[] 1. Title Page 2. Cover 3. Table of Contents லெனின் நான்கு கட்டுரைகள் லெனின் நான்கு கட்டுரைகள்   ஆர். பட்டாபிராமன்   pattabieight@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/lenin_four_essays மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/lenin_four_essays This Book was produced using LaTeX + Pandoc லெனின் நான்கு கட்டுரைகள்(Lenin Four Essays) இந்த சிறு மின் பிரசுரத்தில் லெனின் குறித்த நான்கு கட்டுரைகளை இடம்பெற செய்துள்ளேன். விடுதலைப் போராட்டக்காலத்தில் பல போராளிகளுக்கும் லெனின் இந்தியாவில் எந்த அளவு ஆதர்ஷ வீரராக இருந்தார் என்பதை படம்பிடிக்கும் கட்டுரையாக ‘விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் லெனின்’ என்ற கட்டுரை அமைந்திருக்கும். இக்கட்டுரை இணைய தளங்களிலும் ஜனசக்தி மலரிலும் இடம் பெற்ற கட்டுரைதான். அடுத்த கட்டுரை லெனின் ஆட்சிக்கு வந்த பின்னர் என்பது பற்றிப் பேசும் கட்டுரை. புரட்சியை நடத்துவது அதற்கு மக்களை இசைய வைப்பது என்பது எளிதான செயல் அல்ல என்றால் அப்படி புரட்சி நடந்து ஆட்சி பொறுப்பை ஏற்று அவர்கள் முன்மொழிந்த சமூக கட்டுமானத்தை செய்வது அதைவிட மிகக் கடுமையான பல சறுக்கல்களை சந்திக்கும் செயல்களாக அமைவதற்கும் வாய்ப்புண்டு என்பதை என்னால் வெகு ஆண்டுகளுக்கு பின்னரே உணரமுடிந்தது. லெனின் ஆட்சி எப்படி இருந்தது என கொஞ்சம் தேடிப்பார்த்ததில் என் வாசிப்பிற்குள் வந்த அம்சங்களை இக்கட்டுரையில் தந்துள்ளேன். நேருவும் ஆட்சிக்கு வந்தவுடன் அவரிடம் கேள்வி கேட்ட போராளிகளிடம் then I was an agitator, now administrator என பதில் சொன்னதும் நினைவிற்கு வருகிறது. அடுத்த கட்டுரை தோழர் காந்தி என்பதற்காக எழுதப்பட்ட பல கட்டுரைகளில் ஒன்று. லெனினும் காந்தியும் என்பது. இது எளிய ஒப்பீடுதான். ஆனாலும் ஆரம்ப நிலை தோழர்களுக்கு சற்றாவது உதவும் மதிப்பீடாக இருக்கும். தோழர் டாங்கேவும் ரெனோ அவர்களும் இந்த ஒப்பீட்டை எந்த கோணங்களில் முன்வைத்தனர் என இக்கட்டுரை பேசுகிறது. நான்காவது லெனின் சகோதரிக்கும் துணையாருக்கும் எழுதிய கடிதங்கள் எப்படி அமைந்தன என்பது பற்றியதாக இருக்கும். லெனின் குறித்து ஏராள புத்தகங்கள் கிடைக்கின்ற சூழலில் இந்த சிறு வெளியீடு அவர் குறித்து எழுதிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வ உந்துதலால் வந்துள்ளது என சொல்லலாம். எவருக்காவது பலனளிக்கும் என்றால் அதுவே எனக்கான வெகுமதி டிசம்பர் 4, 2021 -ஆர். பட்டாபிராமன் விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை உலகம் காண இருக்கிறது 1917 நவம்பர் புரட்சியும் அதை தொடர்ந்த படிப்பினைகளும் பெரும் விவாதங்களையும் உரையாடல்களையும் உருவாக்கியுள்ளன. அப்புரட்சி இந்தியாவில் விடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த புகழ் வாய்ந்த இந்திய தலைவர்கள் மத்தியிலும், இன்று பெயர்கூட அறியாத அன்று பிரிட்டிஷ் எதிர்ப்பில் ஆங்காங்கே உத்வேகமாக எழுதி செயல்பட்டவர்கள் மத்தியிலும் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது என்பது இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அப்புரட்சி நடந்த காலத்தில் லெனின் எவ்வாறு மகத்தான வகையில் நம்நாட்டில் கொண்டாடப்பட்டுள்ளார் என்பதை நாம் உணரமுடிகிறது. இந்திய தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் மத்தியில் லெனினது தாக்கம் குறித்து பல்வேறு மொழிகளில் வந்துள்ளவற்றை தொகுத்து ஆய்விற்கு உட்படுத்தமுடிந்தால் மேலும் பல்வேறு செய்திகளை அறியமுடியும். பிரிட்டிஷாரின் கெடுபிடிகள் இருந்தபோதும் கூட பல்வேறு இந்திய இதழ்கள், புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆதரவு பத்திரிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் புரட்சி- லெனின் அரசாங்கம் குறித்து ஏராள செய்திகளை இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய வகையில் கொண்டு சேர்த்தன. சோவியத் புரட்சி நடந்த மறுமாதமே புனைபெயரில் டெல்லியிலிருந்து அப்துல் சத்தார் கயரி, அப்துல் ஜாபர் கயரி இருவரும் இந்திய மக்களின் வாழ்த்தை லெனினை சந்தித்து தெரிவித்தனர். அவருக்கு பரிசும் அளித்துள்ளனர். இந்தியப் புரட்சியாளர்கள் ராஜ மகேந்திர பிரதாப், பரகத்துல்லா ஆகியோரையும் 1919ல் லெனின் சந்தித்துள்ளர். பின்னர் அப்துல்ராப், எம் பி டி ஆச்சார்யா, எம் என் ராய், விரேந்திரநாத் சட்டோபாத்யாய், புபேந்திரநாத் தத்தா போன்றோர் லெனினை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. போல்ஷ்விசம் என்றால் என்ன என்பதை பத்திரிகை தணிக்கை சட்டங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அறிய முடியாமல் போய்விட்டதாக மாடர்ன் ரிவ்யூ 1919ல் கூறியது. லெனின் என்ற மனிதரும் அவரது நோக்கங்களும் என்ற கட்டுரையை 1918லேயே அலகபாத் லீடர், பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டன. திலகர் தனது கேசரியில் ஜனவரி 29, 1918ல் ருஷ்யத்தலைவர் லெனின் என்ற தலையங்கம் தந்திருந்தார், லெனினை சமாதானவாதி என புகழ்ந்தார் திலகர். எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகளாக பயானீர், சிவில் மிலிட்டரி கெசட், ஸ்டேட்ஸ்மேன் இருந்தன. இப்பத்திரிக்கைகளின் கபடத்தை லாலாலஜ்பத்ராய் வந்தே மாதரம் இதழில் ஜூலை18, 1920ல் கண்டித்து எழுதினார். லெனின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் இந்தியாவில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தி, பெங்காலி, உருது, மராத்தி மொழிகளிலும் வெளியானது. சோவியத்தில்கூட அப்போது அந்த அளவிற்கு வெளியாகவில்லை . இந்தியாவில் அவை சில குறைகளுடன் போதுமான விவரங்கள் இல்லாமல் வந்திருக்கலாம். வெளியிட்டதில் பலர் மார்க்சியவாதிகளும் அல்லர். சோவியத் புரட்சியை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான புதிய சகாப்தம் என அவர்கள் புரிந்துகொண்டனர். சமத்துவ கொள்கைகளை கொண்டாடினர். இருமகாத்மாக்கள் என லெனினையும் காந்தியையும் ஒருசேர கொண்டாடியவர்கள் இந்தியாவில் இருந்தனர். அவர்களது வழிமுறைகள் வேறானாலும் நோக்கம் உன்னதமானது என அவர்கள் விளக்கம் அளித்தனர். விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின் குறித்த உரையாடலை நாம் காந்தியிடமிருந்தே துவங்கலாம். தனியார் உடைமை ஒழிப்பு என்கிற போல்ஷ்விக்கின் லட்சியவாதத்தை அமைதியான முறையில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் அனுசரிக்க வாய்ப்பிருந்தால் அது குறித்து என்ன கேள்வி இருக்கமுடியும் என்ற கருத்தை காந்தி தனது யங் இந்தியாவில் நவ 1928ல் பிரதிபலித்தார். இத்தகைய லட்சியத்தை உருவாக்கி வளர்த்த லெனினின் மகத்தான தியாகம் அப்போது வீனாகாது. துறப்பின் மேன்மையது என்றார் காந்தி. ஜி வி கிருஷ்ணாராவ் 1921ல் ஆங்கிலத்தில் லெனின் சரிதை எழுதினார். லெனின் வன்முறையை வழிபட்டார் என்பதை அவர் அதில் மறுத்திருந்தார். வன்முறை ஏவப்பட்டால் அதற்கு பதிலடியாக வன்முறை அமையும் என்றே லெனின் கருதியாக ராவ் எழுதினார். கிருஷ்ணாராவ் தனது முன்னுரையில் லெனின் மாபெரும் ஞானி- கடும் போராட்டங்கள் சோதனைகளுக்கு பின்னர் ஜாரின் கொடுங்கொன்மையை வீழ்த்தியவர் என புகழாரம் சூட்டுகிறார். சோவியத் புரட்சி மனிதகுல முன்னேற்றத்தில் புதிய மைல்கல் என்றார். கணேஷ் அண்ட் கோ என்ற நிறுவனம் சென்னையில் இப்புத்தகத்தை வெளியிட்டது.. இதேகாலத்தில் இந்தியில் ரமாசங்கர் அவஸ்தி கல்காத்தாவிலிருந்தும், பிடே மராத்தியில் பம்பாயிலிருந்தும், அஜீஸ் போபாலி அவர்களால் லாகூரிலிருந்து உருதுவிலும், ஹூப்ளியிலிருந்து கோரக் என்பவரால் கன்னடத்திலும் லெனின் வாழ்க்கை வரலாறு வந்திருந்தது 1918 கேசரி தலையங்கம் லெனினை சமாதானத்தின் தூதுவனாக சித்தரித்து எழுதியது. உலகம் உண்மையை அறிய வேண்டும் என்றார் திலகர். திலகரின் கேசரி ஆக21, 1920.செய்தியில் லெனினுக்கு ‘மாரல் விக்டரி’ என்ற பதிவை செய்தது. லெனினை மண்டைஓடுகளுடன் காட்சியளிக்கும் இரத்தம் குடிக்கும் ராட்சஷனாக சித்தரிக்கிறார்கள். அவர் தூய மனமும், மனிதகுலத்தின் மீது அளவற்ற அன்பும் நிறைந்தவர் , கைகளில் ஆயுதம் தரிக்காத மாபெரும் தத்துவவாதி என்றது. அவரின் கம்யூனிச கொள்கை புதிய வகையிலானது. ருஷ்யாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார் என ஆதரவு குரலை தந்தது .கம்யூனிச வரலாற்றில் லெனின் பெயர் இனி நீடித்து நிலைக்கும். அனைத்து புதிய சிந்தனைகளுக்கும் உருவப்படுத்த்மனிதர்கள் தேவை என்றது. ருஷ்யா நாடு முழுதும் சுற்றி உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்தவர் லெனின். தனது பேச்சு துண்டறிக்கைகள் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர். சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு வறுமை மற்றும் போராட்டங்களை சந்தித்தவர். போல்ஷ்விக் கட்சியின் மூலம் தொடர் போராட்டங்களை நடத்தி இறுதியாக ஜாருக்கு எதிரான புரட்சியில் வெற்றியடைந்து தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்தவர் என நீண்ட கட்டுரை ஒன்றை கேசரி 29, 1924 இதழில் துந்திராஜ் த்ரிம்பக் காத்ரே என்பவர் எழுதினார் 1929ல் நேரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். லெனினது 30 ஆண்டுகால கடும் உழைப்பு, தியாகம், போராட்டங்கள் குறித்து அதில் பதிவு செய்கிறார். மகத்தான செயல்வீரன் என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியானது. மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் அமைதியாக ஆழ்ந்துறங்கும் அவரது உடலில் ருஷ்ய மன்ணின் மணம் வீசுகிறது. மாக்சிம் கார்க்கி கூறியது போல பூமிப்பந்தில் மனித நியாயத்தை நிலைநாட்டமுடியும் என்பதற்காக வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளையும் அவர் துறந்தார். லெனினை வெறியன் என்கிறார்கள் புரட்சிகர கடமை எவ்வளவு கடுமையானது- பெரும் பயிற்சிக்குரியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஒற்றுமை என்பதற்கு நம் நாட்டில் நடப்பது போல எந்த ஒட்டுவேலையிலும் இறங்கவில்லை. செயல் வீரர்களையும் அனுதாபிகளையும் அவர் பிரித்தறிந்தார். நடப்பு யதார்த்தங்களின் அடிப்படையில் காரியமாற்றுவது என அவர் பேசினார். டூமா நாடளுமன்றத்தையும் அதே நேரத்தில் ஆயுத போராட்டத்தையும் அவர் பயன்படுத்தினார். நமது லட்சியம் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து வழிகளையும் கையாளுதல் என்பதை அவர் உணர்த்தினார். ரொமைன் ரோலந்த் கூறியபடி இந்த நூற்றாண்டின் தன்னலமற்ற மகத்தான செயல்வீரர் லெனின். லெனின் ருஷ்யாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வலிமைக்கான மரபாகியுள்ளார் என ஜவஹர் எழுதினார் . இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் நீ பிறந்த 1917 மகத்தான ஆண்டு. துன்பத்தில் உழலும் மக்களுக்கு விடிவிற்காக மகத்தான தலைவர் லெனின் பணியாற்றி ருஷ்யாவின் சைபீரியாவின் முகத்தையே புரட்சி மூலம் மாற்றியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். மார்க்சியத்தின் நவீன சோதனையாளர் லெனின். அதை விளக்குவதையும் வறட்டுத்தனமற்று அமுல்படுத்துவதையும் நமக்கு அளித்தவர் அவர். மார்க்க்சிய கோட்பாடுகளை உனக்கு கடிதம் மூலம் சொல்ல விரும்புகிறேன். மக்கள்திரளை கவ்வி பிடித்து அது இயக்குவதால் நமது நாட்டிற்கு கூட அது தேவைப்படலாம். புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு வெறும் ஆர்வலர்கள் மட்டும் போதாது- திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை என்பார் லெனின் என்பதை நேரு இக்கடிதங்களில் தெரிவிக்கிறார். சில நேரங்களில் நாம் மைனாரிட்டி ஆகக்கூட செயலாற்ற வேண்டியிருக்கும் என்றும் லெனின் உணர்த்துகிறார் என்றார் நேரு. போல்ஷ்விக் புரட்சி குறித்தும் அதன் முழக்கங்கள் குறித்தும் லெனினது மகத்தான பங்களிப்புகள் குறித்தும் தனது மகளுக்கு விரிவாக கடிதங்களை எழுதுகிறார். . தேசிய இன உரிமை, விடுதலைக்கு போராடும் நாடுகளின் மகத்தான தூதுவன் என்றும் புகழ்கிறார். 1918 கொலை முயற்சிக்கு உள்ளான பிறகும் ஓய்வின்றி உழைத்தார் லெனின். அவரை எந்திரமாக பார்த்துவிடாதே- மக்த்தான மனிதாபிமானி- உரக்க சிரிக்க தெரிந்தவர். நிதானமாக இருப்பவர். பெரும் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் எளிய நேரிடையான விவாதங்களை முன்வைப்பவர் என்றார் நேரு. எல்லைகாந்தி என அழைக்கப்படும் அப்துல் காபர்கான் நான் படித்தறிந்த புரட்சிகர வரலாற்று தலைமையிலேயே லெனின்தான் மகத்தானவராக தன்னை மேலானவன் என நிறுவிக்கொள்ளாதவராக படுகிறார் என்றார். நெப்போலியன், ரேஸா ஷா, நாடிர்ஷா போன்றவர்கள் கூட தடுமாறியிருக்கிறார்கள். லெனின் மேன்மைமிக்கவர் என பதிவு செய்கிறார். நேதாஜி சுபாஷ் அவர்கள் பிரிட்டன் ஜார் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்- பிரிட்டிஷ் மக்கள் தங்கள் தாயகத்தில் சோசலிச விடுதலையை பெறவேண்டும்- ஆளும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் காலனி ஆட்சி முறைக்கும் தொடர்பு இருக்கிறது- காலனி சுரண்டல் மூலம் அவர்கள் வாழ்கிறார்கள் போன்ற லெனின் கருத்தாக்கங்களை மேற்கோள்காட்டி சுபாஷ் 1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரையாற்றினார். காலனியாதிக்க மக்களின் விடுதலையும் பிரிட்டிஷ் மக்களின் சோசலிச போராட்டமும் இரண்டற கலந்தவை என்பதாக அவரது உரை அமைந்தது. முன்னதாக 1938 ஜனவரியில் சுபாஷ் ஆர்.பி தத் அவர்களுக்கு டெய்லிஒர்க்கர் இதழுக்கு தந்த பேட்டியிலும் கம்யூனிச கருத்துக்கள் தொடர்பாக மார்க்ஸ்-லெனின் எழுத்துக்களில் தனக்கு புரிதல் இருப்பதையும் அவ்வெழுத்துக்களில் தான் திருப்தி அடைவதாகவும் குறிப்பிட்டார். தேச விடுதலை போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் அகிலம் தரும் ஆதரவையும் உலகளாவிய பார்வைக்கு அவற்றின் அவசியத்தையும் ஏற்கவேண்டும் எனவும் பேட்டி அளித்தார். அதேபோல் 1940 மார்ச்சில் சமரசமற்றோர் மாநாட்டில் லெனினது புத்திக்கூர்மையை வியந்து பேசுகிறார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற முழக்கம் மூலம் அவர் எவ்வாறு நிலைமைகளை மாற்றினார் என்பதை விளக்கினார். இத்தாலியில் சாதகமான சூழல் 1922ல் இருந்தபோதும் இத்தாலி லெனின் என ஒருவர் இல்லாமல் போனதால் அந்நாடு திசை தப்பி முசோலினிக்கு வாய்ப்பாகி பாசிசபோக்கில் போனதை பேசுகிறார். லாலாலஜ்பத்ராய் தனது வந்தே மாதரம் (1918-20) இதழில் போல்ஷ்விசம் குறித்து காழ்ப்புணர்வில் கபடமாக வரும் எழுத்துக்களை அவற்றை பிரசுரிக்கும் பத்ரிகைகளை- பயானீர், சிவில் மிலிட்டரி கெசட் போன்றவைகளை தாக்கி எழுதினார். போல்ஷ்விக் அரசாங்கத்தின் மற்றும் லெனின் குறித்த நடவடிக்கைகளை அறிய நியூஸ்டேட்ஸ்மேன், டெய்லி ஹெரால்ட், லேபர் லேடர் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளையும் ஒருவர் படித்து உண்மையை உணர வேண்டும். இதற்கு பொருள் நாம் முற்றிலுமாக அவ்வரசாங்கத்தின் போல்ஷ்விக்கின் அனைத்து கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டோம் என்பதில்லை. அவர்களின் சில கொள்கைகள் மிக ஆரோக்கியமானவை என லஜ்பத்ராய் பதிவு செய்கிறார். நாடு பிடிக்கும் ஆசை ஏதுமின்றி அனைத்து நாடுகளின் சுதந்திரத்தையும் மனிதகுலத்தையும் மதிக்கின்ற நாடாக மலர்ந்திருக்கிறது என லாகூரிலிருந்து வந்த சுயராஜ்ய ஜூலை 8 1921ல் எழுதியது பகத்சிங் மே 1931ல் அலகாபாத் இந்தி வாரப்பத்திரிகையில் புரட்சிகர அரசியல் போராட்டங்களில் சமரசமும் ஒரு பகுதிதான் என்பதற்கு ருஷ்யாவின் 1905 புரட்சி, தொடர்ந்து டூமா நாடுளுமன்ற பங்கேற்பு- புறக்கணிப்பு போராட்டங்களை லெனின் நடத்தியது பற்றி குறிப்பிடுகிறார். அதேபோல 1917 புரட்சிக்குப்பின்னர் உடனடியாக சமாதானம் என்பதை லெனின் உயர்த்திப் பிடித்தார்- சமரசம் எந்த நோக்கிற்காக - நோக்கம் நிறைவேறியதற்கு பின்னர் தொடர்ந்த இயக்கங்கள் என்பதை புரிந்து அரசியல் இயக்கங்கள் நடைபோடவேண்டும் - நமது சாத்வீக தலைவர்களுக்கு இப்படிப்பட்ட பார்வை இல்லாமல் இருப்பது வெறுப்பிற்குரியதாக உள்ளது என எழுதினார். மார்க்சின் மூலதன ஆக்கத்திற்கு லெனினது ஏகாதிபத்தியம் குறித்த புத்தகம் நிரப்பியாகவுள்ளது என அப்புத்தகத்தை ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆய்ந்து எழுதுகிறார். லெனினது ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ இந்தியில் காசிவித்யாபீடம் ராம்சாஸ்திரி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1934ல் வெளியானதற்கு ஆச்சார்யா நரேந்திரதேவ் அறிமுகவுரை எழுதியிருந்தார். லெனினது நடையில் உள்ள கடினத்தன்மையை மொழிபெயர்ப்பாளர் எளிய உருது பதங்கள் மூலம் புரிய வைத்துள்ளார் என நரேந்திரதேவ் பாராட்டுகிறார். M N ராய் தனது நினைவு குறிப்புகளில் முதலில் லெனினை சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கட்சிக்குள் அவரது ஆளுமை எப்போதுமே நீடித்தது. விவாதங்களின் கூர்மை, தோழர்களுடன் ஜனநாயக உரையாடல், ஏற்பின்மை எனத் தெரிந்தால் பிரச்ச்னையை அடிமட்டம்வரை எடுத்து சென்று தீர்வு காண முயற்சிக்கும் பாங்கு குறித்து லெனினை அதில் ராய் பாராட்டுகிறார். லெனின் இரும்பு இதயம் படைத்தவர் என சொல்லப்படுவது எவ்வளவு தவறு என்பதை நிறுவுகிறார். வெளிப்படையாகவும் நட்புடனும் உரையாடத் தெரிந்தவர் லெனின் என்கிறார். காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பை- ஒத்துழையாமையை புரட்சிகரமானது என்று தெரிவித்த லெனின் கருத்தை ராய் ஏற்க மறுத்துவந்தார். லெனின் விரிவாக இது குறித்து அறிக்கை கேட்க பின்னால் ராயின் India In Transition புத்தகமாக அது வந்தது. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் 1936ல் சோசலிசம் எதற்காக என்ற ஆக்கத்தில் லெனினது செய்ய வேண்டியதென்ன குறித்து விவாதித்தார். புரட்சிகர மாற்றத்திற்கு தொழிலாளர்களை- வெகுமக்களை புரட்சிகர அறிவுத்துறை நபர்கள் தயார்படுத்திட வேண்டிய கடமை குறித்து பேசுகிறார் ஜே பி. சகோதரர் லெனினது அழைப்பை கவனியுங்கள் என மெளல்வி பரகத்துல்லா வேண்டுகோள் விடுத்தார். இன்று மானுட சந்தோசத்திற்கு லெனின்தான் சூரிய வெளிச்சம் என்றார் பரகத்துல்லா. முகமதியர்களும் ஆசிய நாடுகளும் ருஷ்யா சோசலிசத்தின் உன்னதங்களை உணர்ந்து ஆர்வத்துடன் அக்கொள்கைதனை தழுவ வேண்டும் என தாஷ்கண்ட்டில் 1919ல் வெளியிட்ட பிரசுரத்தில் தெரிவித்தார் பரகத்துல்லா. தோழர் டாங்கே 1921ல் காந்தியும் லெனினும் பிரசுரத்தில் லெனின் காலனி நாடுகள் பிரச்சனை குறித்த லெனின் ஆய்வுகளை குறிப்பிட்டு எழுதுகிறார். விஞ்ஞானி மக்நாத் ஷகா பிற அரசியல் தலைவர்களை போல் அல்லாமல் லெனின் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஞானமுடையவராக இருந்தார் என குறிப்பிடுகிறார். லெனின் என்ற மனிதரும் அவர்தம் குறிக்கோளும் என தலைப்பிட்டு லீடர் அலகபாத் ஜனவரி 10, 1918 இதழில் பெரிய கட்டுரை எழுதியது. அதை பம்பாய் கிரானிக்கிள் மறுபிரசுரம் செய்தது. இந்தியன் ரிவ்யூ ஜூன் 1918ல் இளைஞர்களை கவ்வி பிடிக்கும் காந்த சக்தி லெனின் என எழுதியது. புரட்சியின் பெயரில் ரொட்டியும் நிலமும் என அவர் வாக்களித்துள்ளார் என சுட்டிக்காட்டியது. 1919 ல் தாஷ்கண்ட் சென்ற கர்பக்ஷ்சிங் போல்ஷ்விகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை அறியமுடிகிறது. ஆனால் கார்ல்மார்க்ஸ், லெனினை அவர்கள் நம்பினார்கள். அவர்களது படங்களை எல்லா இடங்களிலும் மக்கள் வைத்திருந்தனர். லெனினுடன் டெலிபோனில் பேசமுடிகிறது என்றனர். சாதரண போல்ஷ்விக் ஆடையைவிட மோசமான ஆடையையே அவர் உடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்திய ரூபாயில் ரூ 3க்கு சமமான ஊதியம் மட்டுமே அவர் பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் என்ற பதிவை செய்துள்ளார். கல்கத்தா மாடர்ன்ரிவ்யூ லெனின் சொல்லும் சுயநிர்ணய உரிமை குறித்து பிப் 1919ல் எழுதியது. அமிர்தபஜார் பத்ரிகா பெட்ரண்ட் ரஸ்ஸல் ருஷ்யா சென்று லெனின், கார்க்கி, டிராட்ஸ்கியை பேட்டிக் கண்டு நேஷன் இதழில் எழுதியதை குறிப்பிட்டு அவர்களின் மேதாவிலாசத்தை புகழ்ந்தது, லெனினை மாபெரும் அறிவுஜீவி என்றது. லெனின் சுய முக்கியத்துவம் இல்லாமல் செயல்படுகிறார். அச்சமற்றவராக, நிதானமானவராக, கொள்கையின் உருவமாக இருக்கிறார். அவர் பேராசிரியரைபோல் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் என்றும் அவரின் மின்மயமாக்கல் தொழிற்துறைகளில் அமுலாகி வருகிறது எனவும் ரஸ்ஸல் எழுதியுள்ளதாக அமிர்தபஜார் 1920 ஆகஸ்ட்17ல் பதிவு செய்தது. லெனின் மறைவை அடுத்து ஜூன் 25 1924ல் அவர் தூவிய புரட்சியின் விதைகள் உலகம் முழுதும் செல்லும்.. யாரும் அழித்துவிடமுடியாது என எழுதியது பனாரஸ்ஸிலிருந்து வெளியான இந்தி தினசரி ஆஜ் அக் 5 1920ல் இந்திய வரலாற்று தன்மையுடன் ருஷ்யபுரட்சியை விளக்கியது. மனிதகுல மீட்சி ஒரே காரணியை சார்ந்திருப்பதல்ல. பல்வேறு காரணிகளை சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. எதிர்ப்பும் சேர்ந்தே இயங்குகிறது. ஒருகாலத்தில் மதகுருமார்கள் ஆளுமையில் மனிதகுலம் இருந்தது. பின்னர் மன்னர்களின் அதிகாரத்திற்குட்பட்டே அனைத்தும் நடந்தன. தற்போது பணமுள்ள வைஸ்யர்கள் எனும் முதலாளிகளின் வசம் அதிகாரமுள்ளது. அவர்கள் முடிவெல்லைக்கு வந்துவிட்டார்கள். எதிர்ப்பு எழத்துவங்கிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்கள் தலைஎடுக்கத் துவங்கிவிட்டனர். ருஷ்யாவில் இது தெளிவாகிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்களின் தலைமை புரட்சியின் மூலம் வைஸ்யர்கள் எனும் முதலாளித்துவ தலைமையை வீழ்த்தும் என கருகிறோம்.. லெனினது கடமை முடிந்ததாக தெரியவில்லை. ஒரு லெனின் போனாலும் 10 லெனின்கள் வருவார்கள். லெனினை தனிமனிதனாக நம்மால் பார்க்க முடியவில்லை,. அவர் ஒரு காரணி என அற்புத வரலாற்று பார்வையில் அப்பத்திரிகை எழுதியிருந்தது. . டாக்டர் லக்ஷ்மன் நாராயண் ஜோஷி தனது போல்ஷ்விஸம் (1921) மராத்தி புத்தகத்தில் லெனினுக்கு வெற்றி எளிதாக கிட்டிவிடவில்லை. அவரது சுயநிர்ணய உரிமை கருத்துக்கள் அமெரிக்க தலைமை வில்சனையும் பாதித்தது என பதிவு செய்துள்ளார். அந்த மராத்தி புத்தகத்தில் ஜப்பனிய நிருபர் நகாஹிரா லெனினை பார்த்து எடுத்த பேட்டி பற்றிய குறிப்பும் இடம் பெற்றது. அவ்வுரையாடலில் லெனின் பேட்டி எடுக்க வந்தவரிடம் ஜப்பனிய உழைக்கும் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் அவற்றின் மையமான பிரச்சனைகள்- விவசாய இயக்க போராட்டங்கள்- உணவில் தன்னிறைவு உள்ள நாடாக ஜப்பான் இருக்கிறதா- ஆள்பவர்களின் தாக்குதல்கள் எவ்வாறு அமைகின்றன போன்றவற்றை கேட்டறிவதில் ஆர்வம் காட்டினார். தங்கள் நாட்டில் தம்மக்களை அறியாமையிலிருந்து வெளியேற்றிட அவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். அவரது அலுவலகம் அவரைப்போலவே மிக எளிமையாக இருந்தது என அப்பத்திரிகையாளர் செய்த பதிவையும் மராத்தி புத்தகம் எடுத்து சொல்கிறது. லெனின் உலகின் அனைத்து ஆண்- பெண் ஒற்றுமையை வலியுறுத்தியவர். உண்மையான சகோதரத்துவம் சமத்துவம் விடுதலைக்கு உழைத்தவர்- அவருக்கு நீண்ட ஆயுள் தேவை. இறை ராஜ்யமே நிறுவப்பட்டதுபோல் உள்ளது என லாகூரில் வெளியான லெனின் வாழ்க்கை வரலாறு உருது புத்தகத்தில் அசிஸ்போபாலி எழுதுகிறார். விவசாயிகளை விடுவிக்கவேண்டும் எனில் அவர்களை நகர்ப்புற சுரண்டலிருந்தும் விடுவிக்கவேண்டும் என்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார் லெனின். நகர்ப்புறங்களிலும் தொழிலாளர்கள் நிர்வாக கட்டுப்பாடுகளுடன் சோவியத் என நிறுவ முயற்சித்தார். உலக பாட்டளிகளின் உதவி இல்லாமல் சோசலிச மரம் மானுடம் முழுமைக்குமான நிழலைத் தராது என கருதினார் லெனின். ஆப்ரிக்க, இந்தியா போன்ற நாடுகளின் விடுதலையையும் அவர் உயர்த்திப் பிடித்தார் என 1923 இந்தி ஆக்கத்தில் ப்ரான் நாத் வித்யலங்கார் எழுதியுள்ளார். யுவ வார்தா பத்திரிகை பிப்12 1923ல் லெனின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வதந்திகள் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து எழுதியது. அவர் ஆகஸ்ட் 1918ல் படுகொலை செய்யப்பட்டார் எனவும் , செப் 3 அன்று ஆக 31 அன்றே இறந்துவிட்டர் எனவும் செய்திகளை பத்திரிகைகள் பரப்புவதை சுட்டிக்காட்டியது வார்தா. நமது நாட்டவர்கள் இதுபோன்ற செய்திகளை விழிப்புடன் சரி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என எச்சரித்தது அப்பத்திரிக்கை. வங்கமொழி புத்தகம் ஒன்றில் அதுல் சந்திர சென் என்பார் பிப் 1924ல் கார்ல்மார்க்சின் கனவு குழந்தை லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன் என்ற பதிவை செய்கிறார். ஏகாதிபத்திய போர்களை பூமிப்பந்திலிருந்து அகற்ற வேண்டும் என லெனின் போராடினார் எனவும் குறித்துள்ளார். தேச கட்டுமானத்தலைவர் லெனின் மறைவு என பம்பாய் கிரானிக்கிள் எழுதியது. நியுயார்க ஹெரால்டில் மாக்சிம் கார்க்கி லெனின் குறித்து எழுதிய குறிப்புகளையும் அப்பத்திரிகை மேற்கோளாக காட்டியது. லெனினது வாழ்வின் அடிப்படை மனிதகுல மேம்பாடுதான். மனித இயல்பின் அனைத்து சக்திகளின் திரள் உருவமாக அவர் இருந்தார் என்ற கார்க்கியின் பதிவை ஜன் 23, 1924ல் பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டது. லாகூரிலிருந்து வெளிவந்த ட்ரிப்யூன் ஜன் 29, 1924 உலக ஆளுமை மறைந்தது என்ற செய்தியை வெளியிட்டது. அய்ரோப்பாவின் கைப்பாவையாகாமல் புரட்சிகர ருஷ்யாவை உருவாக்கிய லெனின் மறைவால் உலகம் இன்று ஏழையாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது, பல நூற்றாண்டுகளில் காணமுடியாதிருந்த மாபெரும் தாக்கத்தை உலகமுழுதும் ஏற்படுத்திய அம்மனிதன் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனவும் அப்பத்திரிக்கை எழுதியது. மேலும் ட்ரிப்யூன் ஜன் 31 1924ல் லெனின் இறுதி நிகழ்ச்சி காட்சிகள் என்ற செய்தியையும் வெளியிட்ட்டது.. உறைய வைக்கும் குளிரிலும் ஏராள மக்கள் பார்வையிட வந்திருந்தனர். அந்நாட்டின் வீரர்கள் கண்ணீர்மல்க வைத்திடும் அஞ்சலி கீதம் இசைத்தனர். அவரது உடலை சோவியத் தலைவர்களும் தொழிலாளர்களும் சுமந்து வந்தனர் என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டது டாங்கே நடத்திய சோசலிஸ்ட் பத்திரிக்கை அவருக்கு இறக்க உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி வாழும் உரிமை போலவே இறக்கும் உரிமையும் உண்டு. கோடானுகோடி உழைக்கும் மக்கள் அவர் நூறாண்டுகள் வாழவேண்டும் என்கின்றனர். ஒடுக்குபவர்கள் அவர் உடன் மரணிக்கவேண்டும் என்றனர். இரண்டையும் அவர் செவிமடுக்கவில்லை போலும். புரட்சி குறித்து எழுதி புரட்சிக்காக வாழ்ந்து புரட்சியை நடத்திய மாபெரும் உலக மனிதர் லெனின், அவர் மரணமடைவதற்கு முழு உரிமை படைத்தவர் என்று தனது ஜன 30, 1924 இதழில் பதிவு செய்தது. உருது வாரப்பத்திரிக்கை யாத் வாதன் நியுயார்க்கிலிருந்து மே 1924 இதழில் லெனினது பல்லாண்டு போராட்டம்- புரட்சி- அரசாங்க ஆட்சி குறித்த நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டு புகழ் அஞ்சலி செய்தது. உலகில் வாழ்ந்த ஒரிரு மகத்தான மனிதர்களுள் லெனின் ஒருவர் என்பதை எதிரிகள் கூட மறுக்கமுடியாது. அவரது இரங்கல் ஊர்வலம் போன்ற ஒன்றை ருஷ்யா இதுவரை பார்த்ததில்லை. நாட்டின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாஸ்கோ நோக்கி குவிந்தனர் என பதிவு செய்தது. மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 3000க்கும் அதிகமானோர் மருத்துவ சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியை தந்தது யாத் வாதன். அபுத்யா எனும் இந்தி வார இதழ் கிருஷ்ண காந்த் மாளவியாவால் நடத்தப்பட்டு வந்தது. லெனின் புரட்சியின் பேனரை உயர்த்திப்பிடித்தார் . ஏழே நாட்களில் ருஷ்யாவை மட்டுமல்ல உலகையே குலுக்கியது அப்புரட்சி. வறியவர்களாலும் உழைக்கும் மக்களாலும் நடத்தப்படும் இராஜ்யம் நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பார்க்கிறோம் என தனது ஜன் 29 1924 இதழில் எழுதியது. .அவ்விதழ் அலகாபத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. லேபர்கிசான் கெசட்டில் சிங்கார வேலர் தொழிலாளர்கள் சார்பில் துக்கம் அனுசரிப்போம் என்ற கட்டுரையை லெனின் மறைவை ஒட்டி எழுதினார். மனிதகுலத்தை மீட்க வேண்டும் என பலர் போராடியிருக்கிறார்கள் ஆனால் லெனின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் துயரங்களை போக்கிட சரியான பாதையை போடுவதற்கான வாய்ப்பை பெற்றவராக விளங்குகிறார். உலகில் ஒருசிலரின் சுயநலத்திற்கு பெரும்பான்மை பலியாவதை அறிவியல் பூர்வமாக கார்ல்மார்க்ஸ் விளக்கினார். அது நடைமுறை படுத்தப்பட்டது என புகழஞ்சலி செய்திருந்தார். லெனின் உருவாக்கிய புரட்சி சில சுயநலமிகளால் அழிக்கப்படலாம் ஆனால் அது திரும்ப திரும்ப எழும் என இதழ் ஜன 31 1924ல் எழுதினார். 1923 ஹூப்லியிலிருந்து வெளியிடப்பட்ட கன்னட புத்தகம் லெனின் எவ்வாறு மாணவர்களையும் இளைஞர்களையும் தனது பேச்சின் மூலம் பெரும் செயலுக்கு உந்தி தள்ளுகிறார் என்பதை அவரது உரைகளை மேற்கோள் காட்டி பதிவு செய்திருந்தது. கோரக் என்பவர் அதை எழுதியுள்ளார். எடுத்த காரியத்தை தொடுத்து முடியுங்கள் நடுவில் விட்டுவிடாதீர்கள். முடிக்கமுடியாத ஒன்றை துவங்காதீர்கள் என அவர்களை செயலுக்கு தள்ளியவர் லெனின் என கோரக் பாராட்டுகிறார். லெனின் முட்டாள் என்றும் ஜனநாயகத்தை அழித்துவிட்டார் என்றும் பண உலகம் கூப்பாடு போடுகிறது .சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. நாய் நரிகளுக்கு அஞ்சாது நடைபோடும் சிம்மம் லெனின். பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இடமளிக்கும் சோவியத் சோசலிச குடியரசு அது. கம்யூனிச அரசாங்கமது என பெருமிதம் பொங்கிட கோரக் எழுதுகிறார். மனிதர்களின் எவரெஸ்ட் சிகரம் அவர், பார்த்தவர்களும் பேசியவர்களும் பரவசப்ப்ட்டுள்ளனர். ஏழைகளின் புன்சிரிப்பு அவர். எத்தனை குழப்பங்களை உருவாக்கினாலும் விடைகாணக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவர் பயமற்றவர்களின் அடையாளம் என கோரக் எழுதினார். தன்னுடைய செயல்களில் மகத்துவம் உருவாக்கும் பவபூதி அவர். லெனினை காந்தியுடன் ஒப்பிட்டு இருபெரும் ஆளுமைகள் என கோரக் அப்புத்தகத்தில் பதிவை தருகிறார். இருவரின் நடைமுறை உத்திதான் மாறுவதாகவும் நோக்கம் மானுட விடுதலையே என்றும் குறிப்பிடுகிறார் கோரக். மகாத்மா காந்திக்கு அடுத்த மாபெரும் மனிதர் லெனின்தான் என அஜ் பிப் 2 1924ல் எழுதியது. வங்கப்பத்திரிகைகள் இந்துஸ்தான், ஆன்ந்த்பஜார் பத்ரிகா, சசித்ரசிசிர் ,பங்கவாசி, ஜோதி, சொல்தன், பசுமதி ,பெங்காலி போன்ற பத்திரிகைகள் லெனின் மறைவு செய்தியை புகழஞ்சலியுடன் வெளியிட்டன. ஜாரின் கொடுமைகளிலிருந்து வெளிவர போராடிய மக்கள் திருப்தியடையக்கூடிய அரசாங்கம் அங்கு நடைபெறுகிறது. பிரிட்டிஷ், பிரான்ஸ் முயற்சிகள் தோல்வியுற்றன என்ற குறிப்புடன் லெனின் மறைவை சுதேசமுத்திரன் ஜன 25 1924 இதழ் வெளியிட்டது. மெட்ராஸிலிருந்து வெளியான ஆந்திர பத்ரிகா ஜன 23 1924ல் லெனின் கருத்துக்களுடன் ஒருவர் வேறுபடலாம்.. ஆனால் புத்தியுள்ள எவரும் அவர் உலகப்புகழ் வாய்ந்தவர் என்பதை மறுக்க முடியாது என்றெழுதியது. சேலத்திலிருந்து வெளியான தமிழ்நாடு எனும் இதழ் ஜன் 27 1924ல் லெனினுக்கு எதிராக பல முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி தாக்குதலை தந்தன. போல்ஷ்விசம் அழிக்கப்படவேண்டும் என கருதின. எதிரிகளின் தாக்குதலில் நிலை குலையாமல் புரட்சிகர ருஷ்யா அரசாங்கத்தை அவர் உருவாக்கினார். அவர் மறைந்தாலும் அவரது லட்சியம் நீடித்து நிலைக்கும் என்ற பதிவை செய்தது. பாண்டிச்சேரியிலிருந்து தேசசேவகன் இதுவரை இல்லாத புதியவகை ஆட்சியை உருவாக்கிய லெனின் மறைந்துவிட்டார். அவரை கேலி செய்தவர்கள் தொடர்ந்தும் கூட செய்யலாம். இணையற்ற கொள்கையை அவர் நிறுவியுள்ளார். அவை உறுதிப்பட்டு நிலைக்கும் என எழுதியது. விஜயவாடாவிலிருந்து வந்த சுயராஜ்ய பத்ரிகா லெனினை பலர் கேலிக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கினர். ஆனால் அவர் மறைவின்போது அவர்தம் இழப்பை உணராதவர் என எவருமில்லை என்றது மெளலானா ஆசாத் அவர்களை ஆசிரியராக கொண்டு அல் ஹிலால் பத்திரிகை டிசம்பர் 9 1927ல் சோவியத்தின் 10 ஆண்டு கொண்டாட்டத்திற்கு இந்திய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டும் அரசாங்க அனுமதி பிற சூழல்களால் யாரும் செல்லமுடியவில்லை என்ற பதிவை தந்திருந்தது. கொண்டாட்டத்திற்கு இருநாட்கள் தாமதமாக மோதிலாலும் ஜவஹரும் சென்ற செய்தி பின்னர்தான் கிடைக்கப் பெற்றது. கொண்டாட்ட ஊர்வலத்தில் மக்கள் இரவும் பகலுமாக வந்து கொண்டேயிருந்தனர் என்ற செய்தியை அவ்விதழ் பதிவு செய்துள்ளது. கம்பீரமான லெனின் சிலை கம்யூனிசத்தின் அடையாளமாக எழுப்பப்பட்டுள்ளது என்றும் எழுதியது.. செளகத் உஸ்மானி’ கிரம்ளினில்’ என்ற நினவுப்பதிவை 1927ல்செய்திட்டார். எங்களது மொழிபெயர்ப்பாளர்களுடன் லெனின் அறைக்கு சென்றோம். சரியான இருக்கைகள்கூட அங்கு இல்லை. சுவர் முழுக்க உலக நாடுகளின் வரைபடங்கள்- புத்தகங்கள் நிறைந்த அல்மிரா - கார்ல் மார்க்சின் போட்டோ இருந்தன. அறையில் ஆடம்பர வசதிகள் ஏதுமில்லை. லெனினை நாங்கள் தொந்திரவு செய்யவிரும்பவில்லை. விவசாயிகளின் அன்பிற்கு பாத்திரமானவராக அவர் விளங்கினார். தொழிற்சங்க கூட்டத்தில் அவர் ஆற்றிக்கொண்டிருந்த மிக முக்கிய உரைகளை கேட்க முடிந்தது, உணவுக்கூடத்தில் கிரெம்பிளினில் தொழிலாளர்களுடன் அவர் உணவு எடுத்துக்கொண்டார் போன்ற அவரது எளிமையை நேரில் பார்த்த உஸ்மானி எழுத்துக்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. அமிர்த்சரஸிலிருந்து வெளியான கிர்தி பஞ்சாபி மாத இதழ் பிப் 1927ல் லெனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவீர் என்ற வேண்டுகோளை விடுத்தது. விவசாயிகளுக்கு துயர்துடைக்கும் தோழன், ஏழைகளின் நண்பன், தொழிலாளர் வாழ்க்கையை உயர்த்தும் மனிதன் லெனின் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. லெனினது கொள்கைகள் உழைக்கும் மக்களை விடுவிக்கும் மகத்தான சக்தி கொண்டது. தவறாமல் உழைக்கும் மக்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தது கிர்தி. மாதுரி என்ற இந்தி மாத இதழ் ஜன 1928ல் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. குட் என்ற மான்செஸ்டர் கார்டியன் நிருபர் லெனின் அரசாங்கம் எவ்வாறு நடைமுறையில் உள்ளது என பார்வையிட 1919ல் வந்திருந்தார். இதுவரை பரப்பப்பட்ட தவறான தகவல்களை தான் உணர முடிந்ததாக அவர் எழுதியதை மாதுரி பதிவு செய்தது. லெனினை சுற்றி சீனா வீரர்கள் இருப்பார்கள் என்பது பெரும் கட்டுக்கதை - யாருமில்லை. அமைச்சர்கள் அவரவர் அலுவலகத்தில் இருந்தனர்- லெனின் எளிமையாக அவரது அலுவலத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக உழைப்பதை பார்க்க முடிந்தது.. அரசாங்க செலவில் கம்யூனிச பிரச்சாரங்களை பிற நாடுகளுக்கு நாங்கள் செய்வதில்லை என்றார் லெனின். ஆனால் பிரிட்டன், பிரான்ஸ் சோவியத் கம்யூனிச எதிர்ப்பை அரசாங்கம் மூலமே சட்டமியற்றி செய்கிறார்கள் என்பதை திருவாளர் குட் அவர்களிடம் லெனின் சுட்டிக்காட்டினார். நாங்கள் கருத்து சுதந்திரத்திற்காக நிற்போம் என்றார் லெனின் போன்ற அந்நிருபரின் பதிவை மாதுரி வெளியிட்டது. குறுகிய 10 ஆண்டுகளுக்குள் சோவியத் ஜனநாயகம் உலகின் புரட்சிகர சிந்தனையை கூர்மைபடுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலை- மக்களின் விடுதலைவரை சோவியத்யூனியன் ஓயாது என்ற வேட்கையையும் கனவையும் மாதுரி பதிவு செய்தது. லெனினின் எளிமை அய்ரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. நாட்டின் ஆட்சித்தலைவர் சாதரண குடிமகனைப்போல இருக்கிறார் என்பதை அவர்களால் நினத்துப் பார்க்க முடியவில்லை. உழைக்கும் மக்கள் எடுத்து கொள்ளும் அதே உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. நண்பர்கள் கொணர்ந்து தரும் மிக உயர்ந்த பழவகைகளை பிற பொருட்களை அவர் தொடுவதில்லை. அவருக்கு வருகின்ற அப்பொருட்களை குழந்தைகள் பள்ளிக்கும், மருத்துவமனைக்கும், அநாதை இல்லங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்- அரசாங்க வேலையில் அவர் பெரும் ஊதியம் கூட ஏழைகளின் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாக அறிகிறோம். அவரது துணைவி க்ருப்ஸ்காயா இந்த லட்சிய தவ வாழ்விற்கு துணை நிற்கிறார் போன்ற அவரின் அன்றாட வாழ்வின் உன்னத நடைமுறைகளை தேவ் விரட் என்பார் 1930ல் தனது புத்தகம் ஒன்றில் லெனினின் மேன்மை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார். லக்னோவிலிருந்து பார்கவா என்பாரும் 1932ல் லெனின் குறித்து பெருமையுடன் பேசுகிறார். இதேபோல கான்பூரிலிருந்து போல்ஷ்விக் ருஷ்யா என்ற இந்தி புத்தகத்தில் 1932ல் சிவ நாரயண் டாண்டன் லெனினது அரசாங்க சிறப்புக்களையும் அவரது தனிப்பட்ட அருங்குணங்களையும் பதிவு செய்கிறார். சத்ய நாராயன சாஸ்த்ரி என்பாரும் ஆசிய மக்களுக்கு லெனினின் செய்தி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். உலக இஸ்லாமிய சகோதரர்களின் விடுதலை குறித்து லெனின் பேசுகிறார். நமது 32 கோடி மக்களின் விடுதலைக்கு சோவியத் கொள்கைகள் துணை நிற்கிறது. புரட்சிகர எண்ணங்களை வளர்ப்போம்- சோவியத்துடன் தோழமை கொள்வோம். தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் துணை நிற்பவர்கள் சோவியத் என்பது ஆசிய மக்களுக்கு புரியத்துவங்கிவிட்டது என்ற பதிவை அவர் செய்கிறார். ஆசியாவின் புரட்சி என்ற இந்தி நூலில் இக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.. காசியிலிருந்து மகாத்மா லெனின் என்ற புத்தகத்தை சதானந்த பாரதி என்பார் 1934ல் இந்தியில் எழுதியுள்ளார். மக்களின் கல்வி அறியாமையை நீக்காமல் கம்யூனிசத்தை வளர்த்தெடுக்கமுடியாது என்ற லெனினின் உறுதிப்பாட்டை ஆசிரியர் பாராட்டுகிறார். கம்யூனிச பத்திரிகைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் விஷயங்களை எழுதவேண்டும் என லெனின் அறிவுறுத்தியதையும் அவர் பதிவு செய்கிறார். லெனின் எதையும் நேர்பட பேசிவிடுவார். லெனின் மறைந்தாலும் அவரது பாதுகாக்கப்படும் உடல் தனது நிர்வாகம் தொடர்ந்து சரியாக இயங்குகிறதா என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கும். மக்களின் நலன் குறித்த தீர்விற்காக தவிக்கும் என எழுதினார் சதானந்த பாரதி. அற்புத அரசியல் மேதைமை என்ற தலைப்பிட்டு சையக் முஷிர் ஹுசைன் கித்வாய் எழுதுகிறார். ட்ராட்ஸ்கி போன்றவர்கள் கணிக்க தவறிய நிலையிலும் புரட்சி குறித்து மிகச் சரியான நேரக்கணிப்பை உருவாக்கி அதை நடத்த லெனினால் முடிந்தது. சரியான நேரத்தில் சமாதானம் என பேசியதையும் அவர் பலவீனமாக கருதவில்லை என அவரின் உத்திகளை பெருமையுடன் கித்வாய் தனது புத்தகமான இஸ்லாமியமும் போல்ஷ்விசமும் என்பதில் 1937ல் பதிவாக்குகிறர். இஸ்லாமியர்கள் போல்ஷ்விசத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற தனது விழைவையும் அதில் தெரிவித்தார் கித்வாய். நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைகூடங்களில் வாடிவந்த கைதிகளையும் லெனின் கவர்ந்திழுத்துள்ளார் . லெனினது சைபீரிய கொடும் அவதிகள் மத்தியிலும் அவரின் புரட்சிகர பணிகள், புத்தகங்கள் எழுதியது போன்றவற்றை சுட்டிக் காட்டி பிஜய் குமார் சின்ஹா 1939ல் கான்பூரிலிருந்த வெளியான பதிப்பில் கூறுகிறார். மகத்தான இக்பால், வள்ளத்தோள், விஷ்ணுதே, பாரதி, ஹரிந்திரநாத் சட்டொபாத்யாய், புட்டப்பா என புகழ்வாய்ந்த் கவிபெருமகனார்கள் லெனின் குறித்தும் சோவியத் புரட்சியை வரவேற்றும் எழுதினர். மனிதகுல விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் தங்கள் ஆயுளை அர்ப்பணித்த மகத்தான மனிதர்கள் ஆயிரம் விமர்சனங்கள் ஊடாகவும் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வும் பணியும் கலங்கரை விளக்காக ஒளிக்காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் லெனின் உலகில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஈர்ப்பு விசையாகவும் இருக்கிறார். கட்டுரையின் செய்திகளுக்கு ஆதாரம்: 1. Lenin His Image in India: edited by Debendra Kaushik, Leonid Mitrokhin, Vikas publication 1970 2. Lenin In contemporary Indian Press edited by P C Joshi,Chattopadyaay, Kaushik PPH 1970 Dec 4 2016 அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம் புரட்சிக்கு பின்னர் லெனின்  ( ஆட்சியும் மறைவும்) நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு இயக்கங்களும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களும் நடத்திவருகிறோம். அக்டோபர் புரட்சி அல்லது புதிய காலண்டர்படி நவம்பர் 1917 புரட்சி நடந்த சூழல் குறித்தும் 1905 முதல் 1917 வரை நடந்த எழுச்சிகர போராட்டங்கள், ருஷ்யாவில்  சோசலிச  புரட்சிகர சக்திகள் மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து செயலாற்றியமை குறித்தும் ஏராள புத்தகங்கள் ஆவணங்கள் வந்துள்ளன. மென்ஷ்விக், சோசலிச புரட்சிகர கட்சிகளைப்பற்றிய பல ருஷ்ய ஆவணங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெற்றால் மேலும் சரியான புரிதலை நாம் பெறமுடியும். அதிகாரபூர்வமான போல்ஷ்விக் ஆவணங்கள் , அவர்களை விமர்சிக்கும் ஆவணங்கள் கிடைக்கின்றன. ருஷ்யாவில் 1905-1917 ஆண்டுகளில் முடியாட்சிக்கும் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு அரசியல் சட்டமுறைகளை உருவாக்கும் கான்ஸ்டிட்யூஷனிசம் நடைமுறை கோரிக்கைக்கும் இடையே ஆன போராட்டங்கள் நடந்தன. டூமா மற்றும் அதற்கான நடைமுறை போராட்டங்கள் வளர்ந்தகாலம் என குறிப்பிடலாம். இக்காலத்தில் அங்கு கட்சிகளாக இருவித புரட்சிகர சக்திகள் வளரத்துவங்கின. மார்க்சிய வழியில் நின்ற ருஷ்யன் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் கட்சி மற்றது விவசாயிகளை கிராமப்புற போராளிகளை நம்பி செயல்பட்ட சோசலிஸ்ட் புரட்சிகர கட்சி.  சோசலிச ஜனநாயக கட்சி 1903ல் போல்ஷ்விக், மென்ஷ்விக் பிரிவுகளானது. பிளக்கானோவ், ஆக்சல்ராட், வெராசசூலிச் போன்ற மூத்த தலைமுறை மார்க்சியவாதிகளுடன் லெனின், மார்டோவ், பொட்ரெசாவ் போன்ற இளம் தலைமுறையினர் 1900ல் இணைந்தனர். அறுவரும் இணைந்து இஸ்க்ரா பத்ரிக்கை கொணர்ந்தனர். ருஷ்ய சமுக ஜனநாயக கட்சியை உருவாக்கி அதன் முதல் காங்கிரசை பிரஸ்ஸல்ஸில் நடத்தி லண்டனில் வாழத்துவங்கினர். ஆர் எஸ் டி பி ல் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1903 முதல் மென்ஷ்விக்- போல்ஷ்விக் என செயல்படத்துவங்கினர். 1905 எழுச்சியால் உருவான டூமா எனும் நாடாளுமன்றத்தில்  கான்ஸ்டிட்யூஷனல் டெமாக்ரட் என்கிற காடட் கட்சி பலம் பெற்றது. ஆனாலும் ஜாரால் அது கலைக்கப்பட்டது. மூன்றாவது டூமா மட்டுமே அதில் பிற்போகு சக்திகள் நிரம்பி இருந்த காரணத்தால் 5 ஆண்டுகள் நிலைத்தது.  அக்டோபரிஸ்ட் எனப்படும் வலதுசாரி கட்சியினர் வலுவாக இருந்தனர். அதில்  Guchkov, Stolypin  போன்ற திறமையாளர்கள் இருந்தனர். நிலப்பிரச்சனை, விவசாய பிரச்சனையில் ஸ்டோலிபின் கவனம் செலுத்தக்கூடியவராக இருந்தார். ஆனால் அவர் 1912ல் கொல்லப்பட்டார். 1914-17 களில் ஜார் அரசு யுத்தங்களில் சிக்கி தனது பொருளாதார பின்னடைவை கண்டது. ஜாரின் ஆட்சி பலவீனமானநிலையில் 1917 பிப்ரவரி புரட்சியால் தூக்கி எறியப்பட்டது. நான்காவது டூமா சார்ந்த லிபரல்கள், சோசியல் டெமாக்ரட் கெரன்ஸ்கி தற்காலிக அரசை அமைத்தனர். அரசிற்கு வெளியே  தொழிலாளர்-ராணுவவீரர்கள் சோவியத் என்பது பெட்ரோகிராட் போன்ற பகுதிகளில் வலுவாக செல்வாக்குடன் இருந்தது. அவர்களில் பலர் மார்க்சிய தாகம் நிறைந்தவர்களாக இருந்தனர். நகர்புறங்களில் மென்ஷ்விக்குகள் கையிலும், கிராமப்புறங்களில் புரட்சிகர சோசலிஸ்ட்கள் செல்வாக்கிலும் சோவியத்துகள் இருந்தன.  போல்ஷ்விக் பிரிவிற்கு லெனின் தலைமை தாங்கினார். 1914 முதலாம் உலக யுத்த நேரத்தில் ஏகாதிபத்திய யுத்தம் சிவில் யுத்தமாக நாடுகளில் எதிரொலிகட்டும் என்றார் லெனின். 1917 பிப்ரவரி புரட்சியில் ஜார் வீழ்த்தப்பட்டு கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தது. அதனால் போர்க்கால நெருக்கடிகளை சமாளிக்க இயலவில்லை. போல்ஷ்விக்குகளின் அக்டோபர் புரட்சி சாத்தியமானது.  1917 மே மாதம் ருஷ்யாவில் சுதந்திரமாக நடந்த கட்சி காங்கிரசில் போல்ஷ்விக்குகள் மூன்று முழக்கங்களை அனுசரித்தால் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என்றார் லெனின். அமைதி, விவசாயிக்கு நிலம், அனைத்து அதிகாரமும் சோவியத்திற்கு என்பது அம்முழக்கங்கள். நவம்பர் 7 1917 புரட்சிக்கு பின்னர் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசு வடிவம் பற்றி விளக்கவேண்டியிருந்தது. லெனின் அதை  half state  என்பார். வலுவாக எழுந்துள்ள அரசு தன்னை தொடர்ந்து வாழவைத்துக்கொள்ளாது. பலவீனமாகி இற்றுப்போகும் என பேசினார்.  In the proletarian state the majority suppress the minority, and, being the majority, have no need to use for instruments organisations that are self- perpetuating and parasitic… organisations they use are democratically controlled, and they gradually disappear as the work of suppression is completed  என விளக்கப்பட்டது. […] லெனின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது முதல் அவரின் மறைவுவரை ( 1917 நவம்பர்- 1924 ஜனவரி) முழுமையான 5 ஆண்டுகள் குறித்த சுருக்கமான பதிவாக இக்கட்டுரை  எழுதப்பட்டுள்ளது. புரட்சியின் நாளன்று விடியற்காலை 3.30வரை லெனின் பெரும்பரபரப்புடன் காணப்பட்டார். ஒருவாரகாலமாகவே அவர் சரியாக உறங்கவில்லை. அவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்மோலியில் அன்று இரவு தங்கவேண்டாம் என முடிவெடுத்து தனது நெருங்கிய நண்பர்  Bonch Bruyevich  என்கிற போல்ஷ்விக் தலைவரும் வரலாற்றாசிரியருமான பெஸ்கி குடியிருப்பில்  தங்கினார். லெனின் சாப்பிட்டாரா என்பதைகூட உடன் இருந்தவர்கள் அறியமுடியவில்லை. அவ்வீட்டில் படுக்கை அவ்வளவு வசதியாக இல்லை. ஆனாலும் லெனின் சற்று ஓய்வெடுக்கவேண்டும் என பான்ச் தெரிவித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட அறையில் புத்தகம், பேப்பர்கள், எழுதுகோல் வைக்கப்பட்டிருந்தன. பான்ச் உறங்க சென்றநேரத்திலும் லெனின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவர் தன் கைத்துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டதை பான்ச்  பார்க்கிறார். திடிரென ஏதோ எழுதி எழுதி லெனின் சரி செய்கிறார். பின்னர் விளக்கு அணைத்து படுத்துக்கொண்டார். காலையில் யாரும் அவரை எழுப்பவேண்டாம் என நினைத்தனர். ஆனால் அவரோ புரட்சியின் முதல்நாள் வணக்கம் என்கிற சல்யூட்டுடன் வந்தார். துணைவியார் கிருப்ஸ்காயா அருகில் வந்தவுடன் தான் உடனடியாக மக்களுக்கு படிக்க இருக்கும்  நில  ஆணையை  Decree of Land படித்துக்காட்டினார். பான்ச்சிடம் நகல்கள் போட உத்தரவிட்டார். பான்ச் சந்தேகத்துடன் பார்த்தபோது விவசாயிகள் நிலம் பெறுவர். விவசாய புரட்சி நிறைவேறும் என்றார். பான்ச் இரத்தவெள்ளம் ஓடும் என்றார். விவசாயிகளிடம் செல்வாக்குடன் உள்ள  கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட்களுக்கு சாதகமாக மாறும் என்றார் பான்ச் இருக்கட்டும் தோழா- சட்டரீதியான பாதுகாப்பை ஆட்சிப்பொறுப்பேற்கும் நாம்தான் தரமுடியும் என்பதை விவசாயிகள் உணர்வர் என்றார் லெனின். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் இந்த விவசாய புரட்சி நிறைவேறும் என்கிற அழுத்தமான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஆணையின் நகல் 50 ஆயிரம் காப்பிகள் அடிக்கப்பட ஏற்பாடு நடந்தது. பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. உரியவர்களுக்கு நிலம் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்கிற நம்பிக்கையுடன் நம் தோழர்கள் இதை விளங்க செய்யவேண்டும் என்கிற செய்தி பரவியது. இதனிடையில் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கெரன்ஸ்கி தனது படையுடன் போரிடலாம் என்கிற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்வது குறித்து நெருங்கிய சகாக்களுடன் லெனின் விவாதம் மேற்கொள்கிறார். ஸ்மான்லியில் லெனின்  ஆற்றிய உரையை ஜான் ரீடு கேட்கிறார். தனது உரையில் சமாதானம்- அமைதி- யுத்தத்தை முடிவிற்கு கொணர்தல் போன்ற அம்சங்களை லெனின் வலியுறுத்தினார். பிரிட்டிஷ் தொழிலாளர் வரலாற்று பூர்வமாக சார்ட்டிஸ்ட் காலம் துவங்கி போராடி வருவதை பாராட்டினார். பிரான்ஸ், ஜெர்மன் தொழிலாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாலையில் நில ஆணை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. லெனின் தனது உரையில் சகோதரத்துவம் என்கிற ருஷ்ய சொல்லை பயன்படுத்தினார். அரசாங்கப் பதவி தனக்கு ஏதும் வேண்டாம் என்றார் லெனின். கட்சியியின் மூலம் வழிகாட்டமுடியும் என்றார். ஆனால் அவரின் பிடிவாதம் சரியல்ல என கமிட்டியில் தோழர்கள் தெரிவித்தனர், பேசுவது எளிது. புரட்சிகர அரசாங்கத்தை நடத்துவது கடினம் என்கிற விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டது. அதை லுனாசார்ஸ்கி செய்தார் . லெனின் தலைமை ஏற்க முன்வந்தார். 2 அரசாங்கம்  அமைப்பது  பற்றிய விவாதம் வந்தது. அமைச்சர்கள் என்கிற பதம் வேண்டாம் என முடிவெடுத்தனர். டிராட்ஸ்கி கமிசார் என்றார். சுப்ரீம் கமிசார் என்றால் சுப்ரீம் மக்களிடமிருந்து அந்நியமாக்கும் எனவே வேண்டாம் என்றனர், இறுதியில் மக்கள் கமிசார் என்பதை லெனின் ஏற்றார். அரசாங்கத்தை எப்படி அழைப்பது என்கிற கேள்வி எழுந்தது.  The Soviet of People’s Commissars   என அழைக்க முடிவெடுத்தனர். லெனின் பதவியை சோவியத் மக்கள் கமிசார்களின் தலைவர் என அழைக்கலாம் என்றனர். ருஷ்ய மொழியில்  Predsedatel Sovieta Narodnikh Kommissarov- President of Soviet People’s Commissar  என்றனர். நீளமாக இருப்பதால் சுருக்கி  Predsovnarkom-   என்கிற புதிய சொல்லாட்சி உருவாகி மக்களிடம் செல்லத்துவங்கியது. சோவ்னர்கம் என்றால் அரசாங்கம் என அறியப்பட்டது. இலாகா பொறுப்புகள் மக்கள் கமிசார்களுக்கு பிரித்து ஒதுக்கப்பட்டன. உள்துறை         : ஏ அய் ரைகாவ் விவசாயம்        : வி பி மில்யுதின் ராணுவம் மூவர் கமிட்டி: வி ஏ ஆண்டனோவ்-க்ரைலெங்கோ, பெடிபென்கோ தொழிலாளர்             : சில்யாப்னிகோவ் வர்த்த்கம் தொழில்       : வி பி நோகின் கல்வி                   : ஏ வி லூனாசார்ஸ்கி நிதி                     : ஸ்டெப்பனோவ் வெளியுறவு              : ட்ராட்ஸ்கி நீதி                     : ஜி அய் ஒப்பகோவ் தபால் தந்தி             : என் பி அவிலார் தேசிய இனம்            : ஸ்டாலின் […] அமைச்சரவை நவம்பர் 8 1917 இரவு பதவியேற்றது. டிராட்ஸ்கிக்கு லெனினுக்கு அடுத்ததான  செல்வாக்கு இருந்தது. ஆரம்பத்தில் கமிசார்களின் அறிவிப்பெல்லாம் அப்படியே அமுலாகும் என்று மக்கள் கமிசார்கள் நினத்தனர். ஆனால் உள்நாட்டில் நிலைமைகள் சீராக இல்லை என்பது உணரப்பட்டது. ரயில்லோடு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர். தபால் தந்தியில் போராட்டம் எழுந்தது. ஆனால் அரசாங்க சார்பில் அவர்கள் உடன் வேலைக்கு திரும்பவேண்டும்- எதிர்புரட்சிக்கு உதவகூடாது என்கிற ஆணை பிறப்பிக்கப்பட்டது. கெரன்ஸ்கியின் ஆபத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் டிராட்ஸ்கி அழுத்தம் கொடுத்தார். லெனின் இது குறித்து விவாதித்தபோது ஆயுதங்கள் குறைவாக இருப்பதை அறிந்துகொண்டார். கெரன்ஸ்கி ஆதரவாளர்கள் மாஸ்கோ- பெட்ரோகிராட் ரயில்பாதையை துண்டித்துவிட்டால் நிலைமை விபரீதமாகும் என்கிற அவசரம் உணரப்பட்டது. முழுமையாக ராணுவ விஷயங்களை தனது நேரடி கட்டுக்குள் லெனின் கொணர்ந்தார். புரட்சிக்கு பின்னரான ஒரே வாரத்தில் உலக நாடுகள்- பத்திரிகைகள் லெனின் ட்ராட்ஸ்கி என்கிற இரு பெயர்களையும் உச்சரிக்க துவங்கின. கெரன்ஸ்கி பின்னடைவு என்கிற செய்தி போல்ஷ்விக் தலைவர்களை உற்சாகப்படுத்தியது. அரசாங்கத்திலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துவது பெரும் சிக்கலான பணி என்பது உணரப்பட்டது. பலநேரங்களில் அடக்குமுறைகள் மூலம்தாம் நிலைமைகளை கட்டுக்குள் கொணரமுடிந்தது. மாக்சிம் கார்க்கி போன்றவர் லெனினை கடுமையாக தாக்கி பேசத்துவங்கினார். புரட்சிக்கு பின்னர் இரண்டே வாரங்களில் தனது விமர்சனத்தை அவர்   Novoya Zhizn  பத்திரிகையில் எழுதினார்.  அவர் எழுத்தின் ஆங்கில வடிவம் சுருக்கி இங்கு தரப்படுகிறது “Blind Fanatics and unscrupulous adventurers are rushing headlong toward social revolution. That is to say the road to anarchy and ruin of proletariat and of the revolution. Following this road Lenin and his cohorts think it is permissible to commit all crimes, massacres in Petrograd, devastation in Moscow, suppression of free speech, senseless arrests…I hope the common sense of the workers and the realization of their historical mission will open their eyes to the impossibility of fulfilling the promises made by Lenin and to his extent of his madness and anarchic tendencies, which follow the line of Bakunin and Nechayev. The working classes cannot fail to realise that Lenin is experimenting with their blood and trying to strain the revolutionary mood of the proletariat to the limit to see what the outcome will be….. one must imagine that Lenin is all powerful magician, but a deliberate juggler who has no feeling either for the lives or for the honor of the proletariat .. புரட்சியின் பெயரால் லெனின் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றமுடியும் என நம்பி  இரத்த ஆறு ஓடவேண்டாம். பகுனின் வழியிலான அராஜகம்தான் நடக்கிறது. சுதந்திர பேச்சுரிமைக்கு தடை, கண்மூடித்தனமான கைதுகள், படுகொலைகள் என கார்க்கியின் விமர்சனம் சென்றது. இப்படி கார்க்கி எழுதுவதை பார்த்த மேற்குலகம் அவரை ரஷ்யாவின் மனசாட்சி என்றழைத்தது. லெனினும் டிராட்ஸ்கியும் தங்களை நெப்போலியனாக கருதிக்கொண்டு சர்வாதிகாரம் செய்து வருகின்றனர் என்பது அன்று கார்க்கியின் விமர்சனமாக இருந்தது. லெனின் மக்களுடன் ஒருபோதும் வாழாதவர் என்பதால் அவர் உளவியல் இவ்வாறு இருக்கிறது எனவும் கார்க்கி எழுதினார். சோவியத் கமிசார்கள் ஆட்சியில் ராணுவ ரேங்க்முறை ரத்து என சொல்லப்பட்டது. சல்யூட் ஆர்டெர்லி முறைகள் ரத்தாயின. கர்னல் ரேமண்ட் ராபின்ஸ் என்பாரிடம் லெனின் தன் சந்தேகத்தை சொல்கிறார். ஒருவேளை எங்கள் ஆட்சி வீழ்ந்தாலும் எங்களது சமுக கட்டுப்பாட்டு முறைதான் நீடிக்கும். எங்களது புரட்சி பழமையான அனைத்தையும் துடைத்தெறிந்துவிடும் என்றார். அமெரிக்காவின் ஜனநாயக அரசையும் இம்முறை தூக்கி எறிந்துவிடுமா என கர்னல் கேட்கிறார். அது ஊழல் அரசு என்கிறார் லெனின். மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களே என வினவ- நீங்கள் பணம் என புரிந்துகொள்கிறீர்கள்- சிந்தனை ஊழல் என விளக்கம் அளிக்கிறார் லெனின். தாமஸ் ஜெபர்சன் காலத்து அரசாங்கமது- அதில் அறிவு நாணயமில்லை என்றார். நீங்கள் சிட்டிசன் என்பீர்கள்.  எங்கள் அரசாங்கம் தொழிலாளர் குடியரசு என விளக்கினார். ஜார்ஜ் சாலமன்  என்கிற லெனினது 25 ஆண்டுகால நண்பர் அவரை சந்தித்து தாங்கள் பேசுவது உடோபியா கனவா எனக்கேட்டார்.  Utopia on a colossal state ?   இல்லை என்றார் லெனின். சோசலிச அரசிற்கான பெரும் போராட்டம் என்றார் . அதற்கு அனைத்தையும் அழிக்கலாமா என சாலமன் வினவினார். தரைமட்டமாக்காவிட்டால் புதியனவற்றை எவ்வாறு கொணரமுடியும். அழுகிவிட்ட பூர்ஷ்வாமுறையைத்தானே அழிக்கிறோம் என்றார் லெனின். […] பிராவ்தாவில் நவம்பர் 19 அன்று மக்களுக்கு வேண்டுகோள் என லெனின் செய்தி வெளியிட்டார். நீங்கள்தான் இப்போது ஆட்சியாளர்கள் என்பதை அறியுங்கள். சோவியத்தான் அரசாங்க அதிகார நிறுவனங்கள் என்றார். அடுத்து அரசியல் அசெம்பிளி என்கிற கோரிக்கைக்கு செவிசாய்க்கவேண்டிவந்தது. வாக்கு எனில் எவருக்கெல்லாம் என்பது விவாதமானது. சுதந்திரமான சட்டப்படியான தேர்தலுக்கு உறுதி அளிக்கப்படுவதாக அரசாங்க செய்தி வெளியானது. நவம்பர் 30 அன்று தேர்தல் முடிவுகள் வந்தன. வாக்காளர்கள் 4.17 கோடியில் புரட்சிகர சோசலிஸ்ட்கள் 2.08 கோடி, போல்ஷ்விக்குகள் 98 லட்சமும் பெற்றதாக தேர்தல் கமிஷன் சொல்லியது. நிலைமைகள் மோசமாயின.  தேர்தல் கமிஷன் அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். போல்ஷ்விக் கட்சியை சார்ந்தவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.  எதிர்புரட்சி சக்திகளை ஒடுக்குவது என்பதற்காக  Combating Counter Revoultion- Chrezvychainaya komissiya-  எனப்படும் செக்கா உருவாக்கப்பட்டது. ஜனவரி 18, 1918ல் அரசியல் சட்ட அசெம்பிளி கூடும் என்றனர். அசெம்பிளி சேர்மனுக்கு போல்ஷ்விக்குகள் எவரையும் நிறுத்தவில்லை. சோசலிச புரட்சி கட்சியின் Maria Spindonova  Victor Sernov  ஆகியோர் நின்றனர். புரட்சிகர வலதுசாரி பிரிவினராக கருதப்பட்ட விக்டருக்கு 237 வாக்குகளும் மரியாவிற்கு 151 வாக்குகளும் கிடைத்தன. புரட்சிகர சோசலிஸ்ட்கள் திட்டம், போல்ஷ்விக் திட்டம் இரண்டும் வாக்குக்கு விடப்பட்டதில் 237, 136 என முடிவுகள் வந்தன. போல்ஷ்விக்குகள் தாங்கள் அரசியல் அசெம்பிளியிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்தனர்.  சோசலிஸ்ட் கட்சியினரும் மற்றவர்களும் ரஷ்யாவில் ரிபப்ளிக் அரசாங்கம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டனர். ஆனால் அனைவரும் உடனடியாக கலையவேண்டும் என்கிற உத்தரவு அவர்களுக்கு மக்கள் கமிசார்கள் சார்பில் பிறப்பிக்கப்பட்டது. யுத்தமற்ற அமைதியான சூழலில்தான் மின்மயம், வங்கிகள் தேசியமயம், தொழில்வளர்ச்சி, கிராம கூட்டுறவுகள் மூலம் நாம் ருஷ்யாவை கட்டமைக்கமுடியும் என லெனின் பேசினார். புரட்சியை காப்பாற்ற ஜெர்மனியுடன் உடன்பாடு அவசியம் என டிராட்ஸ்கியை வற்புறுத்தினார். ஆனால் பெட்ரோகிராட் கட்சிகூட்டத்தில் அவரின் முன்மொழிவிற்கு 60 பேரில் 15 பேர் மட்டுமே உடன்பட்டனர். டிராட்ஸ்கி  No peace No war க்கு 16 வாக்குகள், புகாரினின் ஜெர்மனிக்கு எதிராக யுத்தம் என்பதற்கு 32 வாக்குகள் கிடைத்தன. மறுநாள் மத்திய கமிட்டியில் லெனின் பெரும்பான்மை பெற்றார். ரடேக் போன்றவர்கள் லெனினை சிறையில் தள்ளவேண்டும் என சத்தமிட்டனர். லெனின் நீங்கள்தான் உள்ளே போவீர்கள் என அமைதியாக தெரிவித்தார். 3 1918-21 War Communism காலம் என்றழைக்கப்படுகிறது. 16 வயது முதல் 50 வயது உள்ள எவரும் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்கிற உத்தரவு அமுலானது.  Supreme Council of National Economy என பொருள்தரும் Vesenkha உருவாக்கப்பட்டது. ஒர்க்கர்ஸ் கவுன்சில் அதிகாரம் குறைக்கப்பட்டதாக புரட்சிகர சோசலிஸ்ட்கள் அதிலிருந்து வெளியேறினர். 1921-24 புதிய பொருளாதாரகொள்கை அமுல்படுத்தல் காலமாக இருந்தது.  சிறிய அளவில் கலப்பு பொருளாதார நடைமுறை உருவாக்கப்பட்டது. பயிர் உற்பத்தி பெருகியது. ஆனால்  Industrial prices- Agri prices வேறுபாடுகள் பலமடங்கு உயர்ந்தது. இது குறித்த பரிசீலனையை டிராட்ஸ்கி முன்வைத்தார்.  NEP என்பதை New Exploitation of Proletariat  என சிலர் விமர்சித்தனர்.  Shilapnikov, Kollantai போன்றசில தலைவர்களும் கருத்துவேறுபாடுகளை தெரிவித்தனர். சிலப்னிகோவ் மெட்டல் தொழிற்சங்க தலைவர். புரட்சிகாலத்தில் பெட்ரோகிரேடில் முக்கிய தலைவர். அவர் லெனின் அமைச்சரவையில் லேபர் கமிசார் ஆக இருந்தவர். Unionised Workers role in directing the economy- Right to participate என்கிற முழக்கங்களை வைத்தவர். பிரெஸ்ட் லிடோவ்ஸ்கி அமைதி உடன்பாட்டின் காரணமாக ருஷ்யா தனது நிலப்பரப்பிலிருந்து போலந்து, பின்லாந்த் பால்டிக் பகுதிகளை இழக்க நேர்ந்தது.1913ல் இருந்த உற்பத்தியளவைவிட 1921ல் தானிய உற்பத்தி, நிலக்கரி, இரும்பு, பெட்ரொல் எண்ணை உற்பத்தி 40 சதமாக விழந்தன.1918ல் தேவாலயங்கள் அரசு நிர்வாகம் தனித்தனி, ஆர் எஸ் டி எல் பி என்பது கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயர் மாற்றம், மாஸ்கோ தலைநகர் ஆதல், அரசு முதலாளித்துவம் என்பதை கொள்கையாக ஏற்பது போன்ற முடிவுகள் அமுலாக்கப்பட்டன. அரசாங்க முதலாளித்துவம் குறித்து லெனின் விளக்கம் தந்தார்.  State monopoly capitalism inevitably and unavoidably implies a step, or several steps towards socialism…. socialism is nothing but state capitalist monopoly which has been turned in the interest of the whole people and has therefore ceased to be capitalist economy  பெட்ரோகிரேடிலிருந்து மாஸ்கோவை தலைநகராக்கி செயல்படுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. உடன் 24 மணிநேர பயணம் செய்து லெனின் மாஸ்கோ வந்தடைந்தார்.  அங்கு National Hotel என்பதில்தான் முதலில் தங்க ஏற்பாடு இருந்தது. புகழ்வாய்ந்த கிரெம்ளின் மாளிகை சரிபார்க்கப்பட்டு வந்தது. அவருக்கு அப்பெரிய அரண்மனை வாசத்தில் போய் தங்க பெரும் தயக்கம் இருந்தது. மகாபீட்டர் இளம்வயதில் வாழ்ந்த வீட்டின் பகுதியில் சில வாரங்கள் லெனின் தங்கினார். டிராட்ஸ்கி அருகாமையில் குடியேறினார். கிரெம்ளின் மாளிகை மணிகள் சர்வதேசகீதம் இசைக்க துவங்கின. நாட்டில் லஞ்சம் ஊழல் எனில் 10 ஆண்டுகள் சிறை என்பதற்கு சட்டம் வேண்டும் என விழைந்தார் லெனின். புரட்சிக்கு விரோதமாக எழுதும் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. ஜார் குடும்பம் முழுமையாக சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக டிராட்ஸ்கிக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்கு எடுத்த முடிவு என டிராட்ஸ்கி கேட்டதாக ராபர்ட் பைன் சொல்கிறார். கிருப்ஸ்காயா குறிப்பிலும் அக்குடும்பம் ஜூலை16, 1918ல் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி நமக்கு கிடைக்கிறது.. கிரெம்ளினுக்கு இடம்பெயர்ந்த லெனின் வழக்கம்போல் தனது படிப்பறையில் 4 மணிநேரமாவது செலவிட்டார். சமையல் அறை சென்று கிருப்ஸ்காயாவுடன் உணவு எடுத்துக்கொள்வதை பழக்கமாக வைத்துக்கொண்டார். கடிதங்களுக்கு பதில் எழுதுவதற்கு, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கினார். அவரது வரவேற்பறை ஆடம்பரம் ஏதுமின்றி எளிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அவரது தொலைபேசிகள் அலறாமல் buzz ஒலி மட்டும் வருவதுபோல் வைக்கப்பட்டிருந்தன. மாஸ்கோவில் தொலைபேசிகள் சில மட்டுமே அவையும் சரிவர இயங்காத சூழல் அப்போது இருந்தது. ஆனால் லெனின் தொலைபேசிகள் முன்னுரிமையுடன் சரியாக பராமரிக்கப்பட்டன. அவரது நெறிப்படுத்தல்கள் பெரும்பாலும் தந்தி, தொலைபேசிவாயிலாக நடந்ததாக  ராபர்ட் பைன் சொல்கிறார். அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் நின்று போவதை பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தன் அறையில் கார்ல்மார்க்ஸ் படம் இருப்பதை அவர் விரும்பினார். உணவுத்துறை மக்கள் கமிசார் அதிக வேலைபளுவுடன் உணவு எடுத்துக்கொள்ளாமல்கூட வேலை செய்து மயக்கம்,அடைந்தார் என்கிற செய்தி லெனினுக்கு சென்றது. அவரிடம் பாக்டரி தொழிலாளர் அளவிற்காவது  உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற அறிவுரையை லெனின் வழங்கினார்  . எவராவது 15 மணிநேரம்- 18 மணிநேரம் வேலை செய்கிறார் என அறிந்தால் அவர்களிடம் நீங்கள் அரசாங்க சொத்து- விரயமாக்ககூடாது என கருணையுடன் அவர் கடிந்துகொண்டதாக பார்க்கமுடிகிறது. விவசாய பிரதிநிதிகள் தன்னை சந்திக்க வரும்போது எழுந்து நின்று அவர்களை அவர் வரவேற்பதை பழக்கமாக கொண்டார். அவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு பெயர்சொல்லி அழைத்து நெருக்கம் உணர்த்துவார். அவர்கள் கிராம சோவியத் பற்றி புகார் எழுப்பினால் பொறுப்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்துங்கள் என உற்சாகப்படுத்துவார். எச் ஜி வெல்ஸ் 1920ல் மாஸ்கோ வந்தார். In the Shadow of Russia  என அதை 1921ல் வெளியிட்டார். லெனினை சந்திக்க வைக்கமுடியும் என்கிற கார்க்கியுடனான தொலைபேசி உரையாடலை நம்பி அவர் ரஷ்யா வந்தார். ஆனால் லெனினை சந்திக்க அவ்வளவு சுலபமாக முடியவில்லை என எச் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துவ ஆலயங்கள் திறந்தே இருந்ததையும் வாயிலில் பிச்சைக்காரர்கள் இருந்ததையும் அவர் பதிவிட்டுள்ளார். லெனினைப்பற்றி  a dreamer in the kremlin என அவர் எழுதியிருந்தார்.  He spoke excellent English  என்கிற பதிவையும் செய்துள்ளார். In the face of Gigantic difficulties they are trying to rebuild a new Russia among the ruins..என்று குறிப்பிட்டுள்ளார் வெல்ஸ் லெனின் அவரிடம் சிறுநகரங்கள் உருவாதல் பற்றி உரையாடியதாக தெரிகிறது. பத்து ஆண்டுகள் கழித்து வந்து பாருங்கள் எங்கள் வளர்ச்சி தெரியும் என்றார் லெனின். தன்னிடம் வந்து முறையிடும் தொழிலாளர் குறைகளை தீர்ப்பதில் அவர் முன்னுரிமை கொடுத்தார். சோவியத் அதிகாரிகள் குறித்து லெனினிடம் சென்று குறை சொல்லும் தொழிலாளர்களை சிறையில் அடைத்தபோது அவர்களை விடுவித்து அந்த அதிகாரிகளை அவர் சிறைக்கு அனுப்பியதாக அறிகிறோம். லெனின் அரசாங்க அதிகாரத்தை டெர்ரர் ஆக்கி வருகிறார் என்கிற விமர்சனம் அவர் காதுகளுக்கு எட்டாமல் இல்லை. கிரெம்ளின்விட்டு அவர் அதிகம் வெளியே செல்லாதவராக இருந்தார். கமிட்டி கூட்டங்களில் பங்கேற்க அவர் தவறுவதில்லை. ஆனால் அபத்தமான விவாதங்களை சகித்துக்கொள்ளமுடியாமல் இருந்தார். அப்போது தனது கவனங்களை வேறுபக்கம் வைத்துக்கொண்டார் என ராபர்ட் பைன் எழுதுகிறார்.  ஆகஸ்ட் 30, 1918 காலை 11 மணி அளவில் மோசஸ் உரிட்ஸ்கி என்கிற கமிசார் சுடப்பட்டார் என்கிற செய்தி பரவியது. சைக்கிளில் வந்த இளைஞன் சுட்டுவிட்டு சென்றான் என்பது செய்தி. மோசஸ் லெனின் பாராட்டிவந்த சிறந்த அமைப்பாளர்களில் ஒருவர். மென்ஸ்விக்குகளிடமிருந்து போல்ஷ்விக்காக மாறியவர். சுட்டவன் பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க் அமைதி உடன்பாட்டிற்கு எதிராக பேசியவன். போல்ஷ்விக்குகளில் பலர் யூதர்கள் என்கிற விமர்சனத்தையும் அவன் வைத்திருந்தான். சகோதரி மற்றும் கிருப்ஸ்காயாவுடன் லெனின் இருந்தபோது அவருக்கு தகவல் தரப்பட்டது. அவர் வெளியில் வரவேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தரப்பட்டது. அவர் அலுவலக பணிகளை தொடர்ந்தார். தான் ஆற்றவேண்டிய  உரைகளை சரிசெய்து கொண்டிருந்தார். அன்று மாலையில் ஏற்றுக்கொண்ட கூட்டத்திற்கு சென்றார். எதிர்புரட்சி சக்திகள் மீது கவனமாக இருந்து ஒடுக்குவது பற்றி குறிப்பிட்டார். உழைப்பவர் முன்னேற்றம் என்கிற பிரச்சனை வாழ்வா சாவா என்பது என்றார். கூட்டத்தில்  பெண்கள் சிலர் சூழ்ந்துகொண்டு  கேள்விகளை அவரிடம் எழுப்பினர். திடிரென ஒருபெண் லெனினை சுட்டார். லெனின் கண்கள் திறந்த நிலையில் அந்த இளைஞர் பிடிபட்டாரா எனக்கேட்டார். அவருக்கு மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு கொண்டுபோய் சிகிட்சை என்றார் லெனின். சட்டை முழுதும் இரத்தம் வழிந்திருந்தது. வீட்டில் மாடிக்கு தானே ஏறமுடியும் என்றார். அவரை படுக்கை அறைக்கு தூக்கி சென்றனர். சிறு காயத்துடன் தப்பிவிட்டதாக மரியாவிடம் அவரே தெரிவிக்கிறார். கிருப்ஸ்காயாவை அழைக்க கார் அனுப்பப்படுகிறது. செய்தி அறிந்த கிருப்ஸ்காய லெனின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா உண்மையை சொல்லுங்கள் என சோகமயமாகிறார். சிறு மருத்துவமனையாகிறது அந்த அறை. கிருப்ஸ்காய வந்தவுடன் நீ களைப்பாக இருப்பாய் ஓய்வெடு என லெனின் கூறுகிறார். டாக்டர்களிடம் கிருப்ஸ்காய நிலைமைகளை கேட்டு அறிகிறார். இடது தோள்பட்டையில் குண்டுகள் பாய்ந்திருக்கலாம் என்றனர். இரவு 11 மணிக்கு லெனின் சுடப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக எதிர்புரட்சியாளர்கள் பெட்ரோகிரேடில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட செய்தியும் வருகிறது. புரட்சிகர சோசலிஸ்ட்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். ஆகஸ்ட் 4 பிராவ்தா செய்திதாள் தொழிலாளர்களே துப்பாக்கி ஏந்துங்கள் என்கிற அறைகூவலை தருகிறது. கடைசி முதலாளி இருக்கும்வரை போராடுங்கள் என அதில் வேண்டுகோள் விடப்படுகிறது. அடுத்துவந்த 10 நாட்களில் லெனின் உடல்நிலை குறித்து 35 மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டன. லெனினை சுட்ட அப்பெண்ணின் பெயர்  Fanya Kaplan. 28 வயதே நிரம்பியவர்.  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்ந்தவள். My name is Fanya Kaplan. Today I shot at Lenin. I did it on my own. I will not say whom I obtained my revolver. I will give no details. I had resolved to kill Lenin long ago. I consider him a traitor to the Revolution. I was exiled to Akatoi for participating in an assassination attempt against a Tsarist official in Kiev. I spent eleven years at hard labour. After the Revolution I was freed. I favoured the Constituent Assembly and am still for it ..லெனின் என்னைப்பொறுத்தவரை துரோகி ஆகையால் கொல்ல முற்பட்டேன் என்கிற பதிலை அப்பெண்மணி தந்தார். 1917 பிப்ரவரி புரட்சிக்கு பின்னர் பொது மன்னிப்பில் வெளியே வந்த பெண் கப்லான். ஜாரின் சிறைக்கொடுமையில் தன் கண்பார்வையை இழந்த பெண்.  இரவு 10 மணிக்கு இருட்டில் கண்பார்வை குறைந்த ஒருவர் மூன்று முறை எப்படி குறிபார்த்து சுட்டிருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுந்ததை பார்க்கமுடிகிறது. அப்பெண்ணின் பின்மண்டையில் சுடப்பட்டு செப்டம்பர் 3 1918ல் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. செபடம்பர் முதல்வாரத்தில் லெனின் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாக்சிம் கார்க்கி செய்தி அறிந்து மிகவும் மனம் வருத்தப்பட்டு லெனினை சந்திக்கிறார். அறிவுஜீவிகளுக்கு எதிராக லெனின் அதிகம் பேசவேண்டாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறார். அவர்கள் அவசியம் என ஏற்பதாக லெனின் சொல்கிறார். ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது சரியல்ல என்கிற கருத்தையும் லெனின் எடுத்து உரைக்கிறார். லெனின் மலைகள் சார்ந்த கோர்கி பகுதிக்கு ஓய்விற்காக அனுப்பப்படுகிறார். அங்கு ஓய்வின்போது ஓடுகாலி காட்ஸ்கி  என்பதை எழுதுகிறார். தனது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பூர்ஷ்வா ஜனநாயகத்தைவிட பன்மடங்கு மேலானது- தூய ஜனநாயகம் என்றார். லெனினுக்கு பணிவிடை செய்ததில் கிருப்ஸ்காயா சுகவீனமுற்றார். இதய நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் குழந்தைகள் சூழ்ந்த பகுதிக்கு இருமாத ஓய்விற்கு அனுப்பப்படுகிறார். ஜனவரி 19 1919ல் கிருப்ஸ்காயாவை பார்க்க தனது சகோதரியுடன் லெனின் காரில் சென்றபோது வழிப்பறி கும்பல் ஒன்றால் அவர் தடுக்கப்படுகிறார். லெனின் தலையில் துப்பாக்கி வைத்து அவர்கள் மிரட்டினர். மரியாவோ லெனினை உங்களுக்கு தெரியவில்லையா என கத்தினார். அப்பகுதி சோவியத் தலைவர்கள் வந்து லெனினை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து கொள்ளையர் தடுப்பு சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. அக்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு பத்திரிகையாளர் சிலர் ருஷ்யாவில் பட்டினியும் மின்வெட்டும் கொடுமையாக இருப்பதாக 1919ல் எழுதினர். மக்கள் டைபஸ் நோய்க்கு ஆளானதாகவும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாகவும் எழுதினர். பெட்ரோகிராடில் ஆலைத்தொழிலாளர்கள் அரசியல் முழக்கங்களுடன் தெரு இறங்கினர். லெனின் வீழட்டும்- ஜார் மீளட்டும் என்கிற பிற்போக்கு முழக்கம் அங்கு எதிரொலித்தது. லெனினை சந்தித்த ஆங்கில எழுத்தாளரிடம் இங்கிலாந்தும் புரட்சியை விரைவில் காணும் என்றார் லெனின். மின்மயம் என்பதில் லெனின் அதிக கவனம் செலுத்தினார். ஊரக மாவட்டங்களில் ஓராண்டில் மின்விளக்குகள் என்கிற திட்டம் உருவானது. அனைத்து கிராமங்களிலும் இரு ஆண்டுகளில் மின்சாரம் பார்த்துவிடலாம் என்றனர். சோவியத்துடன் மின்மயம் என்பது சோசலிசம் என சொல்லப்பட்டது. 8வது காங்கிரஸ் கூட்டத்தில் மிக குறைந்த மின் ஒளியில் மின்சார திட்டத்தை லெனின் அறிவித்தார். மூன்றாவது அகிலத்தின் அவசியம் உணரப்பட்டு 1919 மார்ச்சில் துவக்க மாநாடு கூட்டப்பட்டது. அதன் முதல் செயலராக  Angelica Ballabenoff  ஆக்கப்படுகிறார். ஏஞ்சலிகா பின்னாட்களில் போல்ஷ்விக் விமர்சகராகவும் இத்தாலியில் அவந்தி பத்திரிகையாளராகவும் மாறினார். அகிலத்தின் கூட்டத்திற்கு 35 பிரதிநிதிகள் வந்தனர். லெனின்,டிராட்ஸ்கி காம்னேவ், ஜினோவீவ், புகாரின் பங்கேற்றனர். உலக கம்யூனிஸ்ட் புரட்சி வந்தே தீரும் என லெனின் உரையாற்றினார். கிரான்ஸ்டாட்டில் 16000 மாலுமிகள் கூடி ரகசிய வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் என்கிற கோரிக்கையை வைத்தனர். கலகம் செய்ய முயற்சித்தனர். லெனினின் அரசாங்கம் தொழிலாளர்- விவசாயிகளின் பிரதிநிதியல்ல என்றனர். அரசின் பிரதிநிதி பங்கேற்ற கூட்டத்தில் இப்படிப்பட்ட தீர்மானம் எழுந்தது. கலகம் என்பதை உணர்ந்த சோவியத் அரசாங்கம் அதை சமாளிப்பதற்கு தேவையான முழு அதிகாரத்தை டிராட்ஸ்கிக்கு வழங்கியது. கச்சாப் பொருட்கள் தட்டுப்பாட்டால் சில ஆலைகள் மூடப்பட்டன. பஞ்சத்திற்கான நிவாரணங்களை செய்திட அமெரிக்கா முன்வந்தபோதும் அதை ஏற்கவேண்டாம் என்று முடிவெடுத்தனர். உலக நாடுகளுக்கு பொது வேண்டுகோள் மட்டுமே விடப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயங்கள் நிவாரணவேலைகளில் ஈடுபடலாம் என விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் மாக்சிம் கார்க்கி அமெரிக்கா, அய்ரோப்பாவின் நல்உள்ளங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசாங்க அலுவலர்களுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை லெனின் வற்புறுத்தினார். மக்கள் அலுவலகங்களுக்கு வந்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்றார். பார்வையாளர் பதிவேடு வைக்கப்படவேண்டும் என்றார். […] உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லெனின் மீண்டும் கோர்கி சென்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். மாலடோவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் கூட்டங்களில் பங்கேற்கமுடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டுவிடுமோ என தன் அச்சத்தை வெளிப்படுத்தினார். 1922ல் நிர்வாக மெத்தனம் குறித்து தோழர்களை அவர் கடிந்து கொண்டார். நாம் கம்யூனிஸ்ட் ப்யூரோகிரட்ஸ் ஆகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையை தந்தார். ஸ்டேட் பாங்க் பற்றி பூஜ்யம் என்கிற மதிப்பீட்டை தந்தார். அவர் 1922 கட்சி காங்கிரசில் poverty of not only materials but culture  என்பதற்கு அழுத்தம் கொடுத்து உரையாற்றினார். வெறும் உத்தரவு போட்டு அதை பிரச்சாரம் செய்த காலம் முடிவிற்கு வருகிறது. இனி நடைமுறைவேலையில் கூடுதல் கவனக்குவிப்பு என்றார். மென்ஷ்விக்குகள், சோசலிச புரட்சிகரவாதிகள் எனும் போர்வையில் எதிர்புரட்சியாளராக செயல்படுபவரை நாம் சுட்டு வீழ்த்தவேண்டும் என்றார். நமது சோசலிச சோதனையும் முதல் நீராவி இன்ஜின் சோதனை போன்றதே. குறைகளை சரி செய்து முன்னேறுவோம் என்பது அவர் அறிவுரையாக இருந்தது. நவீன கண்டுப்பிடிப்புகளில் மிக மேலான ஒன்றை நாம் உருவாக்கியுள்ளோம். பாட்டாளிகளின் அரசு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து செயல்படுவோம் என்றார் லெனின். ஏப்ரல் 3, 1922 அன்று காங்கிரசில் தோழர் ஸ்டாலின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஸ்டாலின், ட்ராட்ஸ்கி சமநிலையை சரி செய்திட மக்கள் கமிசாரின் துணை சேர்மனாக டிராட்ஸ்கியை நியமிக்கலாம் என்கிற லெனின் யோசனையை டிராட்ஸ்கி ஏற்கவில்லை. லெனின் தலைவலியால் அவதிப்படுவதைக் கண்ட மருத்துவக்குழு அவரின் தோள்பட்டையில் பாய்ந்த குண்டை எடுத்துவிடலாம் என்கிற முடிவிற்கு வந்தனர். இதற்கான அறுவை சிகிட்சை ஏப்ரல் 23 1922ல் நடந்தது. ஆனால் சில நாட்களில் அவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. வலப்பக்கம் தாக்கப்பட்டிருந்தது. மூளைப்பாதிப்புக்கு அவர் உள்ளாகலாம் என டாக்டர்கள் அஞ்சினர். அவருக்கு  first stroke  ஏற்பட்டதையும் கண்டறிந்தனர். பக்கவாதமா உண்மையை சொல்லுங்கள் என லெனின் வினவினார். இனி என்னால் பயன் ஏதுமில்லையா என வருத்தமுற்றார். கட்டாய ஓய்வு மூலம் சரி செய்துவிடலாம் என் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 4 லெனினை உறவுக்காரர்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.  பத்திரிகைகள் கூட படிப்பதற்கு தரக்கூடாது என்கிற அறிவுரை தரப்பட்டிருந்தது. ஸ்டாலின் பார்க்கவந்தார். எனக்கு நியூஸ்பேப்பர்கூட இவர்கள் தரமறுக்கிறார்கள் என அப்பாவியாக லெனின் கூறினார். அவருக்கு பேச்சு தெளிவாக வரவில்லை. அதற்கு பயிற்சி என முடிவெடுத்தனர். சற்று உடல்நலம் தேறியபின் முன்புபோல் மணிக்கணக்கில் அவர் வேலை செய்வதற்கு அனுமதி இல்லை என்றனர். உரையாற்றினால் 15 நிமிடம் மட்டுமே என  அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முதலில் 5 மணிநேரம் என உழைக்க ஆரம்பித்த லெனின் 10 மணிநேரம்வரை செயல்படலாகினார். 1922 அக்டோபரில் அவர் மாஸ்கோ திரும்பினார். லெனின் உடல்நிலை கருதி இரவு வெகுநேர கண்விழிப்பு கூட்டங்கள் இல்லை என முடிவானது. விரைவில் முடித்துக்கொள்ளத்துவங்கினர். அனைத்து ருஷ்ய மத்திய கமிட்டி கூட்டத்தில் அவர் அக்டோபர் 31ல் பங்கேற்றபோது நியுயார்க் டைம்ஸ் செய்தியாளர் உலகம் தங்களை சிறந்த மனிதராக கொண்டாடத்துவங்கிவிட்டது என்றார்.  I am not a great man  என அவரிடம் பணிவாக சொல்லி லெனின் நகர்ந்தார். 15 நிமிடங்கள் மட்டும் உரையாற்ற அனுமதிக்கப்பட்டார். ஆனால் அடுத்து நடந்த மூன்றாம் அகில கூட்டத்தில் பங்கேற்றபோது ஜெர்மன் மொழியில் அவர் ஒருமணிநேரம் உரையாற்ற தயங்கவில்லை. அவ்வுரையில்  Soviets had not come into power as result of overwhelming popular enthusiasm for Bolshevism, but came to power because the enemy lost its head  என்ற உணர்த்தலை அங்குள்ளவர்களுக்கு செய்தார். அவரின் இந்த வெளிப்படை பேச்சு அனுபவ வெளிப்பாடாக வந்தது. விவசாயிகள் பிரச்சனை, நிலம் கட்டுப்பாடு, அரசாங்க முதலாளித்துவம் பற்றி அவர் பேசினார். அந்நிய வர்த்தகத்தில் அரசு ஏகபோகம் என்பதில் புகாரின் கருத்துவேறுபட்டார். ஆனால் சோவியத் அரசு இயங்க அம்முறை அவசியம் என லெனின் சொல்லிவிட்டார். லெனின் தன் உடல்நிலை பலவீனப்பட்டுவருவதை உணர்ந்து தன் வேலைகள் சிலவற்றை ரைகாவ், காம்னேவ் போன்றவர்களிடம் ஒப்படைத்தார். 1922 நவம்பரில் அவர் எவ்வேலையிலும் ஈடுபடாமல் ஓய்வெடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்.  அவருக்கு டிசம்பர் 16 1922ல் மீண்டும்  second stroke  ஏற்பட்டது. மருத்துவர் அறிவுரை புறக்கணிக்கப்பட்டு அவர் வேலையில் ஈடுபடுவதால் பலவீனமடைகிறார் என்பதை டாகட்ர்கள் எடுத்துரைத்தனர். நான் எப்படி பயன்படாதவனாக இருந்துகொண்டிருப்பது என்பது லெனின் வாதமாக இருந்தது. டாக்டர்கள் முழுகண்காணிப்பில் கட்டாய ஓய்வு அவசியமாக்கப்பட்டது.  லெனின் தனது உதவியாளர்களை அழைத்து சில முக்கிய வழிகாட்டல்களை, உத்தரவுகளை விடாமல் வழங்கத்துவங்கினார். அவர் ஒத்துழைக்காத நோயாளி என்பதாக பெயரெடுத்தார். தினம் இரண்டுமணிநேரமாவது படிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.. டிசம்பர் 23 அன்று திடிரென யோசித்துவிட்டு தனி செயலர் மரியா வோலோடிசேவாவை அழைத்தார். மத்திய கமிட்டி புனரமைப்பு என்பது குறித்து வழிகாட்டல்களை தந்தார். திட்டக்குழு பற்றியும் வழிகாட்டல் இருந்தது. சிறு மனமாச்சர்யங்களை பெரிதாக்கவேண்டாம் என உயர் கமிட்டி தோழர்களுக்கு அறிவுரை தந்தார். டாக்டர்கள் ஓய்வெடுக்க வற்புறுத்தியதால் மறுநாள் அழைத்து 10 நிமிடங்கள் டிக்டேட் செய்தார். ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆளுமைகள் குறித்த தனது பார்வையை அவர் தந்தார். “ Comrade Stalin, having become  General Secretary has concentrated immeasurable powers in his hands, I am not sure that he always knows how to use that powers with sufficient caution. On the other hand com Trotsky as was proved by his struggle against the CC in connection with the question people’s commissar of Railroads , is distinguished not only by his exceptional abilities- personally  to be sure he is perhaps the most able man in the present CC- but also by his self assurance and excessive enthusiasm for the purley administrative aspect of his work. These two qualities of the two eminent comrades of the CC lead to a spilit, if our party does not take steps to prevent it….  இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களையாவிட்டால் கட்சி உடையும் என்கிற எச்சரிக்கையை லெனின் தந்தார். […] பொலிட்ப்யூரோ கூட்டம் 1922 டிசம்பர் 24 அன்று கூடியது. டாக்டர்கள் மேற்பார்வையில் லெனின் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட அனுபவத்தில் டிசம்பர் 29 அன்று தனி செயலரை அழைத்து நமது கருவி பயனற்று போகிறது என்றார். மத்திய கமிட்டியில் நேரடி தொழிலாளர் பிரதிநிதிகள் 100 பேராவது இடம் பெறவேண்டும் என பேசினார்-  not mere armed Marxist intellectuals  என்றார். மீண்டும் டிசம்பர் 30 அன்று ஸ்டாலின் உட்பட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பெயர் சொல்லி விமர்சித்தார். கலாச்சார கல்வித்துறையின் செயல்பாட்டில் அதிருப்தியை தெரிவித்தார். தனது நாட்குறிப்பிற்காக டிக்டேட் செய்தபோது  the entire people should go for the entire period of cultural development  என சொன்னார்.  1923 ஜனவரி 4 அன்று தனது மற்றொரு செயலர் லிட்யாவை அழைத்து  Stalin is too coarse, and this fault, though tolerable in dealing amongst us communists, becomes unbearable in a General secretary. Therefore I propose to the comrades to find someway of removing Stalin from his position and approving someone.. more tolerant, loyal, polite and consideration to his comrades, less capricious..  என குறிப்பை எழுத சொன்னார். இவ்விஷயத்தை சிறிய விஷயமாக மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கருதவேண்டாம். டிராட்ஸ்கி ஸ்டாலின் வேறுபாட்டால் கட்சி பிளவுறாமல் காக்கவேண்டும் என்றார். முன்னதாக 1922 டிசம்பரில்  கிருப்ஸ்காயாவிடம் ஸ்டாலின் தொலைபேசி உரையாடல் ஒன்றில் கடுமையாக பேசியிருந்தார். தேவையில்லாமல் அரசியல் தெரியாமல் லெனினிடம் சொல்வதை தவிர்க்கவேண்டும் என எச்சரித்திருந்தார். அவர் மிரட்டல் தொனியில் பேசியதில் வருத்தம் அடைந்த கிருப்ஸ்காயா காம்னேவிடம் ஸ்டாலின் உரையாடல் பற்றி தெரிவித்தார். ஸ்டாலினைவிட லெனின் மீதும் சோவியத் அரசியல் மீதும் தனக்குள்ள கரிசனம் குறைவானதல்ல என்றார் கிருப்ஸ்காயா. பின்னர் இவ்விஷயம் லெனினுக்கு தெரியவந்தது. கடும் கோபமடைந்த லெனின் ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும்- இல்லையேல் லெனினுடன் உறவுகளை துண்டித்துகொள்ளலாம் என தெரிவித்தார்.  ஸ்டாலின் தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஜினொவீவின் பெட்ரோகிராட் செல்வாக்கும், காம்னேவின் மாஸ்கோ செல்வாக்கும் அவசியம் எனக் கருதி மூவர் இணைந்து பணி செய்வது என்ற முடிவை ஏற்க செய்திருந்தார். ஜனவரி 25 1923ல் பிராவ்தாவில் லெனின் எழுதிய கட்சிகாங்கிரசிற்கு சில முன்மொழிவுகள் கட்டுரை வெளியானது ஸ்டாலின் பற்றி ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அடுத்து  Better Fewer  but Better என்பதை எழுதினார். அரசாங்க இயந்திரம் முற்றிலுமாக சரி செய்யப்படவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஸ்டாலின் இக்கட்டுரையை அச்சிற்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்தார். அதைபோட்டு ஒருகாப்பியை மட்டும் அடித்து லெனினுக்கு அனுப்பிவிடலாம் என குபிஷேவ் எனும் தோழர் தெரிவித்தார். ஆனால் டிராட்ஸ்கி பிடிவாதத்தால் அவர்கள் வெளியிட நேர்ந்தது. மார்ச் 4 அன்று அக்கட்டுரை முதல் பக்கத்திலேயே வெளியானது. ஜார்ஜியா விவகாரங்களை ஸ்டாலினிடம் விட்டுவிடாமல் ஜினோவீவ் எடுத்து பார்க்கட்டும் என்ற அறிவுரையை  லெனின் தந்தார். கிருப்ஸ்காயா விவகாரம், ஜார்ஜியா குறித்த லெனின் அறிவுரை படுத்தபடுக்கையாக இருந்த டிராட்ஸ்கிக்கு தொலைபேசிமூலம் தெரிவிக்கப்பட்டடது. ஸ்டாலினுக்கு லெனின் எச்சரித்து எழுதிய கடிதம் தனி செயலர் மூலம் ஸ்டாலினிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 7, 8 நாட்களில் லெனின் உடல்நிலை குறித்து விசாரித்து செல்ல காம்னேவ் வந்து சென்றார். தான் ஸ்டாலின் மற்றும் Ordjonikidze, Dzerzhinsky  ஆகிய தோழர்கள் மீது கடும் வருத்ததில் இருப்பதாக தெரிவித்த கடித நகல் காம்னேவ், டிராட்ஸ்கிக்கு போடப்பட்டது. கட்சிக்காங்கிரசில் லெனின் ஸ்டாலினை கடுமையாக தாக்குவார் என்கிற செய்தியை அவரது செயலர் லிட்யா பரப்பினார். டிராட்ஸ்கியை சந்தித்துவந்த லிட்யா அவர் தனியாக ஸ்டாலினுடன் மோத தயங்குகிறார் என்கிற செய்தியை லெனினிடம் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மன்னிப்பு கடிதம் அனுப்பிவிடத்தயார் என்கிற முடிவிற்கு ஸ்டாலின் வருகிறார். லெனினுக்கு 1923 மார்ச் 9 அன்று மூன்றாவது Stroke  ஏற்பட்டது. பக்கவாத தாக்குதல் இடது பக்கமும் ஏற்பட்டது. மருத்துவர்கள் போராடி ஜூலையில்  மெதுவாக நடக்கக்கூடிய அளவிற்கு அவரை குணப்படுத்தினர். இடப்பக்கம் செயல்பாட்டிற்கு வந்தது. கிருப்ஸ்காயா அவருக்கு பேச்சுபயிற்சி கொடுத்துவந்தார். கம்பு ஊன்றி வலக்காலை சற்று இழுத்து நடக்குமளவு அவர் குணமடைந்தார். யார் வருகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மெதுவாக அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது. மிகவும் மென்மையான பெரிதும் ஒத்துழைக்கும் நோயாளியாக தற்போது லெனின் இருக்கிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கையை மாலடோவ் வெளியிட்டு அவர் குணமடைந்ததை தெரிவித்தார். லெனின் பேசுவதற்காக கடுமையாக தன்னை வருத்திக்கொண்டதாக அறியமுடிகிறது. கிருப்ஸ்காயவை விட்டு படிக்க சொல்லி கேட்டுவந்தார் லெனின். மாக்சிம் கார்க்கியின் சுயசரிதையை அவர் படிக்க கேட்டார்.  லெனினை சந்திக்க வந்த தொழிலாளர் குழுவினருக்கு அனுமதி தரசொன்னார், அவர்கள் லெனின் கையை தொட்டு முத்தமிட்டனர். சிலர் கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஜனவரி 1924ல் கோர்க்கி கிராம குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மரம் வளர்த்து கொண்டாட்டங்களை செய்தார் கிருப்ஸ்காயா. அங்கு வாழ்ந்த விவசாயிகளும் குழந்தைகளும் பங்கேற்றனர். சில குழந்தைகள் லெனின் அருகில் போய் அமர்ந்து வாஞ்சையுடன் அவரை பார்த்தன. ஜீனோவீவ், காம்னேவ், புகாரின் வந்து பார்த்தபோது அவர்கள் கைகளை குலுக்கி வந்தனம் செய்தார் லெனின். ஏதும் அவரால் பேச இயலவில்லை. கிருப்ஸ்காயாவுடன் அளவளாவி விட்டு தோழர்கள் சென்றனர். […] ஜனவரி 1924ல் சோகம் நிறைந்த தனிமையில் வாழும் மனிதனின் இருட்கதையாக கருதப்பட்ட ஜாக்லண்டன் எழுதிய  Love of Life யை அவர் படிக்க சொல்லி கேட்டார். அவனின் விடாமுயற்சி என்கிற செய்தி அதில் இல்லாமல் இல்லை. கட்சி காங்கிரஸ் கூட்டம் ஜனவரியில் நடந்தபோது அக்கூட்டம் லெனின், டிராட்ஸ்கி பங்கேற்பில்லாமல் நடந்தது. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் நிலைமைகளை கொணர்ந்தார். டிராட்ஸ்கியின் தவறுகளை விமர்சித்து பேசினார். ரடேக் போன்றவர்கள் பேசியதை பொருட்படுத்தவேண்டாம் என்றார். ஆனால் லெனின் குறித்து உயர்வாக பேசினார். பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் லெனின் போன்ற ஒருவர் தோன்றமுடியும் என்றார். ஜனவரி மூன்றாம் வாரத்தில் ஸ்டாலின் தலைமை என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றானது. 5 ஜனவரி 21,1924 அன்று லெனின் உடல்நிலை மோசமானது. அன்று காலை வைக்கப்பட்ட தேநீரைக் கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை. மதிய உணவு மிகக்குறைவாக எடுத்துக்கொண்டார். மாலை 6 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மாலை 6.50க்கு அவர் மறைந்தார். ருஷ்யா மரபின்படி நீண்ட மேஜையின் மீது அவரது உடல் வைக்கப்பட்டது. செய்தி அறிந்த பலர் கூடினர். மாஸ்கோவிலிருந்து ஜீனோவீவ், ஸ்டாலின், காம்னேவ், புகாரின் உள்ளிட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கோர்க்கி விரைந்தனர். ஜனவரி 22 காலை 11 மணி அளவில் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 12 மருத்துவர்கள் சோதனை முடித்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.  Autopsy செய்திட  கால தாமதம் ஏன் என்கிற விமர்சனங்கள் மெல்லிய குரலில் எழாமல் இல்லை. கிரெம்ளின் ஒப்புதல் பெற்றவுடன் தாங்கள் பணியில் தாமதம் ஏதுமில்லாமல் ஈடுபட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டிராட்ஸ்கிக்கு லெனின் மறைவு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர் செய்தி அறிந்து கிளம்பும்போது அவசரமான அறிக்கை ஒன்றை இரங்கல் செய்தியாக தந்தார். அன்று கடுங்குளிர் நிலவியது. மைனஸ் 20 டிகிரி. ஏராள மக்கள் குளிரை பொருட்படுத்தாமல் வந்து அவதிக்கு உள்ளாகினர். மாயாகொவ்ஸ்கி  we are burying the most earthy of all the men who ever walked the earth…This man is more human than any of us  என்கிற கவிதாஞ்சலி தந்தார். சோவியத்துக்களின் காங்கிரஸ் ஜனவரி 26 1924ல் கூடி அஞ்சலி செய்தது. கிருப்ஸ்காயா, ஸ்டாலின், ஜினோவீவ்,காலினின் பூத்தூவினர். கிருப்ஸ்காயா தனது உரையில் ‘’லெனின் இதயம் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்தது. புத்தகங்கள் படித்தல் மூலம் அவர் மார்க்சிடம் செல்லவில்லை. எதிர்ப்படும் மக்கள் பிரச்சனைகளின் தீர்விற்காக அவர் மார்க்சிடம் சென்றார். விடையும் கொணர்ந்தார். அவர் தொழிலாளர்களிடம் மார்க்சியத்தை கொண்டுசென்றபோது கர்வம் நிறைந்த பேராசிரியரைப்போல நடந்துகொள்ளவில்லை. தோழனாக நெருங்கினார். கற்றுக்கொடுக்க மட்டும் என அவர் தன்னை நினைத்துக்கொள்ளவில்லை. காதுகளை அகலத்திறந்து கேட்கும் பயிற்சி கொண்டிருந்தார். ஆலையைப்பற்றி மட்டுமில்லாமல் அவர்கள் கிராம வாழ்நிலையையும் அவர் கேட்டறிந்தார். லெனின் அவர்களை உணர்ந்தார். வெற்றி பெறமுடிந்தது’  என்கிற ஆழமான பதிவை செய்தார். லெனினிடமிருந்து நாம் கற்றுக்கொண்டுள்ளோம். பணிகளை தொடர்வோம் என ஸ்டாலின் உரை அமைந்தது. பெட்ரோகிராட் இனி லெனின்கிராட் என பெயர்பெறும் என அறிவித்தனர். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு நிரந்தரமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்கிற முடிவையும் எடுத்தனர். கிருப்ஸ்காயா இதில் ஏற்பில்லை என்றார். லெனின் தன்னை கடவுளாக்க விரும்பியதில்லை என்றார். நினைவு மண்டபங்கள் வேண்டாம். வெளிப்பகட்டு மரியாதைகள் பயனற்றவை. அவர் பெயரை ஊர்கள் இடங்களுக்கு சூட்டாதீர். அவர் பெயரால் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக நடத்தாதீர். லெனின் தன் வாழ்நாள் முழுதும் இது போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை . பதிலாக முதியோர் இல்லங்களை துவங்கி பராமரிப்பீர். குழந்தை காப்பகங்கள், பள்ளிகள், நூலகங்கள் துவங்கி பராமரிப்பீர். அநாதை குழந்தைகளை கைவிடாதீர். மருத்துவமனைகள் அவசியம் என்கிற வேண்டுகோளை கிருப்ஸ்காயா பிராவ்தாவில் விடுத்தார்.  ஜனவரி 27 அன்று தொழிலாளர் கூடத்திலிருந்து அவரது உடலை ஜீனோவீவ், ஸ்டாலின் மற்றவர்கள் செஞ்சதுக்கம் சுமந்து சென்றனர். மாலை 4 மணிக்கு மூன்று நிமிடம் நாட்டின் அனைத்துவேலைகளும் நிறுத்தப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது. டாக்டர்கள் செய்த எம்பால்மிங் ஆயிரம் வருடங்கள் நிலைக்கும் என பலரும் பேசினர். அவரது மூளை தனியே எடுக்கப்பட்டு Soviet Brain instituteல் வைத்ததாக ராபர்ட் பைன் குறிப்பிடுகிறார். 1926ல் மீண்டும்  Embalming Process  நடந்ததாக அறிகிறோம். இரண்டாம் உலகப்போர் நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் உடல் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் பதட்டங்கள் தணிந்தபின் மீண்டும் செஞ்சதுக்கம் கொணரப்பட்டதாகவும் அறியமுடிகிறது. லெனினின் பயன்படுத்திவந்த பொருட்களை நினைவில்கொள்ளும் வகையில் மியூசியம் ஒன்று உருவாக்கப்பட்டது. Lenin imagined himself the servant of an infallible doctrine which he alone could interpret; and so could afford to be always modest and yet alwys right  என்கிற மதிப்பீட்டை ஜான் பிளமெனடாஸ் தருகிறார். போல்ஷ்விக்குகள் வருவதற்கு முன்பாகவே சோவியத்துகள் உருப்பெற்று வலுப்பெறத்துவங்கின. Having made themselves as rulers of Russia, they had perforce rule, as soon as their power was challenged, they defended it as best they could  என ஜான் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். லெனின் பதவிக்கு வந்த இரண்டாண்டு கழிந்தபின்னரும் அவரைப்பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை மேற்கு பத்திரிகை உலகம் பரப்பியதை ரைம்ஸ் வில்லியம்ஸ் சொல்கிறார். அமெரிக்க சோசலிஸ்ட்டான ரைம்ஸ் லெனின் தங்கியிருந்த நேஷனல் ஹோட்டலில் இருந்து லெனினுடன் உரையாடியவர். ஜார் ராணுவத்தின் 15 லட்சம் வீரர்களை முழுமையாக அவர் விஷமிட்டு கொன்றார் என்ற கதை பரப்பப்பட்டது இருபதுமுறையாவது லெனின் சுடப்பட்டார் என்கிற செய்தியை பரப்பினர். கட்சித்தலைமையே அவரை விலங்கிட்டு அடைத்துவைத்துள்ளது என்கிற செய்தியும் வெளியிடப்பட்டது. தினம் அவருக்கு பழங்களுக்காக 2000 ரூபிள் செலவு செய்யப்படுவதாக செய்தியை உலாவவிட்டனர்.. பிரிமியர் லெனின் என சொல்லாமல் கொடுங்கோலன் லெனின் என உள்நாட்டில் பேசியவர் உளர். சோசலிஸ்ட் வலதுசாரிகள் ஜார் நிக்கோலஸ் போய் புதிய ஜாராக நிக்கோலய் லெனின் என கேலி பேசினர்.  ஒருமுறை லெனினை பார்க்கவந்த பாக்டரி தொழிலாளர்கள் எங்கள் ஆலையை தேசியமயமாக்க உத்தரவு தாருங்கள் என்றனர். லெனின் உடனே செய்துவிடலாம் என சொல்லி சில கேள்விகளை முன்வைத்தார். அங்கு வரவு செலவு என்ன- கணக்குகளை யார் பார்த்துள்ளீர்கள்- பாக்டரிக்கு வேண்டிய கச்சா பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என தெரியுமா? சரி உங்கள் பொருட்கள் எங்கே விற்பனைக்கு அனுப்பபடுகிறது என கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர். பாக்டரி சென்று சில முக்கிய அம்சங்களை கற்று ஏற்று நடத்த தயார்நிலையில் வந்து சொல்லுங்கள் செய்துவிடலாம் என்றார் என்கிற பதிவை ரைம்ஸ் வில்லியம்ஸ் தருகிறார்.  நூற்றுக்கணக்கான கடிதங்களுக்கு அவரே கைப்பட பதில் எழுதுவார், 18 மணிநேரம் கூட அவர் உழைக்க அஞ்சவில்லை. கிருப்ஸ்காயா தேநீர் குடித்துவிட்டு செயலாற்றுங்கள் என்பார். என் ரேஷன் முடிந்துவிட்டதா என லெனின் கேட்கும் பழக்கம் வைத்திருந்தார். நமது வீரர்கள் இரும்பு கட்டிலில்தானே உறங்குகிறார்கள்- நமக்கும் அது போதும் என அவர்கள் உறங்கினர். நாட்டில் அதிக பட்ச சம்பளம் மாதம் 600 ரூபிளை தாண்டக்கூடாது என சோவியத் சர்க்காரில் முடிவெடுத்தனர். பிரிமியர் லெனினுக்கு 200 டாலருக்கு குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சோவியத் பொருளாதாரத்தை வலுப்படுத்த டெக்னிகல் நிபுணத்துவம் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்து தேவை என்பதை லெனின் ஏற்றார். The reports from the Great Moscow Economic Council in June 1919 show Lenin with Chicherin battling for the plociy of economic alliance with America.. என ரைம்ஸ் சொல்கிறார்.  அமெரிக்க ரெட் கிராஸ் சொசைட்டியின் ரேமண்ட் ராபின்ஸ்  ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டை லெனின் எவ்வாறு மற்றவர்க்கு விளக்கினார் என்பதை பதிவு செய்துள்ளார். ஆமாம் வெட்கம்கெட்ட முறையில் அமைதி உடன்பாடு. நான் சரண்டர் ஆனதாக கருதுகிறீர்கள். ஜாரின் ராணுவம் போரிடமுடியாமல் களைத்துப்போனது. நீங்கள் புரட்சிக்காக போராடியவர்கள். இப்பொழுதே நீங்கள் போர்முனைக்கு செல்லலாம். அங்கு உயிரை மாய்த்துக்கொள்ளலாம். புரட்சியின் லட்சியங்களை அமுல்படுத்த நீங்கள் தேவை. என் புரட்சிகர சகோதரர்கள் இப்படி யுத்தத்தில் மடிவதை என்னால் ஏற்கமுடியாது. போவதாக இருந்தால் சொல்லுங்கள். நான் பதவி விலகிவிடுகிறேன். ஜெர்மன் எதிர்த்து போராட நீங்கள் செல்லுங்கள் என்றவுடன் ‘தோழர் லெனின்’ என்கிற முழக்கம் எழுந்ததாக அவரின் பதிவு செல்கிறது. மாஸ்கோவில் தொழில் நடத்திய அமெரிக்கன் ஒருமுறை ராபின்ஸ் இடம் வந்து தன் கஷ்டத்தை வெளிப்படுத்தினார். ஏன் வேலை நடக்கவில்லையா என கேட்க , இல்லை அவர்கள் ஜார் காலத்தை விட 20 சதம் கூடுதலாக உற்பத்தி செய்கிறார்கள்.. ஆனால் தொழிலாளர் கட்டுப்பாட்டில் எல்லாம் என சொல்லி நிர்வாகமுறையை எடுத்துக்கொள்கிறார்கள். பிரச்சனை லெனினிடம் ராபின்ஸ் மூலம் சென்றது.  Workers control of office in the American Firm  இனி இருக்காது என்கிற உத்தரவை தந்துவிடுவதாக லெனின் அவர்களிடம் தெரிவித்தார். நியுயார்க்டம்ஸ் செப்டம்பர் 2 1918ல் எழுதியது. உலகபோர் அறிமுகப்படுத்திய முக்கிய மனிதர்களில் லெனினும் ஒருவர். அதற்கு  முன்பு அவரை யாரும் அறியோம். அவர் ஜெர்மனியின் கைக்கூலி என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. லெனின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செல்வாக்கு மிக்க தலைவராக போராடுபவர்களின் ஆதர்சன நாயகனாக ஏற்கப்பட்டார். மார்க்சிசம்- லெனினிசம் என்கிற அளவிற்கு மார்க்சியம் பின்னொட்டு கண்டது. சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் சோவியத் மாடெல் தோற்றுள்ளதே தவிர சோசலிசம் தோற்கவில்லை- மார்க்சியம் வெல்லும் என்கிற நம்பிக்கையுடன் மார்க்சிய இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. தற்போது லெனினிசம் என்பதை நீக்கிக்கொண்டாலும் லெனின் குறித்த பெருமிதங்கள் அவரின் முக்கிய ஆக்கங்கள் பற்றிய விவாதங்கள் தொடரவே செய்கின்றன. 1. The Govt of Soviet Samurel Harper 2. German Communism and Russian Communism- John Plamenataz 3. Lenin The Man and His work- Albert Rhys Williams 4. The Life and Death of Lenin  Robert Payne 5. . In the Shadow of Russia     H G Wells காந்தி – லெனின் காந்தியடிகள் தான் வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்தும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் – ஆளுமைகளுடன் ஒப்பிடப்படுவதை பார்க்கமுடியும். மார்க்ஸ் உடன் காந்தியை ஒப்பிட்டு மஷ்ருவாலா எழுதினார். விநோபாபாவே அவர்கள் அதில் முன்னுரை தந்திருப்பார். காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை காந்தியைக் கண்டுணர்தல் என்கிற எனது முந்திய ஆக்கத்தில் பல்வேறு கட்டுரைகளில் இடம் பெற செய்துள்ளேன். மார்க்சியம் - லெனினியம் என்கிற அளவிற்கு மார்க்ஸ் உடன் இணைப்பைப் பெற்ற லெனினுடன் காந்தியை ஒப்பிடுதல் என்பது இங்கே முயற்சிக்கப்பட்டுள்ளது. காந்தியையும் லெனினையும் ஒப்பிட்டு 1920களில் இரு புத்தகங்கள் வந்தன. ஒன்று மார்க்சிய – சோசலிச சிந்தனைகொண்ட இந்திய இளைஞர் தோழர் டாங்கே (1899-1991) எழுதி 1921ல் வெளியான புத்தகம் Gandhi VS Lenin . இப்புத்தகம் அளவில் சிறியது. இந்த 2021 ஏப்ரலில் அப்புத்தகம் நூற்றாண்டைக் கண்டது. அடுத்த புத்தகம் ரெனி ஃபுலோப் மில்லர் எழுதி 1927ல் வெளிவந்த லெனினும் காந்தியும் (Lenin and Gandhi) என்பதாகும். அளவில் பெரிய புத்தகம். ரெனி ஃபுலோப் மில்லர்(1891-1963) வியன்னாவில் செயல்பட்ட கலாச்சார வரலாற்றாசிரியர். மில்லர் எழுதியதை இந்திய வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா நல்லவகையில் மதிப்பிட்டுள்ளார். இரு ஆளுமைகளையும் உச்சங்களாக மில்லர் மதிப்பிட்டதை குஹா தெரிவிக்கிறார். Gandhi VS Lenin புத்தகத்தை 1921ல் தோழர் டாங்கே எழுதியபோது அவருக்கு வயது 21 . இளம் தேசபக்தரின் துணிவான செயலாக இவ்வாக்கத்தைப் பார்க்கலாம். காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தை’ கொண்டாடியவர்கள் ருஷ்ய போல்ஷ்விக்குகளுக்கு இணையான போராட்டம் என்று வர்ணித்ததை ஏற்கமுடியாமல் இரண்டிற்குமான வேறுபாடுகளை இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற அவாவில் டாங்கே அதை எழுதினார். டாங்கே ஒத்துழையாமையில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பைவிட்டு வெளியேறியவர். இந்த புத்தகம் லெனின் பார்வைக்கு சென்றதாகவும் , இந்தியர்களிடம் ‘மார்க்சிய உணர்வு’ பெருகி வருவதாக லெனின் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உள்ளன. திலகரின் தொண்டனாகவும் சோவியத் புரட்சி குறித்து அறிந்தவராகவும் இருந்த டாங்கேவிற்கு மாறுபட்ட காந்தியின் போராட்டம்- சிந்தனைமுறை விமர்சனம் செய்யப்படவேண்டிய ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில் அதன் வன்முறைக்கு எதிரான உறுதிப்பாட்டை, முதலாளித்துவம் சுரண்டலுக்குரிய முறை என்கிற காந்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்கமுடியாத நிலையும் இளம் டாங்கேவால் உணரப்பட்டிருந்தது மார்க்சிய கருதுகோள்களான உற்பத்தி உடைமை, உபரிமதிப்பு ஆகியவற்றை டாங்கே விளக்குகிறார். சோசலிச சமுக மாற்றத்திற்கு ஆயுதம் தாங்கிய புரட்சி தவிர சமாதான வழிகளை பேசுவது அறிவீனம் என்பதை ஆரம்ப பக்கங்களில் சொல்கிறார். இந்திய முதலாளிகள் மூன்றுவகை பாவங்களை செய்கின்றனர். அந்நிய கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கின்றனர். இந்திய விவசாயிகளையும், கூலிக்காரர்களையும் சுரண்டுகின்றனர். அய்ரோப்பியர்களுக்கு ஆதரவாக நின்று நமது நாட்டின் வறுமை பெருக்கத்திற்கு துணை நிற்கின்றனர். எனவே இரு கடமைகளாக அந்நிய நுகத்தடியிலிருந்து விடுதலை, முதலாளித்துவத்தை அப்புறப்படுத்தல் ஆகியவை எழுகின்றன. இதற்கு வழி முறை தான் என்ன? என்கிற கேள்விக்கு டாங்கே விடைதேட முயற்சித்தார். நவீன தொழில்மய சமூகத்தின், நாகரீகத்தின் கேடுகளை காந்தியும் விமர்சிக்கிறார். ருஷ்யாவின் போல்ஷ்விக்குகளுக்கும் இந்த பார்வை இருக்கிறது. இந்துக்களுக்கு கீதை, கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல போல்ஷ்விக்குகளுக்கு மார்க்சின் மூலதனம் இருக்கிறது. பொருளாதார பொருண்மைவாதம், உபரிமதிப்பு, வர்க்கப்போராட்டம் மூன்றும் போல்ஷ்விக்குகளின் கருத்தில் கவனம் கொண்டு நிற்பவை. சோசலிச புரட்சி என்றால் தொழிலாளர்- விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய வர்க்க புரட்சியைத்தான் சொல்கிறோம். முதலாளித்துவத்தின் கோரமான மூர்க்கத்தை சமாளிக்க இது அவசியம் என அவரது தேடல் சென்றது. டாங்கேவின் எழுத்தில் இது இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “.. an armed revolution of the workers and peasants, with all the fanaticism of a religious belief is the only remedy.” முதலாளித்துவம் அப்புறப்படுத்தப்பட்டபின் இந்த வெறி தணியும் (when they have been dispossed, fanaticism will fade). ” காந்தி அனைவரும் உழைக்கவேண்டும் எனச் சொல்கிறார். சோம்பிக்கிடப்பவன் திருடன் என்கிறார். ராட்டை நூற்பு என்பதை முன்வைக்கிறார் . ஆனால் உலகின் பேரளவு உற்பத்திக்கு முன்னர் கைத்தறி நெசவால் ஏதும் செய்யமுடியாது. காந்தியம் தொழிலாளர் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. பிரிட்டிஷ் போன்ற கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுபட காந்தியம் போல்ஷ்விசத்திற்கு நேர் எதிரானவற்றை முன்வைக்கிறது. போல்ஷ்விக்குகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் மனிதமனத்தை மாற்றுதல் என முன்வைத்தால், காந்தி ‘மனித மனதின் மாற்றம்’ என்பதை முன்வைக்கிறார் . அவரைப் பொறுத்தவரை வன்முறை வன்முறைக்குத்தான் வித்திடும்.” என டாங்கே எழுதியுள்ளதை பார்க்கிறோம். காந்தியம் என்பது இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது என டாங்கே மேலும் விளக்குகிறார். ஒன்று உலகளாவிய மானுடத்திற்கு பொதுமையானது- உலகளாவிய தீங்குகள் அதன் சமூக பாதிப்புகள் பற்றியது. அடுத்தது இந்தியாவில் நிலவும் கொடுங்கோல் ஆட்சியை அப்புறப்படுத்த அது முன்வைக்கும் வழிமுறைகள். ” One relates to general evils, common to all human society and treats of the solution of problems affecting all. Another aspect treats of the special evil of despotism and proposes means to do away with it.” ‘Non Violent Non cooperation’ என்கிற வழியை காந்தி முன்மொழிகிறார். டால்ஸ்டாய் சொல்வதை ருஷ்யாவே கைவிட்டுவிட்டது. காந்தி எடுத்துக்கொண்டுள்ளார்- ’ Gandhism relies on individual purification, individual consciousness , conviction and individual action’. மனசாட்சியின்படி செயலாற்று என அது பேசுகிறது இது நல்ல இலட்சிய கனவாக இருக்கலாம் என்பது அன்றைய டாங்கேவின் விமர்சனம். போல்ஷ்விசம் ‘inherent goodness’ என்ற நம்பிக்கையைக் கொள்ளவில்லை. லெனின் காந்தி இருவருக்கும் இன்று நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்பது என்கிற பொதுவான இலட்சியம் இருக்கிறது. ஆனால் இதற்கு காரணங்கள் என்பதில் நவீன நாகரீகம்- தொழில்புரட்சி மனிதனிடம் காணப்படும் தீங்கான செயல்கள் என்பதுடன் காந்தி நிற்கிறார். லெனின் உற்பத்திமுறை- நிலம் - முதலாளி- அசமத்துவம் என்பதைக் காண்கிறார். தீர்வுதான் என்ன என்பதிலும் இருவரும் மாறுபடுகின்றனர். நவீன நாகரீகத்திலிருந்து காத்துக்கொள்ளுதல் என காந்தி மொழிந்தால், லெனின் இந்த வளர்ச்சியை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்பதைப் பேசுகிறார். வழிமுறைகள் என பார்த்தால் கொடுங்கோன்மை அகல அதனுடன் அனைவரும் ஒத்துழையாமை அனுசரிப்பது என்கிறார் காந்தி. லெனினோ புரட்சிகர சிறுபான்மையால் அவர்களை வீழத்தமுடியும் என்பதுடன் பெரும்பான்மை அவர்களின் சொந்த நலனை உணர்ந்து பின்தொடர்வர் என்கிறார். அதுதான் சாத்தியமான வழி என்கிறார். காந்திக்கோ மத நம்பிக்கையும் அகிம்சையும்தான் சிறந்த வழியாக இருக்கிறது. வன்முறை வன்முறையைத்தான் பெருக்கும் என காந்தி பேசினால், லெனின் வன்முறை தற்காலிகமானதே- குழப்பங்கள் முற்றிலுமாக நீங்கி மக்களின் நல்வாழ்வு திடமாகும் என்கிறார். போல்ஷ்விக்குகளால் அவர்கள் முழங்கிய ‘land Bread and peace’ என்பதை தரமுடிந்துள்ளது. லெனின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் மாஸ்கோ சென்ற பத்திரிகையாளர் லெனின் அலுவலகத்தில், அவரின் எளிமையை பார்த்துவிட்டு வியந்து பேசினார். இந்த விஷயத்தில் அவர் காந்தி போல இருக்கிறார் என டாங்கே வியக்கிறார். ருஷ்ய புரட்சி என்பது முதலாளித்துவ காலத்தை முடிவிற்கு கொணர்ந்து உழைப்பவர்க்கான காலத்தை திறந்துவிட்டுள்ளது. சோவியத் ஆட்சியின் மேன்மைகளை பேசிய டாங்கே இந்தியாவில் புரட்சி குறித்தும் தனது எண்ணத்தை தந்துள்ளார். Indian Revoultion என்கிற பகுதியில் இந்தியாவிற்கு என்ன வழி எனக்கேட்டு டாங்கே விவாதித்துள்ளார். நமது ‘கான்ஸ்டிடூஷன் முறை’ வெற்றியைத்தராது. நாம் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் என போகவேண்டியதில்லை. அதேநேரத்தில் தீவிர மாற்றங்களை அடியோடு உருவாக்கும் புரட்சி தேவை என்பதை டாங்கே சொல்கிறார் . இந்தியாவில் 64 சத சொத்தை 2 சத பெரும்பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள். சாதாரண 88 சத மக்களிடம் 12 சதம் சொத்து இருக்கிறது. நம்முடைய போராட்டத்தில் வன்முறைதான் வழி என இல்லாவிடினும் வன்முறை ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்வது தவிர்க்கமுடியாததாகலாம். கம்யூனிஸ்ட் திட்டம் என்பதை நாம் முழுமையாக ஏற்கவேண்டாம். தேசியமயம்- அரசாங்கத்துறை என்றளவு அத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மூலதன குவிப்பை தடுத்தாக வேண்டும். செல்வம் - சொத்து என்றால் இவ்வளவுதான் அதிகபட்சம் என்கிற உச்சவரம்பு வேண்டும். இன்றுள்ள நிலையில் 4 பேர் உள்ள குடும்பம் எனில் ரு 150 போதும். எனவே very luxurious life அனுபவிப்பவர் யார் யார் என்பதை அரசாங்கம் கவனிக்கவேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் என உச்சவரம்பு விதிக்கவேண்டும். அதற்கு மேல் அவர் சம்பாதித்தால் உபரியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது ஆலோசனை மட்டுமே என டாங்கே முன்மொழிந்தார். காந்தியின் தர்மகர்த்தாமுறையில் முதலாளிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் என முன்மொழியப்பட்டதை நாம் அறிவோம். அதேபோல் விவசாயிகளுக்கு நிலப்பகிர்வு மற்றும் கிராமப்புற கடன் வசதி மேம்பாடு பற்றி டாங்கே முன்மொழிவுகளை செய்தார். இப்படி சில சீர்திருத்தங்கள் மூலம் முதலாளி- நிலப்பிரபுக்களை கட்டுக்குள் வைக்கலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரலாம். இறுதியில் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையை இந்த ஆக்கத்தில் டாங்கே தந்திருந்தார். சோவியத் குறித்து பெருமிதங்களை பேசினாலும், திலகரை கொண்டாடுபவராக இருந்தாலும் காந்தியின் தாக்கத்தை நிராகரிக்க முடியாமல் நூறாண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் டாங்கே இருந்துள்ளமையை நாம் உணரமுடியும். போல்ஷ்விக்குகளின் பாதையை அப்படியே ஏற்பது அவசியமில்லை என்கிற பார்வையையும் டாங்கேயிடம் அப்போது இருந்ததை உணரலாம். தேசபக்த தேசியவாதத்திலிருந்து மார்க்சியராக கம்யூனிஸ்டாக பரிமாணம் பெறும் இளைஞரின் பார்வையாக இவ்வாக்கம் பொதுவாக கருதப்படுகிறது. அடுத்த மிக முக்கியமான புத்தகம் ரெனி மில்லர் எழுதிய ‘லெனினும் காந்தியும்’ ஆக்கமாகும். புத்தகத்திற்கான முன்னுரையில் மில்லர் ( 1927 மார்ச்) இவ்வாறு வரையறுத்திருந்தார். ” லெனின் காந்தி இருவருமே வெவ்வேறு வழிகளில் தங்களின் துணிச்சல்மிக்க சோதனைகளை மானுட மேம்பாட்டிற்காக செய்தவர்கள். இருவரும் ருஷ்யா, இந்தியா என தங்கள் எல்லைக்குள் நின்று தங்கள் நாட்டின் எதிர்கால திசைக்கான போராட்டத்தை நடத்தினர். சொந்த நாட்டில் நின்று காலூன்றி மக்களின் விருப்பங்களை கனவுகளை உணர்ந்து செயலாற்றினர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள்- அரசியல் திசைவழி நாடு கடந்து உலகில் பரவியது. உலக மக்களின் பரந்த அனுபவத்திற்காக ருஷ்யா லெனினாலும், இந்தியா காந்தியாலும் ‘subject’ ஆக இருந்தன என புரிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நின்ற இரு தீர்க்கதரிசிகளாக லெனினும் காந்தியும் தெரிகின்றனர். அவர்களை கூர்ந்து கேட்போமானால் சகாப்தங்களை தொடங்கி வைத்தவர்கள் என்ற உணர்வை பெறுவோம்.” லெனின் காந்தி இருவருமே அய்ரோப்பிய கலாச்சாரம் மீதான விமர்சன பார்வையைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் வழிமுறைகள் வேறாக இருந்தன. லெனின் கொடும் ஜார் அரசை அப்புறப்படுத்தி தனது மார்க்சிய இலட்சிய அரசை உருவாக்க வன்முறை எனும் வழியை தேர்ந்தெடுத்தார். காந்தி ‘evil empire’ என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் எதிர்த்து அகிம்சை வழி ஒத்துழையாமையை தேர்ந்தெடுத்தார். லெனின் ‘சோவியத் நாட்டை மின்சாரமயமாக்குதல்- தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குதல்’ சோசலிச பாதை என்றார். காந்தி தொழில்புரட்சி என்ற பெயரால் கோடானுகோடி கைகளுக்கு வேலைகொடுக்கமுடியாத எந்திரமயத்தை எதிர்த்தார். எந்திரத்திற்கு மனிதன் அடிமையாகிவிடக்கூடாது என எச்சரித்தார். ரெனி மில்லர் லெனின் வெற்றியின் இரகசியம் என பேசும்போது கோட்பாட்டு செல்வாக்கை நடைமுறையில் கொடுத்ததிலும், நடைமுறை அனுபவங்களின் பாற்பட்டு அவற்றை தனது கோட்பாட்டு அம்சங்களில் குழைத்துக் கொள்வதிலும் இருந்தது என்கிறார். லெனின் தான்பெற்ற கோட்பாட்டறிவை மாற்றிக்கொள்வதிலும் தயங்காமல் இருந்தார். காந்தியும் தனது ‘inconsistency’ குறித்து வந்த விமர்சனங்களில் வீழாமல் உண்மைக்கு அந்த அந்த தருணங்களில் நெருக்கமாக இருப்பது என்கிற வழியில் வாழ்ந்தார். டால்ஸ்டாய் குறித்த சில விமர்சனங்கள் லெனினிடம் இருந்தாலும் கார்க்கியிடம் பலமுறை மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தினார் லெனின். ” Tolstoi what a mass ! What a wealth of material.. What has Europe to compare with Tolstoi.. Nothing என கார்க்கியிடம் அவர் மகிழ்ந்து வெளிப்படுத்திய தருணத்தை மில்லர் தருகிறார். காந்தியும் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டவர் என நாம் அறிவோம்.. ஒருமுறை துணைவியார் கிருப்ஸ்காயாவுடன் நாட்டில் உள்ள கல்வியறிவின்மை பற்றி லெனின் உரையாடியபோது, புரட்சிக்கு அந்த கல்வியறிவற்றவர்கள்தானே உடன் நின்றனர் என கிருப்ஸ்காயா தெரிவித்தார். ஜாரின் வீழ்ச்சி என்கிற அழித்தலுக்கு அந்த சூழல் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்பது வெறும் அழிவுவேலையல்ல. இடிப்பதற்காக மட்டுமே நாம் இடிக்கவில்லையே. புது கட்டுமானத்திற்கு கல்வியறிவின் மேம்பாடு மிக அவசியம் என்றார் லெனின். காந்தியும் ‘நயி தாலிம்’ என்கிற அடிப்படைக் கல்விக்காக நின்றதை நாம் அறிவோம். . லெனினும் சோசலிச கட்டுமானத்திற்கு ‘liquidate illiteracy’ என்றார். லெனினை பொருத்தவரை போல்ஷ்விசத்தின் அரசியல் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை தந்தார். ஒழுக்க நெறிகள், சீலம் என்பதெல்லாம் அதற்கு துணைநிற்கும் அளவிற்குத்தான் அவரிடம் கவனம் பெற்றன. சுதந்திரம் என்பதைக்கூட பூர்ஷ்வா சொல்லாடலாக அவர் பார்த்தார். மரணதண்டனை ஒழிப்பு என மக்கள் கமிசார் கூட்டத்தில் பேச்சு வந்தபோது அதனை ஒழிப்பது பைத்தியக்காரத்தனம் என்றார். எதிரிகளை சிறையில் போடுவதால் மட்டும் வெற்றி கிட்டிவிடும் என இருந்துவிடக்கூடாது என எச்சரித்தார். ஓடுகாலிகளுக்கு புரட்சியின் துரோகிகளுக்கு மட்டும் தண்டனை என சொல்லலாமா என காம்னேவ் கேட்டபோது அந்த நல்ல எண்ணம் மாயைதான் என்றார் லெனின். புரட்சிக்கு எதிராக பயங்கரவாதம் இருக்கும்போது புரட்சியின் வெற்றிக்காக நமது பயங்கரவாதம் தேவை என்கிற கருத்து அவரிடம் இருந்தது. ’ Friendly kindly fashion ’ மூலம் அவற்றை செய்ய முடியாது. தூங்குமூஞ்சி சர்வாதிகாரம் என ஏதும் இருக்க முடியாதென்றார். நமது சூழல்கள் நம்மை கடுமையாக கொடுமையாக நடக்க வைத்துள்ளன. நமது குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்தை பெறுவர் என லெனின் பேசும்போது அவரின் உள்மனம் எதற்காக நின்றது என்பதையும் சேர்த்தே உணரலாம். காந்தியோ வன்முறைதான் வழி எனில் அத்துடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என்பதில் தெளிவாக நின்றவர். தூய்மையற்ற வழிகளால் எவ்வளவு உயர்வாக பேசப்படும் ஒன்றை அடைந்தாலும் , விரைவில் அடைவதற்கான வழியாக இருக்குமே தவிர நீடித்து நிற்காது என அவர் உறுதியாக நம்பினார். இலக்கு இலட்சியம் என்பதைவிட வழிமுறைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். லெனின் தன்னைப்பற்றி சக தோழர்கள் அவ்வப்போது செய்த விமர்சனங்களையெல்லாம் ஒருமுறை தொகுத்து சொன்னார். ” …autocratic, bureaucratic, centralist, one sided, pig headed, narrow, suspicious and unsociable” புரட்சிக்கு பின்னர் ஜெர்மன் தாக்குதல் என அறிந்தபோது டிராட்ஸ்கி லெனினுடன் உரையாடுகிறார். நாம் இருவரும் கொல்லப்பட்டால் புகாரின் சமாளிப்பாரா? அவர்கள் நம்மை கொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன் என டிராட்ஸ்கி கூற லெனின் பதில் தருகிறார். யார் அறிவர்- கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லி லெனின் சிரித்தார். நாம் புரட்சிக்குப்பின் நன்றாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம். இப்போது பிடரிமயிரை பிடித்துக்கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம். நிலைமைகளை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என துரிதமாக லெனின் செயல்பட்டதால் பிரஸ்ட் லிட்டொவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை வந்ததை நாம் அறிவோம். காந்தி அனைத்து நேரங்களிலும் கடவுள் வழிகாட்டுகிறார்- உள் குரல் என செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார் என்பதை அனைவரும் அறிவர். லெனின் அப்படி உள்குரல் என எதையும் சொல்லிக்கொண்டதில்லை. லெனின் தனது கருத்துக்களில் உறுதியாக நிற்பார். தான் பலநேரங்களில் தனித்து விடப்படுகிறோம் என்பதை அறிந்தாலும் no fear of isolation என்பது அவரிடம் இருந்தது. காந்தியும் இதே குணம் கொண்டவராக செயல்பட்டார். நாடு பிரிவினையின் போது அவர் எவ்வாறு தனிமையானார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த செய்தி. அதேநேரத்தில் அஞ்சாமல் உறுதியாக வகுப்புக்கலவரப் பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் இருந்து கடமையை செய்து அமைதிப்படுத்தினார். காந்தியை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றிய ரொமெய்ன் ரோலந்த் லெனின் குறித்து இவ்வாறு எழுதினார். Lenin the greatest man of action in our century and at the same time the most selfless. ரஸ்ஸல் இருபதாம் நூற்றாண்டில் லெனினும், அய்ன்ஸ்டினும் வரலாற்றின் புருஷர்களாக இருப்பர் என்றார். . காந்திக்கு தனது கருத்து சரியாக இருக்கிறது என்கிற நம்பிக்கை பலமாக ஏற்பட்டால்தான் அதை நோக்கி மற்றவரை அழைக்க அவர் முற்படுவார். ரோலந்த் அவரது மனநிலையை அழகாக தருவார் His forehead remains calm and clear, his heart devoid of vanity. He is a man like all other men. கோடானுகோடி இந்தியர்களுக்கு தொண்டன் என்பதைத்தவிர என்னை அழைத்துக்கொள்ள வேறு ஏதுமில்லை என்பார் காந்தி. காந்தி தன்னைப்பற்றி தருகின்ற சொற்சித்திரம் அவரைப்போல உண்மையானதாக எளிமையானதாக இருப்பதைப் பார்க்கலாம். ” எனக்கு எந்த பிரிவையும் (செக்ட்) உருவாக்கும் நோக்கமில்லை. கடவுளின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏகபோக உரிமை கோரல்களும் என்னிடம் இல்லை. உண்மை என அறிந்தவற்றிற்காக நிற்பது செயல்படுவது என இருப்பவன். என்னிடம் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. நான் தவறுகள் இழைப்பவன்தான். எனது சேவைகளுக்கு வரம்பு இருக்கிறது. ” லெனின் படுகொலை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றாலும் அவர் மீது கொலை முயற்சிகள் நடந்தது. ஆகஸ்ட் 30 1918 அன்று மாஸ்கோவில் ஆலைத்தொழிலாளர் கூட்டம் ஒன்றில் லெனின் பேசிவிட்டு வரும்போது ‘புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்’ இளம் பெண் கப்ளான் என்பவர் லெனினை சுட்டார். லெனின் உயிர்பிழைத்தாலும் அவரால் தொடர்ந்து ஆரோக்கியமாக சக்தியுடன் பணியாற்ற முடியாமல் போனது. புரட்சி நடத்திய லெனினை புரட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என விதைக்கப்பட்ட எண்ணத்தால் கப்ளான் சுட்டார். லெனின் ஜனவரி 21, 1924 மாலை மறைந்தார். அவரின் டாக்டர்கள் அவர் எப்படி தனது will power மூலம் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தார் என ஆச்சரியமடைந்த செய்தியை நாம் அறிகிறோம். லெனின் மறைவை அந்நாட்டு மக்கள் பலராலும் ஏற்கமுடியவில்லை. அவர் ‘glass case’ ல் இருந்துகொண்டு கவனித்து வருகிறார் எனக் கூட நம்பினர். காந்தி மீது கொலைமுயற்சி அவ்வப்போது நடந்திருந்தாலும் ஜனவரி 30, 1948 அன்று மாலை அவர் படுகொலை செய்யப்பட்டார். எந்த மதத்தின் மீதும் துவேஷமே பாராட்டாத காந்தியை- தன்னை இந்து சனாதனவாதி என அழைத்துக்கொண்ட காந்தியை இந்துத்துவ அரசியல் பின்புலத்திலிருந்து வெறியூட்டபட்ட கோட்சே கொன்றார். பல்வேறு இணை நிகழ்வுகள் கொண்ட இருவரும் தங்கள் வழிகளில் மானுட மேம்பாட்டை மட்டுமே தாகமாக கொண்டு செயல்பட்டனர். தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். காந்தியை லெனினுடன் ஒப்பிட்ட ஆக்கங்கள்போல் ஸ்டாலினுடன் ஒப்பிட்ட ஆக்கம் ஒன்றை லூயி பிஷர் எழுதினார். லூயி பிஷர் எழுதிய காந்தியின் வாழ்வு குறித்த ஆக்கம் மிக மேம்பட்ட நூலாக இன்றும் கருதப்படுகிறது என அறிவோம். Gandhi and Stalin எனத் தலைப்பிடப்பட்ட பிஷரின் அப்புத்தகம் கட்டுரைகளின் தொகுப்பாகும். அதில் ஒரு முக்கிய அத்தியாயமாக காந்தி ஸ்டாலின் ஒப்பீட்டை பிஷர் தந்துள்ளார். காந்திக்கு ‘அரசியல் என்றால் மிகப்பெரிய விஷயம்- வேறொன்று சிறிய விஷயம்’ என்பதெல்லாம் கிடையாது. அவர் பொது இடத்தில் பலர் மத்தியில் 24 மணிநேரமும் இருப்பவராக இருந்தார். பெரும்பாலும் சிறிய குடிசைகளில் இருந்தார். அதுவும் ஒடுக்கப்பட்டவர்- தீண்டப்படாதவர் என சொல்லப்பட்டவர்கள் மத்தியில் வாழ்ந்தார். இந்துக்களால் கண்டால் தீட்டு- பட்டால் பாவம் என நினைக்கப்பட்டவர்களுக்காக நின்றவர் காந்தி. தீண்டாமை என்கிற கொடுமையை இந்துக்கள் அறவே கைவிடவேண்டும் என்பதற்காக விடாது முயற்சித்தார். காந்தி பணம் ஏதுமில்லாத தனிநபர்தான். ஆனால் அவருக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அமைந்தனர். இதை பிஷர் கூறும்போது “His individualism does not give him the right to take everything he can get within the law. His individualism is not based on property. It is based on personality. It means that when he feels his cause is just he can stand alone against the world. With Gandhi, individualism is maximum freedom from outward circumstances and maximum development of inner qualities. Gandhi is the free man from the inside out.” என தெரிவிப்பதைப் பார்க்கிறோம். தனித்த பாதையில் எப்போதும் மக்களுடன் அவரால் இருக்கமுடிந்தது. அடிமை இந்தியாவில் முழுமையான சுதந்திர புருஷனாகவே அவர் நடமாடினார். திருடர் குறித்த உரையாடல் காந்தியுடன் நடைபெற்றபோது அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்கிற பார்வை அவசியம் என்றார். அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் உள்நோக்கி சிந்தித்தால் இது புலப்படும். அவசியமான அளவிற்கு மேல் செல்வத்தை சேர்த்துகொள்வதும் பதுக்குவதும் திருட்டுதான் . நீதி நிறைந்த சமூகமாக இருந்தால் திருட்டு இல்லாமல் போகலாம். திருடர்களை போலீசில் ஒப்படைப்பதா என்கிற கேள்வியின்போது அவர் பெரும் உண்மை ஒன்றை நமக்கு தந்தார். A reformer cannot afford to be informer என்பதுதான் அவரின் செய்தி. நிர்ப்பந்த வசத்தால் நல்லவனாக இருப்பது நீடிக்காது என்பதை அவர் உணர்த்திவந்தார். சர்வாதிகாரத்தில் நிர்ப்பந்தம் இருக்கும். ஆனால் அதன் குறைகள் ஒருநாள் வெடிக்கும். மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்வது மூலம் மாற்றம் என்பதற்காக காந்தி பெரிதும் பாடுபட்டார். தானே வாழ்ந்துகாட்டியதன் மூலம் எந்தவித அரசாங்கத்தையும் துணைக்கு கொள்ளாமல் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கண்ணியம் என்பதின்- கூட்டு முயற்சி என்பதின் புதிய அர்த்தத்தை காந்தி கற்றுக்கொடுத்தார் என என பிஷர் எழுதினார். காந்தியின் வாழ்வு எப்போதும் திறந்த புத்தகமாக இருந்தால் (Gandhis life is an open book. Stalin lives behind a thick curtain) ஸ்டாலின் வாழ்வு திரை கொண்டது என்கிற தன் ஒப்பீட்டை ஃபிஷர் தருகிறார். இந்திய கம்யூனிஸ்ட்கள் மற்றும் சோசலிஸ்ட் தலைவர்களில் பலர் எளிய திறந்த புத்தகமாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டதையும் நாம் சேர்த்து இங்கு பார்க்கவேண்டும். ஸ்டாலின் எங்கு செல்கிறார்- எப்படி செல்கிறார்- அவர் வீடு எங்கு இருக்கிறது- எங்கே தங்குகிறார் என்பதெல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக ஃபிஷர் தெரிவிக்கிறார். மாஸ்கோவில் (நவம்பர் 1932) அவரது துணைவியார் சவப்பெட்டியுடன் ஸ்டாலின் வருவதற்காக முழுமையாக தெருக்கள் கண்காணிப்பிற்கு வந்துவிட்டதாகவும் அவர் எழுதினார். ஜன்னல்கள் வழியாகக் கூட பார்க்க பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. லெனின் ஸ்டாலினை பொதுச் செயலராக்கினார் என்பது உண்மை. அதேபோல் அவரை நீக்கிவிடுங்கள் என அவர் எழுதியதும் உண்மை. ஆனால் ஸ்டாலின் ஜினோவீவ், காம்னேவ் உதவியுடன் தன் பொறுப்பை தொடர்ந்தார் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். பிஷர் ஸ்டாலின் அதிகாரம் செயல்பட்டமுறையை இவ்வாறு சுருங்கத் தருகிறார். ” Stalin keeps authority and initiative at the peak of the pyramid. Nothing works automatically in Soviet Russia. everything is a campaign, If a govt believes that political parties, trade unions, and city and village self rule are no longer necessary now that it is in power, then it is autocracy no matter what it has done about the nationalisation of factories and farms.The character of a government is determined not by its treatment of inanimate property but by its treatment of living people.” ஸ்டாலின் கால சோவியத் ஆட்சியை ‘political economic autocracy’ என்று ஃபிஷர் வர்ணித்தார். சோவியத்முறை ‘the boss is always right’ என்ற உரிமை பாராட்டியது. காந்தியோ ‘I am never sure I am right’ என்பார். காந்தி தன் குறைகளை பார்க்கத்தெரிந்தவராக இருந்தார். ஸ்டாலின் பிறரது குறைகளை பட்டியலிட்டு தண்டனைகள் தருபவராக இருந்தார். காந்தியடிகள் மீதான விமர்சனங்களை அவர் முன்பாகவே வெளிப்படையாக வைக்கமுடிந்தது. ஸ்டாலினை விமர்சித்தால் என்னவாகும் என்பதை வரலாறு காண்பித்துள்ளது. ‘Dictatorship’ என்கிற ஆட்சியாளர்களின் தவறே செய்யாத தலைவரின் குணங்களாக 32 அம்சங்களை ஃபிஷர் அந்நூலில் பட்டியலிட்டுள்ளார். ஜனநாயகத்திலும் பெருங்குறைகள் நீடிக்காமல் இல்லை. ஜனநாயகம் நீடிப்பதற்கேகூட தன் குறைகளை பொருட்படுத்தி சரிசெய்திட அது கற்கவேண்டும். அதற்கு காந்தி செய்துகாட்டிய கருதுகோளான ‘Turn the Searchlight Inward’ என்பது பெரும்பான்மையினருக்கு அன்றாட பயிற்சியாக மாறவேண்டும். பிஷர் இது பற்றி குறிப்பிடுகிறார். அன்பு காட்ட, தர்மவான் ஆக வாழ்ந்திட, பொறுமை சகிப்புத்தன்மையுடன் நடக்க சட்டம் போடமுடியாது. காந்திக்கு வெறுப்போ, விஷம் உமிழும் மனதோ இருந்ததில்லை என பிஷர் எழுதினார். பிஷரின் பார்வையில் ஸ்டாலினுக்கு மாற்று மருந்து காந்திதான் “Gandhi is the antidote to stalin because the Mahatma is the symbol of the individual against the strong government”. வலிமைவாய்ந்த அரசாங்கத்தை தனிநபர் எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை காந்தி தருகிறார். மக்களின் நல்வாழ்வு என்பதில் காந்தி அக்கறை கொண்டவராகத்தான் இருந்தார். பேராசை- சொத்தாசை- சுயநலம் வேண்டாம் என்றார். எவர் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுள்ளாரோ அவருடன் அவராக அவர் மேம்பாட்டிற்கு நேர்மையாக நிற்க காந்தி சொல்லிக்கொடுத்தார். வெறும் உபதேசமாக அல்ல. செயல்முறையாக தானே முன்நின்று களமாடியவராக அவர் இருந்தார். பிஷர் தன் மொழியில் இவ்வாறு எழுதினார். “Gandhism asks people to live better. It asks them to be less selfish, less greedy, less money mad, less self centred. It asks them to be more kind, more honest, more friendly, more brotherly. ..Turn the searchlight inward.” மக்கள் சுயநலமின்றி, பேராசை இல்லாமல், பணப்பேய் பிடிக்காமல், தன்னலப்பேணியாக இல்லாமல் வாழவே காந்தியம் வேண்டுகிறது. அன்பானவர்களாக, நேர்மையானவர்களாக, நட்பும் சகோதரத்துவமும் பாராட்டுபவர்களாக மக்கள் நல்வாழ்வை நடத்தமுடியும் என அது சொல்லிக்கொடுக்கிறது. சமூகமாற்றத்தில் நம்பிக்கைவைத்து செயலாற்றும் ஒவ்வொருவருக்கும் காந்தி தந்த செய்தி ‘Turn the searchlight inward’. சகோதரிக்கு லெனின் லெனின் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்கள் அவரின் நூல்தொகைகளில் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளது. வால்யூம் 37. ஆர்வமுள்ளவர்கள் 750 பக்கங்களுக்கு மேலாக உள்ளவற்றை பார்க்க படிக்க முடியும். அவர் அக்டோபர் புரட்சியின் ஆண்டுகளில் 1917ல் எத்தகைய மனநிலையில் இருந்தார் என்பதை இக்கடிதங்கள் வழி அறிய இயலுமா என்பதற்காகவே அதை பார்க்க எண்ணினேன். 1. நவம்பர் 26 1916ல் அவர் ஜூரிச் சுவிட்ஜர்லாந்திலிருந்து சகோதரி மரியா உலியானாவிற்கு எழுதிய கடிதத்தில் நாவல்கள் அனுப்பியமைக்கு நன்றி. இங்கு மாறுதல் ஏதும் இல்லை. விலைவாசி மிக அதிகமாக இருக்கிறது. 869 பிராங்க்ஸ் ( 500 ரூபிள்ஸ்) வந்தது. நன்றி. இங்கு ருஷ்யா தினசரிகள் கிடைப்பதில்லை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பேப்பர்களை நீ படித்துவிட்டு இறுக்கமாக கட்டி எனக்கு பார்சல் போடு. மூன்று புத்தகங்கள் மொழிபெயர்ப்பிற்குரிய பதிப்பாளர் பதில்தரவில்லை. எனது அன்பு முத்தங்கள். 2. பிப்ரவரி 15, 1917ல் சகோதரிக்கு கடிதம் எழுதுகிறார். அதில் எனக்கு இன்று 808 பிராங்க் அசாவ்- டன் வங்கி வழியாக வந்துள்ளது. ஜனவரி 22ல் 500 பிராங்க் வந்தது. இந்தப்பணம் என்னப் பணம் என்பது குறித்து எழுது. நான் கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். நட்யா ( துணைவியார்) உனக்கு ஏதாவது பென்ஷன் வரத்துவங்கி விட்டதோ என கேலி செய்கிறாள். இங்கு கடுமையான விலைவாசி வாட்டுகிறது. என் உடல்நிலை காரணமாக அதிகமாக பணியாற்ற முடியவில்லை. நான் இப்பணத்தை செலவு செய்ய அஞ்சுகிறேன். நீ அனுப்பிய மூன்று ( ருஷ்ய) புத்தகங்கள் வந்துவிட்டன. நன்றி இங்கு மாறுதல் ஏதுமில்லை. அமைதியாக காலம் கழிக்கிறோம். நட்யாவிற்குத்தான் தனிமை தெரிகிறது. குளிர் கடுமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அநேக முத்தங்கள். 3. அடுத்த கடிதம் தன் சகோதரி அன்னாவின் கணவரான மார்க் டிமோபெயவிச் அவர்களுக்கு பிப்ரவரி 18 அல்லது 19 அன்று எழுதப்பட்டிருக்கலாம் என தொகுப்பில் குறிப்பிடுகின்றனர். அக்கடிதத்தில் நட்யா ருஷ்யா இலக்கியத்தில் காணப்படும் இடைவெளி ஒன்றை சரி செய்திட Pedagogical Dictionary or Encyclopaedia எடிட் செய்ய விழைகிறார். அது நல்ல செயல் மட்டுமல்ல, வருவாய் நல்கும் பணியாக இருக்கும் ( useful work and will provide income). என்சைக்ளோ நன்றாக வந்துவிட்டால் பல பதிப்புக்களைக் காணும். கற்பிக்கும் கலை குறித்து நட்யா பல ஆண்டுகளாக உழைத்துவருகிறாள். ஜூரிச்சில் உலகத்தரம் வாய்ந்த இதற்குரிய அருங்காட்சியகமும் இருக்கிறது. இதற்காக எந்த முதலாளியையும் தேடாமல் நாமே கொணர முயற்சிப்போம். அது இலாபகரமாக அமையும். அது ஒத்துவராது என நீங்கள் கருதினால் மாற்றுவழி ஒன்றை யோசிக்கலாம். கவனம் தேவை. இத்திட்டம் எவராலும் களவாடப்பட்டுவிடக்கூடாது. பதிப்பகத்தாருடன் நட்யா எடிட்டர் பெயரில் ஒப்பந்தம் செய்யவேண்டும். பல பதிப்பாளர்கள் இலாபம் முழுக்க எடுத்துக்கொண்டு ஆசிரியரை அடிமையாக்கிவிடுகிறார்கள். இத்திட்டம் குறித்து கவனமாக பரிசிலீக்கவேண்டுகிறேன். விரிவாக எழுதுங்கள். வெற்றி எனத்தெரிந்தால் உடன் தந்தி மூலம் தெரிவியுங்கள். நட்யா வேலையை ஆரம்பிப்பார். வாழ்த்துகள். 4. அடுத்த கடிதம் ஆகஸ்ட் 1917ல் எழுதியிருக்கலாம். தேதி குறிப்பிடப்படவில்லை. சகோதரிகள் மரியா, அன்னாவிற்கு இக்கடிதம் ஹெல்சிங்கியிலிருந்து எழுதப்பட்டுள்ளது. அதில் எனது வாழ்த்துகள். நான் செளகரியமாக இருக்கிறேன். ‘அரசு’ என்பது குறித்து தீவிரமாக ஆர்வம் காட்டிவருகிறேன். எனது அறிவுரையை ஏற்று மருத்துவ சிகிட்சைக்கு செல். கால்களையும் நரம்பு பிரச்சினையும் சரி செய்து கொள். ஏதாவது நாவலை எடுத்துச் செல். இல்லையெனில் மொழிபெயர்ப்பை பார். அப்போது சிகிட்சை காலத்தில் ‘போர் அடிக்காது’. உன்னை அன்புடன் தழுவிக்கொள்கிறேன். 5. அடுத்தக்கடிதம் மரியாவிற்கு செப்டம்பர் 1917ல் எழுதப்பட்டுள்ளது. அதிலும் அவரின் உடல்நலம் குறித்த அக்கறையை லெனின் தெரிவித்தே எழுதுகிறார். உடல்நிலை தேறிவந்தவுடன் உனக்கு வேலை காத்திருக்கிறது. கட்சி காங்கிரஸ் என்பது கூட நல்ல சப்ஜெக்ட்தான். அதன் தொடர்பான மினிட்ஸ் மட்டுமல்ல பல சிறு வெளியீடுகளும் இருக்கலாம். எனக்கு சரியாக நினைவில் இல்லை.. நீ எழுதிவிட்டால் நகலை அனுப்பு. நாம் விவாதிக்கலாம். உன்னை அன்புடன் தழுவுகிறேன். அடுத்து நமக்கு கிடைக்கும் கடிதங்கள் 1919ல் எழுதப்பட்டவையாக இருக்கின்றன. 1918ல் உறவினர்களுக்கானவை என ஏதும் காணப்படவில்லை. 6. 1919 ஜூலையில் அவர் தனது துணைவியார் கிருப்ஸ்காயாவிற்கு எழுதுகிறார். அன்புள்ள நட்யா, மாலடொவ் மூலம் தான் உனக்கு heart attack என அறிந்துகொண்டேன். நீ அதிகமான வேலையை தவிர்த்து ஓய்வெடுக்க வேண்டும். டாக்டர்களின் சொல்படி நடக்கவேண்டும். உனது பயணம் விடியற்காலை 3 மணிக்கு என மாலடோவ் தெரிவித்தார். குளிர்காலத்தில் உன்னால் பணியாற்ற முடியாமல் போய்விடும். வேலையை குறைத்துக்கொண்டு ஓய்வெடு. கல்வி அமைச்சகம் குறித்து நான் உனக்கு தந்தி அனுப்பியுள்ளேன்.. கிழக்குப் பகுதி அற்புதமாகிவருகிறது. தென்பகுதியில் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. நன்றாக மாறவேண்டும். கார்க்கியை உன்னுடன் அனுப்ப முயற்சித்தேன். முடியவில்லை. கோர்கி பகுதியில் நான்கு நாட்கள் நல்ல ஓய்வுடன் இருந்தேன். உன்னை அன்புடன் தழுவி முத்தம் தருகிறேன். ஓய்வெடு. 7. அடுத்தக்கடிதம் 1919 அல்லது 1920ல் எழுதப்பட்டிருக்கலாம். மாதம், நாள் தெரியவில்லை. சகோதரி , துணைவியாருக்கு எழுதப்பட்டுள்ளது. விடியற்காலை மணி 4.30 ஆகிறது. தூங்கமுடியவில்லை. இனி படுக்கைக்கு செல்லவேண்டும். ஆனால் நீங்கள் என்னை காலை 10 மணிக்கு பின்னரும் தூங்கவிட்டுவிடாதீர்கள் எழுப்பவில்லையெனில் நாள் வீணாகிவிடும். அது ஆட்சிக்கு உகந்ததாகாது. ( இக்கடிதங்களின் ஆங்கில வாசகங்களை வால்யூம் 37ல் பக்கங்கள் 535-547 களில் பார்க்கலாம்) ஆசிரியரின் பிற நூல்கள் […] 1. மார்க்சியத் தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ideas of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 10. காந்தியைக் கண்டுணர்தல் 11. நேருவின் மரபு 12. பெரியாரின் பொதுவுடைமை புரிதல் 13. அம்பேத்கரும் கம்யூனிசமும் 14. தோழர் காந்தி மகாத்மாவின் சோசலிச உரையாடல் சிறு வெளியீடுகள் 1. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 2. சிகாகோ மேதின தியாகிகள் 3. பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிசமும் 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 5. பிரடரிக் எங்கெல்ஸ் நட்பின் சிகரம் 6. நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் 7. காந்தியும் கம்யூனிசமும் 8.வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் 9. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் (என் எளிய வாசிப்பில்) www.pattabiwrites.in FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.