[] []   லலிதாம்பாள் சோபனம் கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com    மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com      உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அட்டைப்படம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com               பொருளடக்கம் நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 5  சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்!  1 7  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 2 10  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம், 3 15  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 4 23  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 5 33  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 6 45  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 7 57  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8 70  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9 80  ஸ்ரீலலிதையின் சோபனம் தொடர்ச்சி அம்பிகையின் பெருமை! 93  ஸ்ரீலலிதையின் சோபனம்! கந்தன் பிறப்பு! 103  ஸ்ரீலலிதையின் சோபனம்! சிந்தாமணி க்ருஹ வர்ணனை! 114  ஸ்ரீலலிதையின் சோபனம்! அம்பிகையின் இருப்பிடங்கள்! 126  ஸ்ரீலலிதையின் சோபனம்! சோபனம்! சோபனம்! மங்களம்! 137  உதவிப் புத்தகங்கள்:  149  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 151  கணியம் அறக்கட்டளை 157  தொலை நோக்கு – Vision 157  பணி இலக்கு  – Mission 157  தற்போதைய செயல்கள் 157  கட்டற்ற மென்பொருட்கள் 157  அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள் 158  வெளிப்படைத்தன்மை 159  நன்கொடை 159  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்  இது 2010 ஆம் வருஷம் எழுதினது.இதை மரபு விக்கியிலும் இணைத்திருந்தேன்.   இதை மரபு விக்கியில் பார்த்துவிட்டு என் மதிப்புக்குரிய சகோதரர் திரு வரகூர் நாராயணன் அவர்கள் இதைத் திரும்பவும் இந்த நவராத்திரியில் போடும்படி கேட்டுக் கொண்டார்கள். அதன்படி திரும்பப் போடுகிறேன். இதற்காகச் சில மேல் விபரங்களைத் தேடினால் கூகிளில் Vedhichomas  என்னும் வலைத்தளத்தில் "ராமச்சந்திரன்" என்பவர் "சந்துரு" என்னும் பெயரில் இதில் சில மேல் விபரங்களையும் என்னோட தனிப்பட்ட விபரங்களை எடுத்துக் காட்டும் வார்த்தைகளையும் நீக்கிவிட்டுப் போட்டிருக்கார். உடனே அந்தத் தளத்திற்கு ஒரு மெயில் கொடுத்துக் கேட்டதற்கு இன்று வரை பதில் வரவில்லை! இது மாதிரிப் பல பதிவுகள் இப்படித் தான் பலரால் திருடப்படுகிறது. குறைந்த பட்சமாகப் பெயரையாவது கீதா சாம்பசிவம் எழுதினது எனக் கொடுத்திருக்கலாம். :( vedhichomas இதிலே எஸ்.ராமச்சந்திரன், சந்துரு என்னும் பெயரில் காப்பி செய்திருக்கிறார்.   2015 ஆம் வருஷம் Face Book முகநூலில் ஒருவர்  அத்வைதம் என்னும் பெயரில் இதைக் காபி செய்திருக்கிறார். இது 2017 ஆம் ஆண்டில்!  நானும் முகநூலில் பத்து வருஷமாக இருந்தும் எனக்கும் தெரியவில்லை. யாரும் பார்த்துச் சொல்லவும் இல்லை. :( ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதைத் தவிர்த்துப் பெண்மை என்னும் தளத்தில் என்னுடைய பெயரிலேயே வெளியிட்டிருக்கின்றனர்.  பெண்மை பெண்மையில் 2016 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கின்றனர்.  இதிலே என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி. ஆனால் இதைப் போலவே என்னோட சிதம்பர ரகசியம் தொடர், பிள்ளையார் பற்றி எழுதிய நெடுந்தொடர், சுமங்கலிப் பிரார்த்தனை, கல்யாணங்கள் பற்றி எழுதியவை என அனைத்துமே காப்பி செய்யப்பட்டு உரிய காலத்தில் எனக்கு நண்பர்களால் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களைக் கேட்டும் இன்று வரை பதில் இல்லை! :( போகட்டும். இது முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பில் எழுதப்பட்ட பதிவு.  சோபனம், சோபனம் 2010 ஆம் ஆண்டு நான் எழுதியவற்றின் சுட்டிகள் சோபனம், சோபனம்  இது கடைசிப் பதிவு. அக்டோபரில் ஆரம்பித்து டிசம்பர் வரை சுமார் 26 பதிவுகள் எழுதி அனைத்தையும் மரபு விக்கியிலும் நானே ஏற்றினேன். பெண்மையில் என்னைக் கேட்கவில்லை என்றாலும் குறைந்த பட்சமாக என்னுடைய பெயரையாவது போட்டிருக்காங்க. மத்தவங்க! :((((( [] படத்துக்கு நன்றி கூகிளார்!   சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்!  1 மங்களமான லலிதாம்பாள் சோபனம் மங்களமுண்டாகப் பாடுகிறோம் ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி எங்கட்கு முன்வந்து காப்பாமே முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும் மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும் நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன் நாதர் காமேசருங்காப்பாமே! போன வருஷம் அம்பிகையின் நவதுர்கா ரூபத்தையும், அவளின் படைத் தளபதிகளான சப்தமாதர்களையும் பார்த்தோம். இப்போது கொஞ்சம் தேவியின் புராணத்தைப் பார்ப்போமா?? மஹாவிஷ்ணுவைப் போல தேவிக்கும் பத்து அவதாரங்கள் என்பார்கள். இதன் காரணம் தெள்ளத் தெளிவானது. தேவியின் ஆண் அம்சமே விஷ்ணு. நம்மைப் போன்ற பாமரர்களின் செளகரியத்திற்காக விஷ்ணுவின் சகோதரி தேவி வைஷ்ணவி என்கிறோம். உண்மையில் ஆதி பராசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியது, அனைவரும் தோன்றினார்கள் என்பது சாக்தர்களின் தீவிர நம்பிக்கை. அதனாலேயே அவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ என்னும் அடைமொழியைச் சேர்த்து ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் என்று அழைக்கப்படுவதாய்ச் சொல்கின்றனர். அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு. மோகினியையும் அம்பிகையின் இன்னொரு அவதாரமாகவே சாக்தர்கள் பார்க்கிறதாய்ச் சிலர் கூற்று. தேவியை உபாசித்தவர்களில் தலை சிறந்தவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தன், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் ஆவார்கள். இத்தனைபேர் தேவியை ஆராதித்த பெருமையைச் சுட்டும் விதமாகவே மஹாவிஷ்ணு, தேவியைப் போலவே அனைவர் மனமும் மகிழும் வண்ணம் மோகினி அவதாரம் எடுத்தார் எனச் சொல்லுகின்றனர். ஈசனால் எரிக்கப் பட்ட காமன் என்னும் மன்மதன் தேவியின் கருணா கடாக்ஷத்தாலேயே அநங்கனாக மாறி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான வடிவும், அழகும் நிரம்பிய சூக்ஷ்மதேகத்தைப் பெறுகின்றான். இதையே லலிதா சஹஸ்ரநாமமும் “ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவ-நெளஷதி: என அம்பிகையைப் போற்றுகிறது. ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்சீவனி மருந்தாக அம்பிகை இங்கே செயல்பட்டிருக்கிறாள் என்பதே இதன் பொருள். அந்த மன்மதனுக்கும் கரும்பு வில் தான். அம்பிகையான காமாக்ஷிக்கும் கரும்பு வில்தான். அநங்கனுக்கும் புஷ்ப பாணங்கள். அம்பிகைக்கும் புஷ்ப பாணங்கள். ஆனால் ஒரு மாபெரும் வேற்றுமை என்னவெனில் மன்மதனின் அம்புகளால் சிற்றின்பமாகிய காமத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மைக் கடைத்தேற்றுவதே அம்பிகையின் கரும்பு வில்லுக்கும், புஷ்ப பாணங்களுக்கும் முக்கிய வேலையாகும். நம் மனதைக் கட்டுப்படுத்திக் கட்டுக்குள் வைக்க அம்பிகையின் அருள் உதவி புரிகின்றது. அம்பிகையின் கடாக்ஷம் நமக்கு மோக்ஷ மார்க்கத்தைக் காட்டி, சிவனோடு ஒன்றுபட உதவுகிறது. மானுட வர்க்கத்தின் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இங்கே கரும்பு வில் நம் மனதை உருவகப் படுத்துகிறது. பாணங்கள் ஐந்தும் ஐந்து தன்மாத்திரைகள் ஆகும். நம்முடைய ஆசையை அம்பிகை தன் இடமேல்க்கரத்தில் பாசாங்குசமாக வைத்திருக்கிறாள். நம்முடைய கோபத்தை அடக்கும் அங்குசத்தை வலமேல்க் கையில் வைத்திருக்கிறாள். இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகையை வணங்கித் துதிப்பவர்கள் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் அடிமையாக மாட்டார்கள் என்பது சாக்த வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். இத்தகைய காமாக்ஷியைத் துதித்து அகஸ்தியர் தவம் இருக்கிறார் தன் மனைவி லோபாமுத்திரையுடன். அப்போது அவர் முன்னால் ஹயக்ரீவர் சங்கு, சக்ரதாரியாகக் கையில் புத்தகத்துடன் தோன்றினார். “ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும் அகிலலோகம் சஞ்சரிப்பவரும் ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில் ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார். சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும் தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய் தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன் தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்! தன்மாத்திரை என்னவென நினைப்பவர்களுக்காக: சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் இவை ஐந்தும் தன்மாத்திரை எனப்படும். மேற்கண்ட லலிதாம்பாள் சோபனம் பாடல் தொகுத்து அளித்திருப்பது சகோதரி சுப்புலக்ஷ்மி ஆவார்கள். (சேவாசதன்) இவரைப் பற்றிய ஒரு குறிப்புக் கடைசி நாளில் வரும். நவராத்திரி பூஜைகள் ஆரம்பமானதும் முதல்  நாளைய பூஜைக்கான முறைகள் கீழே கொடுக்கப்படுகின்றன. கொலு வைப்பவர்கள் அமாவாசையன்றே வைக்க வேண்டும். இன்றைய தினம் வீட்டில் சமைப்பதே கொலுவிற்கும் ஆராதிக்கலாம். நாளை முதல் கொலு/நவராத்திரி பூஜைகள் ஆரம்பிப்பதால் கொலுவின் நிவேதனம் இருவேளையும் தனி!  நவராத்திரி முதல்  மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும். ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.   நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்  2 சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 2 முதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் நான் புரிந்து கொண்டவை சரியா எனப் பார்த்துத் தப்பானவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். அதோடு நடு நடுவே வரும் புராணக் கதைகளை விளக்கும்படி இருக்கும். ஆகவே பல நாட்கள் ஆகும். நவராத்திரிக்குள் முடியாது என்பதால் தேவியின் புராணத்தைச் சுருக்கமாகவே தரப் போகிறேன். “ஆதியந்தம் பராசக்திக்கில்லை ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான் ஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம் சொல்ல முடியாதொருவராலே ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம் முன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்க முதல் வந்தாள் ஒரு ரூபம்- சோபனம் சோபனம்! எப்போது தோன்றினாள் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பழையோள் ஆன பராசக்தியே இந்த ஜகத்துக்கு ஆதாரம். நாம் அனைவரும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களே. அவளுடைய ரூபங்களையும் அவள் எடுத்திருக்கும் வடிவங்களையும் அவதாரங்களையும் சாமானிய மானுடர்களான நமக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இவளே மஹா மாயை, அதனால் பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாகிறாள். இவளே ஸ்ரீஹரியின் யோக நித்திராதேவி. அதனாலேயே அவளால் இவ்வுலகம் மயக்கப் படுகிறது. சேதனமும் அவளே, அசேதனமும் அவளே! அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து! என்றுமுள்ளவள். ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரி அவளே! உலகே அவள் உருவான புவனேஸ்வரியும் அவளே. தேவர்களின் காரிய சித்திக்காக அவள் எப்போது ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது அவள் இவ்வுலகில் உற்பவித்ததாய்ச் சொல்லப் படுகிறது. “சிதக்னி-குண்ட-ஸம்பூதா-தேவ காரிய –ஸமுத்யதா” என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமாவளி. அப்படி ஒரு கல்பமுடிவில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையில்போது தோன்றிய இரு அரக்கர்கள் மதுகைடபர்கள் என்ற பெயருள்ளவர்கள். உக்கிர வடிவோடு தோன்றிய அவ்விரு அசுரர்களும் பிரம்மாவையும் கொல்ல முயல, அவரோ உலகநாயகியான தேவியைத் துதித்தார். அழிவற்ற, நித்தியமான, ப்ரணவஸ்வரூபியான தேவியை, அம்ருத ரூபிணி, அவளே ஸ்வாஹா, அவளே ஸ்வதா, அவளே ஸந்தி, அவளே சாவித்ரி, அவளே காயத்ரி என்றெல்லாம் துதித்தார். திருப்பாற்கடல் தன்னில் ஸ்ரீஹரியும் சேஷ சயனத்தில் பள்ளி கொண்டார் மஹாவிஷ்ணுவின் கர்ணங்களிலிருந்து  மதுகைடபர் இருவர் உண்டானார்-சோபனம், சோபனம் விழித்துப் பார்த்தங்கே பிரம்மாவை அவர்கள்  முஷ்டியுத்தம் பண்ண வந்தெதிர்த்தார் அயனுங்கண்டு பயந்து கொண்டு ஸ்ரீ ஹரியை வந்து நமஸ்கரித்தார். நினைவு தெரியாது விஷ்ணுவுமப்போ நித்திரையின் வசப்பட்டிருந்தார் அம்மா தேவி நித்திராமோஹினியே பொல்லா அஸுராள் பயத்தால் ஹரியிடம் வந்தேன் மோஹினியே ஜகன்மாதாவே மஹாவிஷ்ணுவை  விட்டு வெளியேறம்மா- சோபனம், சோபனம் என்று லோக மோஹினி மஹிமைதனைச் சொல்லி நான்கு முகவரும் ஸ்தோத்தரிக்க பகவானுடைய சரீரத்தினை விட்டுப் (தேவி) பிரத்யக்ஷமாக எதிரில் வந்து வேண்டும் வரத்தைக் கொடுத்துப் பிரம்மாவுக்கு விச்வமோஹினியும் மறைந்தாள்.-சோபனம், சோபனம் மஹாவிஷ்ணு நித்திராதேவி தன்னை விட்டு அகன்றதும் கண் விழித்துப் பார்க்கவும் மதுகைடபர்களைக் கண்டு அவர்களோடு போர் புரிந்தார். பல்லாண்டுகள் போர் புரிந்தும் அவர்களை அவரால் கொல்ல முடியவில்லை. மதுகைடபர்கள், விஷ்ணுவிற்கு வரங்கள் அளிப்பதாயும், வேண்டும் வரங்களைக் கேட்குமாறும் கூற, அவரும் அவர்கள் இருவரும் தம்மால் கொல்லப்படவேண்டுமேயன்றி வேறு வரங்கள் தேவையில்லை என்றார். பிரளய மஹாகாலமான அந்தக் கால கட்டத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்க வேண்டிய வேளையில் இவர்கள் இருவரையும் ஒடுக்கவேண்டியே மஹாவிஷ்ணு பிரயத்தனப் பட்டார். எங்கும் நீர்ப்பிரவாகமாய் இருக்கக்கண்ட மதுகைடபர்கள் பூமியானது தண்ணீரில் முழுகாமல் இருக்கும் இடத்தில் தங்களைக் கொல்லுமாறு கூற, மஹாவிஷ்ணுவும் அவர்களைத் தம் தொடையில் இருத்திக்கொண்டு சக்கரத்தால் கொன்றார். இவ்வாறு பிரம்மாவால் துதிக்கப் பெற்ற யோக நித்திராதேவி தானாகவே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு மஹாவிஷ்ணுவின் மூலம் மதுகைடபர்களை பிரளயத்தில் ஒடுங்கச் செய்தாள். ஆதி சக்தியானவள் தன்னிடமிருந்த முக்குணங்களின் மூலம், மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹாகாளி, ஆகிய மூன்று வடிவங்களைத் தோற்றுவிக்கிறாள். பிரம்மபத்தினியாகச் சொல்லப் படும் சரஸ்வதி வடிவத்திற்கும் இவளுக்கும் வேறுபாடு உண்டு. இவள் பராசக்தியின் வடிவினின்று வேறுபட்டவள் அல்ல. இந்த ஆதி மஹாசரஸ்வதியே ஆதி பராசக்தி, ஆதிலக்ஷ்மி ஆவாள். இதையே லலிதா சஹஸ்ரநாமாவளியும், ஸ்ருஷ்டிகர்த்தா, பிரஹ்மரூபி, கோப்த்ர்யை, கோவிந்த ரூபிண்யை, சம்ஹாரிண்யை, ருத்ரரூபாயை, திரோதான கர்யை, ஈஸ்வர்யை என்றெல்லாம் கூறுகிறது. இந்த மதுகைடப வதத்திற்கு அடுத்து வரப்போவது மஹிஷாசுர வதம். நவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை  திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.      பெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை  ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும்.  மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள். ஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம். அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.      நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம், 3 அ+உ+ம= ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம=உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும், “உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம்(அழித்தல்), திரோதானம்(மறைத்தல்), அனுகிரஹம்(அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,, “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. இப்போ மஹிஷாசுரனைப் பத்திப் பார்ப்போமா?? மஹிஷாசுரன் வாங்கிய வரங்களைக் கொண்டு நல்லாட்சி நடத்தாமல் அனைவரையும் துன்புறுத்தியே வந்தான். அவனுடைய அசுர வலிமையால் இந்திரலோகத்தில் இருந்து இந்திரனை விரட்டிவிட்டு மஹிஷாசுரன் தானே இந்திரன் என அறிவித்துக்கொண்டான். மேலும் திக் தேவதைகளின் அதிகாரங்களையும், சூரிய, சந்திரர்களைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தான். ஆகவே மூவுலகிலும் நியதிகளில் மாறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அவனுடைய கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகவே அனைவரும் ஈசனைச் சரண் அடைந்தனர். ஈசன் இது தேவி ஒருத்தியாலேயே நிகழக்கூடிய ஒன்று எனக் கூறித் தன் சக்தியில் இருந்து ஒரு மாபெரும் ஒளிப்பிழம்பைத் தோற்றுவித்தார். அவ்வாறே பிரம்மா, விஷ்ணுவும் அவரவர் சக்தியை ஒளிப்பிழம்பாய்த் தோற்றுவிக்க மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்தது. இதைக் கண்ட தேவாதி தேவர்கள் தங்கள் பங்கும் இந்த நற்காரியத்திற்கு வேண்டும் என உறுதி கொண்டு அவரவர் சக்தியை வெளிப்படுத்த அனைத்தும் சேர்ந்து கோடி சூரியப் பிரகாசத்தைவிடவும் அதிகப் பிரகாசம் கொண்டதொரு ஜோதி ஸ்வரூபமாய் மாறி தனக்கு உவமையற்றதாய் விளங்கியது. ஒன்று சேர்ந்த அந்த ஜோதி ஒரு பெண்ணுருக் கொண்டது. ஈசனின் முகத்து ஒளியானது அந்தப் பெண்ணின் முகமாகவும், விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும், யமனின் ஒளியால் கேசமும், சந்திரனுடைய காந்தியால் மார்புகளும், இந்திரனுடைய காந்தியால் இடையும், வருண காந்தியால் தொடைகளும், முழங்கால்களும் தோன்றின. பூமியின் ஒளியானது பிருஷ்ட பாகமாய் மாறிற்று. பிரம்மாவின் ஒளியால் பாதங்கள், சூரிய ஒளியால் கால்விரல்கள், வசுக்களின் ஒளியால் கைவிரல்கள், குபேரனின் காந்தியால் மூக்கு, பிரஜாபதியின் ஒளியால் பல்வரிசைகள், அக்கினியின் ஒளியால் முக்கண்கள், சந்தியைகளின் ஒளியால் இரு புருவங்கள், வாயுவின் ஒளியால் காதுகள் தோன்றிற்று. மற்ற தேவர்களின் ஒளியால் மங்கள ஸ்வரூபமான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது. பரமசிவன் திரிசூலத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட ஒரு சூலத்தை அம்பிகைக்குக் கொடுக்க, விஷ்ணுவும் தன் சுதர்சனத்தில் இருந்து மற்றொரு சக்கரத்தை உண்டாக்கி அம்பிகைக்கு அளித்தார். வருணன் சங்கமும், அக்னி சக்தி ஆயுதமும் வாயு வில்லையும் பாணங்கள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அளிக்க, இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தையும், ஐராவதத்தில் இருந்து தோன்றிய மணியையும் அளிக்கிறான். யமனின் கால தண்டத்திலிருந்து ஒரு தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரஜாபதி அக்ஷமாலையையும், கமண்டலுவையும் அளித்தனர். சூரியனின் கிரணங்களால் அவள் உடலின் காந்தி ஒளிவிட்டுப் பிரகாசித்தது. காலன் சுத்தியையும், கேடயத்தையும் அளிக்க, பாற்கடலரசன் ஹாரத்தையும் எப்போதும் புதிதான வஸ்திரங்களையும் கொடுக்கிறான். இவ்வாறே மற்ற தேவர்களும் ஒப்புயுர்வற்ற ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளிக்கின்றனர். விஸ்வகர்மா பிளக்கமுடியாத கவசங்களையும், ஹிமவான் சிம்ம வாகனத்தையும் நவரத்தினங்களையும் அளிக்கிறான். ஆதிசேஷன் நாகஹாரத்தைக் கொடுத்தான். தேவி அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள். இவ்வாறு உபசாரங்கள் செய்யப் பட்டதில் மனம் மகிழ்ந்து சிம்ம வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் “அட்டஹாசம்” என்னும் சிரிப்பைத் தர அண்டசராசரமும் நடுங்கியது. தேவர்கள் ஜயகோஷம் எழுப்பினர். மஹிஷனை வதைக்க தேவி கிளம்பினாள். மஹிஷ அசுரன் என்னும் ஒருத்தன் தபஸுமிகப்பண்ணி வரமடைந்தான் ஜகத்திலுள்ளோரை உபத்திரவிக்க அஸுரன் தேவர்கள் ரிஷிகளெல்லோருங்கூடி, கைலாசத்திற்கு ஓடி வந்தெல்லோரும் அறிவித்தாள் மஹாதேவருக்கும் சிவனுடைய ஸந்நிதியில் நின்று  தேவி மஹிமை சொல்லி ஸ்துதித்தாள். தேவாளுடைய முகத்திலிருந்தம்மன் தேஜோரூபமாய் ஒன்று சேர்த்து அத்தனை பேர்களின் தேஜசைக் கிரஹித்து அம்மன் பிரத்தியக்ஷமாக வந்தாள் அத்தனை தேவர்களும் பணிந்து தங்கள் ஆயுதமும் தேவி கைகொடுத்தாள் பக்தியாய் ஆயுதமுங்கொடுக்க அம்மன் பதினெட்டுக் கையிலும் தரித்துக்கொண்டு, சிம்ஹவாஹனத்தில் ஏறிக்கொண்டாள் மஹா தேவியும் யுத்தம் பண்ண வந்தாள் மஹிஷாஸுரனும் தேவியுமாய் மஹா ஆங்காரமாய் யுத்தம் பண்ணலுற்றார். [] மகிஷாசுரமர்த்தினி! தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெரிதாகப் பூஜை, ஜபம், ஹோமம்னு எல்லாம் அமர்க்களமாய் எதுவும் செய்யவேண்டாம். ஒருமித்த மனதோடு தேவியின் நாமஸ்மரணை பண்ணினாலே போதும் என செளந்தர்ய லஹரியின் 23-ம் ஸ்லோகம் கூறுகிறது. தேவியை பவனாகிய ஈசனின் மனைவி என்ற பொருளில் பவானி என அழைக்கின்றனர். ஆனால் சம்ஸ்கிருத மொழியில் விளங்கும் பல பொருள் கொண்ட சிறப்பின் படி, பவாநீ என்பது,”நான் அப்படியே ஆவேன்” என்னும் பொருள் கொண்ட வினைச்சொல்லாகவும் எடுத்துக்கொள்வார்கள் சாக்தர்கள். தேவியைப் பூரணமாக ஒருமித்த மனதோடு வழிபடும் சாக்தர்கள் “நீயாகவே நான் ஆகின்றேன்” என்று உணர்கின்றான். இதை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ந்திருக்கிறார். அம்பாளை வழிபடும் சக்தி உபாசகர் ஆன அவர் அச்சமயங்களில் தானும் புடைவை உடுத்திக்கொண்டு ஒரு பெண்ணைப் போலவே முக்கியமாய்த் தானே அம்பாள் ஆனதாகவே உணர்ந்திருக்கிறார். தேவியை வழிபடுபவர்களுக்குத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய அத்தகையதொரு சாயுஜ்ய பதவியை தேவி அளிக்கிறாள். இப்போ மஹிஷனுக்கு என்ன ஆச்சுனு பார்ப்போமா? அநேக காலம் மஹிஷன் தேவியுடன் அஞ்சாமலே யுத்தம் செய்து நின்றான் மாய்கையினால் பல ரூபமெடுத்தவன் மஹாதேவியுடன் யுத்தம் செய்தான் காளிரூபமெடுத்துக்கொண்டு தேவி கைதனில் சக்ராயுதமுங்கொண்டு மஹிஷரூபமெடுக்கும் போதவனை  மடிய வெட்டினாள் மாதேவியும் தேவியோடு யுத்தம் செய்ய வந்த மஹிஷன் தனக்கு உதவியாக எண்ணற்ற அசுரப் படைகளைக் கொண்டு வந்ததோடு அல்லாமல், பலவிதமான ஆயுதங்களையும் கொண்டு தேவியோடு யுத்தம் செய்தான். வாளை வீசிக்கொண்டு சண்டிகையைக் கொல்ல முயன்ற அசுரர்களைச் சண்டிகை வதம் செய்தாள். தேவியின் வாஹனமான சிம்ஹமும் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு யுத்த களத்தில் பாய்ந்தது. அம்பிகையின் பெருமூச்சினாலேயே அசுர சேனாபலம் குறைந்து வந்தது. கதையாலும், சூலத்தாலும் தாக்கப்பட்டனர். அம்புகள் முட்களைப் போல் உடலெங்கும் பாய்ந்து உயிரை விட்டனர் பலர். தேர்களும், யானைகளும், குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமியெங்கும் கால் வைக்க முடியாமல் இருந்தது. எங்கும் ரத்த வெள்ளம் பாய்ந்தது. அசுர சேனையின் தோல்வியைக் கண்டு தேவர்கள் விண்ணிலிருந்து புஷ்பமாரி பொழிந்து தேவியைத் துதித்துப் பாடினார்கள். தன் சேனையின் தோல்வியைக் கண்ட மஹிஷாசுரன் தேவியைத் தன் வாளால் வெட்ட எண்ணி அவளை அடிக்க அவளின் புஜத்தில் பட்டு வாள் பொடிப் பொடியாய் ஆயிற்று, பின்னர் சூலத்தையும் ஏவினான். பின்னர் எருமை உருவிலேயே வந்து அனைவரையும் தன் கொம்புகளாலும், வாலாலும், குளம்புகளாலும் தாக்க ஆரம்பித்தான். அனைவரையும் வாலில் சுருட்டி வீசி பூமியில் எறிந்தான். தேவியை நோக்கிக் கோபத்துடன் கர்ஜனை செய்தான். பூமி நொறுங்க, கடலும் கரை புரண்டு பூமிக்குள் புகுமோ என்னும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும், மண்ணுக்குமாய் ஆரோகணித்து நின்றான் மஹிஷாசுரன். சண்டிகை கோபத்துடன் அவனைக் கொல்ல முயல, அவன் சிங்க உரு, மானிட உரு, யானை உரு எனத் தன் மாயையால் பல உரு எடுத்தும் தேவி அவனை விடாது துரத்திக் கொல்ல முயன்றாள். மீண்டும் எருமை உருவிலேயே வந்து தேவியை முட்டித் தள்ள முயன்றான். தேவி அவன் மேல் பாய்ந்து அவனை வீழ்த்திக் கீழே தள்ளித் தன் கால்களால் மிதித்துக்கொண்டு கைச்சூலத்தால் அவனைத் தாக்கினாள். தேவியின் கால்களில் மிதிபட்ட மஹிஷாசுரன் வாயைப் பெரிதாய்த் திறந்துகொண்டு சுய உருவில் வெளியே வந்து எவ்விதமேனும் தப்ப முயல, அதைக் கண்ட தேவி தன் வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள். மிச்சம் இருந்த அசுரர்கள் எல்லாம் ஓடிச் சிதற தேவர்கள் குதூகலத்துடன் ஆடிப் பாடி தேவியைப் பல வகைகளிலும் துதித்தனர். இங்கே எருமை என்பது அறியாமை என்னும் மெளட்டிகத்தையே குறிக்கும். தத்துவார்த்த ரீதியான இக்கதைகளின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொண்டு அநுபவிக்கவேண்டுமே தவிர, அசுரன் என்றால் கொல்லலாம், தேவர்கள் என்றால் சகாயம் காட்டுவதா என்ற கேள்வி அர்த்தமற்றது. நம் மனத்திலே உள்ள ரஜோ குணம், தமோ குணம் போன்றவைகளால் நாமே சில சமயம் மிகவும் கோபம் கொள்ளுகிறோம். அப்போது என்ன சொல்லுவோம், “என்னைக் கோபப் படுத்தாதே, கோபம் வந்தால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்!” இப்படித்தானே பெரும்பாலும் சொல்கிறோம்? இந்தக் குணமே மஹிஷாசுரனை ஒத்த அசுரர்களைக் குறிக்கும். நம்முடைய அறியாமையால் விளையும் இத்தகைய துர்க்குணங்களையே தேவி வழிபாடு வெட்டி வீழ்த்தும். அதுவும் மஹிஷன் தேவியின் பாதாரவிந்தங்களை அன்றோ சரணடைந்தான்?? அவ்வாறு தேவியின் பாதார விந்தங்களை நாம் சரண் அடைந்தால் அசுரர்களாகிய துர்க்குணங்கள் ஒழிந்து சத்வ குணம் நிரம்பப் பெற்று மானிட நிலையிலிருந்து தேவ நிலைக்கு உயர்த்தப் படுவோம். அதன் பின் படிப்படியாக மேலே உயர்ந்து தேவியின் கிருஹத்தில் அவள் துணையோடு சிவசக்தி ஐக்கிய சொரூபத்தைத் தரிசிக்கலாம். சந்திரகண்டா மூன்றாம் நாளுக்கான தேவி! மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தேவியைத்  துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.        இன்றைய தினம் நான்கு, ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நக்ஷத்திரக் கோலம் போடலாம். அல்லது முத்துக்களால் ஆன மலர்க்கோலமும் போடலாம்.  குழந்தைகள் சாப்பிடுவதால் நிவேதனத்துக்கு கோதுமை மாவினால் ஆன லாடும், சர்க்கரைப் பொங்கலும் செய்யலாம்.  செண்பகப் பூக்கள், மரு, செம்பருத்தி, தாமரை மலர்கள்,  குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம்.  மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்கலாம்.  வெப்பத்தைப் போக்கும் தேவி என்பதால் தயிர் சாதமும் நிவேதனம் செய்யலாம்.  மாலையில் வெள்ளைக்காராமணி அல்லது பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 4 ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான். எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ, சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!” என்று கூறுகிறது. மஹிஷாசுரனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் அவர்களுக்குத் தேவையான சமயம் தான் திரும்பவும் தோன்றுவதாய்க் கூறி மறைகின்றாள். இனி ஸும்ப, நிஸும்பர்களின் வதத்தைப் பார்ப்போம். எல்லா அசுரர்களையும் போலவே ஸும்பன், நிஸும்பன் என்ற இரு சகோதரர்களும் தேவேந்திர பதவியைப் பறித்துக்கொண்டு மூவுலகையும் தங்களுக்குக் கீழே கொண்டு வந்தனர். ஆபத்தில் தன்னை நினைக்குமாறு கூறிச் சென்ற தேவியின் வாக்கு நினைவில் வர, தேவர்கள் இமயத்தை அடைந்து தேவியைத் துதித்தனர். பல்வேறு நாமங்களால் தேவியைத் துதித்துப் போற்றி வழிபட்டனர். தங்கள் கஷ்டங்களைக் களைய வந்திருக்கும் துர்காதேவி எனவும், ஜகத்தின் ஆதாரமும், இயக்கமும் அனைத்துமாக உள்ள தேவிக்கு நம்ஸ்காரங்கள் செய்தும் வழிபட்டனர். அனைத்து உயிர்களிலும் விஷ்ணு மாயை உருவத்தில் இருப்பவளும் அவளே எனக் கூறி வழிபட்டனர். இந்த வழிபாட்டு ஸ்லோகங்கள் அனைத்தும் தொகுக்கப் பட்டு 2008-ம் வருஷத்திய நவராத்திரிப் பதிவுகளில் காணலாம். இங்கே “யாதேவி ஸர்வ பூதேஷூ விஷ்ணுமாயேதி சப்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:” என்று ஆரம்பிக்கும். தேவர்கள் இங்கனம் தேவியைத் துதித்து வருகையில் பர்வத ராஜனின் மகளான பார்வதி அங்கு வந்து தேவர்களைப் பார்த்து, “என்ன?” என்று வினவ, அவளின் உடலில் இருந்து அப்போது மங்கள சொரூபியாக ஒரு பெண் தோன்றினாள். அம்பாளின் சரீர கோசத்திலிருந்து தோன்றிய அவளைக் கெளசிகீ என்பார்கள். சிவந்த அவள் வெளிவந்ததும் பார்வதியான அம்பாள் கறுப்பு நிறமடைந்து காலி(ளி)கை யானாள். கெளசிகீயின் அழகையும் நிறத்தையும் பார்த்து மோகித்தனர் சண்ட, முண்டர்கள் என்னும் அசுரத் தளபதிகள். இவர்கள் சும்ப, நிசும்பனின் படைத்தலைவர்கள். சும்ப, நிசும்பர்களைக் கண்டு கெளசிகீயின் அழகை வர்ணிக்கின்றனர். அவளைப் போன்ற உத்தமமான வடிவை எங்கும் கண்டதில்லை என்றும், அவளை அடையவேண்டியவர்கள் சும்ப, நிசும்பர்கள் தானே தவிர வேறு எவரும் இருக்கமுடியாது எனவும் சொன்னார்கள். அவளுடைய சிவந்த நிறம் உதய சூரியனின் கிரணங்களின் நிறத்தைத் தோற்கடிக்கக் கூடியதாகவும், எட்டுத் திசைகளையும் பிரகாசப் படுத்துவதாயும் இருப்பதாயும், கூறிவிட்டு, அவளுக்கு ஈடு, இணையாக இன்னொரு பெண் மூவுலகிலும் இல்லை என்கின்றனர். விலை மதிக்க முடியாத பல சொத்துக்களை சும்ப, நிசும்பர்கள் பெற்றிருப்பதாயும், அவை அனைத்தும் தேவாதி தேவர்களிடமிருந்தும், பிரம்மா, சமுத்திரராஜன், மற்றும் திக்கஜங்கள் போன்றவர்களிடமிருந்த விலை மதிக்க முடியாத பொருட்களும் சும்ப நிசும்பர்கள் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு உத்தமமான ஸ்த்ரீ ரத்னம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்றும் கூறினார்கள். சும்பன் இதைக் கேட்டுவிட்டு, தன் சபையில் இருந்த அசுரர்களில் சிறந்தவன் ஆன சுக்ரீவன் என்பவனைத் தூது அனுப்புகிறான். (ராமாயண சுக்ரீவனோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்). சுக்ரீவன் தேவியிடம் வந்து தன் இனிமையான சொற்களால் அவள் மனதை மாற்ற முயல்கின்றான். மூவுலகையும் ஆளும் ஈஸ்வரன் சும்பன் ஒருவனே என்றும் தேவர்கள் அனைவரையும் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்திருக்கும் சும்பனைத் தவிர, மற்றவர் யார் எது கூறினாலும் கேட்கவேண்டாம் எனவும் தேவியிடம் கூறுகிறான். இவ்வுலகின் தலை சிறந்த ரத்தினங்கள் அனைத்தும் தன் வசம் வைத்திருக்கும் சும்பனிடமே இந்த ஸ்த்ரீரத்னம் இருக்கவேண்டிய இடம் என்றும் சுட்டிக் காட்டுகிறான். சும்பனைப் பிடிக்கவில்லை எனில் அவன் தம்பி நிசும்பனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்கின்றான். இதை ஆலோசித்துக் கொண்டு சும்பனுக்கோ அல்லது நிசும்பனுக்கோ பத்தினியாக வந்து அடையுமாறு தேவிடம் சும்பன் தெரிவித்ததாய் சுக்ரீவன் கூறுகிறான். தேவி தன் முகத்தில் குமிண்சிரிப்புத் தெரிய, கூறிய பதில் என்னவெனில்:”உண்மைதான், சும்பனும் நிசும்பனும் பராக்கிரமசாலிகள் தான். ஆனால் நான் யாருக்குப் பத்தினியாகவேண்டும் என்பதற்கு ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. அந்தப் பிரதிக்ஞை என்னவெனில் என்னைப் போரில் வெல்லவேண்டும். போரில் என்னை வெல்பவர்களே எனக்குக் கணவன் என முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் சும்பனையோ, நிசும்பனையோ என்னோடு வந்து போர் புரியச் சொல். என்னை ஜெயித்துவிட்டுப் பின்னர் அடையட்டும். “ என்கிறாள். தேவரெல்லாருமாய் ஸ்தோத்தரிக்கத் தேவியும் பிரத்யக்ஷமாக வந்து அஞ்சாதேயுங்கள் நீங்களென்று அபயஹஸ்தங் கொடுத்தாள் தேவருக்கு. ஹிமயபர்வதந்தன்னில் வந்து தேவி கன்னிகாரூபமெடுத்துக்கொண்டு கோகிலம் போலும் குரலுடையாள் கொம்புத்தேன் போலும் மொழியுடையாள் ஹம்ஸம்போலும் நடையுடையாள் அபயங்கொடுக்கும் கரமுடையாள் மன்மதன் கைக்கொண்ட விற்போலுமுள்ள வளைந்த புருவச் சிலையழகும்  முத்துக்கோத்தாற்போல் பல்லொளியும் பவழம் போன்ற அதரங்களும் பட்டமுஞ்சுட்டியும் நெற்றிதன்னில் மின்ன பதக்கம் சரப்பளி மார்பிலசைய, தண்டைசிலம்பு கலகலவென்னக் காலில் சிலம்பு கொஞ்சிச் சலுஞ்சலென்க சொர்ணமயமான ஊஞ்சலில் இருந்து கோடி சூரியர் உதித்தது போல் தங்கத்தினாலான சங்கிலியைத் தொட்டு தானே பாடிக்கொண்டு ஆடலுற்றாள் சுக்கிரீவன் கேட்டு ஸந்தோஷமாய் வெகு சீக்கிரமாகவே ஓடிவந்தான் தேவியருகினில் கிட்ட வந்துமெள்ளச் சேதியை நன்றாய் எடுத்துரைப்பான். சும்பநிசும்பனென்று இரண்டு பேர் மூன்றுலகங்கட்டி யாண்டிருக்கார் உமக்கு மெத்த அழகிஅருந்தும் நல்ல போகபாக்கியம் புஜியாமல் இந்த அதிரூப செளந்தரியத்துடன் தனித்திருக்கின்ற காரியமேன்? எங்கள் ராஜாவிற்கு ஏர்வையம்மா நீர் இந்த க்ஷணத்தில் வாருமென்றான் வாருமென்று அழைக்கவுமேயவன் மஹேஸ்வரியுமேது சொல்வாள் சபதமொன்றல்லவோ செய்திருக்கேன் சத்தியமாகவே சொல்லுகிறேன் சண்டையிட்டு என்னை ஜெயித்தவர்கள் கொண்டு போகலாமென்று சொல்லி, உங்கள் ராஜாவிற்குச் சொல்லுங்களென்று உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாள். இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச்சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள். துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம் ஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர் தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே கள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே! என்கின்றார் தாயுமானவ ஸ்வாமிகள்.  இதையே அபிராமி பட்டரும். “நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத் தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே! என்றும், ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும் தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே! இதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. இனி சும்ப, நிசும்பர்கள் என்ன ஆனார்கள் எனப் பார்க்கலாமா?? சுக்ரீவன் கூறியதைக் கேட்ட சும்பன் முதலில் தூம்ரலோசனன் என்பவனை அனுப்புகிறான். அம்பிகையைக் கேசத்தைப் பிடித்து இழுத்துவரப் பணிக்கப்பட்ட தூம்ரலோசனன் அம்பிகையை நோக்கிப் பாய்ந்தான். தன் ஹூங்காரம் ஒன்றாலேயே அம்பிகை அவனை அழித்தாள். அம்பிகையின் வாகனம் ஆன சிங்கமும் கோபத்துடன் அசுரச் சேனையின் மீது பாய்ந்து அவர்களை அழித்தது. திகைத்துப் போன சும்ப, நிசும்பர்கள் இப்போது சண்ட, முண்டர்களை அனுப்புகிறான். சண்ட, முண்டர்கள் பலத்த ஆயத்தங்களோடு கூடிய சதுரங்க சேனைகளுடன் பரிபூர்ண ஆயுதபாணிகளாய்த் தேவியைக் கொல்லச் செல்கின்றனர். அம்பிகை தன் கோபத்தில் இருந்து காளியைத் தோற்றுவித்தாள். நாக்கைச் சுழற்றிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் பயங்கர ஸ்வரூபத்துடன் தோன்றிய காலியானவள், சற்றும் தாமதிக்காமல் அசுரப் படைக்குள் புகுந்து அவர்களை அழிக்க ஆரம்பித்தாள். கோபம் கொண்ட சண்டன் காலியை நோக்கி ஓடி அம்புகளால் அவளை மறைத்தான். காலியின் சிரிப்பால் அவை சரமழையாக உதிர்ந்தன. பின்னர் காலி தேவி , சண்டனை அழித்துப் பின் முண்டனையும் அழிக்கிறாள். கெளசிகீ அவளை நோக்கி சண்ட, முண்டர்களைக் கொன்ற அவளைச் சாமுண்டா என அழைக்கப்படுவாள் என்றாள். இதையேலலிதா சஹஸ்ரநாமம், இந்த ஸ்வரூபமே லலிதா சஹஸ்ரநாமத்தில், “மஹேஸ்வரி, மஹாகாலி, மஹாக்ராசா, மஹாசநா” அபர்ணா, சண்டிகா, சண்ட, முண்டாசுர நிஷூதினி!” என்று கூறும். தூம்ரலோசனன் பட்டுப் போனானென்று தூதர்கள் ஓடிச் சொன்னாருடனே மந்திரியும் பட்டுப்போனான் என்றவுடன் மண்டியெரிந்து கண்கள் சிவந்து, சண்டமுண்டரைக்கிட்டழைத்து நீங்கள் ஸம்ஹரித்திங்கே வாருமென்றான் சண்டமுண்டரும் ஓடிவந்து அந்தச்  சங்கரிதேவியை வந்தெதிர்த்தார். கண்டுதேவிதன் கோபத்தினாலே காளிதேவியை உண்டாக்கினாள்(அவள்) சண்டமுண்டர் தலையை வெட்டிச்சிவ சங்கரிதேவிமுன் வைத்து நின்றாள். சங்கரியம்மனும் ஸந்தோஷமாயப்போ சாமுண்டி என்ற பேர்தான் கொடுத்தாள் தேவர்கள் எல்லாருங்கூடிக்கொண்டு மஹா தேவிக்குப் புஷ்பமலர் சொரிந்தார்.” நவராத்திரி நான்காம் நாளுக்கான தேவி கூஷ்மாண்டா எனப்படுவாள். உலகைப் படைத்தவள் என்னும் பொருளில் ஆதி சக்தி துர்கா தேவியை இந்தப் பெயரில் அழைத்து இன்று வழிபடுகின்றனர். சிலர் வாராஹியாகவும் வழிபடுவதுண்டு. [] படங்களுக்கு நன்றி கூகிளார் அன்னை ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் வாராஹி அன்னையின் படைக்குத்  தலைமை வகித்தவள்.  சத்ருக்களிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாக்க அன்னை வாராஹியை வழிபட வேண்டும். இன்றைய தினம்  மஹாலக்ஷ்மியாக சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும்படி அன்னையை அலங்கரிக்கலாம். ஷோடதசாக்ஷரி என்னும் பெயராலும் அழைக்கப்படுவாள்.  அக்ஷதை, மலர்கள் இரண்டாலும் கோலம் போடலாம். படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். கீழே குறுகி மேலே செல்லச் செல்ல அகலமாக இருப்பது போல் போட வேண்டும். வாழ்வில் படிப்படியாக உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.  செந்தாமரை, ரோஜா மலர்கள், கதிர் பச்சை, கஸ்தூரி மஞ்சள் பொடி போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ஜயதுர்கையாக நினைத்து வழிபடும் அன்னையை ரோகிணி என்னும் பெயரால் அழைக்கலாம். ஐந்து வயதுப் பெண் குழந்தையை ரோகிணியாகப் பாவித்து வழிபட வேண்டும்.  நிவேதனத்திற்குக் கதம்ப சாதம் செய்யலாம். மாலை பட்டாணிச் சுண்டல் செய்யலாம். கதம்ப சாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போலத் தான். காய்கறிகள் நிறையப் போடணும் என்பதோடு நாட்டுக்காய்களாகவும் இருக்கவேண்டும். பூஷணி, பறங்கி, வாழைக்காய், முருங்கைக்காய்( விருப்பமானால்), கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, அவரை, கொத்தவரை போன்றவை போடலாம். மொச்சை இருந்தால் ஊற வைத்துச் சேர்க்கலாம்.      நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 5 கெளமாரி குமாரனின் சக்தி. குமாரன் என்றால் சுப்ரமண்ய ஸ்வாமி ஒருவரே. ஷண்முகனின் சக்தியான இவளைக் “குமார கண நாதாம்பா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் வல்லமை படைத்தவள். “துள்ளி வருகுது வேல், பகையே சுற்றி நில்லாதே போ!” என்னும்படிக்குப் பகையை ஓட ஓட விரட்டி அடிப்பாள் இவள். ஆறுமுக சக்தியான இவள் ஷட்கோணத்தில் உள்ள ஆறு ஆதாரங்களின் மூலமும் சஹஸ்ராரத்தில் இருக்கும் சச்சிதானந்தத்தை அடைய உதவுவாள். நம் சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களையும் மணி பீடம் என்று சொல்வார்கள். இவற்றை மூன்றாய்ப் பிரித்து வயிறும், வயிற்றுக்கீழே உள்ள பாகமும் அக்கினிக் கண்டமாகவும், வயிற்றுக்கு மேலே மார்பு வரை உள்ள பாகம் சூரிய கண்டமாகவும், அதற்கு மேலே உள்ள பாகம் ஸோம கண்டமாகவும் சொல்லப் படும். அக்னிக்கண்டத்தில் உள்ள பிரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடமாகவும், சூரியக் கண்டத்தின் விஷ்ணுக்ரந்தி விஷ்ணுவின் இருப்பிடமாகவும், ஸோமகண்டத்தின் ருத்ரக்ரந்தி ருத்ரரின் இருப்பிடமாகவும் கூறப்படும். நம் உடலின் இயக்கங்களோடு சேர்ந்து கூர்ந்து கவனித்தால் இவற்றின் உள்ளார்ந்த தத்துவங்கள் நன்கு புரியவரும். இங்கே இதற்கு மேல் விளக்குவது சரியில்லை. அம்பிகையை உபாசிப்பவர்கள் இவற்றை ஒவ்வொன்றாய்க் கடப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் அந்த அந்த முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டு அம்பிகை தோன்றி மேலே மேலே அதி உந்நதத்திற்கு கூட்டிச் செல்வாள். அமிர்த தாரை வர்ஷிக்கும். இதையே லலிதா சஹ்ஸ்ரநாமம், “மூலாதாரைக –நிலயா-ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ என்று கூறுகிறது. அபிராமி பட்டரோ, “பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார் சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”  என்கின்றார். இதன் யோக தந்திர முறையிலான விளக்கம் என்னவெனில் திரிபுரை என்பதற்குப் பல பொருட்கள் சொல்லலாம். எனினும் இங்கே நம் உடலின் மூன்று நாடிகள், மனம், புத்தி, சித்தம் மூன்று இடங்களிலும் உறைபவள், முத்தேவர்களாலும் தன் தொழிலை நடத்துபவள், மும்மறைகளுக்கும் அதிபதியானவள், மூன்று வகை அக்னிக்களையும் ஒழுங்கு செய்பவள், மூன்று வகை சக்திகளைத் தன்னிடத்தே கொண்டவள், மூன்று ஸ்வரங்களைக் கொண்டவள், மூவுலகையும் தன்னகத்தே இருத்தியவள், என எல்லாவற்றுக்கும் அதிபதியானதோடு அல்லாமல் மூன்று பிரிவை உடைய ஆறு சக்கரங்களுக்கும் தலைவியாகவும் இருப்பவள். இவளின் அருளாலேயே நஞ்சை அமுதாக்கி நம்மை சாயுஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறாள். இனி சும்ப, நிசும்பர்களின் வதத்தைப் பார்ப்போமா? [] சண்ட,முண்டர்களின் வதத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட சும்பனும், நிசும்பனும் ரக்தபீஜனைப் பலவகைப் படைகளோடும் அம்பிகையோடு யுத்தம் செய்ய அனுப்பி வைத்தான். காளி மிக உக்கிரமாய்ப் போரிடுகிறாள். சிங்க நாதத்தையும் வில்லின் நாண் ஒலியையும் மீறிக்கேட்ட காளியின் குரலோசை கேட்டுக் கோபம் கொண்ட அசுரப் படைகள் சண்டிகையையும், காளியையும் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்ல முயன்றன. அப்போது தேவாதி தேவர்கள் அம்பிகையின் சேனைக்குத் தலைவர்கள் தேவை என எண்ணிக் கொண்டு, அம்பிகைக்கு ஏற்றாற்போல் பெண்களையே அவள் சேனைக்குப் படைத்தலைவர்களாய் அனுப்ப யோசித்தனர். அனைத்துத் தேவர்களும் தங்கள் வலிமையையும், சக்தியையும் ஒன்று கூட்டி தங்கள் வடிவங்களிலேயே ஒரு தேவியாக ஆக்கினார்கள். ஹம்ஸ வாகனத்தில் அக்ஷமாலையும் கமண்டுவும் ஏந்திக்கொண்டு ப்ரஹ்ம சக்தி ப்ராஹ்மணி என்ற பெயருடனும், ரிஷப வாகனத்தில் திரிசூலம் ஏந்திக்கொண்டு , நாகாபரணங்களைச் சூடிக்கொண்டு சந்திரகலையோடு மஹேஸ்வரரின் சக்தி மாஹேஸ்வரி என்ற பெயருடனும், அசுரனான சூரனைக் கொல்வதற்கென்றே பிறந்த குமாரனின் சக்தி கெளமாரி என்ற பெயருடன் மயில் வாகனத்தில் குகவடிவோடு, அம்பிகை குகனுக்கு அளித்த சக்தியாயுதத்தை ஏந்தியவண்ணமும், சங்கு, சக்ர, கதாதாரியாய், கதை, சார்ங்கம், வாள் ஆகிய ஆயுதங்களோடு கருட வாகனத்தில் வைஷ்ணவியும், ஸ்ரீஹரியின் யக்ஞ வராஹ வடிவத்தின் சக்தியான வாராஹியும், சங்கு, சக்ரங்களை ஏந்திக்கொண்டும், நரசிம்மத்தின் பெண் வடிவான நாரசிம்மி தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டும், கர்ஜனை செய்து கொண்டும் நாரசிம்மியாகவும், ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு தேவருலகை ஆளும் இந்திரனின் சக்தியான ஐந்த்ரீ இந்திரனைப் போன்றே வஜ்ராயுதம் ஏந்தி யானை வாகனத்திலும் தேவியின் படைத் தலைவர்களாக வந்து சேர்ந்து கொண்டனர். இவர்களே முறையே சப்த கன்னியர் என்றும், சப்த மாதாக்கள் எனவும் அழைக்கப் படுவார்கள்.    பின்னர் சண்டிகா தேவியானவள் சிவனை அசுரர்களிடம் தூது அனுப்பினாள். சிவனையே தூது செல்ல ஏவியதால் அவள் சிவதூதீ என்ற பெயராலும் அழைக்கப் பட்டாள். சிவனின் தூதுக்கும் அசையாத அசுரர்கள் கோபம் கொண்டு தேவியின் இருப்பிடத்தை நோக்கிக் கோபத்துடன் சென்றனர். [] தேவியானவள் அசுரர்கள் எய்த அம்புகளையும், சூலங்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் தன் வில்லினின்று எய்யப்பட்ட அம்புகளால் தடுத்து நிறுத்தக் காலியானவள் தன் கட்வாங்கம் என்னும் ஆயுதத்தால் அசுரக் கூட்டத்தை நசுக்கினாள். பிரம்மாணியோ தன் கமண்டலுவின் நீராலேயே சத்துருக்களை பலமற்றவர்களாக்கினாள். மாஹேஸ்வரி, திரிசூலத்தாலும், வைஷ்ணவி, தன் சக்கரத்தாலும், கெளமாரி ஈட்டியாலும், ஐந்திரி வஜ்ராயுதத்தாலும் அசுரர்படையைத் தாக்கினர். வாராஹி தன் கூரிய மூக்காலும், நாரசிம்ஹி தன் கூரிய நகங்களாலும் அசுரப் படைகளை ஒழித்தார்கள். அப்போது ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப்போல் ஓர் அசுரன் உதிக்க, சப்த மாதர்களும் சூழ்ந்து கொண்டு அவனைத் தங்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். சண்டிகையானவள் சாமுண்டியான காலியைப் பார்த்து ரக்தபீஜனின் ரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ளச் சொன்னாள். காலியும் அவ்வாறே அவனின் கடைசிச் சொட்டு ரத்தம் கீழே விழும்வரைக்கும் அவனைக் களைப்படையச் செய்து ரக்தபீஜனின் ரத்தத்தைத் தன் வாயில் ஏந்தினாள். ரக்தபீஜன் ரத்தம் இல்லாமல் கீழே விழ, சும்பனும், நிசும்பனும் கோபம் கொண்டு அம்பிகையைத் தாக்கினார்கள். நிசும்பன் தன் கூரிய வாளால் தேவியின் வாகனமான சிங்கத்தின் தலையில் அடிக்க அந்த வாள் தேவியின் கூரிய பாணத்தால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறே நிசும்பன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பயனற்றுப் போக நிசும்பன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். சங்கநாதமும், மணியை ஒலித்தும் ஓசை எழுப்பிய தேவி, நிசும்பனை மூர்ச்சை அடைய வைத்ததைக் கண்டு . கோபம் கொண்ட சும்பன் தேவியோடு போரிட, விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு எட்டுக் கைகளோடு பாய்ந்தான். சும்பனின் ஆயுதங்களும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பலனற்றுப் போக சும்பனையும் தன் சூலத்தால் அடித்து மூர்ச்சை அடைய வைத்தாள் தேவி. இதற்குள் எழுந்த நிசும்பன் மீண்டும் போருக்கு வர தன் சூலத்தால் நிசும்பனின் இதயத்தைப் பிளந்து அவனைக் கொன்றாள் தேவி. சகோதரன் கொல்லப்பட்டது கண்ட சும்பன் தேவியைப் பார்த்துக் கேலியாக மற்றவர்கள் பலத்தினால் ஜெயித்துவிட்டுக் கர்வம் கொள்ளாதே என்றான். அப்போது தேவி அவனைப் பார்த்து, “மூடா, இங்கு இருப்பவள் நான் ஒருத்தியே. இரண்டாவதாக எவரும் இல்லையடா! இவர்களெல்லாம் என்னிலிருந்து தோன்றிய என் அம்சங்களே அன்றி என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல! இதோ பார்!” என்றாள். சப்த கன்னியரும், காளியும் மறைந்து சும்பன் கண்ணெதிரே தேவி ஒருத்தியின் உடலில் புகுவதைக் கண்டான். “என்னால் அளிக்கப்பட்ட என் பல்வேறு சக்திகளும் இப்போது என்னிலேயே கலந்துவிட்டன. இப்போது போரில் உறுதியாக இருந்து போர் செய்வாய்!” என்றாள் தேவி. அசுர ராஜன் சும்பன் பல ஆயுதங்களால் தேவியைத் தாக்கினான். மிக உக்கிரமான அஸ்திரங்களை எய்தான். அனைத்தும் தேவி தன் ஹூங்காரம், உச்சாரணம் போன்றவற்றாலேயே அழித்தாள். அவனுடைய குதிரையையும் கொன்று ரத சாரதியுமின்றி வில்லையும் ஒடித்தாள் தேவி. சும்பன் முத்கர ஆயுதம் என்னும் ஆயுதத்தால் தேவியைத் தாக்கப் போக, தேவி அதைப் பிளந்தாள், அசுரனின் இருதயத்தின் தன் முஷ்டியால் குத்தினாள். அவன் அப்படியே தேவியைத் தூக்கிக்கொண்டு ஆகாய மார்க்கமாய்ச் செல்ல, தேவியும் அங்கே இருந்த வண்ணமே அவனோடு போர் புரிந்தாள். அவனுடைய அட்டஹாசம் அதிகமாகக் கண்ட தேவி இனி தாங்காது எனக் கருதித் தன் சூலத்தால் சும்பன் மார்பையும் பிளந்து குத்தி அவனைப் பூமியில் வீழ்த்தினாள். காளிதேவியும் ரக்தபீஜர்களை  வாரி வாரி விழுங்கிவிட்டாள் ரக்தபீஜனும் பட்டவுடன் பொல்லா நிசும்பனும் பார்த்துக் கோபத்துடன் ஸம்ஹரிப்பேன் இவளையென்று சொல்லி சபதம் செய்து தமையன் முன்னே தேவியுடன் எதிர்த்து நிசும்பனும் தோற்காமலே யுத்தம் செய்து நின்றான் ஆயிரமாயிரம் அம்பு தொடுத்தவன்  அஞ்சாமலே யுத்தம் பண்ணலுற்றான் நேரே யுத்தம் பண்ணி லீலாவிநோதமாய் நிசும்பனக் கொன்றாள் ஸ்ரீதேவியும் தம்பியும் பட்டதைக் கேட்டுச் சும்பாஸுரன் சங்கையில்லாத கோபத்துடன் அம்பிகையெதிரில் வந்து சும்பாஸுரன் ஆங்காரத்துடன் ஏது சொல்வான் யுத்தம் பண்ணத் தெரிந்தவளே எங்கள் இத்தனை பேரையும் ஏய்த்தாயேடி நீயும் யாருமில்லாதே யிருந்தாயேடி நீயும் ஏழுபேருனிப்போ நின்றாயடி. சதிகாரியடி நீயுமிப்போ என்னை சற்பனை செய்யவே வந்தாயடி வஞ்சித்தாயடி நீயுமென்னை யிப்போ வாரத்தைகள் இரண்டு சொன்னாயடி. ஒருத்தியாக இருந்து கொண்டன்றோ நீ உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாய் அத்தனைபேர்களைச் சேர்த்துக்கொண்டு இப்போ அதட்டுகிறாயடி நீயுமென்னை சும்பன் வார்த்தையைக் கேட்டு ஸகிகளே இங்கே வாருங்கள் என்றழைத்து  வாரியணைத்தாள் ஸகிகள் எல்லோரையும் மாரோடு மறைத்து ஐக்கியமானாள் இரண்டாம்பேரிங்கில்லை காளியுடன் நீ எதிர்த்து யுத்தமும் பண்ணுயென்றாள். அம்மன் செயலையும் வார்த்தையையும் கேட்டு அ ம்புபட்டாப்போலுந்தானுருகி, சும்பாஸுரனும் காளிகாதேவியும் தோற்காமலே யுத்தம் பண்ணலுற்றார் அடித்த பந்து கிளம்பினாற்போலவன் ஆகாயத்தினிலே கிளம்பி, ஒருவருக்கொருவர் சளையாமல் அங்கு ஓடோடி யுத்தமும் பண்ணினார்கள் சும்பாஸுரனும் காளிகாதேவியும் தொந்தயுத்தமும் பண்ணினார்கள் தேவர்களெல்லாம் பயத்துடனே மஹா தேவியை ஸ்துதித்துக்கொண்டிருந்தார்கள் எத்தனை பொழுதாக யுத்தம் பண்ணுவோம் என்று காளியும் கோபத்துடன் சும்பாஸுரனை வதைத்தாள் காளியும் [] துர்க்காதேவி என்றவம்மனை அழைத்தாள் துர்க்காதேவியம்மன் அஸுரனை வதைக்கத் தேவர்கள் புஷ்பமழை சொரிந்தார். அடுத்து  ஸ்ரீலலிதையின் உதயம். அதற்கு முன் துர்கையான அம்பிகையையே , நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என் றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!” என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம். மோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது. “முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே முதலாவது அந்த அவதாரம் பின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம் பின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம்.  என்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை. “லலிதாதேவியுடைய மஹிமை தன்னிலே லக்ஷங்கோடியுள்ளதில் லேசஞ் சொல்வோம், கேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம் கிட்டும் நிச்சயம் ஸந்தேஹமில்லை பூர்வத்தில் தக்ஷனுடைய கன்னிகையாக்கும் பூர்வாவதாரம் பரமேச்வரிக்கு சாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத் தாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம் இதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம். எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான். “மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா மனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம் சாம்பமூர்த்தியப்போ அம்ருத கடாக்ஷத்தால் சாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன் சாம்பசிவனுடைய அம்ருத கடாக்ஷத்தால் சாம்பல் புருஷன் ஜீவனோடெழுந்தான் விச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்  விருப்பத்துடனே வளர்த்த பின்பு வேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன் ஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம் தவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை. “பண்டாஸுரனுக்குப் பலநாளைக்குப் பின்பு  கெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப் பிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப் பிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில் காவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே கட்டளையிட்டான் தேவர்களை; துஷ்டன் கையிலகப்பட்டு விழிக்கிறார்கள் வில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம் தங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார் தாருகாஸுரனை வதைக்கவென்றே சங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த் தானே வலையில் விழும்புலியைப் போல ஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால் சத்துருவாகினான் பண்டாஸுரன் வம்பன் பண்டாஸுரனை வதைப்பதற்கு  மனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம் மஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர். தேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்  செய்கிறார் தேவர்கள் உக்கிரதபஸை ஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம் இப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள் ஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும் அதிகடினமான தபஸிருந்தார் பகவதி ஈச்வரியாள் இதுவரைக்கும் பிரத்யக்ஷமாகவில்லை –சோபனம் சோபனம் தங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம். [] கால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள் கழுத்துடன் குதிக்க நிச்சயித்தார்கள் மின்னல்மலை போல அக்னி குண்டத்தில் மின்னிக்கொண்டொரு காந்தியுண்டாயிற்று ஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார் அதற்குள்ளே ஸ்ரீசக்ரரதத்தைக் கண்டார். அழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா அம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம். நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தேவி ஸ்கந்த மாதா எனப்படுவாள். ஸ்கந்தனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.   []          இவளை  வைஷ்ணவி எனவும் அழைப்பார்கள்.. மாத்ருகா வர்ண சொரூபிணி என வர்ணிக்கப்படும் சதாக்ஷியும் இவளே. சாகம்பரியும் இவளே! மஹாலக்ஷ்மியாகவும் அழைக்கப்படுகிறாள்.  கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகையில் வைஷ்ணவி எனப் படுவாள். இன்றைய தினம் சுகாசனம் எனப்படும் அமர்ந்த கோலத்தில் அம்பிகையை சாந்த துர்கையாக அலங்கரிக்கலாம். ஆறு வயதுப் பெண் குழந்தையை காளிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். கடலை அல்லது கடலை மாவுடன் மஞ்சள் பொடி சேர்த்து மயில், அன்னம்,போன்ற பறவைக்கோலம் போடலாம்.    செவ்வரளி, சந்தன இலை போன்றவற்றால் மாலை கட்டியும் அர்ச்சனைகள் செய்தும் அம்பிகையை வழிபடலாம். இன்றைய நிவேதனமாகத் தயிர் சாதமே செய்யலாம். அல்லது சுண்டக்  காய்ச்சிய பசும்பாலில் குழைந்த சாதத்தைப் போட்டுக் கிளறி, நெய் சேர்த்துச் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்து சேர்க்கவும்.  மாலை கடலைப்பருப்புச் சுண்டல் செய்யலாம்.  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 6 பெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் ப்ரியா ஆர். கேட்டிருந்தார் அல்லவா?? தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம். இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது.  நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் ‘ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ, “பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே! என்கிறார். இனி ஸ்ரீலலிதையின் மஹத்துவம். “வானுலகத்துத் தேவாள் தாபத்தைத் தீர்த்திட வந்து அலிதை அவதாரமாய் பட்டுக்குடை கவியச் சித்திரப் பொன்ரதம் பளிச் பளிச்சென்று ஒளி திகழ  ஸ்ரீசக்ரராஜ ரதத்தினில் தேவியும்  சிங்கார ரூபமாய்க்காந்தி மின்ன ஆலவட்டம் வெண்சாமரம்போடச்சகிகளும் அக்னிகுண்டத்தின் நடுவில் வந்தாள்.”சோபனம் சோபனம் இதையே ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், “ சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவ கார்ய-ஸமுத்யதா!!” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம்?? சம்பக மொட்டுப் போன்ற மூக்கையும், பவளம் போன்ற சிவந்த உதடுகளும், குருக்கத்திப் போன்ற பற்களும் கருநீலம் போன்ற விழிகள், தாழம்பூவின் மடல் போன்ற காதுகள், வில்லைப் போன்ற புருவங்கள், கண்ணாடி போல் பளபளக்கும் கன்னங்கள் என அம்பிகையைப் பார்க்கும்போதே தெய்வீகமான அழகு புலப்பட்டு அனைவர் மனதிலும் சாந்தி ஏற்பட்டதாம்.  “அர்த்தசந்திராகார நெற்றியில் சிந்தூரம் அதி சிவப்பாம் மூன்றாங்கண்ணதுபோல் அர்த்தசந்திரக்கலையும் சுட்டி ராக்கோடியும் அழகு நீளமான கேசத்தின் மேல் சிந்தாமணி ரத்தினத்தாலே கிரீடம் சிரஸிலே தரித்துக்கொண்டிருக்காளம்மன் சந்தனம் கஸ்தூரி புனுகு பூமாலையும் தரித்து மாதா வந்தாள் –சோபனம் சோபனம் தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்துப் போற்றி வணங்க அவர்களின் அங்க ஹீனங்களைக் கண்டு வருந்திய அம்பிகை தன் கண்களின் பார்வையின் சக்தியினால் அவற்றைப் போக்குகிறாள். [] மண்டலபால அரக்கன்போலம்மன் வர்ணமும் வளமுள்ள சந்திரகாந்தி சீதளமும் கண்டவுடன் தேவியைக் கைகூப்பித் தேவர்கள் கனகத்தடிபோல் விழுந்து பணிந்தார்கள் தேவர்களுடைய தேஹரணத்தைக் கண்டு  ஸ்ரீலலிதை மெத்த இரக்கத்துடன் அவ்வளவு பேரையும் அம்ருதக் கண்னால் பார்த்து அங்கக்குறைகள் தீர்த்தாள்- சோபனம் சோபனம் அம்பிகை தேவர்களின் குறையைக் கேட்டுவிட்டு அவர்களைத் தேற்றுகிறாள். “ஸ்துதியாலே மெத்தமனங்குளிர்ந்தீஸ்வரி சொல்லுவாள் திரும்பவும் கீர்வாணர்க்கு இன்றுமுதல் பயத்தைத் தூரவிட்டு விடுங்கள் இந்தப் பண்டாஸுரன் நமக்குப் பஞ்சு அரை நிமிஷத்தில் பண்டாஸுரப் புழுவை அக்கினி எரித்தாற்போல் வதைத்திடுவோம் ஒருவாக்கிற்கு மறுசொல்லில்லை நமக்கு உங்கட்கே மங்களம்-சோபனம் சோபனம்   நாளை ஸ்ரீலலிதைக்கும், ஸ்ரீகாமேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம்.    []     சிவனும், சக்தியும் ஸமமாகவே இருக்கின்றார்கள். அங்கே ஆணாதிக்கம் என்ற பேச்சோ, பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது. சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயர். அதே போல் சிவ-சிவா என்றாலும் ஈசனையும், சக்தியையும் குறிக்கும். பைரவர், பைரவி என்பதும் அவர்களின் சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படிப் பெயர்களின் மூலம் காட்டும் ஸமம் நாம ஸாம்யம் எனப்படுகிறது. அவர்களின் ரூபலாவண்யத்தால் சிவந்த நிறம், இருவருக்கும் மூன்று கண்கள், தலையில் பிறை அலங்கரிப்பது போன்றவை ரூப ஸாம்யம் எனப்படும். ஆதியும் அந்தமும் இல்லா இந்தத் தம்பதிகளை வழிபட்டு அம்பாளைச் சிறப்பாக ஸ்ரீவித்யா வழிபாட்டின் மூலம் வழிபடுகிறவர்களின் தாம்பத்தியத்தில் பரஸ்பரம் சிநேகபாவம் உண்டாகும். மேலும் ஆண்களுக்குக் கர்மாக்களைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல பெண்களுக்குக் குடும்ப விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை இரண்டும் சமமாக நடந்தாலே அந்தக் குடும்பம் “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்” என்னும்படிக்குச் சிறப்பாக இருக்கும். சிவ தத்துவம் சக்தியில் அடங்கியது. சக்தி சிவத்தோடு சேர்ந்தது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதையே அபிராமி பட்டர்,    “தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே அவர் தமக்கன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் துவளே இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!’    என்கிறார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுதலால் “அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்கின்றார் பட்டர். இதே கருத்தைத் திருவாசத்தில் மணி வாசகரின் பொற்சுண்ணம் இடித்தலிலும் சிதம்பரச் செய்யுட்கோவையிலும், மீனாக்ஷி அம்மன் அம்மானையும் காணக்கிடைக்கிறது என்பது ஆன்றோர் கூற்று. மனைவியைத் தாய் என்றும், சக்திதான் சிவத்தை யீன்றது என்றும் கூறுவார்கள். இதனுடைய உள்ளார்ந்த கருத்து நமக்கு இந்தக் குறிப்பிட்ட யோகப் பயிற்சியை குரு மூலம் தீக்ஷை பெற்று மேற்கொள்ளும்போதே புரியவரும்.     []     அம்பிகையானவள் நம்முடைய ஆக்ஞா சக்ரத்தில் மனமாகவும், விசுத்தி சக்கரத்தில் ஆகாயமாகவும், அநாஹத சக்ரத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும், மணி பூரகத்தில் ஜல தத்துவமாகவும், மூலாதாரத்தில் ப்ருத்வி என்னும் பூமி தத்துவமாகவும் விளங்குகிறாள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சமே அம்பிகையாகவே பரிணமிப்பதாய் சாக்தர்கள் சொல்வார்கள். என்றாலும் அவள் தன்னைப் பரமசிவனுடைய பத்னி என்னும் பாவனையால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு சிவசக்தி ஐக்கிய வடிவான சச்சிதானந்தத்தை நமக்கும் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,    பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும் ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.”     என்கின்றார். ஐந்து பூதங்களையும் அவற்றால் விளையும் ஐந்து தன்மாத்திரைகள் ஆன கந்தம், சுவை, ஒளி, பரிசம், சத்தம் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று இசைந்து செல்லும்படியாக அவற்றினிடையே வியாபித்து நிற்பவள் சிவகாம சுந்தரியான அந்த சாக்ஷாத் அம்பிகையே ஆவாள். அவள் திருவடியைத் தொழுவோர்க்குக் கிட்டாத செல்வம் ஏதும் இல்லை என்பதே இதன் பொருள்.    இனி ஸ்ரீலலிதையின் திருக்கல்யாணம் காண்போம்.    “அம்மன் கிருபையாலே விச்வகர்மாவும் அழகான புரங்களும் சபைகளுடன் சிந்தாமணி ரத்னம் பளபளவென்று மின்ன சிம்ஹாஸனம் உண்டு பண்ணி வைத்தான் பட்டண அமைப்பையும் அம்மன் தன் அழகையும் பார்த்துப் பிரம்ம தேவர் யோசிக்கின்றார் நாட்டுக்குப் பதியான அம்மனுக்கிப்போ  நாயகர் வேண்டுமே –சோபனம் சோபனம்.    இப்படிப் பிரம்ம மனதிலெண்ணியதை ஈசர்அறிந்து நல்ல ஒளியுடனே முப்பது கோடி மன்மதாகார ரூபமாய் வேஷந்தரித்ததி ஸுந்தரமாய் மகுட குண்டலத்துடன் அழகு பீதாம்பரமும் மார்பில் சந்தனம் முத்துமாலையுடன் மோஹன வேஷந் தரித்திருந்தபடி தேவி முன்னே நின்றாரீசன் – சோபனம் சோபனம்    நின்ற நிலையில் அதிஸுந்தரமான லலிதாதேவிக்கு இசைந்த அழகும் என்றும் பதினாறு வயதுந் தரித்துக்கொண்டு இருக்கின்ற ஈச்வரரைக் கண்டு பிரம்மா காமேச்வரரென்று பேருமிட்டவருக்கும் கண்ணாட்டி லலிதேச்வரி தேவிக்கும் ஓமென்று இவர்கள் இரண்டு பேருக்கும் இப்போ விவாஹஞ் செய்யலாமென்றார் – சோபனம் சோபனம்    சோடித்துக் கலியாணத்துக்கெல்லாம் பிரம்மாவும் கோவிந்தருடைய சம்மதத்தாலே ஒடுக்க வணக்கமாய் அம்மனைப் பார்த்து உம்மைக் கணவருடன் பார்ப்போமென்றார் மாதாவும் தன்னுடைய கழுத்திலிருந்ததொரு  மாலையைக் கழற்றி அம்பலத்தில் போட்டாள் நாதர் காமேச்வரர் கழுத்திலந்த மாலை ராஜியாய் சேர்ந்தது –சோபனம் சோபனம்    அம்பாளுக்குத் தக்க மணாளன் காமேஸ்வரரே என நிச்சயித்துக் கல்யாணம் நடக்கிறது. அம்பாளும் ஈசனும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். வாத்தியங்கள் முழங்குகின்றன. தேவலோக மாதர்கள் நர்த்தனம் செய்கின்றனர்.     ஈசருந் தேவியும் மாலையிட்டார்கள் இருவரும் இருந்து கன்னூஞ்சல் ஆட வாஸுதேவராலே உமையவளைத் தாரை வார்க்கச் சொன்னார் பிரம்மா- சோபனம் சோபனம்     பத்மாஸனர் சொல்லால் நல்ல முஹூர்த்தத்தில் பரிமளிக்கும் தேவஸபை நடுவே  பத்தினியுடன் கூட விஷ்ணு காமேசருக்குப்  பக்தியாய் மதுவர்க்கந்தான் கொடுத்தார் காமேஸ்வரருக்கு லலிதேச்வரியைக் கன்னிகாதானம் செய்தார் மஹாவிஷ்ணுவும் காமேச்வரரும் திருமங்கல்ய தாரணம்  கட்டினார் லலிதைக்குச் –சோபனம் சோபனம்   நெய்யால் ஹோமஞ்செய்து பாணிக்கிரஹணஞ் செய்து ஈசன் அம்மனை அம்மி ஏற்றினார் மெய்யாக அக்னியை மூன்று தரஞ்சுற்றி முக்கண்ணர் பொரியினால் ஹோமஞ்செய்தார் காமேச்வரரும் லலிதேச்வரியைத் தான்  கலியாணஞ் செய்து கொண்டார் ஸுகமாய் பூமிமுதல் மூன்று லோகத்தவர்களும் புகழ்ந்தார்கள் அகஸ்தியரே-சோபனம் சோபனம்   நாளை பண்டாசுர வதம்      இன்றைய தேவியைக் காத்யாயினி என்றும் அழைப்பார்கள். மஹேஸ்வரி என்றும் சொல்கின்றனர். பாம்பாசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகாவாகவும், ரக்த பீஜனை வதம் செய்த அன்னையாகவும் பாவிப்பது உண்டு. உலகாளும் மஹேஸ்வரியும் இவளே. இன்றைய  தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் "சண்டிகா"வாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.    []     செந்தாமரை மலர்கள், பவளமல்லி, செம்பருத்தி மலர்கள், ரோஜா ஆகிய மலர்களால் அம்பிகையை வழிபடலாம். தும்பை இலையும் மிகவும் சிலாக்கியம். சிலர் குமாரியின் பெயரை காளிகா என்றும் சொல்லி வழிபடுவார்கள்.    []     உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்    “காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி  நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”    என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.    இன்றைய கோலம் பாவைகள் அல்லது தேவியின் திருநாமத்தைப் பருப்பு வகைகளால் எழுதியோ மஞ்சள் பொடி கலந்த கடலைமாவினால் அன்னையின் திருநாமத்தை எழுதியோ வைக்கலாம். காலை நிவேதனமாகத் தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பால்ப் பாயசம் செய்யலாம். மாலை பாசிப்பருப்புச் சுண்டல்   நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 7 ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா! சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!! என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடிக்கு லலிதா காமேஸ்வரரின் திருக்கல்யாணத்துக்குப் பின்னர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீகாமேஸ்வரரோடு வீற்றிருந்த தேவியிடம் தேவாதி தேவர்கள் பண்டாசுர வதம் பற்றி நினைவூட்டுகின்றனர். அம்பிகையும் இதற்கெனவே தான் தேவ கார்யத்துக்காக அவதாரம் எடுத்திருப்பதால் இனி தாமதிக்கக் கூடாதென்று தன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு பண்டாஸுரனோடு யுத்தம் செய்யத் தயாராகின்றாள். [] இதை லலிதா சஹஸ்ரநாமம் “தேவர்ஷி-கண-ஸங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேனா-ஸமன்விதா!! என்று கூறுகிறது. “ரதகஜ துரக பதாதிகளுடன் கடல்  அலைபோல வருகின்றாள் சேனையுடன் சதுரங்கமான சக்தி சேனைகளுடனே சங்கரி வருகிறாள் –சோபனம் சோபனம் சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா கேயசக்ர-ரதாரூட- மந்திரிணீ-பரிஸேவிதா கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா பண்டஸைன்ய-வதோத்யுக்த-பாலா விக்ரம-நந்திதா மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு சிங்கார உருளைகள் நான்கு வேதம் பூஜ்யமான தர்மார்த்த காம மோக்ஷம் புனிதமான நான்கு குதிரைகளாம் ஆனந்தக் கொடிமரம் அதற்கு மேலழகாய் ஐந்து யோசனை யகலம் முத்துக்குடை முந்நூறு தேர்ப்படை முழுதுஞ் சக்திகள் வாராள் முழுத்தேரும் தேவிக்குச் –சோபனம் சோபனம் அம்மன் தொரட்டியில் இருந்துமொரு தேவி ஸம்பத்கரி என்று உண்டானாள் நன்மையாகவே பின்னும் அச்வாரூடை யுதித்தாள் நாகபாசத்திலே உண்டாகி யானைகள் ஸம்பத்கரிக்குச் சேனையாம் அச்வாரூடைக்குக் குதிரைகளாம் தாயார் மந்திரிணியுடைய ஸ்ரீசக்ரத்தில் தட்டுக்களேழுண்டு-சோபனம் சோபனம் மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே மஹாசக்திதேவிகள் நிறைந்திருக்காள் விந்தையாய்ப் பதினாறு நாமத்தால் தேவர்கள் மந்த்ரிணியை ஸ்தோத்திரங்கள் செய்தார் சியாமளையுடைய திருக்கையிலிருந்து தானும் பாணத்தோடொரு கோதண்டத்தை நமஸ்கரித்தம்மனிடம் வாங்கியே மந்த்ரிணி நாயகி வருகிறாள் –சோபனம் சோபனம் “பைரவி, பஞ்சமி பாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா வைரவி மண்டலி மாலினி சூலி வாராஹி என்றே செயிர் அவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே!”  என்கின்றார் அபிராமிபட்டர். பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள். இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர், “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார் அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.” என்கின்றார். “வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார் வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க் கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல் கூட வருகிறார் சக்திகளும் தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும் கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக் கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம் ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு அஸுராள் மேல் கோபிஷ்டைகளாகக் கோலாஹலமாக யுத்த பேரி வாத்யம் முழங்க கொடி பறக்க அணியணியாய் வாராள் தேவ வாத்தியம் முழங்க கந்தர்வர் கானம் பண்ண தேவதாஸிகள் நாட்டியமாடிவர தூயமுனிவர் மலர்சொரிய லலிதேச்வரி சுகத்துடன் வருகிறாள்-சோபனம் சோபனம் தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு திடுக்கிட்டுப் பண்டாஸுரன் சபையில் கோபத்துடனே சிம்ஹாசனத்திலிருந்து கூடிய அஸுராளோடு யோசித்தான் இடிபோல் அட்டகாசஞ் செய்தான், கோட்டை வாசல்கள் எல்லாவற்றிலும் காவல் வைக்கச் சொன்னான் குடிலாக்ஷன் மந்திரியை யுத்தத்திற்கனுப்பினான் கோபிஷ்டை லலிதையுடன் – சோபனம் சோபனம் அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம். ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி: ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள். இதை பட்டர் “அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதிசயமான தபசயமாகமுன் பார்த்தவர் தம் மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே! தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார். “வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம். “பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா! நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸூகா!! பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா! மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா! விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா! காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா! மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா! பண்டாஸூரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ!! மேற்கண்ட ஸ்லோகங்களில் நடைபெறும் சம்பவங்களையே இன்று பார்க்கப் போகிறோம். பண்டாசுரனை வதம் செய்யவென்று அம்பிகை அனுப்பிய சேனைகளோடு முதலில் மந்திரி போர் செய்ய வந்தான். நாற்பது அக்ஷெளஹிணி சேனைகளைக் கொண்டு யுத்தம் செய்தவனை சம்பத்கரி வதைக்கிறாள். அதன் பின்னர் அனுப்பிய குண்டனை அச்வாரூடை சம்ஹரிக்க, தன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைக்கிறான். கூடவே விஷமான மாயைகளையும், சர்ப்பேணிப் பிசாசுகளையும் அனுப்பிப் பயமுறுத்துகிறான். அந்தச் சர்ப்பேணியானவள் அசுரனின் கட்டளையாலே பல பாம்புகளைப் பெற்று அவற்றை எல்லாச் சக்திகளின் மேலும் ஏவிவிடுகிறாள். “விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு விழுந்ததுகள் சக்திசேனையின் மேல் இதைக்கண்டு நகுலியம்மன் கருடன் தோளில் இருந்ததிவேகமாய் ஓடி வந்து பாம்புக்கு ம்ருத்யுவாம் கீரிப்பிள்ளைகளைப்  பல்லுகளிலிருந்து விழவடிஅத்தாள் அம்மெட்டுப் பாம்பையும் துண்டாக்கியது அம்மன் கீரிப்பிள்ளைகள்-சோபனம் சோபனம் இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது, “பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப் புரட்டுச் செய்கையைத் தேவியறியாமல் முன்னே தண்டநாதைச் செய்கின்ற சண்டையின் வேடிக்கை பார்த்தம்மனிருந்து விட்டாள் துரோகி விஷங்கள் ஒரு பாணத்தால் தேரின் துலங்குங் கொடிதன்னை அறுத்துவிட்டான் வேகமாய்ப் புருவங்களை அம்மன் கோபத்தால் வில்லுப்போல வளைத்தாள்- சோபனம், சோபனம். அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள். “குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி கூடிவந்த அஸுராளைக் கொன்றாள் விடியற்காலங் கண்டு விஷங்கன் செய்ததுகளை விசையாய் மந்த்ரிணி தண்டநாதையுமாய் அம்பாவிடத்தில் சொல்லி ஜ்வாலாமாலினியாலே அக்னிக்கோட்டையைப் போடச் சொன்னாள் தென்புறம் வீதியொரு யோஜனை வாசலில் ஸ்தம்பினியும் காவல்-சோபனம் சோபனம். முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை முழுவதும் நூறு யோஜனை சுற்றளவு இப்படி ஸ்ரீசக்கரத் தேருஞ் சேனையுங் கொண்டு இருக்கின்றார் சக்திகள் தீக்கோட்டைக்குள் தம்பியும் மந்திரியும் தப்பி வந்ததையும் சலியாத தீக்கோட்டை மஹிமை கேட்டு அன்பாய் முப்பது பிள்ளைகளைப் பண்டன்  சண்டைக்கு அனுப்பினான் தேவி மேல்-சோபனம், சோபனம் இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான். “பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப் பண்டன் கேட்டுப் புலம்பி அழுதான் மெத்த கொலைபாதகன் விக்னயந்திரஞ் செய்யச் சொல்லிக் கொடூரன் விசுக்கிரனை அனுப்பி வைத்தான் துஷ்ட விசுக்கிரன் அக்னிக்கோட்டையில் வந்து  சுற்றி உள்ளே போகமாட்டாதே கெட்டவன் பாறையில் எட்டுத் தேவதேயந்திரம் சீறி ஏவினான் கேளும்-சோபனம் சோபனம் யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே  எல்லோரும் ஸ்தம்பித்து இருந்தார்கள் தண்டினி, மந்த்ரிணி, அம்பாளிடத்திற்குச் சொல்ல மாதாவும் காமேசர் முகத்தைப் பார்த்தாள் சக்தி கணபதி சுத்த லக்ஷணத்துடன் திடுமென்று குதித்து வ்ந்து யந்திரத்தைக்  குத்தித் தன் கொம்பாலே தூளாய்ப் பறக்கவிட்ட குஞ்ஜார முகர்க்குச் –சோபனம், சோபனம் விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா! காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா! மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா! அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார். நாளை பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும் ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும். கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :))))))) நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள். []          ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை. செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம். இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை  வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.    நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8 இப்போ அடுத்ததுக்குப் போகறதுக்கு முன்னால் ராம்ஜி யாஹூவின் நேயர் விருப்பம். த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே பவேத் பூஜா தவ சரணயோர்-யா விரசிதா! ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே ஸ்திதா ஹ்யேதே சச்வந்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா” என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து. இதையே அபிராமி பட்டர், பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு  மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!”  என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா! என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம். இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம். இதை லலிதா சஹஸ்ரநாமம், “மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிணீ ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ!!  என்று சொல்கிறது. ஒவ்வொரு ஆதார சக்கரத்தின் வழிபாட்டின் மூலமும், சக்தியானவள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக்கொண்டு மேலே ஏறி சஹஸ்ராரத்தில் நிலை பெற்று இருக்கிறாள். இது யோகியருக்கே புரியும். நம் போன்ற சாமானியருக்கு எளிதில் புரியாது. குரு மூலமாகவே முயலவேண்டும். நம் உடலின் பஞ்சபூத தத்துவங்கள், இவ்வுலகின் பஞ்சபூத தத்துவங்களோடு பெரிதும் சம்பந்தப் பட்டிருக்கிறதைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொண்டோமானால் இந்த வார்த்தைகளுக்குப் பொருளும் எளிதில் விளங்கும். மூலாதாரம்-பூமி தத்துவம் மணிபூரகம்- ஜல தத்துவம் ஸ்வாதிஷ்டானம்-அக்னி தத்துவம் அநாஹதம்-வாயு தத்துவம் விசுத்தி- ஆகாயதத்துவம் ஆக்ஞா- மனஸ் தத்துவம் இந்த ஆறு ஆதாரங்களும், பஞ்ச பூதங்களும் காலகதிக்கு உட்பட்டவை, ஆனால் தேவியோ காலத்தைக் கடந்து என்றென்றும் நிற்பவள். இவ்வுலகத்தை அண்டம் என்கின்றோம். அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட நம் உடலோ பிண்டம் எனப்படும். நம் உடலின் மூலப் பொருட்கள் ஒன்பது. இவ்வுலகின் மூலப் பொருட்களும் ஒன்பது. ஆகவே அம்பிகையும் நவகோண நாயகியாவாள். நம் உடலின் மூலப் பொருட்களாகிய மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகியவற்றை சிவாம்சம் எனவும், தோல், ரத்தம், மாமிஸம், மூளை, எலும்பு ஆகிய ஐந்தும் சக்தி அம்சம் எனவும் சொல்லப் படும். இது நம் பிண்டத்தின் சிவ, சக்தி அம்சங்கள் எனில் அண்டத்தில் பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் ஐந்தும் சக்தி அம்சமாகவும், அதைச் சார்ந்த மாயை, சுத்தவித்தை, மகேஸ்வரன், சதாசிவன் ஆகியன சிவாம்சமாகவும் கொள்ளப் படும். ஸரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், லக்ஷ்மி அஷ்டோத்திரத்திலும் தேவியை ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்று சொல்லி இருக்கிறது. அம்பிகையே ப்ரம்ம ரூபமாயும், விஷ்ணு ரூபமாயும், ருத்ர ரூபமாயும் இருக்கிறாள் என்பதையும் முன்னரே பார்த்தோம். இந்த மாத்ருகா ரூபங்கள் அனைதுமே தேவியுடையவையே. தேவியை பட்டர் ஐந்து வர்ணங்களையும் உடையவள் என்றும் கூறுகிறார். “மங்கலை செங்கலசம் முலையாள் மலயாள் வருணச் சங்கலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை பொங்கலி தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள் பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!”  சில புத்தகங்களில் பசும்பொற்கொடியே என்றும் பாடம் இருக்கிறது. மங்கலை என்றால் சுமங்கலி, அதுவும் நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னை, சிவந்த கலசம் போன்ற தனபாரங்களுடன், வருணனால் அளிக்கப் பட்ட சங்கு வளைகளை அணிந்த சிவந்த திருக்கரங்கள், எல்லாக் கலைகளுக்கும் தலைவி. இதை லலிதா சஹஸ்ரநாமம் சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்றும் “கலாவதீ” என்றும் கூறும். அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். ஈசனின் வாமபாகத்தை ஆட்கொண்ட அம்பிகையானவள் பொன் போன்ற நிறம் படைத்த பிங்கலை என்றும் கருநீல நிறம் கொண்ட காலி என்றும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் பெற்ற விந்தியாவாகவும், பச்சை நிறம் பெற்ற மீனாக்ஷி, உமை அம்மையாகவும் இருக்கிறாள். இதிலே பிங்கலை ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினி என்னும் திருநாமத்தோடு பொன்னிறங்கொண்டு விளங்குகிறாள். இதை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், “ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா! சூலாத்யாயுத- ஸம்பந்தா பீதவர்ணாதி கர்விதா!! மேதோ-நிஷ்டா- மதுப்ரீதா பந்தின்யாதி- ஸமன்விதா தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ”  என்று கூறும். இவளே மூலாதாரத்தில் வீற்றிருக்கையில் ஸாகினீ என்னும் பெயரோடு நான்கிதழ்த் தாமரையில் பஞ்ச முகத்தோடு கரிய நிறத்தவளாய் இருக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமம் இதை, “மூலாதாரம்புஜாரூட பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா முக்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ”  என்றும் ஆக்ஞா சக்ரத்தில், “ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா! மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ”  என்றும் கூறுகிறது. இதை பட்டர் “வெளியாள்=கலைமகள்” என்னும் பொருளில் அழைக்கிறார். ஆக்ஞா சக்ரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்துடனே ஹாகினீ என்னும் பெயரோடு வெண்ணிறமுடையவளாய் (சுக்ல வர்ணா)எழுந்தருளி இருக்கிறாள். விசுத்தி சக்ரத்தில் ரக்த வர்ணத்தில் டாகினீ என்னும் பெயரோடும் பட்டர் இவளைப் பொதுவாக “செய்யாள்=திருமகள்” என்னும் பெயரில் அழைக்கிறார். “விசுத்தி- சக்ர –நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா பாயஸான்ன-ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா-டாகினீஸ்வரீ! , மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம். “மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ அநாஹதத்தில் ச்யாமளையாக ராகினீ என்னும் பெயரோடு வீற்றிருக்கிறாள். “அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா! தம்ஷ்ட்ரேஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர-ஸம்ஸ்திதா காலராத்ர்யாதி-சக்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ!” இனி ஸ்ரீலலிதையின் சேனை என்ன செய்தது என்பதைப் பார்ப்போம். விக்ன யந்திரம் பொடிப்பொடியாகிப் போனதை அறிந்த பண்டாஸுரன் தன் தம்பிகளை அனுப்புகிறான். விசுக்கிரன் முன்னால் தலைமை வகித்து வருகிறான். மந்த்ரிணீ அவனை எதிர்த்துப் போரிடுகிறாள். அஷ்வாரூடையும் துணை புரிய சக்தி சேனைகள் எதிர்த்துச் சண்டை போட்டும் விசுக்கிரனின் பாணங்கள் மழையெனப்பொழிய அம்பிகையை வேண்டுகின்றனர். விஷங்களோடெதிர்த்தாள் மந்திரிணியும் பொல்லா விசுக்கிரனை எதிர்த்தாள் வாராஹிதேவி அச்வாரூடை முதலானபேரெதிர்த்தாள் அந்தச் சேனைகளக்ஷெளஹிணிகளையும் வஞ்சக விசுக்கிரன் பாண வருஷத்தால் வாடி மெலிந்து சக்தி சேனைகளும் அம்பாவின் சேனைகள் அஸ்திரத்தின் தாபத்தால் அம்மனை வேண்டினார்-சோபனம் சோபனம் மந்த்ரிணி உரையாலே சிந்துவைச் சக்திகள் தாபந்தீர அழைத்தாள்  வந்து சொரிந்தது சுத்த கங்கா தீர்த்தம் வாரணத்துக்கை போல் இரண்டு சாமம் வேண்டிய மட்டும் குடித்தே சக்திகளெல்லாம் வெகு தாகந்தீர்ந்து பலமடைந்து தேகக்களைகள் தீர்ந்து சத்தி சேனைகளெல்லாம் ஜயத்துடன் எதிர்த்தார்கள்- சோபனம், சோபனம் கங்கையின் நீரைப் பருகி புதிய பலம் பெற்று சக்தி சேனைகள் போரிட்டு விஷங்கன், விசுக்கிரன் போன்றோரை மந்திரிணியும், அஷ்வாரூடையும் வதம் செய்கின்றனர். இனி தானே நேரிடையாய்ப் போரிடவேண்டியதுதான் என பண்டாஸுரன் நினைத்தான். அவன் போருக்கு ஆயத்தமாகிறான். சேனாதிபதிகள் முதல் தம்பிகள் வரைக்கும் செலவாய்ப் போனதைக் கேட்டுப் பண்டாஸுரன் மானங்கெட்டவன் இன்னும் பின்னதி கோபமாய் மஹேச்வரியை வைது திட்டிக்கொண்டு கடித்துக்கொண்டான் பர்களையும் உதட்டையும் கண்களிலே அனல்பொறி பறக்கக் குடிலாக்ஷனைப் பார்த்து ஆக்கினை செய்கின்றான் கிப்பக் குழந்தாய் கேள்-சோபனம், சோபனம் கேளாய் குடிலாக்ஷா லலிதையென்பாளொருத்தி கேடு செய்தாள் நமக்கினியவளை வாளாலே லேசுலேசாகவே கொய்கிறோம் வரவிடுவாய் என்றன் சேனையெல்லாம் முன்கோட்டை வாசலில் காக்கும் சேனையைத் தள்ளி மிச்சம் மீதியாயுள்ள சேனையெல்லாம் பெண்கள் தவிர, மற்றப் பேர்களும் புறப்பட்டார் பெண்கொடி லலிதைக்கு-சோபனம் சோபனம் கழுதை, குதிரைகள் போன்றவகள் தேரில் பூட்டப் பட்டன. கரடி, சிங்கம், ஒட்டகம், கரும்பன்றி, காக்கை, பருந்து, கோழி, செந்நாய்கள், பாம்புகள், இன்னும் பூதப் ப்ரேதங்கள், வேதாளங்கள் போன்றவையும் வாஹனங்களாய் வந்து துணை செய்கின்றன. இதைத் தவிரவும் சாமானிய வாஹனங்களும் அநேகமாய் வருகின்றது. பண்டாஸுரன் கிளம்பும்போதே வழக்கம்போல் அபசகுனங்கள் தெரிய வருகின்றன. பூமாதேவி நடுங்கினாள். விண்ணிலிருந்து ரத்தம் சொரிந்தது. யானைகளுடைய தந்தங்கள் திடீரெனக் காரணமே இல்லாமல் முறிந்தன. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண்டாஸுரன் கிளம்பி வருகிறான். எந்த உற்பாதமும் எண்ணாமல் வருகிறான் இலவம்பஞ்சு காற்றில் பறக்கின்றாப்போல் பொல்லாத காலத்தில் பண்டாஸுரன் சேனை புறப்பட்ட தம்மனை ஜயிக்கவென்றே துஷ்டப் பண்டாஸுரன் வருவதைக் கண்டு சூரிய சந்திரன் ஏழு சமுத்திரமும் அஷ்டதிக் கஜங்களும் அலறி நடுங்கிற்று அம்மனுக்கே ஜயம்- சோபனம் சோபனம் [] இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள். ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.  மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்   புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம்  நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9 அம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள். “ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா! [] ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி இருக்கும் அம்ருத வாவியிலே மணிமயமான படகிலே இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களைக் கரை சேர்க்கிறாள். பக்தர்களைக் கரை சேர்ப்பதாலேயே இவளைத் தாரா என்றும் அழைப்பார்கள். மின்னல் கொடி போலவே சூக்ஷ்மமான ஒளிமயமான ரூபம் உடைய அம்பிகை, சூரியன், சந்திரன், அக்னி இவர்கள் வடிவங்களில் ஒளிமயமாய்ப் பிரகாசிக்கிறாள். நம் மூலாதாரத்தில் இருந்து படிப்படியாய் மேலேறி வரும் சக்தியானவள் சஹஸ்ராரச் சக்கரத்தில் நிலைபெறுகிறாள். ஸஹஸ்ரதளத்தில் தாமரைக்காட்டில் நிலை பெறும் இவள் ஒருத்தியே அனைத்துமாவாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்டவாறு கூறும். “ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா ஸர்வாயுத-தரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ!! சஹஸ்ரதளங்களுள்ள தாமரையில் அனைத்து வர்ணங்களோடுகூடிய சக்திகளுடன், சகலவிதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அநேக முகங்களோடும் யாகினீ என்ற பெயரோடு காட்சி அளிக்கிறாள். இதை பட்டர், “அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன் எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன்  அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே!”  என்று தேவிக்கு தேவ மாதர்கள் பரிவார சக்திகளாக இருத்தலைக் குறிப்பிடுகிறார். அழகுத் தெய்வமான அம்பிகையின் காந்தி பொருந்திய முகத்தின் ஒளியானது நம் உள்ளத்து இருட்டைப் போக்கும் வல்லமை உடையது. அவளுடைய கரிய கேசத்தின் கருமை அவளைத் தியானிக்கு அடியவர்களின் மன இருளைப் போக்கி உள்ளொளியை வளர்க்கும். அவள் கூந்தலின் இயல்பான மணத்தை லலிதா சஹஸ்ரநாமம், “சம்பகாசோக-புந்நாக-செளகந்திக-லஸத்கசா!” என்கிறது. சம்பக மலர்கள், அசோக மலர்கள், புந்நாகம்(புன்னை) மலர்களின் வாசத்தைக் காட்டிலும் மணம் அதிகமாய் உள்ள கரிய கேசத்தை உடையவள் என்பது பொருள்படும். அந்தக் கேசத்தை இரண்டாய்ப் பிரிக்கும் வகிட்டை “ஸீமந்தம்” என்று சொல்வார்கள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருதி-ஸீமந்த –ஸிந்தூரீ” எனக் கூறும். நெற்றியில் இருந்து வகிடு ஆரம்பிக்கும் இடத்தை ஸீமந்தம் என்று சொல்வதோடு, சுமங்கலிகள் அங்கே குங்குமம் இட்டுக்கொள்வதும் வழக்கம். நெற்றியில் நடுவே பொட்டில்லாவிடிலும், இந்த ஸீமந்தம் எனப்படும் வகிட்டின் உச்சியில் சிந்தூரம், அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது கட்டாயமாய் அநுசரிக்கப் படும். இந்த உச்சித் திலகத்தை வைத்தே பட்டர் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார். “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழித்துணையே!” என்கிறார். உதிக்கின்ற செங்கதிரைப் போன்று உச்சித் திலகத்தின் சிவந்த நிறம் காணப்படுகிறது என்று கூறுகிறார். சூரியன் உதித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டால் சூரியனை வெறும் கண்ணால் காணமுடியாது. அதே சமயம் உதய சூரியனைக் கண்ணால் நன்றாய்ப் பார்க்க முடியும். ஆகையால் உதிக்கின்ற சூரியன் என்பது இங்கே அதையும் சுட்டும். அம்பிகையை மனமாரத் தியானித்தால் அவளைக் கண்ணாரக் காண முடியும். உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்பது மெய்ஞ்ஞானம் பெற்ற ஞாநிகள் மதிக்கின்ற மாணிக்கம் போன்றவளே என்று வரும். மாதுளம்போது என்பது, அம்பிகையின் மாதுளை நிறத்தைக் குறிக்கும். “தாடிமீ குஸுமப்ரபா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறும். “மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்பது இங்கே தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்கின்ற மின்னற்கொடியான அம்பிகை என்று பொருள்படும். இத்தனை பெருமை வாய்ந்த லலிதாம்பிகையுடன் பண்டாஸுரன் போருக்கு வந்திருக்கிறான். பண்டாஸுரன் வது சக்தியின் சேனைகளோடு தன் சேனைகளையும் மோத விட்டான். சக்திகள் கோபத்துடன் அக்னிக்கோட்டைக்கு வெளியில் வந்து சண்டை போட்டனர். ராஜராஜேஸ்வரியான லலிதாம்பிகை பண்டாஸுரனைக் கண்டு இவனை அழிக்கவேண்டியது நாமே என உறுதி பூண்டாள். “அக்கினிக்கோட்டைக்கு வெளியில் வந்தாள்-ஸ்ரீ சக்கரத்தில் அபசகுனங்கண்டாள் ஒப்பற்ற அஸுராள் தம்பட்ட முரசுகள் உக்கிரமாய்க் கொம்புகள் ஊதிக்கொண்டு சக்திதேவிகளை அஸுரர்கள் எல்லோரும் சண்டை பிடித்தடிக்கத் துவங்கினார்கள் சக்தி தேவியர்கள் அப்போ அஸுர சேனைகளை ஸம்ஹரிக்கின்றார்கள்-சோபனம் சோபனம் அஸுர சேனைகளை சக்திதேவிகள் சுற்றிப் பிடித்திழுத்துக் கத்தியாலே குத்தியும், ஈட்டியாலே குத்தியும், கொன்றழிக்கின்றனர். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் இருபக்கமும் சாய்ந்து கிடக்கும் அசுரர்களின் தலைகளும், தேகங்களும் விருட்சங்களைப் போல் காட்சி அளித்தனவாம். “யுத்தபூமிதனில் ரத்தப் பிரவாஹம் ஓடுவதைக் கண்டு தேவரெல்லாம் சக்திசேனையினால் அத்தனை அஸுராளும் ஸம்ஹரிக்கப்பட்டுக் கிடப்பதையும் அத்தனை யானை குதிரை சேனைகளெல்லாம் ஆமை போல் மிதக்க ரத்த நதியில் சித்தம் மகிழ்ந்து பாரிஜாதப் புஷ்பங்கள் தேவிக்கு சொரிந்திட்டார்- சோபனம் சோபனம் தேவர்களுஞ் சொர்ண புஷ்பமாரி சொரிந்து திவ்விய சகுனங்களைக் காட்டினார்கள் கோபத்துடனே பண்டாஸுரன் விழிசிவக்கவே கொடூரமாய் உருட்டி விழித்துக்கொண்டு தன்சேனை அஸுராளுக் கபஜயத்தைக் கண்டு தாய் லலிதா தேவியை எதிர்த்தான் அஞ்சாமல் தேவியும் பண்டாஸுரனைப் பார்த்து அதிகக் கோபங் கொண்டாள்-சோபனம் சோபனம் பண்டாஸுரன் தன் மாயையைக் காட்டி அம்பிகையை பயமுறுத்தப் பார்க்கிறான். மாயா சக்திகள் அனைத்துக்கும் தலைவியான அவளை எந்த மாயை பயமுறுத்தும். மாயையினால் அவன் இருட்டைக் கொண்டுவர, அம்பிகை சூர்யாஸ்திரத்தின் மூலம் அந்தக் காரிருட்டைப் போக்கினாள். குருடாஸ்திரம் விட்டு அம்பிகையைக் குருடாக்க நினைக்க, நேத்ராஸ்திரத்தால் அதை வென்றாள் அம்பிகை. வாயு அஸ்திரத்தைப் பண்டாஸுரன் போட, அம்பிகையோ வருணாஸ்திரத்தால் அதை முறியடித்தாள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வியாதிக்கிருமிகளை அனுப்ப, அவற்றைத் தன்வந்திரியான அச்சுதாநந்த கோவிந்த நாமத்ரய அஸ்திரத்தால் வென்றாள் பகவதி. அந்தகாஸ்திரத்தை அனுப்ப, ம்ருத்யுஞ்சயனால் அது வெல்லப் பட்டது. பார்த்தான் பண்டாஸுரன். மந்திரத்தால் சும்ப நிசும்பன் சண்டமுண்டன் மஹிஷாஸுரனையவன் அனுப்பி வைத்தான் அனுப்பி வைத்தான் அதைக்கண்டு மஹேச்வரி அட்டஹாஸம் செய்தாளதிலிருந்து அம்மனட்டஹாஸத்தால் துர்க்காதேவி யுண்டாகி அஸுராளை ஸம்ஹரித்தாள் –சோபனம் சோபனம் [] முன்னே வேதங்களைத் திருடின சோமுகன் முதலான அஸுராளை அனுப்பி வைத்தான் தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத் தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை               உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து உண்டாகிவந்து மச்சமூர்த்தியும் வதைத்தந்த அஸுராளெல்லாரையும் ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம். [] சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன் சக்திசேனைகளை முழுகடிக்க நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது நீட்டி ஆள்காட்டி வரல்தனையும் குதித்தாருடனே யதிலே யிருந்து கூர்மாவதார மஹாவிஷ்ணுவும் கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம். [] இரணியாக்ஷனை அதிகோபத்துடனே இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான் வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ வலக்கை நடுவிரலில் இருந்து பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம் சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார் வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம் இவ்வுலகின் அக்ஞான இருளைப் போக்கும் ஒளியான அம்பிகையோடு சேர்ந்து ஐக்கியமான சிவனும் சேர்ந்த சச்சிதாநந்த ஸ்வரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு உலகின் மற்றப் புற இன்பங்களின் ஆநந்தங்கள் மங்கியே தெரியும். சிவதம்பதிகளின் ஜீவாதார ஒளியைத் தரிசித்தவர்களுக்கு வேறு பேறு வேண்டியதில்லை. பக்தர்களின் மனமாகிய சாகரத்தில் மலரும் ஆநந்தமயமான ஞாநத்தாமரையின் மகரந்த வாசனைகளை அனுபவிக்கும் இரு அழகான ஹம்ஸங்களாக ஈசனும், அம்பிகையும் குறிப்பிடப் படுகின்றனர். ஹம் என்பது சிவனையும், “ஸ” என்பது சக்தியையும் குறிக்கும். இவர்களின் சம்பாஷணைகளாகப் பதினெட்டு வித்தைகளும் குறிப்பிடப் படுகின்றன. அவை வேதங்கள் நான்கு, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம் போன்றவை ஆறு, மீமாம்ஸம், நியாயம், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என நான்கு, மருத்துவ வேதமான ஆயுர்வேதம், ஆயுதப் பயிற்சிகளைக் குறிக்கும் தனுர்வேதம், சங்கீதம் போன்ற கலைகளுக்குச் சொந்தமான காந்தர்வ வேதம், மற்றும் பொதுவான நீதிகளைக்குறிக்கும் நீதி சாஸ்திரம் போன்றவை ஆகும். நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும். இதையே அபிராமி பட்டர், தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.” என்கிறார். அபிராமியின் கடைக்கண்களின் கடாக்ஷத்தால் அவளை வழிபடும் அன்பர்களுக்கு எல்லாவகையான ஐஸ்வரியங்களும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் தளராத மனம், தெய்வீக அழகு, வஞ்சம் இல்லாமனம் என அனைத்தையும் கொடுக்கும். லலிதா சஹஸ்ரநாமமோ, அம்பிகையை அனைத்துக்கலைகளுக்கும் தலைவி என அழைக்கிறது. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” எனவும், “கலாவதீ” எனவும் கூறுகிறது. கலா என்பது மயிலின் கலாபத்துக்கும் ஒரு பெயராகும். ஆகவே அப்படிப் பார்த்தாலும் சகலகலாமயிலான அம்பிகைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அம்பிகையின் கடைக்கண்களின் மூன்று விதமான ரேகைகள் திரிவேணி சங்கமத்தை நினைவூட்டுவதாய்க் கூறுவார்கள். சூரிய புத்திரியும் கறுப்பு வண்ணத்தவளும் ஆன யமுனை, வெளுப்பான கங்கை, சிவந்த நிறமுள்ள சோனை போன்ற மூன்று நதிகளின் சங்கமத்தை நினைவூட்டும் விதமாய் அம்பிகையின் கண்களின் ரேகைகள் காட்சி அளிக்கின்றன். மேலும் இவை மும்மூர்த்திகளையும் நினைவூட்டுகிறது. ரஜோ குணமுள்ள சிருஷ்டிகர்த்தா பிரம்மாவையும், ஸத்வ குணம் நிறைந்த ஸ்திதிகர்த்தா விஷ்ணுவையும், தமோ குணம் நிறைந்த ஸம்ஹார கர்த்தா ருத்திரரையும் நினைவூட்டுகிறது. இப்போ பண்டாஸுரன் என்னவானான் என்று பார்ப்போம். அடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம். [] “இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம் இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான் பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர விலையசைத்தாள் அதிலிருந்து அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார் நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம் நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன். [] மஹாபலி முதலான அஸுரசேனைகளை வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன் மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச் சுழட்டியே உதறினாள் அதிலிருந்து வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய் மஹாபலி அஸுரனையும் ஜயித்து மஹாபலியை பாதாளத்தில் தள்ளின வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம் வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.  [] கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன் கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான் ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும் அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப் பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.  மனிதரில் பல பரிணாமங்கள், பலவிதமான மனிதர்கள். முதலில் வந்ததோ குட்டையான மனிதன். அடுத்து வந்ததோ தன் கோபத்தை அடக்க முடியாத மனிதன். இப்போ வரப் போவதோ பூரணமான ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம். மர்யாதா புருஷோத்தம் என அன்போடு அழைக்கப் படுபவன். நாளை பார்ப்போமா?? இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.    எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம்  அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது. நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள். இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!    ஸ்ரீலலிதையின் சோபனம் தொடர்ச்சி அம்பிகையின் பெருமை! சிச்சக்திச் -சேதனா-ரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். மேலும் அம்பிகையின் கண்களை "வாமநயனா" என்றும் கூறும். இன்னொரு இடத்தில் "வாமகேசீ" என்றும் கூறும். வாமம் என்றால் இடப்பக்கம் என்ற பொருள் மட்டுமல்லாமல் அழகானது, வடிவானது என்ற பொருளிலும் வரும். வலப்பக்கம் இடப்பக்கத்தை விடவும் அதிக பலத்தோடும் திறமையோடும் இருப்பதால், (கவனிச்சுப் பார்த்தவங்க புரிஞ்சுக்கலாம், வலக்கையைவிடவும் இடக்கைச் சுற்றளவு கொஞ்சம் குறைஞ்சே இருக்கும்) வலப்பக்கம் தக்ஷிண பாகம் என்று சொல்லப் படும். அந்த வாமபாகத்தில் இருக்கும் அம்பிகைதான் ஜடப்பொருட்களையும் உயிருள்ளதாய் சக்தி உள்ளதாய் மாற்றுகிறாள். இன்னும் சொல்லப் போனால் சிவனுக்கே சக்தியை அளிக்கிறாள். அம்பிகை தான் சைதன்ய குஸுமம் எனவும் அழைக்கப் படுகிறாள். லலிதா சஹஸ்ரநாமம், "சைதன்யார்க்கய-ஸமாராத்தயா சைதன்ய-குஸுமப்ரியா" என்று கூறும். அழகான தமிழில், ஞாநப்பூங்கோதையான அம்பாள் என்று கூறலாம். பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?? நம் உடலின் இடப்பாகத்தில் இருக்கும் இதயம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியைத் தருகிறது. ஈசனின் அந்த வாமபாகத்தில் இருப்பவள் சக்திதானே? ஆனால் ஒரு விஷயம் யோசித்தோமானால் வலக்கையின் வசதியும், செளகரியமும், வலக்காலின் வசதியும், செளகரியமும் இடக்கை, காலுக்கு வருவதில்லை அல்லவா?? இங்கே தான் அம்பிகை தன்னை அடக்கிக் கொண்டு தான் ஈசனுக்கு அடங்கியவள் என்பதை நிரூபிக்கிறாள். சக்தி என்னவோ தருவது அவள் தான். ஆனாலும் ஈசனையே தன்னைவிடவும் அதிக சக்தி உள்ளவராய் வெளியே காட்டுகிறாள். மேலும் இங்கே அடக்குவது, அடங்குவது என்ற அதிகாரங்கள் பிரயோகிக்கப்படாமல் இயல்பாகவே எவரும் கேட்காமலும், சொல்லாமலும் இதுதான் நியதி என்று ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இதயமான அந்த சக்தி இல்லை எனில் நம் உடல் எப்படி சரிவர இயங்காதோ அது போலவே அம்பிகையான சக்தி இல்லாமல் சிவத்தால் இயங்க முடியாது. இருதயம் எப்படி வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயங்குகிறதோ அப்படியே அம்பாளும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஈசனிடம் சரணடைந்து அவனையும் இயக்கி அதன் மூலம் நம்மையும் இயக்குகிறாள். இதையே அபிராமி பட்டர், “உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங் கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!” நம்மைப் போன்ற பரிபக்குவமே துளிக்கூட இல்லாத பக்தர்களுக்கும் சக்தியானவள் தன் மகிமையால் தன் திருவடிகளுக்கு அன்பு செய்யும் அன்பர்களை ரக்ஷித்து அனுகிரஹம் செய்கிறாள். மேலும் அர்த்தநாரீசுவரத் தியானம் என்பது ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை மேம்படுத்திப் பெண்களின் மேல் மரியாதையும், மதிப்பும் உண்டாகச் செய்வதோடு பெண்ணாசையையும் ஒழிக்கும் வல்லமை பெற்றது. இதையே பட்டர் தன் அடுத்த பாடலில் இவ்விதம் கூறுகிறார். “ஆசைக்கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதமெனும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே!” தேவியின் வழிபாட்டால் மண், பெண், பொன் என்னும் புறவுலகுச் சிந்தனைகளும் அது குறித்த ஆசைகளும் இல்லாமல் போகும். இதற்கு அபிராமி பட்டரே ஒரு வாழும் சாக்ஷியாகவும் இருந்திருக்கிறார் அல்லவா? ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் என்பது இங்கே கூற்றுவனைக் குறிக்கும். கூற்றுவன் கை பாசம் என்னும் ஆயுதத்தால் துன்புறும்படி இருக்கும் அடியார்களைக் கரைசேர்ப்பவள் அன்னையே. இப்போ லலிதாம்பாள் சோபனத்தின் அடுத்த அவதாரத்தைப் பார்க்கலாம். ஸ்ரீராமாவதாரம். ஒரு சொல், ஒரு மனைவி, ஒரு பாணம் எனத் தனித்தன்மை பெற்று விளங்கிய புருஷோத்தமன் ஸ்ரீராமன். நம் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் ஸ்ரீமத்ராமாயணம் விளங்குகிறது என்பதே அதன் பெருமையைக் கூறும். தன்னுடைய குடிமக்களுக்குத் தான்கொடுக்க வேண்டிய நல்லாட்சிக்காகத் தான் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால் தன் அருமை மனைவியையே துறந்தவன் ஸ்ரீராமன். பலர் கண்களுக்கும் அவன் மனைவியைத் துறந்தது தவறு எனப் பட்டாலும், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்னும் வழக்குச் சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் ஸ்ரீராமன் செய்தது சரியே எனப் புரிந்து கொள்வார்கள். எப்போது குடிமக்களில் சிலர் தன் மனைவியைத் தவறாய்ப் பேசுகின்றனரோ அப்போது அந்த மனைவியின் மேல் எத்தனை பாசம் இருந்தாலும் அவளைத் துறப்பதே சிறந்த முடிவு, குடிமக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்ற முடிவெடுத்து ஆண்டான் ஸ்ரீராமன். அதே போல் தன் அருமை இளவல் லக்ஷ்மணனையும் அவன் துறக்கவேண்டி வந்தபோது அவனையும் துறந்தான். கொடுத்த வாக்கிற்காக இளவலைத் துறந்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதன் எவ்வாறு மனம், வாக்கு, காயம் அனைத்தாலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டிய ஸ்ரீராமனுக்கு மங்களம். [] “இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான் தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச் செப்பிடுவித்தை போல் உதறினாளே ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு ராவணன் முதலோரை வதைகள் செய்தார் தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம். அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார். “வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன் மலைமலையாகவே தேவிமேலே விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை மின்னல் மின்னினாற்போல் உதறினாளே பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப் பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம் [] இச்சாசக்தி-க்ஞாநசக்தி-க்ரியாசக்தி-ஸ்வரூபிணி ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணி என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை அனைத்து சக்திகளுமாய் இருக்கிறாள். அனைத்துக்கும் காரணியாய் இருக்கிறாள். அவ்வளவு ஏன் நமக்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடி, சோறும் ஊட்டுவது அவளே. இதையே செளந்தர்ய லஹரியில் அம்பிகையை வர்ணிக்கும் ஆசாரியர் அவள் சூரியனையும், சந்திரனையும் தன்னிரண்டு ஸ்தனங்களாய்க் கொண்டு இவ்வுலகத்து மாந்தர்களான நமக்கும், மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் அமுது ஊட்டுவதாய்க் கூறுவார். பால் ஊட்டும் தாயாக அம்பிகையைக் கூறுகிறார். என்ன இது?? சூரியனும், சந்திரனும், அம்பாளின் இரண்டு மார்பகங்களா? ஒரே பேத்தல்! அது வழியாப் பாலூட்டறதாமே என்பவர்கள், நன்கு கூர்ந்து கவனிக்கவும். அம்பிகைதான் நமக்கு அன்னை. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வாறு மனம் கனிந்து உவகையுடன் பாலூட்டுவாளோ அவ்வாறே அன்னபூரணியாம் அம்பிகையின் அருளாலேயே நாம் உண்கிறோம். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வங்கத்து மேதை ஜகதீஸ் சந்திரபோஸ் சொல்லி இருக்கார் இல்லையா?? நம் வேதமோ இதை அவருக்கும் முன்னரே கூறி உள்ளது. சூரிய சந்திரர்களின் கிரணங்களால் தான் தாவரங்கள் உயிர் பெறுகின்றன அல்லவோ?? சூரிய வெளிச்சம் படவில்லை என்றால் ஒரு விதை முளைக்குமா? தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை சூரியனிடமிருந்து நேரே பெறுகின்றன அல்லவா?? அதுதான் தாவரங்களின் சத்தாய் மாறி நாம் உண்ணும்போது நம் உடலில் கலந்து நமக்கு சக்தியைக் கொடுக்கிறது. இவ்வுலகிலே சூர்ய சக்தி இல்லை எனில் எதுவுமே நமக்குக் கிடைக்காதே? சூரிய சக்தியை நாமும் நேரே சூரியனிடமிருந்து பெறுவதற்காகவே அதிகாலையில் சூரிய நமஸ்காரமும், அதனோடு சேர்ந்த அனுஷ்டானங்களும் வைத்திருக்கிறார்கள். அது போல் நிலவொளியிலேயே மூலிகைகள் வளரும். மூலிகைகளின் மகத்துவம் நாம் அனைவரும் அறிவோம். மருத்துவ சக்தி உள்ள இந்த ஒளஷதங்கள் சந்திர கிரணங்களின் சக்தியைப் பெற்றே வளர்கின்றன. மேலும் சந்திரனின் பூரண வளர்ச்சியைப் பொறுத்தே சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாய் உள்ளது. சந்திரனின் இழுப்பின் சக்தியாலேயே பருவக்காற்று, பருவ மழை அனைத்தும் ஏற்படுகின்றன. சூரிய கிரணங்களால் ஆவியாகும் சமுத்திரத்து நீரானது, சமுத்திரத்து நீரை ஆவியாக்கும் அலைகளில் சந்திரன் உண்டாக்கும் மாற்றங்களாலேயே மழையாக மாறுகின்றன. ஆகவே இவ்வுலகத்து இயக்கத்துக்கே அம்பிகை காரணமாகிறாள். நம்முடைய புத்தி ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்குச் சூரியன் உதவினால் மனத்தின் எண்ணங்களுக்குக் காரணியாகச் சந்திரன் விளங்குகிறான். இந்த அன்னபூரணி அன்ன பிக்ஷை வயிற்றுக்கு மட்டும் போடுவதில்லை. நம் மனதுக்கும் ஞாந பிக்ஷை போடுகிறாள். இவள் நம் இச்சைகளை மட்டுமல்லாமல், நம் உடலின் சக்தியாகவும், ஞாநத்தைத் தரும் சக்தியாகவும் செயல்படுகிறாள். [] இவ்விதம் அம்பிகை அனைத்துமாய் இருப்பதை பட்டர் குறிக்கையில், “நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே.” என்கிறார். இவ்வுலகங்கள் அனைத்துமே அம்பிகை ஈன்றெடுத்தாள் என்கிறார் பட்டர். மேலும் ஆதியும் அந்தமும் இல்லா, முதலும் முடிவும் இல்லா, பிறப்பும் இறப்பும் இல்லா இவளைப் போய் மலைமகள் என்று கூறுவது வம்பு என்கிறார். அம்பிகையின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தால் முன்னும், முடிவும், பின்னும், என்றும் எப்போதும் எதுவும் புலனாகாது. நம் அளவுக்கு மிஞ்சிய செயலாகும் அது. லலிதா சஹஸ்ரநாமத்தில், “அநகா அத்புத சாரித்ரா” என எண்ணற்றக் கோடிக்கணக்கான அற்புதமான சரித்திரங்களை உடையவள் எனப் போற்றுகிறது. இத்தனை அற்புதச் சரித்திரம் படைத்த அம்பிகை தன் கைவிரல்களில் இருந்து கண்ணனைத் தோற்றுவிப்பது பெரிய விஷயமா?? அதைப் பார்ப்போமா? “சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான் விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர விரலை அசைத்தாள் அதிலிருந்து சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார் சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன் ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம். அடுத்துக் கல்கி அவதாரம். கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக் கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான் கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்  காட்டி அசைத்தாள் அதிலிருந்து அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய் அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம் முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம் பின்னும் அநேகம் மோஹனாஸ்திரந்தன்னைப் பூட்டிவிட்டான் சக்தி சேனையின் மேல் அந்நேரம் அம்மனும் சாம்பவர் அஸ்திரத்தில் அதையும் விமோசனம் செய்துவிட்டாள் அக்ஷெளஹிணி சேனையை நாராயணாஸ்திரத்தால் பஸ்மமயமாக ஆக்கிவிட்டாள் துஷ்டன் குடிலாக்ஷன் முதற்சேநாதிபதிகளைச் சிதைத்தாள் பாசுபதத்தால்-சோபனம் சோபனம் பின்னும் அநேகம் அஸ்திரத்தாலவன் அக்ஷெளஹிணி சேனை போன பின்பு என்ன பலம் லலிதா தேவிக்கு என்று ஏங்கி விழிக்கின்றான் பண்டாஸுரன் அம்மனும் தம்முடைய நாதர் காமேசரை அந்தரங்கத்திலே தான் நினைத்துக் காமேசர் அஸ்திரத்தால் ஜயம் வரட்டுமென்று கணவரை வேண்டினாள்-சோபனம், சோபனம். நாளை பண்டாஸுரன் வதம்  ஸ்ரீலலிதையின் சோபனம்! கந்தன் பிறப்பு! பக்திமார்க்கத்தில் இருந்து கொஞ்சம் உயர்ந்தது யோக மார்க்கம் இல்லையா?? அந்த யோக மார்க்கத்தில் தான் இந்த ஸ்ரீவித்யா வழிபாடுகள் வருகின்றன. நம்முடைய பிராணனின் மூலம் எதுவெனக் கண்டு பிடித்து அந்த மூலத்தோடு நாம் ஒன்று சேர்கிற வழியே நம்முடைய பிறப்பின் தாத்பரியம். எனினும் இது நமக்குப் புரியப் பல ஜன்மங்கள் ஆகின்றன. நம் பூர்வ ஜன்மக் கர்ம வினையைப் பொறுத்து இந்த ஜன்மத்தில் ஆன்மீகத்தில் நாம் முன்னேறுவது நடக்கும். நாம் நம்முடைய உறங்கும் பிராணசக்தியை மூலாதாரத்தில் இருப்பதைத் தட்டி எழுப்பவேண்டும். அதை மேலே மேலே கொண்டு வந்து சஹஸ்ராரத்தை அடையவேண்டும். சச்சிதாநந்தத்தில் மூழ்கவேண்டும். அதற்கான யோக சாதனைகளில் இந்த வித்யா வழிபாட்டு முறையும் ஒன்றாக இருந்து வருகிறது. சஹஸ்ராரத்தை அடைந்துவிட்டால் யோகத்தின் நிறைவு. யோகத்தின் நிறைவில் எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் நம்மை மறந்த நிலையில் இருப்போம். நம்மிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நீங்க வேண்டும். ஆநந்தம் பிறக்கவேண்டும். [] பரப்பிரும்ம தத்துவத்தை ராதாகிருஷ்ணனாய்ப் பார்த்தால் அதுவும் ஆநந்தம், ஆநந்தம், ஆநந்தமே தான். ஆநந்தம் வந்தால் சிரிப்போம். ராதையின் செளந்தரியமும், கிருஷ்ணனின் ப்ரேமையும் ஆநந்தம். அதற்கு உயிரும், உணர்வும் வேண்டுமல்லவா?? அந்த உயிரும், உணர்வும், அறிவுமாக இருப்பவளே அம்பிகை. லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “ சித்கலாநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ” என்று கூறும். கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால், “உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே!” என்கிறார். நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். மாயையிலிருந்து விடுபடுவோம். அவளே முக்திரூபிணீ. என்றாலும் அம்பிகை தன் பர்த்தாவிற்கே முதல் பெருமையை அளிக்கிறாள். காமேசரை வேண்டியே அஸ்திரம் பெறுகிறாள். இங்கே அவள் சக்தியாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஈசனிடம் ஒன்றிப் போகிறாள். உள்ளே இருந்து இயக்குவது அவளாகவே இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறாள். இதுவே சிவசக்தி ஐக்கியம். நிலவிலிருந்து ஒளியையும், பூவிலிருந்து சுகந்தத்தையும், தீபத்திலிருந்து பிரகாசத்தையும் எப்படிப் பிரிக்கவே முடியாதோ, அப்படி இவர்களையும் பிரிக்கவே முடியாது. சொல்லும், பொருளும் இவர்களே. இதையே அபிராமி பட்டர், “சொல்லும்பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!” என்கிறார். சொல்லில் இருந்து பொருளை எவ்வாறு தனியாய்ப் பிரிக்கவே முடியாதோ அவ்வாறே அம்மையப்பனையும் பிரிக்கவே முடியாது. “பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறுகிறது. காமேசரிடம் அஸ்திரம் பெற்ற அம்பிகை பண்டாஸுரனை வதைக்கிறாள். “கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே காமேசர் அஸ்திரங்கொடுத்தார் வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் அஸ்திரத்தை மண்டலாகாரமாய் வில் வளைத்துக் கோடி சூரியன் போன்ற காமேசர் பாணத்தைக் கோதண்டத்தில் வைத்து மந்திரித்து வேடிக்கையாகவே காது பரியந்தம் விசையாய் இழுத்துவிட்டாள்-சோபனம், சோபனம். தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது தரணியிலே விழுந்து உயிரைவிட்டான் அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து அம்மன் ஜயங்கொண்டாள்-சோபனம் சோபனம் புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள் புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச அப்பொழுது தேவி சக்திசேனையுடன் ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள் ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள் காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள் நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் பூமியும் புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம் ஆயிற்று. தேவியின் அவதாரக் காரியம் நிறைவேறியாச்சு . அடுத்துத் தேவர்கள் கேட்டது மன்மதனை எழுப்பவேண்டுமென்று. ஆம், அவன் சாம்பலின் மூலமே பண்டாஸுரன் வந்தானல்லவா? எரிந்த மன்மதனை நினைத்து நினைத்து அழுது வேதனைப்படும் ரதியின் மனச் சமாதானத்துக்கு மட்டுமா?? இல்லை, இல்லை, மன்மதன் இல்லை எனில் உலகில் சிருஷ்டி காரியம் எப்படி நடக்கும்?? என்றால் ஏன் ஈசன் எரித்தார்?? யோகத்தில் இருந்த ஈசன் மீண்டும் சிருஷ்டி புதிதாய்த் தொடங்க வேண்டியே அழித்தார். இப்போது அம்பிகை அருளால் மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கவேண்டும் அல்லவா? மன்மதனை எழுப்பித் தரச்சொல்லிக் கேட்டார்கள் மும்மூர்த்திகள் முதல் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும். மேலும் சூரனையும் அழிக்கவேண்டுமே.    “ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநெளஷதி” என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் அம்பிகை எனப் பொருளில் வரும் இந்த வரிகளில் அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா?? “நஞ்சு அமுதாக்கிய அம்பிகை” என்கிறார் பட்டர் இந்தத் திருவிளையாடலை.    []     “பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்  வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார்சடையோன்  அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்  திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”    இங்கே முப்புரை என்பதற்குப் பல பொருட்களை அறிந்து கொள்கிறோம். புரை என்றால் மூத்தவள் என்ற பொருளுக்கிணங்க, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளான பிங்கலை, இடைகலை, சுழுமுனை மூன்றிலும் இருப்பவள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் உறைபவள். “மஹாபுத்திர்-மஹாஸித்திர்-மஹாயோகீஸ்வரேஸ்வரீ” என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். ஆகவே அதனாலும் இவள் முப்புரை அல்லது திரிபுரை. மேலும் மூன்று தேவர்கள், மூன்று மறைகள், மூன்று அக்னி, மூன்று சக்தி, மூன்று ஸ்வரங்கள், மூன்று உலகங்கள், மூன்று நகரங்கள் என அனைத்திலும் மூன்று பிரிவுகளைக் கொண்டவளாய் இருப்பதையும் முன்னரே பார்த்தோம். அதேபோல் சந்திரகண்டம், சூர்யகண்டம், அக்னிகண்டம் என்னும் மூன்று பிரிவையுடைய சக்கரத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். நம் மனத்தை ஞாந நிலைக்கு எழுப்பும் மநோன்மணியாக இருக்கிறாள்.    அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்?? குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.    “அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்  துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி  பதிசயமான தபசயமாக முன் பார்த்தவர் தம்  மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”    தாமரை மலர்களால் துதிக்கப் பெறும் திவ்ய செளந்தரியமான அழகை உடைய அம்பிகை மன்மதன் மற்றவர்களைத் தன் மலர்க்கணைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் பெற்ற வெற்றியை எல்லாம் தோல்வி அடையும்படி தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்த ஈசனின் மனமும் மாறும்படியாக அவன் மனமும் குழையும்படியாக மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்ததோடு அல்லாமல், ஈசனின் மனத்தையும், புத்தியையும் ஆட்கொண்டு, உடலிலும் இடம் பெறுகிறாள். மன்மதனை எழுப்பச் சொல்லி ஸ்ரீலலிதையிடம் தேவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.    “இந்த ரதியுடைய கணவன் மன்மதனை  எழுப்பித் தந்து எங்கள் மனங்குளிர  எவ்விதமாவது தயவு செய்து ஈசரும்  ஈச்வரியைக் கூடி சுப்ரமண்யர்  பிறந்து தாருகன் முதல் அஸுரர்களை வதைத்ததால்  பிறகு சங்கடமில்லை எங்களுக்கு  கூடியே தேவர்கள் எல்லோருங்கைகளைக்  கும்பிட்டு நின்றார்கள் –சோபனம், சோபனம்.”    கண்டவுடனே ரதிதேவியை அம்மன்  காமேசர் முகத்தை ஆதரவாய்ப் பார்த்தாள்  உண்டாய்விட்டான் மதன் வஜ்ஜிரதேஹத்துடன்  உடனே தாயாரை நமஸ்கரித்தான்  அனுகிரஹித்தாள் தேவி மன்மதனுக்கு  ஆருமினியவனை ஜயிக்காமல்  வானவரும் இனி ஜயிக்கமாட்டாரென்று  வரமுங்கொடுத்துச் சொல்லுவாள்- சோபனம் சோபனம்    குழந்தாய் உனக்குப் பயமில்லை இனிமேல்   கூட்டிவை பார்வதியுடன் ஈசரை  தழுதழுத்துன்னுட பாணத்தால் சங்கரர்  தானே விவாஹஞ்செய்வார் பார்வதியை  ஒருவர் கண்ணுக்கும் இனி அகப்பட மாட்டாய்  உன்னைத் தூஷித்தபேர் அண்ணா கள்ளர்  சற்றும் பயமில்லை நாமிருக்கின்றோமென்று  சங்கரி யனுப்பினாள் –சோபனம் சோபனம்.    மன்மதனுக்கு வரம் கொடுத்து அவனை அனுப்பி வைக்கிறாள் அம்பிகை. ஈசனும், ஈச்வரியும் கூடி ஸ்கந்தன் அவதாரம் ஏற்படுகிறது.      []     ஷண்முக நாயகன் தோன்றிடுவான் – சிவ  சத்குரு நாதன் தோன்றிடுவான்  கண்களால் கண்டு போற்றிடுவோம் –கொடும்  காலத்தைக் காலால் வென்றிடுவோம்    "நாதபிந்து கலாதீ நமோ நம!" என்று கூறுவார் அருணகிரிநாதர். நாதமும் பிந்துவும் சேர்ந்ததால் தோன்றிய கலையே ஷண்முகன். சிவசக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமே ஷண்முகன். ஷண்முகனின் மந்திரமாகிய "சரவணபவ" என்னும் ஆறெழுத்தும் நம் உடலின் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். உயிர்களுக்குப்பற்றுக்கோடாக விளங்குபவன் கந்தன். அனைத்துக்கடவுளரின் ஆற்றலும், சக்தியும் திரண்டு வந்ததால் கந்தன் என்ற பெயர் பெற்றான் என்றாலும் நம் ஆன்மாவைக் கட்டிவைக்கும் சக்தியான கந்துவும் அவனிடமே இருப்பதாலும் கந்தன் என்று கூறலாம்.  ஸ்ரீலலிதையின் சோபனம்! சிந்தாமணி க்ருஹ வர்ணனை! பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா ஸுகாராத்யா சுபகரீ சோனபா-ஸுலபாகதி: என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். மொழி ஸ்வரூபமாய் இருப்பவள் அம்பிகை. 51 மாத்ருகா அக்ஷரங்களே அம்பிகையின் வடிவு என்பார்கள். ஸ்ரீசக்தி பீடங்களும் அந்த அந்த அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 இருக்கின்றன. சொல்லையும் பொருளையும் போல் பிரிக்கமுடியாமல் சிவசக்தி ஐக்கியம் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். பட்டரோ, மன்மதனின் தவத்தைக் கலைத்த அம்பிகையை மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவள் என்கின்றார். “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே!”  அதாவது சொல்லுக்கும், எண்ணத்துக்கும் எட்டாத அம்பிகையின் திருவுருவானது இங்கே பக்தர்களின் தீவிர வழிபாட்டால் அவர்களுடைய கண்களுக்கும் வழிபாடுகளுக்கும் வெளிப்பட்டு நிற்கின்றது. “சிவப்ரியா சிவபார சிஷ்டேஷ்டா சிஷ்ட-பூஜிதா அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா” என்னும் சஹஸ்ரநாமத்தின் துதியின் படி மனதினாலேயே அம்பிகையைத் துதித்து வழிபடுவர்களுக்கு அவள் அருள் புரிவாள். நம் பேரின்பவாழ்வுக்குப் பற்றுக் கோடு அம்பிகை. அவளைக் குறித்த எண்ணங்களை மனதில் விரும்பித் தியானிக்கும்படியோ, வாயினால் இவ்வாறு இருக்கும் என்றோ உரைக்க முடியாது. “பாநுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ” என சஹஸ்ரநாமத்தில் கூறுவதற்கேற்ப சூரியமண்டலத்தில் நட்டநடுவே கோடி சூரியப் பிரகாசத்தோடு இருக்கிறாள் அம்பிகை. வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொற் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!” யோகியான ஈசன் மனதில் இடம் பிடித்த அம்பிகை அதன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றதையும் பட்டர் இவ்வாறு கூறுகிறார். ககனமும் வானும் புவனமும் காணவிற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!”  என்கிறார் பட்டர். வல்லபம் என்பது இங்கே வலிமை பொருந்திய, அறிவாற்றல் பொருந்திய என்ற பொருளில் வரும். ஞாநமே குழந்தையாகப் பிறந்த ஷண்முகனை இங்கே வல்லபம் என்கிறார் பட்டர். சிவசக்தியின் ஐக்கியத்திலே பிறந்த இந்தக் குழந்தை மகா ஒளி பொருந்திய குழந்தை, வல்லமை பொருந்திய குமாரன். எவராலும் வெற்றி கொள்ளமுடியாத அதிசூரன். இவன் வெறும் சக்தி மட்டும் அல்ல, அறிவுச் சக்தி, ஞாந சக்தி, அருள் சக்தி. தகப்பனுக்கே உபதேசம் பண்ணிய தகப்பன் சாமி. குருநாதன். வஸ்துவாகிய ஈசனுக்குள்ளேயும், அதன் சக்தியாகிய அம்பிகைக்குள்ளேயும் ஒன்றாக இருந்த அன்பானது இருவராகப் பிரிந்து மீண்டும் ஒன்றாய்க்கலந்து அதிலிருந்து தோன்றிய அற்புத குமாரன் ஷண்முகன். ஈசனால் தாரகனையும், சூரனையும் வதைக்க முடியாதா என்ன?? என்றாலும் அவர் தன்னைவிடத் தன் குமாரன் அதிபுத்திசாலி, மஹாவீரன் என்று காட்டாமல் காட்டினார். மனித இயல்பும் அதுதானே?? சத் எனப்படும் ஈசனும், சித் எனப்படும் அம்பிகையும் காட்டி உணர்த்திய ஆநந்தம், சச்சிதாநந்தப் பரம்பொருள் ஷண்முகன். இவரையே நடுவில் வைத்து ஒரு பக்கம் ஈசனும், மற்றொரு பக்கம் அம்பிகையும் இருக்கும் கோலத்தில் நாம் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்திகளாய்ப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். இவரை சோமாஸ்கந்தர் என அழைக்கிறோம். ஸஹ+உமா+ஸ்கந்தர் என்பதே சோமாஸ்கந்தர் என்று ஆகிவிட்டது. லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை, “குமார கணநாதாம்பா” எனப் போற்றும். அந்தக் குமாரன் பிறந்து என்ன நடக்கிறது?? அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது. தேவசேநாபதியான அவன் சூரனை வதைக்கிறான். வதைக்கிறான் என்று சொல்வதை விடவும், அவனை மன்னித்து ஆட்கொள்ளுகிறான்.  [] குமாரனின் ராஜ்யத்தில் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் இல்லை. மன்னிப்பு மட்டுமே. குமரனை வணங்குபவர்களுக்கு அழியாத ஆநந்தத்தைத் தருவான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மயிலாகவும், கோழியாகவும் மாற்றிவிடுகிறான் சூரனை. ஞானகங்கையாம் சரவணப்பொய்கையில் மூழ்கிய சூரன் அதில் தானும் கலந்து பிரணவத்தை நாதமாகவும், விந்து வடிவில் தோகை விரித்து ஆடிப் பிரணவ ஸ்வரூபத்தைக் காட்டியும் முக்தியைப் பெறுகிறான். இந்த ஓங்கார நாதமும், விந்துவும் சேர்ந்து வரும் கலையே சக்திவேல். கொக்கு அறுத்த கோ என்றும் கூவுகிறான் சூரன். கோழி கொக்கரக்கோ எனக் கூவும் அல்லவா?? கொக்கு என்னும் மாயையாகிய மாமரமாய் வந்த சூரனை அறுத்த கோமகன் ஷண்முகன்.அதையே கொக்கரக்கோ எனக்கூவிக் கோழி தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்துகிறது. மயிலோ எனில் பிரணவ ஸ்வரூபத்திலேயே தோகையை விரித்துக்கொண்டு ஆநந்தம் பொங்க ஆடுகிறது. மழைக்காலத்து மயிலின் ஆட்டம் இருளை நினைவு படுத்துகிறது எனில் விடிகாலை கூவும் கோழியின் குரல் உதயத்தை நினைவூட்டும். இருளிலிருந்து நம்மை வெளிச்சத்துக்கு இட்டுச் செல்லும் குரு ஷண்முகன். இனி ஸ்ரீலலிதையின் சோபனத்தில் ஷண்முகன் பிறப்பையும் அசுரர்கள் வதம் பற்றியும் பார்க்கலாமா?? [] “அம்மன் அனுக்ஞையால் மதனன் பூச்சரத்தாலே அடித்தான் பார்வதி தேவி பரமேசரை வந்து விவாஹஞ் செய்து ரமித்தார் பரமசிவன் குமாரரும் உண்டானார் அஸுராளை வதைத்த கோலவேலருக்குச் சோபனம் சோபனம் தேவசேனாபதி தெய்வயானை மணந்து  ஸ்ரீபுரந்தன்னில் வந்தார்- சோபனம் சோபனம். ஸ்ரீபுரமென்றதைக் கேட்டது மகஸ்தியர் தவமுனி ஹயக்ரீவரைப் பார்த்து ஸ்ரீபுரமென்பதை விஸ்தாரமாகவே சொல்லவேண்டும் தயவாக வென்றார் அன்புடன் வார்த்தையைக் கேட்டு ஹயக்ரீவர் அகஸ்திய முனிவரைப் பார்த்துரைப்பார் இன்பங்களுண்டாக தேவியின் நகரத்தை இனிச் சொல்வோம் கேளென்றார்- சோபனம் சோபனம் பண்டாஸுரனை வதைத்த ஸந்தோஷத்தால் பரமேச்வரிக்கும் காமேசருக்கும்  தேவசேநாபதியும் தேவர்களும் கூடி ஸ்ரீ லலிதாம்பாள் கொலுவிருக்க ஈச்வரியாளுக்குச் சிந்தாமணிக் கிருஹம் விச்வகர்மாவை அமைக்கச் சொன்னார் மகிழ்ந்து விச்வகர்மா இவர்கள் சொன்னபடிக்குப் புகழ் பெறவே செய்தார் –சோபனம் சோபனம். அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள். இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார். அண்டங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் உள்ள ரத்தினத் தீவில் உள்ளது. இருபத்தைந்து வெளிப் பிராகாரங்கள். முதலில் இரும்பு எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம்,கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவளம், நவரத்தினம், நானா ரத்தினம் இவற்றால் அமைந்தவை. இது தவிர மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களாலும், சூரிய, சந்திர, மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. இந்த 25 பிராகாரங்களில் எட்டாவது பிராகாரத்தில் கதம்பவனம். அந்தக் கதம்பவனம் மந்திரிணியான சியாமளையின் வாசஸ்தலம். [] பதினைந்தாவது பிராகாரங்களில் அஷ்ட்திக்பாலகர்களும், பதினாறாம் பிராஹாரத்தில் சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள். [] இவளோடு சேர்ந்து சியாமளைக்கும் இங்கே ஒரு கிருஹம் உண்டு. “மஹா சதுஷ்ஷ்ஷ்டி கோடி-யோகினீ-கண ஸேவிதா”பதினேழாவதில் யோகினிகளும், பதினெட்டில் மஹாவிஷ்ணுவும், பத்தொன்பதில் ஈசானனும், இருபதில் சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் தாரா தேவியும், இருபத்தொன்றில் வாருணியும், இருபத்திரண்டில் அஹங்காரக் கோட்டையில் குருகுல்லாதேவியும், “குருகுல்லா குலேஸ்வரீ” இருபத்துமூன்றில் சூரியப் பிராகாரத்தில் மார்த்தாண்ட பைரவரும், “மார்த்தாண்ட- பைரவாத்யா மந்த்ரிணீ-ந்யஸ்த-ராஜ்யதா”இருபத்து நான்கில் சந்திரனும், இருபத்தைந்தாவது சிருங்கார வனத்தில் மன்மதனும் இருக்கின்றனர். இதற்குள்ளேயே மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷங்களால் ஆன தோப்பும் உள்ளன. அதன் நடுவில் சிந்தாமணிக் கிருஹம். அக்கினி மூலையில் அம்பாள் தோன்றிய சிதக்கினிக் குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபக்கமும் மந்த்ரிணியும், தண்டினியும் இருக்கும் கிருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருக்க, நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீ சக்கரம் காக்ஷி கொடுக்கிறது. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சர்வாநந்தமயமான பிந்து பீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாதிரிபுரஸுந்தரியான லலிதா காமேஸ்வரி வீற்றிருக்கிறாள். "பஞ்ச பேரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ " இந்தப் பஞ்சப் பிரம்மாஸனம் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியைப் பலகையாயும் கொண்ட கட்டில் ஆகும். இதுவே அ+உ+ம= ஓம் என்பதைக் குறிக்கும் அர்த்த, மாத்திரை, பிந்து வடிவான ஓங்கார மஞ்சம். “மஹா காமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி”என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி பட்டர் அம்பிகையின் இந்தக் கோலத்தை வர்ணிக்கையில் “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் திரிபுர சுந்தரி சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே! “ என்கிறார். இத்தகைய அம்பிகையை, “நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு  வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என் றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!” இது நாம் ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதே போல் இன்னொரு அந்தாதியிலும் கூறுவார்: “பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’ என்றும் கூறுகிறார். சிலம்பணிந்த சிறிய திருவடிகளை உடைய அம்பிகை தன் கைகளில் பாசமும், அங்குசமும் கொண்டு ஐந்து மலர்ப்பாணங்களையும் கையில் ஏந்தி, சிந்தூரம் போன்ற சிவந்த மேனியோடு திரிபுரசுந்தரியாக வீற்றிருக்கிறாள். அவளே பராசக்தியின் ஐந்தாவது சக்தியான அநுகிரஹ சக்தியான பஞ்சமியாகவும், “பஞ்சமீ பஞ்சபூதேசீ” கருநிறக் காளியாகவும், கோபம் கொண்ட சண்டிகாவாகவும்,” மஹேஸ்வரீ, மஹாகாலி மஹாக்ராஸா மஹாசனா!அபர்ணா சண்டிகா சண்டமுண்டாசுர நிஷூதநீ” சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருக்கும் மண்டலியாகவும் காட்சி அளிக்கிறாள். “பாநு மண்டல மத்யஸ்தா” என லலிதா சஹஸ்ரநாமாவளி கூறும். இனி லலிதாம்பாளின் ஸ்ரீசக்ர வர்ணனையின் சோபனப்பாடலைக் காண்போம். இந்த வர்ணனை மட்டும் நடுவிலிருந்து போடாமல் பாடல் எண் 166ல் இருந்து பாடல் எண் 188 வரையும் முழுவதும் கொடுக்கப் படும். தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில் ஏழும் தேவிக்குப் பதிநாறு ஸ்ரீபுரங்கள் மேருகிரியிலொரு ஸ்ரீபுரமுண்டதை முன்னாலே உமக்கு நான் சொல்லுகிறேன் மூவராலும் ஆதிசேஷராலும் சொல்லி  முடியாது அம்மன்புர மஹியை சாவதானமாகக் கேட்கவேண்டுமிதை தன்யனே சொல்லுவேன் – சோபனம் சோபனம் ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு உயரம் நாநூறு யோஜனைகள் உண்டு நன்றாக நூறு யோஜனை அகலங்காண் நான்குபுறத்திலும் வாசலுண்டு வாசல்கள் தோறும் கோபுரமுண்டு அதற்கு வரியாக தட்டுக்கள் இருபத்தஞ்சு யோஜனைக்கு ஒரு தட்டு வீதங்கணக்கு உச்சி மகுடம் மூன்று – சோபனம் சோபனம் இந்த வாசல் போலே நாலு வாசலுக்கும் இது போலே கோபுரத் தட்டுமுண்டு இந்தக் கோட்டை வாசல் கதவு கோபுரமுதல் எல்லாம் இரும்புப் பணி இதைப்போல எந்தக் கோட்டைகளினி சொல்லப் போகின்றோமோ அந்தக் கோட்டை இதுபோலகஸ்தியா இந்தக் கோட்டை கழிந்தபுறமுள்ளது ஏழுயோஜனையுண்டு சோபனம் சோபனம் ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில் எல்லா மரங்கலும் நிறைந்திருக்கும் தோழர்களே ஏழு யோஜனையின் விஸ்தாரம் சொல்லப்போகிறோம் கோட்டை இடைநடுவில் காளியுங்காளரும் சக்தியுடனே  கால சக்ராசனத்தில் இருந்து லலிதையுடைய நாமஞ்ஜபித்து ஒன்றாங் கோட்டை ரக்ஷிக்கிறாள் என்றும் சோபனம் சோபனம் வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல் வேலியும்கற்பக விருக்ஷமாகும் தங்கச் செம்புக் கோட்டையில் வேலி ஹரிசந்தனம் சுசியான கிரீஷ்மருது காவல் ஈயக் கோட்டையின் வேலி சந்தன விருக்ஷங்கள் எங்குஞ் சுற்றிக் காவல் வர்ஷருது முன்னாலிரும்புக்கோட்டையின் வேலி மந்தாரை வெளுத்த சரத்ருது காவல் –சோபனம் சோபனம் பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி ஹேமந்தருது காவல் காத தூரம் பஞ்சப்பொன்கோட்டைக்கும் மந்திரிணி முதலான சக்திகள் கிருஹம் சிசரருது காவல் பிக்ஷூரகத்து சித்தர்களும் முத்திப் பெண்குகளுங்கூடி இருக்கின்றார்கள் பிக்ஷூரம் கழிந்தப்புரஞ்சாரணர் பத்மராகக் கிருஹம் சோபனம் சோபனம் அழகிய கந்தர்வாள் வைரக் கிரஹந்தன்னில் அதற்குப்பின் யோகிகள் வஜ்ஜிரக்கிருஹம் புதுநாகரத்னமும் வைடூர்யத்தாலும் பின்னிந்திரக் கல்லாலுமுள்ள கிருஹம் முத்துக்கள் சூழும்மரகதத்தால் கிருஹம் மின்போல் வராகிக்கும் நாலு கிருஹம் சுத்தமான கிருஹம் பிரம்மாவுடையது செம்பவழத்தாலே – சோபனம் சோபனம்  ஸ்ரீலலிதையின் சோபனம்! அம்பிகையின் இருப்பிடங்கள்! [] சிந்தாமணி கிருஹத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் ஸ்ரீபுர வர்ணனை தொடர்கிறது. “மாணிக்க மண்டபத்தில் விஷ்ணுவும் இருக்கின்றார் மண்டபத்தினிடையில் சிவலோகம் பிரம்ம தேவருடைய சத்தியலோகமும் பிரபலமான விஷ்ணுவின் உலகம் மாயக்கோட்டை அனந்தம் வர்ணமுள்ள கோட்டை அதற்கிடையில் சூரியனின் விமானம் பகவான் மார்த்தாண்ட பைரவர் இருப்பு பக்தரே கேளின்னுஞ் –சோபனம், சோபனம். சந்திரபிம்பத்தில் சிங்காரமாகவே சரியாக இருபத்தஞ்சு கோட்டையும்  சுந்தரமான கோபுரங்களும் தானுண்டு தொகையொரு கோட்டைக்கு நான்கு வீதம் அப்புரத் தாமரைப் புஷ்பங்களின் வனம் ஆறு யோஜனைக்கு நிறைந்திருக்கும் விப்ரனே அதற்குக் கிழக்காகவே யெங்கும் சுற்றிக் கதம்பவனம் –சோபனம் சோபனம் அதற்குக்கிழக்கிலே மும்மூர்த்திகளுக்கும் அகங்கள் மூன்று பத்ம அடவியிலே இதற்கு நடுவில் சிந்தாமணி ரத்தினத்தால் ஈச்வரி லலிதா தேவியின் கிருஹம் நாலுபுறம் வாசல் உண்டதற்குச்சியில் ஞானரத்னத்தாலே மகுடம் வலப்புறத்திலே மந்திரிணியின் கிருஹம் வாராஹிக்கிடப்புறம் –சோபனம் சோபனம் அக்கினி முடுக்கிலே அக்கினிக்குண்டம் அதற்கு மேலே நிற்கும் ஸ்ரீசக்கரத்தேர் நிர்கின்றது வாயுமுடுக்கில் மந்திரிணிதேர் நேரே ஈசான்யத்தில் வாராஹிதேர் இந்த நடுவிலே சக்திகளின் கிருஹம் சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றிலும் சிந்தாமணிக்கிருஹம் சிந்தாமணிச்சுவர் சுற்றிலும் தீபங்கள் –சோபனம் சோபனம் சிந்தாமணிக்கிருஹத்தின் நடுமத்தியிலே சிந்தாமணியாலே ஸ்ரீபீடம்  அஷ்டகோண வடிவாகி விளங்கிய சக்ரராஜா வென்ற பீடத்தின்மேல் ஐம்மூன்று தட்டத்த ஸ்ரீபீடத்திற்கு ஆயிரத்தறுநூறு முழம் வீதி கைமுழத்திற்கிருபது முழ உயரம் தட்டு கடலைக்குடித்தவகஸ்தியர் –சோபனம் சோபனம் தட்டு தோறும் இதுபோல் உயரம் வீதி தட்டுதோறும் சக்திகள் இருக்காள் திட்டமாய் ஸ்ரீபீடத்திற்கப்புறத்திலே சிங்காரப்படி முப்பத்தாறு ஸ்தம்பம் வட்டமான இந்தபீடத்தில் ஈசர் பிரம்மா மாலவர் ருத்திரர் கட்டிலின் கால் கட்டிற்பலகை சிவன் ஸதாசிவன் பாய் ஈசானன் தலையணை –சோபனம் சோபனம். “ஸர்வாருணா நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா சிவ-காமேஸ்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா ஸுமேரு-மத்ய – ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதற்கேற்ப, இங்கே அம்பிகை வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம். மஞ்சத்தின் மேல் ஹம்ஸதூளிகா மெத்தையும் வட்ட இருபுறத்தலையணையும் மஞ்சத்தின் மேலே கிழக்கைப் பார்த்திருக்கின்றார் மன்மத கோடி போல் காமேசரும் நாதர் காமேசர் மடிமேல் கிழக்கைப் பார்த்து தாய் லலிதா தேவியும் இருக்காள் பாலா லலிதா தேவிக்கு நித்தியம் பதினாறு வயதென்றும் –சோபனம், சோபனம் சர்வ சக்தி வாய்ந்த அம்பிகை கிழக்கில் இந்திராணி சக்தியாகவும், அக்னி மூலையில் அக்னி தேவதையாகவும் தெற்கில் வாராஹியாகவும், நிருருதி மூலையில் கட்கதாரிணியாகவும் காக்கிறாள். மேற்கில் வாருணீயாகவும், வாயுமூலையில் மிருகவாஹினியாக வாயுசக்தியும், வடக்கில் கெளமாரியும், ஈசான்யமூலையில் சூலதாரிணியாகவும் காத்து வருகிறாள். பிரஹ்மாணி மேலேயும், விஷ்ணு சக்தி கீழேயும் ஆக மொத்தம் பத்துத் திசைகளையும் தன் சக்தியால் சாமுண்டா தேவி காத்தருள்கிறாள். தேவியைப் பிரார்த்திக்கையில், ஜய சக்தி நம் முன்னால் இருக்கவேண்டும் என்றும், விஜய சக்தி பின்னாலும், அஜிதா இடப்பக்கமும், அபராஜிதா வலப்பக்கத்தில் இருக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கவேண்டும். மேலும் நம் சிகையை உத்யோதினீ தேவியும், சிரசில் உறையும் உமா சிரசையும், லலாடத்தை மாலாதாரிணியான சக்தியும், புருவத்தை யஷஸ்வினியும் காக்கவேண்டும். புருவ மத்தியை த்ரிநேத்ரதாரியான அம்பிகையும், நாசியை யமகண்டாதேவியும், கண்களின் நடுவே சங்கினீ சக்தியும், காதுகளில் துவாரவாஸினீ சக்தியும் ரக்ஷிக்கவேண்டும். கன்னத்தில் காளிகா தேவியும், கர்ணமூலத்தில் சங்கரியும், நாசிகைகளில் ஸுகந்தா தேவியும், மேலுதட்டில் சர்ச்சிகா தேவியும், கீழுதட்டில் அம்ருதகலாதேவியும், நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காக்கவேண்டும். பற்களில் கெளமாரியும், கழுத்தின் நடுவில் சண்டிகையும் காக்கவேண்டும். உள்நாக்கைச் சித்ரகண்டா தேவியும், தாடையை மஹாமாயையும், மோவாய்க்கட்டையைக் காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்களா தேவியும் காக்கவேண்டும். கழுத்தில் பத்ரகாளியும், முதுகெலும்பில் தருத்தரீ தேவியும் கழுத்தின் வெளியில் நீலக்ரீவாதேவியும், கழுத்தெலும்பை நளகூபரீ தேவியும் காக்கவேண்டும். தோள்களை கட்கதாரிணியும், புஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கவேண்டும். நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்க, கஷ்கங்களை அனலேஸ்வரி ரக்ஷிக்க, ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்க, மனதைச் சோகவிநாசினி ரக்ஷிக்கவேண்டும். இருதயத்தை ஸ்ரீலலிதையும், வயிற்றை சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேஸ்வரியும் காக்கவேண்டும். பூதநாதா லிங்கத்தையும் மஹிஷவாஹினி அபானத் துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் காக்கவேண்டும். தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும். கால்விரல்களை ஸ்ரீதரியும், பாதத்தின் கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்வகேசினியும், மயிர்க்கால்களை கெளபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு,மூளை இவற்றைப் பார்வதியும் காக்கவேண்டும். குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேஸ்வரியும், ஆதாரக் கமலங்களில் பத்மாவதியும், சுபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும். நகங்களுக்குப் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா சந்திகளிலும் அபேத்யா தேவியும் பிரம்மாணி சுக்லத்தையும், நிழலை சத்ரேஸ்வரியும் ரக்ஷிக்கட்டும். தர்மசாரிணி நமது அஹங்காரத்தையும், மனதையும், புத்தியையும் காக்கவேண்டும், பிராணன், அபானன், வியானன், ஸமாநன், உதானன் போன்றவற்றையும் அவளே காப்பாள். புகழ், கீர்த்தி, அழகு இவற்றை சக்ரீணியும், இந்திராணி கோத்திரத்தையும், சண்டிகை பசுக்களையும் காக்கவேண்டும். மஹாலக்ஷ்மி தன் குழந்தைகளான நம்மை காக்கவேண்டும். பைரவி மனைவியையும், க்ஷேமங்கரீ வழியையும், விஜயா அனைத்துப் புறங்களிலும் காக்கவேண்டும். இங்ஙனம் தேவியின் ஸ்மரணமே நம்மைக் காக்கும் கவசமாக நினைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது. இதைத் தவிரவும் தேவியின் இருப்பிடங்களாகவும், அவற்றில் குடிகொண்டிருக்கும் நாமாவளிகளும் விவரிக்கப் பட்டிருக்கிறது. அவையாவன: லக்ஷ்மி தேவிக்குக் கோலாபுரம் மஹாஸ்தானமாகவும்,  ரேணுகாதேவிக்கு மாத்ருபுரமும், துர்க்கைக்கு சப்தஸ்ருங்கம், துளஜாபுரம், இங்குலை, ஆகிய இடங்களும், ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ஸ்ரீரக்த தந்த்ரிகா, அன்னபூரணி ஆகியோரின் இருப்பிடமாக சர்வ சக்தி வாய்ந்ததும், மூலாதார க்ஷேத்திரங்களின் முதன்மையானதும் ஆன காஞ்சிபுரமும், அங்கேயே பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்ட ஏகாம்பரமும், யோகேஸ்வரி பிரதிஷ்டை செய்த தேஜோஸ்தானம், பீமாதேவி விந்த்யாசலத்திலும், விமலாதேவி, நீலாம்பிகை போன்றோர் திருவானைக்காவல், ஸ்ரீநகரம் நேபாளத்தில் குஹ்யகாளியாகவும், எல்லாவற்றுக்கும் மேல் தஹராகாச க்ஷேத்திரமான சிதம்பரத்தில் சிவகாமியாகவும், வேதாரண்யத்திலும் சீனத்திலும் நீல சரஸ்வதியாகவும், வைத்தியநாதத்தில் வகலாவாகவும், மணித்வீபத்தில் புவனேஸ்வரியாகவும் காமாக்யாவில் திரிபுர பைரவியாகவும் புஷ்கரில் காயத்ரி தேவியாகவும், அமரேசத்தில் சண்டிகையாகவும், பிரபாச க்ஷேத்திரத்தில் புஷ்கரேக்ஷணியாகவும், நைமிசாரண்யத்தில் லிங்கதாரிணியாகவும், புருஹூதையில் புஷ்கராக்ஷியாகவும், ஆஷாடத்தில் ரதி தேவியாகவும், மைசூரில் சண்டமுண்டிகாவாகவும், பராபூதி, பூதியில் பரமேஸ்வரியின் தண்டினியாகவும், நகுலத்தில் நகுலேஸ்வரியாகவும், அரிச்சந்திராவில் சந்திரிகாவாகவும், ஸ்ரீபர்வதத்தில் சங்கரியாகவும் திருவையாறில் திரிசூலியாகவும், ஆம்தாத்கேச்வரத்தில் குக்ஷுமாவாகவும், மகாகாளேச்வரத்தில் சங்கரியாகவும் மத்திமத்தில் சர்வாணியாகவும், கேதாரத்தில் மார்க்கதாயினியாகவும், பைரவத்தில் பைரவியாகவும், கயையில் மங்களாவாகவும், குருக்ஷேத்திரத்தில் ஸ்தாணுப்ரியாவாகவும், நகுலத்தில் ஸ்வாயம்பவியாகவும் கனகலத்தில் உக்ராதேவியாகவும், விமலேஸ்வரத்தில் விஸ்வேஸ்வரியாகவும், மஹாநந்தாவில் மஹாந்தகையாகவும், பீமக்ஷேத்திரத்தில் பீமேஸ்வரியாகவும், பவானியில் சங்கரியாகவும். அர்த்தகோடியில் ருத்ராணியாகவும் காசியில் தன் விசால நயனங்களால் அருளாட்சி புரியும் விசாலாக்ஷியாகவும், மகாலயத்தில் மஹாபாகாவாயும், கோகர்ணத்தில் பத்ரகாளியாகவும், பத்ரகர்ணிகையில் பத்ரியாகவும் உத்பலாக்ஷியில் ஸ்வர்ணாக்ஷியாகவும், ஸ்தாண்வீயில் ஸ்தாணுவாகவும், திருவாரூர் என்னும் மற்றொரு மூலாதார க்ஷேத்திரத்தில் கமலாம்பிகையாகவும் சகலண்டகத்தில் பிரசண்டையாகவும் குருண்டலையில் த்ரிசந்தியாதேவிகளாகவும் மாகோடத்தில் மகுடேஸ்வரியாகவும் மண்டலேசத்தில் கண்டகியாகவும், காலஞ்சரத்தில் காளிகாவாயும், சங்குகர்ணத்தில் த்வனீஸ்வரியாகவும் ஸ்தூலகேஸ்வரத்தில் ஸ்தூலகேஸ்வரீயாகவும், அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள். தேவியின் இந்த நாமாவளிகளை முடிந்தவர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளுமோ அல்லது ஒருவேளையோ சொல்லலாம். இவை தேவியின் சக்திபீடங்கள் எனச் சொல்லப் படுகின்றன. இவற்றில் சில இருக்குமிடம் தெரியவில்லை. சிலவற்றின் இன்றைய பெயர்கள் மாறியுள்ளன. விரைவில் ஒரு சின்ன அட்டவணையுடன் தர முயல்கிறேன். "இடது துடைமேல் சுவாமி வைத்துக்கொண்டம்மனை வலது கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு விடைமேல் அழகரும் வளமுடன் தேவிக்கு விபூதியிட்டு திருஷ்டி கழித்து அஞ்சாதீர் எனப் பக்தர்க்கபயப் பிரதானஞ்செய்து அம்பிகையுடன் தாம்பூலந்தரித்து இந்தபடி ஈசன் சிந்தாமணிக்கிருஹத்தில் இருந்தார் தேவியுடன் -சோபனம் சோபனம் தேவிக்கு உயர நாற்பது முழத்திற்கு மேல் தேசத்தில் ஒப்பில்லா மேல்கட்டிலில் யமுனாகைஹாரமாகச் சுற்றியிருக்கின்றாள் இச் ஜகத்தை மோஹிப்பிக்கும் மாயை! தேவியுடைய ஸெளபாக்கியத்திற் கொப்பில்லை தேவிதானறிய வேணுமகஸ்தியா நாவாலும் மனதாலும் எண்ண முடியாது ராஜேச்வரி மஹிமை-சோபனம், சோபனம் யமுனாகைஹாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி. குண்டலினி சக்தியை தேவி என்றும் உடலைப் பாம்புபோல் மூன்றரைச் சுற்றாய் வளைத்துக்கொண்டு அங்கே வீற்றிருப்பதாயும் கூறுவார்கள். இந்தச் சக்கர விபரங்களையும், ஸ்ரீவித்யா ஜபத்தின் மஹிமை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்.  ஸ்ரீலலிதையின் சோபனம்! சோபனம்! சோபனம்! மங்களம்! []       [] கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இதற்கு முந்தைய பதிவு இங்கே!  இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள். “ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!” “ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ” என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும். அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க) நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம். “விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ” சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை, “பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!”  என்கிறார். அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு. “அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ” இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும். “கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!” என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல். மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்துப் பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம் அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும் அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும் அம்மன் சோபனமென்றும் பக்தியுடன் விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும் வியாதியில்லை சத்ரு பாதையில்லை நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம் இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம் தேவிகளென்று மனதிலெண்ணி சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம் ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும் ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும் தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம் இனி அம்பிகையை வழிபடவேண்டிய முக்கியமான காலங்கள் நாளை பார்ப்போம். அதோடு மங்களம் பாடி முடியும்.  [] [] அநாஹதத்திற்கு அடுத்து ஸ்வாதிஷ்டானம். அக்னியின் இருப்பிடம் ஆகும் இது. வாயோர் அக்னி என்பார்கள். வாயுவில் இருந்து அக்னி உண்டாகிறது. இங்கு ஆறு தள கமலத்தில் அம்பிகை காமேசுவரியாகப்பிரகாசிக்கிறாள். “காகினீ” என்ற பெயரிலும் வழங்கப் படுவாள். “ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா சூலாத்யாயுத-ஸம்பந்தா பீத வர்ணா திகர்விதா மேதோ-நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா த்த்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ!! அக்னி தத்துவமாய்க் காட்சி அளிப்பது திருவண்ணாமலையாகும். இங்குள்ளது தேஜோமயமான லிங்கம். மேலும் இங்கு தான் அம்பிகையும், ஈசனும் சமமாகவும் ஆனதாய்ச் சொல்லப் படுகிறது. அம்பிகை ஈசனின் உடலில் சரிபாதியை எடுத்துக்கொண்ட அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை இங்கே ஒவ்வொரு கார்த்திகைப் பெளர்ணமி தீபத்தின் போதும் காணமுடியும். ஈசன் இங்கே ஸமவர்த்தகேஸ்வரராகவும், அம்பிகையை ஸமயா என்றும் வணங்குவார்கள் சாக்த உபாசகர்கள். நெற்றிக்கண்ணால் அகில உலகத்தையும் அழித்து சம்ஹரிக்கும் ருத்ரனை ஸமயா என்னும் அம்பிகை தன் குளிர்ந்த பார்வையால் குளிர்ச்சி அடைய வைத்து அதே சமயம் எரிந்த இவ்வுலகையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறாள். காமனை எழுப்பிய சஞ்சீவனியான அம்பிகை இங்கு நம் அனைவரையும் உயிர்ப்பிக்கும் சர்வ சஞ்சீவியாகவும் விளங்குகிறாள். மேலும் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வேறு சமயங்களும் இல்லை. அவளை விடவும் உயர்ந்த தாய் வேறொருத்தியும் உண்டோ? இதையே அபிராமி பட்டர், “உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!” என்கிறார். ஏக உருவென்று அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தைக் கூறும் பட்டர், பக்குவமே இல்லாத நம் போன்ற பக்தர்களையும் அம்பிகையின் திருக்கடைக்கண் பார்வையானது ஆட்கொண்டு தனக்கு அன்பு செய்ய வைக்கும் என்கிறார். இதை விடவும் வேறு உயர்ந்த்தொரு சமயம் வேறு உண்டா என்று கேட்கும் பட்டர் பெருமான், அம்பிகை மேல் வைத்த பக்தியால் நமக்கு இனி மற்றொரு பிறவி எடுத்துத் துன்பப் படும் பிணி இல்லை. நம்மை ஈன்றெடுக்க மனித உருவில் இனி ஒரு தாய் இல்லை. அம்பிகையே நமக்குத் தாயாக ஆனாள். மேலும் பெண்ணாசையையும் ஒழிக்க வல்லது அர்த்த நாரீசுரத் தியானம் என்பதைச் சுட்டும் விதமாய்க் கடைசியில், “ அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே” என்கிறார். மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் ஒழிந்து போகும் என்று பொருள் கொள்ள வேண்டும். பொதுவாகச் சக்கர வரிசையில், விசுத்தி, அநாஹதம், மணிபூரகம் என்றே வரும். ஆனால் இவ்வுலகப் பஞ்சபூதத் தத்துவங்களின்படி, ஆகாயத்தின் பின் வாயுவும், வாயுவிற்குப் பின்னர் அக்னியும் தத்துவமானதால் ஸ்வாதிஷ்டானத்தைப் பார்த்தோம். அடுத்து மணிபூரகத்தைப் பார்ப்போமா? மணிபூரகம் நீரின் இருப்பிடமாய்க் கூறப்படும். நம் தமிழ்நாட்டில் திருவானைக்காவல் ஜலதத்துவமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கே அம்பிகை பத்துத் தளக் கமலத்தில், ஈசனோடு அம்ருதேஸ்வரியாய்க் கூடிக் காட்சி அளிக்கிறாள். லாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள். “மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா-ஸ்வரூபிணீ!! பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் மாபெரும் தெப்பமாய் இங்கே அம்ருதேஸ்வரரும், அம்ருதேஸ்வரியும், எப்படி பக்தர்களின் கண்களில் காட்சி அளிக்கின்றார்கள் எனில் நீருண்ட மேகம் போன்ற ஈசனிடம் அந்த மேகத்தில் தோன்றும் மின்னல் கொடியைப் போல் காட்சி அளிக்கிறாள். ஆசையானது மனிதர் மனதில் சூரிய வெப்பத்தைப் போல் உண்டாகிறது. அதனாலேயே இவ்வுலகத்தின் மேல் இடைவிடாத பற்றும் ஏற்படுகிறது. நம் ஆசையாகிய சூரிய கிரணம் அநாஹதத்தில் இருந்து கீழிறங்கி, ஸ்வாதிஷ்டானத்தின் அக்னியோடு சேர்ந்து கொண்டு, மணிபூரகத்தில் புகுந்து குளிர்ந்த மேகத்தை உண்டாக்கி அம்பிகையின் கருணை மழை பொழிந்து நம் மனதை மட்டுமில்லாமல் இவ்வுலகையும் குளிர்விக்கிறது. இந்த அப்புவிலிருந்து தோன்றுவது ப்ருத்வி த்த்துவம். இதன் இருப்பிடம் மூலாதாரச் சக்கரம். முக்கோணத்தின் நடுவே நாலு தளத் தாமரையில் வீற்றிருக்கும் அம்பிகையை ஸாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள். மூலாதாரம்புஜாரூடா பஞ்ச வக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா முத்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ”  இங்கு நடராஜரோடு கூடி சிறந்த தாண்டவம் செய்யும் அம்பிகையானவள், பிரளயகாலத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை ஈசனைப் பார்ப்பதின் மூலமே உற்பத்தி செய்கிறாள். “மஹேஸ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ-ஸாக்ஷிணீ மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸதாசிவன் தாண்டவநர்த்தனம் (வெறும் தாண்டவம் மட்டுமே) செய்யும்போது ப்ரக்ருதி ரூபமான அம்பாளோ லாஸ்ய நர்த்தனம் (இசையுடன் கூடிய நடனம்) செய்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கவே இவ்வுலகம் தோன்றுகிறது. மூலாதார க்ஷேத்திரங்களாய்க் காஞ்சியும், திருவாரூரும் சொல்லப் படுகிறது. இனி தேவியைப் பூஜிக்கும் முக்கியமான காலங்கள். அன்பாய் நவராத்திரி பெளர்ணமி சுக்கிரவாரம் அம்மன் சோபனந்தன்னைச் சொன்னபேர்க்குத் துன்பங்கள் உண்டாகமாட்டாது ஒருக்காலும் தென் திசையை யடையார் தினஞ்சொன்னவாள் ரொம்பச் சொல்லுவானேன் தேவி தாஸாளுக்குத் திரிலோகமும் அவர்கட்கு ஜயம் நம்பினபேர்களைக் காத்திடத் தேவியல்லால் நாட்டிலே வேறுண்டோ-சோபனம் சோபனம் அத்திரி மஹரிஷி ஆசிரமத்தில் அநசூயை கேட்ட இக்ஞான ரஹஸ்யத்தை நல்துறையில் வாழும் லக்ஷ்மி கடாக்ஷத்தால் நாராயணனுரைத்த தேவி மஹிமை ராஜேச்வரியாள் மஹிமை யகஸ்தியரும் ஆதரவாய்ச் சொல்லச் சொன்னதற்கு நாடு செழிக்க அவதரித்து வந்த  மாதவர் அறிவித்தார்-சோபனம் சோபனம் அறிந்தறியாமல் இந்தச் சோபனத்தில் அர்த்த அக்ஷரப்பிழை இருந்தாலும்  மஹாப்பிரபு மனுஷப்பிரபு விஷ்ணு என்பது போலும் மராமரா என்றதொர் நாமம் போலும் வரதசிவனார் சிவசங்கர நாமம் போலும் வார்த்தைப் பிழைகள் தன்னைப் பொறுத்து எதுவிதத்திலும் (பர)தேவியைத் தியானித்தால் ஏழைக்கிரங்குவள்-சோபனம் சோபனம் மங்கள வாழ்த்து ஜயமங்களம் லலிதா தேவிக்கும் ஜயமங்களம் காமேச்வரருக்கும் ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும் ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும் ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும் ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும் ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும் ஜயமங்களம் நித்ய சுப மங்களம் லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது.  ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.   உதவிப் புத்தகங்கள்:  அபிராமி அந்தாதி- உரை திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 4-ம்பதிப்பு ஜூலை 1968 செளந்தர்ய லஹரி பாஷ்யத்துடன்: "அண்ணா" அவர்களால் எழுதப்பட்டது. ராமகிருஷ்ணா மடம் வெளியீடு ஸ்ரீலலிதாம்பாள் சோபனம்: கிரி ட்ரேடர்ஸ் வெளியீடு. சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் தொகுக்கப் பட்டது.பதினைந்துக்கும் மேல் பதிப்புகள் கண்டது.  ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள் மட்டும் ஸ்ரீதேவி மஹாத்மியம் "அண்ணா" அவர்கள் உரையுடன் ராமகிருஷ்ணா மடம் வெளியீடு. 2010 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து  மிகுந்த முயற்சியுடன் எழுத ஆரம்பித்த இது அதே வருடம் டிசம்பர் மாதத்தில் முதல் வாரம் மேற்கண்ட பதிவுகளுடன் முடிவடைந்துள்ளது. லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் குறித்து எழுதுவது எனில் இன்னும் நீண்ட காலம் தேவைப்படும். ஆழ்ந்த பயிற்சியும், தக்க குருவின் உதவியோடு புத்தக உதவிகளும் தேவைப்படும். எப்போது எனக்குக் கிடைக்குமோ தெரியலை. என்றாலும் இங்கே ஓர் சிறிய முயற்சி செய்திருக்கேன். இதைப் பலரும் அவரவர்களின் தளங்களில் அவரவர் பெயரிலேயே வெளியிட்டும் இருக்கின்றனர். ஒரே ஒருத்தரைத் தவிர்த்து யாரும் மாற்றவில்லை. :(  நான் இதை எழுதும்போதே "இல்லம்" குழுமத்திலும் போட்டு வந்ததோடு பின்னர் "மரபு விக்கி" மரபு விக்கியிலும் இதை தரவேற்றி உள்ளேன். இதை ஓர் சிறு மின்னூலாக வெளியிடும் ஆசையும் உண்டு. அதே சமயம் அது சரியா என்னும் எண்ணமும் தோன்றுகிறது. லலிதாம்பாள் என்ன நினைக்கிறாளோ அதன் படி நடக்கும்! இது வரை பொறுமையாகப் படித்து வந்த அனைவருக்கும் என் நன்றி. தியானம், யோகம் சம்பந்தப்பட்ட இடங்களில் புரியாதோருக்கு இது கொஞ்சம் கடினமாகவே தெரியும். ஆனாலும் யோகம் பற்றியும் ஆறு சக்கரங்கள் குறித்தும் ஓரளவுக்கானும் புரிந்து வைத்திருப்பவர்களுக்குப் புரியும். இவை ஜனரஞ்சகமான பதிவுகள் அல்ல. அம்பிகையின் தத்துவத்தைப் பற்றிப் படிக்கப் படிக்க எங்கேயோ நம்மை இழுத்துச் செல்லும். கவனமாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் அம்பிகையின் அருள் பரிபூரணமாய்க் கிட்டுவதற்கு என் பிரார்த்தனைகள்.      FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   கணியம் அறக்கட்டளை [] rect224   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்   - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Kaniyam Foundation Account Number : 606101010050279 606 1010 100 502 79                                                        Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618