[] []                                                                                                   மனிதர்களும் அமைப்புகளும் ஜேம்ஸ் ஆலன்     (தமிழில்: சே.அருணாசலம்) மின்னஞ்சல்: arun2010g@gmail.com      அட்டைப்படம்: கா.பாலபாரதி மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com      மின்னூலாக்கம் :   பெ.மகாலட்சுமி மின்னஞ்சல் : mahaperumal89@gmail.com      Men and Systems. By James Allen   (ஆங்கில முதன்நூல்: Men and Systems.  (1914)     வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.( விற்பனை கூடாது)        பொருளடக்கம் அணிந்துரை- டாக்டர். விக்டர் லூயிஸ் அந்துவான் 4  முன்னுரை 6  1.மனிதர்களும் அமைப்புகளும்-அவற்றிற்கு இடையேயான தொடர்புகளும் ஒருங்கிணைந்த விளைவுகளும் 10  2. உழைப்பு, ஊதியம், நல்வாழ்வு 16  3. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்—தெய்வீக நியதியின் பார்வையில் 21  4. தீமையில் பொதிந்துள்ள நீதி 25  5. நீதியும் அன்பும் 30  6. தன்னைத் தற்காத்துக் கொள்ளல்: விலங்கு, மனித, தெய்வீக இயல்புகளும் செயல்பாடுகளும் 32  7. புதியதொரு துணிவு 38  FreeTamilEbooks.com-எங்களைப் பற்றி 44  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 50    அணிந்துரை- டாக்டர். விக்டர் லூயிஸ் அந்துவான்                              (பேராசிரியர், LIBA, சென்னை) ------------------------------------------------------------------------------------------------- மனிதர்களும் அமைப்புகளும் என்ற இந்நூல் ஜேம்ஸ் ஆலனின் Men and Systems என்ற நூலின் தமிழாக்கம் ஆகும். ஆசிரியர்: சே.அருணாசலம்.   வாழ்க்கை என்பதே மாற்றங்களை உள்ளடக்கியது தான். இந்த மாற்றங்களினூடே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தேடிக் கொண்டிருப்பது மனித இயல்பு. மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கைக்கு அடிப்படைகள் எவை என்பதை ஆய்ந்தறிந்து தெளிவோடு மனித குலத்திற்கு வழங்கியிருப்பவர் மதிப்புக்குரிய சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன். மதக்கோட்பாடுகள் அனைத்துமே மனித வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தேடி அலைவதற்கான முயற்சிகளின் அடிப்படைகளே. வாழ்வில் முரண்பாடுகளைக் காணும் போது, சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கும் போது பல புதிர்களையும் விடையங்களையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இந்த முயற்சிகளின் அடித்தளத்தில் ஒரு கோடு அனைத்து அனுபவங்களையும் முயற்சிகளையும் ஊடுருவி பாய்வதை உணர்கின்றோம். அது தான் அடிப்படையான அறநெறி.   அந்த அறநெறி ஒரு பொதுநெறி. இது என்ன என்பதைக் கண்டு ஒரு முயற்சி எடுத்திருப்பவர் ஜேம்ஸ் ஆலன். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அடிப்படைகளை ஆராயும் முயற்சியில் பல அறிஞர்கள் காலம் காலமாக உலகெங்கிலும் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். இருபதாவது நூற்றாண்டில் பல அறிஞர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களில் மிகச் சிறந்த ஒரு சிலரில் ஜேம்ஸ் ஆலன் ஒருவர். இந்தத் தேடலில் ஆன்மீகக் கோட்பாடுகளையும் சடப்பொருட்கள் பற்றிய புரிதல்களுக்கும் தேவையான அடிப்படைகளை உருவாக்க இந்த அறிஞர்கள் எல்லாமே முயன்று வந்திருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆலன் ஆழமாகச் சிந்தித்தவர். வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்தவர். உன்னதமான சிந்தனைகளோடு மனித வாழ்வு மேன்மையடைய உழைத்தவர். வாழ்க்கையில் முன்னேறவும் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் சவால்களையும் சந்திப்பது எப்படி என்று தெளிவாகக் கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் ஆழமானவை, அருமையானவை. அவரது சிந்தனைகள் உன்னதமான சிந்தனைகள். மானுட மேம்பாட்டிற்கான மிகச் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவராக இன்றளவும் உலகெங்கிலும் போற்றப்படுபவர் ஜேம்ஸ் ஆலன்.   மெய்ஞானிகளின் மனங்கள் தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பேருண்மை என்னவென்றால் மனித குலம் அனுபவிக்கும் எல்லாத் தீமைகளும் அறியாமையில் இருந்து தான் வருகின்றன. பிரபஞ்ச ஒழுங்கை கட்டியமைக்கக் கூடிய தெய்வீக விதிகள் குறித்த மனிதனின் அறியாமையினால் எழும் எண்ணங்கள், வெறி உணர்வுகள், மனநிலைகளே துக்கம், பேரழிவு ஆகியவற்றுக்கு மூலகாரணங்களாக இருக்கின்றன. தீய எண்ணங்களே மோதல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. மனிதன் தன் அறியாமையையும் சுயநலத்தையையும் கொண்டு பேரழிவிற்கான ஒரு கருவியாகத் தன்னை உருமாற்றிக் கொள்கின்றான். வறுமை, நோய், பஞ்சம், இயற்கை பேரழிவு போன்ற அனைத்துமே மனிதனது அகவாழ்வோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்கின்றன.   மனிதர்கள் விலங்குகளின் குணங்களிலிருந்து மேம்பட்டு மனித குணங்களில் உள்ளத்தளவில் பெருமளவில் உயர்ந்து இருக்கின்றார்கள். மனித குணங்களிலிருந்து தெய்வீகக் குணங்களைப் பெற்று தெய்வீக நிலைக்கு உயர்ந்து தெய்வீக நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்று ஜேம்ஸ்ஆலன் கூறுகிறார். புத்தரும் இயேசுவும் இத்தகைய நிலையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.   ஜேம்ஸ் ஆலன் பல நூல்களை எழுதியுள்ளார். அவை உலகெங்கும் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அவருடைய நூல்களால் இலட்சக்கணக்கான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திச் சரியான பாதையில் சென்றிருக்கிறார்கள். வாழ்வில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பிறரது வாழ்க்கையையும் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்.   ஜேம்ஸ் ஆலனின் Men and Systems என்ற அருமையான நூலைத் தமிழில் கொண்டு வந்திருப்பவர் சே.அருணாசலம். இது ஒரு அரிய பெரு முயற்சி. எளிதில் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களையும் எளிமைப்படுத்தியுள்ளார். தொல்காப்பியர் எழுதிய ”மரபு நிலை திரியா மாட்சியவாகி”(தொல்காப்பியம்-639) என்பதற்கு ஏற்ப அருணாசலம் அவர்கள் ஆங்கில நூலின் சாரத்தை அழகிய தமிழில் எளிமையாக யாவரும் புரிந்து கொள்கின்ற வகையிலே மொழிமாற்றம் செய்து ஆலனின் கருத்துக்களை அழகாக வழங்கியுள்ளார். இந்த முயற்சி யாவருக்கும் பலனளிக்கக் கூடியது. இது பாராட்டுக்குரியது. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது பணி தொடரட்டும், சிறக்கட்டும். நன்றி.   டாக்டர். விக்டர் லூயிஸ் அந்துவான் (பேராசிரியர், LIBA, சென்னை)             முன்னுரை   வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்தவாறே இருக்கும் மாற்றங்கள், அதன் பாதுகாப்பற்ற தன்மை, வாழ்வின் துயரங்கள் ஆகியன மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதி வாழ்வில் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என்றால் நிலை கொள்வதற்குச் சில உறுதியான அடிப்படைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவ ஆராய்ச்சிகள், மதக் கோட்பாடுகள் என எல்லாமே இத்தகைய ஒரு நிலையான, ஒரு நிரந்தரமான அடித்தளத்தை தேடிக் கண்டு அடைவதற்கான பல் வேறு முயற்சிகள் தான். பிரபஞ்சத்தை பற்றிய எல்லா விளக்கங்களுமே, அவை சடப் பொருட்கள் பற்றியதானாலும் சரி அல்லது ஆன்மீகக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்களானாலும் சரி, அவை எல்லாமே இந்த வாழ்வில் தொடர் நிகழ்வாக அரங்கேறியபடியே இருக்கும் மாற்றங்களும் வாழ்வின் முரண்பாடுகளும் ஏதோ அடிப்படையான பொது நெறி அல்லது நெறிகளுக்குள் உட்பட்டிருப்பதை எடுத்துக் கூறும் முயற்சிகள் தான்.   கணிதவியல் தான் துல்லியமான ஒரே அறிவியல் என்று கூறப்படுகிறது; அதாவது, எந்த ஒரு விதிவிலக்கும் கூட இல்லாமல் எப்போதும் செயல்படும் ஒரே அறிவியல், கணிதவியல் தான். அப்படி என்றாலும் கூட அந்தச் செயல்பாடுகளின் உடல் தான் கணிதவியலே தவிர அதன் உயிர் என்பது அறநெறிகளே ஆகும். எந்த ஒரு கணிதச் சிக்கலுக்கும் அதன் எதிர் இணை அறநெறிக் கோட்பாடு இல்லாமல் இருந்தது இல்லை. புறச்செயல்பாடுகள், எப்படி எந்தக் காலத்திலும் கணித விதிகளுக்கு உட்பட்டு இருக்குமோ அது போலவே  அகச்செயல்பாடுகள் அறநெறி விதிகளுக்கு உட்பட்டே எந்தக் காலத்திலும் இருக்கும்.   இயல்பான எல்லா அறிவியல்களுமே அடிப்படையில் கணிதவியல் தான் என்று இப்போது கண்டறியப்பட்டு இருக்கிறது. கணிதவியலோடு மிக விலகி இருக்கக் கூடிய ஒன்று என்று பொதுவாகக் கருதப்பட்ட இசை கூட ஒரு வகையான கணிதவியலே என்று இன்று அறியப்படுகிறது. பலவகை ஓசைகள் ஒன்றிசைந்து ஒலிக்கும் அறிவியல் எதை வெளிபடுத்துகிறது என்றால், சில நிலையான இசை மெட்டுகள் குறிப்பிட்ட வகை அளவைகளிலிருந்து மாறுபடுவதே இல்லை, அவற்றை எண்களின் வடிவில் தொகுத்து விடலாம். இந்த இசை மெட்டுகள், அவற்றின் சார்பாக நிற்கும் எண்களை போல, என்றும் மாறாதவை. அவற்றின் கூட்டுச் சேர்க்கை, எண்களின் கூட்டுச் சேர்க்கை போல ஒர் எல்லை வகுக்க முடியாதவை, ஒரு குறிப்பிட்ட வகையான கூட்டு சேர்க்கை, ஒரு குறிப்பிட்ட வகை விளைவையே ஏற்படுத்தும்.   யாவற்றிலும் பொதிந்து இருக்கும் இந்தக் கணிதவியல்  அடித்தளம் தான் அறிவியல் கோயிலைத் தாங்கி நிற்கும்  மையத் தூணாகும். காலத்தினால் மாறாத இந்தக் கணிதவியல் அடிப்படை தான் புனிதர்களும் துறவிகளும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்தும்  கொந்தளிப்புகளிலிருந்தும் மீண்டு தங்கள் வாழ்வில் மாறாத பெருநிம்மதியைக் கண்டு உணரும் படி செய்தது.   மனித வாழ்வும் அதன் பரிணாம வளர்ச்சியும்  தற்போது எட்டியிருக்கும் நிலை என்பது  அதற்குரிய ஆரம்பக் கட்ட பாடங்களை கற்கும் நிலை ஆகும். அந்த ஆரம்பப் பாடங்கள் மனிதக்குலத்தை நேரான பாதையில் இட்டுச் செல்வதற்கு வேண்டிய தெய்வீக அறிவு அல்லது  என்றும் மாறாத கணிதவியல் தத்துவத்தின் அடிப்படையைப் பற்றிய புரிதலாகும். இந்தக் கணிதவியல் தத்துவத்தின் அடிப்படையைப் பற்றிய புரிதல் இல்லாமல் எந்த ஒர் பாடத்தையும் கற்க முடியாது. வாழ்வின் மூலம் அல்லது கடவுள் பற்றிய பாடத்தை மனிதர்கள் பயில்கிறார்கள் என்று சொல்லும் போது, இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதில் (1) கற்பவனிடம் நிச்சயம் ஏதோ ஒரு பகுதி அறியாமை நிலையில் இருக்கிறது (2) அவன் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அறிவு நிச்சயம் இருக்கிறது. பள்ளியில் பயிலும் குழந்தையைப் பார்க்கும் போது இதைத் தெளிவாக உணர முடியும். அந்தக் குழந்தை பயிலும் பாடங்கள் மாற்றத்துக்கு உள்ளாகாத ஒர் அறிவை நோக்கிய பயணமாக அந்தக் குழந்தையை முன்னேறச் செய்கிறது. அப்படிப்பட்ட ஒர் அறிவை நோக்கிய பயணமாக இல்லாமல் எந்த பாடமும் இருந்தது இல்லை.   எனவே, தவறு இழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்வின் பாடங்களைக் கற்கும் நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள் என்று ஒருவன் குறிப்பிடும் போது அவன் அறிந்தோ அறியாமலோ அவன் குறிப்பிடுவது, என்றும் நிலையான அடித்தளமாக விளங்கும் மெய்யறிவினை தான். அந்த மெய்யறிவைப் பெறும் நோக்கில் தான் எல்லா மனிதர்களும் பயணிக்கிறார்கள்.   இந்த அடிப்படை அறநெறி குறித்த தெளிவான அறிவைக் காலப்போக்கில் முழு மனித இனமும் பெறும் என்பதற்குச் சான்றாக முன்நிற்கும் சொற்பதம் தெய்வீக நியதி. மனித நீதி, ஒருவன் உள் இருக்கும் ஒளி அல்லது இருளைப் பொறுத்து ஒவ்வொரு மனிதனிடத்தும் வேறுபடும், ஆனால் தெய்வீக நியதி வேறுபடாது.  அப்படி வேறுபடாதிருப்பதன் காரணமாகவே பிரபஞ்சம் என்றும் காப்பாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தெய்வீக நியதி என்பது ஆன்மீகக் கணிதவியல் ஆகும். எண்களோடும் பொருட்களோடும், எளிமையானதாகவோ அல்லது குழப்பம் மிக்கதாகவோ போடப்படும் கணக்கு, சரியான ஒரு விடையையே எப்போதும் தரும்.   அறியாமையைக் காரணம் காட்டியோ அல்லது தவறுகளை வேண்டும் என்றே உட் புகுத்த முனைந்தோ வேறு விடையைப் பெற முடியாது. அதே விடையைத் தான் அந்தக் கணக்கு என்றும் எப்போதும் கொடுக்கும். அது போலவே, எண்ணங்கள் அல்லது  செயல்களின் ஒவ்வொரு கூட்டுத் தொகுப்பும், அவை நன்மை அல்லது தீமை என எதுவாக இருந்தாலும், அவற்றின் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். அதை மாற்றி அமைக்கவோ தவிர்க்கவோ முடியாது.   ஒரு வேளை இது இவ்வாறு இல்லை என்றால், நாம் செயலை செய்யாமல் பலனை அனுபவிக்க முடியும் என்றால், அல்லது காரணத்தின் தொடர்பின்றி விளைவை நாம் உருவாக்க முடியும் என்றால், அனுபவம் ஒரு போதும் மெய்யறிவிற்கு இட்டுச் செல்ல முடியாத நிலையை அடையும். பாதுகாப்பு வழங்கக் கூடிய எந்த அடிப்படையும் இருக்காது. எந்தப் பாடத்தையும் கற்க முடியாது.   இவ்வாறு, ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இடையில் அநீதி உட்புகுந்து இடம்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் காரணங்களும் விளைவுகளும் பின்னிப் பிணைந்து நெருங்கிய உறவைக் கொண்டிருக்கின்றன. அறியாமை நிலவிக் கொண்டு தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அறியாமையினால், வாழ்வின் பாடங்கள் தவறாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறு, தவறாகச் செய்வது தான், மனிதர்களின் துன்பத்துக்குக் காரணமான பிழை, அல்லது பாவம். பள்ளியில் தனக்கு வழங்கப்படும் கணக்குகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்று குழந்தை எத்தனை முறை கண்ணீர் வடிக்கின்றது. தங்களது செயல்பாடுகளின் கூட்டுத் தொகையாக விளங்கும் விடையானது மகிழ்ச்சிக்குப் பதிலாகத் துன்பத்தைத் தரும் போது, வாழ்வு என்னும் பள்ளியில் படிக்கும்  வளர்ந்து விட்ட  குழந்தைகள் ஆகிய மனிதர்களும் அதையே தான் செய்கிறார்கள்.     எனவே, வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கு இடையிலும் பாதுகாப்பாக நிலை கொண்டிருப்பதற்கு ஒர் உறுதியான தளமாக இருப்பது, துல்லியமான கணிதவியலாக விளங்கும் இயற்கை நியதியேயாகும். பிரபஞ்சத்திற்கான இயற்கை நியதி சரி விகிதச் சம நிலையில் அன்றி வேறு வகையில் இருக்க முடியாது. ஒரு வேளை அப்படி இருந்தால், பிரபஞ்சம் துண்டு துண்டாகச் சிதறும்.  செங்கல் கற்களால் ஆன ஒர் வீடு,  வடிவியல் விகித நிலைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டிருந்தால் மட்டுமே சிறிது காலம் நிலைத்து நிற்க முடியும் என்னும் போது, ஒரு மிகப் பெரிய பிரபஞ்சமானது, எண்ணிக்கையில் அடங்காத, எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவங்களோடும் , அசைவுகளோடும் சிதறாத கம்பீரத்தோடு யுகங்களாகச் செயல்படுகிறது என்றால் தவறிழைக்காத மறுக்கமுடியாத நீதியால் அல்லாமல் வேறு எப்படி நடை பெற முடியும்?   மனிதர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டுள்ள இயற்கை விதிகள் தங்கள் செயல்பாடுகளில் என்றுமே நெறி பிறழ்வது இல்லை. காரணம் ஒன்று இருந்தால், அதற்கேற்ற விளைவு நிச்சயமாக இருக்கும். மனிதர்களுக்கு நன்கு பரிச்சயமாகியுள்ள தெய்வீக நியதிகளும், அதே போன்று தங்கள் செயல்பாடுகளில் என்றுமே நெறி பிறழ்வது இல்லை, நெறி பிறழவும் முடியாது. வாழ்க்கைச் சூழலில், ஒரு வகையான எண்ணம் அல்லது செயலை நல்கும் போது, அதற்கேற்ற விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த அற நெறிகள் அடிப்படையாக அமையப் பெறவில்லை என்றால் மனித சமூகம் இருக்க முடியாது, காரணம், தனிநபர்களின் பதில் உணர்வாக வெளிப்படும் அறம் சார்ந்த செயல்களே சமூகம் உடைந்து விழுவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.   எனவே, பங்கிடப்படும் இன்ப துன்பங்களின் அடிப்படையில் காணப்படும் வாழ்வின் ஏற்றத்தாழ்வு நிலை என்பது அறநெறிகளின் ஆற்றல்கள் துல்லியமாகச் செயல்படுவதால் உருவாவதாகும். தடம்புரளாத இந்த நீதியே என்றும் மாற்றத்துக்கு உள்ளாகாத வாழ்வைத் தாங்கும் உறுதியான அடிப்படையாகும். இதைக் கண்டு உணர்வது, மனிதன் தன் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதை உறுதி செய்யும். அவனை மெய்யறிவு மிக்கவனாகவும் மெய்ஞானம் மிக்கவனாகவும் மாற்றும். நிம்மதியும் பெருமகிழ்வும் அவன் வாழ்வில் ததும்பி வழியும்.   மனிதனின் உணர்வுநிலையிலிருந்து வழுவாத இந்த நீதி மீது, அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அகற்றுவதாக வைத்துக் கொள்வோம். அவனது நிலை அந்தக் கனமே அலைகடலில் சுக்கான், வரைபடம் அல்லது திசைகாட்டும் கருவி  என எந்த ஒர் கருவியின் உதவியுமற்ற படகு போல அவனது வாழ்வு அடித்துச் செல்லப்படும். தனது வாழ்வு அல்லது குண இயல்புகளை வளர்த்து எடுப்பதற்கான உறுதியான அடித்தளம் அவனிடத்தில் இனி இல்லை. அறநெறியாகச் செயல்பட வழிநடத்தும் எந்த மையமும் அவனிடத்தில் இல்லை. அவனால் நிம்மதி என்னும் தீவை அடைய முடியாது, புகலிடம் என்னும் துறைமுகத்திற்குள் நுழைய முடியாது. கடவுளை மிகச் சக்தி படைத்த ஒர் மனிதனாக, தவறிழைக்காத மனதை உடையவனாக, பாரபட்சமோ அல்லது பாகுபாடோ அற்ற ஒர் உயர்ந்தவனாக, ஆண்டவன் என்று சித்தரிக்கும்  ஒரு மேம்போக்கான சிந்தனை கூடத் தெய்வீக நியதி என்னும் அடிப்படை அறநெறியின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு தான்.   இந்த அறநெறியின் படி சலுகைகளோ அல்லது அதிட்டமோ இல்லை, ஆனால் தவறிழைக்காத, மாற்ற முடியாத நியாயம் மட்டுமே உள்ளது. எனவே, மனிதர்களின் எல்லாத் துன்பங்களும் அறநெறியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுகளே. அவற்றின் காரணம், அவர்கள் அறியாமையில் இழைத்த தவறுகளே. அவை விளைவுகள் மட்டுமே என்பதால், அவை நீங்கிப் போகும். தான் செய்த ஒன்றிற்காகவோ அல்லது செய்யத் தவறிய ஒன்றிற்காகவோ அன்றி வேறு எதற்கும் ஒரு போதும் மனிதன் துன்புற முடியாது.  அவ்வாறு நேர்ந்தால், அது காரணமின்றி தோன்றிய விளைவாகிவிடும். மனிதன் அவனாலேயே துன்புறுகிறான். எங்காவது விளைவிருந்தால் அங்கே அதற்கான காரணமும் இருக்கும். காரணம் எப்போதும் உள்ளிருக்கும், வெளி இருக்காது. மனிதர்கள் இன்று அறுவடை செய்யும் விளைவுகள் யாவும் அவர்கள் முன்பு விதைத்த ஒன்றின் விதைகளே. இன்றைய நல்மனிதன் முன்பு செய்த தீங்கின் பயனை அறுவடை செய்யலாம். இன்றைய தீய மனிதன் முன்பு செய்த நன்மையின் பயனை அறுவடை செய்யலாம். நன்மை துன்புறுவதையும் தோல்வியடைவதையும், தீமை இன்புறுவதையும் வெற்றி பெறுவதையும் பொதுவாகக் காணும் போது ஏற்படும் கேள்விக்கு அறநெறிக் கோட்பாடுகளின் ஒளி வீச்சில் காணும் போது விடை கிடைக்கும். எந்த ஒன்றும் காரணமின்றி மேல் எழுவதில்லை. காரணம் மற்றும் அதன் விளைவு என்னும் நீண்ட தொடர்வரிசை, அவை மேல் எழுந்ததன் பின்னணியில் இருக்கின்றன, அது போன்ற ஒரு நீண்ட தொடர்வரிசை எதிர்காலத்திலும் தொடரும்  பெருநிலப்பரப்பில் உள்ள பொருட்களைக் காணும் போது  கண்ணோட்டத்தை நாம் தெளிவு படுத்திக் கொள்கிறோம். நிகழ்வுகளைக் கவனிக்கும் போதும் தெளிந்த கண்ணோட்டத்துடன் நாம் காண வேண்டும்.   தெய்வீக நியதி என்னும் இந்த அறநெறி தெய்வீக விதிகளிலிருந்து வேறுபட்டதல்ல. இரண்டும் ஒன்று தான். பாகுபாடு மிக்க மனிதர்கள் அன்பிலிருந்து நியாயத்தைப் பிரித்தெடுப்பார்கள். அவை ஒன்றோடு ஒன்று எதிரானது என்றும் கருதுவார்கள், ஆனால், ஆன்மீக வாழ்வில் அவை ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்.   நியாயத்தை எதுவும் வீழ்த்த முடியாது. நமது அறியாமை மற்றும் தவறுகளின் விளைவுகளைத் தப்பாமல் அனுபவிக்க வேண்டும் என்று துன்பத்தை விரும்பி ஏற்று அதன் வாயிலாகக் குறைகளைச் சரிப்படுத்திக் கொள்வதை விட மேலான ஒன்றை நாம் விரும்ப முடியாது. என்றும் மாறாத,  ஒரு போதும் தவறிழைக்காத, ஒரே ஒரு செயலையும் கூட  காணாமல் கடந்து செல்லாத இந்தத் தெய்வீக அன்பில் தான் நாம் அடியொற்றி மீள்வதற்கான உறுதியான பாறை நிலைகொண்டுள்ளது. மாற்றத்துக்கு உள்ளாகி, மாறும் தன்மை கொண்ட ஒன்றின் மீது நம் காலடியை உறுதியாகப் பதிக்க முடியாது. என்றும் மாறாத, காலத்துக்கும் உண்மையான ஒன்றின் மீது தான் நிரந்தரமான நிம்மதியும் பாதுகாப்பும் குடியிருக்கும். தீயதைக் கைவிட்டு நன்மையைப் பற்றி இந்த அறநெறி கோட்பாட்டில் தஞ்சம் புகுந்தால், வாழ்வின் எல்லா மாற்றங்களுக்கு இடையிலும் நாம் உறுதியாக நிற்கக் கூடிய அடித்தளத்தை பற்றிய மெய்யறிவை நாம் அறிய முடியும். காலத்திற்கும் நிற்கும் பாறையின் மீதான புனிதர்களின் புகலிடத்தை நாம் கண்டு அடைந்துள்ளோம்.   ஜேம்ஸ் ஆலன் “ப்ரைன்கோல்யூ” இல்ஃப்ராகோம்பு. 1.மனிதர்களும் அமைப்புகளும்-அவற்றிற்கு இடையேயான தொடர்புகளும் ஒருங்கிணைந்த விளைவுகளும்   மனிதர்களின் செயல்பாடுகளுக்குத் துணைபுரிவதற்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பு முறைகளின் மீது இன்றைய காலத்தில் ஒரு பரவலான எதிர்ப்பு நிலை காணப்படுகிறது. இந்த அமைப்புகள் எல்லாம், ஏதோ மனிதர்களுடன் தொடர்பில் இல்லாமல் எங்கோ தனித்து இருந்து மனித குலத்தையே  இயக்கிக் கொண்டிருப்பதாக, கட்டுப்படுத்துவதாக அல்லது ஆட்டுவிப்பதாகக் கருத்து வேறுபாடின்றி குறிப்பிடப்படுகிறது. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களுக்குத் தலைமை ஏற்பவர்கள் தங்கள் பேச்சுகளில் “வணிக அமைப்பு”, “சமூக அமைப்பு”, ”போட்டி சூழல் அமைப்பு”, ”அரசியல் அமைப்பு” என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.  பரவிக்கிடக்கும் தீங்குகளான வறுமை, பாவச் செயல்கள், குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட அமைப்பே பொறுப்பு என்று கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்புக்கள் எல்லாம் அப்பாவியான மனிதக்குலத்தின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் உடல், உருவமில்லாத  இராட்ச்ச கொடுங்கோலர்களாகச் சித்தரிக்கப்படுகிறது.   அவ்வாறு தன்னிச்சையாக இயங்கும் எந்த ஒர் புற அமைப்பிற்கும், இடம் இருப்பதாகச் சொல்ல முடியாது. அப்படி இருப்பதாகச் சொல்வது ஒரு மாயை. மனிதர்கள் ஏற்படுத்தும் அமைப்புக்கள், மனிதர்களின் ஆசைகள் மற்றும் தேவைகளிலிருந்து வேறானதாகப் பிரிந்து இருக்க முடியாது. அவை, உண்மையில் அவர்களது ஆசை மற்றும் தேவைகளின் புற வெளிப்பாடு தான். ஒர் அமைப்பு என்பது ஒன்றிணைந்த சமுகத்தின் கூட்டுச் செயல்பாடே அன்றி வேறு அல்ல. செயல்பாடுகள் அந்த அந்த முறைமைகளில் தான் இருக்கும் என்பதை அனைவரும், அல்லது கிட்டத்தட்ட அனைவரும் ஏற்கும் ஒரு கையெழுத்தில்லாத உடன்பாடு முன் வைக்கப்படுகின்றது. மனித இனம் ஒரு வகையான முறையில் செயல்படத் தனது ஒப்புதலை வழங்குகிறது. அவ்வாறு செயல்படுவதன் காரணமாகவே ஒரு அமைப்பு உருவாகின்றது. அவர்கள் செயல்பட மறுத்தால், அந்த அமைப்பு மறைந்து விடும்.   ஒர் அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஒருவன் தனது தினசரி வாழ்வில் உடன்பட்டுச் செயல்படுகிறானா அல்லது செயல்பட மறுக்கிறானா என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறதே தவிர அந்த அமைப்பின் மீது அவன் கொண்டிருக்கும் ஆதரவு மனப்பான்மை அல்லது எதிர்கருத்து என்பது எந்த ஒரு பாதிப்பையோ தாக்கத்தையோ ஏற்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் உதட்டளவில் ஒரு அமைப்பை வன்மையாகக் கண்டிக்க முடியும், ஆனால் அந்த அமைப்பின் திட்டங்களை ஏற்றுச் செயல்படுவதன் வாயிலாக அவன் உள்ளத்தில் அதோடு ஒத்துழைக்கிறான் என்பதைக் காண முடியும். சமயக் கோட்பாடுகள் குறித்து வேடம் தரிப்பதை நாம் எல்லோரும் பொதுவாக அறிந்திருக்கிறோம். சமயங்கள் பாவச் செயலை கண்டிக்கும் போது( கிட்டத்தட்ட விழிப்புணர்வு இல்லாமலேயே) முழுமையாக ஆதரித்து விட்டு, அதே பாவச் செயலை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வாறு மேலோட்டமாக, கருத்தியலாக ஒன்றை எதிர்த்துவிட்டு செயலளவில் அதோடு உடன்படுவது, வாழ்வில் நடைமுறையாவதைக் காண முடிகிறது. இவ்வாறு விழிப்புணர்வின்றி, சொல் ஒன்று செயல் வேறாக இருக்கும் நிலை என்பது மத தொடர்பான செயல்பாடுகளுக்கு மட்டும் உட்பட்டு இருக்கவில்லை.       அது எல்லா வகையான கடமைகளைச் செயல்படுத்தும் போதும் முன்நிற்கிறது. செயல் நிலையிலிருக்கும் அமைப்புகளில், கொள்கையளவிலானச் சீர்திருத்தங்களை எந்த அளவிலாவது மேற்கொள்ள வேண்டும் என்பது முதன்மை குறிக்கோளாக இருக்கும் திசைகளில், இது மிக அதிக அளவில் வலிமையாகக் காணப்படுகிறது. ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகின்றன என தற்போதைய முதலாளித்துவ அமைப்புக்களைக் கண்டனம் செய்யும் பொதுவுடைமைவாதிகளிடம், அவர்களே அத்தகைய நிறுவனங்களின் இலாப பங்கீட்டில்(டிவிடன்ட்), அதாவது மற்ற மனிதர்களது உழைப்பிற்கான ஊதியத்தில்  வாழவில்லையா, தீமை என்று ஒவ்வொரு நாளும் முழக்கமிடும் ஒன்றையல்லவா ஊக்குவிக்கிறீர்கள் என்று கேட்கும் போது அவர்கள் அனைவரது ஒருமித்த பதில், “நீங்கள் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது, அமைப்பைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.”    இந்தப் பதில் எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால், தங்களது செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் சார்ந்திராமல் தனித்தியங்கும் ஒரு கொடுங்கோன்மையான ஒரு புறச்சூழ்நிலைக்கு எதிராக ஏதும் செய்ய இயலாத நிலையில் அதற்கு இரையாவதாகக் கருதி, மனிதர்கள் அதற்கு ”அமைப்பு” என்று பெயரிடுகிறார்கள். ”அமைப்பு” என்று மக்கள் கண்டிப்பது தாங்கள் ஒருவகையான செயல்பாடுகளில் ஈடுபட்டால் அது தீமையல்ல, ஆனால் மற்றவர்கள் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தீமை என்பது, சிறிதளவு ஆழ்ந்து சிந்தித்தால் கூடத் தெளிவாக விளங்கும்.   மனிதர்கள் உருவாக்கும் அமைப்புக்கள் என்பது மனிதர்கள் செயல்படுவதற்கென வடிவமைத்துக் கொண்ட வழிமுறைகளே. மனிதர்கள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில், எழுதப்படாத ஒப்பந்தமாக அச்செயல்பாட்டு முறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டியே ஒரு அமைப்பு நீடித்து நிலைபெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வகை அமைப்பின் செயல்பாட்டை நடைமுறைபடுத்த விரும்புபவர்கள், அதன் சாதகமான அம்சங்களை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் அதன் பாதக அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் தவிர்க்கவியலாத ஒரு முக்கியக் கூறு. சாதகமான அம்சங்களுக்காகப் பாடுபட்டு அடைவதற்கான முயற்சி ஒரு புறம் இருந்தால் அதற்கு நேர் இணையான பாதகமான அம்சங்களும் நிச்சயம் இருக்கும். மனிதர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றி, தோல்வி என இரண்டும் எப்போதும் இருக்கும்.   ”அமைப்பின் கொடுங்கோன்மைக்கு இரையாகும் அப்பாவிகள்”  என்ற மிகப் புழக்கத்தில் இருக்கும் சொற்றொடர் இந்த ஒளி வெளிச்சத்தில் ஆழமற்ற, மாயையான ஒன்றாகக் காணப்படுகிறது. ஒரு அமைப்பின் செயல்பாட்டில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ, அதில் ஈடுபடும் எவரையும் இரையாகும் அப்பாவிகள் என்று கருத முடியாது. குற்ற உணர்வு இருந்தால், அந்த குற்ற உணர்விற்கு எல்லோரும் பொறுப்பு. மேலோட்டமான, வெளிப்பார்வைக்கு மட்டுமே குற்றமற்ற அப்பாவியாகக் காட்சி தர முடியுமேயன்றி அடிப்படையுடன் கூடிய ஒரு நிதர்சனமாக இருக்க முடியாது.    பன்நெடுங்காலமாகப் போராடிச் செயல்பட்டு மாற்றங்களுக்கு உள்ளாகி நிலைப்பெற்று விளங்கக் கூடிய மனிதர் உருவாக்கிய அமைப்புக்களில், உண்மையாகவே பாவங்களற்றத்தன்மை அல்லது குற்ற உணர்வு என இரண்டும் தொடர்பிலிருக்காது. ஒரு புறம், வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கின்றன. மறுபுறம், தோல்வியும் துக்கமும் இருக்கின்றன. தோல்வி அடைபவர்கள் அப்பாவிகளும் அல்ல, வெற்றி அடைபவர்கள் குற்ற உணர்வு கொண்டவர்களும் அல்ல. இந்த இரண்டு நிலைகளுமே, மனிதர்களின் செயல்பாடுகளால் சமூக வாழ்வில் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள். போட்டி அல்லது போராட்டம் என ஒன்றிருந்தால், வெற்றி அல்லது தோல்வி என்பது உடனிருக்கும்.   இதை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள ஒர் எளிய எடுத்துக்காட்டு ஒன்றைக் காணலாம். இங்கே ஒரு பத்து மனிதர்கள், தங்களுக்குள்ளாகவே, ஒரு வகையான சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்புதலை ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொள்கிறார்கள். இப்போது, இந்தப் பத்து பேரில், ஒவ்வொருவனின் குறிக்கோளும், வெற்றி பெற வேண்டும், சூதில் வைத்த பணத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனாலும், அதை இழப்பதற்கான வாய்ப்பும் உண்டு என்பது அனைவருக்குமே தெரியும். சிலர் அதை நிச்சயம் இழக்க வேண்டும். அது தான் அந்த விளையாட்டின் தவிர்க்க முடியாத சிக்கல். அவர்கள் உடைமைகளைச் சூதில் அடகு வைத்து ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய உடனேயே  ”சூதாட்ட அமைப்பு” ஏற்பட்டு விடுகிறது. அந்த அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் விரைவில் வெளிப்படத் தொடங்கி விடும். அவர்களது செல்வ அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. சிலர் வெற்றி பெற்று மேன்மேலும் செல்வத்தை குவிக்கிறார்கள். சிலர் தோல்வியடைந்து இருப்பதை இழந்து தவிக்கிறார்கள். இறுதியாக, அதில் சிலர், இருப்பதை முற்றிலுமாக இழந்து வெளியேறுகிறார்கள். இழந்தவனின் பங்கை மற்றவர்கள் பெற்றுத் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.   இப்போது, வெற்றி பெற்றவர்களை தோல்வியடைந்தவர்களின் செல்வத்தை அபகரித்துக் கொண்டவர்கள், குற்ற உணர்வு அவர்களை உறுத்த வேண்டும் என்று சொல்ல முடியாது. தோல்வியடைந்தவர்களைச் சூதாட்ட அமைப்பில் ஈடுபட்டு அதன் கொடுங்கோன்மைக்கு இரையாகியுள்ள அப்பாவிகள் என்றும் சொல்ல முடியாது. இந்தப் பத்து மனிதர்களின் மனப்பான்மையிலும் செயல்பாட்டிலும் குற்ற உணர்வும் இல்லை, அப்பாவித்தனமும் இல்லை. ஒரு செயல்பாட்டமைப்பின் தவிர்க்க முடியாத விளைவுகளான சாதகமான அம்சங்கள் ஒரு புறம், பாதகமான அம்சங்கள் மறுபுறம் என  ஏற்று, அதில் ஈடுபடுவதற்கு ஒருவரோடு ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.   இதே போன்று தான் மனிதர்கள் ஈடுபடும் ஒவ்வொரு அமைப்பும். அதில் தண்டிக்கப்படும் அப்பாவிகளும் இல்லை, குற்றவுணர்வுடன் விளங்கும் கொடுங்கோலர்களும் இல்லை. தோல்வியுற்றவர்களை அல்லது தற்சமயத்தில் இழப்புக்கு உள்ளானவர்களைக் குறிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்னும் சொற்பதத்தை வேண்டுமானால் மனிதர்கள் பயன்படுத்தலாம். ஆனால், அவர்கள் தங்களது செயல்களால் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், தங்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு புற ஆற்றல் அவர்கள் மீது அநியாயத்தைச் சாற்றியிருப்பதாக கூற முடியாது. சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர்களுள், யாரும் தண்டிக்கப்படவில்லை. தங்களை தாங்களே தண்டித்துக் கொண்டால் அன்றி வேறு யாராலும் அவர்களைத் தண்டிக்கவும் முடியாது. அந்த அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள், அதாவது-தங்கள் செயல்பாடுகளால் அதை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் செய்யாதவர்கள், அதனால் பாதிக்கபடாமால் இருக்கிறார்கள். எனவே, பல சமூக சீர்திருத்தவாதிகள் குறிப்பிடுவது போல, நமது தற்போதைய வணிக அமைப்புக்கள், “பேராசை மிக்க அமைப்புக்கள்” ஆக உருவெடுத்திருக்கின்றன என்றால் பேராசை மிக்கவர்களை அன்றி மற்றவர்கள் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.   உலகம் பேராசையால்  நிறைந்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனித இனம் தனது தற்போதைய பரிணாம வளர்ச்சி கட்டத்தில் அதன் பெரும்பாலான பாடங்களைச் சுயநலப் பாதையில் சென்றே கற்றுக் கொள்கின்றது. எந்த ஒரு புற”அமைப்பிலும்” பேராசை என்பது இருக்க முடியாது, அது மனிதர்களது உள்ளத்தில் தான் இருக்கின்றது. பேராசையால் பேராசை கொண்டவர்களே பாதிப்புக்கு உள்ளாக முடியும். தங்கள் உள்ளத்திலிருந்து பேராசையை அழித்தொழித்தவர்கள் இடையே வணிகம் பேராசையின் சுவடின்றி காணப்படுகிறது. ஆனால், பேராசை மிக்கவர்கள், ஒவ்வொன்றையும், சமய மதங்களையும் கூட, தங்களது சொந்த களங்கத்தால் கறைப் படுத்துகிறார்கள்.   தொழில் துறை என்பது ஒரு நாட்டின் ஆற்றல் மற்றும்  திறன்களின் வெளிப்பாடு. அது போற்றுதலுக்குரிய ஒன்று. பேராசையை ஈடேற்றத் துடிக்கும் பேராவல் தான் துன்பத்தை ஏற்படுத்துகிறது. பேராசை எண்ணங்களை ஈடேற்ற முற்படுபவர்கள் மட்டும் தான் அதனால் பாதிக்கப்படுவார்கள்.   நிறுவனத்தை முன்னிலைப்படுத்த அபகரிக்கும் எண்ணத்தோடு செயல்படும் நிறுவன செயற்பாட்டாளர்களின்/விளம்பரங்களின் வலையில் விழுபவர்கள் அப்பாவிகள் தானே என்ற பொதுவாக முன் வைக்கப்படும் கருத்திற்கான பதில்(இந்தப் பதில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா அமைப்பு மற்றும் சூழல்களுக்கும் பொருந்துவதாக இருக்கும்), “அவர்கள் அப்பாவிகள் அல்ல, அந்த விளம்பரத்தின் உட்கருத்தான பேராசை அல்லது ஈடான உழைப்பை வழங்காமல் பொருளை ஈட்டும் மனப்பான்மை அவர்களுக்குள்ளும் இருக்கின்றது. தங்களுக்குள் இருக்கும் பேராசையின் காரணமான விளைவை ஏற்படுத்தும் கருவியாக அந்த விளம்பரம் செயல்படுகிறது. அவர்கள் தங்கள் பேராசையினால் தான் தண்டிக்கப்படுகிறார்கள்.   முதலாளித்துவ அல்லது வணிகத்துவ அமைப்புக்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் கண்டிக்கிறார்கள். ஆனால், அதே நேரம் அவர்கள் பேராசை எண்ணங்களை ஊக்குவிக்கும் வணிகத்துவ அமைப்புகளின் சில பகுதிகளோடு இயைந்து செயல்படுகிறார்கள். எடுத்துகாட்டாகச் சொல்ல வேண்டும் என்றால் வணிக அமைப்புகளின் அடிப்படையான தொழில் சார்ந்த துறைகளிலிருந்து வேறுபட்ட, உறுதியான அடிப்படையின்றி ஊகத்தின்(speculation) அடிப்படையில் ஏற்ற இறக்கமாகும் “இலாப முதலீடுகள்” (good investment), அதிகமான ”இலாப ஈட்டுத் தொகையின் பங்கு” (dividends) குறித்த பேராவல் போன்றவைகளைச் சொல்லலாம். இவற்றோடு அவர்கள் இயைந்து செயல்படும்போது வணிகத்துவ அமைப்புகளை ”பேராசையின் விளைவான அமைப்புக்கள்”(அது உண்மையும் கூட) என்று தான் அழைக்க முடியும்.   மற்றவர்களது உழைப்பின் பலன்களைக் கொண்டு வாழ்பவர்கள் அல்லது அப்படி செய்யும் உணர்வுடையவர்கள்(ஊதியத்திற்கு ஈடான உழைப்பை வழங்காமல் பணத்தைப் பெற்று கொள்ள நினைப்பவர்களின் எண்ணிக்கை என்பது மிக அதிகம்), அதாவது,  உறுதியற்ற ஊகங்களின் அடிப்படைகளை முன்னிறுத்தி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள்-, வறுமையும் பற்றாக்குறையும் இருப்பதைக் குறித்துச் சலித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்கள் செயல்பாடுகளின் வாயிலாக ஊக்குவிக்கும் அமைப்பின் தவிர்க்க இயலாத பாதகமான அம்சங்களாக வறுமையும் பற்றாக்குறையும் இருக்க, சாதகமான அம்சங்களாக ஆடம்பரமும் செல்வச் செழிப்பும் இருப்பதை அவர்கள் உணர வேண்டும்.   செல்வந்தன் ஆவதற்கான உழைப்பை வழங்காமல் திடீர் என்று ஒரு நாள் பணக்காரனாகிக் காலம் முழுக்க வசதியாக வாழ வேண்டும் என்னும் ஒரு கற்பனை எண்ணம் பல ஏழைகளிடம் பரவியிருப்பதைக் காண முடியும். பேராசையின் பிடியில் சிக்கி மனித மனங்கள் உலாவிக் கொண்டிருக்கும் வரை, தேவைகளும் வறுமையும் தொடரவே செய்யும்.   மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். பின்பு செயல்படுகிறார்கள். அவர்களது ஒட்டு மொத்த  செயல்பாடுகளின் கூட்டுத் தொகுப்பையே மக்கள் அமைப்பு என்று கூறுகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த பத்து பேரும் உழைக்காமலேயே, மற்றவர்களின் இழப்பில் தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ள ஆசைப்பட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டார்கள். அவர்களது ஒட்டு மொத்த  செயல்பாடுகளின் கூட்டுத் தொகுப்பான அமைப்பே பல விகித சேர்க்கைகளில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, அமைப்புக்கள் என்பது எத்தனையோ தனி நபர்களின் செயல்கள், அவற்றுக்கான மறு செயல்களின் கூட்டுத் தொகுப்பே. தனி நபர்களின் செயல்கள், அவற்றுக்கான மறு செயல்களின் கூட்டுத் தொகுப்பே அமைப்பு என்பதை மறந்து, உலகில் உள்ள தீமைகளுக்கு எல்லாம் மனிதர்கள் அமைப்புகளின் மீது பழியை சுமத்துகின்றனர்.   ஒரு அமைப்பு ”அநியாயம்” ஆனதாக  இருக்க முடியாது, காரணம் மனிதர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவுகளை தவிர்க்க இயலாமல் அறுவடை செய்கிறார்கள். உலகில் தலைதூக்கும் தீமைகள், அநியாயத்தின் இருப்பை சுட்டிக் காட்டவில்லை, மாறாக, நியாயத்தின் இருப்பையே சுட்டிக்காட்டுகின்றன. தற்கால சமூக வாழ்வு அல்லது அமைப்பு, அதாவது, மனிதர்கள் ஒப்புக் கொண்டுள்ள செயல்படு முறைகளின் இயற்கையான பாதகமான அம்சங்களாக வறுமையும் பற்றாகுறையும் இருக்கின்றன. அந்த பாதகமான அம்சங்களையும் ஏற்றுத் தான் மனிதர்கள் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, துன்பம் இருக்கிறது, அதை மறுக்க முடியாது. ஆனால், அநியாயம் இருக்கிறது என்று கூற முடியாது. சூதாட்டத்தில் பணத்தை இழந்த தோல்வியாளர்களுக்கு வெற்றியாளர்கள் அநியாயம் செய்துவிட்டதாகவோ அல்லது சூதாட்ட அமைப்பு அவர்களை அநியாயமாக தண்டித்து விட்டதாகவோ கூற முடியாது.   சமிபத்தில், ஒரு பொதுவுடைமைவாதியான நண்பர் ஒருவர், நிலச்சுவான்தார்களை பற்றி வன்மையாக கண்டனம் செய்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், “நீங்கள் ஏன் நிலச்சுவான்தார்களை கண்டிக்கிறீர்கள், நீங்களே பல நிலங்களுக்கு உரிமையாளர் தானே? உங்களிடம் ஏற்கெனவே பல நிலங்கள் இருந்தும்,  சில வாரங்களுக்கு முன்பு , மேலும் சில நிலங்களை வாங்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவரது பதில், “அதற்கு அமைப்பைத் தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும். என்னை அல்ல.  தற்போது உள்ள அமைப்பு நீடிக்கும் வரை நான் அதோடு இயைந்து தான் செயல்பட வேண்டும். அதில் மாற்றம் செய்யப்பட்டால், என்னிடம் உள்ள நிலங்களை நான் கைவிடத் தயாராக இருக்கிறேன்”.   சூதாட்டக்காரன், அந்த அமைப்பு தீங்கானது என்று விடாமல் கூறிக் கொண்டே அதில் தொடர்ந்து ஈடுபடுகிறான் என்றால் அவன் தனக்கான செயல்பாடு நெறிகளிலும் மனக்கண்ணோட்டத்திலும் மிகவும் குழம்பிப் போயிருக்கிறான் என்று கூறுவது சரியாக இருக்கும். சமூகம், அரசியல் அல்லது எந்த வகை அமைப்பாக இருந்தாலும் சரி, ஒரு மனிதன் அதைக் கண்டனம் செய்து கொண்டே அதில் ஈடுபடுகிறான் என்றால் அவன் குழம்பித் தான் போயிருக்கிறான். அத்தகைய மனிதன், தனது உள்ளத்தில், அதைக் தீங்கானதாகக் கருதவில்லை. ஆனால், நியாயமானதாக, நன்மையானதாகத் தான் கருதுகிறான். அவன் தனது செயல்பாடுகளால் அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான் என்பதே இதற்கான நிரூபணச் சான்று.   சூரியனுக்கு ஒளி எப்படியோ, மேகத்திற்கு மழை எப்படியோ அல்லது மனதிற்கு எண்ணங்கள் எப்படியோ அப்படித் தான் மனிதர்களுக்கு அமைப்புகளும். அமைப்பு என்பது மனிதர்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் இணைந்த கூட்டே. அமைப்பு என்பது மனிதர்களிடமிருந்து வேறுபட்டது என்று கருதுவது, கொண்டிருக்கும் அடிப்படை கொள்கைகள் மற்றும் எண்ணங்களில் உள்ள குழப்பமாகும். அநியாயமாக அவை செயல்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. காரணம், அறியாமையில் செய்யப்படும் செயல்கள் என்றாலும் அதற்கான தண்டனை நிச்சயம். மெய்யறிவோடு செய்யப்படும் செயல்களுக்கு அதற்கான பரிசு நிச்சயம்.     அமைப்புக்களில் எந்தத் தீங்கும் இல்லை. அறியாமையும்  தவறிழைப்பதுமே   தீமையாகும். எல்லா அமைப்புகளும் நியாயமானவையே, மனிதர்களுக்கு தங்கள் விருப்பம் போல் நடந்துக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. தங்களை வளப்படுத்திக் கொள்ள மற்றவரை அபகரிக்கலாம் என்று ஒருவருக்கு ஒருவர் ஒப்புதல் தெரிவித்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பத்து பேர்களும் பழியைத் தங்களைத் தவிர வேறு யார் மீதும் போட முடியாது. வெற்றியாளர்கள் தங்கள் ஆதாயத்தில் திருப்தி அடைவது போல தோல்வியாளர்கள் தங்கள் இழப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி முடியவில்லை என்றால், தங்களுக்குள் உற்று நோக்கி, தங்கள் செயல்பாடுகளைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வறுமை என்பது ஒரு நல்ல பாடமாகும். அது சிறந்த வழிகளைத் தேடி கண்டு அடைந்து செயல்படுவதற்கு அவர்களுக்கு நெருக்கடி வழங்கி எச்சரிக்கின்றது. ஒருவன் ஒர் அமைப்பைத் தீங்கு என்று கருதினால், அதில் ஈடுபடாமல் அதிலிருந்து அவனை வெளியேற்றிக் கொள்ள வேண்டும். அவனது செயல்பாடுகளை வேறு ஒரு திசையில் ஈடுபடுத்த வேண்டும். இரண்டு மனிதர்கள் ஒத்துழைத்துச் செயல்பட ஒப்புக் கொண்ட உடனேயே ஒர் அமைப்பு உருவாகிவிடுகிறது. அவர்களது செயல்பாட்டின் நன்மை, தீமைகளை அவர்கள் உருவாக்கிய அமைப்பு விரைவில் வெளிப்படுத்தும்.   மனிதக்குலத்தின் வாழ்வில், அமைப்புக்களில், நன்மை-தீமை என அழைக்கப்படும் எந்த ஒன்றிலும்-, மனிதர்களது செயல்பாடுகளின் கூட்டு விளைவால் உருவெடுக்கும் வடிவமே வெளிப்படுகின்றது. அவை அனைத்திலும், அவை அனைத்தின் மூலமாகவும், அவை அனைத்தையும் நீதி என்றும் நிலையாக வலிமையுடன் ஆள்கிறது. 2. உழைப்பு, ஊதியம், நல்வாழ்வு   ஒன்றின் செயல்பாடு என்பது அது இருப்பதற்கான இன்றியமையாத காரணம். அது இருப்பதற்கான நோக்கம், பயன்பாடு தான். பயனில்லாததாக மாறிய ஒன்றை இயற்கை தன் இணைப்பிலிருந்து உடனே துண்டித்து விடும். அவளது பொருளாதாரம் குறைகளற்றது. அவள் தன் செம்மையான பட்டறையில் பயன்பாடற்ற பொருட்களுக்கு இடம் தந்து அடைசலாகும் படி செய்ய மாட்டாள். அவள் கைவசம் இருக்கும் செயல் திறன் மிக்க கருவிகளை பயனின்றி முடங்கிக் கிடக்கவும் விடமாட்டாள் அல்லது பளபளப்பாக மின்னும் பொருட்கள் துருப்பிடித்து உதிரவும் அனுமதிக்க மாட்டாள்.    எங்கே திறமை இருக்கிறதோ அங்கே அது வெளிப்படுவதற்கான வாய்ப்பும் சூழலும் நிச்சயம் இருக்கும். எங்கே ஆற்றல் இருக்கிறதோ அங்கே அது பாய்ந்தோடுவதற்கான வடிகால்களும் இருக்கும். எங்கே உயரச் செல்லத் துடிக்கும் மனம் இருக்கிறதோ அங்கே சாதனை ஏற்கெனவே பிறந்துவிட்டது. வயல்வெளி உழவிற்காக காத்திருக்கும், கடல் கப்பலுக்காகக் காத்திருக்கும், துறைமுகம் சரக்குகளுக்காகக் காத்திருக்கும். அது போல, இயற்கையும், தனது அனைத்துத் துறைகளிலும், பொருள் அளவிலானாலும் சரி அல்லது மன அளவிலானாலும் சரி, மனிதனது உழைப்போடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறாள். அவனது கவனமான உழைப்பிற்கும் பேரார்வமான திறனுக்கும் பரிசுகளை வழங்கக் காத்திருக்கிறாள். “எனது திறமைக்கு வாய்ப்பில்லை” என்னும் அறிவிப்பு ஒரு வீண் பெருமை பேசும் கூற்றாகவோ அல்லது கவனக் குறைவிற்கான ஒரு சாக்காகவோ அல்லது இன்னும் தனது திறமைகளை அல்லது  வாய்ப்புக்களை பயன்படுத்தும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவோ தான் அதைக் கொள்ள வேண்டும். திறமையானது, ஒரு நொடி கூட பயன்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கத் தேவையில்லை. எல்லா திறமைகளுக்கும் எல்லையற்ற வாய்ப்புக்கள் இருக்கின்றன. திறமையை பயன்படுத்திப் பணி செய்யும் ஆற்றல் மட்டுமே தேவை.   இருக்கும் எல்லாத் திறன்களிலும், பணியை மேற்கொண்டு  செய்வதற்கான செயல்திறன் தான் மிகப் பயனுள்ளதும் தேவையானதுமாகும். அதைப் பெற்றிருப்பது என்பது ஒரு பேராற்றலாகும். இதை மனிதர்கள் செயல்பட இயலாமல் முடங்கிக் கிடக்கும் சூழலிலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் போதோ உணர்கிறார்கள். முழுமையான, துடிப்பான உழைப்பில் ஈடுபட முடியாமல் வலுக்கட்டாயமாக முடக்கப்படும் போது,  மூளையையோ அல்லது தசைகளையோ உள்ளத்துடிப்புணர்வுடன் மீண்டும் செயல்படுத்துவதற்கு அவர்கள் எந்த அளவு ஏக்கம் கொள்வார்கள், தங்கள் ஆற்றல்களை முறையான வழிகளில் செலவிட எவ்வளவு ஆர்வம் கொள்வார்கள்?   பணியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்- விருப்பத்துடன் அதில் ஈடுபடுவது அல்லது வலுக்கட்டாயமாக அதில் ஈடுபடுத்தப்படுவது. தனது ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கோடு பணியை எப்படியாவது செய்து முடிக்க எண்ணுபவன், அதற்கு என வழங்கப்படும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர அந்தப் பணியில் ஆர்வமோ ஈடுபாடோ இல்லாதவன் ஒரு அடிமையாகவே இருக்கிறான், அவனை ஒரு உண்மையான ஊழியனாக கொள்ள முடியாது. தேவைகளின் நெருக்குதல் காரணமாக மட்டுமே அவன் உழைக்கிறான். அவனது முழு ஆர்வமும் பெறுவதில் தான் இருக்கிறது, தருவதில் அல்ல. அவன் கவனக்குறைவோடும் வேண்டா வெறுப்போடும் தனது உழைப்பை வழங்குகிறான், ஆனால் தனது ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதில் பெறும் ஆர்வம் கொள்கிறான், எந்தளவுக்குக் குறைவிலும் குறைவாக வழங்கி எந்தளவுக்கு அதிகமாகப் பெற முடியும் என்று ஆவல் கொள்கிறான். “குறைவான வேலை, நிறைவான கூலி” என்பது அடிமைகளின் கூக்குரல், மனிதர்களுடையதாக இருக்க முடியாது.   இதற்கு மாறாக, தான் மேற்கொண்டுள்ள பணியை உள்ளத்தின் முழுஈடுப்பாடோடு செய்பவன், அதைக் குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணுபவன், ஒரு உண்மையான ஊழியனாவான். அவனால் விளையக் கூடியப் பயனும் அவனது ஈர்க்கும் தன்மையும் கூடிக் கொண்டு முன்னேறியப்படியே இருக்கும். ஒரு வெற்றியிலிருந்து மேலும் மேலும் பெரிய வெற்றிக்கு அவனை அழைத்துச் செல்லும். கீழ்நிலை உழைப்பிலிருந்து மேன்மேலும் மேல்நிலை உழைப்பிற்கு முன்னேறியப்படியே இருப்பான். அவன், தன் ஊதியத்தைப் பற்றியோ அல்லது பரிசுகளைப் பற்றியோ எதுவுமே நினைப்பதில்லை அல்லது மிக குறைவாகவே நினைக்கிறான். ஆனால், தனது பணியை ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் வழங்குகிறான். இயற்கை அன்னை அவனை தன் சிறப்புக்குரிய மகனாகத் தேர்வு செய்கிறாள். தனது சுயநலமற்ற உழைப்பின் காரணமாக அறநெறிகளால் முடிசூடப்பட்டவன், மேன்மேலும் பெருமைகளையும் பரிசுகளையும் பெறுவான்.   ஊதியத்தின் மீது மட்டும் பேராசை கொண்டிருப்பவனை அந்த முழு ஊதியம் சென்று அடையாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது, பல முறை அது சென்றடைவதும் இல்லை. ஆனால், தனது ஊதியத்தை பற்றி கவலைப்படாமல் தன் பணியில் கவனம் செலுத்துபவனை அது ஒருபோதும் சென்றடையாமல் இருந்தது இல்லை. காரணம், உழைப்பிற்கு ஈடான ஊதியம் ஒருபோதும் தடுத்து நிறுத்தப்பட முடியாது, ஆனால் ஊதியத்திற்கு ஈடான உழைப்பை வழங்காமல் இருந்தால், ஏமாற்றம் தான் ஊதியமாக தரப்படும், எதிர்ப்பார்க்கும் பரிசுகளும் கிடைக்காது.   உழைப்பிற்கான ஊதியம் நிச்சயம் உண்டு. பிரபஞ்சத்தின் பொருளாதாரத்தில் எந்த மனிதனும் ஏமாற்றப்படுவது கிடையாது, அவன் நியாயமாக ஈட்டியுள்ளதை அவனுக்கு வழங்காமல் அவ்வூதியத்தை ஏய்க்க முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு முயற்சியும் ஒரு காரணம்-, அது, அதற்கு ஏற்ற விளைவைச் சந்திக்கும். பணியைச் செய்வது முதல் காரணமாகும், ஊதியம் என்பது அதன் விளைவாகும். ஊதியம் என்பது முடிவல்ல, மற்றொரு பேர் விளைவையும் ஒரு பெரு முடிவையும் ஏற்படுத்துவதற்கான வாயிலாகும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ;- தனிமனிதனின், மனிதக்குலத்தின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் தொடர்ந்து நீடித்து நிலைபெறுவதற்காகவே ஆகும்.   செய்த வேலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் என்பதாக மட்டுமே ஊதியத்தைக் கொள்ளமுடியாது. பணம் என்பது செய்த வேலைக்கான ஊதியத்தின் ஒரு சிறு பகுதியே. பணத்தைப் பெறுவது ஒன்றையே, தான் மேற்கொள்ளும் பணியின் இறுதி முடிவாகக் கருதுபவன், தனது உழைப்பிற்கு அவன் கேட்ட பணத்தை கையில் பெற்றாலும் அவனது உழைப்பினால் அவனுக்கு மனநிறைவு உண்டாகாது. கடமையைத் தன்னலமின்றி போற்றுபவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய உயர்வகை  அறிவையும் பயன்பாட்டையும் அவர்களால் அறிய முடியாது.   ஒருவன் தனது கடமையை, பொறுப்பை அவனது உள்ளுணர்வின் ஒளி பாய்ச்சலில் காணும் போது அவை குறித்து அவனது மனப்பான்மை ஒரு உயர்நிலையை எட்டும். அந்த நாள், அவனது வாழ்வில் நிச்சயம் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு  நாள் ஆகும். பாரமான அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டு தன் பணியைச் செய்வதற்கான மகிழ்ச்சிக் களத்தை வந்தடைகிறான். இறுக பற்றிக்கொள்கின்ற இழிநிலையையும் அவமானங்களையும் தலைகுனிவையும் விட்டு மேலெழுந்து, தனது நிலையை அவன் கண்ணியமாகச் சகமனிதர்களிடையே நிலைநாட்டுகிறான். மனிதகுலத்திற்காக இன்முகத்தோடு இணைந்து பாடுபடுகிறான். பொருளாதாரச் சுற்று வட்டத்தில் தனது பங்கை ஆற்றும் ஒரு மகிழ்ச்சியான கருவியாக விரும்பி செயல்படுகிறான்.   அத்தகைய மனிதன் தனது ஊதியத்தைக் கீழ்காணும் ஏழு உட்கூறுகளில் பெறுவான் 1. பணம் 2. பயன்பாடு 3. திறமை மெருகேறுவது 4. ஆற்றல் மேம்படுவது 5. தற்சார்பு நிலை 6. மதிப்பு 7. மகிழ்ச்சி முதலில் அவன் செய்த பணிக்கு ஈடான முழுப் பணத்தையும் பெறுகிறான். ஆனால், அத்துடன் கூடவே உலகத்திற்கான அவனது பயன்பாடும் அதிகரிக்கிறது, தொடர்ந்து மேன்மேலும் வளர்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பயன்பாடு என்பது, தூய்மையான உழைப்பு வழங்கும் பேர் உவகைகளில் ஒன்று. காரணம், பயனுள்ள வகையில் செயல்பட்டதற்கான உண்மையான பரிசு, மேலும் பயனுள்ள வகையில் செயல்படுவதற்கான வாய்ப்பு தான். ஒரு அடிமை, உழைப்பின் பரிசாகச் சோம்பி கிடக்க வேண்டும் என்று விரும்புவான். ஆனால், ஒரு உழைப்பாளியோ, கூடுதல்  பணி கிடைக்கும் போது அகமகிழ்வான்.   இவ்வாறு அதிகரிக்கும் அவனுக்குரிய பயன்பாடு, அவனது திறமையை மெருகேற்றி, மேற்கொள்வதற்கான பணியை, செம்மையாக நிறைவேற்றத் துணைபுரியும். தனக்கு வழங்கப்பட்ட பாடத்தைக் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தையும்-, ஒரு பிரச்சினையைச் சந்தித்து வெற்றிகரமாகத் தீர்க்கும், ஒரு மொழியைக் கற்று அறியும் அல்லது ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு எழும் ஒவ்வொருவரும், மகிழ்ச்சியால் பிணைக்கப்படுகிறார்கள். அந்த மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அப்போது அவர்கள் அறிந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களது வாழ்வின் பணியை நிறைவேற்றுவதற்கு வேண்டிய திறமை மெருகேறும் போது உடன் வரும் மகிழ்ச்சி தான் அது என்பதை பின்பு அறிந்து கொள்வார்கள்.   இவ்வாறு மெருகேறிக் கொண்டிருக்கும் திறமை- ஆற்றல்-அறிவு ஆகியன ஒரு கட்டத்தில் சங்கமிக்கும். அதன் பெயர் வல்லமை. தன் தொழிலைக் கவனம் சிதறாது மேற்கொள்பவன் இறுதியில் அதில் வல்லுனராவான், அது எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி. அவன் அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரக்கூடிய ஆசான் நிலையை, வழிகாட்டியாக , பயிற்சியாளனாக  தான் கடந்து வந்த பாதையில் கீழ் நிலையில் வருபவர்கள் முன்னேற உதவியாக இருக்கிறான். பயிற்சியாலும் அனுபவத்தாலும் அவன் பெற்ற அறிவின் காரணமாக மற்றவர்கள் அவன் உதவியை நாடுகின்றனர். மனித குலத்திற்குச் சேவையாற்றுபவர்களின் வழிகாட்டுபவர்களின் உயர்நிலையை அவன் அடைகிறான். அவன் நம்பிக்கைக்கு உரியவனாகிறான். நீண்ட காலமாகத் தொடரப்படும் மனம் தளராத உழைப்பிற்கான ஊதியம் தான் ஆற்றலாகும். எவன் அதை வளர்க்கிறானோ அவனுக்குத் தான் அது வழங்கப்படும். சுயநலமின்றி பாடுபடுவது ஆற்றலை அறுவடை செய்ய வழிவகுக்கும்.   ஆற்றலோடு இணைந்திருப்பது ஒரு சுதந்திர உரிமை நிலை. ஒரு உண்மையான உழைப்பாளி தன்னுடன் வாழும் சகமனிதர்களுக்கு மத்தியில் பயனுள்ள குடிமகனாகத் தனக்குரிய கண்ணியமான இடத்தைப் பெறுகிறான்.  அச்சமற்ற நேர்மையின் ஒளி அவனது கண்களில் ஒளிரும், அவனது குரலில் தாழாத மேன்மை ஓலிக்கும், உறுதியான தன்னம்பிக்கை அவனது நடையில் வெளிப்படும். வாழ்வின் உயரிய நன்மைகளை அதற்காக உழைக்காமலேயே அடைய நினைக்கின்ற மனித கூட்டில் வாழும்  ஒரு உணர்வற்ற இயந்திரமாக அவன் இருப்பது இல்லை. தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான ஒரே நோக்கத்துடன் வேண்டா வெறுப்புடன் வேலை செய்யும் அடிமை, கையேந்தும் இழிநிலைக்கு ஆளாகிப் புறக்கணிக்கப்படுவான். ஆனால் உண்மையான உழைப்பாளி, எவரையும் சார்ந்திராத உயர்ந்த நிலைக்கு முன்னேறி, பலராலும் பாராட்டப்பட்டு நாடப்படும் நிலையைப் பெறுவான்.   மதிப்பு-இது ஒரு உயர்வகையான ஊதியமாகும். தங்கள் வாழ்வின் பணியை நம்பிக்கையோடும் ஆற்றலோடும் மேற்கொள்பவர்களை அவர்கள் எதிர்பார்க்காமலிருக்கும் போது  நாடி வரும். அது ஒரு வேளை,  பெரும்பாலும், தாமதமாக வருவதாக தோன்றலாம், ஆனால், அது நிச்சயம் வந்தே ஆக வேண்டும், அது வருகின்ற வேளையும் அது வருவதற்கான அதற்கேயுரிய சரியான வேளையாகவே இருக்கும். பணம் என்பது ஊதியத்தின் முதலாவதும் சிறியதுமான ஒரு பாகமாகும். மதிப்பு என்பது ஊதியத்தின் இறுதியானதும் பெரியதுமான ஒரு பாகமாகும். மதிப்பின் அளவு கூடுதல் என்றால் அதை ஈட்டியதற்கான உழைப்பு நீண்டதாகவும் கடினமானதாகவும் இருக்கும். பயன்பாட்டைப் பொறுத்து மதிப்பில் பல படிநிலைகள் இருக்கின்றன. ஆகச் சிறந்த மனிதர்கள் சிறந்த மதிப்பைப் பெறுவார்கள்.   ஊதியத்தின் முழுமையைப் பெறுபவர்கள், மகிழ்ச்சியின் முழுமையைப் பெறுவார்கள். சோம்பித் திரிவதற்கும் விருப்பமின்றி வெறுப்போடு செய்யப்படும் வேலைக்கும் மகிழ்ச்சியின்மையின் நாணயங்கள் கிடைப்பது போல உண்மை உழைப்பிற்கு ஊதியமாக மகிழ்ச்சி நிச்சயம் வரும். தனது ஆற்றல்களை ஒருவன் மனிதக்குலத்தின் முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ள உணர்வை அவன் பெறும் போது அவனுக்கான மகிழ்ச்சி குறைகளின்றி காணப்படும். அதில் நிம்மதியான உறுத்தாத நெஞ்சம், நிறைவான உள்ளம், உள்ளமைதியான மனம் உறைந்திருக்கும்.   முதலில் உழைப்பு, பின்பு ஊதியம். உழைப்பு உண்மையானதாகவும் அதில் ஈடுபடுவது  இயல்பாகவே விரும்பக் கூடியதாகவும் அதிலிருந்து பெறப்படும் பணம் சுயக் கொண்டாட்டங்களிலோ முட்டாள் தனமான கேளிக்கைகளிலோ வீணாக்கப்படாமல் மேன்மேலும் பணிகளுக்காகவும் குறிக்கோள்களை எட்டவும் பயன்படுத்தப்படும் போது மட்டுமே நல்வாழ்வுத் தொடரும். பணத்திற்காக மட்டுமே ஒருவன் வேலை செய்கிறான் என்றால் கூட, அந்தப் பணத்தை அவன் கவனமாக நல்ல முறையில் கையாண்டால் அதன் மதிப்பிற்கு தக்கவாறு ஒரு சிறிய அளவிலான தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆனால், அந்தப் பணத்தை நல்வாழ்விற்கு செலவு செய்யாமல் வீணாக்கினால், அவன் வாழ்வென்னும் மரத்தின் உயிரோட்டமில்லாத பயனில்லாத கிளையாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்வான்.   பொருட்களின் இயற்கை விதி எதைக் கோருகிறது என்றால், ஒவ்வொரு மனிதனும் எந்த அளவு கொடுக்கிறானோ, அந்த அளவு அவன் பெறலாம் என்று. அவன் சோம்பேறித் தனத்தைத் தந்தால் அவன் செயல்பட முடியாத நிலையை  பெறுவான், அவன் செய்ய வேண்டிய பணியை விருப்பமின்றி பற்றாகுறையாகச் செய்தால், நம்பிக்கையும் பாதுகாப்பும் இல்லாத ஊதியத்தை  பெறுகிறான். அவன் தன் உழைப்பை விருப்பத்தோடு தாராளமாக வழங்கினால் அவன் தாராளமான ஊதியத்தைப் பேரருளோடு சேர்த்துப் பெறுகிறான்.   இப்போது இங்கே வழக்கமாகப் பின்வருமாறு கேட்கப்படுகிறது: “நீங்கள் சொல்வது, சில குறிப்பிட்ட தனிநபர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்? பெரும் எண்ணிக்கைகளில் பாடுபடும் ஏழைகளுக்கு எப்படிப் பொருந்தும், ஆலைகளிலும் தொழில் மையங்களிலும் இயந்திரமயமாக வேலை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?”   இது எல்லோருக்கும் பொருந்தும். எந்த  தனிநபர்களுக்கும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்போது உயர்நிலையிலிருப்பவர்கள் ஒரு காலத்தில் தாழ்நிலையில் இருந்தவர்கள் தாம்.  இயந்திரமயமான வேலை செய்யும் ஆலை தொழிலாளி தனது கடமையில் சுயநலம் கலக்காமல் கவனமாக வேலை செய்ய  வேண்டும் என்னும் கூற்றை மறுக்க ஏதாவது சிறப்புக் காரணமிருக்கிறதா?  அவன் தன் உடல், மனம் மற்றும் நிதி சார்ந்த ஆற்றல்களை வீணாக்காமல் அவற்றை தன் வீடும் சுற்றுப்புறமும் மேம்படுவதற்குப் பயன்படுத்த வேண்டும், அவனது மாலை நேர ஓய்வு நேரங்களைத் தன் அறிவாற்றல் மற்றும் அறநெறி ஒழுக்க முறைகளை மேம்படுத்திக்கொள்ளச் செலவிட வேண்டும்.   இவ்வாறு அவன் தன்னை உயர்தளத்திற்கு பயன்பாடுள்ளவனாகவும் ஆற்றலுள்ளவனாகவும் விளங்கத் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் போதிய அளவு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு பொறுப்புக்களை ஏற்று செயல்படுவதற்கான வலிமையை பெற்றிருக்கும் போது அவன் உயர்நிலை அடைவதைத் தடுக்கக் கூடியதாக எதுவுமிருக்காது. அவன் அறிவிலும் வலிமையிலும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் செயல்பாடே அதனளவில் அவனுக்கு மகிழ்ச்சியை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.   உழைப்பு, ஊதியம் மற்றும் நல்வாழ்வு என்பன தனிமனிதன் மற்றும் மனிதக்குலம் ஆகிய இரண்டின்  பரிணாம வளர்ச்சியில் ஒரு மிகப் பரந்த நிலையை வகிக்கக் கூடிய நிலையாகும். எதிர்கால அரசியல் பொருளாதாரம்,  தான் இப்போது புறக்கணித்துக் கொண்டிருக்கும் மனம் மற்றும் ஆன்மீக அடிப்படையிலான ஊதியங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றாலும், இன்றும் அவை தான் மனிதர்களின், தேசங்களின் நல்வாழ்வைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.   ஒரு தேசத்தின் மகிழ்ச்சியும் செழிப்பும் அதன் பொருள் வளங்களில் மட்டும் இல்லை, ஆனால் அதில் குடியிருப்பவர்களின் மனம் மற்றும் ஆன்மீக வளத்தையும் பொறுத்திருக்கிறது என்று உணர்ந்து அதை பயன்படுத்த விளையும் போது அது அந்தத் தேசத்திற்கு பெரு நன்மையாக இருக்கும். மாற்றங்களுக்கு உள்ளாகும் கல்விமுறைகளால் மன வளமும் நிம்மதியும் உருவாகும். உயர்வான  சிறந்த வாழ்வுக்கு மட்டுமல்ல, பொருள் சார்ந்த வெற்றிக்கும் உறுதியான விரைவான வழி குண இயல்புகளை உளப்பூர்வமாகத் திருத்தி அமைத்துக் கொள்வது தான். 3.  தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்—தெய்வீக நியதியின் பார்வையில்   இயற்கையும் உள்ளுணர்வும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்று ஒரு காலத்தில் உலகமெங்கும் பரவலாகக் கருதப்பட்டது. இன்றும் கூட பெரும்பாலான மக்கள் அவை ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால் என்றும் நிலையான ஒர் உண்மையின் இரு வேறு பாகங்களே இயற்கையும் உள்ளுணர்வும் என்னும் நுட்பமான கருத்தைப் பிரபஞ்ச செயல்பாடுகளைப் பற்றிய முழுமையான அறிவு வெளிப்படுத்தும்.   உள்ளுணர்வுச் சடப்பொருளாக மாறி பார்வைக்குப் புலப்படுவதே இயற்கையாகும். மறைந்திருக்கும் ஒன்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தேர்ந்து எடுத்துக் கொள்ளும் எழுத்தும் வடிவமுமே காட்சியாகும். சுவடுகளற்றப் பாலைவனங்களுக்குச் சென்று நாம் உண்மையைத் தேடுகிறோம். ஆனால், அது எல்லா நேரமும் நம் கண் முன் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் நாம் கண்கள் மூடியபடியே பயணத்தை தொடங்கினோம், மூடிய கண்களை திறக்காமலேயே வந்து சேர்ந்தோம். எங்கெங்கோ உண்மையைத் தேடி களைத்துச் சோர்ந்து போய் பயனில்லாமல் அலைவதிலிருந்து தெளிவானதை, எளிமையானதை நோக்கி நெஞ்சம் திரும்பும்; அறியாமையிலிருந்தும் ஆணவத்திலிருந்தும் விடுபட்ட பார்வையுடன் நாம் இயற்கையை நோக்கினோம், ஆ! களங்கமானது பரிசுத்தமாகியிருக்கிறது, நிலையில்லாதது நிலையானது ஆகியிருக்கிறது, இயற்கையானது உள்ளுணர்வின் காட்சியாக வெளிப்படுகிறது.   எனவே, சடப்பொருட்களை ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானி ஒரு இயற்கை விதியை வெளிப்படுத்தும் போது, தெளிவான மனங்களுக்கு ஒரு ஆன்மீக விதியை அவனையும் அறியாமல் வெளிப்படுத்துகிறான். முழுப் பிரபஞ்சமுமே ஆன்மீக வயப்பட்டது தான். ஒவ்வொரு இயற்கை விதியும் ஆன்மீக அறநெறித் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்து வடிவாகும். பிரபஞ்சத்தின் இந்த ஆன்மீக இயல்பு உணரப்படும்போது, புலப்படும் பொருள் மற்றும் புலப்படாத உள்ளுணர்வு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும். பொருளை ஈட்ட மனம் தளராமல் உண்மையாக முயற்சியை மேற்கொள்ளும் ஒருவன் உலகவாழ்வில் மூழ்கித்தழைத்தவன் என்று சமகாலத்தவர்களால் கூறப்படுபவன் அதே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும் வெளிப்படுவான். அதே நிலை தான் வெளித்தோற்றத்தில் ஆன்மச் செயல் புரிபவனுக்கும். பிரபஞ்ச செயல்பாட்டில், அவை வெவ்வேறானவை அல்ல, ஒரே முழுவட்டத்தின் இரு வெவ்வேறான அரைவட்ட வளைவுகளே.   சார்லஸ் டார்வின் “தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்” என்னும் விதியைப் தெரியப்படுத்தும் போது இயற்கையின் செயல்பாட்டில் உள்ள அறநெறியை, தர்ம நியாயத்தை வெளிப்படுத்துகிறார். மதச்சார்புடையவர்கள், உலகமெங்கும் வேறுபாடு இல்லாமல் அதை எதிர்த்ததன் காரணம், அது ஒரு உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்பதால் அல்ல, ஆனால், அந்த விதியை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதால். இன்று, அந்த எதிர்ப்புணர்வு ஏறக்குறைய மடிந்து விட்டது என்றாலும், அதை, அன்பையும் இரக்கத்தையும் அழிக்கின்ற ஒரு கொடூரமான விதியாகவே அது பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.   அந்த விதியை பலரும், “கொடூரமானது தப்பிப் பிழைக்கும்” அல்லது, “வலிமையானது தப்பிப் பிழைக்கும்” என்றே பொருள் கொள்கிறார்கள். இங்குத் தான் தவறானப் புரிதலும் ஏற்படுகிறது. “தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்” என்ற சரியானச் சொற்றொடரின் மீதான நமது பார்வையை நாம் இழக்கக் கூடாது. காரணம், தகுதியுள்ளது என்றும் கொடூரமானதாக இருக்காது, வெகு அரிதாகவே, வலிமையானதாக இருக்கும். வலிமையான, கொடூரமான விலங்குகள் என்றோ மடிந்து பலவீனமான, ஆனால் அறிவாற்றல் மிகுந்த உயிரினங்களுக்கு இடம் அளித்து விட்டன. எண்ணிக்கையில் அடக்க முடியாத பூச்சி வகைகளையும் அவற்றைக் கொன்று புசிக்கும் வலிமையான எதிரிகளையும் எண்ணிப்பாருங்கள். ஆனாலும், இந்த அருமையான. அற்புதமான உயிரினங்கள் தொடர்ந்து வாழ்கின்றன, அதற்கு அவைகளது அறிவாற்றலே காரணமாகும், அதன் வலிமையான எதிரிகளை விட அவையே தப்பிப் பிழைக்க தகுதி வாய்ந்தவை. தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதன் அர்த்தம் எது சிறந்ததோ அது தான் தொடர்ந்து வாழும். முன்னேற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உலகில், ஒவ்வொரு கால கட்டத்திலும், தகுதி நிறைந்தவை தகுதி குறைந்தவற்றை விட முன்னேறியிருக்கும். அப்படி நடப்பது தான் முன்னேற்றத்தின் அர்த்தம். நாம் முன்னேற்றம் என்றவுடன் உடனடியாக நம் நினைவுக்கு வருவது, உயர்வானதும் காலச் சூழலுக்கு ஏற்றதுமான ஒன்று காலச் சூழலுக்கு பொருந்தாத தாழ்வானதை கடந்து செல்வதைத் தான். இந்த முன்னேற்றம், தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்னும் கூற்று ஒரு ஆன்மீக விதியாக பரிணமிக்கின்றது.   இந்த கருத்தின் எதிர்ப்பாளர்கள் சுயநலம் மிக அதிகமாக உள்ள உயிரினங்களே தப்பிப் பிழைக்க தகுதியானவை என்று எண்ணி, அந்தக் கருத்தைக் கண்டனம் செய்து சுயநலத்தை முன்னிலைப்படுத்துவதாக டார்வினை குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், அவர்களது மீது தான் பிழையே தவிர டார்வின் மீதோ அல்லது அந்த விதியின் மீதோ அல்ல. அவர்களது பாரபட்சமான மனப்பான்மையால் ஒரு பொய்யான அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு தாக்குகிறார்கள். சுயநலம் மிக அதிகமானவையே தப்பிப் பிழைக்க தகுதியானவை என்று பிழையாகக் கருதுவதால் ஏற்படும் தவறாகும். அவ்வாறு கருதுவது, மிக மோசமான உயிரினங்களைச் சிறந்த உயிரினங்களாகக் கருதுவது போன்றதாகும். சுயநலம் மிக்கவைகளை விட சுயநலமற்றதே தப்பிப் பிழைக்க தகுதியானவை என்று நாம் உணரும் போது, அதன் எதிர்ப்பாளர்கள் வழங்கும் கருத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு பரிணாமத்தை அந்தக் கருத்துப் பெறுகிறது. மிக ஆழமான அறநெறி கோட்பாடுகளான அன்பும் நீதியும் அதில் இயைந்து செயல்படுவதைக் காண முடியும்.   தகுதியானது தப்பிப் பிழைக்கும் என்பதை நினைவில் கொண்டதன் பின்னணியில், பிரபஞ்ச விதி முறைகளின் படி, தகுதியானவை என்பதற்கான வரையறை என்ன? ஒரு உயிரின கூட்டத்தில் மிக தகுதியானவையே அதிகம் முன்னேறியிருக்கும் என்பது வெளிப்படையானது ஆகும். மிக வலிமையானதோ, மிகக் கொடூரமானதோ, மிகச் சுயநலமானதோ அல்ல, உடலளவில் மிக அற்புதமானதும் அல்ல, ஆனால், பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப முன்னேறுபவையே தகுதியானவை ஆகும்.   ஒரு கால கட்டத்தின் சூழலில் தகுதியான ஒன்று இன்னொரு கால கட்டத்தின் சூழலிற்குத் தகுதியானதாக இருக்காது. ஒரு காலத்தில் மிருக வலிமையே பேராற்றலாக விளங்கியது. அதை விட உயர்ந்த ஒன்று பரிணமிக்காமல் இருந்த காலம் அது. ஆனால், பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான அந்தக் காலக் கட்டத்தின் சூழலிலும் கூட, இராட்சத உயிரினங்கள் பூமியெங்கும் கோலோச்சிய காலத்திலும் கூட, அவற்றை விட உயர்வான ஒன்று பரிணமித்துக் கொண்டிருந்தது. சுயநலமற்ற அன்பும் அறிவாற்றலும் தங்கள் இருப்பை மெல்ல உணரச் செய்துக் கொண்டிருந்தன. அந்த இராட்சத விலங்குகளும் தங்கள் குட்டிகளைக் காப்பாற்றி அன்புச் சுரந்தன. மனிதனோ மிருகமோ, தங்கள் சந்ததியைச் சுயநலமின்றி காப்பாற்றியவையே, தப்பி பிழைத்தன.   தங்கள் சந்ததியைப் புறக்கணித்த உயிரினங்கள் மடிந்து போயின. இவ்வாறு, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, அறிவாற்றல் என்னும் குழந்தை மிருக ஆற்றல்களுக்கு மத்தியில் பிறந்து, மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக மிருக ஆற்றலுக்கு மேலெழுந்து வந்தது. இன்று அறிவாற்றல் உலகை ஏறக்குறைய கைப்பற்றி ஆள்கிறது, வலிமையான மிருக ஆற்றல்கள் ஒரேயடியாக மடிந்து போய் பலவீனமான சிறிய, ஆனால் சிறப்பான அறிவாற்றல் பொருந்திய உயிரினங்கள் ஆள்கின்றன.   இப்படி ஒரு விதி செயல்படாமலிருந்து இருந்தால், மனிதன் தனது இன்றைய நிலையை எட்டியிருக்க முடியாது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் உயிரினம் பூமியில் தோன்றிய காலத்திலிருந்து மனிதன் தோன்றி அவன் சந்தித்த போராட்டங்கள், செய்த தேர்வுகள், மேற்கொண்ட முன்னேற்றங்கள் என்னும் வழிமுறையின் வாயிலாக இன்று அவன் சிகரத்தின் உச்சியிலிருக்கிறான். பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அல்லது யுகங்களாகச் செயல்படும் விதியான தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற விதியின் நிரூபணச் சான்றாகவே மனிதன் இன்று இருக்கிறான். தன்னுள் இருக்கும் அறிவாற்றலின் அடிப்படையில் மனிதன் இன்று உலகை ஆள்கிறான். ஆனால், அந்த அறிவாற்றலை விட ஓர் இன்னொரு உயரிய கோட்பாடு அவனுள் பரிணமிக்கின்றது.   அது தெய்வீக அன்பு. எப்படி, மிருக ஆற்றலை விட அறிவாற்றல் பன்மடங்கு உயர்வானதாகவும் ஆற்றலானதாகவும் இருக்கின்றதோ அது போலத் தெய்வீக அன்பும் அறிவாற்றலை விட பன்மடங்கு உயர்வானதும் ஆற்றலானதும் ஆகும். இங்கு தெய்வீக அன்பு என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், குறுகிய மனித பாசமும் இரக்கமும் அன்பு என்ற சொல்லப்படுகின்ற காரணத்தால், தெய்வீக அன்மை அதிலிருந்து வேறுபடுத்துவதற்காகவே ஆகும். ஆனால், உண்மையான அன்பை வேறுபடுத்தும் நோக்கோடு அல்ல. அறிவாற்றல் சுயநலத்திற்கு உதவலாம். ஆனால், அறிவாற்றல் அன்பிற்கு உதவ முடியாது.  அன்பில், எல்லாச் சுயநலமும் மிருக ஆற்றலும் விழுங்கப்படுகின்றன, ஆனால் அவை கனிவாக உருமாறுகின்றன.   தெய்வீக அன்பின் துவக்கம் பூமியில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. அந்தத் தெய்வீக அன்பு முழுமையாக மலர்ச்சி  பெற்றிருந்த மனிதர்கள், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்-, மாபெரும் ஆன்மீக ஆசான்கள், தங்களது எடுத்துக்காட்டான வாழ்வாலும் போதனைகளாலும் உலகை இன்றும் ஆள்கிறார்கள். சுயநலம் மிக்க மனிதர்கள் அவர்களைக் கடவுளாக வணங்குகிறார்கள். இத்தகைய மனிதர்களிடம் குடி கொண்டிருந்த அன்பு காலத்தைக் கடந்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க முடிகிறது. நிறைய மனிதர்கள் அன்பின் உயர்நிலையைப் பெற்றிருந்தால், இப்போது மிருக ஆற்றல் அறிவாற்றலால் ஆளப்படுவது போலச் சுயநலமும் சுயநலம் கொண்ட மனிதர்களும் இத்தகைய அன்பின் உயர்நிலைக்கு கீழ்படிந்து அவற்றால் ஆளப்படக்கூடிய நிலை ஏற்படும்.   இந்த அன்பு இப்போது பேராசான்களிடையே மட்டும் இருந்து ஊற்றெடுக்கவில்லை, சாதாரண மனிதர்களிடமிருந்தும் கூட வெளிப்படுகிறது. ஆனால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத வகையில் வெளிப்படுகிறது. இருந்தாலும், கனிவும் மகிழ்ச்சியுமான அதன் அதிர்வலைகள் மனித இதயங்களால் உணரப்படாமல் இல்லை.   தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பதற்கு எதிரான பொதுவான வாதம் என்னவென்றால், அது நடைமுறைப்படுத்தப்பட்டால், வலிமையானவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், பலவீனமானவர்களும் செயல்திறனில் குறைந்தவர்களும் கொன்றழிக்கப்படுவார்கள், மனிதக்குலத்தின் அன்பும் இரக்கமும் அழிக்கப்படும் என்பதாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்த பிழையான புரிதலின் செயல் வடிவமே இந்த வாக்குவாதம். அன்பும் இரக்கமுமே மனிதக்குலத்தின் சிறப்பு என்று வாதிடும் அதே நேரம் தகுதியுள்ளது அல்லது சிறப்பானது தப்பிப் பிழைக்கும் என்று சொல்லும் அதே வேளையில் சிறப்பான அவை மடியும் என்று சொல்வது புரிந்துகொள்ளப்படாத முரணாக உள்ளது. இங்கு தான் நாம் அதன் மையக் கருத்திற்கு வந்துவிட்டோம். சிறப்பானது தப்பி பிழைக்கும், எனவே, கனிவு, இரக்கம், அன்பு ஆகியவற்றை சுயநலத்தால் கவிழ்க்க முடியாது. சுயநலம் அழிந்தொழியும். மனிதர்களை மட்டும் எடுத்து கொண்டோமானால், தப்பிப் பிழைக்க தகுதியானவர்கள் சுயநலமிக்கவர்களோ கொடியவர்களோ அல்ல, ஆனால், கனிவு, இரக்கம், நீதி, அன்பு போன்ற மெல்லிய குண இயல்புகளை, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அறநெறிகளை கடைபிடிக்கும் தூய்மையான மெய்யறிவு மிக்கவர்களே என்பது தெளிவாகும்.   இந்த விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேசுவதிலிருந்தே அதிலுள்ள முட்டாள்தனம் வெளிப்படுகிறது. காரணம், அது தானாகச் செயல்படக்கூடிய ஒன்று, அது எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது, எல்லா மனிதர்களும் உயிரினங்களும் அதற்கு கீழ்படிகிறார்கள். மனித இனத்தின் எந்தப் பிரிவாவது, இந்த விதியை நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லி தங்களுள் இருக்கும் பலவீனர்களையும் செயல்திறன் குறைந்தவர்களையும் கொல்ல நினைத்தால், அவர்களது விருப்பத்திற்கு  இந்த விதி செயல்படாமல், அதற்கு மாறாக தனக்கு உரிதான அறநெறிகளின் படி செயல்பட்டு அவர்களையே விரைவில் அழித்து விடும்.   மனிதக்குலத்தின் இந்த இடையறாத முன்னேற்றத்தால், வளர்ந்து வரும் அறிவாற்றலையும் கனிவையும் எதிர்க்க முடியாமல்  கொடூரத்தன்மை தப்பிப் பிழைப்பதற்கு மேலும் மேலும் தகுதியற்றதாகிறது. கொடூர இனங்கள் ஏறக்குறைய அழிந்தே விட்டன, சில ஒழுங்கமைக்கப்படாத அமைப்புக்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. வேட்டையாடும் மிருகங்கள் அருகிவிட்டன, வெறிபிடித்த மனிதர்களே இப்போது சமூகத்திற்கு ஆபத்தாக இருக்கிறார்கள். படிபடியாக தவிர்க்க இயலாத வகையில், அன்பினால் ஆளப்படும் உலகில், நீதியும் உண்மையும் வெற்றி பெறும் உலகில், அமைதியும் நல்லெண்ணமுமான சூழலில்-,  தப்பிப் பிழைப்பதற்கான தகுதியில்லாமல் சுயநலமும் வெறியுணர்வும் கொண்ட மனிதர்களின் ஆற்றல் உலகில் குறைந்த படியே இருக்கும், இராட்சத மிருகங்கள் முற்றாக ஒழிந்தது போலச் சுயநலமும் வெறியுணர்வும் கொண்ட மனிதர்களின் ஆற்றல்  இறுதியில் பூமியிலிருந்து முற்றிலுமாக ஒழிந்து விடும்.   எனவே, டார்வின் முன்னிறுத்தும் இந்த விதி என்பது இயற்கையின் ஒர் அம்சம். நீதி அல்லது அன்பின் செயல்பாடு ஆகும். காரணம், உண்மையின் வெளிச்சத்தில் நீதியும் அன்பும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த விதியின் ஆன்மீகக் கூறு பற்றி  எல்லா பேராசான்களும் நன்கறிந்திருந்தார்கள், தங்கள் போதனைகளில் அவர்கள் இதை உட்புகுத்தியிருந்ததை மனிதர்கள் தான் காண மறந்தார்கள். எனவே இயேசுவின் வாய்மொழியான “சாந்த குணமுடையவர்கள் பூமியை வசப்படுத்துவார்கள்” என்பது டார்வினின் கூற்றான தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு எளிய ஆன்மீக வாசகமே. 4. தீமையில் பொதிந்துள்ள நீதி   இன்று நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பேச்சுமொழி,”எல்லாம் நன்மைக்கே”. போப் தமது புகழ் பெற்ற புத்தகத்தில், “எது உள்ளதோ, அது சரி” என்கிறார். பலராலும் வழிமொழியப்படும் ப்ரௌனிங்கின் புகழ்பெற்ற வாசகம், “கடவுள் சுவர்கத்தில் இருக்கிறார். உலகில் நடைபெறுவன யாவும் சரியே.”   இத்தகைய கூற்றுக்களை எதிர்கொள்ளும் போது இயற்கையாகவே சில கேள்விகள் மேலெழும்: போரும் பஞ்சமும் ஏற்படுவதை நல்லது எனச் சொல்ல முடியுமா? நோயும் வறுமையும் நல்லது எனச் சொல்ல முடியுமா? துக்கமும் துன்பமும் நல்லது எனச் சொல்ல முடியுமா? இவை எல்லாம் மனித வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் நிதர்சனமான உண்மைகள். மீண்டும் அதே இடத்திற்கு வருவோம், பாவமும் சுயநலமும் சரியானதா? போதையும் கொடுங்கோன்மையும் சரியானதா? குற்றமும் வன்முறையும் சரியா? கடலிலும் நிலத்திலும் ஏற்படும் விபத்துக்கள் நன்மையாகுமா? இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும் பேரழிவுகள் நன்மையாகுமா? இவையும் முந்தைய கூற்றுக்களை போலத் தினசரி நிகழ்வுகளாகும். இவை உண்மையான உலகநடப்புக்கள், துன்பத்தைப் பரவலாகச் செய்கின்றன, இவை யாவும் சரியா?   கடந்த பல ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள எதிர்பாராத பேரழிவுகளான எரிமலை வெடிப்புக்கள், நில நடுக்கங்கள், வெள்ளம், பஞ்சம், போர், பல்வேறு வகையான குற்றங்களை மற்றும் வன்முறைகளைக் குறித்து பலரும் இவ்வாறு கேள்வியெழுப்பியிருப்பார்கள்.   அவை எல்லாம் சரி தானா? பின் ஏன் மனிதர்கள் அவற்றிலிருந்து தப்ப விழைகின்றனர். “எது உள்ளதோ, அது சரி” என்று கூறுபவர்கள் கூட சில வகையான தீங்குகளைக் குறிப்பிடுகின்றனர், அவற்றிலிருந்து விடுபட என்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றைப் பரிந்துரைக்கின்றனர்.   மனிதக்குலத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா என்ற கோணத்திலிருந்து பார்த்தால், இவை துக்கத்தை தான் தருவதால் இவை யாவும் சரியில்லை என்று தெளிவாக அறியலாம். தத்துவ அடிப்படையில் தீங்கு என்று ஒன்று இருப்பதை மறுப்பவர்கள் கூட நடைமுறை வாழ்வில் அதை முறியடிக்க வேண்டும் என்னும் தங்களது முயற்சியால் அதன் இருப்பை அங்கீகரிக்கிறார்கள்.   என்ன தான் சொன்னாலும், இந்த முழுப் பிரபஞ்சத்தின் நன்மைக்கான அடிப்படையில் அந்த கூற்றுக்கள் எல்லாம் சரியானவையே. ஒவ்வொன்றுக்குமான தொடர்பின் அடிப்படையில் அது உணரப்பட வேண்டியது. தீங்கை அங்கீகரிப்பது, எல்லாம் நன்மைக்கே என்னும் கூற்று ஆகியவை ஒன்றோடு ஒன்று முரண் பட்டதல்ல. வாழ்வின் நிகழ்வுகளை மனிதக்குலத்தின் மகிழ்ச்சியோடு தொடர்பு கொண்டு பார்த்தால், சிலவற்றை “நன்மையாகவும்”. சிலவற்றை “தீமையாகவும்” அடையாளம் காண முடியும். ஆனால் அவற்றை என்றும் நிலையான அடிப்படை கோட்பாடான நீதியோடு தொடர்பு கொண்டு பார்த்தால், அனைத்தும் சரியாகவே தோன்றும், எல்லாம் வல்ல நீதியின் முன் அனைத்தும் சமம் என்ற எதற்கும் வளைந்து கொடுக்காத விதியோடு இசைந்து சரியாகவே இருக்கும்.   உடல் வலி என்னும் ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மனித வாழ்வின் மகிழ்ச்சி என்ற அடிப்படையில் கருதும் போது, உடலின் வலி என்பது ஒரு தீமையாகும். ஆனால் உயிர் என்ற அடிப்படையில், அதைக் காப்பாற்ற வேண்டும், அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்னும் கண்ணோட்டத்தில் காணும் போது, அந்த உடல் வலி ஒரு முன்னெச்சரிக்கையாகவே இருப்பதால் நன்மையானதாகவே காணப்படும். அந்த உடம்பைப் பாதிப்பிலிருந்து அழிவிலிருந்தும் காப்பதற்கு ஆவன செய்யும் படி அது மனிதனை வலியுறுத்துகிறது.   உடல் வலியைப் போன்றதே தான் மனதின் வலிகளும். துக்கம், மன உறுத்தல், தனிமை மற்றும் சோகம் ஆகியன மகிழ்ச்சியை அழிப்பதால் தீமையாகும். ஆனால், அறியாமை மற்றும் தீய செயல்களின் விளைவே அவை என்ற அடிப்படையில் அது நியாயமான காரணமாக இருப்பதால் அவை உண்மையில் நன்மையாகவே கருதப்படும். அது மெய்யறிவும் நேரிய செயல்பாடுகளுமான பாதையில் செல்ல மனிதனை வலியுறுத்துகிறது.   இறைதூதரான இசய்யா சொல்வது:   ”நானே ஒளியை ஏற்படுத்தி இருளையும் உருவாக்குகிறேன். அமைதியை ஏற்படுத்தி தீங்கையும் உருவாக்குகிறேன். இறைவனான நானே இவை அனைத்தையும் செய்கிறேன்.”   அறநெறியின் அடிப்படையிலான இந்தப் பிரபஞ்சத்தில் நன்மைக்கு எதிராக தீமை இருப்பதற்கான நியாயமான காரணத்தை அவர் அங்கீகரிக்கிறார். சடப்பொருட்களின் அடிப்படையிலான பிரபஞ்சத்தில் ஒளிக்கு எதிராக இருள் இருப்பதைப் போல அறநெறியின் அடிப்படையிலான இந்தப் பிரபஞ்சத்தில் நன்மைக்கு எதிராகத் தீமை இருப்பதற்கான நியாயமான காரணத்தை அவர் அங்கீகரிக்கிறார்.   இறைதூதரான ஆமோஸ் அதேக் கருத்தை வேறுவிதமாக வெளிப்படுத்துகிறார்:   கடவுள் அனுமதியாமல் ஒரு நகரில் தீமை குடிபுக இயலுமா?   தீமையின் வேர் நியாயத்தின் மீது தான் இருக்கிறதே தவிர அநியாயத்தின் மீது அல்ல என்ற இந்த உண்மை அறிவிப்பு பழைய ஏற்பாட்டில் காணப்படும் இறைத்தூதர்களின் கருத்தோடு ஒத்துப் போகிறது. அறநெறி விதிகளை மனிதன் தனது பங்கிற்கு மீறுவதன் காரணமாகவே அவனைப் பெருந்துன்பங்களும் பேரிடர்களும் ஆட்கொள்கின்றன. அவர்கள் இந்தக் கருத்தில் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்றால் உள்ளத்தின் எண்ண நிகழ்வுகளுடன்  துளியும் தொடர்பில்லாத புற நிகழ்வுகளான வெள்ளம், புயல்காற்று, நிலநடுக்கம், வறட்சி, மனிதனுக்கான உணவுப் பற்றாக்குறை என அனைத்துக்குமான காரணங்களாக மனிதனது உள்ளத்தின் நேர்மையின்மையையும் அறநெறி வழிகளிலிருந்தும் விலகுவதையே சுட்டிக்காட்டுகின்றனர்.   மனித வாழ்வோடு மனித இதயத்தோடும் உள்ள ஆழமான உள்ளார்ந்த தொடர்பு, ஒரு பேருண்மையை நிச்சயமாக வெளிப்படுத்தும். அதை மேலோட்டமாக நோக்கும் போது  உண்மை என்று நிச்சயம் புலப்படாது. ஆழமாகச் சிந்திக்காத மனங்களுக்கு அது வசப்படாது. அதாவது,  மனித உணர்வுகளின் மோதல்களும் முரண்பாடுகளும் சங்கமிக்கும் களம் தான் எல்லாத் துக்க நிகழ்வுகளும். எங்கே ஆழமான வெறியுணர்வு இல்லையோ அங்கே பேரிடரோ பேரழிவோ நிகழாது. மனிதக்குலம் தன் இதயத்தில் இசைவோடும் நிம்மதியோடும் செயல்படும் நிலையை அடையும் போது உலகை அச்சுறுத்தும் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் இடம் பெறாது, மனித இனம் துயரத்தில் உழலாது,  உதவியின்றி தவிக்கும் நிலையில் சிக்காது.     ”விஸ்டம் அன்டு டெஸ்ட்டினி” என்ற நூலின் ஆசிரியர் மேயிட்டர்லின்ஸ்க் அவரது நூலில் இந்த உண்மையைத் தெளிவாக உணர்த்துகிறார்: தனது கட்டளைகளை ஒரு முறைக்கு மேல் கட்டுப்படுத்தி ஆளுமை செய்துள்ள ஆன்மாவிடம் விதி மோதாமல் பின்வாங்கவே செய்யும். இத்தகைய ஆன்மா அருகே இருக்கும் போது சில வகையான பேரிடர்களைக் கட்டளையிடும் துணிவு அவளுக்கு ஏற்படாது.   விதியின் வலிமையான திட்டத்தை முறியடிக்க ஒரு மெய்ஞானியின் இருப்பே போதுமானது. இதற்கான ஆதாரம், ஒரு உண்மையான மெய்ஞானி தோன்றும் போது அந்த மெய்ஞானியின் முன்னிலையில் வெகு அரிதாகவே ஆர்ப்பரிக்கும் காட்சிகள் நடந்தேறும். அப்படி ஒரு வேளை  இரத்தமும் கண்ணீரும் சிந்தக்கூடிய நிகழ்வு நடக்க வேண்டியிருந்தாலும், அந்த நிகழ்வு சிறிது காத்திருக்க வேண்டும். ஒரு மெய்ஞானிக்கும் இன்னொரு மெய்ஞானிக்கும் சண்டை மூண்டாலும் கூட அங்கு ஆரவாரமான நிகழ்வுகள் இருக்காது. ஒரு மெய்ஞானியைச் சுற்றிச் செயல்படுபவர்களாக வெகு சிலரே இருப்பர் என்பதே உண்மை. மெய்ஞானத் தேடல் உடையவர்களின் முன்னிலையில் பெரும் சோகம் நிகழ்வதாக நம்மால் எளிதாகக் கற்பனை செய்ய முடிகின்றதா?   அந்த நிகழ்வு ஒரு கணமே என்றாலும் அப்படி நடப்பது அரிதினும் அரிதாகவே இருக்கும். ஆர்ப்பரிக்கும் மனிதர்கள் ஒரு பேரான்மாவை கண்டு அஞ்சுகின்றனர், ஆனால் ஆர்ப்பரிக்கும் நிகழ்வுகளுக்கும் கூட அதே அச்சம் இருக்கின்றது. அங்கு ஒரு உண்மையான போர் வீரன் இருந்தாலும் அவனது ஆயுதமும் மண்ணில் வீழ்ந்து மெய்ஞான அமைதியே அங்குத் தவழும்.   குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தி, ஷேக்ஸ்பியர் ஏறக்குறைய எல்லா வகையான பாத்திரங்களையும் வடிவமைத்திருந்தாலும் ஒரு மெய்ஞானியைத் தனது நாடக பாத்திரமாக அவர் உலாவ விட்டதேயில்லை. துக்கக் காட்சிகளாக முடிவுறும் அவரது நாடகங்கள், ஒரு மெய்ஞானியின் இருப்பில் துக்கமாக நிறைவுற முடியாது. அந்நாடக பாத்திரங்கள் வன்முறையால் உந்தப்படுவதற்கான மறைவான காரணம் அவர்களது உள்ளத்தின் ஒழுங்கமைக்கப்படாத முரண்பாடான வெறியுணர்வுகளே. ஒரு மெய்ஞானி அவற்றை எல்லாம் கடந்து மேலெழுந்திருக்கிறான். அவனது ஒத்திசைவுடனான சாந்தமான ஆற்றலின் முன்பு மற்றவர்களின் வெறியுணர்வும் அடங்கி சாந்தமாகும், அதைப் பின் தொடரக்கூடிய துக்கமும் தடுக்கப்படும்.   மெய்ஞானிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் மனங்கள் தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பேருண்மை என்றால் மனிதக்குலம் அனுபவிக்கும் எல்லாத் தீமைகளும் அறியாமையில் இருந்து தான் உதிக்கின்றன, எனவே, அவை மனிதக்குலத்தின் பிழைகளும் தவறுகளுமே ஆகும். எனவே, நியாயமான, சரியான காரணத்தின் அடிப்படையிலேயே தீமை அமையப் பெற்றிருக்கின்றது. அது இருப்பதற்கான காரணம் நியாயமானதாகவும் சரியானதாகவும் இருந்தாலுமே அது விரும்பக் கூடியதாக இல்லை. அது தீமை என்பதால் அதை விட்டு மேலெழுந்து  வர வேண்டியத் தேவை இருக்கின்றது. ஒரு திருடனுக்கு எப்படிச் சிறைத்தண்டனை நியாயமும் சரியோ அப்படித் தான் மனிதனுக்கு தீமையும். அது அவனுக்கு பாடத்தை கற்று கொடுத்து மெய்யறிவிற்கு இட்டுச் செல்கின்றது. எப்படி உடல் வலி உடலைக் காக்கின்றதோ அது போல மன வேதனை அவனது மனதையும் வாழ்வையும் காக்கவே முனைகின்றது.   பிரபஞ்ச ஒழுங்கைக் கட்டி அமைக்கக் கூடிய தெய்வீக விதிகள் குறித்த மனிதனின் அறியாமையால் எழும் எண்ணங்கள், வெறியுணர்வுகள், மனநிலைகளே துக்கம், பேரிடர், பேரழிவு ஆகியவற்றின் மூலகாரணங்கள் ஆகின்றன. பொறாமை, தீய எண்ணம், கசப்புணர்வு ஆகியன மோதல் போக்குகளையும் சண்டைகளையும் ஏற்படுத்தும். இறுதியில் அவை போர்களாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களுக்கும் அங்க ஈனங்களுக்கும் காரணமாகி, நூற்றுக்கணக்கான வீடுகளில் துக்கம் புரண்டோடச் செய்யும். பணத்தாசை, தன்முனைப்பு மற்றும் கேளிக்கைகளுக்கான தவிப்பு ஆகியன பெருந்தீனிகாரனாகவும், சோம்பல் உடையவனாகவும் போதைக்கு அடிமையானவனாகவும் ஒருவனை மாற்றி உடல் சீர் கேடு, வறுமை, நோய் ஆகியவற்றுக்கு அவனை இட்டுச் செல்லும். பேராசை, சிற்றின்ப இச்சை, மற்றும் சுயநலத்தின் எல்லா வடிவங்களும் மனிதர்களை-, ஏமாற்று, பொய், மோசடிகளைக் கடைபிடிக்க வழி செய்யும். தங்களது அற்ப ஆசைகளையும் இச்சைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மற்றவர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாக போராட செய்து தவிக்கவிடப்படும் நிலைக்கும், இழப்புக்கும் பேரழிவுக்கும் வழி வகுக்கும். வன்முறை மிகுந்த வெறியுணர்வு இருக்கும் இடங்களில் உயிரை முன்கூட்டியே மாய்க்கும் வன்முறை இறப்புக்கள் இருக்கும்.   மனிதன் தனது அறியாமை, சுயநலம், இருள் படர்ந்த மனதின் காரணமாகத் துக்கத்திற்குத் தன்னை அடையாளம் காட்டுகிறான், பேரழிவிற்கான ஒரு கருவியாகத் தன்னை  உருமாற்றிக் கொள்கிறான்.  முடக்கப்பட்டிருந்த தெய்வீக விதிகள் தம்மை மீண்டும் நிலைநாட்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டும் விதமாக அவன் அனுபவிக்கும் துன்பங்கள் இருக்கின்றன. அவனது வாழ்வின் இன்ப ஒளி புறப்பட்ட அதே நீதியிலிருந்து தான் அவனது வாழ்வின் சோக இருளும்  வருகின்றது. ஒவ்வொரு தற்கொலையும், ஒவ்வொரு பேரழிவும், ஒவ்வொரு பெருந்துன்பமும், ஒவ்வொரு விபத்தும் கூட அதன் மூல காரணத்தோடு பின்னப்படும் போது அதில் குழப்பமற்ற நீதியின் செயல்பாடு பொதிந்திருப்பதைக் காண முடியும்.   தனிஒருவனுக்குப் பொருந்தும் இந்த நீதி தேசங்களுக்கும் பொருந்தும். சுயநலம் பரவலாக இருக்கும் போது பேரிடர்களும் பரவலாக இருக்கும். தேசமெங்கும் ஊழல் மலிந்திருக்கும் போது நிலை குலையச்செய்யும் நிகழ்வுகளும் தேசத்தின் வீழ்ச்சியும் பேரழிவும் பின் தொடரும்.   வறுமை, நோய் மற்றும் பஞ்சம் மட்டுமல்ல, ஆனால், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பெரு வெள்ளம் போன்ற எல்லா புற நிகழ்வுகளின் மூல காரணங்களும் மனிதனின் அகவாழ்வோடு தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடியும். வன்முறை மிக்கவர்கள் தங்களது மூடத்தனத்தாலும் முட்டாள்தனத்தாலும் தங்களின் உயிருக்குத் தாங்களே உலை வைத்துக் கொள்ளும் விபத்துக்கள், புற விபத்துக்களின் பின் ஒரு அறம் சார்ந்த காரணம் இருப்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.   மனிதனது உடல் மண்ணில் உள்ள மூலப் பொருட்களின் அடிப்படையிலும் மற்றும் புவிஈர்ப்பு அடிப்படையிலும் பூமியின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அவனது மனம் ஆன்மீக அடிப்படையிலும் மற்றும் அறத்தின் அடிப்படையிலும் பிரபஞ்சத்தை செயல்படுத்தும் விதிகளின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அவனது வாழ்வும் இருப்பும் பிரிக்க முடியாததாகப் பின்னிப் பிணைந்து இயல்பாகவே ஒன்றோடு ஒன்று ஊடுருவியிருக்கிறது. அவனது நிலை குறித்து பொறுப்பேற்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கின்றது. தெய்வீக விதிகளுக்கு மாறாகச் செயல்படாமல், அவ்விதிகளை அடையாளம் கண்டு அத்துடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கான ஆற்றல்கள் அவன் வரையறைக்குள்ளேயே இருக்கின்றன.   அறநெறி விதிகளை ஒரு பெரும் சுவராகச் சித்தரிக்கலாம். பார்வையற்றவனோ அல்லது கண்மூடித்தனமாக ஓடுபவனோ, கவனிக்காமல் அதன் மீது மோதி இடித்துக் கொண்டால் காயம் ஏற்படவே செய்யும். மனிதர்கள் சந்திக்கும் வேதனைகள், துன்பங்கள், பேரிடிகள், சீற்றங்கள் யாவும் அறநெறி சுவரின் மீது மோதியதால் ஏற்பட்ட காயங்களே. இந்தத் துக்கங்கள் எல்லாம் கோபம் கொண்ட ஏதோ ஒரு தெய்வம் தன் சுய விருப்பு வெறுப்பால் அதன் இட்டத்திற்கு வழங்கும் தண்டனை அல்ல., ஆனால் நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது போலத் தகுந்த காரணத்தினால் ஏற்படும் விளைவுகளாகும்.   சமுக, அரசியல், மதச் சண்டைகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றோடு போர், பஞ்சம், வெள்ளம், காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிகழ்ந்து வரும் இந்தக் காலத்தில்* (* 1910) தேச அளவிலான நிகழ்வுகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் தொடர்பு  இருக்கின்றது என்ற  இறைத்தூதர்களின் வார்த்தைகளை உண்மை என்ற நெருப்பின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் பூர்வமான மெய்ஞானம் புலப்படும். மனிதனின் மனத்திரைகள் விலகும். பிரபஞ்சத்தின் பேரழகும் கட்டொழுங்கும் வெளிப்படும். மனிதவாழ்வைச் செயல்படுத்தும் வழுவாத நீதியை அறிய முடியும்.   வாழ்வின் தீமைகள் உருவானதற்கான காரணம் மனிதனே என்ற அடிப்படையில் வாழ்வின் தீமைகளைக் குறை கூற முடியாது. ஆனால், அதே நேரம், மனிதனால்  தீமை ஏற்படுவதற்கான காரணங்களை உருவாக்க முடியும் என்றால், நன்மை ஏற்படுவதற்கான காரணங்களையும் அவனால் உருவாக்க முடியும் என்பது வெளிப்படை. அவனது உள்ளத்தில் உறையும் வெறியுணர்வுகள் கீழ்படிந்து கட்டுப்படும் போது, வெளியே நிகழும் வன்முறை மறைந்துப் போகும் அல்லது மனிதக்குலத்தைக் காயப்படுத்தும் ஆற்றலை இழக்கும். உள்ளத்தில் பொங்கியெழும் வெறியுணர்வுகள் வெளியில் நிகழும் இயற்கையின் சீற்றங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டு ஒன்றறக்கலந்த சாராம்சமாக இருக்கின்றன.   இறை தூதர் அமோசின் வார்த்தைகள்:   ”இறைவன் என்ற நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் அதற்குப் பதிலாக வன்முறை மற்றும் களவை வீற்றிருக்க வைத்திருப்பவர்களுக்குச் சரியானது எது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நம்பிக்கை ஆகிய இறைவனின் வார்த்தை : அந்த நிலத்தை துன்பம் சுற்றிவளைத்துத் தாக்கும். அவர்களது வலிமை பறிக்கப்பட்டு அவர்களது உறைவிடங்கள் சிதறும்”   உள்ளத்தில் உறையும் வன்மமான வெறியுணர்வுகளைச் சமநிலை செய்வதற்குப் புற உலக துன்பங்கள் இன்றியமையாதவையாகும். எனவே தான் அவை நிகழ்கின்றன. ஒரு நாடு  சீர்கேடாகும் போது அந்நாடு கைப்பற்றப்பட்டு விழுங்கப்பட்டுவிடும். நகரங்கள், அறநெறிகளைப் பின்பற்றுவதில் வற்றும் போது, அவை துண்டு துண்டாக உடையும் அல்லது அந்நிய சக்திகளால் அழிக்கப்படும். 5. நீதியும் அன்பும்   நியாயம் அன்பிற்கு எதிரானது என்னும் ஒரு கருத்தைப் பல முறை கேட்க நேரிடுகிறது. இந்த இரண்டு அறநெறிகளைப் பரந்த நோக்கோடு ஆழமாக உணர்ந்து கொள்வதில் உள்ள குறைபாட்டின் காரணமாகவே இந்தக் கருத்து மேலெழுகிறது, காரணம் இரண்டு தெய்வீக நீதிகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானவையாக இருக்க முடியாது. இரண்டு அடிப்படையான நீதிகள், இரண்டுமே நன்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை, நிச்சயம் ஒத்திசையும் வகையில் இருக்க வேண்டும்; இல்லை என்றால், அதில் ஒன்று தீங்கானதாக இருக்க வேண்டும், காரணம், நன்மை நன்மையை எதிர்க்க முடியாது. அன்பிற்கும் நியாயத்திற்கும் இடையில் மனிதர்கள் கற்பிக்கும் பகையுணர்வு உண்மையில் நிலவவில்லை. அவற்றுள் உள்ளடங்கியிருக்கும் அடிப்படை விதிகள் செயல்படுகின்ற முறையையும் அவற்றின் உண்மை இயல்பையும் சரியாக விளங்கிக் கொள்ளாத அறியாமையால் ஏற்படும் பிழையே அது.   இரக்கத்தின் கூறு, நியாயத்திலிருந்து எப்போதுமே விடுபட்டு இருப்பது இல்லை. அப்படி விடுப்பட்டு இருக்கிறது என்றால், அது பலவீனமான உணர்ச்சி கொந்தளிப்பாகவே இருக்க முடியுமேயன்றி அன்பாக இருக்க முடியாது. அக்கறை செலுத்தாமல் ஏற்றுக் கொள்வதை விட அக்கறையுடன் கவனித்து கடிந்து உரைப்பதிலே கூடுதல் அன்பு பெரும்பாலான நேரங்களில் காணப்படும். தனது குழந்தையின் மீது சிறிது அளவே அன்பு கொண்டிருக்கும் தந்தை அதைக் கொடுமைபடுத்த மாட்டார் என்றாலும் அதன் தவறுகளைத் திருத்தப் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார்.   ஆனால் தன் குழந்தையின் மீது அதிக அளவு அன்பு கொண்டிருக்கும் தந்தை, அந்தக் குழந்தையின் மீது கனிவாக இருக்கும் அதே நேரம் அதை திருத்தவும் முயற்சி செய்வார். அவர் குழந்தையின் மீது அன்பு கொண்டிருப்பதால் நியாயமாக நடந்து கொள்வார். அந்தக் குழந்தையின் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு, அந்த குழந்தையைக் கண்டித்தும் தேவைப்படும் போது தண்டித்தும் கூட திருத்துவார்.   நியாயம் அன்பிலிருந்து தனித்து இருக்கவில்லை. அன்பும் நியாயத்திலிருந்து தனித்து இருக்கவில்லை. அவ்விரண்டு அறநெறிகளின் சாரமும் ஒன்று தான் என்பதை, பின்வரும் இந்த எளிய தெய்வீக கருத்து வெளிப்படுத்துகிறது: "மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அறுவடை செய்கிறான். ” மனிதன், தனது நற்செயல்களினாலான நல்விளைவுகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதும், தீய செயல்களினாலான தீயவிளைவுகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதும்  சீரிய அன்பு மற்றும் வழுவாத நீதியின் காரணமாகவே ஆகும். இதை, அனைத்து மனிதர்களும் கொள்கையளவில் மறுக்காமல் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகள் அவர்களை சூழும்போது, பெரும்பாலானவர்கள் பிரபஞ்சத்தில் அந்த விதியின் செயல்பாட்டை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அவர்கள் விதைத்ததை அறுவடை செய்யவில்லை என வாதிடுகிறார்கள், அப்படி ஒரு துரதிட்டம் தங்கள் மீது விழும் அளவுக்கு ஏதும் செய்யவில்லை என்கிறார்கள். தாங்கள் செய்யாத தவறுக்காக அல்லது மற்றவர்கள் செய்த தவறின் காரணமாக, அநியாயமாகத் தண்டிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.   என்றாலும் அந்த விதி, நீண்ட தேடல் உடையவர்களுக்கும் மேற்பரப்பைக் கடந்து ஆழ்ந்து காண்பவர்களுக்கும் சிறிய  தவறும் இழைக்காமல் துல்லியமாகச் செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. சரியான மனநிலையில் இருப்பவன், அந்த விதியின் செயல்பாடு வேறு விதமாக இருப்பதற்கு விரும்ப மாட்டான். மெய்யறிவிலும் அறநெறியிலும் அவன் வளர்ச்சிக்கு அது உதவும் காரணத்தால் அவன் செய்த தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் தண்டிக்கப்படுவதை விட அன்பான செயலாக வேறு எதுவும் இருக்க முடியாது என உணர்வான். செய்த பாவத்திற்கான தண்டனையைத் தள்ளுபடி செய்யத் தெய்வத்திடம் கோரிக்கை விடுப்பதால் பயனில்லை,  அறநெறி உணர்வுகளால் உந்தப்படாத பக்குவமற்ற மனதிலே தான் அப்படிப்பட்ட எண்ணங்கள் முளைத்து எழும். நீதியின் இந்த விதி செயல்படவில்லை என்றால் மனிதன் மீது சொல் எண்ணா துயரம் விடியும்.   அந்த விதியின் விளைவாக தன் மீது தானே வரவழைத்துக் கொண்ட,  துன்பங்களாலும் துக்கங்களாலும் அவன் தற்போது சிக்கித் தவித்தாலும், நீதி வழுவாத சிறப்புச் சலுகைகளோ பாகுபாடோ காட்டாத அந்த விதி தான் அவனுக்கு நம்பிக்கை தரக்கூடியது ஆகும். இந்த விதிக்கு மாறாக, ஒரு பிரார்த்தனையைச் செய்து விட்டு மனிதனால் அவனது தீய செயல்களின் விளைவுகளிலிருந்து அவன் தப்பித்துக் கொள்ள முடியும் என்றால், நியாயம் என்பது இல்லாமல் போய் விடும். அன்பிற்கு இடம் எங்கிருக்கும்? அவன் செய்த தீமையின் விளைவிலிருந்து விலக்கு அளிக்கப்படுமானால், அவனது நற்செயலின் பலன்கள் திருடப்படாது என்பதற்கு என்ன உறுதி மொழி இருக்க முடியும்? இவ்வாறு, மீள்வதற்கான அடிப்படையே பெயர்க்கப்பட்டு விடும், அன்பும் நீதியும் இருக்கின்ற இடத்தில் அதற்குப் பதிலாக எதேச்சதிகாரமும் கொடுங்கோன்மையும் வீற்றிருக்கும். ஒரு நாணயத்திற்குத் தனித்துவமான இரு வேறு பக்கங்கள் இருப்பது போன்றே அன்பும் நீதியும் ஒரே அம்சத்தின் இரு வேறு பக்கங்களாகும். நீதிக்குள் ஒளிந்திருக்கும் அன்பையோ அல்லது அன்பிற்குள் ஒளிந்திருக்கும் நீதியையோ மனிதர்கள் உணர்வதில்லை. காரணம், அவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.   இன்னொரு பக்கத்தை, அறநெறியின் முழுமையை, அவர்கள் பார்ப்பது இல்லை. நீதி என்பது ஒரு தெய்வீக அறநெறியாகும். அதற்குள் கொடூரத்தனத்தின் எந்தக் கூறும் இடம் பெற முடியாது. அந்த நீதியின் வெளித்தோற்றத்தில் காணப்படும் கொடூரத்தனம் எல்லாமே அழுத்திவைக்கப்பட்டிருக்கும் அன்பின் நெருப்பு தான். மனிதனே தனது நிரந்தர மகிழ்ச்சிக்காகவும் நன்மைக்காகவுமே அவன் மீது செயல்படும் துன்பங்களை ஈர்த்துக் கொண்டுள்ளான், விதி அவன் மீது எதையும் சாற்றவில்லை. பிரபஞ்சத்தில், அன்பின் ஆட்சி தான் நிலவுகிறது, காரணம் நீதி தான் ஆள்கிறது. அன்பின் மென்மையான கரம், தண்டனைக்கான தடியைப் பயன்படுத்துகிறது. மனிதன், அவனிடமிருந்தே  பாதுகாக்கப்படுகிறான். அன்பும் நீதியும் ஒன்று தான். 6. தன்னைத் தற்காத்துக் கொள்ளல்: விலங்கு, மனித, தெய்வீக இயல்புகளும் செயல்பாடுகளும்   சுய பாதுகாப்பிற்காகச் செயல்படுத்தப்படுகிற பல அற்புத வழிமுறைகள் போட்டிச் சூழல் மிகுந்த இந்த உலகில் இருக்கின்றன. தாவரங்கள் கூட சுயபாதுகாப்பிற்கானச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் வரலாறு. விலங்கு உலகத்திற்குள் பார்வையை செலுத்தினால், தங்கள் இனம் அழித்தொழிக்கப்படுவதைத் தவிர்க்க ஒவ்வொரு விலங்கினமும் மேற்கொள்ளும் வழிமுறைகளும் வாழ்விற்கான போராட்டங்களும் எண்ணில் அடங்காதவையாக, நம்மை வியப்பிலும் ஆச்சிரியத்திலும் ஆழ்த்துகின்ற அளவுக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாக இருக்கின்றன.   வாழ்விற்கான இந்த போராட்டமானது எப்போதுமே  “ஒரு மூர்க்கமான போராட்டமாகவோ வலிமையானவைகள் மட்டுமே பங்கு கொள்ளக்கூடிய ஒரு போட்டியாக இருக்கும்” என்று கொள்ள முடியாது.   உண்மையில் பலவீனமான உயிரினங்கள் தங்களது எதிரிகளிடமிருந்து தப்ப கடைபிடிக்கும் வழிகளும் வெளிப்படுத்தும் கெட்டிக்காரத்தனமும், அவற்றை மிகக் குறைந்த அளவிலான எதிரிகளை உடைய வலிமையான விலங்குகளுக்கு இடையேயும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் துணை செய்கின்றன.   படைப்பினங்களில் மிக பலவீனமான பூச்சிகள், இந்த சுயபாதுகாப்பு வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த அளவு ஒரு தனித்தன்மையைப் பெற்றிருக்கின்றன, தாங்கள் நிலை கொண்டிருக்கும் கிளையின் நிறத்திற்கு, மண்ணின் நிறத்திற்கு அல்லது உயிருள்ள அல்லது உயிரற்ற இலைகளின் நிறத்திற்கு எனச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. இன்னும் சில உதாரணங்களில், தங்களது நீண்ட அனுபவத்தின் விளைவால் தாங்கள் தேடிப் போகும் மலர்களின் நிறத்திற்கும் வடிவத்திற்கும் கூட தங்களை மாற்றிக் கொண்டு கூர்மையான பார்வையை கொண்டு எதிரிகளாக இருக்கும்  பறவைகளின் பார்வையிலிருந்து தப்பிக்கின்றன. புத்திகூர்மை கொண்ட மனிதனாலும் அதைக் கண்டறிய முடியாது. அனுபவம் மிக்க இயற்கை ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே அந்தப் பூச்சிகளை அவைகள் வசிக்கும் மலர்களிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியும்.   விலங்கு இனங்களில் மிக கீழ்நிலை படிதட்டில் இருப்பதாக கருதப்படும் ஆகச் சிறிய மீன்கள் கூட இதை ஒத்த முறைகளைக் கடைபிடித்து தங்களை மறைத்துக் தற்காத்துக் கொள்கின்றன.   நான்கு கால் விலங்கினங்களை எடுத்து கொண்டால் (அவற்றுள் வலிமை குறைந்தவை வலிமை மிகுந்தவற்றால் வேட்டையாடப்பட்டாலும், மீன்கள் மற்றும் பூச்சிகள் அகியவற்றிடையே நிலவுவது போன்ற தப்பிப் பிழைத்தற்கான வழிகளை இவையும் மேற்கொள்கின்றன) கண்மூடித்தனமாகச் செயல்படும் ஆற்றலே கோலோச்சுகின்றது. வெகு அரிதாகவே நுட்பமான செயல்திறன் இடம்பெறுகிறது எனலாம்.   விலங்குகள் தற்காப்பிற்கான வலிமை மிக்க ஆயுதங்களாகக் கொம்புகள், கோரை பற்கள், கூர்மையான நகங்கள் போன்றவற்றின் துணையோடு வலிமையான தசைகளாலான உடலையும் பெற்று பூமியிலிருந்து அழித்து ஒழிக்கப்படாமல் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன.   தாக்கு பிடிக்கும் திறன், வேகம், வலிமை மற்றும் மூர்க்கத்தனம் ஆகிய தன்மைகளே கொடிய மிருகங்களின் சுய பாதுகாப்பு வழிமுறைகளாகும்.   மிருக சுய பாதுகாப்பின் உச்ச நிலைகளை அதீத வலிமையும் வியக்கத்தகு புத்திசாலித்தனமும் கொண்ட சிங்கம், புலிகளிடத்தில் காணலாம். ஆனாலும், மனிதன் கைக்கொள்ளும் சுயபாதுகாப்பு வழிமுறைகளோடு ஒப்பிடும் போது மிருக சுயபாதுகாப்பு பரிதாபமான, பலவீனமான நிலை என்றே கூற வேண்டும். சுயபாதுகாப்பிற்காக மனிதர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் மிருகங்களிடத்தில் காணப்படுவது போல அந்த அளவுக்கு ஆற்றல் நிறைந்ததாக இல்லை என்றாலும் அந்த உணர்வு மனிதனுள்ளும் மேலோங்கி இருப்பதே மனிதன் கைக்கொள்ளும் சுயபாதுகாப்பு வழிமுறைகள் சிறந்து விளங்கக்  காரணம்.   எல்லா மிருக இயல்புகளும் மனிதனுள் நிலை கொண்டிருக்கின்றன. மிருகங்கள் மற்றும் பூச்சிகளின் உள்ளுணர்வுகளும் அவனுக்குள் வலிமையாகவே இருக்கின்றன. ஆனால், இந்த விலங்கு வாழ்வின் தற்காப்பு இயல்புகளோடு கூடுதலாக ஒரு வகையான அறிவும் சுய உணர்வுநிலையும் இருக்கின்றன. அதனால் தான் அவனது தற்காப்பு வழிமுறைகள் ஆற்றல் வாய்ந்ததாகவும் பேரளவானதாகவும் இருக்கின்றன.   தாக்குப் பிடிக்கும் திறன், வேகம், வலிமை மற்றும் மூர்க்கத்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதன் இன்னும் ஒரு மிருகம் தான். ஆனால், ஒரு அறிவான, சுய உணர்வு உள்ள உயிர் என்ற அடிப்படையில் அவன் மிருகத்தை விட உயர்ந்தவன்.   அறிவின் கீழ் படிநிலையில் இருக்கும் மனிதர்கள் இடையே மிருக வழிமுறைகள் வழக்கில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன. வாழ்க்கை போராட்டத்தில் கொடூரமானது மூர்க்கத்தனத்தையே நம்பியிருக்கின்றது.   நாகரீகமான சமூகங்கள் இடையே கூட  ஆயிரக்கணக்கானவர்கள் “தற்காப்புக் கலையின் உயர்வை” பேசும் போது சிங்கத்தின் வெறி குணத்தையும் தந்திரங்களையும் குறிப்பிடுகிறார்கள். அதன் போர்க்குணத்தை எந்த கலைநயமுமற்றதாக கருதி அதை அங்கீகரிப்பதைத் தவிர்க்கிறார்கள்.எனவே, அந்த விலங்கு தற்காப்பின் சின்னமாகக் குறியிடப்படுவதிலிருந்து வெகுகாலத்திற்கு முன்பே விலக்கு பெற்று விட்டது. சிலர் மட்டுமே பொழுது போக்கிற்காக அதைப் போலியாக குறிப்பிடுகிறார்கள்.   தான் கடந்து வந்த பாதையான மிருக உள்ளுணர்வோடு கள நிலவரத்தையும் ஆழமாகச் சிந்தித்து, மனிதன் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி தனது எதிரிகளை அழித்தொழிக்கவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முனைகிறான். இதை மிகுந்த புத்திசாலித்தனமாகவும் நுட்பமாகவும் தொடர்ந்து வளர்த்த வண்ணமாக இருக்கிறான்.   விலங்குகள் தளத்தோடு ஒட்டுறவு இல்லாத மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடிய இந்தத் தூய அறிவின் செயல்பாடான இந்தப் புதிய பாதையில் பயணிக்கும் போது, தனது உடம்பின் சுகம் மற்றும் வசதி ஆகியவற்றுக்கான வழிகளையும் தன் உடம்பை நிம்மதியாகப் பாதுகாக்கும் வழிகளையும் மனிதன் கண்டுபிடிக்கிறான். உயிர்வாழ்வதற்கான தனது ஆற்றலை வெறித்தனமான ஆற்றலால் மனிதன் நிலைநிறுத்தவில்லை என்றாலும், தனது கரம் மற்றும் மூளையின் கூர்மையான அயராத உழைப்பால் நிலைநிறுத்துகிறான்.       இங்குள்ள அடிப்படை போராட்டம், உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவிற்கான நேரடிச் சண்டை அல்ல. ஆனால், மறைமுகமான வழிகளில் உணவைப் பெற்று உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கான அடிப்படை போராட்டம்.   மூர்க்கமான மிருக சண்டை நுட்பமான மனிதச் சண்டையாக உருப்பெற்று இருக்கிறது. கோரை பற்களோடும் நகங்களோடும் இரத்த வெள்ளத்தில் போராடாமல் வார்த்தைகளாலும் திறமைகளாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க மென்மையான முறையில் போரைப் புரிகிறான்.   தாக்குதல் தொடுப்பதையும், கொல்வதையும் மற்றவர்களைக் கெடுப்பதையும் விட சுய பாதுகாப்பிற்கு வேறு சிறந்த வழிகள் இருக்கின்றன என்பதை மனிதன் உணர்ந்திருக்கின்றான் என்றாலும் அதைப் பகுதி அளவில் தான் உணர்ந்திருக்கிறான். அவன் முந்தைய முறையைப் பின்பற்றுவதால் தனது சுக போகம், மகிழ்ச்சி மற்றும் வாழ்வையும் கூடப் பணயம் வைக்க வேண்டும். அதற்குப் பதிலாக இரத்தமில்லாத யுத்தத்தில் ஈடுபட்டு ஒவ்வொருவரும் அவர்களது மன ஆற்றலுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் நிலையை நிலைநிறுத்திக் கொள்ளட்டும் என இருக்கிறான்.   ஆற்றல் அமர்ந்த இடத்தில் உரிமை அமரத் தொடங்கிவிட்டது. போராட்டம் என்பது பணத்திற்காகத் தான் பெரும்பாலும் நடக்கிறது என்றாலும் அது முழு உண்மை அல்ல. வாழ்வின் செயல்பாட்டுக்கு ஏற்ற ஒரு கருவியாகத் தன்னை உருமாற்றி கொண்டு மனித பண்பின் சிறப்பியல்புகளை வெளிக் கொணரவும் போராட்டம் நடைபெறுகிறது.   அறிவுசார் குணங்களான பகுத்தறிவு, கணிக்கும் திறன், கெட்டிக்காரத்தனம், தொலை நோக்கு, புத்திசாலித்தனம், பல்வகை ஆற்றல்கள், புத்தாக்கங்கள்; மற்றும் கனிவு, பொறுமை, இரக்கம், மன்னிக்கும் தன்மை, உயர்வை மதித்தல், நேர்மை, நீதி போன்ற அறநெறி குணங்களை அடையவும் தான் இது நடைபெறுகிறது.    தற்போது உள்ள மனித இனத்திற்கான கல்வி முறை இங்குக் குறிப்பிடப்பட்ட அறிவு சார்ந்த மற்ற அற நெறி சார்ந்த துறைகளிலேயே முழுமையாக இருக்கிறது. ஒருவன் தன் இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்கான இன்னொருவன் உடனான போட்டியில் அவன் பயன்படுத்தும் கருவிகள் என்பவை அவனது ஆற்றல்கள், கோரை பற்கள் அல்ல. திறமைகள், நகங்கள் அல்ல.   அறிவுசார்ந்த மற்றும் அறம் சார்ந்த நெறிகளில் உயர்ந்து நிற்பதே மனித உலகில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கான கடவுச் சீட்டு.   அறிவுசார் துறைகளில் தீவிரமாகச் செயல்படுபவர்களும் அறநெறிகளில் வழுவாது நிற்பவர்களுமே வாழ்வில் வழிகாட்டும் விதமாக முன்னேறி செல்கிறார்கள். பலவீனமானவை அவற்றுக்குரிய இடத்தை பெற்றுக் கொள்கின்றன. அவை முன்னேறுவதற்கான வழிவகைகளும் வாய்ப்புக்களும் இல்லாமல் இல்லை.   மற்றவர்களைக் காப்பதில்—வலிமை குறைந்தவற்றை, துன்பத்திலிருப்பவர்களை, துயருற்றிருப்பவர்களைக் காப்பாற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அவன் தனக்கு மேலான ஒரு பாதுகாப்பை வழங்கிக் கொள்ள முடியும் என்று மனிதன் மெதுவாக ஒன்றை கற்றுக் கொண்டு வருகிறான்.     கொடூர விலங்கின் கொல்லக்கூடிய வெறியுணர்வோடு ஒப்பிடும் போது சுய பாதுகாப்பின் இந்த முறையை ஒரு மிகப் பெரும் முன்னேற்றமாக நாம் கருதலாம்.  கொள்ளை மற்றும் அழித்தொழிப்பின் இடத்தை வணிகமும், தொழிலும் விளையாட்டும் ஏற்றுக் கொள்ளும். குறுகிய மிருக பாசம் பேரன்பாகவும் அறக்கொடைகளாகவும் உருவெடுக்கிறது.   மனிதர்களுக்கு இடையேயான போட்டிகளில் கொடூரத்தன்மை இன்னும் இருக்கவே செய்கிறது, ஆனால், அதன் செயலாற்றல் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் இயல்புத்தன்மை நன்மை அளிக்கும் வேறு சிறந்த ஒன்றாக உருமாற்றப்பட்டு இருக்கிறது. அதன் திகிலூட்டும் இருள், அன்பின் ஒளிக்கதிர் பரவும் அருளாகியிருக்கிறது. அதன் கொடூரத்தன்மை எல்லையில்லாத அன்பால் விரியும் கனிவாகியிருக்கிறது. விலங்குகளின் சுய பாதுகாப்பை விட மனிதனின் சுய பாதுகாப்பு உயர்ந்தது. எப்படி விலங்குகளின் பாதுகாப்பை விட மனித பாதுகாப்பு உயர்ந்ததோ அது போல மனித பாதுகாப்பை விட தெய்வீக அல்லது ஆன்மீகப் பாதுகாப்பு உயர்ந்தது.   இந்த வழிமுறையில், மனிதன் விலங்குகளின் வழிமுறையைப் போல நேருக்கு நேராக மூர்க்கத்தனமான முறையில் மோதுவதில்லை அல்லது மனித வழிமுறையில் மனரீதியாக நுட்பமாகவும் போராடுவதில்லை. அவன் தன்னுள் இருக்கும் மூர்க்கத்தனத்தோடு, அதை அழித்தொழிக்கப் போராடுகிறான். உயர்ந்த, சிறப்பான  நிம்மதியும், நல்லெண்ணமும் மெய்யறிவும் மிக்க வாழ்வை வாழும் பொருட்டு தனது பேராசை இயல்புகளை எதிர்த்துப் போரிடுகிறான்.   தெய்வீக பாதுகாப்பில் மற்றவருடனான மூர்க்கமான போராட்டம் முடிவுறும், சுய விருப்பத்திற்கான போட்டியும் நிலவாமல் போகும். தன்னலத் துறப்பும் எதிர்ப்பைத் தாங்கி எதிர்ச் செயல் செய்யாதிருத்தலுமே இதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்.   மனதளவில் உயர்நிலையை அடைந்து தெய்வீகச் செயல்பாடுகளின் தளத்தில் உள்நுழையும் தகுதி பெற்றவர்களால் மட்டுமே இந்த ஆயுதங்களின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.   கூடுதலாகத் திறன்பெற்ற மனிதர்கள் மிகச் சுலபமாகவும் அலட்டிக் கொள்ளாமலும் மனதின் உதவியோடு செயல்படுத்தும் ஆயுதங்களைப் புரிந்து கொள்ளவோ பயன்படுத்தவோ கோரை பற்கள் கொண்ட கொடிய விலங்குகள் ஆற்றலின்றி இருந்ததைப் போல ஆன்மீகத் தளத்தில் செயல்படும் மனிதனின் ஆயுதங்களான தன்னலத் துறப்பு மற்றும் எதிர்ப்பைத் தாங்கி எதிர்ச் செயல் செய்யாதிருத்தல் ஆகிய ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அவன் ஒருவனை மட்டும் அல்ல, ஆனால், உலகையே காக்கும் கேடயங்களாகச் செயல்படுவதை சுயநலத்தில் மூழ்கியுள்ள மனிதனால் புரிந்து கொள்ள முடியாது.   மனித வாழ்வியலுக்கு என்றே உரிய காரணங்களாக சுயநலம், எதிரியை வீழ்த்த போராட்டம், மற்றவருடனான போட்டி ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால், தெய்வீக வாழ்வில் பிறர் நலத்தை எண்ணி தன்னலத்தை மறப்பதும் மற்றவர்கள் மீது ஆழமான உணர்வுடனான இரக்கமும் கருணையுமே மேலோங்கும் குணங்களாகும்.   மற்றவர்கள் சுயநலத்தை இறுகப் பற்றி போராடும் போது ஆன்மீக மனிதன் எதிர்ப்புணர்வின்மையாலும் விட்டுக்கொடுத்தலாலும் கைப்பற்றுகிறான். விலங்குகளின் வலிமையான ஆற்றல்கள், பலவீனமாக மனிதனது அறிவுசார் ஆற்றல்களின் முன் வீழ்வது போல-, அந்த அறிவுசார் ஆற்றல்கள் எவ்வளவு வலிமையாக இருப்பினும், ஆன்மீக மனிதனின் கனிவான ஆற்றல்களை எதிர்கொள்ள முடியாமல் அவை வீழவே செய்யும்.   மிருக இயல்பு ஆற்றல்கள் மனித ஆற்றல்களின் முன் நிற்க முடியாதது போல, மனித ஆற்றல்களால் தெய்வீக அறநெறி ஆற்றல்களின் முன் நிற்க முடியாது. தெய்வீக மனிதன் அத்தகைய ஆன்மீக அறநெறிகளின் அடிபடையில் நின்று செயல்படுகிறான்.   தெய்வீக அறநெறிகளான பொறுமை, பணிவு, தூய்மை, கருனை மற்றும் அன்பு ஆகியன மனித இயல்புகளோடு அவனுள் ஒன்றற கலந்து விட்டன.   விலங்கு மற்றும் மனிதன்  என இரு பிரிவுகளும் தற்காலிக இருப்பான இந்த உடலையும் இந்த உடலைச் சார்ந்த பண்புகளையுமே பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் முனைகின்றன. ஆனால், தெய்வீக மனிதன் தனது உள்ளொளியான ஆன்மாவினை காப்பாற்ற முனைகிறான். அவனைத் தாங்கி நிற்கும் நிலையான அறநெறிகளின் அடிப்படைப் போன்று அது என்றும் நிலையானது.   சுருக்கமாகச் சொன்னால், தெய்வீகத் தற்காப்பு என்பது மனதை சுயநலத்திலிருந்தும் வெறியுணர்வுகளிலிருந்தும் பாதுகாப்பது ஆகும். மனதை தூய்மையோடும் மெய்யறிவோடும் வைத்திருப்பது ஆகும்.   தன்னலத் துறப்பு மற்றும் எதிர்ப்பவர்களின் மீதான எதிர்ப்பின்மை என்பதன் போராற்றல் என்ன என்பதை அவ்வறநெறிகளை வாழ்ந்துக் காட்டியுள்ள இயேசு, புத்தர், போன்ற பேராளுமைகளின் வாழ்வை உற்று நோக்கும் போது நம்மால் உணர முடிகிறது.   இந்த ஆன்மீக பேராசான்களுக்கு, பொதுவாக, எல்லா மனிதர்களுமே, கீழ்பணிந்து செவி சாய்க்கிறார்கள்.   மனிதர்கள் உலக வாழ்வில் பெரும் சாதனைகளைப் புரிந்து உயர்நிலைகளை எட்டுகிறார்கள்-மன்னர்களாக, நாட்டை கைபற்றுபவர்களாக, வெற்றிகரமான தளபதிகளாக, நாட்டின் பிரதிநிதிகளாக, பேச்சாளர்களாக, பெரும் நிதியாளர்கள் ஆகிய அனைத்துப் பெருமக்களும் அத்தகைய பேராளுமைகளின் முன்னிலையில் தன்னடக்கத்தோடு கீழ் பணிந்து நடக்கிறார்கள். அந்த பேராசான்கள் மனிதகுலத்துக்கு கனிவாக வெளிப்படுத்தும் அந்த தன்னை வென்ற நிலை, அந்த ஆன்மீக சாதனையின் முன் மனிதர்களது உலக வாழ்வின் சாதனைகள் ஒப்பிட அருகதையற்றதாக விளங்கச் செய்கின்றன..   இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் புத்தரையும் இயேசுவையும் தங்கள் ஆசானாகவும் மீட்பராகவும் வழிபடுகிறார்கள்.   சுய பாதுகாப்பின் மூன்று வழிமுறைகளான விலங்கு, மனிதன், தெய்வீக வழிமுறை ஆகிய இம்மூன்றிலும் செயல்படுகின்ற அடிப்படை ஆற்றலை உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் நம்மால் உணர முடிகிறது. மிக தாழ்ந்த உயிரில் பரிணாம வளர்ச்சி தோன்றி நம்மால் நேரடியாக உணரப்பட முடியாத தெய்வீக உயிர்கள் வரை நீள்கிறது.   எந்த ஒரு வழிமுறையிலும் தீமை உள் பொதிந்து இருப்பதாக நம்மால் உணர முடியவில்லை. அவை எல்லாம் நியாயமானவை. பிரபஞ்ச விதியின் அமைப்புக்கு அவை கட்டுப்படுகின்றன.   அதன் அதன் தளத்தில் ஒவ்வொன்றும் சரியானதாகவும் தேவையானதாகவும் இருக்கின்றது. இன்னும் உயர்நிலையில் உள்ள பேரறிவிற்கு இட்டுச் செல்கின்றது. இன்னும் ஆழமான ஞானத்திற்கு இட்டுச் செல்கின்றது.   விலங்கானது தனக்குள்ள அறிவை வைத்து, தனது இயல்பைப் பொறுத்து தன்னை தற்காத்துக் கொள்கிறது. மனிதனும் தனது மனித இயல்புகளோடு ஒத்திசைந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான். ஆன்மிக உயிர் தனது தெளிவான உள்ளொளியாலும் ஆழமான மெய்யறிவாலும்  காலத்தைக் கடந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.   பரிணாம வளர்ச்சியின் இந்தச் செயல்பாட்டில் எந்த ஆற்றலும் வீணாகப் போவதில்லை. வெறியும் மூர்க்கத்தனமும்  மனிதனுள் அறிவு மற்றும் அறநெறி சார்ந்த ஆற்றலாக உருமாறுகின்றன. ஆன்மீக மனிதனுள் அவை இரண்டும் கட்டுப்பாட்டோடும் சமநிலையோடும் ஒன்று கலக்கின்றன.       7. புதியதொரு துணிவு   துணிவு என்ற பெருங்குணம் உடல் சார்ந்த அடிப்படையில் மட்டுமே பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது, உதாரணமாகச் சொன்னால், வேட்டையாடும் விலங்கான சிங்கமே துணிவின் சின்னமாக உருவகப்படுத்தப்படுகிறது. துணிவு என்ற இந்த வார்த்தைக்கு அகராதியை புரட்டிப் பார்த்தால் “தைரியம், அஞ்சாமை” போன்ற வார்த்தைகளையன்றி வேறு வார்த்தைகளில்லை. மனிதர்களின் துணிவுக்கு போர்வீரன் உதாரணமாகிறான். “சிங்கத்தைப் போன்ற துணிவு”, “போர்வீரனைப் போன்ற துணிவு” மாதிரியான சொற்றொடர்களை நாம் கேள்விப்படுகிறோம்.   போர்வீரன், சிங்கம் என இரு உதாரணங்களுமே  தாக்குதல், தற்காப்பு என்ற இரண்டையும் அஞ்சாமல் செயல்படுத்துபவைகளே. இரண்டும், பணிந்து போவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் தயாராக இருக்கும். ஆனால், அதை முற்றிலும் மிருக அடிப்படையிலான தாக்குதல், தற்காப்பு என்றே கொள்ள வேண்டும். துணிவு என்ற பெருங்குணத்தை இந்த வட்டத்திற்குள்ளாக மட்டும் அடக்கி விட முடியாது. உண்மையில், இதை  சில படிகள்  தாழ்ந்த நிலையில் உள்ள துணிவின் வெளிப்பாடு என்றுச் சொல்லலாம் . துணிவிற்கு இன்னும் பல்வேறு விதமான  கூறுகளும் செயல் படும் முறைகளும் இருக்கின்றன. ஒருவன் அறநெறி மற்றும் ஆன்மீக அளவீடுகளில் உயரும் போது அவனது துணிவு ஒரு புதிய பரிமாணத்திற்கு உருமாற்றம் பெறும். இந்தக் கட்டுரையின் பேசுபொருள் அந்த உயர்வடிவ துணிவைப் பற்றித் தான் என்றாலும், அதன் தாழ்நிலை வடிவுகளை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். உடல் சார்ந்த துணிவின் இயல்புகள் குறித்து அனைவருமே ஒரு அளவு அறிந்திருப்போம். அது விலங்கு, மனிதன் என இரு இனங்களுக்குமே அது பொதுவானது.   அச்சமின்மையிலிருந்து அது முளைத்து எழுகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதல் என இரண்டுவகைகளில் செயல்படுகிறது. இதில் கவனத்திற்கு வருகிற ஒன்று, இறப்பு மற்றும் பேரழிவு என்று வெளிப்படுவதன் காரணமாக, விலங்கினம் மற்றும் மனித இனம் என்னும் இருதளங்களிலும் இவ்வகையான துணிவுடன் துன்பம் தவிர்க்க முடியாத வகையில் இணைந்தே இருக்கிறது. அது தற்காப்பு என்றாலும் சரி இல்லைத் தாக்குதல் என்றாலும் சரி, சுய பாதுகாப்பு தான் மேலோங்கியத் தன்மையாக இருக்கிறது ஆனால், மனிதன் ஒரு வெறும் விலங்காக மட்டும் இல்லை, உடலின் அடிப்படையில் செயல்படும் ஒரு உயிராக மட்டுமே அவன் இல்லை., அறநெறி மற்றும் அறிவுவழி செயல்படும் உயிராகவும் அவன் இருக்கிறான். அவனது அறநெறி வாழ்வின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு உயர்ந்த வகை துணிவை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினான். அது ஆக உயர்ந்தது அல்லது இந்த கட்டுரையில் பின் குறிப்பிடப்படவிருக்கும் புதியதொரு துணிவு என்று கூற இயலாது என்றாலும் அது உடல் ரீதியான துணிவோடு ஒப்பிடுகையில் அது பன்மடங்கு உயர்ந்த ஒரு மனத்துணிவு ஆகும்.   உடல் ரீதியான துணிவைப் பொறுத்தவரையில், மற்றவனது உடலோ அல்லது உடைமையோத் தாக்கப்படுகிறது, ஒருவனது சொந்த உடலும் உடைமையும் பாதுகாக்கப்படுகின்றன.   மனத்துணிவை பொறுத்த வரையில் மற்றவன் கொண்டிருக்கும் கருத்துக்களும், வாழ்வின் அடிப்படை நெறிகளும்  தாக்கப்பட்டு ஒருவனது  சொந்த கருத்துக்களும் வாழ்வின் அடிப்படை நெறிகளும் பாதுகாக்க அல்லது தற்காக்கப்படுகின்றன.     தாக்குதல் மற்றும் தற்காப்பைச் செயல்படுத்தத் தேவைப்படும் அச்சமின்மையே உடல் அளவிலான துணிவிற்கு அடிப்படையாக இருப்பது போல மனதளவிலான துணிவிற்கும்  அதுவே அடிப்படையாக இருக்கிறது. ஆனால் புறச் செயல்பாடுகளின் அடிப்படையில் காணும் போது அவை பெரிய அளவில் வேறுபடுகின்றன. அவற்றின் வெளித்தோற்றம் மறைந்து ஒரு பெரும் உருமாற்றத்திற்கு உள்ளாகி ஒரு புதிய ஒன்றாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. காரணம், மனத்துணிவு என்பது மனிதர்களை எதிர்கொள்வது அல்ல, ஆனால் அவர்களது அடிப்படை கொள்கை கோட்பாடுகளை, அறநெறிகளை, சித்தாந்தங்களை எதிர்கொள்வது ஆகும்.   இது உண்மையில் மனதளவில் நடைபெறுகிறது. இதுவும் அழிவையே செயல்படுத்துகிறது என்றாலும் இந்த அழிவு என்பது இரத்தமின்றி மிக நுட்பமாக நடைபெறுகிறது. அதாவது, மற்றவர்களது கருத்துக்களை அழிக்கும் இந்த செயலில் அவர்கள் அனுபவிக்கும் வேதனை, மனதளவில் தானே தவிர உடலளவில் இருக்காது. பொதுவான பேச்சுவழக்கு நிகழ்வுகளில் இவ்வகையான துணிவு மனத்துணிவு அல்லது உள்ளத்துணிவு என்று குறிப்பிடப்படுகிறது. உடல் சார்ந்த துணிவிலிருந்து அதை வேறுப்படுத்திக் காட்டும் நோக்கமே இதற்குக் காரணம்.   விலங்கினங்களில் காணப்படாத இந்த வகை துணிவு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு சமீபத்திய முன்னேற்றம் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்காத ஒன்றாக இருக்கிறது.   சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையிலும் அது மிக அரிதாகவே காணப்படக்கூடிய ஒரு புதிய குண இயல்பாக விளங்கியது. அது இப்போதும் வளர்ச்சி நிலையில் தான் காணப்படுகிறது. மனித இனத்தின் பெரும்பான்மை எண்ணிக்கை இதை இன்னும் கைவரப் பெறவில்லை. உடல் சார்ந்த துணிவை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது-, எழுப்பத்தி ஐந்து விழுக்காடு மக்கள் பெற்றிருப்பதற்கு சாத்தியமிருக்கலாம். ஆனால்  இருபது விழுக்காடு மக்களாவது உள்ளத்துணிவை பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. இவ்வாறான இந்த உள்ளத்துணிவை நிரம்ப பெற்றிருப்பவர்கள்,  அவர்களது செயல்பாட்டு தளத்தில் அதன் காரணமாகத் தனித்து அடையாளம் காணப்பட்டுப் பொதுவாகத் தலைவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு தலைவர்களாகத் தான் இருப்பார்கள் என்பது ஒரு கட்டாய விதி என்று கொள்ளத் தேவையில்லை.   இந்த கட்டுரையின் தலைப்பான புதிய துணிவு, இதுவரை இங்கு விவரிக்கப்பட்டுள்ள உள்ளத்துணிவு என்பதைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றாகும். எப்படி உள்ளத் துணிவு என்பது அதன் முந்தைய நிலையான உடல் சார்ந்த துணிவை விட மேல் நிலையில் உள்ளதோ அது போல இந்த புதியத் துணிவு உள்ளத்துணிவை விட மேல்நிலையில் உள்ளது.    இதை புதியத் துணிவு என்று கூறுவதற்குக் காரணம் இது இப்போதைய காலத்தில் மனித இனத்திற்குப் புதியது. இது தற்காலத்தில் மிக அரிதாகவே வெளிப்படுவதால் மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.   புதியத் துணிவு உள்ளத்துணிவில் இருந்து பெரிதும் வேறுப்பட்டு இருந்தாலும் அதில் இருந்தே தோன்றியிருக்கிறது. உள்ளத்துணிவு எப்படி உடல் சார்ந்த துணிவில் இருந்து வேறுப்பட்டிருந்தாலும், அதை அடித்தளமாக கொண்டு பிறப்பெடுத்ததோ அதைப் போலவே உள்ளத்துணிவை அடித்தளமாகக் கொண்டு புதியத்துணிவு பிறப்பெடுத்திருக்கிறது.     உடல் அளவிலான துணிவு என்பது மிருக குணமாகும். உள்ளத்துணிவு என்பது மனித குணமாகும். புதியத் துணிவு என்பது தெய்வீகக் குணமாகும். எனவே, புதியத்துணிவு என்பது மிருக அல்லது மனித அச்சமின்மையிலிருந்து வேறுப்பட்ட ஒரு தெய்வீகமான அச்சமின்மையாகும்.   புதியதுணிவு இரண்டு அடுக்குத்   தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. அதன் முதல் அடுக்கில், மற்ற இரண்டு துணிவு வகைகளைப் போலவே   புதியத்துணிவும், எதிரிகளை அச்சமின்றி தாக்கி மீண்டு வரச் செயல்படுகிறது. வெளியிருக்கும் எதிரிகளை தாக்குவதற்குப் பதிலாக, ஒருவனது உள் இருக்கும் எதிரிகளைத் தாக்குவது தான் இதில் உள்ள வேற்றுமை. அதன் அடுத்த கட்டத்தில் மற்றவர்களுடனான செயல்பாடுகளில் முற்றிலும் புதிய இயல்பில் வெளிப்படுகிறது, அதிலும் குறிப்பாகப் புறவாழ்வின் எதிர்ப்பாளர்களையும் காழ்ப்புணர்வாளர்களையும் சந்திக்க வேண்டிய சூழல்களில்.   புதியத்துணிவு என்ற குணம் அதன்  வளர்ச்சி பெற்ற கனிந்த நிலையில் அதன் புறச்செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைக் குறித்துத் தான் இந்தக் கட்டுரையில் நாம் ஆர்வமும் கவனமும் செலுத்த இருக்கிறோம்.   உடல் அடிப்படையான துணிவு எப்படி ஒருவனது உயிரையும் உடைமைகளயும் பாதுகாக்கச் செயல்படுகிறது என்பதைப் பார்த்திருக்கிறோம். உள்ளத்துணிவு கொண்டவன் எப்படி தனது கருத்துக்களை பாதுகாக்க செயல்படுகிறான் என்பதையும் பார்த்திருக்கிறோம். இனி அடுத்ததாக, இந்த தெய்வீகத் துணிவை கொண்டிருப்பவன் எப்படிச் செயல்படுவான்?   புதியத் துணிவைக் கொண்டிருப்பவன் மற்ற மனிதர்களை தாக்கவோ தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ மாட்டான். மற்றவர்களது கருத்துக்களைத் தாக்கவோ அல்லது தனது கருத்தை தற்காத்துக் கொள்ளவோ மாட்டான். அனைத்து மனிதர்களுக்கும் பாதுகாவலாக இருக்கின்றான். அவன் எதிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறான் என்றால்,  மனிதர்களை அவர்களின் சொந்த அறியாமையிலிருந்தும் அவர்களின் கட்டுபடுத்தப்படாத வெறியுணர்வுகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுகிறான். ஒருவனுக்குள் உறையும் தீமை தான் அவனது மிகக் கொடிய எதிரி. இப்புதியத் துணிவைப் பெற்றவன், மனிதர்களை அவர்களது அந்த  கொடிய எதிரியிடமிருந்து காப்பாற்றத் தனக்கு எந்தத் தற்காப்பையும் தேடிக்கொள்ளாமல் தன்னையே கேடயமாக்கி அவர்களைக் காப்பாற்றச் செயல்படுகிறான்.   உடல் அடிப்படையிலான துணிவு, உள்ளத் துணிவு இரண்டும் சத்தத்துடன் தான் செயல்படும்.   ஒன்றில், ஆயுதங்களின் உரசலும் படைக்கலன்களின் பேர் இடி ஓசையும் இருக்கும். கூடவே வெற்றி முழக்கங்களும் இறப்பவர்களின் ஓலமும் இருக்கும். இன்னொன்றில் நாவின் பேரிரைச்சலால் பெரும் வாக்குவாதப் போர் நடக்கும்.   ஆனால் இந்த புதிய துணிவில் ஒரு ஆழமான பேரமைதி குடி கொண்டு இருக்கும். முழு மனிதக்குலமும் ஏற்படுத்தும் சத்தத்தை விட இந்த புதிய துணிவை பெற்றிருக்கும் ஒரு ஒற்றை மனிதனின் அமைதி பேர் ஈர்ப்பாகவும் பெரும் ஆற்றல் வாய்ந்ததாகவும் இருக்கும்.     அமைதியாக இருப்பதற்கானத் துணிவு என்று இந்தப் புதிய துணிவை விவரிக்கலாம். ஆக, இந்தப் புதிய துணிவைக் கொண்டிருப்பவன், தாக்கப்படும் போது, அவதூறு செய்யப்படும் போது அல்லது தவறாக சித்திரிக்கப்படும் போது அவன் சலனமற்ற பேரமைதியோடு இருக்கிறான். ஆனால் இந்த பேரமைதி ஆணவத்தாலோ சுயநலத்தாலோ விளைந்த ஒன்றல்ல.   வாழ்வைப் பற்றியச் சரியான புரிதலில், ஒரு பயனுள்ள நன்மையான இலக்கை அடைய எண்ணும் பேராவலில் விளைந்த பேரமைதியாகும். அந்த இலக்கு என்பது தன்னைத் தாக்குபவனின் நல்வாழ்வை கருத்தில் கொள்வதாகும். அவனை அவனுள் தீவிரமாக இயங்கும் தீங்கில் இருந்து காப்பதன் வாயிலாக ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் காப்பதாகும்.   பெரும் நெருக்கடி அளிக்கும் வகையில் ஆர்பரித்து எழும் மனித உணர்வுகள் என்னும் கடலின் எதிரில் அமைதியாக, சாந்தமாக, பேரிரக்க மனப்பான்மையோடு இருப்பதற்கு ஒரு மாபெரும் துணிவு வேண்டும். இத்தகையத் துணிவு, மனிதர்களால் கிட்டத்தட்ட அறியப்படாததாகவே இருக்கிறது. இத்தகையத் துணிவை பெற்றிருந்த ஒரு சில மனிதர்கள், தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதன் காரணமாக தண்டிக்கப்பட்டிருந்தாலும், எதிர்கால மனித இனம் அவர்களை தெய்வீகமானவர்களாகவும் அற்புதம் நிகழ்த்தியவர்களாகவும் அவர்களைப் போற்றுகிறது.   இப்புதிய துணிவைப் பெற்றிருப்பவர்கள் உலக வாழ்விலிருந்து விடைப்பெற்றிருந்தாலும் அந்த துணிவானது எப்படி செயல்பட்டு கொண்டே இருக்கிறது என்பதை இங்கே காண்கிறோம்.   உடலளவில் துணிவை பெற்றவன் இன்னொருவனை சண்டையில் வெல்கிறான். உள்ளத்துணிவை பெற்றவன் மற்றவர்களின் கருத்துக்களை வென்று ஆயிரகணக்கானவர்களை தனது குறிக்கோளிற்கு ஆதரவாக திரட்டுகிறான். ஆனால் தெய்வீக துணிவை பெற்றிருப்பவன் உலகையே வெல்கிறான். அவனது வெற்றி என்பது இரத்தம் சிந்தியோ அல்லது போராட்டமாகவோ இல்லாமல் பேரருளாகவும் பெரு நிம்மதியாகவும் நேர்கிறது.   கீழ்நிலையில் உள்ள இருவகை துணிவுகளில் காணப்படும் தற்காப்பு மற்றும் தாக்குதல், இப்புதியத் துணிவில் முற்றிலும் காணப்படாமலயே இருக்கின்றது.   அவை காணப்படாமல் தான் இருக்கின்றதே தவிர அது அழிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அவற்றின் கருவாக இருப்பவைகள் ஒன்று கலந்து பிரபஞ்சத்தின் மீது பொழியும் நுட்பமான பேரிரக்கமாக உருமாறியிருக்கிறது. தெய்வீக மனிதன் தனது எதிரியுடனான சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறான், அந்த எதிரியே வெற்றி பெற்றதான ஒரு உணர்வை அவனுக்கு வழங்குகிறான், இதற்கு காரணம் அவனது எண்ணம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இல்லாமல், தவறுதலாக அவனை எதிரியாகக் கருதுபவனது நலனையும் உள்ளடக்கியே இருக்கிறது.   அவனது எதிரியின் மீது அவனுள் சுரக்கின்ற ஒரு ஆழமான பேரிரக்கம் அவனை வழிநடத்துகின்றது. அந்த பேரிரக்கத்தின் அடிப்படை,  தெய்வீகமான தெளிந்த அறிவு. அவனது அமைதியான செயல்பாடு அவனது எதிரி கொண்டிருக்கும் வெறியுணர்வினாலான செயல்பாடுகளை அந்த நேரம் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும், அவனது அந்த அமைதியான செயல்பாடுகளை  விவரித்தால் மட்டும் போதும், வேறு எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம், பின்வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நூற்றுக்கணக்கான எதிர்காலச் சந்ததியினரின் வெறியுணர்வை அது கட்டுப்படுத்தும். உண்மையான ஒரு செயல் காலத்தைக் கடந்து நிற்கும் மாபெரும் ஆற்றல் கொண்டிருக்கிறது.   எனவே, இந்த புதிய துணிவு என்பது மவுனமாகப் பேசும் இரக்கம் ஆகும்( மனிதர்களிடமிருந்து பொதுவாகத் தன்னெழுச்சியாக எழும் இரக்க உணர்விலிருந்து  இது பெரிதும் வேறுபட்டதாகும்). அது தற்காப்பு மற்றும் தாக்குதல் என இரண்டையும் உள்ளடக்கியிருக்கிறது.   வெறியுணர்வை, அதை விட அதிக வெறியுணர்வால் வெல்ல முயற்சிக்கும் மனித வழிமுறையை விடுத்து வெறியுணர்வின் நேர்எதிர்உணர்வான கனிவால் வெல்வது என்பது மனித வழிமுறையை விட ஒரு பெருவெற்றியை ஈட்டித் தரும் ஒரு தெய்வீக வழிமுறையாகும். மனிதர்களின் புரிதலில், வெறியுணர்வு எதிர்க்கப்படாமல் தனித்து விடப்படுவதாகத் தோன்றும். ஆனால் வெறியுணர்வை விடப் பன்மடங்கு வலிமையான தெய்வீகக் கனிவால் அது எதிர்க்கப்படுகிறது என்பதே உண்மை. காரணம், தெய்வீகக் கனிவிற்கும் மனித வெறியுணர்விற்கும் நடக்கும் சமரில் எப்போதும் தெய்வீகக் கனிவே வெல்லும்.   தெய்வீகத் துணிவைப் பெற்றிருப்பவனைத் துணிவு மற்றும் வீரத்தின் கீழ்நிலை படிகளில் இருந்து நோக்கும் போது, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதவனாகவோ அல்லது தற்காத்துக் கொள்ளாதவனாகவோ தோன்றும், அவன் அந்த நேரத்தில் கோழை என்று கூடக் கருதப்படலாம். ஆனால், அவன் உண்மையில் வெறியுணர்வு கொண்டு போரிடுபவர்களை விடத் தன்னை மிகச் சரியாகவும் வெற்றிகரமாகவும் பாதுகாத்துக்கொள்கிறான். காரணம், எவன் தன் எதிரியை அன்பால் பாதுகாத்து தெய்வீகக் கனிவின் செயல்பாடுகள் என்னும் கேடயத்தைக் கொண்டு அனைத்து மனிதக்குலத்தையும் காக்கிறானோ அவன் தன்னை என்றும் காத்து நிற்கும் ஒரு  பாதுகாப்பு வளையத்தையும் கவசத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறான். புதிய துணிவிற்கான எடுத்துக் காட்டுகளை தேட எண்ணினால், ஒருவன் மனிதக்குலத்தின் பெரும் ஆன்மீகத் தலைவர்களைத் தான் நாடிச்செல்ல வேண்டும். காரணம் அது அந்த அளவிற்கு அரிதான ஒன்று.   இதற்கு உடனடியாகத் தென்படும் உதாரணமாக இயேசு விளங்குகிறார். அவர் அவமானப்படுத்தப்பட்டு, சாட்டையால் விளாசப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு பதில் தாக்குதலோ அல்லது குறைந்தபட்ச எதிர்ப்பையும் காட்டவில்லை அல்லது தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு வார்த்தையையும் பேசவில்லை. அவரை ஏளனப்படுத்தும் விதமாக அவரை எதிர்த்த பெரும் கூட்டம், “அவர் மற்றவர்களைக் காப்பாற்றினார், ஆனால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறி இயேசுவை ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் கோழை என்றும் சித்தரிக்க முயன்றது.   இது போன்று சூழல்களைக் கடந்து செல்லத் தேவைப்படும் உயர்ந்த வகை துணிவை எண்ணிப் பார்த்தால் சாதாரண வகை மனித துணிவிலிருந்து புதியத் துணிவு எந்த அளவிற்கு உயர்ந்தோங்கி இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.   அந்த மேலோங்கிய துணிவின் செயல்பாடு தெய்வீகமானது என்றே அதை இன்று உலகம் அங்கீகரிக்கின்றது. மனிதர்களை, அவர்களது சுயநலமான பாதைகளிலிருந்தும் நோக்கங்களிலிருந்தும் அவர்களை அது மேல் உயர்த்துகிறது.   புத்தரின் எதிரிகள் அவரை அவமதித்து பொய்யாகப் பழியுரைத்த போது, புத்தர் அமைதியாகவே இருந்தார். அவரை குற்றம் சாட்ட வந்த எதிரிகள் திரும்பிச் சென்ற போது  போற்றி வணங்கும் நண்பர்களாகவும் சீடர்களாகவும் சென்றார்கள் என்ற உண்மை அமைதியான கனிவின் பேராற்றலை விளக்கும் முகமாக உள்ளது.   இத்தகைய துணிவு மனித இனத்தின் ஒரு குணமாக மாறுவதற்கு நீண்ட நெடுங்காலம் ஆகலாம். ஆனால், அதை நோக்கியே ஒவ்வொன்றும் நகர்கிறது. ஏனைய மனிதர்களும் இந்தத் துணிவைப் பெறத் தொடங்குவார்கள், தொடர்ந்து மென் மேலும் மனிதர்கள் அதை தங்கள் வசப்படுத்துவார்கள். இறுதியாக மனித இனம் இந்த துணிவைத் தன் உடைமையாகக் கொண்டு ஒரு உயர்நிலையில் இருக்கும். துக்கமும் சுயநலமும் அன்று முடிவுறும். வலியும் வேதனையுமான மனித உணர்வுகளின் போராட்டங்கள் பூமியிலிருந்து விடைபெற்றிருக்கும்.                     FreeTamilEbooks.com-எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:    மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.    ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:    ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.    தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:    தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.    சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.    சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?    அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது.    சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.    நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.    அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும்.    இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.    எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.    தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?    கூடாது.  ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.    அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.    அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.    வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.    பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்.    வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம்.     மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.    FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.    PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT   இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.    அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.    இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?    நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.    அவ்வளவுதான்!  மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:  1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்  2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.    இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?    யாருமில்லை.    இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.    மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.    இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?    ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.    ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.    அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.    தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.    நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?    உள்ளது.  பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.  1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net    எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?    இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.  <துவக்கம்>  உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.  இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.    இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.    இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.    எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.    இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.    http://creativecommons.org/licenses/    நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.    e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி.      மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.    முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.    கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.    ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?    அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.  ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.    அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.  மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?    ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.    நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.    தவிர்க்க வேண்டியவைகள் யாவை?    இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.    எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?    நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.    - email : freetamilebooksteam@gmail.com  - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks  - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948  -   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?    குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by    - Free Software Foundation TamilNadu, www.fsftn.org  - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி  – [youtube http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I]    2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –  கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/    http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101  https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses    உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/    3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.  1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)    இந்த விவரங்களை இந்த படிவத்தில் நிரப்புக.  https://forms.gle/    அவை தாமாகவே https://github.com/ இங்கு பகிரப்படும்.    இங்கிருந்தே பங்களிப்பாளர்கள் நூல்களைத் தேர்ந்தெடுத்து மின்னூலாக்கம் செய்வர்.    விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.  ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.    மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –    தமிழில் காணொளி – [youtube https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs]  இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook    A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/    எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum  நன்றி !    நன்கொடை   உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.    பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    Kaniyam Foundation Account Number : 606101010050279   606 1010 100 502 79   Union Bank Of India West Tambaram, Chennai   IFSC – UBIN0560618