[] 1. Cover 2. Table of contents முகநூலும் முத்துலட்சுமியும் முகநூலும் முத்துலட்சுமியும்   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/fb_and_muthulakshmi மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc பஞ்சரத்னம் “பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி. அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை –இந்தியாவில் கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான். அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு, அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர்கள். பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள். பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் ‘ஊருக்கு’ப் போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள். குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள். போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி. ’இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு. தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது. புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்! ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா? பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள். ‘இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள். ‘காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி. சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய ‘இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன. “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள். ‘அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள். தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், ‘உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும். ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்றுமருந்தாக இருக்கவில்லை. “ஹலோ சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது. நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்! சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின. நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. டீச்சர் வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!” அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. ‘உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்! பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை! அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று. “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும். ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி. ‘இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி. அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள். “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள். கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று. ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள். முதலில் சற்று அயர்ந்தாலும், ‘இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி. அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி. “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம். “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னாடி வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக. தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், ‘நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்! நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. ‘காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’ அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள். நீட்டிய அவள் கையை நடுங்கிய தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி. (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச் சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்). பாட்டி பெயர் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு. எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள். பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப்போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான். “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார். ”பாட்டி பேருதான்!” அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!” “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”. “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!” மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு. மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் அவளுக்கு இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகள் திரும்பி வந்ததும், அவள் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம் என்று அவன் கனவு விரிந்தது. “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?” சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!” ‘எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப்போச்சு! இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ. ஸாம்’. படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை. “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.” “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”. அவனுக்குப் புரியவில்லை. “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார். “சம்பூர்ணம். தெரியாதமாதிரி கேக்கறீங்களே!” “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப்போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!” சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா? முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ? ‘நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான். ’நான் சொல்லவந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன்மேலேயே பழியைத் திருப்புவார்! “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு. பிரம்மஹத்தி தோஷம் தொலைகாட்சி ஒத்திகை முடிந்து வீடு திரும்பியதும் களைப்புதான் மிஞ்சியது அபிராமிக்கு. ‘எத்தனை விதமான சமையல் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!’ என்று புகழ்ச்சியில் ஆரம்பித்து, அவளைத் தன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தார் இயக்குனர் சற்குணம். முதன்முதலாகத் தன்னை பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கவனமாக அலங்கரித்துக்கொண்டு போயிருந்தாள் அபிராமி. அவளை மேலும் கீழும் நோட்டமிட்ட சற்குணம், “பாக்கறவங்க ஒங்களையேதான் பாத்துக்கிட்டு இருக்கப்போறாங்க. சமையல் குறிப்பிலே மனசு போகாது!” என்றார் கேலியாக. உடனே, கழுத்திலிருந்த இரண்டு சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி கைப்பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டு, தாயின் ஆமோதிப்பை வேண்டும் குழந்தையைப்போல் அவரையே பார்த்தாள் அந்த இல்லத்தரசி. “இப்போ சரியா இருக்கு!” என்ற ஆமோதிப்பு அப்போது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் ஒரு சின்னத்திரை நடிகை! நேரம் நெருங்க நெருங்க, அபிராமிக்குப் பயம் வந்தது. பரீட்சைக்கு எழுதுமுன்னர் மாணவர்கள் கழிப்பறையை நாடி ஓடுவதுபோல் உணர்ந்தாள். “அதை ஏன் அங்கே எடுத்துக்கிட்டு போறீங்க? இப்படி சோபாமேல வெச்சுட்டுப் போங்க, என்று குரல் கொடுத்தவள் அவள் வயதை ஒத்த கலாராணி. கல்யாணி என்ற இயற்பெயரை தொலைகாட்சிக்காக மாற்றிக்கொண்டிருந்தவள். அவள் அவ்வப்போது அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டுக்கொடுக்கும் ‘எடுபிடி’. ஆனால், அவ்வாறு அவள் மதிப்பைக் குறைக்காது, ‘உதவி இயக்குனர்’ என்று அவள் பெயரும் திரையில் வரும்படி செய்திருந்தார் இயக்குனர். “நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்கறேன்!” என்றவளைப் பார்த்து தர்மசங்கடத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அவசரமாக ஓடினாள் அபிராமி. திரும்பி வந்தபோது, கைப்பை அவள் வைத்த இடத்தில் இருக்கவில்லை. “என் ஹாண்ட்பேக்?” என்று அபிராமி அலறியபோது, சிறிய சமையலறைக்குள்ளிருந்து வெளிப்பட்டாள் கலாராணி. அவள் தோளில் அபிராமியின் கைப்பை! “மொதல்லே இந்த டீயைக் குடிச்சு ஆசுவாசப்படுத்திக்குங்க! ஒங்களுக்குன்னு ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன்”. நன்றியுடன் அதை வாங்கிக்கொண்டாள் அபிராமி. சூடான பானம் தொண்டையின்வழி இறங்கியபோது, சற்றுமுன் எழுந்த பயம் மறைந்து, சுறுசுறுப்பு வந்துவிட்டாற்போல் இருந்தது. அடுத்து, “இந்தாங்க. நான்தான் பத்திரமா எடுத்து வெச்சேன். இப்படி வெச்சுட்டுப் போகலாமா?” என்று அபிராமியிடம் அவள் பொருளை நீட்டினாள் கலாராணி. “எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க”. குரலில் திமிர் தெரிந்தது. இயந்திரகதியில் அபிராமி அதைத் திறக்கப்போனபோது, “ரெடி?” என்ற இயக்குனர் குரல் கேட்டது. ஆளுயரக் கேமராவையும் விளக்குகளையும் பார்த்து இன்னும் நடுக்கம் எழுந்தது. நாலைந்து முறை குளறிவிட்டு, ஒருவழியாக வீடு திரும்பினாள் அபிராமி. ‘இந்த ஒரு அனுபவமே போதுண்டா சாமி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். உடலும் மனமும் ஒருங்கே களைத்திருந்தன. அடுத்த சில நாட்கள், தன் உருவத்தை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் தொலைகாட்சிவழி பார்க்கப்போகிறார்கள், யாரெல்லாம் அழைத்துப் பாராட்டுவார்கள் என்ற இனிய கற்பனைகளில் கரைந்தன. ஆனால், தான் சமையல் குறிப்புகளைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தபோது அபிராமிக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய சங்கிலி இருப்பதுதான் கண்ணை உறுத்தியது. பதட்டத்துடன் கைப்பையில் தேடினாள் அபிராமி. இந்த நிகழ்ச்சிகளுக்குச் சன்மானம் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் முகம் எல்லாருக்கும் தெரிகிறதே என்ற பெருமையில்தான் பலரும் பங்கேற்க முன்வந்தார்கள் – அபிராமியைப்போல். அந்நிகழ்ச்சிக்கென்று அளிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியைத் தயாரிப்பாளர் தனதாக்கிக்கொண்டு, ஒரு சிறு விள்ளலை அதற்கென ஒதுக்கியிருந்த வயிற்றெரிச்சலை அவளுடன் முன்பே ரகசியமாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். ‘நாங்க தெருவோரத்தில வெச்சிருக்கிற ஸ்டால்ல சாப்பிடுவோம்மா!’ என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் அவளும் அவர்களுடன் சேர்ந்துபோவதைத் தவிர்த்திருந்தார் சற்குணம். “அதுக்கென்ன! வீட்டிலே சமைச்சு வெச்சுட்டுத்தான் வந்திருக்கேன்!” என்று பெரியமனது பண்ணினாள் அபிராமி. கலாராணியோ, பகல் உணவின்போது, ‘நசி லெமாக்’ என்னும் தேங்காய்ப்பாலில் வெந்திருந்த சோறு நடுவில் இருக்க, அதைச் சுற்றி, வறுத்த நிலக்கடலை, கருவாடு மற்றும் வெள்ளரிக்காய் வில்லைகள், வறுத்தரைத்த மிளகாய்ச்சாறு எல்லாம் தனித்தனியாக வைக்கப்பட்ட கொழுப்பு சேர்த்த சாதம் ஓசியாகக் கிடைக்குமே என்று ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டாள். அவளால் கண்டிப்பாக ஆறாயிரம் வெள்ளி கொடுத்து ஐந்து பவுன் சங்கிலி வாங்கியிருக்கமுடியாது. நடந்ததையெல்லாம் நாடகத்தொடர்போல் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டாள் அபிராமி. ஏதோ உள்நோக்கத்துடன்தான் அவள் கைப்பையை கழிப்பறைக்குள் எடுத்துச் செல்லவேண்டாம் என்று தடுத்திருக்கிறாள்! அப்போது இருந்த பதட்டத்தில் அதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்! முட்டாள்! பேரன்புடன், சூடான பானத்தைக் கொடுப்பதுபோல் கொடுத்து, தன் கவனத்தைக் கலைத்திருக்கிறாள். அடுத்தடுத்து வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கலாராணியின் கழுத்தில் மின்னிய சங்கிலி தன்னுடையதுதான் என்பதில் அபிராமிக்குச் சந்தேகம் இருக்கவில்லை. எடுத்ததை அவள் பார்க்கவில்லைதான். ஆனால், எந்தத் திருடன்தான் பிறர் பார்க்கத் திருடுகிறான்! அவளைப்போய் கேட்க முடியுமா? ஒரு பேரங்காடியில் தன் குழந்தைக்காக மிட்டாய் வகைகளையும், காய்ச்சலுக்கான மாத்திரைகளையும் திருடிய ஏழைத் தாய்க்கு சட்டம் தண்டனை விதிக்கும். ஆனால் இவ்வளவு பெரிய குற்றத்திற்கு எந்தவித தண்டனையும் இல்லாமல் இவள் தப்பிவிட்டாள்! இது என்ன நியாயம்! தங்கத்தைத் திருடினால் பிரம்மஹத்தி தோஷம். அதாவது, கொலை செய்த பாவம் என்று அபிராமி படித்திருக்கிறாள். ‘தெய்வம் நின்று கொல்லும்!’ என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே! இந்த திருடிக்கு எப்போது, எப்படி தண்டனை கிடைக்கப்போகிறது? விரைவிலேயே அதற்கான விடையும் கிடைத்தது, தினசரியில் முதல் பக்கச் செய்தியாக. கலாராணியின் மகன் தன் காரில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளுக்காக கைது செய்யப்பட்டிருந்தான். ‘பொருள் அங்கிருப்பதே அவனுக்குத் தெரியாது., தனித்து வாழும் தாய்க்கு ஒரே மகன்!’ என்று வக்கீல் வாதாடினார். கலாராணி ‘அன்பளிப்பாக’ அளித்திருந்த சங்கிலி அவரை அப்படி உணர்ச்சிவசமாகப் பேச வைத்திருந்தது. மலேசியச் சட்டப்படி, ஒரு கிலோ வைத்திருந்தாலே மரணதண்டனை. இவன் வசமோ நான்கு கிலோ! அதற்கடுத்த வாரம் வந்த நிகழ்ச்சியில், சோர்ந்த முகத்துடன் காணப்பட்டாள் கலாராணி. கழுத்தில் ஒரு கருகமணி மாலை மட்டும்! ‘பிரம்மஹத்தி தோஷம் சும்மா விடுமா!’ என்று உரக்கவே சொல்லிக்கொண்டபோது, ஆறுதலாக இருந்தது அபிராமிக்கு. தொலைத்தது அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்! கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? ‘இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று வாதாடுவாள் அந்த சண்டைக்காரி. மறைவான இடம் எங்கு இருக்கிறது என்று நான் விழித்துக்கொண்டிருந்தபோதே அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கழுத்தில் அழுக்கேறாத மஞ்சள் கயிறு. அந்த புது மணப்பெண் எதுவும் கேட்குமுன்னரே நான் முந்திக்கொண்டேன். “ஸாரி பிரேமா. ஒன் கல்யாணத்துக்கு வரமுடியல”. பிரேமா கலீரென்று சிரித்தாள். பேரழகியான அவள் முகத்திற்கு இன்னும் மெருகேற்றியது அந்தச் சிரிப்பு. “கல்யாணம் நடந்திருந்தாத்தானே!” சிரிப்பு பலத்தது. “பின்னே..?” என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்ற தர்மசங்கடத்துடன் அவள் கழுத்தையே பார்த்தேன். “சாயந்திரமா ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமா சொல்றேன், பானு. சாப்பாட்டு வேளை முடிஞ்சதும், ஒடனே வேலைக்கு வராட்டா, அந்த மானேஜர் பிசாசு கத்துவான்!” யாருக்கும் அடங்காத இவளை அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கும் அந்த ‘மானேஜர் பிசாசைப்’ பார்க்கவேண்டும்போல் இருந்தது எனக்கு. பதினேழு வயதிலேயே உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்க வேண்டும் என்று பிரேமாவுக்கு என்ன கட்டாயம்? ‘பொறுமையாக இரேன். அவள்தான் வீட்டுக்கு வந்து சொல்லப்போகிறாளே!’ நிதானமின்றி அலைந்த மனதை வைதேன். பிரேமாவும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இந்த தறுதலையோட என்ன பேச்சு!’ என்று அம்மா உள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பிரேமாவின் காதிலும் விழுந்திருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படாததுபோல் நடந்துகொள்வாள். “என்னைக் கேக்காம, அப்பா அந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டார். அந்தக் கறுப்பனை யார் கட்டிப்பாங்க! அதான், கல்யாணத்துக்கு மொதநாள் அவனோட அண்ணனோட ஓடிப்போயிட்டேன்!” மீண்டும் சிரிப்பு. “அவனோட பேர் என்ன தெரியுமா? ரெமோ! முழிக்காதே. ரெங்கசாமி மகன் மோகன்!” எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை. “எனக்கு ஒங்கிட்ட மனம்விட்டுப் பேச முடியுது, பானு. நாம்ப சின்ன வயசிலேருந்து பழகினவங்க இல்லியா? அதான்,” என்றவள் தொடர்ந்தாள். “ரெமோவுக்கு இன்னும் படிப்பு முடியல. நான்தான் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன்”. ஒரு வழியாக என் குரல் வெளிப்பட்டது. “ஒங்க வீட்டிலே?” பதிலுக்கு, இடி இடியென்று சிரித்தாள் பிரேமா. “நாங்க பண்ணின காரியத்துக்கு எந்த வீட்டிலே சேர்ப்பாங்க?” அதன்பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் நான் பிரேமாவைப் பார்த்தேன். அவளுடைய சிரிப்பு மட்டும் மாறாது, அப்படியே இருந்தது. “ரெமோவுக்குப் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலை கிடைச்சுடுச்சா?” நிறைய தங்க நகைகள் அணிந்திருந்தவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் அப்படி ஒரு கேள்வி எழுந்தது. “யாரு? ஓ, அவனா!” அப்படி என்ன அலட்சியம்? “இப்போ நான் அவனோட இல்லே”. இன்னொரு அதிர்ச்சியை அளித்தாள். ‘நல்லவேளை, அம்மா அருகில் இல்லை, இவள் பேசுவதைக் கேட்க!’ என்று சிறிது நிம்மதி எழுந்தது எனக்குள். “நான் முந்தி வேலை செஞ்சிட்டு இருந்தேன் பாரு, அந்தக் கடை முதலாளி என்மேல ஆசைப்பட்டார். ‘உன்னை ராணிமாதிரி வெச்சுக்கறேன்’னார். எதுக்காக ரெமோவுக்கு உழைச்சுக் கொட்டறது?” “இன்னொரு கல்யாணமா?” என் குரல் எனக்கே கேட்கவில்லை. “போதும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட அவதி! ’ஒனக்குப் பிறந்ததை நீயே வெச்சுக்கடா’ன்னுட்டு, என் மகனையும் அவங்கிட்ட குடுத்துட்டு, ஜாலியா வெளியே வந்துட்டேன்!” இதற்கும் ஒரு சிரிப்பா? நான் முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டேன். வெளிநாட்டில் பல வருடங்கள் கழித்துவிட்டு, அம்மாவைப் பார்க்கத் திரும்பி வந்தேன். “பிரேமாவைப் பாத்தியா? எப்படிம்மா இருக்கா?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனாள் அம்மா. காதில் விழவில்லை என்று நான் நினைத்துக்கொள்ளவேண்டுமாம்! ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளாமல் போனதுபோல் தவிப்பாக இருந்தது எனக்கு. சொல்லி வைத்தாற்போல், அவளே என்னைத் தேடி வந்தாள். “ஒங்கம்மாவை மார்க்கெட்டில பாத்தேன். நீ வந்திருக்கிறதா சொன்னாங்க”. ஏதோ ஒப்பிப்பதுபோல் சொன்னாள். இளமையின் உற்சாகம் எப்போதும் நிலைத்திருக்குமா? அவளுக்கும் இப்போது ஐம்பது வயதாகி இருக்காது? “எங்கேயாவது வெளியே போகலாமா, பானு?” என்றாள் மெள்ள. எனக்குப் புரிந்தது. அவள் சொல்லப்போவது அம்மா காதில் விழக்கூடாது! என்று இவள் பிறர் நினைப்பதைப்பற்றி கவலைப்பட்டிருக்கிறாள் என்கிற ஆச்சரியமும் எழாமலில்லை. உணர்ச்சியற்ற குரலில், “ரெமோ செத்துப்போயிட்டான்,” என்று ஆரம்பித்தாள். என்னதான் அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், சட்டப்படி அவள் இன்னும் அவனுடைய மனைவிதானே! அந்த துக்கமோ? “எனக்கு யாரும் சொல்லிவிடலே. பேப்பரில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இறுதி யாத்திரை இந்த விலாசத்திலே, இத்தனை மணிக்குன்னு போட்டிருந்தாங்க. ரயில்ல அங்க போனேன்”. அதன்பின் நீண்ட மௌனம். அவள் பார்வை எங்கோ நிலைத்திருந்தது. “மொதல்ல என் மகனை எனக்கு அடையாளம் தெரியல. எப்பவோ, ரெண்டு வயசில பாத்தது. அவங்கப்பாமாதிரியே அழகா இருந்தான். அதை வெச்சுத்தான்..!” நான் சற்றும் எதிர்பாராவிதமாக பிரேமா விம்ம ஆரம்பித்தாள். “அவன் எல்லார்கிட்டேயும் என்ன சொன்னான், தெரியுமா பானு? ‘எனக்கு ஒரு அம்மா இருக்கிறதே தெரியாது,’ அப்படின்னான். எங்கிட்ட வந்து, ‘இனிமே இங்க வராதீங்க,’ன்னு கறாரா..! என்னால அவனுக்கு அவமானமாம்! பெத்த தாய்னுகூட பாக்காம என்னை விரட்டி அடிச்சுட்டாண்டி!” பெரிய குரலெடுத்து அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? ’ஒரு தாயாக நீ அவனுக்கு என்ன செய்தாய்?’ என்று கேட்கத்தான் தோன்றியது. ஆனால், என் கை வாயை முந்திக்கொண்டது. அவள் முதுகைப் பரிவுடன் தடவிக்கொடுத்தது. அடுக்கடுக்கான சங்கிலிகள்மேல் கை பட, பேச்சை மாற்றும் எண்ணத்துடன், “இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வெளியே வரலாமா, பிரேமா? தொலைஞ்சுடாது?” என்று செல்லமாகக் கடிந்தேன். ’எதை எதையோ தொலைச்சுட்டேனே! நகை என்ன, கேவலம் உயிரில்லாத சாமான்!’ என்று எண்ணியிருப்பாள். இல்லாவிட்டால், அப்படிக் கதறியிருப்பாளா? தாம்பத்தியத்தில் கத்தரிக்காய் “பாரு! இங்க வந்து பாரேன்,” உற்சாகமாகக் கூவினார் ஜம்பு. “வேலையா இருக்கேனே,” என்று பதில் குரல் கொடுத்தாள், அவருடைய தர்மபத்தினி. ‘இவருக்கென்ன! மாசம் பொறந்தா, ’டாண்’ணு பென்ஷன் வந்துடும்! பொண்ணாப் பிறந்தவளுக்கு ஏது ஓய்வு, ஒழிச்சல் எல்லாம்!’ என்று முணுமுணுத்துக்கொண்டாள். “பாரு!” புழக்கடைத் தோட்டத்திலிருந்து வந்த குரலில் ஸ்ருதி இன்னும் ஏறியிருந்தது. அடுப்பைச் சிறியதாக எரியவிட்டாள் பாரு. இல்லாவிட்டால், கத்தரிக்காய் கறி கரியாகிவிடுமே! ‘ஒனக்குக் கொஞ்சமாவது பணத்தோட அருமை தெரியறதா?’ என்று அதற்கு வேறு கத்துவார். கணவர் இன்னொருமுறை அலறுவதற்குள், “வந்துட்டேன்,” என்று குரல் கொடுத்தபடி பின்புறம் போனாள். “அப்படி என்ன தலைபோற விஷயம்?” எரிச்சலுடன் வந்தது அவள் கேள்வி. “இங்கே பாரேன்!” அவரது மகிழ்ச்சிக்குப் பாத்திரமாகி இருந்ததை ஒரு விரலால் சுட்டிக் காட்டினார். கத்தரிக்காய் செடியில் ஒரு மொட்டு. தான் நட்ட செடியில் முதன்முறையாகக் காய்க்கப்போகிறது! “இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால். “மார்க்கெட்டில காய் வாங்கிண்டு வந்தா, சொத்தை, வாடல், பூச்சின்னு நூறு குத்தம் சொல்வியே!” என்று அவளையே தாக்கினார். “இன்னும் கொஞ்ச நாளிலே பச்சை வாசனை போகாம, செடியிலேருந்து பறிச்ச ஒடனேயே சமைக்கலாம்!” அவருடைய பெருமையில் பங்குகொள்ளாது, “ஒங்களோட வம்பு பேசிண்டிருந்தா, கறி தீய்ஞ்சுடும்,” என்றபடி உள்ளே நடந்தாள். ‘அசமஞ்சம்! சமையலைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது!’ என்று திட்டினார் – மெள்ள. எல்லாம், அவளுக்குக் கேட்கவா போகிறது என்ற தைரியம்தான்! இல்லாவிட்டால், இலையைக் கவனித்துப் பரிமாறுவாளா? ‘நீங்களே எடுத்துப் போட்டுக்கோங்கோ,’ என்று விறைப்பாகக் கூறிவிட்டு, தொலைக்காட்சியின்முன் உட்கார்ந்துவிடுவாளே! “இன்னிக்கு.. சமையல் ரொம்ப நன்னாயிருக்கு! அதுவும் கத்திரிக்காயை எண்ணையிலேயே குளிப்பாட்டி இருக்கே! உளுத்தம்பருப்பு, மிளகாய் ரெண்டையும் வறுத்துப் போட்டியா? ஆகா!” என்றபடி ஒரு பிடி பிடித்தார். ‘டாக்டர் எண்ணை சாமானே கூடாதுங்கிறார். இவருக்கோ அதுதான் பிடிக்கிறது. கண்ணில படாம, கொஞ்சம் காயை ஒளிச்சு வெச்சிருக்கணும்!’ என்று தன்னையே நொந்துகொண்டவள், இனிமேல் அப்படித்தான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். அடுத்தடுத்த வாரங்களில் ஒரு சிறு டபராவில் இருந்ததைப் பார்த்து, “ஒரு கிலோ வாங்கினேனே! இவ்வளவுதானா இருக்கு?” என்றவருக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. “எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுட்டியா?” என்று மேலும் துளைத்தார். “வயசானா, நாக்கை அடக்கக் கத்துக்கணும். நான் என்னிக்கு ஒங்களுக்கு முன்னாலே சாப்பிட்டிருக்கேன்!” என்று அலுத்த குரலில் கூறியவள், “பாத்துச் சாப்பிடுங்கோ. நிறைய எண்ணை விட்டு வதக்கியிருக்கேன்,” என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு அப்போதெல்லாம் செவிசாய்த்திருந்தால் ஜம்புவின் இருதய அடைப்பு மோசமாகி, அவருக்கு நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்காது. ‘கத்தரிக்கா மொட்டு விட்டபோதே பூரிச்சேளே! இப்போ, காய்ச்சுக் குலுங்கறதைப் பாத்தா, உசிரை விட்டிருப்பேள்!’ பேச்சுவாக்கில் எதையோ சொல்லிவிட்ட பாரு நாக்கைக் கடித்துக்கொண்டாள். ‘நல்ல பிஞ்சுக்காயாப் பறிச்சு, அவருக்குப் பிடிச்சமாதிரி வதக்கி, கொண்டுவைக்கணும்!’ மாலை அணிந்திருந்த சட்டத்துக்குள் அடைபட்டிருந்த ஜம்புவுக்கு அவளது ஆதங்கம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போல் விறைப்பாகத்தான் காட்சியளித்தார். முகநூலும் முத்துலட்சுமியும் அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா. இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத ‘நண்பர்’களுக்காக. பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள். அப்போதுதானே, நாளைக்கு அவர்கள் எதையாவது வெளியிடும்போது பிறர் புகழ்வார்கள்! பேசத் தெரிந்தவுடன் பாடும் குழந்தையின் மழலைப் பாட்டைக் கேட்டதும், ’இவ்வளவு சிறு வயதிலேயே ஒரேயடியாகக் கொண்டாடினால், உலகமே தனக்காகத்தான் இயங்குகிறது என்பதுபோல் கர்வப்பட்டு, யாரையும் மதிக்காமல் போய்விடாதா!’ என்று யோசனை போயிற்று அமிர்தாவுக்கு. சலிப்புதான் வந்தது. ‘இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு நேரம் கிடைக்கிறது?’ என்று, பொறாமையுடன் கலந்த ஆச்சரியம் எழ, கணினியில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்குத் திரும்ப ஆயத்தம் செய்தபோதுதான் அந்த கடிதம் கண்ணில் பட்டது. ‘ஒரு வேண்டுகோள்,’ என்று ஆரம்பித்திருந்தாள் முத்துலட்சுமி என்று யாரோ ஒருத்தி. ஏதாவது பண உதவியோ? இந்தக் கஷ்டகாலத்தில்தான் பலருக்கும் வேலை போய்விட்டதே! சுவாரசியம் எழ, அமிர்தா படித்தாள். நூற்றுக்கு மேற்பட்டவர்கள், ‘உங்கள் நண்பராக விரும்புகிறேன்,’ என்று எனக்கு எழுதுகிறீர்கள் – அனுதினமும். அந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? அழகான வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர்கள். அத்துடன் முடித்திருந்தாள். அப்படி என்ன நடந்திருக்கும் அந்த – அவள் பெயர் என்ன? –ம்.. முத்துலட்சுமிக்கு? அவளை நேரில் பார்த்துக் கேட்டால் தனக்கு நல்லதொரு சமாசாரம் கிடைக்குமே என்ற ஆசை எழுந்தது அமிர்தாவுக்கு. அவளுடைய தொலைபேசி எண் கிடைத்தது. தன் ஃப்ரெண்டா அவள்? எப்போதோ, ‘முப்பது வயதுக்கு மேலிருக்காது’ என்று, அவளுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தானும் அவளுடைய நட்பை நாடியிருக்கிறோம்! வேடிக்கைதான்! முத்துலட்சுமியை அழைத்தாள். பதிலுக்குப் பேசியவள் குரல் கரகரப்பாக இருந்தது. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் அமிர்தா. சிறிது நேரம் பேசிவிட்டு, “இதே ஊரிலதானே இருக்கே? நேரிலேயே வாயேன்!” என்று முத்துலட்சுமி அழைத்தபோது, ஒருமாதிரி இருந்தது அமிர்தாவுக்கு. எவ்வளவு மரியாதைக்குறைவாகப் பேசுகிறாள்! மரியாதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இது சமயமில்லை என்று மறுநாளே அவளைச் சந்திக்கப் போனாள். “வாம்மா. அமிர்தாதானே? டி.வியில ஒன்னை நிறையப் பாத்திருக்கேன்,” என்று வரவேற்ற மாதுவுக்குக் குறைந்தபட்சம் எழுபது வயதாவது இருக்கும். கூடவே, “நான்தான் முத்துலட்சுமி,” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள். அமிர்தா அடைந்த அதிர்ச்சி முகத்தில் தெரிய, முத்துலட்சுமி மாமி சிரித்தாள். “நீ என்னை எதிர்பாக்கலே, இல்லே?” என்றவள், “என்ன செய்யறது? பொண்கள் இளவட்டமா இருந்தாத்தானே மத்தவா கண்ணிலே படறது!” என்று தன் பொய்யை ஒத்துக்கொண்டாள். “இங்க, வீட்டில, நாங்க ரெண்டே பேர். தினம் வெளியே போக முடியறதா! பொழுது போகணுமே! அதான், ஃபேஸ்புக்கில சேர்ந்தா, நாலு பேரைத் தெரிஞ்சுக்கலாம்னு தோணித்து”. பேசுவதற்கு யாரும் கிடைக்காமல் இருந்தவளுக்கு நேரிலேயே, அதுவும் பிரபலமான ஒரு பெண்ணைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. படபடவென்று கொட்டினாள். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அது ஏன் அப்படி எழுதியிருக்கீங்க? யாராச்சும் தொந்தரவு பண்ணினாங்களா?” என்று கேட்டாள் அமிர்தா. “அதை ஏன் கேக்கறே!” என்று அங்கலாய்த்தாள். “ராத்திரி பத்து மணிக்கு எந்தத் தடியனோ ஃபோன் பண்றான், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு. அவங்கிட்ட சொல்ல முடியுமா, முக அழகைப் பாத்து நட்பு வரதில்லேடான்னு?” “சரியாச் சொன்னீங்க!” என்று ஊக்கினாள் அமிர்தா. “எங்காத்துக்காரரோ சந்தேகப் பேர்வழி. ‘அர்த்த ராத்திரியில எவன்கூடப் பேச்சுன்னு?’ கேட்டா? அதான் ஃபோனை பட்டுனு வெச்சுட்டேன்!” பெரிதாகச் சிரித்தாள். “மழை காலத்திலே காளான் மொளைச்சமாதிரி, சில நாளிலேயே நூத்துக்கணக்கில ஃப்ரெண்ட்ஸ். அவா அத்தனை பேருக்கும் காலை வணக்கம், இரவு வணக்கம்னு சொல்லிண்டே இருக்கணும்னா எப்படி? எனக்கு வேற வேலையே கிடையாதா?” முதியவளைப் பேசவிட்டு, அமிர்தா மௌனமாக இருந்தாள். தான் ஊக்குவிக்காவிட்டாலும் அவள் பேசுவதை நிறுத்தப் போவதில்லை என்று அதற்குள் புரிந்திருந்தாள். “ஒரு நாளைக்கு நாப்பது பேருக்குப் பிறந்தநாளாம். நான் HAPPY BIRTHDAY சொல்லி என்ன ஆகப்போறது!” “நானே பேசிண்டு இருக்கேனே! நீ என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தியோ!” என்று சற்று நிறுத்தினாள் முத்துலட்சுமி. “சும்மாத்தான், மாமி!” காபி குடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்ற அன்புக் கட்டளையை மறுக்கத் தோன்றவில்லை அமிர்தாவுக்கு. சமையலறையில் உரையாடல் தொடர்ந்தது. “அன்னிக்குப் பாரு, ஒருத்தன் அவனோட போட்டோ அனுப்பியிருந்தான். எப்படிங்கிறே? மேலே சட்டை போடாம, என்னமோ அழகுப்போட்டிக்குப் போஸ் குடுக்கிறமாதிரி. அது அவனோட போட்டோவாகவே இருக்காது. எவனோடதையோ எடுத்து, என்னை இம்ப்ரெஸ் பண்ண அனுப்பியிருக்கான். எதுக்கு? நாளைக்கு, ‘நீயும் இந்தமாதிரி ஒண்ணு அனுப்பேன்,’னு கேக்கத்தான்!” தழைந்த மார்பகத்துடன் இருக்கும் இந்த முகநூல் சிநேகிதியைப் பார்த்து அவன் எவ்வளவு அதிர்ச்சி அடைவான்! சிரிக்காமலிருக்கப் பாடுபட்டாள் அமிர்தா. “இவருக்கு நான் படறபாடு புரியறதா! ‘ஒனக்கென்ன! புதுசு புதுசா, நிறைய ஃப்ரெண்ட்ஸ்!’ அப்படின்னு என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறார்”. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, கலகலவென சிரித்தாள் அமிர்தா. தன் மனதில் இருந்ததையெல்லாம் இன்னொரு ஆத்மாவுடன் பகிர்ந்துகொண்டுவிட்ட நிம்மதியில், மாமியும் சிரித்தாள். அடுத்த வாரம், ’தெரிந்த முகமாக இருக்கிறதே!’ என்று பார்த்தாள் அமிர்தா. அதன் கீழ்: முத்துலட்சுமி என்னும் எனது இன்றைய போட்டோ இது. என் வயது எழுபத்தைந்து. வெற்றிக்குக் காரணம் ராமனுக்கு மனைவியிடம் எரிச்சல்தான் எழுந்தது. அப்படி என்ன உலகில் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள்? அதற்காக ஓயாமல் அழுதுகொண்டிருந்தால்? முதல் குழந்தை என்று அவனும் எத்தனையோ கனவுகளுடன்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தெரியவில்லையே, அது குறையுடன் பிறக்கும், இருக்கும் நிம்மதியையும் பறித்துவிடும் என்று! ‘வீணா அதைக் கொஞ்சிக்கிட்டு இருக்காதே. கீழேயே போட்டுவை. அது அல்பாயுசில போனதும் ரொம்ப வேதனையாப் போயிடும்!’ என்னமோ, அதன் இறப்புக்கு நாள் குறித்தவர்கள்போல் பலரும் அறிவுரை கூறியதை புனிதா காதில் வாங்கவேயில்லை. தலையிலிருந்து ஒரு மயிரிழை உதிர்ந்தால்கூட சற்றே வருந்தும் பெண்ணாயிற்றே! தன் உடலில் ஒரு பாகமாக இருந்த குழந்தையின் இழப்பை நினைத்தும் பார்க்கமுடியுமா? குழந்தையின் உடலும், கண்களும் மஞ்சள் நிறமாக மாறியபோதுதான் முதலில் சந்தேகம் எழுந்தது அவளுக்கு. சிரிப்பும் களிப்புமாக இருக்கவேண்டிய குழந்தை! இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறதே! அடிக்கடி வாந்தி வேறு. ‘வயிற்றுப்பகுதியில் இருக்கும் பெரிய உறுப்பு. கழிவுகளை அகற்றி, கொழுப்பைச் சேர்த்துவைப்பது என்று பல உபயோகங்கள் கொண்ட அவயவம்,’ என்றெல்லாம் மருத்துவர் விளக்கிய கல்லீரல் பழுதாகி இருந்தது. “குழந்தைக்கு மாற்று லிவர் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால்..,” என்று அவர் முகத்தில் பரிவைத் தேக்கி வைத்துக்கொண்டு கூறியபோது, தான் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் இருக்குமோ என்று எழுந்த சந்தேகத்தை உதறினான் ராமன். அதை மனைவியின்மேல் ஆத்திரமாக மாற்றிக்கொள்வது எளிதாக இருந்தது. ‘உருப்படியா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடத் துப்பில்லே!’ என்று சாடினான். “சனியன் செத்துத் தொலையட்டும். ஒரே அழுகையோட போயிடும்!” “அப்படியெல்லாம் சொல்லாதீங்க,” என்று கதறினாள் பெற்றவள். “நான் என்னோடதைக் குடுக்கறேன்”. “ஹூம்!” உறுமிவிட்டு அப்பால் நகர்ந்தான் ராமன். இவளோட கல்லீரலைத் தானம் கொடுக்கப்போகிறாளாம்! கருவிலிருக்கும் இன்னொரு உயிரும் குறையுடன் வெளியாகவா? டாக்டர்தான், ‘இந்த நிலையில் முடியாது!’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே! அது தெரிந்தும் நாடகமாடுகிறாள்! ‘நீ ஆம்பளை. ஒழைச்சுக் கொட்டணும். ஒன் ஒடம்பிலே எதையாவது அறுத்தா, அப்புறம் ஒன்னால வேலை செய்ய முடியுமா?’ என்ற தந்தையின் விவாதம் நியாயமாகப்பட்டது அவனுடைய குழம்பிய மனதிற்கு. அம்மாவும் ஒத்துப் பாடினாள்: “ஒரு பொட்டைக்கழுதை போனா என்னடா? இன்னும் அஞ்சு மாசத்திலே இன்னொண்ணுதான் பிறக்கப்போகுதே!” வசதியற்ற குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து, அனுபவித்த வேதனைகள் அவளை அப்படிப் பேச வைத்தது. தாத்தா பாட்டியின் நம்பிக்கைக்குச் சவால் விடுவதுபோல், ஒரு வயதுக்குமேல் அந்தக் குழந்தை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தது. புனிதாவின் உறுப்பில் ஒரு பகுதி குழந்தை பூரணிக்குப் பொருத்தப்பட்டது. நான்கே மாதங்களில் இருவரது கல்லீரலும் முழுமையாக வளர்ந்தது. அவளும் வளர்ந்தாள். “நீ பிழைக்கவே மாட்டேன்னு நினைச்சோம் டீ,” என்று கிழவர் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். “நான், ஒங்க பாட்டி, எல்லாரும், ‘இந்தப் பொட்டைக்குட்டி போனா என்னா?’ன்னுகூட சொல்லியிருக்கோம். ஒங்கம்மா கேக்கலியே!’ “அப்பா?” மெல்லிய குரலில் கேட்டாள். “அவனும்தான்! ஒடம்பில எதையாவது அறுத்துக் குடுத்தா, அப்புறம் எப்படி வேலை செஞ்சு சம்பாதிக்க முடியும்னு யோசிச்சான். நியாயம்தானே!” பழியை அவன்மேலேயே திருப்பினார். பூரணிக்கு வருத்தமாக இருந்தது. யாருக்குமே தான் முக்கியமாகப் படவில்லை! தனக்குள் எழுந்த ஆத்திரத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியே தள்ளினாள். “நம் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். இதற்கு யாரெல்லாம் காரணம்?” என்று கேட்டார் ஒரு பேட்டியாளர். “என் கல்லீரலும் அம்மாவும்!” என்று உறுதியாகப் பதிலளித்தாள் பூரணி. ‘என்னை ’வேண்டாம்’னு சொன்ன அப்பாவுக்கு நன்றியும், பாராட்டும் ஒரு கேடா!’ என்ற வீம்பு எழுந்தது அவளுக்குள். என்னைப் புகழாதே! (‘அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’ ‘அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’) “இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, தொலைபேசியில் எல்லாரையும் அழைத்து, ‘கல்யாணம் நின்றுவிட்டது!’ என்று சொல்ல நேரிடும் என்று? பரிசுப்பொருட்களுடன் எல்லாரும் வந்துவைத்தால், அது வேறு துக்கம். அந்த எண்ணம் உதிக்கையிலேயே, ‘அப்படி என்ன துக்கம் வந்துவிட்டது இப்போது?’ என்று தன்மீதே ஆத்திரப்பட்டாள் நளினி. ‘ஏதோ, இதுவரைக்கும் காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்று நிம்மதி அல்லவா அடையவேண்டும்! ‘பாம்பு யார், மணிவண்ணனா? நம் மனம்தான் எத்தனை சீக்கிரம் மாறுகிறது!’ லேசாகச் சிரிப்புகூட வந்தது நளினிக்கு. அடேயப்பா! அவனைப்பற்றி நினைக்கும்போதே தான் துடித்த துடிப்பென்ன, தனக்குத்தானே சிரித்துக்கொண்டதும், நிமிடத்துக்கு நிமிடம் கண்ணாடிமுன் நின்று தன் அழகை ரசித்ததும், பாட்டு முணுமுணுத்ததும்! முதன்முறையாக அவளைப் பார்த்தபோதே, “நீங்க எப்போ லைப்ரரிக்கு வந்தாலும், ஒங்களுக்குப் பக்கத்திலே எனக்கு இடம் பிடிச்சு வைங்க!” என்று சொல்வதானால், தான் அவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கவேண்டும் என்ற பெருமைதான் உண்டாயிற்று அவளுக்கு. “நளினி! அன்னிக்கு, ஒன் பக்கத்திலே இடம் கேட்டேன். இப்போ, எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பியான்னு கேக்கத்தோணுது. ஒன் அழகைத் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாமில்ல?” என்று சினிமா வசனம் பேசினான், ஒரு நாள். “எங்கப்பாகிட்ட வந்து பேசுங்க,” சற்றே நாணியபடி நளினி பதிலளித்தபோது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த அப்பா ‘வேண்டாம்’ என்றால் வேறு ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிவிடுவாளோ? “ஒங்கப்பாவைக் கேட்டுக்கிட்டா என்னோட சுத்தினே?” எப்போதும் அதிராத குரலில் பேசியவர்! எதற்கு இந்தக் கோபம்? அவள் மிரண்டு போனதைப் பார்த்து மணிவண்ணனின் தைரியத்தில் சிறிதளவு திரும்பியது. அவள் தோளைப்பற்றி அணைத்துக்கொண்டான். “ஸாரிடா. எங்கே நீ என்னைவிட்டுப் போயிடுவியோங்கிற பயம்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டான். அப்படியே ஒருவரை ஒருவர் உராய்ந்தபடி அந்தப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டது: “ஹலோ, நளினி!” “டேய் சங்கர்! நீயா? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! இந்த ஒலகத்திலேதான் இருக்கியா?” கலகலவென்று சிரித்தாள். மணிவண்ணனின் முகம் சிறுத்தது. ‘யார் இந்த தடியன்? ஒரு மரியாதைக்காவது எனக்கு ஒரு ஹலோ சொல்லி இருக்கவேண்டாம்?’ “என்னடா? முந்தி சோனியா இருப்பே. இப்ப ரொம்ப குண்டா ஆயிட்டியே!” உற்சாகமாகப் பொரிந்துதள்ளிய நளினியைக் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தான் மணிவண்ணன். சந்தேகமும் பொறாமையும் கொப்புளித்தன அப்பார்வையில். அப்போதுதான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வந்தவளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்: “இது.. சங்கர். நாங்க ரெண்டு பேரும் கிண்டர் கார்டனிலேருந்து பன்னண்டு வருஷம் ஒண்ணாப் படிச்சோம். தமிழ்ச்சங்கத்திலே துடிப்பா இருப்போம். எத்தனை சண்டை போட்டிருக்கோம்! ஞாபகம் இருக்கா, சங்கர்?” பேசிக்கொண்டே போனவளை ஓர் அனல் பார்வை பார்த்துவிட்டு, எதிரிலிருந்த எதிரியைப் பார்த்து, “சரி, பாக்கலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அப்பால் நடந்தான் மணிவண்ணன். பாலியத்தோழனிடம் விடைபெறவும் மறந்து, ஏதோ குற்றம் புரிந்தவள்போல், நிழலாகக் காதலனைத் தொடர்ந்தாள் நளினி. அவளை அடக்கிவிட்ட பெருமிதத்துடன், “எப்பவோ ஒண்ணாப் படிச்சிருந்தா என்ன? அதுக்காக இப்படி கண்ட ஆம்பளைகிட்ட கொஞ்சிக் குலாவணுமா?” என்று மிரட்டிய மணிவண்ணனின் தலையுடன் குரலும் உயர்ந்தது. “நாளைக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் இந்தக் குணம்தானே வரும்?” வாயடைத்துப்போயிற்று நளினிக்கு. செல்லமாக அவளை இடித்தான் மணிவண்ணன். “என்ன செய்யறது, நளினி? நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா? என்னை அவ்வளவு பைத்தியமா அடிச்சிருக்கே நீ!” தன் தடுமாற்றத்தை மறைக்க நளினி சிரிக்க முயன்றாள். ‘அதிகம் யோசிக்காது எதற்குள்ளேயோ காலை விட்டுவிட்டோமோ? இவரிடம் அப்படி என்ன பிடித்துப்போயிற்று எனக்கு?’ அவளுடைய குழப்பத்தைக் கவனியாது, “எங்கம்மா அவங்க மருமகளைப் பாக்க ஆவலா இருக்காங்க, நளினி. இப்பவே வா!” என்று அழைத்துப்போனான். நளினியை மேலும் கீழும் பார்த்த பார்வதி அம்மாளின் முகம் சுருங்கியது. “ஒரு தோடுதான் போட்டிருக்கே. அதுவும் கண்ணுக்குத் தெரியாதமாதிரி. மத்தபடி, பொட்டுத்தங்கத்தைக்கூடக் காணுமே! பாங்கிலேயாவது வெச்சிருக்கீங்களா?” அவமானத்தால் சுருங்கிய நளினியைப் பொருட்படுத்தாது, பார்வதி தன்போக்கில் அடுக்கினாள்: “மணி எனக்கு ஒரே மகன். கறுப்புதான். ஆனாலும், ஆம்பளை இல்லியா? அவனோட படிப்புக்கு அம்பதாயிரம், லட்சம்னு குடுத்து, அதோட அம்பது பவுன் நகையும் போட எங்க சொந்தக்காரங்களே தயாரா இருக்காங்க. ஏதோ, ஒன்னோட அதிர்ஷ்டம் அவனுக்கு ஒன்னைப் பிடிச்சுப்போச்சு. அதுக்காக சும்மா பண்ணிக்க முடியுமா? ஒரு இருபதாயிரம் ரிங்கிட்டாவது கையில குடுப்பாரில்ல ஒங்கப்பா?” மெள்ளத் திரும்பி காதலனை ஒரு பார்வை பார்த்தாள், ‘நீ கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்!’ என்று எப்போதும்போல் ஆதரவாக ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன். அவனோ, ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!’ என்பதுபோல் தலையைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். நடந்ததைக் கேட்டு அப்பா ஏன் கொதித்தெழவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் நளினி. “பெண்ணைப் பெத்துட்டா, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமாம்மா? முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சு நான் சேத்து வெச்சிருக்கிறதை ஒனக்கில்லாம, வேற யாருக்காக செலவழிக்கப்போறேன்!” என்று பாசத்தைக் கொட்டினார். உடனே, “அவசரமா அவ்வளவு புரட்ட முடியுமோ, என்னமோ!” என்று கவலைப்பட்டுவிட்டு, “வட்டிக்கு வாங்கினாப்போச்சு!” என்று வயதுக்குரிய நிதானத்துடன் பேசியபோது, தந்தையை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தாள் நளினி. கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்தபோது அதுவரை எழுந்த கவலை, குழப்பம் எல்லாம் மறைந்தன. “நளினி மணிவண்ணன்’ என்று மந்திரம் ஜபிப்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அடிநாக்கில் இனித்தது. இனி யாருக்கும் பயந்து திரைப்படங்களுக்குப் போக வேண்டியதில்லை. உரிமையுடன் என் கணவரின் கையோடு என் கையைக் கோர்த்துக்கொண்டு எங்கு வேண்டுமானால் போகலாம். நான் அணியவேண்டிய உடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். நான் அவருக்குப் பிடித்த வகைகளைச் சமைத்துப்போட்டு..! அத்தையிடம் கேட்கவேண்டும் அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று. சிந்தனையில் ஒரு சறுக்கல். ‘மாமியார்!’ என்று சொல்லி, ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டால்கூடத் துள்ளுமாமே! தலையை இருபுறமும் வேகமாக ஆட்டி, அந்த வேண்டாத எண்ணத்தைத் தள்ள முயன்றாள் நளினி. ‘ஆரம்பத்தில் அப்படித்தான் கெடுபிடியாக இருக்கும். ஒரு பேரனைப் பெற்றுக்கொடுத்தால்..!’ கற்பனை போன திசையை உணர்ந்து நளினியின் முகம் சிவந்தது. “நளினி! யார் வந்திருக்காங்க, பாரேன்!” தந்தையின் உற்சாகக் குரல் கேட்டது. “வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க!” ‘கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு!’ போலிக்கோபமும் வெட்கமுமாக நளினி வெளியே வந்தாள். ‘எத்தனை வருடப் பழக்கம்! இப்போது என்ன, புதிதாக வெட்கம்?’ தன்னிடம் தோன்றிய மாறுதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. “ஒக்கார நேரமில்லே மாமா”. அவளைக் கவனியாது வேகமாகப் பேசினான் மணிவண்ணன். “அம்மா ஒரு சேதி சொல்லி அனுப்பினாங்க. நீங்க சொன்னதுக்குமேலே பத்து பவுனில ஒரு நெக்லஸ் போடணுமாம். அப்பத்தான் சபையில கௌரவமா இருக்கும்னாங்க”. அந்த இடத்தில் ஓர் அசாதாரணமான மௌனம் நிலவியது. “என்ன மாமா யோசனை? ஒங்க பொண்ணுக்குத்தானே செய்யச் சொல்றோம்? நானா வளையலும் நெக்லஸும் போட்டுக்கப்போறேன்?” அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை நளினியால். “இப்படி அம்மாபிள்ளையா இருக்கிறதுக்கு வளையல் போட்டுக்கிட்டா ஒண்ணும் தப்பில்லே, என்று ஆங்காரத்துடன் கத்தியவள், கையிலிருந்த பத்திரிகையை இரண்டாகக் கிழித்தாள். “நளினி!” பதறினார் தந்தை. “சுயபுத்தி இல்லாம, அம்மா பேச்சுக்குத் தாளம் போடறவரோட என்னால வாழமுடியாதுப்பா. இவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அந்தப் பண்டிகை, இந்தப் பண்டிகைன்னு ஏதாவது சுரண்டிக்கிட்டே இருப்பாங்க,” என்று பொரிந்தவள், “நான் மட்டும் என்னப்பா, விலைபோகாத சாமானா?” என்றபோது குரல் கம்மியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள். கரிய முகம் மேலும் கறுக்க, விறுவிறுவென்று வெளியே நடந்தான் மணிவண்ணன். ஏதோ சொல்லவந்த தந்தையைப் பேசவிடாது, “நல்லவேளை, அவங்க குணம் கல்யாணத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுபோச்சு! எனக்காக வேற ஒருத்தர் பிறந்திருக்கமாட்டாரா, என்ன!” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள் நளினி. ‘இனிமேல் யார் என்ன புகழ்ந்தாலும் மயங்கிவிடக் கூடாது,’ என்று அவள் முடிவெடுத்தது அப்போதுதான். சக்குவின் சின்னிக்குட்டி “உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!” மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே ‘பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே! காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, இரண்டு வருடங்களாக ஏன் இப்படி? தான் அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாடு போவதால், தனிமை அவளை வாட்டுகிறதோ? பெரிய உத்தியோகம் என்றால், பொறுப்புகளும் அதிகமாகத்தானே இருக்கும்! இதுகூடவா புரியவில்லை அவளுக்கு? கேட்டும் பார்த்துவிட்டான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதாவது கேட்டால், ஒரே அழுகை. கடைசி முயற்சியாக, வைத்தியம். “இன்னும் பிள்ளை பிறக்கலியேன்னு அவங்களுக்கு ரொம்ப ஏக்கம். நம்ப சமூகத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதா! யார் வீட்டு விசேஷத்துக்காவது போனா, அக்கறையா, துக்கம் விசாரிப்பாங்க. சின்னக் குழந்தைங்களைத் தூக்க விடமாட்டாங்க!” தன்னிடம் மனைவி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கோபமும், உடனே பச்சாதாபமும் ஏற்பட்டன. சகுந்தலாவிடம் நைச்சியமாகப் பேச்சுக்கொடுத்தான். ‘சில பேருக்கு, கல்யாணமாகி, பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுக்கூட குழந்தை பிறந்திருக்கு. ஒனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா..,” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் குறுக்கிட்டாள்: “தத்து எடுக்கிற சமாசாரமே வேண்டாம்”. அதன் காரணத்தைக் கேட்கவெல்லாம் அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை. ’எப்படியோ போ!’ என்று மனத்துக்குள் திட்டத்தான் அவனால் முடிந்தது. நல்லவேளை, அனுதினமும் இவளுடைய அழுமூஞ்சித்தனத்தைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்ற ஆறுதல் எழுந்தது. அயல் நாட்டில் இரு வாரங்களைக் கழித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிரித்த முகத்துடன் சகுந்தலா! “இங்க வாங்களேன்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. சொகுசாக, மெத்து மெத்தென்று மடிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மேல். “இது எங்கேயிருந்து வந்தது?” சற்று எரிச்சலுடன் பிறந்தது கேள்வி. “தானே வருமா? நான்தான் நேத்து கொண்டுவந்தேன், என் ஃப்ரெண்ட் கோகிலா இல்லே, அவ வீட்டிலேருந்து!” பெருமையாகச் சொன்னாள். சிறு வயதில், ‘பூனைகிட்ட போகாதே, பிறாண்டும். தொட்டா, அலர்ஜி வந்து, அரிக்கும்,’ என்று பலவாறாக எச்சரிக்கை விடுத்திருந்தாள் அவன் தாய். இப்போது, அந்த அறிவுரை ஞாபகத்தில் எழ, “வீட்டுக்குள்ளே விடாதே. அசுத்தம் பண்ணிடும்,” என்றபடி, அப்பால் நகர்ந்தான். ஏதோ நினைத்துக்கொண்டவனாய், “இந்தக் குட்டி ரொம்ப சோனியா இருக்கே! ரோமமும் இல்லே. ஏன் சக்கு? ஒனக்கு ஆசையா இருந்தா, கடைக்குப் போய், அழகான, புசுபுசுன்னு இருக்கிற நாயோ, பூனையோ வாங்கிக்கிறது!” அவளுடைய ஆத்திரம் அவன் எதிர்பாராதது. “ஒங்களுக்கு சோனியா, அழகில்லாம ஒரு குழந்தை பிறந்தா அதைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?” எழுந்த வேகத்திலேயே அவள் ஆத்திரம் அடங்கியது. “இதுக்கு பேர் என்ன தெரியுமா? சின்னி! நல்லா இருக்கில்ல?” இவள் என்ன, வளர்ந்த குழந்தையா? ஆயாசம்தான் எழுந்தது கருணாகரனுக்கு. தாய்ப்பால் மறக்காத குட்டிக்கு அவள் தன் விரலைப் பாலில் நனைத்து, அதன் வாயில் வைத்தாள். அதுவும் தாயின் மடிக்காம்பு என்று நினைத்து சப்பியது. ஆறுமாதங்கள் கழிந்தன. சின்னியின் உடலில் பருவ மெருகு ஏறியிருந்தது தெருவில் போகிற ஆண்பூனை ஒன்றின் கண்களுக்குத் தப்பவில்லை. அது உரிமையுடன், வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து, சின்னியைத் துரத்தியதைக் கண்டு கருணாகரனுக்குப் பயம் ஏற்பட்டது. போனால் போகிறதென்று மனைவிக்குத் துணையாய் ஒரு பூனைக்குட்டியைச் சகித்துக்கொண்டாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று அல்லது ஐந்து குட்டிகளைப் பிரசவித்தால் என்ன செய்வது! இது என்ன வீடா, அல்லது மிருகக்காட்சிசாலையா? ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு ஆண் பூனையைத் துரத்தினான். “என்ன செய்றீங்க?” அதட்டலாக வந்தது சகுந்தலாவின் குரல். “ஒன்னோட பூனையை டாக்டர்கிட்ட கூட்டிப் போகணும்,” என்று முணுமுணுத்தான். “எதுக்கு?” என்றாள், புரியாது. அவன் விளக்கியதும், “எந்த ஜன்மத்திலே செஞ்ச பாவமோ, என் வயிறு திறக்கலே. அறுவைச்சிகிச்சை செஞ்சாவது சின்னியையும் மலடியா ஆக்கணுமா? பிள்ளை பெத்து, பால் குடுக்கிற இயற்கையான சந்தோஷத்தை அதுக்குக் கிடைக்காம பண்ணினா, அது பெரிய பாவங்க!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் சகுந்தலா. அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. சின்னி வந்த நாளிலிருந்தே அவளது அழுகை குறைந்து, உற்சாகமாக இருந்தாளே! இப்போது மீண்டும் தொடர் அழுகையா! “நீயும் ஒன் பூனையும் எப்படியோ தொலைங்க”. மனம் வெறுத்துப் பேசினான். “அப்பா கிடக்கார்! நீ வாடி சின்னிக்குட்டி,” என்று அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபோது, அவனுக்குள் பொறாமை கிளர்ந்தது அவனுக்கே அவமானமாக இருந்தது. ஒரு பூனைக்குட்டியுடன் போட்டியா? தன்னை அப்பா என்கிறாளே! அப்போது, அவள் அம்மாவா? சில மாதங்களில் அதுவே உண்மை என்று தெரியவந்தது. “சின்னியை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போகணும்”. அவள் கூறியது புரியவே சில வினாடிகள் பிடித்தன. “எதுக்கு சக்கு? நீதானே வேண்டாம்னு சொன்னே?” “அது அப்போ. நம்ப பிள்ளை பிறந்துட்டா, பூனைக்குட்டிங்களை யாரால பாத்துக்க முடியும்?” அலட்சியமாக வந்தது அவள் குரல். உணவும் சுத்தமான குடிநீரும் கொடுத்து, அதற்கு ஈடாக தன் அடிப்படை உரிமையைப் பறித்துக்கொள்ளும் மனிதர்களின் குணம் புரியாது, சகுந்தலாவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திகொண்டிருந்த அந்த பூனைக்குட்டியைக் கண்டு கருணாகரனுக்குப் பரிதாபமாக இருந்தது. தனக்கு மட்டும் ஏன் குட்டிகள் இல்லை என்று என்றாவது அதற்கும் அழத்தோன்றுமோ? இறுதியில் ஓர் ஆரம்பம் குறுகிய தெருவின் இருபுறமும் வத்திப்பெட்டிமாதிரி ஒரே அடுக்காக இருந்த அந்த வீடுகளில் தனித்துத் தெரிந்தது அவ்வீடு. வாசலில் இருந்த நந்தியாவட்டைச் செடியால் அதன் அழகைக் கூட்ட முடியவில்லை. வெளியே பலர் நின்றிருக்க, சிறிய காம்பவுண்டுக்குள் போடப்பட்டிருந்த வாடகை நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள் சிலர். எல்லாருமே ரகசியக்குரலில் பேசியது ஏதோ துக்கம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தியது. சாவித்திரி நிமிர்ந்த தலையுடன் உள்ளே நுழைந்தாள். சிவப்புப்புடவை, நெற்றியில் சிவப்பு ஒட்டுப்பொட்டு, கழுத்தில் சிறிய சங்கிலி என்ற அலங்காரத்துடன் வந்திருந்த அவளைப் பெண்கள் அதிர்ச்சியுடன் பார்த்ததை அலட்சியம் செய்தாள். நெற்றி கொள்ளாத குங்குமப்பொட்டும், கழுத்தில் மல்லிகை மாலையுமாக, கௌரவமாகவே காட்சியளித்தார் பரமசிவம். வாழ்வில் கிடைக்காத பெரியமனிதத்தனம் சாவின் அலங்காரங்களால் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்றே தோன்ற, ஒரு வரண்ட புன்னகையில் சாவித்திரியின் உதடுகள் விரிந்தன. இப்போதும் அவர் எழுந்து, இரண்டு வார்த்தைகள் பேசினால், அவரது லட்சணம் வெளிப்பட்டுவிடும். நாக்கு இருக்கிறதே என்று என்ன வேண்டுமானாலும் பேசிவிடுவதா? தனது சொத்தையான நடத்தையைப் பிறர் ஆராயாதிருக்க மற்றவர்களின் சிறு குறைகளையும் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்துவிட்டு, அவைகளுக்குக் கண்ணும் காதும் வைத்து, தன்னோடு பிறரையும் வதைப்பது இவரது குணம். சாவித்திரி சாந்தமூர்த்தி என்ற தன் பெயர் சாவித்திரி பரமசிவம் என்று மாறக் காரணமாக இருந்தவரின் நாக்கு இனி அசையவே அசையாது என்ற நிதர்சனம் எழ, பெருமூச்சு கிளம்பியது. என்றாவது தன்னிடம் அன்பாகப் பேசியிருக்கிறாரோ? முதலிரவன்றே பேசி இருக்கிறார்தான். ஆனால் அன்பாக இல்லை. பரமசிவம் நாக்கைப் புரட்டிக் கேட்ட முதல் கேள்வி: “நர்ஸ் வேலை பாக்கறப்போ, ஆம்பளைங்க கையை, காலைத் தொட்டிருப்பே?” புற்று நோய்க்கான விசேட பயிற்சி பெற்றிருந்த பெருமையில் பதில் வந்தது: “கை, கால் மட்டுமென்னங்க! யாருக்கு எங்கே வியாதியோ, அதுக்கேத்தபடி முதுகு, மார்பு எல்லாத்தையும்தான் கவனிக்கணும்”. “அப்போல்லாம் ஒனக்கு எப்படி இருந்திச்சு?” கேள்வி விரசமாகப் போவது புரியவில்லை அவளுக்கு. அதனால் முகம் கோணவில்லை. “வலியால ஒருத்தர் துடிச்சுக்கிட்டிருக்கப்போ, அவங்க ஆணா, பொண்ணான்னு எல்லாம் யோசனை போகுமாங்க?” என்று ஆரம்பித்தவளை இடைமறித்தான் புதுக்கணவன் பரமசிவம். “எனக்கெப்படி தெரியும்? நீதான் சொல்லணும்!” இவருக்குத் தன்னைப்பற்றி அறிவதில்தான் எவ்வளவு ஆர்வம்! உற்சாகமாகப் பேசிக்கொண்டு போனாள் சாவித்திரி. “சின்ன வயசிலே நான் தெருவில அடிபட்டுக் கிடந்த பூனைக்குட்டி, நாய்க்குட்டி எல்லாத்தையும் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்திடுவேனாம். யாராவது வலியிலே துடிச்சுக்கிட்டிருந்தா எனக்குப் பொறுக்காதுங்க. எங்கப்பா எப்பவும் சொல்வாரு, ‘நீ டாக்டராவோ, நர்ஸாவோதான் போவே!’ அப்படின்னு”. அதற்குமேல் பரமசிவம் எதுவும் பேசவில்லை. ஆனால், அறைக்குள் நுழைந்தபோது எழுந்த உற்சாகம் வடிந்திருந்தது புரிந்தது. தான்தான் பல பெண்களுடன் நெருக்கமாகப் பழகி, தகாத உறவு வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றால், இவள் தன்னையும் மிஞ்சிவிட்டாளே! சௌகரியமாக, ‘நோயாளி!’ என்ற பூச்சு! சில மாதங்களுக்குப்பின், “நான் ஒன்னைக் கட்டிக்கறதுக்குமுந்தி, பல பொண்ணுங்க என்னைச் சுத்திச் சுத்தி வந்தாங்க. ஆனா, ஒனக்குத்தான் என் கையால தாலி கட்டிக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு!” பரமசிவம் மெல்ல ஆரம்பிக்க, அவனது உள்நோக்கம் விளங்காது, “எனக்கும் அப்படித்தாங்க,” என்று அவன் விரித்த வலையில் வலிய மாட்டிக்கொண்டாள் சாவித்திரி. கண்களைக் குறுக்கிக்கொண்டு அவளையே அவன் பார்க்க, பழைய சம்பவம் ஒன்றைக் கள்ளமின்றி விவரித்தாள். “எங்க மாமா பையன் ஒருத்தன் – அவன் சின்ன வயசிலேருந்து எங்க வீட்டிலேயேதான் வளர்ந்தான். அவனையும் ஒரு அண்ணனாத்தான் நினைச்சிட்டிருந்தேன். திடீருன்னு ஒரு நாள், நான் வேலை செய்யற இடத்துக்கே ஒரு காதல் கடிதம் அனுப்பினான். எனக்கு எப்படி இருந்திருக்கும்கிறீங்க!” “எப்படி இருந்திச்சுன்னு நீதான் சொல்லணும். எனக்கு எப்படித் தெரியும்?” “பயந்தே போயிட்டேன், போங்க!” “என்ன பயம்? பழகினவன்தானே? நீ ஏன் அவனை..?” “அதான் மொதல்லேயே சொன்னேனே! அண்ணனா நினைச்சுப் பழகினவனை எப்படிங்க கட்டிக்கிறது?” பரமசிவத்திற்குக் காலங்கடந்து கோபம் எழுந்தது. தன் மனைவிக்கு ஒருவன் காதல் கடிதம் எழுதுவதாவது! “யாரு அந்த அயோக்கியன்? நம்ப கல்யாணத்துக்கு வந்திருந்தானா? அப்பவே அவனை நீ ஏன் காட்டலே? கழுத்தை நெறிச்சுப் போட்டிருப்பேன்ல?” சாவித்திரி. உல்லாசமாகச் சிரித்தாள். “அவன் இப்போ உயிரோட இல்ல. கந்துவட்டிக்காரங்ககிட்ட ஏராளமா கடன் வாங்கிட்டு, அவங்க மிரட்டல் தாங்காம, தற்கொலை பண்ணிக்கிட்டான், பாவம்!” செத்தவனுக்காகப் பரிதாபப்படுகிறாளே! இன்னும் அவனையே நினைத்துக்கொண்டிருப்பாளோ? அன்பில்லாமலா, ‘பாவம்’ என்ற வார்த்தை வரும்? காசுக்காகத் தன்னுடன் சுகித்திருந்த பெண்களின் நினைவு வந்தது. ‘இந்தப் பெண்களே இப்படித்தான்!’ என்று உலகிலுள்ள எல்லாப் பெண்கள்மேலும் ஆத்திரம் எழுந்தது. ‘மொத்தத்திலே நான் ஏமாந்துட்டேன்!’ என்று தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டான் பரமசிவம். தன்னை மறக்க குடிப்பழக்கத்தை நாடினான். மனம் ஓயாமல் பொருமியதில் உடல்நிலையும் கெட்டது. “ஒன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டதால்தான் இப்படி சீக்காளி ஆயிட்டேன்,” என்று அதற்கும் மனைவியைப் பழித்தான். அவன் எது சொன்னாலும் வாய் திறவாது கேட்டுக்கொண்டு இருந்தவளின் பொறுமையும் ஒரு முடிவுக்கு வந்தது. “இந்தப் பிள்ளை எனக்குப் பிறந்ததுதானா? என் சாடையுமில்லே. ஒன்னைமாதிரியும் இல்லியே! எவனை நினைச்சுக்கிட்டு..,” என்று அவன் அடுக்கிக்கொண்டே போக, இப்படி ஒரு அவமானத்தைத் தாங்கிக்கொண்டாவது ‘கணவன்’ என்ற ஒரு கயவனுடன் வாழவேண்டுமா என்று கசந்துபோயிற்று சாவித்திரிக்கு. எதற்கு ஒரு போலி கௌரவம்? கணவனுடைய வாய் ஓயாத இழிச்சொற்களைக் கேட்டு நொந்த மனம், ‘ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ? நான் கெட்டவள்தானோ?’ என்று குழம்பியது யாருக்குப் புரியும்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் தாய்வீட்டுக்கே போனாள். “ஒனக்கு நான் அலுத்துட்டேனா?” என்று வாசலில் நின்றபடி கத்தியவனைப் பார்க்கவும் விரும்பாது உள்ளே நடந்தபோது அலாதி நிம்மதி ஏற்பட்டது. அதன்பின், கோர்ட்டில் பார்த்ததுதான். அப்போது பார்வையிலேயே வெறுப்பைக் கொட்டி, அவன் அவளை வெறித்தது அவன் பக்கம் திரும்பாமலேயே அவளுடைய உள்ளுணர்வுக்குப் புரிந்தது. பத்து வருடங்கள் கழித்து. மாஜிக்கணவன் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு படுக்கையே வாசமாகக் கிடந்த செய்தி அவளை அப்படியொன்றும் பாதிக்கவில்லை. ‘எனக்கும், சந்தேகப்பிராணியான அந்த மனிதனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!’ என்று அலட்சியம் செய்தாள். ஐந்து வருடங்களுக்குமேலாக அவதிப்பட்டுவிட்டு, இன்று நிரந்தர விடுதலை பெற்றிருக்கிறான். அவளுக்குச் சமாசாரம் தெரிவிக்கப்பட்டதும், ‘போய்த்தான் ஆகவேண்டுமா?’ என்று யோசித்துவிட்டு, அழைத்த மரியாதைக்காக வந்திருக்கிறாள். அவன் கட்டிய தாலி அவள் கழுத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த சமூகம் இருக்கிறதே, அதற்கு அவள் இன்னமும் அவன் மனைவிதான். “இவ கண்ணில பொட்டு தண்ணிகூட வரலியே!’ குரல் எழும்பாது யாரோ விமரிச்சித்தது அவள் காதிலும் விழத்தான் செய்தது. ‘பிறருக்காக நான் ஏன் அழவேண்டும்?’ என்ற வீம்பு எழுந்தது. தான் கலங்கி நின்றபோது இவர்களில் எத்தனைபேர் உதவிக்கரம் நீட்டினார்கள்? ‘ஆம்பளை முன்னேபின்னேதான் இருப்பான். கட்டினவதான் பொறுத்துப்போகணும்!’ என்று சொன்னதையே சொல்லி, இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை அடிமையாகவே வைத்திருக்கப்போகிறார்கள்? மூச்சை இழுத்துக்கொண்டாள் சாவித்திரி. பிணவாடையை அமுக்கவென ஏற்றப்பட்ட ஊதுபத்தியின் மணம் அவளைத் தாக்கியது. அதற்குமேலும் அந்தச் சூழ்நிலையைப் பொறுக்க முடியாது, வேகமாக வெளியே நடந்தாள் சாவித்திரி. இனி அவள் வாழ்க்கை அவள் கையில்தான். அவள் நிம்மதியைக் குலைக்க எவருக்கும் அதிகாரமில்லை. நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர். ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை. 1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியத்திற்கான பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். பரிசில்களும், விருதுகளும் * “சிறுகதைச் செம்மல்” விருது (1991) * “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) * சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) * ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். * மின்னூல்கள்: தமிழ் – 27, ஆங்கிலம் – 6 (Amazon Kindle, Amazon paperback) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.