[] [மின்தமிழ் மேடை] [cover1] Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - தமிழ் மரபு அறக்கட்டனள - இந்த இதழில் - 1. தலையங்கம் சுபாஷிணி - 2. பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் திவாகர் - 3. மலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள் தேமொழி - 4. புத்தாண்டு பிறக்குது ! சி. ஜெயபாரதன் - 5. வள்ளுவரின் பொதுநோக்கும் சமயாதீதமும் மலேசிய அறிஞர் டாக்டர்.கி.லோகநாதன் - 6. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும் மேகலா இராமமூர்த்தி - 7. பெரியாரின் பேட்டி தேமொழி - 8. மனோசக்தியின் மகிமை தேமொழி - 9. 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -1 தேமொழி - 10. 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -2 தேமொழி - 11. துப்பாக்கிக் கவுண்டர் முனைவர் கி. காளைராசன் - 12. சிந்தனை களம்: படித்தால் பெரியாளாகி விடுவாய் வித்யாசாகர் - 13. அண்ணமார்சாமி கதை செல்வன் - 14. சைத்தான் ஓதிய வேதம் செல்வன் - 15. நின்னினும் நல்லன்! மேகலா இராமமூர்த்தி - 16. ஆடானையப்பர் ஆலயம் - பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம் சொ.வினைதீர்த்தான் - 17. நடுவட்ட சீனர்கள் செல்வன் - 18. பிலிப்பைனின் தங்கத் தாரா செல்வன் - 19. மாவோரி பழங்குடியினர் ஆயுதங்கள் செல்வன் - 20. மகாத்மா காந்தியின் மரணம் சி. ஜெயபாரதன் - 21. வாதாபி கொண்டான் செல்வன் - 22. பல்லவர், சோழர் காலத்தமிழகத்தில் நிலவிய ஜனநாயகம் செல்வன் - 23. அறிவிப்பு - 24. தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரையிலான வெளியீடுகள் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 தமிழ் மரபு அறக்கட்டனள [eBook_last_page] 2   (மின்தமிழ்மேடை வலைத்தளத்தில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15, 2015 வரை பதிவான படைப்புகளின் தொகுப்பு)   1. தலையங்கம் 2. பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் 3. மலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள் 4. புத்தாண்டு பிறக்குது ! 5. வள்ளுவரின் பொதுநோக்கும் சமயாதீதமும் 6. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும் 7. பெரியாரின் பேட்டி 8. மனோசக்தியின் மகிமை 9. 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -1 10. 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -2 11. துப்பாக்கிக் கவுண்டர் 12. சிந்தனை களம்: படித்தால் பெரியாளாகி விடுவாய் 13. அண்ணமார்சாமி கதை 14. சைத்தான் ஓதிய வேதம் 15. நின்னினும் நல்லன்! 16. ஆடானையப்பர் ஆலயம் – பாடல் பெற்ற தலம் 17. நடுவட்ட சீனர்கள் 18. பிலிப்பைனின் தங்கத் தாரா 19. மாவோரி பழங்குடியினர் ஆயுதங்கள் 20. மகாத்மா காந்தியின் மரணம் 21. வாதாபி கொண்டான் 22. பல்லவர், சோழர் கால ஜனநாயகம் 23. கல்வெட்டு வகுப்புகள்: அறிவிப்பு 24. தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் [] THE TEXT IN THIS ISSUE BY Tamil Heritage Foundation IS LICENSED UNDER A CREATIVE COMMONS ATTRIBUTION-SHAREALIKE 4.0 INTERNATIONAL LICENSE.     [pressbooks.com] 1 தலையங்கம் சுபாஷிணி தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம்!!   இன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண்டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த  உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.   1800ம் ஆண்டு வாக்கில் அமுல் படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியிருந்தது.  இந்தியாவில் அப்போது நடப்பில் இருந்தது  பிரித்தானிய காலணித்துவ ஆட்சி. ஆக, பிரித்தானிய அரசு அப்போதைய இந்திய காலணித்துவ  அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தென்னாப்பிரிக்கக் காடுகளை வெட்டி கரும்புத்தோட்டம் உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து தொழிளாளர்களைக் கொண்டு செல்வது என முயற்சி மேற்கொண்டது.  இந்தியாவின் வளங்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வது என்பதை அப்போதைய  காலணித்துவ அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காலணித்துவ நாடுகளின் வளங்களே பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொருட்களை எப்படி தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனரோ அதே போல மனிதர்களையும் தமது பொருளாதார வளத்தினைப் பெருக்க பிரித்தானிய அரசு பயன்படுத்திக் கொண்டது. இதன் அடிப்படையில் தான் பல தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்திய தொழிலாளர்கள் மலாயா, சிங்கை, பர்மா, மொரிஷியஸ், பிஜி தீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர்.  இப்படித்தான் தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கும் தென்னிந்தியர்கள் குடியேற்றம் ஆரம்பித்தது.   1860 ஆண்டு அப்போதைய  மட்ராஸிலிருந்து 16 நவம்பர்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர்.  இவர்கள் மூன்றாண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இதனை அடுத்து தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.   தென்னாப்பிரிக்கத்தமிழர்களின் தமிழ் தாகம் என்பது அளப்பறியது. தங்கள் மொழி என்பது நாளடையில் புழக்கத்தை விட்டு மறைந்து விட்டதை உணர்ந்து தங்கள் மொழியையும், பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் அண்மைய காலத்தில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். தமிழிசையை புறந்தள்ளும் நிலை மாறி பல முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழிசையே ஆக்கிரமிக்கும் நிலையை இங்கு காண்கின்றோம். கோயில்கள், தமிழ் சடங்குகள், தமிழ் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மென்மேலும் தங்கள் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து கால ஓட்டத்தில் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் இவர்கள் கவனத்துடன் செயல்படுகின்றனர். பல்வேறு தென்னாப்பிரிக்க தமிழ்ச்சங்கங்களும்  தமிழ் இயக்கங்களும் செய்யும் சேவைகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் தமிழ்ச்சேவையானது அளப்பறியது; குறிப்பிடத்தக்கது.   தமிழ் மொழி தென்னாப்பிரிக்காவில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது தகுதியான தமிழ்ப்பாடங்களே; அப்பாடங்களை முறையுடன் நடத்த  தகுதி பெற்ற தமிழாசிரியர்கள்; என அடிப்படை தேவையைக் கண்டறிந்து இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு தமிழாசிரியர்களுக்கான ஓராண்டு பயிற்சியைச் செய்து முடித்திருக்கின்றது இந்த இயக்கம். இதன் வழி 43 மாணவர்கள் தம்மை தகுதி பெற்ற தமிழாசிரியர்களாக உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது இத்திட்டம். இத்திட்டத்தின் பின்னனியில் இருந்து அதனை இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். பொருளாதார ஆதரவு, திட்ட அமைப்பு, மாணவர்களுக்கும் அமைப்பிற்கும் ஆதரவு என பல்முனையில் செயல்படும் இவர் ஒரு அசாத்தியமான  மனிதர். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் இவர் என்பது மிகையான கூற்று அல்ல.   மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளின்  20 ஆண்டு காலங்கள் தென்னாப்பிரிக்காவில் வசித்தவர். மகாத்மா காந்தியடிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்களில் ஒருவராக அறியப்படும் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு தென்னாப்பிரிக்கா. அங்கு அப்போது எவ்வகையில் தமிழ் உணர்வு இருந்ததோ அதில் சிறிதும் குறைவில்லாது,  தமிழ் உணர்வே தமிழரின் தன்மானத்திற்கு அடையாளம் என தென்னாப்பிரிக்க தமிழர்கள் தீவிரமாக தமிழ் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமது இன்றைய நிலை போலல்லாது நன்கு தமிழில் எழுதவும் பேசவும் கற்றவர்களாக வளர்ச்சி பெற  வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!  [] அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது. அன்புடன் சுபாஷிணி ------------------------------------------------------------------------ [] சுபாஷிணி – ksubashini@gmail.com ------------------------------------------------------------------------ 2 பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் திவாகர்   இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. முக்கியமாக தமிழர்கள் இடமாற்றம் அதுவும் தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலத்தை விட்டு பாரதத்தில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் குடியேற்றம் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆராயப்பட்டு எழுதப்பட்டதாகும்.   உலகிலுள்ள பண்டைய குடி இனங்களில் காலம் காலங்களாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தை தன்னுள் வாங்கிக்கொண்டு அதனால் புத்துணர்ச்சி பெற்று மென்மேலும் பெருமை பெற்று வாழும் குடி தமிழ்க்குடி ஒன்றுதான் என்று மிகத் தைரியமாக சொல்லவேண்டும். தமிழர்களின் தோற்றத்தைக் காலக் கணக்குக் கொண்டு நிச்சயமாகக் கணக்கிடமுடியாது. அவர்கள் எந்தப் பகுதியில் முதலில் தோன்றினார்கள் என்பதையும் நம்மால் இன்னமும் நேர்த்தியாக விளக்கமுடியவில்லை. கடலால் அழிந்த குமரிக்கண்டத்தில் தமிழர்கள் தோன்றினார்கள் என்று பொதுவாக நிறுவப்பட்டாலும், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் மத்தியில் இந்தோனிஷியாவையும் இணைத்துக் காணப்பட்ட பூமி என்று பல தன்னார்வக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும் நிறுவப்படாத செய்திகளை நாம் இக்கட்டுரையில் கொண்டு வரப்போவதில்லை. தற்போதுள்ள தமிழக-கேரள  பூமியே தமிழர்கள் தோன்றிய பூர்வ நிலம் என்ற வழக்கையே தமிழர் சொந்த பூமியாக ஏற்றுக்கொண்டு, இப்படி தம் சொந்த பூமியிலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்த வரலாற்றை மட்டும் கவனிப்போம்.   சங்கத் தமிழ் சொல்லும் குமரிமுனையிலிருந்து திருவேங்கடம் வரை உள்ள நிலப்பரப்பில் ஆதியில் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப தமிழர்கள் வாழ்ந்தாலும், தங்கள் நாகரீகத்தை தங்கள் சொந்த பூமியிலிருந்து கொண்டே வளர்த்துக்கொண்டும் மேன்மைப்படுத்திக் கொண்டும் வாழ்ந்தாலும் இன்றைய பாரதத்தில் பிற இடங்களிலும் சங்ககாலம் தொட்டே தங்கள் இனப்பெருக்கத்தைக் கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். அதே போல இன்றைய தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளு (மலையாளத்தையும் தமிழையும் தற்போதைக்குப் பிரித்துப் பார்க்கவில்லை. காரணம் தமிழின் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட மொழியாக மலையாளம் உள்ளது) ஆகியவைகளில் தமிழின் வழக்கமான அளவில் பேசப்படும் சாதாரணச் சொற்கள் கலந்து மக்கள் வாயால் பேசப்படும்போதுதான் தமிழர்கள் இங்கெல்லாம் குடியேறி இருக்கிறார்கள் என்பது விளங்கும். இந்தச் சொற்களைப் பற்றி அதிகமான அளவில் கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, துளு நாட்டிலும் (மேற்குக் கடையோர மங்களூர் உடுப்பி போன்ற இடங்கள்) அதே போல தென் கலிங்கநாட்டில் (இன்றைய வடகிழக்கு ஆந்திரா) மக்களால் பேசப்படும் சாதாரண பேச்சு வழக்கில் கூட தமிழுக்கே தனிப்பட்ட உரிமையான பல சொற்கள் அந்தந்த மொழிகளோடு கலந்து விட்டதையும் அவர்களிடத்தில் நாம் பேசும்போது சாதாரணமாகவே அறியலாம். உதாரணத்துக்காக உயரமான மலைக்குடியேற்றத்துக்காக செல்லும் ஆரம்பப்பகுதியை தமிழில் அடிவாரம் என்றழைப்பது சகஜம்தான். இன்றைக்கும் தென் கலிங்கத்து மலைகளின் கீழ்ப்பகுதியை அடிவாரம் அல்லது அடவிவரம் என்றே அழைக்கிறார்கள். இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். தமிழர்கள் எந்தந்த சமயங்களில் இப்படி குடியேற்றம் மாறினார்கள் என்பதை சற்று விளக்கமாகக் கவனிக்கலாம்.   தமிழர்கள், பற்பல ஆண்டுகளாகவே கடும்  உழைப்பாளிகளாகத்தான் இருந்ததாக தமிழர் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன். இன்றைக்கும் கூட கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான அளவில் தமிழர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கும் கூட கிரானைட் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழை ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது என்பதும் அந்த ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற தமிழர்கள்தாம் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் அறிந்தார்களோ நாம் அறியோம். (ஒருவேளை பழைய நாளேடுகளில் கொத்தடிமை மீட்கப்பட்டனர் என்ற சிறு செய்திகள் படித்திருப்போருக்கு இவை ஞாபகம் இருக்கவாய்ப்புண்டுதான்.) தமிழர்கள் மூன்றுவிதமாக செயல்திறன்களில் சிறந்து விளங்கினார்கள்.   பண்டைய காலத்தில் இரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் சக்கரக்கோட்டம் (இன்றைய பல்சார் மாவட்டம், சட்டிஸ்கர் மாநிலம்) என்ற நகரத்தைச் சூழந்த காடுகளில் நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் மத்தியிலும் இந்த சக்கரகோட்டத்தில் மிகப் பெரிய இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012-1042) நடைபெற்ற ஒரு யுத்தம் அங்குள்ள இரும்புச் சுரங்கங்கள் சோழர்கள் வசம் முழுமையாக சிக்குவதற்குக் காரணமாக இருந்தது. இரும்பு என்பது மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக அமைந்து விட்ட காலகட்டத்தில் இந்த இரும்புச் சுரங்கங்களை சோழ அரசே தங்கள் வசம் வைத்திருந்ததற்கான பல ஆதாரங்களை சரித்திர ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகவே கண்டறிந்துள்ளனர். இரும்புச் சுரங்கங்களில் தமிழர்களே வேலை செய்தனர். தமிழர்களே காவல் காத்தனர். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) காலத்திலும் இந்த இரும்புச் சுரங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள இன்னொரு முறை ஒரு யுத்தம் நடந்ததாக  குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் ஒரு வரி உள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்தச் சுரங்கங்கள் மத்திய இந்தியாவின் உள்ள வேறு பல அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், பிறகு தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டது. ஆனால் பத்து, பதினோராம் நூற்றாண்டில் குடியேறிய தமிழ்த் தொழிலாளக்குடும்பங்கள் நிலையாக அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்துள்ளனர். வீரர்களுக்குத்தான் எப்போதுமே இடமாற்றம் உண்டாகுமே தவிர தொழிலாளப் பெருமக்களுக்கு ஏது இடமாற்றம். மேலும் ஒரு தொழிலில் தம் திறமையைக் காண்பிக்க முற்பட்டுவிட்டால், அதன் சிறப்புத் தன்மையால் எந்த இடத்தில் தங்கள் தொழிலைச் செய்கிறோமோ அங்கேயே தங்கிவிடும் பழக்கம் எல்லாக் குடியினரிடத்திலும் உண்டு. இப்படியாக கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள்தாம் இன்றைக்கும் பிஜித்தீவி கரும்புத் தோட்டங்களிலும், மலேஷிய ரப்பர் தோட்டங்களிலும், இலங்கை தேயிலைத் தோட்டங்களிலும் வேர்விட்டு மரமாகி ஆலமாகி நின்று விட்டதை யார்தாம் மறுக்கமுடியும். அதே போலத்தான் அன்றைக்கு சக்கரக்கோட்டக் காடுகளிலும் மேலும் வடக்கே நீண்ட கனிமச் சுரங்களிலும் வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.   ஆனால் காலம் கொடுமையானது. பின் வந்த காலங்கள் இரும்புக்காக எத்தனையோ போர்களை சந்தித்தன. போர்களை நடத்தியவர்கள் இந்திய சிற்றரசர்கள் மட்டுமல்ல, துருக்கியில் இருந்து வந்து நம்மை ஆண்ட துருக்கர்களும் அதற்குப் பின்னர் வந்த ஐரோப்பியர்களும் கூட. சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பிழைப்பு அவ்வளவாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்களது பரம்பரை பழக்கவழக்கங்கள் காலத்தால் மாறுபட ஆரம்பித்தன. இந்தக் கலாசார மாற்றம் தமிழனின் வாழ்க்கை முறையையும், மொழியையும் பாதித்தது என்று கூட சொல்லலாம்.   பீஹார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தமிழ்க்கடவுளான முருகர் வழிபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பின்னால் வந்த கதைகள் முருகனை வடநாட்டுக் குமாரசுவாமியாக ஆக்கினாலும் தமிழனின் தலைக் கடவுள் முருகனை என்றும் தமிழர்களின் வாரிசுகள் மறக்கவில்லை என்பதற்கான சான்றுதான் இது. இன்று அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனாலும் முருக வழிபாடு ஒன்றே அவர்களை இன்னமும் தமிழகத்தின் வேரை மிகப் பலமாக அவர்கள் மனதில் ஊன்றியிருக்கிறது என்று சொன்னாலும் மிகை அல்ல.   அதே போல ஆந்திரத்தில் வேறு வகையான நிலையில் தமிழர்கள் குடிபெயர்ந்தனர். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஆந்திரம் முழுவதும் போயர்கள் எனும் மலைவாழ் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த போயர்கள் மிகவும் உன்னத நிலையில் இருந்ததாக அவர்களைப் பற்றிய சரித்திரம் சொல்கிறது. மேலும் இவர்கள் வடநாட்டில் உள்ள காசியில் வேதம் பயின்று, புரிநூல் தரித்து அவர்கள் வேதக் கொள்கைகளை ஏற்று அவைகளை மலைவாழ் மக்களிடம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தனர். மடிபோயா என்பவர் மடிசர்மா என்று பெயர் மாறியதற்கான ஆதாரங்களும் ஆந்திர சரித்திரத்தில் உள்ளன. ஆனால் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் வந்த சாளுக்கிய வம்சத்தினர் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து கீழைச் சாளுக்கியம் என ஆந்திரக் கிழக்குப் பகுதியையும் மேலைச் சாளுக்கியம் என இன்றைய மேற்கு ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரத்தின் தென்பகுதியையும் ஆள ஆரம்பித்தனர். இவர்கள் வேத மதத்தை முறையாகப் பரப்ப கோவில்களை அதிகம் கட்ட ஆரம்பித்தனர். 9ஆம் நூற்றாண்டில் ஐந்து பெரும் சிவன் கோவில்கள் ஆந்திரத்தில் எழுப்பப்பட்டு இன்றும் பஞ்சராமம் ஸ்தலங்கள் என்ற பெயருடன் சிறப்பாக போற்றப்படுகின்றன.   சரி, இவை எதற்காக சொல்கிறோம் என்றால் வேதபாடங்கள் சொல்வதற்கு போயர்கள் ஏற்கத்தக்கவர் இல்லை என்று கீழைச் சாளுக்கிய ராஜாக்கள் அந்த இனத்து மக்களோடு யுத்தம் செய்ததாகவும் கலிங்கம் முதல் இன்றைய ஓங்கோல் வரை நீண்ட நாட்களாக நடந்த சண்டைகளில் போயர்கள் வீழ்த்தப்பட்டதையும் ஏகப்பட்ட செப்புப்பட்டயங்கள் பறைசாற்றுகின்றன. இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமே கல்வி கேள்விகளில் சிறந்து விள்ங்கியதால் கல்வியறிவு பெற்ற வேத விற்பன்னர்கள் பலர் குடும்பம் குடும்பங்களாக ஆந்திர தேசத்துக்கு அனுப்பப்பட்டனர், என்றும் அவர்களுக்குத் தோதாக ஆங்காங்கே கோவிலக்ள் கட்டப்பட்டு அவர்கள் பராமரிப்பில் நிலங்கள் நிவந்தமாகவும் விடப்பட்டதற்கு செப்புப்பட்டயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.. இன்றைய குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டண  மாவட்டங்களில் இந்தத் தமிழ் அந்தணர்கள் குடியேற்றம் நடந்ததையும் குலோத்துங்கனின் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர்கள் வடநாட்டைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லை என்றும் சாமவேதம் கற்ற தமிழ் அந்தணர்கள்தாம் என்றும் உறுதி செய்கின்றார். இன்றைக்கும் இந்தத் தமிழர்கள் தங்கள் குடிப்பெயராக ’திராவிட’ என்ற பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழை திராவிடமொழி என்று வடநாட்டார் பல்லாண்டுகளாக எழுதி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த திராவிட குடும்பத்தார் பல்லாயிரக்கணக்கில் ஆந்திராவில் இருந்தும், தம் முன்னோர் அனைவரும் தமிழர்களே என அறிந்தும் தம் மொழியை மட்டும் மறந்துபோயினர்.. இன்று அதற்காக வருத்தப்படும் பல குடும்பங்கள் இங்கு உள்ளன என்றாலும் காலம் எனும் காலன் செய்த கோலம் இது என்று சொல்லலாமா அல்லது முன்னோர்கள் முயலாததால்  காலத்தின் மாற்றத்தில் தமிழ்மொழியை நழுவவிட்டக் கொடுமையை என்று நம் முன்னோர்கள் மீது பழியைப் போடுவோமா?   அதே போல வைணவத்தைப் பரப்புவதற்காக நாதமுனி எனும் வைணவப்பெரியார் – 10ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், இவர் வைணவமதத்தின் ஆதி குரு எனப்போற்றப்ப்படுபவர். அவர் வைணவ மதத்தைத் தனிப்பட்ட வகையில் பரப்புவதற்காக பல வைணவக் குடும்பங்களை தமிழகத்திலிருந்து ஆந்திரா முழுவதும் அனுப்பி வைத்தார். இப்படி ஒரு வைணவக் குடும்பத்துக்கு நிலம் நிவந்தம செய்யப்பட்டதற்கான இன்றைய பிரகாசம் மாவட்டம் காரம்சேடு வேணுகோபாலசுவாமி கோயிலில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று எடுத்துக் காட்டுகிறது, இன்றும் ஆந்திரத்தின் கடைக்கோடியில் உள்ள ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் கோயில்களில் கூட இந்த வைணவக்குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களால் தமிழ் பேசமுடியவில்லை என்றாலும், கோயில்களில் தமிழ்ப்பிரபந்தங்கள் பாடுவதை வழக்கத்தில் இன்னமும் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.   அதே போல ஜெயங்கொண்டார் தான் பாடிய கலிங்கத்துப் பரணியில் இன்றைய ஒடிஷா-ஆந்திர எல்லையில் தமிழ்வீரர்கள் கலிங்கத்தோடு நடைபெற்ற போரில் வெற்றி கிடைத்ததும், கலிங்க வீரர்களைத் தேடித் தேடிப் பிடிக்கையில் கலிங்க வீரர்கள் மாறு வேடம் பூண்டு தாம் புத்தர்கள், தாம் தெலுங்கர்கள், தாம் அரவமொழி பேசும் தமிழர்கள் என்று சொல்லித் தப்பித்தனராம். அரவம் என்றால் தமிழ்மொழி என்பதும் அவர்கள் அந்த மண்ணின் மைந்தராக மாறினாலும் அரவமொழியைப் பேசியதால் அரவர்கள் என்றே அழைக்கப்பட்டதாக அந்தச் செய்தி சொல்கிறது. இது பதினொன்றாம் நூற்றாண்டுச் செய்தியாகும்.   வடநாடுகளில் தமிழர் குடியேற்றம் பல நூறாண்டுகளாகவே வணிக நிமித்தமாக நடைபெற்று வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கன்னோசி நகரத்துக்கு ராஜேந்திர சோழர் காலத்தில் சில சிங்களக்குடும்பங்களும், தமிழ்க்குடும்பங்களும் அனுப்பப்பட்டன என்று இலங்கை மஹாவம்சத்தினர் எழுதியுள்ளார்கள். இதற்கு ஆதாரத்தகவல்கள் சோழநாட்டில் உண்டு. ராஜேந்திரர் இலங்கையை முழுவதும் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்த போது, இலங்கைக்கு கன்னோசி மன்னர் உதவியதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.  இன்றைக்கும் தமிழே அறியாத பீஹார் தமிழர்கள் பாடலிபுத்திரம் என்கிற பாட்னாவிலும் ராஞ்சியிலும் ஏராளமான அளவில் வசித்து வருகிறார்கள். வணிகர்கள் குடியேறுவது என்பது காலம் காலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்தான்.   தமிழ் வணிகர்கள் ஆந்திரத்தின் வடபகுதியில் குடும்பஙளோடு வசித்ததையும், அப்படி ஒரு குடும்பம் சிம்மாசலம் கோயிலுக்காக ஒரு பெரு நிலத்தில் தோட்டத்தை வளர்த்து, அந்த நந்தவனத்தை நிவந்தமாக (தானம்) அளித்ததையும் ஒரு தமிழ்க்கல்வெட்டு பேசுகிறது. எங்கோ ஆந்திராவில் வடகோடியில் உள்ள இந்தக் கோயில் பற்றிய முதல் கல்வெட்டு கூட தமிழ்தான் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அத்தோடு பெருநிலம் ஒன்றினை ஒரு தமிழ் வணிகன் தானம் செய்தான் என்றால் அவன் இன்னும் எத்தனை பெரிய இடங்களை அந்தச் சமயத்தில் தன் வசத்தில் வைத்திருந்தானோ.. அவனைப் போல பல தமிழ் வணிகர்களும் அங்கு இருந்ததாக திரு பி.சுந்தரம், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரியர் 1963 இல் ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரையாகவே வடித்திருக்கிறார்.   தமிழர் குடியேற்றம் குழுமங்களாகத்தான் நடைபெற்றன. இந்தக் குழுமங்கள் வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சங்கங்கள் வைத்து தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டதற்கான உதாரணங்கள் வெகுவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழ் வணிகர்கள் கடல்கடந்த வெளிநாடுகளில் எண்பேராயம், ஐந்நூற்றவர் என்று தங்கள் சமூகத்துக்காகவே சங்கங்கள் அமைத்தவை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் அந்தந்த நாடுகளில் கிடைத்துள்ளன. இந்தியத் திருநாட்டில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள சங்கங்களைப் பற்றிய பழைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய பெரிய நகரங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே சங்கம் வைத்துக் கொண்டு காலத்துக்கு ஏதுவாக செயல்பட்டது தெரியவருகிறது.   ஆனாலும் இப்படி பழையகாலத்தில் குடியேறிய தமிழ் மக்கள் தங்கள் வாரிசுகளைப் பற்றியோ, அவர்களுக்கு மொழிப்பற்று கொடுக்காமல் மறைந்தது பற்றியோ நாம் இனியும் பேசிக் கொண்டிராமல் தற்காலத்தில் இப்படி குடியேறும் தமிழ்க் குடும்பங்கள் மறவாமல் தம் பிள்ளைகளுக்கு தேனினும் இனிய தமிழறிவை எப்பாடுபட்டாவது புகட்டவேண்டும். அன்று அப்படிக் குடியேறிய தமிழர்கள் செய்த பிழையை நாமும் செய்யலாமா.. இன்று முனோர்களைச் சுட்டிக்காட்டி தவறு செய்துவிட்டார்களே என்று நாம் சுமத்தும் அவப்பெயர் நாளைய இளையதலைமுறையினரால் நமக்கும் ஏற்படக்கூடாது அல்லவா..   நாவுக்கினிய நம் இனிய தமிழ் மொழியை நம் செல்வங்களுக்குத் தந்து நாம் பெருமை கொள்வோம். இதை இந்தப் புத்தாண்டு உறுதிமொழியாக ஒவ்வொரு தமிழ்க்குடியின் தலைவனும் தலைவியும் மேற்கொண்டால் அதுவே அவர்கள் தம் வாழ்நாளில் மொழிக்குச் செய்த பெரும் சேவையாகும்…   ------------------------------------------------------------------------   [] திவாகர்- venkdhivakar@gmail.com ------------------------------------------------------------------------ 3 மலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள் தேமொழி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வம் என்ற சொல்வழக்கினை செயல்படுத்த எங்கெங்கும் கோயில்களை அமைப்பது தமிழர் மரபாக இருக்கிறது. மலை உச்சிகள், கடற்கரைகள், குளக்கரைகள், ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, நடைபாதைகளையும் நாம் விட்டு வைத்ததில்லை. தமிழக மக்கள் தொன்று தொட்டு வழிபாட்டில் உள்ள தெய்வங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வந்து பரவிய மதங்களுக்கும் வழிபாட்டிற்காக ஆலயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆலயங்கள் கலாச்சார மையமாக மட்டுமின்றி மானுடவியலின் பிரதிநிதியாக மனிதர்களின் வாழ்வியல் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. ஓரிடத்தின் கோயில்களின் தன்மையைக் கொண்டு அங்கு வாழும் மக்களை, அவர்களது பின்புலத்தை நாம் அறியலாம். காட்டாக, இந்தியக் கடற்கரையோர நகர்களில் வந்திறங்கிய மேலைநாட்டு கிறிஸ்துவர்களின் தாக்கத்தினாலும் போதனைகளாலும் அம்மதத்தைத் தழுவிய கடல் சார்ந்து வாழ்ந்த மீனவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் அவர்கள் வணங்கும் தேவாலயங்களையும் நாமறிவோம். அது போல நம் நாட்டின் மதங்களும் கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ளதை அங்குள்ள புத்த மத வழிபாட்டினாலும், இந்து மதக் கோயில்களாலும் அறிவோம். அவ்வாறு பரவிய இந்துமதத்தின் கோயில்களைக் கொண்டும் அங்கு சென்று வாழ்ந்த இந்தியர்களின், தமிழர்களின் பின்னணியையும் அறியலாம். கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோயில் உருவாகிய காலத்தில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் பின்னணி, இக்கால மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பின்புலம் போன்றவற்றை அவர்கள் வழிபடும் கடவுள்களின் கோயில்களைக் கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம். மலேசிய கோயில்கள் தமிழர்களின் சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும்: தமிழகத்தின் சமய வளர்ச்சியில் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடபுலத்திலிருந்து வந்து பரவியிருந்த சமண புத்த மதங்கள் மறைந்து, மற்றுமொரு வடபுலத் தாக்கத்தினால் நலிவடைந்திருந்த இந்து மதம் அரசர்களின் ஆதரவு பெற்று மறுமலர்ச்சி அடைந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த பண்டைய வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் உள்ளிழுத்து மறுமலர்ச்சி அடைந்த இந்துமதம் தன்னை உறுதிப் படுத்திக் கொண்டது. பண்டைய தமிழர்களின் வழிபாடு தங்களது மூதாதையரை தெய்வங்களாக வணங்குவதாக இருந்தது. இந்த ஆதிகால வழிபாட்டுத் தெய்வங்கள் பிற்காலத்தில் சிறுதெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டனர். இந்த மரபு வழி தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற பாமர மக்களின் பண்பாடாக இருக்கிறது. மாறாக, பெருந்தெய்வங்கள் வேதங்கள் கூறும் புராண தெய்வங்களாவர். சுருக்கமாகக் கூறின், சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களென்றும் அறியப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டின் அடியையொற்றி இவை முறையே நாட்டுப்புற சமயமென்றும், பெருஞ்சமயமென்ற பிரிவுகளாகவும் வழங்கப்பட்டு வருகிறது (முனைவர் ஒ.முத்தையா, தமிழ் இணையக் கல்விக் கழகம்). [] கிராமங்களை இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபு வழி வந்த சிறுதெய்வங்கள் (1) ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு உரிய தெய்வமாகவோ, (2) ஒரு குலத்திற்கு உரிய தெய்வமாகவோ (ஒரே மூதாதையர் வழி வந்த குடும்பக்களுக்குரிய), (3) ஓர் இனத்திற்குரிய தெய்வமாகவோ (சாதிப்பிரிவு), (4) ஊர்த்தெய்வமாகவோ அல்லது (5) பெரும்பான்மையோர் வணங்கும் (வெகுசனத் தெய்வம் என்றும் குறிப்பிடப்படும்) தெய்வமாகவோ இருப்பர். இச்சிறு தெய்வங்களில் பெரும்பாலோர் பெண்தெய்வங்களாவர். பெண்தெய்வங்களிலும் தாய்தெய்வங்களே அதிகம், கன்னித் தெய்வங்களும் உண்டு. ஆண் தெய்வங்களை விட பெண்தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர், இந்த நம்பிக்கையை “சக்தி இருந்தால் செய், சக்தி இல்லையேல் சிவனே என்று இரு” என்ற பழமொழியின் வாயிலாகவும் அறியலாம் என்கிறார் முனைவர் ஒ.முத்தையா. வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாகவும், வலிமைக்கும் திறமைக்கும் குறியீடாகவும் போற்றப்படுபவர் பெண் தெய்வங்கள். வணங்கினால் நன்மையும், வணங்காவிட்டால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வழிபடப்படும் பெண் சிறுதெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள். மழைத்தெய்வமாக, மழை தந்து உயிர்வளங்களைக் காப்பதாகக் கருதப்பெறும் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படுவதுண்டு. தமிழகம் முழுவதும் மாரியம்மன் வழிபாடு பரவி இருந்தாலும் தென் மாநிலங்களில் மாரியம்மன் வழிபாடு அதிகம். சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையாக குறிப்பிடப்படும் காளியம்மனின் கோயில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அடுத்துப் பரவலாக வணங்கப் படும் ஒரு தெய்வம் காளியம்மன். வேதங்கள் குறிப்பிடும் கோப ஆவேசம் கொண்டு தீயவர்களைத் தண்டிக்கும் காளியே இந்தக் காளியம்மன் ஆவார். சிறுதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிறுபான்மையினரே. இவர்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக ஊருக்குப் புறத்தே கோயில் கொண்டிருப்பர். ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வணங்கப் பெறும் ஆண்தெய்வங்களில் (1) முதன்மை தெய்வங்களும், அவர்களுக்கு உறுதுணையான உள்ளோர் பரிவாரத் தெய்வங்களாகக் கருதப்படும் (2) துணைமைத்தெய்வங்களும் உண்டு. முதன்மை தெய்வங்களாக அய்யனார், முனீஸ்வரன், சுடலை மாடன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் வணங்கப் படுகின்றனர். கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படும் ஐயனார் வழிபாடு தமிழக கிராமங்களில் பரவலாக அதிகம் உண்டு. மாயாண்டி, மாடசாமி, சடையாண்டி போன்றோர் துணைமைத் தெய்வங்களாவர். குளம் ஏரிபோன்ற நீர்நிலைகளில் அருகில் மிகச்சிறு கோயில்களில், அல்லது ஊருக்கு வெளியே கொடிய ஆயுதங்கள் கையிலேந்தி மண்குதிரை போன்ற வாகனங்களுடன்இருக்கும் சிறுதெய்வங்களின் தோற்றம் அச்சம் தருவதாகவும், உருவத்தில் பெரியவையாகவும் இருக்கும். பூசாரிகள் கொண்டு பூசைகள் நிகழ்த்தி, பலி கொடுத்து வணங்கப்படும் வழிபாட்டு முறைகள் கொண்ட சிறுதெய்வங்கள் என்போர் தோன்றி, வாழ்ந்து, மக்களைக் காத்து, அவர்கள் நலனுக்காக தங்கள் இன்னுயிரை விட்டவர்கள் ஆவர். காலப்போக்கில் சிறுதெய்வங்கள் பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வங்களாக மாற்றப்பட்டு பிறகு பெருந்தெய்வங்களின் வடிவமே இவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாடுகளில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்கள் தெய்வங்களின் மேல்நிலையாக்கம் (sanskritization) எனச் சுட்டப்படுகிறது. காட்டாக, ‘மாரியாயி’ என்ற சிறுதெய்வம், ‘மாரியாத்தா’ என்ற பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வமாக மாறுதலடைந்து, பிறகு ‘ஸ்ரீகௌமாரியம்மன்’ என்ற பெருந்தெய்வமாக மேல்நிலையாக்கப்படுகிறது. அது போன்றே ‘காளியாயி’ என்ற சிறு தெய்வம், ‘காளியாத்தா’ என்று மாற்றமடைந்து, பிறகு ‘ஸ்ரீகாளீஸ்வரி’ என்ற பெயருடன் பெருந்தெய்வமாக பெரும்பான்மையினர் வணங்குவதற்கு மேல்நிலையாக்கம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து ஆகம முறை வழிபாட்டைக் கொண்டு வணங்கும் முறைகளும் தொடர்கிறது. பெரிய கோபுரம் உள்ள கோயில்களும் எழுப்பப்பட்டு, பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் கோயிலுக்கு புறத்தே நடத்தப்படுகிறது. []   அக்கரைச் சீமையின் அம்மன்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் (பரதன் குப்புசாமி, 2006; பார்பரா வெஸ்ட் 2009). இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டு பின்பற்றிய கடவுள்களுக்கு கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது (சுபாஷிணி ட்ரெம்மல், 2013). இத்தகவலை மேலும் ஆழ்ந்து நோக்க விரும்பி மலேசிய இந்து தெய்வங்களின் கோயில்களின் பட்டியல் விக்கிபீடியாவில் இருந்து தரவிறக்கப்பட்டு, கோயில்களின் தெய்வங்களின் பெயர்கள் கொண்டு பகுக்கப்பட்டது [மலேசிய மண்ணின் வளர்ச்சிக்கு தமிழக இஸ்லாமியர் பெரும்பங்கு ஆற்றியிருந்தாலும், இந்த கட்டுரையின் நோக்கத்தின் காரணமாக அத்தமிழர்களின் பின்புலத்தை அறியத்தரும் அவர்களது வழிபாட்டுத்தலங்களோ தகவல்களோ தவிர்க்கப்பட்டுள்ளது]. இது போன்று தற்கால நிலையினைக் கடந்தகால நிகழ்வுகளின் வரலாற்றுத் தரவுகள் துணை கொண்டு அறிந்து கொள்ளும் ஆய்வு “வரலாற்று ஆய்வு” (Retrospective Observational Study) என்ற முறையாகும். [] தரவுகளின் படி மலேசிய மண்ணில் ஆண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கையும் பெண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிகையும் சம அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் சிறுதெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 58 விழுக்காடும், பெருந்தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 42 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் ஆழ்ந்து நோக்குகையில் அதிக கோயில்கள் இருப்பது  மாரியம்மனுக்கே (30%) என்பது தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்து இடம் பெறுபவை முருகன் கோயில்களும் (19%), முனீஸ்வரன் கோயில்களும் (10%), காளியம்மன் கோயில்களும் (10%), பிள்ளையார் கோயில்களும் (7%) ஆகும். உத்தேசமாக, இரண்டு கோயில்களில் ஒன்று சிறு தெய்வங்களின் கோயிலாகவும், மூன்று கோயில்களில் ஒன்று மாரியம்மன் கோயிலாகவும் அமைந்திருக்கிறது. மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் கூட்டாக 40% கோயில்களாக அமைந்து நாட்டுப்புற சிறுதெய்வங்களான பெண்தெய்வங்களின் கோயில்கள் அதிகம் இருப்பது தெரிகிறது. இவற்றோடு 10% முனீஸ்வரன் கோயில்களையும் கணக்கில் கொண்டால் சிறுதெய்வங்களின் கோயில்கள் பாதிக்கும் மேல் பெரும்பான்மையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தரவுகள் அளிக்கும் இந்துக்கோயில்களின் தகவல்கள், மலேசியாவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளில் பெரும்பான்மையோர் தமிழக கிராம மக்கள் என்ற தகவலையே ஒத்திருக்கிறது. மலேசியாவின் புகழ் பெற்ற, நீண்ட காலமாக வழிபாட்டில் இருக்கும் கோயிலும் கோலாலாம்பூரில் மாரியாம்மன் கோயிலே. கோலாலாம்பூரின் சைனா டவுன் அருகில் இருக்கும் இப்புகழ் மிக்க, பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் 1873 ஆண்டு திரு. தம்புசாமி பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பிள்ளைக் குடும்பத்தினரின் தனிப்பட்ட இக்கோயில் பிறகு 1920களில் அனைவரும் வணங்கிப் பயன் பெரும் கோயிலாக மாற்றப்பட்டு, தற்பொழுது ஒரு அறங்காவல் குழுவின் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. சிறு செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் இடம்மாற்றப்பட்டு 1973 இல் கோபுரம் உள்ள புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் நீண்ட காலமாக வழிபடும் இந்துக்கோயிலாக உள்ளது இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் சிறப்பு.   ஆதாரங்கள்: - பரதன் குப்புசாமி, (BaradanKuppusamy – 24 March 2006). “Racism alive and well in Malaysia”. Asia Times.பார்த்த நாள் 27 October 2010. – http://www.atimes.com/atimes/Southeast_Asia/HC24Ae01.html - பார்பரா வெஸ்ட் (West, Barbara A. – 2009).Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. – http://books.google.com/books?id=pCiNqFj3MQsC&printsec=frontcover&hl=en#v=onepage&q&f=false - சுபாஷிணி ட்ரெம்மல், மலேசியா – பழைய செய்தி புதிய பதிவு, மின்தமிழ், ஜூலை 2013 – https://groups.google.com/forum/#!msg/mintamil/OTs6Tbc7z5E/7kjFBrMAiO4J - நாட்டுப்புறவியல் மரபுகள்: வழிபாடுகளும், விழாக்களும், முனைவர் ஒ.முத்தையா – http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06142in.htm – http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614222.htm - மலேசியா தகவல்கள்: மலேசியா – https://ta.wikipedia.org/s/er மலேசியா இந்துக் கோயில்களின் பட்டியல் (தரவுகளின் நிலவரம் July ‎12, ‎2013 படி): https://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் – http://en.wikipedia.org/wiki/Sri_Mahamariamman_Temple,_Kuala_Lumpur கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் – http://www.malaysiantemples.com/2012/04/maha-mariamman-temple-kuala-lumpur.html மலேசியா அம்மன் கோயில் காணொளிகள்: - Documentary – Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 1 – http://youtu.be/s6txzvoXvSI - Documentary – Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 2 – http://youtu.be/7SDHK9vUME0 மேலும் தகவலுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்கள்: - Ramstedt, Martin (2004), Hinduism in modern Indonesia, London: Routledge, ISBN 0-7007-1533-9 - Elementary Statistics: Looking at the Big Picture, Nancy Pfenning, 2010, Retrospective observational study on P.49, Cengage Learning, ISBN-10: 0495016527   - படங்கள் உதவி: http://en.wikipedia.org/     ------------------------------------------------------------------------   [] தேமொழி – themozhi@yahoo.com ------------------------------------------------------------------------ 4 புத்தாண்டு பிறக்குது ! சி. ஜெயபாரதன்   புத்தாண்டு பிறக்குது ! நமக்கு புத்தாண்டு பிறக்குது ! கடந்த ஆண்டு ஓடுது, ஆயினும் தடம் இன்னும் இருக்குது ! வித்தைகள் சிறக்கணும் ! வேலைகள் பெருகணும் ! வீணர்கள் தேறணும் ! சித்தர்கள் பிறக்கணும் ! பித்தர்கள் தெளியணும் ! யுக்திகள் கூர்மை ஆகணும் ! சண்டைகள் குறையணும் ! சாதிகள் சேர்ந்து வாழணும் ! ​ சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் ! பொ ரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் ! திறமைகள் ஒன்றாய் வலுக்கணும் வறுமை குன்றி வருவாய் பெருகணும். மின்சக்தி பெருகி யந்திரம் ஓடணும். வேளாண்மை விருத்தி ஆகணும் ! பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் ! லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் ! தேசப் பற்று நமக்குள் ஊறணும் ! தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் ! தேச மக்கள் நேசம் பெருகணும் ! விடுதலை நாடு சீராய்த் தழைக்க, கடமைகள் முடிக்கணும்; நாட்டுப் பொறுப்புகள் ஏற்கணும் !   ------------------------------------------------------------------------   [] சி. ஜெயபாரதன் – jayabarathans@gmail.com ------------------------------------------------------------------------ 5 வள்ளுவரின் பொதுநோக்கும் சமயாதீதமும் மலேசிய அறிஞர் டாக்டர்.கி.லோகநாதன்     வள்ளுவரின் சமயாதீதம் – ஆதிபகவன்:   இனி திருகுறளின்  முதல் அதிகாரத்திற்கு பொருள் கூறப்புகும் முன், உலக வரலாற்றில் சிறப்புமிக்க இப்பெருநூலின் சில தனிச் சிறப்புக்களை எடுத்துரைப்பது மிகவும் தேவைப்படும் ஒன்று. அதில் முதலாக நாம் இந்நூலை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்றவாறு முப்பால் நூலாக கருததப் படுவது ஏற்புடைத்தா? என்ர கேள்வி எழுகின்றது. இது பிற்காலத்தில் உரையாசியர் யாரோ ஒருவர் பிழையாகத் தந்த பாகுபாடு என்று தெரிகின்றது. இது திருகுறளிற்கும் சங்க இலக்கியப் பண்பாட்டிற்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை காட்டாது போகின்றது.   முப்பால் பாகுபாடு யாருடையது?   இந்தப் பாகுபாடு மிகப் பழமையானது என்றாலும் பிழையான ஒன்றாகவேப் படுகின்றது, முதலில் நாம் கவனிக்க வேண்டியது முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்ல-  இறைவனைப் போற்றித் துதித்து நூல் இனிதே முடிய இறைவனது அருளைவேண்டிப் பாடுவது அல்ல.  மாறாக இங்கு இறைவனைப் பற்றி  ஆய்ந்து பல  மெய்ஞானக் கருத்துக்களை தெரிவிக்கும் ஓர் அதிகாரமாகும்.   ஆக இதனை ‘இறையுண்மை அதிகாரம்’ என்று கூறுதல் பொருந்தும்   மேலும் இந்நூலையே தொல்காப்பிய மரபு வழி வந்து இன்னும் பல புதுமைகளையும் செய்யும் நான்கு திணைகள் கொண்டுள்ள ஓர் பெருந்நூல் என்று கொள்வதே பொருந்தும்   எவ்வாறு எனின் கூறுவோம்   காமத்துப்பால் உள்ளபடியே காமத்தைப்பற்றி அல்லாது காதல் அன்பினைப் பற்றியது ஆகும். தொல்காப்பியத்தின் ‘ஐந்திணை அன்பினையே” காதல் என்று கணித்து அதன் ஆழத்தையெல்லாம் ஓர் அழகிய நாடகம் போல் விளக்குவதாகும். ஆகவே இந்த காமத்துப்பாலை நாம் வள்ளுவர் கருத்துப்படி ‘அகத்திணை’ என்று கூறுவதே ஒக்கும்.   இதேப்போன்றுதான் பொருட்பால் என்பதும் இது தொல்காப்பிய மரபில் வரும் புறத்தினை யாகும்.   இவ்வாறெனின் அறத்துப்பால் தான் யாது?   இது அகத்திணையும் அல்ல புறத்திணையும் அல்ல, மாறாக அவற்றால் எழக்கூடிய சங்காலப் புறத்திணையில் புதைந்து கிடந்த  மேலான மெய்யறிவுச் சிந்தனையின்  உகத்திணையாகும். உகத்திணையாவது மெய்யுணர்வுத் தேடலை அடிப்படையாக கொண்ட இல்லறம் என்றும் துறவறம் என்றும் இயங்கும் வாழ்க்கையாகும்   சங்க இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனார் கூறும் ‘யாது ஊரே யாவருங் கேளிர்’ முதுகண்ணன் சாத்தனார் கூறும் ‘உண்டி கொடுத்டோர் உயிர் கொடுத்தோரே” என்பன போன்ற மெய்யறிவு விசாரனை சார்ந்த ஒழுக்கமாகும், இத்தகையப் புலவர்கள் வாழ்ந்த வாழ்கையாகும்.   திருவள்ளுவர் இதனை தனியொருத் திணையாக வடித்து ஓர் புரட்சி செய்கின்றார்.   இனி இதனால் எழுவதே ‘சிவத்திணை’ எனக் கூறவரும் ‘செம்பொருள்’ எனும் இறைவனைப் பற்றிய ஞான விசாரனையின் ஒழுக்கமாகும். இது இறையுண்மையும் இறைவனது குணங்களும் கருதப்படும் ஓர் திணையாகும்   இந்தத் திணையே பிறகாலத்தில் இறை நம்பிக்கையை வற்புறுத்தி எழுந்த பத்தி எழுச்சியின் வித்தாக  அமைந்துள்ளது. இதன் விருத்தியே பத்தி இயக்கத்தின் எழுச்சிக்கு வித்திட்டு பாரதம் எங்கும் பரவி இறைவனைப் போற்றிப் புகழும் வாழ்க்கையே வாழ்க்கையாக ஓர் புரட்சி செய்து இறையுண்மையை ஏற்காத  உலகாயதம் சாங்கீயம் புத்தம் போன்ற சமயங்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.   இனி திருவள்ளுவர் இறையுண்மை வாழ்க்கையை வாழ்ந்தவர் எனினும்  சமயச் சார்பு அற்றே விளங்கியுள்ளர். சமயங்களில் சார்பு சமயங்கள் என்றும் சார்வற்ற சமயநிலை என்றும் இருவகை உண்டு.  சார்புச் சம்யங்கள் ஓர் மறைநூலையோ புத்தன் தீர்த்தங்கரர் போன்ற மகான்களின் வாக்குகளையோ யாராலும் எழுதப்படாத வேதங்களே மெய்ய்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்துள்ள பிரமாணியம்    சைவாகமங்களை வைணவ ஆகமங்களை சுருதி ஆதாரமாக் கொண்ட சம்யங்கள் எல்லாம் சர்புச் சமயங்கள் ஆகும். (sectarian religions)   இவ்வாறான சார்புச் சமயங்களில் பட்டு சிறையுண்டு கிடக்காது மெய்யுணர்தலையே அடிப்படையாகக் கொண்டு  அறிவியல் முறையில் மெய்ஞானத்தையே தேடி செல்லும் நூலிய அறிவியல் வாழ்க்கையே வாழ்க்கை என வாழ்ந்தவர் திருவள்ளுவர் என்பதின் அவர் அழகிய சமயதீதர் ஆகின்றார்.   இந்த சமயாதீதத்தை பிறகால சைவசித்தாந்த மரபும் போற்றி வளர்த்துள்ளது.   இவ்வகையிலேயே திருவள்ளுவரின் பொதுநோக்கைப் புரிந்துகொண்டு முதல் அதிகாரத்தை சிவத்திணையின் ‘இறையுண்மை’ அதிகாரமாகக் கொண்டு உரையை விரிப்போம்   திருவள்ளுவரின் ‘சிவத்திணை’ எனும் பகுதி ‘இறையுண்மை’ அதிகாரம் எனும் ஒரே அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று கொண்டு நம் உரை விளக்கம் செல்லும். ------------------------------------------------------------------------   [ninnaa dr loganathan]   மின்தமிழ் உறுப்பினர், மலேசிய அறிஞர் டாக்டர்.கி.லோகநாதன் அவர்கள் இம்மாதம் இயற்கை எய்தினார். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். தமிழ் ஆய்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சுமேரியத் தமிழ் ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அன்னாரின் மறைவுக்கு வருந்துகிறோம், தமிழ் மரபுக் கட்டளை தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ------------------------------------------------------------------------   6 வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும் மேகலா இராமமூர்த்தி []     நரேந்திரர் கேட்கும் மனித வாழ்க்கை சார்ந்த அருமையான கேள்விகளும் அதற்குக் குருதேவரின் பொருள்செறிந்த பதில்களும் … ஓர் உரையாடல்   நரேந்திரர்: (சலிப்புடன்) சற்றும் ஓய்வில்லாத வகையில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக உள்ளதே சுவாமி! இராமகிருஷ்ணர்: தொடர்ந்த வேலைகள் உன்னை ஓய்வற்றவனாக ஆக்கலாம் நரேன்! ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார்!) நரே: இப்போதெல்லாம் வாழ்க்கை ஏன் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது? இராம: ஆராய்ச்சி செய்வதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுவாழப் பழகு! அதுவே சிக்கலைத் தீர்க்கும் வழி! நரே: பின்பு ஏன் நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம்…? இராம: கவலைப்படுவதையே (உன்) வழக்கமாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் நரேன்? (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை!) நரே: சுவாமி! நல்லவர்களே எப்போதும் துன்புறுவதற்கு என்ன காரணம்? இராம: தங்கத்தைப் புடம்போட்டுத்தான் ஒளி(ர்)விடச் செய்ய முடியும்! வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன்! அந்த அனுபவம் அவர்கள் வாழ்வைக் களிப்புடையதாக்குமேயன்றிக் கசப்புடையதாக்கா! (சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு. என்ற குறள் கருத்து இங்கு ஒப்புநோக்கி மகிழத்தக்கது.) நரே: (வியப்புடன்) என்ன…!!! இத்தகைய (சோதனையான) அனுபவம் பயனுள்ளதே என்றா கூறுகின்றீர் ஐயா? இராம: ஆம்…நரேன்! அதில் ஐயமென்ன? அனுபவம் எனும் ஆசிரியர் சற்றே கடுமையானவர்…கண்டிப்பானவர்! முதலில் தேர்வு நடத்திவிட்டுப் பின்பு பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அவரது வழக்கம்! நரே: (கவலையுடன்) குருதேவா! பல்வேறு பிரச்சனைகள் நம்மைத் துரத்துவதால் வாழ்வில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதே புரிபடமாட்டேன் என்கிறதே? இராம: (நரேனைக் கூர்ந்து நோக்கியவராய்) நரேன்…என்ன இது? வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு! உன் கண்கள் உனக்கு அக்காட்சியையும், உன் இதயம் நீ பயணிக்கவேண்டிய பாதையையும் காட்டும்! நரே: (சற்றே தழுதழுத்த குரலில்) நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை வேதனையுறச் செய்து சரியான பாதையில் நம் பயணத்தைத் தொடரவிடாமல் செய்துவிடுமா ஐயா? இராம: இல்லை நரேன் இல்லை! வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே! ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா? (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது…வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே!) நரே: (சிந்தித்தவண்ணம்) ஐயா! வாழ்வின் கடினமான தருணங்களிலும் சோர்வுறாது நம் குறிக்கோளைத் தக்கவைத்து அதன் வழி நடப்பது எங்ஙனம்? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்! இராம: நரேன்! எப்போதுமே கடக்க வேண்டிய தூரத்தை எண்ணிக் கவலையும் கலக்கமும் கொள்ளாமல் இதுவரை நீ கடந்துவந்த தூரத்தை எண்ணிப் பெருமிதம் கொள்! நீ பெற்றவைகளை எண்ணி மகிழ்! தவறவிட்டதை எண்ணித் தளராதே! நரே: (கேள்விகளின் போக்கைச் சிறிது மாற்றி) மக்களிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது என்று கூறுங்கள்? இராம: சிரித்தபடி…அவர்கள் துன்புறும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமங்கள் தருகிறாய்?” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி?” என்று கேள்வி கேட்பதில்லை! (இதே கருத்தத்தைத்தான் நம் வள்ளுவப் பேராசான் சிறிது மாற்றி, ”இன்பம் வரும் வேளையில் அதை நன்மையாகக் கருதும் மனிதன், துன்பம் வரும் வேளையில் மட்டும் துவளுவதேன்?” என்கிறார். நன்றாங் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.) நரே: (புத்துணர்ச்சி கொண்டவராய்) நல்லது குருதேவா! வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு வழியொன்று சொல்லுங்கள்! இராம: கடந்த காலத்தை நினைந்து கலங்காமல், நிகழ்காலத்தைத் துணிவுடனும் எதிர்காலத்தை அச்சமின்றியும் எதிர்கொள்வதே வாழ்க்கையைச் சிறப்பாய் வாழ்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன் நரேன்! நரே: இறுதியாக ஒரே ஒரு கேள்வி ஐயனே! சில வேளைகளில் நம் பிரார்த்தனைகளுக்கு (இறைவனிடமிருந்து) பதில் கிடைப்பதில்லையே ஏன்? இராம: (நரேனின் கண்களை ஆழமாக நோக்கியபடி) பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை! வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று! வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே! என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன்! (என்று கூறியபடி நரேனை அன்போடு அணைத்துக் கொள்கிறார் குருதேவர்.) (கேள்விகள் நரேந்திரருடையவையாக இருப்பினும் அதற்கான குருதேவரின் விடைகள் மாந்தர்கள் அனைவருக்குமே வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன!) உரையாடலை  மொழியாக்கம் செய்தவர் மேகலா இராமமூர்த்தி ------------------------------------------------------------------------   [] மேகலா இராமமூர்த்தி – megala.ramamourty@gmail.com ------------------------------------------------------------------------ 7 பெரியாரின் பேட்டி தேமொழி [the nadar kula mitran]   அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:   _________________ சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.   இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.     பஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.   சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.   எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.   சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது? உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.   அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.   காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.   காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது.   நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர். நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.   ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.   இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன்.   இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன். _________________   * இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது. _________________   பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை: நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3 ‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம் மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை “தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம். _________________ தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகளில் ஒன்றாக மின்பதிப்புகளாக மாற்றப்பட்டு வரும் “நாடார் குலமித்திரன்” சஞ்சிகையில் இருந்து தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் தகவல்கள் … தொகுத்து வழங்குபவர்: தேமொழி ------------------------------------------------------------------------ [] தேமொழி – themozhi@yahoo.com ------------------------------------------------------------------------   8 மனோசக்தியின் மகிமை தேமொழி [the nadar kula mitran]     ஹேவுட் என்னும் ஐரோப்பியர் கல்கத்தா டெலிகிராப் பத்திரிக்கைக்குக் கொடுத்த தகவல் _________________   சில வியத்தகு நிகழ்வுகள் அவ்வப்பொழுது இந்தியாவில் நிகழ்கின்றன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வுகளை விளக்கவும் வழியில்லை.   மூன்று மாதங்களுக்கு முன் நான் கோவையிலிருந்து திருச்சிக்கு தொடர்வண்டியில்  முதல் வகுப்பில் பயணம் செய்த பொழுது எதிர்கொண்ட புதுமையான வியக்கவைக்கும் நிகழ்விது.   இரண்டாம் வகுப்பில் உடல்முழுவதும் திருநீறு அணிந்து, நீண்ட சடைமுடியுடனும் கண்களிலும் முகத்திலும் ஒளி துலங்க, பற்றற்ற வகை என்று சொல்லக்கூடிய  பார்வையினைக்  கொண்ட துறவி ஒருவரைக் காண நேர்ந்தது.   நிலையத்தில் வண்டியில் ஏறுமுன்னரே அவரை நான் பார்த்திருந்தேன். பயணச்சீட்டு இன்றி வண்டியில் நுழைந்தவரை பயணச்சீட்டு சோதனை  செய்பவர் வெளியில் இறக்கி விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவிருந்தது. இப்பொழுது மீண்டும் அவரை வண்டியினுள் கண்டதும் பக்தி நிறைந்தவர் யாரோ அவருக்காக பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து உதவினார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன்.   சற்றுக் கழித்து சோதனை செய்பவர் அவரிடம் ஏதோ சர்ச்சையில் இறங்கவும் ஏற்பட்ட சத்தம் என் கவனத்தைக் கவர்ந்தது. . துறவி  பயணச்சீட்டு  இல்லை என்று தலையை மட்டுமே அசைத்து  உணர்த்தினார், வாய்திறந்து  மறுமொழி அளிக்கவில்லை.  இதற்குள் வேடிக்கை பார்க்கவென ஒரு கூட்டமும்  சேர்ந்துவிட்டது.   கோபமுற்ற சீட்டு பரிசோதகரால் மீண்டும் துறவி  வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார். நானும் அத்தோடு அந்த செயலுக்கு முடிவேற்பட்டது என்றுதான் நினைத்தேன்.   ஆனால், நடந்தததோ வேறு.  அத்துறவி நடைமேடையில் நின்றுகொண்டு வண்டியை முறைத்துப் பார்த்தவாறே  இருந்தார்.  வண்டி புறப்படும் நேரம் வந்தது.  புறப்படும் மணியும் அடித்தாகிவிட்டது. வண்டியை இயக்கத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் தொடர் வண்டி நகரவில்லை.  நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.   இயந்திரக் கோளாறாக இருக்கும் என்று எண்ணி அந்த என்ஜினை நீக்கிவிட்டு வேறொண்டு பொறுத்த நினத்தாலும், தண்டவாளத்தில் இருந்து அதை நகர்த்தவும் முடியவில்லை. அப்பொழுது சிலர் துறவியை வெளியேற்றியதால் அவர் வண்டியை நிறுத்திவிட்டார் என்று நிலைய அதிகாரியிடம் கூறவும் அவர் சிரித்தார்.  இதற்குள்  இயந்திரப் பரிசோதனையில் வண்டியில் பழுதொன்றும் இல்லை என்ற தகவலும் கிடைத்தது. பழையபடி இயக்க முற்சித்தபொழுதும், நீராவி மட்டும் வெளியேறியதே ஒழிய வண்டி நகரவேயில்லை.   வேறுவழியின்றி நிலைய  அதிகாரி துறவியை அணுகி பேசத் துவங்கினார். துறவி தான் போக வேண்டிய இடத்திற்குத் தேவையான பயணச் சத்தத்திற்கான  பணம் தன்னிடமில்லை என்றும், தனக்கு யாரும் துன்பம் தராமல் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்ய உதவவேண்டும், அவ்வாறு உறுதியளித்தால் வண்டியை தடை செய்யமாட்டேன்  என்று சைகையால் தெரிவித்தார்.  வேறுவழியின்றி தொடர்வண்டியின் அதிகாரிகள் இசைவு தெரிவித்தனர்.   துறவியும் அவசரமின்றி அமைதியாக தான் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துகொண்டு, இனி வண்டி புற்றப்படலாம் என்ற தோரணையில் சைகையால்  அனுமதி வழங்கினார். அந்தக் குறிப்பின்படி அதிகாரி குழுலூதி, கொடியை அசைத்ததும் ஓட்டுனர் வண்டியை இயக்கினார், என்ன வியப்பு வண்டியும் நகரத் துவங்கியது.   _________________   நாடார் குல மித்திரன், 1922ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று  வெளிவந்த  இதழ்  (மலர் 4 – இதழ் 11) தந்த செய்தி. _________________   தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகளில் ஒன்றாக மின்பதிப்புகளாக மாற்றப்பட்டு வரும் “நாடார் குலமித்திரன்” சஞ்சிகையில் இருந்து தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் தகவல்கள் … தொகுத்து வழங்குபவர்: தேமொழி ------------------------------------------------------------------------   [] தேமொழி – themozhi@yahoo.com ------------------------------------------------------------------------ 9 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -1 தேமொழி [the nadar kula mitran] 1921 ஆம் ஆண்டின் தமிழகத் தொழிலாளர் புள்ளிவிவரம்     1922ம் ஆண்டு டிசம்பர் 1  ஆம் தேதி வெளிவந்த நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை (மலர் 4 – இதழ் 10)  இதழில் வெளியான, தமிழகத்தைப் பற்றிய கருத்தைக் கவரும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு … _________________   லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் 1922ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் தரப்பட்டுள்ளன: 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி …14% மக்கள் மட்டுமே தொழிற்சாலைகளை  நம்பி வாழ்க்கை நடத்தினார்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்  எண்ணிக்கை 14,06,286   தொழில் நிறுவனங்கள்: 2105 தொழில் நிறுவனங்கள் மட்டுமே சென்னை மாகாணத்தில் இருந்தன. இவற்றில், 13,06,270  ஆண்களும்; 41,269 பெண்களும் பணிபுரிந்தனர். இந்தியத் தொழிலாளிகளில் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 6,353 சிறுவர்களும்,   5,362 சிறுமிகளும் அடங்குவர். இத்தொழிலாளர்களில் 1,389 பேர் ஐரோப்பியரும் ஆங்கிலேய இந்தியர்களும் ஆவார்கள். சென்னையின் அரசுக்குட்பட்ட போர்க்கருவிகள் தொழிற்சாலையில் பொறுப்புள்ள நிர்வாகப் பதவியில் இந்தியர் ஒருவர் கூட இல்லை   தொழிற்சாலை உற்பத்தி பற்றிய மேலும் விரிவான தகவல்கள்: காப்பி தேயிலை போன்ற தோட்டப்பயிர்களின் உற்பத்தி பத்தாண்டுகளில் மும்மடங்கு பெருகியது. 91 சுரங்கங்களும் அவற்றில் மாங்கனிசும், மைகாவும் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டன.  இச்சுரங்கங்களில் 6,665 தொழிலாளர்கள் வேலை  செய்தனர்.  அவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 352 பேரும், 235 சிறுமிகளும் அடங்குவர்.   நெசவுத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 441; இவற்றில் 33,871 ஆண்களும், 13,750 பெண்களும் பணிபுரிந்தனர்; இவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 2,115 பேரும், 1,894 சிறுமிகளும் பணி புரிந்தனர்.   இத்தொழிற்சாலைகளில் … பருத்தி எடுக்கும் தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் எண்ணிக்கை 228ம்; அவற்றில் பணி செய்த ஆண்களின் எண்ணிக்கை 6,707 என்றும், பெண்களின் எண்ணிக்கை 5,075 ம் ஆகும், 14 வயதிற்குட்பட்டோரின்  எண்ணிக்கை 177.  பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும், கிரக்கர்கள் இருவரும், நான்கு ஜப்பானியரும், ஐந்து சுவிச்சட்சர்லாந்து பணியாளர்களும் இத்தொழிற்சாலைகளில் பணி புரிந்தனர். நூல்நூற்கும், துணி நெய்யும்  தொழ்ற்சாலைகளின் எண்ணிக்கை 115 ம், இவற்றில் 23,439 ஆண்களும், 6,167 பெண்களும் பணிபுரிந்தனர்.  இவர்களில் 14 குட்பட்டோரின் எண்ணிக்கை 3,377. நிர்வாகப்பணியிலும், உயர் பதவிகளிலும் இருந்தோரில் ஒரு அமெரிக்கர் இரண்டு பிரெஞ்சுக்காரர், இரண்டு டச்சுக்காரர்களும் அடங்குவர்.   கைத்தறிகளின்  எண்ணிக்கை 1,69, 403.  தஞ்சை, சேலம் பகுதிகளில் விசைநாடாத் தறிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 21,525 பேர் வேலை செய்யும் மாநகராட்சி தொழில் நிறுவனங்கள் 53 இருந்தன.  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 84 ம், அதையொட்டி ய எலும்பரைக்கும் ஆலைகளும் 4,674 பேருக்கு வேலைவாய்ப்பளித்ததுள்ளது.  நவீன வகையில் அமைக்கப்பட்ட 7 சார்க்கரைத் தொழிற்சாலைகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன.   குறிப்பிடப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும், உயர்பதவியிலும் இருந்தவர் யாவரும் அந்நியர்களே, இவர்கள் லாபத்தில் பங்கு பெரும் முதலாளிகளாகவும் இருந்தனர்.  அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் கூலிகளாகவும், குமாஸ்தா, மேஸ்திரி தொழில்களில் இருந்தனர். உடல் உழைப்பைத் தந்த இவர்கள் யாவருக்கும் லாபத்தில் பங்கு இல்லை. சென்னை மாகாணத்தின் தொழில்வாய்ப்பு உயரவேண்டுமானால் அதற்கு அரசின் நடவடிக்கையும், இப்பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களும் முயற்சித்தால் முன்னேறலாம் என லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை தகவல்கள் தருகிறது. _________________   தகவல் தந்துதவிய இதழ்: 1922ம் ஆண்டு டிசம்பர் 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4 – இதழ் 10). _________________ தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகளில் ஒன்றாக மின்பதிப்புகளாக மாற்றப்பட்டு வரும் “நாடார் குலமித்திரன்” சஞ்சிகையில் இருந்து தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் தகவல்கள் … தொகுத்து வழங்குபவர்: தேமொழி ------------------------------------------------------------------------   [] தேமொழி – themozhi@yahoo.com ------------------------------------------------------------------------ 10 1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -2 தேமொழி [the nadar kula mitran] 1921 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள் _________________   நாடார் குல மித்திரன் – 1923 – ஜனவரி  மாதத்தின் 1 வது இதழ் வழங்கும் தகவல் _________________   1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 – ஜனசங்கை)  கணக்கெடுப்புபடி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்.   ஆண் பெண் , மணமானவர்,  மதப் பின்னணி பற்றிய மக்கட்தொகை  விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  கிறிஸ்துவ நாடர்கள் (சுமார் இரண்டு லட்சம் பேர்), கிறிஸ்துவர்கள் என்ற பிரிவுக்குள் கணக்கெடுக்கப் க்கபட்டுவிட்டதாகவும், நாடார் குலத்துடன் சேர்க்கப்படவில்லை என்பதும் மேலதிகத் தகவல்.  சென்னை மாகாண கணக்கெடுப்பின் படி நாடார்களின் எண்ணிக்கை 6,52,652 .  இதே ஆறரை லட்சம் எண்ணிக்கையில் உள்ள நாடர்கள் தமிழகம் தவிர்த்து உலகில் பிற இடங்களிலும் இருப்பர் எனவும், எனவே ஆக மொத்தம் உலகளாவிய அளவில் 13 லட்சம் நாடர்கள் இருக்கக்கூடும் என்ற கணிப்பு கூறப்படுகிறது.   சென்னை மாகாண வாழ் நாடார்களில்  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும்  பத்தில் ஒருவர் என்ற விகிதமே, மாகாண நிலையையே  இது ஒத்திருக்கிறது.   நாடார்குல பெண்களில்  நூறில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். மொத்தம் 2500 ஆங்கிலம் படிக்கத் தெரிந்த நாடார்குல மக்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும்  88  மட்டுமே.,   1901 மற்றும் 1911 மக்கதொகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 1901 இல் 1000 த்தில் 1 பெண்(கள்) படித்திருந்தனர் என்ற நிலை, அடுத்த பத்து ஆண்டுகளில்…1911 இல் 1000 த்தில் 7 நாடார் குல பெண்கள் படித்திருந்தனர் என்று  உயர்ந்திருந்தது. ஆனால் இது அதற்கடுத்த பத்து ஆண்டுகளில், 1921 இல்  1000  த்தில் 15  நாடார் குல பெண்கள் படித்தவர் என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் கொடுக்கப்படிருக்கிறது.   எனினும்  நூறு  நாடர்குல பெண்களில் ஒருவர் மட்டுமே படித்தவர் என்பதே ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழக நாடர்குல பெண்களின் கல்விநிலை என்பது வருந்தத் தக்க புள்ளிவிவரம்.  இதே நிலைதான்  மற்றகுல பெண்களுக்கும் என்பதையும் எளிதில் நாம் கணிக்கலாம்.   நாடார்குல பெண்களில் மூன்றில் ஒரு பங்கு திருமணமானவர்கள், திருமணமானவர்களிலும்  ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர்  கைம்பெண்கள். அதாவது,  நூற்றில் 14 நாடார் குல பெண்கள் கைம்பெண்கள். இதை பெண்களின் பரிதாப நிலை என்கிறது நாடார் குலமித்திரன்.  பெண்களைவிட ஆடவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு நாடார்கள் பலர் தொழில் நிமித்தமாக அயல்நாடு செல்லும்பொழுது குடும்பத்தையும் அழைத்து செல்லாததும் ஒரு காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.   நாடார்களில் பெரும்பாலோர் விவசாயம், கைத்தொழில், வணிகம் என்று வாழ்வாதாரம் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.  வேலை பார்ப்பவர் எண்ணிக்கை குறைவு என்றும் அதிலும் நாடார்களில்  உயர் அதிகாரி என்ற நிலை  இல்லாது இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்விநிலையங்கள் அதிகரித்தும், கல்வியின் தேவை பற்றி பரவலாக அறிவுறுத்தப்பட்டும்  நாடார்குல கற்றோர் எண்ணிக்கை வருத்தம் தருவதாக உள்ளதாக இந்த இதழ் அறிவிக்கிறது.  பெற்றோர்களை நாடார்குல முன்நேற்றத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   _________________   நாடார் குல மித்திரன் – 1923 – ஜனவரி  மாதத்தின் 1 வது இதழ் வழங்கும் தகவல். _________________ தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகளில் ஒன்றாக மின்பதிப்புகளாக மாற்றப்பட்டு வரும் “நாடார் குலமித்திரன்” சஞ்சிகையில் இருந்து தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் தகவல்கள் … தொகுத்து வழங்குபவர்: தேமொழி   ------------------------------------------------------------------------   [] தேமொழி – themozhi@yahoo.com ------------------------------------------------------------------------ 11 துப்பாக்கிக் கவுண்டர் முனைவர் கி. காளைராசன் உதயபெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கிக் கவுண்டர் வீரவரலாறு   17ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொங்குநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் தர்மபுரியில் பிறந்தவர் உதயபெருமாள் கவுண்டர். [] வெள்ளையரின் படையில் கவுண்டர் வெள்ளையர் படையில் சேர்ந்து சுமார் 10 ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி. வெடிகுண்டு. தோட்டா தயாரித்தல், ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார். அதனால் அவரை உடன் பணிபுரிந்தவர்கள் துப்பாக்கி கவுண்டர் என்றே அழைத்தனர். [] காளையார் கோயில் அருள்மிகு காளீசுவரர் கோபுர வாயிலில் துப்பாகிக் கவுண்டர் சிலை, மற்றம் அவர் சுட்டு வீழ்த்திய கரடி சிலை வெள்ளையர் படையில் சேர்ந்து இருந்தாலும் இயல்பாகவே நாட்டுபற்று மிக்கவராக இருந்ததால் வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்துவது பிடிக்கவில்லை. எனவே, சகவீரர்களிடம் வெள்ளையர்களை எதிர்ப்பது சம்பந்தமாக நாட்டுபற்றை ஊட்டினார். இதை அறிந்த வெள்ளையர்களின் மேல் அதிகாரிகள் உதயபெருமாள் கவுண்டரை கொல்ல திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களின் திட்டத்தை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் அங்கிருந்த சில வெள்ளையரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டுஅங்கிருந்து வெளியேறினார். அச்சமயத்தில் சிவகங்கை சீமையில் வீர மங்கை வேலுநாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து வருவதை தமது உற்ற நண்பர்விருப்பாச்சி கோபால நாயக்கர் மூலம் ஏற்கனவே கவுண்டர் அறிந்து இருந்ததால், விரைந்து சிவகங்கை சீமை நோக்கி பயணம் ஆனார்.அந்த சமயத்தில் சிவகங்கை சீமையில் மருது சகோதரர்கள் ஆட்சி நிர்வாகம் செய்து வந்தார்கள். வேலுநாச்சியார் அவர்கள் உடல் நலக்குறைவால் விருப்பாச்சி கோட்டையில் தங்கியிருந்தார்.   சிவகங்கை சீமையில் கவுண்டர் சிவகங்கை சீமையின் காரைக்குடி கழனிவாசல் பகுதிக்கு வந்து சேர்ந்த உதயப்பெருமாள் கவுண்டர், சக போராளிகள் மு்லம் அன்னை வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருப்பதை அறிந்த கவுண்டர் ராணியாரை சந்திக்க விருப்பாச்சி கோட்டைக்கு சென்றார். வீரமங்கையைச் சந்தித்த கவுண்டரிடம், “பிரதானிகளான மருது சகோதரர்களுடன் சேர்ந்து நீ பணிபுரிய வேண்டும்” என்றும், மேலும்“சிவகங்கை சீமைக்கு கௌரி வல்லப உடையணத்தேவர் தான் எனது சுவீகார புத்திரன் என்றும, அவரை தேடி கண்டுபிடித்து இந்த ஓலை நறுக்கை ஒப்படைக்க வேண்டும்” என்றும் கட்டளை இட்டார். ராணியாரிடம் இருந்து ஓலையை பெற்றுக்கொண்டு, ராணியாரிடமும் கோபாலநாயக்கரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை சீமை வந்த கவுண்டர் மருது சகோதரர்கள் படையில் சேரத் தருணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.   மருதிருவருடன் கவுண்டர் பெருமழையின் காரணமாக மறவமங்கலம் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு மக்கள் திரண்டு உடைப்பை அடைத்துக்கொண்டு இருந்தனர். மருதிருவரும் அங்கு வந்து மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தனர். இந்த செய்தி அறிந்து, மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அங்கு சென்ற உதயபெருமாள் கவுண்டர், பம்பரமாக சுழன்று தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கண்மாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதும், மக்கள் அனைவரும் மகிழ்ந்திருந்த சமயம், பெரியமருது அங்கு கூடிஇருந்த மக்களை பார்த்து, “யார் இந்த கண்மாயில் நீந்தி அக்கரைக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு விரும்பும் சன்மானம் வழங்கப்படும்” என்று அறிவித்தார். மருது சகோதரர்கள், படையில் சேர இது தான் தக்க தருணம் என உணர்ந்த கவுண்டர் சற்றும் தாமதியாமல் கடல் போல் விரிந்து கிடந்த கண்மாயில் குதித்து அக்கரைக்கு சென்றதுடன் திரும்பியும் நீந்தி வந்து சேர்ந்தார். அதிசயித்து நின்ற பெரியமருது, கவுண்டரை அழைத்து “யார் நீ” என்று கேட்டார். தான் தர்மபுரியை சேர்ந்தவன் என்றும் தனது பெயர் உதயபெருமாள் கவுண்டர் என்றும், துப்பாக்கி சுடுவதில் சிறந்தவன் என்பதால் என்னை அனைவரும் துப்பாக்கி கவுண்டர் என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார். பெரியமருது உதயபெருமாளை பார்த்து “நீ துப்பாக்கி சுடுவதில் வல்லவன் என்றால் அதோ அங்குவானத்தில் பறந்து செல்லும் வல்லூறுவை சுட்டு வீழ்த்து பார்க்கலாம்” என கூறினார். உடனே தனது துப்பாக்கியை கொண்டு ஒரே தோட்டாவில், அந்த பறவையை வீழ்த்தி காட்டினார். கவுண்டரின் திறமையை கண்டு வியந்த பெரியமருது அவரது பணி நமக்கு தேவைப்படும் என்று எண்ணியவாறு, உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். “எனக்கு பரிசு எதுவும் வேண்டாம். என்னை தங்களது படையில் சேர்த்துக்கொண்டால் போதும்” என்று உதயபெருமாள் கவுண்டர் கூறிய பதிலை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பெரியமருது உடனடியாக சின்னமருதுவிடம் நமது படையில் துப்பாக்கி படைபிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு உதயபெருமாள்கவுண்டரை தளபதியாக்க உத்தரவிட்டார். மேலும் உதயபெருமாள் கவுண்டரை திருப்பாச்சேத்தி அம்பலகாரராக அறிவித்து திருப்பாச்சேத்தியில் சென்று தங்கும்படி கூறினார். தமது எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்ட உதயபெருமாள் கவுண்டர், தனது மனைவி பொன்னாயி மற்றும் மகன்கள் ஆறுமுகம், உதயபெருமாள் ஆகியோருடன் திருப்பாச்சேத்தியில் தங்கினார்.மேலும், ஊர் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், போராளிகளை தயார் செய்யவும் தனது வீட்டின் அருகிலேயே சவுக்கை ஒன்று அமைத்தார்.அந்த பகுதி இன்றும் “கவுண்டவளவு“ என்று அழைக்கப்படுகிறது.   மருது சகோதரர்கள் இட்ட உத்தரவுப்படி, சத்திரபதி கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் தாராமங்கலத்தில் துப்பாக்கிகள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையையும் ஏற்படுத்தி உதயபெருமாள் கவுண்டர் சிறப்பாக நடத்திவந்தார். வெள்ளையர்களைசுட்டுவீழ்த்த வெறி கொண்டு இருந்த உதயபெருமாள் கவுண்டர் தினமும் குளக்கரைக்கு சென்று, கண்ணில் படும் வெள்ளை கொக்குளை சுட்டு வீழ்த்தி தனது வெறியை தீர்த்துக்கொண்டார்.   வீரமங்கையின் மறைவு 25.12.1796ல் வீரமங்கை வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு, ராணியாரின் சுவீகார புத்திரன் கௌரிவல்லபர் அறந்தாங்கி பகுதியில் பதுங்கி வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.   ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாளையங்கோட்டை போரும் அதன்பின்னர், திருநெல்வேலி சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்கள் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் குடும்பத்தாரையும் வெள்ளையர்கள் சிறை வைத்தனர். அங்கிருந்து தப்பி வந்த ஊமைத்துரை சிவகங்கை சீமையை அடைந்து மருதுசகோதரர்களிடம் அடைக்கலமாகி நடந்த விபரங்களை கூறினார். மனம் வேதனையுற்ற பெரியமருது உடனடியாக சின்னமருதுவையும் உதயபெருமாள் கவுண்டரையும் அழைத்து, தேவையான படைவீரர்களை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சீமைக்குச் சென்றுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி வரும்படி உத்தரவிட்டார். நடுஇரவில்பாளையங்கோட்டையை அடைந்த வீரர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தி, கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி சிவகங்கை சீமைக்கு அழைத்து வந்தனர்.   மருது சகோதரர்கள் மீது வெள்ளையரின் கோபம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பாளையங் கோட்டையிலும் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியதால், வெள்ளையர்கள் மருது சகோதரர்கள் மீது கோபம் கொண்டனர். மருதிருவரும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு, வெள்ளையர் ஆதிக்கத்தை முழுமையாக எதிர்க்க முடிவுசெய்தனர். இதனால் உதயபெருமாள் கவுண்டர் தனது துப்பாக்கிக்கு வேலை வந்ததை எண்ணி, இனி குளக்கரையில் கொக்குகளை சுட வேண்டியதில்லை, பரங்கியர் தலையை சுட்டு வீழ்த்தலாம் என அகமகிழ்ந்தார். திருப்பாச்சேத்தி போர் 7.6.1801ஆம் ஆண்டு திருப்பூவணம் திருப்பாச்சேத்தி வழியாக இராமநாதபுரம் பகுதிக்கு மேஜர் கிரே தலைமையிலான வெள்ளையர் படை வருவதை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் தனது சக போராளிகளுடன் திருப்பாச்சேத்திக்கு மேற்கே 1 மைல் தொலைவில் இரு கண்மாய்கள் இணையும் இடத்தில் மரங்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில், மறைந்திருந்து தாக்கும் “கொரில்லா போர்” முறையில் திடீர்தாக்குதல் நடத்தினார். இந்த சண்டையில் மேஜர் கிரே சுட்டு கொல்லப்பட்டார். தளபதி நாகின் ஈட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். லெப்டினன்ட் ஸ்டு்வர்டு தாடை எழும்பு முறிந்து பலத்த காயமடைந்தார். மேலும் வெள்ளையர் படையில் 15 பேர் கொல்லப்பட்டனர். பரங்கியர் படை அத்துடன் புறமுதுகிட்டு ஓடியது. இந்த தாக்குதல் குறித்து “வெல்ஸ்” என்னும் வெள்ளையர் தளபதி தனது டைரியில்குறிப்பு எழுதி வைத்துள்ளார். இந்த போரில் வெற்றி பெறக் காரணமாக இருந்த உதயபெருமாள் கவுண்டரின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் சிலை வைக்க பெரியமருது உத்தரவிட்டார். (மேற்படி சிலை திருப்பாச்சேத்தி சிவாலயத்தில் முருகன் சன்னதியில் உள்ளது).   கர்னல் அக்னியூவின் கோபம் திருப்பாச்சேத்தியில் நடந்த போர் சண்டை குறித்து தகவல் அறிந்த கர்னல் அக்னியூ, மருது சகோதரர்களை அழிப்பதே எனது முதல் வேலை என்று, சிறுவயல் நோக்கி தனது படையுடன் புறப்பட்டார். இதை அறிந்த மருது சகோதரர்கள் தமது படையுடன் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் கோட்டைக்கு சென்றனர். சிறுவயல் வந்த அக்னியூ தலைமையிலான படை ஏமாற்றம் அடைந்தது.சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததால், பீரங்கிகளை கொண்டு செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணியில் வெள்ளையர் படை ஈடுபட்டது. அக்னியூவின் வெள்ளை கரடி மருது சகோதரர்கள் தமது படையை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காட்டு பகுதிக்கு அனுப்பினர். கொரில்லா போர் முறையில் வெள்ளையர் படையை தாக்கினர். அந்த சமயத்தில் அங்கிருந்த கர்னல் அக்னியூவை உதயபெருமாள் கவுண்டர் துப்பாக்கியால்,குறிபார்த்து சுட்டார். அப்போது, அக்னியூ வளர்த்த வெள்ளை கரடி குறுக்கே வந்து பாய்ந்து அக்னியூவை காப்பாற்றி தன் உயிரைமாய்த்துக்கொண்டது. கோபம் கொண்ட அக்னியூ பீரங்கியை உதயபெருமாள் பக்கம் திருப்ப உத்தரவிட்டான். நொடிப்பொழுதில் உதயபெருமாள் கவுண்டர் வேறுதிசைக்கு சென்று தனது துப்பாக்கி தாக்குதலை நடத்தினார்.   கௌரிவல்லபரை சந்தித்த கவுண்டர் அந்த சமயத்தில், சிவகங்கை சீமைக்கு உரிமை கோரிய கௌரிவல்லபரை மன்னராக அறிவித்து வெள்ளையர்கள் கௌரிவல்லவரை தங்களுடன் வைத்துக்கொண்டனர். வேறு வழியின்றி வெள்ளையர் படையில் வந்த கௌரிவல்லபரை யார் எனத் தெரியாததால், முதலில் குதிரையைச் சுட்டு வீழ்த்தினார். தமிழ் மன்னர் போன்ற தோற்றத்தில் குதிரையில் வீற்றிருபவர் யார் என அருகில் இருந்தவர்களிடம் உதயபெருமாள் கவுண்டர் விசாரித்தபோது, அவர்தான் மன்னர் கௌரிவல்லபர் என அறிந்ததும், நிராயுதபாணியாக நின்ற கௌரிவல்லபரிடம், ராணி வேலுநாச்சியார் கொடுத்த ஓலை நறுக்கை ஒப்படைத்து விட்டு, அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.   ஒன்றும் புரியாத நிலையில், நிராயுதபாணியான தம்மை கொல்லாமல் ஏதோ ஓலையை கொடுத்துவிட்டு செல்கிறானே இந்த வீரன் என்று எண்ணிய கௌரிவல்லபர், அந்த ஓலையை பிரித்து பார்த்தபோது ராணி வேலுநாச்சியார் தன்னை சுவீகார புத்திரன் என்று அதிகாரம் அளித்திருப்பதை அந்த ஓலை மூலம் அறிந்து பூரிப்படைந்த கௌரிவல்லபர் உதயபெருமாள் கவுண்டருக்கு தனது மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டார்.   1801 ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை வெள்ளையர் படை சாலை அமைத்தனர். இந்த இரு மாதங்களும் வெள்ளையர் படையும் மருதுசகோதரர்கள் படையும் நடத்திய துப்பாக்கி சண்டையில் இரு தரப்பினருக்கும் உயிர்சேதம் அதிகமானது. 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ந்தேதி வெள்ளையர் படை முன்னேறி காளையார்கோயிலை அடைந்ததும், கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ், கர்னல் ஸ்பிதா ஆகியோர் வியூகம் அமைத்து காளையார்கோயில் கோட்டையை தாக்கினர்.   மாவீரனின் வீரமரணம் உதயபெருமாள் கவுண்டரின் வேண்டுகோளின்படி. மருது சகோதரர்கள் தலைமறைவாகினர். மருதுபடை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காளையார்கோயில் கோட்டையிலிருந்து வெள்ளையர் படையை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினர். கர்னல் அக்னியூ, தனது வெள்ளைக் கரடியை சுட்டுக் கொன்ற உதயபெருமாள் கவுண்டர் கோட்டையிலிருந்து போர் நடத்துவதை அறிந்ததும், தனது பீரங்கியை கொண்டு தாக்கும்படி உத்தரவிட்டான்.   அவனது உத்தரவின்படி நடந்த பீரங்கி தாக்குதலில், வெள்ளையர் படைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கப்பட்ட உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்தார். பிணக்குவியலின் நடுவே காளையார்கோயில் கோட்டையில் நுழைந்த வெள்ளையர் படைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மருதிருவரை பிடிக்க முடியவில்லை.   சிவகங்கை அரண்மனையில் கௌரிவல்லபர் 5.1.01801 ஆம் ஆண்டு சிவகங்கை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் மேளவாத்தியங்கள் மந்திரம் முழங்க வீரமங்கை வேலுநாச்சியாரின் சுவீகாரபுத்திரன் கௌரிவல்லபர் அரியாசனத்தில் அமர்ந்து பதவிஏற்றார்.   உதயபெருமாள் கவுண்டருக்கு சிலை கௌரிவல்லபர் பதவி ஏற்றதும் முதல் ஆணையாக, சிவகங்கை தெப்பக்குளத்தின் மேல் கரையில் கௌரி வினாயகர் ஆலயம் அமைக்கவும், தென்கரையில் தனது தெய்வத்தாய் வீரமங்கை வேலுநாச்சியாரின் மாலையீடு மீது ஆலயம் அமைக்கவும், வெந்தியூர்காட்டில் தான் தனித்து நின்றபோது. தம்மை தாக்காமல் விட்டு. ராணியார் எப்போதோ கொடுத்த ஓலையை கடமை தவறாமல் தன்னிடம் ஒப்படைத்த உதயபெருமாள் கவுண்டருக்கு அவர் வெற்றியூர் காட்டில் கர்னல் அக்னியூவின் வெள்ளை கரடியை சுட்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காளையார்கோயிலில் உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்த இடத்தில் சிலை அமைக்கவும்உத்தரவிட்டார். அதன்படி அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் உதயபெருமாள் கவுண்டர் வெள்ளைகரடியை சுட்டபடி சிலை அமைக்கப்பட்டது.   கொங்கு சீமையில் பிறந்து வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சிவகங்கை சீமையில் திருப்பாச்சேத்தியில் அம்பலகாரராக இருந்து, தன் மனைவி மக்களை பிரிந்து காளையார்கோயில் போரில் வீரமரணம் அடைந்த உதயபெருமாள் கவுண்டரின் வாழ்க்கை போர்முனையில் துவங்கி, போர்முனையிலேயே முடிந்தது. அதன்பின்னர், மருது சகோதரர்கள் இருவரும்வெள்ளையர்களிடம் பிடிபட்டபோது, தாங்கள் மானியமாக அளித்ததை திரும்பப் பெறக்கூடாது என்ற அவர்களின் வேண்டுகோளின்படி, மருது சகோதரர்களால் உதயபெருமாள்கவுண்டருக்கு அளிக்கப்பட்டிருந்த அம்பலகாரர் பட்டமும், மானிய கிராமங்களையும் கொண்டு அவரது மனைவி பொன்னாயி தன் மகன்களை வளர்த்து, அவர்களை அறப்பணியில் ஈடுபடுத்த முற்பட்டார்.   உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள் உதயபெருமாள் கவுண்டரின் மகன்களுக்கு பிள்ளை பட்டம் வழங்கப்பட்டு, அவர்கள் ஆறுமுகம்பிள்ளை, உதயபெருமாள் பிள்ளை என்றே அழைக்கப்பட்டனர். அத்துடன் திருப்பாச்சேத்தியில், பிள்ளைமார் இனத்திலேயே மணம் முடித்து, அவர்களுடைய வாரிசுகள் பத்து தலைமுறையாக பிள்ளைமார் சமுதாயத்தினராகவே திருப்பாச்சேத்தியில் வாழ்ந்து வருகின்றபோதிலும், ஊர்மக்களால் கவுண்டபுரத்தார் என்றே அழைக்கப்படுகிறார்கள்.   கவுண்டபுரத்தாரின் அறப்பணி உதயபெருமாள் கவுண்டரின் மகன்கள் ஆறுமுகம்பிள்ளையும் உதயபெருமாள்பிள்ளையும் அறப்பணியில் தீவிரம் காட்டினர்.திருப்பாச்சேத்தியில் உள்ள மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயிலில் சுற்றுச்சுவர், கோட்டை வாசல் கட்டினர். மேலும் வினாயகர் சன்னதி, முருகன் சன்னதி, பைரவர் சன்னதி கோயில்களை புனரமைப்பு செய்துள்ளனர். இதற்கான ஆதாரமான கல்வெட்டு மேற்படி கோயிலின் கிழக்கு வாசல் முன்மண்டபத்தில் இன்றும் உள்ளது. மேலும் யாத்திரை வருபவர்கள் தங்குவதற்கு மடமும் கட்டிஉள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே துறைக்கும், காவல்துறைக்கும் இடம் விட்டு உதவியுள்ளனர். மேலும், உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள் தொன்றுதொட்டு இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்திருநாள் அன்று அன்னதானமும், நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சியும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.   உதயப்பெருமாள்கவுண்டர் பற்றிய ஆவண நூல்கள் 1. காளையார்கோயில் மு.சேகர் எழுதிய “வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் செம்மண்”. 2. தேச விடுதலையும் தியாகசுடர்களும் புத்தகத்தில் மு.ஜீவபாரதி அவர்கள் எழுதிய “துப்பாக்கி கவுண்டன்” என்ற கட்டுரை. 3. தேசிய விடுதலையில் கொங்குநாட்டினரின் பங்கு என்ற புத்தகத்தில், ஈரோடு புலவர். செ.ராசு அவர்கள். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவர் (ஓய்வு) எழுதிய துப்பாக்கி கவுண்டர் என்ற உதயபெருமாள் கவுண்டர் என்றகட்டுரை. 4. முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் தென்பாண்டி சிங்கம். 5. செவல்குளம்புலவர் அ.சா.குருசாமி அவர்கள் எழுதிய மாவீரர் மருதுபாண்டியர். 6. மீ.மனோகரன் எழுதிய மருதுபாண்டிய மன்னர்கள். 7. வெல்ஸ் டைடரி வால்யூம் 1. பக்கம் 81.82 8. திருப்பாச்சேத்தி சிவாலயத்தின் கிழக்கு வாயில் முன்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு. [] திருப்பாச்சேத்தியில் கவுண்டபுரத்தார்களால் நடத்தப்படும் விழாக்கள் 1. தைப்பூசத்திருநாளில் அன்னதானம் நடத்துதல். 2. மாசிமாதம்டூகளாpவிழாடூசிவாலயத்திலுள்ள உதயப்பெருமாள் கவுண்டர் அவர்களின் திருஉருவசிலைக்கு மரியாதை செய்து பின் வைகை ஆறு சென்று குலதெய்வ வழிபாடு செய்தல். 3. சித்திரைமாதம் அழகியநாயகிஅம்மன் கோயில் திருவிழாவில், முதல்நாள் (சித்திரை1ம்தேதி) முதல்திருக்கண்மரியாதை, அம்மன் சிம்மவாகனத்தில் அலங்காரம் செய்தல், பிரசாதம் வழங்குதல், துண்டு அணிவித்தல். 4. மதுரை சித்திரை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு 10 நாட்கள் நீர்மோர் வழங்குதல். 5. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 6. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கவுண்டபுரம் பங்காளிகளின் பாட்டனார் மாவீரன் உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டர் நினைவுநாள் கொண்டாடுதல். 7. காராளருடைய அய்யனார்கோயில் புரவிஎடுப்பு விழாவில் முதல் குதிரை அரண்மனைக்கும் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம்) அடுத்தது கிராம கணக்கில் முதல் குதிரையும், முதல் மரியாதையும் கவுண்டபுரத்தாருக்கு கொடுக்கப்படுகிறது. சமர்ப்பணம் இந்திய விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை மண்ணுக்குத் தந்து வீரமரணம் அடைந்த பல ஆயிரம் வீரர்களில் ஒருவரான உதயபெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த அவரது வாரிசுகளான நாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திருப்பாச்சேத்தி உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கிக் கவுண்டரின் வாரிசுகள் நன்றியை சமர்ப்பிக்கின்றோம். [] மானாமதுரை சுவாமிஜி அம்மா இவர்களது முன்னிலையில், திருப்பாச்சேத்தி அருள்மிகு சப்பாணி கருப்பர் கோயிலில் வைத்து 4 மார்ச் 2015 அன்று கவுண்டரின் வாரிசுகள், கவுண்டர் பற்றிய செய்திகளை முனைவர் கி. காளைராசனிடம் வழங்கினர். ------------------------------------------------------------------------ [] முனைவர் கி. காளைராசன் – kalairajan26@gmail.com ------------------------------------------------------------------------ 12 சிந்தனை களம்: படித்தால் பெரியாளாகி விடுவாய் வித்யாசாகர்   ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.   நடுத்தரத்தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல் படித்தலால் கைவரப்படுவதை தொடர்ந்து படிப்போரால் அறியமுடிகிறது. விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன்பொருட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும்முன்னரே ஓலையில் எழுதத் துவங்கிய நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.   படித்தலின் இன்றியமையாமையை பின்னோர் அறிய ஓலையிலேனும் எழுதிவைத்துச்சென்ற முன்னோர்களின் பிரயத்தனத்திற்குமுன் புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமலே கடந்துச்சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் பிள்ளைகளுக்கான வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயமுள்ளது.   படிப்பு என்பது வெறும் புத்தகத்தில் படிப்பதில் மட்டுமில்லை; வாழ்க்கையின் சிறப்புகளை மனிதர்களின் மூலமும், தீமையின் நன்மையின் விளைவுகளை அளவிட்டுப் பார்ப்பதிலும், நடப்புகளை அதனதன்போக்கில் அதனதனை கவனித்து வருவதன்மூலமும், இயற்கையை அகக்கண் திறந்துப் பார்ப்பதிலும், உள்ளே உற்றுநோக்கி நோக்கி வெளியை இயக்கப் பழகுவதிலுமென, ‘படிப்பென்பது அசைவதிலும் அசையாததிலுமாய் ஏகமாக இருந்தாலும், அந்த மொத்த படிப்பினைக்கான முதலுரத்தை இடுவது புத்தகங்களே.   புத்தர் வாசித்த ரிக் வேதத்திலிருந்து தான், காற்றுவழி உள்ளே பயணித்து கல்லுக்குள்ளும் இருக்கப்பெரும் கடவுளின் சக்தியை அறியமுடிந்தது. ஆய்ந்து ஆய்ந்து அறிவதற்கான முதல் புள்ளி புத்தகங்களிலிருந்து நமக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. உலகம் முழுதும் சுற்றிவந்து எல்லா ஊரிலும் மண்ணெடுத்து அதை மொத்தமாக கலந்து அதிலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து அந்த ஒரு பிடிக்குள் இந்த ஒய்யார உலகத்தைப் பார்க்கக் கிடைப்பதற்குச் சமம்தான் சங்கிளிவழியாக வந்த உலகளாவிய மொத்த அறிவும் ஏதோ ஒரு புத்தகத்தினுள் அடங்கிப் போதலும்.   அத்தகைய புத்தங்களை அடுக்கிவைதிருக்கும் ஒவ்வொரு அகமும் அறிவு விளக்கேற்றும் கோவிலின்றி வேறில்லை. நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு. இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு. அத்தனையத்தனை அற்புதங்களை இயற்கை காணுமிடமெல்லாம் அடக்கி வைத்திருக்கிறது.   அண்ணாந்துப் பார்க்கும் வானத்திலும், அளந்திட இயலாது வியந்துநோக்கும் கடலிடமும் வேறென்ன சூழ்ச்சுமத்தின் ஈர்ப்பிருந்துவிடும் நமக்கெல்லாம்? கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தாய்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே? வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே? பூமியை சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே? அதெல்லாம் ஏன் அத்தனைக் கோடான கோடி மர்மங்களும், வியப்புகளும், நடப்புகளுமென எல்லாம் சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிதான் நாம். நாம் அதத்தனையையும் ஒரு கையில் அடக்கிக் கொள்ளும் முடுச்சிகளின் மூலத்தை அறிவதெனில் நம் கையினுள்ள பல புத்தகங்களை படித்துணருவதால் அது முடியும்.   எனவே வெற்றிகளின் மூலத்தை, தோல்வியில் தாங்கும் பக்குவத்தை, தோல்வியை வென்றெடுக்கும் தந்திரத்தை, வெற்றி தோல்வியின் சரிசமத்தை இப்படி அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் நகர்விற்கேற்ப படித்தறிய நம்மால் இயலுமெனில் அதற்கு பேருதவியாய் அமைவதே நூலகங்கள்.   நூலகங்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். தெருவின் ஓரத்தில் ஒரு மாங்காய் மரம் வளர்ந்து நான்கு மாங்கணி கைக்கெட்டும் தூரத்தில் தொங்கினால் பறித்துன்னவும், எட்டாத உயரத்தில் இருந்தால் கல்லெறியவும் அறிவிருக்கும் நமக்கு; கால்நடக்கும் தூரத்திலுள்ள அறிவுக் கோயில்களான நூலகங்களை அவ்வப்பொழுது அணுகி பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏன் பொதுவாய் எல்லோருக்கும் இருந்திருக்கவில்லை?   சினிமாவிற்குப் போகவும், பூங்காவிற்கு சென்று விளையாடவும், மாலைநேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று செலவிடவும் முடிகிற நாம் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக திறந்துவைதுள்ள நூலகத்திற்குச் செல்வதையும் இன்றியமையாததாக எண்ணி பழக்கவேண்டும். படிப்பதை புத்தகத்தின் வழியேவும் நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கித் தரவேண்டும். புத்தகம் என்பது அலமாரியில் வைத்துக்கொள்ள பிறரால் தரப்படும் பரிசுப்பொருளாக மட்டும் பிள்ளைகள் அறிந்துவைத்துக் கொள்ளாதிருக்க’ அவைகளை படித்துணரும் பழக்கத்தையூட்டி, இலக்கிய அறிவை பெருக்கி, கலையின் கலாசாரத்தின் சாரம்சங்களை முன்னெடுத்து, நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்கிறோம் என்பதை அறிவுணர சொல்லித்தரவேண்டும்.   எதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக்கொள்ளமுடிவதை’ ஒவ்வொரு வளர்ச்சியின் இடையிலும் புகட்டி பிள்ளைகளை நாம் நடைமுறை அறிவோடு வளர்க்கவேண்டும். நேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக்கொள்ள புத்தகங்கள் உதவும் என்பதை அறியத்தரும் முதல்புள்ளி நமது வளர்ப்பிலும் வார்த்தையிலுமேயுள்ளது.   ஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் மனிதர்களின் கதையும் வாழ்வும் ஏக்கமும் இழப்பின் சுவடுகளும் கொட்டிக்கிடக்கிறதென்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பழக்கிவிட்டால், அடுத்தநாள் நூலகம் தேடி அவர்களாகவே போவார்கள். நல்லதை அதன் விளைவோடு அறிந்து, தீயதை அதன் விளைவோடு எச்சரிக்கையுறும் அளவிலுணர்ந்து தனை செதுக்கி செதுக்கி சுதந்திரப் பிறவியாக இம்மண்ணில் நம் குழந்தைகள் வளம்வர படிப்பினை உதவும் என்பதை எடுத்துச் சொல்வது பெற்றோராகிய நமது கடமையாகவே முன்னிற்கிறது.   அரிசி விளையும் ஒவ்வொரு விளைநிலத்தின் ஈரத்திலும் ஒரு விவசாயியின் வியர்வையினுடைய ஈரம் மட்டுமில்லை, கண்ணீரும் சுட சுட இருக்கிறது. இனிக்கும் பழங்களுக்குள்ளே அந்தத் தோட்ட முதலாளியின் சிரிப்பும் வேலைக்காரனின் அழுகையும் ஏக்கமும் நிறைந்துகிடக்கிறது. விண்ணளந்து நிற்கும் அத்தனை கட்டிடங்கள் அழகழிய வீடுகள் என ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு கதை வதை வாழ்க்கை கொட்டி அடைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் கோடானகோடி கேள்வியும் பதிலுமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பின்னேயும் ஒரு படைப்பாளியின் கண்ணீரும் கவலையும் அழுகையும் ஏக்கமும் வலியும் உறுத்தலும் நிராசையாய் உரைந்துப்போயுள்ளது. அவைகளையெல்லாம் துடைப்பதற்கு நாம் படிக்கவேண்டும். இதோ உன் அழுகை எனது சிரிப்பிற்கான பாதையைக் காட்டியுள்ளது பாரென்று அவர்களுக்குக் காட்டவேண்டும். நீ செலவிட்ட நேரத்தில் நான் எனது அறிவுக்கண்ணை திறந்துக்கொள்வேன் கவலையுராதே என்று நம்பிக்கையூட்டவேண்டும்.   புத்தகங்களை அடுக்கியுள்ள நூலகத்திற்கு ஆயுதபூசையன்று பொட்டு வைப்பதோடு நில்லாமல் அவைகளின் கனம் உணராமலிருக்கும் அறிவு நோக்கி ஒரு செல்லக் குட்டு வைத்துக்கொள்வோம். குட்டு வலித்த இடத்திலிருந்து இனி நூலகத்திற்கான கதவுகள் வெகுவாய் திறக்கட்டும். புத்தகங்களின் ரசிக்கத்தக்க உள்பக்க நறுமணத்தைப் போல நம் வாழ்க்கையும் செம்மையுற்று நல்லெண்ணத்தின் மணம் இனி உலகெங்கும் பரவலாய் வீசட்டும்.   புத்தகதிற்குப் பின்னேயும் நூலகங்களின் பின்புறமும் நின்றழும் படைப்பாளிகளின் கண்ணீரை நம் படிக்கும் பழக்கத்தைக் கூட்டிக் கூட்டி மெல்ல துடைப்போம். அவர்களின் சிரிப்பினால் இச்சமூகம் தெளிந்த சமூகமாய் அறிவு மிளிரும் மனிதர்களோடு கூடியதாய் அமையட்டும்.   புத்தகங்கள் வாழ்க.. அச்சிடுவோர் வாழ்க.. எழுதுவோர் வாழ்க.. எழுதியதை எடுத்தடுக்கி காத்து நூலகமமைத்துத் தருவோர் வாழ்க.. படிப்போரும் படிக்க பள்ளிக்கூடம் அமைத்தோரும் வாழ்க.. எல்லோரும் படித்து, ‘விடுதலையை பெறும் அறிவோடும்’ தரும் அறிவோடும் இருந்து’ ஒவ்வொரு உயிரும் சிறந்தோங்கி’ நன்னிலந்தோறும் நலமே நலமே விழையப் பெறுக…   ------------------------------------------------------------------------ [] வித்யாசாகர் – vidhyasagar1976@gmail.com ------------------------------------------------------------------------ 13 அண்ணமார்சாமி கதை செல்வன் நம் ஊரில் அண்ணமார் சாமி எனும் பெயரில் பொன்னர்- சங்கர் கதை பிரபலமாக இருப்பதுபோலவும், பஞ்சபாண்டவர் கதை பிரபலமாக இருப்பது போலவும் சீனாவிலும் ஒரு அண்ணமார் சாமி கதை இருக்கிறது. பொன்னர்- சங்கர் போல இந்த அண்ணமாருக்கும் கோயில்கள் உள்ளன. சுவாரசியமான இந்த அண்ணமார்களின் வரலாற்றை நெட்ப்ளிக்ஸில் கண்டு ரசித்தேன். இவர்கள் வரலாற்றைசிறிது பார்ப்போம்.   ஏழாம் நூற்றாண்டுவாக்கில் சீனா இரு பேரரசுகளாக பிரிந்து கிடந்தது. சாங் எனும் சீனபேரரசு மேல் கிடான்கள் (மங்கோலியர்களின் மூதாதையர்) படையெடுத்துத்தொல்லை கொடுத்துவந்தார்கள். சீன அரசரிடம் யாங் எனும் தளபதி பணிபுரிந்து வந்தார். ஒருமுறை படையெடுத்த யூலுவ் எனும் தளபதி தலைமையிலான மங்கோலிய படையை முறியடித்து அந்த தளபதியின் தலையை வெட்டிவிடுகிறார். போர்முடிவில் தளபதி உடல் கூட கிடைக்காதாதால் அவரது மனைவி கவலையில் இறக்கிறார். இதனால் கோபமடைந்த தளபதியின் மகன் யான் தன் தந்தையை இக்கதிக்கு ஆளாக்கின யாங் தளபதியின் வம்சத்தைக்கறுவறுக்க சபதம் செய்கிறார்   யாங்குக்கு ஏழு மகன்கள். ஏழுபேரும் மாவீரர்கள். இந்த சூழலில் சாங் அரசின் மேல் மங்கோலியர்கள் யான் தலைமையில் மீண்டும் போர் தொடுக்கிறார்கள். அரசர் கோழையும், முட்டாளுமான பிரபு பான் என்பவர் தலைமையில் ஒரு படையை அவர்களுடன் போரிட அனுப்புகிறார். பானுடன் ஜெனெரல் யாங்கும் போருக்கு செல்கிறார்.   யாங் வீரமாக போராடி வெற்றியை அடையவிருக்கும் சூழலில் பிரபுபான் முட்டாள்தனமாக பின்வாங்கிவிடுகிறார். யாங் களத்தில் இருந்து தப்பினாலும் காயம்பட்டு மலைகுகை ஒன்றில் ஒளிந்துகொள்கிறார். அவரை மீட்க ஏழு அண்ணமாரும் கிளம்புகிறார்கள். அவர்கள் முதலாம் அண்ணன், இரண்டாம் அண்ணன் என எண்கள் பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள் [] மங்கோலியர் படையை துவம்சம் செய்து தந்தை இருக்கும் மலைகுகையை அடைகையில் அது மங்கோலியர்கள் அவர்களை பூண்டோடு அழிக்க பின்னிய வலை என்பதைப்புரிந்துகொள்கிறார்கள். குகையை மங்கோலியர் படை சூழ்கிறது. ஏழாம் சகோதரன் மட்டும் தப்பி பிரபு பானிடம் உதவி கேட்க செல்கிறான். ஆனால் படையை அனுப்ப மறுக்கும் பான் ஏழாம் சகோதரனை அம்புகளை ஏவிக்கொன்றுவிடுகிறார். தன் கோழைத்தனம் தெரியகூடாது என்பதற்காக இறந்தது மங்கோலியவீரன் எனவும் கூறிவிடுகிறார்.   சகோதரர்கள் அறுவரும் மீண்டும் மங்கோலியர படையை துவம்சம் செய்தபடி குதிரையில் தந்தையுடன் தப்புகிறார்கள். நடந்த யுத்தத்தில் நூறு மங்கோலியரும், இவர்கள் எழுவரும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். நூறுபேர் அடங்கிய படை இவர்களைத்துரத்துகிறது.   தன்னால் மகன்கள் உயிருக்கு ஆபத்து விளைந்த குற்ற உணர்வில் தளபதி யாங் தற்கொலை செய்துகொள்கிறார். அதன்பின் அவரது உடலை தாயிடம் சேர்க்க தனயன்கள் சபதம் எடுக்கிறார்கள். தன் தந்தை உடல் எப்படி தன் தாயிடம் சேரவில்லையோ அதுபோல யாங்கின் உடலும் அவர் மனைவியிடம் சேராது என மங்கோலிய தளபதி யான் உறுதிபூணுகிறார்.   அதன்பின் மங்கோலியர் படை நெருங்கவும் மூத்த அண்ணன் மற்ற தம்பிகளை அனுப்பிவிட்டு 100 பேரை எதிர்கொள்கிறார். சண்டையிட்டு நேரத்தை கடத்தியபடி தம்பிகள் தப்ப வழிகாண்கிறார். ஆனால் சண்டை முடிவில் தளபதியால் கொல்லபடுகிறார்.   இதன்பின் மீண்டும் மங்கோலியபடை நெருங்க நெருங்க ஒவ்வொரு அண்ணனாக அவர்களுடன் சண்டையிட்டு பிறதம்பிகள் தப்ப வழிசெய்கிறார்கள். கடைசியில் ஆறாவது அண்ணனும், மங்கோலிய தளபதி இருவரும் மட்டுமே எஞ்சுகிறார்கள்.   சீன அரண்மனை அருகே நெருங்கவும் இருவரும் மோதுகிறார்கள். கடுமையான போரில் ஆறாம் அண்ணன் சீனதளபதி யானைக்கொன்று வீழ்த்தி தாயிடம் தந்தை உடலை சேர்க்கிறார். அதன்பின் சீன தளபதியாக தந்தை இடத்தில் அமர்ந்து மங்கோலியரை விரட்டி சீனாவைக்காக்கிறார்.   இக்கதை 9 முதல் 13 நூற்ராண்டுவரை வாய்மொழியாக பரவி சீனாவெங்கும் புகழடைந்தது. ஒவ்வொரு ஊரிலும் இது வேறு வடிவங்களில் சொல்லபட்டு வருகிறது. ஆனால் இதில் வரும் சீனத்தளபதி யாங்கும், அவரது ஆறாம் மகனும் உண்மையில் வாழ்ந்து சீனாவை மங்கோலியர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் எனத்தெரிகிறது. தளபதி யாங்கின் உடல் புதைக்கபட்ட 11ம் நூற்ராண்டு கோயில் சீனாவில் இன்னும் உள்ளது. காண்க புகைப்படம்   ​[]   பின்னாளில் 16ம் நூற்ராண்டுவாக்கில் இவர்கள் கதை நாவல், நாடகம், கவிதை என பரவியது. பல திரைப்படங்களும், டிவி சீரியல்களும் எடுக்கபட்டன   அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையே நம் ஊர் அண்ணமார் சாமிகளும், பஞ்சபாண்டவரும், சீனத்து அண்ணமாரும் கூறும் கதைநீதி.   ------------------------------------------------------------------------   [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 14 சைத்தான் ஓதிய வேதம் செல்வன்   கிபி 1230ம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட, உலகின் எட்டாவது அதிசயமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட, சைத்தானால் எழுதப்பட்டதாக கருத்தபடும் கோடெக்ஸ் கிகாஸ்( Codex Gigas) எனும் நூலைப்பற்றிய National Geographic டாக்குமெண்டரியை இன்று பார்த்தேன்.   []   சைத்தான் ஏன் பைபிளை எழுதவேண்டும்?   பண்டைய பொஹிமியாவில் (ரொமேனியா) ஒரு (கிறிஸ்துவ) கருந்துறவிகள் மொனாஸ்ட்ரி இருந்தது. மிக, மிக தீவிர விரதம் எடுத்தவர்களே இதில் துறவிகளாக சேரமுடியும். குறைவாக உண்பார்கள், குறைவாக உறங்குவார்கள், கடுமையாக பிரார்த்தனை செய்வார்கள், எந்த தவறான எண்ணமும் மனதில் வராமல் பார்த்துக்கொள்வார்கள். இவ்விரதங்களில் சிறுபிழை நேர்ந்தாலும் தம்மையே சாட்டையடிக்கு உட்படுத்துவது, கடுமையான முறையில் மரணதண்டனை பெறுவது என்பது போன்ற விதிகள் உண்டு.   இதில் ஒரு துறவி ஒரு பிழை செய்த்தால் அவருக்கு மரணதண்டனை என முடிவானது. அதாவது சுவரில் வைத்து உயிருடன் புதைத்துவிடும் தண்டனை. நாளை காலையில் தண்டனை நிறைவேற்றம் எனும் நிலையில் அசரீரியாக அத்துறவியிடம் கடவுள் “உலகின் மிகச்சிறந்த ஞானம் அனைத்தும் இருக்கும் நூல் ஒன்றை இரவுக்குள் எழுதுவதாக மற்ற துறவிகளிடம் கூறு. அப்படி செய்தால் உனக்கு விடுதலை கிடைக்கும்” என்றார். துறவியும் அவ்வாறே கூற “அது எப்படி ஒரு இரவில் அப்படி ஒரு நூலை எழுத முடியும்?” என மற்ற துறவிகள் கேட்டாலும் அதன்பின் அப்படி செய்தால் விடுதலை அளிப்பதாக ஒப்புக்கொண்டார்கள். இரவு முழுக்க எழுத ஆரம்பித்தும் நூலை எழுதி முடிக்க முடியாத நிலை. கடவுளை உதவிக்கு அழைத்தும் அவர் வரவில்லை. அதனால் கோபத்தில் அத்துறவி சைத்தானை வேண்டி “என் ஆன்மாவை உனக்கு கொடுத்துவிடுகிறேன். நூலை எழுதிக்கொடு” என வேண்டினார். சாத்தானும் அதன்பின் ஒரே இரவில் நூலை முடித்துக்கொடுத்து அத்துறவியை காப்பாற்றினான்.   இதுதான் அந்த நூலைப்பற்றிய தொன்மம். இத்தொன்மம் ஏன் பிறந்தது என ஆராய்கையில் அதற்கான காரணங்கள் புலப்பட்டன. இந்த நூலில் உள்ள சாத்தானின் படம் அக்காலகட்டத்தில் மிகப் புதுமையானதாக இருந்தது. இதுபோல தனியாக இருக்கும் சைத்தானின், அச்சமூட்டும் படம் அக்கால பைபிள்கள் எதிலும் இல்லை. []   அதுதவிர நூலை எழுத அசாதாரண உழைப்பு தேவைப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒரு பிழை நேர்ந்தாலும் அந்த பக்கத்தை மொத்தமாக கிழித்துவிட்டு புதிதாக எழுதவேண்டும். மையை தயாரிப்பது, பேப்பரை தயாரிப்பது எல்லாம் எழுத்தாளரே செய்யவேண்டும். சித்திரமும் அவரே வரையவேண்டும். பேஜ் லே அவுட் எல்லாம் செய்யவேண்டும். பேப்பர் இல்லாத காலகட்டத்தில் ஆட்டுத்தோலில் சில புராசஸ் செய்துதான் தாள் தயாரிக்கவேண்டும்.   ஆக மிகப்பெரிய டீமாக தான் அன்றைய நூல்கள் எழுதபப்ட்டன. அதற்கு வருடக்கணக்கில் கால அவகாசமும் எடுத்தது. இத்தனை பெரிய சைஸில் எந்த நூலும் அன்று கிடையவும் கிடையாது (நூல் எடை சுமார் 100 கிலோ). ஆனால் இந்த நூல் மெகாசைஸ் நூல், சித்திர வேலைப்பாடுகள் நிரம்பிய நூல், நூல் முழுக்க ஒருவரால் எழுதபட்டது என கையெழுத்தை ஆராய்கையில் தெரிந்தது…தவிரவும் நூலில் சைத்தான் உள்ள பக்கம் மட்டும் கருத்திருந்தது. பிறபக்கங்கள் வெண்மையாக இருந்தன.   டாக்குமெண்டரியில் இந்த புதிரை விஞ்ஞானிகள் விடுவித்ததை காட்டினார்கள். முதற்கண் நூலில் கையெழுத்து ஆய்வு நடத்தபட்டது. அது நூலை எழுதியவர் ஒருவரெ என காட்டியது. நூலை எழுத எத்தனை நாளாகும் என ஆராய்ந்ததில் இரவு,பகல் ஒரு செகண்டு ஓய்வெடுக்காமல் எழுதி இருந்தால் சுத்தமாக ஐந்து வருடம் ஆகும் என தெரிந்தது. உறக்கம், ஓய்வு எல்லாம் சேர்த்தால் 25- 30 ஆண்டுகளில் நூலை எழுதியிருக்க சாத்தியமுண்டு.   அதன்பின் நூலை எழுதியவர் ஹெர்மன் என்ற பாதிரியார் (Herman the recluse) என்ற புதிரும் நூலின் கடைசிபக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. பெயரை லட்டினில் தவறாக எழுதியிருந்ததால் இத்தனை நாளாக யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை.. ஆனால் தனி அறையில் இருந்த ஹெர்மன் (Herman the recluse) என்பதை உயிரொடு புதைக்கபட்ட ஹெர்மன் என பலரும் தவறாக புரிந்துகொண்டதால் இப்படி ஒரு கதை எழுந்ததாக தெரிந்தது. ஹெர்மன் தன் சர்ச்சுக்கு மிகப்பெரும் கொடையை அளிக்க விரும்பி இரவு, பகலாக தனி அறையில் இருந்து நூலை எழுதி முடித்தார். எழுதி முடித்ததும் நூல் இன்னொரு சர்ச்சுக்கு நல்ல விலைக்கு விற்கபட்டது. அந்த சர்ச்சில் அதை ஏசுவின் கல்லரை இருந்த மண் அருகே வைக்க அப்போது பிளேக் நோய் வந்து அந்த சர்ச்சில் பலரும் இறந்தார்கள். ஆக நூலின் பெயர் கெட ஆரம்பித்தது. அதில் பேயை ஓட்டுவது, பிசாசை ஓட்டுவது போன்ற பல மாந்தீர்கங்கள் விவரிக்காப்ட்டிருந்தன. அதனால் அன்றைய ரோமானிய மன்னர் அந்த நூலை எடுத்துபோனார். அவர் வாரிசின்றி இறந்தார். அதன்பின் நூலை ஸ்வீடிஷ் படைகள் கைப்பற்றி ஸ்டாக்ஹோம் நகருக்கு கொண்டு சென்றன. இன்றூவரை நூல் ஸ்டாக்ஹோம் நூலகத்தில் பத்திரமாக உள்ளது   சாத்தான் படம் மட்டும் ஏன் கருப்பானது?   நூல் தோலில் எழுதபட்டது எனபபர்த்தோம். தோலின் மேல் வெயில் பட்டால் அது கருக்கும். எட்டுநூறு ஆண்டுகளில் நூலைபார்க்கும் யாரும் முதலில் பார்ப்பது சாத்தான் படத்தைத்தான். பிற பக்கங்களை அவர்களில் பலரும் தொடக்கூட இல்லை. அதனால் வெயில் பட்டு சாத்தான் பக்கம் இருந்த தோல் கருத்துவிட்டது   இதுவே சைத்தான் எழுதிய பைபிளின் சுவாரசியமான கதை.   ------------------------------------------------------------------------   [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 15 நின்னினும் நல்லன்! மேகலா இராமமூர்த்தி   நண்பர்களே! காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோமா…(கற்பனையில்தான்!)   நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்துவிட்டோம். அதோ அங்கே பாருங்கள்! அங்கே போர்க்களம் ஒன்று காட்சியளிக்கிறது; கடும்போர் ஒன்று இப்போது அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். வாள்களோடு வாள்களும் வேல்களோடு வேல்களும் மோதி உண்டாக்கும் ஒலியும், வெயிலில் மின்னும் அவற்றின் ஒளியும், இடியும் மின்னலும் தரைக்கு இறங்கி வந்துவிட்டதாகவே தோற்றம் காட்டுகின்றன!   போரில் ஈடுபட்ட வீரர்களின் எண்ணிக்கையோ அளவிடற்கரியது. வெற்றிகண்ட வீரர்களின் வீரமுழக்கமும், புண்பட்டுத் தரையில் சாயும் வீரர்களின் ஓலக்குரலும் ஒருங்கிணைந்து கடலின் இரைச்சலைப்போல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு உக்கிரமாக அங்கே போர் புரிந்து கொண்டிருப்பவர்கள் யார்…சற்று நெருங்கிச் சென்று பார்ப்போமா?   அதோ! ஒரு பக்கம் புலிக்கொடி பறக்கிறது. கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து போர்புரியும் மன்னர் ஒருவரைக் காணமுடிகிறது. உற்சாகமும் இப்பகுதியில்தான் அதிகமாக இருக்கக் காண்கிறோம். அது என்ன முழக்கம்? ”மாமன்னர் கரிகால் வளவர் வாழ்க!” அடடா! இவர்தான் கரிகால் வளவரா? இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்த பெருவீரர் அல்லரோ இவர்? அவ்வீரர்கள் இவர் குறித்துப் பெருமிதம் கொள்வதில் பொருளிருக்கிறது!   சரி…எதிர்ப்பக்கத்தில் போர்புரிவது யார் என்று அறிந்துவருவோம்!   இங்கே விற்கொடி பறக்கிறது! கம்பீரமும் அரசகளையும் பொருந்திய ஒரு வீரபுருஷர், கரிய குன்றுபோலிருக்கும் யானைமீது அமர்ந்து கடும்போர் புரிந்துகொண்டிருக்கின்றார். இவர் சேரர்குலத் தோன்றல் என்று பார்த்தவுடன் தெரிகிறது. ”இவர் பெயரென்ன?”   ”அஞ்சாநெஞ்சர் பெருஞ்சேரலாதர் வாழ்க!” என்ற முழக்கமிடுகிறார்களே இவ்வீரர்கள்! ”ஓ! இவர்தான் பெருஞ்சேரலாதரா?” வீரத்தில் இவர் கரிகாலருக்குச் சற்றும் குறைந்தவரல்லவே! இவர்கள் இருவரும் புரியும் கடும்போரின் முடிவு யாதாயிருக்கும்? எனும் பரபரப்பு இப்போதே நமக்கும் தொற்றிக்கொள்கிறது.   போர்க்களத்திலிருந்து சிறிது விலகி, அதோ…அந்தப் பனைமரத்தடியில் நின்று இந்தப் போரை நாமும் கவனிப்போம்!   கடுமையான போர் தொடர்ந்து நீடிக்கின்றது. இதோ…போரின் உச்சக்கட்டம் நெருங்கிவிட்டதாகக் காண்கிறது. ஆம்…கரிகாலரும் பெருஞ்சேரலாதரும் நேருக்கு நேராகவே தத்தம் யானைகளிலிருந்து ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரியகத் தொடங்கிவிட்டார்கள். ”என்ன நடக்கப்போகிறதோ?” என்ற பதற்றத்தில் நம் இதயத்துடிப்பு எகிறுகின்றது.   இருவர் வேல்களும் ஒன்றோடொன்று மோதி ’டணார் டணார்’ என்று ஒலியெழுப்புகின்றன. ”அற்புதம்! அருமையான வேற்போர்! ஆ! என்ன இது? கரிகாலர் சேரலாதரின் வேலைத் தன் வேலால் தட்டிவிட்டாரே! சேர மன்னனின் மார்புக்குக் குறிவைத்துத் தன்னை வேலைச் செலுத்துகிறாரே! ஐயோ…சேரமானின் மார்பில் வேல் பாய்ந்துவிட்டதே! அவர் தன்யானையிலிருந்து கீழே சாய்கிறாரே!”   ”நல்லவேளை!” கீழே நின்று போர் புரிந்துகொண்டிருந்த அவருடைய காலாள் வீரர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துவிட்டனர்.   சோழர் பக்கத்திலோ வெற்றிமுழக்கம் விண்ணை எட்டுகிறது. ”கரிகாலர் வாழ்க! பகைவருக்குக் காலர் வாழ்க!” என்ற முழக்கத்தோடு சோழவீரர்கள் சேரவீரர்களை ஓட ஓட விரட்டுகின்றனர். சேரர்படைச் சிதறி ஓடுகின்றது. கரிகாலர் வெற்றிக்களிப்போடு தன் பாசறைக்குத் திரும்புகிறார்.   ஆனால் போர்க்களத்திலோ…மார்பில் வேல்பாய்ந்து புண்பட்டுச் சாய்ந்திருக்கும் சேரர்பெருமானின் அருகில் பத்துப் பதினைந்து வீரர்கள் வேதனையோடு நின்றிருக்கின்றனர். சேரர் தன்மார்பில் பாய்ந்திருக்கும் வேலைப் பார்க்கிறார் அது குறித்து அவர் கவலை கொண்டாரில்லை. ஆனால், அதன் மறுமுனை அவர் முதுகில் ஊடுருவியிருப்பதை உணர்கின்றார். அதனால் பெருவேதனையும் அவமானமும் கொள்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.   “என் வீரத்திற்கு இப்படி ஓர் களங்கமா? போரில் புறமுதுகிட்டதுபோல் அல்லவா புறப்புண் (முதுகில் ஏற்படும் புண்) ஏற்பட்டுவிட்டது! இனியும் நான் உயிர்வாழ வேண்டுமா? என் குலத்திற்கே மாறாப் பழியை ஏற்படுத்திவிட்டேனே!” என்று எண்ணித் துடிக்கிறார். அவருடைய கம்பீரமான முகத்தில் கடுமையான வேதனையின் சாயை படர்கின்றது. ஒரு முடிவுக்கு வந்தவராகத் தன் பக்கத்தில் கவலையோடு நின்றிருக்கும் வீரர்களைப் பார்க்கிறார்.   அவர்களில் ஒருவன், ”அரசே! ஊருக்குள் சென்று மருத்துவர் யாரையேனும் உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன்” எனக் கிளம்புகிறான். அவன் கையைப் பிடித்து நிறுத்திய சேரமான், அவனைக் கருணையோடு பார்த்து, ”வீரனே! என்மீது உனக்கிருக்கும் அன்பினைக் கண்டு மகிழ்கிறேன். எனக்கு மருத்துவர் வேண்டாம்; அதற்குப் பதிலாக நீ வேறோர் உதவி செய்யவேண்டும்” என்கிறார்.   அவ்வீரன் அவர் முகத்தையே ஆவலோடு பார்க்க அவரோ, ”அன்பனே! ஊருக்குள் சென்று தருப்பைப்புல் கொஞ்சம் கொண்டுவந்து இப்போர்க்களத்திலே பரப்பி நான் அமர்வதற்கான ஆசனமாய் அதை ஆக்கு! போரில் புறப்புண்பெற்ற நான் இனியும் உயிர்வாழ விரும்பவில்லை; வடக்கிருந்து உயிர்த்துறந்து வீரசொர்க்கம் புக விரும்புகிறேன்!” என்கிறார்.   தன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக் கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்த அவ்வீரன், தம் அரசரின் கொள்கையை மாற்றுவது கடினம் என்று மனத்துள் நினைந்தவனாய்க் கூறவந்ததைக் கூறாமலே தளர்ந்த நடையோடு அங்கிருந்து அகன்றான். அடுத்து நடந்தவை தமிழரின் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் என்றென்றும் சான்று பகர்பவையாக அமைந்துவிட்ட நிகழ்வுகள். ஆம்…தன் புறப்புண்ணுக்கு நாணிப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்த் துறந்தான் பெருஞ்சேரலாதன். அவனோடு அவன் வீரர்கள் சிலரும் அவ்வாறே உயிர்த்துறந்து வீரசொர்க்கம் ஏகினர்.   சேரன் இவ்வாறு உயிர்த்துறந்ததை அறிந்தார் அதே ஊரைச் சேர்ந்த பெண்பாற் புலவரான ‘வெண்ணிக் குயத்தியார்.’ தம்மரசனான கரிகாலன் மீதும் பெருமதிப்பு கொண்டவர் அவர். ஆயினும் சேரன் தன்முதுகில் புண்பட்டதற்காக மனம்வருந்தி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்தது அவரைப் பெரிதும் நெகிழ்த்திவிட்டது. அச்செயல் அவனைச் சுத்தவீரன் என்று மெய்ப்பித்துவிட்டதையும், கரிகாலனினும் அவனை உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும் ஆக்கிவிட்டதையும் உணர்ந்தார் குயத்தியார்.   நேரே தம்மரசனான கரிகாற் சோழனைக் காணப் புறப்பட்டார். அங்கே நாளோலக்கத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான் கரிகாலன். புலவரைக் கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று ஆசனத்தில் அமர்த்திவிட்டு, ”பெருமாட்டி! வெண்ணிப் போரைப் பற்றி அறிந்திருப்பீர்களே…?” தன்மீசையை முறுக்கியபடிக் குயத்தியாரைப் பார்த்து அவன் கம்பீரமாக வினவ, அவரும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு,   ”நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தையோட்டி போர்செய்தற்குக் காற்றின்துணை அவசியம் என்றறிந்து வளிச் செல்வனை (காற்றை) அழைத்துஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளோனே! (கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே ஆவர் என்பது குயத்தியாரின் இம்மொழிகளால் உறுதிப்படுகின்றது; சிலர் நினைப்பதுபோல் காற்றின் திசையறிந்து மரக்கலத்தை முதலில் செலுத்தியவர்கள் உரோமானியர் அல்லர்…தமிழரே என்பதை அறிக.)   மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே! போர்மேற்சென்று போரில் நின்னாற்றல் நன்கு வெளிப்படுமாறு வென்றவனே! புதுவருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க்களத்தில்,  உலகத்துப் புகழுக்குப் பெரிதும் பாத்திரமாகும் வண்ணம் தன்புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த சேரர்பெருந்தகை நின்னைவிட நல்லவன் அன்றோ?” என்று புலவர் கரிகாலனைப் பார்த்துக் கேட்க, அம்மையாரைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்தவண்ணம் யோசனையோடு அமர்ந்திருந்த கரிகாலன், பின்பு அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்!’ என்று தலையசைத்தான்.   போரில் வென்று கரிகாலன் பெற்ற புகழ் வெற்றிப் புகழ்; போரில்பெற்ற புறப்புண்ணுக்கு நாணி உயிர்த்துறந்ததன் வாயிலாய்ச் சேரன் பெற்றதோ வளவனினும் விஞ்சிய பெரும்புகழ் என்பதே வெண்ணிக் குயத்தியாரின் எண்ணம்; அதுவே அவர் பாடலின் பொருள்.   நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற வென்றோய் நின்னினு நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே.   (வெண்ணிக் குயத்தியார்: புறம்-66)   தம்மரசன் முன்பு பிறிதோர் அரசனை, அதுவும் தம்மரசனிடம் போரில் தோல்விகண்ட அரசனைப் போற்றுதற்கு ஒரு புலவருக்கு எத்துணைத் துணிச்சல் வேண்டும்! அஃது அந்நாளைய புலவோர்க்கு இருந்திருக்கிறது என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது. வாழ்க புலவரின் அஞ்சாமை!   (மீள்பதிவு – நன்றி: வல்லமை)   ------------------------------------------------------------------------   [] மேகலா இராமமூர்த்தி – megala.ramamourty@gmail.com ------------------------------------------------------------------------ 16 ஆடானையப்பர் ஆலயம் - பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம் சொ.வினைதீர்த்தான் ஆடானையப்பர் ஆலயம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலவழிபாடு  []   திருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன். []   இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது. []     1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். நல்லவேளை ஊர் அஜகஜேஸ்வரம் என்றில்லாமல் ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை எனப்பதிவாகிவிட்டது.   புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.   ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.     2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. [] [] []   3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது. [] [] []   4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் வரிசையில் அமர்ந்துள்ளனர். []   5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார். []       6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.     7.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி. அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!     8.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே”என்பதும்”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்கு நோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.   []     திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன்.  நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன்… [] [] [] [] [] []       ------------------------------------------------------------------------   [] சொ.வினைதீர்த்தான் – karuannam@gmail.com ------------------------------------------------------------------------ 17 நடுவட்ட சீனர்கள் செல்வன் 19ம் நூற்றாண்டில் மலேயாவிலும் ப்ரிட்டிஷ் ஆட்சி இருந்தது. இந்திய கைதிகளை அந்தமானுக்கும், பர்மாவுக்கும் நாடுகடத்தியது போல மலேயாவில் போராடிய சீனர்கள் சிலரை இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் ப்ரிட்டிஷார். அவர்களை நீலகிரியில் சிறையில் அடைத்தார்கள்.   1868ம் ஆண்டு நீலகிரி ஜெயிலில் இருந்த சீனர்கள் சிலர் ஜெயிலை உடைத்துவிட்டு தப்பி ஓடினார்கள். போலிஸ் சிலரை துரத்திப்பிடிக்க, சிலர் கடைசிவர அகப்படவே இல்லை. அதன்பின் ப்ரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சீன கைதிகளை நீலகிரியிலேயே குடியமர்த்தியது ப்ரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு நீலகிரி தமிழ்பறையர் இனத்தை சேர்ந்த பெண்களை திருமணமும் செய்து வைத்தார்கள் ப்ரிட்டிஷார். இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் முதல் கூடலூர் வரை இருந்த பகுதிகளில் வசித்தார்கள்.   இவர்களை ஆராய்ச்சி செய்ய சென்ற எட்கார் தர்ஸ்டன் அவர்களை புகைப்படம் எடுக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். வழக்கமாக தர்ஸ்டன் இந்தியர்களுக்கு புகைப்படம் எடுக்க இரண்டு முதல் எட்டணா வரை கொடுப்பது வழக்கம். ஆனால் சீனர்கள் “எங்களுக்கு காசு வேண்டாம். போட்டொ கொடுங்கள்” என கேட்டுவாங்கிக்கொண்டார்கள்.   அவர்களது குழந்தைகள் தாயின் கருநிறமாக இல்லாமல் தந்தையின் மஞ்சள் நிறத்தில் இருந்ததாக தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இடுங்கிய கண்கள், தட்டைமூக்கு என மங்கோலிய சாயல் அக்குழந்தைகளிடம் இருந்ததாம். காலஓட்டத்தில் அக்குழந்தைகள் நீலகிரியின் பறையர் சமூகத்திலேயே கலந்துவிட்டார்கள். அவர்களை பின்னாளில் தேடிக்கண்டுபிடிக்க நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.   ------------------------------------------------------------------------ [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 18 பிலிப்பைனின் தங்கத் தாரா செல்வன் இன்று சிகாகோவின் புகழ்பெற்ற பீல்ட் மியூசியத்தில் இந்த தங்கதாரா சிலையைக்கண்டேன்.   13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலை முழுக்க தங்கத்தால் ஆனது. சுமார் 1.86 கிலோ தங்கத்தால் ஆன இச்சிலை மலேயாவின் மகாஜத் அரச வம்சாவளியை சேர்ந்ததாக கருதபடுகிறது. இச்சிலையில் இருக்கும் தாரா எனும் தேவி பவுத்தத்தின் ஒரே பெண் போதிசத்வர். எடுத்த காரியத்தில் வெற்றி அளிக்கவல்ல தேவதை. []   தாரா வட இந்தியாவில் துர்க்கையின் வடிவமாக கருதப்படுபவர். பவுத்தம் அதன்பின் இவரை உள்வாங்கியது. [] 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிலிப்பைன்ஸில் ஆற்றோரம் ஒரு எளிய பெண்மணி இத்தங்கதாரா சிலையை கண்டெடுத்தார். அதன்பின் அந்த மாகாண பிலிப்பைன்ஸ் கவர்னர் கைக்கு இச்சிலை சென்றது. பிலிப்பைன்ஸ் கவர்னர் ஒரு தேங்காய் கம்பனிக்கு பட்ட கடனுக்கான இச்சிலையை கைமாற்றி விட்டார். அத்தேங்காய் கம்பனி இதை எக்ஸிபிஷனில் வைக்க பீல்ட் மியூஸிய கியூரேட்டரின் மனைவி 4000 பெசோவுக்கு (பிலிப்பைன் பணம்) 19208 வாக்கில் இதை வாங்கி சிகாகோ கொண்டுவந்தார் [] பிலிப்பைன்ஸின் ஒப்பற்ற தேசிய சின்னமாக கருதப்படும் இச்சிலை இப்படி சிகாகோ நகருக்கு வந்து சேர்ந்தது. பிலிப்பைன்ஸில் இதன் மாதிரியை எக்ஸிபிஷனில் வைத்துள்ளார்கள். [] பீல்ட் மிச்யுசியத்தில் 19ம் நூற்றான்டை சேர்ந்த பீஜாப்பூர் நகை ஒன்றையும் காண நேர்ந்தது. ஆலிலை கண்ணன் சிரித்தபடி அதில் வீற்றிருந்தான்.   ------------------------------------------------------------------------ []  செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------   19 மாவோரி பழங்குடியினர் ஆயுதங்கள் செல்வன் ஒப்பிட்டளவில் உலகில் மிக சமீபகாலத்தில் மனித குடியேற்றம் நிகழ்ந்த பகுதி நியூசிலாந்து மட்டுமே.   சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு மாவோரி எனும் மாலினிசிய குடிகள் இங்கே குடியேறினார்கள். பூர்விகமாக அவர்கள் கருதுவது ஹவாகிகி எனும் இடம்..இது கற்பனையான இடம் எனவும், தற்போதைய ஹவாயி எனவும் நடுவே இருக்கும் பல பசிபிக் தீவுகள் இவர்கள் பூர்விகமாக கருதப்படுகின்றன. [] [] [] மவோரி பழங்குடிகள் கதாயுதத்தை பயன்படுத்தி சண்டையிட்டனர். கற்கால குடி என்பதால் உலோக ஆயுதங்கள் இல்லை. மர கதைகள் மட்டுமே. மண்டையை உடைக்க ஒரு வகை கதை. தோலை கிழிக்க ஒரு வகை கதை. எலும்புகள், மூட்டுகளை உடைக்க ஒரு வகை கதை. கூட்டங்களில் அலங்காரமாக அணிய ஒரு வகை கதை. இடுப்பில் அணிந்து close combat சண்டைகளுக்கு பல வகை குறுங்கதைகள். []   மாவோரி மொழியில் இவற்றிற்குப் பெயர் கடா (Gata). ------------------------------------------------------------------------ [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 20 மகாத்மா காந்தியின் மரணம் சி. ஜெயபாரதன் [] [1869-1948] அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! – இரவீந்திரநாத் தாகூர்   பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.   மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மையுற்றார்!   கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!   உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!   ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெறவில்லை!   அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்! மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.   ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!   நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்! டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின! “முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.   காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள் காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!   40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.   காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.   மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம் பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.     சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.   ‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார். மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.   கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!   கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி! இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’   அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’   1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர். காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.   இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது.     முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்! [] ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்! பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?   வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.   காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார். ‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!   இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே ! ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ? [] ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே! பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!   இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!   அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் ! மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை! [] கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!   வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!   மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார்.   ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!       Mohandas Gandhi – Timeline:   October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi 1883: Gandhi and Kasturbai are married. 1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father September 4, 1888: Gandhi leaves for England to study law. June 10, 1891: Gandhi passes the bar exam in England. 1891-1893: Gandhi fails as a lawyer in India. April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit. Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress. Spring 1896: Gandhi returns to India to collect his wife and children. December 1896: Gandhi returns to South Africa with his family. October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British. 1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders. 1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906. 1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.” July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.” January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison. October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail. 1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed. November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter. June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests. July 18, 1914: Gandhi sails to England. August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918). January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome. May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live. April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India. April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters. August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India. March 10, 1922: Gandhi is arrested for sedition. March 1922-January 1924: Gandhi remains in prison. 1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India. 1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress. February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi. January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India. March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws. March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea. May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India. January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative). Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain. December 28, 1931: Gandhi returns to India. January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial. September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables. 1934-38: Gandhi avoids politics, travels in rural India. 1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence. September 1939: World War II begins, lasting until 1945. March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War. August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence. August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace. February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule. February 22, 1944: Death of Kasturbai May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace. Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole. May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal. March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition. August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan. August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan. January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.   ------------------------------------------------------------------------ [] சி. ஜெயபாரதன் – jayabarathans@gmail.com ------------------------------------------------------------------------   21 வாதாபி கொண்டான் செல்வன் கிபி 600 முதல் 900 வரை தென்னக வரலாறு மூன்று பேரரசுகளின் வரலாறாக இருந்தது. சாளுக்கியர், பல்லவர் மற்றும் பாண்டியர்.   சாளுக்கிய வரலாறு புலிகேசியுடன் துவங்குகிறது. சாளுக்கியர் வடகர்நாடகத்தின் வாதாபியை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள். பாதாமி மராட்டியத்துக்கு பக்கமாக இருப்பதால் சாளுக்கியரை மராட்டியர் என கூறுவோர் உண்டு. இருந்தாலும் சாளுக்கியர் கர்நாடகாவை சேர்ந்த க்ஷத்திரிய வம்சத்தவர்கள். கல்வெட்டுக்களை கன்னடமொழியிலும், சமஸ்கிருதத்திலும் எழுதினார்கள். கர்நாடகத்தைசேர்ந்த கடம்ப அரசின் சிற்றரர்களாக இருந்த சாளுக்கியர்கள் முதலாம் புலிகேசி காலத்தில் கடம்பர்களை அடித்துவிரட்டிவிட்டு ஆட்சியைப்பிடித்தார்கள். கிபி 540ம் ஆண்டு புலிகேசி மன்னர் ஆட்சிக்கு வருகிறார்.   ஆட்சிக்கு வந்த புலிகேசி செய்த முதல் வேலை அஸ்வமேத யாகம் செய்தது. அஸ்வமேத யாகம் செய்தால் அவர் மாபெரும் சக்ரவர்த்தி எனப்பொருள். அந்த யாகத்தைசெய்து முடித்து சுற்றுவட்ட சிற்றரசுகளை எல்லாம் தன் ஆட்சியில் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் வடக்கே வலிமையான ஹர்ஷரின் ராஜ்யமும், தெற்கே பல்லவரின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. இப்படி ஒரு பேரரசை உருவாக்கிவிட்டு அவர் இறக்க அவர் மகன் இரன்டாம் புலிகேசி ஆட்சிக்கு வருகிறார். இரண்டாம் புலிகேசி மன்னர் சாளுக்கிய வரலாற்றில் மிகபுகழ் பெற்றவர். அவர் ஆட்சிக்கு வந்ததும் தெற்கே தன்பார்வையைத்திருப்புகிறார்.   கோசலம், கலிங்கம் எல்லாம் எதிர்ப்பின்றிசரணடைகின்றன. ஆந்திராவில் வெங்கிபகுதியில் தன் தம்பி விஷ்ணுவர்த்தனை ஆட்சியில் அமர்த்தி கீழசாளுக்கிய ஆட்சியை ஏற்படுத்துகிறார். அதன்பின் பல்லவர்கள் மேல் படைஎடுக்கிறார். காஞ்சிக்கு அருகே 15 மைல் தூரத்தில் உள்ள புள்லலூரில் நடந்தபோரில் மகேந்திரவர்மன் தோற்றுப்போய் காஞ்சிகோட்டைக்குள் பதுங்கிகொள்கிறார். கோட்டையை முற்றுகையிட்டு அது வீழும் சமயத்தில் வடக்கே நர்மதை ஆற்றைகடந்து ஹர்ஷரின் படைகள் வருவதாக தகவல் கிடைக்க முற்றுகையை முடித்துகொண்டு புலிகேசி வடக்கே விரைகிறார். பெரும்போருக்குபின் வடக்கே நர்மதை நதிக்கரையில் கிபி 620ம் ஆன்டுவாக்கில் ஹர்ஷரை தோற்கடிக்கிறார்.அதன்பின் குஜராத், மராட்டியம்,கோவா எல்லாம் அவர் ஆட்சியின்கீழ் வருகிறது. தெற்கே மகேந்திரவர்மர் தப்பிபிழைத்த போதும், அது பல்லவர்களுக்கு தீராத அவமானமாக மாறுகிறது   புலிகேசி இப்படி ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடியணையற்ற மன்னராக விளங்குகிறார். பாரசிக மன்னர் குஸ்ரு அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார். அவர்களும் புலிகேசி மன்னரின் அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார்கள். இந்த சூழலில் பல்லவ நாட்டில் கிபி 630 வாக்கில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புலிகேசி படை எடுக்கிறார். ஆனால் இம்முறை பல்லவர்கள் மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்று ஓடவும், விடாத நரசிம்மவர்மர் அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார். கிபி 642 வாக்கில் நடந்த கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகர் ஆகவே இல்லை.   அதன்பின் நரசிம்மவர்மர் சேரர்கள், பாண்டியர்கள், சிங்களளர்கள், களப்பிரர் என பலரை வென்று தென்னகத்தின் இணையற்ற மன்னர் ஆகிறார். அழிவின் விழிம்பில் நின்ற சாளுக்கியபேரரசில் சிற்ரரசர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. இந்த சூழலில் இரண்டாம் புலிகேசியின் மகன் சாளுக்கிய விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப்பாட்டன் கங்கமன்னர் துர்வினீதன் உதவியுடன் எதிரிகளை முறியடித்து சாளுக்கிய அரசை தன் கட்டுபாட்டில் கொண்டுவருகிறார்.   இப்போது நரசிம்மவர்மர் இறந்து அவரது மகன் இரன்டாம் மகேந்திரவர்மன் ஆட்சியில் இருக்கிறார். போர் மூள்கிறது. பான்டியர் மாறவர்மனுடன் கூட்டணி ஏற்படுத்தி பல்லவர் மேல் படை எடுக்கிரார் விக்கிரமாதித்தர். கங்கநாடு அருகே நடந்தபோரில் பல்லவர்கள் தோற்க பல்லவமன்னர் இரன்டாம் மகேந்திரவர்மர் உயிர்துறக்கிறார். அவர் மகன் பரமேச்வரவர்மன் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் விக்கிரமாதித்தர் படை காஞ்சியை நெருங்க பரமேஸ்வரவர்மர் உறையூருக்கு ஓடுகிறார். உறையூர வரை அவரை விரட்டிசெல்கிறார் விக்கிரமாதித்தர். திருச்சி அருகே பெருவளநல்லூரில் பாண்டியர்- சாளுக்கியர் கூட்டணி அணிதிரண்டு பல்லவரை எதிர்கொள்கிறது.   மாபெரும் இக்கூட்டணியை எதிர்கொன்ட பல்லவர் படை பேரதிசயமாக வெற்றி அடைகிறது. இந்த வெற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கு வியப்பை அளிப்பதாகும். பெரும்தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த பல்லவர்கள் பெருவெற்றி அடைகிறார்கள். இப்போரின் இறுதியில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படுதோல்வி அடைந்து நிர்வானமாகதப்பி ஓடியதாக பல்லவரின் கல்வெட்டு குறிக்கிறது.   இதன்பின் விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன், பேரன் விஜயாதித்தன் ஆட்சி நடக்கிறது. இவர்கள் தெற்கே படைஎடுக்கவில்லை. அதன்பின் கிபி 733ம் ஆன்டுவாக்கில் இரண்டாம் விக்கிரமதித்தன் ஆட்சிக்கு வருகிறார்.இவரது ஆட்சியின் போது சிந்து பகுதியில் அரபியர்கள் ஆட்சி ஏற்படுகிறது. அவர்கள் தென்னகத்தின் மேல் படை எடுக்கையில் சாளுக்கிய விக்கிரமாதித்தர் அவர்களை முறியடிக்கிறார்.   அப்போது பல்லவநாட்டை இரண்டாம் பரமேஸ்வரமர்வர் ஆள்கிறார். இம்முறை கங்கமன்னர் எரியப்பர் உதவியுடன் சாளுக்கியர் பல்லவர்கள் மேல் படை எடுக்கிரார்கள். போரில் பரமேச்வரவர்ம கொல்லபட காஞ்சி சாளுக்கியர் வசமாகிறது. முதல்முறையாக சாளுக்கியர் படை காஞ்சியில் நுழைகிறது   வாதாபியை எரியூட்டியதற்கு பழிவாங்குவார் என கருதபட்ட நிலையில் காஞ்சியின் கோயில்கள், சிற்ப அழகுகள் விக்கிரமாதித்த மன்னரின் மனதைகொள்ளைகொள்கிறது. நகரேஷு காஞ்சி என அழைக்காப்ட்ட சிறப்பு மிகுந்த நகர் காஞ்சி. அதை எரியூட்ட மனம் வராது கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட காஞ்சிமாநகர கோயில்களுக்கு ஏராளமான பொன்னை வழங்கி, காஞ்சி மக்களுக்கும் ஏராளமான தானதருமங்களை செய்து அதை கைலாசநாதர் கோயிலில் அதை ஒரு கன்னடகல்வெட்டிலும் பதித்துவிட்டு வாதாபியை எரித்தற்கான பழியை இப்படி அன்பால் தீர்த்துவிட்டு பல்லவநாட்டை விட்டு அகன்றார் சாளுக்கிய விக்கிரமாதித்தர்.   ------------------------------------------------------------------------ [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 22 பல்லவர், சோழர் காலத்தமிழகத்தில் நிலவிய ஜனநாயகம் செல்வன் 8, 9ம் நூற்றாண்டுகளில் மூன்றுவகை கிராம நிர்வாக அமைப்புகள் இருந்ததாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன   ஊர் – அனைத்துசாதி மக்களும் நிலம் வைத்திருந்து நிர்வாகத்தில் பங்கேற்கும் கிராம சபை   சபை- பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு கொடுக்கபட்ட நிலங்களை வைத்திருப்போர் பங்கேற்கும் அமைப்பு   நகரம்- வணிகர்கள், வைசியர்கள் பங்கேற்கும் நிர்வாக அமைப்பு   சில ஊர்களில் இவற்றில் ஒன்று மட்டுமே இருக்கும், அல்லது சில பெரிய நகரங்களில் இரண்டு, மூன்று நிர்வாகச்சபைகள் இருக்கும். ஆனால் சச்சரவின்றி ஒரு பிரச்சனையால் பாதிக்கபடுவோர் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவுகளை இச்சபைகள் எடுத்ததாகத்தெரிகிறது. இத்தனை சாதி அமைப்புகள் இருந்தபோதும், சாதிவாரியாகபிரிந்திருந்தபோதும் சச்சரவின்றி வயலுக்கு நீர்பாசன விவகாரம், கோயில் நிர்வாகம், தானதருமம் உள்ளிட்ட பல விவரங்களை இச்சபைகள் நிர்வகித்து வந்தன, இச்சபைகளில் உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கபடவேண்டும், நிர்வாகம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு எல்லாம் தெளிவான விதிகள் இருந்தன   ஒவ்வொரு கிராமத்துக்கும் மகாஜனம் என அழைககப்ட்ட ஒருவர் நிர்வாகியாக இருந்தார். மகாஜனங்கள் கவுண்டர் என அழைக்கப்ட்ட தலைவர்களுக்கு கட்டுபட்டிருந்தார்கள். அரசுஅதிகாரிகள் ஊர் நிர்வாக சபைகளுடன் இணைந்தே செயல்பட்டார்கள்.   அரசு அதிகாரிகளுடன் ஊர் மக்கள் கீழ்க்காணும் விஷயங்களுக்கு உதவவேண்டி இருந்தது. ஊரில் உப்பை வெட்டி எடுத்தல், சர்க்கரை உற்பத்தி செய்தல், வெளியூர்த்திருடன் எவனாவது தப்பி ஓடி வந்தால் அடைக்கலம் தராமல் பிடித்துகொடுக்கவேண்டியது. அதுபோக அரசு அதிகாரிகளுக்கு மாட்டுவண்டி கொடுப்பது, இராத்தங்க இடமளிப்பது மற்றும் உணவையும் அளிக்கவேண்டி இருந்தது.   அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டிய உணவுபப்ட்டியல்: அரிசி, பால், தயிர், புல் (மாட்டுக்கு), காய்கறிகள்   மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் வீட்டுவரி தொழில் வரி சந்தை வரி சுங்கவரி நீதிமன்ற கட்டணம்   இதுபோக தண்ணீர் கட்டணம், பராமரிப்பு, கோயில், மருத்துவமனை போன்றவற்றுக்கு நன்கொடை கொடுக்கவேண்டி இருந்தது. இது கட்டாயமில்லையெனினும் மக்கள் இவற்றையும் ஆதரித்துப்பராமரிக்கவே செய்தனர்   இந்த சபைகளை உள்ளடக்கி வள்நாடு, மண்டலம் எனும் அமைப்புகள் இருந்தன. இப்போதைய மாவட்டம் போன்ற அமைப்புகள் அவை. நாட்டுக்கோன் என அழைககப்ட்ட அதிகாரி அவற்றின் நிர்வாகியாக இருந்தார்.   நீதிமன்றங்கள் பல்லடுக்கு முறையில் அமைந்தன. கிராமப்பஞ்சாயத்து, ஜாதி சபை போன்றவை அடிமட்ட அளவில் நீதி வழங்கின. மேல்முறையீட்டுக்கு அதிகாரணம் என அழைககப்டட் நீதிமன்றங்கள் இருந்தன. நீதி சாஸ்திரங்களில் சிறந்தோரே இவற்றில் நீதிபதிகளாக் முடியுமெனினும் இவற்றில் ஊழலும் நடைபெற்றதாக மகேந்திரவர்மன் தான் எழுதிய மத்தவிலாஸபரிகஸத்தில் குறிப்பிட்டுப்பகடி செய்துள்ளான்.   மன்னனுக்கு அறிவுரை வழங்க மந்திரிமண்டலம் எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. ஆட்சிக்கு வரும் மன்னர்கள் முந்தைய மன்னன் பிறப்பித்த உத்தரவுகள், பரம்பரை உரிமைகள், தானதரும சபைகள் ஆகியவற்றை அப்படியே தொடர்வதாக உறுதிமொழி அளித்தபின்னரே ஆட்சிபொறுப்பேற்ரார்கள். ஒரு நாட்டை இன்னொரு நாட்டு மன்னன் பிடித்தாலும் இத்தகைய நிர்வாக அமைப்புகளை கலைத்துகுழப்பம் விளைவிக்க முயலவில்லை.   மன்னர்களின் அதிகாரவெறி எல்லைமீறாமல் ஜாதி சங்கங்கள், குறுநில மன்னர்கள், பரம்பரையாக பதவியில் இருக்கும் ஊர்தலைவர்கள், சபைகள் ஆகியோர் பார்த்துகொண்டுவந்தார்கள். அதனால் பண்டைய பல்லவர், சோழ, பாண்டியர் ஆட்சியில் மன்னன் தன் நாட்டு மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பேச்சே எழவில்லை. இடைவிடாத படையெடுப்புக்களால் நாடு, நகரங்கள் கைமாறினாலும் மக்களின் அன்றாட வாழ்வின் அமைப்பை மாற்றாமல் இம்முறை காத்து வந்தது.       (நன்றி: A history of South India – நீலகண்ட சாஸ்திரியார்)     ------------------------------------------------------------------------   [] செல்வன் – holyape@gmail.com ------------------------------------------------------------------------ 23 அறிவிப்பு மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு பகுதியில் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடர் பதிவுகளின் மூலம் திரு. து. சுந்தரம் அவர்கள் கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்றப் பாடங்களைத் துவக்கியுள்ளார். [kalvettu]   சிவப்புக் கட்டத்தில் இருப்பதை “முக்கால் திருப்பள்ளி” எனப் படிக்க விரும்புபவர்கள் இந்தப் பதிவுகளின் மூலம் கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. திரு. து. சுந்தரம் அவர்களுக்கு நன்றி. ------------------------------------------------------------------------ [thu suntharam] து. சுந்தரம் – doraisundaram18@gmail.com ------------------------------------------------------------------------ 24 தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரையிலான வெளியீடுகள் விழியப் பதிவுகள் : 1. மண்ணின் குரல் 20ம் நூற்றாண்டு ஆரம்ப கால மலாயா செய்திகள் 2. மண்ணின் குரல்: மார்ச் 2015: ​ ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் – விழுப்புரம் மாவட்டம் 3. தைப்பொங்கல் திருநாள் சிறப்பு வெளியீடு (மண்ணின் குரல் – 2015) – ஆனைமலை குடைவரைக்கோயில் ஸ்ரீயோகநரசிம்மர் 4. மண்ணின் குரல்: ஜனவரி 2015:மானாமதுரை மண்பாண்டங்கள் – குடிசைத் தொழில்   மின்னூல்கள் : 1. THF Announcement: E-books update: 15/02/2015 *திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புக்கள்* 2. THF Announcement: E-books update: 11/01/2015 *பஞ்சாங்ககணனம்* 3. THF Announcement: E-books update: 01/01/2015 *தமிழ்க்கூறும் நல்லுலகம் -பகுதி 2 *   மின்னிதழ்கள் : 1. நாடார் குல மித்திரன் – 1922 – நவம்பர் 1 வது இதழ் 2. நாடார் குல மித்திரன் – 1922 – நவம்பர் 2 வது இதழ் 3. நாடார் குல மித்திரன் – 1922 – நவம்பர் 3 வது இதழ் 4. நாடார் குல மித்திரன் – 1922 – டிசம்பர் 1 வது இதழ் 5. நாடார் குல மித்திரன் – 1922 – டிசம்பர் 2 வது இதழ் 6. நாடார் குல மித்திரன் – 1922 – டிசம்பர் 3 வது இதழ் 7. நாடார் குல மித்திரன் – 1923 – ஜனவரி 1 வது இதழ் 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !