[] [Pedetha_10 copy] பிடித்த பத்து பொருளுரை: பார்வதி இராமச்சந்திரன் மாணிக்கவாசகப் பெருமான், ‘பிடித்த பத்து’ பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை ‘பிடித்த பத்து’ எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் ‘முத்திக் கலப்புரைத்தல்’ எனப்பட்டது… இறையருளால், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’ பதிகங்களுக்கு, நான் புரிந்து கொண்ட வரையில் உரை எழுதியிருக்கிறேன்!…இதற்கான என் தகுதி பற்றி நான் அறியேன்!..ஆயினும் ஈசனருளை முன்னிறுத்தி, இதனைச் செய்திருக்கிறேன்.. இது என் முதல் மின்னூல்.. இந்த நூலை, திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ சத்தியகிரீஸ்வர சுவாமி திருவடிகளிலும், அருள்மிகு தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருவடிகளிலும், பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்… இந்த நூலைப் படிப்போர் அனைவருக்கும், இறைவன் வேண்டுவன வழங்கி அருளப் பிரார்த்திக்கிறேன்!!.. இந்த நூலில் பிழை திருத்தங்கள் செய்து கொடுத்ததோடு, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தந்து ஊக்கிய திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.. இந்த நூலை மின்னூலாக்கம் செய்து உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும். அன்பர்கள் நூலினைப் படித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!!!…. – பார்வதி இராமச்சந்திரன் tsparu2001@gmail.com   அட்டைப் படம்  – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் – அருண் பிரகாஷ் – arunprakash.pts@gmail.com உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. This book was produced using PressBooks.com. Contents - முன்னுரை - அறிமுக உரை - 1. பதிகம் # 1 முத்திக் கலப்புரைத்தல் - 2. பதிகம் # 2 - 3. பதிகம் # 3 - 4. பதிகம் # 4 - 5. பதிகம் # 5 - 6. பதிகம் # 6 - 7. பதிகம் # 7 - 8. பதிகம் # 8 - 9. பதிகம் # 9 - 10. பதிகம் # 10 - ஆசிரியர் அறிமுகம் - எங்களைப் பற்றி 1 மாணிக்கவாசகப் பெருமான், ‘பிடித்த பத்து‘ பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை ‘பிடித்த பத்து‘ எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் ‘முத்திக் கலப்புரைத்தல்‘ எனப்பட்டது… 2 அறிமுக உரை இறையருளால் , மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘ பிடித்த பத்து ‘ பதிகங்களுக்கு , நான் புரிந்து கொண்ட வரையில் உரை எழுதியிருக்கிறேன் !… இதற்கான என் தகுதி பற்றி நான் அறியேன் !.. ஆயினும் ஈசனருளை முன்னிறுத்தி , இதனைச் செய்திருக்கிறேன் .. இது என் முதல் மின்னூல் .. இந்த நூலை , திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டருளும் , அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ சத்தியகிரீஸ்வர சுவாமி திருவடிகளிலும் , அருள்மிகு தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருவடிகளிலும் , பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன் … இந்த நூலைப் படிப்போர் அனைவருக்கும் , இறைவன் வேண்டுவன வழங்கி அருளப் பிரார்த்திக்கிறேன் !!.. இந்த நூலில் பிழை திருத்தங்கள் செய்து கொடுத்ததோடு , ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தந்து ஊக்கிய திருமதி . மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன் .. இந்த நூலை மின்னூலாக்கம் செய்து உதவிய திரு . ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும் . அன்பர்கள் நூலினைப் படித்து , தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் .. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி !!!!!…. – பார்வதி இராமச்சந்திரன் [pressbooks.com] 1 பதிகம் # 1 முத்திக் கலப்புரைத்தல் உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : உம்பர்‍ - தேவர் ..’ தேவர்கட்கு அரசரே !, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற கலந்திருப்பவனே !, அழுக்கினை உடைய உடல் தரித்த எனக்கு , புதிய பொருள் போலத் தோன்றி வந்து , என் குடி முழுவதும் ஆண்டு , மாயையினால் ஆன இவ்வுலக வாழ்வு நீங்குமாறு , பேரின்ப வாழ்வு தந்தருளிய அமுதம் போன்றவனே !.. ‘ செம்மையான , மெய்ப்பொருள் நீயே ‘ என்று துணியப்படுபவனே !… சீர்மை பொருந்திய கழலிணைகள் உடையவனே !.. நிலையான பேரின்ப நிதியாகிய செல்வமே !.. சிவபெருமானே !… யாம் உய்யும் பொருட்டு , உம்மைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன் !… நீ இனிமேல் என்னை விட்டு எங்கெழுந்தருளிச் செல்வது ?….’ சற்றே விரிவாக … இங்கு ‘ யோகம் ‘ என்ற சொல் , ‘ சேர்ந்திருப்பது ‘, ‘ கலந்திருப்பது ‘ என்னும் பொருளில் அறியப்படுகின்றது .. எம்பெருமான் இப்பிரபஞ்ச முழுதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினன் ஆதலின் , ‘ ஒழிவு அற நிறைந்த யோகமே ‘ என்றார் … ‘ ஊத்தையேன் ‘ அல்லது ‘ ஊற்றையேன் ‘ என்பது , ‘ அழுக்கான உடல் தரித்த என்னை ‘ என்று பொருள் தரும் .. இதில் அழுக்கு என்பது புற அழுக்கு மட்டுமல்லாது , மும்மலங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம் .. பாம்பாட்டிச் சித்தரின் ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’ என்ற பாடலையும் இங்கு ஒப்பு நோக்கலாம் . ‘ வம்பெனப் பழுத்த ‘ என்ற சொல்லின் பொருள் மிக ஆழமானது .. இருப்பினும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம் .. இறைவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள் .. பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன் .. இறைவன் , புதிய பொருள் போலத் தோன்றி தம் குடி முழுதும் ஆண்டு கொண்டான் என்கிறார் …. அஞ்ஞான இருள் நீங்கி , என்றும் புதிதான ஞான ஆதித்தன் ( இறைவன் ) உதித்து , தம் ஆன்மாவை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்ட இயல்பையே வியந்துரைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான் . இங்கு ‘ குடி ‘ என்னும் சொல் , உற்றார் , உறவினர் , நண்பர்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் குறிப்பதாகவே பெரும்பான்மையான உரையாசிரியர்கள் கொள்கின்றனர் . இவையெல்லாம் நிலையானவை அல்ல என்பது வாதவூரார் அறியாததல்லவே !!.. பல பிறவிகளின் கர்ம மூட்டையால் பிணிக்கப்பட்டுள்ள ஆன்மாவை , இறைவன் அருள் தந்து அவனுடையதாக்கிக் கொள்ளலையே ‘ குடி முழுதும் ஆண்டு ‘ என்றார் … தம்மை முற்றாக , முழுமையாக இறைவன் ஏற்றுக்கொண்டதையே அவர் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம் .. அடுத்து வரும் ‘ வாழ்வு அற ‘ என்ற வரியும் இதை உறுதி செய்கிறது .. இறைவனது அருள் பெற்ற உயிர் , மீண்டும் பிறவா நிலையை அடைகிறது .. பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுகிறது … ‘ வாழ்வு அற வாழ்வித்த மருந்தே ‘ என்பதால் , இவ்வுலகத்தில் பிறவி எடுத்தல் என்னும் நிலை நீங்குமாறு பேரின்ப வாழ்வளித்து அருள் செய்தான் இறைவன் என்பதைச் சொல்கிறார் .. மருந்தே என்பது இங்கு அமுதமே என்பதாகப் பொருள்படும் .. இறவா நிலை தரக் கூடியது அமுதம் .. இறைவன் பிறப்பிறப்பு நீக்கி சாயுஜ்ஜிய நிலையை அருளியதைச் சுட்டுவதாக , இதனைக் கொள்ளலாம் . செம்பொருள் என்பது , உண்மையான பொருள் என்பதாகப் பொருள்படும் .. உண்மையான பொருள் எது என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் , இறுதியாக , சிவமே மெய்ப்பொருள் என்று துணிவர் .. ஆகவே , ‘ அத்தகைய உண்மையான பொருள் நீயே ‘ என்று துணியத் தக்கவனே என்றார் .. ‘சீருடைக் கழலே’ என்பதில் கழல் என்பது ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளைக் குறிக்கின்றது.. உண்மையான சிவப்பரம்பொருளின் திருவடிகளை அடைவதே மானிடப் பிறவி எய்தியதன் நோக்கம்… தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி   என்று கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதை இங்கு ஒப்பு நோக்கிப் பொருள் கொள்ளலாம் . ‘ எம்பொருட்டு ‘ என்றது , பதிகங்களைப் பாடும் நமக்கு அறிவுறுத்தியது .. நம் பொருட்டு , நாம் உய்ய வேண்டுமெனில் , எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும் .. இதனைச் செய்வதால் பலனடைவோர் நாம் தான் அல்லவா ?!.. சிக்கெனப் பிடித்தல் என்பது , நம்மை முற்றாக இறைவனது திருவடிகளில் சமர்ப்பித்து ..’ பற்றுக பற்றற்றான் பற்றினை ‘ என்பதற்கிணங்க , இறைவனை மிக உறுதியாகப் பற்றிப் பிடித்தலாகும் .. ‘ சிக்கென ‘ என்பதன் மூலம் தளராத உறுதிப்பாடு கூறப்பட்டது .. உறுதியாக , ‘ நீயே கதி ‘ என இறைவனைப் பற்றிப் பிடிப்போரின் இதயத் தாமரையில் இறைவன் நிரந்தரமாக எழுந்தருளுவான் ஆதலின் , ‘ எங்கெழுந்தருளுவது இனியே ..’ என்றார் .. சித்தம் சிவலோகமாக மாறிய பின் , எங்கும் அதுவே காணுதலால் , அவர் பிறிதோரிடத்து தோன்றுதல் என்பது கிடையாது .. ஆகவே ‘ தாம் வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது …’ என்று உரிமையுடன் உரைத்தார் … இவ்வாறு , தாம் , இறையனாரின் இணையடிகளை உறுதியாகப் பற்றிப் பிடித்தமையும் அதன் காரணமாக , இறைவன் , தம் ஆன்மாவின் மலங்கள் நீங்குமாறு செய்து , பேரின்ப வாழ்வளித்தமையையும் உரைக்கிறார் பெருமான் …’ முத்திக் கலப்புரைத்தல் ‘ சொல்லும் பதிகங்களில் , முதற் பதிகத்தின் பொருள் இவ்வாறு அமைந்ததாகக் கொள்ளலாம் . திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !.. 2 பதிகம் # 2 விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : இடப வாகனத்தை விடாது மிக விரும்பிய விண்ணவர் அரசே !, வினைகளினால் சூழப்பட்டவனாகிய நான் உணர்ந்த உண்மைப் பொருளே !, அடியேன் ,   நாற்றம்  நீங்காத‌ ,   முழுவதும் புழு நிரம்பிய இவ்வுடற் கூட்டினிலே கிடந்து ,  முதுமையின் காரணத்தால் , மண்ணிலே மறைந்து கீழ்மையடையும் நிலையைத் தாராது , எம்மைக் காத்து ஆண்டருளிய கடவுளே !.. கருணைப் பெருங்கடலே !.. இடைவெளி இல்லாது , உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன் .. நீ இனிமேல் எங்கு எழுந்தருளுவது ?! இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம் .. இங்கு ‘ விடை என்பது இடபவாகனத்தைக் குறித்தாலும் , தர்ம தேவதையே சிவபிரானின் இடபவாகனமாகக் கருதப்படுவதால் , இறைவன் விடாது தர்மத்தையே விரும்புவது உணர்த்தப்படுகின்றது …. இப்பதிகத்திலும் இறைவன் , ‘ விண்ணோர்களுக்கு அரசன் ‘ என்றே போற்றப்படுகின்றார் … மனித நிலையிலும் மேம்பட்டது தேவர்களின் நிலை .. இறைவன் தேவாதி தேவன் .. பதிகங்கள் முத்திக்கலப்புரைக்கும் அனுபவத்தைக் கூறுதலாலும் , முத்தி , மிக மேலான உயரிய நிலை என்பதாலுமே இறைவன் இவ்வாறு போற்றப்படுகின்றார் என்று கொள்ளலாம் .. இடபத்தை , சித்தாந்த நோக்கில் ‘ பசு ‘ எனக் கருதினாலும் , பசுவாகிய உயிர்களை விடாது விரும்பி , அவை உய்வு பெற்று , தம்மை வந்தடைதலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் எம்பிரான் எனவும் பொருள் கொள்ளலாம் . விடை வாகனனான எம்பெருமானை , உருவ நிலையின் குறியீடாகக் கருதுவது மரபு , ‘ தோடுடைய செவியன் விடையேறி ‘ என்ற சம்பந்தப் பெருமானின் பதிகப் பொருளின்படி , ‘ விடையேறி ‘ என்பது உருவ நிலையையும் , ‘ பொடி பூசி ‘ என்பது அருவ நிலையையும் , ‘ உள்ளங்கவர் கள்வன் ‘ என்பது அருவுருவநிலையையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது .. ‘ வினையனே னுடையமெய்ப் பொருளே ‘ என்பதில் , உடைய என்னும் சொல்லின் பொருள் வெகு அருமையானது .. இறைவன் , முத்தர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டுமே உடையவனல்ல .. கர்மவினைகளால் சூழப்பட்டு , துன்புறும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமானவன் .. அவ்வுயிர்களைத் தம் கருணையால் ஆள்பவன் .. ஆகவே , நமது வினையின் காரணமாக , இறைவன் நம்மை விரும்பார் என்பது இல்லை .. அவனே நமது அன்னையும் தந்தையும் ஆதலினால் உண்மைப் பரம்பொருளாகிய அவன் கருணை நமக்குக் கட்டாயம் கிட்டும் என்பது குறிப்பால் இவ்விடத்தில்  உணர்த்தப்படுகின்றது . ‘ முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து ‘ முடை என்பதை இவ்விடத்தில் நாற்றம் என்பதாய் பொருள் கொண்டால் , நாற்றம் நீங்காது இருக்கும் இவ்வுடலைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம் . குரம்பை என்பது , உடலையே குறிக்கும் . ‘ மூத்தற ‘ என்பதை , ‘ அற மூத்து ‘ என மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும் .. வயதின் காரணமாக , முதுமை எய்தி , நாற்றம் நீங்காத இவ்வுடல் மரணித்து , மண்ணில் வீழ்ந்து , புழுக்களால் உண்ணப்படும் நிலையைத் தாராது , எம்மை ஆட்கொண்டாய் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான் .. குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு         எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி         குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல   சுகமாலக்  ( திருப்புகழ் ) முதுமை எய்தாத நிலை , அதாவது என்றும் இளமையோடு இருக்கும் நிலையாவது இறைவனோடு கூடியிருக்கும் நிலை .. பிறப்பிறப்பிலா முத்தி நிலை .. இங்கு ‘ நாற்றம் ‘ என்பதை , ‘ வாசனா மலமாகவும் பொருள் கொள்ளலாம் . ‘ அடியேன் முடை நாய்த் தலையே ‘ என்ற அபிராமி பட்டரின் வாக்கும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது . இப்போது முடை என்பதைத் ‘ தடை ‘ என்னும் பொருளில் பார்க்கலாம் . வினைகள் , இறையருளைப் பெற  முடியாதபடி தடை செய்கின்றன .. அத்தகைய குறைபாடுகள் , தடைகள் விடாத அடியேனாகிய தம்மையும் ஆட்கொண்டார் எம்பிரான் என்கிறார் வாதவூரார் . இவ்வாறு , தம்மை கீழ்மையிலாழ்த்தாது , அதாவது பிறவிச் சுழலில் சிக்க வைக்காது , தமது கடல் போன்ற கருணையினால் ஆட்கொண்ட இறைவனை , இடைவிடாது எந்நேரமும் தாம் உறுதியாகப் பற்றிப் பிடித்திருப்பதால் , அவர் தமது இதயத் தாமரையிலேயே எப்போதும் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான் .. இங்கு ‘ கடவுளே ‘ என்ற பதம் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது .. உள் கடந்து ஒளி உருவாய் நிற்பவன் இறைவன் என்பதாலும் , தொடர்ந்து தாம் , தமது நெஞ்சகத்தில் இறைவனை இருத்தி சிந்திப்பதைப் புலப்படுத்தும் பொருட்டும் , இவ்வாறு உரைத்திருப்பதாகக் கொள்ளலாம் .. திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !   3 பதிகம் # 3 அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : “ தாயும் தந்தையும் ஆனவனே !.. நிகரில்லாத மாணிக்கமே !.. அன்பாகிய கடலில் விளைந்த ஆரமுதே !.. பொய்யான , வீணான செயல்களையே செய்து , வாழ்நாளை பாழாகக் கழிக்கின்ற , புழுக்களை இடமாக உடைய உடலைக் கொண்ட கீழ்மையேனுக்கு , மிக உயர்ந்த சிவபதத்தை அளித்தருளிய , பக்தர்களின் உண்மையான செல்வமாகிய சிவபெருமானே , இப்பிறவியிலேயே , நான் உய்யும் பொருட்டு , உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் .. இனி நீ எழுந்தருளும் இடம் வேறேது ?.” இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம் .. இறைவனே நமக்கு அன்னையும் தந்தையும் .. நம் பால் வரம்பில்லாத அன்போடு  இருப்பவன் ஆதலினால் இறைவனே அன்னை , தீமையான நெறியிலிருந்து நம்மை விலக்கி , நன்னெறி காட்டுதலால் இறைவனே நமது தந்தை என்கிறார் வள்ளலார் பெருமான் ..      திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்       குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்       பொருவில் அன்னையும் போக்கது தந்தையும்       தரும வெள்விடைச் சாமிநின் நாமமே .  ( திருவருட்பா ) அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ  ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ என்று ,   திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் அருளியிருப்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம் . ‘ ஒப்பிலா மணியே ‘   என்பது , ‘ நிகரில்லா மாணிக்கமே ‘ என்பதாக , இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது ….  ‘ மாணிக்கம் ‘ என்கின்ற சொல் , எம்பிரானைப் போற்றும் பல பதிகங்களில் பயன்படுத்தப்படுவதால் , இது சிறப்பு வாய்ந்ததெனப் புலனாகிறது .. மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே   என்று சுந்தரர் பெருமானும் , தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே . என்று அப்பர் பெருமானும் , வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா       மாணிக்க மேகருணை மாகடலே ‍ என்று வள்ளலார் பெருமானும் பாடிப்பரவுகின்றார்கள் . இதற்கு ஒரு அருமையான விளக்கம் கேட்கப் பெற்றேன் .. முத்தி நிலையாவது , சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலை … மாணிக்கத்தோடு பளிங்கை இணைத்து வைத்தால் , வெண்ணிறப் பளிங்கு , மாணிக்கத்தின் சிவந்த நிறத்தைப் பெற்று , அதுவும் மாணிக்கமே என்று சொல்லத் தகுமாறு தோன்றும் … அதைப் போல் , சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலையை உயிர்கட்கு அருளுதலால் , எம்பிரானை ‘ மாணிக்கம் ‘ என்கிறார்கள் . அன்பினில் விளைந்தஆ ரமுதே === பாற்கடலைக் கடையும் போது வந்த ஆலகால விஷத்தை உண்டு , உயிர்கட்கு நலமருளியவன் எம்பிரான் ..   ஐயனின் அருளால் அன்றோ அமுதம் கிடைத்தது !… பக்தர்கள் , எம்பெருமான் மீது கொண்ட கடல் போன்ற பேரன்பில் தோன்றும் அமுதமே சிவம் !..’ அமுதம் ‘ இங்கும் முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகவே கொள்ளப்படுகின்றது . பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் ==== உயிருக்கு நன்மை தருவது , எம்பிரானின் கழலிணைகளை இடையறாது சிந்தித்தலாம் .. அதை விடுத்து , உலகியல் விஷயங்களில் சிந்தனையை உழல விடுவது வீண் காலம் கழித்தலேயாகும் .. பிறவியின் நோக்கமே பெருமானை அடைதல் என்றிருக்க , அதற்கு உதவாத செயல்களைச் செய்தல் பொய்ம்மையைப் பெருக்கி , பொழுதைச் சுருக்குதலேயாம் .. இங்கு ‘ பொழுது ‘ என்பது வாழ்நாளைக் குறிக்கும் .. வீணே காலம் கழித்தலால் , நம் வாழ்நாள் சுருங்கி , பெருமானை நினைத்து உய்வு பெறும் கால அவகாசம் குறைகிறது .. கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே . ( அப்பர் பெருமான் ) புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த ==== இவ்வரிகளின் மூலம் , இவ்வுடலின் நிலையாமை புலப்படுத்தப்படுகின்றது … நிலையாத இவ்வுடல் எடுக்கும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்கும் பொருட்டு , எம்பிரான் , மிக உயர்ந்த சிவபதம் அருளியமை பகன்றார் வாதவூரார் . ‘ செல்வமே சிவபெரு மானே ‘=== அடியார்களின் பெருநிதியம் சிவபிரான் . ஆகவே ‘ செல்வமே ‘ என்றார் . இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே .==   இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் என்றருளுகிறார் வாதவூரார் .. இறைவனை அடைய , வேறொரு பிறவி அவசியமில்லை .. இப்பிறவியில் , வினைகளால் சூழப்பட்ட இவ்வுடலில் இருப்பதால் , இறைவன் அருள மாட்டான் என்பதில்லை .. உள்ளன்போடு , உறுதியோடு சிவனை நினைந்தால் , கட்டாயம் அவன் கழலிணைகள் அடையலாம் . அடியார்கள் , தமது பக்தியால் பரமனடி தொழுது வேண்ட , இம்மையிலேயே அவன் கட்டாயம் அருள் செய்வான் என்று திண்ணமாகக் கூறுகிறார் .. இவ்வாறு இறைவன் கழலிணைகளை உறுதியாகப் பற்றிப் பிடிக்க , இறைவன் , தன் திருவடிகளைத் தந்து , முத்திநிலை அருளுவான் .. சிவத்தோடு கலந்த பின்பு , எம்பிரான் தனியாக எழுந்தருளுவதெங்கே !.. ஆதலினால் , ‘ எங்கெழுந்தருளுவது இனியே ?!’ என்றார் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !   4 பதிகம் # 4 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே .  பொருள் இரக்கம் , பரிவுடைய சுடர் போன்றவனே !..   பக்குவ நிலையை அடைந்த கனி போன்றவனே !.. பெரும் ஆற்றலை உடைய , அருமையான தவத்தினை உடையவர்க்கு அரசனே !.. உண்மைப் பொருளை விளக்கும் நூலாக இருப்பவனே , புகழ்ச்சிக்கு அடங்காத , இன்பமாக இருப்பவனே !.. யோகத்தின் மூலம் அடையத் தக்க பொலிவானவனே !… தெளிவினை உடைய அடியார்களது சிந்தையில் புகுந்து உறையும் செல்வமானவனே !.. சிவபெருமானே !.. இருள் நிறைந்த இந்த உலகத்தில் , உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் .. இனி நீ எங்கு எழுந்தருளுவது ?!! சற்று விரிவாகப் பார்க்கலாம் .. அருளுடைச் சுடரே — ஒளி தரும் சுடர் வெம்மையையும் தருவது , தீண்டுவோரைச் சுடுவது .. ஆனால் இறைவன் தாயினும் சாலப் பரிந்து அடியாரைப் பேணுதலால் , ‘ இரக்கம் நிறைந்த சுடர் ‘ என்னும் பொருள் வருமாறு , அருள் நிறைந்த சுடர் என்றார் .. இதற்கு மற்றொரு பொருளும் கூறலாம் .. இறைவன் பேரொளி வடிவானவன் , ஆயினும் அவனிடமிருந்து வெளிப்படும் ஒளியானது அடியார்களைச் சுடுவதில்லை .. தண்மையே தருகிறது .. ஆகையினாலும் இறைவன் அருளுடைச் சுடர் . அளிந்ததோர் கனியே – நன்கு கனிந்து பக்குவமடைந்த கனி போன்றவன் இறைவன் .. காயானது நன்கு பழுத்து கனிந்த பின்னரே சுவை தருவது நாம் காயினை உண்ணுவதை விடவும் கனியினை உண்ணுதலையே விரும்புவோம் . இறைவன் அவ்வாறான சுவை மிகுந்த கனி போன்றவன் .. .   இதற்கு வேறொரு பொருளும் கூறலாம் .. அடியார்கள் பரிபக்குவ நிலையை அடைந்த பின்னரே இறைவன் அவர்களுக்கு அருள் சுரப்பான் .. பரிபக்குவ நிலையை அடைந்த அடியார்களை இறைவன் மிக உயர்ந்த பரிபக்குவ‌ ( தன் ) நிலைக்கு உயர்த்துதல் எளிது ஆகையால் , இறைவனைப் பக்குவமடைந்த , கனிந்த , கனி என்றார் .. பெருந்திறல் அருந்தவர்க் கரசே – தவநெறியின் மேன்மை இங்கு விளக்கப்படுகின்றது .. பேராற்றல் தவத்தினால் கிட்டும் .. முனிவர்களது தவ ஆற்றலின் மேன்மை நாம் அறிந்ததே !.. இறைவனை அடையும் பொருட்டு , உயர்வான தவநெறியில் சென்று , மிகக் கடுமையான ‘ பஞ்ச தவம் ‘ முதலானவைகளைச் செய்யும் அடியார்களுக்கு அருள் மழை பொழிபவன் இறைவன் ..   ஆகையால் , பெரும் திறன் படைத்த , அருமையான ( அரிய , கடினமான ) தவ நெறியில் செல்வோரின் அரசரே ! என்றார் . இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம் … பேராற்றலாவது உள் மனதின் ஆற்றலே ஆகும் .. கடினமான தவநெறியில் செல்வது , மிகுந்த மனோபலமுள்ளவர்களாலேயே இயலும் .. அவர்கள் மேற்கொள்ளும் நெறிகள் , மேலும் மேலும் அவர்களது உள் ஆற்றலைப் பெருக்கி , தவநெறியின் குறிக்கோளான இறைவனை அடைவிக்கும் .. அத்தகைய பேராற்றல் வாய்ந்த தவசீலர்களின் அரசர் என்று இறைவனைப் போற்றுகின்றார் வாதவூரார் . அருந்தவ மாமுனி வர்க்கரு  ளாகியோர் ஆலதன்கீழ் இருந்தற மேபுரி தற்கியல்  பாகிய தென்னைகொலாங் குருந்தய லேகுர வம்மர  வின்னெயி றேற்றரும்பச் செருந்திசெம் பொன்மல ருந்திரு  நாகேச் சரத்தானே ( சுந்தரர் பெருமான் ) \ பொருளுடைக் கலையே — இங்கு பொருள் என்பது மெய்ப்பொருளையே குறிக்கும் .. வெளிப்படையாகப் பார்க்கும் போது , மெய்ப்பொருளை விளக்கும் நூலாக இருப்பவன் இறைவன் என்று பொருள்படுகிறது இது .. அதாவது , உயிர்கள் அடைய வேண்டிய , அடையத் தகுந்த மெய்ப்பொருள் இறைவன் ஒருவனே !.. அவனை அடையத் தகுந்த வழியும் அவனருளாலேயே கிட்டும் !.. இன்னும் விரிவாகப் பார்ப்போமானால் , அவனே அந்த வழியாகவும் இருக்கிறான் … இதை நுட்பமாக விளக்குவது கடினம் .. வீணான , மற்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து , மெய்ப்பொருளான இறைவனையே சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக இவ்வரி உணர்த்துவதாகக் கொள்ளலாம் . புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே —- இறைவனது மகிமையை , புகழை , ஓதி முடித்தல் என்பது இயலாது .. அவனது மகிமைக்கு அளவில்லை .. ஆதலால் , ‘ புகழ்ச்சியைக் கடந்த ‘ என்றார் .. சிற்றின்பமாகிய உலகியல் இன்பங்கள் யாவும் உண்மையில் போகமல்ல . இறைவனோடு கலந்திருத்தலாகிய பேரின்பமே ‘ போகம் ‘ என்று கொள்ளத் தக்கது .. அதுவே உயிர்களுக்கு எந்நாளும் நன்மை செய்யக் கூடியது .. ஆகவே ‘ போகமே ‘ என்றார் . யோக நெறியில் நிற்போர் , தங்கள் யோக சாதனைகளின் மூலம் எம்பெருமானை  மகிழ்வித்து , அவரோடு ஒன்றி நிற்றலாகிய முத்தி நிலையைப் பெறுகின்றனர் .. யோகியருக்கே அவர்களது சாதனைகளின் பலன் அனுபவ ரீதியாகப் புலப்படும் … அந்த அனுபவத்தின் வாயிலாக , அகக்காட்சியில் மட்டுமே காணக் கிடைப்பவன் ஆதலால் , ‘ பொலிவே ‘ என்றார் . யோகியருக்கு உள்ளூரப் பொலிபவனாக விளங்குபவன் இறைவன் . தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே — அவ்வாறு யோக நெறியில் நிற்பவரது சித்தம் தெளிவுடையது .. அடைய வேண்டிய பொருள் , அதற்குச் செல்ல வேண்டிய மார்க்கம் என அனைத்திலும் தெளிந்த சிந்தனை உடையவர்களாக , தம் சாதனைகளில் ஈடுபடுபவர்கள் யோகிகள் .. ஆகவே , தெளிந்த சிந்தனையுள்ள அவர்களது சிந்தையில் புகுந்து அருளும் செல்வமே என்றார் .. இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . — இருள் இடம் என்று இங்கு சொல்லப்படுவது , இவ்வுலகமே …   மாயையாகிய இருள் படர்ந்து விளங்குவதால் இவ்வுலகம் இருளின் இடமாக இருக்கிறது .. இருளை அகற்றும் மெய்ஞ்ஞானச் சுடர் இறைவனே !..   வல்வினையேன் றன்னை . மறைந்திட மூடிய மாய இருளை .   ( சிவபுராணம் ).. தம் அகத்தே மூடிய மாய இருள் நீங்கும் பொருட்டு , தாம் இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததால் , பெருங்கருணைப் பேராறாகிய இறைவன் , முத்தி நிலையை அருளி விட்டான் .. தாம் சிவத்தோடு கலந்து விட்டதால் , இனி , எம்பிரான் , தனித்து வேறெங்கும் எழுந்தருள இயலாது என்று உரைக்கிறார் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !   5 பதிகம் # 5 ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோ ரன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒரே பரம்பொருளே !, அடியேனது உள்ளத்துள் ஒளிர்கின்ற பேரொளிமயமானவனே !… உண்மையான  உயர்ந்த நிலையை அறியாத , பெருமையேதும் இல்லாத எனக்கு உயரிய பேரானந்த வாழ்வளித்த அன்பின் திருவுருவே !, சொல்லால் விளக்குதற்கு அரிய , செழுமையான சுடர்  வடிவினனே !!, அடியார்களின் செல்வமான சிவபிரானே !, இளைத்த இடத்து , உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன் !.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது ?!.. இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம் … இறைவன் தனக்குவமையில்லாதான் .. ஆகவே ‘ ஒப்பு உனக்கு இல்லா ‘ என்றார் .. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்  மனக்கவலை மாற்ற லரிது “ -   திருக்குறள் , ஒரே பரம்பொருளான இறைவன் சிவபிரானே .. ஆகையினால் ‘ ஒருவனே ‘ என்று போற்றுகிறார் !… ஒருவன் என்னும் ஒருவன் காண்க   ( திருஅண்டப் பகுதி ) உள்ளன்போடு , இறைவனைத் துதிப்போர் உள்ளமே இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில் .. இறைவனோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம் என்றார் ஔவை .. பரந்து பல் ஆய் மலர் இட்டு , முட்டாது , அடியே இறைஞ்சி , ` இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் ‘ என்னும் , அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே ! நின் தன் வார் கழற்கு அன்பு , எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே .( திருச்சதகம் ) மெய்யடியார்கள் , தங்கள் மனதில் பேரொளி மயமான இறைவனது தரிசனத்தை விடாமல் காண்கின்றனர் . ஆதலால் , ‘ உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே ‘ என்றார் .. புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் இறைவன் ஒருவனே !.. ஆகையால் , தம்மை ‘ வீறு இலியேற்கு ‘ என்றார் .. மானிடராய்ப் பிறந்தவர் உயரிய சிவபதம் அறிவது இயலாததால் ‘ மெய்ப்பதம் அறியா ‘ என்றார் . அவ்விதம் உயரிய நிலை அறியாத போழ்தும் , இறைவன் தம் பேரன்பினால் , அந்த மேன்மையான பதத்தை அளித்து அருள் செய்த பான்மையினை , ” விழுமிய தளித்ததோ ரன்பே ‘ என்றார் .. இங்கு ‘ ஓர் அன்பே ‘ என்ற பதம் மிகுந்த பொருளாழமுடையது . இவ்வுலகியல் விஷயங்களின் பால் நாம் கொள்கின்ற அன்பு நிலையானதன்று .. அதைப் போல் , நம் பால் , நம் உற்றார் உறவினர் , நண்பர்கள் முதலானவர்கள் வைக்கும் பற்றுதலும் , நிலையானதல்ல … உண்மையான அன்பு என்பது , இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும் , நமக்கு அன்னையும் தந்தையும் ஆகிய இறைவன் நம் பால் எப்போதும் சுரக்கின்ற பேரன்புமே …  அந்தப் பேரன்பின் காரணமாகவே , இறைவன் பெருமையேதும் இல்லாத தனக்கு மேலான பதமளித்தமையால் , ‘ ஓர் அன்பே ‘ என்றார் . இறைவன் , அக இருளை நீக்கும் ஞானமாகிய சுடர் வடிவினன் .. ஞானமே செழுமையானது .. ஆகவே , ‘ செழுஞ்சுடர் மூர்த்தி ‘ என்றார் …. பாரும் விசும்பும் அறிய வெனைப்         பயந்த தாயும் தந்தையும் நீ     ஓரும் போதிங் கெனி லெளியேன்         ஓயாத் துயருற்றிட னன்றோ     யாருங் காண வுனை வாதுக்         கிழுப்பே னன்றியென் செய்கேன்     சேரும் தணிகை மலை மருந்தே         தேனே ஞானச் செழுஞ்சுடரே . ( செழுஞ்சுடர் மாலை ). என்று வள்ளலார் பெருமான் பாடியருளியதை இங்கு ஒப்பு நோக்கலாம் …. ‘ எய்ப்பிடத்து ‘ என்பது இளைத்த இடத்தில் என்று பொருள்படும் .. இளைப்பிற்குக் காரணம் .. பலப் பல பிறவிகள் எடுத்தது .. ‘ எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் ‘ என்று சிவபுராணத்தில் வாதவூரார் அருளியிருப்பதை இங்கு பொருத்தி உணரலாம் .. முடிவற்ற பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி , பல பிறவிகள் எடுத்தும் , இறைவனருள் கிட்டாமையினால் இளைத்திருக்கும் இத்தருணத்தில் ,  ‘ ஏதாகிலும் சரி , உன்னை  நான் இனி விடேன் ‘ என்று இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக , இறையருளும் அதன் வழியே முத்தி நிலையும் கை கூடப் பெற்றதால் , இனி எம்பிரான் தனித்து எழுந்தருளுவது இயலாது என்று உரைத்தார் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !     6 பதிகம் # 6 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : ஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு , அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி , என் ஆன்மாவின் பிறப்பிறப்புச் செடியின் வேரைக் களைந்து , என் குடி முழுவதையும் ஆண்ட , தலைக்கோலமுடையவனே !.., பெரிய , பெருமையுடைய , எம் மெய்ப்பொருளே !…, திறந்த வெளியிலே அடியேன் கண்ட காட்சிப் பொருளே , அழிவற்ற செல்வமே !….., சிவபெருமானே !…, இறுதியாக , உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன் .. இனி நீ எங்கு எழுந்தருளிச் செல்வது ?/ சற்று விரிவாக … இறைவன் ஒருவனே உயிர்களின் நிரந்தரமான ஆதரவு … மற்ற உலகியல் உறவுகளின் ஆதரவு நிலையில்லாதது .. ஆகவே , நிரந்தரமான ஆதரவைப் பெறும் பொருட்டு , தம்மை ‘ அறவையேன் ‘ என்றார் .. மெய்யடியார் நெஞ்சகமே இறைவன் உறையும் திருக்கோயில் உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் ( திருமூலர் ) பேரானந்த நிலை எனப்படுவதே ‘ அளவிலா ஆனந்தம் ‘ எனப்பட்டது … ஒரு உயிர் , தன் கர்மவினையால் , மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுக்கின்றது .. ஒவ்வொரு பிறவியிலும் , அதன் கர்ம வினைகள் சேர்ந்து கொண்டே போகின்றன .. இந்நிலை , கிளைகளும் தழைகளுமாகச் செழித்து ஓங்கி வளரும் ஒரு செடிக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது … இந்தச் செடியின் வேரற்றுப் போகுமானால் , மீண்டும் பிறப்பு என்பது நிகழாது .. மாயையால் பிணிக்கப்பட்டிருக்கும் செடியின் வேராகிய கர்மவினை , ஈசனருளால் அற்றுப் போகும் … ஆகவே , ‘ பிறவி வேர் அறுத்து ‘ என்றார் . ‘ குடி   என்பதை , இங்கு அடியார்களின் குழாம் என்பதாகக் கொள்ளலாம் .. இறையடியார்களுக்கு , அவர்களைப் போன்ற மெய்யன்பர்களே உண்மையான சுற்றம் .. இறையடியார்களின்  கூட்டுறவாகிய ‘ சத்சங்கம் ‘ இறையருளைப் பெறும் வழிகளுள் ஒன்று .. ஆகவே , தம் போன்ற அன்பர்கள் அனைவரையும் இறைவன் ஆட்கொண்டு அருளும் பான்மையைக் குறிக்க , ‘ குடி முழுதாண்ட ‘ என்றார் . பிஞ்ஞகா பெரியஎம் பொருளே === பொதுவாக , ‘ பிஞ்ஞகன் ‘ என்ற சொல்லுக்கு ‘ தலைக்கோலமுடையவன் ‘ என்பதே பொருளாகச் சொல்லப்படுகின்றது .  ‘பிஞ்சம்‘ என்ற சொல்லுக்கு,   மயிற்பீலி என்பது பொருள்.. மயிற்பீலி சூட்டி சிகையை அழகு செய்வது வழக்கம்… அது போல் , தன் சடைமுடியில் , இளம்பிறை , குளிர்ந்த கங்கை நதி , பொன்னிறமான கொன்றை மாலை முதலியன அணிந்த தலைக்கோலமுடையவன் எம்பெருமான் .  ஆகவே , எம்பிரானைப் ‘ பிஞ்ஞகன் ‘ ( தலைக்கோலமுடையவன் ) என்றார் . ‘ பிஞ்சம் ‘ என்ற ஒரு வகைச் சடைமுடியை உடையவன் என்பதாலும் எம்பெருமானுக்கு ‘ பிஞ்ஞகன் ‘ என்ற திருநாமம் உண்டாயிற்று என்றொரு கூற்றும் உள்ளது .. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க ( சிவபுராணம் ). நிரந்தரமான கோலம் எம்பிரானுடையதே , மற்றவையெல்லாம் அழியக்கூடியதே என்பதை , இவ்வரி குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம் .. ‘ அரிய ‘ என்பதை ‘ அருமையான ‘ என்ற பொருளில் வழங்குதல் போல் , இங்கு ‘ பெரிய ‘ என்பது ‘ பெருமையான ‘ என்ற பொருளில் கையாளப்படுகின்றது … பெருமைக்குரியவன் இறைவன் ஒருவனே என்பதாகவும் , ‘ பெரிய ‘ என்பதன் இயல்பான பொருள் தோன்றும் வகையில் ‘ இறைவனே மிகப் பெரியவன் ‘ என்று சொல்லப்படுவதாகவும் பொருள் கொள்ளலாம் .. உண்மையான பரம்பொருள் இறைவனே !. இறைவன் அடியார்களுக்கே உரியவன் ஆதலினால் ‘ எம் பொருள் ‘ என்றார் . மாயையின் திரை விலகித் தோன்றும் அண்ட வெளிக்காட்சியின் கண் தோன்றியருளுபவன் இறைவன் . ஆதலினால் ‘ திறவிலே கண்ட காட்சியே ‘ என்றார் .   அடியார்களின் நிலையான செல்வம் சிவபெருமானே . இறவு = அழிவு . அழிவு நேருங் காலத்தில் , இறைவனை முழு நம்பிக்கையுடன் பற்றிப் பிடித்து , சரணடைந்தால் , இறைவன் , அவருக்கு முத்தி நிலை அருளுவான் . இறுதியில் தம்மைப் பற்றிப் பிடித்தவர் எனினும் அவரையும் தம் பெருங்கருணையால் கடைத்தேற்ற வல்லவன் எம்பிரான் என்பது விளங்குதற் பொருட்டு , ‘ இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் ‘ என்றார் .. அங்ஙனம் பற்றிப் பிடித்த அடியாரை விடுத்து , தனித்து வேறெங்கும் எழுந்தருளுவது இறைவனுக்கு இயலாததால் , ‘ எங்கெழுந்தருளுவது இனியே …!!’ என்றார் .  திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !..     7 பதிகம் # 7 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : பாசத்தின் வேரை அகற்றுகின்ற , பழமையான முதற்பொருளாகிய தன்னை ( சிவனை ) அடையும் வழியை அடியேனுக்கு அருளி , அடியேன் செய்த பூசனைகளை உகந்து ஏற்று , அதன் பலனாக , என் சிந்தையின் உள்ளே புகுந்து , தன் பூங்கழலிணைகளைக்  காட்டியருளிய பரம்பொருளே !, ஒளியுடைய விளக்கே !, விளக்கினுள் தோன்றும் செழுமையான சுடர் வடிவினனே !, அடியார்களது செல்வமே !, சிவபெருமானே !, ஈசனே !… உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் .. இனி நீ எங்கு எழுந்தருளுவது ?. சற்றே விரிவாக .. ‘ பாசத்தின் வேர் ‘ என்பதை , பந்த பாசமாகிய பற்றுதல்களின் வேர் என்பதாகப் பொருள் கொள்ளலாம் .. சித்தாந்தக் கருத்துக்களின் வழியாக , சிந்திக்கும் போது , ‘ பாசம் ‘ என்பதை ,   முப்பொருள் உண்மைகளுள் ஒன்றாகிய பாசம் என்பதாகப் பொருள் கொண்டு , உயிர்களைப் பிணிக்கும் தளைகளாகிய ஆணவம் , கன்மம் , மாயை என்பனவற்றைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம் . இவற்றின் வேரை அகற்ற வல்லவன் இறைவனே ஆகையால் , ‘ பாச வேரறுக்கும் ‘ என்றார் .  பரந்த , இந்தப் பிரபஞ்ச முழுமைக்கும் முற்பட்ட முதன்மையான‌ பரம்பொருளாக இறைவன் இருக்கிறான் என்பதை , ‘ பழம் பொருள் ‘ என்றார் . முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே ( திருவெம்பாவை ) தன்னை அடையும் வழியைக் காட்டியருள வல்லவன் இறைவனே . அவனே குருவடிவம் தாங்கி , தன்னை அடையும் வழியைக்  காட்டுகிறான் . அவ்வாறு , இறைவனே அருள் சுரந்து , ஞான குருவாக உபதேசம் தந்து , தன்னை அடையும் வழியைக் காட்டியருளியமையை , ‘ பற்றும் ஆறு அடியேனுக்கு அருளி ‘ என்றார் . சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே . ( திருமந்திரம் ,  ஆறாம் தந்திரம் , திருவடிப் பேறு ) இறைவனை அடையும் பொருட்டு , இறைவன் உகக்கும் முறையில் , தாம் பூசனை முதலிய கிரியைகளைச் செய்து வழிபட்டதை , ‘ பூசனை உகந்து ‘ என்றார் . பூசனை முதலிய கிரியைகளை இறைவன் உகந்து அருளுதலும் இவ்வரியில் குறிக்கப்பட்டது .. பூசனைகளை ஏற்ற இறைவன் , தம் சிந்தை உட்புகுந்து , பூங்கழலிணைகளைக் காட்டியருளியமையை ‘ சிந்தையுட்புகுந்து , பூங்கழல் காட்டிய பொருளே ‘ என்றார் . இறைவனது திருவடிகளின் மென்மை , ‘ பூங்கழல் ‘ என்பதாகக் குறிக்கப்பட்டது .. புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ( சிவபுராணம் ) ‘ தமது சிந்தையின் உள்ளே புகுந்தான் இறைவன் ‘ என்று வாதவூரார் உரைத்தலால் , இறைவன் அகக் காட்சி அருளிச் செய்தமை புலப்பட்டது .. ‘ ஒளியுடைய விளக்கு ‘ என்னும் பொருள் வருமாறு ‘ தேசுடை விளக்கே ‘ என்று உரைத்தார் . ஆயினும் இதற்கு வேறொரு பொருளும் கூறப்படுகின்றது ..’ தேசுடை விளக்கு ‘ என்பது இங்கு இறைவனது சொரூப நிலையினைக் குறிக்கிறது .. சொரூப நிலையாவது இறைவனின் இயற்கை நிலையாகும் ..  தேசு என்றால் ஒளி என்பது பொருள் . பேரொளிமயமான இறைவனது இயற்கைத் தன்மையை , சொரூப நிலையை விளக்குகிறார் வாதவூரார் . இறைவன் பேரொளிமயமான தம் அருவுருவத் திருமேனியிலிருந்து உருவத் திருமேனி தாங்கி வருவது , உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு .. இறைவன் ஐந்தொழிற்படுவதன் மூலம் உயிர்களுக்கு அருள் புரிகின்றார் .. இவ்வாறு ஐந்தொழிற்படும் ( படைத்தல் , காத்தல் , மறைத்தல் , அருளல் , அழித்தல் )   நிலையே தடத்த நிலை ..  சொரூப நிலையிலிருந்து  இறங்கி வந்து, உயிர்களை உய்விக்கும் பொருட்டு, இறைவன் தடத்த நிலை ஏற்றல் ‘செழுஞ்சுடர் மூர்த்தி‘ என்பதாகக் குறிக்கப்படுகின்றது (‘செழுஞ்சுடர் மூர்த்தி‘ என்பது இங்கு வேறொரு பொருளில் கையாளப்படுகின்றது)…..  ‘ தேசு ‘ என்ற சொல்லின் மூலம் இறைவனது பேரொளி மயமான சொரூப நிலையையும் , ‘ மூர்த்தி ‘ என்ற , இறைவனது உருவத் திருமேனியைக் குறிக்கும் சொல்லின் மூலம்   தடத்த நிலையையும் குறிக்கிறார் வாதவூரார் . ஒவ்வொரு பதிகத்திலும் , ‘ செல்வமே ‘ என்று எம்பிரானைக் குறிக்கின்றார் . உயிர்களின் நிலையான செல்வம் சிவபெருமானே !.. அதை அடைவதே மனித வாழ்வின் நோக்கம் . இதைக் குறிக்கவே அவ்வாறு உரைக்கின்றார் . ‘ ஈசன் ‘ என்ற சொல்லுக்கு ‘ ஆள்பவன் ‘ என்று பொருள் . ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி  ( சிவபுராணம் ) . ஈசன் எந்தை இணையடி நீழலே ( அப்பர் பெருமான் ) இறைவனது திருவடியைப் பற்றிப் பிடிப்பதால் வீடு பேறு என்னும் பெரும் பேறு கிட்டும் .. அங்ஙனம் தான் உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக , இறைவன் தம்மை ஆண்டருளியதைக் குறிக்கவே ‘ ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் ‘ என்றார் .. திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !   8 பதிகம் # 8 அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெரு மானே பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : தந்தையே !… தேவர்களாயும் தேவலோகமாயும் நின்ற முதற்பொருளே !.. காலம் , இடம் முதலிய எதன் பொருட்டும் முடிவில்லா ஞானவடிவே !, அடியார்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்து நிற்கும் அருட்செல்வமே !.. சிவபிரானே !.. பேரருள் உடையவனே !.. உயிர்களெல்லாமுமாக விளங்கியும் , அவற்றிலிருந்து நீங்கி , வேறாகவும் நிற்கும் மாயம் உடையவனே !,.. உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் !.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது ?!! சற்றே விரிவாக .. இறைவனே உயிர்களனைத்துக்கும் தந்தையாதலினால் ‘ அத்தனே ‘ என்றார் . தேவர்களாகவும் , தேவர்கள் வாழும் தேவலோகமாகவும் இறைவனே இருக்கின்றான் என்ற பொருள் வருமாறு , ‘ அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே ‘ என்று குறித்தார் இறைவனே ஆதி முதல்வன் …… மனித நிலையில் இருந்து மேம்பட்டது தேவ நிலை ..   மிக உயர் நிலையில் இருக்கும் தேவர்களாக இருப்பவன் என்று இறைவனைச் சொல்வதன் மூலம் , தேவ நிலைக்குக் கீழான பிற உயிர்களாகவும் இருப்பவன் இறைவனே என்பது குறிப்பாகப் புலப்படுத்தப்பட்டது . அது போல் , தேவர்களின் உலகமாக இருப்பவன் இறைவன் என்று சொல்வதன் மூலம் , அனைத்துலகங்களாகவும் விளங்குபவன் இறைவன் என்பதைப் புலப்படுத்தினார் . இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் , காலம் , இடம் முதலியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக விளங்குபவன் . இதனையே ‘ யாதும் ஈறு இல்லா ‘ என்றார் .. முடிவில்லாத இறைவனே , பிரளய காலத்தில் , இப்பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் சென்று சேரும் இடமாக , இறுதியாக விளங்குபவன் . நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ; ஆறு கோடி நாராயண ரங்ஙனே ; ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ; ஈறி லாதவன் ஈசன் ஒருவனே”  ( அப்பர் ) உயிர்கள் அறிய வேண்டிய பொருளாகவும் , அறிவு வடிவினனாகவும் இருப்பவன் இறைவன் .. இறைவனது ஞான வடிவினைக் குறிக்கும் பொருட்டு , ‘ சித்தன் ‘ என்றார் . அடியார்கள் எப்போதும் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் அருட்செல்வம் சிவபெருமான் . ஆகவே ‘ பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே ‘ என்றார் …. பக்தியில்  மேம்பட்ட அடியார்கள் பற்றிப் பிடித்திருக்கும் செல்வம் சிவபிரான் என்று உரைப்பதன் மூலம் , பக்தியினால் பெறப்படும் செல்வம் , மெய்ப்பொருளாகிய சிவனே என்பதையும் உணர்த்தினார் .  ‘பித்தன்‘ என்னும் சொல், மிகுந்த பொருளாழமுடையது.. ‘ பித்தா பிறைசூடி ..’ என்று பாடியருளுகிறார் நம்பியாரூரர் பெருமான் . இறைவன் பேரருள் உடையவன் .. இறைவனது பேரருள் வழங்கும் தன்மை , பித்தோடு ஒத்ததென்று கூறப்படுகின்றது . இறைவனது செயல்கள் , உயிர்களின் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது . பிறர்வயமாகாப் பெரியோனாகிய இறைவன் , தன்வயமுடைமையால் செய்யும் செயல்கள் , உயிர்களின் சிற்றறிவுக்கு உட்பட்ட காரண காரிய விதிகளோடு பொருந்துவதில்லை … சிவன் செயல்களின் காரணம் சிவனே அறிவான் .. உயிர்களுக்கு , அது நெறிமுறைகட்கு உட்படா பித்தனின் செயல் போலத் தோன்றுவதாலும் இறைவன் பித்தன் . விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே . - சம்பந்தர் உயிர்களுக்குள் கலந்து உறைகின்றவன் சிவன் .. எம்பிரானே அனைத்திலிருந்தும் , நீங்கி , அவற்றிலிருந்தும் வேறுபட்ட தன்மையனாகவும் நிற்கின்றான் . இறைவனது இயல்புகளுள் இதுவும் ஒன்று .. ஆகவே , ‘ எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் ‘ என்றார் . ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்            ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்       வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்            மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்       அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி            அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்       தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான            சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே . ( திருவருட்பா ) இறைவனது இவ்விதமான இயல்பு ( அனைத்துள்ளும் பொருந்துதலும் , பின் அவற்றினின்றும் நீங்கி நிற்றலும் ) மாயம் போலத் தோற்றமளிப்பதால் , ‘ மாயம் உடையவனே ‘(‘ எத்தனே ) என்றார் . சித்தாந்த நெறியில் சிந்தித்தால் வேறொரு பொருளும் தோன்றும் ..  மாயை , சுத்த மாயை அசுத்த மாயை மிச்சிரமாயை என  மூவகைப்படும் . சுத்தமாயையைத் தொழில் படுத்தும்போது சிவபிரான் தானே அயன் அரி அரன் என மூன்று நிலைகளையும் அடைந்து முத்தொழில்களையும் புரிவார் … அசுத்த மாயையின் கீழ் வரும் பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்தும் போது , பக்குவப்பட்டு , உயர்நிலையை அடைந்த உயிர்களாகிய , அயன் , அரி , அரன் என்பவர்கள் , எம்பிரானின் ஆணைப்படி , படைத்தல் , காத்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்வர் .. இவ்வாறு , மாயையைத் தொழிற்படுத்தி , உலகங்களின் தோற்றம் , நிலைபெறுதல் , அழித்தல் ஆகிய செயல்களை , ஒரு மாயம் எனத் தோன்றுவது போலச் செய்தருளுவதாலும் இறைவன் ‘ எத்தன் ‘. ‘ இத்தகைய இயல்பினனான இறைவா !… உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் .. அதன் காரணமாக‌ , நீ உன் பேரருங்கருணையினால் எனக்கு முத்தி அளித்தருளினாய் … இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னோடு என்னையும் இணைத்தருளியமையால் , இனி நீ தனித்து , வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது ..’ என்னும் பொருள் தோன்ற , ‘ உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே ….’ என்றுரைத்தார் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி ! 9 பதிகம் # 9 பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . பொருள் : குழந்தையின் பசி வேளை அறிந்து , காலம் தவறாது பாலூட்டும் தாயை விடவும் மேலான அன்புடன் , பாவியேனாகிய என் , உடலை உருக்கி , உள்ளொளியாகிய ஞானத்தைப் பெருக்கி , அழியாத ஆனந்தமாகிய பேரானந்தத் தேனைச் சொரிந்து , என்னைப் புறத்தேயும் காத்தருளிய அருட்செல்வமே , சிவபெருமானே , நான் உனைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் .   நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது ?!! சற்றே விரிவாக .. குழந்தை பசியில் அழும் வரை காத்திராது , காலம் அறிந்து பாலூட்டும் தாயே , தாய்மார்களில் சிறந்தவள் .. அத்தகைய தாயினும் மேலான அன்புடையவன் இறைவன் . உயிர்களின் பால் அவன் கொண்டுள்ள அன்புக்கு ஈடேது ?.. ஆகவே , ‘ தாயினும் சாலப் பரிந்து ‘ என்றார் . ஓய்வி லாதன உவமனில் இறந்தன     ஓண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்     என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள்  புரிந்தஎன்     தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்     செழுங்கடல் புகுவேனே .  ( திருச்சதகம் ). தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு தாயினும் நல்லன்  தாழ்சடை யோனே ( திருமந்திரம் ). மண்ணுலகத்தில் , ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்  தாயால் , இவ்வுடலை மட்டுமே பாலூட்டி வளர்க்க இயலும் . உள்ளத்தில் மறைந்தொளிரும் ஞான ஒளியை வளர்க்க வல்லவன் இறைவன் ஒருவனே !!… இதன் காரணமாகவும் , இறைவனைத் தாயினும் மேலானவன் என்றார் . கர்மவினைகளால் பிணிக்கபட்டுள்ளமையால் , ‘ பாவியேன் ‘ என்றார் .  வினைகளை , இறைவன் தம் கருணையால் நீக்கி , தம்மை ஆட்கொண்டு அருள் செய்த விதத்தினை அடுத்து வரும் வரிகளில் உரைக்கிறார் . இறைவனால் ஆட்கொள்ளப்படும் நிலையில் , முதலில் அன்பு மேலீட்டால் உடல் உருகும் .. அதாவது , உடல் புளகாங்கிதம் அடைவது முதலான மாற்றங்கள் தோன்றும் . அதன் பின் , உள்ளம் இறைஞானத்தைப் பெறும் . ஞான ஒளி பெற்ற உள்ளத்தில் , மாயத் திரை விலகப் பெற்று , பரந்த இப்பிரபஞ்சமெங்கும் சிவமே நிற்கும் அண்டவெளிக் காட்சி அருளப் பெறும் . இதனையே ‘ ஊனினை உருக்கி , உள்ளொளி பெருக்கி ‘ என்றார் .. இதே பொருள் தோன்றும் வகையில் அமைந்துள்ள மற்றொரு திருச்சதகப் பாடல் … வான நாடரும் அறியொ ணாதநீ மறையி லீறும்முன் தொடரோ ணாதநீ ஏனை நாடரும் தெரியொ ணாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான்உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே . பேரானந்தம் ஒன்றே அழிவில்லாதது .. நிரந்தரமானது .. ஆகவே ‘ உலப்பிலா ஆனந்தமாய ‘ என்றார் . தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி  போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி  மானோர் நோக்கி மணாளா போற்றி ( போற்றித் திரு அகவல் ) பேரானந்த நிலையை , தேனாக உருவகம் செய்தார் . பேரானந்தத் தேனைச் சொரிந்து , தம் அகத்தை மட்டுமல்லாது , புறத்தையும் காத்தருளினான் எம்பிரான் என்னும் பொருள் வருமாறு , ‘ தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த ‘ என்றாராயினும் , உள்ளுறையாக , அகவழிபாட்டின் சிறப்பைத் தெரிவிக்கிறார் .  உயிர்கள் , மும்மலங்கள் நீங்கித் தூய்மை பெற வேண்டுமெனில் , அதற்கு அகவழிபாடே சிறந்தது .. முறையான பயிற்சியின் மூலம் , தியான நிலையில் , இறைவனை , அகத்தே எழுந்தருளச் செய்து வழிபடும் போது , இறைவன் அகத்தே எழுந்தருளி ,   உயிருக்கு , தனது பேரானந்த நிலையை அருளிச் செய்வான் . அதாவது , முத்தி அருளுவான் . பேரானந்த நிலையின் பிரவாகத்தைக் குறிக்கும் விதமாக , ‘ ஆனந்தமாய தேனினைச் சொரிந்து ‘ என்றார் .. இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம் எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன் வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும் மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால் சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப்  பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப்  பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே   ( சிவஞான சித்தியார் ). அகத்தே மட்டுமல்லாது புறத்தேயும் காப்பவன் இறைவன் என்னும்  பொருள் வருமாறு ‘ புறம் புறம் திரிந்து ‘ என்று உரைத்தார் வாதவூரார் . இறைவன் அகவழிபாடு செய்வோருக்கு மட்டுமல்லாமல் , புற வழிபாடு செய்வோருக்கும் அருள்பவன் என்பது இதன் உள்ளுறை . எம்பெருமானே சிவஞானத்தால் பெறப்படும் பெருநிதி . ஆகவே , ‘ செல்வமே சிவபெருமானே !!..’ என்றார் . இறைவனை , விடாது தொடர்ந்து உறுதியாகப் பற்றிப் பிடித்தமையை , ‘ தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் ‘ என்றார் . எனினும் , இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ தொடர்ந்து ‘ என்னும் சொல் , மிகுந்த பொருளாழமுடையது .. இறைவனை அடைய வேண்டுமெனத் தொடர்ந்து முயற்சி செய்து ,   இறைவனை , உள்ளத்தில் தொடர்ந்து சிந்தித்து , அதன் பலனாக , இறையருளையும் முத்தி நிலையையும் அடைந்தமையை ,   வாதவூரார் இங்கு குறிப்பாக  உரைத்ததாகவும் கொள்ளலாம் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !..   10 பதிகம் # 10 புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே .  பொருள் : “ புன்மையான , நிலையற்ற , மாமிசத்தால் ஆன இந்த உடல் , புளகாங்கிதம் எய்தி , பொன்னாலாகிய கோயிலே  இது என்று  கொள்ளும்படியாக , அதனுட் புகுந்து ,  ( ஆனந்தத்தால் ) எலும்புகளெல்லாம் உருகுமாறு செய்து , எளியேனாகிய என்னை ஆட்கொண்டருளிய ஈசனே !, குற்றமில்லாத மணியே , துன்பம் , பிறப்பு , இறப்போடு , மயக்கமும் ஆகிய பற்றுதல்களை எல்லாம் அறுத்த சோதி வடிவானவனே !.. நிலையான இன்பமே , உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் .. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது ?…” சற்றே விரிவாக .. மாமிசத்தால் ஆன இவ்வுடல் நிலையற்றதாகையால் ‘ புன்மையானது ‘ என்னும் பொருள் வருமாறு ‘ புன்புலால் யாக்கை ‘ என்றார் . ‘ புரைபுரை கனிய ‘ என்று , இறைவன் நினைவால் , உடல் புளகாங்கிதம் அடைவதைக் குறித்தாரெனினும் , இங்கு ‘ புரை ‘ என்பது , ‘ உள்ளறை ‘ என்னும் பொருளும் கொண்டு ,   ஏழு வகைத் தாதுக்களால் ஆன தூல தேகத்தையும் , சூக்கும , காரண  தேகங்களையும் ஒரு சேரக் குறித்தது .. ( ஏழு வகைத் தாதுக்கள் ….      இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை     என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ     அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல     அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும் . ( சிவஞான சித்தியார் ). தூல , சூக்கும , காரண தேகங்கள் கனிந்தது , பதி ஞானமாகிய , இறைவனைக் குறித்த ஞானத்தினாலாம் .  ஆகவே , ‘ புரைபுரை கனிய ‘ என்றார் . இதே பொருள் வருமாறு அருளப்பட்ட கோயில் திருப்பதிகப் பாடல் .. அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப்  புகுந்துநின் றுருக்கிப் பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே .( கோயில் திருப்பதிகம் ). கனிந்து நின்ற இவ்வுடலை , பொன்னாலான கோயில் என்று எண்ணுமாறு ,  இறைவன் ,  அதனுள் எழுந்தருளியமையை , ‘ பொன்னெடுங் கோயிலாப் புகுந்து ‘ என்றார் . ஆயினும் ‘ பொன்னெடுங் கோயில் ‘ என்பதற்கு வேறொரு பொருளும் கொள்ளலாம் .. இங்கு ‘ பொன்னாலான ‘ என்று பொருள் கொள்ளாது , ‘ பொன் போலும் ஒளி பொருந்திய ‘ என்று கொண்டோமானால் , ‘ பிரணவ தேகம் ‘   என்னும் ஒளியுடல் பெறுதலையே இது குறிப்பதாகக் கொள்ளலாம் .. ‘ பிடித்த பத்து ‘ பதிகங்கள் , முத்திக் கலப்புரைத்தலைச் சொல்பவை ஆதலினால் , நிறைவுப் பதிகமான இந்தப் பதிகத்தில் , இறைவன் , ஒளியுடல் அருளி , தம்மை ஆட்கொண்டமையைச் சொல்வதாகக் கொள்ளலாம் . துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என் தனக்கே அன்பகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் – இன்புருவம் தாங்கினேன் சாகாத் தனிவடிவாம்  பொற்றொளியா ல் ஓங்கினேன் உண்மை வரை .( திருவருட்பா ). பொன்னுடம் பெ னக்கு பொரிந்திடும் பொருட்டா  என்னுளம் கனிந்த என்றனி அன்பே . ( திருவருட்பா ). ‘ என்பெலாம் உருக்கி ‘ என்றது , எலும்புகளும் உருகுமாறு , பேரானந்த நிலையை அருளிச் செய்தமையைக் குறித்தாம் . துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்            துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை       என்பொலா மணியை என்சிகா மணியை            என்னிரு கண்ணுள்மா மணியை       அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை            அருட்பெருஞ் ஜோதியை அடியேன்        என்பெலாம் உருக்கி  இன்பெலாம் அளித்த            எந்தையைக் கண்டு கொண் டேனே .  ( திருவருட்பா ) எளியேனாகிய தம்மை , உலகனைத்தையும் ஆள்பவனாகிய ஈசன் , தம் நிலைக்கு ( சிவசாயுச்சிய நிலைக்கு ) உயர்த்தியமையை , ‘ எளியையாய் ஆண்ட ஈசனே ‘ என்றார் . உலகில் , குற்றங்குறையுடைய மணிகள் பலப்பல இருக்க , செந்நிறமுடைய மணியாகிய சிவபிரானுக்கு அத்தகைய தன்மைகள் ஏதும் இல்லை .. ஆகவே , ‘ மாசிலா மணியே ‘ என்றார் . சிவப்பரம்பொருளின் , குற்றமற்ற , பூரணமான நிலையை விளக்கும் பொருட்டும் ‘ மாசிலா மணியே ‘ என்று கூறியதாகக் கொள்ளலாம் . மென்னிழற் றருவை யடைபவர் தம்மை  விடாநிழல் விட்டிடு மாபோ  னின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து  நீங்கலா வினையுநீங் குறுமே  கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே  கண்மணி யேயருட் கடலே  யென்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு  மீசனே  மாசிலா மணியே .  ( குறுங்கழி நெடில் ) தேன்என இனிக்கும் திருவருட் கடலே            தெள்ளிய அமுதமே சிவமே       வான்என நிற்கும் தெய்வமே முல்லை            வாயில்வாழ் மாசிலா மணியே       ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்            உன்திருக் கோயில்வந் தடைந்தால்       ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா            ஈதுநின் திருவருட் கியல்போ .  ( திருவருட்பா )  துன்பம் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை , பிறப்பு , இறப்பு என்னும் பெருஞ்சுழல் , இவை எல்லாம் மாயை என்று எண்ணாது நிஜமே என்று எண்ணும் மயக்கம் ஆகிய பற்றுதல்களை எல்லாம் நீக்க வல்லவன் எம்பிரான் … இந்தப் பற்றுதல்களை எல்லாம் இறைவன் நீக்குவித்து , தம் சோதி வடிவைக் காட்டியருளியமையை ,  ‘ துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ ‘ என்றார் . திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் சோதி  மிக்க உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே .( அப்பர் சுவாமிகள் ) இறைவன் , நிலையான இன்ப வடிவினன் … ஆகையினால் இறைவனை ‘ இன்பமே ‘ என்றார் . அத்தகைய தன்மை கொண்ட‌ இறைவனை , ‘ உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் ‘ என்னும் பொருள் தோன்ற ‘ உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் ‘ என்றார் .  ‘ சோதி ‘ என்றும் ‘ இன்பம் ‘ என்றும் இறைவனைச் சொல்லி , அதன் பின் , இறைவனை உறுதியாகப் பற்றியமை சொல்லப்படுவதால் , இறைவனது திருக்காட்சியும் அதன் காரணமாக , இறைத்தன்மையை உணரும் அறிவும் அருளப் பெற்று , இறைவனோடு இரண்டறக் கலந்த முத்தி நிலை கிட்டப் பெற்றதால் , ‘ இறைவனோடு தாம் என்றும் இணைந்திருக்கும் நிலை எய்தியமையைக் ‘   குறிப்பால் உணர்த்துவதாக , ‘ எங்கெழுந்தருளுவது இனியே !!’ என்றார் . திருச்சிற்றம்பலம் . மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !. ‘ பிடித்த பத்து ‘ பதிகங்கள் நிறைவடைந்தன .   1 ஆசிரியர் அறிமுகம் புத்தகங்களே என் முதல் காதல் .. படித்தவற்றையும் தெரிந்து கொண்டவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இரு வலைப்பூக்கள் ( www.aalosanai.blogspot.com , www.kuviyalgal.blogspot.com ) நடத்தி வருகிறேன் .. இணையத்தில் என் முதல் கட்டுரை , வகுப்பறை (http://classroom2007.blogspot.in) வலைப்பூவை நடத்தி வரும் திரு .SP.VR. சுப்பையா அவர்களால் , ஞாயிறு தோறும் அவர் வலைப்பூவில் வெளிவரும் ‘ மாணவர் மலரில் ‘ வெளியிடப்பட்டது … அவர் தந்த ஊக்கத்தாலேயே ‘ வகுப்பறையில் ‘ தொடர்ந்து எழுதலானேன் .. ‘ வகுப்பறை ‘ வலைப்பூவில் நண்பர்கள் அளித்த கருத்துரைகள் என் எழுத்துக்களை மெருகேற்ற பெரிதும் உதவின . தற்போது , சில இணைய இதழ்களிலும் , ‘ இலக்கிய வேல் ‘ உள்ளிட்ட பத்திரிகைகளிலும் எழுதி வருகிறேன் .. தொடர்பு விவரம் : பார்வதி இராமச்சந்திரன் (tsparu2001@gmail.com) 2 எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/