாமலைமேல்;-நாளின் ஒளிக்கொளியா நிற்கின்ற ஓர்மெய்யின் தூதன் களிப்பொடுவைத் தான்மலைமேல் கால். (வாள்-பிரகாசமுள்ள) இரவிலெழும் போயோ டிருட்குழுவை யோட்டும். 7 உலகம் மனத்தின் பிரதிபிம்பம் உலகம் மனத்தின் பிரதிபிம்பம் நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே உங்கள் உலகமும் இருக்கின்றது. உங்கள் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்தின் தன்மைக்குச் சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் புறநிலைமை எவ்வாறிருந்தாலும் பெரிதன்று; உங்கள் புறநிலைமைகளெல்லாம் உங்கள் அகநிலைமைகளின் பிரதிபிம்பங்களேயாகலான், உங்கள் அகத்தின் நிலைமைதான் பெரிது. உங்கள் புறத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்திலுள்ளவற்றிற்குச் சரியாகச் செய்யும் திருத்தவும் படுமாகலான், எவையெல்லாம் உங்களால் இதுமுன் அறியப்பட்டிருக்கின்றனவோ அவையெல்லாம் உங்கள் அனுபவத்தில் அடங்கியிருக்கின்றன; எவையெல்லாம் உங்களால் இனிமேல் அறியப்படப்போகின்றனவோ அவையெல்லாம் உங்கள் அநுபவமாகிய வாயிலின் மூலமாகச் செல்ல வேண்டும்; ஆதலால், அவையெல்லாம் உங்கள் ஜீவனில் ஒரு பாகமாகும். உங்கள் நினைப்புக்களும், அவாக்களும், நோக்கங்களும் உங்கள் உலகமாகின்றன; அழகும், இன்பமும் சுகமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், அல்லது அழகின்மையும், துன்பமும் துக்கமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், உங்கள் அகத்துள் அடங்கியிருக்கின்றன. உங்கள் நினைப்புக்களால் உங்கள் வாழ்க்கையை-உங்கள் உலகத்தை-உங்கள் பிரபஞ்சத்தை ஆக்குகிறீர்கள்; அல்லது அழிக்கின்றீர்கள். நினைப்பால் உங்கள் அகத்துள் நீங்கள் அமைக்கின்ற வாழ்க்கையையும் நிலைமைகளையும் போலவே உங்கள் புறவாழ்க்கையும் நிலைமைகளும் அமைகின்றன. உங்கள் அகத்தின் ஆழ்ந்த அறைகளில் எதனைப் பொதிந்து வைத்திருக்கின்றீர்களோ அது சிறிதும் தவறாத ஒரு நியதிப்படி உங்கள் புறவாழ்க்கையின் நிலைமையாக வந்து உங்களைப் பொருந்தும், அசுத்தமும், கீழ்மையும், சுயநலமுமுள்ள ஆன்மா கேட்டையும், துன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது; சுத்தமும், மேன்மையும், பரநலமுமுள்ள ஆன்மா ஆக்கத்தையும், இன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவும் தனக்குச் சொந்தமானவற்றைக் கவர்கின்றது; அதற்குச் சொந்தமல்லாத எஃதும் அதனை அணுகாது. இதனை அபரோக்ஷமாக அறிதல் தெய்வ நீதியின் சர்வ வியாபகத் தன்மையை அறிதலாம். ஆக்கத்தையும் கேட்டை உண்டுபண்ணுகிற ஒவ்வொரு மனித வாழ்க்கையின் சம்பவங்களும் அவனவனது அக நினைப்பின் சக்தியாலும் தன்மையாலும் அவனவனைச் சார்கின்றன. கைக்கொள்ளப்பட்ட நினைப்புக்களும் அநுபவங்களும் சேர்ந்த சேர்க்கையே ஜீவன்; அதன் விளக்கத்திற்காக அதனாற் செய்து கொள்ளப்பட்ட கருவியே உடம்பு. ஆதலால், உங்களுடைய நினைப்புக்கள் எவையோ அவையே நீங்கள்; உங்களைச் சுற்றியுள்ள சரவுலகமும் அசரவுலகமும் உங்களுடைய நினைப்புகளுக்குத் தக்க உருக்களைக் கொள்கின்றன. புத்தர், “நமது நிலைமைகளெல்லாம் நமது நினைப்புக்களின் பலன்கள்; அவைகளெல்லாம் நமது நினைப்புகளையே ஆதாரமாகக் கொண்டுள்ளன; அவைகளெல்லாம் நமது நினைப்புக்களாலேயே செய்யப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். ஆதலால், ஒருவன் சந்தோஷகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் சந்தோஷமுள்ளவனாயிருக்கிறான்; மற்றொருவன் விசனகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் விசனமுள்ளவனாயிருக்கிறான். ஒருவன் அச்சமுள்ளவனாகவோ அல்லது துணிவுள்ளனவாகவோ, மடையனாகவோ அல்லது அறிஞனாகவோ, கலக்கமுற்றவனாகவோ அல்லது அமைதியுற்றவனாகவோ இருந்தால் அவனுடைய அந்நிலைமைக்குரிய காரணம் அவன் அகத்துள்ளேயே இருக்கின்றது; புறத்தில் இல்லவே இல்லை. ஆனால், சிலர், “புறநிலைமைகள் நமது மனங்களைப் பாதிப்பதேயில்லையென்று நீர் சொல்லுகிறீரா?” என்று வினவக்கூடும். நான் அப்படிச் சொல்லவில்லை. நான், “எவ்வளவு தூரம் உங்களைப் புற நிலைமைகள் பாதிக்கும்படி இடங்கொடுக்கிறீர்களோ அவ்வளவு தூரமே அவை உங்களைப் பாதிக்கக் கூடும்” என்று சொல்லுகிறேன். இஃது ஒருபோதும் மாறாத உண்மையென்று அறியுங்கள். நினைப்பின் தன்மையையும் பிரயோஜனத்தையும் வலிமையையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாததனாலேயே புறநிலைமைகள் உங்களைப் பாதிக்கின்றன. புறப்பொருள்கள் உங்கள் வாழ்க்கையை ஆக்குதற்கும் அழிப்பதற்குமுரிய சக்தியைக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். (உங்களுடைய சகல துக்கங்களும் நம்பிக்கை என்னும் இச்சிறு சொல்லில்தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.) நீங்கள் அப்படி நம்புவதால் நீங்கள் அப் புறப்பொருள்களுக்குக் கீழ்ப்படுகின்றீர்கள்; நீங்கள் அவற்றின் அடிமைகளென்றும், அவை தம் இஷ்டப்படி செய்யக் கூடிய உங்கள் எஜமான்களென்றும் நீங்கள் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்; அப்படிச் செய்வதால் நீங்கள் அவற்றினிடத்திலில்லாத ஒரு வலிமையை அவற்றிற்குக் கொடுக்கின்றீர்கள், நீங்கள் புற நிலைமைகளுக்கு இலக்காகுவதோடு அவற்றைப்பற்றி நீங்கள் உங்கள் நினைப்பிற் கொண்டுள்ள விசனத்திற்கோ அல்லது சந்தோஷத்திற்கோ, அச்சத்திற்கோ அல்லது துணிவிற்கோ, பலத்திற்கோ அல்லது பலஹீனத்திற்கோ இலக்காகின்றீர்கள். பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வைத்திருந்த நிதிகளையெல்லாம் சிறு வயதில் இழந்து விட்ட இரண்டு மனிதர்களை நான் அறிவேன். அதனால் ஒருவன் மிக வருத்தமடைந்து கவலைக்கும், கிலேசத்திற்கும், ஏக்கத்திற்கும் இடங் கொடுத்துவிட்டான். மற்றொருவன் தனது நிதியைக் கொடுத்து வைத்திருந்த வட்டிக்கடை முறிந்து விட்டதென்று பத்திரிகையில் வாசித்தவுடன், “நமது பணம் போய்விட்டது; கவலையும் கிலேசமும் அதனைத் திரும்பக் கொண்டு வரமாட்டா. ஆனால், கடுமையான முயற்சி அதனைத் திரும்பக் கொண்டு வரும்” என்று சாந்தமாகவும் திடமாகவும் கூறினான். அதுமுதல் அவன் அதிக ஊக்கத்தோடு வேலை செய்து வந்தான். விரைவில் அவன் செல்வன் ஆகிவிட்டான். முந்திய மனிதனோ தனது பணம் போய்விட்டதைப் பற்றிக் கிலேசித்துக் கொண்டும் தனது துரதிருஷ்டத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டுமிருந்து மிகத் தரித்திரமான நிலைமைகளுக்கு, உண்மையில் தனது பலஹீனமும் அடிமைத்தனமும் பொருந்திய நினைப்புகளுக்கு ஆளாகிவிட்டான். பண நஷ்டம் ஒருவனுக்கு ஒரு தீமையாக அமைந்தது, அவன் அதனைக் கிலேச நினைப்போடும் அச்ச நினைப்போடும் கொண்டதனால்; பண நஷ்டம் மற்றொருவனுக்கு ஒரு நன்மையாக அமைந்தது, அவன் அதனைத் திடமும் நம்பிக்கையும் புதிய ஊக்கமும் பொருந்திய நினைப்புக்களோடு கொண்டதனால். புறநிலைமைகள் இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுக்கும் சக்தியை உடையனவாயிருப்பின், அவை எல்லா மனிதருக்கும் ஒரே விதமான இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுத்தல் வேண்டும். ஆனால், ஒரே நிலைமை சிலருக்கு இன்பத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் கொடுக்கின்றது; ஆதலால் இன்பமும் துன்பமும் நிலைமையில் இல்லையென்பதும், அவற்றைக் கொள்ளுகிற மனிதனது மனத்திலேயே உள்ளனவென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? இதனை நீங்கள் அபரோட்சமாக அறியத் தொடங்குங்காலையில் நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஆளுதற்கும், உங்கள் மனத்தைத் திருத்தி ஒழுங்கு செய்தற்கும், உங்கள் ஆன்மாவின் அகக் கோயிலைத் திரும்பக் கட்டுவதற்கும் தொடங்குவீர்கள். அப்பொழுது நீங்கள் பிரயோஜனமற்ற நினைப்புக்களையும் அவசியமற்ற நினைப்புக்களையும் உங்கள் அகத்தினின்றும் வெளிப்படுத்தி, சந்தோஷமும், சாந்தமும், உறுதியும், உரமும், இரக்கமும், அன்பும், அழகும், நித்தியத்துவமும் பொருந்திய நினைப்புக்களை உங்கள் அகத்துள் கொள்ளுவீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யுங்காலையில் நீங்கள் சந்தோஷமும் சாந்தமும் உள்ளவர்களாகவும், வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவர்களாகவும், நித்திய அழகும் நித்திய வாழ்வும் உள்ளவர்களாகவும் இருப்பீர்கள். நமது வாழ்க்கையில் நேரும் சம்பவங்களில் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறதுபோல, நம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களிலும் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறோம். அதனால் ஒருவன் ஒற்றுமையையும் அழகையும் பார்க்கிற இடத்தில் மற்றொருவன் ஒற்றுமையின்மையையும் அழகின்மையையும் பார்க்கிறான். ஓர் உற்சாகமுள்ள இயற்கைத் தத்துவ சாஸ்திரி ஒருநாள் தனது தொழில் சம்பந்தமாக ஒரு கிராமத்தின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்; அப்பொழுது அவன் ஒரு நெற்களத்திற்குச் சமீபத்திலுள்ள ஓர் உவர் நீர்க்குட்டத்தைக் கண்டான். அவன் பூதக்கண்ணாடி கொண்டு பரீட்சிப்பதற்காக அக்குட்டத்தின் நீரில் சிறிது ஒரு பாத்திரத்தில் மொண்டு கொண்டிருந்தபோது அவன் பக்கத்தில் நின்ற கல்வியில்லாத ஒரு கிருஷிகனிடத்தில் அக்குட்டத்தில் மறைந்து கிடக்கும் எண்ணிறந்த அதிசயங்களைப் பற்றிச் சொல்லி, கடைசியாக, “இக்குட்டத்தில் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணத்தக்க புத்தியாவது கருவியாவது நம்மிடம் இல்லை” என்று கூறினான். அவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷிகள், “இந்நீருள் எண்ணிறந்த தவளைகள் இருப்பதை நானும் அறிவேன்; ஆனால் அவைகளை எளிதில் பிடித்து விடலாம்” என்றான். இயற்கைப் பொருள்களின் ஞானம் நிரம்பிய மனத்தையுடைய அவ்வியற்கைத் தத்துவ சாஸ்திரி இயற்கையின் அழகையும் ஒற்றுமையையும் காட்சிக்குப் புலப்படாத பெருமையையும் அக்குட்டத்தில் பார்த்தான். அப்பொருள்களில் ஞானமில்லாத மனத்தையுடைய கிருஷிகன் அருவருக்கத்தக்க தவளைகளை மாத்திரம் அக்குட்டத்தில் கண்டான். வழிப்போக்கனது காலில் மிதிபடுகிற காட்டுப்பூ, ஒரு புலவனது ஞானக்கண்ணிற்கு (பொறிகளால் காணமுடியா)க் கடவுளினது தூதன் போலத் தோன்றுகிறது. அநேகருக்குச் சமுத்திரமானது கப்பல்கள் சென்று உடைவதற்கேதுவாகிய ஒர பயங்கரமான நீர்ப்பரப்பாகத் தோன்றுகிறது; ஒரு சங்கீத வித்வான் அதனை ஓர் உயிருள்ள பொருளாகக் காண்கிறான்; அதனுடைய சகல மாறுதல்களிலும் அவன் தெய்வ கீதங்களைக் கேட்கிறான்; ஒரு சாதாரண மனிதன் இவ்வுலகத்தின்கண் ஆபத்துக்களையும் குழப்பங்களையும் பார்க்கிறான்; ஒரு தத்துவ ஞானி இவ்வுலகத்தின்கண் காரண காரிய ஒழுங்கைப் பார்க்கிறான். ஒரு நாஸ்திகன் இவ்வுலகத்தில் நித்திய மரணத்தையே காண்கிறான். ஓர் ஆஸ்திகன் இவ்வுலத்தில் நித்திய வாழ்வையே காண்கிறான். இவ்வுலக சம்பவங்களுக்கும் பொருள்களுக்கும் நாம் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துவதுபோல நாம் நம்மைச் சுற்றிலுள்ள மற்றை மனிதர்களுக்கும் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துகிறோம். சந்தேக நடத்தையுள்ளவன் ஒவ்வொரு மனிதனையும் சந்தேக நடத்தையுள்ளவனாக நினைக்கிறான்; பொய்யன் எல்லா மனிதரையும் பொய்யரென்று நினைக்கிறான்; பொறாமையுள்ளவன் ஒவ்வொருவனிடத்திலும் பொறாமையைப் பார்க்கிறான்; உலோபி தனது பொருளைக் கவருவதற்கு ஒவ்வொரு மனிதனும் ஆசை கொண்டிருக்கிறதாக நினைக்கிறான்; தனது மனச்சாக்ஷ¢க்கு விரோதமான காரியங்களைச் செய்து பணம் சம்பாதிக்கிறவன் உலகத்திலுள்ளவர்களெல்லாம் மனச்சாக்ஷ¢க்கு விரோதமான காரியங்களைச் செய்வதாகவும் தனது பொருளை அவர்கள் திருடுவதற்காக அவாக் கொண்டிருப்பதாகவும் எண்ணித் தனது தலையணையின்கீழ் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு உறங்குகிறான்; பெருங் காமுகன் சாதுக்களை வெறும் வேஷதாரிகளென்று நினைக்கிறான். இதற்கு மாறாக அன்புள்ள நினைப்புகளில் வசிக்கின்றவர் எல்லா மனிதரையும் அன்புடையவராக நினைத்து, அவரிடத்து அன்பும் அநுதாபமும் பாராட்டுகின்றனர்; யோக்கியத்தையும் நம்பிக்கையுமுள்ளவர் எவரிடத்தும் சந்தேகம் கொள்வதில்லை; பிறருடைய பெருஞ் செல்வத்தைக் கண்டு சந்தோஷப்படுகிற நற்சுபாவமும் தயாளமுமுடையவர், பொறாமை எப்படியிருக்குமென்றும் அறியார்; தமது அகத்துள் மெய்ப்பொருளை அபரோட்சமாகக் காண்கின்றவர் விலங்குகளுள்பட சகல உயிர்களிடத்தும் மெய்ப்பொருளைக் காண்கின்றனர். புருஷர்களும் ஸ்திரீகளும் தமது மனத்தில் கொண்டுள்ள நினைப்புகளுக்குஒத்தவாறு காரியங்கள் நிகழக் காண்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் தமதுமனத்திலிருந்து எவற்றைப் புறத்தே அனுப்புகின்றனரோ, அவற்றையே காரணகாரியநியதிப்படி புறத்திலிருந்து கவருகின்றனர்; ஆதலால், அவர் தம்மையொத்தமனிதரின் சேர்க்கையைக் கொள்கின்றனர். “இனம் இனத்தோடு சேரும்” என்னும்பழமொழி பெரும்பாலார் கொள்ளும் பொருளினும் மிக ஆழ்ந்ததோர் பொருளைக்கொண்டிருக்கின்றது; அது ஜடவுலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன்தன் இனத்தோடுசேர்ந்திருக்கிறது போலச் சித்துலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன் தன் இனத்தோடுசேர்ந்திருக்கிறதென்ற உண்மையையும் விளங்குகின்றது. வெண்பா “அன்புகொள வேண்டினுயிர்க் கன்புசெய்வாய்; மெய்வேண்டின் இன்பமொடு மெய்மொழிவாய்; ஏனையர்க்கு-முன்பெதனை நல்குவையோ அஃதுநினை நண்ணும்; நினதுள்ளம் நல்குபிம்பம் நின்னுலகம், நாடு.” நீங்கள் உங்கள் மரணத்திற்குப்பின் ஒரு பேரின்ப உலகத்தைஅடையவேண்டுமெனக்கோரிக் கொண்டிருப்பீர்களாயின், இதோ! ஒரு சந்தோஷ சமாசாரம்உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்பேரின்ப உலகத்தில் நீங்கள் இப்பொழுதேபிரவேசித்துப் பேரின்பத்தை அநுபவிக்கலாம். அப்பேரின்ப உலகம் பிரபஞ்சமுழுவதிலும் நிரம்பியிருக்கிறது. அஃது உங்கள் அகத்துள்ளேயும் இருக்கிறது.அதனை நீங்கள் கண்டு அடைந்து அநுபவிக்க வேண்டுமென்று அது காத்துக்கொண்டிருக்கிறது. ஆன்மாவின் அக ஒழுங்குகளையெல்லாம் அறிந்த ஒருவர், ‘கடவுளுலகம் இதோ இருக்கிறது; அதோ இருக்கிறது’ என்று மனிதர் சொல்லும்பொழுது, நீங்கள் அவர்பின் செல்லவேண்டாம். ‘கடவுளுலகம் உங்கள் அகத்துள்ளேயேஇருக்கிறது’ என்று கூறியுள்ளார். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால்நீங்கள் இவ்வாக்கை நம்ப வேண்டும்; நீங்கள் இதனைச் சந்தேகம் சிறிதும் இல்லாதமனத்தோடு பூரணமாக நம்பவேண்டும்; பின்னர் நீங்கள் இதனை அபரோட்சமாகக் காணும்வரையில் இதனைத் தியானிக்க வேண்டும், நீங்கள் இவ்வாறு தியானிக்குங்காலையில் உங்கள் அகவுலுவலகத்தைச் சுத்தப்படுத்தவும் புதுப்பிக்கவும்தொடங்குவீர்கள். நீங்கள் அதனைப் புதுப்பிக்குங் காலையில் உண்மைகளைஒன்றன்பின் ஒன்றாக அறிவீர்கள்; அநுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாகஅனுபவிப்பீர்கள்; தன்னை ஆளும் ஆன்மாவின் மந்திர சக்தியைத் தவிரப்புறப்பொருள்களில் யாதொரு சக்தியும் இல்லையென்று காண்பீர்கள். நிலைமண்டில ஆசிரியப்பா உலகினைத் திருத்தி, அஃதுற்றுள பலவகைக் கேட்டையு மழிவையு மோட்டி யொழிக்கவும், களைநில மனைத்தையும் விளைநில மாக்கவும், பாலை வனங்களைச் சோலையா மாற்றவும், உன்னுவை யாயின், நின்னைத் திருத்தே; உலகினை நீடு வலனொடு பிணைத்துள மறத்தளை களையறுத் துலகைவெளி யேற்றி, உடைந்த உளங்கள் திடங்கொள உதவவும், துயரினை யொழித்துச் சுகமுறச் செய்யவும், விரும்புவை யாயின், அறுக்கநின் தளையே. உலகின் நீண்ட பிணிகளைத் தீர்த்ததன் துயரையும் துன்பையும் மயலையும் தொலைக்கவும், பிணியெலாம் தீர்த்ததில் பேரின்ப மாக்கவும், துன்பமுற் றார்க்கெலாம் இன்பம் நல்கவும், நினைப்பை யாயின், நின்பிணி தீரே. உலகின் மரணக் கனவி னின்றும் அமரி னின்றும் உலகை யெழுப்பிஅஃ தன்பும் நட்பும் அறிவும் அழிவிலா வாழ்வின் ஒளியும் மன்னிடச் செய்ய எண்ணுவை யாயின், எழுப்புக நின்னையே.   8 விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி துன்பம் நித்திய இன்ப சொரூப மெய்ப்பொருளை ஜீவன் மறைப்பதனாலுளதாகும் நிழலென்றும், உலகம் ஒவ்வொருவருக்கும் தம்தம் பிரதிபிம்பத்தைக் காட்டுகின்ற கண்ணாடியென்றும் கண்டோம். இப்பொழுது நாம் உறுதியுள்ளவையும் எளிதில் ஏறத்தக்கவையுமான படிகளின் வழியாக நியாய ஒளியை அபரோட்சமாகக் காணத்தக்க மேல் தட்டுக்கு ஏறுவோம். இந்நியாய ஒளியைக் கண்டபின்னர், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் காரணகாரிய நியதிக்கு உட்பட்டிருக்கிறதென்ற ஞானமும், எஃதும் அந்நியதியிலிருந்து விலகமுடியாதென்ற ஞானமும் உண்டாகும். மனிதனுடைய மிக அற்பமான நினைப்பு, சொல், செயல் முதற்கொண்டு வானிலுள்ள நக்ஷத்திரக் கூட்டங்கள் வரையுள்ள அனைத்தையும் அந்நியதி ஆள்கின்றது. ஒருநிலைமை, காரணமில்லாது ஒருகணமும் இருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய நிலைமையின் இருப்பு காரணகாரிய நியதியை மறுத்ததாகவும் அழித்ததாகவும் முடியும். ஆதலால், வாழ்க்கையின் நிலைமை ஒவ்வொன்றும் ஒழுங்கும் நேர்மையுமுள்ள காரணகாரிய நியதியில் கட்டுப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு நிலைமையின் மர்மமும் காரணமும் அதனுள்ளேயே அடங்கியிருக்கின்றன. “வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்” என்னும் உண்மை ஒருபோதும் அழியாது; அதனை ஒருவரும் மறுக்க முடியாது; அதனை ஒருவரும் ஏமாற்ற முடியாது; அதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. எவன் நெருப்பில் கையை விடுகிறானோ அவன் அதன் சுடுகையை அநுபவித்தே தீர வேண்டும்; நிந்தனையாவது பிரார்த்தனையாவது அச்சுடுகையை மாற்றமாட்டாது. இதே நியதிதான் மனோவுலகத்தையும் ஆள்கின்றது. வெறுப்பு, வெகுளி, பொறாமை, காமம், பேராசை இவையெல்லாம் எரிகின்ற நெருப்புக்கள்; இவற்றை யார் தொட்டாலும் எரிதற்றுன்பங்களை அனுபவித்தே தீரவேண்டும். இம்மனோ நிலைமைகளையெல்லாம் ‘தீமை’ என்று பெரியோர் சொல்லியது சரி; ஏனெனில், இவையாவும் ஆன்மா தனது அஞ்ஞான நிலையில் காரண காரிய நியதியைக் கவிழ்ப்பதற்காகச் செய்யும் பிரயத்தனங்கள். ஆதலால், இவை ஒழுங்கின்மையும் குழப்பத்தையும் உண்டுபண்ணி, விரைவில் அல்லது தாழ்ப்பில் நோய், தவறு, கேடு, துன்பம், விசனம், ஏக்கம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும், பொறுமையும், நல்லெண்ணமும், தூய்மையும் தம்மைப் பரிபாலிக்கிற ஆன்மாவின் மீது சாந்தியை வீசுகிற குளிர்ந்த வாயுக்கள். அவை நித்திய நியதிக்கு ஒத்தனவாயிருக்கின்றமையால், ஆரோக்கியம், ஆக்கம், வெற்றி, சாந்தம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கின்ற இப் பெரிய நியதியைப் பூரணமாக அறிதலால் கீழ்ப்படிவு என்னும் மனோ நிலைமை அடையப்படுகின்றது. நியாயமும், ஒற்றுமையும், அன்பும் பிரபஞ்சத்தில் மேலான சக்திகளென்று நாம் அறிவோமானால், பிரதிகூலமான நிலைமைகளும் துன்பகரமான நிலைமைகளும் நாம் அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடவாததனாலுண்டான பலன்களென்று நாம் அறிவோம். அவ்வறிவு நமக்குப் பலத்தையும் வலிமையையும் கொடுக்கின்றது; அவ்வித அறிவினாலேயே மெய்யான வாழ்வையும் நிலையான வெற்றியையும் நித்திய இன்பத்தையும் அடையக் கூடும். சகல சந்தர்ப்பங்களிலும் பொறுமையோடிருத்தலும், உங்கள் அபிவிருத்திக்கு அவசியமான கருவிகளென்று சகல நிலைமைகளையும் ஏற்றுக் கொள்ளுதலும் துன்பகரமான நிலைமைகட்கெல்லாம் மேற்பட்டு நிற்றற்கும், அவை திரும்பவும் வருமென்று பயப்பட வேண்டாத விதத்தில் அவற்றை அடியோடு வெல்வதற்கும் ஏதுக்களாகும்; ஏனெனில், அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சக்தி அவற்றை வேராடு நாசம் செய்து விடுகின்றது. அத்தகைய கீழ்ப்படிதலுள்ள மனிதன் நியாயத்திற்கு ஒத்தபடி நடக்கிறான்; உண்மையில் அவன் நியாயத்தோடு ஐக்கியமாய்விட்டான் அவன் அடையும் வெற்றிகளெல்லாம் நித்திய வெற்றிகள்; அவன் உண்டு பண்ணுவனவெல்லாம் என்றென்றும் நிலை நிற்பவை. சகல பலத்தின் காரணமும் சகல பலஹீனத்தின் காரணமும் அகத்துள் இருக்கின்றன; சகல சுகத்தின் காரணமும் சகல துக்கத்தின் காரணமும் அகத்துள்ளேயே இருக்கின்றன. அகத்திலிருந்து விரிவதைத் தவிர வேறாக எவ்வித அபிவிருத்தியுமில்லை; ஞானத்தில் கிரமமாக அபிவிருத்தியடைவதைத் தவிர, வேறாக ஆக்கத்திற்கும் சாந்தத்திற்கும் எவ்வித மார்க்கமுமில்லை. நீங்கள் நிலைமைகளால் விலங்கிடப்பட்டிருக்கிறதாகக் கூறுகின்றீர்கள்; நல்ல நிலைமைகளையும் விரிந்த செல்வாக்கையும் ஆரோக்கிய நிலைமைகளையும் நீங்கள் அடைய வேண்டுமென்று கதறுகின்றீர்கள். உங்கள் கைகளையும் கால்களையும் கட்டியிருக்கிற உங்கள் விதியை நீங்கள் நிந்திக்கின்றீர்கள். உங்களுக்காகத்தான் நான் எழுதுகிறேன்; உங்களுக்காகத்தான் நான் சொல்லுகிறேன். என் வார்த்தையைக் கேளுங்கள்; என் வார்த்தைகள் உங்கள் அகத்துள் என்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கட்டும். நான் சொல்வது முற்றிலும் உண்மை:- நீங்கள் உங்கள் அக நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கு உறுதியாகத் தீர்மானித்துக் கொள்வீர்களாயின், நீங்கள் உங்கள் புற நிலைமையில் அடைய வேண்டுமென்று விரும்புகிற அபிவிருத்திகளை அடைவீர்கள். இவ்வழி தொடக்கத்தில், மனோகரமாகத் தோன்றாதென்பதை நான் அறிவேன். (மெய் எப்பொழுதும் அப்படித்தானிருக்கும். பொய்யும் மாயையும் தொடக்கத்தில் மனோகரமாகத் தோன்றி மனத்தைக் கவரும்.) ஆனால், நீங்கள் அவ்வழியில் செல்வதாகத் தீர்மானித்துக் கொள்வீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்திலுள்ள பலஹீனத்தை நீக்கி உங்கள் மனோ சக்திகளும் ஆன்ம வலிகளும் விரியும்படி செய்து விடாமுயற்சியால் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்தி வருவீர்களாயின், உங்கள் புற வாழ்க்கையில் உண்டாகும் அற்புதமான மாறுதல்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். நீங்கள் செல்லச் செல்ல உங்கள் வழியில் பொன்போல உதவும் சந்தர்ப்பங்கள் வந்து குறுக்கிடும். அவற்றைச் சரியாக உபயோகிப்பதற்குத் தக்க வலியும் அறிவும் உங்கள் அகத்தில் உற்பத்தியாகும்; நீங்கள் அழையாமலே உங்களிடம் சரசமான சிநேகிதர்கள் வந்து சேர்வார்கள்; காந்தத்தினிடத்து ஊசிகள் போய்ச் சேருவது போல, அநுதாபமுள்ள மனிதர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள்; நீங்கள் வேண்டும் புத்தகங்களும் மற்றைய உதவிகளும் நீங்கள் தேடாமலே உங்களுக்குக் கிடைக்கும். ஒருகால் உங்கள் வறுமை விலங்கு பளுவாயிருக்கலாம்; நீங்கள் சிநேகிதரில்லாது தனியாயிருக்கலாம்; உங்கள் பளுவு குறைய வேண்டுமென்று நீங்கள் மிகுந்த ஆவலோடு விரும்பலாம்;ஆனால், உங்கள் வறுமை விலங்கின் பளு முன்போலவேயிருக்கின்றது; நாளுக்கு நாள் அதிகமாகிற இருள் உங்களை மூடுகின்றது. நீங்கள் உங்கள் நிலைமையைக் குறை கூறுகின்றீர்கள்; உங்கள் வறுமையை நிந்திக்கின்றீர்கள்; உங்கள் பிறப்பையோ, பெற்றோரையோ, எஜமானையோ, உங்களுக்கு வறுமையையும் கஷ்டத்தையும் மற்றவருக்குச் செல்வத்தையும் சுகத்தையும் கொடுத்த அநியாயமான தெய்வத்தையோ பழிக்கின்றீர்கள். நீங்கள் பழிப்பதையும் கூப்பாடு போடுவதையும் நிறுத்துங்கள்; நீங்கள் பழிக்கின்ற எதுவும் உங்கள் வறுமைக்குக்காரணம் அன்று. காரணம் உங்கள் அகத்துள் இருக்கிறது; அதன் பரிகாரமும் அங்கேயே இருக்கின்றது. நீங்கள் குறை கூறுபவர்களாயிருத்தலே நீங்கள் உங்கள் தற்கால நிலைமையை அடைவதற்குத் தக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது; எல்லா முயற்சிகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் ஆதாரமான நம்பிக்கை உங்களிடத்தில் இல்லையென்பதைக் காட்டுகின்றது. நியாயமான பிரபஞ்சத்தில் குறை கூறுபவனுக்கு இடமேயில்லை; கவலை ஆன்மாவைக் கொலை செய்யத்தக்கது. உங்களுடைய ஒவ்வொரு மனப்போக்கினாலும் நீங்கள் உங்களைப் பந்தப்படுத்தியிருக்கிற விலங்குகளைப் பலப்படுத்துகின்றீர்கள்; உங்களை மூடியிருக்கிற இருளை அதிகப்படுத்துகின்றீர்கள்; உங்கள் அகநிலைமையை மாற்றுங்கள்; உங்கள் புற நிலைமை மாறுதல் அடையும். உங்கள் நம்பிக்கையையும் அறிவையும் வளர்த்து நீங்கள் நல்ல நிலைமைகளையும் விரிந்த செல்வாக்கையும் அடைவதற்குத் தகுதியுள்ளவர்களாகுங்கள். உங்களிடத்தில் இப்பொழுது உள்ளனவற்றை நீங்கள் முற்றிலும் சரியாக உபயோகிக்கிறீர்களா என்பதை முதலில் கவனியுங்கள். சிறிய வசதிகளைக் கவனியாது விட்டுவிட்டுப் பெரிய வசதிகளை அடையலாமென்று நினைத்து நீங்கள் மோசம் போய்விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு பெரிய வசதிகளை அடைவீர்களாயின், அவை நிலையற்றனவாகி, நீங்கள் கவனியாது விட்ட சிறிய வசதிகளின் பாடங்களைப் படிப்பதற்காக நீங்கள் திரும்பவும் கீழே வந்து சேர்வீர்கள். கலாசாலை மாணவன் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்குப் போவதற்கு முன் முந்திய வகுப்புப் பாடங்களைச் சரியாகப் படித்து முடிக்க வேண்டுவதுபோல, நீங்கள் விரும்புகிற பெரிய வசதிகளை நீங்கள் அடைவதற்கு முன் நீங்கள் அடைந்துள்ள சிறிய வசதிகளை நீங்கள் சரியாக உபயோகிக்க வேண்டும். நம்மிடத்திலுள்ள சிறியனவற்றை நாம் சரியான வழியில் உபயோகிக்காது பிசகான வழிகளில் உபயோகிப்போமானால், நம்மிடத்திலுள்ள சிறியனவும் நம்மிடத்திலிருந்து கவரப்படும். ஏனெனில், நமது நடக்கையால் நம்மிடத்திலுள்ள சிறியனவற்றையும் நாம் கொண்டிருப்பதற்குத் தகுதியற்றவரென்று காட்டுகிறோம். ஒரு கால், நீங்கள் சிறிய குடிசையில் வசித்துக் கொண்டிருக்கலாம்; உங்கள் குடிசையைச் சுற்றி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கெட்ட நாற்றங்கள் நிறைந்திருக்கலாம்; நீங்கள் ஆரோக்கியத்திற்கொத்த ஒரு பெரிய வீட்டை அடைவதற்கு விரும்பலாம். அப்படியானால், நீங்கள் முதலில் உங்கள் சிறிய குடிசையை ஒரு சிறிய சுவர்க்கம் போலாக்கிக் கொண்டு, நீங்கள் விரும்பிய பெரிய வீட்டை அடைவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ளவேண்டும்; உங்கள் சிறிய குடிசையை மாசு மறு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் கையிலுள்ள பொருளுக்குத் தக்கபடி உங்கள் குடிசையை அழகுள்ளதாகவும் இனிமையுள்ளதாகவும் தோற்றும்படி செய்யுங்கள். உங்கள் சாதாரண சாப்பாட்டை முழுக் கவனத்தோடும் சமையல் செய்யுங்கள்; உங்கள் எளிய சாப்பாட்டை நீங்கள் எவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யக்கூடுமோ அவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யுங்கள். உங்கள் குடிசையில் விரித்தற்குப் பாய் உங்களிடத்தில் இல்லையானால், உங்கள் குடிசை அரங்குகளில் சிரிப்பும் வரவேற்புமாகிய பாயை விரித்து, அதன் மீது இனிய வார்த்தைகளாகிய ஆணிகளைப் பொறுமையாகிய சம்மட்டியால் அடித்து இறுக்குங்கள். அத்தகைய ஒரு பாய் சூரிய ஒளியால் நிறம் குன்றாது; அடிக்கடி உபயோகிப்பதால் கிழியமாட்டாது. உங்களுடைய தற்கால வசதிகளை இவ்விதமாக நீங்கள் மேன்மைப்படுத்திக் கொள்வதனால் நீங்கள் அவற்றிக்கு மேற்பட்ட வசதிகளை அடையத் தகுதியுள்ளவர்களாவீர்கள். அவை உங்களுக்கு அவசியமில்லாதனவாய்விடும். உங்கள் வரவிற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்கிறதும் உங்கள் தகுதிக்கு ஒத்ததுமான நல்ல வீட்டையும் மற்ற வசதிகளையும் நீங்கள் சரியான காலத்தில் அடைவீர்கள். ஒருகால், நீங்கள் ஆலோசனை செய்வதற்கும் முயற்சி செய்வதற்கும் அதிக நேரம் வேண்டுமென்று விரும்பக்கூடும்; நீங்கள் கஷ்டத்தோடு அதிக நேரம் வேலை செய்வதாக உணரக்கூடும். அப்படியானால், உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலம் முழுவதையும் நீங்கள் சரியாக உபயோகிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலத்தை வீணாக்குவீர்களாயின், நீங்கள் இன்னும் அதிக அவகாசம் வேண்டுமென விரும்புவதில் யாதொரு பிரயோசனமும் இல்லை. உங்களுக்கு அதிக அவகாசம் கிடைக்குமாயின், நீங்கள் இன்னும் அதிக சோம்பலுள்ளவர்களாயும் உதாசீனமுள்ளவர்களாயும் இருப்பீர்கள். வறுமையும் அவகாசமின்மையும் நீங்கள் நினைக்கிறதுபோல அவ்வளவு தீயன அல்ல. அவை உங்கள் அபிவிருத்தியைத் தடுக்குமாயின், அதற்குக் காரணம் உங்கள் பலஹீனங்களாகிய உடைகளை நீங்கள் அவற்றிக்கு உடுத்தியிருத்தலே; அவற்றில் நீங்கள் காணும் தீமை உண்மையில் உங்கள் அகத்துள் இருக்கிறது. நீங்கள் உங்கள் மனத்தைச் சீர்திருத்தி ஒழுங்கு செய்கிற அளவில் நீங்கள் உங்கள் ஊழை ஆக்குகிறவர்கள் என்பதை அபரோட்சமாக அறிவீர்கள்; நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உங்களைச் சீர்திருத்தி ஒழுங்கு செய்கின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக நீங்கள் உங்கள் ஊழை ஆக்குகின்றவர்கள் என்பதை அபரோட்சமாக அறிவீர்கள்; அப்பொழுது நீங்கள் தீயனவென்று கருதியவற்றையெல்லாம் நல்லனவாக மாற்றிக் கொள்ளலாமென்பதைக் காண்பீர்கள்; நீங்கள் அப்பொழுது உங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்ப்பதற்கு உங்கள் வறுமையை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்வீர்கள்; உங்கள் சிறிய அவகாசத்தை நீங்கள் விரைந்து ஆலோசனை செய்தற்கும் காரியம் செய்தற்கும் ஒரு துணையாக உபயோகித்துக் கொள்வீர்கள். மிகக் கெட்ட நிலத்தில் மிக நல்ல மலர்கள் வளர்வதுபோல, வறுமையாகிய மிகக்கெட்ட நிலத்தில் மிக நல்ல மனிதராகிய மலர்கள் வளர்ந்து மலர்ந்திருக்கின்றன. எவ்விடத்தில் நாம் கஷ்டங்களை எதிர்க்க வேண்டியிருக்கிறதோ அவ்விடத்திலும், எவ்விடத்தில் நாம் அதிருப்தியான நிலைமைகளை வெல்ல வேண்டியிருக்கிறதோ அவ்விடத்திலும், ஒழுக்கம் மிக மிக வளர்ந்து அதன் பெருமையைக் காட்டுகின்றது. நீங்கள் ஒரு கொடுமையான எஜமானுக்கு அல்லது எஜமாட்டிக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம்; நீங்கள் கொடுமையாக நடத்தப்படுவதாக உணரலாம். இதுவும் உங்கள் அபிவிருத்திக்கு அவசியமென்று கருதுங்கள். உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டிக்கு உங்களை அன்பில்லாது நடத்தினால் அவர்களிடத்தில் நீங்கள் அன்பையும், பொறுமையையும் காட்டுங்கள். நீங்கள் இடைவிடாது பொறுமையையும் அடக்கத்தையும் அப்பியசியுங்கள். உங்கள் மனோ பலத்தையும் ஆன்ம பலத்தையும் வளர்ப்பதற்கு உங்களுக்குப் பிரதிகூலமாகவுள்ள நிலைமைகளை அநுகூலமாக உபயோகித்துக் கொள்ளுங்கள். உங்கள் மௌன நடத்தையாலும் சக்தியாலும் உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டிக்குப் புத்தி கற்பிப்பீர்கள்; அவர் தமது நடத்தையைப் பார்த்து நாணமடையும்படி செய்வீர்கள்; அதேசமயத்தில் நீங்கள் உங்கள் ஆன்ம சக்தியை வளர்த்துக் கொண்டும் உங்கள் தற்கால நிலைமைகளைப் பார்க்கினும் உயர்ந்த நிலைமைகள் உங்களை நெருங்குங் காலத்தில் அவற்றைக் கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக நீங்கள் வளர்ந்து ஏற்றுக்கொண்டு இருப்பீர்கள்; நீங்கள் அடிமையாக இருப்பதாகக் குறை கூறாதீர்கள்; நீங்கள் மேன்மையான நடத்தையால் அடிமை நிலைக்கு மேற்பட்டவர்களாகுங்கள்-நீங்கள் வேறொருவனுக்கு அடிமையாயிருப்பதாகக் குறை கூறுவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு (உங்கள் மனத்திற்கும் சரீரத்திற்கும்) அடிமையாயிருக்கவில்லையா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அகத்துள் நோக்குங்கள்; அங்குத் தேடிப்பாருங்கள் ; உங்கள் மீது இரக்கம் கொள்ளாதீர்கள்-நீங்கள் அடிமைத்தனமான நினைப்புகளையும் அவாக்களையும் அங்குக் காண்பீர்கள். உங்கள் தினசரி வாழ்க்கையிலும் நடத்தையிலும் அடிமைத்தனமான பழக்கங்களைக் காண்பீர்கள். நீங்கள் இவற்றை வெல்லுங்கள்; நீங்கள் உங்களுக்கு அடிமையாயிருப்பதை விடுங்கள்; அப்போது உங்களை அடிமைப்படுத்தும் சக்தி எவனிடத்திலும் இருக்க மாட்டாது. நீங்கள் உங்களை வெல்லுங்காலையில், நீங்கள் பிரதிகூலமான நிலைமைகளையெல்லாம் வென்று விடுவீர்கள்; ஒவ்வொரு கஷ்டமும் உங்களைக் கண்ட மாத்திரத்தில் நீங்கிவிடும். செல்வந்தர்கள் உங்களை இம்சிக்கிறதாகக் குறை கூறாதீர்கள். நீங்கள் செல்வந்தர்களானால் நீங்கள் எளியவர்களை இம்சிக்க மாட்டீர்கள் என்பது நிச்சயமா? முற்றிலும் நியாயமான ஒரு நித்திய சட்டம் இருக்கிறதென்பதையும், இன்று இம்சிக்கிறவன் நாளை இம்சிக்கப்படுவானென்பதையும், இச் சட்டத்திலிருந்து எவனும் தப்ப முடியாதென்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருகால், நீங்கள் நேற்று (உங்கள் முந்தைய ஜென்மம் ஒன்றில்) செல்வந்தர்களாகவும் இம்சிக்கிறவர்களாகவும் இருந்திருக்கலாம்; நீங்கள் அப்பெரிய சட்டத்திற்குச் செலுத்த வேண்டிய உங்கள் கடனை இன்று செலுத்திக் கொண்டிருக்கலாம். ஆதலால், நீங்கள் நம்பிக்கையையும் தைரியத்தையும் கைக்கொள்ளுங்கள்; நித்திய நீதியாயும், நித்திய நன்மையாயும் இருக்கிற கடவுளை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருங்கள். நீங்கள் கண்ட பொருள்களையும் அநித்தியமாயுள்ள பொருள்களையும் விட்டு அகண்டமாயும் நித்தியமாயுள்ள பொருளிடத்துச் செல்ல முயலுங்கள். பிறர் உங்களுக்குத் துன்பம் செய்கின்றனர் அல்லது உங்களை இம்சிக்கின்றனர் என்ற மயக்கத்தை விட்டுவிடுங்கள். உங்கள் அக வாழ்க்கையையும் அதனை ஆளும் நியதிகளையும் பற்றிய ஞானத்தால் உங்கள் அகத்தில் உள்ளதே உங்கள் புறத்தில் வந்து உங்களை உண்மையில் துன்பப்படுத்துகிறதென்று நீங்கள் அபரோட்சமாக அறிய முயலுங்கள். தன்மீது தான் இரக்கம் கொள்ளுதலைப் பார்க்கினும் தாழ்ந்ததும் அவமதிப்பைத் தரத்தக்கதும் ஆன்மாவைக் கெடுக்கத்தக்கதும் வேறொன்றுமில்லை. அத்தகைய புழு ஒன்று உங்கள் இருதயத்தைத் தின்று கொண்டிருக்கும்பொழுது நீங்கள் பூரண வாழ்வையே ஒருபோதும் அடைய முடியாது. நீங்கள் பிறர் மீது குறை கூறுகிறதை விட்டு, நீங்கள் உங்களையே குறை கூறத் தொடங்குங்கள் மாசற்ற தூய்மையும் குற்றமற்ற நன்மையும் பொருந்தியிராத உங்கள் செயல்களையும் அவாக்களையும் நினைப்புக்களையும் கவனியாது விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வதால் நித்திய வஸ்துவாகிய மலையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுகின்றீர்கள். உங்கள் §க்ஷமத்திற்கும் இன்பத்திற்கும் வேண்டியவையெல்லாம் தக்க காலத்தில் உங்களிடம் வந்து சேரும். அகத்திலுள்ள சுயநல நிலைமைகளை ஒழிப்பதைத் தவிர, வறுமையினின்றோ, விரும்பத்தகாத மற்றைய நிலைமையினின்றோ, ஸ்திரமாக நீங்கிக் கொள்வதற்கு வேறு வழியில்லை; ஏனெனில், வறுமையும் விரும்பத்தகாத மற்றைய நிலைமைகளும் அகத்தின் சுயநல நிலைமைகளின் பிரதிபிம்பங்களே. உண்மையான செல்வங்களை அடைவதற்கு மார்க்கம், ஒழுக்கத்தைக் கைக்கொண்டு ஆன்மா செல்வமுறுமாறு செய்தலே. உண்மையான அக ஒழுக்கத்திற்கு வேறாகச் செல்வமாவது வலிமையாவது இல்லை; அவற்றின் தோற்றங்கள் மாத்திரமே உண்டு. ஒழுக்கம் ஒரு சிறிதும் இல்லாமலும், ஒழுக்கத்தைக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் ஒரு சிறிதும் இல்லாமலும் இருக்கிற மனிதர்கள் மிகுதியாகப் பணம் சம்பாதிப்பதை நான் அறிவேன். ஆனால், அத்தகைய பணம் உண்மையான செல்வமாகமாட்டாது. அதனுடைமை அழிவையும் நோவையும் தரத்தக்கது. அதற்குத் தாவீது சான்று கூறியிருக்கின்றனர். அவர் “துர்நடத்தைக்காரர் செல்வந்தரானதை நான் பார்த்தபொழுது அம்மனிதர் செல்வ நிலைமையில் பொறாமை அடைந்தேன். அவரது விழிகள் கொழுத்துப் பருத்திருந்தன. அச்செல்வந்தர் தமது விருப்பத்திற்கு மேற்பட்ட செல்வமுடையவராயிருந்தனர். நான் எனது அகத்தைச் சுத்தம் செய்ததும் நான் யாதொரு குற்றமும் செய்யாதிருந்ததும் வீண் என்று தோன்றின. நான் இதனை நினைத்தபோதெல்லாம் எனக்கு வருத்தமாயிருந்தது. நான் கடவுளின் ஆலயத்துள் பிரவேசித்தபொழுது அச்செல்வத்தின் முடிவைக் கண்டேன்” என்று கூறியிருக்கின்றனர்: துர்நடத்தைக்காரருடைய செல்வம் தாவீதுக்கு மிக வருத்தத்தைக் கொடுத்தது. அவர் கடவுள் ஆலயத்திற்குள் சென்ற பின்னர் அச் செல்வத்தின் முடிவைக் கண்டனர். அவரைப் போல, நீங்களும் கடவுளாலயத்துள் செல்லலாம். அஃது உங்கள் அகத்துள்ளே இருக்கிறது. இது தாழ்வாயும் கண்டமாயும் அநித்தியமாயுமுள்ள எல்லாவற்றையும் விட்டு, உயர்வாயும் அகண்டமாயும் நித்தியமாயுமுள்ள தத்துவங்களை அபரோட்சமாக அறிந்தபோது எஞ்சி நிற்கும் ஞானமே. அதுதான் அறிவின் தெய்வத்தன்மை. அதுதான் பரம்பொருளின் ஆலயம். நீங்கள் நீண்ட காலம் முயற்சிசெய்து உங்களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் அப்பரிசுத்த ஆலயத்துள் பிரவேசித்தபொழுது மனிதரது சகல நல்ல நினைப்புகளின் பலன்களையும் முடிவுகளையும், நல்ல முயற்சிகளின் பலன்களையும், முடிவுகளையும், மனிதரது சகல தீய நினைப்புகளின் பலன்களையும் முடிவுகளையும், தீய முயற்சிகளின் பலன்களையும், முடிவுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண்பீர்கள். அப்பொழுது ஒழுக்கமில்லாத மனிதன் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால் உங்கள் தெய்வ நம்பிக்கையை இழக்க மாட்டீர்கள். ஏனெனில், அவன் மறுபடியும் வறுமையையும் தாழ்மையையும் அடைந்தே தீரவேண்டுமென்பதை நீங்கள் அறிவீர்கள். ஒழுக்கமில்லாத செல்வந்தன் உண்மையில் தரித்திரனே. நதியின் ஜலம் சமுத்திரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது எச்வவளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமே அவன் சகல செல்வங்களையும் உடையவனாயிருக்கும்பொழுதே வறுமைக்கும் கேட்டிற்கும் சென்று கொண்டிருக்கிறான் என்பது. அவன் செல்வந்தனாக இறந்தபோதிலும், அவனது தீய ஒழுக்கத்தின் தீய பலன்களை அறுப்பதற்கு அவன் திரும்பப் பிறந்தே தீர வேண்டும். அவன் அநேக தடவை செல்வத்தை அடைந்தபோதிலும், அவன் நீண்ட கால இன்ப துன்ப அனுபவங்களால் அவனுடைய அகத்தின் வறுமையை வெல்லும் வரையில் அநேக தடவை வறுமையை அடைந்தே தீரவேண்டும். ஆனால், புறத்தில் செல்வமின்றியும் அகத்தில் ஒழுக்கத்தைக் கொண்டுமிருக்கிற மனிதன் உண்மையில் செல்வந்தனே. அவனது சகல வறுமைகளோடும் அவன் செல்வத்திற்கும் சேவுமத்திற்கும் சென்று கொண்டிருக்கிறான். அவனது வரவிற்காக நித்திய இன்பமும் சுகமும் காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் உண்மையாகவும், நிலையாகவும், செல்வந்தர்களாயிருக்க விரும்புவீர்களாயின், நீங்கள் முதலில் ஒழுக்கமுடையவர்களாதல் வேண்டும். நீங்கள் செல்வத்தை நேராக (ஒழுக்கத்தின் மூலமாக) அல்லாது அடைவதற்குக் கருதுதலும், செல்வம் சம்பாதித்தலொன்றையே உங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளுதலும், செல்வத்தை அடைவதற்கு நீங்கள் பேராசையோடு முயலுதலும் அறிவீனமாகும். இச்செயல்கள் முடிவில் உங்களுக்குத் தோல்வியையே கொடுக்கும். உங்களை ஒழுக்கத்தில் நிறையுடையவர்களாகச் செய்து கொள்வதையும் பிரயோஜனமும் பரோபகாரமுமான செயல்களைச் செய்வதையும் உங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாயும் மாறுதலில்லாததாயும் இருக்கிற நன்மையினிடத்து நம்பிக்கையுடையவர்களாயிருங்கள். நீங்கள் உங்கள் சொந்தத்திற்காகச் செல்வத்தை விரும்பவில்லையென்றும், ஆனால் அதனைக் கொண்டு நன்மை செய்வதற்கும் மற்றவர்களைச் சுகப்படுத்தற்குமே அதனை விரும்புகிறீர்களென்றும் கூறுகின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்புவதன் உண்மையான நோக்கம் இஃதாயிருக்கும் பட்சத்தில், உங்களுக்குச் செல்வம் வந்து சேரும்; நீங்கள் செல்வமுடையவர்களாயிருக்கும்பொழுது நீங்கள் உங்களை அச்செல்வத்தின் சொந்தக்காரர்களாகக் கருதாது, அதனை நல்ல வழிகளில் செலவு செய்து காப்பாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளென்று கருதும் பட்சத்தில் நீங்கள் உண்மையில் பலமும் பரநலமும் உள்ளவர்களே. ஆனால், நீங்கள் உங்கள் நோக்கத்தை நன்றாகச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், மற்றவர்களைச் சுகப்படுத்தும் நோக்கத்தோடு செல்வத்தை விரும்பியவர்களில் பெரும்பாலோர், ஜனங்களால் நேசிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தையும் பரோபகாரி அல்லது சீர்திருத்தக்காரன் என்ற பெயரை அடையவேண்டுமென்ற விருப்பத்தையும் கொண்டவராயிருந்திருக்கின்றனர். உங்களிடத்திலுள்ள சிறிய செல்வத்தைக் கொண்டு நீங்கள் நன்மை செய்யவில்லையானால், நீங்கள் பெரிய செல்வத்தை அடைந்தபோது நீங்கள் அதிக சுயநலமுடையவர்களாவீர்களென்றும், நீங்கள் உங்கள் செல்வத்தைக் கொண்டு செய்வதுபோல் தோன்றிய நன்மைகளெல்லாம் உங்களது தற்புகழ்ச்சி நிமித்தமே செய்யப்பட்டனவென்றும் நம்புங்கள். நன்மை செய்தல் உங்களுடைய உண்மையான விருப்பமாயிருப்பின் நீங்கள் அதனைச் செய்யச் செல்வத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் அதனை இப்பொழுதே, இந்த நிமிஷத்திலேயே, நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே செய்யக்கூடும். நீங்கள் உங்களை மதிக்கிறபடி நீங்கள் உண்மையில் அவ்வளவு பரநலமுடையவர்களாயின் நீங்கள் மற்றவர்கள் நிமித்தம் இப்பொழுதே உங்கள் சொந்த சௌகரியங்களிற் சிலவற்றைக் குறைக்கலாம். நீங்கள் எவ்வளவு எளியவர்களாயிருந்தாலும் பெரிய காரியமில்லை. உங்கள் சுயநலத்தைப் பரித்தியாகம் செய்வதற்கு இடமுண்டு. ஏனெனில், அன்னவஸ்திரப் பணம் மாத்திரம் வாங்கிக் கொண்டிருக்கிற விதவை கூடத் தன் பணம் முழுவதையும் வட்டிக்குக் கொடுக்கிறாள். நன்மை செய்வதற்கு உண்மையில் விரும்புகின்ற ஹிருதயம் செல்வம் வரும் வரையில் காத்திருக்க மாட்டாது. அது பரித்தியாகம் என்னும் பலிபீடத்தின் முன்வந்து, “யான்” என்னும் தகுதியற்ற அபிமானத்தை அவ்விடத்தில் விட்டுவிட்டு, அயலானுக்கும் அந்நியனுக்கும், சிநேகிதனுக்கும் பகைவனுக்கும் ஒரே தன்மையாக உபகாரம் செய்யச் செல்கின்றது. காரியம் காரணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது போல, செல்வமும் பலமும் அக நன்மையோடும், வறுமையும் பலஹீனமும் அகத் தீமையோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பணம் உண்மையான செல்வமுமன்று, அந்தஸ்துமன்று, பலமுமன்று. பணத்தை மாத்திரம் நம்பியிருத்தல் ஒரு வழுக்கிடத்தில் நிற்றலையொக்கும். உங்கள் உண்மையான செல்வம் உங்கள் ஒழுக்கமே. உங்கள் உண்மையான பலம் உங்கள் ஒழுக்கத்தைப் பலம் தரும் வழிகளில் உபயோகித்தலே. நீங்கள் உங்கள் அகத்தைச் சீர்படுத்துவீர்களாயின், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவோராவீர்கள். காமம், வெறுப்பு, வெகுளி, வீண்பெருமை, தற்பெருமை, பேராசை, பொறியின்பம், சுயநலம், மூர்க்கத்தனம் இவையெல்லாம் வறுமையும் பலஹீனமுமாகும். அன்பு, தூய்மை, அமைதி, பணிவு, பொறுமை, இரக்கம், தயாளம், சுயநலம் மறத்தல், சுயநலத் துறத்தல் இவையெல்லாம் செல்வமும் பலமுமாகும். வறுமையின் தத்துவங்களையும் பலஹீனத்தின் தத்துவங்களையும் வென்றபொழுது, எஃதாலும் வெல்லப்பட முடியாததும் எல்லாவற்றையும் வெல்வதுமான ஒரு சக்தி அகத்தினின்று வெளிப்படுகின்றது. மிக உயர்ந்த ஒழுக்கத்தைதக் கைக்கொண்டிருக்கிறவன் உலகம் முழுவதும் தன் முன் கீழ்ப்படியச் செய்கிறான். ஆனால், செல்வந்தர்களும் தரித்திரர்களும் தங்கள் விரும்பாத நிலைமைகளைக் கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்குள்ள துக்கம் பெரும்பாலும் தரித்திரர்களுக்கில்லை. தரித்திரர்களுக்குள்ள சுகம் பெரும்பாலும் ¦ச்லவந்தர்களுக்கில்லை! இதனால் சுகமானது புறப்பொருள்களையாவது புறவுடைமைகளையாவது பொறுத்தமையைப் பொறுத்ததென்றும், அறிகிறோம். ஒருகால், தன்றென்றும், ஆனால் அக நிலை நீங்கள் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கும் எஜமானர்களாயிருக்கலாம்; உங்கள் வேலைக்காரர்களால் நீங்கள் ஓயாத தொந்தரவுகளை அடைந்து கொண்டிருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரர்கள் கிடைத்தால் அவர்கள் உங்களைவிட்டு விரைவில் நீங்கிவிடுவார்கள். இதனால் நீங்கள் மனித சுபாவத்தைப் பற்றிய உங்கள் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறீர்கள், அல்லது முற்றிலும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்கள் வேலைக்காரர்களுக்கு அதிகச் சம்பளங்கள் கொடுத்தும் அதிகச் சுதந்திரங்கள் கொடுத்தும் உங்கள் காரியங்களை சீர்படுத்த முயல்கிறீர்கள். ஆனால், உங்கள் காரியங்கள் முன்போலவே இருக்கின்றன. நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். உங்கள் தொந்தரவுகளின் மர்மம் உங்கள் வேலைக்காரர்களிடத்தில் இல்லை. அஃது உங்களிடத்திலேயே இருக்கின்றது. நீங்கள் உங்கள் குற்றத்தைக் கண்டு நீக்கவேண்டுமென்ற உண்மையான அவாவுடன் உங்கள் அகத்துள் நோக்குவீர்களாயின், நீங்கள் விரைவிலோ தாழ்ப்பிலோ, உங்கள் சகல சந்தோஷங்களுக்குமுரிய மூலத்தை அங்கே காண்பீர்கள். அஃது ஒரு சுயநல அவாவாக அல்லது பிறர்மீது சந்தேகம் கொள்கின்ற, அல்லது அன்பில்லாதிருக்கின்ற ஒரு மனப்போக்காக இருக்கலாம். அதனை நீங்கள் உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் காட்டாவிட்டாலும், அது தனது விஷக்காற்றை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது வீசித் திரும்ப உங்களிடம் வந்து உங்களைப் பாதிக்கின்றது. நீங்கள் உங்கள் வேலைக்காரர்களிடத்தில் அன்புடையவர்களாயிருங்கள். நீங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையும் சௌகர்யத்தையும் கவனியுங்கள். நீங்கள் ஒருவருக்கு வேலைக்காரராயிருந்தால் நீங்கள் செய்ய விரும்பாத அளவுக்கு மிஞ்சிய வேலையை உங்கள் வேலைக்காரர்கள் செய்யவேண்டுமென்று விரும்பாதீர்கள். தனது எஜமானுடைய நன்மையின் நிமித்தம் தன்னை முற்றிலும் மறந்துவிடுகிற ஒரு வேலைக்காரனது ஆன்ம அடக்கத்தைக்காண்பது அருமையாயும் அழகாயுமிருக்கின்றது. ஆனால், தனது சுகத்தை மறந்து தனக்குக் கீழ்ப்பட்ட வேலைக்காரர்களது சுகத்தை நாடுகிற ஒரு எஜமானுடைய ஆன்ம உணர்ச்சியைக் காண்பது அதனினும் அருமையாயும் திவ்வியமாயும் இருக்கின்றது. அத்தகைய மனிதனது சுகம் ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகுகின்றது; தனது வேலைக்காரர்களைப் பற்றிக் குறை கூறும் ஆவசியகம் அவனுக்கு ஏற்படுவது இல்லை. எண்ணிறந்த வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்குகிறவரும், ஒருபோதும் ஒரு வேலைக்காரனையும் தம் வேலையினின்று நீக்காதவருமான ஒரு பெயர் பெற்ற மனிதர், “நான் எனது வேலையாட்களுடன் எப்பொழுதும் மிக சந்தோஷகரமான சம்பந்தங்களையுடையவனாயிருக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் என்னைக் கேட்பீர்களாயின், எப்படி அவர்கள் என்னிடத்தில் நடக்க வேண்டுமென்று நான் விருமபுகிறேனோ, அப்படியே நான் அவர்களிடத்தில் நடக்க வேண்டுமென்ற நோக்கத்தை நான் ஆரம்ப முதல் கொண்டிருக்கிறேனென்று மாத்திரம் சொல்வேன்” என்று கூறினார். விரும்பத்தக்காத சகல நிலைமைகளையும் நீக்குவதற்கும், விரும்பத்தக்க சகல நிலைமைகளையும் அடைவதற்கும் உரிய மர்மம் இதில் அடங்கியிருக்கிறது; உங்களுக்கு உலகத்தில் சிநேகிதர் ஒருவருமில்லையென்றும், உங்களை ஒருவரும் நேகிக்கிறதில்லையென்றும், நீங்கள் தனிமையாயிருக்கிறதாகவும் நீங்கள் கூறுகின்றீர்களா? அப்படியானால், உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களைத் தவிர வேறு ஒருவரையும் குறை கூறாதீர்களென்று உங்களைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் மற்றவர்களிடத்தில் சிநேகம் பாராட்டுங்கள். சிநேகிதர்கள் உங்களைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்களைத் தூயர்களாகவும் நேசிக்கப்படத் தக்கவர்களாகவும் செய்யுங்கள். எல்லாரும் உங்களை நேசிப்பார்கள். தன்னைத் தூய்மையாக்குதலும் தன்னை அடக்கியாள்தலுமாகிய சிருஷ்டி சக்தியை உங்கள் அகத்துள் வளர்ப்பீர்களாயின், உங்கள் உயிருக்குப் பாரமாயிருக்கிற சகல நிலைமைகளினின்றும் நீங்கள் நீங்கிவிடுவீர்கள். உங்களுக்குத் துன்பத்தைக்கொடுக்கிற வறுமை (நான் செல்கிற வறுமை துன்பத்திற்கு மூலமாயிருக்கிற வறுமையேயன்றி, முத்தரும் தவத்தரும் மனதார வேண்டுமென்று உண்டு பண்ணிக் கொள்கிற வறுமையன்று.)யாக இருந்தாலுஞ் சரி, அல்லது உங்களுக்குப் பாரமாகத் தோன்றுகிற செல்வமாக இருந்தாலுஞ் சரி, அல்லது உங்கள் வாழ்க்கையில் நேரும் கேடுகளும் துன்பங்களும் துக்கங்களுமாக இருந்தாலுஞ் சரி, அவற்றையெல்லாம், அவற்றிற்கு ஆதாரமாயிருக்கிற உங்கள் அகத்திலுள்ள சுயநலத் தத்துவங்களை ஒழிப்பதனால் நீங்கள் ஒழித்து விடலாம். சென்ற கால நினைப்புக்களும் செயல்களும் பிழையாத நியதிப்படி தமது பலன்களைக் கொடுக்க வேண்டியவைகளாயும் அவற்றை நாம் அனுபவிக்க வேண்டியவர்களாயுமிருந்தாலும் பெரிய காரியமில்லை. ஏனெனில், நாம் நமது வாழ்நாளின் ஒவ்வொரு நிமிஷத்திலும் புதியபுதிய நினைப்புக்களை நினைத்துக் கொண்டும், புதிய புதிய செயல்களைச் செய்து கொண்டும் இருக்கிறபடியால், நாம் அவற்றையெல்லாம் நல்லனவாக அல்லது தீயனவாகச் செய்து கொள்ளும் சக்தியை உடையவர்களாயிருக்கிறோம். அன்றியும், ஒரு மனிதன் தனது பணத்தை இழக்கும்படி அல்லது தனது நிலையை விடும்படி நேரிட்டால், அவன் தனது தைரியத்தை இழப்பதும் ஒழுக்கத்தை விடுவதும் ஆவசியகமில்லை. இவற்றில்தான் அவனுடைய செல்வமும் பலமும் சந்தோஷமும் இருக்கின்றன. “யான்” என்பதைப் பற்றிக் கொண்டிருக்கிறவன் தன்னை அழிக்கும் விரோதியாகிறான். அவனை அழிப்பதற்காக அவனைச் சுற்றி விரோதிகள் சூழ்கின்றார்கள். ‘யான்’, என்பதைத் துறக்கிறவன் தன்னை இரட்சிக்கும் கர்த்தனாகிறான். அவனைக் காப்பதற்காக அவனைச் சுற்றிச் சிநேகிதர்கள் சூழ்கின்றார்கள். பற்றற்ற ஹிருதயமாகிய தெய்வ கிரணத்தின் முன்னர் சகல இருள்களும் நீங்கிவிடுகின்றன. எவன், ‘யான், என்பதை வென்றானோ அவன் பிரபஞ்சத்தையே வென்றவனாகிறான். நீங்கள் ‘யான்’ என்பதை விட்டு வெளியே வாருங்கள்; நீங்கள் உங்கள் வறுமையை விட்டு வெளியே வந்தவர்களாவீர்கள்; நீங்கள் உங்கள் துன்பத்தை விட்டு வெளியே வந்தவர்களாவீர்கள். நீங்கள் உங்கள் தொந்தரவுகளையும், ஏக்கங்களையும், மனவருத்தங்களையும், குறைகூறல்களையும், தனிமையையும் விட்டு வெளிவந்தவர்களாவீர்கள். உங்கள் அற்ப சுயநலமாகிய கிழிந்த உடையை எறிந்துவிட்டுப் பூரண அன்பாகிய புதிய உடையை உடுத்திக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் அகத்திலுள்ள சுவர்க்கத்தை அபரோட்சமாகக் காண்பீர்கள். அஃது உங்கள் புற வாழ்க்கையிலெல்லாம் பிரதிபிம்பித்துக் கொண்டிருக்கும். ‘யான்’ என்பதை வெல்லும் மார்க்கத்தில் தனது பாதங்களைப் பலமாக வைத்து, தெய்வ நம்பிக்கையாகிய ஊன்றுகோலின் உதவியால், துறவு (‘யான்’ என்பதை விடுதல்)என்னும் பெரும் பாதை வழியாக நடக்கிற மனிதன் மிகமிக மேலான செல்வத்தைஅடைவான். நாள்தோறும் வளர்கின்ற நித்திய இன்பத்தையும் சுகத்தையும்அனுபவிப்பான்- வெண்பா நன்மைஉரு வானமெய்யை நண்ணமுயல் வார்க்கிங்கு மன்னுகின்ற பல்பொருளும் மாண்துணையாம்;- திண்மையென ஒன்றும் உறுவதில்லை; உற்றாலும் அஃதெல்லாம் சென்றொழியும் மெய்யறிவால் தேய்ந்து (மெய்-கடவுள்; மாண்-நல்ல.) வான்மீனை மேகம் மறைத்தல்போல் துன்பம்தான் தேன்மானும் இன்பத்தைத் தேய்க்குமால்;-ஈன நரகம் சுவர்க்கமுன் நண்ணும் இராத்தான் இரவிமுன் நண்ணல்போல் இங்கு (மீனை-நக்ஷத்திரத்தை) தவறல்கள் மேன்மைத் தலைசேர்க்கும் ஏணிக் குவவார் படிகளெனக் கொள்வாய்;-கவலைதரும் நட்டம் இலாபத்தை நல்கும்; பருவத்தில் கட்டம் சுகம்நல்கும் காண். (குவவு ஆர்-பெருமை நிறைந்த) துன்பம் கடவுளியல் தூயசெயல் சொல்நினைப்போ டின்பம் தரும்நெறிகள் எய்துவிக்கும்;-மன்பதைகள் மேம்பா டுறுநெறியில் மேகஇருள் எல்லொளிகள் தாம்பா டுறமன்னும் சார்ந்து. (எல்-பிரகாசமுள்ள; பாடு உற-பெருமையுற) தேடிநாம் காண்டற்கும் செய்துநாம் கொள்ளற்கும் நாடியிருக் கின்றபொருள் நன்றின்பம்-வீடிவற்றின் மார்க்கத்தில் சார்ந்து மறைக்கும் இருட்குழுவைச் சேர்க்குங்காண் போகூழ் தெரி. (நன்று-அறம்; போகு ஊழ்-தீய ஊழ்) நாமடைய உன்னுகின்ற நன்னிலையின் மார்க்கத்தில் நாமடையும் ஐயஇருள் நாமஇருள்-சேம உயிரை யடுகின்ற ஊழ்நிலைமை யெல்லாம் செயிரை யடும்படிகள் தேர். (ஐயம்-சந்தேகம்; நாமம்-அச்சம்) நம்முடைய சுற்றத்தார் நம்மைவிட்டு நீங்குதலால் தம்முடைய காரியத்தே தம்கருத்தைச்-சும்மா செலுத்துதலால் ஆம்துக்கம் சீர்ஞான வீட்டுள் செலுத்துநெறி யென்றே தெரி. (ஆம்-நமக்கு உண்டாகும்) விதியால் உழந்து மெலிந்துவரு வோனைப் பதிபால் உறச்செய்யும் பால-மதியால் உளத்தைப் புரத்தலும் ஒள்ளறிவும் அன்பும் வளத்தைப் பெருக்கருளும் மற்று. (பதி-கடவுள்;பால-தன்மையன)   9 நினைப்பின் மௌன வலிமை நினைப்பின் மௌன வலிமை (சக்திகளை ஆளுதலும் செலுத்தலும்) பிரபஞ்சத்திலுள்ள சக்திகளிலெல்லாம் மிக வலிமையுள்ள சக்தி மௌன சக்தி. “மௌனம் மலையைச் சாதிக்கும்.” சரியாகச் செலுத்துங்காலையில், ஒரு சக்தி எவ்வளவுக்கெவ்வளவு வலிமையுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு இலாபத்தையும், பிசகாகச் செலுத்துங்காலையில், அவ்வளவுக்கவ்வளவு கஷ்டத்தையும் தரும். நீராவி, மின்சாரம் முதலிய யந்திர சக்திகள் சம்பந்தப்பட்டமட்டில் இவ்வுண்மையைப் பலரும் அறிவித்திருக்கின்றனர். ஆனால், சக்திகளிலெல்லாம் மிகமிக வலியதாகிய நினைப்புச் சக்தியை, சிருஷ்டிக்கும் பிரவாகமாகவும் சம்ஹரிக்கும் பிரவாகமாகவும் அனுப்பிக் கொண்டிருக்கிற மனோவுலகம் சம்பந்தபட்டமட்டில் இவ்வுண்மையை அறிந்து உபயோகிப்பவர் மிகச் சிலரே. தாம் அபிவிருத்தியாகிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் மனிதர் அச்சக்திகளை ஆளுவதற்குத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுடைய தற்கால முக்கிய நோக்கமெல்லாம் அச்சக்திகளை அடக்கியாளுதலே. இந்த ஸ்தூல உலகத்தில் மனிதர் அடையக் கூடிய ஞானமெல்லாம் தன்னை அடக்கியாள்தலிலேயே அடங்கியிருக்கிறது. “உங்கள் விரோதிகள்பால் அன்பு பாராட்டுங்கள்” என்னும் கட்டளையானது, இப்பொழுது மனிதர்களை அடிமையாக்கிச் சுயநலப் பிரவாகங்களில் அடித்துக் கொண்டுபோகிற மனோசக்திகளை வசப்படுத்தி அடக்கியாளுதற்குரிய ஞானத்தை அடைவதற்கு நீங்கள் இப்பொழுதே, இங்கேயே தொடங்குங்கள் என்று உபதேசிக்கின்றது. பரம்பொருட் சட்டத்தைப் பூரணமாக அறிந்திருந்த எபிரேய தேசத்துத் தீர்க்கதரிசிகள், புறச்சம்பவங்கள் அக நினைப்போடு சம்பந்தப்பட்டவையென்றும். ஒரு தேசத்தின் அழிவோ ஆக்கமோ அக்காலத்தில் அத்தேசகத்தாரை ஆண்டு கொண்டிருக்கும் நினைப்புகளையும் அவாக்களையும் பொறுத்ததென்றும் எப்பொழுதும் சொல்லி வந்தார்கள். அனைத்திற்கும் காரணமாகிய நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவு, உண்மையான சகல ஞானத்திற்கு பலத்திற்கும் ஆதமாரமாயிருப்பதுபோல அவருடைய தீர்க்க தரிசனத்திற்கும் ஆதாரமாயிருந்தது. தேச சம்பவங்கள் தேசத்தாரது மனோசக்திகளின் வேலைகளேயன்றி வேறல்ல. யுத்தங்களும், தொத்து நோய்களும் பஞ்சங்களும் பிசகாகக் செலுத்தப்பட்ட மனோ சக்திகள் ஒன்றோடொன்று சந்திப்பதாலும் மோதுவதாலும் உண்டாகின்றன. அவைதாம் பரம்பொருட் சட்டத்தின் காரியஸ்தரென்ற அறிவு வெளிப்படும் ஸ்தானங்களாம். யுத்தத்திற்கும் ஒரு மனிதனது அல்லது ஒரு கூட்டத்தாரது செல்வாக்கே காரணமென்று கூறுதல் அறிவீனம். அஃது ஒருதேசத்தாரது சுயநலத்தின் மிகக் குரூரமான கோரச் செயல். எல்லாப் பொருள்களையும் காட்சிக்குக் கொண்டு வருவன மௌனமும் வெற்றியும் பொருந்திய நினைப்புச் சக்திகளே. பிரபஞ்சம் நினைப்பிலிருந்தே வெளிப்பட்டது ஜடப் பொருள்களைப் பகுத்துக்கொண்டு போகப்போகக் கடைசியாக மீதமாவது திரிசியமான நினைப்பென்றே தத்துவ சாஸ்திரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதரால் செய்யப்பட்ட காரியங்களெல்லாம் முதலில் நினைப்பில் செய்யப்பட்டுப் பின்னரே காட்சிக்கு வந்தன. நூலாசிரியரும் உண்மை காண்போரும் சிற்பிகளும் தமது வேலைகளை முதலில் நினைப்பால் செய்து முடிக்கின்றனர்; நினைப்புலகத்தில் தமது வேலைகளைச் சரியாகவும் பூரணமாகவும் செய்து முடித்த பின்னரே, அவற்றைக் காட்சியுலகத்திற்குக் கொண்டு வருவதற்காக ஸ்தூலப்படுத்தத் தொடங்குகின்றனர். எல்லாவற்றையும் ஆள்கின்ற பரம்பொருட் சட்டத்திற்கு ஒற்றுமையாக நினைப்புச் சக்திகளைச் செலுத்தும்போது, அவை சிருஷ்டிக்கும் சக்திகளும் இரக்ஷ£க்கும் சக்திகளுமாகின்றன; அவை அச்சட்டத்திற்கு மாறாகச் செலுத்தப்படுங்காலையில் பிரிக்கும் சக்திகளும் அழிக்கும் சக்திகளுமாகின்றன. உங்கள் நினைப்புகள் நன்மை வடிவாயிரா நின்ற கடவுளின் சர்வசக்தியிலும் ஆள்கையிலும் அசையாத பூரண நம்பிக்கையைக் கொள்ளுதல், நீங்கள் அக்கடவுளோடு ஐக்கியமாகும்படிக்கும் நீங்கள் உங்கள் அகத்துள்ள சகல தீமைகளின் காரணத்தையும் பரிகாரத்தையும் காணும்படிக்கும் செய்யும். நீங்கள் கடவுளை நம்புவீர்களாயின், நீங்கள் நீடூழி வாழ்வீர்கள்; இந்நம்பிக்கையே உங்கள் ரக்ஷ¢ப்புக்கு வழி; நித்திய நன்மையாயிருக்கின்ற கடவுளின் மெய்யொளியில் பிரவேசித்தலே இருளினின்று நீங்குதலும் துன்பத்தினின்று இரக்ஷ¢க்கப்படுதலுமாம். எவ்விடத்தில் அச்சமும் தொல்லையும் கவலையும் ஐயமும் எரிச்சலும் ஆசாபங்கமும் இருக்கின்றனவோ அவ்விடத்தில் நம்பிக்கையின்மையும் அஞ்ஞானமும் இருக்கின்றன. இம் மனோநிலைமைகளெல்லாம் சுயநலத்தின் நேரான பலன்கள்; அவை தீமையின் வலிமையிலும் தலமையிலும் உள்ளூரக் கொண்டுள்ள நம்பிக்கையை ஆதரவாகக் கொண்டுள்ளன; ஆதலால் அவை அநுபவ நாஸ்திகமாம்; ஆன்மாவைக் கெடுக்கும் இம் மனோநிலைமைகளுக்கு இடம் கொடுத்தலும் ஆளாகுதலுமே மெய்யான நாஸ்திகம். மனித சமூகம் வேண்டுவது இந்நிலைமைகளிலிருந்து இரக்ஷ¢க்கப்படுதலே; இந்நிலைமைகளின் ஆளாகவும் அடிமையாகவும் இருக்கிற எந்த மனிதனும் தான் இரக்ஷ¢ப்பை அடைந்து விட்டதாக வீண்பெருமை பாராட்ட வேண்டாம். அஞ்சுதலும் கவலுதலும் கடவுளை நிந்தித்தலையொத்த ஒரு பாவமாகும்; ஒருவன் நித்திய நியாயத்தில், சர்வ வல்லமையுள்ள நன்மையில், அகண்டாகாரமான அன்பில், உள்ளுறுத்திய நம்பிக்கை கொண்டிருப்பானாயின், அவன் அச்சத்தையாவது கவலையையாவது எப்படி அடைதல் கூடும்? தான் அஞ்சுதலும் கவலுதலும் ஐயுறுதலும் அப்பொருளை மறுத்தலையும் நம்பாதிருத்தலையும் ஒக்கும். இத்தகைய மனோநிலைமைகளிலிருந்துதான் சகல பலஹீனங்களும் தவறுதல்களும் உண்டாகின்றன; ஏனெனில் அவை உண்மையான நினைப்புச் சக்திகளைப் பிரித்து அழிகின்றன; அவை அவ்வாறு அழிக்கப்படாவிட்டால், அவை மிகுந்து வலிமையோடு தமது காரியத்தை விரைந்துசெய்து, தமது இலாபகரமான பலன்களைக் கொடுக்கும். இந்நிலைமைகைளை ஒழித்தல், பலமுள்ள ஒரு வாழ்வை அடையும்படிக்கும் அடிமையாயிருத்தலை விட்டு அரசனாக்கும்படிக்கும் செய்யும்; இந்நிலைமைகளை ஒழிப்பதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு. அஃது அகஞானத்தில் நிலையாக மேன்மேலும் வளர்ந்து கொண்டிருத்தலே. மனத்தினால் தீமையை மறுப்பது மட்டும் போதாது; ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும், நன்மையை மனத்தினால் அங்கீகரித்தல் மட்டும் போதாது; விடாத முயற்சியால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும். மனத்தை அடக்குவதற்காக விவேகத்தோடு செய்யும் அப்பியாசம், ஒருவனது அகத்தின் நினைப்புச் சக்திகளைப் பற்றிய ஞானத்தை விரைவில் அடையுமாறு செய்து, பின்னர் அவற்றைச் சரியாகச் செலுத்துவதற்கும் உபயோகித்தற்கும் வேண்டும் பலத்தை அடையுமாறும் செய்கின்றது, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களை ஆளுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் மனோ சக்திகளை நீங்கள் ஆண்டு உங்கள் காரியங்களையும் புற நிலைமைகளையும் ஆள்வீர்கள். எந்த மனிதன் கைபட்டால் எல்லாம் அழிந்து போகின்றனவோ, எந்த மனிதன் தன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிகளை வைத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறானோ அந்த மனிதனை எனக்குக் காட்டுங்கள். அவன் வலிமைக்கு நேர் மாறுதலையான மனோநிலைமைகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருக்கிறானென்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். ஐயமாகிய சேற்று நிலத்தில் எப்பொழுதும் உழன்று கொண்டிருத்தலும், அச்சமாகிய உதிர் மணல்களை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டிருத்தலும், கவலையாகிய காற்றுக்களால் இடைவிடாது அலைக்கப்படுதலும், ஓர் அடிமையின் வாழ்வை அடையும்படி செய்யும். அத்தகைய மனிதன் கடவுளிடத்து நம்பிக்கை வையாததாலும், தன்னைச் சரியாக ஆளாததாலும் தனது காரியங்களைச் சரியாக ஆள்வதற்குத் திறமையில்லாதவனாயும் தனது நிலைமைகளுக்கு ஓர் அடிமையாயும் இருக்கிறான்; உண்மையில் அவன் தனக்கே அடிமையாயிருக்கிறான்; அத்தகைய மனிதர்க்குத் துன்பமே ஆசான்; அவர் சகிக்க முடியாத கொடிய துன்ப அநுபவத்தால் பலஹீனம் நீங்கிக் கடைசியாகப் பலம் பெறுகின்றனர். நம்பிக்கையும் காரியமுமே வாழ்க்கையின் பலமும் நோக்கமும் ஆகும். உறுதியான தெய்வ நம்பிக்கையும் அசையாத காரிய சிந்தனையும் எக்காரியத்தையும் முடிக்கும். தெய்வ நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலால், நினைப்புச்சக்திகள் ஒன்று சேர்கின்றன. நல்ல காரிய சிந்தனையை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்துவதனால், செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நோக்கி நினைப்புச் சக்திகள் செல்லுகின்றன. நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, நீங்கள் வெற்றியையாவது பிரயோஜனத்தையாவது வலிமையையாவது எள்ளளவேணும் அடையவேண்டுமானால். நீங்கள் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்த்து உங்கள் நினைப்புச் சக்திகளை ஒருமுகப்படுத்துவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் வியாபாரிகளென்று வைத்துக் கொள்வோம்; நீக்கமுடியாத ஒரு கஷ்டமோ நஷ்டமோ திடீரென உங்கள்பால் வருகின்றது. உடனே நீங்கள் அச்சத்தையும் கவலையையும் கொள்ளுகின்றீர்கள்; நீங்கள் உங்கள் புத்தியை இழக்கும் நிலைமைக்கு வந்துவிடுகின்றீர்கள். அத்தகைய ஒரு மனோநிலைமையைக் கொண்டிருத்தல் அழிவையே கொடுக்கும்; ஏனெனில், அகத்துட் பிரவேசிக்கும்பொழுது, காரியத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் சக்தி நீங்கிவிடுகின்றது. அச்சமயத்தில், நீங்கள் அதிகாலையிலாவது இராத்திரியிலாவது அமரிக்கையாயிருக்கும் ஒரு நேரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்; அந்நேரத்தில் நீங்கள் ஓர் தனித்த இடத்திற்காவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் நேரிடாத ஓர் அரங்கிற்காவது செல்லுங்கள்; அவ்விடத்தில் நீங்கள் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் கொடுக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டு, உங்களுக்குக் கவலையைக் கொடுக்கிற விஷயத்தினின்றும் உங்கள் மனத்தைப் பலவந்தமாக நீக்கிவிடுங்கள்; சிறிது நேரத்துள் அமைதியும் உறுதியுமுள்ள ஒரு பலம் உங்கள் மனத்திற்குள் உங்களுக்குத் தெரியாமல் பிரவேசிக்கும்; உடனே உங்கள் கவலை நீங்கிப் போய்விடும். எந்த நிமிஷத்தில் உங்கள் மனம் கவலையாகிய தாழ்ந்த ஸ்தானத்திற்குத் திரும்புகின்றதோ, அந்த நிமிஷத்திலேயே உங்கள் மனத்தை அதனின்று திருப்பி, அமைதியையும் பலத்தையும் கொடுக்கின்ற ஸ்தானத்திற்குக் கொண்டு போய் மறுபடியும் அங்கு நிறுத்துங்கள். இதனை நீங்கள் பூரணமாகச் செய்து முடித்தபொழுது உங்கள் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்குரிய வழிகளைச் சிந்திப்பதில் உங்கள் மனத்தை ஏகாக்கிரப்படுத்துங்கள்; நீங்கள் கவலையாயிருந்தபோது உங்களுக்குச் சிக்கலாகவும் நீக்க முடியாததாகவும் தோன்றிய விஷயம் இப்பொழுது சிக்கலற்றதாகவும் நீக்கக்கூடியதாகவும் தோன்றும்; இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அதனைச் செய்வதற்குரிய மார்க்கத்தையும் கவலையும் சஞ்சலமுமில்லாத மனத்திற்கு மாத்திரம் சொந்தமான தெளிவோடும் அறிவோடும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மனத்தைப் பூரண அமைதிக்குக் கொண்டு வரச் சக்தியுள்ளவர்களாவதற்கு நீங்கள் பல நாள் முயல்வது ஆவசியகம்; ஆனால், இடைவிடாது முயன்றால் நீங்கள் நிச்சயமாக அதனைச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் அமைதியாயிருக்கும் நேரத்தில் நீங்கள் எதனைச் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பகற்காலத்தில் உங்கள் வியாபாரத்தில் பிரவேசித்தபொழுது உங்கள் கவலைகள் மறுபடியும் உங்கள் அகத்தில் பிரவேசித்து உங்களை ஆளத் தொடங்கும்; அப்பொழுது முன் அமைதியான நேரத்தில் நீங்கள் குறித்த காரியமும் மார்க்கமும் பிசகானவையென்றும் அறிவில்லாதவையென்றும் நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனால். அவ்வித நினைப்புக்களுக்கு நீங்கள் இடங்கொடுத்தல் கூடாது. அமைதியான நேரத்தில் தோன்றிய காரியத்தையோ மார்க்கத்தையோ நீங்கள் சிறிதும் விடாது பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் கவலையின் நிழல்களைப் பின்பற்றாதீர்கள். அமைதியான நேரமே சரியான அறிவையும் தெளிவையும் கொடுக்கிற நேரம். மனத்தை அவ்விதமாகப் பயிற்றுவதால் சிதறுண்ட நினைப்புச் சக்திகள் திரும்ப ஒன்று சேர்ந்து குறித்த காரியத்தில் சென்று அதனைச் செய்து முடிக்கும். அமைதியும் பலமுமுள்ள ஒரு நினைப்பின் ஏகாக்கிரத்தின் முன் எத்தகைய கஷ்டமும் நிலை நிற்கமாட்டாது. ஒருவனது மனோசக்திகளை விவேகத்துடன் செலுத்துவதாலும் உபயோகிப்பதாலும் முடிக்கக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் அகத்துள் ஆழ்ந்து சென்று ஆராய்ந்து தேடி, அங்கு ஒளிந்து கொண்டிருக்கிற உங்கள் விரோதிகளையெல்லாம் ஒழிக்கும் வரையில் நீங்கள் நினைப்பின் கூரிய வலியையாவது, புறத்திலுள்ள ஸ்தூலப் பொருள்களுக்கும் உங்கள் நினைப்புக்கும் உள்ள பிரிக்க முடியாத சம்பந்தத்தையாவது, உங்கள் நினைப்பு சமநிலையில் வைக்கப்பட்டுச் சரியாக செலுத்தப்படுங்காலையில் உங்கள் வாழ்க்கை நிலைமைகளைச் சரிப்படுத்திச் சீர்திருத்தும் அதன் சக்தியையாவது நீங்கள் சிறிதும் அறிய முடியாது. நீங்கள் நினைக்கிற ஒவ்வொரு நினைப்பும் நீங்கள் வெளியில் அனுப்புகிற ஒவ்வொரு சக்தியாகும். அதன் இயற்கைக்கும் வலிமைக்கும் ஒத்தவாறு அது வெளியே சென்று அதனைப் பெறத்தக்க மனங்களுட் பிரவேசித்துத் தங்கும்; அது திரும்ப நன்மையாகவோ தீமையாகவோ உங்கள்பால் வந்து சேரும். ஒரு மனத்திற்கும் மற்றைய மனங்களுக்கும் இடைவிடாத சம்பந்தமும் இடைவிடாத கொடுக்கல் வாங்கல்களும் இருக்கின்றன. சுயநல நினைப்புக்களும் கலக்க நினைப்புக்களும் கேட்டையும் அழிவையும் கொடுக்கும் தீமையாகிய பேயின் தூதர்; அவை வெளியிற் சென்று மற்றை மனங்களிலுள்ள தீமையை உயிர்ப்பித்து வளர்க்கின்றன. அவை திரும்ப உங்கள்பால் அதிக பலத்தோடு வந்து சேர்கின்றன. ஆனால் அமைதியும், தூய்மையும், பரநலமுமுள்ள நினைப்புக்கள் உங்கள் அகத்தினின்று வெளிப்பட்டு உலகத்திலுள்ள தீயசக்திகளைக் கெடுத்து, உலகத்திற்கு ஆரோக்கியத்தையும், §க்ஷமத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் நன்மையாகிய தெய்வத்தின் தூதர்கள்; அவை கவலையாலும் துக்கத்தாலும் வருந்துகின்ற மனத்திற்கு அமைதியையும் சுகத்தையும் கொடுத்து அழிந்துபோன உள்ளங்களுக்கு அழியாத் தன்மையைத் திரும்பக் கொடுக்கின்றன. நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம். உண்மையான பலத்தையும் நிலையான சாந்தியையும் அடைய வேண்டினால், தன்னை அடக்குதலையும் தன்னை ஆள்தலையும், தன்னைச் சுத்தப்படுத்துதலையும் தவிர வேறு மார்க்கமே இல்லை. நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் செல்லுதலானது உலகத்தில் உங்களை ஆண்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் செய்துவிடும். உங்கள் அற்ப விருப்பு வெறுப்புகளையும், உங்கள் கோபமும் சந்தேகமும் பொறாமையுமாகிய வெறிகளையும், உங்களை அடிமைகளாக்கி ஆளாநின்ற நிலையற்ற மற்றைய குணா குணங்களையும் நீங்கள் வெல்ல வேண்டும். உங்கள் வாழ்க்கையாகிய வஸ்திரத்தைச் செல்வமும் இன்பமுமாகிய பீதாம்பரமாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புவீர்களாயின், மேற்சொல்லிய வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். உங்கள் அகத்திலுள்ள நிலையற்ற குணா குணங்களுக்கு நீங்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருக்கிறீர்களோ அவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் ஜீவ யாத்திரையில் மற்றைய மனிதர்களையும் வெளித் துணைகளையும் சார்ந்திருக்க வேண்டிய ஆவசியகம் ஏற்படும். நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உறுதியாகவும் பத்திரமாகவும் செல்லவும் ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கவும் விரும்புவீர்களாயின், நீங்கள் கலக்கத்தையும் தோல்வியையும் உண்டுபண்ணும் சகல சஞ்சலங்களையும் ஒழித்துவிட வேண்டும். நீங்கள் “மௌனநிலை”களை அடைவதற்கு, அஃதாவது உங்கள் மனத்தை அமைதியாக்குவதற்கு நாள்தோறும் பழகவேண்டும். இது கவலையுள்ள நினைப்பிற்குப் பதில் அமைதியுள்ள நினைப்பையும், பலஹீன நினைப்புக்குப் பதில் பலமுள்ள நினைப்பையும் கொள்வதற்கு ஒரு வழி. இதனை நீங்கள் செய்து முடிக்கும் வரையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சம்பாதித்த காரியங்களிலும் வேலைகளிலும் வெற்றியைடையத்தக்க விதத்தில் உங்கள் மனோசக்திகளைச் செலுத்த முடியாது. இஃது ஒருவனுடைய சிதறுண்ட சக்திகளை ஒரு நல்ல மார்க்கத்தில் செலுத்துவதற்கு உபாயமாகும். சிதறுண்ட பல நீரோட்டங்களையும் கேட்டை விளைவிக்கும் பல நீரோட்டங்களையும் நன்றாக வெட்டியுள்ள ஒரு வாய்க்காலில் செலுத்துவதால், அதன் பக்கத்திலுள்ள பிரயோஜனமற்ற ஒரு நிலத்தைப் பொன் போன்ற கதிர்களைக் கொடுக்கும் ஒரு நன்செயாகவோ அல்லது நல்ல கனிகளைக் கொடுக்கும் ஒரு தோட்டமாகவோ செய்துவிடலாம்; அதுபோல எவன் அமைதியை அடைந்து தனது அகத்திலுள்ள நினைப்போட்டங்களை அடக்கி அவற்றை நல்ல நெறிகளில் செலுத்துகிறானோ அவன், தனது ஆன்மாவை இரக்ஷ¢ப்பதோடு தனது அகத்தையும் வாழ்வையும் பயன் தருவனவாகச் செய்கிறான். நீங்கள் உங்கள் மனோ எழுச்சிகளையும் நினைப்புக்களையும் ஆளும் திறமையை அடைந்த காலையில், உங்கள் அகத்துள் ஒரு புதிய மௌனசக்தி வளர்வதையும், அமைதியும் பலமுமுள்ள ஒரு நிலையான உணர்ச்சி உங்களிடத்தில் தங்குவதையும் நீங்கள் அறியத் தொடங்குவீர்கள். அப்பொழுது, உங்கள் அந்தரங்க சக்திகள் வெளிப்படத் தொடங்கும்; அப்பொழுது நீங்கள் வெற்றியைக் கொடுக்கும் அமைதியோடும் நம்பிக்கையோடும் உங்கள் வேலைகளைச் செய்துமுடிக்கும் சக்தியுள்ளவர்களாவீர்கள். நீங்கள் இப்புதிய சக்தியையும் பலத்தையும் அடைகிற சமயத்திலே உங்கள் அகத்துள் “ஆன்ம தரிசனம்” என்று சொல்லா நின்ற அகவிளக்குப் பிரகாசிக்கும். அதன் பின்னர் நீங்கள் இருளில் வழி தெரியாமல் நடக்க மாட்டீர்கள்; வெளிச்சத்தில் வழி தெரிந்து நடப்பீர்கள். அவ்வான்ம விளக்கம் வளரவளரப் பகுத்தறிவும் நுண்ணுணர்வும் அளவு கடந்து அதிகரித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது எதிர்காலச் சம்பவங்களையும் உங்கள் முயற்சிகளின் பலன்களையும் முன்கூட்டிச் சரியாக அறியத்தக்க ஞான திருஷ்டி உங்கள் அகத்துள் வளரும். உங்கள் அகத்துள் எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மாறுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் புறவாழ்வு மாறுதலடையும். மற்றவர்கள் சம்பந்தமாக உங்கள் மனப்போக்கை நீங்கள் மாற்றுங்காலையில் உங்கள் சம்பந்தமாக அவர்கள் கொண்டுள்ள மனப்போக்கையும் நடக்கையையும் மாற்றுவார்கள். நீங்கள் தாழ்வையும் பலஹீனத்தையும் அழிவையும் கொடுக்கும் நினைப்புக்களை ஒழித்த காலையில், பலமும் சுத்தமும் உயர்வும் பொருந்திய மனங்களால் சிருஷ்டிக்கப்படும் உண்மையும் வலிமையும் ஆக்கமும் பொருந்திய நினைப்போட்டங்களை அடைவீர்கள்; உங்கள் சந்தோஷம் அளவு கடந்து அதிகப்படும்; தன்னை ஆள்வதால் உளதாகும் இன்பத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் நீங்கள் அடையத் தொடங்குவீர்கள். இவ்வின்பமும் பலமும் செல்வாக்கும் இடைவிடாது உங்களிடத்திலிருந்து வெளியில் சென்று கொண்டிருக்கும்; உங்கள் முயற்சி ஒன்றுமில்லாமலும், உங்களுக்குத் தெரியாமலும் வலிய மனிதர்கள் உங்கள்பால் வந்து சேர்வார்கள்; செல்வாக்கு உங்கள் கையில் கொடுக்கப்படும்; உங்கள் நினைப்புக்களின் மாறுதலுக்குத் தக்கபடி உங்கள் புறநிலைமைகளும் மாறுதலடையும். “ஒரு மனிதரது விரோதிகள் அவன் சொந்த வீட்டுக்காரர்களே.” எவன் பயனும் பலமும்சுகமும் அடைய விரும்புகிறானோ, அவன் இன்மையும் இரவும் மலமும் பொருந்தியநினைப்போட்டங்களைக் கொள்ளும் ஒரு கலனாயிருத்தல் கூடாது. அறிவுள்ளகிருகஸ்தன் ஒருவன் தனது வேலைக்காரர்களையெல்லாம் சரியாக ஆண்டு நல்லவிருந்தினரைத் தன் வீட்டிற்கு அழைப்பதுபோல், மனிதன் தனது அவாக்களையெல்லாம்சரியாக ஆண்டு நல்ல நினைப்புக்களைத் தனது ஆன்மாவின் அரண்மனைக்குள்விடுவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும். தன்னை அடக்கியாள்வதில் சிறிய வெற்றியைஅடைந்தாலும் அது பெரிய வலிமையை அவனுக்குக் கொடுக்கும். எவன் இந்த மேலானகாரியத்தைப் பூரணமாகச் செய்து முடித்தானோ, அவன் அதற்குமுன் சொப்பனத்திலும்காணாத ஞானத்தையும், மனோபலத்தையும், சாந்தத்தையும் அடைகிறான். தன்னைச்சரியாக ஆளுகிறவன் பிரபஞ்சத்திலுள்ள சகல சக்திகளும் தனக்கு உதவி புரிவதையும்ஊழியம் செய்வதையும் அபரோட்சகமாகக் காண்பான். வெண்பா மிகவுயர்ந்த வான்சுவர்க்கம் வேண்டுவையேல் என்றும் தகவுயர்ந்த நன்னினைவே தாங்கு;-மிகவிழிந்த கீழ்நிரயம் வேண்டுவையேல், கேடெல்லாம் நல்குமொரு தாழ்நினைவே யெஞ்ஞான்றுந் தாங்கு. (தகவு-ஒழுக்கம்) நின்னினைப்பே நின்மேல் நிலவும் சுவர்க்கமாம்; நின்னினைப்பே நின்கீழ் நிரயமாம்;-நின்னினைப்பை யன்றியிவண் இன்பம் அணுவுமில்லை; நின்னினைப்பை யன்றியிவண் துன்பமிலை யாங்கு. (ஆங்கு-அவ்வாறு) நினைப்பதனை நீத்தக்கால் நீழுலகம் நீங்கும்; நினைப்பதனை நீத்தக்கால் நீங்கும்-வினைப்பயன்கள்; நித்தியமா யுள்ள நினைப்பினின்றே காலமுதல் தத்துவமெல் லாம்நிகழுஞ் சார்ந்து. (சார்ந்து-பொருந்தி) மதிப்பும் அவமதிப்பும் மாண்அன்பும் வன்பும் துதிப்பு மிழிப்புமின்பும் துன்புங்-கதிப்புடனே ஊழையாள் கின்ற உரஞ்சால் நினைப்பினது கோழைவே டங்களெனக் கொள். (வன்பு-பகை) விழையும் இரவியது வெள்ளொளியே யீங்கு மழைவில்லின் பன்னிறமா மாறும்;-தழைவோ டிலகுமொரு மெய்ப்பொருளே எல்லோருங் காணும் உலகினது பல்பொருளாம் ஓர். (விழையும்-(எல்லோரும்)விரும்பும்) மெய்ப்பொருளோ நின்மனத்துள் வீற்றுளது;நின்னான்மா மெய்ப்பொருளை யெய்திநிற்க வேண்டுவையேல்-கைப்பொருளை நின்மனமெஞ் ஞான்றும் நினைக்கும்படி செயல்நின் கன்மமென நன்றாகக் காண். (கைப்பொருளை-ஒழுக்கமாகிய பொருளை) அந்நினைவு நின்கொள்கை யாவையுமே மெய்யாக்கும்; புன்னிரயச் சொற்பனத்தைப் போக்கடிக்கும்; – நன்னடையுந் தூயதவ மும்பூண்டார் தொன்றுதொட்டு வாழின்பம் ஏயசுவர்க் கத்துள் இடும். (மெய்யாக்கும்-உண்மையாக்கும்) இன்பத்தை யாக்குவ தின்பநினைப் பெஞ்ஞான்றுந் துன்பத்தை யாக்குவது துன்பநினைப்-பென்புடல்செய் புண்ணியபா வங்களுடன் பொய்யிருளும் மெய்யொளியும் நணணுநினைப் பாக்கிநிற்கும் நன்கு. (என்பு உடல்-எலும்புடைய சரீரம்) சீர்சான்ற மெய்யைத் தினமுநினைப் பாயேல்நீ, சீர்சான்ற மெய்யைத் தெரிவாய்நீ;-ஏர்சால் மகத்தான மெய்யை மனத்துட்கொள் வாயேல், மகத்தான மெய்யாவாய் மற்று. (மெய்யை-மெய்ப்பொருளை)   10 ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும் ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும் பாரதக் கதையில் துரியோதனன் பாண்டவரைக் கொல்வதற்காகச் செய்த பல வஞ்சகங்களினின்றும் அவர்கள் தப்பிப் பிழைத்ததை நாம் பாலியர்களாயிருந்த காலத்தில் எவ்வளவு ஆவலோடு வாசித்தோம்! துரியோதனனது வஞ்சகங்களினின்று பாண்டவர்கள் தப்புவார்களென்பதையும், முடிவில் பாண்டவர்களே துரியோதனனாதிகளை வெல்வார்களென்பதையும், நமது சிற்றறிவு எவ்வளவு நன்றாக அறிந்திருந்தது! ஏனெனில் மெய்ப்பொருள் சர்வ வல்லமையும் சர்வ நியாயமுள்ளதென்பதும், அது நன்மையையும் நியாயத்தையும் கைவிடாதவர்களைக் கைவிடுவதில்லையென்பதும் நமக்குத் தெரியும். கடைசியில், பாண்டவர்கள் துரியோதனனாதிகளை வென்று, தமது அரசாட்சியைக் கைக்கொண்டபொழுது, நமது மனம் எவ்வளவு பெரிய சந்தோஷத்தை அடைந்தது. மெய்ப்பொருள் அணுவுக்கணுவாய் நமது காட்சிக்குப் புலப்படாததாயிருந்தும், அது எல்லாவற்றையும் வெல்லுஞ்சக்தியைக் கொண்டு, நல்லவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சுகத்தையும், அவற்றை அடைவதற்குத் தக்க நிலைமைகளையும் கொடுக்கின்றது; அன்றியும் அது ஞான வளர்ச்சியினால் நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவையும் உயிர்களின் அகவுலகத்தை ஆளும் சட்டங்களைப் பற்றிய அறிவையும் அடைந்திருக்கிறவனுடைய ஆன்மா ஐக்கியமாகி நித்தியமாக வாழ்கின்றது. நன்மை வடிவாயிருக்கிற கடவுளுக்குச் சரியாக எவர் தமது அகத்தை நல்லதாக்க நாள்தோறும் முயல்கின்றனரோ, அவர் உண்மையில் மெய்யான ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சுகத்தையும் அடைகின்றனர். நன்மைக்கு உவமையாகச் சொல்லத்தக்க பொருள் ஒன்றுமில்லை. ஒழுக்கவிதிகளுக்கு ஒத்துப்புறத்தில் நடப்பதை மாத்திரம் நான் நன்மையென்று சொல்லவில்லை. தூய நினைப்பு, உயர்ந்த கோரிக்கை, சுயநலமற்ற அன்பு, வீண் பெருமையில்லாமை முதலியவற்றை நன்மையென்று சொல்லுகிறேன். நல்ல நினைப்புகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருத்தலானது. ஒருவனைச் சுற்றி இனிமையும் வலிமையும் பொருந்திய ஒரு சூஷ¤ம ஆகாயத்தைப் பரப்புகின்றது. அவன் சமீபத்தில் செல்லுகிறவர்களெல்லாம் அதனை உணர்கின்றனர். உதயசூரியன் உதவியற்ற இருள்களையெல்லாம் ஓட்டுவது போல, தூய்மையாலும் தெய்வ நம்பிக்கையாலும் பலப்படுத்தப்பட்ட ஓர் அகத்தினின்று பிரகாசிக்கிற நல்ல நினைப்பின் கிரணங்கள் தீமையின் இருட் சக்திகளையெல்லாம் ஓட்டுகின்றன. எவ்விடத்தில் பூரண தெய்வ நம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் ஆரோக்கியம் இருக்கின்றது; வெற்றி இருக்கின்றது; வலிமை இருக்கின்றது; அத்தகைய நம்பிக்கையும் தூய்மையுமுள்ள மனிதனை நோயும் தோல்வியும் எளிமையும் அணுக மாட்டா; ஏனெனில், அவற்றைக் கிரகிப்பதற்கும் போஷிப்பதற்கும் அவனிடத்தில் யாதொன்றுமில்லை. சரீர நிலைமைகள் பெரும்பாலும் மனோ நிலைமைகளால் ஏற்படுகின்றன. இவ்வுண்மையை ஜடதத்துவ சாஸ்திரிகளும் அங்கீகரிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். தனது சரீரம் தன்னை எவ்வாறு செய்கின்றதோ அவ்வாறே மனிதன் ஆகிறான் என்னும் பழைய நாஸ்திக நம்பிக்கை விரைந்து நீங்கிக் கொண்டும், அதற்குப் பதிலாக மனிதன் தனது சரீரத்திற்கு மேற்பட்டவனென்னும், தனது நினைப்பின் வலிமையால் தனது சரீரத்தை எவ்வாறு செய்கிறானோ அவ்வாறே அஃது ஆகிறதென்றும் ஓர் ஆஸ்திக நம்பிக்கை விரைந்து உண்டாகிக் கொண்டும் வருகின்றது. ஒரு மனிதன் அஜீரண நோயால் வருந்துகின்றமையால் அவன் மனம் தளர்ச்சியுறுகிறானென்று நம்புவதை விட்டு, அவன் மனம் தளர்ச்சியுற்றிருப்பதால் அவன் அஜீரணத்தை அடைகிறானென்று இப்பொழுது ஒவ்வோர் இடத்திலுமுள்ள மனிதர் நம்பி வருகின்றனர். சகல வியாதிகளுக்கும் உரிய மூலம் மனத்திலிருக்கிறதென்ற உண்மை சமீப காலத்தில் சாதாரண ஞானமாய்விடும். மூலத்தையும் வேரையும் மனத்தில் கொண்டிராத தீமை எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை; துன்பமும் பாவமும், வியாதியும் துக்கமும் உண்மையில் பிரபஞ்சத்திற்குச் சொந்தமானவையல்ல. அவை உலகப் பொருள்களின் இயற்கைகளை ஒட்டினவையல்ல; ஆனால், அவை பிரபஞ்சப் பொருள்களுக்கும் நமக்குமுள்ள உண்மையான சம்பந்தங்களை நாம் அறியாத மடமை காரணமாக உண்டாகின்றன. நமது தேசத்தில் ஒரு காலத்தில் அநேக தத்துவ ஞானிகள் இருந்ததாகவும், அவர்கள் அளவு கடந்த தூய்மையையும் கபடமின்மையையும் கைக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் சாதாரணமாக நூற்றைம்பது வயதிற்கு மேலேயே வாழ்ந்திருந்தாகவும், ஒழுக்கத்தினின்றும் தவறுதலே வியாதிக்குக் காரணமென்றும், வியாதியை அடைதல் மன்னிக்கத் தகாத ஒரு பேரவமானம் என்றும் அவர்கள் கருதியதாகவும் நமது தேசத்தின் சரித்திரங்கள் கூறுகின்றன. கோபங்கொண்ட ஒரு கடவுளால், அல்லது அறிவற்ற ஒரு தெய்வத்தால் வியாதி கொடுக்கப்பட்டதென்று நினைத்தலை நாம் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக விட்டு, அது நமது குற்றத்தால் அல்லது பாவத்தால் உண்டாகிறதென்று அபரோக்ஷமாக அறிவோமோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரமாக நாம் ஆரோக்கியமாகிய இராஜபாட்டையில் பிரவோசிப்போம். வியாதியானது தன்னைக் கவர்கின்றவர்களிடத்தும், தன்னைக் கொள்ளத்தக்க மனத்தையும் சரீரத்தையும் உடையவர்களிடத்துமே செல்கின்றது. ஆரோக்கியத்தையும் ஆயுள் பலத்தையும் கொடுக்கும் பிரவாகங்களைச் சிருஷ்டிக்கிற தூய்மையும் உண்மையும் வலிமையும் பொருந்திய நினைப்புக்களை ஆள்பவர்களை விட்டு வியாதியானது பறந்தோடுகின்றது. நீங்கள் கோபத்திற்காவது, கவலைக்காவது, பொறாமைக்காவது, பேராசைக்காவது, நேர்மையற்ற வேறு ஒரு மனோநிலைமைக்காவது இடங்கொடுத்துக் கொண்டு, பூரண சரீர ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பீர்களாயின், நீங்கள் அடைய முடியாத ஒரு காரியத்தை எதிர்பார்க்கின்றீர்கள்; ஏனெனில், நீங்கள் உங்கள் மனத்தில் வியாதியின் வித்துக்களை இடைவிடாது விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவுள்ள மனிதன் எச்சரிக்கையாயிருந்து அத்தகைய மனோநிலைமைகளை நீக்கிவிடுகிறான்; ஏனெனில் அது துர்நாற்றம் நிறைந்த ஒரு சாக்கடையிலும், தொத்து வியாதி நிறைந்த ஒரு வீட்டினும் அதிக அபாயகரமானதென்று அறிவான். நீங்கள் சகல சரீர நோய்களிலிருந்தும் நோவுகளிலிருந்தும் தப்புவதற்கும், பூரண சரீர ஆரோக்கியத்தை அடைவதற்கும் விரும்புவீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் நினைப்பை நேர்மைபடுத்துங்கள்; சந்தோஷகரமான நினைப்புக்களை நினையுங்கள்; ரம்மியமான நினைப்புக்களை உட்கொள்ளுங்கள்; நல் விருப்பமாகிய அமிர்தத்தை உங்கள் இரத்த நாடிகளின் வழியாக ஓடவிடுங்கள். உங்களுக்கு வேறு மருந்து ஆவசியகமில்லை. உங்கள் பொறாமைகளையும், உங்கள் சந்தேகங்களையும், உங்கள் கவலைகளையும், உங்கள் வெறுப்புக்களையும், உங்கள் சுயநல போகங்களையும் விட்டுவிடுங்கள். உங்கள் அஜீரணமும், உங்கள் பித்தமும், உங்கள் அச்சமும், உங்கள் கைகால் நோவுகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். பலஹீனத்தையும் நாசத்தையும் கொடுக்கிற இம்மனோ நிலைமைகளை நீங்கள் விடாது பற்றிக் கொண்டிருப்பீர்களாயின், உங்கள் சரீரம் நோயை அடைந்த காலையில் தெய்வத்தின்மீது குறை கூறாதீர்கள். பின்வரும் கதை மனத்தின் சுபாவங்களுக்கும் சரீர நிலைமைகளுக்குமுள்ள நெருங்கிய சம்பந்தத்தை விளக்கும்:-ஒரு மனிதன் ஒரு கடுமையான நோயால் வருந்திக் கொண்டிருந்தான். ஒருவன் பின் ஒருவனாக வைத்தியனையும் பார்த்து அவன் மருந்து சாப்பிட்டான். ஆனால், அம்மருந்தெல்லாம் யாதொரு பயனையும் தரவில்லை. பின்னர் அவன் வியாதிகளை நீக்கும் தீர்த்தங்களுள்ள ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று அவற்றில் மூழ்கினான். அவன் வியாதியோ முன்னினும் அதிகமாய் அதிக வருத்தத்தைக் கொடுத்தது. ஓர் இரவு அவனுடைய சொப்பனத்தில் ஒரு பெரியவர் தோன்றி, “சகோதரனே! வியாதியைத் தீர்க்கும் சாதனங்களையெல்லாம் செய்து விட்டாயா?” என்று கேட்டார். அவன், “ஆம், எல்லாவற்றையும் செய்துவிட்டேன்” என்று பதில் சொன்னான். பெரியவர், “இல்லை. நீ என்னுடன் வா; நீ கவனியாது விட்டுவிட்ட ஒரு தீர்த்தத்தைக் காட்டுகிறேன்” என்றார். வியாதியஸ்தன் அவரைப் பின்தொடர்ந்து போனான். பெரியவர் சுத்தமான நீரையுடைய ஒரு தடாகத்திற்கு அவனை அழைத்துக் கொண்டுபோய், “நீ இதில் மூழ்கு, உன் வியாதி நிச்சயமாக நீங்கிவிடும்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அம்மனிதன் நீரில் மூழ்கி வெளியேறவும், அவனது வியாதி நீங்கிவிட்டது; அதே நிமிஷத்தில் அவன் தடாகத்தின் மீது “விட்டுவிடு” என்ற சொற்கள் எழுதப்பட்டிருக்கக் கண்டான். அவன் விழித்த பின்னர் அவன் சொப்பனத்தின் முழு அர்த்தமும் அவன் மனத்துள் விளங்கிற்று. அவன் தனது அகத்துள் நோக்கினான். அவன் அவ்வளவு காலமும் ஒரு பாபகரமான செயலைச் செய்து கொண்டு வந்ததைக் கண்டான்; அதனை அடியோடு விட்டுவிடுவதாக அக்கணமே சத்தியம் கொண்டான். அவன் செய்துகொண்ட சத்தியத்தை நிறைவேற்றினான். அந்நாளிலிருந்து அவனது வியாதி அவனை விட்டு நீங்கத் தொடங்கியது. சிறிது காலத்திற்குள் அவன் வியாதி அவனை விட்டுப் பூரணமாகி நீங்கிவிட்டது. அநேகர் வேலை மிகுதியால் தமது சரீர ஆரோக்கியம் குன்றிவிட்டதாகக் குறை கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தமது சக்தியை மடத்தனமாகச் செலவு செய்ததனால் சரீர ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றனர். நீங்கள் ஆரோக்கியத்தை அடைய விரும்புவீர்களாயின் நீங்கள் கஷ்டமில்லாமல் வேலை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆத்திரப்படுதலும் கவலைப்படுதலும் அநாவசியமான காரியங்களைப் பற்றித் தொல்லைப்படுதலும் சரீர உடைவை உண்டு பண்ணுதலாம். மூளை வேலையும் சரீர வேலையும் இலாபத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கத்தக்கவை. தன் கையிலிருக்கிற வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து யாதொரு கவலையும் தொல்லையுமில்லாமல் நிலையான அமைதியோடும் பிடிவாதத்தோடும் தனது வேலையைச் செய்யும் மனிதன். கவலையோடும் ஆத்திரத்தோடும் வேலை செய்கிற மனிதனைப் பார்க்கிலும், அதிக வேலை செய்வதுமல்லாமல், அவன் இழக்கின்ற ஆரோக்கியத்தை விரைவில் அடைபவனாகவும் இருப்பான். உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதுபோல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். விருப்பும் வெறுப்புமாகிய கலக்க நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள்; கேடாகிய புயல் எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன்மப்படகை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும் அசையாத நம்பிக்கையோடும் செலுத்துவீர்களாயின், அது கரைக்குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிச்சயம். மற்றபடி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்கையின் பலத்தினாலேயே நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின, மெய்ப்பொருளிடத்து நம்பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள்; உங்களுடைய வேலையிலும் அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின்மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். சகல சந்தர்ப்பங்களிலும் உங்கள் மனச்சாட்சியின் மிகவுயர்ந்த தூண்டுதல்களைப் பின்பற்றுதலும், தெய்வத்தன்மை வாய்ந்த உங்கள் ஆன்மாவுக்கு உண்மையாக நடத்தலும், உங்கள் அகஒளியையும் உங்கள் அகஒலியையும் நம்புதலும், ஒவ்வொரு நினைப்பின் பலனும் முயற்சியின் பலனும் எதிர்காலத்தில் உங்களுக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையோடும், நிர்ப்பயமும் அமைதிமுள்ள ஹிருதயத்தோடும் உங்கள் காரியத்தைச் செய்தலும், பிரபஞ்ச நியதி ஒருபோதும் தவறமாட்டாதென்றறிதலும், உங்கள் விருப்பம் ஒரு சிறிதும் குறையாமல் உங்கள்பால் திரும்ப வந்து சேருமென்றறிதலுமே தெய்வ நம்பிக்கையாம், தெய்வ நம்பிக்கையில் வாழ்தலாம். அத்தகைய நம்பிக்கையின் வலியால் சந்தேகமாகிய நீல நீர் பிளக்கப்படும்; கஷ்டமாகிய கருமலை தகர்க்கப்படும். அந்நம்பிக்கையைக் கொண்ட ஆன்மா யாதொரு துன்பமும் உறாது சென்றுவிடுகின்றது. நண்பர்களே! இந்நிர்ப்பயமான நம்பிக்கையாகிய விலை மதிப்பற்ற உடைமையை எதற்கும் மேலாக அடைய முயலுங்கள்; ஏனெனில், அஃதாவது ஆரோக்கியத்தையும், வெற்றியையும், சாந்தத்தையும், வலிமையையும், வாழ்க்கையைப் பெரிதாகவும் துன்பமற்றதாகவும் செய்யும் எல்லாவற்றையும் கொடுக்கும் மந்திரயந்திரமாகும். அத்தகைய நம்பிக்கையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுவீர்களாயின், நித்திய மலையின் மீது நித்தியப் பொருள்களைக் கொண்டு, நித்திய வீட்டைக் கட்டுகின்றவர்களாவீர்கள். நீங்கள் கட்டும் வீடு ஒரு காலத்திலும் அழியாது; அது முடிவில் தூளாகப் போகின்ற சகல ஸ்தூல உடைமைகளையும் போகங்களையும் கடந்து நிற்கும். நீங்கள் துக்கமாகிய கடலுள் ஆழ்த்தப்பட்டாலும் நீங்கள் சந்தோஷமாகிய மலையின் மீது உயர்த்தப்பட்டாலும், நீங்கள் இந் நம்பிக்கையை எப்பொழுதும் கொண்டிருங்கள்; நீங்கள் நிர்பயமாகத் தங்கத்தக்க மலைக்குகை அஃதேயென்று அதற்குத் திரும்புங்கள். அழியாததும் அசையாததுமான அதன் அடிவாரத்தில் உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அத்தகைய நம்பிக்கையை உறுதியாக நீங்கள் கொண்டிருப்பீர்களாயின் உங்களைத் தாக்க வரும் தீமையின் சக்திகளையெல்லாம் கண்ணாடியாற் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல, தூள் தூளாக்கத் தக்க ஆன்ம சக்தியை நீங்கள் அடைவீர்கள். உலக லாபத்தை அடையக் கருதிய மனிதன் ஒருபோதும் அடைய முடியாத (கனவிலும் அடைய முடியாத) வெற்றியை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் நம்பிக்கையைக் கொண்டு சந்தேகத்தை விடுவீர்களாயின், நீங்கள் இதனைச் செய்து முடிப்பது மாத்திரமன்றி, நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘நீ இவ்விடத்தினின்று நீங்கிச் சமுத்திரத்தில் போய் விழ’ என்று கூறின், அஃது அவ்வாறு நீங்கிப்போய் அங்குவிழும். இந்நம்பிக்கையைக் கைக்கொண்டு, இதனைக் கடைப்பிடியாகப் பிடித்து, இதனை நாள்தோறும் அப்பியசித்து இதனால் வரும் பெருமையையும் அமைதியையும் அடைந்துள்ள புருஷர்களும் ஸ்திரீகளும் இன்றும் இவ்வுலகில் இருக்கின்றார்கள். அவர்கள்தாம் மனித சமூகத்திற்குரிய விதி விலக்குகளை ஏற்படுத்தியவர்கள்; துக்கமும் ஆசாபங்கமும் மனக்களைப்பும் சரீர நோவும் அவர்களை விட்டு நீங்கியொழிந்துவிட்டன. நீங்கள் இந்நம்பிக்கையை உடையவர்களாயிருப்பின், உங்கள் வெற்றியைப் பற்றியாவது தோல்வியைப் பற்றியாவது நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியகமில்லை; வெற்றி நிச்சயமாக உங்கள்பால் வந்து சேரும். உங்கள் முயற்சியின் பலன்களைப் பற்றி நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியகம் உண்டாகாது. சரியான முயற்சிகளும் சரியான பலன்களைத் தவறாது கொண்டு வருமென்று நீங்கள் தெரிந்து சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். அநேக சுகங்களை அநுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயை நான் அறிவேன். சமீபகாலத்தில் ஒரு நண்பர் அவளைப் பார்த்து, “ஆ! நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி! நீ ஒரு பொருளை அடைய விரும்புகிறாய்; அஃது உடனே உன்னிடம் வந்து சேருகின்றது” என்று கூறினார். அவளது காரியங்கள் மேலாந்தரப் பார்வையில் அவ்வாறு தோன்றின. உண்மையில் அவள் வாழ்வைப் பற்றிய சகல சுகங்களும் அவள் ஆயுள் நாளெல்லாம் கைக்கொண்டு வளர்த்து வந்த அவளது (சுகங்களென்னும்) அக நிலைமைகளின் நேரான பலன்கள், வெறும் விருப்பம் ஆசாபங்கத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டுவர மாட்டாது. சரியான வழியிற் செய்யப்படும் முயற்சியொன்றே விரும்பிய பொருளைக் கொண்டு வரும். ஒரு பொருளை அடைய விரும்பி மடையர் முணுமுணுக்கின்றனர். அப்பொருளை அடைவதற்குரிய வேலைகளைச் செய்து அறிஞர் காத்திருக்கின்றனர். இந்த ஸ்தீரி வேலை செய்திருக்கிறாள்; புறத்திலும் அகத்திலும் வேலை செய்திருக்கிறாள்; தெய்வ நம்பிக்கையும், தெய்வ விசுவாசமும், தெய்வ பக்தியும், அருளும், பரோபகாரமுமாகிய கற்களை கொண்டு (பொறிகளுக்குப் புலப்படாத) ஆன்மாவின் கைகளால் ஒரு நல்ல ஒளியாலயத்தைக் கட்டியிருக்கிறாள்; அதன் பெருமையுள்ள பிரகாசம் எப்பொழுதும் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. அஃது அவளுடைய கண்களில் பிரகாசிக்கின்றது. அஃது அவளுடைய முகத்தில் ஒளிக்கின்றது. அதன் வசீகர சக்தியை அவள் சமீபத்தில் செல்பவரெல்லாம் உணர்கின்றனர். எவ்வாறு அவள் சுகங்களை அடைந்தனளோ, அவ்வாறே நீங்களும் சுகங்களை அடையலாம்; உங்கள் வெற்றியும் உங்கள் தோல்வியும், உங்கள் செல்வாக்கும், உங்கள் முழு வாழ்வும் உங்களிடத்திலே இருக்கின்றன. ஏனெனில் உங்களை ஆளுகின்ற நினைப்புக் கூட்டங்களே உங்கள் விதியை ஆக்கும் கருவிகள். நீங்கள் அன்புள்ள நினைப்புக்களையும் மாசற்ற நினைப்புக்களையும் சந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள். சுகங்கள் உங்களிடம் வந்து சேரும். சாந்தியாகிய வஸ்திரம் உங்கள் மேஜையின் மீது விரிக்கப்படும். நீங்கள் வெறுப்புள்ள நினைப்புக்களையும், மாசுள்ள நினைப்புக்களையும், அசந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள்; நிந்தனைகள் உங்கள் மேல் செரியப்படும்; அச்சமும் கவலையும் உங்கள் தலையணையின் மீது வந்திருக்கும் உங்கள் நல்ல விதியையோ, தீய விதியையோ, ஆக்குகின்ற கர்த்தர்கள் நீங்களே. உங்கள் வாழ்வை ஆக்குகிற அல்லது அழிக்கிற சக்திகளை நீங்கள் ஒவ்வொரு நிமிஷத்திலும் வெளியே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அகம் பெரியதாகவும் அன்புள்ளதாகவும் சுயநலமற்றதாகவும் வளரட்டும். நீங்கள் தனத்தை அதிகமாக அடையாவிட்டாலும், உங்கள் செல்வாக்கும், வெற்றியும் பெரியனவாகவும் நிலையுள்ளனவாகவுமிருக்கும். உங்கள் அகத்தைச் சுயநலத்தின் சுருங்கிய எல்லைக்குள் அடைத்து வையுங்கள்; நீங்கள் கோடீஸ்வரர்களானபோதிலும் உங்களுடைய செல்வாக்கும் வெற்றியும் முடிவில் மிக அற்பமாகக் காணப்படும். ஆதலால், நீங்கள் கலப்பற்ற பர நலத்தை வளர்த்து அதனைத் தூய்மையோடும் தெய்வ நம்பிக்கையோடும் ஏக காரியத்தோடும் சேருங்கள். நீங்கள் நிலையான ஆரோக்கியத்தோடும் ஸ்திரமான வெற்றியை மாத்திரமல்லாது, பொறுமையையும் வலிமையையும் கொடுக்கும் அம்சங்களை உங்கள் அகத்தினின்று வெளிப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். உங்கள் தற்கால நிலை நீங்கள் விரும்பத்தகாததாகவும், உங்கள் மனம் உங்கள் வேலையில் செல்லாததாகவும் இருந்தால், நல்ல நிலைகளும் பெரிய காரியங்களும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற அபிப்பிராயத்தை நீங்கள் மனத்தில் கொண்டு உங்கள் கடமைகளை உங்கள் மனச்சாக்ஷ¢க்கு விரோதமில்லாமல் ஊக்கத்தோடு செய்யுங்கள். நல்ல சமயம் வாய்த்துப் புதிய நிலை தோன்றும்பொழுது, அந்நிலையில் பிரவேசிக்கத்தக்க விதத்தில் உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டும், உங்கள் விவேகத்தை வளர்த்துக் கொண்டும், நீங்கள் அந்நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நீங்கள் செய்யும் வேலை எதுவாயிருந்தாலும், அதில் உங்கள் முழுமனத்தையும் ஏகாக்கிரப்படுத்துங்கள்; உங்கள் ஊக்கம் முழுவதையும் அதில் செலுத்துங்கள்; சிறிய வேலைகளைக் குறைவறச் செய்து முடிப்பவருக்குப் பெரிய வேலைகள் நிச்சயமாக வந்துசேரும். எப்பொழுதும் நீங்கள் உறுதியாக மேல் நோக்கிச் சென்று கொண்டிருங்கள்; ஒருபோதும் நீங்கள் கீழ் நோக்கிச் செல்லாதீர்கள்; இதில்தான் உண்மையான வலிமையின் மர்மம் அடங்கி இருக்கின்றது. நீங்கள் உங்கள் சக்திகளை எப்படி ஆளலாமென்பதையும், அவற்றை ஒரு குறித்த விஷயத்தில் ஒரு குறித்த நிமிஷத்தில் எப்படி ஏகாக்கிரப்படுத்தலாமென்பதை அடிக்கடியும் அப்பியசித்துக் கற்றுக்கொள்ளுங்கள். மடையர் தமது மனோபலத்தையும் ஆன்மபலத்தையும் அற்பத்தனமான சிந்தனைகளிலும் மூடத்தனமான பேச்சுக்களிலும் சுயநல விவாதங்களிலும் வீணாகச் செலவிடுகின்றனர்; அவர் சரீரத்தால் செய்யும் மிகைகளோ எண்ணிறந்தன. எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை, நீங்கள் அடைய விரும்புவீர்களாயின், இன்ப துன்பங்களைச் சமமாகக் கொள்ளவும், எப்போதும் அமைதியாயிருக்கவும் கற்றல் வேண்டும்; நீங்கள் எந்தக் காரியத்தையும் தனிமையாகச் செய்து முடித்தற்குச் சக்தியுள்ளவர்களாக வேண்டும். பலவகைப் பலமும் அசையாமையோடு கூடியிருக்கிறது; நிலையான மலையும், பெரிய பாறும், காற்றிற் கிளையாத கருங்காலி மரமும் தனித்து நிற்றலாலும், அசையாது நிற்றலாலும் தமது பலத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; உருளும் மணலும், வளையும் தளிரும், அசையும் நாணலும் தக்கும் சக்தியின்மையாலும் அசையுந் தன்மையாலும் தமது பலஹீனத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; தமது இனங்களை விட்டுப் பிரிக்கப்பட்டபொழுது, அவை சிறிதும் பிரயோஜனமில்லாமற் போகின்றன. தனது இனத்தாரெல்லாம் மனக்கிளர்ச்சியால் அல்லது மனச்சலனத்தால் துடிக்கும்பொழுது எவன் அமைதியாகவும் அசையாமலும் இருக்கின்றானோ, அவன்தான் உண்மையில் பலமுள்ள மனிதன். எவன் தன்னை அடக்கி ஆளுகின்றானோ, அவன்தான் மற்றவரை அடக்கியாளுவதற்குத் தகுதியுள்ளவன். வெறியர்களும், பயங்காளிகளும், ஆலோசனையில்லாதவர்களும், அற்பத் தன்மையுள்ளவர்களும் தத்தம் இனத்தோடு கூடி நிற்கட்டும்; இல்லாவிட்டால் துணையின்றிக் கீழே விழுந்து அழிந்து போவார்கள்; ஆனால், அமைதியுள்ளவரும், பயமற்றரும், ஆலோசனையுள்ளவரும், பெருந்தன்மையுள்ளவரும் வனமும், காடும், மலையின் உச்சியும் ஆகிய தனித்த இடங்களைத் தேடிச் செல்லட்டும்; அவரது பலத்தோடு அதிக பலம் சேரும்; மனிதரை அழிக்கும் மனத்தின் ஓட்டங்களையும் சுழிகளையும் தடுத்து அவர் மேன்மேலும் வெற்றியடைவர். காமக் குரோதம் பலமன்று. அது பலத்தின் துர்விநியோகமும் உடைவுமாகும். காமக் குரோதம் ஒரு பலத்த பாறின் மீது வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் அடிக்கும் ஒரு கடும் புயலுக்குச் சமமானது; ஆனால், பலம் அப்புயலுக்கெல்லாம் அசையாது மௌனமாய் நிற்கின்ற பாறுக்குச் சமமானது. மார்ட்டின் லூதர் என்பவர் வொர்ம்ஸ் என்னும் இடத்திற்குச் §க்ஷமமாகப் போய்வரமாட்டாரென்று சந்தேகித்த அவரது நண்பர்கள் அவரை அங்குப் போகக் கூடாதென்று சொல்லிய காலத்தில், அவர், “வீடுகளின் மேலுள்ள ஓடுகளைப் போல எண்ணிறந்த பேய்கள் வொர்ம்ஸில் இருந்தாலும் நான் போயே தீருவேன்” என்று பதில் சொல்லியது உண்மையான பலத்தைக் காட்டுகின்றது. பெஞ்சாமின் தேஸரே என்பவர் பார்லிமெண்டு சபையில் முதல் தாம் பேசத் தொடங்கித் தவறிச் சபையாரின் அவமதிப்பை அடைந்த காலத்தில், அவர், “எனது பேச்சைக் கேட்பது ஒரு கௌரவம் என்று நீங்கள் நினைக்கும்படியான நாள் வரும்” என்று சொல்லியது சிருஷ்டி செய்யும் பலத்தைக் காட்டுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் துரதிர்ஷ்டங்களையும் கேடுகளையும் இடைவிடாது அடைந்து கொண்டிருந்த காலத்தில், அவனை அவனது சிநேகிதர் பரிகாசம் செய்து, மேல் பிரயத்தனஞ் செய்யாது நிறுத்திவிடும்படி சொல்லியதற்கு, அவன், “எனது நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் நீங்கள் கண்டு ஆச்சரியப்படும்படியான காலம் விரைவில் வரப்போகின்றது” என்று பதில் கூறினான்; அவனை எண்ணிறந்த கஷ்டங்களுக்குட்படுத்தி அவனுக்கு வெற்றியாகிய கிரீடத்தைக் கொடுத்ததும், எதனாலும் எதிர்க்க முடியாததுமான மௌன வலிமையை அவன் கொண்டிருந்தானென்பதை அது காட்டிற்று. இவ்வலிமை உங்களிடத்தில் இல்லையானால் அதனை நீங்கள் அப்பியாசத்தினால் அடையலாம். வலிமையின் தொடக்கம் ஞானத்தின் தொடக்கத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் இவ்வளவு காலமும் மனதார இடங்கொடுத்துக் கொண்டிருந்த பயனற்ற அற்பக் காரியங்களையெல்லாம் ஒழிப்பதற்கு ஆரம்பிக்கவேண்டும். உரத்த சிரிப்பு, அடங்காத சிரிப்பு, நிந்தனைப் பேச்சு, பயனற்ற பேச்சு, சிரிப்பை உண்டு பண்ணும் விகடம் முதலியவையெல்லாம் வலிமையைக் கெடுப்பன என்று கருதி ஒதுக்கப்பட வேண்டும். செயின்டு பால் என்பவர் இபிசியின் ஜாதியாரைப் பார்த்து, “பயனற்ற பேச்சும் விகடமும் நல்லவையல்ல” என்று கூறியது, அவர் மனிதரது அபிவிருத்திக்குரிய (பொறிகளுக்குப் புலப்படாத) சட்டங்களில் எவ்வளவு ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தாரென்பதை விளக்குகின்றது. ஏனெனில், அத்தகைய பழக்கங்களைச் சுபாவமாகக் கொண்டிருத்தல் சகல ஆன்ம பலத்தையும் வாழ்வையும் அழித்துவிடும். அத்தகைய மனச்சிதறல்களுக்கு நீங்கள் இடங்கொடாத திட்பமுடையவர்களான காலையில் நீங்கள் உண்மையான வலிமை இன்னதென்று அறிய ஆரம்பிப்பீர்கள். பின்னர் உங்கள் ஆன்மாவைப் பந்தப்படுத்தி நீங்கள் வலிமையை அடைய விடாது தடுத்துக் கொண்டிருக்கிற உங்கள் அவாக்களோடும் பசிகளோடும் போராட ஆரம்பிப்பீர்கள்; அதன்பின்னர் நீங்கள் மிக எளிதில் அபிவிருத்தி அடைவீர்கள். நீங்கள் ஒரே நோக்கத்தை உடையவர்களாயிருங்கள்; எல்லாவற்றிலும் முக்கியமானதும் நியாயமானதும் பயன் தருவதுமான ஒரு காரியத்தைத் குறித்துக் கொள்ளுங்கள்; உங்கள் முழு மனத்தோடும் அதனைச் செய்யுங்கள். அது தவிர வேறு எதுவும் உங்கள் கவனத்தைக் கவர விடாதீர்கள்; “இரண்டு மணமுள்ள மனிதன் தனது பல காரியங்களிலும் நிலையில்லாதவனென்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும். கற்பதற்கு முந்துங்கள்; ஆனால், இறப்பதற்குப் பிந்துங்கள்; உங்கள் வேலையைப் பூரணமாக அறிந்து கொள்ளுங்கள். அதனை நீங்களே செய்து முடியுங்கள். உங்கள் அகவழிகாட்டியை உங்கள் அக ஒளியை, நீங்கள் பின் தொடர்ந்து செல்லும்பொழுது நீங்கள் வெற்றிமேல் வெற்றியை அடைவீர்கள்; படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களுக்குச் செல்லுவீர்கள். எப்பொழுதும் விரிந்து கொண்டிருக்கிற உங்கள் நுண்ணுணர்வு உங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தையும் அழகையும் உங்களுக்குக் காட்டும். உங்கள் மனம் சுத்தமாய் விட்டால் ஆரோக்கியமும் உங்களுடையதாயிருக்கும்; நீங்கள் தெய்வ நம்பிக்கையைக் கொண்டிருந்தால், வெற்றி உங்களுடையதாயிருக்கும்; உங்கள் மனத்தை நீங்கள் ஆண்டு வந்தால், வலிமை உங்களுடையதாயிருப்பதோடு நீங்கள் செய்வதெல்லாம் அபிவிருத்தியாகும்; ஏனெனில், நீங்கள் மனத்திற்கு அடிமையாகி மற்றைய உயிர்களினின்று பிரிக்கப்பட்ட தனிப்பொருளாயிருப்பதினின்று நீங்கி, நீங்கள் பிரபஞ்ச உயிராயும் நித்திய நன்மையாயும் விளங்காநின்ற மெய்ப்பொருளாகிய பெரிய சட்டத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யாது, அதற்கு ஒத்தவாறே எல்லாவற்றையும் செய்து, அதனோடு ஒருமைப்பட்டிருப்பீர்கள். நீங்கள் அடையும் ஆரோக்கியம் உங்களிடத்தில் நிலையாக நிற்கும்; நீங்கள் அடையும் வெற்றி மனிதர் எண்ணிக்கைக்கு எட்டாததாயிருக்கும்; அஃது ஒருபொழுதும் உங்களை விட்டு நீங்காமலிருக்கும்; உங்களுடைய செல்வாக்கும் வலிமையும் நாள்தோறும் அதிகமாய்க் கொண்டிருக்கும்; ஏனெனில், அவை பிரபஞ்சத்திற்கு ஆதாரமாயிரா நின்ற மெய்ப்பொருளின் அம்சங்கள். ஆகையால், சுத்தமான ஓர் அகமும், ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் மனமுமேஆரோக்கியத்தின் மர்மம்; அசையாத தெய்வ நம்பிக்கையும், விவேகத்தோடு செய்யும்காரியமுமே வெற்றியின் மர்மம்; அவாவாகிய கருங்குதிரையை உறுதியானதீர்மானத்தோடு அடக்கியாள்வதே வலிமையின் மர்மம். ஆசிரியப்பா நாம் நம் கால்களால் நடப்பதற் காக எல்லா நெறிகளும் இருக்கின் றன; அவை ஒளிஇரு ளுடையவை; உயர்வுதாழ் வுடையவை; அழிவழி யாமை, அகலம் ஒடுக்கம், எட்டும் படிகள், எட்டாப் படிகள், நன்மை தீமை, நண்ணப் பெற்றவை; அவற்றுள் ஒன்றைநாம் அடுத்ததில் சென்றுதன் நன்று தீதுணர லாமே. உள்ளுறும் தூய்மையாம் உயர்ந்த ஒடுங்கிய சுத்தமார் நெறியினில் தொடர்ந்து செல் வோமெனச் சத்தியம் செய்துநம் தாள்களை வைத்துப் பிறருடை இகழ்ச்சிப் பேச்சம் சிரிப்பும் நிந்தைச் சொல்லும் சிந்தையுட் கொளாது நடந்திடை யூறுமுட் கடந்து, நலனார் பசியநன் னிலத்தைப் பற்றிடின், நல்லன வெல்லாம் நாங்காண லாமே. ஓடியே கழியும் ஒவ்வொரு கணத்திலும் அன்பும் பொறுமையும் அளவிலா தாற்றி, மாசெள் ளளவும் மனத்துறா தாண்டு வாம்மையி னின்று வழுவா தென்றும் உயிர்கள் தமது செயிர்விட உதவின், ஆரோக்கியமும் அழகும் வலிமையும் அடைந்துள இடத்தைநாம் அடைந்துநின் றழியா வீட்டினை அறிந்துணர லாமே. தேடுவோ மாயின், தேடிய காண்போம்; முயல்வோ மாயின், முயன்றன அடைவோம்; இழப்போ மாயின்; இனிதுநாம் திருந்துவோம் நமதுன் பங்கள் நாசமுற் றொழிய, நமதான் மாஒளி நல்வாழ் வுடைய, நாம்இவண் அழாது நகையுற வேண்டின், மெய்விதிக் கடங்கநாம் வேண்டும்; நமையாள் மெய்விதி நமக்கடங் காவே; சுயநயம் பிடித்த மயல்நெஞ் சுடையோர் நற்பொரு ளெல்லாம் நமவென மொழிவர்; நமதுநல் நோக்கம் நற்பொரு ளனைத்தையும் தேடிக் காண்டலே, தெரிந்தினி துணர்தலே; ஏனெனில், தூயரே ஞானவீ டடைகுவர். நமதெனச் சொலற்கும் நமதெனக் கொளற்கும் ஒன்றுமே ஈங்கிலை உண்மைநாம் அறியவும் உணரவும் அனைத்துநம் முடையவே.   11 வளரும் இன்பத்தின் மர்மம் வளரும் இன்பத்தின் மர்மம் இன்பத்திற்குத் தாகம் அதிகம்; அவ்வளவு இன்பமின்மையும் அதிகம். செல்வம் ஸ்திரமான பேரின்பத்தைக் கொண்டு வருமென்று நம்பித் தரித்திரங்களிற் பெரும்பாலோர் செல்வத்தை அவாவுகின்றனர். ஒவ்வோர் அவாவையும் இச்சையையும் நிறைவேற்றிச் செல்வந்தரிற் பெரும்பாலோர் சரீர மெலிவாலும் சரீர வீக்கத்தாலும் வருந்துகின்றனர். ஆனால், இன்பத்திற்குத் தரித்திரரினும் அவர் தூரத்திலிருக்கின்றனர். காரியங்களின் இந்நிலைமையை நாம் ஆலோசித்துப் பார்த்தால், இன்பம் புறவுடைமைகளால் மாத்திரம் உண்டாவதில்லை என்ற சிறந்த உண்மையும், துன்பம் புறவுடைமைகள் இன்மையால் மாத்திரம் உண்டாவதில்லையென்ற சிறந்த உண்மையும் நமக்கு விளங்கும். ஏனெனில், இன்பம் புறவுடைமையினின்றும், துன்பம் புறவுடைமையினின்றும் உண்டாகுமாயின், தரித்திரர் எப்பொழுதும் துன்பத்தை அநுபவித்தலையும், செல்வந்தர் எப்பொழுதும் இன்பத்தை அநுபவித்தலையும் நாம் காணவேண்டும்; ஆனால் உண்மை இதற்கு மாறியிருக்கின்றது. மிக மிகக் கொடிய துன்பத்தை அநுபவிப்பவர்களிற் சிலர் செல்வங்களும் போகப்பொருள்களும் சூழ்ந்திருக்கப் பெற்றிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மிகமிக இனிய இன்பத்தை அநுபவிப்பவர்களிற் சிலர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை மாத்திரம் கொண்டிருப்பதை நான் அறிவேன். செல்வங்களைச் சம்பாதித்துள்ள அநேக மனிதர் தாம் செல்வத்தைச் சம்பாதித்ததனால் உண்டாய சுயநல போகங்கள் தமது வாழ்க்கையின் இன்பத்தைக் கவர்ந்து கொண்டனவென்றும், தான் தரித்திரராயிருந்த காலத்தில் அடைந்த இன்பத்தைத் தாம் செல்வந்தரான காலத்தில் ஒருபோதும் அடைந்ததில்லையென்றும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அப்படியானால், இன்பமாவது யாது? அதனை அடைவது எவ்வாறு? அஃது ஒரு கற்பனையா அல்லது ஒரு மாயமா? துன்பந்தானா நித்தியமாயுள்ளது? என்னும் வினாக்கள் உண்டாகின்றன. நாம் சிரத்தையோடு கவனித்து ஆலோசிப்போமானால், ஞான மார்க்கத்தில் பிரவேசித்துள்ளவர்கள் தவிர மற்றவர்களெல்லாம் அவாவை நிறைவேற்றுவதனால் மாத்திரம் இன்பத்தை அடையலாமென்று நம்பியிருக்கிறார்களென்பது நமக்குத் தெரியும். அஞ்ஞானமாகிய நிலத்தில் வேரூன்றியிருப்பதும் சுயநல அவாக்களாகிய நீரால் இடைவிடாது பாய்ச்சப்படுவதுமான இந்த நம்பிக்கைதான் உலகத்திலுள்ள சகல துன்பங்களுக்கும் காரணம். நான் அவா என்னும் சொல்லை ஸ்தூலமான மிருக போகங்களை மாத்திரம் குறிக்கும் பொருளில் உபயோகிக்கவில்லை; இன்ப சொரூபமாக வெளிப்படுகின்ற ஆன்மாவினது அழகையும், சாந்தியையும், தூய்மையையும் இழக்கும்படி செய்து, புத்திசாலிகளையும் ஒழுக்கமுள்ளவர்களையும் பந்தப்படுத்துகிற, மிகுந்த வலிமையும் வஞ்சமும் நுட்பமும் பொருந்திய அவாக்களைக் கொண்ட மனோவுலகத்தையும் குறிக்குமாறு உபயோகிக்கின்றேன். உலகத்திலுள்ள துன்பங்களுக்கெல்லாம் சுயநலமே காரணமென்பதை அநேகர் ஒப்புக்கொள்வார். ஆனால், அச்சுயநலம் தம்முடையதென்றும் வேறொருவருடையதென்றும் அவர் கூறி ஆன்மாவைக் கெடுக்கும் மயக்கத்துள் வீழ்கின்றனர். உங்கள் துன்பமெல்லாம் உங்கள் சொந்த சுயநலத்தின் பலன்களென்று நீங்கள் ஒப்புக்கொள்ள விருப்பமுடையவர்களாயிருக்கும்பொழுது நீங்கள் சுவர்க்கத்தின் வாயில்களுக்குச் சமீபத்திலிருப்பீர்கள்; ஆனால், உங்கள் சந்தோஷத்தைக் கவர்வது மற்றவர்களுடைய சுயநலமென்று எவ்வளவு காலம் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு காலமும் நீங்கள் உங்களால் ஆக்கப்பட்ட நரகத்துள் கைதிகளாயிருப்பீர்கள். இன்பமானது பூரண திருப்தியாகிய அகத்தின் நிலைமை; அது சகல அவாக்களும் நீங்கியசந்தோஷமும் சாந்தியுமின்றி வேறன்று. அவாவை நிறைவேற்றுவதனால் உண்டாகும்திருப்தி நிலையற்றதாகவும் தோற்றம் மாத்திரையாகவும் உள்ளது; அத்திருப்தியால்அவா மேலும் மேலும் அதிகப்படுகின்றது. அவா சமுத்திரத்தைப்போல அடங்காதது; அதனை நிறைவேற்ற நிறைவேற்ற, அது மிகமிகச் சத்தமிட்டுக் கூக்குரலிடுகின்றது.அவாவைப் பற்றியவர் சரீர நோவையாவது மன நோவையாவது அடைந்து அகத்தைச்சுத்தப்படுத்தும் துன்பமாகிய நெருப்பில் மூழ்கும் வரையில் அவரிடம் அதுமேன்மேலும் வேலை வாங்குகின்றது. அவா நரகத்தின் அடிவாரம்; சகல துன்பங்களும்அங்கு நிறைந்திருக்கின்றன. அவாவை விடுதல் சுவர்க்கத்தை அடைதலாம். சகலஇன்பங்களும் அவ்விடத்தில் காத்துக் கொண்டிருக்கின்றன. என்னான்மா வைப்பொறிகட் கெட்டாத மெய்ப்பொருள்பால் பொன்னாடு பெற்றுவரப் போக்கினேன்-என்னான்மா நானே சுவர்க்கம் நரகம் எனச் செவி யுள் மானே! மொழிந்ததுடன் வந்து. சுவர்க்கமும் நரகமும் அகத்தின் நிலைமைகள். “யான்” என்பதனுள்ளும், அதன் சகலபோகங்களுள்ளும் ஆழுங்கள்; நீங்கள் நகரத்துள் ஆழ்கின்றீர்கள். ‘யான்’ என்பதின்றும் நீங்கி, ‘யான்’ என்பதை முற்றிலும் துறந்தும் மறந்தும்இருக்கிற அறிவின் ஸ்தானத்திற்கு உயருங்கள்; நீங்கள் சுவர்க்கத்துள்பிரவேசிக்கின்றீர்கள். ‘யான்’ என்பது கண்ணில்லாதது; பகுத்தறிவில்லாதது; உண்மையான ஞானமில்லாதது; எப்பொழுதும் துன்பத்திற்கே செலுத்துவது. சரியானகாட்சியும், பட்சபாதமற்ற அறிவும், உண்மையான ஞானமும் கடவுளுக்குரியவை.இக்கடவுள் ஞானத்தை அடைவதால் மாத்திரம் இன்பம் இன்னதென்று தெரியமுடியும்; நீங்கள் சுயநலத்தோடு உங்கள் சரீர சுகத்தை நாடிக்கொண்டிருக்குங் காலமெல்லாம்இன்பம் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்; நீங்கள் துன்ப வித்துக்களைவிதைத்துக்கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் ‘யான்’ என்பதை எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் இழக்கின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவுஇன்பம் உங்களிடம் வந்து சேரும். நீங்கள் இன்பப் பலனை அறுப்பீர்கள். அன்புசெய்த லால் உள்ளம் ஆனந்தம் எய்துமல்லாமல், அன்பு செய்யப்படாமல் அஃதெய்யா-தின்புயர்கட் கீதலினால் உண்டல்லால் ஈயப்படுதலினால் மாதே! இலையணுவும் மற்று. எஃதனை நீவேண்டினையோ, எஃதுநிற்கு வேண்டுவதோ அஃதனையே நீயீவாய் ஆருயிர்கட்-கஃதுநின தான்மாஉணும் உணவாம்; அஃதால்மெய்வாழ்வடைவாய் தேன்மா மொழியாய்! தெரி. ‘யான்’ என்பதைப் பற்றுங்கால், நீங்கள் துன்பத்தைப் பற்றுகின்றீர்கள்; ‘யான்’ என்பதை விடுங்கால், நீங்கள் இன்பத்தை அடைகின்றீர்கள். சுயநலமாட்டம் இன்பத்தை இழக்கும்படி செய்யும். அவ்வளவேயன்றி, இன்பத்திற்கு மூலமென்று நாம் நம்புகிற பொருள்களையும் இழக்கும்படி செய்யும். பெருந்தீனிக்காரன் தனது ஒழிந்துபோன பசியை எழுப்புதவற்காக எவ்வாறு புதிய புதிய உணவுகளை ஓயாமல் தேடிக் கொண்டிருக்கிறானென்பதையும், கடைசியில் அவன் வயிறு வீங்கிக் கனத்து வியாதியுற்று யாதொரு உணவும் உட்கொள்ள முடியாமல் எவ்வாறு வருந்துகிறானென்பதையும் பாருங்கள். இதற்கு மாறாக எவன் தனது பசியை ஆளுகின்றானோ அவன் உணவைத் தேடுவதுமில்லை; ஊணின்பத்தை ஒருபோதும் நினைப்பதுமில்லை. அவன் மிக மிக எளிய உணவு கிடைப்பினும் சந்தோஷம் அடைகின்றான். ‘யான் என்னும் கண்ணின் மூலமாகப் பார்க்கும் மனிதர் தமது அவாக்களைப் பூர்த்தி செய்வதனால் உண்டாகுமென்று நினைக்கும் இன்பத்தை அவர் அடைந்தபொழுது அது துன்பத்தின் என்புக்கூடாகக் காணப்படுகிறது. உண்மையில், எவன் தனது உயிரின் மீது அதிக அபிமானம் கொண்டிருக்கிறானோ அவனே அதனை விரைவில் இழப்பான்; எவன் தனது உயிரின் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுகிறானோ, அவனே அதனை இழவாதிருப்பான். ‘யான்’ என்னும் பற்றை விடுவதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது மேன்மேல் வளரும் இன்பம் உங்கள்பால் வந்து சேரும். உங்களுக்கு மிக அருமையானதும், நீங்கள் பற்றினாலும் பற்றாவிட்டாலும் உங்களிடத்திலிருந்து ஒருநாள் கவரப்படுவதும், நிலையில்லாததுமான ‘யான்’ என்னும் பொருளை இழப்பதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது அதுவரையில் உங்களுக்குத் துன்பமான நஷ்டம் போலத் தோன்றிக் கொண்டிருந்த அவ்விழப்பு இன்பமான இலாபமாகக் காணப்படும். ஆனால், இலாபத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒன்றை விடுவதைப் பார்க்கினும் பெரிய மயக்கமாவது, துன்பத்தைத் தரும் மூலமாவது வேறில்லை; வேண்டியவற்றை விட்டு விடுவதற்கும் நஷ்டத்தை அநுபவிப்பதற்கும் பிரியங்கொள்ளலே உண்மையான வாழ்விற்கு மார்க்கம். இயற்கையில் அழிந்துபோகும் பொருள்களை நமக்கு ஆதாரமாகக் கொண்டிருக்குங்காலையில், நாம் எப்படி உண்மையான இன்பத்தைக் காணமுடியும்? என்றென்றும் நிலை நிற்கும் பொருளை நமக்கு ஆதாரமாகக் கொண்டால் மாத்திரமே, நாம் உண்மையான இன்பத்தைக் காண முடியும். ஆதலால், நிலையில்லாத பொருள்களைப்பற்றிக் கொண்டிருத்தலையும் அவாவிக் கொண்டிருத்தலையும் நீங்கள் விடுங்கள்; உடனே நித்தியப் பொருளின் அறிவை நீங்கள் அடைவீர்கள் ‘யான்’ என்பதை ஒழித்துத் தூய்மையும் சுய நலத்துறத்தலும் அகண்ட அன்புமாகிய குணங்கள் உங்களிடம் மேலும் மேலும் வளருங்காலையில் அந்நித்தியப் பொருளின் அறிவை உங்களுக்கு ஆதாரமாக நீங்கள் கொள்வீர்கள். அப்பொழுது ஒருபோதும் மாறாததும் ஒருபோதும் உங்களிடத்திலிருந்து கவரப்படாததுமான இன்பத்தை நீங்கள் அடைவீர்கள். பிறர்மீது கொண்டுள்ள அன்பினால் தன்னை முற்றிலும் மறந்துவிட்ட அகமானது, மிகமிக உயர்ந்த இன்பத்தை அடைந்த அளவேயன்றி, அழியாத தன்மையையும்அடைந்துவிட்டது. அது தெய்வத்தன்மையை எய்திவிட்டமையால், கடந்துபோன உங்கள்வாழ்க்கையை நோக்குங்கள்; நீங்கள் இரக்கத்தோடாவது சுயநலமற்ற அன்போடாவதுஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லவோ ஒரு செய்கையைச் செய்யவோ நேர்ந்தநிமிஷங்களோ, உங்களுக்கு மிகமிக மேலான இன்பத்தைக் கொடுத்தவைகளென்றுகாண்பீர்கள். பரமார்த்தத்தில் நேர்மையும், இன்பமும் ஒரு பொருளைக்குறிக்குஞ் சொற்கள். நேர்மையானது அன்பு சொரூபமாக விளங்குகிற பெரியசட்டத்தின் ஒரு தோற்றம்; பலவித சுயநலங்களும் நேர்மைக்கு மாறானவை, சுயநலம்பாராட்டுதல் தெய்வக் கட்டளைகளுக்கு மாறாக நடக்கும்படி செய்யும்.கருவியாகின்றன. ‘யான்’ என்பதை விடுத்து, எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்புபாராட்டுங்காலையில், இன்பமாகிய தெய்வ சங்கல்பத்திற்கும் பிரபஞ்சஇயற்கைக்கும் நாம் ஒற்றுமையாக நடக்கிறோம். உண்மையான இன்பமாகிய அவ்வாசம கோசரசங்கல்பம் நமது சொந்த உடைமையாகின்றது. புருஷர்களும் ஸ்திரீகளும்இன்பத்தைத் தேடிக்கொண்டு குருட்டுத்தனமாக இங்கும் அங்கும் ஓடுகின்றார்கள்; இன்பமானது முன்னரே தமது அகத்துள்ளும் தம்மைச் சுற்றியும், பிரபஞ்சமுழுவதும் உள்ளதென்றும், தமது சுயநல நாட்டத்தால் அதனைத் தாம்காணவில்லையென்றும் அறிகிற வரையில் அவர்கள் இன்பத்தைக் காண முடியாது. ஆசிரியப்பா இன்பெனும் மங்கையை என்பொரு ளாக்கத் தேக்கு திராட்சை பாக்கு வனம்கடந் தேகினேன்; ஓடினள், வேகமா ஓடினேன், பொள்ளெனக் குன்றிலும் பள்ளத் தாக்கினும் நண்ணிய வயலிலும் தண்ணிய நிலத்தினும்; நீரினோட் டங்களை வீரமொடு கடந்து கழுகல றும்மலை தழுவிமேல் ஏறினேன், ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு கடலையும் விரைந்தே கடந்தேன்; விரைந்தவள் தந்திர மாக முந்திஓ டினளே. யான்மிகக் களைத்துக் கான்மிகத் தளர்ந்து பாழ்ங்கரை யொன்றில் வீழ்ந்தயர்ந் திருக்க; ஒருவனுண வென்றான், ஒருவனிதி யென்றான்; என்புதெரி கரங்களில் அன்புடன் அளித்தேன்? ஒருவனது தாபமும் ஒருவனுறையிடமும் அளித்தருள் என்றனர்; களித்துடன் அளித்தேன்; இல்லார்க் கியன்றன எல்லாம் ஈந்தேன். இனியநல் லின்பம் கனியுமெய் யுருவோடு வந்துநின் றுனக்குச் சொந்த மாதா னேனெனக் காதிலோ தினளே. பர்லி என்னும் ஆங்கிலக் கவியின் இவ்வழகியபாக்கள் வளரும் இன்பத்தின் மர்மத்தை விளக்குகின்றன. நீங்கள் சரீரப் பற்றையும் மற்றைய நிலையில்லாத பொருள்களின் பற்றுக்களையும் விடுங்கள்; நீங்கள் உடனே சரீரமில்லாததும் நிலையுள்ளதுமான பொருளாவீர்கள். தனது அற்ப நலன்களுக்காகச் சகல பொருள்களையும் கீழ்படுத்துவதற்கு நாடுகின்ற குறுகிய தன்மையுள்ள ‘யான்’ என்பதை விடுங்கள்; நீங்கள் தேவகணங்களின் சகவாசத்தையும், பேரருளாக விளங்காநின்ற கடவுட்டன்மையையும், கடவுளகத்தையும் அடைவீர்கள். நீங்கள் ‘யான்’ என்பதை மறந்து மற்றவர்களுடைய துக்கங்களை உங்கள் துக்கங்களாகக் கருதி மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள்; தெய்வ இன்பம் உங்களைச் சகல துன்பங்களினின்றும் துக்கங்களினின்றும் வெளியேற்றிவிடும். “ஒரு நல்ல நினைப்போடு முதல்படி ஏறி, ஒரு நல்ல சொல்லோடு இரண்டாம் படி ஏறி, ஒரு நல்ல செயலோடு மூன்றாம்படி ஏறி நான் சுவர்க்கத்தை அடைந்தேன்.” என்றனர் ஒரு பெரியவர். நீங்களும் அவ்வாறு சுவர்க்கத்தை அடையலாம். சுவர்க்கம் தூரத்திலில்லை; இங்கே இருக்கின்றது. தூய அகத்தைக் கொண்டிருக்கிறவர் மாத்திரம் அதனைக் காண்கின்றனர்; சுயநலமற்றவர் மாத்திரம் அதனை அடைகின்றனர். நீங்கள் இவ்வகண்ட இன்பத்தை இதுவரையில் அடையவில்லையானால், நீங்கள் அதனை அடைய வேண்டுமென்று எப்பொதும் கோரியும், சுயநலமற்ற அன்பாகிய உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும் அதனை அடையத் தொடங்குங்கள். கோரிக்கையென்றாலும், பிரார்த்தனையென்றாலும் மேல்நோக்கிய அவாவாகும். அஃதாவது நிலையான திருப்தியைத் தரத்தக்கவராய் எல்லாவற்றிற்கும் மூலமாயிருக்கிற கடவுளை நோக்கி ஆன்மா நிற்றலாம். கோரிக்கையால் அல்லது பிராத்தனையால், அவாவினது அழிக்கும் சக்திகள் தெய்வத்தன்மை வாய்ந்ததும் எல்லாவற்றையும் பரிபாலிப்பதுமான வலிமையாக மாற்றப்படுகின்றன. கோருதல் அல்லது பிரார்த்தித்தல் என்பது அவாவின் விலங்குகளை உதறிவிடுவதற்காகச் செய்யும் ஒரு முயற்சி. அம்முயற்சியைச் செய்யுங்கால் ஆன்மா தனிமையையும் துன்பத்தையுமுற்று, ஞானத்தை அடைந்து, தனது தந்தையின் மாளிகைக்குத் திரும்பிப் போய்ச் சேரும். உலோபத்தன்மையுள்ள ‘யான்’ என்பதை நீங்கள் ஒழிக்கும்போது, உங்களைப் பந்தப்படுத்தியிருக்கிற விலங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் உடைக்கும்பொழுது, உலோபத்தால் உண்டாகும் துன்பத்தினின்று நீங்கள் நீங்கி நீங்கள் பிறருக்கு ஈதலால்-எங்கள் பொருளை ஈதலால்-உங்கள் விவேகத்தை ஈதலால்-உங்கள் அகத்துள் வளரா நின்ற அன்பையும் ஒளியையும் ஈதலால்-உளதாகும் இன்பத்தைக் காண்பீர்கள். நீங்கள் அப்பொழுது “கொள்வதிலும் கொடுத்தல் அதிக இன்பத்தைத் தரும்” என்று அறிவீர்கள். ஆனால், உங்கள் கொடை ‘யான்’ என்னும் பற்றுச் சிறிதுமில்லாததாயும், பிரதிபலனைக் கருதாததாயும், உள்ளத்தின் அடியினின்று வெளிப்படுவதாயும் இருத்தல் வேண்டும். கலப்பற்ற அன்பால் நிகழும் கொடை எப்பொழுதும் இன்பத்தைக் கொண்டு வரும். நீங்கள் கொடுத்த பின்னர், உங்களுக்கு வந்தனம் அளிக்கவில்லையென்றாவது, உங்களை முகஸ்துதி செய்யவில்லையென்றாவது, உங்கள் பெயரைப் பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையென்றாவது நீங்கள் வருத்தப்படுவீர்களாயின், உங்களுடைய கொடை அன்பினாற் செய்யப்பட்டதன்றென்றும், நீங்கள் கொள்வதற்காகவே கொடுத்தீர்களென்றும், நீங்கள் உண்மையில் உலோபம் செய்தீர்களேயன்றிக் கொடையைச் செய்யவில்லையென்றும் அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடைய §க்ஷமத்திற்காக ‘யான்’ என்பதை நீங்கள் விட்டுவிடுங்கள்; நீங்கள் செய்யும் காரியங்களிலெல்லாம் ‘யான்’ என்பதை மறந்துவிடுங்கள்; இதுதான் வளரும் இன்பத்தின் மர்மம். சுயநலம் உங்களை அணுகாத விதத்தில் உங்களைஎப்பொழுதும் ஜாக்கிரதையாக நீங்கள் காத்துக் கொண்டு அகத்துறவாகிய தெய்வபாடத்தை நீங்கள் உண்மையோடு படியுங்கள்; அவ்வாறு செய்யின், இன்பத்தின்மிகமிக மேலான ஸ்தானங்களுக்கு நீங்கள் ஏறுவீர்கள்; அழியாமையாகிய பிரகாசமுள்ளஉடையை உடுத்துக் கொண்டு, மேகத்தால் ஒருபொழுதும் மறைக்கப்படாத பேரின்பமாகியசூரியப் பிரகாசத்தில் நித்தியமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஆசிரியப்பா ஒருபொழுதும் அழியா உயர்ந்த இன்பத்தை மருவுதற் கெண்ணி வருந்துகின் றனையா? துன்பநாள் உன்னைத் தொடவிடா நித்திய இன்பினை அடைவதற் கெண்ணுகின் றனையா? அன்பும் வாழ்வும் அமைதியுமாகிய மின்புனல் அருவியை விரும்புகின் றனையா? மயல்தரும் அவாவெலாம் மாய்த்துச் சுயநல நாட்டமுந் தொலைக்கவே ருடனே. துன்பமும் பிணியும் துக்கமும் நிறைந்துள வன்புதர் நெறிகளில் வருந்துகின் றனையா? இளைத்தவுன் அடிகளை ஈர்க்கும் வழிகளில் களைத்லைந் துழன்று கவல்கின் றனையா? அழுகையும் துக்கமும் அணுவும் அணுகா விழுமிய வீட்டை விரும்புகின் றனையா? சுயநய அகத்தினைத் துறந்து பரநய அகத்தினைப் பாத்தடை வாயே.   12 வலிமையை அடைதல் வலிமையை அடைதல் உண்மையும், நம்பிக்கையும், தயாளமும் அன்பும் நிறைந்திருக்கின்ற அகத்திற்கு மாத்திரம் மெய்யான வலிமை கொடுக்கப்படுகின்றது. இக் குணங்களைக் கொண்டிராத அகமானது வலிமையை அறிய முடியாது; ஏனெனில் வலிமை, சுகத்தைப் போலவே ஒரு புற உடைமையன்று; ஓர் அக அநுபவம். பேராசையுள்ள ஒரு மனிதன் ஒரு கோடீசுவரனாகலாம். ஆனால், அவன் எப்பொழுதும் துன்பமுள்ளவனாகவும், இழிஞனாகவும், எளியனாகவும் இருப்பான். தன்னினும் மிகுந்த செல்வமுள்ள ஒருவன் உலகத்தில் இருக்கிறவரையில் தன்னைப் புறத்திலும் எளியவனென்றே அவன் நினைத்துக்கொண்டிருப்பான்; ஆனால், நேர்மையும் உதாரமும், அன்புமுள்ள மனிதர் தமது புறஉடைமைகள் கொஞ்சமாயிருந்தபோதிலும் அஷ்ட ஐசுவரியங்களுக்குமுரிய வலிமையை அடைந்திருப்பர்; “அதிருப்தி உடையவனே எளியன்; தனக்குக் கிடைத்துள்ளவற்றோடு திருப்தியுடையவனே வலியன்.” தயாளமுள்ளவனாயிருப்பவனே அதிக வலிமையுள்ளவன். பிரபஞ்சத்தில் ஜடமும் சித்துமாகிய சகல நல்ல பொருள்களும் நிறைந்திருக்கின்ற விஷயத்தை நாம் சிந்தித்து, அதனோடு மனிதன் சில தங்க நாணயங்களையோ, சில காணி புழுதி நிலங்களையோ சம்பாதிக்கக் கொள்ளும் குருட்டுத்தனமான ஆசையை நாம் ஒப்பிட்டுப் பார்க்குங்காலையில் சுயநலம் எவ்வளவு இருண்டதென்பதையும், மடத்தனமென்பதையும் நாம் காண்போம். அப்பொழுதுதான் தன்னலநாட்டம் தன்னையே அழிப்பதென்பதைத் தெரிவோம். பிரகிருதியானது ஒன்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் எல்லா உயிர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தும், அஃது ஒன்றையும் இழப்பதில்லை; மனிதன் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்துக் கொண்டிருந்தும், அவன் ஒவ்வொன்றையும் இழந்துவிடுகிறான். நீங்கள் உண்மையான வலிமையை அடைய விரும்புவீர்களாயின், நியாயமாகச் செய்யப்படும் ஒவ்வொன்றும் அநியாயமாக முடியுமென்று அநேகர் கொண்டிருக்கிற தப்பு நம்பிக்கையை நீங்கள் கொள்ளாதீர்கள். ஒழுக்கத்தின் வலிமையிலுள்ள உங்கள் நம்பிக்கையை அசைக்கக் கூடிய ‘போட்டி’ என்பதற்கு நீங்கள் இடங்கொடாதீர்கள். ‘போட்டி’யின் விதிகளைப்பற்றி மனிதன் பேசுங்காலையில் நான் சிறிதும் கவனிப்பதில்லை; ஏனெனில், ஒருநாள் அவற்றையெல்லாம் ஓட்டுவதும், இப்பொழுதும் அவற்றையெல்லாம் நியாயமான மனிதனுடைய அகத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓட்டுகிறதுமான மாறாத சட்டத்தை நான் அறிந்திருக்கிறேன். இச் சட்டத்தை அறிந்திருப்பதனால், சகல வகை அயோக்கியங்களும் அழிவை அடையுமென்று தெரிந்து அசையாத அமைதியுடன் இருக்கின்றேன். நியாயமென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள்; மெய்ச் சட்டத்தை நம்புங்கள்; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள்; ஒருபோதும் உங்களை அது கைவிடாது; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய நஷ்டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகின்ற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும் தயாளத்தையும் அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கைவிடாதீர்கள். அவை உங்களை உண்மையான வலிமையுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான், “தனக்குப் போய்த் தானம்,” என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய்யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது. அதனைக் கைக்கொண்டு நடக்கிறவர்களுக்கு ஒருநாள் வரும்; அந்நாளில் அவர்களை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள்; அவர்கள் தனிமையாலும் துன்பத்தாலும் அழும்பொழுது அவர்களை ஏனென்று கேட்கவும் அவர்களுக்கு உதவி புரியவும் ஒருவரும் முன்வரமாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி நினைத்தற்கு முன்னர்த் தன்னைப்பற்றி நினைத்தல் மேம்பாடும் தெய்வத்தன்மையுள்ள ஒவ்வொரு மனோ எழுச்சியையும் தடுத்தும் கெடுத்தும் அழித்தும் விடும். உங்கள் ஆன்மா விரிவுறுக; உங்கள் அகம் அன்போடும் தயாளத்தோடும் மற்றவர்களிடத்துச் செல்லுக; உங்கள் இன்பம் பெரியதாகவும் நீடித்து நிலை நிற்பதாகவும் இருக்கும்; சகல வலிமையும் உங்கள் பால் வந்து சேரும். நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர், ‘போட்டி’ தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்ளுதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர். நீதி மார்க்கத்தில் ஒழுகுகின்றவர் ‘போட்டி’யினின்று தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய ஆவசியகமில்லை. இது வெறும் வார்த்தையன்று. யோக்கியதையாலும் நம்பிக்கையாலும், சகல ‘போட்டி’களையும் வென்று, தம்மோடு ‘போட்டி’ செய்த காலத்தில் தாம் தமது ஒழுக்கங்களிலிருந்தும் சிறிதும் விலகாது நடந்து வலிமையை அடைந்துள்ள மனிதர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக முயன்றவர்களெல்லாம் தோல்வியடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். நன்மை என்று சொல்லப்படும் குணங்களையெல்லாம் ஒருவன் கைக்கொண்டிருத்தல்அவனைத் தீமையின் சகல சக்திகளினின்றும் தப்புவிக்கும், இக்குணங்களைவளர்ப்பதனால் ஒருவன் அசைக்க முடியாத வெற்றியை அடைவான். என்றென்றும் நிலைநிற்கத்தக்க வலிமையை அடைவான். வெண்பா தீயவினை நோவு செறிதுன்பம் உட்கவலை தூயமன வெள்ளுடையில் தோய்ந்ததனால்-ஆயகறை பின்னிரங்கற் கேணி பிரார்த்தனையூற் றால்நீங்கி முன்னிறத்த வெண்மைவரு மோ! அறியாமை மார்க்கத் தடிவைத்த போழ்து செறியாநிற் கும்பெருகித் தீமை–அறியாமை எய்தியதன் காரணம் ‘யான்’ என்னும் சுயநயத்தைச் செய்ததுவே யென்று தெரி. அறிவுடைமை யாலாம்நீர் அவ்வுடையி லாய செறிகறையைப் போக்கி வெண்மைசேர்க்கும்;- அறிவுடைமை அன்புசமா தானம் அறியாமெய்ஞ் ஞானமெனும் மின்புனலை நல்கும் விரைந்து. பாவம் செயல்பின் பரிந்திரங்கல் துன்பநெறி; ஏமநல்கும் மெய்ஞ்ஞானம் இன்பநெறி-ஞால உயிர்க்கெல்லாம் நன்றாற்ற ஓடிவரும் மெய்ஞ்ஞானம் செயிர்க்கெல்லாம் வேராம் ‘யான்’ சென்று. யான் உள்ளே யின்றாக இம்மண்நீர் தீக்காற்று வான்உள்ளே நிற்கின்ற வாலறிவோம்;-தேன்உள்ளே ஊறிப் பெருகியெங்கும் ஓடி நிறைந்துவெளி ஏறிப் பெருகிநிற்கும் இங்கு.   வலிமைக்கு மார்க்கம் முற்றும்