[] [cover image] மார்க்சியத்திற்கு அழிவில்லை கோவை ஞானி FreeTamilEbooks.com CC-BY-SA-ND மார்க்சியத்திற்கு அழிவில்லை 1. மார்க்சியத்திற்கு அழிவில்லை 1. மின்னூல் உதவி 2. முன்னுரை 3. அணிந்துரை 2. மார்க்சியம் கற்போம்: தேடலோடும், திறனாய்வோடும் 3. கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை – ஆய்வுக்கான சில குறிப்புகள் 4. பொருள் முதல் வாதமும் மார்க்சிய நோக்கும் 5. பொருள் முதல் வாதமும், மார்க்சிய மெய்யியலும் 6. மார்க்சியமும் அறவியலும் I 7. மார்க்சியமும் அறவியலும் II 8. அன்டோனியா கிராம்சி வாழ்வும் சிந்தனையும் 9. மார்க்சியமும் சமயமும் 10. தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் 1. பகுதி 2 2. பகுதி 3 3. பகுதி 4 11. கலையும் சித்தாந்தமும் 12. மார்க்சியமும் தமிழ்த்தேசியமும் 13. பாட்டாளி மக்களாட்சி 14. கம்யூனிசம் தோற்றுவிட்டதா? 15. கீழை மார்க்சியம் பாமரனின் பார்வை குறித்து சில திறனாய்வுகள் 16. மார்க்சியத்தின் எதிர்காலம் 17. மார்க்சியத்திற்கு அழிவு இல்லை 1. பிற்சேர்க்கை :  18. மார்க்சியமும் அறவியலும் 19. தோழர் காலன்துரைக்கு ஒரு கடிதம் 1. FREETAMILEBOOKS.COM 2. கணியம் அறக்கட்டளை 3. நன்கொடை மார்க்சியத்திற்கு அழிவில்லை மார்க்சியத்திற்கு அழிவில்லை   கோவை ஞானி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - அ.சூர்யா - suriya.alagar97@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/marxiayathirkku_azhivillai} மின்னூல் உதவி Author correspondence and acquisition of Creations Gnuஅன்வர் gnuanwar@gmail.com மெய்ப்பு செய்தவர் தாரா முன்னுரை இன்றியமையாத காரணங்களுக்காக அல்லாமல் ஒருவர் மார்க்சியத்தை தழுவிக் கொள்ள வேண்டியதில்லை . இப்படி 1975 -ல் “இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்” என்ற எனது முதல் நூலில் எழுதினேன். மார்க்சியத்தை இன்றுவரை நான் தழுவிக் கொள்வதற்கான இன்றியமையாத காரணங்கள் உள்ளன.  1960 களின் தொடக்கத்தில் எனக்கு மார்க்சியம் அறிமுகமாயிற்று. உடனடியாக மார்க்சியத்தை நான் தழுவிக்கொள்ளவில்லை. 1965 வாக்கில் தோழர் எஸ். என். நாகராசனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஓரளவு மார்க்சிய சார்பு எனக்குள் முன்பே இருந்த போதிலும் எஸ்.என்.நாகராசன் அவர்களோடு நானும் நண்பர்களும் நடத்திய உரையாடலின் விளைவாக எனக்குள் மார்க்சியம் செறிவு பெற்றது. 1960 களின் இறுதியில் கோவையில் இருந்து வெளிவந்த “புதிய தலைமுறை” ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். “வசந்தத்தின் இடி முழக்கம்” என்ற பேரியக்கம் எங்களைப் பெருமளவில் தன்வசப்படுத்திக் கொண்டது. தோழர் எஸ். என். நாகராசன் மூலம் எங்களுக்கு மாவோ அறிமுகம் ஆனார். அன்று முதல் இன்று வரை, இடைக்காலத்தில் எவ்வளவோ நடைபெற்ற போதிலும் மாவோவின் ஈர்ப்பிலிருந்து நாங்கள் விடுபடவில்லை.  மாவோவின் நெறியில்தான் மார்க்சியம் எங்களுக்குள் வளமும் உரமும் பெற்றது. இளமைக் காலத்தில் எனக்குள் நிறைந்திருந்த கடவுளைப் பற்றிய நம்பிக்கை மட்டுமல்லாமல், சில அற்புத அனுபவங்களின் வழியே பின்னர் அவற்றைக் கடந்து கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம் அன்றி வேறில்லை என்று அறிந்து கொண்டேன்.  கடவுள் ஒரு வழியே கருத்தாக்கம் என்று எனக்குள் ஏற்பட்ட புரிதல்  மார்க்சியத்திற்கும் என்னை இட்டுச் சென்றது. என் வாழ்வுக்கு என்ன அர்த்தம் என்ற கேள்விதான் கடவுளைப் பற்றிய என் தேடலுக்கும் பின்னர் ஏற்பட்டகருத்தியல் மாற்றங்களுக்கும் காரணமாயிற்று.  வாழ்வுக்கான அர்த்தம் என்ற தேடல் வழியாகத்தான் மார்க்சியத்தை நான் ஆரத் தழுவிக் கொண்டேன். வரலாற்றில் தான் நான் வாழ்கிறேன். நெடுங்கால வரலாற்றின் வழியே மாறிவரும் சமூகச் சூழல்தான் என்னைப் படைக்கிறது. என் வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுகிறது. நான் தனியன் இல்லை. மாபெரும் வரலாற்று இயக்கத்தில் நான் ஒரு துளி. எனக்குள்ளும் வரலாறும் சமூகமும் இயங்குகின்றன. இந்த இயக்கத்தின் வழியே இயற்கையோடும், உயிர்களோடும், பிரபஞ்சத்தோடும் நான் உறவு கொண்டிருக்கிறேன். உடமையும் அதிகாரமும் என்னை ஆட்கொள்வதன் மூலம் என்னைச் சிறுமைப்படுத்துகின்றன, என்னை அடிமைப்படுத்துகின்றன.  இவற்றின் ஆதிக்கத்திற்கு என்னை நானே விட்டுத் தருவதன் மூலம் என் வாழ்வின் அழகையும் ஆற்றலையும் நான் அழித்துக் கொள்கிறேன். வரலாற்றின்வரையறைகளுக்குள் வாழ நேர்ந்த போதிலும் ஆதிகாலம் முதற்கொண்டு எனக்குள்ளும் தொடர்ந்து வருகிற பொதுமை / சமதர்மம் என்ற நீரோட்டத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள இயலாது. வரலாற்றின் நீரோட்டத்திற்குள்ளிருந்து காலம் தோறும் பொங்கி வழிகிற சமதர்மம் என்ற பேருணர்வில் தான் நான் தழைக்கிறேன். இந்த உணர்வு தான் நான் யார் என்ற புரிதலை எனக்குத் தருகிறது. இதன்மூலம் தான் வரலாற்று இயக்கத்தில், சமூக மாற்றத்திற்கான இயக்கத்தில் என்னைக் கண்டுகொள்ளவும், என் வாழ்வுக்கான அர்த்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இயல்கிறது. மார்க்சியத்தின் வழியில் அல்லாமல் இத்தகைய அர்த்தத்தை, அழகை, ஆற்றலை பெறுவதற்கு வேறு வழியும் இல்லை. என்னுடைய வாழ்வுக்கான அர்த்தம் என்ற எனது தேடல் என்பது, எனக்கு மட்டுமே உரிய தேடல் என்று நண்பர்கள் கருதமாட்டார்கள் என நம்புகிறேன். தனி உடைமையும், அரசு அதிகாரமும் ஆதிக்கம் பெற்றுள்ள எந்த ஒரு சமூகச் சூழலும் மனிதரின் படைப்புத் திறன் முதலியவற்றை அழிக்கவே செய்கின்றன. ஆதிக்கத்திற்கு மக்கள் தங்களை இழந்து தவிக்கின்றனர். வறுமை, நோய் நொடிகள், தற்கொலைகள் முதலிய கொடுமைகளுக்கு மக்கள் உள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு கல்வியோ, வேலைவாய்ப்போ, தரப்படுவதில்லை. இவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. இவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி இல்லை. இந்த மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்களாகிய நிலம், நீர், காடுகள் முதலிய இயற்கை வளங்களும் இவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் இவர்கள் மீது உச்ச அளவில் திணிப்பதன் மூலம் இவர்கள் வாழ்வின் ஆதாரங்களை மட்டும் அல்லாமல் அழகையும் அர்த்தங்களையும் அழிக்கிறார்கள்.  ஆதிக்கங்கள் அறவே இல்லாத சமூகச் சூழலில்தான் இவர்கள் மனித மாண்புகளுடன் வாழமுடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துவது மார்க்சியம்.  மார்க்சியத்தை அரசியல் என்று மட்டுமே நான் கருதவில்லை. மாறிவரும் உலகத்தையும், வாழ்வையும் தொடர்ந்து புரிந்து கொள்வதற்கான பேரறிவு என்று மார்க்சியத்தை நான் கொள்கிறேன். நெருக்கடிகள் மிகுந்த வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் தவிர வேறு நெறி இல்லை என்பது மட்டும் அல்ல. நெருக்கடி மிகுந்த வாழ்வைப் புரிந்து கொள்வதற்கும் மார்க்சியம் தான் திறவுகோல். இவ்வகையில் மார்க்சியம் ஒரு மெய்யியல். இம்முறையில் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வது ஒரு கல்விமுறை. இந்த மெய்யியலும், கல்வி முறையும் என்றும் காலாவதியாக முடியாது.  இயந்திரவியல் வகைப்பட்ட பொருள்முதலியல், தத்துவ வகைப்பட்ட கருத்து முதலியலை என்றும் வெல்ல முடியாது என்று லெனின் எழுதியிருக்கிறார். கலாச்சார மரபுகளை ஒதுக்கிவிட்டு மார்க்சியத்தை செரித்துக் கொள்ள இயலாது என்றும் அவரே எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சாகவும் அதே சமயம் ஒடுக்கும் சூழலுக்கு எதிரான கலகம் என்றும் மதம் குறித்து மார்க்ஸ் எழுதினார். மதத்தின் வழியிலும் நடைபெறுவது வர்க்கப் போராட்டம் என்று எங்கல்ஸ் எழுதினார்.  கலை இலக்கியங்களின் தன்னியக்கம் குறித்தும் மார்க்சியர் எழுதி உள்ளனர். இன்னும் இவை போல எத்தனையோ குறிப்புக்கள் மார்க்சியத்தினுள் தட்டுப்படுகின்றன. இந்தக் குறிப்புக்கள் நமக்குத் தரும் எச்சரிக்கை மூலம் நாம் மார்க்சியத்தை கவனமாகக் கற்றுக் கொள்ள இயலும். அரசியல் என்றோ, பொருளியல் என்றோ, வேறு ஒன்று என்றோ மார்க்சியத்தை ஒற்றைப் பரிமாணத்திற்குள் ஒடுக்கிவிட இயலாது. மார்க்சியம் மட்டுமே ஒரே பேரறிவு என்ற முடக்கமும் நமக்குள் தேவையில்லை.  மாவோவின் நெறியில் மார்க்சியத்தைக் கற்றுக்கொள்வதற்கு நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நாம் இழந்துவிட இயலாது. மார்க்சியத்தின் பன்முகப் பரிமாணங்களை கிராம்சி முதலிய அறிஞர்கள் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளனர். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வதற்கும் தெளிவு பெறுவதற்கும் ஓர் ஆயுட்காலம் கூடப் போதாது. இயக்கங்களின் பேரனுபவங்களை ஒதுக்கவும் இயலாது. எல்லாவற்றையும் திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு பயில்வதன் மூலம் நமக்கான மார்க்சியம் நமக்கு வசப்படும்.  நம் காலத்தில் மார்க்சியம் குறித்து உலகளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் பெரும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தில் முதலாளியத்தின் மீட்பு குறித்து எழுந்த விவாதங்கள் மட்டும் அல்லாமல், சோவியத்தின் தகர்வை அடுத்து இன்றுவரை பல்வேறு வட்டாரங்களில் எழுந்த விவாதங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தியச் சூழலிலும் பல்வேறு விவாதங்கள். தமிழகத்தில் பெரியாரியத்தோடும் பெண்ணியம், தலித்தியம் என்பனவற்றோடு கடைசியாக பின்நவீனத்துவத்தோடும் விவாதங்கள் தொடர்கின்றன.  மார்க்சியம் தன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இவை. இவற்றிலிருந்து மார்க்சியம் கற்றுக் கொள்ளவும் முடியும். இவ்வகை இயக்கங்களோடு உறவு கொள்வதன் மூலம் தன்னையும், பிற இயக்கங்களையும் மார்க்சியம் செழுமைப்படுத்தவும் இயலும். மனித விடுதலைதான் மார்க்சியத்தின் உறுதியான நோக்கமாக இருக்கமுடியும். தனக்கு மாறுபட்ட இயக்கங்கள் என்பதனால் மனித விடுதலைக்கான பிற இயக்கங்களை ஒதுக்கவும் இயலாது. விவாதங்கள் வழியே மார்க்சியம் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும், செறிவுபடுத்திக் கொள்ளவும் இயலும். இந்த உண்மையை என் அனுபவங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன.  தனக்குள் இருக்கும் அதிகாரத்தை களைந்து கொள்வதன் மூலமே, மார்க்சியம் தன்னை மனித விடுதலைக்கான ஊடகம் ஆக்கிக் கொள்ள இயலும். வரலாற்றின் மாறுபட்ட சூழலுக்கு ஒத்த முறையில் மார்க்சியமும் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது. மார்க்சியத்தின் உள்ளும் மாறுபட்ட குரல்களுக்கு இடம் உண்டு.    எனது புரிதலை முதன்மையாகக் கொண்டிருக்கும் மார்க்சியம் குறித்த என் கட்டுரைகளும் இத்தகைய விவாதங்களில் ஒன்று என நண்பர்கள் ஏற்க முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளில் சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை இப்பொழுது தவிர்க்க இயலவில்லை. இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதப்பட்டவை. கிராம்சி குறித்த கட்டுரை பரிமாணம் இதழில் இடம்பெற்றது. 1986/ 86 காலத்தில் நான் எழுதிய சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. தோழர் கே. வேணு, பெரியவர் குன்றம் இராமரத்னம், தோழர் எஸ்.என்.நாகராசன் ஆகியவர்களின் நூல்கள் குறித்தக் குறிப்புக்களை தேவையான இடங்களில் தர இயலவில்லை . என் புத்தகக் கிடங்கிலிருந்து இந்த நூல்களைத் தற்பொழுது உடனடியாகத் தேடி எடுக்க இயலவில்லை. நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். சிந்தனையாளன் 2001 பொங்கல் மலரில் வெளியான மார்க்சியத்திற்கு அழிவில்லை என்ற எனது கட்டுரையின் தலைப்பையே இந்த நூலுக்கும்  பொருத்தம் கருதி வைத்து உள்ளேன். அரசியல் மற்றும் பொருளியல் அரங்கில் என்னென்னவோ நடைபெற்ற போதிலும் மார்க்சியம் இல்லாமல் நம் வாழ்வுக்கு அர்த்தம் இல்லை என்பதுதான் எனக்குள் பதிந்துள்ள ஆழமான புரிதல். இதைச் சொல்வதற்கும்தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.  மார்க்சியத்தை நான் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கானத் திறவுகோலை தந்தவர் என்ற முறையில் தோழர் எஸ்.என்.நாகராசன் என்றும் என் நன்றிக்கும் மரியாதைக்கும் உரியவர். தோழர் எஸ்.வி.ராஜதுரை, புலவர் ஆதி என்று தொடங்கி நான் பலரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பைக் கூடியவரை ஒழுங்குபடுத்திய நிலையில் யார் வெளியிடுவார்கள் என்று நான் காத்திருந்த சமயத்தில் நண்பர் ரவி அவர்கள் தானாக முன்வந்து நான் வெளியிடுகிறேன் என்றார். இவரது பேரன்புக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். திரு. ரவியும், நண்பர் திரு.எம்.ஜி.சுரேஷ் அவர்களும் இரட்டையர்கள் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். எம்.ஜி.சுரேஷ் அவர்களின் அரிய படைப்புத்திறனை தமிழுலகம் நன்கு அறிந்துள்ளது. இவர் எனது இனிய நண்பர். இவரது அணிந்துரை இந்த நூலுக்கு அழகு செய்கிறது.  இந்த நூலின் ஆக்கத்திற்கு என்னோடு ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமுவந்த நன்றிகள். குறிப்பாக ஒளி அச்சு செய்த நண்பர் கோபி மற்றும் அச்சகத்தார்க்கு என் நன்றிகள்.  ஞானி 123, காளீசுவரர் நகர், கோயமுத்தூர் 641 009.  அணிந்துரை ‘மார்க்சியத்துக்கு அழிவில்லை’ என்கிற இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்குமாறு ஞானி அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டபோது, இந்தி எழுத்தாளர் ‘அக்ஞேய’, தர்மவீர் பாரதி என்கிற இந்தி எழுத்தாளரின் புகழ்பெற்ற நாவலான ‘சூரியனின் ஏழாவது குதிரை’ என்ற இந்தி நூலுக்கு எழுதியிருந்த முன்னுரை வரிகள் என் நினைவுக்கு வந்தன.  ‘எழுத்தாளன் இரு காரியங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். ஒன்று பிறர் நூலுக்கு முகவுரை எழுதுவது ; மற்றது தனக்குச் சமகாலத்தவராக இருக்கும் வேறொரு எழுத்தாளரைப் பற்றி தமது கருத்தை வெளியிடுவது’.  அவர் சொன்ன கருத்து இந்தச் சூழ்நிலையில் எனக்குப் பொருந்துமா?  யோசித்துப் பார்த்தேன்.  உண்மையில் அந்தக் கருத்துக்கு எதிர்மாறாக செயல்பட வேண்டியதுதான் என் கடமை என்று எனக்குத் தோன்றியது.  ஏனெனில், இந்த நூலுக்கு நான் மார்க்ஸீயத்தின்பால் நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் முகவுரை எழுதக் கடமைப் பட்டவன். அடுத்தது எனதுச் சமகாலத்தவராக இருக்கும் ஞானியைப் பற்றிய என் கருத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிட வேண்டியதும் மிக அவசியம்.  இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில், சிலவற்றையேனும் பல சந்தர்ப்பங்களில் நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். இவையல்லாமல் ஞானி எழுதியிருக்கும் பல்வேறு கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். மேடைப் பேச்சில் ஞானியின் வசீகரத்தால் கட்டுண்ட பலருள் நானும் ஒருவன். தொடர்ந்து இயங்கி வரும் ஞானி எழுதும் பல கட்டுரைகளை வாசித்து வரும் பல தமிழ் வாசகர்களுள் நானும் ஒருவன்.  ஹேபர்மாஸ், சோம்ஸ்கி, பிரடரிக் ஜேம்ஸன் போன்று, தரத்திலும் ஆழத்திலும் தேர்ந்த கருத்துக்களை தமிழில் முன் வைக்கக்கூடிய முக்கியமான மார்க்ஸீய அறிஞர்களுள் ஞானியும் ஒருவர் என்று என்னளவில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவரது சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும் எனக்கு தனியான கவனம் உண்டு.  இந்தக் கட்டுரைகளை இப்போது ஒரு சேரப் படிக்கும் போது, எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.  எனக்கு மார்க்ஸீயம் எவ்வாறு அறிமுகமானது என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.  அப்போது எனக்குப் பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும். கோடை விடுமுறை நாட்களில் நான் என் சின்னத் தாத்தா வீட்டுக்குப் போய்த் தங்குவது வழக்கம். உறவுமுறை தான் சின்னத்தாத்தாவே தவிர வயதிலும் தோற்றத்திலும் இளைஞராகத் தான் இருப்பார். அவரது மகன்களும் நானும் ஒரே வயதினர் என்பதால் விடுமுறை நாட்களில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக ஒன்று நான் அங்கே போவேன் அல்லது அந்தப் பையன்கள் நானிருந்த இடத்திற்கு வருவார்கள்.  என் சின்னத் தாத்தாவின் மீது எங்கள் குடும்பத்திலும், உறவினர் குடும்பங்களிலும் பயம் இருந்தது. “சாமி, பூதம் இல்லேங்கறான்; யாருக்குமே சொந்த வீடு சொத்து இருக்கக் கூடாதுங்கறான்’’ என்று வியப்புடனும் அசூயையுடனும் முணுமுணுப்பார்கள். ஏதோ கடற்கொள்ளைக்காரன் என்பது போன்ற தொனியில்”அவன் ஒரு கம்யூனிஸ்ட்” என்று அச்சமூட்டும் குரலில் பேசுவார்கள். எனக்கும் சின்னத் தாத்தா ஒரு சுவாரசியமான மனிதராகத் தோன்றினார். அதிலும் அவருடன் பேச ஆரம்பித்தாலோ வினோதமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்.  அவர் வீட்டில்தான் முதன்முதலாக அந்த ஆங்கிலப் புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அட்டையில் தாடிவைத்த இரண்டு வயதான மனித முகங்கள் பக்கவாட்டுத் தோற்றத்தில் மிளிர்ந்தன. இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. இன்னொரு புத்தகத்தின் அட்டையில் குறுந்தாடி வைத்த வழுக்கைத் தலை மனிதர் கோட், சூட் அணிந்து காணப்பட்டார். இந்தப் புத்தகங்களின் வழுவழுப்பான காகிதங்கள், கட்டமைப்பு போன்றவை என்னை பிரமிக்க வைத்தன. அந்தப் புத்தகங்களை எடுத்துப் பிரித்துப் பார்ப்பேன். பின்பு மூடுவேன். அப்போது எழும் புத்தக வாசனை என்னைக் கிறங்கவைக்கும். அந்தச் சிறுவயதில் அந்தப் புத்தகங்களை படிக்கவோ, புரிந்து கொள்ளவோ, போதிய ஆங்கில அறிவோ, மனப்பக்குவமோ எனக்கில்லை. எனினும் அந்தப் புத்தகங்களை என் சின்னத் தாத்தாவிடம் இரவல் பெற்று எடுத்து வந்தேன்.  சில ஆண்டுகள் கழிந்தன. இப்போது நான் பள்ளி இறுதித் தேர்வை முடித்த நிலையில் இருந்தேன். எதைக் கண்டாலும் படிப்பது என்ற ஆர்வத்தில் இருந்த நான் ஒரு நாள் என் சின்னத் தாத்தா வீட்டிலிருந்து எப்போதோ வாங்கிவைத்திருந்த இரண்டு கிழவர்களின் பக்கவாட்டுத் தோற்ற முகங்கள். அச்சிடப்பட்ட அட்டை போட்ட அந்தப் புத்தகத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தேன். அதைப்பார்த்த என் பெரிய தாத்தா திடுக்கிட்டார். ‘உன்னையும் அவன் கொடுக்க ஆரம்பிச்சுட்டானா’ என்று திட்டியபடி அந்தப் புத்தகத்தை பிடுங்கி பரணில் எறிந்தார். ஏனெனில், இவர் ஒரு காந்தியவாதி பின்பு மஷ்ரூவாலா என்பவர் எழுதிய ‘காந்தியும் மார்க்ஸும்’ என்ற நூலின் தமிழாக்கத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.    அந்த நூல் முழுக்க காந்தியை உயர்த்தியும் மார்க்ஸை மட்டம் தட்டியும் எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கப் படிக்க நான் மார்க்ஸின் வசமானேன். இதன்  பிறகு என் தாத்தா எனக்களித்த பல கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரசுர நூல்களைப் படித்து நான் கம்யூனிஸத்தின் மேல் காதல் வயப்படலானேன். இதே தருணத்தில் நான் கவிதை கதை என்று எழுத முயன்று கொண்டே இருந்தேன். எனது எழுத்துக்கள் அப்போது தாமரை, செம்மலர், கார்க்கி சிகரம் போன்ற இடதுசாரி சார்பான இதழ்களிலும், தீபம், கணையாழி போன்ற சிற்றிதழ்களிலும் வெளிவர ஆரம்பித்திருந்தன.  அப்போது இடதுசாரிப் பத்திரிகைகளை தொடர்ந்து படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ‘கார்க்கி’ இளவேனில், ஞானி, எஸ்.வி. ராஜதுரை போன்றோரின் கட்டுரைகள் என்னை வசீகரித்தன. கார்க்கி இளவேனில் மூலமாக வி.பி.சிந்தன், குசேலர் போன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களின் பரிச்சயமும் நட்பும் கிடைத்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமும் ஏற்பட்டது. தத்துவார்த்த ரீதியில் மார்க்ஸிய சிந்தனையை வரித்துக் கொண்ட எனக்கு நடைமுறை அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. சார்த்ரே சொன்ன எந்த ஒரு தத்துவமும் அமைப்பாகக் கட்டமைக்கப்படும் போது நேரும் சீர்குலைவு. என்ன என்பது புரிந்தது. அதனால் கட்சி சார்ந்த மார்க்ஸியம் எனக்கு உவப்பானதாக இல்லாமல் போயிற்று. கட்சிகளில் இருந்த கம்யூனிஸ்ட்கள் பாதிரியார்களைப் போலவே தோற்றமளித்தார்கள். பாதிரியார்களின் கையில் பைபிள் இருக்கும். இவர்கள் கையில் மார்க்ஸ் எழுதிய புத்தகங்கள் இருக்கும். இருபது வயதில் சொன்னதையே கிளிப்பிள்ளை போல் அறுபது வயதிலும் சொல்லிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரியார்களைப் போல் இவர்களும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ ‘செம்பரப்பு’ என்றெல்லாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் பேசிக் கொண்டிருப்பார்கள். மார்க்ஸ் பரிணாம வளர்ச்சியை நம்பியவர். மார்க்ஸ் காலத்திய மார்க்ஸிஸத்திற்க்கும் இன்றைய மார்க்ஸிஸத்திற்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன என்பது குறித்து இவர்கள் சிந்தித்ததில்லை. அதனால்தான் கிராம்ஸி, புகாரின் போன்றவர்கள் இவர்கள் கண்களுக்கு விரும்பத்தகாதவர்களாகத் தென்பட்டதில் ஆச்சரியமில்லை. இந்தக் கிளிப்பிள்ளைகளால்தான் சோவியத் என்கிற மாமரம் சாய்ந்தது என்பதை நானறிவேன்.  ‘சோவியத் யூனியன் வீழுமா?’ என்ற கேள்விக்குப் பதிலாக ‘மனிதன் மீண்டும் மனிதக் குரங்காக மாற முடியுமா?’ என்று திருப்பிக் கேட்கிற அளவுக்கு இவர்கள் மூடநம்பிக்கையுடன் இருந்தார்கள். கட்சியில் வி.பி.சி., குசேலர் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க நல்ல போராளிகளை கட்சி அரசியலிலிருந்து விலக்கி சாதுர்யமாக தொழிற்சங்க அரசியலுக்கு ஓரம் கட்டினார்கள். அரசியல் தலைமை இவர்கள் கைக்குப் போகாதது துரதிருஷ்டவசமானது.  அப்போது அரசியல் இலக்கியங்களோடு புனைவு இலக்கியங்களையும் நான் நிறைய விரும்பிப் படித்தேன். ரஷ்ய, ஜெர்மானிய, பிரெஞ்சு, லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் எனக்கு வாசிப்பில் புதிய அனுபவங்களை சாத்தியமாக்கின. அதே சமயம் கட்சி மார்க்ஸிய அரசியல் தொடர்பு இல்லையென்ற போதிலும் வெளியிலிருந்து மார்க்ஸியத்தைக் கூர்ந்து கவனிக்கவே செய்தேன். நியோ மார்க்ஸிஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம் போன்ற கருத்தியல்களை பரிசீலனை செய்துப்பார்த்தேன். இன்றைய பின் நவீனத்துவம் வரை தத்துவப் போக்குகளை கூர்ந்து கவனித்து வருகிறேன்.  பின்-நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நாணி முகத்தை மூடிக் கொள்வதை விட, கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ அறிவித்த ‘தலைமைப் பீடங்களைத் தகர்த்து எறியுங்கள்’ என்ற வாசகமும், பின்-நவீனத்துவவாதிகள் முன்வைக்கும் ‘மையங்களைத் தகர்க்க வேண்டும்’ என்ற கோட்பாடும் பொருந்திப் போகிற அதிசயத்தைப் பற்றி யோசிப்பவன் நான்.  தெரிதா, ஃபூக்கோ போன்றவர்கள் முன்வைக்கும் பின் நவீனத்துவம்; ஆக்டேவியா பாஸ் போன்றவர்கள் முன்வைக்கும் இடதுசாரி பின் நவீனத்துவம் போன்ற கருத்தியல்களையும் நான் கவனித்து வருபவன். இச்சூழ்நிலையில் ஞானியின் சிந்தனையும் எழுத்தும் அவர் என் போல்வர் என்பதை எனக்கு உறுதி செய்கின்றன. தவிரவும், நான் மட்டும் தனியன் இல்லை என்கிற புத்துணர்வையும் எனக்குத் தருவதாக இருக்கிறது.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதற்கொண்டு பொருள்முதல்வாதமும் மார்க்ஸிய நோக்கும், மார்க்ஸிய அறவியல், கிராம்சி, மார்க்ஸியமும் சமயமும், கீழை மார்க்ஸியம் மார்க்ஸீயத்தின் எதிர்காலம் என்று பல்வேறு பரந்துபட்ட பிரச்சனைகள் வரை இந்நூலில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. இவை மார்க்ஸியத்தை உள்ளும் புறமும் அலசி ஆராய்கின்றன. பாசாங்கற்ற, வறட்டு சூத்திரங்களையும், கோஷங்களையும் முன் வைக்காத அசலான ஒரு ஆன்ம தரிசனம் இக்கட்டுரைகளில் சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி என்று என்னால் சொல்ல முடியும்.ரோஸா லக்ஸம்பர்க் சொன்ன மாதிரி, ‘மார்க்ஸீயம் காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பரிணாம வளர்ச்சி எய்துகிறது’. இதுவே ஞானியின் நம்பிக்கை. எனது நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கையை இந்த நூல் முன்வைப்பது நமது காலத்தின் தேவையாகும்.  இந்த நூலை கம்யூனிஸ்ட்கள் தான் படிக்க வேண்டும் என்றில்லை. தமிழ் அறிந்த யாவரும் படிக்கலாம். இத்தனை செழுமையான, அதே சமயம், ஆழமான அடர்த்தியான கருத்துக்களைத் தாங்கி நிற்கும் இந்த நூலைப் படித்துப் பயன்பெறுமாறு ஒரு வாசகன் என்ற முறையில், சக வாசகர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.  அன்புடன் எம்.ஜி.சுரேஷ்  சென்னை 93. 07.12.2001  மார்க்சியம் கற்போம்: தேடலோடும், திறனாய்வோடும் மார்க்சியம் கற்பதற்கு எளிய வழி என ஒன்று இல்லை. தேடலோடும் திறனாய்வோடும் தான் மார்க்சியத்தைக் கற்க முடியும், செரித்துக்கொள்ள முடியும். மார்க்சியம் கற்பதற்கு எளிய முறையில் எழுதப்பட்ட பாடநூல்கள் பயன்பட முடியாது. பன்முகப் பரிமாணங்களை உடைய மார்க்சியத்தை ஒற்றை பரிமாணங்கள் குறைத்து சுருக்கித் தருகிற பாடநூற் கல்வி ஆபத்தாகவும் முடியும். சுருக்கமாக வகுப்பறைகளில் மார்க்சியத்தைக் கற்கவும் முடியாது. மார்க்சியத்தின் அடிப்படை நூல்கள் என ஒன்று இரண்டை அல்ல பல நூல்களைக் கற்கவேண்டும். மார்க்சிய இயக்கத்தோடு தொடர்பு இல்லாமல் கற்பதும் சாத்தியமில்லை. கட்சிக்குள் இருந்து கற்றுக்கொள்கிற மார்க்சியம் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் கட்சி கற்றுத்தரும் மார்க்சியம், மனித விடுதலையின் நோக்கமாகக் கொண்ட மார்க்சியத்திற்கு எதிரானதாகவும் இருக்க முடியும்.  வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தில் கூடியவரை உழைக்கும் மக்களுக்கு நெருக்கமாக இருப்பவர்க்குத் தான் மார்க்சியம் எளிதில் புரியும், எந்த ஒரு கல்வி மற்றும் ஆய்வுத் துறையை பழுதர கற்றால் ஒழிய அந்தத் துறையின் விரிவும் ஆழமும் நமக்கு வசப்படாது. எவ்வளவுதான் கற்றாலும் கல்விக்கு நிறைவு என்பது இல்லை. அன்றியும் சுயவிமர்சனத்தோடு தான் எதையும் கற்றுச் செரித்துக் கொள்ள முடியும். இந்த உண்மை , மார்க்சியக் கல்விக்கும் பொருந்தும்.  மார்க்சியத்தில் அடிப்படையான கொள்கைகள் என சிலவற்றை உறுதியாகக் கூற முடியும். வர்க்கப் போராட்டம் என்ற கருத்து மார்க்சியத்தின் ஆதாரமான கோட்பாடுகளில் ஒன்று. மார்க்சுக்கு முன்பே கண்டறியப்பட்டது என்ற போதிலும், இதை உறுதியாகக் கடைப்பிடித்தவர் மார்க்சியர்தான். “இதுவரையிலான தத்துவங்கள் உலகத்தை விளக்கின. ஆனால் இனிச் செய்ய வேண்டியது உலகத்தை மாற்றுவதுதான்’’ என்று கூறினார் மார்க்ஸ். இதன் காரணமாக உலகை மாற்றுவதற்கான செயல்முறைக்கு மார்க்ஸ் அழுத்தம் தந்தார். லெனின் முதலியவர்கள் கட்சி முதலியவற்றை உருவாக்கினர். மாற்று உலகை முதன்மை நோக்கமாக மார்க்சியம் கருதுவதனாலேயே தத்துவக் கல்விக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட முடியாது.  மாறிக் கொண்டிருக்கும் உலகத்தையும், மனித வாழ்வின் சிக்கல்கள் முதலியவற்றையும் புரிந்து கொள்வதற்கு தத்துவம் இல்லாமல் முடியாது. ஒன்றல்லது இரண்டு தத்துவங்கள் உலகின் பல்வேறு இயக்கங்களை விளக்கிவிடவும் முடியாது. எனினும் வரலாறு, பொருளியல் முதலியவற்றை பெருமளவில் விளக்குவதற்கான கூடியவரை சரியான தத்துவம் என்று மார்க்சியத்தைத்தான் சொல்லமுடியும். புதிய புதிய அறிவுத்துறைகளும், வாழ்வியல் அனுபவங்களும் தொடர்ந்து விரிவு பெற்றிருக்கும் உலகச் சூழலில் மார்க்சியரும் தம்மை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  மார்க்சியத்தின் அடிப்படைகள் என பலவற்றைக் கூறமுடியும் என்றாலும் இவற்றில் பெரும்பாலானவை தொடர்ந்து மறு ஆய்வுக்குரியனவாக இருக்கத்தான் செய்கின்றன. இயங்கியலை ஒரு மூன்று வாய்பாடுகளில் அடக்கிப் பாட நூல்கள் கூறுகின்றன. மாவோவைப் பொருத்தவரை முரண்பாடு என ஒன்றின் இயக்கப் போக்கில் பாடநூல்கள் குறிப்பிடும் மூவகை விதிகளும் அடங்கும் என்று விளக்கினார்.இயங்கியலை இன்னும் விரிவாக கற்க வேண்டும் என்றார் லெனின். அன்றியும் இயங்கியல் என்பது கூட மார்க்சியத்தின் மெய்காண் முறையே அன்றி மார்க்சியத்தின் மெய்யியல் ஆக முடியாது.  மனித வாழ்வுக்குப் பொருள் என்ன? என்ற கேள்வியை எழுப்பி தொடர்ந்து மாறிவரும் வரலாறு மற்றும் பொருளியல் சூழல்களில் வைத்து மனித விடுதலையை இலக்காகக் கொண்டதான வாழ்வின் அர்த்தம் பற்றி மார்க்சியம் ஆராய்கிறது. சார்த்தர் முதலியவர்கள் மார்க்சியத்திற்கு இப்படி புதிய பொருள் கண்டனர். இங்குதான் மெய்யியலோடு கலாச்சாரம், கலை, இலக்கியம் முதலியனவும் இணைகின்றன.  பொருள்முதல்வாதம் என்பதை மார்க்சியத்தின் ஒரு முக்கியப் புள்ளி என்று நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. கடவுள், ஆன்மா முதலிய கருத்தினங்களை வைத்து உலக இயக்கத்தை மதவாதிகள் முதலியவர்கள் விளக்கினர். மன்னர்கள் இல்லாமல், தலைவர்கள் இல்லாமல், தனிஉடமை அரசு முதலியவை இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்று பலர் நம்பினர். இவ்வகைக் கருத்துக்களுக்கு மாறாக மார்க்சியம் மனிதர்களின் வாழ்வுக்கான உலகத்தை, வரலாற்றைக் கண்டறிந்தது. தனிஉடமை அரசு முதலியவை வரலாற்றின் ஒரு கட்டத்தில்தான் தோன்றுகின்றன, மாறவும் செய்கின்றன.      தனி உடமை, அரசு முதலியவை இல்லாத காலம் என ஒன்று வரும் அல்லது வரவேண்டும் என்பதை மார்க்சும், எங்கல்ஸும் கண்டறிந்தனர். இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்த மதங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வரலாற்றுச் சூழலில் மனிதர்களின் தேவைகளை ஒட்டி ஏற்பட்டன. வர்க்கச் சமூகத்தின் பிளவுகள் பிரிவுகள் இவற்றின் இயக்கத்திற்குக் காரணமாகவும் அமைகின்றன. குடும்பம், தனிவுடமை, அரசு முதலியவை இல்லாமல் வரலாற்றில் இயக்கமும் இல்லை. வரலாறு என்பது இவ்வகையான முரண்களோடுதான் இயங்குகிறது. தனிஉடைமை அரசு முதலியவற்றின் மூலம் ஆதிக்கங்கள் வளர்ச்சி பெற்றன என்பது உண்மை என்றாலும், வரலாற்றின் முரண் இயக்கத்தில் இருந்து ஆதிக்க வர்க்கங்களை மட்டுமே பிரித்து அவைதான் வரலாற்றைத் தீர்மானிக்கின்றன என்பதான விளக்கம் வரலாற்றை விளக்க முடியாது. ஆதிக்க வர்க்கங்களால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் ஆதிக்க வர்க்கங்களோடு அவர்களின் ஒத்துழைப்பு மட்டும் அல்லாமல் அவர்கள் அவ்வப்போது கிளர்ச்சிகளிலும், கலகங்களிலும் ஈடுபடத்தான் செய்கிறார்கள். வரலாறு குறித்துப் பாடநூல்கள் சொல்லும் ஒற்றைப் பரிமாண விளக்கம் வரலாற்று இயக்கத்தை விளக்க முடியாது. வரலாற்றுச் சூழலில் மனிதன் அடிமைப்படுகிறான், தன்னை இழக்கிறான், அதன்பிறகு தன்னைப் புரிந்து கொள்கிறான், தன்னை மீட்டுக் கொள்வதற்காகப் போராடுகிறான், போராட்டத்தின்போது புதிய ஒளியையும், புதிய ஆற்றலையும் பெறுகிறான். மீண்டும் இன்னொரு சூழலில் தன்னை இழக்கிறான், மறுபடியும் போராடுகிறான். இவ்வாறுதான் வரலாற்றில் மனிதனின் வாழ்வும், வளர்ச்சியும், விடுதலையும் அமைகின்றன. இப்படியெல்லாம் மார்க்ஸ் விளக்கி உள்ளார்.  வரலாறு மற்றும் பொருளியல் முதலிய சூழல்களில் மனிதனின் பல்வேறு வகையான இயக்கங்கள் முதலியவற்றை வைத்து ஆராய்கிற வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மார்க்சியத்தின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்று. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என ஒன்று இருக்கிறது. மானுடவியலாளர்கள் இது குறித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் பலவற்றின் அடிப்படையில் எங்கல்ஸ், தனிஉடமை, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற ஆய்வு நூலை எழுதினார்.  வரலாறு குறித்து பெரும் வெளிச்சங்களை இந்த அரிய நூல் நமக்குத் தருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் மானுடவியல் ஆய்வில் தொடர்ந்து ஏற்படும் வளர்ச்சிப் போக்கில் எங்கல்சின் கருத்துக்களும் மறு ஆய்வுக்குரியனவாகத் தோன்றுகின்றன. இதைப் போலவே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்தும் திறந்த மனத்தோடுதான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. மேற்கத்திய சமூக வளர்ச்சிப் போக்கின் விதிகளை கீழைச் சமூகங்களுக்கு அப்படியே பொருத்த முடியாது என்பதற்கு மார்க்சின் ஆய்வுகளே சான்றாகின்றன. மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை என்பதன் அடிப்படையில் தான் கீழைச் சமூகங்களின் நெடுங்கால வரலாறு குறித்து நாம் பார்க்கமுடியும். ஆசிய உற்பத்தி முறை குறித்த ஆய்வுகள் சோவியத் ரஷ்யாவில் தொடரவில்லை என்பதற்கும் காரணம் உண்டு.  மார்க்சியத்தின் இன்னொரு அடிப்படை என அடித்தளம் மற்றும் மேற்கட்டுமானம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள உறவு குறித்த மார்க்சியக் கருத்தும் தொடர்ந்து ஆய்வுக்குரியவை. இவற்றின் இடை உறவுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. உற்பத்தி உறவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், உற்பத்திச் சக்திகளுக்கு அழுத்தம் தரும் போக்கு முதலாளியத்திற்கே நம்மை இட்டுச் செல்லும் என்ற மாவோவின் வளமான கருத்தை நாம் இங்கு நினைவு கொள்ள முடியும். அடித்தளம் என்பதன் கூறுகள், மேற்கட்டுமானம் என்பதன் கூறுகள் ஆகியவற்றை புதிய புதிய முறைகளில் அடுக்கிப் பார்க்கிற மார்க்சியரும் உண்டு. இவர்களில் ஒருவர் அல்தூசர்.  எப்பொழுதும் நிர்ணயிக்கும் சக்தியாக அடித்தளம்தான் இருக்கமுடியும் என்ற கருத்து ஸ்டாலினியத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. முரண்பாடு என்பதனுள் இடம் பெறும் எதிர்நிலைகள் இரண்டில் ஒன்றுக்கு மட்டுமே அழுத்தம் தரும் போக்கு இயங்கியலாக இருக்க முடியாது. இயங்கியல் குறித்து மாவோவின் வரையறைகள் அற்புதமானவை.  மார்க்ஸ் முன் வைத்த அந்நியமாதல் என்ற கோட்பாடு இல்லாமல் மார்க்சிய நோக்கில் கலை இலக்கியம், மதம், பண்பாடு, மெய்யியல், வாழ்க்கை முதலியவற்றை விளக்க முடியாது. இளைய மார்க்ஸ் முன்வைத்த இந்தக் கோட்பாட்டை முதிய மார்க்ஸ் ஒதுக்கினார் என்று கூறுவது உண்மை இல்லை. மதம் குறித்த மார்க்சின் கருத்துக்களும், எங்கல்சின் ஆய்வுகளும் மார்க்சியத்திற்கு வளம் சேர்ப்பவை. மதம் என்ற வடிவிலும் நிகழ்வது வர்க்கப் போராட்டம்தான் என்பதை எங்கல்ஸ் விளக்கி யிருக்கிறார். மனிதனின் அந்நியமாதல் என்பது சோசலிச சமூகத்திலும் இருக்கத்தான் செய்கிறது. அரசு இருக்கும்வரை அந்நியமாதலும் இருக்கும் என்று மார்க்ஸ் எழுதினார். அந்நியமாதல் என்ற போக்கு இல்லாத ஆதிப்பொதுமைச் சமூகம் பற்றி மார்க்சியர் அழகாக எழுதியுள்ளனர். இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒன்றி இருந்தவன் ஆதிப்பொதுமைச் சமூகத்து மனிதன் . வர்க்க ஏற்றத்தாழ்வு நிலவுகிற வரலாற்றுச் சூழலில் மனிதன் தனக்குள் பிளவுபட்டு அந்நியமானான். தனக்குள் அந்நியப்பட்ட மனிதனுக்கு மதங்கள், மாயைகள் தேவைப்பட்டன.  கம்யூனிச சமூகத்தில் அந்நியமாதலுக்கு இடமில்லை. மனிதன் தனக்குள் மீண்டும் ஒன்றி இணைவான். இப்படி ஒரு அற்புதமான காட்சியை மார்க்ஸ் முன் வைக்கிறார். வர்க்கங்களாகப் பிளவுபட்ட மனிதனுக்குள்ளும் ஆதிப் பொதுமை சமூகத்தின் கூறுகள் இல்லாமல் இல்லை. கலை இலக்கியங்கள் முதலியவை இந்த மனிதனைத்தான் திரும்பத் திரும்ப நமக்கு நினைவுபடுத்துகின்றன. சமதர்மம் இல்லாமல் நமக்கு வாழ்வு இல்லை என்ற உணர்வுக்கும் இதுதான் ஆதாரம். வர்க்கப் போராட்டங்களின் வழியே வர்க்கங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் மார்க்சியம்.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற இடைக்கால அரசு என்ற அமைப்பை மார்க்ஸ் முன்வைத்த போதிலும், அரசு உதிர்வது பற்றியும், மக்கள் மயப்படுவது பற்றியும் மார்க்ஸ் கூறி இருக்கிறார். அதிகாரமும், ஆதிக்கமும் மனிதனை சிறுமைப்படுத்தவே செய்யும். அன்றியும் மனித விடுதலைக்கு இடையூறாக அமையும். மனித விடுதலைக்கான மார்க்சியம் ஆதிக்கங்களை உள்வாங்கிக் கொண்டதாகச் செயல்பட முடியாது. தனக்குள் இருந்து அதிகாரத்தைக் களைந்து கொள்கிற மார்க்சியம்தான் மனிதனுக்கு விடுதலை தரமுடியும். மக்களின் சுயநிர்வாகம் குறித்து மார்க்சியம் சொல்லுகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பதை இப்படி எத்தனையோ விமர்சனங்கள் மூலம் கற்பதனால் மட்டுமே மார்க்சியம் நமக்குள் தங்கும்.  இன்னும் சிலவற்றைச் சொல்ல வேண்டும்.  சோவியத் யூனியனிலிருந்து நமக்கு வந்து சேர்ந்த மார்க்சிய நூல்கள் மிக விரிவானவை என்றபோதிலும் அவற்றிலிருந்து மட்டுமே மார்க்சியத்தை நாம் கற்பது போதாது. சீன அனுபவங்கள் பலவற்றை உள்ளடக்கிய மாவோவை கற்பது நமக்கு மார்க்சியம் குறித்து மேலும் சரியான புரிதலைத் தரமுடியும். மாவோவையும் விமர்சனத்தோடுதான் கற்க வேண்டும் என்று சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை. கலாச்சார புரட்சியின்போது தலைமைப் பீடங்களைத் தகர்த்து எறியுங்கள் என்று மாவோ கூறியது ஒரு சரியான கருத்து. கட்சியும் தவறு செய்யும். தவறு செய்த கட்சியை திருத்தவேண்டியது மக்களின் கடமை என்று மாவோ கூறினார். மார்க்சியமும் பிற்போக்கான கோட்பாடென்று கருதுகிற காலம் ஒன்று வரும் என்றார் மாவோ. மார்க்சியத்தையும் மனிதன் கடந்து செல்ல வேண்டும் என்பது மாவோவின் கருத்து. கம்யூனிசம் மட்டுமே மனிதனின் இறுதியான இலக்காக இருக்க முடியாது. இப்படி எவ்வளவோ மாவோ கூறியிருக்கிறார்.  மேற்குலகிலும் மார்க்சியம் பெரும் அளவில் வளர்ச்சி பெற்றது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மார்க்சியமும் ஒரு ஆய்வுத் துறையாக உலகில் வளர்ச்சி பெற்றுள்ளது. கட்சிக்கு வெளியிலும் மார்க்சியர் இருக்க முடியும். கட்சி இறுகும்பொழுது மார்க்சியர் வெளியில்தான் வாழமுடியும்.  மேற்குலக ஆய்வுகளில் மார்க்சியம் பெற்ற வளர்ச்சி குறித்து நாம் விரிவாகப் படிப்பதற்கு இடம் இருக்கிறது. மேலை மார்க்சியம் என்ற ஒரு பள்ளியின் சாதனைகள் விரிவானவை. கிராம்சியின் ஆய்வுகளை இன்று பலரும் கற்கின்றனர். பிரான்ஸ், பிரிட்டன் முதலிய நாடுகளிலும் மார்க்சியம் பெற்ற வளம் குறித்து நாம் நிறையக் கற்கமுடியும். இங்கிலாந்தில் கால்டுவெல், ஜே.டி. பெர்னால், ஜோசப் நீதாம் என்று பலரைச் சொல்லலாம். பிரான்சிலும் சார்த்தர், ரோஜர் கரோடி வஃபர்கே என்று இன்னும் பலர். எரிப்பிராமின் உளவியல் ஆய்வுகள் ஆழ்ந்து கற்பதற்குரியவை. மார்க்சியம் இறுகியதன் விளைவாக, மார்க்சியத்திற்கு வெளியில் சென்ற பலரையும் நாம் கற்கத்தான் வேண்டும்.  மார்க்சியத்தோடு முரண்படுகிறவர்களையும் நாம் ஒதுக்குவதற்கில்லை. மனித விடுதலை என்ற நோக்கில் எத்தனையோ தத்துவவாதிகள் பேசுகின்றனர். நீட்சே முதலியவர்களையும் ஒதுக்கி விடுவதற்கும் இல்லை. அதிகாரத்தை களைவது குறித்து பூஃகோ முதலியவர்கள் எழுதிய அற்புதமான நூல்களை ஆராய்ந்து கற்கத்தான் வேண்டும். கியூபா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் மார்க்சிய நோக்கில் விடுதலை இறையியல் முதலிய போக்குகள் உருவாகி உள்ளன. கற்பதற்கு எல்லைகள் இல்லை. மார்க்சியத்தின் உள்ளும் வலது சாரிப் போக்குகள், இடது சாரிப் போக்குகள் என பிரிவுபட்டுள்ளதைப்போலவே நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகியவற்றினுள்ளும் இவ்வகைப் போக்குகள் இடம் பெற்றுள்ளன. நாம் இந்தியாவிற்குள், தமிழகச் சூழலில் வாழ்கிறோம். கூட்டாட்சி என்றும், தேசிய இன விடுதலை என்றும், தமிழ்த்தேசியம் என்றும் பேசுகிறோம். சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கங்களுக்கு நம்மவர் வசப்பட்டு வருகின்றனர். இயற்கை நாசம் முதலிய எத்தனையோ கேடுகள் நம்மைச் சூழ்ந்து வருகின்றன. நவீன அறிவியலும், தொழில் நுட்பமும் நம் வாழ்வின் எல்லைகளை முடக்கி விடுகின்றன. விடுதலைக்கான நம் ஏக்கங்கள் ஒடுக்கப்படவும் செய்கின்றன. மன நோயாளிகளாக நாம் மாறி வருகிறோம்.  இத்தகைய சூழலில் நமக்கான மார்க்சியத்தை நாம் தேடித் திறனாய்வோடு கற்பதற்கு நாம் சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை – ஆய்வுக்கான சில குறிப்புகள் குறிப்பு:  மார்க்கம் எங்கல்சும் கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கையை உருவாக்கிய பிறகு உலகளவில் எத்தனையோ வகைவகையான அனுபவங்களும், ஆய்வுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றையும் உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை பற்றித்தான் இன்று நாம் பேசுவது பொருந்தும். இவ்வகை ஆய்வை உள்ளடக்குவதற்கான தேவை இன்று கூடியிருக்கிறது. இந்த ஆய்வை பலவகை மார்க்சிய இயக்கங்கள் ஒன்றுபட்டு செய்வது தான் முறை. இந்தக் குறிப்பை முன்வைப்பதோடு நிறுத்திக்கொண்டு, மார்க்சும், எங்கல்சும் உருவாக்கிய கம்யூனிஸ்டு கொள்கை பற்றிய ஆய்வுக்குள் இப்பொழுது செல்லலாம்.  1 அ. கொள்கை அறிக்கையின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் தொடங்கி  உலக அளவில் தன்னை விரித்துக் கொண்டிருக்கிற முதலாளியத்தின் வெற்றிகள் குறித்தும், தவிர்க்க இயலாமல் முதலாளியம் பாட்டாளி வர்க்கத்தைத் தோற்றுவித்திருப்பது பற்றியும் சொல்லப்படுகிறது. முதலாளி வர்க்கம் தான் சவக்குழியைத் தானே தோண்டுகிறது. ஆ. முதலாளியம் நிலப் பிரபுத்துவத்தை முறியடித்தது குறித்தும் உலக  அளவிலான நாகரிகத்தைத் தோற்றுவித்தது குறித்தும் இதன் விளைவாக அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அறிக்கை கூறுகிறது. இ. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்று பின்னர் அறியப்படுகிற ஆய்வுமுறை இந்தப் பகுதியில் இடம்பெறுகிறது.  2. கொள்கை அறிக்கையின் அடுத்த பகுதி  அ. பாட்டாளி வர்க்கத்தை முன் நிறுத்துகிற கொள்கை அறிக்கை, பாட்டாளி வர்க்க அமைப்புக்கள் குறித்தும், கம்யூனிசக் கோட்பாடு மற்றும் செயல்முறையை இவ்வகை இயக்கங்களுக்குள் கொண்டு சேர்ப்பது குறித்தும் அறிக்கை குறிப்பிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி என்று தனியாக ஒன்று தேவை என்பது குறித்து அறிக்கை கூறவில்லை.    ஆ. முதலாளியத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்று லெனின் வரையறை செய்தார். இவ்வகைப் புரிதலுக்கான கூறு கொள்கை அறிக்கையின் முதல் பகுதியில் இடம் பெறுகிறது. கட்சி அமைப்பு குறித்த கருத்துக்களும் செயல்முறையும் லெனினால் வரையறுக்கப்பட்டன. கட்சி அமைப்பு என்பதைக் கொள்கை அறிக்கையின் ஒரு கூறாக ஏற்க முடியும். இ. பாரீஸ் கம்யூன் அனுபவங்கள் அடிப்படையில் அரசு இயந்திரத்தை  நொறுக்குவதைப் பற்றிய குறிப்பு முன்னுரையில் இடம் பெறுகிறது. கொள்கை அறிக்கையில் இணைக்கப்பட வேண்டிய கூறு இது. ஈ. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய இயக்கங்கள் குறித்து லெனின் செய்த வரையறைகள் கொள்கை அறிக்கையில் இடம் பெறுவது தேவை.  உ. 1917 சோவியத் புரட்சி இல்லையென்றால் கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை வெறும் இலக்கியமாகவே தொடர்ந்து படிக்கப்பட்டிருக்கும். உலக வரலாற்றில் சோசலிசம் கம்யூனிசம் என்ற தடம் அழிக்கமுடியாத தடம் சோவியத் புரட்சியின் மூலமே சாதிக்கப்பட்டது.  ஊ. மார்க்சியத்திற்கு லெனின் தந்த பங்களிப்புக்கள் கொள்கை அறிக்கையின் பிற கூறுகள்.  3. கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கையின் அடுத்த பகுதி  அ. முதலாளிகள் கம்யூனிஸ்ட்கள் குறித்துச் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு மார்க்சும், எங்கெல்சும் தரும் எதிர்வினைகளின் தொகுப்பு இந்தப் பகுதி. கம்யூனிஸ்ட்டுகள் தேசியத்தை, தனி உடைமையை, குடும்பங்களை அழிக்கிறார்கள். பண்பாட்டை அழிக்கிறார்கள். பெண்களை பொது உடைமையாக்கு கிறார்கள், விபச்சாரிகளாக்குகிறார்கள் ஆகிய குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்படுகின்றன. தேசம், அரசு, குடும்பம் முதலியவை வரலாற்றில் எவ்வாறு உருக்கொள்கின்றன? இவை எவ்வாறு வலுப்பெறுகின்றன முதலிய விளக்கங்கள் கொள்கை அறிக்கையில் இல்லை. பிறகு எங்கெல்சு இவை குறித்து விரிவாக எழுதினார். குடும்பம் வரலாற்றில் தொடருமா? பெண் அடிமைத்தனம் எவ்வாறு ஒழியும் என்பது குறித்த ஆய்வுகள் தேவை.   ஆ. தொன்மைக் காலத்திலிருந்து தொடரும் பண்பாடுகள் குறித்து சிறப்பாக இப்பகுதி குறிப்பிடுகிறது. முதலாளிகள் பெரும்பாலான மக்களின் உடைமைகளை, குடும்பங்களை அழித்தார்கள். இவர்களுக்குப் பேச என்ன உரிமை இருக்கிறது? என்ற முறையில் கோபத்தோடு அறிக்கை எழுதப்பட்டிருக்கிறது. தனிஉடைமை  முதலியவற்றின் தோற்றம் குறித்து விளக்கங்கள் இல்லை.   இ. முதலாளியம் அடுத்து வந்த காலங்களில் இன்றுவரை கம்யூனிஸ்ட்களின் மீது சொல்லிவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் தொகுத்துக் கொள்ள வேண்டும். உடைமை மற்றும் அரசு இல்லாமல் சமூகம் இயங்க முடியாது என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள்.    ஈ. பண்பாடு, மெய்யியல், சமயம் குறித்துத் தொடர்ந்து எழுந்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்பட வேண்டும். இயங்கியல் குறித்து கொள்கை அறிக்கையில் நேரடியாகக் கூறப்படவில்லை. மார்க்சின் அந்நியமாதல் இடம்பெறுகிறது (முன்னுரையில்?) உலக அளவிலான விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் சாதிக்க வேண்டும் என்ற கருத்தினுள் இது அடங்கியுள்ளது. 4. கொள்கை அறிக்கையின் அடுத்த பகுதி  அ. கம்யூனிஸ்ட் செயல்திட்டம் குறித்த 10 கூறுகள், குறிப்பாக விவசாயப் பிரச்சினை முதலியவை. இவை குறித்து விரிவான ஆய்வு தேவை. இரஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்ற செயல்திட்டங்கள் குறித்த ஒரு தொகுப்பும் தேவை.  ஆ. சீனாவைப் பொறுத்தவரை உழவர்கள், கிராமங்கள், மக்கள்படை முதலியவற்றுக்கு முதன்மை. ஐக்கிய முன்னணி என்ற தந்திரம் இது குறித்து லெனின் கூறியிருக்கிறார். ஜார்ஜ் டிமிட்டிரோவ் வரையறை செய்திருக்கிறார். மாவோவின் வரையறைகள் துல்லியமானவை. முரண்பாடுகள் குறித்து மாவோவின் ஆய்வுகள். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் கலாச்சாரப் புரட்சி மூன்று இணைப்பு தலைமைப் பீடத்தைத் தகர்க்க வேண்டும். முதலாளியமா, சோசலிசமா எதற்கு இறுதி வெற்றி என்பது இன்னும் தீர்மானமாகவில்லை. நூறு பூக்கள் மார்க்சியமும் பிற்போக்கான தத்துவம் என்ற காலம் வரும் நட்பு முரண்பாட்டுக்கு அழுத்தம் முதலிய கூறுகள்.  5. அடுத்த பகுதி  அ. நிலப்பிரபுத்துவ சோசலிசம், முதலாளிய சோசலிசம் (குட்டி முதலாளிய சோசலிசம்) கற்பனா சோசலிசம், ஜெர்மெனியில் எழுந்த ‘உண்மை’ சோசலிசம் முதலியவை குறித்த விரிவான விளக்கங்களும் மறுப்புக்களும் இதில் இடம் பெறுகின்றன. 48 க்குப் பிறகும் சோசலிசம் குறித்து புதிய வகைகள் தோன்றின. இவை குறித்தும் இங்கு தொகுக்க வேண்டும்.  ஆ. குறிப்பாக இந்தியாவில் சோசலிசம் குறித்த போக்குகள் கம்பனில் சோசலிசம் காந்திய சோசலிசம் ஜெயப்பிரகாஷ் முதலியவர்களின் சோசலிசம் பெரியார் சோசலிசம் விடுதலை இறையியல் முதலியவை ஆய்வுக்குரியவை.  இ. சோசலிச அறிக்கை என்று முதலில் குறிப்பிட்டு, பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை என மார்க்கம் எங்கெல்சும் மாற்றியதை முன்னுரை குறிப்பிடுகிறது. அராசகவாதிகள் அரசை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை மார்க்சு மறுத்தார். (அடிக்குறிப்புகளில் இடம் பெறும் செய்தி)   6. கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை ஒவ்வொரு நாட்டிற்கும் உரியதாகச் செய்யப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு நாட்டின் தனிச் சூழலுக்கு வரலாற்றுச் சூழலுக்குப் பொருத்தமுடையதாக அமைக்க வேண்டும். இந்தியச் சூழலுக்கு ஒத்த ஒரு முன்னுரை தேவை. இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்படிச் செயல்பட்டதா என்பது குறித்து நம்மிடையில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஆசிய உற்பத்தி முறை என்பது இந்தியச் சூழலுக்குப் பொருத்தமானது. இரஷ்யாவில் நிலம் பொதுவுடைமையாக இருந்தது. பிறகு இந்தப் போக்கு மாறியது என்ற குறிப்பும் அடிக்குறிப்பில் இடம்பெறுகிறது. இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் குறித்து மார்க்சு நிறையவே எழுதியுள்ளார். இந்தியச் சமூகத்தின் வர்க்க அமைவு, இந்திய வரலாறு சாதி அமைப்பு, மதங்கள் குறித்து ஆய்வுகள் தேவை. பாட்டாளி வர்க்கம் இந்தியாவில் முதன்மையான வர்க்கமாக இல்லை. சோவியத் பாணியில் அல்லது சீன பாணியில் சமூக மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் இங்கு எந்த அளவில் உள்ளன. விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்களின் பங்கு இந்தியாவில் ஆதிக்கத்தில் இருப்பது தேசிய முதலாளியா? பெரு முதலாளியா? தரகு முதலாளியா? ஏகாதிபத்தியத்தோடு இந்தியாவுக்கு என்ன உறவு? ஏகாதிபத்தியம் என்ற சொல் சரியானதுதானா? உழவர் புரட்சியோடு, தலித் இயக்கங்கள் முதலியவற்றோடு பாட்டாளி வர்க்கம் கொள்ளும் உறவு என்னவாக இருக்கவேண்டும் (இங்கு கோத்தா திட்டம் குறித்து மார்க்சின் திறனாய்வுக் குறிப்புகள் ஆய்வுக்குப் பயன்படும்) தேசிய இனங்களின் போராட்டம் இப்பொழுது என் முதன்மை பெறுகிறது? அணுகுண்டு தயாரிப்பு, தடா கொடா குறித்து இன்று பேசவேண்டும்.  7.  கம்யூனிசம் என்ற கோட்பாடு ஐரோப்பாவில் பிளாட்டோ காலம் முதல் இருந்து வருகிற கோட்பாடு. உலகளவில் புராதனப் பொதுவுடைமைச் சமூகங்கள் இனம் காணத்தக்கவை. இவற்றின் குரல் கம்யூனிசம். கம்யூனிசம் என்பது காலம்தோறும் கனவில், கற்பனையில், வாழ்வியலின் சில கூறுகளில் இருந்து வந்தது. வர்க்கப் போராட்டம் என்ற கருத்தும் கூட மார்க்சுக்கு முன்பே இருந்த கருத்து. கம்யூனிசம் குறித்த விஞ்ஞானப் பார்வையைக் கண்டறிந்தவர்கள் மார்க்சும், எங்கெல்சும் என்று கூறுகிறோம். இது எந்த அளவில் விஞ்ஞானப் பார்வை என்ற ஆய்வை நாம் புறக்கணிக்க முடியாது. கம்யூனிசம் பொருளியல் அடிப்படையில் சமூக மாற்றத்தைக் கோருகிறது. இது கம்யூனிசத்தின் அடிப்படையான கூறுகளில் மிக முக்கியமானது. இதன் தொடர்பில் அடித்தளம், மேற்கட்டு என்பனவற்றுக்கிடையிலான உறவுகள் தொடர்ந்து ஆய்வுக்குரியவை. இயங்கியல் குறித்த ஆய்வு தீவிரப்பட வேண்டும் என்று லெனின் கூறினார். அல்தூசர் முதலியவர்களின் ஆய்வுகள் வரவேற்கத்தக்கவை. ஸ்டாலின் காலத்தில் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் என்பதனுள் சில கூறுகளுக்கு அழுத்தம் அதிகமாகத் தரப்பட்டது. மேற்கத்திய மார்க்சியம், கீழை மார்க்சியம் என்றெல்லாம் பேசுவதற்குத் தேவையான ஆதாரங்கள் இருக்கின்றன.  ஃபிராய்டியம், இருத்தலியம் என்று தொடங்கி எத்தனையோ மெய்யியல் போக்குகள் உலகில் நிலவுகின்றன. கலை இலக்கிய ஆய்வுகளில் புதிய போக்குகள் வந்துள்ளன. எதார்த்தவாதம் செத்துவிட்டது என்றும் பேசுகின்றனர். நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகியவற்றை மார்க்சியம் உள்வாங்கிக் கொள்ள முடியும். பெண் அடிமைத்தனம் குறித்து எங்கெல்சு முதலியவர்களிடம் போதிய விளக்கங்கள்  இல்லை. அந்நியமாதல் மார்க்சியத்தில் புறக்கணிக்கப் படுகிறது. இன்றைய உலகச் சூழலில் தொழிலாளிகளின் உழைப்புத் திறனுக்குத் தேவை இல்லை. நவீன கணிப்பொறிகள் தகவல் சாதனங்கள் முதலியவை பொருள் உற்பத்திக்கு ஆதாரமாகிவிட்டன. ஆகவே, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு இனி சாத்தியமில்லை. இப்படிக் கருதுவது பேதைமை என்றும் சிலர் சொல்லலாம். முதலாளியத்தின் விதிமுறைகள் கொண்டு இயற்கையின் மாபெரும் உற்பத்தித் திறனை வரையறுக்கவோ விலை மதிப்பிடவோ முடியாது. உபரி மதிப்பு என்ற கோட்பாட்டை உலக அளவில் வைத்து நாம் பார்க்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் என்று பேசி இயற்கையை நாசம் செய்யமுடியாது. சோசலிசம் என்றால் என்ன? என்பதற்கான வரையறைகள் போதுமானதாகதில்லை. முரண்பாடுகள் இல்லாமல் வரலாறு இயங்குவதில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு எப்பொழுதுமே நாம் மரியாதை தரவேண்டும். வரலாற்றை மாற்றக்கூடிய தகுதியும் திறனும் தங்களுக்கே உண்டு என்று கம்யூனிஸ்டுகள் கருதுவது சரியில்லை. மார்க்சும், எங்கெல்சும் தொகுத்த கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கை என்பது ஒரு இடைக்கால வெளிப்பாடு. மார்க்சியத்தின் கூறுகளை வரலாற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு திரும்பத்திரும்ப ஆராய்ந்து கொள்கை அறிக்கையைத் திருத்தமுறச் செய்யவேண்டும். கொள்கை அறிக்கை ஒருவேத நூல் அல்ல. ஒரு வரலாற்று ஆவணம் என்ற முறையில் இந்தக் கொள்கை அறிக்கைக்கு என்றும் மரியாதை உண்டு. கம்யூனிசம் சாத்தியப்படும் காலம்வரை இந்த மரியாதை நிலைக்கும்.  பொருள் முதல் வாதமும் மார்க்சிய நோக்கும் மார்க்சியத்தின் ஆதாரக் கோட்பாடுகளில் ஒன்று பொருள்முதல்வாதம். மார்க்ஸ்க்கு முன்பே பொருள்முதல்வாதம் என்ற கோட்பாடு மேற்கத்திய மெய்யியலில் இருந்தது என்ற போதிலும், மார்க்சிய நெறியில் இந்தக் கோட்பாடு மேலும் தெளிவும், உறுதியும் பெற்றது என்பதில் அய்யமில்லை.  பிரபஞ்சத்தை கடவுள் தோற்றுவிக்கவில்லை. இயங்கிக் கொண்டிருப்பது பிரபஞ்சம். பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு கூறு நம் கதிர் மண்டலம். இதன் உட்கூறு உலகம். பரிணாம கதியில் எத்தனையோ மாற்றங்களோடு உலகம் தன்னை உயிரினங்களின் வடிவில் இறுதியாக மனிதன் வடிவில் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது என்று கூறலாம்.  உழைப்பின் வழியே குரங்கிலிருந்து மனிதனின் தோற்றம் நிகழ்ந்தது. சமூகம், வரலாறு என்பனவற்றின் வழியேதான் மனிதனின் வளர்ச்சியை நாம் பார்க்க முடியும். பிரபஞ்சம் முரணியக்கம் கொண்டது. இந்த முரணியக்கத்தின் வழியில்தான் வரலாறு, சமூகம், மனிதன் ஆகியவற்றை நாம் விளங்கிக் கொள்ளமுடியும். இயற்கை என்ற மாபெரும் இயக்கத்தினுள்தான் மனிதனை வைத்துக் காண்கிறோம். இவ்வாறு மனிதனின் இயக்கத்தை மார்க்சியம் தனக்கே உரிய முறையில் பார்க்கிறது. இவ்வகையில் பொருள்முதல் வாதம் என்பது வரலாற்றியக்கத்தையும், இயங்கியலையும் தனக்குள் கொண்டதாக இருப்பதை மார்க்சியம் விளக்கியது. இவ்வாறுதான் பொருள்முதல் வாதம் என்ற கருத்தியலை, பன்முகப் பரிமாணங்களில் வளர்த்தெடுத்தது, மார்க்சியத்தின் தனித்தன்மை என்று கூறமுடியும்.  தத்துவங்களை இரண்டு வகைகளாகப் பிரித்து விளக்க முடியும் என்று சொல்லும் எங்கல்ஸ், இப்பிரிவுகளை பொருள்முதல்வாதம் என்றும், கருத்து முதல்வாதம் என்றும் குறிப்பிட்டார். இவ்வகைப் பெயரிடலும் எங்கல்ஸுக்கு முன்பே மேற்கத்திய மெய்யிலில் இருந்ததுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.  கருத்துத்தான் முதல் என்று சொல்லும்பொழுது எல்லாவற்றுக்கும் அதாவது உலகம், இயற்கை, பிரபஞ்சம் உயிரினங்கள், மனிதன் முதலிய அனைத்திற்கும் மூலமாக இருப்பது கடவுள் தான் அல்லது சிந்தனைதான் என்ற சமயவகை விளக்கம் கிடைக்கிறது. மேற்கத்திய மெய்யியலில் தெகார்த்தே போன்றவர்கள், “நான் சிந்திக்கிறேன் ஆகவே இருக்கிறேன்” என்று கூறியதை இங்கு நாம் இணைத்துக் கொள்ள முடியும். கடவுள் என்ற கருத்தாக்கத்தை மறுக்கும் சமணம், பவுத்தம் முதலிய மெய்யியலாளர்கள் ஆன்மா என்பதையோ, அறம் என்பதையோ மூலம் என்று கூறினார்கள். கருத்தே முதல் என்ற வாதம் இவ்வாறு செயல்படுகிறது.  இதை மறுத்து பொருள்தான்முதல்/ மூலம் என்பது பொருள்முதல்வாதம். மனிதன் சிந்திப்பதற்கு முன்பு உணவை உட்கொள்ள வேண்டும் என்பது இதன் எளிய விளக்கம். சிந்தனை என்பது மூளைக்குள் நடைபெறும் உயர்வகை இயக்கம். மூளை தனித்து இயங்காது. நரம்பு மண்டலத்தோடு கூடிய மூளையின் இயக்கத்தை மனிதன் அல்லது விலங்கு பறவை முதலிய உயிரினங்களின் உடலியலோடு தொடர்பு படுத்தித்தான் பார்க்க முடியும். மனிதனை உள்ளடக்கிய உயிரினங்களின் வாழ்வை நிலம், நீர், காற்று, கதிரவன் தொடங்கி எவ்வளவோ கூறுகளை உள்ளடக்கிய விரிவான பொருளியல் சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. இதனுள் வரலாறு சமூகம் முதலியனவும் உள்ளடங்குகின்றன.  மார்க்சியம் விளக்குகிற உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், அடித்தளம், மேற்கட்டு முதலிய அனைத்துமே இந்தச் சூழலுக்குள் வந்து விடுகின்றன. மனித வாழ்வு இத்தகைய சூழலில்தான் இயங்குகிறது. மனிதனின் மெய்யியல் முதலிய சிந்தனைகளும் இத்தகைய சூழல் இல்லாமல் நடைபெறுவதில்லை. வாழ்வியல் தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. (சிந்தனையை வாழ்நிலை தீர்மானிக்கவில்லை) என்பது ஒரு மார்க்சீய வாய்பாடு.  கருத்து/ கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் ஆகிய இரு போக்குகளையும் எதிர் நிலையில், முற்றான எதிர்நிலையில் நிறுத்திப்பார்க்கும் நாம் இங்கு மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியவர்களின் வேறு சில கூற்றுக்களையும் நினைவில் கொள்ள வேண்டும். தத்துவங்களை கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்றும் வேறுபடுத்தி பார்க்க வழி சொல்லும் எங்கல்ஸ், ‘பயர்பாக்’ பற்றிய தன் சிறு நூலில் தொடர்ந்து விளக்கும் பொழுது கான்டின் மெய்யியலையும், ஹியூமின் மெய்யியலையும் இவ்வாறு பகுக்கமுடியாது என்று கூறுகிறார். எங்கல்ஸின் கூற்று நமக்குள் சற்று அதிர்வையும், நிதானத்தையும் ஏற்படுத்துகிறது. சிந்தனை மனிதனை இறுகப்பற்றும் பொழுது அது பொருளாயத சக்தியாக மாறுகிறது என்று ஏற்கனவே மார்க்ஸ் கூறியது நம் நினைவுக்கு வருகிறது.  எல்லாவற்றையும் அடித்தளம் என்றும் மேற்கட்டுமானம் என்றும் பிரித்து விட முடியும் என்று நாம் கற்ற தொடக்க நிலை பாடம், மொழி என்பதை அடித்தளத்திலும் சேர்க்க முடியாது, மேற்கட்டுமானத்திலும் சேர்க்க முடியாது என்று கூறிய ஸ்டாலினை படிக்கும்பொழுது கடுமையான அதிர்வுக்குள்ளாகிறது. மெய்யியல் வகைப்பட்ட கருத்து முதல் வாதத்தை இயந்திரவியல் வகைப்பட்ட பொருள் முதல்வாதம் வெல்ல முடியாது என்று லெனின் கூறியதையும் இங்கு நினைவு கூறுகிறோம். பொருளின் இயக்கத்திலிருந்து தொடங்கி, தனக்குள் விரைவு கொள்ளும் சிந்தனை தன் இயக்கத்தின்போது அதன் வேகம் காரணமாக நேர்கோட்டில் செல்வதில்லை. இடப்புறமாக எதிர்நிலைக்கு சென்று அங்கு மோதி, மோதலின் தீவிரத்தோடு வலப்புற எல்லைக்குச் சென்று அங்கும் மோதி இப்படித்தான் சிந்தனை என்பது ZIG ZAG பாதையில் செல்கிறது என்று லெனின் சிந்தனையின் இயக்கம் குறித்து சொல்லியிருக்கிறார்.    இக்கூற்றுக்களை எல்லாம் உச்ச அளவிலான அக்கறையோடு நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. பொருளே முதல் என்பது ஓர் எல்லை / இறுதி எல்லை. கருத்தே முதல் என்பது இன்னொரு எல்லை / இறுதி எல்லை. எல்லைகளுக்குச் சென்ற பிறகு இயக்கம் இல்லை திரும்பி வரவேண்டும். எதிர்நிலைகளுக்கு இடையில் ஊடாட்டம் குறித்து அக்கறையோடு மார்க்சியம் பேசுகிறது. முரண்நிலைகள்தான், முரண் நிலைகளுக்கு இடையில் ஊடாட்டம் தான் இயக்கத்திற்குக் காரணம். ஒன்று இல்லாமல் மற்றதற்குள் இயக்கம் இல்லை. இப்படியெல்லாம் மார்க்சியம் விளக்குகிறது.  கடவுள், ஆன்மா முதலியவற்றை கருத்தாக்கங்கள் மனிதனோடு , மனித வரலாற்றோடு உறவு கொண்ட கருத்தாக்கங்கள் என்று மார்க்சியரால் பார்க்க முடியும். இப்படிப் பார்க்கத் தொடங்கியவுடன் கடவுள் ஆன்மா முதலிய எவ்வகைக் கருத்தும் வரலாற்றுச் சூழலில் பொருள் வகைச் சூழலில் மனிதனுக்குள் வந்த, மனிதன் தனக்குள் தோற்றுவித்துக் கொண்ட கருத்தாக்கங்கள் என்று பார்க்க முடியும். கடவுளே முதல், ஆன்மாவே முதல் என்ற கருத்தாக்கங்கள் இங்கு அடிபட்டுப் போகும். எவ்வகைக் கருத்தியலும் தத்துவமும். அதற்குள் பொருளியல் கூறு இல்லாமல் இருக்க முடியாது என்பதையும் உடனே நாம் புரிந்து கொள்ள முடியும்.  “சூழல் தான் மனிதனைப் படைக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமே. உண்மையின் மறுபாதி, சூழலை தனக்கு ஏற்ற முறையில் மனிதன் படைத்துக் கொள்கிறான் என்பதாகும்”. ‘பயர்பாக்’ பற்றிய ஆய்வுரைகளில் இப்படி எழுதியவர் மார்க்ஸ். மனிதனுக்குள் வரலாறு, மரபு, பண்பாடு முதலியவை செயல்படுகின்றன. மனிதன் தனக்குள் இதன் காரணமாக சுய இயக்கம் கொண்டவனாக இருக்கிறான். புறத்தை உள் வாங்கிக் கொள்கிற மனிதன் அகத்தினுள்ளிருந்து எழுச்சி கொள்கிறான்.  எதிரொலிப்பு என்ற கோட்பாட்டை விளக்கும் பொழுது லெனின் புறத்தோடு ஒத்துச் செயல்படும் உடன்பாட்டு முறையிலான எதிரொலிப்பு குறித்தும், புறத்திற்கு எதிர் வினை தரும் செயல்வகைப்பட்ட எதிரொலிப்பு குறித்தும் பேசி இருக்கிறார். புறத்தை எதிர்கொள்ளும் முறையில் மனிதன் ஆக்கத்திறனோடு செயல்படுகிறான். இந்த ஆக்கத் திறன்களை வரலாற்றின் முரணியக்கத்திலிருந்து மனிதன் பெறுகிறான். இந்த ஆக்கத்திறன்களில் ஒன்று சிந்தனை. சிந்தனை காரணமாகத்தான் மனிதன் புற உலகத்தின்மீது புதிய முறைகளில் செயல்படுகிறான். சிந்தனையிலிருந்து / கருத்தியலிலிருந்து மனிதனை இங்கு பிரித்துப் பார்க்கவும் முடியாது. இவ்வகையில் தான் மனிதன் தன்னையும், வரலாற்றுச் சூழலையும் கடந்து இயங்குகிறான். இங்கு பொருளே முதல், சிந்தனையோ முதல் என்ற வேறுபடுத்தல்கள் பொருளற்று போகின்றன.  பொருள் என்றால் என்ன என்பது குறித்து லெனின் வழங்கிய வரையறை பற்றி இங்கு குறிப்பிடலாம். “நமக்கு புறமாக / வெளியில் இருப்பது பொருள்” “நம் புலன்களை பாதிப்பது பொருள், நமக்கு முன்பும் பொருள் இருந்தது, நாம் இல்லாத போதும் பொருள் இருக்கும்’’ இப்படி லெனின் விவாதித்தார்.  பொருள் என்பதே இல்லை எல்லாமே சத்தியாக மாறிவிட்டது என்று சில விஞ்ஞானிகள் விவாதித்த சூழலில் லெனின் இந்த வரையறையை முன்வைத்தார். எல்லாமே இடைவெளிகள் நிறைந்த அணுக்களின் தொகுப்பு என்று சொல்வதற்கும் இந்தக் கூற்று ஒரு மறுப்புரை . லெனினை பொறுத்தவரை இந்தக் கூற்று மெய்யியல் வகைப்பட்ட வரையறை. இது அறிவியல் விளக்கமல்ல என்ற கவனத்தோடு இருந்தார். நமக்கு புறத்தில் இருப்பதும், நம் புலன்களை பாதிப்பதுமாகிய பொருள் எந்த வடிவத்திலும் இருக்கலாம். (அது சக்தியாக கூட இருக்கலாம் என்பதை இந்த வரையறை மறுக்கவில்லை) நமக்கு வெளியில், புறத்தில் இருப்பது பொருள் என்றால் நம் உடல் முதலியனவும் பொருள் அன்றி வேறு என்ன? என்ற கேள்வியும் இங்கு எழலாம். இந்தக் கேள்விகளை எல்லாம் ஏன் எழுப்பவேண்டும், யார் எழுப்புகிறார்கள் என்றும் இங்கு சிந்திப்பதற்கு இடம் உண்டு. இப்படிக் கேட்பதனால் லெனின் தந்த வரையறையின் தகுதிப்பாடு இங்கு குறைந்து விடுவதில்லை.  மேலும் ஒன்றை இங்கு சொல்லலாம். அடித்தளம், மேற்கட்டு என்று எல்லாவற்றையும் பிரித்து பார்க்கமுடியும் என்பது ஒரு மார்க்சிய வரையறை. இதன் எல்லைக்குள்ளிருந்தே தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன. உற்பத்திச் சக்திகள் என்பதனுள், கருவிகள், நிலம் முதலியவற்றோடு மனிதனையும் உள்ளடக்குகிறோம். மனிதன் என்பவனை கருவியாக என்றும் குறைத்துச் சொல்ல முடியாது. மனிதன் உணர்வுள்ளவன், உறவுகளோடு கூடியவன். கருவிகள் என்பதனுள்ளும் மனிதன் இருக்கிறான். வரலாறு இருக்கிறது. கருவிகளிலிருந்து மனிதனை பிரித்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் பொழுதே அறிவியல் முதலியவற்றிலிருந்தும் அவனைப் பிரித்து பார்க்க முடியாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.  உறவுகளிலிருந்தும் மனிதனை பிரித்துப் பார்க்க முடியாது என்று சொல்லும்பொழுது மெய்யியல், கலை இலக்கியங்கள், சிந்தனை முதலியவற்றிலிருந்தும் மனிதனைப் பிரித்து பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். அப்படியானால் அடித்தளம் என்றும் மேற்கட்டு என்றும் பிரித்துப் பார்ப்பது சில வசதிகளுக்கு ஆனது என்பதைத் தவிர முற்றாகப் பிரித்து பார்ப்பது இயங்கியலுக்கும் ஒத்ததாக இருக்கமுடியாது. முரணியக்கத்தினுள் பல்வேறு கூறுகள் செயல்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவற்றை இருவகை எதிர் நிலைகளுக்குள் வைத்துக் காண்கிறோம். வரலாற்றின் தேவை முதலியவை இப்படி நமக்குள் இயக்கம் கொள்கின்றன. பொருள்வகை இயக்கத்தின் ஓர் உயர் நிலை சிந்தனை. பொருளையும், சிந்தனையையும் முற்றாக எதிர்நிலைப்படுத்த முடியாது.  பிரித்துப் பார்ப்பதும், வகைப்படுத்துவதும், பெயரிடுவதும் சிந்தனை இன்றி செயல்படுவதில்லை. சிந்தனையின் வழியே தான் கொள்கைகள் கோட்பாடுகள் எனப் படைக்கிறோம், கட்டமைக்கிறோம். நிலமாகக் கிடக்கும் ஒன்றை நாடு என்றும், மாநிலம் என்றும் கட்டமைப்பது சிந்தனையைக் கொண்டுதான். கட்டிடம் என்பதனுள் பொருள் வகைகளோடு விதிமுறைகளும் இணைகின்றன. ஒரு கற்பாறை யானை என வடிவம் பெறுகிறது. ஓசைகள் பல்வேறு வடிவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் மொழியாகிறது, இசையாகிறது. மரத்தைக் கொண்டு எத்தனையோ வகைப்பட்ட பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. மரம் நாற்காலியாகிறது, மேஜையாகிறது, கட்டிடம் ஆகிறது. நாற்காலி என்பதனுள் பொருளும் சிந்தனையும் இணைந்திருக்கின்றன. இவற்றை நாம் பிரித்து பார்ப்பதில்லை. மனிதன், ஆண், பெண், விலங்குகள், பறவைகள், உலகம் இயற்கை, கதிரவன், விண்மீன்கள் முதலிய பலவற்றையும் நாம்தான் சிந்தனைக்குள் கட்டமைக்கிறோம் / படைக்கிறோம்.  வாழ்வென்பதை இப்படித்தான் படைக்கிறோம். லட்சியங்கள் முதலியவற்றையும் படைத்துக்கொள்வது இப்படித்தான். கடவுளைக்கூட இப்படித்தான் நாம் படைத்தோம். தத்துவங்கள், கலைகள் மனிதனின் படைப்புக்கள். வரலாறு சமூகம் என்பனவும் இத்தகைய படைப்புக்கள்.  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இவை இல்லை. மனிதன் தன்னை படைத்துக் கொள்ளும்பொழுதே இவற்றையும் படைத்துக் கொள்கிறான். இங்கெல்லாம் கருத்து, பொருள் என்று பிரிப்பதில் அர்த்தமில்லை. பொருளை எப்பொழுதும் நாம் பொருளாகவே வைத்துக் கொள்வதில்லை. நம் தேவைகளுக்கு ஒத்த முறையில் மாற்றி அமைக்கிறோம், படைத்துக் கொள்கிறோம். நன்மை/ தீமை, மேல்/ கீழ், சாதி மதம், சமத்துவம் / சகோதரத்துவம் என்பனவும் மனிதனின் படைப்புக்கள். இவை அனைத்தும் பொருளாகவும், சிந்தனையாகவும் இருக்கின்றன. பொருளில் பல மட்டங்கள், தளங்கள். இவை நமக்குள் ஒத்தும், முரண்பட்டும் செயல்படுகின்றன. இவை இயக்கத்தில் இருக்கின்றன.  இயக்கத்தில் இருக்கும் இவற்றை பிரித்து, அதன் பிறகு குறைத்து வெறும் உணவாகவோ, இருப்பிடமாகவோ, கட்டிடமாகவோ காணுகிற வகையில் பார்க்கும் பார்வை. மனிதனை விலக்கமுடியாது, வரலாற்றை விலக்கமுடியாது. மனிதனின் அடிப்படைத் தேவைகள் என உணவு, உடை, இருப்பிடம் என சிலவற்றை மட்டும் வரையறை செய்வது மனிதன் வளர்ச்சிக்கு உகந்ததாகாது. உடமைக்குள், அதிகாரத்திற்குள் மனிதனை முடக்குவது மனித வளர்ச்சிக்கு ஒத்ததாக இருக்க முடியாது. நிறுவனங்களுக்குள், கட்சிக்குள் மனிதனை முடக்குவதும் இத்தகைய குறுகலான பார்வைதான். பொருள் முதல்வாதம் என்ற பெயரிலும் மனிதன் குறுக்கப்படுவதை மார்க்சியம் ஏற்காது. இத்தகைய பொருள் முதல்வாதம், லெனின் கூறியபடி இயந்திரவியல் பொருள்முதல்வாதம். இதற்கும் மார்க்சியத்திற்கும் உறவு இல்லை. நமக்கு வேண்டியது இயங்கியல் வகையிலான பொருள் முதல்வாதம். வரலாறு, சமூகம் மற்றும் பொருளியல் என்ற சூழலின் ஏதேனும் சில கூறுகளை உள்ளடக்கியதாகத்தான், கருத்துமுதல்வாதம் என நாம் இனம் காணுகிற எந்த ஒரு கருத்தியலும் தோன்றுகிறது. அன்றியும் நிலை பெறுகிறது. இதன் காரணமாக கருத்தியல் அல்லது கருத்து முதல்வாதம் பற்றிய ஆய்வை அதன் இருத்தலுக்குக் காரணமான பொருளியல் சூழலிலிருந்து தான் தொடங்கவேண்டி இருக்கிறது. அன்பே கடவுள், அறமே இறைமை என்பதற்கு அழுத்தம் தரும் ஒருவரை கருத்து முதல்வாதி என்று நம்மால் இகழ்ந்து விடமுடியாது. இவருக்குள்ளும் சமூகத்தின் முரணியக்கம் செயல்படுகிறது. ஆன்மா அல்லது அறத்தை முதன்மைபடுத்திய சமணர்களும் பவுத்தர்களும் வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை வகித்துள்ளனர். எல்லாவற்றினுள்ளும் பிரமத்தைக் கண்ட விவேகானந்தர், இந்த கருத்தியல் தளத்தை சமூகவியலுக்குள் விரிவுபடுத்திய பொழுது சமதர்மத்தை தழுவிக் கொள்ள முடிந்தது. பொருள்முதல்வாதி என்று தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவர், பணம், அதிகாரம் ஆகியவற்றில் தன்னைப் பறி கொடுத்து மக்கள் மீது சுமையாக அமர்ந்து விட முடியும். ஆகவே கருத்து முதல் வாதம் பேசும் ஒருவரை, இப்படிப் பேசுவதனாலேயே பிற்போக்குவாதி என்றோ, பொருள்முதல்வாதம் பேசுவதனாலேயே ஒருவரை முற்போக்குவாதியென்றோ நாம் கருதிவிட முடியாது. எல்லா மனிதருக்குள்ளும் சில கூறுகளிலேனும் வரலாறு மற்றும் சமூக இயக்கம் செயல்படுகிறது. இயங்கியல் நெறியில் இப்படித்தான் ஒருவரை அல்லது ஒருவரது கருத்தியலை கணிக்கமுடியும்.  இயற்கையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் இறுதியில் தன்னிலிருந்தும் அன்னியமாகும் மனிதன் குறித்து மார்க்ஸ் விரிவாகப் பேசி உள்ளார். இப்படி அன்னியமாகும் / அன்னியப்படுத்தப்பட்ட மனிதன் கலைகளுக்குள், சமயத்திற்குள் தன்னை முடக்கிக் கொள்கிறான். கலைக்குள் அல்லது பக்திக்குள் தன்னை முழுமையாகக் காண்கிறான். வெறுக்கத்தக்க வரலாறு மற்றும் சமூகச் சூழல்தான் இவனை இப்படி ஆக்குகிறது. இலக்கியப் படைப்பினுள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் படைப்பாளியும் இத்தகையவன். 17/18-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு நாட்டின் பொருளியல் சூழலில் முதலாளியப் போக்கை வெறுத்த சில கலைஞர்கள், நவீன கலை இயக்கத்திற்குள் தம்மைப் புதைத்துக் கொண்டார்கள். கலை கலைக்காகவே என்று பேசிய இவர்களை சரியாகவே பிளக்னோவ் இனம் கண்டு கொண்டார். உடமையும், அரசும் தம் ஆதிக்கத்தை குரூரமாகப் பெருக்கி வரும் சூழலில் இவற்றோடு நமக்கு எந்த உறவும் வேண்டாம் என்று காடுகளில் ஆசிரமங்களை துறவிகள் அமைத்துக் கொண்டனர். மன்னவனும் நீயோ என்று கேட்டு அரசவையை கம்பர் முதலிய புலவர்கள் துறந்தனர். அறத்தையும் அன்பையும் வாழ்வின் இலக்குகள் என எத்தனையோ சான்றோர்கள் முதன்மைப்படுத்தினர். சுற்றிலும் படர்ந்து வருகிற பாலைவனங்களுக்கு மத்தியில் சோலைகளாக அமைந்து மனித மேன்மையை வரலாற்றில் தக்கவைப்பவர்கள் இவர்கள். இவர்கள் கடைப்பிடிப்பது இலட்சியவாதம். இதுவும் கருத்து முதல்வாதம்தான். இவர்களையெல்லாம் இயங்கியலில் அக்கறையுடைய மார்க்சியனால் புரிந்து கொள்ள முடியும். இவர்களுக்குள் ஆளும் வர்க்கத்தின் சார்பை கண்டுபிடிப்பவன் வறட்டுப் பொருள் முதல்வாதி. இவன் பார்வையில் வள்ளுவரும் இளங்கோவும் ஆளும் வர்க்கத்தின் சேவகர்கள்.  உற்பத்தியை பெருக்குவதன் மூலம் எல்லோருக்குமான சமத்துவம் சாத்தியப்படும் என்பது முதலாளியப் பொருள்முதல்வாதம். இயற்கையை மனிதன் இயந்திரங்களைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் இதே வகையிலான பொருள்முதல்வாதம். மனிதன் மகத்தானவன் என்பதும் இதேவகைவாதம். உபரி மதிப்புக்களை தொழிலாளி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் இந்த வாதம்தான். கட்சி, தொழிற்சங்கம் ஆகியவற்றை வழிபாடு செய்வதும் இதுவேதான். தனக்குள் பதவி, அதிகாரம், அறிவு முதலியவற்றை சேர்த்துக் கொண்டு பிறர்மேல் ஏறி அமர்வதும் இதுதான். இந்த வகைப் பொருள் முதல்வாதம் மனிதனை அழிக்கும். மனித வரலாற்றை முடக்கும். இவர்களுக்கு இயற்கை தெரியாது, உயிரினங்கள் தெரியாது. இவர்களுக்கு கலைகள் தெரியாது. இவர்கள் அன்பை மதிக்கமாட்டார்கள். இவர்கள் கடைப்பிடிப்பது இயந்திரவாதம், சடங்குகள் மற்றும் சாத்திரங்கள். இவர்கள் கட்சி மற்றும் அதிகார நிறுவனங்களுக்குப் புரோகிதர்கள். அடித்தளத்திற்கே அழுத்தம் தருவது இவர்கள் போக்கு. சுதந்திரம் பிரிவுபடாதது என்ற மார்க்சின் கூற்றை இவர்களால் என்றும் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் ஏற்படுத்தும் எந்த நிறுவனமும் மனித விடுதலையை மறுக்கும். தத்துவ வகைப்பட்ட கருத்து முதல்வாதத்தை இயந்திரவியல் வகைப்பட்ட பொருள் முதல்வாதம் என்றைக்கும் வெல்லமுடியாது என்று லெனின் கூறியதை திரும்பத் திரும்ப நாம் நினைவு கொள்ளலாம். ஏகாதிபத்தியத்தோடு, முதலாளியத்தோடு, கருத்து முதல்வாதத்தோடு போராட நேரும்பொழுது எதிரியின் சில கூறுகளை ஒருவர் தமக்குள் வரித்துக் கொள்ளாமல் இருப்பது சாத்தியமில்லையென்றும் மார்க்ஸ்தான் கூறியிருக்கிறார். ஆகவே பொருள் முதல்வாதம் என்று பேசுவோரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பொருள் முதல் வாதமும், மார்க்சிய மெய்யியலும் மார்க்சிய வகைப்பட்ட பொருள்முதல்வாதம், அதிக அளவில் அறிவியல் கண்ணோட்டமாக இருக்கிறதே அன்றி, வாழ்வியல் கண்ணோட்டமாக இல்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே மார்க்சியத்தில் அரசியல் கண்ணோட்டம் உச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த அரசியல் கண்ணோட்டம் தான் இலக்கிய பார்வைக்குள் அழுத்தம் பெறுகிறது. அன்றியும் கட்சி பார்வைக்கு ஆதாரமாக இருக்கிறது.  எங்கல்ஸ் இவ்வாறு எழுதினார். “இயற்கை விஞ்ஞானம் முழு அளவில் வளர்ச்சி பெறும்பொழுது மெய்யியலுக்கு இடம் இல்லாமல் போகும்’’ இந்தக் கூற்று இன்னும் ஆழமாக, விரிவாக சிந்திக்கத் தகுந்தது.  இயற்கை விஞ்ஞானம் என்பதனுள் இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை உள்ளடக்கலாம். உயிரியலை இத்தோடு சேர்த்துக் கொள்ள இயலும். பொருள் என்பதனுள் திடப்பொருள், திரவப்பொருள், வாயுப்பொருள் மட்டுமல்லாமல் வேறு பல நுண்பொருள்களையும் உள்ளடக்கலாம். விண்மீன்கள் முதலியன குறித்த வானவியல் ஆய்வும் இதற்குள் வந்து விடும். தாவரங்கள், விலங்குகள் முதலிய உயிரினங்கள் குறித்த ஆய்வும் இதனுள் அடங்கும். புறச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதன் உள்பட எல்லா உயிரினங்களும் எவ்வாறு தம்மை தக அமைத்துக் கொள்கின்றன என்ற ஆய்வும் இதில் சேரும். விலங்கு முதலிய உயிரினங்களின் உடம்புக்குள் நடைபெறும் வேதியியல் செயல்பாடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இயற்கை விஞ்ஞானம் குறித்து எங்கல்ஸ் இங்கு குறிப்பிட்டாலும், அறிவியல் கண்ணோட்டத்தை தனக்குள் விரிவாகக் கொண்டிருக்கிற எத்தகைய ஆய்வையும் பொருள்முதல்வாத ஆய்வு என நாம் கருத முடியும். மானுடவியல், சமூகவியல் ஆகிய ஆய்வுகள் இத்தகையவை.  குடும்பம், உடமை, அரசு முதலியவை எவ்வாறு தோன்றி நிலை பெறுகின்றன என்ற ஆய்வு சமூகவியல் ஆய்வு. சாதி, மதங்கள், சடங்குகள் முதலியவற்றின் தோற்றம் மற்றும் நிலைபேறு குறித்த ஆய்வுகளும் சமூகவியல் ஆய்வுகள். வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகள் இவற்றுக்கிடையிலான உறவுகள் குறித்த ஆய்வுகளும் இதனுள் அடங்கும். இதைப் போலவே கலை மற்றும் இலக்கியங்கள் தோன்றுவதற்கான சமூக நிலவரங்கள் குறித்த ஆய்வுகளும் சமூக இயலினுள் அடங்கும். உளவியல் ஆய்வும், அறிவியல் கண்ணோட்டத்துடன் நடைபெற இயலும். மன நோய்கள் முதலியவற்றுக்கு காரணமான குடும்பம் மற்றும் சமூகச் சூழல் குறித்த ஆய்வையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் செய்யமுடியும். இவை அனைத்துமே வரலாற்று சூழல் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துள் அடங்கும்.  ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் அறிவியல் ஆய்வின் மூலம் திரட்டப்படும் பொது விதிகளை இயங்கியல் விதிகளுக்குள் அடக்கி இந்த இயங்கியலை மெய்யியல் என்று மார்க்சிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவிதிகளுக்குள் இயங்கியலை காண முடியும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இயங்கியலை ஆய்வு நெறியென குறிப்பிடலாமே அன்றி மெய்யியல் எனக் கூறமுடியாது. எங்கல்ஸ் கூறியபடி அறிவியல் ஆய்வுகளின் முடிவில் மெய்யியல் தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்துத் தான் இல்லாமல் போய்விட வேண்டும்.  பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் இன்னும் விடுபடாத புதிர்கள் நிறையவே உள்ளன. அறிவியல் என்று குறிப்பிடப்படும் எந்தத் துறையினுள் மேலும் மேலும் உண்மைகள் தேடி ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு துறையும் தன்னைப் பற்றிய ஆய்வில் என்று முடிவு பெறும் என்பது குறித்து இப்பொழுது எதையும் சொல்லமுடியாது. துறை வகைகளும், துறைகளுக்கு இடையிலான ஆய்வும் தொடர்ந்து வளர்ச்சி பெறுகின்றன. உயிரித் தொழில்நுட்பம், கணிணி குறித்த ஆய்வுகள் மிக அண்மைக் காலத்தில் தான் தொடங்கப் பெற்று உள்ளன. உடலியல் குறித்த ஆய்வில் டி.என்.ஏ. வரை படம் தயாரிப்பது குறித்து நம்பிக்கையோடு அறிஞர்கள் பேசுகின்றனர். தாவர இனங்கள் முதலியவற்றை நாம் விரும்பும் அளவுக்கு மாற்றி அமைக்க முடியும் என்றும் கூறுகின்றனர். புதிய உயிரினங்களை இனிப் படைக்க முடியும். மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களை கருவின் உள்ளிருந்தே கண்டறிந்து நீக்கமுடியும். டாலி ஆட்டைப்போல மனிதர்களையும் படைக்கமுடியும்.  எவ்வளவுதான் இதுவரை ஆய்வுகள் நடைபெற்ற போதிலும், ஆய்வுகள் என்றாவது நிறைவுபெறும் என்று தோன்றவில்லை. ஆகவே எல்லாத் துறைகளினுள்ளும் மர்மங்களும், புதிர்களும் தொடர்ந்து பெருகுகின்றன. உளவியல் குறித்து இன்னும் எவ்வளவோ தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. புதிர்களும் மர்மங்களும், குழப்பங்களும் நிலவும் காலம் வரையிலும் தொடர்ந்து பல்வேறு கண்ணோட்டங்களுக்கு / கருத்தியல்களுக்கு இடம் இருந்தே தீரும். ஒரு நிகழ்வு குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களும், கருத்தியல்களும் நிலவும் காலம் வரையிலும் அறிவியல் ஆய்வு நிறைவு பெற்றதாகச் சொல்லமுடியாது. இதன் காரணமாக பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினுள்ளும் நிறைவு சாத்தியமில்லை. இங்கெல்லாம் கருத்து முதல்வாதமும் தன்னை எத்தனையோ வழிகளில் உயிர்ப்பித்துக் கொள்ளவே செய்யும். இதன் காரணமாக நாம் இங்கு ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்தான் எப்பொழுதும் வெற்றிபெறும் என்று சொல்லிவிட இயலாது.  அறிவியல் ஆய்வுகள் எனப்படுபவை பொதுவாகப் புறநிலை சார்ந்தவை. அகநிலைச் சார்புக்கு அறிவியல் ஆய்வில் இடம் இல்லை என்பது ஒரு பொதுவிதி. கல், மண், காற்று, கதிரவன் முதலிய ஆய்வுகளுக்கு இந்தப் பொது உண்மை பொருந்துகிறது. உயிரினங்களைப் பற்றிய ஆய்வுக்கும் கூட இந்தப் பொது உண்மை பொருந்தலாம். சூழலுக்கு எதிர்வினை தரும் முறையில் எந்த ஒரு உயிர் இனமும் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் எதிர்வினை தரமுடியும். மனிதன் என்று வருகிறபோது, மனிதன் தரும் எதிர்வினை குறித்து எப்பொழுதும் உறுதியாகச் சொல்ல முடியாது. விலங்குகள் வாழும் சூழல் என்பதைக் காட்டிலும் மனிதன் வாழ்கிற சூழல் என்பது மிக, மிக விரிவானது. விலங்குகளைக் காட்டிலும் மனிதனின் சமூக ஆக்கம் விரிவானது. மனிதன் தான் வர்க்கங்கள் என்றும், மதங்கள் என்றும், சாதிகள் என்றும் பேசமுடியும். மனிதனுக்குத்தான் வரலாறு என்பது இருக்கிறது. மொழி என்பதனுள் எத்தனையோ விந்தைகளை மனிதன் உள்ளடக்கி வைத்திருக்கிறான். மனிதன் படைத்த கலை இலக்கியங்கள் எத்தனையோ நுட்பங்களுடன் இயங்குகின்றன. மனிதனுக்கு மட்டும் தான் தன் உணர்வுண்டு. பிரபஞ்சப் பெருவெளி குறித்தும் வரலாற்றின் விரிவு குறித்தும் மனிதன் மட்டுமே உணர்வு கொள்ளமுடியும். மனிதனுக்கு மட்டும் தான் விலங்குகளைக் காட்டிலும் பல அடுக்கிலான மனம் உண்டு. மனிதன் ஆயிரம் தொழில் செய்யக்கூடியவன். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வழியே வாழக்கூடியவன். எத்தனையோ பேருணர்வுகள் இவனுக்குள் பொங்கி எழுகின்றன. இவன் எவ்வளவோ படைக்கிறான். தனக்கேற்றதாக உலகத்தை படைத்துக் கொள்கிறவன் மனிதன். இவனுக்குள் தன்னியக்கம் என ஒன்று இருக்கிறது. இவனுக்கு மட்டுமே சுதந்திர உணர்வுண்டு. பிரபஞ்ச இயக்கம் இவனுக்குள் எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதைத் தீர்மானமாகக் கூறிவிட இயலாது. கதிரவனும் விண்மீன்களும் பிற கிரகங்களும் இவனுக்குள் ஏற்படுத்தும் பதிவுகள் குறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.  இயற்கை விஞ்ஞானங்கள் முன்வைக்கும் ஆய்வு முறைகள் சமூகவியல் வரலாறு முதலியவை பற்றிய ஆய்வுக்கு போதுமானதாக இருக்கமுடியாது. உளவியல் ஆய்வு முதலியவற்றை மேற்கொள்ளும்பொழுது மேலும் புதிய ஆய்வு முறைகள் தேவைப்படுகின்றன. மனிதனுக்கு உள் இயங்கும் கலை உணர்வு முதலிய ஆய்வுகள் இன்னும் நுட்பமானவை. நாளை வருவதை சில மனிதர்கள் முன்கூட்டியே உணர்கின்றனர். குறைந்தளவு மெய்மைகளிலிருந்து புதிய உண்மைகளுக்குத் தாவுகிறது மனிதமனம். இசை என்னும் பிரவாகம் மனிதனுக்குத்தான் சாத்தியம். வறுமை நிலையில் திருடுவது, பொய் சொல்வது முதலியவற்றுக்கான நியாயங்களை மறுத்து எல்லோருக்குமான வாழ்வு குறித்து மனிதன் சிந்திக்கிறான். தனது இன்பங்களைத் துறக்கிறான். பிறர் நலத்திற்காக தன் உயிரை இழக்கவும் துணிகிறான். இப்படி எல்லாம் மனிதன் இயங்குவதை வரலாற்றுக் காலம் முழுவதும் நாம் பார்க்கிறோம். காமம் என்பது உடலியல் தூண்டுதல் என்ற போதிலும் இதனைக் காதலாக மாற்றிக் கொள்பவன் மனிதன்; முரண்பட்ட பலவற்றையும் ஒரு தொகுப்பினுள் இணைத்துக் காண்பவன் மனிதன். போட்டி பொறாமை, வம்பு வழக்குகள் முதலியவை புறச்சூழலிலிருந்து வரும் தாக்கங்கள் என்றபோதிலும் இவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்று மெய்ப்பிப்பவன் மனிதன். அறம் என்ற பேருணர்வில் தன்னை இவன் வடிவமைத்துக் கொள்ளவும் செய்கிறான். இவை எல்லாம் இவன் தனக்குள் செய்து கொள்கிற சுய இயக்கம். வரலாற்றுக்குள்ளிருந்து தன்னை இவன் எழுப்பிக் கொள்கிறான். எதிர்நிலைகளிலிருந்தும் பாடம் பெறுபவன் இவன்.  மனிதனைக் குறித்த இத்தகைய சித்தரிப்பு நமக்கு எதை மெய்ப்பிக்கிறது. இத்தகைய மனிதனை அறிவியல் ஆய்விலிருந்து விலக்க முடியாது. சமூகவியல் ஆய்வுகூட இத்தகைய மனிதனைக் கண்டறிந்து சொல்லமுடியாது.  மனிதனுக்கு உணவு தேவை, உடை தேவை, இருப்பிடம் தேவை, எந்தளவுக்குத் தேவை, எந்த வகையில் தேவை என்பதைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் விரித்துரைக்க முடியும். இவற்றையெல்லாம் பெறுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டுமென்பதை பொருள்முதல் கண்ணோட்டம் சித்தரிக்க முடியும். போராட்டங்கள் தேவை. அரசுக்கெதிராக, முதலாளியத்துக்கு எதிராக போராடித்தான் மனிதன் தனக்கான உரிமைகளைப் பெற முடியும் என்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கூறமுடியும். மனிதனுக்கு ஏற்படும் மன நோய்களுக்கு ஆன சமூகச் சூழல் குறித்து பொருள்முதல்வாதம் கூறும். காமத்திற்கு தீர்வு குறித்தும் பொருள்முதல்வாதம் சொல்லமுடியும். கலை இலக்கியங்கள் எதை எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் பொருள்முதல்வாதம் சொல்லலாம். வறுமை நிலையில் ஒருவன் திருடுகிறான்; பொய் சொல்லுகிறான் என்பதற்கான நியாயங்களை பொருள்முதல்வாதம் எடுத்துரைக்கும். இவ்வாறெல்லாம் புறநிலை ஆய்வுக்கு அழுத்தம் தரும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் மனிதனின் அகத்திற்குள் உரிமையோடு, உறுதியோடு, நம்பிக்கையோடு செல்ல முடிவதில்லை. புறத்தை விளக்குவதோடு உலகத்தை மாற்றுவது குறித்துப் பொருள் முதல்வாதம் உரத்துப் பேசும். அகத்தினுள் நடைபெறும் எத்தனையோ அற்புதங்களைப் பொருள்முதல்வாதம் மறுக்கும் அல்லது குறைத்துப் பேசும். வள்ளலாரையோ, சித்தரையோ பொருள்முதல்வாதம் கண்டு கொள்ளாது. தற்கொலை செய்து கொள்வது தேவை இல்லை என்றும் பொருள் முதல்வாதம் அதற்குள் ஆழ்ந்து செல்ல முடியும். வாழ்க்கைக்கு வசதிகள் தேவை என்ற வாதம் எளிய வாழ்க்கையை விளங்கிக் கொள்ளாது. அன்பையோ அறத்தையோ பொருள்முதல்வாதம் முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. ஒரு கலைஞனுக்குள் நிகழும் படைப்பியக்கம் இயக்கம் குறித்து பொருள் முதல்வாதத்திற்கு அதிகம் தெரியாது. தாய்மை, குழந்தைமை குறித்து பொருள்முதல்வாதம் எதுவும் சொல்வதில்லை. இயற்கைக்குள் மனிதன் தான் கரைந்து விடுவது குறித்து பொருள்முதல்வாதத்திற்கு எதுவும் தெரியாது. தனக்குள் இறைவனைக் காணும் ஒரு பக்தனின் மனநிலை பொருள்முதல் வாதத்திற்குத் தெரியாது. அலோபதியைப் புரிந்து கொள்ளும் பொருள்முதல்வாதம் சித்த மருத்துவத்தை புரிந்து கொள்ளாது. ஆன்மா என்றோ, ஆன்மீகம் என்றோ ஒருவர் பேசுவதைப் பொருள்முதல்வாதம் ஏற்காது. இன்னும் இவைபோல ஆயிரம் விவரங்களை நாம் அடுக்கிச் செல்லலாம்.  இவை எல்லாம் ஏன் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அகப்படுவது இல்லை என்ற முதன்மையான காரணம். இதற்கு மெய்யியல் பார்வை இல்லை என்பதுதான். புறத்திற்கு அழுத்தம் தரும் பொருள்முதல்வாதம், அகத்திற்கும் அழுத்தம் தந்து பார்ப்பதில்லை. நான் யார் என்ற கேள்வி மதவாதிகளின் கேள்வி என்று பொருள்முதல்வாதம் கருதுமே ஒழிய இதற்கு மார்க்சிய முறையிலான விடை தேடுவதில் பொருள்முதல்வாதம் ஆர்வம் கொள்வதில்லை. நவீன ஓவியம் என்பது குறித்துப் பொருள்முதல்வாதம் புரிந்து கொள்வதில்லை. இன்னொருவரின் கருத்தியலுக்குள்ளும் அதற்கான காரணம் இருக்கமுடியும் என்று இவன் நம்புவதில்லை. தனக்குள் இன்னொருவனை அனுமதிப்பதில்லை.  வாழ்வின் இயக்கத்தைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்குள் அடைத்துவிட இயலாது. வாழ்வின் இயக்கம் ஆழமானது, விரிவானது. வரலாற்றையோ, வாழ்வையோ இன்னும் தேவையான அளவுக்குக்கூட விளக்கமுடியாத நிலையில் பல்வேறு கருத்தியல்களுக்கு இங்கு இடம் உண்டு என்பதைப் பொருள்முதல்வாதம் ஏற்கவேண்டும். அவற்றோடு உறவு கொண்டு உரையாட வேண்டும். எந்த ஒரு அறிவியலுக்குள்ளும் முற்றான அறிவுசேகரம் ஆவதில்லை. எந்த ஒரு பேருண்மையும் பொய்மையின் கூறுகளை உள்ளடக்கியே உள்ளன. எல்லாமே வரலாற்றுச் சூழலுக்குள் தான் இருக்கின்றன, இயங்குகின்றன. வரலாற்றுச் சூழல் முழுவதையும் எந்த ஒரு கருத்தியலும் வசப்படுத்திக் கொள்வதில்லை. ஒவ்வொன்றிலும் தனக்குரிய பாதையில் பயணம் செய்கின்றன. வரலாறு குறித்தும், வாழ்வியல் குறித்தும் மேலும் மேலும் உண்மைகள் கண்டறியப்படலாம். பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவன்தான் உண்மையாக வாழ்கிறான் என்று சொல்ல முடிவதில்லை. எந்த ஒரு மனிதனும் வாழ்வை சந்தித்தபடியே இருக்கிறான். துயரங்களும், சுமைகளும் வாழ்வியல் அனுபவங்கள். அடிப்பதும், அடிபடுவதும் அனுபவங்கள். வறுமையும் கூட ஒரு அனுபவம்தான். திருடுவதையும் ஒரு அனுபவமாகக் கொள்ளமுடியும். என்னை நானே எவ்வளவு புரிந்து கொண்டேன் என்று சொல்வது சாத்தியமில்லை. என்னைத் தவிர இன்னொருவரை எவ்வளவு புரிந்து கொள்ள முடியும் என்பதும் கேள்வி. இப்படியே தான் வாழ்வு பற்றி நூறு திசைகளில் தேடிச் செல்ல வேண்டும். எனக்கு அகப்பட்டதுதான் வாழ்க்கை என்றோ உலகம் என்றோ சொல்ல முடியாது. ஒன்றை இன்னொன்றுக்குப் பதிலாக இடம் மாற்றிக் கொள்ள இயலாது. சுரண்டல் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை. எனக்குள்ளும் எத்தனையோ ஒடுக்குமுறைக்கு இடம் கொடுத்துள்ளேன். எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. போராடத்தான் செய்கிறேன். வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வருகின்றன.  சிறுதுளிக்குள் கடலைக் காண்கிறேன். எனக்குள் எத்தனையோ கனவுகள், காட்சிகள். இவை எல்லாம் பொருள்முதல்வாதத்திற்குள் அடங்குவதில்லை. ஆகவே ஒவ்வொரு கருத்தியலையும் கருத்து முதல்வாதம் என்று சொல்லி நம்மால் இகழ்ந்துவிட முடியாது. அதற்குள் இன்னும் உயிரியக்கம் இருக்கிறது. இப்படி எல்லாம் பார்ப்பது மெய்யியல். பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கடந்து இப்படி மெய்யியல் இயங்க முடியும். மார்க்சியம் மனிதனை இப்படி விரிவாகப் பார்க்க முடியும். மெய்யியல் என்பது எல்லாவற்றையும் அதன் புறத்திலிருந்து மட்டுமல்லாமல் அதன் உள்ளிருந்தும் பார்க்கக் கூடியது. நேசம் மிகுந்த மனிதன் எல்லாவற்றினது உள்ளியக்கத்திலும் கவனம் கொள்வான். ஒரு குற்றவாளியை, ஒரு துறவியை, ஒரு முதலாளியை அவனுக்குள்ளிருந்து பார்க்கத்தான் வேண்டும். அப்புறம் அவனுக்காகவும் சேர்ந்து அவனோடும் சேர்ந்து உலகத்தை மாற்றவேண்டும். நட்பு முரணுக்கு மார்க்சியம் அழுத்தம் தரவேண்டும். பகை முரண்பாட்டிற்குள்ளேயும் தன்னை முடக்கிக் கொள்ள முடியாது. மார்க்சியத்திற்கு வானமும் வேண்டும்; பூமியும் வேண்டும்.  மார்க்சியமும் அறவியலும் I 1. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன்’ என்று வள்ளுவர் கூறினார். மனிதன் தன் மனத்தில் எந்த வகை மாசும் இல்லாதவனாக இருப்பதுதான் அறம் என்பது வள்ளுவர் கருத்து. மாசுகள் அல்லது குற்றங்கள் எவை என்பது குறித்தும் வள்ளுவர் கூறுகிறார். ‘அழுக்காறு, அவா வெகுளி, இன்னாச் சொல்’ ஆகிய மாசுகளை மனத்திலிருந்து நீக்கிச் செய்வதுதான் அறம் என்று கூறும் வள்ளுவர், ‘காமம், வெகுளி, மயக்கம்’ ஆகியவற்றின் பெயர்களும் கூடக் கெடும்பொழுது மனிதனுக்கு வரும் நோய்கள் துன்பங்கள் நீங்கும் என்கிறார். மனத்திற்குள் வரும் மாக்கள் அல்லது குற்றங்கள் பற்றிய பட்டியலை விரித்துப் பயனில்லை. மயக்கம் என்பது அறியாமை. அவா என்பது பொருள்பற்று. உடல் இன்பவெறியை காமம் என்பது பொருந்தும். பொருள் பற்று காரணமாக களவு முதலிய குற்றங்கள் நிகழ்கின்றன. மனிதன் பொய் சொல்லுகிறான், பிறரை வஞ்சிக்கிறான். கொலை முதலிய வன்முறைகளில் ஈடுபடுகிறான். இவை அனைத்தையும் மாசுகள் என்று தொகுத்துக் கொள்ளலாம். இவை என்று தோன்றின, இவை இல்லாமல் மனித சமூகம் வாழ்ந்திருக்க முடியுமா? வாழமுடியுமா? இவ்வகைக் குற்றங்கள் இல்லாத ஒரு சமூகம் என்றாவது சாத்தியமா? அன்பு, அறம் என்று சொல்லிச் சொல்லி மனித மனத்தை தூய்மை செய்து கொள்ள இயலுமா? இவ்வாறெல்லாம் நமக்குள் கேள்விகள் எழுகின்றன. இவை பற்றிய ஆய்வை அறவியல் என்று நாம் குறிப்பிடலாம். இப்படி ஒரு அறவியல் மார்க்சியத்திற்குண்டா என்ற கேள்வியையும் இத்துடன் சேர்த்துக் கொள்வோம்.  2. மார்க்சியம் சமதர்மம் என்ற ஒரு சமூக / பொருளியல் அமைப்பை முன் வைக்கிறது. மனிதர் மத்தியில் வரலாற்றுக் காலம் முழுவதும் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மார்க்சியம் வற்புறுத்துகிறது. சமுதாயம் வர்க்கங்களாக பிளவுபட்டதிலிருந்துதான், மனிதர் மத்தியில் வம்பும், வழக்குகளும், போட்டியும் பொறாமையும், பொய்யும் களவும் தோன்றின என்று மார்க்சியம் சொல்லுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிப்பொதுமைச் சமூகத்தில் தனி உடமை இல்லை, அரசு அதிகாரம் இல்லை. ஆதிப் பொதுமைச் சமூகத்தில் மனிதர்கள் இயற்கையோடு ஒன்றியிருந்தார்கள். சமூகத்தில் பிளவுகள் இல்லாத நிலையில் தாங்கள் வாழும் இனக்குழு சமூகத்தோடு ஒன்றியிருந்தார்கள். அவர்கள் தனிமனிதர்களாக இல்லை. அவர்களுக்குள் மனச்சிக்கல் இல்லை. இயல்பாகவே அவர்கள் அனைவரும் சேர்ந்து உழைத்தார்கள், விளைவைப் பகிர்ந்து கொண்டார்கள். பகிர்வில் முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமை உண்டு. இந்தச் சமூகச் சூழலில் அறம் என்ற சிக்கல் எழவில்லை.  ஆதிப் பொதுமைச் சமூகம் குடும்பம் தனி உடமை, அரசு முதலியவற்றுக்கு இடம் கொடுத்து மறைந்தது. இயற்கையை சிலர் இயன்ற அளவுக்கு வசப்படுத்திக் கொண்டார்கள். தனி உடமை தோன்றியது. தனி உடமையை பாதுகாப்பதற்கும் மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஆயுதங்களும் படைகளும் தேவைப்பட்டன. அரசு அதிகாரம் தோன்றியது.  காலப்போக்கில் நாம் இன்று நாகரிகம் என்று சொல்லும் முறையிலான வளர்ச்சி ஏற்பட்டது. (இது வளர்ச்சிதானா என்ற கேள்விக்கும் இங்கு இடம் உண்டு). தனிக்குடும்பங்கள் தோன்றின. முன்னைய சமூகத்தில் பெண்ணுக்கு இருந்த முதன்மை இப்பொழுது இல்லை. ஆண் ஆதிக்கம் தோன்றியது. சமூகத்தில் தொடர்ந்து பிரிவுகளும், பிளவுகளும் தோன்றின. ஏற்றத்தாழ்வுகளுக்கு சமூகம் இடம் கொடுத்தது. உலகம் இரண்டாயிற்று. ஒரு பக்கம் அதிகாரம், உடமை மற்றும் வன்முறைகள். இன்னொரு பக்கம் வறுமை முதலிய நிலவரங்கள். இத்தகைய சூழலில் தான் வம்பு வழக்குகளும் தோன்றுகின்றன. சட்டங்களும் நீதிகளும் தோன்றுகின்றன. உடமையாளனுக்கு ஒரு நீதி, உடமையற்றவனுக்கு ஒரு நீதி. இப்படித்தான் அறம் இரண்டாகிறது. வலுத்தவனின் நியாயம் வெற்றி பெறுகிறது. இளைத்தவன் சமூகத்திலிருந்தும், தனக்குள்ளும் ஒதுங்குகிறான். இவனுக்குள் கேள்விகள் எழுகின்றன. இவை எல்லாம் எப்படி நேர்ந்தன. மனிதர்கள் மத்தியில் நாகரிகம் என்ற பெயரால் இப்படி ஒரு அநாகரிகம் தேவைதானா? முன்பு மனித உறவுகள் நம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தன. இப்பொழுது எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன, எல்லாமே தொலைந்து போகின்றன. தொலைதூரத்துக்குச் செல்லுகின்றன. இவற்றை இனி எட்டிப் பிடிக்கமுடியுமா? என்று இந்தத் துயரங்கள் தீரும் இப்படி மனத்தில் கேள்விகள். கடவுள், ஆன்மா பற்றிய பேச்சுக்கள். மேலுலகம், கீழுலகம், பாவம் புண்ணியங்கள் பற்றிய பேச்சுக்கள். இந்த உலகியல் வாழ்வை இனிச் சகித்துக் கொள்ளமுடியாது. நாடு நமக்கு வேண்டாம், நாகரிகம் வேண்டாம். காடுகளுக்குச் செல்வோம். துறவிகள் ஆவோம், சமூகத்திற்குள் வந்து விட்ட இந்த நெருப்பை மற்றும் புயலைத் தனிக்கத் தவம் செய்வோம். நமக்கு உடமைகள் வேண்டாம். அதிகாரம் வேண்டாம். நமக்குள் அமைதி வேண்டும், அன்பு வேண்டும். கருணை வேண்டும். இவற்றை நமக்குள் நிரந்தரப்படுத்திக் கொள்ள கடவுளைத் தேடுவோம். ஆன்மாவைக் கண்டடைவோம். ஒருவனுக்கு அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அவனுக்கே தனது உடலைக் கொடுத்து, அவனுக்காகக் குழந்தைகள் பெறும் வாழ்க்கை நமக்கு வேண்டாம். கற்பு என்று சொல்லி ஆண் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு, தன்னிலை துறந்து வாழும் மனைவியரின் வாழ்க்கை நமக்கு வேண்டாம் என்று சொல்லி சில பெண்கள் பரத்தமையைத் தழுவிக் கொண்டனர். இனி களவு மனத்திற்கு இடம் இல்லை, கற்பு மணம் என்ற பெயரில் சடங்குகளும் விதிமுறைகளும் வந்துவிட்டான். வழக்குறை மன்றங்கள், தீர்ப்புக்கள், நியாயங்கள் என தோன்றி அவை தொடர்கின்றன. இவையெல்லாம் எப்படித் தோன்றின? என்ற ஓயாத கேள்விகள் மனிதனின் மனத்தைக் குடைகின்றன. அறம், நீதி, நேர்மை, நன்மை, தூய்மை, இனிமை, அழகு என்றெல்லாம் இனிப் பேச வேண்டியிருக்கிறது. ஆராய வேண்டியிருக்கிறது. கிடைத்த விடைகள் போதுமானவையாக இல்லை. புதிய விடைகள் தேவைப்படுகின்றன. நிரந்தரமான உண்மை தட்டுப்படவில்லை. உண்மை தடுமாறுகிறது. கிடைத்த விடைகள் கைநழுவிப் போகின்றன. புதிய விடைகள் கிட்டாத நிலையில் குழப்பங்கள், மயக்கங்கள் நேர்கின்றன. இரண்டு நீதி, இரண்டு அறங்கள் பேசப்படுகின்றன. இகத்துக்கு ஒரு நீதி. பரத்திற்கு இன்னொரு நீதி. ஆணுக்கு ஒரு நீதி. பெண்ணுக்கு இன்னொரு நீதி. இல்லறத்தானுக்கு ஒரு நீதி. துறவிக்கு இன்னொரு நீதி. அரசனுக்கு ஒரு நீதி. அடிமைக்கு இன்னொரு நீதி. வணிகனுக்கு ஒரு நீதி. கள்ளனுக்கு இன்னொரு நீதி. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வகை நீதி. இவ்வாறெல்லாம் நீதியும் அறமும் முரண்பட்ட நிலையில் தொடர்ந்து தேடல்கள் நிகழ்கின்றன. மனிதன் ஓய்ந்து விடமுடியாது. ஆதிப்பொதுமைச் சமூகத்தின் நீதி அழிந்து விடமுடியாது. இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒத்து வாழ்ந்த அந்தப் பழங்காலத்து நியதியை மறக்கமுடியாது. சான்றோர்கள் இன்னும் அந்த நீதி பற்றிச் சொல்லுகிறார்கள். இலக்கியங்கள் அந்த நியதியை திரும்பத் திரும்ப நமக்கு நினைவுபடுத்துகின்றன. கடவுள் என்பது கூட அந்த நீதியைத்தான் தனக்கு உட்பொருளாகக் கொண்டிருக்கிறது. கடவுளின் குழந்தைகள் நாம். அவர் நமக்குத் தந்தது இந்த உலகம்/ இயற்கை. மனிதர் அனைவரும் சகோதரர்கள் கடவுளின் குழந்தைகள். நமக்குள் தனி உடமை தேவை இல்லை. நமக்குள் பிரிவினைகள் தேவை இல்லை. மேலோர் கீழோர் என்று நமக்குள் பிளவுகள் வேண்டாம். நாம் சேர்ந்து உழைப்போம். பகிர்ந்து கொள்வோம். விளைச்சல் சிறிதெனினும் பகிர்ந்து கொள்ளுதலில் பேரின்பம். நமக்குச் சமத்துவம் வேண்டும். சமதர்மம் வேண்டும். சமதர்மச் சூழலில் போட்டி பொறாமைகளுக்கு இடம் இல்லை. மனத்தில் மாசுகளுக்கு இடம் இல்லை. மனிதன் இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் ஒன்றியிருப்பான். இவன் உயிர்களை நேசிப்பான். எல்லோருக்காகவும் இவன் உழைப்பான். தன்னை விட்டுக் கொடுப்பதில் பேரின்பம் காண்பான். இப்பொழுது இவனுக்கு வெளியிலிருந்து இவனை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவை இல்லை. இவன் தனக்குள் நிறைவாக இருப்பான். இவனுக்குள் அறம் இயல்பாக இயங்கும். இவனுக்குள் கடவுள் ஐக்கியப்படுவார். இவன் மனிதன், தன்னை உணர்ந்த மனிதன். இவனுக்குள் வானமும் காற்றும் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் தனக்குள் இடம் தருகிறான் இவன். எல்லாவற்றோடும் இவன் கலந்திருக்கிறான். முரண்கள் இவனுக்குள் இல்லை. இவனுக்குள் பகைமை இல்லை.  3. அறவியல் குறித்து மார்க்சியத்தின் ஆய்வை இப்படித்தான் தொகுத்துச் சொல்ல முடியும். சமதர்மம் என்பதனுள்ளும் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு. ஏற்றத்தாழ்வில்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை என்பதையும் மார்க்சியம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் இந்த ஏற்றத்தாழ்வின் அளவு/ விகிதம்/ படிநிலைகள் இயன்றவரை குறைவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது மார்க்சியம், வர்க்கங்கள் இருக்கும்வரை தனிஉடமை இருக்கும், அரசு அதிகாரம் இருக்கும். வர்க்கப் போராட்டங்கள் வழியே தனி உடமையை மற்றும் அரசு அதிகாரத்தைக் கடந்து செல்ல வேண்டும். கடந்து சென்ற நிலையில் தான் சமூகம் தனக்குள் முற்றான ஒருங்கிணைவைப் பெறும். ஏற்றத்தாழ்வுகள், வர்க்க முரண்பாடுகள் அறவே இல்லாத சமூகத்தைத்தான் கம்யூனிச சமூகம் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். இதுபற்றி மார்க்ஸ் தந்த இரத்தினச் சுருக்கமான ஒரு கருத்துரையை இங்கு குறிப்பிடலாம்.    “காலையில் உடல் பயிற்சிக்காக தோட்ட வேலை. பிற்பகல் இளம் வெயிலில் மீன்பிடித்தல். மாலையில் முன் இரவில் இசை மற்றும் நடனம்” இப்படி மனிதர்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்வார்கள் என்று மார்க்ஸ் கற்பனை செய்தார். ஐரோப்பிய சமூகச் சூழலில் மார்க்ஸ் வாழ்ந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவேதான் இளம் வெயிலில் மீன்பிடித்தலை ஒரு பொழுது போக்காக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். (மீன் பிடித்தல் சரிதானா? என்று நம் சூழலிலிருந்து நாம் கேட்டு வைப்போம்). இயந்திரங்களே மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் உற்பத்தி செய்து தரும். மனிதன் உழைக்க வேண்டியதில்லை. ஆகவே மனிதன் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறான். உடல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம்.  சோசலிச சமூகம் எத்தகையது அது எப்படி மாறும் என்ற கேள்விக்கு லெனின் தந்த பதில். “மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் வேறுபாடு இராது; கிராமத்திற்கும் நகரத்திற்கும் வேறுபாடு இல்லை”. இத்தகைய சமூகம் நமக்குத் தேவை. ஆணாதிக்கத்திற்கு இடம் இல்லாத சமூகம் என்றெல்லாம் இந்த வர்ணனைகளை நமக்குள் விரிவு செய்து கொள்ளலாம். அரசு இருக்கும் வரை அன்னியமாதல் இருக்கும். மதம் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். அரசு முற்றாக உதிர்ந்து விட வேண்டும். இந்நிலையில் மக்கள் தம்மைத்தாமே சுயநிர்வாகம் செய்து கொள்வர் என்றார் மார்க்ஸ்.  4. இப்படி ஒரு சமூகம் என்றாவது சாத்தியப்படுமா? என்ற கேள்வியை இப்பொழுதைக்கு ஒதுக்கிவைத்து அதற்கு முன் இன்னொரு கேள்வியை நமக்குள் எழுப்பிக் கொள்ளலாம். தனி உடமை, அரசு, குடும்பம் முதலிய நிறுவனங்கள், இவை போலவே மதம், கட்சி முதலிய நிறுவனங்கள், இல்லாமல் மனித சமூகம் வாழ்ந்திருக்க முடியுமா? இவை எப்பொழுதுமே தீங்கு செய்தவை தாமா? இத்தகைய கேள்விகளுக்கு மார்க்சியம் தரும் பதில் என்ன?  ஆதிப் பொதுமைச் சமூகம் என்னதான் மேன்மை உடையதாய் இருந்த போதிலும் அது தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இருந்தன. ஒரு இனக்குழுவின் பிரதேசத்தை இன்னொரு இனக்குழு வசப்படுத்திக் கொண்டது. இனக்குழுக்களுக்கிடையில் சிறிய அளவிலேனும் போர்கள் நடைபெற்றன. இதற்காகச் சிறிய அளவில் படைப்பிரிவுகள் தோன்றின. கல் முதலிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தனி உடமை தோன்றியது, அதிகாரம் தோன்றியது. இனக்குழு சமூகத்தில் தேவையான உற்பத்தி இல்லை. வேளாண்மை மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் இப்படி ஒவ்வொன்றாக தொடங்கிய பொழுது நாகரிகம் தோன்றியது. நகரங்கள், வணிகம், போக்குவரத்து என்பனவும் வந்தன. இனக்குழு சமூகத்து மனிதன் தனக்குள் ஒன்றியிருந்தான் என்பதும் உண்மைதான். தனக்குள் இவன் தாவரம் போல் இருந்தான், இடம் விட்டு பெயராமல் இருந்தான்.  நாகரிக மனிதன் பல தொழில்களில் ஈடுபட்டான். அவனது புலன்கள் வளர்ச்சி பெற்றன. புலன்களின் நீட்சியாக கருவிகள் படைத்தான். இவனுக்குள் மெல்ல, மெல்ல உலகம் நுழைந்தது. இயற்கையை தொடர்ந்து மாற்றினான். விலங்குகள் தாவரங்கள் முதலியவற்றோடு இவன் உறவு கொண்டான் செயல்பட்டான். உலகத்தை இவன் மாற்றும் பொழுதே தன்னையும் மாற்றிக் கொண்டான். இவனுக்குள் மனித ஆளுமை மெல்ல, மெல்ல வளர்ச்சி பெற்றது. இவனது இன்பங்களும் அதிகம். இவன் எதிர்கொண்ட துன்பங்களும் அதிகம். துன்பங்கள் / தடைகள் / நெருக்கடிகள் முதலியவற்றைத் தகர்த்துக் கொண்டு முன் செல்லும்பொழுதே தனக்குள் பல்வகைத் திறன்களையும், விரிவான பார்வைகளையும் பெற்றான். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் முறையில் இவன் கேள்விகள் கேட்டான். நான் எப்படித் தோன்றினேன்? உலகம் தோன்றியது எப்படி? பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதன் ஏன் சாக வேண்டும்? நோய் நொடிகள் எவ்வாறு வருகின்றன? என்னை யார் படைத்தார்? என் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? கடவுள் ஏன் இவற்றை எல்லாம் செய்கிறார்? நன்மை தீமைகள் எவ்வாறு தோன்றின? இவ்வாறெல்லாம் மனிதன் தனக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வெளியிலும், தனக்குள்ளும் தேடுகிறான். கலைகள், கதைகள், தர்க்கங்கள் எனப் படைக்கிறான். இந்தக் கேள்விகள் மூலமும் மனிதன் தனக்குள் விரிவடைகிறான் தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறான். தன்னைத்தானே சோதனைகளுக்கு உள்ளாக்கிக் கொள்கிறான்.  நாடுகள், நகரங்கள், இனங்கள், மொழிகள் என்று பல பரிமாணங்களில் மனிதன் விரிவடைகிறான். கடல்களைக் கடந்து செல்கிறான். பல திசைகளில் மனிதன் பயணம் செய்கிறான். வேளாண்மை போதவில்லை. தொழிற்புரட்சியும் முதலாளியமும் தொடர்கின்றன. மன்னராட்சியை ஒழிக்கிறான். தேசங்கள் தோன்றுகின்றன. ஜனநாயகம் என்ற முறையில் அரசமைக்கிறான். சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறான். இவையும் போதவில்லை. சமதர்மம் இல்லாமல் முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்கிறான். முதலாளிகள் இந்த உலகத்திற்குத் தேவை இல்லை. உழைக்கும் மக்களே அரசமைக்க முடியும் என்றெல்லாம் பேசுகிறான். புரட்சியில் ஈடுபடுகிறான். பெருமிதமிக்க சாதனைகளைச் செய்கிறான். இராணுவங்கள், போர்கள் முதலிய நாசங்களும் தொடர்கின்றன. இயற்கை நாசமாகிறது. வரலாற்றில் இன்று மனிதனுக்கு வாழ்வுண்டா? என்ற கேள்வியை எதிர்கொண்டு தனக்குள் திகைத்து நிற்கிறான்.  மிக மிகச் சுருக்கமான மனித வரலாறு குறித்த குறிப்புக்கள் இவை. மனிதன் தன்னைத்தானே படைத்துக் கொள்ள முடியும். மனிதனின் ஆளுமை மிக விரிவானது. பலதுறை அனுபவங்கள் இவனுக்குள் இணைய வேண்டும். துயரங்கள், தடைகள், நெருக்கடிகள் வழியே இவன் தன் ஆற்றல்களை பெருக்கிக் கொள்கிறான் தடைகளைத் தகர்ப்பதன் மூலமே இவன் சக்தியைப் பெறுகிறான்.  5. உபரி மதிப்பு இல்லாமல் சமூகத்தில் வளர்ச்சி இல்லை. உபரி மதிப்பென்பது சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறையின் மூலம் பெறப்படுகிறது. உபரி மதிப்பு முதலாளியத்திற்குரிய விதி என்ற போதிலும், முதலாளியத்திற்கு முற்பட்ட காலங்களிலும் சுரண்டலோடு ஒடுக்குமுறையும் நிலவி வந்திருக்கின்றன. பிரமிடுகளும், தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில் முதலிய கட்டிடக் கலையின் அற்புதங்களும் உழைப்பாளிகளை ஒடுக்குவதன் மூலம் தான் நிர்மாணிக்கப்பட்டன. உலகளவில் காணப்படும் மாபெரும் கட்டிடங்கள் அறிவியல் வகைப்பட்ட ஆய்வுகள், மாபெரும் அணைக்கட்டுக்கள் முதலியனவெல்லாம் உழைக்கும் மக்கள் மீது சுரண்டலைத் திணித்துத் தான் அமைக்கப்பட்டன. இந்தியா முதலிய நாடுகளையும் அடக்கி ஒடுக்கி இந்திய மக்களின் செல்வங்களைக் கொள்ளையிட்டதன் விளைவாகத்தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி முதலியன ஏற்பட்டன. செவ்விந்தியர்களை கொன்று ஒழித்ததன் விளைவென்று தான் அமெரிக்க நாகரிக மேன்மையைக் குறிப்பிட முடியும். ஆப்பிரிக்காவின் கறுப்பு இனத்தவரை அடிமைப்படுத்தியதன் விளைவு தான் அமெரிக்க நாகரிகம்.  வரலாற்றின் வளர்ச்சிக்கு இத்தகைய அழித்தொழிப்புக்கள் தேவைதானா? என்பது நிரந்தரமான கேள்வி. தாஜ்மகாலைக் கட்டுவதில் ஈடுபடுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் சிலவகை தொழில்நுட்பங்களையும், கலையுணர்வையும் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது உண்மைதான். இந்த வகையிலும் எத்தனையோ இழப்புக்கள் வழியே இவர்கள் மனித நாகரிகத்தில் மேம்பட்டு வருகிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளலாம். அதே சமயம் செவ்விந்தியரை கொன்று ஒழித்ததில் எத்தகைய மேன்மையை நாம் கற்பிக்க முடியும். இந்தியாவின் உயர்வகை நாகரிகத்தை ஒழித்ததின் மூலம்தான் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி சாத்தியமாயிற்று. இதை எப்படி நியாயப்படுத்த முடியும். சமூகத்தில் உச்சத்தில் இருந்த மன்னர்கள், படைத்தலைவர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் தம் சுகபோக வாழ்வுக்காகவும் ஆடம்பரங்களுக்காகவும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை வறுமை, நோய்கள், அறியாமை முதலிய கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள். பெண்களை நாசப்படுத்தினார்கள். தமது பெருமிதமான வாழ்வுக்காகவும், தமது வீரம், புகழ், பெருமை முதலியவை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் நாடுகள் மீது படையெடுத்தார்கள். நகரங்கள் முதலியவற்றை அழித்தொழித்தார்கள், கிராமங்களுக்கு தீ இட்டார்கள். இவற்றையெல்லாம் நாகரிகத்திற்கான வளர்ச்சி என்று எப்படி மெய்ப்பிக்க முடியும். நாடுகளை விட்டு மக்கள் துரத்தப்பட்டார்கள். அகதிகளாய் மக்கள் அலைந்தார்கள். தம் முன்னைய வரலாற்றை இழந்தார்கள், பண்பாடுகளை இழந்தார்கள். மன்னர்கள் படைத்தலைவர்கள் முதலியவர்கள் இந்தளவுக்கு சுரண்டியும், கொடுமை படுத்தியிருக்கவும் வேண்டாம். கொஞ்சம் கருணையோடு இருந்திருப்பார்கள் என்றால் மனித வாழ்வின் தரம் சற்று உயர்ந்திருக்கும்.    செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டதைப் போலவே ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையில் வைக்கப்பட்டார்கள். உலகில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான போர்களுக்கு என்ன நியாயங்களை சொல்லமுடியும். இன்றுவரை இராணுவ தயாரிப்புக்கள் தொடர்ந்து பெருகுகின்றன. போர்களையும் இராணுவ தயாரிப்புக்களையும் உலகிலிருந்து அகற்ற முடியுமானால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் சிறக்கும்.  கல்விச் செல்வங்கள் முதலியவைகள் பெருகும். இன்றுவரை சமூகத்தின் உச்ச நிலையில் இருக்கும் மனிதர்கள் மேன்மைக்காக சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்கள் தம்மை தொடர்ந்து இழந்து வந்திருக்கிறார்கள். கடைசியாக வந்திருக்கிற உலகமயமாதல் குறித்து நாம் இங்கு விவரிக்க வேண்டியதில்லை. இந்த போக்கின் உச்ச விளைவு இயற்கையின் மீது ஏற்படுத்தப்படும் பேரழிவு. இப்பொழுது மனித நாகரிகமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஒரு சில நாடுகள் சில லட்சம் மனிதர்கள் தேவைகளுக்காக உலகமே அழிவுக்குள்ளாகும் நிலை நேர்ந்துள்ளது. இதற்கான நியாயங்கள் அறங்கள் என்று எதையும் சொல்வதற்கில்லை. இத்தகைய போக்கை பாசிசம் என்ற பெயரால் மட்டுமே குறிப்பிட முடியும். இந்தப் போக்கோடு ஒத்துழைக்கிற விஞ்ஞானிகள், அறிவாளிகள், படிப்பாளிகள், நகரத்து மக்கள், அரசியல் கட்சிகள் முதலியவர்களை நாம் பாராட்டிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது.  மார்க்சியர் என்பவர் இத்தகைய அழுத்தமான கேள்விகளை கேட்பதன் காரணத்தை மற்றவர் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய விரிவான, அழுத்தமான கேள்விகளின் வழியே மார்க்சியத்தின் அறஇயல் எவ்வாறு செயல்படுகிறதென்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக சோவியத் யூனியனில் நடைபெற்ற எத்தனையோ வகை அழித்தொழிப்புக்களை மார்க்சியத்தின் பெயரால் நாம் நியாயப்படுத்த முடியாது. வன்முறையை மார்க்சியன் எல்லாச் சூழல்களிலும் கொண்டாட முடியாது. மார்க்சியத்தின் வெற்றிக்காக அறநெறிகளிலிருந்து, மார்க்சியன் பிறழ்ந்து செல்வதை நாம் ஏற்கமுடியாது. குறியை எய்த வேண்டும் என்பதற்காக நெறியைக் கைவிட முடியாது. நிரந்தரமான அறம் என்பது இல்லை என்று சொல்லி அறத்தை இகழ்ந்து விட முடியாது.  6. மார்க்சியத்தினுள் நிரந்தரமான அறத்திற்கு இடம் உண்டா என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம். அறத்தின் சில கூறுகள், ஒழுக்க நெறிகள் என்று கூறப்படும். இத்தகைய கூறுகள் காலத்திற்கும் இடத்திற்கும் சூழலுக்கும் ஒத்த முறையில் மாறுவது குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதற்கு மேலும் காலந்தோறும் தொடர்ந்து வருகிற, அறநெறி என்று சொல்லத்தக்க நீரோட்டம் என்று ஒன்றை மார்க்சியன் இனம் காண முடியுமா? கடவுள் ஆன்மா முதலியவை குறித்துப் பேசுகிற சமயவாதிகளைப் பொறுத்தவரை இயற்கைக்குள்ளும், மனித வாழ்வினுள்ளும் செயல்படுகிற அறம் குறித்து எளிதாகப் பேசிவிட முடியும். உடமை இல்லாத காலம் இல்லை. அரசு இல்லாத காலம் இல்லை. வன்முறையும் போர்களும் மனித இயல்பிலேயே ஆழமாய் வேரோடி உள்ளன. காமம் இல்லாமல், உடலியல் குறித்து நாம் பேசமுடியாது. பசியும், பாதுகாப்புணர்வும் மனிதனை எத்தகைய கொடிய செயல் நோக்கியும் தூண்ட முடியும். இவையெல்லாம் நிரந்தரமான மனித இயற்கை என்று சிலர் நம்புகிறார்கள்.  உடமை, அரசு முதலியவை குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலிலிருந்து தோன்றுகின்றன, ஆக்கம் பெறுகின்றன. பசி, காமம், பாதுகாப்பு உணர்வு முதலியவை என்றும் மனிதனுக்கு உள்ளவை. இயற்கையின் சீற்றம் முதலியவற்றால் மனிதன் தனக்குரிய பாதுகாப்பை அடிக்கடி இழக்கத்தான் செய்கிறான். எல்லோருக்கும் போதிய உணவு இருக்கிற காலங்களிலும் வறுமையால் பலர் சாகத்தான் நேர்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு சில பெரிய விஞ்ஞானிகள் ஓர் உண்மையை உறுதியாகக் கூறினார்கள். சமகாலத்து அறிவியல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்பொழுது மக்கள் தொகை இரண்டு மடங்கு பெருகினாலும் எல்லோருக்கும் உணவு அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலில் பெரும்உடைமையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியவர்களின் பார்வையில் இத்தனை கோடி மக்களுக்கு அவசியமில்லை. கணிணி முதலிய கருவிகள் வந்துவிட்டன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் தொழிற்சாலைகள் உற்பத்தியை தொழிலாளிகள் இல்லாமலே பலமடங்கு உயர்த்த முடியும். குடும்பக் கட்டுப்பாடு என்று தொடங்கி இனப்படு கொலைகள் வரை இவ்வகையில் நியாயப்படுத்தப்படலாம். காமம் என்பது உடலியல் உணர்வு என்பது உண்மைதான். முதலாளியம் எத்தனையோ வகைகளில் காம உணர்வை தூண்டி பெருக்குவதற்கான நியாயத்தை நம்மால் எப்படி ஏற்க முடியும்.  நிலவளம் என்பது கோடிக்கணக்கான ஆண்டுகளின் மழைப்பொழிவு முதலியவற்றால் ஏற்பட்டது. வேளாண்மையின் விளைச்சலுக்கு பருவங்களும், மழைப்பொழிவும், மண்புழுக்களின் செயல்பாடும் மிக முக்கியமானவை, விளைச்சலில் உழவர்களின் உழைப்பென்பது மிகக்குறைந்த அளவுக்குத்தான் தேவை.  கடலில் மீன் விளைவிற்கு மனிதன் காரணமில்லை. தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பெருக்கத்தில் மனித முயற்சியின் பங்கு மிகக் குறைவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. இதன் காரணமாகவே மனித வாழ்க்கை மேம்பட்டதாய் இருந்தது. வாழ்க்கையில் பணத்திற்கு அதைப்போலவே அதிகாரத்திற்கு இன்றியமையாத தேவை இல்லை.  மன்னர்கள், அரசமைப்பு முதலியவை தோன்றிய பிறகு காலம் மாறுகிறது. தொழிற்புரட்சிக்குப்பிறகு பெருத்த மாற்றங்கள் நிகழ்கின்றன. உடமையும், அதிகாரமும் முதன்மை பெறுகின்றன. மனிதவாழ்வு இயல்பாக இல்லை. வரலாற்றில் இதை வளர்ச்சி என்று சொல்வதா? என்று நமக்குள் கேள்வி எழுகின்றது. மனித ஆளுமை விரிவும் ஆழமும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் நேர்ந்துள்ளன என்பது உண்மைதான் என்றபோதிலும் மனிதனுக்குள் குறுக்கமும், திரிபுகளும் கோணல், மாணல்களும் ஏராளமாக நேர்ந்துள்ளன. நுகர்வு வெறி தூண்டப் பெறுகிறது. அறிவியல் என்ற பெயரில் அழித்தொழிக்கும் கருவிகள், மற்றும் போதை மருந்துகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. வானமும் காற்றும் கூட நாசமாகின்றன. அதிகாரத்தில் இருக்கும் ஒரு சில லட்சம் நபர்கள் இயற்கையின் மீதும், கோடிக்கணக்கான மனிதர்கள் மீதும் அழிவுகளைத் திணிப்பதற்கான நியாயம் எதுவும் இல்லை. நிலம், நீர், காற்று, கடல், காடு முதலியவை இயற்கைச் செல்வங்கள். இவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல்  எத்தனையோ வகை உயிரினங்களுக்கும் உரியவை. நிலத்தையோ, நீரையோ, கடலையோ, காற்றையோ, ஒரு சிலர் தமக்கு உடமையாக்கிக் கொள்வது மனித அறத்திற்கு எதிரான செயல்.  தனி உடமை என்பது இயற்கை நியதியாக இருக்க முடியாது. பல லட்சம் ஆண்டுகள் இயற்கை தன்னை எப்படியோ சமனப்படுத்திக் கொண்டது. இன்று நிலைமை மாறிவிட்டது. எல்லோருக்கும் பொதுவான இயற்கையை ஒரு சிலர் அபகரித்துக் கொள்வது நீதி இல்லை என்பதை மார்க்சியம் அழுத்தம் திருத்தமாகக் கூற முடியும்.  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இயற்கையோடு மனிதன் ஒன்றியிருந்தான். சமூகத்தில் பிளவுகள் இல்லாததால் மனிதனுக்குள்ளும் பிளவுகள் இல்லை. மனிதனுக்குள் அகமும் புறமும் ஒன்றியிருந்தார். இவனுக்குள் ஆதிக்கம் இல்லை. எல்லாவற்றையும், எல்லோரோடும் இவனால் பகிர்ந்து கொள்ளமுடியும். இது பொதுமைச் சமூகம். சமதர்மம் நிலவிய சமூகம். வரலாற்றுக்கு முற்பட்ட இத்தகைய மேன்மையான காலம் பிறகு மறைகிறது. உடமை, அரசு முதலியவை தோன்றிய நிலையில்தான் மனிதனுக்குள் நான் யார் என்ற கேள்வி எழுகிறது. புறத்திலும் அகத்திலும் சிக்கல்கள், நெருக்கடிகள் என்றாலும் அந்த ஆதிப் பொதுமை என்பது . இவனை விட்டு விலகவில்லை. இவனது கனவுகளிலும், நினைவுகளிலும், கதை, கற்பனைகளிலும் அந்த ஆதிப்பொதுமைச் சமூகம் கலந்தும் மறைந்தும் இருந்தது. திரும்பத் திரும்ப அந்தப் பொதுமை அறத்தை மனிதன் தனக்கு உள்ளும் புறத்திலும் மேம்படுத்திக் கொள்ளவே விரும்பினான். சமூகத்தில் கூட்டாக வாழ்வதை திரும்ப, திரும்ப சோதித்துக் கொள்கிறான். சமயங்களிலுள்ளும் கடவுள் என்ற கருத்தாக்கத்திற்குள் நிழலாடுவது அந்த ஆதிப்பொதுமைச் சமூகம்தான்.  கடவுள் நம் தந்தை. அவர் கருணையே வடிவமானவர். நாம் அவரின் படைப்புக்கள். நமக்குள் வேறுபாடுகள் இல்லை. கருணை மிக்க கடவுள் நமக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்கமாட்டார். இப்படி எல்லாம் கடவுளுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களின் உள்ளுறை பொதுமைச் சமூகம் என்பதனுள்ளிருந்து பெற்றது என்பதைத்தானே காட்டுகிறது. சமயங்களினுள்ளும், ஆதிக்கங்கள் நுழைந்ததை உடமை மற்றும் அரசு ஆதிக்கச் சூழலில் வைத்துத்தானே புரிந்து கொள்ளமுடியும். அரசோடும், உடமையோடும், ஆதிக்கங்களோடும் மத நிறுவனம் ஒத்துச் செல்லும்போது, மதத்திற்குள்ளிருந்தே கலகங்கள் எழுகின்றன. இதைச் செய்பவர்கள் தத்துவவாதிகள். ஆதிக்கத்தோடு ஒத்துழைப்பவர்கள் புரோகிதர்கள், இவர்களுக்கு எதிரான கலகக்காரர்கள் தத்துவவாதிகள். தமிழ்ச் சூழலில் இவர்கள் சித்தர்கள். சமயங்களின் வரலாறென்பது இப்படித்தான் இன்றுவரை தொடர்கிறது.  இயற்கை எல்லோருக்கும் சொந்தம். உழைப்பதும், பகிர்ந்து கொள்வதும் மனிதச் செயல். பொதுமைதான் மனித அறம். இதற்கு இன்றைய பெயர் சமதர்மம். இந்த அறம்தான் இயற்கையைக் காப்பாற்றும், மனிதர்களை வாழ்விக்கும். கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் விளைச்சலில் ஒன்று அறிவு. இதைத் தனிஉடமை ஆக்க முடியாது. அறிவை ஒரு சொத்து என சிலர் உரிமை கொண்டாட முடியாது. ஐன்ஸ்டீனுக்குள் செயல்பட்ட பேரறிவு கோடிக்கணக்கான மனிதர்கள் காலம்தோறும் திரட்டிய அறிவின் விளைச்சல். கணிணி முதலியவற்றினுள்ளும் கோடிக்கணக்கான மனிதர்களின் அறிவின் நுட்பங்கள் குவிந்துள்ளன. இங்கெல்லாம் தனிமனித உடமைக்கு அர்த்தம் இல்லை. ஊருணியில் சேரும் தண்ணீர் இயற்கையின் விளைவு இது எல்லோருக்கும் உரியது.  தனிமனிதனிடம் திரண்டுள்ள செல்வம் பல்லாயிரம் மக்களின் தொகுப்பு. செல்வன் அறிவுடையவனாயின் இந்த உண்மையைப் புரிந்து கொள்வான். தனக்குள் ஒதுங்கியவன், சமூகத்திலிருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டவன். இவன்தான் உடமையாளன். இவனுக்குள் மனித ஆளுமை சுருங்கிவிட்டது, இறுகிவிட்டது. உலக அளவுக்கு ஆன விரிந்த பார்வை இவனுக்கு இல்லை. இவனுக்குள் பேரின்பம் இல்லை. இவனுக்குள் நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. இவனுக்குள் வாழ்வின் விரிவு இல்லை. இவன் தான் அதிகாரி, இவன் தான் வணிகன். இவனுக்கு காவல் வேண்டும். ஆயுதங்கள் வேண்டும். அடிமைகளும் வேண்டும். இவன்தான் சுரண்டலைத் திணிப்பவன். ஒடுக்கு முறை செய்பவன். இவனுக்கு புகழ் வேண்டும்; பெருமைகள் வேண்டும். இவன் துதிபாடிகளை ஊக்குவிப்பான். பரிசுகளும், விருதுகளும் வழங்குவான். கருணை உள்ளவன்போலத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிற செல்வத்திலிருந்து கொஞ்சம் கொடுப்பான். இச்சகத்தை இவன் விரும்புவான். இவனுக்குள் எப்பொழுதும் அச்சம், நடுக்கம் இருக்கும். இவனுக்குக் கடவுள் வேண்டும், கோவில்கள், வழிபாடுகள், சடங்குகளும் வேண்டும். தனக்குள் எப்பொழுதும் இவன் தனியன், இவன் கோழை, இவனுக்குள் வீரமில்லை. வீரனென காட்டிக் கொள்வதற்காக ஆயுதங்களோடு இவன் திரிவான். இவன் தொடர்ந்து தனக்குள்ளிருந்து மனிதத்தை வெளியேற்றுகிறான். இன்பங்கள் இவனுக்கு வேண்டும், போதைகள் இவனுக்குத் தேவை. தனக்குள் காம உணர்வை தூண்டி பெருக்கிக் கொள்பவன் இவன். இவனை மனிதன் என்று மதிக்கவேண்டியதில்லை. இவனுக்குள் மனித அறம் இல்லை. இயற்கையோடும், சமூகத்தோடும், தன்னோடும் இவனுக்கு நெருக்கம் இல்லை, உறவு இல்லை. மனித வரலாற்றிலிருந்து இவன் தன்னை துண்டித்துக் கொள்கிறான். மார்க்சியத்தின் அற இயல் இத்தனை விரிவானது. அர்த்தச் செறிவுமிக்கது.  7. நிரந்தரமானது இந்த மனித அறம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான், வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிப் பொதுமைச்சமூகம் பற்றியும், வரலாற்றுக்காலம் நெடுகிலும் அந்த ஆதிப்பொதுமை சமூக உணர்வுகள் மனிதனுக்குள் நிரந்தரமான நீரோட்டமாக ஓடுகிறது என்பதையும், சமதர்மம் என்று மார்க்சிய நெறியில் திரட்டிச் சொல்வது இந்தப் பேரறம் தான் என்பதையும் இதுவரை நாம் பார்த்தோம். வரலாற்றின் வழியேதான் இந்தப் பேரறத்தை மனிதன் தனக்குள் தெளிவும் உறுதியும் செய்து கொண்டான் என்றும் பார்த்தோம். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனுக்கு தன்னுணர்வு இல்லை. தன்னை மனிதன் என்று கூட அவன் உணர்ந்து கொள்ளவில்லை. விலங்குகளிலிருந்து தான் வேறுபட்டவன் என்பதைக்கூட அவன் அப்போது அறியவில்லை. சில தேவைகளோடு அவன் கட்டுப்பட்டிருந்தான். இவனது தேவைகள் விலங்கின் தேவையைப் போன்றதே. அவனது புலன்கள் வளர்ச்சி பெறவில்லை. அவனுக்குள் பார்வை விரிவடையவில்லை. உணவுத்தேவை முதலியவற்றை அவனால் நிறைவேற்றிக் கொள்ளவும் முடியவில்லை. தொடர்ந்து கருவிகளைக் கண்டறிந்தான். தன் எல்லைகளிலிருந்து வெளியேறினான். உடமைகள் முதலியவற்றைச் சேர்த்துக் கொண்டான். தனக்குள் பிளவு நேர்ந்தது. இன்னும் சிலகாலம் சென்ற பொழுதுதான் தனக்குள் என்னவோ நேர்ந்துள்ளது என்பதை உணரத் தொடங்கினான். இப்பொழுதுதான் தன்னுணர்வு அவனுக்குள் முளை விட்டது. இழந்ததைக் குறித்து கவலைப்பட்டான். இழந்தது என்ன என்று சிந்தித்தான். இவன் வரலாற்றுக்குள் வந்துவிட்டான். இனித் திரும்பிச் செல்ல முடியாது. வரலாற்றின் வழியே தனக்குள்ளும் புறமும் விரிந்து சென்றான். கோடிக்கணக்கான அனுபவங்கள் பெற்றான். செல்வத்தையும் அதிகாரத்தையும் திரட்டிய பிறகு தன்னை இழந்தான். பிறகு தனக்குள் தேடினான். திரும்ப, திரும்ப தன் கனவுகளுக்குள் நுழைந்தான். செல்வம் பெருகினாலும் இவனுக்குள் நிம்மதி இல்லை. அடிமைகளை உற்பத்தி செய்வதில் பாதுகாப்பு இல்லை. பிறரைச் சுரண்டுவதிலும் ஒடுக்குவதிலும் தனக்குள் ஆனந்தம் இல்லை, பரவசமில்லை. தனிமையில் தன்னை நொந்து கொண்டாலும் அரசவைகளில், மேடைகளில், பொது இடங்களில் இவள் தன் துயரங்களைச் சொல்ல முடியாது. போர்களில் வெற்றி பெற்ற போதெல்லாம் தனக்குள் சோர்ந்தான். மது முதலிய போதைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட போதிலும் போதை தீர்ந்த நிலையில் தனக்குள் தான் சிறுமைபட்டதை இவன் உணராமலில்லை. பணமும், அதிகாரமும் இவனைப் பற்றிக் கொண்டான். இவன் தன் வசத்தில் இல்லை. கடவுளுக்குள் இவன் தன்னை ஆழ்த்திக் கொள்ளவும் முடியவில்லை. கடவுள் இவனுக்குள் எங்கோ இடறுகிறார். கோயில்கள் கட்டி வைத்தான் திருவிழாக்கள் நடத்தினான். இவனுக்குள் ஆணவம் அதிகரித்தது நிம்மதி தொலைந்தது. செல்வங்களை, அதிகாரங்களை இழந்துவிட்ட பிறகேனும் நிம்மதி கிடைக்குமா என இவன் தேடினான். தன்னைத் தொலைத்து விட்டபிறகு தனக்குள்ளும் வெளியிலும் தேடினான். இப்படி இவன் எத்தனையோ அனுபவங்களுக்குள் சென்றான், திகைத்தான் தேடினான் இந்த வரலாறு மிகவும் நீண்ட வரலாறு. இவனுக்குள் இருந்த சமதர்மக் கனவு மடிந்துவிடவில்லை.  மார்க்ஸ் கண்டுரைத்த முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று அன்னியமாதல். இயற்கையோடும், சமூகத்தோடும், இறுதியில் தன்னோடும் அன்னியப்பட்ட நிலையில் தான் மனிதனுக்கு துயரங்கள் பெருகின. இந்நிலையில்தான் தனக்குள் இவன் தன்னைத் தேடுகிறான். இழந்த சொர்க்கத்தைத் தான் இவன் தேடுகிறான். இத்தகைய அன்னியமான மனிதனைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் கார்ல் மார்க்ஸ்.  இவனை முற்றாக மார்க்ஸ் நொந்து கொள்ளுகிறாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். தொழிலாளி மட்டுமல்லாமல் முதலாளியும் தனக்குள் அன்னியப்பட்டிருக்கிறான். தான் அன்னியப்பட்டிருப்பதை பாட்டாளியால் உணர்ந்து கொள்ள முடியும், முதலாளியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கை வசதிகளுக்குள் அவன் சிறைப்பட்டிருக்கிறான். குறிப்பிட்ட பொருளியல் சூழலுள் அவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். தன்னால் தன்னை விடுதலை செய்துகொள்ள அவனுக்கு முடியாது. அவனது சூழலிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும், அப்பொழுதுதான் அவன் தன்னை மனிதனாக உணரமுடியும். பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்வதோடு, முதலாளிக்கும் விடுதலை நல்க வேண்டும். முதலாளிக்குள்  சிறுத்துப் போன மனிதனை விடுவிக்க வேண்டும். மனிதனாக அவன் வளர்ச்சி பெற பாட்டாளி வர்க்கம் முயற்சி செய்ய வேண்டும். உச்சங்களில் குடியிருக்க முடியாது. தரையில்தான் பாதுகாப்போடு வாழமுடியும். உழைப்பதும் பகிர்வதும் பேரின்பம். ஏற்றத் தாழ்வுகள் மனிதனைக் குறுங்கவைக்கும். மனிதனுக்குள் பிளவுகள் ஏற்படுத்தும். அவனால் நிம்மதியாக இருக்கமுடியாது இப்படி எல்லாம் மார்க்ஸ் தன் கோட்பாட்டை விளக்குகிறார். சமதர்மம்தான் மனித வாழ்வுக்கான ஆரோக்கியமான சூழல். அறச்சிக்கல்களிலிருந்து மனிதன் அப்பொழுது தான் விடுபடுவான். இவனுக்குள் மனநோய்கள் இல்லை. போதைகள் இவனுக்குத் தேவை இல்லை. இவனுக்குள் வானம் வசப்படும். இந்த மனித அறம்தான், மார்க்சியம்.  காலந்தோறும் மனிதன் அன்பென்றும், கருணை என்றும் தியாகமென்றும், விருந்து என்றும், கொடை என்றும் பேசினான். அவ்வப்பொழுது தனக்குள் இந்த உணர்வுகளை மலர்த்திக் கொண்டான், பெருக்கிக் கொண்டான்.  அன்பில், கருணையில், தியாகத்தில் இவன் அவ்வப்பொழுது தன்னை இழந்தாலும் முற்றான, நிரந்தரமான அன்பிலும் கருணையிலும் இவன் நிறைவு கொள்ள இயலவில்லை. கொடுப்பது நல்லதென்றாலும் கொடுப்பதானால் வறுமை தீர்வதில்லை. கடவுளை என்னதான் வருந்தி வருந்தி அழைத்தாலும் கடவுள் இவனுக்குள் நிரந்தரமாய் நிலை பெறுவதில்லை. உலகியல் அடிக்கடி இவனை ஆட்கொள்கிறது. காமம் இவனை வருத்துகிறது. இவன் சமூகத்தை தனக்குள் தாங்கியவனாக இல்லை. வரலாறு இவனுக்குள் வெளிச்சம் தரவில்லை. கடவுளை இவன் தான் தனக்குள் உற்பத்தி செய்து கொண்டான் என்ற புரிதல் இல்லை. தியானங்களில் தன்னை இழந்துவிட முடியாது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் உலகம் இவனைப் பற்றிக் கொள்கிறது. தனக்குள் அவ்வப்பொழுது சில உச்சங்களில் தரிசிக்கிறான். இந்த உச்சங்களில் இவனால் வாழமுடிவதில்லை. தியானங்களின் போது இவனுக்குள் காலங்கள் அற்றுப் போகின்றன. பிறகு காலம் இவனைக் கைப்பற்றிக் கொள்கிறது.  இந்தக் குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் என்ன காரணம் என்பதை இவன் ஆராய்வதில்லை. இவனது குழப்பங்கள், துயரங்கள், முதலியவற்றுக்கான காரணங்களை மார்க்சியம்தான் கண்டறிந்து சொல்லுகிறது. தனிஉடமை, அரசு அதிகாரம், ஏற்றத்தாழ்வுகள் என்னும் இவை இருக்கும்வரை மனிதன் இத்தகைய குழப்பங்களோடு வாழ்ந்தாக வேண்டும். இது ஒரு முக்கியமான உண்மை. சிக்கல்கள் புறத்தில் மட்டுமில்லை அகத்திலும் உள்ளன. சமயவாதிகள் என்பவர்கள் மனத்தை மாற்றுங்கள் சிக்கல்கள் இல்லாது தீரும் என்று சொல்லுகிறார்கள். புறத்தை முற்றாக மாற்றிய போதிலும் மனத்தில் சிக்கல்கள் தொடரும் என்பதில் அய்யமில்லை. மனமும் சிலவற்றைப் படைத்துக் கொள்கிறது. புறத்திலிருந்து உள்ளே செல்லும் சிக்கல்கள் சில திரட்சிகளைப் பெறுகின்றன. அவற்றைக் களைவதற்குக் காலம் தேவை. பொருளிடத்தில் கொள்ளும் பற்று, மனிதனின் மனத்தைப் பற்றிக் கொள்கிறது. தேவைக்கு மேல் மனிதன் சேர்க்கிறான். இதேபோலத்தான் பிறவகைப் பற்றுகளும். அறிவுரை சொன்னால் மனம் இவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்கிறதா. போதைப் பழக்கம் மனத்தைவிட்டு நீங்குவதில்லை. மற்றும் சில அழகு மயக்கங்கள். மயக்கங்கள் மனத்தை பற்றிக்கொண்டு இவையே வாழ்க்கை என்கிறது. இவை எல்லாம் மனத்தினுள் ஏற்படும் முடிச்சுகள். இந்த முடிச்சுக்களை மெல்ல மெல்லத்தான் அவிழ்க்க வேண்டும். இப்படி எல்லாம் சொல்வதற்கு மார்க்சியம் இடம் தருகிறது. சுற்றிலும் நெருப்பு எரிகிற நிலையில் எந்த ஒரு மனிதனாலும் நிம்மதியாக இருக்க முடியாது. அதைப்போல வறுமையும் நோய்நொடிகளும், களவும், பொருட்களும், ஊழலும், ஊதாரித்தனங்களும், கொள்ளையும், வஞ்சகங்களும் நிறைந்துள்ள சமூகச் சூழலில் கடவுளோ, இன்னொன்றோ நமக்கு நிரந்தரமான நிம்மதியைத் தரமுடியாது. சூழலை மாற்ற வேண்டும். இதற்குரிய நெறியைக் காட்டுவது மார்க்சியம். முதலில் புறம், பிறகு அகம் என்பதுகூட உண்மை இல்லை. சமதர்மம் தான் உலகத்தை, மனிதனைக் காப்பாற்றும் என்பது இன்று அகத்தினுள் நாம் ஏற்படுத்திக் கொள்ளுகின்ற திரட்சி. இந்த ஆதாரத்தின் மீது தான் நாம் வாழ்கிறோம். புறத்தை எதிர்கொள்கிறோம். சமயவாதிக்குள்ளும் இத்தகைய திரட்சியை ஏற்படுத்திக் கொள்ள இயலும். கடவுள் இதற்குத் தடையாக இருக்கமுடியாது. மதம் என்பதனுள்ளும் இத்தகைய திரட்சிக்கு இடம் உண்டு. மதம் என்பதனுள் அடியில் வண்டலாக இருக்கிற திரட்சியிலிருந்து இத்தகைய அறத்தை / சமதர்மத்தை சமயவாதி தனக்குள் உயிர்ப்பித்துக் கொள்ள இயலும். அன்பு நிலை பெறுவதற்கு ஆதாரமான தளம் தேவை. கருணை எனத் தனியே உருக வேண்டியதில்லை. தியாகம் என தன்னைக் குழப்பவேண்டியதில்லை. மேலுலகம் தேடி அலைய வேண்டியதில்லை. சமதர்ம நோக்கில் உலகை மாற்ற முடியுமானால் இயல்பான அன்பில் மனிதன் தழைக்க முடியும். கடவுள் மனிதனுக்குள் கரைந்து விடுவார். புரோகிதனுக்கு இங்கு வேலையில்லை. வர்க்கங்கள் இனி இங்கு இருக்காது.  8. சமதர்மம் தான் மனிதனுக்கான நிரந்தர அறம் என்று சொல்வதற்கான ஆதாரத்தை வரலாற்றின் வழியே தேடிச் சென்று, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆதிப்பொதுமைச் சமூகத்திற்குப் போய்ச் சேருகிறோம். இப்படி ஒரு சமூகம் இருந்ததா? என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். அமெரிக்காவில் இருந்த சில மானுடவியலாளர்களின் ஆய்வுகளை படித்த மார்க்சும், ஏங்கல்சும் இப்படி ஒரு சமூகம் பற்றிச் சொல்கின்றனர். இவர்கள் குறிப்பிடுகிற அதே வடிவத்தில் ஆதிப்பொதுமை சமூகம் இருந்ததை பிற மானிட சமூக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்றும் ஆதிப் பழங்குடிகள் என்பவர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் இன்றும் தனி உடமை இல்லை. மூத்தவர்களை முன்னிறுத்துகிற சமூக நிர்வாகம் இவர்களுக்கு உண்டு. இவர்கள் இயற்கைக்கு நெருக்கமாகத் தான் இருக்கின்றனர். மார்க்ஸ் முதலியவர்கள் கூறும் தத்துவத் தெளிவோடு இவர்கள் இல்லை எனினும் இவர்களுக்குள் நுழைந்து பார்க்கும்பொழுது இவர்களின் வாழ்வியல் தத்துவம் ஒன்றைத் திரட்ட முடியும். பொதுமைச் சமூகம் என்று குறிப்பிடுவதற்கான சில அழுத்தமான கூறுகளை இவர்களின் வாழ்வியலிலிருந்து காணமுடியும். இத்தகையதொரு திரட்சி நமக்குப் போதுமானது.  அனேகமாக எல்லாச் சமயங்களும் இத்தகையதொரு தூய்மையான ஆதிப்பழமையில் வேர்கொண்டு இருக்கின்றன. மனிதன் தோன்றுவதற்கு முன்பு உயிர் வடிவில் அவன் இறைவனோடு ஒன்றியிருந்தான். இறைவனுக்குள் இவன் கலந்திருந்தான் என்று சிலவகை வர்ணனைகளை மதங்கள் முன் வைக்கின்றன. அல்லது இறைவன் இந்த உயிர்களை தனக்குள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ படைத்து உலகில் உலவவிட்டான் என்றும் சமயங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு சமயமும் இவ்வகை ஆதி நிலவரம் பற்றி ஒவ்வொரு வகையில் சித்தரித்ததை நாம் காண்கிறோம்.  உயிர்களை தனக்குள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து இறைவன் ஏன் படைக்க வேண்டும். பிறகு ஏன் உலகில் உலவவிட வேண்டும் என்றெல்லாம் கேட்டு நாம் தெளிவான கருத்தைப் பெறமுடியாது. இதனுள் ஒரு வகையான தர்க்கம் செயல்படுகிறது. அதாவது உலகமும், உயிர்களும் எவ்வாறு தோன்றின என்ற கேள்வி எழுப்பிக் கொண்டு ஒருவன் இவற்றை தோற்றுவித்திருக்க வேண்டும் என்று தர்க்கம் செய்து, இந்தத் தர்க்கத்தின் வழியே ஆதிகாலத்திற்கும் இறைவனுக்கும் நாம் போய்ச் சேருகிறோம். எந்த ஒரு தர்க்கத்திற்கும், தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்த இயலாத ஒரு முதற் பொருள் வேண்டும். அதைக் கேள்விக்குட்படுத்தினால் நமக்குள் தொடரும் தர்க்கங்கள் சிதையும். ஆகவே தான் இந்த முதற்பொருளை கேள்விக்குட்படுத்தக் கூடாது என்ற நியாயம் பிறந்துள்ளது. எல்லாச் சமயங்களும் இப்படிச் சில முற்கூறுகளிலிருந்தே வேர்பிடித்து வளர்ந்து கிளைத்துள்ளன.  இப்படி ஒரு முழுமை (The absolute) என்ற கருத்தினை முற்கூறாக்கி தனது தத்துவ இயலை ஹெகல் தொடங்கினார். குணம், குறிகளற்ற இந்த முழுமை / பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சம், உலகம், உயிர்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்தது என்று ஹெகல் விவரிக்கிறார். தானே தனியாய் இருப்பது இந்த பிரமத்திற்குப் பிடிக்கவில்லை. இந்த பிரம்மமே உலகமாய், சடமாய் தன்னை மாற்றிக் கொண்டது. அப்புறம் தனக்குள்ளிருந்து உயிர் இயக்கத்தைத் தோற்றுவித்தது. பரிணாம கதியில் உயிரியக்கத்தின் இறுதியில் மனிதன் தோன்றினான். மனிதனுக்குள்ளிருந்து இறைவன் மீண்டும் தன்னுணர்வு பெற்றான். இப்படிச் செல்லுகிறது ஹெகலின் தத்துவம்.  ஹெகலின் தத்துவத்தை இதே வடிவில் மார்க்ஸ் ஏற்கவில்லை. பொருளின் இயக்கம் என்றைக்கும் இருக்கிறது. பரிணாம கதியில் மனிதன் தோன்றுகிறான். தொடக்கத்தில் இவன் தனக்குள் ஒன்றியிருந்தான். உடமை முதலியவற்றின் தோற்றத்தோடு தனக்குள் இவன் அன்னியமானான். இயற்கையிலிருந்தும் இனக்குழு சமூகத்திலிருந்தும், பிறகு தன்னிலிருந்தும் இவன் அன்னியமானான். இறுதியில் மீண்டும் இவன் இயற்கையோடும், சமூகத்தோடும் இறுதியில் தன்னோடும் இவன் ஒன்றி இணைவான். இந்த முறையில் தான் மார்க்சின் பொருள் முதலியல் சிந்தனை இயங்குகிறது. மதம் எத்தகைய முற்கருத்திலிருந்து தொடங்கியதோ கூடியவரை அதே வகையான ஒரு முற்கருத்திலிருந்துதான் மார்க்கம் தொடங்குகிறார். இம்முறையில் மார்க்சியமும் ஒரு மதம்தான் என்று சிலர் கருதுகின்றனர். மனிதன் தன் அளவில் தொடக்கத்தில் தூயவனாகத்தான் இருந்தான். பிறகுதான் தீமைகள் தோன்றின என்ற முறையில் தான் இந்த முற்கருத்தைப் படைத்திருக்க முடியும். மார்க்சியத்திற்கும் இது பொருந்தும்.  இதை மனிதநேய மார்க்சியம் என்று பெயரிட்டு வரலாற்றில் இதற்கு இடமில்லை, அறிவியல் ஆய்வில் இப்படிக் கருதுவதற்கு இடமில்லை என்று சில நவீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மார்க்சியத்திற்குள்ளிருந்து ஹெகலியத்தை, மனித நேயத்தை வெளியேற்ற வேண்டும், மார்க்சியத்தை முற்றான அறிவியல் கோட்பாடாக மாற்ற வேண்டும் என்பது இவர்கள் கருத்து. இதற்கான முயற்சிகளை அல்தூசர் முதற்கொண்டு பலர் மேற்கொண்டனர். மனித உணர்வுக்கு அறிவியலில் இடம் இல்லை. கருத்தியல் என்பதற்கு கோட்பாட்டில் இடம் இல்லை என்ற முறையில் இவர்களின் ஆய்வு தொடர்கிறது. மார்க்சியம் உட்பட எவ்வகைத் தத்துவத்திலிருந்தும் மனிதச் சார்பை ஒதுக்கிவிட அறவே இயலாது என்ற முறையில் இந்த அறிவுக் கோட்பாட்டாளர்களை நாம் பார்க்க முடியும். மனிதனை முற்றாக அவனது உணர்வுகளிலிருந்து பிரித்து, துண்டித்து, அறிவே உருவானவனாக அவனை மாற்றமுடியாது.  இப்படிக் கருதுபவர்கள் ஆதிப்பொதுமைச் சமூகம், ஆதியிலிருந்தே சமதர்ம உணர்வு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. தொடக்க நிலையிலேயே இவனை முற்றான மனிதன் என்று நாம் சாதிக்க முடியாது. தொடக்க நிலையில் இருக்கிற இவனுக்குள்ளிருந்து தத்துவம் எதையும் வார்த்தெடுக்க முடியாது. விலங்கிலிருந்துதான் இவன் தொடங்குகிறான் / தொடர்கிறான். சமூக மாற்றங்களின் போது இவனை அவ்வப்பொழுது நாம் கண்டு தொகுக்க வேண்டுமே ஒழிய இவனுக்குள் நிரந்தரம் என்று ஒன்றைத் திரட்ட இயலாது. இப்படித் தொடர்கிறது இவர்களின் விவாதம். இன்றைய மனிதன் பற்றித்தான் பேசவேண்டும். இவன் தான் நமக்குத் தெரிந்த மனிதன். இவன் தனக்குள் ஒருவனாக இல்லை. இவனுக்குள்ளிருந்து ஒன்றிணைந்த ஒன்றை எடுக்க முடியாது. மதம் என்பது அறிவியலுக்கு எதிரானது. மதம் முதலியவை மூடநம்பிக்கைகள். இதற்குள் நாம் ஒளியைத் தேடமுடியாது. சமதர்மம் நமக்குத் தேவைதான் இது எதிர்காலத்தில் தான் சாத்தியம். இன்றைய மனிதனின் பருண்மையான நிலவரங்களிலிருந்துதான் இந்த மனிதனைக் குறித்து ஆராய முடியும். இவர்களின் பார்வையில் அறம் என ஒன்று இல்லை, எது தேவையோ, எதற்கு வாய்ப்புண்டோ அதைச் செய்ய வேண்டும். எல்லாமே சூழலுக்கு கட்டுப்பட்டவைதான். அறம் என ஒரு இறுதியான இலக்கை வைத்துக் கொண்டு மனிதன் இயங்க முடியாது. இப்படியும் ஒரு மார்க்சியம் கட்டமைக்கப்படுகிறது. இப்படி ஒரு மார்க்சியத்தையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. நம் சார்பு மனிதநேய மார்க்சியம்தான். அறிவு நெறியோடு நமக்கு உரையாடலும் சாத்தியம்தான். ஆதிப்பொதுமைச் சமூகம் என்ற முற்கருத்து குறைந்தளவுக்கேனும் ஆதாரமுடைய கருத்து என்று நாம் ஏற்கிறோம். இங்கிருந்துதான் நாம் இயங்க முடியும். நமக்குள் மதம் செயல்படுகிறதென்று நம்மை விமர்சனம் செய்பவர்களோடு நமக்குப் பகைமை இல்லை.  மதம் என்பது கூட மனித உணர்வோடு மட்டுமல்லாமல், வரலாற்று முறையில் மனிதன் தன்னைத் தேடுவதோடு நெருக்கமான உறவுடையது. இவன் தனக்குள்ளிருந்தான் தனது கடவுளைத் தோற்றுவித்தான். கடவுள் என்பதனுள்ளும் இவன் தன்னைத் தான் தேடுகிறான். இவனுக்கு இவன் வாழத்தகுந்த உலகம் ஒன்று வேண்டும். இவனுக்குரிய அறநெறியோடு இயங்குகிற உலகமாக அது இருக்க வேண்டும். தன் வாழ்வியலுக்கான அறத்தைத்தான் இவன் இயற்கைக்குள்ளும் தேடுகிறான். இந்த அறம்தான் இவனது இயக்கத்திற்கு ஆதாரம். தான் மட்டுமல்லாமல், பிற உயிர்களும் வாழ்வதற்கான உலகமாக இது இருக்க வேண்டும். உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வுரிமை உண்டு. இப்படித் தொடங்குகிறது இவனின் மனித அறம். சமதர்மம் என்பதுதான் எல்லா மனிதர்களும் இங்கு வாழ்வதற்கான அறம். உடைமைவாதிக்குள் இயங்கும் அறம் குறித்தும் இவன் புரிந்து கொள்கிறான். எதிர்நிலைகளோடு தான் எந்த இயக்கமும் சாத்தியம். எதிர் நிலைகளுள் இரண்டனுள் ஒன்றை அழித்துவிட்டால் இன்னொன்றிற்கும் இயக்கம் இருக்கமுடியாது. இன்றைய சந்தைப் பொருளாதாரம் இதைத்தான் செய்யத் துடிக்கிறது. தன்னுடைய சார்பு இதற்குத் தெரியவில்லை. இங்கு தான் மீண்டும் சமதர்மம் குறித்து நாம் அழுத்தமாகப் பேச நேர்ந்திருக்கிறது. எதிரியையும் ஏற்றுக் கொள்ளுகிற மனித அறம் இத்தகையது. வலிமை மிக்கவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம் என்பது மனித அறமாக இருக்க முடியாது. எளியவர்களையும் இணைத்துக் கொண்டுதான் நாம் இயங்க வேண்டும் என்னும் அறம்தான் நமக்கு வலிமை தருகிறது. இந்த அறத்திற்கு அழிவில்லை.  - 2.3.2000  மார்க்சியமும் அறவியலும் II 1. அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய வரையறுப்பில் மேற்கட்டுமானத்தில் ஒரு கூறாகவே அறவியல் இடம் பெறுகிறது. கலை, இலக்கியம், தத்துவம் முதலிய சிந்தனை வகைப்பட்ட எல்லாவற்றையும் குறிப்பிட்ட சமுதாயத்தின் பொருளியல் கட்டுமானத்தை ஆதாரமாக வைத்து மார்க்சியம் காண்கிறது. எல்லாவற்றின் தோற்றத்தையும் மற்றும் வளர்ச்சியையும் சமூகத்தின் பொருளியல் கட்டுமானத்தைக் கொண்டே விளக்குவதாகிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மார்க்சியத்தின் ஆதாரக் கோட்பாடுகளில் மிக முக்கியமானது. சமூக மாற்றம் என்பதை பொருளியலின் அடிப்படை மாற்றத்தோடு தொடர்புபடுத்துகிற மார்க்சியம் மேற்கட்டுமானத்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படுகிற மாற்றத்தையும் பொருளியல் கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றத்திற்கே முன்னுரிமை தந்து விளக்குகிறது. பொருளியல் கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றத்தைத் தொடர்ந்து கலை இலக்கியம் முதலியவற்றிலும் மாற்றம் ஏற்படும் என்று சொல்லுகிறது மார்க்சியம். ஒழுக்க நெறிகளின் தொகுப்பாகிய அறவியலுக்கும் இந்த உண்மை பொருந்தும்.  மேற்கட்டுமானம் பொருளியல் அடித்தளத்தை பாதிப்பது குறித்து தொடக்க நிலையில் மார்க்சியர் தம் கருத்தை செலுத்தவில்லை. மேற்கட்டுமானத்தின் சில கூறுகள் பொருளியல் கட்டுமானத்தின் மீது பாதிப்பைச் செய்யும் என்பதை ஏற்றுக் கொண்ட ஏங்கல்ஸ் தொடக்க நிலையில் அவ்வாறு மார்க்சும் தானும் கருதாமைக்கு காரணம் சொல்லுகிறார். தலைவர்கள் தாமாகவே வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்துகிறார்கள் என்று தமக்கு முன்னர் நிலவிய கருத்தியலை மறுக்கும் முறையில் பொருளியல் கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தாங்கள் கருத்துச் செலுத்தியதாக ஏங்கல்ஸ் கூறுகிறார். உற்பத்தி சக்திகள் மற்றும் கருவிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். தலைவர்கள் தாமே விரும்பி வரலாற்றில் மாற்றங்களை கொண்டுவந்து விட முடியாது என்பதை ஏங்கல்ஸ் விளக்கினார். மேற்கட்டுமானம் பொருளியல் கட்டமைப்பை மாற்றுவதில் பெறும் பங்களிப்பைக் குறித்து தொடக்கத்தில் மார்க்சியம் ஆராயவில்லை எனினும் இத்தகைய ஆய்வை மார்க்சியத்தால் புறக்கணிக்கவும் முடியாது. என்னதான் மேற்கட்டுமானம் பொருளியல் அடிப்படையைப் பாதிப்பதாக இருந்தாலும் இறுதியில் தீர்மானிக்கும் சக்தியாகப் பொருளியல் அடிப்படைதான் இருக்கிறது என்று ஏங்கல்ஸ் முடித்துக் கொண்டார்.  பொருளியல் மாற்றத்திற்கு முதன்மைதரும் மார்க்சியம் பொருளியல் மாற்றத்தை தூண்டுவதற்கான சக்திகளாகவே கலை இலக்கியங்கள் முதலியவை செயல்பட வேண்டும் என்று கூறியதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கலை இலக்கியங்கள் மற்றும் அறவியலின் தனித்தன்மையை மார்க்சியம் மறுக்கவில்லை என்ற போதிலும் பொருளியல் கட்டுமானத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களிலேயே தன் முழு கவனத்தையும் ஈடுபடுத்திய மார்க்சியர் கலைஇலக்கியம், கலாச்சாரம் முதலியவற்றின் இயக்கம் குறித்து ஆழமாக ஆராயவில்லை. இத்தகைய ஆய்வை முதன்மைப்படுத்தும் விரும்பவில்லை. இத்தகைய ஆய்வில் ஈடுபடுபவர்களை மார்க்சியர் புறக்கணித்தனர், அன்றியும் குறித்துப் பேசினர். இத்தகைய போக்கிற்கான தவற்றை முதலானவை முதலியவர்கள் மீது நாம் சுமத்த முடியாது. பால்சாக் குறித்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியவர்களின் மதிப்பீடுகளையும்,டால்ஸ்டாய் குறித்து லெனின் செய்த மதிப்பீடு மதிப்பீட்டையும் இங்கு குறிப்பிடலாம். இத்தகைய ஆய்வுகள், மார்க்சிய ஆய்வில் விதிவிலக்காகவே தொடர்ந்து இருந்தன என்பதையும் நாம் பார்க்க முடியும். 2. பேராசிரியர் டூரிங் என்பவரோடு தீவிரமான விவாதத்தை நடத்திய ஏங்கல்ஸ் குறிப்பிடும் சில கருத்துக்களை இங்கு தொகுத்துக் கொள்ளலாம்.பௌதீக இயல் ஆய்வில் முழு உண்மைகள் குறித்து பேச முடியாது என்கிறார் ஏங்கல்ஸ். பௌதீக இயலைக் காட்டிலும் வேதியியல் ஆய்வுகள் இன்னும் சிக்கலானவை. இதை விட சிக்கலானது உயிரியல் ஆய்வு, சமூகம் வரலாறு என்று வரும் பொழுது சிக்கல்கள் மேலும் அதிகரிக்கின்றன. மூன்று உண்மைகள் என்பதற்குப் பதிலாக, சார்பு உண்மைகள் என்றுதான் பேச முடியும் என்கிறார்கள் ஏங்கல்ஸ்.ஏங்கல்சின் கருத்து இன்றளவும் உண்மைதான் என்பதை நாம் எளிதாக ஏற்க முடியும். மனித சித்தம் முற்றான சுதந்திரம் உடையதா? என்பது குறித்தும் ஏங்கல்ஸ் ஆராய்கிறார் மனிதன் தன் விருப்பத்திற்கு ஒத்த முறையில் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தி விட இயலாது. மனித சுதந்திரமும் வரலாற்றுச் சூழலை ஒட்டியே அமைகிறது. இயற்கையின் விதிகளை மனிதன் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியுமோ அதனை ஒட்டித்தான் மனிதன் சுதந்திரத்தை நிறுவிக் கொள்ள இயலும். வரலாற்று இயக்கத்தின் விதிமுறைகளையும் மனிதர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வேறோர் இடத்தில் குறிப்பிடுவதுபோல வரலாறு எந்த திட்டத்தை முன்வைக்கிறதோ அதைத்தான் மனிதன் நிறைவேற்றமுடியும். வரலாற்றின் கட்டங்களை மனிதனால் தாண்டிச் செல்ல இயலாது. தேவை (NECESSITY) என்பதற்குக் கட்டுப்பட்டது தான் மனிதனின் சுதந்திரம் என்ற அடிப்படையில் ஏங்கல்ஸ் இங்கு எடுத்து விளக்குகிறார்.  இயற்கையின் இயங்கு விதிகள் மனிதனுக்குள்ளும் செயல்படுவதைக் குறிப்பிடும் ஏங்கல்ஸ் ஒழுக்க நெறிகள் குறித்தும் பேசுகிறார். நன்மை, தீமை பற்றிய சிக்கல் குறித்து அழுத்திச் சொல்லுகிறார். உயிரியல் முதலியவற்றின் ஆய்வில் எது சரி, எது தவறு என்று தீர்மானிப்பதில் உள்ள சிக்கலைக் காட்டிலும், எது நன்மை, எது தீமை என்பதை தீர்மானிப்பது இன்னும் கடுமையான சிக்கல் என்று கருதுகிறார் ஏங்கல்ஸ். குறிப்பிட்ட சூழலில் நன்மை தீமையாக மாறுவது குறித்தும் தீமை நன்மையாக மாறுவது குறித்தும் குறிப்பிடுகிறார். எல்லாமே சார்புண்மைகள் என்பதை தொடர்ந்து வற்புறுத்துகிறார். நிலப்பிரபுத்துவம், முதலாளியம், சோசலிசம் குறித்துக் குறிப்பிடும் ஏங்கல்ஸ் ஒவ்வொரு வர்க்கத்திற்கும் தனித்தனியான ஒழுக்க நெறிகள் என்பது குறித்தும் சொல்லுகிறார். கிரேக்க சமூகத்தில் உயர்வகுப்பினர் தாம் சுதந்திரமானவர்கள் என்று கருதினர். அடிமைகள் இல்லாமல் இவர்களுக்கு வாழ்வு இல்லை. எனினும் அடிமைகளுக்கான சுதந்திரம் குறித்து இவர்கள் அக்கறை கொள்ளவில்லை. விலங்கிலிருந்து பிரிந்து வந்தவன் மனிதன் என்ற உண்மைக்கு அழுத்தம் தரும் ஏங்கல்ஸ், மனிதனின் சுதந்திரம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்துப் பேசுகிறார். சமத்துவம் என்ற கருத்து முதலாளியத்தின் தோற்றத்தை ஒட்டி ஏற்பட்ட கருத்து என்பதை விளக்கும் ஏங்கல்ஸ், முதலாளி கூறும் சமத்துவம் அவர்களுக்கு உரிய சமத்துவம் மட்டுமே. பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களால் சமத்துவம் வழங்க முடியாது என்று சொல்லும் ஏங்கல்ஸ், பாட்டாளிகள் தான் அனைவருக்குமான சமத்துவம் பற்றி பேசமுடியும் என்கிறார். வரலாற்றின் தொடக்கத்தில் சமத்துவம் பற்றி ஏங்கல்ஸ் எதுவும் சொல்லவில்லை.  மனித சுதந்திரம் என்பதனோடு ஒழுக்கநெறியின் தொடர்பு குறித்தும், விலங்கிலிருந்து மேம்பட்டு வரும் மனிதனின் ஒழுக்க நெறி குறித்தும் வரலாற்றில் மனித சுதந்திரம் அதிகரித்து வரும் என்பதனோடு ஒழுக்க நெறியின் தொடர்பு குறித்தும், இயற்கையின் விதிமுறைகளை தொடர்ந்து புரிந்து கொண்டு செயல்படும் மனிதனின் ஒழுக்க நெறிகள் குறித்தும் ஏங்கல்ஸின் குறிப்புக்கள் நமக்கு முக்கியமானவை. அறநெறி பற்றி ஆய்வுக்கு இந்தக் குறிப்புக்கள் மார்க்சியருக்கு பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை. மனிதன் தன் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக சில ஒழுக்க நெறிகள் குறித்தும், விலங்கு நிலையிலிருந்து தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுக்க நெறிகள் குறித்தும் நமக்குள் சிந்தனைகளை ஏங்கல்ஸ் தூண்டுகிறார். சமூக மாற்றம் என்பதை பொருளியல் மாற்றத்திலிருந்து பிரிக்க முடியாது என்பது உண்மையாயினும் ஏங்கல்ஸின் குறிப்புக்கள் பொருளியல் மாற்றத்தை மட்டுமே முற்றான தேவை என்பதை முதன்மைப்படுத்தி சொன்ன குறிப்புக்களாகத் தோன்றவில்லை.  3. மனித சமூகம் அறநெறிகள் இன்றி வாழமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பம், நிறுவனம், சமூகம் என்ற சூழலில் வாழ்கிறான். இவற்றோடு மேலும் பல அமைப்புக்களையும் இங்கு நம் கருத்தில் கொள்ளலாம். சமய நிறுவனங்கள் அறநெறிகள் பற்றிக் கூடுதலாகப் பேசுகின்றன. இவை குறிப்பிடும் அறநெறிகளுக்கிடையில் எத்தனையோ வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை நாம் காண முடியும். இவை குறித்து நாம் இங்கு முழுமையான கவனம் செலுத்துவதற்கு இடமில்லை. இங்கு ஒன்றைக் குறிப்பிடலாம். பெரும்பாலான மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம், வேலை முதலிய தேவைகளை பெருவதற்காக அலைக்கிறார்கள், பல்வேறு சூழல்களுக்கு ஒத்த முறையில் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். பொய், களவு முதலிய செயல்களோடு முற்றாக இவர்கள் உறவைத் துண்டித்துக் கொள்ள இயலாத நிலையில் வாழ்கிறார்கள். இவர்களைப் புரிந்து கொள்வது நம் கடமை. ஒரு மனிதன் தற்கொலை செய்கிறான் என்றால், தன் வாழ்வைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் இவன் கடுமையாக அகப்பட்டுள்ளான் என்பதை நாம் ஏற்க முடியும். இதற்கு மேலும் நம் கவனம் செல்ல வேண்டும். சமூகத்தினுடைய ஒட்டுமொத்தமான பொருளியல் சூழல் மற்றும் நிறுவன அமைப்புக்கள் மேலும் ஒழுக்க நெறிகள் குறித்தும் நாம் ஆராய வேண்டும். இந்த ஆய்வென்பது உலகளவிலான பல்வேறு அமைப்புக்கள் முதலியவற்றையும், இறுதியில் வரலாற்றுச் சூழலையும் உட்கொண்டதாக அமைய வேண்டும். நமது ஒவ்வொரு செயலுக்கும் நாம் மட்டுமே காரணமல்ல. குற்றவாளிகளைச் சமூகம்தான் தோற்றுவிக்கிறது. உடலை விற்றுத்தான் பிழைக்க வேண்டியிருக்கிறது. நம்மை பிறருக்கு அடிமைப்படுத்திக் கொள்ள நேர்ந்திருக்கிறது. நம்மை நாமே களங்கப்படுத்திக் கொள்கிறோம் மற்றும் முடமாக்கிக் கொள்கிறோம். உடமை, ஆதிக்கம் முதலியவை பெற்றுள்ளவர்கள் நம்மை அடிமைப்படுத்துகிறார்கள். இவர்கள் நமக்கு ஒழுக்க நெறிகள் வரையறுக்கிறார்கள். இவர்களோடு ஒத்து நம்மால் செல்ல முடியாது. பொய் சொல்லியும், களவு செய்தும் இவர்களை ஏமாற்ற வேண்டும், வேறுவழி நமக்கு இல்லை.  சமூகச் சூழல் இப்படி இருந்த போதிலும் சிறுபான்மை என்று சொல்லப்படும் சில மனிதர்களைப் பொருத்தவரை சில ஒழுக்க நெறிகளில் ஊன்றியிருக்கிறார்கள். இப்படி இருப்பதன் மூலம் தன் தனித்தன்மையை நிறுவிக் கொள்கிறார்கள். இந்தத் தனித்தன்மையிலிருந்து பிறகு அவர்களால் விலக முடிவதில்லை. தாய் என்பவள் தன் குழந்தைகளுக்காக எந்த தியாகத்தையும் செய்பவளாக இருக்கிறாள். பக்தி என்பது கூட இப்படி ஒரு தனித்தன்மை எத்தகைய துயரம் தனக்கு நேர்ந்தாலும் எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு தமக்குள் இவர்கள் பக்தி செய்கிறார்கள். தாயே வறுமை வாய்பட்டாலும் அவள் வறுமை தீர்க்க தான் தீய வழியில் செல்ல மாட்டேன் என்பவன் குறித்து வள்ளுவர் சொல்லுகிறார். தான் வளர்க்கும் பசு மாட்டிற்குக் கூட பிறரிடம் நீரை யாசிக்க விரும்பாதவன் இத்தகைய மனிதன், இவனுக்கு வறுமை துன்பம் தருவதில்லை. இத்தகைய மனிதனுக்குள்ளிருந்து சான்றோன் என்பவனை வளர்த்தெடுக்கிறார் வள்ளுவர். இத்தகையோர் இருப்பதனால்தான் இந்த உலகம் வாழ்கிறது என்கிறார்.  மார்க்ஸ் முதலியவர்கள் இப்படி வாழ்ந்தவர்கள். சூழல் மனிதனை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மார்க்ஸ், இதுவே முழு உண்மை அல்ல என்கிறார். உண்மையில் இது பாதிதான் என்கிறார். மறுபாதி என்ன என்ற கேள்விக்கு விடை தருகிறார், தன் சூழலை மாற்றுபவன் மனிதன் என்கிறார். இதைத்தான் உண்மையின் மறுபாதி என்கிறார். பிற மனிதர்கள் போல இவர் வாழவில்லை. எல்லாவகை இன்பம், பொருள் தேட்டம் முதலியவற்றை ஒதுக்கிவைத்து விட்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை குறித்த ஆய்விலும் செயல்பாட்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் மார்க்ஸ். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது உண்மைதான். வாழ்நிலை ஒருவனை திருடத் தூண்டலாம். கொலை செய்யவும் தூண்டலாம். இல்லறத்தின் உள்ளேயே முடங்கிவிடவும் தூண்டலாம். இவை எல்லாம் மனிதனுக்குள் உடன்பாட்டு முறையில் ஏற்படும் வாழ்வியல் சிந்தனை. சூழலை ஏற்க மாட்டேன் என்று வாழ்நிலைக்கு எதிர்வினை தரும் சிந்தனை என்பது மற்றது. சிந்தனை மனிதனைப் பற்றும் பொழுது அவன் பௌதீக சக்தியாக மாறுகிறான் என்று மார்க்ஸ் குறிப்பிட்டதன் உண்மையை இங்கு தெளிவாகப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் கடவுள் சிந்தனை மனிதனைப் பற்றிக் கொள்கிறது.  கலைஞர்கள் என்பவர்கள் கலை ஈடுபாட்டையே தம் வாழ்வின் முதற்பொருள் ஆக்கிக் கொள்கிறார்கள். இசைக் கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவருக்கு தனக்கப்பால் வேறு உலகம் இல்லை. அறிவியல் அறிஞர்கள் முதலியவர்களும் இப்படி முழுமையாகச் செயல்படுகிறார்கள். தமக்கு வெளியில் உள்ள உலகம் இவர்களை பாதிப்பதில்லை. புற உலகின் தூண்டுதல்களுக்கு இவர்கள் தம் அகத்தினுள் இடம் தருவதில்லை. அகத்தை இவர்கள் வலிமையாக படைத்துக் கொள்கிறார்கள். பிறகு அதிலிருந்து இவர்கள் நிலைபெயர்வதில்லை. எப்பொழுதேனும் தங்களுக்குள் புற உலகம் நுழைந்து இவர்களைத் தடுமாறச் செய்லாம். அப்பொழுதெல்லாம் இவர்கள் படும் துயருக்கு அளவில்லை. சில சமயங்களில் இவர்கள் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இத்தகைய மனிதர்களை சில சமயங்களிலேனும் நாம் சந்தித்திருக்க முடியும். தன் அகத்திலேயே முழுமையாக தன்னை ஊன்றிக் கொள்ளும் மனிதர்களைப் போலத்தான் இவர்களும் கலை முதலிய துறைகளில் தன்னை ஊன்றிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள்ளும் சமூகம் மற்றும் வரலாற்றின் இயக்கம் ஏதோ ஒரு வடிவில் செயல்படுகிறது. அறவியலில் ஊன்றியிருப்பவர்களையும் இப்படித்தான் புரிந்து கொள்ளமுடியும்.  4. மார்க்சுக்கு முற்பட்டவர் ஜெர்மானியத் தத்துவவாதிகளில் ஒருவரான இம்மானுவேல் கான்ட் என்பவர். அறவியல் குறித்த ஆய்வில் அவர்முன் வைத்த கோட்பாடு கேட்டகாரிகல் (CATEGORICAL IMPERATIVE) இம்பரெட்டிவ் என்பது. அதாவது கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதன் மறுவடிவம் இது. இப்படித்தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பலனை எதிர்பார்க்காமல் தன் கடமையைச் செய்தார்.  வரலாற்றிலும் கலைகள் மட்டுமல்லாமல் சமயங்கள் முதலியனவும் இவ்வாறு தனக்குரிய தனித்தன்மையோடு வரலாற்றில் வேர் பிடித்து கிளைகள் படர்ந்துள்ளன. இவ்வகைப் போக்கை நாம் முற்றாக மறுப்பதற்கில்லை. மார்க்சியரும் இப்படி சிற்சில கூறுகளில் வேரூன்றி கிளை படரமுடியும். பொருள்முதல்வாதம் என்பதனுள் இப்படித்தான் மார்க்சியர் வேரூன்றுகின்றனர். புரட்சிக்கான வாய்ப்புக்களோ செயல் குறைந்த அல்லது இல்லாத நிலைமைகளில் கட்சிக்குள்ளும் சிலவகைச் செயல்பாடுகளினுள்ளும் வேரூன்றுவது இப்படித்தான். குறிப்பிட்ட துறையில் ஆழ்ந்து செல்லும் பொழுது இப்படி நேர்வதைத் தவிர்க்க இயலாது. மார்க்சியமும் இப்படி வரலாற்றுச் சூழலில் தனக்குள் முடக்கம் கொள்ளமுடியும். அல்லது சில கிளைகள் வளர வேறு சில கிளைகள் பட்டுப்போகலாம். இத்தகைய போக்கைப் புரிந்து கொள்ள மீண்டும் வரலாற்றுச் சூழல் குறித்த பொருள்முதல்வாத ஆய்வுக்குள் நாம் செல்லுகிறோம். கலை முதலிய துறைகளில் இதன் காரணமாக வளர்ச்சி ஏற்படுவதையும் நாம் புரிந்து கொள்ளலாம். நவீன ஓவியம் முதலியவை இப்படித்தான் நமக்குள் வளர்ந்து செழித்துள்ளன. கருத்துமுதல்வாதம் என்பதன் வளர்ச்சியை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள இயலும். மார்க்சியத்தினுள்ளும் கருத்துமுதல்வாதத்துக்கு இடம் உண்டு. இவற்றையெல்லாம் உள்ளடக்கி மார்க்சியத்தின் பல்வேறு கூறுகளை நாம் ஒருங்கிணைக்க முடியும்.  ஜெர்மனில் மார்க்சியராகவும் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்த பெர்டோல்ட் பிரக்ட் நாடகம் ஒன்றை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்யும் உடமையாளன் ஒருவனுக்கு துணையாக ஒட்டகத்தோடு உடன் நடந்து செல்லுகிறான் ஓர் அடிமை. ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பவள் ஆண்டான் அடிமை நடந்து செல்கிறான். வழக்கம்போல ஆண்டான் அடிமையை அடிக்கடி ஏசுகிறான், அடிக்கவும் செய்கிறான். கடுமையான வெயில் உடமையாளனின் குடுவையில் நீர் தீர்ந்து விடுகிறது தாகத்தால் தவித்த அவனை நோக்கி அடிமை தன் குடுவையை நீட்டுகிறான். அடிமை தன்னை அடிக்க குடுவையை ஓங்குகிறான் என்ற எண்ணிய உடமையாளன் தன் கையிலுள்ள தடியால் அடிமையை அடிக்க அடிமை இறக்கிறான். நீதிபதி ஒருவரிடம் இந்த வழக்கு செல்லுகிறது. ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையில் நிலவுவது பகை உறவு, பகை உணர்வு காரணமாக ஆண்டான் அடிமையை அடிக்கத்தான் செய்வான் ஆகவே உடமையாளனை குற்றம் சொல்ல முடியாது. இப்படி தீர்ப்பு தரப்படுகிறது.  புகழ்பெற்ற நாடக ஆசிரியர் பிரக்ட் இந்த நாடகத்தின் மூலம் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் நிலவுகிற பகை உறவை வலியுறுத்துவதற்காக இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார். ஆண்டான் தன் பகை உணர்வில் ஊன்றியிருந்து செயல்படுகிறான். ஆண்டான் இடத்தில் அடிமை அன்பு கொள்ளத் தேவை இல்லை. இங்கு அவன் செய்த அன்பென்பது அவனது மூடத்தனம் அன்றியும் பழமைப்போக்கு, பாட்டாளி வர்க்கம் எதிரிக்கு அன்பு செய்ய வேண்டியதில்லை. எதிரியை ஒழித்துக் கட்டுவதுதான் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. சமய உணர்வு தன்னிடம் தங்கியிருக்கும் காரணமாகவோ, வேறு எந்தக் காரணத்திற்காகவோ அடிமை இப்படி நடந்து கொண்டால் அவனை உடமையாளன் தண்டிக்கத்தான் செய்வான். ஆகவே இவனுக்கு அன்பு தேவையில்லை. தன் தோழனிடம் இவன் அன்பு செய்யலாம். எதிரியிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது.  பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவுரை வழங்குவதற்காக எழுதப்பட்டது இந்த நாடகம் என்று நண்பர்கள் பாராட்டினர். இத்தகைய நாடகத்தின் மூலம் மார்க்சியம் தனக்குள் வளம் பெறுவதாகச் சொல்ல முடிவதில்லை. அன்பு செய்வது மனிதப் பண்பு இதிலிருந்து மனிதன் தன்னை விலக்கிக் கொள்ள முடியாது. எதிரியிடமும் மனிதன் அன்பு செய்யமுடியும். இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் அவன் புரிந்து கொள்வான். எதிரிக்குள்ளிருக்கும் மனிதனை விழிப்புறச் செய்வதற்கு இப்படி அவனால் தண்டிக்கப்பட்டு சாவதும் கூட ஒரு நெறிதான். முதலாளியின் விடுதலைக்காகவும் பாட்டாளி வர்க்கம் பாடுபட வேண்டும் என்று கூறியவர் மார்க்ஸ். சுதந்திரம் பிரிவுபடாதது என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். மார்க்சிடம் ஆழத்தில் குடியிருந்த இந்த அற்புதப் பண்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மார்க்சுக்குள் இப்படி ஒரு இயேசு குடியிருந்தார். காந்தியடிகளுக்குள்ளும் இத்தகைய கருணையை நம்மால் காணமுடியும். இந்த மனிதனின் மனம் அன்பில் குடியிருக்கிறது அல்லது சிறைப்பட்டிருக்கிறது என்றும் கூறலாம். இத்தகைய அன்பு விலங்குகளுக்குத் தெரியாது, மனிதனுக்கு மட்டுமே இது புரியும். இதன் காரணமாகத்தான் மனிதன் மேம்பட்டிருக்கிறான். இதேபோலத்தான் மனிதனுக்குள் அறவியல் செறிவு பெறமுடியும். மார்க்சியத்தினுள்ளிருந்தும் இப்படி ஒரு அறநெறியை நாம் வளர்த்தெடுக்க முடியும். இது மார்க்சியத்திற்கு முரணாகாது. மார்க்சு இப்படி இம்மானுவேல் காண்டுக்கு வசப்பட்டிருக்கிறார். இப்படித்தான் மார்க்சியன் என்பவன் தனக்குள் ஒரு சித்தனாக இருக்கிறான். இந்த உண்மை லெனினுக்குப் புரியும் மாவோவுக்கும் புரியும். கட்சி மார்க்சியம் இந்த உண்மையை புரிந்து கொள்ளாததில் வியப்பில்லை.  அன்டோனியா கிராம்சி வாழ்வும் சிந்தனையும் இளமைக்காலம்:  இத்தாலியின் ஒரு பகுதியாகிய சார்டினியாவில் ஓர் ஏழைக்குடும்பத்தில் 1891 -ல் பிறந்தார் கிராம்சி. தந்தையார் ஓர் எழுத்தர். தாயார் ஏழை உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராம்சியின் ஏழாம் வயதின்போது பணக் கையாடல் குற்றத்திற்காகத் தந்தை சிறைக்குச் சென்றார். வெளிவந்தபோது அவருக்கு வேலை இல்லை. கிராம்சியுடன் பிறந்தவர்கள் அறுவர். பள்ளியை விட்டு விலகிய கிராம்சி சில ஆண்டுகள் அலுவலகப் பையனாகப் பணி புரிந்தார். இருபதாவது வயதில் டியூரின் பல்கலைக் கழகத்தில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. வறுமை மிக்க குடும்பச் சூழல், உடல்நலக்குறைவு, கூன் விழுந்த முதுகு இவற்றோடு கிராம்சி பயின்றார்.  சார்டினியா, உழவுத்தொழில் பெரும்பகுதி நடைபெறும் பகுதி. கிராம்சி குடும்பம் பரவாயில்லை என்று சொல்லத்தக்க நிலைமை. டியூரினில் இவர் பார்த்த தொழிலாளர்களைவிட வறிய நிலையில் சார்டினியா உழவர்கள் வாழந்ததைக் கிராம்சி என்றும் மறக்கவில்லை. தான் வாழ்ந்த சார்டினியாவின் ஆழ்ந்த வேர்களைத் தம்மிடம் கொண்டிருந்தார். தம் மக்கள் கலாச்சாரம், மொழி, பாடல்கள் முதலியவற்றிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  நவீனத் தொழில்வளமிக்க டியூரினுக்கு அவர் சென்றபொழுது நகரம் அவரை அச்சுறுத்தியது, விரைவில் டியூரின் நகரத்தின் வரலாற்று முக்கியத்துவமும் அரசியல் கொந்தளிப்பும் அவரது உணர்வில் கலக்கத் துவங்கின. தொழில்துறை வளர்ச்சியின் தேவையை அவர் ஏற்றார். எதிர்காலவியல் இயக்கத்தைச் (Futurist movement) சார்ந்த கலைஞர்களிடம் ஈடுபாடு கொண்டார். டியூரினிலிருந்த கார் தொழிற்சாலை அதிபர்கள் நவீன கால மன்னர்களாக அவருக்குக் காட்சி தந்தனர். இவற்றோடு இத்தாலியின் அறிவுச்சூழல், முதல் உலகப்போருக்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடிகள், இத்தாலிய சோசலிசக் கட்சி, பால்மயிரோ டோகிலியாட்டி, ஆஞ்சலா டாஸ்கா முதலிய நண்பர்களின் உறவு இவற்றின் பாதிப்புக்கு வெகுவாக ஆட்பட்டார் கிராம்சி.  இத்தாலியின் சிந்தனைச் சூழலில் பெரும் செல்வாக்குச் செலுத்தியவர் பெனிடிட்டோ குரோஸ். இவர் ஒரு தத்துவவாதி. 1866- இல் பிறந்தவர். இயற்கை விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்பட்ட நேர்க்காட்சிவாத அணுகல் முறையைக் கடுமையாகத் தாக்கினார். வரலாற்று மாற்றம், கலைப்படைப்பு ஆகியவற்றில் அகநிலைப்பண்பை முதன்மைப்படுத்தினார். மார்க்சைக் கற்கத் துவங்கிய குரோஸ், ஹெகலிடம் பற்றுக்கொண்டார். 18 ஆம் நூற்றாண்டு இத்தாலியச் சிந்தனையாளர் விகோவின் பாதிப்பும் இவரிடம் இருந்தது. இவர்களிடமிருந்து வரலாறு என்பது சமூகம், சிந்தனை முதலிய பல துறைச்சார்பு கொண்டது என்பதை அறிந்தார். வரலாறு என்பது மனித ஆன்மாவின் வரலாறுதான். வரலாற்று மாறுதல்கள், தனி மனிதர்களிடமும் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளிலுமே வெளிப்படுகின்றன. வரலாறு மனித சுதந்திரம் பற்றியது. வரலாற்றுக் கட்டங்கள் என்பவை மனித சுதந்திரத்தின் வளர்ச்சி நோக்கியவை. இத்தகைய கருத்துக்கள் கொண்ட குரோஸ், இறுதியில் எல்லாமே எப்படியோ சரியாகிவிடும் என்று நம்பினார்.  அரசியல், கலை, முதலிய மனிதச் செயல்முறைகள் அனைத்தும் தழுவியது வரலாறு என்பதோடு, பழமைக்கும் புதுமைக்கும், இறப்பு, நிகழ்வு, எதிர்காலம் ஆகியவற்றுக்கும் உள்ள உறவு முறை பற்றிய கருத்தாக்கத்தையும் குரோஸிடமிருந்து கற்றார் கிராம்சி. நேர்க்காட்சி வாதத்தின் வரையறைகளையும் அறிந்தார். சமகாலத்திய மார்க்சியவாதிகள் கற்பித்து வந்த இயந்திரவியல் வகைப்பட்ட மார்க்சியத்தின் போதாமையையும் அறிந்தார். பாஸ்போர் என்பவரின் சொற்பொழிவுகளிலிருந்தும், லேபிரியலோ என்பவரின் மார்க்சிய விளக்கங்களிலிருந்தும் பலவற்றைக் கற்றுக்கொண்டார். தனது சமகால சோசலிசவாதிகள் பலரைக் காட்டிலும் கலாச்சாரம் பற்றிய ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தார் கிராம்சி. குரோஸின் பாதிப்புக்களோடே மார்க்சியத்திற்கு வந்த கிராம்சி இறுதிவரை குரோஸின் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை என்பதாகவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.  மார்க்சியத்திற்கு எதிரான குரோஸின் கருத்துக்களை கிராம்சி விமர்சனம் செய்துவந்தார். இத்தாலிய வகைத் தாராள வாதத்தின் தத்துவவாதி குரோஸ். குரோஸின் தத்துவம், சிந்தனை வகைப்பட்டதாகவே இருந்தது. ஒருவர் எடுக்கும் தத்துவ நிலைப்பாடு இன்றியமையாமல் அரசியல் செயல்பாட்டில் முடிவு அடைய வேண்டும் என்று குரோஸ் நம்பவில்லை. ஆயினும் முதல் உலகப்போரின் போது சிந்தனையாளர் பலரும் குழம்பித் தவித்த நிலையில், இறுதியில் வரலாற்றின் அறிவார்ந்த தன்மை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த குரோஸைப் பாராட்டினார் கிராம்சி. குரோஸின் தத்துவம், பெரும் அளவுக்குச் செயல்முறைத் தத்துவத்தின் சிந்தனாவாத மொழிபெயர்ப்பு என்று பிற்காலத்தில் எழுதினார். குரோசுக்குத் தம் காலத்தவர் பட்ட கடனைப் பாராட்டினார் கிராம்சி. குறிப்பாக மதத்தின் உதவி இல்லாமல் மனிதன் வாழ முடியும் என்ற குரோசின் கூற்றைப் பெரிதும் பாராட்டினார். வரலாற்று வளர்ச்சியில் கலாச்சாரம், சிந்தனை, பெரும் சிந்தனையாளர்கள், அரசு ஆகியவற்றின் பங்கைப் பற்றி தங்கள் கவனத்தைத் திருப்பியவர் குரோஸ் என்று பிற்காலத்தில் தனது சிறைக்குறிப்பேடுகளில் எழுதினார்.  இதே காலத்தில் இத்தாலியில் சோசலிசக் கோட்பாட்டாளர் பலர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் பாராளுமன்ற நிறுவனங்களை விமர்சனம் செய்தனர். பிரஞ்சுக்காரராகிய ஜியார்ஜஸ் சொரேல் கருத்துக்களும் இத்தாலியில் இடம் பெற்றன. பாட்டாளி வர்க்கம் தனது சமூகத்திற்குப் புத்துயிர் கொடுக்கவல்ல அறிவியல் ஆற்றல் உள்ளது: சோசலிசம் தான் நிகழ்காலத்திற்கான சமயம், பண்பாடு. சொரேலின் இக்கருத்துக்கள் கிராம்சிக்கு ஏற்றவையாக இருந்தன. பாட்டாளி வர்க்கம் அரசியல், கலாச்சாரத் துறைகளில் தனது சொந்தக் கால்களில் வேர்களில் நிற்கவேண்டும் என்பதிலும், உரோம கத்தோலிக்க சமயம் போலவே வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக சோசலிசம் அமைய வேண்டும் என்பதிலும் சொரேலின் கருத்துக்களுடன் கிராம்சி உடன்பட்டார்.  1911 முதல் 5 வரை டியூரின் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது தீவிரமான சோசலிச அமைப்புக்களுடனும் உறவு கொண்டார் கிராம்சி. 1913இல் நடைபெற்ற கார் தொழிற்சாலை வேலை நிறுத்தமும், சார்டினியாவில் நடைபெற்ற தேர்தல் அனுபவங்களும் அவரை ஒரு சோசலிசவாதி ஆக்கின. பின்னர் சோசலிச இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பொழுது மார்க்சியவாதி ஆனார் கிராம்சி.  கட்சிப்பணி:  முதல் உலகப்போர்ச் சூழலில் இத்தாலிய சோசலிசக் கட்சிக்குள் கடுமையான பிளவுகள் ஏற்பட்டன. ஏற்கனவே இருக்கும் அரசியல், பொருளாதார அமைப்பின் உள்ளேயே சீர்திருத்தம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு பிரிவும், கட்சி முதலியவற்றைக் கட்டி வைத்தால் மார்க்ஸ் எதிர்பார்த்த வரலாற்று மாற்றம் நேர்ந்து விடும் என்ற வைதீக மார்க்சியப் பிரிவும் கட்சிக்குள் ஏற்பட்டன. முதல் உலகப் போரில் இத்தாலி நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கருத்தும் பிரிட்டன் பிரான்சுக்குச் சார்பாக இத்தாலி தலையிட வேண்டும் என்ற கருத்தும் கட்சிக்குள் ஏற்பட்டன. இவை தவிர, இத்தாலிய உழைப்பாளிகள் இயக்கத்தினுள் அராசகவாதிகளும் சின்டிகலிஸ்டுகளும் செயல்பட்டனர். இச்சமயத்தில் சோசலிச இயக்கத்தில் பங்குபெற்ற கிராம்சி, போரில் இத்தாலி தலையிட வேண்டுமென்று முசோலினியைப் போலவே தாமும் கருதலானார். முசோலினியை ஆசிரியராகக் கொண்ட அவந்தி முதலிய பத்திரிகையில் இவர் கட்டுரைகள் வெளியாயின. புரட்சிகரமான செயல்களுக்கு இப்சன், பிரான்டல்லோ முதலிய நாடக ஆசிரியர்களின்  பங்கைச் சிறப்பித்து எழுதினார். அரசியல் ரீதியான புரட்சிக்கு முந்திய கட்டத்தில் ஒரு புதிய கலாச்சாரச் சூழலின் தேவை பற்றி நிறைய எழுதினார். தொழிலாளர்கள் ஒரு புதிய நாகரிகம், வாழ்க்கை முறை பற்றிய கல்வியைப் பெற வேண்டும். தத்துவம், வரலாறு, கலைப்படைப்பு முதலிய பல துறைகளிலும் தொழிலாளர்கள் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். இவ்வாறு அவரது தனித்த சிந்தனைகளை அவர் கட்டுரை வெளிப்படுத்தின. இவற்றோடு கலாச்சாரத்திற்கும் அரசியலுடன் கலாச்சாரம் கொள்ளும் உறவிற்கும் அவர் முக்கியத்துவம் தந்தார். இவற்றுடன் மார்க்சியத்தின் அடிப்படை பிரச்சனைகள் பலவற்றிலும் அவர் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.  1917 பிப்ரவரி ரஷ்யப் புரட்சியைக் கிராம்சி வரவேற்றார். போல்சுவிக் கட்சி, லெனின் பங்கு ஆகியவற்றைப் பெரிதும் வரவேற்றார். 1917 க்கு முன் லெனின் படைப்புக்கள் இத்தாலிக்கு வந்து சேரவில்லை. 1917 அக்டோபர் புரட்சி, பூர்சுவாப் புரட்சியைக் கடந்து பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மலர்வதன் சாத்தியத்தை அறிந்து கொண்டார். ரஷ்யப் புரட்சி மார்க்சின் மூலதனத்துக்கு எதிரானது என்று எழுதினார் கிராம்சி போல்சுவிக்குகள் மார்க்சின் சில வரையறைகளை மறுத்த போதிலும் மார்க்சின் உயிர்ப்பைச் செயல்படுத்தி உள்ளனர் என்று பாராட்டினார். இக்காலத்தில் தான் அவரது சிந்தனையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல்களைப் புரிந்து கொண்டு புரட்சி செய்வது என்பதற்கு மாறாக, சூழல்களைப் புரிந்து கொள்ளவே புரட்சி செய்தாக வேண்டும் என்ற கருத்திற்கு வந்து சேர்ந்தார். இக்காலத்தில் இத்தாலிய சோசலிசக் கட்சியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக கிராம்சி இருந்தார்.  போரின் முடிவில் ஏற்பட்ட பொருளியல், சமூக, அரசியல் சீர்குலைவின் காரணமாக 1922 ன் முடிவில் முசோலினி பதவிக்கு வந்தார். 1919 20 காலத்தில் சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புக்கள் மிகுந்திருந்தன. தொழிற்சங்க உறுப்பினர் தொகை 20 இலட்சமாக உயர்ந்தது. 1919 தேர்தலில் சோசலிசக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்தது. புரட்சி பற்றிய அச்சம் சில வட்டாரங்களில் மிகுந்தது. பொருளியல், அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளைப் பாராளுமன்றக் குடியாட்சி முறை தீர்க்கமுடியாமல் திணறியது.  இந்தச் சூழலில் கிராம்சி தன் நண்பர்களுடன் சேர்ந்து “புதிய அமைப்பு” (Ordine Nuovo) என்ற பத்திரிகையை வெளியிட்டார். சோசலிசக் கட்சித் தலைமையை, புரட்சிகர நோக்கிலிருந்து கடுமையாக விமர்சனம் செய்தார். கிராம்சி தனது சிந்தனைகளை இதில் வெளியிட்டார். மார்க்சியம் சித்தாந்தப் பிரச்சனைகளும் இவ்விதழில் விவாதிக்கப்பட்டன.  டியூரின் நகரத்தில் பெரும் அளவிலிருந்த கார் தொழிற்சாலைகளில் போர்க்காலத்தில் தொழிற்சங்கங்கள் வலிமை பெற்று இயங்கின. இவற்றுடன் தொழிற்சாலை ஆலோசனைக் குழுக்களும் (Factory Councils) வலிமையோடு இருந்தன. சோவியத் புரட்சியில் சோவியத்துகள் வகித்த பங்கினை இந்த ஆலோசனைக் குழுக்கள் ஆற்ற முடியும் என்று கிராம்சி நம்பினார். இந்த ஆலோசனைக் குழுக்கள் புரட்சிகர இயக்கத்தின் கருவாக அமைவதோ, எதிர்கால சமூகத்தின் உருவமைப்பு ஆகவும் திகழமுடியும் என்று நம்பினார். இவை தொழிலாளர்க்கான கல்வி மையங்களாகவும், சோசலிச ஆய்வு மையங்களாகவும் செயல்பட முடியும். இந்தக் குழுக்கள் தொழிற்சங்க இயக்கத்தில் ஏற்பட்டுவிடக் ககூடிய அதிகார வர்க்க அமைப்பிற்கு மாற்றாகவும் அமைய முடியும். இத்தகைய அமைப்புகளுடன் உறவு கொண்ட கட்சிதான் புரட்சிகரக் கட்சியாக இருக்கமுடியும். இந்தக் குழுக்களுக்குள் தொழிலாளர்களின் இயங்கு சக்தி முழுமையாக வெளிப்படும். இவற்றின் மூலமே எதிர்கால கம்யூனிசச் சமூகம் உருவாக முடியும். இவற்றின் வழியேதான் கட்சி செயல்பட முடியுமே ஒழிய இவற்றிற்குப் புறம்பாக இருந்து இவற்றை ஆளுவதால் அல்ல. இம்முறையில்தான் சுதந்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை தீரும். தன்னியக்கமும் ஒழுங்கும் வளரும். இந்தக் குழுக்களில் தொழிற்சங்க உறுப்பினர்களோடு நிறுவன அமைப்பில் வராத பிற தொழிலாளர்களும், கட்சி ஆதரவாளர்களும் பங்கு பெற முடியும். நிச்சயம் இத்தகைய ஆலோசனைக் குழுக்களை, இறுக்கமான கட்சி அமைப்பை விரும்பக் கூடியவர்களும் பொருளாதார வாதத்திற்கு ஆட்பட்ட தொழிற்சங்கவாதிகளும் விரும்ப மாட்டார்கள் என்பது உறுதி.  இத்தகைய தொழிற்சாலைக் குழுக்களை, டியூரினல் வலிமை பெற்றிருந்த உலோகத் தொழிற்சாலைத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். சீர்திருத்தவாதிகளுக்கும் புரட்சிவாதிகளுக்கும் கூட இக்கருத்து உடன்பாடில்லை. டியூரின் நகரைத் தவிர வேறு நகரங்களில் இக்குழுக்கள் ஆக்கம் பெறவில்லை.  கிராம்சியின் கருத்தை சோசலிசக் கட்சியில் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகிய போர்டிகா (Bordiga) கடுமையாக எதிர்த்தார். சிறிய, தனக்குள் முற்றிலுமான இணக்கம் கொண்ட, விட்டுக் கொடுக்காத, ஒரு புரட்சிகரக் கட்சியையே போர்டிகா உருவாக்க விரும்பினார். கிராம்சி போன்ற அறிவாளிகளின் செல்வாக்கு சோசலிச இளைஞர் பேரவையில் ஏற்படுவதை போர்டிகா விரும்பவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கிராம்சியும் போர்டிகாவும் எதிர் துருவங்களிலிருந்து இயங்கலாயினர்.  இதற்கிடையில் இத்தாலியின் அரசியல் நிலைமைகள் ஒரு புரட்சிகர நிலைமையை நோக்கி விரைந்தன. 1919 அக்டோபரில் கூடிய சோசலிசக் கட்சிப் பேரவை கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தனது இணைப்பை உறுதிப்படுத்தியதுடன், உடனடியாக சோவியத்துகளை உருவாக்கக் கோரியது. நிகழ்ச்சிகளின் வேகத்தோடு ஒத்து கட்சி இயங்கவில்லை. ஆளும் வர்க்கம் சோசலிசக் கட்சியை முறியடிக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்கத் தொடங்கியது. டி.யூரின் தொழிலதிபர்கள் ஆலைக் குழுக்களை அங்கீகரிக்கவில்லை. தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடங்கினர். முதலாளிகள் தொழிற்சாலைகளை மூடினர். பெரும் அளவில் துருப்புக்களை அரசு அனுப்பியது. தொழிற்சாலைகளைத் தொழிலாளர்கள் ஆக்ரமித்தனர். தென் மாநிலங்களில் உழவர்கள் நிலங்களை ஆக்ரமித்தனர். நாணய மதிப்பு வீழ்ந்தது. பொருளாதாரச் சிதைவு முழு அளவில் நேர்ந்தது. புரட்சிக்கான எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. இச்சமயத்தில் தொழிலதிபர்களுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கட்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. இதை ஏற்படுத்தியது அரசு. தொழிற்சங்க உறுப்பினர்களுக்குச் சலுகைகள், தொழிற்சாலை நிருவாகத்தில் பங்கு முதலியவை வழங்கப்பட்டன. அரசின் கட்டமைப்பில் தொழிற்சங்கங்கள் இணைந்திருப்பதற்கான முயற்சி வெற்றி பெற்றது, கிராம்சி அஞ்சியது நிறைவேறியது. ஆலைக் குழுக்கள் பற்றிய முயற்சி படுதோல்வி அடைந்தது. சீர்திருத்தவாதம் வெற்றி பெற்றது.  கிராம்சியின் கருத்தாக்கங்கள் பல கட்சியிலிருந்தும், தலைமையிலிருந்தும் அவரை ஒதுக்கின. போர்டிகாவின் தலைமைக்கு ஆதரவு பெருகியது. 1921 சனவரியில் கூடிய கட்சிப் பேரவையில் கட்சி உடைந்தது. போர்டிகாவின் முயற்சிகள் நிறைவேறின. கட்சியின் மத்தியக்குழுவில் கிராம்சி சேர்க்கப்பட்டார். ஆனால் நிருவாகக் குழுவில் இடம்பெறவில்லை. போர்டிகாவின் கட்சி அமைப்பு பற்றிய கருத்தாக்கத்தைத் தற்காலிகமாக கிராம்சி ஏற்றுக்கொண்டார்.  1921-22 இல் பாசிசக் கட்சி தொடர்ந்து வலிமை பெற்றது. கமயூனிஸ்டுகளுக்கும் சோசலிஸ்டுகளுக்கும் எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தியது. தொழிலாளர் இயக்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே பெரும்பணி ஆயிற்று. சோசலிச அரசு ஏற்படுவதற்கான நம்பிக்கை மங்கத் தொடங்கியது. பாசிசத்திற்கு எதிரான இயக்கத்தில் தொழிலாளர்களின் பிற இயக்கங்களை இணைத்துக் கொள்வது கூடாது என்பதில் போர்டிகா தொடர்ந்து பிடிவாதம் கொண்டிருந்தார். 1922 மே மாதத்தில் கோமின்டர்ன் பிரதிநிதி என்ற முறையில் கிராம்சி மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டார்.  1922 அக்டோபரில் முசோலினி பிரதமரானார். பாசிச ஆட்சிக்காலம் தொடங்கியது. மாஸ்கோவில் உடல்நலக் காப்பகத்தில் கிராம்சி இருந்தபோது கியூலியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் கிராம்சி. 1924 மே மாதத்தில் இத்தாலிக்குத் திரும்பினார். கம்யூனிஸ்டுகளைப் பாசிஸ்டுகள் கடுமையாக வேட்டையாடிய காலத்தில் கிராம்சி பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி பிற அமைப்புகளோடு கூடி பாசிசத்தை எதிர்க்க வேண்டுமென்ற அகிலத்தின் போர்த் தந்திரம் போர்டிகாவுக்கு உடன்பாடில்லை. இந்நிலையில் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிராம்சிக்கு வந்து சேர்ந்தது. 1920-ல், தான் கைதாகும்வரையில் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சி, அகிலம் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் கிராம்சி.டியூரின் அனுபவம் தோற்றதற்கான காரணம், தேசிய அளவில் வலிமை வாய்ந்த, தனக்குள் இறுக்கம் கொண்ட ஒரு கட்சி இல்லாததுதான் என்ற முறையில் கட்சியை உருவாக்க முயன்றார் கிராம்சி. சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான செராட்டியும் அவர்களைச் சார்ந்தவர்களும் கிராம்சியின் முயற்சியால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்து சேர்ந்தனர்.  தொடக்கத்திலிருந்தே பாசிசத்தின் தோற்றத்தை, பூர்சுவா அரசின் தோல்வியாகவும் சிதைவாகவும் கிராம்சி மதிப்பிட்டார். முதலாளிய வன்முறையின் சட்டத்திற்குப் புறம்பான வடிவம் பாசிசம். போரால் பாதிக்கப்பட்ட பூர்சுவா பொருளாதாரக் கட்டமைப்பைக் காக்கவும், ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் முதலாளியம் கண்டுபிடித்த இறுதி வடிவம் பாசிசம். இந்தப் பாசிசத்தின் ஆதரவுச் சக்தியாக இருந்தவர்கள் நிலக்கிழார்களும் முதலாளிகளும் சிறு முதலாளிய வர்க்கமும் என்று மதிப்பிட்டார் கிராம்சி. பூர்சுவா வர்க்கம் தன்னைக் காப்பாற்ற இதுவரை அது உருவாக்கிய அரசமைப்பை அது அழித்திருக்கிறது. சீர்திருத்தவாதிகளில் சிலர் கருதியது போல இது புரட்சி அல்ல. பூர்சுவாக்களின் இந்தச் சர்வாதிகாரம் விரைவில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிதிறக்கும் என்று கிராம்சி மதிப்பிட்டார்.  ஆனால் கிராம்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சிறு குழு அளவிலேயே எஞ்சியது. இதே சமயத்தில் சர்வதேசக் கம்யூனிஸ்டு இயக்கமும் சில பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. ஜெர்மன் புரட்சி /1923 இல் பெரும் தோல்வியுற்றது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் ட்ராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு சர்வதேச இயக்கத்தில் பெரும் பிரதிபலிப்புகளைத் தோற்றுவித்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படும் பிளவு, உலக அளவில் கட்சித் தலைமை பற்றிய அவநம்பிக்கையைப் பாட்டாளிகள் மத்தியில் ஏற்படுத்தி விடும் என்று அஞ்சினார் கிராம்சி. தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இயக்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்தினார் கிராம்சி. ரஷ்யாவில் அதிகார வர்க்க வளர்ச்சியைப் பற்றிய ட்ராட்ஸ்கியின் பார்வையோடு கிராம்சிக்கு உடன்பாடு இருந்தது. நீங்கள் கட்சியைக் கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். லெனின் தலைமையில் உருவான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் நெறிகாட்டுத் திறத்தை அழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தனிநபர் சண்டைகளுக்கு இடையில் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று கிராம்சி ரஷ்யத் தலைவர்களுக்கு எழுதினார். அச்சமயம் டோக்கியாலிட்டி மாஸ்கோ போய்ச் சேர்ந்தார். ரஷ்யத் தலைவர்கள் பற்றிய கிராம்சியின் விமர்சனத்தை போக்கியாலிட்டி ஏற்கவில்லை.  சிறைப்படல்:  கிராம்சி 926 நவம்பர் 8 ஆம் தேதி கைதானார். முன்பே வெளிநாட்டில் அவர் புகலிடம் தேடவேண்டும் என்று நண்பர்கள் கூறிய அறிவுரையை அவர் ஏற்கவில்லை. மனைவி மாஸ்கோ திரும்பினார். முதலில் கிராம்சி மிலானில் விசாரிக்கப்பட்டார். குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை. பின்னர் உரோமில் விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது அரசுத்துறை வழக்குறைஞர் முசோலினியை மேற்கோள் காட்டிக் கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு இவர் மூளை சிந்தனை செய்வதைத் தடுக்க வேண்டும்”, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சார்டீனிய கட்சித் தலைவர் ஒருவருக்கு எழுதிய கிராம்சியின் கடிதம் போலீஸ் தரப்பில் சான்றாக வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போர், கொள்ளையிடல் முதலியவற்றைத் தூண்டும் வகையில் கிராம்சி ஒரு கூட்டத்தில் பேசியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. கிராம்சி இதை மறுத்தார். ஆயினும் இறுதியில் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.  பத்தாண்டுக்காலச் சிறை வாழ்வின் போது அவர் பட்ட துன்பங்கள் அளவற்றவை. மன்னிப்புக் கோரினால் விடுதலை கிடைக்கும் என்ற முசோலியின் நிலைபாட்டை இறுதிவரை கிராம்சி ஏற்கவில்லை. ரஷ்யாவில் கைதான கத்தோலிக்கப் பாதிரியார்களுக்குப் பதிலாக கிராம்சியைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்ற சோவியத் ரஷ்யாவின் ஆலோசனையை முசோலினி ஏற்கவில்லை. மன்னிப்பு தன் உடலைக் காக்கலாம். ஆனால் தன் ஆன்மாவைக் கொன்றுவிடுமே என்று கேட்டார். கிராம்சி தற்கொலையைத் தேர்ந்து கொள்ளவில்லை. அவர் அனுபவித்த நோய்கள் பற்பல.  அடிக்கடி மயங்கி விழுந்தார். பலமுறை நினைவு மறதிக்கு ஆட்பட்டார். வலது நுரையீரல் காசத்தால் பாதிக்கப்பட்டுப் பலமுறை இரத்த வாந்தி எடுத்தார். அவரது பற்களெல்லாம் விழுந்து விட்டன. தொடர்ந்து பல மாதங்கள் எழுதக் கூட முடியவில்லை. இறுதியாக அவரைப் பார்த்தவர்களுக்கு அவர் ஒரு நிழல் உருவம் போலத் தென்பட்டார். இறுதியாக உடல் நலக்கேடு கருதி தற்காலிகமாக விடுதலை செய்யப்படும் தருவாயில் 1937 ஏப்ரல் 27 இல் 46 ஆவது வயதில் அவர் காலமானார்.  முசோலினியின் விருப்பம் நிறைவேறவில்லை. சிறையில் பல சிரமங்களுக்கு இடையில் தொடர்ந்து பத்தாண்டுகளில் 33 குறிப்பேடுகளில் அவர் தமது சிந்தனைகளை வடித்தார். அச்சில் அவை பிறகு 2350 பக்கங்களில் வெளியிடப்பட்டன. வரலாறு, தத்துவம், அரசியல், இலக்கியம் பற்றியும் அவர் தன் கொழுந்தி பாட்டியானாவுக்கு எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும். சிறையில் சிறை அதிகாரிகள் அனுமதித்த அளவுக்கே அவரால் படிக்க முடிந்தது. வெளி உலகில் மனிதர்களைப் பார்க்க வேண்டும் என்ற பேராசை அவரைப் பெரிதும் துன்புறுத்தியது. இத்தாலிய அறிவாளிகளின் வரலாறு பற்றியும், மொழியியல் ஒப்பாய்வு பற்றியும் பிரான்டல்லோ பற்றியும், மிக விரிவாக அவர் எழுதத் திட்டமிருந்தார். அவர் திட்டமிட்டிருந்தது நிறைவேறவில்லை. ஆனால், அவை பற்றியெல்லாம் அவரது சிறைக் குறிப்பேடுகளில் (Prison Note Books) நிறையக் குறிப்புகள் இடம்பெற்றன. சிறைக்குறிப்பேடுகள்:  சிறைக் குறிப்பேடுகளில் மார்க்சியத்தை செயல்முறைத் தத்துவம் (Philosophy of Praxis) என்று குறிப்பிடுகின்றார், கிராம்சி. லெனின், ஸ்டாலின் முதலியவர்களின் பெயர்களைச் சிறை அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்காக மாற்றிக் கொள்கிறார். செயல்முறைத் தத்துவம் என்ற மார்க்சியத்தை அவர் குறிப்பிட்டது மிகவும் சரியாகப் பொருந்தும். குரோசின் வரலாற்றியலை அவர் முற்றிலுமாக ஒதுக்க முடியவில்லை. அவருக்குள் குரோசுக்கும் லெனினுக்கும் இடையில் இடைவிடாத விவாதம் நடைபெற்றது. லெனினின் கோட்பாடும் நடைமுறையும் அவரைப் பெரிதும் பாதித்தன. அவரது மேலாண்மை (Hegemony) என்ற கருத்தாக்கம் அவர் லெனினிடமிருந்து பெற்றதுதான். கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகள் நடைமுறைகளை இத்தாலியின் வரலாற்று மொழியில் தந்ததுதான் தனது புதிய அமைப்பு இதழின் கடமையாக இருந்தது என்று குறிப்பிட்டார் கிராம்சி. மார்க்சியத்தை அவர் இத்தாலியச் சூழலுக்கு உரியதாக உருவாக்க முயன்றார். பிற மார்க்சியவாதி எவரைக் காட்டிலும் மார்க்சியத்தின் வரலாற்றுப் பரிமாணத்திலும், அதன் கலாச்சாரப் பரிமாணத்திலும் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டார். இத்தாலிய சோசலிசக் கட்சியின் சித்தாந்தத்திலும் நடைமுறையிலும் ஏற்பட்ட தவறுகள், நேர்க் காட்சிவாதத்துடனும் வறட்டுப் பொருள்வாதத்துடனும் அவர்கள் கொண்ட உறவு என்று விமர்சனம் செய்தார்.  புகாரின் திறனாய்வு:  வரலாற்றுப் பொருள் முதலியல் கோட்பாடு என்ற புகாரின் நூல் 1921- இல் ரஷ்யாவில் வெளிவந்தது. இதன் பிரஞ்சு மொழிபெயர்ப்பு 1927-ல் வந்தது. இந்த நூல் பற்றிய விமர்சனங்கள் கிராம்சியின் சிறைக்குறிப்புகளில் இடம் பெறுகின்றன. கிராம்சி விமர்சனம் எழுதிய அதே காலத்தில் புகாரின் ரஷ்யாவில் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகி பிறகு சில ஆண்டுகளில் விசாரணை செய்யப்பட்டுக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டார். மார்க்சியம் தேங்கிவிடக்கூடாது என்பதிலும் உழவர்கள் பங்கு பற்றிய பிரச்சனையிலும் புகாரின் கொண்டிருந்த கருத்தையே கிராம்சியும் கொண்டு இருந்தார். புகாரின் பற்றிய கிராம்சியின் விமர்சனத்திலிருந்து, கிராம்சியின் மார்க்சியம் பற்றிய விளக்கங்களைத் தெளிவாக அறிய முடிகிறது.  புகாரின் மார்க்சியத்தை வரலாற்றியல் கோட்பாடு என்பதைவிட சமூகவியல் கோட்பாடாக மதிப்பிட்டார். இயற்கை விஞ்ஞானம்தான் பிறவகையான அறிவுத்துறைகளுக்கான அடிப்படை வரையறைகளைத் தருகிறது என்கிறார் புகாரின். இயங்கியல் என்பதை, சக்திகளின் சமநிலை என்ற இயந்திரவியல் கோட்பாடாக விளக்கினார். இவ்வகை விளக்கங்களைக் கடுமையாக மறுத்தார் கிராம்சி. வரலாற்றியல், அரசியல் தரும் விவரங்களைத் தொகுத்து ஏற்கனவே இயற்கை விஞ்ஞானம் தந்த நேர்காட்சிவாத வரையறைகளின் அடிப்படையில் செயல்படும் சமூகவியல், இயங்கியல் தன்மை உடையதாக இருக்கமுடியாது என்றார் கிராம்சி. பிற துறைகள் பலவற்றையும் தழுவியது வரலாறு தானே ஒழிய, சமூகவியல் அல்ல. சமூகவியலின் அடிப்படையாக உள்ளது வறட்டுத்தனமான பரிணாம அடிப்படை வாதமே. அளவியல் மாற்றம், குணவியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதை சமூகவியல் அறியாது. வரலாற்றியல் வளர்ச்சிகள் முன்னைய திட்டப்படி அவ்வாறே நடைபெறக் கூடியவை அல்ல. மனிதர் தன் வரலாற்று நிகழ்ச்சிகளில் தம் செல்வாக்கைப் பயன்படுத்த முடியும். இதைச் சமூகவியல் விளக்க முடியாது. புரட்சி அதற்கான தயாரிப்புக் கட்டத்தில் மக்கள் திரளின் உணர்வில் ஆழ்ந்த மாற்றங்களை உருவாக்குதலோடு தொடர்புடையது. இதற்குப் பிறகு அவர்களின் ஆற்றல் மிக்க சக்திகளாகிறார்கள். இதனை இயந்திரவியல் முறையில் வகுத்துவிட முடியாது. கிராம்சியின் அரசியல் தத்துவத்தில் இப்பண்பு முக்கிய இடம் வகிக்கிறது.  கிராம்சியின் கருத்தின்படி மனித அனுபவத்தில் முதன்முறையாக வாழ்க்கை சிந்தனை ஆகியவற்றின் அனைத்துத் துறைகளையும் வரலாறு, தத்துவம், அரசியல், விஞ்ஞானம் முதலிய அனைத்தையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தது, செயல்முறைத் தத்துவமாகிய மார்க்சியம்தான். இது ஒரு ஒருங்கிணைந்த, முதன்மையான தத்துவம். வரலாற்றுக் கட்டத்திலும், உலகச் சிந்தனையிலும் இது ஒரு புதிய கட்டத்தைத் திறந்திருக்கிறது. மரபு முறைப்பட்ட கருத்து முதலியல், பொருள் முதலியல்களுக்கு அப்பால் இது செல்லுகிறது. அதேசமயம் பழஞ்சமூகங்களின் தத்துவங்களிலுள்ள உயிர்த்தன்மையை இது தனக்குள் தாங்கியிருக்கிறது. இயங்கியலின் உண்மையான பொருள் இது என்று விளக்கினார்.  இயங்கியல்:  இயங்கியலின் பல பண்புகளை விளக்கும்போது கிராம்சி குறிப்பிடுகிறார் : செயல்முறைத் தத்துவம், ஹெகலியத்தின் சீர்திருத்தமும் வளர்ச்சியுமுமாகும். வறட்டுத்தனமான சித்தாந்தப் பண்புகளிலிருந்து விடுதலை பெற்ற விடுவிக்கப்பட்ட தத்துவம் இது. தத்துவவாதி தனிநபர் என்ற முறையிலும், ஒரு முழுமையான சமூகக் குழு என்ற முறையிலும் தன்னைப் புரிந்து கொள்கிறார். சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதோடு, முரண்பாட்டில் ஓர் அம்சமாகத் தன்னைக் கண்டு இந்த அம்சத்தை அறிவுக் கோட்பாடாகவும் அதே சமயத்தில் செயல்வகைக் கோட்பாடாகவும் உயர்த்துகிறவர் தத்துவவாதி.  கிராம்சியின் பார்வையில் இந்த அம்சம் மார்க்சியத்தின் மையப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று. வறட்டுத்தனமான மார்க்சியம் புகாரின் கோட்பாட்டையும் இதில்தான் சேர்த்தார் கிராம்சி அறிவியல், சட்டம், தத்துவம், கலை, சிந்தனைத் துறை முதலிய அனைத்தையும் உள்ளடக்கிய மேற்கட்டு, பொருளாதாரக் கட்டமைப்பால் நேரிடையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிறது. ஆனால், கிராம்சி வரலாற்றுப் போக்கில் சிந்தனைக்கும் தனிமனிதர்க்கும் அதிகமான பங்கு இருப்பதை வலியுறுத்துகிறார். இதை விளக்கும் முறையில்தான் அளவியல் மாற்றம் குணவியல் மாற்றமாகிறது என்ற ஹெகலியக் கோட்பாட்டை தனிமனிதர்க்கும் பயன்படுத்துகிறார் கிராம்சி. பொருள் வகை மாற்றங்கள் மனிதர்களின் உணர்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை இவ்வாறு குறிப்பிடுகிறார். திரும்ப இவை பொருளியல் மாற்றத்தைச் செய்கின்றன. நீர் ஆவியாவதற்கு, புறத்திலிருக்கும் வெப்பம் காரணமாகிறது. மனிதர்களைப் பொறுத்தவரை, புறந்தூண்டுதல் என்பது எது? பௌதிகச் சக்திகள் இத்தகைய  தூண்டுதலாகிவிட முடியாது. இவ்வகை இயக்கத்திற்கு, மனிதன் தன்னுணர்வோடு தனது ஆற்றலை வழங்குவதன் மூலம் தன் பங்கைச் செலுத்துகிறான். ஒரு புதிய உணர்வு இம்முயற்சியில் எழுகிறது. இவ்கை விளக்கத்திற்கு கிராம்சி மார்க்சிடமிருந்து பொருத்தமான மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார். அரசியல் பொருளாதார விமர்சனம் என்ற நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார். உற்பத்திச் சக்திகள் அனைத்தும் தமக்கான முழு வளர்ச்சி பெறும் வரையில் எந்தச் சமூக அமைப்பும் தானாக அழிவது இல்லை. பழைய சமூகத்தின் கருப்பையில் அதன் பொருளியல் நிலைமைகள் முற்றாக முதிர்ச்சியுறும் வரையில் புதிய உயர்நிலை உற்பத்தி உறவுகள் தோன்றுவதில்லை. ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் சிக்கலான நிலையையும் அதற்குள் உள்ள அதுவரை அறியாத சாத்தியப்பாடுகள் பற்றியும் விளக்குவதற்கு மேற்கண்ட மேற்கோளை கிராம்சி பயன்படுத்தினார். புரட்சிகர மாற்றம் பற்றி மார்க்ஸ் எழுதியவற்றிலிருந்து மேலும் ஒரு மேற்கோள்: இத்தகைய புரட்சிகர மாற்றங்களை ஆராயும்போது, உற்பத்திக்கான பொருளாதார நிலைமைகளின் பொருளியல் மாற்றத்திற்கும் இவற்றை இயற்கை விஞ்ஞானத்தில் செய்வது போல திடமாகத் தீர்மானிக்க முடியும். சட்டம், அரசியல், சமயம், கலையியல், தத்துவம் சுருக்கமாக சித்தாந்த வடிவங்களுக்கும் இவற்றில் மனிதர் இந்தப் போராட்டத்தைப் பற்றிய உணர்வு, பெற்று, போராடித் தீர்க்கிறார்கள் இடையில் ஒரு வேறுபாட்டை எப்போதும் செய்து கொள்ள வேண்டும். இதுபோலவே எங்கல்ஸ் எழுதியிருந்ததைப் பற்றியும் கிராம்சி அறிந்திருந்தார்.  இம்முறையில், அடித்தளமும் மேற்கட்டும் ஒன்றை மற்றது பாதிக்கிறது. இதுதான் உண்மையான இயங்கியல். இம்முறையில் மதிப்பிட்ட கிராம்சி, பொருளாதாரச் சூழலுக்கும் அறிவுத்துறை வளர்ச்சிக்கும் இடையில் திட்டவட்டமான இணைப்பை நிறுவும் சாத்தியப்பாடு இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.  வரலாற்று விளக்கம்:  இக்கருத்தைத் தனது சிறைக் குறிப்பேடுகளில் மேலும் வளர்த்தார் கிராம்சி. சமூகத்தில் நெடுங்கால அளவிலான நிகழ்வுகளை ஒருங்கிணைந்த இயக்கங்கள் (Organic movements) என்றும், சில சந்தர்ப்பங்களில், உடனடியாக, தற்செயலாக நடைபெறுவதை தனி அல்லது தற்காலிக நிகழ்வுகள் (Conjuctural movements) என்றும் வேறுபடுத்தினார். வரலாற்றுக் கட்டத்தை ஆராயும் பொழுது இந்த வேறுபாட்டின் முக்கியம் புலப்படும் என்றார் கிராம்சி. பல பத்தாண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு நெருக்கடி நிகழ்கிறது. இதற்குள் தீர்க்கமுடியாத கட்டமைப்பு வகைப்பட்ட முரண்பாடுகள் எழுகின்றன.  இருக்கும் நிலைமைகளைக் காக்க விரும்பும் அரசியல் சக்திகள், சில குறிப்பிட்ட எல்லைகளில் பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கின்றன. இம்முயற்சிகள் தற்காலிக வகையானவை. நிரந்தரமானதும், தற்காலிகமானது மானவற்றுக்கிடையிலான உறவைத் தீர்மானிப்பது சிரமம். தற்காலிகச் செயல்பாடுகள் தீர்க்கமானவை என்பது போன்ற கருத்துக்கள் சில சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. இப்படி விளக்கினார் கிராம்சி. ஏற்கனவே லெனின் கூறியபடி பொருளாதாரச் சக்திகளால் தீர்மானிக்கப்படும் வரலாற்று வரையறைக்குள் நிகழக்கூடிய ஏற்றத்தாழ்வு அலைகள் என்ற கருத்தாக்கத்திற்கு ஏற்ற கருத்து கிராம்சியினது.  இவற்றின் தொடர்பாக Historicalblock என்ற கருத்தை உருவாக்கினார் கிராம்சி. இது தொடர்ந்து திட்டவட்டமான விளக்கம் தரவில்லை என்றபோதிலும் அவரது குறிப்புக்களிலிருந்து கிடைக்கும் விளக்கம் பின்வருமாறு:  ஒரு புரட்சிகரமான சூழலை உருவாக்கும் முறையில் புறநிலை, அகநிலைச் சக்திகளின் ஒருங்கிணைந்த ஒரு சந்தர்ப்பத்தை இத்தொடரால் கிராம்சி குறிப்பிட்டதாகத் தெரிகிறது. பழைய சமூகத்தின் கட்டமைப்பு சிதைவுறும் சமயத்தில் மன உறுதியும் தீர்மானமும் வரலாற்று அளவில் தெளிவும் உடைய மனிதர்கள், இந்தச் சூழலைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்படிக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. பொருள்வகைச் சக்திகளை உள்ளடக்கமாகவும், சித்தாந்தங்களை உருவமாகவும் கொண்டுள்ள Historical block என்றும் கிராம்சி குறிப்பிட்டு இருக்கிறார். அடித்தளம் மேற்கட்டின் இணைவையும் இப்படிக் குறிப்பிடுகிறார். தனி மனிதனுக்குள் இத்தகைய ஒரு கூட்டிணைவு நேர்வதை இயங்கியல் முறையில் விவரிக்கிறார் கிராம்சி: சமூகத்திலும் இது நேர்வதையும் விளக்குகிறார். மனிதர் தம் ஆளுமையைத் தாமே உருவாக்குகிறார்கள். தமது மன உறுதிக்குக் குறிப்பிட்டதொரு ஆளுமை நோக்கிய திசை வழியைத் தாமே தருவதன் மூலமும், தனது சொந்தத் திறன்கள் வரையறைகளின் அளவில், இந்த மன உறுதியை நிறைவேற்றுவதற்கான ஒட்டுமொத்தமான நிலைமைகளில் மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலமும் மனிதர் தம் ஆளுமையை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்றார் கிராம்சி.  பிராய்ட் பற்றி:  சிறை வாழ்வின் துன்பங்களுக்கிடையில் இடைவிடாது படிப்பதையும் எழுதுவதையும் மேற்கொண்டிருந்தார் கிராம்சி. மாஸ்கோவில் இருந்த துணைவியார் அடிக்கடி மனநோய்க்கு ஆளாயினார். அப்போது அவர் பற்றி டாடியானாவுக்கு எழுதிய கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை. பிராய்டை அவர் படித்திருந்தார். பிராய்டியக் கோட்பாடுகளின் பயன்பாட்டு எல்லைகள் குறுகியவை என்று எழுதினார். மனைவியின் மனநோய் பற்றி எழுதியபோது குறிப்பிட்டார்: ரொமான்டிக் இலக்கியங்களில் இகழப்பட்டவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்படும் சமூகப் பகுதியினர்க்கே உளவியல் பகுப்பாய்வு முறை உதவலாம் என்று கருதுகிறேன். நவீன கால வாழ்வின் இரும்புப் பிடிப்பிற்குள் சிக்குண்ட தனி நபர்கள் இப்படிச் சிக்குண்ட நிலையில் ஒரு புதிய அறிவியல் சார்ந்த நிலைக்கு வர இயலாதவர்கள் இத்தகையவர்க்கே உதவி செய்ய முடியும். வரலாற்றின் சில குறிப்பிட்ட கட்டங்களில் சில குறிப்பிட்ட சூழல்களில் நிலைமை கடும் மோதலுடையது ஆகிறது. மிகக் கடுமையான கூர்மையான நெருக்கடிகள் நேரும்பொழுது அசுரத்தனமான கூட்டுச் சக்திகள் வெளியிடப்பெற்று அவை தனி நபர்களைத் தாக்கி நெருக்கும்போது இத்தகைய நிலைமைகள், மிக நுட்பமான உன்னதமான மனநிலையுடைவர்களுக்கு பெருந்தீங்கு விளைவிக்கின்றன. ஆனால் பண்பாடு மிக்க சமூகத்தில் செயல் திறனுள்ள மனிதன் தன்னைத்தானே சிறந்த முறையில் உளப்பகுப்பாய்வு செய்துகொள்ள முடியும்.  இன்னொரு கடிதத்தில், இகழப்பட்டவர்கள், வேதனைக்குள்ளாக்கப் பட்டவர்கள் இவர்களை உளவியல் நெருக்கடிகள் பாதிப்பதோடு, பழமையான பழக்கவழக்கங்கள், பழைய முறைச் சிந்தனைகள் என்ற படிவுகளோடு கூடிய மன இயல் போக்குள்ள தனிநபர்களுக்கும் அவர்களிடம் சமூகம் கோரும் கடமைகளுக்கும் இடையில் மோதல் நேரும்பொழுதும் இத்தகைய மன இயல் நோய்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டார். இந்தப் பிரச்சனைகளில் ஆபத்தான முறையிலேயே தீர்க்கப்படுகின்றன. அடக்கப்பட்ட உணர்வுகள் நோய்க் கூறான முறையில் வெடிக்கின்றன. சமூகக் கயமைத்தனம் இத்தகைய உணர்வுகளைச் செயலற்றதாக்கி மனத்தின் ஆழத்தில் மாட்டி வைத்திருக்கின்றன.  பிராய்டியக் கருத்தாக்கங்களைச் சில வரையறைகளுடன் ஏற்கும் கிராம்சியிடம் அரசின் விதிப்புக்களும் ஒரு இலட்சிய சமுதாயத்தில் ஒன்றிணையும் என்ற சோசலிசக் கருத்தாக்கமும் இடம் பெறுகிறது. மிகக் கடுமையான முரண்பாடுகளின் மோதலின்போதும், மீற முடியாத கட்டுப்பாட்டின் அழுத்தத்தின்போதும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு சார்ந்த நிலையை மனிதன் பெற முடியும் என்கிறார் கிராம்சி. அதாவது, இத்தகைய நிலைகளில் வரலாற்று முறையில், இயங்கியல் முறையில், மனிதன் சிந்திப்பதில் வெற்றி பெற்று அறிவார்ந்த நேர்மையுடன் விருப்பு வெறுப்பின்றி தனது கடமையோடு அவன் ஒன்ற முடியுமானால் இத்தகைய மனிதன் தனக்குத்தானே மருத்துவன் ஆகலாம் என்கிறார்.  தத்துவவாதி:   தனது செயல்பாட்டுக்கான சாத்தியப்பாடுகளைப் பற்றிய தெளிவான கருத்து உடைய மனிதன் இதைச் செய்வதற்காகத் தமது வரலாற்றுச் சூழல் பற்றிய அறிவை உடையவன் இத்தகைய புரிதலோடு, தனது சூழலை மாற்றச் செயல்படுபவன் தனது வளர்ச்சியையும் தனது சூழலின் வளர்ச்சியையும் சாதிக்க முடியும். இத்தகைய செயல்படும் மனிதன்தான் உண்மையான தத்துவவாதி.  இயற்கை உலகின் பகுதியாக மட்டுமே உள்ளவன் அதனுடன் உறவில் கலப்பதில்லை. செயல்பாடு, தொழில் நுணுக்கத்தின் மூலமே இயற்கை உலகோடு உறவு கொள்கிறான். மேலும் இவ்வுறவுகள் இயந்திரவகையானவை அல்ல. இவை செயலாற்றலும் தன் உணர்வும் உள்ளவை. தன்னை இதயமாக மையமாகக் கொண்ட சிக்கலான உறவுகளை மாற்றும் அளவுக்கே மனிதன் தன்னை மாற்றிக் கொள்கிறான். இப்பொருளில், உண்மையான தத்துவவாதி என்பவன் அரசியல்வாதி ஆகிறான். இத்தகையவன், நாம் ஒவ்வொருவரும் பங்கு பெறுகிற உறவுகளின் தொகுப்பு என்ற சூழலைப் புரிந்து கொண்டு அதனை மாற்றிச் செயல்படும் மனிதன் ஒருவனின் தனியாளுமை என்பது இத்தகைய உறவுகளின் தொகுப்பு என்றால், ஒருவனின் ஆளுமையைப் படைப்பது என்பது இத்தகைய உறவுகள் பற்றிய உணர்வைப் பெறுவதும் இத்தகைய உறவுத் தொகுப்பை மாற்றுவது என்பதாகும்.  அறிவாளிகள்:  வரலாற்று உணர்வைப் பெறுவது தான் வாழும் சமுதாயத்திற்கும் தனக்கும் சரியான வழி எது என்பது அறிய உணர்வைப் பெறுவது என்பது அறிவாளியின் கடமை. கிராம்சியின் புரட்சிகரமான மாற்றம் பற்றிய கோட்பாட்டில் அறிவாளியின் பங்கு இம்முறையிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. கிராம்சியின் விளக்கங்கள் சிக்கலானவை. ஒருபுறம், மக்கள் திரள்களுக்கான சித்தாந்தத்தையும் தத்துவத்தையும் வழங்கி, அதன் மூலம் பொதுமக்கள் தம்மை ஆள்பவர்களைக் கேள்விக்கு உட்படுத்த இயலாத முறையில், ஆளும் வர்க்கம் தன் மேலாண்மையைச் செலுத்த உதவும் அறிவு ஜீவிகள் (Intelligentia) என்பவரையும் இச்சொல்லால் குறிப்பிடுகிறார். மறுபுறம் ஒவ்வொரு மனிதனும் அறிவாளி தான். ஒரு திறனை, மொழி அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுத் திறத்தை வெளிப்படுத்துகிறான் என்றும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனும் ஒரு தத்துவவாதி, கலைஞன், சுவைஞன், ஒவ்வொருவனும் உலகக் கண்ணோட்டம் பற்றிய ஒரு குறிப்பிட்ட வகையில் பங்கு பெறுகிறான். உணர்வுள்ள ஒரு அறிவியலைக் கடைப்பிடிக்கிறான். இம்முறையில் ஒரு உலகக் கண்ணோட்டத்தைத் தாங்குகிறான், அல்லது மாற்றுகிறான். இம்முறையில் சிந்தனையில் புதிய உருவங்களைப் படைக்கிறான் என்கிறார் கிராம்சி.  ஒவ்வொரு மனிதனும் அறிவாளிதான் என்றால் அறிவாளிகள் வகுப்பையும் அதன் சமூகப் பங்கையும் எப்படி மதிப்பிடுவது என்ற கேள்வி எழுகிறது.  அறிவாளிகளின் சமூகப் பங்கைப்பற்றி விரிவாக ஆராயும் போக்கில், மரபுமுறை அறிவாளிகள், ஒருங்கிணைந்த அறிவாளிகள் (Traditional and organic) என்ற வேறுபாட்டைச் செய்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் அறிவுத் தலைமையை ஆற்றுபவர்கள் மரபுமுறை அறிவாளிகள். ஒருங்கிணைந்த அறிவாளி என்பவர், தாம் சார்ந்த வர்க்கத்தோடு முற்றாக இணைந்தவர் என்கிறார் கிராம்சி. மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தோடு இருந்த புரோகிதர்கள், மரபுமுறை அறிவாளிகள். அவர்களும் முன்னைய காலத்தில் ஒருங்கிணைந்த அறிவாளிகளாக இருந்தவர்கள். நாளடைவில் இவர்கள் தாம் சார்ந்திருந்த குறிப்பிட்ட வர்க்கத்துக்குண்டான உறவுகளில் இருந்து விடுபட்டு, ஆதிக்கத்திலுள்ள சமூகக் குழுவிலிருந்து சுதந்திரமானவர்களாகத் தம்மை முன்வைக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், கத்தோலிக்கத் திருச்சபை தொடர்ந்திருப்பதற்கு இவர்கள் காரணம்.  புரோகிதர்களைத் தவிர மரபுமுறை அறிவாளிகள் என்று பேசும் பொழுது கிராம்சி குரோஸை மனத்தில் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இத்தகைய அறிவாளிகள் தம்மைச் சுதந்திரமானவர்களாகக் கருதிக்கொள்வது ஒரு பிரமை என்கிறார் கிராம்சி. குரோஸ் முதலிய தாராளவாத தத்துவவாதிகள், தம் காலத் தொழிலதிபர்களுடன் இணைந்தவர்கள். அவர்கள் சார்பில் பழையகாலப் புரோகிதர்களைப் போல வாதாடுபவர்கள்.  மரபு முறை அறிவாளிகளின் உண்மையான கடமை, தமது பழைய சார்புகளை ஒப்புக்கொண்டு புதிய புரட்சிகர வர்க்கத்துடன் ஒருங்கிணைவதுதான். இம்முறையில் இவர்கள் ஒருங்கிணைந்த அறிவாளிகளாக முடியும். இப்படி இணைந்தவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினராதல் தவிர்க்க இயலாதது. இத்தகையவர் பங்கு செயல் வகையிலானது, சொற்பொழிவாற்றுவதல்ல இவர்கள் கடமை. அத்துடன் செயல்முறை வாழ்வில் பங்கு பெறுதல், உருவாக்குதல். இவர்கள் சார்ந்த கட்சிதான் இவர்கள் சார்ந்த வர்க்கத்திற்கு அறிவுத்தலைமை மேற்கொள்கிறது. மக்கள் திரளுடன் இணைந்த அறிவாளிகள் தான் வரலாற்றில் பங்கு பெறுகிறார்கள்.  நவீனகால அரசன்:  இத்தாலிய அறிவாளிகளின் வரலாறு பற்றிய குறிப்புகளைத் தரும் கிராம்சி. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்திய மாக்கியவெல்லி பற்றிப் பாராட்டி எழுதினார். ஒருசமயம் குரோஸ் மார்க்சைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பாட்டாளி வர்க்கத்தின் மாக்கியவெல்லி என்று குறிப்பிட்டார். இதை மனதில் கொண்டு 16 ஆம் நூற்றாண்டு இத்தாலிய சமூகத்தைப் பகுத்தாய்ந்த மாக்கியவெல்லியின் முறையைச் சமகாலச் சமுதாய ஆய்வுக்குப் பயன்படுத்த விரும்பினார் கிராம்சி. மார்க்கியவெல்லி எழுதிய Prince புத்தகம் போல நவீனகாலச் சமூகம் பற்றிய Modern prince எழுத முயன்றார் கிராம்சி. இருபதாம் நூற்றாண்டில் அரசியல் மாற்றத்தைத் தோற்றுவித்து நிறைவேற்றும் அரசனாக இவர் அரசியல் கட்சியைக் குறித்தார்.  மாக்கியவெல்லி தனது காலத்து ஆளும் வர்க்கத்திற்குத் தேவையான கல்வியைத் தர முயன்றார். திருச்சபையின் கோட்பாடுகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல், இத்தாலியை எதிர்கொண்ட அரசியல் கடமைகள் பற்றிய யதார்த்தத்தைக் கற்றுத் தரமுயன்றார். அதுபோல, நவீன கால அரசன் அதாவது, கட்சி, பாட்டாளி வர்க்கத்திற்கான கல்வியைத் தந்து, எதிர்கால ஆளும் வர்க்கமாக அதனைப் பயிற்றுவிக்கும் கடமை உடையவன். அறவியலிலிருந்து அரசியலைப் பிரித்தது மாக்கியவெல்லியின் சாதனை எனப் புகழ்ந்தார் கிராம்சி. பொய்யான அறவியலிலிருந்து அரசியலைப் பிரித்து, உண்மையான அறவியலும், அரசியலும் இணைவதை விரும்பினார், மாக்கியவெல்லி. இக்கருத்தை கிராம்சி ஆதரிக்கிறார். இக்கருத்தை உறுதியாகப் பற்றி நிற்கிறார் கிராம்சி. எந்த அரசியல் பொருளாதார மாற்றமும் அறிவுத்துறை அறிவியல் மாற்றத்தோடு இணைந்திருக்க வேண்டும். நவீன கால அரசன் அதாவது கம்யூனிஸ்ட் கட்சி, தான் வளர்ந்து செல்லும்போது, அறிவுத்துறை, அறிவியல் உறவுகளை முற்றிலும் புரட்சிகரமாக மாற்றுகிறது. கட்சியை வளர்க்கும் பலப்படுத்தும் அல்லது எதிர்க்கும் முறையிலேயே அவற்றின் நன்மை தீமை தீர்மானிக்கப்படும். மனிதர்களின் மனத்தில் கட்சியே தெய்வமாக அல்லது இன்றியமையாத கடமையாக இடம் பெறுகிறது. வாழ்வின் எல்லாத் துறைகளையும் இவ்வாறே அது மாற்றுகிறது என்கிறார் கிராம்சி.  மேலாண்மை:  கட்சி, ஒரு புதிய புரட்சிகரமான உறுதியைப் படைக்க வேண்டும். புரட்சியில் ஏற்ற இறக்கமான கட்டங்கள் உண்டு. புரட்சி என்னும் இராணுவ தந்திரத்தில் இயக்கம் போலவே நிலைப்புக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் இடையறாத புரட்சி என்ற கோட்பாட்டை விமர்சனம் செய்கிறார் கிராம்சி. பெருமளவு மக்கள் திரள் சார்ந்த அரசியல் கட்சிகளும் பெரும் பொருளாதார அமைப்புக்களும் இல்லாத கட்டத்தில் இடையறாத புரட்சி என்ற வாதம் சரியானதுதான். ஆனால், மையத்தில் குவிந்த அரசின் அதிகாரமும், அதற்கு மக்கள் திரள் நிறுவனங்களின் அதிகாரமும் அதிகரித்தபோது, இடையறாத புரட்சி என்பதற்குப் பதிலாக அரசியல் மேலாண்மை இடம் பெறுவதாக கிராம்சி கருதுகிறார். எந்த ஒரு ஆளும் வர்க்கமும் தான் வெற்றி பெற நிலைத்து நிற்க, இத்தகைய மேலாண்மை ஏற்படுத்துவது தேவை. நவீன கால அரசனின் கடமை, இத்தகைய மேலாண்மையை ஏற்படுத்துவதாகும். அமைதியான புரட்சிக்காலத்தில் மக்களின் மனத்தில் இத்தகைய மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.  கிராம்சி, தனது மேலாண்மை என்ற கருத்தாக்கத்திற்கு லெனினுக்குத் தான் கடமைப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். கட்சி, தனது செயல்திட்டத்திற்கான சித்தாந்த அடிப்படையை மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட வேண்டும். மக்களைப் பொருளாதாரவாதக் கவர்ச்சியிலிருந்து தடுப்பதற்கு இது வழி என்றார், லெனின். இந்த வரையறுப்பை, மார்க்சியத்துக்கான நன்கொடை என்றார் கிராம்சி. மேலாண்மை தனது செயல் வடிவில் ஒரு புதிய சித்தாந்தக் களத்தைப் படைக்கிறது. மன உணர்வில் மாற்றத்தைச் செய்கிறது. ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்திற்குத் தக்கதொரு புதிய ஒழுக்கவியலை நாம் புகுத்துவதில் வெற்றியடையும்போது, தத்துவத்தில் புதிய முழுமையான மாற்றம் நிகழ்கிறது என்கிறார் கிராம்சி. இத்தகைய கருத்து குரோசிடமும் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறார் கிராம்சி.  ஒரு அரசியல் வர்க்கத்தின் மேலாண்மை என்பதன் பொருள், சமூகத்தின் பிற வர்க்கங்களும் தனது அறவியல், அரசியல், கலாச்சார மதிப்பீடுகளை ஏற்குமாறு தூண்டுவதில் வெற்றி பெறுதல் என்கிறார் கிராம்சி. இதில் வெற்றி பெறும் ஆளும் வர்க்கம், வன்முறையை அதிகம் பயன்படுத்த வேண்டியிராது. பாராளுமன்ற ஆளுகையில் மேலாண்மை செயல்படும் வழக்கமான முறை, வன்முறையையும் பொதுக் கருத்தையும் உருவாக்குதலையும் செயல்படுத்த முடியாத இடைவெளியில் தான் ஊழல் வந்து அமர்கிறது என்றும் விளக்குகிறார் கிராம்சி. நெருக்கடிக் காலங்களில் மேலாண்மைச் சாதனம் சிதைகிறது. எந்த ஒரு குழுவும் ஆளுதற்கேற்ற பொதுக்கருத்தை உருவாக்க முடிவதில்லை. இத்தகைய நிலை, புதிய மேலாண்மைச் சாதனத்தை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இல்லாவிட்டால் அரசின் வன்முறைக்கே இடம் வாய்க்கிறது.  ஒவ்வொரு வரலாற்று மாற்றக் காலத்திலும் மேலாண்மையை உருவாக்குவதில் அறிவாளிகளின் பங்கை வலியுறுத்துகிறார் கிராம்சி. மேலாண்மையைச் சாதிப்பதும், நிலைநிறுத்துவதும் பெரும்பகுதி கல்வித்துறை சம்பந்தப்பட்டது. ஒரு கூட்டு தேசிய மன உறுதியை உருவாக்குவதில் தான் கல்வித்துறையின் சாதனை வெளிப்படுகிறது. இத்தகைய மன உறுதியை உருவாக்குவதில் மக்கள் திரள்களுடன் அறிவாளிகள் கொள்ளும் உறவு இன்றியமையாதது. மக்களின் அடிப்படையான ஆர்வங்களை அறிந்து கொள்ளாமல் அவை பற்றிய உணர்வு கொள்ளாமல் மக்களுடன் இவ்வகையில் உறவேற்படுத்திக் கொள்ளாமல் இதைச் சாதிக்க முடியாது. இத்தகைய உறவில்லாத நிலையில், உறவுகள் அதிகார வர்க்கத் தன்மை உடையனவாகின்றன. அறிவாளிகள், ஒரு சாதியாக, புரோகிதர்களாக மாறுகின்றனர்.  மக்கள் கலாச்சாரத்துடன் கிராம்சி கொண்ட உறவை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அரசியல் கட்சிக்குள் உள்ளார்ந்த ஜனநாயகத்தின் தேவையையும் இதிலிருந்து அறிய முடியும். தொழிற்சாலைக் குழுக்களில் தலைவர்களையும் தொண்டர்களையும் இணைப்பது பற்றிய அவரது Historical Block பற்றிய கருத்தும் இதிலிருந்து தெளிவாகிறது. இம்முறையில்தான் தலைவர்களும் தொண்டர்களும் ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். அதிகார வர்க்கம் எந்த நிறுவனத்தையும் இறுதியாக இயக்கமற்றதாகச் செய்துவிடும். ஜனநாயக மையத்துவம் என்பதில் தான் அதிகார வர்க்கத் தீமையை வெல்ல முடியும். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்பதை இணைத்தல், சட்டவியல் நிர்வாக அதிகாரங்களுக்கு இடையில் நெருங்கிய இணக்கம். இம்முறையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அலுவல்களை நிர்வகிப்பதிலும் ஈடுபாடு கொள்வார்கள் இவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தினார் கிராம்சி.  இப்படிப் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி துண்டுதுண்டாக - ஆயினும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருக்கிறது கிராம்சியின் சிறைக் குறிப்பேடுகள்.  மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியவர்களின் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உண்மையிலேயே முயன்றவர் யார்? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அல்தூசர் தந்த பதில்: கிராம்சி பற்றித்தான் என்னால் சிந்திக்க முடியும். மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றித் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார் கிராம்சி. பொருளாதார சக்திகளுக்கும் மேற்கட்டுக்குமான உறவுகள் பற்றிய அவர் ஆய்வுகள், வறட்டுத்தனமாக இயங்கியலை விளக்குவது பற்றிய மறுப்புரைகள், வரலாற்றில் சிந்தனைக்கும் தனி மனிதரின் மன உறுதிக்குமான பங்கை நிர்ணயிக்க முயன்றதன் மூலம் வரலாற்றுப் பொருள் முதலியலைப் புதிதாக வரையறை செய்த அவர் முயற்சிகள், சிந்தனை கலாச்சாரப் பண்புகளுக்கு அவர் தந்த அழுத்தங்கள் மேலாண்மை பற்றிய அவரது கோட்பாடு, முதலியவை கிராம்சியைப் பிற மார்க்சியவாதிகளிலிருந்து பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகள். சமூக உறவுகளில் கலாச்சாரத்திற்கு அவர் தந்த அழுத்தத்தை வேறு யாருமே தந்ததில்லை. புரட்சிகர இயக்கப் போக்கிலும் புரட்சிகர மாற்றத்திலும் புரட்சியை நிலைப்படுத்துவதிலும் சிந்தனையாளர் பங்கு பற்றிய அவரது ஆய்வுரைகள் கட்சி பற்றிய கருத்தாக்கங்கள் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அவரது சிறைக் குறிப்பேடுகள் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியத்திலும் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றிலும் அவருக்குத் தகுதி மிக்க இடம் தருபவை. மார்க்சியக் கோட்பாட்டாய்வில் ஆர்வம் உடைய அனைவர்க்கும் அவரது படைப்புக்கள் புதுமையோடு விளங்குபவை.  கிராம்சியின் படைப்புக்கள், மார்க்சியவாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் பிற தத்துவவாதிகளிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளன. கிராம்சி, இத்தாலிய ஐரோப்பிய கலாச்சார மரபில் வேர் கொண்டார். ஆகவே, இவருக்கு மார்க்ஸ், லெனின் போலவே விகோ, ஹெகல், சொரேல், குரோஸ் முதலியவர்களும் முக்கியமானவர்களாகத் தோன்றினர். இவர்களுக்கு எதிரான விமர்சனங்களை அவர் கொண்டிருந்தபோதிலும் இதனால் மார்க்சியத்தைச் சாராத பிற தத்துவவாதிகளுக்கு கிராம்சியோடு விவாதிப்பது அவர்களுக்கே பயனுடையதாக இருக்கும்.  கிராம்சி தன் காலத்தில் வெளியுலகில் உள்ள மார்க்சியவாதிகளோடு தொடர்புகொள்ள வாய்ப்பற்றவராக இருந்தார். லெனின், டிராட்ஸ்கி, புகாரின் ஸ்டாலின் தவிர பிறர் பற்றிய குறிப்புக்கள் அவரது படைப்புக்களில் இடம்பெறவில்லை. மார்க்சியக் கோட்பாடு, காலத்தின் தேவைக்கேற்றபடி பல்வேறு வகை வளர்ச்சிகளைப் பெறுகிறது என்ற ரோஸா லக்ஸம்பர்க் கருத்தால் அவர் கவரப்பட்டிருந்தார். புரட்சிக்கு, மக்கள் திரள்களின் ஆதரவைப் பெறுவதன் தேவையை லக்ஸம்பர்க் போலவே கிராம்சியும் வற்புறுத்தினார். கிராம்சி ஆர்வம் கொண்டிருந்த துறைகளில் அவர் காலத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர்களாக உறங்கேரியைச் சேர்ந்த ஜியார்ஜி லூகாக்சையும், ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் கோர்ச்சையும் குறிப்பிடலாம். இவர்களும் வரலாற்றுப் பொருள் முதலியலை விளக்குவதில் கலாச்சார தத்துவப் பண்புகளுக்கு முக்கியத்துவம் தந்தனர். கிராம்சியின் சிந்தனைகளுடன் ஒத்திருந்த போதிலும், அவரது சிந்தனை எப்போதும் செயல்முறைத் தத்துவச் சார்பிலேயே இருந்தது. இவரது செயல்முறைத் தத்துவம், மக்கள் சார்பு மிக்கதாகவும் மேலும் மனிதவியல் சார்ந்ததாகவும் இருந்தது. 20-ஆம் நூற்றாண்டில் மாபெரும் மார்க்சிய சிந்தனாவாதியாக இருந்த கிராம்சியின் படைப்புக்கள், பொருளியல் வரையறைகளிலிருந்து விடுதலை பெற முயலும் மனித ஆன்மாவின் சுதந்திரத்தை விளக்கவல்ல மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழும்.  பின் குறிப்பு : கட்டுரைக்கான ஆதார நூல்  1. Gramsci By James Joll Fantana Collins 1977  2. Antonic Gramsci Towards an Intellectual Biography By Alastair Davidson Merlin Press London 1977  மார்க்சியமும் சமயமும் வர்க்கப் போராட்டம் என்ற மார்க்சியத்தின் ஆதாரக்கருத்தை மதம் பற்றிய விளக்கத்திற்கு பயன்படுத்த இயலும்.எல்லாவற்றுக்குள்ளும் வர்க்கப் போராட்டம் நிகழ்கிறது என்பது மார்க்சிய விதி. கட்சிக்குள்ளும் இருவழிப்பாதை என்றார் மாவோ. குடும்பம் முதலிய பல்வகை அமைப்புக்குள்ளும் இதன் செயல்பாட்டைக் காண முடியும். சமயத்தில் கொள்ளும் வர்க்கப் போராட்டத்தை ஏன் காணமுடியாது? சமயம் எப்பொழுதும் ஆளும் வர்க்கச் சார்பு உடையது என்ற ஒற்றைப் பரிமாண விளக்கம் பொருந்துவதில்லை. சமயப்போர்கள் அல்லது சமயத்தின் வழித்தெரியும் போர்கள் என்பன வர்க்கப் போராட்டம்தான் என்று ஏங்கல்ஸ் விளக்கினார். தேவர்களுக்கிடையில் அதாவது தெய்வங்களுக்கிடையில் நடைபெறும் போர்கள், கலவரங்கள் என்பன ஆழ்ந்து பார்த்தால் மக்களுக்கிடையிலான போராட்டங்கள்தான் என்றார் மார்க்ஸ். நிறுவனப்படுத்தப்பட்ட சமயம் தன் அதிகாரத்தையும் உடமைகளையும் காப்பாற்றவும் வளர்த்துக்கொள்ளவும் அதிகாரத்தை, அரசைச் சார்ந்து இருப்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அரசு அதிகாரத்தின் பகுதி என்ற முறையில்கூட சமய நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றும் கூறலாம். ஆனால் இவ்வகை விளக்கம் சமயத்தின் தோற்றம் சமயத்தின் உடைசல் புதிய சமய ஆக்கம் தவிர, மக்கள் மத்தியில் இன்றுவரை சமயம் பெறும் இடம் ஆகியவற்றை விளக்க முடியாது. சமயம் எப்பொழுதும் மூடத்தனத்தின் பகுதிதான் என்ற பகுத்தறிவுப் பார்வை இந்த அம்சத்தை விளக்கமுடியாது. சமுதாயத்தின் பொருள்வகை சிக்கல்கள் அதிகரிக்கும் சூழலில் அன்றியும் மக்களின் முற்றான விடுதலைக்கான வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் மக்கள் தம் ஆறுதலுக்காகவும், தம்மை விடுதலை விடுவிக்கும் சக்திகளை எதிர்நோக்கியும், நம்பியும் கடவுளை சமயத்தை நாடுகின்றனர். மார்க்சின் புகழ்பெற்ற வாசகங்களை வேறு எந்த முறையிலும் விளங்கிக் கொள்ள இயலாது. மதம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு என்றும், அதேவேளையில் ஒடுக்கப்பட்ட சூழலுக்கு எதிரான கலகம் என்றும் மார்க்ஸ் கூறுகிறார். கடவுளே உனக்கு கண் இல்லையா? என்று மக்கள் குழம்பும் பொழுது இக்குரலில் தனக்கு நேர்ந்துள்ள நெருக்கடியை மட்டும் மக்கள் வெளிப்படுத்துவதோடு அல்லாமல் கடவுளுக்கு எதிரானது ஆகும் இக்குரலில் அர்த்தம் வெளிப்படுகிறது சூழலுக்கு எதிரான குரலாகவும் இதனை நாம் காண முடியும். உலகம் திரிபுபட்டதான வர்க்க ஏற்றத்தாழ்வுகளால், வாழ்வு திரிபுபட்டதாக இருக்கிறது. திரிபுபட்ட உலகம் மாயைகளைத் தோற்றுவிக்கிறது என்பதும் மார்க்சின் கருத்து. இந்த மாயை தற்காலிகத் தேவையாகவும் அமைகிறது. இந்த நோக்கில் தான், ஏக்கப் பெருமூச்சு, கலகம் என்ற வாசகங்களை அடுத்துத் தொடரும் வாக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  மதம், இதயம் அற்ற உலகின் இதயம் ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்கிறார் மார்க்ஸ். ஆங்கிலத்தில் இருக்கும் வாசகங்களை மென்மைப்படுத்தும் முறையில், உயிரற்ற உலகின் உயிர், உணர்வற்ற உலகின் உணர்வு என்றெல்லாம் இந்த வாசகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து வாசகங்களின் அர்த்தத்தையும் முற்றாக உள்ளடக்கும் முறையில் மார்க்ஸ் முடிக்கிறார். மதம் மக்களுக்கு அபின். அபின் என்ற சொல் போதை தருவது உணர்வுகளை மங்கும்படியாகச் செய்வது என்பது மட்டுமல்ல அபின் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவதாகிய ஜெர்மன் மூலச்சொல் இன்னொரு அர்த்தத்தையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது என்கிறார் பிக்கு பரேக் என்ற பேராசிரியர். அதாவது கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு தற்காலிகமாக வலிநிவாரணி மார்பியா தேவைப்படுகிறது. இந்த அர்த்தத்தையும் அந்த ஜெர்மன் சொல் கொண்டுள்ளது என்கிறார் அந்தப் பேராசிரியர். மார்க்சின் தொடர்ச்சியான கூற்றுக்கு முத்தாய்ப்பாக வரும் “மதம் மக்களுக்கு அபின்” என்ற வாசகத்திற்கு இந்த இரு அர்த்தங்களும் சரியாகப் பொருந்துகின்றன.  மதம் மக்களுக்கு அபின்தான் என்ற முறையில் லெனினின் ஒற்றைப் பரிமாண வாசகம் அமைகிறது. இந்த வாசகம் பெரியாரியத்திற்கு பகுத்தறிவியக்கத்திற்கு சரியாகவே பொருந்தும். இந்த ஒற்றைப் பரிமாணப் பொருள் மக்கள் துயரத்தை விளக்காதது. மக்கள் துயரத்தைப் புரிந்து கொள்ளாதது இந்தப் பார்வை. மூடத்தனம்தான் மதத்தை / கடவுளைத் தோற்றுவித்தது என்ற புரிதலின் / புரியாமையின் விளைவு இந்த அர்த்தப்படுத்தல்.  குறிப்பிட்ட வரலாற்று பொருளியல் சூழலில்தான் எந்தச் சிக்கலையும் வைத்து ஆய்வு செய்வது என்பது மார்க்சிய முறை. சமயம் மட்டும் அல்லாமல் வேறு எதனையும் கலை, இலக்கியம், தொழில்நுட்பம், சாதி முதலிய அனைத்தையும் இவற்றின் தோற்றம், வளர்ச்சி அழிவு ஆகிய எதனையும் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் வைத்துத்தான் ஆராய்ந்து புரிந்து கொள்ள முடியும். சமயம் அல்லது கடவுள் கருத்தையும் இப்படித்தான் விளக்கமுடியும்.  கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம், கடவுள் என்பது பொருளியல் சக்தி அல்ல என்பதை மார்க்சியம் விட்டுக் கொடுக்க இயலாது. கடவுள் என்ற கருத்தாக்கம் வரலாற்றில் குறிப்பிட்ட காலச் சிக்கல்களிலிருந்து தோன்றிய ஒரு கருத்தாக்கம். பூமியைச் சுற்றிலும் நடைபெறும் பருவமாற்றம் மழைப்பொழிவு, கதிரவன் இயக்கம் முதலிய பல்வேறு நிகழ்வுப் போக்குகளைப் புரிந்து கொள்ள மனிதன் முயற்சி செய்கிறான். தன் வாழ்வுக்கு மிக நெருக்கமாக உள்ளவை இந்த நிகழ்ச்சிகள். இவற்றைப் புரிந்து கொள்ளாமல் மனிதன் வாழ முடியாது. கேள்வி எழுந்த பிறகு விடை தேடி தனக்குள்ளும் புறத்திலும் அலைகிறான் மனிதன். இத்தேடலில் கிடைத்த ஒரு கருத்து, கடவுள். இந்தக் கருத்து மூலம், தனக்குள்ளும் புறத்திலும் நடைபெறும் பல்வேறு இயக்கங்கள் இந்தக் கருத்தை ஒரு திறவுகோல் மாதிரிப் பயன்படுத்திப் புரிந்து கொள்கிறான். இந்த முயற்சி பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்கிறது. இந்தக் கருத்துப்பற்றிய ஐயங்கள் எழுகின்றன. வரலாற்றுச் சூழல் வேறுபட்ட நிலையில் அறிவியல் வளர்ச்சி பெற்ற நிலையில் கடவுள் என்பது பொருளியல் சக்தி என்பதைக் கைவிடுகிறான். கடவுள் இல்லை என்ற முற்றான பகுத்தறிவுக் கொள்கைக்கும் செல்கிறான். கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம், ஒரு திறவுகோல். ஒரு கருவியாக இது பயன்படுகிறது என்பதை நிதானமாகப் புரிந்து கொள்ள இயலும். இந்தக் கருவியை கருவி என்பதை கருத்து என்பதை மறுத்து, இது ஒரு பொருள்தான் என்று நிலை நிறுத்துவதில் விடாப்பிடியாக நிறுவனச் சமயங்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. கருத்து மனிதனைப் பற்றிக் கொள்ளும் பொழுது ஒரு பொருளியல் சக்தியாகச் செயல்படுகிறது என்ற மார்க்சின் கூற்று ஆழமுடையது என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். மேலும் மதம் பற்றிய ஆழமான புரிதலுக்கு ஜான் லெவிஸ் என்ற பிரிட்டானிய மார்க்சியர், புரோகிதர், தீர்க்கதரிசி என்ற இரு வேறு கருத்துக்களைத் தக்கமுறையில் பயன்படுத்துகிறார். சமய நிறுவனச் சார்புடையவர், புரோகிதர். மக்கள் சார்பில் செயல்படுபவர் தீர்க்கதரிசி. இவர் இடைவிடாத தேடலில் இருப்பவர். சமூகக் கொடுமைகளுக்குக் காரணமான உடமை, அரசு, அதிகாரம், சமய நிறுவனம், சாதி இறுதியாக மதம் ஆகியவற்றைத் தோலுரிப்பவர். கிறித்துவ சமயத்தில் இந்தத் தீர்க்கதரிசிகள் இறைவாக்கினர் என்று கொண்டாடப்படுகின்றனர். இயேசுவும் ஒரு தீர்க்கதரிசியாகப் புரிந்து கொள்ளப்படுகிறார். தமிழ்ச் சமூகத்தில் சித்தர்கள் இவ்வகையினர். சைவம் நிறுவனப்படுத்தப் படுவதற்கு முந்திய நாயன்மார்கள் குறிப்பாக நால்வரை இம்முறையில் பார்க்கலாம். ஆழ்வார்களும் இம்முறையில் மதிக்கத்தக்கவர்கள்.  அந்நியமாதலின் ஒரு முக்கிய வடிவம் சமயம் என்ற மார்க்சியக் கருத்து நமக்கு இன்னும் ஆழ்ந்த புரிதலை வழங்க இயலும். இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் பிரிவுபடாத முறையில் ஆதிப்பொதுமைச் சமூகத்தில் மனிதன் வாழ்ந்தான். வர்க்கச் சமூகம் தோன்றிய நிலையில் தனி உடமை, அரசு முதலியவை தோன்றிய நிலையில் மனிதன் இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் இறுதியாகத் தன்னிலிருந்தும் அந்நியமானான். இந்த அந்நியமாதலுக்கு உட்பட்ட நிலையிலும் அந்த ஆதிச்சமூகம் கனவிலும் கற்பனையிலும் தனக்குள் தங்கியிருப்பதை உணர்கிறான் மனிதன். இயற்கையோடும், சமுதாயத்தோடும் தன்னோடும் பிரிவுபடாத அந்தப் பேருணர்வைத் திரும்பவும் பெறவேண்டிய சூழல் இப்பொழுது எழுகிறது. இறைவன் என்ற கருத்து இயற்கை சமுதாயம் ஆகியவற்றின் உள்ளிருக்கும் ஆக்கச் சக்தியாக மனிதனுக்குத் தென்படுகிறது. சமுதாயமே அவனுக்கு உயிரையும், உணர்வையும், அன்பையும், ஆற்றலையும் வழங்குகிறது. இவற்றோடு, இந்த இயக்கத்தோடு தன்னை முற்றாக ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலமே தனது வாழ்வின் நிறைவைக் காண முடியும். அந்நியமாதலை முற்றாகக் களைந்து கொள்வதற்கான சமூகச் சூழல், பொதுவுடமைச் சமூகத்தில்தான் நேரிடும் என்கிறார் மார்க்ஸ். அத்தகைய சமூகத்தில் மீண்டும் மனிதன் முழுமையை நிறைவான வாழ்வைப் பெறுவான். நிறைவான வாழ்வு கிட்டும் அந்த காலத்தில் இறைவன் இவனுக்குத் தேவையில்லை. கிறித்துவம் முன்வைக்கும் நிறைவாழ்வு, இறையாட்சி ஆகிய தொடர்களை இவ்வகையில் நாம் அர்த்தப்படுத்துவது சாத்தியம் மட்டுமல்ல தேவையும் கூட.  அதனால் பொதுமைச் சமூகத்திலிருந்து விலகிய நிலையில், அந்தச் சமூகப் பொதுமைப் பண்புகளின் நினைவாக இறைவனைத் தனக்குள் தாங்கினான் என்பதை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளும் அதே சமயம், இறைவன் என்பதற்குத் தரப்படும் பற்பல இலக்கணங்கள் பற்றியும் கவனிக்கத்தான் வேண்டும்.  பலகடவுட் கோட்பாடு, ஒரு கடவுட் கோட்பாடு, கடவுளுக்கு வழிபாடு, கோயில் முதலிய பல்வேறு செயற்பாடுகள் அவ்வக்காலச் சமூக நிலவரங்கள் முதலியவற்றை ஒட்டியே ஏற்படுவதையும் பார்க்கமுடியும். இவை பற்றிய விளக்கங்கள் மார்க்சியப் புரிதலோடு நடைபெற்றுள்ளன. இறைவன் வாழ்வுக்கு மையம் ஆகிவிட்டான். இறைவன் மூலமே இனி எதுவும் சாத்தியம் என்ற நிலை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று பயர்பாக் விளக்கினார். மனிதனின் இனப்பண்புகள், அறிவு, அன்பு, விருப்பம், ஆர்வங்கள் என்பனவற்றைப் புறத்தில் நிறுத்தி இறைவனுக்குள் செலுத்தி இறைவனை படைத்த மனிதன், நாளடைவில் இறைவனை இலட்சியப்படுத்தி பேருணர்வு, பேரன்பு, பேராற்றல் ஆகியவற்றின் வடிவமாக்கி,தன்னைத் தாழ்த்தி அதன் முன் தன்னை கடத்திக் கொண்டதை பயர்பாக் விளக்கினார். இந்த விளக்கம் மார்க்சுக்கும் உடன்பாடாக இருந்தது. வெறும் சிந்தனை அல்லது தியானம் என்ற முறையில் மனிதன் கருத்தாக்கங்களைப் பெறவில்லை என்று மார்க்ஸ் கண்டார். இது பொருள்வகைச் சூழலில் செயல்படும் மனிதனின் உணர்வாக எழுந்த கருத்து என்பதை விளக்கினார். பயர்பாக்கின் பொருள் முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழப்படுத்துகிறார். தான் முதல்வன் என்பதை மறந்த மனிதன் இறைவனை முதல்வனாக்கினான் என்றார் பயர்பாக். இறைவனை மீண்டும் தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் பயர்பாக். இயேசுவின் மூலம் வெளிப்படும் அன்பு, மனித அன்பு இம்முறையில் அன்பின் சமயத்தை பயர்பாக் படைத்தார். என்கிறார் மார்க்ஸ் வரலாற்றுச் சூழலை மாற்றுவது பற்றி பயர்பாக் சிந்திக்கவில்லை. இதுவரை தத்துவவாதிகள் உலகை விளக்கினார்கள் இனி நாம் செய்ய வேண்டியது உலகை மாற்றுவது என்ற மார்க்ஸின் முடிவை இவ்வாறு நாம் விளங்கிக் கொள்ள முடியும். பயர்பாக் இறைவனை விளக்கினார். இறைவனை நமக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்ள இறைவன் தேவைப்படாத சூழலைத் தோற்றுவிக்க சமூகத்தை மாற்ற வேண்டும் அரசு இருக்கும் வரை அந்நியமாதல் அதாவது மதம் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார் மனிதனின் கைகளைப் பிணைக்கின்ற சங்கிலிகளை மறைக்கும் அழகிய மலர்கள் என்று மதத்தை கருதியதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். பொருளியல் சங்கிலிகளால் மனிதன் தனைப்பட்டுள்ளான். இந்தச் சூழலில்தான் சமயம் இறைவன் என்ற மாய உணர்வுகள் மனிதனை மயக்குகின்றன. அவை அழகிய மலர்கள் அழகானவை. கண்ணுக்குக் குளிர்ச்சியானவை. இந்த இன்பத்தில் கவர்ச்சியில் மனிதன் எந்நேரமும் மூழ்கியிருக்க முடியாது. மனிதன் நனவுலகுக்கு வரவேண்டும். சமயம் பற்றி விமர்சனம் இந்த அழகிய மலர்களை விலக்கி உள்ளே மறைந்திருக்கும் பொருளியல் தளைகளை மனிதனுக்கு காட்ட வேண்டும் என்றார். கருத்தியல் வகைப்பட்ட விமர்சனம் ஆயுதங்களை கொண்டதான விமர்சனமாக மாற வேண்டும் என்றார். பகுத்தறிவுப் பார்வையிலான விமர்சனம், தன் நோக்கில் பொருளியல் பற்றிய விமர்சனமாக உருப்பெற வேண்டும் என்பதை பகுத்தறிவாளர்களால் புரிந்து கொள்ள முடியும். பார்ப்பனர் செய்த சதி முட்டாள்தனம் என்பதோடு இந்த விமர்சன நோக்கை நிறுத்திவிட முடியாது. ஆழத்திலுள்ள பொருளியல் நலன்களை மக்களுக்கு சுட்டிக் காட்டுவது மிக முக்கியம். பகுத்தறிவாளர்கள் இதை செய்ய மார்க்ஸின் பொருளியல் பற்றிய பார்வையை கற்க வேண்டும். கற்கத்தான் வேண்டும். தமிழகச் சூழலில் …… முடமாகிவிட்ட பகுத்தறிவுப் பார்வையைத்தான் காண்கிறோம். சரியான புரிதலோடு சமயம் பற்றிய விமர்சனம் பகுத்தறிவாளர்களையும் மார்க்சியரையும் இந்தத் தளத்தில் இணைக்கும். இத்தகைய பொருளியல் சூழல் நிலவும் காலம் முழுதும் சமயங்கள் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கும். தமிழகச் சூழலில் இன்று புதிய புதிய சமயவழித் தோன்றல்கள் பலரைப் பார்க்கிறோம். சூழலை மாற்றுவதற்கான தேவை அதிகரிக்கிறது என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம். சூழலை மாற்றுவதுதான் சரியான விமர்சனம் என்கிறார் மார்க்ஸ். டால்ஸ்டாயினிடம் முழுநிறைவான அன்பைக் கிறித்துவ அன்பாகப் பார்க்க முடியும். இதையும் சமயம் என்று விமர்சனம் செய்தார் லெனின்.  1905 புரட்சி தோற்ற நிலையில் பாக்டனோவ், கார்கி போன்றவர்கள் புதுக்கடவுளைத் தோற்றுவிக்க முனைந்ததையும் லெனின் கடுமையான விமர்சனத்திற் உள்ளாக்கினார். அன்பு என்பதுதான் அவர்கள் தோற்றுவிக்க முனைந்த புதுக்கடவுள். வர்க்கங்களுக்கு இடையில் சமரசமாக இந்த அன்பு வெளிப்படுகிறது என்பது லெனினியிப் புரிதல். கடவுளை மறுத்த நிலையிலும் சமயம் செயல்பட முடியும் என்பதை வரலாற்றில் நெடுக நாம் காண்கிறோம். சமயத்தை அதன் நிறுவன வடிவில் ஒதுக்கிய ஒழித்தபிறகும் சமயம் வாழ்கிறது. இம்முறையினை சமயத்தை ஒழித்துவிட்டுத்தான் ஓய்வோம் என்று பகுத்தறிவாளர்கள் கூறலாம். மார்க்சியரைப் பொறுத்தவரை இந்த எல்லைக்குச் செல்ல வேண்டியதில்லை, பொருள்வகைச் சூழலை மாற்றுவது என்பது சமய நிறுவனங்களை ஒழிப்பது என்பதையும் உள்ளடக்கியதுதான். இத்தகைய சூழலை உருவாக்குவதன் மூலம் சமயத்தின் ஆதிக்கத்தை அழிக்க முடியும்.  பிரபஞ்சம் முதற்கொண்டு உடலியல், உளவியல் பற்றிய எல்லாப் புதிர்களும் விடுவிக்கப்படும் காலம்வரை சமயம் ஏதோ சில வடிவங்களில் இருக்கத்தான் செய்யும். கம்யூனிச உலகிலும் கலை இலக்கியம் இசை பொதுமைப்படுத்தப்படும் சிந்தனை முறை ஆகியவற்றுக்கும் தேவை இருக்கத்தான் செய்யும். கம்யூனிச சமுதாயமும் முரண்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது. பகை முரண்களுக்கும் இடமில்லை. ஆனால் நட்பு முரண்கள் செயல்படத்தான் செய்யும். தனக்குள் மார்க்சியன் இறுக வேண்டியதில்லை. தனிமனிதனை அவனது சுதந்திர உணர்வை மார்க்சியன் மறுக்க முடியாது. உளவியல் ஆய்வுகளுக்கு வழிதிறந்து வைப்பது போல் மெய்யியல் முதலிய ஆய்வுகளுக்கும் கம்யூனிச சமுதாயம் வழிதிறந்து வைக்கும். சமயத்தோடு மார்க்சியன் கொள்ளும் பகைமை என்பது முரண்பாட்டியக்கம் என்பதை பகை முரண்பாடு என்பதாக மட்டுமே பார்க்கிற மார்க்சிய பார்வையின் விளைவு அன்றி வேறு இல்லை.  தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் ஏற்கனவே சில பத்தாண்டுகளாக உலகளவில் மையம் என்றும் விளிம்புகள் என்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவிலான முதலாளியத்தை விளக்கும் முறையில் இச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மார்க்சியர் இச் சொற்களைப் பயன்படுத்தவில்லை. எனினும், இச் சொற்கள் மூலம் உலகளவிலான முதலாளியம் சில கூறுகளில் விளக்கம் பெறுவதை மறுப்பதற்கும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளும் உலகின் மையங்களாகத் திகழ்கின்றன. மூன்றாம் உலக நாடுகளை விளிம்பு நிலைக்கு இவை தள்ளுகின்றன. மூன்றாம் உலக நாடுகளைத் தொடர்ந்து கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கி மையங்கள் தம்மை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றன.  மையங்கள் பெருநகரங்கள் என்றும் கூறப்பட்டன. இப்படி விளக்கத் தொடங்கிய சமீர் அமீன், ரஞ்சிட்ஷா போன்ற அறிஞர்கள், ஒவ்வொரு நாட்டினுள்ளும் செயல்படும் மையம் என்பதையும் விளிம்புநிலை என்பதையும் கூடுதலாக விளக்கினர்.  இன்னொரு வகையிலும் விளிம்புநிலை என்ற சொல்லை பின் – நவீனத்துவம் என்று பேசுபவர்கள் விளக்குகின்றனர். சமூக வாழ்விலிருந்து விலக்கப்பட்டும் ஓரத்தில் ஒதுக்கப்பட்டும் அதற்கு மேலும் சமூகம் என்ற கட்டமைப்பின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பவர்களை விளிம்புநிலை மனிதர்கள் என்று குறிப்பிட்டார்கள். மன நோயாளிகள், பல்லாண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், பாலியலைத் தொழிலாகச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்கள் முதலியவர்களை விளிம்புநிலை மனிதர்கள் என்றார்கள். சமூகத்தின் மையத்தில் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் முறையில் இப்படி நெடுங்காலமாகச் செய்து வருகிறார்கள்.  வணிகர்கள், முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களெல்லாம் நாட்டின் சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டும் சட்டங்களை மீறியும், கள்ள வாணிகம் முதலிய குற்றச் செயல்களில் ஈடுபட முடிகிறது. இவர்கள் கள்ளர்கள்தான் என்பதில் அய்யமில்லை. தாம் செய்யும் கள்ளத்தை மறைக்கும் முறையில் சிலரைக் கள்ளர்கள் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்து ஒடுக்குகிறார்கள். வர்க்க வேறுபாடுகள் உள்ள எந்த ஒரு சமூகத்திலும் ஏதாவது ஒரு அளவில் மனநோயாளியாகத்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். பொய்யும் வஞ்சகமும் ஏமாற்றும் கோழைத்தனமும் பொறாமையும் தாழ்வு / உயர்வு மனப்பான்மையும் மனத்தின் நோய்க்கூறுகள் தான். தம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் முறையில் இவர்கள் பிளவுபட்ட சமூகத்தின் விளைவாகக் கடுமையான மனநோய்க்கு உட்பட்டவர்களை, மனநோய் மருத்துவமனை அல்லது சிறைகளில் அடைக்கிறார்கள். இதைப்போலவே தான், தம் குடும்பங்களில் தாமே ஈடுபட்டுள்ள உடல் வணிகத்தை மறைக்கும் முறையில் ஆதரவற்ற பெண்களை வேசிகள் என்று இழிவுபடுத்துகிறார்கள்.  இவர்களை விளிம்பு நிலை மனிதர்கள் என்று குறிப்பிடுவது பொருந்தும். இவர்களால் மீண்டும் சமூகக் கட்டமைப்பினுள் மரியாதையோடு இடம் பெறுவது சாத்தியமில்லை. மனிதத் தரத்திலிருந்து இவர்கள் பெரிதும் கீழ் இறக்கப்பட்டவர்கள். இவர்கள் தம் மனிதத் தரத்தை மீட்டுக் கொள்வது அரிது. கடுமையான குரூரங்களுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் அதிகளவில் சொல்வதென்றால் கலவரங்கள் செய்ய முடியும். இத்தகையவர்கள் இதன் காரணமாகவும் மேலும் ஒடுக்கப்படலாம். ஆனால் இவர்கள் செய்யும் கலவரங்கள் சமூகத்தின் மையம் வரை தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்யும்.  ஆதிக்கம் நிலவுகிற காலம் முழுவதும் இத்தகைய அதிர்வுகளை இவர்களால் தவிர்க்க இயலாது. ஒவ்வொரு தேசத்தினுள்ளும் உலகளவிலும் விளிம்புநிலை மனிதர்கள் நாடுகள் இருக்கின்றன. இங்கும் ஓயாத கலவரங்கள் வெடிக்கத்தான் செய்யும். எந்த ஒரு நகரத்தினுள்ளும், குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை சேரிகள் இல்லாமல் நகர வாழ்க்கை இல்லை; சிறைச்சாலைகள் இல்லாமலும் இல்லை. விளிம்பு நிலையில் உள்ள நாடுகளை வளரும் நாடுகள் என்று சொல்வது உண்மை இல்லை. இவை அழிந்து கொண்டிருக்கும் நாடுகள்.  சந்தைப் பொருளாதாரம், உலகமயமாக்கம் என்ற பெயர்களால் இந்த நாடுகள் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகின்றன. இந்த வகை நாடுகளினுள் முன்பு நாம் கூறிய விளிம்புநிலை மனிதர்களின் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதும் தெளிவாகத் தெரிகிறது. சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு அங்கு தொடரும் நிலவரங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.  மையங்கள் உறுதியாக இருப்பதைப் போலத் தோன்றினாலும் கடுமையான அதிர்வுகள் அங்கும் நிலவுகின்றன. மையங்கள் என்றும் விளிம்புநிலைகள் என்றும் அரசியல் அறிஞர்கள் முன்பு பயன்படுத்திய சொற்கள் இன்றைக்கும் பொருள் தரும் முறையில் பயன்படத்தான் செய்கின்றன. இன்றைய உலகளவிலான பொருளியல் மற்றும் அரசியல் சூழலை வேறு சொற்கள் கொண்டும் விளக்குவதற்கு இடம் உண்டு என்றாலும், மையம், விளிம்பு ஆகிய சொற்கள் பொருள் இழந்து விடவில்லை.  2. தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை விளிம்புநிலை என்பதனோடு சேர்த்துச் சொல்லுகிறது. ஏற்கனவே வழங்கிவரும் விளிம்பு என்ற சொல்லின் ஆழ்ந்த பொருளை மீண்டும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. சமூகம் என்ற கட்டமைப்புக்கு வெளியில் தள்ளப்பட்டவர்களை முதன்மையாக விளிம்பு நிலை மனிதர்கள் என்று சொல்வது சரியாகப் பொருந்தும். சமூகம் என்ற கட்டமைப்புக்குள் இவர்கள் திரும்பி வருவதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை; அல்லது மிக, மிகக் குறைவு. இவர்களை இப்படி வைத்திருப்பதன் மூலம் தான் உடமைச் சமூகம் தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறது; அன்றியும் பத்திரப்படுத்திக் கொள்கிறது. இப்படிச் செய்வதன் மூலம்தான் இவர்கள் குடிமக்கள் என்ற பெயரோடு, வணிகம், அரசியல், சுரண்டல், நிர்வாகம், நீதிமன்றம் முதலியவற்றை மகிழ்ச்சியோடு செய்ய முடியும்; அறம், ஒழுங்கு, மதம், இலக்கியம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியும். தாமும் செய்வது கள்ளத்தனம், உடல் வணிகம், வன்முறை, சாத்தானின் செயல்கள் என்றெல்லாம் இவர்களுக்கு குறைந்தளவுக்கேனும் புரிதல் ஏற்படுமானால், இவர்களால் நிம்மதியாக வாழ முடியாது.  தலித் மக்களையும், பெண்களையும் இன்றைய சமூகக் கட்டமைப்பின் வெளியில் வைத்துப் பார்க்க முடியாது. இவர்கள் இல்லாமல் இன்றைய சமூகத்தில் உற்பத்தி இல்லை / மறு உற்பத்தி இல்லை. இவர்களின் உழைப்பு இன்றைய சமூகத்தில் நடைபெறும் ஆதிக்கங்கள் முதலிய அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இவர்கள் அதிக அளவில் சுரண்டப்படுகிறார்கள்; ஒடுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான மனித உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. மனிதத் தரத்திலிருந்து இவர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களை முற்றாக ஒதுக்கி விட்டு இந்தச் சமூகம் வாழ முடியாது. இவர்களை மனநோயாளிகள் என்று சொல்வதற்கில்லை. இவர்கள் செய்வது பாலியல் தொழில் இல்லை. இவர்கள் சிறைகளில் அடைக்கப்படவில்லை.  அதிகளவில் சொல்வதென்றால், சமூகத்தின் ஓரத்திற்கு இவர்கள் தொடர்ந்து தள்ளப்படுகிறார்கள். இவர்களை இப்படி எல்லாம் முற்றாக ஒதுக்கி விடவும் முடியாது. இன்றைய சமூகத்தில் நடைபெறும் பல்வேறு வகை உற்பத்திகளில், உழவர்கள், கைவினைஞர்கள் முதலியவர்களை உள்ளடக்கிப் பார்க்கும்பொழுது இவர்களை விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்வது பொருந்தாது. தலித்துகள், பெண்கள் என்பவர்களையும், உழவர்கள், கைவினைஞர்களையும் சேர்த்து அடித்தள மக்கள் என்று சொல்வதுதான் பொருந்தும், பழங்குடி மக்களையும் இவர்களோடு சேர்த்துச் சொல்லலாம். இந்திய சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக இருப்பவர்களையும் இந்தப் பிரிவில்தான் சேர்க்க முடியும். தொடர்ந்து மாறி வரும் உற்பத்தி முறை காரணமாகப் பாட்டாளி மக்கள் என்று முன்பு சொல்லப்பட்டவர்களுள் ஒரு பெரும் பகுதியினர் இப்பொழுது இந்தப் பிரிவுக்குள் வந்து சேர்கிறார்கள்.  நவீனத் தொழில்நுட்பங்கள் காரணமாக நகர்ப்புறத்துப் பாட்டாளிகள் தவிர்க்க முடியாமல் நாட்கூலி பெறும் உழைப்பாளர்களாக மாறி வருகிறார்கள். எனினும், இவர்கள் இல்லாமலும் முடியாது. இவ் வகை அடித்தள மக்கள் தொகுதியிலிருந்தும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுபவர்கள் உண்டு என்பதில் அய்யமில்லை. இதன் காரணமாக அடித்தள மக்கள் அனைவரையும் விளிம்புநிலை மனிதர்கள் என்று பெயரிடுவது பொருத்தமில்லை. சமூகக் கட்டமைப்புக்கு வெளியில் தள்ளப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள், சமூகத்தில் நடைபெறும் உற்பத்தியில் எந்தப் பங்கும் வகிப்பதில்லை என்று கூறுவதில் தவறில்லை.  பகுதி 2 1. தலித் மக்களின் விடுதலைக்கான இயக்கங்களை நாம் வரவேற்கிறோம். காலங்காலமாக இவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளின் விளைவாக மனிதத் தரத்தில் தாழ்ந்திருக்கிறார்கள்; தாழ்ந்திருக்குமாறு வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நில உரிமை இல்லை; நிர்வாகத்தில் பங்கு இல்லை. நால்வருண அமைப்புக்கு வெளியில் இவர்கள் வைக்கப்பட்டார்கள். மனிதர்களாகக் கூட இவர்கள் கருதப்படவில்லை. விலங்குகளைப் போல் இவர்கள் கருதப்பட்டனர். உடமையாளர்களின் நிலங்களில் இவர்கள் இரவு பகலென்று பாராமல் உழைக்க வேண்டும். கிராமத்துக்கு வெளியில் சேரிகளில் அமர்த்தப்பட்டார்கள். சற்று எல்லை மீறினால் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு கல்வி முதலிய மனித உரிமைகள் மறுக்கப்பட்டன. பெருந் தெய்வங்கள் இவர்களுக்கு இல்லை. இவர்களின் பெண்கள் எல்லா வகைகளிலும் உடமையாளர்களுக்குச் சேவை புரிய வேண்டும். கற்பு என்று இவர்கள் பார்க்கக் கூடாது; எனினும், இவர்கள் உழைக்க வேண்டும். உற்பத்தி செய்து கொடுத்து விட்டுக் கொஞ்சம் பெற்றுக் கொள்ள வேண்டும்.  மனித நாகரிகம் என்ற தளத்தில் இவர்களுக்கு வாழ்வு இல்லை. இன்று இவர்கள் மனித உரிமைக்காகப் போராடுகிறார்கள். மனிதர்களாகத் தாங்கள் மதிக்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள். தங்களை அடிமைப்படுத்திய சாதி அமைப்பை இவர்கள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். பிரம்மாவின் தலையில் இருந்து பார்ப்பனன் தோன்றினான் என்று தொடங்குகிற கதை இவர்களுக்கு உடன்பாடில்லை. சாதி அமைப்பில் தங்களை அடிமட்டத்தில் வைத்திருக்கிற இந்து மதம் இவர்களுக்கு உடன்பாடில்லை. சமூக உற்பத்தியில் தங்களுக்கு உரிய பங்கை இவர்கள் மீட்டுக் கொள்ள வேண்டும். அரசு அதிகாரத்திலும் கல்வி முதலிய நிறுவனங்களிலும் தங்களுக்குரிய பங்கு வேண்டும் என்று போராடுகிறார்கள். இவர்களின் போராட்டங்களை எவராலும் மறுக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக இவர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புக்களுக்கு இப்பொழுது ஈடு செய்தாக வேண்டும். இவர்களுக்குரிய பங்கு 20 சதம்தான் என்பது கூட நியாயமாகாது.  சுதந்திரம் பிரிவுபடாதது என்ற மார்க்சின் கூற்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவர்களை அடிமையாக வைத்திருக்கிற சமூகம் நிம்மதியாக இருக்க முடியாது. இவர்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் ஆண்டான்கள் தமக்குள்ளும் சுதந்திரமாக இருக்க முடியாது. எப்பொழுதும் இந்த ஆண்டான்கள் தம் ஆயுதங்களை நம்பி, அரசை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும். அடிமைகள் மனநிறைவோடு இவர்களுக்குச் சேவகம் செய்யவும் முடியாது. எப்பொழுதும் உள்ளக் குமுறலோடு வாழும் இந்த அடிமைகள் எந்தச் சமயத்திலும் கலகத்தில் ஈடுபடலாம். இதன் காரணமாகவும் ஆண்டான்கள் நிம்மதியாக இருக்க முடியாது. பனைமும் அதிகாரமும் மனிதப் பண்பை அழிக்கும். அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்காக இவர்கள் ஆணவத்தோடு திரிய வேண்டும். அடிமைகளுக்குச் சுதந்திரம் தருவதன் மூலமே இவர்களும் மனிதர்களாக வாழ முடியும்.  காலங்காலமாக அடிமைத்தனத்தில் இருத்தப்பட்டவர்கள் இப்பொழுது விடுதலை வேண்டுகிறார்கள். இவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறும் தலைவர்களும் தோன்றிவிட்டார்கள். கலகத்திற்குத் தூண்டும் முறையில் இவர்களுக்குச் சிலவற்றை கற்பிக்கிறார்கள். கலகம் செய்தால்தான் நியாயம் பிறக்கும் என்பது ஒரு மூதுரை. கலகம் செய்யும்போது இதுவரை ஆண்டான்களாக இருந்தவர்கள் குரூரமாகவே எதிர்வினை தருவார்கள். நிறைய இரத்தம் சிந்த வேண்டியிருக்கும்; ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியும். கலகம் செய்வதென்பது வெறும் கலகமாக, கலவரங்களாக மட்டுமே இருந்துவிட முடியாது. இவர்கள் உழைப்பாளிகள்.  சமூகத்தின் உற்பத்தியில் பெரும் பகுதிக்கு இவர்கள்தான் காரணம். சமூகத்திற்கு இதுவரை தேவை என்று கருதப்பட்ட சில சேவைகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள். ஆகவே, சமூகத்தின் கட்டமைப்பில் இவர்கள் தமக்கான இருப்பை / இடத்தைப் பெற முடியும். சமூக நீதிக்கான போராட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இவர்கள் வெற்றி பெறுவது உறுதி. ஒட்டுமொத்தமான சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது வழிவகுக்கும். சமத்துவம் என்பதில்தான் மனிதச் சமூகம் நிலைபெறும். சமத்துவம் நாளடைவில் சமதர்மத்திற்கும் வழி அமைக்கும்.  2. இந்த உண்மையை சித்தலிங்கய்யா அவர்கள் கூறுவதுபோல் வேறு ஒரு வடிவத்திலும் சொல்லலாம். சமூகக் கட்டமைப்பு என்பதன் ஓரத்தில் இருந்தபோதிலும் இவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள். வெளியில் இவர்களை எவராலும் தள்ளிவிடவும் முடியாது. ஏற்றத்தாழ்வான சமூகம் என்ற கட்டமைப்பின் ஒரு துருவத்தில் இவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு துருவத்தில் முதலாளிகள், நிலக்கிழார்கள், அரசு அதிகாரிகள் முதலியவர்கள் இருக்கிறார்கள். காவல்துறை, இராணுவம் என்று எத்தனையோ ஏற்பாடுகளை இவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் முதலியவை இவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. அதிகார மையத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு இவர்கள் சனநாயகம் முதலிய நடைமுறைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  அதிகார மையத்தை இவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அண்மைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் அதிகார மையத்தோடு இணைந்திருக்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கட்சிகள் தலித் மக்களையும் தங்களோடு சேர்த்துக்கொள்ளவே முயற்சி செய்கிறார்கள். இவர்கள் பத்திரமாக வாழ வேண்டும், மேலும், மேலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தேசமே இவர்களைத் தாங்க வேண்டும். தலித் மக்கள் இருந்தால் மட்டுமே தேசம் அமைதியாக இருக்கும், பாதுகாப்பாக இருக்கும் என்று இவர்கள் எத்தனையோ மாயைகளைப் பரப்புகிறார்கள், பத்திரிகையாளர்கள், படிப்பாளிகள் இவர்களோடு சேர்ந்திருக்கிறார்கள்.  நடுத்தர மக்களை இவர்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள். தொழிற்சங்கங்கள் இவர்கள் வசத்தில் இருக்கின்றன. சந்தைப் பொருளாதாரம் முதலிய இன்றைய போக்குகள் இந்த ஆதிக்க மையத்தை வலுப்படுத்துகின்றன. மேற்கத்தியரின் மூலதனமும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும் இவர்களுக்குத் தேவை. இதற்காகத் தேசத்தின் இயற்கை வளங்கள் முதலியவற்றை இவர்கள் அன்னியரிடம் ஒப்படைக்கிறார்கள். இயற்கை வளங்களை இழந்துவிட்டு உழைக்கும் மக்கள் தமக்கான வாழ்வைப் பெற முடியாது. நவீனத் தொழில்கள் பெருகும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். மையத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உழைக்கும் மக்களின் மீது சுரண்டலும் ஒடுக்குமுறையும் அதிகரிக்கிறது. வறுமை, நோய்நொடிகள், வேலை இல்லாத் திண்டாட்டம் முதலியவற்றால் உழைக்கும் மக்கள் துன்புறுகிறார்கள்; தற்கொலைகளும், மனநோய்களும் அதிகரிக்கின்றன.  காவல்துறை முதலியவை கூடுதலாக வலுப்பெறுகின்றன; போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஆதிக்க மையத்திற்கெதிராகக் கலவரம் செய்ய முடியாது ஒடுக்கி ஆகவேண்டும். அப்பொழுதுதான் ஆதிக்க மையத்தில் இருக்கிறவர் பத்திரமாக இருக்கமுடியும்.  இந்த நிலையை நாம் ஏற்க முடியாது. உயிரைக் கொடுத்தேனும் போராடியாக வேண்டும். வரலாற்றை நாம் வசப்படுத்த வேண்டும். இந்தத் தேசம் எங்களுடையது என்று சொல்லி, மீட்டாக வேண்டும். தம் தேவைகளுக்கு ஒத்த முறையில் நம்மைப் பயிற்றுவித்த அவர்களின் கல்வி முறை முதலியவற்றை நாம் உதறிக் கொள்ள வேண்டும். அவர்கள் நமக்குள் திணித்தது, அவர்களின் ஆதிக்கத்திற்குத் தேவையான பண்பாடு. இதை ஏற்றுக் கொண்டதன் மூலம் நம்மை நாமே அருவருப்புக்கு உள்ளாக்கிக் கொண்டோம். அவர்களின் வேளாண்மை முறை நமக்குத் தேவை இல்லை. அவர்களின் நுகர்வியம் நமக்கு உடன்பாடில்லை. இனியும் நாம் அவர்களுக்கு அடிமைகளாக இருக்க முடியாது. அவர்களிடமிருந்து தேசத்தை, வரலாற்றை, நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மையத்தை நாம் கைப்பற்ற வேண்டும். இன்னொரு ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல. ஆதிக்கங்களுக்குத் தேவை இல்லாத ஒரு பொருளியலை, அரசியலை, பண்பாடு முதலியவற்றை நம்மால் அமைக்க முடியும். நம்மால் சேர்ந்து உழைக்க முடியும். விளைவைப் பகிர்ந்து கொள்ள முடியும். எளிய வாழ்க்கை நமக்குப் போதும். நவீனத் தொழில்நுட்பங்களை அதே வடிவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. இயற்கையை, உயிரினங்களை நம்மால்தான் பாதுகாக்க முடியும். ஆதிக்கங்கள் காலங்காலமாகச் செய்து வந்த அழிவுகளை நம்மால் மெல்ல மெல்ல மாற்ற முடியும்.  அடித்தள மக்கள் என்பவர்கள் தான் இந்தப் போரில் முன் நிற்க முடியும். இந்தப் போரின் தேவையைப் புரிந்து கொண்டவர்கள் என்ற முறையில் ஒரு சில படிப்பாளிகள் இவர்களோடு இருக்க முடியும். உழவர்களை முன்னிலைப்படுத்தாமல் இந்தப் போரின் திசை வழியை நம்மால் வகுக்க முடியாது. இன்றைய சூழலில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உச்சளவில் உள்ளானவர்கள் தலித்துகளும், பெண்களும் என்பதில் அய்யமில்லை. உழவர்கள் மற்றும் கைவினைஞர்கள் என்பவர்களிலும் இவர்களே பெரும்பகுதியினர். இவர்களின் போராட்டங்களின் பொழுது மையங்கள் அதிரும் என்பதில் அய்யமில்லை. காவல்துறையினுள்ளும் இராணுவத்தினுள்ளும் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் அடித்தள மக்கள் என்பதில் அய்யமில்லை. இன்னும் நாம் தேடிச் சென்றால் சமூகத்தின் எல்லாக் களங்களினுள்ளும் நமக்குச் சாதகமானவர்கள் கிட்டுவார்கள். ஓரத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது; மையத்தை நோக்கி இயங்கியாக வேண்டும்.  இப்பொழுது ஒன்றைச் சொல்ல முடியும். மேட்டுக்குடியினருக்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நாங்கள் கள்ளுண்போம், மாட்டுக்கறி தின்போம், கற்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் ஆரவாரம் செய்வதற்கில்லை. இதைத் தவறென்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இவற்றில் அழுந்தி இருக்க முடியாது. உயர் சாதி எவையெல்லாம் நல்லதென்று சொல்லுகிறதோ அவை எங்களுக்குத் தேவை இல்லை என்ற போக்கில் இருந்துவிட முடியாது. சமூக வாழ்வின் அடிமட்டத்தில் நெடுங்காலம் இருத்தப்பட்டதன் விளைவாக சில பழக்கவழக்கங்களும், பண்புகளும் தமக்குள் புகுந்திருக்க முடியும். இவற்றையும் நாம் வாழ்வின் இலட்சியங்களாக்க முடியாது. வாழ்வின் இந்த எல்லைக்குள்ளேயே நாம் முடங்கிவிட முடியாது.  சமூக வாழ்வுக்கு ஆதாரமான இயற்கை வளங்களை அன்னியர் அகப்படுத்துவதை, மாசுபடுத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அன்னியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உயர் சாதியினரும் பாதிப்புக்கு உள்ளாகட்டும் என்று அமைதியாக நாம் இருந்துவிடவும் முடியாது. அன்னியர்கள் நமக்கு விடுதலை தரப் போவதில்லை. அவர்களும் நம்மை அடிமைப்படுத்தவே செய்வார்கள். நம் சக்திகள் தொடர்ந்து திரளும்பொழுது இனியும் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளமுடியாது என்ற நிலையில் அன்னியர்களுக்கு எதிராக ஆதிக்கவாதிகளில் ஒரு பகுதியினர் நம்மோடு சேரத்தான் செய்வார்கள். கலகம் செய்வதில் தொடங்கி அப்புறம் கட்டுப்பாடான முறையில் புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட்டால் ஒழிய நமக்கான தேசத்தைப் பெற முடியாது.  3. இப்பொழுது கட்டுரையின் தொடக்கத்திற்குச் செல்வோம். விளிம்புநிலை என்று தொடர்ந்து பேசுவதில் பொருளில்லை. சிறைக்கைதிகள் கலவரம் செய்யலாம். மற்றவர்களும் தெருவுக்கு வரலாம். இவர்களால் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது. சமூகக் கட்டமைப்பின் ஓரத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் தம்மைத் திரட்டிக் கொண்டு மையம் நோக்கி நகர முடியும். அடித்தள மக்கள் என்ற முறையில் உழைக்கும் மக்களோடு இவர்கள் தம்மை இனம் காண முடியும். அடித்தள மக்கள் இல்லாமல் இந்தச் சமூகம் இதுவரை வாழவில்லை. சமூகக் கட்டமைப்பில் இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளை இவர்களால் மீட்க முடியும். இவர்கள் முனைந்து பாடுபட்டால் சமூகத்தின் கட்டமைப்பையே மாற்றி அமைக்கவும் முடியும்.  உலகளவிலான ஆதிக்க மையங்கள் தொடர்ந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டு வரும் நிலையில் சமூகத்தில் உழைக்கும் மக்கள் உட்பட பெரும்பகுதியினர் மீது அடிமைத்தனத்தை அவர்கள் திணிக்கிறார்கள்.  இயற்கை முதலியவற்றை நாசமாக்குகிறார்கள். இயற்கையை இனிமேலும் அழிவுக்குட்படுத்த முடியாது என்ற முறையில் இயற்கையும் இப்பொழுது கலகம் செய்யத் தொடங்கியிருக்கிறது. கொடுமையான புயல் காற்றுக்களும் கடல் கொந்தளிப்புகளும் நில அதிர்வுகளும் கூடுதலாகி வருகின்றன. உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் அழிந்து வருகின்றன. இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகப் புதிய வகை நோய்கள் பெருகி வருகின்றன. எல்லாத் தேசங்களிலும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, மக்கள் சார்பாக பயங்கரவாதங்கள் அதிகரிக்கின்றன. விபத்துக்கள், போதை மருந்துகள், ஆயுதத் தயாரிப்புக்கள் ஆதிக்கவாதிகள் உட்பட எல்லோரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. உலக அளவில் ஒரு அவசர நிலை தோன்றியிருக்கிறது. இதே போக்கு நீடிக்குமானால் வரலாற்றின் இறுதிக்கு மனித சமூகம் போய்ச் சேரும்.  உலகளவில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மூன்றாம் உலகநாட்டு மக்கள், இப்பொழுது உலகைக் காப்பதற்கான கடமைகளில் ஈடுபட வேண்டும். அடித்தள மக்கள் என்ற முறையில் தலித்துகளும் பெண்களும் இன்னும் பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சாதியிலிருந்து விடுதலை, ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இவை பகுதிப் போராட்டங்கள். முழுமையான விடுதலைப் போராட்டத்தோடு இவை இணைக்கப்பட வேண்டும். சிற்சில சந்தர்ப்பங்களில் இவை தனித் தனியே நடைபெறுவதையும் நாம் ஏற்க முடியும். ஆனால், முழுமையான போராட்டம் என்பதிலிருந்து இவர்கள் விலகி நிற்க முடியாது.  ஆண் ஆதிக்கம் என்பதும் கூட தேசத்தின் பொருளியல் முதலிய அமைப்புக்களோடு நெருக்கமான உறவு உடையது. இயந்திரங்களை, ஆயுதங்களைக் கையாள்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்.  அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆண்கள் உடமைகளுக்கு உரியவர்கள் ஆண்கள், மதங்களினுள்ளும் ஆண்களுக்கே கூடுதலான இடம். ஆண் ஆதிக்கம் என்பது இந்த வகைகளிலெல்லாம் ஆண்களுக்குள் உறைந்திருக்கிறது. சமூகத்தின் பொருளியல் முதலிய அமைப்புகளை மாற்றாமல் ஆண் ஆதிக்கத்தையும் முற்றாக ஒழிக்க முடியாது. இருக்கும் பொருளியல் அமைப்புக்குள் பெண்கள் இடம் பெற முடியும் என்பது உண்மைதான். அப்படி இடம்பெறும் பொழுது இன்றைய பொருளியல் அமைப்பின் ஆதிக்க உணர்வுகளைத்தான் இந்தப் பெண்களும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். சமுதாயத்தின் பொருளியல் அமைப்பை மாற்றாமல் இதில் அகப்பட்டுள்ள மனிதர்கள் விடுதலை பெறுவது சாத்தியமில்லை.  முழுமைப் பார்வைக்கு இனி இடம் இல்லை. எல்லாவற்றையும் உள்ளடக்குவதாக எந்த ஒரு தத்துவமும் இருக்க முடியாது. இனி பகுதிப் பார்வைக்கே இடம் உண்டு. மார்க்சியம் தோற்றுவிட்டது இப்படி எல்லாம் இன்று அறிவாளிகள் என்று தம்மைக் கருதிக் கொள்வோர் பேசுகிறார்கள். வகை வகையான தர்க்கங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். மார்க்சியத்திற்கெதிராகத் தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் இவர்கள் முன் நிறுத்துகிறார்கள். மனிதனுக்குள் ஒரு நான் என்பது உண்மை இல்லை. மனிதன் தனக்குள் பல நாள்களாகச் சிதைந்துவிட்டான். இவனுக்குள் ஒருமை இல்லை. இவனுக்குள் ஒருமை காணும் மதவாதம் இனி செல்லுபடியாகாது. வரலாறு, இலக்கியம் முதலிய அனைத்துமே பிரதிகள். அவரவர் தனித்தனியே வாசித்துக் கொள்ள வேண்டும். மனித விடுதலை என்றெல்லாம் இனி பேசுவதற்கில்லை.  அறம், ஒழுக்கம், பண்பாடு என்றெல்லாம் இனி கட்டுப்பாடுகள் தேவை இல்லை. மனிதன் எதையும் செய்யலாம், எப்படியும் வாழலாம். ஆண்களோடு ஆண்களும் பெண்களோடு பெண்களும் பாலியல் உறவு கொள்ளலாம்; திருமணம் செய்யலாம்; குழந்தைப் பேற்றுக்கு அவசியம் இல்லை. இப்படி எல்லாம் இன்று நம் அறிவாளிகள் உரையாடல் நிகழ்த்துகிறார்கள்.  சந்தைப் பொருளாதாரம் என்ற பல பெயர்களில் மூலதனம் உலகளவில் தன்னைத் திரட்டிக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலுள்ள மூலதனச் சக்திகள் தமக்குள் ஒருங்கிணைவைச் செய்துகொள்கின்றன. தமக்குள் என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் உலகளவிலான சுரண்டலை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்.  தேசங்களின் இறையாண்மையை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். உலகளவில் இயற்கை எங்களுக்குச் சொந்தம்; மனித உழைப்பு எங்களுக்குச் சொந்தம்; அறிவு எங்களுக்குச் சொந்தம் என்றெல்லாம் இவர்கள் பிரகடனம் செய்கிறார்கள். போர் ஆயுதங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளவில்லை. அதே சமயம் அறிவையும் ஒரு வலிமைமிக்க ஆயுதமாக மாற்றுகிறார்கள்; அறிவை வர்த்தகப் பொருளாக மாற்றுகிறார்கள். இவர்களின் ஆதிக்கங்களுக்கு எதிராக மக்கள் திரளக் கூடாது. அவர்கள் திரள்வதைத் தடுக்க வேண்டும். மக்களின் அமைப்புக்களைச் சிதைக்க வேண்டும். மனித ஆளுமையைச் சிதறடிக்க வேண்டும். முழுமை என்று இவர்கள் பேசக்கூடாது. உலகை மாற்றுவது குறித்து இவர்கள் சிந்திக்கக் கூடாது. இவர்களைத் தனியன்களாக்கி, துகள்களாக்கி காற்றில் பறக்கவிட வேண்டும். இப்படியும் ஆதிக்க சக்திகள் முனைந்து செயல்படுகின்றன.  மார்க்சியம் தோற்றுவிட்டது என்று இவர்கள் பிரகடனம் வெளியிடுகிறார்கள். எல்லாவற்றையும் தன்னால் விளக்கமுடியும் என்று மார்க்சியம் ஒரு காலத்தில் உரிமை கொண்டாடியது உண்மைதான். ஆனால், இன்றுவரை வேறு எந்தக் கோட்பாட்டைக் காட்டிலும் வரலாறு, மெய்யியல், பொருளியல் முதலிய பலவற்றைக் கூடுதலாக விளக்குவதும் மார்க்சியம்தான். எந்தவகை ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்வது மார்க்சியமாக இருக்க முடியாது. மார்க்சியத்தினுள்ளும் முதலாளியம் முதலிய ஆதிக்கங்கள் நுழைந்து தங்கி இருந்தன என்பதும் உண்மைதான். தனக்குள்ளிருந்தும் ஆதிக்கங்களை களைந்து கொள்கிற மார்க்சியம்தான் மனிதனுக்கு விடுதலை தர முடியும்.  சாதி ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் முதலியவைகளையும் மார்க்சியம் ஏற்க முடியாது. உலகளவிலான மனித விடுதலை குறித்தும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும். அடித்தள மக்களின் விடுதலையில் கவனம் வைத்து நம்மால் முன் செல்ல முடியும். தலித் மற்றும் பெண்களின் விடுதலை இல்லாமல் மனித விடுதலை சாத்தியமில்லை. விளிம்புநிலை என்று ஆர்ப்பரிப்பதை விடுத்து, அடித்தள மக்களின் விடுதலை என்று நிதானமாக ஆனால் உறுதியாக முன் நகர்வது நமது இன்றைய வரலாற்றுக் கடமை.    பகுதி 3 தமிழக வரலாற்றுச் சூழலில் கடந்த சில பத்தாண்டுகளாகத் தலித்தியம், பெண்ணியம் குறித்த விவாதங்களில் சில போக்குகளை இங்குத் தொகுத்துப் பார்க்கலாம். தலித்தியம் மற்றும் பெண்ணியம் குறித்துச் சரியான பார்வை பெற இத்தகைய ஆய்வு பயன்படும்.  1. 1980 -களின் இடையில் பெண்ணியம் மற்றும் தலித்தியம் குறித்து நிறப்பிரிகை நண்பர்கள் ஒரு ஆழமான சொல்லாடலை தொடங்கி வைத்தனர். தலித்தியம் என்று அறியத்தக்கக் கூறுகள் பெரியாரைக் காட்டிலும் அம்பேத்கர் இடத்தில் விரிவாக இருக்கின்றன என்பதில் அய்யமில்லை. அதைப் போலவே, பெண்ணியம் என்று அறியத்தக்க சில கூறுகள் அம்பேத்கரை காட்டிலும் பெரியாரிடத்தில் கூடுதலாக இருக்கின்றன. இந்தியாவில் மற்றும் உலக அளவில் மார்க்சியத்துக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்த ஆய்வின்போதுதான் பெண்ணியமும் பிறகு தலித்தியமும் முன்னணிக்கு வந்தனர் பாட்டாளி வர்க்கம் தான் வாக்களித்தபடி புரட்சிகரமான சமூக மாற்றத்தை செய்து முடிக்க இயலவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் மீது முழு கவனத்தையும் குவித்திருந்த மார்க்சியர், பாட்டாளி வர்க்கத்தை காட்டிலும் கூடுதலான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு இருந்த பெண்களையும் தலித் மக்களையும் ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வி அழுத்தமாக எழுந்தது. பெண் விடுதலைக்கு வாய்ப்பில்லை. மார்க்சியருக்குள்ளும் உயர்சாதி மனப்பான்மை பதிந்திருந்ததன் காரணமாகத், தலித் மக்களை மதிக்கவில்லை. இவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டுச் சமூக மாற்றம் என்பதை செய்வதற்கில்லை. மார்க்சியருள்ளும் தலைமைப் பீடத்தில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். இதன் காரணமாக மார்க்சியக் கட்சிகளுக்குள் பார்ப்பனியம் அழுத்தம் பெற்றிருந்தது. இதன் காரணமாகவும் பெண்ணியத்தையும் தனித்து எதையும் மார்க்சியத்திற்கு வெளியில் தள்ளி வைத்துப் பார்த்தார்கள். 2. நிலமை மாறி இருக்கிறது. தலித்துகளையும் பெண்களையும் உள்ளடக்கியதாக தான் சமூகம் மாற்றம் அடைய முடியும். கட்சிக்காரர்கள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் கட்சிக்கு வெளியில் இருக்கிற மார்க்சியர் பெண்ணியம், தலித்தியம் குறித்து அக்கறையோடு பார்த்ததுடன் இவற்றுக்குச் சார்பான நிலைப்பாடு எடுத்தனர். பார்வையில் அழுத்தம் பெற்ற நிலையில் மார்க்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கிய தோடு மார்க்சியத்திற்கு வெளியிலும் சென்றனர் பின் நவீனத்துவம் என்ற கருத்தியல் காரணமாகவும் இப்படி நேர்ந்தது என்று சொல்வதில் தவறு இல்லை. நிறப்பிரிகை நண்பர்கள் இப்படி எல்லாம் செயல்பட்டதன் விளைவாகப் பெண்ணியமும் தலித்தியமும் இலக்கியவாதிகள் உட்பட சிந்தனையாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த எவராலும் புறக்கணிக்க முடியாத போக்கு ஆகிவிட்டது. பெரியாரை ஒரு சமயம் ஒதுக்கி வைத்த நிறப்பிரிகை நண்பர்கள் பிறகு அம்பேத்கருக்கு நிகராக பெரியாரையும் மேற்கோள் காட்டத்தொடங்கினர். எஸ்.வி.ஆரைப் பொருத்தவரைத் தொடக்க காலம் முதலே வகுப்பு வாரி உரிமைக்காகப் பெரியார் போராடியதை ஏராளமான மேற்கோள்களுடன் மெய்ப்பித்தார். தலித் மக்களுக்கு ஆதரவாக பெரியார் எப்பொழுதும் செயல்பட்டார். பொது உடமை / புரட்சிச் சார்பை பெரியார் கைவிட்டார் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் / சொற்களில் பெரியார் புரட்சிகரமான சமூக மாற்றம் குறித்துப் பேசிக் கொண்டுதான் இருந்தார். ஆகவே, பெரியாரை இந்தச் சிக்கலிலிருந்து ஒதுக்குவதில் பொருளில்லை.  வர்க்கமா, சாதியா எதன் அடிப்படையில் இந்திய சமூகத்தை மதிப்பிட வேண்டும் என்ற முறையில் மார்க்சியரும் திராவிட இயக்கத்தவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இன்றும்கூட இந்த விவாதம் அடிக்கடி தலை தூக்குவதைப் பார்க்கிறோம். இதன் காரணமாகத் தமிழகச் சூழலில் இணைந்து செயல்பட வேண்டிய சக்திகள் தமக்குள் முரண்பட்டு மோதுவதன் மூலம் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்ந்து பின்னடைவுக்கு உள்ளாவதை நாம் பார்த்து வருகிறோம். இடையில் ஒரு மாதிரியான சமரசத்தையும் சிலர் செய்து வைத்துள்ளனர். வர்க்கத்தினுள்ளும் சாதியக் கூறு இருக்கத்தான் செய்கிறது. சாதி அமைப்பு என்ற படிமுறைக்குள் வர்க்க வேறுபாடுகளும் இருக்கின்றன. இத்தகைய சமரசம் தேவைதான் என்றபோதிலும் இதைச் சிலர் கலைத்துப் போடுவதிலும் இன்பம் காணத்தான் செய்கின்றனர்.  பெரியாரை முன்பு ஒதுக்கிவைத்தது போல மார்க்சியர் இன்று செய்ய முடியவில்லை. மார்க்சியக் கட்சிகள் சிலவற்றில் பெரியார் உறுதியாக இடம் பெறவும் செய்கிறார். இத்தகைய மார்க்சிய கட்சிகளினுள் தலித் மக்களும் உரிமையோடு இடம் பெறுகின்றனர். விடுதலை என்பது சாதி அளவில் மட்டும் தங்கிவிட முடியாது என்ற புரிதல், கூடிவருகிறது.  3. இந்தச் சிக்கல் குறித்து இன்னொரு பார்வையையும் இங்கு முன் வைப்பது பொருந்தும். மார்க்சியரின் வர்க்க ஆய்வென்பது, எந்த ஒரு சிக்கலும் எத்தகைய வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் தோன்றுகிறது, வளர்ச்சி பெறுகிறது என்பதை ஆராய்வதாகத்தான் இருக்க முடியும். இந்திய சமூகத்தில் தோன்றிய சாதி இன்று வரை எத்தனையோ வடிவங்களில் நிலை பெறுகிறது. இந்தியாவில் சாதி ஏன், எப்படித் தோன்றியது. யாரால் யாருடைய நலன்களுக்காகச் சாதி அமைப்புத் தோன்றியது / தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராய்வது மார்க்சியரின் வர்க்க ஆய்வுமுறை. பார்ப்பனர்தான் தோற்றுவித்தனர் என்பது ஒற்றைப் பரிமாண விளக்கம்.  அம்பேத்கர் அவர்களின் ஆய்வுப்படி, இந்திய வரலாற்றில் நெடுங்காலம் தமக்குள் முரண்பட்டு, போரிட்டுப் பிறகு இரு சார்பினரும் வலுக்குன்றிய நிலையில், இனியும் இப்படி மோதிக் கொண்டிருந்தோம் என்றால், நமது வலிமை குன்றிய நிலையில், நமக்குக் கீழ் இருக்கும் சாதிகள் நம்மை ஆதிக்கம் செய்வர் என்று கருதி பிராமணரும், சத்திரியரும் தமக்குள் கை கோர்த்துக் கொண்டனர். இதன் பிறகு இந்திய வரலாறு இதே கதியில் சென்றது என்கிறார் அம்பேத்கர்.  தனி உடமையும் அரசு அதிகாரமும் பார்ப்பனியத்தோடு கை கோர்த்துக் கொண்ட நிலையில்தான் இந்திய வரலாற்றில் இவர்கள் ஆதிக்கம் பெற்றனர். அம்பேத்கரின் இந்த ஆய்வு மார்க்சியத்திற்கு ஒத்த ஆய்வு. இன்றும்கூட சாதிமுறையை முதலாளியம் இப்படித்தான் பயன்படுத்துகிறது என்பதை நாம் பார்க்கிறோம். இந்துத்துவம் என்ற மதவாத அரசியலை வேறு வகையில் விளக்கவே முடியாது. சாதி அமைப்பையும் சமூகத்தின் பொருளியல் அமைப்பையும் வேறு பிரித்துப் பார்ப்பதற்கில்லை. ஆகவே, இங்கெல்லாம் சாதிதான் அல்லது வர்க்கம்தான் என்று பேசுவதில் பொருளில்லை.  ஆகவே மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் முரண்படுத்துவதிலும் பொருள் இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முரண்படுத்தல் எதிரிகளுக்குச் சாதகமாகிவிடும். முரண்படுத்திப் பேசுபவர்களும் முதலாளியம் முதலிய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஒத்த முறையில்தான் செயல்படுகின்றனர் என்று கூறவும் முடியும். இவர்களால் மக்கள் விடுதலை பெற முடியாது; தலித் மக்கள் விடுதலை பெற முடியாது.  4. மார்க்சியம் ஏன் வெற்றி பெறவில்லை என்பதையும் இங்குச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம். பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போக முடியாது என்று எங்கல்ஸ் கூறி இருக்கிறார். பெருந்தொழிலைப் போலவே மாபெரும் அரசமைப்பும் சோசலிசமும் ஒத்துப் போக முடியாது. ஏவுகணைகள் முதலியவற்றோடு கூடிய இராணுவ அமைப்பும் சோசலிசமும் ஒத்துப் போக முடியாது. தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் மீது உச்சளவிலான சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் செயல்படுத்தினால் ஒழிய, மாபெரும் தொழில் அமைப்பையும் அரசமைப்பையும் கட்ட முடியாது. இப்படித்தான் முதலாளியப் போக்கை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம் சோவியத் ஒன்றியத்தில் செயல்பட்டது; இதன் காரணமாக மக்கள் மீது அடிமைத்தனத்தைத் திணித்தது.  இந்தியாவினுள்ளும் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம், மக்களுக்கு விடுதலை தராததில் வியப்பில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிற பாட்டாளி வர்க்கத்தை முதன்மைப்படுத்தித் தலித் மக்களை உள்ளடக்கிய உழவர் மற்றும் கைவினைஞர் சமூகத்தை மார்க்சியர் ஓரத்திற்கு ஒதுக்கினர். இந்தியச் சமூகத்தின் எத்தனையோ இயல்புகளைப் புறக்கணித்தனர். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியர், மேற்கத்திய நாகரிகத்தைத்தான் இங்கும் முன் மாதிரி ஆக்கினர். இந்தியாவில் இல்லாத “தேசிய முதலாளிகள்” என்ற தரகர்களோடு ஒத்துழைத்தனர். இப்படி எவ்வளவோ செய்ததன் விளைவாக இங்கு மார்க்சியம், மக்களியமாகவில்லை. தன் பின்னடைவின் விளைவாக மார்க்சியம் இப்பொழுது புதுப் பாடங்களைக் கற்றுக் கொள்வதை நாம் வரவேற்கிறோம். மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்கள் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் முதலியவற்றை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மேம்படும் என்பதிலும் நாம் உறுதி கொள்ள முடியும்.  ஆதிக்கங்களோடு மார்க்சியம் ஒத்துச் செல்ல முடியாது. தனக்குள்ளும் பதிந்திருக்கிற ஆதிக்கப் போக்குகளை மார்க்சியத்தால் களைந்து கொள்ள முடியும். சாதி ஆதிக்கத்திற்கு வசப்படுகிற மார்க்சியம், மார்க்சியமாகவும் இருக்க முடியாது. மக்களுக்கு விடுதலை என்ற நோக்கில் செயல்படும் மார்க்சியம் ஆண் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ள முடியாது. இவ்வாறெல்லாம் ஆதிக்கங்களைக் களைந்து கொண்ட மார்க்சியம், இயற்கையின் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாக இருக்க முடியாது.  5. இப்பொழுது பெண்ணியம் குறித்துச் சிலவற்றைச் சொல்லலாம். பெரியாரின் பெண்ணியப் பார்வையை நண்பர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். குடும்பம் என்ற அமைப்பு பெண்ணை அடிமைப்படுத்துகிறது. குழந்தைப் பேறு பெண்ணை அடிமைப்படுத்துகிறது. வரலாறு தொடரவேண்டும் என்பதற்காகப் பெண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தவறு. ஆணுக்குப் பெண் அடிமை இல்லை. திருமணம் செய்து கொள்வதும் செய்யாமல் இருப்பதும் பெண்ணின் உரிமை. தாலி பெண்ணுக்கு அடிமையின் சின்னம். கற்பென்பது ஆண் திணித்த அடிமைத்தனத்தின் வெளிப்பாடு.  இப்படி எல்லாம் பெரியார் தீவிரமாகப் பேசினார். பெரியாரை ஒரு அராஜகவாதி என்று மரியாதையோடு சொல்வது தகும். அரசு என்ற அமைப்பைச் சமூகத் தளத்திலிருந்து முழு அளவில் ஒதுக்கி வைக்கிற அனார்க்சிசம் என்ற மேற்கத்தியப் பார்வை பெரியாருக்குள் இயல்பாக வெளிப்படுகிறது. கடவுள் இல்லை, சாதி இல்லை, மதம் இல்லை என்றெல்லாம் பேசிய பெரியார், தேசம், மொழி, இனம் முதலிய எல்லைகளுக்குள் மனிதன் அகப்பட வேண்டியதில்லை என்பதிலும் தீவிரமான கருத்து கொண்டிருந்தார். தன்மானம் என்பது பெரியாரின் மெய்யியல். பெண்ணுக்குத் தன்மானம் என்பது ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவது. தொழிலாளிக்குத் தன்மானம் என்பது முதலாளியத்திலிருந்து விடுதலை பெறுவது. இப்படி எல்லாவகையிலும் விடுதலை பெற்ற மனிதனுக்குத் தேசம் இல்லை, இனம் இல்லை இப்படித்தான் பெரியாரின் சிந்தனை தீவிரமாக இயங்கியது.  மனித சமூகத்தின் இறுதி இலக்கு என்பது இதுவாகத்தான் இருக்கமுடியும்.  இடைக்காலத்தில் எத்தனையோ தடங்கல்கள், தடைகள், தத்துவங்கள், அமைப்புக்கள் முதலியவை. இவற்றையெல்லாம் கடந்தாக வேண்டும். இறுதியில் பெண் மனிதன் அடைய வேண்டிய இலக்கை இடைக்காலத்தில் சாதிக்கமுடியுமா? இப்பொழுதே நாம் குடும்பம் முதலியவற்றைத் தகர்த்துக் கொள்ள முடியுமா? இப்பொழுதே வரலாற்றுக்கு வெளியில் நம்மால் இயங்க முடியுமா?  பெரியாரின் பெண்ணியத்தை இன்றைய நோக்கில் தீவிரவாதப் பெண்ணியம் என்று கூற முடியும். ஒரு சிலர் இதை இப்பொழுதே செயல்படுத்த முனையலாம். பெரும்பாலானோர்களால் இப்பொழுதைக்கு இது சாத்தியம் இல்லை. எனினும், இறுதி இலக்கை மனத்தில் இருத்தி, இப்போதைய சூழலில் செயல்படத்தான் வேண்டும். இதற்குப் பெயர் சமரசம் இல்லை. சீர் கெட்ட முதலாளியமும் இப்படிச் சில தூண்டுதல்களைப் பெண்ணுக்குள் செலுத்த முடியும். நாம் கவனமாக இருக்க வேண்டும். ஜீலியன் கிறிஸ்தவா அவர்களின் கருத்துப்படி பெண்ணியம் என்பது, படைப்பியக்கம். எல்லா மனிதருக்குள்ளும் செயல்படுவது இந்தப் படைப்பியக்கம். தாய்மை என்பதும் கருணை என்பதும் இதன் வேறு பெயர்கள். இயற்கை, உலகை வாழ வைப்பது மற்றும் புதுப்பிப்பது இந்தப் பெண்ணியச் சக்தி. தமிழ் மரபில் இதனைச் சக்தி என்று சொல்வது பொருந்தும். இந்த நோக்கில் பெண்ணியம் குறித்த நம் பார்வை விரிவு பெறவேண்டும். தலித் மக்கள் உள்ளும் இதன் விரிவை நாம் காணமுடியும்.  வேசித்தனம் இல்லாமல் முதலாளியம் செயல்பட முடியாது. சமூகம் முழுவதையும், ஆண்கள் உட்பட எல்லோரையும் வேசித்தனத்திற்கு உள்ளாக்குவது முதலாளியம். கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் எல்லோரும் முதலாளியத்திற்கு சேவகம் செய்யும் முறையில் தம் உடல் உழைப்பைக் குறைந்த கூலிக்கு விற்க வேண்டும்; தன்மானம் முதலியவற்றை இழக்க வேண்டும். இப்படி இயங்குவது முதலாளியம். இது நமக்கு உடன்பாடாக இருக்க முடியாது. பெண்ணும் தன்னை எதற்காகவும் விற்க முடியாது. தலித்தும் இப்படித் தன்னை இழக்க முடியாது.  இன்று உலக அளவில் செயல்படுகிற முதலாளியம், இயற்கையை நாசமாக்குவதோடு, உழைக்கும் மக்கள் அனைவரையும் சமூகத்தின் தாழ்நிலைக்குள் தள்ளுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் எங்கும் பரவி வருகின்றன. ஆறுகளும் கடல்களும் சாக்கடையாகின்றன. காற்றில் நஞ்சு ஏறுகிறது. மனிதனிடமிருந்து அவனது உழைப்புத் திறனை மட்டுமல்லாமல், தன்மானம், அறம் முதலியவற்றையும் வெளியேற்றுகிறது இந்த முதலாளியம். இந் நிலையில் நாம் என்ன பார்க்கிறோம். உழைக்கும் மக்கள் அனைவருமே தலித் நிலைக்கு தாழ்த்தப்படுகின்றனர். நடுத்தர மக்களின் பெரும்பகுதியினருக்கும் நாளடைவில் இந்த நிலைதான் நேரும். இதை எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.  இப்பொழுது உழைக்கும் மக்கள் தம்மை ஆதிக்கங்களுக்கு எதிராக திரட்டிக் கொள்ளத்தான் வேண்டும். விடுதலைக்கு வேறு வழியில்லை. கடைசியாக ஒன்று. தலித் மக்கள் தம்மைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதவேண்டியதில்லை. கடுமையாக உழைப்பதில் இவர்கள் தளர்ச்சி கொள்வது இல்லை. எளிய வாழ்க்கை இவர்களுக்குப் போதும். துன்பப்படுகிறவர்கள்தான் பிறர் துன்பங்களைப் புரிந்து கொள்ளமுடியும். இதன் காரணமாக இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களிடமும் கதைகள் உண்டு, கலைகள் உண்டு. இவர்களுக்கும் தெய்வங்கள் உண்டு. மனிதத் தரத்திலிருந்து விடுபடாதவை இவர்களின் தெய்வங்கள். இவர்கள் முழக்கும் பறை, தாள கதிகளின் உச்சங்களை எளிதாகத் தொடுகிறது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பிரெஞ்சு நாவல் ஒன்று கூறுவதுபோல இவர்களுக்கு வானமும் மண்ணுமே தெய்வங்கள். மனிதப் பண்பின் சிகரங்கள் இவர்களுக்குள்ளும் இயங்குகின்றன. உழவுத் தொழிலின் நுட்பங்கள் இவர்களுக்கு இயல்பானவை. கைவினைகளில் நுட்பங்கள் இவர்களிடம் அற்புதங்களாகக் கூடி உள்ளன மனிதத் தரத்தின் உச்சங்கள் இவர்களுக்கும் உரியவை. இவர்கள் நிமிர்ந்து நின்றால் இவர்களிடமிருந்து மாபெரும் சக்திகள் வெளிப்படும். மனித விடுதலை இவர்கள் மூலம் சாத்தியப்படும். பகுதி 4 தமிழ்த் தேசியம் என்ற அரசியலில் தலித்தியம் மற்றும் பெண்ணியத்தின் நிலைப்பாடு குறித்துச் சிலவற்றை சொல்ல வேண்டும். தமிழகத்தில் தலித்தியம் குறித்துப் பேசும் அவர்களில் ஒரு பகுதியினர், தமிழ்த் தேசியம் என்ற அரசியலை ஏற்பதில்லை. தமிழர்கள் என்பது உயர்சாதி இந்துக்களைத்தான் குறிக்கிறது. குறிப்பாக வேளாளர்கள் மற்றும் முதலியார்களின் அரசியல் குரலாக தமிழ்த் தேசியம் அமைகிறது தலித் மக்களை அடிமைப்படுத்துகிற அரசியலின் தொடர்ச்சிதான் தமிழ்த் தேசியம் இப்படி இவர்கள் விவாதிக்கிறார்கள். உலகம் முழுவதிலும் தேசிய இன விடுதலைக்கான போராட்டங்கள் அண்மைக் காலத்தில் வலுத்து வருகின்றன. எந்த நாட்டினுள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஓர் அரசின் கீழ் ஒத்து வாழ முடிவதில்லை. பெரும்பான்மை இனம் மைய அரசைத் தன் பிடியில் வைத்துள்ளது. முதலாளிகளோடு ஒத்துழைக்க மைய அரசு, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மூலதனத்தைக் கூடுதலாக திரட்டுகிறது. பெரும்பான்மை இன மக்களை மட்டுமல்லாமல் இன்னொரு இனத்தை சிறுபான்மை இனம் என்று குறிப்பிட்டு அதன் ஆட்சி உரிமை, பொருளியல் உரிமை முதலியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு அதன்மீது கூடுதலான சுரண்டலைத் திணிக்கிறது அன்னிய நிறுவனங்களின் ஊடுருவலைத் தொடர்ந்து, மைய அரசு தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது. இதன் விளைவாக, ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தனக்கென தனிநாடு கோரிப் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இயற்கை வளங்கள் தொடர்ந்து அளிக்கப்படுவதை ஒப்புக் கொள்ள முடியாது. தனது மொழி, பண்பாடு முதலியவற்றை இழந்து ஒரு தேசிய இனம் வாழ முடியாது. இறையாண்மை என்பது இறுதியில் மக்களிடம்தான் இருக்கிறது இதை மீட்டு கொள்வதற்காக நடத்தும் போராட்டம் புனிதமானது என்பதில் அய்யமில்லை. இந்தியாவிலும் இதுதான் நடைபெறுகிறது. தமிழ்த் தேசிய இனம் இப்பொழுது விடுதலை கோருகிறது. மைய அரசில் சரியான கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த கூட்டாட்சிக்கு வழி இல்லை. நாளுக்கு நாள் மாநில அரசின் அதிகாரங்களும் பறி போகின்றன. மாநில அரசிலுள்ள ஆளும்கட்சியும் மைய அரசோடு ஒத்துழைக்கும் முறையில் தமிழ் மக்களின் நலன்களை அன்னியச் சக்திகளுக்கு விட்டுத் தருகிறது.  மார்வாடிகள் தமிழகத்தின் தொழில் வளங்களைத் தொடர்ந்து கைப்பற்றுகின்றனர். ஏற்றுமதியைப் பெருக்குவது என்ற பெயரால், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் இறால் பண்ணைகளும் தமிழகத்தின் நீர்வளம், நிலவளம் முதலியவற்றைத் தொடர்ந்து நஞ்சாக்குகின்றன. எதிர்காலத்தில் தமிழகமே பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும். இன்னும் எத்தனையோ காரணங்கள். தமிழ் நிலத்தை இத்தகைய அழிவுகளிலிருந்து மீட்டாக வேண்டும். தமிழகத்தைச் சுரண்டுவதோடு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டை விடுவித்தாக வேண்டும். இந்த நோக்கில்தான், தமிழ்த் தேசியம் என்ற அரசியல் இங்கு தேவைப்படுகிறது.  மூவேந்தர்கள் முதலியவர்களின் ஆட்சிப் பெருமை, படையெடுப்பு முதலியவற்றை எல்லாம் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்களின் ஆதிக்க மரபு நமக்கு உடன்பாடு இல்லை. தமிழ் இலக்கியம், வரலாறு முதலியவற்றினுள் காலந்தோறும் இயங்கி வருகிற விடுதலை மரபை இன்று நாம் வளர்த்தெடுக்க விரும்புகிறோம். வள்ளுவரின் ஒப்புரவு, சித்தர் இலக்கியம் முதலியவற்றின் வழியே வெளிப்படுகிற சமத்துவம் / சமதர்மம் இன்று நமக்குத் தேவை. இந்த மரபு, ஆதிக்க மரபுக்கு எதிரானது. இது மக்கட் சார்புடையது. உழவர் சமூகத்திலிருந்து கிளைத்தெழுந்தது இந்த மரபு. ஆதிக்கத்திற்கு எதிரானது இந்த மரபு என்ற முறையில் பெண்களை மட்டுமல்லாமல் தலித் மக்களையும் சமத்துவம் நோக்கி ஊக்குவிப்பது இந்த மரபு. ஆதிப் பொதுமைச் சமூகத்திலிருந்து தொடர்ந்து வருவது இந்த மரபு.  வள்ளலார், பெரியார் முதலியவர்களுக்குள் வந்து சேர்ந்தது இந்த மரபுதான். இந்த மரபை இன்றைய நோக்கில் மேலும் மேலும் திறனாய்வுக்கு உட்படுத்தி இதை வளர்த்தெடுக்க வேண்டியது நம் கடமை. இதைத்தான் தமிழ் மரபு என்று கூறுகிறோம். இங்கு தமிழர்கள் என்று சுட்டும் பொழுது ஆதிக்கவாதிகளை நாம் இங்கு விலக்கி வைக்கிறோம். அவர்களுக்கு முதலாளியம் முதலிய ஆக்கங்கள் தேவை; ஆங்கிலம் அவர்களுக்குத் தேவை; ஊழலும் அதிகாரமும் தேவை. நமக்கு நீர் வேண்டும், நிலம் வேண்டும், இயற்கை வேண்டும், தமிழ் வேண்டும், மக்களியம் வேண்டும், விடுதலை வேண்டும்.   தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக்கான அரசியலுக்குள் தலித் மக்கள் உரிமையோடு இணைய முடியும். அன்னிய நிறுவனங்களின் ஊடுருவலோடு, தொடர்ந்து பெருகி வருகிற ஆதிக்க அரசியல் தமிழ் மக்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தும்.  தலித் மக்கள் மற்றும் பெண்கள் மீது கூடுதலான கரண்டலையும் ஒடுக்குமுறையையும் மேலும் மேலும் திணிக்கும். இதைப் புரிந்து கொள்ளும் தலித் இயக்கங்கள் தமிழ்த் தேசிய அரசியலை உவந்து ஏற்க முடியும். இதில் பார்ப்பனியத்திற்கு இடம் இல்லை. நில உடமையாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடமில்லை. ஊழல் அரசியலுக்கும் இங்கு இடமில்லை.  3. வரலாற்றைச் சற்று நாம் திரும்பிப் பார்க்க வேண்டும், சிங்கள இராணுவத்தின் தாக்குதல் தொடங்கிய காலச் சூழலில் தமிழ் இயக்கப் போராளிகள் தங்களோடு ஒத்துழைக்குமாறு அங்கிருந்த தலித் மக்களைக் கேட்டுக் கொண்டனர். சிங்களப் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு எங்களுக்கு நிலத்தில் உரிமை தருவீர்களா? எங்களை உங்களோடு சமமாக நடத்துவீர்களா என்றெல்லாம் தலித் மக்கள் நியாயமாகவே கேட்டனர். போர் முடியட்டும் என்றார்கள் தமிழ் அரசியல்வாதிகள். பிறகு என்ன நேர்ந்தது ஊருக்குள் நுழைந்த சிங்களப்படை எல்லோரையும் கொன்றது. ஊரை விட்டுத் துரத்தியது. டேனியல் நாவல் இத்தகைய சித்தரிப்பைத் தருகிறது.  ஈ. வே. ரா. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, காங்கிரஸுக்கு எதிராகவும் காந்திக்கு எதிராகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் போராடினார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகினார். அவருக்கான நியாயங்களை நாம் மறுப்பதற்கில்லை. வகுப்புவாரி உரிமையை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளும் என்றால் அவர்களோடு இணைந்து தான் போராட முடியும் என்று பெரியார் ஒரு சமயம் கூறினார். இப்படி நடைபெற்றிருக்க வேண்டும்.  1942 – வாக்கில் இட்லரின் நாசிப்படை இரஷ்யாவின் மீது போர் தொடுத்த நிலையில், இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் இனி மேற்கொண்டு இந்தியாவில் பிரிட்டீஸாரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் செயல்பட முனைந்தனர். இப்படி நேர்ந்திருக்கக் கூடாது.  இதுபோன்ற ஒரு தவற்றை இன்றைய சூழலில் தலித் மக்கள் செய்யக்கூடாது. மஞ்சூரியாவின் மேல் படையெடுத்து அதை ஜப்பானியப் படை ஆக்கிரமித்துக் கொண்டபோது மாவோவின் அரசியல் செயல்பாடு இங்கு நினைவு கூறத்தக்கது. சியாங்கே ஷேக்குடன் கை கோர்த்துக் கொண்டு ஜப்பானியப் படைகளை மாவோ விரட்டினார். இப்படி செயல்படுவதுதான் சரியான அரசியலாக அமையும். தமிழ்த் தேசியம் என்ற அரசியலில் தலித் மக்கள் தமக்கான இடத்தைப் பெற முனைய வேண்டும். தமிழக அரசியல் தற்பொழுது வகை, வகையான சிக்கல்களோடுதான் நடைபெறுகிறது. தலித் மக்களின் விடுதலை இயக்கத்தைச் சாதியப் போராட்டமாக இனி குறைக்க முடியாது. தலித் மக்கள் எழுச்சி பெற்று வருகின்றனர். அவர்களை இனி யாராலும் ஒடுக்க முடியாது. தமிழ் நிலம் என்றும் இயற்கை என்றும் சமத்துவம் என்றும் இவர்களால் போராட முடியும். சமத்துவத்திற்கு மட்டுமல்லாமல், சமதர்மத்திற்காகவும் இவர்களால்தான் உயிரைக் கொடுத்து உறுதியாகப் போராட முடியும். மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து வந்தவர்கள், தலித் அமைப்பினுள் செயல்படுகிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு போக்கு; தலித்துகளை முன் தள்ளி விட்டு, மார்க்சியத் தலைவர்கள் பின் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்பு கூறப்பட்டது, எல்லாவற்றையும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். நாம் ஏமாறுவதற்கு இடமில்லை. தலித்தியமோ, பெண்ணியமோ தனித்திருந்து போராட முடியுமென்றாலும் அது முதலாளிய எல்லையைக் கடந்து செல்ல முடியாது. மார்க்சியத்தோடு இவை கைகோர்த்துக் கொள்ளுமென்றால் முதலாளியத்தைக் கடந்து செல்ல முடியும். மார்க்சியமா, இன்னொன்றா என்று விவாதிப்பதை விட மக்கள் விடுதலை நமக்கு இன்றியமையாதது.  கலையும் சித்தாந்தமும் கலை என்பது மனிதனுக்கு வெறும் அலங்காரமாக, பூச்சாக, உத்தியாக இல்லை. இப்படிக் கலையை அலங்காரமாகவோ, போதையாகவோ மாற்றுவது முதலாளியப் பார்வை. ஓய்வு இருக்கிறது அதனால் கலைஞன் படைக்கிறான் என்பதும் இவ்வகைப் பார்வை. உழைப்பிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது மனிதனைப் பற்றிய அரிச்சுவடிப் பார்வை. இதற்கு மேலும் சமூகம், வரலாறு, மொழி, பண்பாடு என்றெல்லாம் சொல்லித்தான் மனிதனை விளக்க முடியும். குறிப்பாக மனிதனை அவனது படைப்பியக்கத்தின் வழியேதான் சரியாக விளக்கமுடியும்.  படைப்பியக்கத்தின் போதுதான் மனிதன் முன்பு தன்னை ஒடுக்குகிற சூழலில் இருந்து விடுபட்டு ஒரு பாய்ச்சல் என்ற முறையில் முன் செல்கிறான். இப்பொழுதுதான் தன்னைப்பற்றியும் புதிய பார்வை கொள்ளுகிறான். படைப்பியக்கத்தின் போதுதான் மனிதன் உலகம் குறித்தும் வரலாறு குறித்தும் கலை அல்லது இலக்கியம் குறித்துமே புதிய பார்வை பெறுகிறான். பாய்ச்சல் பற்றி மிகத் துல்லியமானப் பார்வையை மார்க்சீய இயங்கியல்தான் முன்வைக்கிறது.  கலை என்பது வரலாற்றின் வழியே மனிதனுக்குள் வந்து செயற்படுகிற ஒரு ஆற்றல். ஒரு பேருணர்வு. கலை என்பது மனிதனின் உள்ளுறுப்பு, உள்ளியக்கம். பலதுறை அறிவும் வாழ்வியல் அனுபவங்களும் மிக்கவனுக்குள் பேரியக்கமாய் வெளிப்படுவது இந்தக் கலை. இந்தக் கலைஞனால் எழுதாமல் இசைக்காமல் இருக்க முடியாது. பட்டு இழைகளை உற்பத்தி செய்வதன் மூலம் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்கிற பட்டுப்புழு போன்றவன் இந்தக் கலைஞன் என்பது மார்க்ஸ் தந்த விளக்கம். இம்முறையில் தான் மில்டனை ஒரு பெருங்கலைஞனாக மார்க்ஸ் கண்டார்.  சுண்ணாம்பையும் மணலையும் அரைத்துக் காரை உற்பத்தி செய்வது ஒரு கலைதான். அய்யமில்லை, சுண்ணாம்பும் மணலும் ஓர் உயர் வெப்பநிலையில் கண்ணாடியாக மாறுகிறது. கலைக்குள் நடக்கும் பேரியக்கத்தை இவ்வகைப் பாய்ச்சல் கொண்டுதான் விளக்கமுடியும். முன்னதும் கலைதான் என்ற முறையில் கட்சிக்காரர்கள் முன்வைக்கும் கலை உற்பத்தியைப் புரிந்து கொள்ளலாம். இந்தக் கலைக்குள் தான் சித்தாந்தம் உள் வருகிறது. பின்னதன் இயக்கம் சித்தாந்தத்தைக் கடந்து செல்கிறது.  அரசியல் பொருளாதாரத்திற்கான திறனாய்வு என்ற நூலின் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுவதை இங்கு கூறவேண்டும். ‘’ஒரு சமுதாயத்தில் சில சந்தர்ப்பங்களில் கலை அடைந்திருக்கிற உன்னதத்தை அந்த சமுதாயத்தின் பொருளியல் அடிப்படை கொண்டு விளக்க முடியாது.’’ ஒரு நாற்காலி போன்ற பொருள் உற்பத்தியின் விலையை மதிப்பிட அதற்குள் செல்லும் தொழிலாளியின் உழைப்புத்திறன் கொண்டு கணக்கிட முடியும். உயர்வகைக் கலை ஒன்றினுள் தன் உயிரைச் செலுத்தி கலைஞன் படைக்கிறான். இத்தகையப் படைப்பை மதிப்புக் கோட்பாடு கொண்டு விளக்க முடியாதென்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.  “நடையும் நடைப்பழக்கம்” என்பது தமிழ்ச் செய்யுள் ஒன்றின் கூற்று. “எழுதி எழுதித்தான் நான் எழுத்தாளன் ஆனேன்” என்று ஒருமுறை கூறினார் ஜெயகாந்தன் படைப்பியக்கம் எழுத்தாளனை வசப்படுத்திக் கொள்கிறது. படைப்பியக்கத்தின்போது ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது. அவன் வழியே தன்னை வெளிப்படுத்துகிறது என்று படைப்பியக்கத்தை சிலர் விளக்கியுள்ளனர். சாதாரண ஆலாபனைக்கு இந்த விதி பொருந்தாது. தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் ரங்கண்ணாவை இங்கு நினைத்துக் கொள்ளலாம். பேரிசையில் தன்னை கரைத்துக் கொள்கிறார் ரங்கண்ணா. கண்ணுக்குத் தெரிகிற ஒரு புள்ளியில் தொடங்குகிறார் ஓவியர். பிறகு அந்த ஒவியம் கலைஞனை உள்ளிழுத்துக் கொள்கிறது. அவருக்குள்ளிருந்து முன்பு அவர் நினைத்தும் பாராத ஓவியம் என்று திரைச்சீலையில் உருவாகிறது.  எல்லா மனிதருக்குள்ளும் கலைஞன் இருக்கத்தான் செய்கிறான். கலைஞன் என்பவன் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. விளையாட்டின்போது புதியது படைக்கிற ஒரு சிறுமிக்குள் இருப்பவன் கலைஞன். வீட்டை அழகாக வைத்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்குள்ளும் கலைஞன் இருக்கிறான். சிக்கலான கணக்கு ஒன்றை சிரமத்தோடு செய்து ஒரு ஒளியின் பாய்ச்சலைப் போல விடை கண்டறியும்போது ஏற்படம் பரவசம், கலைஞனின் பரவசம். உழவனுக்குள்ளும் கைவினைஞனுக்குள்ளும் செய்வதை திருந்தச் செய்யும் கலைஞன் இருக்கிறான். கலை என்பது மனிதனின் உள்ளுறுப்பு / உள்ளியக்கம்.  சூழல் மனிதனை பாதிக்கிறது என்பது உண்மையில் ஒருபாதி. சூழலை மனிதன் படைக்கிறான் என்பது உண்மையின் மறுபாதி. இப்படி எழுதியவர் மார்க்ஸ். இந்தப் படைப்புச் செயலை நாம் விளக்கவேண்டும். வர்க்கம் என்று சொல்லி இதன் இயக்கத்தை நாம் விளக்கமுடியாது.  வள்ளுவருக்குள்ளும் இளங்கோவிற்குள்ளும் வணிக வர்க்கத்தை கண்டுபிடித்த மார்க்சியர் வள்ளுவனின் இலக்கியத்தையோ, இளங்கோவின் காவியத்தையோ அவற்றினுள் செயற்பட்ட படைப்பியக்கத்திலிருந்து விளக்கத்தவறினர். கம்பனுக்கு ஓய்வு இருந்தது. வெண்ணெய்நல்லூர் சடையன் கம்பனை உட்கார வைத்து விருந்து படைத்தான். ஆகவே கம்பன் காவியம் இயற்றினான் என்ற விளக்கம் மார்க்சியத்திற்கு மரியாதை தராத விளக்கம். அறிஞரும் புலவரும் ஆளும் வர்க்கச் சார்பினர் என்று வரையறைப்படுத்திய பின்னர் வள்ளுவனையோ, இளங்கோவையோ, கம்பனையோ அவர்களால் எப்படிக் கண்டறிய முடியும்? இன்றுவரை தமிழிலக்கியத்திற்குள் செயற்படும் பேராற்றலை மார்க்சியர் எங்கே கண்டனர்?  பீத்தோவனின் இசையில் சில கணங்களேனும் லெனின் தன்னை இழந்தார். தன்னை இழக்கும் இந்த பேருணர்வைத்தான் பரவசம் என்று குறிப்பிடுகிறோம். (உணர்ச்சி என்று சொல்லி இந்தப் பேருணர்வின் ஆழத்தையும் செறிவையும் குறைக்கக் கூடாது). மனிதனுக்கு வாய்ப்பதுதான் இந்தப் பேருணர்வு. ஒரு மலரை உற்று பார்க்கும்போது ஒரு கணம் மயங்குகிறோம். அதாவது இந்த கணத்தில் நாமும் மலரும் ஒன்றாகிறோம். நம் ஆளுமைக்குள் இந்த மலர் கலந்துவிட்டது. இப்படித்தான் இயற்கை நமக்குள் கலக்கிறது. வானமும் பறவையும் நம் ஆளுமைக்குள் சென்று நம்மை விரிவுபடுத்துகின்றன. இப்படித்தான் நம்மை நாமே பெற்றோம் நமக்குள் நேரும் மாற்றத்தை வேதியியல் மாற்றம் என்பது பொருந்துமா? வேறு எப்படி இதைச் சொல்வது? என்றோ கண்ட டபோடில்ஸ் மலர்கள் வேர்ட்ஸ்வொர்த்தை என்ன செய்தன? இத்தகையப் பரவசம் மார்க்சியனுக்கும் உரியதுதான்.  இந்தப் பரவசத்தை பொருள்படுத்தும் வாய்ப்பை லெனின் இழந்தார் என்று சொல்வது கூட பொருந்தாது. உழவனுக்குள் தன்னைக் கண்டவர் லெனின். கம்யூனிஸ்ட் என்பவனுக்குள் ஒரு சிந்தனைக் கண்டவர் லெனின். பரவச உணர்வை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மேலும் அரசியல் உணர்வு தழைக்கத்தான் செய்யும். இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் தத்துவ வகைப்பட்ட கருத்து முதல்வாதத்தை வெல்லமுடியாது என்று லெனின் கூறியதை இங்கு நினைவு கொள்ளலாம்.  மாயகோவ்ஸ்கியின் புதுக்கவிதை முதலில் லெனினுக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை. சில ஆயிரம் படிகள் அச்சிட்டால் போதும் என்று முதலில் எழுதிய லெனின், பள்ளிக்குழந்தைகள் மாயகோவ்ஸ்கியின் கவிதையை மனங்கலந்து பாடியதை பார்த்த பொழுது 10000 பிரதிகள் அச்சிடுங்கள் என்றார் லெனின். லெனினுக்குள் பரவசம் இல்லை என்று சொல்லமுடியுமா? படைப்பியக்கத்தின் பாய்ச்சலின்போது ஏற்படும் பேருணர்வு பரவசமின்றி வேறு என்னவாம்?  வரலாற்றிற்கு முன்பு வர்க்கங்கள் இல்லை. வரலாற்றுக் காலத்தில்தான் வர்க்க உணர்விற்கு நாம் இடம் கொடுத்தோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் சமூகத்தோடும் நாம் இணைந்திருந்தோம். அப்பொழுது நமக்குள் பிளவு இல்லை. அப்பொழுது எல்லாவற்றையும் ஒன்றெனக் கண்டோம். இப்படி எல்லாவற்றையும் ஒன்றெனக் கண்ட பேருணர்வை வரலாற்றுக் காலத்தில் முற்றாக நாம் இழந்துவிட்டோமா? இல்லை. வர்க்க வகைப்பட்ட உணர்வுக்கடியில் அந்தப் பேருணர்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த உணர்வும் வர்க்கம் கடந்த உணர்வு.  முதலாளியும் அந்நியப்பட்டவன். சமுதாயத்தில் நிலவும் பொருளியல் சூழலுக்குள் மாட்டிக் கொண் டவன் அவன். அவனுக்கும் விடுதலை தேவை. அவனுக்கும் சேர்த்துதான் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும். இப்படி உண்மை கண்டவர் மார்க்ஸ். இந்த உணர்வுக்குள் இருக்கும் கருணையை நாம் மறுக்க வேண்டுமா? பகை முரண்பாட்டிற்குள் அழுந்தியவனுக்குள் இந்த கருணை இருக்கமுடியாது. நட்பு முரண்பாடுகள் குறித்தும் சிந்திப்பவனுக்கு இந்த கருணை புரியும் முதலாளிக்குள்ளும் மாட்டி வதைப்பட்டுக் கொண்டிருக்கிற அந்த மனிதனை நாம் காண வேண்டாமா? அன்பு இல்லாதவன் இதை எப்படி கண்டுகொள்வான்?  கலைஞனுக்குள் பெருகுவது இந்த அன்பு. இயற்கையினுள்ளும் பிரபஞ்சத்தினுள்ளும் உயிர்களினுள்ளும் தன்னைக் காணும் கலைஞன் ஒரு மெய்யியலாளன். சித்தாந்தம் என்ற வரையறைகளுக்குள் இவன் அகப்படுவதில்லை. சித்தாந்தம் தேவைதான் என்ற போதிலும் அதன் வரையறைக்குள் முடங்கிவிட முடியாது.  ஆதிப்பொதுமைச் சமூகம் முதற்கொண்டு இவனுக்குள் தொடர்ந்து வரும் பேருணர்வில் தான் இவன் திளைக்கிறான். உடமையையும் அதிகாரத்தையும் இவன் ஒப்புக்கொள்வதில்லை. இவனுக்குள் இயல்பாய் இருப்பது சமத்துவம். இந்த உணர்வுதான் இவரது கவிதையினுள்ளும் இலக்கியங்களினுள்ளும் இடம் பெறுகிறது. இந்த உணர்வுக்கு இன்று நாம் தரும் பெயர் சமதர்மம். ஆதிமனிதன் முதற்கொண்டு இன்றுவரை நமக்குள் தொடர்வது இந்த சமதரும் உணர்வு. வர்க்கச் சமூகம் இந்த உணர்வை என்னதான் அழித்தாலும் திரித்தாலும் இந்த உணர்வு மீண்டும் மீண்டும் இவனுக்குள்ளிருந்து ஊற்றென் பொங்குகிறது. இந்த ஊற்றைத்தான் வள்ளுவருக்குள்ளும் இளங்கோவிற்குள்ளும் நாம் காண்கிறோம். கம்பனுக்குள்ளும் பாரதிக்குள்ளும் பொங்குவது இந்த ஊற்றுதான். அரசியலதிகாரத்தை முதன்மைப்படுத்துபவருக்குள் இந்த ஊற்று வறண்டு விடுகிறது. தனக்குள்ளிருந்து அதிகாரத்தை வெளியேற்றி கொண்டவர்க்கு இந்த ஊற்று எளிதில் தட்டுப்படும்.  பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது கூட ஒரு அரசு முறைதான். அரசு இருக்கும்வரை மதமும் இருக்கும். அந்நியமாதலும் இருக்கும் என்றார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது மக்களிடத்தில் தன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இருக்கமுடியும். இதன் போக்கில் தான் அரசு உதிரும். சமத்துவம் இங்குதான் நிறைவு பெறும். இந்தக் கனவை காலம்காலமாக தனக்குள் கொண்டிருப்பவன் கலைஞன். அரசதிகாரத்தை இவன் என்றைக்கும் ஏற்கமாட்டான். அதிகாரத்தில் தன்னை இறுக்கிக் கொள்ளும் கட்சிக்குள்ளும் இவன் இருக்கமுடியாது. அதிகாரத்தை தனக்குள் தாங்கியிருக்கும் கட்சிக்கு தேவைப்படுவது சித்தாந்தம். கட்சி அதிகாரத்திற்கு சேவை செய்யும் கலைஞன் இந்த சித்தாந்தத்திற்குள் மகிழ்ச்சியாகவே சிறைப்படுவான். அதிகாரத்தை எந்த வடிவத்திலும் விரும்பாத கலைஞன் சித்தாந்த வரையறையைக் கடந்து செல்வான். வர்க்க வரையறைக்குள் அகப்படாத இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் உயிர்களோடும் மண்ணோடும் மலர்களோடும் தன்னைக் கண்டு தனக்குள் உயிர்ப்பை புதுப்பித்துக் கொள்பவன் இந்தக்கலைஞன்.  எல்லாவற்றோடும் சமத்துவம் கண்டு தம்மை உயிர்ப்பித்துக் கொள்வதாகிய இந்தப் பேருணர்வை வர்க்கச் சமுதாயம் அழிக்கிறது என்பதன் காரணமாகத்தான் வர்க்கச் சமூகத்தோடு முரண்பட்டு நிற்கிறான் இந்தக் கலைஞன். வர்க்கமற்ற சமுதாயத்தைப் படைப்பதுதான் தன் நோக்கம் என்று சொல்லும் கட்சிக்குள் இவன் நுழைகிறான். ஆனால் வர்க்கச் சமுதாயத்தின் இன்னொரு வடிவத்தை இவன் கட்சிக்குள் காண்கிறான். முதலாளியத்தின் இன்னொரு வகை அமைப்பாக செயற்படும் கட்சிக்குள் தனக்கும் விடுதலை இல்லை என்று கண்டு கட்சியைவிட்டு இவன் வெளியேறுகிறான். மனித விடுதலைக்கான மார்க்சிய கட்சிதான் இவனுக்கு உடன்பாடு. வர்க்கமற்ற சமூகத்திற்குள் தான் மனிதன் தன்னை முழுமையாக பெற முடியுமென்பது இவனது நம்பிக்கை. படைப்பியக்கத்தை தனக்குள் முழு அளவு பெற்றுள்ள இந்தக் கலைஞனுக்கு சோர்வு இல்லை. இவன் மார்க்ஸ்க்கு நெருக்கமாக இருக்கிறான். மார்க்ஸ் என்றுமே பாராட்டிய பிராமித்யஸ் குறித்து இவனுக்கு நன்கு தெரியும். சித்தாந்தம் இல்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை. அதைப்போலவே சித்தாந்தத்திற்குள் வரலாறு முடங்கி விடவும் இயலாது. சித்தாந்தத்தை கடந்தும் வரலாறு இயங்கும். இப்பொழுது வரலாற்றிற்குள் இயங்குவது மெய்யியல்.  மார்க்சியமும் தமிழ்த்தேசியமும் 1. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியச் சூழலில் ஏற்பட்ட கத்தோலிக்க மத ஆதிக்க எதிர்ப்போடும், அறிவியல் முதலிய துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கத்தோடும், முதலாளிய வளர்ச்சியோடும், இணைந்து தோன்றியது தேசிய இன எழுச்சி. தேசிய இனம் குறித்த ஸ்டாலினிய வரையறைகளில், முக்கியமான ஒரு கூறு மொழி என்பது ஆகும். மொழி சார்ந்த ஒரு பிரதேசத்தின் பொருளியல் வரையறையும், நெடுங்கால வரலாறு சார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் இன்னும் சில முக்கியமான கூறுகள். ஒரு மொழி வழங்கும் ஒரு பிரதேசத்தினுள்ளும், பொருளியல் ஏற்றத்தாழ்வு காரணமாக பிரிவினைக் கோரிக்கைகளும் எழுவதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாமல், இலங்கைய முதலிய நாடுகளிலும் மதம் என்பது தேசிய இனங்களை கட்டமைக்கிற ஒரு முக்கியமான கூறாகவும் எழுந்துள்ளது.  முதலாளியத்தை ஒட்டி வளர்ச்சி பெற்றது என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, தேசிய இனம் என்பதை கட்டமைக்கிற முதல் பெறும் சக்தியாக முதலாளியம் தான் விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட தேசிய இனத்தின் பொருளியலை மட்டுமல்லாமல் பண்பாடு முதலியவற்றையும் கட்டமைக்கிற சக்தியாக முதலாளியத்தைத்தான் நாம் இனம் காண முடியும். இனம் என்பதைக்கூட இந்த வரையறைகளோடு சேர்த்துப் பார்ப்பதும் தேவையாக இருக்கிறது. ஐரோப்பியச் சூழலில் நிலவுடமை ஆதிக்கத்தை முற்றாக மறுத்தது எனச் சொல்லப்படுகின்ற முதலாளியம், இந்தியச் சூழலில் நிலவுடமை ஆதிக்கம் முதலியவற்றோடு ஒத்துத்தான் இயங்கியது. இன்றைய நிலையிலும் முதலாளியத்திற்கு சாதி, மதம் முதலிய சக்திகள் தேவைப்படுகின்றன. இங்கு வந்து சேர்ந்த முதலாளியத்தை லும்பன் முதலாளியம் என்றுதான் சொல்ல முடியும். மக்கள் விடுதலைக்கான ஒரு முற்றான சக்தி என்று முதலாளியத்தை நாம் கருதுவதற்கில்லை.  2. ஸ்டாலினிய வரையறைகளை முதலாளிய வரையறைகள் எனக் காண்பதன் மூலம் தான் தேசிய இனம் பற்றிய சிக்கலில் நாம் ஒரு தெளிவுக்கு வரமுடியும். தேசியம், தேசிய இனம் என்பன எல்லாம், கட்டமைப்புக்கள் தான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேச விடுதலையை ஊக்குவிக்க வேண்டுமென லெனின் கருதியதையும் இங்கு நாம் நினைவு கொள்ளலாம். தேசிய முதலாளிகளின் தலைமையில் தேச விடுதலைக்கான இயக்கங்களை இந்த நோக்கில்தான் லெனின் ஆதரித்தார். ஐரோப்பியச் சூழலில் இருந்த முதலாளியமும், ஆசியா முதலியவற்றில் நுழைந்து தன் ஆதிக்கத்தை இராணுவ பலத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட முதலாளியத்தையும் எம்.என். ராய் வேறுபடுத்திப் பார்க்கவும் செய்தார்.  இங்கு தேசிய முதலாளிகள் இல்லையென்றும், ஏகாதிபத்தியத்தோடு ஒத்துழைக்கும் முதலாளியத்தைத்தான் இங்கு காண முடியும் என்றும், இவர்கள் தலைமையில் தேச விடுதலைக்கான சாத்தியங்கள் இல்லை என்றும் எம்.என்.ராய் கூறியதை நாம் மறுப்பதற்கில்லை. இன்னொன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இந்தியா முதலிய நாடுகளில் மொழி, பொருளியல், பிரதேச எல்லைகள், வரலாறு, பண்பாடு முதலிய அனைத்தையும் தன் ஆதிக்கத்திற்கான தேவைகளை ஓட்டி முதலாளியம் தான் கட்டமைக்கிறது என்ற உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கூறு என நாம் புரிந்து கொள்ள முடியும்.  அப்படியானால், இன்று தேசம் என்றும், மொழி என்றும், வரலாறு என்றும், பண்பாடென்றும், கல்வியென்றும், மருத்துவம் என்றும், தொழில் என்றும், வேளாண்மை என்றும், சாதி என்றும், மதம் என்றும் நாம் பேசுகிற அனைத்து வகையான கருத்தியல்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கிற முதலாளியச் சார்பு மற்றும் ஆதிக்கத்தை நாம் இனம் கண்டு களைந்தால் ஒழிய, மக்களுக்கான விடுதலை பற்றி நம்மால் பேசமுடியாது. நிலக்கிழமை முதலிய எத்தனையோ போக்குகளை இன்றும் நமது குடும்ப அமைப்புக்குள் மட்டுமல்லாமல், அனைத்து நிறுவனங்கள் மற்றும் கட்சி அமைப்புக்குள் காண முடியும். முதலாளியத்தைக் கடந்து செல்வது பற்றியும் நாம் நெடுங்காலமாகப் பேசிவருகிறோம். சமதர்மம் இல்லாமல் நமக்கு வாழ்வு உறுதிப்படாது.    அப்படியானால் தேசிய இனம் பற்றிய ஸ்டாலினிய வரையறைகளில் உள்ளடங்கியுள்ள முதலாளியக் கூறுகளை இனம் கண்டு களைவதோடு சாதிகளுக்கு இடையிலான ஆதிக்கம் முதலியவற்றைக் களையும் முறையில் சமத்துவம் என்பதையும் மக்களின் விடுதலைக்கு உகந்த முறையில் சமதர்மம் என்பதையும் இணைத்துக் கொள்வது இன்று நமக்கு இன்றியமையாதது. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்றால், தேச விடுதலையை லெனின் உளக்குவித்தது போல, இன்றைக்குப்  பெருகிவருகிற உலகமயமாதல் முதலிய புதிய பெயர்களோடு வருகிற வல்லாசிய ஆதிக்கத்தை புதிய அர்த்தங்களோடு நாம் வளர்த்தெடுக்க வேண்டிய தேசிய இன எழுச்சியின் மூலமே எதிர்கொள்ள முடியும். இத்தகைய கோட்பாட்டு ஆக்கம் தான் மார்க்சியத்திற்கு ஒத்ததாக இருக்கமுடியும். இப்படித்தான் ஸ்டாலினை நாம் உள்வாங்கிக் கொள்ளவும் முடியும்.  3. இந்தியாவிற்குள் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, தேச விடுதலைக்கான இயக்கங்கள் எழுச்சி பெற்றன. இந்தியாவில் உள்ள பலவகையான தேசிய இனங்களும் விடுதலைக்கான போராட்டத்தில் ஓரளவுக்கேனும் இணைந்திருந்தன என்பது உண்மைதான். இதன் காரணமாகவே இந்திய தேசியம் என்ற கருத்தமைப்பு உருவாயிற்று. தொடக்கம் முதலே தேசிய இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லாமலும் இல்லை.  தமிழ்த்தேசியம் என்ற உணர்வெழுச்சிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. தமிழ் மற்றும் தமிழ் மக்களின் நெடுங்கால வரலாறு, தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களின் மேன்மை. சங்ககாலப் பொதுமை அற இலக்கியங்களின் எழுச்சி, பக்தி இயக்கம், சித்தர் இலக்கியம் முதலியவை தமிழகத்தின் ஆற்றல் மிகுந்த தனித்தன்மைகள். வள்ளுவர் முதலியவர்கள் மூலம் தொடர்ந்து செயல்படுகிற அன்பு, அருள், தவம் முதலியவற்றை உள்ளடக்கிய ஒப்புரவுக் கொள்கை . சித்தர் இலக்கியங்கள் மூலம் தெரியவரும் சமரச மனப்பான்மை. இவற்றை எல்லாம் தமிழ்மக்கள் இழப்பதற்கில்லை.  தமிழ் வரலாறு முதலிய தனித்தன்மைகளை ஒப்புக் கொள்ளாத போக்கை ஆரிய இனம் தொடக்கம் முதலே கடைப்பிடித்து வருகிறது. இதன் நீட்சியை இன்று வரை நாம் காண்கிறோம். இதன் காரணமாகவே இனப்பெருமை, மொழிப் பெருமை முதலியவற்றை உள்ளடக்கிய தீவிரப் போக்கையும் எழுச்சியையும் இங்கு நாம் காண்கிறோம். விடுதலை இயக்கத்தில் இறுதிவரை பங்கு பெற்றிருக்க வேண்டிய திராவிட இயக்கம், விடுதலை இயக்கத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். சந்தைப் பொருளாதாரம் முதலிய எத்தனையோ பெயர்களில் வல்லரசுகள் என்று இன்றும் நாம் இனம் காணத்தக்க ஆதிக்கங்கள் தொடர்ந்து அதிக அளவில் தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதை ஒவ்வொரு நாளும் அனுபவத்தில் உணர்கிறோம்.  தமிழ் இன்று மதிக்கப்படுவதில்லை. கல்விக் களங்களில் தமிழுக்கு இடமில்லை. தமிழகத்தின் இயற்கை தொடர்ந்து நாசமாகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. நிலமும், நீரும் நாசமாகின்றன. உழவர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் எதிர்காலம் இல்லை. ஆட்சி பீடங்கள் தொடர்ந்து அதிகாரங்களில் வலுத்து வருகின்றன. மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வலுப்பெற்று வருவது லும்பன் முதலாளியம்.  நகரங்களின் பெருக்கம். வெறித்தனமான நுகர்வியம். அந்நியப் பொருள்களின் மீது மோகம். ஊழலின் இன்றியமையாமை, பண்பாட்டுச் சிதைவுகள் என்று எத்தனையோ அழிவுகளை நாம் பட்டியல் இட முடியும். தமிழகத்தின் தொழில் வளங்களை மார்வாடிகள் மட்டுமல்லாமல் அந்நியர்களும் வசப்படுத்திக் கொள்கின்றனர். தமிழக அரசு இவர்களோடு உறுதியாக ஒத்துழைக்கிறது. தமிழனின் வரலாறு அழிந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழனுக்கு வரலாற்றில் இடம் இல்லை என்ற போக்கு உருவாகிறது.  தமிழ்த்தேசிய இயக்கங்கள் என்பவை தாம் பெறவேண்டிய பன்முகப் பார்வையை இதுவரை பெறவில்லை. தமிழ் என்றும், இனம் என்றும் பேசுவதோடு தம் இயக்கத்தின் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஒரு பக்கம். மரண தண்டனை எதிர்ப்பு முதலியவற்றோடு முடங்கிக் கிடப்பவர்கள் இன்னொரு பக்கம். காவிரி நமக்கு இல்லை. முல்லைப் பெரியாறு அணையும் நம் வசத்தில் இல்லை. இந்த உண்மைகளை இப்பொழுது தான் சிலர் காணத் தொடங்கி உள்ளனர். அசலான தமிழ் மக்கள் என்று உழவர்கள் மற்றும் கைவினைஞர்கள் உள்ளடங்கிய அடித்தள மக்களைத்தான் முதன்மையாகச் சொல்லமுடியும். தமிழ் உணர்வு தங்களுக்கு இருப்பதனாலேயே நகரம் சார்ந்த படிப்பாளிகளில் ஒரு பகுதியினர் தாம்தான் அசலானத் தமிழர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்வதில் உள்ள பொய்மைக் கூறுகளை நாம் காணாமல் இருக்கமுடியாது.  மேற்கத்திய நாகரிகத்தின் அனைத்து வகை வசதிகளையும் அனுபவிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட அடித்தள மக்களின் வாழ்வை நாம் நாள்தோறும் நாசமாக்குகிறோம் என்ற உண்மையை மார்க்சியர் மட்டுமல்லாமல் தமிழ் உணர்வாளரும் இன்றுவரை ஏற்கவில்லை. மேற்கத்தியரின் நவீன அறிவியலும் உயர் தொழில் நுட்பமும் இல்லாமல் நாம் வாழவே முடியாது என்று இவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர். இயற்கை வேளாண்மை, சித்த மருத்துவம், தாய்த்தமிழ்பள்ளி முதலியவற்றை ஏற்கத் தயங்குகிறோம். நாம் இன்னும் நடுத்தர வர்க்கம்தான் என்ற புரிதல்கூட நமக்கு இருப்பதில்லை. தமிழ் இலக்கியங்களை மேன்மைப்படுத்தி பேசுகிறவர்கள் தமிழ் மரபு என்பதனுள் இயங்குவதாகிய ஒப்புரவு முதலியவற்றை உள்ளடக்கிய சமதர்மப் போக்கைக் காண்பதில்லை.  தமிழ்த் தேசிய அரசியல் என்று பேசுவதன் மூலம் அரசியலுக்கு முதன்மை தரும் இவர்கள், உழவர் முதலிய அசலான தமிழர்களுக்குள் இயங்குவதாகிய மெய்யியலை இனம் காண்பதில்லை. சித்தர் மெய்யியல் என்பது அசலான தமிழ் மெய்யியல் தமிழ் வரலாறு நெடுகிலும் இந்த மெய்யியல் இயக்கம் தெரிகிறது. மெய்யியல் பார்வையை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் இயக்கம் நாளடைவில் ஆதிக்க அரசியலுக்கு இடம் கொடுப்பதாக முடியும். மார்க்சியத்திற்குள் படிந்திருக்கிற ஆதிக்கம் நமக்கு இன்றும் இனியும் தேவை இல்லை. தமிழனின் பெருமை சொல்லித் தொடங்கியவர்கள் இத்தகைய ஆதிக்க அரசியலில் போய் முடிந்தார்கள். இவர்கள் தான் வல்லரசியம் முதலிய ஆதிக்க அரசியலோடு ஒத்துழைக்கிறார்கள்.  தமிழகத்தின் இயற்கை நாசம் முதலியவற்றுக்கெல்லாம் இவர்களே காரணம் ஆகிறார்கள். இன்று பெரியாரியமும் முதலாளியத்திற்கு சேவை செய்வதை எப்படி நாம் விளக்கமுடியும். தமிழ்த்தேசிய அரசியலும் ஆதிக்க அரசியலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் இன்று அதிகம் உள்ளன. மக்கட் சார்பென்பதை நமக்குள் திரும்பத் திரும்ப பதித்துக் கொள்ள வேண்டும். விடுதலைக்கு வேறு வழி இல்லை. நுகர்வியம் முதலிய பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியமும் நமக்குள் நுழைந்து நம்மைச் சிறைப்படுத்திக் கொள்ளமுடியும். நமக்குள் இருக்கும் அதிகாரத்தைக் களைந்து கொண்டால் ஒழிய மக்களுக்கான விடுதலை பற்றி நாம் பேச முடியாது.  4. விடுதலையா? தன்னுரிமையா? எது நமக்கு இன்று முதன்மையான முழக்கமாக இருக்கமுடியும்? இப்படி ஒரு கேள்வி இன்று தமிழ்த் தேசிய அரசியலின் மையத்தில் எழுகிறது. தன்னுரிமை என்ற சொல் சுயநிர்ணய உரிமை என்பதற்கான பதிலியாக இல்லை என்றெல்லாம் பேசப்படுகிறது. சுயநிர்ணயம் என்ற சொல்லை இங்கு நாம் பயன்படுத்துகிறோம். மக்கள் தம் ஆக்கத்திற்கான அரசியல், பொருளியல், வேளாண்மை, கல்வி மருத்துவம் முதலியவற்றை தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். தமக்கான வாழ்வு, வளர்ச்சி என்பதை மக்களுக்குப் பதிலாக வேறு எவரும் நிர்ணயிக்கக் கூடாது. மக்கள் என்று குறிப்பிடும் பொழுது உழைக்கும் மக்களைத்தான் முதன்மையாக நாம் பொருள்படுத்துகிறோம். இவர்களுக்கான அரசியல், பொருளியலைத்தான் நாம் வேண்டுகிறோம். பெரும்பான்மை மக்களுக்கான வாழ்வியல் ஆதாரங்கள் ஆகிய நிலம், நீர், காடுகள், கடல் முதலிய வாழ்வியல் ஆதாரங்களை அழிக்கும் உரிமையை வேறு எவருக்கும் நாம் விட்டுத் தரமுடியாது. இப்படித் தொடங்குவது தான் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை.  தமிழ் மக்களை ஆதிக்கம் செய்யும் சக்திகளை உள்நாட்டிலும் நாம் இனம் காண முடியும். கொள்ளைக்காரர்கள் என்றும், ஊழல்வாதிகள் என்றும், தலைவர்களுக்கு துதிபாடிகள் என்றும் நம்மால் இனம் காண முடியும். இவர்கள் வழியே தான் வடவர்கள் முதலிய ஆதிக்கங்கள் நம்மீது வந்து அமர்கின்றன. இவர்களுக்குத்தான் மேற்கத்திய நாகரிகம் மட்டுமல்லாமல் சாதிமதங்களும் தேவை. இந்துத்துவம் என்ற ஆதிக்கம் இல்லாமல் இவர்களுக்கு முடியாது. இந்திய தேசியம் என்பதுதான் இன்றும் இவர்கள் கொள்கை. அரசு அதிகாரத்தையும், இராணுவ வலிமையையும் இவர்கள் கூடுதலாக வேண்டுகின்றனர். இவர்கள்தான் ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்தவர்கள். இவர்களுக்கும் எதிராகத்தான் தமிழ்த் தேசிய அரசியல் முனைப்புடன் செயல்பட வேண்டும்.  இந்தியாவினுள்ளும், கூட்டாட்சி என்றும், தேசிய இனங்களின் உரிமை என்றும் ஒரு காலத்தில் பேசப்பட்டது. இன்று தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்கள் இந்தியாவில் கூர்மை அடைந்து வருகின்றன. ஒரே அடியாக விடுதலை இன்றைக்குச் சாத்தியமில்லை. சுயநிர்ணய உரிமை என்ற முறையில் எல்லா தேசிய இனங்களினுள்ளும் மக்களைப் பெருமளவு திரட்டுவதுதான் இன்றைய முதற்கடமையாக இருக்கமுடியும்.  இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியும். தேசிய இனங்கள் என்ற கருத்தமைப்போ, தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை என்பதோ இந்த மறு ஆய்வினுள்ளும் முதன்மை பெறுவது சாத்தியமில்லை. இருந்த போதிலும் விடுதலைக்கான், ஆயுதப் போராட்டங்களுக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் சுயநிர்ணய உரிமை என்றும், சரியான கூட்டாட்சி என்றும் இன்று இயக்கம் நடத்துவதன் மூலம் தமிழ் மக்களைத் திரட்ட முடியும். எந்த ஒரு தேசிய இனமும் இத்தகைய கோரிக்கைகளை மறுப்பதற்கில்லை. தமிழகத்திற்கு வெளியில் சென்று இத்தகைய இயக்கங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். சரியான கூட்டாட்சிக்கு இன்றும் வாய்ப்பில்லை? என்பதையும் கூடவே சொல்ல முடியும்.  இப்படி எல்லாம் தொடங்கி ஒரு பத்தாண்டுகளுக்கேனும் செயல்பட்டால் ஒழிய விடுதலை பற்றிப் பேசுவது பொருள் இல்லை. ஆதிக்கம் உள்ளிலும், வெளியிலும் நமக்கு வேண்டாம் என்பதில் நாம் உறுதியாக இருப்பதன் மூலம் சாதி ஆதிக்கம் முதலியவற்றைக் களைந்து கொள்ள விரும்புகிறோம். பழங்குடி மக்களுக்கான உரிமைகளை நாம் மதிக்கிறோம். மனித உரிமைகள் இல்லாமல் நமக்கு முடியாது. இயற்கை வேளாண்மை , பசுமை இயக்கம் என்றும் நம்மால் உரிமையோடு பேசமுடியும். எளிய வாழ்வு என்ற அடிப்படையின் மூலம் அனைத்து மக்களுக்கான நல்வாழ்வு என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும்.  மேற்கத்திய நாகரிகம் நமக்கு வேண்டாம். இயந்திரங்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்த இடம் தரமுடியாது. நமக்கு உலகளாவிய கல்வி தேவை. ஆங்கிலம் நமக்கு சன்னலாகத்தான் இருக்கமுடியும். இப்படி எல்லாம் தொடங்கி நம் இயக்கங்கள் செயல்பட முடியும். தமிழ் உணர்வென்பதும், மார்க்சியம் என்பதும் எதிர்த்திசைகளில் இயங்குவதற்கில்லை. இரண்டு உணர்வுகளும் ஒரு நெறியில் இணைந்து செல்லமுடியும். வள்ளுவரும், இளங்கோவும், பாரதி, பாரதிதாசனும் நமக்கு வாய்த்த பெரும் நிதியங்கள். கிராமப் புறங்களில் இருந்துதான் மக்கள் இயக்கங்களை நாம் கட்ட வேண்டும். நகரங்கள் எப்பொழுதும் நம்மை பாழ்படுத்துபவை. தமிழ்த் தேசியம் என்று சொல்லி பல திசைகளில் சென்று நமக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதில் அர்த்தமில்லை. தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றுடையவர்கள் இந்தப் போக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலைக்கு முதல் அடி எடுத்து வைக்க முடியும்.    பாட்டாளி மக்களாட்சி தோழர் வேணுவின் ஆவணத்தின் மீது சில குறிப்புகள் குறிப்பு : 1984 வரை கேரளாவில் மார்க்சிய-லெனினிய சார்போடு சி.ஆர்.சி என்ற மைய அமைப்புக் குழுவின் செயலராக தோழர் கே.வேணு பணியாற்றினார்.மார்க்சியம் குறித்து விரிவான நூல் ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் தோழர் கே.வேணு. கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறியபோது “பாட்டாளி மக்களாட்சி” என்ற ஆவணத்தை விவாதத்திற்கு என வெளியிட்டார். தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணம் குறித்து தமிழகத்திலும் விவாதங்கள் நடைபெற்றன. கோவையில் நடைபெற்ற விவாதத்தை உள்ளடக்கி 1985/86 வாக்கில் நான் எழுதிய கட்டுரை இது. 1. சமூக உடைமை நாடுகள் எனக் கருதப்பட்ட நாடுகளில் சமூகப் பாசிசம் ஏற்பட்டது. நவகாலனியச் சூழலில் சமூகப் பாசிசம் பிற வல்லரசுகளோடு கைகோர்த்துக் கொண்டது. பழைய அதிகார வர்க்கத்திற்கெதிராக புதிய அதிகார வர்க்கம் முழுமையான அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி கொள்ள முடிந்தது.முன்னைய அரசுக் கட்டமைப்பு புதிய அரசுக் கட்டமைப்புக்கு இடம் கொடுத்தது. மக்கள் மீது செலுத்தப்பட்ட அனைத்து அதிகாரத்திற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வகைப் போக்குகளுக்கு ஆதாரமான காரணங்கள் என்ன என்று அடிப்படைக் கேள்வியிலிருந்து இந்த ஆவணம் தொடங்குகிறது. அனைத்து அதிகாரம் என்பது கட்சியின் அனைத்து அதிகமாக மாறியது.இந்த ஆவணம் மையப்படுத்துகிற பிரச்சனை இதுதான். மார்க்ஸ், எங்கல்ஸ் தொகுத்துரைத்த பாரிஸ் கம்யூன் அனுபவம், லெனின் காலத்து அனுபவம், ரோசா லக்சம்பர்க் முன்வைத்த கருத்துரை, சீன அனுபவம், மாவோவின் திறனாய்வு ஆகியவற்றின் மூலம், மேற்குறிப்பிட்ட ஒரு பிரச்சனையை இந்த ஆவணம் விரிவாக விவாதிக்கிறது. புரட்சிக்குப் பின் சமூகநிர்வாகம் முழுவதையும் மக்கள் மயப்படுத்த வேண்டும். சில குறிப்பிட்ட சூழலில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் செயல்பட்டிருக்கலாம்.செயல்படவும் வேண்டும். இந்த மையம் கட்சியாகவும் இருக்கலாம்.பிறகு இந்த மையம் தன்னிடமிருந்து அதிகாரத்தைக் களைந்து கொள்ள வேண்டும்.வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டு வர்க்கம் சாராத மக்களும் அவர்களின் நலன்களும் உண்டு.வர்க்க அதிகாரம் என்பது வர்க்கக் குறைப்பு ஆகிறது.தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையில் உறவு என்ற பிரச்னை வர்க்கம் சாராப் பிரச்னை. சுற்றுச்சூழல், பெண்ணியம், இந்தியாவில் சாதி முதலிய பிரச்னைகள் வர்க்கம் சாராப் பிரச்னைகள் இப்படி இந்த ஆவணம் சொல்லுகிறது.  2. பாட்டாளிய அனைத்து அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் சோவியத் யூனியனில் ஒரு கட்சி அதிகாரமாக மாறியது. கட்சி அதிகாரமாக மாற்றியவர் லெனின். இதைத்தான் ஸ்டாலினும் செயல்படுத்தினார். மாவோவும் இதைக் கடந்து செல்ல முடியவில்லை. கட்சி அதிகாரம் என்ற கோட்பாடு மார்க்சிடம் இல்லை. புரட்சிகரமான கட்சிக்கோட்பாட்டை வகுத்து செயல்படுத்தியவர் லெனின். சோவியத்துகள், அதிகார பீடங்கள் என்ற நிலைமாறி கட்சியே அனைத்து அதிகாரங்களும் செலுத்தும் களமாயிற்று. உள்நாட்டுப் போர், ஏகாதிபத்தியத்தின் முற்றுகை என்பது இதற்கான சூழல். இதைத் தவிர்த்திருக்க முடியாது. இப்படி இந்த ஆவணம் விவாதிக்கிறது. இந்தச் சூழல் மாறிய பிறகு கட்சி தன் அதிகாரத்தைக் களைந்திருக்க வேண்டும். சூழல் மாறியதா என்பது பற்றி ஆவணம் எதுவும் சொல்லவில்லை. சூழல் மாறவில்லை. இரண்டாம் உலகப் போர்ச்சூழல். இப்படி விவாதிக்கலாம். சூழல் என்ற இந்தப் பார்வை வட்டத்திலிருந்து இந்த ஆவணம் வெளியேற முடியாது. சூழல் இவ்வளவு கடுமையானது. இப்படித்தானா என்று நாம் கேள்வி எழுப்பி விவாதிக்க வேண்டும். இந்தச் சூழலை ஒப்புக் கொண்டால் தொடர்ந்து ஸ்டாலினுக்குப் பிறகும் குருச்சேவ், கடைசியாக கோர்பச்சேவ் வரை இந்தச் சூழல் வட்டம் விரிவடையத்தான் செய்யும் சூழல் செய்யும் இவ்வளவு பெரிய சதி பற்றி ஆவணம் எழுதியவர் கருத்து செலுத்தவில்லை. இந்தச் சூழலிலிருந்து ஏகாதிபத்தியம் இருக்கிறவரை நாம் வெளியேற முடியாது என்று நாம் விவாதத்தைத் தொடரலாம். அப்படியானால் மார்க்சியம் விடுதலைக்கான கோட்பாடாக செயல்திட்டமாக ஆக முடியாது. விடைதேடக் கிளம்பும் ஆவணம், நம்மை அதலபாதாளத்தில் தள்ளிவிடுகிறது.  3. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று தன்னைக் கண்டுகொண்ட பொது உடைமைக் கட்சி அரசு அதிகாரத்தைத் தான் கைப்பற்றி செயல்படுத்தியது. ஏற்கனவே சோவியத் யூனியனில் இருந்த அரசு எந்திரத்தைத் தகர்க்க இயலவில்லை. சோசலிசம் நோக்கித் தன்னை மாற்றிக்கொள்கிற அளவுக்கு முதலாளிய வளர்ச்சி ஜார் ரஷ்யாவில் நடைபெறவில்லை. புரட்சியை அடுத்து ஒரு பலவீனமான முதலாளியத்தை சோவியத் அரசு வளர்க்க வேண்டியிருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையை லெனின் செயல்படுத்தினார். லெனின் இறந்த அண்மைக் காலத்தில் இந்தக் கொள்கை கைவிடப்பட்டு சோசலிச ஆக்கத்திற்கான பாய்ச்சலாகச் செயல்திட்டம் நடைமுறைக்கு வந்தது. கனரகத் தொழில்கள் பெருகின. இராணுவம் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டது. இவற்றுக்காக பெருமளவு மூலதனம் தேவைப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் மூலம் மூலதனம் திரட்டப்பட்டது. தொழிற் பெருக்கத்தின் விளைவாகத்தான் வாழ்க்கைத் தரம் உயரும் என்று சொல்லித் தொழிலாளர்கள், உழவர்கள், விஞ்ஞானிகள் முதலிய அனைத்து மக்களின் முயற்சிகளும் உச்ச அளவில் திரட்டப்பட்டன. தொழிற்சங்க உரிமைகள் இதற்காக புறக்கணிக்கப்பட்டன. மக்கள் மீது அதிக அளவில் கட்டுப்பாடுகள் செலுத்தப்பட்டன. ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒத்துழைப்பவர்கள், களையெடுக்கப்பட்டனர். உழைப்பாளர் முகாம்கள் பேரளவில் தோன்றின. இந்தப் போக்கின் சாரமென்று இப்படி குறிப்பிடலாம். உற்பத்திச் சக்திகள் வளர்த்தெடுக்கப்பட்டன. இவற்றின் வளர்ச்சியில் என்றாவது ஒரு நாள் உற்பத்தி உறவுகள், இவற்றின் தொடர்ச்சியாக மனித உறவுகள் என்றாவது மாறலாம். சர்வாதிகாரத்திற்கு தேவையில்லாமல் போகலாம்.  இப்படி ஏற்படவில்லை. ஏனென்று நாம் சிந்திக்க வேண்டும். முதலாளிய வளர்ச்சி, முற்றுப்பெறாத நிலையில் புரட்சிக்கான வாய்ப்பு ஏற்பட்டது. புரட்சிக்குப்பிறகு சோவியத் அரசின் கீழ் முதலாளிய வளர்ச்சிக்கு முனையலாம் என்றார் லெனின். லெனின் காலத்தில் சிறிய அளவில், அப்புறம் ஸ்டாலின் காலத்தில் பெரிய அளவு செயல்பட்டது, முதலாளிய வளர்ச்சி. சோசலிசம் என்ற பெயரில் முதலாளிய வளர்ச்சி, முதலாளிய ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி சோவியத் யூனியனுக்கும் தேவை. இதைப் போலவே இராணுவப் பெருக்கமும், நவீன அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாமே சோவியத் யூனியனுக்கும் வேண்டும். இதற்காகப் பெரும் மூலதனம் தேவை. தொழிலாளிகளிடமிருந்து உழவர்களிடமிருந்தும் மூலதனத்தைத் திரட்ட வேண்டும். அடக்கு முறையில்லாமல் இதைத் திரட்ட முடியாது. அடக்கு முறையை அலங்காரப்படுத்த சோசலிசம் என்ற பேச்சு. இந்த உணர்வைப் பயன்படுத்தித்தான் மூலதனத்தைத் திரட்ட முடியும். சோவியத் அரசு திரட்டியது. முதலாளிய நாடுகள் 200, 300 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை 40 அல்லது 50 ஆண்டுகளில் சோவியத் யூனியன் பெற்றாக வேண்டும். இதற்காக முதலாளிய நிர்வாக முறை முழு அளவில் அரசு அமைப்பிலும், கட்சி அமைப்பிலும் செயல்படுத்தப்பட்டது. கேள்வி கேட்காதே, உழைத்துக் கொண்டிரு. இப்பொழுது ஜனநாயகம் இல்லை. என்றைக்காவது வரலாம். நான் நிபுணன், நீ தொழிலாளி. நான் சொல்வதைக் கேள். இப்படி செயல்படுத்தப்பட்டது, முதலாளிய நிர்வாக முறை. இது சோசலிச நிர்வாக முறை அல்ல. சோசலிச நிர்வாக முறை என்றால் ஒரு  தொழிற்சாலையில் அல்லது கூட்டுப்பண்ணையில் உழைக்கிற அவ்வளவு பேர்களோடும் சமமாக அமர்ந்து பேச வேண்டும். விவாதிக்க வேண்டும். எல்லாவற்றையும் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரும் சேர்ந்தே திட்டமிட வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும். இங்கு எஜமானத்துவத்துக்கு இடமில்லை. தோழமைக்குத்தான் இடம் உண்டு. நிபுணன் என்ற முறையில் தனிச் சலுகைக்கு இடமில்லை . தலைவன் அதிகாரியாக முடியாது. தலைவன் தொழிலாளியாகவும் இருக்கவேண்டும். நகரத்தானுக்கு அதிகம் என்ற பேச்சுக்கு இடமில்லை. கட்சிக்காரன் மகனுக்கு உயர்ந்த படிப்பு என்பதற்கு இடமில்லை. அழகு சாதனங்களுக்குத் தேவையில்லை. ஆடம்பரத்திற்கும் இடமில்லை. கட்சிக்காரனுக்கு அதிகம். தொழிலாளிக்கு குறைவு என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. கட்சிக்குள் இதேதான். இராணுவத்திற்குள்ளும் இதே வகை உறவு. இங்கு உளவுத் துறை இருக்க முடியுமா, கருத்து வேறுபாட்டிற்காக சிறையில் தள்ள முடியுமா? தன் தலைமையை நிலைநிறுத்திக் கொள்ள, தன்னைத் திறனாய்வு செய்பவரை, எதிரிக்கு இடம் கொடுத்தவனென்ன என்று விசாரிக்க முடியுமா? கொலைத் தண்டனை விதிக்க முடியுமா? இப்படிச் செய்தால் சோசலிச உணர்வு இங்கு தங்குமா?  இப்பொழுது உறுதியாகச் சொல்லலாம். முதலாளியத்தை / ஏகாதிபத்தியத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் சோவியத் யூனியனில் செயல்படுத்தப்பட்டது, எல்லா நிறுவனங்களுக்குள்ளும் முதலாளியம்தான். உற்பத்தி சக்திகளைப் பெருக்கு என்ற குரல், முதலாளியத்தின் குரல்தான். உற்பத்தி உறவுகளுக்கு அழுத்தம் கொடுப்பது சோசலிசத்தின் குரல். அப்படியானால் எங்கே தவறு தொடங்கியது என்று நாம் வரலாற்றைத் தோண்டிச் செல்லவேண்டும். இடையில் இந்த ஆவணத்தாருக்குப் பதில் சொல்லிவிடலாம். பாட்டாளி வர்க்கத்துக்குப் பதிலாகக் கட்சி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதும் அரசு அதிகாரத்தை மேற்கொண்டதும், முதலாளியத்தைச் செயல்படுத்துவதற்காகத்தான். பாட்டாளிகளை அமரவைத்து நிதானமாக அவர்களுக்கு போதனை தந்து அவர்கள் மூலம் செயல்திட்டம் வகுத்து, அதைச் செயல்படுத்துவதற்கு முடியாது. அவர்களுக்கு அறிவுத் தரம் போதாது. நாம் வகுக்கும் நீண்ட காலத் திட்டம் அவர்களுக்குப் புரியாது. நாம் சொல்வதை அவர்கள் செய்தால் போதும். சோசலிசம் வந்துவிடும். சோசலிசம் என்றால் என்னவாம்? இன்னும் அதிக அளவில் இயந்திரங்கள், தொழில்நுட்பம், நவீன அறிவியல், தொடர்பு சாதனங்கள், இராணுவம், நகரப் பெருக்கம் படிப்பாளிகள் கட்சி அதிகாரிகள், கட்சித் தலைமை சொன்னதை நம்பி, கட்சி அதிகாரத்தை ஏற்று, தன்னலம் துறந்து பல கோடி பேர் உழைத்தார்கள். பல லட்சம் பேர் இறந்தார்கள். கட்சி சிலசமயம் சுய விமர்சனம் செய்து கொண்டது. உள்ளிருந்து எதிரிகளைக் களைந்ததாகச் சொல்லிக் கொண்டது. இப்படியாக கட்சிக்காரர்களுமே, சோசலிசம் என முழுமையாக நம்பி முதலாளியத்தைச் செயல்படுத்தினார்கள். இந்த முதலாளியம் தான் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல் தனக்குள்ளேயே தடுமாறி சிதைந்து, அப்புறம் அழிந்துபோய், இப்பொழுது ஏகாதிபத்தியமே முழு அளவில் என்னை எடுத்துக் கொள் என்கிறது.  4. இந்த ஆவணத்தில் சோவியத் அனுபவங்கள் தரும் படிப்பினைகள் என்பது, சீன அனுபவத்தில் படிப்பினைகளைக் காட்டிலும் அதிகமாகச் சொல்லப்பட்டிருப்பது பொருத்தமில்லை. சோவியத் அனுபவத்தைக் காட்டிலும் மாவோ தலைமையிலான சீன அனுபவம் மிக விரிவாக இருந்தது. சீனப்புரட்சி, உழவர்கள் மூலம் நடைபெற்றது. சீனத்தின் பருண்மையான நிலை, அதிக அளவில் கணக்கில் கொள்ளப்பட்டது. ஏனான் அனுபவம், உலக வரலாற்றில் மிக முக்கியமானது. மக்கள் ஆயுதபாணியாக்கப்பட்டனர். தொழில்துறைக்கும் வேளாண்மைத் துறைக்கும் இடையிலான முரண்பாடு ஊக்குவிக்கப்படவில்லை. மாபெரும் பாய்ச்சல் காலத்தில் மக்கள் திரளினரின் ஆற்றல்கள் உச்ச அளவில் திரட்டப்பட்டன. இயந்திரங்கள் மக்களின் உழைப்பை மாற்றீடு செய்யவில்லை. மக்கள் விடுதலைப் படை, மக்கள் மீது ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்லையில் இருந்த இராணுவம் தனக்கான உணவுத் தேவையை நிறைவுறுத்தும் முறையில் வேளாண்மையில் ஈடுபட்டது. உள்நாட்டில் இருத்தப்பட்ட இராணுவம், தொழிற்சாலைகளிலும் கல்விக் கூடங்களிலும் தன் உழைப்பைச் செலுத்தியது. அறுவடைக் காலங்களில் உழவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டது. சீனத்தில் உருவாக்கப்பட்ட கம்யூன் முறை உலக அளவில் வெகுவாகப் புகழப்பட்டது. கிராமப்புறங்களிலும் நகரப் பகுதிகளிலும் கம்யூன்கள் எழுந்தன. கிராமப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட கம்யூன், தனக்குரிய பிரதேசத்தின் தொழில், வேளாண்மை, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தியது. வாரத்தின் இறுதிநாளில் கம்யூன் உறுப்பினர்கள் ஒருங்குகூடி தம் செயற்பாடுகளை பரிசீலனை செய்து தவறுகளைத் திருத்தம் செய்து மேலும் சரியான செயல்பாட்டிற்குத் திட்டமிட்டார்கள். நகரங்களிலாகட்டும், கிராமப் பகுதிகளிலாகட்டும், நிபுணர்கள், தலைவர்கள் எனப்படுவோர் தாமும் உடல் உழைப்பில் ஈடுபட்டார்கள். மூளை உழைப்பாளிகளுக்கு அல்லது நிர்வாகிகளுக்கு தனி ஊதியம் இல்லை. இராணுவத்தில் கூட சிறிது காலம் பதவிகள் ஒழிக்கப்பட்டன. பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் நிர்வாக அமைப்பாக மூவர் குழுக்கள் ஏற்பட்டன. அரசியல் அதிகாரத்தை ஆணையில் வைக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்தது. வரலாற்றை மக்கள் சக்திதான் தீர்மானிக்க வேண்டும். ஆயுதங்கள் தீர்மானிக்க முடியாது. அணு ஆயுதம் என்பது காகிதப் புலி. இவ்வாறெல்லாம் முழக்கங்கள் எழுந்தன. வாழ்வியல் அனுபவங்களிலிருந்து இயங்கியல் கற்கப்பட்டது. கம்யூன் முறை சீனாவிலிருந்து இனி என்றும் மறையாது என்று அமெரிக்கப் பயணிகள் எழுதினர்.  கட்சிக்குள்ளும் இருவழிப்பாதை என்று பேசினார் மாவோ. முதலாளியமா? சோசலிசமா? எது இறுதியில் வெற்றி பெறும்? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார். ஒரு பண்பாட்டுப் புரட்சி போதாது. நூற்றுக்கணக்கில் இவை தொடர வேண்டும் என்றார். நூறு பூக்கள் மலரவேண்டும் என்றார். தன் சிந்தனைப் போக்கை கட்சிக்குள் எதிர்ப்பவர்கள் வெளியே தெருக்களுக்கு வந்து போராடட்டும் என்றார். சீனாவின் குருச்சேவ் என்று லியோ சோஷியை திறனாய்வு செய்தார். திரும்பவும் ஏனான் மலைப்பகுதிக்குதான் திரும்பி செல்வது பற்றி கவலை இல்லை என்றார். சோவியத் தொழில் முறையை மாவோ மறுத்தார். உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை தருவதை மாவோ மறுத்தார்.  இவ்வகை அனுபவங்கள், சோவியத் அனுபவங்களைக் கடந்து நெடுந்தொலைவு வரலாற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவை. முதலாளியத்தை சோசலிசம் எவ்வாறு வெல்ல வேண்டும் என்ற திசைவழியை இவை கட்டக்கூடியவை. ஆடம்பர வாழ்க்கை கூடாது. மேற்கத்திய வாழ்க்கை முறை நமக்குத் தேவை இல்லை. வாழ்க்கை எளிமையாக இருக்கமுடியும். மக்களுக்கு ஊழியம் செய்வதன் மூலமே நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறெல்லாம் சீன அனுபவங்கள் நமக்கு படிப்பினை தரக்கூடியவை. ஆனால் சீன அனுபவம் எங்கு எப்படி, தோல்வியுற்றது? கட்சி மையக்குழுவில் மாவோ எப்பொழுதும் சிறுபான்மைப் பகுதியிலேயே இருந்தார். இராணுவம், தொழிற்கொள்கை நிர்வாகம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் சோவியத் நடைமுறையைத்தான் சீனா கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்துடையவராக லியோ சோஷி இருந்தார். இவரது பாதை முதலாளியப் பாதை. மாவோவின் பாதை சோசலிசப் பாதை. இங்கு முதலாளியம் தான் வென்றது. சீன அனுபவங்கள் நாம் விரிவாக, சரியாகக் கற்றுக் கொள்ளத்தக்கவை. இதேபோலவே இன்னும், தென் வியட்நாம், கியூபா, இவை போலவே கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் அனுபவங்களும் கற்கத் தகுந்தவை. சோசலிசம் என்றால் என்ன? என்று தொடங்கி இவ்வனுபவங்கள் கற்கத் தகுந்தவை. ஆவணக்காரர், இவ்வகை அனுபவங்களுக்குள் அதிகம் செல்லவில்லை. ஏன் என்பது தெரியவில்லை. பாரிஸ் கம்யூனின் அனுபவப் பின்னணியில் சீனாவின் கம்யூன் அனுபவம், ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கற்கத் தகுந்தது.  5. பாட்டாளிய மக்களாட்சி ஒரு கட்சியின் அனைத்து அதிகாரமாக எப்படி மாறியது என்ற ஒற்றைப் பிரச்னையை ஆதாரமாக வைத்திருக்கிறது இந்த ஆவணம். சோசலிசக் கட்டுமானம் போன்ற பிற பிரச்னைகளை இந்த ஆவணம் விவாதிக்கவில்லை. பாட்டாளிய மக்களாட்சி முழு அளவில் செயல்பட்டிருந்தால் பிற பிரச்னைகளுக்குமான தீர்வுகளும் கிடைத்திருக்கும் என்பது ஆவணம் எழுதியவரின் கருத்தாக இருக்கக்கூடும். இந்த ஆவணம், மார்க்சிய மெய்யியல் பிரச்னை பற்றி மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. வர்க்கம், வர்க்கம் சார்ந்த பிரச்னை, வர்க்கம் சாராப் பிரச்னை என்று விவாதிக்கும்பொழுது மார்க்சிய ரீதியிலான தீர்வுகள் என்பதற்கு மாறாகப் புதிய பிரச்னைகளை கிளப்புகிறது. வர்க்கம் சாரா அணுகுமுறைக்கு மார்க்சியத்தினுள் இடம் உண்டா என்று நம்மைக் கேட்கவைக்கிறது. இந்தியச் சூழலில் மார்க்சியரின் புரட்சிகரச் செயல்முறைகள் என்னவாயின்? என்ன காரணத்தால் என்று இந்த ஆவணம் விவாதிக்கவில்லை. சமூக உடைமை நாடுகள் எனக் கருதப்பட்ட நாடுகளின் பிரச்னைகளும் பிற நாடுகளின் பிரச்னைகளும் ஒன்றல்ல. இரசிய அனுபவத்தை விவாதிப்பதன் மூலமே இங்குள்ள கட்சி தன் அமைப்பு / செயல்பாடு குறித்து எதைப்படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆவணம், குறிப்பாக மறைமுகமாக சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியச் சூழலில் மார்க்சிய லெனினியக் கட்சி பாட்டாளிய அனைத்து அதிகாரத்தைச் செயல்படுத்த முடியாது. அப்படியானால், குறைந்த அளவு கட்சிக்குள் எஜமானத்துவம் கூடாதென்பதாக இந்த ஆவணம் கருதுவதாகக் கொள்ளலாம். சோவியத் யூனியன் என்று பிற நாடுகளின் அனுபவங்களை விவாதிப்பதற்கு முன்னுரிமை தருவதற்குப் பதிலாக நமது சூழல் பற்றிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை தருவது மேல் எனத் தோன்றுகிறது. பெண்ணியம், சுற்றுச் சூழல், சாதியம், நவீன அறிவியல், தொழில்நுட்பம், பசுமைப்புரட்சி என்றெல்லாம் மார்க்சிய நோக்கில் விவாதங்களை முன்னெடுத்துச் செல்வது, நமக்குப் பயன்படும். விவாதங்களுக்கு பதில் சொன்ன தோழர் வேணு, தனது ஆவணத்தில் பாட்டாளி வர்க்க அனைத்து அதிகாரம் ஒரு கட்சி அதிகாரமாக சீர்குலைந்தது, என்பதுதான். ஆவணத்தின் அடிப்படை. இதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். உள்நாட்டு நிலைமை ஏகாதிபத்திய நாடுகளின் முற்றுகை என்ற சூழல் காரணமாகத்தான் ஒரு கட்சி அதிகாரம் முதன்மை பெற்றது என்பதை லெனின் எங்கும் கூறவில்லை. இப்படி தோழர் வேணு  கூறும்பொழுது, குறிப்பிட்ட சூழலில் நிர்ப்பந்தம் பற்றிய உணர்வு லெனினுக்கு இருந்திருந்தால், நிர்ப்பந்தம் குறைகிறபொழுது, பாட்டாளிய அனைத்து அதிகாரத்திற்கு மாற்றீடு என்ற முறையிலான ஒரு கட்சி அதிகாரத்தை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி லெனின் பேசியிருக்கக் கூடும் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நம்மிடம் எதிர்பார்க்கிறார் தோழர் வேணு.  மக்கள் ஆட்சி என்பது பற்றி லெனினுக்குப் போதிய புரிதல் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறார் தோழர் வேணு. மக்களாட்சி என்பதில் அரசியல் தன்மையிலான அரசு என்பதும் சமூக நிர்வாகம் என்று அறியப்படுகிற சமூகவியல் என்பதும் ஆக இரு பகுதிகள் உள்ளன. முதலாளிய மக்களாட்சிக்கு முன்பே வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அல்லது வரலாற்றுக்கு முன்பே கூட இனக்குழு மக்களிடம் மக்களாட்சி முறை இருந்தது. இதன் தொடர்ச்சிதான் முதலாளிய மக்களாட்சி. தோழர் வேணு மேலும் விளக்குகிறார். சோசலிசத்தின் போதும் அதன் அடுத்த கட்டமான கம்யூனிசத்தின் போதும் சமூக நிர்வாகம் என்ற மக்களாட்சி பல இலட்சம் மடங்கு மேம்படும் என்று கூறிய லெனின் அக்காலங்களில் மக்களாட்சி உதிர்ந்துவிடும் என்றும் குறிப்பிடுகிறார். உதிர்வது அரசு. இது மக்களாட்சியின் முதலாளிய காலத்து அரசுமுறை. இப்படி வேறுபடுத்திப் பார்க்க லெனினுக்குத் தெரியவில்லை. இப்படி விளக்குகிறார் தோழர் வேணு. முதலாளிய மக்களாட்சிக் காலத்திலும் மக்களின் சிவில் உரிமைகளை அரசு பொருட்படுத்தி செயல்படுத்தத்தான் வேண்டும் என்று கருதும் தோழர் வேணு, மக்களாட்சி என்பதன் அரசியல் கூறு வர்க்கம் சார்ந்தது என்றும் குடியுரிமைகளைச் செயல்படுத்தும் சமூக நிர்வாகம் என்று கூறு, வர்க்கச் சார்பற்றது என்றும் வேறுபடுத்துகிறார். லெனின் பார்வையை வர்க்கக் குறைப்பு என்கிறார்.  உடனடியாக நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் சில முதலாளிய அரசு, சில சந்தர்ப்பங்களிலாவது மக்களின் குடியுரிமைகளைச் செயல்படுத்தாமல், தான் அரசாக நிலைபெறமுடியாது. இதே முதலாளிய அரசு சில நெருக்கடிகளின்போது குடியுரிமைகளை முற்றாக அழிக்கவும் செய்கிறது. இப்படி ஒரு லெனினியவாதி விவாதிப்பதற்கு இடமிருக்கிறது.  லெனினுக்குத் தெரியவில்லை என்பதை அவர் காலத்துக் கடுமையான நிர்ப்பந்தங்களின் தொடர்ச்சியாகவும் நாம் காணமுடியும். மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி பெற்ற மக்களாட்சி முறை ஜார் ரஷ்யாவில் இல்லை. அரசியல் நிர்ணய சபையை லெனின் கலைத்தது, சூழல் தந்த நிர்ப்பந்தத்தின் விளைவு. இப்படி லெனின் கலைத்ததை தோழர் வேணு குறை சொல்லவில்லை. பாரிஸ் கம்யூன், நிலைபெறாமைக்கு ஒரு முக்கிய காரணமாக மார்க்கம் எங்கல்சும் கூறியது, மைய அதிகாரத்தை உடனடியாகக் கலைத்ததுதான். ஆக, மைய அதிகாரம் தேவையான கால அளவுக்குச் செயல்படுவதை தோழர் வேணு ஏற்கத்தான் செய்கிறார். இந்த மைய அதிகாரம் குறைந்த கால அளவுக்குக் கூட தேவையில்லை என்றுதான் தோழர் வேணு தொடங்கியிருக்க வேண்டும். அப்படியானால், சோசலிசமாகத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு முதலாளியம் வளர்ச்சி பெறாத ரஷ்ய சூழலில் புரட்சி செய்திருக்க வேண்டாம் என்றும், விவாதத்தைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.  ஆக, பாட்டாளிய அனைத்து அதிகாரம் ஒரு கட்சி அதிகாரமாக சீர்குலைந்தது என்ற இந்த ஆவணத்தின் அடிப்படை, சோவியத் யூனியனில் சோசலிசக் கட்டுமானம் ஏன் தகர்ந்தது அல்லது ஏன் செயல்படவில்லை என்ற விளக்கத்திற்கு ஆதாரமாக முடியாது. கட்சி சீர்குலைந்தது என்பது உண்மைதான். லெனின் சிந்தனையிலிருந்த ஒரு குறைதான் இந்தச் சீர்குலைவுக்கு ஒரு காரணம் என்று விவாதிக்கத் தொடங்கினால், சிந்தனையைச் சரிப்படுத்திக் கொள்வதன் மூலம் புற நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று பேச வேண்டியிருக்கும். புறநிலைச் சிக்கலை, வெறும் கருத்தியல் சிக்கலாகக் காணும் தவறான முறை இது என்பதில் ஐயமில்லை.  6. பெண்ணுரிமை இயற்கை நாசம் முதலியவற்றை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சிக்கல்கள் எனத் தோழர் வேணு கருதுவது நமக்கு உடன்பாடில்லை. வர்க்கம் என்பதைக் கறாராக நிர்ணயிப்பதில் சிக்கல் உண்டு. பகை முரண்பாடு என்பதைத் தவிர நட்பு முரண்பாடு என்று கூறும் இயங்கியலில் உண்டு. அதிகாரத்தையும் உற்பத்திப் பெருக்கத்தையும் முதன்மைப்படுத்தும் பொழுது இயற்கை நாசம் அடைவதைத் தவிர்க்க இயலாது. பெண்களின் உரிமையும் மதிக்கப்படாது. வர்க்கம் என்பதுகூட அதிகாரக் கட்டமைப்பாக இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்துக்கு முதன்மை தருவதன் மூலம் உழவர்கள் முதலிய பிற சமூகப்பிரிவினர் மீது, ஆதிக்கம் செய்வதை நாம் ஏற்பதற்கில்லை. மாவோ கூறியபடி மக்கள் மற்றும் மக்களின் எதிரிகள் என்ற முறையில் பாகுபாடு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். வர்க்கத்திற்கப்பால் என்று பார்ப்பது இறுதியில் மார்க்சியத்தையே குறைப்பதில் முடியும். கட்சிக்குள் தோழர் வேணுவின் அனுபவங்கள் ஆய்வுக்குரியவை.  கம்யூனிசம் தோற்றுவிட்டதா? கம்யூனிசம் என்பதன் முதல்கட்டம் சோசலிசம். கம்யூனிசம் பற்றியும் சோசலிசம் பற்றியும் மார்க்சிய முதல்வர்களும் வழிவந்தவர்களும் தம் புரிதலையும் அனுபவத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தி உள்ளனர். மாவோ ஒரு சந்தர்ப்பத்தில், வரலாற்றில் முதலாளியமா அல்லது சோசலிசமா எது வெற்றி பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார். மாவோவை கோர்பச்சேவ் புரிந்துகொள்ள விரும்பியிருக்கமாட்டார். கலாச்சாரப்புரட்சி பற்றி மாவோ கூறிய பொழுது கலாச்சாரப்புரட்சி ஒருமுறை அல்ல பலமுறை நடைபெற வேண்டும் என்றார். சோவியத் யூனியனில் செயல்படுத்தப்பட்டதாக முன்பு சொல்லிக்கொண்ட கலாச்சாரப்புரட்சி பற்றிய விமர்சனத்தை மாவோவின் புரிதலின் அடிப்படையில் கோர்பச்சேவ் தெரிந்து வைத்திருந்தாரா? தெரிந்திருக்க முடியாது. உற்பத்திக் கருவிகளின் பெருக்கம் முதலாளியம்தான் என்றார் மாவோ. இந்த உண்மை கோர்பச்சேவுக்குப் புரிந்ததாகவும் தெரியவில்லை. தொழில் முறையிலும் நிர்வாகத்திலும், இராணுவ நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளும் இருவழிப்பாதை பற்றி மாவோ கூறியிருந்தார். ஒன்று முதலாளியப்பாதை மற்றது சோசலிசப்பாதை, கட்சிக்குள்ளும் நடைபெறுவது வர்க்கப் போராட்டம். இது கோர்ப்பச்சேவுக்கு தெரியுமா? இம்மாதிரி மார்க்சியத்தின் அடிப்படை உண்மைகளைப் புரிந்து வைத்து எங்கே தவறு நேர்ந்தது என்று கண்டறிந்து களைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அப்புறம் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அறிவித்திருப்பார். சரி பரவாயில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு அடிப்படை தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவதாக நாம் நினைத்துக் கொள்ளலாம்.  கோர்பச்சேவ் 85 86 ம் ஆண்டுகளில் தான் முன்வைத்த பொருளியல் மறு சீரமைப்பு என்ற பொஸ்டிராய்காவை, லெனின் முன்வைத்த புதிய பொருளியல் திட்டத்தோடு ஒப்பிட்டார். சோவியத் யூனியனில் பொருளியல் உற்பத்தி முற்றாகத் தேங்கிவிட்ட சூழலில், இம்மாதிரி ஒரு புதிய திட்டத்தை சோதனை என்ற அளவிலாவது வரவேற்க வேண்டியிருந்தது. அப்புறம் வெளிநாட்டுக் கடனுதவி வேண்டி கோர்ப்பச்சேவ் காத்துக் கிடந்தார். பயணம் செய்தார். சோவியத் யூனியனில் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் தேவைக்காக ஏகாதிபத்தியத்தை வருந்தி வருந்தி அழைத்தார். அப்பொழுது கம்யூனிசத்தில் அக்கறை உடையவர்களுக்கு அழுத்தமான சந்தேகம் எழுந்தது. ஏகாதிபத்தியத்தின் உதவியை வருந்திக் கோருவது, சந்தேகத்துக்கு ஒரு காரணம். நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் சோவியத் சமூகத்தில் அதிகாரத்தை எந்த அளவு அதிக அளவில் மையப்படுத்தும்? தவிர சமூகத்தை எந்த அளவு நாசப்படுத்தும் என்பது பற்றிய சந்தேகம். இன்னொரு காரணம், கோர்பச்சேவ் கூறிய உதவி கிடைப்பதாக இல்லை.ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனை பலவீனப்படுத்த உலக சமுதாயத்தின் முன்னிலையில் கேவலப்படுத்த நினைத்தது இராக்போரில் கோர்பச்சேவை தன் தூதுவனாக சதிக்கு ஒத்துழைப்பாக பயன்படுத்திக் கொண்டது. கோர்பச்சேவ் இதையெல்லாம் விரும்பித்தான் செய்தார். அப்புறமாவது இவர் கேட்டுக் கொண்ட உதவி கிடைத்ததா? இல்லை, சந்தைப் பொருளாதாரம் தான் சோவியத் யூனியனுக்கான பொருளியல் திட்டம் என்று ஏகாதிபத்தியம் பரிந்துரை செய்தது. சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளியும் என்பதைத்தவிர வேறல்ல. இதையும் கோர்பச்சேவ் ஏற்றுக்கொண்டார். கம்யூனிசத்தையோ சோசலிசத்தையோ வேரோடு வெட்டித்தள்ளும் திட்டம் சந்தை பொருளாதாரம். இப்பொழுது கேட்கலாம். எது தோற்றுவிட்டது? சோவியத் யூனியனில் மார்க்சியம் எந்த இடத்தில் வழிதவறியது என்பதைக் கண்டறியும் முனைப்பு எதுவும் இல்லாமல், ஒன்றை அடுத்து இன்னொன்று என்ற முறையில் சரிவில் சென்ற கோர்பச்சேவ் யெலட்சினும் இப்பொழுது தாங்கள் கம்யூனிசத்தை வெற்றி கண்டு விட்டோம். தோற்கடித்து விட்டோம் என்று சொல்லியிருந்தால் ஓரளவு உண்மையாகவும் இருக்கும். அவர்களை பற்றிய உண்மையும் வெளியே தெரியவரும். சரி, இந்த விவாதத்தை இங்கு நிறுத்திக்கொண்டு வேறு சிலவற்றை பார்க்கலாம். முதலாளிய நெறி என்பதும் சோசலிச நெறி என்பதும் ஒன்றிலிருந்து மற்றது முற்றிலும் வேறானநெறிகள். இந்த அறிவு வரலாற்றனுபவங்களின் மூலம் இப்பொழுது நமக்கு தெளிவு பட்டிருக்கிறது. இவைபற்றி இங்கு சுருக்கமாகக் குறிப்பிடலாம். இராணுவ பெருக்கம், அணுஆயுதப் பெருக்கம்,மையத்தில் அதிகாரக் குவிப்பு, நவீன அறிவியல் தொழில்நுட்பம், நகர பெருக்கம்,கட்சியின் சர்வாதிகாரம், மத்தியதர வர்க்கத்தை அதிகாரவர்க்கத்தின் பகுதியாக மாற்றுவது ஆகியவை சுத்தமாக முதலாளியப் போக்கு இவற்றுக்கும் சோசலிசத்திற்கும் அறவே உறவில்லை. சுரண்டல் எந்த வடிவத்திலும் இருக்க முடியாது. மனித விடுதலையை நோக்கமாகக் கொண்டது சோசலிசம். சமூக உறவுகளுக்கிடையில் எந்தவகையிலும் சுரண்டல், அதிகாரம், திமிர், தற்பெருமை, நுகர்வு வெறி, போதை முதலியவற்றுக்கும் இடம் இருக்கக் கூடாது, இதை நோக்கியது சோஷலிசம் (கம்யூனிசம்) பெருந்தொழில் என்ற அமைப்போடு சோசலிசம் ஒத்துச் செல்லமுடியாது என்று எங்கல்ஸ் கூறியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. சுதந்திரம் என்பது பிரிவு படாதது என்ற மார்க்சின் கூற்றிலுள்ள உண்மையைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தையும் சேர்த்துத்தான் விடுவிக்க வேண்டும் என்று மார்க்கம் எங்கல்சும் வற்புறுத்திக் கூறியதை மார்க்சியர்கூட ஏற்கவில்லை. மதம் என்பது மனித அவலத்தின் வெளியீடு என்று கூறிய மார்க்சு, அதே வாக்கியத்தில் அத்துடன் மனித அவலத்திற்கு எதிர்ப்புக்குரல் (கலகம்) மதம் என்று கூறியதைப் பலர் புரிந்துகொள்ளவில்லை. மார்க்சியத்தின் இலக்கணமாகிய இயங்கியலை அதன் ஆழத்தில் வைத்து விரிவுபடுத்துவதில் லெனின், மாவோ மாதிரி பிற மார்க்சியர் அக்கறை கொள்ளவில்லை. மாவோ மார்க்சியத்திற்குள்ளிருந்து புதிய வெளிச்சங்களை புதிய உண்மைகளை எடுத்துத்தந்த நெறியின் வழி மார்க்சியர் தொடரவில்லை. இயற்கைப் பாதுகாப்பு அறிவியல் தொழில்நுட்பம் பெண்களின் பிரச்சனை ஆதிவாசிகள் போன்ற சமூகங்களின் பிரச்சனை, தாழ்த்தப்பட்டவர் பிரச்சனை, மருத்துவம், கல்வி, குடும்பம், பாலுறவு, தொழில் நிர்வாகம், வேளாண்மை, பண்பாடு, தத்துவம் ஆகிய நூற்றுக்கணக்கான களங்களில் மார்க்சிய நெறி எது? என்பதைப்பற்றி கட்சி சார்புடையவர் கவலைப்படவில்லை. சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்கத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை விவசாயிகளுக்குத் தரவில்லை. மனித உரிமைகள் சோவியத் யூனியனில் மதிக்கப்படவில்லை. பிரம்மாண்டமான தொழில் நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், சுரங்கம் தோண்டுதல் முதலிய கடுமையான பணிகளுக்காக உழைப்பாளர் முகாம்கள் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டதை யாரும் தட்டிக் கேட்கவில்லை. மாஸ்கோ விசாரணை என்ற பெயரில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுடையவர்கள் கடுமையாக ஒழிக்கப்பட்டதை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. இயற்கைச் சூழல் நாசமாகி வந்ததை மார்க்சியர் காணவில்லை. இவ்வாறெல்லாம் காரியங்கள் நடைபெற்றபொழுது, இப்படித்தான் சோசலிச உருவாக்கம் நடைபெறும் என்றும், ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இதுதான் ஒரே வழி முறை என்றும் சொல்லப்பட்டதை அனைவரும் நம்பினர். இந்த நெறி முதலாளிய நெறி, இந்த முதலாளிய வளர்ச்சிக்கு சோசலிச போதனை உதவியாக இருந்தது. இறுதியில் ஏற்பட்டதென்னவோ, அரசு முதலாளியம் இதற்காக கோடிக்கணக்கான மக்கள் பட்ட துயரங்கள், செய்த தியாகங்கள், வரலாற்றில் அரிய செயல். சோசலிசம் எது என்று தெரியாத நிலையில் தாம் அறியாமலே முதலாளிய நெறிகளை உள்வாங்கிக் கொண்டு தாம் செயல்படுத்துவது சோசலிசம்தான் என்று முழுமையாக நம்பிக் கட்சி உழைத்தது. கட்சியை நம்பி கோடிக்கணக்கான மக்கள் தியாகங்கள் செய்தார்கள்.  இப்பொழுது நமக்கு புரிந்திருக்கிறது. சோசலிசப்பாதை எது என்பது மேலும் தெளிவாகப் புரிந்திருக்கிறது. ஏகாதிபத்தியம் நாம் நினைத்தது போல பலம் குன்றிவிடவில்லை.அதன் பலம் பலமடங்கு பெருகியிருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் கரங்கள் உலகின் மூலை முடுக்குகளிலும் பரவி இருக்கின்றன. ஏகாதிபத்தியம் இல்லாத இடம் இல்லை என்று கூட சொல்லிவிடலாம். ஏகாதிபத்தியம் மனிதனுக்கு விடுதலை தராது. ஏகாதிபத்தியத்தை அழிக்கும் முனைப்பிலும் முயற்சியிலும் தான் மனித விடுதலை சாத்தியம். அதிகாரம், தலைமை, உடைமை, ஆணவம் என்பன போன்ற போக்குகள் எங்கிருந்தாலும் அதற்குள் இன்று செயல்படுவது ஏகாதிபத்தியம்தான். மார்க்சியம் இவ்வளவு நுணுக்கத்தோடு ஏகாதிபத்தியத்தை இன்று புரிந்து கொள்ள முடியும். இத்தகைய பார்வையை , வெளிச்சத்தைத் தருவது இன்று மார்க்சியம் தவிர வேறு கோட்பாடில்லை. இதற்குக் குறைந்து இன்று, மார்க்சியத்தை அர்த்தப்படுத்துவது மார்க்சியத்திற்கு இழுக்கு. ஏகாதிபத்தியம் இருக்கும் வரை மார்க்சியம் அழியாது. வெட்ட வெட்ட மார்க்சியம் புதிய பொலிவோடு தழைக்கும்  இனி மீண்டும் கோர்ப்பச்சேவை கவனிக்கலாம். லெனின் புரட்சி செய்த நாட்டில் மார்க்சியம் சோசலிசம் ஆகியவை மரியாதையோடு போற்றப்பட்ட சமூகச்சூழலில் கோர்ப்பச்சேவ் பிறந்தார், வாழ்ந்தார். கட்சிக்குள் இணைந்து பணியாற்றினார். 1985-ம் ஆண்டுச் சூழலில் சோவியத் யூனியனில் நிறைய மாற்றங்களைச் செய்தார். பத்திரிகைகளுக்கு சுதந்திரம் கொடுத்தார். இனி சட்டமுறைப்படிதான் கைது செய்யப்படுவதும் விசாரணையும் நடைபெறவேண்டும் என்றார். கம்யூனிஸ்ட் கட்சி தவிர, மக்கள் தமக்குத் தேவையான அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் போராடலாம், என்றார். அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவில்களைத் திறக்க வழி செய்தார். உண்மை, நேர்மை, தியாகம் ஆகியவற்றை மதங்களின் வழியே சமூகம் பெற முடியும் என்றார். முன்னைய ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட கலைச் செல்வங்களை மீண்டும் வெளிக் கொண்டு வந்தார். ஸ்டாலின் காலத்தில் பொய்யாக துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு வரலாற்றின் களங்கமென முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு புத்துயிர்ப்பு தந்தார். பிரம்மாண்டமான இராணுவம், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், இல்லாமல் உலகம் வாழமுடியும் என்பதை உணர்ந்து, துணிச்சலாக வருவது வரட்டும் என்ற முறையில் ஐந்தாறு ஆண்டுகளுக்குள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்து தன் இராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொண்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் சோவியத் இராணுவம் இனி தலையிடலாது என்று அறிவித்ததன் மூலம் கட்சி, (அரசு) சர்வாதிகாரத்திலிருந்து மக்கள் விடுதலைக்கு வழிவகுத்தார். வரலாற்றில் இவையெல்லாம் புதிய பாதைகள், கோர்ப்பச்சேவுக்குள், சமூகச்சூழலில் உள் உறைந்து இருக்கிற , குறைந்த அளவுக்கேயான, மார்க்சிய உணர்விலிருந்துதான் இத்தகைய ஆக்கரீதியான செயற்பாடுகள் முளைத்தன என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.  தேசிய இன விடுதலை (சுயநிர்ணய உரிமை) என்பதை நம்கால வரலாற்றுத் தடத்தில் ஆழமாகப் பதித்தவர் லெனின். சோவியத் யூனியனில் தேசிய இனப்பிரச்சனைகள் எந்தக் காலத்திலும் மங்கிவிடவில்லை. கோர்ப்பச்சேவ் சில அனுபவங்களுக்குப்பிறகு தேசிய இனங்களின் விடுதலை என்பதைப்பற்றி விரைவில் கற்றுக்கொண்டார். அரசியல் சட்டத்தின் நெறி முறையின்படிதான் தேசிய இனங்கள் பிரிந்து செல்ல வேண்டுமென்று சொல்லி, சில கெடுபிடிகளைச் செய்து பார்த்தார். பால்டிக் குடியரசுகள் கேட்பதாக இல்லை. மைய அரசுக்குப் பதிலாக ஒரு மாபெரும் கூட்டரசு பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சோவியத் யூனியன் முழுவதிலும் அங்கங்கே விடுதலைக் குரல்கள் எழுந்தன. தேசிய இனங்களின் விடுதலை தவிர்க்க முடியாதது. இதற்கொரு நல்ல சந்தர்ப்பமாக நேர்ந்ததுதான் அதிரடிப்புரட்சி.  ஒரு பதினைந்து நாட்களுக்குள் பல பிரச்சனைகள் முடிவாகிவிட்டன. இனி சோவியத் யூனியன் என்ற பெயர் இல்லை. எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய மைய அரசு இல்லை. இராணுவத்தையும், அணு ஆயுதங்களையும், பேய் பிசாசுகளைக் கட்டிக்காப்பது மாதிரி நிர்வாகம் செய்ய மையத்தில் ஒரு நிர்வாகம் தேவை. இறையாண்மை பெற்ற அரசுகள் தாமாக விட்டுக் கொடுக்கும் உரிமைகளைத்தான், மைய நிர்வாகம் தனக்கு அதிகாரம் எனக்கொள்ளும். குடியரசுகளுக்குள்ளும் தன்னாட்சிப் பிரதேசங்களின் விடுதலை குரல்களை இனி அமுக்க முடியாது. ஐரோப்பிய சமூகம் செய்து கொண்டிருப்பது மாதிரி குடியரசுகள் தமக்கிடையில் வர்த்தக ஒப்பந்தங்கள் இனி செய்து கொள்ளலாம். பொருளாதார திட்டம் வகுக்கும் மையக்குழு இல்லை. பால்டிக் குடியரசுகள் இனி சுதந்திரமாக வாழலாம், உக்ரைன் குடியரசுத்தலைவர், எனக்கு அணு ஆயுதங்கள் எதுவும் வேண்டாம், எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன வாசகம், நமக்குத் தேன் என இனிக்கிறது. எல்லாவற்றையும் எனக்கே கொடுத்து விடுங்கள் என போரிஸ் யெல்ட்சின் கூறுகிறார். அவருக்குள் இருக்கும் குட்டி சர்வாதிகாரியை சில நாட்களில் நாம் கண்டுகொண்டோம். அவர் மாபெரும் வீரர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். உண்மையில் சோவியத் யூனியனுக்குள் ரஷ்யர்களின் கடுமையான சர்வாதிகாரப்போக்கு இப்பொழுதேனும் உடைப்பட்டிருப்பதை நாம் வரவேற்க வேண்டும். ரஷ்யன் என்பவன்தான் சோவியத் யூனியனில் தன்னைக் கதாநாயகனாகப் போற்றிக் கொண்டவன். இவனுக்கும் இவனது மொழிக்கும் இடம் கொடுத்துத்தான் மற்றவர்கள் வாழவேண்டும். ரஷ்யக் குடியரசு பெரும்பான்மை மக்களையும், பிரதேசத்தையும் கொண்டது. எதிர்காலத்திலும் இதன் அதிகாரப்போக்கு இருக்கத்தான் செய்யும். கோர்ப்பச்சேவ் இப்படியெல்லாம் இறுக்கமான கட்டுக்களை உடைத்ததை ஆழ்ந்து பார்த்தால், மார்க்சிய நெறிக்கு ஒத்ததுதான் என்று சொல்லமுடியும். அதிகாரத்தை உடைப்பது மார்க்சியம்.  கடைசியாக கம்யூனிஸ்ட் கட்சியை உடைப்பது பற்றி ; இது கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லை. தனக்கு உடைமைகளையும், அதிகாரத்தையும் நிறைய சேர்த்துக்கொண்டு, அதிகாரத்தின் கனத்தில், சுகபோகங்களின் நசிவில், திமிர் பிடித்த நோயாளிகளாகத் திரிந்தால் அது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. அதிகாரத்தோடும், உடைமையாளர்களோடும் ஒத்துழைக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டு, தெருக்களில் மக்கள் மத்தியில் ஒதுக்கிடங்களில், கட்சி இனி தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளவேண்டும். மாஸ்கோவில் மக்கள் எழுச்சியோடு கட்சிக்காரர்களும் திரண்டிருந்தார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. அற்புதமான தோற்றம் உடைய மார்க்சின் சிலைக்கு முன், எங்களை மன்னியுங்கள் என்று மக்கள் எழுதிவைத்தார்கள். லெனினது சவம், இனி வேறு இடத்தில் புதைக்கப்படலாம். இதில் தவறு இல்லை. ஆனால் சோவியத் யூனியன் என்று முன்பு அறியப்பட்ட பிரதேசத்திலிருந்து, லெனின் தடம் அழியாது. கம்யூனிஸ்ட் கட்சி, தன்னைப் புதுப்பித்துக்கொள்ள, தன் வரலாற்று அனுபவத்தை, தத்துவ நூல்களை, ஆழமாகத் தோண்டி இனி புதியதாகக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்பு, இப்பொழுது நேர்ந்திருக்கிறது. சந்தைப் பொருளாதாரம், மக்களின் மீது சுமைகளைத் தூக்கி வைக்கும். ஏகாதிபத்திய ஒத்துழைப்பு மக்களை விடுவிக்காது. மக்கள் ஏகாதிபத்தியத்தின் ஆளுகையை விரைவில் கண்டுகொள்வார்கள். இந்தியாவிலுள்ள மைய அரசோ, முதலாளிகளோ, முதலாளியக் கட்சிகளோ, மக்கள் மீது இனி ஆதிக்கத்தையோ சுரண்டலையோ செய்யமாட்டோம் என்று வாக்குறுதி தரவில்லை. சோவியத் யூனியனின் சிதைவு, தங்களுக்கு புதிய சக்தியைத் தந்துள்ளதாக நம்பி, சுரண்டலையும் அதிகாரத்தையும் இனி அதிகமாகவே திணிப்பார்கள். முட்டாள், தன்னால் பெரிய பாறையைத் தூக்க நினைத்து, தன் தலையிலேயே போட்டுக் கொள்வான். நம் முதலாளிகளும், முதலாளியப் போக்கைத் தழுவிய கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் மூடர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களுக்கு ஜே. போடலாமா.  குறிப்பு: கோர்பச்சேவின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்ட்சின் இரஷ்ய அதிபரானார். இரஷ்யக் குடியரசிலிருந்து சுதந்திரம் வேண்டி சச்சன்யா போராடியது. இதற்குச் சற்று முன்பு எழுதப்பட்ட கட்டுரை இது. கீழை மார்க்சியம் பாமரனின் பார்வை குறித்து சில திறனாய்வுகள் குறிப்பு:  “மார்க்சியம் கிழக்கும் மேற்கும்”, என்ற எஸ்.என்.நாகராசன் அவர்களின் நூல், தமிழகச் சூழலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மார்க்சியத்தை கிழக்கு, மேற்கு என்று எப்படிக் கூறுபடுத்தலாம் என்று தொடங்கி கேள்விகள் பல எழுந்தன. நாகராசனை வைணவ மார்க்சியர் என்றும் சிலர் குறை கூறினர். இப்படி விமர்சனங்களைத் தொடங்கி வைத்தவர் அ. மார்க்ஸ். இந்தக் கேள்விகளையெல்லாம் எதிர்கொண்டு “நிகழ்” இதழில் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.  கோவையிலிருந்து வெளிவந்த “தாராமதி” இதழின் ஆசிரியரும், தமிழ் சிற்றிதழ் சங்கத்தைத் தோற்றுவித்தவரும் ஆகிய திரு. குன்றம் இராமரத்னம் அவர்கள் “கீழை மார்க்சியம் ஒரு பாமரப் பார்வை” என்று ஒரு சிறு நூல் எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு அ.மார்க்ஸ் முன்னுரை எழுதி இருந்தார். இந்த நூல் குறித்துக் கோவையில் நடைபெற்ற திறனாய்வு அரங்கிற்காக நான் விரிவான குறிப்புக்கள் எழுதினேன். கட்டுரையின் உள் துணைத் தலைப்புக்கள் குன்றம் அவர்களின் நூலில் அமைந்தவை. நாகராசன் அவர்களின் மார்க்சியம் பற்றிய கருத்துக்களை தொகுத்துத் தருகிறது என்ற முறையில் இந்தக் கட்டுரையை நண்பர்கள் வாசிக்க முடியும். மற்றபடி திரு. குன்றம் அவர்கள் எங்கள் அன்புக்கும், மரியாதைக்கும் என்றும் உரியவர்.  1. வரலாறு:  வரலாறு என்பதை உருட்டல் என்கிறார். மதம் பற்றி கேலி செய்கிறார். அறிவியல் தொழில்நுட்பம் நாகராசனுக்கு அலர்ஜி என்கிறார். புதிய காலனியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக வரலாறு என்பதைப்பற்றி மார்க்சியரின் கருத்தை இவர் கேலி செய்கிறார். யார் எப்படியும் வரலாற்றைத் திரிக்கலாம். வரலாறு திரும்பி வருவதில்லை. வரலாற்றுக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. வரலாற்று ஆய்வு கூட வேண்டியதில்லை. எதற்காக வரலாற்றைப் பார்க்க வேண்டும். இன்றுள்ள யதார்த்தங்கள் நம் கண் முன் தெரிகின்றன. இதைப் புரிந்து கொள்வதற்கான அறிவுதான் தேவை. எதார்த்தம் பற்றிய புரிதல் எதற்குத் தேவை. நம் முன்னோர் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். இதைக் கண்காட்சியாக்கி ஏன் பார்க்க வேண்டும்? இப்படி குன்றத்தின் சிந்தனை செல்கிறது.  மார்க்சியனுக்குத்தான் வரலாறு முக்கியமாகிறது. குன்றத்திற்கு முக்கியமில்லை. வரலாறு தேவையில்லையென்றால் உதறிக் கொள்ளலாம். ஆனாலும் வந்து காலைச் சுற்றும். இந்தியாவும் இங்கிலாந்தும் வெவ்வேறு வரலாற்றுச் சூழலில் உள்ளன. இன்று உலக வரலாறு நம்மீது மோதுகிறது. மேற்கை ஏற்றுக் கொள்ள இயலாமல் நாம் திணறுகிறோம். அவர்கள் வரலாற்றுக்கும் நம் வரலாற்றுக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது. நமக்குள்ளும் பல வரலாற்று இடைவெளிகள் உள்ளன. விலங்கிலிருந்தும் கூட நாம் வேறுபடவில்லை. ஆதி மனிதன் கூட நமக்குள் இருக்கிறான். பகுத்தறிவுப் பார்வைகூட நமக்குப் போதாது. இயங்கியல் தெரியவேண்டும். நாம் எந்த வரலாற்று சூழலில் இருக்கிறோம் என்பது தெரியவேண்டும். காலம் பற்றிய உணர்வு வேண்டும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றிய அறிவு தேவை.  ஒரு முதியவனும் இளையவனும் எந்த இடத்தில் வேறுபடுகின்றனர் என்பது தெரிய வேண்டும். குன்றத்தின் பார்வையில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் நமக்குத் தேவையில்லை. விஞ்ஞானத்தின் வரலாறு கூட தேவையில்லை. இன்று என தொடங்கி நாளை நோக்கிச் செல்கிறோம். இளமை நினைவுகூட அவசியமில்லை. நினைவுகள் எதற்காக? என்றுகூட குன்றம் கேட்டுக் கொள்ள விரும்பமாட்டார். நிகழ் காலத்தில் உறுதியாக இவர் நிற்க விரும்புகிறார். எதிர்காலம் நோக்கித்தான் நமது பயணம். இறந்தகாலம் எதற்காகக் குறுக்கே வரவேண்டும். வரவேண்டியதில்லைதான். ஆனாலும் வருகிறது. வரலாறு குன்றத்திற்கு ஒரு அலர்ஜி, வரலாற்றில் புதைந்துவிட வேண்டியதில்லை. பழங்காலக் கற்பனையில் நாகராசன் முழுகிவிடவில்லை. மார்க்சியம் எந்த சூழலில் தோன்றியது என்று ஆராய்கிறார். மார்க்சியத்திற்குள் அவர் காணும் குறையை வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்க்கிறார். இந்தக் குறையிலிருந்து மார்க்சைக்கூட விடுவிக்கிறார்.  புதிய காலனியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறார். இசுலாமியர் வரலாற்றைச் சொல்கிறார். இந்தியாவின் மத வரலாற்றைச் சொல்கிறார். இன்றைய நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறார். ஒரு மன நோயாளியைக் குணப்படுத்துவதற்கு அவரைப் பற்றிய வரலாறு தேவையில்லையா? உடம்பில் தைத்த அம்பின் வரலாறு வேண்டியதில்லை என்று புத்தரும்தான் சொன்னார். ஆனாலும் இதற்காகவும் வரலாறு தேவையில்லையா? குன்றம் மிகவும் பொதுவான ஒரு பிரச்னையைக் கிளப்புகிறார்? வரலாறு ஏன் தேவை என்பது பிரச்சனை. அதேபோல வரலாறு என்றால் என்ன என்பதும் பிரச்சனை. குன்றத்திற்கு வரலாறு தேவையில்லை. நாகராசனுக்குத் தேவைப்படுகிறது. வேறு எப்படி குன்றத்தையும் நாகராசனையும் புரிந்து கொள்ள முடியும். வரலாறு தேவையில்லை என்ற பேச்சு அநேகமாக ஆன்மீகவாதத்திற்குள் செலுத்தும்.  2. கீழை மார்க்சியம்  மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம் என்பதை 12 வகைகளில் குன்றம் வேறுபடுத்துகிறார். மார்க்சியம் பற்றி இவர் ஒப்புக் கொள்கிறாரோ இல்லையோ? கீழை மார்க்சியத்தில் இவருக்குள்ள வெறுப்பு காரணமாக, மேலை மார்க்சியர்களை சார்ந்து நிற்பது போலத் தெரிகிறது. கீழை மார்க்சியம், உழவர்களையும் கிராமங்களையும் போற்றுகிறது. மதத்தைப் புரிந்து கொள்ளச் சொல்கிறது. நவீன அறிவியலை எதிர்க்கிறது. இம்மாதிரி காரணங்களால் குன்றம் கீழை மார்க்சியத்தை மறுக்கிறார். நகர வாழ்க்கை, விஞ்ஞானம், வாழ்க்கை வசதிகள் முதலியவற்றை குன்றம் ஏற்கிறார்.  கீழை உலகம் பழங்காலத்தைச் சேர்ந்தது. மேலை உலகம் நவீன காலத்தைச் சேர்ந்தது. பழங்காலம் நமக்கு வேண்டாம். நவீன காலம் தேவை. இப்படிக் குன்றத்தின் உணர்வுகள் செல்கின்றன. மேற்குலகம் தோற்றுவிட்டது. இனி கிழக்குலகம் அதை வெல்லும். இப்படி நாகராசன் சொல்லும் பொழுது, மத்திய ஆசிய, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மேற்கை வெல்லும் என்று நையாண்டி தொனிக்க குன்றம் சொல்லுகிறார். கீழை மார்க்சியத்தை நாசராசன் யுனிவர்சல் மார்க்சியமாக்கப் பார்க்கிறார் என்றும் குன்றம் சொல்கிறார். வகைப்படுத்திச் சொல்வதுதான் தன் நோக்கம் என்று இவர் சொன்னாலும் மேலை மார்க்சியத்துக்கு அவர் சார்பாக இருப்பதைப் புரிந்து கொள்கிறோம். மேலை மார்க்சியம் உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை தருகிறது. கீழை மார்க்சியம் உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை தருகிறது. மேலை மார்க்சியத்தின் மையம் பகை முரண்பாடு. கீழை மார்க்சியத்தின் மையம் நட்பு முரண்பாடு. அடித்தளம் மேற்கட்டு என்ற பிரச்சினையிலும் மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம் இவற்றை வேறுபடுத்தும். இந்த அம்சங்கள் குன்றத்தின் வகைப்படுத்தலில் இல்லை.  3. மார்க்சியம் அறிவியலா? மெய்யியலா?  மார்க்சியம் அறிவியல்தான் என்பது குன்றத்தின் கணிப்பு. அறிவியல் என்பது மாறாதது. அறிவியலின் அணுகுமுறை / தொழில்நுட்பம் மாறும். அதுபோல, மார்க்சியத்தின் அறிவியல் மாறாத அம்சம். ஆனால் நாட்டுக்கு நாடு அணுகுமுறை வேறுபடலாம். அணுகுமுறை வேறுபடுவதன் காரணமாக, மார்க்சியத்தை இரண்டு மூன்று என எண்ண முடியாது. இப்படிக் குன்றம் கருதுகிறார்.  மார்க்சியத்தில் அறிவியல் அம்சமும் உண்டு. மெய்யியல் அம்சமும் உண்டு என்று நாகராசன் வேறுபடுத்துகிறார். இயங்கியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதம் ஆகியவை மார்க்சியத்தின் அறிவியல். இதே மார்க்சியம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்த அம்சம் மார்க்சியத்தின் மெய்யியல். விஞ்ஞானத்துக்கு உரை இல்லை. மெய்யியலுக்கு உரை உண்டு. மார்க்சியத்துக்கு பலவகை உரைகள் சொல்லப்படுகின்றன. மார்க்சின் உரை, லெனினின் உரை, ஸ்டாலினின் உரை, மாவோ உரை என வேறுபடுத்தலாம். நாகராசனும் தனி உரை சொல்லுகிறார். இப்படி நாகராசன் கருத்தை விளக்கமுடியும். அறிவியலின் அணுகுமுறை / தொழில்நுட்பம் வேறுபடுகிறது என்பது போல, மார்க்சியமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்று சொல்லலாமா? அறிவியலின் அணுகுமுறைகள் ஏன் வேறுபடுகின்றன? அணுகுமுறையும் தொழில் நுட்பமும் ஒன்றா?  மதம், உரை காண்பதற்கு உரியது. மார்க்சியத்திற்கு தரும் பல்வகை விளக்கங்களை உரைகள் என்று சொல்லலாம். விஞ்ஞானம் மாறாதது என்பது உண்மைதானா? வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அதே வடிவில் மெய்யானதா? இயங்கியல் என்பது அறிவியலா, மெய்யியலா?  நாகராசன் மார்க்சியத்தை அறிவியல் என்றும் மெய்யியல் என்றும் கூறுவதிலுள்ள சிக்கல் தெரிகிறது. மார்க்சியத்தை திரிபுவாதமாகவோ இடதுசாரி வாதமாகவோ புரட்டுவதையும் உரை என்று சொல்லலாமா? மார்க்சியத்தின் மாறாத அம்சங்கள் என சிலவற்றைத் தொகுக்கலாம். இவற்றுக்கிடையிலான உறவுகள் என்றும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மார்க்சியத்தின் இந்த வடிவம் வேறுபடுகிறது. லெனினது மார்க்சியம்,  ஸ்டாலினது மார்க்சியம் என இந்த வடிவ வேறுபாடுகளைச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு வடிவத்தையும் அதன் அளவில் மார்க்சியம் என வைத்துக் கொண்டால் அப்புறம் மார்க்சியங்களுக்கு இடையிலான விமர்சனம் என்று எதையாவது சொல்லமுடியுமா? மாவோவை வைத்து ஸ்டாலினை விமர்சனம் செய்கிறோம். இத்தகைய விமர்சன முறை தவறானதுதானா? மார்க்சியத்தில் எந்த அம்சம் உரை காண்பதற்குரியது. இதை நாகராசன் தெளிவுபடுத்தவில்லை. இந்த அம்சம்தான் நாகராசனைப்பற்றிய விமர்சனமாக வெளிப்படுகிறது. விஞ்ஞானம் என்பதனுள்ளும் மெய்யியல் இருக்க முடியும். இயங்கியல் என்பது அடிப்படையில் மெய்காண் முறை தான். இயங்கியலின் விதிகள் விஞ்ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. வாழ்வியலிலிருந்து சமூகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மெய்யியல் என்பது அடிப்படையில் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம். வர்க்கப் போராட்டம் என்பதை விஞ்ஞானம் எனக் கொண்டால், இந்தச் சூழலில் எத்தகைய செயலை மேற்கொள்வது என்பது மெய்யியல்.  மெய்யியலை மார்க்சியத்துக்குள்ளிருந்து வெளியேற்றுவது அல்தூசர் செய்த முயற்சி. மெய்யியல், பிரமைகளைக் கொண்டது. பிரமைகளைக் களைந்து அதைக் கோட்பாடாக வடித்தெடுக்க வேண்டும். கோட்பாடு என்பது விஞ்ஞானம். இப்படிச் சொல்கிறார் அல்தூசர். எனினும் மார்க்சியத்தை அடிப்படையில் ஒரு மெய்யியல் எனத்தான் நாம் கொள்ள வேண்டும். எவ்வகை மெய்யியலினுள்ளும் விஞ்ஞானப்பார்வை, குறைந்த அளவிலோ, அல்லது அதிக அளவிலோ கலந்திருக்கக் கூடும். எத்தகைய கருத்துமுதல்வாதத்தினுள்ளும் பொருள் முதலியல் அம்சங்கள் கலந்தே இருக்கும். பொருள் முதலியல் அம்சங்களை முற்றாகக் களைந்து விடமுடியுமா? கடைசியாக இது நான் இருக்கிறேன். நான்தான் மெய் என்பதில் முடியும். (சொலிப்சிசம்) மெய்யியல் என்பது குன்றத்திற்கு மதம் எனத் தெரியலாம். ஆனால் மெய்யியல் என்பது (தத்துவம்) இதை எந்த அளவுக்கு குன்றம் புரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வில்லை. இவர்க்கு வேண்டியது விஞ்ஞானம்தான். எல்லாவற்றையும் காரணம் விளைவு என்ற அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். இதன் நுட்பங்கள் பற்றி அவர்க்கு அக்கறை இல்லை.  4. மேலை மார்க்சியம் பற்றாக்குறை :  1. மார்க்சியத்தில், மார்க்சு, லெனின், ஸ்டாலின் முதலியவர்களிடத்தில் அன்பு இல்லை என்று நாகராசன் சொல்வதாகக் குன்றம் புரிந்துகொண்டு, மக்களுக்காக பாடுபட்ட மார்க்சு முதலியவர்களிடத்தில் அன்பு இல்லையா, அறம் இல்லையா என்று கேட்கிறார். நாகராசனை குன்றம் தவறாகப் புரிந்து கொண்ட இடம் இதுதான். மார்க்சியத்தில் அன்புக்கு இடமில்லை என்பது நாராசன்வாதம். அதாவது ஒரு பொருளைப் புரிந்துகொள்ள அன்பு தேவை இல்லை. மனிதனைப் புரிந்து கொள்ள அன்பு தேவை. பகை முரண்பாட்டில் அன்புக்கு இடம் இல்லை. நட்பு முரண்பாட்டில் அன்பைத்தவிர பகைக்கு இடமில்லை. பகை முரண் என்பது மேலை மார்க்சியத்திற்குள் விஞ்ஞானத்தின் வழியே வந்தது. இந்த வரலாற்றைத்தான் பேக்கன், கிரேக்க மெய்யியல் வழியே விளக்குகிறார்.  2. ஏசுவுக்குள் செயல்பட்ட அன்பைப்பற்றி குன்றம் விரித்துரைப்பது, சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. மேலை நாட்டில் கிறித்தவத்தில் இருந்த அன்பு பற்றிப் பேசுகிறார். ஆதிக் கிறித்தவம் என்றெல்லாம் நாகராசனையே மேற்கோள் காட்டுகிறார். ரசியா சமூகத்தில் கிறித்தவம் என்று எழுந்த குரலையும் நாகராசன் வழியே சுட்டுகிறார். கிறித்துவுக்குள் அவரது தேற்றாளனாகிய ரபிக்குள் செயல்பட்ட அறம் பற்றி குறிப்பிடுகிறார். மார்க்சுக்குள் அறம் செயல்பட்டது. காண்ட்டை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றாலும் மார்க்சின் வர்க்கப் போராட்டத்திற்கு அடியில் செயல்பட்டது அற உணர்வுதான். இதை ஏற்பதில் நாகராசனுக்கு தடை எதுவுமில்லை. அல்தூசருக்குத்தான் சிக்கல். குன்றம் இங்கு அறம் பற்றியும் அன்பு பற்றியும் அழுத்தமாகவே பேசுகிறார். இந்த இடத்தில் நாகராசனோடு தானும் ஒன்றுபட்டிருப்பதை குன்றம் புரிந்து கொள்ளவில்லை. குன்றத்திற்கும், எதிர் நிறுத்தி விவாதிக்க ஒரு பகை தேவைப்படுகிறது. நிழலோடு சண்டைப் போடுகிறார். விஞ்ஞானத்திற்கும் இந்த அறத்திற்கும் அல்லது அன்பிற்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை குன்றம் சிந்தித்தாரா? விஞ்ஞானத்திற்கும் சமூக இயலுக்கும் என்ன உறவு? குன்றம் என் சிந்திக்கவில்லை? இரண்டும் தனி உலகம் இல்லையா? எந்த உலகம் நமக்கு நெருக்கமானது. கருவிகள் எதற்காக? படைப்புகள் எதற்காக? நமக்கு வாழ்க்கை எதற்காக? ஏசுவையும், நபியையும் குன்றம் மேற்கோள் காட்டும்போது, குன்றத்திற்கும் வரலாறு தேவைப்படுகிறது ஏசுவுக்கும், நபிக்கும், இன்றுள்ள நமக்கும், என்ன உறவு.  5. தேடலும் தேறலும்:  மேலை மார்க்சியத்தில் அன்பு இல்லை அறம் இல்லை என்பதால் கீழைத் தேசத்திலிருந்து நாகராசன் எடுத்துக் கொள்கிறார் என்று குன்றம் தொடங்குகிறார். இந்த அன்பு கணியன் பூங்குன்றனாரிடம், வள்ளுவரிடம், சமண பௌத்தரிடம், சைவர்களிடம் இருக்கிறது. இப்படி எடுத்துக் கொள்ளாமல், தென்கலை வைணவத்திலிருந்து எடுத்துக் கொள்கிறார். மார்க்சியத்திலிருந்து இதன் விழியை எடுத்து குருடான தென்கலை வைணவத்திற்குப் பொருத்துகிறார். மார்க்சியத்திற்கு விஷ ஊசி போடுகிறார். மார்க்சியக் கட்சிக்குள் பார்ப்பனர் செயல்படுகின்றனர். இவரும் பார்ப்பனர் . இப்படிக் குன்றம் சொல்லும்பொழுது, தனக்குச் சந்தேகம் என்கிறார். தன்னுடைய கொடூரமான எண்ணம் என்கிறார். இப்படி குன்றம் விவாதிக்கிறார்.  மார்க்சியத்தில் அன்பு இல்லை என்று நாகராசன் தொடங்கவில்லை. மார்க்சியத்திற்குள் இல்லாத அன்பை மதத்திற்குள்ளிருந்து எடுத்து மார்க்சியத்திற்கு பொருத்த வேண்டும் என்றும் நாகராசன் செயல்படவில்லை. மாவோ கூறிய நட்பு முரண்பாடு என்பதனுள் அன்பு நிறைய இருக்கிறது. மாவோவுக்குள் இத்தகைய பார்வை எங்கிருந்து வந்தது? என்ற கேள்விதான் நாகராசனையும் கீழைத் தேசப்பண்பாடு நோக்கி செல்லத் தூண்டுகிறது. கீழைத் தேசங்களை, மேலைத் தேசங்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்துவது, இங்கு தோன்றிய பலவகை மதங்கள். இப்படிப் பல மதங்கள் ஏன் தோன்றின. முரண்பாடுகள் இல்லாமல் இப்படி தோன்ற முடியுமா? இம்மாதிரி கேள்விகள் குன்றத்திற்கு இல்லை. மதம் என்றாலே, அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. மதத்திற்கு அடியிலும் வரலாறு இயங்குகிறது. இம்மாதிரிப் பார்வை, ஒரு மார்க்சியனுக்கான பார்வை. பாமரனுக்குள் செயல்படுவது பகுத்தறிவுப் பார்வை. வள்ளுவனைப் பற்றி புளகாங்கிதம் கொள்கிறார். சைவத்தைக் கூட இப்பொழுது பாராட்டுகிறார். நாகராசனுக்கு தெரிந்தது தென்கலை வைணவம். தென்கலை வைணவத்தினுள் நாகராசன் வரலாற்றின் எதிர்மரபைக் காண்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைச் சொல்கிறார். இந்த இடத்தில் தான் அன்பைப் பற்றிப் பேசுகிறார். தென்கலை வைணவத்தின் வரலாற்றுச் சூழல் பற்றி நாகராசன் சொல்லவில்லை.  நாகராசனுக்குள் குற்றம் கண்டுபிடித்து, அப்புறம் குற்றவாளியாக்கி, தண்டிக்கிறார் குன்றம். தனக்குள் கோபமும் விஷமும் உற்பத்தியாவதை தானே பார்த்துக் கொண்டிருக்கிறார். கொடூரமாக, மோசமாக தான் மாறிக் கொண்டிருப்பதையும் உணர்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பார்ப்பனர் என்கிறார். நாகராசனையும் ஆரியக் கூத்தாடி என்று சொல்கிறார். இவர் சொல்லும் வார்த்தைகள் இங்கு முக்கியமில்லை என்கிறார். தான் கொடூரமானவராக மாறுகிறார் என்பது கூட முக்கியமில்லை. வரலாற்றை குன்றம் மறுத்து விடுகிறார். மதத்திற்கு அடியில் என்ன செயல்பட்டது என்பதைப் பற்றி பார்க்க மறுக்கிறார்? வைணவத்திற்குள் செயல்பட்ட அன்பையும் தமிழகச் சூழலில், கணியனிடமும் வள்ளுவரிடமும், அவர்களின் தொடர்ச்சியாகவும் காணமுடியும். கண்ணன் கோபிகைகள் என்றெல்லாம் குன்றம் விலாசுகிறார். பார்ப்பனியத்திற்கு எதிராக இவரும் ஒரு சாடலை செய்து முடிக்கிறார். இனி குன்றம் அதிகமாகவே கத்த முடியும். ஒரு தவறிலிருந்து இன்னொன்றுக்கு என்ற முறையில் இனி குன்றம் பாய்ந்து செல்லமுடியும்.  6. அன்பு அறம் அறிவு மெய்மை :  1. நாகராசன் அன்பு அறம் அறிவு ஆகியவற்றிற்கிடையில் காணும் உறவுக்கு எதிர்த்திசையில் குன்றம் பயணம் செய்கிறார். காண்டின் ஆதாரத்தில் நாகராசன் அறிவை விஞ்ஞான அறிவு, சமுதாய அறிவு என இருவகைப்படுத்துகிறார். விஞ்ஞான அறிவு சிறுபான்மைக்குரியது. ஆகவே சிற்றறிவு. சமுதாய அறிவு, பெரும்பான்மையான மக்களுக்குரியது. அது பேரறிவு. சமுதாய அறிவு, பெறுவதற்கு அன்பு வேண்டும். அன்பு இருந்தால்தான் சமுதாய அறத்தைப் புரிந்துகொள்ள முடியும். சமுதாய அறத்தை விஞ்ஞானத்தால் புரிந்துகொள்ள முடியாது. இது நாகராசன் பார்வை .  2. குன்றம் எதிர்த் திசையில்தான் செல்கிறார். அன்பு அறிவுக்குத் தடை என்கிறார். பையனுக்கு நோகிறது என்பதால் பள்ளிக்கு செல்லாதே என்று உதாரணம் காட்டுகிறார். காரணகாரியப் பகுப்பாய்வின் மூலம்தான் சமுதாய அறிவைப் பெறுகிறோம். இது விஞ்ஞான அறிவு. இதற்கு அறிவுதான் தேவை. ஆகவே நாகராசன் சொல்வது பார்ப்பனிய அறிவு. வந்தேறிகளின் அறிவு.  3. தமிழர்களின் அறிவு பற்றி குன்றம் பெருமிதம் கொள்கிறார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்ற குறளை மேற்கோள் காட்டுகிறார். பெரியாரின் பகுத்தறிவைப் பாராட்டுகிறார். வந்தேறிகள் என்று சொல்லும்போது பலரை ஒதுக்கி விடுவது பற்றி கவலை கொள்கிறார். இப்படிச் சொல்வது நெருஞ்சி முள் போல குத்துகிறது என சொல்கிறார். இதற்காகக் குன்றத்தைப் பாராட்ட வேண்டும். தமிழர்கள் எனப் பெருமை கொள்வது குன்றத்தின் அறிவியலுக்கு பொருந்தாது. தலித்தியலாளர்களும், பெண்ணியலாளர்களும் அறிவைக் குறுக்குகின்றனர். குன்றம் இதற்காக கடிந்துகொள்கிறார்.  4. அடிப்படையான கேள்வி, விஞ்ஞானத்தைக் கொண்டு எல்லாவற்றையும் அறியமுடியுமா என்பதுதான். கருவிகளின் மூலம் செயல்படுவது விஞ்ஞானம். விவரங்கள் தொகுத்து ஆராய்வது விஞ்ஞான முறை. இதேவகை முறையை சமூகவியல் மற்றும் உளவியலுக்கும் நாம் பொருத்தலாம். நாகராசனே கூறுகிறபடி இயற்பியலில் விஞ்ஞானத்தன்மை அதிகம். உயிரியலுக்கு செல்லும்பொழுது விஞ்ஞானத் தன்மை குறைவு. சமூகவியல், மெய்யியல், அழகியல் என்று செல்லும்பொழுது விஞ்ஞானத்தன்மை மேலும் குறைகிறது. இங்குதான் பேரறிவு பற்றிப் பேசுகிறோம். இவை எல்லாவற்றையும் கறாரான விஞ்ஞானமாக்கிவிடுவது சாத்தியமில்லை. உள்ளுணர்வு, தரிசனம் என்பனவற்றை இங்கு பேசவேண்டும். கைரேகை, சோதிடம் பற்றியும் சொல்ல வேண்டும். இவ்வகைச் சிக்கலில் ஒரு பக்கச் சார்பு என்பது முடக்கடிவாதமாகும். நாகராசனை இப்படி வாதம் செய்பவர் என்றும் குன்றம் குற்றம் சாட்டுகிறார். பொறுமை, நிதானம், விட்டுக் கொடுத்தல், தியாகம் முதலியவை விஞ்ஞானத்திற்குள் வருவதில்லை. அவை, விஞ்ஞானத்திற்குள் இல்லை. இந்தச் சிக்கலை மாறிமாறிப் பேசலாம். பயனில்லை.  7. மதமும் மார்க்சியமும் :  1. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நாகராசன்கள் வடித்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் குன்றம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் ஓர் அடிப்படையான அம்சத்தை தான் அறிந்த முறையில் விளக்குகிறார். மீண்டும் இயேசுவை இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். ஆதிகால மதம், நீதியைக் கற்பித்தது என்கிறார் . நன்மை, தீமை வேறுபாடுகள் தோன்றியபோது தீமைக்கும் நன்மை செய் என்றது மதம். தீமைக்கு தண்டனை வழங்கித்தான் திருத்த வேண்டும் என்று அரசு செய்தது அறம் என்கிறார். இகம் பற்றிய மதத்தின் கருத்து, பொருள்முதல்வாதச் சார்புடையது என்கிறார். மதத்தினுள் மறுமை / பரம் என்ற கருத்தும் உண்டு. மோட்சம், நரகம், பாவம், புண்ணியம், பரலோக சாம்ராஜ்யம் என்றெல்லாம் மதங்கள் கூறின. துயரப்படுவோன் பாக்கியவான். அவன் பரலோக ராஜ்யத்தை அடைவான் என்ற கிறிஸ்துவின் கருத்தும் பாட்டாளிகள் தமக்கான பொன் உலகை அமைப்பார்கள் என்ற மார்க்சின் கருத்தும் ஒன்று எனக் கூறுகிறார். கிறித்தவத்தை இப்படி பொருள்படுத்துவதைப் போல இங்குள்ள மதங்களை நாகராசன் பொருள்படுத்தியிருந்தால் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை படைத்தவர் ஆவார் என்கிறார். அகந்தை ஒழி என்ற மாவோவின் மார்க்சியம் மாவோவைப் புதைக்கும் மார்க்சியம். மார்க்சின் மார்க்சியம் அகந்தையை வளர்ப்பது என்று நாகராசன் கூறுவது, பார்ப்பனியம்தான் என்கிறார். தன் சந்தேகம் உறுதிப்பட்டிருக்கிறது என்கிறார்.  2. குன்றம் கூடியவரை சுயமாகச் சிந்திப்பவர் என்பதற்கு இந்தப் பகுதி சான்று. மதத்திற்குள் இகம் /பரம் என்பதை பொருள்முதல்வாதத்தோடு கருத்து முதல்வாதத்தோடு தொடர்புபடுத்துகிறார். மதத்தினுள் நன்மையும் காண்கிறார். தீமையும் காண்கிறார். மார்க்சியர்க்கும் மதத்திற்கும் உறவுபடுத்துகிறார். மதத்தின் நோக்கம் நீதி புகட்டுவது என்கிறார். அரசின் சட்டம் நல்லதுதான் என்கிறார். துயரப்படுபவனுக்கு பரலோக ராச்சியம் உண்டு என்ற கருத்து மார்க்சுக்குள் ஆக்கம் பெற்றது என்கிறார். இக்கருத்துக்களையெல்லாம் அ. மார்க்சு, தி. க. சி. முதலிய திறனாய்வாளர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் ஏற்கிறார்கள் என்று நாம் காண வேண்டும். மதத்தின் தோற்றம் மற்றும் வரலாற்றை குன்றம் தவறாகத்தான் கணிக்கிறார். அரசோடு மதம் ஒத்துச் செயல்பட்டது என்று சரியாகவே சொல்கிறார்.  மார்க்சியத்தின் ஆழத்தில் கிறித்தவம் செயல்பட்டது என்கிறார் அல்லது தன் காலக் கிறித்தவத்தை விமர்சனம் செய்வதன் மூலம் கிறித்துவின் சாரமான கருத்தை மார்க்ஸ் தனக்குள் கொண்டிருந்தார் என்றும் இதைச் சொல்லலாம். மார்க்ஸ், யூதர். யூதச் சமயத்தோடும் இதைத் தொடர்புபடுத்த வேண்டும். அகந்தையை ஒழி என்பதில் குளறுபடியான மதச் சார்பைத்தான் குன்றம் காண்கிறார். மார்க்சிடம் அகந்தை உண்டு என்று குன்றம் சொல்வதை நாகராசன் ஏற்கக் கூடும். மதம் பற்றிய குன்றத்தின் ஆய்வு விஞ்ஞான வகைப்பட்ட ஆய்வா என்றும் நாம் கேட்கலாம். இங்கு குன்றம் மதத்திற்கு உரை சொல்கிறார். விஞ்ஞானம் என்பதற்குக்கூட காரணகாரிய ஆய்வு என்று குன்றம் பொருள் சொல்வதை விஞ்ஞானத்திற்கு உரை சொல்வதாகத்தான் நாம் காணமுடியும். நாகராசனைக் குன்றம் மறுப்பதைப் போலத் தோன்றினாலும் நாகராசனோடும் ஒத்துச் செல்கிறார். நாகராசன் சொல்லும் சில உண்மைகளை அவரது அணுகுமுறையில் அல்லாமல் குன்றம் தன் அணுகுமுறையில் காண்கிறார். மதம் பற்றிய சிக்கல் விரிவானது. இங்கு பலரும் தம் கருத்துக்களை முன்வைத்து விவாதிக்க முடியும்.  8. அறிவியல் தொழில்நுட்பம் :  1. அறிவியல் தொழில்நுட்ப ஆக்கங்கள் முதலாளிகளுக்கு உரியவையாக இருக்க முடியாது. இவை பாட்டாளிகளுக்கு உரியவையாக வேண்டும் என்கிறார் குன்றம். எப்படி ஆக / ஆக்க முடியும் என்பதை குன்றம் சொல்லவில்லை. வன்முறைப் புரட்சியை அவர் ஏற்கமாட்டார்.  2. முதலாளியத் தொழில் நுட்பங்கள் இன்று பாட்டாளிக்குரியனவாக மாறி வருகின்றன என்பதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்கிறார். பாலிலிருந்து வெண்ணெய் எடுப்பது, இரண்டு நிமிடங்களில் நடக்கிறது. வீட்டில் கிரைண்டர் முதலிய பொருட்கள். இந்தச் சாதனைகளை அவர் எவ்வளவு தூரம் தொடர முடியும் என்பதைச் சொல்லவில்லை. விமானப் பயணம், தொலைத் தொடர்பு, பார்லிமெண்டில் இடம் பெறுதல், ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பதவி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆதல், அணுமின் திட்டம், பெரிய அணைக்கட்டு என்றெல்லாம் இவர் பேசியிருந்தால் உண்மை இவருக்கே வெட்டவெளிச்சமாகும்.  3. அடிப்படைத் தொழில் வளர்ச்சியை முதலாளி வர்க்கம் ஊக்குவிக்காமல், நுகர் பொருட்களை உற்பத்தி செய்து, பாட்டாளி மக்களைக் கெடுக்கிறது என்ற விமர்சனத்தை ஏற்கிறார். முதலாளிதான் இதற்குக் காரணம். இதை மாற்ற வேண்டும் என்கிறார். வில்லை நோக்க வேண்டாம் என்கிறார். நவீன அறிவியல் தொழில் நுட்பத்தினுள் முதலாளியமும் ஏகாதிபத்தியமும் அமர்ந்துள்ளதை இவர் ஏற்க மாட்டார். கனரகத் தொழில், உயிரித் தொழில்நுட்பம், கணினி, அணு மின் திட்டம் முதலியவற்றினுள் முதலாளி பத்திரமாக அமர்ந்துள்ளான். அதுபோல பசுமைப்புரட்சி , வெண்மை மற்றும் நீலப்புரட்சி இவற்றின் உள் நோக்கங்களை இவர் ஏற்கமாட்டார்.  4. மார்க்சிய சமனியம் நம் கொள்கை என்கிறார் பாராட்டலாம்.  5. நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் முதலிய சீர்கேடுகளை நவீன அறிவியல்தான் தீர்க்க வேண்டும் என்கிறார். சில அம்சங்களில் தீர்க்க முடியும். ஏகாதிபத்தியத்தை வைத்துக்கொண்டு எப்படி தீர்க்கமுடியும்? குன்றத்திடம் வழி இல்லை. ஆவேசமாக, சற்று ஆர்ப்பாட்டமாகத்தான் பேசுகிறார். போலி மார்க்சியர்களை இவர் ஈர்த்துக் கொள்ளமுடியும். அறிவியல் தொழில் நுட்பத்தோடு இவர் தொடர்பு கொண்டிருந்தவர். ஆகவேதான் உறுதியோடு பேசமுடியும் என்று நம்புகிறார்.  6. நமக்கு உள்ள ஒரு பிரச்சினை, ஏகாதிபத்தியத்தை ஒழித்து, தொழில்முறை, விஞ்ஞானம் முதலியவற்றை மக்களுக்கானதாக்கி, இயற்கையை மீட்கும் வரை ஏகாதிபத்தியம் நம்மை விட்டு வைக்குமா, அதுவரை இயற்கை இருக்குமா? எத்தகைய இயக்கம் கொண்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்பதுதான் நமக்குள்ள பிரச்சனை. குன்றம் எதிர்த்திசையில்தான் செல்கிறார். உற்பத்தி வடிவத்திற்கும் முதலாளியத்திற்கும் உள்ள தொடர்பை இவர் காணவில்லை என்பதுதான் அடிப்படைக் குறை. விஞ்ஞானம் என்பதை கேள்விக்குட்படுத்தக் கூடாது என்பது இவரது அடிப்படைக் கருத்து.  9. பார்வைக் கோணங்கள் :  1. பார்வைக் கோணங்கள் மூன்று என்று சொல்லி, தன்னிலிருந்து பார்த்தல், பிறரிலிருந்து பார்த்தல், பொதுவிலிருந்து பார்த்தல் என்று சொல்கிறார் குன்றம். நாகராசனின் பார்வை, தன்னிலிருந்து பார்க்கிற வைணவப் பார்வை என்கிறார். ஜி.எஸ். ஆரை மேற்கோள் காட்டுகிறார். மார்க்சின் பார்வை பொதுவிலிருந்து பார்த்தல் என்கிறார்.  2. தன்னிலிருந்து பார்த்தல், பொதுவிலிருந்து பார்த்தலிருந்து முற்றாக விலகிவிட முடியாது. தமிழன் வைணவன் என்பது, தன்னிலிருந்தும் பொதுவிலிருந்தும் பார்த்தல்தான். மார்க்சின் பார்வை உலக அளவிலான தொழிலாளர் நிலையிலிருந்து பார்த்தல். இதிலும் பொதுத்தன்மை குறைவுதான். இதைக் கடந்த பார்வையும் மார்க்சுக்குள் உண்டு. அது வரலாற்றுப் பார்வை. குன்றம் நாகராசனை வைணவ மார்க்சிய ரென முடிவு கட்டிவிடுகிறார். இன்னும் சைவ மார்க்சியம், அத்வைத மார்க்சியம் என்றெல்லாம் பிறரை கேலி செய்கிறார்.  10. புதிய ரட்சக வர்க்கங்கள் : 1. தொழிலாளிகள் புரட்சிகர உணர்வை இழந்துவிட்டார்கள். நடுத்தர வர்க்கத்தினர் முதலாளிய சுகங்களுக்கு, தம்மை இழந்துவிட்டார்கள். புதிய காலனியம் வலுவடைந்து வருகிறது. புரட்சிகர சக்தி இல்லை . இப்படி நாகராசன் சொல்வதைக் குன்றம் ஏற்றுக் கொள்கிறார்.  2. நாகராசன், அ. மார்க்சு, கருணாமனோகரன் ஆகியவர்கள் இன்றைய சமூகத்தின் பகை முரண்களுக்கு எதிராக, தலித், தலித்துகள், பிற்பட்ட சமூகத்தினர். பெண்கள் முசுலீம்கள் ஆகியவர்களை, புதிய ரட்சகர்களாகக் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் கிடைக்கலாம். முகலீம்கள் கிடைக்க மாட்டார்கள். நாகராசனின் வைணவத் தூண்டிலில், திராவிட இயக்கத்திலிருந்து விடுபட்ட செத்த மீன்களும், முதிய வைணவர்களும் கிடைக்கலாம். அ. மார்க்சு, கருணாமனோகரன் ஆகியவர்களுக்கு யார் கிடைப்பார்கள் என சொல்லவில்லை.  3. நாகராசனை முற்றாக எதிர்ப்பவரைப் போல குன்றம் தோன்றினாலும் நாகராசனிடமிருந்து சில அழுத்தமான அம்சங்களை குன்றம் ஏற்கிறார். தன்னுடைய சமூகக் கோட்பாடும் மார்க்சிய குடியரசு என்கிறார். மார்க்சியத்தின் அடிப்படைகளில் எந்த அம்சங்களை இவர் விமர்சனம் செய்வார் எனத் தெரியவில்லை. வர்க்கப் போராட்டம் என்பதை இவர் ஏற்கலாம். முதலாளியிடமிருந்து உலகை மீட்க வேண்டும் என்பதையும் ஏற்கிறார். இந்த அமைதியான புரட்சி நடந்து வருகிறது என்கிறார். எங்காவது மோதல் நிகழுமா என்பது பற்றி இவர் சிந்திக்கவில்லை. புதிய ரட்சகர்கள் என்று சொல்லும்பொழுதே இவர் கேலி செய்கிறாரா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பாட்டாளி வர்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இவர் சொல்லலாம். மதத்திலிருந்து மார்க்சியத்திற்கு ஒத்த அம்சங்களைக் கண்டுபிடிக்கலாம் என்பதும் இவர் கருத்து. முழு அளவில் விஞ்ஞானம் அல்லது விஞ்ஞானப் பார்வை தேவை என்கிறார். எந்த அளவில் சாத்தியம் என்பதை இவர் சிந்திக்க வேண்டும். பாமரனின் பார்வை என்று இவர் சொன்னாலும் இவர் சிலவற்றில் அழுத்தமாக இருக்கிறார். அறிவியல், தொழில்நுட்பம் என்பதைப் பொறுத்தவரை, தன்னை இவர் அறிஞர் என்றுதான் நம்புகிறார். மதம் பற்றி தனக்கு ஆய்வறிவு உண்டு என்பதும் இவர் கருத்தாக இருக்கமுடியும். நிகழ்காலம் பற்றி மிகுந்த அக்கறையோடு இவர் விவாதிக்கிறார். பாமரன் என்று இவர் சொல்லிக் கொண்டாலும் பாமரத்தனமானவராக இவர் இல்லை. நாகராசனுக்குள் வைணவத்தைக் கண்டுபிடித்து, அந்த அம்சத்தை முதன்மைப்படுத்தி ஆராய்வதுதான் இவரது அடிப்படைத் தவறு. மார்க்சியத்தின் இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், அடித்தளம் மேல் கட்டு என்ற விவரங்கள் இவரிடம் இல்லை . வரலாற்றைக் கூட இவர் மறுக்கிறார். மார்க்சியத்தை இவர் ஆழமாகக் கற்கத்தான் வேண்டும். திறனாய்வாளர்கள் இதற்கான தூண்டுதலை இவருக்குத் தரவேண்டும். இன்றைய நிலையில் தரமாட்டார்கள்.  11. இரண்டு வர்க்கங்கள் :  1. குன்றம் தனக்கான மார்க்கிய வரையறைகளை உருவாக்குகிறார். முதலாளி, தொழிலாளி என்ற எதிர்நிலை வர்க்கங்களை குன்றம் ஏற்கவில்லை. இந்தியாவில் தாழ்த்துவோர், தாழ்த்தப்படுவோர் என்பதுதான் எதிர்நிலைகள் என்கிறார். தாழ்த்தப்பட்டோர் என்பதிலும் இரு பிரிவுகளைக் காண்கிறார். தலித்துகள் இந்தியாவின் அடிப்படை வர்க்கம். இவர்கள் தலைமையில் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் திரளவேண்டும்.  2. இதற்காகதான் 80-ல் அமைத்த ஐக்கியப் பேரணி, முன்னணி ஆகியவை பற்றிச் சொல்கிறார். இவை செயல்படவில்லை என்று சொல்கிறார்.  3. மார்க்சிடம் வர்க்கங்கள் என்ற வரையறை இருந்தபோதிலும் தொடக்க முதலே The Oppresser, the oppressed ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற முறையிலும் சமூகத்தைப் பிரிவுபடுத்திப் பார்க்கிற போக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் என்பதை மாவோ மக்கள் என்கிறார். ஒடுக்குவோர் மக்களின் எதிரிகள் என்கிறார். கறாரான வர்க்க வரையறை முழு அளவில் வளர்ச்சி பெற்ற முதலாளிய சமூகத்திற்குப் பொருந்தும். இந்திய சமூகத்திற்குப் பொருந்தாது. மார்க்சியர் இது பற்றி ஆய்வு செய்யவில்லை. குன்றம் செய்யும் பிரிவில், தலித் மக்கள்தான் தலைமை தாங்குவர் என்கிறார். தலித் மக்களிடம் உடைமை இல்லை என்பது உண்மைதான். ஆனால் இயந்திர தொழிலாளரிடம் தொடர்ந்து சேருகிற சமூக அனுபவம் உலகப் பார்வை இயக்கங்கள் கட்சி அமைப்பு ஆகியவை தலித் மக்களிடம் உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆகவே தலித் தலைமையும் சாத்தியம் இல்லை. தலித் பாட்டாளிக்கு ஒருவேளை இது சாத்தியப்படலாம். மார்க்சியர் இதுபற்றிச் சிந்திக்கவில்லை.  12. முன்னுரையில் அ.மார்க்ஸ் கருத்துகள் :  1. கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாதைப் பிறழ்ச்சியைக் காட்டிலும் நாகராசன் செயல் விஷ ஊசி என்கிறார்.  2. அறிவியல் தொழில்நுட்பம் தீங்கு செய்யவில்லை. இதை கையில் எடுத்துள்ள நாசகார சக்திகள் தான் தீங்கு செய்தன என்பதை ஏற்கிறார்.  3. மதம், அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றிய குன்றத்தின் கருத்துகளை மறுக்கிறார். 4. நாகராசனைக் காட்டிலும் பாமரனின் பார்வைதான் மார்க்சியத்திற்கு நெருக்கமாகப்படுகிறது. நேசமாகப் பார்க்கிறது என்கிறார்.    5. மாவோவோடு நாகராசனை இரண்டொரு இடங்களில் குன்றம் உறவுபடுத்துவதை மறுக்கிறார்.    6. இன்றைய சமூக மாற்றங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் காரணம் என்று குன்றம் கூறுவதை மறுக்கிறார். 7. தலித், பிற்பட்டவர்கள், பெண்கள், சிறுபான்மையோர் இணைவுக்காக நாகராசன் சொல்லும் நியாயம் ஒரு யுக்தி மட்டுமே, அ.மார்க்ஸ், கருணா கூறும் காரணங்கள் ஒருங்கிணைந்தவை.  8. நாகராசன் மலத்தை கலக்கிறார். கிணற்றுக்குள் விழுகிறார், குன்றம் முக்கி எடுப்பது நியாயம்தான் என்கிறார்.  என் கருத்து :  1. குன்றம் நடத்துவது ஒரு நாடகம். நாகராசனைக் கடுமையாக சாடுவது போல் நாடகம் நடத்துகிறார். விஷ ஊசி, ஆர்யக்கூத்து, பிள்ளை விளையாட்டு என்றெல்லாம் குன்றம் கூறுவதை அ. மார்க்ஸ் உண்மை எனவே எடுத்துக் கொள்கிறார். குன்றம் அ. மார்க்சை ஏமாற்றிவிட்டார்.  2. அறிவியல் தொழில்நுட்பம் பற்றி உலக அளவில் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வந்துள்ளன. அ. மார்க்சுக்குள்ளிருக்கும் அடைப்பை யாரால் நீக்க முடியும்? நாகராசனைக் காட்டிலும் பாமரன், மார்க்சியத்துக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான் அ. மார்க்சின் உண்மையான கருத்து என்றால், அ. மார்க்சு, மார்க்சியத்திலிருந்து தொலைவில் தான் இருக்கிறார். வைணவ எதிர்ப்புத்தான் அவர் கண்ணை மறைக்கிறது.  3. மதம் அரசு பற்றி குன்றத்திற்கு அ. மார்க்சு கொஞ்சம் கற்றுத் தந்திருக்கலாம். பிறகாவது அதைச் செய்யட்டும்.  4. தலித் முதலியவர்கள் ஒன்றிணைப்பை நாகராசன் சிறப்பாகத்தான் செய்திருக்கிறார். இங்கும் நாகராசன் பார்வை மறைக்கப்படுகிறது.  5. குன்றத்திற்கு அ.மா. ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அ.மா.வின் கை பெரிய கை.  6. குன்றம் தமிழர் மெய்யியல் எனப் பேசுவது பற்றி அ.மா. குறிப்பிட்டுவிட்டு தொடரவில்லை.  13. குன்றத்தின் என் உரை : 1. நாகராசனை விளையாட்டுப்பிள்ளை எனக் குறிப்பிட்டு பாரதக் கண்ணனாக்கி பார்க்கிறார் குன்றம். காரமடையில் நாமதாரிகள் போடும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அவர்கள் எவ்வளவு சீரழிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார். இப்படி மனிதர்களைச் சீரழித்திருக்கிற வைணவத்தை நாகராசன் கொண்டாடுகிறார் என்ற விமர்சனம்.   2. உயர்ந்த தத்துவங்கள் ஒரு காலத்தில் சீரழிந்து விடுகின்றன. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவில் பௌத்த மடங்கள் இவை சிறந்த உதாரணங்கள். நாமதாரிகளை நாகராசன் ஏற்பதில்லை. தீராத விளையாட்டு பிள்ளை என்ற வாசகம் குன்றத்துக்குப் பொருத்தலாம்.  முடிப்புரை :  1. குன்றம் தனது நூலை திறனாய்வு நூல் என்று சொல்வதைவிட மறுப்பு நூல் என்று சொல்வது பொருந்தும் என்கிறார். இந்த நூல் பற்றிய திறனாய்வின் மூலம் மார்க்சியத்தை மேலெடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.  2. இதற்கான கூறுகள் குன்றத்திடம் இருப்பதாக அவர் நம்புகிறார். இந்தியாவில் இருவகை எதிர்நிலைகள். தலித் தலைமையில் பிற மக்கள் இணைய வேண்டும் என்ற சில கருத்துகள் தவிர வேறு கருத்துகள் இவரிடம் இல்லை. மார்க்சிய சமனீய அரசு என்கிறார். நுகர்வியத்தை மறுக்கிறார். அறிவியல் தொழில் நுட்பங்கள் மக்களின் படைப்புகள் என்கிறார். இப்படியும் சில கருத்துகள் நாகராசனை இவர் முற்றாக மறுத்துவிட்டதாக நான் கருதவில்லை. திறனாய்வு என்ற முறையில் இரண்டொரு அம்சங்கள் இவரிடம் உள்ளன. மற்றபடி இவர் மார்க்சியர்தானா? என்ற கேள்விக்கும் இடம் உண்டு.  மார்க்சியத்தின் எதிர்காலம் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியவர்களின் “பொதுவுடமை கொள்கை அறிக்கை” வெளிவந்து 150 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர்கள் கனவு கண்ட பொதுமைச் சமுதாயம் படைப்பதற்கான பொருளியல் கட்டமைப்பை வரலாற்றில் இனி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் கொள்கை அறிக்கை வெளிப்படுத்தியது. தனி உடமை, அரசு அதிகாரம், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க முடியும். வறுமை, நோய் நொடிகள், வஞ்சகம், போட்டி பொறாமைகள், ஏற்றத்தாழ்வுகள், போர்கள் இல்லாத உலகளாவிய சமுதாயம் அண்மைக் காலத்தில் வர இருக்கிறது என்ற நம்பிக்கையையும் இவர்கள் உலகத்துக்கு வழங்கினார்கள்.  பாரீஸ் கம்யூன் உட்பட இடைக் காலத்தில் எத்தனையோ அனுபவங்கள் ஏற்பட்டன. 1917-ல் நடைபெற்ற இரஷ்யப் புரட்சி, மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியவர்களின் கனவுகளை நடைமுறைக்கு கொண்டுவந்தது. கிழக்கு ஐரோப்பிய அனுபவங்கள், சீனப்புரட்சி, கியூபா, வியட்நாம் வெற்றி முதலியவை வரலாற்றில் ஒரு புதிய சமுதாயத்திற்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்தன. சமதர்மமா? முதலாளியமா? இவற்றுக்கிடையில் வெற்றி இனி யாருக்கு என் பதில் கூட கேள்விக்கு இடமில்லை. வல்லரசுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் பலவும் சமதர்மம் குறித்துப் பேசின.  1980 களின் இறுதியிலும், 1990 களின் தொடக்கத்திலும் என்ன நேர்ந்தது. சமதர்ம அமைப்பு தகர்ந்தது. வல்லரசுகள் இனி என்னவும் செய்ய முடியும். சமதர்மம் இனி சாத்தியமில்லை. மூலதனத்திற்குத்தான் இனி உலகம் சொந்தம். நவீன அறிவியலும், தொழில்நுட்பங்களும் இல்லாமல் ஒரு தேசம் இனி வாழ முடியாது. மனிதர்களின் உழைப்புத் திறன் என்பதற்கு இனி முக்கியத்துவம் இல்லை. வேதிப் பொருட்களும், தொழில் நுட்பங்களும் இனி உற்பத்தியில் முதன்மையானவை. கணிணியும், இணையமும் இனி எல்லாவற்றையும் செய்ய முடியும். தொழில் நுட்பங்களின் முதன்மைக் கூறாக தகவல்களின் தொகுப்பு மாறி இருக்கிறது. உபரி மதிப்பு என்று பேசுவதற்கும் இடம் இல்லை. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. கல்வி, மருத்துவம் முதலியவற்றையும் இனி விலை கொடுத்துத்தான் வாங்கவேண்டும். இரஷ்ய மாதிரியைப் பின்பற்றி ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலிய கண்டங்களிலுள்ள தேசங்களில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இனி தனியாரின் ஆளுகைக்குச் செல்லவேண்டும். இராணுவம், காவல்துறை என்ற அளவில் அரசுகள் தங்கள் பணிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களுக்கு இனி தேவையில்லை. பத்திரங்களை வாங்கும் முறையில் நடுத்தர வர்க்கம் இனி முதலாளியத்தோடு கூட்டு சேர்ந்து கொள்ளமுடியும். முதலாளியம் தவிர உலகிற்கு இனி வழியில்லை . மார்க்சியம் காலாவதியாகிவிட்டது.  இத்தகைய பேச்சுக்களும், செயல்முறைகளும் தீவிரப்பட்டு வருகின்ற இன்றைய உலகச் சூழலில், முன்னர் நிலவிய சமதர்ம சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது. எப்படி இவை தகர்ந்தன என்பது குறித்து நாம் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ஒன்றியத்திலும் நிறுவப்பட்டது சமதர்மச் சமுதாயம்தானா? என்று கேட்க வேண்டியிருக்கிறது. மேற்கத்திய சமூகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொழிற் பெருக்கம், இராணுவப் பெருக்கம் முதலியவற்றுக்கு சோவியத் ஒன்றியம் முதன்மை தந்தது. அமெரிக்கா, பிரிட்டன் முதலிய வல்லரசுகள் உலக அளவில் சுரண்டித் தம் தேசங்களை வலிமைப்படுத்திக் கொள்ள முடியும். சோவியத் ஒன்றியத்துக்கு இது சாத்தியமில்லை. ஆகவே உள்நாட்டில்தான் சுரண்டலை அதிகரித்தாக வேண்டும் வேலை நிறுத்தம் முதலியவற்றில் ஈடுபடும் தொழிற்சங்க உரிமை தொழிலாளர்களுக்கு இல்லை. மருத்துவம், கல்வி முதலிய வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உரிமைப்படுத்திய நிலையில் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தில் இவர்களுக்குப் பங்கு தேவையில்லை. மக்கள் நாயகத்திற்கு இடம் இல்லை. கட்சிக்கே முதன்மை புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் எல்லோரும் இருந்தாக வேண்டும். எதிர்ப்புக் குரல் எங்கு எழுந்தாலும் அவை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. வன்முறையோடு கூட்டுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. உழைப்பு முகாம்களும் உண்டாயின். கட்சிக்குள்ளும், அரசமைப்பிலும் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.  உழைப்பில் மக்களுக்கு ஆர்வம் இல்லை. தொழில்துறை முதலியவற்றில் வளர்ச்சி இல்லை. ஊழல் பெருச்சாளிகள் எல்லாவற்றையும் கவர்ந்து கொண்ட நிலையில், மக்கள் மீது ஒடுக்குமுறைகளும் தீவிரப்பட்ட நிலையில் சமதர்மச் சமுதாயம் என்று சொல்லப்பட்ட அதிகார அமைப்பு தனக்குள் இனித் தாக்குப் பிடிக்க முடியாது. இவை அகக் காரணிகள். புறக்காரணிகளும் சேர்ந்து கொண்ட நிலையில் “சமதர்மம்” தகர்ந்தது. சீனா முதலிய அனுபவங்கள் சற்று வேறு மாதிரியானவை. இவை குறித்து விரிவாகப் பேசுவதற்கு இங்கு இடம் இல்லை.  சோவியத் ஒன்றியம் முதலியவற்றில் இப்படி எல்லாம் நேர்ந்திருக்கத்தான் வேண்டுமா? என்றும் இப்பொழுது சிந்திக்கிறோம். சோவியத் முன்மாதிரிதான் ஒரே வகையான முன்மாதிரியா? இராணுவப் பெருக்கம் இல்லாமல் ஒரு சமூகம் வாழமுடியாதா? உற்பத்திச் சக்திகளை பெருக்குவதன் மூலம் எல்லோருக்குமான சமத்துவ வாழ்வு உடனடியாக வந்து விடுமா? இயந்திரப் பெருக்கங்கள் முதலியவை இயற்கை வளங்களை எப்படி எல்லாம் தின்று தீர்க்கின்றன. சமூகத்தின் மேல் மட்டத்திலுள்ள 15/20 சதம் மக்களுக்காக பெரும்பாலான உழைக்கும் மக்கள் கொடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகத்தான் வேண்டுமா? சமதர்மத்தின் தீண்டல்கூட இல்லாத பல தேசங்களை சோவியத் ஒன்றியம் தன் ஆதிக்கத்துக்குட்படுத்தியதும் தேசிய இனங்களை ஒடுக்கியதும் நியாயந்தானா?  தொழிற்பெருக்கம் என்ற முறையில் இயற்கை வளங்களைத் தொடர்ந்து அழித்தது. தொழிற்சாலைக் கழிவுகளாலும், அணுக்கதிர் வீச்சுக்களாலும், நிலங்களும், நீர் நிலைகளும் கடுமையாக பாதித்தன. நுகர்வு வெறி ஏறிய மேற்கத்திய நாகரிகம் இவர்களுக்கும் முன் மாதிரியாயிற்று. தம் தேச மக்களையே எதிரிகளின் உளவாளிகள் என்று கருதி கேவலப்படுத்துவதும், ஒடுக்குவதும் ஒரு பெரும் கொடுமை. இவ்வாறெல்லாம் அங்கு நேர்ந்திருக்க வேண்டியதில்லை. இப்படி நேர்ந்ததற்கான காரணங்கள் என்று சிலவற்றை அதிகாரிகள் சொல்லக்கூடும், தலைவர்கள் சொல்லக்கூடும். இவர்களுக்கெல்லாம் அதிகாரமும், வளமான வாழ்க்கையும், ஊழலும் இல்லாமல் முடியாது.  எளிய வாழ்க்கை மக்களுக்குப் போதும். சுரண்டப்படுவதோ மனித மாண்பை நாசமாக்கும். உழைப்பும் பகிர்வும் மனித வாழ்வின் உன்னதங்கள். அதிகாரம் முதலியவற்றுக்கு இடம் கொடுத்து மனிதர்களை அந்நியமாக்க வேண்டியதில்லை . மனித வாழ்வுக்குச் சுதந்திரம் தேவை. 15/20 சதம் பேர்களின் நலன்களுக்காக மக்கள் தம் வாழ்வை, சுதந்திரத்தை இழக்க வேண்டியதில்லை. இவ்வாறெல்லாம் இன்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. மக்கள் சீனத்திலும், கியூபாவிலும் நடைபெற்ற சில சோதனைகள் குறித்து நமக்கு அக்கறை இருந்திருக்க வேண்டும். அரசுகள் என்றாவது உதிரும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மக்கள் நாயகத்திற்கு உரிமைப்படுத்தும் பொழுது அரசு தானாகவே உதிரும்.  திரும்பவும் இன்றைய நிலவரங்கள் குறித்து சிந்திப்போம். சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியா முதலிய நாடுகளுக்குள் நுழைந்துவரும் அந்நிய நிறுவனங்கள், மற்றும் இவற்றோடு கைகோர்த்துக் கொள்கிற சீர்கெட்ட முதலாளிய நிர்வாகங்கள், ஒவ்வொரு தேசத்திலும் உள்ள பெரும்பாலான உழைக்கும் மக்களின் நலன்களை நிறைவேற்றுமா? நடுத்தர மக்களை பலவகைகளிலும் வசப்படுத்திக் கொண்ட இந்த நிறுவனங்கள் அவர்களைக் கொண்டே மக்கள் நலன்களை தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீர், நிலம், காடு, கடல் முதலிய இயற்கை ஆதாரங்களை இழந்து விட்ட நிலையில் அல்லது ஆதிக்கவாதிகள் இவற்றைத் தொடர்ந்து நாசம் செய்து வரும் நிலையில் இந்த மக்கள் என்ன செய்வார்கள்?  ஏற்றத்தாழ்வுகளும், வறுமை முதலிய கொடுமைகளும் இப்பொழுது அதிகரித்து வருகின்றன. தரமான கல்வியையோ, நல்ல மருத்துவத்தையோ இந்த மக்கள் இனிப் பெறமுடியாது. அரசு அதிகாரிகள், முதலாளிகள் தம் வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்ள எல்லாவற்றையும் தொடர்ந்து செய்கிறார்கள். இருபது சதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எண்பது சதம் மக்கள் தெற்கு நாடுகள் என்று சொல்லப்படுகின்ற நாடுகள் பலவற்றிலும் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பழங்குடிகளும், பெண்களும், தலித் மக்களும் கூடுதலான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். இந்த வாழ்வை எவ்வளவு காலத்திற்குச் சகித்துக் கொள்ளமுடியும்.  வல்லரசு முதலிய ஆதிக்க சக்திகள் இயற்கையை தொடர்ந்து நாசப்படுத்துவதன் விளைவுகளை இன்று எல்லோரும் அனுபவிக்கிறோம். அணுக்கழிவுகள் இரசாயன நஞ்சுகள் முதலியவற்றிலிருந்து இனி யாரும் தப்பமுடியாது. மலை உச்சியில் மாளிகைகள், பெரு நகரங்களில் நவீன மருத்துவமனைகள் அமைத்துக் கொண்டாலும் இவை எவ்வளவு காலத்திற்கு இந்த ஆதிக்கவாதிகளைக் காப்பாற்றும். பெரிய அணைக்கட்டுக்கள், பெரும் தொழிற்சாலைகள் மின் உற்பத்தி நிலையங்கள் முதலியவற்றின் விளைவாக காற்று சூடேறுகிறது. கடல்கள் கொந்தளிக்கின்றன. பருவங்கள் மாறி பெரும் புயல்கள் வீசத் தொடங்கிவிட்டன. நில நடுக்கங்கள் எங்கும் இனி ஏற்படக் கூடும். உணவுப் பொருள் முதலியவற்றில் ஏறிய நஞ்சுகள் உடலுக்குள்ளும் புகுந்து புற்றுநோய்கள் முதலியவற்றை அதிகரிக்கின்றன. எய்ட்ஸ் முதலிய புதியவகை கொடும் நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. அறிவியலாளர்கள் இப்பொழுதே அச்சம் தெரிவிக்கின்றனர். உலக நாகரிகம் தன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆதிக்கவாதிகள் நடுத்தர மக்களில் அறிவாளிகளைக் கொண்டு உலகை வசப்படுத்தும் திட்டம் அவர்களின் முகத்திலேயே கேள்விக்குரியாய் மாறி உள்ளது.  மான்சாண்டோ மலட்டு விதைகள் விளைச்சலை அதிகரிப்பது என்பது பொய்யாகி வருகிறது. பெரிய அணைக்கட்டுக்கள் மட்டுமல்லாமல் பெரிய அரசமைப்பும் பெரிய நிறுவனங்களும் இனி மக்கள் நலன்களுக்குரிய சேவைகளைச் செய்ய முடியாது. செயற்கை முறையில் இனி சர்க்கரை தயாரிக்கலாம். காப்பிக் கொட்டைகள் தயாரிக்கலாம். உறுப்புக்களை மாற்றி வைக்கலாம். திசுக்களைக் கொண்டு மாபெரும் உற்பத்திகளைச் செய்யலாம். மரபணுக்களின் உள் மர்மங்களும் செயல்முறைகளும் பெருமளவில் தெரிந்துவிட்ட நிலையில் இனி நோய்கள் இல்லாமல் செய்யலாம். அறிவாளிகளை உற்பத்திச் செய்யலாம். மலட்டுத் தொழிலாளிகளையும், இராணுவத்திற்கான வீரர்களையும் தயாரித்துக் கொள்ளலாம். எந்த இனத்தை வைத்துக் கொள்ளலாம், யாரை அழிக்கலாம் என இனித் திட்டமிடலாம். உபரி மதிப்பென்று பேசுவதற்கு இனி வாய்ப்பில்லை என்பதும் உண்மையாகலாம்.  இவற்றின் விளைவாக உலகம் என்ன ஆகும். இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்த உலகம் தாக்குப் பிடிக்கும். உலகத்திற்கே அழிவு நேரும் நிலையில், ஆதிக்கவாதிகள் மற்றும் அறிவாளிகள் எந்த கிரகத்திற்கு, எத்தனை பேர் தப்பிச் செல்லமுடியும். போர்கள் இல்லாத உலகத்தை இவர்கள் நமக்குத் தருவார்களா? இந்த ஆதிக்கவாதிகள் அதிகாரம் உட்பட எல்லாவற்றையும் மக்களோடு பகிர்ந்து கொள்வார்களா? மக்கள் தொகை அதிகரிக்கிறது என்றும் மானியங்கள் அதிகரிக்கின்றன என்றும் ஓயாமல் சொல்லும் இவர்கள் மக்களை என்ன செய்வார்கள். இவர்களின் ஆதிக்கத்தில் இனி உலகம் இருப்பதற்கில்லை. நாம் ஏதாவது முடிவு செய்தாக வேண்டும். இந்த நிலையில்தான் மீண்டும் சமதர்மத்திற்கு திரும்ப வேண்டியிருக்கிறது.  மனித மாண்புகளை நாம் எவ்வாறு இழக்க முடியும். வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் பெற்று வந்த வளர்ச்சியை எவ்வாறு இழந்து விட முடியும். இயந்திரங்கள் முதலியவற்றுக்குள் சென்றது யாருடைய சக்தி. அறிவாளிகள் கலைஞர்கள் முதலியவர்களின் அறிவுத்திறன், கலைத்திறன் முதலியவற்றை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள். அனைவருக்கும் வாழ்விற்காதாரமான இயற்கை வளங்களை ஒரு சிறுபான்மையினர் தம் வசப்படுத்திக் கொள்வதற்கும், நாசப்படுத்துவதற்கும் இவர்களுக்கு எங்கிருந்து உரிமை கிடைத்தது. நவீன உற்பத்திகள் என்ற முறையில் இவர்கள் வசப்படுத்திக் கொள்ளும் கொழுத்த இலாபங்கள் முதலியவை எங்கிருந்து கிடைக்கின்றன. கணிணி முதலியவற்றிற்குத் தன் அறிவாண்மையை மாற்றிக் கொண்ட இந்த மலடுகள் எந்த மனித வாழ்வை அனுபவிக்க முடியும். இவர்களைப் பொருத்தவரை காடுகள் அவசியமில்லை. பெண்களுக்குத் தேவையில்லை, குழந்தைகளும் வேண்டாம், மலர்களும் வேண்டாம், எல்லாவற்றையும் செயற்கையாக உற்பத்தி செய்து கொள்ளலாம். மனிதர்களுக்கு மனம் தேவையில்லை, கலை தேவையில்லை, சுதந்திரம் தேவையில்லை. இப்படி ஒரு கொடிய வாழ்க்கையை இவர்களும் கூட எப்படி சகித்துக் கொள்வார்கள்.  தேசிய இனங்கள் இப்பொழுது விடுதலை கேட்கின்றன. மனித உரிமை பற்றி உலகெங்கும் உரத்தக் குரல்கள் எழுகின்றன. பசுமை இயக்கங்கள் எங்கும் பரவி வருகின்றன. பெண்கள் விடுதலை கோருகிறார்கள். கலகங்கள் தொடர்கின்றன. அரசின் பயங்கரவாதத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அடிமைகளை உற்பத்தி செய்யும் ஆண்டவர்கள் என்றும் நிம்மதியாக வாழமுடியாது. ஆதிக்கங்கள் தமக்கு எதிரான கலகங்களை எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்கும். போர்க் குற்றவாளிகள் என்ற முறையில் பெரும் தலைவர்கள் விசாரணைக்கு உள்ளாகிறார்கள். பெரிய அமைப்புகள் இனி எந்த வடிவத்திலும் தேவை இல்லை. இயற்கை நமக்கு வேண்டும். எளிய வாழ்க்கை போதும். அந்நியர்களுக்கு மீண்டும் நாம் அடிமையாக வேண்டியதில்லை. உலக நாகரிகத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும். எல்லாவற்றையும் ஆதிக்கவாதிகளுக்கு இழந்துவிட்டு நாம் வறியவர்களாக அழிய வேண்டியதில்லை.  இப்பொழுது மீண்டும் நாம் சொல்லுகிறோம். சமதர்மம் தவிர நமக்கு வாழ்க்கை நெறி வேறு இல்லை. மார்க்சியம் தான் நம்மைக் காப்பாற்றும். புதிய அடிப்படைகளோடு மார்க்சியம் இனி மலர வேண்டும். உழைக்கும் மக்களுக்குத்தான் இனி உலகம் சொந்தம் என்பதை ஆதிக்கச் சக்திகளின் முகத்திற்கெதிராக, மார்க்சும், எங்கல்சும் செய்ததுபோல நாமும் பிரகடனம் செய்கிறோம்.  மார்க்சியத்திற்கு அழிவு இல்லை 1. மார்க்சியம் உலகத்திற்கு அறிமுகமாகி 150 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இடைக்காலத்தில் பாரீஸ் கம்யூன், இரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கியூபா, வியட்நாம் என்று எத்தனையோ வகைப்பட்ட வரலாற்று அனுபவங்கள் நேர்ந்துள்ளன. அரசியல் நடைமுறை என்பது மட்டுமல்லாமல் தத்துவம், கலை இலக்கியம், கலாச்சாரம், வரலாறு என்ற முறையிலும் மார்க்சியத்தின் அடிப்படையில் ஏராளமான ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்றுள்ளன. மார்க்சியத்தின் அடிப்படைகள் என்று அறியப்பட்டனவற்றினுள்ளும் கேள்விகள் எழுந்துள்ளன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இனியும் மார்க்சியத்தின் அடிப்படைகளுள் ஒன்றாக இருப்பதற்கில்லை என்ற முறையில் அனுபவங்கள் நேர்ந்துள்ளன. அடித்தளம், மேல் கட்டுமானம் என்பனவற்றில் எப்பொழுதும் அடித்தளத்திற்கே அழுத்தம் என்பது தொடக்கம் முதலே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. வரலாற்றுக் கட்டங்கள் தோறும் கலாச்சாரம் மாறிவரும் என்பதற்கு மேலும், வரலாற்றுக் காலம் முழுவதும் தொடரும் கலாச்சாரக் கூறுகள் குறித்த சிந்தனை ஏற்பட்டுள்ளது. முதலாளியத்தை உள்வாங்கியதாக மார்க்சியம் இருக்க முடியாது என்ற புரிதல் மேலும் மேலும் அழுத்தம் பெறுகிறது.  மார்க்சியம் குறித்த புதிய வகையான புரிதல் இன்று நமக்குத் தேவைப்படுகிறது. சோவியத் யூனியன் தகர்வை அடுத்து சோசலிசம் குறித்து நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முதலாளிய / ஏகாதிபத்திய நாடுகளின் பொருளியல் முதலியவற்றை நகல் எடுக்கும் முயற்சியை சோசலிசம் என்று சொல்ல முடியாது. சோவியத் யூனியனில் தகர்ந்தது முதலாளியத்தை உள்வாங்கிக்கொண்ட சோசலிசமே அன்றி மார்க்சியம் அல்ல. மாபெரும் இராணுவம், மாபெரும் தொழிற்கூடங்கள் மற்றும் அணைக்கட்டுகள், மாபெரும் அரசுக் கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் மீது கடுமையான சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் திணிக்க வேண்டி இருந்தது. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டன. உழைப்பாளர் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உளவுத்துறை அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக இருந்தது. கட்சியதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. கட்சிக்குள்ளும் தனி நபரின் இறுதி அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட இயலாது. கட்சியின் முன்னணித் தோழர்கள் ஒழிக்கப்பட்டனர். ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டியிருக்கிறது என்பதற்காக இத்தனைப் பெரிய சர்வாதிகாரத்தை ஒரு தேசத்தால் தாங்க இயலாது.    2. இந்த சர்வாதிகாரத்தை இறுதியாகக் களைந்தவர் கோர்பச்சேவ். ஏற்கெனவே நிலவிய பொருளியல் மற்றும் அரசியல் கட்டமைப்பை இனியும் தொடர்வதற்கில்லை என்ற நிலையில் தான் கோர்பச்சேவ் அன்று நிலவிய கட்டமைப்பைக் கலைத்தார். அன்றைய நிலையில் பொருளியல் வளர்ச்சிக்கே இடமில்லாமல் முழு அளவில் தேங்கி விட்டது. உழவர் பண்ணைகளில் மின்சாரம் இல்லை. டிராக்டருக்கு உதிரி உறுப்புகள் இல்லை. எங்கும் ஊழல் மயம். ஆகவே தான் எல்லாவற்றையும் திறந்து போட்டார். முன்னர் நடைபெற்ற கொடுங்கோன்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. தொழிற்சாலை, நிர்வாகம் முதலியவற்றில் மறுசீரமைப்பை ஏற்படுத்தினார்.  இவற்றோடு கோர்பச்சேவ் நின்றுவிடவில்லை. அணு ஆயுதம், ஏவுகணை ஆகியவற்றில் அமெரிக்காவை எதிர்பார்க்காமல் தானே முன்வந்து குறைப்பைச் செய்தார். சோசலிசம் நிலவுவதாகச் சொல்லப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காக அந்த நாடுகளில் நிறுத்தப்பட்ட சோவியத் இராணுவம் இனி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சர்வாதிகார அரசுகள் சடசடவெனச் சரிந்தன.  சோவியத் யூனியன் இனியும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அந்நிய நாடுகளின் மூலதனம் இல்லாமல் ஒரு மாதம்கூடத் தாக்குப்பிடிக்க இயலாது என்ற நிலையில், இலண்டனில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு கோர்பச்சேவ் சென்றார். செல்வதற்கு முன்னர் அவருடைய நிதியமைச்சர் ஓர் ஆலோசனை வழங்கினார். சோவியத் யூனியனுக்குள்ளேயே கட்சி அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கள்ளத்தனமாகக் குவித்து வைத்திருக்கிற ஏராளமான செல்வத்தை சோவியத் அரசால் பறிமுதல் செய்ய முடியுமென்றால் அன்னியர்களின் மூலதனம் இங்கு அறவே தேவைப்படாது என்றார். தேசத்தின் அதிபர் என்றாலும் இதை அவரால் செய்ய முடியாது. செய்ய முயன்றால் ஒருநாள் கூட அவர் அரசு நிற்காது. ஆகவே இலண்டன் மாநாட்டிற்குச் சென்று மண்டியிட்ட கோர்பச்சேவ் வெறுங்கையோடு திரும்பினார்.  3. சோவியத் யூனியனில் அதுவரை நிலவிய அரசியல், பொருளியல் கட்டமைப்பை சோசலிசம் என்று கூறமுடியாது. எல்லோருக்கும் கல்வி, மருத்துவம், குழந்தைகளுக்கு வசதிகள் என்ற சில கூறுகளைத் தவிர ஒட்டுமொத்தமான கட்டுமானத்தை சோசலிசம் என்று கூறுவதற்கில்லை. அதிகார வர்க்கத்தின் போக்குக் குறித்து தொடக்க காலத்திலேயே லெனின் கவலைப்பட்டார். அதிகார வர்க்கத்தை அடக்க முடியாமல் ஸ்டாலினும் திணறினார். முதலாளிய வளர்ச்சி முற்றுப் பெறாத நிலையில் சோசலிசத்தைச் செயல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்த புரிதல் லெனினுக்கு இருந்தது. லெனினால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து முடிக்க முனைந்தார். விளைவுகள் கடுமையாக இருந்தன. பிறிதொரு சமயம் பிரஸ்னேவிற் எழுதிய கடிதம் ஒன்றில் சல்சனிட்சன் இவ்வாறு குறிப்பிட்டார். “சோவியத் யூனியனில் 15 சதம் மக்களுக்கு சோசலிசத்தை உருவாக்குவதற்காக நாம் காடுகளை அழித்தோம். சுரங்கங்கள் தோண்டி கனிமங்களை எடுத்தோம்; பெட்ரோலியத்தை எடுத்தோம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு காடுகளும் கனிமங்களும் இருக்கும்? அனைவருக்கும் சோசலிசம் என்பது என்றாவது, எப்படியாவது சாத்தியப்படுமா?”  தொடக்கக் காலத்தில் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார். “பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாது”. பெருந் தொழில்கள் மட்டுமல்ல; அரசு, தொழில் முதலிய எத்தகைய பெரும் கட்டமைப்போடும் சோசலிசம் ஒத்துப் போகாது. பெரும் கட்டமைப்பை உருவாக்க மக்களை, இயற்கையைப் பலியிட நேரும். இப்படிப் பலியிட்டு 15 சதம் பேருக்கு என உருவாக்கப்படுவது சோசலிசமாகவும் இருக்க முடியாது.  எல்ட்சின் தன் நினைவுக் குறிப்புகளில் எழுதியவாறு சோவியத் யூனியனில் பல்வேறு மாநிலங்களிலுமுள்ள கட்சித் தலைவர்கள் மாஸ்கோவில் வந்து தங்குவதற்காக மாஸ்கோவில் மட்டும் 4500 மாளிகைகளை வைத்திருந்தார்கள். பெரும் முதலாளிகளும் கனவுகாண இயலாத அளவிற்கு எல்லா வகை வசதிகளையும் கொண்டவை இந்த மாளிகைகள். இதுதான் உண்மை நிலை என்றால் 85 சதம் மக்களுக்கு எப்போது சோசலிசம் வரும்? சோசலிசம் என்பது நுகர்வியத்தின் பெருக்கமா? முதலாளியத்திற்கு இது பொருந்தும். சோசலிசத்திற்கு இது எப்படிப் பொருந்தும்? வாழ்க்கை வசதிகளின் பெருக்கத்திற்காக அதாவது கறியும் மீனும் மதுவும் எனத்தின்று உடல் கொழுப்பை வளர்ப்பதற்காக இயற்கையை அழிப்பது எவ்வளவு காலத்திற்கு சாத்தியப்படும்? இது குறித்து எங்கெல்ஸ் விடுத்த எச்சரிக்கையை மார்க்சியர் எவரும் புறக்கணித்துவிட முடியாது.  4. அனுபவச் செறிவு மிக்க மாவோவின் சில கூற்றுகளை இங்கு நினைவுகூறலாம். உற்பத்திச் சக்திகளின் பெருக்கம் முதலாளியத்திற்கே வழிவிடும். உற்பத்திச் சக்திகளைக் காட்டிலும் உற்பத்தி உறவுகளுக்குத்தான் நாம் அழுத்தம் தரவேண்டும். பகை முரண்பாடுகளைப் போலவே நட்பு முரண்பாடுகளும் முக்கியத்துவம் உடையவை. முதலாளியமா? சோசலிசமா? எது இறுதியில் வெற்றி பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நூறு மலர்கள் மலரட்டும். கலகம் செய்வது, நியாயமானது. கலாச்சாரப் புரட்சி ஒரு தடவை அல்ல ஓர் ஆயிரம் முறை நடத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியும் தவறு செய்யும். கட்சி செய்யும் தவறுகளை இறுதியில் மக்கள்தான் களைய வேண்டும். தவறு செய்யும் தலைமைப் பீடத்தை மக்கள் தகர்த்தெறிய வேண்டும். மார்க்சியமும் பிற்போக்கான தத்துவம் என்று சொல்வதற்கான காலமும் வரும் வரவேண்டும். வரலாறு மார்க்சியத்தையும் கடந்து செல்லும். இந்தக் கூற்றுகளோடு மக்கள் சீனத்தில் மளமளவென உருவாகி பின்னர் மாவோவுக்குப் பிறகு கலைக்கப்பட்ட கம்யூன்களையும் இங்கு நினைவு கொள்வோம்.  5. இவற்றோடு கிராம்சி முதலிய மார்க்சிய அறிஞர்கள் முன்வைத்த கோட்பாடுகளையும் ஆய்வுகளையும் நெஞ்சில் நிறுத்துவோம். கியூபா அனுபவங்கள் மிக முக்கியமானவை. இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதிய வரையறைகளில் நாம் கற்க வேண்டியிருக்கும்.  வரலாறு குறித்த மார்க்சியப் பார்வையின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புறக்கணிக்க இயலாது. இயங்கியலை மேலும் ஆழமாகக் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வர்க்கப் போராட்டம் என்பது மார்க்சியத்தின் மிக முக்கியமான ஆதாரக் கோட்பாடு. பொருளா? கருத்தா? எது முதல் என்ற ஆய்வில் பொருள் முதல்வாதம் அடங்குவதில்லை. பொருளும் கருத்தும் ஒன்றையொன்று ஊடுருவக் கூடியவை. மதம் மக்களுக்கு அபின் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மதம் குறித்த மார்க்சிய ஆய்வு முற்றுப் பெறுவதில்லை. வர்க்கப் போராட்டங்களின் வழியே வர்க்கப் போராட்டத்தைக் கடந்து செல்வதுதான் மார்க்சியம்.  வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவது என்பது முதலாளியமேயன்றி சோசலிசமாகாது. எளிமையான வாழ்க்கை முறைதான் எல்லோருக்கும் சாத்தியம். இந்த எளிய வாழ்க்கை முறையின் மூலம்தான் இயற்கையைக் காப்பாற்றி வைக்க முடியும் அமைப்புகளில்லாமல் இயலாது என்ற போதிலும் அமைப்புகளுக்குள் அதிகாரம் குவியக்கூடாது. முதலாளியத்தோடு ஒத்துழைக்கும் தொழிற்சங்க அமைப்புகள் மூலம் மார்க்சியத்தை முன்னெடுத்துச் செல்ல இயலாது.  மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியவர்களோடுதான் உலகிற்கு மார்க்சியம் அறிமுகமானது என்றாலும் வரலாற்றிற்குள் மார்க்சியத்தின் வேர்கள் ஆழமாக ஓடியிருக்கின்றன. எந்த நெடுங்கால மரபிற்குள்ளும் மார்க்சியத்தின் இழைகளைக் காணமுடியும். எந்தவகை ஆதிக்கத்திற்கும் எதிரானது மார்க்சியம், மனித விடுதலைதான் மார்க்சியத்தின் இலக்கு. ஆதிக்கம் என்பது ஒரு கட்டமைப்பு. இதற்குள் அகப்பட்டுள்ள மனிதன் தனக்குள்ளும் அந்நியமானவன். ஆதிக்கக் கட்டமைப்பிற்குள் இருந்து இவனை விடுவித்து மனிதனாக்குவது மார்க்சியம். தனியுடைமையும் அதிகாரமும் மனிதனைச் சுருக்கும், திரிக்கும்; அழிக்கும். இவற்றின் ஆதிக்கங்களிலிருந்து மனிதன் விடுதலை பெற வேண்டும். ஆணுக்குப் பெண் அடிமை என்பதும், உயர்சாதிக்காரனுக்கு இன்னொருவன் அடிமை என்பதும் உடைமைச் சமூகத்தின் கூறுகள்.  இப்படியெல்லாம் மார்க்சியம் குறித்த புதிய புரிதல்கள் இன்று சாத்தியம். இந்த வகை மார்க்சியத்திற்கு அழிவு இல்லை. மாவோவின் நெறியில் கற்பது இத்தகைய மார்க்சியம்.  சாதி வேண்டாம்; மதம் வேண்டாம், சடங்குகள் வேண்டாம் என்று கூறிய தமிழ்ச் சித்தர்கள் நெறியில் மார்க்சியத்தை நாம் பயில முடியும். இந்த சித்தர்கள் உடைமைக்கும் அதிகாரத்திற்கும் எதிரானவர்கள். இந்த சித்தர் மரபை வள்ளுவருக்குள்ளும் கணியன் பூங்குன்றனுக்குள்ளும் காணமுடியும். வாழையடி வாழை எனத் தொடர்ந்து வரும் இந்த சித்தர் மரபில் பெரியாரையும் வைத்துக் காணமுடியும்.  தமிழ்ச் சூழலில் பெரியாரியமும் மார்க்சியமும் கைகோத்துக் கொள்ள முடியும். பெரியார் வழியே மார்க்சியத்தையும், மார்க்சியத்தின் வழியே பெரியாரியத்தையும் கற்பதுதான் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்விற்கு, விடுதலைக்கு வழிவகுக்கும்.  தேசிய இனங்களின் தன்னுரிமை மற்றும் விடுதலை என்பது மார்க்சியத்திற்கு ஒத்த கோட்பாடுதான். தமிழன் தன்னை உலகில் நிலைநிறுத்திக் கொள்ள மார்க்சியம் இல்லாமல் முடியாது; பெரியாரியம் இல்லாமல் முடியாது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் உலக அளவில் கரண்டலையும் ஒடுக்கு முறையையும் உச்ச அளவில் திணிக்கிற முதலாளியத்திற்கு மரண அடி கொடுக்கவல்லது மார்க்சியம் தவிர வேறில்லை.  நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் முதலாளியத்தின் படைப்புகள் என்று உரிமை கொண்டாடுவது ஒரு வெற்று மாயை. வரலாற்றின் வழியே கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் விளைச்சல்தான் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள். இவற்றை மூலதனம் வசப்படுத்திக் கொண்டது என்பதனால் மூலதனத்திற்கு இவை உரிமையாகி விட முடியாது. எல்லாவற்றையும் தோற்றுவித்தவன் மனிதன். எத்தனை ஆயிரம் ஆண்டுகளின் வாழ்வும் வளர்ச்சியும் இந்த மனிதனைப் படைத்துள்ளன? இவனுக்கு இந்த உலகம் சொந்தம். இந்த மனித வரலாற்றிற்குள்ளிருந்துதான் மார்க்சியத்தை நாம் கண்டறிகிறோம். மார்க்சியத்தையும் மனிதனையும் வேறு பிரித்து அறிய முடியாது. இத்தகைய மார்க்சியத்திற்கு அழிவு இல்லை. முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியத்தில் இருந்து மனித விடுதலையை உள்ளடக்கிய மார்க்சியத்தைக் கண்டெடுப்பது நம் கடமை .  பிற்சேர்க்கை :  மார்க்சியமும் அறவியலும் (சயின்ஸ் அண்ட் மொராலிட்டி என்ற மாஸ்கோ வெளியிட்ட நூலில் இருந்து தொகுக்கப்பட்ட சில கருத்துரைகள்) 1. அறநெறி குறித்த சிக்கலை ஆராய்வதற்கு சமூகம், வரலாறு முதலியவை குறித்த அறிவியல் ஆய்வுகள் தேவை என்பதை இந்த நூல் தொடர்ந்து வற்புறுத்துகிறது. அறிவியல் என்ற துறை வேறு, அறவியல் வேறு என்று சிலர் கருதுவது இவர்கள் மறுக்கிறார்கள். அறிவியல் ஆய்வில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிற அற இயல் சமூகத்திற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். சமூக வரலாற்றின் ஒரு கட்டத்தில் வர்க்க உணர்வு தோன்றுகிறது. சமூக உணர்வைத் தனக்குள் வரித்துக் கொள்ளும் மனிதன் தான் தனக்கென தனித்தன்மை மற்றும் ஆளுமையைப் பெறுகிறான். வர்க்க உணர்வு பெற்ற மனிதன் தான் சமூக மாற்றத்திற்காக போராடுகிறான். போராட்டம் என்பது வாழ்வின் ஒரு நியதி. சமதர்மத்தை சாதிப்பதற்காக தந்தை இழந்தும் இவன் போராடுகிறான். புரட்சி என்பது சமூக உணர்வின் உயர்மட்டச் சிந்தனை மற்றும் செயல்முறை. சமத்துவம் முழு அளவில் நிறைவு பெறும் சமூகச் சூழலில், அறிவியல் என்பது தன் தனித்தன்மையை இழந்து இல்லாமல் போகிறது. சமூகம் மற்றும் வரலாற்றுச் சூழலிலிருந்து பிரித்து அறநெறிகளை உபதேசிப்பவர்கள் மார்க்ஸ் கடுமையாக சாடினார். இத்தகைய உபதேசங்கள் வெற்றுரைகள். சமூகத்தை அறிவியல் முறையில் ஆய்வதன் மூலமே மனிதன் உண்மைகளைப் பெறுகிறான். உண்மை குறித்த மனிதனின் தேட்டம் இடையறவு இல்லாமல் நடைபெற வேண்டும். சமூகம் குறித்த உண்மைகள் சார்ந்துதான் அறவியல் குறித்து நாம் பேச வேண்டும். சமதர்மம் அல்லது கம்யூனிசம் குறித்த சிந்தனைகள் முதலியவர்களுக்கு முன்பே வரலாற்றுக் காலம் முழுவதிலும் இருந்து வந்ததையும் இந்த நூல் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். லெனின் கூறியபடி சமதர்மத்தை சாதிக்கும் முறையில் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் செயல்முறைகளை வகுத்தது மார்க்சியம். 2. ஒரு நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியாகிய முடிவுரைக்கு பதிலாக என்ற பகுதியிலிருந்து கருத்துக்களைக் கீழே தொகுக்கிறோம் அறவியல் என்பது மனித நேயம், மனிதனின் பொறுப்புணர்வு மற்றும் சமூக வளர்ச்சி என்ற மூன்றின் ஆதாரத்தில் அமைகிறது என்கிறார் கட்டுரையாளர். பொறுப்புணர்வு என்பது சமூகம் பற்றிய ஆய்வை வற்புறுத்துகிறது. மனித நேயம் என்பது மனித ஆளுமைக்கு மரியாதை தருகிறது. எல்லா மனிதர்களுக்கிடையில் சமத்துவம் தேவை என்பதை வற்புறுத்துகிறது. படைப்புத்திறனும் தன் உணர்வும் மனிதனுக்கு உண்டு என்கிறது. கூடவே சுதந்திரத்திற்கான தேட்டம் என்பது இதனுள்ளார்ந்த குணம் என்றும் கூறுகிறது. மனிதனின் தேவைகளை இவை அனைத்திலும் முன் நிபந்தனையாகக் கொள்கிறது மனிதநேயம். மனிதநேயம் என்பது இல்லாமல் அற உணர்வு குறித்துப் பேசுவதில் பயனில்லை என்கிறார் கட்டுரையாளர். குறிப்பிட்ட வரலாறு மற்றும் சமூகச் சூழலில் வைத்துத்தான் மனிதநேயம் என்பது குறித்து நாம் பேசவும் முடியும். எல்லா மனிதர்களும் சூழலோடு வேர் கொண்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் சூழலை மாற்றும் படைப்புத்திறன் உடையவர்கள். தனிமனிதன் என்னதான் படைப்புத்திறன் மிகுந்தவனாக இருந்த போதிலும் சமூகத்தோடு ஒத்துச் செயல்படுவதன் மூலமே தனது சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் சாதிக்க முடியும். இது அவனது பொறுப்புணர்வு. சமூகம் பற்றிய இடையறாத புரிதலை மேற்கொள்வதும் இவனது பொறுப்பாகும். சூழலின் கைதியாக இருப்பவன் அல்லன் மனிதன். சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களில் இவன் பங்கு பெறுகிறான். வாழ்வின் பொருள் என்ன என்பதனுள் இரண்டறக் கலந்திருப்பது அறநெறி. அசலான அற உணர்வு என்பதைச் சமூகம் குறித்த அறிவியல் ஆய்வு மற்றும் செயல்பாடுகளிலிருந்து பிரித்துப் பேசமுடியாது. (All Authentic Morality) என்ற சொல்லை இங்கு கட்டுரையாளர் பயன்படுத்துகிறார். இதைப்போலவே போலி அறவியல் என்பதிலிருந்து அசல் அறவியலைப் பிரிக்கும் முறையிலும் அசல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.  3. கான்டின் அறவியல் குறித்து ஆராயும் கட்டுரையின் ஒரு பகுதி Faith And Morality என்ற தலைப்பில் உள்ளது Faith என்பது சமய நம்பிக்கை. விசுவாசம் என்று இதை மொழிபெயர்க்கலாம். இக்கட்டுரையிலேயே hope என்ற சொல்லும் இடம் பெறுகிறது. இதை எதிர்பார்ப்பென்றோ, நம்பிக்கை என்றோ குறிப்பிடலாம்.  கான்டின் கருத்தியல் தொகுப்பில் அறிவை மறுப்பதாகிய விசுவாசத்திற்கு இடம் இல்லை. கடவுள் நம்பிக்கையை கான்ட்  எதிர்க்கிறார். விசுவாசத்தின் அனைத்து வடிவங்களையும் கான்ட் ஆராய்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்வில் நிச்சயமின்மை என்பதனை மறுக்கும் முறையில் கான்ட் எல்லாவற்றையும் ஆராய்கிறார். இப்படி ஆராய்வதன் விளைவாக இறை இயலுக்கு எதிராகச் செயல்படுகிறார். சமயச் சார்பு இல்லாதவர்களின் மூடநம்பிக்கைகளையும் இவ்வகையில் மறுக்கிறார். நாத்திக வாதம் என்பதை கான்ட் கடுமையாகச் சாடுகிறார். சமயம் சார்ந்த உலகப்பார்வையைக் களைந்தெறிவதில் கான்ட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சமயத்தை அழித்தொழிப்பதில் கான்ட்டின் நிலைப்பாட்டை அவர் சமய எதிர்ப்பாளராக இருந்து செய்தார் என்பதை காட்டிலும் சமயத்திற்கு உள்ளிருந்தே, அதன் சார்பாக இருந்து செய்தார் என்று தான் கூற முடியும் சமய உணர்வு என்பது மனிதனின் அழிவுக்கு வழி செய்யாது என்பதில் அழுத்தமான கருத்து கொண்டவர் கான்ட். எனினும் கடவுள் என்பதை அவர் மெய்ப்பிக்கவே முயன்றார். மனித சுதந்திரம், மனித மாண்பு ஆகியவற்றை கடவுள் மறுப்பதில்லை என்றும் கருதினார்.சில தனி மனிதர்களின் தீர்க்கதரிசனத்தின் போது, சமய வெறி ஏறியவர்களின் கூற்றுக்களின்போது தெரிவிக்கப்படும் வெளிப்பாடுகள் வழியே தொகுக்கப்படும் விசுவாசத்தை கான்ட் ஏற்கவில்லை. புனிதர் மூடர்கள் என்பது இவர்களை குறித்து பயன்படுத்திய வாசகம். சில தெரிவு செய்யப்பட்ட மேலான மனிதர்களின் கூற்றுகளை நம்பச் சொல்கிறது. விசுவாசம் மனிதனின் தவிர்க்க இயலாத கடமை உணர்வு என்பதிலிருந்து விசுவாசம் அதை விலக்குகிறது. தனக்குள் இருந்து விசுவாசம் என்பதை முழுமையாகக் கான்ட் வெளியேற்றினார் என்று சொல்வதற்கில்லை.தனது படைப்புகளில் அடிப்படையான சில கேள்விகளை கான்ட் எழுப்பினார். அறிதலைப் பொறுத்தவரை எனக்கு எது சத்தியம்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய எதிர்கால நம்பிக்கைகளை செயல்படுத்துவதற்கு எத்தகைய துணிவை நான் பெற வேண்டும்? இத்தகைய மூன்று அடிப்படையான கேள்விகளை கான்ட் கான்ட் எழுப்பினார்.விசுவாசம் என்பதை தனக்குள் இருந்து முற்றாக வெளியேற்றி இருந்தார் என்றால் கான்ட் இன்னும் துணிவோடு பெற்றிருக்க முடியும். எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை என்பது ஒருவருடைய உளவியல் சார்ந்தது, நம்பிக்கை சார்ந்தது. சமூகவியல் குறித்த ஆய்விலிருந்து கான்டின் எதிர்பார்ப்புகள் வெளிப்படவில்லை. 4. புற உலகின் மீது செயல்படுவதன் மூலம் தான் மனிதன் தன் புலன்களை வளர்த்துக் கொள்கிறான். இயற்கையின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். கருவிகளைக் கொண்டு இயற்கையின் மீது செயல்படும் மனிதன், தன் மீதே செயல்படவும் செய்கிறான். இத்தகைய செயல்பாட்டுக்கு எல்லை எதுவும் இல்லை. மனிதன் தனக்குள் எல்லையற்றவன். பிரபஞ்ச அளவில் தனக்குள் விரிவு காண்பவன். இவை மனிதனின் உள்ளுறைகள். குறிப்பிட்ட எந்த ஒரு சூழலிலும் மனிதன் வரையரைகள் கொண்டவனாக எல்லைகளுக்குப் படுபவனாகத்தான் இருக்கிறான். அவனது உள்ளுறைகளில் இன்னொன்று நல்லது / நன்மை என்று கூறலாம். இது அவனுக்கான இலக்கு. வரலாற்று நிகழ்வின் எல்லைகள் மற்றும் கட்டுப்பாடுகளோடுதான் மனிதன் இயங்குகிறான். தனது வரையரைகளுக்கும், தனது எல்லையற்ற தன்மைகளுக்கும் இடையிலான போராட்டத்தில் மனிதன் இருக்கிறான். இதைத்தான் வரலாறு என்று குறிப்பிடுகிறோம். மார்க்சின் கருத்துப்படி மனிதன் ஒரு பிராணி / உயிரி அவனது இனச்சாரம் என்பது (Genetic Essence) என்பது அவனது உயிரியலின் பகுதி அன்று.  வரலாற்றின் பொருளியல் மற்றும் ஆன்மீகக் கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளும் முறையில் மனிதன் தனக்கான ஆளுமையைப் பெறவேண்டும். குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களின் போது சமயம் முதலியவற்றின் வடிவத்தின் வழியே மனிதன் தனது இனச்சாரத்தை வெளிப்படுத்துகிறான். மத்திய ஐரோப்பாவில் மனிதன் கடவுள் என்ற வடிவத்தின் வழியாகத் தன் பிரபஞ்சம் அளாவிய சாரத்தோடு உரையாடினான். சமயவகை அன்னியமாதல் என்ற தலைகீழான வடிவத்தில் தான் இந்த உறவாடல் நடைபெற்றது. இந்த முறையில் தான் பிற எல்லா மனிதர்களோடும் சமத்துவம் உடையவனாகத் தன்னை அவன் கருதினான். கடவுளுக்கு முன்னர் தான் ஒரு துரும்பு, அற்பம் என்று தன்னைக் கருதிக் கொண்டான். தன் புலனின்பங்களைத் துறந்தான். ஒரு கிறிஸ்துவனுடைய முதன்மையான பண்புகள் இவை. கடவுளை இவ்வாறு அவன் தனக்குள் பெற்றான். இதன் காரணமாகவே கிறித்துவத்திற்குள் வெளியில் இருப்பவர்களைத் தன்னைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் என்று கருதினான். தான் கடவுளுக்கு அடிமை.  இத்தகைய மனிதன் தான் தனக்குள் சுதந்திரமானவன் எல்லையற்றதை எதிர்காலத்தில் சாதிப்பவன் நிகழ்கால வரலாற்றுச் சூழலுக்குக் கட்டுப்பட்டவன். பிற சுதந்திரமான மனிதர்களோடு இணைந்து தொடர்ச்சியாகச் செயல்படுவதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை இவன் சாதிக்க வல்லவன். அதிகளவுக்கு இவன் செயல்படும் வகையில் பிரபஞ்ச அளவிலான மனிதாக இவன் மாறி வருகிறான். இதன் மூலம் தன் சுயத்தை அவன் பெறுகிறான். சமூக இயக்கத்தைத் தூண்டுகிறான்.  வரலாற்றினுள் குறிப்பிட்ட சூழலில் செயல்படுகிற, நிபந்தனையோடு கூடிய நெறிகளை ஒழுக்க நெறி என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அன்னியமான மனிதன் என்ற முறையில் சமூகம் அவனுக்குள் முன்வைக்கிற நெறிகள் இவை. ஒழுக்க நெறி குறித்து மார்க்சின் எதிர்மறை அணுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். புறநிலைத்தேவைகளுக்கு ஒத்த முறையில் தனிமனிதச் செயல்பாடுகளை ஒழுக்க நெறி என்று மார்க்ஸ் கருதினார். இதன் காரணமாக தனிமனிதன் என்பவன் சுதந்திரம் அற்றவனாக, பகுதி மனிதனாக இருக்கிறான். இந்தச் சிக்கல் குறித்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியவர்களின் வரையறை கூடிய சில கூற்றுக்களை இங்கு பார்க்கலாம்.  கம்யூனிஸ்டுகள் உபதேசம் செய்வதில்லை. கம்யூனிஸ்டுகளின் தோற்றத்தோடு ஒழுக்க நெறியின் அடிப்படைகள் தகர்கின்றன. மூலதனத்தில் பொருளியல் ஆய்வை முதன்மையாக எடுத்துக் கொண்ட மார்க்ஸ். பிறவற்றின் ஆய்வுக்கு இங்கு அவசியம் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஒழுக்க நெறியை உபதேசிப்பதைத் தீவிரப்படுத்தும்போக்கு எதைக் காட்டுகிறது என்பதற்கு மார்க்சின் பதில் இவ்வாறு அமைகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும், சமூகத்திலுள்ள பல்வேறு குழுக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தீவிரப்படுத்துவதைத்தான் இந்த போக்கு வெளிப்படுத்துகிறது. இந்தக் குழுக்கள் தான் நிலவும் சமூக உறவுகளை என்றும் உள்ளவை மற்றும் உலகளாவியவை என்று புனிதப்படுத்துகின்றனர். மரபு வழிவந்த ஒழுக்க நெறிகள் புதிய சூழலில் அர்த்தம் அற்றவை ஆகின்றன. இந்த சமூகக் குழுக்களின் தனி நலன்களை இவர்கள் ஒட்டு மொத்தமான சமூகத்திற்கான நலன்கள் என்று கூறுகின்றனர். இம்முறையில் மாயைகளையும், வஞ்சனைகளையும் இவர்கள் பரப்புகின்றனர். வாழ்க்கை இவர்களின் பொய்மைகளை வெளிப்படுத்துகிறது. தன் கருத்துக்களை இவர்கள் தீவிரப்படுத்தும் பொழுது, இவர்களின் பேச்சில் புனிதங்கள் கூடிவிடுகின்றன. இவர்கள் தமக்குத் தாமே இயல்பாகவும் இல்லை. இவர்கள் தமக்குள் முரண்பட்டவர்களாகவும் தெரிகின்றனர்.  வரலாற்றுச் சூழலில் நிபந்தனைகளுக்கு உட்படாத எல்லோருக்கும் பொதுவான அறநெறி என்பது ஒழுக்க நெறியோடு முரண்படுகிறது. அறிவியல் ஆய்வில் வெளிப்படுகிற அறநெறியும் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலுக்கு மட்டுமே உரிய நிபந்தனையோடு கூடிய ஒழுக்க நெறியும் முரண்படுவதை சமூகம் குறித்த அறிவியல் ஆய்வு வெளிப்படுத்துகிறது. அறநெறிக்கும், ஒழுக்க நெறிக்கும் உள்ள உறவுகள் சிக்கலானவை. ஹெகலுடைய ஆய்வுகள் மட்டுமல்லாமல், இலக்கியங்களும் இந்த முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. டால்ஸ்டாயின் உயிருள்ள பிணம் என்ற நாடகம், ஒழுக்க நெறிக்கும் அறநெறிக்கும் உள்ள முரண்பாட்டைச் சொல்லுகிறது. பாஸ்டர்நாக் எழுதிய நாவல் அறநெறியற்ற ஒழுக்கநெறிக்கு அழுத்தம் தருகிறது (இதை UNETHICAL MORALITY என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்)  கொலை செய்யாதே என்ற மோசேவின் கட்டளை நிபந்தனை அற்ற ஒழுக்க நெறியாக முன்வைக்கப்படுகிறது. சமூகத்தோடு கொள்ளும் உறவின் போதுதான் தனிமனிதன் தனக்கான ஆளுமையைப் பெறுகிறான். வரலாற்றுச் சூழலை இந்தக் கட்டளை மறுக்கிறது. இன்னொரு மனிதனை ஒருவன் கொல்லும் பொழுது, தனக்குள் இருக்கும் மனிதனை அவன் கொல்கிறான். இத்தகைய செயல் மனித சமூகத்திற்கு எதிரான செயல். நிரந்தரமான, முழுமையான மதிப்பீடுகளை உட்கொண்டு வளர்வது மனித ஆளுமை. இந்நிலையில் மாபெரும் குற்றச் செயல்களில் ஒன்று கொலை செய்வது. தற்கொலையைக் காட்டிலும் இது கொடியது. எதிர்காலத்தில் மனித ஆளுமை வளர்ச்சிக்குத் தடையான கட்டளைகள் முதலியவை மாபெரும் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும்.  நிபந்தனையற்ற முறையில் கொலை செய்யாதே என்ற கட்டளையில் உள்ள முரண்பாடுகள் முக்கியமானவை. இம்முறையில் இது ஒழுக்க நெறியாகிறது. அற நெறியாக இருக்க முடியாது. அரசு தரும் கொலைத் தண்டனை, போர் நடவடிக்கைகள் முதலியவை நம் சிந்தனைக்குரியவை. ஒழுக்க நெறிக்கு விருதுகளோ, தண்டனையோ தரப்படுகிறது. பொருள் வடிவத்தில் பரிசுகள் தரப்படுகின்றன. ஆனால் அறநெறியைப் பொறுத்தவரை பொருள் வடிவிலான பரிசுகள், விருதுகள் ஆகியவை பொருத்தமில்லாதவை. தனிமனிதனின் தன்னுணர்வோடு தான் அறநெறி இயங்குகிறது. இது ஓர் உள்ளார்ந்த உணர்வு. எல்லையற்ற எதிர் காலம் நோக்கி வரலாற்றியக்கத்தின் பகுதியாக அமைகிறது அறநெறி. இதன் காரணமாகத் தனிமனிதனின் செயல்கள் முதலியவற்றை இது பொருட்படுத்துவதில்லை. நிகழும் ஒழுக்க நெறியை ஏற்றுச் செயல்படுவதன் மூலம் பரிசையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்ப்பவன் ஒழுக்க நெறியாளன். இந்த வகையில் அவன் தன்னைத் தியாகம் செய்வது வரை அவன் செல்லக்கூடும். இதன் காரணமாக சமூகத்தின் பாராட்டையோ, பழிப்புரையையோ கூட இவன் பெறக் கூடும். இம்முறையில் தனது ஆளுமையில் அவன் நிறைவு கொள்வான் என்றால், அறநெறி வகையில் உண்மையாகவே அவன் செயல்பட்டான் என்று தான் கருத முடியும்.  இதுவரை விவாதித்ததன் விளைவாக அறநெறி எப்பொழுதுமே நல்லது. ஒழுக்கநெறி எப்பொழுதுமே தீயது என்று நாம் முடிவு செய்து கொள்ளக் கூடாது. இங்கு அற உணர்வு என்பதைத் தனிமைப் படுத்தித்தான் நாம் ஆய்வு செய்கிறோம். இதன் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் முறையில் ஆய்வு செய்கிறோம். சமகால மனிதன் என்பவன் தனக்குள் அறநெறிக்கும், ஒழுக்க நெறிகளுக்குமிடையிலான முரண்பாட்டோடு தான் வாழ்கிறான். அவனுக்குள் உள்ள இந்த முரண்பாட்டை அவன் அறிவு ரீதியாகப் புரிந்து கொள்வதில்லை. அவனுக்குள் இது சோக உணர்வோடு கூடிய மனச்சான்றாக வெளிப்படுகிறது. இயல்பாக நான் இல்லை என்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுகிறது. சமகால மனிதனுக்குள் அறத்திற்கும், ஒழுக்கத்திற்கும் இடையிலான மோதல் வெளிப்படையான வடிவம் பெறுவதில்லை. சமூகப் பிரிவுகளுக்கும் புறத்தின் ஆதிக்கத்திற்கும் உட்பட்ட இந்த மனிதனுக்குள் இந்த முரண்பாடு தெளிவு பெறாதததை நாம் புரிந்து கொள்ள முடியும்.  குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் வாழ்கிற மனிதனுக்குள் அற உணர்வு அழுத்தம் பெறாததில் வியப்பில்லை. நிபந்தனையற்ற உலகு தழுவியதான அற உணர்வோடு குறிப்பிட்ட சூழலில் வாழும் இந்த மனிதன் முரண்படத்தான் செய்வான். அறவுணர்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் மனிதன் சமூகச் சூழலுக்குப் பொருந்தாதவனாகவே கருதப்படுவான். தாஸ்தா வெஸ்கியின் “முட்டாள்” என்ற நாவலில் வரும் முஸ்கின் இத்தகையவன். இவனைப் போன்றவர்கள் புனித தீர்க்க தரிசிகள் என்றோ புனித மூடர்களென்றோ, பைத்தியகாரர்களென்றோ கருதப்படுகிறார்கள். இவர்கள் இந்த உலகத்திற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்றும் மேலுலகத்திற்கு இவர்கள் உரியவர்கள் என்றும் கருதப்படுவார்கள்.  இனக்குழுச் சமூகத்தில் இந்த முரண்பாட்டுக்கு இடம் இல்லை. இனக்குழுச் சமூகத்திலிருந்து ஆளுமை என்ற முறையில் தன்னை வேறுபடுத்திக் கொள்ள முடிவதில்லை. பிற்காலத்தில் அவனுக்குள் ஏற்படும் இத்தகைய முரண் அல்லது பிளவென்பது உயர் வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. தற்கால மனிதனுக்குள் பல்வேறு வகையிலான முரண்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக அவன் தனக்குள் பிளவுபடுகிறான். இனக்குழு மனிதன் தனக்குள் இந்த முரண்களை உணரவில்லை. இதன் காரணமாக அவனுக்குள் ஆளுமை வளர்ச்சியும் இல்லை. தொடக்க நிலையில் அற உணர்வென்பது ஒழுக்க நெறி என்ற வடிவில்தான் செயல்படுகிறது. ஒழுக்க நெறிக்குத் தன் சுயத்தை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வடிவத்தில்தான் இங்கு செயல்படுகிறது. இதன் அருவத் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய மனிதன் தனக்குள் வேதனை கொள்வான். இது படைப்பின் வேதனை. ஆளுமை வளர்ச்சிக்கான பிரசவ வேதனை. ஒவ்வொரு சமூகப் பிரிவினுள்ளும் செயல்படும் இத்தகைய ஒழுக்க நெறிகளுக்குள், ஒழுக்க நெறிகளைக் கடந்த அற உணர்வு செயல்படுவதை நாம் காண முடியும். பகுதிகளின் வழியே முழுமை இப்படித்தான் . செயல்படுகிறது. ஒவ்வொரு சமூகப் பிரிவும் வரலாற்றுச் சூழலுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் அதேசமயம் வரலாற்றுச் சூழலை கடந்து செல்லவும் முயல்கிறது. இதன்மூலம் தான் வரலாற்றில் வளர்ச்சி ஏற்படுகிறது.  வரலாற்றை முன் நகர்த்துவதற்கான புரட்சிகரச் செயல்பாட்டில் பாட்டாளி வர்க்கம் ஈடுபடுகிறது. வர்க்கப் பிரிவுகளையும், பொருளியல் உற்பத்திக்கான ஆதிக்கங்களையும் இழந்த நிலையில் அற உணர்வு தனக்குள் பிளவு அற்றதாக ஆகிறது. புறத்தின் தேவைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதாகிய ஒழுக்க நெறிக்கு இனி இடமில்லை. இனி பொருளின் உற்பத்தி என்பதற்கு மாறாக மனித ஆளுமையின் படைப்புக்கான முயற்சிகள் முதன்மை பெறுகின்றன. மனிதனுக்குள் இதுநாள் வரை செயல்பட்ட இருமைக்கு இனி இடமில்லை.  5. THE ETHICAL CONSCIOUSNESS FROM THE PINT OF PHILOSOPHY  மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரையின் ஒரு பகுதி. அற உணர்வு என்பது தொன்றுதொட்டு எல்லாக் காலங்களிலும் மானுடவியல் சமயங்கள் பண்பாடு முதலிய எல்லாவற்றினுள்ளும் இடம் பெறுகிறது. மனிதனின் எல்லாவகைச் செயல்பாடுகளினுள்ளும் அற உணர்வு இடம் பெறுகிறது. முரண்பட்ட அற இயல்கள் தொடர்ந்து நிலவுகின்றன.அற உணர்வு என்பது தனக்குள் முரண்பாடுகளை கொண்டதாகவும் இருக்கிறது.தத்துவ வரலாற்றினுள் அறவியலின் சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள விரும்புகிறோம்.அரசியல் குறித்து மார்க்ஸ் தனியாக ஆராயவில்லை. மார்க்சின் பல்வேறுபட்ட எழுத்துக்களில் சிதறிக் கிடக்கிற கருத்துகளை அவருடைய கோட்பாடுச் சட்டகத்தின் பின்புலத்தில் இருந்து நாம் காண வேண்டும். ஹெகலினுடைய கருத்து நிலைகளை குறித்து மார்க்சின் ஆய்வுகளில் இருந்து நாம் தொடங்குகிறோம். ஹெகல் அறவியலையும் ஒழுக்கநெறியையும் வேறுபடுத்துகிறார். வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ஒழுக்க நெறியின் மேல் அறவியல் செய்த மேலாண்மை குறித்து ஹெகல் குறிப்பிடுகிறார்.Absolute Spirit எனப்படும் பேரான்ம வரலாற்றுக் கட்டங்கள் வழியே சுயமான வளர்ச்சி பெற்றுவரும் பின்னணியில் அறவியல் என்பதையும் ஒழுக்க நெறியையும் வேறுபடுத்துகிறோம். தொடக்கத்தில் பேரான்மாவின் சுயமான தன்னிலையை அறவியல் இருப்பு என்று குறிப்பிடுகிறார். இனக்குழுச் சமூகத்தில், சமூகத்திலிருந்து எந்த வகையிலும் பிரிவுபடாத தனிமனிதனுக்கு பேரான்மாவின் இருப்பை ஒழுக்க நெறி என்று கூறுகிறார்.இனக்குழு சமூகத்தோடு தனக்குள்ள கடமை மற்றும் பொறுப்புகளை தனக்குள் தங்கியிருக்கிற, குழுவில் இருந்து பிரிந்த தனிமனிதனைக் குறித்து பேசுகிறார். இங்கு இந்தத் தனிமனிதன் தனக்கென ஆளுமையை தனக்குள் வளர்த்துக் கொள்பவன்.பேரான்மா தனிமனிதனுக்குள் பிரிந்தும் பிளவுபட்டதாகவும் தொடர்ந்து இயங்குவது குறித்து ஹெகல் சொல்லுகிறார். தனி மனிதன் என்ற முறையில் ஒழுக்கநெறி சார்ந்தவனாக இவன் இருக்கிறபொழுதே பேரான்மா என்ற முழுமைக்கு தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனாகவும் இருக்கிறான்.தனக்குள் எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய ஆன்மாவின் இயக்கத்தை இவன் தனக்குள் இழந்து விடுவதில்லை. இனக்குழுச் சமூகம் தனக்குள் பிளவுபடாதது எனினும் அதனைப் புரிந்து கொள்ளாமல் இருந்த அவன் இப்பொழுது தனக்கு ஏற்பட்டிருக்கும் பிளவைப் புரிந்து கொண்ட நிலையிலும் பேரான்மாவின் உறவிலிருந்து விலகுவதில்லை. குடும்பம் அரசு ஆகிய வடிவத்திற்குள் தன்னை இவன் இழக்கிறான். குடும்பம் அரசு முதலியவை பேரான்மாவின் இருப்புக்கள்.பேரான்மாவுக்குக் கட்டுப்பட்டும் அதேசமயம் சுதந்திரமாகவும் இவனால் இருக்க முடியும், சட்டம்,நீதி ஆகிய வடிவங்களில் இயங்குவதாகிய பேரான்மாவுக்கு இவற்றுக்குக் கட்டுப்பட்ட தனிமனிதனின் அனுமதி தேவை இல்லை. பேரான்மாவின் நீதி முதலியவற்றிலிருந்து விலகும்பொழுது தனிமனிதன் தண்டனைக் குள்ளாகிறான். புறநிலைத் தேவைகள் மற்றும் விதிப்புக்களுக்காகத் தனிமனிதன் இங்கு தியாகம் செய்யப்படுகிறான். தனிமனிதன் எந்த நிலையிலும் முழு ஆன்மா ஆகமாட்டான். பேரான்மாவின் இயக்கம் அறநெறி என்றும், தனிமனிதர்களில் சுதந்திரமான இயக்கம் ஒழுக்க நெறி என்றும் இங்கு புரிந்து கொள்ள முடியும்.  ஹெகலை மறுப்பவராகிய மார்க்ஸைப் பொறுத்தவரை தனிமனிதன் தனக்குள் எல்லையற்ற, பிரபஞ்ச சார்புடையவனாக தனக்குள் முழுமையைத் தாங்கியவனாக இருக்கும்பொழுதே, தனிமனிதனாகவும், தனக்குள் சுதந்திர உணர்வைக் கொண்டவனாகவும் இருந்து முழுமை நோக்கி எவ்வாறு வளர்ச்சி பெறுகிறான் என்பதை மார்க்ஸ் விளக்குகிறார். சமூகச் சூழலில் தான் தனிமனிதன் தனக்கான ஆளுமையைப் பெற முடியும். இதைப் பெறுவது வரலாற்றின் வளர்ச்சியோடு ஒத்ததாகவும் இருக்கிறது. குடும்பம், அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு தனிமனிதன் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஹெகலின் கருத்தை மார்க்ஸ் ஏற்கவில்லை . அதற்கு மாறாகக் குடும்பம், அரசு முதலியவற்றின் நலன்களே ஒருசில தனிமனிதர் மூலம் மற்றவர்க்குள் திணிக்கப்படுகின்றன என்று மார்க்ஸ் கருதினார். வரலாற்றுக் காலம் முழுவதும் சமுதாயத்தின் பொது நலன்கள் என்று சொல்லப்படுவனவற்றைத் தீர்மாணிப்பவர்கள் ஒரு சில தனிமனிதர்கள் தான்.  சமூகத்திலுள்ள குழுக்கள், குடும்பம், அரசு ஆகியவற்றுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதிலிருந்து சமூக மனிதன் என்ற முறையில் தனிமனிதன் சமூகச் சூழலால் தன் ஆளுமையைப் பெறுகிறான். வர்க்கம் என்ற வகையில் தன் உணர்வுகளைத் திரட்டிக் கொள்கிறான். தன்னையும் பொருளாக மாற்றுகிற சமூகச் சூழல் இவனுக்கு உடன்பாடில்லை. இத்தகைய சமூகத்தை அவன் மாற்றியாக வேண்டும். இதற்காக ஒத்த உணர்வுடையவர்களோடு தொடர்பு கொண்டு இயங்குகிறான். தனக்குள் உலகளாவிய கூறுகளை வளர்த்துக் கொள்கிறான். கம்யூனிசம் என்று சொல்லப்படுவது தனிமனிதர்களின் கூட்டுணர்வு. ஒவ்வொரு தனிமனிதனும் பிறகு எல்லாத் தனிமனிதர்களின் நலன்களுக்காகவும் பாடுபடுவது கம்யூனிசம் எல்லாருடைய சுதந்திரமான வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரமான வளர்ச்சியை முன் நிபந்தனையாகக் கொள்வது.  மார்க்ஸ் கருத்தின்படி ஒழுக்கநெறி என்பது வர்க்கக் கூறுகளைக் கொண்டது. ஆதிக்கம் செய்யும் மனிதர்களின் விருப்பங்களை , நலன்களை நிறைவேற்றுவதாகிய கூறுகளைக் கொண்டது. ஆதிக்க வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்தது. ஆதிக்க சமூகத்தின் கருத்தியல்வாதிகள் தாம் பிறர்மீது திணிக்கும் இந்த ஒழுக்க நெறிகள் தன்னளவில் முழுமை உடையதென்றும், சுயமானதென்றும் கூறுகிறார்கள். கடமைகள், பொறுப்புக்கள் என்ற முறையில் இவற்றை ஒடுக்கப்படும் மக்களுக்கு வற்புறுத்துகிறார்கள். இம்முறையில் தனிமனிதர்களுக்குள் உலகு தழுவிய ஆளுமைத்திறன் வளராமல் இவர்கள் தடுக்கிறார்கள். தன்னை இழப்பதன் மூலம் இவர்கள் தமக்கே தீங்கு செய்து கொள்கிறார்கள். சுதந்திர உணர்வை இழப்பதுதான் இவர்களுக்கு பேரழிவு ஆகிறது.  வர்க்க சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் பிறப்பு முதற்கொண்டே ஒழுக்க நெறிகள் திணிக்கப்படுகின்றன. புறநிலையின் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நெறிகள் என்று இவை சொல்லப்படுகின்றன. இவ்வகையில் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இப்படித்தான் தனி மனிதர்களின் சுதந்திர உணர்வும் ஆளுமையும் வளர விடாமல் தடுக்கப்படுகின்றன. சமூக நலன்கள் என்று சொல்லப்படுவனவும், தனிமனித நலன்கள் என்று சொல்லப்படுபனவும் இங்கு முரண்படுவது தவிர்க்க இயலாது.  குறிப்பு : மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தார் வெளியிட்ட ஆங்கில நூல் சயின்ஸ் அண்ட் மொராலிட்டி எனது நூல் கிடங்கிலிருந்து இந்த நூலை தேடி எடுத்து, தேவையான குறிப்புக்களை இங்கு சேர்க்க இயலவில்லை.  தோழர் காலன்துரைக்கு ஒரு கடிதம் பெறுதல் : திரு. தோழர் காலன்துரை, புரட்சிகர மக்கள் பாசறை, சென்னை.  அன்புள்ள தோழருக்கு வணக்கம்,  இந்தியா டுடே இதழுக்காக “புரட்சிகர ஜனநாயக நடைமுறை” என்ற உங்கள் நூல் குறித்து கையெழுத்தில் 4 பக்க அளவில் ஒரு மதிப்புரை அனுப்பி வைத்தேன். நூல் குறித்து மேலும் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்தக் கடிதம் எழுதுகிறேன்.  புரட்சிகர மக்கள் பாசறையின் செயற்பாடுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. உங்களது இந்த நூல் இளைஞர்களை இயக்கம் நோக்கி திரட்டுவதற்கான ஒரு பாடநூல் போல் அமைந்துள்ளது. இது தேவையான பாடநூல். உங்கள் வாழ்வியல் அனுபவத்தோடு மார்க்சியத்தையும், இயக்கத்தையும் வளப்படுத்தக் கூடிய முறையில், சில நல்ல கருத்துக்களை நூலில் முன் வைத்திருக்கிறீர்கள். இந்தியாவின் நெடுங்கால மக்கள் மரபோடு மார்க்சியத்தை இணைத்துப் பார்க்கிறீர்கள். நீங்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நீங்கள் முன்வைக்கும் இந்தியத்துவம் இன்று வலுப்பெற்றுவரும் இந்துத்துவத்துக்கு எதிரானது என்பதில் அய்யமில்லை . வரட்டுத்தனமான பகுத்தறிவுவாதம் இந்துத்துவத்தை வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, இந்துத்துவம் மக்கள் மத்தியில் மேலும் பரவுவதற்கே இடம் கொடுக்கும். குடும்பம் ஆண், பெண் உறவு, உடல் நலம் காத்தல், தனிமனித ஒழுக்க நெறிகள் முதலியவற்றுக்கு மார்க்சியம் சார்ந்த கட்சிகள் எந்த முக்கியத்துவமும் தருவது இல்லை.  இத்தகைய பண்பாட்டுச் செழுமை இல்லாமல் மார்க்சியம் நம்மிடம் தங்க முடியாது. இந்த அம்சத்தில் உங்கள் கருத்துரைகள் வரவேற்கத்தக்கவை. இந்தப் பண்பாட்டு கல்வியையும், புரட்சிகர ஜனநாயக நடைமுறையின் பகுதியாக நீங்கள் இணைத்திருக்கிறீர்கள். இவையெல்லாம் பாராட்டுதலுக்குரிய வளமான கூறுகள்.  மார்க்சியம் குறித்து உங்களது புரிதல் பற்றி எனது நோக்கிலிருந்து சிலவற்றை இங்கு தொகுத்துக் கொள்கிறேன். கடிதங்கள் வழியே இவற்றை விவாதிக்க இயலாது எனினும், இங்கு தொகுத்துச் சொல்லுகிறேன் மாவோ நெறியில் மார்க்சியத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். மாவோவின் சில புரிதல்களை நீங்கள் கடந்து செல்லவும் முயற்சி செய்கிறீர்கள். மாவோ நெறியில் இந்தியாவில் மார்க்சியம் லெனினியம் என்று இயக்கம் வளர்த்தவர்கள் ஏகாதிபத்தியம் முதலிய மூவகை ஆதிக்கங்களை முன்னிலைப்படுத்தியதையும் நீங்கள் தொடர்ந்து முன்வைக்கிறீர்கள். இன்றும் சந்தைப் பொருளாதாரம் முதலியவற்றையும் உள்ளடக்கிப் பேசுகிறீர்கள். இவற்றோடு எனக்கு மறுப்பில்லை.  ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் குறித்து பேசும்பொழுது நவீன அறிவியல் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு ஏகாதிபத்தியத்தை உள்வாங்கிக் கொண்டதாகச் செயல்படுகிறது என்ற விமர்சனம் உங்களிடம் இல்லை. பிரமாண்டமான தொழில் நுட்பத்துக்கு நம் இயற்கை வளங்கள் முதலியவற்றை தின்னக் கொடுத்து அழிக்க முடியாது. இன்று பெருகிவரும் இயற்கைச் சீரழிவை நம்மால் எப்படி விளக்க முடியும். தோல் பதனிடும் தொழிற்சாலை இந்த உண்மைக்குச் சான்றுகள். பசுமைப்புரட்சி தொடர்ந்து செய்யும் கொடுமைகளுக்கு அளவு இல்லை.  இயற்கை குறித்து எங்கல்சின் எச்சரிக்கையை ஸ்டாலின் முதலியவர்கள் கண்டுகொள்ளவில்லை. பெரும் தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகமுடியாது என்று எங்கல்ஸ் கூறியது ஒரு அற்புதமான வாசகம். பெரிய இராணுவம், பெரிய தேசம், அரசுப் பெருக்கம், பெரிய நீர்மின் திட்டங்கள், அணுமின் நிலையம் என்று தொடங்கி இன்னும் பலவற்றைச் சொல்லமுடியும். இவையெல்லாம் இறுதியில் மக்கள் அரசுக்கோ, மக்கள் நாயகத்திற்கோ வழிவிடாது. இன்று இந்த எச்சரிக்கை உணர்வில்லாது மார்க்சியம் பற்றி பேசுவதற்கில்லை. ஸ்டாலினியத்திற்குள் அழுந்திக் கிடப்பதும் மாவோ நெறியில் நடப்பதும் எதிர் எதிரான செயல்கள். உற்பத்தி சக்திகளின் பெருக்கம் குறித்து மாவோ தந்த எச்சரிக்கை நம் நினைவுக்கு வரவேண்டும். சோவியத் ஒன்றியம் முதலியவற்றில் இத்தகைய புரிதல் இல்லாதததன் விளைவே முதலாளிய வளர்ச்சி.  இதன் இன்னொரு கட்டத்தில் ஏகாதிபத்தியமாக மாறவும் செய்யும். அமெரிக்கா முதலிய ஏகாதிபத்தியத்தோடு போட்டி போடுவதில் சோவியத் யூனியன் வெற்றி காணமுடியவில்லை என்பது மட்டுமல்ல, தோல்வியில் துவண்டும் போனது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை நாம் வழிபட முடியாது. உற்பத்தி சக்திகளை விட உற்பத்தி உறவுகளுக்கு நாம் அழுத்தம் தரவேண்டும். இதிலிருந்து பின்வாங்குவதற்கில்லை. மார்க்சியத்தை திரும்பத் திரும்ப விஞ்ஞானக் கோட்பாடுதான் என்று சாதிக்கும்பொழுது இந்த அறிவியல் வழிபாட்டைத்தான் நாம் செய்கிறோம். அல்தூசர் மார்க்சியத்திற்கு உள்ளிருந்து ஹெகலியம், மனிதநேயம், மதத்தின் தாக்கம் முதலியவற்றை முற்றாக கலைய வேண்டும் என்று ஒரு பெரும் முயற்சி செய்தார். மார்க்சியம் ஒரு சித்தாந்தம் அல்ல அதை அறிவியல் முறையில் கோட்பாடாக மாற்ற வேண்டும் என்பது அவர் கருத்து.  சித்தாந்தம் அல்லது கருத்தியல் என்பதற்குள் மனித நேயம் முதலிய மனிதச் சார்புகள் இருக்கும். தத்துவம் / மெய்யியல் என்பதனுள் சித்தாந்தக் கூறுகள் இருக்கவே செய்யும். கோட்பாடென்பதில் இதற்கு அறவே இடம் இல்லை. இத்தகைய போக்கைத் தான் தமிழகத்தில் அ.மார்க்ஸ் முதலியவர்கள் கடுமையாக கடைப்பிடிக்கத் தொடங்கினர். கறாரான ஆய்வுமுறை என்று தொடங்கி பலரைத் தாக்கவும், தகர்க்கவும் செய்தனர். பிறகு என்ன ஆயிற்று. அல்தூசரை அவர்கள் இப்பொழுது கைவிட்டு விட்டார்கள். உள்ளுணர்வு முதலிய மனித உறவுகளுக்கு இப்பொழுது இடம் தருகிறார்கள். பின் நவீனத்துவம் என்று இப்பொழுது இன்னொரு தீவிரவாதத்திற்குள் இறங்கி இருக்கின்றனர். மார்க்சியத்தை ஒருசமயம் ஆதரிப்பதும், இன்னொரு சமயம் மறுப்பதும் என்ற இரட்டை நடைமுறையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். மார்க்சியத்தின் மரியாதை குறைந்து வருவதற்கு இவர்களும் ஒரு காரணம்.  நீங்களும் மார்க்சியத்தை விஞ்ஞானக் கண்ணோட்டம் என்றே அழுத்திச் சொல்லுகிறீர்கள். மார்க்சியம் முதன்மையாக சமுதாயவியல் சார்ந்தது. இயற்கை விஞ்ஞானத்தில் செயல்படும் அறிவியல் விதிமுறைகளை அதே வடிவில் சமுதாயவியலுக்குப் பொருத்த முடியாது. இயற்பியலின் விதிமுறைகளை அதே வடிவில் உயிரியலுக்கோ பிறகு உளவியலுக்கோ பொருத்துவது சாத்தியம் இல்லை. இயங்கியலின் பொது விதிகள் இங்கெல்லாம் தனிநிலைக் கூறுகளுடன் இயங்குவது என்று நாம் காண முடியும். இயற்கையின் இயங்கியல் பற்றி எங்கல்ஸ் பேசியதை சார்த்தர் ஏற்கவில்லை. வர்க்கப் போராட்டம் முதலிய கருத்தினங்கள் சமூகவியலுக்கு உரியவை. சமூக இயலினுள் செயல்படுகிற விதிமுறைகளின் தொகுப்பினுள் உள்ள சில பொதுக் கூறுகளை அறிவியல் என்று சொல்வதில் பொருள் உண்டு. இவ்வகையில் மார்க்சியமும் ஒரு விரிந்த சமூக அறிவியல்.  இந்தியத்துவம் என்று நீங்கள் சொல்வது குறித்தும் என் சார்பில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன். இந்தியத்துவம் என்ற சொல் இந்தியாவின் தத்துவம் என்று பொருள்படுமா என்று தெரியவில்லை. இந்தியத்துவமும் இந்துத்துவம் என்பதும் ஒன்றுதான் என்று நம் நண்பர்கள் விவாதிப்பார்கள். எனக்கு இதில் உடன்பாடில்லை. ஆரியத்திற்கு எதிராக திராவிடம் என்று இனம் காணத்தக்க ஒரு விரிவான நாகரிகம் இந்தியாவிற்குச் சொந்தமானது. புத்தர் முதலியவர்கள் ஆரியத்திற்கு எதிராகப் போராடினார்கள். சாங்கியம் முதலிய தரிசனங்கள் திராவிடர்களுக்குரியவை. சிந்து சமவெளித் தொடங்கி இந்தியாவின் நெடுங்கால நாகரிகம் குறித்து நாம் விரிவாகச் சொல்லமுடியும்.  டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுவது போல இந்திய நாகரிகத்தின் மேல் அடுக்கு ஆரியமாக இருக்கலாம். ஆனால் அடித்தளம் முழுவதும் திராவிட நாகரிகம். இந்தப் பொருளில் இந்தியாவை நாம் இன்னொருவருக்கு விட்டுத் தரமுடியாது. இதன் காரணமாகத்தான் இன்றும் சரியான கூட்டாட்சி பற்றி பேச வேண்டி இருக்கிறது. அந்நியர்களுக்கு இந்தியாவை ஆரியர்கள் விட்டுக் கொடுக்க விரும்புவார்கள். மண்ணோடும், மக்களோடும் உறவு கொண்டுள்ள நமக்கு இது முடியாது.  இன்றுள்ள திராவிட இயக்கத்திற்கு இப்படி ஒரு வளமான பார்வை இல்லை. திராவிடமும் ஒரு மாயை என்று இன்று அறிஞர் குணா முதலியவர்கள் சொல்வதிலுள்ள உண்மையை நாம் புறக்கணிக்கவும் முடியாது. இது குறித்து இப்பொழுது தேவை இல்லை. ஏகாதிபத்தியம் இங்கு நெடுங்காலம் தங்கியதின் விளைவாக இந்திய மரபுக்கெதிரான சில போலி மரபுகள் வலுப்பெற்று உள்ளது குறித்து நீங்கள் ஆழ்ந்த அக்கறையோடு குறிப்பிடுகிறீர்கள். போலி பகுத்தறிவு, போலி ஜனநாயகவாதம் முதலியவை இத்தகைய கூறுகள்.  பணத்திற்கும் அதிகாரத்திற்கும் இடம் தருவதன் மூலம் மக்களின் வாழ்வியல் நாசமாகிறது. முதலாளிகள் முதலிய ஆதிக்க சக்திகளுக்கு மக்களின் வாழ்வில் அக்கறை இல்லை. மெக்காலே கல்விமுறை குறித்து சரியாகவே சாடுகிறீர்கள். ஏகாதிபத்தியம் தொடர்ந்து இங்கு செயல்படுவதற்கு போலி தலித்தியம், போலி பெண்ணியம் உதவியாக இருக்கின்றன. இவை குறித்து இன்னும் விரிவாகச் சொல்லவேண்டும். பிறிதொரு சமயம் இது பற்றிப் பேசலாம். இடையில் ஒரு கருத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்றுக் கொள்கிற நீங்கள் இதற்கு அறவே இடம் இல்லாத சூழலில் விடுதலையை ஆதரிக்கத்தான் வேண்டும். ஏகாதிபத்தியம் எந்தச் சந்திலும் நுழைந்து தங்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் திரும்பவும் ஏக இந்தியா என்று தொடங்கினால், ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் வழி இல்லை  புரட்சிகர ஆன்மீகம் குறித்து நீங்கள் அக்கறையோடு பேசுவதை நான் பெரிதும் வரவேற்கிறேன். மதங்கள் தத்துவங்கள் இன்று பெற்றுள்ள வடிவங்களுக்கு அடியில் சென்று நாம் ஆராய வேண்டும். மக்களின் இத்தகைய உணர்வுகளில் இருந்துதான் அத்வைதம் முதலிய தரிசனங்கள் பிறகு அறிஞர்களால் வடிவமைக்கப்படுகின்றன. இயக்கம் என்பதும் பொறுமை என்பதும் வேறு வேறு அல்ல. இந்த இயக்கம் பிரபஞ்சம் வரலாறு உயிரினங்கள் எங்கும் நீக்கமற இயங்குகிறது. முரண்பாடில்லாமல் இயக்கமும் இல்லை. மனம் என்பதும் இயக்கத்தின் இன்னொரு வடிவம். சமதர்மம் என்பதும்கூட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இன்னொரு வடிவம். இவை பற்றி எல்லாம் நீங்கள் சரியாகவே சொல்லுகிறீர்கள்.  இந்த அடிப்படைகளை உள்ளடக்கியும், இவற்றை மறைத்தும் மதங்கள் வளர்ச்சி பெற்றன. தேவி பிரசாத் முதலியவர்கள் இவ்வகை ஆய்வில் விரிவாக ஈடுபட்டனர். ஆனால் இவர்களும் எல்லாவற்றையும் வெறும் பொருள் முதல்வாதமாக மாற்றினர். இந்த வறட்டுப் பொருள்முதல்வாதம் எத்தனையோ தீங்குகளை நமக்குச் செய்திருக்கிறது. இதன் ஒரு கூறுதான் போலிப் பகுத்தறிவுவாதம். மார்க்சியரும் இந்த பெரியாரியத்தைத்தான் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பணம் அதிகாரம் முதலியவற்றுக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்தைத் தாங்கி நிற்கின்றனர். இந்தியாவின் இத்தகைய மெய்யியல் வரலாற்றை நீங்கள் விரிவாக ஆராயவில்லை என்பது உங்கள் குறை அல்ல. எனினும் உங்களது எளிய விளக்கங்களை நண்பர்கள் கடுமையாகச் சாடவே செய்வர். தோழர் எஸ்.என்.நாகராசன் அவர்களும், நானும் இங்கெல்லாம் சிலவற்றை எழுதி இருக்கிறோம்.  இப்பொழுது இங்கு நிறுத்திக் கொள்கிறேன். நேரம் இல்லை என்பதனாலும் எனது கருத்துக்களை இன்னும் விரிவாக எழுதுவதற்கில்லை. உங்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதனால்தான் இக்கடிதம் எழுதுகிறேன். எந்த அளவில் உங்களை எதிர்கொண்டிருக்கிறேன் என்பது குறித்து நான் சொல்வதற்கில்லை. என் கருத்துக்களை நீங்கள் மறுக்கவும் செய்யலாம். இப்பொழுது விடைபெறுகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இந்தியா டுடே மதிப்புரை இணைத்துள்ளேன்.  நன்றி தங்கள் ஞானி  இணைப்பு : காலந்துரையின் கடவுள்  காலந்துரையின் “கடவுள்” நூல் : புதிய ஜனநாயக நடைமுறை ஆசிரியர் காலன் துரை பக்கங்கள் 316 விலை ரூ. 50.00 வெளியீடு : புரட்சிகர மக்கள் பாசறை 15/212, லெட்சுமி நகர், ஆழ்வார்திருநகர், சென்னை 37.  பொதுவுடமை இயக்கத்தில் பல்லாண்டுகள் ஈடுபாடும், மார்க்சிய லெனினிய அரசியலில் அழுத்தமும் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் காலன்துரை, இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் இதுவரை ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கான காரணங்களையும், இனி வெற்றி பெறுவதற்கு தேவையானது என்ற முறையில் புதிய ஜனநாயக நடைமுறை என்ற அரசியலையும், புரட்சிகர ஆன்மீகம் என்ற இலட்சியத்தையும் முன்வைக்கிறார்.  இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடைபெற்ற ஏகாதிபத்தியம், இந்தியாவில் தரகு முதலாளியத்தை ஊக்குவித்தது. நிலவுடமை ஆதிக்கத்தோடு சமரசம் செய்து கொண்டது. மெக்காலே கல்வி முறையும், மேற்கத்திய பொருளியல் நாகரிகமும், இந்திய மக்களுக்குள் ஊடுருவி இந்தியாவின் நெடுங்கால ஆன்மீகம், பண்பாடு முதலியவற்றைச் சிதைத்தது. பொருளுக்கும் அதிகாரத்திற்கும் முதன்மை தருகிற போலிப் பகுத்தறிவு வாதத்தையும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எல்லோருக்கும் ஒரு வாக்கு என்ற முறையில் போலி ஜனநாயகத்தையும், ஆணுக்குப் பெண் சமம், பெண்ணும் தன்னைச் சுயமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற போலிப் பெண்ணியத்தையும், கோயிலில் நுழைந்து வழிபாடு செய்ய தலித் மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் நிலவுடமையில் பங்கு இல்லை என்ற போலி சமத்துவத்தையும் / தலித்தியத்தையும் இந்தியாவில் வளர்ப்பதற்குக் காரணமாக இருந்தது.  இத்தகைய போலி நடைமுறைகள் மூலம் இந்தியாவில் ஏகாதிபத்தியம் இன்றுவரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியம் முதலிய மூவகை ஆதிக்கங்களையும், போலிப் பகுத்தறிவு முதலிய ஐந்து வகை நோய்களையும் முறியடித்தால் ஒழிய இந்திய மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் முதலியவை கிட்டாது என்பதை ஆசிரியர் இந்த நூலில் அழுத்தம் திருத்தமாக விவாதிக்கிறார்.  இந்துத்துவம் தன்னை நிறுவிக் கொள்ளும் இக்காலச் சூழலில் இந்தியத்துவம் என் ஒன்றை கண்டறிந்து பேசுகிறார். கட * உள் என்பது தோற்றங்களைக் கடந்து உள்ளே சென்று உண்மையைக் கண்டறிவது என்று தொடங்குகிறார். பிரபஞ்சம் முதலிய அனைத்தினுள்ளும் உள்ளியங்குவது இயக்கம் என்கிறார். இயக்கத்தின் இன்னொரு வடிவம் பொருண்மை. இந்த இயக்கத்தின் விளைவுதான் உலகம், உயிர்வகைகள், இறுதியாக மனிதன் என்ற பரிணாம வளர்ச்சி. மனிதன் மனம் உடையவன். சிந்தனைத் திறன், நன்மை தீமை பற்றிய பகுத்தறிவு ஆகியவற்றோடு, இவற்றைச் செய்பவன். நான் என்ற தன்னுணர்வும் மனத்தின் உள் இயக்கம். தன்னுணர்வு என்பதே ஆன்மா.  மனிதனை மேலும் மேலும் தூண்டுவது இந்த உள் இயக்கம். சமத்துவம் / சமதர்மம் இன்றி மனிதர்களுக்கு உரிய வாழ்வியல் இல்லை என்பதை உணர்த்துவது இந்த உள் இயக்கம். இயக்கத்தின் நோக்கம் வளர்ச்சி. எதிலும் நன்மை உண்டு. நமக்கான நல்வாழ்வு என்று நாம் கருதுவது அனைவருக்கும் ஆன நல்வாழ்வாக இருக்கவேண்டும். இதைத்தான் இந்தியத்துவம் என்கிறார் ஆசிரியர். இதையே இந்தியத்துவ மார்க்சியம் என்றும் கூறுகிறார்.  இத்தகைய ஆன்மீகம் அத்வைதத்தின் வழியே வெளிப்படும் ஆன்மீகம் புரோகிதர்கள் முதலிய சக்திகளால் போலி ஆன்மீகமாக மாற்றப்பட்டது என்கிறார். புரட்சிகர ஆன்மீகம்தான் இந்திய மக்களை மேம்படுத்த முடியும் என்கிறார். எல்லாம் அவன் செயல், வாழ்வே மாயம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு முதலிய கருத்துக்கள் வழியே இவற்றின் உள் இயக்கம் காணவேண்டும் என்கிறார். புரட்சிகர இயக்கம் புதிய ஜனநாயக நடைமுறை என்பதைக் கடைப்பிடித்து ஆகவேண்டும் என்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரோடும் இயக்கம் இணைந்து செயல்பட வேண்டும்.  ஒடுக்கப்பட்டவர்கள் என்ற தொகுப்பினுள் சுதேசி முதலாளிகளுக்கும், பணக்கார விவசாயிகளுக்கும் இடம் உண்டு என்கிறார். ஏகாதிபத்தியம் முதலாளியம் முதலிய ஆதிக்கங்களோடு ஒத்துச் செயல்படும் போலிப் பகுத்தறிவு, போலி பெண்ணியம், போலி தலித்தியம் முதலியவை நமக்கு வேண்டாம் என்கிறார். தோற்றங்களையே உண்மை என நம்பிக்கிடப்பது போலிப் பகுத்தறிவு. ஆளுமை உடையவன் ஆண்மகன். தாய்மை உடையவள் பெண். கணவனும், மனைவியும் இன்பம் கருதி வாழ்வதில்லை. துயரங்கள் மனிதனை மேம்படுத்தும். சுயக்கட்டுப்பாடும், ஒழுங்கும் இல்லாமல் குழந்தைகளுக்கு வளர்ச்சி இல்லை. உடல் ஆரோக்கியம் இல்லாமல் உள் ஆரோக்கியம் இருக்க முடியாது. உடலை வளர்ப்பதன் மூலமே உயிரை வளர்க்க முடியும். வள்ளுவரின் இல்லறமே இன்னும் நம் குடும்பங்களுக்குத் தேவை. பிறர் குற்றம் காண்பது போல் தன் குற்றமும் காணும் சுயவிமர்சன நடைமுறை நமக்குத் தேவை. போலிப் பகுத்தறிவு, போலி பெண்ணியம், குறுங்குழுவாதம் முதலியவற்றில் புரட்சியாளர்கள் அழுந்திக் கிடக்கும்வரை இந்தியாவில் புரட்சிகர இயக்கம் முன் செல்லமுடியாது.  குடும்பம் பற்றியும், குழந்தைகள் வளர்ப்பு குறித்தும், சமுதாயத்தில் பெண்ணுக்கு எந்த இடம் என்பது பற்றியும், தனிமனித ஆளுமைக்கான வளர்ச்சி குறித்தும் இந்தியாவின் நெடுங்கால அணுகுமுறைகளை நாம் இகழ்ந்து விட முடியாது. இந்தியத்துவமே மார்க்சியம் என்று தொடர்ந்து சொல்லும் ஆசிரியர் விவேகானந்தரை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். பகவத் கீதைக்குப் புதுப்பொருள் சொல்லுகிறார். உபநிடதங்கள், வேதங்கள் குறித்தும் சொல்லுகிறார். குறள் நெறி பற்றியும் பேசுகிறார். இவை குறித்தெல்லாம் நூலில் விரிவான ஆய்வுகள் இல்லை. அங்கங்கே சிற்சில குறிப்புக்கள் மட்டும் இடம் பெறுகின்றன.  பொதுவுடமையாளர்கள் மட்டுமல்லாமல், பகுத்தறிவு என்றும், தலித்தியம் , பெண்ணியம் என்றும் உரக்கப் பேசுபவர்கள் விவாதிக்க வேண்டிய நூல் என்பதில் அய்யமில்லை. இந்துத்துவம் என்பதை முறியடிக்கும் நோக்கில் இவர் சொல்லும் இந்தியத்துவமும் கூர்மையான விவாதங்களுக்கு உள்ளாகும் என்பதில் அய்யமில்லை. எனினும் ஆசிரியாது பெரும் முயற்சி பாராட்டத்தக்கது.  - ஞானி  FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY  கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.