[] [‘மேட்ச் ஃபிக்சிங்’ - கிரிக்கெட் கட்டுரைகள்] ‘மேட்ச் ஃபிக்சிங்’ - கிரிக்கெட் கட்டுரைகள் பத்ரி சேஷாத்ரி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com Creative Commons Attribution-NoDerivatives 4.0 International This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - ‘மேட்ச் ஃபிக்சிங்’ - கிரிக்கெட் கட்டுரைகள் - 1. மேட்ச் பிக்சிங் : சுனாமி கிரிக்கெட் - 2. இளம் நட்சத்திரம் இர்ஃபான் பதான் - 3. ஜிம்பாப்வே கிரிக்கெட்டும் அரசியலும் - 4. குற்றமும், தண்டனையும், மேல்முறையீடும் - 5. வளைந்த கைகள் - 6. கிரிக்கெட் ஆட்டத்தில் பல்வேறு அடிகள் - 7. பந்துத் தடுப்பு வியூகங்கள் பற்றி - 8. வேகப்பந்து வீசும் கலை - 9. தேவை ஒரு நல்ல விக்கெட்கீப்பர் - 10. அரங்கத்துக்குப் போய் கிரிக்கெட் பார்ப்பது - 11. கும்ப்ளே 400 - 12. ஷரத் பவாரைத் தோற்கடித்த தால்மியா 'தில்லுமுல்லு' - 13. பகலுக்குப் பின் இரவு வரும், இரவுக்குப் பின் பகல் - 14. டெண்டுல்கரின் 'டென்னிஸ் எல்போ' - 15. இந்த வார கிரிக்கெட் அலசல் - 16. இந்தியாவின் தொல்லைகள் - 17. யார் அந்த ஹார்மிசன்? - 18. கிரிக்கெட்டின் ஆஸ்கார் யாருக்கு? - 19. இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி - 20. ஒரு போஸ்ட்மார்டெம், உலகக்கோப்பை 2007க்கான நம் எதிர்பார்ப்புகள் - 21. விக்கெட் கீப்பர் குழப்பம் - 22. டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழ ஒன்றுமே இல்லையா? - 23. இரு சாம்பியன்கள் - 24. அணித்தலைவர்கள் பற்றி - 25. சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்கள் - 26. கிரிக்கெட் தொடர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் - 27. இலங்கையின் ஹீரோ, உலக கிரிக்கெட்டின் வில்லன்? - 28. கிரிக்கெட் கவரேஜ் - 29. Farewell to நாசெர் ஹுசைன்! - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 ‘மேட்ச் ஃபிக்சிங்’ - கிரிக்கெட் கட்டுரைகள் [Cover Image] “தமிழோவியம் இணையத்தளத்தில் ஜூன் – டிசம்பர் 2004-ல் தொடராக வெளியானவை” http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=bseshadri   ஆசிரியர் – பத்ரி சேஷாத்ரி – bseshadri@gmail.com மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com   உரிமை – Creative Commons Attribution-NoDerivatives 4.0 International உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். வெளியீடு: http://FreeTamilEbooks.com       [pressbooks.com] 1 மேட்ச் பிக்சிங் : சுனாமி கிரிக்கெட் சுமத்ரா அருகே மையம் கொண்ட நிலநடுக்கம் உலகையே உலுக்கியிருக்கிறது. 26 டிசம்பர் 2004, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் பல நாடுகளில் பாக்சிங் டே (Boxing Day) என்று கொண்டாடப்படுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற கிறித்துவ காமன்வெல்த் நாடுகளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்மஸ் அன்று தமக்குள்ளாக பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டாடும் பணக்காரர்கள், கிறிஸ்மஸ் பண்டிகை மறுநாள் தம் கீழே வேலை பார்க்கும் ஏழைகளுக்கு பெட்டிகளில் தானம் தருவதையும், அந்தப் பெட்டிகளைப் (box) பெறுவோர் அந்தப் பெட்டிகளை ஆவலோடு பிரிப்பதுமே boxing day என்னும் பெயர் வர முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. பணக்காரர்கள், அவர்களிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரர்கள் என்ற பாகுபாடு இந்த நாடுகளில் கிட்டத்தட்ட காணாமல் போனாலும், இந்த ‘பாக்சிங் டே’ எனும் பெயர் மட்டும் தங்கி விட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 26-30 டிசம்பர் தேதிகளில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இம்முறை ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்த்து தொடரின் இரண்டாவது டெஸ்டில் விளையாடியது. நியூசிலாந்து-இலங்கை இரண்டும் முதலாவது ஒருநாள் போட்டியில் மோதின. இந்த இரண்டு ஆட்டங்களும் தொடங்கி ஒரு மணிநேரத்துக்குப் பிறகுதான் சுமத்ராவுக்கு அருகே கடலில் நிலநடுக்கம். அப்பொழுது இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தம் நாடு பேரழிவில் மாட்டிக்கொள்ளப்போகிறது என்று தெரியாது. அன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை மிகக்குறைந்த ரன்களுக்கு அவுட்டாகி விட, தொடர்ந்து விளையாடிய வெகு எளிதாக ஆட்டத்தை வென்றது. மறுநாள் நிலநடுக்க விபரீதத்தின் வீச்சு இலங்கை ஆட்டக்காரர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. ஜெயசூரியா, அட்டபட்டு இருவரின் பெற்றோர்களுக்கும் ஆபத்து இருக்கலாம் என்று செய்திகள் வந்தன. ஜெயசூரியாவின் தாயார் மாதர – கடற்கரை நகரம் – எனுமிடத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் காயம் பட்டார். ஆனால் தப்பித்துவிட்டார். அட்டபட்டுவின் தந்தை வெளியூருக்குப் பயணம் செய்தவர் பத்திரமாக இருக்கிறார் என்றும் பின்னர் தகவல் கிடைத்தது. கால் கோட்டைக்கருகே உள்ள கிரிக்கெட் மைதானம் கடலலைகளால் சூறையாடப்பட்டு குப்பைக்காடாகக் காட்சியளித்தது. இலங்கையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் தெய்வாதீனமாகத் தப்பியதாகக் குறிப்பிட்டார். கால் நகரிலிருந்த முரளி அங்கிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்குள்ளாக கடலலை ஊருக்குள் நாசத்தை விளைவித்தது. இலங்கை ஆட்டக்காரர்கள் உடனடியாக நாடு திரும்ப விரும்பினர். ஆனால் பாதியில் ஒரு போட்டித்தொடரை முறித்துக்கொண்டு வந்தால் ஐசிசி அபராதம் விதிக்கும் என்று இலங்கை கிரிக்கெட் நம்பி, அதனால் பயந்து தமது கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து விளையாடுமாறு வற்புறுத்தியது. ஆனால் மறுநாளே ஐசிசி, இரண்டு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், தொடரை ரத்து செய்து, வேறு சமயத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்க, நியூசிலாந்தின் ஒப்புதலோடு இலங்கை வீரர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள சேதம் மிக மோசமானது. அந்நாட்டிற்கு பேருதவி வெளியிலிருந்து தேவைப்படுகிறது. இதற்கிடையே இலங்கை அரசு சரியான முறையில் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதில்லை என்ற சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. மெல்போர்னில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்ந்து நடைபெற்றது. இரு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடினாலும், இரண்டாம் இன்னிங்ஸில் உதிர்ந்து போக, ஆஸ்திரேலியாவுக்கு மற்றுமொரு எளிதான வெற்றி. ஆஸ்திரேலிய வீரர்கள் தமது பரிசுப் பணத்தை சுனாமி உதவி நிதிக்கு வழங்கியுள்ளனர். []பாக்சிங் டே – சுனாமி நாள் அன்று மற்றும் இரண்டு கிரிக்கெட் ஆட்டங்கள் நிகழ்ந்தன. இந்தியா-பங்களாதேஷ் இரண்டாம் ஒருநாள் போட்டி. இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த அளவு ஞாயிறு அன்று யாருக்கும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் ஒருவேளை ஆட்டத்தை நிறுத்தியிருப்பார்களா? பங்களாதேஷிலும் அதிகமாக எந்த சேதமும் நடக்கவில்லை. உலகுக்கே மோசமான ஒரு நாளாக இருந்தாலும் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு இந்த நாள் முக்கியமான நாள். அன்று பங்களாதேஷ் இந்தியாவைத் தோற்கடித்து, சொந்த மண்ணில் முதல் முதலாக ஓர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வென்றது. மறுநாளே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டித்தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து இரண்டும் பாக்சிங் டே அன்று டர்பன் நகரில் இரண்டாம் டெஸ்டை விளையாட ஆரம்பித்தன. இங்கிலாந்து மிக எளிதாக முதல் டெஸ்டை ஜெயித்திருந்தது. ஆனால் இரண்டாம் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் மிகச்சிறு ஸ்கோருக்கே அவுட்டானது. தொடன்ர்து தென்னாப்பிரிக்காவும் நிறைய ரன்களைப் பெற்று நல்ல லீட் எடுத்திருந்தது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அபாரமாக விளையாடியது. டிரெஸ்கோதிக், ஸ்டிரவுஸ், தார்ப் ஆகியோர் சதமடிக்க, தென்னாப்பிரிக்கா தோற்கும் அபாயம் இருந்தது. ஆனால் இன்று கடைசி நாளில் தென்னாப்பிரிக்கா வெளிச்சமின்மையின் துணையுடன் ஆட்டத்தை டிரா செய்தது. இங்கிலாந்து அணியினரும் தம் வருமானத்தை சுனாமி நிவாரணத்துக்கென தந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் கிளைவ் லாய்ட், ஐசிசி உடனடியாக இலங்கைக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஐசிசியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஐசிசி கையில் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. அதன் ஒரு சந்தையான இலங்கை இன்று பெரும் திண்டாட்டத்தில் இருக்கிறது. ஐசிசியால் தாராளமாக பத்து மில்லியன் டாலர் உதவியை இலங்கைக்குக் கொடுக்க முடியும். ஆனால் தனக்கும் உலகில் நடக்கும் ஒரு பெரும் அழிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைப்போல ஐசிசி வாய்பொத்தி நிற்கிறது. தனித்தனியாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வருமானத்தைக் கொடுக்கும்போது பணத்தில் கொழிக்கும் ஐசிசியின் செய்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்ற அணி வீரர்கள் தத்தம் விளையாட்டுகளுக்குப் போய்விடுவார்கள். இலங்கை அணி வீரர்களுக்கு நீண்ட மீட்புப்பணி காத்திருக்கிறது. 2 இளம் நட்சத்திரம் இர்ஃபான் பதான் [] பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றியது. இந்தத் தொடரின் நாயகன் இர்ஃபான் பதான். நான்கு இன்னிங்ஸில் 18 விக்கெட்டுகள் பெற்று இந்திய வெற்றிக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் பதான். இந்தத் தொடரில்தான் பதான் முதல் முறையாக ஓர் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளோ, அதற்கு மேலோ பெறுகிறார். அதுவும் அடுத்தடுத்து மூன்று இன்னிங்ஸில். அதைப்போலவே இந்தத் தொடரில்தான் ஒரே டெஸ்டில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெறுவதும். எப்படி ஒரு மட்டையாளருக்கு அரை சதம், சதம், அதற்கும் மேல் என்று பெறுவது முக்கியமான மைல் கல்லோ, அதைப்போன்றே ஓர் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் பெறுவதும். இத்தனைக்கும் பதான் முதன்முதலாக சர்த்தேச கிரிக்கெட் விளையாட வந்து சரியாக ஒருவருடம்தான் நிறைவு பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் முதல் டெஸ்டை விளையாடிய பதான் மறக்க முடியாத யார்க்கர் ஒன்றில் கில்கிறிஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். காற்றிலே உள்நோக்கி வளைந்து சரேலென இறங்கிய பந்தில் கில்கிறிஸ்ட் முழுவதுமாக ஏமாந்து போனார். முன்வந்து தடுத்தோ, அடித்தோ ஆட முற்பட்டார் கில்கிறிஸ்ட். ஆனால் பந்து மட்டைக்கும், கால் காப்புக்கும் இடையேயான சிறிய இடைவெளியில் புகுந்து ஸ்டம்பைக் கழட்டியது. புதிதாக விளையாட வரும் எந்தவொரு இளைஞருக்கும் பெருத்த உற்சாகத்தைக் கொடுக்கும் விக்கெட் இது. கில்கிறிஸ்ட் பந்துவீச்சாளர்களின் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கக் கூடியவர். அழ வைத்து விடுவார். அவரை, அதுவும் இந்த வகையில் அவுட்டாக்குவது மாபெரும் பலத்தைத் தரக்கூடியது. அதையடுத்து வந்த பாகிஸ்தான் தொடரில், பதான் தன் முதிர்ச்சியை மட்டையடியில் காட்டினார். இந்தியா தோற்ற லாஹூர் டெஸ்டில் பதான், யுவ்ராஜ் சிங் இருவரும்தான் தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது. தன் பெற்றோர்கள் பார்க்க, தன் அரை சதத்தை எட்ட முயற்சி செய்து அவுட்டானார் பதான். பின்னர் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றொரு தோற்ற டெஸ்டில் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் பந்துவீச்சில் அவ்வப்போது பெறும் ஓரிரு விக்கெட்டுகள் பதான் அதிக தூரம் போகவேண்டியதைத் தெரிவித்தது. ஒரு தேர்ச்சி பெற்ற பந்துவீச்சாளர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். ஒரு விக்கெட் எடுத்துவிட்டால் உடனே புதிதாக உள்ளே வந்திருப்பவரை அச்சுறுத்தி, அவரையும் அவுட் செய்யப் பார்ப்பார். ஒரு விக்கெட் எடுத்தாலே போதும் என்ற மனநிலை அவரிடம் எப்போதும் இருக்காது. அதற்கு, ஒரு பந்து வீச்சாளர்க்கு முக்கியத் தேவை சில விக்கெட் எடுக்கும் பந்துகள். பதான் இடது கை மிதவேகப் பந்துவீச்சாளர். இவரது பெரும்பான்மைப் பந்துகள் வலது கை மட்டையாளருக்கு உள்நோக்கி ஸ்விங் ஆகும். துல்லியமாக வீசினால் முதல் சில ஓவர்களுக்குள் – மட்டையாளர்கள் பந்தைச் சரியாக கவனிக்கத் தொடங்கும் முன்னர் – எல்.பி.டபிள்யூ வகையில் விக்கெட் கிடைக்க ஏதுவான பந்து. இலங்கையின் சமிந்தா வாஸ் இவ்வாறு வீசுவதில் சமர்த்தர். பதானும் வாஸைப் போலவே துல்லியமாக வீசுகிறார். பங்களாதேஷ் போன்ற அணிகளின் திறமை குறைவான ஆட்டக்காரர்கள் இந்தப் பந்தில் நிறையவே தடுமாறுகின்றனர். பதானுக்கு நிறைய எல்.பி.டபிள்யூக்களும் கிடைக்கின்றன. பதானின் கூட்டாளி ஜாகீர் கான், பதான் அளவுக்கு பந்துகளை உள்ளே கொண்டுவருவதில்லை. இவரது பந்துகள் பெரும்பான்மையும் அவர் வீசும் கோணத்தினாலேயே வெளியே போகக்கூடியவை. அதற்கு மேல் வெளியே போகும் ஸ்விங் வேறு. எப்பொழுதாவது, கஷ்டப்பட்டுதான் பந்துகளை உள்ளே கொண்டுவருவார். பதான் அளவுக்கு ஜாகீர் கான் பந்தில் துல்லியம் கிடையாது. இங்கும் அங்குமாக நிறையவே அள்ளித் தெளிப்பார். மேலும் பதான் அளவுக்கு கிரீஸ் கட்டுப்பாடும் கிடையாது ஜாகீர் கானுக்கு. இதனால் எக்கச்சக்க நோபால்களும் உண்டு. பதான் பந்துவீச்சில் சில குறைபாடுகளும் உண்டு. ஒன்று வேகம் சற்று குறைவாக இருப்பது. கிட்டத்தட்ட மெக்ராத் வீசும் வேகத்தில்தான் பதான் வீசுகிறார் என்றாலும், தன் இளமையில் மெக்ராத் இன்னமும் வேகமாக வீசியவர். பதானும் இப்பொழுது சற்று வேகத்தைக் கூட்டும் முயற்சியில் – துல்லியத்தை சற்றும் குறைக்காமல் – ஈடுபடவேண்டும். மெக்ராத் தன் உயரத்தால், பந்தை அபரிமிதமாக எழும்ப வைப்பார். பதான், தன் உயரக் குறைவால் பந்தை ஓங்கிக் குத்துவதன் மூலம்தான் இதனைச் செய்யமுடியும். சமீபத்தில் பெர்த் ஆடுகளத்தில் மெக்ராத் பாகிஸ்தான் அணிக்கெதிராக அற்புதமாகப் பந்துவீசி ஒரே இன்னிங்ஸில் எட்டு விக்கெட் பெற்றார். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகச்சிறந்த பந்துவீச்சு இது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதுதான். ஆனால் மெக்ராத்தின் பந்துகளை விட கில்லெஸ்பி, காஸ்பரோவிச் இருவருமே வேகமாக வீசக்கூடியவர்கள். இருந்தும் மெக்ராத்தான் விக்கெட்டுகளைப் பெற்றார். எனவே வேகம் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. மெக்ராத்தின் திறமையே ஓவர் மாற்றி ஓவர் ஒரே இடத்தில் – ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசி, பந்தை சற்றே வெளியே கொண்டுபோவது. விடாது, மீண்டும் மீண்டும் அதையே வீசிக்கொண்டிருப்பது. மெக்ராத்திடமிருந்து பதான் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான். துல்லியமாக, ஒரே இடத்தில், மீண்டும் மீண்டும் பந்தை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற சோதனைகள் வேண்டாம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, நல்ல அளவில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். முடிந்தவரை பந்துகளை வெளியே செல்லுமாறு ஸ்விங் செய்ய வேண்டும். நடு நடுவே, எப்போதாவது மட்டும், பந்துகளை உள்ளே ஸ்விங் செய்யவேண்டும். எப்பொழுதாவது ஒரு பவுன்சர், ஒரு யார்க்கர். அவ்வளவுதான். அதைச் செய்தால் இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்னும் பட்டத்தைப் பெறுவதில் கஷ்டமேயில்லை. கபில் தேவுக்குப் பிறகு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் பதான். கபில் தேவ் சென்ற தூரம் வரையாவது இவரும் செல்வார் என்று எதிர்பார்ப்போம்! 3 ஜிம்பாப்வே கிரிக்கெட்டும் அரசியலும் இப்பொழுது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேயில் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இது. ஆனால் பல குழப்பங்களுக்குப் பின்னர் முதல் ஆட்டம் நடைபெறவில்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட்டே கடந்த மூன்று வருடங்களில் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. வெள்ளை/கறுப்பின மக்களுக்கிடையேயான போராட்டம் என்று மட்டும் எளிதாக இதனைச் சித்தரித்துவிட முடியாது. சற்று பின்னோக்கிப் போய் ஜிம்பாப்வேயின் சமீபத்திய அரசியல் வரலாற்றைப் பார்ப்போம். பிற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இன்றைய ஜிம்பாப்வேயின் பகுதிகளில் பல்வேறு கறுப்பு ஆப்பிரிக்க இனப் பழங்குடிகள் பல வருடங்களாகவே வாழ்ந்து வந்தனர். 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் ஜிம்பாப்வேயின் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர், ஆனால் 17ஆம் நூற்றாண்டில் பழங்குடியின அரசர்கள் போர்ச்சுகீசியர்களை விரட்டி விட்டனர். 19ஆம் நூற்றாண்டில் பிரிடிஷ் சவுத் ஆஃப்ரிகா கம்பெனி (கிழக்கிந்தியா கம்பெனி போல!) ஜிம்பாப்வே பகுதிகளில் சுரங்கம் தோண்டி தங்கம் வெட்டியெடுக்கும் உரிமையைப் பெற்றனர். பிரிடிஷ் காலனியாதிக்கம் இப்படித்தான் தொடங்கும். தங்கம் வெட்டுகிறேன், மிளகு வாங்குகிறேன் என்று ஆரம்பித்து பின் நாட்டையே தன் ஆதிக்கத்தில் கொண்டுவந்து சுரண்டும் வரை சுரண்டுவார்கள். 1893இல் ஜிம்பாப்வே முழுமையாக பிரிடிஷ் சவுத் ஆஃப்ரிகா கம்பெனி கைவசம் வந்தது. இதே நேரத்தில் தென்னாப்பிரிக்காப் பகுதிகள், ஜாம்பியா, மலாவி போன்ற ஆப்பிரிக்காவின் பெரும்பான்மைப் பகுதிகள் பிரிடிஷ் கைக்குள்தான் இருந்தன. 1923 முதல் தெற்கு ரொடீஷியா பிரிட்டனின் காலனியாக இருந்து வந்தது. 1953இல் பிரிட்டனின் கையிலிருந்து காலனிகளான தெற்கு ரொடீஷியா (ஜிம்பாப்வே), வடக்கு ரொடீஷியா (ஜாம்பியா), நியாசாலாந்து (மலாவி) ஆகியவை ஒருங்கே வந்து ஒரு கூட்டமைப்பாக – அதே சமயம் பிரிட்டனின் காலனியாக – இருந்தன. தெற்கு ரொடீஷியாவில் ஆட்சி, சொத்து எல்லாம் சிறுபான்மை பிரிடிஷ் வெள்ளைக்காரர்கள் கையில். மண்ணின் மைந்தர்களான பல்வேறு கறுப்பினத்தவர் வெள்ளைக்காரர்களின் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் கூலி வேலை செய்து ஏதோ கொஞ்சம் பெற்றுப் பிழைத்து வந்தனர். ஆட்சியும் வெள்ளைக்காரர்கள் கையில்தான். கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடையாது. காவல்துறை, ராணுவம் எல்லாமே வெள்ளைக்காரர்கள்தான். 1950களில் கறுப்பர்கள் இதனை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பல கட்சிகள் தோன்றின. ஆங்காங்கே ஆயுதப் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தன. இவையெல்லாம் ஆளும் வெள்ளைக்காரர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எப்பொழுதெல்லாம் தெற்கு ரொடீஷியா பிரதமராக இருப்பவர் கறுப்பர்களுக்கு சிறிதாவது சலுகை காட்ட முன்வருவாரோ, அவர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டு வேறொருவர் கொண்டுவரப்படுவார். 1963இல் அதுவரை சேர்ந்திருந்த தெற்கு ரொடீஷியா, வடக்கு ரொடீஷியா, நியாசிலாந்து ஆகியவை கூட்டமைப்பிலிருந்து பிரிந்தன. 1964இல் பிரிட்டன் வடக்கு ரொடீஷியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஜாம்பியா என்று பெயர் மாறிய இந்த நாட்டில் கறுப்பினத்தவரான கென்னத் கவுண்டா அதிபரானார். இதே நேரத்தில் தெற்கு ரொடீஷியாவும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் பிரிட்டன் சுதந்திரம் தரவேண்டுமென்றால் அங்கு பெரும்பான்மைக் கறுப்பர்களுக்கும் உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அவர்களுக்கும் ஆட்சியில் பங்குதரவேண்டும் என்று சொன்னது. ஆனால் தெற்கு ரொடீஷியாவை ஆண்டுவந்த வெள்ளையர்களுக்கு கறுப்பர்களுடன் ஆட்சியைப் பங்குபோட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. கோபம் கொண்ட தெற்கு ரொடீஷிய ஆளும் வெள்ளையர்கள் 1965இல் தாங்களாகவே பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர், அத்துடன் தம் நாட்டுப் பெயரை தெற்கு ரொடீஷியாவிலிருந்து ரொடீஷியா என்று மாற்றினர். பிரிட்டன் ஐ.நா சபை மூலம் ரொடீஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் உண்மையில் ரொடீஷிய வெள்ளையர்களின் உறவினர்கள் அனைவரும் பிரிட்டனில்தான் இருந்தனர். இங்கும் அங்கும் போய்வர எந்தத் தடைகளும் இல்லை. ரொடீஷியாவின் பொருளாதாரம் இந்தத் தடைக்காலத்தில் நன்றாகவே வளர்ச்சியடைந்தது. இதே நேரத்தில் கறுப்பினக் கட்சிகளான ZANU, ZAPU ஆகியவை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியது. ரொடீஷியாவில் இராணுவத்திற்கு தென் ஆப்பிரிக்க வெள்ளை நிறவெறி ராணுவமும் உதவி செய்தது. 1970களிலும் பிரச்னை தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருவழியாக 1979இல் பிரிட்டன் தலையீட்டால் புது அரசியல் நிர்ணயச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுனைதுவரை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது. 1980 தேர்தலில் ராபர்ட் முகாபே பிரதமரானார். ஆனால் தொடர்ச்சியாக அப்பொழுதும் சொத்துக்கள் பலவும் வெள்ளையினத்தவர் கைகளில்தான் இருந்துவந்தது. அத்துடன் ராபர்ட் முகாபே கட்சிக்கும் (ZANU), அவருடன் பல நேரங்களில் இணைந்து போராடிய ஜோஷுவா நுகோமா கட்சிக்கும் (ZAPU) உரசல்கள் இருந்து வந்தன. 1987இல் ராபர்ட் முகாபே நாட்டின் அதிபராகி, அதிகாரம் அனைத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்தார். ரொடீஷியா ஜிம்பாப்வே ஆனது. தொடர்ச்சியாக வந்த எல்லாத் தேர்தல்களிலும் முகாபேயின் ZANU-PF கட்சியே ஜெயித்து இன்றுவரை நாட்டின் அதிபராக உள்ளார் முகாபே. இத்துடன் நாட்டில் உள்ள வெள்ளையர் பண்ணை நிலங்களை காசுக்கு வாங்கி இந்த நிலங்களை கறுப்பர் குடும்பங்களுக்குப் பிரித்துத் தர முயன்றார். ஆனால் அதில் அவரால் அதிக வெற்றியடைய முடியவில்லை. பின்னர் வெள்ளையர் நிலங்களை ZANU-PF தொண்டர்கள் அதிரடியாகக் கைப்பற்றத் தொடங்கினர். அப்படிக் கைப்பற்றிய நிலங்களும் கட்சியின் ஒருசில முக்கியஸ்தர்கள் கைக்கே சென்றன. எல்லா மூன்றாம் உலக நாடுகளிலும் பரவியிருக்கும் ஊழல் ஜிம்பாப்வேயில் பரவ, கறுப்பினப் பொதுமக்களே அதிகமாகக் கஷ்டப்படவேண்டியிருந்தது. இந்நிலையில் வெள்ளையர்களின் அரசியல் பலம் வெகுவாகக் குறைந்து போனது. ஆனால் முகாபேயின் ஊழல்களை எதிர்த்து கறுப்பினத்தவர்களே போராடத் தொடங்கினர். மார்கன் ஸ்வெங்கராய் என்னும் எதிர்க்கட்சித் தலைவர் (Movement for Democratic Change – MDC) மீது பல்வேறு ராஜதுரோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ZANU-PF குண்டர்கள் MDC ஆதரவாளர்களை அடித்துத் தாக்கினர். அதே சமயம் வெள்ளையர்களின் பண்ணை நிலங்கள் ஒருபக்கம் கையகப்படுத்தப்பட்டன. இந்த பிரச்னை தொடர்கிறது. இதில் கிரிக்கெட் எங்கே உள்ளது என்று பார்ப்போம். தென்னாப்பிரிக்கா போலவே ஜிம்பாப்வேயிலும் குடியேறிய பிரிடிஷ் வெள்ளையர்கள் தங்களுக்குள்ளாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் அங்கீகாரம் வந்ததும் அந்தப் பக்கம் வரும் சர்வதேச அணிகள் தெற்கு ரொடீஷியா அணியுடனும் சில ஆட்டங்களை விளையாடும். 1965க்குப் பின்னர் சில ஆட்டங்கள் விளையாடினாலும் 1980க்குப் பின்னர்தான் உலக நாடுகள் “A” ஆட்டங்கள் விளையாட ஜிம்பாப்வே சென்றனர். ஐசிசி கோப்பைக்கான இரண்டாம் நிலை கிரிக்கெட் நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் ஜிம்பாப்வேயின் வெள்ளை கிரிக்கெட் அணி எப்பொழுதுமே வென்று வந்தது. அதனால் 1987 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடவும் ஜிம்பாப்வே அணி தகுதிபெற்றது. அந்த ஆட்டங்களின்போது ஜிம்பாப்வேக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175* உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். 1992இல் ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி கிடைத்தது. அப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடிய அனைவருமே வெள்ளையினத்தவர்கள்தான். ஜிம்பாப்வே மக்கள் தொகையான 13 மில்லியனில் வெறும் 3.5% மட்டுமே உள்ள இந்த வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடக்கூடிய நிலையில் இருந்தார்கள். 95% மேலான கறுப்பர்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற நிலையில்தான் இருந்தார்கள். 2000 ஆண்டிலிருந்தே கிரிக்கெட் போர்டில் கறுப்பினத்தவர்களைச் சேர்க்கவும், கிரிக்கெட் அணியில் கறுப்பர்களைச் சேர்க்கவும் அரசு முனைந்தது. ஜிம்பாப்வே குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலியாவில் வாழ்க்கையைக் கழித்த மார்க் குட்வின் என்பவரும் தென்னாப்பிரிக்க்காவில் வசித்த நீல் ஜான்சன் என்பவரும் சிலகாலம் ஜிம்பாப்வேக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடினர். அவர்களும் ஜிம்பாப்வேயில் நடக்கும் அரசியல் சண்டைகள், மனித உரிமை மீறல்கள், குறைந்த சம்பளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தலைமுழுகிவிட்டு ஆஸ்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் உள்ளூர் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டனர். ஹென்றி ஒலாங்கா ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய முதல் கறுப்பர் ஆவார். ஆனால் நகைமுரணாக 2003 உலகக்கோப்பையின்போது ஒலாங்காவும், ஆண்டி ஃபிளவரும் கையில் கறுப்புப் பட்டி அணிந்து ராபர்ட் முகாபே அரசின் மக்களாட்சி விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அப்பொழுதைய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணித்தலைவர் ஹீத் ஸ்டிரீக்கின் தந்தையின் பண்ணை நிலங்கள் கறுப்பினத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டன. உலகக்கோப்பை நடக்கும் சமயத்தில் ஒலாங்கா தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பியோடி, முகாபே கைக்கூலிகளால் தன்னுயிருக்கு ஆபத்து என்று அறிவித்தார். ஒலாங்காவின் மனைவி வெள்ளையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையின்போது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேயில் ஓர் ஆட்டம் ஆடவிருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் விளையாட மறுத்ததால் பாயிண்டுகளை இழந்தனர். உலகக்கோப்பைக்குப் பின்னர் ஜிம்பாப்வேயின் மிகச்சிறந்த விளையாட்டு வீரரான ஆண்டி ஃபிளவரும் ஆட்டத்திலிருந்து விலகினார். 2002-03 முழுவதுமே ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் குழப்பம் நிலவிவந்தது. ஹீத் ஸ்டிரீக் பதவி விலகினார். இன்னமும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்திலிருந்து விலகினர். மே 2004இல் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் பன்னிரெண்டு ஜிம்பாப்வே வெள்ளை விளையாட்டு வீரர்கள் சம்பளப் பிரச்னை காரணமாகவும், தரமற்ற கறுப்பின வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்வதனாலும் தாங்கள் ஜிம்பாப்வேக்காக விளையாடப்போவதில்லை என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மோசமான அணி தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் தாங்கள் விளையாடமாட்டோம் என்றும் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதியை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையில் இங்கிலாந்து அணியும் நவம்பர் 2004இல் ஜிம்பாப்வே போகவேண்டியிருந்தது. பிரிட்டன் பத்திரிகைகள், பொதுமக்கள் இங்கிலாந்து அணியினர் அங்கு செல்வதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இங்கிலாந்து விளையாட்டு வீரர்களும் ஜிம்பாப்வே செல்ல விரும்பவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இருவருமே ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதியை நீக்குவதில் மிகவும் ஆவலாயிருந்தனர். ஐசிசியின் மால்கம் ஸ்பீட் ஜிம்பாப்வே சென்று ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியனுக்கும், வெள்ளை விளையாட்டு வீரர்களுக்குமிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை மூக்குடைக்கும் விதமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டது. கோபம்கொண்ட ஐசிசி மே 2004இல் ஓர் அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அந்தக் கூட்டத்தில் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதி பற்றிப் பேச முடிவு செய்தது. இதனால் பயந்துபோன ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் ஆஸ்திரேலியாவிடம் பேசி, டெஸ்ட் போட்டிகளை ரத்து செய்து அதற்கு பதில் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடத் தீர்மானித்தது. ஐசிசி கூட்டம் தள்ளிப்போடப்பட்டு, ஜூன் 2004இல், 2004 முடியும்வரை ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடாது என்றும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் ஆடும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து நவம்பர் 2004 பயணத்தின்போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இங்கிலாந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமா என்பதில் நிறைய சந்தேகம் இருந்தது.  இங்கிலாந்து ஜிம்பாப்வே போகாவிட்டால் ஐசிசி இங்கிலாந்தின் மீது கடுமையான அபராதமும், தண்டனையும் விதிக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அணியை அனுப்புவது என்று முடிவுசெய்தது. உலகக்கோப்பை 2002இன்போதே சில இங்கிலாந்து கிரிக்கெட் நிருபர்களை ஜிம்பாவே நாட்டின் உள்ளே புகவிடவில்லை. பின்னரும் மற்ற கிரிக்கெட் ஆட்டங்களின்போதும் (ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே) முகாபே எதிர்ப்புப் பத்திரிகையான பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் நிருபர் மிஹிர் போஸ் என்பவரை நாட்டுக்குள் விடவில்லை. நவம்பர் 2004இல் பிரிட்டனின் பல பத்திரிகையாளர்களுக்கு முகாபே அரசு நாட்டிற்குள் வர அனுமதியளிக்கவில்லை. இதைக் காரணம் காட்டி இங்கிலாந்து வீரர்கள் ஜிம்பாப்வே போகமறுத்து, தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டனர். அவசர அவசரமாக ஐசிசி, இங்கிலாந்து நிர்வாகம், ஜிம்பாப்வே நிர்வாகம் ஆகியவை பேசி, ஜிம்பாப்வே அரசை சம்மதிக்க வைத்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நாட்டில் நுழைய அனுமதி வாங்கித்தந்தனர். ஆனால் அதற்குள் முதல் ஒருநாள் போட்டியை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. கடைசியாக போட்டிகள் தொடங்கி இதுவரை ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திடம் சண்டை போட்டுவந்த வெள்ளை கிரிக்கெட் வீரர்களும் தங்களால் மேற்கொண்டு போராடமுடியாது என்று சொல்லி சண்டையை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். இதற்கிடையே ஐசிசி, ஜிம்பாப்வே நிர்வாகம் இனத்துவேஷம் காட்டியுள்ளதா என்று ஆராய்ந்து அப்படியொன்றும் இல்லை என்று ஓர் அறிக்கையை சமர்ப்பித்து முடித்தது. இப்பொழுது சர்வதேச கிரிக்கெட் உலகில் மிக மோசமான அணி என்ற பட்டம் பங்களாஷிலிருந்து ஜிம்பாப்வே கைக்கு வந்துள்ளது. இதிலிருந்து ஜிம்பாப்வேயால் மீளமுடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் மனித உரிமை, அதே சமயம் நிலங்களை சரியான முறையில் பங்குபோடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே சரியாகும்.   4 குற்றமும், தண்டனையும், மேல்முறையீடும் சவுரவ் கங்குலி மீது ஐசிசி மேட்ச் ரெஃபரீ கிளைவ் லாய்ட் கடுமையான குற்றச்சாட்டை வைத்து அவருக்கு தண்டனையும் வழங்கியுள்ளார். இப்பொழுது கங்குலி அதன்மீது மேல்முறையீடு செய்துள்ளார். நம்மில் பலருக்கு என்ன குற்றச்சாட்டு, ஏன் இந்த தண்டனை என்பது பற்றி ஒன்றும் புரிவதில்லை. அப்படி என்னதான் தவறு செய்து விட்டார் கங்குலி? அதற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை நியாயமானதுதானா? இதுபற்றி நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். நமக்கு வேண்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கொடுக்கப்படும்போதுதானே நாம் இதைப்பற்றி மேல் விவரங்கள் அறிந்துகொள்ள முற்படுகிறோம்? ஐசிசி நடத்தை விதிகள் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை எம்.சி.சி வழங்கியுள்ள கிரிக்கெட் சட்டங்கள் (“Laws of Cricket“). இந்த சட்டங்களைப் பின்பற்றித்தான் சர்வதேச கிரிக்கெட் ஆனாலும் சரி, தெருமுனை கிரிக்கெட் ஆட்டங்களானுலும் சரி, விளையாடப்படுகிறது. ஆனால் சில ஆட்டங்களின்போது சட்டங்களின் மீது சில மாறுதல்கள் (amendments) செய்துகொள்கிறோம். உதாரணமாக, தெருவில் விளையாடும்போது ஒரு குறிப்பிட்ட சுவற்றில் பட்டால் இரண்டு ரன்கள். ஹாங் காங் சிக்ஸஸ், கிரிக்கெட் மேக்ஸ், Twenty20 போன்ற சற்றே மாறுபட்ட கிரிக்கெட் ஆட்டங்கள் உண்டு. ஐசிசி – அதாவது சர்வதேச கிரிக்கெட் வாரியம் – ஐந்துநாள் டெஸ்ட்கள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைத் (ICC Standard Playing Conditions) தொகுத்து வழங்கியுள்ளது. இந்த விளையாட்டு விதிமுறைகளை, எம்.சி.சி கிரிக்கெட் சட்டங்களுடன் சேர்த்தே படிக்க வேண்டும். அத்துடன் கூட, விளையாட்டு வீரர்கள் சர்வதேச விளையாட்டுகளின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் நடத்தை விதிகளையும் வழங்கியுள்ளனர் (PDF கோப்புகளாக). இந்த நடத்தை விதிகளில் விளையாட்டு வீரர்கள், அணித்தலைவர் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்துகொண்டால் அது தவறு, என்னவிதமான தவறு என்று கருதப்படும், இந்தத் தவறுகளுக்கு என்ன தண்டனை என்று அனைத்து விலாவரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கங்குலியின் தவறுகள் [Ganguly]22 ஜனவரி 2004இல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி மெதுவாகப் பந்துவீசியது என்பதற்காக (1) நேரத்தை வீணடித்தார் (2) கிரிக்கெட் ஆட்டத்தின் உன்னதத்திற்கு எதிரான முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் கங்குலியின் மீது வைக்கப்பட்டன. இந்தக் குற்றம் லெவல் 2 என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தண்டனையாக கங்குலியின் அந்த ஆட்டத்திற்கான வருமானத்தின் 50% அபராதமாக வசூலிக்கப்பட்டது. அந்த ஆட்டத்திற்கான மேட்ச் ரெஃபரி கிளைவ் லாய்ட். நடத்தை விதிகள் 5 C (iii) படி “ஓவர்கள் வீசும் விகிதம் டெஸ்ட் ஆட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்சத்தையும் விட ஐந்து ஓவர்கள் குறைவாக இருந்தாலும், ஒருநாள் ஆட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குரைந்த பட்சத்தையும் விட இரண்டு ஓவர்கள் குறைவாக இருந்தாலும், நடத்தை விதிகள் (i), (ii) இல் குறிப்பிட்டுள்ள தண்டனைகளுக்கும் மேலாக, அணித்தலைவர் மீது நடத்தை விதிகள் C1 படி, நேரத்தை வீணடித்தார் என்றும், கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்துக்கு மாறான முறையில் நடந்து கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்படும்.” சரி, நடத்தை விதி C1 என்ன சொல்கிறது? “விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளும் அனைத்து நேரங்களிலும் [உன்னதமான கிரிக்கெட்] விளையாட்டின் நோக்கங்களுக்குள்ளாகவும், கிரிக்கெட் சட்டங்களுக்கு உள்ளாகவும் நடந்துகொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இதன்படி ஓரணி நடந்துகொள்ள அணித்தலைவர் முயல வேண்டும். (இந்த நடத்தையை மீறினால் என்ன தண்டனை என்பது CC 5.1இல் சொல்லப்பட்டுள்ளது.)” குற்றங்களை 1, 2, 3, 4 என்று பல தரங்களில் பிரித்துள்ளனர். லெவல் 1 என்றால் சாதாரண குற்றம். லெவல் 4 என்றால் படுமோசமான குற்றம். 12 மாதத்துக்குள் இரண்டு லெவல் 1 குற்றங்கள் செய்தவர் லெவல் 2 குற்றவாளி என்று கருதப்படுவார். அதேபோல 12 மாதத்திற்குள் இரண்டு லெவல் 2 குற்றங்களைச் செய்தவர் லெவல் 3 குற்றவாளி என்று கருதப்படுவார். கங்குலி மீது கிரிக்கெட் ஆட்டத்தின் குறிக்கோள்களுக்கு எதிராக விளையாடினார், நியாயமற்ற முறையில் விளையாடினார் (unfair play) என்ற லெவல் 2 குற்றச்சாட்டு ஜனவரி 2004இல் வைக்கப்பட்டிருந்தது என்று பார்த்தோம். அடுத்த குற்றமும் அப்படியே. இரண்டு வாரங்களுக்கு முன் கொல்கொத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓவர்களைக் காட்டிலும் குறைவாகப் பந்து வீசியதால் மீண்டும் அதே குற்றம் சாட்டப்பட்டார். இப்பொழுதும் மேட்ச் ரெஃபரி கிளைவ் லாய்ட். இதுவும் லெவல் 2 குற்றம். ஆனால் 12 மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நடந்த காரணத்தால் லெவல் 3 குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் கங்குலி. மற்ற லெவல் 3 குற்றங்கள் என்ன தெரியுமா? (i) நடுவரையோ மேட்ச் ரெஃபரீயையோ வார்த்தைகளாலோ, செயல்களாலோ அச்சுறுத்துவது (ii) பிற விளையாட்டு வீரர்களையோ, பார்வையாளர்களையோ, அதிகாரிகளையோ அடித்துவிடுவேன் என்று மிரட்டுவது (iii) பிறரை அவர்களது இனம், மொழி, மதம், தோல் நிறம், பிறப்பு, பால் ஆகியவற்றைக் காரணம் காட்டி, வார்த்தைகளாலோ, சைகைகளாலோ கேவலப்படுத்துவது, மிரட்டுவது, அச்சுறுத்துவது ஆகியவை. ஆக, ஐசிசி நடத்தை விதிகள் படி மேற்சொன்ன குற்றங்களைச் செய்தவர்களுக்கும், 12 மாதங்களுக்குள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓவர்களைக் காட்டிலும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசும் அணியின் அணித்தலைவராக இருப்பவருக்கும் கிடைக்கும் தண்டனை ஒரே மாதிரியானது. (இது தெரிந்திருந்தால், கிளைவ் லாய்டை நாலு தடவை சாத்தியிருக்கலாமே என்று கங்குலி நினைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அது லெவல் 4 குற்றமாகி, இரண்டு லெவல் 2 உடன் சேர்ந்து அவரை ஒரேயடியாக ஆட்டத்தை விட்டே நீக்கியிருப்பார்கள்!) கங்குலிக்குக் கொடுத்த தண்டனை சரி, லெவல் 3 குற்றத்துக்கான தண்டனை என்ன? கங்குலி டெஸ்ட் போட்டிகள் விளையாட இருப்பதால் இரண்டு டெஸ்ட்கள் விளையாட முடியாது என்று தண்டனை கொடுத்தார் லாய்ட். இதே கங்குலி ஒருநாள் போட்டிகள் பலவற்றிலும் விளையாடுவதாக இருந்தால் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்ற தண்டனை கிடைத்திருக்கும். அதாவது தண்டனையைப் பொருத்தவரையில் ஒரு டெஸ்ட் என்பது இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு சமம் என்று கருதப்படும். ஜனவரி 2003இல் ஆஸ்திரேலிய வீரர் டாரென் லெஹ்மான் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் அவுட்டான பிற்பாடு டிரெஸ்ஸிங் ரூம் வந்து “கறுப்புக் கூ*” என்று இலங்கை அணி வீரர்களைத் திட்டியது இலங்கை ஆட்டக்காரர்கள் இருக்கும் அறை வரை கேட்டது. அப்பொழுது மேட்ச் ரெஃபரீ லெஹ்மான் மீது எந்தக் குற்றமும் சுமத்தவில்லை. அப்பொழுதைய மேட்ச் ரெஃபரீ யார் தெரியுமா? மதிப்புக்குரிய (கறுப்பின) கிளைவ் லாய்ட்தான்! ஆனால் இந்த பிரச்னை பெரிதாகி, ஐசிசி தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் (அவரும் ஓர் ஆஸ்திரேலியர்) உடனடியாக லெஹ்மான் மீது குற்றச்சாட்டை வைத்தார். இது லெவல் 3 குற்றம். விசாரித்த லாய்ட், லெஹ்மான் மீது ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாடத் தடை விதித்தார். மேல்முறையீடு கங்குலி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட இரண்டு ஆட்டங்களிலும் இயற்கையில் தொல்லை இருந்தது. சிட்னியில் நடந்த ஆட்டத்தில் மழை. ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டன. ஆனாலும் புல்லின் மீது இருந்த ஈரம் காரணமாக பந்தைத் துடைத்துத் துடைத்து வீசவேண்டியிருந்தது. கொல்கொத்தாவிலும் பனி காரணமாக இரண்டாவதாகப் பந்துவீசிய இந்திய அணி பந்தைத் துடைத்துத் துடைத்து வீசவேண்டிய நிலைமை. இதனால் தான் வேண்டுமென்றே (லெஹ்மான் அளவுக்கு) ஆட்டத்தின் கண்ணியத்தை மீறியதாகக் கூறுவது நியாயமாகாது என்று கங்குலி மேல்முறையிட்டுள்ளார். மேல்முறையீடு முடியும் வரை கங்குலி தொடர்ந்து விளையாடலாம் என்று அறிவித்த ஐசிசி, நியூசிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டிம் காஸில் என்பவரை மேல்முறையீட்டு நடுவராக நிர்ணயித்தது. கங்குலிக்கு ஆதரவாக மேற்கு வங்க முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தார்த்த ஷங்கர் ரே, இந்திய கிரிக்கெட் வாரிய வழக்கறிஞர் உஷாநாத் பானர்ஜி ஆகியோர் இன்று (25 நவம்பர் 2004) வாதிட்டனர். ஐசிசி வழக்கறிஞர் தென்னாப்பிரிக்காவின் ஊர்வசி நாயுடு, மேட்ச் ரெஃபரீ கிளைவ் லாய்ட் ஆகியோர் தம் தரப்பு வாதங்களை வைத்தனர். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி டிம் காஸில் கங்குலி தரப்பு வாதங்களையும், கிளைவ் லாய்டின் பதிவுகளையும், ஆட்டத்தின் விடியோ படங்களையும் பார்த்து முடிவு செய்து, கங்குலிக்கு விதித்திருந்த தண்டனையை முழுவதுமாக ரத்து செய்துள்ளார். O நடத்தை விதிகளுக்கான தண்டனையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் கருத்து. லெஹ்மான் குற்றத்துக்கும், கங்குலியின் குற்றத்துக்கும் உள்ள வித்தியாசம் நம் அனைவருக்கும் புரியும். இருவருக்கும் ஒரே தண்டனை என்பது சரியில்லை. அதை ஐசிசியும் உணர்ந்துள்ளது நல்லதே. இதனால் கிளைவ் லாய்ட் செய்தது தவறு என்றாகி விடாது. லாய்ட் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையிலிருந்து குற்றத்துக்கான தண்டனையைக் கொடுத்தார். மேல்முறையீட்டால்தான் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றப்பட வேண்டியது ஐசிசியின் நடத்தை விதிகளில், குற்றங்களுக்கான வரையறையும், குற்றங்களுக்கான தண்டனையும். 5 வளைந்த கைகள் கிரிக்கெட் விளையாட்டு என்பது பந்துவீச்சாளர்களுக்கும், மட்டை பிடிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போட்டி. ஆனால் இந்தப் போட்டி சம வலுவுடைய இரு கோஷ்டிகளுக்கு இடையே நடப்பதல்ல. எப்பொழுதெல்லாம் பந்து வீச்சாளர்கள் கை ஓங்குகிறதோ, அப்பொழுது ஆட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, மட்டையாளர்கள் கை மேலோங்கி வந்துள்ளது. தொடக்கத்தில் கிரிக்கெட் ஆடுகளம் மூடப்படாமல் இருந்து வந்தது. மழை, பனி, வெய்யில் போன்ற காரணங்களால் ஆடுகளம் எப்படி விளையாடும் என்று சொல்லமுடியாத முறையில் இருந்தது. திடீரென அரை மணி நேரம் மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். மழை நின்று, சிறிது காய்ந்தவுடன் வந்து விளையாட வேண்டும். அப்பொழுது மட்டை பிடித்தாடுவது மிகக் கடினம். ஆடுகளத்தை மூடிவைக்கும் பழக்கம் வந்த பின்னர்தான் மட்டையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது. பிராட்மேன் என்னும் மிகப்பெரும் ஆளுமையைத் தடுத்து நிறுத்த வேண்டி இங்கிலாந்து அணித்தலைவர் டக்ளஸ் ஜார்டைன், வேகப்பந்து வீச்சாளர் ஹரால்ட் லார்வுட் இருவரும் சேர்ந்து ‘பாடிலைன்’ என்னும் கால்பக்கம், உடலைக் குறிவைத்துப் பந்துவீசும் முறையைக் கொண்டுவந்தனர். கால் திசையில் மட்டையாளருக்குப் பின்பக்கம் நாலைந்து தடுப்பாளர்களை நிறுத்தி, வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வந்து மட்டையாளரின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசி, பந்தை எழும்பி வரச்செய்து உடலின் மேல் அடிப்பதுதான் பாடிலைன். இந்த பிரச்னை தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பெரிய சண்டையே வந்துவிடும் போலிருந்தது. பின் எம்.சி.சி தலையீட்டால் பாடிலைன் பந்துவீச்சு தடைசெய்யப்பட்டது. கால்திசையில் மட்டையாளருக்குப் பின்னால் இரண்டு பந்துத் தடுப்பாளர்களுக்கு மேல் நிறுத்த முடியாது என்று விதிமுறை வந்தது. அப்படியும் வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டையாளருக்குத் தொல்லைதான். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்லி கிரிஃப்ஃபித் பந்துவீச்சில் இந்தியாவின் நாரி காண்டிராக்டர் மண்டையில் அடிபட்டு கிட்டத்தட்ட உயிர் போகிற நிலைமை. தெய்வாதீனமாகத் தப்பினார். தொழில்நுட்பம் பெருகப் பெருக, கால்காப்புகள், தலைக்கவசம், தொடை, முதுகு, கை விரல்கள், முழங்கை என உடல் முழுதையுமே காக்கக்கூடிய, எடை குறைவான காப்புகள் வரத்தொடங்கின. அப்படியும் வேகப்பந்து வீச்சாளர்கள் தொல்லை தாங்கமுடியவில்லை. முக்கியமாக இங்கிலாந்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியவில்லை. எனவே ஓர் ஓவரில் தலைக்கு மேல் செல்லக்கூடிய மாதிரி ஒரு பந்துதான் வீசலாம் என்று விதி வந்தது. பின், போனால்போகிறதென்று இரண்டு பவுன்சர்கள் போடலாம் என்றானது. []இடையில் நோபால் விதிமுறை மாறியது. இப்பொழுதிருக்கும் நோபால் விதிமுறைப்படி, பந்துவீச்சாளரின் முன்னங்காலின் சிறு பகுதியாவது கிரீஸில் பின்னால் இருக்கவேண்டும். முன்னால் இருந்த விதிமுறையில் பின்னங்கால் முழுவதுமாக கிரீஸுக்கு உள்ளாக இருக்க வேண்டும். ஆனால் அப்பொழுதெல்லாம் சில வேகப்பந்து வீச்சாளர்கள் பின்னங்காலை கிரீஸின் பின் வைத்து, காலை இழுப்பதன் மூலம் நன்கு முன்னே வந்து வீசி, அதன்மூலம் தங்கள் பந்தின் வேகத்தை இன்னமும் அதிகமாக்கினர். இதைத் தடுக்கவே முன்னங்கால் நோபால் விதிமுறை வந்தது. இதனால் மட்டையாளர்களுக்கு சவுகரியம்தான். ஆக, எப்பொழுதெல்லாம் பந்துவீச்சாளர் கை ஓங்குவது போலத் தெரிகிறதோ, புதிய விதிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை மட்டையாளர்களுக்கு ஆதரவளித்தன. இப்பொழுது சிறு மாற்றம். கடந்த சில வருடங்களில் பல பந்துவீச்சாளர்கள் பந்துகளை வீசுவதில்லை, எறிகிறார்கள் என்றதொரு குற்றச்சாட்டு பெரிதானது. அதென்ன வீசுதல் வேறு, எறிதல் வேறா என்று கேட்கலாம். ஆங்கிலத்தில் bowl என்பதை வீசுதல் என்றும், throw என்பதை எறிதல் என்றும் குறிப்பிடுகிறேன். அதாவது கை, தோள்பட்டையிலிருந்து சுழன்று, நடுவில் எங்கும் நிற்காமல், முழங்கையருகே ‘அதிகமாக’ வளையாமல் ஒரே சீராகப் பந்தை வீசுவது bowling. அப்படி இல்லாமல் கையை சடாரென்று நிறுத்தியோ, முழங்கையருகே ‘அதிகமாக’ வளைந்த விதத்திலோ பந்தைப் போடுவது எறிதல், அல்லது throwing. பந்து வீசும்போது முழங்கைக்கு மேலும், கீழும் உள்ள பாகங்கள் முழுவதும் நேராக இருப்பதில்லை. ஓரளவுக்கு வளைந்துதான் இருக்கும். இப்பொழுதுள்ள விதிகளின்படி முழங்கைக்கு மேலும் கீழும் உள்ள பகுதிகளுக்கு இடையேயான கோணம் 5 இலிருந்து 10 டிகிரி வரை இருக்கலாம். மெதுவாகப் பந்துவீசுபவர்களுக்கு இந்தக் கோணம் 5 டிகிரிதான் இருக்க முடியும். மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கு 7.5 டிகிரிகள். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 10 டிகிரிகள் இருக்கலாம். அப்படி இல்லாமல் பந்து வீசினால், அந்தப் பந்து எறியப்பட்டது என்று கருதி, நோபால் என்று நடுவர் அறிவிக்கலாம். அதுமட்டுமல்ல, அந்தப் பந்துவீச்சாளர் வெகு விரைவில் வெளியேற்றப்பட்டு, பந்துவீசும் முறையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார். காலம் முழுவதும் சில பந்துவீச்சாளர்கள் களங்கம் படிந்த பெயருடனே இருக்க வேண்டியிருக்கும். இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர், இந்தியாவின் ஹர்பஜன் சிங் என பலரும் ‘எறிதல்’ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். முரளிதரன் இன்னமும் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கு பயோமெக்கானிக்ஸ், பிறவியிலேயே கையில் எலும்பு வளைந்துள்ளது எனப் பலவற்றைத் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது. ஐசிசி, செப்டெம்பர் 2004 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்களின்போது விளையாடிய பலரையும் அதிவேக கேமரா மூலம் (விநாடிக்கு 250 பிரேம்கள்) படமெடுத்து, அந்தப் படங்களை கவனமாகப் பரிசீலித்தது. அதைப் பார்த்தபொழுது பந்துவீசிய அனைவருமே (ராம்நரேஷ் சார்வன் எனும் ஒரேயொருவரைத் தவிர!) கைகளை பத்து டிகிரிக்கு மேல் வளைத்தனர் என்னும் அதிர்ச்சி தரக்கூடிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது யாருமே ஒழுங்கில்லையாம்! அப்படியானால் யார் இனி முரளிதரனை மட்டும் தனித்துக் குற்றம் சாட்ட முடியும்? இதனால் முழங்கைக் கோணத்தை 15 டிகிரிகளாக – அனைத்துவிதப் பந்துவீச்சாளர்களுக்கும் சேர்த்து – உயர்த்த முடிவு செய்து, அதனை வரும் ஐசிசி எக்சிகியூட்டிவ் கமிட்டியில் கலந்தாலோசிக்க இருக்கிறார்கள். பலர் இதை வரவேற்றிருக்கிறார்கள். சிலர் – முக்கியமாக ஆஸ்திரேலியர்கள் – எதிர்க்கிறார்கள். இதில் எதிர்க்க என்று ஒன்றுமே இல்லை என்பது என் கருத்து. விதிமுறைகள் மாற்றப்பட வேண்டியவையே. சரியான காரணங்கள் இருந்தால். இப்படி கோணத்தை அதிகரிப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு தனி பலம் கிடைக்குமா? இதனால் அதிக விக்கெட்டுகளை அவர்கள் எடுப்பார்களா? அப்படியொன்றும் நடக்கப்போவதில்லை. சில வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கைக்கோணத்தை அதிகரிப்பதன் மூலம் தங்கள் வேகத்தை இன்னமும் அதிகப்படுத்தலாம். முக்கியமாக ஷோயப் அக்தர் வீசும் பல அதிவேகப் பந்துகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஆனால் அக்தரை விட மெக்ராத் தான் எதிரணியைப் பயமுறுத்துகிறார். எனவே மட்டையாளர்கள் கவலைப்படாது விளையாட வேண்டும். எது எப்படியாயினும் பந்துவீச்சுக்கு ஆதரவாக ஒரு விதியாவது போவது தவறில்லை. 6 கிரிக்கெட் ஆட்டத்தில் பல்வேறு அடிகள் சென்ற வாரம் பந்துத் தடுப்பு வியூகங்கள் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம். அதை மீண்டும் கவனிக்க முற்படும் முன்னர், எந்தப் பந்துகளில் எந்த மாதிரி அடிகளை அடிக்கலாம் என்று பார்ப்போம். கிரிக்கெட்டில் கண நேரத்தில் சில காரியங்கள் நடக்கின்றன. பந்து வீச்சாளர் பந்து வீச வரும்போதே அவர் என்னமாதிரியான பந்தை வீசுவார் என்பதை மட்டையாளர் முடிவு செய்திருப்பார். ஆனால் தேர்ச்சி பெற்ற பந்து வீச்சாளர் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யலாம். அதற்கு ஏற்றவாறு மட்டையாளர் தான் அடிக்க வந்ததை மாற்றிக்கொள்ள வேண்டும். பந்துகள் அடிபட்டால் எங்கு செல்லும் என்று பந்துத் தடுப்பு அணித்தலைவர் சில யூகங்களின் அடிப்படையில் தடுப்பு வியூகத்தை அமைத்திருப்பார். அதையும் மனதில் வைத்து மட்டையாளர் சில மாறுதல்களைச் செய்து சில அடிகளை அடிப்பார். அதைப் பந்துத் தடுப்பாளர் ஒருவர் பாய்ந்து தடுக்க முனைவார். இத்தனையும் கண நேரத்தில் நடக்கும். இந்தக் கண நேரத்தில் என்னென்ன அடிகளை அடிக்கலாம் என்று ஒரு மட்டையாளர் முடிவு செய்வார்? இந்த முடிவில் பாதி பழக்கத்தில் வருவது. அது ஒரு ஃபார்முலா படியானது. கிரிக்கெட் கோச்சிங்கில் இதை சொல்லிக்கொடுத்திருப்பர். அதற்கு மேல், ஒரு மட்டையாளர் தன் திறமையின் காரணமாகவும், உள்ளுணர்வின் காரணமாகவும் சில மாறுதல்களைச் செய்யலாம். அப்படித் திறமையாக விளையாடுபவர்தான் ஜீனியஸ். டெண்டுல்கர் போல! சேவாக் போல. ஆஃப் திசையில் வரும் பந்துகளைப் பொதுவாக ஆஃப் திசையில்தான் அடிப்பது வழக்கம். ஆனால் இந்தப் பந்துகளை வளைத்து கால் திசையிலும் அடிக்கலாம். அதுபோலவே கால் திசையில் வரும் பந்துகளைக் கால் திசையில் மட்டும்தான் அடிக்க முடியும். இந்தப் பந்துகளை ஆஃப் திசையில் அடிப்பது மிகவும் கடினம். ஆஃப் திசை அடிகள் ஸ்டியர் (Steer) என்னும் அடி மட்டையை நெடுக்காக (vertical), ஒரு கோணத்தில் வைத்து பந்தின் திசையை சற்றே மாற்றி ஸ்லிப் வழியாக அடிப்பது. ஒருநாள் போட்டிகளில் மிக அதிகமாக உபயோகமாகும் அடி இது. ஒருநாள் போட்டிகளில் முதல் சில ஓவர்களுக்குப் பிறகு ஸ்லிப்பில் யாரும் நிற்பது கிடையாது. அதனால் ஸ்லிப் வழியாக ஸ்டியர் செய்வது பாதுகாப்பானது. தர்ட்மேனில் நிற்பவர் பந்தைத் தடுத்து விடுவார். சாதாரணமாக ஒரு ரன்தான் கிடைக்கும். எப்பொழுதாவது நான்கு ரன்களும் கிடைக்கும். மட்டைக்கு வெகு அருகில் – அதாவது அகலம் அதிகம் இல்லாமல் வரும் பந்துகளில்தான் ஸ்டியர் செய்ய முடியும். ஸ்டியர் செய்ய முற்படும்போது மட்டையில் விளிம்பில் பட்டு கேட்ச் ஆவதும் உண்டு. விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் நிற்பவர்கள் கையில் கேட்ச் போகும். மட்டையை மேல்நோக்கி திருப்பி விடும்போது பந்து உயரப் பறந்து சென்று தர்ட்மேன் வரையில் கேட்ச் செல்லலாம். பந்து அளவு குறைந்தும், சற்று அகலத்துடன் வரும்போது வெட்டி ஆடவது எளிது. அகலம் என்றால் மட்டைக்குத் தள்ளி, ஆஃப் ஸ்டம்பிற்குத் தள்ளி விழுந்து வெளியே நகர்ந்து செல்லும் பந்து. வெட்டி ஆடுவது (cut) என்றால் பந்தின் பாதையை வெட்டி ஆடுவது. அதே போல வீசும் அளவு குறைந்து வரவேண்டும். மட்டையைக் குறுக்காக (horizontal) வைத்து பந்தின் பாதையில் பந்தைச் சந்தித்து பந்தின் திசையை மாற்றி அடிப்பது. இப்படி அடிக்கப்பட்ட பந்து பகுதிகள் 6, 5 ஆகிய இடங்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். (சென்ற வாரம் படத்தைப் பார்க்கவும்.) ஸ்டியர் செய்யும்போது பந்திற்கு அதிகமான வேகம் எதையும் கொடுப்பதில்லை. வழியை மற்றும் மாற்றுகிறோம். கட் செய்யும்போது பந்திற்கு அதிகமான வேகமும் கொடுத்து அடிக்கிறோம். ஸ்கொயர் கட் என்பது பந்தின் திசையை கிட்டத்தட்ட 90 டிகிரி கோணத்தை மாற்றி பாயிண்ட் திசையில் அடிப்பது. இந்த அடியை அடிக்கும்போது பொதுவாக பின்காலில் சென்றோ, அல்லது நின்ற இடத்தில் இருந்தோ அடிப்பார்கள். இந்த அடியின்போதும் சரியான கணிப்பு இல்லையென்றால் மேல் விளிம்பில் பட்டு கேட்சாகலாம். அல்லது உள் விளிம்பில் பட்டு ஸ்டம்பிலேயே விழுந்து அவுட்டாகலாம். ராகுல் திராவிட் பலமுறை இப்படி வெட்டி ஆடும்போது உள் விளிம்பில் பட்டு பவுல்ட் ஆவது உண்டு. இதற்கு முன், அசாருத்தீன் மிக அதிகமாக இப்படி அவுட்டாகியுள்ளார். குட் லென்த், அல்லது அளவு அதிகமாக வரும் பந்துகளை அடிக்க டிரைவ் (drive) என்னும் அடியைப் பயன்படுத்துவார்கள். இந்த அடிக்கு மட்டையை நெடுக்காக வைத்து பந்து வரும் திசையை நேராக எதிர்த்து பகுதிகள் 5, 4, 3 ஆகிய இடங்களுக்கு அடிப்பது. ஸ்கொயர் டிரைவ் என்பது ஸ்டியர் போன்று ஆனால் சற்று வேகம் செலுத்தி அடிப்பது. மட்டையை நேராக வைத்து, பந்தைச் சந்தித்து, கடைசி நேரத்தில் மட்டையைத் திருப்புவது ஸ்கொயர் டிரைவ். இது 6, 5 பகுதிகளுக்குச் செல்லும். முன் காலில் வந்து ஆடுவது. ஸ்டியர் என்பது நின்ற இடத்திலிருந்தே, அல்லது பின்காலில் சென்று ஆடுவது. டிரைவ் கவர் திசையின் சென்றால் கவர் டிரைவ் என்றும், மிட்-ஆஃப் திசையில் செல்லும்போது ஆஃப் டிரைவ் என்றும், நேராக, பந்துவீச்சாளருக்கு இருபக்கமும் சென்றால் ஸ்டிரெயிட் டிரைவ் என்றும், மிட்-ஆன் திசையில் சென்றால் ஆன்-டிரைவ் என்றும் அழைக்கப்படும். கால் திசை அடிகள் நடு ஸ்டம்பில் அல்லது கால் திசையில் வரும் பந்துகளை கால் திசையில் அடிக்கலாம். இந்தியர்கள் கால் திசையில் நன்றாக அடித்து விளையாடுவார்கள் என்பது பொதுக்கருத்து. அசாருத்தீன், லக்ஷ்மண் போன்றவர்கள் கால்திசையில் மிக அழகாக விளையாடுபவர்கள். கால் திசையில் நல்ல அடிகள் அடிக்க மணிக்கட்டில் நல்ல திறன் வேண்டும். அல்லது உடம்பையே திருப்பி மட்டையை இழுத்து அடிக்க வேண்டும். ஆன் டிரைவ் அடிப்பதே எளிதானதல்ல. அளவு குறைந்து, எழும்பி வரும் பந்துகளை பகுதி 2ல், புல் (pull) என்ற அடியினால் அடிக்கலாம். மட்டையைக் குறுக்காக வைத்து பந்தை வளைத்து தரையோடோ, அல்லது மேலாகவோ அடிப்பது. ஸ்கொயர் லெக் முதல் மிட்விக்கெட் வரை பந்து செல்லும். பந்து எழும்பி வராதபோது பிளிக் (flick) என்ற அடியால் அடிக்கலாம். மட்டையை நேராக பந்தின் பாதையில் சந்தித்து கடைசி நேரத்தில் மணிக்கட்டால் மட்டையை மிட்விக்கெட் திசை நோக்கித் திருப்பி அடிப்பது. லெக் ஸ்டம்பின் திசையில் அல்லது அதற்கு வெளியே போகும் பந்துகள் அளவு அதிகமாக வரும்போது அந்தப் பந்தின் திசையைத் திருப்புவது டர்ன் (turn) என்னும் அடி. கிளான்ஸ் (glance) என்னும் அடியில் மட்டையைச் சாய்வாக வைத்து பந்து மட்டையின் மீது பட்டதும் விக்கெட் கீப்பருக்கு அருகாமையில் செல்வது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே அளவு குறைந்து, எழும்பி வரும் பந்துகளை ஹூக் (hook) என்னும் அடியால் அடிக்கலாம். மட்டை நெடுக்காக கைப்பிடி கீழாகவும் மட்டை மேலாகவும் வைத்து பந்துக்குப் பின்னாலிருந்து பகுதி 2, 1 இல் அடிப்பது ஹூக். இந்த அடியில் பந்து தரையோடும் போகலாம், மேல்நோக்கியும் போகலாம். பந்து எந்தத் திசையில் வருகிறது என்பதைப் பொறுத்து புல் அல்லது ஹூக் அடிக்கலாம். பந்து ஆஃப் ஸ்டம்ப், நடு ஸ்டம்ப் வழியில் அளவு குறைந்து எழும்பி வந்தால் புல் செய்வதுதான் சரி. லெக் ஸ்டம்ப் அல்லது அதற்குத் தாண்டி வந்தால் ஹூக் செய்வதுதான் சரி. உயரத்தூக்கி அடிப்பது []லாஃப்ட் (lofted shot) என்பது பந்தை உயரத்தூக்கி டிரைவ் செய்வது. கவர், மிட்-ஆஃப், லாங்-ஆப், லாங்-ஆன், மிட்-ஆன், மிட்-விக்கெட் திசைகளில் பந்தை லாஃப்டெட் டிரைவ் அடிக்கலாம். எந்த மாதிரியான பந்துத் தடுப்பு வியூகம் என்பதைப் பார்த்து மேலாக அடிப்பதா இல்லை தரையோடு அடிப்பதா என்று முடிவு செய்வார்கள். கையில் நல்ல வலு இருந்தால், எல்லைக்கோட்டைத் தாண்டி பந்து விழுமாறு அடிக்கமுடியும் என்றால் பந்துத்தடுப்பாளர் எங்கு நின்றாலும் கவலையின்றித் தூக்கி அடிக்கலாம். சேவாக் போன்றவர்கள் ஸ்கொயர் கட் அடிக்கும்போது கூட பந்தை உயரமாக அடித்து விளையாடுவார்கள். உலகக்கோப்பையின்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெண்டுல்கர் ஷோயப் அக்தரையும், சேவாக் வக்கார் யூனுஸையும் பாயிண்ட் திசையில் ஸ்கொயர் கட் சிக்ஸ் அடித்தது ஞாபகம் வருகிறதா? O கிட்டத்தட்ட இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தில் பொதுவாக அடித்து ஆடும் ஷாட்கள். பல மட்டையாளர்கள் இதை அடிப்பதா, அதை அடிப்பதா என்று குழம்பி கடைசி நேரத்தில் தவறு செய்துவிடுவார்கள். அதேபோல பந்தைத் தடுப்பதா அல்லது அடிப்பதா அல்லது மொத்தமாக விட்டுவிடுவதா என்பதிலும் குழம்பி ஆட்டத்தை இழக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும்போது எல்லாப் பந்துகளையும் அடிக்க வேண்டும் என்பதில்லை. பெர்செண்டேஜ் ஆட்டம் என்பார்கள். முக்கியமாக, டெஸ்ட் விளையாடும்போது ஒருசில பந்துகளை அடித்தால் அவுட்டாகும் வாய்ப்பு அதிகமாகும் என்று தெரிந்தால் அந்தப் பந்தை அடிக்காமல் விடுவதே சரியானது. பொதுவாகவே மட்டைக்கு வெகு அருகில், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வேகப்பந்து வீச்சாளர்கள் வீழும் பந்துகள் ஆபத்தானவை. சற்று கணிக்கத் தவறினாலும் மட்டையின் விளிம்பில் பட்டு கேட்ச் ஆகும். இந்தப் பந்துகளை முடிந்தவரை விட்டுவிடுவதே சரியானது. அதைப்போல லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் லெக் ஸ்டம்பிற்கு வெளியே அளவு அதிகமாக வீசப்படும் பந்துகளை காலால் தடுப்பதே சரியான முறை. அதை அடிக்கப்போய் அவுட்டாகத்தான் வாய்ப்புகள் அதிகம். அடித்தாடுவதைப் போலவே, பந்தைத் தடுத்தாடுவதிலும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதை வேறொரு சமயம் பார்க்கலாம். 7 பந்துத் தடுப்பு வியூகங்கள் பற்றி கீத் மில்லர் பற்றிப் பேசும்போது ஒரு கதையைச் சொல்வார்கள். அவர் கேப்டனாக இருந்த ஓர் உள்ளூர் ஆட்டத்தில் பந்துத் தடுப்பு வியூகம் அமைக்க வேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் அணியினரைப் பார்த்து ஆங்காங்கே கிடைக்கும் இடத்தில் போய் நில்லுங்கள் என்று அவர் சொன்னாராம்! இன்று தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் பலருக்கும் யார் யார் எங்கு நிற்கிறார்கள், ஏன் என்பது அதிகம் புரிவதில்லை. ஓரளவுக்கு தடுப்பு வியூகம் பற்றி இங்கு விளக்கிச் சொல்ல முற்படுகிறேன். பந்துத் தடுப்பு வியூகத்தை அமைக்கும் வேலை அணித்தலைவருடையது. அவர் தன்னிச்சையாக இதைச் செய்வதில்லை. பந்து வீச்சாளரிடம் பேசி, ஆலோசித்து, பின் அவருக்குத் தேவையான வியூகத்தைத்தான் தர முனைகிறார். மட்டையாளர் எப்படி நிற்பார் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டு பக்கமுமுள்ள நடு ஸ்டம்ப்களை இணைத்து ஒரு நேர்கோடு வரைந்து அதை அரங்கின் இரு கோடிக்கும் நீட்டினால் மைதானம் இரண்டு பிரிவுகளாக இருக்கும். மட்டையாளரின் மட்டை ஒரு பகுதியில் வரும் – இது ‘ஆஃப்’ திசை. மட்டை இருக்கும் பக்கம் என்றும் சொல்லலாம். மறுபகுதியில் அவரது கால்கள் இருக்கும் – இது ‘ஆன்’ திசை அல்லது கால் திசை ஆகும். எப்பொழுதுமே ஆஃப் பக்கத்தில் பந்துகளை அடிப்பதுதான் சுலபமானது. அந்தப் பக்கத்தில்தான் மட்டையை முழுவதுமாக வீசலாம். கால் பக்கத்தில் பந்துகளை அடிப்பது கடினமானது. இதனால்தான் ஆட்டத்தின் முக்கால்வாசி நேரமும் ஆஃப் திசையில் அதிகமான பந்துத் தடுப்பாளர்கள் இருப்பார்கள். விக்கெட் கீப்பர், பந்து வீச்சாளர் ஆகிய இருவர் போக மொத்தம் ஒன்பது பந்து தடுப்பாளர்கள் மட்டையாளர்களால் அடிக்கப்படும் பந்துகளைத் தடுக்கும் வேலையைச் செய்வார்கள். இந்தத் தடுப்பாளர்களை, இவ்வளவு பெரிய மைதானத்தில் எங்கெங்கு நிறுத்துவது, அப்படி நிறுத்துவதன் மூலம் ரன்களை எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியும், கேட்ச்களைப் பிடிக்க முடியும் என்பதுதான் அணித்தலைவரது வேலை. கொடுக்கப்பட்டிருக்கும் தடுப்பு வியூகத்துக்கு ஏற்ற முறையில் பந்து வீசுவதுதான் பந்து வீச்சாளரின் வேலை. தடுப்பு வியூகங்களில் உள்ள சில இடங்களின் பெயர்களைப் பார்ப்போம். முதலில் ஆடுகளம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கீழே உள்ள படத்தில் பார்த்துவிடவும். இங்கு வலது கை மட்டையாளர் ஒருவர் ஆடுவதாக வைத்துக் கொள்வோம். இடதுகை மட்டையாளர் என்றால் எல்லாமே கண்ணாடி பிம்பங்களாக இட-வலம் மாறும். [Ground Zones]மைதானத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது வழக்கம். நாம் தலைகீழாக ‘6’ம் பகுதியிலிருந்து அ-ப்ரதக்ஷிணமாக வருவோம். ஸ்லிப் (Slip), கல்லி (Gully), தர்ட்மேன் (Thirdman) ஆகியவை இந்தப் பகுதியில் வரும் தடுப்பு வியூகங்களின் பெயர்கள். ஸ்லிப், கல்லி இரண்டுமே ரன்களைத் தடுக்கும் இடங்கள் அல்ல, கேட்ச் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள். தர்ட்மேன் தான் ரன்களைத் தடுப்பதற்காக எல்லைக்கோட்டின் அருகே வைக்கப்பட்டிருக்கும் இடம். இந்தப் பகுதியில் பொதுவாக கட் (cut), ஸ்கொயர் டிரைவ் (square drive), ஸ்டியர் (steer) ஆகிய அடிகள் போகும். விளிம்பில் பட்டும் நிறைய அடிகள் போகும். அடுத்து ‘5’ம் பகுதி. இங்குதான் பாயிண்ட் (Point), கவர் (Cover) ஆகிய இரண்டு முக்கிய இடங்கள். இவை ரன்களைத் தடுப்பதற்கும், கேட்ச்களைப் பிடிப்பதற்கும் உதவும் இடங்கள். ஆஃப் திசையில் பொதுவாக இந்தப் பகுதியில்தான் அதிகபட்ச ரன்கள் கிடைக்கும். கட் (cut), டிரைவ் (drive), புஷ் (push) ஆகிய அடிகள் இந்தப் பகுதிக்கு வரும். எல்லைக்கோட்டிற்கு அருகில் இந்தப் பகுதியின் ரன்களைச் சேமிக்க ஸ்வீப்பர் கவர் (Sweeper Cover) என்ற தடுப்பாளர் சில சமயங்களில் நிறுத்தப்படுவார். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது மட்டையாளருக்கு வெகு அருகில் சில்லி பாயிண்ட் (Silly point), சில்லி மிட்-ஆஃப் (Silly mid-off) போன்ற தடுப்பாளர்களையும் நிற்க வைப்பதுண்டு. கவர் பகுதியில் சில சமயம் இரண்டு ஆட்டக்காரர்களை நிறுத்துவது வழக்கம். கவருக்கும், பாயிண்டுக்கும் இடையில் அவர் நிற்பார் என்றால் அந்த இடத்திற்கு கவர் பாயிண்ட் (Cover point) என்று பெயர். கவருக்கும் பந்து வீச்சாளருக்கும் இடையில் என்றால் எக்ஸ்டிரா கவர் (Extra cover). ‘4’ம் பகுதியில் மிட் ஆஃப் (Mid-off), லாங் ஆஃப் (Long-off) என்னும் இடங்கள் உண்டு. இவை பொதுவாக ஓட்டங்களைத் தடுத்து நிறுத்தவே. இந்தப் பகுதிகளில் டிரைவ் அடிதான் அதிகம். மேலாகத் தூக்கி அடிக்கப்படும் (lofted shot) அடியும் இங்கு ஓட்டங்களைப் பெற்றுத்தரும். ‘3’ம் பகுதியில் மிட் ஆன் (Mid-on), லாங் ஆன் (Long-on) என்னும் இடங்கள். மேற்சொன்னதைப் போன்ற அடிகள்தான் இங்கும். டிரைவ் என்பது மட்டையை நெடுக்காக (மேலிருந்து கீழ்) வைத்து, பின்னாலிருந்து முன்னுக்கு வேகமாகக் கொண்டுவந்து பந்தை அடிப்பது. கவர் திசையிலிருந்து மிட்-ஆன் வரையில் டிரைவ் அடியை அடிக்கலாம். கவரில் அடித்தால் கவர் டிரைவ், மிட்-ஆஃப் திசையில் அடித்தால் ஆஃப் டிரைவ், நேராக அடித்தால் ஸ்டிரெயிட் டிரைவ், மிட்-ஆன் பக்கம் அடித்தால் ஆன் டிரைவ். அவ்வளவுதான். சேவாக், லக்ஷ்மண் போன்ற மட்டையாளர்கள் பந்தை நன்றாக ‘டைம்’ செய்து அடிப்பார்கள். அதாவது மட்டையை சரியான நேரத்தில், சரியான இடத்தின் வழியாக எதிர்கொண்டு அடிப்பது. அப்பொழுது அவர்கள் முழுதாக மட்டையை செலுத்தி அடிக்க வேண்டியதில்லை. பேட்டில் பட்டவுடனேயே பந்து எல்லைக்கோட்டுக்குப் பறக்கும். அதனால் சில சமயம் தடுத்தாடுவது போலத் தோன்றும் அடிகளும் கூட நான்கு ரன்களைப் பெற்றுத்தரும். கட் என்னும் அடி மட்டையைக் குறுக்காக (இட வலமாக) வைத்து பந்தின் பறக்கும் திசைக்குக் குறுக்காக வெட்டி ஆடுவது. இப்படி அடிக்கும் அடி ஸ்லிப் திசையிலிருந்து கவர் திசை வரைப் பயணிக்கும். அடுத்து ‘2’ம் பகுதிக்கு வருவோம். இங்கு புல் (Pull), பிளிக் (Flick) ஆகிய அடிகள் பொதுவாகச் செல்லும். புல் என்பது பந்தை மட்டையால் அடியிலிருந்து மேல்நோக்கி அடிப்பது. பிளிக் என்பது மட்டையை நெடுக்காக வைத்து மணிக்கட்டைத் திருப்புவதன் மூலம் பந்தின் திசையைத் திருப்புவது. இந்த அடிகள் ஸ்கொயர் லெக்கிலிருந்து (Square leg) மிட் விக்கெட் (Mid wicket) வரை பயணிக்கும். சில பிளிக் அடிகள் ‘1’ம் பகுதிக்கு பயணிக்கும். கால் திசையில் மட்டையாளருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பயமுறுத்துவது ஃபார்வர்ட் ஷார்ட் லெக் (Forward short leg). சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை, குனிந்து பக்கவாட்டில் மட்டையை வைத்து, தரையைப் பெருக்குவது போல அடிப்பது ஸ்வீப் (Sweep). இப்படி அடிப்பது ஸ்கொயர் லெக்கிலிருந்து ஃபைன் லெக் வரை செல்லும். வேகப்பந்து வீச்சாளர்கள் அளவு குறைந்து, உயரம் அதிகமாக, கால் திசையில் வீசும் பந்துகளை அடி வழியாகத் தூக்கி மேலெ அடிப்பது ஹூக் (Hook) – கொக்கி போடுவது. இதுவும் ‘1’ம் பகுதிக்குச் செல்லும். ஒவ்வொரு தடுப்பு இடங்களின் பெயர்களையும் இந்தப் படத்தில் கொடுத்துள்ளேன். அந்த இடங்களில் எண்களுக்கு சமமான பெயர்கள் இங்கே. [Ground fielding Positions.jpg]Wk – விக்கெட் கீப்பர் B – பந்துவீச்சாளர் 1 – முதல் ஸ்லிப் 2 – இரண்டாம் ஸ்லிப் 3 – மூன்றாம் ஸ்லிப் 4 – கல்லி 5 – தர்ட்மேன் 6 – பாயிண்ட் 7 – கவர் 8 – மிட் ஆஃப் 9 – ஸ்வீப்பர் கவர் 10 – லாங் ஆஃப் 11 – லாங் ஆன் 12 – மிட் ஆன் 13 – மிட் விக்கெட் 14 – டீப் மிட் விக்கெட் 15 – ஸ்கொயர் லெக் 16 – பேக்வர்ட் ஸ்கொயர் லெக் 17 – ஷார்ட் ஃபைன் லெக் 18 – ஃபைன் லெக் 19 – சில்லி பாயிண்ட் 20 – ஃபார்வர்ட் ஷார்ட் லெக்   இந்த இடங்களைத் தெரிந்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் எம்மாதிரியான பந்துகளில் எம்மாதிரியான ஷாட்களை அடிக்க முடியும் என்று பார்ப்போம். 8 வேகப்பந்து வீசும் கலை மெக்ராத் பேட்டிங்கில் ஜீரோ! [Glen Mcgrath]   ‘புறா’ என்று செல்லப்பெயருடன் அழைக்கப்படும் கிளென் மெக்ராத் ஆஸ்திரேலியாவின் சூப்பர் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர். இப்பொழுது நாக்பூரில் நடக்கும் டெஸ்ட் இவரது 100வது டெஸ்ட். மெக்ராத்தை விட அதிகம் டெஸ்ட் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் நான்கு பேர்தான் – இயான் போதம், வாசிம் அக்ரம், கபில் தேவ், கோர்ட்னி வால்ஷ். இந்த நான்கு பேரில் வால்ஷ் ஒருவர்தான் மெக்ராத்தை விட (இப்பொழுதைக்கு) அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளவர். இந்த நால்வரில் வாசிம் அக்ரம் ஒருவர்தான் மெக்ராத்தை விட மட்டையாளர்களை அதிகம் பயமுறுத்தக்கூடியவர் என்று சொல்லலாம். இந்த ஐவரிலுமே மெக்ராத்தான் தான் வீசிய ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களைக் கொடுத்தவர். சற்று முந்தைய தலைமுறையில் வளர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனைபேரும் பந்துவீச்சில் வேகம் இருக்கவேண்டும் என்றுமட்டும்தான் நினைத்தார்கள். விவேகம் குறைவுதான். ஆனால் மெக்ராத் வித்தியாசமானவர். குறிப்பிட்ட ஓரிடத்தில் – ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே – தொடர்ச்சியாக சரியான அளவில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருப்பது. அதையே மீண்டும் மீண்டும் செய்வது. இதுதான் மெக்ராத்தின் பாணி. அப்படி வீசும் பந்துகளில் ரன்கள் அடிப்பது கடினம். ரன்கள் அடிக்க பிரயத்னம் செய்வதில் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆகத்தான் சாத்தியங்கள் அதிகம். அல்லது எல்.பி.டபிள்யூ ஆகவேண்டியிருக்கும். மெக்ராத் பந்துவீசும் முறை பாடப்புத்தகங்களில் அப்படியே சொல்லப்பட்டிருப்பது. கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் ஓடிவருவார். ஸ்டம்பிற்கு வெகு அருகாமையிலிருந்து, வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசுவார். கடைசி விநாடியில் சற்றே விலகி கிட்டத்தட்ட நடுவருக்கு/ஸ்டம்பிற்கு நேர் முன்னால் வீசும் கை இருக்குமாறு பந்தை வீசுவார். இதனால் மெக்ராத் பந்துவீசும்போது மட்டையாளருக்கு நேர் எதிராக – ஒரே நேர்க்கோட்டில் இருப்பார். இம்மாதிரியான ஓடுபாதை அவ்வளவு சுலபமாக எல்லொருக்கும் வாய்ப்பதில்லை. இப்பொழுது பந்து வீசுபவர்களிலேயே தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஒருவர்தான் அப்படி வீசுபவர். முந்தைய வலதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ இதேபோன்று வீசுபவர். இவர்கள் மூவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பந்துவீச்சாலர்கள் என்று சொல்லலாம். அதிவேகப் பந்து வீசுவதில் இவர்களுக்கு நாட்டமில்லை. அதற்குத்தான் ஷோயப் அக்தர், பிரெட் லீ போன்றவர்கள் இருக்கிறார்களே! இவர்களது சாரமே துல்லியம், அவ்வப்போது சிறிதாக பந்தின் திசையை நகர்த்துதல், முடிந்தவரை – ஓவருக்கு ஆறு பந்துகளையுமே – ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசுதல், ஆனால் மிக அதிக அகலம் கொடுக்காமல் வீசுதல் ஆகியவையே. ஹாட்லீ, பொல்லாக் இருவருக்கும் வாய்த்த ஸ்விங் கூட மெக்ராத்துக்குக் கிடையாது. மெக்ராத், முடிந்தவரை, பந்தின் தையல் குறிப்பிட்ட கோணத்தில் சுழன்று கொண்டே வந்து தரையில் படுவதன் மூலம் பந்து பக்கவாட்டில் நகர்வதைத்தான் (seam movement) அதிகம் நம்பி வருகிறார். அதை மட்டும் வைத்துகொண்டே, தன் விடாமுயற்சியால், மட்டுமே இதுவரை (வியாழன் இரவு வரை) 449 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். மெக்ராத் இடதுகை மட்டையாளர்களுக்கு மிகவும் நன்றாகப் பந்து வீசுவார் என்று பெயர் பெற்றவர். பிரையன் லாராவை மிகுந்த கஷ்டத்துக்குள்ளாக்கியவர். இடதுகை மட்டையாளர்களுக்கு வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர வீசுவார். அப்படி வீசும்போது பந்தை உள்நோக்கிக் கொண்டுவந்து, மட்டையாளர் வெட்டி ஆடத்தேவையான அகலம் கொடுக்காமலேயே வீசுவார். லாரா போன்ற ஆட்டக்காரர்களை இந்த நீளமும், திசையும் வெகுவாக பாதித்தது. பொல்லாக், ஹாட்லீ போலல்லாது, மெக்ராத் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுபவர். தன் எதிராளி தன் பந்தை அடித்து விட்டால் வாய் ஓயாது அவரிடம் சென்று ‘பேசுவார்’. எந்நிலையும் மனம் தளராத போட்டியாளர். டெண்டுல்கர், லாரா போன்ற பெயர் பெற்ற மட்டையாளர்களுக்கும், மெக்ராத்துக்கும் நடந்த போட்டிகளில் மெக்ராத்தே மேலே வந்துள்ளார். இத்தனை திறமை வாய்ந்த மெக்ராத் பேட்டிங்கில் ஜீரோ! தன் 100 டெஸ்ட் ஆட்டங்களில் இவர் மொத்தமாக இதுவரை எடுத்துள்ள ரன்கள் வெறும் 468! கிட்டத்தட்ட அத்தனை விக்கெட்டுகள் இவர் கையில் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மெக்ராத் பேட்டிங் செய்ய வந்துள்ளார் என்றாலே விக்கெட் விழுந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்ப்பர். அவ்வப்போது பந்தைத் தூக்கியடித்து ரன்களைப் பெற்றாலும், மெக்ராத்தை விட மோசமான பேட்ஸ்மேன் இன்றைய கிரிக்கெட் உலகில் எந்த சர்வதேச அணியிலும் கிடையாது. மெக்ராத்தின் ஃபிட்னெஸ் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக மாறிமாறி ஆட்டத்திலிருந்து ஓய்வெடுக்கும் நிலையில், மெக்ராத் இதுவரை இரண்டே இரண்டு முறைகள் – அதுவும் ஒன்பது டெஸ்ட்கள்தான் – தன் அணிக்காக விளையாடாமல் இருந்துள்ளார். இன்றும் கூட நாள் முழுவதும் பந்து வீசுகிறார் ஆனால் கையையும், காலையும் இழுத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை டென்னிஸ் லில்லீதான் அவர்களது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதற்குப்பின் மெக்ராத் பெயர்தான் முன்னால் வரும். 9 தேவை ஒரு நல்ல விக்கெட்கீப்பர் []   பெங்களூர், சென்னை டெஸ்ட்கள் இரண்டிலும் பார்திவ் படேல் விக்கெட் கீப்பிங்கை நேரில் பார்த்தேன். மிக மோசமாக விளையாடியிருந்தார். விக்கெட் கீப்பிங் எளிதான வேலையல்ல. இந்தியாவின் ஆடுகளங்கள் வித்தியாசமானவை. வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகள் அவ்வளவாக எழும்பாது. புதுப்பந்து, முதல் நாள் என்றாலும் கூட பந்து தாழ்ந்துதான் வரும். எழும்புதலும் சமச்சீராக இருக்காது. இதற்குக் காரணம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஆடுகளத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிளவுகள்தான். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் – அதுவும் ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக – சுழற்பந்துக்கு ஆதரவான ஆடுகளங்களாக இருந்தால் மட்டும்தான் முடியும் என்று “மேலிடத்தில்” முடிவு செய்வதன் விளைவாக, ஆடுகளத்தில் இருக்கும் மிச்சம் மீதி புல்லும் முழுவதுமாக சரைக்கப்படும். ஆடுகளத்தில் விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டு, முழுவதுமாக நிறுத்தப்படும். வெய்யில் கொளுத்த கொளுத்த, ஆடுகளத்தின் மேற்பரப்பு உதிரத்தொடங்கும். பரப்பு காயும்போது, பிளவுகள் ஏற்படும். ஏற்கனவே உள்ள பிளவுகள் இன்னமும் விரிவடையும். தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் பற்றிப் பேசும்போது கையில் உள்ள சாவிக்கொத்திலிருந்து சாவிகளை உள்ளே செருகி, பிளவு எத்தனை மோசம் என்பதைக் காண்பிப்பார்கள். இப்படிப்பட்ட பிளவுகளின் ஓரங்களில் பந்து வந்து விழும்போது என்ன வேண்டுமானாலும் ஆகலாம். திடீரென எழும்பலாம். அல்லது தரையோடு உருளலாம். பந்துவீச்சாளரே எதிர்பார்க்காமல் பந்து உள்ளேயே, வெளியேயோ திரும்பலாம். இதனால் மட்டையாளருக்கு மட்டுமல்ல, விக்கெட் கீப்பருக்கும் திண்டாட்டம்தான்! சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முதல் நாள் முதற்கொண்டே நல்ல சுழற்சி கிடைக்கும். அதனால் ஒன்றும் அவ்வளவு தொல்லையில்லை. அடுத்த இரண்டு நாள்களில் மேற்பரப்பில் நிறைய மணற்தூள்கள் உருவாகும். அதில் பந்து பட்டால் எகிறும். தொலைக்காட்சியில் பார்க்கும்போது பந்து விழுந்த இடத்தில் ஒரு சிறு புழுதிப்படலம் உருவாவதையும் நீங்கள் காணலாம். இதை எதிர்கொள்வதில் தேர்ச்சியில்லாத மட்டையாளர்கள் மிகவும் சிரமப்படுவர். மட்டையை விட கால் காப்பையும், முதுகையும், பின்பக்கங்களையும் கூட பயன்படுத்தி பந்தினை விக்கெட்டின் மேல் சென்று விழாதவாறு காக்க வேண்டும். முடிந்தவரை மட்டையாளர் பந்தை முழுவதுமாக விட்டுவிடுவார். அப்பொழுதுதான் விக்கெட் கீப்பர் தடுமாறுவார். பந்து எகிறி வரும். விக்கெட் கீப்பரோ, விக்கெட்டின் பின் வெகு அருகாமையில் நின்று கொண்டிருப்பார். அவர் குள்ளமானவராகவும் இருந்து விட்டால் பந்தை சரியாகப் பிடிப்பதே கஷ்டம். அத்துடன் அந்தப் பந்து என்ன செய்யப் போகிறது என்பது புரியவில்லையென்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு மேல் அந்தப் பந்து மட்டையில் விளிம்பில் பட்டு வருகிறது என்றால் இன்னமும் நாசம்தான்! பார்திவ் படேலுக்கு நம் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், கும்ப்ளே இருவர் பந்துவீச்சும் இன்னமும் முழுமையாகப் புரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர்களது பந்துவீச்சைப் பார்த்திருக்கிறார், கீப்பிங் செய்துள்ளார் என்றாலும் இந்திய ஆடுகளத்திற்கும், வெளிநாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிபடுவதில்லை. கும்ப்ளே பெரும்பாலும் டாப் ஸ்பின், கூக்ளிதான் வீசுவார். பெயருக்குத்தான் அவர் லெக் ஸ்பின்னர். இது தெரிந்திருந்தும் படேல் கும்ப்ளே வீசும் ஒரு கூக்ளியையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கூக்ளி என்பது கிட்டத்தட்ட லெக் பிரேக் போடும் ஆக்ஷனில் கடைசி நேரத்தில் கை விரல்களை வேறு பக்கமாகத் திருப்பி, ஆஃப் ஸ்பின்னாக வீசுவது. வலது கை லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் வீசும் லெக் பிரேக் வலது மணிக்கட்டால் ஏற்படும் சுழற்சியால் ஆனது என்பதை மனதில் கொண்டு கூக்ளி எப்படி வீசப்படும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். திறமையான மட்டையாளராலேயே இந்தப் பந்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். விக்கெட் கீப்பர் இன்னமும் பின்னால் இருக்கிறார். அதனால் பொதுவாக கூக்ளி என்பதை அடையாளம் கண்டு கொள்ள விக்கெட் கீப்பருக்கு சற்று அதிகம் அவகாசம் உள்ளது. ஆனால் அப்படியும் படேல் கும்ப்ளேயின் கூக்ளிக்களை அடையாளம் காண்பதில்லை. இதுவரை இந்தியாவிற்கு விளையாடிய எந்த விக்கெட் கீப்பரும் இந்த அளவுக்கு மோசமாக விளையாடியதில்லை. ஆம், தீப் தாஸ்குப்தா கூட அவ்வளவு மோசமில்லை. ஏன்? இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் ஒரு லெக் ஸ்பின்னராவது இருப்பது வழக்கம். அவருக்கு கூக்ளி போடத்தெரியும். அவருக்கு கீப்பிங் செய்து பழகியிருந்தாலே போதும், ஓரளவுக்கு சர்வதேச ஆட்டங்களில் சமாளித்து விடலாம். ஆனால் அங்குதான் படேலின் பிரச்னை ஆரம்பமாகிறது. படேல் இந்தியாவில் ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை ஆட்டங்களில் ஆடிப் பயிற்சி பெறவேயில்லை. நேரடியாக சர்வதெச கிரிக்கெட்டுக்குப் போனார். அங்கேயே விளையாடிக் கொண்டிருக்கிறார். இதைப்போலவே ஹர்பஜன் பந்துவீச்சில், ஆஃப் ஸ்பின் ஆகாது நேராகவோ, அல்லது சற்றே விலகி வெளியே போகும் பந்து – தூஸ்ரா – அதையும் படேல் கணிக்கத் தவறுகிறார். இது கணிக்க மிகவும் கஷ்டமான பந்து. இந்தியாவில் விளையாடும் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் அத்தனை பேராலும் இந்தப் பந்து வீசப்படுவதில்லை. கூக்ளியை வீசாத லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களே இல்லை எனலாம். ஆனால் வெகு சில ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களே தூஸ்ரா வீசத் தெரிந்தவர்கள். படேல் வெளிநாடுகளின் ஆடுகளங்களில் ஓரளவுக்கு திருப்தியாகவே கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆடுகளத்தின் மேற்பரப்பு தூள் தூளாகாது. மேற்பரப்பில் உயிருடன் இருக்கும் புல்லையும், செத்த புல்லையும் போட்டுப் பிசைந்து வைத்திருப்பதால் கெட்டியாக இருக்கும். கடைசிவரை தண்ணீர் பாய்ச்சி இருப்பதால் பிளவுகள் கடைசி இரண்டு நாள்கள் வரை தோன்றாது. பந்தின் எழும்புதலை மிகச்சரியாகக் கணிக்க முடியும். பந்தும் கன்னா பின்னாவென்று சுழலாது. ஆனால் வேகப்பந்து வீச்சில் தையல் மூலமாகவோ, அல்லது காற்றிலேயே ஸ்விங் செய்வதன் மூலமோ பந்து அதிகமாக பக்கவாட்டில் நகரும். ஆனால் அம்மாதிரியான பந்துகளுக்கு படேல் அதிகம் தள்ளி நின்று கீப்பிங் செய்வதால் பாய்ந்து சென்று தடுத்து விட முடியும். அதனால்தான் படேல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நமக்காக டெஸ்ட் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது டெக்னிக்கில் எந்தக் குறையையும் நாம் காணவில்லை. சரி, இப்பொழுது என்ன செய்வது? இந்தப் போட்டித் தொடரில் உள்ள மற்ற இரண்டு டெஸ்ட்களுக்காக புதிதாக ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஆனது ஆகட்டும் என்று படேலையே கீப்பிங் செய்யச் சொல்லலாம். ஆனால் படேல் இடத்தில் தினேஷ் கார்த்திக்கைக் கொண்டு வருவதிலும் அதே பிரச்னைகள்தான். கார்த்திக்கும் இந்தியாவின் ஆடுகளங்களில் நல்ல ஸ்பின் பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொண்டு கீப்பிங் செய்ததில்லை. எனவே அடுத்த ஒரு வருட காலத்துக்கு படேல், கார்த்திக் இருவரையும் உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடச் சொல்லிவிட்டு தில்லியின் விஜய் தாஹியா அல்லது பிற மாநிலங்களில் வெகு நாள்களாய் கிரிக்கெட் விளையாடும் விக்கெட் கீப்பர் ஒருவரை தற்காலிகமாகக் கொண்டு வரலாம். தாஹியா பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பாகச் செய்யாவிட்டாலும் விட்டுவிடலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பார்திவ் படேல் எப்படி விலையாடுகிறார் என்பதைப் பார்த்து மீண்டும் அவரையோ, அல்லது அதற்குள் ஸ்பின், வேகப்பந்து இரண்டையும் சரியான விதத்தில் கீப்பிங் செய்யக்கூடியவராகப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இப்படியே படேலை தொடர்ந்து அணியில் வைத்திருப்பதால் அவருக்கும் கெடுதல், இந்திய அணிக்கும் கெடுதல். 10 அரங்கத்துக்குப் போய் கிரிக்கெட் பார்ப்பது இந்தியாவில் பல கோடி பேர் தொலைக்காட்சியில் மட்டுமே கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கின்றனர். தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், நேரடியாக மைதானம் சென்று அரங்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. [Chepauk Stadium]தொலைக்காட்சியில் பார்ப்பது என்பது உரித்த வாழைப்பழத்தை வாயில் ஒருவர் ஊட்டிவிடுவதைப் போன்றது. மைதானத்தில் போய் கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளர் சற்று அதிகமாக முயற்சி செய்யவேண்டும். கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். சிந்தனையைச் சிதறவிடக் கூடாது. இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற நிலையில் எதற்காக ஒருவர் மைதானம் போய் ஆட்டத்தைப்பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். உரித்த வாழைப்பழம் எல்லாம் சரி, ஆனால் நல்ல கனிந்த, உங்கள் சுவைக்கு ஏற்றதான வாழைப்பழத்தை உங்களால்தானே தேர்ந்தெடுக்க முடியும்? நேரடியாக ஆட்டத்தைப் பார்க்கையில் தொலைக்காட்சியில் காண்பிக்காத பலவற்றைக் காண முடியும். அதே சமயம் தொலைக்காட்சியின் பல சவுகரியங்கள் நேரடியாக ஆட்டத்தைப் பார்ப்பதில் இருக்காது. நல்ல அரங்கங்களாக இருந்தால் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு டிவி இருக்கும். அல்லது அரங்கில் பெரிய திரையில் அவ்வப்போது ரீப்ளே காண்பிக்கும். பெங்களூரில் பெரிய திரை கிடையாது, சென்னையில் உண்டு. அரங்கில் இருக்கும்போது நம்மால் முழு பந்துத் தடுப்பு வியூகத்தையும் பார்க்க முடியும். யார் யார் எங்கே நிற்கிறார்கள், சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதைப் போல அணித்தலைவர் யாரை எங்கு நகர்த்துகிறார், பந்து எங்கு ஓடுகிறது, மட்டையாளர்கள் எவ்வளவு ரன்களை எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இடது கை மட்டையாளரும், வலது கை மட்டையாளரும் ஒரு ரன்னடித்து இடம் மாறும் போது தடுப்பு வியூகம் எப்படி மாறுகிறது என்று பார்க்க முடியும். தடுப்பு வியூகத்தில் எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது என்பதை முழுமையாகப் பார்க்க முடியும். பந்து வீச்சாளர் பந்தை வீசியவுடனே மட்டையாளர் இடைவெளியைப் பார்த்து அடிப்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். பந்தை அவ்வாறு அடித்தவுடன் பந்து தடுபடுமா, இல்லை நான்காகுமா என்று கவனிக்க முடியும். பந்தை உயரத் தூக்கி அடிக்கும்போது பந்து சிக்ஸ் ஆகுமா இல்லை உள்ளேயே விழுந்துவிடுமா என்பதைக் கணிக்க முடியும். இது எதையும் டிவியில் பார்க்கும்போது கண்டறிய முடியாது. டிவியில் பார்க்கும்போது எந்த முனையிலிருந்து வீச்சாளர் பந்து வீசினாலும் ஒரே மாதிரியாகத்தான் தெரியும். டிவியில், முதலில் பந்துவீச்சாளர் ஓடிவருவது, வீசுவது ஆகியவை காண்பிக்கப்பட்டு, காட்சி சட்டென்று மாறி அடுத்து மட்டையாளர் காண்பிக்கப்படுவார். அதன்பின் அவரது ஷாட் காண்பிக்கப்படும். பின் பந்துத் தடுப்பாளர்களும், பந்தும் ஒரே ஃபிரேமுக்குள் வருமாறு கேமரா கோணம் மாறும். நடுவில் மட்டையாளர்கள் ரன் பெறுவது வேண்டுமானால் காண்பிக்கப்படும் (மிகவும் நெருக்கமான ரன், ரன் அவுட் வாய்ப்புள்ளது என்றால்). ஓவர் முடிவில் இந்தியத் தொலைக்காட்சியென்றால் சதா விளம்பரங்கள். பலமுறை அடுத்த ஓவரில் முதல் பந்து காணாமல் போய்விடும். அதில் விக்கெட் விழுந்து தொலைத்தால், உடனே அந்த விக்கெட்டைக் கூட காட்டாமல் மேலும் விளம்பரங்கள் – இப்படி. ஆனாலும் தொலைக்காட்சியில் சில விஷயங்கள் மிகவும் உபயோகமானவை. சூப்பர் ஸ்லோ மோஷன் கேமராக்கள், ஸ்டம்ப் கேமரா, ரீப்ளே, ஹாவ்க் ஐ, எல்.பி.டபிள்யூ மார்க்கர், கேட்சா, இல்லையா என்பதைக் கண்டறிய பெரிதாக்கிக் காண்பிக்கும் வசதி போன்றவை மிகவும் உபயோகமானதே. அதனால்தான் அரங்கில் அமர்ந்து கொண்டு, பக்கத்தில் டிவியையும் வைத்திருந்தால் வசதியாக இருக்கும். அரங்கில் இடம் கிடைப்பது அடுத்த விஷயம். எங்கு உட்காருவது? எங்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கும் என்றால் முடிந்தவரை பந்துவீச்சாளர்க்கு நேர் பின்னே உட்காருங்கள். முடிந்தவரை கான்கிரீட் தூண்கள் இல்லாத இடமாகப் பார்த்து உட்கார வேண்டும். மைதானத்தில் பெரிய திரை இருந்தால், அதைப் பார்க்கக்கூடிய திசையில் சீட் பிடியுங்கள். பொதுவாக நல்லதொரு எலெக்டிரானிக் ஸ்கோர்போர்டும், ஒரு சாதா ஸ்கோர்போர்டும் இருக்கும். எலெக்டிரானிக் ஸ்கோர்போர்டில்தான் அதிகபட்ச விவரங்கள் கிடைக்கும். சென்னை சேப்பாக்கத்தில் பெரிய திரையில் ஸ்கோர், ரீப்ளே என எல்லாம் கிடைக்கும். அவ்வப்போது ஏதானும் ஒரு மேட்சாவது மிட் விக்கெட் (கவர்) திசையில் உட்கார்ந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவத்தைத் தரும். மற்ற பல விஷயங்களும் உண்டு. முக்கியமாக பந்து எங்கே போகிறது என்பதைக் கவனிக்க பலரும் தவற விடுவார்கள். டிவியாக இருந்தால் டிவி கேமரா பந்தைத் துரத்தி உங்களுக்குக் காண்பிக்கும். அரங்கத்தில் பந்து எங்கே போகிறது என்பதை நீங்கள்தான் கவனிக்க வேண்டும். அதற்கு சிறிது அனுபவம் வேண்டும். (இதை வைத்துத்தான் டிவி கேமராமேன் செய்கிறார்!) பந்து வீசியவுடன் மட்டையாளர் எப்படி நகருகிறார், மட்டையை வீசுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். உடனடியாக உங்கள் மூளை, பந்து எங்கு சென்றிருக்கமுடியும் என்பதை ஓரளவுக்குக் கணிக்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் விளையாட்டு உங்களுக்கு நன்கு புரிபட வேண்டும். உங்களையே பேட்ஸ்மேனாக நினைத்து அந்த அடியை நீங்கள் கண நேரத்தில் அடித்துப் பார்க்க வேண்டும். பின்பு அந்தத் திசையில் கவனிக்க வேண்டும். பந்து சரியானபடி அடிபட்டிருந்தால் அங்குதான் செல்லும். ஆனால் தவறாக அடிபட்டிருந்தால் சற்றே விலகிச் செல்லும். அல்லது முழுவதுமாக எதிர்த் திசையிலும் செல்லலாம். (மிட்விக்கெட்டில் அடிக்கப்போய் கவருக்குச் செல்லும்!) மேற்கொண்டு உதவ பீல்டர்கள் எந்தத் திசைகளில் ஓடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும். ஒருநாள் போட்டிகளாக இருந்தால், இந்திய அரங்கம் என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். சத்தம் தாங்க முடியாது. உங்களைச் சுற்றி இருக்கும் பார்வையாளர்கள் பொதுவாக கிரிக்கெட் பற்றிய அறிவு குறைந்தவர்களாக, அல்லது முழுவதுமாக இல்லாதவர்களாக இருப்பார்கள். இந்திய வீரர்கள் அசிங்கமாக ஆடி, ஒரு ரன் எடுத்தாலும் கூட்டம் ஆர்ப்பரிக்கும். எதிரணி வீரர்கள் அருமையான நான்கு ரன்களைப் பெற்றாலும் அமைதியாக இருப்பார்கள். பந்து தரையில் பட்டு தடுப்பாளரிடம் சென்றால் சுற்றி உள்ளவர்கள் தீவிரமாக அப்பீல் செய்வார்கள். அதையெல்லாம் கண்டு/கேட்டு கடுப்பாகக் கூடாது. அவர்கள் பாவம், மன்னித்து விடுங்கள். நடு நடுவில் ‘சாக் தே’, ‘சத் ஸ்ரீ அகால்’, ‘ஜீதேகா பாயி ஜீதேகா’ போன்ற பல பாடல்கள் வரும். காலி தண்ணீர் பாட்டில்களை வைத்து சேரில் தட தடவென அடித்து சத்தம் செய்வார்கள். இந்தியா இரண்டு மூன்று விக்கெட்டுகளைச் சேர்ந்த மாதிரி எடுத்தால் எல்லோரும் எழுந்து நின்று அடுத்த பந்துகளைப் பார்க்க முடியாதவாறு செய்வார்கள். முடிந்தவரை கிரிக்கெட் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் போட்டிகளுக்குப் போகாதீர்கள். (போகலாம், ஆனால் கிரிக்கெட்டை ரசிக்க முடியாது. மற்றவர்களோடு சேர்ந்து குதித்து ஆடி சந்தோஷமாகவோ, அல்லது சோகமாகவோ திரும்பி வரலாம்!) டெஸ்ட் போட்டிகள்தான் அரங்கில் போய் ரசிக்க லாயக்கானவை. பொதுவாக கூட்டம் குறைவாக இருக்கும். ஆட்டமும் சற்று மெதுவாகவே நடக்கும். கூச்சல் குழப்பம் இருந்தாலும் அதைத் தவிர்த்து ஆட்டத்தில் ஓரளவுக்கு கவனம் செலுத்தலாம். நான் பார்த்தவரையிலே, இந்தியாவிலேயே சென்னை சேப்பாக்கம் ரசிகர்கள்தான் சிறந்த ரசிகர்கள். 11 கும்ப்ளே 400 [] தன் 85ஆவது டெஸ்டில், அனில் கும்ப்ளே 400 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் கபில்தேவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை கும்ப்ளே அடைவார். ஒருவர் முக்கியமான மைல் கல்லை அடையும்போது பொதுவாக அனைவருமே அவரைப் பாராட்டுவார்கள். கும்ப்ளே பாராட்டுக்குரியவரே. அதில் சந்தேகமில்லை. இந்தியாவிற்காக பல வெற்றிகளை இந்தியாவில் பெற்றுத் தந்திருக்கிறார். கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வரையில் இவர் வெளிநாடுகளில் குறிப்பிடத்தகுந்த மாதிரி டெஸ்ட் போட்டிகளில் எதுவும் செய்ததில்லை. அந்நேரத்தில் ஹர்பஜன் சிங் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக ஆகியிருந்தார். கேப்டன் கங்குலி, பலமுறை கும்ப்ளேயை அணியிலிருந்து விலக்கி வைத்து ஹர்பஜனை மட்டும் விளையாட வைத்திருந்தார். ஆனால் 2003-04இல் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் சுற்றுப் பயணங்களின் போது ஹர்பஜன் கைவிரல் எலும்பு முறிவால் கும்ப்ளே தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல்முறையாக வெளிநாடுகளில் நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியா ஜெயிப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருந்தார். 400 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், ஆடுகளத்தில் கும்ப்ளே ஒரு பிரம்மாண்டமான ஆகிருதியாக இல்லை என்பதே என் எண்ணம். கும்ப்ளே தன்னை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் மனதில் பயத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு நிலையில் இல்லை. முரளிதரனோ, ஷேன் வார்னோ – பந்து வீசும்போதே எப்பொழுது விக்கெட் விழும் என்ற ஒரு நிலையைத் தோற்றுவிப்பவர்கள். அவர்களது ஒவ்வொரு பந்தும், முந்தைய பந்தை விட மாறுபட்டிருக்கும். மட்டையாளரை ஏமாற்றி, முழுவதுமாக அவரைக் குழப்பி, விக்கெட்டைப் பறிப்பார்கள். இந்தியாவில் அதுபோன்று இப்பொழுது பந்து வீசக்கூடியவர் ஹர்பஜன்தான். பெங்களூர் டெஸ்டில் கும்ப்ளே எடுத்த மூன்று விக்கெட்டுகளுமே சிறப்பான பந்து வீச்சுக்குக் கிடைத்த விக்கெட்டுகள் அல்ல. தவறான பேட்டிங்கினால் விளைந்தது. கும்ப்ளே இத்தனை அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் முதல் டெஸ்ட் விளையாடும் மைக்கேல் கிளார்க்கை கட்டி வைக்க முடியாது அவஸ்தைப்பட்டார். பந்துகளை அவ்வப்போது லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருந்தார். கிளார்க்கும் அவற்றை எல்லைக்கோட்டுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். கும்ப்ளே தொடக்கத்திலிருந்து இன்றுவரை பந்தை அதிகமாக சுழற்றக்கூடியவர் இல்லை. ஒரு சுழற்பந்து வீச்சாளருக்குத் தேவையானதை விட அதிகமான வேகத்தில் பந்துகளை வீசக்கூடியவர். ஆடுகளம் மோசமாக இருந்தால், அதன் மேற்பரப்பு உடைந்த மண் துகள்களால் மூடப்பட்டிருந்தால், கும்ப்ளேயை விளையாடுவது மிகக் கடினம். சமச்சீராக பந்துகள் எம்பும் களங்களில் கூட தொடக்கத்தில் கும்ப்ளே நிறைய விக்கெட்டுகளைப் பெற்றார். பின் கும்ப்ளேயின் துல்லியம் குறையத் தொடங்கவும், அவரது பந்துவீச்சை கிட்டத்தட்ட மித-வேகப் பந்து வீச்சாளரின் பந்துகளைப் போல மட்டையாளர்கள் விளையாடத் தொடங்கவும் கும்ப்ளேயின் வெற்றிகள் குறைய ஆரம்பித்தன. கும்ப்ளேயின் முக்கிய ஆயுதம் அவர் வீசும் பிளிப்பர்கள் (Flippers). சற்றே அளவு குறைவாக வீசப்படும் பந்து இது. காற்றிலே வரும்போதே அதன் உயரம் சடாரென கீழிறங்கி, தரையில் பட்டதும் இன்னமும் வேகமாக ஸ்டம்பை நோக்கி வரும். கிட்டத்தட்ட நேராக வரும் பந்து இது. பந்து ஸ்டம்பில் படாவிட்டாலும், எல்.பி.டபிள்யூ வாவது கிடைக்கும். கும்ப்ளே இந்தப் பந்தை மிக அழகாக வீசுவார். ஆனால் இப்பொழுது அவ்வளவாகக் காணக் கிடைப்பதில்லை. லெக் ஸ்பின்னர்களின் மற்றுமொரு முக்கிய ஆயுதம் கூக்ளி. ஒரு லெக் ஸ்பின்னரைப் போடும் அதே கையசைவில், கடைசியில் மணிக்கட்டை அதிகமாகத் திருப்பாமல், விரல்களால் பந்தை எதிர்ப்புறத்தில் திருப்புவது. இதனால் பந்து தரையில் பட்டதும் ஆஃப் ஸ்பின்னராக வரும். கும்ப்ளே யின் லெக் ஸ்பின்னர்களே அதிகம் திரும்பாத நிலையில் கூக்ளியால் அவருக்கு என்றுமே அதிகப் பலன் கிடைத்ததில்லை. ஹர்பஜன் சிங்கின் தூஸ்ராவுக்கு இருக்கும் பலன் கும்ப்ளேயின் கூக்ளிக்கு கிடையாது. என்னடா, ஒரேயடியாக கும்ப்ளேயை மட்டம் தட்டுவதிலேயே நேரத்தை செலவழிக்கிறானே என்று நினைக்காதீர்கள். குறைந்த வீச்சை வைத்துக் கொண்டே கும்ப்ளே ஒழுங்கு, செய்நேர்த்தி ஆகியவற்றாலும், தன் ஸ்டாமினாவாலும் தொடர்ந்து பந்து வீசிக்கொண்டேயிருந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தனக்கு ஆதரவான ஆடுகளம் கிடைக்கும்போது எவ்வளவு விக்கெட்டுகளைப் பெற முடியுமோ, அத்தனையையும் பெற்று விடுவார். இப்பொழுதெல்லாம் கும்ப்ளேயின் பந்துகளை வலுவாக எதிர்கொண்டு மட்டையாளர் அடிக்கத் தொடங்கியதும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது கும்ப்ளே தடுமாறுகிறார். முன்னர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது துல்லியமாகப் பந்து வீசுவது மட்டுமே தன் குறி என்று இருந்தார். இழந்த அந்தத் திறமையை மீண்டும் எப்படியாவது அவர் பெற்றால்தான் இன்னமும் இரண்டு வருடங்கள் இந்தியாவிற்காக விளையாட முடியும். அத்துடன் விடாது லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மிக அதிகமாக ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் கூட கும்ப்ளே தன் பந்துகளை அதிகமாகத் திருப்பப் போவதில்லை. ஆஃப் ஸ்டம்ப், அதற்கு வெளியே மட்டும் என்று பந்து வீசுவது, துல்லியமாகப் பந்து வீசுவது, அவ்வப்போது கூக்ளி, பிளிப்பர் ஆகியவற்றைப் பிரயோகித்து எதிராளியைத் தடுமாற வைப்பது, நாலைந்து பவுண்டரிகள் போய்விட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாது, முகத்தைத் தொங்கப்போடாது காரியத்திலேயே கண்ணாக இருப்பது என்று இருந்தால் கும்ப்ளே வாழ்நாளில் 500 விக்கெட்டுகளைத் தொட முடியும். செய்வாரா? 12 ஷரத் பவாரைத் தோற்கடித்த தால்மியா 'தில்லுமுல்லு' மே மாதம் எழுதியிருந்த கட்டுரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தேர்தல்கள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒருமுறை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் படிக்கவும். இந்திய கிரிக்கெட்டில் தால்மியா யாராலும் எதிர்க்க முடியாத பெரும் சக்தியாக மாறியுள்ளார். ஒரே நேரத்தில் மூன்று பெரும் வழக்குகளை பிசிசிஐ சந்திக்கிறது. மிக முக்கியமான கிரிக்கெட் தொடர் – இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே – நடைபெற உள்ளது. அதைத் தொலைக்காட்சியில் காண்பிப்பதில் குழப்பம். இப்பொழுது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதைவிட முக்கியமான விஷயம் பிசிசிஐயின் குடுமி யார் கையில் இருக்க வேண்டும் என்பது. ஜக்மோகன் தால்மியா தனக்காகவே பேட்ரன்-இன்-சீஃப் – அதாவது தலமைப் புரவலர் என்ற பட்டத்தை வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இது நிறைவேற இருந்த அவசரப் பொதுக்கூட்டத்தைத் தடைசெய்ய ஒருவர் மத்தியப்பிரதேச நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடுத்து கோர்ட்டின் ஆணையை எடுத்துக்கொண்டு சென்னைக்குப் போவதற்குள் அவசர அவசரமாக கூட்டம் நடந்து முடிந்து தால்மியா ஒருமனதாகப் புரவலராக்கப்பட்டார்! ஆனால் மேற்கொண்டு சென்னை நகர நீதிமன்றம் ஒன்றில் ஒருவர் தடையுத்தரவு வாங்கியுள்ளார். பிசிசிஐ அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் போகப்போகிறது. இதற்கிடையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரண்பீர் சிங் மகேந்திரா, அருண் ஜெயிட்லி இருவருக்குமிடையில் பலத்த போட்டி நடப்பதாக இருந்தது. இருவருமே தால்மியா தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என விரும்பினர். தால்மியா யார் பக்கம் சாய்கிறாரோ, அவர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலை. [Ranbir and Pawar]இந்நிலையில் மத்திய கேபினெட் அமைச்சர் ஷரத் பவார் திடீரென, தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். சுழற்சி முறையில் தலைவர் பதவி வடக்குப் பிராந்தியத்திற்குப் போக வேண்டும். பவார் மும்பை கிரிக்கெட்டின் தலைவர் (மேற்குப் பிராந்தியம்). ஆனால் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பவார் பெயரை முன்மொழிய முடிவு செய்தது. அருண் ஜெயிட்லி போட்டிலியிருந்து விலகிக் கொண்டார். தால்மியா ரண்பீர் சிங் மகேந்திராவை ஆதரித்தார். அவ்வளவுதானே? இனி தேர்தல்தான் என்றால், அதுதான் இல்லை. தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு வெளியே செல்லும் தலைவர் – தால்மியாவின் – வேலை. ஆனால் பவார் ஆதரவாளர் (தால்மியா எதிரி) ஏ.சி.முத்தையா சென்னை உயர்நீதிமன்றம் சென்று தால்மியா தேர்தலை நடத்தினால் குழப்பம் விளைவிப்பார். அதனால் சென்னை உயர்நீதிமன்றமே யாரையாவது நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அஷோக் குமார், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மோகனை தேர்தலை நடத்தக் கேட்டுக்கொண்டார். ஆனால் தேர்தல் நாளன்று பிசிசிஐ சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சை அணுகி, அஷோக் குமாரின் ஆணையை ரத்து செய்ய வைத்தது. இதன்படி தால்மியாவே தேர்தலை நடத்தலாம் என்று முடிவானது. மொத்தம் 31 வாக்குகள். இந்த வாக்குகளை யார் போடுவார்கள்? ஒவ்வொரு கிரிக்கெட் அசோசியேஷனும் ஒருவரை நியமித்து அவரிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் தேர்தலை நடத்துபவர் – இந்த இடத்தில் தால்மியாதான் – யார் ஒவ்வொரு அசோசியேஷனுக்காகவும் வாக்களிப்பார் என்பதை முடிவு செய்வார். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் இரண்டு இடங்களிலிருந்தும், இரண்டு பேர்கள் தாங்கள்தான் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் என்று வந்தனர். [இதுவும் முன்னேற்பாடுதான்!] தால்மியா தேர்தலை நடத்துபவர் என்ற உரிமையில் ராஜஸ்தானிலிருந்து வாக்களிக்க வந்தவர்களுக்குள் தன் ஆதரவாளரை வாக்களிக்கவும், மஹாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் இருவரையும் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் முடிவு செய்தார்! மஹாராஷ்டிரம் பவாரது சொந்த மாநிலம் என்பதை மனதில் வைக்கவும்! விளைவு? மொத்தம் 30 வாக்குகள்தான் [மாஹாராஷ்டிரம் தவிர்த்து]. அது 15-15 என்று பிரிந்தது. உடனே தால்மியா தனது casting வாக்கை ரண்பீர் சிங் மகேந்திராவுக்குப் போட்டு அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தார்! தோற்ற ஷரத் பவார் தான் இதை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஏன் என்று புரியவில்லை. வெளியிலிருந்து பார்க்கும் அனைவருக்குமே தால்மியா ஆடியுள்ள அழுகுணி ஆட்டம் தெரிய வரும்! பிசிசிஐயின் சட்டங்கள் மிகவும் குழப்பமானவை. பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமானவை. பொய், திருடு, ஏமாற்று வளர உதவி செய்பவை. வெளிப்படையாக எதுவுமே நடப்பதில்லை. இப்படியானதொரு இடத்தில்தான் அரசியல்வாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும், பதவித் தரகர்களும் கொழித்தாடுவார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தக் கூத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஒரு பக்கம் இந்திய அணியின் விளையாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மந்தமான நிலை நிலவுகிறது. கிரிக்கெட் வாரியத்திலோ அசிங்கமான அரசியல் சண்டைகள். எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் போய் நிற்க வேண்டிய நிலை. இதே நிலைமை தொடர்ந்தால் மத்திய அரசு வேறு வழியின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தினை கையகப்படுத்திக் கொண்டு தானே நிர்வாகம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக அரசு நிர்வாகம் செய்யும் எதுவுமே உயர்வாக இருப்பதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரையில் இப்பொழுது இருப்பதை விட மோசமாக நிர்வகிக்க இந்திய அரசால் கூட முடியாது! 13 பகலுக்குப் பின் இரவு வரும், இரவுக்குப் பின் பகல் கடந்த கிரிக்கெட் சீசன் (2003-04) இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல நேரம். ஆஸ்திரேலியாவுக்குச் சென்று போட்டித் தொடரை டிரா செய்தது. பாகிஸ்தானுடன் பல வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட்களில் விளையாடியது. பாகிஸ்தானில் முதன் முறையாக டெஸ்ட் ஆட்டத்தில் வென்றது, தொடரையும் வென்றது. இந்திய வீரர் ஒருவருக்கு (சேவாக்) டெஸ்டில் ஓர் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் கிடைத்தது. டெண்டுல்கர் இல்லாமலே ஜெயிக்கலாம் என்ற நிலை. புது நம்பிக்கை நட்சத்திரங்களாக இர்பான் பதான், பாலாஜி ஆகிய பந்துவீச்சாளர்கள் கிடைத்தது… உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஆரம்பமே சரியில்லை. சீசன் தொடங்கும் முன்னால், வரிசையாக மூன்று ஒருநாள் போட்டிகளில் படுதோல்வி. அட, அது கூடப் போகட்டும், வரும் டெஸ்ட் தொடர்களில் சரியாக விளையாட வேண்டும் என்ற நிலையில், டெண்டுல்கருக்குக் காயம். பாலாஜியும் ஆஸ்பத்திரியில். போதும் போதாதற்கு சேவாக், லக்ஷ்மண் இருவருக்கும் பேட் பிடிப்பது சுத்தமாக மறந்து போய்விட்டது. அட, அதுகூடப் பரவாயில்லை என்றால், ஜக்மோகன் தால்மியாவும், இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தொலைக்காட்சி சானல்களும் இந்திய கிரிக்கெட்டை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை என உள்ளனர். தொலைக்காட்சி உரிமம் பற்றிய பிரச்சினை பற்றி உங்களுக்கு விளக்கமாகவே தெரியும். எப்பொழுதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய ஏலத்தை, தால்மியா எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ, அவ்வளவு தள்ளிப்போட்டார். விளைவு? இன்று ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி, இறங்க வேண்டியுள்ளது. இ.எஸ்.பி.என் கிரிக்கெட் வாரியத்தை கோர்ட்டுக்கு இழுக்க, கிரிக்கெட் வாரியம் ஏலத்தை முழுமையாக ரத்து செய்ய, இதனால் அடுத்து ஜீ உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. அக்டோபர் 6 தொடங்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என்ற நிலை இப்பொழுது. தொலைக்காட்சியில் ஆட்டங்கள் காண்பிக்கப்படாவிட்டால் ஆஸ்திரேலியா விளையாட வரமாட்டோம் என்கிறார்கள். ஐசிசியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது இந்திய கிரிக்கெட்டின் தலைவிதி உச்ச நீதிமன்றத்தின் கையில். ஒரேயொரு நல்ல நியூஸ்… பாண்டிங் முதல் டெஸ்ட்டில் (நடந்தால்!) விளையாட முடியாதவாறு, விரலில் எலும்பை முறித்துக் கொண்டுள்ளார். சரி, அதை ஈடுகட்ட மற்றுமொரு கெட்ட நியூஸ்… மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஹெர்ஷல் கிப்ஸ், நிக்கி போயே இருவரும், போலீஸ் தலையீடு ஏதும் இல்லாவிட்டால்தான் தாங்கள் விளையாட வருவோம் என்கின்றனர். அவர்கள் இருவராலும் வரமுடியாவிட்டால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை கேன்சல் செய்வோம் என்று பயமுறுத்துகின்றனர். [Dalmiya]சரி, இந்தத் தொல்லைகளெல்லாம் எதற்கு என்று தால்மியா பேசாமல் கிரிக்கெட் வாரியத்தை விட்டு விலகலாம் இல்லையா? இரண்டு முழுநேர அரசியல்வாதிகள் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் செய்தி. பாஜகவின் அருண் ஜெயிட்லி. காங்கிரஸின் முன்னாள் ஹரியானா முதல்வர் பன்சி லால் மகன் ரண்பீர் சிங் மகேந்திரா! போதாதற்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், தானும் தேர்தலில் நுழைய இருப்பதாக அறிவித்தார். இதற்குள் தால்மியா தன்னத்தானே வாழ்நாள் முழுவதற்குமாக ‘பேட்ரன்-இன்-சீப்’ ஆகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்பொழுது சரத் பவார் போட்டியிடப்போகிறார் என்பதைக் கேட்டு தானே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகவும் (விதிகளை அங்கும், இங்குமாக தளர்த்தி) தால்மியா வட்டாரங்கள் சொல்கின்றன. ஆண்டவா! நீதான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும்! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து விட்டது! ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் இது. கடந்த ஒரு வருடத்தில் இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட மாற்றம் வியக்கத்தக்கது. மற்றுமொரு அரையிறுதியில் பாகிஸ்தான் படு கேவலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்றுப் போனது. இறுதியாட்டத்தில் இங்கிலாந்து ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம். இரானி டிராபி உள்நாட்டுக் குழப்பங்கள் எது இருந்தாலும், இந்திய சீசன் தொடங்கி விட்டது. முதல் ஆட்டமான இரானி டிராபி ஆட்டத்தில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மும்பை அணியைத் தோற்கடித்து விடும் போலத்தான் தோன்றுகிறது. சென்ற வருடம் இரானி ஆட்டம் பிரமாதமாக இருந்தது. சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது மும்பை அணிக்கு டெண்டுல்கரும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கங்குலியும் அணித்தலைவர்களாக இருந்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், பாலாஜி, கும்ப்ளே, ஹர்பஜன் சிங். பேட்டிங்கில் பங்கார், சேவாக், திராவிட், லக்ஷ்மண், கங்குலி, யுவ்ராஜ் சிங், பார்த்திவ் படேல்! அதாவது டெண்டுல்கர் தவிர்த்த முழு இந்திய அணி. மும்பை அணியும் சளைத்ததல்ல. டெண்டுல்கர் அணியின் பந்து வீச்சாளர்கள் அகர்கர், சால்வி, பகுதுலே, பொவார் (நால்வரும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்கள்!). பேட்டிங்கில் முக்கியமானவர்கள் வினாயக் மானே, வாசிம் ஜாபர். முதல் இன்னிங்ஸில் மும்பை அணி லீட் எடுக்க, கடைசி இன்னிங்ஸில் திராவிடும் (121), லக்ஷ்மணும் (99) ஜோடி சேர்ந்து ரெஸ்ட் ஆப் இந்தியாவை ஜெயிக்க வைத்தனர். ஸ்கோர் விவரம்: மும்பை 297 (டெண்டுல்கர் 94, பகுதுலே 58, ஜாகீர் கான் 5-77) & 244 (டெண்டுல்கர் 50, பொவார் 57, ஹர்பஜன் சிங் 4-79), ரெஸ்ட் ஆப் இந்தியா 202 (திராவிட் 41, பொவார் 4-61) & 340/7 (திராவிட் 121, லக்ஷ்மண் 99, பகுதுலே 3-61). ரெஸ்ட் ஆப் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தின் வென்றது. ஆனால் இப்பொழுது நடப்பதோ… டெண்டுல்கர் இல்லாத மும்பை அணி. யாருமே இல்லாத ரெஸ்ட் ஆப் இந்தியா அணி. தினேஷ் மோங்கியா கேப்டன். 14 டெண்டுல்கரின் 'டென்னிஸ் எல்போ' []டெண்டுல்கர் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் இப்பொழுது விளையாடாமல் இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடியது ஆசியக் கோப்பை ஆட்டங்களில். தொடர்ந்து ஹாலந்தில் நடைபெற்ற விடியோகான் கோப்பையிலும், இங்கிலாந்தில் தற்போது நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையிலும் டெண்டுல்கரால் விளையாட முடியவில்லை. டெண்டுல்கரின் முழங்கைக் காயத்திற்கு ‘டென்னிஸ் எல்போ’ என்று பெயர். மருத்துவ பாஷையில் Lateral Epicondylitis என்பார்கள். முழங்கை தசைகள் அதிகமான வேலை காரணமாக வீங்கியும், வலிதரக்கூடியதாகவும் உள்ளது. இந்த வலி இருக்கும்போதே டெண்டுல்கர் விடாமல் பயிற்சி செய்துள்ளார். அப்பொழுது அஜித் அகர்கார் வீசிய குறைந்த அளவுள்ள ஒரு பந்தினைத் தடுக்கும்போது முழங்கையில் ‘விர்ரென்று’ ஏறி விட்டது. இப்பொழுது ஒலி அதிர்வலைகள் மூலம் இந்தக் காயத்தைக் குணமாக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூரில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்டில் டெண்டுல்கரால் விளையாட முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. டெண்டுல்கருக்கு ஏற்கனவே முதுகெலும்பில் வலி; கூடவே கால் கட்டை விரலில் பிரச்னை. அத்துடன் இந்த முழங்கை வலியும் சேர்ந்தால் வெகுநாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என்று தோன்றுகிறது. தன் விளையாடும் காலத்தை நீட்டிக்க, டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகிவிடலாம் என்றும் தோன்றுகிறது. இதனால் தன் டெஸ்ட் வாழ்நாளை அவரால் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். டெஸ்ட் விளையாட, சற்று குறைந்த பிட்னெஸ் போதுமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் பந்து வீச வேண்டிய அவசியமில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளது போல வேகமாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டியதில்லை. பந்துத் தடுப்பாளராக மைதானமெங்கும் ஓடித் திண்டாட வேண்டியதில்லை. இந்தியாவின் முக்கியமான மட்டையாளர்களில் ஒருவரான டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆயுளை நீட்டிக்க வேண்டியது இந்திய அணியின் பொறுப்பாகும். டெண்டுல்கரும் தன் 16 வயதிலிருந்து விடாது டெஸ்ட் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளிலிருந்து எடுக்கும் ஓய்வு அவருடைய குடும்பத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கும். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை – இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான விளையாட்டுகள் தொடங்கி முதல் கட்டமான ஒரு நல்ல அணியும், ஒரு மோசமான அணியும் எதிர்த்து விளையாடும் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. மொத்தம் நான்கு குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள்: இரண்டு நல்ல அணிகள், ஒரு ஒப்புக்குச் சப்பாணி. ஒப்புக்குச் சப்பாணிகளான அமெரிக்கா, பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே நால்வரும் தாம் ஒவ்வொருவரும் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்று சமர்த்தாக வீடு திரும்பி விட்டனர். அடுத்து ஒவ்வொரு குழுவிலும் உள்ள இரண்டு நல்ல அணிகளுக்கிடையேயான மோதல் – இது சடன் டெத். தோல்வியுற்றவர் வீடு திரும்ப வேண்டும். இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஆட்டம் நடைபெறுகிறது. பாதிக் கிணறு தாண்டிய நிலையில், ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் போலத் தோன்றுகிறது. நாளை இங்கிலாந்து – இலங்கை, மறுநாள் தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள், அதற்கடுத்து ஞாயிறு அன்று உலகமே எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கிடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும். சென்ற வாரத்தில் இறுதியாட்டத்துக்கு ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தான் தேர்வு பெறும் என எழுதியிருந்தேன். ஆனால் இப்பொழுது குழுக்களை கவனித்தால், ஒருவரோடு ஒருவர் மோதுவதாக இருந்தால் இவ்விருவரும் அரையிறுதி ஆட்டத்தில்தான் மோதவேண்டி வரும் என்று புரிகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் குழப்பங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி உரிமம் வழக்கு தொடர்கிறது. உயர் நீதிமன்றமும், வழக்கு முடியும்வரை ‘status quo’ தொடர வேண்டும், வேறு யாருக்கும் தொலைக்காட்சி உரிமத்தை விற்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. Status quo என்றால்? கடைசியாக தூரதர்ஷனிடம்தான் தொலைக்காட்சி உரிமம் இருந்தது. எனவே அது தொடரும்… ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் 6 முதல் தொடங்குகின்றன. இப்படியே சண்டை தொடர்ந்து நடந்தால் கடைசியாக ஒன்றுக்கும் உதவாத தொடர்கள் மட்டும்தான் வழக்கில் வென்றவருக்குப் போய்ச்சேரும். ஏனெனில் ஆஸ்திரேலியா தொடரின் மதிப்பு மிக மிக அதிகம்! இதற்கிடையில் ஜக்மோகன் தால்மியாவிற்கு ஏகமனதாக Patron-in-chief என்னும் பட்டம் கொடுத்துகௌச்சானிக் கொம்பில் உட்கார வைத்து விட்டார்கள். மேலும் பேட்ரன்-இன்-சீஃப் தால்மியாவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை விட அதிக அதிகாரங்கள் தருவதற்காக கிரிக்கெட் வாரியத்தின் சட்ட விதிகளை அங்கும் இங்குமாகத் தட்டி மாற்றப்போவதாகவும் கேள்வி. இதை எதிர்த்து போபால் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் ஓர் ஆசாமி தடையுத்தரவு வாங்கினார். ஆனால் அந்த கோர்ட்டின் உத்தரவைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் சென்னையில் சிறப்புப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தால்மியாவுக்கு பேட்ரன்-இன்-சீஃப் ‘பதவி’யை வழங்கினர். இந்த வழக்கும் சில நாள்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். அப்படி தால்மியாவுக்கு பேட்ரன்-இன்-சீஃப் பதவி ஏன் தரவேண்டும் என்ற கேள்வியை யாருமே கேட்கவில்லை! மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏதோ தில்லுமுல்லுகள் செய்கின்றன என்று மத்திய அரசுக்குத் தோன்றினால், அரசே கிரிக்கெட் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பார்க்கும்போது, அரசே உள்ளே புகுந்து கிடைக்கும் பணத்தை ஒழுங்காக மற்ற விளையாட்டுகளுக்கும் செலவழித்தால் நாட்டில் கிரிக்கெட்டும் பிழைக்கும், பிற விளையாட்டுகளும் பிழைக்கும் என்று தோன்றுகிறது. 15 இந்த வார கிரிக்கெட் அலசல் பிரச்னை என்பது இந்திய கிரிக்கெட் கூடப் பிறந்தது போல. சென்ற வார இறுதியில் பிசிசிஐ – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யாருக்கு தொலைக்காட்சி உரிமத்தைத் தரவேண்டும் என்பதை முடிவு செய்தனர். ஜீ டிவி நிறுவனம் இந்த உரிமத்தை US$308 மில்லியன் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. ஆனால், இந்த முடிவு தவறானது என்று இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மும்பை உயர் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பிசிசிஐ மீது இ.எஸ்.பி.என் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதில் ஏன் இந்திய அரசு, பிசிசிஐ-இடம் இருக்கும் இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் தனியுரிமையை  நீக்கக்கூடாது என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தனர். இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. இன்று மும்பை நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில் மறு ஏலம் நடைபெறும் என்றும், இ.எஸ்.பி.என், ஜீ இருவருமே மீண்டும் தொலைக்காட்சி உரிமையைப் பெற எத்தனை பணம் தரவிருக்கிறார்கள் என்பதனை கோர்ட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட் யாருக்கு உரிமை போகவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இது முட்டாள்தனமாக உள்ளது. ஓர் உயர் நீதிமன்றத்துக்கு இதுதான் வேலையா? இதென்ன, அப்படி ஒரு தலைபோகும் விஷயமா? பிசிசிஐ-இடம் உள்ள அதிகாரங்களை மும்பை உயர்நீதிமன்றம் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஏலமுறையில் ஏதேனும் தவறிருந்தால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது மட்டும்தான் கோர்ட்டின் வேலை. இடைக்காலத் தடை விதிப்பது, அந்தத் தடையை விலக்கிக் கொள்வது ஆகியவற்றோடு தன் வேலையை நிறுத்திக்கொள்ளாமல் இப்பொழுது கிரிக்கெட் உரிமையை ஏலம் விடுவதிலும் இறங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். இப்படி தன் வேலையை காசு வாங்கிக்கொள்ளாமலேயே  கோர்ட் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தால், பிசிசிஐ முன்னமேயே கனம் கோர்ட்டாரவர்களிடம் வேலையை ஒப்படைத்திருக்கலாம்! O ராகுல் திராவிட் ஐசிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும், சிறந்த கிரிக்கெட் வீரர் (டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டும் சேர்ந்து) விருதையும் தட்டிச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 19 கட்டுரையில் ராகுல் திராவிட்தான் டெஸ்ட் கிரிக்கெட் விருதைப் பெறுவார் என நான் சொல்லியிருந்தேன். ஜாக் கால்லிஸ்தான் இரண்டு வகையான ஆட்டங்களிலும், மேலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்பது என் எண்ணம். அதனால் அவருக்குத்தான் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வாக்குகளில் திராவிட் முதலாவதாகவும், கால்லிஸ், பிளிண்டாஃப் இருவரும் இரண்டாவதாகவும் வந்துள்ளனர். திராவிடின் டெஸ்ட் விளையாட்டு அனைவரையும் அந்த அளவிற்கு மயக்கியுள்ளது! ------------------------------- ----------------- ---------------------- விருது என் கணிப்பு யாருக்குக் கிடைத்தது சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ராகுல் திராவிட் ராகுல் திராவிட் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் ரிக்கி பாண்டிங் ஆண்டிரூ பிளிண்டாஃப் சிறந்த புதுமுகம் இர்ஃபான் பதான் இர்ஃபான் பதான் வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் ஜாக் கால்லிஸ் ராகுல் திராவிட் சிறந்த “சமர்த்தான அணி” நியூசிலாந்து நியூசிலாந்து சிறந்த நடுவர் பில்லி பவுடன் சைமன் டாஃபெல் ------------------------------- ----------------- ---------------------- ஐசிசி நியமித்த விருது கமிட்டி டெஸ்ட் ஆட்டத்திற்கும், ஒருநாள் ஆட்டத்திற்கும் என 11 சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் டெஸ்ட் 11இல் முத்தையா முரளிதரன் பெயர் இல்லை, ஷேன் வார்ன் பெயர் உள்ளது. இதனால் முரளிதரன் கடுங்கோபம் அடைந்துள்ளார். கடந்த வருடத்தில் நடந்த விளையாட்டுகளை மட்டும் வைத்துப் பார்த்தால் அதில் பாதி வருடத்தில் ஷேன் வார்ன் விளையாடவேயில்லை – ஊக்க மருந்து உட்கொண்டிருப்பார் என்ற சந்தேகத்தில் வார்ன் ஒரு வருடத் தடையை அனுபவித்துக்கொண்டிருந்தார்! ஆனால் முரளியின் பெயருக்குப் பதில் வார்ன் பெயர் இருப்பது முரளியின் பந்துவீச்சின் மேல் சிலருக்கு இருக்கும் சந்தேகம் காரணமாகவே என நினைக்கிறார் முரளி. முரளியின் கோபம் நியாயமானதே. சென்ற வருடத்தில் பெற்ற விக்கெட்டுகளை மட்டும் முன்வைத்தால் முரளியின் பெயர்தான் இருந்திருக்க வேண்டும்! அது சென்ற வருடத்தைய ரெகார்டை மட்டும் முன்வைத்து. ஆனால் இருவரில் யார் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் (அதாவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட்டுப் பார்க்கையில்!) என்றால் அதில் ஷேன் வார்ன் பெயர்தான் மிஞ்சும் என்னும் என் கருத்தை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். O ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் டெண்டுல்கர் இல்லாமல் இந்தியா என்ன சாதிக்கப் போகிறது? டெண்டுல்கர் இருந்திருந்தால் மட்டும் என்ன சாதித்திருக்கப் போகிறது என்றெல்லாம் கேட்கலாம். இந்தியா முக்கியமாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். கடந்த சில வாரங்களில் நான் சொன்னவற்றையேதான் மீண்டும் சொல்லப் போகிறேன். அவை: (1) திராவிடை விக்கெட் கீப்பராக வைக்காமல் வேறொருவரைக் கொண்டுவர வேண்டும். (2) ஓரிரண்டு “வயதான” விளையாட்டு வீரர்களை ஒருநாள் போட்டி விளையாடுவதிலிருந்து நீக்க வேண்டும் – லக்ஷ்மண், கும்ப்ளே பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. (3) ரோஹன் கவாஸ்கரை சமர்த்தாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த வாரம் தெஹல்காவில் பீட்டர் ரோபக் இதையேதான் – அப்படியே ஒரு வார்த்தை மாறாமல் எழுதியுள்ளார். மேலும் இம்மாதிரியான முடிவுகளை எடுக்காமல் ஆஸ்திரேலியா எப்படி சில காலங்கள் கஷ்டப்பட்டது, இங்கிலாந்து எப்படியெல்லாம் தடுமாறியது என்பதையும் விளக்குகிறார். மார்க் டெய்லர், ஸ்டீவ் வா ஆகியோரை ஆஸ்திரேலியா தன் ஒருநாள் அணியில் தேவைக்கு அதிகமாகவே வைத்திருந்ததால் பல தொல்லைகள் வந்தன. இங்கிலாந்து அதுபோலத்தான் நாசெர் ஹுசைனை சற்று அதிகமாகவே அணியில் வைத்திருந்தனர். இந்தியா தன் தவறுகளை உடனடியாக சரிசெய்வது அவசியம். சேவாகின் ஆட்டத்தின் குறைவு தாற்காலிகப் பிரச்னைதான். இரண்டு ஆட்டங்கள் வெளியே வைத்து, ஒழுங்காக நெட் பிராக்டீஸ் செய்தால் எல்லாம் சரியாகி விடும்! இப்பொழுதுள்ள ஃபார்ம் படி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதுவர். விளைவு எல்லோருக்கும் தெரிந்ததாகவே இருக்கலாம். 16 இந்தியாவின் தொல்லைகள் பாகிஸ்தானில் நன்றாக விளையாடி சரித்திரம் படைத்த இந்தியா இன்று ஜெயிக்க ஏன் தடுமாறுகிறது? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இந்திய கிரிக்கெட்டில் கோடி கோடியாகச் செலவு செய்யும் நிறுவனங்களின் மார்கெடிங் மேனேஜர்கள் வரை கேட்கும் கேள்வி இதுதான். பாகிஸ்தான் தொடருக்குப் பின் இந்தியா ஆசியக் கோப்பை விளையாட்டுகளில் மிகவும் தடுமாறியது. இந்தியா முழு பலத்தோடும், முனைப்போடும் விளையாடினால் நிச்சயமாக ஜெயிக்கும் என்றுதான் நான் நம்பினேன். தமிழோவியத்தில் இந்தியா ஜெயிக்கும் என்று நான் சொன்ன ஆருடம் பலிக்கவில்லை. பந்துவீச்சில் பாலாஜி தடுமாறினார். ஜாகீர் கான் முழுமையான உடல் கட்டுமானத்தில் இல்லை. மட்டையாளர்கள் யாரும் சேர்ந்தாற்போல் ஒட்டி விளையாடவில்லை. ஹாலந்தில் நடைபெற்ற போட்டிகளை முழுவதுமாக மறந்து விடலாம். மழையால் பாதிக்கப்பட்ட அந்தத் தொடரின் ஒரே பலன், பாலாஜி தன் பந்துவீச்சை மீண்டும் பெற்றதுதான். நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் விளையாட்டு தண்ணீரில் மூழ்கிய நீந்தத் தெரியாதவன் கையயும் காலையும் விலுக் விலுக்கென்று உதறிக்கொண்டேயிருந்தால் பிழைத்துக் கொண்டுவிடலாம் என்று இயங்கியதைப் போலிருந்தது. ஒவ்வொரு விக்கெட் விழுந்தபோதும் யாருக்கும் நின்று ஆடத் தோன்றவில்லை. திராவிட் கூட இந்த வலையில் வீழ்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிதானமாக நின்று ஆடியிருந்தால் இந்தியா 220 ஓட்டங்களாவது எடுத்திருக்கலாம். அதனால் வெற்றி வாய்ப்பு ஓரளுவுக்கேனும் அதிகரித்திருக்கும். சேவாக் விக்கெட் இழந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் கங்குலி, திராவிட், லக்ஷ்மண் மூவரும் புது விளையாட்டு வீரர் வார்ஃப் கையில் தன் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவரில் கொடுத்தனர். தொடர்ந்து யுவ்ராஜ் சிங்கின் ரன் அவுட். [Rohan Gavaskar]எனக்கு ரோஹன் கவாஸ்கரின் தரத்தில் எப்பொழுதும் சந்தேகமே. சர்வதேச அளவில் விளையாடக்கூடிய திறமை அவரிடம் இல்லை என்பது என் கருத்து. இந்தத் தோல்வியைக் கண்டு அதிர்ந்து போக வேண்டியதில்லை. டெண்டுல்கர் விளையாடப்போவதில்லை என்பதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. இதே இந்திய அணியால் ஆஸ்திரேலியா தவிர மற்ற அணிகளை எளிதாக வெல்ல முடியும். [ஆஸ்திரேலியாவை கஷ்டப்பட்டு வெல்ல வேண்டும்.] குற்றம் பேட்டிங் மீதுதான். கங்குலி தொடக்க ஆட்டத்தில் சற்றே கவனம் செலுத்தி கடைசிவரை நின்று விளையாட முயற்சி செய்ய வேண்டும். திராவிடும் அப்படியே செய்ய வேண்டும். மற்றவர்கள் அனைவரும் தம் விளையாட்டை அப்படியே தொடரலாம். ஓரிருவர் பெரும் இன்னிங்ஸ்களை அடித்தால் தானாகவே தன்னம்பிக்கை வளர்ந்துவிடும். O தன்னம்பிக்கை பற்றிப் பேசும்போது இங்கிலாந்து அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிக் கட்டாயம் பேச வேண்டும். அத்துடன் தென்னாப்பிரிக்காவிற்கு என்ன ஆனது என்பது பற்றியும் பேச வேண்டும்! இங்கிலாந்து அணி இந்தக் கோடை கால ஆட்டங்களில் விளையாடிய ஏழு டெஸ்ட்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இம்மாதிரியானதொரு விளையாட்டை முந்தைய நாட்களில் மேற்கிந்தியத் தீவுகளும், தற்போதைய ஆஸ்திரேலியா மட்டுமே செய்துள்ளனர். ஸ்டீவ் ஹார்மிசன், ஆண்டிரூ ஃபிளிண்டாஃப், ஆஷ்லி ஜைல்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக நன்கு பந்துவீசி வருகின்றனர். அவ்வப்போது மாத்தியூ ஹோகார்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பக்க வாத்தியங்களை சரியாகவே வாசிக்கின்றனர். ஆண்டிரூ ஸ்டிரவுஸ் புதிதாக அணிக்கு வந்துள்ள நட்சத்திரம். நாசெர் ஹுசெய்ன் இடத்தை நிரப்ப வந்த இவர் பிரமாதமாக விளையாடுகிறார். ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் தன் முத்திரையைப் பதித்து இப்பொழுதைய உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக விளங்குகிறார். இங்கிலாந்து மீண்டும் மேலுக்கு வருவது உலக கிரிக்கெட்டுக்கு நல்லது. மேற்கிந்தியத் தீவுகள் இப்பொழுது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. பார்வையாளர்கள் குறைந்து போயுள்ளனர். கிரிக்கெட்டில் பணம் குறைவு. லாரா போன்ற அற்புதமான வீரர் இருக்கும்போதும் பெறும் வெற்றிகளும் குறைவு. புதிதாக அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக வரவில்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா திடீரென்று ஒலிம்பிக்ஸ் போன இந்திய வீரர்கள் போலத் தடுமாறுவது ஏனென்று புரியவில்லை. அணியில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் தொடர்ச்சியாக இலங்கையிடம் ஐந்து ஆட்டங்களைத் தொலைத்து விட்டு, பயிற்சியாளரை மாற்ற வேண்டுமா என்பது பற்றி யோசிக்கின்றனர். பழைய கிரிக்கெட் வீரர்கள் வெளியே வந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிர்காலம் குறைவு, உடனடியாக புது ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்றெல்லாம் பயமுறுத்துகின்றனர். இந்தத் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு குறைவும் இல்லை. பவுலிங்கில் சிறிது வலு சேர்க்க வேண்டும். அவ்வளவே. இலங்கை அணி மீண்டும் நன்றாக விளையாடுவதும் நல்லதற்கே. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் சற்றே தன் ஆட்டத்தை கெட்டிப்படுத்தினால், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். 17 யார் அந்த ஹார்மிசன்?   [Steve Harmison] இங்கிலாந்தின் ஸ்டீவ் ஹார்மிசன் என்பர்தான் உலகிலேயே நம்பர் 1 டெஸ்ட் பவுலர் என ஒரு செய்தி வந்தது. யார் சொல்வது? ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ (PWC) எனும் நிறுவனம் அமைத்துள்ள கிரிக்கெட் ரேட்டிங் படிதான் இந்தத் தகவல். PWC யார்? அவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? PWC என்பது புகழ்பெற்ற ஒரு பன்னாட்டு அக்க்கவுண்டிங் & ஆடிடிங் (accounting & auditing) நிறுவனம். 1987இல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் டெட் டெக்ஸ்டர் (இவர் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் கூட) இந்த நிறுவனத்தை அணுகி (அப்பொழுது நிறுவனத்தின் பெயர் டெலாயிட்ஸ்) கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் யார் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் என்பதைக் கணித பூர்வமாக நிறுவமுடியுமா என்று கேட்டிருந்தார். டெலாயிட்ஸ் அப்பொழுது உருவாக்கியதுதான் டெலாயிட்ஸ் ரேட்டிங். (பின் டெலாயிட்ஸ், கூப்பர்ஸ் & லைப்ராண்ட்ஸ் ஆனது. பிறகு பிரைஸ்வாட்டர்ஹவுஸோடு இணைந்து பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் ஆனது. எனவே டெலாயிட்ஸ் ரேட்டிங்கும், கூப்பர்ஸ் & லைப்ராண்ட்ஸ் ரேட்டிங்காக மாறி, இப்பொழுது PWC ரேட்டிங்ஸ் ஆக உள்ளது.) சரி, இந்த ரேட்டிங் எப்படி இயங்குகிறது? நம்மூரில் ‘டாப் டென்’ பாடல்கள் என்று சொல்வோமே, அது எப்படி இயங்குகிறது? நான்கு பேர் கூடி ‘இந்த பாட்டு நல்லாயிருக்கு, இதுதான் முதல்’ என்று சொல்லியிருப்பார்கள். சிலர் வாசகர்கள் கொடுக்கும் வாக்குகளை வைத்துத் தீர்மானிக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டைப் பொருத்தவரை கைவசம் நிறைய நம்பர்கள் உள்ளன. அதைவைத்து யார் உசத்தி, யார் மட்டம் என்று தீர்மானித்து விடலாம். ஆனால் எல்லா நம்பர்களும் சமமாகுமா? (அ) டெண்டுல்கர் ஜிம்பாப்வேக்கு எதிராக 120 ஓட்டங்கள் எடுக்கிறார். திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ஓட்டங்கள் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். யார் எடுத்த ஓட்டங்கள் அதிக மதிப்புடையது? (ஆ) டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 225* ஓட்டங்கள் எடுக்கிறார். ஆட்டம் டிராவில் முடிகிறது. இந்திய அணியில் இன்னமும் இரண்டு பேர் சதமடித்துள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 630/7 டிக்ளேர்ட். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 647 ஆல் அவுட். அந்த அணியிலும் மூன்று பேர்கள் சதமடித்துள்ளனர். அடுத்த மேட்சில் திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 225* ஓட்டங்கள் எடுக்கிறார். இந்தியா ஜெயிக்கிறது. திராவிடுக்கு அடுத்து இந்திய அணியில் பெரிய ஸ்கோர் 79. எதிரணியில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தலா ஒரு சதம் உண்டு. ஸ்கோர்: ஆஸ்திரேலியா 289 & 245, இந்தியா 457 (திராவிட் 225*) & 83/3. இப்பொழுது சொல்லுங்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெண்டுல்கர், திராவிட் இருவரும் 225* ஓட்டங்கள் அடித்திருந்தாலும், இரண்டும் சமமா? (இ) கும்ப்ளே, பாலாஜி இருவருமே ஒரு இன்னிங்ஸில் தலா ஐந்து விக்கெட்டுகள் எடுக்கின்றனர். கும்ப்ளே எடுத்தது அத்தனையும் கடைசியாக விழுந்த வால் விக்கெட்டுகள். பாலாஜி எடுத்தது முதல் ஐந்து விக்கெட்டுகள். யார் எடுத்த விக்கெட்டுகளுக்கு அதிக மதிப்பு? இதற்கெல்லாம் பதில் சுலபமானதாகவே இருக்கும். ஆனால் இதையே எண்களாகக் காட்ட வேண்டுமென்றால்? அதாவது ஜிம்பாப்வேக்கு எதிராக எடுக்கும் 120 ஓட்டங்களுக்கு மதிப்பு வெறும் 86தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கும் 120 ஓட்டங்களின் மதிப்பு 137. இப்படி. இதை ஒரு ஃபார்முலாவாகக் கொடுக்க முடியுமா? அதைத்தான் PWC ரேட்டிங் செய்கிறது. இதை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம். 1. சீர்தூக்கிய சராசரி (weighted average): ஒருவர் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸில் அடித்த எண்ணிக்கைக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இன்னிங்ஸ் பின்னோக்கிப் போகும்போதும் அதன் மதிப்பு 4% குறைந்து கொண்டே போகும். அதாவது டெண்டுல்கர் மூன்று இன்னிங்ஸில் 70, 50, 30 என்று ஓட்டங்கள் பெற்றுள்ளார்; திராவிட் 30, 50, 70 என்று வைத்துக்கொள்வோம். திராவிடுக்குத்தான் அதிக மதிப்பு. 2. ஒரு வீரர் ஓர் ஆட்டத்தில் என்ன காரணத்துக்காகவாவது ஈடுபடவில்லையென்றால் – காயம் பட்டிருக்கலாம், வீட்டில் தொல்லை, அல்லது கேப்டன் அவரை விளையாடாது செய்திருக்கலாம் – எதுவாக இருந்தாலும், அவரது  மதிப்புலிருந்து டெஸ்டாக இருந்தால் 1% குறையும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 0.5% குறையும். 3. எதிராளியின் பலம்: எதிரணியில் இருக்கும் பவுலர்களின் PWC ரேட்டிங்கைக் கணக்கில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பந்து வீச்சாளரும் எவ்வளவு ஓவர்களை வீசியுள்ளனர் என்று கணக்கிட்டு அதன்மூலம் சராசரி பந்துவீச்சு ரேட்டிங்கைத் தீர்மானிப்பர். இந்த சராசரி பவுலிங் ரேட்டிங் உலக சராசரியை விட எவ்வளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதோ அதற்கேற்ப ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்கள் அதிகமாகும், அல்லது குறையும். PWC ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளில் அதிக ரன்கள் எடுத்தால் அது நம் கணக்கில் இன்னமும் அதிகமாகும். சோப்ளாங்கி டீமுக்கு எதிராக ரன் எடுத்தால் அது குறைக்கப்படும். 4. எல்லோரும் ரன்கள் குவித்தால்? : ஓர் ஆட்டத்தில் விக்கெட்டுக்கு எவ்வளவு ரன்கள் சராசரியாக அடிக்கப்படுகின்றன என்பதைக் கணித்து, அந்தச் சராசரிக்குக் குறைவாக அடித்தவர்களின் பாயிண்டுகள் குறைக்கப்படும், சராசரியை விட அதிகமாக அடித்தவர்களுக்கு பாயிண்டுகள் ஏறும். ஆக எல்லோரும் 20க்கு மேல் அடிக்காதபோது ஒருவர் மட்டும் 80 ரன்கள் அடித்தால் அதன் மதிப்பு எக்கச்சக்கமாக உயரும். 5. வெற்றிக்கு மதிப்பு: யார் அணி வெற்றி பெற்றிருக்கிறதோ, அவர் அடித்த ரன்களுக்கோ, எடுத்த விக்கெட்டுகளுக்கோ அதிக மதிப்பு கொடுக்கப்படும். (தோற்றவர்களுக்கு குறைவில்லை.) 6. நாட் அவுட்: ஒரு பேட்ஸ்மேனின் சராசரியைக் கணக்கிடும்போது அவரது நாட் அவுட்டுகள் அவரது சராசரியைக் கூட்டும். ஆனால் அந்த வகையில் செயல்படாது, PWC ரேட்டிங்கில் நாட் அவுட்டுக்கு என்று கொஞ்சம் போனஸ் கிடைக்குமே ஒழிய எக்கச்சக்கமான கூடுதல் இருக்காது. 7. ஒருநாள் போட்டிகளுக்காக: மேற்சொன்னவற்றிலிருந்து இரண்டு அதிகப்படியான விஷயங்களை ஒருநாள் போட்டிகளுக்காக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். அது பேட்ஸ்மேனுக்கு ஸ்டிரைக் ரேட் – அதாவது எவ்வளவு வேகமாக ரன்களைப் பெறுகிறார் என்பது. பவுலர்களுக்கு எகானமி ரேட் – எவ்வளவு குறைந்த ஓட்டங்களைத் தன் ஓவரில் தருகிறார் என்பது. அதைத் தவிர இப்பொழுதெல்லாம் கென்யா, அமீரகம் போன்ற குட்டி குட்டி அணிகளும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால், அவற்றுக்கு எதிராகப் பெறும் ரன்களும், விக்கெட்டுகளும் குறைத்து மதிப்பிடப்படும்; அதுபோல உலகக்கோப்பையில் பெறும் ரன்கள், விக்கெட்டுகளுக்கு சற்று அதிக மதிப்பு கொடுக்கப்படும். ஆக இத்தனையையும் ஒரு பெரிய ஈக்வேஷனாக மாற்றி ஒவ்வொரு ஆட்டம் முடிந்ததும் பாயிண்டுகள் கணக்கிடப்படும். அப்படிச் செய்ததில்தான் இப்பொழுதைய உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ராஹுல் திராவிட். பெற்றுள்ள பாயிண்டுகள் 892. (1000தான் ஒருவர் மிக அதிகமாகப் பெறக்கூடிய பாயிண்டுகள்.). அடுத்து ஆஸ்திரேலியாவின் மாத்தியூ ஹேய்டன், அடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா. சச்சின் டெண்டுல்கர் இப்பொழுதைக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார். இப்பொழுதைக்கு மிகச்சிறந்த டெஸ்ட் பவுலர் இங்கிலாந்தின் ஸ்டீவ் ஹார்மிசன் (875 பாயிண்டுகள்). அடுத்து இலங்கையின் முத்தையா முரளிதரன், மூன்றாவதாக தென்னாப்பிரிக்காவின் ஷான் போலாக். இந்தியாவின் அனில் கும்ப்ளே ஏழாம் இடம். ஒருநாள் போட்டிகளில் முதலாவது பேட்ஸ்மேன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்! (792 பாயிண்டுகள்). அடுத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மூன்றாவதாக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட். ராஹுல் திராவிட், ஏழாம் இடத்தில் இருந்தவர் தற்போது சரிந்து 14 இடத்துக்கு வந்துவிட்டார். பந்துவீச்சாளர்களில் முதலாவது இலங்கையின் சமிந்தா வாஸ் (889 பாயிண்டுகள்). அடுத்து முத்தையா முரளிதரனும், ஷான் போலாக்கும். இந்தியாவின் ஹர்பஜன் சிங் 15வது இடத்தில். இதற்கு மேல் தூண்டித் துருவிப் பார்த்து யார் யார் எந்த நேரத்தில் எத்தனை பாயிண்டுகள் பெற்று முதல் பத்தில் இருந்தனர் என்பதையும், உங்களுக்குப் பிடித்த இரண்டு மட்டையாளர்களோ, பந்து வீச்சாளர்களோ எப்படி ஒப்பீட்டில் ஒருவரை ஒருவர் முந்தி வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள போக வேண்டிய இடம்: PWC ரேட்டிங் தளம். 18 கிரிக்கெட்டின் ஆஸ்கார் யாருக்கு? சேவாக், டெண்டுல்கர், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், யுவ்ராஜ் என்று யாருமே தொடர்ச்சியாக சோபிக்கவில்லை.   ஹாலிவுட் சினிமாவுக்கு ஆஸ்கார். அறிவியல், மருத்துவம், பொருளாதாரத் துறைகளுக்கு நோபல். இப்பொழுது ஐசிசி, கிரிக்கெட் வீரர்களுக்கென்று வருடாந்திர விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக ஆறு விருதுகள் உண்டு. இவற்றில் நான்கு தனி வீரர்களுக்கானவை: (1) வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (2) சிறந்த ஒருநாள் போட்டி வீரர் (3) சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் (4) சிறந்த இளம் வீரர் (சிறந்த புதுமுகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்). மற்றும் இரண்டு அணிகளுக்கானவை. (1) சிறந்த டெஸ்ட் அணி (2) சிறந்த ஒருநாள் அணி. இதைத் தவிர கவுரவ விருதுகளாக சிறந்த நடுவருக்கு ஒன்று, சமர்த்தான அணிக்கு ஒன்று (அதாவது குறைந்த அளவு மட்டும் தகராறு செய்த அணி!) என்று உண்டு. இந்த விருதுகளுக்குப் பாத்திரமானவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவர் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிச்சி பெனாட். தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் இயான் போதம், சுனில் காவஸ்கர், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் பாரி ரிச்சர்ட்ஸ். மேல் விவரங்களை அறிந்துகொள்ள http://www.icc-cricket.com/icc/news/icc_awards/main.html என் தேர்வு: சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்: ராஹுல் திராவிட் (இந்தியா) சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்: ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) சிறந்த புதுமுகம்: இர்ஃபான் பதான் (இந்தியா) வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர்: ஜாக் கால்லிஸ் (தென்னாப்பிரிக்கா) சிறந்த டெஸ்ட் அணி: ஆஸ்திரேலியா; அடுத்தது இங்கிலாந்து சிறந்த ஒருநாள் அணி: ஆஸ்திரேலியா; அடுத்தது இந்தியா சிறந்த “சமர்த்தான அணி” – நியூசிலாந்து சிறந்த நடுவர்: பில்லி பவுடன் (நியூசிலாந்து) உங்கள் தேர்வு என்ன என்று சொல்லுங்களேன்? O மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட கென்யாவின் மாரிஸ் ஒடும்பே தடைசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு இருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். வழக்கை விசாரித்த ஐசிசி நியமித்த நீதிபதிகள் ஒடும்பே மீது குற்றம் இருப்பது உறுதியானதாகத் தீர்ப்பளித்தனர். இதனால் ஐசிசியின் நிபந்தனையின் பேரில் கென்யா ஒடும்பேவை ஐந்து வருடங்களுக்குத் தடை செய்துள்ளது. ஒடும்பேயின் இப்பொழுதைய வயது 35. இத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று சொல்லிவிடலாம். 1996இல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கையில் நடைபெற்ற உலகக்கோப்பையின் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கென்யா தோற்கடித்தது. யாருமே எதிர்பார்க்காத அந்த வெற்றியின் ஆட்ட நாயகன் ஒடும்பே. தனது வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சால் அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் ஒடும்பே. கென்யாவின் 166 ஓட்டங்களைத் தாண்ட முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் வெறும் 93 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. O அடுத்த வாரத்திலிருந்து இந்திய அணி மீண்டும் விளையாடத் துவங்குகிறது. முதலில் ஹாலந்தில் நடக்க இருக்கும் விடியோகான் கப். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியா இந்தக் கோப்பயை ஜெயிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று. தொடர்ந்து இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் போட்டிகள் – நாட்வெஸ்ட் தொடர். உடனேயே ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை. ஆசியக் கோப்பையின் போது இந்தியா பேட்டிங்கில் மிகவும் தடுமாறியது. சேவாக், டெண்டுல்கர், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், யுவ்ராஜ் என்று யாருமே தொடர்ச்சியாக சோபிக்கவில்லை. இந்த ஆறு பேரில்ஈரண்டு பேர் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்தால் போதுமானது. ஜாகீர் கான், ஆஷீஸ் நேஹ்ரா இருவரது ஃபிட்னெஸ் பற்றிய பிரச்சினைகளும் இருந்தன. இப்பொழுது ஜாகீர் கான் அணியில் இல்லை. பாலாஜியின் பந்துவீச்சு படு சுமாராக இருந்தது. முக்கியமாக பேட்டிங் சற்றே ஒழுங்கானால், தாக்குப் பிடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. எதிரணியில் பாகிஸ்தான் எப்பொழுதும் போல குழப்பமான நிலையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு விளையாட வருவது நமக்கு வசதியாக இருக்கும். நான் ஏற்கனவே திராவிட் விக்கெட் கீப்பிங் பற்றிய எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். திராவிடின் முழுத் திறமையும் பேட்டிங்கில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அதைத் தவிர திராவிட் மோசமான விக்கெட் கீப்பரும் கூட. அவரால் தவறு செய்ய முடியாமல் இருக்க முடியாது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விளையாட வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. அவர் இந்திய அணியுடன் சுற்ற இருப்பதால் பீஹாரின் மஹேந்திர சிங் தோனி என்பவருக்கு கென்யாவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட தோனி அடித்து விளாசுகிறார். இப்படி நன்கு பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர்கள் வருவது நமக்கு நல்லதுதான். O கென்யாவில் நடக்கும் ‘A’ அணிகளுக்கான போட்டியில் இந்தியா கோப்பையைத் தட்டிச் செல்லும் என்று [Venugopal Rao]தோன்றுகிறது. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. இதுவரை ஒரேயொரு ஆட்டத்தில்தான் இந்தியா கென்யாவிடம் தோல்வியுற்றது. யார் இறுதிப்போட்டிக்கு வந்தாலும் இந்தியா-A எளிதாக ஜெயித்து விடும் என்று தோன்றுகிறது. [Gautham Gambir]இந்த ஆட்டங்களில் இந்தியாவின் எதிர்கால டீம்தான் விளையாடுகிறது. பேட்டிங்கில் கவுதம் கம்பீர், மஹேந்திர சிங் தோனி, வேணுகோபால ராவ், அம்பாடி ராயுடு ஆகியோர் விளையாடுகின்றனர். தமிழகத்தின் ஸ்ரீதரன் ஸ்ரீராமும் இருக்கிறார் – ஆனால் அவர் கடந்த காலம், எதிர்காலம் அல்ல. பந்துவீச்சில் அவிஷ்கார் சால்வி, அமித் பண்டாரி, ஷிப் சங்கர் பால் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், ரமேஷ் பொவார், சாயிராஜ் பஹுதுலே என சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இது மிக நல்ல, வலுவான அணி. திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோர் ரிடயர் ஆகும்போது வேணுகோபால ராவ்,[Ambati Rayudu] அம்பாடி ராயுடு, கவுதம் கம்பீர் ஆகியோர் நிச்சயமாக அந்த இடத்தை நிரப்புவார்கள். சேவாக் துவக்க ஆட்டத்திலிருந்து இறங்கி மிடில் ஆர்டருக்கு வருவார். இவருடன் யுவ்ராஜ் சிங், வேணுகோபால ராவ், அம்பாடி ராயுடு ஆகியோர் சேர்ந்தால் கச்சிதமான மிடில் ஆர்டர் கிடைக்கும். கவுதம் கம்பீர் அல்லது விநாயக் மானே துவக்க ஆட்டத்திற்குப் போவார்கள். ஆகாஷ் சோப்ரா மற்றொரு துவக்க ஆட்டக்காரர். இந்தியாவின் பேட்டிங் எதிர்காலம் பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பவுலிங்கில்தான் நாம் அதிகமாக முன்னேற வேண்டும். O முடிக்கும்போது ஒரு கேள்வி. இப்பொழுதைக்கு கிரிக்கெட் விளையாடுவோர்களில் யார் சிறந்த ஆல் ரவுண்டர்? நான் ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் என்கிறேன். ஜாக் கால்லிஸ் அடுத்த இடம்தான். உங்கள் சாய்ஸ் என்ன? 19 இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 டெஸ்ட் விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார். கிரிக்கெட் பற்றி பாசத்துடன் பேசும் பெரிசுகளைக் கேட்டுப் பாருங்கள். தங்கள் நாள்களில் ‘ஸ்பின் குவார்டெட்’ – பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கடராகவன் என்னென்ன செய்தனர் என்று பேசித் தள்ளுவார்கள். இந்த நால்வரும் நான்கு வெவ்வேறு வகை ஸ்பின் பவுலர்கள். இதில் பிஷன் சிங் பேடி இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இன்னமும் பெரிசுகளிடம் போய் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றிப் பேசினால் வினு மன்கட் என்பார்கள். பேடி தாண்டி இந்தப் பக்கம் வந்தால் திலீப் தோஷி, ரவி ஷாஸ்திரி, மனிந்தர் சிங், வெங்கடபதி ராஜு, ரகுராம் பட், நிலேஷ் குல்கர்னி, முரளி கார்த்திக். இந்தியாவிற்காக டெஸ்டே விளையாடாத, ஆனால் மிகச்சிறந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்று பத்மாகர் ஷிவால்கர், ராஜிந்தர் கோயல் என்ற இருவரைக் குறிப்பிடுவர். இருவரும் சம காலத்தவர்கள். ஷிவால்கர் மும்பை அணிக்காகவும், மஹாராஷ்டிர அணிக்காகவும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர். ராஜிந்தர் கோயல் ஹரியானாவுக்காக விளையாடினார். கோயல் 156 ஃபர்ஸ்ட்-கிளாஸ் போட்டிகளில் விளையாடி 750 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷிவால்கர் 124 போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆனால் இருவருக்கும் ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவர்கள் இருவரும் விளையாடிய அதே நேரத்தில்தான் பிஷன் சிங் பேடியும் விளையாடிக் கொண்டிருந்தார். மூன்று பேருமே இடது கை விரல் சுழற்பந்து வீச்சாளர்கள். இதற்கு ஆங்கிலத்தில் slow left arm orthodox என்று சொல்வர். இந்த வகைப் பந்து வீச்சாளர்கள் வீசுவது வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீசுபவர்களின் கண்ணாடி பிம்பமாக இருக்காது. வலது கை ஆஃப் ஸ்பின் வீசுபவர்கள் சாதாரணமாக front-on actionஇல், வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர வீசுவார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பொதுவாக side-on actionஇல் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வீசுவார்கள். அத்துடன் நடுவரை நன்கு பின்னுக்குத் தள்ளி நிற்க வைத்து விட்டு ஸ்டம்பிற்கும் நடுவருக்கும் இடையே ஓடிவந்து வீசுவார்கள். []பேடி, ஷிவால்கர், கோயல் போன்றோர் பந்து வீசும்போது பந்தை மிக மெதுவாக, காற்றில் மிதக்க (flight) வைப்பார்கள். விரல்களால் பந்தை அழுத்திப் பிடித்து சுழற்றுவார்கள். சுழன்று போகும் பந்திலிருந்து மாற்றாக arm ball எனப்படும் கையோடு உள்ளே வரும் பந்தை வீசுவார்கள். இத்தகைய ஆர்ம் பந்து சற்றே வேகமாக வீசப்படுவதும் கூட. மற்றபடி இவர்கள் அதிகமாக நம்பியிருப்பது ஃபிளைட்தான். இந்த ஸ்பின்னர்கள் ஓட்டங்கள் கொடுப்பதைப் பற்றி சிறிதும் அஞ்சியது கிடையாது. மட்டையாளர்களை மயக்கி, ஏமாற்றி, ஃபிளைட்டினால் அவர்களைத் தோற்கடித்து விக்கெட்டுகளை எடுப்பதையே பெரிதும் விரும்பினார்கள். சரி, பேடி எத்தனை விக்கெட்டுகள் எடுத்தார் தெரியுமா? 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 டெஸ்ட் விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார். அத்துடன் 370 ஃபர்ஸ்ட்-கிளாஸ் மேட்ச்களில் விளையாடி 1560 விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார்!! பேடி இந்தியாவில் விளையாடியது மட்டுமின்றி இங்கிலாந்து கவுண்டிகளில் நார்தாம்டன்ஷயருக்காகவும் விளையாடினார். பேடி ஓய்வெடுத்ததும்தான் திலீப் தோஷிக்கு வாய்ப்பு கிடைத்தது. தோஷி, பேடி அளவிற்கு பந்தைப் பேச வைத்தது கிடையாது. தோஷியின் கடைசிக் காலத்தில் உள்ளே வந்த ரவி ஷாஸ்திரி, பின் அவரைத் தொடர்ந்து வந்த மனிந்தர் சிங் ஆகியோரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களே. ரவி ஷாஸ்திரி மிகக் குறைந்த திறமைபடைத்தவர். சிறிது காலத்திலேயே தன் பவுலிங்கினால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து படிப்படியாக துவக்க ஆட்டக்காரராக ஒரு பேட்ஸ்மனாக உருமாறிவிட்டார். மனிந்தர் சிங் ஆனால் மிக அருமையான ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர். அவரது உச்சத்தில் அவர் கிட்டத்தட்ட பேடி போல பந்து வீசுகிறார் என்று புகழப்பட்டார். திடீரென அடுத்தடுத்து வந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனும், நரேந்தர் ஹிர்வானியும் வலதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தனர். ஆனால் வந்த வேகத்திலேயே தங்கள் முதல் மேட்சை அணிக்காக ஜெயித்துக் கொடுத்து பின் ஒரேயடியாகக் காணாமல் போய்விட்டனர். மனிந்தர் சிங் மட்டும் சளைக்காமல் ஒருபுறம் விளையாடிக் கொண்டிருந்தார். மனிந்தருக்குப் பின் நிலைத்து நின்று விளையாடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹைதராபாதின் வெங்கடபதி ராஜு. அப்பொழுதுதான் அஸாருதீன் கேப்டனாகவும், அஜித் வடேகர் கோச்சாகவும் இருந்தனர். இந்தியாவில் நடக்கும் ஆட்டங்கள் அனைத்தையும் கொத்திப்போட்ட மண்தரையிலே நடத்தி மூன்று ஸ்பின்னர்களை வைத்தே வென்று வந்தனர். அனில் கும்ப்ளேதான் முன்னணி ஸ்பின்னர். அவருக்கு சரியான துணை ராஜு. சில ஆட்டங்களில் ஆஃப் ஸ்பின்னர் ராஜேஷ் சவுஹான் விளையாடி வந்தார். ராஜுவுக்குப் பின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. ரகுராம் பட் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தார். மும்பையின் நிலேஷ் குல்கர்னியும் ஏமாற்றம்தான். ஆச்சரியம் தரத்தக்க வகையில் இப்பொழுதைக்கு நியுசிலாந்தின் டேனியல் வெட்டோரிதான் உலகின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளர். அவரை அடுத்து இங்கிலாந்தின் ஆஷ்லி கைல்ஸ் கடந்த சில மேட்ச்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி மேலே வந்திருக்கிறார் என்றாலும் இவருக்கும் வெட்டோரிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத இட வித்தியாசம். வெட்டோரி அருமையாக பந்தை காற்றில் மிதக்க வைப்பவர். இந்தியாவின் முன்னணி ட்வீக்கர் (tweaker) முரளி கார்த்திக். ஆனால் இவர் விடாது ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். மிகச் சீக்கிரமாக ஒரு ஸ்பின் இடம் (அனில் கும்ப்ளே) காலியாக இருக்கிறது. விடாமுயற்சி இருந்தால் அந்த இடம் கார்த்திக் உடையதுதான். நான் வினு மன்கட் விளையாடிப் பார்த்தது கிடையாது. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகைச் சுழற்பந்து வீரர் பிஷன் சிங் பேடிதான். ஷிவால்கர், கோயல் இரண்டு பேரும் கிட்டத்தட்ட இந்த குவாலிடியில்தான் பந்து வீசியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதற்கடுத்து மனிந்தர் சிங்தான். கார்த்திக் மிகவும் ஃபிளாட்டாக – உயரமும், ஃபிளைட்டும் கொடுக்காமல் – வீசுகிறார் என்பது நிபுணர்களின் குற்றச்சாட்டு. அதற்கு முக்கியக் காரணம் ஒருநாள் போட்டிகள்தான். ரன்கள் தடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட எந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரும் சிறப்பான பந்துவீச்சை வீசிவிட முடியாது. டெஸ்ட் மேட்ச்களைப் பொருத்தவரை விக்கெட்டுகளைப் பெறுவதுதான் முக்கியமான குறிக்கோள். அங்கு ஒருவரது துல்லியமான பந்துவீச்சும், ஃபிளைட்டில் கொண்டுவரும் மாறுபாடுமே முக்கியம். கார்த்திக் இதைத்தான் சரியாகப் பழக வேண்டும். 20 ஒரு போஸ்ட்மார்டெம், உலகக்கோப்பை 2007க்கான நம் எதிர்பார்ப்புகள் ஆசியக் கோப்பை முடிந்துவிட்டது. இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணங்கள்? – மூன்று மாதம் விளையாடததால் துருப்பிடித்துப்போன கைகள் – ஜாகீர் கானுக்கு மீண்டும் காள் சுளுக்கு, இடுப்பு தசைப் பிடிப்பு என்று ஏதாவது ஒன்று – திராவிட்தான் நமக்கு கீப்பராக இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான யோசனை – பாலாஜிக்கு திருஷ்டி. பந்து கால் திசையில் மட்டும்தான் போவேன் என்கிறது இவைதான் என்றில்லை. பல குட்டிக் குட்டி விஷயங்களும் சேர்த்துதான். நம் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் இள ரத்தங்களைப் பாய்ச்ச வேண்டும். மொஹம்மத் காயிஃப் மேல் எப்பொழுதும் பிரெஷர் இருக்க வேண்டும் என்பதற்காக தினேஷ் மோங்கியா, ஹேமங் பதானி ஆகியோரை அருகிலேயே வைத்திருக்கலாம். செய்யாமல் விட்டு விட்டார்கள். லக்ஷ்மணை ஒருநாள் போட்டிகளிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது. அவர் ஃபீல்டிங்கிலும் சோடையாக இருக்கிறார், வேகமாக கிரீஸ் இடையே ஓடி ஒரு ரன்கள் சேகரிப்பதில் தடவுகிறார். வயசாகிக் கொண்டே போகிறது. இந்த முறை சேவாக், யுவராஜ், கங்குலி, லக்ஷ்மண், காயிஃப் ஐவரும் தடவி விட்டனர். திராவிடும் உச்சத்தை எட்டவில்லை. டெண்டுல்கர் ஒருவர்தான் முடிந்தவரை நின்றாடினார். ஆனால் அவரும் முழு ஃபார்மில் இல்லை. ஒருவழியாக நாம் போனவாரம் சொன்னதை செலக்டர்கள் கேட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. நாம் கேட்டுக்கொண்டபடியே இன்று அறிவித்த அணியில் பார்திவ் படேலைத் தூக்கி விட்டு தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கைக் கொண்டு வந்துள்ளனர். உடனடியாக விளையாடுவாரா என்று தெரியவில்லை. அடுத்த சில ஆட்டங்களுக்கு திராவிடே விக்கெட் கீப்பராக இருப்பார் என நினைக்கிறேன். தைரியமாக ஹாலந்தில் நடக்கும் போட்டிகளில் தினேஷ் கார்த்திகை விளையாட வைக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் பேட்டிங்கில் வேறெந்த மாற்றமும் இல்லை. தினேஷ் மோங்கியா இல்லை. லக்ஷ்மண், காயிஃப் உள்ளனர். ரோஹன் கவாஸ்கர் மீண்டும் உள்ளே வந்துள்ளார். இதனால் அதிகமாக எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஜாகீர் கானை தூக்கி விட்டு அஜித் அகர்கார் உள்ளே வந்துள்ளார். பாலாஜி மீண்டும் ஒழுங்காகப் பந்து வீசுவார் என்று எதிர்பார்ப்போம். சுழற்பந்து வீச்சில் எந்த மாறுதலும் இல்லை. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் உள்ளனர். அனில் கும்ப்ளேயை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. உண்மையில் அந்த நேரம் தாண்டி விட்டது என்றே தோன்றுகிறது. இப்பொழுதைக்கு நம் அணியின் முன்னணி ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்தான். அப்படி இருக்கும்போது முரளி கார்த்திக், அமித் மிஷ்ரா ஆகியோரை உடனடியாகக் களத்தில் இறக்கி விடாமல் நாள்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. [Sachin, Ganguly, Dravid]என் பயமெல்லாம் அடுத்த உலகக் கோப்பை மீதுதான். இப்பொழுதிருந்தே 2007ஐ மனதில் வைத்திருந்து அணியைத் தீர்மானிக்க வேண்டும். 2007இல் லக்ஷ்மண் விளையாடப்போவதில்லை. கங்குலி, டெண்டுல்கர், திராவிட் விளையாடுவர், ஆனால் தங்கள் கடைசிக் காலத்தில் இருப்பர். சேவாகும், யுவ்ராஜ் சிங்கும் தான் நம் முன்னணி மட்டையாளர்களாக இருப்பர். அப்படியானால் இன்னமும் இரண்டு நல்ல மட்டையாளர்கள் தேவை. அவர்களைக் கண்டுபிடிக்க நாம் புதிதாக 6 பேர்களையாவது சோதனையாகக் களமிறக்க வேண்டும். பந்துவீச்சில், கும்ப்ளே அதுவரை தாக்குப் பிடிக்கப் போவதில்லை. எனவே உடனடியாக ஹர்பஜனுக்கு ஜோடியாக இன்னமும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டறிய வேண்டும். அதற்கென நான்கு-ஐந்து பேர்களை தொடர்ச்சியாக களத்தில் இறக்கி பரிசோதிக்க வேண்டும். வேகப்பந்து வீச்சில், ஜாகீர் கான் மீது அதிக நம்பிக்கை இல்லை. பதான், பாலாஜி, அகர்கார், நேஹ்ரா என நால்வரும் 2007 வரை விளையாடுவார்கள் எனத் தோன்றுகிறது. முனாஃப் படேலை இப்பொழுதே உள்ளே கொண்டுவர வேண்டும். இன்னமும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைத் தயார் செய்ய அடுத்து மூன்று-நான்கு பேர்களைக் கண்டறிய வேண்டும். நிச்சயமாக திராவிட் விக்கெட் கீப்பராக இருக்கக் கூடாது. தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல், இன்னமும் ஒரு விக்கெட் கீப்பர் ஆகியோருக்கிடையில் யாராவது ஒருவரைப் பிடித்தாக வேண்டும். ஆக நம் செலக்ஷன் கமிட்டிக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதைச் சரியாகச் செய்வதுபோலத் தெரியவில்லை. 21 விக்கெட் கீப்பர் குழப்பம் இந்தியாவின் மிக நம்பகமான பேட்ஸ்மேன் ராஹுல் திராவிட். பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) ரேட்டிங் படி டெஸ்டு போட்டிகளில் உலகின் ‘நம்பர் ஒன்’னாகவும், ஒருநாள் போட்டிகளில் ஏழாவதாகவும் இருப்பவர். இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் போட்டிகளில் சரியான கலவை இருக்க வேண்டுமென்பதற்காக திராவிடை அவரது விருப்பத்திற்கு மாறாக விக்கெட் கீப்பிங் செய்யத் தூண்டிக்கொண்டிருக்கிறது. திராவிட் ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பதனால் விருப்பமில்லாவிட்டாலும் அணி நிர்வாகம் வேண்டும் போதெல்லாம் கீப்பிங் செய்கிறார். அவர் எப்படி கீப்பிங் செய்ய வந்தார் என்பதை நாம் சிறிது கவனிக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கு திராவிட் சிறிதும் லாயக்கற்றவர் என்ற எண்ணம் அப்பொழுது இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து வந்தது. அதற்கு இடமளிக்கும் வகையில் திராவிட் தன் ஆரம்ப நாள்களில் ஒருநாள் போட்டிகளில் மிக மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தை சுழற்றிக்கொண்டிருக்குமாறு ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன்னை எடுப்பது திராவிடுக்கு அப்பொழுது சிறிதும் கைவரவில்லை. ஒவ்வொரு பந்தையும் நேராகப் பந்துத் தடுப்பாளர் கையில் அடித்துவிட்டு பரிதாபமாக நின்று கொண்டிருப்பார். அதனால் அவ்வப்போது ஒருநாள் போட்டி விளையாட வருவார், பின்னர் அணிக்கு வெளியே இருப்பார். []2001/02 மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை 2003ஐ மனதில் வைத்து இனி திராவிடை விக்கெட் கீப்பராக்கி விடலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு முன் கூட அவ்வப்போது  திராவிட் (ஒன்பது) ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார். ஆனால் இன்றைக்குப் பார்க்கும்போது திராவிட் ஒருநாள் போட்டிகளிலும் முன்னணி வீரராக உலக அளவிலேயே இருக்கிறார். PwC ரேட்டிங்கில் உலக அளவில் ஏழாவது, இந்தியாவில் டெண்டுல்கர் ஒருவர் மட்டும்தான் திராவிடுக்கு மேல், உலக அளவில் நான்காவது. ஆனால் அப்படியிருந்தும், இந்திய அணி நிர்வாகம் தன் வசதியைக் கருதி திராவிட் தலையில் மீண்டும் மீண்டும் விக்கெட் கீப்பிங்கைத் திணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவால் திறமையான ஒரு விக்கெட் கீப்பரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே. []குழந்தை முக பார்த்திவ் படேல் இப்பொழுது இந்தியாவின் முன்னணி விக்கெட் கீப்பராகக் கருதப்படுகிறார். ஆனால் இதுவரை ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடிய போதெல்லாம் நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றமே. சொல்லப்போனால் டெஸ்டு போட்டிகளிலும் இவரிடமிருந்து நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான். இன்னும் இவர் இந்திய அணியில் இருப்பதற்குக் காரணம் தீவிரமான போட்டி வேறு யாரிடமிருந்தும் வராதிருப்பதே. பார்திவ் படேலுக்கு முன் இந்தியா தீப் தாஸ் குப்தா, அஜய் ராத்ரா ஆகிய இருவரையும் பயன்படுத்தியது. தீப் தாஸ் குப்தா மிக மோசமான விக்கெட் கீப்பர். அஜய் ராத்ரா சுமார்தான். இருவரும் டெஸ்டு போட்டிகளில் ஆளுக்கொரு சதம் அடித்துள்ளனர். இதில் அஜய் ராத்ராவுக்கு மீண்டும் வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இவர் படேலை விட சற்றே திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் புதிதாக சிலரையும் முயன்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் என்பவர் இப்பொழுது இந்தியா-ஏ அணியுடன் ஜிம்பாப்வே, கென்யா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இவர் இதுவரை ஒரு சீஸன்தான் ரஞ்சிக்கோப்பை விளையாடியுள்ளார். அதிலும் மிக நேர்த்தியாக பேட்டிங் செய்துள்ளார். இவருக்கும் சர்வதேச அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை பார்திவ் படேலை ரஞ்சிக்கோப்பை விளையாட்டுகளில் ஓரிரு வருடங்கள் விளையாட வைப்பது அவருக்கே நன்மை பயக்குமோ என்றும் தோன்றுகிறது. ஓர் ஆத்திர அவசரத்தில் ஒரு ரஞ்சி ஆட்டம் கூட விளையாடாத படேலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றது இந்திய அணி நிர்வாகம். அன்று முதல் இன்றுவரை முறையான பயிற்சி இல்லாது படேல் வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறார் என நான் நினைக்கிறேன். திராவிட் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான விளையாட்டு வீரர். அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்து அவரது சக்தியை வீணடிக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒருநாள் போட்டிகளில் வேறெந்த நாடும் இதுபோல் தாற்காலிக விக்கெட் கீப்பரை வைத்துப் பொழுதை ஓட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்ககாரா ஆகியோர் தனித்திறமை வாய்ந்த மட்டையாளர்களும் கூட. மற்ற நாடுகளின் விக்கெட் கீப்பர்கள் யாரும் இந்த அளவிற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் கச்சிதமான விக்கெட் கீப்பிங் திறமை பெற்றவர்கள். இந்தியா மட்டும்தான் இந்த இரண்டும் இல்லாமல் ஒரு முன்னணி, அதுவும் மிக முக்கியமான, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை கையில் கிளவ்ஸ் போடச் சொல்லிக் கேவலப்படுத்துகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை செப்டம்பர் 2004க்கு முன்னால் இந்திய அணி மாற்று ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். 22 டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழ ஒன்றுமே இல்லையா? பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 82* ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றதும் தான் கொடுத்த பேட்டியில் டெண்டுல்கர் தன் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார். டெண்டுல்கருக்கு யார்மீது, எதனால் கோபம்? சில மாதங்களாகவே கிரிக்கெட் விமரிசகர்கள் டெண்டுல்கர் மீது இரண்டு விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். 1. டெண்டுல்கரின் பேட்டிங்கில் பார்த்து ரசிக்கத்தக்க அம்சங்கள் குறைந்து வருகிறது. 2. டெண்டுல்கர் தன் பேட்டிங்கில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை, அவருக்கே தன் பேட்டிங் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் டெண்டுல்கரை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளன என்பது அவரது பேட்டியிலிருந்து தெரிய வருகிறது. உண்மை நிலை என்ன? டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழக்கூடிய அம்சங்கள் குறைந்துதான் வருகின்றன. ஒருவரது பேட்டிங்கில் என்னென்ன அம்சங்கள் பார்ப்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்? – ஒரு பந்துவீச்சாளர் வீசும் பந்தின் வேகத்தை (speed), அளவை (length), திசையை (line), நகரும் முறையை (movement) மிகச் சரியாகக் கணிப்பது – பந்தினை முழுதாகக் கணித்ததும், அந்தப் பந்தினை எதிர்கொள்ளும் முறையை – பந்தினை விட்டுவிடுவதா, தடுத்தாடுவதா அல்லது அடித்தாடுவதா – என்று உடனடியாக மனதில் முடிவு செய்வது. – அடித்தாடுவது என்றால் எம்மாதிரியான அடி (stroke) என்று தேர்ந்தெடுப்பது. அப்படி அடிக்கும்போது பந்து தரையோடு செல்ல வேண்டுமா, அல்லது மேலாகப் பறந்து செல்ல வேண்டுமா என்பதையும் கண நேரத்தில் தேர்ந்தெடுப்பது. இதற்கு shot selection என்று பெயர். – அடியைத் தீர்மானித்த பிறகு, பந்துத் தடுப்பாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்து, எங்கு இடைவெளி இருக்கிறது என்பதை அவதானித்து, இடைவெளிகளில் செல்லக்கூடிய மாதிரியாக அடியை அமைப்பது. இதற்கு placement என்று பெயர். – அப்படிப்பட்ட அடியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதை நிறைவேற்றுவது (execution). அதற்கு முக்கியமாகத் தேவை கால்களை சரியாக நகர்த்தி (foot movement) பந்தினை மட்டையால் சரியான நேரத்தில் சந்திப்பது (timing). ஆக, பார்ப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடியதான ஓர் ஆட்டத்தை விளையாடுபவர் சரியாக பந்தைக் கணித்திருப்பார், அந்தப் பந்தை எந்த அடியால் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, சரியாகக் கால்களை நகர்த்தி, சரியான அடி மூலமாக பந்தை சரியான நேரத்தில் சந்தித்து, பந்தை தடுப்பாளர்களால் தடுக்க முடியாதவாறு இடைவெளியில் செலுத்தி ஆடுவார். அப்படி விளையாடுபவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம், உயர்ந்த கலைகளான நாட்டியம், இசை, ஓவியம் ஆகியவற்றை தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இயற்றிக்காண்பிக்கும்போது நிகழும் அனுபவத்துடன் ஒப்பிடலாம். டெண்டுல்கர் சிறுவயது முதற்கொண்டே விளையாட வந்தபோது அவரது கால்களை வேகமாக, சரியாக நகர்த்தும் நேர்த்தி புலப்பட்டது. ஒவ்வொரு பந்திற்கும் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் ஒரு ஸ்டிரோக் ஒன்றை அடிப்பார். பந்து சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு ஓடும். டெண்டுல்கரின் ஆட்டத்தை கவனித்து வருவோர் அனைவருமே இப்பொழுது டெண்டுல்கரின் விளையாட்டில் அதே நேர்த்தி இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். []எவ்வளவுதான் திறமைசாலியான விளையாட்டு வீரராக இருந்தாலும், அவருக்கு form என்று ஒன்று உண்டு. சில நாட்கள் கால்கள் அசையவே செய்யாது. காலில் இரும்புச்சங்கிலி கட்டிவிட்டதைப் போலிருக்கும். பத்து ஓட்டங்கள் அடிக்கும் வரை எதுவே சரியாக ஓடாது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே உள்ள பந்துகளை வீணாகத் தொடத் தோன்றும். பந்து சரியாக மட்டையில் படாது. அவ்வப்போது விளிம்பில் பட்டு ஹார்ட் அட்டாக் கொடுக்கும். சில விளையாட்டு வீரர்களுக்கு காலம் பூராவுமே இப்படித்தான். ஆனால் timing, placing, கூரிய கண்பார்வை ஆகியவற்றால் அதிரடியாக விளையாடுவார்கள். கிரிஷ் ஸ்ரீக்காந்த் இப்படியானவர்தான். விரேந்தர் சேவாக் இப்படிப்பட்ட விளையாட்டாளர்தான். நாளடைவில், கண்பார்வை குறையும்போதும், டைமிங், பிளேசிங் திறமை மங்கும்போதும், இவர்களுக்கு ஓட்டங்களைக் குவிப்பது கடினமாகிவிடும். தொடக்க காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனிக்க முடிந்தது. ஒன்று பயமின்மை. வயது குறைந்திருந்தும் எந்தப் பந்தையும் எதிர்நோக்கக்கூடிய தைரியம் இருந்தது. தைரியமாக பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்த அபிமன்யூவைப் போன்ற திறமை. ஆனால் அபிமன்யூவையும் விஞ்சி, அந்த பத்ம வியூகத்தை மீண்டும் பிளந்து வெளிவரக்கூடிய திறமை. இரண்டாவது விஷயம், ஒவ்வொரு பந்தையும் சரியான முறையில் கணித்து, மிகச் சிறப்பான ஸ்டிரோக் வழியாக மட்டுமே ஓட்டங்களைக் குவிப்பது. புதுமையான முறையில், எந்த வித்தகரும் எதிர்பார்க்காத innovative அடி மூலம் அடிக்கக்கூடிய திறமை. குறைந்த அளவில் ஆஃப் திசையில் எழுந்து வருகிற பந்தா? குள்ளமான உருவத்துடன், கால்விரல்களால் எக்கி நின்று, பின்னங்காலில் சென்று பக்கவாட்டில் பந்தை வெட்டி ஆடுவார். சற்றே அளவு கூடி வருகிற பந்தா? முன்னோக்கி வந்து, மட்டையை நெடுங்குத்தாக வைத்து, முழு பாரத்தையும் முன்னங்காலுக்கு மாற்றி, பந்தை கவர் திசையில் செலுத்தி ஆடுவார். அளவு குறையாமல் குட் லென்த்தாக இருந்தால் அதையும் கூட, வெட்டியோ, செலுத்தியோ தேர்ட்மேன் முதல் லாங் ஆஃப் வரை எங்கு வேண்டுமானாலும், நினைத்த மாதிரி அடிப்பார். மாறுதலுக்காக, மணிக்கட்டைத் திருப்பி, பந்தை மிட் விக்கெட் திசையில் flick செய்வார். என்னதான் செய்யப்போகிறார் என்று பந்து வீச்சாளருக்கும் தெரியாது, பந்து தடுப்பாளர்களுக்கும் புரியாது. கால் திசையில் எகிறி வரும் பந்தை ஹூக் செய்வதிலிருந்து, மடக்கி தரையோடு தட்டுவது, சுழற்பந்து வீச்சாளராக இருந்தால் பெருக்குவது, சற்றே நேராக வரும் பந்துகளை மிட் ஆனில் டிரைவ் செய்வது என்று டெண்டுல்கரின் வீச்சு பிரம்மாண்டமாக இருந்தது. அதனால்தான் உலகம் முழுவதும் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இது வெறும் ரன்களைப் பெறுவதனாலோ, சதங்களை அடிப்பதனாலோ வருவதல்ல. ஆட்டத்தின் அழகில் மயங்குவதால் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுதைய நிலை என்ன? டைமிங் சரியாக வருவதில்லை. பந்தின் வேகத்தை சரியாகக் கணிப்பதில்லை. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவான் ஸோய்சாவின் பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்க முடியாததால்தான் மிட் ஆஃப் திசையில் மேலே எழும்பி அடித்து ஆட்டமிழந்தார். கடந்த 20 ஒருநாள் போட்டிகளில், 19 முறை ஆட்டமிழந்துள்ளார். அதில் 9 முறை (47%) விக்கெட் கீப்பர் அல்லாத பந்து தடுப்பாளர்களால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம் பந்தை சரியாகக் கணிக்காமல் தனது ஷாட்டை முன்னதாகவே தேர்ந்தெடுத்து விளையாடுவதே. டைமிங் சரியாக வராததால், முன்னெல்லாம் மிக அழகான ஷாட்களை அடித்து ஓட்டங்கள் எடுத்து வந்தாரோ, இப்பொழுது அதைத் தவிர்த்து பெர்செண்டேஜ் விளையாட்டாக விளையாடுகிறார். எப்படியாவது ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அழகான ஆட்டம் போய், இயந்திரத்தனமான ஆட்டம் நுழைந்துள்ளது. ஒருநாள் ஆட்டங்களின் சச்சின் டெண்டுல்கரின் ரன் எடுக்கும் ஸ்டிரைக் ரேட் – சந்திக்கும் 100 பந்துகளில் எத்தனை ஓட்டங்கள் அடிக்கிறார் என்னும் புள்ளி விவரம் – இப்பொழுது 100 பந்துகளுக்கு 86 ஓட்டங்களாக உள்ளது. கடந்த 100 ஆட்டங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தனது ஸ்டிரைக் ரேட்டை 100 பந்துகளுக்கு 86 ஓட்டங்களாகவே வைத்திருக்கிறார். ஆக அழகு குறைந்தாலும் அவர் ஒருநாள் போட்டிகளில் எடுக்கும் ரன்கள் குவிக்கும் வேகத்தில் ஒரு குறைவும் இல்லை. அத்துடன், கடந்த 100 ஆட்டங்களில் அவரது ஒருநாள் போட்டிகளுக்கான சராசரி 42.5இலிருந்து 44.8ஆக உயர்ந்துள்ளது. ஆக புள்ளிவிவரப்படி இந்திய அணிக்கான டெண்டுல்கரின் பங்களிப்பு கடந்த 100 போட்டிகளில் அதிகமாகித்தான் உள்ளது. தனது அழகாக ஆடும் திறமை குறைகிறது என்று தெரிந்ததுமே டெண்டுல்கர் தனது பிறவியிலேயே கிடைத்த திறமையினால், தன் ஆட்டத்தை மாற்றி, ஓட்டங்களைக் குவிப்பதில் செய்திறனை வளர்த்துள்ளார். இது கிரிக்கெட் மீதான ஆர்வம் அப்படியே இருப்பதால்தான் நிகழ்கிறது. ஆர்வமில்லாத ஒருவர் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. எனவே முதலாவது குற்றச்சாட்டு – டெண்டுல்கரின் விளையாட்டில் ரசிக்கத்தக்க அம்சங்கள் குறைந்து வருகிறது – என்பது உண்மையாக இருக்கிறதே தவிர, இரண்டாவது குற்றச்சாட்டு – டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது – என்பது நியாயமான குற்றச்சாட்டு இல்லை. 23 இரு சாம்பியன்கள் ஷேன் வார்ன், முரளிதரன் இருவரும் ஆளுக்கு 527 விக்கெட்டுகளுடன் உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்களாக உச்சத்தில் நிற்கிறார்கள். வார்னுக்கு 35 வயது. முரளிதரனுக்கு 32 வயது. வெறும் புள்ளிவிவரங்களை வைத்து ஒப்பிடுகையில், முரளிதரனே மேலாக நிற்கிறார். முரளிதரன் தனது விக்கெட்டுகளை வார்னை விட குறைந்த டெஸ்டுகளில் எடுத்துள்ளார். (22 டெஸ்டுகள் வித்தியாசம்). முரளிதரன் தானெடுத்த விக்கெட்டுகளுக்கு ஈடாகக் கொடுத்த சராசரி ஓட்டங்கள் 22.76; வார்னுடையது கொஞ்சம் அதிகமாக 25.47. முரளிதரன் ஒவ்வொரு 58.2 பந்துகளுக்குப் பிறகும் ஒரு விக்கெட்டை எடுக்கிறார். வார்னுக்கு 59.7 பந்துகள் ஆகின்றன. விட்டு விடலாம், வெறும் 1.5 பந்துகள்தான் வித்தியாசம்! புள்ளிவிவரங்களை விட்டுவிடுவோம். அவற்றிலிருந்து கிடைக்கும் கதைகள் குறைவு. இவ்விருவரது விளையாட்டிலும் எத்தனையோ ஆச்சரியங்கள், அதிசயங்கள். இருவர் மீதும் சில குற்றச்சாட்டுகள். ஷேன் வார்ன் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட வந்தபோது அவரது எதிர்காலம் பிரகாசமாகத் தெரியவில்லை. அவர் முதலில் எதிர்கொண்டது சிட்னியில் இந்திய அணியை. இந்திய அணி அப்படியொன்றும் 1991-92இல் பிரகாசிக்கவில்லையென்றாலும் அந்த டெஸ்டில் ரவி ஷாஸ்திரி இரட்டை சதமடித்தார்; சச்சின் டெண்டுல்கர் ஒரு சதமடித்தார். வார்னின் பந்துவீச்சில் புதிதாக ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. பந்துவீசிய ஒரே இன்னிங்ஸில் 150 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை (ஷாஸ்திரியுடையது) எடுத்திருந்தார். முரளிதரன் வார்னுக்குப் பிறகு விளையாட வந்தவர். தன் முதல் டெஸ்டில் கொழும்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். வார்ன் அளவுக்கு மோசமாக இல்லாமல், முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். ஆனால் வார்ன்தான் முதலில் வெளியே தெரிந்தார். தனது 12வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது லெக் ஸ்டம்பிற்கு வெளியே அவர் வீசிய பந்து சுழன்று மைக் கேட்டிங்கின் மிடில் ஸ்டம்பைத் தட்டியது. அதுபோன்ற ஒரு பந்தை இங்கிலாந்து வீரர்கள் பார்த்து பல மகாமகங்கள் ஆகியிருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை இங்கிலாந்து கிரிக்கெட் எழுத்தாளர்கள் வார்னின் புகழ்பாடுவதிலேயே கழித்து வருகின்றனர். அந்த டெஸ்டைத் தொடர்ந்தே வார்ன் விக்கெட்டுகளை கூடை கூடையாகக் குவிக்கத் தொடங்கினார். ஷேன் வார்ன் ஒரு லெக் ஸ்பின்னர். ஆசாரமான லெக் ஸ்பின்னர். லெக் ஸ்பின் பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டுமோ, அதை இலக்கணசுத்தமாக வீசுபவர். வலது மணிக்கட்டை சரியாகத் திருப்பி, பந்தை கால்திசையிலிருந்து ஆஃப் திசைக்குத் திருப்புவார். நடுநடுவே அதே ஆக்ஷனில் பந்தை வீசி, விரல்கள் மூலம் கடைசி நேரத்தில் பந்தை கூக்ளியாகவும் போடுவார். கூக்ளியை விட இவர் வீசும் ஃபிளிப்பர் – வேகமாக, அளவு குறைந்து விழுந்து சரேலென நேராக ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்தை லாகவமாய் வீசுவதில் வல்லவர். பந்து வீச்சின்போது, மெதுவாக நாலடி நடந்து விக்கெட்டின் மேல் கை வருமாறு கடைசி நேரத்தில் தோள்பட்டையும், மணிக்கட்டும் சேர்ந்து இயங்க பந்தை வீசுவார். சிலசமயம் எதுவுமே தன் அணிக்கு சாதகமாக இயங்காத போது (அதாவது சச்சின் டெண்டுல்கர் எதிர் முனையில் பேட்டிங் செய்யும்போது!) வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே எறிந்து மட்டையாளரின் பிருஷ்டத்தில் படுமாறு வீசுவார். அப்பொழுதெல்லாம் ஒரு தேர்ச்சி பெற்ற நாதசுரக் கலைஞனின் வாத்தியத்தை எடுத்து அதனால் தரையைக் கூட்டச்சொல்வதைப் போன்ற தோற்றம் இருக்கும். ஷேன் வார்ன் தன் உச்சத்தை எட்டிய அதே நேரத்தில் உலகில் இந்தியர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் ஸ்பின் பவுலிங்கை விளையாடுவதில் கொஞ்ச நஞ்சமுள்ள திறமையும் காணாமல் போயிருந்தது. நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணியில் உள்ள அனைவரும் வார்னைக் கண்டதும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போயினர். பாகிஸ்தான் அணி கூட தடுமாறியது. இந்தியா மட்டும்தான் வார்னை உச்சியிலிருந்து கீழே தட்டி வைத்திருந்தது. []முரளிதரனின் தொடக்கம் வார்னுடையதைப் போல இல்லை. ஆனாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டுதான் இருந்தார் முரளி. வார்ன் எந்த அளவிற்கு இலக்கணசுத்தமாக லெக் ஸ்பின் வீசினாரோ, அதற்கு நேர்மாறாக, யாருமே இதுவரை வீசாத ஒரு ஆக்ஷனில் ஆஃப் ஸ்பின் பந்து வீசுபவர் முரளி. இதனால் இன்றுவரை பந்தை ‘எறிகிறார்’ என்ற அவப்பெயரும் வாங்கியுள்ளவர். சாதாரணமாக வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் விரல்களால் சுழல்பந்து வீசும்போது, முரளி உள்ளங்கை மேல்நோக்கி நிற்க வலது மணிக்கட்டைச் சுழற்றி ஆஃப் ஸ்பின் போடுகிறார். வழவழக் கண்ணாடித்தரையிலும் பந்தை சுழலச் செய்யக்கூடியவர் முரளிதரன். ஷேன் வார்னின் லெக் ஸ்பின்னர்களைப் போலவே முரளியின் ஆஃப் பிரேக்குகளும் அக்கச்சக்கமாக[] சுழலக் கூடியது. இந்தியா தவிர பிற அணிகளை நிலைகுலையச் செய்பவை. இந்தியா கூட கடந்த சில டெஸ்டுகளில் முரளியை சரியாகச் சந்திக்கவில்லை. நாளாக நாளாக முரளியின் பந்துவீச்சில் திறமை கூடுகிறது. வார்னின் பந்துவீச்சு அப்படியில்லை. வார்ன் பந்துவீசும்போது அவர் முகத்தில் ஒரு மறைந்த சிரிப்பு இருக்கும். முரளி பந்துவீசும்போது அவர் கண்களில் ஒருவித வெறிகலந்த வேகம் இருக்கும். முகத்தின் தீவிரம் பயத்தைக் கொடுக்கும். பந்துத் தடுப்பாளர் பந்தைக் கோட்டைவிடும்போது முரளிதரன் கோபத்தில் சத்தம்போடுவது தெளிவாகத் தெரியும். வார்ன் பந்துவீசும்போது அப்படியிருக்காது. முரளி எந்த அளவிற்கு கிரிக்கெட் மைதானத்தில் சர்ச்சையைக் கிளப்புகிறாரோ, அந்த அளவிற்கு பொதுவாழ்க்கையில் அமைதியாக இருப்பவர். வார்னோ, கிரிக்கெட் மைதானத்தில் குற்றம் சொல்ல முடியாதவர். பொதுவாழ்க்கையில் பில் கிளிண்டனுக்கு அடுத்தபடி. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடப்போனபோது அங்கு ஒரு பாரில் இருந்த பெண்மணியை விடாது துரத்தி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறவாட முயன்றார் என்று செய்தி பரவியது. மன்னிப்பு கேட்டார் வார்ன். பின்னர் தடைசெய்யப்பட்ட டயூரெடிக் (diuretic) மருந்து உடலில் இருந்ததால் உலகக்கோப்பை 2003இல் விளையாடாமல் வெளியேறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒருவருடம் தடை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட நேரத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வார்ன் தனக்கு ஆபாசமான செய்திகளை மொபைல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பினார் என்று குற்றம் சாட்டினார். ஆஸ்திரேலியப் பெண் ஒருவரும் வார்ன் தன்னிடம் அசிங்கமாக நடக்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதுபோன்ற நிலையிலிருந்து மீண்டு இப்பொழுது மீண்டும் கிரிக்கெட்டில் முழுதாக ஈடுபட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கி விட்டார். முரளிதரனுக்கு ஏற்பட்ட கஷ்டமெல்லாம் ஆஸ்திரேலியா தொடர்பானது. இரண்டு ஆட்டங்களில் முரளி பந்தை ‘எறிந்தார்’ என்று ஆஸ்திரேலிய நடுவர்கள் அவரது பந்துகளை நிராகரித்தனர். அதைத் தொடர்ந்து பிரச்சனை சர்வதேச அளவில் பெரிதானது. பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஐசிசி முரளியின் ‘தூஸ்ரா’ என்னும் பந்தை வீசக்கூடாது, அது சட்டபூர்வமானதில்லை என்று அறிவித்தது. அது நடக்கும்போதே ஆஸ்திரேலியாவின் பிரதமர் முரளியின் பந்துகள் சட்டபூர்வமானதில்லை என்று தான் நம்புவதாக அறிவிக்க, முரளி ஆஸ்திரேலியாவுக்குத் தான் செல்லமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். சென்றிருந்தால், இன்று வார்னும், முரளியும் ஒரே விக்கெட் எண்ணிக்கையில் உலகின் உச்சியில் இருந்திருக்க மாட்டார்கள். இனி வரும் நாட்களில், ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாண்டிக்கொண்டிருப்பார்கள். முதலில் வார்ன்தான் கிரிக்கெட்டிலிருந்து விலகுவார் என்று தோன்றுகிறது. அப்படியென்றால், இருவருக்குமான போட்டியில், முரளி நிச்சயமாக வென்று விடுவார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், ஷேன் வார்னே தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக நிலைநிற்பார். 24 அணித்தலைவர்கள் பற்றி சென்றவாரம் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்களைப் பற்றிப் பார்த்தோம். கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அன்றிலிருந்து, இன்றுவரை அணித்தலைவரிடம்தான் (கேப்டன்) அதிகபட்ச அதிகாரங்கள் இருந்து வந்துள்ளது. ஓர் இராணுவ யூனிட்டின் தலைமை போல தன் அணியின் மற்ற பத்து பேரையும் தான் விரும்பியதைச் செய்ய வைப்பது அணித்தலைவர்தான். பயிற்சியாளருடன் சேர்ந்து அணிக்கான விளையாட்டுத் திட்டத்தைத் தீர்மானிப்பது அணித்தலைவர். அணியில் யாரைச் சேர்ப்பது, அன்றைய போட்டியில் யாரை விளையாட வைப்பது, பேட்டிங்கில் யாரை எந்த வரிசையில் அனுப்புவது, யாரை பவுலிங் போட வைப்பது, பந்துத் தடுப்பு வியூகத்தை எப்படி அமைப்பது, டாஸில் ஜெயித்த பிறகு முதலில் பேட்டிங் செய்வதா, பவுலிங்கா என்று தீர்மானிப்பது, எப்பொழுது தன் அணியில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக (டிக்ளேர் செய்வது) அறிவிப்பது, எதிரணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொல்வது (ஃபாலோ-ஆன்), நடுவரிடம் தன் அணி வீரருக்காக வாதாடுவது என்று எல்லாவற்றையும் தனியாளாகத் தீர்மானம் செய்து நிறைவேற்றுவது அணித்தலைவர்தான். உலக கிரிக்கெட்டில் பேர் சொல்லக்கூடிய அணித்தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். அனைவரைப் பற்றியும் இங்கு நான் பேசப்போவதில்லை. ஒருசிலரை மட்டும் தொட்டுச் செல்கிறேன். பாடிலைன் (Bodyline) என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? உலகிலேயே தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஆஸ்திரேலியாவின் டொனால்ட் பிராட்மேன் இங்கிலாந்தை கதிகலங்க வைத்தார். அப்பொழுதைய இங்கிலாந்து கேப்டனாக இருந்த டக்லஸ் ஜார்டன் பாடிலைன் என்றொரு உத்தியைக் கண்டுபிடித்தார். லார்வுட், வோஸ் எனும் இரு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு மட்டையாளர்களின் கால்புறத்தில் பந்தைக் குத்தி எகிறவைத்து பந்தை மட்டையாளரின் இடுப்பு, விலாப் பகுதிகளில் வந்து மோதுமாறு செய்வது, கால்திசையில் அருகாமையில் மூன்று பந்துத் தடுப்பாளர்களை வைத்து எகிறும் பந்தில் கேட்ச் கிடைக்குமாறு செய்வது – இதுதான் பாடிலைன். அந்தக் காலத்தில் உடலுக்கான தடுப்புகள் எதுவும் கிடையாது. தலைக்கு ஹெல்மெட் கூட கிடையாது. இப்படி இங்கிலாந்து பந்து வீச ஆரம்பித்ததும், பிராட்மேனால் கூட ஓட்டங்களைப் பெற முடியவில்லை. (அப்படியும் அந்தத் தொடரில் பிராட்மேனின் சராசரி 50ஐத் தாண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.) ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு உடம்பெங்கும் காயங்கள். இந்தப் பிரச்சினை பெரிதாகி வெடித்து ஆஸ்திரேலியாவுக்கும், பிரிட்டனுக்குமான ராஜதந்திர உறவில் கூட விரிசல் விழுந்தது. டக்லஸ் ஜார்டன் கடைசிவரை தன்னுடைய உத்தியில் தவறேதும் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் கிரிக்கெட் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து பாடிலைன் பவுலிங் தடைசெய்யப்பட்டது.   +-----------------------------------------------------------------------+ | பட்டையைக் கிளப்பு | +-----------------------------------------------------------------------+ | []வில்லன் நடிகராக பொடி ஹீரோக்களிடமும் அடி வாங்கும் நடிகர் | | பொன்னம்பலம், ‘பட்டையைக் கிளப்பு’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் | | மற்றும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். சென்ற ஆண்டு இவர் “அம்மையப்பா’ | | என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். படம் பெரிதாய் வெற்றிப் | | பெறவில்லையென்றாலும் இவரால் வில்லனாக மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் | | சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. | | | | ‘பட்டையைக் கிளப்பு’ காமெடி கலந்த ஒரு காதல் கதையாம். காதல் கதையென்றால் | | சாதாரண காதல் இல்லையாம் வித்தியாசமான காதல் கதையாம். கத்திரிக்காய் | | காய்தால் கடைத்தெருவுக்கு வரத்தானே போகிறது. | +-----------------------------------------------------------------------+                                 மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் மூலம்தான் ‘தம்மாலும் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அடைந்தனர். ஆயினும் பல காலங்களுக்கு அந்த அணியின் தலைவர் ஒரு வெள்ளையராகவே இருந்து வந்தார். கறுப்பர்களால் நன்றாக பந்து வீச முடியும், மட்டையாட முடியும், ஆனால் அணித்தலைவராகவெல்லாம் இருக்க முடியாது என்ற ஒரு பேச்சு உள்ளூர இருந்து வந்தது. அப்பொழுதுதான் பிராங் வோர்ரெல்  மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவராக ஆனார். கறுப்பர்களாலும் திறமையாகவும் விளையாடி, திறமையாகவும் அணியை நிர்வகிக்க முடியும் என்பதற்கு சான்றாக இருந்தவர். இதுவரையிலான உலக கிரிக்கெட் அணித்தலைவர்களிலேயே ‘ஜெண்டில்மேன்’ – கண்ணியமான கனவான் – என்ற மரியாதைக்குரியவர். வொர்ரெலுக்கு வெகுநாட்கள் கழித்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியவர் கிளைவ் லாயிட். இவர் காலத்தில்தான் ஓர் அணி மற்ற எல்லாரையும் விட மிகச் சிறப்பாக, பல காலங்களுக்கு கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக விளங்க முடியும் என்று முதலில் நிரூபித்தவர். சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி. இவரது கோபத்தை உசுப்பி விட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியை உலக சாம்பியன்களாக மாற்றியதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. மேற்கிந்தியத் தீவுகளுக்கே சென்று 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களை நான்காவது இன்னிங்ஸில் எடுத்து ஜெயித்தது இந்தியா. இப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்றதற்குக் காரணம் அவ்வணியில் விளையாடிய ஸ்பின்னர்கள்தான் என்று உறுதியாக நம்பினார் லாயிட். இனி இப்படியொரு தோல்வி கனவிலும் கூட வரக்கூடாது என்று சூளுரைத்து, தன் அணியை வேகப்பந்து வீச்சாளர்களின் கூடாரமாக மாற்றினார். மார்ஷால், கார்னர், கிராஃப்ட், ராபர்ட்ஸ், ஹோல்டிங், ஆம்புரோஸ், வால்ஷ் என்று பிற்காலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற அதிவேகப் பந்து வீச்சாளர்களை உற்பத்தி செய்து அவர்களை மற்ற அணியினரின் மீது ஏவினார் லாயிட். விளைவு – ஒவ்வொரு அணியும் படுதோல்வி அடைந்தது. யாராலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பத்து வருடங்களுக்கு அணுகக்கூட முடியவில்லை. இடையில் முதலிரண்டு உலகக் கோப்பைகளையும் வென்றார். மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லமுடியாதவாறு முட்டுக்கட்டையிட்டது இந்தியாதான்! கிளைவ் லாயிடைப் போல தற்காலத்தில் இருந்தது ஸ்டீவன் வா. சிலர் வா, லாயிடையும் விட உயர்ந்த அணித்தலைவர் என்று கூடச் சொல்லுவர். ஆஸ்திரேலியாவின் கேப்டன் இன்வின்சிபிள் கூட இந்தியாவின் முன்தான் தலை குனிய வேண்டியிருந்தது. இந்தியாவில் ஒரு தொடரையும் அவரால் வெல்ல முடியவில்லை. அதைவிடக் கொடுமையாக ஆஸ்திரேலியாவிலேயே போய் இந்தியா கடைசித் தொடரை டிராவில் முடித்தது. மற்றபடி எதிர்த்த அனைவரையும் தவிடுபொடியாக்கியது வா-வுடைய ஆஸ்திரேலியா. உலகக் கோப்பையில் இந்தியாவையும் அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலியா. பல கேப்டன்களைப் பற்றிப் பேசுகையில் பாகிஸ்தானின் இம்ரான் கான் பற்றியும் பேசியாக வேண்டும். அவிழ்த்துக்கொட்டிய நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒருவரோடொருவர் ஒத்துப்போகாமல் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி வீரர்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர் இம்ரான் கான். ஆனாலும் மேற்சொன்ன பிறரைப் போல அவரால் உச்சத்தை அடைய முடியாததற்குக் காரணம் அவரது தொடர்ச்சியான உடற்காயங்கள், அதனால் பல ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமை, தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்குள்ளான பிரச்சனைகள் ஆகியவையே. ஆயினும் இவரது தலைசிறந்த பங்களிப்பு பாகிஸ்தானை உலகக் கோப்பை 1992ஐ வெல்ல வைத்தது. இந்தியாவில் பேர் சொல்லக்கூடிய சில அணித்தலைவர்கள் நவாப் பட்டோடி, அஜித் வடேகர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அசாருத்தீன், கங்குலி. இதில் கபில் தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது முக்கியமானது. ஆனால் இவர்கள் அனைவரிலும் முன்னுக்கு நிற்பது கங்குலிதான். மிகவும் ஏமாற்றத்தைத் தந்தவர் சச்சின் டெண்டுல்கர். இப்பொழுதைக்கு இந்திய அணி தனது சரித்திரத்திலேயே சிறந்து பங்காற்றியுள்ள கங்குலியின் தலைமையின் கீழும், இதுவரையிலானதிலேயே மிகச்சிறந்த பயிற்சியாளர் கீழும் உள்ளது. இனி வரும் மூன்று வருடங்களில் உலகில் உச்சிக்கே போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. செய்கிறார்களா பார்ப்போம்! [கங்குலிக்கு வியாழன் அன்று பிறந்த நாள். வாழ்த்து கூறுவோம்.] 25 சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கால்பந்து, கூடைப்பந்து போன்ற ஆட்டங்களில் அணியின் பயிற்சியாளர் (கோச்) மிக முக்கியமானவர். தன் அணியில் யார் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து, எப்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே எடுத்துவிட்டு அவரிடத்தில் மாற்று வீரரை உள்ளே நுழைப்பது, எந்த நேரத்தில் டைம்-அவுட் கேட்பது என்பதைத் தீர்மானிப்பது, எதிரணியைத் தோற்கடிக்க எந்த மாதிரியான வியூகங்களை அமைப்பது என்பதை வெளியிலிருந்தே சைகைகளால் காண்பிப்பது, முழு ஆட்டத்திலும் முழுமையாக ஈடுபட்டிருப்பது, தோல்வியடந்தால் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது, ஜெயிப்பது போலிருந்தால் பக்கத்தில் இருப்பவரைக் கட்டிப் பிடித்து முத்தமிடுவது, இன்னும் சற்றே வெறி பிடித்தவராயிருந்தால் தன் அணியில் நட்சத்திர ஆட்டக்காரருக்கு ரெட் கார்டு கிடைத்துவிட்டால் நடுவரை அடித்துத் துவம்சம் செய்வது என்று இந்தப் பயிற்சியாளர்கள் ஆட்டத்தில் நீக்கமற நிறைந்துள்ளனர். ஆனால் சிறிதுகாலம் முன்னர் வரை கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் என்றால் யாரென்றே வெளியே பெயர் தெரியாமல் இருந்தது. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் ‘சூப்பர் கோச்’ என்று பெயர் பதித்தவர் பாப் வுல்மர்.[]இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்தவர்! இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடியவர். சுமாரான ஆட்டக்காரர்தான். 19 டெஸ்டு போட்டிகளில் விளையாடி சராசரியாக 33.09 ஓட்டங்கள் எடுத்தவர். இவர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக 1994இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் பல திறமை மிக்க ஆட்டக்காரர்கள் இருந்தனர். ஆனால் யாரும் சூப்பர் ஹீரோக்கள் கிடையாது. அணித்தலைவர் ஹன்சி குரோன்யேவுடன் இணைந்து வுல்மர் தென்னாப்பிரிக்க அணியை ஒரு தலைசிறந்த ஆயுதப்படை போல மாற்றினார். கிரிக்கெட் உலகில் கணினியை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவர்தான். கணினியில் எதிரணி வீரர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு அதனை தன் வீரர்களிடம் காட்டிக்கொடுத்து, எதிராளிகளின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களை ஆடுகளத்தில் சீக்கிரம் அவுட்டாக வைத்தார். ஃபீல்டிங் என்பது மிக முக்கியமானது என்பதை நிலைநாட்டினார். அதற்கெனத் தனிப்பயிற்சி கொடுத்தார். இவரது காலத்தில்தான் தென்னாப்பிரிக்காவும், ஜாண்டி ரோட்ஸும் உலகப் பிரசித்தி பெற்ற பந்துத் தடுப்பாளர்களாக மின்னினர். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணிகளில் வார்விக்ஷயர் என்னும் அணியின் கோச்சாகவும் பணியாற்றி, சுமாரான ஒரு அணியை பல பரிசுக் கோப்பைகளைப் பெற வைத்தார். சில காலம் ஐசிசி இரண்டாம் கட்ட அணிகளின் (ICC associate member countries) தரத்தை உயர்த்துவதற்கான நிர்வாகியாக சில காலம் பணியாற்றினார். இப்பொழுது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  உலகிலேயே பாகிஸ்தானின் கோச்சாக இருப்பதைப் போல பாவப்பட்ட ஜென்மம் யாரும் கிடையாது.  பாகிஸ்தான் அணி மிகவும் திறமை வாய்ந்தது. ஆனால் இவர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விளையாடுவது ஒருபொழுதும் கிடையாது. அவ்வப்போது இம்ரான் கான் போன்ற தலை சிறந்த வீரர்களின் அணித்தலைமையில் பிரகாசிப்பார்கள். மற்ற நேரமெல்லாம் குடுமிப்பிடி சண்டைதான். மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது, அவ்வப்போது யாராவது ஒருவர் மற்றவர்களெல்லாம் காசு வாங்கிக்கொண்டு ஆட்டத்தில் தோற்கிறார்கள் என்று புகார் சொல்வது, டீம் ஸ்பிரிட் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்பது – இதுதான் பாகிஸ்தான் அணி. கடந்த ஐந்து வருடங்களில் பத்து முறையாவது பயிற்சியாளரை மாற்றியிருப்பார்கள். அதில் ஜாவீத் மியாந்தாத் மட்டுமே நாலு முறையாவது மீண்டும் மீண்டும் வந்திருப்பார்.  ரிச்சர்ட் பைபஸ் (மற்றுமொரு தென்னாப்பிரிக்க சூப்பர் கோச்) இரண்டு முறை என்று. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்து எப்பொழுது கலைக்கப்படும், யார் தலைவராக வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது. [அந்நாட்டின் பிரதம மந்திரிக்கே இதுதான் நிலைமை…] பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்பொழுது பார்த்தாலும் அணித்தேர்வில் தலையிட்டுக் கொண்டிருக்கும். இந்த அணியையும் வுல்மர் மாற்றிக் காட்டினாரென்றால் அவர் உண்மையிலேயே சூப்பர் கோச்தான்! []ஸ்ரீலங்காவில் பிறந்து, ஆஸ்திரேலியாவிற்காக விளையாடிய டாவ் வாட்மோர் மற்றுமொரு சூப்பர் கோச். இவர் வுல்மரை விட மோசமான கிரிக்கெட் வீரர். ஏழு டெஸ்டுகளில் சராசரியாக 22.53 ஓட்டங்கள் எடுத்தவர். ஸ்ரீலங்கா அணியின் கோச் ஆனார். அந்த அணியை தலைகீழாக மாற்றினார். உலகக் கோப்பை 1996ஐ வெல்லக் காரணமாயிருந்தார். மிக அருமையான பயிற்சியாளர். சுமாரான டீமை எப்படி உலக சாம்பியனாக்கினார் என்பது உலகையே அதிசயிக்க வைத்தது. இப்பொழுது பங்களாதேஷின் கோச்சாக உள்ளார். இங்கும் இவரது முழுத் திறமைக்குமான சவால் உள்ளது. பங்களாதேஷ் புது அணி. வரிசையாகத் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்திருக்கும் அணி. அங்கும் அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டில் குளறுபடிதான். வாட்மோரின் பணியை கூர்ந்து கவனிக்க வேண்டும். தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜான் பூஷணன் மேற்சொன்ன இரண்டு பேர்களையும் போன்றவரே. இவர் வாழ்க்கையில் ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடியதில்லை! ஆனால் 1999 முதல் ஆஸ்திரேலியாவின் கோச் பதவியில் இருந்து ஸ்டீவன் வா தலைமையிலான அணி உலக சாம்பியன்களாக இருக்க முக்கியக் காரணமானவர். இந்தியாவில் பயிற்சியாளர் நிலை எப்படி இருந்து வந்தது? இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மற்ற பதவிகளைப் போல இங்கும் வட்டார சமரசங்களே நிகழ்ந்து வந்தன. போனமுறை வடக்கிலிருந்து ஓர் ஆள் வந்தாரா? அடுத்த வருடம் தெற்கோ, மேற்கோ ஒருவரைப் பிடிப்போம் என்றே நடந்து கொண்டனர். ஆனால் AC முத்தையா வாரியத் தலைவராக இருந்தபோது வெளியாள் ஒருவரை – திறமையான புரொஃபஷனல் ஒருவரை – கொண்டுவர முயற்சி செய்தனர். 2000த்தில் நியு ஜிலாந்தின் ஜான் ரைட்டை வேலைக்கு நியமித்தனர். அப்பொழுது இந்திய முன்னாள் வீரர்கள் பலருக்கு மிகவும் வருத்தம். இவ்வளவு பேர் இருக்கிறோம், வெளிநாட்டான் எதற்கு என்று குரலெழுப்ப ஆரம்பித்தனர். எங்கு சறுக்குவார், ஆளை ஒழித்துக் கட்டலாம் என்று அடுத்து வந்த நிர்வாகமும் முயன்றது. ஆனால் ஜான் ரைட் இதையெல்லாம் கண்டு மனம் சலிக்கவில்லை. கடமையைச் செய்வோம், பலனை எதிர்பாராது என்று கீதை வழியில் நடந்தார். சிறிதும் பொறுப்புணர்ச்சியும், கட்டுப்பாடும் இல்லாத இந்திய அணிக்கு  பொறுப்பினையும், தங்களால் வெல்ல முடியும் என்ற எண்ணத்தையும் கொண்டுவந்தார். பயிற்சியினைக் கடுமையாக்கினார். ஓர் அணியாக இணைந்து விளையாட வைத்தார். இன்று அத்தனை வீரர்களுமே ஜான் ரைட்டின் பங்களிப்பை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். புரளி பேசிய முன்னாள் “வீரர்கள்” வாயடைத்துப் போயுள்ளனர். இந்திய மாஜிக்கள் சற்றே தங்கள் உழைப்பை அதிகமாக்க வேண்டும். இந்தியாவில் திறமையான, சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்களே இல்லையா என்ற கேள்வி எழலாம். பதில் வருத்தம் தரக்கூடியது. இல்லை. சந்தீப் பாடில் கென்யாவின் பயிற்சியாளராக இருந்தவர். நிச்சயம், இப்பொழுதைக்கு இவர் பெயரைத்தான் முன்னால் வைக்க வேண்டும். கிருஷ் ஸ்ரீக்காந்த் இளம் அணியினரிடையே (U-19, India-A) மிகவும் பாராட்டைப் பெற்றவர். ஆனால் unorthodox. இப்பொழுது கோச்சிங்கில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இவர்கள் இருவர் பெயரைத் தவிர சொல்லிக்கொள்ளுமாறு வேறு எந்தப் பெயரும் இல்லவே இல்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரரான கபில்தேவ் – மிக மோசமான, உதவாக்கரை கோச்சும் கூட. ஜான் ரைட்டுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழும்போது நாலைந்து இந்திய பயிற்சியாளர்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று நம்புவோம். அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால், வெட்கப்படாமல் வெளி நாட்டவர் யாரையாவது தேட வேண்டியதுதான். 26 கிரிக்கெட் தொடர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் [] இந்தியாவின் கிரிக்கெட் சீசன் தொடங்கவிருக்கிறது. ஜூலையில் ஏசியா கப். அதைத் தொடர்ந்து ஆகஸ்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் ஹாலந்தில் மும்முனைப் போட்டி ஒன்றில் விளையாடுகின்றனர். ஹாலந்துக்குக் கிரிக்கெட்டைக் கொண்டு போகிறோம் பேர்வழி என்று நடக்கும் இந்தப் போட்டி முழுக்க முழுக்க இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மூவரும் பணம் செய்வதற்காக மட்டுமே நடைபெறுகிறது. ஹாலந்தின் கிரிக்கெட் அமைப்புக்கு கிடைக்கவிருப்பது வெறும் அரங்க நுழைவுக் கட்டணம் மட்டுமே. தொலைக்காட்சி உரிமம் முதல் மற்ற பணம் கொழிக்கக் கூடிய அனைத்து உரிமங்களையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மூவரும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து செப்டம்பரில் இந்தியாவும் இங்கிலாந்தும் நாட்வெஸ்ட் கப் – மூன்று ஒருநாள் போட்டிகளில் – விளையாடுகின்றனர். உடனே ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டம் நடக்கிறது. அங்கும் இந்தியா-பாகிஸ்தான் இருவரும் முதல் கட்டத்திலேயே மோதுகின்றனர். இந்த நான்கு ஒருநாள் போட்டித்தொடர்களையும் தொடர்ந்து, அக்டோபரில் ஆஸ்திரேலியா இந்தியா வருகிறது. தொடர்ச்சியாக நான்கு டெஸ்டு போட்டிகள் விளையாடுகின்றனர். ஓர் ஒருநாள் ஆட்டமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அடுத்து டிசம்பரில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்டு போட்டிகளில் விளையாடுகின்றது. இது ஒருவகையில் நல்லதுதான். தொடர்ச்சியாக இந்தியா கிட்டத்தட்ட 10-12 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். அதைத் தொடர்ந்து வரிசையாக ஆறு டெஸ்டு போட்டிகள். இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களை ஒவ்வொரு போட்டிக்கும் சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள முடியும். இப்பொழுதைக்கு ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியில் உள்ள வீரர்களைப் பற்றி சிறிது பார்ப்போம். ஆகாஷ் சோப்ரா ஆட்டத்தைத் துவக்க வேண்டுமா, கூடாதா என்பதைப் பற்றி இங்கு நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அக்டோபரில் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுதைக்கு சேவாக், டெண்டுல்கர், கங்குலி மூவரில் இருவர் ஆட்டத்தைத் துவக்குவர். இதில் முக்கியமானவர் சேவாக். கடந்த சீசனில், ஆஸ்திரேலியாவிலும், பாகிஸ்தானிலும் சேவாக்கின் ஆட்டத்தைப் பார்த்தபின், இவர் தனது ஃபார்மைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கும். டெண்டுல்கரின் ஆட்டமும் முக்கியமானது. இவர் இப்பொழுது தனது இயல்பான அடித்தாடும் ஆட்டத்தை நன்கு குறைத்து விட்டு ஆட்டமிழக்காமல் ஆடுவதையே அதிகம் விரும்புகிறார். இதனால் அணியின் ஸ்டிரேட்டஜி எவ்வாறு மாறும் என்பது விளங்கவில்லை. ஒருவேளை டெண்டுல்கரை நான்காவது இடத்தில் விளையாடுமாறும் செய்யலாம். சேவாக், கங்குலி, லக்ஷ்மண், டெண்டுல்கர், திராவிட், யுவராஜ் சிங், மற்றொரு மட்டையாளர், நான்கு பந்து வீச்சாளர்கள் என்று அணியின் வரிசை இருக்கலாம். டெண்டுல்கர் இதை விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன். லக்ஷ்மண் எவ்வளவுதான் சாதித்தாலும் மீண்டும் மீண்டும் தனது இடம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்திருந்தாராம். பதிலுக்கு கங்குலியும், அணித்தேர்வு நடக்கும்போது முதலில் எழுதப்படும் பெயர் லக்ஷ்மணுடையதுதான் என்று தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் லக்ஷ்மண் இன்னமும் அதிகம் சாதித்தாக வேண்டியுள்ளது. அவர் தனது சராசரியையும், அணியில் உள்ள மற்றவர்களின் சராசரியையும் பார்த்தாலே தனது இடம் அவ்வளவு பாதுகாப்பானதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். லக்ஷ்மணது இடம் டெஸ்டு போட்டிகளில் எவ்வளவுக்கெவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியற்றது ஒருநாள் போட்டிகளில் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட் மீது விக்கெட் கீப்பிங் தொடர்ந்து திணிக்கப்படுவது வருந்தத்தக்கது. பார்திவ் படேல் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் நன்கு விளையாடக்கூடிய அளவுக்கு முன்னேறவில்லை. இப்பொழுதைக்கு இந்திய அணிக்குள் யாராவது இடம் பிடிக்க முயன்றால் விக்கெட் கீப்பிங்/பேட்டிங் இரண்டு திறமையுடனும் உள்ளே நுழையமுயற்சிப்பதே சமயோசிதமாகும். யுவராஜ் சிங் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது. தினேஷ் மோங்கியா, ஹேமங் பதானி, ரோஹன் காவஸ்கர், மொஹமத் காயிஃப் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. திறமையின் அடிப்படையில் காயிஃப் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் காவஸ்கரை அணியில் நுழைக்க அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும். காயிஃப், பதானி, மோங்கியா மூவருமே பந்து வீச்சாளர்கள் கிடையாது. அவ்வப்போது கையைச் சுழற்றி ஓரிரு ஓவர்களை வீசுவார்கள். ரோஹன் காவஸ்கர் பந்து வீச்சிலும் சுமார், பேட்டிங்கிலும் சுமார்தான். இங்கும் புதியதொரு ஆல் ரவுண்டு வீரர் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஜாகீர் கானின் ஃபிட்னெஸ் மிகுந்த கவலையளிக்கிறது. அவர்தான் அணியையே தாங்கப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆஷீஸ் நேஹ்ரா எப்பொழுதும் நாலைந்து ஓவர்கள் வீசியதும் கையையோ, காலையோ முறித்துக்கொள்வார் என்பது எதிர்பார்த்திருந்தது. ஆனால் இருவரும் இப்பொழுது மருத்துவமனையிலும், மைதானத்திலும் மாறி மாறி காலத்தைக் கழிக்கப்போவதுபோலத் தோன்றுகிறது. எங்கிருந்தோ வந்த இர்ஃபான் பதானும், எதிர்பாராத பாலாஜியும் ஓரளவிற்கு பந்து வீசுகிறார்களோ, பிழைத்தோம். அதிலும் பாலாஜி பாகிஸ்தானில் வீசிய விதம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. இப்பொழுதைக்கு பாலாஜியே இந்தியாவின் முன்னணிப் பந்து வீச்சாளராக களமிறங்குவார். ஹர்பஜன் சிங் மீண்டும் விளையாட வந்திருப்பதும் இந்திய அணிக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். அமித் பண்டாரி, முனாஃப் படேல் ஆகிய புது ரத்த வேகப்பந்து வீச்சாளர்களுடன், கும்ப்ளே, கார்திக் சேர்ந்து பந்து வீச்சு டிபார்ட்மெண்ட் தேவலாம். என் கணிப்பு: இந்தியா ஏசியா கப்பை வெல்லும். நாட்வெஸ்ட் கப்பிலும் வெற்றியடையும். ஹாலந்த் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இரண்டிலும் இறுதிப் போட்டிக்குச் செல்லும்! 27 இலங்கையின் ஹீரோ, உலக கிரிக்கெட்டின் வில்லன்? பருவமழை கொட்டும் கலுத்தரா, இலங்கையிலிருந்து இந்த வாரக் கட்டுரை உங்களை வந்தடைகிறது. போன வாரம் நான் கேட்டிருந்த கேள்விக்கு சரியான விடையை முதலில் கொடுத்தது நாமக்கல்லிருந்து ராஜா. அவருக்கு விஸ்டன் கிரிக்கெட்டர்’ஸ் அல்மனாக் 2004  தபாலில் போய்ச்சேரும். ராஜா தன்னுடைய கடிதத்தில் கிரிக்கெட் கவரேஜ் பற்றிப் பேசும்போது மற்ற சில அம்சங்களைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பிட விட்டுப்போனது பந்தின் வேகத்தைக் கணக்கிடும் கருவி (Speed gun), எல்.பி.டபில்யூ பட்டை, ஹாவ்க் அய் (Hawk Eye) என்னும் பந்தின் வீச்சுப் பாதையை முப்பரிமாணத்தில் காட்டும் நுட்பம் ஆகியவை. பந்தின் வேகத்தை லேசர் துப்பாக்கித் தொழில் நுட்பம் மூலம் கணக்கிடுகிறார்கள். இதுபோலத்தான் நெடுஞ்சாலைகளில் வேகமாகப் போகும் வண்டிகளின் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள். இது கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொலைக்காட்சி கவரேஜில் இருந்து வருகிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை சற்றே குறைவு. பந்தின் வேகம் பலமுறை இந்த ஸ்பீட் கன்னால் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பந்து வீசப்படும் கோணம், பந்தின் உயரம், பந்து எழும்புகிறதா, இறங்குகிறதா என்பதை சரியாகக் கணக்கிட முடியாதது ஆகியவை. அடுத்ததாக எல்.பி.டபில்யூ பட்டை. ஒரு அசையா இன்ஃப்ரா ரெட் கேமரா மூலம் இரண்டு ஸ்டம்புகளுக்கும் நேர் கோடாகப் படம் எடுத்து அதனை மற்ற கேமரா படங்கள் மீது படுமாறு செய்யும்போது பந்து காலில் எங்கு படுகின்றது என்பதைக் காண முடிகிறது. இதிலும் பந்து எவ்வளவு தூரம் எழும்புகிறது என்பதை சரியாகக் கணிக்க முடியாது. இது முற்று முடிவான ஒரு தீர்ப்பைக் கொடுக்காது. நடுவர்களுக்கு இந்தப் படம் காண்பிக்கப் பட மாட்டாது. இலங்கையில் 2002இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியின் போது மட்டும் மூன்றாவது நடுவர் எல்.பி.டபில்யூ பற்றிய தீர்ப்பை அளிக்கலாம் என்று சோதனை முறையில் செய்து பார்த்தனர். பின்னர் இது கைவிடப்பட்டது. அதன் பின்னர், இப்பொழுது ஹாவ்க் அய் தொழில்நுட்பம் வந்துள்ளது. இதுவும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் ஒரு விவாதத்தை உண்டு பண்ணவே ஒழிய நடுவர்களும் வீரர்களும் இதனால் இப்பொழுதைக்கு எந்தப் பலனும் அடைவதில்லை. ஹாவ்க் அய் என்பது பல கேமராக்களை வைத்து பந்தின் பாதையை பின்பற்றி, கணினிகளின் மூலம் இடைப்பட்ட பாதையை முப்பரிமாணத்தில் interpolate செய்வது. இது எத்தனை தூரத்திற்கு சரியான தகவல் தருகிறது என்பதை சோதனை முறையில் யாரும் கண்டதில்லை [ஹாவ்க் அய்ந்தக்காரர்களைத் தவிர]. இதற்கெல்லாம் மேலாக உருப்படியான, செலவு குறைந்த வழி ஒன்றிருக்கிறது. அது பந்திற்குள் ஒரு மைக்ரோ சிப்பைப் பொறுத்துவதுதான். ஐஸ் ஹாக்கி ‘பக்’ உள்ளே இதுபோன்ற சிப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மிக வேகமாக செலுத்தப்படும் மிகச் சிறிய பக் எங்கெல்லாம் போகிறது என்பதை தொலைக்காட்சித் திரையில் காண முடியும். அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்த மைக்ரோசிப் பொறுத்துவதற்கான மிக முக்கிய காரணியாகும். நாளையே ஏதாவது ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஐசிசியை வற்புறுத்தி இந்த வேலையைச் செய்யலாம். O [முரளி]முரளிதரனைப் பற்றிப் பேச நினைத்தோம். வேறெதையோ பற்றிப் பேசுகிறோம். ஒரு சிலர் விட்டால் முரளியின் உடம்பில், கையின் ஏதாவது மைக்ரோசிப்பை வைத்து அது எப்படியெல்லாம் பந்து வீசும்போது வளைகிறது என்பதைப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று தோன்றுகிறது. கொழும்பில் வழிக்கும் சாதாரண மக்களுக்கு ஆஸ்திரேலியர்கள் மீது அளவு கடந்த கோபம். ஆஸ்திரேலியப் பிரதமர் எப்படி முரளியைப் பற்றி தவறாகப் பேசலாம் என்று பொருமுகிறார்கள். ‘Murali chucks Australia’ என்கிறது ஒரு பத்திரிகை. சிலர் ஒருபடி மேலே போய், இந்தியா, இங்கிலாந்து என்றால் சிட்னி, மெல்போர்ன், பெர்த், அடிலெய்ட் என முக்கிய நகரங்களில் விளையாடவும், இலங்கை என்றால் டார்வின், கேய்ர்ன்ஸ் போன்ற முன்னே பின்னே பெயர் தெரிந்திருக்காத இடங்களில் விளையாடவும் செய்கின்றனர் என்று வருந்துகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்த மாதங்களில் டார்வின், கேய்ர்ன்ஸ் போன்ற இடங்களில்தான் விளையாட முடியும். போன வருடத்திலிருந்து ஆஸ்திரேலியா மேற்குறிப்பிட்ட இடங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. முதலில் பங்களாதேஷ். இப்பொழுது இலங்கை. முரளி என்றாலே இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவித தற்காப்பு உணர்ச்சி மேலோங்கப் பேசத் தொடங்குகின்றனர். இதன் உச்சக்கட்டம் இலங்கைப் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே ஐசிசியை எதிர்த்து நீதிமன்ற வழக்குப் போடுவேன் என்றது. பின்னர் முரளியின் ‘தூஸ்ரா’வை அங்கீகரிக்க வேண்டும் என்றது. முரளியை தேசியச் சொத்து என்றெல்லாம் சொன்னது. இலங்கை போன்ற சிறிய நாட்டில், கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக வளர்ச்சி ஏதும் இல்லாத நாட்டில், கடுமையான உள்நாட்டுப் போராட்டத்தில் பல உயிர்களை இழந்து, எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பயத்தில் வசிக்கும், அரசியல்வாதிகளின் மீது முழுதுமாக நம்பிக்கையற்றுப் போன மக்களின் வாழ்க்கையில் ஒரு பிடிப்புக்காக ஹீரோக்கள் தேவைப்படுகின்றனர். அந்த ஹீரோ முரளிதரன். அந்த ஹீரோவின் மேல் அவதூறு பேசுபவர்கள் என்ன சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும். ஷேன் வார்ன் ‘Murali has a thin skin’ என்று சொன்னால் பொங்குகிறது கோபம். விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லும்போது எங்கள் வண்டி ஓட்டுனர் ஷேன் வார்ன் என்ன சொன்னார் என்பதே தெரியாமல், ‘என்னவோ சொல்லி விட்டார்’ என்று உணர்ச்சிவசப்படுகிறார். (புலிகள் கையில் இல்லாத) இலங்கை மக்களிடம் இப்பொழுதைக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தி இலங்கை வரலாற்றில் அதிக சாதனை படைத்த, அதிகம் பேரால் அறியப்பட்ட, மிக முக்கியமான மனிதர் யாரென்று கேட்டால் முதல் இடம் முரளிதரனுக்குத்தான் கிடைக்கும். அந்த வகையில் இலங்கையின் முரளி, இந்தியாவின் டெண்டுல்கருக்கு பல படிகள் மேலே. ஆனால் இதனால் முரளியின் பந்துவீச்சு கிரிக்கெட் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று பிறரை நம்ப வைக்க முடியாது. இலங்கைக்கு வெளியே உள்ளவர்களில் பெரும்பாலோனோர் (பிஷன் சிங் பேடி அளவிற்குப் போகாவிட்டாலும்) முரளியின் பந்துவீச்சில் குளறுபடி உள்ளது என்றே சொல்வார்கள். நானும் அந்தக் கட்சிதான். இப்பொழுது இந்தியாவில் வளர்ந்து வரும், பதினெட்டு வயதிற்குக் குறைந்த பல ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசுவதில்லை. அவர்களது ஆக்ஷனில் முரளியைப் போன்றே ஒரு ‘வெட்டு’ (jerk) உள்ளது. அதை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் உடனடியாக கவனிக்காமல் விடுவதால் பின்னாளில் பெரும் கெடுதல் நேர்கிறது. முரளியை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விட்டதால் இன்று உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பின்னரும் கூட, ஐசிசி கண்காணிப்புப் பட்டியலில் இடம் பெறக்கூடிய அளவிற்கு ஒரு அவமானம் நிகழ்ந்துள்ளது. இப்பொழுது கூட ஐசிசி இந்த விஷயத்தை சரியாக முடிவுசெய்யாவிட்டால் பல இளம் ஆஃப் ஸ்பின்னர்கள் தாங்களும் தவறான ஆக்ஷனில் பந்து வீசலாம் என்றும், தங்கள் ஆக்ஷனை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கருதக்கூடும். அதன் விளைவு – இலங்கையின் சரித்திர நாயகன் உலக கிரிக்கெட்டின் வில்லனாக ஆகிவிடக் கூடும். 28 கிரிக்கெட் கவரேஜ் இன்றைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது என்றதுமே பலருக்கு தலைவலி, வயிற்றுவலி, மற்ற சில உடல் உபாதைகள், இல்லாத பாட்டி, தாத்தாக்களின் உயிர்கள் ஊசலாடல் போன்றவை நிகழ்கின்றன. இதெல்லாம் தெரிந்திருந்தும் விடுமுறை கொடுக்கப்படுகிறது, அல்லது எடுக்கப்படுகிறது. சிலசமயம் அரசே மனமுவந்து ‘நம்மூர்ல மேட்சா, சரி விடு பொதுவிடுமுறை’ என்று கலக்குகிறார்கள். அப்புறம் என்ன? ஹாயாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் கிரிக்கெட் வரும் சானலுக்குப் போய் முழு மேட்சையும் பார்க்க வேண்டியதுதான். எப்பொழுதாவது இந்த தொலைக்காட்சி கவரேஜைப் பார்க்கும் போது அது எப்படி உங்களை வந்து சேருகிறது என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அப்படியானால் என்னுடன் சிறிது வாருங்கள், ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம். மைதானத்தைச் சுற்றிய கேமராக்கள் []இப்பொழுதெல்லாம் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியைப் படம் பிடிக்க குறைந்தது 10-12 கேமராக்களையாவது உபயோகிக்கிறார்கள். இதில் குறைந்தது ஆறு கேமராக்களாவது மனிதர்களால் இயக்கப்படுபவை. மற்றவை இரண்டு பக்க மட்டையாளர்களின் அருகே இருக்கும் கிறீஸ் கோட்டைக் கண்காணிக்கப் பயன்படும். ரன் அவுட் சமயத்தில் இந்த கேமராக்கள் தரும் படங்கள் உபயோகமாயிருக்கும். இப்பொழுதெல்லாம் பந்தின் சுழற்சியை, அதிலுள்ள தையலின் கோணத்தை மிகத் துல்லியமாகக் காண்பிக்கும் சூப்பர் சுலோ மோஷன் கேமராவும் இதில் சேர்த்தி. நடு ஸ்டம்பில் இருக்கும் ஒரு கேமரா பூதாகாரமாக மட்டையாளரின் பின்புறத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும். பந்து ஸ்டம்பில் பட்டு எகிறியதும் கேமராவும், வயரும் பிய்ந்து போய் ஆடுகளத்தின் புல் வெளியும், பழுப்பு நிறத்தில் உள்ள பிட்சும் காட்சியளிக்கும். இந்த ஸ்டம்ப் கேமராக்கள் வயர்லெஸ் முறையில் இயங்கும். ஆட்டக்களத்தின் இரண்டு பக்கங்களிலும் மனிதர்கள் இயக்கும் கேமராக்கள் இரண்டு இருக்கும். இவை தன் பக்கத்திலிருந்து ஓடிச்செல்லும் பந்து வீச்சாளரை பின்பக்கமாக முதலில் பின்தொடரும். எதிர்ப்பக்கமுள்ள கேமரா பந்துவீச்சாளர் பந்தை கையிலிருந்து விடுவிப்பதைக் கண்காணிக்கும். அதற்குள்ளாக மட்டையாளரை நோக்கியுள்ள கேமரா மட்டையாளர் நிற்பதைப் பிடிக்கும். பக்கவாட்டில் இரண்டு கேமராக்கள் தங்களுக்கு எதிர்ப்பக்கமுள்ள அரை வட்டத்தை ரோந்து சுற்றிக்கொண்டிருக்கும். மட்டையாளர் பந்தை அடித்ததும் அத்தனை கேமராக்களும் பந்தை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தும். அப்படியும் சில சமயம் எந்த கேமராவாலும் ஓடும் பந்தைப் பிடிக்க முடியாது. சிலமுறை மட்டையாளர் மிட் விக்கெட்டை நோக்கி அடிக்க யத்தனிப்பார். கேமரா இயக்குனர்கள் ஏமாறும் வகையில் பந்து விளிம்பில் பட்டு கவர் திசையில் வழிந்தோடும். இந்த கேமராக்களைத் தவிர ஒரு புண்ணியவான் கையில் ஒரு கேமராவை ஏந்திக்கொண்டு ஒவ்வொருமுறை அவுட்டாகும் ஆட்டக்காரர் வெளியே போகும்போது அவர் போகும் பாதையைக் காண்பித்து அவரை டிரெஸ்ஸிங் ரூம் வரை வழியனுப்பி விட்டு புதிதாக உள்ளே வரும் ஆட்டக்காரரை கிட்டத்தட்ட ஆடுகளத்தின் நடுவில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார். இந்த கேமரா இயக்குனர் பின்னால் ஒரு எடுபிடி கையில் சுற்றிய வயர் பந்தும், ஒரு டிஷ் ஆண்டென்னாவுமாக வலம்வருவார். நேர்முக வர்ணனை அறை இப்படி கேமராக்கள் எல்லாம் வெட்ட வெளியில், வியர்வையிலும், சூட்டிலும் கிடந்து அல்லாட, கழுத்தில் டையும், முகத்தில் சிரிப்புமாக பழம்பெரும் கிரிக்கெட் பிரபலங்கள், குளிர்பதன அறையில் உட்கார்ந்து கொண்டு நேர்முக வர்ணனை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்முன் ஒரு டிவி மானிட்டர் இருக்கும். அதில் சுடச்சுட கிரிக்கெட் புரொடியூசர் அனுப்பும் படக்கலவை வந்துகொண்டிருக்கும். ஒரு நேரத்தில் இரண்டு வர்ணனையாளர் என்ற கணக்கில் மாறி மாறி வாயோடு ஒட்டும் மைக் மூலம் தங்கள் கிரிக்கெட் அறிவை பொதுமக்களிடத்தில் கொண்டுபோக வேண்டியது இவர்கள் பொறுப்பு. இந்த அறையில் வர்ணனையாளர் தவிர மற்ற சிலர் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு அவ்வப்போது காபி, டீ, பியர், தண்ணீர், சாண்ட்விச் இத்யாதிகளை எடுத்துக்கொடுக்க ஒரு பணியாளர் இருப்பார். ஸ்கோரிங், கிராபிக்ஸ் ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தையும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக ஒரு (அல்லது இரு) புள்ளிவிவர நிபுணர் கணினி வழியாக ஸ்கோர் செய்வார். இந்த ஸ்கோர் பல காட்சிகளாக கணினித் திரையில் தெரிய வரும். புரொடியூசர் (இவரைப் பற்றிக் கடைசியில் பார்ப்போம்) ஒவ்வொரு படக்காட்சிக்கும் பொருத்தமான ஸ்கோர் காட்சியை இணைத்து வழங்குவார். திரையில் ஆக்ஷன் வரும்போது – அதாவது ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும்போதும், மட்டையாளர் அடிக்கும்போதும், அல்லது ஓடி ஓட்டங்கள் பெறும்போதும் தொலைக்காட்சியில் கீழ்ப்பகுதியில் அணியின் மொத்த எண்ணிக்கை மட்டும் காட்சியளிக்கும். பந்துகளுக்கு இடையிலோ, அல்லது ஓவர்களுக்கு இடையிலோ, அவ்வப்பொது முழு பேட்டிங் ஸ்கோர்கார்டும் காணக்கிடைக்கும். அதைத்தவிர புதிதாக ஒரு மட்டையாளர் உள்ளே வரும்போதோ, அல்லது பந்துவீச்சாளர் பந்து வீசத் தொடங்கும் முன்னரோ, அந்த வீரர்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் திரையிலே தோன்று மறையுமல்லவா? அதையெல்லாம் ஒரு புரொடியூசர் கேட்கும்போது கணினித் திரைக்குக் கொண்டுவந்து தருவார் இந்த ஸ்கோரர். வெளிப்புறப் பட ஒளிபரப்பு வண்டி (OB van) ஓபி வேன் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் Outside Broadcasting Van தான் கிரிக்கெட் ஒளிபரப்பின் ஆதாரசுருதி. இங்குதான் நம் புரொடியூசர் உட்கார்ந்திருப்பார். இங்கு மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும். 1. அத்தனை கேமராக்கள், ஸ்கோரர் உருவாக்கும் ஸ்கோர் கணினிக் காட்சிகள், முந்தைய பல மேட்ச்களின் படத் துண்டுகள் ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் பல மானிட்டர்களில் காட்சியளிக்கும். புரொடியூசர் இந்தப் படங்களை இரண்டு விதமாகக் கலக்குவார் (mix). ஒன்றில் ஸ்கோர் கிராபிக்ஸ் எதுவும் இருக்காது. மற்றொன்றில் ஸ்கோர்/பிற கிராபிக்ஸ்கள் சேர்ந்திருக்கும். முதலாவதற்கு clean feed என்று பெயர். இரண்டாவதற்கு dirty feed என்று பெயர். [என் பத்திகளை கவனமாகப் படித்து வருவோர்களுக்கு, இதற்கு முன் டர்டி ஃபீட் என்னும் சொல்லை எந்தக் கட்டுரையில் பயன்படுத்தியிருந்தேன் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முதல் ஆசாமிக்கு Wisden Cricketer’s Almanack 2004 பரிசு. இந்தியாவிற்கு வெளியில் இருந்தால் மிக மெதுவாக ஊர்ந்து வரும் அஞ்சல் சேவையில்தான் அனுப்பி வைக்க முடியும்!] சில தொலைக்காட்சி நிலையங்கள் கிளீன் ஃபீடை எடுத்துக் கொண்டு அதில் தங்களது சொந்த கிராபிக்ஸை சேர்த்து படம் காட்டும். மற்ற தொலைக்காட்சி நிலையங்கள் டர்டி ஃபீடை அப்படியே காட்டி விடும். 2. மேற்படி படங்களுடன் வர்ணனையாளர்களின் குரல்கள், சில சமயம் ஸ்பெஷல் இசை ஆகியவை சேர்க்கப்படும். 3. இப்படிக் கலவையாகும் ஒலி/ஒளிக் கோர்வைகள் செயற்கைக்கோள் வழியாக மேலேற்றப்படும். [uplinking]. மேலும் இவை விடியோவாக கேஸட்டுகளில் பதிக்கப்படும். புரொடியூசர் என்பவர்தான் இந்தக் கலக்கல் விளையாட்டின் நாயகர். அவர் சொல்படிதான் காட்சியமைப்பு இருக்கும். கேமரா யாரை கவனிக்க வேண்டும், எதில் கருத்தை செலுத்த வேண்டும் என்று விடாது கேமரா இயக்குனர்களின் காதுகளில் மாட்டியிருக்கும் இயர்ஃபோன் வழியாகக் கதைத்துக் கொண்டே இருப்பார் இவர். ஸ்டுடியோ விவகாரம் இதற்கு மேலும் விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் உள்ள ஸ்டுடியோவில் ஒரு நிகழ்ச்சி வழங்குனர் இருப்பார். அவர் அவ்வப்போது வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருப்பார். அதன்பிறகு இருக்கிறது விளம்பரங்கள். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் விளம்பரங்களை உள்ளே புகுத்துவது இந்த ஸ்டுடியோக்களில்தான். இப்பொழுதெல்லாம் உணவு இடைவேளை, இன்னிங்ஸ் இடைவேளையிலெல்லாம் ஸ்டுடியோவிலிருந்து இரண்டு மூன்று பிரபலங்கள் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்கள். கூடத் தொட்டுக்கொள்ள ஒரு பெண்ணும் இருக்கிறார். நல்லதாக வர்ணனை செய்ய மட்டும் பெண்கள் யாரையும் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவ்வப்போது டாரோட் கார்டுகள் படிப்பது, கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்த சமையல் என்றெல்லாம் காட்டி கிரிக்கெட் ஒளிபரப்பை பல்சுவை விருந்தாகவே மாற்றிவிட்டனர். O அடுத்தமுறை கிரிக்கெட் மேட்சை தொலைக்காட்சியில் பார்க்கும்போது யார் யார் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்ளுங்கள். பின்னர் முழுக்க மறந்துவிடுங்கள். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் கிரிக்கெட்டில் கவனம் சிதறிப்போய்விடும்! 29 Farewell to நாசெர் ஹுசைன்! சென்னையில் பிறந்து, சில காலம் அங்கேயே வளர்ந்து பிரிட்டன் சென்று அங்கே குடியுரிமை பெற்று, பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குத் தலைவராக சில காலம் இருந்து விளையாடிய நாசெர் ஹுசைன் தனது 36வது வயதில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். [நாசெர் ஹுசைன்]96 டெஸ்டு போட்டிகளில் விளையாடிய ஹுசைன் 5,764 ஓட்டங்களை சராசரி 37.18 என்ற கணக்கில் எடுத்திருந்தார். அதில் 14 சதங்களும், 33 அரை சதங்களும் அடங்கும். தான் விளையாடிய கடைசி இன்னிங்ஸில் நியு ஜிலாந்துக்கு எதிராக சதம் அடித்து இங்கிலாந்தை ஜெயிக்க வைத்தார். அவரை அணியிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவுமில்லை. பின் ஏன் ஓய்வு பெற்றார்? தற்போதைய அணித்தலைவர் மைக்கேல் வான் போன டெஸ்டில் விளையாடவில்லை. அதனால் தற்காலிகமாக விளையாட உள்ளே வந்த ஆண்டிரூ ஸ்டிராஸ் என்பவர் தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடிக்க, இங்கிலாந்து அணித்தேர்வாளர்களுக்கு குழப்பம் வந்தது. அடுத்த டெஸ்டு போட்டியில் வாக்ன் திரும்பி விடுவார். அதற்காக ஸ்டிராஸை வெளியேற்றுவதா? இங்கிலாந்து அணியில் ஆகாஷ் சோப்ரா போன்ற பலியாடும் தற்போது இல்லை. [ஞாபகம் வருதா? பாகிஸ்தானில் கங்குலி விளையாட முடியாதபோது யுவ்ராஜ் சிங் உள்ளே வந்து சதம் அடித்தார். மூன்றாவது டெஸ்டில் கங்குலி மீண்டும் வர, யுவ்ராஜையும் வெளியே தள்ள முடியாத நிலையில் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வெளியேற்றப்பட்டார்.] இதற்கிடையில் ஹுசைன் தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். மேலும் பல இளம் ஆட்டக்காரர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். [அதற்குமேல், ஸ்கை டிவியில் ஆட்ட வர்ணனையாளர் வேலையும் அவருக்குக் காத்திருந்தது.] எனவே தான் மேலே இருக்கும்போதே ஆட்டத்தை விட்டு விலகிவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஹுசைன் 88 ஆட்டங்களில் விளையாடி 2,332 ஓட்டங்களை 30.28 என்ற சராசரியில் எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும், 16 அரை சதங்களு அடக்கம். இந்த ஒரு சதம் இந்தியாவிற்கு எதிராக நாட்வெஸ்ட் கோப்பை இறுதியாட்டத்தில் எடுத்தது. அச்சமயத்தில் இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் ஹுசைன் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலக வேண்டும் என்று எழுதிக்கொண்டிருந்தனர். அதற்கு சாதகமாக ஹுசைன் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்றும் அவரது ஸ்டிரைக் ரேட் – ஓட்டங்கள் எடுக்கும் வேகம் – மிகக்குறைவாக உள்ளது என்றும் எழுதினர். அந்த ஆட்டத்தில், பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த ஹுசைன், பார்க்க சகிக்காமல் விளையாடினார். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கமிருந்தது. அவர் அவுட்டாகக் கூடிய பல வாய்ப்புகள் இந்தியர்களிடமிருந்து நழுவியது. கடைசியாக சதம் அடித்தபின் ஹுசைன் பத்திரிகையாளர்கள் உட்கார்ந்திருத்த திசையை நோக்கி குனிந்து தன் முதுகைக் காட்டி, தன் கோபத்தை வெளியிட்டார். ஹுசைன் ‘3’ என்ற எண்ணுள்ள சட்டையை அணிந்திருந்தார். தான் சதம் அடித்ததன் மூலம், பேட்டிங் வரிசையில் ‘3’வது இடத்துக்குத் தகுதியானவர்தான் என்று சாதித்தி விட்டதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் குறிப்பிட்ட விதத்தில் எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. 2003 உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தியும் விட்டார். உலகக்கோப்பைக்குப் பின்னரும் டெஸ்டு போட்டிகளில் தொடர்ந்து அணித்தலைவராக இருந்து வந்தார். ஜூலை 2003இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டு போட்டித்தொடரில் முதல் டெஸ்டுக்குப் பிறகு, பலத்த எதிர்ப்பிருந்ததால் தன் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அணியில் விளையாடினாலும், அவரது இடம் போய்விடுமோ என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அவ்வப்போது சில ஓட்டங்களைப் பெற்று இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார் – போன வாரம் வரை. ஹுசைன் 45 டெஸ்டு போட்டிகளில் அணித்தலைவராக இருந்துள்ளார். அதில் 17 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளார், 15 தோல்விகள், 13 டிரா. 56 ஒருநாள் போட்டிகளில் அணித்தலைவராக இருந்ததில், 28 வெற்றிகள், 27 தோல்விகள், 1 ஆட்டம் முழுமையாக முடிவடையவில்லை. ஹுசைன் பேட்டிங் கிட்டத்தட்ட ஸ்டீவ் வா பேட்டிங்கைப் போன்றது. அதில் கவிதையக் காண்பது கடினம். ஆனால் அவ்வப்போது பளீரென்று மின்னும் மின்னலைப் போல ஒரு கவர் டிரைவும், ஆன் திசையில் ஆடும் அடியும் இருக்கும். ஸ்டீவ் வா போலவே கடினமான நேரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி பந்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவதில் வல்லவர். அவரது விக்கெட்டைப் பெற அதிக முயற்சி தேவையாக இருந்தது. ஸ்டீவ் வா போன்றே, அனால் அவரை விட வலு குறைவான அணியை வைத்துக் கொண்டு சில சாதனைகளைப் புரிந்துள்ளார் ஹுசைன். பாகிஸ்தான் அணியை பாகிஸ்தானிலே தோற்கடித்தது, இலங்கை அணியை ஒரு டெஸ்டில் தோல்வியடைந்திருந்தும் அடுத்த இரண்டில் வென்று தொடரைக் கைப்பற்றியது, இந்தியாவில் கிட்டத்தட்ட இந்தியாவை தோற்கடிக்க வைத்தது (ஆனால் மழை இந்தியாவைக் காப்பாற்றியது), சற்றே தள்ளாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்தில் தோற்கடித்தது என்று சில சாதனைகள். ஆஸ்திரேலியாவை மட்டும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முற்றிலும் சரணடையாமல் தொடர்களில் ஒரு டெஸ்டு போட்டியையாவது வெற்றி பெற்று வந்தார். உலகில் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும், சென்னையில் பிறந்து கிரிக்கெட் விளையாடியவர்களில் தலைசிறந்த ஆட்டக்காரர் என்று நிச்சயமாகச் சொல்லலாம். O அபிஜித் காலே லஞ்ச ஊழல் வழக்கில், காலே மீது முழுவதுமாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் காலே தான் அணித்தேர்வாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை வற்புறுத்தியது உண்மை, ஆனால் லஞ்சம் கொடுக்க முற்படவில்லை என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரி கடிதம் எழுதியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்னமும் ஏழு மாதங்கள் பாக்கி. அதனால் டிசம்பர் 2004 வரை அவர் விளையாட முடியாது. O ஹன்சி குரோன்யே மேட்ச்-பிக்ஸிங் விவகாரம் தொடர்கிறது. போனமுறை தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்தபோதுதான் இந்த விவகாரம் வெளியே வந்தது. அதில் ஈடுபட்டவர்கள் ஹெர்ஷெல் கிப்ஸ், மற்றும் நிக்கி போயே. இதில் ஹெர்ஷெல் கிப்ஸுக்கு ஒரு வருடத் தடையை தண்டனையாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வழங்கியிருந்தது. அதை முடித்து அவர் மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்க அணி இந்தியா வரவிருக்கிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கிப்ஸ், போயே இருவரையும் இந்தியக் காவல்துறையினர் விசாரிக்கக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த சலுகையை வழங்கும் உரிமை கிடையாது. காவல்துறையும் நிச்சயமாக கிப்ஸ், போயே இருவரையும் விசாரிப்போம் என்று சொல்கின்றனர். இதனால் இவ்விருவரும் இந்தியா வரப்போவதில்லை என்று சொல்கின்றனர். போனமுறை இந்தியாவுடன் விளையாடிய இரண்டு டெஸ்டு போட்டிகளில் போயேதான் ஹீரோ. ஒரு ஸ்பின்னர் கூட இந்தியாவைத் தோற்கடிக்க முடியும் என்று காண்பித்தார். இத்தனைக்கும் அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு ஸ்பின்னர் கிடையாது. கிப்ஸ் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர். அவர் வராவிட்டால் அதனால் தென்னாப்பிரிக்க அணி பாதிப்படையும்.     —முற்றும்— 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !