[] 1. Cover 2. Table of contents மாமல்லை மாமல்லை   டாக்டர். இரா.நாகசாமி   tamilarts.academybooks@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/maamallai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc மாமல்லை டாக்டர். இரா. நாகசாமி தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1968, 1988 தமிழக அரசு கல்வி அமைச்சர் மாண்புமிகு நாவலர் இரா நெடுஞ்செழியன் அவர்களின் அணிந்துரை தமிழக வரலாற்றுப் புகழையும், பண்பாட்டுப் பெருமையையும், நாகரிக மேம்பாட்டையும் விளக்கிக் காட்டிடும் அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், கட்டிடங்கள், குகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், மண்டையோடுகள், புதைபொருட்கள் தமிழகமெங்கணும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பேசவைக்கும் பணியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், இலக்கிய வல்லுநர்கள், கலைஞர்கள் ஆகியோர் சென்ற சில காலமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலை நாடுகளில் வரலாறு, இலக்கியம், கல்வெட்டுகள், கலை ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணற்ற வியப்புக்குரிய நூல்கள் அந்தந்த நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் முறையில் வெளிப்பட்டு வருகின்றன. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கலைச் செல்வங்களைக் காணச் செல்வதற்கு முன்னர் அவை பற்றிய் நூல்களைப் படித்துப் பார்த்து விட்டு தூண்டப்பட்ட ஆவலுடன் அச்செல்வங்களைக் காண விழைகின்றனர். குறிப்பாக மேலை நாடுகளில் கல்லூரி மாணவர்களிடத்திலும் பள்ளி மாணவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது போன்ற பழக்கம் நம் நாட்டிலும் பெருகினால்தான் நம் கலைச் செல்வங்களின் அருமை பெருமைகளை நாமும் உணர முடியும்; பிறர்க்கும் உணர்த்த முடியும். தமிழகத்திலும் அப்படிப்பட்ட நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் பேராவலாகும். அந்த ஆவலை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட ஒரு முயற்சியின் விளைவுதான் “மாமல்லை” என்னும் இந்நூல். இந்நூல் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற, சிற்பக் கலை நிரம்பிய மாமல்லபுரத்தைப் பற்றிய பல்வேறு செய்திகளை இலக்கியத்திலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், சிற்பக்கலை நுணுக்கத்திலிருந்தும், வரலற்றுக் குறிப்புக்களிலிருந்தும் திரட்டித் தருகிறது. தமிழக அரசின் தொல்பொருள் ஆரய்ச்சித்துறையின் இயக்குநரும், சிறந்த இலக்கிய நுண்ணறிவு, கல்வெட்டு ஆராய்ச்சியறிவு, தொல்பொருள் ஆராய்ச்சியறிவு, வரலாற்றறிவு, ஆகியவற்றை ஒருங்கே பெற்றவரும் ஆன திரு இரா. நாகசாமி அவர்கள் இந்நூலை உருவாக்கித் தந்திருப்பது பாராட்டுவதற்குரியதாகும். ஆசிரியர் இனிய, எளிய தமிழிலும், இலக்கிய நயம் சிறக்க அழகான முறையில் எழுதியுள்ளார். தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வரலாற்று அடிப்படையில் கொண்டு வந்துள்ள முதல் நூல் “மாமல்லை” என்ற இந்த ஆராய்ச்சி நூலாகும். இது போன்ற பல நூல்கள் வெளிவர வேண்டும் என்பது தமிழக அரசின் பேராவலாகும். தமிழக பெருமக்கள் இந்நூலுக்குப் பேராதரவு தந்து அதனால் பெரும் பயன் பெறுவார்களாக. இரா. நெடுஞ்செழியன் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் அணிந்துரை தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் வெளியீடாக “மாமல்லை” வெளிவருகிறது. தமிழகத்தில் புத்தாட்சி மலர்ந்ததிலிருந்து தமிழ் வளரவும், தமிழ்க்கலையும், பண்பாடும் செழிக்கவும் அரசு நாள் தோறும் நல்ல பணிகளை மேற்கொண்டு வருவது பெருமக்கள் யாவரும் அறிந்ததே. நமது மரபின் மாபெரும் சிறப்புப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது நமது வாழ்வின் மறுமலர்ச்சிக்கு மிக இன்றியமையாததாகும். கல்லும் கதை சொல்லும் கடல்மல்லையின் வரலாற்றை ஊடுருவிப் பார்த்து அரிய பல உண்மைகளை அழகிய முறையிலும், நெஞ்சத்தில் பதியக்கூடிய வகையிலும் சொல்கிறது இந்நூல். தொல்பொருள் ஆய்வுத்துறையிலும், இலக்கிய, வரலாற்றுத் துறைகளிலும் ஆழ்ந்த அனுபவம் உள்ள திரு இரா. நாகசாமி இந்நூலை எழுதியிருக்கிறார். நடை எளிமையாகவும், சரளமாகவும் இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை பற்றிய நூல்களை, இலக்கிய அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் இயற்றி, மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற அரசின் திட்டப் படி “மாமல்லை” முதல் வெளியீடாக வெளி வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன். அனைவரும் இந்நூலை வரலாற்று ஆதரவு நல்குவார்களாக! மு. கருணாநிதி நகரம் மாமல்லபுரம், மஹாமல்லபுரம், கடல்மல்லை, ஜனநாதபுரம், மல்லாபுரி, மஹாபலிபுரம், மாவேலிவரம், மாவலிபுரம், என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவ்வூரில் தமிழ் மக்களின் தலையாய கலைப்படைப்புகள் இருக்கின்றன. உலகின் பல பாகங்களிலிருந்தும் திரள் திரளாக மக்கள் இங்கு வந்து இக்கலைச் செல்வங்களைப் போற்றுகின்றனர். ‘திறனான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ற மாக்கவி பாரதியின், அமரவாக்கின் பெருமையை, இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வூர் அமைந்துள்ள சூழ்நிலை, பார்ப்பவர்கள் மனதைப் பரவசப் படுத்தும் எழில் வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நகரம், தொன்றுதொட்டே சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. பண்டையத் தமிழ் நூல்களில் இவ்வூருக்கு இருந்த பெயர் எது என்று தெரியவில்லை. ஆயினும் துறைமுகத்தே விளங்கிய பட்டினம் என்ற பெயரில் இவ்வூர் பாடப்பட்டது. பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில், இந்நகரின் சிறப்பு அதிகரித்தது. எனவே அவனுடைய சிறப்புப் பெயரான மாமல்லன் என்ற பெயர் கொண்டு, மாமல்லபுரம் என்று வழங்கப்பட்டது. இதையே மஹாமல்லபுரம் என்றும் குறிப்பர். கி.பி.8-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த சிறந்த சமஸ்கிருத கவி தண்டி என்பவர், ‘அவந்திசுந்தரி கதாசாரம்’ என்ற நூலில் இவ்வூரை மஹாமல்லபுரம் என்று குறித்துள்ளார். 8-ஆம் நூற்றாண்டில் ஆண்ட பல்லவ மன்னனான நந்திவர்மன் பல்லவமல்லனுடைய கல்வெட்டு ஒன்று இவ்வூரில் காணப்படுகிறது. அதில் இவ்வூர் “நகரமான மாமல்லபுரம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. “நகரம்” என்பது வணிகப் பெருமக்கள் வாழும் பகுதியாகும். எனவே இவ்வூர் 8-ஆம் நூற்றாண்டிலிருந்து சிறந்த வாணிபத் தலமாகத் திகழ்ந்தது என்று அறியலாம். அதே காலத்தில் வாழ்ந்த வைணவப் பெரியாரான திருமங்கையாழ்வார் இந்நகரைக் ‘கடலமல்லை’ என்று குறிக்கிறார். கி.பி.11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட சோழப் பேரரசன் முதலாம் இராஜராஜனுடைய கல்வெட்டு இங்கு உள்ளது. அதில் இவ்வூர் ‘மாமல்லபுரமான நகரம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அதே கல்வெட்டில் மாமல்லபுரம், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, ஆமூர் கோட்டத்து, ஆமூர் நாட்டு, நகரம், ‘மாமல்லபுரமான ஜனநாதபுரம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஜனநாதன் என்பது முதலாம் இராஜராஜ சோழனுடைய பட்டப் பெயராகும். எனவே மாமல்லபுரம் இராஜராஜனுடைய 26-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவனுடைய ஜனநாதன் என்ற பட்டத்தைப் பெற்று ‘ஜனநாதபுரம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழகத்தில் மிகச் சிறந்த கலைப்பணி புரிந்தவர்கள் பல்லவர்களும், சோழர்களுமாவர். பல்லவர்களுள் மிகச் சிறந்த வீரன் மாமல்லன். சோழமன்னரில் தலைசிறந்தவன் இராஜராஜப் பெருந்தகை இவ்விரு பெருமன்னர்களுடைய பெயர்களையும் பூண்டு இவ்வூர் விளங்குவது பெருமைக்குரிய செய்தியாகும். சுமார் 16-ஆம் நூற்றாண்டு வரையில், அதாவது விஜயநகர மன்னர்களுடைய ஆட்சி வரையில், மாமல்லபுரம் என்றே இவ்வூர் அழைக்கப்பட்டது. இதையே மாவலிபுரம் என்றும் கொச்சையாக மக்கள் அழைத்தனர் போலும்! இந்தத் திரிந்த பெயரே பிற்காலத்தில் மஹாபலிபுரம் என்று மருவி வழங்கிற்று எனலாம். இங்கு மஹாபலியின் கதையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குகையில் திரிவிக்ரம அவதாரம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டே மாமல்லபுரத்தை மக்கள் மஹாபலிபுரம் என்று அழைத்தனர். 16,17-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வந்த மேலை நாட்டு மாலுமிகள் இதை மாவேலிவரோ என்று குறிப்பிட்டுள்ளனர். சங்க காலத்தில் மாமல்லபுரத்தைப் பற்றியும், அதனுடைய அமைப்பைப் பற்றியும் பண்டைய இலக்கியங்களிலிருந்தும், கல்வெட்டுகளிலிருந்தும் அறிகிறோம். சங்க காலத்தில் இந்தப் பகுதியைத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்டான். அவன் சோழர்களுடைய வழிவந்தவன். நாகப் பட்டினத்துச் சோழன் ஒருவன், பிலத்துவாரத்தின் வழியாக நாகலோகம் சென்று, அங்கு பீலிவளை என்பவளை மணந்தான். அவளுக்குப் பிறந்த குழந்தையை, என்செய்வது என்று அவள் கேட்க, தொண்டைக் கொடியை அடையாளமாகச் சுற்றிக் கடலிலே விட்டுவிடச் சொன்னான். அவ்வாறு கடலிலே விட்டு விட்ட குழந்தையைத் திரைகள் கரையிலே கொண்டு வந்து தள்ளியதால், அவனுக்குத் திரையன் என்று பெயர் வந்தது, என்று உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். அந்த மன்னன் ‘கிள்ளிவளவன்’ என்று, ஒட்டக்கூத்தருடைய உலாவிலிருந்து அறிகிறோம். “பிலமதனில் புக்குத்தன் பேரொளியால் நாகர் குல மகளைக் கைப்பிடித்த கோவும்” என்று விக்ரம சோழன் உலாவிலும், ‘பணம் புணர்ந்த மோலியான் கோமகளை பண்டு மணம் புணர்ந்த கிள்ளிவளவன்’ என்று குலோத்துங்க சோழன் உலாவிலும் அம்மன்னன் குறிக்கப்பட்டுள்ளான். கிள்ளிவளவன், கரிகால் பெருவளத்தானுக்குப் பின் தோன்றியவன் எனவே திரையன் கிள்ளிவளவனுடைய மைந்தன் என்பது புலனாகின்றது. கரிகால்பெருவளத்தான் இமயம் வரை சென்று அங்கு புலிக்கொடியை நாட்டினான் என்று நம் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. வடுகர் நாட்டின் பல பகுதிகளில் கரிகால சோழனின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன என்பது புலனாகிறது. தெலுங்கு நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் அனைவரும் கரிகாலனுடைய குலத்தில் வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்றனர். எனவே கரிகாலனுடைய குலத்துக்கும், அவன் ஆட்சிக்கு உட்பட்ட அரச குலங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது. கரிகாலன் ‘பல்லொளியர் பணிபொடுங்க, தொல் அருவாளர் தொழில் கேட்ப, வடவர் வாட, குடவர் கூம்ப, தென்னவர் திறல்கெடச் சீறீனான்’ என்று பட்டினப் பாலை குறிக்கிறது. எனவே கரிகாலனால் தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒளியர் என்பவரும் ஒருவரென்று அறிகிறோம். மாமல்லபுரத்தில் காணப்படும் இராஜராஜ சோழனுடைய கல்வெட்டில், ஒளிநாகன் நாராயணன், சங்கநாகன், முகலிநாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. எனவே கரிகாலனோடு வடதிசை வந்த கிள்ளிவளவன், இப்பகுதியை ஆண்ட நாகர் வம்சத்து அரசிளங்குமரியை மணந்திருக்கக்கூடும். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே திரையன் எனலாம். தொண்டைக்கொடியை அவன் அடையாளமாகச் சுற்றி வந்ததனால், அவன் ஆண்ட நாட்டுக்குத் தொண்டைநாடு என்று பெயர் வந்தது போலும்! எனவே அவன் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டான். தொண்டைமான் இளந்திரையனைப் பற்றிக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பெரும்பாணாற்றுப்படை என்ற நூலைப் பாடியுள்ளார். அந்நூலில் தொண்டைமானுடைய தலைநகரான கச்சியும், அதற்குச் செல்லும் வழியிலுள்ள ஊர்களும் குறிக்கப்பட்டுள்ளன. அதில் சிறப்பாகக் கடற்கரை ஓரத்தே உள்ள ஒரு துறைமுகப்பட்டினம் பாடப்பட்டுள்ளது. அதன் சிறப்பை நோக்கின், அது மாமல்லபுரமாகவே இருக்கலாம் என்ற ஐயம் தோன்றுகிறது. கச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்கள் தங்களை ‘மல்லையர் கோன்’ என்று குறித்துக் கொண்டனர். எனவே கச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தொண்டைமான் இளந்திரையனின் துறைமுகப்பட்டினம், மாமல்லபுரமாகவே இருக்கும் என்று கருதுவதில் தவறில்லை. இளந்திரையனை ‘மள்ளர் மள்ள’ என்று உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளது இங்கு குறிப்பிடத்தகும். மள்ளர் மள்ளனின் புரமே மாமல்லபுரமோ? பெரும்பாணாற்றுப்படையில் குறிக்கப்பட்டுள்ள சிறப்பு வருமாறு: நீர்ப்பேர் என்ற ஊரில், நீருண்ணும் துறையில், இளம் மகளிர் விளையாடச் சென்று நீராடினர். அப்பொழுது அவர்கள் கழற்றி வைத்த மீன் போன்ற காதணிகளைச் சிச்சிலிப்பறவை தன்னுடைய இரை என்று கருதி, கொத்திச் சென்றது. அருகிலே ஏராளமான பனைமரங்கள் இருந்தன. அவற்றில் பறவைகள் எல்லாம் சென்று அமர்ந்தன. அத்துறையிலே அந்தணர்கள் வேள்வி வேட்டுச் சென்ற யூபத் தூண்கள் இருந்தன. சிச்சிலிப்பறவை மட்டும் பனைமரத்தின் மீது அமராமல், அந்த வேள்வித்தூணின் மீது சென்று அமர்ந்தது. அதன் மூக்கில் மகரக்குழயைக் கொத்திக்கொண்டு, தூணத்தின் மீது அமர்ந்திருந்ததைப் பார்த்தால் யவனர்கள் கூம்பின் மீது வைக்கும் அன்னம் போன்ற விளக்குகளை ஒத்திருந்தது. அவ்வாறு விளங்கிய நீர்ப்பேர் என்ற ஊரின் எல்லையில், அப்பட்டினம் இருந்தது. அப்பட்டினத்தின் கடற்கரையில் மரக்கலங்கள் வந்து நின்றன. அந்த மரக்கலங்களில் உயர்ந்த ஜாதிக் குதிரைகளும், நல்ல வாசனைத் திரவியங்களும் வந்திறங்கின. அவ்வுயர்ந்த ரகக் குதிரைகள் மேலை நாடுகளிலிருந்து வந்தவை. வெண்மையான நிறமுடையவை. உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த குதிரைகள் என்பதற்கிணங்க, அவைகள் அடிக்கடி தலைகளை அசைத்துக் கொண்டேயிருந்தன. வாசனைத் திரவியங்கள் வடதிசையிலிருந்து வந்திறங்கின. இவ்வாறு மரக்கலங்களால் வாய்ந்த கடற்கரையின் அருகில், பல தெருக்களில் பரதவர்கள் வாழ்ந்தனர். அங்கு பல தொழில் செய்பவர்களால் காக்கப்படும் பண்டகசாலைகள் இருந்தன. உழவர்கள் எருதுகளைப் பூட்டி, நெல்லினைப் பெறுவதற்காக நிலங்களை உழுதனர். அங்கு நாய்களும், ஆட்டுக்கிடாய்களும், திரிந்தன. அதனருகில், சிறந்த வணிகப் பெருமக்கள் வாழ்ந்த மாடத் தெருக்கள் இருந்தன. உயர்ந்த மாடங்களில் மகளிர் வசித்தனர். அவர்கள் பொன்னாலான சிறந்த அணிகலன்களையும், மெல்லிய துகில் ஆடைகளையும், அணிந்திருந்தனர். இடையில் மணிகள் கோத்த வடங்களைத் தரித்திருந்தனர். கால்களில் பொன்னாலான சிலம்புகளை அணிந்திருந்தனர். நூலால் வரிந்து செய்யப்பட்ட பந்துகளை, அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு, மாடங்களில் ஆடி இளைத்தனர். பொன்னாற் செய்த கழலைக் கொண்டு ஆடினர். இத்தைகைய சிறப்பு வாய்ந்த வணிகர்கள் அப்பகுதியில் வாழ்ந்தனர். வணிகர்கள் வாழ்ந்த பகுதியைக் கல்வெட்டுகள் ‘நகரம்’ என்று குறிக்கின்றன. பிற்காலக் கல்வெட்டுகளில் மாமல்லபுரம், நகரம் என்று குறிக்கப்பட்டு உள்ளதெனக் கண்டோம். எனவே சங்ககாலத்திலிருந்தே இது வணிகர் நிறைந்த நகரமாகத் திகழ்ந்தது என்பது புலனாகிறது. அங்கு கள் விற்கும் மாடங்கள் இருந்தன. கள் விற்பதைக் குறிக்கப் பசிய கொடிகள் பறந்தன. அங்குள்ள முற்றங்களில் தெய்வத்திற்குப் பூக்கள் தூவப்பட்டன. மகளிர், மது விற்றனர். அவர்கள் வட்டில் கழுவிய நீர், பின்புறத்துச் சென்று தங்கியது. அதில் குட்டிகளோடு கூடிய பெண் பன்றிகள் விளையாடின. அதனால் அவ்விடம் சேறாயிற்று. ஆண் பன்றிகள் கொழுத்த சதையோடு வளர்க்கப்பட்டன. பெண் பன்றிகளுடன் புணராமல் அறைத்த மாவை உணவாகக் கொடுத்து குழிகளில், சிறிய காலை உடைய அப்பன்றிகள், வளர்க்கப்பட்டன. அவற்றின் தசைகளைக் கள்ளோடு பெண்கள் விற்றனர். இராக்காலங்களில் ஏணிகள் சார்த்திவைக்கப்பட்டிருந்த மிகவுயர்ந்த மாடங்களில், விளக்குகள் எரிக்கப்பட்டன. அவ்விளக்குகள், கடலில் வெகு தூரத்திலிருந்தே நன்கு தெரிந்தன. அக்காலத்தில் கடலில் செல்லும் பல கலங்கள் தாங்கள் அடைய வேண்டிய துறை எது என்று அறியாமல் சில கரைகளில் போய்த் தங்கும். அவை தாங்கள் அடைய வேண்டிய துறை அல்ல என்று அறிந்த பிறகு அவ்விடத்தை விட்டு நீங்கி வேறு துறைகளுக்குச் செல்லும். அவ்வாறு கலங்கள் அல்லலுறுவது உண்டு. ஆனால் அப்பட்டினத்தின் மாடங்களிலுள்ள விளக்குகள் கடலில் வெகு தூரத்திற்கு அப்பாலுள்ள கலங்களை ‘நீங்கள் அடையவேண்டிய கரை இதுதான்’ என்று அழைப்பவை போல், கலங்கரை விளக்கங்களாக விளங்கின. சற்று உட்புறத்தே உழவர்கள் வசிக்கும் மனைகளோடு கூடிய தோப்புகள் இருந்தன. அவர்களுடைய மனைகள் தென்னங்கீற்றுகளைக் கொண்டு வேயப்பட்டவை. அம்மனைகளின் முற்றங்களில் மஞ்சள் வளர்க்கப்பட்டது. சுற்றிலும் மணம் வீசுகின்ற பூந்தோட்டங்கள் இருந்தன. நல்ல பலாமரங்களில், நிலத்தைத் தொடும் தாழ்ந்த பெரிய பலாப்பழங்கள் தொங்கின. அவற்றின் சுளைகள் தெவிட்டாத சுவையுடையவை. அங்கு வளர்ந்து இருந்த தென்னை மரங்களிலிருந்து கிடைத்த இளநீர் மிகவும் இனிமையானது. ஏராளமான வாழைமரங்கள் அங்குண்டு. பெரிய முற்றிய பழங்களோடு கூடிய தார்களின் பாரத்தால், அம்மரங்களெல்லாம் வளைந்து காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நல்ல யானையின் வளைந்த தந்தங்களை ஒத்திருந்தன. அவ்வாழைகளில் பழுத்த பழங்கள் வெண்மை நிறமாகவும், தேன் போன்ற சுவையுடையனவாகவும் இருந்தன. நல்ல பனையின் நுங்கும், சேம்பு, வள்ளிக்கிழங்கு முதலியவைகளும் செழித்திருந்தன. அவ்வாரு இடைவிடாது புது வருவாயை உடையது அப்பகுதி, என்று உருத்திரங்கண்ணனார் சிறப்பித்துப் பாடியிருக்கிறார். யவனர்கள் அங்கு விளக்குகள் வைத்தனரென்றும், மேற்கு நாடுகளிலிருந்து குதிரைகள் வந்து இறங்கின என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. பிற தேசத்திலிருந்து வந்த பல வணிகர்கள், பேரிளமையர் என்று பெயர் பூண்டு இப்பகுதியில் கி.பி.10,11-ஆம் நூற்றாண்டுகளில் கூட வாழ்ந்து வந்தனர், என்று மாமல்லபுரத்தில் கிடைத்துள்ள இராஜராஜனுடைய கல்வெட்டிலிருந்து அறிகிறோம். தொண்டைமான் இளந்திரையனுக்குப் பின்னர் இப்பகுதியைத் தொடுகழற்கிள்ளியின் துணை இளங்கிள்ளி என்பவன் ஆண்டான் என்று அறிகிறோம். எனவே இந்நகர் சங்க காலத்தில் சோழருடைய ஆட்சியின் கீழிருந்தது என்பது புலனாகிறது. சுமார் கி.பி.275-ல் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைப் பிடித்துப் பல்லவப் பேரரசை நிலை நிறுத்தினர். அக்காலந் தொட்டு இது பல்லவர்களுடைய துறைமுகமாகத் திகழ்ந்தது எனலாம். பல்லவர் காலத்தில் பல்லவர்கள் பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் குலத்தை தோற்றுவித்தவர் பரத்வாஜ முனிவர் என்று அவர்களது செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கூறும். பரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். துரோணரின் மைந்தன் அச்வத்தாமா. அச்வத்தாமாவின் மகன் பல்லவன். பிறகு பல்லவ குலம் தோன்றியது என்பது அவர்களது மரபு. பல்லவன் என்று பெயர் பெற்ற காரணத்தை ஒரு செப்பேடும், ஒரு கல்வெட்டும் குறிக்கின்றன. ஆந்திர தேசத்தில், குண்டூர் மாவட்டத்தில், அமராவதி என்ற இடத்தில் பல்லவ மன்னன் ‘சிம்மவர்மன்’ என்பானின் கல்வெட்டு கிடைத்துள்ளது. அது பொருள் நிறைந்த சம்ஸ்கிருதச் செய்யுள்களாக உள்ளது. அதில் பல்லவன் தோன்றிய வரலாறு பின் வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. மதனி என்ற தேவமகள், பூவுலகின் அழகைக்கண்டு களிக்க தன் தோழியுடன் வந்தாள். பல மலைப்பகுதிகளையும், ஆறுகளையும், எழில் வனங்களையும் கண்டு வந்த அவள், மனதைப் பறிக்கும் ஒரு பூங்காவில் தங்கினாள். அங்கு அசோக மரம் ஒன்று இருந்தது. அதன் நிழலில் அமர்ந்தாள். அச்சூழ்நிலை அவளைப் பரவசப்படுத்தியது. அருகில் இருந்த குளத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் இணைந்து விளையாடுவதைக் கண்டாள். அது அவள் மனதில் இன்ப உணர்ச்சிகளை எழுப்பியது. தன்னை மறந்து அவற்றின் விளையாட்டில் லயித்திருந்தாள். அப்போது அச்வத்தாமா அங்கு வந்தார். அச்வத்தாமாவின் உருவம் மன்மதனின் உருவையும் தோற்கடிக்கும் வகையில் விளங்கிற்று. அவர் அழகில் மதனி மயங்கினாள். அவர்கள் இருவரும் ஒருவர்மீதொருவர் ஆறாக்காதல் கொண்டனர். அன்பு வாழ்க்கை நடத்தினர். உரிய காலத்தில் மதனி ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். பிறந்த குழந்தையைத் தளிர்களால் ஆன படுக்கையில் ஏந்தினர். தளிர்களைப் பல்லவம் என்பர். தளிர் படுக்கையில் தன் குழந்தை இருந்ததால் பல்லவன் என்று அச்வத்தாமா அழைத்தார். அது முதல் பல்லவ குலம் விளங்கலாயிற்று, என்று அக்கல்வெட்டு கூறுகிறது. நந்திவர்மனது வேலூர்பாளையம் செப்பேட்டில், பல்லவன் தோன்றிய வரலாறு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. துரோணரின் மகனான அச்வத்தாமா சிறந்த தவம் செய்தார். அவரது தவத்தின் பெருமையால் எங்கு தன் பதவி போய்விடுமோ என்று பயந்த இந்திரன், மேனகை என்ற பெண்ணை அனுப்பி அச்வத்தாமாவின் தவத்தைக் கலைத்தான். அச்வத்தாமா மேனகையின் அழகில் ஈடுபட்டார். அவர்களுக்குப் பிறந்த மகவு, தளிர்படுக்கையில் (பல்லவங்களில்) இருந்ததால் பல்லவன் எனப் பெயர் பெற்றான் என்று அச்செப்பேடு கூறுகிறது. பல்லவர்கள் ஒப்பற்ற கலைப்படைப்புகளைத் தோற்றுவித்துள்ளனர் என்று உலகம் போற்றுகிறது. அவர்கள் ஆளும் அரசர்களாயிருந்தும், தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்த நெறியும், குறிக்கோள்களும் அக்கலைப்படைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன என்றால் மிகையாகாது. அவர்களது செப்பேடுகளிலிருந்தும், கல்வெட்டுகளிலிருந்தும் பல்லவர் எத்தன்மையினர் என்பதை அறியலாம். பல்லவர் கடவுளிடம் என்றும் வளர்ந்துவரும் பக்திப் பெருக்கினால் எல்லா மங்கலங்களையும் அடைந்தவர்கள். சிவ பெருமானிடத்தும், திருமாலிடமும், முருகப்பெருமானிடத்தும் ஒருங்கமைந்த சிறந்த அன்பு பூண்டவர்கள். எனவே பரம மாகேச்சுரர், பரமபாகவதர், பரமபிரம்மண்யர் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். மக்களுக்குப் பெரும் காவலராகத் தொண்டு செய்வதே தங்கள் பணி என்ற ‘சத்ய பிரதிக்ஞை’ கொண்டவர்கள். தங்கள் குழந்தைகளை எவ்வாறு நேசிப்பார்களோ அவ்வாறு தன் குடிகளிடமும் எப்பொழுதும் அன்பு காட்டியவர்கள்1. உழு குடிகளிடம் சிறந்த அன்போடு இருந்தவர்கள். நூறாயிரக்கணக்கான "ஏர்களை தானம் செய்து பெருமை அடைந்தவர்கள்2 1 கருவூரேறிய கோப்பெருஞ்சேரலிரும்பொறையை நரிவெரூவுத் தலையார், “காவல் குழவி கொள்பவனின் ஓம்புமதி” தேயத்தைக் குழந்தையை வளர்ப்பவர்களைப் போல் வளர்ப்பாயாக; என்று பாடிய புறநானூற்றுச் செய்யுளை நினைவுறுத்துகிறது அல்லவா? 2. “நாஞ்சில் அல்லது படையும் அறியார்” என்ற சங்கச்செய்யுள் இதன் பெருமையை உணர்த்தும். ‘பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறந்தருகுவை’ ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைக்குடிகளையும் பாதுகாப்பாய் என்று கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியதும் ஈண்டு நினைவிற் கொள்ளல் தகும். இந்திரியங்களை வென்று மனதை அடக்கியவர்கள். காமம், குரோதம், பேராசை, மயக்கம், பயம் இவையற்றவர்கள். அறிஞர்களுக்குப் பெருமழைபோல் வழங்குபவர்கள். முதியோரைப் பேணுவதில் சிறந்தவர்கள். கல்விகளை ஆய்ந்து அறிந்தவர்கள். தருமத்தால் கலியின் கொடுமையைக் கடிந்தவர்கள். தங்கள் தோள்வலியால் பல அரசர்களை வென்றவர்கள். மெலிந்த அரசுகளை நிலைபெறச் செய்தவர்கள். பல்லாயிரம் பசுக்கள், பூமி, பொன் முதலியவற்றைத் தானமாக அளித்தவர்கள். அசுவமேதம் முதலிய பல வேள்விகளை வேட்டவர்கள். ராஜரிஷி என்று பெயர் பெறும் வகையில் ஆண்டவர்கள் என்று அவர்கள் கல்வெட்டுகளிலிருந்தும், செப்பேடுகளிலிருந்தும் அறிகிறோம். இவ்வளவு சிறப்போடு ஆண்டதால் அவர்கள் கலையார்வம் நிரம்பியவர்களாகத் திகழ்ந்தனர். அதற்குகந்த சூழ்நிலையை நாட்டில் தோற்றிவித்தனர். கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 600 ஆண்டுகள் சீரும் சிறப்புமாகத் தமிழகத்தின் வட பகுதியை ஆண்டு, ஒப்பற்ற கலைப்படைப்புகளை தோற்றுவித்து, தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்த இப்பல்லவர் யார்? பல்லவர்கள் யார் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. வட இந்தியாவில் இருந்த பஹலவர்களே, பல்லவர்கள் என்று ஒரு சாராரும்; மணிபல்லவம் என்ற தீவிலிருந்து வந்தவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இன்னும் சிலர் “கி.பி. முதல் இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் தட்சிணப் பகுதியில் சாதவாகனர்கள் என்ற மன்னர்கள் ஆண்டார்கள்; அவர்களுடைய பிரதிநிதிகளாகப் பல்லவர்கள் முதலில் இப்பகுதிக்கு வந்து, பிறகு தனியாட்சியை ஏற்படுத்தினார்கள்” என்று கருதுகின்றனர். இதற்குச் சான்றாகக் காஞ்சிபுரத்திலும், தெற்கே கடலூர் வரையிலும் சாதவாக மன்னர்களுடைய காசுகள் கிடைத்திருக்கின்றன என அவர் கூறுவர். முற்காலப் பல்லவர்களுடைய செப்பேடுகள் எல்லாம் பாகத(பிராகிருதம்) மொழியில் உள்ளன. தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலேயே இவை இதுகாறும் கிடைத்துள்ளன. பெரும்பிடுகு, பகாப்பிடுகு போன்ற இவர்களுடைய பட்டங்கள் தெலுங்கு கன்னடப் பகுதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன என்றும் கருதுவர். பல்லவர்கள் தமிழ்நாட்டு மக்களே. சங்க காலத்தில் ஆண்ட திரையர் வழிவந்தவர்களே என்று மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் பின் வரும் காரணங்களைக் குறிப்பர். ’திரையர்களுக்குத் தொண்டைமான் என்ற பெயருண்டு. பல்லவர்களுக்கும் தொண்டைமான் என்ற பெயர் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் எடுத்தாளப்படுவதைக் காண்கிறோம். தொண்டைமான் இளந்திரையனும், வேங்கடத்தை ஆண்ட புல்லி என்பவனும் நெருங்கிய உறவினர்கள். புல்லி என்பவன் கள்வர் பெருமகன் என்று சங்க நூல்கள் குறிக்கும். இன்றும் கள்ளர் குலப் பெருமக்கள் தங்களைத் தொண்டைமான்கள் என்று அழைத்துக் கொள்வதைக் காணலாம். பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற பட்டம் சிறப்பாகக் குறிக்கப்படும். கள்ளர் குலப் பெருமக்களுக்கும் காடுவெட்டிகள் என்ற பெயர் இன்றும் உள்ளதைக் காண்கிறோம். எனவே பல்லவர்க்கும் கள்ளர் குலத்துக்கும் உள்ள தொடர்பு புலனாகும் என்பர். பல்லவர்கள் பிராகிருதம், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் உபயோகித்தனர். அது அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப அமைந்ததே. தமிழ் வேந்தர்களாகிய சோழமன்னர்கள், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், சமஸ்கிருதத்தை உபயோகித்து இருக்கிறார்கள் அல்லவா? தெலுங்கு மன்னர்களாகிய விஜய நகரப் பேரரசர்கள், தமிழ் மொழியில் ஏராளமான கல்வெட்டுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள் அல்லவா! இவை அனைத்தும் அன்று நிலவிய சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்தவையே. எனவே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் வடமொழியை உபயோகித்திருக்கின்றனர் என்ற காரணத்தால் தமிழ் மக்கள் அல்ல என்று கூறுவது பொருத்தமல்ல. உண்மையில் பல்லவர்களது ஆட்சியில் தமிழ் மொழியே சிறந்த வளப்பம் பெற்றது என்பது கண்கூடு. சிறந்த சமண, பொளத்தக் காப்பியங்களும், தேவார திவ்யபிரபந்தங்களும் அக்காலத்தில்தான் தோன்றின. அவர்களுடைய பல கல்வெட்டுகளில் தூய தமிழ்பாக்கள் உள்ளதைக் காண்கிறோம். எனவே தமிழகத்தில் ஆண்ட திரையர்களே பல்லவர்கள் ஆவர்" என்று கூறுவர். எது எப்படியிருப்பினும், பல்லவர்கள் ஆளத்தொடங்கியது காஞ்சியிலிருந்துதான் என்பது வெளிப்படை. இவர்கள் தங்களுடைய வலிமையினால் தெலுங்கு கன்னடப் பகுதிகளில் பெருபகுதியைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு ஆண்ட அரசர்களின் பெண்களை மணந்தனர். எனவே தெலுங்கு-கன்னடப் பகுதிகளுக்கும், தமிழ் நாட்டுக்கும், ஒரு பெரும் இணைப்பை ஏற்படுத்தியவர்கள் பல்லவர்கள் என்பது தெளிவாகும். சதுரங்கப்பட்டணம் என்ற ஓர் ஊர் மாமல்லபுரத்துக்கு அருகே இருக்கிறது. அதனருகில் வயலூர் என்ற ஓர் ஊர் உள்ளது. அங்குள்ள ஒரு கல்தூணில் இராஜசிம்மப் பல்லவ மன்னனுடைய கல்வெட்டு காணப்படுகிறது. அதில் முதல் பல்லவன் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக ஐம்பத்திநான்கு பல்லவ அரசர்களுடைய பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. முதல் பல்லவனின் மகன் அசோகன் என்று குறிக்கப்பட்டுள்ளான். பல்லவ அசோகன் இந்திய நாட்டின் வட பகுதியில் ஆண்ட மௌரியப் பேரரசன் அசோகனின் சமகாலத்தவன் என்று கொள்ளலாம். அவனுக்குப்பின் பலர் தோன்றினர். அவர்களில் வீரகூர்ச்சன் என்பவன் நாகவம்சத்துப் பெண்ணை மணந்தான். அத்துடன் அரசனுக்குரிய சின்னங்களையும் பெற்றான். அவனுக்குப் பிறகு சுமார் கி.பி.300-ல் ஆண்ட ஸ்கந்த சிஷ்யன் என்பவன், சத்யசேனன் என்பவனிடமிருந்து கடிகையைப் பிடித்தான். அக்காலத்தில் கடிகை என்பது இக்காலப் பல்கலைக்கழகம் போன்றது. தனித்தன்மை பூண்டது. அதில் அந்தணர், அரசர், வணிகர் இவர்களது இளையோர்கள் தங்கள் தங்கள் கல்விகளைச் சிறப்பாகக் கற்றனர். வில்வித்தை, வாள்வித்தை முதலியவற்றின் சிறந்த பயிற்சிகளையும், அங்கேயே கற்றனர். எனவே நாட்டின் வருங்கால அமைச்சர்களும், அரசர்களும், வீரர்களும் அங்கே இருந்ததால் கடிகைகள் பலம் பொருந்தியவையாகத் திகழ்ந்தன. கடிகையைக் கைப்பற்றியதால் தன் பலத்தை ஸ்கந்தசிஷ்யன் பெருக்கிக் கொண்டான். ஸ்கந்தசிஷ்யனின் மகன் குமாரவிஷ்ணு என்பவன் காஞ்சியைக் கைப்பற்றினான். இதிலிருந்து தொடர்ந்து பல்லவர்கள் ஆண்டு வந்துள்ளனர். சுமார் கி.பி.360-ல் குப்தப் பேரரசனான சமுத்திரகுப்தன், தென்னாட்டின் மீது படையெடுத்தான். காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் என்பவன் அவனை எதிர்த்தான் என்று அலகாபாத் கல்வெட்டுக் கூறுகிறது. விஷ்ணு கோபனுக்குப் பிறகு பலர் தோன்றினர். கி.பி.6-ம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவர்மன் என்ற மன்னன் புகழோடு விளங்கினான். அவன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான் என்று அறிகிறோம். இவனுடைய மகனே கீர்த்தி மிக்க சிம்மவிஷ்ணு என்பான். இக்காலம் முழுமையும் மாமல்லபுரம், பல்லவர் ஆட்சிக்குட்பட்டே திகழ்ந்தது. சிம்மவர்மன் காலம் தொடங்கி அபராஜிதவர்மன் என்ற மன்னனின் காலம் வரை பல்லவரது ஆட்சியை வரலாற்று அடிப்படையில் தொகுத்துக் கூற பல சான்றுகள் உள்ளன. இம்மன்னர்களின் ஆட்சியில்தான் என்றும் கண்டிராத சிறப்பை மாமல்லபுரம் கண்டது. எனவே இக்காலத்தில் ஆண்ட மன்னர்களது பெயர்களையும், அவர்களது குலமுறைகளையும், அவர்களது ஆட்சியின் சிறந்த செயல்களையும் அறிவது அவசியம். அதன் அடிப்படையில்தான் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள இயலும். சிம்மவர்மன்: பத்து அசுவமேத யாகங்களையும், பஹுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தான். சிம்மவிஷ்ணு: 555-590? சிம்மவர்மனின் மகன் சிறந்த வீரன். காவிரிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவாக்கினான். களப்பிரர், பாண்டியர், சிங்களர் முதலியோரைத் தோற்கடித்தான். மாமல்லபுரத்தில் ஆதிவராஹக் குகையில் ‘சிம்மவிண்ணப் போத்ரதிராஜன்’ என்ற பெயருடன் உள்ள உருவச்சிலை இம்மன்னனுடையதே எனச் சிலர் கூறுவர். மகேந்திரவர்மன்: 590-630 சிம்மவிஷ்ணுவின் மகன். பலதுறைகளில் தேர்ச்சி பெற்று கலைக்குப் பெரும் தொண்டு புரிந்தவன். சிறந்த இசைப்புலவன். ‘சங்கீர்ணஜாதி’ என்ற பண்ணை இவனே அமைத்துச் சிறப்பெய்தியவன். இசைநூல் ஒன்றாக்கியவன். ஒப்பற்ற கவி. தர்க்க சாத்திரத்தில் சிறந்தவன். கட்டடக் கலையில் வல்லுநன். திருச்சி, மாமண்டூர், மண்டகப்பட்டு, வல்லம், பல்லாவரம் முதலிய பல இடங்களில் குகைக் கோயில்களைத் தோற்றுவித்தவன். ஓவியத்தில் வல்லுநன். சித்ரகாரப்புலி என்று அழைக்கப்பட்டவன். மகாசேத்தாகாரி, லலிதாங்குரன், போன்ற பட்டங்களைப் பூண்டவன். விசித்திரசித்தன் என்ற பட்டம் இவனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும். அப்பர் பெருமானால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டவன். இவன் மீது இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் போர்த்தொடுத்து காஞ்சி வரை முன்னேறினான். இவன் புலிகேசியைப் புள்ளலூர் என்ற இடத்தில் தோற்கடித்து விரட்டினான். மாமல்லபுரத்துப் பணி இவன் காலத்திலேயே தொடங்கியது என்றும், ஆதிவராகக் குகையில் ‘மகேந்திரப் ரோத்ரதிராஜன்’ என்ற பெயருடன் உள்ள உருவச்சிலை இவனுடையதே என்றும் சிலர் கூறுவர். முதல் நரசிம்மவர்மன்: 630-668 முதல் மகேந்திரவர்மனின் மகன். மாமல்லன் என்று சிறப்புப் பெயர் பூண்டவன். இரண்டாம் புலிகேசியை வென்று வாகை சூடினான். வாதாபி மாநகரைத் துகளடித்தான். அந்நகரில் நின்ற வெற்றித் தூணைக் கைப்பற்றினான். ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ என்ற பட்டம் கொண்டான். அந்நகரில் இவனது 13-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இலங்கை மன்னனான மானவர்மனுக்கு உதவியாக ஈழத்துக்கு தன் கடற்படையை இருமுறை அனுப்பினான். இரண்டாம் முறையில் வெற்றி கண்டான். அதன் பயனாக மானவர்மன் ஈழத்து அரியணை ஏறினான். ஈழத்தின் மீது படையெடுத்த பல்லவர் படை மாமல்லபுரத்திலிருந்துதான் சென்றது என்று சில ஆராய்ச்சியாளர் குறிப்பர். மாமல்லபுரம் இவன் பெயரால் சிறந்த துறைமுகமாகத் திகழ்ந்தது. முதலில் இவருக்குச் சேனைத்தலைவராக இருந்த பரஞ்சோதியாரே பிறகு சிறுத் தொண்டர் எனச்சிறப்புப் பெற்ற சிவனடியாராவர். மாமல்லபுரத்துச் சிற்பங்களையும், கோயில்களையும் தோற்றுவித்தவன் இவனே என்று சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பர். மாமல்லபுரத்திலுள்ள கல்வெட்டுகள் இவனுடய காலத்தைவையே என்பது அவ்வாராய்ச்சியாளர்களின் துணிபு. இரண்டாம் மகேந்திரவர்மன்: 660-671 மாமல்லனின் மகன். இரண்டு ஆண்டுகளே ஆண்டான். கடிகையைச் சீர்திருத்தினான். முதல் பரமேச்சுரவர்மன்: 671-700 இரண்டாம் மகேந்திரனின் மகன். இவன் ஆட்சியில் சாளுக்கிய மன்னன், முதல் விக்கிரமாதித்தன் காஞ்சி வரை வெற்றி கண்டான். தெற்கே காவிரி வரை முன்னேறினான். எனினும் முடிவில் பரமேச்சுரன் தன் படையைத் திரட்டி பெருவளநல்லூர்ப் போரில், விக்கிரமாதித்தனைத் தோற்கடித்தான். வாதாபி வரை துரத்தி அந்நகரைக் கைப்பற்றினான். இரணரசிகபுரத்தைக் கைப்பற்றியவன் எனப் பட்டம் கொண்டான். (இரணரசிகன் என்பது விக்கிரமாதித்தனின் பட்டம் ஆகும்). மாமல்லபுரத்தில், மாமல்லன் செய்த பணியை இவன் தொடர்ந்து செய்து முடித்தான் என்றும், இங்குள்ள கல்வெட்டுகள் இவனதே என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர். இரண்டாம் நரசிம்மவர்மன்: 690-728 பரமேச்சுரவர்மனின் மகன். இராஜசிம்மன் என்றும், அத்யந்தகாமன் என்றும் பட்டம் பெற்றவன். கடல் கடந்த லக்ஷத்தீவு முதலிய தீவுகளையும் ஆண்டவன். பல்லவநாட்டில் பேரமைதியை நிலை நிறுத்தியவன். ஒப்பற்ற கலாரசிகன். சிறந்த சிவ பக்தன். சிவசூடாமணி என்ற பட்டம் பூண்டவன். சைவ சித்தாந்தத்துறையில் பல நூல்களைக் கண்டறிந்தவன். மாமல்லபுரத்தில் கலைப்படைப்புகளைத் தோற்றுவித்தவன். காஞ்சி கைலாயநாதர் கோயிலையும், இன்னும் பனைமலை, வயலூர், திருப்போரூர் முதலிய இடங்களில் உள்ள கோயில்களையும் எழுப்பியவன். சீன மன்னனுக்கு நாகப்பட்டிணத்தில் பௌத்தப் பள்ளியை எழுப்ப அனுமதியளித்தவன். இவனுக்கும் “மாமல்லன்” என்ற பட்டம் சிறந்திருந்தது. இவன் அவையைத் ‘தண்டி’ என்ற சமஸ்கிருத கவி அலங்கரித்தார். அவர் ‘அவந்தி சுந்தரிகதா’, ‘அவந்தி சுந்தரிகதாசாரம்’ என்ற நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மாமல்லபுரத்தைப் பற்றி குறித்துள்ளார். அவர் வடமொழிக் காப்பியங்களுக்கு எழுதிய அலங்கார நூலே தமிழில் உள்ள ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலுக்கு முதல் நூலாகும். இரண்டாம் பரமேச்சுரவர்மன்: 728-730 சாளுக்கியர்களுடனும் கங்கர்களுடனும் போரிட்டவன். திருவதிகையில் கோயில் எழுப்பியவன். இவனுடன் சிம்ம விஷ்ணுவின் வழி முடிவடைந்தது. இரண்டாம் நந்திவர்மன்: 730-795 சிம்மவிஷ்ணுவின் உடன் பிறந்த பீமவர்மனின் வழியில் ஆறாவது தலைமுறையில் வந்தவன். இரண்யவர்மன் என்பவனின் மகன். பல்லவமல்லன் என்ற பட்டம் பூண்டவன். தனது 12-ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏறியவன். சாளுக்கியர், பாண்டியர், கங்கர், இராட்டிரகூடர் முதலியோருடன் பலமுறை போரிட்டவன். 65 ஆண்டு காலம் ஆண்டவன். காஞ்சி வைகுந்தநாதராலயத்தைக் கட்டியவன். மாமல்லபுரத்தில் இவனது 65-ஆம் ஆண்டுக் கல்வெட்டு உள்ளது. வைணவ ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை மன்னன், இம்மன்னனின் சமகாலத்தவர். அவர் மாமல்லபுரத்துப் பெருமான் மீது இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றில் கடல் மல்லையைப் பற்றி அழகாகக் குறித்துள்ளார். இம்மன்னன் காலத்தில் உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. தந்திவர்மன்: 796-847 இம்மன்னன் காலத்தில் பல போர்கள் நடந்தன. திரு வெள்ளறையில் சுவத்திகக் கிணறு தோண்டப்பட்டது. மூன்றாம் நந்திவர்மன்: 846-869 தெள்ளாற்றில் பாண்டியனை வென்று தெள்ளாறெறிந்த நந்தி எனப் பட்டம் பெற்றவன். வெறியலூர், கடம்பூர், பழையாறு, குருக்கோட்டை, வெள்ளாறு முதலிய பல போர்களில் பாண்டியனை வெற்றி கண்டவன். காவிரிப்பட்டிணம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ‘கடற்படை அவனி நாரணன்’ எனப் பட்டம் பூண்டவன். இவன் காலத்தில் பூப்புகாரிலிருந்து பல வணிகர்கள், சயாம் நாட்டில் தக்கோலம் என்ற இடத்தில் குடியேறினர். அங்கு விஷ்ணு கோயில் ஒன்று எழுப்பி மன்னனின் பெயரால் ‘அவனி நாரணம்’ என்ற ஏரியை தோண்டிவைத்தனர். இம்மன்னன்மேல் நந்திக் கலம்பகம் பாடப்பட்டது. இவன் ‘காவிரிவளநாடன்’ என்று அழைக்கப்பட்டதிலிருந்து சோழநாடு முழுவதும் இவன் ஆட்சியிலிருந்தது என்பது தெளிவு. இவன் காலத்திலும் மாமல்லபுரம் சிறப்புற்றிருக்க வேண்டும். இவன் கடல் மல்லைப் புரவலன், மல்லைக்காவலன், மல்லைவேந்தன், மல்லையர்கோன் என்று புகழப்படுவதிலிருந்து மாமல்லபுரம் எவ்வளவு சிறப்புற்றிருந்தது என்று அறியலாம். நந்திக்கலம்பகத்தில் மாமல்லபுரத்தைப்பற்றி அழகிய சில பாட்டுகள் உள்ளன. நிருபதுங்கள்: 865-906 சிறந்த வீரன். திருவதிகைக் கோயிலைப் புதுப்பித்தவன். மூன்றாம் நந்திவர்மனின் மகன். இவன் சிறுவனாக இருக்கும்போதே முடி சூடினான். பாண்டிய மன்னனான இரண்டாம் வரகுணனுக்கு உதவினான். இம்மன்னனுக்கு உதவியாக பாண அரசன் காடுவெட்டி முத்தரையன் என்பவனும் காடுவெட்டி தமிழ் பேரரையன் என்பவனும் துணை நின்றனர். கம்பவர்மன்: 868-900 இவனும் மூன்றாம் நந்திவர்மனின் மகனே. நிருபதுங்கனுக்கும் மூத்தவன். இவன் இருக்க நிருபதுங்கன் அரியணை ஏறியதால் அவனோடு போரிட்டு, வென்று கம்பவர்மன் அரியணை ஏறினான். அபராஜிதன்: 870-890 கம்பவர்மனுக்கு கங்க குலப்பெண் விஜயா என்பவளிடம் பிறந்தவன் அபராஜிதன். தன் தந்தையோடு இளம்வயதிலேயே இணைந்து ஆட்சிபுரிந்தவன். திருப்புறம்பியம் என்ற இடத்து பாண்டியனை வென்றான். சோழ மன்னன் ஆதித்தனால் கொல்லப்பட்டான். இம்மன்னன் காலத்தில் திருத்தணி வீரட்டானேச்சுரர் கோயில் கட்டப்பட்டது. சோழர் காலத்தில் கி.பி.850-ல் விஜயாலயன் என்ற மன்னன் தஞ்சையில் ஆண்ட முத்தரையர்களைத் தோற்கடித்து, தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசை நிலைநிறுத்தினான். விஜயாலயனுடைய மகன் ஆதித்த சோழன், அபராஜிதன் என்ற பல்லவ மன்னனைப் போரில் கொன்றான். அத்துடன் பல்லவப் பேரரசு முடிவடைந்தது. ஆதித்தன் சோழராட்சியை வடக்கே வேங்கடம் வரை பரப்பினான். ஆதித்த சோழனுடைய கல்வெட்டு மாமல்லபுரத்துக்கு அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் காணப்படுகிறது. எனவே ஆதித்தன் காலத்தில் மாமல்லபுரம் சோழர் கைக்கு மாறியது. அதிலிருந்து சுமார் 1250 வரை மாமல்லபுரம் சோழராட்சியிலேயே இருந்தது. ஆதித்தனுக்கு பிறகு பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், உத்தம சோழன் முதலியோர் ஆண்ட பிறகு, முதலாம் இராஜராஜன் சோழ அரியணை ஏறினான். அவனது ஆட்சியில் சோழப் பேரரசு மகோன்னத நிலையை அடைந்தது. தமிழகமெங்கும் கோயில்கள் ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்பெருந்தகையின் காலத்தில், மாமல்லபுரம் சிறந்த நிலையில் திகழ்ந்தது. சிறப்பாகக் கடற்கரைக் கோயிலில் வழிபாடு நடந்தது. அக்கோயிலுக்கு இராஜராஜனுடைய பெயரால் ஒரு நந்தவனம் அளிக்கப்பட்டது. அக்காலத்தில் புதுக்கூருடையான் ஏகதீரன் ஐய்ம்பதின்மன் என்பவன், சோழ அரசனின் அதிகாரியாக இங்கு இருந்தான். ஊர்க்கரணத்தானாக ‘திருவடிகள் மணிகண்டனானதிருவெள்ளறை மூவாயிரத்து எழுநூற்றுவன்’ என்பவன் இருந்தான். முதல் இராஜராஜசோழனுடைய ஜனநாதன் என்ற பட்டம் பெற்று இவ்வூர் ஜனநாதபுரம் என வழங்கலாயிற்று. இரண்டாம் இராஜராஜேந்திரசோழன் காலத்தில், திருவெழிச்சிலுடையான் ஜயங்கொண்ட சோழ ஆமுர் நாட்டு மூவேந்தவேளான் என்பவன் இவ்வூர் காரணத்தானாக இருந்தான். இந்நகரத்தார்களின் பெயர்களும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டாம் இராஜேந்திரன், முதற் குலோத்துங்கன், வீரராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. சோழப் பேரரசின் முடிவில் ஆண்ட மூன்றாவது இராஜராஜனுடைய ஆட்சி கலவரம் மிகுந்து விளங்கிற்று. விழுப்புரத்திற்கு அருகிலிள்ள சேந்தமங்கலம் என்ற இடத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த காடவர் (பல்லவர்) தலைவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன் தோன்றினான். அவன் ஆட்சி தொண்டை மண்டலம், தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் பரவி இருந்தது. அவன் சிறந்த வீரன். தன் பலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழப் பேரரசனையே சிறையில் வைத்தான். பிறகு போசள மன்னன் (ஹோய்சாள) நரசிம்மனின் உதவியால் சோழ மன்னன் மீட்கப்பட்டான். எனினும் கோப்பெருஞ்சிங்கன் பலத்தோடே விளங்கினான். அவனுடைய கல்வெட்டு ஏதும் மாமல்லபுரத்தில் காணப்படவில்லை. அவன் ‘மல்லையர்கோன்’ என்றும் மல்லாபுரி மாதவன்’ என்றும் பட்டம் பூண்டான். மாமல்லபுரம் கோப்பெருஞ்சிங்கன் காலம் முழுவதும் அவன் ஆட்சியின் கீழிருந்தது. பாண்டியர் காலத்தில் 1250 வரை புகழ் மங்கியிருந்த பாண்டியர்கள் மீண்டும் தலை தூக்கினர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் சோழர்களைத் தோற்கடித்துக் காடவன் கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்தான். அவனுக்குப் பிறகு மாறவர்மன் குலசேகரன் ஆண்டான். அவனும் சிறந்த வீரன். அவன் ஆட்சி முழுவதும் மாமல்லபுரம் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மாறவர்மன் குலசேகரன் 1309-ல் இறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்றும், சுந்தரபாண்டியன் என்றும் இரண்டு மக்கள். வீரபாண்டியன் உறையூருக்கு அருகில் வீர தவளப் பட்டினம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு நாட்டின் வடபகுதியை ஆண்டான். அவன் ஆட்சிக்குக் கீழ் காஞ்சியும், மாமல்லபுரமும் இருந்தன. தெற்கே மதுரையைத் தலைநகராகக் கொண்டு சுந்தரபாண்டியன் ஆண்டான். சுந்தரபாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் உட்பகை இருந்தது. அப்போது டில்லி சுல்தானின் பிரதிநிதியாக மாலிக்காபூர் என்பவன் தக்காணத்தின் தென்பகுதியில் இருந்தான். சுந்தரபாண்டியன் அவன் உதவியை நாடினான் என்று சிலர் கருதுகின்றனர். அதன் பயனாக 1310-ல் மாலிக்காபூர் உறையூர் மீது படையெடுத்து வீரபாண்டியனைக் கைது செய்ய முயன்றான். அவன் கையிலகப்படாமல் வீரபாண்டியன் தப்பி ஓடிவிட்டான். பின்னர் காபூர் காஞ்சியின் மீது படையெடுத்து வீரபாண்டியைக் கைது செய்ய முனைந்தான். அங்கிருந்தும் வீரபாண்டியன் தந்திரமாக வெளியேறிவிட்டான். சீற்றமடைந்த மாலிக்காபூர் உறையூருக்குத் திரும்பி, சுந்தரபாண்டியன் மீதே படையெடுத்து மதுரை வரை சென்றான். சுந்தரபாண்டியனும் மதுரையிலிருந்து தப்பி விட்டான். ஆனால் இதுகாறும், அண்ணன் தம்பி சண்டைகளில் தலையிடாதிருந்த விக்கிரம பாண்டியன் என்ற அவர்களின் சிறிய தந்தை, நாட்டுக்கேற்பட்ட அவலநிலையைக் கண்டு ஒரு பெரும் படையைத் திரட்டி மதுரையின் புறத்தே மாலிக்காபூரோடு பெரும் போர் தொடுத்தான். விக்கிரம பாண்டியனின் வீரத்தின் முன் மாலிக்காபூரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தக்காணம் முழுவதையும் வென்று மதுரை வந்த வீரனான மாலிக்காபூர் பெரும் தோல்வியடைந்து ஓட்டம் பிடித்தான். போகும் வழியில் அகப்பட்ட பொருள்களைச் சுருட்டிக்கொண்டு டில்லிக்கு ஓடிவிட்டான். மாலிக்காபூரின் ஊடுருவல் ஓராண்டு காலம் தமிழகத்தைக் குலைத்தது. விரைவிலேயே வீரபாண்டியன் வெளிப்போந்து காஞ்சியிலிருந்து உறையூர் வரை ஆண்டான். 1325வரை இப்பகுதியை வீரபாண்டியனே ஆண்டு வந்தான். சோழப் பேரரசை வீழ்த்திய ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய கல்வெட்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அது இம்மன்னனுடைய 13-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சுந்தரபாண்டிய தேவரின் திருமேனிக்கு நன்றாகக் கடல்மல்லைப் பெருமானுக்கு ஒரு விசேஷ வழிபாட்டை ஆமூர் நாட்டுப் பெய்யனூரான ராஜகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையோர் ஏற்படுத்தினர் என்ற செய்தியைக் காண்கிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசை வீழ்த்தியபோது, நெல்லூர்ப் பகுதியை ஆண்டு வந்த தெலுங்குச் சோழர் கண்டகோபாலன் என்பவனையும் தோற்கடித்தான். தெலுங்குச் சோழர்கள், சோழப் பேரரசர்களுக்கு உறுதுணையாக இப்பகுதியில் இருந்தவர்கள். அவர்களில் மிகச் சிறந்தவன் கண்டகோபாலன் என்பவன். சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இப்பகுதியில் கண்டகோபாலன் மிகச் செல்வாக்குடன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டு ஒன்றும், மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. அது இக்கோயிலில் விளக்கு எரிப்பதற்குக் கொடுத்த பரிசைப் பற்றிக் குறிக்கிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்பட்டவர்களுள், காடவர் தலைவன் கோப்பெருஞ்சிங்கன் என்பவனும் ஒருவன். அவன் மல்லைக்காவலன் என்றும் மல்லாபுரி மாதவன் என்றும் பட்டம் பெற்றிருந்தான் என்று முன்பே கண்டோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலம் தொடங்கி வீரபாண்டியன் காலம் முடிய, மாமல்லபுரம் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சம்புவராயர் காலத்தில் 1326-ல் டில்லியில் ஆண்ட முகம்மது துக்ளக், உலூக்கான் என்பவனை அனுப்பிக் காஞ்சியைக் கைப்பற்றினான். 1326-லிருந்து 10 ஆண்டுகள் இப்பகுதி துக்ளக் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது பல்லாளன் என்ற போசள மன்னன் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். போசள மன்னர்களுக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனவே பல்லாளன் காஞ்சியின் மீது படையெடுத்து அதை டில்லி ஆட்சியிலிருந்து மீட்டான். அப்போது சம்புவராயர்கள் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதியிலிருந்தனர். இவர்கள் சோழரட்சியிலிருந்தே செங்கற்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் சிற்றரசர்களாக வாழ்ந்தார்கள். சம்புவராயரைக் காஞ்சியில் மறுபடியும் ஆளும்படி பல்லாளன் வகை செய்தான். சம்புவராயர்களில் சிறந்தவர் இராஜநாராயணன் சம்புவராயர் என்பவர். பாண்டியரகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகரப் பேரரசின் தோற்றம் வரை இவர் இப்பகுதியில் ஆண்டு வந்தார். இவருடைய கல்வெட்டுகள் மாமல்லபுரத்திலுள்ளன. அவற்றில் ஒன்று, சக வருடம் 1275ல் இவருடைய 13ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. அதிலிருந்து இவர் கி.பி.1340-ல் பட்டத்துக்கு வந்தார் என்று அறிகிறோம். இவருடைய 3வது, 5வது, 13வது ஆண்டு கல்வெட்டுகள் மாமல்லை உலகுய்யநின்ற நாயனாருக்கும், நிலமங்கை நாச்சியாருக்கும், திருவாராதனைகளுக்கும், திருப்பணிகளுக்கும் கொடுத்த மான்யங்களைக் குறிக்கின்றன. இதிலிருந்து மாமல்லபுரத்தின் மத்தியில் இப்போது வழிபாட்டிலிருக்கும், பெருமாளுக்கு உலகுய்யநின்ற நாயனார் என்ற பெயரும், நாச்ச்சியாருக்கு நிலமங்கை நாச்சியார் என்ற பெயரும் இருந்தன என அறிகிறோம். சகலலோகச் சக்கரவர்த்தி, இராஜநாராயணன் சம்புவராயர், சுமார் முப்பது ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டார். அதன் பிறகு மாமல்லபுரம், விஜயநகரப் பேரரசின் கைக்கு மாறியது. விஜயநகர் காலத்தில் கி.பி.1336-ல் விஜயநகரப் பேரரசு ஹரிஹரன், புக்கன் என்ற மன்னர்களால் நிருவப்பட்டது. புக்கனுடைய மகன் குமாரகம்பண்ணன் என்பவன், தமிழகம் முழுவதையும் விஜய நகரப் பேரரசுடன் இணைக்கக் கிளம்பினான். முதலில் காஞ்சியில் ஆண்ட சம்புவராயரைத் தோற்கடித்து அப்பகுதியை 1365-ல் கைப்பற்றினான். அதிலிருந்து இப்பகுதி சுமார் 1675 வரை, முன்னூறு ஆண்டுகள் விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்தது. விஜயநகர மன்னர்கள், நேர்முகமாகவும், தங்கள் பிரதிநிதிகளான நாயக்கர்கள் மூலமும், இப்பகுதியை ஆண்டு வந்தனர். விஜயநகரப் பேரரசுக்கும், பாமினி சுல்தான்களுக்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்தது. அப்போர்கள் பெரும்பாலும் ஆந்திர தேசத்திலும், கர்னாடக தேசத்திலுமே நிகழ்ந்தன. எனவே தமிழ்ப் பகுதி விஜயநகரப் பேரரசர்கள் கையிலேயே இருந்தது. விஜயநகர அரசர்களில், அச்சுதராயர், விரூபாக்ஷராயர், ஸ்ரீரெங்கதேவர், வேங்கடபதிராயர் ஆகிய அரசர்கள் மாமல்லபுரத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலத்தில் மாமல்லபுரம் படைவீட்டு ராஜ்யம் என்ற பெரும் பகுதியில் இருந்ததாக அறிகிறோம். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் படைவீட்டு ராஜ்யத்து, ஆமூர் கோட்டத்து, ஆமூர் நாட்டு, ஆயிரவேலிப்பற்றில், பூஞ்சேரி சீர்மை இருந்தது என்று அவர்கள் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். இக்கல்வெட்டுகள், கடல்மல்லைத் தலசயனப்பெருமாளுக்கு, திருவிழாக்களுக்காகவும், திருவாராதனைகளுக்காகவும் அளிக்கப்பட்ட மான்யங்களைக் குறிக்கின்றன. ஒரு கல்வெட்டில், வேங்கடபதி தேவர் தாமே மான்யம் அளித்தார் என்றும், அவருடைய தளவாயாக இங்கு பணிபுரிந்த திருமலை நாயக்கர், இதற்கு ஆவன செய்தார் என்றும் அறிகிறோம். விஜயநகரப் பேரரசின் ஆட்சி முழுவதும், மாமல்லபுரம், அம்மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்த சமயம், முகலாயப் பேரரசனான ஒளரங்கசீப் டில்லியில் ஆண்டான். வீரனான அவன் மொகலாயப் பேரரசை பெருமளவில் பரப்பினான். தமிழ் நாட்டிலும் பல பகுதிகள் ஒளரங்கசீப்பின் வசமாயின. சுமார் 1695-ல் தெற்கே தஞ்சையைத் தாண்டி மதுரை வரை அவன் ஆட்சி எட்டியது. எனவே சில காலம் மாமல்லபுரம் ஒளரங்கசீப்பின் கீழிருந்தது. ஒளரங்கசீப் இறந்தவுடன் மொகலாயப் பேரரசு குலைந்தது. தக்காணப் பகுதியை ஆண்ட நைஜாம், தனியாட்சியை ஏற்படுத்தினார். நைஜாமின் ஆட்சிக்குள் தமிழ்ப் பகுதிகளும் சேர்ந்தன. நைஜாமின் பிரதிநிதியாக ஆற்காட்டைத் தலைநகராகக் கொண்டு நவாப்புகளும் ஆளத்தொடங்கினர். பின்னர் ஆற்காட்டு நவாப்புகளும் தனியாட்சி செய்ய முற்பட்டனர். எனவே மாமல்லபுரம் 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்புகளின் ஆட்சியிலிருந்தது. அக்காலத்தில்தான் பிரஞ்சிந்தியக் கம்பெனியாரும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரும், தமிழகத்திற்கு வாணிகத்திற்காக வந்தனர். நைஜாமுக்கும், நவாப்புகளுக்கும் ஏற்பட்ட ஆட்சிப் போராட்டங்களில் பிரஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் தலையிட்டனர். முதலில் பிரஞ்சுக்காரர்களின் கை ஓங்கியிருந்தது.முடிவில் ஆங்கிலேயர்கள் பெரும் வெற்றி பெற்று விரைவில் இந்தியநாடு முழுவதையுமே கைப்பற்றி விட்டனர். மாமல்லபுரம், 19-ஆம் நூற்றாண்டு முழுவதிலும், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சுமார் 150 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. மாமல்லபுரத்தின் வரலாற்றில் இக்காலம் முக்கியம் வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதுகாறும் நம்மவர்களின் கவனத்தையே ஈர்த்த மாமல்லபுரம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்த காலம் இதுவே. முதலில் இக்கலைச் செல்வங்களைக் கண்டு களித்தவர்கள், கடலில் கலங்களில் வந்த மாலுமிகளே. கலங்களில் இருந்தவர்களை, இங்கிருக்கும் கோயில்கள் கவர்ந்தன. கடலில் சற்றுத் தொலைவில் செலபவர்களுக்கு ஏழு விமானங்கள் [கடற்கரைக் கோயிலுள்ள இரண்டு விமானங்களும், ஐந்து இரதங்களும்] தெளிவாகத் தெரியும். எனவே கடல் மாலுமிகள் இதை ஏழு பகோடாக்கள் என்றனர். ‘ஏழு பகோடாக்கள்’, சான்தோமிலிருந்து ஏழு லீக்குகள் தொலைவும், ‘சதுரபடோ’ [சதுரங்கபட்டினத்திலிருந்து நான்கு லீக்குகள் தொலைவும் இருந்தது என்று அவர்கள் குறித்தனர். பகோடா என்று அவர்கள் அழைத்தது கோயில்களையே. மாமல்லபுரத்தையே ஏழு பகோடாக்கள் என்று தான் அழைத்தனர். சில கலங்கள் கடலில் மாமல்லபுரம் வழியாகச் செல்லும்போது, கடற்கரைக் கோயிலின் எதிரே வந்தவுடன், அதிலிருந்த மாலுமிகள் ‘செல்யூட்’ அடித்துவிட்டு மேல் சென்றனர் என்று அவர்களின் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். உலக நாடுகளில் எங்கும், சிறப்பாக இங்கிலாந்து, பிரான்சு முதலிய நாடுகளில், மாமல்லபுரத்தின் சிறப்பு பரவலாயிற்று. அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர்கள் இங்குள்ள சிற்பங்களைக் காண விழைந்தனர். அக்காலத்தில் இங்கு செல்வது கூட அவ்வளவு எளிதல்ல. பலர் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகப் படகுகளிலேயே மாமல்லபுரம் சென்றனர். எனினும் இங்கு வந்து செல்லும் வெளிநாட்டாரின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்தது. பலர் பல கோணங்களிலிருந்து மாமல்லையின் எழிலை ரசித்துக் கட்டுரைகள் அச்சிட்டுள்ளனர். இங்குள்ள சிற்பங்களை சித்திரங்களாக வரைந்து அச்சிட்டனர். அப்போது நிழற்படம் எடுக்கும் முறையும் புதிதாக வளரத் தொடங்கவே மாமல்லபுரத்துச் சிற்பங்களின் நிழற்படங்களைத் தங்கள் நாட்டிலிருந்தே பார்க்கும் வாய்ப்பு பலருக்குக் கிடைத்தது. இந்திய நாட்டில் காணப்படும் ஏராளமான சின்னங்களின் பெருமையுணர்ந்து அவற்றைக் காத்தல் கடன் என்று மனதார எண்ணி அதற்குரிய சட்டத்தைக் கொண்டு வந்தவர் லார்டு கர்சன் பிரபு ஆவார். இப்பெருமகனுக்கு இந்திய நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை ஏற்படுத்தப்பட்டு, அதன்படி வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துவிடாமல் காக்க வழி வகுக்கப்பட்டன. இத்துறை மாமல்லபுரத்தில் மண்ணுக்குள்ளே புதைந்து கிடந்த பல பகுதிகளை வெளிப்படுத்தி அவற்றைக் காக்க ஆவன செய்தது. கடற்கரைக் கோயில் கடல் அலைகளால் அழிந்து விடாமல் வேண்டிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இக்கோயிலில் இடிந்திருந்த பல பகுதிகள் சீராக்கப்பட்டன. வரலாற்று அடிப்படையில் இச்சிற்பங்களைப் பற்றிய நூல்கள் தோன்றின. அக்காலத்தே கல்வெட்டாராய்ச்சி என்ற ஒரு புதிய துறையும் உருவாகியது. பல அறிஞர்கள் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்ந்து, இவற்றின் வரலாற்றை எழுத முனைந்தனர். இங்கு உள்ள கலைச்செலவங்கள் சுமார் 1250 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஆண்ட பல்லவ குலத்தாரால் தோற்றுவிக்கப்பட்டவை என்ற வரலாற்று உண்மையையும் அறிய முடிந்தது. இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மாமல்லபுரம் மக்களாட்சியிலிருக்கிறது. நம் நாட்டு மக்கள் ஏராளமாக இங்கு வந்து, எழிற்படைப்புகளைக் கண்டு பெருமிதத்துடன் செல்கின்றனர். மாமல்லையினருகில் அணுசக்தி உற்பத்திச் சாலை உருவாகியுள்ளது. இந்நகரின் சிறப்பை இன்னம் அதிகப்படுத்தியுள்ளது. தமிழகத்துக் கட்டடக் கலையிலும், சிற்பக்கலையிலும் இதுவரை அழியாது எஞ்சியுள்ளவற்றில் மிகப்பழமையானவை மாமல்லபுரத்தில்தான் உள்ளன. தமிழகக் கலைகளின் வரலாற்றை மாமல்லைக் கலைகளிலிருந்துதான் தொகுத்துக் கூற முடிகிறது. பல்லவர்கள் இக்கலைகளைத் தோற்றுவித்த காலத்தில், தமிழகத்தின் தலை சிறந்த சிற்பிகள் அனைவரும் மாமல்லையில் பணிபுரிந்திருக்கின்றனர். தஞ்சை, தில்லை, மதுரை முதலிய நகர்களில் அழியாப் புகழ் பெற்ற சிற்பங்களைத் தோற்றுவித்தவர்கள் மாமல்லைச் சிற்பிகளின் வழிவந்தவர்களே. எனவேதான் தமிழக அரசு இன்றும் மாமல்லையில் ஒரு சிற்பப் பள்ளியை நிறுவி வருங்காலச் சிற்பிகளை உருவாக்குவதில் முனைந்துள்ளது. பல்லவ மன்னர்கள் தோற்றுவித்த கலைச்செல்வங்கள், தமிழ் மக்களின் செல்வங்களாகி, இந்திய மக்களின் செல்வங்களாகப் பரிணமித்து, இன்று உலக மக்களின் செல்வங்களாகத் திகழ்கின்றன. அவந்தி சுந்தரி கதையில் மாமல்லபுரத்தைப் பற்றி கீழ்வரும் வரலாறு அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற நூலில் காணப்படுகிறது. அர்ச்சுனனுக்கு சிவபிரான் பாசுபதாத்திரம் கொடுப்பதைச் சித்தரிக்கும் சிறந்த வடமொழி நூல், கிராதார்ஜுனீயம் என்பது. இந்நூலை இயற்றியவர் பாரவி என்ற கவி. இவர் சம்ஸ்கிருத கவிகளில், காளிதாசனுக்கு அடுத்துச் சிறந்தவராகக் கருதப்படுகிறார். இப்புகழ் வாய்ந்த கவியைப் பற்றி அய்ஹொளே கல்வெட்டு குறிக்கின்றது. இவர் சாளுக்கிய மன்னனான விஷ்ணுவர்தனனுடைய அவையிலிருந்தார். அவருடைய நண்பர் தாமோதரன் என்ற கவி. தாமோதரன் இளவரசனோடு ஒரு சமயம் வேட்டைக்குச் சென்றார். அப்போது வேறு ஆகாரம் கிடைக்காமல் புலால் உணவை உண்ண நேர்ந்தது. எனவே தன் பெரியோர்களிடம் திரும்பிச் செல்ல வெட்கி, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அப்போது கங்க இளவரசன் துர்விநீதன் என்பவன் தன் தந்தையிடம் ஏற்பட்ட மனத்தாங்கலால் வனப்பகுதியில் வசித்து வந்தான். துர்விநீதன் தாமோதரனைச் சந்திக்க நேர்ந்தது. தாமோதரனின் நாவன்மையை அறிந்த துர்விநீதன் அவரைப் பல்லவ மன்னனுக்கு அறிமுகப்படுத்தினான். தாமோதரன் பல்லவ மன்னனுக்கு ஓர் ஓலை அனுப்பினார். அதில் கண்ட கவிநயத்தையும், பொருள் சிறப்பையும் உணர்ந்த பல்லவப் பேரரசன் தாமோதரனை அழைத்துத் தன் அவையில் இருத்திக் கொண்டான். தாமோதரனுக்கு மனோரதன் என்ற மகன் பிறந்தான். மனோரதனுடைய நான்காவது மைந்தன் வீரதத்தன் என்பவன். அவனுக்குக் கௌரி என்ற பெண்ணிடத்தில் பிறந்தவன் தண்டி என்பான். தண்டி சிறுவனாகயிருக்கும்போதே தந்தையையும் தாயையும் இழந்தான். அவனைக் கலைமகளும் கல்வியுமே வளர்த்தன. அப்போது காஞ்சி எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. எதிரிகள் சோழநாடு, பாண்டிநாடு வரை கைப்பற்றினர். நாடு சீர்குலைந்த காரணத்தால், காஞ்சியை விட்டு நகர மக்கள் வெளிப்போந்தனர். அவர்களில் தண்டியும் ஒருவர். இதன் காரணமாகத் தண்டி இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல கலைகளைக் கற்க முடிந்தது. எதிரிகள் நீங்கி காஞ்சியில் பல்லவப் பேரரசு மீண்டும் உன்னத நிலையை அடைந்தது. அப்போது தண்டி காஞ்சியை அடைந்து பல்லவர் அவையை அலங்கரித்தார். தண்டி சிற்ப நூல்களில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு சமயம் லலிதாலயன் என்ற ஸ்தபதி அரசவைக்கு வந்து நின்றான். ’இவன் மாந்தாதா என்ற சிறந்த ஸ்தபதியின் மகன். வாஸ்து நூல்களை நன்கு கற்றவன். தொண்ணூற்றாறு விதமான பிராஸாதங்களை நிர்மாணிக்கவல்லவன். தேர், ஊர்திகள், ஆசனங்கள், கட்டில்கள் முத்லியவற்றை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவன். முப்பத்தாறு ஆசார்ய குணங்களைப் பெற்றவன். சிற்பப் படைப்புகளில் பல சிறந்த தோற்றங்களைப் படைத்தவன். தெய்வத்தச்சனுக்குச் சமமானவன். யவனர்களையும் தன்னுடைய கலைத்திறனால் தோற்கடிக்கக் கூடியவன். இவனுடைய படைப்புகள் எல்லாம் இந்திரஜாலம் போன்றவை. பார்ப்பவர் மனத்தை என்றென்றும் உற்சாகப் படுத்தக் கூடியவை’ என்று அருகிலுள்ளோர் கூறினர். லலிதாலயன் ‘நான் மாமல்லபுரத்திலிருந்து வருகிறேன். அங்கு பல கலைப்படைப்புக்களைப் படைத்துள்ளேன். அங்கே கடலினருகில் பள்ளிகொண்ட பெருமாள் சிற்பத்தின் கை மணிக்கட்டு எக்காரணத்தாலோ உடைந்து போயிற்று. அது உடைந்த இடத்தை நான் திருத்தி அமைத்திருக்கிறேன். இதை நீங்கள் வந்து பார்த்தால் என் மனதுக்கு ஊக்கமளிப்பதாயிருக்கும்’ என்று தண்டியினிடத்தில் கூறினான். அப்போது தண்டியினருகில் பல்லவ சேனாதிபதியினுடைய மைந்தன் ராமசர்மன் என்பவன் இருந்தான். அவன் அவ்வழைப்பை ஏற்றுக் கொள்ளும்படி தண்டியை வேண்டினான். மறுநாள் தண்டி நண்பர்களோடு மாமல்லபுரம் சென்றார். அங்கு தன் அலைகளாகிய கரங்களை நீட்டி நடமாடும் மகளைப் போல் விளங்கிய கடலைக் கண்டு மகிழ்ந்தார். அருகில் அரசனுடைய மிகச் சிறந்த மாளிகையைக் கண்டார். அதன் பிறகு கரையோரமாகச் சென்று திருமாலின் ஆலயத்தை அடைந்தார். திருமாலின் பாதகமலங்களை அலைகள் வந்து வருடிச் செல்வதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். ஒப்பற்ற அந்தச் சிற்பியால், உடைந்தது தெரியாமல் இணைக்கப்பட்ட மணிக்கட்டையும் கண்டு ஆச்சிரியத்தில் மூழ்கி, அவனைப் புகழ்ந்தார். அதுசமயம் கடல் அலை ஒரு தாமரை மலரைத் திருமாலின் காலடியில் கொணர்ந்து விட்டது. அம்மலர் ஒரு வித்யாதரனாக மாறி, விண்ணகத்தே கிளம்பி திருமாலை வணங்கி மறைந்தது. இந்நிகழ்ச்சியின் அடிப்படையில்தான் அவந்தி சுந்தரி கதா, அவந்திசுந்தரி கதாசாரம் என்ற இரண்டு நூலகளையும் தண்டி எழுதினார். அவற்றில் தண்டியாலேயே குறிக்கப்பட்டுள்ள மேற்கண்ட வரலாறு மாமல்லபுரத்தைப் பற்றி அறிய மிகவும் உதவுகிறது. ஆழ்வார் பாசுரங்களில் திருமாலின் அடியவர்களாகச் சிறந்த பாசுரங்கள் பாடி, பக்தி நெறியைப் பரப்பிச் சிறந்தவர்களே ஆழ்வார்களாவர். அவர்களில் பூதத்தாழ்வார் என்ற பெரியார் மாமல்லபுரத்தில் பிறந்தவர். அவர் தன் பாசுரங்களில் கடல்மல்லையைப் பாடியுள்ளார். தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளும் தண்பொருப்பு வேலை-தமருள்ளும் மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல எந்தைக் கிடம். -இயற்பா 20. இப்பாசுரத்திலிருந்து பூதத்தாழ்வாருக்கும் முன்பிருந்தே மாமல்லை சிறந்த வைணவத்தலமாகத் திகழ்ந்தது என்றும், அவர் காலத்தே இந்நகருக்கு மாமல்லை என்ற பெயர் சிறந்து இருந்தது என்றும் காணலாம். பூதத்தாழ்வார் வாழ்ந்த காலத்தைக் குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. பூதத்தாழ்வார் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று, சிலர் கருதுகின்றனர். இவர்கள் கருத்துப்படி மாமல்லபுரத்திற்கு ‘மாமல்லை’ என்ற பெயர் முதல் நரசிம்மனுக்கும் முன்பே இருந்தது என்பதாகும். முதல் நரசிம்மனாகிய மாமல்லன் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் ஆண்டான் என்று அறிவோம். மற்றும் சிலர், இந்நகருக்கு ‘மாமல்லை’ என்ற பெயர் மாமல்லன் காலத்தில்தான் ஏற்பட்டது என்றும், பூதத்தாழ்வார் ’மாமல்லை’யைக் குறிப்பதால், மாமல்லனுக்கு பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்றும் குறிக்கின்றனர். எப்படி இருப்பினும், பூதத்தாழ்வார் அவதரித்ததாலும், அவர்தன் பாசுரத்தில் பாடியிருப்பதாலும் மாமல்லையின் சிறப்பு தெளிவாகிறது. பூதத்தாழ்வாரைப் பற்றித் திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவர் ஒரு தனிப்பாடல் பாடியுள்ளார். இந்நகரைக் கடல்மல்லை என்றும், இது சிறந்த புகழ்வாய்ந்த நகரம் என்றும், குளுமையானது என்றும், முத்துக்கள் நிரம்பியது என்றும் குறிப்பிட்டுள்ளார். என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா அன்பே தகளி யளித்தானை-நன்புகழ்சேர் சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப் பூதத்தார் பொன்னங் கழல். -தணியன் பூதத்தாழ்வாருக்குப் பின் தோன்றியவர்களில் சிறந்தவர் திருமங்கையாழ்வார். அவர் நந்திவர்மன், பல்லவமல்லனின் சமகாலத்தவர். தன் பாசுரங்களில், பல்லவமல்லன் தென்னவனோடு கருவூர், நென்மேலி, மண்ணை என்ற ஊர்களில் போரிட்டதை அவர் குறித்துள்ளார். இதிலிருந்து அவர் பல்லவமல்லனின் சமகாலத்தவர் என்பது தெளிவாகும். அவர் கடல்மல்லையில் துயில் கொள்ளும் எம்பெருமான் மீது இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றில் கடல்மல்லையின் சிறப்பைக் குறித்துள்ளார். அங்குள்ள குளங்களில் அலைகள் வீசுவதால் தாமரை மலர்கள் கரையில் அசைந்து, அசைந்து வந்து மோதுகின்றன. உழவர்கள் வயல்களை உழுகின்றனர். அவர்கள் உழும்நீர் மடைகளில் ஓடி மனதுக்கு உவப்பை அளிக்கிறது. செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால் உழுநீர் வயலுழவர் உழைப்பின்முன் பிழைத்தெழுந்த கழுநீர் கடிகமழும் கடல்மல்லை ………… என்று தன் பதிகத்தில் அங்கு உழவர் சிறப்பைப் பாடியுள்ளார். இப்பகுதியில் உழவர்கள் வசித்தனர் என்று பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளதை முன்பே கூறினோம். திருமங்கை மன்னனின் பாடல் அதையே நினைவுறுத்துகிறது. திருமங்கையாழ்வார் கடல்மல்லையின் பொருள் சிறப்பையும், வாணிபத்தலமாக அது சிறந்து விளங்கியதையும், மற்றொரு பாட்டில் அழகாகப் போற்றியுள்ளார். கடல்மல்லையின் கரையில் ஏராளமான கலங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை நிதிக்குவைகளைக் கொண்டுவந்து சேர்த்தன. நல்ல குதிரைகளும், யானைகளும், நவமணிக் குவைகளும், அக்கலங்களில் வந்தன. இவற்றைச் சுமந்து வரும் கலங்கள் வருவதும் போவதுமாக கடல்மல்லைத் துறை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று போற்றுகிறார். புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும் நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்களியங் கும்மல்லை கடல்மல்லைத் தலசயனம் வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே மல்லை என்றால் செல்வச்செழுமை என்பது பொருள். திருமங்கை மன்னன் தன் பாடலில் “கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை” என்று குறித்துள்ளார். இதில் மல்லை என்று முதலில் குறிப்பது வளமையையும், இரண்டாவது குறிப்பது ஊர்ப்பெயரையும் குறிக்கும். இதிலிருந்து இவ்வூர் செல்வச் செழுமையின் காரணத்தால் மல்லை என அழைக்கப்பட்டது என்று கொள்ள ஏதுவிருக்கிறது. சிறந்த செல்வத்தால் இது மாமல்லை என்றும், கடற்கரையில் இருப்பதால் கடல்மல்லை என்றும் பெயர் பெற்றது. முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இவ்வூர் மாமல்லபுரம் என்று மாற்றி அழைக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் நந்திவர்மன் காலத்தவர் என்று கூறினோம். அவர் காலத்தே மாமல்லபுரச் சிற்பங்களின் பணி முடிந்துவிட்டது. அங்குள்ள குகைக்கோயில்களும், சிற்பங்களும், திருமங்கை மன்னன் காலத்திலும் இருந்தன. இவருடைய மாமல்லபுரப் பதிகங்களில் பல இங்குள்ள சிற்பங்களை நினைவுறுத்தும் வகையில் உள்ளன. மாமல்லபுரத்துச் சிற்பங்களில் உலகப் புகழ்வாய்ந்தது அரவணைத்துயின்ற அண்ணலாகக் காட்சி தரும் அனந்தசாயி விஷ்ணுவின் சிலையாகும். இது மகிஷாசுரமர்த்தினி குகையில் உள்ளது. இதே நிலையில் பள்ளிகொண்ட பெருமானாகக் கடற்கரைக் கோயிலிலும் ஒரு சிற்பம் இருக்கிறது. இது வழிபாட்டில் இருந்து வந்திருக்கிறது. எனவே கடல்மல்லைத் தலசயனம் என்பது இதுவே என்றும் சிலர் கூறுவர். திருமங்கையாழ்வார் பாடியுள்ளது இதுவே என்றும் சிலர் கூறுவர். திருமங்கையாழ்வார் தன் பதிகத்தில் கடல்மல்லைப் பெருமானை: கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர்பொறிய மறிதிரியவதனின் பின்னே படர்ந்தானை என்றும், பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தி என்றும், படுகடலுள் அமுதம் என்றும் பாடியுள்ளார். மேலும் படநாகத்தணைக் கிடந்த ன்றவுணர் கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய் பழனவேலி தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன். என்று பாடியுள்ளது. இதன் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. இதுபோன்று அவர் மற்ற சில மூர்த்திகளையும், தன்னுடைய கடல்மல்லைப் பதிகங்களில் குறித்துள்ளார். அவற்றை உருவ அமைதி என்ற பகுதியில் காண்போம். படம் சேர்கவும், (அரவணை துயிலும் எம்மான். மகிஷாசுரமர்த்தினி குகை) “கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே” அரவணை துயிலும் எம்மான். மகிஷாசுரமர்த்தினி குகை நந்திக் கலம்பகத்தில் தெள்ளாற்றெறிந்த நந்தியின் மீது பாடப்பட்ட நந்திக் கலம்பகத்தில் மாமல்லபுரம் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. பல பாடல்களில் மல்லையின் தலைவன் என்று நந்தி குறிக்கப்படுகிறான். இந்நூலில் நந்திக்குக் கடல்மல்லைப் புரவலன், மல்லை அம் கானல் முதல்வன், மல்லையங்கோன் நந்தி, மல்லையர்கோன், மல்லைவேந்தன் முதலிய பட்டங்கள் காணப்படுகின்றன. இதில் இருந்து மாமல்லபுரம் அவன் காலத்தில் [கி.பி.9-ஆம் நூற்றாண்டில்] மிகவும் சிறப்புற்றிருந்திருக்க வேண்டும் என்று அறியலாம். இந்நூலிருந்து தெள்ளாற்றெறிந்த தந்தி கடற்படை உடையவனாக இருந்தான் என்றும் அறிகிறோம். இவனுக்கு அவனி நாரணன் என்ற ஒரு பட்டப்பெயர் உண்டு. கீழை நாடுகளில் ஒன்றான சயாம் நாட்டில் தமிழகத்தில் இருந்து சென்றவர்களால் அவனிநாரணம் என்ற ஏரி தோண்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுக் குறிக்கிறது. இதில் இருந்து அவனுடைய சீரும், சிறப்பும் அறிகிறோம். எனவே அவன் காலத்தில் மாமல்லபுரம் ஒரு சிறந்த துறைமுகமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். நந்திக் கலம்பகத்தில் மாமல்லபுரத்தைப் பற்றிப் பொதுவாகக் குறிக்கும் பாடல்களைத் தவிர சிறப்பாகக் குறிக்கும் சில பாடல்களும் உண்டு. அவை அனைத்தும் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. மாமல்லபுரத்தில் வசிக்கும் தலைவி நந்திவர்மன் மீது கொண்ட காதல் நிலையை அப்பாட்டுக்கள் நயம்பட உரைக்கின்றன. அவை நயம் மிகுந்தவையாதலின் இங்கு தரப்பட்டுள்ளன. தலைவியின் நோய் நிலையைத் தோழி செவிலிக்குக் குறிப்பாக உணர்த்தும் ‘அறத்தோடு நிற்றல்’ என்ற பாட்டாக ஒன்று அமைந்துள்ளது. ’தலைவியும் தோழியும் வேங்கை மரத்தடியே தினைப்புனம் காத்து நின்றனர். அவ்வழி வந்த யானை ஒன்று கடுஞ்சினத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தது. அங்கு வில்லோடு வந்த வீரன் யானை மீது அம்பு எய்து, அதைத் துரத்தி அவர்களைக் காத்தான். அச்சிறந்த வீரன் மாமல்லபுரத்திற்கு வந்திருக்கிறான் போலும். அவ்வூரார் அவனை வரவேற்பது பேராரவாரமாகக் கேட்கிறதோ! அல்லது அவனால் துரத்தப்பட்ட யானை, காட்டுக்குள் புகுந்து இட்ட ஆரவாரமோ தெரியவில்லை. நந்தியின் மாமல்லபுரத்தில் ஆரவாரம் கேட்கிறது." என்று தோழி கூறுகிறாள். இதன் மூலம் அவ்வீரன் மீது இத்தலைவி காதல் கொண்டுள்ளாள் என்றும், அதுவே இவள் நோய்க்குக் காரணம் என்றும் செவிலிக்குக் குறிப்பாக உணர்த்துகிறாள்: புனத்து நின்ற வேங்கைமேல் புகைத்தெழுந்த ஆனையின் சினத்தை அன்றொழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ மனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான் வனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பதே ‘போரில் வெற்றி கண்டு சிறந்த யானை மீதேறி வரும் நந்தியினுடைய மாமல்லபுரத்தைப் பற்றியே இத்தலைவி எப்பபோதும் பேசிக் கொண்டிருக்கிறாள். வேறு எதையுமே இவள் கூறுவதில்லை. இவளுடைய இளம் தனங்களும், உடலும் நந்தி மார்பில் அணிந்துள்ள தொண்டை மாலையையே ஏற்கும். அவனுடைய அணைப்பையே அவை விரும்புகின்றன. வேறு எதையும் அவை ஏற்கா. இவளுடைய காதல் இவ்வளவு வெளிப்படையாக இருக்க நாம் மட்டும் ஏன் நாண வேண்டும்’ என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது மற்றொரு பாட்டு. ஆறா விறலடு போர்வன்மை யாலமர் ஆடியப்பால் பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக் கூறாள் இவளிளங் கொங்கை அவன்வளர் தொண்டையல்லால் நாறா திவள்திரு மேனியும் நாமென்கொல் நாணுவதே. ‘மாமல்லபுரத்து மீனவர்களின் முற்றத்திலும் கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான வெண்சங்கு இரவில் பயமின்றி உறங்கும். அங்கே இரவு முழுவதும் விழித்திருப்பாரும் உண்டு. அவர்கள் பெருங்களிப்போடு இரவு முழுவதும் விளையாடும் இளம் பெண்களாம். எனக்கும் இரவில் உறக்கம் கிடையாது. ஏன்? உவகைப் பெருக்காலா? இல்லை. நான் இமையாத நோயால் வாடுகின்றேன்.என் நிலை எவ்வாறு இருக்கிறது தெரியுமா? குளிர்ந்த செங்கோலை உடைய நந்தியின் கொற்றக் குடையின் கீழ் வாராத மாற்றரசர்கள், இரவும் பகலும் தூங்காது, அஞ்சி நிற்பது போல் உள்ளது’ என்று கூறுகிறது மற்றொரு பாட்டு. தனக்கு நந்தியின் மீது உள்ள காதல் நோய் காரணமாக இரவு முழுவதும் அவனையே நினைத்து உறக்கமின்றி வருந்துவதையே, தலைவி இவ்வளவு அழகாக எடுத்துரைக்கின்றாள்: வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான் வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லைவேந்தன் தண் செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரின் கண்ணும் புளியாநோய் யாமோ கடவோமே. ’மாமல்லபுரத்தில் வசிக்கும் பெண்ணொருத்திக்கு நந்தியின் மீது தீராத காதல். இரவு நேரம். கடலிலிருந்து குளிர் காற்று வீசுகிறது. அது தாங்காமல் கழிகளிலிருந்து நாரைகள் எல்லாம் அருகிலிருந்த பனைமரத்தின் மடற்பாகங்களில் சென்று தங்குகின்றன. அப்பெண்ணின் காதலை அக்காற்று அதிகப்படுத்துகிறது. இராப்பொழுதுவேறு. நந்தி இன்னும் வந்தாரில்லை. ஊர்மக்கள் இவள் காதலைக்கண்டு பழி தூற்றுகிறார்கள். இவளுக்கு ஆவி என்று ஒன்று உண்டா? அது எங்கே இருக்கிறது? இருந்திருந்தால் நந்தியின் பிரிவைத் தாங்கி நிற்குமா!" என்று நயம் பட அமைந்துள்ளது மற்றொரு பாடல்:- கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை மடற்கூறு தோறும் மலிமல்லை கங்குல் அடற்கூடு சாவே அமையா தவர்வை திடற்கூறு வேனுக் கேதாவி உண்டோ “பெண் ஒருத்தி மீது காதல் கொண்ட ஒருவன் அவள் உருவை ஓவியமாக எழுதத்துணிந்தான். அருகில் நின்ற தோழி எழில் மிகுந்த அப்பெண்ணின் உருவை உன்னால் எழுத முடியுமா? தெள்ளாற்றுப் போரில் மாற்றரசர்களைத் தோற்கடித்து அவர்களது பெண்டிர்களை நாணிழக்கச் செய்த நந்தியினுடைய மாமல்லபுரத்தே அவள் வசிக்கிறாள். மயில் போன்ற அவளுடைய அழகிய கூந்தலும், விழியும், புன்முறுவலும், நெற்றியில் இட்ட பொட்டும், இளமுலையின் பெருக்கமும், உன்னால் எழுத முடியுமா!” என்று கூறுவதாக அமைந்துள்ளது அப்பாட்டு. பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார் நாண்நெடும் தெள்ளாற்றில் வட்டவெஞ்சிலை நாணிடக் கழித்தனன் மல்லையின் மயிலன்னாள் விட்ட கூந்தலும் விழியும்நன் முறுவலும் நுதல்மிசை இடுகோலம் இட்ட பொட்டினோ டிளமுலைப் போகமும் எழுதவும் ஆகாதே “மாமல்லபுரத்துக் கடற்கரையில் வாழ்கின்ற சம்பங்கோழிப் பறவையே! நந்தி அணிந்திருக்கும் துழாய் மாலையை இன்னம் நான் பெறவில்லை. அவரிடமிருந்து திரும்பிய தாதியும் அது கொண்டு வந்தாளில்லை. யானை உண்ட விளாம் பழம் போல் வெளுத்துள்ள என் உடலை நீ கண்டாய். காமன் என்னிடத்தில் செய்துள்ள களவையும் நீ அறிவாய். நந்தியிடம் இனிச் சென்று நீ சொல்லவேண்டியது எது என்பதையும் அறிவாய். எனக்காக நீ அவரிடம் சென்று வா” என்று தலைவி மாமல்லபுரத்துக் கம்புள் பறவையிடத்தில் கூறுவதாக அமைந்துள்ளது இன்னம் ஒரு செய்யுள்:- துளவுகண் டாய்பெறு கின்றிலம் சென்றினிச் சொல்லவல்ல அளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட விளவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறல் மாரன் செய்த களவுகண் டாய்நந்தி மல்லையங் கானற் கடற்கம்புளே. பிற இலக்கியங்களில் மாமல்லபுரத்தைப் பற்றி மேலும் சில குறிப்புகள், பிற் காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. குலோத்துங்கச் சோழன் கலிங்கப் போரில் வெற்றி கண்டதும், கருணாகரத் தொண்டைமான் இதில் சீர்த்திப்பெற்றதும், ஜெயங்கொண்டார் இவ்வெற்றியை அழியாக் காப்பியயமாக்கி கலிங்கத்துப்பரணியில் குலோத்துங்கனின் வெற்றியையும், புகழையும் பாடி அரிசி தீட்டும் பேய்கள், கருணாகரத் தொண்டைமானின் புகழையும் பாடுவதாக ஒரு பாட்டு அமைந்துள்ளது. அதில் கருணாகரத் தொண்டைமான் பல்லவர் தோன்றல் என்றும், அவனது ஊர்களான கச்சி, மல்லை, மயிலை இவற்றைப் பாடுங்கள் என்றும் பேய்கள் கூறுவதாக அப்பாட்டு அமைந்துள்ளது. வண்டை வளம்பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே. இதிலிருந்து குலோத்துங்கன் காலத்தில் மாமல்லை சிறந்திருந்தது என்பதும், இது கருணாகரத் தொண்டைமான் மிகவும் விரும்பிய நகரம் என்பதும் புலப்படும். திருத்தொண்டர் பெருமையை ஈடிலாக்காப்பியமாகப் பாடிய சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், மாமல்லையின் சிறப்பைத் தமக்கே உரிய நடையில், நெய்தலும், குறிஞ்சியும் கலந்து நின்ற இடம் எனக் குறிக்கிறார். இங்கு குன்றுகளும் பாறைகளும் நிறைந்துள்ளதையும் கடல் கரையில் உள்ளது என்பதையும் அவர் அழகாய் அமைத்துக் கூறுகிறார். கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால் ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய ஒட்டக்கூத்தர் இரண்டாம் இராசராச சோழன் மேல் பாடிய இராசராசன் உலாவிலும் மாமல்லைக் குறிக்கப்பட்டுள்ளது. இராசராசன் ‘மல்லாபுரேசன்’ என்று அதில் குறிக்கப்படுகிறான். இவை தவிர வைணவப் பெரியார்களைப் பற்றி எழுதப் புகுந்த பிற்கால இலக்கியங்களில், பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்று மாமல்லபுரம் குறிக்கப்படுகிறது. ஆராயிரப்படி குருபரம்பராபிரபாவம், நித்தியசூரி சரிதம் முதலிய நூல்களில் மாமல்லபுரம் குறிக்கப்பட்டுள்ளது. அவதாரத்தலம் என்ற செய்தியைத் தவிர வேறு விசேஷச் செய்திகள் ஏதும் இவற்றில் குறிக்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு மணிப்ரவாள நடையில் சிறந்த வியாக்யானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை திருமங்கை மன்னனின் பாடல்களுக்கு வியாக்யானம் எழுதும் இடத்து கடல்மல்லையைப் பற்றிக் குறித்துள்ளார். தோற்றுவித்தவர் யார்? மாமல்லபுரத்துச் சிற்பங்களைத் தோற்றுவித்தவர் யார்? இங்குள்ள கல்வெட்டுகளை ஆராய்வதன் முன்னர், 18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் பலர் பலவிதமாகக் கூறினார்கள். இவற்றைத் தோற்றுவித்தவன் மாவீரன் அலெக்ஸாண்டர் என்றனர் சிலர். சீன தேசத்துச் சிற்பங்கள் என்றனர் சிலர். இங்குள்ள கல்வெட்டுகள் சயாம் மொழியில் உள்ளன. எனவே இவற்றை அந்நாட்டார் செய்திருக்கக்கூடும் என்று கருதினோரும் உண்டு. வடநாட்டு அரசன் ஒருவனிடம் சீற்றம் கொண்டு, அவனுடைய சிற்பிகள் இங்குச் சில காலம் வந்து தங்கினார்கள் என்றும், அப்போது இந்தச் சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும், பின்னர் அம்மன்னனின் அழைப்பையேற்று இப்பணியைப் பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் ஒரு தல வரலாறு கூறும். கல்யாணியை ஆண்ட சாளுக்கிய மன்னர்களின் சிற்றரசர்களாக, குறும்பர்கள் ஆண்டனர் என்றும், அவர்களே இவ்வெழிற் சிற்பங்களைத் தோற்றுவித்தனர் என்றும் மற்றும் சிலர் கூறினர். பர்கூசன் என்ற பெரியார்தான் இவை கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றுவிக்கப்பட்டவை என்று முதன்முதலில் குறிப்பிட்டார். அதன் பின்னர் கல்வெட்டு ஆராய்ச்சி என்ற புதிய துறை படிப்படியாக வளர்ந்தது. அதன் அடிப்படையில் மாமல்லபுரத்துக் கல்வெட்டுகள் ஆராயப்பட்டன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தின் வரலாறு ஒருவாறு புலனாகத் தொடங்கியது. ஹுல்ட்ஷ், கோபிநாதராவ், ஷோவோதுபரே முதலிய அறிஞர்கள் இக்கல்வெட்டுகளையும், கலைச் செல்வங்களையும் ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்களுடைய முடிவை ஒரு சில சிறிய மாறுதல்களுடன் பின் வந்த அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். எனவே மாமல்லபுரத்தைப் பற்றி இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹுல்ட்ஷ், துபரே முதலிய பெரியார்கள் கூறிய கருத்துக்களே முடிவாக இதுகாறும் கருதப்பட்டன. அதன்படி மாமல்லபுரத்துச் சிற்பங்களைத் தோற்றுவித்தவன் முதல் நரசிம்மவர்மனாகிய மாமல்லன் என்பதே. இந்நூலாசிரியர் இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் ஆராய்ந்து 1962-ஆம் ஆண்டு ஒரு புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். அக்கருத்தின்படி மாமல்லபுரத்துச் சிற்பங்களைத் தோற்றுவித்தவன் முதலாம் நரசிம்மவர்மனாகிய மாமல்லன் அல்ல, அத்யந்தகாமன் என்ற சிறப்புப் பெற்ற இராஜசிம்மன் என்பதாகும். இக்கருத்தின் படி மாமல்லபுரத்துச் சிற்பங்கள் ஒரே மன்னன் காலத்தில் தோன்றியவை. அவன் இறந்ததும் போற்றுவாரின்றி பாதியிலேயே பணி நின்று விட்டது என்பதேயாகும். முதலில் இக்கருத்துக்கு பலத்த மறுப்புகள் இருந்தன. ஆனால் அண்மையில் பல மேலை நாட்டு அறிஞர்கள், இக்கருத்தின் அடிப்படை உண்மையைப் போற்றி, தங்கள் நூல்களில் குறிப்பிட்டு உள்ளனர். பல கருத்துகள் நிலவுவதுதான் ஆராய்ச்சித் துறைக்கே அடிப்படையாகும். இக்கருத்துக்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால் நூல் விரியும். தேவையுமில்லை. எனவே முன்பு நிலவிய கருத்தும், இந்நூலாசிரியருடைய புதிய கருத்தும், இங்கு கூறப்படுகின்றன. இதில் அவரவர்க்கு எது ஒப்புதலோ அதைக் கொள்வதே சிறந்தது. மாமல்லனே! இவ்வூரின் பெயர் மாமல்லபுரம் என்பது. பல்லவ மன்னர்களில் மாமல்லன் என்று பெயர் கொண்டவன் முதலாம் நரசிம்மவர்மன் என்பவன். அவனே வாதாபியை வெற்றி கொண்டவன். எனவே மாமல்லனுக்கும் மாமல்லபுரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. மாமல்லனுடைய தந்தை முதலாம் மஹேந்திரவர்மன். அவன்தான் தமிழகத்தில் முதன் முதலில் குகைக்கோயிலைத் தோற்றுவித்தவன். எனவே அவன் மகனாகிய மாமல்லன் தந்தையின் பணியைப் பின்பற்றிக் குகைக் கோயில்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இதற்குச் சான்று கூறும் வகையில் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் நரசிம்மன் என்ற பெயர் காணப்படுவது, நரசிம்மன் தந்தையைப் போல் குகைக்கோயில்களைத் தோற்றுவித்தான் என்றும் அத்துடன் குன்றுகளைச் செதுக்கிச் கோயில்களாக [இரதங்களாக] உண்டாக்கினான் என்றும் கூறுவதாகும். மஹேந்திரனுடைய குகைகள் எளிமையான நீண்ட சதுர மண்டபம் போன்ற அமைப்புடையவை. அவற்றின் தூண்கள் மேலும், கீழும் நான்கு சதுரமுள்ளவை. நடுவில் எண் பட்டையுடையவை. நரசிம்மன் குகைகளோடு குன்றன்ன கோயில்களையும் செதுக்கினான். அத்துடன் அமர்ந்த சிம்மம் தாங்கும் தூண்களைக் கண்டு பிடித்தான் என்றும், சிம்மத் தூண்களையுடைய குகைகள் மாமல்லனால் தோற்றுவிக்கப்பட்டவை என்றும் கருதினர். இதனால் மஹேந்திரன் பாணி என்றும், மாமல்லன் பாணி என்றும், இரண்டு பாணிகளில் இங்கு கோயில்கள் தோன்றின என்று கொண்டனர். அடுத்து, காஞ்சி கைலாயநாதராலயத்தை இராஜசிம்மன் என்ற மன்னன் தோற்றுவித்தான். இது கட்டடக் கோயிலாகும். இதில் சிம்மங்கள் பாயும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. எனவே இராஜசிம்மன் குகைக்கோயில் கட்டுவதை விட்டு கட்டடக் கோயில்களில் சிறப்படைந்தான். பாயும் சிங்கச் சிற்பங்கள் அவனால் தோற்றுவிக்கப்பட்டவை என்றும் கருதினர். மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலில் இராஜசிம்மனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனவே கடற்கரைக் கோயிலைத் தோற்றுவித்தவன் இராஜசிம்மன் என்பது புலனாயிற்று. இதன்படி மாமல்லபுரத்தில் மூன்று பாணிகளில் சிற்பங்களும் கோயில்களும் தோன்றின என்ற முடிவுக்கும் வந்தனர். அதன்படி மஹேந்திரன் பாணி, மாமல்லன் பாணி, இராஜசிம்மன் பாணி என்று மூன்று பிரிவாக மாமல்லபுரத்துக் கோயில்கள் பிரிக்கப்பட்டன. மேலே குறிக்கப்பட்டுள்ள கருத்துக்களையே பெரும்பாலான அறிஞர்கள் இதுகாறும் ஒப்புக்கொண்டு வந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள எல்லாக் குகைக் கோயில்களும் இரதங்களும் முற்றுப் பெறாமல் பாதியிலேயே நிற்கின்றன. மாமல்லனுக்குப் பின்னர்க் கட்டடக் கோயிலில் நாட்டம் சென்றதால் குகைக் கோயில்களும், இரதக் கோயில்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் இவர்கள் கருதினர். பரமேச்சுரனே! மாமல்லன் தொடங்கிய பணியைப் பரமேச்சுர பல்லவன் தொடர்ந்து செய்தான். எனவே மாமல்லபுரத்தில் பல பணிகள் அவன் காலத்தில் முடிந்தன என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பின்வருமாறு:- தர்மராஜ மண்டபம், கணேச இரதம் என்ற இரண்டு கோயில்களிலும் பல்லவர் காலக் கல்வெட்டுகளுள்ளன. அவற்றில் பரமேச்சுரன் என்ற பெயர் காணப்படுகிறது. மாமல்லனுடைய மகன் இரண்டாம் மஹேந்திரன். அவன் மகன் முதல் பரமேச்சுரவர்மன் என்பவன். இவனைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளும் கிடைத்துள்ளன. இவன் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தனுடன் போர் செய்து முடிவில் வெற்றி கண்டான் என்பது புலனாயிற்று. இதன் அடிப்படையில் தர்மராஜ மண்டபம், கணேச இரதம் என்ற இரண்டு கோயில்களிலும் பரசேச்சுரவர்மன் என்ற பெயர் காணப்படுவதால் அவற்றை மாமல்லனுக்குப் பின் வந்த பரமேச்சுரவர்மனே செய்திருக்க வேண்டும். மாமல்லன் பணியை இவன் தொடர்ந்து செய்து தன் கல்வெட்டையும் பொறித்துள்ளான் என்ற முடிவுக்கு வந்தனர். இங்குள்ள கல்வெட்டில் காணப்படும் கடைசிச் செய்யுள் இராமானுஜ மண்டபம், ஆதிவராஹக் குகைக் கோயில் என்ற இரண்டு இடங்களிலும் காணப்படுகிறது. அதோடு தர்மராஜ இரதம் என்ற இரதக்கோயிலில் உள்ள பல பெயர்களும் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. எனவே மாமல்லபுரத்தில் பரமேச்சுரவர்மனும் சிறந்த பணி புரிந்திருக்கிறான். அதன் பயனாகத் தன் கல்வெட்டுகளையும் விட்டுச் சென்றுள்ளான். இக்கல்வெட்டுகளின் எழுத்துக்களில் வேறுபாடு காணப்படுகிறது. எனவே சில கல்வெட்டுகள் மாமல்லன் காலத்தவை; சில பரமேச்சுரன் காலத்தவை என்ற முடிவுக்கு வந்தனர். இதன்படி மாமல்லன் விட்டுச் சென்ற பணியைப் பரமேச்சுரன் தொடர்ந்து செய்தான். அவனுக்குப் பின்னர் வந்த இராஜசிம்மன் கட்டடக் கலையில் அதிக ஆர்வமுடையவன் ஆனதால் குகைக் கோயில்களும் இரதங்களும் பாதியில் நின்றுவிட்டன என்ற கருத்து உருவாகத் தொடங்கியது. சுருங்கக் கூறின் மாமல்லபுரத்தில் முதல் மஹேந்திரவர்மனுடைய கல்வெட்டுகள் ஏதுமில்லை. எனவே இங்குள்ள குகைக் கோயில்களும், இரதக் கோயில்களும், மற்றும் சிற்பங்களும் மாமல்லன் காலத்தில் தொடங்கின. இவற்றுள் மாமல்லன் தன் தந்தையைப் பின்பற்றி எழுப்பியவற்றை மஹேந்திரன் பாணி என்றும், மாமல்லனால் புதிதாக உருவாக்கப்பெற்றதை மாமல்லன் பாணி என்றும் பிரிக்கலாம். அர்ச்சுனன்தவம், கோவர்த்தனதாரி கண்ணன் முதலிய சிற்பங்களையும் ஏனைய இரதங்களையும் தோற்றுவித்தவன் மாமல்லனே. அவன் தொடங்கிய பணியைப் பரமேச்சுரன் தொடர்ந்து செய்தான். அவனுக்குப் பின்வந்த இராஜசிம்மன் கட்டடக் கோயில்களில் நாட்டம் செலுத்தவே குகைப் பணிகள் பாதியில் நின்றுவிட்டன என்பதே இதுகாறும் நிலவி வந்த கருத்தாகும். இராஜசிம்மனே மாமல்லபுரத்துச் சிற்பங்களை தோற்றுவித்தவன் இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன் என்பது இந்நூலாசிரியரின் கருத்து. அதன் காரணங்கள் பின்வருமாறு: மாமல்லன் காலத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சிகள் வாதாபி வெற்றியும், ஈழத்துப் படையெடுப்பும் என்று கண்டோ ம். இம்மன்னனுடைய திருக்கழுக்குன்றம் கல்வெட்டில் வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன் என்ற பட்டம் காணப்படுகிறது. இவனுக்குப் பின்னர் வந்த பல்லவர்களின் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் இம்மன்னனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் வாதாபியை வெற்றி கொண்டவன் என்றும் ‘ஈழத்தைப் பிடித்தவன்’ என்றும் தவறாமல் குறிக்கின்றன. ஆனால் மாமல்லபுரத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் வாதாபி வெற்றியோ, ஈழத்துப் படையெடுப்போ குறிக்கப்படவில்லை. வாதாபி கொண்டான் என்ற பட்டமும் இல்லை. மாமல்லனுடைய படை ஈழத்துக்கு மாமல்லபுரத்திலிருந்துதான் சென்றது என்ற ஆராய்ச்சியாளர்கள் குறிப்பர். இருந்தும் மாமல்லனுடைய ஈழ வெற்றி இங்கு கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. முதலாம் பரமேச்சுரவர்மன் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சி இரணரசிகனாகிய சாளுக்கிய விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததாகும். அது இவனுடைய செப்பேட்டிலும், மற்ற பல்லவ சாசனங்களிலும் குறிக்கப்படுகிறது. இருப்பினும் மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகளில் எங்கும் இந் நிகழ்ச்சி குறிக்கப்படவில்லை. மாமல்லன், பரமேச்சுரன் ஆகிய இருவருடைய காலத்தும் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் ஏதும் மாமல்லபுரத்தில் காணப்படாததால், அவர்கள் காலத்தில் இக்கலைச் செல்வங்கள் தோன்றினவா என்ற ஐயம் எழுகிறது. ஆனால் இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராஜசிம்மன் இவற்றைத் தோற்றுவித்தான் என்பதற்குக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. இம்மன்னன் கலைக்கடல் என்ற பெயர் பூண்டு தன்னுடைய கலை ஆர்வத்தைத் தெளிவாகக் கூறியுள்ளான். இவனைப் பற்றிக் கூறும் மற்ற பல்லவ சாசனங்கள் ‘கோயில் கட்டுவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவன்’ என்றும், ‘அறிஞர்களைப் போற்றுவதே தொழிலாகக் கொண்டவன்’ என்றும் குறிக்கின்றன. இதை நிலையுறுத்தும் வகையில் இம்மன்னன் கட்டிய கோயில்களும், கல்வெட்டுகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. காஞ்சி கைலாயநாதர் ஆலயம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், பனமலை ஈச்சுரர் கோயில் ஆகிய இடங்களில் இவனுடைய கல்வெட்டுகளும் திருப்போரூர், வயலூர் முதலிய இடங்களில் இவனது கோயில்களும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் அனைத்திலும் இம்மன்னனுக்கு அத்யந்தகாமன் [எண்ணற்ற மனவெழுச்சிகளை உடையவன்] என்ற ஒரு சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இச்சிறப்புப் பெயர் மற்ற எந்த அரசர்களுக்கும் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள பல குகைக் கோயில்களிலும், இரதக் கோயில்களிலும் இப் பெயர் காணப்படுகிறது. பல கோயில்களின் பெயரே அத்யந்தகாம பல்லவேச்சுரகிருஹம் [அத்யந்தகாம பல்லவனுடைய ஈச்சுரர் கோயில்] என்று உள்ளதைக் காண்கிறோம். எனவே இக்கலைச் செல்வங்களைத் தோற்றுவித்தவன் இராஜசிம்மனாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ண இடமிருக்கிறது. இந்த அடிப்படையில் பின்வருபவற்றையும் மனதில் கொள்ளவேண்டும். காஞ்சி கைலாயநாதராலயத்தில் தன்னுடைய நூற்றுக் கணக்கான பட்டங்களை இம்மன்னன் பொறித்துள்ளான். இம்மன்னனுடைய உள்ளக்கிடைக்கைகள் அனைத்தும் இப்பட்டங்களிலிருந்தே தெளிவாக விளங்குகின்றன. இவற்றில் இருந்து இம்மன்னன் சிறந்த கலைஞன் என்றும், தான் தோற்றுவிக்கும் ஒவ்வொன்றிலும் ஒரு புதுமையைக் காண விரும்பினான் என்றும் அறிகிறோம். காஞ்சி கைலாயநாதர் ஆலயம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், பனைமலைக் கோயில் இவை மூன்றும் இம்மன்னனால் தோற்றுவிக்கப்பட்டவை. ஆயினும் ஒவ்வொரு கோயிலிலும் கட்டட அமைப்பில் ஒரு புதுமையைக் காணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒன்று கடல் அலைகள் தவழ்ந்து மனதைக் கவரும் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது. மற்றது காஞ்சியில் பசுமையான வயல்களின் மத்தியில் பெருமிதத்துடன் நிற்கிறது. மூன்றாவது மலையின் உச்சியில் எழில் ஓவியமாகத் திகழ்கிறது. இவை கட்டடக் கலையில் கண்ட புதுமையை உணர்த்துகிறன்றன. காஞ்சி கைலாயநாதராலயம் ஒப்பற்ற சிற்பங்களை உடையது. இங்கு ஒவ்வொரு சிற்பத்தையும் கலைக் கண்ணோடு புதிது புதிதாக அமைத்துள்ளதைக் காணலாம். பனமலைக் கோயில், சிற்பமேதுமின்றி விளங்குகிறது. ஆயினும் உமையம்மையின் எழில் ஓவியம் ஒன்று இருக்கிறது. மற்ற ஓவியங்களிருந்த தடயங்களும் உள்ளன. எனவே பனமலை, ஓவியத்தில் சிறப்புற்ற கோயிலாகத் திகழ்ந்திருக்க வேண்டும். சாளுவன் குப்பத்திலுள்ள யாளிக் குகை முற்றிலும் புதியது. ஆதலின் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் இவன் புதுமை கண்டானென்பது தெளிவு. காஞ்சி கைலாயநாதராலயத்தில் திருச்சுற்றுக்களில் சிறு ஆலயங்கள் பல உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் இராஜசிம்மனுடைய பட்டப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு பட்டப் பெயரும் ஐந்து விதமான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கிரந்த எழுத்து, நாகரி எழுத்து, பூப்போன்ற கிரந்த எழுத்துக்கள், பழைய கிரந்த எழுத்துக்கள் என்று பலவகை எழுத்துக்களைக் காண்கிறோம். இம்மன்னன் சாளுவன்குப்பத்தில் தன்னுடைய கல்வெட்டை இரண்டு வித எழுத்துக்களில் பொறித்துள்ளான். இவன் எழுத்துக்களிலே புதுமையைக் கண்டான் என்று இவற்றில் இருந்து நன்கு புலனாகிறது. கல்வெட்டுகளிலும், பற்பல செய்திகளைப் புதுமையாகக் குறிக்கிறான். காஞ்சி கைலாயநாதராலயத்தில் உள்ள கல்வெட்டுகளில் இவனுடைய பிறப்பின் பெருமையும், சைவ சித்தாந்தப் பற்றும், ஏராளமான பட்டங்களும் குறிக்கப்படுகின்றன. பனமலைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தன் முன்னோர்களது பெருமையையும், அவர்கள் அச்வமேதம் முதலிய யாகங்கள் செய்ததையும் குறிக்கிறான். கடற்கரைக் கோயிலில் உள்ள கல்வெட்டில் மற்றைய அரசர்களைத் தனக்குப் பணியும்படி ஆணையிடுகிறான். சாளுவன்குப்பத்தில், தன்னுடைய போர்த்திறனையும், இசையில் உள்ள பேராற்றலையும் குறிக்கிறான். வயலூர்க் கல்வெட்டில் தன் முன்னோர்கள் 54 பேர்களை வரிசையாகக் குறித்துள்ளான். [ஒருவர் பின் ஒருவராக ஆண்ட ஐம்பத்து நான்கு அரசர்களின் பெயரைக் குறிக்கும் பண்டைய கல்வெட்டு இந்தியாவிலேயே இதுதான்] இது எழுதியிருக்கும் முறையும் விசித்திரமானது. கல்தூணின் மேலே ஆரம்பித்து, அத்தூணைச் சுற்றிச் சுற்றிச் சுருளாக எழுதியிருப்பது இவனுக்குப் புதுமையில் உள்ள ஆர்வத்தை நன்கு புலப்படுத்துகிறது. எனவே கல்வெட்டுகளின் அமைதியிலும் இம்மன்னன் பல புதுமைகளைக் கண்டு இருக்கிறான். அவனுடைய பட்டப் பெயர்களிலும் பல புதுமைகளைக் கண்டுள்ளான். மஹாமல்லன், அப்ரதிமல்லன், அமித்ரமல்லன், சத்ருமல்லன் என்றும் நரசிம்மன், க்ஷத்ரசிம்மன், இராஜசிம்மன், புருஷசிம்மன், நரேந்திரசிம்மன், நரபதிசிம்மன் என்றும் உதயசந்திரன், உதயபாஸ்கரன், உதயவசந்தன் என்றும் உள்ள பல பட்டப்பெயர்கள் அவனுக்குப் புதுமையில் உள்ள ஆவலைத் தெளிவாகக் காட்டுகின்றன. மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்று ஐந்து இரதக் கோயில்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு புதிய அமைப்புடையவை. தர்மராஜ இரதம் என்பது சதுரமான மூன்று தள மாடிகளை உடையது. பீம இரதம் நீண்ட சதுரமானது. அர்ஜுன இரதம் இரண்டு தளங்களை உடையது. திரொளபதி இரதம் குடிசை போன்ற அமைப்புடையது. சகதேவ இரதம் தூங்கானை மாடம் என்ற அமைப்புடையது. இது தவிர கணேச இரதம், பிடாரி இரதங்கள், வலையன் குட்டை இரதம் என்பவைகளும் மாமல்லபுரத்தில் உள்ளன. இவ்வொன்றும் ஒவ்வொரு அமைப்புடையவை. அதே போன்று மாமல்லபுரத்தில் உள்ள எல்லாக் குகைக் கோயில்களும் ஒன்று போல் ஒன்றில்லாமல் புதிய புதிய அமைப்புடன் காணப்படுகிறன. தர்மராஜ மண்டபம், இராமானுஜ மண்டபம், வராஹ மண்டபம், ஆதிவராஹக் குகை, மகிஷாசுரமர்த்தினிக் குகை, மும்மூர்த்திக் குகை என்ற ஒவ்வொரு குகைக் கோயிலும், ஒவ்வோர் அமைப்பு உடையவை. அதே போன்று மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களும் ஒன்று போல் ஒன்று இல்லை. ஒவ்வொன்றிலும் புதிய புதிய மாறுதல்களைக் காணலாம். குகைக் கோயில்கள், தூண்கள், இரதக் கோயில்கள், சிற்பங்கள், என்று உள்ள எல்லா கலைச் செல்வங்களிலும் வெவ்வேறு அமைதிகளைக் காண்கிறோம். இவை தவிர கடற்கரைக் கோயிலினருகில் பாறைகளில் சில புதுமையான சிற்பங்களையும் காண்கிறோம். இவையனைத்தையும் ஒருங்கே காணும்போது புதுமையில் பேரார்வம் படைத்த ஒரு பெரும் கலைஞனால்தான் இவை தோற்றுவிக்கப்பட்டன என்ற உண்மை புலனாகும். இம்மன்னன் அத்யந்தகாமன் என்று சிறப்புப் பெயர் பெற்ற இராஜசிம்மனே என்று அவனுடைய கல்வெட்டுகளிலிருந்தே காண்கிறோம். இராஜசிம்மன்தான் இக்கோயில்களைத் தோற்றுவித்தான் என்று கூறக் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. சாளுவன் குப்பத்தில் உள்ள குகைக் கோயிலை இராஜசிம்மன் தோற்றுவித்தான் என்று அவன் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பதினோரு செய்யுட்களுள்ளன. இவற்றில் நான்கு செய்யுட்கள் மிகச் சிறந்தவை. அவற்றில் அத்யந்தகாமனாகிய மன்னன் “நான் இக்கோயிலைத் தோற்றுவித்தேன்” என்று கூறுகிறான். அதே போல் மாமல்லையில் அதே செய்யுள் சிறிதுகூட மாறாமல் கணேச இரதம் என்ற கோயிலிலும், தர்மராஜ மண்டபம் என்ற குகையிலும் காணப்படுகிறது. சாளுவன்குப்பத்தில் காணப்படும் இன்னும் மூன்று செய்யுட்களும் இவ்விரு கோயில்களிலும் காணப்படுகின்றன. எனவே சாளுவன்குப்பம் குகைக் கோயிலை எந்த மன்னன் தோற்றுவித்தானோ, அதே மன்னன்தான் கணேச இரதத்தையும், தர்மராஜ மண்டபத்தையும் தோற்றுவித்துள்ளான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது. சாளுவன்குப்பம் குகைக் கோயிலை, இராஜசிம்மனே தோற்றுவித்தான் என்று எல்லா அறிஞர்களும் குறிப்பர். எனவே அதேமன்னன்தான் கணேச இரதத்தையும், தர்மராஜ மண்டபத்தையும் தோற்றுவித்தவன் என்பது தெளிவாகும். இவை இரண்டிற்கும் அத்யந்தகாம பல்லவேச்வர கிருஹம் என்ற பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஒரு செய்யுள் இராமானுஜ மண்டபத்திலும், ஆதிவராஹ மண்டபத்திலும் காணப்படுகிறது. எனவே அவற்றையும் அவன் செய்தான் என்பதே பொருந்தும். ஐந்து இரதங்களில் பெரியது தர்மராஜ இரதம் என்பது. இதில் கல்வெட்டுகள் உள்ளன. இவை அரசனுடைய பெயரையும் குறிக்கின்றன. இக்கல்வெட்டில் ‘அத்யந்தகாம பல்லவேச்வர கிருஹம்’ என்ற பெயர் காணப்படுகிறது. எனவே இக்கோயிலையும் அத்யந்தகாமனாகிய இராஜசிம்மன் தோற்றுவித்தான் எனபது தெளிவாகும். தர்மராஜ இரதத்திலுள்ள அரசனின் பட்டப் பெயர்களில் பதினாறு பட்டங்கள் காஞ்சி கைலாயநாதராலயத்தில் குறிக்கப்பட்டுள்ளன. ஆதலின் கைலாயநாதராலயத்தைக் கட்டுவித்த மன்னனும், இக்கோயிலைத் தோற்றுவித்த மன்னனும் ஒருவனே என்பது புலனாகிறது. ஆகவே இதே மன்னன்தான் மற்ற கோயில்களையும் தோற்றுவித்தான் என்பது உணரற்பாலது. இராஜசிம்மன் காலத்தில் பெரும் அமைதி நிலவியது என்று கண்டோம். அவன் இறந்ததும் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது. அவன் மகன் இரண்டாம் பரமேச்சுரவர்மன் போரில் மாண்டான். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான். ஆயினும் கைலாயநாதர் ஆலயச் சிற்பங்கள் அவன் மனதைக் கவர்ந்தன. எனவே பல சிறந்த சிற்பிகள் அவன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் ஆண்ட நந்திவர்மன் பல்லவ மன்னன் பல ஆண்டுகள் போரிலேயே கழித்தான். எனவே போற்றுவாரின்றி மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பாதியில் நின்று விட்டன என்பது இந்நூலாசிரியருடைய கருத்தாகும். இப் புதிய கருத்துக்குச் சில மறுப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் கவனிக்கலாம். சில அறிஞர்கள் கட்டட அமைப்பைக் கொண்டு இது மஹேந்திரன் காலம், இது மாமல்லன் காலம் எனப் பிரிக்கின்றனர். மற்றும் சில ஆசிரியர்கள் எழுத்தின் அமைதியைக் கொண்டு மஹேந்திரன் எழுத்து, மாமல்லன் எழுத்து என்றும் பிரிக்கிறார்கள். ஆனால் இராஜசிம்மனின் கோயில்களிலேயே பல அமைதிகள் காணப்படுவதாலும், அம்மன்னனே ஐந்துக்கும் மேற்பட்ட எழுத்துக்களில் தன் கல்வெட்டுகளைப் பொறித்திருப்பதாலும் கட்டடங்களைக் கொண்டும், காலத்தைப் பிரிப்பது மாமல்லபுரத்தைப் பொறுத்த மட்டில் முடியாததாகும். ஒரே மன்னன் காலத்தில் இவ்வளவு சிற்பங்களையும் செதுக்க முடியுமா என்று மட்டும் ஒரு கேள்வி எழுகிறது. குகைக் கோயில்களைச் செய்வதிலும், கட்டடக் கோயில்களைச் செய்வதிலும் வேறுபாடுகள் உண்டு. கட்டடக் கோயில்களுக்குக் கற்கள் பல காதங்கள் அப்பாலிருந்து பெயர்த்துக் கொண்டு வரவேண்டும். கற்களை உரிய அளவுக்குச் செதுக்கிப் பின்னர் கட்டடங்கள் எழுப்பி, அவற்றில் சிற்பங்களை செதுக்க வேண்டும். இதற்கு ஏராளமான நேரமும், உழைப்பும் தேவை. தஞ்சையில் இராஜராஜன் கட்டிய கோயிலுக்கு எவ்வளவு உழைப்பும், நேரமும் தேவைப்பட்டிருக்கும் என எண்ணிப் பார்த்தால் தெரியும். இராஜராஜப் பெருந்தகை தஞ்சையில் மட்டும் கோயில் கட்டவில்லை. தமிழகம் முழுவதும் அவன் கட்டிய கோயில்கள் ஏராளமாயிருக்கின்றன. அதே போன்று விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயன், 25ந்தே ஆண்டுகளில் பல இடங்களில், பல பெரும் கோபுரங்களை எழுப்பியுள்ளான். ஆனால் பாரையில் குடைவதோ, செதுக்குவதோ இருந்த இடத்திலேயே செய்யப்படுவதாலும், தூக்கிக் கட்டடம் அமைக்க வேண்டிய உழைப்பு இல்லாத காரணத்தாலும், கட்டடக் கோயில்களை விட இவற்றில் பணி எளிது. எனவே இவையனைத்தும் ஒரே மன்னன் காலத்தில் முடியும் என்பது வரலாறு கூறும் உண்மையாகும். முன்னோர்கள் கட்டிய கோயிலில் பின்னர் வந்த மன்னர்கள் கல்வெட்டைப் பொறிப்பது வழக்கம். சில அறிஞர்கள் மாமல்லபுரத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜசிம்மனுடையவை என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும் இங்குள்ள குகைகளும், இரதங்களும் மாமல்லன் காலத்திலேயே தோன்றியவை. இராஜசிம்மன் தன்னுடைய கல்வெட்டைப் பின்னர் இங்கு பொறித்து வைத்திருக்கக் கூடுமென்று இவர்கள் கருதுகிறார்கள். முன்னரேயிருந்த கோயில்களில் பின்னோர்கள் கல்வெட்டுப் பொறிப்பது வழி வழி வந்த வழக்கம்தான். ஆயினும் அவை அனைத்தும் அக்கோயில்களுக்குக் கொடுத்த மான்யங்களையும், பரிசுகளையும் குறிக்கும். ஆனால் மாமல்லபுரக் கல்வெட்டுகள் பின் வந்தவர்கள் கொடுத்த பரிசைக் குறிப்பவை அல்ல. மன்னன் “நான் இக்கோயிலை எடுப்பித்தேன்” என்று கோயில் எடுப்பித்ததைக் குறிக்கும் கல்வெட்டுகளே. எனவே இந்தக் கல்வெட்டுகள் இராஜசிம்மனுடையவை என்று நாம் கருதினால், அவனாலேயே இக்குகைக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன என்று கொள்ளுவதே பொருந்தும். இன்னும் சிலர் “மாமல்லபுரத்துக் கோயில்கள் அனைத்தும் மாமல்லன் காலத்தவைதான்” ஆனால் பின்னர் வந்த இராஜசிம்மன் இக்கோயிலைத்தான் கட்டுவித்ததாகக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துவிட்டான்" என்று கருதுகின்றனர். இங்கு ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது. இவையனைத்தும் பக்திப் பெருக்கால் தெய்வங்களுக்கு எழுப்பப்பட்ட கோயில்களாகும். அதனால் இந்நாட்டு மன்னன் எவனுமே, தன் முன்னோர் எடுப்பித்த கோயிலைத் தான் கட்டியதாகப் பொய்யாகக் கூறமாட்டான். அது நம் பண்பிற்கே களங்கம் கற்பிக்கும் கருத்தாகும். அதைத் தள்ளிவிடுவதே பொருந்தும். கற்பனையே! கலைகளுக்கு பிறப்பிடம் கற்பனையே. எனவே ஓரளவு கற்பனைக்கு இடமளிப்போமானால், மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்களை இன்னும் சிறப்பாகவே போற்ற முடியும். மன்னன் ஒருவன் சிறந்த கலைஞன். அவன் மாமல்லபுரத்துக் கடற்கரையில் நிற்கிறான். அவன் முன்னே பரந்த கடல் காட்சியளிக்கிறது. அவனோ கலைக்கடல். எண்ணற்ற அலைகள் அவன் காலடிக்கு வந்து செல்கின்றன. அவன் மனதிலும் எண்ண அலைகள் தோன்றுகின்றன. எனவே தன்னை எண்ணற்ற மனவெழுச்சிகளை உடையவன் என்று கூறிக்கொள்கிறான். கடல் அலைகளோ உயிரற்ற ஜடப்பொருள்கள். இவனுடைய எண்ண அலைகளோ உயிர்த்துடிப்பில் தோன்றியவை. எனவே உருவெடுத்து, நிலைத்து நிற்கும் தன்மை உடையவை. கலைக்கடலாகிய மன்னன் மாமல்லபுரத்துக் கற்குன்றுகளினூடே உலவி வருகிறான். வெண்ணிலவின் கதிர்கள் மாமல்லபுரத்தையே கனவுலகாகச் செய்திருக்கக்கூடும். அங்கு உள்ள ஒவ்வொரு பாறையும் இவன் மனத்தில் ஒரு கலைக் காட்சியாகத் தென்படுகிறது. புதுப்புது உருவங்களில் அவைகளைக் காண்கிறான். அங்கு பாறைகள் மறைந்து பலப்பல குகைகளும், இரதங்களும், சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. அவனோ சக்கரவர்த்தி! உன்னதமான இச்சைகளையுடையவன். ஆணையிடும் போதில் இன்பம் காண்பவன். “ஆஞாரசன்”. அவன் ஆணையை நிறைவேற்ற ஏராளமான சிற்பிகள் காத்து நிற்கின்றனர். எனவே இச்சைகள் எல்லாம் பூர்த்தி அடைந்தவனாக “இச்சாபூரணன்” ஆகிறான். எந்த எந்தப் பாறைகளில் எந்த எந்த உருவங்களைக் காண்கிறானோ அவைகளையெல்லாம் உண்மைச் சிற்பங்களாக்க ஆணை இடுகிறான். அருகில் நின்ற சிற்பிகளின் தலைவனும் மன்னனைப் போன்ற ஒப்பற்ற கலைஞனாகவே இருந்திருக்க வேண்டும். கல்லெல்லாம் உயிர் பெற்று எழுகின்றன. சிறந்த சிற்பிகள் நுட்பமான சிற்பங்களைச் செதுக்குகின்றனர். அவர்களுடைய மக்கள், கற்களை வெட்டி எடுத்தல் முதலிய சிறு தொழில்களைச் செய்து, சிறந்த கலைத் திறனைப் படிப்படியாகப் பெறுகின்றனர். மாமல்லபுரம் முழுவதிலும் ஒரே சமயத்தில் பல இடங்களில் பணி நடக்கிறது. இப்பணி தொடர்ந்து மன்னன் காலம் முடியும் வரை நடக்கிறது. எனவேதான் மாமல்லபுரத்தில் பல இடங்களில் பல்வேறு நிலைகளில் சிற்பங்களையும், கோயில்களையும் காண்கிறோம். ஒன்றை முடித்து விட்டு மற்றதை முடித்தார்கள் என்று இல்லை. ஒரே காலத்தில் பல சிற்பிகள் பல பாறைகளில் பணி புரிந்திருக்கிறார்கள். இவையனைத்தும் கலைஞனாகிய ஒரு மன்னனுடைய காவியக் கற்பனையே. எனவேதான் ஒப்பற்றக் கலைச் செல்வங்களாக உலகிலுள்ளோர் அனைவரும் போற்றும் வகையில் மனதைக் கவர்கின்றன. இந்த அடிப்படையில் கண்டால்தான் மாமல்லபுரத்தின் உண்மைப் பெருமையை நாம் உணர முடியும். குடைவரைக் கோயில்கள் மும்மூர்த்தி குகை ஊரின் வடப்புறத்தே இருப்பது மும்மூர்த்தி குகை என்ற குடைவரைக் கோயிலாகும். பாறையின் வெளிப்புறத்திலேயே மூன்று கருவறைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் முன்பு மண்டபம் போன்ற அமைப்பு ஏதும் கிடையாது. மூன்று கருவறைகளும் வரிசையாக உள்ளன. முதலில் [வடப்புறத்து] உள்ள அறையில் முருகப்பெருமானின் உருவமும், நடுவறையில் சிவபிரானின் உருவமும், மூன்றாவது அறையில் திருமாலின் உருவமும் உள்ளன. முருகப்பெருமானின் நின்ற உருவம் எழில்மிகு தோற்றமாக உள்ளது. நான்கு கைகள் இருக்கின்றன. அவற்றில் மேலிருகைகளில் தாமரை மலரும், அக்கமாலையும் உள்ளன. கீழ் இடது கை தொடையின் மீது உள்ளது. வலது கரம் அபயமுத்திரை தாங்கியுள்ளது. குளிர்ந்த மலராரங்கள் மார்பகத்தில் உருளுகின்றன. இரண்டு ஆரங்கள் குறுக்காக அணியப்பட்டுள்ள முறையை வீர அணி [வீரச்சங்கிலி] என்று தமிழிலும் ‘சன்னவீரம்’ என்று வடமொழியிலும் கூறுவர். நின்ற நிலையில் இருக்கும் முருகப்பெருமானுடைய காலடியின் இருமருங்கிலும் இரண்டு அடியார்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். இருவரும் சடைமுடி தரித்துள்ளனர். ஒரு கரத்தைப் பிரானைப் போற்றும் வகையிலும், மற்றக் கரத்தை மார்பிலும் வைத்துள்ளனர். மேற்பகுதியின் இரண்டு புறத்திலும் கணங்கள் காணப்படுகின்றனர். தென்புறத்துக் கணத்தின் கையில் கிண்ணம் ஒன்று காணப்படுகிறது. முருகப்பெருமான் இருக்கும் அறை வாயிலின் இருமருங்கிலும் தவ முனிவர்கள் சடைமுடி தரித்து, முப்புரி நூல் அணிந்து பெருமானைப் போற்றி நிற்கின்றனர். அடுத்து நடுவிலுள்ள கருவறையின் பின்புறச் சுவரில் சிவபெருமான் நின்ற நிலையில் காணப்படுகிறார். நான்கு கைகளோடு காணப்படும் எம்பெருமான் மேலிரு கைகளில் மழுவும், அக்கமாலையும் தரித்துள்ளார். கீழ் வலது கை அபயம் அளித்தும், இடது கை தொடை மீது அமர்ந்தும் காணப்படுகின்றன. அவருடைய காலடியில் இரண்டு அடியார்கள் வீற்றிருக்கின்றனர். வடபுறத்து உள்ளவர் ஒரு கரத்தில் மலரும், தென்புறத்து உள்ளவர் இரண்டு கரங்களிலும் மலர்களைக் கொண்டு பிரானைப் போற்றும் வகையில் அமர்ந்து உள்ளனர். மேலே இரண்டு கணங்கள் காணப்படுகின்றனர். இவ்வுருவின் முன்னர் அரையின் மத்தியில் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்து இருமருங்கிலும் வாயிற்காவலர்கள் உள்ளனர். மூன்றாவது அறையில் திருமாலின் உருவம் நின்ற நிலையில் உள்ளது. திருமால் நான்கு கைகளோடு காணப்படுகிறார். மேலிரு கைகளில் ஆழியும் சங்கமும் கொண்டு விளங்குகிறார். கீழ்க் கை அபயமளித்து, மற்ற கை தொடையின் மீதமர்ந்து நிற்கும் எழில் உருவமாக இது காட்சியளிக்கிறது. திருமாலின் காலடியிலும் இரண்டு அடியார்கள் போற்றும் வகையிலும், மேலே இரு கணங்கள் பறக்கும் நிலையிலும் காட்டப்பட்டு உள்ளனர். இவ்வறையின் வெளியே துவாரபாலர்கள் காணப்படுகின்றனர். இம்மூன்று கருவறைகளைத் தவிர தென்புறத்தே பாறையின் வெளிப்பக்கத்திலேயே கொற்றவை [துர்க்கை], எருமைத் தலைமேல் நின்ற தேவியாக, நான்கு கைகளுடன் ஆழியும், சங்கமும், அபயமளிக்கும் கையும், துடைமீதமர்த்திய கையுமாகக் காட்சியளிக்கிறாள். இக்குகையின் வெளியே ஒவ்வொரு அறையின் மேலும் விமானம் போன்ற அமைப்பு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறையின் முன் படிக்கட்டில் மல்லன் என்ற பெயர் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று தெய்வங்களுக்கேற்பட்ட குகையாதலால் இதை மும்மூர்த்தி குகை என்றனர் போலும். மும்மூர்த்தி குகையில் முதல் அறையாகிய வடப்புறத்துக் கருவறையில் இருக்கும் உருவை முருகப்பெருமான் [சுப்பிரமணியர்] என்று குறிப்பிட்டோம். அதைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. சிலர் அதை பிரமனின் உருவம் என்று குறித்துள்ளனர். மஹேந்திரவர்மன், மண்டகப்பட்டு என்ற இடத்தில் ஒரு குடைவரைக்கோயிலை ஏற்படுத்தியுள்ளான். அங்கு பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்க்கும் ஏற்படுத்திய கோயில் என்று குறிக்கிறான். எனவே சிலர் இக்குகையையும் நான்முகன், திருமால், அரன் ஆகிய மூவர்க்கும் ஏற்பட்டது எனக் குறிக்கின்றனர். இன்னும் சிலர் பல இடங்களில் காணப்படும் முருகப்பெருமானுடைய சிலைக்கும், இங்கு காணப்படும் உருவத்திற்கும் ஒற்றுமையுள்ளபடியால் இது முருகனையே குறிக்கும் என்றும், இவ்வுருவம் நான்முகனுக்கு நான்மறையின் பொருளை முருகன் போதித்த நிலை என்றும், எனவே இது “பிரும்மசாஸ்தா” உருவென்றும் குறிக்கின்றனர். இவ்வுருபற்றி இந்நூலாசிரியருடைய கருத்து பின்வருமாறு:- பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் முதலியோர் விட்டுச் சென்றுள்ள பல கலைச் செல்வங்களில் முருகப் பெருமானுடைய உருவம் இவ்வாறு உள்ளதை இன்றும் காணலாம். எனவே இது முருகனுடைய உருவம்தான் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஆனால் இங்கு நிற்கும் நிலையை நான்முகனுக்கு நான்மறை போதித்த நிலையாகிய ‘பிரும்ம சாஸ்தா’ என்று கூறுவது பொருத்தம் இல்லை. இதுபற்றி அறிய வேண்டின் பல்லவர்களுடைய செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் ஆழ்ந்து அறிதல் நலம். பல்லவர்கள் பல பட்டங்களைப் பூண்டனர். இப்பட்டங்கள் இவர்களது உள்ளக் கிடக்கையை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இவற்றில் சில பட்டங்களை அனேகமாக எல்லா பல்லவ மன்னர்களும் சிறப்பாகப் பூண்டனர். அவற்றில் ‘பரமபாகவதன்’ என்ற ஒரு பட்டமும், பரமமாஹேச்சுரன்’ என்ற பட்டமும், பரமபிரம்மண்யன்’ என்ற பட்டமும் சிறந்தவையாம். ‘பரமபாகவதன்’ என்றால் சிறந்த விஷ்ணுபக்தன் [பரம்வைணவன்] என்றும், ‘பரமமாஹேச்சுரன்’ என்றால் சிறந்த சிவபக்தன் என்றும் பொருள் என்பது புலனாகும். பரமபிரம்மண்யன் என்ற பட்டத்திற்கு விளக்கம் தேவையாகிறது. பண்டைய காலத்தில் வேள்வி என்பது அறிவின் சின்னமாகக் கருதப்பட்டது. எனவே வேள்வி வேட்டல் என்பது அறிவைப் போற்றுதலாகும். வேள்வித்தீயின் கொழுந்துக்கு ஒப்பாக அறிவு கருதப்பட்டது. அதை ஞானக் கொழுந்து என்பது தமிழ் மரபு, எனவே தவமுனிவர்கள் அனைவரும் வேள்வியை வேட்டனர் என்று புறநானூறு, அகநானூறு முதலிய நூல்களிலிருந்து அறிகிறோம். அறிவின் இருப்பிடம் முருகப் பெருமான். வேள்வி வேட்டல் என்பது முருகப் பெருமானைப் போற்றுதல் ஆகும். திருமுருகாற்றுப்படையில் திருவேரகத்தில் வாழ்ந்த முனிவர்கள் எல்லாம் முருகப்பெருமானை வணங்கினர் என்று குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நூலில் ஆறுமுகப் பெருமானுடைய ஒரு முகம் வேள்வியைக் காத்து நிற்கும் என்று கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். வேள்வித் தீயின் தெய்வமாக நான்முகனையும் கொள்வர். மாமுது முதல்வன் வாய்மையின் வழா அ நான்மறை மரபில் தீ முறை ஒரு பால் என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. எனவேதான் மஹேந்திரவர்மன் மண்டகப்பட்டில் தான் ஏற்படுத்திய கோயிலை மூன்று தெய்வங்களுக்கும் எடுத்தான். இதே அடிப்படையில் மாமல்லபுரத்தில் பல குகைகள் மூன்று அறைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். பல்லவர்களும் வேள்வி வேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் பிரம்மண்யர்கள், சுப்பிரமணியரைப் போன்ற தூய உருவுடையவர்கள், அறிவின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்கள் என்று தங்களுடைய பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கூறிக் கொள்கின்றனர். ‘சுப்ரமண்யன், குமாரன், குகன் எவ்வாறோ அவர் போன்றவன்’ என்று காஞ்சி கைலாயநாதர் கல்வெட்டில் காண்கிறோம். அதே போன்று காசக்குடிச் செப்பேடுகளிலும் காண்கிறோம். எனவே பரமப்பிரம்மண்யர்கள் என்று பல்லவர்கள் தங்களைக் குறித்துக் கொள்ளுவதால், முருகப் பெருமானின் சிறந்த பக்தர்கள் என்பதும், வேள்வி வேட்பதில் ஈடுபாடு உடையவர்கள் என்பதும் புலனாகும். இங்குள்ள உருவம் அறிவின் தெய்வம். வேள்வியின் கடவுள், முருகப்பெருமான்தான், என்பதும் புலனாகும். எனவேதான் முருகப்பெருமானின் அறை வாயிலைத் தவமுனிவர்கள் அலங்கரிக்கின்றனர். மற்றொன்றும் இங்கு குறித்தல் வேண்டும். அக்காலத்தில் மன்னர்கள் எல்லா தெய்வங்களிடத்தும் சிறந்த ஈடுபாடோடு பக்தி செலுத்தினர். எனவே மூன்று பட்டங்களையும் சேர்ந்தாற்போல் அவர்கள் தரித்திருந்தனர். இது பல்லவர்களுடைய பெரும் பண்புக்கு எடுத்துக்காட்டாகும். இந்த நோக்கோடு மாமல்லபுரத்து மும்மூர்த்தி குகையைக் காணில் மூன்று தெய்வங்களுக்கும் கோயில் ஏன் ஏற்பட்டது என்பது புலனாகும். மும்மூர்த்தி குகையின் எதிரில் ஒரு பாறையை வட்டமான தொட்டியாக வெட்டியுள்ளனர். இதன் விளிம்பில் பல்லவக் கிரந்த எழுத்தில் ஒரு பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. மும்மூர்த்தி குகையிலிருந்து பாறைகளின் இடையே கிழக்கு நோக்கிச் செல்லும் வழியுள்ளது. அதில் சென்றால் அங்கு பாறையின் பகுதியில் ஒரு யானைச் சிற்பத்தைக் காணலாம். அதனடியில் குட்டி யானை ஒன்று துதிக்கையை நீட்டிக் கொண்டு படுக்கும் காட்சி ஒப்பற்ற காட்சியாகும். அதன் மேலே ஒரு குரங்கு அமர்ந்திருக்கிறது. அதனருகில் ஒரு மயில் நீண்ட தோகையோடு அமர்ந்துள்ளதைக் காணலாம். கோடிக்கல் மண்டபம் மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் தென்புறம் பாறையில் ஒரு குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். இதைக் கோடிக்கல் மண்டபம் என்றழைப்பர். இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்கோயிலின் பின்புறம் சுவரின் நடுவில் கருவறை குடைவிக்கப்பட்டு உள்ளது. அது மண்டபத்தில் முன்னோக்கி வந்துள்ளதைக் காண்கிறோம். கருவறை வாயிலின் இருமருங்கிலும் காவற் பெண்கள் நிற்பதைக் காணலாம். வடக்குப்புறத்திலுள்ள காவற் பெண், வலது கையில் கத்தியும், இடது கையில் கேடயமும் கொண்டு நிற்கிறாள். தென்புறமுள்ள பெண் வலது கையில் வில்லைப்பிடித்து நிற்கிறாள். அவளது இடது கரம் குரங்கின் மிசை [தொடை மீது] வைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உட்புறம் காலியாக இருக்கிறது. இருப்பினும் வாயிலைக் காத்து நிற்கும் பெண்களைக் கொண்டு இது கொற்றவைக்கு ஏற்பட்ட கோயில் எனக் கொள்வது பொருந்தும். பல்லவர் கோயில்களில் கொற்றவை கோயில்களில் வாயிற்காவலாகப் பெண்டுகள் நிற்பதைக் காணலாம். இரண்டு காவற்பெண்டுகளும் கச்சணிந்து தலையில் சடைமுடி தரித்து விளங்குகின்றனர். மண்டபத்தின் முன்புறத்தைச் சதுர அமைப்புடையத் தூண்கள் தாங்குகின்றன. அவற்றின் தென்புறத் தூணில் மேல் பகுதியில் ‘வாமாங்குசன்’ என்ற பெயர் பல்லாவா கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. வாமாங்குசன் என்பது இராஜசிம்மனின் பட்டப் பெயராகக் காணப்படுகிறது. [இது பல்லவர்களுக்கு அடங்கி ஆண்ட சிற்றரசன் ஒருவனின் பெயராயிருக்கலாம் அல்லது சிற்றரசனே இதைத் தோற்றுவித்திருக்கக்கூடும் என்று திரு. கூ. ரா. சீனிவாசன் கருதுகிறார்.] தர்மராஜ மண்டபம் இரண்டாவது அர்ச்சுனன் தவத்திலிருந்து தெற்கு நோக்கிச் சிறிது சென்றால் கிழக்கு நோக்கிய குகையொன்றுள்ளது. அதை தர்மராஜ மண்டபம் என்றழைப்பர். கல்வெட்டில் அதற்கு அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் எனப் பெயர் உள்ளது. நீண்ட சதுரமாகவும் இரண்டு அங்கணமாகவும் உள்ள இக்கோயிலின் பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் வரிசையாகவுள்ளன. நடுவிலுள்ளது பெரியதாகவும் மற்றவை சிறிது சிறிதாகவும் உள்ளன. நடுவிலுள்ள கருவறையின் வாயிலை இரு வாயில்காவலர் சிற்பம் அலங்கரித்து நின்றன. இச்சிற்பங்களைப் பிற்காலத்தில் சிதைத்துள்ளனர். தூண்கள் எளிமையான அமைப்புடையவை. வெளி அங்கணத்தில் தென்புறச் சுவரில் பல்லவ கிரந்தத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் சம்ஸ்கிருத மொழியில் பதினோரு செய்யுட்கள் காணப்படுகின்றன. ‘எதிரிகளை வென்றவனும், ரணஐயன் என்ற பட்டம் பூண்டவனுமான அத்யந்தகாமன் என்ற மன்னனால் சிவபெருமானுக்கு இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்றும், குடிமக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் பொருட்டு சிவபெருமானின் அருள் வேண்டியும் இம்மன்னனால், சிறந்த இச்சிவாலயம் தோற்றுவிக்கப்பட்டது’ என்றும் கூறும் செய்யுட்கள் குறிப்பிடத்தக்கவை. இதிலிருந்து இதைத் தோற்றுவித்தவன் அத்யந்தகாமன் என்பது தெளிவாகிறது. அப்பெயர் இரண்டாம் நரசிம்மனான இராஜசிம்மனின் சிறப்புப்பெயர் என முன்பே கண்டோம். எனவே இது அம்மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது என்பது நன்கு புலனாகும். தன் குடிமக்களின் விருப்பங்களெல்லாம் பூர்த்தி அடையவேண்டும் என்பதற்காக சிவபெருமானின் அருட் செல்வத்தை இம்மன்னன் வேண்டுவதிலிருந்தும், அதற்காக இக்கோயிலைத் தோற்றுவித்ததிலிருந்தும் இவனுக்குத் தன் குடிகளின் நலத்திலிருந்த ஆர்வம் வெளிப்படுகிறது. எனவேதான் இம்மன்னன் தன் வாழ்நாள் முழுவதும் போர்க்களம் தவிர்த்து மக்களுக்குச் சாந்தியை அளித்தான். இக்கல்வெட்டிலிருந்து இக்கோயில் சிவபெருமானுக்கு ஏற்பட்டது என்று கண்டோம். எனவே நடுவிலுள்ள கருவறை சிவனுக்காக ஏற்பட்டது என்று அறியலாம். வலப்புறமுள்ளது திருமாலுக்கும் இடப்புறமுள்ளது பிரமன் அல்லது முருகனுக்கும் உரியதா இருந்திருக்க வேண்டும். ஆனால் மூன்று கருவறைகளும் தற்போது காலியாகத்தானிருக்கின்றன. இக்கோயிலைப் பிற்காலத்தில் வைணவர்கள் உபயோகித்தனர் என்பதற்கடையாளமாகச் சங்கமும், சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இராமானுஜ மண்டபம் மஹிஷாசுரமர்த்தினி குகையிலிருந்து கலங்கரை விளக்கம் [light house] இருக்கும் திசையில் ஒரு சிறு வழி செல்கிறது. அதிலே இறங்கிச் சென்றால் இராமானுஜ மண்டபத்தை அடையலாம். இது ஒரு சிறப்பான அம்சமுடைய குகைக் கோயிலாகும். மண்டபம் போன்ற அமைப்பும், அதன்பின்புறத்தில் மூன்று கருவறைகளும் கொண்டு இக்கோயில் விளங்கியிருக்க வேண்டும். மண்டபத்தின் முகப்பில் இரண்டு தூண்களிருக்கின்றன. குகைக் கோயிலின் வெளிப்புறத்தே இருமருங்கிலும் துவாரபாலர்களுடைய சிற்பங்கள் வாயிலைக் காத்துநின்றன. ஆனால் அவை பிற்காலத்தில் சிதைத்தெறியப் பட்டுவிட்டன. அதற்குமப்பால் இருபுறங்களிலும் இரண்டு விமானங்களுடைய உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு இக்குகைக் கோயிலின் வாயிலை அழகு செய்கின்றன. தூண்களினடியில் சிம்மங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியில் உருத்திரனின் புகழ்பாடும் கல்வெட்டு ஒன்று அழகிய பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. குகையின் பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டிருந்தன. மத்தியில் இருந்த கருவறை மற்ற இரு அறைகளைக் காட்டிலும் பெரியதாக, முன் வந்ததாகச் செதுக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் இந்தக் கருவறைகளும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டுவிட்டன. மத்தியில் இருந்த கருவறையின் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்த மூர்த்தியினுடைய உருவம் இருந்தது. இதுவும் பிற்காலத்தில் சிதைக்கப்பட்டு உள்ளது. இவ்வுருவம் மஹிஷாசுரமர்த்தினி குகையிலுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவைப் போலவே இருந்திருக்க வேண்டும். அம்மை, அப்பன், மற்றும் திருமால், பிரமன் முதலிய உருவங்கள் இருந்த தடயங்களும் இங்கு காணப்படுகின்றன. சிவபிரான், அம்மை இருவருக்கும் கொற்றக் குடைகள் காணப்படுகின்றன. மற்ற இரு கருவறைகளிலும் திருமால், நான்முகன் இவர்களுடைய உருவங்களிருந்திருக்க வேண்டும். குகையின் உள்ளே நுழையும்போது முன் அங்கணத்தில் இருபக்கச் சுவர்களிலும் சிற்பங்கள் இருந்தன. அவையும் சிதைக்கப்பட்டு விட்டன. தென்புறத்துச் சுவரில் கொற்றவையின் சிற்பமும், வடப்புறம் திருமகளின் சிற்பமும் இருந்தன. இம்மண்டபத்தைப் பிற்காலத்தில் வைணவர்கள் வழிபாட்டுக்கு எடுத்துக் கொண்டபோது பின்புறமிருந்த கருவறைகளையும், சிற்பங்களையும், வாயிற்புறத்தே நின்ற காவலர்களையும் சிதைத்து இம்மண்டபத்தைப் பெரிதாக்க முனைந்திருக்கின்றனர். அதன் பயனாக இதனுடைய கலையழகு குலைந்து விட்டது. இதற்கு முன்பு ஒரு கல்லாலான மண்டபம் கட்டவும் பிற்காலத்தே முனைந்திருக்கிறார்கள். வராஹ மண்டபம் அர்ச்சுனன் தவத்திலிருந்து கணேச இரதத்திற்குச் செல்லும் வழியில் சென்றால் வராஹ மண்டபத்தை அடையலாம். இங்கு வராஹப்பெருமானின் சிற்பம் இருப்பதாலேயே இதற்கு வராஹ மண்டபம் என்ற பெயர் உள்ளது. இம்மண்டபத்தில் கல்வெட்டு ஏதும் இல்லை. ஆயினும், எழில் மிகும் நான்கு சிற்பங்கள் உள்ளன. சிறிய மண்டப அமைப்பை உடைத்தாயினும், பெரும்பாலும் முற்றுப் பெற்ற கோயிலாகும். ஒரே அங்கணமாக அமைந்த இக்கோயிலில், நடுவில் உள்ள கருவறை சற்று முன்னோக்கி வந்துள்ளது. கருவறையின் உள்ளே உருவம் ஏதும் இல்லை. வாயிலை வாயிற்காவலர் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கருவறையின் பக்கச் சுவர்களிலும், காவலர் சிலைகள் உள்ளது சிறப்பாகும். கருவறையில் நான்கு சுவர்ப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எழில்மிகும் சிற்பங்கள் உள்ளன. வடப்புறச் சுவரில் வராஹ மூர்த்தியின் சிற்பம் உள்ளது. அடுத்துள்ள கீழ்ச் சுவரில் தாமரை மீதமர்ந்த திருமகளின் சிற்பம் உள்ளது. கருவறையின் தெற்கே உள்ள கீழ்ச் சுவற்றில் கொற்றவையின் சிற்பமும், தென்புறச் சுவரில் திருவிக்கிரமரின் உருவமும் உள்ளது. வராஹம் ஊழிக்கூத்தென கடல் அலைகள் வீசின. பெரும் பிரளயம் தோன்றியது. நிலமகளை அலைகள் அள்ளி விழுங்கின. கடலின் அடியிலே சிக்கித் தவித்தனள் நிலமகள். அவளை விடுவிக்க மாபெரும் பன்றியின் உருவிலே புனலிலே பாய்ந்தார் திருமால். திருமாலைக் கண்டதும் கரம் குவித்து வணங்கினாள் நிலச்செல்வி. ஆதிசேடனாம் அரவின் தலையிலே காலை ஊன்றி ஆர்ப்பரித்து அம்மகளைத் தூக்கி வெளியே கொணர்ந்தார் திருமால். அமரர்கள் ஆரவாரித்தனர். உலகம் உய்ந்தது, ‘பெரிய தண்புனல் சூழ் பெரும்நிலம் எடுத்த பேராளன்’ என இவரைப் பக்தர்கள் பாடினர். இங்கு பூவராஹமூர்த்தியாகத் திருமால் மேலிருகைகளில் ஆழியும், சங்கமும் பூண்டு, கீழிரு கரங்களில் நிலமகளை ஆர்ப்பரித்துத் தூக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. திருமால் பூமகளை வலப்புறத்தில் தாங்கியுள்ளார். அவருடைய வலது கால் ஆதிசேடனாம் அரவின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேடனின் வலப்புறம் பெருமாளை வணங்கும் ஓர் உருவம் காணப்படுகிறது. அது ஆதிசேடனின் மனைவியாக இருக்கலாம். அதற்குப் பின் நிற்பது சிவபெருமான். அவருக்கு முன் யாழ் ஒன்று காணப்படுகிறது. மேலே கதிரவன் வராஹப் பெருமானைப் போற்றி வணங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. வராஹமூர்த்தியின் இடப்புறம் நான்முகன் காணப்படுகிறார். அதற்கு அடுத்து நாரதர் வீணை ஏந்தி, வராஹப்பெருமானைப் போற்றுகிறார். இங்குள்ள வராஹப் பெருமானின் தோற்றம் உலகச் சிறப்பு வாய்ந்தது. திருமகள்: இயற்கையன்னை அமர்ந்துள்ளார். இவள் மனிதன் தோன்றிய நாள் முதல் உணவும், உடையுமளித்து வரும் நிலமகளாகத்தானிருக்க வேண்டும். பணிப்பெண்கள் சுற்றும் நிற்கின்றனர். அலை வீசும் கடலிலிருந்து அள்ளியுண்ட நீரைத் தன்னுள் அடக்கி, விண்ணகத்தை மறைத்து வரும் கார் காலத்து மேகம் போல் இருமத்தகஜங்கள் துதிக்கையில் கொண்டுள்ள குடங்களிலிருந்து நீரை அலைமகளின் மீது மழையெனக் கொட்டுகின்றன. செல்வத் திருமகள் தெய்வீக ஒளியோடு அமர்ந்திருக்கும் இக்காட்சியைச் சித்தரிக்கிறது இச்சிற்பம். வரலாற்று அடிப்படையில் திருமகள் வழிபாட்டில், பல வளர்ச்சிகள் தோன்றியுள்ளன. அவற்றில் தான்யங்களைக் கொடுக்கும் நிலமகளைப் பண்டைய மக்கள் தெய்வமாகப் போற்றினர். ‘வஸுக்களை தன்னுள்ளே அடக்கியவள். தான்யங்களின் இருப்பிடம். இரத்தினங்களைத் தன்னிடத்தில் கொண்டவள். எனவே செல்வத்தின் கிழத்தி என்ற வசுந்தரா, அல்லது திருமகள்’ என இவளை மக்கள் வழிபட்டனர். நிலமகளின் செழுமைக்குக் காரணம் மழையே. மழைக்குக் காரணம் மேகங்கள். மேகங்களை மத்தகஜங்களுக்கு உவமிப்பர். மேகங்கள் நீர்பொழிய, நிலமகள் செல்வத்தைக் கொடுக்கும் திருமகளாக மாறுகிறாள். இதை உருவகப்படுத்தி அதனடிப்படையில் தோன்றியதே, இங்குள்ள திருமகளின் வடிவம் என்பர். இதே நிலையில், பண்டைய பொளத்தச் சிற்பங்களிலும், ஸ்ரீமா தெய்வம் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இரண்டாம் நந்திவர்மனாகிய பல்லவமல்லன் அளித்த காசாக்குடிச் செப்பேட்டில், திருமகளைக் குறிக்கும் ஒரு செய்யுள் காணப்படுகிறது. பத்மா பத்மாசீனா பத்மோத்ஜ்வல பாணி பத்மயுகலா வஹ பிரீத்யா பச்யது கரிணீ கரத்ருத கணககட சுஸ்னானா தாமரை மலர்கள் அலங்கரிக்கும் கரங்களையுடையவளும், தாமரை மலரில் அமர்ந்திருப்பவளும், யானைகள் துதிக்கைகளில் தாங்கிய பொற்குடங்களிலிருந்து நீராட்டப் பெறுபவளுமான தாமரையாள். நம்மை அருளோடு பார்க்கட்டும் என்பது அதன் பொருள். நந்திவர்மன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் தோன்றிய சில ஆண்டுகளுக்குள் ஆட்சி புரிந்தவன். அவன் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ள அச்செய்யுள், இங்குள்ள திருமகளின் சிற்பத்திற்கேற்ப அமைந்துள்ளது கண்டு இன்புறத்தக்கது. கொற்றவை: இங்குள்ள கொற்றவையின் சிற்பமும் எழில்மிக்கது. இதைப் பார்க்கும்போது சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் வரும் மூன்று செய்யுட்கள் நினைவிற்கு வரும். ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய் வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய் சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய். இங்குள்ள சிற்பத்தின் மேலே சிங்கமும், கலைமானும் காண்பிக்கப்பட்டுள்ளன. தேவி கானத் தெருமைத் தலைமேல் நிற்கிறாள். அவளின் இருமருங்கிலும் மறவர் வீற்றிருக்கின்றனர். ஒருவர் வாளைக் கையிலேந்தி நிற்க, மற்றவர் தன் தலையை வாளால் அரிந்து, தேவியின் காலடியில் அவிப்பலியாக இடும் நிலையில் காணப்படுகிறார். பண்டைத் தமிழகத்தில், மாற்றாரிடமிருந்து தன் நாட்டைக்காக்க நெடுமொழி [வஞ்சினம்] கூறிய மறவர்கள் வெற்றி கிட்டியதும் கொற்றவைக்குத் தன் தலையை அரிந்து அவிப்பலி இடுதல் மரபு. அச்செயல், மன்னன் சிறப்போடு வாழ வேண்டும் என்று போற்றுவதாகும். சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளுநின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே. சிலம்பு- வே.வரி.18 அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே சிலம்பு-வே.வரி.20 இதன் அடிப்படையில் இங்குள்ள கொற்றவையின் சிற்பம் சிறப்பெய்துகிறது. உலகளந்த பெம்மான்:- வைரோசனின் புதல்வனான பலி தவமிருந்து வரம் பல பெற்று பலம் பூண்டு விளங்கினான். ஆணவம் அதிகமாக அமரர் தலைவனையும் துன்புறுத்தினான். அதிதியின் வேண்டுதலின் பேரில், விஷ்ணு சிறு வேடம் தாங்கி [குறளுருவம்] யாகம் செய்து நின்ற பலியிடம் மூன்றடி நிலம் யாசகமாகக் கேட்டார். அரக்கர்களின் குருவாம் சுக்ராசார்யனின் புத்திமதியையும் புறக்கணித்து மாவலி தானம் தருவதாக வாக்களித்தான். சிறுவனாயிருந்த உருவம் மிகப் பெரிய உருவமாக மாறியது. கையில் கதை, கத்தி, சங்கு, ஆழி, வில் முதலியவை கொண்டு திரிவிக்கிரமனாக விஷ்ணு மாறினார். ஒரு காலினால் பூமியை அளந்தார். மற்ற அடியினால் விண்ணகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிவைக்க இடமின்றி பலியின் தலையிலேயே வைத்தார். பலி பாதாள உலகிற்கு அழுத்தப்பட்டான். உலகம் உய்ந்தது. ஓங்கி உலகளந்த உத்தமனின் புகழ் பாடினர் பெரியோர். மாவலியை பாதாள உலகின் மன்னனாக மாற்றினார் கடவுள். இச்சிற்பம் இங்கு அழகாக வடிக்கப்பட்டுள்ளது. மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்தாவிய சேவடியை திசைமுகன் போற்றுகிறார். மறுபுறம் காணப்படுவது சிவபெருமானாக இருக்கலாம். உலகளந்த பெருமானின் காலடியில் சுக்ராசார்யன், மாபலி முதலிய தானவர்கள் இருக்கின்றனர். பெருமானின் இருமருங்கிலும் சூரியனும், சந்திரனும் போற்றிப் பரவுகின்றனர். மேலே ஜாம்பாவான் மத்தளத்தை இசைக்க எழில் மூர்த்தியாய் நிற்கும் பெருமானைக் காணில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறித்துள்ள- திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே என்ற அடிகளே நினைவிற்கு வரும். ஆதிவராஹ மண்டபம் மகிஷாசுரமர்த்தினி குகையிலிருந்து தென் மேற்கில் ஆதிவராஹக் குகைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்போது வழிபாடு நடந்து வருகிறது. இக்குகையின் முன்புறத்தில் பிற்காலத்தே மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வழிபாட்டு நேரம் தவிர மற்றைய நேரங்களில் வாயிற்கதவு பூட்டப்பட்டிருக்கும். வெளியிலிருந்து பார்த்தால் குகைக் கோயில் என்று கூடத் தெரியாது. வழிபாடு செய்வோர் மாமல்லபுரத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கேட்டால் மனமுவந்து கோயிலைத் திறந்து காட்டுவர். உள்ளே சென்றால், குகைக் கோயில் இரண்டு அங்கணமாகக் குடைவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். குகை, மேற்குப்புறம் பார்த்தது. நடுவிலுள்ள கருவறையில் ஆதிவராஹமூர்த்தி உள்ளது. எனவே இதை ஆதிவராஹர் கோயில் என்றழைக்கின்றனர். கல்வெட்டுகளில் ‘பரமேச்சுர மகாவராஹ விஷ்ணு கிருஹம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே பரமேச்சுரன் என்ற பட்டம் பெற்ற மன்னன் ஒருவனால் இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்பது புலனாகும். இக்கோயிலில் சில சிறப்பான அம்சங்கள் உண்டு. [1] மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல குகைக் கோயில்களில், இக்கோயில் ஒன்றில்தான் இன்னும் வழிபாடு நடைபெறுகிறது. [2] இரு பல்லவ மன்னர்களின் உருவச்சிலைகள், அவர்களுடைய பெயர்களுடன் இங்குள்ளன. [3] விஷ்ணுவுக்கேற்பட்ட இக்கோயிலில் சிவபிரானின் புகழைப் போற்றும் கல்வெட்டுள்ளது. [4] நந்திவர்ம பல்லவ மல்லனின் 65-ஆம் ஆண்டு கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. தமிழகத்தில் 65 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த மன்னன் இவனே. [5] திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் கல்வெட்டு இங்குள்ளது. அதில் புத்தர்பிரானும் பத்து அவதாரங்களில் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். கி.பி.8-ஆம் நூற்றாண்டிலேயே புத்தர், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுவது சிறப்பாகும். இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் வடப்புறச் சுவரில், முன் அங்கணத்தில் சிவபிரான் கங்கைவார் சடை கரந்தாராகக் கங்காதர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். ஆகாயத்திலிருந்து கங்கை மேலே கைகூப்பி இறங்குகிறாள். அண்ணல் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். மேல் கையில் சடையைப் பிடித்துக் கங்கையைத் தாங்குகிறார். மேலிடது கரத்தில் அக்ஷமாலை உள்ளது. கீழ் வலது கரம் அபயமளிக்கிறது. இடது கரம் தொடைமீதமர்ந்து காணப்படுகிறது. வலது புறம் பாம்பு காணப்படுகிறது. இவ்வரலாற்றையே பரிபாடல், எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறை ஊழ்த்து, விழுநிகர் மலர் ஏய்ப்ப, தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணி மிடற்று, அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ. என்று கூறுகிறது. இதற்கு அடுத்து சிம்மவிண்ணப் போத்ராதிராஜனின் உருவச்சிலை உள்ளது. உயர்ந்த அரியணையில் மன்னன் அமர்ந்துள்ளான். இடது கை தொடைமீது அமர்ந்துள்ளது. வலது கரம் சிம்மகர்ண முத்திரையில் காணப்படுகிறது. கீரிடம் தரித்து பெரும் காதணிகளோடு விளங்கும் மன்னனின் இருமருங்கிலும் அவன் மனைவியர் நிற்கின்றனர். மேலே ‘சிம்ம விண்ணப் போத்ராதிராஜன்’ என்று பல்லவக் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அடுத்துள்ள கீழைச் சுவற்றில் திருமகள் தாமரைப் பீடத்தமர்ந்து தோற்றமளிக்கிறாள். இரு கரங்களிலும் தாமரை மலர்கள் உள்ளன. இரு மருங்கிலும் இரண்டு இரண்டு பெண்கள் நிற்கின்றனர். அண்மையில் உள்ள பெண்கள் பொற்குடம் ஏந்தி நிற்கின்றனர். அப்பாலுள்ள பெண்கள் அகிற் பாத்திரத்தை ஏந்தி உள்ளனர். மேலே இரண்டு யானைகள் காட்டப்பட்டுள்ளன. ஒரு புறமுள்ள யானை பொற்குடத்திலிருந்து நீரைத் திருமகள் மீதாட்ட மறுபுறத்து யானை பொற்குடத்தை ஏந்தி நிற்கிறது. கருவறையின் முன்புறம் அடுத்துக் காணப்படுவது நாகராஜர் உருவம். தலையில் ஐந்துதலை நாகத்தோடும் இருகரங்களோடும் இது காணப்படுகிறது. அடுத்துத் திருமால் ஆழியும், சங்கமும் ஏந்தி, அபயக் கரமும், குரக்கம் சேர்த்திய கையுமாக, வழிபடுவோர் இருபுறமும் சூழக் காணப்படுகிறார். அடுத்துக் காண்பது வாயிற் காவலன் சிலை. கருவறையின் உள்ளே ஆதிவராஹமூர்த்தி வலப்புறம் நிலமகளைத் தாங்கி நிற்கிறார். இப்போதுள்ள உருவம் சுதை பூசப்பட்டு, வண்ணம் அடிக்கப்பட்டு விளங்குகிறது. ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான் வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள கானத்தின் கடல்மல்லை தலைசயனத் துறைகின்ற ஞானத்தின் ஒளியுருவை நினைவாரென் நாயகரே. என்று திருமங்கை மன்னன் பாடியிருப்பது இப்பெருமானையே இன்றும், வைணவர்கள், இப்பெருமானின் முன்பு, இப்பதியத்தை ஓதல் சிறந்தது எனக்கொள்வர். இப்பெருமானுக்கு இதனால் ஞானப்பிரான் என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. கருவறையை அடுத்து வாயிற்காவலன் சிலையும், அதையடுத்து அரியரனின் சிற்பமும், அதை அடுத்து வாயிற்காவலன் சிற்பமும் உள்ளன. அரியரனாகக் காட்சியளிக்கும் உருவம் நான்கு கரம் பூண்டு, அபயகரமும் தொடை மீதமர்த்திய கையுமாக விளங்குகிறார். வழிபடுவோர் இருமருங்கிலும் காணப்படுகின்றனர். அரியரன் சிற்பத்தின் மேல் பல்லவக் கிரந்த எழுத்தில் மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா: என்ற வடமொழிச் செய்யுள் ஒன்று உள்ளது. இதில் திருமாலின் பத்து அவதாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. தேவுடை மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய், மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் என்று பெரியாழ்வார் திருமொழி ஈண்டு நினைவிற் கொளல் தகும். திருமாலின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராக இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், தேவாரத் திருப்பதிகங்களின் தோற்றத்தின் பின்னர் பொளத்தமதம் குன்றத் தொடங்கியது என்று சில வரலாற்று ஆசிரியர் குறிப்பர். ஆனால் இங்கு புத்தரும் திருமாலின் அவதாரமாகவே கருதப்படுவதிலிருந்து அக்காலத்து மக்களின் பெரும் பண்பு புலனாகிறது. அதற்கு எதிரில் தரையில் பல்லவக் கிரந்த எழுத்தில் ‘யார் ருத்ரனுடைய புகழ் பாடவில்லையோ அவர்களுக்குக் கெடுதல், கெடுதல், கெடுதல், கெடுதலே ஆகுக’ என்று சிவபிரானின் புகழ்பாடும் செய்யுள் உள்ளது. அடுத்துள்ள கீழைச் சுவற்றில் கொற்றவையின் உருவைக் காண்கிறோம். எண்கரம் பூண்டு எழில் மேனியாய் விளங்கும் இமயக் குமரியின் வலது கரங்களில், ஆழி, கத்தி, மணி, கபாலம் என்ற படைகள் காணப்படுகின்றன. இடது கரங்களில் சங்கம், கேடயம், வில், கிளி ஆகியவை காணப்படுகின்றன. தேவி கானத்தெருமை கருந்தலை மேல் நிற்கிறாள். திருமாலுக்கு இளையவளாகிய கொற்றவையை இளங்கோவடிகள்; மதியின் வெண்தோடு சூடுஞ்சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாய் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியின் உரிவை போர்த்தணங்காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்பும் கழலும் புலம்புஞ்சீரடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல்…………" எனப் போற்றுகிறார். காலடியில் இருபுறமும் வீரர் இருவர் வெற்றித் தெய்வமாம் கொற்றவையை வழிபட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு அப்பால் காவற்பெண்கள் காணப்படுகின்றனர். தேவியின் வலப்புறமுள்ள பெண் கையில் கத்தியும், இடக்கையில் கேடயமும் கொண்டு விளங்குகிறாள். இடப்புறம் உள்ளவள் நீண்ட வில்லைக் கையில் தாங்கி நிற்கிறாள். மேலே இருபுறமும் கணங்கள் உள்ளன. அப்பால் செங்கண் அரியும், கரியதிரிக் கோட்டு கலையும் காணப்படுகின்றன. இவை இரண்டும் கொற்றவையின் சின்னங்களாகச் சங்ககாலத்தில் இருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தன. கொற்றவையின் அழகையும், ஏற்றத்தையும் கண்டு, அடுத்துத் தென்புறச் சுவரில் மஹேந்திரனின் உருவைக் காணலாம். அவரின் இரு பெண்டுகளும் இடப்புறம் நிற்கின்றனர். தன் தேவியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையினால் ஆலயத்தைச் சுட்டிக்காட்டும் மஹேந்திர பல்லவனின் தோற்றமும், அவனுடைய ஆடை அணிகலன்களின் அழகும் ஒப்பற்ற பேரரசன் என்ற நிலையை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன. இதன் மேல் ‘மஹேந்திரப் போத்ராதிராஜன்’ என்று பல்லவக் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து நான்முகனின் சிற்பம் உள்ளது. இக்கோயிலைத் தோற்றுவித்தவன் யார்? இக்கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைப்பது அரிது. இதைப் பலர் பலவிதமாகக் குறிக்கின்றனர். இங்கு சிம்மவிஷ்ணு, மஹேந்திரவர்மன் இருவரின் உருவங்கள் உள்ளன. எனவே இதை மஹேந்திரவர்மன் தோற்றுவித்திருக்கலாம் என்று சிலர் கருதினர். இக்கருத்துப்படி மஹேந்திரன் காலத்திலேயே இங்கு பணி துவங்கியது என்பர். இன்னும் சிலர் இக்கோயிலைத் தோற்றுவித்தவன் முதல் நரசிம்மனான மாமல்லனே. அவன் தன் தந்தையின் சிலையையும், தன் சிலையையுமே இக்கோயிலில் செதுக்கியிருக்கிறான். எனவே நின்ற நிலையில் உள்ளது மஹேந்திரன் என்றும், அமர்ந்திருப்பது மாமல்லனே என்றும் கருதினர். சிம்மவிஷ்ணு என்பது மாமல்லனின் மற்றொரு பெயர் என இவர்கள் கருதினர். இங்கு சிம்மவிஷ்ணு என்னும் உருவம் அமர்ந்த நிலையிலும், மஹேந்திரன் என்னும் உருவம் நின்ற நிலையிலும் உள்ளன. ஆனால் தான் அமர்ந்திருக்க தன் தந்தையை நின்ற நிலையில் இம்மன்னன் காட்டியிருக்க மாட்டான். அது நம் பண்புக்கு உகந்ததல்ல என்று கொண்டு, சிலர், அமர்ந்திருப்பது மாமல்ல நரசிம்மன் என்றும், நின்ற நிலையில் இருப்பது அவன் மகனான இரண்டாம் மஹேந்திரன் என்றும் கூறுகின்றனர். ஆனால் கோயிலின் பெயர் பரமேச்சுர மஹாவராக விஷ்ணுகிருஹம் என்று கல்வெட்டில் உள்ளது. ஆதலின் இதைத் தோற்றுவித்தவன் பரமேச்சுரவர்மன் என்றும் இங்கு சிற்பத்தில் காண்பது அவன் தந்தையாம் இரண்டாம் மஹேந்திரனும், பாட்டனாம் கலைஞன் மாமல்ல நரசிம்மனும் என்று கருதுகிறார்கள். இந்நூலாசிரியருடைய கருத்துப்படி, இங்கு சிம்மவிஷ்ணு என்னும் பெயர் கொண்ட உருவம் இராஜசிம்மனது. மற்ற சிற்பத்தில் உள்ளது அவன் மகனாகிய மூன்றாம் மஹேந்திரன் என்பதே. இராஜசிம்மனுக்கு நரசிம்மவிஷ்ணு என்ற பெயர் காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. அவனுக்கே பரமேச்சுரன் என்ற பட்டமும் உண்டு. இராஜசிம்மனும், அவன் மகன் மூன்றாம் மஹேந்திரனும் கோயில் கட்டுவதில் சேர்ந்து பணியாற்றினார்கள் என்று, காஞ்சியில் அவர்கள் எழுப்பிய கோயிகளிலிருந்து அறியலாம். மேலும், திருமாலுக்கு ஏற்பட்டது இக்கோயில், இங்கு கங்காதரமூர்த்தி, அரியரன் முதலிய சிற்பங்கள் இருப்பதும், உருத்திரனின் புகழ்பாடும் கல்வெட்டு உள்ளதும், பரமேச்சுர மஹாவராஹ விஷ்ணுகிருஹம் என்ற பெயர் காணப்படுவதும், இங்கு குறிப்பிடத்தக்கவை. இவை போன்ற விசித்திரமான, கருத்துக்கள் ஒருங்கமையும்படி தோற்றுவித்தவன் இராஜசிம்மனாகவே இருத்தல் கூடும் என்பது தெளிவு. images/image1.jpg மஹிஷாசுர மர்த்தினி குகை உலகப் புகழ் வாய்ந்த பாயகலைப் பாவையாக விளங்கும் கொற்றவையின் ஒப்பற்ற சிற்பத்தையுடைய இக்குகைக் கோயில் கலங்கரை விளக்கத்துக்குப் போகும் வழியிலமைந்துள்ளது. மண்டபம் போன்ற அமைப்புடைய இக்குகையின் இருபக்கச் சுவர்களிலும் தமிழகத்தின் சிறந்த கலைப் படைப்புகள் இருக்கின்றன. பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டு உள்ளன. நடுவிலுள்ள கருவறையின் முன்னே மண்டபம் போன்ற ஓரமைப்பு குடையப்பட்டுள்ளது. இரு சிம்மத் தூண்கள் தாங்குகின்ற ஒரு மேடை போல் இப்பகுதியமைந்துள்ளது. நடுவிலுள்ள கருவறையின் பின்புறச் சுவரில், குகனோடும், மலைமகளோடும் அமர்ந்துள்ள கற்றைச் சடைமுடி அண்ணலாகிய சிவபெருமானின் ‘சோமாஸ்கந்தர்’ உருவம் காணப்படுகிறது. அவரின் பின்னே இருமருங்கிலும் திருமாலும், திசைமுகனும் பெருமானைப் போற்றிய நிலையில் நிற்கின்றனர். சிவபெருமான் உயர்ந்த அரியனை [சிம்மாசனத்தின்] மீது அமர்ந்திருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்டு விளங்கும் இவருடைய மேல் வலது கரத்தில் பெரிய பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கீழ் வலது கை வரத முத்திரையிலுள்ளது. இடது மேல் கை உருத்திராக்க மாலையை [அல்லது தவமாலையைப் பிடித்த நிலையிலும்] கீழ் இடது கை யோக முத்திரையிலும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். அருகிலே அமர்ந்துள்ள அம்மை இரு கரங்களோடு காணப்படுகிறாள். அவளுடைய இடது கை ஆசனத்தின் மீது ஊன்றப்பட்டுள்ளது. வலது கையில் குழவியாகிய குகனைத் தாங்கியிருக்கிறாள். கந்தனாகிய குகன் அன்னையின் துடை மீதமர்ந்து விளையாடும் குழந்தையாகக் காட்சியளிக்கிறார். உயர்ந்த ஆசனத்தின் கீழே சிவபிரானின் ஊர்தியாகிய ஏறு [காளை] படுத்துள்ளது. அம்மையும், அப்பனும் தங்களுடைய இடது கால்களை அதன் மீது ஊன்றியிருக்கின்றனர். அன்னையினரியணையின் கீழே ஒரு பணிப்பெண்ணின் உருவம் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. பாய்கலைப் பாவை: வஜ்ரம் போன்ற உடல், பளுவான கதை, எருமையின் முகம், எவரும் தன்னை அழிக்க முடியாது என்ற இறுமாப்பு, இவைகளையுடைய அரக்கன் கையில் பட்டு உலகம் அலறியது. தேவர்கள் அஞ்சி ஓடினர். மூவுலகின் அன்னை தன் மக்கள் படும் அல்லல் கண்டு வெகுண்டெழுந்தனள். சிங்கத்தின் மீதமர்ந்து சீறிப்பாய்ந்தனள். தாயுள்ளம் படைத்த தெய்வம் வில்லும், அம்பும் கொண்டு அரக்கனுடன் சமர் தொடுத்தாள். அன்னையின் உருவே அரக்கன் மனத்தில் அச்சத்தை ஊட்டியது. அரக்கர் கோன் அடிபட்டு வீழ்ந்தான். வையம் அன்னையைப் போற்றியது. இக்காட்சியைச் சித்தரிக்கிறது இம்மண்டபத்திலுள்ள சிறபம். கையிலே கதையேந்தி உள்ள மகிஷாசுரனும் அவன் சுற்றமும், தோற்று ஓடுகின்றனர். வில்லேந்தி வீரச்சமர் புரியும் அன்னையினுருவம், கணங்களின் உருவும் வனப்பு வாய்ந்தவை. போரின் சீற்றத்தையே கண்முன் கொணர்ந்து நிறுத்தும் ஆற்றல் கொண்டு உள்ளது இச்சிற்பம். தேவி பாகவதம் என்ற வடமொழிக் காப்பியத்தில் கொற்றவை மகிஷாசுரனை அழித்த கதை விளக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இச்சிற்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மாமல்லையிலுள்ள சிற்பங்களில் இதுவே தலையாயது. இதைக் காணவே ஏராளமான வெளி நாட்டார் மாமல்லைக்கு வருகின்றனர். தமிழகச் சிற்பிகள் தோற்றுவித்துள்ள சிற்பங்களில் இது ஒப்புயர்வற்றது. அரவணை துயின்றோன் தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத் துளவம் சூடிய அறிதுயிலோன். என்று அரவணை துயின்ற அம்மானைப் பரிபாடல் போற்றுகிறது. சாந்தத்தில் உள்ள அமைதியைச் சிற்பத்தின் வாயிலாகக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் சக்தி சிற்பிக்கு உண்டு என்பதைக் காட்டுமாறு இங்கு ஒரு சிற்பம் உள்ளது. கல்பகாலத்தின் முடிவில், உலகனைத்தையும் ஒரு கடலாக்கி, காத்தல் கடவுளாம் திருமாலை யோகநித்திரையில் ஆழ்த்தினாள் மாயா சக்தி. அச்சமயம் மது, கைடபர் என்ற அரக்கர்கள் துன்புறுத்த, சக்தியைப் போற்றினார் நான்முகன். ‘தேவி, உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் வல்லமை பெற்ற பெருமான் உன் மாயையால் உறங்குகிறார். பெருமானை விட்டு நீ அகன்று செல்வாய். நித்திரை நீங்கி அவர் விழிக்கட்டும். அல்லல் தரும் இவ்வரக்கர்களை அழிக்கட்டும். அருள் பாலிப்பாய்’ என்று நான்முகன் வேண்ட தேவி திருமாலை விட்டு நீங்கினாள். பெருமான் விழித்தார். அழிந்தனர் ஆணவத்தின் இருப்பிடமாம் அரக்கர்கள். இவ்வரலாறு மார்க்கண்டேய புராணத்தில் குறிக்கப்படுகிறது. அக்காட்சியே இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அனந்தனின் அணைப்பிலே அண்ணல் படுத்திருக்கிறார். அவர் கால் புறத்தே மது, கைடபன் என்ற அரக்கர்கள், ஆணவம் மேலிட்டு நிற்கின்றனர். மேலே யோகநித்திரையாகிய சக்தி பறந்து செல்கிறாள். பெருமானின் அருகில், சக்கரத்தாழ்வார் மனித உருவிலே காணப்படுகிறார். அவர் தலை முடியிலே சக்கரத்தைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது மார்க்கண்டேயர். அடுத்து நிலமகள், அண்ணலைப் பணிந்து வணங்கும் காட்சி. அரவணை துயின்ற அம்மானின் இவ்வுருவம் உலகப் புகழ்பெற்றது. இக்குகையையும் வைணவர்கள் பிற்காலத்தே உபயோகித்தனர் என்பதற்கிணங்க சங்கமும், சக்கரமும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இக்குகை சற்று உயரத்தில் இருப்பதால் இதில் ஏறிச் செல்ல மத்தியில் பாறையிலேயே படி வைக்க முனைந்துள்ளதைக் காண்கிறோம். இக்குகையின் எதிரில் ஒவ்வொரு கருவறைக்கும் முன்னர் நந்தி முதலிய ஊர்திகள் வைக்க பாறையைச் செதுக்கியுள்ளனர். நடுவில் நந்தி செதுக்கப்பட்டிருந்தது. அது பிற்காலத்தில் சிதைக்கப் பட்டுவிட்டது. மற்ற இரு ஊர்திகளும் இருந்த தடயங்களே இப்போது எஞ்சியுள்ளன. பஞ்ச பாண்டவ மண்டபம் அர்ச்சுனன் தவம் என்ற புகழ்வாய்ந்த பாறைச் சிற்பத்தை அடுத்துள்ள குடைவரைக் கோயிலை பஞ்ச பாண்டவ மண்டபம் என்பர். பஞ்ச பாண்டவர்க்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பல தூண்களை உடையதாகக் காணப்படுவதால் பஞ்ச பாண்டவர் என்ற பெயர் பெற்றது போலும். மாமல்லபுரத்தில் குடைவிக்கப்பட்டுள்ள குகைகளில், மிகப் பெரிய அமைப்புடையது இதுவே. மத்தியில் கருவறை. அதைச் சுற்றி வர இரண்டு அங்கணங்களை உடையதாகத் திருச்சுற்று என்று மிகவும் விசாலமான குடைவரைக் கோயிலாகத் திட்டமிட்டுப் பணி துவக்கியுள்ளார்கள். இங்கும் பணி பாதியிலேயே நின்று விட்டது. முடிவடைந்திருந்தால் மிகச் சிறந்த கோயிலாகத் திகழ்ந்திருக்கும். வெளிப்புறத்தில் சிம்மத் தூண்கள் உள்ளன. அவற்றின் மேல் பகுதி குதிரை வீரர்களையுடைய சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது ஒரு சிறப்பாகும். முகப்பை சாலைகளும், கூடங்களும் அலங்கரிக்கின்றன. கோனேரி மண்டபம் மாமல்லபுரத்து பாறைகளின் மேற்குப் புறத்தே கோனேரிப் பள்ளம் என்ற சிறு ஏரி ஒன்றுள்ளது. இவ்வேரி, கல்வெட்டில் கோனேரி என்றழைக்கப் படுகிறது. அதற்கெதிரில் குன்றின் மேற்புறம் இரண்டு குகைகள் அடுத்தடுத்து குடைவிக்கப் பட்டுள்ளன. ஒன்றில் தொடக்கத்திலேயே பணி நின்றுவிட்டது. மற்றது பெரும்பாலும் முடிவடைந்தது. இதில் தென்புறமுள்ள முடிவடைந்த குகையைக் கோனேரி மண்டபம் என்று குறிக்கின்றனர். இது இரண்டு அங்கணமாகக் குடையப்பட்ட நீண்ட சதுரக்கோயில். இதன் பின்புறச் சுவரில் ஐந்து கருவறைகள் குடைவிக்கப்பட்டுள்ளன. வடக்கிலிருந்து ஒன்று, மூன்று, ஐந்து கருவறைகள் சற்று முன்னோக்கியுள்ளன. இவற்றின் இடையிலுள்ள இரண்டு, நான்கு கருவறைகள் உள்ளடங்கியுள்ளன. ஒவ்வொரு கருவறையின் வாயிலையும் இரண்டு வாயிற் காவலர்கள் சிற்பம் அலங்கரிப்பதைக் காண்கிறோம். எழில் வாய்ந்த இச்சிற்பங்களின் வடப்புறமுள்ள ஒரு வாயிற் காவலன் சிலை சிதைந்துள்ளது. மற்றவற்றிலும் சில பழுதடைந்துள்ளன. இக்கருவறைகள் எந்த தெய்வத்துக்காக ஏற்பட்டவை என்று சொல்வது கடினம். கருவறைகளின் பின்புறச் சுவர்களில் மத்தியில் சதுரமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வமைப்பு சிற்பங்களைச் செதுக்குவதற்கோ அன்றி செதுக்கிய சிற்பங்களைப் பொருத்துவதற்கோ ஏற்பட்டவையாகும். இக்குகையில் கல்வெட்டு ஏதுமில்லை. மிகவும் பெரியதாகவும் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் உள்ளதுமான குகைகளில் இது ஒன்றாகும். நடுவில் உள்ள மூன்றும் சிவனுக்குரியன எனக் கொள்ளலாம். மற்ற இரண்டும் திருமாலுக்கும் பிரம்மனுக்குமாக அமைந்திருக்கலாம். அல்லது ஐந்து கருவறைகளும் ஈசானன், தத்புருஷம், அகோரன், வாமதேவன், சத்யோஜாதன் என்ற ஐந்து மூர்த்தங்களுக்கு ஏற்பட்டவையாயிருக்கும் என்று திரு. கூ. ரா. சீனிவாசன் கருதுகிறார். புலிப்புதர் மண்டபம் கோனேரி மண்டபத்துக்கு அருகில் முற்றுப் பெறாமல் நிற்கும் குகையைப் புலிப்புதர் மண்டபம் என்று அழைப்பர். நீண்ட சதுர வடிவில் ஐந்து கருவறைகள் உடையதாகவும், சிம்மத் தூண்களை உடையதாகவும் இக்கோயிலைத் தோற்றுவிக்க முனைந்துள்ளனர். பின்புறத்தில் ஐந்து கருவறைகளில் நான்கு அறைகள் ஓரளவு குடைவிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் அறையைக் குடையத் தலைப்பட்டுள்ளனர். பணி பாதியிலேயே நின்றுவிட்டது. சிம்மத் தூண்களிலும் பணி தொடக்க நிலையிலேயே உள்ளதைக் காண்கிறோம். கோனேரி மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபம் மேற்குப் புறத்தில் கோனேரி மண்டபத்தின் வடக்கே மற்றுமொரு குகை உள்ளதைக் காணலாம். இதுவும் குடைவிக்கப்பட்டுள்ள கோயிலே. நீண்டசதுர வடிவில் நான்கு சிம்மத் தூண்களுடன் உள்ள இக்கோயிலின் வெளி அமைப்பு புலிப்புதர் மண்டபத்தைப்போல் உள்ளது. ஆனால் உள்ளே மத்தியில் ஒரே ஒரு கருவறை மட்டும் அமைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதன் இருமருங்கிலும் உள்ளே குடைந்து சென்றிருப்பதைப் பார்த்தால் கருவறையின் பின்புறத்தும் குடைந்து சுற்றிவர வழி அமைக்க விரும்பினார்கள் என்று ஐயுற வேண்டியுள்ளது. இங்கும் பணி பாதியிலேயே நின்று விட்டது. முற்றுப் பெறாத மண்டபங்கள் மகிஷாசுரமர்த்தினி குகைக்குக் கீழும், கலங்கரை விளக்கத்தின் கீழும், இரண்டு குகைக் கோயில்களைக் குடையத் தலைப்பட்டுள்ளனர். இவற்றின் வெளித் தோற்றம் மட்டும் உள்ளது. தூண்களும், உள்ளே செதுக்கவேண்டிய பகுதிகளும் வரையப்பட்டு, கற்கள் வெட்டி எடுப்பதற்காகச் சதுரம், சதுரமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து குகைக் கோயில்களை எவ்வாறு குடைந்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மகிஷாசுரன் குகை கடற்கரைக் கோயிலின் வடபுறத்தே அலைவாயில் ஒரு பாறையிருக்கிறது. இதன் மீது கடலலைகள் எப்பொழுதும் அடித்துக் கொண்டேயிருக்கும். சில நேரங்களில் இதைச் சுற்றிலும் நீர் இருந்து கொண்டிருக்கும். இப்பாறையில் கிழக்குப்புறத்தில், சிறிது உயரத்தில் ஒரு குகை குடைவிக்கப் பட்டுள்ளது. உள்ளே கொற்றவையின் சிற்பத்தைக் காணலாம். இப்பாதையின் வடபுறத்தே ஒரு மாபெரும் மகிஷாசுரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கதை ஒன்றை எடுத்துக்கொண்டு அசுரன் ஓடுகிறான். கொற்றவையினூர்தி ஆகிய சிங்கம் அவன் தலை மீது பாய்ந்து, அறைகிறது. அதைத் தாங்க முடியாமல் அலறும் மகிஷாசுரன். இக்காட்சி மிகவும் போற்றத்தகும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. கடலிலிருந்து கரைக்கு வரும்போது இக்காட்சி, வியப்பில் ஆழ்த்தும் வகையிலுள்ளதைக் காண்கிறோம். குன்றன்ன கோயில்கள் பஞ்சபாண்டவ இரதங்கள் நம்மை மறந்து, நம் சூழ்நிலையை மறந்து, நாமிருக்கும் நிலவுலகையும் மறந்து கலையுலகில் நடமாடவைக்கும் செல்வங்களே பஞ்ச பாண்டவ இரதங்கள் என வழங்கும் குன்றன்ன கோயில்கள் இங்கே முதலிடம் எதற்கு. கலைக்கா? கற்பனைக்கா? என்று கேட்பார் பேச்சும், இவற்றைத் தோற்றுவித்தவர்கள் உண்மையில் தெய்வீகச் சிற்பிகளே என்றுரைப்பார் பேச்சுக்களும் அந்த ஆனை நின்று உறங்குவது போல் அல்லவா இருக்கிறது என்போர் குரலும், அந்த சிங்கத்தின் மேலேறிச் சவாரி செய்யத் துடிக்கும் குழவிகளும், அவ்வாறு செய்யும்போது உண்மைச் சிங்கத்தையே அடக்கி அதன் மீதமர்ந்து பவனிவரும் பெருமிதம் உடையவர்களாகக் காட்சி தரும் சிறுவர்களும், படுத்திருக்கும் காளையைப் பின்னனியாகக் கொண்டு நின்று நிழற்படம் எடுத்துக் கொள்ளும் இளைஞர்களும், இரதங்களில் செதுக்கப்பட்டுள்ள இடைவெளியில் நுழைந்து இன்பமாகப் பேசிவரும் இளங்காதலர்களும், இதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரியாததைப் புரியத் துணியும் புலவர்களும், சிற்பங்களைக் கண்டு வியந்து நிற்கும் வெளிநாட்டவர்களும், இனிமையான இளநீரைச் சீவி நீட்டும் கைகளும், எங்கேயோ கேட்கும் கடலலைகளின் ஓசையும், சவுக்கு மரங்களினூடே புகுந்து வரும் சலசல என்ற காற்றும், மழையும், காலையும், மாலையும், கடும் வெய்யிலும், முழுநிலவும் புதுப்புது அணியை அணிவித்து மகிழ்விக்கும் மாபெரும் படைப்புகளே பஞ்சபாண்டவ இரதங்கள் என்பவை. எம்முன்னோர் படைத்த இவை உலகக் கலைகளிலே ஒன்றாகப் போற்றப்படுபவை என, தமிழ் மக்கள் பெருமிதத்தோடு கூறும் படைப்புகள் இவை. குன்றுகளைப் பலவிதங்களில் செதுக்கி, ஒன்றுபோல் ஒன்று இல்லாமல், புதுப்புது நிலைகளில் செதுக்கி வைக்கப்பட்ட அழியாக் காவியங்கள் இவை. இவை இரதங்கள் அல்ல. கோயில்கள். குன்றையே செதுக்கித் தோற்றுவித்த கோயில்கள். இவற்றை மலைதளிகள் என்றும் ஒற்றைக்கல் கோயில்கள் என்றும் குறிப்பர். இவற்றைப் பார்த்தவுடன் இரதங்களை நினைவூட்டுவதால் வழக்கில் இரதங்கள் எனப்பெயர் பெற்று விட்டன. மக்களின் வழக்கில் வந்துள்ளவையாதலின் அப்பெயரையே இங்கு கொண்டுள்ளோம். இங்கு தர்மராஜ இரதம், பீம இரதம், அர்ச்சுனன் இரதம், திரொளபதி இரதம், சகதேவ இரதம், என்ற ஐந்து கோயில்களும், யானை, சிங்கம், எருது ஆகிய மூன்று விலங்குகளின் சிற்பங்களும் உள்ளன. இவற்றில் நான்கு இரதங்கள் ஒரே வரிசையில் வடக்கில் இருந்து தெற்காக உள்ளன. இந்நான்கு இரதங்களும் ஒரே குன்றிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவை. வடக்கிலிருந்து படிப்படியாக உயர்ந்து வரும் இவைகள், குன்றின் சரிந்த பகுதியை நினைவூட்டும். வடப்புறத்து முதலில் குடிசை வடிவிலுள்ளது திரௌளபதி இரதம். அடுத்து உள்ளது அர்ச்சுனன் இரதம். அடுத்து சாலை வடிவில் உள்ளது பீம இரதம். தென்புறத்தே, மிகவும் உயரமாக, இங்குள்ள இரதங்களில் எல்லாம் அரசு எனப் பெருமிதத்துடன் காணப்படுவது தர்மராஜ இரதம். இந்நான்கு இரதங்கள் உள்ள வரிசையில் இல்லாமல் சற்றுத் தனித்தே நிற்பது சகதேவ இரதம். அதன் அருகில் ஒரு நிற்கும் யானை. திரௌளபதி இரதத்தின் முன்னர் ஒரு சிங்கம் அர்ச்சுனன் இரதத்தின் பின்புறத்தில் படுத்திருக்கும் ஒரு எருது. இவைகளே இங்குள்ளவைகள். இவற்றில் தர்மராஜ இரதம், இரதங்களின் அரசு ஆதலின் அதை முதலில் குறித்து அடுத்து மற்றவைகளை ஒவ்வொன்றாக இங்கு குறித்துள்ளோம். தர்மராஜ இரதம் தர்மராஜ இரதம் என்னும் அத்தியந்தகாம பல்லவேச்சுர கிருஹத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மூன்று மாடிகளிலும் சிவபிரான், திருமால், முதலிய தெய்வங்களின் பல உருவங்கள் உள்ளன. கீழிருந்து இரண்டாம் தளத்திற்குச் செல்ல இப்போது படிகள் இல்லை. ஏணி வைத்துத்தான் ஏறிச் செல்ல வேண்டும். இரண்டாம் தளத்தலிருந்து மூன்றாம் தளத்திற்குச் செல்ல கிழக்குத்திசையில் படி அமைக்கப்பட்டுள்ளது. இப்படிகளின் புறச்சுவரில் மாமல்லன் என்ற பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. கீழ்தளத்தில் நான்கு புறங்களிலும் படிகள் அமைக்க வழி வகுத்துள்ளனர். நடுவில் கருவரையும் சுற்றிவர வலம் வருவழியும் அமைக்க முனைந்துள்ளனர். பணி பாதியிலேயே நின்று விட்டது. மூன்று தளங்கள் உள்ள இக்கோயில் மாமல்லபுரக் கோயில்களிலேயே மிகவும் எழிலுடனும் ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு தளத்திலும் ஒரு கருவறையாக மூன்று கருவறைகள் உள்ள கோயிலாக இது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் நடுவில் கருவறை, அதைச் சுற்றிவர வழி, நான்கு பக்கங்களிலும் சிம்மத் தூண்கள், நான்கு முனைகளிலும் சிற்பங்களை தாங்கிய சுவர்கள்; இவ்வாறு அமைக்கப் பணி துவக்கியிருக்கிறார்கள். கிழக்கிலும், மேற்கிலும் பணி சிறிது நடந்திருக்கிறது. ஒவ்வொரு தளங்களிலும் கிழக்கில் ஆரம்பித்து வலமாக வந்தால் அடுத்தடுத்து உள்ள தெய்வ உருவங்களைப் பார்த்து வரலாம். அந்த முறையிலேயே கீழே சிற்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பல சிற்பங்களின் மேல் சீராக, இக்கோயிலைத் தோற்றுவித்த மன்னனின் பட்டப் பெயர்கள் பல்லவக் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதி கீழ்ப்புறம்: [1] பெண் காட்டும் உருவான அர்த்தநாரி. நான்கு கைகள்; மழு, மலர், அபயமுத்திரை, லம்பஹஸ்தம், வலதுபுறம் பாம்பு. மேலே அவனபாஜனன் என்ற பெயர் உள்ளது. [2] முருகன் [சுப்பிரமணியர்]. நான்கு கைகள்: அக்கமாலை, மலர், அபயம், தொடைமீதமர்ந்த கை, மேலே பிரதிவிஸாரன், ஸ்ரீபரன் என்ற பெயர்களுள்ளன. தென்புறம்: [1] சிவபெருமான். நான்கு கைகள்; மழு, அக்கமாலை, அபய முத்திரை, தொடைமீதமர்ந்த கை. மேலே அத்யந்தகாமன், அனேகோபாயன் என்ற பெயர்களுள்ளன. [2] இரண்டு கைகளும் கிரீடமும் தரித்த உரு. இதையே நரசிம்மனின் உருவம் என்று பலர் குறிப்பர். மேலே ஸ்ரீமேகன், த்ரைலோக்கியவர்த்தனன், விதி என்ற பெயர்களுள்ளன. மேற்புறம்: [1] சிவபெருமான். நான்கு கைகள்; சாமரம், அக்கமாலை, பாம்பு, தொடைமீதமர்ந்த கை. மேலே எழுத்துக்கள் பொறிக்கப்படவில்லை. [2] பைரவர். நான்கு கைகள்; அக்கமாலை, மான், அபயமுத்திரை, தொடைமீதமர்ந்த கை. இடதுபுறம் பாம்பு. எழுத்துக்கள் இல்லை. வடபுறம்: [1] நான்முகன்: நான்கு கைகள்; அக்கமாலை, மலர், அபயமுத்திரை, தொடைமீதமர்ந்த கை. எழுத்துக்கள் இல்லை. [2] அரியரன். நான்கு கைகள்; மழு, சங்கம், அபயமுத்திரை, தொடைமீதமர்ந்த கை. மேலே ஸ்ரீநரசிம்மன் என்ற பெயருள்ளது. இரண்டாவது தளம் ஏணி வைத்து ஏறி இரண்டாவது தளத்துக்கு வந்து வலமாக வந்தால் முறையே காணப்படும் சிற்பங்கள். கீழ்ப்புறம்: [1] கையிலே மணி ஏந்தி அடியார் [வழிபாடு செய்வார்] தாடியுடன் விளங்குகிறார். [2] கையில் மலர்க் குடலையுடன் வழிபாடு செய்யும் மற்றொரு அடியார். அவர் தலையில் உச்சிக்குடுமி காணப்படுகிறது. இச்சிற்பத்தின் மேல் பராவரன், வாமன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. தென்புறம்: [1] சிவபெருமான் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். அவற்றில் மூன்று கைகள் அக்கமாலையும் சாமரமும் தாமரையும் தரித்து விளங்குகின்றன. நான்காவது கை தொடைமீதமர்ந்ததாகக் காணப்படுகிறது. இச்சிற்பத்தின் மேல் விதி, விப்ராந்தன் என்ற பெயர்களுள்ளன. [2] காலனைக் காலால் கடிந்த பெருமானாகக் காலாரிமூர்த்தி விளங்குகிறார். பரசு, பாம்பு, பாசம், சூலம் தாங்கிய பாணியராக விளங்கும் இவரது காலின் அண்மையில் காலன் கிடக்கிறான். [3] வீணை தரித்த இப்பெருமானின் மற்ற இரு கைகளில் ஒன்று உடுக்கை பூண்டும், மற்றது கணத்தின் தலைமீதமர்த்தியும் விளங்குகின்றன. மேல் நிருத்தரன், ஸ்ரீநிதி, என்ற பெயர்கள் உள்ளன. [4] அரியரன், நான்கு கைகள்: அக்கமாலை, சங்கம், அபயம், தொடைமீதமர்ந்த கை. தலையின் ஒரு புறத்தைச் சடைமுடியும், மறுபுறத்தைக் கிரீடமும் அலங்கரிக்கின்றன. வலப்புறம் சிவபெருமானும், இடப்புறம் திருமாலுமாக விளங்கும் மூர்த்தி. [5] சிவபிரான் நந்திகேச்சுரரின் அருகில் நிற்கும் கோலம். நான்கு கைகள்: அக்கமாலை பாம்பு, கடகம், பல்லவ ஹஸ்தம். மேலே நயனமனோகரன், சர்வதோபத்ரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. [6] கண்ணன் காளீயனாக அரவின் மீதேறி களி நடம் ஆடுகிறான். [7] சிவபிரான். நான்கு கைகள்: கடகம், பரசு, தொடைமீதமர்ந்த கை. மேற்புறம்: [1] எழில் மங்கை ஒருத்தி கையில் கலம் ஏந்தி நிற்கிறாள். [2] கருவறை உள்ளே குடைவிக்கப்பட்டுள்ள இக்கருவறை முற்றுப் பெறவில்லை. [3] கருவறையின் வெளியே வடப்புறம் நந்திகேச்சுரர். [4] பிக்ஷாடனர் உருவம். நான்கு கைகள்; அக்ஷமாலை,சாமரம், கத்தி, கபாலம். மேலே சத்திய பராக்ரமன், பராவரன் என்ற பெயர்கள் உள்ளன. வடப்புறம்: [1] வீணாதரன், நான்கு கைகள்; இரண்டு கைகளில் வீணை, மற்றவற்றில் அக்கமாலை, பாம்பு கொண்டுள்ளார். கால்களில் மிதியடிகள் காணப்படுகின்றன. மேலே நயனமனோகரன், வாமன், அதிமானன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. [2] தாண்டவமூர்த்தி, சிவபெருமான் தண்டு முனிவர்க்கு நாட்டியம் கற்பிக்கும் பெருமானாகக் காட்சியளிக்கிறார். நான்கு கைகள்; மழு, சூலம், தொடைமீதமர்ந்த கை. மற்றது கற்பிக்கும் முத்திரை என்னும் வியாக்யான முத்திரையில் காணப்படுகிறது. அருகே தண்டு முனிவர் காணப்படுகிறார். [3] அருகில் நிற்கும் சண்டேசுரரை ஒரு கையால் அணைத்து சண்டேசாந்திகமூர்த்தியாக விளங்கும் சிவபிரான். மற்ற கைகளில் சாமரம், பாம்பு, தொடைமீதமர்ந்த கை. மேலே காமலங்கிதன், அமேயமாயன், சகலகல்யாணன் என்ற பெயர்கள் உள்ளன. [4] கங்கைவார் சடை கரந்தாரான கங்காதர மூர்த்தி. நான்கு கைகளில் ஒன்றினால் கங்கையைத் தாங்கும் சடையைத் தரித்துள்ளார். மற்றவற்றில் அக்கமாலை, தர்ஜனி முத்திரை, அலபத்ம முத்திரை தாங்கி விளங்குகிறார். [5] கருடாந்திகமூர்த்தி. நான்கு கைகள்; சங்கமும் சக்கரமும் கையேந்தி, ஒரு கையில் ஞான முத்திரையும் மற்றொரு கரத்தினால் அருகில் நிற்கும் கருடாழ்வானை அணைத்தும் நிற்கும் அழகுக் கோலம். மேலே ஸ்ரீநரசிம்மன், அவநபாஜநன், ஸ்ரீமேகன், அப்ரதிஹத சாஸனன் என்ற பெயர்கள் உள்ளன. [6] காலாரிமூர்த்தி நான்கு கைகள்; அக்கமாலை, விஸ்மய முத்திரை, மழு, சூசி முத்திரை கொண்டு விளங்குகின்றன. காலின் கீழ் காலன் கிடக்கிறான். [7] அடல் ஏறு வலத்து பிரானாக விருஷபாந்திகர் உருவம். நான்கு கைகள்; உடுக்கை, அக்கமாலை, திரிபதாக முத்திரை, நந்தி மீதமர்ந்த கை. இடுப்பில் பாம்பு காணப்படுகிறது. மேலே ஸ்திரபக்தி, மதனாபிராமன், விதி என்ற பெயர்கள் உள்ளன. கீழ்ப்புறம்: [1] சடைமுடி தரித்த அடியார். மேலே அநுபமன், நயாங்குரன் என்ற பெயர்கள் உள்ளன. [2] கையில் நைவேத்தியமும் [படையல்] இடுப்பில் சாவியும் கொண்டு வரும் மாணி ஒருவர் சிற்பம். மூன்றாவது தளம் [1] படியிலிருந்து உள்ளே நுழையும் இடத்தில் கிழக்கு நோக்கி கதிரவனின் உருவம் உள்ளது. வலது கையில் தாமரையும், இடது கையைத் தொடைமீதமர்த்தியும், மார்பகத்தே வீரச்சங்கலி அணிந்தும் கதிரவன் விளங்குகிறார். அவர் தலையின் பின்புறத்தே வட்டமான பிரபை காணப்படுகிறது. இச்சிற்பத்திற்கும் மேல் ‘ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்வர கிருஹம்’ என்றும் ‘ரணஜயன்’ என்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் என்பது அத்யந்தகாமன் என்ற பல்லவனால் எழுப்பபட்ட சிவாலயம் என்பதைக் குறிக்கும். [2] கிழக்குச் சுவரில் அடுத்துக் காணப்படுவது அடியார் ஒருவர் கையில் மலர்களுடன் உள்ள சிற்பம். [3] அடியார் ஒருவரின் சிற்பம். தென்புறம்: [1] அடியார் [2] வாயிற்காவலன், மகாகாளன் ஆக இருக்கலாம். இவர் கழுத்தில் உருத்திராக்ஷ மாலை காணப்படுகிறது. [3] இப்பகுதியின் நடுவில் கருவறை குடைவிக்கப்பட்டுள்ளது. கருவறையினுள்ளே பின்புறச் சுவரில் ‘நங்கடம் பனைப் பெற்றவள் பங்கினனாக’ சிவபெருமான் சோமாஸ்கந்த உருவில் காணப்படுகிறார். அவரின் இருமருங்கிலும், திருமாலும், நான்முகனும் தொழுத நிலையில் காணப்படுகின்றனர். வலப்புறம் பிரம்மனும், இடப்புறம் திருமாலும் காட்சியளிக்கின்றனர். [4] கருவறையை அடுத்துக் காணப்படுவது கையில் கதை பூண்ட வாயிற் காவலன் சிலை. [5] அடியார். வடபுறம்: [1] வாயிற்காவலர் [துவாரபாலர்]. [2] வாயிற்காவலர். [3] சந்திரன் தன்னிருகைகளிலும் தாமரை தாங்கி மார்பகத்தே வீரச்சங்கிலியோடு விளங்குகிறார். இவருடைய தலையின் பின்புறத்திலும் வட்டமான பிரபை காணப்படுகிறது. [4] அடியார். [5] அடியார். கீழ்ப்புறம்: [1] அடியார். [2] அடியார். பீம இரதம் தர்மராஜ இரதத்துக்கு அடுத்து நீண்ட சாலை வடிவில் உள்ள கோயிலைப் பீம இரதம் என்பர். மிகவும் பெரிய இக்கோயில் இரண்டு தளங்களையுடையது. இதன் இருபக்கங்களிலும் மரச்சட்டங்களை உபயோகித்து வேயப்படும் கூரையினமைப்பு அலங்காரமாகச் செதுக்கப்பட்டுள்ளது. கீழ் மத்தியில் நீண்ட சதுர வடிவில் கருவறையமைக்க முனைந்துள்ளனர். கருவறையைச் சுற்றிவர வழியும் வெட்டி இருக்கிறார்கள். இப்பணி வடபுறத்தில் பாதியிலேயே நின்று விட்டது. வெளிப்புறத் தூண்களில் அமர்ந்த சிங்கங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் சிற்பங்களேதுமில்லை. நீண்ட சதுர அமைப்பில் உள்ளபடியால், இக்கோயில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு உரித்தாய் இருந்திருக்க வேண்டும் என்று கருதுவர். இக்கோயிலின் கட்டட அமைப்பைச் சாலை வடிவம் என்பர். அர்ச்சுன இரதம் பீம இரதத்திற்கு அடுத்துக் காணப்படுவது அர்ச்சுனன் இரதம் எனப்படும். இதுவும் அடுத்துள்ள திரௌளபதி இரதமும் ஒரே பீடத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அர்ச்சுனன் இரதம் எண்பட்டை சிகரத்தையும், இரண்டு தளங்களையும் உடைய எழில் வாய்ந்த கோயிலாகும். இது சிவபெருமானுக்காக ஏற்பட்ட கோயில். மேற்கு நோக்கிய கருவறை. கருவறையினுள்ளே சிற்பமேதுமில்லை. இருப்பினும், மத்தியில் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்ட தடயம் இருக்கிறது. கருவறையின் முன்னர் சிறிய மண்டபம் போன்ற அமைப்புள்ளது. முன்புறம் போக ஏனைய மூன்று சுவர்களிலும் வெளிப்புறத்தே எழில் வாய்ந்த சிற்பங்கள் இயற்கை நிலைக்கு ஒப்ப மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் பார்ப்போர் அனைவருடைய மனதையும் ஈர்க்கவல்ல சக்தி வாய்ந்தவை. மேற்குத் திக்கிலிருந்து வலமாக வந்தால் வடபுறச் சுவரில் முதலில் துவாரபாலன் சிலை. அடுத்து செதுக்கப்படாமல் உள்ளது. அடுத்து விஷ்ணு கருடாந்தக மூர்த்தியாகக் காணப்படுகிறார். பின்னர் அரசனும் மனைவியும். அடுத்து துவாரபாலன் சிலை. கிழக்குச் சுவரில் முதலிலுள்ளது அரசன் அல்லது துவாரபாலனைக் குறிக்கும் சிற்பம். அதற்கடுத்துத் தாடியணிந்த முனிவர் ஒருவரும், அவர் பின்னர் ஒரு சீடரும் காணப்படுகின்றனர். முனிவர் கரத்தில் நீண்ட சூலம் போன்ற ஒரு தண்டத்தைக் கையில் தரித்துள்ளார். அதற்கு அடுத்து அதாவது கிழக்குச் சுவரின் மத்தியில் யானை மீதமர்ந்த தேவர் ஒருவரின் உருவம் உள்ளது. அதற்கு இரண்டே கைகள். இவ்வுருவம் அயிராவதத்தின் மீதமர்ந்துள்ள இந்திரனின் சிற்பமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஆலயத்தின் கிழக்குப் புறத்தில் இந்திரன் இவ்வாறு காண்பிக்கப்படுவது மரபு. மற்றும் சிலர் இது முருகப்பெருமானைக் குறிக்கும் என்பர். முருகன் யானை மீதேறி வருவது திருமுருகாற்றுப் படையில் குறிக்கப்பட்டுள்ளதல்லவா! ஆலயத்தின் கிழக்குப் புறத்தில் முருகப்பிரான் உருவம் வைப்பதும் மரபே. அடுத்துக் காண்பது, மாமல்லபுரத்துச் சிற்பங்களில் சிறந்த மற்றொரு எழில் வாய்ந்த படைப்பான இரண்டு பெண்களின் உருவங்கள். அதிலும் ஒன்று கொடிபோல் வளைந்து எழிலின் பிரதிபிம்பமாக, அழகின் இலக்கணமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள மங்கையின் உருவம். இது மன்னரின் தேவியரில் ஒருவளாக இருக்கலாம். அடுத்து துவாரபாலன் சிலை. தென்புறத்தில் இருகோடிகளிலும் துவாரபாலர் சிலைகள். மத்தியில் சிவபெருமான் ஆனந்தமாக, அடலேற்றின் மீது சாய்ந்து நிற்கும் கோலம். அதன் இரு மருங்கிலும், அரசனும், அவன் மனைவியும் காட்டப்பட்டுள்ளனர். இவ்வெழில் உருவங்கள் இராஜசிம்மனும் அவன் மனிவியுமாக இருக்கும் என்று காலஞ் சென்ற டாக்டர் மீனாக்ஷி அவர்கள் கருதினார்கள். எம்முடைய கருத்தும் அதுவே. அர்ச்சுனன் இரதத்தில் கீழ்ப்பகுதியிலேயே சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் கவரும் அழகுடையதாக இந்த இரதம் திகழ்கிறது. திரௌளபதி இரதம் சிறிய குடிசை வடிவில் செதுக்கப்பட்டுள்ள இக்கோயில் சுமார் 2.5 அடி உயரமுள்ள அடிப்பீடத்தின் மேல் உள்ளது. அடிப்பீடத்தின் பக்கங்களை, சிங்கங்களும் யானைகளும் தாங்கி நிற்பவை போல் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன. சதுர வடிவில் அமைந்த கருவறையின் மேல் எளிய குடிசை போல் விமானம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முனைகளில் அழகிய கொடி வேலைகள் காணப்படுகின்றன. உச்சியில் கல்லினாலான குடம் போன்ற ஸ்தூபி பொருத்தி வைக்கப்பட்டிருந்தது. முற்காலத்தில் அது மணலில் புதைந்து கிடந்தது. இப்போது கண்டெடுக்கப்பட்டு, அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வாயிலை இரண்டு காவற்பெண்கள் காத்து நிற்கின்றனர். ஒரு பெண் கையில் வாளையும், மற்றவள் வில்லையும் பூண்டு நிற்கின்றனர். கருவறையின் உள்ளே பின்புறச் சுவரில் கொற்றவையின் சிற்பம் உள்ளது. அன்னை தாமரை மலர் மேல் நின்றாளாக, நான்கு கைகளுடன் விளங்குகிறாள். மேலிரு கைகளில் சங்கமும், சக்கரமும் ஏந்தியுள்ளாள். கீழிரு கைகளில், ஒன்று அபயமளிக்கிறது. மற்றது தொடைமீதமர்ந்துள்ளது. தேவியின் மேலிருமருங்கிலும் கணங்கள் வாள் முதலிய கொண்டு விளங்குகின்றன. காலடியில் அடியார் இருவர் அமர்ந்துள்ளதைக் காண்கிறோம். ஒருவர் மலரால் அர்ச்சிக்கும் நிலையில் உள்ளார். மற்றவர், வாளால் தன் தலையை அரிந்து கொள்ளும் காட்சியைக் காண்கிறோம். கருவறைச் சுவர்களின் புறத்தே மூன்று பக்கங்களிலும், கொற்றவையின் சிற்பங்களே செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பணி பாதியிலேயே நின்றுள்ளதைக் காண்கிறோம். கொற்றவைக்கு எடுக்கப்படும் கோயில்கள் குடிசை வடிவில் அமைய வேண்டும் என்பது தமிழக மரபு. குச்சரக் குடிசை என்று சிலப்பதிகாரம் குறிப்பதும் இதையே. ஐந்து பொருள்கள் சேர்ந்து காணப்பட்டால், அதைப் பாண்டவர்களின் பெயரை வைத்து அழைப்பது இந்நாட்டில் பாமர மக்களின் மரபாம். இங்கு ஐந்து கற்கோயில்கள் சேர்ந்துள்ளன. எனவே, இதை பஞ்ச பாண்டவர் இரதம் என்று அழைத்தனர். அதன்படி, இங்குள்ள கோயில்களுக்கு தர்மராஜர், பீமன், அர்ச்சுனன், சகதேவன் என்பார்களின் நான்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஐந்தாவது இரதம் ஆகிய இதற்கு நகுல இரதம் என்று பெயர் இருக்க வேண்டும். ஆனால் திரௌளபதி இரதம் என்ற பெயரை மக்கள் கொடுத்துள்ளனர். இதன் கருவறையில் கொற்றவையினுருவம் உள்ளது. தமிழகத்தில் ஊரெங்கும் துர்க்கை கோயில், காளி கோயில், திரௌளபதியம்மன் கோயில் என்பனவுள்ளன. இங்கு பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்று வழக்கில் வந்தமையால் பாண்டவர்களின் தேவியாகிய திரௌளபதியின் பெயரை இதற்கு சூட்டினர் போலும். உண்மையில் இது கொற்றவையாகிய துர்க்கையின் கோயிலே. சகதேவ இரதம் ஓரே வரிசையில் இருக்கும் நான்கு இரதக் கோயில்களைத் தவிர, அவற்றின் எதிரே தனித்து நிற்கும் கோயிலைச் சகதேவ இரதம் என்பர். இக்கோயில் எக்கடவுளுக்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்திரனுக்காக எடுக்கப் பட்ட கோயிலாகயிருக்கலாம் என்று சிலர் கருதுவர். இக்கோயில் அமைப்பில் தூங்கானை வடிவிலுள்ளது. இதன் விமானமும் தூங்கானை வடிவிலேயே உள்ளது. இவ்வமைப்பை ‘கஜபிருஷ்டம்’ [யானையின் பின்பகுதி] என்று வடமொழியில் குறிப்பர். இவற்றை மனதில் கொண்டுதான் ஒரு யானை நின்ற நிலையில் அருகிலே செதுக்கப் பட்டுள்ளது போலும். யானையின் பின்புறம் போலவே சகதேவ இரதத்தின் பின்னமைப்பு உள்ளதைக் காண்லாம். இதன் சுவர்களில் சிற்பங்கள் ஏதும் இல்லை. கருவறை முழுமையும் செதுக்கப்படவில்லை. கருவறையின் முன்னர் ஒரு மண்டபம் போன்ற அமைப்புள்ளது. அதன் தூண்களை அமர்ந்த யானைகள் தாங்கி நிற்கின்றன. கணேச இரதம் அர்ச்சுனன் தவத்திலிருந்து வராஹ குகைக்குச் செல்லும் வழியில் ஒர் இரதக் கோயில் உள்ளதைக் காணலாம். இது முற்றிலும் முடிந்த நிலையிலுள்ளது. குன்றிலிருந்து செதுக்கப்பட்டது என்ற எண்ணமே தோன்றாமல், புதிதாகக் கட்டப்பட்ட கோயில் போலத் தோற்றமளிக்கும் வகையில் இது சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் சிற்பங்கள் கிடையா. நீண்ட சதுர அமைப்பிலுள்ள இக்கோயில் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டது. கருவறையின் முன்னர் இரண்டு சிம்மத் தூண்கள் தாங்கிய மண்டபம் போன்ற அமைப்புள்ளது. வாயிலில் துவாரபாலர் சிலையுள்ளதைக் காணலாம். மண்டபத்தின் தென்புறச் சுவரில் பல்லவம் கிரந்த எழுத்துக்களில், வடமொழிச் செய்யுட்கள் எழுதப்பட்டுள்ளன. அக்கல்வெட்டிலிருந்து அத்யந்தகாமன் என்ற மன்னன் குடிமக்களுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடைய வேண்டி, சிவபெருமானுக்கு இக்கோயிலை எடுப்பித்தான் என்றும், இதன் பெயர் ‘அத்யந்தகாம பல்லவேச்வர கிருஹம்’ என்றும் அறிகிறோம். [இச்செய்யுட்களின் பொருளைக் கல்வெட்டுப் பகுதியில் காண்க]. கருவறையில் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தது. பின்னர் யாரோ அதையெடுத்து வெளியே போட்டுவிட்டனர் என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியின் மாவட்ட அதிகாரி இக்கோயிலில் கணேசர் விக்ரகத்தை பிரதிட்டை செய்ய அனுமதித்தார் என்றும், இப்பொழுதுள்ள கணேசர் உரு அப்பொழுது பிரதிட்டை செய்யப்பட்டது என்றும் அறிகிறோம். அதிலிருந்து இக்கோயிலைக் கணேச இரதம் என்றழைக்கின்றனர். உண்மையில் இது பல்லவ மன்னன் பக்திப் பெருக்கினால் சிவபெருமானுக்கு எழுப்பிய கோயிலேயாகும். பிடாரி இரதங்கள் மாமல்லபுரத்திலிருந்து, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை வழியே சென்றால் ஊரின் மேற்கே இரண்டு இரதங்கள் அருகருகே உள்ளதை காணலாம். இவை பிடாரிகோயிலுக்கு அண்மையில் இருந்ததால் பிடாரி இரதங்கள் என்றழைக்கப்பட்டன. இரண்டிலும் விமானப் பகுதிமட்டும் செதுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதியில் பணி, தொடக்க நிலையிலேயே உள்ளது. இரண்டு விமானங்களும் வெவ்வேறு அமைப்பு உடையவை. ஒன்று சதுரமான சிகரப்பகுதியும், மற்றொன்று எண் சதுர சிகரத்தையும் கொண்டுள்ளது சிறப்பாகும். அர்ச்சுனன் இரதம் போன்று இவை இரண்டும் இரண்டு தளங்கள் உடையவை. இரண்டாவது தளத்தில் சிற்பங்கள் செதுக்க முனைந்துள்ளதைக் காணலாம். இவையிரண்டும் அமைந்திருக்கும் சூழ்நிலை மனதுக்கு பேருவகையை அளிக்கும். வலையன்குட்டை இரதம் பிடாரி இரதங்களிலிருந்து சற்று தெற்கே வலையன்குட்டை என்ற குட்டை உள்ளது. அதனருகே ஒரு சிறு இரதக் கோயிலுள்ளது. இதை வலையன்குட்டை இரதம் என்று கூறுவர். சதுரமான சிகரம், இரண்டு தளங்கள், முன் மண்டபம், இவற்றோடு கூடிய இக்கோயில் பிடாரி இரதங்களைக் காட்டிலும் சற்று முடிவடைந்த நிலையிலுள்ளது. சிறிய அளவில் இருந்தபோதிலும் இது எழில் வாய்ந்தது. இவை தவிர மகிஷாசுரமர்த்தினி குகைக்கு எதிரில் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் ஒரு இரதக் கோயிலை அமைக்க முனைந்துள்ளதைக் காணலாம். இது பீம இரதம், கணேச இரதம் போல நீண்ட சதுர அமைப்புடையது. விமானப் பகுதியின் வடிவம் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. பாறைச் சிற்பங்கள் மாமல்லையில் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக்கல் கோயில்களையும் தவிர, திறந்தவெளியில் உள்ள பாறைகளில் அழகிய புடைச் சிற்பங்களை தோற்றுவித்துள்ளனர். இவற்றில் அர்ச்சுனன் தவம், ஆநிரைக்காக்க குன்றமெடுத்த கண்ணன், முதலிய காட்சிகளைச் சித்தரிக்கும் பாறைச் சிற்பங்கள் ஒப்புயர்வற்றவை. அர்ச்சுனன் தவம் மாமல்லபுரத்துக்கு ஏராளமான மக்களை, இந்நாட்டில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஈர்க்கும் ஒப்பற்ற கலைப்படைப்பே அர்ச்சுனன் தவம் என்றும் பகீரதன் தவம் என்றும் குறிக்கப்படுவதாகும். உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒப்பற்ற சிற்பம் இதுவே என்று டாக்டர் பாஷாம் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் குறிக்கும் சிறப்பு வாய்ந்ததும் இதுவே. சுமார் 90 அடி நீளமுள்ள பாறை. அதன் இடையே ஒரு சிறிய வெளி. இவ்வெளியை மையமாக, ஒரு நதி பாய்ந்து வரும் அமைப்பாகக் கொண்டு இரண்டு புறத்தும் உள்ள பாறைகளில் எழில்வாய்ந்த சிற்பங்களை உருவகப்படுத்தியிருக்கிறான் கலைஞன். விண்ணில் தோன்றி, விசும்பிலே பாய்ந்து, பூவுலகிலே வீழ்ந்து, கீழ் உலகுக்கு ஊடுருவிச் செல்லும் நதியாக அதை அமைத்துள்ளான். மூவுலகையும் இணைத்து நிற்கும் ஓர் இழைபோல் காணப்படும் இது கடவுளின் அருள் பெருமழைபோல் மக்களிடையே ஓடி வருவது போன்ற ஒரு காட்சியாம். அந்த அருளைப் பங்கு கொள்ள பாய்ந்து விழையும் உயிர்ப்படைப்புகள். அந்தந்த உலக சூழ்நிலைக்கு ஏற்ப வாழும் உயிரினங்கள். விண்ணிலே வாழும் தேவர்கள், கந்தர்வர்கள், இயக்கர்கள், விசும்பிலே திரியும் வித்தியாதரர்கள், சித்தர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், பூவுலகில் கானகத்தில் திரியும் கானவர்கள், நாட்டகத்தே வாழும் முனிவர், அந்தணர்கள், ஊர்வன,நடப்பன, பறப்பன, என்ற விலங்குகள், பறவைகள்,பாதாள உலகில் வாழும் பாம்புகளாகிய நாகர்கள், இவையனைத்தும் ஒரு மாபெரும் இயக்கமாக, தெய்வீக விளையாட்டில் ஆடும் பாவைகளாக, அறிய முடியாத ஏதோ உண்மையை அறியத்துடிப்பவையாக காண்கிறோம். இம்மாபெரும் தோற்றத்தை கற்பனையில் உருவாக்கினானே. கலைக்கடலாகிய மன்னன் அவனைப் போற்றுவதா, அன்றி அக்கற்பனைக்கு உருக்கொடுத்தானே சிற்பி அவன் ஆற்றலைப் போற்றுவதா என்ற பிரமிப்பு ஏற்படும். தேவர்: நடுவில் பாய்ந்துவரும் நதி. மேலே இருமருங்கிலும் கதிரவனும் சந்திரனும். இவர்கள் தலைகளின் பின்புறம் வட்டமான பிரபைகள் உள்ளன. இவர்கள் தேவர்கள். ஆணும் பெண்ணுமாக இணைந்து பறந்து வரும் நிலையில் பல சிற்பங்களை இருபுறமும் பார்க்கிறோம்.அவர்கள் கந்தர்வர், இயக்கர், வித்யாதரர் என்பர்களாம்.இவர்கள் காணும் பகுதி விசும்பைக் குறிக்கும். அதன் கீழே தாடிவைத்துள்ளவர்களும் இல்லாதவர்களுமாக வருவோர் சித்தர், சாரணர் எனப்படுவர். சித்தர், சாரணர் என்போர் ‘ஆகாசசாரிகள்’ என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிக்கும். குள்ள உருவம் படைத்தவர்களாகத் தலையில் துணி தரித்து, அதன் நுனியை இருகைகளாலும் பிடித்துக் காணப்படுவர்களைக் கிம்புருடர் என்பர். கின்னர்கள்: பாதி மனித உருவமும், பாதி பறவை உருவமும் பூண்டு காணப்படுபவர்களைத் கின்னரர் என்பர். ஆணும் பெண்ணுமாக, இருவர் இருவராகக் காணப்படுவதால் இவற்றைக் கின்னர மிதுனம் என்பர். இவற்றையே கின்னரப் பறவைகள் எனத் தமிழ் நூல்கள் கூறும். கின்னரர்கள் இசையில் சிறந்தவர்கள் என்று நம் பண்டை நூல்கள் கூறும். கின்னரர்களை யாழ் வல்லோர் என்று நிகண்டு குறிக்கிறது. அதற்கு ஏற்ப இங்குக் காணப்படும் சிற்பங்களில் கின்னரர்கள் யாழ் வாசித்துக் கொண்டும், கையில் தாளமும் பூண்டு விளங்குகின்றனர்.ஒவ்வொரு மிதுனமும், யாழை ஒவ்வொரு விதமாகப் பிடித்துள்ளது கவனிக்கத் தக்கது. கானவர்கள்: தென்புறப் பாறையில் மத்தியில் கானவர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் வேடர்கள்,கிராதர்கள் என்பதற்கிணங்க இவர்களது சடையும்,முகபாவமும் அமைந்துள்ளன. இவர் அனைவர் முகத்திலும் மீசையுள்ளது.ஒருவன் முகத்தில் தாடியுடன் காண்பிக்கப்பட்டுள்ளாண். தோலினாலான ஆடையை இவர்கள் இடுப்பில் அணிந்துள்ளனர். தலைமுடியைத் தூக்கி உயர முடிந்துள்ளனர். கையில் வில் தரித்துள்ளனர். இருவனது இடையில் குத்துக் கத்தி காட்டப்பட்டுள்ளது. வில்லேந்திய வேடனொருவன் கழுத்தில் கோல் தாங்கி, அதில் ஏதோ எடுத்துச் செல்கிறான். மற்றொருவன் தோளில் பலாப்பழத்தைத் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் வில் பிடித்துள்ளான். இவன் முகத்தில்தான் தாடியைக் காண்கிறோம். மற்ற இருவர், தோள்களில் வில் ஏந்தியுள்ளனர். இவர்களுடைய தோற்றம் சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் வேடர்களின் தோற்றத்தை நினைவுறுத்துகிறது. ‘தோள்வரை உயர்ந்த வில்லைஉடையவர்கள். நீண்ட தாடியை உடையவர்கள். அச்சத்தைக் கொடுக்கும் உருவமுடையவர்கள்’ என்று சங்க இலக்கியங்கள் கானவர்களைக் குறிக்கின்றன. இவர்கள் கானகத்தே மரங்களிடையே சஞ்சரிக்கின்றனர் என்பதற்கிணங்க இங்கு மரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஒன்று பலா மரம். மற்றொரு மரத்தின் கிளையில் பறவை ஒன்று அமர்ந்துள்ளது. உடும்பு ஒன்று மரத்தின் மேல் ஏறுகிறது. கழுத்தில் கேசத்துடன் காணப்படும் கருங்குரங்கு மற்றொரு மரத்தின் மேல் உள்ளதைக் காணலாம். கானகத்தில் வாழும் பல விலங்குகளும் பல நிலைகளில், உயிருள்ளவை போல் தோற்றமளிக்கும் வகையில் இங்கு காட்டப்பட்டுள்ளன. முயல், கலைமான், பன்றி, புலி, ஆமை முதலிய விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. இரண்டு புலிக் குட்டிகள், தாய்ப்புலியின் மடியிலிருந்து பால் குடிக்கும் காட்சியைக் காண்கிறோம். புலி ஒரு கொடிய விலங்கு என்ற எண்ணத்தை நீக்கி, அதற்குத் தாய்த்தன்மையைக் காட்டியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பன்றி ஒன்று திரும்பிப் பார்க்கும் அழகு உயிரோவியமாகத்தான் திகழ்கிறது. புலி மான் இவைகள் படுத்திருக்கும் நிலை மிகச் சிறப்பாக உள்ளது. இவற்றில் மான் ஒன்று படுத்துத் தன் முன்னங்காலால் மூக்கைத் தடவி விட்டுக்கொள்வது இங்கு வருவோர் அனைவருடைய கவனத்தையும் கவர்கிறது. அங்கேயே உள்ள ஆமை ஒன்று வெகு வேகமாகச் செல்வது போன்ற காட்சி. அர்ச்சுனனும் சிவபிரானும்: இப்பகுதியின் மத்தியில், இடைவெளிக்கு அருகில் இரண்டு உருவங்களைக் காணலாம். இரண்டு கைகளையும் உயரத் தூக்கி ஒரேகாலில் நின்று கொண்டு, நீண்ட தாடி, மீசையுடன், எலும்பும் தோலுமாய்க் கடும் தவம் செய்யும் உருவம் ஒன்றுள்ளது. இதையே அர்ச்சுனன் அல்லது, பகீரதன் என்று குறிப்பர். அதற்கு அருகில் நான்கு கைகளுடன், வலது கையில் நீண்ட சூலத்தைத் தரித்து, இடது கையில் மழுவைத் தரித்து, கீழிடது கையினால் அருள் பாலிக்கும் அண்ணலாகச் சிவபெருமான் காட்சி தருகிறார். அவர் தலையைச் சடைமுடி அலங்கரிக்கிறது. அவருக்கும் அர்ச்சுனனுக்கும் இடையில் ஒரு குள்ளப் பூதம் உள்ளது. இதன் வயிற்றில் ஒரு முகம் காணப்படுவது கவனிக்கத்தக்கது. முனிவர்: இக்காட்சியின் கீழ் ஒரு சிறிய கோயிலைக் காணலாம். இது திருமாலின் கோயில் என்பதற்கிணங்க மத்தியில் விஷ்ணு ஆழியும், சங்கமும் பூண்டு விளங்குகிறார். இக்கோயிலின் முன்னர் நான்கு முனிவர்கள் அமர்ந்து தவம் செய்கின்றனர். அவர்களில் மூவருடைய தலைகள் சிதைந்து போயிருக்கின்றன. மேலிருந்து கீழே விழுந்த கற்கள் இவற்றை சிதைத்திருக்க கூடும். இருவர் சிலை மட்டும் நல்ல நிலையிலிருக்கிறது. நதிக்கரையிலமைந்த ஒரு கோயிலையும், அதன் அருகில் முனிவர்கள் தவம் செய்வதையும் இக்காட்சி சித்தரிக்கிறது. நாட்டகத்தார்: இதன் கீழ், ஆற்றங்கரைச் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குளித்துவிட்டு குடத்தில் நீர் சுமந்து செல்கிறார். ஒருவர் ஈரவேட்டியைப் பிழிகிறார். ஒருவர் கும்பிட்டு நிற்கிறார். தன்னிரு கைகளையும் மேலே பிடித்துக்கொண்டு விரல்களினூடே சூரியனை நோக்குகின்றார். இவர் அந்தணராயிருக்கவேண்டும். இன்றும் அந்தணர்கள் நடுப்பகலில் மந்திரங்களை ஜபித்து, சூரியனை இவ்வாறு கண்டு வழிபடுவது மரபு. இதை ‘மாத்யான்னீகம்’ என்பர். இதன் மூலம், இங்கு மேலேயுள்ள அர்ச்சுனன் கடும்தவம் புரியும் காட்சி, உச்சிப்பகலில் நடக்கிறது என்பதை மறைமுகமாகக் காட்டியுள்ளான் சிற்பி. இவையனைத்தையும் சித்தரித்துள்ள தென்புறப் பாறையை மேல் பகுதி என்றும், கீழ்ப்பகுதி என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். மேல் பகுதியில், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், கிம்புருடர்கள், கின்னரர்கள் முதலியோர் காணப்படுகின்றனர். யானைகள்: கீழ்ப் பகுதியில்தான் உலகம் புகழும் யானைக் கூட்டம் உள்ளது. ஏற்றமான நடை போட்டுச் செல்லும் களிறும், அதன் பின்னே செல்லும் பிடியும் இவற்றின் காலடியிலே விளையாடும் யானைக்குட்டிகளும் உலகச் சிற்பக் கலைகளில் தலையாயப் படைப்புகள். “கல்லிலே விலங்குகளை இவ்வளவு தத்ரூபமாகச் செதுக்கிக் காட்டமுடியுமா! இதைச் செதுக்கியவர்களின் ஆற்றலே ஆற்றல். அந்த யானைக்குட்டிகள் விளையாடுவதைத்தான் காணுங்கள். என்ன அழகு! யானைகளின் துதிக்கைகளும், கண்களும் எவ்வளவு சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. அவ்வாலைத்தான் பாருங்கள். இதோ பின்புறம் வந்து பாருங்கள். உண்மையான யானைக்கூட்டம் செல்லும் வேகத்தை அல்லவா உணர்கிறோம்” என்று இவற்றைப் பார்ப்போர் வியந்து வியந்து பாராட்டுகிறார்கள். நம்நாட்டு மக்கள் மட்டுமல்ல. உலக நாட்டு மக்களனைவரும் இதைப் போற்றுகின்றனர். பூனை: இந்த யானைக்கூட்டத்தின் எதிரிலே ஒரு அதிசயக் காட்சி. ஒரு கிழட்டுப் பூனை இரண்டு கால்களில் நின்று கொண்டு முன்னிரு கால்களையும் உயரத் தூக்கிக்கொண்டு பொய்த்தவம் செய்யும் காட்சி. மாபாரதம், இதோபதேசம் முதலிய நூல்களில் இக்காட்சி குறிக்கப்படுகிறது. தானாக ஓடி ஆகாரத்தைத் தேட முடியாத ஒரு கிழட்டுப் பூனை ஒரு யுக்தி செய்தது. கங்கைக் கரையிலே போலித்தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தது. முதலில் இதனருகில் செல்ல அங்கிருந்த எலிகளஞ்சின. பின்னர் இது உண்மையிலேயே தவம் செய்யும் பூனை என்று நம்பி அதன் காலடியிலேயே விளையாட ஆரம்பித்தன. பூனையும் அவைகளை ஒன்றும் செய்யாமலேயிருந்தது. அந்தி மயங்கும் நேரத்தில் யாரும் பார்க்காமல் ஒரே ஒரு எலியை சட்டென்று பிடித்துத் தின்றுவிட்டது. இது போன்றே அது தினம் ஒரு எலியைத் தின்று ஜீவித்தது. பல நாட்கள் சென்ற பிறகுதான் தங்களுடைய எண்ணிக்கை குறைவதைக் கண்ட எலிகள் விழித்துக்கொண்டன. பூனை செய்யும் பொய்த்தவம் எதற்கென கண்டு கொண்டன. எடுத்தன ஓட்டம். போலித்தவம் புரிவோனிடமிருந்து தங்களைக் காத்துகொள்ளத்தான்! நம்மிடையே இல்லையா இதுபோன்ற பேர்வழிகள். உலகில் திரியும் போலிகளின் உருவகம்தான் இது. இங்கே காட்டப்பட்டுள்ள பூனையும், அதன் காலடியில் விளையாடும் எலிகளும் நிஜப்பூனையாகவும், எலிகளாகவுமே காட்சியளிக்கின்றன. அங்கே அர்ச்சுனன் தவத்தைக் கண்டோ ம். உண்மையாகக் கடுந்தவம் புரிந்து உய்ய விரும்பும் ஒருவரது காட்சி அது. ஆனால் இங்கு போலித்தவம். ஒன்று உண்மையின் பிம்பம் மற்றது போலி. ஒன்று மனிதப் பண்பு மற்றது மிருகப் பண்பு. இரண்டிற்கும் எவ்வளவு வேறுபாடுகள்! இதைக் கல்லில் படம் பிடித்துக் காட்டுவது போலல்லவா காட்டியிருக்கிறான் கலைஞன். பகீரதனா? அர்ச்சுனனா? இப்பாறையில் உள்ள பரந்த சிற்பம் எந்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சிலர் இதைப் பகீரதன் தவம் என்கிறார்கள். மற்றும் சிலர் இதை அர்ச்சுனன் தவம் என்கிறார்கள். பகீரதனே! இது பகீரதன் தவம் என்று குறிப்போர் கீழ்வரும் காரணங்களைக் குறிப்பர். "பகீரதன் தன் முன்னோர்களாகிய சகரபுத்ரர்கள் பாதாள உலகிலே இறந்து கிடக்க, அவர்களுக்கு ஈமக்கடன் செய்து உய்விக்க, விண்ணில் இருந்து கங்கையைக் கொண்டு வர முயற்சித்தான். கங்கை நிலத்தில் விழும்போது அதன் வீழ்ச்சியைத் தாங்க இயலாமல் நில உலகம் அழிந்துவிடும் என்ற காரணத்தால் சிவபிரானை நோக்கித் கடும் தவம் புரிந்தான். சிவபிரான் விண்ணிலிருந்து விழும் கங்கையாற்றின் பெருக்கைத் தன் சடையில் தாங்கிப் பின்னர் கீழே விடுவதாக அருள்புரிந்தார். கங்கை விண்ணிலிருந்து விசும்பில் இறங்க, சிவபிரான் தன் சடையில் தரித்துப் பின்னர் உலகிலே விட, பகீரதன் சகரபுத்ரர்களை உய்வித்தான். இக்காட்சியை மூவுலகத்து மக்களும் கண்டு போற்றினர் என்பது கதை. இதன் அடிப்படையில் விண்ணிலிருந்து விழுந்து ஓடும் கங்கை மையமாகக் காட்டப்பட்டுள்ளது.அதைப் போற்றி தேவர், கந்தர்வர், இயக்கர் முதலியோரும் பூவுலக மக்களும் பாதாளவாசிகளான நாகராஜனும், அவன் மனைவியும் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பகீரதனின் தவத்தால் கங்கை பெருக்கெடுத்து வீழ்வதையும், சிவபிரான் பகீரதனுக்கு அருள் பாலிப்பதையும் போற்றுகின்றனர். இச்சிற்பத்தில் காட்சிக்குரிய மையப் பொருளாக உள்ளது கங்கையின் பெருக்கே" என்று கூறுகின்றனர். பேராசிரியர் ஆனந்த குமாரசாமி போன்ற பெரியார்கள் இதையே குறிக்கின்றனர். அர்ச்சுனனே! மற்றும் சிலர் இது அர்ச்சுனன் தவத்தைக் குறிக்கும் என்று கூறுகின்றனர். இக்கருத்தை நிலைநிறுத்திய பெருமை, இந்நூலாசிரியரின் ஆசானான பத்மபூஷன் தி.நா. இராமச்சந்திரன் அவர்களையே சாரும். மற்ற கருத்துகள் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி, எவ்வாறு இது அர்ச்சுனன் தவக்காட்சியையே குறிக்கும் என்று தன்னுடைய நூலில் தெளிவாகவும் விரிவாகவும் அவர் குறித்துள்ளார். அர்ச்சுனன் தவமும், கிராத வேடத்தில் சிவபெருமான் அர்ச்சுனனுடன் இட்ட போரும், அக்காலத்தில் இலக்கியங்களிலும், சிற்பங்களிலும், சிறப்பிக்கப்பட்டுள்ளன. மஹேந்திர வர்மனின் சமகாலத்தவரான பாரவி என்ற கவி கிராதார்ச்சுனீயம் என்ற அழியாத காவியத்தை ஆக்கியுள்ளார். பொருட்சுவை நிறைந்த இக்காப்பியம் வடமொழிக்காப்பியங்களில் ஒரு பெரும் மாகாப்பியமாக இன்றும் கருதப்பட்டு வருகிறது.பாரவியின் சமகாலத்தவனானன துர்விநீதன் என்ற கங்க மன்னன் தானே இக்காப்பியத்துக்கு ஒரு உரை எழுதியிருக்கிறான். அய்ஹொளேயில் காணப்படும் புலிகேசியின் கல்வெட்டில் பாரவி, காளிதாசனுடன் ஒப்பிட்டுக் குறிக்கப்பட்டுள்ளார். இவற்றிலிருந்து, பாரவியின் கிராதார்ச்சுனீயம் என்ற நூல் எவ்வளவு சிறப்பாக அக்காலத்தில் விளங்கிற்று என்பது தெளிவு.பாரவியின் நண்பரான தாமோதரன் பல்லவர் சபைக்கு வந்தார் என்றும், அவருடைய வழிவந்தவரே தண்டி என்ற கவி என்றும், அவர்தான் எழுதிய அவந்திசுந்தரி கதையில் மாமல்லபுரத்தைக் குறித்துள்ளார் என்றும் முன்பே கண்டோ ம். எனவே பாரவியின் கிராதார்ச்சுனீயமே இங்கு அர்ச்சுனன் தவத்தைத் தோற்றுவிக்க அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்று திரு. தி.நா. இராமச்சந்திரன் தன் நூலில் விரிவாக எழுதியுள்ளார். சிவபெருமானிடமிருந்து பாசுபதாத்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் கடுந்தவம் செய்ய நேர்ந்தது. இந்திரகீலமலை என்ற இடத்தில் தவம் புரிந்தான். சிவபிரான் அர்ச்சுனனை சோதிக்க, தான் வேடுவன் வேடம் பூண்டு வந்தார். அப்போது பன்றி ஒன்று அர்ச்சுனன் மேல் வர, அர்ச்சுனன் தன்னைக் காத்துக் கொள்ள அதன் மீது அம்பெய்தினான். அதே நேரத்தில் வேடுவன் உருவில் வந்த பெருமான், தானும் ஒரு அம்பை எய்யப் பன்றி இறந்தது. தானே கொன்றதாக அர்ச்சுனன் கூற, வேடுவன் வேட்டையாடிவந்து தான் கொன்றது என்று கூற, இருவருக்கும் போர் மூண்டது. முடிவில் அர்ச்சுனன் தோற்கவே, சிவபிரான் தன் நிஜ உருவைக் காட்டி அவனுக்கு பாசுபதாத்திரத்தைக் கொடுத்தார் என்பது கதை. வீரத்தால் ஒரு வேடுவனாகி விசைந்து ஓர் கேழலைத் துரந்து சென்ற ணைந்து போரைத்தான் விசயன்றனக்கன் பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல் என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறித்துள்ளது நினைவிற் கொள்ளல் தகும். வடமொழிக் காப்பியம்: கடுந்தவம் புரியும் அர்ச்சுனன், முன்னைப்பிறப்பிலிருந்த நரனே. ‘இவனே நரநாராயணன் என்று திகழ்ந்தவன்’ என்று தேவர்க்கும், ஏனையோர்க்கும் சிவபெருமான் கூறியதாகக் கிராதார்ச்சுனீயம் குறிக்கும். அதையே இங்கு குறிக்கும் வகையில், சிவபெருமான் தன் இடது கையைக் கீழ் நோக்கிக் காட்டுகிறார். அக்கரத்தின் கீழே நாராயணனாகிய திருமால் கோயில் கொண்டுள்ளதைக் காண்கிறோம், என்று இராமச்சந்திரன் குறிக்கிறார். இக்காட்சி அர்ச்சுனன் தவம் என்று கொள்ள மற்றொரு காரணத்தைக் கூறலாம். அர்ச்சுனனுக்குச் சிவன் பாசுபதாத்திரம் கொடுக்கும் காட்சி, இந்திய நாட்டில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தஞ்சை, தாராசுரம் முதலிய இடங்களில் இக்காட்சியைக் காணலாம். இங்கெல்லாம் அர்ச்சுனனுக்கும் சிவபிரானுக்கும் இடையில் இரு குள்ள பூதம் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அதன் வயிற்றிலும் ஒரு முகம் இருக்கக் காண்கிறோம். அதே போன்று இங்கும் இருப்பதால் இது அர்ச்சுனன் தவமாகவே இருத்தல் கூடும். தமிழ்க் காப்பியம்: இக்காட்சியைச் சித்தரிக்க பாரவி எழுதிய கிராதார்ச்சுனீயம் என்ற காப்பியம் அடிப்படை என்பது சிலர் கருத்து எனக் குறிப்பிட்டோ ம். ஆயினும், இங்கு பாறையில் சித்தரிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள் நம் சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. அதுவும் இதே பகுதியில் இக்கருத்துக்கள் நிலவி வந்தன என்று காணும் போது, சங்க இலக்கியமும் இதற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்க காலத்தில் தொண்டைமான் இளந்திரையன் இங்கு ஆண்டான். அவனைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படை என்ற நூலை உருத்திரங்கண்ணனார் இயற்றியுள்ளார். அதில் கீழ்க்கண்ட வருணனை உள்ளது. இளந்திரையனின் நாட்டில் ஒரு மலைச்சாரல். அதில் மனதுக்கு இன்பமளிக்கும் ஒரு அருவியுள்ளது. அதன் கரையில் கலைமானும், புலியும் படுத்திருக்கின்றன. மயில் ஒன்று ஆரவாரிக்கிறது, அருகில் இருந்த மரத்தின் மீதேறி மந்திகள் குதித்து விளையாடுகின்றன. அச்சாரலில் கின்னர மிதுனங்கள் பாடிச் செல்கின்றன. அக்கரையில் சிவந்த தீயைப் பேணும் அந்தனர்கள் வேட்டனர். வெள்ளைத் தந்தங்களையுடைய யானைகள் மரத்திலிருந்து சமித்தை முறித்துக் கொண்டு வந்தன. அச்சிறப்பு வாய்ந்த மலையின் கிழவோன் இளந்திரையன் என்று உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்:- கின்னரம் முரலும் அணங்குடைச் சாரன், மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின், மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில், செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக் களிறு தரு விறகின் வேட்கும், ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. இக்கருத்துக்கள் அனைத்துமே சிற்பத்தில் உள்ளதைக் காணும் போது நாம் வியப்பில் ஆழ்கிறோம். இச்சிற்பங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். அவர் தன் பதிகம் ஒன்றில் சிவபிரானைப் போற்றும் பாணி இங்கு நினைவிற் கொள்ளல் தகும். “இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அயர்ப்பொன்றின்றி நின் திருவடியதனை அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு திகைப்பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்” இப்பாட்டு மாமல்லபுரத்து அர்ச்சுனன் தவத்தையே நினைவுறுத்துகிறது. சிவபெருமானைச் ‘செந்தமிழும் வடமொழியும் ஆனான் கண்டாய்’ என்று ஆன்றோர்கள் பாடியுள்ளனர். அதே அடிப்படையில் தமிழிலக்கியத்தையும், வடமொழிக் காப்பியத்தையும் இணைத்து, அதிலிருந்துதான் இவ்வெழிற் சிறபத்தைத் தோற்றுவித்துள்ளான் என்று கொள்வதே பொருந்தும். கற்பனையின் சிகரம்: இங்கு மற்றொன்றையும் நாம் காண வேண்டும். இந்தப் பரந்த பாறையில் எவ்வளவு சிறந்த சிற்பங்கள் உள்ளன! எத்தனை சிம்மங்கள்! அவை அனைத்தும் வெவ்வேறு அமைதியில் உள்ளன. நின்று மூரித்து நிற்கும் சிங்கம். முன்காலைத் தூக்கி உறுமும் சிங்கம். பாய்ந்து தாக்கும் சிங்கம். படுத்து உறுமுகின்ற சிங்கம் எனப் பல பல வகைகள். குரங்குகளில் தான் எவ்வளவு வகை! தாடியுடைய கருங்குரங்கு. மனிதக் குரங்கு. வீட்டிலே தொல்லைதரும் குட்டிக் குரங்கு. கின்னரப் பறவைகளில்தான் எவ்வளவு வகை.ஒன்றுபோல் மற்றது இல்லையே! அந்தந்த விலங்குகளின் தன்மையை எவ்வளவு அழகாகச் சித்தரித்துள்ளான் கலைஞன். பாய்ந்து வரும் சிங்கம், பால் கொடுக்கும் புலி, மரத்தில் ஏறும் உடும்பு, திரும்பிப் பார்க்கும் பன்றி, வேகமாக ஒடும் ஆமை, மூக்கைத் தடவிக் கொள்ளும் மான், குகையிலிருந்து எட்டிப் பார்க்கும் விலங்கு, போலித் தவம் புரியும் பூனை, பூனையின் முகத்தைப் பார்க்கும் சுண்டெலி, பெருமித நடைபோடும் யானை, குட்டிக்கரணம் போடும் யானைக் குட்டிகள், வளைந்த காதை உடைய ஆட்டுக்கிடாய். பெண் குரங்கு குட்டி ஒன்றுக்குப் பால் கொடுக்க, அதற்குப் பேன் பார்க்கும் மந்திக் குரங்கு, இவையனைத்தையும் ஒருங்கே காட்டியுள்ள பெருமையை மாமல்லபுரத்திலேதான் காணலாம். வேறு எங்கும் காணமுடியாது. இது பூவுலகிலிருந்து கற்பனையின், கலையின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும் படைப்பு. அர்ச்சுனன் தவம்: [குறைச்சிற்பம்] கிருஷ்ண மண்டபத்திலிருந்து, தெற்கே செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால், அங்கு மற்றொரு அர்ச்சுனன் தவத்தைக் குறிக்கும் சிற்ப பாறையைக் காணலாம். அது புகழ்வாய்ந்த அர்ச்சுனன் தவம் போன்றதே. ஆயினும் சிற்பங்கள் சரிவர செதுக்கி முடியவில்லை. வெறும் உருவம் மட்டுமே செதுக்கியுள்ளார்கள். அப்பாறையிலும் நடுவில் ஒரு பிளவு. அது மேலிருந்து நேரே கீழே வராமல் சற்று சாய்ந்து வருகிறது. அதை மையமாகக் கொண்டு தேவர், இயக்கர், கின்னரர், கானவர், யானைகள் முதலியன செதுக்கப்பட்டுள்ளன. இங்கு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகவும், வெகு வேகமாக முன்னே ஒடுவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளன.இவை முழுவதும் நன்கு செதுக்கப்பட்டிருந்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். எனினும், மாபெரும் வேகத்தை இவற்றின் சிற்பத்திலே காண்கிறோம். இது தவிர மேலே பல அன்னங்கள் மண்டலமிட்டுப் பறப்பது போன்ற ஓர் அமைப்பும் இங்கு சிறப்பாக உள்ளது. நடுவிலே உள்ள இடைவெளி போக தென்புறப் பாறையும் பிளவுபட்டிருக்கிறது. அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சியும் அருகில் சிவபிரான் அத்திரம் அருளும் காட்சியும் இப்பகுதியில்தான் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் முழுவதும் செதுக்கப்பட்டிருந்தால் சிறப்பாகத் தானிருக்கும். குன்றெடுத்து ஆநிரைகாத்த ஆயன் அர்ச்சுனன் தவத்திற்குமப்பால், பஞ்ச பாண்டவர் மண்டபத்தின் வழியில் தெற்கே செல்லும் சாலையில் சென்றால், கிருஷ்ணமண்டபத்தை அடையலாம். பல தூண்களையுடைய இம்மண்டபத்தின் பின்னே, கண்ணன் குன்றெடுத்து ஆநிரை காத்த காட்சி சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. முன்னுள்ள மண்டபம், இங்கு முதலில் இல்லை. கண்ணன் குன்றெடுத்து ஆநிரைக் காத்த காட்சி முதலில் இங்கு அர்ச்சுனன் தவம் போல் திறந்தவெளிச் சிற்பமாகத்தான் இருந்தது. மண்டபம் பிற்காலத்தில் எழுப்பப் பெற்றது. எனவே இம்மண்டபத்தை மனக்கண்ணால் அப்பாற்படுத்தி விட்டுப் பின்னுள்ள பாறைச் சிற்பத்தை மட்டும் கண்டால்தான், இச்சிற்பத்தின் உண்மை எழிலைப் பருகமுடியும். மேலேயுள்ள பரந்த குன்றையே கையில் அனாயாசமாகக் கண்ணன் தூக்கி நிற்பதை இக்காட்சியில் சித்தரித்துள்ளான் கலைஞன். தூக்கி நிறுத்தப்பட்ட குன்றின் கீழிடத்தைப் புகலிடமாகக் கொண்டு கவலையின்றி காணப்படும் ஆயரும், ஆய்ச்சியரும், ஆநிரைகளும், காண்போர் மனதைக் கவரும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்து ஆநிரை காத்த வரலாற்றைத் திருமங்கையாழ்வார் தன் பதிகங்களில் மிக அழகாக ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு, அன்று, ஆயர் விழவு எடுப்ப பாசனம் நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை எல்லாம் போயிருந்து அங்கு, ஒரு பூத வடிவுகொண்டு, உன் மகன், இன்று, நங்காய்! மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி, வளைத்து உண்டு, இருந்தான் போலும். என்றும், இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது, மழை பொழிந்திட, தளர்ந்து, ஆயர் எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல், எம்பெருமான் அருள் என்ன, அந்தம் இல் வரையால் மழை தடுத்தான். என்றும் பாடியுள்ளார். இந்திரனுக்கு ஆயர்கள் எடுத்த விழவை கண்ணன் ஒரு காலத்தே தடுக்க, இந்திரன் வெகுண்டு, கல்மாரியாகப் பெருமழையைப் பெய்வித்தான். ஆயர்களெல்லாம் நடுங்கவும், ஆநிரை மருளவும், கண்ணன் குன்றத்தைக் கையிலே தூக்க அதன் அடியில் ஆநிரைகளும் ஆயர்களும் புகுந்து கவலையொழிந்தனர். இந்திரனின் ஆணவமும் அழிந்தது. இங்கு வடபுறத்திலிருந்து தென்புறம் வரும்போது வரிசையாகக் கீழ்வரும் சிற்பங்கள் உள்ளன. காளை மாடு ஒன்று படுத்திருப்பது போல் ஒரு சிற்பம் வடபுறம் சற்றுத் தனித்துக் காணப்படுகிறது ஒரு வயதான ஆயன் தன் தோளில் சிறுவனைத் தூக்கிக்கொண்டு, நீண்ட தடி ஒன்றை ஊன்றி வருகிறான். அவனுக்கு முன்னர் ஆய்ச்சி ஒருத்தி, தலையில் தயிர்க் குடங்களைத் தாங்கி, இடது கையினால் ஒரு சிறுவனை அழைத்துச் செல்கிறாள். அவனுக்கும் முன்னர் மற்றுமொரு இடைச்சி ஒரு சிறுவனை அழைத்துச் செல்கிறாள். அவளுக்கும் முன் எழிலாக ஒரு கோதை அருகிலுள்ளவள் மீது சாய்ந்து நிற்கிறாள். அடுத்து இடது கையினால் குன்றை அனாயாசமாகத் தூக்கிய ஆயனாகக் கண்ணபிரானைப் பார்க்கிறோம். அடுத்துத் தன்னிரு கைகளையும் கட்டி நிற்கும் ஆயனின் தோளில் தன் இடது கையைச் சார்த்தி, வலது கையைத் தொடைமீதமர்த்தி, சிங்கம் போல் நிற்கும் உருவம் பலராமனது என்று குறிப்பர். சங்க இலக்கியங்களில் கண்ணனும் பலராமனும் சேர்ந்து புகழப்படுவது மரபு. பானிற உருவில் பனைக்கொடி யோனும் நீனிற உருவின் நேமியோனும் என்று பலராமனும் கண்ணனும் சேர்ந்து இருப்பதைப் புறநானூறு குறிக்கும். ……..கடலும் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம் வேறுவேறுருவின் ஒரு தொழில் இருவர் தங்கு நீனிலை ஓங்கிருங் குன்றம் என்று சோலைமலையில் மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கின்றனர் என்று கூறும் பரிபாடலும் நினைவிற் கொள்ளல் தகும். அடுத்து ஓர் அற்புதமான காட்சியைக் காண்கிறோம். தாய்ப் பசு ஒன்று தன் தலையைச் சாய்த்து, அன்போடு தன் கன்றை நாவினால் நக்கிக் கொடுக்கிறது. ஆயன் ஒருவன் குத்திட்டு அமர்ந்து, தன்னிரு முழங்கால்களில் பால்குடத்தை இடுக்கிக் கொண்டு பால் கறக்கும் காட்சி, நம் ஊர்ப்புறங்களில் இன்றும் காண்கிறோமே அது போன்ற ஒரு காட்சியாகவே விளங்குகிறது. அதற்கு மேல் ஆயர்குல மகள் தன் குழவியைத் தொடை மீது அமர்த்தி மேல் நோக்குகிறாள். அங்கு கோவலன் ஒருவன் குழல் ஊதுகிறான்.அவன் குழலிசையில் தங்களை மறந்து பசுக்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. அடுத்து இளங்கொடி போன்ற கோதை ஒருத்தி, ஒலைப்பாயைத் தலையிலே சுருட்டி எடுத்துக் கொண்டு, உரியில் தயிர் குடங்களை வலது கரத்தில் தூக்கிச் செல்கிறாள். அவளுக்குப் பின்னர் இடையன் ஒருவன் தன் தோளில் கோடாரியைத் தாங்கி வருகிறான். சங்க இலக்கியங்களில் ஆயன் மரங்களை வெட்டுவதற்காகத் தோளில் கோடாரியைத் தூக்கிச் செல்வான் என்றும், உரியிலே தயிர்க் குடங்களைத் தாங்கி ஆயர் மகள் வர ஆயன் வருவான் என்றும், கோவலன் நீண்ட குழலை இசைக்க, ஆநிரைகள் அதில் மயங்கி நிற்கும் என்றும், பல இடங்களில் குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அவையனைத்தையும் இங்கு சிற்பத்தில் காணும் போது, பெரும் வியப்படைகிறோம். தாய்ப் பசுவையும், பால் குடிக்க விழையும் கன்றையும் கண்டோம். அடுத்து ஏற்றமாக நடை போட்டுச் செல்லும் எருதையும் அதன் முன்னர் துள்ளிக்குதிக்கத் துடிக்கும் கன்று ஒன்றையும் காண்கிறோம். அங்கு பசுவும் கன்றும், இங்கு காளையும் கன்றும். அங்கு தாய்த்தன்மை. இங்கு ஏற்றத்தின் பெருமிதம். இது போன்று மனிதர்களாகட்டும், விலங்குகளாகட்டும், அல்லது பறவைகளாகட்டும், அந்தந்த உயிரினங்களின் வாழ்க்கையில், சிறந்த தோற்றத்தை; எந்த தோற்றத்தைச் சித்தரித்தால் அதன் உண்மைக் குணம் நன்கு வெளிப்படுமோ அத்தோற்றத்தைத் தேர்ந்தெடுத்து மாமல்லையில் வடித்திருப்பது சிறப்பாம். பேன் பார்க்கும் குரங்கு, பால் கொடுக்கும் பசு, ஏற்ற நடை போடும் எருது முதலிய குணச்சித்திரங்களையே இங்கு சிற்பமாக்கியிருக்கிறான். எருதுக்கும் முன்னர் ஓர் இடையனும் இடைச்சியும் கைகோர்த்து ஆடிச்செல்லும் காட்சி. மயக்கம் போலும். பக்கத்துப் பாறைப் புறத்தில், நான்கைந்து விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று நல்ல சிறுத்தைப் புலியின் உருவம். மற்றவை சிங்க உடல் கொண்டு உள்ளன. ஆனால் அவற்றின் முகங்கள் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றன. இதில் சிறப்பாக ஓர் உருவம் சிம்ம உடலும் மனித முகமும் கொண்டு காணப்படுகிறது. நரசிம்மம் என்று இதைக் கூறலாம். இவற்றைத் தோற்று வித்த மன்னனின் பெயர் நரசிம்மன் அல்லவா; அதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான் கலைஞன். கட்டடக் கோயில்கள் கடற்கரைக் கோயில் மாமல்லையின் கிழக்கே கடல் அலைகள் கரையை வருடிச் செல்லும் இடத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள கோயிலையே கடற்கரைக் கோயில் என்பர். இங்கு உண்மையில் மூன்று கோயில்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரே திருச்சுற்றுக்குள் அமைந்துள்ளன. விண்ணிழி விமானம் உடையதாகக் கடல் நோக்கிய கோயில் ஒன்று உள்ளது. அதன் பின்னர் சிறிய அளவில் மேற்கு நோக்கிய ஒரு விமானமும் உள்ளது. இரண்டுக்கும் இடையில் சற்றுத் தென்புறத்தில் நீண்ட சதுரவடிவில் ஒரு கோயில் இருக்கிறது. இதன் மேல் நீண்ட சதுர வடிவில் ஒரு விமானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது பிற்காலத்தில் விழுந்திருக்க வேண்டும். கிழக்கு நோக்கிய கோயிலும், மேற்கு நோக்கிய கோயிலும் அண்ணன் தம்பி போல் காட்சியளிக்கின்றன. இவையிரண்டும் சிவபிரானுக்கு எடுக்கப்பட்டவை. இடையில் உள்ள நீண்ட சதுரக் கோயில் ஜலசயனப் பெருமாளாக விளங்கும் திருமாலுக்கு எடுக்கப்பட்டது. மிகவும் உயரமான கிழக்கு நோக்கிய கோயிலுக்கு க்ஷத்திரியசிம்ம பல்லவேச்வர கிருஹம் என்றும், மேற்கு நோக்கிய கோயிலுக்கு இராஜசிம்ம பல்லவவேச்வர கிருஹம் என்றும் கல்வெட்டில் பெயர் காணப்படுகிறது. இடையில் உள்ள கோயிலுக்கு நரபதிசிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம் என்றபெயர் அக்கோயில் வாயில் நிலையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் முதல் இராசராசனின் கல்வெட்டில் இக்கோயிலுக்குப் ‘பள்ளி கொண்டருளியதேவர் கோயில்’ என்று பெயர் காணப்படுகிறது. அதே கல்வெட்டு இம்மூன்று கோயில்களும் சேர்ந்த தொகுதியை ‘ஜலசயனம்’ என்று குறிக்கிறது. …. ஸ்ரீராஜராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தாறாவது ஆமூர்கோட்டத்தாமூர்நாட்டு நகர மாமல்லபுரத்து நகரத்தோமும் பேரிளமையோமும் இ(ன்)[ந்நக]ரத்து ஜலஸயாநத்து க்ஷத்ரியஸிம்ஹபல்லவேஸ்வரத்து தேவாரும் இராஜஸிம்ஹ[வ]ல்லவேஸ்வரத்து தேவரும் பள்ளி கொண்டருளிய தேவரும் உடைய …. கிழக்கு நோக்கிய கோயிலின் கருவறையில் பட்டைத் தீட்டப்பட்ட, தாராலிங்கம் காணப்படுகிறது. அதன் பின்புறம், சுவரில் சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவம் இருக்கிறது. மேலே விமானத்தின் பகுதி சிதைந்து உள்ளே இருக்கும் இலிங்கத்தின் மேல் வீழ்ந்து, இலிங்க்த்தின் தலைப்பகுதியைச் சிதைத்துள்ளது. இலிங்கமே அதன் இருப்பிடத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். பின்னர் அதை நேர் செய்தவர்கள் சரியாக இலிங்கத்தை நடவில்லை. இலிங்கத்தில் காணப்படும் தாராரேகைகள் ஏறுமாறாக இருப்பதே இதற்குச் சான்றாகும். இக்கருவறையின் முன்னே இடைகழி உள்ளது. அதன் ஒரு சுவற்றில் திருமால் தேவியுடன் காணப்படுகிறார். மறு சுவற்றில் நான்முகன் தேவியுடன் காணப்படுகிறார்.வாயிலில் இரு காவலர்களைக் காண்கிறோம். இவ்விமானத்தின் தென்புறச் சுவரும், பின்புறச் சுவரும், இடிந்து போய் பின் ஏதோ கிடைத்த கற்களைக் கொண்டு நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சுவர்கள் சிற்பங்கள் அழிந்து எழில் குன்றி விளங்குகின்றன. வடப்புறச் சுவரில் மட்டும் சிற்பங்கள் உள்ளன. மத்தியில் முப்புரமெரித்த மூர்த்தியின் உருவம் உள்ளது. அதன் இருபுறமும், இரணியனைக் கீண்ட நரசிம்ம உருவைக் காண்கிறோம்.கிழக்கே கொற்றவையின் சிற்பத்தைக் காணலாம். இச்சிற்பங்களின் அடிகளில் காணப்படும் கணங்கள் எழில் மிக்கவை. இப்பெருங்கோயிலைச் சுற்றிலும் திருச்சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றின் உட்புறம் பல உருவங்களைச் சித்தரிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை ஏதோ வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்களாக இருந்திருக்க வேண்டும். ஆயினும் எதைக் குறிக்கின்றன என்பது தெளிவாக இல்லை. கிழக்குப் புறத்தில் நுழை வாயில் ஒன்று இருக்கிறது. அதன் மேல் சிறிய கோபுர அமைப்புக் காணப்படுகிறது. தமிழக கோயில்களில் முதன் முதலில் கோயிலின் மேலுள்ள விமானமே உயர்த்திக் கட்டப்பட்டது. வாயிலில் உள்ள கோபுரம் மிகச் சிறிய அளவில் இங்கு உள்ளது போன்று தான் கட்டப்பட்டது. தமிழகக் கோபுரங்களில் எஞ்சியுள்ளவற்றில் மிகவும் பழமையானது இங்குள்ள கோபுரமே என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பர். இக்கோபுரத்திற்கும் கிழக்கில் கடல் அலைகளின் நடுவில், ஒரு கல் தூண் உள்ளது. இதைக் கொடிக் கம்பம் என்பர். கடல் அலைகள் இக்கோயிலின் மீது பாய்ந்து அழித்து விடாமலிருக்க ‘காங்கிரீட்’ கட்டிகளைக் கொட்டி வட்டமான திட்டைக் கட்டி காக்க வழி வகுத்துள்ளனர். பெருங்கோயிலின் பின்னர் நீண்ட சதுரவடிவில் அமைந்துள்ள திருமால் கோயில் நரபதி சிம்ம பல்லவ விஷ்ணுகிருஹம் என்று முன்பே கண்டோம். நீண்ட சதுர கருவறை. அதன் உள்ளே அனந்தசாயியாகத் திருமால் படுத்து உறங்குகிறார். அவருக்கு இரண்டே கைகள் உள்ளன. இச்சிற்பம் தனியாகச் செய்து பிரதிட்டைச் செய்யப்பட்டது அல்ல. அங்கு ஒரு பாறை இருந்திருக்கிறது. அதிலேயே செதுக்கப்பட்ட பாறைச் சிற்பமாகும். இச்சிற்பத்தையே லலிதாலயன் என்ற சிற்பி சீர்திருத்தினான் என்றும் தண்டி எழுதிய அவந்தி சுந்தரி கதையில் குறிக்கப்பட்டுள்ள சிற்பம் இதுவே எனவும் கூறுவர். இதன் முன்னர் இடைகழி உள்ளது. அதன் வாயில் நிலையிலேயே பல்லவக் கிரந்த எழுத்தில் நரபதி சிம்ம பல்லவ விஷ்ணுகிருஹம் என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. இதன் வெளியே தென்புறச் சுவரில் திருமால் கருடன் மீதமர்ந்து கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. வடப்புறச் சுவரில் கண்ணன் காளீயனாம் அரவின் மிசை நடம்புரியும் சிற்பம். அதை அடுத்து கண்ணன் குதிரையாக வந்த அசுரனை வதைக்கும் காட்சி. இக்கோயிலின் மேலிருந்த விமானம் வீழ்ந்து பட்டது. ராஜசிம்ம பல்லவேச்வர கிருஹம்: சிறிய கோயிலாக மேற்கு நோக்கியுள்ள இக்கோயிலின் பின்புறச் சுவரில் எழில் வாய்ந்த சோமாஸ்கந்தமூர்த்தி உருவம் உள்ளது. நடுவில் இலிங்கம் பிரதிட்டைச் செய்யப்பட்டிருந்தது. இச்சிற்றாலயத்தின் இருமருங்கிலும் கீழே இராசராசனுடைய கல்வெட்டுகள் உள்ளன. இம்மூன்று கோயில்களின் கிழக்குப் பகுதி கடலானபடியால், மகாமண்டபங்களையும், திருச்சுற்றையும் விசாலமாக மேற்குப் புறத்தே கட்டி இருக்கிறார்கள். சிற்றாலயத்தின் முன்னர் ஒரு சிறு மண்டபமும், அதன் முன்னர் ஒரு பெரும் மண்டபமும் அமைத்துள்ளனர். இவற்றின் அடித்தளங்களே இப்போது எஞ்சியுள்ளன. சுற்றி வரும் பெரும் திருச்சுற்றின் வாயில் மேற்புறம் வைக்கப்பட்டுள்ளது. சுற்றி வரும் திருச்சுற்றின் மதிலில் உட்புறம் பல்லவ வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்களும், வெளிப்புறம் காஞ்சி கைலாயநாதராலயத்தைப் போன்று பாய்ந்து வரும் சிங்கத்தின் மீதமர்ந்த வீரர் சிற்பங்களும் அலங்கரித்தன. அவற்றின் மேல் பகுதியை வரிசையாக நந்திகள் அலங்கரித்தன. இச்சுவர்களின் மேல் பகுதி பாதிக்கு மேல் இடிந்து வீழ்ந்து விட்டது. உள்ளே இருந்த சிற்பங்கள் எல்லாம் வீழ்ந்து விட்டன. மேற்கு வாயிலின் நிலைகளாக இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. தென்புறம் மூவுருவும் ஓருருவாய் நின்ற ஏகபாத மூர்த்தியின் உருவம். இவ்வுருவுக்கு மூன்று தலைகளும், ஓருடலும் ஒரு காலும் உள்ளன. ஆறு கரங்கள்; சூலம்,பாம்பு முதலிய தரித்துள்ளார். வடபுறம் பல தலைகளை உடைய அரவின் கீழ் நிற்கும் நாகராஜனின் உருவம் உள்ளது. இவ்வாயிலுக்கு எதிரில் மூன்று பலிபீடங்கள் உள்ளன. இரண்டு ஒரே வரிசையிலும், மற்றது சற்றுத் தள்ளியும் உள்ளன. இவற்றின் பீடத்தில் பல்லவக் கிரந்த எழுத்துக்களில், பல சம்ஸ்கிருதச் செய்யுட்கள் உள்ளன. இவை பல்லவ மன்னன் இராஜசிம்மனின் புகழ் பாடுகின்றன. இவை தவிர இங்கு பல சிதைந்த கட்டட அமைப்புகள் உள்ளன. இக்கோயில்கள் அலைவாயில் கட்டப்பட்டுள்ளவை ஆதலின், காலத்தின் போக்கிலே [சுமார் 1250 ஆண்டுகளாக இவை அலைவாயிலேயே அல்லவா நிற்கின்றன] பல பகுதிகள் சிதைந்து விட்டன. கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள், இக்கோயில் பலமுறை கடல் நீரால் சூழப்பட்டும், இன்னும் சில முறை மணலால் மூடப்பட்டும் கிடந்தது என்று மேல் நாட்டார் குறிப்புகளிலிருந்து அறிகிறோம் என்றால், இதற்கும் முன்னர் ஆண்டுகள் நின்றதே இது தமிழகத்தின் நற்பயனே என்றுதான் கருத வேண்டும். எனவே தான் இங்குள்ள திருச்சுற்றுச் சுவர்கள் இடிந்தும், எல்லாச் சிற்பங்களும் சிதைந்தும் உள்ளன. அத்துடன் இது கட்டடக் கோயில். இதைக் கட்ட உபயோகித்த கல் நல்ல கருங்கல் அல்ல. மணற்கல் என்று கூறும் ஒரு வகையாகும். உப்புக்காற்றுப் பட்டதினால் இக்கல் உதிர்ந்து போயிற்று. இங்குள்ள சிற்பங்கள் அதனால்தான் பழுதாகியுள்ளன. இங்கு சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் சேர்ந்து கோயில் எழுப்பப் பட்டுள்ளது ஒரு சிறப்பாம். இதைக் கொண்டு தான் திருமங்கை மன்னன் யிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து அம்பெருமானார்க்கு இடம், விசும்பில் க ணங்கள் இயங்கும் மல்லைக் கடல் மல்லைத் தலசயனம் வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு, என்-தன் மட நெஞ்சே: என்று பாடுகிறார் போலும்! இக்கோயிலுக்குச் சற்றுத் தென் புறத்தே அமர்ந்த நிலையில் உள்ள ஒரு சிம்மம் அனைவருடைய கவனத்தையும் இழுக்கும். அதைப் பார்த்தால் ஏதோ இனம் தெரியாத ஒரு உணர்ச்சி ஏற்படும்.அதன் வயிற்றில் சதுரமாக ஒரு குகை போல் குடை வித்திருப்பதைக் காணலாம். அதன் உள்ளே எட்டிப்பார்த்தால் கொற்றவை பல கைகளை உடைய தேவியாகப் பாய்ந்து வரும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். செங்கண் அரி கொற்றவையின் ஊர்தியல்லவா.அதன் அகத்திலேயே உறைவாள் போன்ற அமைப்பு இது. அரியின் இரு பிடரியிலும் கொற்றவையின் காவற்பெண்டுகள் அமர்ந்துள்ளனர். அச்சிங்கத்தைத் தோற்றுவித்த சிற்பி சிகச் சிறந்த கலைஞன் என்பது கண்கூடு. சிம்மத்தின் உக்கிரத்தை அதன் முகத்தில் சில கோடுகளை வரைந்தே காட்டியுள்ளது வியக்கத்தக்க திறனாகும். அதன் காலடியில் சங்கூதும் குள்ளக்கணம் ஒன்றும், இயற்கையாகப் படுத்திருக்கும் கலைமானின் உருவமும் உள்ளன. பூதம், கலைமான் இரண்டின் தலைகளும், ஏதோ காரணத்தால் உடைந்து காணப்படுகின்றன. இம்மூன்று கோயில்களின் அமைப்பு வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரும் வியப்பையே அளித்து வருகிறது. கடலை நோக்கியும், மேற்கு நோக்கியும் உள்ள இரு சிவாலயங்களும், இராஜசிம்மனால் தோற்றுவிக்கப்பட்டவை என்று திட்டவட்டமாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இடையில் உள்ள அரவணைதுயின்ற அண்ணலின் கோயிலைத் தோற்றுவித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடுகளுண்டு. இப்போதுள்ள கோயிலின் அமைப்பைக் கண்டால் மற்ற இரு கோயில்களையும் கட்டத் துணிந்த காலத்திலேயே இதையும் எழுப்பியிருக்க வேண்டும் என்று துணியலாம். ஆயினும், பாறையில் செதுக்கப்பட்டுள்ள அனந்தசாயியே அனைத்திலும் முந்தியது. [1. முதலாம் நரசிம்மன் திருமாலுக்குக் கடற்கரையில் ஒரு கோயில் எழுப்பியதாக ஒரு செப்பேடு குறிப்பதாக, திரு என். ராமேசம் என்பவர் அறிவித்துள்ளார். ஆனால் அதன் முழுவிவரம் இன்னும் தெரியவில்லை.] நீலத்திரைக் கடலோரத்திலே நிற்கும் இக்கோயில், நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் சூழ்நிலையில் அமைந்து இருக்கிறது. அதிகாலையில் அருணோதய காலத்திலே இதன் அழகை இரசிக்க வேண்டும். அடுத்து கதிரவன் கடல் நீரிலிருந்து சிவந்த ஒரு பந்துபோல் உதிக்கும்போது இதன் அழகு இன்னும் சிறப்பாக இருக்கும். சூரியன் உச்சிக்கு ஏற ஏற ஒரு பொலிவும், மாலையில் மலைவாயில் விழும்போது அதன் நீண்ட சிவந்த கரங்கள், இவ்விமானங்கள் மீது பட்டுக் கடலை அடையும்போது மற்றுமொரு பொலிவும், இருள் சூழச் சூழ இதன் தோற்றமும், வெண்ணிலவு கடலில் தோன்றும் போதும் பால்போல் வீசும்போதும் இவ்விமானங்களின் எழிலும், மழைக்காலத்தில் விமானத்தின் மீது சாய்ந்து விழும் மழைத் தாரைகளால் ஏற்படும் அழகும், நேரில் கண்டு இன்புறத்தக்கவை. எனவே இக்கோயிலின் அழகைப் போற்றாத மக்களே இல்லை. கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் சிறு சிறு பாறைகள் உள்ளன. அவற்றில் படுத்த நிலையிலும் அமர்ந்த நிலையிலும் உள்ள சிம்மங்களும் யாளிக்குகை போன்ற சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. முகலிப்பாமுடையார் கோயில் ஊரின் வடக்கே கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது தொலைவு சென்றால் மண்ணில் புதைந்து கிடப்பதுபோல் ஒரு கோயிலைக் காணலாம். இதை முகுந்த நாயனார் கோயில் என்று அழைப்பர்.அண்மையில் தமிழக அரசின் தொல்பொருள்துறை கண்டுபிடித்த கல்வெட்டிலிருந்து இதற்குத் திருமுகலிப்பாமுடையார் என்பது பெயர் என்று அறியமுடிகிறது. முகலிநாகன் என்ற பெயர் சோழர் காலக் கல்வெட்டில் காணப்படுவது இதை நினைவுறுத்துகிறது. கோயில் கிழக்கு நோக்கியது. கருவறையினுள்ளே சுவரில் சோமாஸ் கந்தமூர்த்தி. நடுவில் உருண்டையான இலிங்கம். முன்மண்டபம். சுவற்றின் புறங்களைச் சிற்பங்கள் ஏதும் அலங்கரிக்கவில்லை. எண்பட்டைச் சிகரம். மேல்பகுதி சிதைந்து உள்ளது. சிகரக் கழுத்தில் கிழக்காக உமாமகேச்சுரர், தெற்கே தக்ஷிணாமூர்த்தி, மேற்கே யோக நரசிம்மர், வடக்கே நான்முகன் இவர்களின் சிற்பங்கள் உள்ளன. அர்ச்சுனன் தவத்திற்கருகில் வைக்கப்பட்டுள்ள பேன் பார்க்கும் குரங்கின் சிற்பம் இக்கோயிலுக்குக் கிழக்கில் மணலில் புதைந்து கிடந்தது. உழக்கு எண்ணெய் ஈச்சுரர் கோயில் மகிஷாசுரமர்த்தினி குகைக் கோயிலின் மேலுள்ள பாறையில், ஒரு பல்லவர் கட்டடக் கோயிலைக் காணலாம். இக்கோயிலின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இது சென்ற நூற்றாண்டு வரை வழிபாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஊரிலுள்ள கடைகளில் பணம் வசூலித்து நாள்தோறும் உழக்கெண்ணை அளந்து நொந்தா விளக்கெரித்தனர் என்றும், அதனால் இதற்கு உழக்கெண்ணை ஈச்சுரர் கோயில் என்று பெயர் வந்தது என்றும், அதுவே மருவி ஒலக்கெண்ணேச்வரர் கோயில் என்று வந்ததாகவும், சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலிலிருந்து அறிகிறோம். இக்கோயிலின் கருவறையில் இலிங்கம் ஒன்று இருந்தது. விமானத்தின் மேல் ஒரு பெரும் ஆலமரம் வளர்ந்திருந்தது என்றும், அதனால் விமானம் பழுதடைந்தது என்றும் அறிகிறோம். கருவறையில் இப்போது ஏதுமில்லை. சுவரின் புறத்தே வடப்புறம் கையலங்கிரியை எடுத்து ஆட்டமுயன்ற தசமாமுகனைத் தன் கால் விரலால் கடிந்த இராவனானுக்ரஹ மூர்த்தியின் சிற்பம் உள்ளது. இதைக் காணும்போது கடுகியதேர் செலாது கயிலாயமீது கருதேலுன் வீரம் ஒழிநீ முடுகுவதன்று தன்மென நின்ற பாகன் மொழிவானை நன்று முனியா விடுவிடுவென்று சென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள், நெடுநெடு இற்று வீழ விரலுற்ற பாதம் நினைவுற்ற தென்றன் மனனே. என்ற அப்பர் பெருமானின் பாடல் நினைவிற்கு வரும். கீழ்ப்புறச் சுவற்றில் சிவபிரான் யோகப்பட்டம் தரித்து அமர்ந்திருக்கிறார். தென்புறம் ஆலின் கீழ் அமர்ந்த பெருமானின் தோற்றம். மாமல்லபரத்திலேயே மிகவும் உயரமாக உள்ள பாறை இதுதான். இதன் மேல் கூர்மையான விமானத்தை உடைய ஒரு கோயிலை எழுப்பியிருக்கிறார்கள். விமானம் வீழ்ந்தது தீவினைப்பயனே. இல்லாவிடில் எண்ணிப்பாருங்கள். கடற்கரையிலே ஒருகோயில். குன்றின் உச்சியிலே ஒரு கோயில். கடலில் கலங்களில் வருபவர்களுக்கு எப்பேர்ப்பட்ட காட்சியை அளித்திருக்கும். நிலத்திலே கரையில் நிற்கும் விமானம் விண்ணகத்தையே தொடப்பறந்து செல்வதுபோல் அல்லவா இருந்திருக்கும்! தலசயனப் பெருமாள் கோயில் ஊரின் மத்தியில் இப்போது வழிபாட்டிலிருக்கும் பெருமாள் கோயிலையே தலசயனப் பெருமாள் கோயில் என அழைப்பர். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையானது தெலுங்குச் சோழ மன்னனாகிய திக்கண கண்டகோபாலனுடையதாம். இம்மன்னன் சோழப் பேரரசன் மூன்றாம் இராஜராஜனின் சிற்றரசனாக இப்பகுதியை 1230லிருந்து ஆண்டான். எனவே இப்போதுள்ள கோயில் 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்திக் கட்டப் பட்டிருக்க வேண்டும். எனினும் இக்கோயில் சோழர்களுடைய காலத்திலேயே வழிபாட்டிலிருந்து, பின்னர் திருத்தி அமைக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக, பல சோழர் காலக் கல்வெட்டுகளின் பகுதிகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இப்போதுள்ள கருவறைப் பகுதி 13-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தைச் சார்ந்தது என்பது தெளிவு. மற்ற பகுதிகள் காலப் போக்கிலே எழுப்பப்பட்டுள்ளன. கண்டகோபாலன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப் பட்டான். சுந்தர பாண்டியனின் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் காணப்படுகிறது. இராஜநாராயணன் சம்புவராயர், விஜயநகர ஸ்ரீரங்க முதலியோரின் கல்வெட்டுகளும் உள்ளன. கி.பி.13-ஆம் நூற்றாண்டிலிருந்து மாமல்லபுரத்தைப் பற்றி அறிந்துகொள்ள இக்கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயிலுக்குத் தலசயனம் என்றும் பெருமாளுக்கு உலகுய்ய நின்ற பெருமாள் என்றும், தேவிக்கு நிலமங்கை நாச்சியார் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. இங்கு பெருமாள் பள்ளி கொண்ட பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். திருமங்கை மன்னர் தன்னுடைய பாசுரங்களில் ‘கடல் மல்லைத் தலசயனம்’ என்று பாடுகிறார் என்று கண்டோ ம். இவர் 8-ஆம் நூற்றாண்டில் நந்திவர்மன் பல்லவ மல்லன் காலத்தில் வாழ்ந்தவர். கல்வெட்டுகள் இக்கோயிலையே கடல்மல்லைத் தலசயனம் என்று குறிக்கின்றன. [கடற்கரையிலுள்ளது ஜலசயனம் என்றும் குறிக்கப்படுகிறது.] எனவே திருமங்கை மன்னர் காலத்திற்கும் முன்பிருந்தே இக்கோயில் தலைசிறந்த வைணவத்தலமாகக் கருதப்பட்டது என்பது தெளிவாகிறது. இவருக்கும் முன்பிருந்த பூதத்தாழ்வார் ‘மாமல்லை எந்தை’ என்பதும் இதையே என்று கொள்வது தவறாகாது. ஆதலின் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வழிபாட்டிலிருப்பதுடன் அவ்வப்போது ஏற்பட்ட திருப்பணிகளினால் இதன் அமைப்புகளில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அறியலாம். சுந்தரபாண்டியனுடைய காலத்தில், அவனுடைய நன்மைக்காக, இக்கோயிலில் ஒரு சிறப்பு வழிபாட்டினை இப்பகுதியைச் சேர்ந்த பையனூரான, இராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் ஏற்பாடு செய்தனர். அடுத்து இராஜ நாராயணன் சம்புவராயர் காலத்தில் சில திருப்பணிகள் நடந்துள்ளன. வழிபாட்டுக்கு வேண்டிய பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர மன்னர்கள் காலத்தில் இங்கு வேங்கடபதி இராயருக்காக வழிபாடுகள் ஏற்பாடு செய்யப் பெற்றன. பத்து நாட்கள் திருவிழாக்கள் நடந்தன. இவற்றில் ஆழ்வாருக்குச் சிறப்பாகத் திருவிழா எடுக்கப்பெற்றது என்று அறிகிறோம். 19-ஆம் நூற்றாண்டில் பல பெருமக்களும் சேவை செய்துள்ளனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்கோயிலின் முன்னர் உள்ள கோபுரம் விஜயநகரக் காலத்தில் எழுப்பப் பெற்றிருக்க வேண்டும். அதில் அழகிய சில சிற்பங்களுள்ளன. அதற்கும் கிழக்கில் தனித்து மற்றும் ஒரு கோபுரம் எழுப்ப முயன்றிருக்கின்றனர். இக்கோபுரம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதையே ராயகோபுரம் என்பர். இதற்கும் கிழக்கில், ஊர்ச் சாலையின் மத்தியில் மிக உயர்ந்த ஊஞ்சல் மண்டபம் உள்ளதைக் காணலாம். இதற்கும் கிழக்கில் ஒரு மண்டபம் இருந்தது என்றும் அதில் அனுமனின் சிலையிருந்ததாகவும் அதை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று விட்டார் என்றும் ஒரு குறிப்பிலிருந்து அறிகிறோம். அதே குறிப்பு அனுமன் மண்டபத்துக்கும் கிழக்கில் மற்றுமொரு இடிந்த மண்டபம் இருந்ததாகவும் அதுவே பூதத்தாழ்வார் பிறந்த இடம் என்றும் குறிக்கிறது. இவற்றிலிருந்து சென்ற நூற்றாண்டு வரை தலசயனப் பெருமாள் கோயிலிலிருந்து நேரே கடற்கரைக்குச் செல்ல வழியிருந்தது என்று அறிகிறோம். தாய்மார் எழுவர் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து வடக்கே செல்லும் சாலையில் சிறிது சென்றால் ஓர் உயர்ந்த பீடத்தின் மீதமர்ந்து காணப்படும் தாய்மார் எழுவர் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் நடுவில் உயரமாக உள்ளது சாமுண்டியின் சிலையாகும். இச்சிற்பம் எழில் வாய்ந்தது. மற்றவை பல்லவர் காலத்தவையாகிலும், காலத்தில் சிறிது பிற்பட்டவை. கிழக்கு நோக்கியிருக்கும் இவை ஒரு உயர்ந்த மேட்டிலுள்ளன. ஊரின் வடபுறத்தே தாய்மார் எழுவருக்குக் கோயில் எடுப்பிக்க வேண்டும் என்று நம் வாஸ்து நூல்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் இங்கு தாய்மார் எழுவரின் கோயில் ஒன்று பல்லவர் காலத்தே இருந்திருக்க வேண்டும். கங்கனா மண்டபம் சாலையின் வடபுறத்தே தெற்கு நோக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. இதைக் கங்கனா மண்டபம் என்று அழைப்பர். இதன் உண்மைப் பெயர் கங்கை கொண்டான் மண்டபம் என்று இருந்திருக்க வேண்டும். அதுவே மருவி கங்கனா மண்டபம் ஆகியுள்ளது. தொண்டை மண்டலத்தில் பல இடங்களில் இதுபோன்ற மண்டபங்களைக் கங்கனா மண்டபம் என்று அழைப்பர். மாமல்லையில் உள்ள மண்டபத்தில் சில கல்வெட்டுப் பகுதிகள் உள்ளன. இம்மண்டபம் மிகவும் பிற்காலத்தது. பிள்ளையார் பிடாரி ரதங்கள் என்பவற்றின் அருகில், பாறையில் பிள்ளையாரின் உருவம் ஒன்று மேற்கு நோக்கியதாகச் செதுக்கப்பட்டுள்ளது. பிள்ளையாரைச் சுற்றிலும் விளக்கு வைப்பதற்காகப் பிறைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் எழில் மிக்க பிள்ளையார். பார்க்கவேண்டிய சிற்பம். சிம்மக்கட்டில் குன்றின்மேல் நடுவில் மேடை போல் ஒரு பாறை செதுக்கப்பட்டுள்ளது. இதில் தலையணை போல் சிம்மம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இதை சிம்மக்கட்டில் எனலாம். இது அமைந்து இருக்கும் சூழ்நிலை மனத்துக்கு இன்பத்தை அளிக்கவல்லது. பல்லவ மன்னன், மாமல்லையில் கலைச்செல்வங்களைத் தோற்றுவித்த போது அடிக்கடி தலைநகரான காஞ்சியிலிருந்து, தேவியர் சூழ இங்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரும்போது இக்கட்டிலில் அமர்ந்து உரையாடிருக்க வேண்டும் என்று எண்ணும்போது உள்ளம் பூரிக்கும். அதற்கு ஏற்ப இதன் அருகில் பல்லவ அரண்மனை ஒன்று இருந்ததாகக் கூறுவர். இங்கு பண்டைய கட்டடங்கள் இருந்த தடயங்கள் காணப்படுகின்றன. சாளுவன்குப்பம் புலிக்குகை மாமல்லபுரத்திலிருந்து சுமார் மூன்று கல் தொலைவு வடக்கில் சென்றால் சாளுவன் குப்பம் என்ற ஊருக்கு வரலாம். இது மாமல்லையிலிருந்து கோவளம் வழியாகச் சென்னைக்கு வரும் கடற்கரைச் சாலையில் உள்ளது. இச்சாலையிலிருந்து கடலை நோக்கிச் சென்றால் இரண்டு குகைகள் உள்ளன. ஒன்று புலிக்குகை என்று கூறப்படுவது. இங்கு புலி ஏதும் இல்லை. ஆதலின் தைரியமாகவே செல்லலாம். ஆனால் இதன் முன் நின்றவுடன் நம் நினைவையே இழந்து, ஏதோ மாயாஜாலம் செய்யும் பூமியிலே இனம் தெரியாத ஏதோ ஓர் இடத்தில் நிற்பது போன்ற பிரமிப்பு ஏற்படும். அல்ல அல்ல மயக்கமே ஏற்படும். பிரும்மாண்டமான யாளிகள் வாயைப் பிளந்து கொண்டு, உறுமிக்கொண்டு, மண்டலமிட்டு நம்மீது பாயவருவது போன்ற அமைப்பு. இதன் மத்தியில் ஒரு மண்டபம். மண்டபத்தின் உள்ளே பணி முடிவடையவில்லை. இது கொற்றவைக்கு ஏற்படுத்தப்பட்ட கோயில். இத்துடன் தென்புறம் உள்ள பாறைப் பகுதியில் இரண்டு யானைகள் முன்னோக்கி வருவது போன்ற சிற்பங்கள் உள்ளன. யானைகள் மேல் அம்பாரி பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றின் உள்ளே இரு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்கள் யாரைக் குறிக்கின்றன என்று தெரியவில்லை. அதற்கும் தெற்கில் குதிரை ஒன்றின் உருவமும் காணப்படுகிறது. யாளி குகையின் வடபுறம், அமர்ந்த சிங்கம் ஒன்றைச் செதுக்க முனைந்துள்ளனர். இங்குள்ள யாளிகளின் உருவைப் பார்த்துத்தான் இதை புலிக்குகை என்றனர் போலும். அதிரணசண்ட மண்டபம் இங்கிருந்து வடக்கு நோக்கி ஒரு பாதை உள்ளது. அதில் சென்றால் மற்றொரு குகைக் கோயிலைக் காணலாம். இதை அதிரணசண்ட மண்டபம் என்று குறிப்பர். பாறையைக் குடைந்து நீண்ட சதுர மண்டபம் போல் அமைத்துள்ளனர். மத்தியில் கருவறை. கருவறையின் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவம் உள்ளது. மத்தியில் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. மண்டபத்தின் இரண்டு சுவர்களின் நடுவிலும் சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வெளித் தூண்கள் எளிமையான அமைப்புடையவை. இம்மண்டபத்தின் வெளியே இருபுறமும் உள்ள பாறையின் பக்கச்சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. தென்புறம் கிரந்த எழுத்துக்களிலும், வடபுறம் நாகரி எழுத்துக்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. எழுத்துக்கள் இரண்டு வகையான போதிலும், இரண்டிலும் உள்ள செய்யுட்கள் ஒன்று தாம். இவை சமஸ்கிருதச் செய்யுட்களாக உள்ளன. “கைலாயத்தையும், மந்தரமலையையும் ஒக்கும் இக்கோயிலானது, அதிரணசண்டன் என்ற மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது. சிறந்த இக்கோயிலுக்கு அதிரணசண்டேச்சுரம் என்று பெயர். பக்திப் பெருக்கினாலும்; சிவபெருமானைப் போற்ற வேண்டும் என்ற அவாவினாலும், உலகின் நன்மைக்காகவும் இக்கோயிலை மன்னன் தோற்றுவித்தான். அம்மன்னன் அத்யந்தகாமன் என்ற பெயருடையவன். இசையில் வல்லுநனாகிய அவன் தோற்றுவித்த இக்கோயிலில் சிவபிரான், உமையோடும் குகனோடும் எப்பொழுதும் தங்கி இருக்கட்டும்” என்று அச் செய்யுட்கள் குறிக்கின்றன. [கல்வெட்டுகள் என்ற பகுதியைக் காண்க]. இக்கோயிலின் முன்னர் தரையாகச் செதுக்கப்பட்ட பாறையில், முதல் இராஜராஜ சோழனுடைய கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.அதில் அதிரணசண்டேச்சுரத்து மகாதேவர் கோயிலுக்கு நொந்தா விளக்கு எரிக்க 90 சாவா மூவாப் பேராடுகள் தானம் அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இராஜராஜன் காலத்தில் இக்கோயில் வழிபாட்டிலிருந்தது என்பது புலனாகும். இக்கல்வெட்டில் இவ்வூர் ஆமூர் கோட்டத்து, ஆமூர் நாட்டு, திருவிழிச்சில் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே திருவிழிச்சில் என்ற பெயர்தான் இவ்வூரின் பழமையான பெயராக இருக்க வேண்டும். பிற்காலத்தில்தான் இது சாளுவன்குப்பமாக மாறியிருக்க வேண்டும். இக்கோயிலுக்கு முன்னர் தென்புறத்தில் படிபோல் இருக்கும் பாறையின் பக்கச்சுவரில் கொற்றவை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. தேவி வலது காலைத் தாமரை மலர் மேல் ஊன்றி, இடது காலை சிம்மத்தின் மீதமர்த்தி, வில் பிடித்துப் போரிடுகிறாள். ஆறு திருக்கரங்கள். அவளின் பின் கணங்களும் போர்க் கோலம் பூண்டு விளங்குகின்றன. எதிரே எருமைத்தலை அரசன், எதிர்த்து நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடுகிறான். இச்சிற்பம் எழில் வாய்ந்த காட்சியாகும். இக்கோயிலுக்குச் சற்று வடப்புறத்தில் ஒரு குடிசை உள்ளது. அங்கு உள்ளே தாய்மார் எழுவருடைய சிற்பங்கள் இருக்கின்றன. அவையும் பல்லவர் காலச் சிற்பங்கள்தாம். இக்கோயிலுக்கு வடக்கே சற்றுத் தொலைவில், ஒரு பாறையில் கி.பி.8-ஆம் நூற்றாண்டு எழுத்துக்களில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதிரணசண்டேச்சுரர் கோயிலுக்கும் நூறு கெஜம் வடக்கில் ஒரு பாறையில் சோழர் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அது மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடைய 37-ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும். மூன்றாம் குலோத்துங்கனுடைய திரிபுவன வீரதேவன் என்ற பட்டம் அதில் உள்ளது. அவனுடைய காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட சோழமண்டலத்து, ஆமூர்க் கோட்டத்துப் தேவதானப் பிரும்மதேயம் திருவிழிச்சிலூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சுப்ரமண்யர் கோயிலிருந்தது என்று அறிகிறோம். அக்கோயிலைச் சேர்ந்த சிலர் கோயிலில் வழிபட்டுவரும் ஆண்டார் கருப்பூருடையார் நம்பி அற்புதக்கூத்தர் என்பவர்க்கு 300 புதுக்காசிகளுக்கு நிலம் விற்றுக் குடுத்த செய்தியைக் கல்வெட்டு குறிக்கிறது. பூஞ்சேரி மாமல்லையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில், ஒன்றரைக் கல்தொலைவில் சாலையின் தென்புறத்தே சிறு பாறைகளைக் காணலாம். இவற்றில் ஒன்று தொட்டி போல் இருக்கும். இதை ‘நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி’ என்பர். இதன் விளிம்பில் பல்லவர் எழுத்துக்களில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கேவாத பெருந்தச்சன், சாதமுக்கியன், குணமல்லன், திருவொற்றியூர் ஆபாஜன் என்ற பெயர்கள் உள்ளன. இவற்றில் கேவாத பெருந்தச்சன் என்ற பெயர் மிகவும் சிறந்தது. தச்சன் என்பது சிற்பிகளைக் குறிக்கும். அக்காலத்தில் சிறந்த சிற்பிகளைப் பெருந்தச்சர் என்று அழைப்பது வழக்கம். எனவே இங்கு காணப்படும் பெயர்கள் மாமல்லபுரத்தில் பணி புரிந்த சிறந்த சிற்பிகளின் பெயர்களாக இருக்கக் கூடும். கலை வரலாறு மாமல்லபுரத்தில் தோன்றிய கலை எவ்வாறு உருவாகியது? கட்டடக்கலையிலும், சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும் தொன்று தொட்டே தமிழகம் சிறந்து விளங்கியது என்று நம் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். பூம்புகார், மதுரை முதலிய சிறந்த நகர்களின் அமைப்பிலிருந்து ஊர்களும் நகரங்களும், திட்டமிட்டு அமைக்கப்பட்டன என்று அறிகிறோம். சிறந்த அரண்களையும், மாளிகைகளையும் எழுப்பும் திறன் பெற்றவர்கள் தமிழகத்தில் இருந்தனர்.மன்னனுக்கு ஏற்ற மாளிகை அமைத்தனர் என்பதை நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு தேஎங் கண்டு தெய்வம் நோக்கி, பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து என்ற நெடுநல்வாடை அடிகளால் உணரலாம். சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளாம் கண்ணகிக்கு எழுப்பிய கோயிலைச் சிறந்த கட்டடவல்லுநர் தோற்றுவித்தனர். மேலோர் விழையும் நூனெறி மக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். அவ்வாறு தோற்றுவிக்கும் கட்டடங்கள் உரிய அளவிற்கு எழுப்பப்பட்டன என்றும் தெரிகிறது.சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கம் அமைத்தலைக் கூறுமிடத்து, அளவுகோலும் அரங்கத்தின் ஒவ்வொரு பகுதியின் அளவுகளும் குறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு எழுப்பிய கட்டடங்களைச் சிறந்த சிற்பங்களும் ஓவியங்களும் அலங்கரித்தன. சங்க காலத்தில் சுதையினாலான உருவங்கள் ஏராளமாகச் செய்யப்பட்டன. இவ்வுருவங்கள் செய்வாரை “மண்ணீட்டாளர்” என்றழைப்பர். மண்ணீட்டாளர்கள் தமிழகத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டனர்.பூம்புகார், மதுரை முதலிய நகர்களில் மண்ணீட்டாளர்கள் சிறப்புற்றிருந்தனர் என்ற சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலிருந்து அறிகிறோம். அவர்கள் கோயிற் சுவர்களையும், மாளிகைகளையும் மண்ணீட்டாலான பாவைகளைக் கொண்டு அலங்கரித்தனர். இன்று கோபுரங்களை அலங்கரிப்பது போன்று, அன்று கோயிற் சுவர்களையும் மண்ணீட்டாலான பாவைகள் அலங்கரித்தன. தமிழகத்தில் தந்தத்தில் வேலை செய்யும் சிற்பிகள் சிறந்து இருந்தனரென்று நெடுநல்வாடையில் இருந்து அறியலாம். அரசி படுத்திருந்த கட்டில் பல போர்களில் வெற்றி கண்ட முதிர்ந்த யானையின் தந்தத்திலிருந்து செய்யப்பட்டதென்றும், அதில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன என்றும் அறிகிறோம். அதே போன்று சிறந்த தேர்களைச் செய்யவல்ல தச்சர்களும் இருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஒரே பகலில் எட்டுத் தேர்களைச் செய்யவல்ல தச்சர் தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தனர்.ஆதலின் தமிழகத்தில் சிற்பக்கலையும் கட்டடக் கலையும் மிகவும் சிறந்திருந்தது. தமிழகத்திலேயே தோன்றி வளர்ந்த கட்டடக் கலை இந்தியாவின் வடபகுதியில் வளர்ந்த கலைகளுடனும், கிரேக்க நாட்டுக் கலையுடனும் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் இன்னும் வளப்பமடைந்தது. அன்றைய உலகில், கட்டடக் கலையிலும், சிற்பக் கலையிலும் மகோன்னத நிலையை கிரேக்கர்கள் பெற்றிருந்தனர். அந்நாட்டுடன் தமிழகத்திற்கு தரை மூலமாகவும், கடல் மூலமாகவும் வாணிகத் தொடர்பிருந்தது. மாவீரன் அலெக்சாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு, பல கிரேக்கர்கள், இந்தியாவில் தங்கி இந்தியப் பண்பைப் பின்பற்றி இந்திய மக்களாக மாறிவிட்டனர். மௌளரியப் பேரரசன் பல கிரேக்கச் சிற்பிகளைக் கலைப்பணி புரிய பணித்தான். சகர், குஷாணர் முதலியோர் போற்றிய கலை கிரேக்கக் கலையே.அக்காலத்தில் வட இந்தியாவெங்கிலும் ஏராளமான பௌளத்த ஸ்தூபங்கள் எழுப்பப் பெற்றன. ஆந்திர தேசத்தில் அமராவதி, நாகார்ஜீனகொண்டா முதலிய இடங்களில், சிறந்த ஸ்தூபங்கள் தோன்றின. அங்கெல்லாம் கிரேக்கக் கலைஞர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.இவர்களையே நம் இலக்கியங்கள் யவனர்கள் எனக் குறிக்கும். யவனர்களுடைய சிற்பத்திறனைத் தமிழகமும் போற்றியது என்று நம் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். ‘யவனர் தந்த வினைமாண் பாவை’ என்று சங்க இலக்கியம் குறிக்கிறது. சோழ மன்னனாகிய கிள்ளிவளவன் தான் வீற்றிருக்க ஒரு சிறந்த மண்டபத்தை அமைத்தான் என்றும் அதை அலங்கரிக்க யவனத் தச்சர்களை நியமித்தான் என்றும் மணிமேகலை குறிக்கிறது. பல்லவர் காலத்தில் மாமல்லபுரத்தில் லலிதாலயன் என்ற சிற்பி பணிபுரிந்தான் என்றும் அவன் யவனர்களைக் காட்டிலும் சிற்பத் தொழிலில் சிறந்தவன் என்றும் குறிக்கப்படுகிறான் என்று கண்டோ ம். அதிலிருந்து யவனச் சிற்பிகள் தமிழகத்தில் எவ்வளவு சிறப்பாகக் கருதப்பட்டனர் என்று அறியலாம். யவனச் சிற்பங்களின் கலைப்பண்புகள், தமிழகக் கலைக்கு வளப்பத்தை ஊட்டியிருக்கின்றன. தமிழகச் சிற்பிகள் பலர் இந்தியாவின் வடபகுதிக்குச் சென்று அங்கு தமிழகக் கலை முறையை விட்டுச் சென்றிருக்கின்றனர் என்று திபெத்திய நூல்கள் குறிக்கின்றன. அதே வடநாட்டிலிருந்து பல சிறந்த சிற்பிகள் தமிழகத்திற்கும் வந்திருக்கின்றனர். முக்கியமாக அன்று சிறப்புற்றிருந்த மகதநாடு, அவந்திநாடு, மகாராட்டிர நாடு, முதலிய நாடுகளிலிருந்து இவர்கள் வந்தனர். மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டினி தியற்றிய பசும் பொன் மண்டபம் என்று மணிமேகலை குறிக்கிறது. இவ்வாறு வளர்ந்த தமிழகக் கலையே மலர்ந்து பல்லவர் கலையாக மாறியது எனலாம். கி.பி.600-ல் பல்லவர் அரியணை ஏறிய மகேந்திரவர்மன், கலையில் ஒப்பற்ற ஆர்வம் கொண்டவன். பல குகைக் கோயிகளைப் பல இடங்களில் தோற்றுவித்துள்ளான். அவனுக்கு மகாசேத்தாகாரி, விசித்திரசித்தன், சித்திரகாரபுலி என்ற பெயர்கள் உள்ளன. இவனுக்கும் முன்னர் கல், செங்கல், மரம், உலோகம், சுதை முதலிய அனைத்தையும் கொண்டு கோயில்கள் எழுப்பப்பெற்றன.மகேந்திரன் கல் ஒன்றை மட்டும் கொண்டு கோயில் எழுப்பவும் வழி வகுத்தான். மண்டகப்பட்டு என்ற இடத்தில் தான் தோற்றுவித்த குடைவரைக் கோயிலில் ஒரு கல்வெட்டைப் பொறித்துள்ளான். அதில், சுதையின்றி, செங்கல்லின்றி, மரமின்றி, உலோகமின்றி, இக்கோயிலைத் தோற்றுவித்துள்ளேன் என்று குறிக்கிறான். அவன் காலத்தில் கோயிற் சுவர்களின் புறங்களைச் சுதைகளாலான உருவங்கள் அலங்கரித்தன. அவனுக்குப் பிறகு பல்லவ மன்னன் இராஜசிம்மனே பெருமளவில் கற்கோயில்களை எழுப்பினான். இரஜசிம்மன் காலத்தில் கற்களைச் சுவர்களாக எழுப்பி, பிறகு சுதையினால் சிற்பங்களைச் செய்தால் எவ்வாறு இருக்குமோ அதேபோன்று சுவர்களிலேயே சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். மண்ணீட்டாளர் கலை, கல்லில் மாறியது. ஆதலின் பல்லவர்களுடைய கட்டடங்கள் எல்லாம் சிறந்த சிற்பங்களாகவே திகழ்கின்றன. அக்காலத்தில் கட்டடம் முழுவதையும் சிற்பமாக உருவகப்படுத்தி, சிற்பத்திற்கு முதலிடம் கொடுத்தனர். இக்கலை இருநூறு ஆண்டுகளில் சோழர் காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்தது. சிற்பங்கள் தனியாகச் செதுக்கப்பட்டுக் கட்டடத்தின் அங்கங்களாகப் பொருத்தப்பட்டன. சோழர் காலத்தில் கட்டடக்கலை சிறந்திருந்தது. பல்லவர்களின் கோயில்களைப் பார்க்கும்போது, சிற்பங்களே சிறந்து நம் முன்னே நிற்கும். சோழர்களின் கோயில்களில், கட்டடங்களின் பெரும் அமைப்பே நம்மை வியப்பில் ஆழ்த்தும். சிற்பத்தில் சிறந்தவர் பல்லவர் என்றும் கட்டடத்தில் சிறந்தவர் சோழர் என்றும் சொல்லலாம். சிற்பங்களில் சிறந்த மாமல்லைக் கோயில்கள், அன்று செங்கல்லாலும், மரத்தாலும் கட்டப்பட்டிருந்த கோயில்களின் பிரதிகளாகத் திகழ்கின்றன. அன்று மரத்தாலும், செங்கல்லாலும் கட்டப்பட்டு இருந்த கோயில்கள், இன்று மறைந்து போயின. ஆயினும் அவை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்று மாமல்லபுரக் கோயில்களிலிருந்து அறியலாம். தமிழகத்தில் தொன்று தொட்டு பல அமைப்புகளில் கோயில்கள் கட்டப்பட்டன என்பதற்கு அப்பர் பெருமானின் பாடல் சான்று கூறுகிறது. ‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோ டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ்ஞாழற் கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் இ ருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்து மிளங்கோயில் மணிக்கோயி லாலக் கோயில் திருக்கோயில் சிவனுரையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந் திறைஞ்சத் தீவினைகடீ ருமன்றே.’ பல அமைப்புகளில் இது காறும் எஞ்சிய தமிழ்க் கோயில்களில் மிகவும் தொன்மையானவை மாமல்லையிலேயே உள்ளன. தமிழகக் கட்டடக் கலையின், சிற்பக்கலையின் வரலாற்றை அறிய மாமல்லையே பெரிதும் உதவும். அன்று விளங்கிய கோயில்களின் பிரதிகளாக விளங்குவதல்லாமல், புதிய புதிய அமைப்புகளையும் ஆங்காங்கே மாமல்லையில் புகுத்தியுள்ளதைக் காணலாம். ஒன்று போல் ஒன்றில்லாமல், ஒன்றைக் காட்டிலும் வேறு புதிய அமைப்புடையதாக மற்றதைப் படைத்து, மாமல்லபுரத்தைக் கலை உலகாக அமைத்துள்ளான் மன்னன். குகையாகட்டும், கோயிலாகட்டும், சிற்பமாகட்டும்,ஒன்று போல் ஒன்றில்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு புதுமையைக் காண்பதாலேயே, மாமல்லபுரத்துக் கலைகள் என்றென்றும் மக்கள் மனத்தில் அழியா இடம் பெறுகின்றன. உருவ அமைதி மாமல்லபுரத்தில் தெய்வங்களின் உருவங்கள் பல்லவர் காலத்தில் பல நிலைகளில் காட்டப்பட்டுள்ளன. தெய்வ உருவங்களை அமைக்க தொன்று தொட்டே தமிழகத்தில் பல நூல்கள் இருந்தன. கட்டட அமைப்புகளைப் பற்றிக் குறிக்கும் நூல்களுக்கு மனைநூல்கள் அல்லது வாஸ்து நூல்கள் என்றும், சிற்பங்களை மட்டும் குறிக்கும் நூல்களுக்குச் சிற்பநூல்கள் என்றும் பெயர். சிற்ப நூல்களில் ஒவ்வொரு உருவத்தையும் எப்படி அமைக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. இவை செய்யுள் வடிவில் உள்ளன. இச்செய்யுட்களைச் சிற்பிகள் மனத்தகத்தே நிறுத்தி அதற்கேற்ப சிற்பங்களைச் செதுக்குவர். மயன் என்ற தச்சன் இயற்றிய மயமதம், அகத்தியர் இயற்றிய சகளாதிகாரம், காச்யபம், சாரஸ்வதம், பிராம்மீயம், விச்வகர்மீயம் முதலிய நூல்கள் நம் நாட்டில் சிறப்பாக வழக்கிலிருக்கின்றன. இவற்றில் மயமதம் என்ற நூல் தொன்று தொட்டே தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கிறது. "மயன் விதித்தன்ன மரபின விவைதாம்’ என்று நம் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. இச்சிற்ப நூல்களில் உள்ள முறைகளை நம் சிற்பிகள் பின்பற்றி வந்துள்ளனர். ஆயினும் சிற்ப நூல்களில் இப்போது உள்ள செய்யுட்களுக்கும், மாமல்லபுரத்தில் உள்ள தெய்வீக உருவங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இங்கு பணிபுரிந்த சிற்பிகள், சிற்ப நூல்களில் குறிக்கப்பட்டுள்ள அளவு முதலிய அம்சங்களைத் துணையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆயினும் தெய்வீக உருவங்கள் அமைய அடிப்படையாக இருந்த கதைகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் சிற்பங்களை வடித்துள்ளனர். ஆதலின் மாமல்லை சிற்பங்கள் கதைகளுக்கு ஏற்ப பல நிலைகளில் படைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கொற்றவை, மகிஷாசுரனை அழித்தது பல நிலைகளில் காட்டப்பட்டுள்ளது. இதே போன்று பல உருவங்களையும் காணலாம். ஆதலின் இங்குள்ள உருவங்கள் உயிர்த்துடிப்பு உள்ளவையாக மிளிர்வதைக் காண்கிறோம். ஆனால் பிற்காலத்தில் சிற்ப நூல்களில் உள்ள உருவ விதிகளை எவ்விதத்திலும் மீறாது தெய்வ உருவங்களைச் சிருஷ்டித்தனர். ஆதலின் கதைக்கோ, கற்பனைக்கோ இங்கு இடமில்லாமல், ஒன்று போலவே உருவங்கள் படைக்கப்பட்டன. ஒன்றுபோல் இருந்தால்தான் வழிபாட்டுக்கு உகந்தது என்று பிற்காலத்தார் கருதியது இதற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காணும் போது அதன் அடிப்படைக் கதையே நமக்கு நினைவுக்கு வரும். ஒரே கதை, பல நிலைகளில் காட்டப்படுவதால் தான் கற்ற கலையைப் பரிபூரணமாக உருவாக்கச் சிற்பிக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.ஆதலின் கலை உன்னத நிலையைப் பெறுகிறது. மாமல்லபுரத்தில் ஒன்று போல் ஒன்று இல்லாமல், ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு புதுமை உள்ளதைக் காண்கிறோம். அதனாலேயே மாமல்லபுரக் கலை நித்யத்வம் உடையதாக என்றென்றும் புதுமையாகக் காட்சி தருகிறது. மாமல்லையில் தெய்வீக உருவங்களில் சிவபெருமான், திருமால், கொற்றவை, திருமகள், நான்முகன், முருகன், மற்றும் ஏனைய தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிவபெருமானின் உருவங்களாக விளங்குகின்றன. சிவமூர்த்தங்கள் 1 சோமாஸ்கந்தர் உள்ள இடங்கள் 1. தர்மராஜ இரதம் 2. மகிஷாசுரமர்த்தினி குகை 3. முகலிப்பாமுடையார் கோயில் 4. கடற்கரைக் கோயில் 5. அதிரணசண்டேச்வரர் கோயில் அம்மையும் அப்பனும் அரியணையில் அமர்ந்திருக்க, அன்னையின் தொடைமீதமர்ந்து விளையாடும் குழவியாக முருகப்பெருமான் உள்ள உருவையே சோமாஸ்கந்த உருவம் என்பர். மாமல்லபுரத்தில் கருவறையின் உள்ளே பின்புறச் சுவரில் இது பெரும்பாலும் காணப்படுகிறது. கருவறையில் இலிங்கத்தின் பின்னர் இது போன்ற சோமாஸ்கந்த உருவை இராஜசிம்மன் என்ற மன்னன் வைத்துள்ளான். இவனுக்கு முன்னர் உள்ள கோயில்களில், உதாரணமாக மகேந்திர வர்மனின் கோயில்களில் இவ்வுருவம் இல்லை இவனுக்குப் பின் வந்த பல்லவர் கோயில்களில் இவ்வுருவம் காணப்படுகிறது. பின்னர் சோழர் காலத்திலோ மற்றய மன்னர்களின் காலத்திலோ எழுப்பப் பெற்ற கோயில்களில் இவ்வுருவம் இல்லை. இராஜசிம்மன் கருவறையில் இலிங்கத்தின் பின்னர் இவ்வுருவை வைக்க வேண்டிய காரணம் என்ன? இதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்று கருதலாம். இராஜசிம்மனுடைய தந்தையின் பெயர் பரமேச்வர வர்மன். இராஜசிம்மன் தன்னைப் பரமேச்வரனின் மைந்தன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைந்தான். அவ்வாறு கூறும் போது, ஈச்சுரருடைய குமாரனாக எவ்வாறு குகன்[முருகன்] சுப்பிரமணியாக அவதரித்தாரோ அவ்வாறு பரமேச்சுரனின் குமாரனாக, சுப்பிரமண்யாக [நல்ல பிரம்மண்யத்தை யுடையவனாக] இவன் அவதரித்தான் என்று சிலேடையாகக் கூறிக்கொண்டான்.’ சுப்ரமண்ய: குமாரோ குக இவ பரமாதீச்வராத் ஆத்த ஜன்மா’. காஞ்சியில் உள்ள கல்வெட்டில் இது காணப்படுகிறது. எனவே பரமேச்சுரனின் குழவியாகக் குகனைக் காண்பிப்பதில் சிறந்த ஆர்வம் அவன் காட்டினான். ஆனால் இராஜசிம்மன் கருவறையில் சோமாஸ்கந்த உருவைக் காட்டியதற்கு இதைவிட ஆழ்ந்த கருத்து இருந்திருக்கக் கூடும். இராஜசிம்மன் சிறந்த சிவபக்தன். எப்பொழுதும் சிவனுடைய அடிகளை மறவாத சிந்தையன். சைவசித்தாந்த மரபுகள் அனைத்தையும் கற்று, அதனால் தன்னுடைய அழுக்காறுகள் நீக்கப்பட்டவன் என்று கல்வெட்டில் அவன் குறிக்கப் பெறுகிறான்.இப்பெருமகன் அம்மை அப்பனாக தன் தெய்வத்தைக் காண்கிறான். இயற்கைச் சக்தியாகிய அன்னையுடன், அப்பனைக் காணும்போது அறிவு உதிக்கிறது. அறிவின் மூர்த்தி ஞானமூர்த்திதான் முருகன், குகன். அறிவு இயற்கையின் அடியில் தவழ்ந்து விளையாடும் போது அது தெய்வீகக் காட்சியாகக் கலைஞனின் மனதில் உதிக்கிறது.அதன் உருவகமே சோமாஸ்கந்த மூர்த்தி. இதைத்தான் கருவறையின் நடுவில் உள்ள இலிங்கமூர்த்தியும் உணர்த்துகிறது. இரண்டையும் ஒரே இடத்தில் நாம் காணும் போது கிட்டுகிறது. இதே தான் பிற்காலத்தில் தேவாலயங்களில் இலிங்கமாகக் கருவறையிலும், சோமாஸ்கந்தராக, செம்பு உருவில் வீதி உலாவரும் மூர்த்தியாகவும் காண்கிறோம். சிவபெருமானிடத்தில் அம்மையப்பனாகக் கொண்ட ஈடுபாட்டினாலேயே இராஜசிம்மன் இவ்வுருவைக் கருவறையில் வைத்திருக்கக் கூடும். மாமல்லையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவம். தர்மராஜ இரதம், கடற்கரைக் கோயில், மகிஷாசுரமர்த்தினி குகை, முகலிப்பாமுடையார் கோயில், சாளுவன் குப்பத்தில் உள்ள அதிரணசண்டேச்சுரர் கோயில் முதலியவற்றில் உள்ளன. சோமாஸ்கந்தமூர்த்தி உருவில் சிவபெருமானின் பின்புறம் எப்போதும் நான்முகனும், திருமாலும் போற்றும் நிலையில் காண்பிக்கப்பட்டுள்ளனர். மாமல்லையில் உள்ள சோமாஸ்கந்த உருவங்களில் மிகவும் பெரியது மகிஷாசுரமர்த்தினி குகையில் இருக்கிறது. கடற்கரைக் கோயிலில் மேற்கு நோக்கிய சிறிய சிவன் கோயிலில் உள்ளது மிகவும் எழில் வாய்ந்தது. சோமாஸ்கந்தமூர்த்தி கருவறையைத் தவிர வெளியிலே எங்கும் காணப்படவில்லை. 2. சந்திரசேகரமூர்த்தி: உள்ள இடங்கள். 1. மும்மூர்த்தி குகை 2. தர்மராஜ இரதம். மும்மூர்த்தி குகையில் நடுவில் உள்ள கருவறையில், உள்ளே பின்புறச் சுவரில், இவ்வுருவம் காணப்படுகிறது. தர்மராஜ இரதத்திலும் இவ்வுருவமுள்ளது. 3. தக்ஷிணாமூர்த்தி: உள்ள இடங்கள். 1. தர்மராஜ இரதம். 2. கடற்கரைக் கோயில். 3. ஒழக்கெண்ணை ஈச்சுரர் கோயில். மேலிரு கைகளில் அக்கமாலையும், அமிருத கலசமும் கொண்டு கீழிடது கையைத் தியானத்தில் அமர்த்தி, வலது கரத்தால் அபயமளித்து விளங்கும் இவ்வுருவம் பல்லவர் கோயில்களில் வடபுறச் சுவரில் காணப்படுகிறது. தென்புறச் சுவரில் யோக தக்ஷிணாமூர்த்தியையும், வடபுறத்தில் இவ்வுருவையும், பின்புறத்தில் இலிங்கபுராண தேவரையும் காண்பித்தல் பல்லவர் கால மரபு. இவ்வுருவை மேதாதக்ஷிணாமூர்த்தி என்பர். பல்லவர் காலத்தில் கருவறையின் மூன்று பக்கங்களின் நடுவிலும் சிவபெருமானின் உருவங்களே காண்பிக்கப்பட்டன. பிற்காலக் கோயில்களில் வடபுறம் நான்முகனும், பின்புறம் திருமால் அல்லது இலிங்கோத்பவரும், தென்புறம் தக்ஷிணாமூர்த்தியும் பெரும்பாலும் காண்பிக்கப்படுகின்றன. கடற்கரைக் கோயிலில் பலி பீடங்களின் தெற்கே சதுரமான ஒரு தூணின் பகுதி காணப்படுகிறது. அதன் நான்கு புறங்களிலும் சிற்பங்களூள்ளன. இதைக் கொடிக் கம்பத்தின் பகுதி என்று கருதுகின்றனர். அதில் ஒரு புறத்தில் இவ்வுருவத்தைக் காணலாம். கடற்கரைக் கோயிலின் வாயிலின் தென்புறத்திலும் இது காணப்படுகிறது. 4. யோகதக்ஷிணாமூர்த்தி: உள்ள இடம். 1. ஒழக்கெண்ணை ஈச்சுரர் கோயில். மரத்தினடியில் யோக நிலையில் அமர்ந்து யோகப் பட்டம் தரித்து எழிலாக அமர்ந்திருக்கும் உருவம். பல்லவர் காலக் கோயில்களில் தென்புறச் சுவரில் காணப்படுவது. " காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம் கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழ் அறம் பகர ஏகஞ் செய்தவர்………….." என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அடிகளை நினைவிற்கொண்டு இச்சிற்பத்தைக் காணல் வேண்டும். இச்சிற்பத்தையே குறிக்கும் தியானச் செய்யுளாக அது விளங்குவதைக் காணலாம். கின்னரர்களும் உழுவையும், பாம்பும், சிங்கமும், மாதவர் குழுவும் சூழ ஆல நிழலில் இப்பெருமான் அமர்ந்து உள்ளது நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும். 5. இராவணானுக்ரஹ மூர்த்தி: உள்ள இடம். 1. ஒழக்கெண்ணை ஈச்சுரர் கோயில். 6. அர்த்தநாரீச்சுரர்: உள்ள இடங்கள். 1. கடற்கரைக் கோயில். 2. தர்மராஜ இரதம். தர்மராஜ இரதத்தில் காணப்படுவது பொது நிலை, கடற்கரையின் கொடிக் கம்பப் பகுதியில் காணப்படுவது மிகவும் எழில் வாய்ந்த மூர்த்தி. கையில் வீணை தரித்து இவர் அமர்ந்திருக்கும் நிலையே மனத்தைக் கவரும். 7. பைரவர்: உள்ள இடம். 1. தர்மராஜ இரதம். 8. திரிபுராந்தகர்: உள்ள இடம். 1. கடற்கரைக் கோயில். இங்கு முப்புரம் எரித்த மூர்த்தி இரண்டு விதமாகக் காண்பிக்கப்பட்டுள்ளார். பலி பீடத்தின் அருகில் உள்ள கொடித் தூண் பகுதியில் ஒரு புறம் இவ்வுருவம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.நான்கு திருக்கரங்கள். கீழ்க் கரத்தை நீண்ட காம்பை உடைய மழுவில் அமர்த்தி, மற்றொரு கரத்தில் ஒரு வில்லைப் பிடித்திருக்கிறார். வலது கரங்களில் ஒன்று சூலப்படையைப் பிடித்தும், அடுத்தது அம்பைப் பிடித்தும் காண்கிறோம். இதைக் காணும் போது, “நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்தமரர் குறைந்திரப்ப நிறைந்தருளி யவர்க்காய் வெற்பார் வில்அரவு நாண் எரிஅம்பால் விரவார் புரமூன்றும் எரிவித்த விகிர்தன்” என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிகள் நினைவிற்கு வரும்.கடற்கரைக் கோயிலின் கிழக்கு நோக்கிய பெரிய சிவன் கோயில் வடபாற் சுவரில் முப்புரம் எரித்த முழு வேகத்தையும் ஒரு சிற்பத்தில் காணலாம். தேர் மீதேறி விற்பிடித்து வீரச் சமர்புரியும் தோற்றமாக அது விளங்குகிறது. 9. தாண்டவமூர்த்தி: உள்ள இடம். 1. தர்மராஜ இரதம். தண்டு என்ற முனிவர்க்கு ஆடல் போதிக்கும் ஆசானாகக் காட்சியளிக்கும் உருவம் இது. காணற்கரிய சிற்பம். 10. நந்தீசானுக்ரஹமூர்த்தி: உள்ள இடம். 1. தர்மராஜ இரதம். நந்தியெம்பொருமான் கைகட்டி நிற்க அவர் தோள் மீது தன் கரத்தை அமர்த்தி அருள்பாலிக்கும் இச்சிற்பமும் காணற்கரிய சிற்பமே. 11. விருஷபாந்திகமூர்த்தி: உள்ள இடம். 1. அர்ஜுன இரதம். பெருமானின் பின்புறத்தில் காளை நிற்க அதன்மீது ஆனந்தமாகச் சாய்ந்து நிற்கும் உரு. 12. சண்டேசாந்திகர்: உள்ள இடம். 1. தர்மராஜ இரதம். சண்டீசர் அருகில் நிற்க அவரைக் கையில் அணைத்து நிற்கும் உருவம். பிற்காலத்தில் சண்டேச்சுரரின் முடியில் மலர் மாலை சூட்டி அருள் பாலிக்கும் சண்டேசானுக்ரஹ மூர்த்தியின் உருவம் சிறப்படைந்தது. பல்லவர் காலத்தில் பெருமான் சண்டேச்சுரரைத் தன் தோளோடு அணைத்து அன்பு வெள்ளத்தைக் காட்டுவதாகக் திகழ்கிறது. 13. கங்காதரமூர்த்தி: உள்ள இடங்கள். 1. தர்மராஜ இரதம். 2. ஆதிவராஹக் குகை. 14. ஹரிஹரமூர்த்தி: உள்ள இடங்கள். 1. தர்மராஜ இரதம். 2. ஆதிவராஹக் குகை. 14. பாசுபதமூர்த்தி: உள்ள இடம். 1. அர்ஜுனன் தவம். 15. ஏகபாத திரிமூர்த்தி: உள்ள இடம். 1. கடற்கரைக் கோயில். விஷ்ணுமூர்த்தங்கள் மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் தோற்றுவித்தவன் இராஜசிம்மன் என்றும் அவன் சிறந்த சிவபக்தன் என்றும் கண்டோ ம். ஆயினும் மற்ற தெய்வங்களிடத்தும் சிறந்த பக்தி பூண்டவன் என்று அவன் செப்பேடுகளிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறியலாம். அவனளித்த ரேயூரு செப்பேட்டில் தன்னை பரமபாகவதன் என்று கூறிக்கொள்கிறான். பரம பாகவதன் எனில் பரம வைணவன், திருமாலிடம் சிறந்த பக்தி பூண்டவன் என்று கண்டோ ம். ஆதலின் திருமாலின் உருவங்கள் பல மாமல்லபுரத்தில் உள்ளதைக் காணலாம். அவற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று விஷ்ணு, திருமாலாகவே அருள் புரிந்த சில நிலைகள். மற்றது அவரது அவதார உருவங்கள். 1. அனந்தசாயி: உள்ள இடங்கள் 1. கடற்கரைக் கோயில் 2. மகிஷாசுரமர்த்தினி குகை கடற்கரைக் கோயிலில் திருமால் அரவணை மீது உறங்குகிறார். மற்ற எந்த உருவமும் அருகில் இப்போது இல்லை. கோயில் முழுமையும் இருந்தபோது மற்ற உருவங்கள் பின்புறச் சுவரில் இருந்திருக்கக் கூடும். இவ்வுருவை காணுந்தோறும், “சங்கு தங்கு தடங்கடல் கடல் மல்லையுள் கிடந்தாய்” “வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய்” “மன்னும் கடல் மல்லை மாயவனை” என்ற திருமங்கை மன்னனின் பாசுர அடிகள் நினைவிற்கு வராமல் போகாது. மகிஷாசுரமர்த்தினி குடைவரைக் கோயிலிலுள்ள உலகப் புகழ்வாய்ந்த அரவணை துயின்ற அம்மானைக் காணும்போது, “கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே” என்ற திருமங்கையாழ்வாரின் அடிகள் நினைவை விட்டகலாது. 2. திருமால்: உள்ள இடங்கள் 1. மும்மூர்த்தி குகை 2. ஆதிவராஹக் குகை 3. அர்ச்சுனன் தவம் மும்மூர்த்தி குகையில் ஒரு கருவறையின் உள்ளே சுவரின் பின்புறத்தே இவ்வுருவம் உள்ளது. அர்ஜுனன் தவத்தில் ஒரு சிறிய கோயிலின் உள்ளேயும், இதைக் காண்கிறோம். 3. கஜேந்திர அனுக்ரஹமூர்த்தி: உள்ள இடம் 1. கடற்கரைக் கோயில் இச்சிற்பம் பெரும்பாலும் உதிர்ந்து போய்விட்டது. கருடன் மீதமர்ந்த பகுதியே இப்போது இங்கு கண்ணில் படும். 4. கருடாந்திகர்: உள்ள இடங்கள் 1. தர்மராஜ இரதம் 2. அர்ஜுனன் இரதம் 5. ஹரிஹரன்: உள்ள இடங்கள். 1. ஆதிவராஹக் குகை 2. தர்மராஜ இரதம் ஆதிவராஹக் குகை விஷ்ணுவுக்கு ஏற்பட்ட கோயில். அதில் அரியரனின் சிற்பம் உள்ளது. அதே போன்று அத்யந்தகாம பல்லவேச்வர கிருஹம் என்னும் தர்மராஜ இரதம் சிவனுக்கு ஏற்பட்டது. அதிலும் அரியரன் உருவை காண்கிறோம். 6. திருமால்: திருமால் சிவபெருமானைப் போற்றுபவராக சோமாஸ் கந்தமூர்த்தி உருவங்களில் காணப்படுகிறார். சிவனுக்குகந்த ஆலயத்தில் கருவறையின் முன் இடை கழியில் ஒரு புறத்தில் திருமால் தன் தேவியுடனும், மறுபுறம் நான்முகன் தன் தேவியுடனும் உள்ளதைக் காண்கிறோம். அவதாரமூர்த்தங்கள்: திருமாலின் அவதாரங்கள் பத்தும் ஆதிவராஹக் குகையில் ஒரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மீன், ஆமை, பன்றி, நரசிம்மர், வாமனர், பலராமர், கோதண்டராமர், பரசுராமர், புத்தர், கல்கி ஆகிய உருவங்கள் குறிக்கப்பட்டுள்ளன எனக் கண்டோ ம். அவற்றில் கண்ணனுடைய உருவம் குறிக்கப் பெறாததும், அதற்குப் பதிலாக புத்தரின் உருவம் குறிக்கப் பெற்றுள்ளதும் கவனிக்கத் தக்கவை. மாமல்லபுரத்துச் சிற்பங்களில் புத்தரின் சிற்பம் எங்கும் சித்தரிக்கப்படவில்லை. அதே போன்று மீன், ஆமை, பரசுராமர், கோதண்டராமர், கல்கி, ஆகிய உருவங்களே உள்ளன. 1.வராஹமூர்த்தி: உள்ள இடங்கள். 1. வராஹக் குகை. 2. ஆதிவராஹக் குகை. ஆதிவராஹக் குகை பிற்காலத்தே சுதை பூசப்பட்டு அலங்கரிக்கப் பெற்றது. வராஹக் குகையில் உள்ளது சிறந்த சிற்பம். இதன் எதிரே உலகளந்த உத்தமனின் உருவம் உள்ளது என்றும் கண்டோ ம். இக்குகையில் நின்று கொண்டு, “…..பாரிடத்தை எயிறுகீற இடந்தானை வளைமருப்பின் ஏனமாகி இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை எம்மானைக்கண்டு கொண்டேன் கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே” என்ற திருமங்கையாழ்வாரின் பாடலைப் பாடிப்பாடி இன்புறலாம். அதுமட்டுமா! “தீது அறு திங்கள், பொங்கு சுடர், உம்பர், உம்பர்-உலகு ஏழினோடும் உடனே, மாதிரம், மண் சுமந்த வட குன்றும், நின்ற மலை ஆறும், ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒருபால் ஒடுங்க, வளர் சேர் ஆதி முன் ஏனம் ஆகி, அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே”. என்பதையும் காணலாம். 2. திரிவிக்கிரமர்: உள்ள இடங்கள் 1. வராஹக் குகை 2. கடற்கரைக் கோயில் கடற்கரைக் கோயிலில் ஓர் உடைந்த உலகளந்த உத்தமனின் உருவமுள்ளது. வராஹக் குடைவரையிலுள்ளது மிகச் சிறந்த சிற்பமாகும். “வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி, அங்கு ஓர் குறள் ஆகி, மெய்ம்மை உணர, செந் தொழில் வேதநாவின் முனிஆகி,வையம் அடி மூன்று இரந்து பெறினும், மந்தரமீது போகி, மதி நின்று இறைஞ்ச, மலரோன் வணங்க, வளர் சேர் அந்தரம் ஏழினோடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே” என்ற அடிகளைப் பாடிப் பரசலாம். 3. நரசிம்மர்: உள்ள இடங்கள் 1. கடற்கரைக் கோயில் 2. முகலிப்பாமுடையார் கோயில் முகலிப்பாமுடையார் கோயிலில் விமானத்தின் கழுத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மராகக் காணப்படுகிறது. கடற்கரைக் கோயிலில் பெரிய சிவாலயத்தின் வடபுறச் சுவரில் இருமுறை இது காணப்படுகிறது. திருமங்கை மன்னன், “பிறையெயிற் றன்ற டலரியாப் பெருகினானை ………………………………………………………… கண்டு கொண்டேன் கடல் மல்லைத் தலசயனத்தே” என்கிறார். 4. குதிரை அசுரனைக் கொன்றவர்: உள்ள இடம். 1. கடற்கரைக் கோயில். “….. பரிவாய் கீண்ட சீரானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்னும் திருமங்கை மன்னன் பா நினைவிற் கொளல் தகும். 5. காளீயமர்த்தனர்: உள்ள இடங்கள். 1. கடற்கரைக் கோயில் 2. தர்மராஜ இரதம். “பூணாகம் பிளவெடுத்த போர் வல்லானை ………………… கண்டு கொண்டேனே கடிபொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே” என்பது திருமங்கை பனுவல். 6. கோவர்த்தனதாரி: உள்ள இடம். 1. கிருஷ்ண மண்டபம் குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயன். இச்சிற்பத்தையே ஆழ்வார். “கோகுலங்கன் தளராமல் குன்றமேந்திக் காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேனே கடிபொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே” என்று பாடியுள்ளது கேட்டு இன்புறத் தக்கது. மாமல்லைச் சிற்பங்கள் தோன்றி சுமார் 50 ஆண்டுகட்குள் வாழ்ந்த திருமங்கையாழ்வார், மாமல்லைப் பாசுரங்களில், பல உருவங்களைப் பாடியுள்ளார். அங்குள்ள சிற்பங்களைக் காணும்போது அப்பாசுரங்களை நினைவிற் கொண்டால், இலக்கியத்தையும் கலையையும் இணைத்துக் காணும் ஆற்றல் பெற்றவர் ஆவோம் என்றதினால் அவர் பாடல்களில் மேற்கோள்கள் ஆங்காங்கு காட்டப்பட்டுள்ளன. பிறமூர்த்தங்கள் கொற்றவை: உள்ள இடங்கள் 1. மகிஷாசுரமர்த்தினி குகை. 2. வராஹக் குகை. 3. ஆதிவராஹக் குகை. 4. இராமானுஜ மண்டபம். 5. மும்மூர்த்தி குகை. 6. அதிரணசண்டேச்சுரம். சாளுவன் குப்பம். 7. திரௌளபதி இரதம். 8. கடற்கரைக் கோயில். திருமகள்: உள்ள இடங்கள் 1. வராஹக் குகை 2. ஆதிவராஹக் குகை. 3. இராமானுஜ மண்டபம். நான்முகன்: உள்ள இடங்கள். 1. தர்மராஜ இரதம். 2. ஆதிவராஹக் குகை. 3. கடற்கரைக் கோயில். முருகன்: உள்ள இடங்கள். 1. மும்மூர்த்தி குகை. 2. தர்மராஜ இரதம். 3. அர்ஜுன இரதம். இன்ன பிற உருவங்களும் ஆங்காங்கே உள்ளதை அந்தந்த சிற்பங்களைக் குறிக்கும் போது குறித்துள்ளோம். மேலை நாட்டார் குறிப்புகள் சுமார் நானூறு ஆண்டுகளாகப் பல மேலை நாட்டார் மாமல்லபுரத்திற்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் பல குறிப்புகளை எழுதியுள்ளனர். அவற்றில் பல மாமல்லை பற்றிய வரலாறு தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை ஆயினும் பல ருசிகரமான செய்திகளை நமக்கு அளிக்கின்ற வாதலின் அவற்றில் சில ஈண்டு தரப்பட்டுள்ளன. ‘கோச்ரோ பல்பி’ என்பவர் கி.பி. 1582-ல் மாமல்லபுரத்திற்கு வந்து அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டு மாலுமிகளும், வரலாற்று ஆசிரியர்களும், கவிஞர்களும் பல கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியுள்ளனர். மாமல்லபுரத்தைப் பற்றி மேலை நாட்டார் எழுதியுள்ள குறிப்புகளில் இதுவரை கிடைத்துள்ளவற்றில் இதுவே மிகவும் பழமையானதாகும். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறிப்பாகும். இதில் ‘மறுநாள் காலை மூன்று மணிக்கு நாங்கள் ’ஏழு பகோடாக்கள்’ என்ற இடத்திற்கு வந்தோம். அங்கு அதிக உயரமில்லாத எழில் வாய்ந்த எட்டுக் குன்றுகள் இருக்கின்றன. செயிண்ட்தாமஸ்ஸிலிருந்து இவ்விடம் 8 லீக்குகள் தொலைவில் இருக்கிறது. பகல் நேரத்தில் கரையை அடைந்தோம். மூன்று பெரும் வணக்கங்களை [முப்பெரும் செல்யூட்டு] செலுத்திக் கரை சேர்ந்தோம்" என்று குறித்துள்ளார். கி.பி.1700-ல் நிகோலோ மனூசி என்பவர் மாமல்லபுரத்தைப் பற்றி “சோழ மண்டலக் கரையில் கடலருகில், மாவேலிவரோ’ என்ற குன்று உள்ளது. இது ‘சத்ரஸ்படோ’ [சதுரங்கப் பட்டினம்] என்ற இடத்திலிருந்து நான்கு லீக்குகள் தூரத்தில் உள்ளது. இங்கு சீன தேசத்துக் கலையைப் போன்ற சிற்பங்கள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1727-ல் ஹெமில்டன் என்பவர் ‘கிழக்கிந்தியத் தீவுகளைப் பற்றிப் புதுக் குறிப்புகள்’ என்ற நூலில் மாமல்லபுரத்துக்குத் தானே சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். “கொன்னியமேறே” [கூனிமேடு] என்ற இடத்திற்கு அருகில் ‘ஏழு பகோடாக்கள்’ இருக்கின்றன. இவற்றில் ஒன்று அதன் பெயரை நான் மறந்து விட்டேன்- யாத்ரீகர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்வதால் சிறப்புப்பெற்றது" என்று குறித்துள்ளார். இவர் செயின்ட் தாமஸ் மகாபலிபுரத்தில் துன்புறுத்தப்பட்டார் என்று தவறுதலாகக் குறித்துள்ளார். செயிண்ட் தாமஸ், சென்னையில் மயிலாப்பூரில் துன்புறுத்தப்பட்டதாக ஒரு செவிவழிக் கதை உண்டு. கி.பி. 1721-ல் பொட்டாம் என்ற கப்பல் தலைவன் மாமல்லபுரத்துக்கு வந்தார். அவர் வந்த ‘சார்ல்டன்’ என்ற கப்பல் மாமல்லபுரத்துக்கு அருகில் உடைந்து மூழ்கியது. அதை எடுப்பதற்காக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1727-ல் மூழ்கும் செப்பு இயந்திரம் ஒன்று இந்தியாவுக்குக் கொண்டு வந்து மாமல்லபுரத்தில் தேட வகை செய்தார். நீர்மூழ்கி உடைந்த கலத்தின் பகுதிகளைக் கண்டு பிடித்தார். எனினும் கடல் அலைகளின் வேகத்தால் இயந்திரத்தை உபயோகிக்க இயலவில்லை. கி.பி.1788-ல் வி.சேம்பெர்ஸ் என்பவர் ஆசிய ஆராய்ச்சிகள் [Asiatic Researches] என்ற நூலில், சதுரங்கப் பட்டினத்திலிருந்து வடக்கே சில கல் தொலைவில் மாவலிபுரம் இருக்கிறது. அதை கடல் மாலுமிகள் ஏழு கோயில்கள் என்று குறிப்பர். இங்கு உள்ள சில முதியோர்கள் சேம்பெர்ஸிடம், ‘தாங்கள் இளைஞர்களாக இருந்த போது கடலில் வெகு தூரத்தில் நீருக்கடியில் பல கோயில்களின் சிகரங்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். அவர்கள் பார்த்த சிகரங்கள் செம்பினால் ஆனவை என்றும், காலையில் ஆதவன் உதிக்கும்போது, கதிர் ஒளிகள் அவற்றின் மீது பட்டு மிகவும் ஒளி விட்டுத் திகழ்ந்தன என்றும், ஆனால் இப்போது செம்பின் மீது பாசி படிந்து, கதிர் ஒளிகள் முன் போல் பிராகசிப்பதில்லை என்றும் கூறினர்’ என்று இவர் குறித்துள்ளார். இவர்கள் குறிப்பது வழி வழிக் கதை என்றே கொள்ள வேண்டும். சேம்பெர்ஸ் தான் முதன் முதலில் மாமல்லபுரத்தைப் பற்றிச் சிறப்பான குறிப்பு எழுதியுள்ளார். இவருடைய குறிப்புகளையே அடிப்படையாகக் கொண்டு பின்வந்த பலர் எழுதியுள்ளனர். சேம்பெர்ஸ் மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகள் சயாம் நாட்டு மொழியில் உள்ளன என்று கருதினார். கி.பி.1794-ல் அரிவிட்னி என்பவர்களால் தயாரிக்கப் பட்ட புதிய வரை படம் ஒன்று லண்டனில் பதிப்பாயிற்று. அது கம்பெனியாரின் வசமிருந்த பகுதிகளைத் தனியாக சர்வே செய்ததை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. சென்னைக்கு அருகில் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்த பகுதிகள் அல்லது சோழ மண்டலக் கரையில் உள்ள ஜாகிர் நிலங்களின் புதுப்படம் என்ற தலைப்பில் உள்ளது. இதில் மாவலிபுரம் ‘ஏழு சிகரங்கள்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1798-ல் கோல்டிங்ஹாம் என்பவர் கல்கத்தாவில் பதிப்பான ‘ஆசிய ஆராய்ச்சிகள்’ என்ற பத்திரிக்கையில், மாமல்லபுரத்தில் உள்ள பெரிய சிற்பத் தொடரை அர்ச்சுனன் தவம் என்று குறித்துள்ளார். மற்றும் கணேச இரதத்தில் சிவலிங்கம் கருவறையில் இருந்தது என்று குறித்துள்ளார். கி.பி.1800-ல் ப்ரா போலினாடா சான் பர்த்தால்மியோ என்பவர் “கிழக்கிந்திய கடற்பயணம்” என்ற நூலில் மாமல்லபுரத்துக்குத் தான் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். “பண்டைய இந்தியாவின் கலைகளில் ஒப்பற்ற இதை நான் எவ்வாறு புகழ்வேன்! என் வாழ்நாளிலேயே இது போன்ற சிறந்த கலைச் செல்வங்களை நான் கண்டதே இல்லை. நான் இவ்விடத்திற்குச் சென்ற போது ஐந்து அந்தணர்கள் எனக்கு வழித்துணையாக இருந்தனர். இவர்கள் அனைவரும் போர்த்துக்கீசிய மொழி பேசினார். நான் கண்ட ஒவ்வொன்றினுக்கும் விளக்கங்கள் கூறினர். அவர்கள் கூறிய ஒவ்வொன்றையும் நான் குறித்துக் கொண்டேன். அவர்களுக்கு ஐந்து ரூபாய் பணம் கொடுத்தேன்” என்று இவர் குறிக்கிறார். இவர் மாமல்லபுரத்தை எலிபெண்டா, கனேரி குகைகளோடு ஒப்பிட்டு இவையனைத்தும் சமகாலத்தவை என்றும், உள்நாட்டு கலையே; எகிப்து நாட்டிலிருந்தோ கிரேக்க நாட்டிலிருந்தோ வந்த கலை அல்ல என்றும் குறித்துள்ளார். கெமிலி, கெரெரி என்பவர்கள், எலிபெண்டா, கனேரி குகைகள் மாவீரன் அலெக்ஸாண்டரால் தோற்றுவிக்கப்பட்டவை என்று குறித்துள்ளனர். இவர் அக்கூற்றை மறுத்து எலிபெண்டா, கனேரி, மகாபலிபுரம் முதலிய இடங்களில் உள்ள குகைகள் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பு ஏற்பட்டவை என்றும், தான் செல்லாத சோழ மண்டலக்கரையில் மாமல்லபுரத்தில் எவ்வாறு மாவீரன் அலெக்ஸாண்டர் கோயில்களைக் கட்டியிருக்க முடியும் என்று வினா எழுப்பி அதை மறுத்துள்ளார். [மகாபலிபுரம், கனேரி, எலிபெண்டா முதலிய அனைத்தும் மாவீரன் அலெக்ஸாண்டருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றியவை]. கி.பி.1810-ல் சௌளதே என்ற ஆங்கிலக் கவி, மாமல்லபுரத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கெஹமாவின் சாபம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். கி.பி.1814-ல் ஹைன் என்பவர் மாமல்லபுரத்தைப் பற்றிக் குறிக்கும் போது, கடலுக்கடியில் கோயில்கள் இருக்கின்றன என்பது தவறு என்று கூறியுள்ளார். ஆயினும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் இவர் மனதைக் கவரவில்லை. அவைகளை மிகவும் குறைவாகக் கூறியுள்ளார். “பூனைகள், கழுதைப் புலிகளைப் போல் காட்சியளிக்கின்றன. தெய்வங்கள், ரிக்கட்ஸ் என்ற நோயால் பீடிக்கப்பட்ட சிறுவர்களைப் போல் பெருந்தலையும், பருத்த தொந்தியும் வாழைத் தண்டு போன்ற கால்களும் கொண்டு விளங்குகிறார்கள்” என்று கூறி, ‘இச்சிற்பங்களை யார் வேண்டுமானாலும் போற்றட்டும், ஆனால் என்னைப் பொருத்த மட்டில் இவை மட்டமானவையே’ என்று குறித்துள்ளார். [இது போன்று கலையழகைப் போற்றத் தெரியாத மனிதர்களும் உண்டு என்பதற்கு இது எடுத்துக் காட்டு போலும்!]. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளுக்கும் மற்றும் ஓலைச் சுவடிகளுக்கும் படிகளைத் தயாரித்து ஒப்பற்ற சேவை புரிந்த கர்னல் மெக்கன்சி அவர்கள் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்களைப் பற்றியும், கல்வெட்டுகள் பற்றியும் சிறந்த குறிப்புகள் தயாரித்துள்ளார். இதற்குப் பின்னர் பி.ஜீ பாபிங்க்டன் என்பவர் மாமல்லபுரத்தின் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் பற்றி சிறந்த குறிப்புகள் எழுதியுள்ளார். சாளுவன் குப்பம் குகையில் இரண்டுவித எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகளையும் முதன் முதலில் இவர்தான் மொழி பெயர்த்தார். மெக்கன்சியும், எல்லிஸ் என்பவரும் மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் கோயில்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று அறிய கடற்கரை ஓரத்தில் பல இடங்களில் ஒலிகளைப் பதிவு செய்து ஆராய்ந்தனர் என்று இவர் தன் நூலில் குறிக்கிறார். கி.பி. 1844-ல் வால்டர் எலியட்ஸ் என்பவர் ‘சென்னை இலக்கிய விஞ்ஞான பத்திரிகை’ என்ற நூலில் மாமல்லபுரத்து ஆதிவராஹக் கோயிலிலுள்ள கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக்குகைக் கோயிலில் கல்வெட்டுகள் ஒரு சுவரால் மறைக்கப்பட்டிருந்தன என்றும் சுவரை இடித்து கல்வெட்டைப் படி எடுத்துப் பின்னர், மறுபடியும் அச்சுவரை எழுப்ப அக்கோயிலில் வழிபாடு செய்வோர் பெருந்தொகை கேட்டனர் என்றும் பின்னர் இதற்கே 30 ரூபாய் கொடுத்தால் போதும் என்றும் கூறினர். எனவே இதற்கு சங்க மெம்பர்கள் ஒவ்வொருவரும், 30 ரூபாய் கொடுக்க பணத்தை வசூலித்து படி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். [ஆங்கிலேயருடைய வரலாற்று ஆர்வத்துக்கு இது எடுத்துக் காட்டு]. கி.பி. 1855-ஆம் ஆண்டில் மரே கம்பெனியாரால் பதிக்கப்பட்ட தென்னாட்டு கெஸட்டியர் என்ற நூலில் மாமல்லபுரத்தைப் பற்றிய ஒரு தல வரலாறு குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடநாட்டு அரசன் ஒருவன் ஒரு பெரும் கோயில் கட்ட முனைந்தான். ஏராளமான சிற்பிகள் அங்கு வந்தனர். ஆனால் அவன் கொடுத்த பணத்திற்கு சிற்பிகள் இணங்கவில்லை. எனவே அவர்கள் அனைவரும் மாமல்லபுரம் வந்து இங்கு சிற்பங்கள் செய்யத் தொடங்கினர். சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர்கள் இங்கு சிற்ப வேலைகள் செய்து வந்தனர். அதன் பிறகு அம்மன்னன் சிற்பிகள் கேட்டதை கொடுக்க இசைந்ததும், மாமல்லபுரப் பணியைப் பாதியிலேயே போட்டுவிட்டு அங்கு சென்று விட்டார்கள் என்று அத்தல வரலாறு குறிக்கிறது. [இது வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்டது அல்ல]. சென்னை அரசாங்கத்தின் ஆணையின் பேரில் M.W.கார் என்பவர் 1869-ல் மாமல்லபுரத்தைப் பற்றிய நல்ல நூல் ஒன்று எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர் எழுதப்பட்ட சிறந்த நூல்களை எல்லாம் திரட்டி இவர் தன் நூலில் கொடுத்துள்ளார். அதில் இவ்வூரைப் பற்றிய தல வரலாற்றைக் குறித்து இது சமீபத்தில் வைணவ அடிப்படையில் எழுதப்பட்ட நூல் என்றும், பண்டைய மாமல்லபுரத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இதில் கிடையாது என்றும் எழுதியுள்ளார். ஆங்கிலப் பேரரசைத் தோற்றுவித்த ராபர்ட்கிளைவ், மாமல்லபுரத்தில் குன்றின் வடபுறம், சிவாலயத்தில் இருந்த நந்தியை எடுத்துச் சென்று விட்டார் என்றும், அர்ஜுனன் இரதம் [இப்போது கணேச இரதம்] எனக் கூறப்பட்ட கோயிலிலிருந்த சிவலிங்கத்தை ‘பு’ என்பவர் எடுத்துச் சென்று விட்டார் என்றும் குறிக்கிறார். ஊர் மக்களின் கூற்றுப்படி இதை எடுத்துச் சென்றவர் லார்டு ஹோபார்டு என்பவர். அவர் இத்துடன் ஒரு ஹனுமான் சிலையையும் எடுத்துச் சென்று விட்டார். அதற்காக அவர் மனைவி லேடி ஹோபார்டு ஊர் மக்களுக்கு 20 பகோடா பணம் கொடுத்தார் என்று இந்நூல் குறிக்கிறது. இந்நூலில் இரதங்களை எல்லாம் விமானங்கள் என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார். சாளுவன் குப்பத்தில் இருக்கும் அதிரணசண்ட மண்டபத்தின் படம் ஒன்று இந்நூலில் உள்ளது. அதில் மண்டபம் மணலால் மூடப்பட்டுக் கிடந்தது. அப்போது கர்னல் மக்கென்சியும், மர்ரேயும் மணலை அப்புறப்படுத்தி இம்மண்டபத்தை நேராக்கினர். இந்நூலில் உள்ள படத்திலிருந்து, மறுபடியும் அம்மண்டபம் மணலால் மூடப்பட்டது என்று அறிகிறோம். கி.பி. 1871-ல் சென்னை கவர்னராக இருந்த லார்டு நேபியர் என்பவர் மாமல்லபுரத்திற்குச் சென்று கலைச் செல்வங்களைப் பார்வையிட்டார். அப்போது ‘பேன் பார்க்கும் குரங்கு’ சிற்பம் ஈச்வராலயத்தின் தெற்கில் இருந்தது. நேபியர் இதை அர்ஜுனன் தவத்தருகே உள்ள பாறையில் வைத்தார். டாக்டர் அலக்ஸாண்டர் ஹட்டன் என்பவர் சென்னைக் கலைப் பள்ளியை [Madras School of Arts] ஆரம்பித்தார். அவர் மாமல்லபுரத்தைப் பற்றிய பல படங்கள் எடுத்துள்ளார். அப்படங்கள் சில ருசிகரமான தகவல்களைத் தெரிவிக்கின்றன. லார்டு நேபியரோடு வந்தவர்கள் பல ஒட்டகங்களுடன் வந்தார்கள் என்பதை ஒரு படம் காட்டுகிறது. அப்போது அர்ஜுனன் தவம் என்ற சிற்பம் பாதிக்கு மேல் மணலால் மூடப்பட்டு இருந்தது. ஹண்டர் ஒரு பகுதி மணலை எடுத்தார். நேபியர் 8 அல்லது 9 அடிக்கு மணலைக் கீழே தோண்டி எடுத்த போது யானை முதலிய அழகிய சிற்பங்கள் வெளிப்பட்டன. சாளுவன் குப்பம் குகை பெரும்பாலும் மணலால் மூடப்பட்டுக் கிடந்தது. அதை நேர் செய்தார். ஐந்து இரதங்கள் இருக்கும் இடத்தில் அர்ஜுனன் இரதத்திற்குப் பின்னர் உள்ள நந்தி மணலில் மூடப்பட்டுக் கிடந்தது. அதையும் நேர் செய்தார். அவர் தன் குறிப்பில் மாமல்லபுரத்தில், மணலும், நீரும் பல குகைகளையும், கோயில்களையும் சூழ்ந்தன என்று குறிக்கிறார். கடற்கரைக் கோயிலுக்கும், கடலுக்கும் இடையில் 1822-ல் மரங்கள் இருந்ததாகவும், மற்றொரு சமயம் தான் மாமல்லபுரம் சென்றிருந்த போது கடற்கரைக் கோயில் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தது என்றும் குறித்துள்ளார். ஜேம்ஸ் பர்கூசன் என்பவரும் ஜெம்ஸ் பர்க்கஸ் என்பவரும், ‘இந்தியக் குகை கோயில்கள்’ என்ற சிறந்த நூல் ஒன்று எழுதியுள்ளனர். அதில் மாமல்லபுரத்தைப் பற்றி எழுதியுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள குகைகளும், கோயில்களும் கி.பி. 650-லிருந்து 700 க்குள் தோன்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதிவராஹக் குகையைக் குறிக்கும் போது, இக்கோயிலுள் வெளியார் புக முடியாது; எனவே ஊரார் கூறுவதிலிருந்து, உள்ளே நான்கு கரங்களை உடைய வராஹப் பெருமான் நிலமகளைத் தாங்கி நின்ற சிற்பமும், நான்கு கரங்களை உடைய சக்தியின் சிற்பமும், ஹரிசேகரன் என்ற அரசன், அவன் இரு மனைவியர் சிற்பங்களும், திருமகளின் சிற்பங்களும் உள்ளே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அனுமன் இராமனைப் போற்றும் சிற்பம் இன்றும் உள்ளே இருப்பதாகக் குறித்துள்ளார். [ஹரிசேகரன் என்ற மன்னன் என்பது பல்லவ மன்னனின் சிற்பம் எனக் கொள்ளலாம். அனுமன் சிற்பம் ஏதும் உள்ளே கிடையாது]. கி.பி. 1881-ல் பிரான்மெல் என்பவர் சென்னை இலக்கிய விஞ்ஞானப் பத்திரிகையில் மாமல்லபுரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதி இராமானுஜ மண்டபத்தில் கலைச் சிதைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். “கி.பி.12- ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்துக்கு எதிராக வைணவ சமயத்தைப் பரப்பினர். இராமானுஜருடைய பெயர் உள்ளதைப் பார்த்தால் அவர் சமயத்தைப் பின்பற்றியவர்கள் இங்கு சைவக் கோயில்களையும், சிற்பங்களையும் சிதைத்திருக்கிறார்கள் என்பது நன்கு விளங்குகிறது. இராமானுஜ மண்டபம், கோனேரி மண்டபம், தர்மராஜ மண்டபம் முதலிய மண்டபங்கள் இதனால்தான் சிதைந்துள்ளன. இச்செய்கைக்குக் காரணம் இவர்கள்தான் என்பதற்கு அடையாளமாகச் சங்கமும், சக்கரமும் இங்கெல்லாம் பொறித்துள்ளனர்” என்று குறிக்கிறார். சிவல் என்பவர் சென்னை மாகாணத்தில் உள்ள பண்டைய சின்னங்கள் என்ற நூலில் மாமல்லபுரச் சிற்பங்கள், கல்யாணி சாளுக்கியர்களின் படைப்பு என்றும், அவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக ஆண்ட குறும்பர்களால் படைக்கப்பட்டவை என்றும் குறித்துள்ளார். [இது வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்டது அல்ல]. இன்னும் பல குறிப்புகள் உள்ளன. அவை அனைத்தையும் கூறப்புகுந்தால் நூல் விரியும் என்ற காரணத்தால் ஒரு சில குறிப்புகளே இங்கு குறிக்கப்பட்டுள்ளன. காசுகள் மாமல்லபுரத்தில் பண்டைய கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சாளுவன் குப்பத்தின் அருகில் காசுமேடு என்று ஒரு மேடு இருந்ததாகவும் அதில் சில காசுகள் கிடைத்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இப்போது அணுசக்தி உற்பத்திச்சாலை நிறுவப்பட்டிருக்கும் கல்பாக்கத்தின் அருகிலும் இவ்வாறு காசுகள் கிடைப்பதாக அறிகிறோம். மாமல்லபுரத்தில் உரோமானியக் காசுகளும், பல்லவர் காசுகளும், சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. கி.பி.393-ல் ஆண்ட உரோமானிய அரசன் தியோடோ சியஸ் என்ற மன்னனின் செப்புக்காசுகள் பல மாமல்லபுரத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவற்றின் முன்புறம் மன்னனின் தலையும், ஒரு நக்ஷத்திரமும் காணப்படுகின்றன. விளிம்பில்…..DOSUIS PP என்ற எழுத்துகள் உள்ளன. பின்புறம் மூன்று உருவங்கள் கையில் வேல் பிடித்து, நின்ற நிலையில் உள்ளன. தியோடோ சியஸ், தன் மக்களான அர்க்கேடியஸ், ஹோனோரியஸ் என்பவர்களுடன் நிற்பதை இது சித்தரிக்கிறது. விளிம்பில் GLORIA ROMANORUM என்று எழுத்துக்கள் உள்ளன. இக்காசுகள் மாமல்லபுரத்தில் கண்டெடுக்கப் பட்டது வரலாற்றுச் சிறப்பாகும். சங்க காலத்திற்கும் பிறகும் கி.பி.4-ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது என்பதை இக்காசுகள் தெளிவாக விளக்குகின்றன. மாமல்லனுக்கும் முன்னரே, கி.பி.4-ஆம் நூற்றாண்டில் மாமல்லபுரம் துறைமுகமாகத் திகழ்ந்தது என்பதற்கும் இவை சான்று பகர்கின்றன. கர்னல் மெக்கன்ஸி அவர்களால் மாமல்லபுரத்தில் இக்காசுகள் கண்டெடுக்கப்பட்டன. பல்லவர் காலக் காசுகளில் இரண்டு இங்கு கிடைத்துள்ளன. இவை செம்பாலானவை. மெல்லியத் தகடுகள் போன்றவை. இவை இரண்டிலும் முன்புறம் நின்ற நிலையில் எருது காணப்படுகிறது. ஒன்றில் காளையின் மேல்,ஸ்ரீபரன் என்றும், மற்றதில் ஸ்ரீநிதி என்றும் பெயர்கள், பல்லவ கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபரன் என்ற பெயருள்ள காசின் பின்புறம், நான்கு இதழ்களை உடைய தாமரை மலர் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றதில் ஒரு மீனின் உருவைக் காண்கிறோம். ஸ்ரீநிதி, ஸ்ரீபரன் என்ற பெயர்களை உடைய மன்னனால் இக்காசுகள் வெளியிடப்பட்டன என்பது தெளிவு. அவன் யார்? ஸ்ரீநிதி, ஸ்ரீபரன் என்ற பட்டப் பெயர்கள் இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராஜசிம்மனுக்குப் பல இடங்களில் காணப்படுகின்றன. மாமல்லையில் தர்மராஜ இரதத்திலும், தர்மராஜ மண்டபத்திலும், கணேச இரதத்திலும், கடற்கரைக் கோயிலிலும் இவை காணப்படுகின்றன. எனவே மாமல்லையில் கிடைத்த காசுகள் இராஜசிம்மன் காலத்தவை என்று அறியலாம். மாமல்லையில் உள்ள பெயர்களே காசுகளிலும் காணப்படுவதிலிருந்து இங்கு சிற்பப்பணி நடந்த காலையில் இக்காசுகளே இங்கு வழக்கிலிருந்தன என்று அறியும்போது நம் வியப்பு அதிகரிக்கும். சோழர் காலத்தைச் சேர்ந்த இராஜராஜனுடைய செப்புக் காசுகளும் இங்கு கிடைக்கின்றன. இவற்றில் ஒருபுறம் ஈழ மனிதனின் உருவமும், மறுபுறம் ‘ஸ்ரீராஜராஜ’ என்ற நாகரி எழுத்துகளும், அமர்ந்த ஈழ மனிதனின் உருவமும் காணப்படுகின்றன. இராஜராஜன் காலத்துக் கல்வெட்டு மாமல்லையில் காணப்படுவதும், இராஜராஜனுடைய பெயர் கொண்டு இந்நகர் ஜனநாதபுரம் எனப் பெயர் பெற்றிருந்ததும், இங்கு நினைவிற் கொள்ளல் தகும். கல்வெட்டுச் செய்யுட்க்கள் […] […] அதிரணசண்டேஸ்வர், சாளுவான் குப்பம் அதிரணசண்டேஸ்வர் கோயில், செய்யுள் அதிரண சண்டேஸ்வர க்ருஹம், சாலுவான்குப்பம், தெற்குச் சுவர் ஸ்ரீமதஹ அத்யந்த காமஸ்ய த்விஷத் தர்ப அபஹாரிணஹ. ஸ்ரீனிதேஹே காம ராகஸ்ய ஹர ஆராதன சம்கினஹ.. 1 அபிஷேக ஜல ஆபூர்ணே சித்ர ரத்ன அம்புஜ ஆகரே. ஆஸ்தே விஷாலே சுமுக்ஹ ஸிரஹ சரஸி சங்கரஹ.. 2 தேன இதம் காரிதம் ஸம்போஹோ ப்ஹவனம் பூதயே பஹுவ. கைலாச மன்தர நிப்ஹம் பூப்ப்ருதாம் மூர்த்னி திஷ்டதா.. 3 பக்தி ப்ரஹ்வேண மனசா பவம் புஷண லீலயா. தோஷணா ச யோ பூவன் தத்தே ஜீயாத் சஹ ஸ்ரீபரஸ் ஸிரம்.. 4 அதிரணச் சண்டஹ பதிஹி அவனிபுஜாம் அதிரண சண்டேஸ்வரம் இதம் அகரோத் இஹ கிரிதனயா குஹ கண சஹிதோ நியத க்ருத ரதிஹி பவது பஸுபதிஹி.. 5 குர்வ்வீம் ஈஸான பக்திம் ஸ்ரியம் அதிஷயினீம் துர்வ்வஹம் பாரம் உர்வ்வ்யாஹ நிஷ்ஷாமான்யஞ் ச தானம் சமம் அதிரண சண்டாக்யயா யோ [பிபர்தி]. ஸ்தானே நிர்ம்மாபிதே அஸ்மின் விதித ரணஜயா க்யாதினா தேன பர்த்தா பூதானாம் அஷ்டமூர்த்திஸ் சிரம் அதிரண சண்டேஸ்சரே யாது நிஷ்டாம்.. 6 ஆனுக்ரஹ ஷீல[ஹ..] யதி ந விதாதா பரதோ யதி ந ஹரிஹி நாரதொ ந வா ஸ்கந்தஹ. போத்தும் க இவ சமர்த்தஹ சம்கீதம் கால காலஸ்ய.. 7 ஓம்.. சமர தனஞ்ஜயஹ ஸம்க்ராம தீரஹ.. ஓம் அதிரண சண்டேஸ்வர க்ருஹம், சாலுவான்குப்பம், வடக்குச் சுவர் ஸ்ரீமதஹ அத்ந்த காமஸ்ய த்விஷத் தர்ப்ப அபஹாரிணஹ. ஸ்ரீனி-தேஹே காம ராகஸ்ய ஹர அராதன சம்கினஹ.. 1 அபிஷேக ஜல ஆபூர்ணே சித்ர ரத்ன அம்புஜாகரே. ஆஸ்தே விஷாலே சுமுகஹ ஸிரஸ் ஸரசஸி சங்கரஹ.. 2 தேன இதம் காரிதம் ஸம்போஹோ பவனம் பூதயே பூவஹ. கைலாச மன்தர நிபம் பூப்ருதாம் மூர்த்னி திஷடதா.. 3 பக்தி ப்ரஹ்வேண மனசா பவம் பூஷண-லீலயா. தோஷணா ச யோ பூவம் தத்தே ஜீயாத் சஹ ஸ்ரீபரஸ் ஸிரம்.. 4 அதிரணடஹ பதிஹ அவனிபுஜாம் அதிரண சண்டேஸ்வரம் இதம் அகரோத். இஹ கிரிதனயா குஹகண சஹிதஹ நியத க்ருத ரதிர் ப்ஹவது பசுபதிஹி.. 5 குர்வ்வீம் ஈஸான பக்திம் ஸ்ரியம் அதிஷயினீம் துர்வ்வஹம் பரம் உர்வ்வ்யா நிஸ்ஸா மான்யஞ் ச தானம் சமம் அதிரணசண்ட ஆக்ஹ்யயா யோ பிபர்த்தி. ஸ்தானே நிர்ம்மாபிதே அஸ்மின் விதித ரணஜய [க்யாதினா] தேன பர்த்தா பூதானாம் அஷ்டமூர்த்திஸ் ஸிரம் அ[திரண சண்ட]ஸ்சரே யாது நிஷ்டாம் ..6 -ஸ்வஸ்தி-. தர்மராஜ மண்டபம் சம்பவ ஸ்திதி சம்ஹார காரணம் வீதகாரணஹ. பூயாத் அத்யந்தகாமஸ்ய ஜகதாம் காம மர்த்தனஹ.. அமாயஸ் சித்ரமாயோ அசா அகுணொ குண ப்ஹாஜனஹ. ஸ்வஸ்தோ நிருத்தரோ ஜீயாத் அனிஷஹ.. (பரமேஸ்வரஹ) யஸ்ய அங்குஷ்டஹ பராக்ராந்தஹ கைலாஸஸ் ஸதஷானனஹ. பாதாலம் அகமன் மூர்த்த்னா ஸ்ரீநிதிஹி தம்பிபர்த்ய அஜம்.. பக்தி ப்ரஹ்வேண மனஸா பவம் பூஷண லீலயா. தோஷண ச யோ பூவோ பாரம் ஜீயாத் சஹ ஸ்ரீபரஸ் சிரம்.. அத்யந்த காமோ ந்ருபதிஹி நிர்ஜித ஆராதிமணடலஹ. க்யாதோ ரணஜயஹ ஸம்போஹோ தேன இதம் வேஷ்ம காரிதம்.. ஞஹ ஸ்தாணுஹு நிஷ்கலஹ ஸோமஹ பாவகாத்மா வியத் வபுஹு. பீமஹ ஸிவோ விஜயதாம் சங்ரஹ காம ஸூதனஹ.. ராஜராஜோ ந விரஸஷ் சக்ரப்ருத் ந ஜனார்த்தனஹ. தாரக அதிபதிஹி ஸ்வஸ்தோ ஜயதாத் தருணாங்குரஹ.. ஸ்ரீமதஹ அத்யந்த காமஸ்ய த்விஷத் தர்ப்ப அபஹாரிணஹ. ஸ்ரீநிதேஹே காம ராகாஸ்ய ஹர ஆராதன ஸங்கினஹ.. அபிஷேக ஜல அபூர்ணே சித்ர ரத்ன அம்புஜாகரே. ஆஸ்தே விஷாலே சுமுகஹ ஸிரஸ் சரசி சங்கரஹ.. தேன இதம் காரிதன் துங்கன் தூர்ஜ்ஜடேஹே மந்திர க்ருஹம். ப்ரஜானாம் இஷ்ட சித்தயர்த்தம் சங்கரீம் பூதிம் இச்சதா.. .. ஒம்.. ..அத்ந்த காம. பல்லவேஸ்வர. க்ருஹம்.. திக் தேஷான் திக் ! தேஷாம் புனரபி திக் திக் திக் அஸ்து திக் தேஷாம். யெஸ் ஹான் ந வஸதி ஹ்ருதயே குபத கதி விமோக்ஷகோ ருத்ரஹ.. கணேஷ க்ருஹம் சம்பவ ஸ்திதி சம்ஹார காரணம் வீத காரணஹ. பூயாத் அத்யந்த காமாய ஜகதாம் காம மர்மத்தனஹ..1.. அமாயஷ் சித்ரமாயோஸ் அவகுணோ குணபாஜனஹ. ஸ்வஸ்தோ நிருத்தரோ ஜீயாதனீஷஹ பரமேஸ்வரஹ..2.. யஸ்ய அங்குஷ்டஹ பராக்ராந்தஹ கைலாசஹ ஸதஷானனஹ. பாதாலமகமன்ப்ஹூர்தூத்னா ஸ்ரீநிதிஸ்தம் பிபர்த்யஜம்..3.. பக்தி ப்ரஹ்வேண மனசா பவம் பூஷணலீலயா. தோஷண ச யோ பூவோ பாரம் ஜீயாதச ஸ்ரீபரஸ் சிரம்..4.. அத்யன்தகாமொ ந்ருபதிர்ன் நிர்ஜிதாராதி மணடலஹ. க்யாதோ ரணஜயஹ ஸம்போஸ் தேனேதம் வேஷ்ம காரிதம்..5.. ஞஹ ஸ்தாணுர்ன் நிஷ்கலஹ சோமஹ பாவகாத்மா வியத்வபுஹு. பீமஹ ஸிவோ விஜயதாம் சங்கரஹ காமாஸூதனஹ..6.. ராஜராஜோ ந விரஸஷ் சக்ரப்ருன்ன ஜனார்த்தனஹ. தாரகாதிபதிஹி ஸ்வாஸ்தோ ஜயதாத்தருணாங்குரஹ..7.. ஸ்ரீமதோத்யந்தகாமஸ்ய த்விஷத்தர்ப்பாபஹாரிணஹ. ஸ்ரீநிதேஹே காமராகாஸ்ய ஹராராதன சங்கினஹ..8.. அபிஷேக ஜலாபூர்ண்ணே சித்ரரத்னாம்புஜாகரே ஆஸ்தே விஷாலே ஸுமுக்ஹ ஸிரஸ் ஸரஸி சங்கரஹ..9.. தேநேதங் காரிதம் துங்கன் தூர்ஜ்ஜடேர் மந்திர க்ருஹம்.. ப்ரஜானாம் இஷ்ட சித்யர்த்தம் சங்கரீம் பூதிம் இச்சதா..10.. திக் தேஷாம் திக் தேஷாம் புனஹ அபி திக் திக் திக் அஸ்து திக் தேஷாம். யேஷாம் வஸதி ஹ்ருதயே குபதகதி விமோக்ஷகோ ருத்ரஹ.. 11 அத்யந்த காம பல்லவேஸ்வர க்ருஹம்.. கடற்கறைக் கோயில் ….ஸ்ரீ ராஜசிம்ஹோ ரணஜயஹ ஸ்ரீபரஸ்சித்ர கார்முகஹ எகவீரஸ் சிரம்பாது சிவசூடாமணிர்மஹீம்…. மேற்கண்ட வரிகள் பனமலைக் குகைக் கோயிலிலும் உள்ளது. கடற்கறைக்கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜ சோழனுடய காலத்துக் கல்வெட்டு:- …. …ஸ்ரீராஜராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தாறாவது ஆமூர்கோட்டத்தாமூர்நாட்டு நகர மாமல்லபுரத்து நகரத்தோமும் பேரிளமையோமும் இ(ன்)[ந்நக]ரத்து ஜலஸயாநத்து க்ஷத்ரியஸிம்ஹபல்லவேஸ்வரத்து தேவாரும் இராஜஸிம்ஹ[வ]ல்லவேஸ்வரத்து தேவரும் பள்ளி கொண்டருளிய தேவரும் உடைய …. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.