[] [cover image] மகாபாரதம்-அறத்தின் குரல் நா.பார்த்தசாரதி FreeTamilEbooks.com Public Domain - CC0 மகாபாரதம்-அறத்தின் குரல் 1. மகாபாரதம்-அறத்தின் குரல் 1. முன்னுரை 2. தோற்றுவாய் 3. யாருடைய காவியம்? 4. பாரதக் கவிஞர்கள் 5. பாரதமும் பாத்திரங்களும் 6. ஆதி பருவம் 2. மூவர் தோற்றம் 3. கன்னிப் பருவத்தில் நடந்த கதை 4. ஐவர் அவதாரம் 5. பாண்டுவின் மரணம் 6. சோதரர் சூழ்ச்சிகள் 7. துரோணர் வரலாறு 8. நனவாகிய கனவு 9. ஒற்றுமை குலைந்தது! 10. கானகத்தில் நிகழ்ந்தது 11. பாஞ்சாலப் பயணம் 12. வெற்றி கிடைத்தது 13. தருமன் முடி சூடுகிறான் 14. யாத்திரை நேர்ந்தது 15. நான் தான் விசயன்! 16. வசந்தம் வந்தது 17. வேள்வி நிகழ்ச்சிகள் 18. சிசுபாலன் போட்டி 19. கர்ணன் மூட்டிய கனல் 20. விதுரன் செல்கிறான் 21. விதியின் வழியில் 22. மாயச் சூதினிலே! 23. தீயன செய்கின்றான் 24. அவையில் நிகழ்ந்தவை 25. பாஞ்சாலி சபதம் 1. ஆரணிய பருவம் 26. விசயன் தவநிலை 27. விசயன் தவநிலை 28. சிவதரிசனம் 29. இந்திரன் கட்டளை 30. வீமன் யாத்திரை 31. தீமையின் முடிவு 32. தருமம் காத்தது! 33. மாண்டவர் மீண்டனர் 1. விராட பருவம் 34. மறைந்த வாழ்வு 35. கீசகன் தொல்லைகள் 36. பகைவர் சோதனை 37. வேடம் வெளிப்படுகிறது! 1. உத்தியோக பருவம் 38. உலூகன் போகின்றான் 39. போர் நெருங்குகிறது! 40. மாயவன் தூது 41. தூது சென்ற இடத்தில்… 42. கண்ணன் திரும்பி வரல் 43. சூழ்ச்சியின் தோல்வி 44. நன்றி மறக்கமாட்டேன் 45. படை ஏற்பாடுகள் 46. களப்பலியும் படைவகுப்பும் 1. வீட்டும பருவம் 47. போரில் மனப்போர் 48. சிவேதன் முடிவு 49. போர் நிகழ்ச்சிகள் 50. ஐந்து நாட்களுக்குப் பின் 51. வீட்டுமன் வீழ்ச்சி 1. துரோண பருவம் 52. பதினொன்றாவது நாளில் 53. சூழ்ச்சியின் தோல்வி 54. போரின் போக்கு 55. வியூகத்தின் நடுவே 56. வீரச்சிங்கம் வீழ்ந்தது! 57. அர்ச்சுனன் சபதம் 58. பொழுது புலர்ந்தது 59. சயத்திரன் சாகின்றான் 60. இரவிலும் போர் 61. துரோணர் முடிவு 1. கர்ண பருவம் 62. கர்ணன் தலைமையில் 63. அந்திம காலத்துப் போர் 64. தீயவன் தீர்ந்தான் 65. சங்கநாதம் 66. கர்ணன் மரணம் 67. துயர அமைதி 1. சௌப்திக பருவம் 68. அழிவின் எல்லையில் 69. முடிவு நெருங்குகிறது 70. எல்லாம் முடிந்து விட்டது 71. அறத்தின் வாழ்வு 1. இந்த மின்னூலைப் பற்றி மகாபாரதம்-அறத்தின் குரல் மகாபாரதம்-அறத்தின் குரல்   நா.பார்த்தசாரதி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/mahabharatham_arathin_kural} முன்னுரை காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. புதிய கதைகள், புதிய புதிய காவியங்கள், புதிய புதிய உண்மைகள், யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை ஆண்டுக்கு ஆண்டு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. கதைகளும் அவை அமைக்கப்பட்ட காலச் சூழ்நிலையும், சம்பவங்களும் நாளடைவில் வலுக்குறைந்து நம்பிக்கைக்கு அளவுகோலான நிகழ்கால வரம்புக்கு நலிந்து போகலாம். கதையும் கற்பனையும்தான் இப்படி அழியும். அழிய முடியும். அழிக்க முடியும். ஆனால் சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை ! தர்மத்துக்கு என்றும் அழிவில்லை ! கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தர்மமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை. காலத்தை வென்று கொண்டே வாழக் கூடியவை. இதை மறுப்பவர் எவருமில்லை. எங்கும் இல்லை என்றும் இல்லை. மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் ‘ஐவர் காவியம்’ என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம். நெருப்பைத் தொட்டவர்களுக்குத்தான் அது சுடுகிறது. நெருப்புக்குச் சுடுவதில்லை. தருமமும் இப்படி ஒரு நெருப்புத்தான். அறியாமையினாலோ, அல்லது அறிந்து கொண்டே செருக்கின் காரணமாகவோ, தருமத்தை அழிக்க எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது. நன்மையைத் தீமை நெருக்கினால் நன்மை அழிவதில்லை. தீமைதான் அழிகிறது. துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்ற தீயவர்களையும் இந்தக் கதையில் காண்கிறோம். விதுரன், வீட்டுமன், தருமன், விகர்ணன், அர்ச்சுனன் போன்ற நல்லவர்களையும் காண்கிறோம். கர்ணனையும், வீமனையும் போலப் பலசாலிகளைக் காண்கிறோம். குந்தியையும், காந்தாரியையும் போலத் தாய்மார்களையும், திருதராட்டிரன், பாண்டு போன்ற தகப்பன்மார்களையும் காண்கிறோம். திரெளபதி, சுபத்திரை, சித்திராங்கதை போன்ற பெண் திலகங்களையும் இந்த மகாகாவியத்தில் தான் சந்திக்கிறோம். எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிக்கொண்டே ஒன்றுமறியாத பாமரன் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவான கண்ணன் இதயத்திலிருந்து மறைவானா? அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம் விம்மிப் பூரிக்காமல் இருக்குமா? மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப் போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவது போல் முழங்கும் எண்ணம் யாது? தர்மத்துக்குத்தான் வெற்றி சத்தியத்துக்குத்தான் வெற்றி! நேர்மைக்குத்தான் வெற்றி! தியாயத்துக்குத்தான் வெற்றி! இந்த எண்ணம்தான் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்குகிறது. முழங்கிக்கொண்டே இருக்கட்டும். ‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! அப்படிக் கேட்பவர்களுக்கு நாம் இந்தப் பதிலைச் சொல்லுவோம். நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாத்தில் எதுவும் இல்லை. நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது. அதை நாமும் நம்புவோம்; நம்பி வாழ்வோம்! இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப் போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள். எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து புகழ்ந்து கவிதையில் வனைந்து அழகு படுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் தரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன். இந்த அறத்தின் குரலுக்குத் தமிழ்ப் பெருமக்கள் செவிசாய்ப்பார்களென்ற நம்பிக்கை யோடு இந்தச் சுருக்கமான முன்னுரையை முடிக்கிறேன். 14-9-64 அன்பன் சென்னை நா. பார்த்தசாரதி தோற்றுவாய் உலகம் என்ற ஒன்று தோன்றிய நாளிலிருந்து அறம், மறம் என்னும் இரண்டு மாறுபட்ட பேருணர்ச்சிகளும் தோன்றிப் போராடித்தான் வருகின்றன. காலந்தோறும் வாழ்க்கை தோறும் மனித சமுதாயத்தின் உயர்நிலை தாழ்நிலை ஆகிய நிலைகள் தோறும் தர்ம அதர்ம யுத்தம் என்கிற இந்தச் சத்திய அசத்தியப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாகரிக வளர்ச்சியோ இதயப் பண்பாடோ, அல்லது சமூக முன்னேற்றமோ, எந்த ஒரு புதுமையின் முயற்சியாலும் உலகின் அழியாப் போராகிய இந்தப் போரை நிறுத்தவே முடியவில்லை. மண்ணும் விண்ணும் மண்ணையும் விண்ணையுங் கொண்டு வாழும் உயிரினங்களும் உள்ள வரை இந்தப் போரும் நித்தியமாக நிலைத்து நின்று நிகழும் என்பதை மறுக்க முடியாது. இதை வற்புறுத்துவது போலக் காலமும் கவிகளின் உள்ளமுமாக இணைந்து கொடுத்த எண்ணற்ற பல காவியங்களின் தொகுதி நம் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது. காவியங்களைக் கற்கும் போதும் ‘இது என்றோ நடந்தது; அல்லது கற்பனை செய்யப்பட்டது’ என்னும் நினைவு நமக்கு எழலாம். மெய்தான்! அப்படி எழுகின்ற நினைவு மனித மனத்திற்கு இயற்கையே. ஆனால் கால முற்பாடும், ‘கற்பனையோ?’ என்ற நினைவும் ‘காவியங்களில் அறப்பண்புகளும் மறப்பண்புகளும் மோதுகின்றன. இறுதியில் வெற்றி தோல்வியும் ஏற்படுகின்றது’ - என்ற நமக்குத் தேவையான உண்மையைச் சிறிதளவும் பாதிக்க முடியாதல்லவா? உண்மைக்கும் வாய்மைக்கம் நிகழ்ந்த போர் அரிச்சந்திரன் கதையாக நிலவுகிறது. விதிக்கும் தனி மனிதனுக்கும் நிகழ்ந்த போர் சிலப்பதிகாரக் கதையாகத் திகழ்கின்றது. கடமையைக் காக்க வேண்டுமென்று நேர்மைக்காக வந்து போராடிக் கொடுமையை அழித்த கடவுட் பிறப்பின் கதை இராமவதாரமாகக் காட்சி தருகின்றது. கட்டியங்காரன் என்ற ஒருவனின் மனத்தில் முளைத்த தீமை வித்து மெல்லக் கருகி அழிந்து சீவகன் என்ற திறமையாளனின் நல்மனம் நல்லன எண்ணி நல்லன செய்து நன்மை பெறும் மேன்மையைச் சீவக சிந்தாமணி தெரிவிக்கிறது. இன்னும் வளர்ப்பானேன்? வாழ்க்கையில் மட்டும் அல்ல, வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் காவியம், கலை, கற்பனை ஆகிய இவைகளிலும் கூட அறவுணர்ச்சிகளும், மறவுணர்ச்சிகளும் வந்து கலகமிடுகின்றன. மென்மையும் வன்மையுமான இந்த நேர்மாறான இரு துருவங்கள் போன்ற உணர்ச்சிகள் கொடிய முறையில் காக்கும் போது எளிய முறையில் மென்மையாக இயற்றப்பட வேண்டிய காவியங்களின் தாய்ச் சரக்கு என்னும் மூலப் பொருள் கிடைக்கிறது. உலகின் நாற்றிசைகளிலுமுள்ள உயிரிணம் முழுதுமே அறச் சார்புடையதாய், நேர்மை ஒன்றே நோக்கமாக வாழும் வழி எப்போதோ, எப்படியோ ஏற்பட்டு விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அன்று தொடங்கி வாழ்க்கையில் - உலக வாழ்க்கையில்தான் - சுவை, ஆர்வம், விரைவு என்ற இந்த அவசியமான அம்சங்கள் செத்துப் போகும். கலை, கற்பனை, காவியம் இவைகளும் மூலப் பொருளான தாய்ச் சரக்கு இல்லாமல் ஏங்கி நிற்க வேண்டியது தான்! எனவே அறத்தின் பெருமை, என்ற இந்த மாபெரும் ஒளி விளக்கமுற்று இலங்குவதற்கு வாழ்க்கையிலும் சரி, காவியத்திலும் சரி, மறத்தின் தீமை என்ற புலையிருள் பொதிந்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ‘காவியப் பண்பு’ அறுசுவையில் கைப்பு என்ற ஒன்று, பெரும்பான் மையாக - ஏன் முற்றிலுங்கூட உலகில் எவராலும் விரும்பப் படுவதில்லை. அதற்காக அந்த சுவையிலும் அதைச் சார்ந்த பொருள்களிலும் நாம் குரோதங்கொண்டு அழித்து விடவா செய்கிறோம்? அல்லது அவைகளாகவே அழிந்து விடத்தான் செய்கின்றனவா? இரண்டும் இல்லையே? வாழ்க்கையிலும் மறத்திற்கு இத்தகைய விலக்க இயலாத ஓர் இடம் ஏற்பட்டு இருக்கின்றது. கைப்பு என்றோர் சுவை இருப்பதனால்தானே இனிப்பின் பெருமை விளங்குகின்றது. அதுபோல, மறம், பாவம், தீமை என்ற இந்த விலக்கப்பட்ட குணங்களுக்கும் வாழ்வில் நிற்குமிடம் நிலைத்தவையாக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அறம், ஒழுக்கம், நேர்மை என்ற இந்த விதிக்கப்பட்ட குணங்களுக்கு உலக வாழ்வில் ஒளியும் பெருமையும் நிலைத்திருக்கின்றன. கைகேயியின் இரக்கமின்மையாலேயே இராமனுடைய பரந்த புகழ் என்னும் அமுதம் உலகுக்குப் பருகக் கிடைத்ததாகக் கம்பன் கூறுகின்றான். பகைப்புலனாக நிற்கவல்ல எதிர்மறைப் பண்பு ஒன்றினால்தான் காவிய குணமாகிய உடன்பாட்டுப் பண்பு ஒன்றை நிலை நிறுத்திக் காட்டுவதற்கு இயலும். இதிகாச காவியங்களாகிய இராமாயணம், பாரதம், முதலியவற்றின் கதைப் போக்கில் பகைப்புலனின் பண்பாலேயே காவியம் கூறக் கருதும் பொருளை வற்புறுத்தும் நிலையைக் காணலாம். காவியத்தில் எந்தச் சில பாத்திரங்களின் சார்பாக, அவற்றின் வெற்றி நோக்கிக் கதையாகச் சித்திரித்துச் சொல்லப்படுகின்றதோ, அந்தச் சில பாத்திரங்களின் வாழ்வே அந்தக் காவியம் முழுவதும் ஊடுருவி நிற்கின்றது எனக் கொள்ளலாம். இதிகாச காவியங்களைப் பொறுத்த வரையிலோ இது பெரிதும் பொருத்தமான மெய்யாகத் தோன்றுகிறது. யாருடைய காவியம்? மகாபாரதம் பெயரளவைக் கொண்டு நோக்கும் போது பாரத யுத்தத்தைப் பற்றிய கதை என்ற பொருளைத் தருமானாலும் உண்மையில் பாண்டவர் ஐவரின் வெற்றியை அறத்தின் வெற்றியாகச் சித்திரிப்பதே பாரதத்தின் தாத்பரியம். துரியோதனாதியர், கண்ணன் முதலியவர்களுக்கும் பாரதக் கதைக்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்பதை இங்கே மறுக்க வில்லை. ஆனால் பாரதம் என்ற இந்த மாபெரும் காவியம் காட்டுகின்ற வாழ்க்கை துரியோதனாதியருடையதும் அன்று, கண்ணனுடையதும் அன்று, முற்றிலும் ஐவருடைய வாழ்க்கையே, துரியோதனாதியர், கண்ணன் என்னும் இவர்கள் இடையிடையே இக்காவியத்தில் வருகின்றார்கள் எனினும் பாண்டவர்களாகிய ஐவருக்கே வாழ்வுரிமை கொடுப்பது தான் இக்காவியத்தின் நிலைக்களன் ஆகும். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என்னும் இவர்கள் ஐவருடைய வாழ்க்கையில் அறத்திற்கு ஏற்பட்ட சோதனைகளும் இறுதியிலே அறம் வெற்றி பெற்றதும் ஆகிய இவற்றின் முழுவடிவமே பாரதம். இஃது அறத்தின் காவியம்; அறச்சார்போடன்றி வாழலாகாது என அறவாழ்விற்காகப் போரிட்ட ஐவர்கள் காவியம். அறமும் மறமும் மோதி முரண்பட்டுப் போராடும் போது நேர்மையையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ முயன்ற ஓர் ஐந்து சகோதரர்கள் அடைந்த இன்னல்களையும் முடிவில் தருமத்தின் வெற்றியை இவர்கள் வாழ்வின் வெற்றியாக விளக்கிப் பேசுவதையும் தனதாகக் கொண்டு சொல்லும் ஒரு நெடுங்கதைதான் மகாபாரதம். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதக் கதை அன்றே தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்திற்குரிய பெருங்கதையாகத் திகழ்ந்து வந்ததை அறிகிறோம். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியம் முதலிய நூல் வகைகளில் ஆங்காங்கே பாரதக் கதையைச் சிறப்பித்தும், சான்றாக எடுத்தாண்டும் போற்றியிருக்கக் காண்கிறோம். இதைத் தவிரப் பாரதக் கதைக்கு வேறோர் சிறப்பும் அமைந்துள்ளது. இராமாயணம் என்ற இதிகாச காவியத்தைத் தமிழில் இயற்றும் சிறந்த நோக்கம் கம்பர் ஒருவருக்கே ஏற்பட்டது. ஆனால் பாரதத்தையோ சங்க காலத்துப் பெருந்தேவனாரிலிருந்து நேற்றைய பாரதியார் வரை ஒவ்வொரு புலவரும் தமிழ்க் காவியமாக ஒவ்வொரு நோக்குடன் அமைக்க ஆசையுற்றிருக்கின்றனர். இந்தக் கருத்துடனே காணும் போது இராமாயணத்தைக் காட்டிலும் பாரதம் தமிழ்ப்புலவர்களை மிகுதியாகக் கவர்ந்திருக்கின்றதென்ற உண்மை புலப்படும். கடவுள் மனிதனாக அவதரித்து அறத்தைக் காப்பதற்கு முயன்ற கதை இராமாயணம் என்றால், மானிடர்களாக உடன் பிறந்த ஐந்து சகோதரர்களின் வாழ்க்கையில் அறத்தைக் காக்க முயன்ற கதையே பாரதம். இராமன் என்ற அவதார புருஷன் சிலரையும் பலரையும் இயக்கி நிகழ்த்தின அவதார நாடகமே இராமாயணம். ஆனால் பாரதம் அவ்வாறில்லாமல் ஐவர் வாழ்க்கையில் அவரவர் இயக்கத்தைக் காட்டும் காவியம். இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களுக்கும் இடையிலுள்ள இந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதக் கவிஞர்கள் தமிழில் தோன்றிய முதல் பாரத காவியமாகிய பெருந்தேவனார் பாரதம் இப்போது கிடைக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவராகிய இந்தப் பெருந்தேவனார் தவிர ஒன்பதாம் நூற்றாண்டின்ராகிய மற்றோர் பெருந்தேவனார் பாரத காவியத்தை வெண்பாக்களால் இயற்றினார். இப்பாரத வெண்பாவின் பெரும் பகுதி இப்பொழுது கிடைக்கின்றது. அச்சிட்டும் வெளியிட்டிருக்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக விரிவான முறையில் பெருங்காப்பிய அமைப்புடன் தமிழில் பாரதக் கதையை இயற்றிய ஒரே ஓர் ஆசிரியர் வில்லிப்புத்தூரார் தாம். நாலாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்பது பாடல்களால் வில்லி பாடிய அதே காவியத்தை வில்லிக்குப் பிற்பட்டவராகிய நல்லாப்பிள்ளை என்பவர் பதினையாயிரத்து முந்நூறு பாடல்களாகப் பெருக்கி அமைத்தார். வில்லியின் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாடல்களும், நல்லாப்பிள்ளை அவற்றுடன் கலந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களும் சேர்ந்த மொத்தத் தொகுதிக்கே நல்லாப்பிள்ளை பாரதம் என்று பெயர். நல்லாப்பிள்ளையின் ஒருசாலை மாணாக்கராகிய முருகப்பிள்ளை என்பவர் பாடிய பாடல்களும் இதில் கலந்துள்ளன என்பது சிலர் கருத்து. இவர்களுக்கெல்லாம் பிற்காலத்திலே நம்முடைய தலைமுறையில் வாழ்ந்து மறைந்த வரகவியாகிய பாரதியார் முற்றிலும் புதியதொரு நோக்குடன் பாரதத்தின் ஒரு பகுதியைக் காவிய அமைப்புடன் தமிழில் படைத்தார். சூதாட்டம், அதில் திரெளபதியையும் தன்னையும் தம்பியரையும் தன் உடைமைகளையும் தருமன் இழந்து போவது ஆகிய இந்நிகழ்ச்சிகளே குருட்சேத்திர யுத்தத்துக்குக் கால்கோளென்பதை நன்கறிந்தவராகிய பாரதியார் ‘பாஞ்சாலி சபதம்’ என்று தம் காவியத்திற்கு மகுடமிட்டுக் கொண்டார். பாஞ்சாலியின் சபத மொழியையே தமது புதுக்காவியத்தின் மையப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் கவியரசர் பாரதியார். வில்லி பாரதத்தில் சபாபருவத்தில் விவரித்த செய்திகளையும் பாரதக் கதையின் இயற்கையான முடிவையும் இணைத்து இடப்பட்ட தலைப்பிற்கும் பொருத்தமாகப் பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றிக் கூந்தலை முடித்துக் கொள்வதோடு காவியத்தை முடிவு செய்து விடுகின்றார். சுருக்கமான காவிய அமைப்பாலும், பாரதியாரது ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் நடையும் காவியப் பாத்திரங்களின் குணசித்திர வரம்பும் சிறந்து விளங்குவதாலும், தமிழிலுள்ள பாரதக் கதைகளில் தனக்கென ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுவிட்டது பாஞ்சாலி சபதம். பாரதம் ஐவராகிய பாண்டவர்களின் வாழ்க்கையை பேசும் காவியம் என்று கண்டோம். இதில் ஒரு சிறப்பான ஒற்றுமை இயற்கையாகவே அமைந்து சிறப்பளிக்கிறது பாருங்கள். பாரதத்திற்கு பாண்டவர் ஐவரே போலத் தமிழில் பாரதக் கதையை இயற்றிய காவிய ஆசிரியர்களும் ஐவர்தாம். சங்க காலத்தினரான பெருந்தேவனார் முதல் இருபதாம் நூற்றாண்டினரான பாரதியார் வரை ஐந்து காவிய கர்த்தாக்களையே பாரதம் கவர்ந்திருக்கின்றது. எனவே, ஐவர் காவியம் என்ற தலைப்பு இரண்டு வகையாலும் பொருத்தமானதாகவே அமைந்து விடுகிறது. தருமன் முதல் சகாதேவன் இறுதியாகவுள்ள காவியப் பாத்திரங்களும் ஐவரே. பெருந்தேவனார் முதலாகப் பாரதி இறுதியாக உள்ள பாரதம் பாடிய புலவர்மணிகளும் ஐவரே. இஃது ஐவருடைய காவியம் மட்டுமன்று; தமிழில் ஐவரால் பாடப்பெற்ற காவியமும் ஆகும். இந்தத் தொடர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற சங்ககாலத்துப் புலவர் ஒருவரைத் தவிர ஏனைய புலவர்களின் காவியங்களே பாரதத்தைப் பற்றி இப்போது நமக்குக் கிடைக்கின்றன என்பதை முன்பே அறிந்தோம். ஐவர் காவியம் என்ற இத்தொடரின் நோக்கம். தமிழிலுள்ள பாரதக் கதைகள் - அனைத்தையும் காவிய ஒப்புநோக்கு முறையில் எளிய இனிய கதைத் தொடராக விமர்சிக்க வேண்டும் என்பதே ஆகும். பாரதக் கதையைப் பற்றி தமிழில் இந்த நூற்றாண்டில் எண்ணற்ற உரைநடை நூல்கள் எழுந்துள்ளன. தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் பெருந்தகையாராகிய இராஜாஜி அவர்கள் வியாச பாரத காவியத்தை ‘வியாசர் விருந்து’ என்ற அரும்பெரும் கலை விருந்தாக அளித்துள்ளார்கள். ஆனால் வில்லி, நல்லாப்பிள்ளை, பாரதி, பெருந்தேவனார் (ஒன்பதாம் நூற்றாண்டு) என்னும் இவர்கள் ஒவ்வொருவரும் இயற்றிய காவியங்களைத் தழுவி அவற்றின் எளிய விமர்சனமாக அமைக்கப்பட்ட பாரத உரைக் கோவை இன்றுவரை எவராலும் எழுதப்படவே இல்லையென்று துணிந்து கூறலாம். தமிழில் இந்த முயற்சி புதுமையும் இனிமையும் பொருத்திய ஒன்றாக அமைவதற்குத் தடையே இல்லை. பாரதமும் பாத்திரங்களும் பாரதக் கதையின் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, வாழ்க்கைக்குத் தேவையான நன்மைப் பாற்படுகின்ற உடன்பாட்டுக் குணங்களையும் வாழ்க்கைக்குத் தேவையற்ற தீமைப் பாற்படும் எதிர்மறைக் குணங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளுகின்றோம். ‘அறமே குறிக்கோள்’ என்று நிற்போரையும் அங்கே காண்கின்றோம். ‘ஆண்மையே யாவும் - என்று பேசுவோரையும் அங்கே காண்கின்றோம், ‘மறமும், தீமையும், சூதும், வஞ்சகமுமே வாழ்வு’ என்று மயங்கித் தவறான வழிகளால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுபவர்களையும் காண்கின்றோம். மனித வாழ்க்கையில் என்றுமே நிலைத்த அமைப்போடு இடம் பெற்றிருக்கும் உத்தம், அதம், மத்திய குணங்கள் பாரதக் கதையின் போக்கிலேயே முற்றிலும் முழுமையாக அமைந்திருக்கின்றன. பாத்திரங்களின் மூலமாக அந்தக் குணங்களைப் புரிந்து தெளிவு கொள்கின்ற காவிய நேயர் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையிலே ‘கடைப்பிடிக்க வேண்டிய குணங்கள் யாவை? நீக்க வேண்டிய குணங்கள் யாவை?’ என்பதை நன்றாக உணர்வதற்கு முடிகின்றது. இத்தகைய பயன் கனிந்த பேருணர்வை உண்டாக்குவதுதான் உன்னதமான காவியம் ஒன்றின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பாரதம் ஓர் உன்னத காவியமாகையால்தான் அதன் குறிக்கோளும் இவ்வாறு பொருந்தியிருக்கிறது. இப்பொருத்தத்தைச் சற்றே விளக்கமாகக் காண்போம். ‘தருமன்’ - என்று ஒரு பாத்திரம் பாரதக்கதையின் உயிர்நாடி. அன்பு, அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் என இவ்வாறு வரும் மேனிலைப் பண்புகளாலேயே படைக்கப்பட்ட பாத்திரம், தன் வாழ்வைச் சுற்றி எழுகின்ற எண்ணத் தொலையாத சூழ்ச்சிகளையும் சோதனைகளையும், மனத்திற்குத் தோன்றியபடி வெல்ல வேண்டும் என்றெண்ணாமல், அறத்திற்காகத் தாங்கி நிற்கும் பொறுமையைத் தருமனிடம் காண்கின்றோம். ‘இரும்பை இரும்பால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற அரசியற் கருத்துள்ள பழமொழிகளை அறியாதவன் அல்லன் தருமன். ‘வில்லும், வாளும் ஏந்திப் போர் செய்யும் திறனும், அரசியலை எப்படி நடத்தவேண்டும் என்ற சூழ்ச்சியைக் கற்பிக்கும் அரசியல் நூல்களும், தனக்குத் தெரியாதவை என்ற பலவீனம் தருமனிடம் இல்லை. ‘வாழ்க்கையில் ஒருமையான சட்டம் அறம். அதை மீறியோ, விலகியோ, வாழ்வது பிழை’ என்ற உயரிய நோக்கு அவனுக்கு இருந்தது. அந்த நோக்கு ஒன்றினால்தான், ‘மற்றைய வழிகள் அவனுக்குப் புலப்படவில்லையோ?’ - என்று நாம் ஐயுறுகின்ற அளவிற்கு அறம் பழுத்த வாழ்வாக விளங்கிற்று அவனுடைய வாழ்வு. இதயம் பண்பாட்டுக் கனிந்த நிலை அடைந்திருந்தால் ஒழிய இப்படிப்பட்ட வாழ்வு சாத்தியமில்லை. கைகுவித்து வணங்க வேண்டிய கடவுள் வாழ்க்கை அல்லவா இது? பீமனை நோக்கினால் ‘வாழ்ந்தால் ஆண்மைக்காக வாழவேண்டும்’ என்ற நோக்கு அவனுக்கு அமைந்திருந்ததை உணர்கிறோம். தருமன் அறத்தின் பெயரால் பொறுமை கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் வீமன் ஆண்மையின் பெயரால் குமுறுவதைக் கண்டு இருவருக்குமுள்ள பண்பு வேறுபாடு புலனாகிறதைத் தெளியலாம். ஆண்மை ஒன்றே கொழித்து வளர்வதற்கு ஏற்றபடி வீமனுக்கு உடலும் உள்ளமும் மென்மை விரவாத தனி வலிமையினால் ஆகியிருந்தன. இந்த ஆண்மையும் தீமை கலந்த ஆண்மை அன்று, தீமையைக் கண்டு பொறுக்க முடியாமல் குமுறுகின்ற நேரிய ஆண்மையே. தருமனுக்கு இருந்த ‘பொறுமையுள்ளம்’ வீமனுக்கு இல்லை. வீமனுக்கு இருந்த ‘தீமை கண்டு சீறும் ஆண்மை நெஞ்சம்’ தருமனுக்கு இல்லை.– இதுதான் இவர்களிருவருக்கும் இடையேயுள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு இல்லை என்றால் காவியத்தில் சுவையும் விறுவிறுப்பும் எப்படி இருக்க முடியும்? அருச்சுனனுடைய வாழ்வோ, காதல், வீரம் உணர்ச்சி ஆகிய மூன்று வேறு பண்பு நிலைகளிலும் மாறி மாறித் திகழ்கிறது. மென்மையும் வன்மையும் சம அளவில் விரவி இணைந்த வாழ்வு அது. தருமனுக்கு அடுத்த நிலையில் உள்ளப் பண்பாட்டினால் எய்தும் பெருமை அருச்சுனனுக்கே கிட்டுகிறது. வீமனைப் போலத் தீமையைக் கண்டு குமுறிக் கொதிக்கும் உணர்ச்சி மயமான உள்ளம் அருச்சுனனுக்கு இல்லை என்றாலும் தீமை கண்டபோது, அதை அழிக்க வேண்டும் என்ற இயற்கையான உணர்வும், வில்லைத் தேடி விரையும் கரங்களும் இருந்தன. இதேபோல அழகையும் மென்மையையும் நுகரவேண்டும் என்ற கலையுணர்வும் அவனுக்கு இருந்தது. அவற்றைக் காதலித்து நுகரவேண்டும் என்ற மன ஆர்வமும் அவனுடைய உள்ளத்திற்கு இருந்தது. வில்லைப் பிடித்த கைகளுக்கு மலர் மாலைகளை ஏந்தவும் தெரிந்திருந்தது. சுருங்கக் கூறினால் வீரத்துடனே அழகு உணர்ச்சியும் அருச்சுனனிடம் நிறைந்திருந்தது. இது தருமனுக்கும் வீமனுக்கும் இடைப்பட்ட ஒருவகைக் குணச்சித்திரமாக அமைந்து சிறப்பை அளிக்கின்றது. நகுல், சகாதேவர்களுடைய குணங்கள் தெளிவாக விளங்கும்படியான முறையில் பாரதக் கதையைப் பற்றி நிகழும் எந்த ஒரு காவியமும் அவர்களுடைய குணங்களைச் சிறப்பாக வரையறுத்துக் கூறக் காணோம். பாரதக் கதையில் மிகச் சாதாரணமான துணைப் பாத்திரங்களைப் போலவே இவர்கள் எப்போதாவது வந்து போகின்றனர். இவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளோ மிகச்சில இடங்களிலேயே குறுகிய முறையில் கூறப்பட்டுள்ளன. ஆகையால் நகுல சகாதேவர்களின் குணங்களை மிக உன்னதமாகவோ, இழிவாகவோ, எந்த வகையிலும் தெளிவு செய்து ஒப்பிடுவதற்குரிய வாய்ப்பு நமக்கு இல்லை. பாண்டவ சகோதரர்களில் அவர்களும் இக்காவியமாகிய பெருவாழ்வில் இடையிடையே வந்து போகும் இருவர் என்ற முறையிலும் அவர்களைப் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம், அதுவே இப்பொழுதுக்கு இங்கே பொருத்தமாக ஏற்பது. இதுவரை பகைப் புலனுக்கு நேர் எதிரிடையாகவும் காவியக் கருத்துக்கு உடன்பாடாகவும் நின்ற பாத்திரங்கள் ஐந்தைக் கண்டோம். இனிக் காவியக் கருத்துக்கு எதிரிடையாகவும் பகைப்புலனுக்கு உடன்பாடாகவும் நிற்கும் துரியோதனன் முதலிய பாத்திரங்களைப் பற்றிக் குண அமைப்பு முறையை அறிந்து கொள்ள முற்படுவோம். இருளில் கொண்டு போனால் தானே விளக்கு ஒளியைக் கொடுக்கும். வேறோர் விளக்கு இருக்கும் இடத்திற்கோ, அல்லது பகல் நேரத்திலோ, விளக்கின் ஒளி எடுத்துத் தோற்றாது அல்லவா? இதே போலத்தான் காவியத்தில் நேர்புலனும், பகைப்புலனும். இரண்டுமே நேர் புலனாக இருந்துவிடுமானால் ஒளிக்கு முன் ஒளிபோல விளக்கமிழந்து போகும். பாண்டவர்களைப் போலவே கெளரவர்களையும் படைத்திருந்தால் பின் ‘பாரதம்’ என்ற இந்தக் காவியந்தான் ஏது? கதைதான் ஏது? பாண்டவர்களுக்கு நேரிய அறத்தையும் வீரத்தையும் குணமாக்கிக் கௌரவர்களுக்குப் போலி வீரத்தையும், பொய்மையையும் குணமாக்கியதனால்தானே பாரத காவியத்தை அடைய முடிந்தது? துரியோதனனை அறிவும் சிந்தனை வளமும் உடைய ஒருவனாகக் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. தீயவனாயினும் அறிவும் சிந்தனை உள்ளவனாக இருந்திருக்கலாம் அல்லவா? தெளிவற்ற அறிவோடு தகுதியற்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காத ஒரு மனநிலையை அவனிடம் காண்கின்றோம். பிறர் காட்டும் தவறான வழிகளில் சென்று விடுகின்ற அளவு பலவீனமுடையது அவன் அறிவு. இல்லையென்றால், சகுனி முதலியவர்கள் கருத்தை அப்படியே ஏற்று அதன்படி நடக்கின்றவரை சிந்திக்கும் திறமின்றிக் கழிந்திருக்குமா அவன் மனம்? சூழ்ச்சியும், வஞ்சகமும், தீமையும் புரிகின்ற இறுக்கமான மனத்திடமும் சொந்தமாக அவனிடம் இல்லை. சூழ்ச்சி முதலிய தீய பண்புகள் அவனை ஒரு வெறுங்கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களைத் துன்புறுத்தின என்றே கூறுதல் தகும். சகுனி முதலிய தீயோர் அதை வற்புறுத்தித் தூண்டும் துணைக் கருவிகளாக இருந்தார்கள். ஆகவே அறிவுத் தெளிவற்ற சிந்தையும் சூழ்நிலையும் துரியோதனனைத் தீயவைகளைக் கூசாமற் செய்பவனாக ஆக்கியிருந்தன எனலாம். கர்ணன், அவனைப் பொறுத்தமட்டில் தனி நிலையில் சிறந்த வீரனாகத் தோன்றினாலும் பொறாமை, ஆத்திரம், அளவிறந்த மானம் என்னும் இம்மறைக் குணங்களால் கெளரவர்களைப் போலவே தானும் ஒரு தீயவனாகவே தோற்றம் பெற நேரிடுகின்றது. கொடையும், குன்றா வீரமும் ஆகிய இருபெரும் பண்புகளைப் பெற்றிருந்தும் அவன் எந்த ஒரு நல்ல பண்பையும் பெற முடியாத கெளரவர்களில் தானும் ஒருவனாக விளங்க வேண்டியதாகின்றது. சகுனியோ கல்மனமும் தீமைப் பண்புகளுமே முற்றிய கொடியவனாகச் சித்திரிக்கப்படுகின்றான். துச்சாதனன் முதலிய மற்றையோரையும் இந்த வகையிலேயே சேர்க்க நேரிடுகின்றது. திருதராட்டிரன் குண அமைப்பு அநுபவமும் முதுமையும் பொருந்திய ஓர் அரசனுக்கு ஏற்ற இயல்பான முறையில் பெரும்பகுதி நன்மைக் கூறுபாடும் சிறு பகுதி தீமைக் கூறுபாடும் உடையதாக வரையறுக்கபட்டிருக்கிறது. விதுரன், வீட்டுமன், துரோணன் முதலிய சான்றோர்கள் சான்றாண்மைக்குரிய குணக்குன்றுகளாகவும் கடமை வீரர்களாகவும் இக்காவியத்தில் ஒளியுற்று இலங்குகின்றனர். இனி பாண்டவர், கெளரவர், இருசாரார்க்கும் ஆதி காரணமாய் நின்று பாரதக் கதையை நிகழ்த்திச் செல்லும் கண்ணனும் இக்காவியத்தில் ஒரு பாத்திரமே. இறைமையின் பேராற்றல்கள் யாவும் நிறைந்த இறையம்சத்திற்குரிய தலை பெரும் பாத்திரமாக வருகின்றான் கண்ணன். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே தூதுவனாகச் செல்லும் நிலையிலும் போர்களத்திலும் தயக்கமுற்ற அருச்சுனனைத் தேற்றிப் ‘போர் செய்யலாம்’ என்று அறிவுரை கூறும் நிலையிலும் கண்ணனின் இறைமைக் குணங்கள் நுணுக்கமான முறையில் விளங்குகின்றன. பரம்பொருளின் சாயையான மனிதனாக உலாவினாலுமே காண்போர்க்கு அங்கங்கே எண்ணத்தால் வியப்பும் அருள் நிறை அன்பும் நல்கும் பாத்திரம் கண்ணனே. பாரதகாவியத்தில் ஆடவர் என்னும் பிரிவிலடங்கும் பாத்திரங்கள் இங்கு மேலே விவரித்த இவ்வளவோடு அமையாமல் இன்னும் பலராக எண்ணற்றுப் பரந்து கிடக்கின்றனர். ஆனால் பாரத காவியத்தின் இன்றியமையாத ஆண் பாத்திரங்கள் என்ற முறையில் இங்கு மேலே விவரித்த சிலரே அமைகின்றனர். ஆகையால் அவர்களைப் பற்றிய செய்தியை இவ்வளவில் நிறுத்திவிட்டு இனி மேலே சில பெண் பாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முற்படுவோம். பாண்டவர்களின் தாய் குந்திதான் வரிசை முறைமையாலும் தகுதியாலும் பாரதத்தின் முதற்பெண் பாத்திரமாக இலங்குகின்றாள். பாண்டவர்கள் பிறப்பதற்கு முன்பும் பாண்டுவை மணந்து கொள்வதற்கு முன்பும் முனிவர்க்கும் பெரியோர்க்கும் தொண்டு செய்து கழித்த இவளுடைய கன்னிப் பருவம் கள்ளங்கபடமற்ற முறையில் தூயதாகத் தோற்றுகிறது. கதிரவன் அருளால் கர்ணன் பிறந்தபோது பயமும் குழப்பமும் அடைந்து, அவனைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடும்போது இத்தகைய நிலைகளில் இயல்பாக ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மன நிலையையே குந்தியிடமும் காணமுடிகிறது. அரக்கு மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்று வேத்திரகீயத்தில் ‘ஐந்து புதல்வர்களோடு தனிமை வாழ்க்கை நடத்தும் போதும், பிற்காலத்தில் போர்க்களத்தில் கர்ணனைத் தனியே சந்தித்துத் தான் அவனுக்குத் தாய் எனவும், பாண்டவர்கள் அவனுக்குச் சகோதரர்கள் எனவும் கூறி அவனைப் பாண்டவர் பக்கம் சேருமாறு கேட்கும் போதும், குந்தியின் மாசு மறுவற்ற தாய்மையுணர்ச்சி தெளிவாக அமைந்து விளக்கம் பெறுகிறது. இக்காவியத்தில், குந்திக்கு அடுத்தபடியாக இங்கே குணவிளக்கம் பெறுவதற்கு உரியவள் பாஞ்சாலி. பல்வேறு நிலைகளிலும் அவ்வவற்றிற்கேற்பப் பாஞ்சாலியின் குணப்போக்குச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாடு, சுயம்வரம், இவைகளுக்கு முன் இருந்து கன்னிப்பெண் பாஞ்சாலிக்கும், துரியோதனன் தருமனுடனே சூதாடி உன்னை வென்றான், என்றபோது ‘தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா? தன்னை இழப்பதற்குமுன் என்னை இழந்தாரா?’ என்று உரிமைக் குரல் கொடுத்து உணர்ச்சியோடு கேள்வி கேட்கும் பாஞ்சாலிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு பாருங்கள்! துரியோதனன் அவையில் தான் இழிவு செய்யப்பட்டபோது, ‘இனி மனிதர் துணையால் நம் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது’ என்று உணர்ந்து தோன்றாத் துணையாகிய பரம்பொருளின் உதவியை நாடும் நிலையிலும் இவளுடைய அறிவுத் திறனையே காண்கிறோம். குந்தியைக் காட்டிலும் சிறப்பான வேறு ஒரு தகுதியும் பாஞ்சாலிக்கு எய்துகின்றது. குந்தியைப் போல் காவியத்தில் அங்கங்கே வந்து போகும் பாத்திரமாக இராமல் காவியம் முழுதும் ‘தலைவி’ என்ற இடத்தைப் பெறும் பேறு இவளுக்கு இருக்கிறது, பாரதம் பாண்டவர்களாகிய ஐவர்கள் காவியம் என்றால் பாஞ்சாலிதானே அதன் தலைவி? இந்த நோக்கில் பாஞ்சாலியின் குணசித்திர அமைதி பற்றி எவ்வளவு விவரித்தாலும் ஏற்கும். ஆனால் இது சுருக்கமான அமைப்புடைய முன்னுரை என்பது பற்றி இவ்வளவில் நிறுத்த வேண்டியிருக்கிறது. கெளரவர்களுக்குத் தாயாகிய காந்தாரியைப் பற்றிக் காவியத்திலிருந்து பொதுவாக அறிந்து கொள்ள முடிகின்றதே அல்லாமல் குணசித்திரம் என்ற முறையில் தெளிவாக விளங்குவதற்குரிய அவ்வளவிற்குப் பெரும் பங்கு இவளுக்கு இக்காவியத்தில் இல்லை. எனவே, குந்தியைப் போல ஒரு பெரும் பாத்திரமாகக் கொண்டு காந்தாரியைப் பற்றி விளக்குவதற்கு விவரங்கள் எவையும் இங்கே கிடையா. துரியோதனன் மனைவியாகிய பானுமதியைப் பற்றிச் சிறிதளவு கூறலாம். பாஞ்சாலியைப் போல வாழ்க்கைச் சோதனைகளையும் துயரங்களையும் அனுபவிக்கும் சந்தர்ப்பம் ஒன்றாயினும் இவளுக்கு நேரவில்லை. ஆகையால்தான் குணங்களால் தீமையற்ற, நன்மகளாக இருந்தும் இவளுடைய குணம் சிறப்பாகத் தோன்றுவதற்குரிய வாய்ப்பு இல்லாமலே கழிந்துவிட்டது. வஞ்சகக் கலப்பில்லாத தூய்மையான வெள்ளையுள்ளமும், பிறருக்குத் தீமை நினையாத எண்ண நலமும் பெற்றிருந்தும் இவளுடைய நலம் பெரிதும் பாராட்டிச் சித்திரிக்கப்பட படாமைக்கு இதைத் தவிர வேறெந்தப் பெரிய காரணமும் கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம். துரியோதன மன்னன் அரண்மனையில் இல்லாத ஒரு பொழுதில் அவன் மனைவி பானுமதி துரியோதனனுக்கு நெருங்கிய நண்பன் என்ற முறையுரிமை கொண்டு கர்ணனோடு சொக்கட்டான் விளையாடிக் கொண்டி ருந்தாள். விளையாட்டில் தன்னை மறந்து இலயித்துப் போய் ஈடுபட்டிருந்த கர்ணன் சிறிது நேரத்தில் துரியோதனன் அங்கே வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை . ஆனால் துரியோதனன் உள்ளே வருவதை அவன் மனைவி பானுமதி கண்டு கொண்டாள். கண்டவுடன் கணவனுக்குச் செய்ய வேண்டிய மரியாதை முறைப்படி எழுந்து நின்றாள். திடீரென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு அவள் எழுந்து நின்றது கண்ட கர்ணன் அவள் எதற்காக எழுந்து நிற்கிறாள் என்ற காரணம் விளங்காமல் மனத்தில் தவறாக எண்ணிக்கொண்டு அவளை உட்காரச் செய்யும் கருத்துடன் விளையாட்டு வெறியில் அவளைத் தொட்டு மேகலையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்து விட்டான். துரியோதனன் இதற்காகக் கர்ணனை மன்னித்து விட்டதோடு இதை ஒரு பெருங்குற்றமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதைப் பாரதம் விவரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் துரியோதனனுடைய பெருந்தன்மைக்கும் மேற்பட்ட பெருந்தன்மையாகப் பானுமதியின் சிறந்த கற்பு நிலையே விளக்கம் பெறக் காண்கின்றோம். இன்னும் சுபத்திரை, சித்திராங்கதை, இடிம்பி முதலிய வேறு பல பெண் பாத்திரங்களும் அக்காவியத்தின் ஓரோர் பகுதியில் பயின்று செல்கின்றனர். அருச்சுனனைக் காணாமலே அவனை எண்ணி எண்ணிக் காதலுணர்வு பெற்றுத் துறவியாக உருக்கொண்டு வந்திருக்கும் அவனிடமே, ‘அருச்சுனர் நலமா?’ - என்று கேட்கும் பேதமை நிறைந்த சுபத்திரையின் காதலிலும் ஒரு வகை அழகு இருக்கத்தான் இருக்கிறது. பாண்டியன் மகளாகப் பிறந்து பார்த்தனை மணந்து இன்புற்ற நிலையிலும் அவனைப் பிரிந்து துன்புறுகின்ற நிலையிலும் ஆகிய இரண்டு மாறுபட்ட நிலைகளிலுமே சித்திராங்கதையின் பற்றும் மெய்ம்மையும் பிறழாத காதலில் மனோ திட்டத்தின் கனிந்த நிலையைக் காண்பதற்கு முடிகின்றது. அரக்கியாகப் பிறந்து அரக்கனுக்குத் தங்கையாக வாழ்ந்தும் அண்ணனாகிய அரக்கனைக் கொன்ற பீமன் மேல் அன்புள்ளத்தோடு காதல் கொள்ளும் இடும்பியினுடைய குணப்போக்கு ஒரு தனி விந்தை. வன்மையும், கொடுமையும் உள்ள அன்பற்ற அரக்கி ஒருத்தி மென்மையும் காதலும் கொண்டு அன்பு செலுத்துபவளாக மாறும் விசித்திர நிலையை இடிம்பி இக்காவியத்தில் நமக்கு அளிக்கிறாள். பாரதக் கதையின் பரப்பை நோக்கினால் சாதாரணமான ஒரு சிறிய பாத்திரமே இடும்பி. ஆனாலும் தன்னுடைய சிறந்த குணசித்திரத் தோற்றத்தினால் மறக்க முடியாத ஓர் இடத்தை இக்காவியத்தில் அவள் பெற்றிருக்கின்றாள். ஆடவர், பெண்டிர் என்று இருவகையிலும் பாரதம் என்னும் காப்பியக் கடலிற் பயிலும் பாத்திர முத்துக்கள் எண்ணிலடங்காதவை. எண்ணிலடங்காத அந்த முத்துகளில் எல்லாவற்றையும் குளித்தெடுத்துக் கொணர்ந்து காட்டுவதற்குரிய வாய்ப்பும் விரிவும் இந்தச் சிறிய முன்னுரைக்குப் போதாது. மேலே தொடர்ந்து விவரிக்கப்படவிருக்கும் கதையின் விரைவான வசனப் போக்கிற்கு ஒரு முன் விளக்கமாக அமைந்தால் போதும் என்ற நோக்கத்தோடுதான், இந்தச் சிறு முன்னுரையும் கூட இங்கே எழுதப்பட்டது. பொன்னை, பொருளை, உணவை, உடையை, அனுபவிக்கப் பிறந்தவர் களைக் காட்டிலும் காவியத்தைச் சுவைக்கும் அனுபவத்திற்கு உரியவர்களாகப் பிறந்தவர்களே பெரும் பாக்கியசாலிகள். உலகின் வேறெந்த மகாபாக்கியங்களும் இந்த ஒரேயொரு பாக்கியத்திற்கு ஈடாக முடியாது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இத்தகைய உறுதிப் பொருள்களை விளக்கி இவை பற்றிய உணர்வை உண்டாக்குவதுதான் ஒவ்வோர் சாதாரணமான காவியத்துக்கும் நோக்கம் என்றால் பாரதம், இராமாயணம் போன்ற பெரிய இதிகாச காவியங்கள் இந்த உணர்வை உண்டாக்கத் தவறிவிடப் போவதில்லை. பிற காவியங்கள் உறுதிப் பொருளுணர்வை எவ்வளவு உண்டாக்க முடியுமோ அவ்வளவிற்கும் ஒருபடி விஞ்சி நின்று பாரதம் முதலியவை அதே வகை உணர்வை உண்டாக்குமே ஒழியக் குன்றிப்போகமாட்டா. இதிகாச காவியங்களின் உயர்ந்த குறிக்கோளே இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் உண்டாக்க வேண்டும் என்பதே ஆகும். ஒரு நாட்டு மக்கள் பொருள் துறையில் வளம் பெற வேண்டுமானால் விளைவு, தொழில் முதலியவற்றைப் பெருக்கி உழைப்பை வளர்த்தால் போதும். வெளியாருடன் இதயங்கலந்து பழகுவது போலப் பழகாமற் பழகுகின்ற நாகரிக வளம் பெற வேண்டுமானால் சாதாரணமான பொது அறிவு மட்டும் பெற்றால் போதும். ஆனால் உள்ளத்தின் பண்பாடு வளம் பெற வேண்டும் என்றாலோ காவியங்கள் வேண்டும், கவிதைகள் வேண்டும், அவைகளை உணர முற்படும் உள்ளங்கள் வேண்டும். உணரத் தயங்காத உணர்வுகள் வேண்டும். அற நூல்களும் நீதி நூல்களும் உண்டாக்குகின்ற இதயப் பண்பாட்டினும் விரைவாகப் பெருகிய அளவில் காவியங்களே இதயப் பண்பாட்டை வளர்ப்பதற்கு முடியும். இது அனுபவம் மலரச் செய்கின்ற பேருண்மை. ‘பொய் சொல்லாதே பொய் சொல்லாதே!’ என்று சிறு குழந்தைக்கு நூறு முறை வாய் உபதேசம் செய்யும் வறண்ட முறையைக் கைவிட்டு ஒரே ஒரு முறை அரிச்சந்திரன் கதையை உருக்கமான முறையில் உள்ளத்தில் பதியும்படியாகச் சொன்னால் ‘பொய் பேசல் தீது’ என்ற உணர்வை எளிமையான முறையில் அழுத்தமாக ஏற்படுத்திவிட முடியும். இது உறுதி. இந்த உணர்வுதான் காவியத்தின் தலைசிறந்த குறிக்கோளாம். ‘ஐவர் காவியமாகிய’ பாரதக் கதையை எத்துணையோ முறை எழுத்திலும் பேச்சிலும் கண்டு அனுபவித்தவர்கள் தாம் நாம். பாரதமும், இராமாயணமும் பாரத நாட்டின் பரம்பரையான அநுபவச் செல்வங்கள் . இதிகாசமாக அலர்ந்த இணையற்ற இலக்கிய வடிவங்கள். அவற்றை எத்துணை முறைகள் எழுதினாலும் பேசினாலும் சுவையோ, உண்மைகளோ, நயங்குன்றப் போவதில்லை. வாடாத செந்தளிர்க் கற்பகத்தின் வைப்புகள் அவை. இங்கே விரியும் இந்த ஐவர் காவியம் இதயப் பண்பாட்டை மலரச் செய்ய வேண்டும் என்ற தூய குறிக்கோளின் விளைவு. இந்த விளைவுக்கு ஏற்படும் பயன்மிகுந்தால் அதுவே இத் தொடரின் மாபெரும் வெற்றி. பாரதத்தின் தருமனைப் போல் இல்லாவிடினும் வாழ்வில் ஒல்லும் வாய் எல்லாம் அறத்தைக் கைவிட்டு விடாமல் காக்கும் நல்ல உள்ளம் பெறுமாறு எல்லோரையும் தூண்டிச் செயற்படுத்தும் தூய பண்பையாவது இது நல்கியே தீரும்.  ஆதி பருவம் மூவர் தோற்றம் அந்தி மகள் மேலை வாயிலில் வந்து செவ்வண்ணக் கோலங்களைப் பரப்பி உலகை அழகு மயமாகச் செய்து கொண்டிருந்த அந்த இன்பமிக்க மாலை நேரத்தில் வீட்டுமன் மாத்திரம் சோர்ந்த மனத்துடன் கங்கைக் கரையில் அமர்ந்திருத்தான். கங்கைப் பிரவாகத்தின் நீல நிற நீர்ப் பரப்பில் மேலை வானின் செந்நிற ஒளி மின்னி விளங்கும் அழகை அவன் கண்கள் காணவில்லை. சுற்றுப் புறத்தின் கவின்மிக்க எந்தக் காட்சியும் அவனைக் கவரவில்லை! தன்னை மறந்து தான் வீற்றிருக்கும் இடத்தை மறந்து உள்ளத்தோடு சிந்தனையில் ஒன்றிப் போயிருந்தான் அவன். அப்படி அவன் மனதை வாட்டிய அந்தச் சோகம் முற்றிய சிந்தனைதான் எதுவாக இருக்கும்? பிரம்மசரிய விரதத்தால் கவின் கொண்டு மின்னும் அவனது ஒளிமிக்க உடலில் நுழைந்து உடலை அணுக எந்தக் கவலைக்கும் துணிவு இருக்க முடியாதே? பின் ஏன் அவன் கமல வதனம் வாடியிருக்கிறது? கண்களில் அழகொளி இலகவில்லையே? ஏன்? கொடிய நோயால் தம்பி விசித்திர வீரியனின் மரணத்தைக் கண்ட அவன் அந்தத் துன்பத்தைக் கூடப் பொறுத்தான். ஆனால், இரண்டு பெண்களை மணந்து கொண்டு சந்திர வமிசத்திற்குச் சந்ததியைப் படைத் தளிக்காமலே இறந்து போன அவன் தீயூழை நினைக்கிற போது தான் வீட்டுமனுக்குத் துயரம் தாங்கவில்லை. நித்திய பிரம்மசாரியாகிய தான் சந்திரவமிசத்திற்காக இனி எதுவும் செய்ய முடியாதாகையினால், சந்திர வமிசம் தன்னோடு அழிந்து போகுமே - என்பதை நினைக்கவும் முடியாமல் தவித்தான் அவன். சிறிய தாயாகிய பரிமளகந்தியும் மகன் வீட்டுமனைப் போலவே இந்தத் தவிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். தன்னைப் போலவே அரண்மனையில் சிற்றன்னையும் சந்திர வமிசத்திற்கு நேர்ந்த இந்தப் பெருந்தீவினையை எண்ணிக் குமைத்து கொண்டிருக்கிறாள் என்பதை வீட்டுமன் நன்கு அறிவான். இளமை அழகு மாறாத நிலையில் கணவனை இழந்து மங்கலமின்றிக் கவல்கின்ற தம்பியின் மனைவியர்களான அம்பிகை, அம்பாலிகை இருவரையும் காண்கின்ற போதுகளில் எல்லாம் சந்திர வமிசம் குலக் கொழுந்தில்லாமல் ஏமாற்றப்பட்டு விட்டதே என்ற பயங்கர எண்ணந்தான் வீட்டுமனின் மனத்தில் உதிக்கும். வேதனையின் வடிவமே இந்த எண்ணந்தான்! அன்று காவையில் சிற்றன்னை அவனிடம் கூறிய வேறோர் முடிவு இடியோசை கேட்ட நாகம் எனத் திடுக்கிடச் செய்திருந்தது அவனை. தன் உயிரினும் சிறந்ததாக அவன் மேற்கொண்டிருந்த விரதத்தை அழித்துக் குலைப்பதாக இருந்தது அந்த முடிவு. கங்கையில் விழுந்து மாண்டாலும் மாளலாமே ஒழிய அதற்கு இணங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டான் அவன். “குலத்தைத் தொடரச் செய்வதற்கு மக்கட்பேறில்லாத நிலையில் மாண்டவன் மனைவியை அவனுடைய சகோதரன் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொண்டு வமிசத்தை வளர்க்கலாம்! இதை வேதங்களும் நீதி நூல்களும் அங்கீகரிக்கின்றன. நீயும் இந்த முறைப்படி நடந்து கொண்டால் தான் சந்திர வமிசம் தழைக்க முடியுமப்பா” என்று அவனுடைய சிற்றன்னையாகிய பரிமளகந்தி அவனை வேண்டிக் கொண்டாள். “நீங்கள் கூறுகின்ற இந்தச் செயலைச் செய்ய முடியாத விரதமுடையவனாக நான் இருக்கிறேன் தாயே! ஆகவே இதை மறுப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்! இத்தகைய நிலையிலே கணவனை இழந்த பெண்டிர் முனிவர்களால் மக்கட்பேறு அடையலாமென்ற வேறோர் முறை பரசுராமர் காலத்தில் ஏற்பட்டுள்ளது! முனிவர்கள் மூலமாக வேண்டுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்று அப்போதே சிற்றன்னைக்கு மறுமொழி கூறிவிட்டான் வீட்டுமன். “அப்படியானால் அதற்கும் ஒருவழி இருக்கிறது மகனே! பராசர முனிவரருளால் என் கன்னிப் பருவத்தில் நான் பெற்ற தெய்வீகப் புதல்வன் ஒருவன் இருக்கிறான்! அவன் இப்போது ‘வியாசன்’ என்னும் பெயருடன் நிகரில்லாத முனிபுங்கவனாக விளங்கி வருகிறான். அவனை அழைத்தால் நம் கருத்துப்படி செய்ய இசைந்து தன் அருள் வலிமையினால் விசித்திர விரியனின் மனைவியர் மக்கட்பேறு அடையும்படி செய்வான்! நீ என்ன நினைக்கிறாய்?..” என்று சிற்றன்னை மீண்டும் அவனைக் கேட்டாள். “நான் நினைப்பதற்கும் சொல்வதற்கும் இனி என்ன இருக்கிறது தாயே? வியாசர் திருவருளால் சந்திரவமிசம் வளர ஏதாவது வழி ஏற்படுமானால் அது நம்முடைய பெரும் பேறு ஆகும். தடையின்றித் தங்கள் கருத்துப்படியே செய்யுங்கள்” என்று வீட்டுமன் கூறினான். இதன் பின் மாலையில் கங்கைக் கரைக்கு வந்தபோது தான் மீண்டும் சிந்தனை அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அதையே தொடக்கத்தில் கண்டோம். உலகெங்கும் தம்முடைய அறிவு மனத்தைப் புனிதமான முறையில் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த மகாமுனிவர் அருள் புரிவார், என்ற நம்பிக்கையுடனே மாலைக் கடன்களை முடித்தான் வீட்டுமன். கடன்களை முடித்துக் கொண்டு அவன் அரண்மனைக்குப் புறப்படும்போது கங்கைக்கரை மெல்ல இருண்டு கொண்டிருந்தது. செல்லும் வழி மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மனத்தில் மட்டும் நம்பிக்கைச் சுடர் சிறிது சிறிதாக ஒளி பெருக்கி வளர்ந்து கொண்டிருந்தது. பரிமளகந்தி வியாசரை அழைத்தாள். வியாசர் எல்லாப் பற்றுகளையும் துறந்த முனிவராயினும் பெற்றவள் அழைத்த அந்த அழைப்பை மறுக்கவோ, துறக்கவோ முடியவில்லை. அவர் பெற்றவளுக்கு முன் தோன்றினார். பரிமளகந்தி, சந்திரவமிசம் குலமுறையின்றித் தவிப்பதைக் கூறி அந்தத் தவிப்பு நீங்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு காலஞ்சென்ற விசித்திர வீரியனின் தேவியர்களாகிய அம்பிகை, அம்பாலிகை இருவரையும் அவர் வசம் ஒப்புவித்தாள் வியாசர் அருள் புரிந்தார் குருகுலக் கொழுந்து மூன்று தளிராகத் தழைத்து வளர்ந்தது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் என்று மூவரை வியாசரின் அருள் அளித்துச் சென்றது. திருதராட்டிரன் பிறவிக் குருடனாகவும் பாண்டு உடல் வெளுத்தவனாகவும் தோன்றியிருந்தனர், அறிவிலும் அழகிலும் சிறந்த புதல்வனாகத் தோன்றியவன் விதுரன் ஒருவனே! எவ்வாறானால் என்ன? ‘குரு குலக்கொடி வேரறுத்துப் போகவில்லை. தழைத்துப் படரத் தொடங்கி விட்டது - என்று திருப்தியுற்றனர் பரிமளகந்தியும் வீட்டுமனும். “காலம் வளர்ந்தது! வளர்ந்து வளர்ந்து பெருகியது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரும் கவின்பெற்று விளங்கும் மூன்று மலைச்சிகரங்கள் போலப் புகழ்பூத்து வளரலாயினர். வீட்டுமன் கண்ணை காக்கும் இமை போல அந்த மூன்று குலக் கொழுந்துகளையும் போற்றி வளர்த்து வந்தான். கல்வி, கேள்வி, படைப்பயிற்சிகளில் அவர்களைத் தேர்ச்சி பெற்று வலிமையடையச் செய்வதற்காகத் தானே அவர்களுக்கு ஆசிரியனாக அமைந்தான். குருகுலத்தின் எதிர்கால நலம், எதிர்காலச் சிறப்பு ஆகிய யாவையும் அந்த மூவரால் தான் நிலை பெற்று வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு தான் வீட்டுமன் அவர்களை இவ்வாறு உருவாக்கலானான். இந்த உணர்ச்சிதான் தளர்ச்சியே குறுக்கிடாமல் அவனுக்கு ஊக்கமளித்த உணர்ச்சி. தகுந்த பருவம் வந்ததும் மூத்தவனாகிய திருதராட்டிரனுக்கு முடி சூட்டினான் வீட்டுமன். பாண்டுவை அவனுக்குச் சேனாதி பதியாக நியமித்தான். கடைசித்தம்பியாகிய விதுரனை அவனுடைய அறிவாற்றல்களுக்கேற்ற அமைச்சுத் தொழிலுக்குரியவனாக நியமித்தான். இவ்வளவும் செய்து முடித்தபின், திருதராட்டிரனுக்குத் திருமணத்தையும் விரைவில் முடித்துவிட்டால் நல்லதென்று தோன்றியது வீட்டுமனுக்கு. காந்தார நாட்டு மன்னன் மகள் காந்தாரியை அவனுக்கேற்ற மனைவியாகக் கருதித் தூதுவர்களை மணம் பேசி வருமாறு அனுப்பினான். திருதராட்டிரன் கண்ணில்லாதவன் என்ற உண்மை தெரிந்தவனாகையினால் காந்தார வேந்தன் அவனுக்குத் தன் மகளைக் கொடுப்பதற்குத் தயங்கினான். தன் தயக்கத்தை அவன் தன் மகளிடமே கூறியபோது,”கலங்காதீர்கள் அப்பா? விதி என்னை இந்த வழியில் தான் அழைக்கிறது போலும்! குருடராக இருந்தால் இருக்கட்டும்! நான் அவரையே மணந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!" என்று காந்தாரி மறுமொழி தந்தாள். ‘மணத்திற்குச் சம்மதம்’ என்று தூதுவர்களிடம் கூறியனுப்பினான், காந்தாரமன்னன். விரைவில் காந்தாரிக்கும் திருதராட்டிரனுக்கும் மணம் முடிந்தது. ‘கணவனுக்கு இல்லாத கண்கள்’ எனக்கு மட்டும் எதற்கு? என்று கூறினவளாய் மணமான அன்றே தன் கண்களையும் திரையிட்டு இறுகக் கட்டி மறைத்துக் கொண்டாள் காந்தாரி. அவளுடைய இந்தக் கற்புத் திறத்தைக் கண்டு வியக்காதாரில்லை. அதியற்புதமான அழகும் நற்குணங்களும் படைத்த இந்த யுவதிக்கு இவ்வளவு இளம் பருவத்திலேயே தியாகமும், கற்புணர்ச்சியும் செறிந்த இந்த உள்ளம் எப்படி அமைந்தது?’ - என்று நாடு முழுவதும் அதிசயித்தது! சாதாரணமாக எவராலும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்து காட்டுகின்றவரிடம் ஒரு விதமான தெய்வீகக் கவர்ச்சி இயற்கையாகவே ஏற்படுகின்றது. காந்தாரியின் தியாகமும் அவளுக்கு இத்தகையதொரு கவர்ச்சியை அளித்திருந்தது. திருதராட்டிரனுக்குத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாண்டுவின் திருமணத்தைப் பற்றிய சிந்தனை வீட்டுமனுக்கு ஏற்பட்டது. குந்திபோசமரபில் சூரன் என்னும் அரசனின் மகளாகிய ‘பிரதை’ (குந்தி ) என்பவளைப் பாண்டுவுக்கு மணமுடிக்கலாமென்று கருதினான் அவன். அதற்கு முன்பாகவே ‘பிரதை’யின் கன்னிப் பருவத்து வரலாறு ஒன்றை நாம் கண்டு விடுவோம். கதைப் போக்கிற்கு அவசியமான வரலாறு ஆகும் இது.  கன்னிப் பருவத்தில் நடந்த கதை குந்தி போசர் அரண்மனையில் எழிலும் வனப்புமாக வளர்ந்துவந்த பிரதை, வளர்பிறைச் சந்திரன் கலை கலையாக வளர்ந்து முழுமை கனிவது போல நிறைவை நெருங்கிக் கொண்டி ருந்தாள். துள்ளித் திரிந்து ஓடியாடி விளையாடும்இளமைப் பருவத்தில் இளமயில் போலப் பழகி வந்தாள் அவள். இந்த நிலையில் தவ வலிமை மிக்கவராகிய துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசர் அரண்மனைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தார். முனிவர் வரவால் தன் விளையாடல்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு முழு நேரத்தையும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபடுத்தினாள் பிரதை. “இவர் இங்கே தங்கியிருக்கின்ற வரையிலும் இவருக்குரிய பணிவிடைகள் எல்லாவற்றையும் நீயே செய்ய வேண்டும்! முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி யிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்  கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன்? எதற்காக? எப்படி? அந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது அவளுக்கே விளங்கவில்லை. மேலே முழு நிலவு! மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான்! செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும்! தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம்! பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி! உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப் பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ! நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே! இது அறமா? முறையா?” - என்று அவன் பிடியிலிருந்து விலகித் திமிறி ஒதுங்கினாள். அவள் இவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கவும், கதிரவனுடைய கண்கள் மேலும் சிவந்தன. அவன் ஆத்திரத்தோடு, “அப்படியானால் என்னை ஏன் வீணாக அழைத்தாய்? என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா? அல்லது உன் குலம் என்ன கதியடையும்? என்பதாவது உனக்குத் தெரியுமா? பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் உன்னைப் பெற்ற தந்தை இதை அறிந்து உன் மேல் வெறுப்புக் கொள்வானே என்று நீ பயப்பட வேண்டாம். என் வரவு உனக்கு நன்மையையே நல்கும்! இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய்! இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ? அவன் சட்டென்று தன் முகத்தை மேகத்திரளுக்குள் மறைத்துக் கொண்டான். மேகத்திலிருந்து, சந்திரன் மறுபடியும் விடுபட்டு வெளியே வந்த போது நிலா முற்றத்தில் கதிரவன் குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான். தான் வந்தது, குந்தியை மகிழ்வித்தது, அவளுக்கு மீண்டும் கன்னியாக வரங்கொடுத்தது, எல்லாம் வெறுங் கனவோ, என்றெண்ணும் படி அவ்வளவு வேகமாக விடை பெற்றுக்கொண்டு சென்றான் அவன். சஞ்சலம், சஞ்சாரம், சாரத்யம், முதலியவைகளையே தன் குணமாகக் கொண்ட காலம் மீண்டும் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. குந்தியின் வயிற்றில் ‘கர்ணன்’ பிறந்தான். தேவர்களும் அறியாத கொடைப் பண்பை நிரூபித்துக் காட்டுவான் போலத் தோன்றிய இந்தப் புதல்வன் செவிகளில் கவச குண்டலமும் ஈகை யொளி திகழும் முகமுமாக விளங்கினான். உலகும், குலமும், பழிக்கும் என அஞ்சிய குந்தி இந்தப் புதல்வனை ஒரு பேழையில் பொதிந்து வைத்துக் கங்கை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டாள். பேழை கங்கையிலே மிதந்து கொண்டே குழந்தையுடன் சென்றது. அதிரதன் என்னும் பெயரைப் பெற்ற ‘சூதநாயகன்’ என்கிற தேர்ப்பாகன் தன் மனைவி ‘ராதை’ என்பவளுடனே நீராடக் கங்கைக்கு வந்தான். குந்தி மிதக்கவிட்ட பேழையை இவர்கள் கண்டெடுத்தனர். வெகுநாட்களாக மக்கட்பேறின்றி வருந்தி வந்த இவர்கள் மனமகிழ்வோடு அழகும் அருளொளியும் ததும்பும் கர்ணனாகிய குழந்தையை இன்னானென்று தெரியாமலே வளர்த்து வந்தனர். இது தான் குந்தியின் கன்னிப் பருவத்தில் நடந்த மறைமுகமான கதை. ஐவர் அவதாரம் பாண்டுவின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டுமென்பதற்காக வீட்டுமன் அனுப்பிய தூதுவர்கள் குந்தி போச நாட்டை அடைந்து சூர மன்னனைச் சந்தித்தனர். குந்தியைப் பாண்டுவுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்குச் சூரன் உவகையோடு சம்மதித்தான். ஒருப்பட்டு இசைந்த கருத்தைத் துருவாசர் சென்று வீட்டுமனுக்குக் கூறினர். வீட்டுமன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஒரு குறிப்பிட்ட மங்கல நாளில் குந்திக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணமான புதிதில் மண இன்பத்தை இயற்கைச் சூழலில் நுகருவதற்காக இமயமலைச் சாரலிலுள்ள அழகிய பூம்பொழில்களில் பொழில் விளையாடக் கருதி மனைவியோடு பாண்டு புறப்பட்டான். இதற்குள் மந்திர ராசன் என்ற வேறொர் அரசனும் ‘மாத்திரி’ என்ற பெயரையுடைய தன் மகளையும் பாண்டுவுக்குத் தானாகவே விரும்பி மணமுடித்துக் கொடுத்திருந்தான். இரு மனைவியருடனும் இமயமலைச் சாரலுக்குச் சென்ற பாண்டு பொழுது போக்குக்காக வேட்டையாடவும் விரும்பினான். தங்கியிருந்த பொழிலில் குந்தியையும் மாத்திரியையும் விட்டுவிட்டு வில்லும் கணைப்புட்டிலும் சுமந்து வேட்டைக்குப் புறப்பட்டான் பாண்டு, வேட்டையாடுவதற்கு அருமையான பலவகை விலங்குகளை எளிமையாக வேட்டையாடி வீழ்த்தியபடியே மேலும் மேலும் பெருகுகின்ற வேட்டை விருப்பத்தோடு மலைச் சாரல் வழியே வில்லேந்திய கையனாய்ச் சென்று கொண்டிருந்தான் அவன். இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, தொலைவில் ஓர் ஆண்மானும், பெண்மானும் தம்முட்டி ஒன்று பட்டு இன்ப நிலையில் ஆழ்ந்திருக்கும் காட்சி அவன் கண்களுக்குத் தென்பட்டது. பாண்டுவின் போதாத வேளைதானோ என்னவோ, அந்த நிலையிலிருந்த அவ்விரண்டு மான் களையும் அவன் கண்டது? அறிவற்ற ஓர் ஆசை அவன் மனத்தில் எழுந்தது. அந்த மான்களை வேட்டையாடினால் என்ன என்ற ஆசை தான் அது! அவைகள் இருக்கின்ற ‘மயங்கிய நிலை’ குறி தப்பாமல் அம்பு செலுத்துவதற்கு ஏற்றபடி அமைந்திருந்தது. பாண்டுவின் மனத்தில் கருணை சிறிதளவும் எழவில்லை ! ஆசையே விஞ்சி நின்றது. கை வில்லை வளைத்தது! ‘அம்பு’ ஒன்று விர்ர்ர்ரென்று குறி வைத்த திசை நோக்கிப் பறந்த அடுத்த விநாடியில் அந்த ஆண் மான் அலறிக் கொண்டே கீழே சாய்ந்தது. சாய்ந்த மறுகணம் அங்கே மான் இல்லை. மார்பிலே குருதி ஒழுக ஒரு முனிவர் எழுந்து நின்றார். பாண்டு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டே திகைத்துப் போய் நின்றான். ‘தான் அம்பு எய்த மான் எங்கே? இந்த முனிவர் எப்படி வந்தார்? தம் அம்பு இவர் மார்பில் எப்படித் தைத்தது?’ என்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன. அவனுடைய திகைப்பையும் வியப்பையும் போக்கு பவர் போல் ‘இந்தமன்’ என்னும் பெயரையுடைய அந்த முனிவர் ஆத்திரத்துடனே மொழியலானார்; ‘நானும் என் மனைவியும் ஆண்மானும் பெண்மானுமாக உருமாறி இன்பத்தில் ஈடுபட்டிருக்கும் போது என் மேல் அம்பு எய்து கொன்றாய் நீ! இந்தத் தகாத காரியத்தைச் செய்ததற்காக, ‘நீயும் உன் மனைவியை இன்பம் நாடி எப்போது தீண்டுகிறாயோ, அப்போதே இறந்து போவாய் இது என் சாபம்’ என்று இதைக் கூறியவுடன் கீழே விழுந்து இறந்து போனார் இந்தமன் முனிவர். பெண்மானாக உருமாறியிருந்த அவர் மனைவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் கணவன் பிரிவைப் பொறுக்காமல் காட்டுத் தீயிலே பாய்ந்து உயிர் துறந்தாள். சாபம் பெற்ற பின்பு தான் பாண்டுவுக்குத் தன் குற்றமும் அதில் நிறைந்திருந்த தீமையும் புலப்பட்டன. அவன் தன்னை உணர்ந்தான். ‘செய்த பாவம் எவ்வளவு பெரியது?’ என்பதையும் உணர்ந்தான். இந்தப் பாவத்திற்கு எப்படியாவது பரிகாரம் தேடியாகவேண்டும் என்று அவனுடைய மனச்சான்று அவனை வதைத்தது. தனக்கு மெய்யுணர்வைத் தோற்றுவித்தது அந்தச் சாபமேயாகையால் அது ஏற்பட்டதும் ஒரு வகையிலே நல்லதாகவே தோன்றியது அவனுக்கு. தன் பாவத்துக்குப் பரிகாரமாக, அரசாட்சி, அந்தஸ்து, படைத்தலைமைப் பதவி முதலிய எல்லாவற்றையும் துறந்து மனைவியரோடு வனத்திலேயே தங்கித் தவத்துறையில் ஈடுபடக் கருதினான். அதன்படியே செய்தான்! படையை அடக்கி நடத்திய பாண்டு இப்போது தவத்திற்காகப் புலன்களை அடக்கி நடத்தப் பழகினான். அரசாட்சியின் ஒரு பிரிவில் தலைமை பூண்டிருந்தவன் இப்போது ஞானத்திற்குத் தலைமை பூண்டவனாயினன். அவனுடைய தவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெருகிச் சிறந்து வந்தது. இடையே, ‘மக்கட்பேறில்லாமையினாலே தன் வாழ்வு பயனற்றதாகி விடுமோ?’ - என்ற கவலையும் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்டது! திருதராட்டிரனுடைய மனைவியாகிய காந்தாரி வியாசருடைய அருளால் நூறு புதல்வர்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு கருக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அப்போது கேள்விப்பட்டிருந்ததும் இந்த ஏக்கத்தை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாயிற்று. குந்தியை அழைத்துக் காந்தாரி கருவுற்றிருக்கும் செய்தியையும் தன் ஏக்கத்தையும் கூறுத் தொடங்கினான் பாண்டு. “ஆருயிர்க் காதலி! இந்த உலகில் அறிவறிந்த மக்களைப் பெறுவதும், அங்ஙனம் பெற்ற மக்களின் மழலை மொழிகளைக் கேட்பதும் போலச் சிறந்த இன்பம் வேறு எவற்றிலுமே இல்லை. ஆனால் என் தீவினையால் நானடைந்திருக்கின்ற சாபத்தை நினைத்துப் பார்த்தால் இந்தப் பிறவியில் மக்களைப் பெற்று மழலை கேட்கும் இன்பத்தை நான் அடையாமலே இறந்து விடுவேனோ? - என்று எனக்குத் தோன்றுகிறது. மக்கள் இன்பத்தை நான் அடைவதற்கு உன்னால் ஏதேனும் உதவி செய்ய இயலுமா குந்தி?” உள்ளம் உருகும் சொற்களால் குந்தியிடம் வேண்டிக் கொண்டான் பாண்டு. கணவனின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட போது தனக்குத் துர்வாசர் கற்பித்துச் சென்ற மந்திரத்தின் நினைவு ஏற்பட்டது குந்திக்கு. தான் சூரியனைச் சேர்ந்தது, கர்ணனைப் பெற்று ஆற்றிலே விட்டது, ஆகிய இரண்டு செய்திகளை மட்டும் கூறாமல், துருவாசருக்குப் பணிவிடை செய்தது தொடங்கி அவரிடம் வரம் பெற்றது வரை எல்லாச் செய்திகளையும் பாண்டுவிடம் விவரமாகக் கூறிவிட்டாள் அவள். குந்தி கூறியதைக் கேட்ட பாண்டு இழந்த பொருளை இரு மடங்காகத் திரும்பப் பெற்றார் போல மனமுவந்து, “இதற்கு நான் மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றேன் குந்தி, நீ விரும்புகின்ற தேவர்களை அழைத்து அவர்களுடன் கூடி எனக்கு மக்கட் செல்வத்தைக் கொடு! அது ஒன்றே எனக்கு வேண்டியது!” என்றான். குந்தி கணவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கித் தர்மராசனை மந்திரம் ஒலித்து அழைத்தாள். முன்பு முதன் முறை கதிரவன் தோன்றியது போல் இப்போது தருமன் அவள் முன்பு தோன்றினான். அவளுக்கு அருள் செய்த பின் தருமன் விடை பெற்றுச் சென்றான். உரிய காலத்தில் குந்தி கருக்கொண்டாள். கருமுற்றிப் பிறந்த புதல்வனே தருமபுத்திரன். ‘உலகையெல்லாம் தன் நேரிய ஆட்சி வன்மையினால் செங்கோல் நெறியிலே செலுத்தி ஆளவல்ல மன்னர் மன்னன் இவன்!’ - என்று கண்டவுடன் சொல்லும்படி விளங்கினான் இளந் தருமபுத்திரன். அவனிடம் அவ்வளவு தேஜஸ் நிறைந்து விளங்கியது! ‘குந்திக்கு இத்தகைய புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற செய்தியைக் கருக்கொண்டிருந்த காந்தாரி கேட்டாள். அளவுக்கதிகமான பொறாமை பயங்கரமானது. காரணமின்றிப் பிறரைப் பற்றி மனங் கொதித்தால் தனக்கே துன்பத்தை அடைய வேண்டியதுதான். இடைவிடாத பொறாமையினால் காந்தாரியின் கருச்சி சிதைந்து வெளிப்பட்டது. இதைக் கண்டு என்ன செய்வதென்றறியாமல் பலரும் அஞ்சியிருக்கும்போது வியாசர் வந்தார். சிதைந்த கருவை நூறு தாழிகளில் தனித்தனியே பிரித்து அடைத்துவிட்டு, ‘இவைகள் தாமாகவே முற்றிக் குழந்தைகளாக வெளிப்பட்டால் ஒழிய இடையே எவரும் தீண்டலாகாது! - என்று கூறிச் சென்றார் அவர். அதன்படியே தாழிகளைத் தீண்டாமல் தொலைவிலிருந்து குழந்தைகள் வெளிப்படும் நாளை அடைக்காக்கும் பாம்பைப் போல் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள் காந்தாரி. இங்கே அத்தின புரியில் இவ்வாறிருக்கும்போது தபோ வனத்தில் பாண்டு மீண்டும் குந்தியை அழைத்து மக்கட் பேற்றுக்கு வற்புறுத்தினான். குந்தி துர்வாசர் கற்பித்த மந்திரத்தைக் கூறி வாயு தேவனை அழைத்தாள். வாயுதேவனின் நல்வருளால் வலிமையிலும் ஆற்றலிலும் நிகரற்றவனாகிய வீமன் தோன்றினான். குந்தியும் பாண்டுவும் மனமுவந்தனர். வீமன் பிறந்த சில நாட்களில் அத்தினபுரியில் வியாசர் வைத்துவிட்டுச் சென்ற கருப்பத் தாழிகளுள் முதல் தாழியிலிருந்து குழந்தை வெளிப்பட்டது. இந்தக் குழந்தையே துரியோதனன். இதன் பிறந்த நாட் போதில் நல்லவர்கள் கண்டு மனம் வருந்தும்படியான பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பின்பு சில நாட்களில் தொடர்ந்து வரிசையாகத் தொண்ணூற்றொன்பது தாழிகளிலிருந்தும் துச்சாதனன் முதலியவர்கள் பிறந்தார்கள். இறுதியாகத் ‘துச்சனை’ என்னும் பெண்ணொருத்தியும் பிறந்தாள். புதல்வர்கள் நூற்றுவராலும் பெண் ஒருத்தியாலும் திருதராட்டிரனும் காந்தாரியும் இறும்பூதடைந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மூன்றாவதாக மீண்டும் பாண்டு விரும்பியபடியே குந்தி இந்திரனை அழைத்து அவனருளால் அருச்சுனனைப் பெற்றாள். பிறந்த காலத்தில் பங்குனன் என்னும் பெயர் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. தன் மனைவியரில் குந்திக்கு மக்கள் மூவர் பிறந்திருந்தும் மாத்திரி மக்களின்றி வருந்துவதைக் கண்டு பாண்டு, “குந்தி! உனக்கு துர்வாசர் கற்பித்த மந்திரத்தை நீ மாத்திரிக்கும் கற்பித்து அவளும் மக்கட்பேறு அடையுமாறு செய்!” என்று அன்புடன் குந்தியை வேண்டிக் கொண்டான். கணவனுடைய வேண்டுகோள்படி துர்வாசர் தனக்களித்த மந்திரத்தை மாத்திரிக்குக் கூறினாள் குந்தி. அந்த மந்திரத்தைக் கொண்டு கதிரவன் புதல்வராகிய அசுவினி தேவர்கள் இருவரையும் தனித்தனியே இருமுறை அழைத்து அவர்களருளால் நகுல, சகாதேவர்களைப் பெற்றாள் மாத்திரி. புதல்வர்கள் ஐவரை அடைந்த பாண்டு தான் செய்து வந்து தவத்திற்கே பயனைப் பெற்றவன் போல உள்ளம் உவந்தான். பாண்டு, குந்தி, மாத்திரி ஆகியவர்கள் மனத்தில் மகிழ்ச்சி வளர்ந்ததைப் போலவே பாண்டவர்கள் ஐவரும் வளருங் குருத்து எனக் கொழித்து வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் முனிவர்களைக் கொண்டு குடுமி களைமங்கலமும் முந்நூல் மங்கலமும் செய்வித்துப் புதல்வர்களைக் கலைப் பயிற்சி மேற்கொள்வதற்கேற்றவர்களாக்கினான். தபோவனத்து வாழ்க்கையின் இனிய சூழ்நிலையில் முனிவர்களாகிய ஆசிரியர்கள் கற்பித்த பலவகைக் கலைகளிலும் தேர்ந்து திகழ்ந்தனர் பாண்டவர். பாண்டுவின் மரணம் தீவினை எவரை அணுகினாலும் சரி, சொல்லிக் கொண்டு அணுகுவதில்லை. கண்ணுக்குத் தோற்றாமல் விளைவு நெருங்குகிறது வினை. பாண்டுவின் வினையும் இப்படித்தான் அவனை நெருங்கியது. வினைக்கும் விதிக்கும் முன்னால் மனிதன் எம்மாத்திரம்? அப்போது வசந்தகாலம்! தபோவனத்தைச் சுற்றி வசந்த கால எழில் மனோரம்யமாகப் பரவியிருந்தது. மரங்களின் பசுமைப் பரப்பிற்கு நடு நடுவே செவ்வண்ண மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. தென்றல் மனோகரமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சூழ்நிலை, பாண்டு மான் தோலை விரித்து அமர்ந்து கொண்டிருந்தான். ஆசிரம வாசலில் மாத்திரி நீராடி விட்டுக் கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் நின்று கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்த நிலை கண்டோர் காமுறத்தக்க கவர்ச்சியினதாக இருந்த்து. தவத்துக்காக அமர்ந்து கொண்டிருந்த பாண்டு, கண்கள் இமையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், நீராடி முடிந்த நிலையில் கடைந்தெடுத்தவை போன்ற அவளுடைய அங்கங்கள் ஓளி நிறைந்து தோன்றிக் காணும் கண்களை வசீகரித்தன. தோகை விரித்தாடும் இளமயில் போல் அவள் தன்னை மறந்த அவசத்துடன் கூந்தலைக் கோதிக் கொண்டேயிருந்தாள். பாண்டுவின் மனத்தில் அவளுடைய இந்த மோகனமான தோற்றம் ஆசைத் தீயை மூட்டியது. அங்குசத்தையும் பாகனையும் மீறிக் கொண்டு மதத்தால் கொழுத்து ஓடும் யானையைப் போலத் தவத்தையும் ஒழுக்கத்தையும் மீறிக் கொண்டு அவன் மனம் மோகவெறியில் ஆழ்ந்தது. மாத்திரியின் குமுதச் செவ்விதழ்களும், கொஞ்சும் கிளி மொழியும் அவன் தவத்தை அபகரித்தன. அவன் மான் தோலிலிருந்து எழுந்தான். தவத்தை மறந்தான். தணிக்க முடியாத ஆசை வெறியால் இந்த முனிவரின் சாபத்தையும் மறந்து மாத்திரியை அணுகினான் அவன். அடுத்த வினாடி மாத்திரி அவன் கையில் விளையாட்டுப் பாவையாக மாறினாள். அவன் கரங்கள் ஆசை தீர அவளைத் தழுவி முயங்கின. அதே நேரத்தில் சரியாகத் தொலைவில் எங்கோ ஓர் ஆந்தை பயங்கரமாக ஒரு முறை அலறி ஓய்ந்தது. முயங்கிய பாண்டுவின் கரங்கள் சோர்ந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது. கை கால்கள் ஓய்ந்து கொண்டு வந்தன. சிறிது சிறிதாக உணர்வு ஒடுங்கிக் கொண்டே வந்தது. மாத்திரி ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் உடல் வேரற்ற மரம் போலக் கீழே சாய்ந்தது! அந்த உடலிலிருந்து உயிர் நீங்கிவிட்டது. முனிவரின் சாபத்திற்கு வெற்றி பாண்டுவின் ஆசைக்குத் தோல்வி! மாத்திரி கதறி ஓலமிட்டு அழுதாள்; அலறினாள்; அரற்றினாள். குந்தியும் புதல்வர்களும் அவள் அலறலைக் கேட்டு ஓடி வந்தனர். பாண்டுவின் திடீர் மரணம் அவர்களையும் கதறியழச் செய்தது. எல்லோரையும் அழவைத்த விதி எங்கோ தனிமையில் எவரும் காணாதபடி பாண்டுவை, தான் வென்றுவிட்டதாகச் சிரித்துக் கொண்டிருந்தது! இவர்கள் அழுதார்கள்! விதி சிரித்தது ! இவர்களுடைய அழு குரலைக் கேட்டுத் தபோவனத்தைச் சேர்ந்த மற்ற முனிவர்களும் வந்து கூடினார்கள். குந்தி, மாத்திரி, பாண்டவர்கள் ஆகியோர்க்கு அந்த முனிவர்கள் ஆறுதல் கூறினர். புதல்வர்களைக் கொண்டு பாண்டுவின் அந்திமக் கிரியைகளை நிறைவேற்றினர். கணவன் இறக்கத் தான் காரணமாகியதனால் மாத்திரி, தானும் ஈமச் சிதையில் விழுந்து கணவனுடனேயே விண்ணுலகு எய்தினாள். ‘புதல்வர்களைக் காத்துய்க்க வேண்டும்’ என்ற கடமையை மேற்கொண்ட குந்தி மனத்தைக் கல்லாகச் செய்து பொறுத்துக் கொண்டவளாய் இவ்வுலகில் தங்கினாள். பாண்டவர்கள் ஐவரும் தாயாலும் காசிபர் முதலாகிய தபோவனத்து முனிவர்களாலும் ஆறுதலும் தேறுதலும் பெற்றுத் தந்தையிழந்த துயரத்தை மறந்து வந்தனர். பாண்டுவுக்கும் மாத்திரிக்கும், செய்ய வேண்டிய கிரியைகளை யெல்லாம் முடித்த பின்பும் குந்தியும் பாண்டவர்களும் துயரம் நிறைந்த வருத்தச் சின்னமாகத் தோன்றும் அந்த தபோவனத்தில் தங்கியிருப்பது நல்லதல்ல - என்று எண்ணினர் அங்கிருந்த மற்ற முனிவர்கள். வருத்தம் நிகழ்வதற்கு இடமாக அமைந்தது அந்தத் தபோவனம். இனியும் அங்கே தங்குவதனால் அவர்களுடைய வருத்தம் வளரலாமே தவிரக் குறைய முடியாது. ஆகையால் குந்தியும் பாண்டவர்களும் வருத்தத்தை மறந்து ஆறுதல் பெற வேண்டுமானால் தங்கள் உறவினர்களோடு அத்தினாபுரியிற் சென்று தங்கியிருப்பதே சிறந்தது என்று முடிவு செய்தனர் தபோவனத்தில் உள்ளோர். காசியர் முதலிய முனிவர்கள் குந்தியையும் பாண்டவர் களையும் தலைநகரமாகிய அத்தினாபுரிக்கு அழைத்துக் கொண்டு வந்து திருதராட்டிர மன்னனிடம் விட்டு விட்டுச் சென்றனர். திருதராட்டிரன் தம்பியின் புதல்வர்களையும் மனைவியையும் கண்டு அவன் மறைவிற்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கினான். தன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய தம்பியின் புதல்வர்களை மார்புறத் தழுவி மகிழ்ந்த காட்சி திருதராட்டிரனது பாசத்தை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருந்தது. பாட்டனாகிய ‘வீட்டுமன்’ சிறிய தந்தையாகிய விதுரன் முதலியோரும் பாண்டவர்களையும் ஆதரவும் ஆறுதலும் கூறிப் போற்றி வரவேற்றனர். ஐவரும் நூற்றுவரும் சகோதர பாசத்துடனே நெருங்கிப் பழகினர். ஒரே பொய்கையில் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் நெருக்கமாக மலர்ந்து கொழித்து வளர்ந்தாற் போலப் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்புடன் நேயம் பெருக்கி வாழ்ந்தனர். பெருகி வளர்ந்து வந்த இந்த நட்புப் பிற்கால வெறுப்பிற்குக் காரணமாக அமைந்ததுவோ என்னவோ? பாண்டவர்களும் குந்தியும் இவ்வாறு அத்தினாபுரியில் தங்கியிருந்தபோது குந்திபோச நாட்டுச் சூரமன்னனுக்குத் தன் மகளின் நாயகனாகிய பாண்டு இறந்து போன செய்தி எட்டியது. தன் மகளுக்கு நேர்ந்த இந்த அமங்கல நிகழ்ச்சிக்காகப் பெரிதும் கலங்கினான் அவன். அவனும் குந்திபோசர்களைச் சேர்ந்த ஏனையோரும் பேரர்களாகிய பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறுவதற்காக அத்தினாபுரிக்கு வந்து சேர்ந்தனர். யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறைமைக்காகப் பலராமனும் கண்ணனும் கூட வந்து தங்கி ஆறுதலுரைத்தனர். தந்தையை இழந்து கவலையில் ஆழ்ந்து போயிருந்த பாண்டவர்கள் ஐவரும் இவர்கள் வரவால் பெரிதும் மனந்தேறினார்கள். பாண்டவர்கள் பெற வேண்டிய செல்வம், ஆட்சியுரிமை முதலியவற்றையும் அவர்களுக்கு முறைப்படி பகுத்தளிப்பதற்குரிய முயற்சியைக் கண்ணன், பலராமன், குந்தி போசகர்கள் முதலிய இவர்கள் மேற்கொண்டனர். தண்ணீர்ப் பெருக்கோடு தண்ணீர்ப் பெருக்கு ஒன்று பட்டுக் கலந்தது போல இவர்கள் யாவரும் ஒன்று பட்டு அத்தினபுரியில் உவந்திருந்த நிலை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களுக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றுப் போற்றிப் பேணுவதிலேயே நேரமெல்லாம் கழிந்தது. பாண்டவர்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணபிரானுடைய அனுதாபமும் உதவிகளும் கிடைப்பதற்கு இந்த முதல் சந்திப்புப் பெரிதும் பயன்பட்டது. சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் குந்தி போசர்களும், கண்ணன், பலராமன் முதலியவர்களும் புறப்பட்டு விடை பெற்றுக் கொண்டு தத்தம் நாடு சென்றனர். கருடனுக்கு அஞ்சித் தளரும் பாம்புகள் போலப் பாண்டவர்களை நோக்கத் துரியோதனாதியர் தளர்ந்தவர்களாகத் தென்பட்டனர். பாண்டவர். கல்வியாலும் வீரத்தாலும் நாள்தோறும் சிறப்புற்று வாழத் தலைப்பட்டனர். அவர்கட்கு முன் கெளரவர், மதிக்கு முன் மின்மினி யாயினர். சோதரர் சூழ்ச்சிகள் இளமைப் பருவத்துப் பழக்க வழக்கங்கள், நட்பு முதலியன யாவும் அடியிலிருந்து கரும்பு தின்பதைப் போன்றவை. அடிக்கரும்பின் கணுக்களிலிருந்து மேலே மேலே சுவைக்கும் போது உவர்ப்புத் தென்படுகிறதல்லவா? தந்தையின் மரணத்திற்குப் பின்பு பாண்டவர்கள் அத்தினாபுரிக்கு வந்து துரியோதனாதியர்களுடன் கலந்து பழகிய நட்பும் வளர வளரக் கசப்பையே அளித்தது. தேர்ப்பாகன் சூதநாயகன் ஆற்றில் கண்டெடுத்து வளர்த்து வந்த கர்ணனும் துரியோதனாதியர்களோடு சேர்ந்து அவர்கட்கு உயிர் நண்பனானான். சுபல நாட்டு மன்னன் துரியோதனாதியர் தாயாகிய காந்தாரிக்கு உறவினன். எனவே சுபல் மன்னனின் புதல்வன் சகுனியும் அத்தினபுரியில் வந்து தங்கித் துரியோதனாதியரோடு நெருங்கிப் பழகலானான். கர்ணன், சகுனி என்ற இவ்விருவரது புதிய பழக்கத்தால் தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பொறாமை தலைப்பட்டது. நட்பிலே பிளவு என்பது பொறாமை பகைமை இவைகளின் பிறப்பு ஆகும். மாங்காய் காம்போடு பொருந்தியிருக்கும் போது பால் வடிவதில்லை. காம்பிலிருந்து அதைத் தனியே பிரிக்கும் போது பால் வடியாமலிருப்பதில்லை. பொறாமைக்கும் பிளவுதான் காரணம். சகுனியும் கர்ணனுமாக நூற்றுவர் மனத்தைப் பாண்டவர்களிடமிருந்து தனியே பிரித்து விட்டனர். மனங்களின் இந்தப் பிரிவில் எழுந்த குரூரமான சூழ்ச்சிகள் ஒன்றா இரண்டா? பல சூழ்ச்சிகள் எழுந்தன. வானவிளிம்பை அளாவி நிற்கும் உயரமான மலைச்சிகரம் போலச் சத்தியத்தையும், தருமத்தையும் போற்றி உயர்வு பெற்று விளங்கும் தருமன், வல்லமையால் உலகையே வெல்லும் உடலும், உள்ளமும் ஊக்கமும் பெற்ற வீமன், சிந்தனை, செயல், அழகு, ஆண்மை, இவற்றில் நிகரின்றி நிற்கும் விஜயன் என இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் உன்னத நிலை பெற்றுத் தோன்றும் பாண்டவர்களை எதிர்த்துப் பொறாமை கொள்வது கெளரவர்களுக்கு எளிமையான இயல்பாகத் தோற்றியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தை தோற்றுவித்தவன் கர்ணன் வளர்த்து முதிரச் செய்தவன் சகுனி. இதன் விளைவு?… பாண்டவர்களை எந்தெந்த வழியில் எல்லாம் துன்புறுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் துன்புறுத்துவது என்ற பகைமை எண்ணம் கெளரவர் மனத்தில் எழுந்தது. ‘காளான்‘ ஒரே நாளில் முளைத்து வளர்ந்து முழு வளர்ச்சியும் பெற்று விடுகிறது. ஆனால் கடம்ப மரம் அப்படி வளர முடிகின்றதா என்ன? நல்ல எண்ணங்களைக் காட்டிலும் தீய எண்ணங்களே விரைவில் வளர்ந்து வளம் பெற்று விடுகின்றன. இது உலகியல்பு. பாண்டவர்களின் முழு ஆற்றலும் பொருந்தி நிறைந்திருப்பது வீமனிடத்தில் தான் என்பதை நன்கு அறிந்து கொண்ட துரியோதனாதியர் தங்கள் சூழ்ச்சி வலையை எடுத்த எடுப்பில் வீமன் மேலே விரித்தனர். கெளரவர்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் நிரம்பியிருந்த ஒரு நாள் இது நிகழ்ந்தது. புயலை எதிர்பார்த்து நின்ற அமைதி அது! அழிவை எண்ணி இறுமாந்து கொண்ட இன்பம் அது! அவர்கள் பாண்டவர்களை அணுகி, “இன்றைய பொழுதை இன்பமாகக் கழிப்போம் … கங்கையாற்றின் மனோரம்மியமான நீரலைகளில் நாம் நீந்தி விளையாடி மகிழலாம்! நீங்களும் வரவேண்டும் சோதரர்களே! என்று அன்பொழுகப் பேசுவது போல் நடித்து அழைத்தனர். வஞ்சகம் அறியாத பாண்டவர்கள் வருவதற்கு மனமிசைந்து கெளரவர்களோடு கங்கைக் கரைக்குப் புறப்பட்டனர். கங்கைக்கரை.. பனிமலைப் படிவங்களிலே தவழ்ந்து வளர்ந்து கன்னிப்பருவ மெய்திய கங்கைச் செல்வி கடலாகிய காதலனை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். மோகனமான நீள அலைக்கரங்களை நீட்டிப் பாவசரீரங்களை நீராட அழைப்பது போல இருந்தது, தன்னுடைய நீர்த்தரங் கங்களால் அவள் செய்து கொண்டிருந்த சலனம். கெளரவர்களும் பாண்டவர்களும் நீர் விளையாடலுக்காக நதியில் இறங்கினார்கள். தொடக்கத்திலேயே துரியோதனனுக்கும் வீமனுக்கும் நீந்துவதில் போட்டி ஏற்பட்டது. தங்களுக்குள் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின் படி பாண்டவர்களை அன்று எப்படியும் துன்பமும் அவமானமும் அடையும் படி செய்ய வேண்டும் - என்று முனைந்தனர் துரியோதனாதியர். சுழித்துச் சுழித்து ஓடிய கங்கை நங்கை அவர்களுடைய இந்த நிறைவேற முடியாத முயற்சியைக் கண்டு தனக்குள் மோனப் புன்னகை செய்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ, தவறிக் கூட அநீதிக்குத் துணை செய்வதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் கங்கையாற்றிலேயே ஒரு போராட்டம் ஏற்பட்டுவிட்டதோ? என்று சொல்லும்படி வெகுநேரம் கெளரவர்களும் பாண்டவர்களும் ‘நீந்துதல்’ என்ற போரை நடத்தினர். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதிபதியைப் போல அமைதியாக இந்தப் பொறாமைப் போரைக் கண்டுகொண்டிருந்தாள் கங்கை நங்கை. உலகில் அறத்தின் துணை யார் பக்கமோ அங்கே தான் வெற்றியின் துணையும் இருக்கும். அவமதிப்பைச் செய்ய நினைத்தவர்கள் அவமதிப்பை அடைந்தார்கள். தோல்வியைப் பாண்டவர்களுக்கு உண்டாக்கத் திட்டமிட்டவர்கள் தாமே அதை அடைந்தனர். வீமனைத் தலைகுனியச் செய்ய வேண்டும் என்று கருதிய துரியோதனன் தானே தலைகுனியும்படி ஆகியது. பொறாமைக்காரர்களின் தோல்வியால் பொறாமை தானே வளரும்? கங்கைக் கரையில் நீர் விளையாட்டு முடிந்ததும் யாவரும் பசி தீர உண்டனர். பின் ஓய்வு கொண்டனர். மாலையில் மாளிகைகளுக்குத் திரும்பினர். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்னும் நால்வருக்கு மட்டும் தோல்வியால் விளைந்த மனத் தவிப்பு அடக்க முடியாமல் குமுறிக் கொண்டிருந்தது. இருண்டு குமுறிய அவர்கள் இதயத்தின் இருட்டைத் தன்னோடு ஒப்பு நோக்கிக் காண வந்தது போல இரவும் வந்தது. பகலில் மிகுந்த நேரம் நீரில் விளையாடிக் களைத்துப் போயிருந்ததனால் பாண்டவர்கள் முன்பே உறங்கச் சென்றுவிட்டார்கள். கெளரவர்களிலும் துரியோதனன் முதலிய நான்கு பேர்களைத் தவிர ஏனையோர் உறங்கச் சென்றிருந்தனர். பொறாமையாலும் பழிவாங்கும் எண்ணத்தினாலும் இந்த நால்வருக்கும் மட்டும் உறக்கம் வரவில்லை. “வீமனை எந்தவிதத்திலாவது பழி தீர்த்துக் கொண்டாலொழிய என் மனத்திற்கு அமைதி இல்லை” - என்றான் துரியோதனன். “அது தான் அண்ணா என் எண்ணமும் அந்த முரடனுக்குச் சரியானபடி பாடங்கற்பிக்க வேண்டும்” - என்றான் துச்சாதனன். “இன்றே இப்போதே இந்த இருளிலேயே அந்தப் பழியை நாம் தீர்த்துக் கொள்ளத் தவறக் கூடாது” - என்றான் கர்ணன். அதுவரை சிந்தனையில் ஆழ்ந்திருந்த சகுனி அவர்கள் மூவரையும் அருகில் அழைத்து, “வீமனைப் பழிவாங்குவதற்கு நான் இதுவரை எண்ணி முடிவு செய்த திட்டம் இது” - என்று அதை அவர்களிடம் காதோடு காதாகக் கூறினான். சகுனி கூறிய சூழ்ச்சியைக் கேட்டதும் மற்ற மூவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உடனே அதை நிறைவேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்கள் அவர்கள். சலனமற்று அமைதி திகழும் இரவு. எங்கும் செறிந்த கருக்கிருட்டு. வீமனின் பள்ளியறை, பகலிலே கங்கை நீரில் ஆடி விளையாடிய அலுப்புத் தீர ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான் வீமன். கட்டிலில் படுத்திருந்த அவள் மூச்சுவிடும் ஒலியைத் தவிர வேறு ஒலி அங்கே இல்லை . தன் குகையிலே சுதந்திரமாக உறங்குகிற சிங்கத்தோடு ஒப்பிடும்படியாகத் தோன்றியது அவன் உறங்கும் நிலை. உறங்கும் சிங்கத்தின் குகைக்குள்ளே பதுங்கிப் பதுங்கி நுழையும் குள்ளநரிகளைப் போலத் துரியோதனன் முதலிய நால்வரும் கையில் கயிற்றுச் சுருள்களுடன் வீமனின் பள்ளியறைக்குள் நுழைந்தனர். வீமனோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழமாக இலயித்துப் போயிருந்தான். வந்த நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கயிறுகளால் கட்டி லோடு கட்டிலாக வீமனை இறுக்கிக் பிணித்தனர். அவன் அப்போதும் உறக்கம் நீங்கி விழித்துக் கொள்ளவில்லை. கட்டிலோடு அவனைத் தூக்கிக் கொண்டு கங்கையை நோக்கி நடந்தனர். அவர்களுடைய இந்த வஞ்சகச் செயலுக்குத் துணை செய்வது போல இரவின் தனிமையும் அமைதியும் வேறு பொருந்தியிருந்தன. தடுப்பதற்கு எவருமில்லை. சதி செய்யும் நினைவோடு விரைந்தனர். வீமன் கட்டிலோடு, பொங்கி நுரைத்துப் பாயும் கங்கை வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டான். அமுதம் கடையக் கடல் புகுந்த மந்தர மலையோ என்றெண்ணும்படி இருந்தது, வீமனை அவர்கள் கங்கையில் இட்ட காரியம். வீமனை இவ்வாறு வீழ்த்திவிட்டுப் போகும் போதே துரியோதனன் முதலியோர்க்கு வேறு ஒரு சந்தேகமும் உடனெழுந்தது. ஒரு வேளை வீமன் பிழைத்தெழுந்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ - என்று அஞ்சினர். அவன் பிழைத்துக் கரையேறி வந்தாலும் அவனை அடித்துப் புடைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று நான்கு கொழுத்த வீரர்களையும் கங்கைக் கரையில் இருளில் ஒளிந்திருக்குமாறு செய்து விட்டு அதன் பின்பே அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் நினைத்தபடியே வீமன் கரையேறிப் பிழைத்து வந்தது மெய்தான்! தண்ணீரின் குளிர்ச்சி அவனுடைய உறக்கத்தைக் சுலைத்தது. உடல் கட்டிலுடனே பிணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மூச்சை அடக்கி அழுத்தமாக வெளியிட்டான் வீமன், கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து சிதறின. வீமன் நீந்திக் கரையேறினான். கரையில் துரியோதனன் முதலியோரால் ஏவப்பட்டிருந்த தடியர்கள் நாலு பேரும் வீமன் மேல் பாய்ந்தனர். வீமனை அவர்கள் புடைத்துக் கொல்ல வேண்டுமென்பது துரியோதனனுடைய ஏற்பாடு. ஆனால் நிகழ்ந்தது என்னவோ நேர்மாறான நிகழ்ச்சி. வீமன்தான் அவர்களை அடித்துப் புடைத்து வீழ்த்திவிட்டு இரவோடு இரவாக மாளிகைக்கு திரும்பினான். தன்னைக் கொல்லுவதற்கு முயலும் சூழ்ச்சிக்காரர்கள் யாவர் என்பதை அவன் அறிந்து கொண்டான். ஆயினும் சூழ்ச்சிக்கு ஆளாவது போல நடித்து அதை வெல்லுவது தான் உண்மையான திறமை என்று தெரிந்து கொண்ட வீமன் வெளிப்படையாக ஏதுமறியாதவன் போல அமைதியாக இருந்தான். மற்றோர் நாள் வீமனைக் கொல்வதற்காக அவன் இருக்குமிடத்தில் அவனுக்குத் தெரியாமல் நச்சுப் பாம்புகளை நிறைத்து வைத்திருந்தனர். வீமன் இந்த சூழ்ச்சியை அறிந்தும் தன் இருக்கையை அடைந்தான். முசுட்டுப் பூச்சிகளைக் கையால் நசுக்கிக் கொல்லுவது போல் வஞ்சகர்கள் இட்டுவைத்த நச்சுப் பாம்புகளைச் சிதைத்துக் கொன்றான். இதன் பின் மீண்டும் வீமனையும் மற்றவர்களையும் கங்கைக்கு நீராட வருமாறு ஒரு நாள் துரியோதனாதியர்கள் அழைத்தனர். கங்கையாற்றில் இடையிடையே கழுக்களை (ஈட்டிகளைப் போவ நுனிப் பகுதி கூர்மையான ஒரு வகை ஆயுதங்கள்) இட்டு வைத்து வீமனை அந்த இடங்களிலே பாயுமாறு செய்து, கொல்ல வேண்டுமென்று இம் முறை துரியோதனாதியர் சூழ்ச்சி செய்திருந்தனர். இதற்குப் பாண்டவர்களை அழைத்தபோதே ‘வீமனின் அழிவு’ ஒன்றே துரியோதனாதியர்களின் நோக்கமாக இருந்தது. சூதுவாதறியாத பாண்டவர் சம்மதித்து நீராடச் சென்றனர். நீராடும் போது கழுக்களை நட்டுவைத்த இடங்களை முன்பே தெரிந்து கொண்டிருந்த கெளரவர்கள் ஜாக்கிரதையாக வேறு பகுதிகளில் ஒதுங்கி நீராடினர், வீமன் கழுக்களில் பாய்ந்து அழிந்து விடுவானோ என்று அஞ்சத்தக்க நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக இறையருள் துணை செய்தது. எந்தெந்த இடங்களில் கழுக்கள் நாட்டப்பட்டி ருந்தனவோ, அங்கே கண்ணபிரான் வண்டுகளாகத் தோன்றி வீமனைக் காப்பாற்றினார். வீமன் கழுக்கள் இருந்த இடங்களை விலக்கி விட்டுத் திறமாக நீராடிக் கரையேறினான். தீய உள்ளம் படைத்த துரியோதனாதியர் இம்முறையும் ஏமாற்றமே அடைந்தனர். வஞ்சகர்களைப் பொருத்தமட்டில் ஏமாற்றம் என்பது குரூரத்தை மேலும் மேலும் வளர்க்கின்ற சாதனமாகப் பயன்படுகிறது. அடுத்த முயற்சியாக, வீமனை விருந்துக்கு அழைத்து நஞ்சு கலக்கப் பெற்ற உணவு வகைகளைப் பரிமாறிக் கொன்று விடுவதென்று தீர்மானித்தனர். இம்முறை வீமனின் உயிர் எப்படியும் தங்களுடைய வஞ்சகத்திற்குத் தப்ப முடியாதென்பது அவர்களது திடமான எண்ணம். ஆனால் வாழ்க்கையின் முதல் முடிவு என்பது மனித சித்தத்திற்கு மீறிய செயல் என்பதை அவர்கள் சற்றே சிந்தித்து உணர முற்பட்டிருந்தால் இவ்வளவு திடமாக எண்ணியிருக்க மாட்டார்கள்! துரியோதனாதியர் ஏற்படுத்திய விருந்துக்கு வீமன் வந்தான். உணவுகளில் நஞ்சு கலக்கப் பெற்றிருப்பதை அறியாமலே உண்டான். எதிர்பார்த்தபடி உணவு உண்டு. முடிந்த சிறிது நேரத்திலேயே மயங்கி வீழ்ந்தான். துரியோதனாதியர் தங்கள் ஏவலாட்களைக் கொண்டு மயங்கி விழுந்த வீமனின் உடலைக் கயிறுகளால் பிணித்து மீண்டும் கங்கையில் கொண்டு போய்த் தள்ளினர். பீமனுடைய உடல் கங்கையில் அமிழ்ந்து ஆழத்திற்குச் சென்றது. கங்கையில் வசித்து வந்த பாம்புகள் அவனுடைய உடலைக் கடித்தன. ஏற்கனவே நஞ்சு கலந்த உணவை உண்டிருந்ததனால் பாம்புகளின் நஞ்சு அவனை ஒன்றும் துன்புறுத்த வில்லை. அதனுடன் மட்டுமின்றி வீமனுடலில் முன்பே ஏறியிருந்த நஞ்சையும் முறிவு செய்து போக்கி விட்டன இந்தப் பாம்புகள். பின்பு ‘வாசுகி’ என்னும் பெயர் பெற்ற பாம்புகளின் தலைவனுக்கு வீமன் அறிமுகமானான். வீமன் வாயு புத்திரன் என்பதை அறிந்து கொண்ட வாசுகி அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினான். வாசுகியின் உதவியால் வீமனுக்கு அமுதம் கிடைத்தது. அமுதம் அருந்திய சிறப்பால் வீமன் நஞ்சுண்ட வேதனையும் சோர்வும் நீங்கிப் புதிய அழகும் உடல் நலமும் பெற்றான். மேலும் சில நாட்கள் வாசுகியுடன் அங்கே தங்கியிருந்தான். வீமன் திரும்பி வராததைக் கண்டு அவன் இறந்து போய்விட்டான் என்றே நினைத்து செருக்குற்று மகிழ்ந்தனர் துரியோதனாதியர். பாண்டவர்களும் குந்தி தேவியும் வீமனைக் காணாமல் கலங்கிப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். பாட்டனாராகிய வீட்டுமர் ஒருவர் மட்டுமே “நடந்தது யாது?” என்பதை அனுமானித்து உணர்ந்து கொண்டு பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறி “வீமனைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்! அவன் எப்படியும் நலமாக மீண்டும் திரும்பி வந்து விடுவான்” என்றார். எட்டு நாட்கள் சென்ற பின் வாசுகியின் உதவியால் கங்கைக் கரையை அடைந்து நகருக்குள் நுழைந்தான் வீமன். ஏதோ வேற்றூர் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பு கிறவனைப் போலக் காணப்பட்டானே தவிர, வேறு சோர்வு ஏதும் அவனிடம் தெரியவில்லை . பாண்டவர்களும் குந்தியும் அன்போடு வரவேற்றனர். ‘வீமன் இறந்து போய் விட்டானோ?’ என்று எண்ணி மனம் துன்புற்றிருந்த நகரமக்களும் அவனைக் கண்டு துன்பம் நீங்கினர். சகோதரர்களாக இருந்தும் துரியோதனாதியர் பாண்டவர்களோடு முரணி, அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சிகளே செய்து வந்தனர். பாண்டவர்களில் வீமனின் வலிமை தங்களுக்கு அச்சத்தை விளைவிப்பதாக இருந்ததனால் அவனையே முதலில் அழிக்கக் கருதினர். ஆனால் விதியோ. இந்த வஞ்சகர்களின் கருத்துக்கு நேர் எதிராக இருந்தது. ‘நன்மையும் தீமையும், சத்தியமும் அசத்தியமும், தர்மமும் அதர்மமும் போராடுகின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் அடிக்கடி வருகின்றன. சத்தியம் தோற்று விடுவோ?’ - என்ற பயம் இம்மாதிரி நேரங்களில் காண்போர்க்கு ஏற்படத்தான் ஏற்படுகிறது! ஆனால் நன்மை, சத்தியம், தர்மம் முதலிய இவைகள் யாவும் பொறுத்து ஆற அமரவே வெற்றி பெறுகின்றன. வேகமாகச் செல்லும் தண்ணீர் வேகமாகவே வடிந்து விடுவது போல் தீமையும், அசத்தியமும், அதர்மமும் வேகமாக வளர்வது போலவே  வேகமாக அழிந்து விடுகின்றன. அதற்கு மாறாகச் சூழ்ச்சி செய்யும் மனிதர்கள், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஆகிய யாவும் விரைவாக முன்னேறி வெற்றியை நெருங்குவது போலத் தோன்றுவது இயற்கைதான். ஆனால் முடிவில் அழிவும் தோல்வியும் இவர்களுக்கே ஏற்படப் போவது உறுதி. உலக வாழ்வின் மிக நுணுக்கமாக உண்மை இது. இந்த உண்மையை முடிவில் விளக்குவது தான் காவியப் பயன். துரோணர் வரலாறு கெளரவர்களும் பாண்டவர்களும் படைக் கலப் பயிற்சி பெறுவதற்குரிய இளமைப் பருவத்தை அடைந்தனர். வீட்டுமன், விதுரன் இருவரும் அரசிளங்குமாரர்களாகிய இருசாரார்க்கும் ஏற்ற ஆசிரியரைக் கொண்டு போர், படைப்பயிற்சி முதலிய வித்தைகளைக் கற்பிக்கக் கருதினர். ‘கிருபாச்சாரியார்’ என்ற சிறந்த ஆசிரியர் குருவாகக் கிடைத்தார். பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் இவரிடத்தில் வில், வேல், வாள் முதலிய படைக்கலப் பயிற்சிகளைப் பெறுமாறு வீட்டுமனால் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதர்களும் ஏற்பாட்டின்படி கிருபாச்சாரியார் பால் பயிற்சி பெற்றனர். கிருபாச்சாரியார் ஆசிரியராக இருந்தும், வேறொர் சிறந்த ஆசிரியரையும் தேடினர் வீட்டுமன் முதலியோர், துரோணர் இரண்டாவதாக அகப்பட்டார். துரோண மரபில் தோன்றிய துரோணர் பரத்துவாச முனிவரின் புதல்வர், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர். வில்வித்தையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திறமை துரோணருக்கு உண்டு. அத்தினாபுரியிலிருந்து ஆசிரியரைத் தேடிச் சென்ற தூதுவர்கள் துரோணரை அழைத்து வந்ததனால், யாவருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது அது. திருதராட்டிரனது அவை துரோணருக்கு மரியாதை செய்து, அவரை அன்போடு வரவேற்றது. துரோணர் அந்த மரியாதையையும், அன்பான வரவேற்பையும் ஏற்றுக் கொண்டு அவையோர்க்கு நன்றி கூறினார். நன்றி கூறியவர், அப்படியே தம்முடைய வாழ்வில் தம்மைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி ஒன்றையும் கூறத் தொடங்கினார். “இளமையில் குருகுல வாசம் செய்யும் போது நானும் பாஞ்சால நாட்டு இளவரசன் யாகசேனனும் அங்கிலேசர் என்னும் முனிவரிடம் இருந்தோம். எனக்கும் யாகசேனனுக்கும் அப்போது நெருங்கிய நட்பு இருந்தது. உயிர் நட்பு என்றே அதனைச் சிறப்பித்துக் கூறலாம். ஒரு நாள் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசாட்சி எனக்குக் கிட்டும். அப்போது என் அரசில் ஒரு பகுதியை உனக்கு மனமுவந்து அளிப்பேன் நீயும் என்னைப் போல வளமான வாழ்க்கையை அடையலாம்’ என்றான். அப்போது அவன் கூறிய இச்சொற்களை நான் உறுதியாக நம்பினேன். பின்பு சில நாட்களில் பாகசேனனுடைய தந்தை மறைந்து விடவே அவன் நாடு சென்று விட்டான். நானும் குருகுல வாசம் முடிந்தபின் இப்போது இதே அரசகுமாரருக்கு ஆசிரியராக இருக்கும் கிருபாச்சாரியாருடைய தங்கையை மணந்து கொண்டு இல்லறத்தில் பிரவேசித்தேன். நாளடைவில் என் இல்லற வாழ்வின் போக்கில் நான் யாகசேனனையும் அவன் கூறிய உறுதி மொழிகளையும் ஒருவாறு மறந்து போனேன். காலம் வளர்ந்தது. எங்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அவன் பிறந்தபோது எங்கள் வாழ்வில் வறுமை பெரிய அளவில் குறுக்கிட்டிருந்த காலம். உண்பதற்குப் பாலும் அளிக்க முடியாத துயரநிலை, ‘வேதனையை மிகுவிக்கும் இந்த வறுமையை நீக்கிக் கொள்ள என்ன செய்யலாம்’ என்று மனம் மயங்கிச் சிந்தித்தேன் நான். அப்போது எனக்கு யாகசேனனுடைய இளமைப் பருவத்து நட்பும் உறுதி மொழிகளும் நினைவிற்கு வந்தன. தன் அரசாட்சியிலேயே ஒரு பகுதியை அவன் எனக்குத் தருவதாகக் கூறியிருந்த சொற்களை எண்ணினேன். உடனே நம்பிக்கையோடு பாஞ்சால் நாட்டையடைந்து யாகசேனனைச் சந்திக்கச் சென்று அவன் முன் கூறிய சொற்களை நினைவுபடுத்தி என் வறுமை நிலையில் எனக்கு உதவுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ என்னை அதற்கு முன்பு கண்டும் அறியாதவனைப் போல நீ யார்?’ என்று என்னையே கேட்டான். எனது மனம் அப்போது மிகுந்த வேதனையை அடைந்தது. நான் இளமையில் குருகுலவாசத்தின் போது நடந்ததிலிருந்து எங்களுடைய நட்பை நினைவுபடுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறினேன். ஆனால் அப்படிக் கூறியும் அவன், ‘நானோ நாடாளும் மன்னன். நீ சடை முடி தரித்த முனிவன். அவ்வாறிருக்க உனக்கும் எனக்கும் நட்பு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்? வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய்? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன?’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன்! இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார்!’ என்று அவையறியக் கூறிச் சூளுரைத்தேன். “அதை நிறைவேற்ற வேண்டும்.” - துரோணர் இவ்வாறு தம் வாழ்க்கையையே பாதித்த பழைய நிகழ்ச்சியைக் கூறி முடித்தார். அரசகுமாரர்களாகிய பாண்டவர்களும் கெளரவர்களும் அவைக்கு அழைத்து வரப் பெற்றனர். குருவாக வந்திருக்கும் பெருந்தகையாளராகிய துரோணரைப் பணிந்து வணங்கினர். “துரோணரே! உம்மை அவமானப்படுத்திய யாக சேனனை வென்று அவனுக்கு அறிவு புகட்ட இவர்களே ஏற்றவர்கள், தாங்கள் இவர்களுக்குக் கற்பிக்கும் வித்தைகளால் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்!” என்று அரச குமாரர்களைச் சுட்டிக்காட்டி வீட்டுமர் கூறினார். பின்பு துரோணருக்கு அத்தினாபுரியில் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. ஒரு பேரரசனுக்குரிய அந்தஸ்துக்களோடு அவர் மேலான சிறப்புக்கள் செய்யப் பெற்றார். பண்பட்ட ஆசிரியனின் கடமை தனது மனம் பொருந்த, தான் கற்ற கல்வியை மாணவர்க்குச் சிறிதும் ஒளிக்காமல் அளிப்பது ஆகும். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணர் கற்பித்த கலைப்பயிற்சி அத்தகையதாக இருந்தது. சகோதரர்களில் அவரவர்கள் அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற கலையைத் தேர்ந்து போதித்தார் அவர். விசயன் வில்வித்தையில் தலைசிறந்து விளங்கினான். வில் பயிற்சி என்ற கலை காவிய நாயகர்களில் இராமன் ஒருவனுக்காகவே ஏற்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் விசயனோ, அவனைப் போன்றே தகுதிபெற்று விளங்கினான் இந்தக் கலையில், விசயனின் ஒப்புயர்வற்ற பெருமைக்கு முன் கௌரவர்கள் கதிரவனுக்கு முன் மின்மினி போலாயினர். நல்ல மாணவன் ஆசிரியரின் உள்ளத்தில் தனித்த அன்பையும் நட்பையும் பெறுவது இயற்கையல்லவா? துரோணர் விசயனின் மேல் அளவற்ற பற்றும் அன்புணர்வும் கொண்டு ஆர்வத்தோடு அவனுக்குக் கற்பித்து வந்தார். நல்ல மாணவன் உடலைப் பின்பற்றும் நிழலைப் போல ஆசிரியனை விட்டு விலகாமல் போற்றிப் பாராட்டி வழிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். விசயன் துரோணரை அவ்வாறு மதித்து வழிபட்டுக் கற்றான். இஃது இவ்வாறிருக்கும் போது துரோணரால் வில்வீரனாகிய ‘ஏகலைவன்’ என்பவனின் விந்தை மிக்க வரலாறு ஒன்றை இங்கே காண்போம். அவனுடைய தியாகத்தையும் குருபக்தியையும் அறிந்து கொள்வோம். ஏகலைவன் ஓர் வேட்டுவன், இளமையில் துரோணர் விற்கலையில் ஒப்பற்ற பேரறிஞர் என்பதைப் பலமுறை பலரிடம் கேட்டு மகிழ்ந்தவன். ‘கற்றால் அவரிடம் வில் வித்தை கற்க வேண்டும்’ என்று அவரையே தனது இலட்சிய குருவாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மனத்தையுடையவன். துரோணரைக் காணாமலும் கண்டு பழகாமலுமே அவரை மனத்தின் உயர்ந்த இடத்திலே வைத்துத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இயல்பினன். கல்விக்குரிய பருவமும் ஆர்வமும் முறுகி வளர்ந்து பெருகியபோது அவன் துரோணரை நாடிச் சென்றான். அவரிடம் தன் ஆர்வத்தைக் கூறிப் பணிவுடனே தனக்கு வில்வித்தை கற்பிக்குமாறு வேண்டினான். ஆனால் துரோணர் தம்மால் இயலாதென்று மறுத்து விட்டார். ஏகலைவன் பெரிதும் ஏமாற்றமடைந்து மனம் வருந்தினான். இறுதியில் எவ்வாறேனும் துரோணரிடமே கற்க வேண்டும் என்ற முடிவு தான் அவன் மனத்தில் நிலைத்து நின்றது. வனத்தில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு அதில் துரோணரைப் போன்ற உருவச்சிலை ஒன்றைச் செய்து வைத்தான். அந்த சிலையையே தன் குருவாகப் பாவித்து அதற்கு முன்னால் நின்று விற்பயிற்சி பெறும் முயற்சியில் தானாகவே ஈடுபட்டான் அவன். உறுதியான நல்லெண்ணங்களும் முயற்சிகளும் ஒரு போதுமே வீண் போவதில்லை. நல்ல பயனளித்தது. நாட்கள் செல்லச் செல்லத் துரோணரிடம் நேரிற் கற்றால் எவ்வாறு பயன் அடைந்திருப்பானோ அவ்வளவு பயனை ஏகலைவன் அடைந்து விட்டான். வில்வித்தையில் சிறந்த வீரன் என்று பெயரும் புகழும் பரவலாயின. ஏகலைவன் விற்கலையில் இவ்வாறு அடைந்த புகழ் துரோணர் செவிகளுக்கும் எட்டியது. துரோணர் ஏகலைவனைக் கண்டு செல்ல வேண்டும் என்று வனத்திற்கு வந்தார். கோவிலில் விளங்கும் வழிபாட்டுக்குரிய தெய்வச்சிலையைப் போலத் தம்முடைய உருவச்சிலை அங்கே ஏகலைவனின் ஆசிரமத்தில் இடம் பெற்றிருப்பதை அவர் கண்டார். மனம் பூரித்தார். துரோணரே தம் ஆசிரமத்தை நாடி வந்திருப்பதை உணர்ந்த ஏகலைவன் மனமகிழ்ந்து பயபக்தியோடு அவரை வரவேற்று உபசரித்தான். “எல்லாம் தேவரீர் அருளால் வந்த திறமை ! தாங்களே என்னுடைய ஆசிரியர். மானசீகமாக நுட்பமான விற்கலையைத் தங்களிடமிருந்தே நான் கற்றேன்.” என்றான் ஏகலைவன். “அப்படியானால் நீ எனக்கு ஆசிரியர் காணிக்கையாக ஏதாவது அளிக்க வேண்டும் அல்லவா?” - என்றார் துரோணர். ‘தாங்கள் எதனைக் கேட்டாலும் சரி! அதை அளிக்க எளியேன் தயங்க மாட்டேன்’ - என்று ஏகலைவன் பணிவான குரலில் உள்ளன்போடு மறுமொழி கூறினான். “நல்லது! உன் வலது கைக்கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறேன். அதை எனக்கு அறுத்துக் கொடு” - என்று துரோணர் கேட்டார். வலதுகைக் கட்டைவிரல் - விற்கலைக்கே இன்றியமையாத உறுப்பு. அந்த விரலை இழந்தபின் ஏகலைவன் கற்ற அத்தனை கலைகளும் பயனற்றுப் போகும். “சுவாமி! வேறு ஏதாவது கேளுங்களேன், தருகிறேன்” என்று ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாகத் தருவதற்கு மறுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவன் ஆசிரியரின் உன்னத நிலையை உணர்ந்து வழிபடும் உயரிய பண்பும் தியாகமும் கொண்ட ஆண்மகன். துரோணருக்குக் கட்டைவிரலைத் தர இயலாது என்று அவன் மறுக்கவில்லை! அவர் கேட்ட மறுவிநாடியே கட்டைவிரலை அறுத்துக் குருதியொழுகும் கரத்தினால் அவர் திருவடிகளில் வைத்து வணங்கினான். துரோணர் திகைத்தார். ஏகலைவனது பண்பு அவரைவியக்கச் செய்தது. அவனுடைய உயர்ந்த பண்பு நிறைந்த உள்ளம் அவருக்கு அப்போதுதான் புலனாயிற்று. அவர் அவனைப் பாராட்டி வாழ்த்தினார். ஏகலைவனுக்குப்பின் அர்ச்சுனன் ஒருவனிடமே அவர் மெய்யான வில்வித்தையின் திறமையைக் காணமுடிந்தது. அர்ச்சுனன் மேல் ஒரு தந்தைக்கு மகன் மேல் ஏற்படும் பாசமும் அன்பும் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் துரியோதனாதியர் அர்ச்சுனன் மேல் அளவற்ற பொறாமை கொண்டிருந்தனர். துரோணரே இதை அறிந்து கொண்டார். மெய்யான திறமை அவனுக்கு இருக்கும் போது காரணமின்றி இவர்கள் பொறாமைப்படுவது விருப்பு வெறுப்பற்ற ஆசிரியராகிய அவர் மனத்தையே மிகவும் வாட்டியது. அர்ச்சுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியான சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி பார்த்தாவது அவன் மேல் அவர்கள் பொறாமைப்படுவது குறையலாம் என்று எண்ணி அதற்கு ஏற்பாடுகளைச் செய்தார் துரோணர். அவர் ஒருநாள் காலை தம்முடைய மாணவர்கள் யாவரையும் அழைத்துக் கொண்டு கிணற்றுக்கு நீராடச் சென்றார். வேண்டுமென்றே மடுப்போல நீர் ஆழமாக நிறைந்திருந்த அந்தக் கிணற்றில் தம் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தைத் தவறி விழுந்து விட்டது போலப் போட்டு விட்டார். பின்பு மாணவர்களை அழைத்துக் கிணற்றில் இறங்காமலே அம்பு செலுத்தி மோதிரத்தை எடுத்து வருமாறு செய்ய எவராலாவது இயலுமா? என்று கேட்டார். எல்லோருமே, ‘என்னால் முடியும்’ - ‘என்னால் முடியும்’ என்று கூறி முன் வந்து அம்புகளைச் செலுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் செலுத்திய அம்புகள் தண்ணீருக்குள் சென்று முழ்கினவே ஒழிய மோதிரத்தை மீட்டுக் கொண்டு வரவில்லை. இன்னும் ஒரே ஒருவன் மட்டும் அம்பு எய்யவில்லை. அந்த ஒருவன்தான் அர்ச்சுனன் துரோணர் ஏதோ கட்டளையிடுவது போல அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் வில்லை எடுத்துச் சாமர்த்தியமாக வளைத்து அம்பைக் கிணற்றுக்குள்ளே செலுத்தினான். என்ன விந்தை? அம்பு மோதிரத்தோடு கிணற்றுக்குள்ளிருந்து மீண்டும் திரும்பவும் மேலே பாய்ந்து வந்தது. கூடியிருந்த மாணவர்கள் யாவரும் அர்ச்சுனனை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்தோடு பார்த்தனர். துரோணர் புன்னகை புரிந்தார். ‘அர்ச்சுனனின் வில் திறமை உங்கள் யாவரினும் சிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது போலிருந்தது அந்தப் புன்னகை. மற்றோர் நாள்! துரோணர் தம் மாணவர்களுடனே கங்கையாற்றுக்குச் சென்றிருந்தார். கங்கைக் கரையில் அவர் மாணவர்களோடு நீராடிய படித்துறைக்கு அருகில் ஒரு பெரிய அரசமரம் படர்ந்து வளர்ந்திருந்தது. சட்டென்று துரோணர் தம் மாணவர்களின் பக்கமாகத் திரும்பி, “இந்த மரத்திலுள்ள அத்தனை இலைகளையும் துளைக்கும்படியாக ஒரே அம்பைச் செலுத்தக் கூடிய திறமை உங்களில் எவருக்காவது உண்டா ?” - என்று கேட்டார். துரியோதனாதியர் அதைக் கேட்டதுமே மலைத்தனர். வேறு எவருக்கும் வில்லைக் கையிலெடுத்து முயன்று பார்க்கக் கூடத் துணிவில்லை. அர்ச்சுனன் தயங்காமல் வில்லை எடுத்தான். அவன் வில்லிலிருந்து விர்ரென்று அம்பு பறந்ததைத்தான் மற்றவர்கள் காண முடிந்தது. பின் அந்த அம்பு எல்லா இலைகளையும் துளைத்துவிட்டுக் கீழே விழுந்தபோது தான் கண்டவர்களுடைய கண்கள் இமைத்தன! வேறோர் சமயம் துரோணர் நீராடிக் கொண்டிருக்கும் போது கொடிய முதலையொன்று அவர் காலை இறுகப் பற்றிக் கவ்விக் கொண்டது. உடனே அவர் அலறிக் கொண்டே தம் மாணவர்களைக் கூவி அழைத்தார். எல்லோருமே ஓடி வந்தனர். அவர் காலை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார்கள். யாராலுமே அக்காரியத்தைச் செய்ய முடியவில்லை. ஓடி வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதங்கள் எதுவுமே இல்லாமல் வந்திருந்தார்கள். அர்ச்சுனன் மட்டும் எங்கோ வெளியிற் சென்றிருந்தான். அவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது வில்லும் அம்புமாக ஓடி வந்து துரோணரை முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான். தாங்கள் வெறுங்கையர்களாக அவசரத்தில் ஓடி வந்து ஒன்றும் உதவமுடியாமற் போனதற்காக வெட்கித் தலைகுனிந்தனர் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக வில்லும் அம்பும் கொண்டு வந்து ஆசிரியரைத் துன்பத்திலிருந்து விடுவித்த அர்ச்சுனன் திறமையைப் போற்றினர். துரோணரே மனம் நெகிழ்ந்து அன்பு சுரக்கும் சொற்களால் அவனுக்கு நன்றி கூறினார். தமது நன்றிக்கு அறிகுறியாக ஆற்றலும் வேலைப்பாடும் செறிந்த அம்பு ஒன்றை அவனுக்கு அவர் அளித்தார்: துரோணரிடம் பெருமதிப்புக் கொண்டுள்ள அன்பர்களும், நகரத்துப் பெரியோர்களும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் அர்ச்சுனன் அவரைக் காப்பாற்றியதைக் கேள்விப்பட்டு அவனைப் புகழ்ந்தனர். ஓர் நல்ல மங்கல நாளில் கௌரவர்களும் பாண்டவர் களும் பிறரும் கற்ற கலைகளை அரங்கேற்றம் செய்ய முடிவு கொண்டார் துரோணர். விழாப்போல நிகழ வேண்டிய இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி நகரத்தார் எல்லோருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அரசவையைச் சேர்ந்தவர்களும், நகரமாந்தரும் கூடியிருந்த ஓர் அரங்கில் விழாத் தொடங்கியது. வழிபடு தெய்வத்தை வணங்கியபின் மாணவர்கள் தாம் கற்ற கலைகளைக் காட்டுமாறு பணித்தார் துரோணர், மாணவர்களும் அவையிலிருந்த சான்றோர்களை வணங்கி அரங்கேற்றத்தில் ஈடுபட்டனர். துரியோதனனும் வீமனும் அரங்கேறிய போது இருவருக்கும் இடையே உள்ள மனப்பகை புலப்படுமாறு போர் செய்து கொண்டனர். நடுவே இவர்கள் போரிடுவது சுவைக்குறைவான நிகழ்ச்சியாகத் தென்பட்டதனால் துரோணரின் புதல்வனான அசுவத்தாமன் புகுந்து அமைதியை உண்டாக்க வேண்டியதாயிற்று. கடைசியாகத் துரோணரை வணங்கி விசயன் தான் கற்ற கலைகளைச் செய்து காட்டி அவையில் கூடியிருந்தவர்களை மகிழ்விக்கத் தொடங்கினான். அவனுடைய அபாரமான திறமைகளையும் நுணுக்கங்களையும் கண்டு போற்றினர் அவையோர். துரோணர் அவனுக்குக் கற்பித்த போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். ஆனால் ஒரே ஓர் உள்ளம் மட்டும் இவ்வளவையும் கண்டு குமுறிக் குமைந்து வெதும்பிப் பொறாமையால் தவித்துக் கொண்டிருந்தது. அதுவே கர்ணனுடைய உள்ளம். விசயன் மேல் அசூயை அவனுக்கு.  # பகைமை பிறக்கிறது தன்னினும் இளம் பருவத்தினான அர்ச்சுனனின் திறமை அங்கே புகழ் பெற்று ஓங்குவதைக் கண்டு கர்ணன் மனங் கொதித்தான். ‘இவனுடைய ஆற்றலை எவ்வாறேனும் மங்கச் செய்து என் புகழை இங்கே நிலை நாட்டுவேன்’ - என்று எண்ணிக் கொண்டு அவையில் தன் கலைத்திறனைக் காட்டுவதற்குத் தயாராக எழுந்து நின்றான். சினத்தோடு பாய்ந்து எழுகின்ற சிங்கத்தைப் போலத் தன் குரலை முழக்கிக் கலைச் செயல்களைச் செய்து காட்டத் தொடங்கினான். அர்ச்சுனனுடைய திறமையை முற்றிலும் மங்கச் செய்து விட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அவனை வம்புக்கு இழுத்தாவது மட்டந்தட்டி விட வேண்ட மென்ற எண்ணத்துடனே, “தனியாக உன் திறமையைக் காட்டினாய்! நீ உண்மையான திறமையும் வீரமும் உள்ளவன் ஆனால் என்னோடு இந்த அவையில் போர் செய். உன் தலையைக் கிள்ளி எறிந்து காட்டுகிறேன்!” - என்றான் கர்ணன். “போருக்கு அழைப்பது சரிதான் என்னோடு சரி நிகராக நின்று போர் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - என்று அவனைத் தன் கேள்வியால் மடக்கினான் அர்ச்சுனன். இவர்களுடைய இந்தப் பகைமையும் மனக் கொதிப்பை வெளிக்காட்டுவன போன்ற சொற்களும் சுற்றியிருந்த வர்களை விளைவு என்ன ஆகுமோ?’ என்று அஞ்சும்படி செய்தன. இதற்குள் வயது முதிர்ந்தவரும் சிறந்த கலைகளின் ஆசிரியருமாகிய கிருபாச்சாரியார் எழுந்து அர்ச்சுனனின் கேள்வியைத் தழுவி ஆதரித்துப் பேசினார். “விசயன் கூறுவது ஒரு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி தானே? அரசகுமாரனாகிய அர்ச்சுனனுடன் எதிர்நின்று சமமாகக் கருதிப் போர் செய்வதற்குத் தேர்ப்பாக சூதநாயகனின் வளர்ப்பு மகனாகிய கர்ணனுக்கு என்ன தகுதி இருக்கிறது? கர்ணன் விசயனைப் போருக்கு அழைப்பதே முறையும் பொருத்தமும் இல்லாத ஒன்றாயிற்றே?” - என்றார் அவர். கர்ணனைத் தன் உயிர் நண்பனாக எண்ணி வந்த துரியோதனன் கிருபாச்சாரியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். அவர் பேசிய விதம் பாண்டவர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல இருந்ததனால் அவனுக்கு முன்பே பாண்டவர்கள் மேல் இருந்த பகைமை உணர்ச்சியும் முதிர்ந்து எழுந்தது. இப்போது அவ்வளவு கோபமும் கிருபாச்சாரியார் மேலே திரும்பியது. “கல்வியினால் பிறரைக் காட்டிலும் உயர்நிலை பெற்றவர்கள், அழகினால் கவர்ச்சி நிறைந்து விளங்குபவர்கள். பிறருக்குக் கொடுத்து மகிழும் கொடைப் பண்பு பூண்டவர்கள், இவைகள் போன்ற தகுதியுடையவர்களுக்குச் சராசரி உலகம் நிர்ணயிக்கும் சாதாரணமான பொருத்தங்களும் தகுதிகளும் அவசியமில்லை. பிறவியும் செல்வ நிலையும் கொண்டு மனிதர்களை இழிவு செய்து பேசுவது நேரியதாகாது. கிருபாச்சாரியார், அர்ச்சுனனோடு போர் செய்யும் தகுதி கர்ணனுக்கில்லை என்கின்றார்! என் உயிர் நண்பனாகிய கர்ணனுக்கு நானே அந்தத் தகுதியை உண்டாக்கிக் கொடுக்கிறேன். என் ஆட்சியைச் சேர்ந்த அங்க நாட்டிற்கு மன்னனாக இன்றே இப்போதே இந்த அவையிலேயே கர்ணனுக்கு முடி சூட்டுகின்றேன். பின்பு கர்ணன் அரசன் என்ற தகுதியை அடைந்து விடுவான்” - என்று துரியோதனன் கூறினான். கூறியபடியே கர்ணனை அப்போதே அவ்விடத்திலேயே அங்க நாட்டு வேந்தனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்தான். அரசவையில் கூடியிருந்த பெரியோர்களனைவரும் திடீரென்று துரியோதனன் கர்ணனுக்குச் செய்த இந்தச் சிறப்பைக் கண்டு திகைத்தனர். வியப்புக்குரிய முறையில் கர்ணனுக்கும் அவனுக்கும் இடையே அமைந்திருந்த நட்பின் அழுத்தம் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியது. ‘முடியளித்து ஒருவனை அரசனாக்கி விடுவது என்பது எவ்வளவு பெரிய காரியம் ? அதை இவன் இவ்வளவு எளிமையாக வாயாற் கூறிய மாத்திரத்திலேயே நிறைவேற்றி விட்டானே?’ - என்பது தான் அவையினரின் வியப்புக்குக் காரணம். கர்ணனுக்கு முடிசூட்டியவுடன் அவனைத் தன் அருகில் தன் அரியணையோடு சரிசமமாக இடப்பட்டிருந்த அரியணை ஒன்றில் அன்போடு தழுவி அமரச் செய்தான் துரியோதனன். துரியோதனன் எவ்வளவோ வழிகளில் தீயவன் ஆனாலும் நட்பு என்ற இந்தப் பண்பில் மட்டும் அவன் வழி உயரியதாகவே சென்றது. கர்ணனின் நட்புக்காக அவன் செய்த இந்தப் பேருதவியே அதற்குச் சான்று, அரங்கேற்று விழா இவ்வாறாக முடிந்தது. தம்முடைய மாணவர்களின் திறமை துரோணரின் மனத்தை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அரங்கேற்றத்திற்குப் பின் மாணவர்களைத் தனியே அழைத்து ஒன்றுகூற விரும்பினார் அவர். இளமைப் பருவத்தில் தனக்கு அரசாட்சியில் பாதி தருவதாகக் கூறிவிட்டுப் பின் மறுத்து அவமானப்படுத்திய யாகசேனனைப் பழிவாங்கும் நினைவு அவருக்கு அப்போது எழுந்தது. “நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய ‘ஆசிரியர் காணிக்கை’ பொன்னோ, பொருளோ அல்லது வேறு பல செல்வங்களோ அல்ல. குருகுலத்து இளைஞர் செல்வங்களே! ‘இளம் பருவத்தில் யாகசேன மன்னன், தான் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து என்னைப் பிற்காலத்தில் அவமானப்படுத்தி விட்டான். அந்த யாகசேனன் இப்போது பாஞ்சால நாட்டு மன்னனாக இருக்கின்றான். அவனை வென்று கைதியாகச் சிறைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் நீங்கள் என்னிடம் கற்ற கல்விக்காக எனக்கு அளிக்க வேண்டிய ஆசிரியர் காணிக்கை! என்னுடைய இந்த விருப்பத்தை எப்படியும் நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும். அது உங்கள் கடமை.” - என்று தனியே அழைத்துச் சென்று தன் மாணவர்களிடம் கூறினார். குருகுலத்துச் சிங்கக் குருளைகளான அந்த மாணவர்கள் அத்தனை பேரும் துரோணரை வணங்கி அவருடைய  வேண்டுகோளைத் தங்கள் உயிரை ஈந்தாவது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்தனர். துரோணர் உள்ளம் குளிர்ந்தார். தங்களுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் குருபக்தி அதிகம் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பிய வர்களைப் போல் கௌரவர்கள் உடனே நால்வகைப் படைகளையும் திரட்டிக் கொண்டு பாஞ்சாவநாட்டை நோக்கி வேகமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாண்டவர்கள் ஆர அமர நின்று நிதானித்துப் படைகளுடன் புறப்பட்டனர். அர்ச்சுனன், வீமன் முதலியோரிடம் நிகரற்ற வீரப்பண்பு சிறந்திருந்ததைப் போலவே எதையும் சிந்தித்துப் பார்த்து நன்மை தீமை ஆராயும் பண்பும் நிறைந்திருந்தது. ஆனால் துரியோதனாதியர்களிடமோ இந்த இரண்டு விதமான பண்புகளுமே இல்லை. ஆத்திரப்படுகின்றவர்களுக்கு அறிவு குறைவு என்று சொல்லுவார்கள். அறிவுக் குறைவினால் வெற்றி எங்காவது விளையுமா? வேகமாகப் படைகளோடு யாகசேனனை எதிர்த்து வந்த துரியோதனாதியர் கதியும் இந்தப் பழமொழியின் கருத்தையே நிரூபணம் செய்தது. பேரரசனான யாகசேனன் கெளரவர்களது படையெடுப்பை முன்கூட்டியே அறிந்து கொண்டு தன் படைகளைச் சரியான படி எதிர்முனையில் அணிவகுத்து நிறுத்தியிருந்தான். துரியோதனாதியரும் படைகளும் களத்தில் நுழையவும் யாகசேனனும் அவன் படைகளும் அவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது. யாகசேனனின் மின்னல் வேக எதிர்ப்பினாலும் தாக்குதலினாலும் சிதறிப்போன கெளரவர்களும் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓட வேண்டியதாக நேர்ந்து விட்டது. நல்லவேளையாகக் கெளரவர்கள் பின்வாங்கித் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் அர்ச்சுனன் தன் படைகளோடு களத்துக்குள் புகுந்தான். யாகசேனனின் படைகளுக்கும் அர்ச்சுனனின் படைகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. துரியோதனாதியரைத் தாக்கி ஓடச் செய்தது போல் அர்ச்சுனனையோ அவனது படை வீரர்களையோ சுலபமாக அவர்களால் பின் வாங்குமாறு செய்வதற்கு முடியவில்லை. அதற்கு நேர்மாறாக யாகசேனனையும் அவனுடைய படைவீரர்களையும் அர்ச்சுனன் தன் வில் வலிமையாலும் போர்த்திறமையினாலும் தளர்ந்து பின் வாங்கும்படி செய்திருந்தான். நொடிக்கு நொடி அர்ச்சுனன் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு யாகசேனனே பயந்து கலக்கமடையும் நிலையாகிவிட்டது. அர்ச்சுனனின். வில்லுக்கும் விற்பிடித்த கைகளுக்கும் ‘வெறி’ பிடித்து விட்டது. அன்றைக்கு அம்புமழை பொழிந்தது அவன் வில். ஆண்மை மழை பொழிந்தது அவன் நெஞ்சம். வெகு நேரம் போர் நிகழ்ந்தது. முடிவில் பாஞ்சால நாட்டு மன்னன் யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன் ஆயுதங்களின்றித் தலைகுனிந்து வெறுங்கையனாகி நிற்கவேண்டிய நிலை வந்து விட்டது. படைகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டன, விசயனின் கணைகளால் சிறு பகுதி அஞ்சி ஓடிவிட்டன. எஞ்சி நின்றவன் யாகசேனன் ஒருவனே . வயதிலும் அனுபவம், ஆற்றல் முதலியவற்றிலும் அர்ச்சுனனைக் காட்டிலும் மூத்தவனான யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன்னால் கைதியைப் போல் நின்றான். துரோணரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வெறுங்கையனாய் நின்ற யாக்சேனனைச் சிறைப்பிடித்துத் தன் தேர்க்காலில் இழுத்துக் கட்டினான் அர்ச்சுனன், யார் யாரையோ வென்று வாகை சூடிப் பேரரசனாக விளங்கும் தன்னைக் கேவலம் ஓர் இளைஞன் போர்க்களத்தில் சிறைப்பிடித்துத் தேர்க்காலில் கட்டியது யாதசேனனுக்கு மலைப்பைக் கொடுத்தது. இது அவனுக்கு விந்தையும் புதுமையும் நிறைந்த அனுபவம். வாழ்விலேயே அழிக்க முடியாதபடி அவனுக்குக் கிடைத்த தோல்விக் கறை இது ஒன்றுதான். அர்ச்சுனன்தான் ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகச் சிறைப் பிடித்த யாகசேனனை அவருக்கு முன் கொண்டு சென்றான். துரோணர் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து பார்த்தார்.  தன்னை அவமானப்படுத்திய யாகசேனன் தன் முன் தலைகுனிந்து உடல் கூசி ஒடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தான். அவனைச் சிறை செய்துகொண்டு வந்த களிப்போடு வில்லேந்திய கையனாய் அர்ச்சுனன் அருகில் நின்று கொண்டிருந்தான். இளமையில் தன்னுடன் கற்ற ஒரு சாலை மாணாக்கனும் பின்பு அரசனாகிய கர்வத்தின் மமதையினால் தன்னை மறந்து அவமானம் செய்தவனுமாகிய யாகசேனன் இப்போது தன் முன் கைதியாக நிற்பதை நோக்கித் துரோணர் மெல்ல நகைத்தார். அமைதியான நீர்ப்பரப்பில் காற்றினால் உண்டாக்கிய சிற்றலைகளைப் போலத் துரோணர் செய்த இந்த நகையை யாகசேனனும் கேட்டான். அவன் செவி வழிய புகுந்த அந்தச் சிறுநகை உள்ளத்தை வாட்டி அனலாகிக் கொதிக்கச் செய்தது. ஆனால் இந்தப் புன்னகையை விட அதிகமான வேதனையைச் செய்த துரோணர் கூறிய சொற்கள். “பாஞ்சால நாட்டுப் பேரரசரே வருக! நீங்கள் என் இளம் பருவத்து நண்பர் யாகசேனனல்லவா? அதனால் தான் இவ்வளவு அன்போடு தங்களை வரவேற்கிறேன். நல்லது, யாக்சேனா! அன்றைக்கு உன் அவையில் நான் உனக்கு நண்பனேயில்லை’ என்று கூறி என்னைப் பொய்யனாக்கி அவமானப்படுத்தினாய், குலத்திலே அந்தணன் நான். வேதத்தின் வழியே வாழ்கிறவன் நான். மன்னன் நீ. அரசின் பெருமைக்கேற்ப உன் பெருமையை வளர்த்துக் கொள்கிறவன் இதோ, உன்னைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் கைதியாக நிறுத்தியிருக்கும் இந்த இளைஞனைப்பார்! இவன் என் மாணவன் அர்ச்சுனன்! இந்திரகுமாரன் மிகச் சிறியோனாகிய இவன், பெருமை பொருந்திய உன்னைச் சிறை செய்து விட்டான்! மமதையில் இல்லை வாழ்வின் நேர்மை, அன்பில் இருக்கிறது அது! தெரிந்து கொள். நீ ‘எனக்குத் தருகிறேன்’ என்று கூறியிருந்த பாதியரசாட்சி மட்டுமில்லை; உன் முழு அரசாட்சியுமே இப்போது என் கையில் இருக்கிறது. ஆனால், அது எனக்கு மிகை. நீயே இப்பொழுது என் கைதி என்றால் அரசு எம்மாத்திரம்? எனக்கு நீ கூறியிருந்த அளவு பாதி அரசு போதுமானது! உனக்கு இரங்கி மற்றோர் பாதியரசை உன்னிடமே அளித்து உன்னையும் விடுதலை செய்து அனுப்புகிறேன் நான் பறித்துக்கொள்ள முடியும் உன் வாழ்வை. ஆனால் உன்மேல் கருணை கொண்டு அதை உனக்கே தருகிறேன். போய் வா… அர்ச்சுனா! இவனை விடுதலை செய்து அனுப்பு… பாவம்… அரசவாழ்வை மீண்டும் அடையட்டும்!” என்று துரோணர் கூறினார். அர்ச்சுனன் துரோணரை வணங்கி யாகசேனனை விடுதலை செய்தான். அவன் ஒன்றும் பேசாமல் மெளனமாகக் குனிந்த தலையோடு நடந்து சென்றான். அவன் நடந்து சென்ற நடையில்தான் அமைதியிருந்தது. அவன் உள்ளமோ பொங்கிப் புரண்டு அலைபாய்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. கிரகணத்திற்குப் பின் வெளிப்பட்ட சந்திரனைப் போன்ற கலங்கிய நிலை அவன் மனத்தில் நிலவியது. ஓர் இளைஞனால் தன்னை அவமானப்படுத்திப் பழிக்குப்பழி வாங்கிவிட்ட துரோணரின் செயல் அவனை வதைத்தது. அதே சமயத்தில் தன்னையும் வென்று சிறைப்படுத்திவிடும் அளவிற்கு வீரனான அர்ச்சுனனின் சாமர்த்தியத்தில் அவனுக்கு ஒரு வகையான கவர்ச்சியும் பற்றும் ஏற்பட்டன. அத்தினாபுரியிலிருந்து விடுதலை பெற்று அவன் பாஞ்சால நாட்டிற்கு வந்த பின்பும் துரோணரின் அவமானச் செயலையும் அர்ச்சுனனின் வீரமும் அழகும் விவேகமும் கலந்த சிறப்பையும் அவனால் மறக்கவே முடியவில்லை. துரோணரைப் பற்றி நினைவு எழும் போதெல்லாம் குரூரமான பகைமையே அவன் உள்ளத்தில் பிறந்தது. அர்ச்சுனனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ‘அந்த இளைஞனின் மெய்யான வீரத்தைப் பாராட்டி அதற்கு நன்றி செலுத்த வேண்டும்’ என்ற ஆசையே அவன் உள்ளத்தில் அலைமோதியது. ஒன்று பழிவாங்கும் ஆசை! மற்றொன்று பாராட்டும் ஆசை துரோணரைக் கொன்று பழிவாங்கு வதற்காக ஒரு மகன்; அர்ச்சுனனைப் பாராட்டி அவன் வீரத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்க ஒரு பெண். ஆக இரு மக்கள் தனக்கு வேண்டும் என்ற விநோதமான எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இந்த எண்ணமே நாளடைவில் தவிர்க்க முடியாத ஆசையாகவும் வளர்ந்துவிட்டது. இரவு பகல் எந்நேரமும் இந்த ஆசையைத் தழுவி இழையோடிய எண்ணங்கள் இடைவிடாமல் அவன் உள்ளத்தை ஏக்கங்கொள்ளும்படி செய்தன. மக்களைப் பெறுவதற்கு ஓர் வேள்வியைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முனிவர்களை அழைத்தனுப்பினான் யாகசேனன். இங்கே நிலைமை இவ்வாறிருக்க அத்தினாபுரியில் பாண்டவர்கள் மேல் துரியோதனாதியரது பொறாமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போயிற்று. சிறு வயதில் விளையாடும் போதும் குருகுலவாசம் செய்யும்போதும் பாண்டவர்கள் மேலே இயற்கையாகவே இவர்கள் நெஞ்சங்களில் பகைமை உணர்ச்சி கருக்கொண்டிருந்தது. அப்படிக் கருக்கொண்டிருந்த அந்தப் பகைமை உணர்ச்சி இப்போது வெளிப்படையாகவே பிறந்து சொல்லாலும் செயலாலும் புலப்பட்டது. இந்தச் சமயத்தில் வீட்டுமன், திருதராட்டிரன், விதுரன் முதலிய பெரியோர் தங்களுக்குள் ஒன்று கூடிச் சிந்தனை செய்து தருமனைத் தகுதியுடையவனாகத் தேர்ந்தெடுத்து இளவரசுப் பட்டம் கட்டிவிட்டனர். தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுதற்கு முன்னும் கட்டும்போதும் பேசாமல் இருந்துவிட்ட துரியோதனன் பின்பு மனம் குமுறிப் புழுங்கினான். “நம்மை ஒரு பொருட்டாக மதித்து நமக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் தருமனுக்குக் கட்டுவதற்குத் தந்தை மனம் இசைந்திருக்கிறாரே!” என்றெண்ணி அசூயை கொண்டான். கர்ணன், சகுனி முதலிய தோழர்களும் துச்சாதனன் முதலிய பண்பற்ற தம்பிமார்களும் அவனுடைய இந்த அசூயையைப் பெருகச் செய்தார்கள். துரியோதனன் பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் தன் தந்தையாகிய திருதராட்டிரனை அணுகினான். ‘தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது முறையில்லை’ என்று அவன் தன் தந்தைக்கே அறிவுரை கூறத்தொடங்கிவிட்டான். “தந்தையாக இருந்தும் நீங்கள் உங்கள் புதல்வனாகிய எனக்குத் துரோகமே செய்ய நினைக்கிறீர்கள்!” என்று திருதராட்டிரனைப் பழித்துக் கூறினான். “பாண்டு என் தமையன்! அவன் இறந்து போய்விட்டதனால் அவனுடைய மக்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடிசூட்டி இளவரசுப் பட்டமும் கட்டி விட்டேன். ஆகவே நீ சினம் கொள்வது எந்த வகையால் பார்த்தாலும் பிழையான செயலாகும்” என்று அவனுக்கு அறிவுரை கூறினான் திருதராட்டிரன். ஆனால் துரியோதனனோ தந்தையினுடைய இந்த அறிவுரையைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “பாண்டவர்களை எனக்குச் சிறிதளவும் பிடிக்கவில்லை. அவர்களோடு நட்புக் கொண்டு வாழ இனியும் என்னால் முடியாது! சகோதரர்களும் சகுனி முதலியோர்களும் என் பக்கம் துணையாக இருக்கிறார்கள். எனக்குத் தனியான உரிமைகளும் வேண்டும்” என்று பகைமை கொழுத்த நெஞ்சத்துடனே துரியோதனன் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்டான். நனவாகிய கனவு துரோணரிடமிருந்து விடுதலை பெற்றுத் தன் நாடு சென்ற யாகசேனன் அமைதியிழந்த மன நிலையோடு வாழ்ந்து வந்தான். முன்பே கூறியவாறு, ‘துரோணரைப் பழிக்குப்பழி வாங்குதல் - அர்ச்சுனனைப் பாராட்டிப் போற்றுதல்’ - என்ற இவ்விரண்டு எண்ணங்களும் அவன் மனத்தில் இடையீடில்லாமல் சுழன்று கொண்டிருந்தன. இதனாலேயே வேள்வி செய்யக் கருதி முனிவர்களை அழைத்தனுப்பி யிருந்தான் அவன். முனிவர்கள் வந்தார்கள். யாகசேனன் தன் கருத்தை அவர்களிடம் விவரித்தான், வேள்வி செய்து மக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். முனிவர்கள் வேள்வி செய்ய இசைந்து ஏற்பாடுகளைச் செய்யலாயினர். வேள்விக்குக் குறித்த மங்கல் நாளிலே வேள்வி தொடங்கி நிகழ்ந்தது. மறையொலி எங்கும் முழங்கி எதிரொலித்தது. தெய்வத் தன்மை பொருந்திய மணம் கமழும் வேள்வி நிலையத்திலே பாஞ்சால நாட்டுப் பெரியோர்கள் குழுமியிருந்தனர். வேள்வியில் பயன்படுத்தி மிகுந்த வேள்வி அமிழ்தமாகிய பிரசாதத்தை யாகசேனன் மனைவிக்கு அளிக்கவேண்டியது முறை. ஆனால், வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்த போதே அவள் தீண்டாமை எய்தி விலக்காக இருக்கவேண்டியதாயிற்று. எனவே, வேள்விப் பிரசாதத்தை அவளுக்கு அளிக்க இயலவில்லை. என்ன செய்வதென்று செயல் விளங்காமல் திகைத்த யாகசேனன் இறுதியில் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தான். வேள்வியில் எஞ்சிய பிரசாதத்தை ‘இறைவன் விட்ட வழியில் முடியட்டும்’ என்றெண்ணிக் கொண்டு வேள்விக் குழியிலேயே இட்டான் அவன். வேள்விக் குழியில் அவன் நல்வினை விளக்கம் பெற்றது! கனவு நனவாகியது. தீயிலே பெய்த அமுதம் வீண் போகவில்லை. வேள்வியில் முதல்வரான உபயாச முனிவரின் மந்திர அருள் வலிமையினால் ஓமகுண்டத்தில் இட்ட பிரசாதம் உயிர் வடிவத்தை அடைந்தது. முதலில் ஓர் ஆண் மகன் அந்த வேள்வித் தீயிலிருந்து பிறந்து எழுந்தான். அவன் உடல் ஒளியும் அழகும் பெற்றுத் தோன்றியது. பொன்னொளிர் மேனியும் புன்னகை தவழும் நிலா முகமும் சுற்றியிருந்தோர்களைத் தன்பாற் கவர, வேள்விக் குழியிலிருந்து கிளம்பும்போதே தேரின் மீது நிற்கும் தோற்றத்துடனே கிளம்பினான் அம்மகன். சிரத்திலே மணிமுடி செவிகளிலே மகர குண்டலங்கள்! மார்பில் பொற் கவசம்! கரங்களில் வில்! - என்று இவ்வாறு தன் போக்கிலே வனத்தில் திரியும் சிங்கக் குரளையைப் போலக் காட்சியளித்தான் அவன். யாகசேனனது மனம் இந்தப் புதல்வனைக் கண்டு திருப்தியால் பூரித்தது. அவன் உபயாச முனிவரை வணங்கி நன்றி செலுத்தினான். ‘துரோணரைப் பழிவாங்கிக் கொள்வதற்குத் தகுதியான புதல்வன் பிறந்து விட்டான்’ என்று மகிழ்ச்சி வெறியால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம் புதல்வன் பிறந்ததற்காகக் கொண்டாடப் பெற்ற கொண்டாட்டம் அரண்மனையெங்கும் திருவிழாக் காட்சியை உண்டாக்கி யிருந்தது. மங்கல நிகழ்ச்சியைக் குறிக்கும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. ‘யாகசேனனுக்குப் புதல்வன் பிறந்துள்ளான்’ - என்ற நற்செய்தி அரண்மனைக்கு அப்பால் நாட்டு மக்களிடமும் களிப்பையும் ஆரவாரத்தையும் பரப்பியிருந்தது. புதல்வனுக்குத் ‘துட்டத் துய்ம்மன்’ என்று பெயரிட்டார்கள். இந்த நிலையில் யாகசேனன் உபயாச முனிவரை அணுகி மீண்டும் யாகத் தீயில் அமுதை இட்டு ஒரு பெண் மகளையும் தனக்கு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டான். முனிவர் வேள்விக் குழியில் மீண்டும் அமுதத்தை இடச் செய்தார். இந்த முறையும் இறைவன் அருள் துணை யாகசேனனுக்கு இருந்தது போலும்! முகில் கற்றைகளுக்கு இடையே வானில் மின்னும் மின்னலைப் போன்ற சிற்றிடையுடன் மதன கலைகளெல்லாந் திரண்ட வடிவழகு தன்னை அலங்கரிக்கத் திரெளபதி தீக் கொழுந்துகளுக்கு இடையே எழுந்து தோன்றினாள். அவளுடைய அழகிலே தெய்வீகம் கனிந்து இலங்கியது. வனத்திலே புதர் மண்டி வாளிப்பாகக் கருத்துச் செழிப்போடிருக்கும் பச்சை மூங்கில் போலப் பளபளக்கும் அழகான தோள்கள், சுழன்று மருளும் மான் விழிகள், மலர்வதற்கிருக்கும் வரிசையான முல்லை மொட்டுக்களைக் கோத்து வைத்தாற் போன்ற பல்வரிசை, திருமகளின் அழகில் எவ்வளவு கவர்ச்சி நிறைந்திருந்ததோ, அவ்வளவு கவர்ச்சி, காண்போர் வியக்குமாறு இத்தகைய தோற்ற நலங்களுடனே திரெளபதி வேள்விக் குழியிலிருந்து  யாகசேனனின் இரண்டாவது மக்கட் செல்வமாக வெளிப்பட்டாள். பேரரசர்களெல்லோரும் வியந்து புகழத்தக்க அர்ச்சுனனின் வீரத்திற்குக் கைம்மாறாக அளிக்க இவள் சரியான கன்னிகைதான் என்று விம்மி நிறைந்தது யாகசேனன் உள்ளம். தனக்குக் கிடைப்பதற்கரிய பேறாகக் கிடைத்த அந்தப் புனித சுன்னிகையைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே சமயத்தில் ‘இத்தகைய கன்னிகைகள் சாதாரணமான செயலை நிறைவேற்றுவதற்காக உலகில் பிறப்பதில்லை! இவர்கள் அசாதாரணமான அழகும் பண்பும் கொண்டு பிறப்பதைப் போலவே அதிசயமான பெருஞ்செயல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சீதை பிறந்தாள். இராவணன் முதலிய அரக்கர்கள் அழிந்தார்கள். இப்போது இவள் பிறந்திருக்கிறாள்! இவளால் எந்தத் தீமையை, எந்தத் தீயவர்களை அழிக்க வேண்டும் என்பது இறைவன் கருத்தோ?’ - என வேறோர் தெய்வீகக் குரலும் அவன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்தது. அர்ச்சுனன் தோள்களைத் தழுவி அவனை மணப்பதற்காகப் பாஞ்சாலியையும், தன்னைப் பெரிய அவமானத்திற்குள்ளாக்கிய துரோணரை அழித்து வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்குத் துட்டத்துய்மனையும் தனக்கு மக்களாக அளித்த விதியை வணங்கினான் பாஞ்சால மன்னன் யாகசேனன். கனவாக இருந்து மனத்தைக் குழப்பிய விருப்பங்கள், எண்ணங்கள் பலித்து விட்டால் அப்படிப் பலித்தவருக்கு ஏற்படுகின்ற மன அமைதி எதுவோ அதை யாகசேனன் அடைந்திருந்தான் இப்போது. ஒற்றுமை குலைந்தது! தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது குறித்து ஏற்கனவே பொறாமை கொண்டிருந்த துரியோதனன், தந்தையைச் சந்தித்துத் தனக்குச் சுதந்திரமான அரச போகங்களும் உரிமைகளும் வேண்டுமென்று வற்புறுத்தினான் அல்லவா? அது திருதராட்டிரன் மனத்தைக் கலக்கமடையச் செய்திருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் மனம் மயங்கினான். திருதராட்டிரன், வீடுமன், விதுரன் முதலியோர்களை அழைத்து ஆலோசனை செய்தான். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவே அசூயை, பொறாமை, பகைமை. ஆகிய தீய உணர்வுகள் தோன்றியதனால் ஓற்றுமை குலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்பதை விளக்கினான். இந்த ஒற்றுமைக்குலைவைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவர்களை வினவினான். “உறவு நெருக்கமாக இருந்தால் இவர்களுக்குள் பொறாமையும் பகைமையும் உண்டாவது இயற்கைதான். எனவே பாண்டவர்களும் ‘இவர்களும்’ தனித்தனியே விலகியிருந்து வாழுமாறு செய்து பார்ப்பது நல்லது. பிறந்ததிலிருந்தே ‘இவர்கள்’, ஐவர் மேல் அசூயை கொள்வது இயற்கையாகி விட்டதனால் நாம் அழைத்து அறிவுரை கூறினாலும் கேட்கமாட்டார்கள். இந்த ஒற்றுமைக் குலைவும் குரோதமும் உண்டாக்கப் போகின்ற தீய விளைவுகளை நுகர்ந்து துன்புற்றாலொழிய இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. எனவே இவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம்…” - என்று வீடுமன் முதலியோர் மனக் கசப்போடு கூறிவிட்டுச் சென்றனர். “மனம் என்பது விந்தையானது! போட்டி, பொறாமை, வஞ்சகம் முதலிய உணர்வுகள் புகமுடியாத நல்ல மனத்திலும் சூழ்நிலை காரணமாக அவை புகுந்து விடுவது உண்டு. பாதுகாப்பு நிறைந்த வீட்டிலும் அஜாக்கிரதையால் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால் நாய்கள், திருடர்கள், நுழையும்படி நேர்ந்து விடுகிறதல்லவா? மனத்தின் அஜாக்கிரதையினால் இப்படிப்பட்ட தீய குணங்களும் இடம் பெற்று விடும். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களின் அசூயையும், பொறாமையும் தவறானவை’ என்று அஞ்சி மனம் பதறிப் பதைத்த திருதராட்டிரனது பண்புகூட  நாளடைவில் மாறுபட்டது. தன் புதல்வர்கள், பாண்டுவின் புதல்வர்களென்று வேறுபடுத்திப் பாராத அவனே துரியோதனனின் துர்ப் போதனையாலும் தன்னலத்தினாலும் மனம் மாறி வஞ்சகமாக நினைக்கத் தொடங்கி விட்டான். கர்ணன், சகுனி, துர்ச்சாதனன் முதலியவர்களும் சேர்ந்து பொறாமை பேசிப் பேசி அவன் மனத்தையும் அதன் வண்ணமாக மாற்றி விட்டார்கள். நல்லாசிரியராகவும், பாண்டவர்கள் கௌரவர்கள் ஒற்றுமையில் அக்கறை கொண்டவராகவும் இருந்த துரோணர் இந்த ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், அவரோ அப்போது துட்டத்துய்ம்மனுக்குக் கல்வி, கலைகளைக் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரிடமே தன் மகனைக் கற்கச் செய்து அவரையே பழி வாங்கத் திட்டமிட்டிருந்தான் யாகசேனன். உயரிய நோக்கமும் கொள்கையினாற் பரந்த உள்ளமும் படைத்தவராகிய துரோணர் ‘கலை’ என்ற ஒன்றை மட்டும் தன்னைக் கொல்லவரும் அரசகுமாரனுக்கும் கற்பிக்கத் தயாராக இருந்தார். துட்டத்துய்ம்மன் அவரிடம் வந்து ‘தனக்கு வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும்’ - என்று பிரார்த்தித்தபோது அவன் இன்னானுடைய மகன் என்றும் இன்ன விதத்தில் தனக்கு வைரி என்றும் நன்கு தெரிந்திருந்தும் கூடத் துரோணரால் அவன் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. தன் உயிருக்கு எமனாக எவன் வளர்ந்து வருகிறானோ அவனுக்கே தாம் ஆசிரியனாக இருந்து உள்ளன்போடு கற்பிக்க ஒப்புக் கொண்டார் துரோணர். ‘சான்றோர்கள் பகைவனுக்கும் அருள் புரிகிற பண்பட்ட மனமுடையவர்கள்’ - என்னும் உண்மையை நிதர்சனமாக்கிக் காட்டியது துரோணரின் கருணை மிக்க இக்காரியம். இதனால் துரோணர் கூடத் திருதராட்டிரனையோ கெளரவர்களையோ சந்தித்து ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு வழியின்றிப் போயிற்று. தந்தை திருதராட்டிரனையும் தங்களது வஞ்சகக் கருத்துக்கு ஏற்றபடி மாற்றிவிட்ட துரியோதனாதியர், புரோசனன் என்னும் பெயரினனான தீய அமைச்சன் ஒருவனைத் தங்கள் கருத்துக்குத் துணையாக வைத்துக் கொண்டனர். புரோசனனும், சகுனி, கர்ணன், துரியோதனாதியர், ஆகியோரைப் போலப் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டவன் தான். புரோசனனும் துரியோதனாதியர்களும் கூடிச் சிந்தித்துப் பாண்டவர்களை அழித்தொழிக்க ஒரு வழி கண்டுபிடித்தனர். ‘வாரணாவதம் என்ற ஊரில் பாண்டவர் களைத்தனியே ஓர் அரக்கு மாளிகையில் வசிக்குமாறு தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் வசித்து வரும்போது ஒருநாள் இரவில் மாளிகைக்குத் தீ வைத்து விட வேண்டும்’ - இது தான் அவர்களது சிறுமை நிறைந்த உள்ளங்களுக்குத் தோன்றிய வழி. இந்த எண்ணத்தை அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சென்று திருதராட்டிரனிடம் கூறினார்கள். புறக் கண்களை இழந்து போய்க் குருடனாயிருந்த அந்தப் பெருவேந்தன் அகக் கண்களையும் இழந்து போனானோ என்றெண்ணும்படியாக அதற்கு இசைந்து அரக்கு மாளிகை கட்டவும் ஏற்பாடு செய்து விட்டான். இந்த ஏற்பாடு விதுரனுடைய மனத்தில் மட்டும் சந்தேகத்தை நுழையச் செய்தது. அரக்கு மாளிகை கட்டி முடிந்தவுடன் திருதராட்டிரன் பாண்டவர்களை அழைத்து விவரத்தைக் கூறினான். தருமன் அவன் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டான். “நீங்களும் கெளரவர்களும் இங்கு ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அது ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் வளர்வதற்குக் காரணமாகிவிடும். ஆகவே நீங்கள் வாரணாவத நகரத்தில் தனியே வசித்து உங்களது ஆட்சியை நடத்துவதே நல்லது. உங்களுக்கு வேண்டிய படைகளையும் மற்ற வசதிகளையும் கொடுத்துத் துணையாக இருப்பதற்குப் புரோசனன் என்னும் அமைச்சனையும் கூட அனுப்புகிறேன். உங்கள் ஒற்றுமைக் குலைவைத் தவிர்ப்பதற்கு இது தான் சரியான வழி -என்று திருதராட்டிரன் கூறினபோது தருமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் சகோதரர்களுடனும் தாய் குந்தியுடனும் வாரணாவத நகரத்திற்குப் புறப்பட்டான். இவ்வாறு திருதராட்டிரன் பாண்டவர்களை வாரணா வதத்திற்கு அனுப்பியது தெரிந்ததும் துரியோதனாதியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீமைக்கு மகிழ்வது தானே சிறுமையின் இயல்பு? வாரணாவத் நகரில் தங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த அரக்கு மாளிகையிற் குடியேறி வசிக்கத் தொடங்கிய போது பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சி எதையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக வாரணாவத் நகரில் தங்களை வசிக்குமாறு செய்ததில் ஏதோ சூது அடங்கியிருப்பதை உணரத் தலைப்பட்டனர். தங்களோடு உடனிருக்கும் மந்திரி புரோசனன் படைகளின் நிர்வாகத்தையும் வேறு சில முக்கிய நிர்வாகப் பொறுப்பு களையும் தானே வைத்து அதிகாரம் புரிந்து கொண்டு வந்ததைக் கண்டு அவன் மேல் சந்தேகம் கொண்டனர் பாண்டவர்கள். புரோசனனின் அளவுக்கதிகமான பணிவும் வணக்கமும், அவர்களை ஐயம் கொள்ளச் செய்தன. அவனுடைய சில மர்மமான நடத்தைகள், தங்களை ஆதரிப்பது போல் கேடுகளைச் செய்வனவாய் அமைவதையும் அவர்கள் நுட்பமாகக் கவனித்துக் கொண்டே வந்தார்கள். இவைகளுக்கெல்லாம் மேல் தங்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மாளிகை முழுவதும் அரக்கினாலேயே கட்டப்பட்டிருந்தது எதற்காக என்பது அவர்கள் சிந்தனையில் சந்தேகத்துக்குரிய வினாவாகப் பற்றி நின்றது. இதை அறிந்து கொள்ளும் முயற்சியில் வீமன் ஈடுபட்டான். மாளிகை ஏன் அரக்கினால் கட்டப்பட்டிருக்கின்றது என்ற புதிருடன் வேறோர் பயங்கர உண்மையும் விடுபட்டது. அந்த அரக்கு மாளிகையைக் கட்டிய தச்சர்களில் முதன்மை வாய்ந்த ஒருவன் விதுரனுக்கு நண்பன். அவன் வீமனைத் தேடி வந்தான். அவனிடமிருந்து கெளரவர்களின் எல்லாச் சூழ்ச்சிகளையும் வீமன் அறிந்து கொண்டான். “இந்த அரக்கு மாளிகையை தீக்கு இரையாக்கி உங்களை அழிக்க வேண்டும் என்பது அந்தச் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணம். இதை அறிந்த விதுரர் நான் இந்த மாளிகையை அமைக்கும்போதே, ‘பாண்டவர்கள் தப்பிச் செல்ல உள்ளே இரகசியமாக ஒரு சுரங்கம் அமைத்து விடு’ - என்று என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே ஒரு சுரங்கம் இங்கிருந்து காடுவரை போக வசதியாக அமைத்திருக்கிறேன். ஆபத்து ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - என்று கூறி அந்தச் சுரங்கம் ஒரு பெரிய தூணுக்கு அடியில் கீழே அமைந்திருப்பதையும் விளக்கிவிட்டுச் சென்றான். வீமன் அவனைப் பாராட்டி நன்றி செலுத்திப் பரிசு பல கொடுத்தனுப்பினான் அவனுக்கு. இதன் பின் வெகு விரைவிலேயே ஒருநாள் வீமன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விபத்து ஏற்பட்டது. ஆனாலும் அவன் முன்னேற்பாடுடனே தயாராக இருந்தான். அன்று பாண்டவர்கள் மிகுந்த நேரம் வனத்திலேயே வேட்டையாடி அலைந்த களைப்புடனே மாளிகைக்குத் திரும்பியிருந்தார்கள். அவர்கள் ஓய்வாக உறங்கப் போகும் நேரத்தில் புரோசனன் என்னும் அமைச்சன் வந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் வேறோர் புறத்தில் துரியோதனாதியர்களால் ஏவப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயாகிய வேட்டுவச்சி ஒருத்தியும் அந்த அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைப்பதற்காக ஒளிந்து கொண்டிருந்தார்கள். இது வீமனுக்கு மட்டும் முன்பே தெரியும். பேசிக் கொண்டே இருந்த மற்ற நால்வரும் அமைச்சன் புரோசனனையும் உறங்கச் சொல்லிவிட்டுத் தாங்களும் உறங்கி விட்டனர், நெருப்பு வைப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தவர்கள் எங்கே தங்கியிருந்தார்களோ, அங்கே முதலில் அவர்களை முந்திக் கொண்டு தானே நெருப்பை வைத்துவிட்டுத் தூண்டியிலிருந்த சுரங்கத்தைத் திறந்தான் வீமன், மாளிகையில் வேகமாகத் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. அது தான் வெளியேறுவதற்குச் சரியான சமயம் என்று தன் சகோதரர்களையும் தாயையும் சுரங்க வழியாக வெளியேற்றிக் கொண்டு வீமன் கிளம்பினான். பாண்டவர்களும் குந்தியும் பிழைத்தனர். புரோசனனும், வேட்டுவர்கள் ஐவரும் அவர்கள் தாயும் தீக்கிரையான மாளிகைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்க வழியாகவே வெகு தொலைவு நடந்து காட்டுக்குள் வந்து சேர்ந்தனர் பாண்டவர்களும் குந்தியும். ஆனால் உலகறியாத இரகசியம் இது! மறுநாள் பொழுது விடிந்ததும் இறந்து கருகிப்போன வேட்டுவர், வேட்டுவச்சி பிணங்களைப் பாண்டவர்களும் அவர்கள் தாயும் இறந்தவர் என்றெண்ணி வருந்தியது உலகம். விதுரன், வீட்டுமன் முதலியவர்கள் கூடப் ‘பாண்டவர்கள் அழிந்தனரோ’ -என்றெண்ணி வேதனை கொண்டனர். விதுரன் தச்சன் மூலமாக உதவி செய்திருந்தாலும் என்ன நடந்ததோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கத் தான் செய்தது. ஊரோடு தாங்களும் அழுது வருந்துபவர்களைப் போலத் துரியோதனாதியாரும் வருத்தப்பட்டுப் பொய்யாக நடித்தனர். ‘பாண்டவர்களை அறம் காக்கும்! அவர்கள் உறுதியாக இறந்திருக்க மாட்டார்கள்!’ -என்று வேறு சிலர் நம்பினர். விதுரன் மெய்யாகவே பாண்டவர்களைக் காக்க வழி கூறியிருந்ததனால் இந்த நம்பிக்கையால் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் இந்தச் சம்பவத்தால் குலைந்து இடிந்து விழுந்த அரக்கு மாளிகை போலவே குருகுலத்தின் ஒற்றுமையும் ஒடுங்கிக் குலைந்து போய்விட்டது. கானகத்தில் நிகழ்ந்தது அரக்கு மாளிகையிலிருந்து வெளியேறிய வீமன், சகோதரர்களுடனும் தாயுடனும் ஒரு கானகத்தின் இடையே வந்து சேர்ந்திருந்தான். சுரங்க வழியின் முடிவு அந்த வனத்தில் தான் அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தான் வைத்த நெருப்பு எங்கும் பற்றிப் பரவி மாளிகையில் அழிவு உண்டாக்குவதற்கு முன்னால் சுரங்க வழியில் வெகு தொலைவு நடந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தால் வீமன், தாய், சகோதரர் ஆகியோர்களோடு மிக விரைவாக நடந்து வந்திருந்தான். வழி நடந்த களைப்பும், இரவு நேரத்தின் உறக்கச் சோர்வும், அவர்களைப் பெரிதும் அலுத்துப் போகும்படியாகச் செய்திருந்தன. களைத்த நிலை தீர ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். இரவின் அமைதியும் தனிமையும் எங்கும் நிறைந்து குடிகொண்டு இலங்கிற்று அவ்வனம். மெல்லிய காற்றும் காட்டினது இதமான சூழ்நிலையும் வீமனைத் தவிர யாவரையும் உறக்கத்தில் ஆழ்ந்து போகச் செய்திருந்தது. பலவிதமான குழப்பம் நிறைந்த சிந்தனைகளால் அவன் மனம் கலக்க முற்றிருந்த காரணத்தால் உடலில் களைப்பு இருந்தும் உறக்கம் அவனை நாடவில்லை, உறங்காமல் உடன் பிறந்தவர்களுக்கும் தாய்க்கும் காவலாக இருப்பதுபோல அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான். இவ்வாறு அவன் விழித்திருந்த போது அங்கே ஓர் வியப்புக்குரிய நிகழ்ச்சி நடந்தது! சிந்தனைப் போக்கில் இலயித்துப் போய் வீற்றிருந்த அவன், ‘கலின் கலின்’ என்று சிலம்புகள் ஒலிக்க யாரோ அடிபெயர்த்து நடந்து வரும் ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்தான். ஆச்சரியகரமான ஒரு காட்சியை அப்போது வீமன் தன் எதிரே கண்டான். அழகே வடிவான இளம் பெண் ஒருத்தி அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். மயிலின் சாயலும் அன்னத்தின் நடையும் விளங்க அவள் நடைபயின்று வந்து கொண்டிருந்த விதம் வீமனுடைய அடி மனத்தில் இனிய உணர்வையும் கவர்ச்சியையும் உண்டாக்கிற்று. வீமன் தலைநிமிர்ந்து தன்னை நோக்கியதும் அந்தப் பெண் சிரித்தாள். சிரிப்பா அது? முத்துப் போன்ற வெண்பற்களின் ஒளி அவன் கண் வழிப் புகுந்து இதய உணர்வைக் கரைத்தது. வீமனுடைய மனத்தைப் பற்றிக் கொண்டிருந்த கலக்கம் நிறைந்த சிந்தனைகள், அந்தச் சிரிப்பின் மோகனத்திலே ஐக்கியமாகி விட்டன. அந்த அழகி சிறிதும் தயங்காமல் வீமனை நெருங்கினாள். “நீங்களெல்லாம் யார்? இந்த நள்ளிரவில் மனிதர்கள் நுழைவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் எவ்வாறு நுழைந்தீர்கள்? உங்களுக்கு இங்கு இந்நேரத்தில் என்ன வேலை?” -யாழிசை போன்ற மெல்லிய குரலில் சிறிதும் தயக்கமின்றி வீமனை நோக்கிக் கேட்டாள் அவள். அவளுடைய கேள்விக்கு உடனடியாக அப்போதே மறுமொழி கூறிவிடவில்லை அவன். ஆர்வம் ததும்பும் விழிகளால் அந்த இளங் கன்னிகையை ஏற இறங்க ஒரு முறை கூர்ந்து நோக்கினான். வீமனுடைய அந்தப் பார்வை அவளையும் அவள் உள்ளத்தையும் ஊடுருவியது. அந்த யுவதியின் கண் பார்வை தாழ்ந்து பிறழ்ந்தது. கன்னக் கதுப்புக்கள் சிவந்தன. கேள்வியிலிருந்த மிடுக்கு இப்போது இல்லை. தோற்றத்தில் நாணம் தென்பட்டது. மூடிய இதழ்களில் நகைக் குறிப்புப் புலப்பட்டது. இப்போது வீமன் கலகலவென்று சிரித்தான். எழுந்திருந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்று நின்று கொண்டான். அது சரி, நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? இந்தப் பயங்கரமான காட்டில் இரவு நேரத்தில் அழகே வடிவான வன தேவதை போலத் தோன்றும் உங்களுக்கு என்ன வேலையோ? மெல்லியலாராகிய தாங்கள் எவ்வளவு துன்புற்று இந்தக் காட்டிற்குள் நுழைந்தீர்களோ?" -வீமன் கேட்டான். அவன் சிரித்துக் கொண்டே கேட்ட இந்தக் கேள்வி அவளைத் திகைப்புக்குள்ளாக்கிவிட்டது. அவளுடைய திகைப்பில் நாணமும் கலந்திருந்தது. வீமனுடைய சிரிப்பும் பதிலுக்குப் பதிலாகக் கேட்கப்பட்ட குறும்புத்தனமான கேள்விகளும் அவள் இதயத்தைத் தழுவி இருக்க வேண்டும். அவளது வெட்கம் இந்த உண்மையை விவரித்தது. வெட்கத்தோடு வெட்கமாக அவள் தலையைக் குனிந்து கொண்டே கூறிய விடைதான் அவனைச் சிறிதளவு திடுக்கிடச் செய்தது. தான் அந்த வனத்தில் வசிக்கும் கொடிய அரக்கனாகிய இடிம்பன் என்பவனின் தங்கை என்றும், மனிதர்களைக் கொன்று தின்னும் இயல்பும், கொடுமைகளும் நிறைந்தவன் தன் தமையன் என்றும் மனிதர்கள் எவரோ வந்திருக்க வேண்டும் என்பதை அனுமானித்தே தன்னைத் தன் தமையன் அங்கு அனுப்பினான் என்றும் அந்தப் பெண் கூறினாள். வீமனுக்கு உண்மை புரிந்தது. அந்தப் பெண் இடிம்பனின் தங்கை இடிம்பி. அவன் ஏவலால் அவள் வந்திருக்கிறாள் என்ற செய்திகளை வீமன் தானாகவே உய்த்துணர்ந்து கொண்டிருந்தான். உண்மை நன்கு விளங்கியதும் இவன் திகைத்தான். ஆனால் அஞ்சவில்லை. “அப்படியானால் உன் தமையனிடம் சென்று நாங்கள் இருக்குமிடத்தைச் சொல்லி எங்களைக் கொல்லும்படிச் செய்யேன்” - தன் திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்தவாறே இப்படிக் கேட்டுவிட்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான் வீமன். அவள் அனுதாபமும் அனுராகமும் ஒருங்கே வந்து திகழும் நோக்கு ஒன்றை அவன் மேல் செலுத்தினாள். “உங்களைத் தேடிக் கொண்டு வருகிறபோது கொல்ல வேண்டும் என்ற குருதி வெறியோடுதான் வந்தேன். ஆனால்… ஆனால்… இப்போது …” அவள் தலை கவிழ்ந்தது. கால்விரல்கள் நிலத்தைக் கிளைத்தன. “ஆனால் என்ன? இப்போது மனம் மாறிவிட்டதா?” “ஆமாம்! ஆமாம்! என் மனத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். உங்களையும் அழைத்துக் கொண்டு இந்த வனத்தையும் இதில் ஏகபோகமாகக் கொடுங்கோல் ஆட்சிபுரியும் என் தமையனைவும் விட்டுவிட்டு எங்காவது ஓடிப் போய்விடலாம் போலிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் என் தமையன் இங்கே வந்துவிடுவான். அவன் வந்தால் உங்களையெல்லாம் உயிரோடு தப்பவிடமாட்டான். பேசாமல் என்னோடு புறப்பட்டு விடுங்கள். நாம் இருவரும் என் தமையனுக்குத் தெரியாமல் அருகிலுள்ள ஒரு மலைச்சிகரத்துக்கு ஓடிப் போய்விடலாம். உங்கள் அழகு அழிவதை என்னுடைய இந்தக் கண்களால் காண முடியாது! வாருங்கள் உடனே ஓடிவிடலாம்” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வீமனைக் கெஞ்சினாள் அவள். “நான் கோழையில்லை, பெண்ணே! இதோ உறங்கிக் கொண்டிருக்கும் என் சகோதரர்களையும் தாயையும் அனாதரவாக விட்டுவிட்டு உன்னோடு ஓடிவருவதற்கு என் அறிவு மங்கிப் போய்விடவில்லை. உன் தமையன் வரட்டுமே! அவன் கையால் நாங்கள் அழிகிறோமா அல்லது என் கையால் அவன் அழிகின்றானா என்பதை நீயே நேரில் காண்பாய்” - வீமன் ஆத்திரத்தோடு கூறினான். அவன் இவ்வாறு கூறி முடிக்கவில்லை. அந்தக் காடே அதிரும்படியாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தரை நடுங்க யாரோ அந்தப் பக்கமாக நடந்து வரும் ஒலி கேட்டது. வந்தது வேறெவருமில்லை! இடிம்பன்தான். அவனுடைய நெருப்புக் கங்கு போன்ற கண்களையும் யானைக் கொம்புகள் போன்ற பெரும் பற்களையும், மலை போன்ற உடலையும் வீமனைத் தவிர வேறு எவரும் பார்த்திருந்தால் நடுங்கி மூர்ச்சித்துப் போயிருப்பார்கள். ஆனால், வீமனோ தன்னைப் போருக்குச் சித்தம் செய்து கொண்டான். அளவற்ற துணிவுணர்ச்சி அவன் உள்ளத்திலும் உடலிலும் திரண்டு நின்றது. அங்கே வந்த இடிம்பனின் கண்களிலே முதலில் அவன் தங்கையே தென்பட்டாள். வீமனை நோக்கி நாணத்துடனே தலை குனிந்து தயங்கி நின்ற நிலையை அவன் விளக்கமாகப் புரிந்து கொண்டான். ஏற்கனவே சிவந்திருந்த அவன் விழிகள் இன்னும் சிவந்தன. “இடிம்பி! பெண் புலி ஆண்மானின் மேல் பாய்வதை மறந்து காதல் கொள்ளத் தொடங்கிவிட்டதா? உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உன் காதலனை நான் உயிரோடு விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! இதோ பார். உன் காதலன் எனக்கு உணவு என்றாக்குகிறேன்” -என்று கூறிக்கொண்டே வீமனை நோக்கிப் பாய்ந்தான் இடிம்பன். அந்தப் பாய்ச்சலை எதிர்பார்த்து அதைச் சமாளிக்கத் தயாராயிருந்தான் வீமன். இருவருக்கும் போர் தொடங்கியது. “நான் ஆண் சிங்கம்! நீ வெறும் பூனை. ஒரே ஒரு நொடியில் உன்னை வானுலகுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே தேவமாதர்கள் உன்னைக் காவல் புரிவர். அரக்கனை எதிர்க்கிற துணிவும் உனக்கு உண்டா? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்!” -என்று தன் இடிக்குரலில் முழங்கிக் கொண்டே பாய்ந்து பாய்ந்து போர் செய்தான் இடிம்பன். இந்தக் கலவரமும் ஒலியும் பாண்டவர்களை எழுப்பிவிட்டது. குந்தியும் எழுந்து விட்டாள். சகோதரர்களும் குந்தியும் வியப்புடன் ஒரு புறம் நின்று போர்க் காட்சியைக் கண்டனர். இடிம்பியும் மற்றோர் புறம் நின்று கண்டாள். இடும்பனைப் போல் வாய் முழக்கம் செய்யாமல் போரில் தன் சாமர்த்தியத்தைக் காட்டி அவனைத் திணறச் செய்து கொண்டிருந்தான் வீமன். இடிம்பன் தன்னுடைய மதிப்பீட்டிற்கும் அதிகமான பலத்தை வீமனிடம் கண்டதனால் மலைத்தான். ஒரு புறம் தன் தமையன் தருகிறானே என்ற பாசமும் மறுபுறம் தன் உள்ளங்கவர்ந்தவன் நன்றாகப் போர் புரிகின்றானே என்ற ஆர்வமும் மாறி மாறி எழுந்தன, இடிம்பியின் மனத்திலே. வீமனிடத்தில் அவளுக்கு ஏற்பட்ட காதல் சகோதர பாசத்தையும் மீறி வளருவதாக இருந்தது. வீமன் தன் கைவன்மை முழுதும் காட்டிப் போர் புரிந்தான். மலைச்சிகரங்களிடையே கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் செங்காந்தள் பூக்களைப் போல இடிம்பனின் பருத்த மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. இடிம்பன் பயங்கரமாக அந்தக் காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாய் அலறிக் கொண்டே வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்தான். வீமன் நிமிர்ந்து நின்றான். தன் புதல்வன் பெற்ற இந்த அரிய வெற்றி, குந்தியை மனமகிழச் செய்தது. சகோதரர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். இடிம்பி தன் தமையனின் உடலைக் கட்டிப் புரண்டு கதறியழுது கொண்டிருந்தாள். ஆயிரமிருந்தாலும் உடன் பிறப்பல்லவா? அவன் மார்பில் பீறிட்டு வழியும் அதே குருதி தானே அவள் உடலிலேயும் ஓடுகின்றது? ஆனால் அவள் அடிமனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பார்த்தால் ஓருண்மையினை அங்கே காணலாம். தன் தமையன் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஆண்மையும் ஆற்றலும் வந்தவுடனேயே தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனைச் சேர்ந்தது என்றெண்ணும் போதே ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அவள் அடிமனத்தின் ஆழத்திலிருந்த அந்த உண்மை. மகிழ்ச்சியும் சோகமுமாக இரண்டுணர்வுகளும் நிரம்பி வழியும் நெஞ்சுடன் பாண்டவர்களும் குந்தியும் அங்கிருந்து காண அழுது தவித்துக் கொண்டிருந்தாள் அந்த இளநங்கை. அப்போது இரவு படிப்படியாகக் கழிந்து கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. வைகறையின் குளிர்ந்த காற்றும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் கதிரவன் உதிப்பதற்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை அறிவித்தன. நேரம் வளர வளரக் கிழக்கே அவன் வட்ட வடிவம் சிறிது சிறிதாக வளர்ந்து மேலே எழுந்தது. “பறவைகளே! இதோ கொடுமைக்கே இருப்பிடமாக இருந்த ஓர் அரக்கனின் பிணம் இங்கே கிடக்கிறது. நீங்கள் விருப்பம் போல் உண்ணலாம். நான் உங்களுக்கு விளக்காக இருக்கிறேன்” - என்று கூறிக்கொண்டே எழுவது போலிருந்தது கதிரவனுடைய தோற்றம், பொழுது விடிந்த பின்பும் வீமன் முதலியவர்களைக் விட்டுப் பிரிய மனமில்லாமல் தமையன் இறந்த துயரத்தையும் மறந்து அங்கேயே தயங்கித் தயங்கி நின்றான் இடிம்பி. அவள் உள்ளக் கருத்து வீமனுக்கும் தெரிந்தது. அந்தக் கருத்தை வரவேற்கும் கவர்ச்சியும் அனுதாபமுங்கூட அவனுக்கும் இருந்தது. என்றாலும் சந்தர்ப்பம், சூழ்நிலை முதலியவற்றை உத்தேசித்துத் தன் மறுமொழியைக் கடுமையாக அமைத்துக் கொண்டு கூறினான்; “பெண்மணியே! உன் உள்ளக் கருத்து எனக்கும் புரிகிறது. ஆனால், என் தமையன் திருமணமாகாதவன். இந்நிலையில் உன்னை நான் அங்கீகரிக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். தவிர இன்னோர் தடையும் உண்டு. நாங்களோ மானிடர்கள். நீயோ காட்டில் கொடிய வாழ்க்கையும் கடும் இயல்புகளும் கொண்டு வாழ்ந்தவனின் தங்கை!” -என்று கூறி இழுத்துத் தயங்கி நிறுத்தினான் வீமன். இடிம்பி கண்ணீர் விட்டு அழுதாள். ஏமாற்றம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. உடன் பிறந்தவனைப் பறி கொடுத்த துயரத்தை விட வீமனின் அன்பைப் பறி கொடுத்த துயரமே அவளைப் பெரிதும் வருத்தியது. அவள் குந்தியின் காலடியில் வந்து விழுந்தாள். தனக்குச் சரணளிக்குமாறு கெஞ்சினாள். குந்தி மனம் இரங்கினாள். தருமன் முதலிய சகோதரர்களும் இடிம்பியின் நிலைக்கு இரங்கினார்கள். சகோதரர்களும், குந்தியும் கூறிய பின் வீமன் இடிம்பியை ஏற்றுக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே அவளைக் காந்தர்வ விவாகம் புரிந்து கொண்டான். தருமனின் அனுமதி பெற்றே இந்த விவாகத்தை வீமனுக்குச் செய்வித்தாள் குந்தி. இந்த மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தவர் போல அன்று பகலில் வியாசமுனிவர் அவர்களைக் காண வந்தார், “இந்தக் காட்டில் இனி மேலும் தங்காதீர்கள்” என்று கூறி அவர்கள் சென்று தங்குவதற்கு வேறிடம் கூறினார் அவர். பாண்டவர்களும் குந்தி, இடிம்பி ஆகியவர்களோடு அவர் கூறிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். வியாசருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள். புதிதாக அவர்கள் வந்த இடம் சாலிகோத்திர முனிவர் என்பவருடைய ஆசிரமம் இருந்த வேறோர் வனம் ஆகும். இந்த வனத்தில் அவர்கள் பல நாள் தங்கியிருந்தார்கள். வீமனுக்கு இடிம்பியிடம் கடோற்கசன் என்ற புதல்வன் ஒருவன் இந்த வனத்தில் பிறந்தான் மனம் ஒருமித்த காதலர்களாகிய வீமனும் இடிம்பியும் இங்கே ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது. ஆனால் மனோதிடம் வாய்ந்தவளாகிய இடிம்பி புதல்வன் கடோற்கசனின் அழகிய தோற்றத்தில் இந்தப் பிரிவை மறக்க முயற்சி செய்தாள். வீமன் விரும்பும்போது அவளை வந்தடைய உதவுவதாகக் கூறிவிட்டு இடிம்பியும் கடோற்கசனும் பிரிந்து சென்றனர். அவர்கள் பிரிவு வீமன் முதலியோர் மனத்தை வருத்தினாலும் தங்கள் கடமை களையும் துயரம் நிறைந்த சூழ்நிலைகளையும் எண்ணி மனத்தை ஆற்றிக் கொண்டனர். பின்பு அவர்கள் அந்தணர்கள் போல உருமாறிய தோற்றத்துடன் வேத்திரகீயம் என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தணர்கள் நிறைய வசிக்கும் அவ்வூரிலே பாண்டவர்களுக்கும் குந்திக்கும் அன்பான வரவேற்புக் கிடைத்தது. ஊரார் போட்டியிட்டுக் கொண்டு பாண்டவர்களை விருந்தினர்களாகப் பேணினர். ஓர் நல்லியல்பு மிக்க அந்தணர் வீட்டில் அவர்கள் அங்கே தங்கி வசிப்பதற்கும் இடம் கிடைத்தது. பாஞ்சாலப் பயணம் ஓர் நாள் காலைப் பொழுது விடிவதற்கு இரண்டு நாழிகை இருக்கும்போது தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் எவரோ பலமாகக் கதறியழுகின்ற ஒலியைக் கேட்டுக் குந்தி திடுக்கிட்டாள். முன்பின் அறியாத தாங்கள் வேத்திரகீய நகருக்கு வந்ததுமே தங்களை நம்பி வீட்டில் இடம் அளித்த அவர்களுக்கு எதுவும் துன்பம் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணிக் கலங்கியது குந்தியின் நெஞ்சம். அவள் மெல்ல அரவமின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து சென்று அழுகை வந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தாள். அந்த மங்கலான நேரத்தில் தங்களுக்கு ஆதரவளித்த அந்தணரின் மனைவி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டாள் குந்தி. நன்றி உணர்ச்சியால் நிறைந்திருந்த அவளுடைய இதயம் பதைபதைத்தது. அன்போடு அவள் அந்தப் பார்ப்பனியை நெருங்கி அழுகைக்குரிய காரணத்தை விசாரித்தாள். பார்ப்பனி தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை விரிவாக எடுத்துக் கூறினாள்:- “அம்மா! இன்று நான் என்னுடைய ஓரே மகனை உயிருடனே பறிகொடுக்க வேண்டிய தீவினைக்கு ஆளாக இருக்கிறேன். இந்த வேத்திரகீய நகரை அடுத்திருக்கும் காட்டில் எவராலும் வெல்லமுடியாத ‘பகாசுரன்’ என்னும் அரக்கன் ஒருவன் இருக்கிறான். அவனால் இந்த ஊரும் இதில் வசிக்கும் மனித ஜீவன்களும் இதற்குள் என்றோ ஒரு நாள் அழிந்து போயிருக்க வேண்டியவை. ஆனால் அவ்வாறு அழிந்து போகாவண்ணம் இந்த ஊர் முன்னோர்கள் அந்த அரக்கனோடு ஓர் உடன்படிக்கை செய்து வைத்துக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கையினால் அரக்கன் ஊர் முழுவதையும் மொத்தமாக அழித்துக் கொல்ல இருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டது. ஆனால் உடன்படிக்கையின் படி நாள்தோறும் இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டினராக முறை பகிர்ந்து கொண்டு அந்த அரக்கனுக்கு உணவாக ஒரு வண்டி சோறு கறிகளும் ஒரு முழுமையான மனிதனின் சரீரமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்று வரை இவ்வூரில் முறைப்படி இந்த ஏற்பாடு தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்த வீட்டின் முறை வண்டியோடு அனுப்ப என் ஒரே மகன்தான் பயன்பட வேண்டும். அவன் உயிர் தான் பலியாக வேண்டும். இந்தக் கொடுமையை எண்ணித் தான் நான் அழுகிறேனம்மா! வேறு ஒரு வழியும் இல்லை. ஒரே மகன் என்று பார்க்காமல் பெற்ற பிள்ளையை வண்டியோடு பகாசுரனிடம் அனுப்ப வேண்டியது தான்.” “வேண்டாம்! உங்கள் ஒரே மகனை அனுப்ப வேண்டாம். நானாயிற்று அவனைக் காப்பாற்றுவதற்கு. எனக்கு ஐந்து புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை வண்டியோடு அனுப்பி விடுகிறேன்” -என்றாள் குந்தி. முதலில் பார்ப்பனி அதை மறுத்தாலும் பின்பு குந்தியின் வற்புறுத்தலின் மிகுதியால் அதனை ஒப்புக் கொண்டாள். வீமனைச் சோற்று வண்டியோடு அனுப்ப வேண்டுமென்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் குந்தி. வீமன் எப்படியும் பகாசுரனை வென்று அவன் கொட்டத்தை அடக்கிவிட்டு வருவான் என்பது அவள் நம்பிக்கை. ஆனால் அவள் அதை வெளிப்படையாக எவரிடமும் கூறிக் கொள்ளவில்லை. வீமனை அணுகித் தன் ஏற்பாட்டைக் கூறினாள் குந்தி. “தாயே! உறுதியாக என்னையே அனுப்புங்கள். அந்த அரக்கனைத் தொலைத்துவிட்டு வருகிறேன். இந்த நகரில் நாம் தங்கியதற்கு அடையாளமான ஓர் நல்ல காரியமாக இருக்கட்டும் இது” -என்று தாயின் கருத்தை வரவேற்று ஆமோதித்தான் அவன். குறிப்பிட்ட நேரத்தில் சோற்று வண்டியோடு காட்டுக்குப் புறப்பட்டான் வீமன். கறிவகைகளும் சோறும் மலைப் போலக் குவிந்திருந்தது வண்டியில். கொஞ்சங்கூட அச்சமில்லாமல் உல்லாச யாத்திரை புறப்படுபவன் போன்ற மகிழ்ச்சியை மனத்திற் கொண்டிருந்தான் வீமன். காட்டை யடைந்ததும் பகாசுரனது குகை இருந்த இடத்தை, அங்கே சிதறிக் கிடந்த எலும்புக் குவியல்களால்தானே அனுமானித்துக் கொண்டு விட்டான். குகையைச் சுற்றி ஒரே கழுகுக் கூட்டம். நரிகளும் அலைந்து கொண்டிருந்தன. நிண நாற்றம் மூக்கைத் துளைத்தது. குகைக்கு இப்பால் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திக் கொண்டு வீமன் தானே சோற்றையும் கறிவகைகளையும் காலி செய்யத் தொடங்கினான். பகாசுரனோடு யுத்தம் செய்வதற்கு வலிமை நாடியும் அவனைச் சண்டைக்கு இழுக்க ஒரு வழி தேடியும் தான் அவன் இதைச் செய்தான். வண்டியிலிருந்த சோற்றையும் கறி வகைகளையும் வீமன் ரசித்துச் சாப்பிட்டதினால் நேரம் கழிந்து கொண்டிருந்தது. வழக்கமாக உணவு வரும் நேரத்திற்கு அன்று உணவு வராததால் பகாசுரன் ஆத்திரத்தோடு குகையிலிருந்து வெளியே கிளம்பினான். குகைக்கு எதிரே மரத்தடியில் வண்டியில் தனக்காக உணவு வந்திருப்பதையும், யாரோ ஒருவன் அதை வேகமாகத் தின்று கொண்டிருப்பதையும் கண்டு அவன் கண்கள் சிவந்தன. பற்களைக் கடித்துக் கொண்டே மரத்தடியை நோக்கித்தாவிப் பாய்ந்து ஓடி வந்தான் அவன். வீமனோ அசுரன் வருகிறான் என்பதை அறிந்ததும் அறியாதவனைப் போலச் சாப்பாட்டி லேயே கவனமாக ஈடுபட்டிருந்தான். “புலிக்கு வந்த உணவைக் கேவலம் ஒரு பூனை தின்று கொண்டிருக்கிறது. இந்தப் பகாசுரன் யார் என்பதை அந்தப் பூனைக்குப் புரிய வைக்கிறேன்” -பகாசுரன் கர்ஜித்துக் கொண்டே வண்டியை நெருங்கினான். அடுத்த விநாடி உண்டு கொண்டிருந்த வீமனுடைய முதுகிலும் பிடரியிலும் விண்விண்ணென்று சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. வீமனோ அந்தக் குத்துக்களைச் சிறிதும் பொருட்படுத்தாது வண்டியில் கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த சோற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். சோறு தொண்டையிலே விக்கிக் கொள்ளாமல் முதுகிலே மென்மையாகத் தட்டிக் கொடுத்தது போலிருந்த பகாசுரனின் குத்துக்கள். வண்டியிலுள்ள எல்லா உணவுப் பொருட்களையும் சாப்பாட்டு முடிந்தபின் மலை எழுந்திருப்பது போல ஏப்பம் விட்டுக் கொண்டே எழுந்திருந்து பகாசுரன் மேல் பாய்ந்தான் வீமன். “நீ அரக்கன். நான் வெறும் மனிதனே. போரில் என்னை வெல்ல முடியுமானால் தைரியமாகப் போர் செய்! இடும்பனுக்கு ஏற்படுத்திய இறுதி முடிவையே உனக்கும் ஏற்படுத்துகின்றேன்” - வீமன் சிங்க ஏறு போல் முழங்கிக் கொண்டே கைகளைப் புடைத்தான். இருவரும் கைகலந்தனர். குன்றோடு குன்று கட்டிப் புரள்வது போலப் போர் நடந்தது. திடீரென்று அருகிலிருந்த மரக்கிளை ஒன்றை முறித்துக் கொண்டு வீமனை அடிக்கப் பாய்ந்து வந்தான் பகாசுரன். அதே வேகத்தில் வீமனும் ஒரு மரக்கிளையை முறித்துக் கொண்டு அதை எதிர்த்தான். பகாசுரன் கீழே கிடந்த பாறைக் கற்களை வீமன் மேல் உருட்டிவிட்டு நசுக்குவதற்கு முயன்றபோது, வீமனும் கற்களை உருட்ட முற்பட்டான். எந்த வகையிலும் அரக்கனால் அடக்கிவிட முடியாததாக இருந்தது வீமனுடைய போரும் வீரமும் அசுரனுக்கு அது பசி வேளை. உடல் சோர்ந்து தள்ளாடியது. ஆனாலும் தன் கையால் வீமனைக் கொல்லாமல் விடுவதில்லை என்ற உறுதியோடு போர் புரிந்தான். வீமனுடைய குத்துக்கள் சரியான மர்ம ஸ்தானங்களில் விழுந்து பகாசுரனைத் தள்ளாடச் செய்தன. பகாசுரன் தீழே மல்லார்ந்து விழுந்தான். வீமன் “அது தான் அவனை தொலைக்கச் சரியான நேரம்” என்று அவனுடைய மார்பிலே தாவி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்க முடியாமல் முழங்கால்களால் அழுத்திக் கொண்டு அவன் கழுத்தைத் திருகிக் கொன்றான். பகாசுரன் கதை அதோடு முடிந்தது. வீமன் சோறு கொணர்ந்த வண்டியிலேயே பகாசுரனின் பிணத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு வேத்திரகிய நகரின் இடுகாட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். இடுகாட்டில் அவனது பிணத்தை இட்டுவிட்டு அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனைக் கால்வாயில் நீராடியபின் நகருக்குள் புகுந்தான். வீமன் பகாசுரனைக் கொன்று விட்டு உயிரோடு திரும்பி வந்த செய்தி ஒரு நொடியில் வெத்திரகீய நகரம் முழுவதும் பரவி விட்டது. அந்தச் செய்தி வேத்திரகீயத்து மக்களை நம்ப முடியாத பேராச்சரியத்தில் மூழ்கச் செய்தது. தங்களை நிரந்தரமான பயங்கொள்ளிகளாகச் செய்து வந்த அரக்கனின் இறந்த சடலத்தை இடுகாட்டில் சென்று கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பாண்டவர்களும் குந்தியும் தங்கியிருந்த வீட்டு அந்தணனும் அவன் மனைவியும் காலில் விழுந்து வீமனை வணங்கினர். நகரெங்கும் வீமனுடைய புகழ் எழுந்து ஓயாமல் ஒலித்த வண்ணமிருந்தது. வேத்திரகீயத்தின் வழியாடு கடவுளாயினர் வீமனும் குந்தியும் உடன் பிறந்தோர் பிறரும். இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கும்போது பாஞ்சால நாட்டில் யாக்சேன மன்னன் தன் தவமகள் திரெளபதிக்குச் சுயம்வரம் நடத்த நன்னாள் குறித்து ஓலை போக்கினான். பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனே தன் மகளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அவன் தன் பழம் பெரும் ஆசை ஆசை அவ்வாறு இருந்தாலும் முறைப்படியே அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று கருதிச் சுயம்வர ஏற்பாடுகளைச் செய்திருந்தான். ‘பாண்டவர்கள் அரக்கு மாளிகைத் தீ விபத்தில் இறந்து போனார்கள்’ -என்று பரவியிருந்த போலிச் செய்தியை எல்லோரையும் போல அவன் நம்பவில்லை. ‘அவர்கள் எவ்வாறேனும் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி உயிரோடு மறைவாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்’ -என்று அனுமானித்து, அந்த அனுமானத்தை உறுதியாக நம்பவும் நம்பினான். இந்த நம்பிக்கையினால் பாண்டவர்கள் எங்கிருந்தாலும் சுயம்வரச் செய்தியை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணி எங்கும் பரவச் செய்தான். ‘அர்ச்சுனனைத் தவிர வேறு எவரும் திரெளபதியை மணந்து கொள்ளக்கூடாது; மணந்து கொள்ள முடியவும் முடியாது!’ - என்ற நம்பிக்கை யாகசேன மன்னன் மனத்தில் தளராமல் இருந்தது. இங்கே பாஞ்சால நகரத்திலிருந்து தற்செயலாக வேத்திரயம் சென்றிருந்த பார்ப்பனன் ஒருவன் மூலம் பாண்டவர்கள் திரெளபதியின் சுயம்வர ஏற்பாட்டை அறிந்து கொண்டனர், அந்தணர்களாக உருமாறி வாழ்ந்து வந்த அவர்கள் தம் வேடத்திற்கேற்ப அவ்வூர் வேதியர்கள் சிலரோடு பாஞ்சால நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திரெளபதியின் சுயம்வர நினைவே தேராக, ஆசை என்ற கடிவாளத்தை இட்டுத் தங்களைத் தாங்களே செலுத்திக் கொள்வது போல் அமைந்தது, அவர்களது பாஞ்சாலப் பயணம். மீண்டும் வியாச முனிவர் அவர்களைச் சந்தித்தார். “இரவு பகல் என்று பாராமல் பிரயாணம் செய்து விரைவில் பாஞ்சாலத்தை அடையுங்கள். சுயம்வரத்தில் உங்கள் பக்கம் வெற்றி ஏற்பட்டு, ‘நீங்கள் யார்?’ என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் அச்சமின்றி ஆண்மையோடு நீங்கள் பாண்டவர்கள் என்பதை வெளிக் காட்டிக் கொள்ளுங்கள். இது தான் நான் உங்களுக்குக் கூற வேண்டிய செய்தி ஆசி! சென்று வாருங்கள். யாவும் நலமே நிகழும்” -என்றார் அவர். பாண்டவர்கள் அவரை வணங்கி மேலே சென்றனர். அர்ச்சுனன் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு வழி காட்டியதனால் இரவிலும் அவர்கள் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. ஓர் இடத்தில் அவர்கள் கங்கையாற்றைக் கடந்து மேலே செல்லும்படி வழி நடுவே கங்கையாறு குறுக்கிட்டது. அப்போது கங்கையாற்றில் சித்திரரதன் என்னும் பெயருடைய கந்தருவன் ஒருவன் தன் மனைவியோடு நீராடிக் கொண்டிருந்தான். இரவின் தனிமையை நாடி மனைவியோடு வந்திருந்த அவனுக்குப் பாண்டவர்கள் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு அவ்வழியாக வந்தது இடையூறாக இருந்தது. அவன் சினம் அடைந்தான். கங்கையாற்றினது பெரிய நீர்ப்பரப்பில் இருளில் ஓர் ஆணும் பெண்ணும் நீரில் விளையாடிக் கொண்டிருப்பது அந்தச் சிறிய தீப்பந்தத்தின் ஒளியில் பாண்டவர்களுக்கு எவ்வாறு தெரியும்? எனவே அவர்கள் ஆற்றைக் கடந்து செல்வதற்காக இறங்கி விட்டார்கள். ஒரு பெண் தன் கணவனோடு தனிமையில் நீராடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டிருந்தாலும் பாண்டவர்கள் தண்ணீரில் இறங்கத் தயங்கியிருப்பார்கள். அல்லது அவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறு தொலைவிலிருந்து எச்சரித்து அவர்கள் ஒதுங்கிக் கொண்ட பின் இறங்கியிருப்பார்கள். ஆனால் சித்திரரதனோ அவர்கள் தண்ணீரில் இறங்கித் தன் மனைவியுடன் நீராடிக் கொண்டிருந்த இடத்திற்கு வருகின்ற வரை பேசாமல் இருந்து விட்டான். தன் அருகே வந்ததும் இரைந்து திட்டிக் கொண்டே அர்ச்சுனனை வம்புக்கிழுத்தான் சித்தரரதன். அர்ச்சுனன் அமைதியாக, ‘நீங்கள் நீராடிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாது! தெரிந்திருந்தால் வேறு வழியாகப் போயிருப்பேன்’ என்று கூறிப் பார்த்தான். ஆனால் சித்திரரதனோ மனக்கொதிப்புத் தணியாமல் அர்ச்சுனன் மேல் போருக்குப் பாய்ந்தான். இவ்வளவு நடந்த பின்பும் பொறுமையைக் கடைப்பிடிக்க அர்ச்சுனன் பைத்தியக்காரனா என்ன? அவனும் தீப்பந்தத்தைச் சகோதரர்களிடம் கொடுத்து விட்டுச் சித்திரரதனோடு போர் செய்ய முற்பட்டான். இருவருக்கும் பயங்கரமான போர் நிகழ்ந்தது. சித்திரரதனுடைய அகம்பாவத்திற்கு அர்ச்சுனன் சரியான புத்தி கற்பித்தான். தோல்வியடைந்த பின்புதான் அவனுக்குப் புத்தி வந்தது. அவன் பாண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தான். சித்திரரதனின் பேதமையை எண்ணித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டே கங்கையின் அக்கரையிலிருந்து தெளமிய முனிவரின் ஆசிரமத்தை யடைந்தனர் குந்தியும் பாண்டவர்களும். அப்போது பொழுது புலர்கின்ற நேரமாகியிருந்தது. ஆசிரமத்தில் இருந்த தெளமிய முனிவர் தாமும் பாஞ்சால நகரத்துக்கு உடன் வருவதாகக் கூறி அவர்களோடு புறப்பட்டார். அவர்கள் பாஞ்சால நகருக்குச் செல்லும் வனவழியிலே வீசிய மலர்களின் மணத்தோடு கூடிய இனிய தென்றற் காற்று இரவெல்லாம் நடந்து வந்த களைப்பைப் போக்குவதற்கென்றே வீசியது போலிருந்தது. வழி நடையின் போது அவர்கள் அங்கங்கே கண்ட சில காட்சிகள் சுயம்வரத்தில் அர்ச்சுனனுக்கே வெற்றி கிட்டும் என்பதற்கேற்ற நல்ல நிமித்தங்களாக அமைந்தன. கதிரவன் நன்கு வெளிப்போந்து ஒளி பரவத் தொடங்கியிருந்த நேரத்தில் அவர்கள் பாஞ்சால நகரத்தின் ஊரெல்லைக்குள் பிரவேசித்தனர். பொற்கலசங்களின் மேல் கொடிகள் வீசிப் பறக்கும் கோபுரங்களுடனே கூடிய மதில்களையும் மாடங்களையும் கம்பீரமான கட்டிடங் களையும் பாண்டவர்கள் ஊரெல்லையிலேயே தொலைவுக் காட்சியாகக் கண்டுகளித்தனர். கோட்டைச் சுவர்களிலே வீசிப் பறந்த கொடிகள் பாண்டவர்களை ‘நீங்கள் வர வேண்டும், வரவேண்டும்’ -என்று கைகாட்டி அழைப்பது போல விளங்கின. நகரத்தின் புறமதிலை அடைந்த பாண்டவர்கள் அங்கே இருந்த ஒரு குயவனுடைய இருக்கையில் தங்கள் தாயைத் தங்கச் செய்துவிட்டுத் தெளமிய முனிவரோடு திரெளபதியின் சுயம்வரம் நடந்து  கொண்டிருந்த அரண்மனை மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். அப்படிப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவர்கள் முன்பிருந்த அந்தணர் உருவிலேயே இருந்தனர். ‘சந்தர்ப்பமும் வெற்றியும் ஏற்பட்டாலொழிய ‘நீங்கள் யார்?’ என்பதை வெளிபடுத்திக் கொள்ள வேண்டாம்’ -என்று வியாசரின் அறிவுரையை அவர்கள் சிறிதும் மறந்து விடவில்லை. எனவே, அரண்மனைக்குள்ளும் ‘அந்தணர்களாகவே’ நுழைந்தார்கள் அவர்கள். வெற்றி கிடைத்தது பிறந்து வளர்ந்து பேதையாய் வாழ்ந்த பருவம் முதல் நினைவு தெரிந்த நாளான அன்று வரை தான் அர்ச்சுனனை மணந்து கொள்வதற்கென்றே பிறந்தவள்’ - என்ற உணர்வைக் கொண்டிருந்தவள் திரெளபதி. சுயம்வர மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தோழியர்கள் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்த போதும் கூட இந்த எண்ணமே அவளுடைய இதயத்தை நிறைத்துக் கொண்ட ஏக உணர்வாக நின்றது. அவளுடைய அந்த உணர்வுக்கு விடை கிடைக்க வேண்டிய நாள் அன்றுதான். சுயம்வர மண்டபம் முழுவதுமே அரசிளங்குமாரர்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. திரெளபதி தோழியர்கள் புடைசூழச் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவள் தோற்றமும் அங்கே வீற்றிருந்த வேந்தர்களை அனலில் மெழுகென உருகி மயங்கச் செய்தது. சுயம்வரத்துக்குரிய நிபந்தனைகளைத் திரெளபதியின் தமையன் துட்டத் துய்ம்மன் எடுத்துரைத்தான். அவையிலிருந்த வேந்தர்களின் கவனம் திரெளபதியினிடமிருந்து அவன் பக்கம் திரும்பியது. அவன் கூறினான் : “அறிவிலும் அழகிலும் கலையிலும் சிறந்த மன்னர்களே! இதோ இந்த மண்டபத்தின் மேலே சுழலும் இயந்திரப் பொறியைப் பாருங்கள். வட்ட வடிவிலும் சூழ ஆரங்கள் அமைந்திருப்பதாகிய இந்தச் சுழல் இயந்திரத்திற்குள் மீன் போன்ற அடையாளச் சின்னம் ஒன்று இருக்கிறது. இயந்திரத்திற்கு நேரே கீழே பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மஞ்சள் கரைந்த நீரில் தெரியும் பொறியின் நிழலைப் பார்த்துக் கொண்டே மேலே இயந்திரத்தோடு இயந்திரமாக அதனிடையே சுழலும் மீன் சின்னத்தை அம்பு எய்து வீழ்த்த வேண்டும். வில் இதோ இருக்கின்றது. இந்த அருஞ்செயலைச் செய்து நிறைவேற்ற வல்ல மன்னன் எவனோ அவனுக்கு என் தங்கை திரெளபதி மாலையிடுவாள். முடிந்தவர்கள் முன் வந்து செய்யலாம்.” ‘சுயம்வரம் என்றால் கழுத்தை நீட்டியவுடன் சுலபமாக மாலை விழுந்துவிடும்’ -என்று எண்ணிக் கொண்டு வந்திருந்த மன்னர்களைத் திடுக்கிட்டு அஞ்சுமாறு செய்தது இந்த நிபந்தனை. ஆனால் ஆசை என்ற அந்த உணர்வு பயம், வெட்கம் எவற்றையுமே அறியாததல்லவா? தங்களால் நிபந்தனையை நிறைவேற்ற முடியாது என்பதைத் தாங்களே உறுதியாக உணர்ந்து கொண்டிருந்த அரசர்கள் கூட வில்லை எடுத்து முயற்சி செய்யத் தொடங்கினார்கள். இப்படி மன்னாதி மன்னர்களெல்லாம் அவளுடைய அழகு மயக்கத்தில் ஆழ்ந்து நாணமின்றி வில்லேந்தி நின்றார்களே, அப்போது தான் திரெளபதி தன் தோழிகள் மூலம் அவையிலிருந்த அரசர்களைப் பற்றிய விவரங்களை மெல்லக் கேட்டு அறிந்து கொண்டாள். ‘அர்ச்சுனன் வந்திருப்பானோ? வந்திருக்க மாட்டோனோ’ என்ற இந்த உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தது அவள் உள்ளம். ‘நான் எய்துகிறேன் பாருங்கள்!’ -‘இதை எய்து வீழ்த்தாவிட்டால் நான் ஆண்மை உடையவனில்லை’ - என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு வஞ்சினம் கூறிவிட்டுத் தோற்றுத்தலை குனிந்தனர் பலர். பெரும்பாலான அரசர்களுக்கு இதே கதிதான் ஏற்பட்டது. சல்லியன் கைதேர்ந்த விற்போர் வீரனாகிய வில்லாளன், பசுதத்தன், சராசந்தன், துரியோதனன் ஆகிய யாவர்களுக்கும் வெற்றி கிடைப்பது போலத் தோன்றி நெருங்கி வரும்போது அதுவே தோல்வியாக  முடிந்துவிட்டது. இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களில் ஒரே ஒருவன் தோல்விக்குத் தப்பி வெற்றி தனக்குத்தான் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவன் தான் கர்ணன். அவன் மட்டுமென்ன? எல்லோருமே நம்பினார்கள் மகா வீரனாகிய கர்ணன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று. கர்ணன் சாமர்த்தியமாக வில்லை வளைத்து அதில் அம்பையும் பொருத்தி விட்டான். ஆனால், அம்பு வில்லிலிருந்து புறப்படுவதற்கு முன் யாருமே எதிர்பாராத விதமாக வில்லின் நாண் நிமிர்ந்து அவன் தலையிலே தாக்கி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. கர்ணனுக்கு மட்டுமின்றி அவையிலே கூடியிருந்த எல்லோருக்குமே பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. கர்ணன் இறுதியாகச் சுயம்வரத்திற்கு வந்திருந்த அத்தனை மன்னர்களும் தோற்றாகிவிட்டது. ‘நிபந்தனைப்படி பார்த்தால் திரெளபதி இனிமேல் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான்’ -என்று துட்டத்துய்ம்மன் நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அவையில் அந்தணர்கள் வீற்றிருந்த பக்கத்திலிருந்து கணீரென்று எழுந்தது ஒரு கம்பீரமான குரல். துட்டத்துய்ம்மன் முதல் எல்லோரும் வியப்படைந்து அந்தணர்கள் வீற்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். மாறு வேடத்திலிருந்த அர்ச்சுனன்தான் எழுந்திருந்து பேசினான். அவன் பேச்சு துட்டத்துய்ம்மனை நோக்கி எழுந்தது. ‘அரசர்களில் எல்லோருமே முயன்று பார்த்துத் தோல்வியடைந்து விட்டார்கள். அந்தணர்களாகிய எங்களிலிருந்து எவரேனும் முன்வந்து முயற்சியில் வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி திரெளபதியை மணம் செய்து கொடுப்பீர்களா?’ -கூட்டத்தில் ஏளனத்தைக் குறிக்கின்ற சிரிப்பொலி ‘கலகல’வென்று எழுந்தது. ‘அந்தணனுக்கு ஆசையைப் பார்! இத்தனை வீரதீரர்களான வேந்தர்களால் முடியாததை இந்த அந்தணனா செய்துவிடப் போகிறான்?’ -என்ற மாதிரிப் பலதரப்பட்ட இகழ்ச்சிக் குரல்களும் கேட்டன. துட்டத்துய்ம்மன் அவையை அமைதியடையுமாறு செய்துவிட்டு, மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனனின் கேள்விக்குப் பதில் கூறினான். ‘அந்தணர் திலகமே! உங்கள் கேள்வியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அந்தணர்களுக்கும் இதில் பங்கு கொள்ள உரிமையுண்டு, உங்களில் எவரேனும் நிபந்தனையை நிறைவேற்றினால், அவ்வாறு நிறைவேற்று பவருக்குத் திரெளபதியைத் தடையின்றி மணம் செய்து கொடுக்கிறேன். இது உறுதி’ -துட்டத்துய்ம்மன் மறு மொழியை முற்றிலும் கூறி முடிப்பதற்குள்ளேயே அர்ச்சுனன் வில்லும் பொறியும் அமைந்திருந்த மேடையை அடைந்து விட்டான். சுற்றி வீற்றிருந்த அரசர்களின் கண்களில் பொறாமையின் சாயையும் இகழ்ச்சியின் சாயையும் ஒருங்கே இலங்கின. ஆனால், அவர்களுடைய இகழ்ச்சியும் பொறாமையும் தூள் தூளாகச் சிதறிப் போகும்படியான காரியத்தை அடுத்த விநாடியிலேயே அவன் செய்து முடித்தான். வெகுநாள் பழக்கப்பட்டவனைப் போல எடுத்த வேகத்தில் அந்த வில்லை நாணேற்றிக் குறி தவறாமல் அம்பெய்து இயந்திரப் பொறியை அறுத்து வீழ்த்தினான். அப்போது இயந்திரப் பொறி மட்டுமா அறுந்து வீழ்ந்தது? இல்லை! இல்லை! அங்கே கூடியிருந்த மன்னர்களின் மனத்தில் இருந்த அலட்சியம் என்ற உணர்ச்சியும் அறுந்து வேரற்றுக் கீழே விழுந்தது. அவையிலிருந்த ஏனைய அந்தணர்களின் கூட்டம் தங்களில் ஒருவனுக்கு வெற்றி கிடைத்ததற்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது ‘கேவலம் ஒரு அந்தண இளைஞன் அரசர்களும் அடைய முடியாத வெற்றியை அடைந்து விட்டானே’ என்று கூடியிருந்த அரசு குலத்தினர் மனம் பொருமினர். கையில் வளைத்த வில்லுடன் பெருமிதம் விளங்க நின்று கொண்டிருந்தான் அர்ச்சுனன். திரெளபதி ஓரக் கண்களால் தொலைவில் நின்றவாறே அவன் அழகைப் பருகிக் கொண்டிருந்தாள். ‘ஒருவேளை அவனே அர்ச்சுனனாக இருக்கலாமோ? அந்தணனாக உருமாறி வந்திருக்கிறானோ?’ என்று சந்தேகம் இயற்கையாகவே அவள் மனத்தில் எழுந்தது. துட்டத்துய்ம்மன் அந்தணனுக்கு (அர்ச்சுனனுக்கு) மாலையிடுமாறு திரெளபதிக்குக் கூறினான். அவள் மெல்ல நடந்து வந்து விற்பிடித்த கையினனாக நிற்கும் அவன் கழுத்தில் மணமாலையை அணிவித்து விட்டு நாணத்தோடு அருகில் தலைகுனிந்து நின்று கொண்டாள். தாங்களெல்லாம் வீற்றிருக்கும் பேரவையில் திரெளபதி ஓர் அந்தண இளைஞனுக்கு மாலை சூட்டிய காட்சி துரியோதனன் முதலிய அரசர்களின் மனங்களைக் கொதிக்கச் செய்தது. அவனையும் அவையிலுள்ள மற்ற அந்தணர்களையும் போர் புரிந்து துரத்தினால் என்ன?… என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது அவர்கள் சிந்தனையின் கொடுமை. திடீரென்று அந்தணர்கள் மேலும் மணமாலையோடு நின்ற அர்ச்சுனன் மீதும் ஆவேசத்தோடு பாய்ந்தனர் அங்கே கூடியிருந்த வேந்தர்கள். சுயம்வர மண்டபம் ஒரு நொடியில் போர்க்களமாகி விட்டது. திரெளபதியும் தோழியர்களும் மனம் பதைத்து ஒதுங்கி நின்று கொண்டனர். அந்தணர்களுக்கும் அரசர் களுக்கும் யுத்தம் நடந்தது. அர்ச்சுனன் தனக்காகப் பரிந்து கொண்டு வந்த மற்ற வேதியர்களைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தானே தன் சகோதரர்களுடன் போரில் இறங்கினான். போர் உக்கிரமாக நிகழலாயிற்று. போரில் பல தேசத்து அரசர்கள் ஒன்று சேர்ந்திருந்ததனால் மிகச் சீக்கிரமே அர்ச்சுனன் அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவது சுலபமாக இருந்தது. எதிர்த்து வந்த மன்னர்கள் சிதறியோடினர். அர்ச்சுனனும் சகோதரர்களுமே இறுதியில் சுயம்வர மண்டபத்தில் எஞ்சினர். ‘மாறுவேடத்திலிருக்கும் இந்த ஐந்து அந்தணர்களும் பாண்டவர்கள் தாமோ?’ -என்ற சந்தேகம் தப்பி ஓடும் போது அரசர்களுக்கு ஏற்பட்டது. சுயம்வரத்திற்கு வந்த கண்ணபிரான் அரசர்களுடைய இந்தச் சந்தேகம் வலுத்து விடாமல் தடுத்து அவர்களைத் தங்கள் தங்கள் ஊர் திரும்பும்படி செய்து பாண்டவர்களைக் காப்பாற்றினார். மாறுவேடத்திலிருந்த பாண்டவர்கள் ஐவரும் சுயம்வரத்தில் அர்ச்சுனன் அடைந்த கன்னி திரெளபதியுடன் புறநகரில் குந்திதேவி தங்கியிருந்த குயவனின் வீட்டுக்கு வந்தனர். வீட்டு வாசலில் இருந்தவாறே, ‘தாயே! இன்று ஓர் பெறற்கரிய பொருளைப் பெற்று வந்திருக்கிறோம் நாங்கள்’ -என்று குந்தியின் செவியில் கேட்குமாறு கூறினார்கள் பாண்டவர்கள். உண்மை என்ன என்பதை வெளியே வந்து காணாத குந்தி, ‘அப்படியானால் அந்த அரும் பொருளை நீங்கள் ஐவருமே அனுபவித்து மகிழுங்கள்!’ என்று உள்ளே இருந்தவாறே மறுமொழி கூறிவிட்டாள். தாய்மொழியை மந்திரமாக மேற்கொள்ளும் பாண்டவர்கள் இந்த விபரீத நிகழ்ச்சி காரணமாக ஐவருமே திரெளபதியின் மேல் உரிமை கொண்டாடுமாறு நேர்ந்து விட்டது. வெளியே வந்து உண்மையைக் கண்டு அறிந்து கொண்டதும், ‘எல்லாம் விதியின் விளைவு!’ என்று கூறி மனம் வருந்தினாள் குந்தி. சுயம்வர நிகழ்ச்சியிலிருந்து போர் ஏற்பட்டதுவரை யாவற்றையும் தாயிடம் விவரித்துக் கூறினார்கள் பாண்டவர் கள் சுயம்வர மண்டபத்திற்குள்ளிருந்து பாண்டவர்கள் புறப்பட்ட போதே அவர்கள் மேல் சந்தேகங் கொண்ட துருபத மன்னன் பின்னாலேயே ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் மூலம் அந்தணர்களாக மாறுவேடத்தில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்றும், திரௌபதியினால் மணமாலை சூட்டப்பட்டவன் அர்ச்சுனனே என்றும் அவன் அறிந்து கொண்டான். உடனே தகுந்த மரியாதைகளுடன் பாண்டவர்களையும் குந்தி திரெளபதி ஆகியவர்களையும் அழைத்து வரச் செய்தான். திரெளபதிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தக் கருதினான். ஆனால் பாண்டவர்களோ திரெளபதியை ஐவரும் மணந்து கொள்ளும்படி நேர்ந்த சம்பவத்தைக் கூறி அப்படியே செய்ய வேண்டும் என்றார்கள். துருபதன் திடுக்கிட்டு மனங் கலங்கினான். அப்போது வியாச முனிவர் அங்கே வந்து துருபதனுக்கு ஆறுதல் கூறித் ‘திரெளபதியின் பழவினைப்படி அவள் ஐவரை மணக்க வேண்டியிருப்பதை’ -விளக்கினார். வியாசர் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின் துருபத மன்னனும் ஒருவாறு மனந்தேறித் திரெளபதியை ஐவருக்கும் மனைவியாக மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதித்தான். பின்பு ஒரு நல்ல மங்கல நாளில் தெளமிய முனிவர் தலைமையாளராக இருந்து பாண்டவர்கட்கும் திரௌபதிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தின் போது பாண்டவர்கள் தங்கள் உண்மை உருவத்தோடு விளங்கினர். இந்தச் செய்தி எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்துவிட்டது. சுயம்வரத்திற்கு அந்தணருருவில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்பதை அறிந்ததும் கெளரவர்களின் சினத் தீ பெருகி வளர்ந்தது. முன்பே இருந்த பகையும் ஒன்று சேர்ந்து கொண்டது. அவர்கள் பாண்டவர் மேல் படை எடுத்துப் புறப்பட்டனர். தருமன் முடி சூடுகிறான் உலகத்தில் தாங்கள் எந்த இடத்தை நிலைக்களன்களாக கொண்டு தோன்றுகின்றனவோ அந்த இடத்தையே அழிக்கும் பொருள்கள் இரண்டே இரண்டு தாம் இருக்கின்றன. ஒன்று நெருப்பு மற்றொன்று பொறாமை தான் எந்தக் கட்டையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எரிக்கின்றதோ அதையே அழித்து விடுகிறது நெருப்பு. தான் எந்த மனத்தில் அளவை மீறி வளர்கின்றதோ அந்த மனத்தையே அழித்து விடுகிறது பொறாமை திரௌபதி சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன்! அவனோடு வந்தவர்கள் பாண்டவர்கள். துருபத மன்னன் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் திருமணம் நிகழ்த்தி விட்டான் என்று வரிசையாக இந்தச் செய்திகளை எல்லாம் அறிய அறியப் பொறாமையால் கொதித்தது கெளரவர் மனம். பாண்டவர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை மூலமற்றுப்போகும்படி அழித்து விட்டால் என்ன? என்று தோன்றியது துரியோதனன் முதலியோர்க்கு. இறுதியில் இந்தக் குரோதம் நிறைந்த எண்ணமே அவர்கள் உள்ளத்தில் வலுப்பெற்று வளர்ந்து விட்டது. படைகளைத் திரட்டிக் கொண்டனர். கொதிக்கும் உள்ளமும் குமுறும் அசூயையுமாகப் படைகளோடு மீண்டும் பாஞ்சால நகரத்துக்குப் புறப்பட்டனர். ஆனால் இவர்கள் இவ்வாறு வருவார்கள் என்பதை உறுதியாக எதிர்பார்த்திருந்த துருபதன் புதல்வன் துட்டத்துய்ம்மன், பாஞ்சால நாட்டுப் படைகளோடு எதிர்ப்பதற்குத் தயாராக இருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கூடத் துட்டத்துய்ம்மனோடு போருக்குத் துணிந்து ‘வீர வேள்வியாக’ அதை எண்ணி வந்து காத்திருந்தனர். துரியோதனாதியர் ‘பாண்டவர்களை எளிதாக வென்று விடலாம்’ -என்றெண்ணி வந்தனர். ஆனால் விளைவு நேர்மாறாக முடிந்து விட்டது. வந்த வேகத்தில் பெருந்தோல்வி அடைந்து திரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது துரியோதனாதியர்களுக்கு. பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை விடத் தாங்கள் இவ்வளவு விரைவில் தோல்வி அடையும்படி நேர்ந்து விட்டதே என்ற வருத்தம் தான் அதிகமாக வாட்டியது அவர்களை இந்த நிலையில் இவர்கள் படையெடுத்துச் சென்றதும் தோல்வியுற்று வந்ததுமாகிய நிகழ்ச்சிகள் திருதராட்டிரனுக்குத் தெரிந்தன. அவன் சிந்தித்தான். பாண்டவர்கள் அவனுக்குத் தம்பியின் புதல்வர்கள். அவர்களுக்கும் தன் மக்களுக்கும் இருக்கின்ற இந்தப் பகைமை, குரோதம் முதலிய உணர்ச்சிகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்களானால் அது நன்றாக இராது என்றஞ்சியது அவன் உள்ளம்: எனவே பாண்டவர்களின் வழியில் தன் மக்கள் அடிக்கடி குறுக்கிட்டு அவர்களைத் துன்புறுத்த முடியாத படி ஒதுங்கி வாழும்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே முதல் வேலையாகப் பாண்டவர்களை அழைத்து வருமாறு தன் தூதுவர்களைப் பாஞ்சால நாட்டிற்கு அனுப்பினான், தூதுவர்கள் பாஞ்சால நாடு சென்று பெரிய தந்தையின் ஆணையைப் பாண்டவர்களிடம் தெரிவித்தனர். உடனே பாண்டவர்கள் துருபத மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு திரெளபதி, தாய் குந்தி ஆகியவர்களோடு அத்தினாபுரம் வந்து சேர்ந்தனர். திருதராட்டிரன் அவர்களை அன்போடு வரவேற்று “அருமைப் புதல்வர்களே! உங்களுக்கு அறிவும் நினைவும், பெருகிய திறன் வாய்ந்த வாலிபப் பருவம் கிட்டிவிட்டது. இனி உங்கள் தந்தைக்குரிய நாட்டின் பகுதியை உங்களிடமே ஆள்வதற்கு ஒப்பித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதனை செவ்வனே ஆளும் பொறுப்பும் கடமையுணர்ச்சியும் உங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு” -என்று கூறிப் பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய உடைமைகளை முறையாகப் பிரித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டான். தருமன் முதலியவர்களும் தந்தைக்கு நன்றி செலுத்தி அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் ஒரு நல்ல நாளில் தன் அலையிலுள்ள சான்றோர்களைக் கொண்டு பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். பாண்டவர்கள் பகுதியாகிய அரசுக்குத் தருமன் அரசனானான், அத்தினாபுரமே பாண்டவர்கள் அரசுக்கும் தலைநகரமாக இருந்தது. தொடக்கத்தில் சில நாட்கள் துரியோதனாதியர் பாண்டவர்களின் நலத்தை வெறுக்காமல் நாட்களைக் கழித்தனர். பின்பு நாளாக ஆகப் பாண்டவர்களுக்குத் தொல்லைகளைச் செய்யத் தலைப்பட்டனர். திருதராட்டிரனோ தன் மக்கள் செய்யும் குற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் வாளாவிருந்தான். ‘தீயோர்களை விட்டு விலகி வாழ்வதே இன்பம்‘ -என்பதை நன்குணர்ந்திருந்த தருமன் தன்னுடைய தலை நகரத்தை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளக் கருதினான். இந்திரப் பிரத்தம், முன்னோர்கள் வாழ்ந்து சிறந்த நகரம். ஆனால் தற்போது வெறும் வெளியாக இருந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த அந்த நகரத்தைத் திருத்தி அமைத்துத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தான் தருமன். இந்திரப்பிரத்தமோ காண்டவப் பிரத்தம் என்னும் பாழடைந்த நகரத்துக்கு அருகில் இருந்தது. எந்த முக்கியமான செயலைச் செய்வதாக இருந்தாலும் கண்ணப்பிரானைக் கலந்து கொண்டே அதைச் செய்யும் வழக்கம் தருமனிடம் இருந்தது. இந்திரப் பிரத்த நகரத்திற்குப் புறப்படும்போது தன் சகோதரர்களுடனே கண்ணபிரானையும் அழைத்துக் கொண்டு சென்றான். இந்திரப்பிரத்தம், அப்போதிருந்த பாழ் நிலையைக் கண்ட கண்ணன் அதில் அந்த நிலையிலேயே பாண்டவர்கள் வசிக்க முடியாதென்பதை உணர்ந்தான். அருள் நிரம்பிய அவன் உள்ளம் மலைத்தது. தயங்கித் திகைத்தது. கண்ணபிரானே மனம் வைத்தால் நடக்காத துண்டா? பாண்டவர்களுக்கு நலம் புரிய வேண்டும் என்ற ஆர்வம் அந்த அடியார்க்கருளும் பண்புடைய மனத்தில் தோன்றி விட்டதானால் பின் என்ன குறை? வானவர் தலைவனாகிய இந்திரனும் வானுலகத் தச்சனாகிய விச்சுவகன்மா என்பவனும் கண்ணபிரானால் பாண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்ளப்பட்டனர். தேவர்களே உதவி புரிய முன் வந்தால் காரியம் வெற்றிகரமாக முடிவதற்குக் கேட்கவா வேண்டும்? காடும் புதருமாக மண்டிக் கிடந்த இடத்தில் கவின் மிக்க மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்தன. எல்லா வகையான அழகுகளும் நிரம்பிய ஓர் நகரம் அங்கே உருவாயிற்று. ‘அமராபதியும் அளகாபுரியும் இதற்கு இணையாக இயலாது’ என்று மண்ணவர்களும் விண்ணவர்களும் கொண்டாடும் படியாக அவ்வளவு சீரும் சிறப்பும் கொண்டு இலங்கியது அந்தப் புதிய நகரம். அதன் பழமையை நினைத்து கண்ணபிரானே அதற்கு ‘இந்திரப் பிரத்தம்’ -என்றும் பெயர் சூட்டினார். பெரிய தந்தை தவறாக எண்ணிக் கொள்ளாதவாறு அவரிடமும் சகோதரர்களிடமும் ஏனைப் பெரியோர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மங்கல நிறைவு செறிந்த ஓர் நல்ல நாளில் இந்திரப்பிரத்த நகரத்துக்குக் குடியேறினர். வனப்பிலும் அழகிலும் நிகரற்ற அந்த மகாநகரத்தைப் படைத்துக் கொடுத்தவனாகிய தேவதச்சன் நகரத்தின் அமைப்பையும் எழிலையும் பாண்டவர்கட்கும் மற்றை யோர்க்கும் விளக்கிக் கூறினான். நகரம் முழுவதையும் சுற்றிக் காண்பித்தான். தேவதச்சனாகிய விஸ்வகன்மா, இந்திரன், கண்ணபிரான் ஆகியவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படியே அந்த நகரத்தைப் பாண்டவர்க்காக உண்டாக்கிக் கொடுத்திருந்தான் என்றாலும் தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய முறையைக் கருதி அவனுக்குப் பெரும் பரிசில்களையும் அன்பளிப்புகளையும் வழங்கினார்கள் தருமன் முதலிய சகோதரர்கள். பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரைத் தங்கள் தலைநகரமாக அமைத்துக் கொண்டு சில நாட்கள் கழிந்தன. நகர் புகு விழாவுக்காக வந்திருந்த கண்ணபிரான் முதலிய விருந்தினர் பாண்டவர்க்கு நல்லாசி கூறி விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் தலைநகரை அடைந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல அது புதுமையாகத் தோன்றிய நகரம் என்ற நினைவே மறந்து விட்டது. ஊழி ஊழியாக வாழ்ந்து பழகிப்போன நகரம் போன்ற மனோபாவம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த மனோபாவத்தோடு மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். முடிசூடிக் கொண்டிருந்த தருமன் அறக்கடவுளே அரியணையில் அமர்ந்து முயன்று அரசாள்வது போலச் செம்மை பிறழாத ஆட்சியை நடத்தி வந்தான். ஒரு தாய் தன் அன்புக் குழந்தைகளைப் பேணிப் போற்றும் தன்மை போலத் தாய் ஒத்த அன்பும் தவம் ஒத்த பண்பும் கொண்டு தனக்குக் கிடைத்த நாட்டைத் தம்பிமார்களோடு நிர்வகித்து வந்தான். இந்நிலையில் இந்திரப்பிரத்த நகரத்து வாழ்வு கோலாகலமாகக் கழிந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத நிலையில் இசைப் புலவரும் மூவுலகங்களிலும் சஞ்சரிக்கின்றவருமாகிய நாரத முனிவர் ஓர் நாள் (இந்திரப்பிரத்த நகருக்கு) அங்கே விஜயம் செய்தார். அவருடைய வரவை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் கொண்ட பாண்டவர்கள் அன்புடனும் ஆர்வத்துடனும் தக்க உபசாரங்கள் செய்து அவரை அரண்மனையில் வரவேற்றனர். ஏதாவது ஓர் இடத்திற்கு நாரதமுனிவர் வருகின்றார் என்றால் அவருடனே சிறப்புமிக்க செய்தி ஒன்றும் வருகின்றது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றும் ஒரு செய்தியோடுதான் இந்திரப்பிரத்த நகரத்தில் பாண்டவர்களைக் காண்பதற்கு வந்திருந்தார் அவர். அது வெறும் செய்தி மட்டும் இல்லை. பாண்டவர் நலனில் அக்கறை கொண்டு கூற வந்த செய்தி. அதை அவர் சொல்லத் தொடங்கிய போது, ‘இவர் இப்போது எதற்காக இப்படி ஏதோ கதை கூறுவது போலக் கூறுகிறார்?’ -என்று திகைத்தனர் பாண்டவர். இறுதியில் தான் அவர்களுக்கு நாரதர் கூறவந்த கருத்து விளங்கியது. “பாண்டவர்களே முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன். இது ஒரு பெண்ணின் காரணமாக இருவர் தங்களுக்குள் மாறுபட்டுப் பெறுவதற்கரிய தவத்தையும் இழந்து போன நிகழ்ச்சி அது. அதை நீங்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சுந்தன், உப சுந்தன் என்று இருவர் பிரம்மாவை நோக்கி இடைவிடாமல் தவம் செய்து கொண்டிருந்தனர். தவம் வளர வளர அதன் சித்தி அருகில் நெருங்கும் அல்லவா? சுந்தோப் சுந்தர்களுடைய தவமும் அதன் பயனை சித்தி வடிவில் பெற வேண்டிய காலம் வந்தது. அப்போது இறுதி முறையாக அவர்களுடைய தவத்தைச் சோதனை செய்யும் பொருட்டு வானுலகிலிருந்து திலோத்தமை அனுப்பப்பட்டாள். பிறரை மயக்கி மோகத்துக்கு மிக விரைவில் ஆளாக்கி விடும் சக்தி வாய்ந்த பேரழகி. அவள். ஈரேழு - பதிநான்கு புவனங்களிலும் வடிவமோகனத்தில் அவளுக்கு நிகரான பெண்ணைத் தேடிக் காண முடியாது. அத்தகைய அழகி சுந்தோபசுந்தர்கள் தவம் செய்து கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் பெண்ணாக மட்டுமா வந்தாள்? இல்லை! இல்லை. அவர்களுடைய வைராக்கியத்தைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பராக்கும் அகோர நெருப்பைப் போல வந்தாள். கண்டவர்களை வாரி விழுங்கும் அந்த அந்தகாரத்தின் அடியே தங்கள் தவத்தை, ஆழத்திற்கும் ஆழத்திலே அழித்துப் புதைக்க முற்பட்டு விட்டார்கள் சுந்தோபசுந்தர்கள். திலோத்தமை என்ற அந்த அழகியின் காரணமாகத் தங்களுக்குள்ளேயே ஒவ்வொருவர் சண்டையிடவும் தொடங்கிவிட்டனர். “அடே இவள் அருகில் நெருங்காதே! இந்த அழகி எனக்குத் தான்” என்றான் சுந்தன். “விலகி நில்! உன் அழகுக்கு இவள் ஒருத்திதான் குறை. இவளை அனுபவிக்கும் யோக்கியதை எனக்குத் தானடா இருக்கிறது” என்றான் உபசுந்தன். அவ்வளவு தான் இருவரும் கட்டிப் புரண்டார்கள், அவர்களுடைய தவமும் மண்ணில் விழுந்து புழுதியோடு புழுதியாகப் புரண்டது. இருவருடைய தவத்தையும் பாழாக்கிவிட்ட பெருமையில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள் திலோத்தம்மை! -இந்த நிகழ்ச்சியைக் கூறி நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் நாரதர். அப்படி இருந்தபோது அவர் விழிகள் பாண்டவர்களை ஊடுருவின. பாண்டவர்கள் ஒன்றும் புரியாமல் திகைப்புடன் மலங்க மலங்க விழித்தனர். அப்போது நாரதர் தொடர்ந்து மேலும் கூறத் தொடங்கினார்: “பாண்டவர்களே! இந்தப் பழைய நிகழ்ச்சியை இப்போது எதற்காக நினைவூட்டினேன் என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் நலனுக்காகத் தான் இதை நினைவூட்டினேன். திரெளபதியை நீங்கள் ஐவரும் மணம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு அரசு, ஆட்சி, புது நகரம் என்று இப்படி எல்லாவிதமான நலன்களும் கூடி வருகின்ற நேரத்தில் அவள் காரணமாக ஒரு சிறு பூசல் ஏற்பட்டாலும் ஒற்றுமை அதிவேகமாகக் குலைந்துவிடும். இதனால் நீங்கள் ஐவரும் திரௌபதியோடு இல்வாழ்க்கை நடத்த வேண்டியது பற்றி நான் வகுத்துக் கொடுக்கும் வரன் முறையை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒருவர் வீதம் அவளோடு நீங்கள் ஐவரும் தனித்தனியே இல்வாழ்க்கை நடத்துங்கள். அவ்வாறு நடத்தும்போது ஒருவர் இல்வாழ்க்கைக் காலத்தில் உங்களில் அந்த ஒருவர் ஒழிய மற்றவர்கள் அவளைக் காணவே கூடாது. இந்தக் கட்டுப்பாடு மிகமிக அவசியமானது. தப்பித் தவறிக் காணும் படியாக நேர்ந்து விட்டால் அப்படிக் கண்டு விட்டதன் பரிகாரத்திற்காக ஓர் வருட காலம் கண்டவர் எவரோ அவர் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்படுத்திக்கொண்டால் திரெளபதி காரணமாக உங்கள் சகோதரத்துவத்திற்கு அழிவு ஏற்படாது.” நாரதர் இவ்வாறு கூறி முடித்ததும் பாண்டவர்கள் இந்த நிபந்தனைக்கு உடன் பட்டனர். தங்கள் ஒற்றுமைக்கு இந்த ஏற்பாடு நல்ல பாதுகாப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. நிபந்தனையின்படி அந்த ஆண்டில் தருமனோடு திரெளபதி இல்வாழ்வு நடத்த வேண்டுமென்று முடிவு செய்து கொண்டார்கள். நாரதர் தம்மால் ஒரு நல்ல காரியம் நிறைவேறிய திருப்தியுடன் விடைபெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் நலனில் அக்கறை கொண்டு அம்முனிவர் இந்திரப் பிரத்த நகருக்கு விஜயம் செய்து நல்லுரை கூறியதற்காக அவரை வணங்கி மரியாதை செலுத்தி நன்றியோடு விடை கொடுத்தனர். சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் மேல் கொண்ட மோகத்தால் தவத்தையும் தங்களையும் அழித்துக் கொண்ட வரலாறு அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது. யாத்திரை நேர்ந்தது பாண்டவர்கள் எது நடக்கக் கூடாது என்று கருதினார்களோ அதுவே ஒரு நாள் நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்க வில்லை . சிறிதும் எதிர்பாராத நிலையில் தற்செயலாக நடந்து விட்டது. அர்ச்சுனன் அன்று காலை ராஜமாளிகையின் பிரதான வாயிலில் ஏதோ காரியமாக நின்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று யாரோ ஒருவர் பரிதாபகரமாக ஓலமிட்டுக் கொண்டே வாயிலுக்குள் நுழைந்து வரும் ஒலி கேட்டது. அர்ச்சுனன் திடுக்கிட்டுப் போய்த் தலை நிமிர்ந்து பார்த்தான். ஓர் அந்தணர் பதறியடித்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவன் அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி “உம்முடைய குறை என்ன? எதற்காகத் துயரமுற்றவர் போல் காணப்படுகிறீர்?” என்று வினவினான். “அரசே! நான் என்ன வென்று கூறுவேன்? தருமமே உருவான தங்கள் தமையனார் ஆட்சியில் கூட இப்படி நடக்குமா? எனக்குச் சொந்தமான பசுக்களைக் காட்டு வேடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டனர். அவைகளை மீட்டுத் தருவதற்கு உதவி நாடி இங்கே வந்தேன்” -என்று பரபரப்புடனும் பதற்றத்துடனும் அந்த அந்தணர் மறுமொழி கூறினார். “அஞ்சாதீர்! இப்படியே நில்லும். நான் மீட்டுத் தருகிறேன் உம்முடைய பசுக்களை. இதோ, உள்ளே சென்று வில்லும் கணைப்புட்டிலும் எடுத்துக் கொண்டு வருகிறேன்” -என அவருக்கு மறுமொழி கூறி அங்கேயே நிறுத்திவிட்டு, தான் வில்லெடுத்து வருவதற்காக உள்ளே சென்றான் அருச்சுனன் . அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது! மாளிகைக்குள் நுழைந்து படைக்கலங்களாகிய வில், வேல், முதலியன வைக்கப் பெற்றிருக்கும் இடத்தை அடைவதற்கு நடுவில் ஓர் பூம்பொழிலைக் கடக்க வேண்டும். இந்தப் பூம்பொழில் திரெளபதிக்கும் அவளுடைய அந்தப்புரத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பழகுவதற்குரிய இடம். அந்தணருக்கு உதவி செய்து அவருடைய பசுக்களை மீட்டுத் தரவேண்டுமென்ற அவசரத்தினால் மகளிர்க்குரிய அந்தப் பூம்பொழிலின் நடுவே செல்லும் குறுக்கு வழியாகப் படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் அர்ச்சுனன். அங்கே திரெளபதி தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. தருமனும் அப்போது அவளோடு பூம்பொழிலில் இருந்தான். ஒரு பூஞ்செடிக்குக் கீழே திரெளபதியின் பாடகமும் சிலம்பும் சுமந்த பாதங்களை மட்டும் அர்ச்சுனன் பார்க்கும்படியாக நேர்ந்து விட்டது. தீயை மிதித்து விட்டவன் போலத் திடுக்கிட்டான் அவன். நாரதர் கூறிய நிபந்தனை நினைவிற்கு வந்தது. திரெளபதியையே பார்க்கக் கூடாது என்றால் அவள் திருவடிகளை மட்டும் எப்படிப் பார்க்கலாம்? அதுவும் பிழைதானே? எனவே கட்டுப்பாட்டுக்கு அடங்கி நிபந்தனைப்படி தான் தீர்த்தயாத்திரை போவதென்று மனத்திற்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டான். அந்தணருக்கு வாக்களித்தபடி பசுக்களை மீட்டுத் தந்த பின் யாத்திரையைத் தொடங்க முடிவு செய்து கொண்டு வில்லும் கணையும் ஏந்தி அந்தணரோடு புறப்பட்டான். காட்டு வேடர்களை வென்று அந்தணரின் பசுக்களை மீட்டுக் கொடுத்த உடனே அவசரமாக அரண்மனை திரும்பி யாத்திரைக் கோலம் பூண்டான். புறப்பட்டுச் செல்வதற்கு முன் சகோதரர்களிடம் நிகழ்ந்த செய்தியைக் கூறி விடைபெற்றான். பாரத தேசத்தில் மானிட சரீரத்தின் பாவங்களைக் கழுவி பவித்திரமாக்கும் புண்ணிய நதிகள் அநேகம் இருக்கின்றன. அவற்றுள் சிறந்ததும் முதன்மை வாய்ந்ததும் கங்கை நதியே. வேறு பல முனிவர்களுடனும் தேசயாத்திரை புரிபவர் களுடனும் சேர்ந்து பிரயாணம் செய்த அர்ச்சுனன் முதன்முதலாக இவ்வளவு சிறப்புப் பொருந்திய கங்கை நதியில் நீராடும் வாய்ப்பைப் பெற்றான். உடன் வந்த முனிவர்கள் யாவரும் அவரவர்களுக்குத் தோன்றிய துறைகளில் நீராடுவதற்காக இறங்கினர். அர்ச்சுனன் மட்டும் ஒதுக்குப்புறமாகத் தனியே ஓர் துறையில் இறங்கினான். அந்தத் துறையருகே பெரும் பெரும் பாறைகளும் பாறைக் குகைகளும் இருந்தன. துறையில் இறங்கி நதியின் நடுப்பகுதிக்கு வந்து நீராடிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அப்போது கரையருகே இருந்த பாறைப் பிளவுகளோடு கூடிய குகை ஒன்றிலிருந்து யாரோ சில பெண்கள் சிலம்பு குலுங்க நடந்து வரும் ஒலி கேட்டது. வளையொலியும் சிலம்பொலியும் கேட்டு வருபவர் யௌவன மகளிர் என்பதை அனுமானித்துக் கொண்டான் அவன். உடனே அவர்கள் தன்னைக் கண்டு அஞ்சி ஓடிப் போய்விடாமல் இருப்பதற்காகச் சில வினாடிகள் மூச்சை அடக்கி நீரில் மூழ்கிக் கொண்டான். மேலெழுந்து மறுபடி அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது செளந்தரியமான காட்சியை அங்கே கண்டான். விண்மீன்களுக்கு நடுவே எடுப்பாக விளங்கும் தண்மதியைப் போல, பல இளம் பருவத்துத் தோழிப் பெண்களுக்கு நடுவே தனியழகுடன் நாககன்னிகை போலத் தோன்றிய யுவதி ஒருத்தி நீராட இறங்குவதற்காக ஆடை அணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அங்கங்கள் அத்தனையும் கண்களாகவே இருந்தால் இரண்டு கண்களால் மட்டும் பார்க்க முடியாத அவள் அழகைப் பரிபூரணமாக அனுபவிக்கலாமே என்று தோன்றியது அவனுக்கு. நீராடுவதற்குத் தயாராக ஆடை அணிகளைக் குறைத்துக் கொண்டு நின்ற அந்த நிலை அந்த யுவதியின் சரீரத்தில் ஒவ்வொரு அணுவிலும் ஜதி போடுகின்ற அழகை அவன் கண்களுக்குக் காட்டின. அர்ச்சுனன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றான். சட்டென்று அவர்கள் துறையிலே இறங்குவதற்காகத் திரும்பியபோது அவள் பார்வை நீரோட்டத்தின் நடுவே நின்ற அவன் மேல் நிலைத்தது. ஓடும் நீர் நடுவே எடுப்பான தோற்றத்தோடு நிற்கும் அவன் அழகு அவளைத் தலைகுனிய வைத்தது. அவள் நாணித் தலைகுனிந்தாள். அதன் பின் நீராடும் போது அவனும் சரி, அவளும் சரி, கங்கை நீரில் மட்டும் திளைத்து ஆடவில்லை. ஒருவர் மனத்தில் மற்றொருவராக மாறி மாறித் திளைத்தாடினார்கள். கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே தென்படும் கயல் மீன்களைப் போன்ற அவள் விழிகள் அவனையே கடைக்கணித்தன. அவன் கண்களோ, அவள் தோற்றத்தை நோக்குவதிலிருந்து இமைக்கவே இல்லை. கண்களின் இந்த ஒத்துழைப்பு, காதலின் பாஷையோ என்னவோ? அந்தப் பெண்களின் உரையாடலிலிருந்து அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்த கன்னிகைகள் என்றும் அவள் நாகலோகத்து இளவரசி ‘உலூபி’ என்றும் அர்ச்சுனன் பராபரியாகத் தெரிந்து கொண்டான். நீராடி முடித்த பின் அவர்கள் மீண்டும் குகை வழியாக நாகலோகத்துக்குக் கிளம்பினார்கள். அப்போது ‘உலூபி’ மட்டும் அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘நீங்கள் என்னை இப்படித் தனியே செல்லவிட்டு வாளா இருக்கலாமோ? என்னைப் பின்பற்றி என்னோடு வந்தால் என்ன?’ -என்று அவனை அழைப்பது போல இருந்தது உருக்கம் நிறைந்த அந்தப் பார்வை. திடீரென்று அவன் மனத்திலும் மின்னலைப் போல் அதிவேகமாக ஓர் எண்ணம் தோன்றியது: ‘நாம் இந்த அழகியைப் பின்பற்றி இவளோடு சென்றால் என்ன?’ -இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே காவி ஆடைகளைப் பிழிந்து அரையில் கட்டிக் கொண்டு துறையிலிருந்து கரையேறிக் குகைக்குள்ளே நுழைந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். உலூபியோடு நாகலோகத்தை அடைந்த அர்ச்சுனன் நாகலோகத்து அரசனால் அன்போடு வரவேற்கப்பட்டான். தன் மகளுக்கும் அவனுக்கும் கங்கைக்கரையில் ஏற்பட்ட சந்திப்பையும் காதலையும் தோழிகள் மூலம் அறிந்து இருவரையும் மணமக்களாக்கித் திருமணம் செய்து வைத்தான். அர்ச்சுனனும் உலூபியும் மணமான பின் பல நாள் இன்பவாழ்வில் திளைத்தனர். காதலர்களின் மனமொத்த போக வாழ்வாகிய அந்த வாழ்வில் நாட்கள் கழிந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. காலம் நேரம் இவைகளை மறந்து தன்மயமாய் ஒன்றி நுகரும் இன்பந்தானே உயர்ந்த இன்பம். அர்ச்சுனனுக்கும் உலூபிக்கும் இராவான் என்றோர் புதல்வன் பிறந்தான். புதல்வன் பிறந்த சில நாட்களுக் கெல்லாம் அர்ச்சுனன் நாகலோகத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் தனது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினான். நாகலோகத்திலிருந்து திரும்பி வரும் போது, இமாசலத்தின் சாரலிலுள்ள பல தீர்த்தங்களிலும் நீராடி மகிழ்ந்தான். இவ்வாறே வடநாட்டிலுள்ள சகல தீர்த்தங்களிலும் நீராடி முடித்த பிறகு ஞானவளமும், நில வளமும் மிகுந்து, ‘சித்திக்கு ஒருவித்து’ -என்று கூறத்தக்க சிறப்பையுடைய தென்னாட்டை அடைந்தான் அர்ச்சுனன். தென்னாட்டில் அவன் முதல்முதலாகப் பார்த்த இடம் திருவேங்கடமலை. தமிழ்த்திருநாட்டின் வடபால் அமைந்திருந்த அந்தத் திருமலையில் உள்ள அருவிகளில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டபின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை சிதம்பரம் முதலிய தலங்களைக் கண்டான். அங்கங்கே இருந்த ஆறுகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி மேற் சென்றான். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீரங்கத்திற்கு வந்து காவேரியில் நீராடி அரங்கநாதப் பெருமானைத் தரிசித்துக்கொண்டு பொதியைத் தென்றலும் தமிழ்த் தென்றலும் ஒருங்கு வீசும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த மதுரை மாநகரத்தை அடைந்தான். வையை வளமும் தமிழ் வளமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சி வளமும் ஒருங்கு திகழும் கூடல் மாநகரில் பாண்டிய மன்னர் பரம்பரையில் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசனைக் காணச் சென்றான். “துறவுக் கோலமுடையவர் போலத் தோன்றுகிறீர்! மிக இளம் பருவத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு மேற்கொண்டு விட்டீர் போலும் நீவிர் இங்கே பாண்டிய நாடு “நான் தான் விசயன்!” பாண்டிய மன்னனிடமும் சித்திராங்கதையிடமும் அர்ச்சுனன் அவ்வளவு சுலபத்தில் விடை பெற்றுக் கொண்டு விட முடியவில்லை. அரிதின் முயன்று மிகுந்த நேரம் மன்றாடித் தான் விடை பெற்றுக் கொள்ள முடிந்தது. கண்களில் நீரும் நெஞ்சில் துயரமும் மல்கத் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தாள் சித்திராங்கதை. மதுரை மாநகரிலிருந்து புறப்பட்ட பின் மற்றும் பல பாண்டி நாட்டுத் திருப்பதிகளுக்குச் சென்றான். அவைகளில் நீராடி வழிபாடு செய்தபின் மேற்குக் கடலில் நீராடச் சென்றான். மேற்குக் கடலருகில் ஐந்து சிறு சிறு பொய்கைகள் இருந்தன. கடலில் நீராடி விட்டு வந்த அவன் இந்த ஐந்து பொய்கைகளையும் கூடப் புண்ணிய தீர்த்தமாகக் கருதி இவற்றிலும் நீராட விரும்பினான். ஒவ்வொரு பொய்கையில் நீராடும் போதும் ஒவ்வோர் முதலையால் அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் அதன் விளைவு மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரக் கூடியதாக இருந்தது. ஒவ்வோர் முதலையும் அவனைக் கடிக்க வந்தபோது அவன் எதிர்த்துத் தாக்கிச் சமாளிக்க முயன்றான். ஆனால் அவன் கை முதலை மேல்படவேண்டியது தான் தாமதம்; ஒவ்வொரு முதலையும் ஓர் வனப்பு நிறைந்த நங்கையாக மாறிக் காட்சியளித்தது. எல்லா முதலைகளையும் தாக்கி முடித்தபின் ஆச்சரியம் திகழும் கண்களால் அவன் பார்த்தான். என்ன விந்தை! அவனைச் சுற்றி அழகிலும் பருவத்திலும் சிறந்த ஐந்து தேவகன்னிகைகள் நின்றார்கள். பின்பு “நாங்கள் இந்திரனால் இத்தகைய சாபத்தை அடைந்திருந்தோம்; தாங்கள் இங்கு வந்து நீராடியதால் எங்கள் சாபம் நீங்கிற்று” -என்று அந்தப் பெண்களே கூறியதனால் அவன் உண்மையைப் புரிந்து கொண்டான். அந்தப் பெண்கள் அவனை வணங்கி நன்றி செலுத்திவிட்டு வானுலகு சென்றனர். அங்கிருந்து திருக்கோகர்ணம் சென்று தோகர்ணத்து எம்பெருமானை வணங்கிவிட்டுக் கண்ணபிரான் முதலியோர் வசிக்கும் தெய்வீகச் சிறப்பு வாய்ந்த துவாரகாபதியை அடைந்தாள். துவாரகை நகரத்துக்குள் பிரவேசிக்கும் போதே சுபத்திரைப் பற்றிய இன்பகரமான உணர்வுகள் அவன் இதயத்தில் எழுந்தன. துறவி போன்ற கோலத்துடனே தான் வந்திருப்பதால் தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ள இயலாதென்று தோன்றியது அவனுக்கு. தான் வந்திருந்த ஆண்டின் கோவத்துக்கு ஏற்பத் துவாரகை நகரத்தின் கோட்டை வாசலில் இருந்த ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அவதாரமாகிய கண்ணபிரானை மனத்திற்குள் தியானித்தான். அன்பர்களின் நினைவைப் பூர்த்தி செய்தலையே தன் முக்கிய காரியமாகக் கொண்டுள்ள அந்தப் பெருமானும் அர்ச்சுனன் துவாரகைக்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கோட்டை வாயில் ஆலமரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் தோன்றினார். அவன் மனத்தில் யாரைப் பற்றிய இன்பகரமான நினைவுகளோடு எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டார். அர்ச்சுனனோடு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் அவன் அவா நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார் அவர். மறுநாள் துவாரகைக்கு அருகிலுள்ள மலை ஒன்றில் அந்நகரத்து மக்கள் இந்திரதேவனுக்காகக் கொண்டாடுகிற விழாவின் பொருட்டுக் கூடியிருந்தார்கள். கண்ணன், பலராமன், சுபத்திரை முதலிய ராஜ குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். கண்ணபிரான் துறவிக் கோலத்திலிருந்த அர்ச்சுனனையும் அங்கே அழைத்து வந்திருந்தார். திருவிழாவுக்காக வந்திருந்தவர்கள் கபட சந்நியாசியாக வீற்றிருந்த அர்ச்சுனனை ‘சிறந்த சக்திகளைப் பெற்ற மாபெருந்துறவி இவர்‘ - என்றெண்ணி வலம் வந்து வணங்கினர். பலராமனும் சுபத்திரையும் கூட இந்த மாபெருந் துறவியின் சிறப்பைக் கேள்வியுற்று இவரை வணங்கிச் செல்வதற்காக வந்தனர். அப்போது அவர் - களுடனே கண்ணபிரானும் வந்தார். உடன் வந்தவர்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காகக் கண்ணனும் அர்ச்சுனனைப் பயபக்தியோடு வணங்குகிறவர் போல நடித்தார். “ஆகா!⁠உலகமெல்லாம் வணங்கக் கூடிய சர்வேசுவரனும் என்னைக் கையெடுத்துக் கும்பிடும்படியான அபசாரத்தைச் செய்து விட்டேனே” -என்று மனத்திற்குள் தன்னை நொந்து கொண்டான் அர்ச்சுனன். “அண்ணா! இவர் பெரிய ஞானி. நம் தங்கை சுபத்திரையே கன்னிகை மணமாக வேண்டியவள். இவரைப் போன்ற ஞானியர்களுக்குக் கன்னிகைகள் தொண்டு செய்தால் விரைவில் நல்ல கணவனை அடையலாம். எனவே இந்த முனிவரின் தொண்டில் சுபத்திரை இன்றிலிருந்து இந்த விழா முடிகின்றவரை ஈடுபடுவது நல்ல பயனை அளிக்கும்” -என்று அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே பலராமனை நோக்கிக் கூறினார் கண்ணன். பலராமன், “அப்படியே செய்யலாம் தம்பீ!” என்று சம்மதித்தான். அர்ச்சுனன் உள்ளூரத் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்துவிடாதபடி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இந்த ஏற்பாட்டின் படி கபட சந்நியாசியாக இருந்த அர்ச்சுனனுக்கும் பணி செய்வதற்காகச் சுபத்திரையையும் அவளுக்குத் துணையாக ஒரு தோழிப் பெண்ணையும் அங்கே விட்டு விட்டுப் பலராமனும் கண்ணனும் தங்கள் காரியங்களைக் கவனிக்கச் சென்றார்கள். போகிற போக்கில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார். அன்றிலிருந்து சுபத்திரையும் அவளுடைய தோழியும் துறவிக்கு பணிபுரிந்து மகிழ்ந்தார்கள். சுபத்திரை ஒரு நாள் முனிவரிடம் சில செய்திகளை விசாரித்து அறிய ஆசை கொண்டாள். “சுவாமி! தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள்? தங்களுடைய சொந்த ஊர் எது?” என்று கேட்டாள் சுபத்திரை. “அம்மா! எனக்கு யாதும் ஊர்தான். ஆனாலும் நீ, நான் பிறந்து வளர்ந்து பெரியவனான ஊரைக் கேட்கிறாய் போலும்! என் ஊரை ‘இந்திரப் பிரத்தம்’ என்று பெயர் சொல்லுவார்கள்.” “சுவாமி! தங்கள் ஊர் ‘இந்திரப் பிரத்தம்’ என்று கேள்வியுற்று மிகவும் மகிழ்கின்றேன். இந்திரப்பிரத்த நகரத்தில் தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியவர்கள் நலமாக இருக்கின்றார்களா?” “நல்லது பெண்ணே! பாண்டவர்களைத் தானே கேட்கிறாய்? அவர்களுக்கு நலத்திற்கென்ன குறைவு? ஆமாம், எனக்கொரு சந்தேகம். நீ பாண்டவர்களில் எல்லோருடைய நலத்தையும் விசாரித்தாய். அர்ச்சுனனைப் பற்றி மட்டும் ஏன் விசாரிக்கவில்லை? அவனை உனக்குப் பிடிக்காதா? இல்லை. அவன் மேல் உனக்கு அன்பில்லையா? என்ன காரணம்?” துறவியின் இந்தக் கேள்விக்கு மட்டும் சுபத்திரை விடை கூறவில்லை. அவளுடைய கன்னங்கள் நாணத்தால் சிவந்தன! கால் கட்டைவிரல் நிலத்தைக் கிளத்தது. உதடுகளில் நாணப் புன்னகை நெகிழத் தலைகுனிந்தாள் அவள். “சுவாமி! எங்கள் இளவரசி சுபத்திராதேவி அர்ச்சுனரை மணந்து கொள்ள வேண்டிய மணமுறை உரிமை கொண்டவள். ஆகையால் தான் வெட்கப்பட்டுக் கொண்டு அவரைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டாள்” - என்று அருகிலிருந்த தோழி விடை கூறினாள். “ஓகோ காரணம் அதுதானா” -என்று கூறிக்கொண்டே நிம்மதியாக மூச்சுவிட்டார் துறவி. “தவிரவும் அர்ச்சுனர் இப்போது தீர்த்தயாத்திரை போயிருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம் சுவாமி! தங்கள் ஞான திருஷ்டியால் அவர் இப்போது எங்கே தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருக் கிறார் என்று கூற முடியுமானால் கூறுங்களேன்” -தோழி மேலும் அவரைத் தூண்டினாள். கபட சந்நியாசி வேஷத்திலிருந்த அர்ச்சுனன் சிரித்துக் கொண்டே சன்னமாகக் குழைந்த குரலில் கூறலானான். “அம்மா? உங்கள் இளவரசியை மணந்து கொள்ளப் போகும் அந்த அர்ச்சுனர் இப்போது இதே இடத்தில் உட்கார்ந்து சந்நியாசியாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குச் சொல்லுங்கள்” - இவ்வாறு கூறிக் கொண்டே தன் சொந்தத் தோற்றத்தோடு அவர்களுக்கு முன்னால் நின்றான் அவன். தோழிப் பெண் திடுக்கிட்டு விலகிச் சென்றாள். சுபத்திரை அதே நாணமும் பயபக்தியும் கொண்டு எழுந்து நின்றாள். ஆர்வமிகுதியோடு அருகில் நெருங்கி அவள் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டு, “சுபத்திரை! நான் தான் விசயன். என்னைத் தெரிகின்றதோ?” -என்றான். சுபத்திரை இலேசாகச் சிரித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அன்போடு நோக்கினார்கள். தோழி பதறிப் போய்ச் சுபத்திரையின் அன்னை தேவகியிடம் சென்று உண்மையைச் சொல்லி விட்டாள். தேவகி பரபரப்படைவதற்கு முன்னால் விஷயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவளை அமைதியாக இருக்கும்படி செய்தார். பின்பு பலராமன் முதலிய எவருக்கும் தெரியாமல் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் கண்ணபிரான். திருமணச் சடங்குகளை நடத்துவதற்கு வசிட்டர் முதலிய முனிவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்ச்சுனனுக்குத் தாய், தந்தை முறையினராக இந்திரனும் இந்திராணியும் வந்தனர். “அர்ச்சுனா சுபத்திரையை மணந்து கொண்டு யாருமறியாமல் அவளோடு இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்றுவிடு! எவர் எதிர்த்தாலும் சரி அவர்களைத் தோல்வியுறச் செய்து மேலே செல்க” -என்று கூறி அவர்கள் இருவருக்கும் இரகசியமாகத் திருமணத்தை முடித்து வைத்தார் கண்ணபிரான், அவர் கூறியபடியே திருமணம் முடிந்தவுடன் ஓர் இரதத்தில் மணக்கோலத்தை நீக்காமலே சுபத்திரையுடன் இந்திரப்பிரத்த நகருக்குப் புறப்பட்டுவிட்டான் அவன். ‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்கின்ற கதையாக அர்ச்சுனனையும் புறப்படச் சொல்லிவிட்டுப் “பலவந்தமாக அர்ச்சுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டு போகிறான்” -என்று பலராமனிடமும் சொல்லி விட்டார் கண்ணபிரான். இதனால் அளவற்ற சினமும் ஆத்திரமும் கொண்டுவிட்ட பலராமன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். சுபத்திரையைத் தேரில் வைத்துக் கொண்டு இந்திரபிரத்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அர்ச்சுனன் பின்னால் பலராமனின் படைகள் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். ‘தானும் போர் செய்து எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை’ - என்று உணர்ந்த அவன் சுபத்திரையைத் தேரோட்டும் சாரதியாக இருக்கச் செய்து விட்டுத் தான் வில்லேந்தித் துரத்திவரும் படையை எதிர்ப்பதற்குத் தயாரானான். “சுபத்திரை ! நீ பயப்படாதே! உன் அண்ணனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ, என் விற்போரால் ஒரு சிறு புண்ணும் ஏற்படாமல் போர் செய்து நான் தடுத்து விடுகிறேன்” - என்று கூறிவிட்டு எதிரிகள் பக்கம் திரும்பவில்லை நாணேற்றுவதற்குத் தொடங்கினான் அர்ச்சுனன். மிகக் குறுகிய நேரப் போரிலேயே பலராமனையும் படைகளையும் தடுத்து நிறுத்திவிட்டு வேறெந்தத் தடையும் இன்றி மேற் சென்றான் அவன். இந்திரப்பிரத்த நகரம் வருகின்ற வரை தேரை சுபத்திரையே சாரத்தியம் செய்தாள். இந்திரப்பிரத்தத்தில் சகோதரர்கள் அர்ச்சுனனையும் சுபத்திரையையும் மணக்கோலத்தில் கண்டு களிப்போடு வரவேற்றனர். அந்தப்புரத்தில் இருந்த திரெளபதி முதலிய மகளிர் சுபத்திரைக்கு மங்கல நீர் கரைத்துப் பாதங்களைக் கழுவி அன்போடு அழைத்துச் சென்றனர். தேர்க்குதிரைகளின் சுடிவாளத்தைப் பிடித்து இழத்துத் திறமையோடு சாரத்தியம் செய்து கொண்டு வந்த அவள் ஆற்றலை வியந்தனர். வில்லும் கையுமாகச் சுபத்திரையோடு தேரிலிருந்து இறங்கிய அர்ச்சுனனைக் குறித்து என்ன துன்பம் நேர்ந்ததோ என்று திகைத்தனர் சகோதரர்கள். பின்பு அவனே நடந்த நிகழ்ச்சிகளைக் கூறக் கேட்டு அறிந்து கவலை தவிர்த்தனர். இங்கு இவ்வாறு இருக்கும் நிலையில் கண்ணபிரான் படையெடுத்து வந்திருந்த பலராமனைச் சமாதானப்படுத்தி அவனிடம் உண்மையைக் கூறினார். பலராமனும் ஆர அமரச் சிந்தித்துப் பார்த்தபின் மன அமைதியுற்றுச் சீற்றம் தணிந்தான். அவ்வாறு சீற்றம் தணிந்த அவனையும் அழைத்துக் கொண்டு சுபத்திரைக் குரியனவும் அர்ச்சுனனுக்குரியனவுமாகிய மணப் பரிசில்களுடன் இந்திரப்பிரத்த நகரத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார் கண்ணபிரான். பலராமன் அர்ச்சுனனிடமும் சுபத்திரையிடமும் தன் ஆத்திரத்தை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு பரிசில்களையும் அளித்தான். சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்துவிட்டுப் பலராமன் துவாரகைக்குச் சென்றான். கண்ணபிரானோ பிரிய மனமின்றி அவர்களுடனேயே தங்கியிருந்தார். காலம் இன்ப வெள்ளமாகக் கழிந்து சென்று கொண்டிருந்தது. உரிய காலத்தில் அர்ச்சுனன் - சுபத்திரை இவர்களுக்கு ‘அபிமன்யு’ என்ற வீரப்புதல்வன் பிறந்தான். பாண்டவ புத்திரர்களாகத் திரெளபதிக்கு ஐந்து ஆண் மக்கள் பிறந்திருந்தார்கள். இவர்கள் வளர்ந்து நினைவு தெரிகின்ற பருவத்தை அடைந்தபோது குருகுல வாசம் செய்து அறிவுக் கலையும் போர்க் கலையும் கற்றுக் கொள்ள ஏற்ற ஆசிரியர்களை நியமித்தனர். வசந்தம் வந்தது புதல்வர்களின் குருகுல வாசமும், பாண்டவர்களின் அமைதி நிறைந்த நல்வாழ்வுமாக இந்திரப்பிரத்த நகரத்தில் நாட்கள் இன்ப நிறைவுடனே கழிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மனோரம்மியமான வசந்த காலம் வந்தது. எங்கும் தென்றல் காற்று வீசியது. சோலைகள் தோறும் குயில்கள் தங்கள் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் இன்னிசைக் கீதங்களைப் பாடின. தீக்கொழுந்துகளைப் போல மாமரங்களில் செந்தளிர்கள் தோற்றின. பொய்கைகளின் குளிர்ந்த நீர்ப்பரப் பிற்கு மேல் பசிய இலைகளுக்கிடையே அல்லி தாமரை முதலிய மலர்கள் அழகு செய்தன. வசந்தகாலத் தலைவனாகிய மன்மதன் தென்றலாகிய தேரில் ரதியோடு பவனி வரத் தொடங்கியிருந்தான். வசந்த காலத்தின் இன்பத்தை நுகரும் ஆவலால் கண்ணபிரானும் அர்ச்சுனனும் தத்தம் தேவியர் களுடனும் உரிமை மகளிர்களுடனும் இந்திரப்பிரத்த நகருக்கு அருகிலிருந்த ஒர் பூஞ்சோலைக்குச் சென்று தங்கினர். சோலையில் மலர்ந்திருந்த பலவிதமான மலர்களைக் கொய்ய ஆரம்பித்தனர் பெண்கள். சோலையிலிருந்த குளிர்ப்பூம் பொய்கைகளில் நீராடி வெம்மையைத் தணித்துக் கொண்டனர். வேனிற் காலத்தில் தம் வெம்மையை உலகம் தாங்கொணாதபடி வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அவர்கள் தங்கியிருந்த பூஞ்சோலைக்கு வெளியே வெயில் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்ததால் எங்கும் கானல் பரந்து கொண்டிருந்தது. தரையில் ஈரப்பசை இன்றி வறண்டு போயிருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் சோலைக்குள்ளேயே ஓர் பெரிய மரத்தின் கீழ்க் குளிர்ந்த நிழலில் அர்ச்சுனனும் கண்ணபிரானும் உட்கார்ந்து பலவகையான செய்திகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தணர் ஒருவர் அவர்களுக்கு எதிரே வந்து ஏதோ கேட்க விரும்பும் பாவனையில் நின்றார். ‘தகதக’வென்று எரியும் தீக்கொழுந்து போன்ற நிறம், மார்பில் வெள்ளை நிறம் மின்னலைப் போலக் கண்ணைப் பறிக்க விளங்கும் முப்புரி நூல், செம்மை நிறத்தோடு பின்னிக் கிடந்து பிடரியில் புரளும் சடை, கம்பீரமான முகத்துக்கு மேலும் தனிச் சோபையை அளித்தான், அவர் செவியிலே அணிந்திருந்த மகர குண்டலங்கள். இத்தகைய தோற்றத்தோடு தங்கள் முன்னே வந்து நிற்கும் ‘அவர் யார்?’ என விளங்காமல் திகைத்தனர் அர்ச்சுனனும் கண்ணபிரானும். ஆனாலும் ‘அந்தணர்’ என்பதற்காக அவரை மரியாதையாக வரவேற்று வணங்கினார்கள். அந்தணர் மரியாதையையும் வணக்கத் தையும் ஏற்றுக் கொண்டு அருகில் அமர்ந்தார். “நான் அந்தணன்! உணவைக் கண்டு வெகு நாட்களாயிற்று. வெகு நாட்களாகப் பட்டினி என் பசி தீர உணவளிக்க வேண்டும்! நீங்கள் மறுக்காமல் அளிப்பீர்கள் என்று நம்பி வந்தேன்” -என்று குழிவிழுந்த கண்களால் நோக்கிக் கொண்டே அவிமணம் கமழும் வாயால் பரிதாபகரமான குரலில் வேண்டினார் அவர். “அந்தணச் செல்வரே! தங்களுக்கு உணவளிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்” - என்றனர் கண்ணபிரானும் அர்ச்சுனனும். அவர்கள் கூறி முடிக்கவில்லை ! எதிரே அந்தணன் அமர்ந்திருந்த இடத்திற்கு தேஜோமயமான தோற்றத்துடனே அக்னி தேவர் நின்றார். “அக்னி பகவானே! தாங்கள் தாம் அந்தணராக உருமாறி வந்தீர்களா?” என்று வியந்து கூறி அர்ச்சுனனும் கண்ணபிரானும் மீண்டும் அவரை வணங்கினர். “எனக்குத் தேவையான உணவை இப்போது கூறுகிறேன் கேளுங்கள். ‘காண்டவம்’ -என்றோர் பெரிய வனம் இருக்கிறது. அது இந்திரனுடைய பாதுகாப்புக்கு உட் பட்டது. அந்த வனம் முழுவதையும் என் தீ நாக்குகளால் எரித்து வயிறார உண்டு பசி தீர வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. இந்த ஆசையை நான் நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இந்திரன் தடையாக இருந்து வருகின்றான். நான் வனத்தை உண்ணத் தொடங்கும்போதே மேகங்களால் மழையைப் பொழிந்து அவித்து விடுகின்றான் அவன் . இம் முறை அவன் அவ்வாறு அவிக்காமல் நீங்கள் எனக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்க வேண்டும்” -என்று தம் வேண்டுகோளை மேலும் விவரித்தார் அக்னி பகவான். “அந்தணரே! நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறமாட்டேன். காண்டவ வனத்தை இப்போதே நீர் புகுந்து எரித்து உண்ணலாம். இந்திரன் உம்மை அவித்துவிட முடியாமல் நான் பாதுகாக்கிறேன் இது உறுதி” என்று அர்ச்சுனன் அவருக்கு மீண்டும் உறுதியாக வாக்களித்தான். அக்னி பகவான் மனமகிழ்ந்து நன்றி செலுத்தினார். அர்ச்சுனன் இந்திரனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக அப்போதே போர்க்கோலம் கொண்டு புறப்பட்டான். தனக்கு உதவி செய்ய முன்வந்த அவனுக்கு வில் அம்பு முதலிய ஆயுதங்களை அக்கினி பகவானே அளித்தார். இந்திரன் தனக்குத் தந்தை முறை உடையவனாயினும் கனற் கடவுளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவனையும் எதிர்க்கத் துணிந்து விட்டான் அர்ச்சுனன். உறவு முறையை விடக் கடமை சிறந்தது அல்லவா? அர்ச்சுனன் வாக்களித்த மறுகணத்திலேயே காண்டவ வனத்தில் எங்கும் நெருப்புப் பற்றிக் கொண்டு பயங்கரமாக எரியலாயிற்று. வனத்திலே பிடித்த நெருப்பின் ஜ்வாலை பிரதிபலித்ததனால் எட்டுத் திசைகளும் தகத்தகாயமாகச் செந்நிறம் படியத் தொடங்கி விட்டது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசத் தொடங்கி விட்டதனால் நெருப்பிற்கு வசதி பெருகிவிட்டது. காட்டு மூங்கில்கள் தீயில் வெடிக்கும் ஒலியும் அங்கே வசிக்கும் விலங்குகள் தீயிலிருந்து தப்புவதற்கு வழி தோன்றாமல் வேதனையோடு கிளப்பிய துயர ஓலங்களுமாகக் காடெங்கும் கிடுகிடுத்தன. சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், பலவகைப் பறவைகள் எல்லாம் நெருப்பிலே சிக்கி நீறுபட்டுக் கொண்டிருந்தன. அசுரர், வேடர் முதலிய இனத்தவர்களாகிய மக்களும் தீக்கிரையாயினர். காண்டவம் தீக்கிரையாகும் செய்தி இந்திரனுக்கு எட்டியது. அடக்கமுடியாத ஆத்திரம் பொங்கியது அவன் உள்ளத்தில் தனக்கு மிகவும் வேண்டியதான தட்சகனென்னும் பாம்பு காண்டவ தகனத்தில் அழிந்து போய் விடுமோ என்றஞ்சியது அவன் மனம். காண்டவத்தில் பற்றி எரியும் நெருப்பை உடனே சென்று அவித்து நிர்மூலமாக்கும்படி தன் கட்டளைக்குட்பட்ட எல்லா முகில்களையும் ஏவினான் இந்திரன். முகில்களை முதலில் அனுப்பிய பின் தானும் சினம் பொங்கும் தோற்றத்தோடு படைகளுடன் ஐராவதத்தில் ஏறிப் புறப்பட்டான். கனற்கடவுள் காண்டவத்தைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும் போது மேலே கொண்டல்கள் திரண்டு மழை சோணாமாரியாகப் பிரளய வெள்ளமாகக் கொட்டு கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது. அக்னிபகவான் திடுக்கிட்டார். ‘ஐயோ! இம்முறையும் அர்ச்சுனன் நம்மைக் காப்பாற்ற முடியாமல் போய் இந்திரன் வென்று விடுவானோ?’ என்று அவர் உள்ளம் அஞ்சியது. நல்ல வேளையாக அர்ச்சுனன் தன் சாமர்த்தியத்தினால் காண்டவ வனத்திற்கு மேல் அம்புகளாலேயே ஒரு கூடாரம் சமைத்து ஒரு துளி மழைநீர் கூட உள்ளே இறங்க முடியாதபடி தடுத்து விட்டான். மேகங்களுக்கும் அவற்றை அனுப்பிய இந்திரனுக்கும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அவனும் அவனோடு வந்த மற்ற தேவர்களும், எப்படியாவது தட்சகனைக் காப்பாற்றிவிட வேண்டும்’ -என்று முயன்றனர். தட்சகனுடைய மனைவி தன் புதல்வனாகிய அசுவசேனன் என்னும் பாம்புடனே அர்ச்சுனனின் அம்புக் கூடாரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றது. அர்ச்சுனன் இதைக் கண்டு விட்டான். ஓர் அம்பைச் செலுத்தி அந்தப் பாம்பின் தலையை அறுத்து வீழ்த்தினான். ஆனாலும் அசுவசேனன் என்ற தட்சகனின் மகன் தப்பித்துச் சென்றுவிட்டான். இந்திரனிடம் போய்ச் சேர்ந்த அசுவசேனனை அவன் நன்குப் பாதுகாத்தான். பிற்காலத்தில் இந்தப் பாம்புதான் கர்ணன் கையில் நாகாஸ்திரமாகப் பயன்பட்டுத் தன் தாயைக் கொன்றதற்காக அர்ச்சுனனைப் பழி வாங்க முயல்கிறது. “தட்சகன் அழிந்து போய்விட்டான். காண்டவத்தில் பற்றிய தீயும் நின்றபாடில்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த அர்ச்சுனன் தான். இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திரன் தன் படைகளுடனே, தன்னந்தனியனாய் நின்ற அர்ச்சுனனோடு கடும் போர் தொடுத்தான். அர்ச்சுனன் ஓரே ஆளாக இருந்தும் அஞ்சாமல் இந்திரனையும் அவனுடைய பெரும் படைகளையும் சமாளித்தான். இந்திரனும் நிறுத்தாமல் போரை வளர்த்துக் கொண்டே போனான். ‘தட்சகன்’ இறந்திருக்க வேண்டும் என்று தவறாக அனுமானம் செய்து கொண்டதே அதற்குக் காரணம். அப்போது வானிலிருந்து”இந்திரா ! தட்சகனும் பிழைத்து விட்டான். அவன் மகன் இருப்பது தான் உனக்கே தெரியும். உன்னுடைய முயற்சியால் காண்டவ வனத்தை அக்னியிடமிருந்தோ, அர்ச்சுனனிடமிருந்தோ காப்பாற்றி விட முடியாது. உன் வீரத்திற்குக் கண்ணபிரானும் அர்ச்சுனனும் சிறிதும் இளைத்தவர்களில்லை. ஆகவே, போரை உடனே நிறுத்திவிட்டு அமராபதிக்குத் திரும்பிச் செல்" -என்று ஓர் தெய்வீகக் குரல் எழுந்தது. அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்ட இந்திரன் போரை நிறுத்திவிட்டு தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். இந்திரன் போரை நிறுத்தி விட்டுப் பின் வாங்கி விடவே அர்ச்சுனன் வெற்றி வாகை சூடினான். வெற்றிக்கு அறிகுறியாகத் திக்குத் திகாந்தங்களெல்லாம் அதிரும்படி சங்கநாதம் செய்தான். தனியொருவனாக நின்று வென்ற அவன் சிறப்பையாவரும் புகழ்ந்து பாராட்டினார்கள். காண்டவம் தீப்பற்றி எரியும் போது கண்ணபிரானுடைய சம்மதத்தாலும் தன் கருணையினாலும் சிலரை உயிர் தப்பிச் செல்லுமாறு விட்டிருந்தான் அர்ச்சுனன். அவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன், “பாண்டவர்கள் எந்த நேரம் எத்தகைய உதவியை விரும்பினாலும் செய்யக் காத்திருப்பேன்” என்று நன்றிப் பெருக்கோடு கூறி அர்ச்சுனனிடமும் கண்ணபிரானிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் அவன் மயனைப் போலவே தட்சகன் மகனும் சில குருவிகளும் தீக்கிரையாகாமல் தப்பிப் பிழைத்தன. கனற்கடவுளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியின்படியே காண்டவம் முழுவதையுமே விருந்தாக அளிக்க முடிந்ததே என்பதற்காகத் திருப்திப்பட்டான் அர்ச்சுனன். பலகாத தூரம் விரிந்து பரந்து கிடந்த அந்த மாபெரும் கானகத்தை உண்டு கொழுத்த வலிமையோடு கனற்கடவுள் அர்ச்சுனனுக்கும் கண்ண பிரானுக்கும் முன்னால் வந்து நின்றார். “இப்போது திருப்தி தானே?” என்றார் கண்ணபிரான் நகைத்துக் கொண்டே. “திருப்தி மட்டுமா? மட்டற்ற மகிழ்ச்சியும் கூட கைம்மாறு செய்ய முடியாத பேறுதவியை இன்று எனக்கு அளித்திருக்கிறீர்கள்…” - கனற் கடவுள் மறுமொழி கூறி இருவரையும் பாராட்டி வணங்கினார். “விருந்து கேட்டீர்கள்! அளிக்க வேண்டிய கடமையோடு அளித்தோம். தங்களுக்குத் திருப்தியானால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி” என்று அடக்கமாக அவருக்குப் பதில் கூறினான் அர்ச்சுனன். அவர் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார். கண்ணபிரானும் அர்ச்சுனனும் தாங்கள் தங்கியிருந்த பூம்பொழிலுக்கு வந்து உரிமை மகளிரையும் தேவியரையும் அழைத்துக் கொண்டு இந்திரப்பிரத்தம் திரும்பினர். முதலாவது ஆதி பருவம் முற்றும்.  வேள்வி நிகழ்ச்சிகள் பாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன். தன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால், நிம்மதியும் திருப்தியும் இன்றி எனக்குள்ளேயே குழம்பும் படியாக நேரிட்டு விடும். உங்களைப் போலவே பிறரைப் பற்றியும் சிந்தித்து அவர்கள் நலனுக்காக உதவும் பண்புடையவர்கள் நீங்கள். சிற்பக் கலையில் நல்ல பழக்கமுள்ளவன் யான். கலைஞர்களெல்லாம் கண்டு அதிசயிக்கும்படியான ஓர் அழகிய மணிமண்டபத்தை உங்களுக்கு நான் கட்டித் தருகிறேன். எளியேனுடைய நன்றியின் சின்னமாக நீங்கள் அந்த மண்டபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டபம் அமைப்பதற்குரிய பொருள்கள் யாவும் ஓர் இடத்தில் மறைந்து கிடக்கின்றன. முற்காலத்து அரசன் ஒருவனால் புதைக்கப்பட்டுள்ள பொருள்கள் அவை. ‘விடபருவன்’ என்ற அசுர குலத்துப் பேரரசன் ஒருவன் தனது அரும்பெரும் முயற்சியாலே ஈட்டிய பொருள்களை எல்லாம் எவரும் அறியாதவண்ணம் ‘பிந்து’ -என்னும் பொய்கையில் மறைத்து வைத்துள்ளான். அவன் இறந்த பிறகு அந்தப் பொருள்கள் எவராலும் பயன்படுத்தப் பெறாமல் அப்படியே மறைந்து கிடக்கின்றன. அந்தப் பொருள்களை எடுத்து வந்துவிட்டால் கட்டப் போகிற மணிமண்டபத்தை மிக உயர்ந்த முறையில் கட்டிவிடலாம். அவற்றை எடுத்து வருவதற்கு மட்டும் உங்கள் உதவி எனக்கு வேண்டும்.” மயனுடைய நன்றியுணர்ச்சியும் களங்கமற்ற அன்பும் பாண்டவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன. “மணிகளையும், அருமையான பல பொருள்களையும் உள்ளடக்கிய விடப்பருவனின் மறைந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்குத் தங்கள் உதவி பூரணமாக உண்டு என்று வாக்களித்த தருமன் உடனே தகுந்த வீரர்களை அழைத்து வரச் செய்தான். ஆற்றலும் செயல் திறனும் மிக்க வீரர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர்.”விட பருவனுக்குச் சொந்தமான ‘பிந்து’ என்னும் பொய்கையில் மறைந்திருக்கும் நிதிகள் யாவற்றையும் கண்டுபிடித்து விரைவில் கொண்டு வாருங்கள்" என்று தருமன் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். வீரர்கள் சென்றனர். மயனுக்குத் திருப்தி ஏற்பட்டது. கட்டளையை மேற்கொண்டு சென்ற வீரர்கள் மிக விரைவிலேயே பொய்கையில் மறைந்திருந்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தனர். பொருள் வந்து சேர்ந்ததும் மயன் மண்டபம் கட்டுகின்ற வேலையைத் தொடங்கினான். அதிவேகமாக உயர்ந்த செளந்தரியங்களைச் சிருஷ்டிக்கும் திறன் படைத்த அந்தத் தெய்வீகக் கலைஞன் பதினான்கே நாட்களில் கண்ணைக் கவரும் அழகோடு மண்டபத்தைக் கட்டி முடித்து விட்டான். வீமனுக்கும் ஓர் கதாயுதத்தையும் அர்ச்சுனனுக்கு ஓர் வலம்புரிச் சங்கையும் மயன் தன் அன்பளிப்பாக அளித்தான். அவனுடைய நன்றி நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் பாண்டவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான் அவன். மயன் இவ்வாறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்ற சில நாட்களில் நாரத முனிவர் இந்திரப் பிரத்த நகரத்துக்கு விஜயம் செய்தார். பாண்டவர்கள் ஐவரும் அவரை வரவேற்றுப் புதிய மண்டபத்தைக் காண்பித்தனர். சிறந்த அமைப்பினாலும் உயர்ந்த பொருள்களாலும் ஈடு இணையற்று விளங்கிய அந்த மண்டபம் நாரதரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. பாண்டவர்களையும் மயனையும் பெரிதும் பாராட்டினார் அவர். “பாண்டவ சகோதரர்களே! இந்த நிகரற்ற மண்டபத்தைப் பெற்ற நீங்கள் இதைக் களனாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்று உண்டு. உங்களைக் கொண்டு ‘இராசசூயம்’ -என்ற பெருவேள்வியைச் செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய பாண்டு பல நாளாகக் கருதியிருந்தான். ஆனால் தீவினை வசத்தால் அந்தக் கருத்து நிறைவேறுவதற்குள்ளேயே அவனுக்கு மரணம் நேரிட்டு விட்டது. இப்போது நீங்கள் அமரரான உங்கள் தந்தையின் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட வேண்டும். உங்கள் தந்தையின் ஆன்மா திருப்தியடையும் படியாக நீங்கள் இந்தக் கணத்திலிருந்தே இராசசூய வேள்விக்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” -நாரத முனிவரின் வேண்டுகோளுக்கு ஒருங்கு இணங்கினர் ஐவரும். முனிவர் உவகையோடு சென்றார். நாரத முனிவருக்கும் பாண்டவர்களுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்தபோது கண்ணபிரான் உடனிருந்தார். முனிவர் செல்கின்ற வரை அமைதியாகப் பேசாமலிருந்த கண்ணபிரான் அவர் சென்ற பின்பு பாண்டவர்களிடம் வேறு ஓர் யோசனையைக் கூறினார். வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்படுகின்ற எதிரிகளை முன்பே உணர்ந்து தொலைக்க முயல வேண்டும். சராசந்தன் என்றோர் அரக்கர் குலமன்னன் இருக்கிறான். மனிதர்களைக் கொண்டு செய்யும் ‘நரமேத யாகம்’ என்ற வேள்வியைச் செய்வதற்காக ஒரு பாவமும் அறியாத அரசர் பலரைச் சிறையில் அடைத்து வைத்திருக் கிறான். ஆற்றல் மிக்க மன்னர்கள் கூட அவனுக்கு பயந்து அடி பணிகிறார்கள். அவ்வளவு பயங்கரமான அந்த அரக்கர் குலமன்னனை முதலில் நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது வேள்விக்கு அவனால் பெரிய இடையூறு நேர்ந்தாலும் நேரலாம். கண்ணபிரான் இவ்வாறு கூறி நிறுத்தவும் தருமன் “அப்படியானால் அந்த அரக்கனைச் சாமர்த்தியமாகக் கொல்லும் வழியையும் தாங்களே கூறியருள் வேண்டும். தங்கள் யோசனையின்படி நாங்கள் நடப்போம்” -என்று வேண்டிக் கொண்டான். “தருமா! அவனை அழிப்பதற்கு எளிமையான வழியை ஏற்கனவே நான் கண்டுபிடித்து வைத்துள்ளேன். நானும், வீமனும், அர்ச்சுனனும், சராசந்தனின் கோட்டைக்கு மாறுவேடத்தில் அந்தணர்களைப் போலச் செல்கின்றோம்..” “அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடுமா?” “வீமன் ஒருவன் போதுமே, சராசந்தனைக் கொல்வதற்கு?” “நல்லது! அப்படியால் போய் வெற்றியோடு திரும்பி வாருங்கள்” -தருமன் சம்மதித்தான். வீமன், அர்ச்சுனன், கண்ணபிரான் மூவரும் தோற்றத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர். சராசந்தனின் தலைநகருக்குப் பெயர் கிரி விரசநகரம். வலிமையான அரண்களாலும் தகர்க்க முடியாத பாதுகாப்பினாலும் சிறந்தது அந்த நகரம். சூதுவாதறியாத அந்தணர்களைப் போலச் சென்றிருந்ததனால் சராசந்தனின் கோட்டைக்குள் சுலபமாக நுழைய முடிந்தது அவர்களால் அந்தணர்கள் மூவர் சந்திக்க வந்திருப்பதாக மெய்க் காவலர்கள் மூலம் சராசந்தனுக்குக் கூறி அனுப்பினர். தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தான் சராசந்தன். வீமன் முதலிய மூவரும் சென்றனர். சராசந்தன் அவர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தான். அந்தணர்களை உற்றுப் பார்த்தான். ஆட்களை ஒரு முறை கூர்ந்து நோக்கியவுடனே அவர்களை இன்னாரென்று எடை போட்டு நிர்ணயித்து விடுகிற ஆற்றல் பொருந்தியவை அவனது கண்கள்! வீமன் முதலியவர்கள் சராசந்தனை ஏமாற்றுவதற்காக வேற்றுருவில் வந்தார்கள். ஆனால், சராசந்தன் அவ்வளவு சுலபத்தில் ஏமாறிவிடுகிறவனா என்ன? அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா? ‘இவர்கள் மூவரும் க்ஷத்திரியர்கள்! ஏதோ ஒரு சூழ்ச்சியின் நிமித்தம் இப்படித் தோன்றி நம்மை ஏமாற்றக் கருதியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என இப்போதே விசாரித்துவிட வேண்டும்’ சராசந்தன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான். “அந்தணர்களே! உண்மையில் நீங்கள் மூவரும் அந்தணர்கள் தாமா? உண்மையை ஒளிக்காமல் என்னிடம் சொல்லிவிடுங்கள்” -சராசந்தன் திடீரென்று தங்களை இப்படிக் கேட்டது வீமன் முதலிய மூவரையும் திடுக்கிடச் செய்தது. என்ன சொல்வதென்று தயங்கினர். “உண்மையை நீங்களாகச் சொல்லாவிட்டால் நானாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட நேரிடும்” இனியும் தயங்குவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணபிரான் உண்மையைக் கூறிவிட்டார். “நாங்கள் மூவரும் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து வருகிறோம். உண்மையில் நாங்கள் ஷத்திரியர்கள்தாம்! நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன்! மூவரும் மாறுவேடத்தில் இவண் வந்திருக்கிறோம். உண்மை இது தான்.” “என்ன காரியத்திற்காக இந்த மாறுவேடத்தில் இங்கே வந்தீர்கள்?” “கிரிவிரச நகரத்தின் அழகைப் பற்றி கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.” கண்ணபிரான் தன்னைச் சமாளித்துக் கொண்டு இந்த மறுமொழியைக் கூறினார். சராசந்தன் இடி இடிப்பது போலத் கை கொட்டிச் சிரித்தான். “யாரை ஏமாற்றலாம் என்று இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள்? உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம்? நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார்?” “ஏன் நாங்கள் மூவருமே போருக்குத் தயாராக இருக்கிறோம்?” “இல்லை! இல்லை! முடியாது. உங்களில் கண்ணன் என்னோடு பதினெட்டு முறைபோர் செய்து தோற்று ஓடியவன். அவனோடு போர் செய்ய நான் விரும்பவில்லை. அர்ச்சுனனோ வயதில் எனக்கு மிகவும் இளையவன். எனவே அவனோடு போர் புரிவதும் எனக்கு இழுக்கு. இங்கிருப்பவர்களில் வீமன் ஒருவன்தான் என்னோடு சரிநிகர் சமானமாக நின்று போர் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவன். இன்று என்னோடு போரிட்டுச் சாகப் போகின்ற பாக்கியத்தை வீமனுக்கே கொடுக்கிறேன்” -சராசந்தன் குரலில் ஆத்திரமும் வெறியும் தொனித்தன, வீமனும் தானும் செய்யப் போகின்ற ‘போரின் முடிவு என்ன ஆகுமோ?’ -என்று ஒருவகையான கலக்கமும் அவன் மனத்தில் நிலவியது. எதற்கும் முன்னேற்பாடாகத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, அதன் பின் தான் போரில் இறங்குவதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு. அரசவையைச் சேர்ந்தவர்களையும் அமைச்சர் களையும் அழைத்து அப்போதே தன் புதல்வனுக்கு மணிமூடி சூட்டி அரியணையேற்றினான். வீமனுக்கும் சராசந்தனுக்கும் போர் தொடங்கியது. மலைச் சிகரங்களையொத்த தன் புயங்களைத் தட்டிக் கொண்டே வீமன் மேற் பாய்ந்தான் சராசந்தன். ‘உனக்கு நான் எந்த வகையிலும் இளைத்தவனில்லை’ என்று கூறுவது போல மதயானை என அவன் மேல் வீமனும் பாய்ந்தான். இருவருக்கும் போர் நிகழத் தொடங்கியது. போர் என்றால் சாமானியமான போரா அது? அண்ட சராசரங்களையும் நடுங்கி நிலைகுலையச் செய்யும் கோர யுத்தம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. வெற்றி தோல்வி இன்னார் புறம் என்று நினைக்க முடியாதபடி இருந்தது போர் நிகழ்ச்சி. ஆற்றல், வீரம், சரீரபலம் ஆகியவற்றிலும் சமமான இந்த இரு வீரர்களின் போர் பதினைந்து தினங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது. போரின் முடிவு நேரம் நெருங்க நெருங்கச் சராசந்தன் கை தளர்ந்து வீமன் கை ஓங்கியது. சராசந்தனுடைய உடலை வீமன் இரண்டு மூன்று முறை கிழித்துப் பிளந்து எறிந்தான். ஆனால், என்ன விந்தை? சராசந்தனின் பிறந்த உடல் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி உயிர் பெற்றெழுந்து வீமனோடு போர் புரிந்தது. அவனை எப்படித்தான் கொல்வதென்று வீமனுக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? சராசந்தனை எப்படிக் கொல்வது? -என்று தெரியாமல் அவன் திகைத்தான். நல்லவேளையாக அப்போது அருகிலிருந்த கண்ணபிரான் ஒரு சிறு துரும்பைக் கையிலெடுத்து அதை இரண்டாகப் பிளந்து மாற்றி வீமனுக்கு அதை அடையாளமாகக் காட்டினார். வீமன் கண்ணபிரானின் சூசகமான இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். ‘சராசந்தனின் உடலைப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டால் அவன் உறுதியாக அழிந்து போவான்’ -என்று கண்ணபிரானின் குறிப்பு விளக்கியது. உடனே வீமன் முழு ஆற்றலோடு ஆவேசம் கொண்டு சராசந்தனின் மேல் பாய்ந்தான். மறுகணம் சராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டான். சராசந்தன் இறந்தான். வீமன் வெற்றி முழக்கம் செய்தான். உடற் பிளவுகளை முறை மாற்றிப் போடுவதற்கு முன்பு பல முறை உயிர் பிழைத்தெழுந்த உடல் இப்போது மட்டும் உயிரற்று வீழ்ந்து விட்டதைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் வியப்பைக் கண்ணபிரானிடம் கூறினான். அவர் அவனுடைய வியப்பைத் தெளிவு செய்வதற்காகச் சராசந்தனின் வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடங்கி அவனுக்குக் கூறினார். “அர்ச்சுனா! இந்தச் சராசந்தனின் வரலாறு ஆச்சரியகரமானது. அதை உனக்கு இப்போது சொல்கிறேன் தெரிந்து கொள். தேவர்களின் பகைக் குலமாகிய அரக்கர் குலத்தில் ‘பிருகத்ரதன்’ -என்றோர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்குப் பல நாட்களாகப் புத்திரப் பேறு இல்லை . மனம் கலங்கி வருந்திய அவன், ‘சண்ட கெளசிகன்’ என்னும் தவவலிமை மிக்க முனிவரை வணங்கி வழிபட்டுத் தனக்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பிருகத்ரதனின் நிலைக்கு மனமிரங்கிய சண்ட கெளசிக முனிவர் அவனுக்கு உதவ வேண்டுமென்று எண்ணினார். அரிய மாங்கனி ஒன்றை அவனுக்கு அளித்து அதை அவன் மனைவிக்குக் கொடுக்கும் படிக் கூறினார். பிருகத்ரதன் முனிவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அரண்மனைக்குச் சென்றான். அவனுக்கு இரு மனைவியர். அதை அவன் முனிவரிடம் கூறவில்லை. முனிவர் கொடுத்த கனியை முழுமையாக ஒருத்திக்குக் கொடுக்காமல் இரண்டாகக் கூறு செய்து இருமனைவியர்க்கும் கொடுத்துவிட்டான் அவன். அறியாமையால் அவன் செய்த இந்தக் காரியம் விபரீதமான வினையை உண்டாக்கிவிட்டது. குழந்தை பிறக்கின்ற காலத்தில் இரு மனைவியரும் ஆளுக்குப் பாதி உடலாகத் தனித் தனிக் கூறுகளை ஈன்றெடுத்தனர். இம்மாதிரித் தனித்தனி முண்டங்களாகக் குழந்தை பிறந்தது என்ன விபரீத நிகழ்ச்சிக்கு அறிகுறியோ என்றஞ்சிய பிருகத்ரதன் இரவுக்கிரவே யாரும் அறியாமல் அவைகளை நகரின் கோட்டை மதிலுக்கு அப்பால் தூக்கி எறியும்படி செய்துவிட்டான். இரவின் நடுச்சாமத்தில் ‘சரை’ என்ற அரக்கி கோட்டை மதிற்புறமாக வரும் போது இந்த உடற்கூறுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் பார்த்திருக்கிறாள். என்ன அதிசயம்! உடல் ஒன்று சேர்ந்ததோடல்லாமல் குழந்தை உயிர்பெற்று அழத்தொடங்கியது. அவள் உடனே குழந்தையை மன்னன் பிருகத்ரதனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். ‘சரை’யால் ஒன்று சேர்க்கப்பட்ட குழந்தையாகையால் சராசந்தன் என்ற பெயர் இவனுக்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவன் பட்டத்துக்கு வந்ததும் பேரரசர்களை எல்லாம் வெல்லும் மாவீரனாக விளங்கினான். இன்று வீமனால் அழிந்தான்." கண்ணபிரான் இவ்வாறு சராசந்தனுடைய வரலாற்றைக் கூறி முடித்ததும் அவர்கள் சராசந்தனின் புதல்வனைக் கண்டு அந்த நாட்டை ஆளும் உரிமையை அவனுக்கே கொடுத்துவிட்டு இந்திரப் பிரத்த நகரத்துக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் இந்திரப் பிரத்த நகரத்தில் இராசசூய வேள்விக்குரிய ஏற்பாடுகளும் பூர்வாங்கமான நிகழ்ச்சிகளும் ஆரம்பமாயின. சிசுபாலன் போட்டி இராசசூய வேள்வி நிகழ்வதற்கு முன்னால் திக்கு விஜயம் செய்து முடிக்க வேண்டும் என்பது ஓர் மரபு, எல்லாத் திசைகளிலுமுள்ள எல்லா மன்னர்களையும் வென்று பணிவித்த தலைமையோடு அந்த வேள்வியைச் செய்தல் நலம். இதற்காகப் பாண்டவ சகோதரர்களும் திக்கு விஜயத்திற்குப் புறப்பட்டார்கள். வடதிசையை நோக்கி அர்ச்சுனனும் கிழக்குத் திசையை நோக்கி வீமனும் புறப்பட்டார்கள். தகுதி வாய்ந்த படைகளும் உடன் சென்றன. வடமேற்கு, தென்மேற்கு ஆகிய இவ்விரு திசைகளிலும் நகுலனும் தெற்குத் திசையில் சகாதேவனும் புறப்பட்டார்கள். சகோதரர்களை வாழ்த்தித் திக்கு விஜயத்திற்கு அனுப்பி விட்டுத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றார் கண்ணாபிரான். கிழக்குத் திசையிற் சென்ற வீமன், கலிங்கம் முதலிய தேசங்களையெல்லாம் வென்று அந்தந்தத் தேசத்து அரசர்கள் கொடுத்த திறைப் பொருள்களை மலையெனக் குவித்தான். வடக்குத் திசையில் சென்ற அர்ச்சுனன் விந்தமலை, ஏமகூடமலை முதலிய மலைகளைக் கடந்து சென்று அதற்கு அப்பாலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றிக் கொண்டான். இவ்வாறே மற்றத் திசைகளில் சென்றவர்களும் அங்கங்கே பெரு வெற்றிகளை அடைந்தனர். வென்ற நாடுகளிலெல்லாம் அரசர்கள் மனமுவந்து காணிக்கையாகக் கொடுத்த பொருள்கள் மலைகள் மலைகளாகக் குவிந்திருந்தன. எல்லோரும் தாம் தாம் சென்ற திசைகளிலிருந்து இந்திரப் பிரத்த நகரத்துத் திரும்பி வந்தார்கள். இராசசூய வேள்விக்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. துவாரகையிலிருந்து கண்ணபிரானை அழைத்து வருவதற்காக நாரத முனிவர் சென்றார். வேள்வி நடக்கப் போவதை அறிவித்து வெளிநாட்டு அரசர்களுக்கெல்லாம் தூதுவர்கள் மூலம் அழைப்புக்கள் அனுப்பப்பெற்றன. கண்ணபிரானும் பிற நாட்டு மன்னர்களும் இந்திரப் பிரத்த நகரத்தில் வந்து கூடினார்கள். மகாஞானியும் தபஸ்வியும் ஆகிய வேத வியாசரை உலூகன் சென்று அழைத்து வந்தான். இவர்கள் யாவரும் வந்து தங்கியிருப்பதனால் இந்திரப் பிரத்தம் ஒரு தனி அழகைப் பெற்று விட்டது போல் கோலாகலமாக விளங்கியது. மிகவும் சிறப்பான முறையில் வேள்வியை நடத்துவதற்குத் தக்கப்படி வேள்விச் சாலை அமைக்கப்பட்டது. அந்தணர்களும் மறையவர்களும் புனிதமான வேதகோஷங்களைச் செய்தனர். வேள்விச் செயல்களுக்குரிய மங்கல வேளை வந்தது. மூதறிஞராகிய வேதவியாசர் வேள்விக்குத் தலைவனாக தருமனையும் தலைவியாகத் திரெளபதியையும் நியமித்தார். ஏனைய சகோதரர்கள் தமையனின் ஆணை பெற்றுத் தத்தமக்குரிய பணிகளை ஏற்றுக் கொண்டனர். வேள்விக்கு வருகின்ற வர்களுக்கு உணவளித்து உபசரிக்க வீமன் பொறுப்பேற்றுக் கொண்டான். கஸ்தூரி, சந்தனம், பன்னீர், மலர் முதலிய அலங்காரப் பொருள்களை வழங்கும் பொறுப்பை அர்ச்சுனன் ஏற்றுக் கொண்டான். நகுல சகாதேவர்கள் வெற்றிலை பாக்கு முதலிய பொருள்களை வழங்கினர். தானம், பொருட்கொடை, சன்மானம் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவனான கர்ணனிடம் ஒப்பிக்கப்பட்டது. பொருள்களையெல்லாம் நிர்வாகிக்கும் தலைமைப் பொறுப்பைத் துரியோதனன் ஏற்றுக் கொண்டான். தருமனும் திரெளபதியும் மங்கல நீராடி வேள்விக்குரிய ஆடை அணிந்து ஓமகுண்டங்களுக்கு முன்பு வீற்றிருந்தனர். இடம் வலமாக அவர்கள் வீற்றிருந்த தோற்றம் சிவபெருமானும் உமாதேவியாருமே முறை மாறி இடம் வலமாக வீற்றிருப்பது போலக் காட்சியளித்தது. தீக்கொழுந்துகளின் செந்நிற ஒளி திரெளபதியின் பொன்னிற மேனிக்கு மெருகு கொடுப்பது போலச் சுடர் பரப்பியது. ஏழு நாட்கள் கண்ணும் கருத்துமாக வேள்வியை நிகழ்த்தி நிறைவேற்றினார்கள்; அந்தப் புண்ணியத் திருச்செயல் முற்றியதும் தருமனும் திரெளபதியும் தான தர்மங்களைச் செய்தனர். வந்திருந்த அந்தணர்களுக்கும் மறையவர்களுக்கும் புலவர் பெரு மக்களுக்கும் அவரவர்கள் விரும்பிய பரிசில்களை மனமுவந்து அளித்தனர். விருந்தினர்கள் சிறப்பான முறையில் உபசரித்து அனுப்பப் பெற்றார்கள். வேள்வி முற்றிப் பூரணமடைந்ததும் வேள்வியைச் செய்தவர்கள் தக்க பெரியார் ஒருவருக்கு வழிபாடு செய்வது வழக்கம். அப்போது அங்கே இந்திரப் பிரத்த நகரத்து வேள்விச் சாலையில் பல பெரியோர்கள் கூடியிருந்ததனால் யாருக்கு முதல் வழிபாடு செய்வது என்று தருமனுக்குப் புரியவில்லை. அதனால் அவன் வீட்டுமனிடம் யோசனை கேட்கக் கருதினான். வீட்டுமனிடம் கேட்டான். வீட்டுமன் அங்கிருந்தவர்கள் யாவருக்கும் மூத்த வராயினும் அறிவிலே சிறந்த வியாச முனிவரை நோக்கி, “வழிபாட்டில் யாருக்கு முதன்மை கொடுக்கலாம்?” என்று கேட்டார். வியாச முனிவர் ‘அங்குள்ளோரில் முதல் வழிபாட்டைப் பெறத் தகுந்தவர் கண்ணபிரான் ஒருவரே’ -என்று கூறினார். வீட்டுமன் இணங்கினார். தருமனும் கண்ணனுக்கே முதல் வழிபாடு செய்ய உடன்பட்டான். அவ்வளவேன்? வேள்விக் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணபிரானையே வழிபாட்டுக்குரியவராகக் கொள்ள வேண்டுமென்பதில் கருத்து மாறுபாடின்றி மகிழ்ந்திருந்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒரே ஒருவனுடைய உள்ளம் மட்டும் பொறாமையால் குமுறிக் கொண்டிருந்தது. கண்ணபிரான் முதல் வழிபாடு பெறுகிறாரே என்ற நினைவால் நெஞ்சம் குமுறிக் குரோதம் கொண்டிருந்தான் அந்த உள்ளத்துக்குரியவன். அவன் தான் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன். தன்னைப் பற்றித் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளும் இயல்பு வாய்ந்தவன். அகங்காரத்தால் கொழுத்த உள்ளம் படைத்த சிசுபாலன் கண்ணபிரானையே எதிர்த்து இழிவான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவையிலிருந்த பெரியோர்கள் அவன் சொற்களைக் கேட்டு மனங் கூசி நாணினர். “அறிவு, திரு, ஆற்றல் மூன்றிலும் சிறந்த பேரரசர்கள் பலர் இந்த அவையில் கூடியிருக்கின்றனர். மன்னாதி மன்னர்களாகிய அவர்களுக்கு இல்லாத தகுதி கண்ணனிடம் எந்த வகையில் இருக்கிறது? கேவலம்! மாடு மேய்க்கின்ற குலத்திலே பிறந்த கண்ணன் முதல் வழிபாடு பெறுவதென்றால் அது நம்மை எல்லாம் அவமானப்படுத்துவது போல் அல்லவா தோன்றுகிறது? வழிபடும் முதன்மையோ, தகுதியோகண்ணனுக்கு இல்லை. ஆகவே கண்ணனுக்கு முதல் வழிபாடு செய்யக் கூடாது. செய்தால் என் போன்றவர்களின் கோபத்தைக் கிளறிவிடும் காரியமாகவே அது அமையும். அரச மரபிலே உயர்ந்தவர்களாகிய சூரிய வம்சத்தினரும் சந்திரவம்சத்தினரும் இங்கு நிறையக் கூடியிருக்கிறார்கள். அவர்களில் எவருமே இந்த வழிபாட்டிற்குத் தகுதியில்லா தவர்களா? கண்ணனுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? இவன் தன் வாழ்வில் செய்திருக்கும் இழிந்த செயல்களை விரல் விட்டு எண்ண முடியுமா? ஆயர்பாடியில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வெண்ணையையும் நெய்யையும் பாலையும் தயிரையும் திருடி உண்டான். இளம் பெண்களுடன் தகாத முறையில் நெருங்கிப் பழகினான் தான் பிறந்த வேளையின் தீமையால் தன்னைப் பெற்றவர்களையே சிறைவாசம் செய்யும்படி ஆக்கினான். ‘கம்சன் தனக்கு மாமனாயிற்றே’ -என்றும் பாராமல் அவனைக் கொன்று அழித்தான். இன்னும் எத்தனையோ பேர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் இவன் செய்த தீமைகள் எண்ணற்றவை. இத்தகையவனுக்கா வழிபாட்டில் முதன்மை கொடுப்பது? இதில் நியாயத்திற்கு சிறிதும் இடமில்லையே!” சிசுபாலன் ஆத்திர வெறியினாலும் பொறாமையாலும் குமுறும் இதயத்திலிருந்து சொற்களை வாரி இறைத்தான். கண்ணபிரான் தன் கோபத்தைச் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக வீற்றிருந்தார். அவருடைய இந்த அசாத்தியப் பொறுமையைக் கண்டு அவையோர் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். சிசுபாலன் பேசி நிறுத்தியதும் அதுவரை அடக்கமாகவும் அமைதி யாகவும் வீற்றிருந்த கண்ணபிரான் மெல்ல எழுந்து நின்றார். “சிசுபாலா? தகுதியைப் பற்றிய உன் பேச்சுக்களை இங்கே கூடியிருப்பவர்கள் முடிவு செய்வதற்குள் நாமே முடிவு செய்து கொண்டு விடுவது நல்லது. எங்கே? நீ இப்போது போருக்குத் தயார் தானே?” -இவ்வாறு கூறிக் கொண்டே யுத்தத்திற்குத் தயாராகத் தம் தேரில் ஏறி நின்றார் கண்ணபிரான். சிசுபாலன் திடுக்கிட்டுப் போனான், ‘கண்ணனிடம் மிருந்து போருக்கு அழைப்பு வரும்‘ -என்பதை இவ்வளவு விரைவில் அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சமாளித்துக் கொண்டு தேரிலே ஏறித்தானும் போருக்குத் தயாராக நின்றான். அவையிலிருந்து வெளிப்புறம் போருக்கு வசதியான இடத்திற்குச் சென்ற பின் இருவருக்கும் போர் தொடங்கியது. வேள்விக்கு வந்திருந்தவர்களும் சூழ இருந்து போர் நிகழ்ச்சியைக் கண்டனர். சிசுபாலன் பேச்சிலேதான் வீரனாகத் தென்பட்டான். ஆனால் போரிலோ? நொடிக்கு நொடி கண்ணபிரானின் ஆற்றலுக்கு முன்னால் அவன் கை தளர்ந்து கொண்டே வந்தது ‘தகுதி யாருடையது?’ -என்று நிரூபிக்க விரும்புகின்றவரைப் போல முழு ஆற்றலோடு போரில் ஈடுபட்டிருந்தார் கண்ணபிரான். இறுதியில் தம் வலக்கரத்திலிருந்த திகிரியை (சக்ராயுதத்தை) அவன் கழுத்தைக் குறி வைத்துச் செலுத்தினார் அவர். திகிரி வேகமாகச் சுழன்று அவன் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் வியப்பு நிழலிடுகிற முகபாவத்துடன் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். திகிரி சிசுபாலனின் தலையை அரிந்து தலையைப் பிரித்ததும் மற்றோர் ஆச்சரியகரமான நிகழ்ச்சியும் நடந்தது. உயிரிழந்து வீழ்கின்ற அவன் உடலிலிருந்து ஓர் ஒளிப்பிழம்பு புறப்பட்டு நேரே கண்ணபிரானின் திருவடிகளைச் சென்றடைந்தது. ‘ஆகா இது என்ன ஆச்சரியம்? இந்த மாதிரிக் கொடிய மனிதனின் சரீரத்திலிருந்து ஓர் ஒளி புறப்பட்டு இவரைச் சரணடைகின்றதே? இதற்கு என்ன அர்த்தம்?’ -என்று திகைத்து மலைப்புற்றனர் கூடியிருந்தவர் யாவரும். கூடியிருந்தவர்களின் இந்தத் திகைப்பைப் போக்கி உண்மையை விளக்கவியாசமுனிவர் முன் வந்தார். ‘சிசுபாலன் யார்?’ -என்பதை விவரிக்கலானார் அவர். “முன் ஒரு காலத்தில் முன் கோபத்தில் வல்லவரான துருவாச முனிவர் திருமாலைக் காண்பதற்காகச் சென்றார். திருமாலின் இருப்பிடமான வைகுந்தத்தில் வாயில் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் இருவரும் அவருடைய பெருமையை அறியாமல் அவரை உள்ளே விடுவதற்கு மறுத்துவிட்டனர். துருவாசர் அவர்கள் மேல் மிக்க சினங்கொண்டார். எனக்கு இழைத்த இந்த அவமானத்திற்குப் பதிலாக என் சாபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணமே நீங்கள் இருவரும் இவ்வாழ்வைத் துறந்து பூவுலகம் சென்று மானிடராய்ப் பிறந்து துன்பங்களை அனுபவிப்பீர்களாக, அவ்வாறு அனுபவித்தால் தான் உங்களுக்குப் புத்தி வரும்…” என்று கோபம் மேலிட்டுக் கூறினார். அதே சமயத்தில் வாயிற் காவலர்களுடனே யாரோ இரைந்து பேசிக் கொண்டிருக்கும் குரலைக் கேட்ட திருமால் தற்செயலாக வெளியே வந்தார். அங்கே துருவாச முனிவர் சினத்தோடு நிற்பதைக் கண்டதும் விஷயத்தை அனுமானித்துக் கொண்டார். முனிவரை அன்போடு இனிய சொற்களைக் கூறி வரவேற்றார். அவருடைய கோபம் மெல்லத் தணிந்தது. “முனிவர் பெருமானே! அறியாமையினால் தவறு செய்து விட்ட இந்தக் காவலர்களுக்குத் தாங்கள் கொடுத்த சாபம் நீங்குவது எப்போது?…” திருமால் கேட்டார். “எல்லாம் வல்ல இறைவனாகிய உனக்குப் பக்தர்களாக ஏழு பிறவி பிறந்து முடித்ததும் இவர்கள் மீண்டும் இப்போதிருப்பது போல் உன்னிடம் வந்து சேர்வார்கள். அல்லது உன்னைக் கடுமையாக எதிர்க்கும் விரோதிகளாக மூன்று பிறவிகள் பிறந்து மீட்சி பெறுவர். இவ்விரண்டு வழிகளில் இவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை மேற்கொள்ளலாம்” என்றார் துருவாசர். உடனே திருமால், “காவலர்களே! முனிவர் கூறிய இவ்விரண்டு வழிகளில் எதைப் பின்பற்றி நீங்கள் சாபமீட்சி பெறப் போகிறீர்கள்? உங்கள் விருப்பம் யாது?” -என்று தம் காவலர்களை நோக்கிக் கேட்டார். “கருணைக் கடலாகிய பெருமானே! உன்னைத் துறந்து ஏழு பிறவிகள் தனித்து வாழ எங்களால் இயலாது. உன் பிரிவை நாங்கள் ஆற்றோம். எனவே மூன்று பிறவிகள் பகைவர்களாகப் பிறந்தே உன்னை அடைவோம்.” காவலர்களின் மறுமொழி திருமாலைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. துருவாச முனிவரும் மூன்று பிறவிகளிலேயே அவர்களுக்குச் சாபமீட்சி கிடைக்கும்படி செய்தார். காவலர்கள் மண்ணுலகில் சென்று பிறந்தனர். முதற் பிறவியில் ‘இரணியன், இரணியாக்கன்’ என்ற பெயரிலும், இரண்டாம் பிறவியில் ‘இராவணன், கும்பகர்ணன்’ என்ற பெயரிலும் மூன்றாம் பிறவியில் ‘கம்சன், சிசுபாலன்’ என்ற பெயரிலும் முறையே இந்தக் காவலர்கள் மூன்று பிறவிகளிலும் திருமாலுக்குப் பகைவர்களாகத் தோன்றினர். சிசுபாலன் இறந்ததும் அவன் உயிர் கண்ணபிரான் திருவடிகளை ஒளியுருவிற் சென்று அடைந்ததற்குக் காரணம் இது தான்!" இவ்வாறு வியாசமுனிவர் விளக்கம் கூறி முடிக்கவும் திருமாலின் அவதாரமே இந்த கண்ணபிரான்‘ -என்றெண்ணி எல்லோரும் அவரைக் கைகூப்பி வணங்கினர். இவ்வளவும் நிகழ்ந்து முடிந்தபின் துன்பத்தை அனுபவித்துப் பெறுகின்ற இன்பத்தின் சுவையைப் போல இறுதியாகக் கண்ணபிரானை அமரச் செய்து அவருக்கே முதல் வழிபாடு செய்தான் தருமன். யாருடைய மறுப்புமில்லாமல் ஒருமித்த மகிழ்ச்சியுடனே நிகழ்ந்து நிறைவேறியது அந்த வழிபாடு. வழிபாடு முடிந்தபின் அந்தந்த நாட்டு மன்னர்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளையும் மரியாதைகளையும் செய்தார்கள். பெரியோர்களையும் முனிவர்களையும் வணங்கி அவர் களுடைய ஆசியைப் பெற்றார்கள் பாண்டவர்கள். தந்தை பாண்டுவின் விருப்பமாகிய இராசசூய வேள்வியை யாவரும் போற்றும்படியான முறையில் செய்து முடித்த திருப்தி அவர்கள் சிந்தையில் நிலவியது. வேள்வி நிகழ்ந்த ஏழு நாட்களிலும் இந்திரனுடைய அமராபுரியைக் காட்டிலும் கோலாகலமும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்திரப்பிரத்த நகரம் யாவரும் விடை பெற்றுச் சென்றபின் விழா நடந்து முடிந்த இடத்தின் தனிப்பட்ட அமைதியைப் பெற்றது. வியாசர் முதலிய முனிவர்களும் கெளரவர்களும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றபின் இந்தத் தனிமையை இன்னும் நன்றாக உணர்ந்தனர் பாண்டவர்கள். இந்திரப் பிரத்த நகரின் வாழ்வும் தருமனின் ஆட்சியும் எப்போதும் போல் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தன. இராசசூய வேள்வியால் திக்குத் திகந்தமெல்லாம் பரவிய புகழ் அந்த வாழ்விற்கு ஒரு புதிய சிறப்பையும் அளித்திருந்தது. கர்ணன் மூட்டிய கனல் இந்திரப்பிரத்த நகரத்தில் நடந்த வேள்விக்குச் சென்று விட்டுத் திரும்பிய கெளரவர்களின் நெஞ்சம் பொறாமையால் குமைந்து கொண்டிருந்தது. ‘ஒரு சாதாரணமான யாகத்தைச் செய்து அதன் மூலம் எவ்வளவு பெரிய புகழைச் சுலபமாக அடைந்து விட்டார்கள் இந்தப் பாண்டவர்கள்?’ -என்று மனம் குமுறினான் துரியோதனன். மனத்தில் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்த இந்தப் பொறாமை நெருப்பைத் தீயாக வளர்த்துவிட்ட ‘பணி’ கர்ணனுடையது. தானாகவே வளர்ந்து கொண்டிருந்த பொறாமையை வளர்ப்பதற்கு மற்றொருவரும் கூடிவிட்டால் கேட்க வேண்டுமா? “இப்பொழுது நடந்த இந்த இராசசூய வேள்வியால் தருமனும் பாண்டவர்களும் அடைந்தாற் போன்ற புகழை வேறெவர் அடைய முடியும்? ஏற்கனவே சாந்த குணம் ஒன்றுக்காக மட்டும் அந்தப் பேதை தருமனைப் புகழ்ந்து கொண்டிருந்த இந்த உலகம் இனி அவனைத் தன்னிகரில்லாத் தலைவனாகக் கொண்டாடத் தொடங்கிவிடும். மன்னருலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற பெருமையை அவன் அடைந்து விடுவான். வீரத்திலும் ஆண்மையிலும் சிறந்தவர்களாகிய நாம் இனியும் தருமனின் புகழ் ஓங்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது” -கர்ணன் இவ்வாறு துரியோதனன் மனத்தில் நெருப்பை மூட்டினான். இந்தப் பொறாமை நெருப்பு அந்தத் தீயவன் மனத்தில் நன்றாகப் பற்றி எரியத் தொடங்கிற்று. “கர்ணா! இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து திரும்பிய நாள் தொடங்கி என் மனமும் இதே சிந்தனையில்தான் அழுந்தி நிற்கிறது. பாண்டவர் புகழை இதே நிலையில் வளரவிட்டுக் கொண்டு போவது நமக்கு ஆபத்து. அவர்கள் வாழ்வின் சீரையும் சிறப்பையும் கெடுக்க ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து தான் ஆக வேண்டும்” என்று கர்ணனுக்கும் மறுமொழி கூறினான் துரியோதனன். இப்படிக் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட சகுனியும் தன் சொந்தப் பொறாமையை வெளிப்படுத்துவதற்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். அவனும் அவர்கள் பொறாமையைப் பெருக்குவதில் பங்கு கொண்டான். “அரசே! இந்தப் பாண்டவர்கள் நம்மைவிடப் பலசாலிகளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவர்களை அளவுக்கு மீறி உலகம் புகழ்வதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. சிங்கம் குகையிலே பதுங்கிக் கிடக்குமானால் மதயானை, அதனை மிக எளிதில் வென்றுவிடலாம். புகழ்மயக்கத்தில் பதுங்கிக் கிடக்கும் இந்தப் பாண்டவர்களை இப்போது நாம் வென்று விடுவது சுலபம்” -சகுனி இவ்வாறு கூறி முடிக்கவும் அவனருகில் நின்ற துரியோதனன் தம்பி துச்சாதனனுக்கும் துணிவு வந்தது. “பாண்டவர்களின் இந்தப் புகழ் நிலா ஒளியைப் போல மென்மையானது. நம்முடைய ஆற்றலோ கதிரவனின் சக்தி வாய்ந்த கதிர்களை ஒத்தவை. பாண்டவர்கள் எவ்வளவு தான் சிறப்புற்றிருந்தாலும் நம் ஆற்றலுக்கு முன்னால் அது எம்மாத்திரம்?” -துச்சாதனனும் ஒத்துப் பாடினான். இந்த மூன்று பேருடைய பேச்சையும் கேட்ட துரியோதனனுக்குத் தன்னைப் பற்றிய கர்வம் அளவு கடந்து தோன்றிவிட்டது. நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று இறுமாப்புக் கொண்டுவிட்டான் அவன். திருதராட்டினன், வீட்டுமன், விதுரன், துரோணன் முதலிய பெரியோர்களும் தன்னோடு அந்த அவையில் இருக்கிறார்கள் என்பதையே அவன் மறந்து விட்டான். அகங்காரம் அவனை மறக்கச் செய்துவிட்டது என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். “தருமன் திசைகள் நான்கையும் வென்று சிறப்புடன் ஓர் வேள்வியையும் செய்து அதற்குத் தலைவனானான். அவன் தம்பியர்களும் அவனும் ஆற்றலிற் குன்றாத சிறந்த வீரர்கள், பாண்டவர்களது ஆற்றவை இதற்கு மேலும் நாம் வளர விடுவோமானால் அவர்கள் நம்மையே வென்று விடவும் முயற்சி செய்வார்கள். முள்ளோடு கூடிய மரத்தை அது வளர்ந்து பெரிதாவதற்கு முன்பே கிள்ளி எறிந்து அழித்து விடுதல் வேண்டும். அந்த மரம் முற்றிவளரும் படியாக விட்டுவிட்டால் பின்பு கோடாரியால் கூட அதை வெட்டிச் சாய்க்க முடியாது. எனவே பாண்டவர்களை எல்லாமிழந்து தோல்வியுறச் செய்யும் முயற்சியில் நாம் இப்பொழுதே ஈடுபட வேண்டும். போர் செய்தோ, சூழ்ச்சி புரிந்தோ அவர்களை வெல்ல வேண்டும். பாண்டவர்கள் செல்வமிழந்து வாழ்விழந்து வெறுங்கையர்களாய் நிற்பதைக் கண்டு நான் மகிழ வேண்டும்…” பொறாமையும் ஆவேசமும் தூண்டியதனால் பண்பாட்டை மறந்து பேசினான் துரியோதனன். “ஆம்! இன்றே இப்போதே அதைச் செய்தாக வேண்டும். இந்திரப் பிரத்த நகரத்துப் பளிங்கு மண்டபத்தில் நமது மதிப்பிற்குரிய பெருமன்னர் (துரியோதனன்) நடந்தபோது தடுமாறியதைக் கண்டு திரெளபதி இகழ்ச்சி தோன்றச் சிரித்தாள். மன்னர் மன்னனை இகழ்ந்த அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நெருப்பாகக் கொதிக்கிறது. வேள்விக்குச் சென்று வந்தோமே அதில்தான் நமக்கொரு சிறப்பு, மரியாதை உண்டா? எத்தனையோ அரசர்கள் போனார்கள்! வந்தார்கள்! அவர்களில் நாமும் ஒருவராகப் போய் வந்தோம். உறவைக் குறித்தோ, உலகம் புகழும் பேரரசராயிற்றே என்றோ , நமக்கு ஏதாவது தனி மரியாதை செய்தார்களா? எந்தத் தகுதியும் இல்லாத கண்ணபிரானுக்கு அல்லவா அவர்கள் தனிச்சிறப்பும் முதன்மையும் கொடுத்தார்கள். எதிர்த்துக் கூறிய சிசுபாலனை அழித்துவிட்டார்கள். பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து இந்த உலகையே வென்று ஆளக் கருதியிருக்கிறார்கள். இந்தக் கருத்து வெற்றி பெற விடக் கூடாது. இன்றே படையெடுத்துச் சென்று பாண்டவர்களை வெல்ல வேண்டும்…” துச்சாதனன் மீண்டும் இவ்வாறு கூறினான். கர்ணன் பாண்டவர்களுக்கு எதிராகப் பொறாமைக்கனல் முட்டி விட்டிருந்தாலும் அவன் உள்ளத்தில் நேர்மை ஒருபால் வாழ்ந்தது. அதனால் அவன் “அரசே! பாண்டவர்களைப் போர் செய்து வெல்ல வேண்டியது தான் முறை, சூழ்ச்சி செய்து வெல்வது நமக்கு இழுக்கு, நம்முடைய ஆண்மைக்கு இழுக்கு. நாமும் வீரர்கள், நமக்கும் வீரமிருக்கிறது. சூழ்ச்சி செய்ய வேண்டியது ஏன்?” - என்று துணிவோடு துரியோதனனை நோக்கிக் கூறினான். ‘சூழ்ச்சி செய்து வெல்ல வேண்டும்’ -என்ற துரியோதனனின் கருத்தையே கர்ணன் துணிவாக எதிர்த்துப் பேசியது அங்கிருந்தோர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. கூடியிருந்தோர் கர்ணனின் நேர்மையை வியந்தனர். ஆனால் கர்ணனுக்கு நேர்மாறான குணம் படைத்த சகுனி, துரியோதனனுக்கு முன்னால் தன் சூழ்ச்சி வலையைச் சாதுரியமாக விரிக்கத் தொடங்கினான். நல்லவைகளை விடத் தீயவைகளைச் சீக்கிரமே புரிந்து கொண்டு செய்ய முற்படுகின்ற இதயப் பாங்குள்ள துரியோதனன் சகுனியின் சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லத் தன்னையறியாமலே விழுந்து கொண்டிருந்தான். கர்ணன் ‘சூழ்ச்சி கூடாது’ -என்று சொல்லி முடித்த மறுவிநாடியே சகுனி பேசலானான்: “இப்போது பேசிய கர்ணனானாலும் சரி, வானுலக வீரரானாலும் சரி! நேரிய முறையில் போர் செய்து பாண்டவர்களை வெற்றி கொள்வது என்பது நடக்க முடியாத காரியம். இன்று மட்டும் அன்று. இன்னும் ஏழேழுப் பிறவிகள் முயன்றாலும் நடக்க முடியாத காரியம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். திரெளபதிக்கு சுயம்வரம் நடந்தபோது அர்ச்சுனனோடு நாம் போர். செய்தோம். அவன் ஒருவன் நாமோ பலர். ஆனாலும், வெற்றி கொண்டவன் அவன்தான். அர்ச்சுனன் ஒருவனுடைய ஆற்றலுக்கு முன்னால் நாமெல்லோரும் தோல்வியடைந்தோம் என்றால் பாண்டவர்கள் எல்லோரையும் வெல்வது எப்படி? எனவே சூழ்ச்சி ஒன்று தான் பாண்டவர்களை நாம் சுலபமாக வெல்வதற்கு வழி, வேறெந்த வழியினாலும் இயலாது!” “ஆம் ஆம் மாமன் சொல்வது தான் சரி. சூழ்ச்சி செய்து தான் பாண்டவர்களைத் தொலைக்க வேண்டும். வேறு வழியில்லை” -என்று துச்சாதனனும் இப்போது மாமனை ஆதரித்துப் பேசினான். தீமையை விரைவில் புரிந்து கொண்டு அதன் வழி நடக்கின்ற துரியோதனன் மனமகிழ்ச்சியோட சகுனியைத் தன் அரியணைக்கு அருகில் அழைத்தான். தன் யோசனைக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் சகுனி எழுந்து அருகில் சென்றான். “மாமனே! நீ கூறிய யோசனைக்கு என் இதயபூர்வமான நன்றி. சூழ்ச்சியால் தருமனையும் அவன் தம்பியரையும் வெல்லலாம் என்றாய் அப்படி வெல்வதற்கான திட்டங்களையும் நீயே எனக்குக் கூற வேண்டும்” -என்று துரியோதனன் அருகில் வந்த சகுனியிடம் கேட்டான். “அரசே! சூதாட்டத்தில் எத்தகையவர்களையும் வெற்றி கொள்ளும் திறன் எனக்கு இருக்கின்றது. பாண்டவர்களையும் இதே திறமையால்தான் வெல்ல வேண்டும். இந்த நகரில் இதுவரை அமையாத சிறப்புக்களோடு புதிய மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள். அந்த மண்டபத்தைக் காண வரவேண்டும் என்று பாண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பினால் அவர்கள் மறுக்காமல் வருவார்கள். மண்டபத் திறப்பு விழாநாளில் மண்டபத்தை அவர்கள் கண்டு முடித்த பின்,”இப்படியே இந்தப் புதிய மண்டபத்தில் பொழுது போக்காகச் சிறிது நேரம் சூதாடலாம்" என்று சூதுக்கு அழைப்போம். தருமனுக்குச் சூதாட்டம் பிடிக்காது என்றாலும் அதற்கு அவனை இணங்கச் செய்வது கடினமான காரியம் இல்லை. முதலில் விளையாட்டுக்காக ஆடுவது போல ஆடுவோம். பின்பு பாண்டவர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாகக் கவர்ந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள் உடைமைகளைக் கவர்ந்து அவர்களை ஏழையாக்குவது என் பொறுப்பு" -என்றான் சகுனி. அவனுடைய திட்டங்களால் மனமகிழ்ந்த துரியோதனன் அவனை அன்புடன் மார்புறத் தழுவி நன்றி தெரிவித்தான். மாமன் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்ததும் “மாமனின் யோசனையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று விதுரனைப் பார்த்துக் கேட்டான் துரியோதனன். “துரியோதனா! நீயும் சகுனியும் உங்களுடைய குறுகிய மனத்திற்குத் தகுந்த எண்ணங்களையே எண்ணுகின்றீர்கள். பாண்டவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்வதற்கு இவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் எதற்கு? நேரே தருமனிடம் சென்று”உன் அரசும் உடைமைகளும் எங்களுக்கு வேண்டும்" -என்று யாசித்தால் மறு பேச்சின்றி உடனே கொடுத்து விடுவானே! எதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சிகளைச் செய்து உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்திற்கும் களங்கத்தைத் தேடிக் கொள்கிறீர்கள்? இப்படிச் செய்தால் பிறநாட்டு மன்னர்களும் சான்றோர்களும் உங்கள் பண்பைப் பற்றி எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்? சூதாடி அடைகின்ற வெற்றி புகழுக்கும் பெருமைக்கும் மாசு அல்லவா? வேண்டாம் இந்தப் பழி! வேண்டாம் இந்த சூழ்ச்சி! பொறாமையைக் கைவிட்டு நேரிய வழியில் வாருங்கள்" -விதுரன் மனம் உருகும்படியான முறையில் துரியோதனனை நோக்கி இவ்வாறு அறிவுரை கூறினார். எரிந்து நீராய்ப் போன சாம்பலிலிருந்து சூடு, புகை தோன்றுவதில்லை. துரியோதனனுடைய நெஞ்சத்தில் அறிவு சூன்யம், பண்பும் சூன்யம். நேர்மை, நீதி, நியாயம் ஆகிய எண்ணமும் அவன் மனத்தில் தலைகாட்டியது இல்லை. விதுரனுடைய அறிவுரை இத்தகைய தீமை நிறைந்த ஒரு மனத்தில் எப்படி நுழைய முடியும்? உண்மையை எடுத்துரைத்த அந்த அறிவுரையை அவன் ஏளனம் செய்தான். அவனுடைய மனமும் ஏளனம் செய்தது. விதுரன் செல்கிறான் நல்லவர்கள் உள்ளன்போடு கூறினாலும் அந்த அறிவுரை தீயவர்களின் மனத்தோடு பொருந்துவதில்லை. தண்ணீரில் எண்ணெய் கலப்பதில்லையல்லவா? விதுரன் கெளரவர்களுக்குக் கூறிய அறிவுரையும் இதே கதியைத்தான் அடைந்தது. அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அதைக் கூறிய விதுரன் மேல் அவன் அளவற்ற ஆத்திரம் அடைந்தான். “நீ சிறிதும் நன்றியில்லாதவன்! கெளரவர்கள் ஆதரவில் வாழ்ந்து கொண்டே பாண்டவர்களுக்காகப் பேசுகிறாயே? ‘அரசாட்சியைக் கொடு’ -என்று தருமனிடம் கேட்டு வாங்க முயன்றால் தயங்காமல் கொடுத்து விடுவான் என்கிறாய்! அப்படிக் கேட்டு வாங்குவது எங்களுக்கல்லவா இழிவைக் கொடுக்கும்? இந்த மாதிரிப் பயனற்ற வழிகளைத்தான் எங்களுக்காக நீ கூறுவாய்! உனக்கு வேறென்னதான் கூறத் தெரியும்?” என்று துரியோதனன் விதுரனை இவ்வாறு வாயில் வந்த வண்ணமெல்லாம் பேசியதைக் கேட்டு அவையிலிருந்த சான்றோர்கள் தலைகுனிந்தனர். விதுரனும் சற்றே பொறுமை இழந்தான்; “துரியோதனா! மொழி வரம்பு கடந்து பேச வேண்டாம். உங்கள் நன்மைக்காகத்தான் இந்த அறிவுரைகளைக் கூறினேன். இதில் எனது சுயநல நோக்கம் சிறிதும் இல்லை. விருப்பமிருக்குமானால் கேட்டு அதன் படி செய்யுங்கள். இல்லையானால் வீண் வார்த்தைகளை ஏன் பேசுகிறீர்கள்?” -என்று ஆத்திரத்தோடு கூறிவிட்டான் விதுரன். அடிக்க அடிக்க அதைப் பொருட்படுத்தாமல் மேலும் படத்தைத் தூக்கி கொத்த வரும் பாம்பைப் போல இவ்வளவு கூறிய பின்பும் மேலும் விதுரனைத் தூற்றிச் சில வார்த்தைகளைச் சொன்னான் துரியோதனன். ‘இனியும் இந்த அரசவையில் நாம் உட்கார்ந்து கொண்டிருப்பதில் பயன் இல்லை, அர்த்தமும் இல்லை’ -என்பதை உணர்ந்து கொண்ட விதுரன் அமைதியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான். இந்த மட்டிலாவது நம்முடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் தடை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு மனிதன் இங்கிருந்து வெளியேறினானே! -என்ற மகிழ்ச்சி துரியோதனனுடைய உள்ளத்தில் ஏற்பட்டது. இறுதியில் சகுனியைக் கொண்டாடி அவனுடைய ஆலோசனையையே ஏற்றுக் கொண்டான் துரியோதனன். பாண்டவர்களைச் சூதுக்கு அழைப்பதற்காக மண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய முற்பட்டனர் கௌரவர்கள். சித்திர வினைஞரும், சிற்ப வித்தகர்களும், தச்சர்களும் உடனே அவைக்கு அழைத்து வரப்பட்டனர். “கண்டவர்கள் அதிசயித்து வியக்கத்தக்க அழகான மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள்” என்ற கட்டளை பிறந்தது. துரியோதனனின் ஆணைக்குட்பட்ட குறுநில மன்னர்கள் மண்டபப் பணிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கினர். மண்டப வேலை மிகவும் துரிதமாக வளர்ந்து வந்தது. தீய எண்ணங்களும் அவற்றின் விளைவுகளும் எப்போதுமே இது போல் அசாத்தியமாக வேகத்தோடு வளர்வது தான் வழக்கம். ஆனால், ‘வேகமான வளர்ச்சிக்கு எல்லாம் வேகமான அழிவும் தொடர்கிறது’ -என்று எண்ணிக் கொள்ள வேண்டும். இந்த உலகத்து அழகெல்லாம் கூடி ஒன்று திரண்டு விட்டதோ என்று சொல்லுமாறு மண்டபம் உருவாகி முடிந்தது. தன் வஞ்சகத்தின் முதல்படியாகிய அந்த மண்டபத்தைக் கண்கள் நிறையக் கண்டு மகிழ்ந்தான் துரியோதனன். பின்பு கர்ணன் சகுனி முதலிய தன் தோழர்களை அழைத்துக் கொண்டு தந்தை திருதராட்டிரனைப் பார்த்து அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காகச் சென்றான். சகுனி, கர்ணன் ஆகியோர் இடையிடையே விளக்கம் கூறத் துரியோதனன், ‘பாண்டவர்களை மண்டபம் காண அழைக்க வேண்டும் - அப்படியே அவர்களைச் சூதினால் வெல்ல வேண்டும்’ என்ற கருத்தைத் தன் தந்தைக்குக் கூறினான். திருதராட்டிரனுக்கிருந்த சிறிதளவு கருணையையும், நல்ல உள்ளத்தையும் கூட அந்த மூவருமாகச் சேர்ந்து போக்கிவிட்டார்கள். புறக்கண்களை மட்டும் இழந்திருந்த அவன், அவர்களுடைய வஞ்சகம் நிறைந்த பேச்சால் அகக் கண்களையும் பறி கொடுத்தான். பாண்டவர்களை மண்டபம் காண அழைப்பது போல் அழைத்துச் சூதாடி வெல்ல வேண்டும் என்ற சூழ்ச்சிக்கு அவனும் இணங்கினான். பெருமைக்குணம் படைத்த தந்தை சிறுமைக்குத் தலையசைத்தான். “மகனே! சரியான காரியம் செய்தாய்? படை திரட்டிப் போர் முனையில் நேருக்கு நேர் நின்று எதிர்த்தாலும் பாண்டவர்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாது. எனவே சூதாட்டத்தினால் வெல்வதே முடியும். இந்த அரிய திட்டத்தைச் சகுனிதான் உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சகுனிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!” என்று இவ்வாறு வாழ்த்தினான் திருதராட்டிரன். இந்த நல்ல சமயத்தைக் கைவிட விரும்பாத துரியோதனன், “தந்தையே! பாண்டவர்களை இந்திரப் பிரத்த நகரத்திலிருந்து மண்டபம் காண அழைத்து வர வேண்டும் அல்லவா? அந்த அழைப்பை மேற்கொண்டு செல்லத்தக்க தூதுவர் விதுரர் தாம் ! ஆகவே அவரையே தூதுவராக அனுப்பிவிடுங்கள்!” -என்றான். விதுரனுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் அவனை ஈடுபடுத்தி, துன்புறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை ! அந்த ஆசையும் அடுத்த விநாடியிலேயே நிறைவேறியது. திருதராட்டிரன் ஒரு பணியாளைக் கூப்பிட்டு விதுரனை அழைத்துக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். சில நாழிகைப் போதில் விதுரன் திருதராட்டிரனுக்கு முன்பு வந்து வணங்கி நின்றான். “விதுரா ! இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்று இங்கே கட்டியிருக்கும் புதிய மண்டபத்தைக் காண்பதற்காகப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு உன்னைத் தூதுவனாக அனுப்புகிறேன்!” -திருதராட்டிரனின் இந்தச் சொற்கள் நெருப்புக் கங்குகள் போல விதுரன் செவியிற் புகுந்து மனத்தைச் சுட்டன. அவன் மிகவும் வெறுத்த சூழ்ச்சி எதுவோ அதை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவனே கருவியாக இருப்பதா? மனச்சான்று வதைத்தது. இதற்கு இணங்காமலிருந்து விட்டால் என்ன?’ -என்று நினைத்தான். ஆனால் திருதராட்டிரன் அழைப்பையும் தூதுத்திரு முகத்தையும் எழுதிக் கையில் கொடுத்தபோது விதுரனால் மறுத்துப் பேச முடியவில்லை. பேசாமல் இருந்து விட்டான். துரியோதனனுக்கு இருப்பதைப் போல, கூசாமல் பெரியோர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் தனக்கும் இல்லாமல் போய் விட்டதே என்ற விநோதமான ஏக்கம் அவனுக்கு இப்போது உண்டாயிற்று. மனத்தையும் அதன் எண்ணங்களையும் மறைத்துக் கொண்டு இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கித் தூது புறப்பட்டான் அவன். ‘பாண்டவர் நலனில் அக்கறை கொண்ட தானே அவர்களைச் சூழ்ச்சியில் மாட்டி வைக்கலாமா?’ என்றெண்ணும்போது, ‘நாம் என்ன செய்யலாம்? கடமைக்காகத்தானே தூது செல்கிறோம்!’ என்ற சமாதானமும் அவன் மனத்திலேயே உண்டாகும். விதுரன் தூது புறப்பட்டு வருகின்ற செய்தி பாண்டவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. சிறிய தந்தை முறையினராகிய அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இந்திரப்பிரத்த நகரத்தின் அழகையும் செல்வ வளத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கொண்டே நகருக்குள் பிரவேசித்தான் விதுரன். ‘இந்த அழகிய நகரத்திற்குரியவர்களின் நலம் நிறைந்த வாழ்வு இன்னும் சில நாட்களில் என்ன கதியை அடையப் போகிறதோ? விதியின் போக்கை என்னவென்று சொல்வது?’ -என்று அவன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். பாண்டவ சகோதரர்கள் ஐவரும் விதுரனை அன்போடும் உவகையோடும் வரவேற்று உபசரித்தனர். விதுரன் திருதராட்டிர மன்னனின் திருமுகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு உங்களை அத்தினாபுரிக்கு அழைத்து வருமாறு உங்கள் பெரிய தந்தை திருதராட்டிர மன்னர் என்னை இங்கே தூதுவனாக அனுப்பினார்’ என்று வந்த காரணத்தைக் கூறினார் விதுரன் கொடுத்த திருமுகத்தைப் படித்து முடித்த தருமன், “இந்த அழைப்பின் அந்தரங்கமான நோக்கம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை” - என்றான். துரியோதனன், சகுனி முதலியவர்கள் செய்திருக்கும் சூழ்ச்சி நிறைந்த தீர்மானத்தைப் பாண்டவர்களிடம் தெளிவாகக் கூறிவிடலாமா? வேண்டாமா? -என்று ஒரு கணம் தனக்குள் யோசித்தான். கூறி விடுவதனால் எந்தத் தவறும் இல்லையென்று முடிவு செய்து கொண்டபின் கூறிவிடுவது என்றே துணிந்தான். “தருமா! திருதராட்டிரன், உங்களுக்குக் கொடுத்துவிட்டிருக்கும் திருமுகத்தில் என்னவோ ‘மண்டபம் காண்பதற்காக வரவேண்டும்’ -என்று அழைத்திருக்கிறான். வெளிப்படையான இந்த அழைப்பில் வேறோர் சூழ்ச்சியும் மறைந்திருக்கிறது. நீங்கள் மண்டபம் காணச் செல்லும் போது சகுனியின் துணைக் கொண்டு துரியோதனன் உங்களைச் சூதாடுவதற்கு அழைப்பான். நீங்கள் இணங்கினால் உங்களோடு சூதாடி உங்களுடைய எல்லா உடைமைகளையும் கவர்ந்து கொள்ள வேண்டுமென்று கெளரவர்கள் சூழ்ச்சி செய்துள்ளார்கள். உங்களை அழைத்திருப்பதின் அந்தரங்கமான நோக்கம் இது தான்.” விதுரன் கூறியவற்றைக் கேட்டதும் தருமனுக்கு உண்மை தெளிவாக விளங்கிற்று. ‘சூதாட்டத்திற்காகத் தன்னை அழைக்கிறார்கள்’ -என்று எண்ணும் போதே தருமன் உள்ளம் புண்பட்டது. ‘ஒரு மனிதனின் எல்லாவிதமான சிறப்புகளும் அழிவதற்குச் சூது காரணமாக அமைய முடியும். அறிவு, சத்தியம், ஆண்மை முதலிய உயரிய குணம் நலன்களெல்லாம் சூதாடத் தொடங்குகிறவனிடமிருந்து ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. கள், காமம், சூது என்று இவை மூன்றையும் விலக்கப்பட வேண்டிய குணங்களாக அறிஞர்கள் கூறுவார்கள். இந்த மூன்றிலும் கூட இறுதியிலுள்ள சூது மிகவும் பயங்கரமான ஒன்றாகும். எத்தனையோ மன்னாதி மன்னர்களையும் நற்குடிப் பிறந்தவர்களையும் கெட்டழிந்து போகச் செய்திருக்கிறது இந்தச் சூது கள்ளும், காமமும் மனிதனுடைய உடலைப் பேரளவிலும் அறிவைச் சிற்றளவிலும் தான் பாதிக்கின்றன. ஆனால் சூதோ மனிதனுடைய ஒழுக்கம், சத்தியம், அறிவு எல்லாவற்றையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ‘சத்தியம், தருமம்’ -என்னும் இவை இரண்டை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னையும் இந்தச் சூது பாதிக்கும்படியாக விடலாமா? இல்லை! ஒருபோதுமில்லை. ‘சூதாட்டத்தினால் தருமபுத்திரனுடைய வாழ்க்கையில் மிகப்பெரியதோர் களங்கம் புகுந்து விட்டது’ -என்று நாளைய உலகில் இப்படி ஓர் அவச் சொல் எழும்படியாக விடலாமா? கூடாது! கூடவே கூடாது’ -தருமனுடைய மனத்திற்குள் ஒரு சிறு போராட்டம் நிகழ்ந்து ஓய்ந்தது. திருதராட்டிரனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதா? புறக்கணிப்பதா? என்று போராடி முடிவு காண இயலாமல் நின்றது அவன் மனம். அரசவையைச் சேர்ந்த பெரியோர் களிடமும், விதுரனிடமும், தன் சகோதரர்களிடமும் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்த பின்பே ஒரு முடிவுக்கு வரலாமென்று தோன்றியது அவனுக்கு “உலகில் நாமெல்லாம் எண்ணுகின்ற எண்ணங்களைக் காட்டிலும் விதியின் எண்ணம் வலிமை வாய்ந்ததாக இருக்கின்றது. நம் எண்ணப்படி. விதி நம்மை வாழ விடுவதில்லை. விதியின் எண்ணத்தையோ நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சிறிய தந்தையே! கெளரவர்கள் எங்களை எதற்காக அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்ற மர்மம் எங்களைக் காட்டிலும் உங்களுக்கு நுணுக்கமாக விளங்கியிருக்கிறது. எனவே நீங்கள் தான் இதைப் பற்றி எங்களுக்கும் பயன்படும் படியான யோசனையைக் கூற முடியும் நாங்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? அருள் கூர்ந்து உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்”… என்று தருமன் விதுரனை வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளில் பணிவும் குழைவும், சிறிய தந்தை என்ற உறவுரிமையும் நன்கு வெளிப்பட்டன “தருமா! உரிமையும் அன்பும் கலந்த உன்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நான் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன், கேட்டுக் கொள்!” “சொல்லுங்கள்! கேட்கிறேன்…..” “சூதாட்டத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இப்போது நீ என்னவெல்லாம் சிந்தித்துப் பதறுகின்றாயோ அவற்றையெல்லாம் துரியோதனனுடைய அவையில் தானே கூறினேன். ‘சூதாட்ட நினைவு கூடாது’ -என்று சொல்லித் தடுப்பதற்கு முயன்றேன். ஆனால் என் சொற்களை அங்கே யாராவது பொருட்படுத்திக் கேட்டால் தானே? பிறருடைய சிந்தனையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டு கவலைப்படக்கூடாது’ -என்று அன்றிலிருந்து ஒரு சங்கல்பம் எனக்கு உண்டாகியிருக்கிறது. எனவே உன் பெரிய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பதை நீயே சிந்தித்து உன் மனத்தில் தோன்றும் முடிவின்படி நடந்து கொள்வதுதான் நல்லது! இவை தவிர இப்பொழுது நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை’என்று பற்றில்லாத முறையில் அமைந்து விட்டது விதுரனின் பதில். இந்தப் பதிலைப் பற்றித் தருமன் தனக்குள் சிந்திக்க ஆரம்பிக்கு முன் வீமன் குறுக்கிட்டுப் பேசினான். “அண்ணா! பொறுமையையும் உறவு முறையையும் நம்பி வீண் போக இனியும் நாம் பேதையர்களில்லை. எந்த வகையிலாவது நம்முடைய வாழ்க்கையைக் கெடுக்கவேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கௌரவர்கள். நாம் இளைஞர்களாக இருந்த காலத்திலிருந்து துரியோதனாதியர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மை அழித்து விடுவதற்கு முயன்று வருகின்றார்கள். இப்போது நம்மை மறைமுகமாகச் சூதாட அழைப்பதன் நோக்கம் தான் என்ன? நம்முடைய அரசுரிமையையும், உரிமைக்குட்பட்ட சகல விதமான உடைமைகளையும் பறித்துக் கொள்ள வேண்டுமென்பது தானே அவர்களது எண்ணம்? விஷவிருட்சத்தைப் போன்ற இந்தத் தீய எண்ணத்தை வளரவிடாமல் உடனடியாகக் - களைந்தெறிய நாம் முயல வேண்டும்’ உடன் பிறந்தவர்கள் என்ற உறவைப் பார்க்காமல் உடனே அவர்கள் மேல் படையெடுக்க வேண்டும். படையெடுத்து அவர்களை நிர்மூலமாக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் நாம் ஆண்மையுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்புவதில் அர்த்தமே இல்லை.” என்று தன் உள்ளத்தில் கவிந் திருந்த ஆத்திரத்தையெல்லாம் கொட்டி விட்டான் வீமன். மனுடைய ஆவேசப் பேச்சு முடிந்ததும் அர்ச்சுனன் தன் கருத்தைக் கூறினான். “நம்பத் தகுந்தவர்களை நம்பாமலிருப்பதும், நம்பத்தகாதவர்களை நம்புவதும் கூடாது. நமக்குப் பலவிதத்திலும் பகைவர்களாக இருப்பவர்களை நம்முடைய உறவினர் என்றெண்ணி அவர்களுடைய தீமைகளுக்கு இரையாவது பேதைமை. பொது உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. அரசியல் - உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. எனவே, துரியோதனாதியர்கள் அழைப்பை மிகுந்த சிந்தனைக்குப் பின்பே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அர்ச்சுனனைத் தொடர்ந்து நகுல, சகாதேவர்களும் இதே கருத்தைத் தருமனிடம் வற்புறுத்திக் கூறினார்கள். துரியோதனாதியர் சூழ்ச்சியை எண்ணி அவர்கள் மனங்குமுறுகிறார்கள் என்பது அவர்கள் சொற்களிலிருந்தே புலப்பட்டது. அவர்கள் யாவரும் கூறிவற்றைப் பொறுமையாக இருந்து கேட்ட தருமன் தன் எண்ணத்தைக் கூறத் தொடங்கினான். “துரியோதனாதியர்களின் போக்கு நாம் மனம் ஒப்பிப் பழகக்கூடிய விதத்தில் இல்லை என்பது உண்மைதான்! அதற்காகப் பெரிய தந்தையின் அழைப்பை நாம் எப்படி மறுக்க முடியும்?” “நம்மைச் சூழ்ச்சியினுள்ளே புதைய வைப்பதற்கு அழைப்பவர்கள் யாராயிருந்தால் என்ன? நாம் போகக்கூடாது” என்று வீமன் கூறினான். “போகாமல் இருப்பதுதான் நல்லது!” -என்று அர்ச்சனனும் அதையே கூறினான். “இல்லை! இல்லை! போகாமல் இருக்கக்கூடாது! அப்படிச் செய்வது பெரிய தவறு ! இன்ப துன்பங்களை விலக்கவும் அனுபவிக்கவும் நாம் யார்? விதி நம்முடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதில்லையே! கெளரவர்களோடு சூதாட வேண்டும் என்று இருந்தால் அது நடந்து தான் தீரும். நீங்கள் நால்வரும் எனக்குத் தம்பியர்களானால் என்னுடன் பிறந்தவர்களானால் நான் கூறுகிறபடி கேளுங்கள். பெரிய தந்தை திருதராட்டிரனின் அழைப்பை மேற்கொண்டு அத்தினாபுரிக்குப் போகத்தான் வேண்டும். புறப்படுவதற்குரிய ஏற்பாடுகளைக் செய்க. சத்தியமும் தர்மமும் சாமானியர்களின் வெற்றுச் சூழ்ச்சியால் அழிவதில்லை! அழியாது” -தருமன் இவ்வளவு ஆணித்தரமாகக் கூறிய பின்பு அவனை எதிர்த்துப் பேச இயலாமல் சகோதரர்கள் சம்மதிக்க வேண்டியதாயிற்று. ‘பாண்டவர்கள் திருமுகத்தை ஏற்றுக்கொண்டு வருவதற்கு இசைந்துவிட்டார்கள்’ -என்ற செய்தியைக் கூறுவதற்காகத் தூதுவனாக வந்திருந்த விதுரன் முன்பே புறப்பட்டுச் சென்றான். அரண்மனையிலும் தருமனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் நடுவிலும் பாண்டவர்களின் பயணச் செய்தி விரைவில் பரவியது. பயணத்திற்கு தேவை யான ஏற்பாடுகளும் துரிதமாக நடக்க தொடங்கியிருந்தன. விதியின் வழியில் மறுநாள் காலையிலேயே பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர். பரிவாரங்களும் படைகளும் உடன் வரும் சிற்றரசர்களுமாகப் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ஐந்து ஒளிமிகுந்த தேர்களில் ஏறிச் சென்றனர். தருமன் நடுநாயகமாகவும் மற்றவர்கள் சூழவும் சென்ற நிலை, நட்சத்திரங்களுக்கிடையே சந்திரன் பவனி வருவது போலத் தோன்றியது. திரெளபதியும் அந்தப்புரத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் அழகிய சின்னஞ்சிறு பல்லக்குகளில் பிரயாணம் செய்தனர். நிமித்திகர், கணிகர் முதலிய அரண்மனைப் பணியாளரும் வழக்கப்படி உடன் சென்றனர். இந்திரப் பிரத்த நகரிலிருந்து சில நாழிகைகள் பயணஞ் செய்து ஒரு காட்டுப் பகுதியை அடைந்தபோது, அங்கே சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பல்லிகள் தீமைக்கறிகுறியான குரல் கொடுத்ததையும், செம்போத்து என்னும் பறவைகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்குச் சென்றதையும் செல்லும் வழியை மறித்துக் கொண்டு ஆண் மான்கள் கொம்புகளை ஆட்டிச் சண்டை செய்ததையும் கண்டு நிமித்திகர்கள் மனம் வருந்தினர். இந்த நிமித்தங்களால் ஏற்படக் கூடிய தீய பலன்களை உடனே தருமனிடம் கூறவும் கூறினர். அப்படிக் கூறியபோது தருமன் அவர்களுக்குக் கூறிய பதில் அவர்களையே திகைக்கச் செய்தது. “நிமித்திகர்களே! தீமை நிகழப் போகிறது என்பதை உங்கள் சகுன பலன்களால் மட்டுந்தானா தெரிந்துகொள்ள முடியும்? அதற்கு முன்பே என் மனத்திற்குத் தெரிகிறதே! உங்கள் நிமித்தம், நிமித்த பலன் இவைகளைக் காட்டிலும் விதி சக்தி வாய்ந்தது. அந்த விதி வகுத்த வழியின் மேலே தான் இப்போது நான் என் தம்பியர்கள்; ஏன்! நாம் எல்லோருமே சென்று கொண்டிருக்கிறோம். அதை மீற எவராலும் முடியாது. அதன்படியே எல்லா நிகழ்ச்சிகளும் நிகழும்”. இந்த பதில் மொழிகளைக் கேட்டபின் நிமித்திகரும் ஏனையோர்களும் பேசாமல் இருந்தனர். நீண்ட நேரப் பிரயாணத்திற்குப் பின்பு வழியருகில் தென்பட்ட ஓர் குளிர்ந்த சோலையில் அவர்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். சோலைக்கு நடுவே ஒரு பொய்கை இருந்தது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் யாவரும் அதில் நீராடினர். பல வகை மலர்களைக் கொய்து மகளிர்கள் தத்தம் கருங்குழலில் கவர்ச்சிகரமாகச் சூடிக் கொண்டனர். அங்கே தங்கியிருந்த நேரம் யாவருக்கும் களிப்பை அளித்து விட்டுக் கழிந்தது. சோலையிலிருந்து புறப்பட்ட பின்னர் வரிசையாக மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்களைக் கடந்து சென்றனர். வயலும் ஊர்களும் சூழ்ந்த பிரதேசமாகிய மருத நிலத்தில் வெண்ணெய், தயிர், பால் முதலியவற்றை அந்நில மக்கள் அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்து கொடுத்தனர். மலைச்சிகரங்களின் பசுமை கலந்த கம்பீரமான அழகையும், கடலின் எல்லையற்ற நீலநிற நீர்ப்பரப்பையும் முறையே குறிஞ்சி, நெய்தல் நிலங்களில் கண்டுகளித்தவாறே அவர்கள் சென்றனர். பாண்டவர்கள் துரியோதனாதியர் தலைநகரமாகிய அத்தினாபுரியை நெருங்கும்போது அந்தி மயங்கி இருட்டு கின்ற நேரமாக இருந்ததனால் ஊருக்கு வெளியே புறநகரிலிருந்த சோலையொன்றில் இரவு நேரத்தைக் கழித்துவிட்டு மறுநாள் காலை நகருக்கு பிரவேசிக்கலாம் என்று தீர்மானித்தனர். பிரயாண அலுப்புத் தீர அந்தக் சோலையில் இரவைக் கழித்தனர். கீழ்த்திசை வெளுத்து அருணோதயமாகப் போகின்ற சமயம் தருமன் விழித்துக் கொண்டான், தம்பியர்களையும், திரெளபதியையும் எழுப்பினான். யாவரும் அங்கேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நகருக்குள் கிளம்பினர். படைகளும் பரிவாரங்களும் மட்டும் தருமன் கட்டளைப்படி அதே சோலையில் இருந்தன. தம்பிமார்களோடும், மனைவியோடும் நகரத்துக்குள்ளே புறப்பட்டுச் சென்ற தருமன் நேரே பெரிய தந்தை திருதராட்டிரனின் மாளிகைக்குச் சென்றான். காவலர்கள் மூலம் திருதராட்டிர மன்னனுக்குத் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லியனுப்பினான். உள்ளே சென்று வந்த காவலர்கள் தருமன், திரெளபதி, தம்பியர்கள் ஆகிய யாவரையும் அழைத்துக்கொண்டு போய்த் திருதராட்டிர மன்னனுக்கு முன்னால் நிறுத்தினார்கள். உடனே பாண்டவர்களும் திரெளபதியும் தங்கள் வரவைத் தந்தைக்கு அறிவிக்குமுகமாக அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருதராட்டிரன் அன்போடு தன் தம்பியின் மக்களைத் தழுவிக் கொண்டு நிறை நெஞ்சுடனே அவர்களுக்கு ஆசி கூறினான். நீண்ட நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பின்பு “நீங்கள் வீடுமன், காந்தாரி முதலியவர்களை இன்னும் சந்தித்து வணங்கி ஆசிபெற வில்லையே?” என்று கேட்டான், “இல்லை! இனிமேல் தான் அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றான் தருமன். “அப்படியானால் சென்று அவர்களைச் சந்தித்து விட்டு வாருங்கள். சகோதரர்கள் திருதராட்டிரன் சொற்படியே செய்யக் கருதி அவனை வணங்கிப் புறப்பட்டனர். காந்தாரியை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் புறப்பட்டபோது திரெளபதி மட்டும் அங்கேயே தங்கினாள். அறிவிலும் வீரம், விரதம் முதலியவற்றிலும் தனக்கு இணையற்ற மூதறிவாளராகிய வீட்டுமனைக் கண்டு வணங்கியபோது,”எல்லா நலங்களும் பெறுவீர்களாக!" என்று வாழ்த்தினார் அவர். இவர்களைச் சந்தித்து வணங்கி முடித்தபின் தங்களுக்கு அந்தரங்க முடையவரும் சிற்றப்பனும் ஆகிய விதுரனின் அரண் மனைக்குச் சென்றனர், அவர்கள் அங்கே செல்லும் போது. இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். விதுரன் மாளிகையிலேயே இருந்தான். மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு இரவு உணவை அங்கேயே உண்டனர். உணவுக்குப்பின் அவர்கள் சற்று நேரம் நிலா முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். காந்தாரியுடன் தங்கியிருந்த திரெளபதியும் விதுரன் மாளிகைக்கே அழைத்து வரப்பட்டிருந்தாள். தம்பியர்கள், திரெளபதி, விதுரன் இவர்களெல்லோரும் உறங்குவதற்குச் சென்ற பின்பும் தருமன் மட்டும் அப்படியே நிலா முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகளெல்லாம் ஏற்படுகின்றன? மெய்ம்மையையும் அறத்தையும் காப்பதற் காக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கின்றது?’ -தருமனுடைய எண்ணங்கள் சுழித்துச் சுழித்து வளைந்தன. அதுவரை மேகக் கூட்டங்களின் கருமைப் பிடியில் சிக்கியிருந்த சந்திர பிம்பம் மெல்ல வெளிப்பட்டது. அந்த முழுமதி வடிவத்தையும் அதனிடையே தென்பட்ட சின்னஞ்சிறு களங்கத்தையும் தருமன் ஊன்றி நோக்கினான், ‘ஆகா! என் வமிசத்தைச் சேர்ந்த துரியோதனன், எண்ணற்ற தீமைகளையும், சூழ்ச்சிகளையும் செய்யப்போகிறான். அவனைத் தடுக்க நான் எழுந்துள்ளேன்’ என்று அந்தச் சந்திரபிம்பம் வாய் திறந்து பேசுவது போலிருந்தது. இன்னும் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபின் தருமன் உறங்கச் சென்றான். விதிக்கு வெற்றியும் பாண்டவர்களுக்குச் சோதனையும் எடுத்துக் கொண்டு வருவது போல மறுநாளும் வந்தது. பாண்டவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்து முடித்துக் கொண்ட பின் துரியோதனாதியரின் புதிய மண்டபத்தைக் காணச் சென்றனர். செல்வதற்கு முன்னால் அறம் செய்வதையே தன் இயற்கைக் குணமாகக் கொண்ட தருமன், ஏழை எளியவர்களுக்குப் பலவகைத் தான தருமங்களைச் செய்திருந்தான். இதற்குள் துரியோதனனே பாண்டவர்களை அழைத்து வருவதற்காகப் பிராகாமி என்ற தேர்ப்பாகனை அனுப்பி விட்டான். அவனுக்கும் கர்ணன், சகுனி முதலியவர்களுக்கும் “எப்படியும் இன்று பொழுது மறைவதற்குள்ளே பாண்டவர்களை வெறுங்கையர் களாக்கிவிட வேண்டும்” என்ற வைராக்கியம், தீமை நிறைந்த இந்த வைராக்கியத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அன்று காலை விரைவாகவே அரசவைக்கு வந்திருந்தனர் அவர்கள். மண்டபம் காணச் செல்வதற்கு முன்னால் திரெளபதியைக் காந்தாரியிடம் போய் இருக்குமாறு அனுப்பிவிட்டனர் பாண்டவர்கள். துரியோதனாதியர்களும் மற்றவர்களும் புதிய மண்டபத்திலேயே வந்து கூடியிருந்தனர். பாண்டவ சகோதரர்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததும் திருதராட்டிரன், வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களை வணங்கினர். மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க அவர்களை அழைத்துச் சென்றனர். துரியோதனன் முதலியோர். எல்லா வகையிலும் உயர்ந்த பொருள்களைக் கொண்டு உயர்ந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் அழகு பாண்டவர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. தருமன் அதனைப் புகழ்ந்து கெளரவர்களிடம் கூறி அவர்களைப் பாராட்டினான். மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தபின் எல்லோரும் அங்கு இருந்த அவையில் வந்து முறைப்படி அமர்ந்தார்கள். அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் துரியோதனன் ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ - என்றெண்ணியவனாகத் தன் சூழ்ச்சி வலையை விரித்தான். “உணவு கொள்வதற்கு இன்னும் மிகுந்த நேரமாகும். அதுவரை நாம் இங்கே பொழுது போகாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டுதானே இருக்கப் போகின்றோம்! பொழுது போக்காக கொஞ்ச நேரம் சூதாடினால் என்ன?” என்று துரியோதனன் தருமனைப் பார்த்துக் கேட்டான். “அறநெறிக்கு முரண்பட்ட குணங்களில் இந்தச் சூது மிகக் கொடியது. ‘இதனைப் பொழுதுபோக்காக விளையாடலாம்’ என்று நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். வேண்டாம்! என்னால் உங்களுடைய இந்த வேண்டுகோளுக்கு இணங்க முடியாது. சூதாடி அதில் வெற்றி பெற்று அதன் மூலம் என்னிடம் எந்தப் பொருளை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை இப்போதே கேளுங்கள். சிறிதும் தயங்காமல் கொடுத்து விடுகிறேன்” -என்றான் தருமன். தீமைக்கு இணங்க மறுக்கும் உறுதியும் ஆவேசமும் அவனுடைய கம்பீரமான குரலிலிருந்து வெளிப்பட்டன. துரியோதனன் தனக்குள், ‘தருமன் சம்மதிக்காமல் போய் விடுவானோ?’ என்று அஞ்சினான். ஆனால் மறுகணமே சகுனியின் பேச்சு அவனுடைய பயத்தைப் போக்கியது! ‘தருமா! நீ கூறுவது போலச் சூதாட்டம் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்று அல்ல. ஆனாலும் நீ ஏனோ இதற்கு இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றாய்? சூதுக்காய்களின் முடிவுப்படியே ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் ஏற்படுகின்றன. வேறெந்தவிதமான சூழ்ச்சிக்கும் இதில் இடமில்ல. உனக்குச் சூதாடுவதற்கு வேண்டிய திறமை இல்லையென்றால் அதற்காகச் சூதாட்டத்தை ஏன் குறை சொல்கிறாய்?" தருமன் சகுனிக்கு மறுமொழியே கூறவில்லை. மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். சகுனி இந்த மெளனத்தைப் பொருட்படுத்தாமலே மேலும் பேசத் தொடங்கினான். “நான் கூறுவதைக் கேள்! ஒருவரை ஒருவர் நம்பி விருப்பத்தோடு சூதாடப் போகிறோம் நாம். நான் தோற்றால் நீ வெற்றி அடைவாய் நீ தோற்றால் நான் வெற்றி அடைவேன். இவ்வளவுதானே? வேண்டுமானால் உனக்காக இரண்டு மடங்கு பந்தயப் பொருளை நான் கொடுக்கிறேன். எனக்கு நீ ஒரு பங்கு பந்தயப் பொருளைக் கொடுத்தால் போதும். சூதாடத் தயங்குகிறாயே நீ? உன்னிடம் செல்வம் இல்லையா? நீ ஏழையா?… பின் ஏன் தயங்குகின்றாய்? பசுவதை செய்துவிட்டுப் பின்னர், ‘ஐயோ, மாபெரும் பாவத்தை செய்து விட்டோமே! என்ன விளைவு நேருமோ?’ என்று நடுங்குகிறவர்களைப் போல நீயும் நடுங்குகிறாயே ஏன்? சூதாடுவதற்குக் கூடத் தைரியமில்லாமல் அஞ்சினால் உன் ஆண்மையைப் பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?” -என்று தன்னுடைய முழுச் சாமர்த்தியத்தையும் பயன் படுத்தித் தருமனை இணங்கச் செய்வதற்கு முயன்றான் சகுனி. ‘தான் அப்போது தன் வழியில் சிந்தித்துத் தன் போக்கில் நடக்கும் நிலையில் இல்லை! விதியின் வழியில் சுழன்று கொண்டிருக்கிறோம்’ -என்பதை உணர்ந்திருந்த தருமன் முன் போலவே அமைதியாக இருந்தான். ‘தருமனின் அமைதி தங்கள் சூழ்ச்சிக்குத் தோல்வியாகி விடுமோ’ -என்று படபடப்பும் ஆத்திரமும் கொண்டு விட்டான் கர்ணன். அந்த ஆத்திரத்தில் ‘என்ன பேசுகிறோம்? நம் பேச்சு யார் யாருக்குக் கோபத்தை உண்டாக்கும்’ -என்ற சிந்தனையே இன்றிப் பேசி விட்டான் கர்ணன். “தருமா! நீ வீரமுள்ள ஓர் ஆண் மகன் தானா? விளையாட்டாகச் சிறிது நேரம் சூதாடுவதற்கு அழைத்தால் அதற்கு இவ்வளவு தூரம் நடுங்கிப் பதறுவானேன்? கேவலம் சூதாட்டத்திற்கே நீ இவ்வளவு நடுங்கினால் போர்களத்தில் போர் செய்வதற்கு இன்னும் எவ்வளவு நடுங்குவாயோ? நீயும் உன் சகோதரர்களும் வெட்கமுள்ளவர்களாக இருந்தால் இப்போதே உங்கள் இந்திரப்பிரத்த நகரத்திற்கு திரும்பி ஓடிப்போய்க் கோட்டைக் கதவுகளைத் தாழிட்டு விட்டு ஒளிந்து கொள்ளுங்கள்.” கர்ணன் இப்படிச் சொல்லி வாயை மூடவில்லை! படீரென்று ஒரு சப்தம் கேட்டது. வேறொன்றுமில்லை! வில்லை நாணேற்றுகின்ற சப்தம்தான். அவையிலுள்ள அத்தனை பேரும் தர்மன் உட்படத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். கனல் கக்கும் விழிகளோடு கர்ணனின் வாயைக் குறி வைத்து வில்லை நாணேற்றி அம்பைத் தொடுக்கத் தயாராகிவிட்டான் அர்ச்சுனன். இன்னும் ஒரு கணம்!.. ஒரே ஒரு கணம் கழிந்திருந்தால் அர்ச்சுனனின் அம்பு கர்ணனின் வாயை உதடுகளோடு அறுத்துக் கீழே வீழ்த்தியிருக்கும். “இந்த மண்டபத்தை கட்டியதும், இதைப் பார்ப்பதற்காக என்று எங்களை வரவழைத்ததும், இப்போது ‘பொழுது போக்காகச் சூதாடலாம்’ என்று சூழ்ச்சியில் மாட்டி வைக்க முயல்வதும் உங்கள் வஞ்சகத் திட்டத்தின் விளைவுகள். எங்களுக்கு எல்லாம் தெரியும்! ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இதோ, இந்தக் கர்ணன் பொறுமையே உருவான எங்கள் தமையனைப் பார்த்து அருவருக்கத்தக்க முறையில் இழிந்த சொற்களைப் பேசுகிறான். தகுதியுணர்ந்து பேசத் தெரியாத இவன் நாவுக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன்” என்று அர்ச்சுனன் மீண்டும் நாணை இழுத்து அம்பைக் குறி வைத்து செலுத்த முயன்றான். அவையிலிருந்தவர்கள் ஒன்றும் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். கர்ணனும், அர்ச்சுனனை எதிர்க்கத் தோன்றாமல் செதுக்கி வைத்த சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அவன் வாயை அம்பு துளைப்பதும் நாவு அறுபடுவதும் தவறாது என்றே எல்லோரும் எண்ணி விட்டனர். இந்த இக்கட்டான நிலையில், “தம்பீ பொறு” என்று ஒரு சாந்தம் நிறைந்த குரல் அர்ச்சுனன் செவியில் நுழைந்தது. குரல் கேட்டதை அடுத்து சினத்தினால் விம்மித் தணிந்து கொண்டிருந்த அவனது பருத்த தோள்களில் மெல்லியதோர் அன்புக்கரம் விழுந்தது. அர்ச்சுனன் கையை வில்லிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தருமன் அவனருகில் நின்று கொண்டிருந்தான். வில் அவனுடைய கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நெருப்பை அணைக்கும் நீரைப் போலத் தன் பார்வை ஒன்றினாலேயே அர்ச்சுனனின் ஆத்திரத்தைப் போக்கி விட்டான் தருமன். ‘தன் வாய் அறுந்து விழுவது உறுதி‘ -என்று நடுநடுங்கியவாறே நின்று கொண்டிருந்த கர்ணனுக்கு இப்போது தான் நடுக்கம் நின்று நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அர்ச்சுனன் சினம் தணிந்து தன் இடத்தில் அமர்ந்து விட்டான். இதை அடுத்துத் தருமன் கூறிய சொற்கள் தாம் யாவரையும் பேராச்சரியம் கொண்டு மலைத்துப் போகும்படி செய்தன. “கர்ணா! சினம் கொண்டு விட்டால் ‘இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசலாம். இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசக் கூடாது’ என்ற வரம்பே இல்லாமல் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசிவிடலாமா? ‘போர் செய்யத் தெரியாத கோழை’ என்றாய் என்னை. வீரமும் போரும் தெரிந்த மெய்யான ஆண்மையாளர்களுக்கு உன்னைப் போலத் தற்புகழ்ச்சி செய்யத் தெரியாது. நான் போர் செய்ய அஞ்சுகிறவனில்லை, என்னோடு போர் செய்ய எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த எதிரியையே நாடுவேன். தெரிந்து கொள். இன்னொன்று உங்கள் சூதாட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன். வரச்சொல் சகுனியை! ஆடிப் பார்க்கிறோம். முடிவுகள், விதியிட்ட வழி ஏற்படட்டும். நான் தயார். உங்கள் பொறுமையையும், மிகக் குறைவான அறிவையும் இனி இதற்கு மேலும் நான் சோதிப்பதற்கு விரும்பவில்லை” -என்று தருமன் முடித்தான். மாயச் சூதினிலே! ‘சூதாடுவதற்குச் சம்மதம்’ என்று தருமன் கூறிய வார்த்தை அந்த அவையிலிருந்த பெரியோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டுமன், விதுரன் முதலிய முதியோர்களும் பிறரும் ‘இறுதி வரை தருமன் சூதாட்டத்திற்கு சம்மதிக்க மாட்டான்’ என்றே எண்ணியிருந்தனர். அவன் திடீரென்று அதற்குச் சம்மதித்தது கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். துரியோதனன் தருமனிடம் சூதாட்டத்துக்குரிய நிபந்தனைகளைக் கூறலானான். “இந்தச் சூதாட்டத்தில் உன் பங்குக்காக வைத்து ஆட வேண்டிய பந்தயப் பொருள்களை நீயே வைத்து ஆட வேண்டும். சகுனியின் பங்குக்குரிய பந்தயப் பொருள்களை நான் கொடுப்பேன்.” “சரி, சம்மதம்” -தருமன் இதற்கு இணங்கினான். ‘விதிக்கு முழு வெற்றி. தருமனுக்குப் படுதோல்வி. தருமனும் சகுனியும் சூதாடும் களத்தில் எதிரெதிரே ஆசனங்களில் அமர்ந்தனர், மாயச் சூது தொடங்கியது. காய்கள் உருண்டன். அழகிலும் ஒளியிலும், விலை மதிப்பிலும் தனக்கு இணையில்லாத முத்துமாலை ஒன்றைத் தருமன் பந்தயமாக வைத்தான். அதற்கு இணையான மற்றோர் மாலை சகுனியின் சார்பில் துரியோதனனால் வைக்கப்பட்டது. சகுனிக்குச் சூதாட்டத்திலுள்ள எல்லாத் தந்திரங்களும் நன்றாகத் தெரியும். ‘என்ன மாயம் செய்து அவன் எப்படிக் காயை உருட்டுகிறான்?’ என்றே விளங்கவில்லை. வெற்றி அவன் பக்கமே சேர்கிறது. முதல் ஆட்டத்திலேயே தருமனுக்கு தோல்வி! முத்து மாலை தருமனிடமிருந்து சகுனியின் கைகளுக்கு மாறியது. இரண்டாவது பந்தயமாகக் கண்ணபிரானால் தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட தேர் ஒன்றை வைத்து ஆடினான் தருமன். சூதாட்டக் காய்களைச் சகுனி மந்திரம் கூறி வசியப்படுத்திவிட்டானோ என்று கூறும்படி இரண்டாம் பந்தயத்திலும் வெற்றி. சகுனியின் பக்கமே விளைந்தது. கள்ளைக் குடிக்கக் குடிக்க அதுகாரணமாக எழுகின்ற வெறியைப் போன்றது சூதாட்டத்தில் ஒருவருக்கு உண்டாகும் ஆசை ‘இழந்த பொருள்களை மீட்க வேண்டும்’ என்ற ஆசையினால் மீண்டும் மீண்டும் இழந்து கொண்டே போவது சூதாட்டத்தில் தோற்றவர்களின் இயல்பு. இந்த நிலையில் தருமனுடைய மன இயல்வும் இதே விதிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. தருமன் தன்னுடைய நால்வகைப் படைகளில், யானைப்படை, குதிரைப்படை முதலியவற்றை வைத்துத் தோற்றான். அரண்மனை உபயோகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேர்களை வைத்து இழந்தான். நாடுகள், அரசு, அரசாள்கின்ற உரிமை, அழகிலும் கலைகளிலும் சிறந்த உரிமை மகளிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வைத்துப் பறி கொடுத்தான். சகுனி சிரித்துக் கொண்டே ஆடினான். துரியோதனன் கர்ணன், துச்சாதனன் முதலியவர்களும் சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். தருமனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. தானும் தம் தம்பியர்களும், திரெளபதியும்தான் இப்போது தருமனின் உடைமைகள், அடுத்து என்ன செய்வது? எதைப் பந்தயமாக வைத்து ஆடுவது? என்று தெரியாமல் கலங்கிய மனத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்த தருமனைச் சகுனி வலுவில் தானாகவே வம்புக்கு இழுத்தான். “ஏன் தயங்குகிறாய் தருமா? உன்னையே ஓர் ஆட்டத்துக்குப் பந்தயமாக வைத்து ஆடேன்! நீயும் தோற்றுவிட்டால் உன் தம்பியர் நால்வரையும் அதற்கு அடுத்த ஆட்டத்திற் பந்தயமாக வைக்கலாமே!” -இப்படிக் கூறிய சகுனியைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்தனர், வீமனும் அர்ச்சுனனும். ஆனால் விளையாட்டு வெறியில் மூழ்கிக் கிடந்த தருமனுக்குச் சிந்தனை செய்ய மனம் இருந்தால் தானே? சகுனியின் கூற்றையே யோசனையாக ஏற்றுக் கொண்டு அடுத்த ஆட்டத்தை உடனே ஆரம்பித்தான் அவன். “சகுனி! இந்த ஆட்டத்திற்கு என்னையே பந்தயமாக வைக்கிறேன். விளையாடு பார்க்கலாம்…” சகுனி தன் சொல் உடனே பலித்ததை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டே காய்களை உருட்டினான். காய்கள் அவனை ஏமாற்றவில்லை. அவன் சொற்படியே உருண்டன்! தருமன் தன்னையே தோற்றுக் கொண்டு விட்டான். தானே தன் தலையில் நெருப்பை அள்ளி வைத்துக் கொண்ட மாதிரி தன்னைத் தோற்ற ஏமாற்றச் சாயை நெஞ்சில் அழிவதற்கு முன்பே, “என் தம்பிமார் நால்வரையும் பந்தயமாக வைக்கிறேன். இந்த ஆட்டத்திற்குக் காய்களை உருட்டுக” என்று கூசாமல் கூறினான் தருமன். அவனுக்குச் சூதாட்ட வெறி பிறந்துவிட்டது. விதியின் கைக் கருவிகள் தாமே அந்தச் சூதாட்டக் காய்கள்? அவை வழக்கம் போலவே சொல்லி வைத்தாற் போலச் சகுனிக்குச் சாதகமாக உருண்டன. தருமனுக்கு அதே நிலையில் அப்படியே சுவாசம் நின்றுவிடும் போல ஆகிவிட்டது. திக்பிரமை பிடித்துப் போய்ச் சிலையாக உட்கார்ந்து விட்டான். “என்ன தருமா! எல்லாவற்றையும் தோற்றாகிவிட்டது. இனிமேல் தோற்பதற்கு ஒரு பொருளும் இல்லை போலிருக்கிறது?” -வெந்த புண்ணில் புண்ணுக்கு மருந்திட வேண்டிய மருத்துவனே வேலை நுழைத்தாற் போலச் சகுனி கூறினான். இதற்குள் துரியோதனனும் கர்ணனும் சகுனியைத் தங்கள் அருகில் அழைத்து அவன் காதோடு காதாக ஏதோ கூறினார்கள். சகுனி அவர்களுக்குத் தலையசைத்து விட்டுச் சிரித்துக் கொண்டே மீண்டும் தருமனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான். தருமன் சகுனியிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை . துயரம், ஏமாற்றம், ஏக்கம், கழிவிரக்கம் ஆகிய எல்லாத் துன்ப உணர்ச்சிகளும் அவனுடைய முகபாவமாகத் திரண்டிருந்தன. எங்கோ சூனியத்தை நோக்கி இலக்கற்றுப் போய் இலயிப்பின்றி நிலைத்துக் கிடந்தது அவன் பார்வை. “நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளக் கூடாது தருமா! உண்மையில் உன்னுடைய நன்மைக்காகத் தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்”… தன் குரலில் தருமனுக்குப் பரிவோடு யோசனை கூறுகிற அக்கறை இருப்பது போலப் பாசாங்கு செய்தான் சகுனி. தருமன் மெல்லத் திரும்பிச் சகுனியின் முகத்தைப் பார்த்தான். “நீ இதுவரை என்னிடம் தோற்றுப் போய் இழந்த எல்லாப் பொருள்களையும் திருப்பிப் பெற வேண்டுமானால் என்னுடைய இந்த யோசனையை நீ புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.” “என்ன யோசனை அது?. அதைத்தான் சொல்லேன்” -தருமன் ஆவலோடு கேட்டான். “ஒன்றும் பெரிய யோசனை இல்லை. சாதாரணமானது தான்!… உங்கள் மனைவி திரெளபதியைப் பந்தயமாக வைத்து இன்னும் ஒரே ஓர் ஆட்டம் ஆடினால், ஒவ்வொன்றாக இழந்த பொருள்களை மீண்டும் பெற்று விட முடியும்…” அவையிலிருந்த அத்தனை பேருக்கும் தலையில் ஆயிரமாயிரம் மலைகளின் சிகரங்கள் தவிடுபொடியாகிப் பாறைகள் விழுந்து அமுக்குவது போலிருந்தது. செவிகளிலே நெருப்புக் கங்குகள் நுழைந்தாற் போல இந்தச் சொற்கள் புகுந்தன. வீமன் முதலிய நால்வருக்கும் சகுனியை அறைந்து கொன்றுவிடலாம். போலக் கைகள் துறுதுறுத்தன. “இந்த உலகத்தில் தருமத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கலி புருஷன் சகுனி, துரியோதனன் முதலியவர்களின் உருவத்தில் பிறந்திருக்கிறான்” -என்று பெரியவர்கள் வருத்தத்தோடு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு முற்றிய பிறகும் கூட அவையில் எல்லோரினும் முதியவனாக இருந்த திருதராட்டிரன் அனுதாபத்தையும் வெளிப்படுத்தாமல் வாயையும் திறவாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். இதை முதலிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த விதுரனுக்கு அடக்க முடியாத சினம் உண்டாகிவிட்டது. அவன் திருதராட்டிரனை நோக்கிக் குமுறியெழுந்தான். அவன் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடிதுடித்தன, “அண்ணா! உனக்குக் கண்கள் மட்டும் இல்லையா? அல்லது செவிகளும் கூட இல்லையா? இந்த அநீதியை, அக்கிரமத்தைச் செவிகளில் கேள்விப்பட்ட பின்பு கூட நீ பிடித்து வைத்த மண் பொம்மை போல இப்படி வாயையே திறக்காமல் உட்கார்ந்திருக்கலாமா? துரியோதனாதியர்களைப் போலவே பாண்டவர்களும் உனக்கு மக்கள் முறை உடையவர்கள் தாமே? உன் சொந்த மக்கள் பாண்டவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு இவ்வளவு தீமைகளைச் செய்வதை நீ கண்டிக்க வேண்டாமா? இம்மாதிரி வஞ்சகச் செயல்கள் எல்லாம் குருகுலத்தின் மேன்மைக்குப் பொருந்துமா? இரு சாரார்க்கும் தந்தை முறை கொண்டு முதன்மை பூண்டிருக்கும் நீயும் இவர்களுடைய சூழ்ச்சிகளுக்கெல்லாம் உடந்தையா? புறக் கண்களைப் போலவே அகக் கண்களும் குருடாகி விட்டனவா உனக்கு? ‘திரெளபதியைப் பந்தயமாக வை’ -என்று கூசாமல் வாய் திறந்து சொல்கிறான் இந்தச் சகுனி. அதை ஆமோதிப்பது போல நீயும் மௌனம் சாதிக்கிறாய். வேண்டாம் இந்தப் பழி. உடனே இந்த சூதாட்டத்தைத் தடை செய்து பாண்டவர் பொருள்களை எல்லாம் அவர்களுக்கு வாங்கிக் கொடு. இல்லையேல் குருகுலத்தின் மானம், பெருமை, புகழ் எல்லாம் இன்றே செத்துப் போய்விட்டன என்று எண்ணிக் கொள்!” தன் ஆத்திரம் முழுவதையும் பேச்சில் கொட்டி விட்டான் விதுரன். ஆனால் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டிருந்த திருதராட்டிரன் விதுரனுடைய பேச்சை இலட்சியம் செய்யாமலே இருந்து விட்டான். கண்களை இழந்த அவன் இப்போது பேசுவதற்கு இயலாமல் வாயையும் இழந்து ஊமை ஆகிவிட்டானோ? -என்று கண்டோர் எண்ணுமாறு தோன்றியது அவனுடைய குரூரமான அந்த மெளனம். இனியும் இவனை வேண்டிக் கொள்வதில் பயனில்லை. எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கட்டும்! விதியைத் தடுக்க நாம் யார்? -எண்றெண்ணி மனம் அமைந்தான் விதுரன். சகுனி கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிப் போன தருமன், ‘திரெளபதியையும் ஒரு பந்தயமாக வைத்துத் தான் பார்ப்போமே’ -என்று எண்ணத் தொடங்கி விட்டான். ‘இழந்த பொருள்களை எல்லாம் மீண்டும் பெறலாம்’ -என்ற நம்பிக்கையால் இந்தத் துர் எண்ணம் விநாடிக்கு விநாடி பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது. தருமனுடைய அறப்பண்பு, சத்தியம், ஒழுக்கம் எல்லாம் அந்த விநாடி அவனை விட்டு இலட்சோப இலட்சம் காத தூரம் விலகி ஓடிப் போய்விட்டன. சூதுவெறி அவன் பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது. “சரி திரெளபதியே பந்தயம். இறுதியாட்டம் இது தான்! விளையாடு” -தருமனுடைய வாயிலிருந்து சொற்கள் வெளிவந்து முடியவில்லை. சகுனி மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இறுதி ஆட்டத்திற்காகக் காய்களை ஊருட்டிவிட்டான். பொல்லாக் காய்களும் உருண்டன. மனிதர்களில் நல்லவர்கள் உண்டு. தீயவர்கள் உண்டு! நல்லவைகள் உண்டு, தீயவைகள் உண்டு. நேர்மை நீதிகள் உண்டு! வஞ்சகம் வம்புகள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டு இருக்கிறோம். கேவலம் மரத்தினால் செய்த சூதாட்டக் காய்களிலுமா அப்படி உண்டு? வஞ்சகத்தைக் குணமாகக் கொண்டே சகுனியின் மனத்தைப் போலவே அந்தக் காய்களைத் தச்சன் செய்திருந்தானோ என்னவோ? காய்கள் இந்த இறுதி முறையிலும் தருமனைக் கைவிட்டு விட்டன. தருமன் திரெளபதியையும் தோற்றுவிட்டான். தோற்கக் கூடாத பொருளைத் தோற்றுவிட்டான். விதிக்கும் கெளரவர்களுக்கும் வெற்றி. சத்தியத்துக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு சோதனை. ‘திரெளபதியையும் தோற்றுவிட்டோம்’ என்றெண்ணும் போது ஒரு சில கணங்கள் அவன் உள்ளம் தளர்ந்தது. ஒடுங்கியது, விம்மியது, உணர்வுகள் குழம்பின. அவன் கலங்கினான். மிக விரைவிலேயே அவனுடைய இயற்கைக் குணமாகிய, சாந்த குணம், கை கொடுத்து உதவியது. தருமன் கலக்கமின்றி இருந்தான். தீயன செய்கின்றான் சூதாட்டத்தினால் தருமனுக்கு விளைந்திருந்த அடுக்கடுக்கான தோல்விகளைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கினார்கள். தோற்கடிக்க முடியாத பொருள்களைத் தாங்களே தோற்றுவிட்டது போன்ற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறு இரங்கிப் பேசிக் கொண்டார்கள்! “என்ன இருந்தாலும் பண்பிற் சிறந்தவனாகிய தருமன் இத்தகைய சூழ்ச்சி நிறைந்த சூதாட்டத்திற்கு இணங்கியிருக்கக் கூடாது!” “இணங்கினால் தான் என்ன? இப்படியா தோல்விமேல் தோல்வியாக ஏற்பட்டு நல்ல மனிதனை மனங்கலங்கச் செய்ய வேண்டும்? விதிக்குக் கண்ணில்லையா? அறக் கடவுளுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?” “எல்லாம் இந்த மாமனுடைய வஞ்சகச் செயல்கள். துரியோதனனும் அவனுடைய தந்தையும் பாண்டவர்கள் தங்களுக்கு உறவினர்களாயிற்றே! என்றெண்ணியாவது இந்த சூதாட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். தருமன் பொறுமை சாலிதான். அவனால் இந்தத் தோல்விகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்து விட முடியும். ஆனால் வீமன் கோபம் மிக்கவன். அருச்சுனனுக்கோ சினத்தால் கண்கள் இரண்டும் இப்போதே சிவந்து விட்டன. இதன் விளைவு என்ன ஆகுமோ?” “தன் புதல்வர்கள் பாண்டவர்களுக்குச் செய்யும் தீமைகளைக் கண்டும் பேசாமல் இருக்கிறான் இந்தத் திருதராட்டிரன். நெருப்பைக் கைகளால் ஓங்கி அறைந்தால் கைகள் தாம் சுடும். பாண்டவர்கள் நெருப்பைப் போலத் தூயவர்கள். அந்த நெருப்போடு மோதுகிறார்கள் குற்றம் நிறைந்த இந்தக் கெளரவர்கள். இவர்கள் அழியப் போவது நிச்சயம்” மேற்கண்டவாறு பலவிதமான பேச்சுக்கள் அந்தப் பெரிய அவையிலிருந்த மக்களிடையே நிலவின. துரியோதனன் இறுமாப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். தருமதேவதை எங்கே இருக்கிறது என்று அப்போது தேடிப் பார்த்திருந்தால் அது மானசீகமாக அழுது கொண்டிருந்ததைக் கண்டிருக்கலாம். “தருமன் யாவற்றையும் எங்களிடம் தோற்றுவிட்டான். இது அவனுடைய போதாதகாலத்தைத்தான் காட்டுகிறது. அந்தத் தேவடியாள் திரெளபதி அன்று இந்திரபிரத்த நகரத்தில் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தாள். மனங்குமுறிப் பெரிதும் வருந்தினேன். இன்று, இதோ இன்னும் சிறிது நேரத்தில் அந்தத் தேவடியாளைக் கண்டு நான் ஏளனச் சிரிப்பு சிரிக்கப் போகிறேன். தருமனும் அவனுடைய தம்பியர்களும் கட்டுக்கடங்காத கர்வம் பிடித்துத் திரிந்தார்கள். இப்போது அவர்களுடைய கர்வம் ஒடுங்கும் நேரம் வந்து விட்டது.” அவையிலுள்ளோர் யாவரும் கேட்கும்படியாக இப்படி இகழ்ந்து கூறினான் துரியோதனன். வயது முதிர்ந்த சான்றோராகிய வீட்டுமரை இச்சொற்கள் பெரிதும் புண்படுத்தின. “துரியோதனா! உங்களுக்குள் பகைமை, குரோதம் முதலிய வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சகோதரர்கள். பலர் கூடியிருக்கும் அவையில் உடன் பிறப்பென்ற முறையையும் பொருட்படுத்தாமல் நாகரிக வரம்பையும் மீறி இப்படி இகழ்ந்து பேசுவது நல்லது அல்ல.” அப்போதிருந்த பகைமை வெறியில் வீட்டுமரின் இந்த அறிவுரையை அவன் பொருட்படுத்தவே இல்லை. விதுரனை அழைத்து, ‘’இந்தச் சூதாட்டத்தில் பாண்டவர்கள் நம்மிடம் தோற்ற பொருள்களை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றும் வேலையை நீ செய் அதோடு நாம் வெற்றி பெற்றிருக்கும் இந்த நல்ல நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்படி ஊராருக்கு அறிவிக்கச் செய்" என்றான். ஏற்கனவே மனங்கலங்கித் துயரத்தில் ஆழ்ந்திருந்த விதுரன் இந்த வார்த்தைகளைக் கேட்டும் கேட்காதவனைப் போல வீற்றிருந்தான். விதுரனுடைய அமைதியைக் கண்ட துரியோதனன் அவனை இன்னும் பெரிய துன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, “நல்லது! நீ இந்த வேலைகளையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. திரெளபதி இனிமேல் நமக்குச் சொந்தமானவள். அந்தப்புரத்திற்குப் போய் அவளை இங்கே கூட்டிக் கொண்டு வா. வர மறுத்தால் பலவந்தமாகவாவது அழைத்து வர வேண்டும்” என்று புதிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான். விதுரனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தன் அமைதியைத் தானே மீறிக் கொண்டு பேசினான் அவன். “நீ எத்தகைய தீய சொற்களை வேண்டுமானாலும் பேசு! நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திரெளபதியை இகழ்ந்து பேசாதே. அந்தப் பேச்சு என் ஆத்திரத்தைக் கிளரச் செய்கிறது. உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். முற்பிறவியில் இராட்சதர்களாக இருந்தவர்கள் இப்போது மனித உருவில் பிறந்திருக்கின்றீர்கள். இப்போது அரக்கத்தனமான செயல்களைச் செய்யத் தொடங்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ளப் போகிறீர்கள். என்னால் உங்களுக்குக் கூற முடிந்தது இதுதான். இதை நீங்கள் கடைப் பிடித்தால் நல்லபடியாக வாழலாம். உங்கள் போக்கின்படி சென்றாலோ அழிவுதான்” -கூறி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் விதுரன். “உனக்கு எப்போதும் எங்களைத் தூற்றுவதே வழக்கம். எங்களிடம் சோறு உண்டு சுகம் அனுபவித்து விட்டு பாண்டவர்கள் பக்கம் பரிந்து பேசும் நன்றி கெட்ட செயலைத்தான் நீ செய்வாய்! உன் பேச்சை இப்போது இங்கே எங்களில் யாரும் கேட்கத் தயாராயில்லை.” துரியோதன்னுடைய இதழ்களில் ஏளனச் சிரிப்பு நெளிந்தது. அவன் பிராதிகாமி என்ற பெயருடைய தேர்ப் பாகனை அழைத்தான். விதுரனுக்கு இட்ட அதே கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. “பிராதிகாமீ! இவர் நிறைவேற்ற மறுத்த கட்டளையை நீ நிறைவேற்ற வேண்டும். போ! திரெளபதியை இங்கே அழைத்துக் கொண்டு வா!” பிராதிகாமி அரசவை ஊழியன். நல்லதோ, கெட்டதோ, அரசன் கட்டளையை மறுக்க அவனுக்கு என்ன அதிகாரம்? அவன் கட்டளைக்கிணங்கித் திரெளபதியை அழைத்து வருவதற்காக அந்தப்புரம் நோக்கிச் சென்றான். சிந்தனையாற்றல் மிகுந்த அத்தேர்ப்பாகன் போகும் போதே இந்தத் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒருவழி கண்டுபிடித்தான். அந்தத் தந்திரமான வழி தோன்றியதும் மேலே போகாமல் அப்படியே அவைக்குத் திரும்பி விட்டான். “அரசே! நான் தங்கள் கட்டளையின்படி சென்று திரெளபதியை அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், என் கணவர் தம்மை தோற்பதற்கு முன்பே என்னை வைத்துத் தோற்றாரா? அல்லது தன்னை தோற்ற பின்பு என்னைத் தோற்றாரா? தெரிந்து வா; பின்பு வருகின்றேன் என்று கூறுகின்றாள்” என்பதாக ஒரு பொய்யைக் கற்பித்துத் துரியோதனனிடம் கூறினான். ஆராய்ந்து பார்க்கும் திறன் குன்றியவனான துரியோதனன் இதை உண்மை என்றே நம்பிவிட்டான். உடனே அவன் தன் தம்பீ துச்சாதனனை அழைத்து “தம்பி! இந்தத் தேர்ப்பாகன் பயந்த சுபாவமுள்ளவனாகத் தோன்றுகிறான். ஆகையினால்தான் அவள் இவனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள். இனிமேல் இவன் போக வேண்டாம். நீயே போ. துணிவாக அவளை இங்கே அழைத்து வா. நம்பிக்கையோடு உன்னை அனுப்புகின்றேன். அது குலைந்து போய் எனக்குச் சினம் உண்டாகாதபடி வெற்றியோடு திரும்பிவா” என்றான். தீய செயல்களைச் செய்யும் பொறுப்புத் தனக்குக் கிடைக்கிறது என்றால் அதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாது துச்சாதனனுக்கு அவன் தமையனை வணங்கிவிட்டுச் சென்றான். அவன் திரெளபதி இருந்த அந்தப்புரத்தை அடைந்ததும் அவளுக்கு முன்கூசாமற் சென்று தீய சொற்களைக் கூறலானான், “உன்னுடைய கணவன் தருமன் தன் உடைமைகளை எல்லாம் இழந்து விட்டான். இறுதியில் தன் உடன் பிறந்த தம்பியர்களையும் உன்னையும் கூடச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்றுவிட்டான். இப்போது முறைப்படி எங்களுக்கு உரியவளாகி விட்டாய் நீ. உன்னை அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி என்னை இங்கனுப்பியிருக்கிறான் மன்னனும் என் அண்ணனும் ஆகிய துரியோதனன். மறுக்காமல் வந்துவிடு.” திரெளபதி இதற்கு மறுமொழி கூறாமல் நின்ற இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள். “அன்று இராசசூய வேள்வியின் போது இந்திரப்பிரத்த நகருக்கு வந்திருந்த எங்கள் மன்னன் துரியோதனனைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்தாயே; அது நினைவிருக்கிறதா? அன்று சிரித்து இகழ்ந்த உன் வாயை இன்று அழுது கதறும்படியாகச் செய்கின்றோம் பார்.” திரெளபதி இதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டாள். “ஏன் இன்னும் நின்றுகொண்டே இருக்கிறாய்? புறப்படு தாமதம் கூடாது, என் தமையன் காத்துக் கொண்டிருப்பான்” கூறிக்கொண்டே சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன். திரெளபதி தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டு அவன் பிடியிலிருந்து திமிறினாள். இந்தச் சமயத்தில் கெளரவர்களின் தாயாகிய காந்தாரி அங்கு வந்தாள். துச்சாதனன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஓடிய திரெளபதி காந்தாரியின் அருகே வந்து நின்று கொண்டாள். காந்தாரி தனக்கு அபயமளித்துக் காப்பாற்றுவாள் என்று எண்ணியிருந்தாள் திரௌபதி. ஆனால் காந்தாரியோ அதற்கு நேர்மாறான எண்ணத்தோடு இருந்தாள். திரெளபதிக்கு அபயமளித்துக் காப்பாற்ற மறுத்ததோடல்லாமல் அவளைத் துச்சாதனனோடு செல்லும்படி வற்புறுத்தினாள் அவள். காந்தாரியின் கொடிய மனோபாவத்தைக் கண்டு திரெளபதி திகைத்தாள், மீண்டும் அவளை இறைஞ்சினாள். “உன்னைக் கூப்பிடுகிறவர்கள் உனக்கு விரோதிகள் அல்லவே? உன் மைத்துனன் தானே உரிமையோடு அழைக்கிறான். போனால்தான் என்ன?” என்று கூறினாள் கல்மனம் படைத்த காந்தாரி. தாயும் தன் பக்கம் பரிந்து ஆதரவாகப் பேசுகிறார் என்பதை அறிந்து கொண்டதும் துச்சாதனனுடைய துணிவு இரண்டு மூன்று மடங்கு பெருகி வளர்ந்து விட்டது. அவன் மீண்டும் பாஞ்சாலியைத் தொட்டு இழுத்தான். இம்முறை அவனுடைய முரட்டுக் கரங்கள் அவளது மென்மையான அளகபாரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தன. கூனிக்குறுகி நாணத்தால் ஓடுங்கி நின்ற அவள் கருங்குழல் அவிழ்ந்து மண்ணில் புரண்டு கொண்டிருந்தது. மயிர்கால்கள் இசிவெடுத்து வலிக்கும் படியாக அவளைக் கூந்தல் வழியே பிடித்து இழுத்தான் துச்சாதனன். இவ்வளவையும் பார்த்துக் கொண்டே பேசாமலிருந்தாள் காந்தாரி. ஓர் இளம் பெண் தன்னிடமுள்ள மிகக் குறைந்த வன்மையைக் கொண்டு முரட்டு ஆண் மகனோடு எவ்வளவு நேரந்தான் போராட முடியும்? உதவுகின்ற நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருந்தாள் என்பதென்னவோ உண்மை. ஆனால் அவளும் உதவ விரும்பாத இராக்ஷஸ மனத்தை ஏற்படுத்திக் கொண்டவளாக இருந்தால் என்ன செய்வது? துச்சாதனன் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். திரெளபதி தன்னைத் தப்பித்துக் கொள்ளும் வழியறியாமல் அவன் இழுப்புக்கு உட்பட்டுச் சென்றாள். ‘தான் போகிற இடத்தில் தன் கணவன்மார்களும் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல் அளித்தது. வீதியோடு வீதியாக அவளை அவன் இழுத்துக் கொண்டு சென்றபோது கண்டவர்கள் மனம் இரங்கினர். இளகிய உள்ளம் கொண்டவர்கள் இந்த அநீதியைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினர். சிலர் “காந்தாரி ஒருத்தி இருந்தும் தன் மகனால் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு இந்த அநீதி நடக்கும்படி விட்டுவிட்டாளே” என்று குறை கூறினர். “ஐயோ! இதென்ன அக்கிரமம்? இந்த நாட்டில் எல்லோரும் பெண்களோடு கூடப் பிறந்தவர்கள் தாமே? பெண்ணுக்கு இந்த வஞ்சனை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே? காலம் எவ்வளவு கெட்டு விட்டது? இனிமேல் இவ்வூரில் குடியிற் பிறந்தவர்கள் கூடக் கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது போலிருக்கிறதே!” பெண்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு மனம் கொதித்துப் பேசிக் கொண்டனர். “வீமனும் அர்ச்சுனனும் இந்த வஞ்சகச் செயலுக்குச் சரியானபடி பழிவாங்காமல் விடமாட்டார்கள்” என்றெண்ணித் திருப்தியுற்றனர் சிலர். இன்னும் சிலர் ‘இதெல்லாம் தருமனால் வந்த வினை அல்லவா?’ என்று அவனைக் குறை கூறினார்கள். சிலருக்கு அப்படியே குறுக்கே பாய்ந்து துச்சாதனனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் போலத் தோன்றியது. தண்டனைக்கு அஞ்சிப் பேசாமல் இருந்தார்கள். அநியாயமான இந்த நிகழ்ச்சி ஊர் முழுவதும் பிரளய நெருப்புப் போல வேகமாக பரவிவிட்டது. அவையில் நிகழ்ந்தவை ஈரமில்லாத வன்மனம் படைத்த துரியோதனனின் அனவக்குள்ளே கூந்தலைப் பற்றி இழுத்தது. அதே நிலையில் திரெளபதியைக் கூட்டிக் கொண்டு வந்தான் துச்சாதனன். பூனையின் கையில கப்பட்ட உயிருள்ள பசுங்கிளி போல அழுது புலம்பித் துடித்தவளாய் உள்ளே வந்தாள் திரெளபதி. அவளை அந்த நிலையில் காணச் சகியாது தலைகுனிந்து கண்களை மூடிக் கொண்டனர் அவையிலிருந்த அரசர்கள். எத்தகைய அரக்க மனம் படைத்தவர்களையும் இளகச் செய்து விடுமியல்பு வாய்ந்த இந்தக் காட்சியினைக் கண்டு கர்ணன், துச்சாதனன், சகுனி, அரியணையில் வீற்றிருந்த துரியோதனன், ஆகியவர்கள் மட்டும் மனமிரங்காமல் இருந்தனர். ஒருபாவமுமறியாத பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி உலகத்திலேயே ஒரு பெரிய குழப்பமாகி விட்டது. திக்குத் திகந்தங்களெல்லாம் தடுமாறி நிலை குலைந்து தவிடுபொடியாவன போல் தோன்றியது. விண்மீன்களும் வானவெளியும் இரத்தக் குழம்பிலே தோய்த்தெடுத்தாற் போலச் செந்நிறமடைந்தன. கடல்தன் எல்லையைக் கடந்து ‘அக்கிரமங்கள் மலிந்து போன இந்த உலகத்தை விழுங்கி விடப் போகிறேன்’ என்று குமுறிக் கொந்தளித்தும் பொங்கி எழுவது போலத் தோன்றியது. அண்ட சராசரங்களும் தட்டுக்கெட்டுக் கொத்துக் கொத்தாகப் பிதிர்ந்து விழுவது போல ஒரு மயக்கம் நிறைந்த குழப்பம் எங்கும் இலயித்துப் போயிருந்தது. விழிகளில் அனற்கதிர் வீச அந்த அவையில் திரெளபதி நிறுத்தப்பட்டிருந்த அலங்கோல நிலையைப் பார்த்தான் வீமன். ஆத்திரத்தால் துடித்த அவன் கைகள் கதாயுதத்தை இறுக்கிப் பிடித்தன. அர்ச்சுனனுடைய கரங்களோ வில்லை எடுக்கத் துறுதுறுத்தன. அப்போதிருந்த கோபவெறியில் அவன் கையில் மட்டும் நாணேற்றிய வில் இருந்திருக்குமானால் கெளரவர்களின் வம்சத்தைப் பூண்டு அற்றுப் போகும்படி துவம்சம் செய்திருப்பான். உணர்ச்சிகளுக்கு விரைவில் ஆட்படாத நகுல சகாதேவர்களும் கூட அளவு கடந்த ஆத்திரமடைந்திருந்தார்கள். வீமனுடைய கதாயுதமும், விசயனுடைய வில்லும், நகுல சகாதேவர்களின் ஆத்திரமும், ஒரே ஒரு பொறுமைசாலியின் கட்டளைக்காகத் தயங்கி நின்றன. யார் அந்த பொறுமைசாலி? தருமன் தான். அவனுடைய சாந்த குணமும் பொறுத்துப் போகின்ற இயல்பும் தான் அப்போது அவர்களுக்குத் தடையாக நின்றன. “ஆத்திரம் வேண்டாம். பொறுத்திருங்கள். அறம் வீண் போகாது. இந்த மூன்று வாக்கியங்களும் மதிப்பிற்குரிய அவர்கள் தமையன் வாயிலிருந்து வெளிப்பட்டு அவர்களின் சகலவிதமான ஆத்திர உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தியிருந்தன. நெருப்பின் மேல் விழுந்து துடிதுடிக்கும் ஜீவனுள்ள புழுப்போலத் திரெளபதி கதறியழுது கொண்டிருந்தாள். வெந்த புண்ணில் வேல் நுழைவது போல் துச்சாதனன் குறுக்கிட்டுப் பேசினான். “இங்கிருப்பவர்கள் எல்லோரும் கொலைகாரர்கள் என்று நினைத்துக் கொண்டாயா நீ? ஏன் இப்படி ஓயாமல் அழுது தொலைக்கிறாய்?. இந்த மாதிரி நீலித்தனங்கள் எல்லாம் பரத்தையர்க்கு உரியவைகள் அல்லவா? நீயும் ஐவருக்கு மனைவிதானே? அதனால் உனக்கும் அந்தப் பரத்தமைக் குணம் உண்டோ என்னவோ?” இது வரை அழுது கொண்டிருந்த திரெளபதி தன் அழுகையை நிறுத்தினாள். அவளுடைய கணவன்மார்களைப் பார்த்தாள். அவர்கள் சொல்லிழந்து செயலிழந்து மூங்கையர்களாய்ச் சிலை போல் வீற்றிருந்தனர். அவள் உள்ளத்தில் தனக்குத்தானாகவே ஒரு துணிவு தோன்றியது. ‘எனக்குத் தேவையானது. நீதி, அதை நானே வாய்திறந்து கேட்கிறேனே?’ என்று தைரியம் அடைந்தாள். அவையிலிருந்த நல்லவர்களை நோக்கித் தன் குறைகளை முறையிடத் தொடங்கினாள்; “நல்ல உள்ளம் கொண்டவர்களே! சான்றோர்களே! நேர்மை நெறியறிந்த மன்னர்களே ! சூதாட்டத்தில் என் கணவர் என்னைத் தோற்றுவிட்டதாகச் சொல்லி இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். தோற்றிருக்கலாம், ஆனால் தோற்பதற்கும் ஒரு முறை வேண்டாமா? ஒரு நீதி வேண்டாமா? தம்மைத் தோற்குமன் என்னைத் தோற்றி ருந்தால் அது முறையான தோல்விதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தம்மைத் தோற்றப் பின் என்னை அவர் தோற்றிருந்தால் அது முறையான தோல்வியாகுமா? ஒருவர் தம்மையே தோற்றுவிட்ட பிறகு அப்பால் தமது மனைவியை வைத்து ஆடித் தோற்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் கூறுகின்ற இந்த வழக்கு அவையிலுள்ள சான்றோர்களுக்குத் தெளிவாகவே விளங்குமென்று எண்ணுகிறேன். எனக்கு நியாயம் வழங்குமாறு வேண்டுகிறேன்.” திரெளபதியின் உருக்கமான, ஆனால் உறுதி நிறைந்த இந்த வேண்டுகோள் அங்குள்ளோரின் மனங்களை இளகச் செய்தது. ஆனால் செய்வது என்ன என்பது தான் அவர்களுக்கு விளங்கவில்லை. எழுதிவைத்த சித்திரங்களைப் போல அவையிலிருந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்திருந்த இந்த நிலையில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது! கெளரவ சகோதரர்களுக்குள் இளம் பருவத்தின்னாகிய ஒருவன் அவையில் துணிந்து பேசுவதற்கு எழுந்தான். அவன் பெயர் விகர்ணன். திரெளபதியின் வழக்கிலே நியாயமும் நேர்மையும் இருப்பதை அவன் உணர முடிந்தது. உணர்ந்த உள்ளத்தில் துணிவு பிறந்தது. துணிவோடு பேசத் தொடங்கி விட்டான்; “அவையிலுள்ள பெரியோர்களே! மன்னர்களே! திரெளபதியின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் ஊமையர்களைப் போல ஏன் மெளனமாக வீற்றிருக்கின்றீர்கள்? அவளுடைய வாதம் நியாயமானது தானே? எப்போது ஒரு மனிதன் தன்னைத் தானே தோற்று மற்றோர் மனிதனுக்கு அடிமையாகி விட்டானோ அப்போதே அவன் யாவற்றையும் இழந்து விட்டான் என்பது தானே முறை? அதன் பின்பு மனைவியைப் பந்தயமாக வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கின்றது? அப்படியே அவன் ஆடியிருந்தாலும் அந்த ஆட்டம் செல்லுபடியாகுமா? ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? உங்களுக்கு கெல்லாம் இந்த வழக்குத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்திருந்தும் சொல்லுவதற்குப் பயந்து கொண்டு பேசாமல் இருக்கிறீர்களா? உண்மையைக் கூறுவதற்குக் கூட நீங்கள் பயப்பட வேண்டுமா?’ விகர்ணன் இவ்வாறு பேசவும் அவையில் மிக வேகமாக ஒரு கிளர்ச்சி உண்டாகியது. அவனுடைய பேச்சின் கருத்தையும் துணிவையும் அவையிலிருந்தவர்களில் பெரும்பாலோர் வரவேற்றனர். சிலர் அவனைப் போலவே எழுந்து பேசுவதற்கும் துணிந்து விட்டனர். நிலைமையை வளரவிட்டு விட்டால் தங்களுடைய சூழ்ச்சியே அழிய நேரிட்டு விடும் என்றஞ்சிய கர்ணன் விகர்ணனைக் கண்டிக்கத் தொடங்கினான். இந்த சிறுவனால்தானே இவ்வளவு கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன என்று ஆத்திரங்கொண்டிருந்தான் அவன். “விகர்ணா! அறவிற் சிறந்த பெரியவர்கள் அடங்கிய இந்த அவையில் வயதிலும் அறிவிலும் இளைஞனாசிய உன் போன்றவர்கள் ஆத்திரம் கொண்டு பேசுவது சிறிதும் பொருத்தமாகாது. நியாயத்தைக் கூறுவதற்கு நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது. எங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நீயாகவே எழுந்து வாதாட உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கின்றதா என்ன? தருமன் மனைவியைப் பந்தயமாக வைத்து ஆட உரிமையற்றவன் என்றாலும் அவன் தன்னை எங்களுக்குத் தோற்ற போதே தன் மனைவியையும் தோற்றவனாகிறான். ஆகவே அவள் எங்களுக்கு உரியவள் தான். நான் கூறுகிற இந்த உண்மையை அவையோர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.” கர்ணனுடைய வார்த்தைகள் இளைஞனாகிய விகர்ணனை அடக்கி உட்கார்த்தி விட்டன. சமயமறிந்து கர்ணன் விகர்ணனை அடக்கியது துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாக மற்றொரு தீய செயலுக்கு உறுதி கொண்டது அவன் மனம். அவன் துச்சாதனனை அருகில் அழைத்துக் கட்டளையிட்டான். “தம்பீ! உனக்கொரு உற்சாகம் நிறைந்த வேலை தருகிறேன், செய்வாயா?” “செய்கிறேன் அண்ணா !” “கேள்! இந்த அவையிலுள்ள யாவரும் காணும் படியாகப் பாண்டவர்களையும் அவர்களுடைய மனைவியான இந்தத் திரெளபதியையும் அவமானப்படுத்த வேண்டும் அல்லவா?” “கட்டாயம் அப்படியே செய்ய வேண்டும் அண்ணா !” “அப்படியானால் அவர்கள் ஆறு பேர்களுடைய ஆடைகளையும் களைந்து விடு தம்பீ!” துரியோதனன் உற்சாகத்தோடு பாண்டவர்களை நோக்கிச் சொன்னான். தன்மானம் மிக்க பாண்டவர்களை அந்த அயோக்கியனின் கரங்கள் தீண்டி ஆடைகளைப் பறிப்பதை விரும்பவில்லை, மேலாடைகளையும் பிற ஆபரணங்களையும் ஐந்து பேரும் தாமாகவே கழற்றி அவன் முன் வீசி எறிந்து விட்டார்கள். சின்னஞ்சிறிய அரை ஆடைகளுடனே காணக் கவர்ச்சியில்லாத தோற்றத்தோடு பாண்டவர் நின்ற நிலையைக் காணச் சகிக்காமல் அவையோர் தலைகுனிந்தனர். கொடிய உள்ளமும் வலிய எண்ணமும் தவிர ஈரமும் கருணையும் இன்னவென்றறியாத துச்சாதனன், திரெளபதி யை மானபங்கம் செய்வதற்காக அவளை அணுகினான். அங்கே கூடியிருந்த ஆண்மையாளர்கள் அத்தனை பேருக்கும் மனத்தைக் கொதிக்க வைக்கும் காரியத்தைச் செய்ய இருந்தான் அவன். ஆனால் கொதிக்க வேண்டிய மனங்கள் எல்லாம் உணர்வொழிந்து கிடந்தன. எல்லா ஆண்மக்களும், பாண்டவர்களுட்படக் கல்லாலடித்த சிலைகளாக இருந்து விட்டனர். திரெளபதியின் விழி மலர்களிரண்டும் ஆறாகக் கண்ணீர் சொரிந்தன. அவிழ்ந்து பிரிந்து கிடந்த கூந்தல் முதுகை மறைத்தது. ஒரு கையினால் தன் அரையாடையை இறுகப் பற்றிக் கொண்டாள். மற்றோர் கை மார்புத் துகிலைக் காத்துக் கொண்டிருந்தது. உடல் சோர்ந்து துவண்டது. பயம் சோர்வை உண்டாக்கியது. இந்த அநியாயம் நடப்பதற்குள் மண் பிளந்து என்னை விழுங்கி விடக் கூடாதா? என்றெண்ணித் துன்பம் துடைக்கும் இன்பப் பொருளாகிய கண்ணபிரானிடம் தன் மனத்தைச் செலுத்தினாள். மனம், ‘கண்ணா! உன் அடைக்கலம். நீ காப்பாற்றினால் மானம் பிழைக்கும், கைவிட்டால் மானம் அழிந்து விடும். கருணை வள்ளலை காப்பாற்று’ என்ற தியானத்திலேயே மூழ்கியிருந்தது. வாயோ அவன் திருநாமமாகிய ‘கோவிந்தா!’ ‘கோவிந்தா!’ என்பதையன்றி வேறொன்றும் கூறியறியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்ற அகங்காரம் அவளை விட்டு அகன்றது. ‘உடல், பொருள், ஆவி மூன்றும் இறைவனுக்குச் சொந்தம். அவன் விரும்பினால் காக்கட்டும், விரும்பாவிட்டால் விரும்பியபடியே செய்யட்டும்’ என்று தன்னைக் கண்ணபிரானிடம் ஒப்படைத்தாள். இறைவனை நோக்கிச் செய்த இந்த ஆத்ம சமர்ப்பணம் வரப்பிரசாத சக்தி வாய்ந்ததாக இருந்தது. திரெளபதியின் மானத்தை அன்று காப்பாற்றிக் கொடுத்தது இந்த ஆத்ம சமர்ப்பணம் ஒன்றுதான். துச்சாதனனுடைய முரட்டுக் கரங்கள் அவளுடைய ஆடையின் தலைப்பைப் பற்றிப் பரபரவென்று இழுத்தன. ஆடை சுற்றுச் சுற்றாகப் பெயர்ந்து விழுந்தது, துச்சாதனன் பேய்ச் சிரிப்புச் சிரித்தான். மேலும் மேலும் தலைப்பைப் பற்றி இழுத்துக் கொண்டேயிருந்தான். அவையில் குனிந்த தலைகளுடன் வீற்றிருந்த பெருமக்கள் இரக்கம் நிறைந்த சிறு சிறு குரல்களை எழுப்பினர். திரௌபதியின் மானம் இன்னும் ஓரிரு கணங்களில் பாழ் போய் விடப் போகிறதே என்று பதறினர். ஆனால் என்ன விந்தை? என்ன பேராச்சரியம்? களிப்போடு பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் கண்களில் பயச்சாயை படிந்தது. துச்சாதனன் கைகள் சோர்கின்றன. திரெளபதியின் மெய்யில் ஆடை பெருகி வளர்ந்து கொண்டே போகிறது. வேதங்களாலும் காணமுடியாத பரம் பொருளின் சொரூபத்தைப் போலத் திரௌபதியின் துகில் மறைத்த சரீரம் காணாப் பொருளாய் நின்றது. துச்சாதனனைச் சுற்றிலும் துகில்கள் மலை மலையாகக் குவிந்துவிட்டன. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உரிய உரியத் துகில்கள் வளர்ந்து கொண்டிருந்தன. துச்சாதனன் மலைத்தான். அவன் உள்ளத்தில் பீதியும் திகைப்பும் தோன்றின. கைகளும் உடலும் களைத்து ஓய்ந்து ஒடுங்கிவிட்டன. ஆற்றாமை உடலைத் தள்ளாடச் செய்தது. அவை எங்கும் குவிந்து கிடந்த சேலைக் குவியல்களைச் சேவகர்கள் அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தனர். தள்ளாடியவாறே அந்தச் சேலைக் குவியலின் மீது பொத்தென்று விழுந்தான் துச்சாதனன். கூப்பிய கரங்களுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி. பக்தி பரவசத்தினால் மனம் பூரிக்க முகமலர்ச்சியோடு நின்று கொண்டிருந்த அவள், தோன்றாத் துணையாயிருந்து தன்னைக் காத்த பரம் பொருளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள். வீட்டுமர், துரோணர் முதலிய முதுமக்கள் “ஆகா இந்தப் பெண்ணினுடைய கற்பை இறைவனே துணையாகிக் காக்கிறானே. இவள் வணங்கத் தக்க தூய்மையுடையவள்” என்று கூறிப் பாராட்டினர். கதாயுதத்தைப் பற்றியிருந்த வீமனின் கரங்கள் ஆயுதத்தின் தண்டை முன்னிலும் அதிக ஆத்திரத்தோடு இறுக்கிப் பிடித்தன. குகையிலிருந்து புறப்படுகின்ற ஆண் சிங்கம் போலத் தன் இடத்திலிருந்து எழுந்தான் அவன். “திமிர் பிடித்த கெளரவர்களே! கேளுங்கள். எங்கள் தமையனுடைய சாந்த குணத்துக்குக் கட்டுப் பட்டுத்தான் இது வரை வாளாவிருந்தோம். உங்களுக்கு அஞ்சி நாங்கள் கட்டுண்டு கிடப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆண்மையுள்ள மனிதர்களாகவோ, வீரர்களாகவோ நான் எண்ணவேயில்லை. நீங்கள் பேடிகள், பெண்களின் முந்தானையோடு மட்டும் போராடத் தெரிந்தவர்கள்! எங்கே பார்க்கலாம்? உங்களுக்கும் ஆண்மை இருக்குமானால் இப்போது என் ஒருவனோடு நூறு பேரும் போருக்கு வாருங்கள் பார்க்கலாம்.” வீமனுடைய முழக்கம் அவையையே கிடுகிடுக்கச் செய்தது. பாஞ்சாலி சபதம் ஏமாற்றமடைந்த துரியோதனன் முன்னைக் காட்டிலும் பல மடங்கு சினமும் ஆத்திரமும் கொண்டிருந்தான். வீமன் பேசிய பேச்சு வேறு அவனை மனங்குன்றிப் போகச் செய்திருந்தது. ஒரே சமயத்தில் இரட்டைத் தோல்விகளை அடைந்துவிட்டது போல் அவன் மனம் புழுங்கினான். இது திரெளபதியை எப்படியாவது மீண்டும் வேறு இன வகையில் மானபங்கம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தை உறுத்தியது. “துச்சாதனா! இந்த வீமனுடைய ஆண்மையைப் பின்பு பார்க்கலாம். இப்போது திரெளபதியைத் தூக்கி வந்து இந்த அவையிலுள்ள பலரும் காணும்படியாக என் தொடையில் அமரச் செய்! பார்க்கலாம், இவர்கள் வீரத்தையும், அவள், கற்பையும்.” துச்சாதனன் எழுந்து திரெளபதியை நோக்கிப் பாய்ந்தான். வேட்டைப் பொருளின் மேல் பாயும் மிருக வெறி அந்தப் பாய்ச்சலில் இருந்தது. திரெளபதியின் உடலில் மீண்டும் நடுக்கம் தோன்றியது. ‘மானத்தைக் காத்தளித்த கண்ணபிரான், இப்போது காத்து கருணை செய்ய மாட்டானா?’ என்று கலங்கினாள். அக்கிரமத்தை எண்ணிக் கலங்கிய அவள் உள்ளத்தில் சினமும் தோன்றியது. சினம் வெறியாக மாறியது. வீமன் முழங்கியது போல அவள் முழங்கத் தொடங்கிவிட்டாள். அந்த முழக்கத்தைக் கேட்ட துச்சாதனன் இடியோசை கேட்ட நாகம் போல அவளை நெருங்குவதற்கு அஞ்சி அப்படியே நின்ற இடத்தில் பதுங்கி நின்றான். “வெட்கமில்லாமல் என்னைத் தன் தொடையிலே வந்து உட்காரும்படி அழைக்கிறான் இந்த அரசன். என்னை உட்காரச் சொல்லிய இவன் தொடையைக் கூரிய அலகுகளைக் கொண்ட பறவைகள் குத்திக் கிழித்துக் குலைப்பனவாகுக! என் சொல் வீண் போகாது. ஒரு நாள் இந்தத் தொடைக்கு அத்தகைய கதி நேரிடத்தான் போகிறது. இவன் நாசத்தை அடையத்தான் போகிறான். இந்தப் பேரவையிலே இன்று கூடியிருக்கும் சான்றோர்களுக்கு முன்னே நான் செய்கின்ற சபதம் ஒன்று உண்டு. பெரியோர்களே கேட்பீர்களாக, பலர் கூடியிருக்கும் இந்தப் பேரவைக்கு இழுத்து வரப்பட்டேன் நான். என்னுடைய கூந்தலையும் சேலையையும் மற்றொருவன் தொட்டு இழுக்கும்படியான அவமானத்தையும் இன்று அடைந்தேன். இவைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தவன் இதோ இந்த அவைக்குத் தலைவனாக வீற்றிருக்கும் கொடிய அரசனே ஆவான். இவனைச் சரியானபடி பழி வாங்காமல் விட மாட்டேன். என் கணவன்மார்களால் போர்க்களத்தில் இவனைக் கொல்லச் செய்து இவன் தொடையினின்று பீறிட்டெழும் குருதியைப் பூசினாலொழிய என் சினம் தீராது. இன்று விரிக்கப்பட்ட என்னுடைய இக் கூந்தல் இந்தச் சபதம் நிறைவேறினாலன்றி முடிக்கப்படாது. இது உறுதி. சத்தியம். என்னுடைய இந்தப் பயங்கரமான சபதம் நிறைவேறும்போது இந்த அரசனும் இவனுடைய குலமும் வேரற்று வீழ்ந்து போய்விடப் போகிறார்கள் பாருங்கள். துச்சாதனன் அவளை அணுகுவதற்கு அஞ்சி நடுநடுங்கி நின்று விட்டான். துணிவும் முரட்டுத்தனமும் திரெளபதியின் பேச்சால் அவனை விட்டு நழுவிப் போயிருந்தன. ஏற்கனவே ஆத்திரமும் கொதிப்பும் கொண்டிருந்த வீமன் தானும் எழுந்து நின்று ஒரு சபதம் செய்தான். “ஒழுக்கம் மிகுந்தவர்களும் பெரியோர்களும் நிறைந்துள்ள இந்தப் பேரவையில் என் மனைவியை இழிவு செய்தவர்களைப் போர்களத்தில் கொன்று பழி தீர்த்துக் கொள்ளாது விடமாட்டேன். இந்தத் துரியோதனனும் துச்சாதனனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் என் கையாலேயே சாகப் போகிறார்கள். திரெளபதியை மானபங்கப் படுத்த முயன்ற துச்சாதனின் இரத்தத்தைக் குடித்தாலொழிய என் ஆத்திரத்தின் தாகம் தீராது போல் இருக்கிறது. அது வரை தண்ணீரைக் கூட நான் என் கைகளால் குடிக்கப் போவதில்லை. அவசியமானால் என் கதாயுதத்தை நீரில் தோய்த்து அதிலிருந்து வடிகின்ற நீரையே பருகுவேன். இது என் சபதம்” வீமனுக்குப் பின் அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்துத் தங்கள் சபதத்தைக் கூறினர். தான் கர்ணனை கொன்று முடிக்கப் போவதாக அர்ச்சுனன் ஆவேசத்தோடு கூறினான். சகாதேவன் சகுனியையும், நகுலன் சகுனியின் மகனையும் கொல்லப் போவதாகக் கூறினார்கள், சகோதரர்களின் ஏகோபித்த சபதங்கள் கௌரவர்களை உள்ளூரத் திகில் கொள்ளச் செய்தன. “நன்றாக வேண்டும் இந்தக் கெளரவர்களுக்கு! இவர்கள் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் செய்த தீமைகளை எண்ண முடியுமா? பாண்டவர்கள் தாங்கள் கூறிய சபதத்தின் படியே இவர்களை அழித்துவிடப் போவது என்னவோ உறுதிதான்” என்று அவையிலிருந்த அரசர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கற்பு நெறி தவறாத பெண் ஒருத்தியின் கண்கள் தீயவர்களின் கொடுமையால் கண்ணீரைச் சிந்துமாயின் அது இந்த உலகத்துக்குப் பெரிய அபசகுணம். வானத்தில் மேகங்கள் கூடாமலே இடி இடித்துவிடலாம். சூரியனின் வடிவத்தைச் சுற்றிக் கோட்டை கட்டினாற்போல் வளையம் தோன்றலாம். பகல் நேரத்தில் தோன்றக்கூடாத நட்சத்திரங்கள் தோன்றிவிடலாம். அவை மண்ணில் உதிர்கின்ற தீமையும் நிகழலாம். ஆனால் இவைகளை எல்லாம் விடப் பெரிய தீநிமித்தம் கற்புடைய பெண் கதறிக் கண்ணீர் சிந்துவதேயாம். திரெளபதியின் கண்ணீரும் உலகத்துக்கு அப்படி ஒரு பெரிய தீமையாக நேர்ந்திருந்தது. அவையிற் கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் இப்படி ஒரு பீதி பரவிப் போயிருந்தது. ‘என்னென்ன தீமைகளுக்கு இது எதுவாகுமோ? ஊருக்குத் துன்பம் வருமோ?’ என்று பலருக்கும் பலவிதமாக அச்சம் ஏற்பட்டது. அதுவரை எல்லாத் தீமைகளையும் தடுக்காமல் வாளா வீற்றிருந்த திருதராட்டிரன் கூட அப்போது தான் கொஞ்சம் திகிலடைந்தான். அவன் நெஞ்சம் துணுக்குற்றது. தன் குலம் குடி எல்லாம் விரைவாக அழிந்து போவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை தோன்றி அவனை வதைத்தது. குருடனாகிய அவன் தன் அரியணையிலிருந்து இறங்கித் தட்டுத் தடுமாறித் திரெளபதி நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். “அம்மா! நீ பெண் தெய்வம். தர்ம பத்தினி. உன் சக்தி பெரிது. அதை அறிந்து கொள்ளத் தெரியாமல் மூடர்களாகிய என் பிள்ளைகள் ஏதேதோ தீங்குகளை உனக்குச் செய்துவிட்டார்கள். எனக்காக அவற்றைப் பொறுத்துக் கொள். என் குலம் அழிவதும் தழைப்பதும் உன் கையில் இருக்கிறது அம்மா! பேதைகளாகிய என் புதல்வர்களின் குற்றத்தை மன்னித்து இந்தக் குலம் வாழ வழி செய் அம்மா” -திருதராட்டிரனுடைய வேண்டுகோளில் மன உருக்கம் புலப்பட்டது. அவனுடைய அந்த உருக்கம் மிகுந்த வேண்டுகோளால் திரெளபதியின் மனக்கலக்கம் கூட ஓரளவு குறைந்தது, பாண்டவர்களிடமும் இதே மாதிரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் அவன். சூதில் அவர்கள் பறிகொடுத்த எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறினான். “தம்பியின் புதல்வர்களே! உங்கள் ஆட்சி, அரசு, உடமைகள் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறேன். என் புதல்வர்களின் குற்றங்களை எல்லாம் மன்னித்து மறந்து விட்டு உங்கள் தலைநகருக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று பாண்டவர்களைக் கெஞ்சினான் திருதராட்டிரன். தங்கள் பெரிய தந்தையின் வேண்டுகோளுக்குப் பாண்டவர்கள் இணங்கி விடுவார்கள் போலிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சகுனியின் தடை முன்னே வந்து நின்றது. ‘பாண்டவர்களையும், திரெளபதியும் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் சூதாட்டத்தில் பறி கொடுத்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து விடுவதும் முறையல்ல! தருமன் முதலிய ஐவரும் நமக்கு எதிரிகள். என்றைக்கிருந்தாலும் அவர்கள் நம்மை அழித்துத் தொலைத்து விடுவதற்கே முயற்சி செய்வார்கள். இப்போது அதிர்ஷ்டவசமாக அவர்கள் நம்முடைய கைதிகளைப் போல் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களை அழித்து ஒழித்து விட முயல்வது தான் புத்திசாலித்தனம். இப்போது பாண்டவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாம் செய்திருக்கும் அவமானங்களுக்கெல்லாம் பழி வாங்குவதற்காக உடனே படையெடுத்து வரத் தயங்கமாட்டார்கள் அவர்கள் ஆகவே நன்கு சிந்தித்து இந்தச் செயலை முடிவு செய்ய வேண்டும். பாண்டவர்களை விடக் கூடாது’ சகுனியின் மேற்படி பேச்சையே துரியோ தன்னுடைய மனமும் விரும்பியது. துச்சாதனன், கர்ணன் முதலிய தன் கூட்டத்தவர்களைக் கலந்து ஆலோசித்தபோது, அவர்களும் இதையே வரவேற்றனர். பாண்டவர்களை அழித்தொழிக்கின்ற எண்ணமே அவர்கள் மனங்களில் முற்றி கன்றிப் போயிருந்தது. மூவரும் கலந்து ஆலோசித்த பின்னர் அவையினருக்குக் கூறவேண்டிய செய்திகளைத் துச்சாதனன் கூறத் தொடங்கினான். “தருமா! எங்கள் தந்தை கூறுவது போல உன் உடமைகளைத் திரும்ப அளித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டு உங்களை நாட்டிற்கு அனுப்ப நாங்கள் தயாராயில்லை. நிச்சயமாக எங்களால் அப்படிச் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரேயொரு விதத்தில் உங்களுக்குக் கருணைக் காட்டுகிறோம். நீங்களும் உங்கள் மனைவி திரெளபதியும் இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு அடிமைகள். எங்கள் தந்தையின் மனத்திருப்திக்காக உங்கள் ஐவருக்கும் திரெளபதிக்கும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கிறோம். நீங்கள் இங்கிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாகச் செல்லலாம். எங்காவது காடு மலைகளில் மறைந்து வாழலாம்.” -துச்சாதனனின் இந்தச் சொற்களை எதிர்த்துப் பேசும் ஆற்றல் துரியோதனாதியர்களுக்குத் தந்தையாகிய திருதராட்டிரனுக்குக்கூட இல்லாமல் போய்விட்டது. வீட்டுமன், விதுரன் முதலியவர்களைத் தனியே அழைத்துச் சென்று திருதராட்டிரனும் ஆலோசித்துப் பார்த்தான். வேறெந்த வழியும் அவனுக்குப் புலப்படவில்லை. முடிவில் தருமனிடம் சென்று, “அப்பா! துரியோத னாதியர்கள் என் மக்கள் எனினும் பிடிவாதக்காரர்கள். நான் இனி எது கூறினாலும் கேட்கமாட்டார்கள். ஆகவே நீ அவர்கள் கூறியபடியே செய்வது தான் நல்லது என்று கூறிவிட்டான். உடனே துரோணர் உரிமையோடும் அன்போடும் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். “நீங்கள் இப்போது உடனே உங்கள் நாட்டின் அரசுரிமையை அடைய முயலவேண்டாம். நேரே காடு சென்று பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறேனும் அங்கு வாழ்ந்து கழித்து விடுங்கள். அதற்குப் பின் ஏதாவது ஒரு நகரில் எவரும் நீங்கள் பாண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடாதபடி அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை அவசியம். அஞ்ஞாதவாச காலத்தில் உங்களை எவரேனும் பாண்டவர்களென்றும் அடையாளம் கண்டு கொண்டால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசிக்க நேரிடும். இதற்கு அவசியம் ஏற்படாமல் பதின்மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு மீண்டும் வாருங்கள், பழையபடி உங்கள் நாடு, அரசுரிமை எல்லாம் உங்களுக்குத் திரும்பிக் கொடுக்கப்படும்.” துரோணர் கூறிய இதே தீர்மானத்தை மூதறிஞராகிய வீட்டுமரும் ஆமோதித்தார். இவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திரௌபதி துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘நானும் என் கணவன்மார்கள் பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு போவது போல இவர்களிடம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு போக விரும்பவில்லை. என் கணவர் மறுபடியும் சூதாடியே எங்களை அடிமைத்தனத்திலிருந்து வென்று மீட்டுக் கொள்வார்" என்று கூறினாள். யாவரும் திகைத்துப் போயினர். திரெளபதியின் யோசனையைத் தருமனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். இம்முறை வெற்றி என் கணவர் பக்கம் ஏற்பட வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வமான கண்ணபிரானைத் தியானித்துக் கொண்டாள் திரெளபதி. தருமனும் கண்ணபிரானை எண்ணிவாறே ஆட ஆரம்பித்தான். ஆடத் தொடங்கும்போதே சகுனி மிகப் பெரியதோர் தடையைக் குறுக்கே நுழைத்தான். “சூதாட ஆசைப்படுவதெல்லாம் சரிதான் தருமா! ஆனால், எந்தப் பொருளைப் பந்தயமாக வைத்து ஆடப் போகிறாய்? நீதான் வெறுங்கையனாய் மேலாடையையும் இழந்து வீற்றிருக்கிறாயே?” என்று கேட்டான் சகுனி. “பொருள் இல்லாவிட்டால் என்ன? இது வரை நான் செய்த நற்செயல்களால் எனக்குக் கிட்டியிருக்கின்ற அவ்வளவு புண்ணியமும் இருக்கின்றதே? அதையே இந்த ஆட்டத்திற்குப் பந்தயமாக வைக்கிறேன்! எடு காய்களை, விளையாடலாம்!” என்று சாமர்த்தியமாக அவனுடைய கேள்வியைச் சமாளித்தான் தருமன். சகுனி விளையாடச் சம்மதித்தான். விளையாட்டு மறுபடியும் ஆரம்பமாகியது. திரெளபதி கண்ணபிரானைத் தியானித்துக் கொண்ட மகிமையோ! அல்லது தருமனின் புண்ணியப் பயனோ வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகள் தருமனின் பக்கமே விளைந்து கொண்டிருந்தன. சகுனி பேயடிப்பட்டவன் போலச் சோர்ந்து போனான், அடிமைத்தனத்தை மட்டும் வென்று கொள்வதற்காக ஆடிய ஆட்டம் தருமனுக்கு அடுக்கடுக்காக அவன் தோற்றுப்போன யாவற்றையுமே வென்று கொடுத்துவிட்டது. முதலில் ஆடிய ஆட்டத்தில் தருமனுக்கு நேர்ந்திருந்த முழுப் பெருந்தோல்வி இப்பொழுது சகுனிக்கு ஏற்பட்டது. சகுனி தலை தாழ வாய்மூடி மெளனியாக அவமானம் தாங்காமல் வீற்றிருந்தான். தான் தோற்றவற்றை எல்லாம் வென்று விட்டாலும் கூட வீட்டுமர் துரோணர் முதலியவர்கள் கூறிய அறிவுரைப்படி பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த பின்னரே அரசாட்சி மேற்கொள்ள விரும்பினான் தருமன். அதுவரை துரியோதனாதியர்களே தன் உடைமைகளை எல்லாம் அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் அவன். பெரியோர்களும் நல்லவர்களும் தருமனின் உயரிய மனோபாவத்தைப் பாராட்டினார்கள் எண்ணி வியந்தார்கள். துரியோதனாதியர்களது கல்மனங்களையே தருமனுடைய அந்த எதிர்பாராத தியாகம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு இது. எல்லோரையும் பணிந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு தருமனும் அவன் தம்பிகளும் திரெளபதியும் புறப்பட்டபோது, இந்த உலகத்தை இரட்சிக்கும் தரும் தேவதையே தன் பரிவாரச் சுற்றங்களுடன் வனத்திற்குப் போவது போல உணர்ந்தார்கள் அங்கிருந்தவர்கள். நாடு நகரங்களில் பாண்டவர்கள் திரெளபதியோடு வனவாசம் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி பரவிய போது தங்கள் நெருங்கிய உறவினர்களை வெகு தொலைவில் பிரிய விட்டு விட்டாற் போலக் கலங்கினர் மக்கள். எங்கும் பாண்டவர்கள் பிரிவு ஒரு விதமான சோக உணர்வை பரப்பியிருந்தது. ஊர் உலகத்தின் துயர் உணர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்றனர் பாண்டவர். அவர்கள் மனங்களிலே நிறைந்திருந்த மகிழ்ச்சி கானகத்திலும் குன்றவில்லை. (சபாபருவம் முற்றும்) ஆரணிய பருவம் விசயன் தவநிலை எங்கு நோக்கினும் பசுமைக் கோலம் பரப்பி நிற்கும் மரக் கூட்டங்கள். சந்தன மரங்கள் ஒரு புறம் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. மலர்களின் நறுமணம் அகிற்கட்டைகளின் வாசனையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தன. மலைச்சாரலைச் சேர்ந்த காடு அது. காமிய வனம் என்று பெயர். தமலைச் சிகரங்களில் அருவிகளாகப் பாய்ந்து கீழே கலகலவென்று சிற்றாறாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் ஓடைகளும், குளிர்ந்த சுனைகளும் மிகுந்திருந்தன. ஆழமாகவும், அகலமாகவும் அமைந்திருந்த சுனைகளின் நீல நிற நீர்ப் பரப்பில் கரிய யானைகள், கூட்டம் கூட்டமாக நீராடிக் கொண்டிருந்தன. வெயிலே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்த மரங்களில் காய்கனிகளை உணவுக்கு நல்கும் பயன் மரங்களும் நிறைந்திருந்தன. அத்தினாபுரத்திலிருந்து வனவாசத்திற்காகப் புறப்பட்ட பாண்டவர்கள் இத்தகைய சிறப்புகளெல்லாம் பொருந்திய காமிய வனத்தில் வந்து முதன் முதலாகத் தங்கினார்கள். பாண்டவர்களோடு உறவினர்களிற் சிலரும் முனிவர்களும் உடன் வந்திருந்தனர். கங்கை முதலிய புனிதமான நதிகள் தோன்றும் இமயமலையின் வளமிக்க சாரலைப் போல் அந்தக் காமிய வனத்தின் இயற்கையழகும் சிறப்புற்று விளங்கியது. பாண்டவர்கள் வந்து தங்கியதால் அந்த வனத்திற்கே ஒரு தனிப்பெருமை ஏற்பட்டு விட்டதைப் போலிருந்தது. இதற்குள் பாண்டவர்கள் அரசைத் துறந்து வனவாசம் புறப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி பல இடங்களில் பரவியிருந்தது, பாஞ்சால வேந்தன் துருபதன் முதலிய பெருமன்னர்களும் பிறரும் செய்தியறிந்து வருந்தினர். பாண்டவர்களை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிப்பதற் காகக் காமிய வனத்திற்குப் புறப்பட்டு வந்தனர். வந்த வேந்தர்களும் நண்பர்களும் பாண்டவர்களை இக்கதிக்குள்ளாகிய துரியோதனாதியர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற மனக் கொதிப்புடனிருந்தனர். எல்லோருமாக சேர்ந்து படையெடுத்துச் சென்று கெளரவர்களின் குலத்தையே நிர்மூலம் செய்து பாண்டவர்களுக்கு அரசாட்சி நல்கிவிடத் தயாராயிருந்தனர். பாண்டவர்களைக் காண்பதற்காக காமிய வனத்திற்கு வந்திருந்த கண்ணபிரான் அந்த மன்னர்களின் சினத்தை ஆற்றினார். “பாண்டவர்கள் மேல் அனுதாபமும் ஆதரவும் காட்டுகின்ற மன்னர் பெருமக்களே! உங்கள் சினமும் ஆத்திரமும் நியாயமானவை என்பதை நானும் அறிவேன். எது எப்படியிருந்தாலும் நாமெல்லோரும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சான்றோர்களும் ஆன்றோர்களும் நிறைந்த பேரவையில் வனவாசம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றான் தருமன். இப்போது நாம் போர் மேற்கொள்வது தருமனுடைய வாக்குக்கு முரணானது. எனவே பாண்டவர்கள் வனவாச காலம் முடிந்த பிறகு ஏற்படப் போகிற பெரும் போரின் போது உங்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் காட்டுகிற ஆத்திரத்தையும் சினத்தையும் அப்போது காட்ட முன்வர வேண்டும்.” கண்ணபிரானின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு மன்னர்கள் சினந்தணிந்தனர். இதன்பின் தருமனுக்கென்று சில செய்திகளைத் தனியே கண்ணபிரான் கூறினார். “தருமா! வனவாசத்துக்காகக் குறித்த ஆண்டுகளில் நீயும் தம்பியரும் மறைவாக இருக்க வேண்டியது முக்கியம். வனவாசத்திற்குரிய நிபந்தனைகளில் அதுவும் ஒன்றல்லவா? உங்களுடைய புதல்வர்கள் யாவரையும் அங்கங்கே இருக்கும் சுற்றத்தினர் வீடுகளில் வசிக்குமாறு ஏற்பாடு செய்து விடு. தாயையும் அம்மாதிரியே எங்காவது தங்கி வாசிக்கச் செய்வது, நல்லது. அவ்வாறன்றி அவர்களையும் வனத்துக்கு அழைத்துக் கொண்டு போவது உங்களுக்கும் அவர்களுக்கும் பலவகை இடையூறுகளைக் கொடுக்கும். வனவாசம் மறைவாக நடக்க வேண்டியது முக்கியம். நாம் வெற்றிக்குரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அமைதியும் தனிமையும் வேண்டும்.” “நீ கூறியதை நான் எப்போதாவது மறுத்ததுண்டா கண்ணா ? இப்போது நீ கூறியபடி உடனே செய்கின்றேன்” -என்று தருமன் ஒப்புக் கொண்டான். தாய் குந்தியைக் காந்தாரியோடு போய் இருந்து வசிக்குமாறு அனுப்பினார்கள். புதல்வர்களைப் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனோடு வசிப்பதற்கு ஏற்பாடு செய்து அவன் வசத்தில் ஒப்பித்தனர். அனுதாபம் கூறுவதற்காக வந்திருந்த மன்னர்களும் உற்றார் உறவினரும் காமிய வனத்தில் பாண்டவர்களை விட்டு விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐவரும் திரெளபதியும் அந்த அழகிய வனமும் அதன் இயற்கை வளமுமே அங்கே எஞ்சியவர்கள். எல்லோரும் சென்ற பின்னர் தனியே இருந்த பாண்டவர்களின் மனநிலை துயரம், ஏக்கம், தனிமை முதலிய உணர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சகோதரர்களின் நெஞ்சங்களில் தெளிவை உண்டாக்கிக் கவலையைப் போக்குவதற்கென்றே வந்தவர் போல வியாச முனிவர் அப்போது அங்கே வந்தார். பிரம்மாவுக்குச் சமமான அந்த மாமுனிவரை ஏற்றபடி வரவேற்று உபசரித்தனர் பாண்டவர். வியாசர் அவர்களிடம் அத்தினாபுரத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டார். விதி வகுத்த துன்பச் சிக்கல்களுக்காக மனமார வருந்தினார். ஆறுதலும் அனுதாபமும் கூறினார். “துயரங்களுக்கெல்லாம் காரணம் மாந்தரது வினைப்பயனே. சூதாடியதால் வாழ்விழந்து அல்லலுற்றது உன் ஒருவனுடைய அனுபவம் மட்டும் அன்று. மன்னாதி மன்னனாகிய நளனும் சூதினாலேயே அரசும், இன்பமும் இழந்தான். இப்போது நீங்கள் வனவாசம் செய்ய நேர்ந்திருப்பதும் அந்த சூது விளைத்த பயன்தான். வனவாசம் நிகழ்ந்து முடிந்ததும் உங்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பெரிய போர் நேரிடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் சொந்த ஆற்றல் ஒன்று மட்டும் போதாது. இறைவன் அருள் துணை வலிமையும் வேண்டும். அந்த அருள் துணையை அடையும் முயற்சியில் இப்போது முதலில் அர்ச்சுனனை ஈடுபடுத்தலாம் என்று கருதியே நான் வந்தேன். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் என்ற வன்மை வாய்ந்த அஸ்திரம் ஒன்றுள்ளது. அதை அடைவதற்காக அர்ச்சுனன் அந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்ய வேண்டும். இப்போதே இந்த விநாடியிலிருந்து என் சொற்களை மதித்துத் தனிமையிற் சென்று இந்தத் தவ முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.” வியாசர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் அவரையும் தமையனையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காகச் சென்றான். “தர்மம் தோற்காது; சத்தியம் என்றும் அழியாது என்பதை அறிந்து கொண்டவன் நீ தருமா! வஞ்சங்களுக்கும் பகைவர் தீமைகளுக்கும் மனம் தளராமல் இந்த வனவாச காலத்தைக் கழித்து விட்டால் வெற்றி உன் பக்கமே காத்திருக்கிறது” என்று மேலும் கூறிவிட்டு வியாச முனிவரும் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்றார். எத்தனை யெத்தனை துயரங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி கொள்ள வேண்டும் என்ற துணிவு வியாசரின் அறிவுரையால் அவர்கள் உள்ளத்தே விளைந்து முற்றத் தொடங்கியிருந்தது. விசயன் தவநிலை வியாசரிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவபெருமானை நோக்கித் தவமியற்றச் சென்ற அர்ச்சுனன் வடதிசையில் பல நாள் இடைவிடாது பிரயாணம் செய்து இமயமலையை அடைந்தான். பராசக்தியாகிய உமாதேவி தோன்றிய அந்த மலையின் மேல் அவனுக்குத் தனிப்பட்ட பய பக்தி ஏற்பட்டது. எங்கு நோக்கினும் முனிவர்களும் தபஸ்விகளுமாகத் தென்பட்ட அந்த மலையில் அவர்களையெல்லாம் வணங்கி வழிபட்ட பின்னர் கைலாச சிகரம் நோக்கி அவன் மேலும் பயணம் செய்தான். அரிய முயற்சியின் பேரில் யாத்திரை செய்து கைலாச சிகரமடைந்த அர்ச்சுனன் வியாச முனிவரின் யோசனையின்படி தன் தவத்தை அங்கே தொடங்கினான். பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி ஒற்றைக் காலில் நின்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டான்; கைகள் சிரத்திற்கு மேல் உயர்ந்து வணங்கும் பாவனையில் குவிந்திருந்தன. அப்போது விளங்கிய அவனுடைய தோற்றம் சிவபெருமானே அங்கு வந்து நின்று தவம் செய்வதைப் போல இருந்தது. புலன்களின் ஒடுக்கத்தில் அறிவு மலர்ந்து பரம் பொருளை நோக்கிப் படர்ந்தது. அவனைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் வளர்ந்த பஞ்சாக்கினிகள் வெம்மையை உண்டாக்கியதாகவே தோன்றவில்லை. நெஞ்சம் சிவனை எண்ணிச் சிவமயமாக இருந்தது. உடல் புளகித்தது. இன்பமயமான அந்தப் பரம்பொருள் தியானத்தில் மெய்சிலிர்த்துச் சிலிர்த்துப் புற உணர்வுகள் ஓயப்பெற்ற அந்த உடல் நாளடைவிலே கற்சிலை போல் இறுகி விட்டது. உணர்ச்சிகள் அடங்கி உள்முகமாக ஒடுங்கி விட்டன. மலைச் சிகரங்களிடையே ஒரு கற்சிலை நிற்பது போல அவன் உடலும் நின்றது. காட்டு யானைகள் உடல் தினவு தீர்த்துக் கொள்ளும் நோக்குடனே அவனுடைய சரீரத்தைக் கற்பாறை என்றெண்ணி அதன் மேல் உரசிக் கொண்டன. உடலின் கீழ்ப் பகுதியில் மண் மேவியதால் அதைப் புற்று என்றெண்ணிப் பாம்புகள் வாசஞ்செய்ய வந்து விட்டன. மனித சரீரம் நெகிழ்ந்து, ஆன்ம சரீரம் வலுப்பட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தழைத்திருந்த செடி கொடிகள் சரீரத்தை மறைத்துத் தழுவிப் படந்து வளர ஆரம்பித்து விட்டன. காலம் வளர்ந்து கொண்டே போயிற்று. சிவ நாம ஸ்மரணையும், தியானமும் தவிரத் தனக்குரிய புறவுடலின் நினைவேயின்றித் தவஞ்செய்தான் அர்ச்சுனன். மாரியும் கோடையுமாகப் பருவங்கள் மாறி மாறி வந்தன. மாரிக் காலத்தில் மழை வர்ஷித்தது. கோடைக் காலத்தில் வெயில் வாட்டியது. குளிர் காலத்தில் குளிர் ஒடுக்கியது! ஆனால் அர்ச்சுனனுடைய தவம் குலையவில்லை. சரீரம் தளரத் தளர ஆன்ம சாதனை பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. போர் என்றால் காயங்கள் ஏற்படாமலா போய் விடும்? தவம் என்றால் சோதனைகள் ஏற்படுவது இயற்கை தான். அர்ச்சுனனுடைய கடுந்தவத்திற்கும் சோதனைகள் ஏற்பட்டன. அவன் மனத்திண்மையைப் பரிசோதனை செய்வதற்காக இந்திரன் அந்தச் சோதனைகளை ஏற்படுத்தினான். தேவருலகில் உள்ள அழகிய மாதர்களை யெல்லாம் ஒன்று திரட்டி, திலோத்தமை, ரம்பை முதலியவர்களின் தலைமையில் அனுப்பினான். நல்ல இளவேனிற் காலத்தில் மன்மதன் தென்றலாகிய தேரில் பவனி புறப்படும் சமயத்தில் திலோத்தமை முதலிய வானுலகத்து அழகிகள் இமயமலைச் சாரலுக்கு வந்தார்கள். அர்ச்சுனன் காலத்தையும் பருவத்தையும் உணராத கர்மயோகியாகத் தவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவன் தவத்தைக் குலைக்கும் முயற்சியில் நளினமான உடலும் மோகக் கவர்ச்சியும் நிறைந்த அந்த வானர மகளிர் ஈடுபட்டனர். காமக்கலைக்குக் கடவுளாகிய மன்மதன் கூட அவர்களுடன் சேர்ந்து கொண்டு பூங்கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தான். அவர்கள் ஆடினார்கள். பாடினார்கள், உடலைத் தீண்ட முயன்றார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. தேவ மாதர்களுக்குப் பெருந்தோல்வி. அர்ச்சுனனுடைய தவம் சிறிதளவும் சலனமுறாமல் மேலே நடந்தது. மாதர் இந்திரனிடம் சென்று கூறினர். இந்திரனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. அர்ச்சுனனின் தவ வலிமை அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்தது. அந்த ஆச்சரியத்தில் தன் மகன் என்ற பெருமிதமும் கலந்திருந்தது. இறுதிச் சோதனையாகத் தானே நேரில் புறப்பட்டுச் சென்று வரலாம் என்றெண்ணினான். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் போன்ற தோற்றங்கொண்டு புறப்பட்டான் இந்திரன். இமயமலைச் சாரலில் அர்ச்சுனன் தவஞ் செய்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது அவனிருந்த நிலையைக் கண்டு இந்திரனே திகைத்து விட்டான். வைராக்கியத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. இந்திரன் தவத்திலிருந்த அர்ச்சுனனை விழிக்கச் செய்து எழுப்பி, “நீ யார் அப்பா? எதற்காக இப்படிக் கடுந்தவம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமானைப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கடுந்தவம் என்று அர்ச்சுனன் பதில் கூறினான். “அது உன்னால் முடியாது இளைஞனே! வீணாக ஏன் பயனற்ற இந்தத் தவமுயற்சியில் நேரத்தைக் கழிக்கிறாய்?” “எனக்கு முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் முயல்கிறேன். அதைத் தடுக்க நீ யார்?” “அதற்குச் சொல்லவில்லை அப்பா! சிவபெருமான் தேவர்களுக்கும் வேதங்களுக்குமே தோற்றங் கொடுக்காதவர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர். கேவலம் சாதாரணத் தபஸ்வியாகிய உனக்கு எப்படிக் காட்சி கொடுப்பார்?” “கொடுப்பார் கொடுக்கத்தான் போகிறார். உம்முடைய உபதேசம் தேவையில்லை. நீர் போகலாம்” இந்திரன் தனக்குள் அர்ச்சுனனுடைய உறுதியை எண்ணிச் சிரித்துக் கொண்டான். அவனுடைய திண்மை அதியற்புதமாகத் தோன்றியது. தனது சொந்த உருவத்தை அர்ச்சுனனுக்குக் காட்டினான் இந்திரன். அர்ச்சுனன் முறை கருதி மரியாதை அளித்து இந்திரனை வணங்கினான். தன்னுடைய தவ உறுதியை மட்டும் கைவிடவேயில்லை. “அர்ச்சுனா! உன் உறுதி எனக்கு வியப்பைக் கொடுக்கிறது. நான் அதனைப் பாராட்டுகிறேன். உன் தவம் உறுதியாக வெற்றியடைந்தே தீரும். சிவபெருமானை நீ காண்பாய். உனக்குரிய வரத்தையும் நீ பெறுவாய்” என்று கூறி வாழ்த்தி விட்டுச் சென்றான் இந்திரன் அர்ச்சுனன் பழையபடி உறுதியுடனும் ஊக்கத்துடனும் தனது தவத்தை ஆரம்பித்தான். சிவதரிசனம் கைலாச சிகரத்தின் உச்சியிலிருந்து மவர்களைக் கொய்யவும் நீராடுவதற்காகவும் மலைச் சாரலுக்கு வந்து செல்லும் உமாதேவியின் தோழிப் பெண்கள் ஒருநாள் அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விட்டனர். அவர்கள் மூலமாகச் செய்தி உமாதேவிக்கு எட்டியது. உமாதேவி சிவபெருமானோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருக்கும் செய்தியை அவருக்குக் கூறினாள். மகேஸ்வரனாகிய சிவபெருமான் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவருடைய முகமண்டலத்தில் புதியதோர் விகசிப்புத் தோன்றியது. அவருடைய முகமலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புகின்ற பாவனையில் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் உமாதேவி. “தேவி! அர்ச்சுனன் இங்கு வந்து பல நாட்களாகத் தவம் செய்து கொண்டிருப்பதை நான் முன்பே அறிவேன். துரியோதனாதியர்கள் கொடுமை செய்து பாண்டவர்களை யாவும் இழந்து காட்டிற்கு வரும்படி செய்து விட்டார்கள். வனவாசம் முடிந்ததும் துரியோதனாதியர்களோடு போர் செய்வதற்காக பாசுபதாஸ்திரம் பெற விரும்பியே அர்ச்சுனன் என்னை நோக்கித் தவம் செய்கிறான். அவனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்.” “ஏன்? சமயம் என்ன? இப்போதே அந்த அருளைச் செய்து விட்டால் போகிறது.” “ஆமாம்! ஆமாம் அருள் செய்ய வேண்டிய சமயம் இப்போதே வந்துவிட்டது. தவம் செய்து கொண்டிருப்புவனைக் கொன்று தொலைத்து விடுவதற்காக முகன் என்னும் அசுரனை ஏவி விட்டிருக்கிறான் துரியோதனன். நாம் போனால்தான் பக்தனை உயிரோடு காப்பாற்றலாம்.” “புறப்படுங்கள்! இப்போதே போகலாம்.” “போக வேண்டியதுதான். ஆனால் ஒரு நிபந்தனை தேவி!” “என்ன நிபந்தனை?” “நான் வேடனைப் போன்ற மாற்றுருவத்திலும் நீ வேட்டுவச்சியைப் போன்ற மாற்றுருவிலுமாகச் செல்ல வேண்டும்.” “ஏன் அப்படி?” “அர்ச்சுனனை எதிர்க்க வந்திருக்கும் முகாசுரனைக் கொன்று பின்பு அவன் தவ வலிமையைச் சோதித்த பின் அருள் செய்ய மாறுவேடத்தில் போவதே வசதியாக இருக்கும்.” “சரி, அவ்வாறே போகலாம்” உமை சம்மதித்தாள். மறுவிநாடி கைலாச சிகரத்திலிருந்து ஒரு வேடனும் வேட்டுவச்சியும் மலைச்சாரலை நோக்கி இறங்கிச் சென்றார்கள். வேடனாகச் சென்ற சர்வேசுவரன் வில்லும் அம்பும் ஏந்தியிருந்தான். வேட்டுவச்சியாகச் சென்ற பராசக்தி முருகனைக் குழந்தையாக்கி இடுப்பிலே தூக்கிக் கொண்டு சென்றாள். சிவகணங்கள் வேட்டுவக்குலத்து மக்களைப் போல மாறி அவர்களைப் பின்பற்றின. அவர்கள் கைலாச சிகரத்தைக் கடந்து கீழே அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்தை வந்தடைந்த போது, பன்றி வடிவில் வந்திருந்த முகாசுரன் அர்ச்சுனன் மேலே தாவிப் பாய்ந்து அவனைக் கொல்ல முயன்று கொண்டிருந்தான். தியானத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சுனன் விழித்துக் கொண்டு பன்றி மேல் அம்பு எய்தான். அவன் எய்த அம்பு பன்றியைத் துளைப்பதற்கு முன்பே வேடனாக வந்திருந்த சிவபெருமானின் அம்பு பன்றியைத் துளைத்து விட்டது. இரண்டாவதாக அர்ச்சுனனின் அம்பும் துளைத்தது. இரண்டு அம்புகளுமாகச் சேர்ந்து பன்றியை இறக்கச் செய்து விட்டதென்னவோ உண்மை. ஆனால் சிவனுடைய ஏவலின்படி சோதனைக்காக அர்ச்சுனனைச் சிவ கணங்கள் வம்புக்கு இழுத்தன. “எங்கள் தலைவன் அம்பு எய்தபின் செத்த பன்றியின் மேல் புதிதாக அம்பு தொடுப்பது போல நீயும் அம்பு தொடுக்கலாமா? அப்படிச் செய்வது சுத்த வீரனுக்கு அழகல்லவே?” “தவறு நீங்கள் உங்கள் தலைவன் பன்றியை எய்ததாகக் கூறுவது பொய். உங்கள் தலைவன் எய்யத் தொடங்கு முன்பே என் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டு விட்டது.” அர்ச்சுனன் விடவில்லை! பன்றி தன் அம்பினாலேயே இறந்ததென்றும் தானே முதலில் எய்ததாகவும் சாதித்தான்! சிவபெருமானும் சிவகணங்களும் அதை வலிந்து மறுத்தனர். இறுதியில் வேடனாக வந்திருந்த சிவபெருமானுக்குக் கோபம் வந்து விட்டது. “உண்மையில் நீ ஒரு தபஸ்விதானா? விருப்பு வெறுப்பற்றுத் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் உனக்கு ஒரு பன்றியின் உயிரைக் கொல்லும் ஆசை ஏற்படலாமா? நீ தவம் செய்வது போல் நடிக்கிறாய். உண்மையில் நீ ஒரு அயோக்கியன். நீ இங்கே பொறுமையோடு தவம் செய்வது போல் நடிப்பது யாரைக் கெடுப்பதற்கோ? உன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லவில்லை என்றால் நீ என்னிடமிருந்து உயிரோடு தப்ப முடியாது!” “வீண் கோபம் கொண்டு துள்ளாதே வேடனே! நான் யார் என்பதைச் சொன்னால் நீ இங்கே நிற்பதற்கே பயந்து என்னை வணங்கி விட்டு ஓடிப் போவாய். ஜாக்கிரதை!” “சும்மா மிரட்ட வேண்டாம். நான் பேடியல்ல ஓடிப் போவதற்கு நீ யாரென்று சொல்!” “சொல்லி விடட்டுமா ! நெஞ்சத்தை உறுதியாக்கிக் கொண்டு கேள். நான்தான் அர்ச்சுனன். இந்த உலகத்தில் வில் என்று ஒரு கருவி பிறந்திருக்கிறதே, அதை ஆள்வதற்கென்றே பிறந்த வில்லாளன்.” “ஓகோ! அப்படியா? இப்பொழுது இதைக் கேள்விப் பட்ட பிறகுதான் என் கோபம் இரண்டு மடங்காகிறது. நீதான் அந்த அர்ச்சுனனா? அப்படிச் சொல்! எங்கள் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கட்டை விரலை இழக்கக் காரணமாக இருந்த துரோணரின் சீடன் இல்லையா நீ? மதிப்பிற்குரிய துருபத மன்னனைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து அவமானம் செய்தது, காண்டவத்தில் தீ எரிந்தபோது அங்கு வசித்த பல வேடர்களைத் தீயில் எரிந்து அழிந்து போகுமாறு செய்தது, ஒரு பார்ப்பானுடைய பசுக்களைக் கவர்ந்ததற்காகப் பல வேடர்களைத் துன்புறுத்தியது, ஆகிய தீமைகளை யெல்லாம் கூசாமல் செய்த கொடியவன் நீதானா? நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை வேடர் குலத்துக்கு எவ்வளவு தீமைகள் புரிந்திருக்கிறாய்? இன்று சரியாக என்னிடம் மாட்டிக் கொண்டாய்? உன் உயிரை வாங்காமல் விடப் போவதில்லை. ஆண்மையிருந்தால் என்னோடு போருக்கு வா! பார்க்கலாம்” என்று வேடன் ஆத்திரத்தோடு வில்லை வளைத்தான். கையில் வில் வளைந்தது. முகத்தில் புருவங்கள் வளைந்தன. அர்ச்சுனனுக்கும் சினம் வந்து விட்டது. அவனுக்கும் போர் செய்து இரண்டிலொன்று பார்த்துவிட விருப்பம் தான். அவனுடைய வில்லும் வளைந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவராக மாற்றி மாற்றி அம்பு மழை பொழிந்தார்கள். தொடக்கத்தில் வேடன் மேல் அர்ச்சுனன் செலுத்திய அம்புகளை எல்லாம் அவன் சாமார்த்தியமாகத் தடுத்து விட்டான். ஆனால் வேடன் தன் மேற்செலுத்திய அம்புகனை அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ள முடிந்ததே ஒழியத் தடுக்க இயலவில்லை. அர்ச்சுனனின் சாபம் தோள்களும் இரத்தக் காடாசிவிட்டது. தன் முன் நின்று சோதனைக்காகச் சிவபெருமான் போர் என்கின்ற திருவிளையாடலைப் புரிகிறான் என்பதை அறியமுடியாத அர்ச்சுனன் வேடன் மேல் அளவற்ற ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். ஆத்திரத்தோடும் மனக்கொதிப் போடும் அவள் செலுத்திய அம்பு வேடனாக இருந்த சிவபெருமானின் முடியைத் துளைத்தது. முடிந்த சடை மறையில் கங்கை முகிழ்த்துச் சிதறியது. சடைகள் தூள் பரந்தன். சிவகணங்களுக்கு இதைக் கண்டு மிகவும் செதுப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்து வில்லை எடுத்துக் கொண்டு அர்ச்சுனன் மேல் பாய்ந்தார்கள். நல்லவேளையாக வேடன் அவர்களுடைய சினத்தை அடக்கினான், மறுபடியும் இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விற்போர் ஆரம்பமாயிற்று போர் வெற்றி தோல்வி காண இயலாத சமநிலையில் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இறுதியில் வேடன் குறி வைத்து எய்த அம்பு ஒன்று அர்ச்சுனனுனடய வில்லின் நாணை அறுத்து வீழ்த்தி விட்டது. விசயன் வெறுங்கையனானான். வில் நாணறுந்து திகைத்த அர்ச்சுனன் கையிலிருந்த வில் தண்டினால் வேடன் மேல் தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஓர் அடி அடித்து விட்டான். வேடனாக இருந்த சிவபெருமான் அடி பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தவர் போல மூர்ச்சையற்றுக் கீழே விழுந்து விட்டார். சர்வேசுவரானாகிய அவர் மேல் பட்ட அந்த அடி உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் மேலும் பஞ்ச பூதங்களின் மேலும், அவற்றாலாகிய பிரகிருதியின் மேலும் ஒருங்கே விழுந்தது போல வலித்தது, வேடன் மூர்ச்சை தெளிந்து மறுபடியும் எழுந்தான். ஆத்திரத்தோடு அர்ச்சுனனை மற்போர் செய்வதற்கு அழைத்தான். அர்ச்சுனன் இணங்கினான், வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் மற்போர் நிகழ்ந்தது. திக்குத் திகந்தங்களெல்லாம் வெடி படுதாளத் திடிபடும் ஓசையென ஒலியெழுந்து அடங்கக் கோரமாகப் போர் செய்தனர். அர்ச்சுனனுடைய குத்துக்கள் வேடன் மேலும் வேடனுடைய குத்துக்கள் அர்ச்சுனன் மேலுமாக மாறி மாறி விழுந்தன. வேடன் தன் வலிமையெல்லாந் திரட்டி அர்ச்சுனனைக் கைகளால் தூக்கி மேலே எறிந்தான். வானத்தில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த அர்ச்சுனன் உணர்வு தெளிந்து கண் விழித்த போது அவனருகே வேடனில்லை. வேட்டுவச்சியும் இல்லை. வேடர் படைகளும் இல்லை. சிவகணங்கள் புடை சூழ கைலாசபதியாகிய சிவபெருமான் உமாதேவியாருடன் புன்முறுவல் பூத்துக் காட்சியளித்தார். அர்ச்சுனன் பக்திப் பரவசத்தோடு எழுந்திருந்து வலம் வந்து வணங்கி அவர்களை வழிபட்டான். ‘தன் தவம் வெற்றியடைந்து விட்டது’ -என்ற எண்ணம் அவனுக்குக் களிப்பைக் கொடுத்தது. சிவபெருமானையும் உமாதேவி யாரையும் நோக்கி மெய் புளகாங்கிதம் அடைய விழிகள் ஆனந்தக் கண்ணீர் சொரிய, நோக்கிய கண் இமையாமல், கூப்பியகை தளராமல் அவன் நின்றுக் கொண்டே இருந்தான். சிவபெருமான் மலர்ந்த முகத்தோடு அவனருகில் வந்தார். மகனை அன்போடு தழுவிக் கொள்ளும் தந்தையைப் போல அவனைத் தழுவிக் கொண்டார். “அன்பனே! துரியோதனாதியர்கள் உன்னைக் கொல்வதற்காக ஏவிவிட்ட ‘முகன்’ -என்ற பன்றியை அழித்து உன்னைக் காப்பாற்றி, நீ வேண்டும் வரத்தை அளிப்பதற்காகவே வேடனாக மாறி வந்தேன். நீயும் நானும் விற்போரும் மற்போரும் செய்து திறமையைப் பரிசோதித்துக் கொண்டோம். அஞ்சாமை நிறைந்த உனது வீரத்தையும் தவ வலிமையையும் பாராட்டுகிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.” “அடியேன் விருப்பம் தேவரீருக்குத் தெரியாதது அல்ல. ‘பாசுபதாஸ்திரம்’ பெறுவதற்காகவே இவ்வரிய தவ முயற்சியை மேற் கொண்டேன்.” சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தையும் அதனைப் பிரயோகிப்பதற்குரிய முறை நூல்களையும் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார். அர்ச்சுனன் சர்வாங்கமும் பூமியில் படுமாறு கீழே விழுந்து வணங்கினான். சிவபெருமான் அவனுக்கு எல்லா நலன்களும் உண்டாகுமாறு ஆசி கூறி மறைந்தார். அர்ச்சுனனுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும்போது தானும் தன் பரிவாரங்களோடு அங்கே வந்திருந்தான் இந்திரன். சிவபெருமான் வரங்கொடுத்து விட்டுச் சென்றதும் தேவர்கோனாகிய இந்திரன் அர்ச்சுனனை அணுகி, “மகனே! சோதனைகளெல்லாம் கடந்து உன் தவத்தில் வெற்றி பெற்று விட்டாய். அது கண்டு மிகவும் மகிழ்கிறேன். நீ சில நாட்கள் எங்களுடனே வந்து விருந்தினனாகத் தங்கியிருத்தல் வேண்டும். என் வேண்டுகோளை மறுக்கக்கூடாது” என்றான். அர்ச்சுனன் சம்மதித்து அவனோடு வானுலகுக்குப் புறப்பட்டான். தேவருலகில் அர்ச்சுனனின் விதி அவனுக்காக ஊர்வசி உருவத்தில் காத்திருந்தது போலும். இந்திரன் அர்ச்சுனனுடைய வரவைக் கொண்டாடுவதற்காகத் தன் உரிமை காதல் மகளிருள் ஒருத்தியாகிய ஊர்வசியின் நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஊர்வசியின் நாட்டியத்தைக் காண்பதற்காக வந்து வீற்றிருந்த அர்ச்சுனனின் மோகனத்தோற்றத்தைக் கண்டு அந்த நடனராணியே அளவற்ற மையல் கொண்டு விட்டாள். நாட்டியம் முடிந்ததும் தான் தனியாகத் தங்கியிருக்கும் மாளிகைக்குச் சென்று விட்டான் அர்ச்சுனன். அவன்மேற் கொண்ட மையலை அடக்க முடியாத ஊர்வசி தனியாக அவனைச் சந்தித்து, தன் மோகத்தை வெட்கமின்றி வெளியிட்டாள். இச்சையை நிறைவேற்றும்படி கேட்டாள். அர்ச்சுனன் திடுக்கிட்டான். “அம்மணி! நீ எனக்கு தந்தை முறையுடைய இந்திரனின் காதல் கிழத்தி. உன்னை நான் என் தாயாக எண்ணுகிறேன்” என்று கூறி ஊர்வசியின் விருப்பத்தை மறுத்து விட்டான். இச்சையும் மோகமும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த ஊர்வசிக்குக் கடுமையான சினம் மூண்டது. தனக்குள்ள சாபம் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அர்ச்சுனனை ஆண் தன்மை இழந்து பேடியாகுமாறு செய்துவிட்டாள். அர்ச்சுனன் பேடியானான். ஊர்வசியின் சாபத்தால் விளைந்த இந்தக் கோர விளைவை எண்ணி மாளிகையை விட்டு வெளியேறாமலிருந்தான் அர்ச்சுனன். இந்திரன் முதலிய தேவருலகப் பெருமக்கள் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டனர். ஊர்வசியின் அடாத செயலைக் கண்டிப்பதற்காக இந்திரனும் தேவர்களும் அவளிருப்பிடம் சென்றனர். ஊர்வசி, தேவர்களும், இந்திரனும் கூட்டமாக வருவதைக் கண்டு அஞ்சி, “அர்ச்சுனன் தான் விரும்பினால் பேடிவடிவத்தை அடையட்டும், இல்லையெனில் சுய உருவோடிருக்கட்டும்” என்று சாபத்தை மாற்றி விட்டாள். உடனே அர்ச்சுனனுக்குப் பழைய ஆண்மை வடிவம் வந்தது. அவன் கவலை நீங்கி வானவர் கோமான் மனமகிழ இன்னும் சில நாட்கள் விருந்தினனாக அங்கே தங்கியிருந்தான். இந்திரன் கட்டளை வானுலகில் விருந்தினனாகத் தங்கியிருந்த நாட்களில் இந்திரன் அர்ச்சுனனைத் தனக்குச் சரிசமமான உபசாரங்களையும் போற்றுதல்களையும் செய்து பேணினான். அர்ச்சுனனின் பெருமையை வாய் சலிக்காமல் தேவர்களுக்கு எடுத்துரைத்தான். இந்திரனுடைய அரசவையிலே அவனுக்கு மிக அருகில் இணையாசனத்தில் வீற்றிருந்தான் அர்ச்சுனன். “வானுலகத்துப் பெருமக்களே! இதோ என்னருகில் அடக்கமே உருவாக வீற்றிருக்கும் இந்த இளைஞரைச் சாதாரண மானிடர்களில் ஒருவனாக எண்ணி விடாதீர்கள். இவன் பாண்டவ சகோதரர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன். இவனுடைய வீரத்தையும் போர் செய்கின்ற ஆற்றலையும் அளவிட்டுச் சொல்லவே முடியாது. நானும் என்னுடைய மேகப் படைகளும் சேர்ந்து தடுத்தும் கூட காண்டவ வனம் எரியும்போது அதை அவிக்க விடாமல் எங்களை எதிர்த்துப் போர் செய்தவன் இவன் தான். இவனுடைய வீரத்திற்கு வானுலகப் பெருமக்களின் சார்பில் நாம் நன்றி செலுத்த வேண்டும்" என்று கூறிக் கற்பகப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றை அர்ச்சுனனுக்குச் சூட்டினான் இந்திரன். மற்றும் பல தேவர்கள் அர்ச்சுனனை மனமகிழ்ச்சியோடு பாராட்டிப் பலவகை அன்பளிப்புகளை வழங்கினர். அன்று இந்திரனும் அர்ச்சுனனும் அருகருகே அமர்ந்து உணவுண்டனர். அதனைக் கண்ட இந்திரனின் கோப்பெருந்தேவியாகிய இந்திராணி அசூயையும் சினமும் கொண்டாள். “ஒரு மண்ணுலகத்து மானிட இளைஞனை வானுலக மன்னராகிய நீங்கள் அருகே அமர்த்திக் கொண்டு உண்பது தகுதியுணராத செயல்” என்று அவள் கூறினாள். இந்திரன் இவ்வாறு கூறிய தன் மனைவியை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே சமாதானமாக விடை கூறலானான். “அரசீ! இவனை மானிடனென்று தாழ்வாகப் பேசாதே! உண்மையில் இவன் தேவர்களைவிடப் பன்மடங்கு உயர்ந்தவன். எனக்கு மகன் முறையுடையவன். எல்லாம் வல்லமாயனாகிய கண்ணபிரானுக்கு மைத்துனன், உலகத்தின் சம்ஹாரகர்த்தாவாகிய சிவபெருமானுடனேயே துணிந்து எதிர்த்துப் போர் செய்தவன்” என்று கூறி இந்திராணிக்கு அர்ச்சுனனுடைய தகுதியை உணருமாறு அறிவுறுத்தினான். பெரிய வில்லாளனும் தெய்வீகக் கண்ணனுக்கு மைத்துனனுமாகிய அர்ச்சுனனுடைய வரவினால் தேவலோகத்துக்கு ஏதாவது பெரிய நன்மை ஏற்படலாம் என்று தேவர்கள் கருதினர். ஒரு நாள் இந்திரனும் அர்ச்சுனனும் தனியே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இந்திரன் அர்ச்சுனனிடம் அப்போது ஒரு வேண்டுகோள் விடுத்தான்; “அர்ச்சுனா! எனக்கும் என் நாட்டிற்கும் தேவர்களுக்கும் எப்போதும் தீமைகளை செய்து கொண்டிருக்கிற அகரர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்காக அந்தக் கொடியவர்களை அழிக்கும் பொறுப்பை நீ மேற்கொள்ள வேண்டும். அன்பு உரிமையோடு இந்தப் பணியை ஒரு கட்டளையாகவே இடுகிறேன்.” “தங்கள் கட்டளை எதுவானாலும் பணிவோடு நிறைவேற்றுவதற்குக் காத்திருக்கிறேன். தெளிவாகக் கூறியருள வேண்டும்.” “கடற்பகுதிகளின் இடையே ‘தோயமாபுரம்’ என்ற தலைநகரை அமைத்துக் கொண்டு ‘நிவாதகவசர்’ என்னும் பெயரையுடைய அசுரர்கள் வசித்து வருகிறார்கள். தெய்வங்களும் தேவர்களுமே அந்த அசுரர்களை எதிப்பதற்கு அஞ்சி ஒடுங்கி அவர் செய்யும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்! உலகமே ஒன்று திரண்டு போரிட்டு வெல்ல முடியாத தீரர்கள் நிவாதகவுசர்கள். அவர்களுடைய போர் வலிமையும் தவவலிமையும் அழியாத இயல்புடை யவை. இன்று வரை மற்றவர்களை அழித்திருக்கிறார்களே ஒழிய தங்களுக்குச் சிறு அழிவையும் கண்டதே இல்லை. மூன்று கோடி எண்ணிக்கை உடையவர்களாகிய நிவாதகவுசர்களை நீ உன்னுடைய தனிச்சாமர்த்தியத்தாலேயே அழித்தொழிக்க முடியும். நீ சென்றால் வெற்றியுடனேயே திரும்பி வருவாய் என்று நம்புகின்றேன்.” “சந்தேகமே வேண்டாம்! உங்கள் அன்பும் ஆசியும் இருந்தால் நிவாதகவசர்களை மட்டும் இல்லை. அவர்களைக் காட்டிலும் சூராதி சூரர்களைக் கூட வென்று வாகை சூடி வருவேன். விடை கொடுங்கள். வெற்றியோடு திரும்பி வருகிறேன்.” அர்ச்சுனன் இந்திரனுக்கு வாக்களித்தான். இந்திரன் விடை கொடுத்தான். பொற்கவசம் ஒன்றையும் சிறந்த தேரையும், தேரோட்டும் தொழிலில் வல்லவனாகிய ‘மாதலி’ என்னும் பாகனையும் அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தான். அர்ச்சுனன் பெற்றுக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். வானுலகம் முழுவதுமே அவனை வாழ்த்தி வழியனுப்பியது. மாதலி தேரைச் செலுத்தினான். தேரில் அர்ச்சுனன் போர்க்கோலம் பூண்டு நின்றிருந்தான். தேர் சென்று கொண்டிருக்கும்போதே பாகனை நோக்கித் தோயமாபுரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விசாரித்தான். கீழ்க் கடலின் இடையே அந்த அரக்கர்களின் தலைநகரம் அமைந்திருப்பதாகவும் அங்கே போக வேண்டும் என்றும் அவன் கூறினான். மாதலியின் ஏற்பாட்டால் அர்ச்சுனனுக்கும் அவனுக்கும் தோயமாபுரத்திற்குத் தேர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுவதற்காகச் சித்திரசேனன் என்பவனும் உடன் வந்தான். வானுலக வீதிகளைக் கடந்து அர்ச்சுனனுடைய தேர் சென்ற போது மேல் மாடங்களில் நின்று கண்ட தேவருலகப் பெண்கள் அவனை இகழ்ச்சி தோன்ற நோக்கி நகைத்தனர். அவன் நிவாதகவர்களை அழிக்க முடியாது என்று எண்ணியே தேவமாதர்கள் அவ்வாறு செய்தனர். அர்ச்சுனனோ தேரில் சென்று கொண்டே அந்தப் பெண்களின் அறியாமையை எண்ணித் தனக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் அர்ச்சுனனுடைய பேராண்மையையும் வீரத்தையும் உணர்ந்தவர்களோ ‘இவனுடைய ஆற்றல் தேவர்களுடைய ஆற்றலைவிடப் பெரியது! நிச்சயமாக இவன் நிவாதகவர்களை வென்று வாகை சூடி வருவான்’ என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறு அர்ச்சுனனைப் பற்றி அறிந்தோர் புகழ்ந்தும், அறியாதோர் இகழ்ந்தும், பேசிக் கொண்டிருந்த வானுலக எல்லையைக் கடந்து தேர் தோய்மாபுரத்து வழியில் தனியே செல்லலாயிற்று. “மாதலி! அந்த அசுரர்களைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறு. கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன். உன் கருத்துக்கள் எனக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.” என்று அர்ச்சுனன் கேட்டான். மாதலி, உடனே நிவாதகவசர்களைப் பற்றித் தனக்குத் தெரிந்திருந்த விவரங்களை எல்லாம் கூறத் தொடங்கினான். “நிவாதகவசர்கள் கண்டவர் பயப்படும்படியான தோற்றத்தை உடையவர்கள். இடி முழக்கம் போலப் பேசுகிற சினம் மிக்க சொற்களை உடையவர்கள். மலைக் குகை போன்ற பெரிய வாயை உடையவர்கள். நெருப்புக் கோளங்களோ எனப் பார்த்தவர்கள் அஞ்சி நடுநடுங்கும் விழிகனள உடையவர்கள். போர் எனக் கேட்டதுமே பூரித்து எழுகின்ற தோள்களை உடையவர்கள். மகாவீரர்கள். ஈட்டி , மழு, வளைதடி, வில், வாள் முதலிய படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதில் நிகரற்றவர்கள். அவர்களை வெல்ல உலகில் எவராலும் முடியாதென்று மற்றவர்களை எண்ணச் செய்பவர்கள்.” மாதலி இவ்வாறு கூறி வந்த போதே தேர் தோயமாபுரத்தை அடைந்து எல்லைக்கு வெளியில் நின்றது. தங்களோடு வந்திருந்த சித்திரசேனனை நிவாதகவசர்களிடம் தூதாக அனுப்பினர் அர்ச்சுனனும் தேர்ப்பாகன் மாதலியும். சித்திரசேனன் அர்ச்சுனன் போருக்கு வந்திருக்கும் செய்தியை உரைப்பதற்காகத் தோய்மாபுரத்திற்குள்ளே சென்றான். மாதவி தேரைச் செலுத்தும்போது தேர்ச்சக்கரங்கள் உருண்ட ஓசையும் வில்லின் நாணை இழுத்து வளைத்து அர்ச்சுனன் உண்டாக்கிய ஒலியும் தோயமாபுர மக்களாகிய அசுரர்களின் செவிகளைக் கிடுகிடுக்கச் செய்தன. ஆனால் அவர்கள் அஞ்சவில்லை. சித்திரசேனன் நகருக்குள் நுழைந்து நிவாதகவுசர்களிடையே அர்ச்சுனன் போருக்கு வந்திருப்பதைக் கூறினான். அவர்கள் இதைக் கேட்டு இடியடி யென்று சிரித்தனர். “இந்த நகரத்து வீரர்களாகிய புலிகளுக்கு நடுவே ஒரு பூனை போருக்கு வந்திருக்கிறது போலும் வரட்டும் வரட்டும், அது சாவதற்குத் தான் வந்திருக்கிறது. நாட்டையும், உடைமைகளையும் பறித்துக் கொண்ட துரியோதனாதியர்களை எதிர்க்கத் தெரியாத அந்த அப்பாவி அர்ச்சுனன் எங்களை எதிர்த்தா போருக்கு வந்திருக்கிறான்? வெட்கக் கேடுதான்” என்று அவமதித்துப் பேசினார்கள் நிவாத கவசர்கள். மூன்று கோடி அசுரர்களுக்கும் சினம் மூண்டது. மனம் கொதித்துப் படைகளோடு அர்ச்சுனனை எதிர்க்கப் புறப்பட்டனர். கடல் ஒன்று அலைமோதிக் கொந்தளித்துத் திரண்டு வருவதைப் போல் அசுரர் கூட்டம் ஊர் எல்லையில் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைத் தனித் தேரை நோக்கிப் பாய்ந்தது. அம்புகள் எட்டுத் திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. அவனும் தன் கைவில்லை வளைத்து அம்புகளைப் பாய்ச்சினான். “அசுரர்களே! நான் இங்கு வில்லோடு வந்திருப்பதைக் கொண்டே உங்களுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இது வரையிலும் உங்களை எதிர்த்து வந்து உங்களோடு போர் புரிந்து தோற்றுப் போனவர்களைப் போல் என்னையும் எண்ணிவிடாதீர்கள். நான் உங்களை அழித்தொழிப்பதற்கென்றே வந்திருக்கிறேன்.” இவ்வாறு கூறிக்கொண்டே எதிரே கடல் போலச் சூழ்ந்து நிற்கும் அசுரர்களின் மேல் அம்பு மாரி பொழிந்தான் அர்ச்சுனன். “உங்கள் மனைவி திரெளபதியை அவமானம் செய்தும், சூதாடி நாட்டை அபகரித்துக் கொண்டு உங்களுக்குத் துன்பமிழைத்த கெளரவர்களை அழிக்கத் தெரியாத நீ எங்களிடமா வீறு பேசுகிறாய்? அழியப் போவது நீதான்! நாங்களில்லை” -என்று கூறிக் கொண்டே நிவாதகவசர்கள் அவனை நெருங்கினர். அவர்களுடைய தாக்குதலுக்குத் தான் ஆளாகாமல் சமாளித்துக் கொண்டு தன் அம்புகளால் அவர்களை அழித்துக் கொண்டிருந்தான் விசயன். நிவாதகவசர்கள் தேருக்கருகில் நெருங்கி ஒரேயடியாகத் தேரை அமுக்கிக் கொன்று விட வேண்டும் என்று ஆக்ரோஷமடைந்தனர். அந்த எழுச்சியின் வேகத்தைத் தவிடுபொடியாக்குவதைப் போல அர்ச்சுனன் பிரம்மாஸ்த்ரத்தை எடுத்துச் செலுத்தினான். சக்திவாய்ந்த அந்த அஸ்திரத்தின் விளைவாக அசுரர்களில் பெரும் பகுதியினர் உயிரிழந்தனர். எஞ்சியிருந்தவர் அவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ச்சுனனும் கை ஓயாமல் வில்லிலிருந்து கணைமழை பொழிந்து கொண்டிருந்தான். நிவாதகவசர்கள் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே இருந்தனர். நல்லவர்களுடைய செல்வம் வளர்வது போல அர்ச்சுனனுடைய ஆற்றல் பெருகியது. வஞ்சகர்களின் செல்வம் அழிவது போல நிவாதகவசர்களுடைய ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது. ஆயிற்று. எல்லா அசுரர்களும் ஏறக்குறைய அழிந்து விட்டனர். இன்னும் சில நூறு பேரே எஞ்சியிருந்தார்கள். அர்ச்சுனன் மனமகிழ்ச்சியோடு அவர்களையும் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் திடுக்கிட்டு மலைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. என்ன மாயமோ? சூனியமோ? திடீரென்று செத்தும் உடல் சிதைந்தும் கிடந்த எல்லா அசுரர்களும் உயிர் பெற்று எழுந்து போருக்கு வந்தார்கள். இறந்தவர் பிழைத்து எழுந்து வரும் அந்த விந்தையைக் கண்டு அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் அவனைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் திடீர்த்தாக்குதல் அவனை தன்னம்பிக்கை இழக்கச் செய்து விட்டது. அவன் சோர்ந்து போய் நின்றான். ஆசரிரீயாக ஒரு குரல் அவனுக்கு அந்த நிலையில் ஊக்கமளிக்கும் அருமருந்து போல் செவிகளில் நுழைந்தது. “பாசுபதாஸ்திரத்தைப் பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.” அர்ச்சுனன் உடனே, தவமிருந்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துத் தொடுத்தான். சிவபெருமானால் அளிக்கப்பட்ட மாபெரும் ஆற்றலமைந்த அந்த அஸ்திரம் மூன்று கோடி அசுரர்களையும் ஒரு நொடியில் சாம்பலாக்கியது. தோயமாபுரம் சூனியமாகியது. அங்கே வாழ்ந்து வந்த தீமையின் உருவங்கள் அழிந்து விண்ணகம் புகுந்துவிட்டன. வெற்றி வீரனாக அர்ச்சுனன் தேரில் வீற்றிருந்தான். மாதலிதேரை வானவர்கோ நகரமாகிய அமராபதியை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியால் விரைந்த அவர்கள் உள்ளங்களைப் போலவே தேர்ச்சக்கரங்களும் உருண்டன. தேர் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை வழியில் அர்ச்சுனன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். அந்தரத்தில் மறைந்து நின்று தொங்குவதைப் போலத் தொலைவில் ஒளிமயமான நகரம் ஒன்று மேகங்களுக்கிடையே தென்பட்டது. அர்ச்சுனன் தேர்ப்பாகனை வினவினான். “மாதலீ! அதோ தெரியும் நகரத்தின் பெயர் என்ன? அந்த நகரத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?” “பிரபு! அந்த நகரம் காலகேயர்கள் வசிக்கும் நகரம், காலகை, பூலோமை என்ற பெயரினரான இரண்டு பெண்களுக்குச் சொந்தமானது. அதிரூபவதியான அந்தப் பெண்கள் பிரம்மாவை நோக்கித் தவம் செய்து சாகாவரமும் மற்றும் பல அரிய வரங்களும் பெற்றுள்ளார்கள். நகரத்திற்கு இரணிய நகரம் என்று பெயர். காலகை, பூலோமை இருவருக்கும் மக்கள் முறை உடையவர்களாகிய அறுபதினாயிரம் மாவீரர்கள் அங்கு வாழ்கின்றனர். அந்த நகரில் வாழ்கிறவர்களுடைய அழகிய தோற்றம், கண்டவர்களை வணங்குமாறு செய்யும் இயல்பை உடையது. சுடச்சுடச் சுடரும் செம்பொன் போன்ற மேனி நிறத்தை உடையவர்கள். உலகெங்கும் தங்கள் பெயரை நிலை நாட்டிய பெருமையுடையவர்கள். இன்று வரை யாருக்கும் போரில் தோற்காதவர்கள் தேவர்கள் கூடக் காலகேயர்களின் இரணிய நகரத்துப் பக்கம் போவதற்கு அஞ்சுவார்கள்.” என்று மாதலி விவரங்களைக் கூறினான். “நாம் அஞ்ச வேண்டாம்! அந்த நகரத்தை நோக்கி நம்முடைய தேரைச் செலுத்து. அவர்கள் இதுவரை என்னவென்று அறியாத தோல்வியை இன்று அவர்களுக்கு அறிவிப்போம்.” மாதலி தயங்கினான். அவனுக்குப் பயம் தெளியவில்லை. “தயங்காதே மாதலீ! காலகேயர்களை வென்று அடக்குவது என் பொறுப்பு! நீ பயப்படாமல் தேரைச் செலுத்து-” அர்ச்சுனன் மீண்டும் வற்புறுத்தித் தூண்டினான். மாதலி மறுக்க வழியறியாமல் காலகேயர்கள் வசிக்கும் இரணிய நகரத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனனுடைய தேர் இரணிய நகரத்து எல்லையை அடைவதற்கு முன்பே காலகேயர்கள் அவன் போருக்கு வருவதை எப்படியே உணர்ந்து விட்டார்கள். தேரேறித் துணிவோடு தங்களுடன் போருக்கு வரும் மானிடனை எண்ணித் தாங்களே பரிதாபப்பட்டுக் கொண்டனர். அறுபதினாயிர காலகேயர்களும் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கப் புறப்பட்டனர். கண்டவர்களை மயக்கும் அழகிய தோற்றம் உடையவர்களாகிய அவர்களுக்குப் போர்க் கோலமும் சினமும் கூடக் கவர்ச்சி நிறைந்தே தோற்றமளித்தது. தேரில் நின்று கொண்டு வளைத்த வில்லும் தொடுத்த கணையுமாக அந்த அசுரர்களான அழகர்களைப் பார்த்த போது அர்ச்சுனனுடைய கைகளும் மனமும் ஒரு கணம் தயங்கின. இப்படிப்பட்ட அழகுள்ளவர்கள் தீயவர்களாக இல்லாமலிருந்தால் இவர்களைக் கொல்ல வேண்டாமே! இப்போது இந்த அழகைக் கண்டு மனம் பேதலிக்கிறதே! கைகள் தயங்குகின்றனவே? அர்ச்சுனன் வில்லை வளைப்பதை நிறுத்தினான். ஓரிரு விநாடிகள் தயங்கினான். வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்தான். ஆனால் அவனுடைய தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் காலகேயர்கள் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் அவன் மேற் பாய்ந்தார்கள். “இவர்கள் புறத் தோற்றந்தான் அழகாக இருக்கிறது. உள்ளம் குருரமாக இருக்கிறது’ என்றெண்ணிக் கொண்ட அர்ச்சுனன் தயக்கத்தைப் போக்கிக் கொண்டு போரைத் தொடங்கினான்.”தேவர்களே நுழைவதற்குப் பயப்படுகின்ற எங்கள் இரணிய நகரத்துக்குள் கேவலம் ஒரு மானிடனாகிய நீ எப்படித் துணிவோடு நுழைந்தாய்? போருக்கு வந்துவிட்டாய்! உன் முடிவு பரிதாபகரமாகத்தான் இருக்கப் போகிறது." “தேவர்களை ஏமாற்றி அஞ்சச் செய்தீர்கள். என்னை ஏமாற்ற முடியாது. நான் உங்களைக் கொன்று உங்கள் குலத்தைப் பூண்டோடு அழித்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்.” அர்ச்சுனன் வீர முழக்கம் செய்தான். அவனுக்கும் காலகேயர்களுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில் தோயமாபுரத்திற் செய்தது போலவே பாசுபதா ஸ்திரத்தை எடுத்துச் செலுத்தினான் அர்ச்சுனன். பாசுபதாஸ்திரத்தின் விளைவாக காலகேயர்கள் எனப்படும் மாயத் தோற்றங்கள் அழிந்தன. புறத்திலே மினுமினுத்து அகத்திலே வஞ்சனை செறிந்த அந்தப் பொய்யுடல்கள் இருந்த இடம் தெரியாமற் பூண்டோடு போய் விட்டன. இரணிய நகரம் என்று மேகங்களின் ஊடே தெரிந்த அந்த நகரமும் மறைந்தது. வில் நாணையே வெற்றி முழக்கத்துக்குரிய வாத்தியமாகக் கொண்டு ஐங்கார நாதம் செய்தான் அர்ச் சுனன். ‘தேவர்கள் தங்கள் பகைவர்கள் யாவரும் தொலைந்தனர்’ என்றெண்ணி மகிழ்ந்தனர். மாதலி வெற்றி மிடுக்குடன் தேரை வானவருலகத்துத் தலைநகரை நோக்கிச் செலுத்தினான். தன் கட்டளைகளை நிறைவேற்றி அர்ச்சுனன் வெற்றி வாகை சூடி வருகிறான் என்று கேள்விப்பட்டான் இந்திரன். மாதலிக்கு வழிகாட்டிய சித்திரசேனன் தேர் வருவதற்கு முன்பே அமராபதிக்கு வந்து வெற்றிச் செய்திகளைக் கூறியிருந்தான். அதனால் விவரங்களை நன்கு அறிந்து கொண்டிருந்த இந்திரன் நகரெங்கும் சிறப்பான அலங்காரங்களைச் செய்யும்படி கட்டளையிட்டான். அர்ச்சுனனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கோலாகலமாகச் செய்து வைத்தான். தன்னாலும் வெல்ல முடியாதவர்களைத் தன் மகன் வென்று விட்டான் என்று அறிந்த போது அவன் உள்ளத்தில் ஏற்பட்ட பெருமிதமும் திருப்தியும் உவமை சொல்ல முடியாதவை. அமராபதியின் நகரெல்லையிலேயே எதிர்கொண்டு சென்று அர்ச்சுனனை வரவேற்றான். களிப்போடு அவனை மார்புறத் தழுவிக் கொண்டு தேவர்களின் சார்பாகப் பாராட்டினான். நன்றி செலுத்தினான். ஐராவதத்தில் அமரச் செய்து நகர்வலம் செய்தான். தோயமாபுரத்திலும் இரணிய நகரத்திலும் பகைவர்களை வென்ற நிகழ்ச்சிகளை ஆவல் தீரக் கேட்டு அறிந்தான். அர்ச்சுனன் இந்திரனோடு இவ்வாறு தங்கியிருக்கும் போது வனத்திலுள்ள தருமன் முதலிய தன் சகோதரர்களைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று அவனுக்கு. தன் விருப்பத்தை அவன் இந்திரனிடம் தெரிவித்தான். இந்திரனுக்குத் தன் மகனை அவ்வளவு விரைவில் பிரிய விரும்பவில்லை. இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கும் படி வற்புறுத்தினான். அர்ச்சுனனைப் பற்றிய செய்திகளை வனத்தில் வசித்து வரும் தருமன் முதலிய சகோதரர்களுக்குக் கூறி வருமாறு ‘உரோமேசர்’ என்னும் பெயரை உடைய தூதுவர் ஒருவர் இந்திரனால் அனுப்பப்பட்டார். அர்ச்சுனனும் இந்திரனுடைய விருப்பத்தை மறுக்க முடியாது. அங்கு தங்கியிருந்தான். வீமன் யாத்திரை தீர்த்த யாத்திரைக்காக முன்பு ஒருமுறை அர்ச்சுனன் ‘பாண்டவர் ஐவர்’ என்ற தன்மை மாறித் தனியாக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றிருந்தான். இப்போதும் அதே போலத்தான் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகத் தவம் செய்யும் பொருட்டு அவர்களைப் பிரிந்து சென்றிருக்கிறான். ஆனால் தருமன் முதலியவர்கள் இன்றிருக்கும் நிலை வேறு. அன்றிருந்த நிலை வேறு. அன்று அரசும் அரசாட்சியுமாக இருந்ததனால் அர்ச்சுனனுடைய பிரிவு அவர்களை அதிகம் வருத்தவில்லை. இன்றோ காட்டில் தனிமை அவர்களுக்கு அவன் பிரிவை உணர்ந்து வருந்தும்படியான நிலையை அளித்திருந்தது. தங்களில் அறிவும் வலிமையும் அழகும் ஒருங்கமைந்த சகோதரன் ஒருவன் எங்கோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்டானே தவம் செய்வதற்காக! -என்றெண்ணிக் கலங்கினர். அவர்களுடைய கலக்கத்தைத் தணிப்பதற்கென்றே வந்தவர் போல இந்திரனால் அனுப்பப்பட்ட உரோமேசர் என்ற தூதர் அப்போது அங்கே வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததுமே அவர் ஏதோ நல்ல செய்தியைக் கூறுவதற்காகவே வந்திருக்க வேண்டுமென்று பாண்டவர்களும் திரெளபதியும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வயது மூத்தவராகவும் சான்றோராகவும் இருந்த அவரை அவர்கள் மரியாதையாக வணங்கி வரவேற்றனர். உரோமேசர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களுக்கு ஆசி கூறி அன்பு பாராட்டினார். பின்பு தாம் இந்திரனால் அனுப்பப்பட்ட செய்தியையும் அர்ச்சுனனைப் பற்றிய விவரங்களையும் கூறத் தொடங்கினார், தருமன் முதலிய சகோதரர்களும் திரெளபதியும் ஆவலோடு கேட்டனர். அர்ச்சுனன், நிவாதக்கவசர்களையும் காலகேயர்களையும் தன் ஆற்றலால் அழித்து வெற்றிக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்ட போது அவர்களுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. தேவர்களுக்கும் உதவி செய்யக் கூடிய அளவிற்குத் தன் தம்பியினுடைய வீரம் சிறந்தது என்று தருமன் இறும்பூது கொண்டான். உரோமேசர் பாண்டவர்களைப் பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடலாம் என்று கூறி யாத்திரையாக அழைத்துக் கொண்டு சென்றார். அப்படியே பாசுபதம் பெற அர்ச்சுனன் அமர்ந்து தவம் செய்த இடத்துக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். கைலாயமலையின் அடிவாரத்தில் அர்ச்சுனனை முகாசுரன் கொல்ல வந்தது, சிவபெருமானும் உமாதேவியும் வேடனும் வேட்டுவச்சியுமாக வந்து காத்தது, சிவபெருமான் சோதனைக்காக அர்ச்சுனனோடு போர் செய்தது, ஆகிய நிகழ்ச்சிகளை உரோமேசரிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள் தருமன் முதலியோர். தீர்த்தங்களையும் தலங்களையும் கண்டு பல இடங்களுக்குப் பிரயாணம் செய்த பின்னர் கைலாயமலைச் சிகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள காந்தருப்பம் என்ற மலைப்பகுதிக்கு வந்து தங்கினார்கள். இயற்கை வளமும் நல்வினைப்பயனும் மிகுந்த அந்த இடத்தில் அவர்களும் உரோமச முனிவரும் ஒரு வருஷ காலம் வசித்து வந்தனர். அவ்வாறிருக்கும்போது வீமன் தன்னுடைய வீரத்தை வெளிபடுத்தும்படியான வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஒரு நாள் திரெளபதி காந்தருப்ப மலைப்பகுதியிலிருந்த அழகிய பூம் பொழில் ஒன்றின் இடையே உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வானிலிருந்து பொன் போலும் நிறத்தை உடைய தாமரைப்பூ ஒன்று அவள் முன் விழுந்தது. கண்ணைக் கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்த மலரை அவள் கையில் எடுத்தாள். ஆர்வம் தீர நுகர்ந்து பார்த்தாள். அம் மாதிரி மலர்கள் பலவற்றைத் தன் கரங்களில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அந்த மலரை வீமனிடம் கொண்டு போய்க் காட்டினாள். “இது போல் அருமையான மலர்கள் சிலவற்றை நீங்கள் எனக்குக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?” -என்று வீமனைக் கேட்டாள். வீமன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான். ஆனால் அத்தகைய மலர்களை எங்கிருந்து பெறலாம் என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை. ‘உரோமேசருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்றெண்ணி அவரிடம் கொண்டு போய்க் காட்டினான். “அப்பா! இது தேவர்கோன் தன் முடியிலே அணியத்தகுதி வாய்ந்த பொற்றாமரைப்பூ. நிதியின் கிழவனாகிய குபேரனுடைய அளகாபுரியிலன்றி இம்மலர்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. சாதாரண மனிதர்கள் முயன்று இம் மலரைக் கொண்டுவருவது இயலாது. ஒருக்கால் உன் போன்ற வீரனுக்கு எளிமையாக முடிந்தாலும் முடியலாம். முயன்று பார்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கூறினார். வீமன் துணிவோடு புறப்பட்டுவிட்டான். ஆயுதபாணியாகப் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறவனைப் போல அவன் சென்றான். திரெளபதிக்கு விரைவில் அந்த மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவளை மகிழச் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு அவசரமாகப் புறப்பட்ட அவன் போகும் போது தருமனிடம் கூறி விடை பெற மறந்துவிட்டான். செல்லும் வழியில் கதலி வனம் என்ற ஓர் பெரிய வாழைக்காடு குறுக்கிட்டது. அந்த வனத்தின் ஒரு கோடியில் இராமபக்தனாகிய அனுமன் புலன்களை அடக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தவம் செய்து கொண்டிருந்தான். வீமனுக்கு இது தெரியாது. அந்த வனத்தின் வழியே போகும்போது சில அரக்கர்கள் வழி நடுவே அவனை எதிர்த்துப் போருக்கு வந்தனர். வீமன் சிறிதும் தயங்காமல் அவர்களோடு போர் செய்தான். சில நாழிகைப் போரிலேயே அந்த அரக்கர்கள் அழிவடைந்து தோற்றுப் போய்விட்டனர். அவர்களை வென்று தொலைத்த பெருமிதத்தால் மகிழ்ச்சியோடு வீமன் தன்னிடமிருந்த சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்தான். அவன் செய்த சங்கநாதத்தின் ஒலியால் அங்கே தவம் செய்து கொண்டிருந்த அனுமனின் தவம் கலைந்து விட்டது. தவம் கலைந்து சிறிது சினம் கொண்ட அனுமன் ஆத்திரத்தோடு எழுந்து வீமனுக்கு முன் வந்தான். வந்தவன் ‘வீமன் அஞ்சி நடுநடுங்க வேண்டும்’ -என்ற எண்ணம் கொண்டு தன்னுடைய விசுவரூபத் தோற்றத்தைக் காண்பித்தான். வானத்துக்கும் பூமிக்குமாக நிமிர்ந்து விளங்கிய அந்தப் பேருருவத்தைக் கண்டு வீமன் வியந்தான். தனக்கு முன் நிற்பவன் இராம பக்தனாகிய அனுமன் என்பது அப்போதுங்கூட அவனுக்குத் தெரியவில்லை. தைரியம் குறையாமல் தொடர்ந்து சங்கநாதமும் ஆரவாரமும் செய்தான் அவன். அனுமனுக்கு அளவற்ற சினம் உண்டாகிவிட்டது. “அடே அற்பமனிதனே! தேவர்களும் அசுரர்களும் கூட இங்கே வரப் பயப்படுகிறார்கள்! திசைகள் எட்டையும் வெற்றி கொண்டு தனிப்பட்ட பெருமிதத்துடன் விளங்குகிறது இந்த வனம். துணிந்து இங்கே வந்தவன் நீ யாரடா?” “நீ யார் என்பதை முதலிற் சொல் பின்பு அவசியமானால் நானும் சொல்கின்றேன்” -வீமன் திருப்பிக் கேட்டான். “அடே! இதோ உன் முன் விசுவரூபத்தைக் காட்டி நிற்கும் என்னைப் பார்த்தா நீ இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? உனக்கு எவ்வளவு திமிர்? தோள் வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? அல்லது வில்வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? ஏ, பேதையே? உன் துணிவிற்குச் சரியான பாடம் கற்பிக்கின்றேன். உன் துணிவு மெய்யானால் என் வாலைக் கடந்து சென்றுவிடு பார்க்கலாம்!” “ஏ! அறிவற்ற குரங்கே! என்ன உளறுகிறாய், இந்த உலகத்திலேயே என்னால் கடக்க முடியாத வால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இராம பக்தியிற் சிறந்தவனும் எனக்கு அண்ணன் முறை உடையவனுமாகிய அனுமனின் வால்தான். அந்த வாலைத்தான் நான் பணிந்து வணங்குவதற்குக் கடமைப்பட்டவன். உன் போன்றவர்களின் வாலைக் கடப்பதற்கு மட்டும் என்ன? அழித்தொழிப்பதற்குக் கூட என்னால் முடியும்.” அனுமன் வீமனுடைய அறியாமையை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆயினும் இறுதிவரை தான் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே வீமனுக்குத் தன் மேலிருக்கும் பக்தியைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவன் முன்பிருந்த சினத்தை மறைத்துக் கொண்டு வீமனை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானான்: “அது சரி அப்பா! கேவலம் ஒரு மானிடனைத் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு சுமந்து இழித்தொழிலைச் செய்தவன் அந்த அனுமன் தவம் செய்து உயர்நிலை பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கும் எனக்கு ஒப்பாக அந்தக் குரங்கை நீ கூறுகிறாயே! இது சிறிதாவது பொருந்துமா?” வீமன் கலகலவென்று சிரித்தான். “மனிதனைச் சுமந்த அந்தக் குரங்கின் பெருமையைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன் கேள். இலங்கையை அழித்தது அந்தக்குரங்கு தான். தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் பரம் பொருள்வதாரமாகிய இராமபிரானுக்கே பக்கபலமாக இருந்து வெற்றி நல்கியது அந்தக் குரங்குதான். அதையும் அதன் தலைவனையும் நீ சாதாரணமாக எண்ணி இகழ்வது உன்னுடைய பெரும் பேதைமையைத்தான் காட்டுகிறது” -வீமனின் பதிலைக் கேட்ட அனுமன் அப்படியே மார்புறத் தழுவிக் கொண்டான். எல்லாம் தெரிந்திருந்தாலும் வெளிக்குக் கேட்பது போல “நீ யார் அப்பா? என்ன காரியமாக இந்தப் பக்கம் வந்தாய்?” -என வீமனை நோக்கிக் கேட்டான். வீமன் தன்னைப் பற்றிய விவரங்களையும் தான் வந்த காரியத்தையும் கூறினான். ‘’நான் தான் அப்பா உன் அண்ணன் அனுமன். இதோ என் சுய உருவத்தைப் பார். இதுவரை உன் துணிவையும் எண்ணங்களையும் சோதித்துப் பார்ப்பதற்காக ஏதேதோ கூறினேன் அதை மனதிற்கொண்டு வருந்தாதே!" -என்று கூறினான். வீமன் உடனே நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அனுமனை வணங்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மீண்டும் அனுமனுடைய விசுவரூபத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்ளவே அனுமன் விசுவரூபமெடுத்துக் காட்டினான். “அண்ணா ! எங்களுக்கும் துரியோதனாதியருக்கும் ஒரு பெரும்போர் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அந்தப் போரில் உன்னுடைய உதவி எங்கள் பக்கத்துக்குக் கிடைக்க வேண்டும்.‘’ வீமன் வேண்டிக் கொண்டான். அனுமன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கினான். குபேரனின் நகரமாகிய அளகாபுரிக்குச் செல்லுகின்ற வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் வீமன் அனுமனை வணங்கி விடை பெற்றுச் சென்றான். அளகை நகருக்குச் செல்லும் வழியில் வலிமை வாய்ந்த அரக்கன் ஒருவன் வீமனைத் தடை செய்தான். ‘புண்டரீகன்’ என்பது அவன் பெயர். நீண்ட நேரத்துப் போருக்குப் பின் வீமன் அவனைக் கொன்று வெற்றிக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். அளகாபுரியை அடைந்ததும் தான் எந்தப் பொற்றாமரை மலரைத்தேடி வந்தானோ அந்த மலர் கிடைக்கக்கூடிய சோலை இருக்கும் இடத்திற்குச் சென்றான். குபேரனுடைய ஏற்பாட்டின்படி அந்தச் சோலையை நூறாயிரம் அசுரர்கள் காவல் காத்து வந்தார்கள். சோலையை நெருங்குவதற்குள்ளேயே வீமன் வரவை அந்த அசுரர்கள் உணர்ந்துவிட்டார்கள். உடனே அவர்கள் பரபரப்படைந்து ஒன்றுகூடி அவனுக்கு முன் வந்து உள்ளே நுழைய விடாமல் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். “தேவாதி தேவர்களைக் கூட இந்தச் சோலையைக் காணவோ இங்குள்ள மலர்களைப் பறிக்கவோ நாங்கள் அனுமதிப்பதில்லை. நீ யார்? அற்ப மானிடன் இங்கு எதற்காக வந்தாய்?” -அசுரர்கள் அவனை மருட்டினர். வீமனோ அவர்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்றான். “நீ மரியாதையாகப் போகிறாயா? அல்லது உன் உயிரைக் கொள்ளை கொள்ளும் முயற்சியில் நாங்கள் ஈடுபடட்டுமா?” “அசுரர்களே! ஏன் இந்த வாய் முழக்கம்? இவற்றை எல்லாம் கேட்டுப் பயந்து ஓடுகிறவன் நான் இல்லை, இடி முழக்கம் போன்ற குரலில் அரட்டிவிட்டால் எதிரி பயந்து ஓடிவிடுவான் என்று நீங்கள் எண்ணுவீர்களாயின் அது அறியாமை. எப்படியும் இந்தச் சோலையிலுள்ள மலர்களில் எனக்குத் தேவையான ஒன்றைப் பறித்துக் கொண்டுதான் இங்கிருந்து போக வேண்டும் என்ற உறுதியோடு நான் வந்திருக்கிறேன். ஒருவன் மனிதனாக இருக்கிறான் என்பதனால் அரக்கர்களுக்குத் தோற்றழிந்து போக வேண்டும் என்பது என்ன உறுதி? இராவணன் முதலிய அசுரகுல மன்னர்களை வென்றவர்கள் சாதாரண மனிதர்கள் தாம் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். நான் இதோ இப்போதே இங்கு உங்களோடு போர் செய்யத் தயார்” -அசுரர்களின் இடி முழக்கப் பேச்சுக்கு வீமன் மறு முழக்கம் செய்தான். அசுரர்கள் கோபத்தோடு கூட்டமாக வீமன் மேற் பாய்ந்தார்கள். வீமன் வில்லையும் கதாயுதத்தையும் மாறி மாறிப் பயன்படுத்தி அவர்களைத் திணறச் செய்தான். அவனுடைய முரட்டுப் போருக்கு முன்னால் ஆயிரக் கணக்கான அசுரர்களும் நிற்கமுடியாமல் திணறினர். அவனிடம் வீரத்தையும் போரிடுகின்ற வலிமையையும் இவ்வளவு எதிர்பார்க்காததனால் அவர்களிற் பெரும்பாலோர் இப்போது புறமுதுகிட்டு ஓடினர். எஞ்சிய சிலர் அழிந்து கொண்டிருந்தனர். தகவல் குபேரனுக்கு எட்டியது. அவன் திகைத்தான். திடுக்கிட்டான். தன் அவையிலிருந்த மகா வீரனாகிய ‘சங்கோடணன்’ என்பவனைக் கூப்பிட்டு, “அந்தச் சின்னஞ்சிறு மனிதனை அழித்துக் கொன்றுவிட்டு வெற்றியோடு வா!” என்று ஏவினான். அவன் தன்னைப்போலவே வலிமை மிகுந்தவர்களாகிய வேறு சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு வீமனைத் தாக்கினான். ஆனால் வீமனோ தன்னுடைய சாமர்த்தியமான போரினால் அவர்களை மூலைக்கு ஒருவராகக் சிதறி யோடும்படி செய்தான். கால் நாழிகைப் போருக்குள் சங்கோடணன் களைப்பும் மலைப்பும் அடைந்து மனத்தளர்ச்சி கொண்டு விட்டான். இறுதியில் அவனும் வீமனுக்குத் தோற்று, குபேரனை நோக்கி ஓடும்படியாக நேர்ந்தது. “அரசே! அவன் சாதாரண மனிதன் இல்லை அளவிடற்கரிய வலிமை உடைய பெரு வீரன். அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அவனோடு பகைத்துக் கொள்ளாமல் நமக்கு நண்பனாக்கிக் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது” என்று தோற்றோடி வந்த சங்கோடணன் குபேரனை நோக்கி முறையிட்டுக் கொண்டான். குபேரன் உடனே தன் புதல்வன் உத்திரசேனனை அழைத்துப் பின்வருமாறு கட்டளையிட்டான். “மகாவீரனான அந்த அற்புத மனிதன் யார்? அவனைப் பார்த்து அவன் யாரென்று தெரிந்து கொண்டு வா ! இயலுமானால் அவன் கேட்கும் பொருளைக் கொடுத்து விட்டு வா!” தந்தையின் கட்டளைப்படி உத்திரசேனன் பூம்பொழில் சென்று அங்கு வந்திருக்கும் மனிதனைக் காணப் புறப்பட்டான். வீமன் வெற்றி வீரனாகப் பூம்பொழிலில் தனியே நின்று கொண்டிருந்தான். “அப்பா! நீ எவ்வுலகைச் சேர்ந்தவன்? எதற்காக இங்கே பலரைக் கொன்று அரும்பாடுபட்டுப் போர் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” உத்திரசேனன் அன்பும் கோபமும் கலந்த குரலில் வீமனை நோக்கிக் கேட்டான். உடனே வீமன், “என் பெயர் வீமன். நான் வாயுவின் புதல்வன். கண்ணபிரானுடைய மைத்துனன். இங்குள்ள தெய்வீகமலர் ஒன்று எனக்கு வேண்டும். அதைக் கொடுத்தால் நான் போய்விடுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறினான். உத்திரசேனன் அப்போதே வீமன் கேட்ட மலரைப் பறித்து அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றான். மலர் பெற்ற வீமன் அங்குள்ள குளிர் பூந்தடாகம் ஒன்றில் அலுப்புத் தீர நீராடிவிட்டுக் களைப்புத் தீர அச்சோலையில் தங்கியிருந்தான். இஃது இவ்வாறிருக்க அங்கே வீமன் எங்கே போனான் என்று தெரியாத தருமன் கலக்கமுற்றுப் பல இடங்களிலும் தேடினான். பின்பு திரெளபதியை விசாரித்து அறிந்து கொண்டு அளகாபுரியில் வீமனுக்கு எவையேனும் தீமை நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சி வீமன் மகன் கடோற்கசனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான். வெற்றிப் பெருமிதத்தோடும் மலர் கிடைத்த மகிழ்ச்சியோடும் ஓய்வு கொண்டிருந்த வீமன் தன்னைத் தேடி வந்த தமையனையும் மகனையும் அன்போடு வரவேற்றான். தருமன் தன்னிடம் கூறாமல் வந்ததற்காக வீமனைக் கடிந்து கொண்டான். கடோற்கசன் அன்போடு தந்தையைப் பணிந்து ஆசி பெற்றான். பின்பு மூன்று பேருமாகச் சேர்ந்து காடு திரும்பினார்கள். வீமன் மலரை அன்புடன் திரெளபதிக்குக் கொடுத்தான். நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உரோமேசர் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தீமையின் முடிவு சகோதரர்கள் நால்வரும் திரெளபதியும் உரோமேசரும் வனத்தில் நலமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வனத்திற்கு அருகேயுள்ள வேறு சில வனங்களில் தவமுயற்சியில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் பலர் ஒருநாள் அவர்களைக் காண வந்தனர். தருமன் அந்த முனிவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுப் பேணினான். முனிவர்கள் கூறினர்; “தருமா! நீ அறத்தின் காவலன்! சத்தியத்துக்குத் துணைவன். உன்னிடம் நாங்கள் ஓர் உதவியை நாடி வந்திருக்கிறோம். மறுக்காமல் நீ அந்த உதவியைச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் வசிக்கும் வனப்பகுதிகளில், கரடி, வேங்கை, யானை, சிங்கம் முதலிய பயங்கர மிருகங்கள் அடிக்கடி தொல்லை விளைவித்து வருகின்றன. அவைகளை வேட்டையாடி எங்களைப் பாதுகாக்கும் உதவியை உன்னிடம் கோருகிறோம்” முனிவர்களின் வேண்டுகோளைக் கேட்ட தருமன் வீமனை அழைத்து அவர்களுக்கு உதவி செய்து விட்டு வருமாறு பணித்தான். வீமன் வேட்டைக்குரிய படைக்கலங்களோடு முனிவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். வீமன் சென்ற சிறிது நேரத்தில் மற்ற இரு சகோதரர்களாகிய நகுல சகாதேவர்களும் மாலையுணவிற்குத் தேவையான காய்கனிகளைக் கொண்டு வருவதற்காகச் சென்று விட்டனர். தருமன் ஒரு மரத்தின் கீழ் எதோ சிந்தனையில் இலயித்துப் போய் வீற்றிருந்தான். திரெளபதி தனியே இருந்தாள். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள வந்தவனைப் போலச் சடாசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கே வந்தான். அவன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்கிற ஆற்றல் படைத்தவன். திடீரென்று பாய்ந்து திரெளபதியைப் பலாத்காரமாகத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அவன் பறக்கத் தொடங்கினான். அந்த அரக்கனின் கொடிய கைகளில் சிக்குண்ட திரெளபதி பயந்து போய் அலறிக் கூச்சலிட்டாள். காடெல்லாம் எதிரொலித்த அந்தக் கூக்குரலின் ஒலியை நகுல், சகாதேவர்கள் கேட்டனர். குரல் திரெளபதியினுடையது என்று அறிந்து பதறி ஓடி வந்தனர். சடாசுரனை மேலே பறக்கவிடாமல் வழி மறித்துப் போரிட்டனர். அசுரன் தரையில் இறங்கித் திரெளபதியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நகுல சகாதேவர்களை எதிர்த்துப் போரிட்டான். போர் வெகுநேரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முனிவர்களோடு சென்றிருந்த வீமன் அன்று வேட்டையாட முடிந்த மிருகங்களை வேட்டையாடி விட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் தொலைவில் வருகிறபோதே நகுல சகாதேவர்களும் சடாசுரனும் போரிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டுவிட்டான். நிலைமையை ஒருவாறு தானாகவே அனுமானித்துக் கொண்டு ஓங்கிய கதையும் கையுமாகச் சடாசுரனை நோக்கிப் பாய்ந்தான். “அடே! அவர்களை விட்டுவிடும். இதோ உனக்குத் தகுந்த ஆள் நான் போரிட வந்திருக்கின்றேன். என்னோடு போருக்கு வா?” சடாசுரன் வீமனுடைய அறைகூவலை ஏற்றுக் கொண்டு அவனுடன் போரிடுவதற்கு முன் வந்தான். ஒரு கையில் கதாயுதமும் மற்றொரு கையில் ஒரு பெரிய மரக்கிளையுமாக வீமன் அசுரனைத் தாக்கினான். அசுரன் ஒரு பெரிய மலைப்பாறையை எடுத்துக் கொண்டு வீமன் மேல் எறிந்து நசுக்க முயன்றான் போர் குரூரமாக நடந்தது. ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு இருவரும் மல்யுத்தம் செய்தார்கள். வீமன் அசுரனின் கைகளை ஒடிக்க முயன்றான். அசுரன் வீமனுடைய மார்பைப் பிளந்தெறிய முயன்றான். ஒருவருக்கொருவர் இளைத்தவர்களாகத் தோன்றவில்லை; இறுதியில் வீமன் அசுரனது உடலை மேலே தூக்கி இரண்டு கைகளாலும் பற்றிக் ‘கர கர‘ வென்று சுற்றி வானில் உயரத் தூக்கி எறிந்தான். கீழே விழுந்து சிதைந்த அசுரனின் உடல் பின்பு எழுந்திருக்கவுமில்லை; மூச்சு விடவுமில்லை. தீமையின் அந்த உரு நிரந்தரமாக அழிந்துவிட்டது. வீமன் சகோதரர்களையும் திரெளபதியையும் அழைத்துக்கொண்டு வெற்றி முழக்கம் செய்தவாறே தமையன் இருப்பிடம் சென்றான். நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டுத் தருமன் வியந்தான். இதன் பின் சில நாட்களில் பாண்டவர்கள் அந்தக் காட்டிலிருந்து புறப்பட்டுக் கயிலாய மலையின் மற்றோர் பகுதியிலுள்ள பத்ரிநாராயணம் என்ற திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்றார்கள். தெய்வீக இயல்பும் தீர்த்த விசேஷமும் பொருந்திய பத்ரிநாராயணத்தில் சில தினங்கள் தங்கியிருந்த பிறகு, அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த அஷ்டகோண முனிவர் அவர்களை வரவேற்றுத் தம்முடன் இருக்கச் செய்து கொண்டார். ஞானத்தைப் பெருக்கவல்ல நல்லுரைக் கதைகள் பலவற்றை அவர்கள் கேட்கும்படி கூறினார் முனிவர். நீண்ட காலம் பாண்டவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வனவாசத் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் வரை கழிந்து விட்டிருந்தன. ஒரு நாள் காலை திரெளபதி ரிஷிபத்தினிகளோடு வனத்திலுள்ள பொய்கையில் நீராடுவதற்காகச் சென்றாள். பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்போது முன்பொரு முறை கண்ட தெய்வீக மலரைப் போன்ற ஒரு மலர் நீரில் மிதந்து வரக் கண்டாள். முன்பு கண்ட பொற்றாமரை மலரைக் காட்டிலும் சிறந்த மணமும் நல்ல அமைப்பும் உடையதாக இருந்தது இம்மலர். பெண்களுக்கு மட்டும் ஒரு பொருளின் மேல் மனப்பற்று ஏற்பட்டு விடுமானால் அந்தப் பொருளை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். அடைந்தாலொழிய அந்தப் பற்றுத் தீராது. ஆசை பிறக்கும்போதே உறுதியும் பிறந்து விடுகின்றது அவர்களுக்கு. திரெளபதி மறுபடியும் வீமனை அணுகினாள். அவன் மறுக்க முடியாதபடி தன் ஆசையை வெளியிட்டாள். வீமன் மனம் நெகிழ்ந்து விட்டது. அன்பையெல்லாம் கொள்ளைக் கொண்ட பெண் கட்டளையிடுகிறாள். ஈரநெஞ்சுள்ளவன் மறுப்பதற்கு எப்படித் துணிவான்? மீண்டும் யாரிடமும் கூறாமல் அளகாபுரியை நோக்கிப் பிரயாணம் செய்தான். இப்போது அளகை நகரம் அவனுக்குக் கொல்லைப்புறத்து வீடு போல. யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் துணிவோடு அளகையிலுள்ள பூஞ்சோலையை நெருங்கினான். தனக்கு எதிரிகள் எவரும் இருக்கின்றனரோ என்று அந்த நகரத்தை நோக்கிக் கேட்கும் பாவனையில் சங்கை எடுத்து முழக்கம் செய்தான். நகரத்தையே கிடுகிடுக்கச் செய்த அந்தச் சங்கநாதம் அளகாபுரி முழுவதும் கேட்டது. பூஞ்சோலையைக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் முன்போலவே போருக்கு ஓடிவந்தனர். ஆனால் அருகில் நெருங்கி நிற்கின்ற ஆளைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப்பின்வாங்கினர். அவ்வாறு பின்வாங்கியவர்களில் ஒரு வித்தியாதரன் ஓடோடிச் சென்று குபேரனின் சேனாதிபதியாகிய மணிமான் என்பவனிடம் செய்தியைக் கூறினான். தன் வீரத்தின் மேல் தேவைக்கு மீறிய நம்பிக்கை உடையவன் மணிமான், குபேரனிடம் தெரிவிக்காமலே வந்திருக்கும் மனிதனைக் கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். மணிமானும் அவன் ஆணைக்குக் கீழ்ப்பட்ட எண்ணாயிரம் படைத் தலைவர்களுமாக வீமனை எதிர்த்துப் புறப்பட்டார்கள். அந்தப் படைத்தலைவர்களுள் துடுக்குத்தனம் நிறைந்தவனும் முரடனுமாகிய சலேந்திரன் என்பவன் வீமனைப் பார்த்து, “அடே நீ உயிரோடு இங்கிருந்து பிழைத்துப் போக முடியாது. இறந்து போகப் போவது உறுதி. இறந்து போவதற்கு முன்பாவது நீ யார் என்பதைக் கூறி விடு” என்று அகம்பாவத்தோடு கேட்டான். வீமன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். “ஓகோ! நான் யார் என்பது உங்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? முன்பு ஒரு முறை நான் இங்கு வந்து வீரர்கள் பலரை ஒருவனாக நின்று வென்று எனக்கு வேண்டிய மலரைப் பெற்றுச் சென்றேனே. மறந்து விட்டதானால் இந்தச் சோலையைக் காவல் காக்கும் வீரர்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்” என்று வீமன் அவனுக்கு மறுமொழி கூறினான். வீமனுக்கும் படைத்தலைவர்களுக்கும் போர் தொடங்கியது. முன்னணியின் நின்ற சாதாரணமான படைத்தலைவர்கள் ஒவ்வொருவராக ஆற்றலிழந்து தளரவே, செய்தியறிந்து மணிமான் வீமனுடன் நேருக்கு நேர் போருக்காக வந்து நின்றான். கண் கட்டி வித்தை செய்வது போல் மாயையான பல ஏமாற்றுப் போர் முறைகளை நன்கு அறிந்தவனாகிய மணிமான் தன் சாமர்த்தியத்தை எல்லாம் வீமனுக்கு முன் காட்டினான். ஆனால் மணிமானின் அந்த அதியற்புத சாமர்த்தியங்களைக் கூட வீமன் விட்டு வைக்கவில்லை. வில்லும் அம்புமாகிய ஓரே கருவியைக் கொண்டு மணிமானின் உடம்பைச் சல்லடையாகத் துளைத்தான். கடைசியாக ஓர் அம்பு மணிமானின் உயிரையும் வாங்கி விட்டு அவனது வெற்றுடலைக் குருதி வெள்ளத்திற்கிடையே தள்ளியது. வீமன் முன் போலவே வெற்றி முழக்கம் செய்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் முன்பொரு சமயம் செய்தது போலவே வீமனைத் தேடிக் கொண்டு தருமன், கடோற்கசனுடன் அங்கு வந்து சேர்ந்தான். தம்பியின் பேராற்றலால் குபேரனின் சேனாதிபதி இறந்து கிடப்பது கண்டு தருமன் மனம் வருந்தினான். “வீணாக ஒரு பெண்ணின் விருப்பத்தின் பொருட்டு அசட்டுத்தனமாகத் தேவர்களையெல்லாம் ஏன் பகைத்துக் கொள்கிறாய்?” என்று வீமனைக் கடிந்து கொண்டான். மணிமான் குபேரனுடைய சேனாதிபதி மட்டுமல்ல. குபேரனுக்கு ஆருயிர் நண்பனும் ஆவான். அவன் போரில் கொல்லப்பட்டான் என்ற செய்தி குபேரனுக்கு அறிவிக்கப் பட்டபோது அவன் வெகுண்டெழுந்தான். “இனியும் பொறுத்திருக்கமாட்டேன். என் ஆருயிர் நண்பனின் உயிரைப் பறித்துக் கொண்ட அந்த மனிதனைக் கொல்லாமல் திரும்பப் போவதில்லை” என்று வஞ்சினம் கூறியவாறு மலர் பொழிலுக்குப் புறப்பட்டு வந்தான் குபேரன். அவன் அவ்வாறு புறப்பட்டு வந்தபோது அவனுடைய மகன் உத்திரசேனன் சில காரணங்களைக் கூறித் தடுத்தான். அவன் ஏற்கனவே வீமனுக்கிருந்த வலிமையை நேரிற் கண்டு அறிந்தவன். ஆகையால் அவன் தடைக்குக் காரணமிருந்தது. “அப்பா! இப்போது வந்திருக்கும் மானிடன் சாதாரணமானவன் அல்லன். முன்பு இந்திரர்களாக இருந்த ஐந்து பேர் சிவபெருமானுடைய திருவருளால் பாண்டவர்கள் என்ற பெயரில் மனிதர்களாகத் தோன்றியுள்ளனர், உலகில் நலம் பெருகச் செய்வது அவர்கள் கடமை. அவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் இந்திரனால் வெல்ல முடியாதவர்களை எல்லாம் வென்று தேவர்கோனுடன் சரியாசனத்தில் அமரும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். மற்றொருவனாகிய வீமனே இங்கு வந்துள்ளான். இதே வீமன் முன்பொருமுறை இங்கு வந்து ஆயிரக்கணக்கான பொழிற் காவலர்களை அழித்தொழித்தது நாமறிந்த செய்தி அல்லவா? மனிதர்களாக இருந்தாலும் தேவர்களை விடச் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் சிலர் உள்ளனர். அவர்களை நாம் அடக்கி ஒடுக்கிவிட முயல்வது தூணில் வலியச் சென்று முட்டிக் கொள்ளுவதைப் போல ஆகும். மகாவிஷ்ணு இராவணனைக் கொல்ல மனித உருவமே கொண்டிருந்தார். மகாபலியை அடக்குவதற்குக் கண்டோர் இகழும் குள்ளனாக வடிவம் கொண்டார். மனிதத் தோற்றத்தால் அந்தத் தோற்றத்திற்குள் பொருந்தியிருக்கும் வீரத்தைத் தாழ்வாக மதிக்கக் கூடாது. மேலும் மணிமான் இறந்ததற்கு வீமனுடைய கை வில் ஒன்று மட்டுமே காரணமல்ல. மணிமானுக்கு இருந்த சாபமும் ஒரு காரணமாகும். முனிவர் ஒருவருக்கு மணிமான் துன்பம் மளித்ததும் அதனால் சினம் கொண்ட அம்முனிவர், ‘தேவர்களுள் ஒருவனாகிய உனக்கு சாதாரண மனிதன் ஒருவனாலேயே சாவு ஏற்படும்’ என்று சாபம் அளித்ததும் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தாமே? தந்தையே! மணிமான் இறந்தது பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். வீமனுடன் போர் செய்யும் எண்ணமும் வேண்டாம். அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்துச் சமாதானமாக அனுப்பி விடலாம். இவ்வாறு உத்திரசேனன் குபேரனுக்குக் கூறிய அறிவுரையை அவன் கேட்கவில்லை, “உன் சொற்களை நான் கேட்கப் போவதில்லை. என் உயிருக்குயிரான நண்பன் மணிமானை எப்பொழுது கொன்றானோ அப்பொழுதே மணிமானைக் கொன்ற அந்த மானிடன் எனக்குக் கொடிய விரோதியாகி விட்டான். நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்” என்று குபேரன் வீமனோடு போருக்குப் புறப்பட்டுவிட்டான். தன் முயற்சி பலிக்காமற் போனதனால் உத்திரசேனன் தன் தந்தையை அவன் போக்கிலேயே விட்டுவிட்டான். மலர் பொழிலின் வாயிலில் நின்று கொண்டிருந்த தருமன், வீமன், கடோற்கசன், ஆகிய மூவரும் தொலைவில் ஆரவாரத்தோடு எழுச்சி பெற்று வரும் குபேரனின் படைகளைக் கண்டனர். தருமனும் கடோற்க்சனும் திகைத்தனர். வீமனோ மறுபடியும் ஊக்கத்தோடு போருக்குத் தயாரானான். வெறுப்பும் சினமும் தவழத் தருமனுடைய விழிகள் அவனை நோக்கின. அந்த விழிகளின் கூரிய நோக்கைத் தாங்க முடியாமல் வீமன் தலை குனிந்தான். போருக்குச் செய்த யத்தனங்களையும் நிறுத்தினான். தருமன் தனக்குள் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலக் குபேரனுடைய படைகளுக்கு எதிரே சென்றான். ஆத்திரமும் மனக்கொதிப்புமாகக் கனல்கக்கும் விழிகளோடு வந்து கொண்டிருந்த குபேரனுக்கு முன் சென்று நின்று கொண்டு மலர்ந்த முகத்தோடு புன்முறுவல் செய்தவாறு அவனைக் கைகூப்பி வணங்கினான். குபேரன் ஒன்றும் புரியாமல் பதிலுக்கு வணங்கி விட்டுத் தயங்கி நின்றான். “குபேரா நீ சற்றே நின்று யான் கூறுவனவற்றைக் கேட்க வேண்டும். உன் சினம் தணிக. நீ அளகாபுரிக்குத் தலைவன். பேரரசன். பெருந்தன்மையுடையவன். என் தம்பி இளைஞன். அறியாதவன் ஏதோ தவறு செய்து விட்டான். மனத்தை வெறுப்புக் கொள்ளச் செய்யும்படியான செயல் ஏதும் நடந்துவிடவில்லை, நான் தருமன், என் மொழிகளை நீ மறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன். சிறியவனாகிய என் தம்பியை மன்னித்து இந்தப் போர் முயற்சியைக் கை விட்டுவிடு” தருமன் உருக்கம் நிறைந்த குரலில் வேண்டிக் கொண்டான். குபேரனுக்கு மனம் இளகி விட்டது. உணர்ச்சி வசப்பட்டவனாகி அப்படியே தருமனை மார்புறத் தழுவிக் கொண்டான். போர் முயற்சியைக் கைவிட்டு விட்டு வீமனைத் தன் மனப்பூர்வமாக மன்னிப்பதற்கும் இணங்கிவிட்டான். தருமனும் வீமனும் குபேரனுடைய விருந்தினர் களாயினர். குபேரனின் அன்பின் மிகுதி அவர்களைக் களிப்பில் மூழ்கடித்தது. தான் சமீபத்தில் தேவர்கோன் தலைநகருக்குச் சென்றிருந்ததாகவும், அங்கே அர்ச்சுனன் நலமாக இருப்பதாகவும், அங்கே அவன் பெருமை பரவியிருப்பதாகவும், விரைவில் அவன் பாண்டவர்களைச் சந்திக்க மண்ணுலகிற்கு வருவான் என்றும் குபேரன் தருமனிடம் கூறினான். தருமன் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான். தருமன், வீமன், கடோற்கசன் ஆகிய மூவரும் குபேரனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். குபேரன் அவர்களுக்குப் பல உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாக வழங்கினான். “விரைவில் உங்கள் சகோதரன் அர்ச்சுனன் உங்களோடு வந்து சேருவான். அதன் பின் உங்களுக்கிருந்த தீமைகளெல்லாம் அழிந்து நற்காலம் பிறக்கும். நீங்கள் ஐந்து பேரும் நலமாக வாழ்வீர்கள்” என்று குபேரன் வாழ்த்தினான். அவர்கள் மண்ணுலகை வந்தடைந்தனர். குபேரன் கூறியபடியே சில நாட்களில் அர்ச்சுனனும் வானுலகிலிருந்து அவர்களை வந்தடைந்தான். ஐவரும் ஒன்று கூடினர். கானகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையேயானாலும் எல்லோருமாக ஒன்று கூடி வாழ்கின்ற அந்த வாழ்கையில் தீமைகள் யாவும் அழிந்து நன்மைகள் யாவும் பெருகி விட்டாற் போன்ற ஒருவகை அமைதி நிலைத்திருந்தது. தருமம் காத்தது! காட்டில் பாண்டவர்கள் நலமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்பதை அறிந்த போது துரியோதனாதியர் உள்ளத்தில் பொறாமை கனன்றது. அவர்களை அப்படி நலமாக வாழவிடாமல் அடிக்கடி ஏதேனும் இடையூறுகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினர் துரியோதனாதியர். துருவாசர் என்று ஒரு முனிவர் மகாமுன் கோபி. எதற்கெடுத்தாலும் கொடிய சாபங்களைக் கொடுக்கக் கூடியவர். அந்த முனிவரையும் அவரோடு சேர்ந்த வேறு சில முனிவர்களையும், “காட்டில் போய்ப் பாண்டவர்களைச் சந்தியுங்கள்” என்று வழியனுப்பி வைத்தான் துரியோதனன். துருவாசரும் அவனுடைய சகாக்களும் பாண்டவர்களைக் காண்பதற்காகக் காட்டுக்கு வந்து சேர்ந்தனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் பயத்தோடு பக்தியும் விநயமும் கொண்டு துருவாசரை வரவேற்று வணங்கினார்கள். துருவாசர் பாண்டவர்களை நலம் விசாரித்து ஆசி கூறினார். அப்போது சரியான நடுப்பகல் நேரமாகியிருந்தது. துருவாசரும் அவரைச் சேர்ந்தவர்களும் வருவதற்கு முன்பே பாண்டவர்களும் திரெளபதியும் இருந்த உணவுப் பொருள்களை உண்டு முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்திருந்தனர். “பாண்டவர்களே! உங்களை இன்று சந்திக்க நேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து இன்று இங்கே உண்ணலாம் என்று இருக்கின்றோம். போய் நீராடிவிட்டு வருகின்றோம், உணவு தயாராக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு நீராடப் புறப்பட்டு விட்டனர் துர்வாசர் முதலியோர். பாண்டவர்கள் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்தனர். வேண்டுமென்றே தங்களுக்குச் சாபத்தைப் பெறுவிக்க வேண்டுமென்பதற்காகத் துரியோதனாதியர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்திருப்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. எப்போதுமே விரைவில் ஆத்திரத்தை அடைந்து விடக் கூடிய சுபாவத்தை உடையவனாகிய வீமன் இப்போதும் அதேபோற் சினமடைந்து ‘உடனே போய்த் துரியோதனாதியர்களைத் துவம்சம் செய்து விடுகிறேன்’ என்று கிளம்பி விட்டான். “நீ கூறுவதும் செய்யப் புகும் ஆத்திரமான செயலும் சிறிதளவும் நன்றாக இல்லை வீமா! முனிவர் உண்ண வருகிறேனென்று சொல்லிவிட்டு நீராடப் போயிருக்கும் போது நீ போருக்குப் புறப்படுவது அவருடைய கடுஞ் சாபத்தை வலுவில் அடையக் காரணமாகும்” என்று கூறி அர்ச்சுனன் வீமனைத் தடுத்தான். “எப்படியாவது துருவாசருக்கும் மற்றவர்களுக்கும் உணவு படைத்து ஆகவேண்டும். அதற்கான வழியைக் காண முயல்வோம்” என்றான் தருமன். “எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் உதவிக் காப்பவன் கண்ணபிரான். அவன் துணையையே இப்போதும் நாடுவோம்!” நகுலன் கூறினான். “ஆம்! அதுவே சரியான வழி, கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்கு அவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமும் கூட நமக்குக் கிடையாது, நாம் இருந்த இடத்திலிருந்தே மனத்திலே எண்ணினால் போதும். நமக்கு உதவ வந்து விடுவான் அவன்.” சகாதேவன் அதை ஆமோதித்தான். சகோதரர்கள் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருந்த போது வாட்டம் நிறைந்த முகத்தோடு திரெளபதி அங்கு வந்தாள். “இதோ! முனிவர் நீராடி விட்டு வந்து விடப் போகிறார். என்ன செய்யலாம்?” என்றாள். உடனே தருமன் நகுல சகாதேவர்களின் யோசனைப்படிக் கண்ணனை எண்ணி மனத்தில் தியானம் செய்தான். சிறிது நேரத்தில் எல்லாம் வல்ல மாயவனாகிய கண்ணபிரான் பாண்டவர்களுக்கு முன் தோன்றினான். ஐவரும் திரெளபதியும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது தாங்கள் துருவாசருக்கு உணவு படைக்க இயலாது திகைத்திருக்கும் நிலையைக் கூறி வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதவனைப் போலச் சிரித்துக் கொண்டே நின்ற அந்தப் பெருமான் அவர்கள் துன்பத்தை அப்போது தான் அறிந்து கொண்டவனைப் போல நடித்தான். “திரெளபதி! கதிரவன் உனக்கு அளித்திருக்கும் அக்ஷய பாத்திரத்தை இங்கே கொண்டு வா” என்று வேண்டினார் கண்ணபிரான். திரெளபதி கழுவிக் கவிழ்த்திருந்த அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வந்தாள். “நன்றாகப் பாத்திரத்தைப் பார்! அதில் ஏதாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதோ?” திரெளபதி பார்த்தாள். ஒரே ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை அப்படியே கண்ணனுக்கருகில் கொண்டு போய்க் காண்பித்தாள். கண்ணன் அந்த ஒரே ஒரு பருக்கையைக் கொடுக்குமாறு வாங்கிச் சாப்பிட்டான். திரெளபதியும் பாண்டவர்களும் கண்ணனின் அந்தச் செயலுக்குக் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தனர். “அம்மா ! திரெளபதி! துருவாசர் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்’’ என்று திரெளபதியை நோக்கிக் கூறினான். அவள் திகைத்தாள். எவருக்கும் எதுவும் புரியவில்லை. கண்ணன் உண்ட அந்த ஒரு சோற்றுப் பருக்கை துருவாசரது வயிற்றையும் அவர் கூட வந்தவர்கள் வயிறுகளையும் எப்படி நிறைத்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. மாயனாகிய கண்ணன் அதன் சூக்ஷமத்தை அவர்களுக்கு விளக்கினான். அதே சமயத்தில் துருவாசர் முதலியவர்கள் நிறைந்த வயிறும் மலர்ந்த முகமுமாக அங்கே வந்து சேர்ந்தனர். எல்லாம் சர்வாந்தர் யாமியாகிய கண்ணபிரானின் திருவிளையாடல் என்பதை முனிவர் புரிந்து கொண்டார். அவர் கண்ணனை வணங்கிவிட்டுப் பாண்டவர்களை நோக்கிக் கூறினார்; “நீங்கள் இட்ட விருந்து நன்றாக இருந்தது. வயிறு நிறைய உண்டோம். உங்கள் நல்லுள்ளத்தைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பாண்டவர்கள் அவரை வணங்கினர். துருவாசர் தாம் காட்டிற்கு வரநேர்ந்த உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டார். “நேற்றிரவு அத்தினாபுரியில் துரியோதனனுடைய அரண்மனைக்கு விருந்துண்ணப் போயிருந்தேன். அவன் அன்போடு உபசரித்து விருந்திட்டான். அவன் என்னிடம் காட்டிய பணிவும் அன்பும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. அது எதற்காக என்று இப்போது புரிந்து கொண்டேன். விருந்துண்டு முடிந்ததும்”உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக்கேள்!" என்று அவனிடம் கூறினேன். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் ஏனையோருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணக் கூடியவனாகிய அந்தப் பேதை உடனே, “முனிவரே! இன்று நீங்கள் என்னிடம் விருந்தினராக வந்தது. போலவே நாளை பாண்டவர்களிடம் போய் விருந்தினராக அமைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். “அதனால் இங்கு உங்களைத் தேடி வந்தேன்.” முனிவர் தாம் வந்த காரணத்தைக் கூறி முடித்ததும் தருமன் அவரிடம் ஒரு வரம் வேண்டிக் கொண்டான். “துருவாசரே! துரியோதனாதியர்கள் இம்மாதிரிச் செய்து விட்டார்களே என்று அவர்கள் மேல் சினம் கொண்டு தாங்கள் சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாது என்பதே அடியேன் வேண்டுகோள்.”துருவாசர் தருமனின் தன்னலமற்ற வேண்டுகோளைக் கேட்டு வியந்தார். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் பிறருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணும் துரியோதனனின் மனப்பண்பையும், தனக்கு துன்பமே விளைந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்று எண்ணும் தருமனின் மனப்பண்பையும் நினைத்துப் பார்த்தார் அவர். ஒன்று மடுவாகத் தாழ்ந்திருந்தது. மற்றொன்று மலையாக உயர்ந்திருந்தது. பின்பு துருவாசரும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அவர்கள் பழையபடி கானகத்தில் கவலை மறந்து வாழலாயினர். அவ்வாறு வாழ்ந்து வரும் போது ஒரு நாள் திரெளபதி வனப்பகுதியில் உலாவி வரவேண்டும் என்ற ஆசையை அர்ச்சுனனிடம் தெரிவித்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய அர்ச்சுனன் அவளை அழைத்துக்கொண்டு காட்டில் உலாவுவதற்குச் சென்றான். உலவிக் கொண்டே வரும்போது வழியோரத்தில் தென்பட்ட ஒரு நெல்லி மரத்தைத் திரெளபதி கண்டாள். அந்த வளமான நெல்லி மரத்தில் ஒரே ஒரு நெல்லிக் கனி விளைந்து முற்றித்திரண்ட வடிவோடு தோன்றியது. அதைப் பறித்து உண்ணக் கருதி அர்ச்சுனனிடம் கேட்டாள் அவள். அவன் உடனே சிறிதும் சிந்திக்காமல் வில்லை வளைத்துக் குறிதவறாமல் ஓர் அம்பை அந்தக் கனியின் மேல் எய்து அதைக் கீழே வீழ்த்திவிட்டான். வில்லை நாணேற்றிய ஒலியையும் அம்பு கனியை வீழ்த்திய ஒலியையும் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள ஆசிரமங்களில் வசித்து வந்த முனிவர்கள் மனம் பதறி வெளிவந்தனர். அர்ச்சுனன் நெல்லிக்கனியைக் கீழே வீழ்த்தியிருப்பதையும் திரெளபதி அவனருகே குனிந்து கனியை எடுக்க முயன்று கொண்டிருப்பதையும் கண்ட அவர்கள் விரைவாக ஓடிவந்து திரெளபதியைத் தடுத்தனர். “ஐயோ! அர்ச்சுனா; என்ன காரியஞ் செய்து விட்டாய்? இந்த நெல்லிக் கனி மாபெரும் முனிவராகிய அமித்திரர் உண்ணுவதற்கு உரியது அல்லவா? திரெளபதியின் பேச்சைக் கேட்டுத் தீரவிசாரித்துக் கொள்ளாமல் இதை நீ மரத்திலிருந்து வீழ்த்திவிட்டாயே. அமித்திர முனிவர் இப்போது இந்தக் கனி கீழே விழுந்திருப்பதைக் கண்டால் கடுங்கோபம் கொண்டு விடுவாரே, என்றனர். அதனைக் கேட்டு அர்ச்சுனன் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து வருந்தினான்.”எப்படியோ தவறு நேர்ந்து விட்டது, நமக்குப் பயமாயிருக்கிறது. கனியைக் கொண்டுப் போய் தருமனிடம் கொடுத்து என்ன பரிகாரம் தேடலாமென்று ஆலோசிக்கலாம்" என்று கனியுடனும் திரெளபதியுடனும் காட்டில் தாங்கள் வசிக்கும் இடத்துக்குத் திரும்பினான். அர்ச்சுனன் கனியைத் தன் கையில் கொடுத்து நடந்தவற்றைக் கூறியதும் தருமனுக்குச் சினம் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணம் தான் அந்தச் சினம் சினமாக இருந்தது. மறுகணம் அதுவே பொறுமையாக மாறிவிட்டது. “காட்டில் அனாதைகளைப் போன்று வசிக்கின்ற துன்பம் போதாதென்று இந்தத் துன்பத்தையும் வேறு நீ கொண்டு வந்திருக்கிறாய்!” -என்று அர்ச்சுனனை நோக்கி வேதனைச் சிரிப்போடு கூறினார். “நமக்குள் வருந்துவது பின்பு இருக்கட்டும். அமித்திர முனிவர் மரத்தில் கனியைக் காணாமல் சினங்கொண்டு சாபம் கொடுப்பதற்குள் அவரைச் சந்தித்துப் பணிவோடு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடலாம்” என்றான் வீமன். “வேண்டாம். என் பொருட்டு எல்லோரும் முனிவரைச் சந்தித்து ஏன் அவருடைய கோபத்துக்கு ஆளாக வேண்டும்? நான் செய்த வினைக்கு நானே சென்று பயனை அனுபவிக்கிறேன்! உங்களுக்கு ஏன் வீணான கஷ்டம்?” என்று அர்ச்சுனன் வெறுப்பினால் தன்னைத்தானே நொந்து கொண்டான். “நீ பேசுவது சிறிதும் நன்றாயில்லை அர்ச்சுனா! உனக்கு மட்டும் முனிவர் சாபம் கொடுத்துவிட்டால் நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? வருகிற துன்பத்தை எல்லோருமே அனுபவிப்போமே?” -என்றான் தருமன். நகுலன் கூறினான்: “என்ன போதாத வேளையோ தெரியவில்லை. நமக்குத் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. துருவாசர் திடீரென்று விருந்துக்கு வந்து கொடுத்த துன்பத்தைக் கூடத் தவிர்த்துவிட்டோம். இப்போது இந்தப் புதிய துன்பத்திலிருந்து தப்ப வழி தெரியவில்லை. முன்போலவே கண்ணபிரானைத் தியானம் செய்வோம். அவன் வந்து உதவினால்தான் இத்துன்பம் தீரும் போலும்.” “இப்படிச் செய்தால் என்ன? அமித்திர முனிவர் மரத்திலிருந்து கனி வீழ்த்தப்பட்டிருப்பதை அறிந்து நம்மைச் சபிப்பதற்கு முன்னால் நாமே ஓடிச்சென்று கனியை அவர் முன்பு வைத்து வணங்கி மன்னிப்புப் பெற்றுவிட்டால் ஒரு துன்பமுமில்லையே?” -சகாதேவன் கூறினான். “எல்லாம் என் ஆசையால் வந்த தீவினை. நான் அந்தக் கனியைக் கேட்டிருக்கவில்லை என்றால் இவ்வளவு துன்பமும் ஏற்பட்டிருக்காது” என்று தன்னை நொந்து கொண்டாள் திரெளபதி. கண்ணபிரானை அழைத்து உதவி வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தோன்றவே தருமன் கருணைக் கடலான கண்ணபிரானை எண்ணினான். எண்ணிய அளவில் அடியார் முன் தோன்றித் துயர் தீர்க்கும் அப்பெருமான் உடன் தோன்றினான். பாண்டவர்கள் அவனை வணங்கிப் பணிவோடு தங்கள் நிலையைக் கூறினார்கள். “இப்போது என் உதவியைக் காட்டிலும் உங்கள் சொந்த தருமம் தான் உங்களைக் காக்க வேண்டும். நீங்கள் ஐவரும் திரெளபதியும் உங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைச் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டால் இந்தக் கனி ஒருவேளை தான் முன்பிருந்த கிளையில் போய்ப் பொருந்திக் கொண்டாலும் பொருந்திக் கொள்ளும். அதைச் செய்யுங்கள்" -என்றான் கண்ணபிரான். பாண்டவர்களும் திரெளபதியும் கண்ணபிரானும் நெல்லிக்கனியை எடுத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்றனர். கனியைக் கீழே வைத்துவிட்டு அவரவர்களுடைய மனத்தில் இருந்ததைச் சத்தியத்திற்குப் புறம்பாகாதபடி கூறலாயினர். “சத்தியமும் மெய்ம்மையுமே உலகில் நிலைத்து வாழக்கூடியவை. மற்றவை எல்லாம் அழிவனவே” என்றான் தருமன். “பிறன் மனைவியை விரும்பல் பெருந்தீமை. பிறரை வருத்தாமல் அவர்க்கு உதவுவது பண்பு” என்றான் வீமன். “மானத்தைக் காப்பது தான் வாழ்வு. உடல், உயிர் எல்லாம் அழிந்தாலும் அழியவிடக்கூடாதது மானம்” -என்றான் அர்ச்சுனன். “உலகில் மதிக்கத்தக்க பொருள் கலைகளாலும் கல்வியாலும் ஏற்படக்கூடிய ஞானமே” -என்றான் நகுலன். “சத்தியத்தைத் தாயாகவும், அறிவைத் தந்தையாகவும் தருமத்தைச் சகோதரனாகவும், சாந்தத்தை மனைவியாகவும், பொறுமையைப் புதல்வனாகவும் கொண்டு வாழ்வதே வாழ்வென்று கருதுகின்றேன் நான்” -என்றான் சகாதேவன் “பெண்ணுக்கு ஆடவர்களின் மேல் ஏற்படக்கூடிய ஆசை அடக்க முடியாதது. எல்லாத் தகுதியும் பெற்ற பாண்டவர்கள் கணவராக வாய்த்தும் என் மனம் வேறொருவனை அடிக்கடி நாடுகிறது. மங்கையர்கள் கற்பு, கணவனாக அமைபவனைப் பொறுத்ததாகும். அது ஒரு உறுதியான பண்பென்று தோன்றவில்லை” என்று திரெளபதி தன் உள்ளத்தில் இருந்ததை மறைக்காமல் கூறினாள். இவர்கள் ஆறு பேரும் இவ்வாறு கூறி முடித்தபோது தரையில் இருந்த நெல்லிக் கனியைக் காணவில்லை. ஆச்சரியத்தோடு திகைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கண்ணபிரான் சிரித்துக் கொண்டே நெல்லி மரத்தின் கிளையைச் சுட்டிக் காட்டினான் என்ன விந்தை? அர்ச்சுனன் எந்த இடத்திலிருந்து அந்தக் கனியை வீழ்த்தினானோ அந்த இடத்தில் அதே காம்பில் அது பொருந்தித் தொங்கிக் கொண்டிருந்தது. தங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு வழி கூறியருளினதற்காகக் கண்ணபிரானுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்தினார்கள் பாண்டவர்கள். “என் உதவி ஒன்றும் இதில் கலந்துவிடவில்லை. உங்கள் தருமத்தாலும் சத்தியத்தாலும் உங்களை நீங்களே காத்துக் கொண்டீர்கள். வழி கூறிய பெருமை மட்டுமே எனக்கு உண்டு” என்றான் கண்ணன். மாண்டவர் மீண்டனர் நெல்லிக்கனிச் சம்பவத்திற்குப் பின் பாண்டவர்கள் அஷ்டகோண முனிவருடைய வனத்தில் அதிக நாட்கள் தங்கியிருக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ‘விஷ்ணு சித்த முனிவர்’ என்ற வேறோர் முனிவர் வசித்து வந்த காட்டை அடைந்து தங்கினர். இவர்கள் இது விஷ்ணு சித்த முனிவரின் வனத்தில் தங்கியிருப்பது எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்து விட்டது. இந்த வனத்திலிருந்து உயிரோடு மீளாமல் பாண்டவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் திட்டத்தோடு வேலை செய்தனர். பல வேள்விகளைச் செய்து நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலுடையவரான காள மாமுனிவர் என்ற முனிவரைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தான் துரியோதனன், பல நாட்கள் இடைவிடாமல் அவரை வழிபாடு செய்து போற்றி உபசரித்தான். திடீரென்று தன்னை அழைத்து வந்து எதற்காக இவ்வளவு பெரிய உபசாரங்களை எல்லாம் செய்கிறான்? என்று விளங்காமல் திகைத்தார் முனிவர். துரியோதனன் மனக்கருத்தை அவர் கண்டாரா? பாவம்! மனம் மகிழ்ந்தார். சகுனியின் மூலமாகத் துரியோதனன் அவரிடம் ஒரு வரம் கேட்டான். சகுனி முனிவரிடம், “முனிவர் பெருமானே! துரியோதனனுடைய விரோதிகளை அழிப்பதற்கு நீங்கள் உங்கள் தவ வலிமையினால் உதவவேண்டும்” என்று குறிப்பை மறைத்துக் கொண்டு நல்லது போலக் கேட்டான். விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத முனிவர் தமக்கிருந்த மனமகிழ்ச்சியில், “நல்லது துரியோதன்னுடைய பகைவர்கள் எவராக இருந்தாலும் என் உதவியால் நான் அவர்களை ஒழிக்க இணங்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டார். உடனே சகுனி, “முனிவரே! அந்த விரோதிகள் வேறெவரும் இல்லை. பாண்டவர்கள் தாம். அவர்களைக் கொல்வதற்காக நீங்கள் ஓர் யாகம் செய்ய வேண்டும்” என்றான். முனிவர் திடுக்கிட்டார். துரியோதனனுடைய வஞ்சகம் அப்போது தான் விளங்கியது. ‘குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல இவனிடம் வாக்களித்து அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே’ என்று கலங்கியது அவருடைய தூய உள்ளம் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் வழியில்லை. பாண்டவர்களைப் பற்றிய நல்லெண்ணமும் நல்ல நோக்கமும் உடையவராகிய அந்த முனிவர் விதியின் கொடுமையை எண்ணி மனம் புழுங்கினார். சகுனியின் வேண்டுகோளை எப்படியாவது மறுத்து விடலாம் என்றெண்ணி “அப்பா! தயவு செய்து வேறு ஏதாவது ஒரு வரம் கேள் நான் பாண்டவர்களை அழிக்க வேள்வி செய்தால் என் புண்ணியமும் தருமமும் ஆகிய யாவும் அழிந்து போய்விடும். நல்லதை எண்ணுங்கள்! நல்லதைக் கேளுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்” என்று உருக்கமாகக் கூறினார். துரியோதனனும் சகுனியும் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டார்கள். அதோடு கூறியதையே மீண்டும் கூறி வற்புறுத்தினார்கள். “நீங்கள் வாக்குக் கொடுத்துவிட்டீர்கள், இனி மாறக் கூடாது. எங்கள் விருப்பப்படியே பாண்டவர்களைக் கொன்று தொலைப்பதற்கு யாகம் செய்தே தீரவேண்டும் என்று முரண்டினார்கள். காளமா முனிவர் மறுப்பதற்கு வழியில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்புப் போல் திண்டாடினார். பாண்டவர்கள் மேலுள்ள அன்பு ‘வேள்வி செய்யாதே’ என்று தடுத்தது. துரியோதனாதியர்க்குக் கொடுத்த வாக்கு ‘வேள்வி செய்’ என்று வற்புறுத்தியது. கடைசியில் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேள்வி செய்ய இணங்கினார். அந்தத் தீய வேள்விக்குரிய பொருள்களை எல்லாம் துரியோதனன் அவருக்குக் கொடுத்தான். கள்ளி மரங்களும் எட்டி மரங்களும் மற்றும் பல வாடிய மரங்களுமாகச் சூழ்ந்து நின்ற பயங்கரமானதோர் காட்டுப் பகுதியில் அந்தப் பயங்கரமான யாகத்தைச் செய்யத் தொடங்கினார் முனிவர். ஏராளமான பலிகளையும் பொருள்களையும் தீயிலே இட்டுத் துர்மந்திரங்களைக் கூறித் தொடர்ந்து வேள்வியைச் செய்தார். வானளாவி வளர்ந்த வேள்வியின் தீக்கொழுந்துகளில் இருந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாகத் தோற்றமுடைய ஒரு பெரும் பூதம் தோன்றியது. கோரமான கடைவாய்ப் பற்களும் குரூரமான செவ்விழிகளும் பாறை போன்ற செவிகளுமாகத் தோன்றிய அந்தப் பூதத்தைக் கண்டு காளமா முனிவருக்கே சதை ஆடியது. எலும்புக் குருத்துக்களுக்குள்ளே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல் இருந்தது. “என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுக” என்று இடி முழக்கம் போன்ற குரலில் அண்டகடாட்சங்கள் எல்லாம் எதிரொலிக் கும்படியாகப் பூதம் முனிவரைக் கேட்டது. “ஏ பூதமே! நீ போய்ப் பாண்டவர்கள் ஐவரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொன்று தொலைத்து விட்டு வா.” “நல்லது முனிவரே! ஆனால் ஒரு நிபந்தனை. பாண்டவர்கள் கொல்வதற்கு அகப்படவில்லையாயின் என்னை அழைத்து என் நேரத்தை வீணாக்கிய உன்னையே திரும்பி வந்து கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றது பூதம். பூதம் கிளம்புவதற்கு முன்பே பாண்டவர்கள் உயிரைக் காப்பதற்கு வேறு ஒரு தேவன் கிளம்பி விட்டான். அவனே எமன். எமதருமன், தருமனுக்குத் தந்தை அல்லவா? பாண்டவர்களுக்கு எதிராக துர்வேள்வி நடப்பதை அறிந்து அவர்களைக் காக்க உறுதி பூண்டு மண்ணுலகுக்கு வந்தான். கொல்லும் தொழிலுடையவன் காக்கப் புறப்பட்டால் அது எவ்வளவு பெரிய விந்தையாக இருக்க வேண்டும்! பாண்டவர்களை உயிர் பெற்று வாழச் செய்வதற்கென்றே நிகழ்ந்தவை போலச் சில நிகழ்ச்சிகள் அவர்கள் வசித்த காட்டில் நிகழ்ந்தன. அந்தக் காட்டில் வசித்து வந்த முனிவர் ஒருவருடைய புதல்வன் தான் அணிந்து கொள்வதற்காகப் பூணூலையும் மான் தோலையும் எடுத்து ஆசிரமத்திற்குள் வைத்திருந்தான். எங்கிருந்தோ நால்காற் பாய்ச்சலில் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று அவன் எடுத்து வைத்திருந்த மான் தோலையும், பூணுலையும் வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பயந்து போன முனிவரின் புதல்வன் அங்கிருந்த பாண்டவர்களிடம் வந்து தன் மான் தோலையும் பூணூலையும் மானிடமிருந்து மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டான். மான் ஒருவரால் பிடிக்க முடியாத வேகத்தில் தலைதெறித்து விடுவது போல ஓடிக் கொண்டிருந்ததனால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒவ்வொருவராக அதைப் பின்பற்றித் துரத்திக் கொண்டு ஓடினார்கள். மான் அலுக்காமல் சலிக்காமல் வெகு தொலைவு ஓடியது. பாண்டவர்களும் விடாமல் பின்பற்றி ஓடினார்கள். ஓடஓடக் கால் நரம்புகள் விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கின. இறுதியில் மான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. ஏமாற்றமும் உடற்சோர்வுமாகச் சகோதரர்கள் ஐவரும் களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். வாய் வறண்டு தாகம் எடுத்தது. உயிரே போய் விடுவது போலத் தாகம் தொண்டையைக் கசக்கிப் பிழிந்தது. ஐந்து பேரும் நீர் வேட்கையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இதே நேரத்தில் அவர்கள் சோர்ந்து விழுந்திருந்த இடத்திற்கு அருகில் எமனுடைய அருளால் ஒரு பெரிய நச்சுக்குளம் (உண்டவர்களை இறக்கச் செய்யும் நீரை உடையது) தோன்றியது. அதன் கரையில் அடர்ந்த பசுமையான மரக்கூட்டங்களும் தோன்றின. பாண்டவர்களைப் பூதத்தினிடமிருந்து காப்பாற்றுவதற்கு எமன் செய்த ஏற்பாடுகள் இவை. நீர் வேட்கையைப் பொறுக்க முடியாத தருமன் சகாதேவனை நோக்கி, “தம்பீ! அருகிலே ஏதாவது குளமிருந்தால் சென்று நீயும் தண்ணீர் பருகிவிட்டு எங்களுக்கும் இலைத் தொன்னையில் தண்ணீர் கொண்டு வா!” என்று கூறினான். சகாதேவன் புறப்பட்டான். அங்கும் இங்கும் சுற்றிய பிறகு எமன் போலியாக உண்டாக்கிய நச்சுக்குளம் அவன் கண்களில் தென்பட்டது. வேகமாகச் சென்று. அதில் இறங்கி நீரைக் கைகள் கொண்ட மட்டும் அள்ளிப் பருகினான். பருகி விட்டு அருகிலிருந்த மரத்தில் தொன்னை செய்ய இலை பறிப்பதற்காக இரண்டடி நடந்தவன் அப்படியே வயிற்றைப் பிடித்தவாறே கரை மேலே சுருண்டு விழுந்தான். நீரிலிருந்த நஞ்சு தன் வேலையைச் செய்துவிட்டது. சகாதேவன் போய் வெகு நேரமாகியும் திரும்பாததைக் கண்டு ஐயுற்ற தருமன் நகுலனை அனுப்பினான். அவனும் இதே குளத்தில் வந்து நீரைப் பருகிவிட்டுச் சகாதேவனுக்கு அருகில் இறந்து வீழ்ந்தான். அடுத்து அர்ச்சுனன் வந்தான். அவனும் அறியாமல் நீரைப் பருகி மாண்டு விழுந்தான். நான்காம் முறையாக வீமன் வந்தான். கரையில் இறந்து விழுந்து கிடக்கும் தன் சகோதரர்கள் மூவரையும் கண்டவுடன் அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பொய்கை நீரில் ஏதோ தீமை இருக்கிறது என்று அனுமானித்துக் கொண்டான். எனினும் தண்ணீர்த் தாகத்தை அவனால் அடக்க முடியவில்லை. தனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூடத் தன்னை அடுத்து வருகின்ற தருமனுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு “இந்தக் குளத்திலுள்ள நீர் நச்சு நீர். இதைக் குடிக்க வேண்டாம்” -என்று குளக்கரை மணற்பரப்பில் எழுதினான். பின்பு நீரைக் குடித்து அவனும். மாண்டு வீழ்ந்தான். சகோதரர்கள் நான்கு பேரும் திரும்பி வராதது கண்டு தருமன் எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தான். சிறிது தொலைவு நடந்ததும் சோர்வு மிகுதியாகவே ஒரு சந்தன மரத்தின் அடியில் உணர்வற்று மயங்கி வீழ்ந்து விட்டான். அவன் மயங்கி வீழ்ந்த அதே சமயத்தில் காளமா முனிவரால் அனுப்பப்பட்ட பூதம் அங்கு வந்தது. தருமன் மட்டும் தனியாக வீழ்ந்து கிடப்பதைக் கண்டது. முனிவர் ஐந்து பேரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொல்ல வேண்டும் என்று கூறியிருந்ததனால் மற்ற நான்கு பேரையும் தேடிச் சுற்றியது. நச்சுக் குளத்தின் கரையில் மற்றச் சகோதரர்கள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதற்கு காளமா முனிவர் மேல் கடுங்கோபம் வந்துவிட்டது. “கேவலம்! செத்துப் போனவர்களைக் கொல்வதற்காகவா என்னை அந்த முனிவன் அனுப்பினான். உடனே போய் அவனைக் கொல்கிறேன் பார்” -என்று வேகமாகத் திரும்பியது அது. காளமா முனிவர் பூதம் கோபாவேசமாகத் திரும்பி வருவதைக் கண்டு நடுநடுங்கி ஓட முயன்றார். பூதம் அவரை ஓட விடவில்லை. இறுக்கிப் பிடித்துக் கொண்டது. “ஏ! போலி முனிவனே! செத்தவர்களைக் கொல்லவா என்னை அனுப்பினாய்? நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்! உன்னை என்ன செய்கிறேன் பார் , இப்போது” -என்று கூறிக்கொண்டே அவரைத் திரிசூலாயுதத்தினால் கிழித்துக் கொன்று விட்டது. கொன்றபின் அருகிலிருந்த யாக குண்டத்தில் தீ வழியே தான் தோன்றியது போலவே புகுந்து மறைந்துவிட்டது. காட்டில் சந்தன மரத்தடியில் மயங்கி விழுந்திருந்த தருமன் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதனால் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். ஞானமந்திரத்தை உச்சரித்து உடலில் வலுவேற்றிக் கொண்டான். தெம்பு தோன்றியதும் எழுந்து நடந்தான். நச்சுக் குளக்கரைக்குச் சென்று சகோதரர்கள் இறந்து கிடந்ததையும் மணலில் எழுதியிருக்கும் எழுத்துக்களையும் கண்டான். எழுதியிருந்ததைப் படித்தவுடன் அந்த நீரைக் குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். சிறிது நேரம் யோசித்துப் பார்த்ததில், “சகோதரர்கள் எல்லோரும் இறந்த பின் நாம் மட்டும் உயிர் வாழ்வானேன்? இந்த நச்சுப் பொய்கை நீரைக் குடித்து நாமும் உயிரை விட்டுவிட்டால் என்ன?” -என்று தோன்றியது. விநாடிக்கு விநாடி சிந்தனை வளர்ந்தது. சிந்தனை வளர வளர உயிரை விட்டு விடுவதே மேல் என்று தோன்றியது. இந்தத் தீர்மானத்தோடு நீரை அள்ளிப் பருகுவதற்காகக் குளத்தில் இறங்கினான் தருமன். “நில் ! இறங்காதே” -தருமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குரல் பெரிதாகக் கேட்டது. ஆனால் குரலுக்குரியவர் யார்? எங்கிருக்கிறார்? என்றே தெரியவில்லை. மீண்டும் ‘வீண் பிரமை’ என்று எண்ணிக் கொண்டு இறங்கினான். “நான் சொல்வது கேட்கவில்லை? இறங்கி நீரைக் குடித்தால் இறந்து போவாய் நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். அவைகட்குப் பதில் கூறினால் இறந்து கிடப்பவர்களை உயிர் மீட்டுத் தருவேன். பதில் சொல்வாயா?” “ஆகா! தாராளமாகப் பதில் கூறுகிறேன். கேள்!” -தருமன் மகிழ்ச்சியோடு இணங்கினான். உருவமில்லாத அந்தக்குரல் கேட்டது. “நூல்களில் பெரியது எது?” “அரிய மெய்ச்சுருதி” “இல்லறத்தை நடத்த அவசியமான பொருள் எது?” “நல்ல மனைவி” “மாலைகளில் மணமிக்கது எது?” “வண்சாதி மாலை” “போற்றத்தக்க தவம் என்ன?” “தத்தம் குல ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது” “முனிவர்குலம் எல்லாம் வணங்கக்கூடிய கடவுள் யார்?” “திருத்துழாய் மாலையணியும் முகுந்தன்” “நங்கையர்க்கு இயல்பான குணம் யாது?” “நாணம்.” “பொருள் மிகுந்த செல்வர்களுக்கு பாதுகாப்பு என்ன?” “தானம்.” “இரண்டு செவிகளுக்கும் இனியவை யாவை?” “குழந்தைகளின் மழலை மொழிகள்.” “நிலைத்து நிற்பது எது?” “நீண்ட புகழ்.” “கற்கத்தக்க கல்வி யாது?” “கசடறக் கற்கும் கல்வி” ‘எல்லாவற்றினும் அற்பமானது என்ன?" “மற்றொருவரிடம் ஒரு பொருளைக் கேட்டுக் கையேந்தி வாங்குவது.” எல்லாக் கேள்விகளுக்கும் மிக விரைவாக மறுமொழி கூறி முடித்து விட்டான் தருமன். கேள்விகளுக்கு விடை கூறி முடித்தவுடன் அவன் முன் எமன் தோன்றினான். தருமன் தந்தையை வணங்கினான். எமன் தருமனை வாழ்த்தி அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கூறி, “இந்த மந்திரத்தைக் கூறினால் உன் தம்பியர் நால்வருள் யாராவது ஒருவரைப் பிழைக்கச் செய்யலாம்” -என்றான். உடனே தருமன் அப்படியே கூறி, சகாதேவனை மட்டும் உயிர் பெறச் செய்தான். அது கண்ட எமன், “ஏன் இவனை மட்டும் உயிர் பெறச் செய்தாய்? மற்ற மூவர் மேலும் உனக்கு அன்பில்லையா?” -என்று கேட்டான். “தந்தையே! நாங்கள் நால்வரும் குந்தியின் மக்கள், இவன் மாத்திரியின் மகன். குந்தி வயிற்றில் தோன்றிய முறைக்கு நான் ஒருவனாவது இருக்கின்றேன். மாத்திரி வயிற்றில் தோன்றிய முறைக்கு இவன் இருக்கட்டும் என்றே இவனை எழுப்பினேன்!” என்று தருமன் எமனுக்கு மறுமொழி கூறினான். தருமனுடைய தன்னலமற்ற பெருந்தன்மை எமனை வியப்புக்குள்ளாக்கியது. “மகனே! உன் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். இதோ உன்னுடைய மற்ற சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தருகிறேன். எல்லோரும் நலமாக வாழுங்கள்” என்று கூறி மற்ற மூவரையும் உயிரோடு எழச் செய்தான் எமன். பின் பாண்டவர்களுக்குப் பயன்படும்படியான சில ஆயுதங்களையும், வரங்களையும் மந்திரங்களையும் கூறினான். துரியோதனனுடைய சூழ்ச்சியால் காளமா முனிவர் துர்வேள்வி செய்து பூதத்தை வருவித்து ஏவியதும், பூதம் அவரையே திரும்பிச் சென்று கொன்றதையும் முறையாக அவர்களுக்கு எடுத்துக் கூறினான். பாண்டவர்கள் யாவற்றையும் கேட்டு ஆச்சரியம் கொண்டார்கள். “சரி நான் வருகிறேன். நீங்கள் காட்டுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல் அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ள வேண்டும் நீங்கள்” -என்று கூறி எமன் விடைபெற்றுக் கொண்டு சென்றான். பாண்டவர்கள் நன்றி கூறி வணங்கி விடை கொடுத்தார்கள், எமன் தன் உலகத்திற்குச் சென்றான். செத்துப் பிழைத்த மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த மனத்தோடு பாண்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடிச் சென்றார்கள். அங்கே திரெளபதி நெடுநேரமாக அவர்களைக் காணாமல், “என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ?” -என்று கலங்கிப் பதறிக் கொண்டிருந்தாள். பாண்டவர்களைக் கண்களால் கண்டபோதுதான் அவளுடைய கலக்கமும் திகைப்பும் நீங்கின. பாண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட பெருந்துன்பங்களையும் நல்வினை வயத்தால் எமன் தங்களை அவற்றிலிருந்து காத்ததையும் திரெளபதிக்குக் கூறிய பின் அஞ்ஞாதவாசத்துக்குரிய ஆலோசனைகளில் ஈடுபட்டனர். (ஆரணிய பருவம் முற்றும்) விராட பருவம் மறைந்த வாழ்வு ‘பன்னிரண்டு வருட காலம் காட்டுவாசம் முடிந்து விட்டது. இனி எங்காவது ஒரு நகரத்தில் மறைந்து வாழ வேண்டும்’ -என்று எண்ணிய பாண்டவர்கள் அது பற்றித் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். சகோதரர்கள் பலரும் பலவாறு கூறினர். ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பத்திற்கு ஏற்றதாக ஒரு நகரத்தைக் குறிப்பிட்டனர். அந்த நிலையில் எல்லோரும் ஒன்று கூடி மறைந்து வாழ்வதற்கேற்ற ஒரு நகரத்தை அர்ச்சுனன் குறிப்பிட்டான். அதுவே விராட மன்னனால் அரசாளப்பட்டு வந்த வளம் மிக்க விராட நகரம், சகோதரர்கள் ஐவரும் தாம் இன்னாரென்று தெரியாதபடி, மாறுவேடங்கொண்டு அந்த நகரத்து அரசனை அண்டி. வாழ்வதென்று தீர்மானமாயிற்று. வனத்தில் பாண்டவர்களுக்கு நட்பினராய் ஒன்று சேர்ந்திருந்த முனிவர்களும் சிற்றரசர்களும் பலர் இருந்தனர். தங்களோடு அவர்களும் வரநேர்ந்தால் அஞ்ஞாதவாசரகசியம் வெளியாகி விடுமோ என்று தயங்கினான் தருமன், எனவே அவர்களை அவரவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று வாழுமாறு கூறி ஏற்பாடு செய்து விட்டு அதன் பிறகே அவர்கள் விராட் நகருக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. விராட நகரத்தை கோநகரமாகக் கொண்டு ஆளப்பெற்று வந்த தேசத்திற்கு மச்சதேசம் என்று பெயர். பாண்டவர்கள் ஐவரும் மச்சதேச எல்லைக்குள் பிரவேசித்து விராட நகரத்தை அடைந்தனர். விராட மன்னனின் அரண்மனைக்குச் சென்று அவனைச் சந்திப்பதற்கு முன்னால் தங்கள் பொருள்களையும் ஆயுதங்களையும் ஒதுக்குப்புறமாக ஒளித்து வைப்பதற்கு ஒரு இடம் தேவையாயிருந்தது அவர்களுக்கு. நகரத்தின் எல்லைப் புறமாகப் பழங்காலத்துக் காளி கோவில் ஒன்று இருந்தது. ‘போகிற போக்கில் அந்தக் காளி கோவிலுக்குள் போய் வணங்கி விட்டுப் போகலாம்’ -என்றெண்ணி உள்ளே சென்ற பாண்டவர்கள் தங்கள் பொருள்களை ஒளித்து வைப்பதற்கேற்ற ஒரு நல்ல இடத்தை அங்கே கண்டனர். காளி சந்நிதிக்கு முன்புறம் ஒரு வயதான வன்னிமரம் பருத்து வளர்ந்து செழித்துப் படர்ந்திருந்தது. அந்த மரத்தின் அடிப்புறம் அமைந்திருந்த பெரிய பொந்தில் எவ்வளவு பொருள்களை வேண்டுமானாலும் ஒளித்து வைக்கலாம் போலத் தோன்றியது. பாண்டவர்கள் தங்களுடைய ஆயுதங்களையும் பிற பொருள்களையும் அந்தப் பொந்திலே போட்டு ஒளித்து வைத்தார்கள். அப்பொருள்கள் யார்க்கும் புலப்படாமல் நலமாக அங்கிருக்க வேண்டும் என்று காளியை வேண்டி வணங்கிய பின் யார், யார் எந்தெந்த மாறு வேடத்தோடு விராடனின் அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்தனர். தாங்கள் ஐந்து பேரும் சகோதரர்கள் என்பது தெரியாதபடி தனித்தனியே வேறு வேறு தோற்றங்களுடன் வேறு முறையில் அரண்மனையில் நுழைவதே ஏற்றது என்று கருதினார்கள். முதன் முதலில் மாறு வேடங்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட வேண்டிய முறை தருமனுக்கு வாய்த்தது. தருமனுக்கு இயல்பான சாந்தகுணம் துறவியாகவே செல்லத் தூண்டியது. அவன் முற்றுந்துறந்த முனுபுங்கவனாக மாறி, கங்கன் என்ற பெயரைப் பூண்டு விராட மன்னனுக்கு முன் சென்று நின்றான். தவஒளி மிக்கவர் போலத் தோன்றியதால்விராட மன்னன் அவனை அன்போடு வரவேற்றான். “சுவாமி! தாங்கள் எவ்வூரிலிருந்து வருகிறீர்களோ? தங்கள் திருநாமம் யாதோ?” “விராட மன்னவா? நின் கொற்றம் வாழ்க நலம் சிறப்பதாகுக! நான் நேற்று வரை பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனோடு வனத்தில் தங்கியிருந்தேன். என்னைக் ‘கங்க முனிவர்’ என்பார்கள்.” “மிகவும் நல்லது முனிவரே! அடியேனுடைய நாடு தங்கள் வருகையால் பெரிதும் உயர்ந்து விட்டது. தேவரீர் இங்குவரத் திருவுளம் பற்றிய காரணத்தை அறியப் பெரிதும் ஆசைப்படுகிறேன்” “காரணம் வேறொன்றம் இல்லை அரசே! திருவும் அறிவும் சிறந்து விளங்கும் உன் நாட்டில் உன்னோடு சில நாட்கள் தங்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை.” “முனி சிரேஷ்டரே! வலிய வந்தடைந்த பாக்கியத்தைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். விரும்பும் நாளெல்லாம் தங்கியிருங்கள். தங்களை விருந்தோம்பி மகிழும் இனிய பேறு எனக்குக் கிடைக்கும்” -தருமனுக்குத் திருப்தி ஏற்பட்டது. விராடன் நம்முடைய வேஷத்தைச் சரியானபடி நம்பிவிட்டான்! அஞ்சாத வாசத்திற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது. இனிக் கவலை இல்லை என்று களித்தது அவன் மனம். தருமனுக்கு அடுத்தபடி வீமன் சமையற்காரனாக மாறுவேடம் கொண்டு விராட்னைக் காணப் புறப்பட்டான். “என் பெயர் பலாயனன். சமையல் தொழிலில் எனக்கு நிகர் நானே. சுவை மிக்கவுணவு வகைகளை என் போலத் தேவருலகில் உள்ளவர்களாலும் படைக்க முடியாது. தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று விராடனுக்கு முன் வேண்டிக் கொண்டான். “ஏன் அப்பா? உன்னைப் பார்த்தால் மதமதவென்று வஞ்சகமில்லாமல் வளர்ந்து மல்யுத்தம் செய்கிற ஆள் மாதிரி இருக்கிறாயே? நீ சமையற்காரன் என்பதை எப்படி நம்புவது?” விராடனின் கேள்வி வீமனைத் தூக்கி வாரிப்போடச் செய்தது. எங்கே உண்மையை விராடன் கண்டு கொண்டு விட்டானோ என்றெண்ணி அவன் உடல் நடுங்கியது. நல்லவேளையாக உடனே துணிந்து சமாளித்துக் கொண்டு, “ஆம் அரசே! தங்கள் அனுமானம் முற்றிலும் முறையானதே. எனக்கு மல்யுத்தத்திலும் நல்ல பழக்கம் உண்டு. திறமாக மற்போர் புரிவேன்” என்றான். உடனே மனமுவந்த விராடன் அவனுக்குச் சிறந்த மரியாதைகள் செய்து தன் அரண்மனையிற் சமையற்காரனாக நியமித்துக் கொண்டு விட்டான். வீமன் பலாயனன் என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டு விராட மன்னனிடம் சமையற்காரனாக நடித்துக் கொண்டிருந்தான். அடுத்த முறை அர்ச்சுனனுடையது. முன்பு ஒரு முறை தேவர்கோன் தலைநகரமாகிய அமராபதியில் தங்கியிருந்த போது ஊர்வசியால், ‘நினைத்தபோது பேடியாக மாறிக் கொள்ளலாம்’ என்ற சாபமொன்றை அர்ச்சுனன் பெற்றிருந்தான் அல்லவா? அந்தச் சாபத்தை இப்பொழுது மாறுவேடத்துக்குப் பயன்படுத்த விரும்பினான் அவன். பேடியாக மாறிச் சென்றே விராடனிடம் வேலை பெறலாம் என்று தனக்குள் முடிவு செய்து கொண்ட அவன் பேடியாக மாறிப் ‘பிருகந்நளை’ என்ற பெயர் பூண்டு அரசனைக் காண்பதற்காகச் சென்றான். “நான் இசைக் கலையிலும் நாட்டியக் கலையிலும் வல்லவள். என் பெயர் பிருகந்நளை. முன்பு அர்ச்சுனனுடைய அந்தப்புர மகளிருக்குப் பேடியாக இருந்து பல்கலைகளைக் கற்பித்து நிறைந்த அனுபவம் பெற்றிருக்கின்றேன். தங்கள் அந்தப்புரத்தில் எனக்கு ஒரு பணி அளித்தால் நல்லது” -என்று விராடனுக்கு முன்னால் சென்று வேண்டிக் கொண்டான். தன் மகள் உத்தரைக்கு இசையும் நாட்டியமும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவ(னை)ளை நியமித்தான் அவன். அப்போதிலிருந்து அர்ச்சுனன் பிருகந்நளையாகி அந்தப் புரத்தில் போய் மறைந்தான். இயற்கையிலேயே நகுலனுக்குக் குதிரையைப் பழக்கும் கலையில் நல்ல பழக்கம் உண்டு. எனவே, அவன் குதிரை பழக்கும் பணியாளனாக அரண்மனைக்குச் சென்றான். மாறுவேடத்தோடு கடிவாளம் குதிரை பழக்கும் கயிறு முதலியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு அரண் மனையைச் சேர்ந்த குதிரைச் சாலையின் வாயிலில் நின்று கொண்டிருந்தான். அப்போது தற்செயலாகக் குதிரைச் சாலையைப் பார்வையிடுவதற்காக அங்கே வந்த விராட மன்னன் அவனைக் கண்டான். கையில் கடிவாளம் முதலிய குதிரை சம்பந்தமான பொருள்களை வைத்துக் கொண்டிருந்ததால் நின்று கொண்டிருப்பவன் அசுவ சாஸ்திரத்தில் (குதிரையைப் பற்றி கலைகளில் திறமை மிக்கவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான். “நீ எங்கிருந்து வருகிறாய் அப்பா? குதிரைகளைப் பழக்குவதில் நீ தேர்ச்சியுள்ளவன் போலும்!” “அடியேனைத் தாமக்கிரந்தி என்று அழைப்பார்கள். அசுவ சாஸ்திரத்தின் இருப்பிடமாகிய நகுலனிடம் பல ஆண்டுகள் உடனிருந்து தொழில் கற்றேன். நகுலன் காட்டுக்குச் சென்றபின் ஆதரவிழந்து எங்கெங்கோ சுற்றினேன். இப்போது தங்களுடைய கலைஞரை ஆதரிக்கும் பண்பு கேட்டு இங்கு வந்தேன்.” “மிகவும் மகிழ்ச்சி அப்பா! உன்னைப் போன்ற ஒரு தலைவனைத்தான் என்னுடைய குதிரைச் சாலையின் பொறுப்பு முழுவதையும் ஒப்படைப்பதற்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்றிலிருந்து நீ அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்” மகிழ்ச்சியும் நன்றியும் ஒருங்கே பொங்கும் உள்ளத்தோடு நகுலன் அந்தப் பதவியை ஏற்று ‘தாமக்கிரந்தி’ என்ற பெயருள் ஒளிந்து கொண்டான். அடுத்து சகாதேவன் வந்தான். பசுக்களை மேய்த்துப் பாதுகாக்கும் கோவலர் வகுப்பைச் சேர்ந்தவனைப் போல மாறுவேடமிட்டுக் கொண்டிருந்தான். அவன் பெயரையும் மாற்றித் ‘தந்திரி பாலன்’ -என்று வைத்துக் கொண்டான். விராடராசனிடம் சென்று, “யான் பசுக்களைப் பரிபாலனம் பண்ணுவதில் வல்லவன். முன்பு பாண்டவர்கள் அரசாண்ட பொழுது சகாதேவனுக்குக் கீழே பசுக்களைப் பாதுக்காப்பவனாகப் பணிபுரிந்து அனுபவமும் தேர்ச்சியும் அடைந்துள்ளேன். என் பெயர் தந்திரி பாலன். கலைஞர்க்குப் புகலிடமாக விளங்கும் தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று குழந்தை சொற்களால் வேண்டிக் கொண்டான். விராட மன்னனும் அவன் நிலைமைக்கு மனமிரங்கி அவனைத் தன் அரண்மனையிலுள்ள கோவலர்களுக்குத் தலைவனாக நியமித்தான். திரெளபதி ஒருத்தி தான் எஞ்சியிருந்தாள். அவள் விஷயம் இவர்கள் ஐவரையும் போல அவ்வளவு சுலபமானது இல்லை. அவள் பெண்! இடம், பொருள், ஏவல், பதவி பார்த்து வாழ வேண்டியவள். கற்பையும் பெண்மையையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்த மாறு வேடத்தோடுதான் அவள் அரண்மனையில் நுழைய முடியும். அப்படிப்பட்ட வேடம் ஒன்றை அவள் சிந்தித்துத் தேர்ந்தெடுத்தாள். அரண்மனைப் பெண்களுக்கு அலங்கரிக்கின்ற கலையில் வல்லவள் போல மாறுவேடம் கொண்டு வண்ண மகளாக விராடராசனின் கோப்பெருந்தேவியைக் காணச் சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கருணை மிக்க மனமுடையவள். வண்ணமகளாக வந்தவளை அன்புடன் வரவேற்று விசாரித்தாள். “தேவீ! என் பெயர் விரதசாரிணி என்பது. நான் அந்தப்புரத்து மகளிர்க்கு அலங்கரித்து விடுகின்ற வண்ணக் கலையில் நன்கு பழகியவள். முன்பு பாண்டவர்களின் அந்தப்புர மகளிர்க்கு வண்ணமகளாக இருந்திருக்கிறேன். துரியோதனனுடைய சூழ்ச்சியால் பாண்டவர்கள் நாடிழந்து காடு சென்றபின் ஒரு பணியுமின்றி நாட்களை வீணே கழிக்கின்றேன். ஆடையுடுத்தல், அணிகலன் அணிவித்தல், திலகமிடுதல், போன்ற கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் விரதங்களும் ஒழுக்கமுமே வாழ்க்கையின் உயிரெனக் கருதுகின்றவள். பிறந்த வீட்டில் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்திலிருந்தே தேவர்களால் காவல் செய்யப்படும் தெய்வீகமான கற்பைப் போற்றி வருகிறேன். ஆண்களின் முகத்தை நான் காண்பதே இல்லை. என்னுடைய இந்த விரதங்களுக்கு அடைக்கலம் அளித்து என்னைப் பணிமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” விராடராசனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை அன்புடன் ‘விரதசாரிணி’யை ஏற்றுக் கொண்டாள். அவளுடைய கற்புக்கும் தனிமை விரதங்களுக்கும் பாதுகாப்பளிப்பதாக உறுதி கூறினாள். ‘விரதசாரிணியாக’ மாறி வந்த திரெளபதி அங்கிருக்க உடன்பட்டாள். சுதேஷ்ணையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது அவளுக்கு இவ்வாறு பாண்டவர்கள் ஐவரும், அவர்கள் தேவியான திரெளபதியும் தத்தம் கலைகளின் திறமையாலும், மாறுவேடம் செய்த உதவியாலும், விராட நகரத்து அரண்மனையில் மறைந்து வாழத் தொடங்கினார்கள். இப்படி அவர்கள் வாழ்ந்து வரும்போது வீமனுக்குத் தன்னுடைய மற்போர் வன்மையை விராடனுக்கு முன்பு வெளிப்படுத்தும்படியான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. ‘பலாயனன்’ -என்ற பெயரில் மறைந்து கொண்டிருந்த வீமன் இந்த வாய்ப்பைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான். மற்போரில் பல நகரங்களில் பலரை வென்று வாகை சூடியவனும் மகாவீரனுமாகிய வாசவன் என்ற மல்லன் விராட நகரத்துக்கு விஜயம் செய்திருந்தான். மனவளம் மட்டுமல்ல, உடல் வளமும் பெருகியிருந்தது அவனுக்கு. வாசவன் நடந்து வருகிறான் என்றாலே, ‘சிறுமலை’ ஒன்று கை கால்களைப் பெற்று நடந்து வருவது போலத் தோன்றும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மல்லர்களை வென்று தனக்கு இணை எங்கும் இல்லை என்பதாக அந்தந்த நாட்டரசர்களிடம் விருது பெற்றுத் திக்கு விஜயம் செய்து கொண்டு வந்தான் அவன். வாசவன் விராட நகருக்கு வந்திருந்ததன் நோக்கம் அரண்மனை மல்லர்கள் யாவரையும் வென்று வாகை சூடிச் செல்ல வேண்டும் என்பது தான். விராட மன்னனும் இந்தப் போட்டிக்கு ஒப்புக் கொண்டான். மற்போர் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. வாசவமல்லனோடு விராடனுடைய அவைக்களத்தைச் சேர்ந்த மல்லர்கள் ஒவ்வொருவராகப் போர் செய்து தோற்றுப் போனார்கள். விராடனுக்குத் தலை தாழ்ந்து விட்டது. தன் மல்லர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனது பெருமைக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதினான் அவன். ஆனாலும் என்ன செய்வது? திறமைக்கு மதிப்புக் கொடுத்துத் தானே ஆக வேண்டும்? எனவே வாசவமல்லனுக்குச் செய்ய வேண்டிய வெற்றி மரியாதைகளை முறைப்படி செய்தான். அவன் மனத்தில் தன் அவையில் தன் மல்லர்களே தோற்கடிக்கப்பட்ட ஏக்கம் மட்டும் குறையாமலிருந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த ஏக்கத்தை முனிவராக, கங்கர் என்ற பெயரோடு அவனருகே அவையிலிருந்த தருமன் கண்டு கொண்டான். “அரசே! உங்கள் கலக்கத்தை நான் உணருகிறேன். இந்த வாசவ மல்லனை வெல்வதற்கு ஏற்ற சரியான ஆள் ஒருவன் நம்முடைய அரண்மனைச் சமையற்காரர்களுக்கிடையே இருக்கிறான். அவனுக்கு மற்போரில் நல்ல பழக்கம் உண்டு, அவன் பெயர் பலாயனன். அவனை அழைத்து இவனோடு போருக்கு மோதவிட்டால் இவன் செருக்கு ஒழிந்து போகும்” என்று கங்கராக இருந்த தருமன் விராடனை நோக்கிக் கூறினான். விராடன் உடனே சமையற்காரப் பலாயன்னை அழைத்து வருமாறு காவலனை அனுப்பினான். வீமனுடைய மற்போர் வன்மைக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென்பதற்காகவே ‘தருமன்’ விராடனுக்கு இந்த எண்ணத்தைத் தூண்டி விட்டான். விராடனோ தான் தோற்ற பெருமையை எல்லாமே மீண்டும் பெற்றவனைப் போல நம்பிக்கையோடு பலாயனனை அழைத்து வரச் செய்தான். மற்போர் என்றதுமே பலாயனன் என்றும் பெயருக்குள் ஒளிந்து கொண்டிருந்த வீமனுக்கு மனத்தில் ஒரே ஆனந்தம். வெகு நாட்களாகத் தினவெடுத்துக் கிடந்த தோள்களுக்கு நல்விருந்து கிடைக்கப் போகிறதே என்ற மனமகிழ்ச்சியோடு அரசவைக்கு வந்தான் அவன். “பலாயனா! நீ மற்போரில் வல்லவனென்று ஏற்கனவே என்னிடம் கூறியிருக்கிறாய். இப்போது இந்த வாசவமல்லனிடம் உன் திறமையைக் காட்டு, பார்ப்போம்” என்று உத்திரவிட்டான் விராடன். விராடனைத் தலைவணங்கிப் போருக்குத் தயாரானான் பலாயனன். “பெரிய பெரிய மல்லர்களையெல்லாம் வென்ற எனக்குக் கேவலம் இந்தச் சமையற்காரன் எம்மட்டு?” -என்றெண்ணி அவன் மேல் தோள் தட்டிக் கொண்டு பாய்ந்தான் வாசவன். பலாயனனுக்கும் வாசவமல்லனுக்கும் கோரமாகப் போர் நடந்தது. புஜங்களும் புஜங்களும் மோதின. கால் காலை இடறியது. மல்யுத்தத்தின் திறமைகளை எல்லாம் காட்டி ஒருவரை ஒருவர் வெற்றிக் கொள்ள முயன்றனர். திமிரும் மனக்கொழுப்பும் கொண்டு போர் புரிந்த வாசவமல்லன் தான் வீரன் என்பதை அவைக்கு விளக்க முயலுவதைப் போலத் துள்ளித் துடித்துப் பலாயன்னைத் தாக்கிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் யாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போர் புரிந்து வந்த பலாயனன். திடீரென்று ஆக்ரோஷமடைந்து வாசவனின் இடுப்பிலே ஓங்கி உதைத்து அவனைக் கீழே தள்ளினான். கீழே விழுந்த வாசவனது மார்பில் ஏறி அமர்ந்த பலாயனன் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவனுடைய கழுத்தை வேகமாகத் திருகினான். கழுத்தொடிந்த வாசவமல்லன் இறந்து விழுந்தான். பலாயனன் வென்றான். விராடன் சமையல்காரன் என்றும் பாராமல் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தான். தன்னுடைய ‘ஆஸ்தான மல்லன்’ என்ற கெளரவமான பதவியையும் பலாயனனுக்கு அளித்தான். கீசகன் தொல்லைகள் விராட நகரத்தில் பாண்டவர்களும் திரெளபதியும் மாறுவேடமும் மாற்றுப் பெயரும் கொண்டு அமைதியான முறையில் மறைந்து வாழ்ந்து வரும் பொழுது அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே கிளம்பியவன் போல் இன்னொரு மனிதன் கிளம்பினான். அவன்தான் கீசகன். கீசகன் விராடனின் படைத் தளபதி. பார்ப்பதற்குக் கவர்ச்சி நிறைந்த தோற்றத்தை உடையவன். விராட மன்னனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை என்பவளுக்குச் சகோதரன். இந்த உறவால் விராடனுக்கு மைத்துனன் முறை உடையவன். இந்த உறவு முறை அல்லாமலும் விராட மன்னனின் முழு அன்புக்குப் பாத்திரமானவன். இவன் அடிக்கடி தன் சகோதரியாகிய சுதேஷ்ணையின் அந்தப்புரத்திற்கு வந்து அவளோடு உரையாடிச் செல்வது வழக்கம். விரதசாரிணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி தன்னால் இயன்றவரை எந்த ஆடவர் கண்களிலும் தென்படாமல் மறைவாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால் ஒரு நாள் அவளை அறியாமலே அவளுடைய விரதத்திற்குப் பங்கம் நேர்ந்து விட்டது. சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் பலவகை மலர்கள் பூத்துச் செழிப்புடன் விளங்கும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. அந்தப்புரத்திற்குள் வந்து போகின்றவர்கள் இந்தப் பூஞ்சோலைக்குள் நுழையாமல் வந்து போவதற்கில்லை. ஒரு நாள் காலை, மாலை தொடுப்பதற்காகப் பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள் திரெளபதி. அப்போது கீசகன் அந்த வழியாக வந்தான். அவள் மலர் கொய்து கொண்டிருப்பதை அவன் பார்த்து விட்டான். இயற்கையிலேயே சஞ்சல சுபாவம் நிறைந்த மனம் அவனுக்கு. கண்டவர்களை மயங்க செய்கின்ற அந்த அழகு, சபலம் நிறைந்த அவன் மனத்தைத் தடுமாறச் செய்துவிட்டது. அப்படியே சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை நோக்கினான். பூஞ்சோலையில் மற்றும் சில தோழிப் பெண்கள் வேறு ஓர் இடத்தில் மலர் கொய்து கொண்டிருந்தார்கள். கீசகன் அவர்களை அணுகி “இவள் யார்? இந்தப் புதுப்பெண் எவ்வளவு நாளாக இங்கே ஊழியம் செய்கிறாள்” என்று கேட்டான். அவர்கள், “அவள் வண்ணமகள், பெயர் விரதசாரிணி, புதிதாகச் சேர்ந்திருக்கிறாள்” -என்று மறுமொழி கூறினர். கீசகனுடைய உள்ளத்தில் ஆசைத் தென்றல் மெல்ல வீசியது. அனுராகத்தின் மெல்லிய குளிர்ச்சி நிறைந்த உணர்வுகள் தலையெடுத்து நின்றன. அவன் அங்கிருந்த மற்றத் தோழிப் பெண்களுக்கு சாடை காட்டினான். அவர்கள் அங்கிருந்து மெல்ல ஒதுங்கிச் சென்றனர். ‘விரதசாரிணி’ அந்தப் பூஞ்சோலையில் தனியாக விடப்பட்டாள், கீசகன் ஆசை துடிக்கும் மனத்தோடு அவளை நெருங்கினான். “பெண்ணழகி! உன் எழிலுக்குத்தான் எவ்வளவு ஆற்றல்? விராடராசனின் சேனாதிபதியையே பித்தனாக்கி மயங்கச் செய்து விட்டது இந்த அழகு. என்னை உன் காலில் விழுந்து வணங்கும் படி செய்துவிடும் போலிருக்கிறது இந்தப் பேரழகு. என் நிலைக்கு இரங்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.” உள்ளத்தின் வெறியால் வாயில் வந்த சொற்களைப் பிதற்றிக் கொண்டிருந்த கீசகனை எரித்து நீறாக்கி விடுபவளைப் போலப் பார்த்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய வெறுப்பு நிறைந்த அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமலே மேலும் தலை தாழ்த்திக் காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்சினான். “தாங்கள் யாராயிருப்பினும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை. இம்முறையற்ற செயலை உடனே விட்டு விட்டுச் செல்லுக, என்னையும் என் கற்பையும் தெய்வீக சக்தி வாய்ந்த ஐந்து தேவர்கள் காவல் புரிந்து வருகின்றனர். என்னை நெருங்காதே. உன் உயிரின் மேல் உனக்கு ஆசை இருக்குமானால் இப்படியே போய்விடு” -கோப மிகுதியால் பன்மையில் தொடங்கி ஒருமையில் ஏசி முடித்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய சினமொழிகளைக் கேட்டும் காமவெறி நீங்காதவனாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான். “என் ஆசையை நீ தணிக்காவிட்டால் எப்படியும் என் உயிர் உடலில் தங்காது. போகிற உயிர் எப்படிப் போனால் என்ன?” -என்று கீசகன் கைகளை நீட்டி நெருங்கி அவளை அணைப்பதற்குப் பாய்ந்தான். கையிலிருந்த பூக்குடலையைக் கீழே போட்டுவிட்டுச் சுதேஷ்ணையின் இருப்பிடத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினாள் விரதசாரிணி. அணைப்பதற்கு நீட்டிய அவனது வலிய கரங்களில் ஒரு பூஞ்செடி சிக்கிக் கசங்கியது. கீசகன் நன்றாக ஏமாந்தான். ஓடிப்போன விரதசாரிணி சுதேஷ்ணையை அடைந்து கீசகனின் கொடுமையைக் கூறி அலறியழுதாள். “என்னை நெருங்கினால் உங்கள் தம்பியின் உயிர்தான் அழியும். தேவீ! என்னைக் காப்பாற்றுங்கள். அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறியை வேறு யாராவது கணிகையர்களைக் கொண்டு தீருங்கள்” என்று விரதசாரிணி முறையிட்டபோது சுதேஷ்ணை அவளுக்காக இரங்கி வருத்தப்பட்டாள். தன் தம்பி கீசகன் மேல் அவளுக்கு மிகுந்த சினம் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் கீசகன் விரதசாரிணியைத் தேடிக் கொண்டு அங்கே ஓடி வந்தான். சுதேஷ்ணை அவனைத் தடுத்து நிறுத்தி “கீசகா! உன்னால் எனக்குக் கெட்ட பெயர்தான் உண்டாகிறது. இங்கிருக்கும் பெண்களிடம் நீ நடந்து கொள்ளும் விதம் சிறிதும் நன்றாக இல்லை. எனக்கு நல்லது செய்ய வேண்டுமானால் நீ இங்கே வரக்கூடாது” -என்று ஆத்திரத்தோடு கூறினாள். கீசகன் தமக்கைக்கு மறுமொழி கூற வாயின்றிப் பேசாமல் குனிந்த தலை நிமிரத் துணிவின்றித் திரும்பிச் சென்றான். கீசகன் தான் அந்தப்புரத்திலிருந்து திரும்பியிருந்தான். அவன் மனம் என்னவோ அந்தப்புரத்தில் விரத சாரியிணியிடத்திலிருந்து திரும்பவே இல்லை. வெறி நிறைந்த எண்ணங்களின் பயனாகத் தான் கண்ட அழகியைத் தன்னிடம் வரவழைப்பதற்கு ஒரு தந்திரமான திட்டம் தயார் செய்தான். காம மிகுதியினால் காய்ச்சல் கண்டு மயங்கி மூர்ச்சையுற்று விழுந்தவனைப் போல நடித்து, “விரதசாரிணியின் அழகு காரணமாக நான் சாகக் கிடக்கிறேன். என் உயிர் இனிமேல் பிழைப்பது அருமை. ஒருவேளை அந்த ‘விரதசாரிணி’யை மனமகிழக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மீண்டும் பிழைத்தாலும் பிழைக்கலாம்” என்று சுதேஷ்ணைக்குச் சொல்லியனுப்பினான். கீசகன் அனுப்பிய ஆட்கள் ஓடோடிச் சென்று அவன் சாகக் கிடக்கிறான் என்றும் விரதசாரிணியை ஒரு முறை காணாவிட்டால் செத்தே போவான் என்றும் சுதேஷ்ணையிடம் கூறினர். ஆயிரம் தான் தவறாக நடந்து கொண்டாலும் உடன் பிறந்த பிறப்பல்லவா? இரத்தபாசம் ஒன்று இருக்கிறதே! கீசகன் இறந்துவிட்டால் சுதேஷ்ணைக்குப் பலவிதத்தில் நஷ்டம். விரதசாரிணியைக் காணாமல் போகின்ற அவன் உயிர் அவளைக் கண்டு அவளோடு பழக முயன்றாலும் போய்விடுமே! தேவர்களால் காவல் செய்யப்படும் அவள் கற்பு அவனைக் கொன்று விடுமே’ என்று கலங்கினாள் அவள். இறுதியில் எப்படியும் தன் சகோதரனாகிய கீசகனின் உயிரைக் காப்பாற்றியே தீருவதென்று விரதசாரிணியிடம் சென்றாள் சுதேஷ்ணை கீசகனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவனுக்கு விரதசாரிணி வெறும் காட்சி மட்டும் அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்பது அவளுடைய கருத்து. விரதசாரிணி மறுக்காத முறையில் அவளை அனுப்புவதற்காக ஒரு நல்ல பூமாலையை அவளிடம் கொண்டு போய்க் கொடுத்து, “விரதசாரிணி! நீ மிகவும் நல்ல பண்புடைய பெண் அல்லவா? இந்த ஒரே ஒரு முறை மட்டும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டு அதன்படி செய்து விடு. இந்தப் பூமாலையைக் கொண்டு போய் நான் கொடுக்கச் சொன்னதாகக் கீசகனைச் சந்தித்துக் கொடுத்து விட்டு வந்து விடு. கீசகன் என் உயிருக்கு உயிரான சகோதரன். அவனுக்குச்சாவு நேரிட்டு விட்டால் என்னால் பொறுக்கவே முடியாது. தயவு செய்து எனக்காக இதைச் செய்” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள். “தேவீ! தாங்கள் மீண்டும் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். என் கற்பிற்கு உரிய மரியாதையை நீங்களோ உங்கள் சகோதரனோ அளிக்கத் தவறினால் அதனால் உங்களுக்குத்தான் கெடுதல். தகாத காரியங்களைச் செய்யுமாறு என்னைத் தூண்டாதீர்கள்” என்று ஆத்திரத்தோடு கூறினாள் விரதசாரிணி. “விரதசாரிணி! நீ என்னை நம்பு! உன் கற்பிற்கு இழிவு உண்டாகும்படியான எந்த ஒரு செயலுக்காகவும் உன்னை நான் தூண்டமாட்டேன். என் சகோதரன் உயிருக்காக இந்த ஓரே தடவை மட்டும் இதைச் செய். இந்த மாலையைக் கொடுத்து விட்டு வந்து விடு! போதும்.” சுதேஷ்ணையின் மறுக்க முடியாத தொல்லையினால் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டு கீசகனைக் காணப் புறப்பட்டாள் விரதசாரிணி. ‘என் கற்புக்கு உலகை ஒளி செய்யும் கதிரவனே காவலாக அமையட்டும்’ என்றெண்ணிக் கொண்டு சென்ற அவள் கீசகனைக் கண்டு மாலையைக் கொடுத்து விட்டுத் திரும்பினாள். அவள் தோற்றத்தைக் கண்டு உள்ளத்திலும் உடலிலும் வெறி மிகப் பெற்ற கீசகன், அவளைக் கட்டித் தழுவுவதற்காகத் துரத்தினான். திரெளபதி பாய்கிற புலியைக் கண்டு பதறியோடும் மானைப் போல் ஓடத் தொடங்கினாள். கீசகன் விடவில்லை. உள்ளக் கிளர்ச்சியைத் தணிக்க முடியாமல் அவளைப் பின் பற்றி ஓடினான். கால்கடுக்க ஓடிய திரெளபதி அரசர்களும் அமைச்சர்களும் கூடியிருந்த அவைக்களத்தில் போய் உடல் பதறிக்கூந்தல் கலைந்து கூனிக்குறுகி நின்றாள். கீசகன் அங்கும் அவளைத் துரத்தாமல் விடவில்லை. எட்டிப் பிடித்து அணைக்கும் ஆசையோடு பாய்ந்தான். திரெளபதியின் கற்பிற்குக் காவலனாகிய கதிரவன் கீசகனைக் கட்டுப்படுத்தி நிறுத்துமாறு ஒரு கிங்கரனைக் காற்று வடிவமாக ஏவினான். விராடராசனின் அவையில் அரூபமாக நுழைந்த அக்கிங்கரன் திரெளபதியாகிய விரதசாரிணியைத் தழுவமுயன்று கொண்டிருந்த கீசகனைத் தொலைவில் தூக்கி எறிந்தான். கீசகன் தான் யாரால் தூக்கி எறியப் பட்டோம் என்பதே தெரியாமல் கீழே விழுந்தான். பலர் கூடிய அவை நடுவில் இந்த அநீதியைச் செய்ய முயன்றதற்காகக் கீசகனை விராடனே தண்டித்திருக்கலாம், ஆனால் விராடனுக்கே கீசகனிடம் கொஞ்சம் பயமுண்டு. கீசகன் படைகளுக்குத் தலைவர்னாகையால் அவனை எதிர்த்துக் கொள்வது தனக்கே துன்பமாக முடிந்தாலும் முடியலாம் என்று அஞ்சினான். இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்தபோது விராடனுடைய அவைக் களத்தில் மாறுவேடத்தில் கங்கராகவும், பலாயனனாகவும், தருமன், வீமன், ஆகியவர்களும் இருந்தனர். தருமன் இயற்கையிலேயே அளவற்ற பொறுமையியல்பு கொண்டவனாகையால், “தருமத்தை எவரும் அழிக்க முடியாது” என்று அமைந்த மனத்தோடு பேசாமல் இருந்து விட்டான். பலாயனனாக இருந்த வீமனுக்குத்தான் படபடப்பையும் ஆத்திரத்தையும் அடக்க முடியவில்லை. தான் எந்த வேடத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து கீசகனை அப்படியே மார்பைக் கிழித்துக் கொன்று விடலாம் போலிருந்தது அவனுக்கு. சபாமண்டபத்துக்கு வெளியே படர்ந்து வளர்ந்த பெரிய மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வீமன் தன் ஆத்திரத்தைக் காட்ட விரும்பினான். நல்லவேளையாக அருகே கங்க முனிவர் உருவில் இருந்த தருமன், “பொறுத்திரு. ஆத்திரமடையாதே!” என்று குறிப்பாக அவனுக்குப் புலப்படுத்தினான். பலாயனன் மரத்தையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்ட அவையினருக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது. உடனே தருமன், “பலாயனா! சமையல் செய்வதற்கு விறகாகும் என்பதற்காகத்தானே இந்த மரத்தை இப்படி உற்று உற்றுப் பார்க்கிறாய்? இது ஈரமரம். இதில் நெருப்புப் பிடிக்காது. வேறு ஓர் காய்ந்த மரத்தை விறகுக்காகத் தயார் செய்து கொள்ளலாம். இது வேண்டாம். இதை விட்டுவிடு” என்று போலிச் சமாதானத்தைக் குறிப்பு மொழிகளால் கூறிவைத்தான். பலாயனன் இதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டு தன் சினத்தை அடக்கிப் பேசாமல் இருந்தான். வெட்கத்தால் உடல்கூசி நின்ற விரதசாரிணி துணிந்து விராட மன்னனை நோக்கித் தன் குறையை ஆத்திரத்தோடு கூறினாள். விராடன் திகைத்துப் போய் அவற்றைச் செவிமடுத்தான். “நியாயத்தையும், நேர்மையையும் காப்பாற்றக்கூடிய விராட மன்னனே! உன்னுடைய மைத்துனன் என்னை மிக இழிந்த முறையில் துன்புறுத்தும் இந்த நிலையைக் கண்டும் நீ மெளனமாக வீற்றிருக்கின்றாயே! உன் மனத்தில் இரக்கம் என்பது சிறிதேனும் இல்லையோ? உன் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாகப் பணி புரிகின்றவள் யான். என் பெயர் விரதசாரிணி. என் ஒழுக்கத்திற்கு இழுக்கு நேரப் பார்த்திருத்தல் உனக்குத் தகுமா? அரசின் நேரிய ஆணையையும் பாதுகாவலையும் அரசன் யாவர்க்கும் அளிக்கவில்லையானால் அவன் அரசு எங்ஙனம் நீண்டகாலம் வாழ முடியும்? இதை உணர வேண்டும் நீ.” விரதசாரிணி கூறிய இந்த ஆத்திரமொழிகள் கூட விராட மன்னனின் மெளனத்தைக் கலைக்கவில்லை. இனியும் அவனது செவியில் வீண் வார்த்தைகளை வாரி இறைப்பதில் பயனில்லை என்றுணர்ந்த விரதசாரிணி துயரம் நிறைந்த மனத்துடன் அந்தப்புரத்திற்குச் சென்றாள். சுதேஷ்ணை கீசகனுக்கு உடன் பிறந்தவளானாலும் பெண் அல்லவா? ஒரு பெண்ணின் உள்ளத்தை உணரும் சக்தி இன்னொரு பெண்ணுக்கு இல்லாமலா போய்விடும்? சுதேஷ்ணையிடம் போய்த் தன் மனத்துன்பத்தை எல்லாம் அள்ளிக் கொட்டினாள் விரதசாரிணி. வீமனையும் அடக்கித் தன் மனத்தையும் அடக்கி விட்ட தருமன் இறுதியில் பொதுவாக விருப்பு வெறுப்பின்றிக் கூறுகிறவனைப் போல விராட மன்னனை நோக்கி, “அரசே! கொடியவர்கள் எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனுடைய கடமை. பெண்கள் பத்திரமாக இருப்பதைக் காட்டிலும் அவர்கள் கற்பு பத்திரமாக இருப்பதற்கு உழைப்பதே ஒரு அரசனுடைய சிறந்த கடமையாகும். அதுவும் உன் அந்தப்புரத்தில் உன்னுடைய கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக இருக்கும் ஒரு ஆதரவில்லாத பெண்ணை உன்னுடைய மைத்துனன் தீமைக்குள்ளாக்கும் போது நீ கண்டிக்காமல் இருப்பது சிறிதும் நல்லதன்று” என்று அறிவுரை கூறினான். ஒரு பெண்ணின் கதறலும் ஒரு முனிவரின் அறிவுரையும் அரியணையில் வீற்றிருந்த அந்த மன்னனின் மனத்தை இளகச் செய்தன. என்றாலும் கீசகனைப் பற்றிய பயம் ‘அவனைத் தண்டிக்கலாம்’ என்ற எண்ணத்தை எழவொட்டாமல் தடுத்தது. எனவே ஒன்றும் மறுமொழி கூறத் தோன்றாமல் அவையிலிருந்து எழுந்து சென்றான் அவன். தருமனும் விவாதத்தை மேலே தொடர விடாமற் சென்றான். ஆனால் அங்கே சமையலறையில் ‘குபுகுபு’ வென்று பற்றி எரியும் அடுப்பைப் போலவே வீமனுடைய மனமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ‘கீசகன்’ என்னும் பெயருக்குட்பட்ட மனிதனை அழித்து உருக்குலைத்து விட வேண்டும் என்று அவனுடைய இரத்த நாளங்கள் துறுதுறுப்பை அடைந்து கொண்டிருந்தன. எல்லோரும் தாம் வருந்தினார்கள். ஆனால் அது வெறும் வருத்தம் என்ற அளவில் நின்று விட்டது. வீமனுடைய வருத்தமோ, எல்லையைக் கடந்து செயலாற்றத் துணிந்த வருத்தம். சுதேஷ்ணை கூட உள்ளுர வருந்தினாள். “கீசகன் செய்வது தீமை, அதை எதிர்க்க அரண்மனையைச் சேர்ந்த யாவருமே பயப்படுகிறார்கள்” என்று விராடநகர் முழுவதும் இந்தச் செய்தி பரவியிருந்தது. கீசகன் செய்யும் தொல்லைகளிலிருந்து தப்பிக்க விரதசாரிணியாகிய திரெளபதிக்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. ‘வீமன்’ உதவியை நாடுவது தான் அந்த வழி. கீசகன் தன்னைத் துன்புறுத்திய சம்பவம் நடந்த அன்று இரவு எல்லோரும் உறங்கிய பின் திரெளபதி வீமனைச் சந்திப்பதற்காகச் சமையலறைப் பக்கம் சென்றாள். பகலில் நேர்ந்த நிகழ்ச்சிகளை எண்ணி வீமனும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். இரவில் திரெளபதி தன்னருகே வந்து நிற்பதைக் கண்டதும் அவன் எழுந்திருந்தான். “திரெளபதி! அவையிலேயே அந்தப் பயல் கீசகனைக் காலைக் கையை முறித்துப் போட்டிருப்பேன். அவ்வளவு கோபம் எனக்கு வந்தது. மாறுவேடத்தில் இருந்ததனாலும் அண்ணாவின் தடையினாலும் பொறுத்திருந்தேன்.” “உங்கள் பொறுமைக்குக் காரணத்தை நானும் புரிந்து கொண்டேன். ஆனால் இனிமேலும் நீங்கள் அம்மாதிரிப் பொறுமையைக் கடைப்பிடித்தால் நான் என்னைக் கீசகனுக்குப் பறிகொடுக்க வேண்டியது தான். ஆகவே ஒரு திட்டம் செய்து கீசகனை யாரும் அறியாமல் ஒழித்துக் கட்ட முயல வேண்டும்.” “என்ன திட்டம் செய்யலாம்? நீதான் ஒரு வழி சொல்லேன் திரெளபதி ! நான் எதற்கும் தயார்!” “என்னைக் கந்தருவர்கள் காப்பதாகவும், என் கற்புக்குத் தீங்கு புரியும் எண்ணத்தோடு என்னைத் தொட முயல்கிறவர்கள் அக்கந்தருவர்களாலேயே உயிர் போக்கப்படுவார்கள் என்றும் இங்கு நான் யாரிடமும் கூறியுள்ளேன். இது நம்முடைய திட்டத்தை முடிக்க மிக அருமையாக வசதியளிக்கின்றது. கீசகன் கருத்துக்கு இணங்குவது போல் நடித்து அவனை ஒருநாள் இரவு தனியே அரண்மனைத் தோட்டத்திற்கு வரச் செய்கிறேன். நீங்கள் அங்கு மறைந்திருந்து அவனை அழிக்கும் விதமாக அழித்து விடுங்கள்.” ‘சரியான யோசனை திரெளபதி! அப்படியே ஏற்பாடு செய். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்." வீமன் சம்மதித்தான். திரெளபதி மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டு வீமனிடம் விடை பெற்றுச் சென்றாள். மறுநாள் வழக்கம் போலவே கீசகன் வெறி மிகுந்தவனாக விரதசாரிணியைச் சந்தித்துத் தன் ஆசையைப் பற்றி ஏதேதோ பிதற்றினான். விரதசாரிணி முதலில் அவன் வேண்டுகோளை மறுக்கின்றவள் போல நடித்துப் பின்பு இணங்கினாள். “இன்றிரவு, அரண்மனைப் பூந்தோட்டத்திலுள்ள உல்லாச அரங்கத்தில் என்னைச் சந்தியுங்கள். உங்களுக்காக நான் அங்கு காத்திருக்கின்றேன்” விரதசாரிணியின் பவழ வாயிலிருந்து இந்தச் சொற்கள் வெளி வந்தனவோ, இல்லையோ, கீசகன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போனான். அப்படியே இரவில் பூந்தோட்டத்தில் சந்திக்க இணங்கி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அன்று நள்ளிரவில் விரதசாரிணி பெண் வேடம் தரிக்கச் செய்து வீமனையும் அழைத்துக் கொண்டு அரண்மனைப் பூந்தோட்டத்தில் போய் மறைந்திருந்தாள். கீசகன் வருகின்ற நேரத்தில் விரதசாரிணி தனியே வேறோரிடத்தில் போய்ப் பதுங்கிக் கொண்டாள். பெண்ணுருவில் இருந்த வீமன் கீசகன் கண்ணிற்காணுமாறு அரங்கத்தின் நடுவே வெட்கத்தால் விரதசாரிணி தலை. குனிந்து உட்கார்ந்திருப்பது போல உட்கார்ந்து கொண்டான். கீசகன் நேரே அவனருகில் வந்து மனமுருகி “ஆரணங்கே! இன்றாவது உன் உள்ளம் என்பால் இரங்கியதே! உன் போன்ற பேரழகுடையவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை” என்று பலவாறு புகழ்ந்து மெல்லத் தழுவ முயல்பவன் போலத் தோளில் கையை வைத்தான். அவ்வளவு தான்! கீசகனுடைய முகவாய்க் கட்டையில் இரும்பையொத்த வன்கரமொன்று ஓங்கி ஒரு குத்து விட்டது. பெண் போல உட்கார்ந்திருந்த உருவம் துள்ளி எழுந்து வாட்டசாட்டமான தோற்றத்தோடு பூதாகாரமாக எழுந்திருந்து கீசகனைத் தாக்க ஆரம்பித்தது. கீசகன் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திணறிப் போனான். தான் தழுவ முயன்றது விரதசாரிணியை அல்ல. ‘அரண்மனைச் சமையற்காரனாகிய ‘பலாயனன்’ என்ற தடியன், பெண்ணைப் போலப் பதுங்கியிருந்து தன்னைத் தாக்குகிறான்’ என்று உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று கீசகனுக்கு. இருவரும் உல்லாச அரங்கத்தின் நடுவே உக்கிரமாகப் போர் செய்யலானார்கள். வெகு நேரத்துப் போருக்குப் பிறகு கீசகனின் உயிரற்ற சரீரத்தைக் கீழே தரையில் கிடத்தி விட்டுத்தான் தலை நிமிர்ந்தான் வீமன். ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி மலர்ந்த முகத்துடனே அவனருகில் வந்தாள். வீமன் அவளை நோக்கி நகைத்துக் கொண்டே “திரெளபதி! இனிக் கவலை இல்லை. உன்னைப் பற்றி நின்ற சனியன் ஒழிந்தது! நீ நிம்மதியாக உன் இருப்பிடத்திற்குச் சென்று உறங்கு” என்றான். அவளும் தன் நன்றி ததும்பும் பார்வையாலும் அன்பு நிறைந்த சொற்களாலும் வீமனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். வீமனும் போர் செய்த ஓய்வைத் தீர்த்துக் கொள்ளுவதற்காகச் சமையலறைக்குச் சென்று படுக்கையில் படுத்தான். வீமனுக்கும் கீசகனுக்கும் போர் நடந்தபோது கேட்ட குழப்பமான ஒலிகளால் கீசகனுடைய தம்பியர்கள் விழித்துக் கொண்டு பூந்தோட்டத்தின் பக்கமாக ஓடி வரலானார்கள். ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள் சிக்கனை அழித்து முடித்துவிட்டுத் திரெளபதியும் வீமனும் தத்தம் இருப்பிடத்திற்குப் போய்விட்டனர். வந்தவர்கள் தீவட்டிகளைக் கொண்டு இருளைப் போக்கிப் பூந்தோட்டத்தில் இருந்த உல்லாச அரங்கிலே தேடிப் பார்த்ததில் கீசகனுடைய உயிரற்ற உடல் இரத்த வெள்ளத்தினிடையே விழுந்து கிடப்பதைக் கண்டனர். கீசகன் தம்பியர்க்கு ஒரு புறம் அடக்க முடியாத வருத்தமும் மற்றோர் புறம் அடக்க முடியாத சினமும் ஏற்பட்டது. “அண்ணனின் சாவுக்கு அந்தப் பாழாய் போன விரதசாரிணிதான் காரணமாக இருக்கவேண்டும். அண்ணனின் சடலத்தை எரிக்கும்போது அந்த நாசமாய்ப் போகிறவளையும் உடன் வைத்து எரிக்க வேண்டும்” என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்ட அவர்கள் உடனே அந்தப்புரத்திற்கு ஓடிப் பலவந்தம் செய்து உயிரோடு தீயிலிடுவதற்காக விரதசாரிணியை இழுத்துக் கொண்டு வந்தார்கள். விரதசாரிணி அவர்கள் செய்த துன்பம் பொறுக்க முடியாமல் ‘குய்யோ முறையோ’ என்று உரத்த குரலில் கூக்குரலிட்டாள். மடைப்பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்த வீமன் இந்தக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டு ஓடி வந்தான். கீசகனுடைய தம்பிமார்கள் திரெளபதியை இழுத்துச் செல்வது கண்டு ஆத்திரத்தோடு அவர்கள் மேல் தாவிப் பாய்ந்தான். ஒவ்வொருவராக வீமன் கையிலிருந்து ‘விண் விண்’ என்று குத்துகளை வாங்கிக் கொண்டே வீழ்ந்தனர். பொங்கி எழும் ஆத்திரத்தோடு நீண்ட நேரம் போர் செய்து கீசகன் தம்பிமார்களைக் கூண்டோடு விண்ணுலகுக்கு அனுப்பிய பின்பே வீமன் ஓய்ந்தான். பின்பு மனமகிழ்ச்சியோடு திரெளபதி தன்னிடத்திற்கும், வீமன் சமையலறைக்குமாக இருவரும் சென்றனர். பொழுது புலர்ந்ததும் கீசகனும் தம்பிமார்களும் இறந்த செய்தி ஊரெல்லாம் பரவியது. சுதேஷ்ணையும் விராடனும் வருந்தினார்கள். திரெளபதியோ தொல்லைகள் நீங்கிய புது மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். பகைவர் சோதனை கீசகனும் அவன் தம்பியர்களும் அழிந்ததைப் பற்றி விரதசாரிணியையோ, பலாயனனையோ, யாரும் ஐயுறவில்லை. விரதசாரிணியின் கற்பைக் காவல் புரிந்து வந்த கந்தருவர்களே அவர்களைக் கொன்றிருக்க வேண்டுமென்று பேசாமல் இருந்துவிட்டனர். தன் சுகத்துக்கெல்லாம் காரணமாக இருந்த தம்பி போய்விட்டானே என்று சுதேஷ்ணையின் மனம் மட்டும் சில நாட்களுக்குப் பெருங்கவலையில் ஆழ்ந்திருந்தது. விராட நகரத்து அரண்மனையில் மறைவாக வாழ்ந்து வந்த பாண்டவர்களோ, ‘விரைவில் தங்கள் அஞ்ஞாதவாச காலம் முடிகிறது. பின் நிம்மதியாக நாடாளச் செல்லலாம்’ என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களது பகைவர்களாகிய துரியோதனாதியர்களால் அவர்களுக்கு ஒரு பெருஞ்சோதனை ஏற்பட்டுவிட்டது. அஞ்ஞாதவாச காலத்தில் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் பாண்டவர்கள் வனவாசம் செய்தே ஆக வேண்டும். அதற்காக எங்கிருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து விடுவது என்ற முயற்சியில் இறங்கி நான்கு திசைகளிலும் உளவு அறிவதற்கு ஆட்களை அனுப்பினர் துரியோதனாதியர்கள். உளவு அறிவதற்காகப் புறப்பட்ட ஒற்றர்கள் தம் தொழிலில் வல்லவர்களாயினும் பல காலம் சுற்றியும் கூடப் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமடைந்த ஒற்றர்கள் ‘ஒன்றும் தெரிய வில்லை’ என்று போய்த் துரியோதனாதியர்களிடம் கூறினர். உடனே துரியோதனன் பாண்டவர்கள் எங்கிருக்கக் கூடும் என்பதைத் தன் அவைப் பெரியோர்களுடன் கலந்து ஆலோசித்தான். “இன்னும் ஆயிரமாயிரம் ஒற்றர்களை நீ அனுப்பினாலும் பாண்டவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க உன்னால் முடியாது. அவர்கள் சத்தியவான்கள். அவர்கள் எந்த இடத்தில் மறைந்து வாழ்கின்றார்களோ அந்த இடம் பல வளங்களும் நிறைந்து செழிப்பாக இருக்கும். வேண்டுமானால் அந்தச் செழிப்பைக் காரணமாகக் கொண்டு அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம்” என்றார் முதியவராகிய வீட்டுமர். இந்தச் சமயத்தில் ஒற்றன் தான் கேள்விப்பட்ட வேறோர் செய்தியையும் துரியோதனனிடம் கூறத் தொடங்கினான். அது உண்மையிலேயே இரகசியத்தை வெளிப்படுத்துவது போலிருந்தது. “அரசே? இப்போதுதான் நாங்கள் கேள்வியுற்ற ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. சென்ற பல ஆண்டுகளை யெல்லாம்விட, விராடநகரம் இந்த ஆண்டு அதிக வளத்தோடு விளங்குகின்றது. தவிரவன்மை வாய்ந்தவர்களான கீசகனையும் அவன் தம்பிமார்களையும் யாரோ ஒரு பலசாலி அந்த நாட்டில் ஒரே சமயத்தில் யமனுலகுக்கு அனுப்பியிருக்கின்றான். அத்தகைய பலசாலிகள் வீமன், அருச்சுனன் ஆகிய இருவருக்குள் ஒருவராகத்தான் இருத்தல் வேண்டும்” என்றான் அந்த ஒற்றன். துரியோதனன், கர்ணன், சகுனி முதலியவர்கள் ஒற்றன் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். “நாம் நம்முடைய வீரர்களை ஏவி, விராடராசனுக்குச் சொந்தமான பசுக்கூட்டங்களைத் திருடி வர ஏற்பாடு செய்வோம். பாண்டவர்கள் அங்கு இருப்பது உண்மையாயின் அப்போது எதிர்த்துப் போர் புரிய வருவார்கள், கண்டுபிடித்து விடலாம்” என்று யோசனை கூறினான் கர்ணன். மற்றவர்களும் இந்த யோசனையை ஒப்புக் கொண்டார்கள். திருட்டுத் தொழிலில் சதுரப்பாடும் சாமர்த்தியமும் மிக்கவனாகிய திரிகர்த்தன் என்பவனுடைய தலைமையில் படைகளை அனுப்பி விராடனின் நாட்டுத் தென் பகுதியிலுள்ள பசுக்களைத் திருடிக் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். திரிகர்த்தனும் படைவீரரும் அவ்வாறே ஓடிச்சென்று விராடராசனின் பசுக்களைத் திருடினர். பசுக்களைப் பறி கொடுத்த கோவலர்களும் பிறரும் ஓடோடிச் சென்று விராடனிடம் முறையிட்டனர். விராடன் திருடர்களை ஒழிப்பதற்காகப் படை திரட்டிக் கொண்டு சென்றான். அவனோடு மாறுவேடத்திலிருந்த பாண்டவர்களில் வீமன் முதலிய நால்வரும் கூடப் போருக்குச் சென்றிருந்தனர். அவர்கள், போர்த் திறமையினாலும் விராடராசன் படை வலிமையினாலும் பசுக்களைத் திருட வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டும் திருடிய பசுக்களை விட்டுவிட்டும் ஓடினர். படையினர் யாவரும் தோற்று ஓடிப்போன பின்பும் கூடத் ‘திரிகர்த்தன்’ என்ற படைத்தலைவன் அனல் கக்கும் விழிகளுடன் விராட்னை அணுகி எதிர்த்து அஞ்சாமல் போர் புரிந்தான். எப்படியோ சாதுரியமாக விராடராசனை வெறுங்கையனாக்கிச் சிறைப்பிடித்துத் தன்னுடைய தேர்க்காலிலும் கட்டிவிட்டான். கங்க முனிவராக இருந்த தருமன் பலாயன்னை (வீமனை) அழைத்துத் திரிகர்த்தனுக்குப் பாடம் கற்பித்து அவனைச் சிறைபிடித்துக் கட்டுமாறு ஏவினார். வீமன் வெகுண்டெழுந்தான். கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு வரும் வீமனைக் கண்டதும் திரிகர்த்தன் நடுநடுங்கிப் போனான். ஆயினும் மன நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு எதிர்த்தான். வீமனுக்கும் திரிகர்த்தனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இறுதியில் வீமன் விராடமன்னனை அவிழ்த்து விட்டு அவனுக்கு முன்னால் திரிகர்த்தனைக் கொண்டுபோய் நிறுத்தினான். விராடனை எந்தக்கைகள் இழுத்துக் கட்டினவோ, அதே கைகளைத்தான் இழுத்துக் கட்டினான் வீமன். தன்னை விடுதலை செய்ததோடன்றித் தன் எதிரியைச் சிறைப்பிடித்ததற்காகவும் வீமனுக்கு நன்றி செலுத்தினான் விராட மன்னன். “பிழை புரிந்தோரையும் மன்னிப்பது பெரியோர் இயல்பு. நாம் இந்தத் திரிகர்த்தனை விடுதலை செய்வதே பெருந்தன்மையான செயல்” என்று கூறினார் கங்க முனிவர். விராடனும் அதற்கு இணங்கினான். உடனே வீமன் பசுத்திருடனாகிய திரிகர்த்தனை அவிழ்த்து விட்டான் அவன் குனிந்த தலையோடு சென்றான். தனக்கு ஏற்பட்ட அவமானங்களால் அவன் நெஞ்சம் கொதித்தது. திரும்பி அத்தினாபுரிக்குச் செல்லாமல் ஓரிடத்தில் போய்த் தங்கிக் கொண்டு தன் தோல்வியையும் பிற நிகழ்ச்சிகளையும் துரியோதனனுக்குக் கூறியனுப்பினான். “நகரின் தெற்கு எல்லையிலுள்ள பசுக்களைக் கவரப்போன படைக்குத்தான் இந்தக் கதி நேர்ந்து விட்டது. நாம் வடக்கு எல்லையில் போய்ப் பெரும்படையோடு மீண்டும் பசுக்களைக் கவர்ந்து தாக்குவோம்” என்று துரியோதனன் படை திரட்டிக் கொண்டு வடக்கெல்லைக்கு விரைந்தான். வடக்குப் பகுதியில் எதிர்பாராதவிதமாகத் துரியோதனன் படை வந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அரண்மனைக்கு ஓடினர். தெற்கு எல்லையில் திரிகர்த்தனையும் படைகளையும் அடக்கிப் பசுக்களை மீட்கப் போயிருந்த விராடன் முதலியவர்கள் அதுவரை அரண்மனைக்குத் திரும்பவில்லை. அரண்மனையில் சுதேஷ்ணை, இளவரன் உத்தரன், பேடியாக இருக்கும் அருச்சுனன் ஆகிய மூவரே இருந்தனர். ஓடி வந்த மக்கள் சுதேஷ்ணையிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறினர். வீரப்பண்பு மிக்க சுதேஷ்ணை, ‘நாட்டுக்குத் துன்பம் ஏற்பட்டால் அரசனைப் போலவே அரசிக்கும் அதைக் காப்பது கடன்’ என்று எண்ணினாள். ஆனால் அதற்குள் இளவரசன் உத்தரன் தானாகவே போர்க்கோலம் பூண்டு, “தாயோ போர்க்களத்திற்கு நான் செல்லுகிறேன். எனக்குத் தேர் ஓட்டுவதற்கு மட்டும் ஓரு ஆளைக் கொடுங்கள்” என்றான். அப்போது பேடியாக இருந்த அருச்சுனன், விரதசாரிணி முதலியவர்கள் அங்கிருந்தனர். விரதசாரிணி பேடியைச் சுட்டிக் காட்டி, “தேவீ! இவளுக்கு நன்றாக ஓட்டத் தெரியும்; இவள் ஏற்கனவே அருச்சுனன் முதலியோருக்குப் பலமுறை தேரோட்டிப் பழகியவள்” என்றாள். பிருகந்தளை என்ற பெயரோடு பேடியாக இருந்த அருச்சுன்னும் தேரோட்டிச் செல்வதற்கு இணங்கினான். பலவகை ஆயுதங்கள் நிறைந்த தேரில் நல்ல குதிரைகளைத் தேர்ந்தெடுத்துப் பூட்டி உத்தரகுமாரனை அமரச் செய்து தேரைச் செலுத்திக் கொண்டு வடதிசைப் போர்க்களம் நோக்கிச் சென்றான் அர்ச்சுனன். அங்கே போர்க்களத்தில் கௌரவர்களின் படை கடல் போலப் பரந்திருந்தது. உத்தரகுமாரன் அரண்மனையில் வீரம் பேசினானே ஒழியப் போர்க்களத்தைக் காண்பது இதுவே அவனுக்கு முதல் முறை. படைகளைக் கண்டதும் நடுக்கம் உண்டாகிவிட்டது அவனுக்கு. பெண்ணுருவத்தில் பேடியாக அமர்ந்து களத்தினிடையே துணிவாகத் தேரை ஓட்டுகிறவளுக்கு இருந்த துணிச்சல் கூட அவனுக்கு இல்லை. “பிருகந்நாளை! ஐயையோ! எனக்கு பயமாக இருக்கிறது. தேரைப் பேசாமல் அரண்மனைக்குத் திருப்பி ஓட்டு. பசுக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன? இந்தப் படைக்கடலுக்கு முன்னால் நிற்கவே என் நெஞ்சில் துணிவில்லை” -உத்தரகுமாரன் பீதி நிறைந்த குரலில் அலறினான். அவன் பயத்தைப் போக்குவதற்கு எத்தனையோ விதமாக வீர மொழிகளையும், உறுதிமொழிகளையும் கூறிப் பார்த்தான் அர்ச்சுனன். அவன் கேட்கவில்லை. அர்ச்சுனன் தேரை நிறுத்தாவிட்டால் தேரிலிருந்து குதித்து ஓடிவிடுவான் போலிருந்தது. “நீ துணிவோடு இரு! பசுக்களை மீட்டுக் கொடுப்பது என் கடமை” என்றான் அர்ச்சுனன். அதே சமயம் ஓடிக் கொண்டிருந்த தேரிலிருந்து பின்புறமாகக் குதித்துத் தாவிப் பாய்ந்து ஓடலானான் உத்தரன். அர்ச்சுனனும் உடனே தேரை நிறுத்தி விட்டு இறங்கி அவனைப் பிடிப்பதற்காகப் பின் பற்றி ஓடலானான். விரைவிலேயே பயந்து ஓடும் உத்தரனை எட்டிப் பிடித்துத் தேருக்கு இழுத்துக் கொண்டு வந்தான். உத்தரன் அலறியும் கத்தியும் கூக்குரலிட்டும் திமிறி ஓட முயன்றான். அர்ச்சுனன் அவன் ஓடாமல் இருப்பதற்காக அவனைத் தேரில் கட்டிப் போட்டான். உத்தரன் ஓட முடியாமல் தேருக்குள் கட்டுண்டான். போரை உத்தரனுக்குப் பதில் தானே செய்து விடலாம் என்றெண்ணிக் காளி கோவில் வன்னிமரப் பொந்திலிருக்கும் தன் ஆயுதங்களை எடுப்பதற்குப் புறப்பட்டான். தேரை விட்டு விட்டு நடந்து போனால் உத்தரன் எங்காவது ஓடிவிடுவானோ என்று சந்தேகங்கொண்டு தேரையும் செலுத்திக் கொண்டே காளி கோவிலுக்குச் சென்றான். மரப்பொந்திலிருக்கும் ஆயுதங்களை அர்ச்சுனன் எடுத்தபோது தேரில் கட்டப்பட்டிருந்த உத்தரன், “இது ஏது பொந்தில் ஆயுதங்கள்?” என்று கேட்டான். “உத்தரா! இவை அர்ச்சுனனுடைய ஆயுதங்கள். இவற்றால் போர் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்” -என்று மறுமொழி கூறினாள் பேடி. “ஆமாம்! அது சரி. அந்த அர்ச்சுனன் இப்போது எங்கிருக்கிறான்?” “அவனா? வேறெங்கும் இல்லை. இங்கே தான் மிகச் சமீபத்திலேயே இருக்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் களத்தில் நீயே அவனைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம்” -என்றாள் பேடி உத்தரன் அவள் கூறியதை வியப்புடனே கேட்டான். “உத்தரா! இனிமேலும் நீ பயப்படக்கூடாது. போரையெல்லாம் நான் செய்து கொள்கிறேன். நீ தேரை மட்டும் செலுத்தினால் போதும்.” “ஆகட்டும்! என்னை அவிழ்த்து விடு” -என்று தலையை ஆட்டினான் உத்தரன். தன் முன் பேடியைப் போலக் கோலங்கொண்டு நிற்பது அர்ச்சுனனாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அவன் மனத்தில் தவிர்க்க முடியாத நம்பிக்கை ஒன்று எழுந்துவிட்டது. இந்தப் புதிய நம்பிக்கையின் காரணமாக அவனிடமிருந்து பழைய பயம் நீங்கியது. அர்ச்சுனன் உத்தரனை அவிழ்த்துவிட்டான். உத்தரன் தேரைச் செலுத்தினான். பேடியும் அரசுகுமாரனும் தேரை நிறுத்திவிட்டு ஓடி விளையாடுவது கண்டு எள்ளி நகையாடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கெளரவர் படை இப்போது திடுக்கிட்டு நின்றது. “காரணம் என்ன? ஓடிய அரசகுமாரன் தேரைச் செலுத்திக் கொண்டுவருகிறான். பேடி வில்லேந்தி அம்பு சுமந்து ஆண்மையுள்ளவள் போலப் போருக்கு வருகிறாள்” -ஆத்திரமும் ஆச்சரியமும் ஒருங்கே அடைந்த துரியோதனாதியர் தம் படைகளை அவசரமாக வியூகம் வகுத்துப் போருக்குத் தயாராக்கினர். உத்தரன், தேர் செலுத்தப் பெண்ணுருவில் பேடியாக இருந்த அர்ச்சுனன் பகைவர்களை நோக்கி சரமாரியாக அம்பு தொடுத்தான். பகைப் படையினரும் அவனை எதிர்த்து வளைத்துக் கொண்டு பலர் கூடி ஒரே சமயத்தில் தாக்கினர். அர்ச்சுனன் சிறிதும் சளைக்கவில்லை. நீண்ட நேரத்துப் போருக்குப் பின் பகைவர்களை ஓட ஓட விரட்டிப் பசுக்களை எல்லாம் மீட்டு உரியவர்களிடம் அளித்த பிறகே வில்லையும் அம்பையும் இயக்குவதை நிறுத்தினான். இதற்குள் அவன் உத்தரனிடம் கூறியிருந்த நான்கு நாழிகைகள் கழிந்து விட்டன. ஓடிப்போன பகைவர்கள் திரும்ப ஒன்று கூடி வரமுயன்று கொண்டிருந்தனர். அர்ச்சுனன் பேடியுருவம் நீங்கித் தன் சுய உருவுடன் நின்றான். உத்தரன் தன் நம்பிக்கை வீண் போகாமல் உண்மையாகியது கண்டு மகிழ்ந்து அர்ச்சுனனை வணங்கி நன்றி செலுத்தினான். முன்பு அக்னி தேவனால் அன்பளிப்பாக நல்கப்பட்ட அனுமக்கொடி பொருந்திய தேர் அர்ச்சுனனுக்கு முன் தோன்றியது. அர்ச்சுனன் வில்லும் கையுமாக அத்தேரில் ஏறிக் கொண்டான். பகைவர்கள் மீண்டும் திரும்பி வர முயன்று கொண்டிருந்த நிலையில் அர்ச்சுனனுடைய தேர் அவர்களை நோக்கிச் சென்றது. தேரில் பேடியின் ஸ்தானத்தில் அர்ச்சுனன் இருப்பதைக் கண்ட துரியோதனாதியர்கள் திடுக்கிட்டனர். அவன் அர்ச்சுனனாயின் அவனை அழித்து ஒழிக்காமல் விடுதல் கூடாதென்று கருதி மீண்டும் ஆவேசத்தோடு போருக்குப் புறப்பட்டார்கள். படையிழந்து வாகனமிழந்து வெறுங்கையனாய் நின்ற துரியோதனன் தன் படைகளை ஏவிவிட்டுத் தான் ஒரு தேரில் ஏறிப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு முன்பிருந்து நழுவி ஓடப் பார்த்தான். ஆனால் அர்ச்சுன்னா விடுகிறவன்? தன் தேரை ஓட்டித் துரியோதனன் தேர் ஓட முடியாதபடி தடுத்து நிறுத்தி விட்டுப் போருக்குத் தயாராக வில்லைக் கையில் எடுத்தான். துரியோதனனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. மிரள மிரள விழித்துக் கொண்டே ஒன்றும் தோன்றாமல் தேரின் மேல் நின்றான் அவன். அவனைக் காப்பாற்றுவதற்காகக் கர்ணன், சகுனி முதலியவர்கள் அந்தத் தேரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அர்ச்சுனனை எதிர்த்துப் போர் புரியலானார்கள். “அர்ச்சுனா! உன்னுடைய வீரத்திற்குச் சரியான மாற்றானாக இதோ நான் இருக்கிறேன், என்னோடு போர் செய் துரியோதனனை விட்டு விடு” -என்று கூறிக் கொண்டே முன் வந்து நின்றான் கர்ணன். அர்ச்சுனனுக்கு எதிராகக் கர்ணன் நின்று போரிட அவனுக்கு ஒரு தேர் கொண்டு வந்து கொடுத்தார்கள் குருகுலப் படையினர். எடுத்த எடுப்பிலேயே தான் செலுத்திய விரைவான அம்புகளால் அந்தத் தேரை அடித்து முறித்து வீழ்த்தினான் அர்ச்சுனன். மற்றும் இரண்டு தேர்கள் கர்ணனுக்காகக் கொண்டு வரப்பட்டன. அவற்றையும் அர்ச்சுனன் அழித்து விட்டான். மூன்று தேர்கள் பறிபோன அதிர்ச்சி கர்ணன் மனத்தில் உறைத்தது. அவன் தேரில்லாமலேயே போர் செய்தான். தேர் மேல் நின்று அர்ச்சுனன் செலுத்திய அம்புகள் கர்ணனுடைய வில்லையும் அம்பறாத் துணியையும் முலைக்கு ஒன்றாகச் சிதறி ஓடச் செய்தன. ஆடை அணிகலன்களெல்லாம் அம்புகளால் சிதைந்து கிழிந்து போன நிலையில் அங்கு நிற்பதற்கு வெட்கமுற்று ஓடலானான் கர்ணன். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் கர்ணனை அந்த அலங்கோல நிலையிலே கண்டு கை கொட்டிச் சிரிக்கலானான். கர்ணனைத் தோற்று ஓடச் செய்த பின்பு மூதறிஞரும் தன் ஆசிரியருமாகிய துரோணரோடு போர் புரிய வேண்டிய நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. அவன் தயக்கமடைந்தான். அவன் உள்ளம் ஆசிரியரோடு போர் புரிய மறுத்தது. நியாயந்தானே! மனம் துணியுமா? ‘அவரோடு தான் போர் புரிய விரும்பவில்லை’ -என்பதை அவருக்குத் தெரிவிப்பான் போலச் சில அம்புகளைச் செலுத்தி அவர் திருவடிகளை அந்த அம்புகள் வணங்கிச் சரணாகதி அடைவதைப் போலக் குறிப்புக் காட்டினான். “யான் எப்போதும் உங்களை என் கைகளைக் கூப்பி வணங்குவதற்கு உரியவனே அல்லாமல் வில்லை வளைத்து வணங்குவதற்கு முயலமாட்டேன். அது அபசாரம்” -என்பது அவன் செய்த குறிப்பின் பெயர். அதை விளங்கிக் கொண்டு உள்ளூர் மகிழ்ச்சி அடைந்த துரோணர், “அர்ச்சுனா! இது போர்க்களம். நான் யாருடைய அரசின் கீழ் உண்டு உடுத்து வசதியாக வாழ்ந்தேனோ, அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக என் மாணவனாகிய உன் முன் வில்லேந்தி நிற்கிறேன் பார். உறவும் முறையும் பாராமல் கடமையை எண்ணி நீ போர் புரியத்தான் வேண்டும். நீ போர் புரிய மறுத்தாலும் நான் உன்னோடு போர் புரிந்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறேன்.” வேறு வழியில்லாமல் போகவே அர்ச்சுனன் துரோணரின் விருப்பத்திற்கிணங்க அவரோடு போர் செய்யத் தொடங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் அமைதியாகவே போர் செய்தனர். நேரம் ஆக ஆக அர்ச்சுனன் செலுத்திய அம்புகளுக்கு மாற்றின்றித் துரோணர் திணறினார். முடிவில் தன் மாணவனாகிய அர்ச்சுனனுக்கு முன்னால் வில்லையும் அம்பறாத் துணியையும் கீழே போட்டு விட்டுத் தோல்வியை ஒப்புக் கொண்டு செல்ல வேண்டிய நிலை அவருக்கும் ஏற்பட்டது. தோல்வியடைந்து செல்கின்ற நிலைமையில் கூடத் தன்னுடைய மாணவனின் திறமை அவருக்கும் ஒருவகைப் பெருமிதத்தையே உண்டாக்கியது. ஆனால் அசுவத்தாமனின் மனத்தில் இந்தத் தோல்வி இதற்கு நேர்மாறான எண்ணத்தையே உண்டாக்கியது. நம்முடைய தந்தையையே இந்தச் சாதாரண வாலிபன் தோற்று ஓடச் செய்துவிட்டானே என்று மனங்கொதித்த அவன் ஓர் அம்பு எய்து அர்ச்சுனனுடைய வில்லை ஒடித்துக் கீழே தள்ளினான். சினங்கொண்ட அர்ச்சுனன் வேறோர் வில்லை எடுத்துத் தான் அரிய முயற்சியால் பெற்றிருந்த பாசுபதாஸ்திரத்தை அசுவத்தாமன் மேல் எய்தான். அந்த அஸ்திரத்தின் வேகத்தைத் தாங்க முடியாமல் அசுவத்தாமன் தன்னிடமிருந்த சகலத்தையும் இழந்து பதறி அலறி அங்கிருந்து புறம் காட்டி ஓடிவிட்டான். முழு வெற்றி அர்ச்சுனன் பக்கம் வந்து சேர்ந்தது. வேடம் வெளிப்படுகிறது! அசுவத்தாமன் தோற்றோடியதுடன் போர் முடிந்து விடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாகப் போர் மீண்டும் பெரிய உருவில் வளர்ந்துவிட்டது. வீட்டுமர், விதுரர் முதலிய நெருங்கிய உறவினர்களான பெரியோர்கள் துரியோதனனுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடனுக்காக மனம் விரும்பாம்லிருந்தும் அர்ச்சுனனோடு போர் புரிய வந்துவிட்டார்கள். துரியோதனனோ யாரோடும் போருக்கு வராமல் தன்னைச் சுற்றி ஒரு மெய்காவற்படையைக் காவல் வைத்துக் கொண்டு பதுங்கியிருந்தான். நிலைமையைப் புரிந்து கொண்டு தானும் தன் கடமையைச் செய்யலாம் என்று தீர்மானித்துக் கொண்ட அர்ச்சுனன் தன்னை எதிர்த்து வளைத்துக் கொண்டு நின்றவர்கள் மேல் நான்கு திசையிலும் மழையைப் போல அம்புகளைத் தூவினான். அவனுக்கு வெறியே பிடித்து விட்டது. சக்கர வட்டமாகச் சுழன்று வன்மை வாய்ந்த அஸ்திரங்களை எல்லாம் தூவினான். அவன் வெறி தணிந்து வில்லில் அம்பு தொடுப்பதை நிறுத்தி விட்டுத் தன்னைச் சுற்றிப் பார்த்தபோது யாருமே இல்லை. இரண்டாம் முறை உற்றுப் பார்த்தபோது பலர் தொலைவில் ஓடிக் கொண்டிருப்பதையும் சிலர் கீழே விழுந்து கிடப்பதையும் பதுங்கிக் கிடப்பதையும் கண்டான். அப்படி விழுந்து கிடந்தவர்களில் துரியோதனன் முதலியவர்களும் இருந்தனர். அர்ச்சுனனும் அவனுக்குத் தேரோட்டியாக இருந்த உத்தரனும் தம் தேரிலிருந்து கீழே இறங்கி வெற்றிக்கு அடையாளமாக எவையேனும் வேண்டும் என்று கீழே விழுந்து கிடந்த துரியோதனன் முதலியவர் களுடைய ஆடையாபரணங்களைப் பறிக்கலாயினர். அந்த ஆடையாபரணங்கள் விராடன் மகளாகிய உத்தரையின் விளையாட்டுப் பொம்மைகளுக்கு ஆகுமென்று எண்ணிக் கொண்டான் அர்ச்சுனன். பறிக்க வேண்டியவற்றைப் பறித்துக் கொண்டு அர்ச்சுனனும் உத்தரனும் தேரில் ஏறிக் கொண்டதும் துரியோதனாதியர்கள் தப்பிப் பிழைத்தால் போதும் என்று எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். அப்போது தேரின் மேல் நின்று கொண்டே ஓடுகின்ற துரியோதனனின் முடியைக் குறிவைத்து ஒரு கூரிய அம்பைச் செலுத்தினான் அர்ச்சுனன். அந்த அம்பு துரியோதனனின் முடியைத் தாக்கி கீழே மண்ணில் விழுந்து புரளுமாறு உருட்டியது. தலையிலிருந்த முடி கீழே உருண்டதும் துரியோதனன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அர்ச்சுனனன் ‘கலகல’வென்று திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படியாக இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தான். “துரியோதனா! அன்றொரு நாள் எங்கள் மேலாடையை வலுவில் பறித்துக் கொண்டு எங்களைக் காட்டிற்கு அனுப்பினாய். நீ கீழே விழுந்து கிடக்கும்போதே அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு உன் தலைமுடியைக் காலால் எற்றி விட வேண்டுமென்று எண்ணினேன். ‘விழுந்து கிடக்கும் போது முடியை ஏற்றுவது முறை அல்ல’ என்றெண்ணியே எழுந்திருந்து ஓடியதும் அம்பு எய்தேன். நினைவு வைத்துக் கொள்! பாண்டவர்கள் சக்தி, என்றும் உன்னையும் உன் அரசாட்சியையும் விடப் பெரியது” என்றான். ஆத்திரமடைந்த துரியோதனன், “வீட்டுமரே! நிபந்தனைப்படி இவர்கள் அஞ்ஞாதவாச காலத்திற்கு முன்னால் வெளி வந்தது பெரிய தவறு. அதனால் மீண்டும் இவர்கள் வனவாசத்திற்குப் போய்த் தீர வேண்டும்” என்று அடிப்பட்ட வேங்கை போல வீட்டுமரை நோக்கிக் கூறினான். இதைக் கேட்டு அர்ச்சுனன் இரைந்து சிரித்தான். “துரியோதனா! நீதான் அறிந்து கொள்ளாமல் மடத்தனமாகப் பிதற்றுகிறாய்! பாண்டவர்களின் அஞ்ஞாத வாசகாலம் நேற்றோடு முடிந்து விட்டது. நிபந்தனைப்படி அவர்கள் இன்று வெளிப்படுவது குற்றமில்லை. ஆகையால் அவர்கள் மறுமுறை வனவாசம் செய்ய வேண்டுவது அநாவசியம்” என்றார் வீட்டுமர். தன் அறியாமைக்கு வெட்கமுற்ற துரியோதனன் மறுபேச்சுப் பேசாமல் படைகளையும் பிறரையும் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். பாண்டவர்கள் நிபந்தனைகளை எல்லாம் கடந்து மீண்டும் வெளி வந்துவிட்டார்களே’ என்ற வயிற்றெரிச்சல் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. இங்கே வெற்றி வாகை சூடிய அர்ச்சுனனும் உத்தரகுமாரனும், களத்திலிருந்து விராட் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். அதற்குள் தென்பகுதியில் போருக்காகப் போயிருந்த விராட மன்னரும் கங்கர், பலாயனன் முதலியோரும் போரை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வந்திருந்தனர். வட திசையிலிருந்து வரும் வழியில் ஓர் பூஞ்சோலையில் சிறிது நேரம் உத்தரகுமாரனும் அர்ச்சுனனும் தங்கினர். வெற்றிப் பெருமையை எல்லாம் உத்தரகுமாரன் தலையில் சுமத்தி விட்டுத் தான் முன்போலவே பேடிப் பேரில் ஒளிந்து கொண்டு தேரோட்டிச் செல்லலாம் என்று தோன்றியது அர்ச்சுனனுக்கு. அப்படியே செய்யக் கருதி, “பேடியைத் தேரோட்டுபவளாக அமர்த்திக் கொண்டு சென்ற உத்தரகுமாரன் வடதிசையில் துரியோதனாதியர்களை வென்று வாகை சூடி வருகிறான்” என்று தூதுவன் மூலம் அரண்மனைக்கு முன் தகவல் சொல்லியனுப்பினான். ஏற்கனவே தென் திசையிலிருந்து அரண்மனைக்கு வந்திருந்த விராடன், ‘உத்தரன்’ போருக்குப் போயிருக்கிறான் என்பதைத் தன் மனைவி சுதேஷ்ணையிடம் கேள்விப்பட்டு, இருந்த நம்பிக்கையையும் இழந்து போயிருந்தான். “உத்தரன் வீரத்தை நான் அறிய மாட்டேனா? அவன் போர் செய்து உருப்பட்டாற் போலத்தான்! போதாக்குறைக்கு ஒரு பேடியை வேறு தேரோட்டக் கூட்டிக் கொண்டு போயிருக்கின்றானாம்” என்று தனக்குள் அலுத்துக் கொண்டான் அவன். அருகிலிருந்து அதைக் கேட்ட கங்கர், “அரசே! நீ வருந்த வேண்டாம். உத்தரனுக்குத் தேரோட்டிக் கொண்டு சென்றிருக்கும் பேடி சாதாரணமானவளல்லள். அவள் நிச்சயம் அவனுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தே தீருவாள்” என்றார். சரியாக அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல வடக்கே இருந்து வந்த தூதுவர்கள் அரசனுக்கு முன் தோன்றி, “அரசே! பேடியின் சாரத்தியத்துடனே போருக்குச் சென்ற உத்தரகுமாரர் முழு அளவில் வெற்றி வாகை சூடித் திரும்பி வருகிறார்” என்று கூறினர். அரசனால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. ஆனாலும் செய்தி என்னவோ உண்மையாகத்தான் இருந்தது. “போகிறது. என் மகனும் ஒரு போரில் வெற்றியடைந்து விட்டானென்றால் அது ஆச்சரியத்துக்குரிய நிகழ்ச்சி தான்,” என்று மகிழ்ந்து மகனை ஆடம்பரமாக வரவேற்பதற்கு நகரத்தை அலங்கரிக்குமாறு ஆணையிட்டான் விராடன். “கங்கமுனிவரே! மகிழ்ச்சிக்குரிய செய்திகளே மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. மகனுடைய வெற்றித் தேர் இங்கு வந்து சேருகின்றவரை சிறிது நேரம் பொழுது போகச் சூதாடுவோம் வாருங்கள்” என்று விராடன் தருமனை அழைத்தான். தருமனுக்கோ, சூதாட்டம் என்ற சொல்லைக் கேட்டவுடனே ‘பகீர்’ என்றது. அவனுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்த சொல் அல்லவா, அது? தருமன் முதலில் தயங்கினான். விராடன் வற்புறுத்தவே மறுக்க முடியாத நிலையில் அவனோடு சூதாடுவதற்கு அமர்ந்தான். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே விராடன், வேறோரு பேச்சை இடையிலே கிளப்பி வைத்தான், “கங்கரே! உத்தரன் செய்யும் முதற்போரே இது தான். ஆனாலும் எவ்வளவு மகத்தான வெற்றியை அடைந்து விட்டான் பார்த்தீரா?” “தவறு அரசே! வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது அந்தப் பேடியாகத்தான் இருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை” -தருமன் அழுத்தமாக இப்படிக் கூறினான். விராடனுக்குக் கோபம் வந்துவிட்டது. “அதென்ன நான் சொல்கிறேன்! நீர் எதிர்த்துப் பேசுகிறீரே? என் மகன் ஒரு பேடியைக் காட்டிலுமா கேவலமானவன்?” “அதற்குச் சொல்ல வரவில்லை அரசே பேடியால் தான் வென்றிருக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.” “நிச்சயமாக நீர் அப்படித்தான் நம்புகின்றீரா?” “கண்டிப்பாக அப்படித்தான் நம்புகிறேன்” விராடனுக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. கையிலிருந்த சூதாடும் வட்டைப் படீரென்று தருமனின் நெற்றியில் வீசி எறிந்து விட்டான். வேகமாக நெற்றிப் பொட்டில் போய்த் தாக்கிய வட்டு ஆழப் பதிந்து அங்கிருந்து ரத்தம் வரும்படியாகச் செய்து விட்டது. ரத்தம் வடியும் நெற்றியை வலது கையால் அமுக்கிக் கொண்டே விராடனைச் சாந்தம் தவழும் முகத்தோடு ஒரு பார்வை பார்த்தார் கங்கர். அப்போது அந்தப் பக்கமாக வந்த விரதசாரிணி இதைப் பார்த்து விட்டாள். உடனே அவள் தன் புடவை முந்தாணையைக் கிழித்துக் கங்கருடைய நெற்றியில் கட்டுப் போட்டாள். அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விராடன் மனத்தில் திகில் தோன்றிவிட்டது. “இந்த கங்கர் யாராயிருக்கக் கூடும்? இவர் நெற்றியில் வழியும் இரத்தத்தைக் கண்டு இந்த வண்ணமகள் விரதசாரிணி ஏன் பதறிக் கட்டுப் போட வருகிறாள். முன்னொரு முறை இந்தப் பொண்ணுக்காகக் கீசகன் கொடுமைகளைச் சுட்டி இவர் என்னிடம் பேசினாரே” என்று எண்ணி ஐயமும் கொண்டான். கங்கரிடம் தான் சினத்தால் தகாத முறையில் நடந்து கொண்டு விட்டதாக அவன் உள்ளுணர்வு கூறியது. இவ்வாறிருக்கும்போது உத்தரனும் பேடியும் போர் களத்திலிருந்து வந்து சேர்ந்தனர். யாவரும் அவர்களை வரவேற்பதற்காக அரண்மனை வாயிலுக்குச் சென்றனர். கங்க முனிவரும் சென்றிருந்தார். தேரிலிருந்து இறங்கிய உத்தரனை விராடன் கட்டித் தழுவி வரவேற்றான். தந்தையின் அருகிலே நின்று கொண்டிருந்த கங்கரின் நெற்றியிலே இரத்தக் கறை கண்ட உத்தரன் மனம் பதறி “இது என்ன காயம்? எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டான். விராடன் நாணத்துடன் தலை குனிந்து நிகழ்ந்ததைக் கூறினான். உத்திரன் அதைக் கேட்டுப் பெரிதும் வருந்தித் தந்தையைக் கடிந்து கொண்டான். இதன் பிறகு தன் தந்தையை அழைத்துக் கொண்டு தாய் சுதேஷ்ணையைக் காண்பதற்குச் சென்றான். சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் தாயும் தந்தையுமாக மகனை அன்புடன் அமர்த்தி உபசரித்து, “போர்க் களத்தில் எப்படி வென்றாயடா மகனே? நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் எங்களுக்குக் கூறு, கேட்பதற்கு ஆவலாக இருக்கின்றோம்” என்றனர். உத்தரகுமாரன் சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கிக் கூறலானான்: “தாயே! தந்தையே! நீங்கள் எண்ணுவது போலப் போரில் வெற்றியைப் பெற்றவன் நான் இல்லை. படைகளைக் கண்டதுமே பயந்து ஓடிவந்துவிட முயன்றேன் நான். அப்போது பேடியாக மாறுவேடங்கொண்டு என்னுடன் இருந்த அர்ச்சுனன் நல்ல காலமாக என்னுடைய மானத்தையும் இந்த நகரத்தின் மானத்தையும் காப்பாற்றினான். இன்னொரு இரகசியம் பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் இந்த ஓராண்டு காலமாக நமது அரண்மனையிலேயே மறைந்து வசித்து வருகிறார்கள். இதை நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கங்கர்தாம் தருமர், பலாயனன் தான் வீமன், பேடியாக ஊர்வசியின் சாபத்தால் கிடைத்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ‘பிருகந்நனை’ -என்ற பெயரோடு இங்கிருந்தவனே அர்ச்சுனன். தாமக்கிரந்தியாகவும், தந்திரி பாலனாகவும் இருந்தவர்களே நகுல சகாதேவர்கள். விரதசாரிணியே திரெளபதி. நாம் மகிழ்ந்து பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா இது? கூடிய விரைவில் அவர்கள் தங்கள் சுயரூபத்தோடு வெளிப்படுவார்கள். அப்பா! தருமருடைய நெற்றியில் காயப்படுத்தியதற்காக நீங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்கு என் அசட்டுத்தனத்தால் ஏற்பட விருந்த தோல்வியைத் தடுத்து வெற்றியை உண்டாக்கிக் கொடுத்த அர்ச்சுனனுக்கே என் தங்கை உத்தரையை மணம் செய்து கொடுக்க வேண்டும்” என்றான் உத்தரன். விராடன் உடனே கங்க முனிவராக இருந்த தருமனை வரவழைத்து, ‘தான் அறியாமல் செய்துவிட்ட பிழை’யை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். “நான் அதை அப்போதே மன்னித்து மறந்துவிட்டேனே!” என்று சிரித்துக்கொண்டே கூறினான் தருமன். உடனே வீமன், அர்ச்சுனன் முதலிய மற்ற சகோதரர்களையும் வருவித்து மகிழ்ச்சியோடு அவர்களுக்குரிய மரியாதையைச் செய்தான். மறுநாள் காலையில் பாண்டவர்களும் திரெளபதியும் தாம்தாம் கொண்டிருந்த அஞ்ஞாத வாசத்துக்குரிய மாறுவேடங்களை விட்டுவிட்டுச் சுயஉருவை அடைந்தனர். விராடன் காணாத விருந்து வரக் கண்டவன் போலப் பெருமகிழ்ச்சி அடைந்தான். ஏன்? விராட நகரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. தருமனுடைய நெற்றியில் ஏற்பட்டிருந்த வடுவை அர்ச்சுனன் இப்போது தான் பார்த்தான். மனம் பதைத்து, “அது எப்படி ஏற்பட்டது?” -என்று கேட்டான். அருகே நின்று கொண்டிருந்த திரெளபதி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள். அதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத சினம் வந்துவிட்டது. “அப்படியா செய்தான் அந்த விராடன்? என்ன செய்கிறேன் பாருங்கள்! அவனையும் அவன் நகரத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விடுகிறேன். இந்த வில்லிருந்து புறப்படும் ஒரே ஒரு அம்பினால் விராடன் தலையை அறுத்து வீழ்த்தாவிட்டால் என் பெயர் அர்ச்சுனன் இல்லை” -என்று அர்ச்சுனன் தணிக்க முடியாத ஆக்ரோஷத்தோடு வில்லை நாணேற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டான், வீமனுக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிந்தது. அவனும் பெருஞ்சினம் கொண்டு கதையைத் தூக்கிக் கொண்டு விராடனைத் தாக்குவதற்குக் கிளம்பி விட்டான். இருவரையும் தடுத்து நிறுத்திய தருமன் சாந்தமாகத் “தம்பியர்களே! கீழ் மக்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். ஒருவர் நம்மைக் கொலை செய்தாற்போன்ற பெருந்துன்பத்தையே நமக்குச் செய்திருப்பினும் அவர் செய்த ஒரே ஒரு சிறு நன்றிக்காவது அவரை நாம் வணங்க வேண்டும். விராடன் எத்தனை துன்பங்களைச் செய்திருந்தாலும் ஓராண்டுக்காலம் நாம் மறைந்து வாழுவதற்கு இடமளித்திருக்கிறான். அந்த நன்றியை நாம் மறக்கக் கூடாது.” விளக்கமாகத் தருமன் கூறிய இந்த அறிவுரையைக் கேட்டு அருச்சுனனும் வீமனும் சினம் நீங்கினர். அப்போது விராடன் தன் அமைச்சர்கள் புடைசூழப் பல பரிசுகளுடனும் காணிக்கைப் பொருள்களுடனும் அங்கே வந்தான். உத்தரகுமாரன், சுதேஷ்ணை முதலியவர்களும் உடன் வந்திருந்தனர். விராட மன்னன் பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். தருமனும் விராடனும் அன்பு மிகுதியினால் ஒருவரை ஒருவர் மார்புறத் தழுவி இன்புற்றனர். “விராடா! உன் போல் நற்பண்பு நிறைந்த மன்னர்களை உலகெங்கும் தேடித் திரிந்தாலும் காண்பது அரிது” என்று நன்றி சுரக்கும் உள்ளத்தோடு கூறினான் தருமன். “இல்லை இல்லை. அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் என் அரண்மனையில் என்னோடு நான் இன்னார் என்று அறிந்து கொள்ள முடியாமலே ஓராண்டு காலம் தங்கியிருக்கிறீர்கள். இது எனக்குக் கிடைத்த பெறும் பேறு. இதற்காக நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” -என்று உபசாரமாக மறுமொழி கூறினான் விராட மன்னன். “உன் அரண்மனையில் தங்கியிருந்தபோது எங்களுக்கு ஒருவிதமான குறைவும் இல்லை. இனியும் இங்கிருந்து வெளியேறிச் செல்கின்ற விசேஷத்தால் எங்களுக்கு யாவும் நலமே நிகழும். இழந்த நாட்டை மீண்டும் பெற்று அரசாளுவோம்” என்றான் தருமன், உடனே விராடனின் புதல்வனான உத்தரன் விராடனைப் போலவே தானும் நன்றி கூறலானான்: “இந்த விராடநகரம் என்றும் தங்களுக்குப் பணிபுரியக் காத்திருக்கின்றது. எங்கள் படைகள் எந்தச் சமயத்திலும் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன. என் தங்கை உத்தரையை அருச்சுனன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” “உத்தரை வயதில் எனக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாதவள். அவள் சிறுமி. அவளை நான் மணம் செய்து கொள்வதற்கு இயலாது. ஒரு வேளை என் மகனுக்கு அவளை மணம் செய்து கொள்ள முடியலாம்” என்று திருமண வேண்டுகோளை அர்ச்சுனன் மறுத்து விட்டான். விராடனும் உத்தரனும் இதைக் கேட்டு முதலில் கொஞ்சம் வருத்தம் உற்றார்கள் என்றாலும் பின்பு மனத்தைத் தேற்றிக் கொண்டார்கள். தருமனின் வேண்டுகோளுக்கிணங்கப் ‘பாண்டவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் முடிந்து சுயமாக வெளிப்பட்டிருக்கிறார்கள்’ என்ற செய்தியை நாடு நகரங்களிலெல்லாம் பரப்பும்படி தூதர்களை அங்கங்கே அனுப்பினான் விராட மன்னன். செய்தியறிந்ததும், முன்பு தருமனை விட்டுப் பிரிந்து சென்ற சிற்றரசர்கள் அவனைச் சந்திப்பதற்காக வந்தார்கள், துவாரகையிலிருந்து கண்ணபிரான், சுபத்திரை, அபிமன்யு, சிவேதன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். போஜகுலராஜர்கள் சிலரும் வந்தனர். சிவேதன் விராடனுடைய மூத்தமகன். ஒரு போரிலே கண்ணனுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்தவன், இப்போது தான் திரும்பி வந்தான். எல்லோரும் மனம் ஒப்பியபடி அர்ச்சுனனுடைய புதல்வனாகிய அபிமன்யு விராடன் மகளாகிய உத்தரையை மணம் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் எடுத்து வந்தன போக எஞ்சிய ஆயுதங்கள் காளிகோவில் வன்னிமரப் பொந்திலேயே இருந்ததனால் மற்றவர்களும் போய் அவரவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். துரியோதனாதியரிடமிருந்து தங்களுக்குரிய நாட்டை எவ்வாறு மீட்பது என்ற சிந்தனையே அப்போது யாவர் மனத்தையும் ஆட்கொண்டிருந்தது. அதைப் பற்றி யோசிப்பதற்காகக் கண்ணன் முதலியவர்களோடும் உபலாவியம் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர் பாண்டவர்கள். (விராட பருவம் முற்றும்) உத்தியோக பருவம் உலூகன் போகின்றான் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்துக் கொண்ட பாண்டவர்களும், கண்ணன் முதலியவர்களும் மேலே நிகழ வேண்டிய பவற்றினைப் பற்றிக் கூடிச் சிந்தித்தனர். போர் செய்து அதில் துரியோதனாதியர்களை வென்று அரசாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று வீமனும் அர்ச்சுனனும் கருதினர். “போர் செய்து அவர்களை வெல்லுவது தவறில்லை, ஆனால் போருக்கு அவசியம் இருக்கிறதா என்பதை நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள். சூதாட்டத்தினால்தான் நாட்டைப் பறிகொடுத்தீர்கள். சூதாட்டத்தினாலேயே மீட்க முயல்வது தானே முறை! எதற்கும் துரியோதனனிடம் தூது அனுப்பி அவன் எதை விரும்புகிறான்? என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது” என்றான் கண்ணன். கண்ணனுடன் வந்திருந்த பலராமன் அடுத்துக் கூறிய யோசனை அங்கிருந்தவர்களுடைய மனத்தைப் புண்படுத்தியது. “பாண்டவர்களே! இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் நாடாள நினைப்பது வீண் பேராசை. துரியோதனாதியர் உங்களிடமிருந்து பறித்துக் கொண்ட நாட்டைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து உரிமை கொண்டாடி விட்டனர். ‘இனி அவர்களிடமிருந்து அதைப் பெறலாம்’ என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்” -பலராமன் இவ்வாறு கூறவும் அங்கிருந்த சாத்தகி என்பவன் அடக்க முடியாத சினங்கொண்டான். “ஏ! பலராமா, உனக்கு எப்போதுமே நல்லதை எண்ணவும் தெரியாது, நல்லதைச் சொல்லவும் தெரியாது” என்று சாத்தகியும் மற்றும் சிலரும் ஆத்திரத்தோடு கூறினர். பலராமனுடைய பேச்சு அங்கு ஒரு பெருங்குழப்பதையும் அடிபிடியையும் உண்டாக்கிவிடும் போல இருந்தது. நல்ல காலமாகக் கண்ணன் குறுக்கிட்டு அதைத் தடுத்தான். “நமக்குள்ளேயே குழப்பம் எதற்கு? முதலில் துரியோதனாதியர்கள் என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தூதுவன் மூலம் அறிந்து கொள்ளலாம். இங்குள்ளவர்களில் உலூகன் ஒருவனே தூது செல்லத் தகுதியானவன். எனவே நம் எல்லோருடைய விருப்பத்தின்படி உலூகன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது சென்று வரட்டும்.” உலூகன் கண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்கித் தூது சென்றான். கண்ணன் முதலியவர்கள் துவாரகைக்குப் புறப்பட்டனர். துரியோதனன், உலூகனிடம் கூறியனுப்புகிற மறுமொழியைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு விவரம் அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு வந்திருந்த சிற்றரசர்கள் எல்லோரும் சென்று விட்டனர். தருமனும் கண்ணனும் கூறி அனுப்பிய செய்திகளோடு அத்தினாபுரத்தை அடைந்து துரியோதனனைக் காணச் சென்றான் உலூகன். பாண்டவர், கெளரவர் இரு சாராருக்கும் இடையே உலூகன் ஒரு பெருந்தகையாளன், தன் பகைவர்களிடம்மிருந்து வந்தவனென்று அலட்சியமாக இராமல் துரியோதனன் அவனை மரியாதையோடு வரவேற்றதற்குக் காரணம் இது தான். துரியோதனன் மட்டுமில்லை. அவன் அவையைச் சேர்ந்த பெரியோர்களாகிய வீட்டுமன், விதுரன் முதலியவர்களும் கூட உலூகனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். வரவேற்பு, உபசாரங்கள், எல்லாம் முடிந்த பின் துரியோதனன் உலூகனை நோக்கி, “ஏதோ முக்கியமான செயல் நிமித்தமாகத்தான் வந்திருப்பீர்கள் போலிருக்கிறது. அது என்ன செயல் என்று நான் அறியலாமா?…” என்று கேட்டான். உலூகன் அதற்கு மறுமொழி கூறினான்: “நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செயல்தான். அதை உங்களிடம் சொல்லி இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். நிபந்தனைப் படியே பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தையும் ஒரு வருட அஞ்ஞாத வாசத்தையும் கழித்து விட்டார்கள். முன்பு நீங்கள் அளித்த வாக்கின்படி அவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களைக் கொடுக்கின்றீர்களா? அல்லது பாண்டவர்கள் உங்களோடு போர் செய்து பெற்றுக் கொள்ளட்டுமா? சூதாட்டமோ, போராட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி; பாண்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாண்டவர்களின் வலிமையும் பேராற்றலும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல! மீண்டும் அவர்களுடனே போரிட்டு உங்களுக்கு நீங்களே அழிவு தேடிக் கொள்வதை விட அவர்களுக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிடுவது நல்லது. உலூகனை மரியாதையோடு வரவேற்ற துரியோதனன், இப்போது அவன் வந்த காரியத்தைக் கேட்டதும் கோபங் கொண்டு விட்டான். “மிகவும் நல்லது! வார்த்தைகளில் இல்லை வீரம் என்பது. பாண்டவர்களுக்கு எங்களோடு போரிட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் போர்களத்திற்கு வந்து எதிரில் நின்று செய்யக் கருதுவதைச் செய்யலாம். இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்! இதுதான் என் விடை போய் கூறுங்கள்” என்றான் அவன். துரியோதனனின் விடையைக் கேட்ட உலூகன் விதுரனின் முகத்தைப் பார்த்தான். உடனே விதுரன் எழுந்து துரியோதனனை நோக்கி “துரியோதனா! நியாயமாக இந்தத் தூதுவர் கூறுகிறபடியே பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதுதான் நல்லது, போர் எண்ணம் வேண்டாம்” என்றான். அடுத்துத் துரோணரும் கிருபாச்சாரியாரும் எழுந்து விதுரனைப் போலவே, ‘போர் வேண்டாம் என்றும், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதே தலம்’ என்றும் துரியோதனனுக்கு அறிவுரை கூறினர். ஆனால் துரியோதனன் இவர்களது அறிவுரைகளைச் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அவன் அலட்சியத்தைப் பார்த்த வீட்டுமர் கொஞ்சம் மனக்கொதிப்புடனேயே எழுந்து பேசினார்: “வனவாசம் முடிந்ததும் நாட்டைத் தருவதாக முன்பு உறுதிமொழி கூறிவிட்டு, இப்போது இப்படிப் பேசுவது ஆண்மைக்கு அழகில்லை. போர் என்று வந்துவிட்டால் அர்ச்சுனன் ஒருவனுக்குக்கூட உங்களால் எதிர் நிற்க முடியாது. ஏன் போர் போர் என்று வீணாகத் துள்ளுகிறீர்கள்?” இவ்வாறு வீட்டுமர் துரியோதனனை இகழ்ந்து பேசியதைக் கர்ணனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் வீட்டுமனுக்கு மறுமொழி கூறினான்:- “கிழட்டு வேங்கையைப் போல இருந்த பரசுராமனை நீ எப்படிக் கொன்றாய் என்பது உனக்கு மறந்துவிட்டதா? எந்தப் பரசுராமனிடம் அருங்கலைகளை எல்லாம் நீ கற்றாயோ, அதே பரசுராமனை நீ கொல்லவில்லையோ? உனக்குக் கற்பித்த ஆசிரியனை மாணாக்கனாகிய நீ எப்படி வென்றாயோ அப்படியே நானும் கெளரவர்களும், பாண்டவர்களை வென்று வாகை சூடுவோம்.” வயது முதிர்ந்தவராகிய வீட்டுமருக்குக் கர்ணனுடைய சொற்கள் அளவிலடங்காத கோபத்தைக் கிளறிவிட்டன. “அடே! கர்ணா, ‘நீ யாரோடு பேசுகிறாய்’ என்பதனை யோசித்து, மட்டு மரியாதையோடு பேசப் பழகிக் கொள். அன்று. திரெளபதிக்குச் சுயம்வரம் நடந்தபோது நீயும் தான் அர்ச்சுனனோடு போர் செய்து பார்த்தாயே? உன்னால் அவனை வெல்ல முடிந்ததா? ஒரு சமயம் உன்னுனடய மதிப்பிற்குரிய நண்பன் துரியோதனனைத் தேவர்கள் தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்களே! அப்போது உன் வீரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது? கடைசியில் துரியோதனனைத் தேர்க்காலிலிருந்து விடுவிக்க வீமன் வரவேண்டியிருந்ததே ஒழிய உங்களால் முடிந்ததா? அட இவையெல்லாந்தான் போகட்டும். சமீபத்தில் விராட நகரத்தில் உங்களுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தது. உங்களில் யாராவது அவனை வென்றீர்களா? வெல்லவில்லை. வெல்வதற்குப் பதிலாக மூன்று முறை புறங்காட்டி ஓடினாய் நீ! நாளைக் குருட்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டப் போவது யார் தெரியுமா? கண்ணன் தேரோட்டம் போகிறான். பயங்கொள்ளியாகிய உத்தரகுமாரன் தேரோட்டும் போதே அவனை வெல்ல முடியாத நீ, இனி மேலா வெல்லப் போகிறாய்? கர்ணா! உன் வீரத்தின் அளவு இது தான் என்று நன்றாக அளந்து வைத்திருக்கிறேன் நான்.” வீட்டுமருக்குப் பதில் கூற வாய் இன்றி வெட்கமுற்றுத் தலை குனிந்து சிலை போல வீற்றிருந்தான் கர்ணன். அவையில் அசாதாரணமான அமைதி நிலவியது. உலூகன் எழுந்திருந்தான். துரியோதனனைப் பார்த்து, “நான் தூது வந்தவன். இங்கே கூறுகிற முடிவு எதுவோ, அதை அப்படியே அங்கே போய்க் கூறுவேன். இப்போது நான் இவ்விடத்து முடிவைத் தெரிந்து கொண்டு புறப்படலாமா?” என்றான். துரியோதனன் ஏளனந்தோன்றக் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உலூகனை அலட்சியமாக நோக்கிக் கொண்டே “இத்தனை நாட்களாகப் பிறருக்கு உரிமையின்றி ஏகபோகமாக ஆண்டு விட்டோம். எங்களுக்கு உரியதான இதை விட மனமில்லை. பாண்டவர்கள் காட்டில் வசித்துப் பழக்கப்பட்டுவிட்டதனால் காட்டை வேண்டுமானால் ஆண்டு கொள்ளட்டும். நாட்டைக் கொடுக்க நாங்கள் தயாராயில்லை. இதுதான் எங்கள் முடிவு, போய்ச் சொல்!” என்று கூறினான். உலூகன் இதைக் கேட்டதும் வீட்டுமன், விதுரன் முதலியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுத் தருமனைச் சந்திக்கச் சென்றான். தருமன் முதலியவர்கள் அப்போது விராட நகரத்துக்கு அருகிலிருந்த உபலாவியம் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். உலூகன் அங்கு சென்று நடந்த நிகழ்ச்சிகளையும் துரியோதனனின் -முடிவையும் கூறினான். துரியோதனாதியர்களோடு போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் பாண்டவர்கள் தெரிந்து கொண்டனர். “உலூகா! எங்கள் சார்பாக நீயே துவாரகைக்குச் சென்று இச்செய்தியைக் கண்ணனுக்கும் கூறிவிட்டு வந்தால் நல்லது” என்று உலூகனை வேண்டிக் கொண்டான் தருமன். உலூகன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கித் துவாரகைக்குப் புறப்பட்டான். துவாரகையில் கண்ணனைச் சந்தித்துச் செய்திகளைக் கூறினான். விவரங்களை அறிந்து கொண்ட கண்ணன் மனத்தில் பல விதமான சிந்தனைகள் உண்டாயின. ஒரு பெரும் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கு ஏற்ற முறையில் பாண்டவர்களைத் தயார் செய்தாக வேண்டுமே என்ற கவலை அவனைப் பிடித்துக் கொண்டது. “அர்ச்சுனனை உடனே நான் சந்திக்க விரும்புகிறேன். நீ போய் அவனை வரச்சொல்” என்று உலூகனிடமே கூறி அனுப்பிவிட்டு எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய சிந்தனைகளில் எண்ணங்களை மிதக்க விட்டான் மாயப் பெருமான், சிந்தனைகளுக்கு எல்லாம் மூலமான அவன் கூட ஒரு சிந்தனையில் ஈடுபட்டான். போர் நெருங்குகிறது! பாண்டவர்கள், கௌரவர்கள். இருசாராருமே இப் போரின் அவசியத்தை உணர்ந்து விட்டனர். தங்கள் தங்கள் பக்கம் படைகளையும் அரசர்களையும் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இருதரப்பினரும் இறங்கினர். துரியோதனனுக்கு உலூகன் வந்து போனதிலிருந்து “போர் உறுதி” என்ற எண்ணம் இதன் தோன்றி விட்டது. தன்னைச் சேர்ந்தவர்களில் வலிமை வாய்ந்தவர்களாகிய வீட்டுமன், விதுரன், கர்ணன் ஆகியவர்கள் ஒருவருக்கொருவர் விருப்பமின்றி இருப்பது முதல் பலவீனமாகப் பட்டது அவனுக்கு. எனவே அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்துப் பலவாறு சமாதான உரைகளைக் கூறினான். அண்டை அயலிலுள்ள சிற்றரசர்களை அழைத்து வரவும் தன் பக்கம் படைத்துணையாகச் சேர்த்துக் கொள்ளவும் தகுதி வாய்ந்த தூதுவர்களை அனுப்பினான். பாண்டவர்கள் பக்கம் யார் சேர்ந்து விட்டாலும் ஒரே ஓர் ஆளை மட்டும் நிச்சயமாகச் சேரவிடக்கூடாதென்பது துரியோதனன் கருத்து. அந்த ஆள் தான் கண்ணன். என்ன தந்திரம் செய்தாவது கண்ணனைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று தானே துவாரகைக்குப் புறப்பட்டான். எல்லாவற்றையும் நிகழ்வதற்கு முன்பே அறிய வல்லவரான கண்ணபிரான் துரியோதனன் புறப்பட்ட உடனே, அவன் தன்னைப் பார்க்கவருவதை உணர்ந்து கொண்டான். “துரியோதனன் என்னைப் பார்க்க வருவான். வந்தால் என்னிடம் அனுமதி கேட்காமலே உள்ளே அனுப்பிவிடுங்கள்” என்று வாயிற் காவலர்களிடம் கூறிவிட்டு உள்ளே போய்த் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருந்தான். கண்கள் பொய் உறக்கத்தில் ஆழ்ந்து மூடியிருந்தன. துரியோதனன் வந்தான். காவற்காரர்கள் பேசாமல் அவனை உள்ளே அனுப்பிவிட்டார்கள். உள்ளே சென்ற துரியோதனன் கண்ணன் உறங்குவதை அறிந்து அவன் தலைப்பக்கமாகக் கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான். எழுந்திருந்ததும் தன் வேண்டுகோளைக் கூறலாம் என்பது அவன் எண்ணம். துரியோதனன் வந்தது, தன் தலைப் பக்கத்தில் உட்கார்ந்தது எல்லாம் அறிந்த கண்ணனின் விழிகள் அருச்சுனன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தினால் தொடர்ந்து மூடியிருந்தன. இங்கு இவ்வாறிருக்க, உலூகனால் கண்ணன் தன்னை அழைத்திருப்பதை அறிந்து கொண்ட அருச்சுனன் உடனே புறப்பட்டுத் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். காவலர்கள் கண்ணன் உள்ளே இருப்பதாகக் கூறி அவனையும் உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்றதும் உறங்கிக் கொண்டிருந்த கண்ணனின் கமலபாதங்களைத் தன் கரங்களால் தொட்டு வணங்கினான். கால்களில் அர்ச்சுனனின் கர ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அப்போது தான் திடுக்கிட்டுக் கண்விழிப்பவனைப் போலக் கண்களைத் திறந்து எழுந்து அர்ச்சுனனை நோக்கினான் கண்ணன். தலைப்புறமிருந்த துரியோதனனை அவன் பார்க்கவே இல்லை. “எங்களுக்கு நீயும் உன்னுடைய படைகளும் துணையாக வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான் அர்ச்சுனன். “அதற்கென்ன அர்ச்சுனா! முன்பே உன் அண்ணனிடம் படை உதவுவதாக ஒப்புக் கொண்டு விட்டேனே” என்றான் கண்ணன். தனக்குப் பின்புறம் தலைப்பக்கமாகத் துரியோதனன் உட்கார்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மாதிரி நடித்தான் கண்ணன். இந்தச் சமயத்தில் அர்ச்சுனன் குறிப்பாக, “அண்ணன் கூட இதோ இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே” என்று பின்புறமாகக் கையைச் சுட்டிக் காட்டினான். ஆச்சரியம் நிறைந்த முகபாவத்தோடு அப்போது தான் தெரிந்து கொள்பவனைப் போலத் துரியோதனனைப் பார்த்து “வா! வா! துரியோதனா! எப்போது வந்தாய்? நீ இங்கு வந்து உட்கார்ந்திருப்பது எனக்குத் தெரியவே தெரியாதே!” என்றான் கண்ணன். “அர்ச்சுனனுக்கும் முன்பே நான் வந்து விட்டேன். நீங்கள்தான் என்னைக் கவனிக்கவில்லை !” “ஒரு நாளும் என்னைத் தேடி வராதவன் வந்திருக்கிறாய், என்ன விசேஷமோ?” “வேறொன்றுமில்லை. தங்களை எங்கள் பக்கம் படை உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதற்காகத்தான் வந்தேன்.” “அடாடா! நான் முன்பே தருமனுக்குப் படை உதவி செய்வதாக வாக்குக் கொடுத்து விட்டேனே! இப்போது கூடச் சற்றுமுன் அர்ச்சுனனிடம் நான் கூறிய உறுதிமொழியைத்தான் நீயும் கேட்டிருப்பாயே! இனி நான் என்ன செய்யலாம்? யாராவது ஒருவருக்குத்தானே உதவமுடியும்?” “சரி? நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஆனாலும் நான் கேட்கும் மற்றோர் வேண்டுகோளையாவது நீங்கள் மறுக்காமல் நிறைவேற்ற வேண்டும்.” “அது என்ன வேண்டுகோள்?” “எங்களுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழ இருக்கும் போரில் நீங்கள் ஆயுதம் எடுத்துப் போர் புரியக் கூடாது. வேறு எந்த வகையிலும் பாண்டவர்களுக்கு உதவிக் கொள்ளலாம்.” “சரி! துரியோதனா! உன் விருப்பப்படியே ஆயுதம் எடுத்துப் போர் புரியாமலே பாண்டவர்களுக்கு உதவுகின்றேன். இன்னொரு விஷயம், நான் ஒருவன்தான் உன் பக்கம் சேர்வதற்கில்லை. என்னைச் சேர்ந்த யாதவர்களையும் பலராமனையும் விரும்பினால் நீ உன் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தடையில்லை.” “அப்படியானால் நான் இப்போதே பலராமனைப் போய்ப் பார்க்கலாமா?” “ஓ! கட்டாயம் போய்ப் பார். அவன் உனக்கு உதவியாக வர இணங்குவது உறுதி.” “நான் போய் வருகிறேன்” -துரியோதனன் விடை பெற்றுக்கொண்டு சென்றான். கண்ணனும் அர்ச்சுனனும் தனிமையில் விடப்பட்டனர். “அர்ச்சுனா!” “என்ன சுவாமி?” “கேட்டாயா துரியோதனன் வேண்டுகோளை? நான் ஆயுதம் எடுக்காமல் உங்களுக்கு உதவி புரிய வேண்டுமாமே! எப்படி அப்பா ஆயுதமின்றி உதவுவது?” “உதவ முடியும் சுவாமீ! என் தேரைச் செலுத்துங்கள்! அது போதும். நீங்கள் ஆயுதமே எடுக்க வேண்டாம்.” கண்ணன் அவ்வாறே தேர் செலுத்துவதாக ஒப்புக் கொண்டு அர்ச்சுனனையும் அழைத்துக் கொண்டு தருமனைக் காண அவனிருந்த இடத்திற்குச் சென்றான். பலராமனிடம் சென்ற துரியோதனன், “தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் போரில் என் பக்கம் உதவி புரிய வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டபின் தன் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றான். துவாரகையிலிருந்து, ‘கண்ணனைத் தன் பக்கம் வசப்படுத்த முடியாது போயிற்றே’ என்ற ஏமாற்றத்தோடு புறப்பட்டிருந்த துரியோதனன் அத்தினாபுரியை அடைந்ததும் தந்தையைச் சந்தித்தான். நடந்ததைக் கூறினான். கண்ணில்லாதவனாகிய திருதராட்டிரன் தன் மக்களையும், சகுனி, கர்ணன் முதலியவர்களையும் ஒன்று கூட்டி ஒரு பெரிய சதியாலோசனைக்குத் திட்டமிட்டான். போரின்றியே பாண்டவர்களை மீண்டும் படுகுழியில் வீழ்த்துகின்ற திட்டம் அது. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஞானாசிரியனான ‘சஞ்சயன்’ என்ற முனிவன் அப்போது அத்தினாபுரத்தில் இருந்தான். நிலையாமையைப் போதித்து, ஆசைகளை உடனே கைவிடும் வண்ணம் உபதேசம் செய்வதில் அவன் வல்லவன். அவனுடைய உபதேசங்களைக் கேட்ட எவரும் உடனே அவற்றின்படி செய்யாமலிரார். அவ்வளவு சக்தி அவன் சொற்களுக்கு உண்டு. இந்த முனிவனைப் பாண்டவர்களிடம் அனுப்பிப் ‘போர் செய்து நாட்டை மீட்டு ஆள வேண்டும்’ என்ற அவர்கள் ஆசையை போக்கிவிட ஏற்பாடு செய்தான் திருதராட்டிரன். விருப்பு வெறுப்புற்றவனாகிய சஞ்சய முனிவன் முதலில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்கினான். பின்பு திருதராட்டிரனின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் பாண்டவர்கள் மனத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டு சென்றான். ஒரு காலத்தில் தங்களுக்குக் குலகுருவாகவும் ஞானாசிரியனாகவும் இருந்த முனிவன் தங்களைத் தேடிவரவே அவனை மரியாதையோடு வரவேற்றுப் போற்றினார்கள் பாண்டவர்கள்: “இத்துணை ஆண்டுகளுக்குப் பின் எங்களைத் தேடி வரத் தூண்டிய கருணை யாதோ?” தருமன் கேட்டான். “வேறொன்றுமில்லை தருமா! உங்கள் மேலுள்ள அன்பால் உங்களுக்குச் சில நற்செய்திகளை உபதேசம் செய்துவிட்டுப் போக வந்தேன். கெளரவர்களிடமிருந்து உங்கள் நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றி மீண்டும் ஆளவேண்டும் என்ற ஆசை உங்களுக்குத் தோன்றியிருத்தலை அறிகிறேன். அப்பா தருமா! ஆசையின் விளைவு பாவம். பாவத்தின் விளைவு நரகம். நாடாளும் ஆசையால் உங்களுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஒற்றுமை குலைந்து போர்தான் மலியும். இந்தப் பாழும் ஆசையைக் கைவிட்டு விட்டு மறுபடியும் காட்டுக்குப் போய்த் தவம் செய்து மோட்ச மார்க்கத்தை அடையுங்கள். என் உபதேசத்தை நீங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். அதுதான் நல்லது.” முனிவன் கெளரவர்களின் சூழ்ச்சியால் உருவாகி வந்திருக்கிறான் என்பதை தருமன் புரிந்து கொண்டான். “முனிவரே! பழியை அழித்துப் புகழை நிலை நாட்டுவது தான் தவம். அரசாளுவது எங்கள் குலதருமம், அதை இன்னொருவனிடம் பறி கொடுத்துவிட்டோம். இன்று மீட்கத் துடிக்கின்றோம். இது முறையான ஆசை தான். இதை நிறைவேற்ற நாங்கள் தயங்கப் போவதில்லை. உங்கள் மொழிகளை மீறுவதற்காக மன்னியுங்கள்…” என்றான் தருமன். தருமனைவிட வீமன் அதிகமாகச் சினம் கொண்டு விட்டான். “ஏ! முனிவனே, நீ வெறுப்பும் விருப்புமின்றி உபதேசிக்க வேண்டிய ஞானாசிரியன். கேவலம், கெளரவர்களின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டு எங்களை மீண்டும் காட்டிற்குத் துரத்த வந்திருக்கிறாயே? போருக்கு தயாராக இருப்பதாக நேற்று உலூகனிடம் கூறியனுப்பிய கௌரவர்கள் அதற்குள் ஏன் இத்தகைய சூழ்ச்சிகளிலே ஈடுபட்டிருக்கிறார்கள்? திருதராட்டிரனுக்கு இந்த ஓரவஞ்சகம் அடுக்குமா? நீ தவம்தானே செய்யவேண்டுமென்கிறாய்? போர்க் களத்தில் இந்தக் கதாயுகத்தைக் கொண்டு பகைவர்களைப் புடைத்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் தலைகளுக்கு நடுவே தவம் செய்கிறோம். துரியோதனாதியர்களின் உயிரைக் களவேள்வியில் பலியிடுகிறோம். இன்னும் லட்சோபலட்சம் உயிர்களைக் கொன்று குவிக்கின்றோம்.” இவ்வாறு வீமன் வெறி பிடித்தவன் போலத் தொடர்ந்து பேசினான். அருகிலிருந்த கண்ணனும் -தருமனும் அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு, “போர் செய்வதைத் தவிர வேறெதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று முடிவாகக் கூறி சஞ்சய் முனிவனுக்கு விடை கொடுத்து அனுப்பினர். சஞ்சயனும் அவன் உபதேசமும் தோல்வியடைந்து திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பச் சென்ற சஞ்சயன் திருதராட்டிர மன்னனிடம் போய்ப் பாண்டவர்கள் கூறிய பதிலைச் சொன்னான். திருதராட்டிரன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். போரின்றியே பாண்டவர்களை வெல்லக் கண்டவழி தோற்றுவிட்டது அல்லவா? மாயவன் தூது சஞ்சய முனிவன் சென்றபின் பாண்டவர்களும் கண்ணனும் தங்கள் நிலை பற்றி ஆராய்ந்தனர். “நம்முடைய எதிரியும் போருக்கு இணங்கி விட்டான். நாமும் போருக்குத் தயாராகி விட்டோம். வீணிற் பல உயிர்களைக் கொன்று போர்க்களம் புகுவதைவிடப் போரின்றியே நமக்குக் கிடைக்க வேண்டிய நாட்டை அடையமுடியுமானால் முயற்சி செய்யலாம்” என்றான் தருமன். திடீர் திடீரென்று முரணிப் பேசும் தருமனின் இயல்பு கண்ணனைக் கோபம் கொள்ளச் செய்தது. “தருமா! அடிக்கடி திட்டத்தை மாற்றிப் பேசுவதில் பயனில்லை. முடிவாக உங்களுடைய தீர்மானம்தான் என்ன? போர் செய்து நாட்டைப் பெறப்போகிறீர்களா? அல்லது ஒன்றுமே செய்யாமல் மீண்டும் காட்டிற்குப் போகப் போகிறீர்களா?” “நான் அதற்குச் சொல்ல வரவில்லை சுவாமீ! இரண்டு பக்கமும் சமாதானமாகப் போய்விட்டால் ஓர் உயிருக்கும் சேதமின்றியே நமக்கு நாடு கிடைத்துவிடும். எல்லாம் வல்லவராகிய நீங்கள் என் சார்பில் துரியோதனாதியர்களிடம் தூது சென்று அமைதியாக ஒரு ஏற்பாட்டைச் செய்தால் என்ன? உங்கள் ஒருவரால்தான் அம்மாதிரி ஏற்பாட்டைச் செய்ய முடியும்!” “ஏன் அப்படிச் சமாதானமாகப் போக வேண்டும்? முறைப்படி உங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை முறை மறந்து கொடுக்க மறுக்கிறான் துரியோதனன். அவனைப் போருக்கு இழுத்துக் கொன்று உங்கள் ஆண்மையை நிலை நாட்டுவது தான் பெருமை.” “சுவாமீ! உடன் பிறந்தவர்களையும் குருக்களையும் ஞானாசிரியர்களையும், சிற்றப்பன் - பெரியப்பன்மார்களையும் எதிர்த்துக் கொள்ள வேண்டிய போரைச் செய்தால்தான் என்ன பயன்? இப்படிப்பட்ட ஒரு போரைத் துணிந்து செய்ய முற்படுவதைக் காட்டிலும் சஞ்சயன் வந்து சொன்னபடி மீண்டும் காட்டுக்கே போய் விடலாமே!” “நல்லது தருமா! நீ சொல்லுகிறபடியே காட்டுக்குப் போய்விடும். ஆனால் அன்று பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது உன் தம்பியர்கள் செய்த சபதம் என்ன ஆவது? உலகம் உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசும் தெரியுமா?” “சுவாமீ! என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் என் வேண்டுகோளின்படியே எனக்காக நீங்கள் ஒருமுறை துரியோதனனிடம் தூது சென்று வரவேண்டும். அமைதியாக உரிமையைப் பெற முயல்வோம். எங்கள் நாட்டைத் தருமாறு கேளுங்கள். இயலாவிட்டால் ஐந்து ஊர்களை ஐந்து பேருக்கும் தருமாறு கேளுங்கள். அதுவும் தரமறுத்தால் ஐந்து. வீடுகளையாவது கேளுங்கள், ‘ஒன்றுமே முடியாது’ என்று மறுத்துவிட்டால் இறுதியாகப் போரைச் செய்வோம்” என்று தருமன் கண்ணனிடம் கூறினான். ஏற்கனவே சஞ்சயன் சொற்களால் சினமுற்றிருந்த வீமன் இப்போது இன்னும் ஆத்திரமடைந்தான். வீமன் கண்ணனை நோக்கிக் கூறலானான் : “சுவாமீ! எங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்திலெல்லாம் பெரிய துரதிர்ஷ்டம் எங்கள் அருகிலேயே இருக்கிறது. அதற்கு எங்கள் ‘அண்ணன்’ என்று பெயர். அன்று அந்தத் திவேந்தன் மன்றினிலே படாததெல்லாம் பட்டோம். நெஞ்சும் மனமும் கொதிக்கும் நியாயமற்ற துன்பங்களை மலை மலையாக அனுபவித்தோம். இன்றோ, இந்த மூத்தவரின் சொற்களுக்கு அஞ்சிப் பகை முடிக்கவும் தயங்குகிறோம். நானும் அருச்சுனனும் திரெளபதியும் மனத்திற் சுமந்திருக்கும் ஆயிரமாயிரம் எண்ணக் குமுறல்களை இவர் ஒருவரே அழித்தொழித்துவிடுவார் போலிருக்கிறது.” வீமன் கூறியதைக் கேட்ட தருமன், “வீமா ! பொறுமையிழந்து பேசாதே. கண்ணிலே தவறிப் போய்க் கைதீண்டிவிடுவது இயல்புதான். அதற்காகக் கண்ணையோ கையையோ அழித்து விடலாமா? உடன் பிறந்தவர்களுக்குள் சண்டை எதற்கு? அமைதியை வேண்டுவோம். இயலாவிட்டால் போரைச் செய்வோம்” என்று அவன் சினத்தை அடக்கினான். “அண்ணா ! உன் அறிவுரை போதும். கண்ணனைத் தூதனுப்பும் எண்ணத்தைக் கைவிடும். அவனுக்கு வேண்டாம் அந்தத் துன்பம். என்னைத் தூதனுப்புங்கள். நான் போகிறேன். போய் நாங்கள் அத்தனை பேரும் செய்த சபதங்களை நிறைவேற்றி விட்டு வருகிறேன். எல்லாவற்றையும் முடிக்காமல் திரும்ப மாட்டேன். நான் அங்கிருந்து திரும்பும்போது அத்தினாபுரத்தில் கெளரவர் குலப்பூண்டு எஞ்சியிருக்காது! என்ன சொல்கிறீர்கள் இப்போது? நான் புறப்படட்டுமா?” “ஆத்திரப்படாதே! குற்றமோ, குறையோ மூத்தவர்கள் பேசுவதை ஒரேயடியாக இழித்துரைக்காதே. பொறுமையாக மேலும் சிந்திப்போம். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இரு” என்று கண்ணன் வீமனைச் சமாதானப்படுத்தினான். வீமன் அமைதியடைந்து உட்கார்ந்தான். அருச்சுனன் கிளம்பிவிட்டான். “பொறுத்துப் பொறுத்துக் கண்டதெல்லாம் போதும். இனிப் போரைத் தவிர வேறு வழியில்லை. மானபங்கம் செய்தபோது, ‘கோவிந்தா! கோவிந்தா!’ -என்று உன்னை நோக்கித்தானே திரெளபதி கதறினாள். நீயே இப்படிப் பொறுமைனய உபதேசித்தால் என்ன செய்வது? துரியோதனன் சமாதான வழிக்கு இணங்க ஒரு காலும் சம்மதிக்கமாட்டான். பால் வார்த்தவர்களிடமே நஞ்சைக் கக்கும் பாம்பு போன்றவன் அவன்” -அருச்சுனன் முடித்ததும் நகுலன் முழங்கத் தொடங்கிவிட்டான். “ஊரறிய உலகறியப் பாண்டவர்கள் வீரர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் புகழ் மொழிகள் வீணாகப் போக வேண்டுமா? வணங்காமுடி மன்னனாகிய துரியோதனன் நமக்கு நாடு கொடுக்க இணங்க வேண்டுமானால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாம் பிச்சை கேட்கவில்லை. நமக்கு உரியதைக் கேட்கிறோம். தானாக அறியாத மூடன் துரியோதனன். பிறர் அறிவுறுத்துவதனாலா அவனுக்குப் புத்தி வந்து விடப் போகின்றது?” நகுலனை அடுத்துப் பேசிய சகாதேவன், “எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். எல்லாம் உங்கள் மாயை. உங்கள் அலகிலா விளையாடல்களை யார் அறிவார்? போர் தான் நடக்க வேண்டுமென்பது உங்கள் திரு உளமானால் அது நடந்து தானே தீரும்?” என்று கண்ணனை நோக்கிப் புன்னகையோடு கூறினான். சகாதேவன் கூடமாக மறைத்துப் பேசிய சாமர்த்தியப் பேச்சு கண்ணனைத் திடுக்கிடச் செய்தது. “நம்முடைய அவதார ரகசியத்தையே அல்லவா இந்தச் சின்னப் பயல் கூறிவிட்டான்!” -என்று மனத்தில் வியந்து கொண்டே சகாதேவனைத் தனியாக ஒரு புறம் அழைத்துக் கொண்டு சென்றான் கண்ணன். “சகாதேவா! என் அலகிலா விளையாட்டைப் பற்றி நீ அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு மிகவும் நன்றி. பாரதப் போர் நடக்காமலிருக்க வேண்டுமானால் நீ தான் அதற்கு ஒரு வழி சொல்லேன்!” -குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சகாதேவனைக் கேட்டான் கண்ணன். “கர்ணனுக்கு அரசாட்சியை அளித்துவிட வேண்டும். அர்ச்சுனனைக் கொன்று திரெளபதியின் கூந்தலை அறுக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு உன்னைப் பிடித்து உன் கை கால்களில் விலங்கு மாட்டிக் கட்டிப் போட வேண்டும், இவ்வளவையும் செய்துவிட்டால் பாரதப் போர் நிகழாமல் தடுக்கலாம்” -என்று ஆவேசத்தோடு பேசினான் சகாதேவன். “சரியான யோசனைதான். இவையெல்லாவற்றையும் நீ ஒரு கால் செய்தாலும் செய்வாய். ஆனால் ஒரே ஒரு காரியத்தை மட்டும் உன்னால் கூடச் செய்ய முடியாதே! என்னைக் கட்டுவதற்கு உன்னால் முடியுமா? உனக்கு அகப்படும்படி அவ்வளவு சாமானியமானவனா நான்?” -இப்படிக் கூறிக் கொண்டே சாதாரணத்திற்கும் அப்பாற்பட்ட விசுவரூபத்தில் பல்லாயிரம் வடிவபேதங்களாக விரிந்து தோன்றி அவனை மருளச் செய்தான் கண்ணன். சகாதேவன் வியப்படையாமல் திகைப்படையாமல் சிரித்துக் கொண்டே நின்றான். “இப்போது என்னைக் கட்டு பார்க்கலாம்!” -ஆயிரமாயிரம் சிரிப்பு ஒலிகளுக்கு இடையே கம்பீரமும் இறுமாப்பும் கலந்து இழைந்த இந்தக் குரல் கேட்டது. பக்தி என்கின்ற கயிற்றால் தன் மனமாகிய தூணில் எண்ணமென்ற வலுக்கொண்டு கண்ணனை இறுக்கிக் கட்டினான் சகாதேவன். கண்ணன் கட்டுண்டான். எதை மீறினாலும் இந்த ஒரே ஒரு கட்டில் அவன் யாருக்கும் எளிதில் சிக்கித்தானே ஆக வேண்டும்! “சகாதேவா! உன் சொற்படியே நீ என்னைக் கட்டிவிட்டாய். வெற்றி உனக்குத்தான். இப்போது என்னை விட்டுவிடு.” “முடியாது! விடமாட்டேன். பாரதப் போரில் எங்களுக்கு முழு உதவியும் புரிந்து வெற்றிக்குத் துணை செய்வதாக வாக்களித்தால் தான் விடுவேன்.” “கட்டாயம் உங்களுக்கு உதவுகிறேன் சகாதேவா! இப்போது என்னை விட்டுவிடு. இங்கு நமக்குள் தனியே நடந்த உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் நீ வேறு எவருக்கும் கூறக் கூடாது.” கண்ணன் வேண்டிக் கொண்டான். சகாதேவன் தன்னுடைய பக்திச் சிறையிலிருந்து கண்ணனை விடுவித்தான். அவர்களிருவரும் தனியிடத்திலிருந்து விலகிச் சென்று மற்றவர்களுடன் கலந்து கொண்டனர். கண்ணன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது போய் வருவதென்று முடிவாயிற்று. இந்த முடிவைக் கேட்ட திரெளபதி கண்ணனுக்கு முன்வந்து கண்ணீர் சிந்தி வருந்தினாள். “என்னை மானபங்கப் படுத்திய துரியோதனாதியர்களைப் போர்க்களத்தில் பழிக்குப் பழி வாங்காமல் ஐந்து ஐளர்களையோ, ஐந்து வீடுகளையோ, சமாதானமாகப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் எனது சபதத்தை நான் என்றைக்கு நிறைவேற்றுவது? முடியாமல் கிடக்கிற என் கூந்தலை துரியோதனனின் இரத்தத்தைப் பூசி என்றைக்கு முடிவது? கண்ணா ! நீதான் என் சபதம் வீணாகாமல் நிறைவேறுவதற்கு உதவி புரிய வேண்டும், என்னைக் கைவிட்டு விடாதே!” என்று அவள் கண்ணனை வணங்கி வேண்டிக் கொண்டாள். கண்ணன் பலராமன் ஆகியவர்களின் கடைசிச் சகோதரனாகிய சாத்தகி என்பவன் திரெளபதியின் வேண்டுகோளால் மனம் குழைந்து, “என்ன ஆனாலும் சரி துரியோதனாதியர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல நாடு கேட்கக் கூடாது. நாம் ஆண்மையற்றவர்கள் இல்லையே! தூதும் சமாதான முயற்சியும் நமக்குத் தேவை இல்லை. கண்ணன் முன்பே சாரசந்தனுக்குப் பலமுறை தோற்றவன். அவன் முடிவை ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் போரே செய்வோம்” என்று ஆத்திரமாகக் கூறினான். “தூதும் சமாதானமும் ஏற்பட்டால் நான் திரும்பி வந்ததும் என் கைகளாலேயே திரெளபதியின் கூந்தலை முடிந்து விடுகிறேன். உங்கள் பகைவர்களின் மனைவிமாரே இனி அமங்கலமாகக் கூந்தலை விரித்துக் கொண்டு கிடக்க நேரிடும். உன் மகன் அபிமன்யு உன் பகைவர்களை அழித்து வேரறுப்பான்! நீ பயப்படாதே…” சாத்தகியின் பேச்சைக் கேட்ட கண்ணன் இவ்வாறு திரெளபதிக்கு ஆறுதல் கூறி அவளைச் சமாதானப்படுத்தலானான். தூது சென்ற இடத்தில்… கண்ணனும் திரெளபதிக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்ட தருமன் மனம் துணுக்குற்றான். ‘நம்முடைய விருப்பப்படி சமாதானமாகப் போக இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! எப்படியும் போரை உண்டாக்கி விடுவார்கள் இவர்கள்’ என்று வருந்தினான். “சினங் கொள்ளுகின்றவர்கள், முனிவர்கள், நிறைகுணமற்றவர்கள், நோயாளிகள், அறிவிலிகள், அறத்தை உணராதவர்கள், பெண்கள் இவர்களெல்லாம் இருக்கும் இடத்தில் அரசியலைப் பற்றிய பிரச்னைகளைக் கலந்தாலோசிக்கக் கூடாது எனப் பெரியோர் கூறுவர். அது இப்போது பொருத்தமாகிவிட்டது!” என்று கூறிவிட்டுக் கண்ணனை நோக்கினான், தருமன். மந்திராலோசனை முடிந்தது. பாண்டவர்கள் சார்பாகக் கண்ணன் சமாதானத் தூது புறப்பட்டான். பலவகை மரியாதைகளோடு கண்ணனைத் தூதனுப்பினர் பாண்டவர்கள். கண்ணன் அத்தினாபுரத்தை அடைந்து நகருக்கு வெளியே உள்ள சோலை ஒன்றில் தங்கினான். தன் வரவைத் துரியோதனனுக்குச் சொல்லி அனுப்பினான். துரியோதனன் கண்ணனை வரவேற்று எதிர் கொண்டழைத்து வருவதற்குச் சிறப்பான ஏற்பாடுக்களைச் செய்தான். “துரியோதனா! நீ உயர்குலத்தில் பிறந்த பேரரசன். கண்ணன் இடைக்குலத்தில் தோன்றிய சிற்றரசன். அவனை நீ போய் எதிர்கொண்டழைத்து வருவது உன் பெருமைக்கு இழுக்கு. அழைப்பும் வரவேற்பும் அவனுக்கு வேண்டாம். அவன் தானாகவே வரட்டும்.” -என்று சகுனி தடுத்து விட்டான். இதனால் துரியோதனன் வரவேற்பு ஏற்பாடுகளைக் கலைத்துவிட்டுத் தானும் போகாமல் இருந்துவிட்டான். ஆனால் வீட்டுமன். விதுரன், துரோணன் முதலிய பெரியோர்கள் கண்ணனை வரவேற்றுக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். துரியோதனன் தன்னை அவமதிக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட கண்ணன், வேண்டுமென்றே அவன் அரண்மனைக்குப் போகாமல் விதுரனுடைய அரண்மனையில் போய் விருந்தினனாகத் தங்கினான். கெளரவர்கள் நிலை பற்றி விதுரனைக் கலந்தாலோசித்தான். “துரியோதனாதியர்கள் எதற்கும் அஞ்சாத தீயவர்கள். சிந்தித்துப் பார்க்கும் அறிவும் அற்றவர்கள். ஆகவே அவர்களிடம் சமாதானத்தை நாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. போர் செய்து கொன்று குவித்தாலொழிய அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். பாண்டவர்களால் சாக வேண்டுமென்பது அவர்கள் தலையெழுத்தானால் அது வீண் போகுமா?” என்றார் விதுரன். “துரியோதனாதியர்கள் மட்டுமென்ன? உலகத்தில் எல்லாருமே கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கிற கைக்குத்தான் பயப்படுகின்றார்களே ஒழிய அணைக்கிற கைக்குப் பயப்படுவதில்லை. உலக இயற்கை அப்படி இருக்கிறது. என்ன செய்யலாம்?” -அன்று முழுவதும் கண்ணன் விதுரன் மாளிகையிலேயே தங்கியிருந்தான். வேறெங்கும் போகவில்லை. மறுநாள் காலை பொழுது புலர்ந்ததும் நீராடல் முதலிய காலைச் செயல்களை முடித்துக் கொண்டு துரியோதனன் அவைக்குப் புறப்பட்டான். துரியோதனனுடைய அவை அன்று கோலாகலமாகக் கூடியிருந்தது. கண்ணன் அங்கு வருவதற்கு முன்பே அவையிலிருந்தவர்களுக்கு ஒரு கட்டளையை வற்புறுத்தி இட்டிருந்தான் துரியோதனன்; “கண்ணன் அவைக்குள் நுழைந்ததும் அவையிலுள்ள எவரேனும் எழுந்திருந்தோ, வரவேற்றோ, எதிர்கொண்டு வணங்கியோ மரியாதை செய்தால் அவர்கள் வாழுமிடம் தீ வைத்து அழிக்கப்படும். கண்ணனுக்கு யாரும் மரியாதை செய்யக் கூடாது.” கண்ணன் தனியனாக அந்தப் பேரவைக்குள் நுழைந்தான். துரியோதனனுக்குப் பயந்து பெரும்பான்மையானவர்கள் மரியாதையும் வரவேற்பும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருந்து விட்டனர். ஆனால் விதுரன், வீட்டுமன், முதலியவர்கள் அவனுடைய அசட்டுக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் கண்ணனை எதிர் கொண்டழைத்து வணங்கி வரவேற்றனர். துரியோதனன் தன் அரியணையிலிருந்து எழுந்திருக்கவுமில்லை. “கண்ணா உட்கார்!” என்று மரியாதைக்குக் கூடச் சொல்லவில்லை. கண்ணன் தானாகவே ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தான். “நான் அரசாளும் தலைநகரத்திற்கு நீ நேற்றே வந்திருக்கிறாய்! ஆனால் என் வீட்டுக்கு வந்து விருந்தாளியாகத் தங்கவில்லை. இது என்னை நீ வேண்டுமென்றே அவமதித்ததாகும்” என்று இரைந்து கத்தினான் துரியோதனன். “துரியோதனா! அழைத்தால் தானே விருந்தினர்கள் வந்து தங்குவார்கள்? நான் இந்த நகரத்திற்கு வந்திருப்பது தெரிந்தும் நீ என்னை இலட்சியம் செய்யவில்லை. விதுரன் முதலியவர்கள் என்னை விரும்பி வரவேற்றார்கள். ஆகையால் தான் அங்கு விருந்தினனாகத் தங்கினேன்.” “இது போலிக் காரணம்! உண்மையில் நீ என்னை அலட்சியம் செய்கிறாய். வேறொன்றும் இல்லை.” “நான் அப்படியே செய்தாலும் அதில் தவறு என்ன? நீ செய்வதைத் தானே நானும் செய்கிறேன். நான் பாண்டவர்களின் தூதனாக வந்திருக்கிறேன். உன் வீட்டில் விருந்துண்டு விட்டு உனக்கு மாறாகப் பாண்டவர்களை ஆதரித்துப் பேச வேண்டியிருக்கலாம். எனவேதான் நான் உன்பால் தங்க விரும்பவில்லை. உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்பவர்கள், பெரியோர் அறிவுரைகளை மீறியவர்கள், நன்றி மறந்தவர்கள், இவர்கள் பழி சூரியனும் சந்திரனும் உள்ள அளவு நீங்காது…” “அதெல்லாம் இருக்கட்டும்! நீ வந்த காரியமென்ன? அதை முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.” “வேறு ஒன்றுமில்லை! எல்லாம் உனக்குத் தெரிந்த காரியம்தான். பாண்டவர்களின் வனவாசம் முடிந்து விட்டது. மிகுந்த துன்பமுற்று நாளைக் கழித்து விட்டு வந்திருக்கி றார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டைத் திருப்பிக் கொடுப்பது தான் ஒழுங்கு.” “அது நடக்காது ! சூதாடித் தோற்றுப் போன நாட்டை மீண்டும் பெறுவது முடியுமா? யார் என்னைப் பழித்தாலும் சரி, நான் பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன். எப்படிப்பட்ட பெரும்போர் இதனால் ஏற்படுவதாயிருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இழந்தவை இழந்தவையே! இனிக் கிடைக்கப் போவதில்லை !” “போனால் போகிறது. முழு நாட்டையும் கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களுக்குச் சேர வேண்டியதில் சரி பாதியாவது கொடு போதும்.” “கொடுப்பதென்ற பேச்சே நம்மிடத்தில் கிடையாது. பாண்டவர்களின் ஆசை பயனில்லாதது.” “துரியோதனா! பாண்டவர்களின் பகை பொல்லாதது! ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களையாவது ஆளக் கொடு. அவர்கள் அதைக் கொண்டாவது திருப்தியடையட்டும்.” “ஐந்து ஊர்களின்றி ஐந்து வீடுகளைக் கொடுத்தாலும் அவர்கள் மாட்டேன் என்றா சொல்லிவிடப் போகிறார்கள்? ஆனால் இப்போது ஐந்து வீடுகளைக் கூட நான் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை.” “கெளரவர் தலைவா! ஐந்து வீடுகளைத் தருவது உனக்கு அவ்வளவு கடினமாக இருக்காது, அவற்றையாவது கொடு!” “கண்ணா ! உலகம் ஆண்மையும் வலிமையும் உடையவர்களுக்குச் சொந்தம். மற்றவர்கள் அதை அடையவோ, ஆளவோ, முயல்வது பயனற்றது.” “நல்லது! உன்னுடைய தத்துவ விளக்கம் எனக்குத் தேவையில்லை. முடிவாகப் பாண்டவர்களோடு போர் செய்வதற்காகவாவது இணங்கு. உனக்கு உன்னைப் புரிந்து கொள்ளச் செய்ய அது தான் சரியான வழி. யார் வலியவர், யார் எளியவர்? என்பதைப் போரில் பார்த்து விடுவோம்.” “நீயா இப்படி வீரமாகப் பேசுகிறாய்? இடைக்குலத்தில் பிறந்து ஆய்ச்சியர்களிடையே சிறுவயதில் நீ உற்ற துன்பங்களெல்லாம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தாய்? மத்தால் அடிப்பட்டும் உரலில் கட்டுண்டும் எத்தனை எத்தனை வேதனை அடைந்தாய்? இப்போது என்னைப் பாண்டவர்களோடு போருக்கழைக்கும் தூதுவனாக வந்திருக்கிறாய்! நான் போருக்குப் பயந்தவனில்லை. அந்தப் பாண்டவர்களை விட நாங்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? ஒரு தாய்க்கும் ஐந்து தந்தைகளுக்குமாகப் பிறந்து ஐவரும் ஒரு பெண்ணை மணந்து கொண்டவர்கள் தாமே பாண்டவர்கள்? அவர்களுக்கு நாடு ஒரு தேடா? ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?” இவ்வாறு பலவிதமாகக் கண்ணனையும் பாண்டவர்களையும் தூற்றிக் கொண்டே போனான் துரியோதனன். கண்ணன் சிரித்த முகம் மாறாமல் பொறுமையோடு யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு விதுரனையும் அழைத்துக் கொண்டு அவனோடு அவன் மாளிகைக்குச் சென்றான். ‘வீமனும் அர்ச்சுனனும் போர் செய்ய ஆசை கொண்டிருப்பது வீண் போகாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் அவன். கண்ணனை மாளிகையில் கொண்டு போய் விட்டு விட்டு, விதுரன் மீண்டும் அவைக்கு வந்து சேர்ந்தான். துரியோதனனின் கோபம் முழுவதும் விதுரன் மேல் பாய்ந்தது. விதுரன் தனக்கு தந்தை முறையுள்ளவன் என்பதையும் மறந்து அவையெல்லாம் கேட்கும்படியாக அவனை மரியாதை மீறித் தூற்றலானான்:- “நீ எப்போதுமே நன்றி கெட்டவன். என் எதிரிகளை ஆதரித்து அவர்களிடமிருந்து வந்திருக்கும் அந்த இடைப்பயலுக்குப் புகலிடம் அளித்திருக்கிறாய். நீ பொருள் கொடுத்தவர்களுக்கெல்லாம் தன் நலத்தை விற்கும் விலைமகளைப் போலக் கேவலமானவன். நீ என்னிடம் உணவு உண்டு எனக்கே துரோகம் செய்கிறாய்.” இதைக் கேட்டு விதுரனின் பொறுமை எல்லை மீறி விட்டது. அவன் ஆத்திரத்தோடு வில்லும் கையுமாக எழுந்தான். “அவையோர்களே! இப்போது இவன் மேல் எனக்கிருக்கும் ஆத்திரத்தில் இவன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன். ஆனால் ‘மகனைக் கொன்ற தந்தை’ என்று பழி ஏற்படுமே என அஞ்சுகிறேன். என் நன்றியையும் நற்பண்புகளையும் பற்றி முட்டாளாகிய உனக்குத் தெரியாவிட்டாலும் இங்குள்ள பெரியோர்களுக்கு நன்றாகத் தெரியும். இதோ இப்போது செய்கின்ற சப்தத்தைக் கேட்டுக் கொள்! நாளை ஏற்படப் போகிற போரில் நிச்சயமாக உன் பொருட்டு வில் எடுத்து உதவமாட்டேன். இது சத்தியம்” -இவ்வாறு கூறிக் கொண்டே தன் கையிலிருந்த வில்லை இரண்டாக முறித்துத் துரியோதனன் முன் எறிந்து விட்டுத் திரும்பிப் பாராமல் அங்கிருந்து வெளியேறித் தன் மாளிகைக்குச் சென்றான் விதுரன். அவ்வளவுதான் எரிமலை குமுறி ஓய்ந்து விட்டது!  கண்ணன் திரும்பி வரல் விதுரன் துரியோதனனைப் பழித்து வில்லை முறித்துப் போட்டுவிட்டுப் போன பின் அவையில் சிறிது நேரம் அசாதாரணமான ஒருவகை அமைதி நிலவியது. விதுரனைப் பகைத்துக் கொண்ட துரியோதனனின் அறியாமையை எண்ணி யாவரும் கலங்கினர். துரோணர், வீட்டுமன், முதலியவர்கள் துரியோதனன் மேல் அருவருப்புக் கொண்டனர். “உனக்கிருந்த ஒரே ஒரு நல்ல வலிமை வாய்ந்த துணையையும் நீ இழந்து விட்டாய். விற்போர் செய்வதிலும் ஏனைய கலைஞானங்களிலும் வல்லவனான விதுரனைப் பகைத்துக் கொண்ட போதே உன் தோல்வி உன்னை நெருங்கிவிட்டதென்பதை மறந்து விடாதே. பாண்டவர்கள் உன்னைச் சுலபமாக வெல்லும்படி நீயே செய்து கொண்டு விட்டான்” வீட்டுமன் மனக் கொதிப்போடு கூறினான். வீட்டுமன் இடித்துக் காட்டிப் பேசிய பேச்சு துரியோதனனுடைய ஆத்திரத்தைக் கிளறி விட்டுவிட்டது. “விதுரன் என்னை விட்டுவிலகியதனால் எனக்கு ஒரு குறைவும் வந்து விடவில்லை. விதுரனைக் காட்டிலும் சிறந்த முறையில் விற்போர் செய்ய வல்லவனான கர்ணன் என்னோடுதான் இருக்கிறான். துரோணரும் அசுவத்தாமனும் இருக்கிறார்கள். வயதிலும் அனுபவ அறிவிலும் மூத்தவராகிய நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் நம்மைச் சேர்ந்த கோடிக்கணக்கான சிற்றரசர்கள் இருக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்! விதுரன் செய்தது தவறா இல்லையா? என் பகைவர்களிடமிருந்து தூதனாக வந்திருப்பவனை இவன் வரவேற்று உபசரித்து விருந்தளித்தது நியாயமா? எனக்கு நன்றி செய்ய மறந்து அந்த இடையனை உபசரித்து மகிழ்ந்த இவனை நான் தூற்றியது மட்டும் குற்றமாகிவிடுமா?” துரியோதனனின் இந்தப் பேச்சுக்கு வீட்டுமன் மறுமொழியே கூறவில்லை. துரோணர் முதலிய மற்றப் பெரியவர்களும் பேசாமல் இருந்து விட்டனர். கர்ணன் தான் அவன் பேச்சை ஆதரித்துப் பேசினான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் துரியோதனனை ஆதரித்துப் பேசுவதே அவன் வழக்கம். “விதுரனுடைய கைவில் முறிந்து விட்டதே என்று இங்கு யாரும் கவலைப்பட வேண்டாம். பாண்டவர்களை முறியடித்துத் துரத்த என் கைவில் ஒன்றே போதுமானது. விதுரனை இழந்ததனால் பெரிய நஷ்டம் என்று வீட்டுமர் கதைக்கிறார். அர்ச்சுனனை எதிர்க்க நம் பக்கம் ஆளே இல்லை என்கிறார். அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே என்னிடத்தில் நாகாஸ்திரம் வளர்ந்து வருகிறது. அர்ச்சுனனை அழித்துப் பாண்டவர்களை ஓட ஓட விரட்டித் தோல்வியுறச் செய்ய நான் ஒருவனே போதும்.” கர்ணனின் அகம்பாவம் மிகுந்த இந்தப் பேச்சு வீட்டுமன் மனத்தைச் சற்றே பாதிக்கத்தான் செய்தது. “இந்திரனால் வெல்லமுடியாத அரக்கர்களை எல்லாம் வென்று வாகைசூடி வானுலகத்தின் ஏகோபித்த புகழை முற்றிலும் பெற்று வந்திருக்கிறான் அர்ச்சுனன். அவன் உனக்குத் தோற்பான் என்று நீ கனவு காண்பது. ‘சந்திரன் விடிவெள்ளியை விடச் சிறிது’ என்று எண்ணுவது போலப் பேதைமை நிறைந்தது. அர்ச்சுனனும் நீயும் நேருக்கு நேர் நின்று போர் செய்தால் ‘நீ வில்லை இதற்கு முன் தொட்டிருக்கிறாய்’ என்று கூடக் காண்பவர்கள் நம்பமாட்டார்கள்” என்றான் வீட்டுமன். “நீங்கள் எல்லாம் நன்றியுள்ள மனிதர்கள் தாமா? துரியோதனன் இட்ட சோற்றை உண்டு வளர்ந்து விட்டு துரியோதனனுக்கே துரோகம் பேசுகிறீர்களே? விதுரனைப் போலவே நீயும் பாண்டவர்களை ஆதரிக்கிறாய்! ‘எனக்கு விற்போரே தெரியாது; நான் கற்றுக் குட்டி’ என்று இகழ்கிறாய்! அர்ச்சுனன் மட்டும் என்ன? அவனினும் சிறந்த வில்லாளர்களை வேண்டுமானால் என்னோடு போருக்கு அனுப்பிப்பார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளையே என் வில்லுக்குப் பயப்பட வைத்தவன் நான். கேவலம்; இந்தப் பாண்டவர்கள் எம்மாத்திரம்?” என்று கர்ணன் மீண்டும் நெருப்பைக் கக்கினான். ஆனால் இம்முறை வீட்டுமன் பதிலே கூறவில்லை. கர்ணனின் பேச்சு துரியோதனனை மகிழ்வித்தது. நீண்ட நேர அமைதிக்குப் பின்னர் அவை அன்றைக்கு இவ்வளவில் கலைந்தது. அவையில் துரியோதனனைப் பகைத்துக் கொண்டு வில்லை முறித்துவிட்டு வந்த விதுரனும், கண்ணபிரானும் தனிமையில் சந்தித்தனர். கண்ணன் ‘அவையில் கோபம் கொண்டதற்கு என்ன காரணம்’ என்று விதுரனை விசாரித்தான். ‘ஆராய்ச்சி அறிவு இல்லாதவர்கள், அமைச்சர்கள் சொற்களைக் கேட்காதவர்கள், நாவடக்கமில்லாதவர்கள் ஆகியவர்களோடு பழகவே கூடாது. தனக்குத் தோல்வியே வராது என்றும் பாண்டவர்கள் தாம் நிச்சயமாகத் தோற்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான் துரியோதனன், உன்னையும் உன்னை வரவேற்று விருந்தினனாகப் பேணிய குற்றத்திற்காக என்னையும் அளவு கடந்து அவன் இழிவாகப் பேசினான். என்னால் பொறுக்க முடியவில்லை. இனி இப்படிப் பட்டவன் பழக்கமே வேண்டாம் என்று கருதி வில்லை முறித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன்." “இதுவும் ஒருவிதத்தில் நன்மைக்குத்தான். துரியோதனாதியர்கள் பக்கம் நீ இல்லையென்றால் பாண்டவர்கள் சுலபமாக அவர்களைத் தோற்கச் செய்து விடுவார்கள். தீ பற்றி எரிய நெருப்பு, விறகு, நெய், எல்லாம் இருந்தாலும் காற்றில்லாவிட்டால் பயனில்லை. சுலபமாக அவித்து விடலாம். நீ இல்லாத கெளரவர்சேனை காற்றில்லாத நெருப்புப் போல ஆகும். பாண்டவர்கள் அதைச் சீக்கிரமே அணைத்துச் சின்னாபின்னமாக்கி விடப் போகிறார்கள்.” விதுரனைப் பார்த்து மகிழ்ச்சி நிரம்பிய மனத்தோடு கண்ணன் இப்படிக் கூறினான். வந்த இடத்தில் தூது வேலை முடிந்து விட்டது. ஆனால் கண்ணன் தூது வேலையைத் தவிர வேறு சில வேலைகளையும் அங்கே செய்ய வேண்டியிருந்தது. அத்தினாபுரத்திலேயே தங்கியிருக்கும் குந்திதேவியைச் சந்தித்து, அவள் மூலம் அந்தரங்கமான சூழ்ச்சி ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதற்காகக் கண்ணன் விதுரனிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தியைச் சந்திக்கச் சென்றான். குந்தி அவனை அன்புடன் வரவேற்று, “வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தாள். “உன் புதல்வர்கள் சூதாடி இழந்த நாட்டை மீண்டும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தூது வந்தேன். தூது முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. கடைசியில் பாண்டவர்களோடு போர் செய்ய வேண்டிய நிலைக்குத் துரியோதனாதியர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். அது போகட்டும், தூது முயற்சிதான் தோற்றுவிட்டது. உன்னிடம் வந்த காரியமாவது வெற்றியாக முடிகிறதா பார்க்கிறேன்”. “அப்படி நான் வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக் கூடிய காரியம் என்ன இருக்கிறது?” “குந்தீ! அந்தக் காரியத்தைக் கூறுவதற்கு முன்னால் அதற்கு அவசியமான சில பழைய நிகழ்ச்சிகளை உனக்கு நினைவூட்ட வேண்டியவனாக இருக்கிறேன். அவை உன் மனத்தைப் புண்படுத்தக் கூடியனவாய் இருந்தால் என்னை மன்னித்து விடு. துருவாச முனிவர் அருளால் விரும்பிய தேவர்களைக் கூடி மகிழும் வரம் கன்னிப்பருவத்திலே உனக்குக் கிடைத்ததல்லவா? அப்போது நீ முதன் முதலாகக் கதிரவனை அழைத்து அவனோடு கூடி மகிழ்ந்தாய். அதன் பயனாகப் பிறந்த குழந்தையை ஊர்வம்புக்கு அஞ்சி ஒரு பெட்டியில் இட்டு ஆற்றில் மிதக்க விட்டுவிட்டாய். ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை அத்தினாபுரத்தில் தேர்ப்பாகன் சூதனும் அவன் மனைவியும் கண்டெடுத்து வளர்த்தனர். அதே சமயத்திலே திருதராட்டிரனுக்கத் துரியோதனாதியர் மக்களாய்ப் பிறந்து வளர்ந்தனர். தேர்ப்பாகன் வளர்த்த மகன் அரண்மனைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் துரியோதனனுக்கும் அவனுக்கும் உயிர்த்தோழமை ஏற்பட்டது. துரியோதனன் பெரியவனாகி முடிசூட்டிக் கொண்டபோது தன் நண்பனான தேர்ப்பாகன் மகனையும் அங்க நாட்டிற்கு அரசனாக முடிசூட்டிச் சிறப்புச் செய்தான். அன்றும் இன்றும் துரியோதனாதியர்க்கு வலது கை போல விளங்கி வரும் அந்தத் தேர்ப்பாகனின் வளர்ப்பு மகனான ‘கர்ணன்’ யார் தெரியுமா? உனக்கும் கதிரவனுக்கும் பிறந்து நீ பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்ட அந்தப் பழைய குழந்தைதான்! உனக்கும் உன் மகனான கர்ணனுக்கும் உலகம் முழுவதற்கும் இதுவரை தெரியாத இந்த உறவின் இரகசியத்தை இப்போது நானே உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியத்தைச் சந்தர்ப்பம் உண்டாக்கி விட்டது.” குந்தியின் கண்கள் வியப்பால் அகன்று மலர்ந்தன. புருவங்கள் மேற்புறமாக வளைந்து நிமிர்ந்து நெற்றி விளிம்பைத் தொட்டன. “ஆ! அப்படியா? கர்ணன் என் மூத்தமகனா?” -மெல்ல மெல்ல அவள் வாயிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன. அவள் மனவெளியில் பிள்ளைப் பாசம் என்ற இனிய தென்றல் சுகமாக வீசுவது போலிருந்தது. கண்ணன் தன் பேச்சை மேலும் தொடர்ந்தான். “குந்தீ! உனக்கு ஏற்படுகிற ஆச்சரியத்தில் தொடர்ந்து நான் கூறப்போகிற காரியத்தை மறந்து விடாதே. நான் இதுவரை கூறியன எல்லாம் இனிமேல் கூறப்போகின்றவற்றுக்கு முன்னுரையே தவிர வேறில்லை. இனிமேல் கூறப்போவதுதான் முக்கியமானது.” “கூறுங்கள்! கேட்கிறேன்.” “என் வேண்டுகோளின்படி இப்போது நீ கர்ணனிடம் போய் வர வேண்டும். அவனிடம் சென்று நீதான் அவனுக்குத் தாய் என்ற ரகசியத்தைச் சொல், ‘பாண்டவர்கள் உன் தம்பியர்கள், நீ இனிமேல் துரியோதனாதியர்களோடு இருப்பது முறையல்ல; பாண்டவர்களோடு சேர்ந்துவிடு!’ -என்று அழைத்துப் பார். அநேகமாகக் கர்ணன் அதற்கு இணங்க மாட்டான். காண்டவ தகனத்தின் போது  அர்ச்சுனனைப் பகைத்துக் கொண்டு சென்ற பாம்பு ஒன்று கர்ணனிடம் வளர்ந்து வருகிறது. அந்தப் பாம்பை அஸ்திரமாக்கிக் கர்ணன், அர்ச்சுனனைக் கொல்ல எண்ணியிருக்கிறான். நீ கர்ணனிடம், ‘நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் அர்ச்சுனனை நோக்கி எய்யக் கூடாது’ என்று ஒருவரம் வாங்கிக் கொண்டு திரும்பிவிடு!” “கண்ணா! முன்பே பல நாட்களுக்கு முன்னால் நீ இந்த உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாதா? அப்போதே அவனைப் பாண்டவர்கள் பக்கம் சேர்த்திருப்பேனே நான்? இப்போது போர் ஏற்பட இருக்கின்ற இந்த நிலையில் திடீரென்று அவனைத் துரியோதனாதியர்களை விட்டு நன்றி மறந்து வரச் சொன்னால் அவன் இணங்குவானா? நீ வரம் கேட்டுக் கொண்டு வரச்சொல்வதைப் பார்த்தால் போரில் கர்ணன் அர்ச்சுனன் கையால் இறக்க வேண்டும் என்றல்லவா தெரிகிறது. இவ்வளவு நாட்களுக்குப் பின் மகனைக் காணச் சென்று அவன் இறப்பதற்குக் காரணமான ஒரு வரத்தை நானே அவனிடம் கேட்க வேண்டும் என்றா சொல்கிறாய்?” “ஆமாம்! குந்தீ! வேறு வழியே இல்லை. கேட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு கர்ணனுடைய உயிர் போகாவிட்டால் உன் மக்கள் ஐந்து பேருடைய உயிரையும் அவன் போக்கி விடுவான். உன் மக்கள் ஐந்துபேர் வாழ வேண்டுமானால் வெற்றிப் பெற வேண்டுமானால், நீ கர்ணனிடம் போய் இந்த வரத்தைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் சொல்வதைச் சொல்லியாயிற்று. இனி உன் கடமையை நீ செய்ய வேண்டியது தான்” -இவ்வாறு கூறிவிட்டுக் கண்ணன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு விதுரன் மாளிகைக்குச் சென்றான். கண்ணன் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றி விடுவதென்ற முடிவுக்கே குந்தியும் வந்து சேர்ந்தாள். இங்கு நிகழ்ச்சிகள் இவ்வாறிருக்க அங்கே அரண்மனையில் துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் தூதுவனாக வந்திருக்கும் கண்ணனைத் திரும்பிப் போகவிடாமல் அத்தினாபுரத்திலேயே கொலை செய்து விடுவதற்கான சூழ்ச்சிகளில் இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்ச்சிக்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காகத் தனது மந்திராலோசனைச் சபையைக் கூட்டியிருந்தான் துரியோதனன். திருதராட்டிரன், கர்ணன் மற்ற அமைச்சர்கள், துரியோதனனுடைய சகோதரர்கள் ஆகியோர் இந்த ஆலோசனையில் அங்கம் வகித்தனர். “பாண்டவர்கள் இவ்வளவு காலம் கானகத்தில் வசித்து விட்டு வந்த பிறகு இப்போது திடீரென்று நாடு கேட்கத் தூண்டிவிட்டவன் யார் தெரியுமா? எல்லாம் இந்த இடைப்பயலான கண்ணனின் வேலைதான். அவன் இன்னும் இங்கேதான் நம் தலைநகரில் திரிந்து கொண்டிருக்கிறான். அவனைச் சரியானபடி தண்டித்து விட வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று சபையோரை நோக்கிக் கேட்டான் துரியோதனன், மகன் கூறியவற்றைக் கேட்ட குருடனாகிய திருதராட்டிரன் அதை ஆதரித்தே தானும் பேசினான். “வேறென்ன செய்வது? அந்தக் கண்ணன் இந்த ஊரை விட்டு வெளியேறுவதற்குள் வளைத்துக் கொண்டு ஆளைக் கொன்று தீர்த்து விட வேண்டியதுதான்.” திருதராட்டிரன் இவ்வாறு கூறவும் துரியோதனாதியர்களுக்குள்ளேயே நற் பண்பு உடையவனும் இளைஞனுமாகிய விகருணன் என்பவன் “பெரியோர்களாகிய நீங்கள் ‘தூதுவனை கொல்லக் கூடாது’ -என்ற அறவுரையையும் மறந்து இப்படி வஞ்சகத்திட்டத்தில் இறங்கலாமா? நம்முடைய தலைநகரைத் தேடி வந்தவர்களை நாம் கொல்வது தர்மமாகுமா? கண்ணன் மாமாயன். நீங்கள் கோடிக் கணக்கில் ஒன்று கூடி வளைத்துக் கொண்டாலும் அவனை நெருங்க முடியாது. கண்ணன் என்ற அந்த இடையனுக்குள் உள்ள சக்தியை அறிந்து கொள்ளாமல் துன்புறாதீர்கள்” -என்றான். இதைக் கேட்டதும் விகருணனுக்கு நேர்மாறான பண்புள்ளவனான துச்சாதனன் சினம் கொண்டு விட்டான்.  “அண்ணா ! இந்த விகருணனைப் போன்ற சிறு பிள்ளைகளை எல்லாம் நீ இங்கே ஆலோசனை சபைக்குள்ளே எதற்காக அனுமதித்தாய்? இவனை உள்ளே விட்டதனால்தானே இப்படிச் சிறு பிள்ளைத்தனமாகப் பேசுகிறான்? இனிமேல் யாரது யோசனையும் தேவையில்லை. வாருங்கள்! இப்படியே ஆயுதங்களுடன் போய் விதுரன் மாளிகையை வளைத்துக் கொள்வோம். அங்கே தான் கண்ணன் தங்கியிருக்கிறான். மாளிகையைச் சுற்றித் தீ வைத்துவிட்டால் கண்ணன் சாவது உறுதி” என்று துச்சாதனன் கூறி முடித்தான். உடனே கர்ணன் “அவ்வளவு முயற்சி எதற்கு? வீட்டை வளைத்துக் கொண்டு நெருப்பு வைக்காமலே ஓரே ஓர் அம்பினாலேயே நான் அவனைக் கொன்று விடுவேனே? இன்றிரவே இச்செயலை நிறைவேற்றி விடுவோம். புறப்படுங்கள்” என்றான். யாவருக்கும் இறுதியாகப் பேசிய சகுனி சாத்தியமானதொரு யோசனையைக் கூறினான். “கண்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டியது அவசியம் தான். இவனை இப்படியே தப்பவிட்டுவிட்டால் இவன் போய்ப் பாண்டவர்களை இன்னும் தூண்டி விடுவான். பாண்டவர்களோடு நாம் போர் செய்ய நேரிட்டால் நிச்சயமாக நமக்குத்தான் தோல்வி ஏற்படும். சந்தேகமே இல்லை. ஆகையால் கண்ணன் இங்கிருந்து திரும்பி உயிருடன் போகவிடாமல் தடுக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்காகத் தூது வந்திருக்கின்ற அவனை வெளிப்படையாகக் கொன்று மக்கள் கூறுகிற பழிக்கும் பாவத்துக்கும் நாம் ஆளாகிவிடக் கூடாது. செய்வதை யாருமறியாமல், யார் செய்ததென்றே தெரியாமல் வஞ்சகமாகச் செய்துவிட்டால் ஒரு வம்புமில்லை இதோ, நான் கூறுகிறேன் இப்படிச் செய்து விட்டால் என்ன? கண்ணனை நம் வீட்டிற்கு விருந்தினனாகக் கூப்பிடுங்கள். அவன் உட்கார்வதற்கென்றே சிறப்பாக ஓர் ஆசனம் அமையுங்கள். அந்த ஆசனத்தின் அடியில் மேலே தெரியாது மறைவாக ஒரு பெரும் பள்ளத்தை வெட்டுங்கள். அவ்வாறு வெட்டிய பள்ளத்தில் ஆயுதந்தாங்கிய வீரர்களையும் மல்லர்களையும் மறைந்திருக்கச் செய்ய வேண்டும். கண்ணன் வந்து ஆசனத்தில் உட்கார்ந்ததும் ஆசனம் முறிந்து விழும்படி மெல்லிதாக இருக்க வேண்டும். ஆசனம் முறிந்து கண்ணன் பள்ளத்திற்குள் விழுந்ததும் அங்கிருப்பவர்களைக் கொண்டு அவனை இரும்புச் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் பிணித்து யாருக்கும் தெரியாமல் ஒரு சிறைச்சாலைக்குள் அடைத்து விட வேண்டும்.” -சகுனியின் இந்தத் திட்டத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டார்கள். மறுநாளே கீழே பள்ளமான நிலவறை அமைக்கப்பட்டு அதன் மேல் மெல்லிய மூங்கில் பிளாச்சுக்களால் ஒரு ஆசனம் போல் கட்டப்பட்டிருந்தது. நிலவறைக்குள் தயாராக வீரர்களும் மல்லர்களும் ஆயுதங்களுடன் மறைந்து இருந்தனர். சூழ்ச்சியின் தோல்வி கண்ணன் விருந்துக்கு அழைக்கப்பட்டான். எல்லா நன்மை தீமைகளையும் முக்காலங்களோடும் தொடர்புபடுத்தி உணரவல்ல அந்த மாயன் ஒன்றுமே தெரியாதவனைப் போல அந்த விருந்துக்கு வரச் சம்மதித்தான். கண்ணனை விருந்தினனாக ஏற்று உபசரிப்பதற்கென்று துரியோதனனுடைய அவை கூடியிருந்தது. கண்ணன் தன் பரிவாரங்களுடனும் தன்னைச் சேர்ந்த சிற்றரசர்களுடனும் வந்தான். கண்ணன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் அவனோடு உள்ளே விடக் கூடாதென்பது வாயிற் காவலர்களுக்குத் துரியோதனன் இட்டிருந்த கட்டளை. அதன்படி உடன் வந்த எல்லோரையும் வெளியே தடுத்து நிறுத்திவிட்டுக் கண்ணனை மட்டுமே உள்ளே விட்டான் காவற்காரன். கண்ணன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான். கண்ணனிடம் பேரன்பு கொண்டவன் போல நடித்த துரியோதனன், போலி வணக்கம், உபசாரங்கள் முதலியவற்றைச் செய்து அவனை வரவேற்றான். “இதோ; இது விருந்தினராகிய தங்களுக்கென்றே அமைக்கப்பட்ட ஆசனம். தாங்கள் இதன்மேல் அமர்ந்து எங்களைக் கெளரவிக்க வேண்டும்” என்று நிலவறையின் மேல் அமைக்கப்பட்டிருந்த வஞ்சக ஆசனத்தைக் கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான். அவன் அவ்வளவு விசேடமாக அதைப் பற்றிக் கூறிய போதே கண்ணனுக்கு ‘அந்த ஆசனத்தில் தான் தன்னைக் கவிழ்க்கின்ற வஞ்சகச் சூழ்ச்சி மறைந்திருக்கிற தென்பது’ புரிந்து விட்டது! ஆனாலும் அவனது வேண்டுகோளை மறுக்க விரும்பாதவன் போல் அந்த ஆசனத்தின் மேல் உட்காருவதற்காக ஏறினான். அவன் கால்கள் சரியாக அதன் மேல் பதியக் கூட இல்லை. அதற்குன் அது ‘சடசட’ வென்று முறிந்தது. அடுத்த விநாடி கண்ணன் உடல் எங்கோ இருண்ட பள்ளத்தை நோக்கிக் கீழே இழுக்கப்படுவது போலிருந்தது. கண் இமைகள் அசைகிற நேரந்தான் இந்த அவஸ்தை. உடனே தன்னைச் சமாளித்துக் கொண்ட கண்ணன் விண்ணும் மண்ணும், திசைகளும் ஈரேழு பதினாலு புவனங்களும் அடங்காத தன் விசுவரூபத்தை மேற் கொண்டான். பூமியும் ஆகாயமும் ஒரு ஆட்டம் ஆடிக் குலுங்கின. கண்ணன் திருவடிகள் கீழே கீழே அதல பாதாளத்தை நோக்கித் தாழ்ந்தன. சிரம் மேலே வானமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு போயிற்று. நிலவறையில் கிடந்த வஞ்சக வீரர்கள் அந்தப் பரம்பொருளின் காலடியில் கிடந்து நசுங்கினர். அந்த விசுவரூபத்தின் சக்தியைத் தாங்கமுடியாமல் ஈரேழு பதினாலு புவனங்களும் பூகம்பம் ஏற்பட்டது போலக் கிடுகிடு என்று நடுங்கின. கோடானு கோடி உயிர் குலங்களின் ஓலம் ஊழிக் கடல் பொங்குவது போன்ற ஓசையை உண்டாக்கியது. மேலும் அந்த ஓலத்தை நீடிக்கச் செய்து உயிர்களைத் துன்புறுத்தக் கூடாதென்று கருதிய கண்ணன் சிறிது தன் சுய உருவை அடைந்து சிரித்துக் கொண்டே துரியோதனனுக்கு முன்னால் நின்றான். துரியோதனன் தன் சூழ்ச்சி பலியாமல் போனதைக் கண்டு மிரண்டு போனான். அப்படி யிருந்தும் தன் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நடித்தான். சிரித்துக் கொண்டு நின்ற கண்ணனைக் கோபத்தோடு உறுத்துப் பார்த்தான். “ஏ! முட்டாள் மன்னனே! நெருப்போடு நீ விளையாடலாமா? கெட்ட எண்ணத்தோடு என்னைக் கொல்வதற்காக நீ குழி வெட்டியிருந்தாய்! இதே குழிக்குள் உன்னையும் உன் குலத்தையும் உன்னைச் சேர்ந்த சர்வத்தையும் ஆழப் புதைத்து நாசம் செய்ய முடியும் என்னால், அப்படியிருந்தும் எதற்காக இப்போது உங்களைக் கொல்லாமல் விடுகிறேன் தெரியுமா? உங்கள் யாவரையும் கொன்று உங்கள் குலத்தை வேரறுப்பதாகப் பாண்டவர்கள் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சபதம் நிறைவேறாமல் போய்விடக் கூடாதே என்று தான் உங்களை இப்போது உயிருடன் விடுகிறேன். தவிர, ‘உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையே உள்ள பகை காரணமாகப் போர் ஏற்பட்டால் பாண்டவர்கள் சார்பாக ஆயுதமெடுத்து உன்னுடன் போர் புரிவதில்லை’ என்று முன்பே உனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த அவையிலிருந்து வெளியேறினான் கண்ணன். அப்படி வெளியேறும் போது கர்ணனை மட்டும் சைகை காட்டி அழைத்துச் சிறிது தொலைவு தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றான். கர்ணனுடைய அப்போதைய மனநிலையில் அவன் கண்ணனுடன் போயிருக்கமாட்டான். ஆனால் அவனை யறியாமலேயே ஒரு சக்தி அவனைக் கண்ணனோடு இழுத்துக் கொண்டு போயிற்று. ஒரு தனியிடத்துக்கு வந்ததும் கண்ணன் கர்ணனை நோக்கிக் கூறலானான்:- “கர்ணா! இப்போது நான் கூறப்போகிற செய்தியைக் கேட்டு நீ திடுக்கிடாதே. நீ குந்திக்குப் பிறந்த முதல் மகன். பாண்டவர்கள் ஐந்து பேரும் உனக்குத் தம்பிமார்கள். துருவாச முனிவர் உன் தாய்க்குக் கொடுத்த வரத்தால் முதல்  முதலில் கதிரவனைக் கூடி உன்னைப் பெற்றாள் குந்தி, விரிவான விவரங்கள் இன்னும் சிறிது காலத்தில் உனக்கே தெரியும். இப்போது நீ செய்யத்தக்கது உடனே துரியோதனாதியர்கள் கட்சியிலிருந்து விலகிப் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்தால் மூத்தவனாகிய உனக்கே அரசாட்சி கிடைக்கும். நீ இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டு விடாதே.” கண்ணன் கூறியனவற்றைக் கேட்டுக் கர்ணன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு கூறினான்:- “கண்ணா! நன்றியை விட அரச பதவியும் உறவும் பெரியவை அல்ல. ‘கர்ணன் நன்றி கெட்டவன்’ என்ற பழிச்சொல் உலகத்தில் ஏற்பட்ட விட்டு விட மாட்டேன். பிறப்பை உணர்த்தியதற்கும் உணர்ந்து கொண்டதற்கும் நன்றி. ஆனால் உண்ட சோற்றுக்கு உழைக்க விரும்புகிறேன். துரோகம் நினைக்க விரும்பவில்லை. என்னை இதற்கு மேல் வற்புறுத்தாதீர்கள்.” “சரி! நல்லது. நீ போய் வா..’’ கண்ணன் கர்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். கர்ணன் சென்றதும் அசுவத்தாமனை அழைத்து வரச் செய்தான். அசுவத்தாமனைத் தனியிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகாமல் அவைக்கு எதிரிலேயே ஓரிடத்தில் நின்று அவையோர்களுக்குக் கேட்காத மெல்லிய குரலில் அவனோடு உரையாடினான்.”அசுவத்தாமா! இந்தத் துரியோதனாதியர்கள் செய்வது அநியாயம் என்பதை நீயே ஒப்புக் கொள்வாய். காட்டில் வசித்து வந்தபின் உரிய காலத்தில் இவர்கள் பாண்டவர்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை இப்போது ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்? இந்தக் கொடியவர்களுக்குப் போரில் நீ ஒத்துழைக்காதே! உன்னைப் படைத் தலைவனாகச் சொன்னால் ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விடு! கௌரவர்கள் பக்கத்தில் நீ படைத் தலைவனாக மறுத்து விட்டால் பின் பாண்டவர்களுக்குத் தான் வெற்றி" -இப்படிச் சொல்லிக் கொண்டே தந்திரமாகத் தம் கையிலிருந்த மோதிரத்தை வேண்டுமென்றே நழுவ விட்டார். கண்ணனுக்கு பதில் கூறுவதற்காக வாய் திறந்த அசுவத்தாமன் பதிலைக் கூறாமல் மோதிரத்தை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். தன் தந்திரங்களைத்தான் அன்றி வேறெவரும் அறிய முடியாத கண்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். கண்ணன் புன்னகை புரிவதையும் அசுவத்தாமன் கீழே குனிவதையும் துரியோதனனும் அவையினரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். அசுவத்தாமன் மோதிரத்தை எடுத்துக் கண்ணன் கையில் கொடுத்தான். “அசுவத்தாமா! மேலே சூரியனைப் பார்! சுற்றிக் கோட்டையிட்டிருக்கிறது” அசுவத்தாமன் உடனே அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். அவன் சூரியனைப் பார்த்த பின்பே கண்ணன் அவன் கையிலிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டான். இந்த நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார்கள். “இந்த அசுவத்தாமன் கண்ணன் காலடியில் குனிந்து வணங்கி அவன் கைமேல் அடித்துச் சூரியன் சாட்சியாக மேலே அண்ணாந்து பார்த்து ஏதோ சபதம் செய்கிறான். பாண்டவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் அந்தச் சபதம்!” என்று எண்ணிக் கொண்டனர். அவர்கள் இப்படி எண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தானே கண்ணன் இந்த மாய நாடகத்தை நடித்தான். ஆனால், அசுவத்தாமன் பாவம்! அவனுக்கு இந்தச் சூழ்ச்சியெல்லாம் தெரியாது. எல்லாம் தற்செயலாக நடந்ததாகவே எண்ணியிருந்தான். “இனி அசுவத்தாமனை நாம் நம்பமுடியாது. அவனுக்குப் போரில் படைத்தலைமையும் கொடுக்க முடியாது. அவன் நமக்குத் துரோகம் செய்து பாண்டவர்களுக்கு ஆதரவாகக் கண்ணனிடம் ஏதோ வாக்குக் கொடுத்துவிட்டான்” என்று அப்போதே தன் அருகில் இருந்தவர்களிடம் கூறி விட்டான் துரியோதனன். தன் சூழ்ச்சி இனிது நிறைவேறியதை உணர்ந்து கொண்ட கண்ணன், “சரி அசுவத்தாமா! நீ போய் வா! என் வேண்டுகோளுக்கு இணங்க உனக்கு விருப்பமில்லை போலும். இதற்கு மேல் நான் வற்புறுத்த மாட்டேன்” என்று கூறிக் கொண்டே அசுவத்தாமனுக்கு விடை கொடுத்து விட்டுத் தானும் கிளம்பினான். கிளம்பியவன் அங்கிருந்து நேரே விதுரன் மாளிகைக்குச் சென்றான். விதுரன் மாளிகையில் தனியிடம் ஒன்றிலமர்ந்து இந்திரனை எண்ணினான். இந்திரனிடம் அப்போது அவனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. முன்னவனே முன்னின்று சிந்தித்தால் முடியாத காரியமும் உண்டா? கண்ணன் எண்ணிய சிறிது நேரத்திற்கெல்லாம் இந்திரன் அவன் முன் தோன்றி வணங்கினான். கண்ணன் அவனை வரவேற்று அருகில் அமரச் செய்து நலம் விசாரித்த பின் தான் கூறவேண்டிய காரியத்தைக் கூறலானான். “உன் மகன் அர்ச்சுனன் நிகழவிருக்கும் போரில் வெற்றி பெற்று உயிர் பிழைப்பதற்காக இப்போது நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்! கர்ணனிடம் அவன் பிறக்கும்போதே தோன்றிய கவசகுண்டலங்கள் இரண்டு உள்ளன. அந்தக் கவசகுண்டலங்கள் அவனிடத்தில் உள்ளவரை அவனை எவராலும் தோல்வியுறச் செய்ய இயலாது. மேலும் காண்டவவனத்திலிருந்து தப்பிய பாம்பு ஒன்று போரில் அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே கர்ணனிடம் வளர்ந்து வருகின்றது. இந்த அபாயங்களை எல்லாம் கடந்து அர்ச்சுனன் உயிர் பிழைக்க வேண்டுமானால் நீ ஒன்று செய்ய வேண்டும். வேதியனைப் போல மாறுவேடம் பூண்டு கர்ணனிடம் சென்று எப்படியாவது அவனுடைய கவசகுண்டலங்களைத் தானமாக வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். இந்தக் கவச குண்டலங்கள் கர்ணனிடமிருந்து பிரிக்கப்படவில்லையானால் போரில் அர்ச்சுனனால் கர்ணனை வெல்லவே முடியாது” - என்று அர்ச்சுனனின் தந்தை முறை உடையவனான இந்திரனை வேண்டிக் கொண்டான் கண்ணன். இந்திரன் கண்ணனின் வேண்டுகோளின்படி, வேத மோதுகின்ற முதுபெருங் கிழவனாகிக் கர்ணனுடைய மாளிகையை அடைந்தான். எப்போது எவர் வந்து எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கக் கூடியவனான கர்ணன் இந்த முதுபெருங்கிழவனை வரவேற்று உபசரித்தான். “பெரியவரே, உமக்கு எது வேண்டுமானாலும் கேளும்! தருகிறேன்.” “நிச்சயமாக நான் எதைக் கேட்டாலும் நீ கொடுப்பாயா?” “சந்தேகமே வேண்டாம்! கண்டிப்பாகக் கொடுக்கிறேன்.” “அப்படியானால் உன் செவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குண்டலங்கள் இரண்டையும் கழற்றி எனக்குக் கொடு! இன்னும் நீ பிறக்கும் போதே உடன்பிறந்த கவசங்களையும் கொடு!” கர்ணன் திகைத்தான்! என்ன செய்வது? வாக்குக் கொடுத்தபின் மறுக்கவா முடியும்? கிழவருக்குக் கொடுப்பதற்காகக் குண்டலங்களையும் கவசங்களையும் கழற்றத் தொடங்கினான். “கர்ணா! கழற்றாதே. இதில் சூழ்ச்சி நிறைந்திருக்கிறது. இவற்றைக் கழற்றிக் கொடுப்பதனால் உனக்கு நீயே அழிவைத் தேடிக் கொள்கிறாய்” -வானிலிருந்து கதிரவன் எழுப்பிய மேற்படி எச்சரிக்கைக் குரல் அசரீரியாகக் கர்ணன் செவிகளில் கேட்டன. ஆனால் கர்ணன் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. தன் வாக்குத் தவறக்கூடாது என்பதற்காகக் கூறியபடியே குண்டலங்களையும் கவசங்களையும் கிழவனாரிடம் கொடுத்து விட்டான். கொடுக்கக்கூடாதவை எவையோ அவற்றையே கொடுத்துப் பெருமை கொண்ட அந்தக் கொடையாளியின் தியாகம் சகலபுவனங்களிலும் ஓர் வியப்பை உண்டாக்கியது. போலிக் கிழவனாக உருமாறி வந்திருந்த இந்திரன், உடனே தன் சுய உருவில் கர்ணனுக்கு முன் தோற்றமளித்து அவனது செயற்கரிய கொடைத் திறனைப் பாராட்டி வாழ்த்தினான். தனது பாராட்டுக்கு ஓர் அடையாளமாகச் சிறப்பும் வலிமையும் வாய்ந்த வேலாயுதம் ஒன்றைக் கர்ணனுக்குப் பரிசளித்து, “கர்ணா! குருக்ஷேத்திரப் போரில் கடோற்கசனோடு போர் செய்ய நேரிடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த வேல் உனக்குப் பெரிதும் பயன்படும்” -என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான் இந்திரன். தனது எண்ணப்படியே கர்ணனது கவச குண்டலங்கள் பறிக்கப்பட்டதை அறிந்து உவந்தான் கண்ணன். இந்திரன் கண்ணனைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினான். “இந்திரா! இந்தக் கர்ணன் இருக்கிறானே; இவன் கொடை என்ற மகாவேள்விக்காகவே அவதரித்தவன், கவசகுண்டலங்களை இழந்த பின்பு, தான் தோல்வி அடைவது உறுதி -என்று தெரிந்து கொண்டே உனக்காக அவற்றைத் தியாகம் செய்திருக்கிறான் பார்த்தாயா? சாதாரண மக்கள் வெறும் பொருளைத்தானம் செய்யவே பயப்படுகின்றார்கள். பெரியோர்களோ, உயிரையும் அந்த உயிரைவிட உயர்ந்த பொருள்களையும் கூடத் தியாகம் செய்துவிடுகிறார்கள்” என்று மாயவனாகிய கண்ணபிரான் கர்ணனைப் பாராட்டினார். தன் மகன் அர்ச்சுனனுக்குப் போரில் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடிந்ததே என்ற மனநிறைவோடு இந்திரன் விடைபெற்றுக் கொண்டு சென்றான். இந்திரன் சென்ற பின்னர் மீண்டும் குந்தியைப் போய்ச் சந்தித்து, தான் கூறிய காரியத்தை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டான் கண்ணன். அத்தினாபுரியில் அவனுக்கு எஞ்சியிருந்த கடைசி வேலை குந்தியின் மூலம் கர்ணன் மனத்தைக் கலைத்துப் பாண்டவர்கள் பக்கம் சேர்க்க முயல்வதே! அது முடிந்தால் அப்புறம் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்.  நன்றி மறக்கமாட்டேன் கர்ணனுடைய மாளிகையில் அவன் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். இந்திரன் கிழவனைப் போல வந்ததும் கவச குண்டலங்களை வாங்கிக் கொண்டு போனதும் ஆகிய நினைவுகள் அவன் மனத்திரையில் நிழலெனப் படிந்து கொண்டிருந்தன. ஏதேதோ பலவகைப் பட்ட வேறு எண்ணங்களும் இடையிடையே மனத்தில் குமுறிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் சுற்றிலும் மிரள மிரளப் பார்த்துக் கொண்டே குந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கர்ணன் அவள் உள்ளே வருவதைப் பார்த்து விட்டான். உடனே அவளுக்கு எதிரே வந்து “தாங்கள் தான் என்னைப் பெற்ற தாய் என்று சமீபத்தில் கண்ணனிடம் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்குமானால் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பாசமும் கடமையும் எனக்கு உண்டு” என்றான். குந்தி இதற்கு மறுமொழி கூறாமல் சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்தாள். பின்பு துணிவை வரவழைத்துக் கொண்டு எல்லா விவரங்களையும் கூறினாள். அவனைச் சிறு குழந்தையாகப் பெற்ற சிறிது போதிலேயே பெட்டியில் வைத்து விட்டது தொடங்கி யாவும் கூறினாள். கர்ணன் யாவற்றையும் உருக்கமாகக் கேட்டான். எல்லாம் நம்பக் கூடியவனவாகத்தான் இருந்தன. ஆனாலும் பாண்டவர்களுக்கு ஆதரவு தேடுவதற்காக மாயனான கண்ணனே குந்தியைக் கொண்டு இப்படி ஒரு, வஞ்சக நாடகத்தை நடிக்கச் செய்கின்றானோ?’ என்று கர்ணனுக்கு ஒரு சந்தேகமும் இருந்தது. குந்தியினிடம் நேருக்கு நேர் அந்தச் சந்தேகத்தையும் கேட்டு நிவர்த்தித்துக் கொள்ள அவன் ஆசைப்பட்டான். அதற்காக அவளுக்கு ஒரு கடுமையான சோதனையையும் ஏற்படுத்தினான். “அம்மா! நீங்கள்தான் என்னுடைய தாய் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் என் மனத்தில் சில சந்தேகங்கள் குறுக்கிடுகின்றன. அவற்றை நீக்கித் தெளிவு பெற வேண்டுவது அவசியமே. முன்பே பல பல பெண்கள் எனது செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருமையிலும் பங்கு கொள்ள ஆசைப்பட்டு என் தாய் என்று பொய் உறவு கொண்டாடி வந்தனர். பேய் போன்ற தீய இயல்பும் தீய எண்ணங்களும் படைத்த அந்தப் பெண்களைச் சரியானபடி சோதித்துத் தண்டித்தேன். மாயத்தன்மை பொருந்தியதும் தேவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டதுமான ஒரு ஆடை என்னிடமிருக்கிறது. என்னை மெய்யாகவே பெற்ற தாயைத் தவிர வேறு யார் அணிந்து கொண்டாலும் அந்த ஆடை அவர்களை எரித்துவிடும். இதற்கு முன் என்னைத் தேடி வந்த போலித் தாய்களும் அப்படியே அழிந்து போய்விட்டனர். தாங்கள் என்னுடைய உண்மைத் தாயாயிருக்கும் பட்சத்தில் அந்த ஆடை தங்களை ஒன்றும் செய்யாது, இதோ அந்த ஆடையை இப்போது கொண்டு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே கர்ணன் உள்ளே சென்று அந்த அற்புத ஆடையை எடுத்துக் கொண்டு வந்து குந்தியிடம் கொடுத்தான். கர்ணன் கூறியபடி அந்த ஆடையை விரித்துத் தன் உடல் மறையப் போர்த்திக்கொண்டாள் குந்தி. நாழிகை விநாடி விநாடியாக வளர்ந்தது. மேலே போர்த்தப்பட்ட அந்த ஆடை குந்தியை ஒன்றும் செய்யவில்லை. பொலிவாக விளங்குகிற ஆடையைப் போர்த்திக் கொண்ட சிறப்பான தோற்றத்துடனே புன்முறுவல் தவழ மகனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் குந்தி. “அம்மா! இனிமேல் சந்தேகமே இல்லை நீங்கள் தான் என்னைப் பெற்ற தாய். நான் உங்கள் புதல்வன்” என்று அன்பு ததும்பக் கூறிக் கொண்டே அவள் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான் கர்ணன். குந்தி, மகனைத் தன் கைகளால் எடுத்துத் தூக்கி நிறுத்தி உச்சி மோந்து தழுவிக் கொண்டாள். “கர்ணா! மகனே; நான் உன்னைப் பெற்ற பின் உன் முகத்திலேயே விழிக்க முடியாத பாவியாகிவிட்டேன். என் தவறுகளை மறந்து மன்னித்துவிடு அப்பா. உன் சகோதரர்களாகிய பாண்டவர்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தனியே தங்கி நாடிழந்த நிலையில் இருக்கிறார்கள். நீ உடனே அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து மூத்தவன் என்ற பொறுப்போடு அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.” -குந்தி மனமுருக வேண்டிக் கொண்டாள். “தாயே! கடமையைக் காட்டிலும் நன்றி பெரியது அல்லவா? நினைவு தெரியாத குழந்தையாக இருக்கும் போதே நீங்கள் பெற்ற பாசத்தையும் மறந்து என்னை ஆற்றில் மிதக்க விட்டுவிட்டீர்கள். என்னை வளர்த்து மனிதனாக்கியவன் துரியோதனன். இப்போது நான் இருக்கும் சிறப்பான நிலைக்கு அவனே காரணம். என்னை ஒரு நாட்டுக்கு அரசனாக்கித் தன் சகோதரர்களும் பிற சிற்றரசர்களும் வணங்கிப் போற்றும்படிச் செய்ததும் அவனே. இன்னும் எண்ணத் தொலையாத எத்தனையோ விதங்களில் அவனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஒரு நாள் துரியோதனன் துணைவியாகிய பானுமதியும் நானும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தோம். ஆட்டம் சுவை நிரம்பிய ஒரு கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது, வெற்றி எனக்காக அவளுக்கா என்று அறியத் துடிதுடிக்கும் ஆர்வத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாடிக் கொண்டிருந்த மாளிகையின் வாயில்புறத்தைப் பார்த்து அவள் அமர்ந்திருந்தாள். அதற்கு எதிர்புறமாக நான் அமர்ந்திருந்தேன். விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே துரியோதனன் வாயில் வழியாக உள்ளே வந்திருக்கிறான். நான் வாயிற்புறத்துக்கு நேரே முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததனால் அவன் வாயில் வழியாக உள்ளே நுழைவதைக் கவனிக்கவில்லை. ஆனால் அவள் பார்த்து விட்டாள். கணவன் முன்னால் எழுந்து நிற்க வேண்டிய மரியாதைக்காகக் குபீரென்று எழுந்திருந்தாள். விளையாட்டு வெறியில் திளைத்திருந்த நான், அவள் ‘எனக்கு வெற்றி கிடைத்துவிடப் போகிறதோ’ என்று அஞ்சியே நடு விளையாட்டில் எழுந்திருப்பதாக நினைத்துக் கொண்டேன், எனக்கு ஆத்திரம் வந்து விட்டது. மரியாதை, வரன்முறை எல்லாவற்றையும் மறந்து அவளைத் தொட்டு அவள் இடுப்பிலிருந்த மேகலையைப் பிடித்து இழுத்து விட்டேன். நான் இழுத்த வேகத்தில் மேகலை அறுந்துவிட்டது. அறுந்த மேகலையிலிருந்து மணிகள் சிதறின. நானும் பதறிவிட்டேன். அவளும் பதறிவிட்டாள்.”என்ன கர்ணா! இந்த மணிகளை எல்லாம் நான் எடுத்துக் கோத்து விடட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே விகல்பமில்லாத முகபாவத்தோடு துரியோதனன் எனக்கு முன்வந்தான். அப்போதுதான் துரியோதனன் அங்கே வந்திருப்பதும் அவள் எழுந்திருந்ததன் காரணமும் எனக்கு விளங்கின. தனிமையாக இருக்கும்போது ஒருவன் மனைவியிடம் இப்படி அடாத முறையில் அத்துமீறி நடந்து கொண்டிருந்தால் காரணத்தைக்கூட ஆராயாமல் கொலை செய்ய வந்து விடுவான். ஆனால் துரியோதனுடைய பெருந்தன்மைதான் அவன் என்னை மன்னிக்குமாறு செய்தது. நான் செய்தது மிகப் பெரிய தவறுதான்! ஆனால் அவன் அதை ஒரு சிறிய தவறாகக்கூட எண்ணவில்லை. அப்படிப்பட்ட துரியோதனனுக்கு என் உயிரையே கொடுத்தாலும் தகுமே! நான் எப்படி அம்மா நன்றி மறப்பது? சோற்றுக்கடன் கழிப்பதற்காகவாவது போரில் அவன் பக்கம் என் உயிரைத் தியாகம் செய்தாக வேண்டும். தாயே! தயவு செய்து நீங்கள் வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். மறுக்காமல் தருகிறேன், என்னைப் பாண்டவர்கள் பக்கம் சேரும்படியாக மட்டும் வற்புறுத்தாதீர்கள்! நான் உங்களுக்குத் தரமுடியாதது இது ஒன்று தான்!" - கர்ணன் உருக்கமாக நீண்ட நேரம் பேசி முடித்தான். “அப்படியானால் நான் கேட்கின்ற வேறு சில வேண்டுகோள்களையாவது நிறைவேற்றுவாயா?” “ஆகா! கேளுங்கள். தாராளமாக நிறைவேற்றுகிறேன்.” “நீ உன் சகோதரர்கள் ஐவரில் அர்ச்சுனன் ஒருவனை மட்டும்தான் எதிர்த்துப் போர் புரிய வேண்டும், மற்ற நால்வரோடும் போர் புரியக் கூடாது.” “சரி அப்படியே!..” “இன்னும் ஒரு வேண்டுகோள். அர்ச்சுனனைப் பழிவாங்குவதற்கென்றே உன்னிடம் வளர்ந்து வரும் நாகாஸ்திரத்தை ஒரே ஒரு முறைக்கு மேல் நீ அவன் மேல் எய்யக் கூடாது.” கர்ணன் இந்த இரண்டாவது வேண்டுகோளைக் கேட்டதும் சிறிது தயங்கினான். ‘வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். தருகிறேன்’ என்று தாய்க்குக் கொடுத்த வாக்கு நினைவிற்கு வந்து, “சரி அம்மா! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் தொடுக்க மாட்டேன். உங்கள் வேண்டுகோள்கள் இரண்டையும் நான் ஒப்புக் கொண்டு அவற்றின் படியே நடக்கிறேன்.” “மகனே! நல்லது. நீ என்னிடம் கேட்க வேண்டிய வேண்டுகோள் ஏதேனும் இருந்தால் கேளேன்.” “ஆமாம் அம்மா! நானும் சில வேண்டுகோள்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அவற்றை மறுக்க மாட்டீர்கள் அல்லவா?” “உன்னைப் பெற்ற தாயாக வாய்த்ததே பெரும் பேறு. உன் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வதைவிடச் சிறந்த பாக்கியம் எனக்கு வேறென்ன இருக்கிறது?” “விதியின் வலிமை நம்முடைய வலிமைகளை எல்லாம் காட்டிலும் மிகப் பெரியது அம்மா! குருக்ஷேத்திரப் போரில் நான் அர்ச்சுனனுடைய வில்லால் கொல்லப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. நான் இறந்த பிறகு என் சடலத்தை அனாதரவாக விட்டுவிடாதீர்கள். என்னுடைய வலிமைக்குக் காரணமானவற்றையெல்லாம் உங்கள் வேண்டுகோள்களால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். என் சடலத்திற்குச் செய்யப் பெற வேண்டிய நீர்க் கடன்களையும் தீக்கடன்களையுமாவது முறையாக என் தம்பிமார்களைக் கொண்டு செய்யுங்கள். போர்க்களத்தில் கூடியிருக்கும் மணிமுடி தரித்த மன்னர்கள்”கர்ணனை இறுதிக் கடன் செய்து எரிப்பதற்குக் கூட ஆள் இல்லை" என்று இழிவாகப் பேசும்படி விட்டுவிடாதீர்கள். இன்னொன்றும் வேண்டிக்கொள்கிறேன். நான் இறந்த பின்பாவது ‘எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன்’ என்ற உறவு முறையை உலகறிய ஒப்புக் கொண்டு பரவச் செய்யுங்கள். என் சடலத்துக்காவது பாலூட்டி அந்த உறவு முறையை வெளிப்படுத்துங்கள். ‘பெற்றவள் யார்? பெற்றவன் யார். உடன் பிறந்தோர் யார்? ஒன்றுமே தெரியாத அனாதைப் பயலல்லவா கர்ணண்! என்ற பழிச்சொல் நான் மறைந்த பிறகாவது நீங்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செய்வீர்களல்லவா?" “கட்டாயம் செய்கிறேன் மகனே! உன்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதால் உனக்கு மட்டுமா பெருமை? எனக்குத்தானே பெருமை?” -என்று குந்தி அவன் வேண்டுகோளுக்கு இணங்கி உறுதிமொழி கொடுத்தாள். பின்பு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தாள். அவளைத் தன்னிடமிருந்து அனுப்ப மனமில்லாமல்தான் விடை கொடுத்தனுப்பினான் கர்ணனும். அங்கு விடை பெற்றுச் சென்ற குந்தி, நேரே கண்ணனிடம் சென்றாள். நடந்தவற்றை எல்லாம் கூறுமாறு கண்ணன் கேட்டான். குந்தி கர்ணனைத் தான் சந்தித்தது முதல் தனக்கும் அவனுக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறினாள். “குந்தி! இந்த நிகழ்ச்சிகள் இப்போதைக்கு உன்னையும் என்னையும் கர்ணனையும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இரகசியமாகவே இருக்கட்டும்” என்று குந்தியிடம் வேண்டிக் கொண்ட கண்ணபிரான் தான் அத்தினாபுரியிலிருந்து திரும்புவதாக அவளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான். கண்ணன் அங்கிருந்து புறப்படும்போது அவனுடன் வந்திருந்த சிற்றரசர்கள், பரிவாரங்கள் தவிர வேறு சிலரும் புறப்பட்டனர். அவர்கள் தம்முடன் பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு வருவதனால் சில குழப்பங்கள் நேரிடலாம் என்று கருதிய அவன், அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டான். பாண்டவர்களைச் சந்தித்துத் தூது போன இடத்தில் நடந்தவற்றையெல்லாம் விபரமாகக் கூறினான் கண்ணன். ‘இனிநாம் துரியோதனாதியர்களோடு போர் செய்து நம் உரிமையைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று நினைத்தனர் சகோதரர்கள் ஐவரும். தங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்த பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் படைகளைக் கொடுத்துப் போரில் நேரடியாக உதவிபுரிய வேண்டுமென்று தூது அனுப்பி வேண்டிக் கொண்டார். போர் ஏற்படப் போகிறதென்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் வாளா இருக்கலாமா? கண்ணபிரானின் ஆலோசனைப்படி வரவிருக்கும் பெரிய போருக்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். போர்ச் செய்தியைத் தூதுவர்கள் மூலமும் திருமுகங்களின் மூலமும் அறிந்து கொண்ட அரசர்கள் தத்தம் படைகளோடு பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். நியாயத்தைக் கூறுகிற தருமநெறி போலவும் தருமத்தை விட்டு விலகாத மெய்மை போலவும் அரசர்கள் பலரின் படைப்புலம் பாண்டவர்கள் பக்கம் கிடைத்தது. படை ஏற்பாடுகள் காட்டாறுகள் பல பொங்கியெழுந்து கடலில் வந்து ஒன்று சேருவது போலப் பாண்டவர்கள் பக்கம் அரசர்களும் படைகளும் மேலும் மேலும் வந்து குவிந்தார்கள். திரெளபதியின் தந்தையாகிய துருபத மன்னன் தனக்கு அடங்கிய சிற்றரசர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். தமிழ்நாட்டு மூவேந்தர்கள் வந்திருந்தார்கள். உலகில் பாண்டவர்கள் பக்கமே உண்மையும் அறமும் ஓங்கி நிற்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருந்த எல்லா அரசர்களும் வந்திருந்தனர். முடி சூடிய மன்னர்களும், வாலைப்பருவத்து இளவரசர்களும், படை நடத்தும் தலைவர்களும், அரசு நெறி செலுத்தும் அமைச்சர்களும், உற்சாகத்தோடு பாண்டவர்களுக்கு உதவிபுரிய வந்து காத்திருந்தனர். சீனர், தெலுங்கர், மாளவர், கலிங்கர், கன்னடர், மகாதர் என்று அடுக்கிக் கொண்டிருப்பதை விடத் தருமத்தின் மேல் நம்பிக்கை யுள்ளவர்கள், தருமத்தைத் தோற்க விடக் கூடாது என்று உறுதியுள்ளவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் எனச் சுருக்கமாகக் கூறி முடித்து விடலாம். தங்களுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக வந்திருக்கும் அவர்களை அன்பு ததும்பும் மனத்தோடு வரவேற்றுத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர் பாண்டவர். கண்ணன் உடனிருந்தான். அத்தினாபுரிக்குத் தூது சென்றிருந்தபோது அங்கு நடந்தவற்றை வந்திருந்த மன்னர்கள் எல்லோரும் கண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். “நண்பர்களே! தர்மயுத்தமாக நடக்க இருக்கின்ற இந்தப் போரில் படைப் பலத்தைவிட ஆத்மாவின் பலத்தையே நான் பெரிதாகக் கருதுகின்றேன். உங்கள் எல்லோருடைய நல்ல மனத்தாலும் உதவியாலும் தான் என் ஆன்ம பலம் வெற்றி அடைய வேண்டும். எனது இந்த நம்பிக்கையை நிறைவேற்றிவைப்பது உங்கள் பொறுப்பு!” என்று தருமன் வந்திருந்த அரசர்களை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டான். தருமனின் வேண்டுகோளால் மனமிரங்கிய மன்னர்கள், “பாண்டவர்களுக்கு உதவுவதில் பெருமைப்பட வேண்டியவர்கள் நாங்கள், இந்த உயிரும் இந்தப் பிறவியும் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக அழியுமானால் அது எங்கள் பேறு ஆகும். அந்தப் பெரும்பேற்றை இழக்க எங்கும், என்றும், எப்போதும் நாங்கள் தயாராக இல்லை” என்று மறுமொழி கூறினர். “போரில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பின்பு பார்க்கலாம். நீங்கள் கூறுகின்ற இந்த உறுதிமொழி இப்போதே வெற்றியை அடைந்து விட்டாற்போன்ற பெருமிதத்தை எனக்கு உண்டாக்குகின்றது. உங்களுக்கு என் நன்றி…” என்று தருமன் கூறினான். பின்பு எல்லோருமாகக் கூடிப் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். வலிமையும் ஆற்றலும் படைகளை நன்கு ஆளும் திறமையும் உடைய சிவேதன் தலைவனானான். சிவேதன் தலைவனாக வாய்த்ததில் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி வெறியில் அரவான் எழுந்து ஒரு சபதம் செய்தான். “துரியோதனாதியர்கள் படையில் பெரும் பகுதியை அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரை எதிர்நோக்கித் துடித்துக் கொண்டிருக்கின்றன என் தோள்கள்.” அரவானுடைய சபதத்தால் ஆவேசமுற்ற யாவரும் மகிழ்ச்சியோடு அதைக் கைகொட்டி வரவேற்றனர். இங்கே பாண்டவர்கள் பக்கம் படை ஏற்பாடுகள் இவ்வாறு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துரியோதனாதியர்கள் சும்மா இருப்பார்களா? அங்கே அவர்களும் படை ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொண்டுதான் இருந்தனர். கண்ணன் தூதாக வந்து குழப்பம் செய்து விட்டுப் போனவுடனே போர் நெருங்கி விட்டது என்று துரியோதனனுடைய உள் மனம் அவனுக்கு எச்சரித்துவிட்டது. ‘இனியும் படை வலிமையையும் துணைவலிமையையும் பெருக்காமல் இருப்பதில் அர்த்தமில்லை’ என்று எண்ணிய அவன் உடனே தனக்குப் பழக்கமுள்ள அரசர்களுக்கெல்லாம் படை உதவி கோரித் திருமுகங்கள் போக்கினான். ஆனால் தான் அனுப்பிய எல்லாத் திருமுகங்களிலும் அவன் ஒரு பெரிய தவறைச் செய்தான். மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் சரி பிறரிடம் உதவி கேட்கும் போது பணிவாகக் கேட்க வேண்டியதுதான் முறை! துரியோதனன் அனுப்பியிருந்த திருமுகங்களோ ‘வேலைக்காரனை மிரட்டிக் கட்டளையிடுவது’ போன்ற ஆணவமும் அதிகாரமும் பொருந்திய வாசகங்களால் நிறைந்திருந்தன. அவன் திருமுகங்களைப் படித்த எவருக்கும் அவற்றில் இருக்கும் ஆணவத்தைக் கண்டு ஆத்திரம் உண்டாகுமே அன்றி உதவி புரிய வேண்டும் என்ற நல்ல விருப்பம் உண்டாகாது. ஆனாலும் என்ன துரியோதனனைப் போலவே ஆணவக்கார அரசர்கள் சிலர் உலகில் இல்லாமலா போய்விட்டார்கள்? அவர்கள் அவன் கட்டளையைச் சிரமேற்கொண்டு உதவிப் படைகளோடு புறப்பட்டு வந்தனர். துரியோதனனுடைய ஆணவத்தை எதிர்த்து நிற்க ஆற்றலில்லாத சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டு வந்தனர். வலிமையும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ள பேரரசர்கள் அதிகமாக அவன் பக்கம் சேரவே இல்லை. இந்த நிலையில் வழக்கம் போலச் சூழ்ச்சியில் இறங்கியது துரியோதனனுடைய மனம், அந்த மனத்தின் இயல்பே அதுதானே? மத்திரபதி மன்னன் என்று ஓர் பேரரசன்; அவன் பாண்டவர்களுக்கு மாமன் முறையுடையவன். போரில் பாண்டவர்களுக்கே உதவிபுரியவேண்டும் என்ற நோக்கத்தோடு தன் படைகளுடன் புறப்பட்டிருந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் வருகிற வழி துரியோதனன் நாட்டைக் கடந்து பாண்டவர்கள் இருப்பிடம் சேர வேண்டியதாக அமைந்திருந்தது. ஏதாவது சூழ்ச்சி செய்து அவனை நடுவழியிலேயே மறித்துத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டான் துரியோதனன். திட்டத்திற்கேற்ப ஒரு சதியும் செய்தான். மத்திரபதியின் படைகள் வருகிற வழியில் அப்படைகளுக்குச் சோறும் நீரும் கொடுத்து உதவும் அறச்சாலைகள் பலவற்றை ஏற்படுத்தினான். துரியோதனன் தன்னுடைய இந்த ஏற்பாடுகளைப் பாண்டவர்கள் செய்திருப்பதைப் போலத் தோன்றும்படிச் செய்திருந்ததனால் மத்திரபதி மன்னன் ஏமாந்துவிட்டான். வரவை முன்பே அறிந்து தருமன் தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு துரியோதனன் விரித்து வைத்திருந்த சூழ்ச்சி வலையில் விழுந்து விட்டான். சோறும் நீரும் கொடுத்து உபசரித்தவர்கள் தருமனுடைய ஆட்கள் எண்றெண்ணிக் கொண்டு, “என்னுடைய இந்தப் பெரிய படைகளும், நானும் உங்களுக்குத் துணையாகவே வந்திருக்கிறோம். இது சத்தியம்” என்று அவர்களுக்கு உறுதி மொழி கூறிவிட்டான் மத்திரபதி. இறுதியில் துரியோதனனே அவனுக்கு முன் தோன்றி “மத்திரபதி மன்னா! நீ என்னுடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் எனக்கு உதவுவதாகச் சத்தியமும் செய்து விட்டாய்! இனிமேல் பாண்டவர்களை நினைப்பதில் பயனில்லை. மறந்துவிடும். என் பக்கம் போரில் உதவு” என்று கூறிய போதுதான் தனது அறியாமைக்கு வருந்தி வாடினான் மத்திரபதி மன்னன். சத்தியத்தை எப்படி மீறுவது? பாண்டவர்க்குப் படைத் துணையாக வந்தவன் விதிவசத்தால் கெளரவர்களுக்குத் துணையாக நேர்ந்தது. துரியோதனன் அரசாட்சியிலும் அவனுடைய கொள்கைகளிலும் நம்பிக்கையுள்ள வேறு பல அரசர்களும் அவன் பக்கம் படைத்துணையாக வந்தார்கள். ஏற்கனவே அவன் வசமிருந்த துரோணர் அசுவத்தாமன் முதலியவர்களின் படைகளையும் சேர்த்தால் பதினொரு அக்குரோணிப் (படைகளின் வகுப்பைக் குறிக்கும் ஒரு பிரிவு) படைகள் ஆயின. வந்தவர்களும் இருந்தவர்களுமாகிய படை வீரர்களுக்குப் பாசறைகள், போர்க் கருவிகள் முதலிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. வயது முதிர்ந்தவனும் பல பெரிய போர்களில் அனுபவம் கொண்டவனுமாகிய வீட்டுமன் கௌரவர்களின் படைத்தலைவனாக இருக்க வேண்டும் என்பதை யாவரும் வரவேற்றனர். அவர்கள் வேண்டுகோளை மறுக்க முடியாத காரணத்தாலும் துரியோதனனிடம் உண்டு வளர்ந்த நன்றிக்கடனைக் கழிக்க வேண்டும் என்பதற் காகவும்தான் வீட்டுமன் அந்தத் தலைமையை ஏற்றுக் கொண்டான். உண்மையைச் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு எதிராகப் படைத் தலைமை பூணும் ஆசையே அவனுக்கு இல்லை. இவ்வாறாக இரண்டு பக்கத்திலும் படை ஏற்பாடுகள் படைத்தலைமை ஏற்பாடுகள் எல்லாம் முடிந்தன. அக்காலப் போர் முறைகளில் போர் தொடங்குவதற்கு முன் களப்பலி கொடுப்பது என்பதும் ஒன்று. இருசாராரில் எவராவது ஒருவர் நல்லவேளை பார்த்து மற்றொரு சாராரிடம், ‘இன்னாரைக் களப்பலியாகக் கொடுங்கள்’ என்று கேட்கிற முறைமையில் இது நடைபெறும். ‘களப்பலி’ என்பது போருக்கு ஆரம்ப நிகழ்ச்சி மட்டும் அல்ல. இதயத்தின் உறுதிக்கும் ஊக்கத்திற்கும் ஒரு பெரும் சோதனை. களப்பலி விஷயமாகத் துரியோதனன் வீட்டுமனைக் கலந்தாலோசித்தான். படைத்தலைவனான வீட்டுமன் கூறினான்: “துரியோதனா! களப்பலி கொடுப்பதற்கு முன்னால் அதற்குரிய நல்லவேளையை முக்கியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவேளையை அறிந்து கூறுவதில் சகாதேவனைப் போல் வல்லவன் வேறெவனுமில்லை. அவன் நமக்குப் பகைவனேயானாலும் நீ போய்க் கேட்டால் நல்ல வேளையைக் கூறுவதற்கு அஞ்சவோ, மறுக்கவோ மாட்டான். அவனிடம் களப்பலி கொடுப்பதற்குரிய நல்லவேளையைக் கேட்டு அறிந்து கொண்டு அப்படியே அரவானிடம் போ. அரவானைச் சந்தித்து,”உன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கு நீ தயாராக இருக்கின்றாயா?" என்று கேள்! அரவான் பெருவீரன். அவனை உயிரோடு விட்டுவிட்டால் போரில் கௌரவர் படைகளைச் சூறையாடிச் சின்னபின்னம் செய்து விடுவான். எனவே அவனை முதலிலேயே களப்பலியாக வாங்கி விடுவது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். அரவான் தூய்மையும் மனவுறுதியும் மிக்க வீரன். ஆகையினால் நீ வேண்டுவதை எதிர்க்க மாட்டான் உன் வேண்டுகோளின் படியே தன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கும் இணங்கி விடுவான். நீ சகாதேவனையும், அரவானையும் சந்தித்து இந்த இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு வா! இப்போதைக்கு இது நமக்குப் பயனளிக்கக் கூடிய திட்டமாகும்" -என்று வீட்டுமன் கூறிய திட்டத்தில் தனக்கு நிறைய நன்மை இருப்பதை உணர்ந்த துரியோதனன் அப்படியே செய்யச் சம்மதித்துச் சகாதேவனையும் அரவானையும் காண்பதற்குப் புறப்பட்டான். சாதாரணமாக வேறு சமயமாயிருந்தால் அவன் தன்னை விட நிலையில் தாழ்ந்தவனாகிய சகாதேவனை அணுகுவதற்கு விரும்பியிருக்க மாட்டான், செயலில் தான் அடைகின்ற சாதகம் அதிகமாக இருப்பதனால் சகாதேவனையும் அரவானையும் வலுவில் சந்திக்கக் கிளம்பி விட்டான். துரியோதனன் தன்னைத் தேடி வரக் கண்ட சகாதேவன் பகைமையை மறந்து வாருங்கள் அண்ணா! இந்தப் பகைமை நிறைந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னைத் தேடி வந்திருப்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது வந்த காரியம் என்னவோ?" என்று வரவேற்று விசாரித்தான். “தம்பீ! பகைமையைப் பாராட்டாமல் நான் வந்த காரியத்தை முடித்துக் கொடுப்பாய் என்று நினைக்கிறேன். நல்ல நிமித்தங்களையும் வேளைகளையும் அறிந்து கூறுவதில் நீயே திறமை மிக்கவன். களப்பலி கொடுப்பதற்கு ஏற்ற நல்ல நேரத்தை ஆராய்ந்து எனக்குச் சொல்ல வேண்டும். சொல்லுவாயா?” -இவ்வாறு துரியோதனன் கேட்கவும் சகாதேவன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு துரியோதனனை நோக்கி “அண்ணா ! நல்லவேளையைச் சொல்கிறேன். கேளுங்கள். சூரியனும் சந்திரனும் செயலொழிந்து தங்களுக்குள் ஒன்று சேருகின்ற நேரம் அமாவாசை இரவே, அந்த நேரம்தான் களப்பலிக்கு ஏற்றது” என்றான். நல்லவேளையைத் தெரிந்து கொண்டு அரவான் இருக்கும் இடத்தை நாடிச் சென்றான் துரியோதனன். அரவானுக்கு முன்னால் அவனுடைய ஆண்மையை வானளாவப் புகழ்ந்து காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது துரியோதனன் கருத்தாக இருந்தது. “அரவான்! உன் ஆண்மையும் வீரமும் உறுதி நிறைந்தவை, எதற்கும் அஞ்சாதவை என்று உலகமெல்லாம் புகழ்கிறார்கள். அந்தப் புகழை நிரூபித்துக் காட்டுவதற்குரிய ஒரு சந்தர்ப்பத்தை உனக்கு நான் தருகிறேன். அதை நீ பயன்படுத்திக் கொள்வாயா?” -அரவானைச் சந்தித்ததுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் துரியோதனன். துரியோதனனைக் கண்டதும் முதலில் அரவானுக்கு வெறுப்பே ஏற்பட்டது. ஆனாலும் அவன் தன்னைப் புகழ்வது போலக் கேட்ட கேள்வியில் கொஞ்சம் மயங்கி விட்டான் அவன். “என்ன செய்ய வேண்டும்? நான் செய்ய முடியாததும் ஒன்று இருக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள். அவசியம் செய்து முடிக்கிறேன்.” -அரவான் தானாகவே தன் தலையை வஞ்சகத்திற்குள் நுழைத்துக் கொண்டு விட்டான். ‘எங்கே?’ என்று காத்துக் கொண்டிருக்கின்ற துரியோதனனுக்கு இவ்வளவு இடம் கிடைத்தால் போதாதா? “கட்டாயம் நான் சொல்வதை உன்னால் செய்ய முடியுமா அரவான்?” “அதென்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? செய்கிறேன் என்றால் செய்தே தீருவேன். இது சத்தியம்! என்னை நீங்கள் முழுமனத்தோடு நம்பலாம்.” “சத்தியம்தானே? அப்படியானால் போர் தொடங்குவதற்கு முன்னால் உன்னைக் களபலியாகக் கேட்கின்றேன். கொடு!” தலையில் பேரிடிகள் ஒரு கோடி முறை விழுந்து ஓய்ந்தது போலிருந்தது அரவானுக்கு புகழ் வெறியில் முட்டாள் தனமாகத் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டதை எண்ணிக் குமுறினான். வாய்விட்டு அழமாட்டாத குறையாக மனம் கலங்கினான். குமுறினால் என்ன, கலங்கினால் என்ன? சத்தியம் செய்த பின் எப்படி மறுப்பது? கொடுத்த வாக்கை எடுக்க முடியுமா? வில்லிருந்து புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையும் திரும்பக் கிடைக்கவா போகின்றன? “என்ன அரவான்? நீதான் மகா வீரனாயிற்றே? ஏன் அப்பா தயங்குகின்றாய்?” “தயங்கவில்லை. களப்பலிதானே வேண்டும்? என்னைக் கொடுக்கின்றேன்! எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன், எனக்கு உயிரினும் வாக்குப் பெரிது.” அரவான் சம்மதித்து விட்டான். வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டதை எண்ணி மனம் கொதித்துக் கொண்டே அவன் தன் சம்மதத்தைத் துரியோதனனுக்குத் தெரிவித்தான். வந்த காரியங்கள் இரண்டுமே தடையற்ற வெற்றியாக முடிந்ததை எண்ணி மகிழும் மனத்தோடு துரியோதனனும் அத்தினாபுரிக்குத் திரும்பினான். சகாதேவனிடமும் அரவானிடமும் துரியோதனன் வந்து பேசி வாக்குப் பெற்றுச் சென்ற இந்த நிகழ்ச்சி பின்பே பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் தெரிந்தது. ஏமாந்துவிட்டதை எண்ணி ஏங்கினர் பாண்டவர். துரியோதனன் சூழ்ச்சியினால் செய்த ஏற்பாட்டை நாமும் சூழ்ச்சியினாலேயே முறியடிக்க வேண்டும் என்றான் கண்ணன். “மாயவனாகிய நீயே அந்தச் சூழ்ச்சியை எங்களுக்குக் கூறி உதவ வேண்டும். நாங்கள் அறத்தையும் உன்னையும் தவிர வேறு எதை நம்புவது?” என்று மனம் உருகக் கண்ணனிடம் வேண்டிக்கொண்டனர் பாண்டவர்கள். கண்ணன் கூறினான்: “துரியோதனன் களப்பலி கொடுப்பதற்கென்று நல்ல வேளையும் நல்ல ஆளையும் பார்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான். அவனை முந்திக் கொண்டு அதே வேளையில் அதே ஆளை நாமே நம் சார்பில் களப்பலி கொடுத்து விட்டால் என்ன?” “அதெப்படி முடியும்? அந்த வேளையில் துரியோதனனும் அவனுடைய ஆட்களும் அரவானிடம் வாக்குப் பெற்றுக் கொண்டபடி அவனைப் பலிக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்களே?” என்று பாண்டவர்கள் கவலையோடு கண்ணனை நோக்கிக் கேட்டனர். “முடியாமல் என்ன? எல்லாம் நான் அல்லவா முன்னின்று முடித்து வைக்கப் போகிறேன்! பதினைந்தாவது திதியில் வரவேண்டிய அமாவாசையைப் பதினான்காந் திதியன்றே வரவழைத்துவிடலாம். அன்றே துரியோதனனை முந்திக்கொண்டு களப்பலியையும் கொடுத்து விடலாம்.” “அமாவாசை திதியை ஒரு நாள் முன்பு வரவழைப்பதா? அதெப்படி முடியும்? பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காந் திதியாக வரவழைப்பது சாத்தியமான காரியமாகப்படவில்லையே!” “உங்களுக்கு ஏன் அந்தத் தயக்கம்? அது சாத்தியமாகும் படிச் செய்து காட்டுகிறேன் நான்” -என்று கண்ணன் கூறினான். களப்பலியும் படைவகுப்பும் கண்ணனுடைய ஏற்பாட்டின்படி பதினான்காந் திதியாகிய சதுர்த்தசியன்றே முனிவர்களும் பெரியோர்களும் அமாவாசை திதிக்குரிய கிரியைகளையெல்லாம் செய்தனர். பெரிய பெரிய முனிவர்கள் எல்லோருமே இப்படிச் செய்வதைக் கண்டு, “உண்மையில் இன்றைக்குத்தான் அமாவாசையா? அல்லது நாளைக்கா?” -என்று சூரியனுக்கும் பாவ சந்திரனுக்குமே சந்தேகமாகப் போய்விட்டது. சூரியனும் சந்திரனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் சந்தித்து அமாவாசை என்றைக்கு என ஆராய்ந்தனர். அவர்கள் இருவரும் மறுநாள் அமாவாசை திதியில் சந்திக்க வேண்டியதை மறந்து திகைப்பினால் முறைதவறி அன்றைக்கே சந்தித்துவிட்டதனால் அமாவாசையும் அப்போதே சதுர்த்தசி நாளிலேயே உண்டாகிவிட்டது. பாண்டவர்கள் இதைக் கண்டு திகைத்து வியந்தனர். “தருமா! என் மாயத்தினால் உனக்கு வாக்களித்த படியே அமாவாசையை ஒரு நாள் முன்பே வரவழைத்து விட்டேன். துரியோதனன் பாவம்! நாளைக்குத்தான் அமாவாசை என்றெண்ணிக் கொண்டு பேசாமலிருப்பான். போரில் யார் முதல் முதலில் களப்பலி கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி. தயங்காமல் இன்றைக்கே துரியோதனனை முந்திக் கொண்டு உன் சார்பில் நீ களப்பலி கொடுத்து விட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்!” “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் யாரைக் களப்பலி கொடுப்பது?” -தருமன் கேட்டான். அவன் இதைக் கேட்கும்போது அரவானும் அருகில்தான் இருந்தான். அவன் ஏற்கனவே துரியோதனனுக்கு வாக்களித்திருந்ததனாலும், சிறிதும் இரக்கமின்றி, “நீ உன் உயிரைக் களப்பலியாகக் கொடு!” -என்று கேட்பதற்கு அச்சமாக இருந்ததனாலும் பாண்டவர்கள் அவனிடம் கேட்காமலிருந்தனர். அரவானாக வலுவில் முன்வந்து ஏற்றுக் கொள்வான் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதுவும் வீணாயிற்று. அரவானை வழிக்குக் கொண்டு வருவதற்குக் கண்ணன் ஒரு நாடக மாடினான். “சரி தருமா! களப்பலியாக முன்வருவதற்கு இங்கு எல்லோருமே தயங்குகிறார்கள் போலிருக்கின்றது. உங்களுக்காக நான் தயார்! இதோ, எனது இந்த உடலை உங்கள் வெற்றிக்காகப் பலி கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்கவில்லை. உங்கள் நன்மை பெரிது! என் உயிர் அதற்கு முன் சாமானியமான பொருள்!” -என்று கண்ணன் இவ்வாறு கூறவும் பாண்டவர்கள் வெலவெலத்துப் போனார்கள். அவர்கள் உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்கின. “கண்ணா! என்ன வார்த்தை கூறினாய்? உன்னைப் பலி கொடுத்துப் பெறப் போகிற வெற்றியை விட இப்போதே அடைகின்ற தோல்வி போதும் எங்களுக்கு. நீ இல்லாதபோது எங்களுக்குப் போர் எதற்கு? வெற்றி எதற்கு? அரசாளும் உரிமைதான் எதற்கு? எங்களைச் சோதிக்காதே! நாங்கள் இப்போதே போர் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறோம்” என்று கண்ணன் திருவடிகளில் விழுந்து கதறினான் தருமன். கண்ணன் தனது மாய நாடகத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அவனது நாடகம் அவன் எதிர்பார்த்த பலனைக் கொடுத்தது. கண்ணனின் விழிகள் அரவானை ஊடுருவி நோக்கின. அரவானின் விழிகள் கண்ணீரால் நனைந்திருந்தன. அவன் கண்ணனையும் தருமனையும் நோக்கி, “இதோ நான் இருக்கிறேன். என்னைக் களப்பலி கொடுங்கள். களப் பலியாவதற்கென்று அன்றே என் தலையில் எழுதியிருக்கிறது. துரியோதனனுக்குக் களப்பலியாவதாக ஏமாந்து போய் நேற்றே வாக்குக் கொடுத்தேன். இன்றைக்கு நீங்கள் களப்பலி கொடுக்காவிட்டால் எப்படியும் நாளைக்கு அவன் என்னைக் களப்பலி கொடுத்து விடுவான். அமாவாசையன்று பலியாவதாக வாக்குக் கொடுத்தேன் அவனுக்கு இன்று தான் அமாவாசை. ஆனால் என்னைப் பலி கொடுக்க அவன் இன்னும் வரவில்லை. குறிப்பிட்ட நல்லவேளை தவறிவிடக் கூடாது. அவன் பலியாக்க வேண்டிய உடலை நீங்கள் பலியாக்கிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை” -என்று கூறினான். “எதற்கு அப்பா உனக்கு வீண் சிரமம்? பாண்டவர்களுக்காக நானே பலியாகி விடுகிறேன். நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்று” -என்று கண்ணன் மீண்டும் போலிச் சோக நடிப்பு நடித்தான். “இல்லை! நீ போருக்கு உறுதுணைவனாக உயிருடன் இருந்து பாண்டவர்களுக்கு எல்லா உதவியும் செய்து வெற்றியை வாங்கிக் கொடு. பலியாக வேண்டிய பாக்கியம் எனக்கே இருக்கட்டும். அதோடு எனக்கு ஒரு வரத்தையும் கொடு! பலியாக வேண்டும் என்ற ஆசையோடு, மற்றோர்புறம், பாண்டவர்களும் கெளரவர்களும் செய்யும் இந்தப் போரை உயிரோடிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் என் மனத்தில் அகலாமல் நிறைந்து நிற்கிறது. அதனால் இன்று இன்னும் சிறிது நேரத்தில் நான் களப்பலியாகி இறந்து போய் விட்டாலும் பின்பு போர் தொடங்கியதும், உயிர்பெற்றுச் சில காலம் போர்க்களக் காட்சிகளையும் காண்பதற்கு வேண்டிய வரத்தை எளியவனாகிய என் பொருட்டு நீ வழங்க வேண்டும்” -என்று அரவான் நீரொழுகும் கண்களோடு வேண்டினான். அரவானின் வேண்டுகோளுக்குக் கண்ணன் இணங்கினான். அதற்கு வேண்டிய வரத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டான். அரவான் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டான். இரவு நேரம் வந்தது. அமாவாசை இருட்டு மைக்குழம்பெனக் கவிந்து உலகைக் கருமையில் மூழ்க அடித்திருந்தது. பாண்டவர்களின் ஜன்மபூமி குருநாடு அல்லவா? இரவோடிரவாக எவரும் அறியாமல் அரவானையும் அழைத்துக் கொண்டு தங்கள் ஜன்மபூமிக்குச் சென்றனர் பாண்டவர். தாங்கள் பரம்பரையாக வணங்கி வந்த காளி கோவிலுக்குச் சென்று நீராடிய ஈரம் உலராத ஆடையோடு அரவானைப் பலிபீடத்தில் நிறுத்தினர். களப்பலியாகப் போகிறவன் யாரோ அவன், தானே தன் கைவாளால் தன்னுடைய தலை முதலிய உறுப்புக்களை அறுத்து காளிதேவிக்கு முன் படைக்க வேண்டுமென்பது வழக்கம். பாண்டவர்கள் ஐவரும் கூப்பிய கரங்களுடன் தேவியைத் தியானிக்கிற பாவனையில் கண்களை இறுக மூடிக்கொண்டு மோனத்தில் இலயித்தனர். அரவான் மலர்ந்த முகத்தோடு இடைவாளை உருவிக் கையில் எடுத்துக் கொண்டான். மறுவிநாடி அவன் வலக்கை வாள் நுனியை அவனது கழுத்தை நோக்கியே கொண்டு போயிற்று. விநாடிகள் கழிந்தன. பலிபீடத்தில் பசுங் குருதி பாய்ந்து வழிந்து ஓடியிருந்தது. சிதறி அறுபட்டுக் கிடந்த அரவானின் உடலுறுப்புக்களுக்கிடையே வாளும் ஒரு மூலையிலே கிடந்தது. பாண்டவர்கள் ஈரம் கசியும் விழிகளின் துயரச் சுவடுகளைத் துடைத்துக் கொண்டே மேலே நிகழவேண்டிய தெய்வக் கடன்களைச் செய்தனர். ஐந்து பேரும் தனித்தனியே யானை, குதிரை முதலிய சில விலங்குகளையும் பலி கொடுத்தனர். குலதெய்வமான காளிதேவியை வெற்றி நல்குமாறு வேண்டிக் கொண்டு கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். ‘களப்பலி’ என்ற பெயரில் நிறைவேற வேண்டிய அந்தப் பயங்கரமான சடங்கு நிறைவேறிவிட்டது. படைகளை இருபுறமும் அணிவகுத்து, போர் தொடங்க வேண்டியதுதான் எஞ்சி நின்றது. மறுநாள் உதவியாக வந்திருந்த அரசர்களும் படைகளும் தங்கியிருந்த இடத்தில் பாண்டவர்களும் கண்ணனும் மற்ற மன்னர்களும் கூடிப் படைகளைப் பிரித்து அணிவகுப்பது பற்றிச் சிந்தித்தனர். பாண்டவர்கள், கெளரவர்கள் இருசாராரும் எதிர்த்துப் போர் செய்யத்தக்க போர்க்களமாகக் ‘குருட்சேத்திரம்’ என்ற மிகப்பெரிய வெளியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். தங்கியிருந்த இடத்திலிருந்து நால்வகைப் படைகளையும் போருக்கேற்ற முறையில் வரிசையாக அணிவகுத்துப் போர்களத்திற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது. கண்ணன், பாண்டவர்கள் சார்பில் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த சிவேதனைக் கூப்பிட்டுப் படைகளை அணிவகுத்துக் களத்திற்கு நடத்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான். தேர்ப்படையில் முன்னணி நின்று போரிடுகின்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ‘அதிர தாதிபர்கள்’ -என்று பெயர். புதிய படை வகுப்புத் திட்டத்தின்படி சிவேதன், வீமன், அர்ச்சுனன், அபிமன்யு ஆகிய நால்வரும் முன்னணித் தேர்ப்படையினராக நியமனம் பெற்றனர். அதிராதிபர்களுக்கு அடுத்தபடி பெருந்தேர்களில் இருந்து போர் புரியக்கூடியவர்களுக்கு மகாரதாதிபர்கள் என்று பெயர். சிகண்டி, சாத்தகி, துட்டத்துய்ம்மன், விராடன், தருமன் ஆகிய ஐந்து பேரும் மகாரதாதிபர்களாக நியமனம் பெற்றனர். மகாரதாதிபர்களுக்கு அடுத்த வரிசையில் நின்று போர் செய்யக்கூடியவர்களுக்குச் சமராதிபர்கள் என்று பெயர். சமராதிபர்களுக்கும் அடுத்த வரிசையில் நிற்பவர்களுக்கு அர்த்தரதாதிபர்கள் என்று பெயர். நகுலன், சகாதேவன், கடோற்கசன் ஆகிய மூவரும் அர்த்தரதாதிபர்களாக நியமனம் பெற்றனர். இங்கு இவ்வாறு போர் ஏற்பாடுகளும் அணிவகுப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது முன்பு துரியோதனாதியர் பக்கம் சேருவதாக முடிவு செய்திருந்த பலராமன் திடீரென்று மனம்மாறி “நான் இந்தப் போரில் இருவர் பக்கமும் சேரப் போவதில்லை. இருபக்கமும் எனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் இந்தப் போர் முடிகிறவரை நானும் விதுரனோடு தீர்த்த யாத்திரை போய்விட்டு வரத் தீர்மானித்திருக்கிறேன்” -என்று கூறிவிட்டு விதுரனுடன் புறப்பட்டுவிட்டான். பலராமன் மனம் மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் கண்ணன். “கண்ணன் பாண்டவர்களுக்கு வேண்டியவனாக இருந்து உதவிகள் புரிந்து வரும்போது நாம் கெளரவர்கள் பக்கம் சேர்ந்து போரிடுவது நல்லதல்ல” -என்றெண்ணியே பலராமன் மனம் மாறினான். பலராமனின் இந்தத் திடீர் மாற்றம் துரியோதனாதியர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் பாண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் கொடுத்தது. தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என்று நான்கு வகையாகப் பிரித்து அணி வகுக்கப் பட்ட பாண்டவர்களின் சேனை ஏழு அக்குரோணி எண்ணிக்கை பெற்றது. அணிவகுப்பு, வரிசை முறைப் பிரிவுகள், எல்லாம் முடிந்த பின் சிவேதன் படைகளைக் குருகுலப் போர்க்களம் நோக்கி நடத்திச் சென்றான். ‘திமுதிமு’ என்று ஆரவாரித்துப் பொங்கும் கடல் ஒன்று பெருகிக் புரண்டு செல்வது போன்ற பேரோசையுடன் படை நடந்தது. எக்காளங்களின் ஒலி, முரசங்களின் ஒலி, சங்கங்களின் ஒலி என்று படைவீரர்களிடமிருந்து கிளம்பிய வாத்தியங்களின் ஓசை வேறு விண்வெளியை அதிரச் செய்தது. வாள்களும், வேல்களும், மேகத்தைக் கிறுகிற மின்னல் துணுக்குகள் போல மின்னின. அந்தப் படையைத் தரையின் மேல் நடந்து வருகின்ற ஒரு பிரம்மாண்டமான புருஷாகாரத்துக்கு ஒப்பிடலாம். அந்தப் புருஷாகாரத்தின் பிராணன் கண்ணன்! மார்பு தருமன்! முகாரவிந்தம் சிவேதன்! அருச்சுன்னும் வீமனும் தோள்கள்! நகுலனும் சகாதேவனும் கண்கள்! படையூடே வருகின்ற சிறந்த அரசர்கள் யாவரும் அந்தப் பேருருவத்தின் மற்ற உறுப்புகளாக விளங்கினர். யானைகளும் குதிரைகளும், தேர்களும், கொடிகளுமாகக் காலாட்களோடு சென்று கொண்டிருந்தது பாண்டவர்களின் படை என்ற அந்தப் பேருருவம். பாண்டவர்களின் படை ஏற்பாடுகள் இவ்வாறிருக்க, அங்கே துரியோதனாதியர்களின் படை ஏற்பாடுகளும் அணிவகுப்புகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்க்க வேண்டாமா? திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக இரட்டை ஏற்பாடுகள் ஏமாற்றங்களில் முடிந்துவிட்டன. அவர்களுக்கு. வில்லை ஒடித்துப் போட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை கிளம்பிய விதுரனோடு பலராமனும் கிளம்பி விட்டானே என்பது முதல் ஏமாற்றம். களப்பலிக்குச் சம்மதித்திருந்த அரவானை முதல்நாளே பாண்டவர்கள் களப்பலி கொடுத்துவிட்டார்களே என்பது இரண்டாவது ஏமாற்றம், ஏமாற்றம் தாங்க முடியாத நிலையில் அவன் வீட்டுமனை நோக்கி, “வீட்டுமரே! இந்தப் பாண்டவர்கள் சுத்தப் பயந்தாங்கொள்ளிகளாக அல்லவா இருப்பார்கள் போலிருக்கிறது? நாம் களப்பலிக்காகப் பார்த்து வைத்திருந்த ஆளை நமக்கு முன்பே வஞ்சகமாகப் பலி கொடுத்து விட்டார்களே! எப்படிப் பார்த்தாலும் அவர்கள் நம்முடைய நிலைக்கு மிகவும் தாழ்ந்தவர்களே” -என்று கூறினான் துரியோதனன். “அதிருக்கட்டும் அப்பா! மேலே செய்ய வேண்டிய காரியத்தைக் கூறு” -என்றான் வீட்டுமன். “செய்ய வேண்டியதென்ன? நம்முடைய படைகளைத் தக்க முறையிலேயே அணிவகுத்துப் புறப்படச் செய்யுங்கள். அதுதான் செய்ய வேண்டியது” -என்று கட்டளையிட்டான் துரியோதனன். வீட்டுமன் உடனே படைகளை வரிசை முறைப்படி அணிவகுத்து நிறுத்தத் தொடங்கினான். முன்னணித் தேர்ப்படையினராக, வீட்டுமன், துரோணர், அசுவத்தாமன் , பூரிசிரவா ஆகியோர் நின்றனர். மகாரதாதிபர்களாகச் சோமவரதத்தன், பகதத்தன், துன்மருஷணன் ஆகிய மூவரும் நின்றனர். சமராதிபர்களாக, கிருதவன்மனும், கிருபனும், சகுனியும் நின்றனர். இப்படி வீட்டுமன் படைகளை அணிவகுத்துக் கொண்டிருந்தபோதே கர்ணன் கண்கள் நெருப்பைக் கக்கின. அவன் நெஞ்சு ஆத்திரத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. தன்னையும் தன்னுடைய வீரத்தையும் மதித்து முன்னணித் தேர்ப்படையினராகிய அதிரதத்தலைவர்களில் ஒருவராக வீட்டுமன் தன்னைத் தேர்ந்தெடுப்பான் என்று எதிர்ப்பார்த்தான் கர்ணன். ஆனால் வீட்டுமனோ கர்ணனையும் அவனது வீரத்தையும் இலட்சியமே செய்ததாகத் தோன்றவில்லை. அதிரதாதிபர், மகாரதாதிபர், சமரதாதிபர் என்ற மூன்று அணிவகுப்புக்களிலும் வீட்டுமன் கர்ணனுடைய பெயரைப் பிரஸ்தாபிக்காமலே இருந்து விட்டான். கடைசியில் மிகவும் பின்னணிப் படையாகிய அர்த்தராதிபர்களில் கர்ணனை முதல்வனாக நியமித்துப் படைத்தளபதியாகிய வீட்டுமன் கட்டளை பிறப்பித்தான். அதைக் கேட்டானோ இல்லையோ, அதுவரை பேசாமல் இருந்த கர்ணன் கோபம் பொங்கிடக் குமுறியெழுந்தான்.  “ஏ கிழவா! உன்னைப் படைத் தலைவனாக நியமித்து கர்வத்தினால் தானே நீ இப்படிச் செய்கிறாய்? வேண்டுமென்றே என்னை அவமதிக்க வேண்டும் என்று இப்படிக் கடைசிப் படையில் நியமிக்கின்றாய் போலும்! இப்போது எனக்கு இருக்கின்ற ஆத்திரத்தில் உன்னை அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றுகிறது. கையாலாகாத வெறும் கிழவனாகிய உனக்கு எவ்வளவு திமிர் இருக்கிறது?” -என்று கர்ணன் பேசிய விதத்தைப் பார்த்தால் அவன் உண்மையிலேயே வீட்டுமன் மேல் பாய்ந்து விடுவான் போலிருந்தது. நல்லவேளையாகத் துரியோதனன் அவனை நெருங்கி நயமாகவும் இதமாகவும் சில சொற்களைக் கூறிச் சமாதானப்படுத்தினான். “ஆயிரமிருந்தாலும் படைத்தலைவரென்று அவரை நியமித்து விட்டோம்! நல்லதோ, கெட்டதோ அவர் கூறுகிறபடி கேட்பதுதான் சிறந்தது. எல்லா விவரமும் தெரிந்த நீயே இப்படி ஆத்திரப்பட்டால் என்ன செய்வது? என் சிநேகிதத்துக்காகவாவது பொறுத்துப் போகலாகாதா? உனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது நான் சொல்ல?” என்று துரியோதனன் கூறவும் கர்ணன் சமாதானமடைந்தான். படைகளின் நடுவே மதிப்பிற்குரிய அரசர்களுக்கு மத்தியில் கர்ணன் தன்னை அவமதித்ததை வீட்டுமனால் பொறுக்க முடியவில்லை! துரியோதனன் கர்ணனைச் சமாதானப்படுத்தி விட்டு வந்தவுடன் வீட்டுமன் ஆத்திரத்தோடு அவனை நோக்கி ஒரு சபதம் செய்தான் -“துரியோதனா! இந்த நிகழ்ச்சி என் மனத்தையும் என் எண்ணங்களையும் மாற்றி விட்டது. படைத்தலைமை வகிக்க ஒப்புக் கொண்ட குற்றத்திற்காக அதை மட்டும் கைவிடத் தயங்குகின்றேன். இந்தப் போரில் நான் ஆயுதமெடுத்து சண்டை செய்யமாட்டேன். ஒதுங்கி நின்று அணிவகுப்பு யோசனைகளை மட்டுமே கூறுவேன். இது என் சபதம். இப்படி ஒரு கொடிய சபதத்தை வலுவில் கூறுகிற அளவிற்கு என் மனத்தைப் புண்படுத்தி விட்டது சற்றுமுன் நடந்த நிகழ்ச்சி” -என்று வீட்டுமன் இப்படிக் கூறிவிட்டு வில்லைக் கீழே எறிந்து விட்டான். “தவறாக நடந்துவிட்ட நிகழ்ச்சிக்காக என்னை மன்னித்துவிடுங்கள். அதற்காக இந்தச் சபதம் வேண்டாம், நீங்களில்லாத போர் என்ன போர்?” -என்று மன்றாடினான் துரியோதனன். “இல்லை அப்பா! நான் சபதம் செய்தது செய்தது தான். இனி அதை மீட்பதற்கில்லை” -வீட்டுமன் உறுதியிலிருந்து தளர மறுத்துவிட்டான். கடைசிக் கட்டத்தில் வேறென்ன செய்வது? படைகள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டன. சபதப்படியே ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு தான் சென்றான் வீட்டுமன். துரியோதனன், கர்ணன் முதலியவர்களும் அணிவகுப்பு முறைப்படியே சென்றனர். பதினொரு அக்குரோணி அளவுள்ள கெளரவசேனை பேராரவாரத்தோடு களத்தை நோக்கி நடந்தது. குருகுலக் களத்தில் பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளுமாகப் பதினெட்டு அக்குரோணிப் படைகள் நின்றன. ஒரே படை வெள்ளம். இந்த மாபெரும் போரினால் ஈரேழு பதினான்கு புவனங்களும் என்ன ஆகுமோ என்று யாவரும் கலங்கினர். இவ்வளவு படைகள் நிறைந்த போர்க்களத்தை இதற்கு முன் கண்களால் பார்த்திராத துரியோதனன் நடுநடுங்கிப் பதறும் குரலுடன் வீட்டுமனை நோக்கி, “இவ்வளவு படைகளுமாகப் போரிட்டு யார் யாரால் எப்போது இந்த யுத்தத்தின் முடிவு தெரியுமோ?” என்று மலைத்துப் போய்க் கேட்டான். “முடிவு தெரியாமலென்ன? நான் எதிர்த்துப் போரிட்டால் இங்கு கூடியிருக்கும் பதினெட்டு அக்குரோணிப் படைகளையும் அழித்து ஒருநாள் பகற் போதுக்குள் முடிவு காட்டுவேன். துரோணர் போரிட்டால் மூன்று பகற் போதுக்குள் முடிவு காட்டுவார். கர்ணன் ஐந்து நாள் போரிட்டால் முடிவு காணமுடியும். துரோணர் மகன் அசுவத்தாமன் போரிட்டால் இவைகளை அழித்து ஒரே ஒரு நாழிகைக்குள் முடிவு காட்டுவான். நம் படைக்கு எதிராக அதோ பாண்டவர் படையில் முன்னணியில் நிற்கிறானே அருச்சுனன், அவன் மனம் வைத்தால் ஒரே ஒரு கணத்தில் எல்லாவற்றுக்கும் முடிவு காட்டி விடுவான்” என்று வீட்டுமன் துரியோதனனுக்கு மறுமொழி கூறினான். துரியோதனன் அது கேட்டு மலைத்துப் போய்ச் சிலையாகி நின்றான். (உத்தியோக பருவம் முற்றும்) வீட்டும பருவம் போரில் மனப்போர் அலைக்கரங்களைக் கொட்டிக் குமுறும் இரண்டு பெருங்கடல்கள் எதிரெதிரே தடைப்பட்டு, நிற்பனபோல இருபுறத்துப் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றன. படைத்தலைவர்களின் ஆணை ஒன்றே கிடைக்க வேண்டியதாக இருந்தது. அது கிடைத்து விட்டால் படைகள் கைகலந்து மோதிவிடும். இந்த நிலையில் இது தேர்மேல் நின்று கொண்டு தன் எதிரே கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். எதிர்ப்புறம் கெளரவர் சேனையின் முன்னே நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டதும் அவனையறியாமலே அவன் கைகள் தளர்ந்தன. கண்கள் நனைந்தன. மனம் நெகிழ்ந்தது. களத்தில் போர் தொடங்குவதற்குமுன்னால் அவன் மனத்தில் தொடங்கிவிடும் போலிருந்தது. கண்ணுக்குக் கண்ணாகப் பழகிப் பாசம் காட்டிய பாட்டனார் வீட்டுமன். பால் நினைந்து ஊட்டுகின்ற தாயினும் சாலப் பரிந்து கலைகளையும் வில் வித்தையையும் கற்பித்த ஆசிரியர் துரோணர், கிருபாச்சாரியார், எவ்வளவோ துரோகம் செய்திருந்தாலும் சகோதரர் முறையினராகிய துரியோதனனும் அவன் தம்பிமார்களும், எல்லோரும் எதிர்புறம் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவன் கண்களை நீர்த்துளிகள் திரையிட்டு மறைத்தன. உடல் வாடித் துவண்டு அப்போதே தேர்த்தட்டின் மேல் மயங்கி விழுந்துவிடும் போல் தோன்றியது. அவன் மனக்களத்தில் பாசத்துக்கும் கடமைக்கும் இடையே பெரும் போர் மூண்டது. தனக்கு முன்னே சிரித்த வாயும் மலர்ந்த முகமுமாகத் தேரைச் செலுத்தும் சாரதியின் பீடத்தில் வீற்றிருந்த கண்ணனை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் அவனுடைய மனநிலையை உய்த்துணர்ந்து கொண்டவனாக மேலும் சிரித்தான். “கண்ணா! இந்தப் போர் வேண்டாம். என்னை விட்டு விடு! நான் போய் விடுகிறேன். வில் இந்தா, வாள் இந்தா, அம்பறாத் தூணி இந்தா, எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள். என்னைவிட்டு விடு” கண்ணன் முன்னிலும் இரைந்த குரலில் கலகலவென்று கிண்கிணி நாதம் போலச் சிரித்தான். அர்ச்சுனனை இமைக்காமல் ஏறிட்டுப் பார்த்தான். பார்வை என்றால் சாதாரணமான பார்வையா அது? சர்வத்தையும் ஊடுருவி நோக்கும் ஆழ்ந்த கூரிய பார்வை! “அர்ச்சுனா நீ என்னிடம் விளையாடுகிறாயா? அல்லது உண்மையாகவே தான் இப்படிக் கேட்கின்றாயா?” “உண்மையாகவேதான் சொல்கிறேன் கண்ணா! அண்ணனையும் தம்பியையும் ஆசிரியனையும் பாட்டனையும் கொன்று பெறுகின்ற வெற்றி எனக்கு வேண்டவே வேண்டாம். உறவினர்களைக் கொன்று அரசாட்சியை அடைய முயலும் தீவினையிலிருந்து என்னை விடுதலை செய்து விடு.” உண்மையாகவே அர்ச்சுனன் மனம் பேதலிந்து விட்டான் என்பதைக் கண்ணன் உணர்ந்துகொண்டான். பொறுப்புணர்ச்சிமிக்க கண்ணனின் உள்ளம் சிந்தித்தது. ‘சரியானபடி அறிவுரை கூறித்தான் அர்ச்சுனனுடைய மனம் திருந்தச் செய்ய வேண்டும். இப்படியே விட்டுவிட்டால் அவன் போர்க்களத்தை விட்டே ஓடினாலும் ஓடிவிடுவான். அர்ச்சுனன் மனத்தில் “போர் செய்வது தவறில்லை; போர் செய்யலாம்” என்ற விருப்பத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும்’ தேரின் முன்புறத்திலிருந்து எழுந்து அர்ச்சுனனுக்கு அருகில் சென்றான் கண்ணன். “அர்ச்சுனா! இப்போது நான் கூறப்போவதைக் கவனமாகக்கேள். வீண் ஆசாபாசங்களில் சிக்கிக் கடமையைக் கைவிட்டு ஓடிவிடாதே. ஜன்மா எப்படி நேருகிறது? எதற்காக நேருகிறது? ஏன் நேருகிறது? உனக்குத் தெரியுமா? மாயா கர்ப்பத்தின் பிறவிதான் மனம். ஜன்மாவே மாயையின் வசத்தாலோ அவசத்தாலோ நிகழ்கிறது. ஜன்மாவின் சிந்தையோ முற்றிலும் மாயையிலேயே மூழ்கித் தோய்ந்து பிறந்தது. மாயையில் மூழ்கிய மனம் மெய்யறிவை மறப்பதும் பயனற்ற ஆசைகளிலும் பாசங்களிலும் மயங்குவதும் இயல்பு. ஆசையையும் பாசத்தையும் மறந்து கடமையைச் செய்வதுதான் ஆத்மாவின் இலட்சியம், ஜன்மாவின் இந்த இலட்சியத்துக்குப் பகைவேறு எங்கும் இல்லை, அதன் சரீரத்துக்குள்ளேயே இருக்கிறது. ஐம்பொறிகளும், அவைகளுக்குப் புலனாகும் விஷயானுபவங்களும், அவற்றை அடக்கியாள்கின்ற மனமும் தான் அந்தப் பகைகள், புலன்களின் விழிப்பும் கொட்டமும் ஒடுங்காத வரை ஆன்மா உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ஆன்மா விழிப்படைந்து மெய்ப்பொருளை உணர வேண்டுமானால், புலன்கள் செயலோய்ந்து உறங்க வேண்டும். புலன்களின் அஜாக்ரதையால் பாசபந்தங்களைப் போக்கிக் கடமையை நிறைவேறும்படி செய்து கொள்ள வேண்டும்; அது தான் பிறப்பின் மாபெரும் குறிக்கோள்! கடமையை நிறைவேற்றுவதற்குரிய ஞானமாக ஒவ்வொரு ஆன்மாவிலும் பரம்பொருள் நிறைந்திருக்கின்றது பாலிலே நெய்போல மறைந்து நிற்கும் பரமஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பற்ற, பாசபந்தமில்லாத நிலையை அடைவதற்கு இந்த ஞானம் அவசியம். இன்னும் கேள்! உயர்பிரிவினர்களாகிய தேவர்களும், ஞானச்செல்வர்களாகிய முனிவர்களும் கூட உணர்வதற்குத் திண்டாடும் ஓர் மாபெருந் தத்துவத்தை இப்போது இங்கே உன் பொருட்டு நான் உபதேசிக்கிறேன். உன் பிரமையைப் போக்கி அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை உண்டாக்குவதற்காகவே இந்த உபதேசம். சரீரம் பஞ்ச பூதங்களிலிருந்து உண்டானது. அழிந்து பின் பஞ்ச பூதங்களோடு கலக்கப்போவது. ஞானத்தையே சரீரமாகக் கொண்டுள்ள பரம்பொருளின் சக்தியால் வெறும் பூதசரீரமாகிய உடல் இயங்குகிறதே ஒழியத் தானாக இயங்கவில்லை. இதோ உனக்கு முன் நீ இரண்டு கண்களாலும் காண்கின்ற வெறும் கண்ணனாகவா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்? இல்லை! பரம்பொருளின் ஓர் அவதார அம்சம் உன் முன் கண்ணன் என்ற பெயர் தாங்கித் தன் இலட்சணத்தைத்தானே கூறிக் கொண்டிருக்கிறது. எனக்கு எத்தனையோ அவதாரங்கள்! எத்தனையோ பிறவிகள். அத்தனைக்கும் தனித்தனி இலட்சியங்கள் உண்டு. நாராயணன் நான்தான். இராமன், இலக்குவன், கண்ணன், அர்ச்சுனன் என்று நாம , உருவ பேதங்கள் பல! ஆனால் இந்த நாமரூப் பேதங்களுக்கு உள்ளே நாமமும், ரூபமும், பேதமும் இல்லாமல் மறைந்து நிற்பவன் யார் தெரியுமா? நான்! நான்தான்! என்ற ஒரு பெருஞ் சக்தி மறைந்து நிற்கிறது. இந்தச் சக்தியின் கட்டளை உனக்கு என்ன கூறுகிறது தெரியுமா? உறவு, பாசம், ஆசையெல்லாம் போலி வெளி வேஷங்கள், அவற்றால் ஏற்படும் மனதளர்ச்சியை உதறி எறி. கடமை எதுவோ அதை செய்! நீயாக எதையும் செய்யவில்லை. அது உன்னால் முடியவும் முடியாது. நான் உன்னுள் நின்று செய்விக்கிறேன், இதை நீ மறந்து விடாதே. கடமையைச் செய்! உனக்காக அல்ல! உன்னுள் நின்று இயங்கும் எனக்காகச் செய்…” பெருமழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது கண்ணனின் உபதேசம். அர்ச்சுனன் மலர்ந்த முகத்தோடு தன் முன்னிருந்த கண்ணனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தான். அங்கே சாதாரணக் கண்ணன் நிற்கவில்லை. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஓர் விசுவரூபன் நிற்பதாகத் தோன்றியது அவன் விழிகளுக்கு. “கண்ணா! என்னை மன்னித்துவிடு. நான் மெய்யை உணர்ந்து கொண்டேன். மனத்தைப் புழுப்போல அரித்து வந்த ஆசாபாசங்கள் அகன்றுவிட்டன. நான் கடமையைச் செய்கிறேன்” -அப்படியே தேர்மேல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கண்ணனின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான் அர்ச்சுனன். “எழுந்திரு! கால்களைப் பற்றுவது பிறகு இருக்கட்டும். முதலில் உன் கடமையை மனத்தில் இறுகப்பற்றிக்கொள். கீழே போட்டுவிட்ட வில்லை எடுத்து இறுகப்பற்றிக்கொள். ‘போர் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணங்களை இறுக உறுதியாக உள்ளத்தில் பற்றிக் கொள்” கண்ணன் அர்ச்சுனனின் தோள்களைப் பற்றி எழுப்பித் தூக்கி நிறுத்தினான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் கெளரவர்கள் சேனை தங்கியிருந்த எதிர்ப்பக்கம் சென்று தங்களுக்கு வேண்டியவர்கள் சிலரைச் சந்தித்து விட்டு வரக்கருதினர் பாண்டவர். கண்ணனும் பாண்டவர்கள் ஐவருமாக ஒரு தேரின் மேலே ஏறிக் கொண்டு கெளரவர்கள் படை நின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். ஒவ்வொருவராகச் சந்தித்துப் பாண்டவர்கள் நிலைபற்றி அவர்களிடம் கூறி விளக்குவதே கண்ணனின் நோக்கம். அந்த நோக்கத்தின்படி அவர்கள் முதலில் வீட்டுமனைச் சந்தித்தனர். “ஐயா! இந்தப் போரில் நியாயம் பாண்டவர்கள் பக்கம்தான் இருக்கிறது! உங்களைப் போன்ற மூதறிஞருக்கு நன்கு தெரியும். இப்படித் தெரிந்திருந்தும் பாண்டவர்களை எதிர்த்து இடுகின்ற போரில் நீங்கள் முன்னணியில் நிற்கலாமா? நீங்களே இந்தப் போரில் தலைமை தாங்கி நின்றால் பாண்டவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று கண்ணன் வீட்டுமனை நோக்கிப் பாண்டவர்கள் சார்பிலே கேட்டான். “கண்ணா! அருமைப் பாண்டவர்களே! போரில் வெற்றி நிச்சயமாக உங்களுக்குத்தான்! எதிர்கால உலகம் தருமனது இன்பம் நிறைந்த செங்கோலாட்சிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் இந்தப் போரில் உங்களுக்கு எதிராக நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். அதோடு என்னைச் சாகச் செய்வதற்குரிய வழியையும் உங்களுக்குக் கூறிவிடுகிறேன். நான் விரைவில் இறந்து விட்டால் பின் உங்களுக்குச் சீக்கிரமே வெற்றி கிடைத்துவிடும். முன்பொரு காலத்தில் என்னைக் கொல்ல வேண்டுமென் பதற்காகவே அம்பை என்ற பெண் ஒருத்தி தவம் செய்தாள். அந்தத் தவத்தின் பயனாக இப்பிறவியில் துருபதராசனின் மகனாகச் ‘சிகண்டி’ என்ற பெயருடனே அவள் பிறந்திருக்கிறாள். அவளால்தான் எனக்குச் சாவு ஏற்படப்போகிறது. அவளை ‘சிகண்டி எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினால் பெண்ணாக இருந்து ஆணாகப் பிறந்தவன்’ என்ற இழிவினால் நான் வில்லையோ, வாளையோ, கையால் எடுக்காமலே வெறுங்கையோடு நின்று விடுவேன். அப்படி நான் வெறுங்கையோடு நிற்கும்போது, அர்ச்சுனன் எய்யும் அம்புகளால் சாகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமாயின் அதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்ளுவேன். கண்ணா! எல்லா மாயங்களிலும் வல்லவனாகிய நீ துணையிருக்கும் பொழுது பாண்டவர்களுக்குத் தோல்வி ஏது? எல்லாம் மங்கலமாக வெற்றி நிறைவுடனே முடிவுபெறும். கவலையே வேண்டாம்” என்று வாழ்த்துக் கூறி அனுப்பினான் வீட்டுமன். அந்த மூதறிஞரின் நல்ல மனத்தை வியந்து பாராட்டிய வண்ணம் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டு துரோணரைச் சந்திப்பதற்காகச் சென்றனர் பாண்டவர்களும் கண்ணனும். துரோணர் புன்முறுவலோடு அவர்களை வரவேற்றார். தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து நல்லாசிரியர் பெருமானாகிய அவரை வணங்கிப் பணிந்து நின்றனர் பாண்டவர்கள். “கண்ணா! பாண்டவர்கள் மட்டும் தனியாக வரவில்லை. அவர்களை அழைத்துக் கொண்டு நீயும் வந்திருக்கிறாய்! நீ கூட வந்திருந்தால் ஏதாவதொரு மாயமும் தந்திரமும் கூட வந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!” துரோணர் சிரித்துக் கொண்டே இப்படிக் கேட்டார். கண்ணனும் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்: “மாயமாவது, தந்திரமாவது! அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் பாண்டவர்களின் குரு. இப்போது இந்தப் போரில் நீங்களே அவர்களுக்கு எதிராக வில்லை எடுத்துப் போரிடும்படி நேர்ந்து விட்டதே என்றெண்ணித்தான் வருந்துகிறேன்.” “இது கடமை! நான் என்ன செய்யலாம்? ஆனால் வெற்றி என்னவோ தருமனுக்குத்தான் கிடைக்கப் போகின்றது. இந்தப் போரில் என்னுடைய எதிர்ப்பால் நீங்கள் அதிகம் தொல்லை அடையாமல் இருக்க ஓர் உபாயம் சொல்கிறேன். நான் போர்க்களத்தில் பல அரசர்களுக்கு நடுவே போர் செய்து கொண்டிருக்கும்போது,”உன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான்" என்று யாராவது நம்பத்தகுந்தவர் ஒருவர் வந்து கூறுவதற்கு ஏற்பாடு செய்துவிடுங்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நான் உடனே வில்லைக் கீழே போட்டுவிடுவேன். அதன்பின் அதைக் கையிலெடுக்கவே மாட்டேன். என்னுடைய இறுதி துட்டத்துய்ம்மன் கை வில்லில் இருக்கின்றது. அதனால்தான் எனக்குச் சாவு நேரிடப் போகிறது. வீட்டுமனும், நானும் இறந்தபின் கெளரவர்களை வெல்ல உங்களுக்கு அதிக நேரம் ஆகவே ஆகாது! நான் என் உயிரைக் கொடுத்த பின்பாவது பாண்டவர்களின் வெற்றியை விண்ணுலகிலிருந்து மானசீகமாகக் கண்டு மனமகிழ்வேன்" -துரோணர் நாத்தழுதழுக்கக் கூறினார். அவருடைய தூயதியாகம் நிறைந்த நெஞ்சம் கண்ணனையும் பாண்டவர்களையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களை வாழ்த்தினார் துரோணர். எதிர்ப்புறத்துச் சேனையில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து முடித்துக் கொண்டதால் கண்ணனும் பாண்டவர்களும் தேரைத்திருப்பிக் கொண்டு தங்கள் படைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர். இருபுறத்துப் படைத்தலைவர்களும் கடைசி முறையாக அணிவகுப்பைச் சரிபார்த்தனர். படைகளைத் தாக்குதலுக்குத் தயாராக்கி வைத்தனர். போருக்குக் குறித்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது, இருதிறத்தாரும் தத்தமக்கு வெற்றியை நல்குமாறு தத்தம் இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டனர். கண்ணன், பாண்டவர்களின் படையின் மலைபோல் குவிந்து நிற்கும் அணிவகுப்புத் தோற்றத்தில் கண்டு வெற்றித்திருவைத் தியானித்து அந்தரங்க சுத்தியோடு வழிபட்டுக் கொண்டான். இருபுறத்திலும் பாம்புக் கொடிகளும் முரசுக்கொடிகளுமாக வானளாவிய மலைகளில் வீழும் அருவிகளைப் போல உயர்ந்து அசைந்தாடின. விண்ணையும் மண்ணையும், திசைகள் எட்டையும் கிடுகிடுக்கச் செய்வது போலப் போர் முரசங்கள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. திருச்சின்னங்களும், எக்காளங்களும் அதிர்ந்தன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்தன. தேர்ச்சக்கரங்கள் பேரொலியுடன் இடி இடிப்பது போல உருண்டன. வீரர்கள் உறையிலிருந்து வாளை உருவும் ஒலி களம் முழுவதும் எதிரொலித்தது. இருபுறமும் எட்ட நின்று கொண்டிருந்த முன்னணித் தேர்ப்படைகள் ஒன்றையொன்று நெருங்கின. கண்ணன் வலதுகையை அசைத்து சமிக்ஞை செய்தான். வீட்டுமனும், சிவேதனும் ஆகிய இருபுறத்துப் படைத்தலைவர்களும் ஒருவருக் கொருவர் ‘போர் தொடங்கலாம்’ என்ற குறிப்பைக் கண்களாலேயே தெரிவித்துக் கொண்டனர். வாள்களும் வேல்களும் மின்னின. வில்நாண்கள் வளைந்தன. நாணொலி இடிமுழக்கத்தைத் தோற்கச் செய்துவிடும் போல இருந்தது. வியூகங்களின் படியே அணிவகுப்பு முறை மாறாமல் தேர்ப்படையோடு தேர்ப்படையும், காலாட்படையோடு காலாட்படையும், யானைப்படையோடு யானைப்படையும், குதிரைப்படையோடு குதிரைப்படையும் கலந்தன. கடல் கடலோடு மோதினாற் போல இருபுறத்துப் படைகளும் சங்கமமாயின. ‘போர்’ ‘போர்’. பயங்கரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் போர் இதோ உண்மையாகவே நடக்கத் தொடங்கிவிட்டது. பதினெட்டு அக்குரோணிப் படை வீரர்களின் ஆண்மை , அந்தக் குருகுலத்து மண்ணில் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் இரத்த விளையாட்டு விளையாட ஆரம்பித்துவிட்டது. மண் இரத்தத்தால் நனைந்தது. விண் ஓசையால் நிறைந்தது. திசைகள் அவலக் குரல்களால் நிறைந்தன, தர்மத்தையும் அதர்மத்தையும் நிறுவையிடும் போரின் முதல்நாள் மலர்ந்து விரிந்து விட்டது! சிவேதன் முடிவு அர்ச்சுனனின் தயக்கத்தைக் கண்ணன் தன் அறிவுரையினால் போக்கிய பின்பு தொடங்கிய முதல் நாள் போர் விரைவாக வளரலாயிற்று. பிரளய காலத்துப் பேரொலி போல் திசைகள் அதிர்ந்து இது போகுமாறு போர் நடந்தது. பாண்டவருக்குத்துணைவந்த அரசர்கள் தங்களிடமிருந்த அம்புகளை எல்லாம் எதிரிகளின் மேல் ஆத்திரந்தீர எய்து தீர்த்துவிட்டார்கள். அம்புகள் தீர்ந்தால் என்ன? உள்ளத்திலிருந்த ஆத்திரம் தீரவில்லையே! பகைவர்களால் எய்யப்பட்டு ஏற்கனவே தங்கள் மார்பில் நுழைந்து நின்ற அம்புகளை வலியையும் பொருட்படுத்தாமல் பிடுங்கிப் பகைவர்கள் மேலேயே எறிந்தார்கள். நூழிலாட்டு என்று ஒருவகைப் போர் முறையாகும் இது! போரில் வலது கையை இழந்து போனவர்கள் இடது கையால் பகைவர்மேல் அம்புகளைப் பொழிந்தனர். இரண்டு கைகளையுமே இழந்தவர்கள் அம்புகளை வாயில் கவ்விக் கொண்டு பற்களால் உந்தி எறிந்தனர். வீரம் என்ற ஒன்று. ஆண்மை என்ற ஓன்று, தனியே வடிவெடுத்து வந்து அங்கே அந்தக் குருக்ஷேத்ரப் போர்க்களத்திலே நிதரிசனமாக விளங்கிக் கொண்டிருந்தது. பாண்டவர், கெளரவர் ஆகிய இரு திறத்தார்களுமே தத்தம் கட்சியில் உண்மையான ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போர் புரிந்தனர். உறவு, பந்தம், பாசம் இவைகளைப் பற்றிய தயக்கத்தை எல்லாம் கண்ணனின் தெளிவுரையால் நீக்கிவிட்டுப் போருக்குத் துணிந்து விட்ட அர்ச்சுனன் முதறிஞனாகிய வீட்டுமனையே எதிர்த்து நின்றான். வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்த கண்கொள்ளாக் காட்சி போர்க்களத்தையே அதிசயிக்கச் செய்தது. வீட்டுமன் உதவிக்காக தூரியோதனனும், அர்ச்சுனன் உதவிக்காக தருமனும், சில சிற்றரசர்களை உடன் அனுப்பியிருந்தனர். சகுனி, சல்லியன் முதலியவர்கள் வீட்டுமன் பக்கமும்: விந்தரன், அபி மன்னன் முதலியோர் அர்ச்சுனன் பக்கமும் துணையாக நின்றனர். ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற முறையில் இருவரும் மகா உக்கிரமாகப் போர் புரிந்தார்கள். வீட்டுமன் போர் செய்வதற்காக நின்று கொண்டிருந்த தேரின் உச்சியில் ஒரு பெரிய பாம்புக் கொடி பறந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் அந்தக் கொடியின் மேல் பன்னிரண்டு அம்புகளை அடுத்தடுத்து வேகமாகச் செலுத்தித் துளைத்து விட்டான். வீட்டுமன் மார்பின் மேலும் உடலிலும் பூண்டிருந்த கவசத்தில் அர்ச்சுனனால் ஏவப்பட்ட ஒன்பது அம்புகள் தைத்திருந்தன. போரில் அனுபவம் மிக்கவனும் திறமைசாலியுமாகிய வீட்டுமன் இளைஞனான அர்ச்சுனனின் போர் வன்மை கண்டு மலைத்துப் போனான். கௌரவர்கள் பக்கம் சகுனி, சல்லியன் முதலியவர்கள் முன்னணியில் நின்றனர். வீட்டுமனைத் தாக்கியதோடு மட்டும் நின்று விடாமல் இவர்களையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டான் அர்ச்சுனன். இதனால், துரியோதனாதியர்களின் படை அணிவகுப்பே நிலை குலைந்து சிதறிப் போய்விட்டது. இந்த நிலையில் உத்தரனும் சல்லியனும் நேரடியாக ஒருவருக் கொருவர் எதிர் நின்று விற்போரில் இறங்கினர். போர்க்களத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த முனைப்பான எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் இவர்கள் எதிர்ப்பு முக்கிய நிலையை அடைந்திருந்தது. இருதரப்பிலிருந்தும் ‘விர் விர்ரென்று’ மழை பொழிவது மாதிரி அம்புகள் வேகமாகப் புறப்பட்டு மோதிக் கொண்டிருந்தன. இங்ஙனம் இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போரில் திடீரென்று உத்தரன் கை ஓங்கியது. சல்லியன் நின்று கொண்டிருந்த தேரின் குதிரைகள் அம்பு மாரியைத் தாங்க முடியாமல் இரத்த வெள்ளத்தினிடையே வீழ்ந்தன. தேர்ப்பாகன் மார்பில் சேர்ந்தாற்போல் நாலைந்து அம்புகள் தைத்து அவன் உயிரைப் பறித்துக் கொண்டன. சல்லியன் நம்பிக்கை இழந்து விட்டான். அவன் உடல் மட்டுமல்ல; உள்ளமும் தளர்ந்து விட்டது. எல்லாம் தளர்ந்து போன இந்தச் சமயத்தில் உத்தரன் எய்த அம்புகளால் கையிலிருந்த வில்லும் நாணறுந்து இரண்டு துண்டாக முறிந்து விழுந்தது. நாணறுந்த பின்னும் நாணமில்லாமல் நின்ற சல்லியன் உத்தரவின் மேல் அடக்க முடியாத ஆவேசம் கொண்டுவிட்டான். ஆவேச வேகத்தில் போர்முறை, நீதி, நியாயம் எல்லாம் மறந்து விட்டன அவனுக்கு. தன் ஆத்திரத்தை முழுதும் ஒன்றாகத் திரட்டி அருகிலிருந்த ஓர் கூரிய வேலை எடுத்து உத்தரகுமாரனின் மார்பைக் குறிவைத்து எறிந்து விட்டான். முறைப்படி போர் முடிந்து விட்டது என்றெண்ணி வில்லையும் அம்பறாத் தூணியையும் கழற்றிக் கீழே வைத்திருந்த உத்தரன் திடீரென்று ஏவப்பட்ட வேலின் பாய்ச்சலை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் அதற்கு இரையானான். சல்லியன் வீசிய வேல் உத்தரனின் நெஞ்சுக்குழிக்குள் ஆழப் பதிந்துவிட்டது. அடியற்ற மரம்போல் உயிரிழந்து கீழே சாய்ந்தான் உத்தரன். அவன் உயிர் விரைவில் உடலை விட்டுப் பிரிந்தது. வெற்றி வீரனாகப் போர்க்களத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த உத்தரன், சில விநாடிகளில் விண்ணகம் புகுந்து விட்டான். சல்லியன்தான் உத்தரனைக் கொன்றான் என்றறிந்து துரியோதனாதியர் மனமகிழ்ந்தனர். தங்கள் துணைவனான உத்தரன் மறைவு பாண்டவர்களை மனங்கலங்கச் செய்தது. உத்தரனைக் கொன்ற சல்லியனைப் ‘பழிவாங்கியே தீருவேன்’ என்று உறுதி செய்து கொண்டு கிளம்பி விட்டான் வீமன். கதாயுதமும் கையுமாக விமன் துரத்திக் கொண்டு வருவதைக் கண்ட சல்லியன் பயந்து போய் ஓடிப்பதுங்கிக் கொண்டு விட்டான். சல்லியனுக்குப் பதிலாகத் துரியோதனனும் அவனுடைய தோழர்களும் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்து வந்தார்கள். இருவகையினரும் ஒருவரோடொருவர் நெருங்கி எதிர்த்தனர். வீமனும் முரட்டுப் பலசாலி! துரியோதனனும் முரட்டுப் பலசாலி! இரண்டு முரட்டுப் பலசாலிகள் சேர்ந்து போரிட்ட காட்சி களத்திலேயே பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. கதாயுதத்தால் ஓங்கி அடித்துப் புடைத்த வீமன் துரியோதனாதியர் படை அணிவகுப்பே சிதறிப் போகுமாறு செய்தான். துரியோதனனுடைய தேரை அடித்துச் சிதைத்துத் தூள் தூளாக ஆக்சி விட்டான். ஆவேசமடைந்து வீமன் மேல் வில்லை வளைத்தான் துரியோதனன். சரியாக அதே நேரத்திற்கு அந்த வில்லையும் கதாயுதத்தால் முறித்துக் கீழே தள்ளி விட்டான் வீமன். துரியோதனன் போர்க்களத்தில் அனாதையாக, அனாதரவாக நின்றான். ‘அவன் தோற்றுவிட்டான்’ என்றே அவனைச் சுற்றி நின்றவர்கள் நினைத்தார்கள். அந்தப் பரிதாபகரமான நிலையில் துரியோதனனின் மைத்துனர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். மைத்துனர்களோடு சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தான் துரியோதனன். வீமன் தயங்கவில்லை. தனது தைரியத்தை மறுபடியும் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினான். ‘தலை சிதறிப் போகாமல் பிழைத்தால் போதும்’ என்று மைத்துனர்களை ஓட ஓட விரட்டினான். வீமனது ஆற்றலுக்கு எந்த விதத்திலும் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்குள் பாண்டவர்களைச் சேர்ந்தவனும், சிவபெருமான் அருளிய வில்லைப் பெற்றவனும் ஆகிய ‘சிவேதன்’ என்பவன் சல்லியன் பதுங்கிக் கொண்டிருந்த இடத்தை விசாரித்து அறிந்து கொண்டு அவனைத் தாக்குவதற்கு ஓடினான். உத்தரனைக் கொன்ற சல்லியனைப் பழிவாங்க வேண்டும் என்பது அவனுடைய ஆத்திரம். அதிர்ஷ்டவசமாக எந்த இடத்தில் சல்லியன் இருப்பதாகச் சிவேதன் எண்ணினானோ அங்கே அவன் அகப்பட்டுவிட்டான். சிவேதனுக்கும் சல்லியனுக்கும் இடையே கடுமையான விற்போர் நடக்கத் தொடங்கிற்று. சல்லியனோடு துணையாய் இருந்து சிவேதனை எதிர்ப்பதற்கு துரியோதனன் ஆறு பெரிய வீரர்களை அனுப்பினான். அந்த ஆறுபேரும் சல்லியன் ஒருவனும் ஆக ஏழுபேர் சேர்ந்து சிவேதனோடு விற்போர் செய்தார்கள். ஆனால் சிவேதன் தனது அதிசயமான போர்த் திறமையினால் அந்த ஏழுபேரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இதைக் கண்ட துரியோதனனுக்குப் பகீரென்றது. ‘இந்தச் சிவேதன் பெரிய வீரனாக இருப்பான் போலிருக்கிறதே! இவனை எதிர்க்க வேண்டுமானால் இவனை விட மீறிய கையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டே அவன் படைத்தலைவனும் மிகப் பேரறிஞனுமாகிய வீட்டுமனை சிவேதனை எதிர்ப்பதற்கு அனுப்பினான். தன்னை அடக்குவதற்காகத் துரியோதனன் வீட்டுமனை அனுப்பியிருப்பதை அறிந்து கொண்ட சிவேதன், சல்லியன் முதலியவர்களை விரட்டித் துரத்துவதை நிறுத்திக் கொண்டு வீட்டுமன் முன் நின்று அவனை எதிர்த்தான். சிவேதனின் சிறிதும் கலக்கமில்லாத தீரம் வீட்டுமனையே அஞ்சிக் கலக்கம் கொள்ளும்படியாகச் செய்தது. எனினும் அவன் சமாளித்துக் கொண்டு சிவேதனோடு போர் செய்தான். சிவேதனுக்கும் வீட்டு மனுக்கும் நிகழ்ந்த போரில் வீட்டுமனின் தேர், தேர்க்கொடி எல்லாவற்றையும் சிவேதன் அறுத்துத் தள்ளிவிட்டான். வில் நாணையும் அறுத்து வீழ்த்தி வீட்டுமனை வெறுங்கையானாக்கி விட்டான். மகா வல்லமை வாய்ந்தவனான வீட்டுமன் திகைத்து விட்டான். சினங்கொண்ட துரியோதனன் களத்திலிருந்து வேறு பல அரசர்களைத் திரட்டி வீட்டுமனுக்குப் பக்கபலமாக சிவேதனை எதிர்க்க அனுப்பினான். சிவேதனை எதிர்க்க அவர்கள் ஓடி வந்தார்கள். வீட்டுமனும் புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு எதிர்த்தான். சிறிது நேரம் போர் நடந்தது. இரண்டாம் முறையாக வீட்டுமனின் வில்லை ஒடித்து வீழ்த்தினான் சிவேதன். அம்முறை வீட்டுமனுடைய மனத்தில் வெட்கம் உறைத்தது. அவமானமாக இருந்தது அவனுக்கு. “அடே! சிவேதா! உனக்கு வில்லைத் தவிர வேறு எந்த ஆயுதத்தை எடுத்தும் போர் செய்யத் தெரியாது போலிருக்கிறது? தெரியுமானால் வாளை எடுத்துப் போர் செய்வதற்கு வா” என்று வீட்டுமன் கூவியழைத்தான். ஒரு சூழ்ச்சியை மனத்தில் பொதிந்து வைத்துக் கொண்டே அவன் இப்படிக் கறினான். சிவேதன் இதை மெய்யென்று எண்ணிக் கொண்டு தன் வில்லைக் கீழே வைத்துவிட்டு, வாளை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான். திடீரென்று வீட்டுமன் வேறோர் வில்லை எடுத்துச் சிவேதனின் தோள் பட்டையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அம்பு சிவேதனின் தோள் பட்டையில் ஆழமாகப் பாய்ந்து கையைத் துண்டித்துத் தள்ளிவிட்டது, மனங்குமுறிய சிவேதன் தனக்கு மீதமிருந்த ஒரே கையால் வாளை ஓங்கிக் கொண்டு வீட்டுமனைக் கொல்வதற்காக அவன் மேலே பாய்ந்தான். அதற்குள் வீட்டுமனுடைய வில்லிருந்து இன்னொரு அம்பு புறப்பட்டு விட்டது. இந்த அம்பு சிவேதனின் மார்பிலே தைத்து அவனைக்கொன்று விட்டது. சிவேதன் ஆவிதடுமாறி மண்ணில் வீழ்ந்தான். சூழ்ச்சியினால் வீட்டுமன் அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டான். இப்படியாக முதல் நாள் போரில் வீரமாகப் போர் புரிந்த உத்தரன், சிவேதன் என்ற இருவரும் பாண்டவர்களுக்கு மேலும் உதவ முடியாமல் மறைந்து அமரராயினர். இவர்கள் இருவருமே விராடனின் மக்கள். போர் நிகழ்ச்சிகள் உத்தரன், சிவேதன் என்று முறையே தன் மக்கள் இருவரையும் முதல் நாள் போரிலேயே இழந்த விராட மன்னனை கண்ணன், தருமன் முதலியவர்கள் ஆறுதல் கூறி மனச் சமாதானம் அடையச் செய்தனர். மறுநாள் அதிகாலையிலேயே அதாவது புலரிப் போதிலேயே இரண்டாம் நாள் போருக்கான அறிகுறிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி விட்டன. கண்ணன் செய்த ஏற்பாட்டின் படி துட்டத் துய்ம்மன் பாண்டவர்கள் சார்பில் படைத் தலைவனாக்கப்பட்டான். இருபுறத்துப் படைகளும் கலந்து ஒன்றொடொன்று மோதிப் போரைத் தொடங்கின. ஒரு காலத்தில் தன் தந்தைக்கு நண்பராக இருந்து பின் பகை கொண்ட துரோணரை நேருக்குநேர் நின்று எதிர்த்தான் துட்டத் துய்ம்மன். துரோணர் விற்கலைக்கென்றே பிறந்த வீரபுருஷராகையால் அவரைத் துட்டத்துய்ம்மனால் முறியடிக்க முடியவில்லை. துரோணருடைய சரமாரியான அம்பு மழையினால் துட்டத்துய்ம்மன் தான் அலுத்துப் போனான். துட்டத்துய்ம்மனுக்கு உதவியாக வீமனும் வந்து சேர்ந்து கொண்டான். இருவருமாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்தார்கள். வீமன் துட்டத்துய்ம்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்டு எதிர்ப்பக்கத்தில் கலிங்க வேந்தன் வீமனை எதிர்ப்பதற்காக வில்லை வளைத்துக் கொண்டு வந்து விட்டான். கலிங்க வேந்தனின் படையில் யானைகளின் தொகை சற்றே அதிகம். மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் தான் வீமனுக்கு அதிக மகிழ்ச்சி. கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான் வீமன். பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை கலிங்கனுக்கு. தன்னுடைய யானைகளுடன் மட்டும் அன்றிப் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்த பின் ‘தோல்வியடைந்தேன், தோல்வியடைந்தேன்’ என்று கூறிக் கொண்டோடுபவன் போல் புறமுதுகிட்டோடினான் கலிங்க வேந்தன். கலிங்கன் ஓடியபின் வீட்டுமன் வீமனை எதிர்த்தான். பாட்டனாராகிய வீட்டுமனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. முன்பு சிவேதன் செய்தது போலவே வீட்டுமனின் வில்லை ஒடித்தும் தேரைச் சிதைத்தும் அவனுக்குத் தொல்லை கொடுத்தான் வீமன். ஒடிந்து விழுந்த வீட்டுமனின் தேர்ச் சட்டம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதனாலேயே அவனுடைய தேரோட்டியை அடித்து வீழ்த்தி விட்டான். முன்பு வீமனுக்குத் தோற்று ஓடிப்போன கலிங்க வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும் வீட்டுமனுக்கு உதவ ஓடி வந்தார்கள். ஓடிப்போன கலிங்கன் திரும்பி வருதலைக் கண்டு வீட்டுமனோடு போரிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான் வீமன். கலிங்கர் படையை நிர்மூலமாக்கிய பின்பே மீண்டும் அவன் வீட்டுமனிடம் வந்தான். இப்போது அபிமன்னனும் அங்கு வந்து சேர்ந்து கொள்ளவே இருவருமாகச் சேர்ந்து வீட்டுமனை எதிர்த்தார்கள். வீட்டுமனுக்குப் பக்கபலமாக நிற்கும் பொருட்டுப் பல அரசர்களை ஒன்று திரட்டி அனுப்பினான் துரியோதனன். அவனால் அனுப்பப்பட்ட அரசர்கள் வந்து சேர்ந்தவுடன் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு வீமனையும் அபிமன்னனையும் வளைத்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்த அர்ச்சுனன் வீமனுக்கும், அபிமன்னனுக்கும் உதவுவதற்காக வில்லோடு வந்தான். அர்ச்சுனனின் திடீர் வரவு போரின் போக்கை எதிர்பாராத விதமாக மாற்றி அமைத்துவிட்டது. வீட்டுமனும் அவன் படைகளும் நிலை தடுமாறிச் சிதறிப் போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். வீட்டுமனும் பிற கெளரவர்களும் தோற்று ஓடிய அளவில் இரண்டாம் நாள் போர் முடிந்து விட்டது. ‘இரண்டாம் நாள் போரில் அதிகமான ஆள் நஷ்டமும் தோல்வியும் தன் பக்கம்தான்’ என்று உணர்ந்தபோது துரியோதனனுக்கு வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தை மறுநாள் வெற்றியால் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணித் திருப்தியுற்றான் அவன். மூன்றாவது நாள் காலையில் போர் தொடங்கும்போது இருசாராருமே தத்தம் படைகளைப் புதுமாதிரி வியூகங்களில் அணிவகுத்து நிறுத்தினார்கள். கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் கெளரவ சேனைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. துட்டத்துய்ம்மன் கண்ணன் கூறிய ஆலோசனைப்படி பாண்டவ சேனையைப் பிறைச் சந்திரன் வடிவில் அணிவகுப்பு முடிந்ததும் முதல் நாள் விடுபட்ட இடத்திலிருந்து போர் தொடங்கியது. அர்ச்சுனனையும் அபிமன்னனையும் எதிர்த்து வீட்டுமன், துரோணர் முதலியவர்கள் வளைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். வீமனைத் துரியோதனனும் அவன் தம்பிமார்கள் தொண்ணூற்றொன்பதின்மரும் எதிர்த்துப் போரிட்டனர். மாமனான சகுனியும் துரியோதனன் பக்கம் நின்று கொண்டிருந்தான். இரு திறத்தாருக்கும் போர் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது. வீமன் மகனான கடோற்கசன் அவனுக்குத் துணை செய்து உதவ வந்திருந்தான். அர்த்த சந்திரவடிவமான நுனியை உடைய அம்புகளைத் தொடுத்துப் போர் செய்தான் கடோற்கசன். அடுத்தடுத்து துரியோதனனுடைய மார்புக் கவசத்தைத் துளைத்த இந்த அம்புகள் இறுதியில் கவசத்தையே பிளந்து மார்பை ஊடுருவிவிட்டன. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் அங்கேயே களத்தில் மயக்கமுற்று விழுந்து விட்டான். துரியோதனனின் தேரோட்டியை அபிமன்னன் ஏவிய அம்பு கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தன. உடனே துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி வீட்டுமனுக்குத் தெரிவிக்கப் பட்டது. துரியோதனன் உடலைத் தனியே ஒரு தேரின் மேல் எடுத்துக் கொண்டு ஒதுக்குபுறமான ஓர் இடத்திற்குப் போய்த் தக்க சிகிச்சைகளைச் செய்து பிரக்ஞை உண்டாக்கினான். தெளிவான நிலையை அடைந்ததும் அவனைப் பத்திரமான இடத்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மீண்டும் வீமனோடு போரைத் தொடர்ந்தான். உண்மையான ஆத்திரத்தோடு வீட்டுமன் மனங்குமுறிச் செய்த இந்த விற்போரை அர்ச்சுனன், வீமன் முதலியவர்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வீட்டுமனோடு எதிர்த்துப் போர் செய்ய வேண்டும் என்பதையே மறந்து அர்ச்சுனன் அவன் போர் செய்யும் அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கண்டு கொண்டான். “உன் பாட்டனார் பெருஞ்சினத்தோடு வில்லை வளைத்துப் போர் செய்கிறார். நீ அவரை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்! இதன் விளைவாக யாருக்கு அழிவு வரும் என்பதை நீ யோசித்தாயா?” என்று சினம் பொங்கும் குரலில் கூறிக் கொண்டே அர்ச்சுனனின் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் கண்ணன். எப்படியும் தானே வீட்டுமனை எதிர்த்து அழிக்காமல் விடுவதில்லை என்பது கண்ணனின் நோக்கம், கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு வீட்டுமனின் தேரில் தாவிப் பாய்ந்து ஏறிவிட்டான் அவன். கண்ணனின் எண்ணமும் சுலபமாக நிறைவேறிவிடும் போலிருந்தது. வீட்டுமனைத் தேர்த்தட்டின் மேல் கீழே தள்ளிக் கழுத்தில் சக்கராயுதத்தால் அறுத்துத் துளைக்கத் தொடங்கி விட்டான் கண்ணன். அப்போது அர்ச்சுனன் ஓடிவந்து கண்ணன் கைகளைப் பிடித்துத் தடுத்தான். “எல்லாம் தெரிந்த மாயவன் நீ! உனக்கே இத்தகைய கோபம் வரலாமா? இந்த அகில உலகத்திலும் உனக்கு நிகரான எதிரி இல்லையே! வீட்டுமனையா உன் எதிரியாகக் கருதி இப்படித் துன்புறுத்துவது? இது உனக்குத்தகுமா? வேண்டாம். இம்முதியவனை விட்டுவிடு” -என்று அர்ச்சுனன் கெஞ்சினான். வீட்டுமனும் கண்ணன் திருவடிகளை நோக்கித் தன்கைகளை குவித்தான். பலவாறு கண்ணனைப் புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினான். நீண்ட நேர வேண்டுகோளுக்குப் பிறகு கண்ணனுக்கு வீட்டுமன் மேல் இரக்கம் உண்டாயிற்று! சக்கராயுதத்தை அவன் கழுத்திலிருந்து எடுத்தான். வீட்டுமன் விடுதலை பெற்றான். உயிர் பிழைத்தான். “கண்ணா! இனி நீ தேரில் ஏறிக்கொண்டு செலுத்து! என் கடமையை நான் செய்கிறேன். என்னை எதிர்ப்பவர்களை இன்று நடுப்பகலுக்குள் நமனுலகுக்கு அனுப்புகிறேன்” -என்று அர்ச்சுனன் கண்ணனை அழைத்தான். கண்ணன் தேரில் ஏறிச் சாரத்தியத்தை மேற்கொண்டு செலுத்தினான். அர்ச்சுனன் தேர்த்தட்டில் ஏறி நின்று கடுமையான போரை மேற்கொண்டான். அன்று செய்த அந்தப் போரைப் போல் அவ்வளவு ஆத்திரத்துடனே அர்ச்சுனன் அதற்கு முன்பு போரே செய்ததில்லை எதிர் தரப்புப் படையினரில் வீட்டுமன் தவிர அர்ச்சுனனை எதிர்த்த வேறெவரும் உயிருடன் பிழைக்க முடியவில்லை. வருணன், வாயு, அக்கினி, இந்திரன் முதலிய திசைப் பாலகர்களை வழிபடு தெய்வங்களாகக் கொண்ட படை அணிகள் பல அழிந்து விட்டன. துரியோதனாதியர் படையைச் சேர்ந்த யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் அநேகம் அழிந்து விட்டன. துரியோதனன் மாடி வீட்டுக்கு இடையில் காவலின் நடுவே இருந்தான். அவன் தரப்பைச் சேர்ந்த மற்ற அரசர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்க முடியாமல் மூலைக்கு மூலை சிதறி ஓடிவிட்டார்கள். சுளத்தில் அர்ச்சுனனுக்கு எதிரே வீட்டுமன் ஒருவனைத் தவிர வேறு ஆள் இல்லை. இரண்டு பொழுது சாய்ந்தபின் வேறு வழியில்லாமையால் அர்ச்சுனன் போரை நிறுத்தினான். மூன்றாம் நாட் போர் இவ்வளவில் முடிந்தது. பழையபடி கருட வியூகத்திலும் அர்த்த சந்திர வியூகத்திலுமாகப் படைகள் நிறுத்தப்பட்டபின் இரு சாராரும் நான்காம் நாள் போரைத் தொடங்கினர். யானைப் படையினர் வீமனைத் தனியே வளைத்துக் கொண்டு தாக்கலாயினர். வீமனும் விடவில்லை. யானைகளையும் அவற்றின் மேல் வீற்றிருந்தவர்களையும் அடித்துப் புடைத்து அழித்தான். ஒருமுறை வீமனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் பின்வாங்கி ஓடிய யானைப் படையைத் துரியோதனன் தலைமை தாங்கி முன்னுக்கு இழுத்து வந்தான். இதனால் துரியோதனனுக்கும் வீமனுக்கும் தனித்தனியே நேருக்குநேர் போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அம்புமாரி பெய்து கொண்டனர். ஈசல் புற்று நுனியில் மொய்த்துக் கொண்டிருப்பது போல் துரியோதனன் மார்பில் நூற்றுக்கணக்கான அம்புகள் மொய்த்துப் பாய்ந்திருந்தன, துரியோதனன் வீமன் மேற் செலுத்திய அம்புகளில் பெரும் பாலானவற்றை அவன் முறித்து வீழ்த்திவிட்டாலும் சில அம்புகள் அவன் உடலிலும் தைக்கத்தான் தைத்திருந்தன. நேரம் ஆக ஆகப் போரில் வீமனுக்கு வெறிபிடித்து விட்டது. வீமன் துணையின்றி நலிகின்றானோ என்றெண்ணிப் பல வீரர்கள் அவன் பக்கம் துணையாக உதவ வந்தார்கள். ஆனால் வீமனோ தனியாகவே துரியோதனனின் வில்லை முறித்தான். தேர்க்குதிரைகளைக் கொன்றான். அம்புகளால் அவன் உடலைச் சல்லடைக் கால்களாகுமாறு துளைத்தான். துரியோதனன் திக்கு முக்காடிப் போனான். அவன் நிலைக்கு இரங்கிச் சகுனி, சல்லியன் முதலியவர்கள் உதவிக்கு ஓடிவந்தார்கள். துரியோதனனுடைய தம்பிமார்கள் சிலரும் உதவிக்கு வந்தார்கள். வீமன் போரை நிறுத்தவில்லை. தன்னுடைய வீரமிக்க போரினால் துரியோதனனின் தம்பியர்களில் ஐந்துபேர்களை விண்ணுலகுக்கு விருந்தாளியாக்கினான். துரியோதனன் உண்மையிலேயே தளர்ந்து விட்டான். வீமனும், அபிமன்னனும் அர்ச்சுனனும் நாலா திசைகளிலிருந்தும் தாக்கிக் கெளரவப் படைகளை சின்னாபின்னமாக்கினர். சூறாவளிக்கு நடுவே பஞ்சுபோல் திணறியது அவன் படை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரியோதனாதியர் படைகளைப் ‘பகதத்தன்’ என்பவன் சிதறாமல் ஒன்று சேர்த்துக் கொண்டு மீண்டும் பாண்டவசேனையோடு போருக்கு வந்து விட்டான். இவன் உறுதியும் துணிவும் மிக்கவன். எப்படியும் பாண்டவர் படைகளை ஒரு ‘கலக்குக் கலக்குவது’ என்று வந்திருந்தான். யானைப் படையிலிருந்த யானைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு, திமுதிமுவென்று பாண்டவ சைனியத்தின் அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டான். இதனால் பாண்டவர்படை அழிந்து ஓடத் தலைப்பட்டுவிட்டது. இதைக் கண்ட கடோற்கசன் தன் வசமிருந்த சில யானைகளையே பல்லாயிரக்கணக்கான யானைகளாகத் தோன்றும்படி மாயம் செய்து கொண்டு பகதத்தனை மோதி எரித்தான். கடோற்கசனைப் போலவே பகதத்தனும் அசுரனே. ஆனால் கடோற்கசனிடமிருந்த அந்தச் சாமர்த்தியம் பகதத்தனிடம் இல்லை. சீக்கிரமே பகதத்தனுக்குத் தோல்வியும் கடோற்கசனுக்கு வெற்றியுமாக அன்றையப்போர் முடிந்தது. நான்காம் நாள் போரில் தன் புதல்வர்களில் ஓர் ஐந்து பேர்கள் வீமன் கையால் இறந்து போனார்கள் என்பதை அறிந்து அரண்மனையிலிருந்த காந்தாரி சோகம் தாங்காது அழுது புலம்பினாள். “பாண்டவர்கள் ஐவரும் இறப்பதற்குப் பதிலாக நீங்கள் நூற்றுவரில் ஐவர் இறந்து போனீர்களே! உங்கள் நல்வாழ்வு கண்டு பொறாமல் அந்தப் பாண்டவர்கள் எண்ணிய பொறாமை எண்ணங்கள் இன்று பலித்து விட்டனவே? இதுவோ உங்கள் விதி?” இவ்வாறு காந்தாரி வெகு நேரம் தன் கதறலை நிறுத்தவே இல்லை. இராம இராவண யுத்தத்தில் இருதரப்படைகளும் நின்றாற்போல் நின்று அணிவகுத்துப் பேரொலிகளுடனும் பேராவாரங்களுடனும், ஐந்தாம் நாள் காலை போர் தொடங்கியது. தேர்ப்பாகனான கண்ணன் அவசர அவசரமாகக் களத்தில் புகுந்து தேரைச் செலுத்த அர்ச்சுனன் வில்லும் கையுமாகப் போருக்குத் தேரில் ஏறினான். அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்ய வேண்டுமென்பது கண்ணனின் ஆசை. அதற்காக வீட்டுமனுடைய தேருக்கு முன்னால் அர்ச்சனுடைய தேரைப் போருக்கேற்ற முறையில் கொண்டு போய் நிறுத்தினான். இதற்குள் கலிங்கவேந்தனைச் சேர்ந்த படை மக்கள் அர்ச்சுனனை நடுவில் மடக்கிக் கொண்டார்கள். வீட்டுமனை அவன் தாக்குவதற்கு முன்பே அவனை மடக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கலிங்கர்களின் நோக்கம். அர்ச்சுனன் அவர்களைத் தன் அம்புகளால் துளைத்தான். கலிங்கர்கள் பலர் மடிந்தனர். இதைக் கண்டு வீட்டுமன் தானாகவே அர்ச்சுனனோடு போருக்கு வந்தான். வீட்டுமனுக்கும் அர்ச்சுனனுக்கும் நேரடியாகவே போர் தொடங்கி விட்டது. சரியாக இதே நேரத்தில் போர்க்களத்தில் மற்றோர் பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த வீமனை எதிரி அரசர்கள் பலர்  சேர்ந்து வளைத்துக் கொண்டனர். துச்சாதனன் முதலிய துரியோதனன் தம்பிமார்கள் சேர்ந்து வீமனை மடக்க முயன்றனர். வீமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளும், கதையினால் அடித்த அடிகளும், தம்பிமார்களை இரத்தம் சிந்த வைத்தன. வீமனுக்குப் பயந்து இரத்தம் சிந்திக் கொண்டே ஓடினார்கள் அவர்கள். அதைக் கண்டு துரியோதனனே வில்லை வளைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான். “என் தம்பியர்களை ஓட ஓட விரட்டிய இந்த வீமனை இன்றைக்குக் கொல்லாமல் விடுவதில்லை” என்று கூவிக் கொண்டே களத்தில் ஆரவாரம் செய்தான் அவன். ஆரவாரத்தோடு ஆரவாரமாகப் பத்து அம்புகளை வீமன் மார்பில் தொடர்ந்து செலுத்தி விட்டான். வீமனின் மார்புக் கவசம் அறுந்து துளைபட்டு விட்டது. தன்மார்புக் கவசம் அறுந்தவுடன் வீமனுக்கும் துரியோதனன் மேல் ஆத்திர வெறிமூண்டு விட்டது. வேகமாக ஒரு கணையை எடுத்துத் துரியோதனன் மார்பைக் குறிவைத்துத் தொடுத்து விட்டான். அந்தக் கணை துரியோதனன் மார்பில் ஆழப்புதைந்து தைத்துவிட்டது. துரியோதனனுக்கு வலி வேதனை பொறுக்க முடியவில்லை. அப்படியே கிறங்கிப் போய் ஒன்றும் தோன்றாமல் நின்று விட்டான் அவன். அப்போது கெளரவர் படையைச் சேர்ந்த வேறோர் அரசனாகிய பூரிசிரவா என்பவன் துரியோதனனுக்குப் பதிலாக வீமனோடு போர் செய்ய முன் வந்தான். வந்த வேகத்தில் குறி தவறாமல் வீமன் மேல் இரண்டு அம்புகளையும் எய்து விட்டான். பூரிசிரவாவும், வீமனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீமனுக்கு உதவியாகச் சாத்தகி வந்தான். வாளைக் கொண்டும் வில்லைக் கொண்டும் மாறி மாறிப் போர் செய்தார்கள். பெரிய அளவில் களம் முழுவதும் வியாபகமாக நடந்து கொண்டிருந்தது போர். போரின் இந்த வியாபகத்தினால் அன்றைய தினத்தில் மிகுந்த அழிவும் மிகுந்த சேதமும் ஏற்பட்டிருந்தன.  ஐந்து நாட்களுக்குப் பின் ஆறாவது நாள் காலையில் போர் தொடங்கும் பொழுது இரு திறத்துப் படையினரும் தத்தம் படைகளைப் புது வியூகங்களில் வகுத்து நிறுத்தினர். பாண்டவர் சேனையைத் துட்டத்துய்ம்மன் மகரமீன் வடிவமாகவும், கெளரவர் சேனையை வீட்டுமன் அன்றில் பறவையின் வடிவமாகவும், வகுத்து நிறுத்தியிருந்தார்கள். போர் தொடங்கியதும் இதுநாள் வரை இல்லாத அபூர்வ சந்திப்பாக வீமனும் துரோணரும் தங்களுக்குள் நேர் எதிரெதிரே வில்லும் கையுமாகச் சந்தித்தார்கள். தனக்கு ஆசிரியராக இருந்த துரோணரோடு கூட அஞ்சாமல் ஆண்மையோடு விற்போர் புரிந்தான் வீமன். துரோணனையும் அவனுடன் சேர்ந்து மற்ற ஆட்களையும் வீமன் தாக்கிக் கொண்டிருக்கும்போது சல்லியன் குறுக்கிட்டு, “ஏ! வீமா… இதோ நான் தயார்! என்னோடு போருக்கு வா!” -என்று வீமனை அழைத்தான். வீமன் சல்லியனைப் பார்த்து ஏளனமாக நகைத்துக் கொண்டே “என்னுடன் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ ஏற்கனவே பல முறை எனக்குத் தோற்றவனாயிற்றே?” என்று இகழ்ந்து கூறிப் போர் தொடங்கினான். சல்லியனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. வீமன் சல்லியனுடைய வில்லை முறித்து வீழ்த்தி விட்டு அவனைத் தேரோடு தூக்கித் தரையில் ஓங்கி அடித்தான். எதிர்பாராத இந்த அதிர்ச்சியினால் சல்லியனுடைய வலிமை முற்றிலும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது. சல்லியன் தளரவும் துரியோதனன் சில ஆட்களோடு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனனும் அவனுடன் வந்தவர்களுமாகச் சேர்ந்து வீமன் மேல் அம்பு மழை பொழிந்தார்கள். அதைச் சமாளிப்பதற்காகத் திட்டத்துய்ம்மன், கடோற்கசன் முதலியவர்கள் வீமனுக்கு உதவியாக வந்தனர். வீமனும் கடுமையாகப் போர் செய்தான். துரியோதனன் தம்பியர்களில் சிலர் அன்று வீமன் கைக்கணைகளால் இறந்தனர். வீமன் செய்த போரை மானசீகமாகத் தேவர்களும் பாராட்டினர். இவர்கள் இவ்வாறு போர் செய்து கொண்டிருக்கும்போது விகர்ணனும் அபிமன்னனும் களத்தின் வேறோர் புறத்தில் போர் செய்து கொண்டிருந்தனர். தனக்கு எதிரே வந்த வேகத்திலேயே விகர்ணனின் தேரை அடித்து முறித்தான் அபிமன்னன். தேர் ஒடிந்ததும் தனக்கு அருகே நின்று கொண்டிருந்த சித்திரசேனன் என்பவனுடைய தேரில் ஏறிக் கொண்டு போர் செய்தான் விகர்ணன். ஏறக்குறைய இதே சமயத்தில் துரியோதனனின் தம்பிகளில் வேறு சிலரும், சயத்திரதன், பகதத்தன் ஆகியவர்களும் இன்னொரு பக்கத்திலிருந்த அபிமன்னனை எதிர்த்துக் கணைகளைத் தூவினர். அபிமன்னனோ அவர்கள் தன்மேல் செலுத்திய அம்புகளைத் தந்திரமாக விலக்கி விட்டுத்தான் அவர்கள் மேல் செலுத்துகிற அம்புகளை மட்டும் குறி தவறாமல் எய்தான். விகர்ணன் அபிமன்னனுடைய அம்புகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறினான். சயத்திரதன் பகதத்தன் முதலிய பெரிய பெரிய வீரர்கள் கூட அபிமன்னனை நெருங்க முடியவில்லை. துரியோதனன் அபிமன்னனை எதிர்க்க வழி தெரியாமல் மருண்டு போய்த் திகைத்தான். அற்புதமாகப் போர் புரிந்த அபிமன்யுவைப் பாண்டவர்கள் பாராட்டிக் கொண்டாடினர். ஏழாம்நாள் காலையில் போர் தொடங்குகிறபோது பாண்டவர்கள் சேனை சர்ப்பவியூகமாகவும், கெளரவர் சேனை சக்கரவியூகமாகவும் நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த பாண்டிய மன்னன் துரோணரை எதிர்த்துப் போர் செய்தான். கடோற்கசனும் போர்க்களத்தில் சுறுசுறுப்போடு தோன்றிப் போர் செய்து கொண்டிருந்தான். துரியோதனாதியரைச் சேர்ந்தவனாகிய ‘சுதாயு’ என்பவன் சாத்தகியை எதிர்த்தான். சகுனியும் சல்லியனுமாகச் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்துத் தாக்கினார்கள். ஆனால் சீக்கிரமே வீமனுடைய வில்லுக்கு முன் நிற்க இயலாதவர்களாகித் தோற்று ஓடினர். கண்ணனைத் தேர்ப்பாகனாகக் கொண்ட அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் விற்போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. வீட்டுமன் எய்த அம்புகளை ஒன்றுகூடத்தன்மேல் விழாமல் அர்ச்சுனன் தடுத்தான்! அர்ச்சுனன் எய்த அம்புகளை ஒன்றுகூடத் தன்மேல் விழாமல் வீட்டுமனும் தடுத்தான்! ஒருவர் அம்பு மற்றவரைப் பாதிக்காமலே நீண்ட நேரம் இருவரும் சாதுரியமாகப் போரைச் செய்து கொண்டிருந்தனர். முருகக் கடவுளும், தாரகாசுரனும், இந்திரனும், பலாசுரனும், இராமனும், இராவணனும் முறையே தங்களுக்குள் செய்த போரைப் போலச் சிறப்பாக வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்தார்கள். முடிவில் இருபுறத்துப் படைகளிலும் சரிசமமான அளவில் அழிவு ஏற்பட்டிருந்தது. பெருவாரியான வேந்தர்கள் உடலில் காயமுற்றிருந்தார்கள். எட்டாம்நாட் காலை போர் தொடங்குகிற போது பாண்டவர்கள் சகடவியூகமாகப் படையை அணிவகுத்து நிறுத்தினர். துரியோதனாதியர் படையை வீட்டுமன் தூசி வரிசையாக அணிவகுத்து நிறுத்தினான். போர் தொடங்குவதற்கு முன்பே தனக்குள் “வீமனை அன்று எப்படியும் கொன்று தீர்த்துவிட வேண்டும்” -என்று ஒரு சபதம் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். எனவே தானும் தன் தம்பியர்களில் சிலருமாக ஒன்று கூடிக் கொண்டு வீமனை எதிர்ப்பதற்கு வந்து நின்றான். வீமனோ, “துரியோதனனின் தம்பிமார்களில் முன்பு ஐந்து பேர்களைக் கொன்றது போல இன்றைக்கு ஒரு ஏழெட்டுப் பேர்களையாவது கொன்றுவிட வேண்டும்” -என்று தனக்குள் உறுதி செய்து கொண்டிருந்தான். துரியோதனன் கோஷ்டிக்கும் அவனுக்கும் போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வீமன் தன் எண்ணப்படியே துரியோதனன் தம்பியர்களை ஒவ்வொருவராகத் தீர்த்துக் கட்டுவதற்குத்  தொடங்கினான், முன்பு இறந்திருந்த ஐந்து பேர்களுக்கு மேலே வரிசையாக இன்று எட்டுப் பேர் இறந்திருந்தனர். பதின்மூன்று தம்பியர்களைப் பறி கொடுத்திருந்தான் துரியோதனன். மனம் உடைந்து போன துரியோதனன் நேரே வீட்டுமனிடம் போய்த் தன் மனத்திலுள்ளவைகளை எல்லாம் பிரலாபித்து அழுதான். “தோல்விமேல் தோல்வியாக நாமே தோற்றுக் கொண்டிருக்கிறோம். உங்களை நம்முடைய படையின் தலைவராக அமைத்தால் உடனே வெற்றி கிட்டிவிடும் என்று நினைத்தேன். என் நினைப்பு ஏமாந்து விட்டது! முன்பு ஐந்து தம்பிமார்களைச் சாகக் கொடுத்தேன். இன்று எட்டுத் தம்பிமார்களை வீமன் கொன்று விட்டான்! பதின்மூன்று தம்பிமார்களைச் சாகக் கொடுத்ததைத் தவிர நான் கண்ட பயன் வேறு என்ன? ஒன்றுமே இல்லையே?” -என்று வீட்டுமனுக்கு முன் நின்று பரிதாபமாகக் கூறினான். வீட்டுமன் என்ன செய்வான்? பாவம்! ஆறுதலாகச் சில வார்த்தைகளைக் கூறினான்:- “துரியோதனா! போர் என்றால் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ஏற்படுவது சகஜம்தான். பகைவர்கள் பக்கமே எல்லாச் சாவுகளும் ஏற்பட்டுவிடுமோ? ‘போர்’ -என்றால் இரண்டு பக்கமும் நஷ்டங்கள், அழிவுகள் எல்லாம் ஏற்படத்தான் ஏற்படும். செல்வர்கள் செல்வத்தைத் தருமம் செய்வதற்கும் தாமே அனுபவிப்பதற்கும் பயப்பட மாட்டார்கள். இல்லறத்தார்கள் விருந்தினர்கள் எப்பொழுது வந்தாலும் வரவேற்றுப் பேணுவதற்குப் பயப்பட மாட்டார்கள். மெய்யறிவு பெற்று இந்த உலகத்தைப் பற்றிய உண்மையைத் தெளிந்து கொண்டவர்கள் சாவதற்கும் பயப்படமாட்டார்கள். இவற்றை எல்லாம் போல அரசர்களாகப் பிறந்த வீரக்குடிமக்கள் போருக்குப் பயப்படக்கூடாது! ஆனால் உன்னைப் பொறுத்த மட்டில் நீ இம்மாதிரிப் பயப்படுவதைத் தடுக்க முடியாது. அன்றிலிருந்து இந்த விநாடி வரை எதிலும் எதற்கும் ஒழுங்கையும் தருமத்தையும் மீறியே வாழப் பழகியிருக்கிறாய் நீ. இந்தத் தீய செயல்களின் பாவபலன்களை நீ அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கற்பின் செல்வியாகிய திரெளபதியை அவைக்கு நடுவே மானபங்கம் செய்கிறபோது இப்போது ஏற்படுகிற தீமைகளெல்லாம் ஏற்படும் என்று கருதித்தானே நாங்கள் தடுத்தோம். ஆனால் நீ அன்று எங்கள் அறிவுரையை இலட்சியம் செய்தாயா? விதுரன் மனம் புண்ணாகி உன்னை வெறுத்து வில்லை முறித்துப் போட்டு விட்டுப் போகும்படி செய்தாய்! சகுனி, துச்சாதனன், கர்ணன் முதலிய தீயவர்களின் சொற்களைக் கேட்டாய். தன்னை அதிரதனாக நியமித்தாலொழியப் போர் செய்ய முடியாது என்று உன் உயிருக்கு உயிரான கர்ணன் கூறிவிட்டுப் போய்விட்டான். எதிர்த்தரப்பில் உள்ள வீமன், அர்ச்சுனன், திட்டத்துய்ம்மன், முதலிய மகா வீரர்களைக் கவனிக்கும்போது நம்மிடம் படையே இல்லை என்றுதான் தோன்றுகிறது! வெற்றியோ? தோல்வியோ? விளைவை விதி உண்டாக்கும். நீ என்னிடம் வந்து பரிதாபப்பட்டு என்ன பயன்? யார் கையில் என்ன இருக்கிறது” -என்று நீண்டதோர் அறிவுரையை அவனிடம் கூறி அனுப்பிவிட்டுப் போர்க்களத்தில் படைகளிடையே புகுந்து சென்றான் தலைவனான வீட்டுமன். முன்பு களப்பலியாக இறந்து போன அரவான், தான் கண்ணனிடம் கேட்டிருந்த வரத்தின்படி உயிர்பெற்றுப் போர்க்களத்திற்கு வந்து போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனும் வழக்கம்போல் மாயத்தன்மை பொருந்திய உருமாற்ற வித்தைகளின் மூலமாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனோடு போர் புரிந்து கொண்டிருந்த ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் தோற்று ஓடும்போது அருகில் நின்று கொண்டிருந்த அரவானைப் போகிற போக்கில் ஓங்கி வெட்டிவிட்டுப் போய்விட்டான். அரவான் வெட்டுப்பட்ட உடனேயே இறந்து போய் விட்டான். ‘அலம்பசன் அரவானைக் கொன்றுவிட்டான்’ -என்ற செய்தி ஒரு விநாடியில் போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. களத்தில் போர் புரிந்து கொண்டிருந்த அபிமன்னனுக்குச் சினம்பொங்கி விட்டது. “அரவானைக் கொன்ற கௌரவர் படையை அழித்துச் சாம்பலாக்கி விடுவேன்” -என்ற உறுதியோடு போரில் ஈடுபட்டான் அவன். வீமனும் அடக்க முடியாத மனக் கொதிப்போடு போர் செய்தான். துரியோதனனும் அவனுடைய தம்பிமார்களும் வீமனின் எதிரே போருக்கு நின்று கொண்டிருந்தார்கள். “ஏ! துரியோதனா? இது வரை பலமுறை இதே போர்க்களத்தில் எனக்கு எதிராக நீ நின்று போர் செய்திருக்கிறாய். என்ன பயன்? தோற்று ஓடியிருக்கிறாயே ஒழிய, ஒரு முறையாவது நீ என்னைத் தோற்கச் செய்திருக்கிறாயா? நீ தனியாகப் போருக்கு வராமல் உன்னோடு உன் தம்பிமார்களையும் அழைத்துக் கொண்டு வருகிறாய் என் கை அம்புகளால் சாவதற்கென்றே உன் தம்பிமார்கள் உன்னோடு வருகிறார்கள். ஏற்கனவே பதின்மூன்று தம்பியர்களைக் கொன்றாய்விட்டது. இப்போது ஓர் ஏழு பேரையாவது கொல்லலாமென்று நினைக்கிறேன். நீ உண்மையான வீரனானால் உன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியுமானால் அவர்களைக் காப்பாற்றிக் கொள்…” என்று துரியோதனனை நோக்கி அறைக்கூவி விட்டுப் போரைத் தொடங்கினான். சொல்லிய சபதத்தின் படியே கால் நாழிகையில் வரிசையாக இன்னும் ஏழு தம்பியர்கள் இறந்து போகும்படி செய்தான் வீமன். இறப்பின் எண்ணிக்கை இருபது ஆயிற்று. துரியோதனன் ஆத்திரம் நிறைந்த விழிகளால் வீமனைப் பார்த்தான். பார்ப்பதைத்தவிர அவனால் வேறென்ன செய்ய முடியும்? “அப்பா துரியோதனா! உனது பாவத்தின் பயன்களை இதுவரை பார்த்தது போதுமா? இனிமேலும் உயிரோடு இருந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? உன் ஆசை தீர்ந்து விட்டதானால் உன்னுடைய இருபது தம்பியர்களும் எந்த இடத்திற்குப் போனார்களோ அதே இடத்திற்கு உன்னையும் அனுப்பி விடுகிறேன். இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என்று உனக்கு ஆசை இருக்குமானால் பிழைத்துப் போ” என்றான் வீமன். இதைத் தன் செவிகளால் கேட்ட பின்பும் வெட்கத்தினால் வேறு மறுமொழி கூறத் தோன்றாமல் தலை குனிந்த வண்ணமே பாசறைக்குத் திரும்பினான் துரியோதனன். எட்டாம் நாட்போராகிய அன்றைய வெற்றி பாண்டவர்கள் பக்கமே மிகுதியாக இருந்தும் கூட அரவானை இழந்த துயரத்தால் அவர்கள் மனத்திலும் நிம்மதியே இல்லை. “இன்று களத்தில் இறப்பதன் முன் அன்றே களப்பலியாக இறந்தவன்தானே அரவான்! அவன் மாண்டதற்காக வருந்த வேண்டாம், வீர சுவர்க்கத்தில் நல்ல இடம் பெறுவான் அவன்” என்று கண்ணபிரான் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறி ஆற்றினான். எட்டாம் நாள் போரை முடித்துக் கொண்டு பாசறைக்குப் போன துரியோதனனின் மனம் சோகத்தினாலும் ஏமாற்றத்தினாலும் வெம்பிச் சாம்பியது. பாசறைக்குப் போன உடனேயே ஒரு காவலனை அழைத்துக் கர்ணனைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னான். கர்ணன் வந்தான். தம்பியர் இறந்து போனது பற்றித் துக்கம் விசாரித்தான். சிறிது நேரத்தில் கூப்பிட்டனுப்பிய காரணத்தை மெல்லக் கேட்டான், “கர்ணா! காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமா? போரில் எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை நீயே தெரிந்துகொண்டுதானே இருக்கிறாய்? இன்று வரை என் தம்பியர்களில் இருபது பேர் இறந்து விட்டனர்! நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வில்லெடுத்துப் போர் செய்தால் என்ன? சும்மா இருந்தால் தான் என்ன? நீ வந்து வில்லெடுத்துப் போர் செய்ய வேண்டும்! அப்போது தான் அந்தப் பாண்டவர்கள் பயப்படுவார்கள்” என்று உருக்கம் நிறைந்த குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான் துரியோதனன். “வாஸ்தவம்தான்! ஆனால் வீட்டுமன் உயிரோடு இருக்கும் வரை நான் வில்லெடுக்கமாட்டேனே? அதற்கென்ன செய்யலாம் இப்போது? அவர், இனிமேல் போர் செய்ய முடியாது’ என்று பாண்டவர்களுக்கு முன்னால் தளர்ந்து விழுந்த பின் நான் உன் பக்கம் போர் செய்து வெற்றியை வாங்கித் தருகிறேன்” என்று மறு மொழி கூறினான் கர்ணன். கூறிவிட்டு உடனே துரியோதனனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் போய்விட்டான். துரியோதனன் அப்போதே துச்சாதனன் மூலம் கர்ணன் கூறிய செய்திகளை வீட்டுமனுக்குக் கூறி அனுப்பினான். அவற்றைக் கேட்ட வீட்டுமன் மனம் வருந்தினான். “அப்படியா? நான் தளர்ந்து விழுந்த பின்புதானா கர்ணன் வில்லெடுப்பான்? நாளை ஒரு நாளைக்குப் பொறுத்துக்கொள்ளச் சொல்! ஒன்றும் முடியாவிட்டால் நான் விழுந்து விடுவேன். பின்பு வெற்றியை வாங்கிக் கொடுக்க கர்ணன் வரட்டும்!” என்று விடைகூறி அனுப்பி விட்டான் வீட்டுமன். ஒன்பதாம் நாள் போரில் புதுமுறை அணிவகுப்பை மேற்கொண்டான் வீட்டுமன். துரியோதனன் களத்தின் நடுப்பகுதியிலும் ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் முன்னணியிலும் பகதத்தன் முதலியவர்கள் பக்கங்களிலுமாகச் ‘சாவதோபத்திரம்’ என்ற முறையில் படைகளை நிறுத்தினான். பாண்டவர்கள் தங்கள் படைகளை அகலவியூகமாக நிறுத்தினர். போர் தொடங்கியவுடன் அலம்பச அரக்கனுக்கும் வீமனுக்கும் வில்யுத்தம் ஏற்பட்டது. அலம்பசனுக்கு விற்போர் நன்றாகத் தெரியாது. வீமனை விற்போரில் சமாளிக்க முடியாத அலம்பசன் திடீரென்று வாளை உருவிக்கொண்டு வாட்போருக்கு அழைத்தான். வீமனும் வாளை எடுத்துக் கொண்டு அலம்பசனோடு வாட்போருக்குப் போனான். சிங்கத்தோடு சிங்கம் மோதுவதுபோல் அலம்பசனும் வீமனும் வாளோடு வாளும், தோளோடு தோளுமாக மோதிக்கொண்டார்கள் வாட்போரிலும் அலம்பசனுக்குத் தான் நிறையக் காயங்கள் பட்டன். உடனே அவன் வாட்போரையும் நிறுத்திவிட்டு மற்போருக்கு அழைத்தான்! வீமனும் அதை மறுக்காமல் சம்மதித்து அலம்பசனோடு மற்போருக்குப் போனான். சிறிது நேரம் இருவருக்கும் கடுமையான மற்போர் நடந்தது. மற்போரிலும் அலம்பசனே இளைத்தான். மீண்டும் திடீரென்று அவன், “மற்போர் போதும்! விற்போர் தொடங்குவோம்” என்று எழுந்து தேரில் ஏறி வில்லை எடுத்துக்கொண்டான். உடன் வீமனும் வில்லை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் பழையபடி விற்போர் தொடர்ந்து நடந்தது. வீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதிய அலம்பசன், மீண்டும் திடீரென்று, “விற்போர் போதும்! மீண்டும் மற்போர் செய்யலாம் வா!” என்றான். வீமனும் மறுக்காமல் அவனுடன் மற்போர் செய்யமுற்பட்டான். இருவருக்கும் மற்போர் நடந்தது. மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வீமன் மேல் எறிந்தான். நல்லவேளையாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்னன் இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்து விட்டான். வீமன் கல்லடி பட்டு நொறுங்காமல் பிழைத்தான். ‘இனி இந்த அசுரனை உயிரோடு விட்டால் அவனால் வீமன் உயிருக்கு என்னென்ன துன்பம் நிகழுமோ?’ என்று பயந்த அபிமன்னன் ஒரு வேலை எடுத்து அலம்பசனின் மார்பிற்குக் குறிவைத்துப் பாய்ச்சி விட்டான். அலம்பச அசுரனைச் சேர்ந்த அரக்கர்கள் வேல் அவன் மேல் பாயாமலிருக்க வேண்டும் என்பதற்காக இவனைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். உடனே வீமன் தன் கதாயுதத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றவர்களை நையப் புடைத்து விலக்கினான். அபிமன்னன் எறிந்த வேல் அலம்பசனின் மார்பிலே பாய்ந்துவிட்டது. அலம்பசன் வீறிட்டு அலறி மாண்டு வீழ்ந்தான். தன் தம்பி அரவானைக் கொன்றவனை அபிமன்னன் பழி வாங்கிவிட்டான் என்று போர்க்களத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மேலும் அன்றைக்கு அர்ச்சுனன் செய்த போரில் துரியோதனனுக்குத் துணையாக வந்திருந்த பதினாயிரம் அரசர்களைத் தோற்கடித்தான். அர்ச்சுனனின் இந்தச் செயலினால் வீட்டுமனுக்கு ஆத்திரம் மூண்டது. அவன் தன் படைகளை அழைத்துக் கொண்டு திட்டத்துய்ம்மன், சிகண்டி ஆகிய பாஞ்சால தேசத்து வீரர்களுக்கு முன்னால் போய்ப் போருக்கு நின்றான். பாஞ்சாலத்து வீரர்கள் வீட்டுமன் கணையால் படாதபாடு பட்டனர். இதனால் சினமடைந்த சிகண்டி வீட்டுமன் மேல் வில்லை வளைத்துக் கொண்டு பாய்ந்தான். சரமாரியாக அவன் தன்மேல் பொழிந்த அம்புகளை எதிர்க்கத் தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டான். மார்பிலும் உடலிலுமாக அம்புகள் தைத்தன. இந்த நிலையில் சிகண்டியை எதிர்ப்பதற்காக ஓடிவந்தான் துச்சாதனன். துச்சாதனனுக்கும் சிகண்டிக்கும் போர் நடந்தது. சிகண்டியின் வில்லை முறித்துத் தேரை அழித்துத் திகைக்கச் செய்தான் துச்சாதனன். சிகண்டி துச்சாதனனிடம் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை அர்ச்சுனன் தொலைவிலிருந்து பார்த்துவிட்டான். அவன் உடனே சிகண்டிக்கு உதவியாக வந்து துச்சாதனனோடு போர் செய்து அவனைத் துரத்தினான், அர்ச்சுனன் துச்சாதனனைத் துரத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுமன் அவனை எதிர்த்துத் தாக்குவதற்காக ஓடி வந்தான். வீட்டுமனை எதிர்ப்பதற்காக விராடராசனின் தம்பியும் மகாவீரனுமாகிய சதாநீகன் என்பவன் முந்துற்றான். ஆனால் சாமர்த்தியமாக சில கணைகளை ஏவிச் சதாநீகனை வந்த வேகத்திலே கொன்று தள்ளி விட்டான் வீட்டுமன். சதாநீகன் மரணத்தோடு ஒன்பதாம் நாள் போர் முடிந்தது. பத்தாம் நாள் காலையில் போர் தொடங்குகிற போதே வீட்டுமன் மனக்குறளி அவனுக்குச் சொல்லி விட்டது. “உனக்கு இன்று மரணம்! உனக்கு இன்று மரணம்” என்று அவன் மனத்தில் எதோ இனம் புரியாத குரலொன்று கூவிக்கொண்டிருந்தது! போரைத் தொடங்குவதற்கு முன்பே அர்ச்சுனனிடம், கண்ணன் சூசகமாகச் சொல்லி விட்டான். “அர்ச்சுனா! இன்றைக்குத்தான் வீட்டுமனுக்கு மோக்ஷ பதவி அளிக்கவேண்டிய நாள். மறந்து விடாதே” என்று கண்ணன் கூறியிருந்தான். “கண்ணா! என் அஞ்ஞானத்தை அகற்றி எனக்கு உறுதியை உபதேசித்தவன் நீ. நீ இடுகிற கட்டளையை நிறைவேற்றுவதற்கு எந்த நேரமும் இந்தக் கைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வில்லெடுக்க வேண்டுமென்று நீ சொன்னால் நான் அப்படியே செய்வேன்” என்று கூறிக் கண்ணனை வணங்கினான் அர்ச்சுனன். சரியாக இதே சமயத்திற்கு விட்டுமன் வில்லும் கையுமாக அர்ச்சுனனுக்கு எதிரே போருக்கு வந்து நின்றான். இருவருக்கும் போர் தொடங்கியது. அர்ச்சுனன் அருகிலிருந்த அரசர்கள் வேகமாக வீட்டுமன் மேல் நிறைய அம்புகளைச் செலுத்தி விட்டார்கள். முள்ளம் பன்றியின் உடலில் சிலிர்த்து நிற்பதைப் போல் வீட்டுமன் உடலெங்கும் அம்புகள் தைத்துச் சிலிர்த்து நின்றன. திடீரென்று ஆவேசமுற்ற வீட்டுமன் எல்லா அம்புகளையும் உதறிவிட்டு எதிர்த்தரப்பில் இருந்த அரசர்களை வன்மையாகத் தாக்கத் தொடங்கினான், அரசர்கள் வீட்டுமனுக்கு எதிரே நின்று போர் செய்ய முடியாமல் மிரண்டு ஓடினார்கள். இதைக் கண்ட அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்வதற்காகத் தானே நேருக்கு நேர் வில்லை வளைத்துக் கொண்டு வந்து நின்றான். வீட்டுமனுக்குத் துணையாக அசுவத்தாமன், கிருபாச்சாரியார், துரோணர், சகுனி, சயத்திரதன், பகதத்தன் முதலியவர்களை அனுப்பியிருந்தான் துரியோதனன். இவர்கள் எல்லோருமாக ஒன்று கூடிக்கொண்டு தனியே நின்ற அர்ச்சுனனை வளைத்துக் கொண்டார்கள். அர்ச்சுனனும் சும்மா விட்டுவிடவில்லை. தன்னுடைய ஒரே ஒரு வில்லினால் இவர்கள் இத்தனை பேருடைய வில்லுக்கும் ஈடு கொடுத்துப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தான். இரண்டு கையாலுமே விற்போர் செய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனன் போர் செய்தது போதாதென்று வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக்கொண்டு எதிரிகளின் படை வகுப்புக்குள் புகுந்து சாடுவதற்குத் தொடங்கியிருந்தான். வீமனால் கெளரவர் படைக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. படையும் மிரண்டு ஓடத் தொடங்கியது. மனக் கொதிப்படைந்த துரியோதனன் வில்வித்தையில் கைதேர்ந்த ஓராயிரம் வீரர்களை அர்ச்சுனனுக்கு எதிராக அனுப்பினான். ஓராயிரம் வீரர்களுமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கிய போது வாயு அஸ்திரத்தைப் பிரயோகித்து அவற்றைத் தடை செய்தான் அவன். வீட்டுமன் போர் செய்து கொண்டுதான் இருந்தான். ஆனால் ஓங்கி நின்றது என்னவோ, அர்ச்சுனன், வீமன் முதலிய பாண்டவர்களின் கைகளே! துச்சாதனன், சகுனி, முதலியவர்கள் தோற்று ஓடினர். தருமத்தின் வெற்றி பாண்டவர்கள் உருவில் விளங்கப் போவதை எண்ணி வீட்டுமன் மனம் களித்தான். ஆனால் தனக்குச் சோறளித்த கெளரவருக்காகச் செய்ய வேண்டிய கடமையையும் மனமாரச் செய்து கொண்டு தான் இப்படி எண்ணினான். வீட்டுமன் வீழ்ச்சி பத்தாவது நாள் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விதிகளின் விதியாய், செயல்களின் ஆதி காரணமாய் விளங்கும் கண்ணன் கலவரம் மிகுந்த அந்தப் போர்களத்தின் நடுவே சிந்தித்துப் பார்த்தான். அவன் சிந்தனை வீட்டுமனின் வாழ்க்கையை முடிப்பது பற்றிச் சென்றது. ‘பத்தாவது நாளாகிய அன்றைய போர் முடியும்போது வீட்டுமனுடைய உலக வாழ்வும் முடிந்து விட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு அர்ச்சுனனை அணுகினான் கண்ணன். கண்ணனின் குரல் அர்ச்சுனன் காதருகே மெல்ல ஒலித்தது. “அர்ச்சுனா! இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எதிர்த் தரப்பில் தளபதியாகவும் பெரிய வீரனாகவும் இருப்பவன் வீட்டுமன். இன்றைக்குப் போர் மட்டும் முடியக்கூடாது, வீட்டுமனுடைய வாழ்வும் முடிந்து விட வேண்டும் நீ வீட்டுமனோடு போர் செய். மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்.” “வீட்டுமரைக் கொல்வதா? ஐயையோ…” என்று அர்ச்சுனன் தயங்கினான். “பார்த்தாயா? உன்னிடம் இன்னும் ஆசாபாசங்கள் இருக்கின்றன. கடமை உணர்வு இல்லை.” இதைக் கேட்டதும் அர்ச்சுனன் அரைகுறை மனத்தோடு சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். உடனே கண்ணன் அர்ச்சுனனுடைய தேரை வீட்டுமன் இருந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தினான். வீட்டுமன் தேரும், அர்ச்சுனன் தேரும் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் போர் தொடங்கிற்று. திசையெட்டும் அதிரச் செய்த முழக்கத்தின் நடுவே ‘விர் விர்’ ரென்று அம்புகளும் வேல்களும் வாள்களும் பாய்ந்தன. போர்க்களம் முழுவதும் கிளர்ச்சியும் குமுறலுமாக விளங்கிற்று. இவ்வாறாக அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ‘சிகண்டி’ போர்க்களத்தில் புகுந்து வீட்டுமனுக்கு முன்னால் வந்து அவன் காணும்படி நின்றான். தான் முன்பு செய்திருந்த சப்தப்படி சிகண்டியை எதிரே கண்டவுடன் வீட்டுமன் போர் செய்வதை நிறுத்தி விட்டான். சிகண்டி வந்ததனால் வீட்டுமனிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை அருகிலிருந்த துச்சாதனன் கவனித்து விட்டான், திடுமென்று வில்லை வளைத்துக் கொண்டு சிகண்டியின் மேல் பாய்ந்தான் துச்சாதனன். அதைக் கண்டு நடுங்கி வெலவெலத்துப் போன சிகண்டி உயிர் தப்பினால் போதுமென்று குதிகால் பிடரியில் பட ஓடத் தொடங்கினான். சிகண்டியின் உருவம் போர்க்களத்திலிருந்து மறைந்ததோ, இல்லையோ, வீட்டுமன் மீண்டும் அர்ச்சுனனோடு போர் செய்ய ஆரம்பித்தான். இம்முறை வீட்டுமன் செய்த போரில் ஆவேசம் மிகுந்திருந்தது. அவன் செலுத்திய அம்புகள் அர்ச்சுனனை மாத்திரம் புண்படுத்த வில்லை. தேர்ப்பாகனாக வீற்றிருந்து தேரைச் செலுத்திய கண்ணன் மேலும் அம்புகள் தைத்தன. இவ்வாறு சமாளிக்க முடியாத வேகத்தோடு வீட்டுமன் போரிடுவதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டும் தந்திரமாகச் சிகண்டியை வரவழைத்து எதிரே நிறுத்தினான். சிகண்டியைக் கண்டதும் உடனே வீட்டுமன் போரை நிறுத்தி விட்டு நின்றான். “இது தான் நல்ல சமயம்! இப்போது அவர்மேல் அம்புகளை ஏவி வில்லை ஒடித்துவிடு… உடனே செய்..” என்று கண்ணன் அர்ச்சுனனைத் துரிதப்படுத்தினான். அர்ச்சுனன் உடனே வில்லைத் துளைக்கும் வேகத்தில் வீட்டுமனை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். வீட்டுமனுடைய வில் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. அவன் வெறுங்கையனாகத் தேரின் மேலே நின்றான். சிகண்டியும் அருச்சுனனுமாக மாறி மாறி அம்புகளைத் தொடுத்தனர். வீட்டுமனுடைய உடலில் அம்புகள் துளைத்து மொய்த்தன. இரத்தம் தேர்த்தட்டுகளில் வடிந்து ஒழுகியது. சிறிது நேரத்தில் உடல் தளர்ந்து சோர்வோடு கீழே விழுந்தான் வீட்டுமன். அந்த வேதனையும் வலியும் மிகுந்த நிலைமையிலும் கூட அவனுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “தாம் தளர்ந்து விழுவதற்குக் காரணமாக ஏவப்பட்ட அம்புகளில் பெரும்பாலானவை அர்ச்சுனனுடையவை” என்ற எண்ணமே அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அப்போது துரியோதனனின் தம்பிமார்கள் கீழே விழுந்த அவனைத் தூக்குவதற்கு ஓடி வந்தனர். “வேண்டாம்! வேண்டாம்! என்னைத் தூக்காதீர்கள்.. இப்படியே விட்டுவிடுங்கள். இனி நான் மீண்டும் இந்தப் பிறவியில் உயிரோடு எழுந்திருந்து போர் செய்யப் போவதில்லை. மகா வீரனான அர்ச்சுனனுடைய அம்புகளால் நான் வீழ நேர்ந்ததே என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நீங்கள் என்னைச் சுற்றி நிற்க வேண்டாம். போய் உங்கள் அண்ணன் துரியோதனனோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்துப் போரிடுங்கள். எனது உயிரின் முடிவு இதோ, மிக அருகில் என்னை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது” இப்படிச் சொல்லி விட்டு மீண்டும் சோர்ந்து விழுந்து விட்டான் வீட்டுமன். வேதனையால் மேல்மூச்சுக் கீழே மூச்சு வாங்கியது. வாயிலிருந்து மெல்லிய முனகல் ஒலிகள் கிளம்பின. இரத்தம் பாய்ந்து விழுந்த இடத்தை எல்லையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செய்தி போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. ‘வீட்டுமன் வீழ்ந்து விட்டான், வீட்டுமன் வீழ்ந்து விட்டான், என்று எங்கு நோக்கினும் அதே பேச்சாக இருந்தது. பாண்டவர்களும் கெளரவர்களும் போரை நிறுத்தி விட்டனர். இருபக்கத்தையும் சேர்ந்த முக்கியமானவர்களெல்லோரும் வீட்டு மனுக்கருகே வந்து பயபக்தியோடு நின்று கொண்டனர். படைகளும் அந்த மகாபுருஷன் வீழ்ந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கூடி விட்டன. கண்ணனும் அருச்சுனனும் தேரிலிருந்து இறங்கி வீட்டுமனின் தலைப்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள். காலத்தைக் கணிக்கும் சோதிடர்கள் ஓடிவந்தனர். வீட்டுமன் தளர்ந்து வீழ்ந்த நேரம் தட்சிணாயன காலம் என்று அறிவித்தனர். தட்சிணாயன காலத்தில் இறப்பதற்கு வீட்டுமன் விரும்பவில்லை. விரைவில் வரப்போகின்ற உத்தராயண காலம் வந்த பின்பே இம்மண்ணுலகிலிருந்து உயிர் விடுவதென்று தீர்மானித்தான் அவன். புலனுணர்வுகளை வென்று வாழ்வெல்லாம் தன்னை அடக்கி வாழ்ந்த அந்த மூதறிஞன் தனது அந்திம காலத்தில் உயிரோடும் உடலோடும் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் யாருமே இல்லை. கடமைக்காக அவன் மேல் அம்பைச் செலுத்தி வீழ்த்திய அர்ச்சுனனே இப்போது கண் கலங்கி நின்றான். வணங்காமுடியோனாகிய துரியோதனன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தான். மகிழ்ச்சி, துன்பம் இவற்றுக்கு ஆளாகாமல் மனத்தைப் பக்குவப் படுத்தியிருந்த தருமனும் வருத்தத்தின் எல்லையில் மனம் பேதலித்து நின்றான். அணையப் போகிற விளக்கின் இறுதிக் கால ஒளி போல்வீட்டுமன் விழிகள் தன்னைச் சுற்றி நின்றவர்களை ஏறிட்டுப் பார்த்தன. தனக்காக அழுகிறவர்கள், கண் கலங்கி நிற்பவர்கள் எல்லோரையும் அவன் கண்கள் கண்டன. உணர்ச்சி மயமான, உள்ளத்தை உருக்கும் சோகம் நிறைந்த சொற்பொழிவு ஒன்று அந்த இறுதியான நிலையில் மங்கிய தொனியில் அவன் வாயிலிருந்து வெளி வந்தது. “அன்பர்களே! நண்பர்களே! என் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட உறவினர்களே! வீரர் பெருமக்களே! நீங்கள் யாரும் எனக்காக அழக்கூடாது. மரணம் விலக்க முடியாதது. ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பு இறப்புகளை அடைந்தே தீரவேண்டும். நான் கோழையாகவோ, கையாலாகாதவனாகவோ இறந்து போய்விடவில்லை. மார்பிலே அம்பு தைத்து வீரலட்சணத்தோடு வீரனாகவே இறக்கப் போகிறேன். இதோ என் உடம்பெங்கும் தைத்து ஊடுருவித்தரையில் என்னைக் கிடத்தியிருக்கும் இவ்வளவு அம்புகளும் எனக்குப் படுக்கை விரித்தது போலத் தோன்றுகின்றன. மலர்ப்படுக்கையைக் காட்டிலும் சிறந்ததாக இந்த அம்புப் படுக்கை எனக்குத் தோன்றுகின்றது. இத்தகைய அம்புகளை என் மேல் எய்தவன் அர்ச்சுனன் என்பதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது” - இவ்வாறு கூறிக்கொண்டே வந்த வீட்டுமன் பேச்சை நிறுத்திவிட்டு அர்ச்சுனனைச் சைகை காட்டித் தன் அருகே அழைத்தான். அர்ச்சுனன் இன்னும் அருகில் நெருங்கி வீட்டுமனின் தலைப்பக்கமாகக் குனிந்து உட்கார்ந்தான். “அர்ச்சுனா, என்னுடைய தலையைப் பார்த்தாயா? தாங்கிக்கொள்வதற்கு அணைவு ஏதும் இல்லாமல் தரையிலிருக்கிறது! இதற்காக நீதான் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். உன் அம்புகளில் ஒன்றைத்தரையில் நட்டு அதன்மேல் என் தலையை அணைவாகத் தூக்கி வைத்துவிடு. இந்தச் சிறிய உதவியை என் பொருட்டு நீ செய்வாயா? உன் கையால் உதவி பெறுவதில் எனக்கு ஒரு பெருமை அப்பா! ‘மாட்டேன்’ என்று சொல்லாமல் இந்தக் கிழவனின் வேண்டுகோளை நிறைவேற்று” அவனுடைய பேச்சு அர்ச்சுனனின் இதயத்தை உருக்கிப் பிழிந்தது. அம்பறாத் தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து நட்டு அதன் மேல் உயரமாகவும் அணைவாகவும் வீட்டுமனின் தலையைத் தூக்கி வைத்தான். அர்ச்சுனன் இதைச் செய்து முடிந்ததும் நன்றி தவழும் கண்களால் அவனை ஆவல் ததும்பப் பார்த்தான் வீட்டுமன். அர்ச்சுனன் தலையை குனிந்து கொண்டான். “அப்பா துரியோதனா! கலக்கத்தையும் குழப்பத்தையும் இனிமேல் விட்டுவிடு. வீணே நீ எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய்! என் காலமோ முடிந்து கொண்டிருக்கிறது. மேலும் போரை நிர்வகித்து நடத்துவதற்கு தகுதிவாய்ந்த படைத் தலைவனைத் தேடிக் கொள்! உன் மனத்தின் ஆசைகளையும் இந்த அந்திம காலத்திலும் நான் உணர முடிகிறது! எனக்கு அடுத்தபடியாக உன் கூட்டத்தில் கர்ணன் தான் சிறந்தவன். வில் வித்தையிலும் போர்த்திறமையிலும் நிகரில்லாத தகுதி உடையவன். அவனைப் படைத்தலைவனாக நியமித்துக் கொள். என் வார்த்தையை நிறைவேற்று.” சம்மதத்திற்கு அடையாளமாக துரியோதனன் தலையை அசைத்தான். அந்தத் தலையசைப்பில் ஜீவனில்லை; உணர்ச்சியும் இல்லை. இந்த உலகத்தில் வீட்டுமன் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம், அல்லது இந்த உலகம் வீட்டுமனுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் அநேகமாக முடிந்து விட்டன. சாவின் வருகையையும் அது நேரப் போகின்ற உத்தராயண புண்ணிய காலத்தையும் எதிர்நோக்கி அவனும் அவனுடைய சிற்றுயிரும் காத்திருந்தன. வீட்டுமன் இறப்பை எதிர்நோக்கி நிற்கும் இந்த அந்திம காலச் செய்தியை ‘சஞ்சயன்’ மூலம் தந்தை திருதராட்டிரனுக்குக் கூறி அனுப்பினான் துரியோதனன். தன் குலத்துக்கே பெருமை அளித்துக் கொண்டிருந்தவனும் இணையற்ற வீர புருஷனும் ஆகிய வீட்டுமன் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கண்ணில்லா மன்னனைக் கண்ணீர் விட்டு அழச் செய்தது. துயரத்தில் ஆழ்ந்துபோனான் துரியோதனனின் தந்தை. “பதினோராவது நாள் போருக்கு யாரைப் படைத்தலைவராக்கலாம்?” -என்ற சிந்தனையில் மூழ்கினான் துரியோதனன். வீட்டுமன் அபிப்பிராயப்படியே கர்ணனை நியமிக்கலாம் என்று முதலில் அவன் எண்ணினான். பின்பு சிந்தித்ததில் அது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆகவே கர்ணனை இப்போதே தலைவனாக நியமித்து விட்டால் பின்பு கடைசிக் காலத்தில் நமக்கு வேறு யார் துணையாக இருக்க முடியும்? ஆகவே கர்ணனை இப்போது நியமிக்க வேண்டாம். பின்பு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு துரோணரைப் படைத்தலைவராக நியமித்து விடலாம்’ -என்று தனக்குத் தானாகவே ஒரு புதுத் தீர்மானம் செய்து கொண்டான் துரியோதனன். தன் தீர்மானப்படியே துரோணரை அழைத்து “வீட்டுமர் மரணப்படுக்கையில் இருப்பதனால் அவர் இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த படைத் தலைமைப் பதவியை இனிமேல் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுக்கக்கூடாது” என்று வேண்டிக் கொண்டான். துரியோதனனின் இந்த வேண்டுகோளைத் துரோணர் மறுக்கவில்லை. படைத்தலைமையை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். கெளரவசேனை முழுவதும் துரோணரைப் புதுப்படைத் தலைவனாக ஏற்று அதற்குரிய மரியாதைகளையும் சிறப்புகளையும் அவருக்குச் செய்தன. யாவரும் பதினோராவது நாள் காலை விடியப் போவதை எதிர்பார்த்திருந்தனர். (வீட்டும பருவம் முற்றும்) துரோண பருவம் பதினொன்றாவது நாளில் இருதிறத்துப் படைகளும் ஆவலோடு தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோராவது நாள் ஒளி உதயத்தோடு தோன்றியது. பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளும் அன்றைய யுத்தத்திற்கு மகிழ்ச்சியோடு தயாராயின. “அர்ச்சுனா! இன்றையப் போரில் நமக்கு அவனை மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயம் ஒன்றிருக்கிறது. எதிர்த்தரப்பில் துரோணர் தான் படைத்தலைவர். வலிமைக்கெல்லாம் மூலாதாரமாக நின்ற வீட்டுமன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வெற்றி நம் பக்கம் தான் என்பதைப் பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதே இல்லை” என்று போருக்குப் புறப்படுகையிலே கண்ணன் அர்ச்சுனனிடம் கூறினான். இருதிறத்துப் படைகளும் நேர் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. வீட்டுமன் தலைமை வகிக்காத கெளரவ சேனை களையிழந்து ஒளியிழந்து காணப்பட்டது. சந்திரனே உதிக்காத ஆகாயம், மணமே இல்லாத மலர், நாதத்தை எழுப்பும் நரம்புகளே இல்லாத வீணை, நதிகளோ, ஆறுகளோ பாயாத வறண்ட நாடு, உயர்ந்த எண்ணங்கள் இல்லாத கீழோனின் மனம், வேத விதியை மீறிய அக்கிரமமான வேள்விகள் இவற்றைப் போல பொலிவிழந்து காணப்பட்டது துரியோதனாதியர் படை. அந்தப் படையின் எல்லாவிதமான பொலிவுகளுக்கும் காரணஸ்தனாக இருந்தவன் தான் மரணப்படுக்கையில் கிடக்கிறானே? புதிய படைத் தலைவரான துரோணர் கௌரவ சேனையைச் ‘சகடம்’ போன்ற வியூகத்தில் அணி வகுத்து நிறுத்தினார். திண்மையும் வலிமையும் வாய்ந்த பாண்டவ சேனையை அன்றில் பறவையைப் போன்ற வியூகத்தில் வகுத்து நிறுத்தினான் துட்டத்துய்ம்மன். படைத்தலைவர்கள் ஆணையும் அனுமதியும் பிறப்பித்தனர். அவ்வளவில் போர் தொடங்கிற்று. ‘திடீரென்று மழை தொடங்கி விட்டதோ?’ எனச் சந்தேகம் கொள்ளுமாறு ‘விர்ர்’ ‘விர்ர்’ ரென்று அம்புகள் இருபுறத்திலிருந்தும் மழை போலக் கிளம்பின, சகுனி சரியான எதிரியிடம் மாட்டிக் கொண்டு விட்டான். சகாதேவன் அவனை வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் சகாதேவன் வெல்வானா சகுனி வெல்வானா என்று முடிவு கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. நேரமாக ஆக இந்த நிலை மாறியது. சகாதேவன் கை ஓங்கிற்று. முதலில் சகுனியின் தேர்ப்பாகன் இறந்தான். பின்பு சகுனியின் தேர்க்கொடிகள் அறுந்து வீழ்ந்தன. அடுத்துத் தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அம்பு தைத்து வீழ்ந்தன. இறுதியில் சகாதேவனின் அம்புகள் சகுனியின் உடலையும், மார்பையும் கூட விட்டுவைக்கவில்லை. சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டன. அம்புகள் தைத்த வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் சகுனி. ‘போர் வேண்டாம், ஆள் பிழைத்தால் போதும்’ என்று கீழே குதித்து ஓடுவதற்கு முயன்ற அவனைச் சகாதேவன் விடவில்லை. சகாதேவனைக் கண்டதுமே சகுனி மிரண்டு போனான். தப்புவதற்கு வழியில்லாத நிலையில் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை எதிர்த்தான். சகாதேவனும் தன் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சகுனியை எதிர்த்தான். சகுனியால் சகாதேவனை எதிர்த்துச் சமாளிக்க முடியவில்லை. கதாயுதத்தைக் கீழே போட்டுவிட்டுப் புறமுதுகு காட்டி ஓடி விட்டான். தோற்று ஓடுகிற அந்தக் கோழை மனிதனைப் பார்த்து இகழ்ச்சி தோன்றச் சிரித்துக் கொண்டே கதாயுதத்தைக் கீழே வைத்தான் சகாதேவன். அதே சமயத்தில் போர்க்களத்தின் மற்றோர் புறத்தில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் பயங்கரமான முறையில் போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனனும் அவனைச் சேர்ந்த துணையரசர்கள் பலருமாக ஒன்று சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தார்கள். வீமனோ தனி ஆளாக நின்று அவர்களை வளைத்துப் போர் செய்தான். வீமனுடைய தாக்குதலைத் தாங்க முடியாத துரியோதனாதியர்கள் களத்திலிருந்து பின் வாங்கி ஓடலாயினர். அவர்களுக்கு உதவுவதற்காக வந்த சல்லியன் வீமனை எதிர்த்தான். சல்லியனுடைய எதிர்ப்புச் சற்றே கடினமாகத்தான் இருந்தது. வீமன் சல்லியனைச் சமாளிக்க முயன்று கொண்டிருந்த போது, நகுலனும் வீமனுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொண்டான். வீமனும் நகுலனுமாக இருவர் சேர்ந்து தாக்கவே சல்லியன் நிலை திண்டாட்டமாகி விட்டது. தேரும், குதிரையும், கொடியும் வில்லும், அம்பும் எல்லாம் இழந்து போர்க்களத்தை விட்டு ஓடினான் சல்லியன். வீட்டுமன் போர் செய்வதை நிறுத்திய பின்பே தான் வில்லைத் தொட முடியும் என்று சபதம் செய்திருந்த கர்ணன் இன்று பதினோராவது நாள் போரில் வில்லெடுத்துப் போர் செய்வதற்கு முன் வந்திருந்தான். கர்ணனுக்கும் விராட ராசனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விராட மன்னனும் கர்ணனும் ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்ட அம்புகளால் வான் வெளியே மூடப்பெற்று மறைந்துவிடும் போலத் தோன்றியது. பதினோராவது நாம் களம் முழுவதும் ஓய்வு நேரமே இல்லாமல் ஒருவரை ஒருவர் விடாது எதிர்த்துப் போர் செய்தவர்கள் துருபதனும் பகதத்தனும் ஆவர். இவர்கள் பரஸ்பரம் யானைப்படைகளைக் கொண்டு போரிட்டனர். துரியோதனாதியர் படையை சேர்ந்த அரசர்களுள் சோமதத்தன் என்பவனும் ஒருவன். அவன் கீழே பல சிற்றரசர்கள் அடங்கியிருந்தனர். அவன் தன் குழுவினரோடு சிகண்டியை எதிர்த்துப் போர்ச் செய்தான். சிகண்டி வாட்போர் செய்தானானால் அவனை எதிர்த்து நிற்க யாராலும் ஆகாது. சிகண்டியை எதிர்த்து வாட்போர் செய்த சோமதத்தன் முதலியவர்கள் மிக விரைவிலேயே தோற்று. ஓடிப் போக நேர்ந்தது. ‘இலக்கண குமாரன்’ என்னும் பெயரோடு துரியோதனனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் இந்தப் போருக்கு வந்திருந்தான். அர்ச்சுனன் புதல்வனும் தீரனுமாகிய அபிமன்னனை எதிர்த்து இலக்கண குமாரன் போரிடுவதற்கு வந்தான். இருவரும் வயதில் ஏறக்குறையச் சமநிலையினரேயானாலும் வீரத்தில் ஏற்றத்தாழ்வுடையவர்களே. அபிமன்னனுடைய வீரம் மலை என்றால் இலக்கணகுமரனுடைய வீரம் மடு. இருவரும் போர் செய்து கொண்டிருக்கும்போதே போர் முறையை மீறி மறைமுகமாக அம்பு செலுத்தி அபிமன்னனுடைய வில்லை முறித்து விட்டான். அபிமன்னனுக்கு இலக்கணகுமாரன் மேல் அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. முறிந்து போன தனது வில் தண்டினால் இலக்கண குமாரனை அடி அடி என்று அடித்துக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் அபிமன்னன். இவ்வாறு இலக்கணகுமாரனை அபிமன்னன் தேரில் இழுத்து வைத்துக் கட்டிச் சிறை செய்து கொண்டு போவதைத் துரியோதனாதியர்கள் பக்கத்தைச் சேர்ந்த சயத்திரதன் என்பவன் பார்த்து விட்டான். உடனே அவன் வில்லும் கையுமாக வந்து அபிமன்னனுடைய தேரை எதிர்த்து வளைத்துக் கொண்டான். இலக்கண குமாரனைச் சிறைபடுத்திக் கொண்டு போக முடியாதபடி சயத்திரதன் அபிமன்னனை எதிர்த்துப் போர் புரிந்தான். அபிமன்னனும் சயத்திரதன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தேர்மேல் மரச்சட்டத்தில் கட்டப்பட்டிருந்த இலக்கண குமாரன் ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தான். சயத்திரதனால் அபிமன்னனை வெல்ல முடியவில்லை. ‘அபிமன்னனை எப்படி மடக்குவது?, என்று விளங்காமல் மலைத்துப் போய்ப் போர்களத்தில் நின்றான். அவன் இவ்வாறு அபிமன்னனுக்கு முன்னால் மலைத்து நிற்பதைக் கர்ணன் கண்டு கொண்டான். உடனே வில்லை வளைத்துக் கொண்டு கர்ணன் சத்திரதனுக்கு உதவியாக வந்து அபிமன்னனை எதிர்த்தான். கர்ணனைப் போலவே கெளரவ சேனையைச் சேர்ந்த வேறு பல அரசர்களும் திடுதிடுவென்று ஓடி வந்தனர். தனியாக நின்ற அபிமன்னன் பகையரசர்களின் பெருங்கூட்டத்துக்கு நடுவே சிக்கிக் கொண்டான். ஆனாலும் அந்த இளம் வீரன் அத்தனை பேருக்கும் நடுவில் மனந்தளர்ந்து விடவில்னல கைகள் ஓய்ந்துவிடவில்லை. துணிந்து போர் செய்தான்! எதிரே நின்றவர்கள் மேல் சரமாரியாக அம்புகளைத் தூவினான். தனது வில் முனையில் அவர்களைத் திக்கு முக்காடச் செய்தான். வெகு நேரம் போர் தொடர்ந்து நிகழ்ந்தது. ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில் அபிமன்னன் வெற்றியடைந்தான். அவனை எதிர்த்தவர்கள் கர்ணன் உட்பட எவரும் அவனுக்கு முன் நிற்க முடியவில்லை. நிலைகலங்கி ஓடுமாறு பகைவர்களை விரட்டியடித்து விட்டுத் தேரோடு இலக்கண குமாரனையும் கைதியாக்கிக் கொண்டு சென்றான் அபிமன்னன். இந்தக் கடைசி நிலையில் கடைசி எதிரியாகச் சல்லியன் ஓடிவந்து வளைத்துக் கொண்டான். அபிமன்னன் பொறுமை இழந்து விட்டான். அவன் மனத்தில் தோன்றிய ஆத்திரம் கைவழியே வில்லில் கலந்தது. நெருப்புச் சரங்களைப் போல அம்புகள் கிளம்பின. சல்லியனின் முகத்திலும் தோள்பட்டைகளிலுமாக அம்பு நுனிகள் துளைத்து நின்றன. வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து ஓர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்னன் மேல் அடிப்பட்ட புலிபோல் பாய்ந்தான் சல்லியன். இந்த நேரத்தில் ஏதோ காரியமாக அங்கு வந்த வீமன் தன் கையிலிருந்த கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். வீமனுக்கும் சல்லியனுக்கும் கதைப் போர் ஆரம்பமாயிற்று. சரியான சமயத்தில் வீமன் வந்து காப்பாற்றியிருக்க வில்லையானால் சல்லியன் ஓங்கிய கதை அபிமன்னனை நொறுக்கியிருக்கும், வீமனின் கதாயுதம் சல்லியனைப் புடைத்துப் புடைத்து ஓய்ந்து போகச் செய்து கொண்டிருந்தது. இறுதியாக வீமன் கொடுத்த அடி சல்லியன் உடலிலிருந்து எலும்புகளைப் பூட்டுவிட்டு நொறுங்குமாறு செய்தன. மயங்கி மூர்ச்சை போட்டு அப்படியே கீழே விழுந்து விட்டான் சல்லியன். வீமன் நல்ல நோக்கத்தோடுதான் அபிமன்னனுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் அபிமன்னனுடைய மனத்தில் அது தவறாகப் பட்டு விட்டது. “இந்தச் சல்லியனை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கும்போது பெரிய தந்தை வீணாக இதில் ஏன் குறுக்கிட வேண்டும்? சல்லியனை எதிர்த்துத் தோற்கச் செய்ய என் ஒருவனுடைய ஆற்றல் போதாது என்ற எண்ணமா? அப்படியானால் பெரிய தந்தை என்னுடைய ஆற்றலை மிகவும் குறைவாகத் தானே எண்ணியிருக்கிறார்?” -என்று இவ்வாறாகத் தனக்குள் நினைத்துப் பொருமினான் அவன். “பெரிய தந்தையே! நான் உங்களுக்கு என்ன அபசாரம் செய்தேன்? என்னையும் என் வீரத்தையும் தாங்கள் இப்படி அவமானப்படுத்தலாமா?… இந்தச் சல்லியனை ஒடுக்க என் ஆண்மை ஒன்றே போதாதா? தாங்கள் வேறு உதவிக்கு வரவேண்டுமா?” -என்று வீமனை நோக்கிப் பணிவுடனும் வணக்கத்துடனும் கேட்டான் அபிமன்னன். வீமன் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறாமல் அபிமன்னனை ஏறிட்டுப் பார்த்தான். இவர்கள் இங்கே இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் போது தேரில் கட்டி வைக்கப்பட்டிருந்த இலக்கணகுமாரன் திருட்டுத்தனமாகக் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு ஓடத் தயாராகிக் கொண்டிருந்தான். துரியோதனாதியர் படையைச் சேர்ந்தவனாகிய ‘கிருத வர்மா’ -என்பவன் இலக்கண குமாரன் தப்பி ஓடுவதற்கான உதவிகளை அவனுக்குச் செய்து கொண்டிருந்தான். வீமனோ அபிமன்ண்னோ தங்களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கிருதவர்மா இலக்கண குமாரனை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு போய் வெகு தொலைவிற்குக் கடத்திக் கொண்டு போய்க் கெளரவ சேனையின் நடுவே பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டான். பேச்சு முடிந்து அபிமன்னனும், வீமனும் திரும்பிப் பார்த்தபோது, இலக்கண குமாரனைக் கட்டி வைத்த இடம் வெறுமையாக இருந்தது! இவ்வளவில் அன்றைய போர் நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன. இரு சாராரும் படைகளோடு தத்தம் பாசறைகளுக்குச் சென்றனர். பதினோராவது நாள் போரில் துரியோதனாதியர்கள் பெருமைப்படும்படியான நிகழ்ச்சியையோ, மகிழ்ச்சிக்குரிய செயல்களையோ, அவர்கள் படை செய்யவில்லை. போதாத குறைக்குத் தன் மகன் இலக்கண குமாரன் அபிமன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு அவமானத்திற்குள்ளானான் என்பதையும் அறிந்தபோது துரியோதனன் மனம் குமுறினான். போரில் நாளுக்கு நாள் பாண்டவர்கள் கை ஓங்கி வருகிறதென்பதை நினைக்கும் போதே அவன் மனம் அசூயையால் புழுங்கியது. பாண்டவர்களையும் அபிமன்னனையும் பழிவாங்குவதற்காக ஏதாவது சூழ்ச்சி அகப்படாதா? என்று துறுதுறுத்துக் கொண்டிருந்தது அவன் மனம். அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. வஞ்சக எண்ணங்கள் அந்த அசூயை நிறைந்த மனம் முழுவதும் அலைமோதிச் சிதறிக் கொண்டிருந்தன. படையில் முக்கியமாகப் பங்கு கொண்டவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் செய்ய வேண்டிய சூழ்ச்சிகளைப் பற்றி அந்த நள்ளிரவில் சிந்தித்தான். படைத் தலைவராகிய துரோணரும் அப்போது அங்கே உடனிருந்தார். “துரோணரே! இன்றைய போரில் என் மகனை அபிமன்னன் அவமானப்படுத்திவிட்டான். என் மனத்திலிருந்து என்றென்றைக்கும் இந்த அவமானம் மறக்கவே மறக்காது. இதற்கு நாம் பழிவாங்கியே தீரவேண்டும். நாளைய தினமே அந்தப் பழியை நிறைவேற்றிக் கொள்ள உங்கள் உதவி தேவை. இன்று என் மகனைச் சிறைப்பிடிப்பதற்கு பதிலாக நாளைக்குப் படைத்தலைவர்களுள் முதல்வனாகிய தருமனையே நாம் சிறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் என் மனத்திலுள்ள ஆத்திரம் தீரும்” என்றான் துரியோதனன். துரோணர் சிந்தனையில் ஆழ்ந்தார். துரியோதன்னுடைய எண்ணம் அசாத்தியமானதாக மட்டும் அன்று; அநாவசியமாகவும் தோன்றியது அவருக்கு. “என்ன துரோணரே! ஏன் தயங்குகிறீர்? நான் கூறியபடி செய்ய முடியாதா?” துரியோதனன் கேட்டான். “தயக்கம் ஒன்றுமில்லை துரியோதனா! பாண்டவர்கள் எல்லா விதத்திலும் வலிமை வாய்ந்தவர்களாயிற்றே?” -என்றுதான் யோசித்தேன். தருமனுக்கு முன்னும் பின்னும் காவலாக நிற்பவர்கள் யார் தெரியுமா? விற்போர் செய்வதற்கென்றே படைக்கப்பட்டவை அர்ச்சுனனுடைய கைகள், அத்தகைய வில்வீரன் தருமனுக்கு முன்புறம் நின்று காவல் புரிகிறான். உடல் வலிமையில் ஒப்பற்றவனாகிய வீமன் பின்புறம் நிற்கிறான். அவ்வாறு இருக்கும்போது தருமனைச் சிறைசெய்யலாம் என்று நாம் நினைப்பதாவது பொருந்துமா? நமக்குக் கிடைத்திருக்கும் பிறவிக்காலம் முழுவதையும் செலவிட்டாலும் செய்ய முடியாத காரியம் இது. ஒரு வேளை மகாபலசாலிகளாகிய வீமன், அர்ச்சுனன் ஆகிய இருவரையும் தருமனுக்கு உதவி செய்ய இயலாமல் அவனிடமிருந்து சிறிது காலம் பிரித்துவைக்க முடியுமானால் நமது கருத்தும் நிறைவேற முடியும். வேறு எந்த வகையாலும் நமது கருத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது! என்னுடைய அபிப்பிராயம் இது தான்" துரோணர் இவ்வாறு கூறி முடித்தார். அவருடைய பதில் துரியோதனனுடைய ஆத்திரத்தைத் தணிப்பதற்கு மாறாக அதிகமாக்கியது. அப்போது துரியோதனனுக்கு மிகவும் வேண்டியவனான திரிகர்த்தன் என்பவன் கூறத் தொடங்கினான்:-“துரோணர் கூறுகிறபடியே அர்ச்சுனனும், வீமனும் தருமனைக் காவல் புரிகிறார்கள் என்பது உண்மையானால் நாளைய பன்னிரண்டாம் நாள் போர் முழுவதும் வீமனையும் அர்ச்சுனனையும் தருமன் அருகில் செல்ல முடியாதபடி நாங்கள் தடுத்து நிறுத்தி வைக்கிறோம். அப்போது தருமன் தனியாகத்தான் நிற்பான். துரோணர் தருமனின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவனைக் கைது செய்து சிறைப்பிடித்து விட வேண்டும். இது நாங்கள் செய்கின்ற சபதம். இந்தச் சபதத்தை நிறைவேற்றவில்லையானால் கொடுங்கோல் அரசனும், பிறன் மனைவியை விரும்புகிறவனும் அடைகிற பாவங்களை நாங்களும் அடை வோமாக.” -திரிகர்த்தனுடைய சபதத்தைக் கேட்டதும் துரியோதனனுக்குச் சிறு அளவில் நம்பிக்கையும் திருப்தியும் ஏற்பட்டது. அடுத்து வேறு பல சிற்றரசர்களும் துரியோதனனுக்கு ஆதரவாகச் சபதம் செய்தனர். துரோணர் விருப்பு வெறுப்புக்களைக் களைந்து வீற்றிருப்பவர் போல் அமைதியாக வீற்றிருந்தார். குறைகுடம் தளும்புவது தானே வழக்கம்; செயலில் ஆண்மை குறைந்தவர்கள் சொல்லில் முதலியவர்கள் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் தருமனைச் சிறை செய்வதை சுலபமான காரியமாக நினைத்தும் பேசியும் ஆரவாரித்தனர். துரியோதனனும் அந்த வெற்று ஆரவாரத்தை நம்பி விட்டான். சூழ்ச்சியின் தோல்வி விதியும், நியதியும், துரோகத்தோடும், வஞ்சகத்தோடும், ஒத்துழைப்பதென்பது என்றும் இல்லை. சூழ்ச்சியின் அடைத்த கதவுகளை விதியின் செயல் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உடைத்துத் திறந்து காட்டிவிடுகிறது. துரியோதனாதியர்கள் அன்று அந்த நள்ளிரவில் தருமனைச் சிறைப்பிடிப்பதற்காகச் செய்த சூழ்ச்சியின் கதியும் அப்படித்தான் ஆயிற்று. பாண்டவர்களின் ஒற்றர்கள் அன்றிரவு துரியோதனனுடைய பாசறையில் நடந்த சதிக் கூட்டத்தின் விவரங்களை ஒன்று விடாமல் அறிந்து கொண்டு போய்த் தருமனிடம் கூறிவிட்டார்கள். பன்னிரண்டாம் நாள் போரில் தன்னைக் கைது செய்து சிறைப்பிடிக்கப் போவதையும், அதற்காகத் தன் தம்பியர்களான வீமனையும் அர்ச்சுனனையும் தன்னை விட்டுத் தொலைவில் பிரித்துச் செல்லப் போவதையும் தருமன் நன்றாக உணர்ந்து கொண்டான். செய்தி தெரிந்ததுமே கண்ணன், அர்ச்சுனன், வீமன், அபிமன்னன் முதலிய முக்கியமானவர்களை அழைத்து அவர்களிடம் எல்லா வற்றையும் விவரித்துக் கூறி விட்டான் தருமன். “நாளைக்குப் பன்னிரண்டாம் நாள் போரில் அவர்கள் சதித்திட்டத்தை வெற்றிகரமாக முறியடிப்போம்! பாவம்! கெளரவர்கள் ஏமாந்து போகப் போகிறார்கள்” - பாண்டவர்கள் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வேரறுப்பதற்குத் திட்டமிட்டு விட்டார்கள். பன்னிரண்டாம் நாள் பொழுது புலர்ந்தது. பாண்டவர்கள் தங்கள் படையை அன்று அணிவகுத்து நிறுத்திய விதம் முற்றிலும் புதுமாதிரியானதாக இருந்தது. தருமனை நடுவில் நிறுத்தி அவனைச் சுற்றிலும் வளையம் வளையமாக மண்டலமிட்டுப் படைகளை நிறுத்தினார்கள். தருமனுக்கு முன்புறம் அர்ச்சுனனும் அபிமன்னனும் நின்றார்கள். பின்புறம் வீமன் நின்றான். மற்ற இருபக்கங்களிலும் நகுல சகாதேவர்கள் ஆயுத பாணிகளாய் நின்றனர். இந்த மண்டல வியூகத்தையும் தருமன் நடுவில் நிற்பதையும் கண்டபோது சபதம் செய்த திரிகர்த்தன் முதலியவர்கள் திடுக்கிட்டுப் போயினர். கெளரவ சேனை கருடவியூகத்தில் வகுத்து நிறுத்தப்பட்டது. திரிகர்த்தன் முதலிய அரசர்கள் நேற்றிரவு செய்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக அர்ச்சுனனையும் வீமனையும் சண்டைக்கு இழுக்கிற பாவனையில் தனியே பிரித்துக் கொண்டு போக முயன்றனர். முதலில் அவர்கள் அழைப்பை அர்ச்சுனன் மட்டும் ஏற்றுக் கொண்டான். முன்புறத்தில் தருமனுக்குச் சரியான பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டுத் திரிகர்த்தனோடு போருக்குச் சென்றான். அவ்வாறு செல்லும்போதும் தருமனுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டுதான் சென்றான். மற்றவர்கள் முன் போன்றே தருமனை மண்டலமிட்டுக் கொண்டு நின்றார்கள். அர்ச்சுனனுக்கும், திரிகர்த்தன் முதலியவர்களுக்கும் போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே துரோணர் பல அரசர்கள் புடைசூழத் தருமனைத் தாக்குவதற்கு வந்தார். துரோணரோடு சயத்திரதன், சகுனி, குண்டலன் ஆகிய அரசர்கள் வந்தனர். இவர்களைத் தவிர, தருமனைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருக்கும் மண்டலத்தைக் கலைப்பதற் காகக் கெளரவ சேனையிலிருந்து ஆயிரக்கணக்கான அரசர்கள் பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தனர். பாண்டவர்களின் படைத் தலைவனான துட்டத்துய்ம்மன் இதைப் பார்த்து விட்டான். மண்டலத்தைக் கலையவிட்டுவிடக் கூடாது என்ற கடமை உணர்ச்சியோடு பாஞ்சால வீரர்கள் அடங்கிய பெரும்படையினால் துரோணரையும் அவர் கோஷ்டியையும் எதிர்த்தான். மாரிகாலத்துக் காட்டாற்று வெள்ளம் போல் அலை பாய்ந்து வந்த துரோணரும் அவர் படை வீரர்களும் சின்னா பின்னமாகச் சிதறி ஓடுமாறு செய்தான் துட்டத்துய்ம்மன். இறுதியில் உயிரோடு எஞ்சியவர்கள் துரோணரும் அவரருகில் நின்ற மிகச் சில வீரர்களுமே! தன் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டதைக் கண்ட துரோணருக்கு மனம் குமுறியது. ஆத்திரத்தோடு மீண்டும் எதிர்த்துப் போர் புரிந்தார். இம்முறை போரில் அவர் கை ஓங்கி விட்டது. பாண்டவர்களைச் சேர்ந்த பலர் துரோணரின் தாக்குதலுக்கு ஆற்றாமல் தளர்ந்தனர். துருபதன், நகுலன், சகாதேவன் ஆகிய வலிமை வாய்ந்த வீரர்களைத் துரோணர் தோற்று ஓடும்படி செய்துவிட்டார். தருமனைச் சுற்றி நின்ற பாஞ்சால நாட்டு வீரர்கள் கூடப் பின்வாங்கி விட்டனர். தருமன் ஏறக்குறைய தனியனாக விடப்பட்டான். இந்த ஏகாந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு துரோணர் தருமனை நேருக்கு நேர் போருக்கு அழைத்தார். அவனும் மறுக்கவில்லை. தருமனும் துரோணரும் தத்தம் படைகளோடு நேரடியாகப் போரிலே இறங்கினார்கள். பார்க்கப் போனால் தருமன் துரோணருடைய மாணவன் தான். ஆனால் துரோணருக்குச் சிறிதும் சளைக்காமல் போரைச் செய்தான். வெகு விரைவிலேயே வில்லை இழந்து தேரை இழந்து வெறுந்தரையில் நிராயுதபாணியாக நிற்கவேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டு விட்டது. அந்த நிலையில் மேலும் தொடர்ந்து அவரைத் துன்புறுத்த விரும்பாத தருமன், “துரோணரே, நீர் என் ஆசிரியர்! உம்மைப் போர்க்களத்தில் அவமானப்படுத்தினேன் என்ற பழியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இப்போது நீங்கள் மிகவும் களைத்து விட்டீர்கள். போய் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் போதுமான ஆயுதங்களோடும், போதுமான படைகளோடும் போருக்கு வந்து சேருங்கள்” என்று சொல்லி அனுப்பினான். அவன் கூறியபடியே துரோணரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் திரும்பவும் படைகளுடனும் ஆயுதங்களுடனும் தருமனோடு போருக்கு வந்தார். இம்முறை தருமனுக்குத் துணையாக வேறு சில அரசர்களும் சேர்ந்து கொண்டிருந்தனர். இதனால் எதிர்ப்பைச் சமாளிப்பது துரோணருக்குக் கடினமாயிற்று. விராடராசன், துட்டத்துய்ம்மன், குந்திபோஜன் முதலியவர்கள் தருமனுக்குப் பக்கபலமாக நின்றார்கள். துரோணர் திணறுவதைக் கண்டு துரியோதனன், கர்ணன், சகுனி, சோமதத்தன் முதலிய கெளரவப் படைவீரர்கள் அவனருகில் துணையாக வந்து நின்று கொண்டார்கள். இரு தரப்பாருக்கும் கடுமையான போர் நடந்தது. துட்டத்துய்ம்மன் முதலியவர்களின் சாமர்த்தியத்தினால் கௌரவர் படைக்கே அதிகமான சேதம் ஏற்பட்டது. துரோணர் முதலிய பெரிய பெரிய வீரர்கள் முன்னணியில் நின்றும் கூட இந்த அழிவைத் தவிர்க்க முடியவில்லை. “வெட்கமில்லாமல் இன்னும் நீங்கள் போர் புரிகிறீர்களே! உங்கள் படை அழிந்து ஒழிந்து போன பிறகும் உங்களுக்கு ஓடிப்போக மனம் வரவில்லையா?” என்று பாண்டவர் படை கெளரவப் படையை நோக்கி ஏசியது. “நாங்கள் என்ன செய்வது? உங்கள் பக்கத்து அரசர்களின் வலிமைக்கு முன்னால் நாங்கள் எது செய்தாலும் வெற்றி பெற மாட்டேன் என்கிறதே?” என்று கெளரவ வீரர் இந்த ஏச்சுக்கு மறுமொழி கூறினர். இப்போது இரண்டாவது முறையாகத் துரோணர் தோற்றுப் பின் வாங்கினார். தருமனைச் சிறைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டு முறை படுதோல்வி அடைந்து விட்டது. வீமன், கடோற்கசன் அபிமன்னன் ஆகியோர் ஒன்று சேர்ந்து துரோணரைப் போர்க்களத்திலேயே நிற்கமுடியாதபடி துரத்தி அடித்தார்கள். கெளரவசேனையில் இறந்தவர்களைத் தவிர இருந்தவர்கள் யாவரும் உயிர் பிழைத்தால் போதுமென்ற எண்ணத்துடன் பாசறைகளை நோக்கி ஓடிவிட்டனர். களத்தில் படை தரித்து நிற்கவே இல்லை. பயம்தான் அவர்கள் இதயத்தில் நிலைத்து நின்றது. அவற்றை எல்லாம் கண்டபோது துரியோதனனுடைய மனத்தில் ஏற்பட்ட தாழ்மை உணர்ச்சிக்கும் அவமானத்திற்கும் ஓர் அளவே இல்லை, வெறுப்பினாலும் அவமானத்தினாலும் ஏற்பட்ட ஒரு வகை விரக்தி அவன் மனத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. “நாம் அசடர்கள்! நாம் முட்டாள்கள்! என்றைக்கும் நம்மால் பாண்டவர்களை வெல்ல முடியாது. அவர்கள் வீரதீரர்கள்! இந்த உலகமும் இதன் ஆட்சி உரிமையும் வெற்றியும், வீரமும் ஆகிய சகலமும் அவர்களுக்குத் தான் சொந்தம்” என்று விரக்தியோடு தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கிக் கூறினான் துரியோதனன். பலர் உறுதியும் உரமும் தோன்றப் பேசி அவனுடைய மனத்தின் விரக்தி நீங்குமாறு செய்ய முயன்றனர். இதன் பயனாக மீண்டும் துரோணர், துரியோதனன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் படையைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு தருமன் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே வில்லை வளைத்துக் கொண்டு இவர்களை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றான் அபிமன்னன். துரியோதனனும் அவன் படைகளும் தருமனை நெருங்குவதற்கு முன்பே அபிமன்னன் செலுத்திய கூரிய கணைகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. தருமன், கடோற்கசன், துட்டத்துய்ம்மன் முதலியவர்களும், போர் புரியவே துரியோதனனுடைய இந்த மூன்றாவது முயற்சியும் வலுவிழந்து போயிற்று. தருமனின் தரப்பார் சரியான முன்னேற்பாட்டுடன் தாக்குதலைச் சமாளித்து விட்டதனால் துரியோதனன் வந்த வழியே படைகளுடன் திரும்பி ஓட வேண்டியதாயிற்று. துரோணருக்கும் அதே கதிதான் நேர்ந்தது. இவ்வாறு இவர்களெல்லோரும் தோற்று ஓடிக் கொண்டிருக்கும் போது பகதத்தன் என்பவன் மட்டும் தன்னிடம் எஞ்சிய கெளரவசேனையை ஒன்று திரட்டிக் கொண்டு மீண்டும் தருமனை எதிர்த்து வந்தான். அவனோடு வேறுசில அரசர்களும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். பிணத்துக்கு உயிர் வந்தது போல் அசம்பாவிதமான ஒருவகைத் தைரியம் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. வேகமாகக் களத்திற்குள் நுழைந்த பகதத்தன் என்ற அரக்கன் சற்றும் எதிர்பாராத விதமாகத் தருமனை நோக்கி முன்னேறினான். இதைப் பின்புறமிருந்து பார்த்துக் கொண்டே இருந்த வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான். பகதத்தனுக்கும் வீமனுக்கும் போர் மூண்டது. யானை மேல் ஏறிப் போர் செய்ய முயன்றான் பகதத்தன். அவனை யானையிலிருந்து கீழே தள்ளி மார்பெலும்புகள் நொறுங்கும்படியாக ஓங்கி ஓர் அறை அறைந்தான் வீமன், அந்த அறையையும் வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான் பகதத்தன் தேரில் ஏறியவுடனே வில்லை வளைத்து வீமன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய வீமனின் கையிலிருந்து கதாயுதம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. பகதத்தன் ஏவிய அம்புகள் மார்பிலும் தோள் பட்டையிலுமாகத் தைக்கத் தொடங்கின. வீமனுக்கு அடக்க முடியாத சினம் மூண்டு விட்டது. தானும் ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான். வில்லை எடுத்துப் பகதத்தன் மேல் அம்புமாரி பொழிந்தான். வீமனுடைய அம்புமாரியைத் தாங்கமுடியாமல் பகதத்தன் தேரிலிருந்து கீழே குதித்தான். அதைக் கண்டு வீமனும் கீழே குதித்தான். இருவரும் விற்போரை நிறுத்தி விட்டு மற்போரைத் தொடங்கினார்கள். மற்போருக்கென்றே வாகாக அமைந்த உடல் வீமனுக்கு. பகதத்தனைப் போதும், போதும், -என்று நினைக்கும் படியாகச் செய்து விட்டான் வீமன். மற்போரிலும் தோல்வியடைந்த பகதத்தன் தளர்ந்த நிலையிலிருந்த தன் யானையின் மத்தகத்தில் தாவி ஏறிக் கொண்டு தப்பி ஓடுவதற்கு முயன்றான். பகதத்தனுடைய யானை ஓடும்போது இடையிலே பாண்டவ சைனியம் அகப்பட்டுக் கொண்டதனால் மோதியும் நசுக்கியும் வீரர்களை அழித்தது அது. பகதத்தனுடைய யானையினால் தனது சேனை சிதறி அழிவதைத் தேர்மேல் நின்று கொண்டிருந்த தருமன் பார்த்து விட்டான். “தீமை எதுவாயிருந்தாலும் அதை உடனே அழித்து விடுவது தான் நல்லது! தீமைகளிலெல்லாம் தலை சிறந்த தீமை இந்தப் பகதத்தன் உருவில்தான் நடமாடுகிறது. இவனை முதலில் அழித்தொழிக்க வேண்டும்.” தருமன், இவ்வாறு தீர்மானித்துக் கொண்டு கண்ணனை மனத்தில் தியானித்தான். திரிகர்த்தனோடு போர் செய்யும் அர்ச்சுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கண்ணன், தருமன் தன்னை நினைப்பதை உணர்ந்து கொண்டான். உடனே அர்ச்சுனனிடம் சொல்லித் தேரை தருமன் நின்று கொண்டிருந்த இடத்திற்குத் திருப்பினான். கண்ணன் தேரை திருப்பிக் கொண்டு வந்த இதே சமயத்தில் பகதத்தன் ஏறிக் கொண்டிருந்த யானையும் திரும்பியது. தேரும், யானையும் மிக அருகிலே நேர் எதிரெதிரே சந்தித்தன. அவ்வளவுதான்! யானை மேலிருந்தபடியே பகதத்தன் அர்ச்சுனன் மேல் அம்புகளைச் செலுத்தினான். அர்ச்சுனன் தேர் மேலிருந்த படியே பகதத்தன் மேல் அம்புகளைச் செலுத்தினான். இருவருக்கும் திடீரென்று போர் தொடங்கி விட்டது. பகதத்தன் செலுத்திய அம்புகளைத் தன் அம்புகளால் தடுத்து முறித்தான் அர்ச்சுனன். தேரை ஓட்டுகிற கண்ணன் மேலேயே அம்புகளைச் செலுத்த முயன்றான் பகதத்தன். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. அர்ச்சுனனின் அம்புகளால் அவன் மார்புக் கவசம் கிழிந்தது. யானையின் முகபடாம் உடைந்து தூள் தூளாயிற்று. வில்லும், அம்பறாத் தூணியும் உடைந்து கீழே விழுந்தன. சினங்கொண்ட பகதத்தன் தன்னிடம் எஞ்சியிருந்த ஒரே ஒரு வேலை எடுத்துக் குறி பார்த்து அர்ச்சுனன் மேல் வீசினான். ஆனால் அது அர்ச்சுனனை நெருங்குவதற்கு முன்பே அவன் அம்பு ஒன்று அதைத் தடுத்து நிறுத்திக் கீழே தள்ளியது. பகதத்தனுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம்! எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று குமுறியது உள்ளம். பல்லாண்டுகளாகத் திருமாலை நோக்கித் தவம் செய்து பெற்ற வேல் ஒன்று அவனிடம் இருந்தது. அந்த வேலை எறிந்தால் அது அர்ச்சுனனை அழிப்பது உறுதி. பகதத்தன் திருமால் தனக்கு அளித்த அந்தக் கூரிய வேலாயுதத்தை எடுத்து அர்ச்சுனனை நோக்கி வீசினான், பாவம்! அதைத் தனக்கு அளித்தவராகிய திருமாலே எதிர்ப்புறம் கண்ணன் என்ற பெயரில் மறைந்து தேரோட்டிக் கொண்டிருப்பதைப் பகதத்தன் அறிய மாட்டான். ஒரே ஒரு விநாடி அர்ச்சுனனுடைய தேர்த்தட்டில் கண்ணனுடைய உருவம் மறைந்தது. சங்கு சக்ரதாரியாக மகாவிஷ்ணு தோன்றினார். அவருடைய கைகள் வேகமாக எதையோ ஏந்தித் தாங்கும் பாவனையில் முன்புறம் நீண்டன. பகதத்தன் ஏவிய வேல் அர்ச்சுனனை அடையவில்லை, திருமாலின் நீட்டிய கைகளில் போய் விழுந்தது. என்ன ஆச்சரியம்! அவருடைய கையில் விழுந்தவுடன் அந்த வேல் ஓர் அழகிய மணி மாலையாக மாறியது. அதை அவர் தம் மார்பில் அணிந்து கொண்டார். அடுத்த விநாடி கண்ணனுடைய உருவமே மீண்டும் தோன்றியது. பகதத்தனுக்கு இங்கு நடைபெற்ற இந்த மாயம் ஒன்றுமே புரியவில்லை. “தான் ஏவிய வேல் அர்ச்சுனனை ஒன்றும் செய்ய வில்லை” என்பது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. அவன் திகைத்துப் போய் வெறுங்கையோடு அர்ச்சுனனைப் பார்த்தவாறே நின்றான். “அர்ச்சுனா! இவனைத் தொலைப்பதற்கு இதுதான் சரியான சமயம்! குறி வைத்து இவன் மார்பில் ஓர் அக்கினிக் கணையைச் செலுத்து…” என்று கண்ணன் அர்ச்சுனனின் காதருகில் இரகசியமாகக் கூறினான். உடனே அர்ச்சுனன் மனம், மொழி, மெய்களால் கண்ணனைத் தியானம் செய்து கொண்டே ஓர் அக்கினி அஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துப் பகதத்தன் மேல் தொடுத்தான். அந்த அஸ்திரம் பகதத்தன் மேல் பட்டதோ, இல்லையோ அவன் உடல் குபீரென்று தீப்பற்றி எரிந்தது. மறுகணம் அவன் நின்ற இடத்தில் திட்டுத் திட்டாகச் சாம்பல் குவிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவன் ஏறிப் போர் செய்த யானையும் கீழே விழுந்து மாண்டு போயிற்று. பாண்டவர்கள் படை வெற்றி முழக்கம் செய்தது. பகதத்தனின் மரணம் துரியோதனனுக்குப் பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணிற்று. சகுனியின் தலைமையில் காந்தார மன்னர்களையும் அவர்களைச் சேர்ந்த சைனியங்களையும் திரட்டி அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு அனுப்பினான் துரியோதனன். கடல் பொங்கி வருவது போலக் காந்தாரப் படை சகுனியைத் தலைவனாகக் கொண்டு அர்ச்சுனனை நோக்கித் திரண்டு ஓடி வந்தது. அர்ச்சுனனும் சும்மா விடவில்லை. அஞ்சாமல் வில்லை நாணேற்றி அம்புகளைத் தொடுத்தான். வந்ததும் வராததுமாக சகுனியின் புதல்வர்களாகிய விடசயன், சயன் என்ற இரு அரசகுமாரர்கள் அர்ச்சுனன் அம்புகளுக்கு இலக்காகி இறந்தனர். சகுனியோடு வந்த காந்தார நாட்டு மன்னர்கள் பலருக்கு எடுத்த எடுப்பில் இதுவே ஒரு பெரிய அபசகுனமாகப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமலே சகுனிக்குத் தெரியாமல் மெல்லக் களத்திலிருந்து நழுவிவிட்டார்கள் அவர்கள். சகுனியின் ஆத்திரம் தருமன் மேல் சென்றது. தன்னருகில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு தருமன் மேலே பாய்ந்தான். தருமன் அம்புகளால் சகுனியை வரவேற்றான். ‘சூழ்ச்சியே தோற்றுவிட்டது. இனிமேல் வெறும் மனிதர்கள் தோற்க எவ்வளவு நாழிகை ஆகும்?’ என்று எண்ணிக்கொண்டே போரிட்டான் தருமன். போரின் போக்கு போர்க்களத்தை விட்டு ஓடினவர்கள் தவிர மீதமிருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சகுனி தருமனை நோக்கித் தாக்க  வந்த போது தருமனுக்குச் சிரிப்பு வந்தது. ‘எத்தனை முறை போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடியிருக்கிறான் இவன்? இப்போது இருந்தாற் போலிருந்து திடீரென்று இவ்வளவு வீரம் இவன் உடம்பில் எங்கிருந்து வந்து புகுந்தது?’ என்று தருமன் தனக்குள் நினைத்துக்கொண்டான். “என்னப்பா! சகுனி, உனக்குக் கூட இவ்வளவு வீரம் இருக்கிறதா? உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமலே பசுடைகளை உருட்டும் சூது விளையாட்டு அன்று இது! போர் அப்பா போர் இந்த விளையாட்டு உனக்குப் புரியாதே? உன்னால் புரிந்து கொள்ளவும் முடியாதே. வீணாக இதில் ஏன் தலையிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? -சகுனியை நோக்கி இவ்வாறு கூறிக்கொண்டே வில்லை வளைத்தான் தருமன். வளைந்த வில்லிலிருந்து அம்புகள் விரைந்தன. போர் நுணுக்கங்களையும், எதிர்ப்பைச் சமாளிக்கும் ஆற்றலையும் பெறாத சகுனி, தருமனின் அம்புகளைத் தடுக்கத் தெரியாமல் திணறினான். அவனுடன் வந்திருந்த படை வீரர்களும் திணறினர். வெகு நேரம் போர் செய்ய வேண்டிய அவசியமே தருமனுக்கு ஏற்படவில்லை. சகுனியும் அவன் படைகளும் தனித்தனியே சிதறி ஓடினர். அவ்வளவில் தருமனுக்கு எதிர்ப்பின்றி ஒழிந்தது. வேறோர் இடத்தில் வீமன் பலமான எதிரிகளுக்கு நடுவே கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். துரோணர். அசுவத்தாமன், கர்ணன், துரியோதனன் ஆகிய பல பெரிய வீரர்கள் அவனை எதிர்த்தனர். அத்தனை பேரையும் தான் ஒருவனாக இருந்தே துரத்தியடித்துக் கொண்டிருந்தான் வீமன். பகைவர்களைத் துரத்தும் பெருமிதம் காரணமாக மலர்ச்சியடைந்த அவன் முகத்தில் புன்சிரிப்பு விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் புன்சிரிப்பு துரியோதனாதியர்க்கு நெருப்பாகத் தகித்தது. தன் தம்பியர்கள் சிலரை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு மீண்டும் வீமனோடு போருக்கு வந்தான் துரியோதனன் இந்த முறையும் வீமன் அவனுக்குச் சரியானபடி புத்தி கற்பித்தான். அவனும் அவன் தம்பியர்களும் களத்தைவிட்டு ஓட நேர்ந்தது. அவ்வாறு ஓடும்போது துரியோதனனுடைய தம்பியர்கள் தங்கள் மனத்திலே என்ன எண்ணிக் கொண்டார்கள் தெரியுமா?”இந்த வீமனைப் படைத்த கடவுள் பெரிதும் வல்லமை உடையவன். அந்தப் படைப்புக் கடவுளே மீண்டும் வந்து இவனோடு போர் செய்தாலும் இவனை வெல்ல முடியாது" என்று வீமனைப் புகழ்ந்து கொண்டே சென்றனர். உண்மையில் அன்றைய தினமாகிய பன்னிரண்டாம் நாளில் வீமன் செய்த போர் புகழின் எல்லைக்கு அப்பாற்பட்டது. மகாதீரர்களாகிய துரோணர், அசுவத்தாமன், கர்ணன் போன்ற வில்லாளர்களையே புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றால் அந்த வீரத்தின் பெருமையை எப்படிப் புகழ்வது? இந்நிலையில் கதிரவன் மறைந்து இருள் படரத் தொடங்கியதனால் பன்னிரண்டாம் நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. போர் செய்த களைப்புடன் இரு பக்கத்துப் படைகளும் படைத்தலைவர்களும் பாசறைகளை அடைந்தனர். பாண்டவர்கள் பாசறைக்குச் சென்றதும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டனர். கெளரவர் களுடைய பாசறையிலோ ஒரே அசூயைக் குரல்களாக முழங்கின. போர்க்களத்தில் வீமனும் தருமனும் காட்டிய வீரத்தைப் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது. ‘முதல் நாள் தருமருக்கு எதிராகத் தாங்கள் செய்த சபதம் வீணாகப் போய் விட்டதே’ என்ற ஆத்திரமும் அவர்களுக்கு இருந்தது. “துரோணரே! இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்லும் நேற்றிரவு நீங்கள் செய்த சபதம் என்னவாயிற்று? அதை வெற்றிகரமாக முடித்தீரா?” என்று துரியோதனன் துரோணரைப் பார்த்து அதிகாரம் தொனிக்கக் கேட்டான். துரோணர் பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தோடு தலைகுனிந்தார். அந்தச் சமயத்தில் கர்ணன் சும்மா இராமல் வெந்த புண்ணில் வேல் நுழைப்பது போல, “துரோணர் பார்ப்பனச் சாதிதானே? சொன்ன சொல்லை நிறைவேற்றித்தான் ஆகவேண்டுமா என்ன? சொல் மாறி நடப்பதுதானே அந்தச் சாதியினரின் வழக்கம்?” என்று குத்திக் காட்டினான். துரோணருக்கு அந்த வார்த்தைகள் சுருக்கென்று இதயத்தில் தைத்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் கர்ணன் மேல் பாய்ந்து அப்படியே அவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றியது. மனத்தை அடக்கிக் கொண்டு தம்முடைய ஆத்திரத்தையெல்லாம் அவனுக்குப் பதில் சொல்வதில் காண்பித்தார் அவர். “கர்ணா! உன் வாயை மூடிக்கொள். உன்னுடைய பேச்சு உன் அறியாமையைத்தான் காட்டுகின்றது. என் சபதம் வெற்றி பெற முடியாமற் போனதற்கு நான் மட்டும் காரணமில்லை. நாம் எல்லோரும்தான் இன்று தோற்றோம். அவ்வளவு ஏன்? உன்னை மகாவீரன் என்று உனக்குள் எண்ணித் தலைகனத்துப் போயிருக்கும் நீ கூடத்தான் இன்றைய போரில் தருமனிடம் தோற்று முதுகு காட்டி ஓடி வந்தாய், தருமனிடம் சரீர பலத்தைவிட ஆத்மபலம் அதிகமாக இருக்கின்றது. அதனால்தான் நாம் ஒன்று கூடியும் அவனை வெல்ல முடியவில்லை. அர்ச்சுனன் வீமன் இவர்களும் கூட நம்மைப் போல வெறும் சரீரபலம் மட்டும் உள்ளவர்கள்தாம். அதனால் அவர்களையாவது அரிய முயற்சி செய்து வென்றுவிட முடியும். தருமனைத் தான் யாராலும் வெல்ல முடியாது. அவனுடைய வன்மை சத்தியத்தின் வன்மை, இணைகூற முடியாத பெருவன்மை, அதை வெல்ல வேர், மீறவோ, இந்த விநாடிவரை இவ்வுலகில் மனிதன் பிறக்கவில்லை. நான் இவ்வாறு கூறுவதில் உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தாலும், அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அவர்கள் நாளைக்கே தருமனோடு போர் செய்வதற்கு முயலட்டும். கர்ணா! நீயும் வீரன் தானே! முடியுமானால் நான் நிறைவேற்ற முடியாத சபதத்தை நாளையே நீ நிறைவேற்றிவிடேன் பார்க்கலாம்.” துரோணர் பேச்சைக் கேட்டுக் கர்ணன் வாயடைத்துப் போனான். அவனுக்குப் பதில் பேச நா எழவில்லை. துரோணர் யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை. விறுவிறு வென்று அங்கிருந்து வேகமாக வெளியேறினார். தமது பாசறையை அடைந்து உறங்கச் சென்றார். பின்பு துரியோதனன் முதலிய மற்ற அரசர்களும் தத்தம் பாசறை சென்று உறங்கலாயினர். இரவின் அமைதி நிறைந்த ஓய்வுக்குப் பின் பதின்மூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. பொழுது மட்டுமா புலர்ந்தது? இரு திறத்துப் படைகளின் ஒடுங்கிக் கிடந்த ஆவல்களும் கூடப் புலர்ந்தன. பாண்டவர்கள் எப்போதும் போல் வெற்றியை நினைத்து வெற்றியின் மேல் நம்பிக்கை வைத்துப் போர்க்களத்திற்கு வந்தார்கள். ஆனால் கெளரவர்களோ, கழிந்து போன நாட்களில் தொடர்ந்து கிடைத்த தோல்வியைப் பற்றி எண்ணி எண்ணிப் புழுங்கும் மனத்துடன் பொறாமை நிறைந்த எண்ணங்களுடன் களத்தில் வந்து நின்றனர். துரோணருடைய கட்டளைப்படி படைகள் சக்கரவியூகமாக வகுத்து நிறுத்தப்பட்டன. நேற்றுத் தங்கள் பிடியில் அகப்படாமல் தப்பிவிட்ட தருமனை இன்று எவ்வாறேனும் பிடித்துவிடுதல் வேண்டுமென்று துரோணர் திட்டமிட்டிருந்தார். துரியோதனனின் மகனாகிய இலக்கண குமாரன், துரியோதனனின் தம்பியரிற் சிலர் கலிங்கப் பெரும் படைஞர்கள் ஆகிய இவர்கள் மொத்தமாக ஒன்று சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க ஒரு படை அமைப்பை வகுத்துக் கொண்டனர். சிந்து தேசத்தின் அரசனும் இணையற்ற வீரனுமாகிய ஜெயத்ரதன் என்பவனை இந்தப் படை அமைப்பிற்குத் தலைவனாக அமைத்துக் கொண்டனர். போர்க்களத்தில் பாண்டவர்களின் ஒற்றர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்ததனால் துரியோதனாதியர்களின் திட்டங்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி அவர்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தன. துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியவர்கள் அன்றையப் போரில் தருமனைப் பிடிக்க எண்ணியிருப்பதையும், வேறு சில இரகசியத் திட்டங்களையும், ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்த தருமன் கண்ணனையும் தன் தம்பியர்களையும் அழைத்து அவைகளைத் தெளிவாகக் கூறி விளக்கினான். இந்த விளக்கம் பாண்டவர்களுக்கு ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாக அமைந்து விட்டது. உரிய நேரத்தில் இருதிறத்தாருக்கும் போர் தொடங்கிற்று. யானை, குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைப் பெரும் படைகளோடு சஞ்சத்தகர்கள் என்ற பெரு வீரர்களைப் பாண்டவர்கள் மேல் ஏவினான் துரியோதனன். அவனால் ஏவப்பட்ட அவ்வீரர்கள் அர்ச்சுனனை வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். அர்ச்சுனன் அம்புகளை ஏவி அவர்களை வரவேற்றான். மிகச் சில கணங்களுக்குள்ளேயே வீரத்திலும் ஆற்றலிலும் வல்லவர்களான அந்தப் படையினரை நம்பிக்கை தளர்ந்து போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். அவர்களில் பலர் களத்திலேயே மாண்டனர். சிலர் கொடியும், தேரும், வில்லும், அம்பும் இழந்து வெறுங்கையர்களாய் ஓடினர். எவற்றை இழந்தாலும் உயிரை இழக்க விரும்பாத சிலர் தாமாகவே தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள், இறுதியில் அர்ச்சுனன் நின்றான், அவனுடன் அந்த வில் நின்றது. அந்த வில்லோடு வெற்றியும் நின்றது. எதிரிகள் நின்ற இடம் காலியாக இருந்தது. அந்தக் காலியிடத்தில் தோல்வி சூனிய ரூபத்தில் மானஸீகமாகக் குடிகொண்டிருப்பது போலத் தோன்றியது. சஞ்சத்தகர்களின் படைக்கும் அர்ச்சுனனுக்கும் நிகழ்ந்த போரின் முடிவுதான் இப்படி ஆயிற்று போர்க்களத்தின் மற்றப் பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருந்த பிற நிகழ்ச்சிகளைக் காண்போம். வேறோர் புறத்தில் விற்கலையில் இளைஞனான துட்டத்துய்ம்மனும், முதுபெரும் வில்லாளனாகிய துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். துட்டத்துய்ம்மனுக்கு வில்வித்தை கற்பித்த ஆசிரியரே துரோணர்தான், ‘போர்’ என்று வந்துவிட்டால் ஆசிரியர் மாணவர், உறவு முறைகளையா கவனித்துக் கொண்டிருக்க முடிகிறது? இருவர் வில்லிலிருந்தும் எதிரெதிரே அம்புகள் மோதிக் கொண்டன. விரைவிலேயே இளைஞனான துட்டத்துய்ம்மன் தளர்ந்து சோர்ந்து விட்டான். துரோணர் நிறுத்தாமல் அம்புகளை ஏவிக் கொண்டிருந்தார். அவருடைய அந்த இடைவிடாத தாக்குதலைத் தாங்க முடியாத துட்டத்துய்ம்மன் தேரிலிருந்து குதித்து ஓடத் தலைப்பட்டுவிட்டான். முதல் முதலாகப் பாண்டவர்கள் பக்கம் நேர்ந்த இந்தப் பெரிய தோல்வி மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் போர்க்களம் முழுவதும் பரவிவிட்டது. எங்கும் ஒரே கலவரமாகிவிட்டது. துட்டத்துய்ம்மன் தோற்று ஓடினான் என்ற செய்தியை நம்ப முடியாமல் திகைத்தனர் பாண்டவர் பக்கத்து ஆட்கள். “பாண்டவர் படைத் தலைவனான துட்டத்துய்ம்மனே தோற்று ஓடி விட்டானாம்!” என்று கைகொட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் கெளரவர்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் தருமருக்குப் பகீரென்றது. அவன் துட்டத்துய்ம்மனைப் பார்த்து வருத்தமும் ஏமாற்றமும் தொனிக்கின்ற குரலில் கீழ்க் கண்டவாறு கேட்டான்: - “துட்டத்துய்ம்மா! படைத்தலைவனாகிய நீதான் நம்முடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணஸ்தனாக இருக்க வேண்டியவன். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது இந்த மகத்தான தோல்விக்கும் நீயே காரணம் ஆகி விட்டாய்” தருமருடைய சொற்களைக் கேட்டுத் துட்டத்துய்ம்மன் தலைகுனிந்தான். நிலைமையைச் சமாளித்துப் பகைவர்களுடைய சக்கரவியூகத்தை உடைப்பதற்கு ஒரு சரியான ஆள் தேவையாயிருந்தது. தருமர் அபிமன்னனை அருகில் அழைத்தான். அபிமன்னன் அருகில் வந்து நின்றான். “அபிமன்னா! இப்போது உன்னால் ஓர் உதவி ஆக வேண்டியிருக்கிறது. மறுக்காமல் நீ அதைச் செய்ய வேண்டும்.” “சொல்லுங்கள்! அது என் பாக்கியம்.” “துரியோதனாதியர்கள் இப்போது சக்கரவியூகத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே புகுந்து போர் செய்து அந்த வியூகத்தை எவ்வாறாவது குலைக்க வேண்டும்.” “ஆகட்டும் இப்போதே இதைச் செய்கிறேன்” -தருமரின் வேண்டுகோளை அப்போதே நிறைவேற்றுவதற்குத் தயாராகிவிட்டான் அபிமன்னன். உடனே போர்க்கோலம் பூண்டு தேரின் மேல் ஏறினான். தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். அப்போது அந்த நிலையில் அபிமன்னனின் தோற்றம் இளஞ்சிங்கக் குருளையென விளங்கிற்று. அழகிய பாதங்களின் மேல் கணுக்காலில் வீரக்கழல்கள் இலங்கின. பரந்த மார்பில் வெண்ணிற முத்துமாலைகள் ஒளி நிறைந்து தோன்றின. பருத்த புயங்களில் வாகுவலயங்கள் அணி செய்தன. நீண்ட அழகிய காதுகளில் மகர குண்டலங்கள் தொங்கின. அழகும், வீரமும், இளமையும் ஒருங்கே ஒன்று சேர்ந்து தேரின் மேல் ஆயுதங்களோடு ஏறி நின்றாற் போலத் தோன்றியது அபிமன்னனின் தோற்றம். ‘இளங்கன்று’ பயமறியாது என்பதற்கு ஏற்பத் தருமனின் வார்த்தையை மீற முடியாமல் ஒப்புக் கொண்டானே தவிர அந்தச் செயல் அபிமன்னனைப் போன்ற ஓர் இளைஞனின் அனுபவத்தைவிடப் பெரியது ஆகும். ஒரு பெரும் படையின் இடையே புகுந்து அதன் வியூகத்தைக் கலைப்பது என்பது இதற்கு முன் அவனுக்கு அனுபவம் இல்லாத விஷயம். எனவே வியூகத்தைக் கலைத்துக் கொண்டு உள்ளே நுழைவது எப்படி என்பதைப் பற்றி அனுபவம் மிகுந்த பெரியோர்கள் பலரைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். வியூகத்திற்குள் நுழைவதென்றால் முதலில் முன் வரிசையில் நிற்கும் அதிரதத் தலைவர்களோடு போர் புரிந்து அவர்களை வென்றாக வேண்டும். அபிமன்னன் தன் தேரைக் கௌரவப் படையின் அதிரதர்களுக்கு முன்னே நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்கினான். துரோணரைப் போன்ற பெருவீரர்கள் கூட முன் வரிசையில் நின்று அவனை எதிர்த்துப் போரிட்டனர். வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த சக்கரவியூகத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஆரங்கள் போல் வீரர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். வியூகத்தை அழிக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு ஆரங்களையும் கலைத்தாக வேண்டும். ஒவ்வொரு ஆரத்தின் முன்னும் ஒரு பெரிய தலைவர் நின்று கொண்டிருந்ததனால் கலைப்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் இருந்தது முதல் ஆரத்தின் முதல் வீரராகத் துரோணர் வில்லுடன் நின்று கொண்டிருந்தார். அபிமன்னன் சிறிதும் தயங்காமல் அவரை எதிர்த்து விற்போர் புரியலானான். தொடக்கத்தில் பயமான இருந்தாலும் நேரம் ஆக ஆக அபிமன்னனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் பெருகி வளர்ந்தன. துரோணரை எப்படியும் வியூகத்திலிருந்து துரத்தியே தீருவது என்ற உறுதியோடு போர் செய்தான் அவன். அவனுடைய வில்லின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வயதானவராகிய துரோணர் எவ்வளவு நேரம்தான் அந்த வேகத்தைத் தாங்கமுடியும்? துரோணருடைய கைகள் ஓய்ந்து கொண்டே வந்தன. முடிவில் வில்லின் நாணை அறுத்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். அம்பறாத் தூணியையும் அறுத்து வீழ்த்தினான். வேறு வழியின்றிக் களத்தை விட்டு ஓடிப் போக வேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டது. துரோணர் ஓடியதுமே முதல் ஆரம் முற்றிலும் கலைந்து விட்டது. முதல் ஆரம் கலைந்தவுடன் இரண்டாவது ஆரத்தைக் கலைப்பதற்காகச் சென்றான் அபிமன்னன். இரண்டாவது ஆரத்தின் முன்னணியில் முதல் வீரனாகத் துரோணருடைய புதல்வன் அசுவத்தாமன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமன் அப்போது அளவு கடந்த சினத்துடனும் ஆத்திரத்துடனும் இருந்தான். தன் தந்தையை அபிமன்னன் முறியடித்ததைக் கண்டு அவனுடைய மனம் மிகவும் புண்பட்டுப் போயிருந்தது. அந்த ஆத்திரம் முழுவதையும் அபிமன்னனோடு போர் செய்வதிற் காட்டினான் அவன். அசுவத்தாமனுக்கும், அபிமன்னனுக்கும் இரண்டாவது ஆரத்தில் போர் தொடங்கியது. ‘வியூகத்தின் நடுவே’ சக்கர வியூகத்தின் இரண்டாவது ஆரத்தில் அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்னன் செய்த போரில் சீக்கிரமே அசுவத்தாமன் கை ஓய்ந்துவிட்டது. மேலும் மேலும் வளர்கின்ற தன்னம்பிக்கையோடு வியூகத்தின் மூன்றாவது ஆரத்தின் மேல் அபிமன்னன் சென்றபோது கர்ணன் அவனை எதிர்த்தான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. “அபிமன்னன் சிறுவன் தானே? சீக்கிரமாகவே தோற்று ஓடிவிடுவான்!” என்றெண்ணிக் கர்ணன் அலட்சியமாகவே போரிட்டான். அபிமன்னனோ கர்ணனைக் கடுமையாக எதிர்த்தான். கர்ணன் அலட்சியம்மாகப் போர் செய்யவே அவனை வெல்வது மிகச் சுலபமாக இருந்தது. கால் நாழிகைப் போரிற்குள் அபிமன்னன் கர்ணனைத் தோற்கச் செய்து விட்டான். அடுத்தபடியாக அபிமன்னனை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றவர்கள் கிருதவன்மனும், கிருபாச்சாரியனும் ஆவர். அபிமன்னன் ஒருவன், அவர்கள் இருவர். இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர். முதலில் அதைச் சமாளிக்க முடியாது திணறிய அபிமன்னன், பின்பு மனத்தை உறுதி செய்து கொண்டு தானும் அவர்களைத் திணறச் செய்தான். கிருதவன்மனும் கிருபாச்சாரியனும் அபிமன்ன னுக்கு எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினார்கள். அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது சொந்தப் புதல்வனும் அடங்கிய படை ஒன்று அபிமன்னனை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தது. எடுத்த எடுப்பிலேயே அபிமன்னன் செலுத்திய கூரிய அம்பு சகுனியின் புதல்வனை விண்ணுலகுக்கு அனுப்பியது. சகுனியோடு வந்தவர்களுக்கு இந்த சாவு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அபாயகரமான தோல்விக்கு முன்னறிவிப்புப் போலவும் தோன்றியது. சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சகுனியும் பின்வாங்கினான். அபிமன்னனோ விடாமல் துரத்தலானான். படையில் துரியோதனனின் இளைய சகோதரர்களாகிய விகர்ணன் முதலியவர்களும் இருந்தனர். அபிமன்னனின் முன் வில்லேந்தி நிற்பதற்காக அஞ்சினர் அவர்கள். இவ்வாறு கெளரவர்களின் சக்கரவியூகத்தை அபிமன்னன் தனது போர்த்திறமையினால் ஆரம் ஆரமாகக் கலைத்துக் கொண்டிருந்தபோது பெரியப்பனான வீமனும் அவனுக்கு உதவுவதற்கு வந்து சேர்ந்தான். வியூகம் வேகமாக உடையலாயிற்று. அபிமன்னன் மேல் ஏற்பட்ட பரிவினால்தான் வீமன் உதவிக்கு வந்திருந்தான். தனியாக அபிமன்னன் திண்டாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “இது யாருடைய ஏற்பாடு? இளைஞனாகிய அபிமன்னனைத் தனியே எதிரிகள் படை நடுவே அனுப்பலாமா? அதனால் அவனுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ?” -என்று வீமன் கடிந்து கொண்டான். அவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தருமர் உடனே பதறிப் போய், “அப்படியானால் நீயே அவனுக்குத் துணையாகச் சென்று உதவும்” -என்று கூறியதனால் தான் வீமன் அபிமன்னனுக்கு உதவ வந்திருந்தான். வீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பல நாட்டு மன்னர்கள் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. வீமன் வேகமாக முன்னேறினான். வீமனும் அபிமன்னனோடு ஒன்று சேர்ந்து விட்டால் அந்தச் சக்கரவியூகம் மிக விரைவில் அழிந்து விடும். வியூகத்தை உடைத்துக் கொண்டு வீமன் விரைவாக வருவதைப் போர்களத்தின் மூலையிலிருந்து துரியோதனன் பார்த்து விட்டான். அவன் மனத்தில் தாங்க முடியாத திகைப்பு ஏற்பட்டது. அவன் சிந்தனை மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வீமன் அபிமன்னனை நெருங்குவதற்குள் அவனை இடையே தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்று நினைத்தான் துரியோதனன். உடனே சகுனி, விகர்ணன், அசுவத்தாமன் ஆகிய மூவரையும் அருகில் அழைத்தான். “நீங்கள் உடனே படைகளோடு விரைந்து சென்று வீமனை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். வீமன் அபிமன்னனோடு ஒன்று சேரக் கூடாது. இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடைய வியூகம் சீக்கிரமே அழிந்து விடும்’ என்று கட்டளை யிட்டான். துரியோதனனுடைய கட்டளையின்படியே அவர்கள் வீமனை எதிர்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின்பும் தன் தம்பிமார்கள், வேறு பல அரசர்கள் எல்லோரையும் வீமன் மேல் ஏவிவிட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். பஞ்சுச் சுருள்களை மேலும் மேலும் தன்னகத்தே வாங்கிப் பஸ்பமாக்கும் நெருப்பைப் போல வீமன் தன்னை எதிர்த்து வந்தவர்களை எல்லாம் சமாளித்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் வீமனால் அபிமன்னனை நெருங்கி அவனோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை. வியூகத்தின் உட்புறத்தில் அபிமன்னனும், வெளிப்புறத்தில் வீமனுமாக மாட்டிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றி அணி அணியாக நிற்கும் படைகளை அழித்தால்தான் அபிமன்னன் வியூகத்தின் வெளியே வரமுடியும். துரியோதனன் தன் மேல் ஏவி விட்டிருக்கும் மன்னர்களையும் வீரர்களையும் முற்றிலும் தோற்றோடச் செய்தால்தான் வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனுக்குப் பக்கமாக நிற்க முடியும். மலைமலையாக வீரர்கள் எதிர்த்து வந்தாலும் வீமன் கலங்காமல் அவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த துரியோதனன் மீண்டும் தனக்குள் பயந்து விட்டான். “ஒரு வேளை வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனோடு சேர்ந்து கொண்டு விடுவானோ?” என்ற எண்ணமே துரியோதனனது பயத்திற்குக் காரணம். இவ்வாறு பயம் தோன்றியவுடனேயே அவன் தன்னுடைய அடுத்த சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்குத் தயாராகி விட்டான். வீரத்தால் எதிரியை வெல்வதற்குத் தெரிந்தவன் வீரத்தைக் கொண்டு வெல்ல முடியும். வீரமில்லாதவன் என்ன செய்வது? சூழ்ச்சியால் தானே தன் எண்ணத்தை ஆக்கிக் கொள்ள முடியும்? துரியோதனன் தன் சூழ்ச்சியைச் சிந்து தேசத்து மன்னனாகிய சயத்திரதன் என்பவனோடு கலந்தாலோசித் தான். “சயத்திரதா! வீமன் அபிமன்னனோடு சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் படைகளை ஏவினேன். ஆனால் படைகளால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இப்பொழுது வேறோரு தந்திரம் செய்தாக வேண்டும். அந்தத் தந்திரத்தைச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லை. வீமன் சிவபக்தி மிக்கவன். சிவபெருமானுக்கும் அவன் அணிந்து கொண்டு கழித்த பொருளுக்கும் பெருமதிப்புச் செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து வீமனின் தேருக்கு முன்னால் குறுக்கே போட்டுவிடு. நீ சிவபெருமானிடம் பக்தி மிக்கவனென்று வீமன் எண்ணிக் கொண்டிருப்பான். ஆகையால் மாலையைக் கண்டு பயபக்தியோடு வணங்கித் தேரை மேலே செலுத்தாமல் அப்படியே நிறுத்தி விடுவான் வீமன். அபிமன்னனோ வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். கொன்றை மாலையை நடுவில் எறிந்து வீமனைத் தடுத்து நிறுத்திய பிறகு, நீயே இன்னும் ஒரு காரியமும் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்னனுடைய தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும். இந்த இரண்டு செயல்களும் இன்று உன் உதவியால் இங்கே நிறைவேற வேண்டும்.” துரியோதனன் வேண்டுகோளுக்குச் சாத்திரதன் இணங்கினான். எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை நினைத்தான். தியானமும் வழிபாடும் செய்து கொன்றை மாலையை வரவழைத்தான். பின்பு அம்மாலையை வீமன் அபிமன்னன் இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காகக் கிடக்குமாறு போட்டு விட்டான். சூழ்ச்சியின் முதல்படி நிறைவேறி விட்டது. வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை அநேகமாக வென்று முடித்திருந்தான் அபிமன்னன். இனியும் வியூகத்தில் நிற்க வேண்டாம் என்று வெளியே வருவதற்காகத் திரும்பினான். திரும்பிய போது தேர் செல்ல வேண்டிய பாதை மேல் கொன்றைமாலை விழுந்து கிடப்பதைக் கண்டு தயங்கினான். “சிவபெருமானுக்கு விருப்பமான அழகிய கொன்றை மலர் மாலை வழிமேல் வீழ்ந்து கிடக்கிறது. அதை மிதித்துக் கொண்டு தேரைச் செலுத்தலாமோ? அங்ஙனம் செய்வது எம்பெருமானையே அலட்சியம் செய்தது போல் அல்லவா ஆகும்?” என்றெண்ணியே அபிமன்னன் வியூகத்திலிருந்து வெளியேறும் கருத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்யலானான். ஏறக்குறைய இதே சமயத்தில் வீமன் தன்னை வழிமறித்த எதிரிகளை விரட்டிவிட்டுத் தன் தேரை அபிமன்னன் பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலை அவன் கண்களில் தென்பட்டது. உடனே தீயை மிதித்தவன் போல் திடுக்கிட்டுப் போய்த் தேரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்ற உறுதி அவன் மனத்தில் ஏற்பட்டது. ‘வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்? எதற்காகப் போட்டிருக்கக்கூடும்? என்று தனக்குள் சிந்தித்த வீமன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டான். தான் அபிமன்னனை நெருங்க விடாமலும் அபிமன்னன் வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சியே அந்தக் கொன்றைமாலையின் உருவத்தில் அங்கே கிடக்கிறது என்பதை விளங்கிக் கொண்டான். ‘வீமன், அபிமன்னன், இருவருமே கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடங்களுக்கே திரும்பி விட்டதைக் கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்ததென்று களிப்டைந்தான். துரியோதனனுடைய களிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. வெளிப்புறம் திரும்பிய வீமனும் உட்புறம் திரும்பிய அபிமன்னனும் தங்களுடைய ஆத்திரம் முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவதற்குத் தொடங்கினர். கர்ணன் அபிமன்னனை எதிர்க்க முன் வந்தான். வந்த வேகத்திலேயே அவன் வில்லை முறித்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். இதைக் கண்ட மாத்திரத்திலேயே கர்ணனுடன் வந்தவர்கள் பயந்து ஓடிவிட்டனர். துரோணரும் அவர் புதல்வன் அசுவத்தாமனும் அடுத்து அவனை எதிர்த்தனர். ஆத்திரத்திலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் செயல் செய்யும் சக்தி பெருகுவது இயல்பு. கர்ணனை விடப் படுதோல்வியடைந்து ஓடினார்கள் துரோணரும் அவர் மகனும். இறுதியாகத் துன்முகன் என்ற பெருவீரன் வந்து எதிர்த்தான். அவனையும் ஓட ஓட விரட்டியபின் எதிர்ப்பதற்கு ஆள் இன்றித் தனியே நின்றான் அபிமன்னன். இவற்றையெல்லாம் கண்ட துரியோதனனுக்கு அங்கேயே அப்பொழுதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. “கேவலம் ஒரு சிறு பிள்ளை! பேரரசனாகிய தன்னையும் தன் படைகளையும் எவ்வளவு அலட்சியமாகத் தோற்று ஓடச் செய்கிறான்?” என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான். உடனே ஏமாற்றத்தாலும் தோல்வியாலும் உண்டான குரோதம் அவனுடைய மனத்தில் குமுறிற்று. “இளைஞனாகிய இவனை இளைஞர்களைக் கொண்டே தோற்கச் செய்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டு தன் மகன் இலக்கண குமாரனைக் கூப்பிட்டு அனுப்பினான். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பதினாயிரம் இளவரசர்களை ஒன்று சேர்த்தான். அந்தப் பதினாயிரம் இளவரசர்களுக்குத் தன் மகன் இலக்கண குமாரனை தலைவனாக நியமித்து அபிமன்னனை எதிர்ப்பதற்காக வியூகத்திற்குள் அனுப்பினான். பல எலிகள் ஒன்று சேர்ந்து தங்கள் அறியாமையால் பூனையை எதிர்க்க முற்பட்டது போல் அரசகுமாரர்களின் கூட்டம் அபிமன்னனை வளைத்துக் கொண்டது. அபிமன்னன் புயல் வேகத்தில் கணைகளை அவர்கள் மேல் தூவினான். ஒரு வகையிலும் வலிமையில்லாத அந்த அரச குமாரர்கள் சிறிது நேரத்திலேயே தளர்ந்து புறமுதுகிட்டு ஓடி வந்து விட்டனர். துரியோதனனுக்கு மகனாகவும் இளவரசர்களுக்கு தலைவனாகவும் இருந்த இலக்கண குமாரன் அபிமன்னனுடைய அம்பு பட்டுக் களத்திலேயே இறந்து வீழ்ந்தான். மகனை இழந்த துயரமும் மானக்கேடுமாகப் பெரிதும் வாட்டமடைந்த துரியோதனன் தன் கட்சியைச் சேர்ந்த அரசர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டித் தன் இதய வேதனையை அவர்களுக்குத் திறந்து காட்டினான். “என்னை அன்போடு ஆதரித்து உதவ முன் வந்திருக்கும் பேரரசர்களே!நீங்களெல்லோரும் அருகில் இருக்கும் போது எனக்கு இத்தகைய மானக்கேடு நேரலாமா? வயதில் மிக இளைஞனாகிய இந்த அபிமன்னன் என் அன்பிற்குரிய மகனைக் கொன்றதுமல்லாமல் பதினாயிரம் இளவரசர்களைத் தோல்வியடையச் செய்து விட்டான். இன்று போர் முடிவதற்குள் எப்படியாவது இந்த அபிமன்னனைக் கொன்று தொலைக்காவிட்டால் இந்த அரசாட்சி, பதவி, பெருமை எல்லாவற்றையும் கைவிட்டு நான் சந்நியாசியாகப் போக வேண்டியதுதான்” -என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்களிடம் முறையிட்டான். கேட்டுக் கொண்டிருந்த அரசர்கள் உண்மையாகவே அவனுடைய முறையீட்டில் மனம் நெகிழ்ந்து விட்டனர். “அரசர்க்கரசே! தாங்கள் இச்சிறுவனால் விளைந்த தோல்விகளுக்காக மனம் வருந்த வேண்டாம். இன்று போர் முடிவதற்குள் இந்த அபிமன்னனைக் கொன்று தீர்க்கவில்லையென்றால் எங்கள் கைகளில் இருப்பது வில் அல்ல. வெறும் மரமே! இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் நாளை இவ்வில்லைக் கையால் தொட்டுப் போர் புரிய மாட்டோம். இது உறுதி. இந்தக் கணமே தாங்கள் கவலையை விட்டொழிக்கலாம்” -என்று எல்லா அரசர்களும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி கூறினார்கள். முன்பு தோற்று ஓடிப் போன துரோணன், அசுவத்தாமன், முதலியவர்களும் மற்றும் பல பெரிய அரசர்களும் ஒன்று சேர்ந்து அபிமன்னனைச் சுற்றி ஆயுதங்களோடு வளைத்துக் கொண்டார்கள். இந்தப் பெரும் படையையும், இதன் குமுறலையும் கண்டுகூட அபிமன்னன் மனம் கலங்கிவிடவில்லை. சற்றும் தளராமல் இவர்களை எதிர்த்து வில்லை வளைத்தான். அம்புகளைத் தூவினான். அவனுடைய அம்புகளால் மாண்டவர் பலர். மாளாமல் காயமுற்று வீழ்ந்தவரும் பலர் . துரியோதனனின் இளைய சகோதரனாகிய துச்சாதனனும் மாமனான சகுனியும், களத்தை விட்டு ஓடியே போய் விட்டார்கள். வேறு சிலருக்குத் தேர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டது. வில்லொடியும் நிலை ஏற்பட்டதனால் வெறுங்கையோடு நின்றவர் சிலர். சிரங்களை இழந்து வெறும் முண்டங்களாய்த் தரையிலே வீழ்ந்தவர் சிலர். கை கால்கள் அறுபட்டு வீழ்ந்தவர் சிலர். நெஞ்சிலே வலிமையும் உடம்பிலே துணிவும் இன்றித் தாமாகவே ஓடிப் போனவர்கள் சிலர். இதைக் கண்டு ஏற்கனவே பெரிதும் சலனமடைந்திருந்த துரியோதனன் மிகுந்த கலக்கமடைந்தான். கர்ணனை அழைத்து, “கர்ணா! இந்த இக்கட்டான நிலைமையை இப்படியே மேலும் வளர விட்டுவிட்டால் அதனால் துன்பமடைகிறவர்கள் நாம் தான். இந்த அபிமன்னனோடு வீமனும் அர்ச்சுனனும் வேறு சேர்ந்து கொண்டால் நாம் தோற்றுப் போவதும் நமது சக்கர வியூகம் அழிவதும் உறுதி. ஆகையால் நீ அபிமன்னனை நேருக்கு நேர் எதிர்த்துப் போர் செய்” என்று கட்டளையிட்டான். உடனே கர்ணன் அபிமன்னனோடு நெருங்கி நின்று போர் செய்யப் புறப்பட்டான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் போர் தொடங்கிற்று. தொடக்கத்தில் இரண்டு மூன்று முறை அபிமன்னனுடைய விற்போரைச் சமாளிக்க முடியாமல் தோற்றோடினான் கர்ணன். மூன்று முறை தோற்றவன் நான்காவது முறையாக அபிமன்னனை எதிர்த்து வந்தபோது அடக்கமுடியாத கோபத்தோடு வந்திருந்தான். இந்த முறை விதியும் கர்ணன் பக்கம் துணை செய்துவிட்டது, கர்ணன் எய்த முதல் அம்பு அபிமன்னனுடைய வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. பின் தொடர்ந்து தேர், தேரின் குதிரைகள் என்று கர்ணன் ஒவ்வொன்றாக அழித் தொழித்தான். அபிமன்னன் திடுக்கிட்டான்! எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு வாள் மட்டும் அவன் கையில் எஞ்சியிருந்தது. அதை உருவிக் கொண்டு தரையில் குதித்தான் அவன். அபிமன்னனுடைய வலது கையில் உருவிய வாளும் இடது கையில் கேடயமும் இருந்தன. சுற்றிச் சுழன்று நின்றவர்களை நோக்கிக் கத்தியைச் சக்ராகாரமாக வீசினான். எதிரிகள் படைக்குத் தலைமை தாங்கி முன்பு தோற்றோடிப் போன பல அரசர்கள் இப்போது மீண்டும் ஓடிவந்து அபிமன்னனை எதிர்த்தனர். தன்னுடைய நிராதரவான நிலையை எண்ணிச் சிறிதேனும் கலங்காத அபிமன்னன் வாளை இடைவிடாமல் சுழற்றிக் கொண்டிருந்தான். துரோணருடைய வில் அவனை நோக்கி அம்புமாரி பொழிந்தது. வாட்போர் செய்கிறவன் மேல் அம்புகளைச் செலுத்தக்கூடாதென்பது போர் முறை. ஆனால் எப்படியாவது அபிமன்னனைக் கொன்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மேல் அம்புகளைத் தூவினார் துரோணர் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்னனின் வலது கையைத் துண்டித்து விட்டார். துரோணரின் இந்தக் கொடுஞ் செயலால் வாளேந்திய அபிமன்னனின் கை அறுந்து குருதி சோரக் கீழே விழுந்தது. அபிமன்னனின் முடமான வலது கை துடிதுடித்தது. இடது கையால் சக்ராயுதம் ஒன்றை எடுத்து வேகமாகச் சுழற்றினான் அவன். அப்போது அவனை எதிர்த்த பலர் தலைகளை இழக்க நேரிட்டது. அபிமன்னன் சக்ராயுதத்தால் பலரைக் கொல்வதைக் கண்டு மனம் கொதித்தான் துரியோதனன். தாங்களும் தங்கள் படைகளும் பிழைக்க வேண்டுமானால் அபிமன்னனைக் கொன்றாலொழிய வேறு வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கதாயுதத்தால் அபிமன்னனை அடித்துக் கொன்றுவிடுமாறு சயத்திரதனுக்குக் கட்டளை இட்டான் துரியோதனன். சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று சத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்னன் மேல் பாய்ந்தான் அவன். உடனே அபிமன்னனும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சயத்திரதனை எதிர்த்தான். இருவர் கதாயுதங்களும் மோதின. எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து எவ்வளவு நேரம்தான் போரிட முடியும்? அபிமன்னன் கைசோர்ந்து கதாயுதத்தைக் கீழே போட்டபோது சத்திரதனுடைய வலிமை வாய்ந்த கதாயுதம் அவன் தலையை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த விநாடி அபிமன்னன் பொறிகள் நிலைகலங்கிக் கீழே தரையில் சாய்ந்தான். வீரச்சிங்கம் வீழ்ந்தது! வீழ்ந்த அபிமன்னன் மறுபடியும் எழுந்திருக்கவே இல்லை. அந்த வீரச்சிங்கத்தின் உடலில் உயிர் இருந்தால் அல்லவா மீண்டும் எழுந்திருக்க இயலும்? வீர சுவர்க்கம் அடைந்து விட்டான் அபிமன்னன். வீரத்தின் சிகரமாக அதுவரை அந்தப் போர்களத்தில் போராடிய ஒரு புனித ஆன்மா செயலிழந்து உணர்வொடுங்கித் தரையில் வீழ்ந்து விட்டது. பகைவர்களும் கூட மனம் கலங்கி வருந்திக் கண்ணீர் சிந்துமாறு செய்தது அவன் முடிவு. துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகியவர்கள் மட்டும் மனம் வருந்தவில்லை. தன் மகனை இழந்த வருத்தம் கூடத் துரியோதனனுக்கு அப்போது மறந்துவிட்டது. அர்ச்சுனன் மகனான அபிமன்னன் இறந்துவிட்டான் என்ற களிப்பே அவன் மனத்தில் நிறைந்து நின்றது. இவர்கள் நான்கு பேரைத் தவிரப் பரந்து விரிந்த அந்தக் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அபிமன்னனுடைய மரணத்திற்காக வருந்தாதவர்கள் வேறெவருமில்லை. இதற்குள் அபிமன்னன் இறந்து விட்டான் என்ற இந்தக் கொடிய செய்தி தருமருக்கும் வீமனுக்கும் எட்டியது. தருமர் ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் திக் பிரமையடைந்து விட்டார். வீமனுக்கு இதய ஓட்டமே நின்று விடும் போலிருந்தது. மனத்துயரம் பொறுக்க முடியாமல் இருவரும் பலவாறு அழுது புலம்பினர். தருமரும் வீமனும் அன்று அந்த அந்தி வேளையில் அங்கே அழுது புலம்பியதைக் கேட்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் குருக்ஷேத்திரத்துக் கல்லும் மண்ணும் கூட அழுது கண்ணீர் சிந்தியிருக்கும். சூரியன் அஸ்தமிக்கப் போகிற சமயம். அப்போதுதான் சஞ்சத்தகர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். தன் மகனான அபிமன்னன் கெளரவர்களின் வஞ்சனைக்காளாகி இறந்து போனான் என்ற செய்தி அது வரை அவனுக்குத் தெரியாது. ஆனால் அர்ச்சுனனுடைய தேரைச் செலுத்திக் கொண்டிருந்த எல்லாம் வல்ல கண்ணபிரான் தம்முடைய ஞான திருஷ்டியால் அபிமன்னனுடைய முடிவைத் தெரிந்து கொண்டான். அர்ச்சுனன் திடீரென்று அதைக் கேள்விப்பட்டால் கதிகலங்கி மூர்ச்சையாகி விடுவான் என்று பயந்து கண்ணன் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு அதன்பின் அந்தப் பயங்கரச் செய்தியை அவனுக்கு உரைக்க விரும்பினான். கண்ணன் தன் மனத்திற்குள் இந்திரனைத் தியானித்துக் கீழ்வருமாறு வேண்டிக் கொண்டான்:- “உன் மகன் அர்ச்சுனன் புத்திரனை இழந்து விட்டான். இந்தச் சோகம் நிறைந்த சூழ்நிலையில் உன் மகனுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவிக்க நீதான் வரவேண்டும்” கண்ணனுடைய தியானத்திற்கும் வேண்டுகோளுக்கும் இந்திரன் மனமிரங்கினான். உடனே கண்ணனும் அர்ச்சுனனும் தேர் மேலேறித் திரும்பிக் கொண்டிருக்கக் கூடிய வழியில் இந்திரன் ஒரு கிழட்டு வேதியனைப் போல உருமாறி வந்து நின்று கொண்டான். வேதியன் அழுது புலம்பியவாறு தளர்ந்து நின்று கொண்டிருந்தான். “ஐயோ! என் மகனை இழந்த துயரைப் பொறுக்க முடியவில்லை ! இதோ, நான் தீயிலே பாய்ந்து இறந்துவிடப் போகிறேன்” என்று வேதியன் இரைந்து கத்தினான். தேரில் வந்து கொண்டிருந்த கண்ணனும் அர்ச்சுனனும் இதைப் பார்த்தார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு அந்த கிழவனை சுட்டிக் காட்டி, “அர்ச்சுனா! அதோ அந்தக் கிழவன் ஏதோ மகனை இழந்து விட்டேனென்றும் தீயிலே பாய்ந்து விடப் போகிறேனென்றும் கத்திக் கொண்டிருக்கிறான். நீ போய் அவனைத் தேற்றித் தீப்பாயாமல் தடுத்தால் நல்லது” என்று கூறினான். உடனே அர்ச்சுனன் கண்ணன் கூறியபடியே தேரிலிருந்து இறங்கி அந்தணனுக்கு அருகே சென்று, “ஐயா! வயதான வேதியரே! நான் சொல்லுகிறபடி கேளும். நீர் உம்முடைய மகனை இழந்ததற்காகத் தீயில் பாய்ந்து உயிர்விடப் போவதாகக் கூறுகிறீர் இறப்பதும் பிறப்பதும் நம் கையிலா இருக்கிறது? எல்லாம் விதியின் வழி நடக்கும்? மகன் இறந்ததற்காக நீர் ஏன் தீப்பாய வேண்டும்? நீர் தீப்பாய்ந்தால் உம்முடைய மகன் திரும்பி வந்து விடுவானா? அறிவிற் சிறந்தவர் போலத் தோன்றும் நீர் என் சொற்படி கேட்க வேண்டும்” என்று அவருக்கு ஆறுதல் கூறினான். உடனே அந்த மாயக்கிழவர் அர்ச்சுனனை நோக்கி, “நல்லது அப்பா! என் மகனுக்காக நான் தீயில் பாய்ந்து இறக்கக்கூடாது என்று நீ தடை செய்கிறாய்! இதே போல் உன் மகன் இறந்தாலும் அவனுக்காகத் தீப்பாய முற்படக் கூடாது. இதற்கு நீ சம்மதித்தால் உன் சொற்படி நானும் கேட்கிறேன்!” என்றார். “கிழவரே! என் மகன் இறந்தால் நான் தீப்பாய மாட்டேன். அப்படியே தீப்பாய எண்ணினாலும் அப்போது நீர் வந்து என்னைத் தடுத்தால் கண்டிப்பாக நிறுத்தி விடுகிறேன். இது சத்தியம்” என்று அர்ச்சுனன் அவருக்கு வாக்களித்தான். “அப்படியானால் நல்லது? நானும் இப்போது தீப்பாயவில்லை” என்று சிரித்துக் கொண்டே கூறினார் வேதியர். அர்ச்சுனனும் கண்ணனும் வேதியரை வணங்கி விட்டு மேலே சென்றார்கள். வேதியர் மறைந்தார். தேர் பாசறையை நெருங்கியது. முன் ஜாக்கிரதையாக அர்ச்சுனனின் கைகளில் எந்தவிதமாக ஆயுதங்களும் இல்லாமல் கண்ணன் வாங்கி வைத்துக் கொண்டான். பாசறையிலிருந்து ஒரே அழுகைக் குரல்களாகக் காற்றில் கலந்து வந்தன. அழுகைக் குரல் செவியில் கேட்டதும் ஒன்றும் புரியாமல் மிரண்டு போய் கண்ணனைப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவனுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் திகைத்தான். “கண்ணா! இதென்ன நம்மவர்கள் தங்கியிருக்கும் எல்லாப் பாசறைகளிலிருந்தும் அழுகைக் குரலே கேட்கிறது? நீயும் அழுகிறாய். எனக்கும் மனத்தில் இனம் புரியாத பயமும் நடுக்கமும் தோன்றுகின்றன. இடது கண், இடது தோள், இடது மார்பு எல்லாம் துடிக்கின்றன. இதன் பயன் என்ன? என்ன துயரம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறதோ? எல்லாம் உணரவல்ல உனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாதே?” -என்று கண்ணனைப் பார்த்துக் கவலை நிறைந்த குரலில் அர்ச்சுனன் கேட்டான். கண்ணன் இதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான். “கண்ணா ! இனியும் பொறுக்க முடியாது! இன்றைய போரில் நம்மைச் சேர்ந்த நமக்கு நெருங்கிய யாரோ ஒருவர் பெருந்துன்பம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. என் சகோதரர்களில் யாருக்கேனும், என் புதல்வர்களில் யாருக்கேனும் துன்பமா? யாருக்குத் துன்பம் ? உள்ளதைச் சொல்லி விடு! இனிமேலும் என்னை ஏமாற்றாதே!” -அர்ச்சுனன் கதறி விட்டான். கண்ணன் அர்ச்சுனனை மார்புறத் தழுவிக் கொண்டான். “அர்ச்சுனா! மனத்தைத் திடப்படுத்திக் கொள். நீ விரைவில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறவன். நான் சொல்லப்போவதோ பரிதாபகரமான செய்தி.” “சொல் கண்ணா! சொல்லிவிடு! இன்னும் என்னைச் சோதனை செய்யாதே!” ‘உன் அருமைப் புதல்வனும் என் அருமை மருமகனுமாகிய அபிமன்னன் வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான்." கண்ணன் கூறிய சொற்கள் செவியில் நுழைவதற்கு முன்பே அர்ச்சுனன் தேரிலிருந்து வேரற்ற மரம் போல் தரையில் சாய்ந்தான். செய்தியைக் கேள்வியுற்ற அதிர்ச்சியில் அவனுக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. கண்ணன் உடனே பதறிப் போய்த் தேர்தட்டிலிருந்து கீழே குதித்து அர்ச்சுனனுக்குப் பிரக்ஞை வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். மயக்கம் தெளிந்ததும் அர்ச்சுனன் கோவென்று கதறியழுதான். பலவாறு புலம்பினான். தரையில் முட்டிக் கொண்டான். ஒரே கன்றை இழந்த தாய்ப் பசுவின் நிலையை அடைந்தான். பாண்டவர் படையைச் சேர்ந்த எல்லோரும் அர்ச்சுனன் விழுந்து கிடந்த இடத்தில் துயரமே உருவாகச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது மகா முனிவராகிய வியாசர் பெருமான் அந்த இடத்திற்கு விஜயம் செய்தார். துயரத்தால் வாடி நிற்கும் யாவருடைய மனமும் ஆறுதலடையும்படி பொதுவாக ஓர் அறிவுரை வழங்கினார் அவர். “பந்த பாசங்களும், உறவு முறைகளும் மாயையினால் ஏற்படுகின்றவை. மனைவி, மக்கள், தாய், தந்தை, சுற்றம், எல்லாமே பொய் மயக்கம் தோன்றுமிடமும் சேருமிடமும் பரமாத்மாவின் திருவடியே. இன்பமும் துன்பமும், வெறும் அவஸ்தைகளே, மெய்ஞ்ஞானமுள்ளவர்கள் துயரங்களைக் கண்டு வருந்திக் கதறக் கூடாது. ‘இது இந்தப் பூத உலகத்தின் இயற்கை’ என்று எண்ணித் தெளிவு பெற வேண்டும். இறப்பதும் பிறப்பதும் இவ்வுலகில் புதுமை இல்லை , நடந்ததை மறந்து இனி நடக்க வேண்டியதை நினையுங்கள். உங்கள் கவலையால் அபிமன்னன் உயிர் பெறப் போவதில்லை” -என்றார் வியாசர். வியாசருடைய அறிவுரையால் பலர் மனம் தேறியது. உண்மையானாலும் அர்ச்சுனன் அந்த அறிவுரையை ஏற்றுத் தெளிவு பெறவில்லை. மகனை இழந்த வேதனை பொறுக்க முடியாமல் தீயிலே பாய்ந்து தானும் உயிர் துறப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அவன். தீயும் வளர்த்தாகி விட்டது. யார் தடுத்தும் கேட்காமல் அர்ச்சுனனும் அதில் பாயத் தயாராகி விட்டான். இன்னும் சில விநாடிகள் தாமதித்தால் அர்ச்சுனனுடைய அழகிய சரீரம் தீயில் மறைந்துவிடும். அப்போது கண்ணன், முன்பு போலி வேதியனாக உருமாறி வந்து அர்ச்சுனனிடம் வாக்குப் பெற்றுக் கொண்டுபோன இந்திரனை நினைத்தான். நினைத்த அளவில் அர்ச்சுனனுக்கு முன் வந்து போலி வேதியன் நின்றான். “நில்! தீயை நெருங்காதே! சற்றுமுன் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?” அருச்சுனன் இந்தக் குரவைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்; வேதியர் நின்று கொண்டிருந்தார். “தன் மகன் இறந்தால் அதற்காக வருந்தித் தான் தீயில் பாய்வதில்லை” -என்று சிறிது நேரத்திற்கு முன்பு அந்தப் பெரியவருக்கு வாக்களித்ததை அவன் நினைவு கூர்ந்தான். சட்டென்று தீயை விட்டு விலகிக் கொண்டு நின்றான். அந்தக் கிழட்டு வேதியனை இம்மாதிரியெல்லாம் தூண்டி விட்டு ஆட்டுவது கண்ணபிரானாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்ச்சுனன் அனுமானித்துக் கொண்டான். எனவே ஒன்றும் செய்யத் தோன்றாது பேசாமல் இருந்தான். “எல்லாம் நம்முடைய தவறு! ஒரு சிறுவனைத் தன்னந் தனியாகச் சக்கரவியூகத்திற்குள் அனுப்பியதுதான் நாம் செய்த தவறு. இனி வருத்தி என்ன பயன்?” என்றான் தருமரை நோக்கி, அர்ச்சுனனுடைய மனம் கொதித்தது. கைகள் பகைவர்களைப் பழி வாங்குவதற்குத் துடிதுடித்தன. அவன் அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோருமே கேட்கும்படியாக இரைந்த குரலில் ஆத்திரத்தோடு சபதம் கூறத் தொடங்கினான்: “இன்றைய போரில் என் அருமை மகன் அபிமன்ன னைக் கொன்றவன் எவனோ அவனை நாளை மாலைக்குள் கொல்லவில்லையானால் நாளை மாலை நான் தீயில் வீழ்ந்து இறப்பேன். என்னை அப்போது யாரும் தடுக்கவே முடியாது. என் மகனைக் கொன்றவனை என்னால் பழி வாங்க முடியவில்லையானால் நான் கொடுமையான நரகத்துக்குப் போகும்படி ஆகுக” என்று இவ்வாறு ஆத்திரத்தோடு பல சபத மொழிகளைக் கூறினான். அப்போது அங்கே கூடியிருந்த யாவர் செவிகளிலும் வீரமொழிகளாகிய இவை கேட்டன. அர்ச்சுனனின் கடுமையான இந்த சபதத்தைக் கேட்டுத் தருமர் திடுக்கிட்டார். “கண்ணா! இது என்ன? இவன் இப்படி முரட்டுத்தனமாக ஆத்திரத்தில் ஏதேதோ சபதம் செய்கிறானே? இவன் சொல்லுவது போல நாளை மாலைக்குள் சயத்திரனை இவனால் கொல்ல முடியுமா? முடியாவிட்டால் தீயிலே பாய்ந்து இறப்பேன் என்று வேறு சபதம் சொல்லியிருக்கிறானே? இவன் தீயில் பாய்ந்து இறந்தால் பின்பு நாங்கள் மட்டும் எப்படி உயிர் வாழ்வோம்? தீயில் பாய்ந்து இவன் உயிரை விட்டால் நாங்களும் உயிரை விட வேண்டியது தான்! என்ன செய்வது? நீ சர்வக்ஞன், நீதான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்” என்று தருமர் கண்ணனை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டார். “தருமா கவலைப்படாதே. யாவும் நலமாக நிறைவேறும். அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேறாமலிருந்தால் தானே அவன் தீப்பாய்வான்’ என்று சொல்கிறான். அவனுடைய சபதம் நிறைவேறும்படி செய்து விடுவோம்.” “அப்படியானால்…” “அபிமன்னனைக் கொன்ற சத்திரதனை எவ்வாறேனும் நாளை மாலைக்குள் பழி வாங்கிவிட்டால் போகிறது. அர்ச்சுனனும் தீப்பாயமாட்டான். நீங்களும் வீண் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை.” “அது முடிகிற காரியமா?” என்று மலைப்புடன் கூறினார் தருமர். “முடிகிற காரியமோ? முடியாத காரியமோ? எல்லாவற்றையும் முடித்து வைப்பவன் நான் அல்லவா?” - இவ்வாறு கூறிக்கொண்டே புன்னகை புரிந்தான் கண்ணன். அர்ச்சுனன் சபதம் அர்ச்சுனனுடைய சபதம் வெற்றி பெறுவதற்கான செயல்களைத்தான் செய்வதாகக் கண்ண பிரானே முன்வந்ததைக் கண்டு தருமர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தனது இதயம் நிறைந்த நன்றியைக் கண்ணனுக்கு அப்பொழுதே தெரிவித்தார். “தருமா! சயத்திரதனைக் கொல்ல வேண்டுமென்று அர்ச்சுனன் செய்துள்ள சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு என் ஒருவனுடைய துணை மட்டும் போதாது. இப்போது நானும் அர்ச்சுனனும் இரவோடிரவாகத் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வேண்டும். எப்படியும் நாளை உதயத்திற்குள் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினான் கண்ணன். ‘சரி! அவசியமானால் செல்லத்தானே வேண்டும்? சென்று வாருங்கள்" என்று விடை கொடுத்து அனுப்பினார் தருமர். கண்ணனும் அர்ச்சுனனும் திருக்கயிலையை நோக்கிப் புறப்பட்டார்கள். சிறிது தொலைவு நடப்பதற்குள்ளேயே அர்ச்சுனனுக்குக் கைகால்கள் எல்லாம் சோர்ந்து களைப்பாக வந்தது. அவன் வாய் திறந்து சொல்வதற்கு முன்பே அந்தக் களைப்பை உணர்ந்து கொண்டான் கண்ணன். “அர்ச்சுனா! அருமைப் புதல்வனைப் பறிகொடுத்த துயரத்தினால் உன் உடலும் மனமும் சோர்வடைந்திருக்கின்றன. இன்று நீ உணவும் உண்ணவில்லை. நடப்பது சிரமமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? பொறுத்துக் கொள். மனித உடல் நிலையாதது. மூப்பு, பிணி, சாவுகளுக்கு உட்பட்டது; பிறவியும் சாவும் எங்கும் எப்போதுமே இயற்கை நியதிகள், என்று எத்தனை எத்தனை நல்லறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்? அவ்வுரைகளையெல்லாம் மறந்து இவ்வாறு கலங்குதல் பொருந்துமா? நீ உணவு உண்ணாமல் இருப்பதனால் இறந்து போன அபிமன்னனுக்கு உயிர் வந்து விடுமோ? கவலையைக் கைவிடு. நான் சொல்வதைக் கேள். இதோ இந்த வழியிலுள்ள அரிய தோட்டங்களில் எண்ணற்ற பழமரங்களும் நீர் நிறைந்த பொய்கைகளும் உள்ளன. மா, பலா, வாழை ஆகிய கனிகளை உண்டு நீர் பருகலாம். நடப்பதற்கும் தெம்பு உண்டாகும்” என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு ஆறுதல் கூறினான். “கண்ணா! ஒவ்வொரு நாளும் சிவபெருமானை வழிபாடு செய்த பிறகுதான் நான் உண்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா? இன்று இன்னும் நாம் சிவபூஜையே செய்யவில்லையே? எப்படி உண்பது? அதனால்தான் தயங்குகிறேன்” “நீ தயங்கவேண்டாம்! உன் பூசையையும் இப்போது இங்கேயே முடித்துக் கொள்கிறதற்கு வழி சொல்லுகிறேன். அன்பர்கள் எந்தெந்த வடிவத்தை நினைத்துப் பூஜை செய்கிறார்களோ அந்த வடிவங்களிளெல்லாம் சிவபெருமான் குடி கொண்டிருக்கிறான். நீ இங்கே மலர்ந்துள்ள மலர்களைக் கொய்து இந்தக் குளத்தில் நீராடு. என்னையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு எனக்குப் பூஜை செய். இவ்வாறு செய்தால் உன் குறை தீரும். சிவபெருமானும் நானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள் என்பதைக் கயிலையை அடைந்ததும் நீயாகவே தெரிந்து கொள்வாய்.” அர்ச்சுனன் மறுக்காமல் கண்ணன் கூறியபடியே நீராடி மலர்களைக் கொண்டு அவனையே சிவபெருமானாகக் கருதிப் பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் அந்த வளமான சோலையிலிருந்த மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் முதலிய பழங்களை உண்டு மகிழ்ந்தான். தன்னுடைய வாகனமாகிய கருடனை அப்போது உடனே அங்கே வருமாறு மனத்தில் தியானித்தான் கண்ணன். நினைத்த அளவில் கருடவாகனம் அங்கே வந்து சேர்ந்தது. “கருடா! என்னையும் அர்ச்சுனனையும் விரைவாகச் சுமந்து கொண்டு சென்று கயிலையில் சேர்க்க வேண்டும்” என்றான் கண்ணன். கருடன் களிப்புடன் அதற்குச் சம்மதித்தான். கண்ணனைத் தனது தோள் மேலும் அர்ச்சுனனைக் கையின் மேலுமாக ஏற்றிக் கொண்டு கருடன் வாயு வேகம் மனோவேகமாகப் பறந்தான். அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக விரைவிலேயே கருடன் அவர்களைத் திருக்கயிலாயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டான். வெள்ளிப் பனி மலையின் நெடிதுயர்ந்த சிகரத்தில் ஜோதிப் பிழம்பாக வீற்றிருந்த சிவபெருமானைக் கண்டு இருவரும் முகமும் அகமும் ஒருங்கு மலர வணங்கினார்கள். சிவபெருமான் புன்னகை பூத்த முகமண்டலத்துடன் அர்ச்சுனனை ஆசி கூறி வரவேற்றார். அப்போது அங்கே, அந்தப் பெருமானிடம் அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. வருகிற வழியில் ஒரு தோட்டத்தில் கண்ணனையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு அர்ச்சுனன் சிவபூஜை செய்தானல்லவா? அப்போது அவன் என்னென்ன மலர்களைக் கண்ணன் மேல் அர்ச்சித்திருந்தானோ அதே மலர்கள் சிவபெருமானின் திருவடிகளில் இலங்கின. “ஆகா! ‘நானும் சிவபெருமானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள்’ என்று கண்ணன் கூறியது எவ்வளவு பெரிய உண்மை?” என்று அர்ச்சுனன் வியந்து கொண்டே கண்ணன் நின்ற பக்கமாகத் திரும்பினான். கண்ணனுடைய உதடுகளில் குறும்புத்தனமான சிரிப்பு நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. பின்பு அர்ச்சுனன் மனம், மொழி, மெய் மூன்றையும் ஒரு முகப்படுத்தித் திரிகரணசுத்தியோடு சிவபெருமானைப் புகழ்ந்து போற்றித் தியானித்தான். அர்ச்சுனனுடைய தியானத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமான் கண்ணனையும் அவனையும் அன்போடு நோக்கி, “நீங்கள் என்னிடம் ஏதோ காரியமாக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது ‘என்ன காரியமாக வந்துள்ளீர்கள்?’ என்பதைக் கூறினால் என்னாலானதைச் செய்வேன்” என்று கேட்டார். “மகாப்பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. வலிமையான எங்கள் பகைவர்களை அழிப்பதற்குச் சில விசேஷ அஸ்திரங்கள் வேண்டும். அவற்றைப் பெற்றுக் கொண்டு போவதற்கே வந்தோம்” என்று கூறினர் அர்ச்சுனனும் கண்ணனும். உடனே சிவபெருமான் அங்கிருந்த ஒரு பொய்கையை அர்ச்சுனனுக்குச் சுட்டிக் காட்டி அதில் நீராடுமாறு கூறினார். அர்ச்சுனன் அவர் கட்டளைப்படியே அந்தப் பொய்கையில் இறங்கி மூழ்கி எழுந்தான். அவன் மூழ்கி எழுந்த அளவில் அவனோடு ஒரு பெரிய பாம்பும் எழுந்தது. பிரம்மாண்டமான அந்தப் பாம்பின் அங்காந்த வாயிலிருந்து ஒரு முனிவர் தோன்றி வெளி வந்தார். அந்த முனிவர் பொய்கைக்குள் மூழ்கி ஒரு வில்லையும் சில அஸ்திரங்களையும் நீருக்குள்ளிருந்து எடுத்துக் கொண்டு வந்து அர்ச்சுனனிடம் கொடுத்தார். பின்பு அந்த முனிவரே அஸ்திரங்களைப் பிரயோகிக்கும் விதத்தையும் வேறு சில போர்த்திரங்களையும் அர்ச்சுனனுக்குக் கற்றுக் கொடுத்தார். அஸ்திரப் பிரயோகத்திற்குரிய மந்திர தந்திர இரகசியங்களையும் அவரிடமே தெரிந்து கொண்டான் அர்ச்சுனன். இறுதியில் கண்ணனும் அர்ச்சுனனும் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கயிலையை விட்டுக் கிளம்பினார்கள். புறப்படும் போது சிவபெருமான் கண்ணனைப் பார்த்து, “நீ பூவுலகில் மக்கட் சுமையைக் குறைத்துப் பூமிதேவிக்கு ஓய்வளிக்கச் சென்றிருக்கிறாய். அந்தச் செயலில் பூரண வெற்றி பெற்றுத் திரும்பி வா…” என்று கூறினார். திருக்கயிலையை நோக்கிச் சென்றவர்களின் நிலை இவ்வாறிருக்க, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனிப்போம். தருமர், அர்ச்சுனன் கயிலைக்குச் சென்றிருக்கும் செய்தியைத் துரியோதனனுக்கும் தெரிவித்து விடுவதுதான் போர் அறம் என்று எண்ணினான். அதனால் உடனே விமன் மகனான கடோற்கசனை அழைத்துச் சத்திரதனைக் கொல்வதாக அர்ச்சுனன் சபதம் செய்திருப்பதையும், அதற்கான அஸ்திரங்களைப் பெற்று வருவதற்காகக் கயிலைக்குச் சென்றிருப்பதையும் துரியோதனனிடம் போய்ச் சொல்லி விட்டு வந்து விடுமாறு அனுப்பினான். தருமன் கூறியவைகளை உரைப்பதற்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கடோற்கசன். அவ்வாறு செல்வதற்கு முன்னால், “நமது மறைமுகமான ஏற்பாடுகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமென்ன? அபிமன்னனை வஞ்சகமாகக் கொலை செய்த அந்தப் பாவிகள், இப்போது இதை முறியடிக்கவும் முன்கூட்டியே ஏதாவது சூழ்ச்சி செய்வார்களே?” என்று தருமனிடம் அதை வற்புறுத்திக் கூறிப் பார்த்தான். “எப்படியாயினும் சரி! நாம் நமது ஏற்பாடுகளைத் தெரிவித்து விடுவதே தருமம். நீ போய்த் தெரிவித்து விட்டு வா..” என்று தருமன் மீண்டும் வற்புறுத்திய பின்புதான் அவன் புறப்பட்டான். கடோற்கசன் துரியோதனாதியர்களுடைய பாசறையில் நுழைந்தபோது அங்கே துரியோதனன் மட்டுமின்றி மற்றவர்களும் கூடியிருந்தனர். பகைவர் படையைச் சேர்ந்தவனான கடோற்கசனை அந்த நேரத்தில் அங்கு வரக் கண்டது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. கடோற்க்சன் அவர்களை மதித்து மரியாதை செய்யவுமில்லை; வணங்கவுமில்லை. அலட்சியமாகத் தான் கூற வேண்டியவற்றைக் கூறி முடித்தான். கடோற்கசன் அர்ச்சுனன் மறுநாள் மாலைக்குள் சயத்திரதனைக் கொல்வதற்காகச் சபதம் செய்திருப்பதையும் அதற்கான அஸ்திரங்களைப் பெற்றுவரக் கயிலைக்குப் போயிருப்பதையும் பற்றிக் கூறியவுடன் துரியோதனனுக்குக் கோபம் வந்து விட்டது. “இன்றைய போரில் உங்கள் தரப்பில் அபிமன்னன் ஒருவன் தான் இறந்திருக்கிறான். எங்கள் தரப்பிலோ எண்ணற்ற அரச குமாரர்களும், என் அருமை மகன் இலக்கணகுமாரனும் இறந்து போயிருக்கின்றனர். இத்தனை பேர்களைப் பறிக்கொடுத்து விட்டு நாங்கள் சும்மா யிருக்கையில் உங்கள் அர்ச்சுனன் மட்டும் பெரிய சபதம் செய்துவிட்டுக் கயிலைக்குப் போவது என்ன நியாயம்? யுத்தம் என்றால் அதில் மரணங்கள் ஏற்படுவது இயற்கைதான். அதைக் கண்டு ஆத்திரமடைவது பேதமை. எவ்வளவு சபதம் செய்தாலும் சரி, எத்தனை சிவபெருமான்களிடத்தில் போய் வரம் பெற்றாலும் சரி, எங்கள் சயத்திரதனை அர்ச்சுனன் கொல்ல முடியாது. நாளைப் போரில் முன்பு அபிமன்னனைக் கொன்றது போலவே அவனுடைய அப்பனான அர்ச்சுனனையும் கொன்று விடுவான் எங்கள் சயத்திரதன். சயத்திரதன் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி இன்று வரைக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமலிருந்தால் நாளைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று துரியோதனன் கடோற்கசனை நோக்கி ஆத்திரத்தோடு கூறினான். கடோற்கசன் அங்கிருந்தவர்களை எல்லாம் கண்களாலேயே எரித்து விடுகிறவனைப் போல உருத்துப் பார்த்தான். “ஏ கடோற்கசா! நான் சொல்வதையும் கேட்டுக் கொள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தமே இல்லை. அபிமன்னன் ஒருவன் செத்துத் தொலைந்ததனால் உங்கள் அர்ச்சுனனுக்கு இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம்? ‘உலகாளப் பிறந்த ஒரே மகன் போய் விட்டானே?’ என்று வருத்தமோ? அர்ச்சுனன் ஒருவனுக்குத்தான் சபதம் செய்யத் தெரியுமா? எங்களுக்கெல்லாம் தெரியாதா? நாளைப் போரில் அர்ச்சுனன் சத்திரதனைக் கொல்லச் சபதம் செய்திருந்தால் நாங்கள் அர்ச்சுனனைக் கொல்ல சபதம் செய்கிறோம்” என்று கர்ணன் கூறினான். ஏற்கனவே துரியோதனனுடைய பேச்சைக் கேட்டு குமுறிப் போயிருந்த கடோற்கசன் கர்ணன் கூறியவற்றையும் கேட்டபின் ஆவேசம் கொண்டு விட்டான். அவன் வாயிலிருந்து சிங்கநாதம் கிளம்பியது. “நீங்கள் எல்லோரும் அற்பர்கள், அறிவிலிகள்; உண்மையான வீரமில்லாதவர்கள். அதனால் உங்களுடைய பேச்சை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆயினும் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். இதோ இந்த விநாடியிலேயே எனக்கு வருகிற ஆத்திரத்தில் உங்கள் பாசறைகளையும் உங்களையுமாக அடித்து நொறுக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து போகுமாறு செய்துவிடுவேன். கேவலம் உங்களைப் போன்றவர்களைக் கொல்வதற்காகவோ, எதிர்த்துப் போர் செய்வதற்காகவோ, அர்ச்சுனனும் வீமனும் முன் வர வேண்டியதில்லை. நான் ஒருவனே நினைத்தால் உங்களை துவம்சம் செய்துவிடுவேன். பொழுது விடிவதற்கு நீங்களும் உங்கள் பாசறைகளும் இருந்த இடம் சுடுகாடாக மாறிப் போகும். ஆனால் என் பெரியப்பனான தருமனுக்காக நான் பயப்படுகிறேன். இம்மாதிரி ஆவேசச் செயல்களை நான் செய்துவிட்டால் அது அவருடைய மனத்தை புண்படுத்துமே என்று தயங்குகிறேன். இதுவரை எந்த ஒரு காரியத்தையாவது நியாயத்துக்குப் பொருந்தும்படி செய்திருக்கிறீர்களா நீங்கள்? போரில் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றால் அவனோடு எதிர் நின்று போர் செய்து கொல்வது தான் யுத்த தர்மம். ஆனால் அபிமன்னனை நீங்கள் அப்படிக் கொன்றீர்களா? பலர் சூழ்ந்து கொண்டு ஓர் இளைஞனைப் பின்புறமிருந்து கதாயுதத்தால் அடித்துக் கொல்வது போர் முறை ஆகுமா? நீங்கள் அபிமன்னனைக் கொல்வதற்காக மேற்கொண்ட சூழ்ச்சிகளை நினைத்தால் ஆண்பிள்ளைகள் வெட்கப்படுவார்கள். அவ்வளவு பெரிய பேடித்தனமான காரியத்தைச் செய்த நீங்கள் வீரம் பேசவோ, சபதம் செய்யவோ தகுதியற்றவர்கள்.” பேரிடிகள் முழங்கியது போலக் கடோற்கசன் பேசி நிறுத்தினான். ஒருகணம் அங்கு இருந்த யாவருக்குமே எதுவும் பதில் பேசத் தோன்றவில்லை. பேயறை பட்டவர்களைப் போல் திக்பிரமை பிடித்துப் போய் நின்றார்கள். முதல் முதலாகச் சமாளித்துக் கொண்டு பதில் பேசினவன் துரியோதனன்தான். “இந்தக் கடோற்கசன் ஒரு முரடன். அறிவும் நாகரிகமுமில்லாத அரக்கர்கள் குலத்தில் பிறந்தவன். இவனோடு பேசுவதனால் நமக்குத்தான் கேவலம் யாரும் இவனோடு பேச வேண்டாம்” -இவ்வாறு துரியோதனன் அரக்கர்கள் குலத்தையும் அதில் பிறந்த தன்னையும் இழிவு படுத்திப் பேசியதைக் கேட்டவுடன் கடோற்கசனுக்கு முன்னிலுமதிகமாகச் சினம் வந்து விட்டது. அவன் துரியோதனனை நோக்கி ஆத்திரத்தோடு பேசலானான். “நாங்கள் அரக்கர்கள்தான். ஆனால் எங்களுக்கு வஞ்சகம் செய்யத் தெரியாது. சகோதரர்களுக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லவோ, அரக்கு மாளிகையில் தீமூட்டிக் கொல்லவோ தெரியாது. நீராட அழைத்துப் போய்ச் சகோதரர்களைக் கழுக்கல் நட்டுக் கொல்வதற்கு முயல மாட்டோம். ஒருவர் செய்த நன்றியை எக்காலத்திலும் மறக்க மாட்டோம். நீதி நியாயங்களை மறந்து வஞ்சகமாகச் சூதாடி வேண்டியவர்களது உடைமைகளைப் பறித்துக் கொள்ள மாட்டோம். பிறன் மனைவியை அவை நடுவில் மானபங்கம் செய்யக் கனவிலும் நினைக்க மாட்டோம். வீரமில்லாத கோழைகளைப் போலப் போரில் புறமுதுகு காட்டி ஓடமாட்டோம். நான் மேலே கூறிய இந்தக் கொடுஞ்செயல்களெல்லாம் உனக்கே உரிமையுடையவை. நினைவு வைத்துக் கொள். நீயும் கர்ணனும் செய்திருக்கும் சபதங்கள் பயனற்றவை. அர்ச்சுனனை வெல்வதாக நீங்கள் எண்ணுவது வெறுங்கனவு. அந்த மகாவீரனை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் இந்த விநாடி வரை பிறக்கவில்லை. மனிதர்களில் மட்டுமல்ல, தேவர்களிலும் பிறக்கவில்லை. நாளைப் போரில் உங்கள் சத்திரதன் அழிவது உறுதி. சந்தேகமிருந்தால் நாளைக்கு பாருங்கள்” என்று கூறி விட்டு அங்கிருந்த எவருடைய மறுமொழியையும் எதிர்ப்பார்க்காமல் கிளம்பினான் கடோற்கசன். அவன் சென்றபின் துரியோதனாதியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துரோணர், சகுனி, கர்ணன் முதலியவர்கள் துரியோதனனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்தனர். துரியோதனன் அவர்களைப் பார்த்து, எப்பாடுபட்டாவது நாளைக்கு ஒருநாள் மட்டும் சயத்திரதனைப் பகைவர்கள் நெருங்கிவிடமுடியாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சயத்திரனைக் கொல்ல முடியாவிட்டால் அர்ச்சுனன், தான் செய்திருக்கும் சபதப்படியே தீயில் விழுந்து இறந்து போவான். அவன் தீயில் விழுந்து இறந்தால் மற்றவர்களாகிய தருமன் முதலியோர் அதைப் பொறுக்க மாட்டார்கள். வேதனை பொறுக்க முடியாமல் அவர்களும் தீயில் விழுந்து மாண்டு போவார்கள். இப்படியாக அவர்கள் ஐந்து பேரும் மாண்டு போய்விட்டால் பின்பு இவ்வுலகில் நம்மை எதிர்க்க எவருமே கிடையாது. நமது அரசுதான் இந்த உலகம் முழுவதும் நிகழும். ஆகவே என்ன முயற்சி செய்தாவது நாளைப் போரில் சயத்திரதனின் உயிருக்குத் துன்பம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியதவசியம்" என்று வேண்டிக் கொண்டான். “உன் வேண்டுகோளை நிறைவேற்ற எங்களால் இயன்ற மட்டும் முயன்று பார்க்கிறோம்” என்றார் துரோணர். “இயன்ற மட்டும் என்ன? கட்டாயமாக நிறைவேற்றியே தீருவேன் நான்” என்று அகந்தையால் வீம்பு பேசினான் கர்ணன். “நாளை ஒரு நாள் மட்டும் எப்படியாவது சயத்திரதனை காப்பாற்றி விடுகிறோம். பின்பு முடியாது” என்றான் துன்மருஷ்ணன் என்பவன். சயத்திரதனைக் காப்பாற்ற முடியும் என்பதில் அங்குள்ள மற்றொருவருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்கள் பேசாமல் மௌனம் சாதித்துவிட்டனர். ஒரு சிலர், “காக்க முடிந்தால் காக்கிறோம்” என்று சந்தேகத்தோடு பதில் கூறினார்கள். “காத்துவிடலாம்” என்று மனப்பால் குடித்தான் துரியோதனன். துரியோதனனின் பாசறை நிலை இவ்வாறிருக்கத் திருவும் அருளும் பெறக் கயிலை சென்றிருந்த கண்ணனும், அர்ச்சுனனும் திரும்பி வந்தனர். தருமன் அவர்களை அன்போடு தழுவி வரவேற்றான். கண்ணனும், அர்ச்சுனனும் கயிலையில் நிகழ்ந்தவற்றைத் தருமன் முதலியவர்களுக்கு விவரித்துரைத்தனர். அப்போது துரியோதனாதியரிடமிருந்து திரும்பிச் சென்றிருந்த கடோற்கசனும் அங்கே போய்ச் சேர்ந்தான். ஏறக்குறையப் பொழுது விடிந்து பதினான்காம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்து விட்டது. போர் ஏற்பாடுகள் நிகழலாயின. பொழுது புலர்ந்தது பதினான்காம் நாள் வைகறை பொழுது மட்டுமா அன்றைக்குப் புலர்ந்தது? அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேற வேண்டிய ஒரு நல்ல 2 நிமித்தமும் பொழுதோடு சேர்ந்து தான் புலர்ந்தது. அர்ச்சுனன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்ற முடியுமோ, முடியாதோ, என்று தருமருடைய உள்ளத்தில் ஒரு சந்தேகமும் புலர்ந்தது. எல்லாவிதமான எண்ணங்களுக்கான முடிவும் அன்று மாலைக்குள் புலர்ந்து தானே ஆக வேண்டும்? போர் முரசங்கள் பேரொலி செய்து இருதரப்புப் படைகளையும் போருக்கு அழைத்தன. போர் தொடங்க வேண்டிய நேரத்தில் இருபக்கத்துப் படைகளும் களத்தில் எதிரெதிரே கூடிவிட்டன. சயத்திரதன் அர்ச்சுனன் கையில் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக அவனை நடுவில் நிறுத்திச் சுற்றிலும் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால் வகைப் படைகளையும் நிறுத்திவிட்டார் துரோணர். வீரமும் வல்லமையும் மிகுந்த பல அரசர்களைத் துரோணர் சயத்ரதனைச் சுற்றி ஆயுத பாணிகளாக நிறுத்தி வைத்தார். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அரசர்களுக்குத் தலைவனாக முதல் நாள் இரவு சபதம் செய்தவர்களுள் ஒருவனான துன்மருஷ்ணன் என்பவன் நிறுத்தப்பட்டான். அர்ச்சுனன் சத்திரதனை நெருங்கக்கூட முடியாது என்று பிரமிக்கும்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவு வன்மையாக இருந்தன. விற்போரில் வல்ல வில்லாளர்களை ஒன்று திரட்டிப் படைகளுக்கு முன்னால் நிற்கச் செய்தார்கள். சகுனி, சல்லியன், கர்ணன் ஆகியவர்களை வியூகத்தின் முகப்பில் காவலாக நிறுத்தினார்கள். துரோணர் சயத்திரதனை மையமாக அமைத்து வகுத்த அந்த வியூகம் மிக அருமையாக அமைந்திருந்தது. விண்ணவரும் அதைக் கண்டு வியந்தனர். போர் தொடங்கிய போது முதன் முதலாக அர்ச்சுனன்தான் எதிர்த்திடுவதற்கு முன் வந்தான். அர்ச்சுனனுக்கு அருகில் உத்தமோசன், உதாமன் ஆகிய வீரர்கள் புடைசூழ்ந்து இருந்தனர். துரோணரால் மிகுந்த நெருக்கமாகவும் அரிய முறையிலும் அமைக்கப்பட்டிருந்த வியூகத்தின் மேல் அர்ச்சுனன் தன் தாக்குதலை ஆரம்பித்தான். ஓராயிரம் வில்கள் பலமுறை பொழிய வேண்டிய அவ்வளவு அம்புகளையும் அவனுடைய ஒரு வில்லே மாறிமாறிப் பொழிந்தது. ஒவ்வொரு முறையும் அவனுடைய வில்லின் நாணிலிருந்து எழும்பும் போது பகைவர்களுடைய நெஞ்சம் அதிர்ந்தது. கைகள் நடுங்கின. உள்ளங்களில் பயமும் சோர்வும் பிறந்தன. படையின் முன்புறம் நின்ற வீரர்கள் ஒவ்வொருவராகப் பின் நோக்கி ஓடத் தலைப்பட்டனர். ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களோடு எதிர்ப்பதற்கு முன்வந்த திருதவர்மன் நிலைகுலைந்து ஓடினான். யானைப் படைகளெல்லாம் கூட்டிக் கொண்டு எதிர்க்க வந்த துச்சாதனன் மிரண்டு போய்ப் பின் வாங்கினான். துரோணர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு முன்னால் இருந்த படைவரிசைகளைச் சிறிது சிறிதாக அழித்து விட்டான் அர்ச்சுனன். மகாவீரரும் வில்லாசிரியருமாகிய துரோணரே அதைக் கண்டு திடுக்கிட்டார். அடுத்து நிகழவேண்டிய போர், அர்ச்சுனனும் துரோணரும் ஒருவரையொருவர் எதிர்த்துச் செய்யவேண்டியதாக வாய்த்தது. துரோணருக்கு அருகில் நேர் எதிரே அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டு போய் நிறுத்தினான் கண்ணன். அந்த நிலையில் துரோணருக்கும் அர்ச்சுனனுக்கும் விற்போர் தொடங்கிற்று. இருவரும் விரைவில் போரை நிறுத்துகிற வழியாகத் தோன்றவில்லை. துரோணருடன் அர்ச்சுனன் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தைக் கழித்துவிடக்கூடாது என்பது கண்ணன் ஆசை. மாலைக்குள் சபதப்படி சயத்திரதனைக் கொன்றாக வேண்டும். ‘எதிரே வந்தவர்களுடன் எல்லாம் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தை வீணாக்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்ச்சுனன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே?’ என்பது கண்ணனின் பயம். இதனால் தேர் துரோணரைக் கடந்து மேலே செல்லும்படி அடுத்த வியூகத்திற்குள் வேகமாகச் செலுத்தினான் கண்ணன். தேர் தன்னைக் கடந்து சத்திரதன் இருந்த பக்கமாக உட்புறத்தில் முன்னேறுவதைப் பார்த்து துரோணர் திடுக்கிட்டு வில்லை வளைத்து அர்ச்சுனன் தேரைப் போகவிடாமல் மறித்து மேலும் போருக்கு அழைத்தார். “சுவாமி! என்னை விட்டு விடுங்கள். நான் உங்களுடனேயே முழு நேரமும் போர் செய்து கொண்டிருந்தால் என்னுடைய சபதத்தை எப்போது நிறைவேற்றுவது? தவிரவும் நீங்கள் ஆசிரியர். நான் உங்கள் மாணவனாக இருந்தவன். உங்களோடு போரிட்டு என்னால் வெல்வதற்கு முடியுமா? எனது சபதம் நிறைவேற உங்கள் சிறிய உதவி இந்த அளவிலாவது சேரக்கூடாதா?” என்று புன்முறுவல் பூத்த முகத்தோடு துரோணரைப் பார்த்து மனங்குழையக் கேட்டான் அர்ச்சுனன். அவனுடைய குழைந்தப் பேச்சும் இதயத்தைக் கவ்வும் புன்முறுவலும் துரோணர் மனத்தை எப்படித்தான் மாற்றினவோ தெரியவில்லை. மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல் துரோணர் அப்படியே நின்று விட்டார். தன்னை மறித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு தடையும் மறைந்து விடவே அர்ச்சுனனுடைய தேர். சுலபமாக இரண்டாவது வியூகத்திற்குள் புகுந்து விட்டது. அர்ச்சுன்னுடைய தேர் புகுந்த இரண்டாவது வரிசையில் காம்போஜம் முதலாகிய பெரிய பெரிய நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி எதிர்த்தனர். அவன் சிறிதும் மலைக்காமல் அவர்களோடு விற்போரைச் செய்தான். அவர்கள் மனம் தளர்ந்து தோற்றுப் பின்வாங்கினர். சயத்திரதன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் பாசப்படை என்று ஓர் படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர்கள் அவனைச் சுற்றிக் கயிறு பிணித்தது போலப் பிணித்துக் கொண்டு நெருங்கி நின்றனர். அர்ச்சுனனுடைய தேர் அந்தப் பாசப்படை வீரர்களுக்கு முன்னால் போய் நின்றது. நின்ற அளவில் அவனுக்கும் அந்த வீரர்களுக்கும் போர் உண்டாயிற்று. போர் செய்து கொண்டே மெல்ல அவனுடைய தேர் உள்ளே சென்றது. உட்புறம் கர்ணன் தன்னைச் சேர்ந்தவர்களோடு முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேர் நுழைவதைப் பார்த்ததுமே கர்ணன் போருக்குத் தயாராகி விட்டான். உடனே அர்ச்சுனன், முன்பு துரோணருக்கு முன்னால் போர் செய்யும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு வந்தது போல் இங்கும் செய்ய வேண்டாம். இங்கே கர்ணனோடு நான் அதிக நேரம் போர் செய்ய ஆசைப்படுகிறேன்" என்று கண்ணனிடம் காதோடு காது வைத்தாற்போல் இரகசியமாகக் கூறினான். “உன் விருப்பம் அதுவானால் அப்படியே செய்யலாம்” என்று அதற்கு இணங்கினான் கண்ணன். கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நிகழ்ந்தது. ஆனால் அர்ச்சுனன் ஆசைப்பட்டது போலக் கர்ணனோடு நீண்ட நேரம் போர் செய்வதற்கு முடியாமல் போயிற்று. காரணம்? அவன் மிக விரைவிலேயே தோற்று ஓடிப் போனான். கர்ணன் தோற்றோடிய பிறகு வருணராஜன் புதல்வனான கதாயு என்ற வீரமன்னனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் ஏற்பட்டது. சுதாயுவுக்குக் கருங்கல்லைப் போல இறுகிய பலமான உடல் வாய்த்திருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்றுகூட அவன் உடலில் தைக்கவில்லை. எல்லா அம்புகளும் முறிந்து முறிந்து விழுந்தன. பல நூறு அம்புகளை ஒரே சமயத்தில் பாய்ச்சக்கூடிய மிகப்பெரிய வில் ஒன்றை வளைத்துச் சுதாயு மேல் அம்புகளைக் கொட்டினான் அர்ச்சுனன். ஆனால் சுதாயு அவற்றையும் தடுத்து விட்டான். தான் எப்படிப் போர் செய்தாலும் சுதாயு அவற்றை முற்றிலும் சமாளித்து விடுவதைக் கண்டு அர்ச்சுனன் கண்கலங்கினான். ஆத்திரமடைந்த அவன் மனம் சுதாவை எப்படியாவது தொலைத்துவிட வேண்டுமென்று துடிதுடித்தது. வில்லை வளைத்துச் கதாயுவின் நாணை அறுத்துவிட முயன்றான். பலமுறை முயன்ற பின் அர்ச்சுனன் தன் முயற்சியில் வெற்றி பெற்றான். சுதாயுவினுடைய வில் நாணறுந்து கீழே விழுந்தது. தன் வில்லை அர்ச்சுனன் ஒடித்து வீழ்த்தியதைக் கண்டு அளவற்ற கோபம் கொண்ட சுதாயு எவரையும் எப்போதும் கொல்லத் தவறாத வலிமை வாய்ந்த ஓர் கதாயுதத்தை அர்ச்சுனனுடைய மார்பைக் குறிவைத்து வீசினான். அவன் வைத்த குறி தவறாமல் அது மட்டும் அர்ச்சுனனுடைய மார்பில் பட்டிருக்குமானால் அவன் அப்போதே அங்கேயே இறந்து விழுந்திருப்பான். சுதாயுவின் கதாயுதம் தன்னால் அழிக்கப்பட முடியாத தெய்வீகத் தன்மை பொருந்திய யாராவது ஒருவர் மேற்பட்டால் அப்போது சுதாயுவே அழிந்து இறந்து போக நேரிடும். கண்ணன் நிலைமையைப் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் மார்பில் மோத வேண்டிய கதாயுதத்தை எதிர்பாராத விதமாகத் தன் மார்பிலேயே தாங்கிக் கொண்டான். கதை கண்ணனுடைய மார்பை அணுகிற்றோ இல்லையோ சுதாயு தன் தேரிலிருந்து கீழே விழுந்து நெருப்பிற்பட்ட புழுப்போலத் துடிதுடித்து இறந்தான். தன் ஆற்றலுக்கு மீறிய தெய்வீக சக்தி உடையவனை மோதும் போது அந்த ஆயுதத்தை ஏவியவனே இறக்க வேண்டுமென்பது அதன் நியதியாயிற்றே! ஆனால் அர்ச்சுனனுக்கு இந்தத் தந்திரம் எதுவுமே புரியவில்லை. “சுதாயு ஏவிய கதை ஏன் தன் மார்பிலே பாயவில்லை? திடீரென்று அவன் தேரிலிருந்து கீழே விழுந்து இறக்கக் காரணமென்ன?” -என்று திகைத்தான், தன் திகைப்பைத் தெளிவிக்குமாறு கண்ணனிடமே கேட்டான். “அர்ச்சுனா! உன் சந்தேகமும் திகைப்பும் நியாயமானவைதான். உனக்கு இவனைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறேன் கேள். இவனுடைய தாயின் பெயர் பன்னவாகை. தந்தையின் பெயர் வருணராஜன். தந்தையின் வலிமையால் அவனிடமிருந்து சில ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய மந்திர தந்திரங்களையும் இவன் கற்றுக் கொண்டிருந்தான். இவன் எய்கின்ற ஆயுதங்கள் வேறு படைக்கலங்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலே பட்டால் அவர்களை நிச்சயமாக கொன்றே தீரும். ஓர் ஆயுதமும் இல்லாத வெறுங்கையர்கள் மேல் பட்டாலோ இவனே இறக்கும்படி நேரிட்டுவிடும். இவனைப் பற்றிய இந்த இரகசிய உண்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இவன் உன்மேல் ஏவிய கதாயுதத்தை நான் இடையில் தடுத்து என் மார்பிலேயே தாங்கிக் கொண்டு இவனைக் கொன்று முடித்தேன்” என்று கண்ணபிரான் சுதாயுவின் கதையை அர்ச்சுனனுக்குக் கூறி முடித்தான். சுதாயு இறந்ததைக் கண்டு அவன் தம்பியாகிய சதாயு என்பவன் தன் படைகளோடு அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். மற்றும் பல அரசர்களும் தேர்களும் ஓடி வந்து அவனை எதிர்த்தனர். சகசிரபாகு என்ற அரசனும் எதிர்த்தான். சதாயு, சகசிரபாகு, இவர்கள் இருவரிடமுமே படைகள் நிறைய இருந்தனவே ஒழியச் சொந்த வலிமை சிறிதும் இல்லை. எனவே அர்ச்சுனன் இவர்களிருவரையும் விரைவில் தோற்கச் செய்துவிட்டு மேலே சென்றான். அவனுடைய தேர் பலவகையிலும் முயன்று வியூகத்தை உடைத்துக் கொண்டு சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது கண்ணபிரான், “அர்ச்சுனா! குதிரைகள் தண்ணீர்த் தாகத்தால் மிகவும் களைத்து ஓய்ந்து போய் விட்டன. இந்த விநாடியே குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினால் ஒழிய இவை மேலே ஓர் அடிக்கூட நகரமாட்டா! இப்போது இந்த நட்டநடுப் போர்க்களத்திலே தண்ணீருக்கு எங்கு போவது?” -என்று மனம் வருந்திக் கேட்டான். கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தை எடுத்தான். சிவபெரு மானைத் தியானித்துக் கொண்டே அந்த அஸ்திரத்தை, ஆழப்பதியுமாறு தரைக்குள்ளே செலுத்தினான். மறுகணம் அஸ்த்ரம் தரையைத் துளைத்தது. அதன் மாயாசக்தியால் போர்க்களத்தின் நடுவே அவர்களுடைய தேருக்கு அருகில் ஒரு மாயப் பொய்கை உண்டாயிற்று. பேரளவாக நீர் நிறைந்து பரந்து தோன்றிய அந்தப் பொய்கையில் இறங்கிக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினான் கண்ணன். பின்பு அவர்கள் இருவருமே குளத்தில் இறங்கி அதுவரை போர் செய்த களைப்பும் வியர்வையும் தீரும்படியாகக் கைகால் முகங்கழுவிக் கொண்டு தண்ணீர் பருகினர். அங்கேயே குதிரைகளை விட்டுவிட்டுச் சிறிது நேரம் களைப்பைப் போக்கி ஓய்வு கொள்ள விரும்பித் தங்கினார்கள். அர்ச்சுனனும், கண்ணனும் பலரை வென்று முன்னேறி போர்களத்தினிடையே மாயப் பொய்கை உண்டாக்கி ஓய்வு கொண்டிருக்கும் செய்தியை போர்க்களத்து ஒற்றர்கள் துரியோதனனிடம் போய்க் கூறிவிட்டார்கள். துரியோதனருக்கு ஒரேயடியாகப் பயம் தோன்றிவிட்டது. ‘அர்ச்சுனன் முன்னேறிக் கொண்டு வருகிற விதத்தைப் பார்த்தால் எப்படியும் இன்று மாலைக்குள் சத்திரதனுடைய தலை பிழைப்பது அருமை என்றல்லவா தோன்றுகின்றது?’ -அவன் சயத்திரதனின் உயிர்மேல் இவ்வளவு அக்கறை கொண்டதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. துரியோதனனுடைய தங்கையாகிய துச்சளை என்பவள்தான், சயத்திரதனுடைய மனைவி. சத்திரதன் இறந்துவிட்டால் தன் அருமை தங்கை கணவனை இழக்க நேரிட்டு விடுமே என்று அஞ்சியே இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான். இப்போது கண்ணனும் அர்ச்சுனனும் பொய்கைக் கரையில் இளைப்பாறுகிறார்கள் என்று அறிந்தவுடன் துரியோதனன் விஷயத்தைக் கூறி அவர்களை எதிர்ப்பதற்காகத் துரோணரைத் தேடிக்கொண்டு சென்றான். துரோணரைக் கண்டதும் அவரிடம் சினத்துடனே பேசலானான்: “துரோணரே! அர்ச்சுனனை இவ்வளவு தூரம் முன்னேற விட்டீர்களே? நமது படைகளெல்லாம் எங்கே போயின? சத்திரதனை அர்ச்சுனன் கொன்றுவிட்டால் என் தங்கையின் கதி என்ன ஆவது? நேற்றிரவு நம்முடைய பாசறையில் கடோற்கசனுக்கு முன் அர்ச்சுனனைக் கொல்வதாகச் சபதம் செய்தவர்கள் எல்லோரும் எங்கே ஓடிப் போனார்கள்? அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்ய அவர்களுக்கெல்லாம் பயந்தோன்றிவிட்டதா? அவர்கள் எல்லோரும் வெறும் வாய்ப் பேச்சில்தான் வீரர்கள் போலிருக்கிறது. இதிலிருந்து எனக்கு என்ன எண்ணம் உண்டாகிறது தெரியுமா? உண்மையாகப் பார்க்கப் போனால் அர்ச்சுனனோடு எதிர்த்துப் போர் செய்யக்கூடிய அவ்வளவு ஆற்றல் படைத்தவர் ஒருவர்கூட நமது பெரும் படையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இனி வேறு வழியும் இல்லை. நான் மற்றவர்களை நம்பிப் பயனும் இல்லை. நானே போர்க்களத்தில் இறங்கி அர்ச்சுனனோடு நேருக்கு நேர் போர் செய்ய வேண்டியதுதான்.” துரியோதனனுடைய ஆத்திரத்தைக்கண்டு துரோணருக்குச் சிரிப்புத்தான் வந்தது. சந்தர்ப்பத்தை உத்தேசித்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டு விடாமல் அடக்கிக் கொண்டார் துரோணர். “துரியோதனா! படைவீரர்கள் அர்ச்சுனனை எதிர்க்கவில்லை என்று நீ என்னிடம் வந்து ஆத்திரப்படுகிறாய். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அர்ச்சுனனும் கண்ணனும் வெற்றியோடு முன்னேறுகிறார்களே என்று நாம் அவர்கள் மேல் பொறாமைப்பட்டு என்ன பயன்? அவர்களுடைய சக்தி பெரிது. மேலும் அர்ச்சுனன் சிவபெருமானைச் சென்று வணங்கி உயரிய அஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றான். ஈரேழு பதினான்கு புவனங்களையும் படைத்த பிரம்மாவே முன் வந்தாலும் அர்ச்சுனனை வெற்றி கொள்வது முடியாத காரியம் ஆயிற்றே? அவ்வாறு இருக்க நாம் வெல்லுவதாக நினைக்கவும் முடியுமா? தவிரவும் கண்ணன் வேறு அவனுக்குத் தேர் செலுத்துகின்றான். உலகத் தேரையே ஓட்டிவரும் பரம்பொருளாற்றலைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் கண்ணனே தேரைச் செலுத்துகின்றபோது அர்ச்சுனன் தோற்பது எங்ஙனம்? ஆகவே அர்ச்சுனனை வெல்வதென்பது நாம் கனவிலும் நினைக்கக்கூடாதது! அன்பிற்குரிய துரியோதன மன்னா! இப்போது இந்த நெருக்கடியான நிலையில் இன்னொரு விஷயத்தையும் உனக்கு நான் நினைவுபடுத்திவிட எண்ணுகிறேன். உடன் பிறந்தவர்களைப் பகைத்துக் கொள்வது என்றைக்கும் இம்மாதிரித் தொல்லையைத்தான் கொடுக்கும் அன்றே விதுரன் உனது அவைக்களத்தில் இந்த அறிவுரைகளை உனக்குக் கூறினான். நீ கேட்கவில்லை. அவனைக் கோபித்துக் கொண்டாய் பழித்துப் பேசினாய். உன் செயலால் உன்மேல் வெறுப்படைந்த அவன் தன் வில்லை ஒடித்து எறிந்து விட்டுத் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான். அவன் இங்கே இப்போது இருந்தாலாவது போரில் உனக்குப் பேருதவியாக இருப்பான். அவன் முயன்றால் அர்ச்சுனன், வீமன் ஆகியோரைக் கூட எதிர்த்துப் போர் செய்ய முடியும். நடக்காததை நினைத்து வீண்பேச்சுப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம். நீ நினைக்கிறதைப் போல் சத்திரதன் பிழைப்பதும் பிழைக்காததும் நம் கையிலோ, நமது படைகள் கையிலோ இல்லை. அது அவனுடைய தலைவிதியின் கையில் இருக்கிறது. நீயே அர்ச்சுனனை எதிர்த்து நேருக்கு நேர் போர் செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறாய்! நல்லது. செய்துதான் பாரேன். இதோ என்னிடம் ஓர் அருமையான கவசம் இருக்கிறது. இதை மார்பிலும் உடலிலுமாக அணிந்து கொள்கின்றவர்களுக்குக் காயங்கள் ஏற்படாது. இந்தக் கவசத்தை முன்பு இந்திரன் பிரம்மாவிடமிருந்து பெற்றான். இந்திரனிடமிருந்து அங்கீரசன் பெற்றான். அங்கீரசனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீ அர்ச்சுனனுடன் போரிடப் போவதாகச் சொல்வதனால் இந்தப் பெருமை வாய்ந்த கவசத்தை உனக்கு அணிந்துவிடுகின்றேன். பின்பு நீ உன் விருப்பப்படி அர்ச்சுனனோடு போர் செய்யலாம்” என்று கூறித் தன்னிடமிருந்த கவசத்தைத் துரியோதனனுக்கு அணிவித்தார் துரோணர். கவசமணிந்து கொண்ட துரியோதனன் அர்ச்சுனனோடு போருக்குச் சென்றான். சயத்திரன் சாகின்றான் அதுவரை தன்னுடன் நேருக்கு நேர் போருக்கு வராத துரியோதனன் அன்று களத்தில் வந்து நிற்பதைக் கண்ட அர்ச்சுனனுக்கு வியப்பாக இருந்தது. ‘இவன் உண்மையில் தன் சொந்தத் தைரியத்துடன்தான் நம்மை எதிர்க்க வருகிறானா? அல்லது ஏதாவது பக்கபலம் பெற்று அதனால் வருகிறானா?’ என்று அர்ச்சுனன் கண்ணனைக் கேட்டான், “அர்ச்சுனா! உன் சந்தேகம் சரிதான். சொந்தத் தைரியத்தோடு அவன் உன்னை எதிர்க்க வரவில்லை. துரோணனால் அளிக்கப்பட்ட தெய்வீக சக்தி வாய்ந்த கவசமொன்று அவன் உடலை மூடியிருக்கிறது. அந்தத் தைரியத்தினால்தான் அவன் உன்னுடன் போருக்கு வந்திருக்கிறான். நீ செய்யவேண்டிய முதல் வேலை அந்தக் கவசத்தைப் பிளந்து எறிவதுதான்” என்றான் கண்ணன். துரியோதனனோடு கிருபன், அசுவத்தாமன், சகுனி முதலியவர்கள் அர்ச்சுனனை எதிர்த்தார்கள். முதலில் அவர்களை முறியடித்துத் துரத்திவிட்டு அதன் பின் துரியோதனனுடைய கவசத்தைப் பிளக்கும் முயற்சியில் இறங்கினான் அர்ச்சுனன். ஆனால் அவன் மேல் எத்துணையோ அம்புகளை எய்து பார்த்தும் அவற்றில் ஒன்றாவது அர்ச்சுனன் எதிர்பார்த்தது போல் கவசத்தைத் தீண்டவுமில்லை. பிளக்கவுமில்லை. கவசத்தில் மோதிய அம்புகள் முறிந்து முறிந்து கீழே விழுந்தன. தோல்வி அர்ச்சுனனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஏமாற்றம் பொறுக்க முடியாமலும் எப்படியாவது துரியோதனனுடைய கவசத்தைப் பிளந்து விட வேண்டுமென்ற வெறியினாலும் ஒரு பெரிய வேலாயுதத்தை எடுத்துக் குறிவைத்து வீசி எறிந்தான். அர்ச்சுனன் இவ்வாறு துரியோதனன் மேல் வேல் எறிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அசுவத்தாமன், திடீரென்று குறுக்கே இன்னொரு வேலை எறிந்து அதைத் தடுத்துக் கீழே தள்ளிவிட்டான். தனது கடைசி முயற்சியும் அசுவத்தாமனால் தடை செய்யப்பட்டு விட்டதைக் கண்ட அர்ச்சுனன் மனம் உடைந்து போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் தளர்ந்து நின்றான். தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணபிரான் மின்னல் வெட்டும் நேரத்திற்குள் அர்ச்சுனனுடைய தளர்ச்சியைப் புரிந்துகொண்டான். “அர்ச்சுனா! மலைக்காதே. இந்தா, இன்னொரு வேலை எடுத்துக் கொள். கையில் வைத்துக் கொண்டிரு. நான் சைகை காட்டும்போது துரியோதனனுடைய கவசத்தைக் குறி வைத்து எறிந்துவிடு. இப்படிச் செய்தால் அவன் கவசம் நிச்சயம் உடைந்துவிடும்! இதோ அதற்கு நான் ஒரு தந்திரம் செய்கிறேன் பார்” என்று அர்ச்சுனன் கையில் வேலைக் கொடுத்துவிட்டுத் தனது சங்கை எடுத்து யாவரையும் மயக்குகின்ற இனிய ஒலி உண்டாகுமாறு அதை ஊதினான். கண்ணனுடைய அற்புதமான சங்க நாதத்தைக் கேட்டு மகுடியோசைக்குக் கட்டுப்பட்ட நாக சர்ப்பங்களைப் போல யாவரும் தம்மை மறந்து தம் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தனர். கண்ணன் ஒருவன் தான் விழிப்புடனிருந்தான். துரியோதனன், அவனைச் சுற்றியிருந்த படைகள், அர்ச்சுனன் முதலிய யாவருமே அந்த இனிய சங்க நாதத்தில் இலயித்துப் போயிருந்தனர். இதுதான் சமயமென்று கண்ணன் அர்ச்சுனன் பக்கமாகத் திரும்பி மெல்ல அவனுக்குச் சைகை காட்டினான். சைகையை அறிந்து தன் நிலை உணர்ந்த அர்ச்சுனன் துரியோதனனின் கவசத்தைக் குறிவைத்து வேலை வீசி எறிந்துவிட்டான். யாரும் தடுக்கவில்லை. வேல் துரியோதனனுடைய உடற்கவசத்தை இரு கூறாகப் பிளந்து கீழே தள்ளிவிட்டது. கவசம் கீழே விழுந்த பின்பே தான் ஏமாந்துவிட்டதைத் துரியோதனன் உணர்ந்து கொண்டான். கவசம் உடைந்து விழுந்ததோ இல்லையோ, துரியோதன னுடைய மனத்தில் பயம் பிடித்துக் கொண்டது. இனி நாம் இங்கே நின்றால் அர்ச்சுனன் நம்மை என்ன செய்வானோ என்று பயந்து அங்கிருந்தே ஓடிவிட்டான் அவன். அவனோடு நின்ற மற்றவர்களும் அதுபோலவே அவனைப் பின்பற்றி ஓடிவிட்டார்கள். இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் போர்க்களத்தின் வேறோர் பகுதியிலிருந்த தருமன் கண்ணன் ஊதிய சங்கின் ஒலியைக் கேட்டு என்னவோ, ஏதோ, என்று பயந்து போய்விட்டான். “அர்ச்சுனனுக்கு ஏதோ பெரிய துன்பம் ஏற்பட்டிருக்கிறது போலும். அதனால்தான் கண்ணன் இப்படிச் சங்கு முழக்கி அதை நமக்கு அறிவிக்கிறான்” என்று அனுமானித்துக் கொண்டான். தன் பக்கத்திலிருந்த ‘சாத்தகி’, என்பவனை அழைத்து, “அர்ச்சுனனுக்கு என்ன துன்பமோ தெரியவில்லை. கண்ணன் சங்கு ஊதுகின்றான். நீ போய்ப் படைகளோடு அவனுக்கு உதவி செய்” என்று அனுப்பினான் தருமன். “அப்படியெல்லாம் அர்ச்சுனனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. நீங்கள் வீணாகப் பயப்படாதீர்கள்” என்று அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் சாத்தகி. அர்ச்சுனன் இருக்கும் இடத்தை அடைவதற்குள் போகிற வழியில் பலரை எதிர்த்து வெல்ல நேர்ந்தது. கிருதவர்மன், சலசந்தன் முதலியவர்களை வெற்றி கொண்டு சாத்தகி மேலே சென்றான். துரியோதனனுடைய தம்பிமார்கள் நான்கு பேர் அவனை எதிர்த்து வழி மறித்துக் கொண்டு போர் செய்தனர். அவர்களைத் தோற்கச் செய்து விரட்டியபின் துரோணர் பெரும் படைகளுடனே வந்து சாத்தகியை வழிமறித்துக் கொண்டார். துரோணர் அந்தணர். சாத்தகி க்ஷத்திரியன். “துரோணரே! நீர் வேதியர் குலத்தைச் சேர்ந்தவர். உம்மோடு போர் புரியும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே எனக்கு வழியை விட்டுவிடும்” என்று அவருடன் போர் செய்ய மறுத்தான் சாத்தகி. “அதெல்லாம் இல்லை. இப்போது உன்னோடு போர் செய்யாமல் விடமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே போரை ஆரம்பித்து விட்டார் துரோணர். சொல்லியும் கேட்காமல் துரோணர் போரைத் தொடங்கவே வேறு வழியின்றிச் சாத்தகியும் அவரோடு போர் செய்யவேண்டியதாயிற்று. துரோணருக்கும் சாத்தகிக்கும் நீண்ட நேரம் போர் நிகழ்ந்தது. வெற்றியுமின்றித் தோல்வியுமின்றி இருவருமே களைத்துப் போனார்கள். இருவர் கைகளும் அலுத்து ஓய்ந்துவிட்டன. துரோணர் போரை நிறுத்திச் சாத்தகிக்கு வழிவிட்டு விட்டார். சாத்தகி விரைவாகச் சென்று அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்தான். அர்ச்சுனனுக்கு உதவி செய்வதற்காகச் சாத்தகியை அனுப்பிய தருமன் அவ்வளவில் மனத்திருப்தி அடைந்து விடவில்லை. “அர்ச்சுனனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. வீமா! நீயும் புறப்பட்டுச் செல்” என்று வீமனையும் அனுப்பினான். முன்பு சாத்தகியை வழி மறித்தது போலே வீமனையும் பலர் வழிமறித்து நிறுத்தினார்கள். வீமனா சும்மா விடுவான்? அவர்களை நிர்மூலப்படுத்திவிட்டு மேலே சென்றான். சாத்தகியை எதிர்த்தது போலவே வீமனையும் எதிர்க்க வந்தனர். துரியோதனுடைய தம்பியர்கள். ஐம்பதுக்கு மேலுமிருந்த அவர்கள் தொகையில் ஏறக்குறைய முப்பத்தைந்து பேரை அப்போது அங்கேயே நமனுலகுக்கு அனுப்பி விட்டான் வீமன். எஞ்சிய சகோதரர்கள் நமக்கு உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இவர்களெல்லாம் ஓடிப் போனபின் துரோணர் சாத்தகியோடு போர் செய்த களைப்பெல்லாம் தீர்ந்து வீமனுக்கெதிரே வந்து வில்லை வளைத்தார். வீமன் அதைக் கண்டு திடுக்கிட்டான். “நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியர். உங்களோடு நான் போர் செய்யலாமா? வேண்டாம். தயவு செய்து என் வழியை எனக்கு விட்டுவிடுங்கள்” என்று கைகூப்பி வணங்கி அவரிடம் இறைஞ்சினான். ஆனால் துரோணர் அவனுடைய சொற்களையோ, வணக்கத்தையோ, இணக்கத்தையோ பொருட்படுத்தவில்லை. “ஆசிரியன், மாணவன் என்ற அந்த உறவை எல்லாம் இப்போது நினைக்காதே. மறந்துவிடு. நீயும் நானும் இப்போது பகைவர்கள்” என்று கூறிக்கொண்டே அவனுடன் போர் செய்தார். துரோணருக்கும் வீமனுக்கும் கடுமையான விற்போர் ஏற்பட்டது. போர் தொடர்ந்து நடந்தது. ஆசிரியர், கெளரவிக்கத் தக்கவர் என்ற மரியாதைகளெல்லாம் மறைந்து துரோணர் மேல் வீமசேனனுக்கும் கோபம் ஏற்பட்டுவிட்டது. வீமன் தன் தேரை விட்டுக் கீழே இறங்கித் துரோணருடைய தேரை நோக்கி நடந்து சென்றான். குபீரென்று பாய்ந்து துரோணரது தேரை அப்படியே அந்தரத்தில் வாரித் தூக்கி எறிந்தான். தேரிலிருந்து தூக்கி எறியப்பட்ட துரோணர் உடல் ஒரு மூலையில் போய் விழுந்தது. அப்போது சில எலும்புகள் கூட நொறுங்கிவிட்டன. துரோணருடைய தேர் தூள் தூளாக ஒடிந்தது. அதில் வீற்றிருந்த தேரோட்டி கீழே வீழ்ந்து நசுக்குண்டு இறந்தான். கீழே விழுந்த துரோணருக்குத் தன் நினைவு இல்லை. வீமன் மேலும் முன்னேறிச் சென்றான். அவன் துரோணருடைய தேரைத் துவம்சம் செய்துவிட்டு மேலே செல்லுவதைத் தொலைவிலிருந்த துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பூரி, அவந்தி ராஜன் முதலியவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அவர்கள் ஆயுதமும் கையுமாக வந்து வீமனை வளைத்துக் கொண்டனர். துரோணரையே வென்று வீழ்த்திய வீமனுக்கு அவர்களா பிரமாதம்? சில விநாடிகளிலேயே அவர்களை வென்று துரத்திவிட்டு அர்ச்சுனனும் கண்ணனும் இருந்த இடத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அப்போது கர்ணன் வந்தான். கர்ணனும் வீமனும் போர் செய்தார்கள். துரோணருடைய தேரைத் தூக்கி எறிந்து ஓடித்தது போலக் கர்ணனுடைய தேரையும் ஒடித்து விட்டான் வீமன். ஆனால் அது கர்ணனுக்கு ஒருவிதமான சேதத்தையும் உண்டாக்கவில்லை. அருகிலிருந்த கர்ணனின் புதல்வன் தன்னுடைய தேரை உடனே தகப்பனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான். மகனுடைய தேரில் ஏறிக் கொண்ட கர்ணன் ஆத்திரத்தோடு மீண்டும் வீமனோடு போர் செய்தான். ஆனால் வீமன் இப்போதும் அவனுக்குத் தோல்வியையே கொடுத்தான். கர்ணனும் வீமனிடம் தோற்றதைக் கண்ட துரியோதனன் தானே தன்னுடைய தம்பிமார்களில் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனன் தம்பியர்களுடன் வருவதைப் பார்த்த வீமன், ஆரவாரம் செய்து கொண்டே தோள் கொட்டினான். முதலில் துரியோதனனோடு வந்த அவன் தம்பியரிருவரையும் விண்ணுலகுக்கு அனுப்பிவிட்டுத் துரியோதனனோடு நேரடிப் போரைத் தொடங்கினான். வீமனுக்கும் துரியோதனனுக்கும் நிகழ்ந்த போரில் ஆரம்பத்தில் துரியோதனனுடைய கை ஓங்கியிருந்தாலும் முடிவில் வீமன் கையே வென்றது. துரியோதனன் சகோதரர்களில் ஒருவனான துன்முகன் வீமனை எதிர்க்க முயன்று மாண்டான். வீமன் இவ்வாறு மேலும் மேலும் வென்று கொண்டே போவதைப் பார்த்த கர்ணன் தான் முன்பு வீமனுக்குத் தோற்றவன் என்பதையும் மறந்து ஒரு பெரிய கைவேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். வீமனோ அம்புகளால் அந்த வேலாயுதத்தைத் தடுத்துக் கீழே விழச் செய்துவிட்டான். இதன் பிறகு உயிரோடு மீதமிருந்த துரியோதனனின் தம்பிமார்களில் இன்னும் ஓர் ஆறு பேர் வீமனுக்கு முன்னால் வந்து அவனோடு போர் செய்து மாண்டனர். இறுதியில் துரியோதனனின் உடன் பிறந்தவர்களுக்குள் நல்லவனாக விகர்ணன் என்னும் இளைஞன் வீமனோடு போருக்கு வந்தான். விகர்ணனின் மாசு மறுவற்ற உள்ளத்தையும் நற்பண்புகளையும் வீமன் ஏற்கெனவே அறிந்தவனாகையினால் அவனோடு போர் செய்வதற்குத் தயங்கினான். ஆனால் அவனோ கண்டிப்பாக வீமனைப் போருக்கழைத்தான். “என் அண்ணனும் அவனைச் சேர்ந்தவர்களும் தீயவர்களாக இருக்கலாம். ஆனாலும் நான் உண்ட சோற்றுக்குக் கடன் கழித்தாக வேண்டுமே? அதற்காகத்தான் உன்னோடு போர் செய்ய முற்படுகிறேன்” என்றான் விகர்ணன். இதன் பின் வீமனும் வேண்டா வெறுப்பாக அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான். நல்லவனாகிய அந்த இளைஞனைத் தன் கையாலேயே கொல்ல நேர்ந்ததற்காக வீமன் உண்மையாகவே வருந்தினான். விகர்ணனுக்குப் பிறகு அவனை எதிர்க்க எவரும் முன் வரவில்லை. அவன் தன் தேரிலேறி அர்ச்சுனனிருக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தான். முன்பே தருமனால் அங்கு அனுப்பப்பட்டிருந்த சாத்தகியும் வீமனோடு அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்திருந்தான். இப்போது அர்ச்சுனனுக்கு இருபுறமும் இரண்டு பலமான துணைகள் ஏற்பட்டுவிட்டன. பகைவர் படைகளுக்கு நடுவில் இருந்த மூன்று பேர் இப்படி அகப்பட்டுக் கொள்ளவும் பூரிசிரவன் முதலிய பகைவர்கள் இவர்களை வளைத்துக்கொண்டு எதிர்த்தும் போர் புரியத் தொடங்கினார்கள். “அர்ச்சுனா! இந்தப் பூரிசிரவன் ஒரு பயங்கரமான எதிரி முதலில் இவனைக் கொன்று தீர்த்துவிடு” என்று கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறினான். அக்கூற்றின்படியே பூரிசிரவனின் மேல் அம்பு எய்து அவனைக் கொன்றவன் அர்ச்சுனன். பூரிசிரவன் இறந்த செய்தி துரியோதனனுக்கு எட்டவே அவன் அங்கு விரைந்து ஓடிவந்தான். “இப்படி மூன்று பேராகச் சேர்ந்து கொண்டு ஒருவனைக் கொல்வது வஞ்சகம். இந்த மாதிரி அநியாயப் போர் கூடாது” என்று அர்ச்சுனனை நோக்கிக் கூப்பாடு போட்டான் துரியோதனன். “நீங்கள் நேற்று அபிமன்யுவைக் கொன்றதும் அதற்கு முன் முதல் நாள் போரில் சிவேதனைக் கொன்றதும் நியாயமான போர் முறையானால் இதுவும் நியாயமான போர் முறைதான்!” என்று அவனுக்குச் சுடச் சுடப் பதில் கூறினான் கண்ணபிரான். பேச வாயின்றித் தலை குனிந்து கொண்டு திரும்பினான் துரியோதனன். அர்ச்சுனனும் சாத்தகியாக வீமனும், மேலும் மேலும் முன்னேறிச் சயத்திரதனைக் கண்டு நெருங்குவதைப் பார்த்த கெளரவர்கள் திகைத்தனர். எவ்வாறேனும் சயத்திரதனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையினால் தரையிலேயே சுரங்கம் மாதிரி ஒரு பள்ளம் உண்டாக்கிச் சயத்திரதனை அதனுள் இறங்கச் செய்து மறைத்துவிட்டனர். சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிய அர்ச்சுனன் ஏமாற்றமடைந்து நின்றான். சயத்திரதன் உருவமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. ‘கண்மூடித் திறக்கும் நேரத்தில் இங்கே நின்று கொண்டிருந்த சயத்திரதன் எவ்வாறு மறைந்திருக்க முடியும்? என்று மயங்கினான் அவன். ‘இதில் அடங்கியுள்ள சூது என்ன? என்று யோசித்தான் கண்ணன். வேண்டுமென்றே அருகிலுள்ள ஏதோ ஓர் இடத்தில் சயத்திரதனை எதிரிகள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று உண்மை கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. “அர்ச்சுனா! கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டுத் தன் வலது கையிலிருந்த சக்கராயுதத்தை வானத்தில் செலுத்திக் கதிரவன் மறையும்படி ஒரு மாயம் செய்தான் கண்ணன். முன்னவனே முன் நின்றால் முடியாத சூழ்ச்சியும் உண்டா? கண்ணன் செய்த மாயத்தினால் திடீரென்று அந்தி இருள் கவிந்தது. கெளரவர்கள் இதைக் கண்டு உண்மையாகவே கதிரவன் மறைந்து விட்டான் என்றெண்ணிக் கொண்டு, “அர்ச்சுனன் இனிமேல் போர் செய்யமாட்டான். இருட்டுவதற்குள் சயத்திரதனைக் கொல்வதாகத்தானே சபதம் செய்தான்? இப்போதோ நன்றாக இருட்டி விட்டது. இனி அர்ச்சுனன் தன் சபதம் நிறைவேற்றாததால் தீயில் விழுந்து உயிர்விட வேண்டியது தான்!” என்று மகிழ்ச்சியாக ஆரவாரித்தார்கள். சயத்திரதன் வெளியே வந்தாலும் நிபந்தனை நேரம் கழிந்து விட்டதனால் அர்ச்சுனன் அவளை ஒன்றும் செய்ய முடியாது என்றெண்ணிக் கொண்டே கெளரவர்கள் சுரங்கப் பள்ளத்திற்குள் மறைந்திருந்த அவனை வெளியே கொணர்ந்து நிறுத்தி விட்டனர். “அர்ச்சுனா! இதுதான் நல்ல தருணம். இதோ சயத்திரதன் வெளியே நிற்கிறான். கீழே விழாமல் அவன் தலையை அம்புகளால் கொய்து அப்படியே சமந்த பஞ்சகமடுவில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கும் அவன் தகப்பன் கையில் போய் விழுமாறு செய். இவன் தலை கீழே விழுந்தால் வீழ்த்தியவர்களுக்குத் துன்பம் நேரிடும்” என்று கண்ணன் இந்தச் சமயத்தில் கூறினான். “ஐயையோ! இருட்டி விட்டதே? என் சபதப்படி வேண்டும்? இனிக் கொல்வது முறைகேடல்லவா?” என்று பதறினான் அர்ச்சுனன். “பதறாதே! நான் சொல்வதைக் கேள். அவனைக் கொல் பொய் இருட்டை நீயுமா நம்புகிறாய்?” என்றான் கண்ணன். உடனே உண்மையைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன் வில்லை வளைத்துச் சயத்திரதன் கழுத்துக்குக் குறிவைத்து அம்புகளை எய்தான். மறுகணம் சயத்திரதன் தலையைத் தனியே அறுத்தெடுத்தான். அப்படியே அத்தலை சமந்தபஞ்சக மடுவில் மாலை நேர வழிபாடு செய்து கொண்டிருந்த சயத்திரதனின் தகப்பன் கையில் போய் விழுமாறு செய்தான். சயத்திரதனின் தந்தை தன் மகன் இறந்த துயரம் பொறுக்காமல் தானும் அந்த மடுக்கரையிலேயே உயிரை விட்டான். “ஆ! இதென்ன அநியாயம்? நிபந்தனையை மீறி இருட்டிய பிறகு சயத்திரதனை எப்படிக் கொல்லலாம்?” என்று கௌரவர்கள் ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே கண்ணனுடைய தேரை நெருங்கினார்கள். கண்ணன் தன் சக்கரத்தைத் திருப்பி எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். உடனே வானில் சூரியன் பிரகாசித்தான். அதைக் கண்டு கெளரவர் திகைத்து வாயடைத்துப் போயினர். இரவிலும் போர் ‘மாயமா? மந்திரமா? சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தபின் திடீரென்று மீண்டும் சூரியன் தோன்றி ஒளிவந்தது எப்படி? இது என்ன சூழ்ச்சி? யார் செய்த சூழ்ச்சி?’ துரியோதனாதியர் திகைத்தனர். சயத்திரதனைக் கொல்வதற்காகவே பாண்டவர்கள் கண்ணனின் உதவியோடு இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்க வேண்டுமென்று துரியோதனன் அனுமானித்தான். “கண்ணா! உன் சூழ்ச்சி எனக்கு ஒன்றும் தெரியாதென்றா நினைத்துவிட்டாய்? உன்னுடைய சக்கராயுதத்தினால் சூரியனைத் தற்காலிகமாக மறைத்து விட்டாய். நாங்கள் மோசம் போனோம். சயத்திரதனைப் பறிகொடுத்தோம். இப்படியெல்லாம் வஞ்சகம் செய்கிறீர்களே, நீங்கள் உருப்படுவீர்களா? இது அநியாயம்! பெரிய பாதகம்” -என்று கண்ணனையும் பாண்டவர்களையும் பார்த்துக் கூப்பாடு போட்டான் துரியோதனன். “நீங்கள் செய்திருக்கும் சூழ்ச்சிக்கு இது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. நியாயத்தையும் அநியாயத்தையும் தீர்மானிப்பதற்கு உன் போன்றவர்களா ஆட்கள்? அவை நல்லவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்லவா?” என்று அவனுக்குக் கண்ணன் சுடச் சுடப் பதில் கூறினான். “உங்கள் வஞ்சனைப்படியே இன்னும் சில நாழிகைப் பொழுது எஞ்சியிருக்கிறதல்லவா? இதற்குள் பாண்டவர்களாகிய உங்கள் ஐந்து பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்புகிறேன். உங்கள் குலத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறேன். இதை என்னால் செய்ய முடியாது போனால் நானே இறந்து விடுகிறேன்” -என்று ஆத்திரமாகக் கூறிக்கொண்டே தன் படைகளை ஒன்று சேர்த்தான் துரியோதனன். அடுத்த விநாடியில் அவனுடைய படைகளும் அவனும் பாண்டவர்களை வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். பாண்டவர்களும் எதிர்த்துத் தாக்கினர். ஆயுதமில்லாமலே வீமன் துவந்த யுத்தம் செய்தான். அவனுடைய இரும்புப் பிடியில் சிக்கித் துரியோதனன் தம்பியர்கள் இருவர் உயிரிழந்தனர். வீமனின் செயலால் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அசுவத்தாமன் கோபம் கொண்டான். அவன் உடனே கடோற்கசனின் மகனை அடித்துக் கொன்றான். இதனால் ஆத்திரமடைந்த கடோற்கசன் வெகுண்டு அசுவத்தாமன் மேற் பாய்ந்தான். அசுவத்தாமனுக்கும் கடோற்கசனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர் செய்து கொண்டிருக்கும் சமயத்திலேயே நடுவில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கடோற்கசனை ஓங்கி அடித்துக் கீழே தள்ளி விட்டான் அசுவத்தாமன். அப்படியே அவன் கீழே இருந்து எழுந்திருப்பதற்குள் அவனைக் கொன்று விடுமாறு கர்ணனின் காதருகில் இரகசியமாகக் கூறி அவனை ஏவினான் துரியோதனன். ஆனால் துரியோதனனுடைய கருத்துக்குக் கர்ணன் இணங்கவில்லை. “அடிப்பட்டுத் தளர்ந்து தரையில் விழுந்திருப்பவனை வஞ்சகமாகக் கொல்வது போர் முறை ஆகாது” -என்று கூறிய பேசாமல் இருந்துவிட்டான். கர்ணன் தனது வார்த்தைக்கு இணங்காமற் போகவே துரியோதனன் முகம் வாடித் தொங்கிவிட்டது. “துரியோதனா! கலங்காதே. இன்று பொழுது சாய்வதற்குள் அர்ச்சுனனைக் கொன்று தொலைக்கிறேன் பார்” - என்று ஜம்பமாகக் கூறினான் கர்ணன். அப்போது அருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருபாச்சாரியார், “கர்ணா! ஏன் இப்படி வீண் ஜம்பம் பேசுகிறாய்? உன்னால் அர்ச்சுனனைக் கொல்ல முடியுமா? நடக்க முடியாததை ஏன் பேசுகிறாய்?” என்று உடனே அவனைக் கேட்டார். கர்ணன் அவருக்குப் பதில் சொல்லவில்லை. அர்ச்சுனனை எதிர்த்துப் போர் செய்வதற்குப் போய்விட்டான். அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் நடந்த போரில் கர்ணன் தோற்றான். அந்தச் சமயத்தில் உண்மையாகவே சூரியன் அஸ்தமித்தான். எனவே இருசாராரும் போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் துரியோதனனுக்கு அன்று இருட்டிய பின்பும் கூடப் போர் வெறி தணியவில்லை. “ஏ! கண்ணா! சற்று நேரத்துக்கு முன் நீ பகலை இரவாக மாற்றிச் சூது புரிந்தாய். இப்போது நான் இரவைப் பகலாக மாற்றித் தொடர்ந்து நிறுத்தாமல் போர் செய்யப் போவதைப் பார்” என்று கூறிக்கொண்டே துரியோதனன் நூற்றுக்கணக்கான தப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு வருமாறு தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். துரியோதனன் ஏவற்படி அவன் படைகள் தீப்பந்தங்களைக் கொளுத்தி ஒளி உண்டாக்கின. தொடர்ந்து போரிடத் தயாராக நின்றன. எதிரிகள் தீப்பந்தங்களின் உதவியால் இரவிலும் போரிட்ட முற்படுவதைத் தருமன் கண்டான். உடனே, ‘நீங்களும் தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு தொடர்ந்து போரிடத் தயாராகுங்கள்" - என்று அவனும் தன் படைகளுக்குக் கட்டளையிட்டான். போர் வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக, இரவிலும் அன்று போர் நடந்தது. தீப்பந்தங்களின் உதவியால் இருதரப்பினரும் ஆத்திரமும் சினமும் கொண்டு போரிட்டனர். அர்ச்சுனனுக்கும் . கர்ணனுக்கும் தொடர்ந்து நடந்த போரில் கர்ணன் இருமுறை தோற்றோடினான். கிருதவன்மனுக்கும் தருமனுக்கும் நேரடியாக நடந்த போரில் தருமன் வென்றான். சல்லியனைச் சதாநீகனும், அசுவத்தாமனைக் கடோற்கசனும், துரோணரைத் துட்டத்துய்ம்மனும் வென்றனர். இந்த வெற்றிகள் எல்லாம் பாண்டவர் பக்கமே நிகழ்ந்ததைக் கண்டு துரியோதனாதியர் மனங்குமுறினர். துரியோதனருக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த அலாயுதன் என்னும் அரக்கன் வீமனை எதிர்ப்பதற்காகத் தனது படைகளோடு புறப்பட்டு விட்டான். “துரியோதனருக்கு வெற்றியுண்டாக்குவதற்காகவே நான் வருகிறேன். உங்கள் படைகளை ஒரு நொடியில் புறமுதுகு காட்டச் செய்யவில்லையானால் என் பெயர் அலாயுதன் இல்லை” - என்று வீரம் பேசிக்கொண்டே களத்திற்குள் நுழைந்தான் அந்த அரக்கன். வீமனுக்கும் அவனுக்கும் போர் தொடங்கிற்று. வாய் பேசிய அளவுக்குக் கைபேசவில்லை அலாயுத அரக்கனுக்கு. வீமன் போர் புரிந்த வேகத்தில் அலாயுதனுடைய தேர் ஒடிந்தது; வில்லும் ஒடிந்தது, அம்பறாத்தூணி தூள் தூளாயிற்று. சினம் கொண்ட அந்த அரக்கன் கீழே கிடந்த பெரிய பெரிய கற்களை எடுத்து வீமன் மேல் வீசி எறிந்தான், வீமன் தன் கையிலிருந்த பெரிய கதாயுதத்தால் அந்தக் கற்களைத் தடுத்துக் கீழே தள்ளினான். தன் தந்தை அலாயுதனோடு போரிடுவதைத் தொலைவிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த கடோற்க்சன் வேகமாக ஓடி வந்தான். “நீங்கள் பேசாமல் ஒதுங்கி இருங்கள். இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்” - என்று வீமனிடம் கூறி விட்டு அலாயுதனை எதிர்க்க முற்பட்டான் கடோற்கசன். அலாயுதனுக்கும் கடோற்கசனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் அரக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களாகையினால் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைக்காமல் தொடர்ந்து போரைச் செய்யலாயினர். முதலில் அலாயுதனுக்கு உதவியாக வந்திருந்த வீரர்கள் ஒவ்வொருவராக எமனுலகு சென்றனர். அலாயுதன் ஒருவன் தான் எஞ்சியிருந்தான். கடோற்கசன் போர்க்களத்தில் மாயாஜாலப் போர் செய்தான். தான் ஒருவனே திடீர் திடீரென்று பலப் பல உருவங்களாக மாறிக்கொண்டு, எதிரி திணறும்படி போர் செய்தான். கடைசியாக மீதமிருந்த அலாயுத அரக்கனையும் கொன்று தீர்த்தபின் கடோற்கசன் வெற்றி முழக்கம் செய்தான். இதன் பின்பும் அவனை எதிர்க்கத் துரியோதனாதியர் படைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. சிறிதும் மலைக்காமல் அந்தப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டான். விநாடிக்கு விநாடி எண்ணிலடங்காத வீரர்கள் அவன் கையில் அகப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தன் படைகளின் நடுவே புகுந்து அவற்றைக் கடோற்கசன் துவம்சம் செய்து கொண்டிருப்பதைக் கண்ட துரியோதனன் மனம் பதைத்தான். இந்தக் கடோற்க்சனை இப்படியே விட்டு விட்டால் நம்முடைய படைகள் எல்லாவற்றையும் இருந்த இடம் தெரியாமல் செய்து விடுவான் போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே துரியோதனன் கர்ணனை அருகில் அழைத்தான். “கர்ணா! இந்தக் கடோற்கசனை இவ்விநாடியிலேயே அழித்துத் தொலைக்காவிட்டால் நமக்குத்தான் ஆபத்து. நீ இந்திரனிடம் வேண்டிப் பெற்றுள்ள சக்தி வாய்ந்த வேலாயுதத்தை அவன் மேலே எறிந்து அவனை இப்போதே கொன்றுவிடு” -என்று காதருகில் இரகசியமாகக் கர்ணனிடம் துரியோதனன் கூறினான். இதைக் கேட்ட கர்ணன் உடனே இதற்குச் சம்மதிக்கவில்லை. கொஞ்சம் தயங்கினான். “கர்ணா! ஏன் தயங்குகிறாய்? இப்போது இரவு நேரம். இந்த இருட்டில்தான் நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ள முடியும். இப்படியே விட்டுவிட்டால் பொழுது விடிவதற்குள் கடோற்கசன் நம்முடைய இனத்தை முழுமையாகத் தொலைத்து விடுவானே!” “துரியோதனா! இவன் அரக்கன். இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும். அப்போது இவனுடைய மாயாஜாலங்கள் பலிக்கமாட்டா. இவன் பொருட்டுச் சக்தி வாய்ந்த இந்த வேலை உபயோகிப்பது வீண் செயல். இந்திரனிடமிருந்து பெற்றுள்ள இந்த வேலை அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தச் சிறியவனின் உயிரைப் போக்குவதற்கு அவ்வளவு பெரிய ஆயுதம் வேண்டாம். சாதாரணமான அம்பு ஒன்றே போதும்.” - கர்ணன் இங்ஙனம் பலவாறு மறுத்தும் துரியோதனன் கேட்கவில்லை. எப்படியும் இந்திரனால் கொடுக்கப்பட்ட வேலைக் கடோற்க்சன் மேல் எறிந்து அவனைக் கொன்றேயாக வேண்டுமென்று வற்புறுத்தினான். கர்ணனும் அவனுடைய பிடிவாதத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துரியோதனின் வேண்டுகோளை மறுக்கமுடியாமல் தனக்கு இந்திரன் கொடுத்த வேலை எடுத்துக் கடோற்கசனின் மார்பைக் குறிவைத்து எறிந்தான் கர்ணன். வலிமை வாய்ந்த அந்த வேல் கடோற்கசனுடைய மார்பைப் பிளந்து கீழே தள்ளியது. பயங்கரமாக அலறிக் கொண்டு மலைபுரண்டு விழுவது போல் கீழே விழுந்தான் அவன். அவனைக் கொன்று முடித்த பெருமிதத்தோடு அந்த வேல் இந்திரனிடம் சென்றது. கீழே விழுந்து துடிதுடித்த கடோற்கசனின் உடல் சிறிது நேரம் கழித்து உயிர் நீங்கி வெற்றுடம்பாகக் கிடந்தது. கடோற்கசன் இறந்த செய்தி பாண்டவர்களுக்கு எட்டியது. அவர்கள் அவன் மரணத்துக்குப் பெரிதும் வருந்திக் கண்ணீர் சிந்தினர். சர்வேசுவரனின் அம்சமாகிய கண்ணபிரானுக்கு மட்டும் ஒரே ஒரு வகையில் திருப்தி ஏற்பட்டது. ‘நல்லவேளை! கர்ணன் இந்திரனிடம் பெற்று வைத்துக் கொண்டிருந்த அந்த வேல் கடோற்கசனோடு போய் விட்டது. இல்லையானால் கர்ணன் அதை அர்ச்சுனனைக் கொல்வதற்காக உபயோகப்படுத்தி இருப்பான்" என்று கூறிப் பாண்டவர்களைத் தேற்றினான் கண்ணன். கடோற்கசன் இறக்கும்போதே இரவு வெகு நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அவன் இறந்ததும் சிறிது நேரம் இருதரப்புப் படைகளும் அமைதியாக இருந்தன. பின்பு மீண்டும் போர் தொடங்கியது. கடுமையாக நிகழ்ந்த அந்தப் போரில் பாண்டவர்கள் பக்கத்தைச் சேர்ந்த துருபத மன்னனையும், விராடராசனையும் துரோணன் கொன்று விட்டான். துருபத மன்னனின் புதல்வனும் மகாவீரனுமாகிய துட்டத்துய்ம்மன் துரோணரைப் பழிவாங்கக் கருதினான். ‘நாளைப் போரில் எப்படியும் துரோணரைக் கொல்லாமல் விடமாட்டேன்’ - என்று சபதம் செய்தான் அவன். ‘பின்பு அதே இரவில் தொடர்ந்து நடந்த போரில் அர்ச்சுனன் துரோணரை ஒரு முறை வென்றான். துரோணர் அவனுக்குத் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடினார். பாண்டவர்களின் உற்ற நண்பனான சாத்தகி துரியோதனனைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினான். அவ்வளவில் கிழக்கு வெளுத்து விட்டது! பொழுது புலரும் நேரம் நெருங்குவதை உணர்ந்து இருசாராரும் இரவு யுத்தத்தை நிறுத்தினர். இரவிலும் போர் செய்ய வேண்டுமென்று கூறிய துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும்தான் அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு நிறைய அழிவை உண்டாக்கவே அவன் தீப்பந்தங்களைக் கொளுத்தி இரவுப் போர் செய்ய எண்ணினான். ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. இரவுப் போர் முடிந்த சிறிது நேரத்திற்குள்ளேயே கதிரவன் உதித்துவிட்டதனால் பகற்போரையும் தொடங்கவேண்டியதாயிற்று. அவசர அவசரமாக நீராடிக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு இருசாராருடைய படைவீரர்களும் பதினைந்தாம் நாள் போருக்காகக் களத்தில் கூடினார்கள். முதல் நாள் இரவு முழுவதும் உறங்காமல் போர் செய்த அலுப்பு இருந்தாலும் உற்சாகத்தோடு போரில் ஈடுபட்டனர். பதினைந்தாம் நாள் போர் ஆரம்பமாயிற்று. அர்ச்சுனனுடைய வில்லிலிருந்து வேகம் நிர்ணயிக்க முடியாத சூறாவளிபோல் அம்புகள் பாய்ந்தன. எதிரிகள் சாவதற்காகவே வந்தவர்களைப் போல் ஒவ்வொருவராக முன் வந்து அவன் அம்புகளைத் தாங்கி இறந்து கொண்டிருந்தனர். துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பாலவீமன், சோமதத்தன், என்ற இரு சிற்றரசர்களும் அர்ச்சுனனுடன் போரிட்டு மாண்டனர். அவர்களைப் போலவே இன்னும் பல மன்னர்கள் அர்ச்சுனன் கணைகளால் இறந்தொழிந்தனர். கௌரவர்கள் பக்கம் படைத் தளபதியாக இருந்த துரோணர் தன்னுடைய வில்லாற்றலை முழுக்க முழுக்க வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை எதிர்த்துப் போர் செய்ய எந்த அரசர்களாலும் இயலவில்லை. வலிமை வாய்ந்த தேர்ப்படைகளைக் கொண்டிருந்தவனும் பாண்டவர் படையைச் சேர்ந்தவனுமாகிய குந்தி போஜராஜன் ஒருவன் மட்டும் தைரியமாகத் துரோணரை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான். துரோணர் முடிவு துரோணருக்கும் குந்தி போஜராஜனுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் களத்தின் மற்றொரு பகுதியில் சல்லியனுக்கும் நகுவனுக்கும், மாளவராசனுக்கும் வீமனுக்கும் சாத்தகிக்கும் கர்ணனுக்கும், சகுனிக்கும் பாண்டியனுக்கும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு போரிலும் வெற்றியும், தோல்வியும் யார், யார், பக்கம் ஏற்படும் என்று கண்டுபிடிக்க இயலாமல் கடுமை எதிர்ப்பு இருபுறமும் நிறைந்திருந்தது. இருபுறத்துப் படைகளிலும் பொறுக்கியெடுத்து நிறுத்தி வைத்தாற்போல் வீரர்களே நிறைந்திருந்தனர். ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்களாகிய இருசாராரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர். கடந்த பதினான்கு நாட்களாக இல்லாத கோபம் அன்று துரோணருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் முகத்தில் அவ்வளவு ஆத்திரத்தின் நிழல் படிந்ததை அதற்கு முன்பு யாரும் கண்டதே இல்லை. என் எதிரிகளின் வாழ்வை நான் முடிக்க வேண்டும், அல்லது என் வாழ்வை நான் முடிக்க வேண்டும் அல்லது என் வாழ்வை என் எதிரிகள் முடிக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு போருக்கு வந்ததைப் போல இருந்தது அவருடைய தோற்றம். பிரம்ம தேஜஸும் ஒழுக்கமும், கருணையும், தவழும் அந்த முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் கூடத் திடுக்கிட்டனர். திடீரென்று போர்க் களத்தில் துரோணருடைய தேருக்கு முன்னால் மரீசி முனிவர், அகத்திய முனிவர் முதலிய பெருந்தவச் செல்வர்கள் தோன்றினர். எதிர்பாராத நிலையில், எதிர்பாராத விதத்தில் அவர்கள் வரவு கண்ட துரோணர் ஸ்தம்பித்துப் போய்விட்டார். உடனே வில்லை மடக்கி வைத்துக் கொண்டு போரை நிறுத்திவிட்டு அவர்களை வணங்கி வரவேற்றார். “துரோணா! உனக்கு ஓர் உண்மையை அறிவுறுத்தி விட்டுச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். நீ ஓர் அந்தணன் சாந்த குணத்தினால் சத்தியச் செயல்களைச் செய்து உண்மையின் வழியில் வெற்றியைப் பெற வேண்டியது உன் குல தருமம். தத்துவத்தையும் யோக ஞானங்களையும் மறந்து இப்படி மறப்போரில் இறங்குவது உன் போன்றவர்களுக்கு அழகு இல்லை . நாசக் கருவிகளான இந்த ஆயுதங்களையும், இந்தப் போரையும் விட்டுவிட்டுச் சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும் நீ . இதை உனக்கு நினைவூட்டிவிட்டுப் போவதற்காகவே நாங்கள் வந்தோம்” என்று கூறித் துரோணரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். துரோணருடைய மனம் அந்த முனிவர்களின் வார்த்தையால் மாறிவிட்டது. தான் வழி விலக இருந்தபோது தன்னை வலுவில் தடுத்தாட்கொண்டதற்காக அந்த முனிவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு ஆயுதங்களைக் கீழே வைத்தார் துரோணர். இதே சமயத்தில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரான் ஒரு தந்திரம் செய்தார். ‘துரோணர் மோட்ச பதவி அடைய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதை அவர் தவறாமல் அடைவதற்கு ஏற்பாடு செய்வோம்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். துட்டத்துய்ம்மனை அருகில் அழைத்தான். “நேற்றிரவு உன் தகப்பனாரைக் கொன்ற துரோணரை நீ பழிவாங்குவதற்கு இதுவே சரியான நேரம் போ போய்த் துரோணரோடு போர் செய்” என்று அவனை அனுப்பினான். துட்டத்துய்ம்மன் கண்ணன் ஏவலின் படி துரோணரோடு போருக்குச் சென்றான். துரோணரை மரணமடையச் செய்வதற்குத் தந்திரமான ஏற்பாடு ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வதற்காகக் கண்ணன் தருமர் இருந்த இடத்துக்குச் சென்றான். “தருமா! இப்போது நான் கூறப்போகிற தந்திரம் உன் மனத்துக்குப் பிடித்ததனாலும் பிடிக்காத்தானாலும் நீ அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். மாளவ தேசத்தரசனும் வீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும் போது வீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். அதிர்ஷ்ட வசமாக அந்த யானையின் பெயரும் ‘அசுவத்தாமன்’ என்பதுதான். துரோணருடைய புதல்வன் பெயரும் மாளவமன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு ஒரு செளகரியம் இருக்கிறது.”வீமன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டான்" என்று நீயே இரைந்த குரலில் கூறிவிடும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசுவத்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் வருந்திப் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். அவர் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் துட்டத்துய்ம்மன் அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான். யோசிக்க நேரமில்லை. உடனே நான் கூறியபடி செய். இது பொய்யும் ஆகாது. ஓரளவு உண்மை பேசுவது போலத்தான் ஆகிறது!" - கண்ணன் கூறிய சூழ்ச்சியைக் கேட்டு மனம் மயங்கிய தருமன் முதலில் அதற்கு இணக்க மறுத்தான். “தருமா! தயங்காதே. முதல் நாள் போரில் துரோணரே தன்னை வெல்லுவதற்குரிய தந்திரமாக இதனைத் தானே கூறியிருக்கிறார்? தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது?” - கண்ணன் மீண்டும் தருமனை நோக்கிக் கூறினான்; “பரமாத்மாவின் அம்சமாகிய நீயே இப்படிக் கூறலாமா? பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும்? குருவிடம் வஞ்சகம் செய்து பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். கல்வி, செல்வம், பாசம், உறவு, அன்பு யாவற்றையும் அழித்தொழிக்கக் கூடிய பொய்யை நான் சொல்ல மாட்டேன்” தருமர் இவ்வாறு கூறவும், கண்ணன் மேலும் சில நியாயங்களைக் கூறி அவன் மனத்தைத் தெளிவடையச் செய்ய முயன்றான். “தருமா! நன்மையைத் தருமானால் பொய்யைத் கூறுவதும் மெய் கூறுவது போலவே ஆகும். நன்மைக்காகப் பொய் சொல்லலாம் என்பதை நம்முடைய அறநூல்களே விளக்குகின்றன. தீமையைக் கொடுக்கின்ற உண்மையைக் கூறினால் அது பொய்க்குச் சமம். நன்மையைக் கொடுக்கின்ற பொய்யைக் கூறினால் அது மெய்க்குச் சமம். சகல நியாயங்களையும் உணர்ந்து கொண்டு நீதியும், நியாயமும் நிலவுவதற்குக் காரணமும் காரியமுமாக விளங்குகிற நான் சொல்வதில் கூடவா உனக்கு நம்பிக்கை இல்லை? அன்றியும் தன்னைச் சூழ்ச்சியால் வென்று கொள்ளலாம் என்று அனுமானித்து அதற்குரிய வழியையும் துரோணரே உனக்குக் கூறியிருக்கிறாரே! துருபத மன்னன் சொன்ன சொல் தவறி அவமானப் படுத்தியதற்காக அவனைப் பழி வாங்க வேண்டும் என்று தானே துரோணர் இல்லற வாழ்வையே மேற்கொண்டார்? அவருடைய வாழ்வின் இலட்சியமான அந்தப் பழி வாங்குதல் தான் இனிது நிறை வேறிவிட்டதே! இனிமேல் துரோணருக்குக் கிட்ட வேண்டிய இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அந்த இலட்சியம் தான் அவர் பரமபதம் அடைய வேண்டியதாகும். உன் வாயால் நான் கூறிய இந்தப் பொய் போன்ற மெய்யை ஒரே ஒரு முறை கூறினால் துரோணருடைய பரமபத இலட்சியமும் அவனுக்கு இப்போதே கிடைத்துவிடும். ஆகவே மறுக்காமல் தயங்காமல் இப்போதே நான் கூறியபடி செய்.” கண்ணன் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பே துரோணர் காதில் விழுமாறு அதைச் சொல்ல இணங்கினான் தருமன். “அசுவத்தாமன் என்னும் ஆண்மையிற் சிறந்த யானையை வீமன் என்னும் பலம் பொருந்திய சிங்கம் கொன்றுவிட்டது!” என்று துரோணருடைய செவிகளில் தெளிவாகக் கேட்குமாறு தருமன் உரத்த குரலில் கூறினான். இச்சொற்களைச் செவியுற்ற துரோணர் தன் மகன் அசுவத்தாமனைத்தான் வீமன் கொன்றுவிட்டானென்று எண்ணிக் கொண்டார். உடனே நெஞ்சங் கலங்கி வலது கையிலிருந்த வில்லையும் தோளிலிருந்த அம்பாறாத் தூணியையும் கீழே எறிந்து விட்டான். அதே சமயத்தில் அவனைப் பழி வாங்குவதற்கென்றே வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்த துட்டத்துய்ம்மன் துரோணர் மார்பில் அம்புகளைச் செலுத்தி விட்டான். துரோணர் தேர்த் தட்டிலேயே ‘ஆ’ என்று அலறியவாறு விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் அவருடைய உயிரும் உடலிலிருந்து பிரிந்தது. கண்ணபிரானின் சூழ்ச்சி பூரணமாகச் சிறிதளவு மாறுதலுமின்றி நிறைவேறிவிட்டது. கண் இமைத்துத் திறக்கும் நேரத்திற்குள் துரோணரின் மரணச் செய்தி போர்க்களம் எங்கும் பரவி விட்டது. களத்தின் வேறோர் பகுதியில் போர் செய்து கொண்டிருந்த அசுவத்தாமனுக்கும் தந்தை இறந்த செய்தி எட்டி விட்டது. அவன் ஓடோடி வந்தான். இறந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்டு மனம் வெதும்பி அழுதான். தந்தையின் பாதங்களைக் கைகளால் பற்றிக் கொண்டே அழுதான். “அப்பா! உலகையெல்லாம் கட்டி ஆண்டு உயர்வும் புகழும் பெறவேண்டும், என்று ஆசீர்வதித்துவிட்டு உங்களிடம் வீட்டுமர் இந்தப் படைத் தலைமையை ஒப்புவித்து விட்டுச் சென்றார். நீங்களோ யாரிடமும் ஒப்புவிக்காமலே உறக்கம் எய்திவிட்டீர்கள்” என்று கண்ணீருக்கு நடுவே உருக்கமான குரலில் கதறினான். பின்பு தந்தை எப்படி இறக்க நேர்ந்தது? என்ற விவரங்களை அங்கே தனக்கருகில் இருந்தவர்களைக் கேட்டு அறிந்து கொண்டான். கண்ணனின் சூழ்ச்சியும் துட்டத்துய்ம்மனின் பழிவாங்கும் எண்ணமும் யாவற்றுக்கும் காரணம் என்று அறிந்த போது அசுவத்தாமன் ஆத்திரத்தோடு குமுறி எழுந்து விட்டான். “கண்ணபிரானின் சூழ்ச்சியால் தருமர் நான் இறந்து விட்டதாகப் பொய் சொன்னார். அந்தப் பொய்யைச் செவியுற்றதும் உண்மையாகவே நான் இறந்து விட்டதாக நம்பிய என் தந்தை திகைத்து நின்றிருக்கிறார். அவர் அப்படித் திகைத்து நிற்கும்போது துட்டத்துய்ம்மன் அம்பு எய்து கொன்றிருக்கிறான். இது நியாயமில்லை, வஞ்சகம்! அக்கிரமம், நேருக்கு நேர் என் தகப்பனாரோடு வாட்போரோ, விற்போரோ, செய்திருந்தால் உங்களால் அவரை வென்றிருக்க முடியுமா? துட்டத்துய்ம்மன் என் தந்தையிடமே விற்கலை கற்றான். அந்தத் துரோகியோ, இப்போது சிறிதளவும் நன்றியுணர்வின்றி என் தந்தையையே வஞ்சகமாகக் கொன்று விட்டான். ஆனாலும் துட்டத்துய்ம்மன் மட்டும் இதற்கு முழுப்பொறுப்பாளி இல்லை. எல்லா வஞ்சகத்துக்கும் காரணமானவர்கள் பாண்டவர்களே. நான் அவர்களைச் சும்மா விடப் போவதில்லை. இதோ என்னிடமிருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை எய்து அவர்களை சர்வ நாசம் செய்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே விழிகள் சிவக்கப் புருவம் வளைய நாராயணாஸ்திரத்தை கையிலெடுத்து விட்டான் அசுவத்தாமன். நாராயணாஸ்திரத்தை எடுத்தவுடன் கண்ணனுக்குப் பகீரென்றது. அந்த அஸ்திரத்தை அவன் பாண்டவர்கள் மேல் எய்துவிட்டால் பாண்டவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. கையில் ஆயுதங்களின்றி முனிவர்களைப் போல அமைதியாக நிற்பவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது அந்த அஸ்திரம், பாண்டவர்களைக் காப்பற்ற வேண்டுமானால் அவர்கள் எல்லோரையும் வெறுங்கையர்களாய் ஆயுதமின்றி நிற்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தான் கண்ணன். உடனே பாண்டவர்களை அழைத்து யோகியர்களைப் போலச் சாந்தமாக வெறுங்கையுடன் நிற்குமாறு கூறினான் வீமன் ஒருவனை மட்டும் ஆயுதத்தோடு இருக்கச் செய்தான். வீமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களின்றி அமைதியாக நின்றனர். அசுவத்தாமன் கோபம் பொங்க வில்லை வளைத்து அதில் நாராயணாஸ்திரத்தைப் பொருத்தித் தொடுத்தான். அந்த அஸ்திரம் ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு நின்றவர்களையெல்லாம் விட்டு விட்டு வீமன் மேல் பாய்ந்தது. நாராயணாஸ்திரம் வில்லிலிருந்து கிளம்பும்போது ஒன்றாகத் தோன்றினாலும் வீமனை நெருங்கும் போது நூற்றுக் கணக்கான அஸ்திரங்களாகப் பெருகி அவனை மிரளச் செய்தது. ஒரு கணம் சற்றே மிரண்டாலும் அடுத்த விநாடியே தன்னைச் சமாளித்துக் கொண்டான் வீமன். தன் கையிலிருந்த வில்லினால் பல அம்புகளைத் தொடுத்து நாராயணாஸ்திரத்தையும் அதில் தோன்றிய கிளை அஸ்திரங்களையும் துண்டித்து எறிந்தான், தோல்வியினால் முடக்கப்பட்ட நாராயணாபதிரம் திரும்பி வந்து பயனற்ற பொருளாக அசுவத்தாமனையே அடைந்தது. தோல்வியடைந்த உள்ளம் எரிமலைபோல குமுறியது. நாராயணாஸ்திரத்தை விட வலிமையான பாசுபதாஸ்திரத்தைக் கையிலெடுத்தான் அசுவத்தாமன். அதை அவன் வில்லில் தொடுத்து எய்வதற்காக வளைத்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வியாச முனிவர் அவன் முன்பு தோன்றினார். “அசுவத்தாமா! நிறுத்து.” முனிவரின் குரல் அவன் கைகளைக் கட்டிப்போட்டது. “சுவாமி, வணங்குகிறேன்! தங்களுடைய எதிர்பாராத வரவின் பொருள் அடியேனுக்கு விளங்கவில்லையே?” அசுவத்தாமன் வியாச முனிவரை வணங்கிக் கூறினான். “அசுவத்தாமா? இன்றைக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? உன் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காகத் தானே? ஆத்திரத்தைத் தணித்துக்கொள். வில்லை மடக்கிவை. உன் தந்தை இறந்தார் என்றால் அதற்கு இவர்களுடைய சூழ்ச்சி மட்டும்தானா காரணம்? துருபத மன்னன் துட்டத்துய்ம்மனைப் பெறுவதற்காக யாகம் செய்த போதே உன் தந்தையின் மரணத்துக்கும் வரம் பெற்று விட்டான். துட்டத்துய்ம்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டுமென்று நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. இதை நீ அறியாதவன் அல்லவே? இவர்களைப் பாசுபதாஸ்திரத்தை எய்து விட்டதனால் உன் தந்தைக்குத் திரும்ப உயிர் கிடைத்துவிடப் போகிறதா?” வியாசர் கூறிய சொற்களால் மனம் தெளிந்த அசுவத்தாமன் பாசுபதாஸ்திரத்தை உபயோகிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். இவ்வளவில் போர் நேரமும் முடிந்துவிட்டது. சூரியன் அஸ்தமித்து விட்டான். இருசாராரும் பாசறைக்குத் திரும்பி விட்டனர். துரோணர் தங்களுக்கு எதிரியானாலும் பாண்டவர்கள் உண்மையாகவே அவருடைய மரணத்துக்காக அனுதாபப் பட்டனர். ‘தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்த ஆசிரியன் மறைந்துவிட்டானே’ என்ற மெய்யான சோகம் அவர்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. வீட்டுமருக்குப் பின் தங்களுக்கு வாய்த்திருந்த படைத் தலைவர் போரில் மரணமடைந்துவிட்டாரே என்ற மனத் துயரத்தோடு கெளரவர்களும் போர்க்களத்தை விட்டுத் திரும்பிச் சென்றனர். நாளைப் போருக்கு என்ன செய்து யாரைத் தலைவராக்குவது என்ற கவலை துரியோதனனைப் பிடித்துக்கொண்டது. தன் தகப்பன் திருதராட்டிரனுக்குத் துரோணருடைய மரணச் செய்தியை அறிவிப்பதற்காகச் சஞ்சயனைத் தூதனுப்பினான். ‘கண்ணனும் தருமனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் கூறித் துரோணரை வஞ்சகத்தால் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைப் போய்த் தகப்பனாரிடம் கூறி விட்டு நாளைப் பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடு!’ என்று கூறிச்சஞ்சயனை அனுப்பினான். சஞ்சயனும் அதற்கு இணங்கி அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டான், சஞ்சயன் சென்றபின் மறுநாள் முதல் படைத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்தான் துரியோதனன். எல்லோரும் ஏகமனதாகக் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றனர். துரியோதனனுடைய அந்தரங்கமும் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றே விரும்பியது. எல்லோரும் அதையே கூறவே கர்ணனைப் படைத் தலைவனாகப் பிரகடனம் செய்தான். கர்ணனும் உள்ள நிறைவோடு அதை ஏற்றுக் கொண்டான். மறுநாள் பொழுது புலர்ந்தது. பதினாறாம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்தது. கௌரவர்கள் படையைக் கர்ணனும், பாண்டவர்கள் படையைத் துட்டத்துய்ம்மனும் போர்க்களத்தில் அணிவகுத்துத் தலைமை தாங்கிக் கொண்டு வந்து நிறுத்தினர். கர்ணனுடைய படை வீரர்கள் மகரமீனைப் போன்ற வியூகத்திலும், துட்டத்துய்ம்மனுடைய படை வீரர்கள் சக்கரவியூகத்திலும் நின்றனர். விரைவில் இருசாரார் படைகளும் கலந்து போரில் ஈடுபட்டன. அன்றைய போரில் அத்தனை நாளும் ஏற்படாத ஓர் ஆசை வீமனுக்கு ஏற்பட்டது. அதுதான் யானை மேலேறிப் போர் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால் அவன் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு போருக்குத் தயாராக இருந்தான். அப்போது காசிமன்னனான ‘கோமதூர்த்தி’ ஒரு யானைமேல் ஏறித்தயாராக இருந்த வீமனுடன் போருக்கு வந்தான். இவருடைய யானைகளும் கொம்போடு கொம்புகள் மோதிப் போர் செய்தன. யானை மேலிருந்தவர்களும் யானைகளுமாக மோதிக் கொண்டு போர் செய்த அந்த நிலை இருகுன்றுகள் முட்டி மோதிக் கொள்வது போல் காட்சியளித்தது. {வியாச பருவம் முற்றும்) கர்ண பருவம் கர்ணன் தலைமையில் யானைமேல் வீற்றிருந்தபடியே காசியரசன் வீமனையும், வீமன் காசியரசனையும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். வீமன் வில்லை வளைத்து அம்புகளை ஏவினான். காசியரசனால் அம்புகளைத் தடுக்க முடியவில்லை. வீமன் மேல் கோபம் கொண்ட அவன் ஒரு வேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். ஆனால் வீமனோ அந்த வேலையும் தன் அம்புகளால் முறித்துக் கீழே தள்ளி விட்டான். தன் வேல் முறிவதைக் கண்டு திகைத்த காசியரசன் அடுத்து வீமனுடைய அம்புகள் தன் யானையின் உடலில் தைப்பதையும் கண்டான். வீமனுடைய அம்புகளால் காசியரசனின் யானை உடலெங்கும் அம்புதுளைக்கப் பெற்று வலிதாங்க முடியாமல் அலறிக்கொண்டே கீழே விழுந்தது. காசியரசன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு வீமனை எதிர்த்தான். உடனே வீமனும் தன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு காசியரசனை, எதிர்த்துப் போர் புரிந்தான். வீமனுடைய கதாயுதம் காசியரசனைப் புடைத்த போதெல்லாம் அவன் மிரண்டு அலறினான். அவன் வஜ்ராயுதம் வீமனை ஒரு முறைகூடத் தாக்க முடியவில்லை. இறுதியில் வீமன் தன் கதாயுதத்தினாலேயே காசியரசனை அடித்துக் கொன்றான். காசியரசன் போர்க்களத்தில் இறந்து விழுந்ததும் அவனுடைய படைகள் சிதறி ஓடிவிட்டன. அதைப் பார்த்த படைத் தலைவனாகிய கர்ணன் அப்படைகளுக்கு ஆறுதல் கூறி அவைகளை மீண்டும் ஒன்று திரட்டிப் போருக்கு அனுப்பினான். மீண்டும் போர்க்களத்தில் முறையான போர் ஆரம்பித்து நடந்தது. இரு திறத்தாரும் உயிரைத் துச்சமாக மதித்துப் போர் இட்டனர். கர்ணனுக்கும் நகுல சகாதேவர்களுக்கும் நேரடிப்போர் நடந்தது. நகுலன் வசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல குதிரைப் படைகள் இருந்தன. அவன் விருப்பத்துக்குக் கேடு விளைவிக்காமல் அறிவுள்ள மனிதர்களைப் போலவே கட்டளைக்கு அடங்கிப் போரைச் செய்தன அந்தக் குதிரைகள். போர் மேலும் மேலும் வளர்ந்த போது நகுலனும் கர்ணனும் ஒருவருக்கொருவர் நேர் எதிரெதிரே நின்று போரைச் செய்தார்கள். கர்ணன் வயதானவன். அதோடு முரட்டுத்தனமாகப் போர் செய்வதற்குப் பழகியவன். நகுலனோ இளையவன். போர் அனுபவம் குறைந்தவன். எனவே நகுலன் கர்ணனைச் சமாளிக்க முடியாமல் அடிக்கடி தளர்ச்சி அடைந்தான். நகுலன் தளர்ந்தபோதெல்லாம் கர்ணன் கை ஓங்கியது. கர்ணன் நினைத்திருந்தால் நகுலனை ஒரேயொரு அம்பினால் கொன்று தீர்த்திருக்க முடியும். ஆனால் கர்ணன் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவன் குந்தி தேவிக்குக் கொடுத்திருந்த வாக்குத்தான். ‘உன் மக்களில் அர்ச்சுனனைத் தவிர வேறெவரையும் கொல்ல முயல்வதில்லை’ என்று முன்பு குந்திக்கு வாக்குக் கொடுத்திருந்தான் அவன். நகுலனுடன் துணைக்கு வந்திருந்த விடதரன், மகதராசன் முதலியவர்களையெல்லாம் அஞ்சாமல் கொன்ற கர்ணன் நகுலனை மட்டும் அவ்வாறு செய்ய நினைக்கவும் இல்லை. நகுலன் விரைவில் கர்ணனுக்குத் தோற்றுவிட்டான். மேலும் இளைஞனாகிய நகுலனைத் துன்புறுத்த விரும்பாத கர்ணன் தன் படைகளையும் தேரையும் அர்ச்சுனன் இருந்த பக்கமாகத் திருப்பி அவனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான். தன் தம்பியாகிய நகுலனைத் தோல்வியுறச் செய்து விட்டு வருகிறான் கர்ணன் என்று தெரிந்ததும் அர்ச்சுனன் அவன் மேல் கோபமடைந்தான். சரிசமான வீரமுடைய அவர்கள் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் இரண்டு கர்ணனுடைய மார்புக் கவசத்தைப் பிளந்து கொண்டு தைத்தது. அம்புகள் தைத்த வலி தாங்காமல் வேதனையுற்ற கர்ணன் கை சோர்ந்து பேசாமல் நின்று விட்டான். அவன் மார்பிலிருந்து இரத்தம் ஒழுகி வடிந்து கொண்டிருந்தது. அவனுடைய வேதனை நிறைந்த நிலையை உணர்ந்த அர்ச்சுனன் அவனோடு மேலும் போர் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டான். சிறிது நேரம் தங்கி நின்ற கர்ணன் பின் மீண்டும் பழைய துணிவை அடைந்து சேர மன்னனோடு போரிட்டான்! போர்க்களத்தின் பிற பகுதிகளிலும் இருசாராருக்கும் போர் விறுவிறுப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. சகுனி பாண்டிய மன்னனோடும், சகாதேவன் துச்சாதனனோடும் அசுவத்தாமன் வீமனோடும், கேகய மன்னன் சுகுதகீர்த்தியோடும், கிருத வன்மன் சிகண்டியோடும், துட்டத்துய்ம்மன் கிருபாச்சாரியனோடும் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். போரில் அழிந்தவர்களின் சடலங்களும் அறுபட்ட கைகால் உறுப்புக்களும் குருதியும் சிந்திக் கிடந்ததனால் அங்கங்கே கவந்தங்களும் கூளிப் பேய்களும் கூடித் தென்பட்டன. வெற்றிக்குத் தோல்வியா, தோல்விக்கு வெற்றியா என்று காணமுடியாதபடி இருந்த அந்தப் போர்க்களத்தின் நிலை பயங்கரமாக ஒழுங்கற்ற சோகத்தின் உருவத்தில் மூழ்கிக் கிடந்தது. அர்ச்சுனன் கைவில்லினால் சாவதற்கென்றே வரம் பெற்றவர்களைப் போல் எதிரிகள் மடிந்து கொண்டிருந்தார்கள். துரியோதனனுக்கு மிகவும் வேண்டிய வீரர்கள் பலரை விண்ணுலகுக்கு அனுப்பினான் அவன். மீதமிருந்தவர்கள் பயந்து துரியோதனன் இருந்த இடத்தை நோக்கி ஓடினர். தன்னுடைய எல்லாப் படைவீரர்களையும் அர்ச்சுனன் துரத்தி அடிப்பதைப் பார்த்த துரியோதனன், தானே ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு அவனை எதிர்க்க முன் வந்தான். ஆனால் துரியோதனனும் அவன் திரட்டிக் கொண்டு வந்த படைகளும் அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைவதற்குள்ளேயே நடுவில் தருமன் வந்து மடக்கிக் கொண்டான். தருமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் கடுமையாகப் போர் புரிந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் ஆத்திரத்தோடு அம்புகளை ஏவிக்கொண்டார்கள். இருவர் படைகளிலும் குதிரைகளும், யானைகளும், காலட்களும் கணக்கின்றி இறந்து விழுந்தனர். போர்க்களம் ‘இது இரத்தசமுத்திரமோ?’ எண்றெண்ணி அஞ்சும் அளவிற்குப் பயங்கரமாக மாறிவிட்டது. தருமன் துரியோதனனுடைய வில்லை அறுத்துத் தேரை அச்சு முறிந்து விழச் செய்தான். தேரோட்டியையும் கொன்று விட்டான். துரியோதனன் கையில் ஆயுதமின்றி நிற்கத் தேர் இன்றித் தரையில் அனாதரவாக நின்றான். அங்கே இங்கே ஓடிவிட முடியாமல் தருமனும் தருமனுடைய படை “துரியோதனா! வெறும் சதுரங்கக் காய்களை வைத்துக் கொண்டு விளையாடும் சூது விளையாட்டு அன்று இது. இங்கே சூழ்ச்சியும் வஞ்சகமும் பலிக்க மாட்டா. உண்மையான வீரம் இருந்தால்தான் இங்கே வெற்றி பெற முடியும். உன்னைப் போன்றவர்களுக்கு உண்மையான வீரம் இருக்குமென்று நான் நம்பவில்லை. இதோ அனாதையைப் போல் எனக்கு முன்னால் நிற்கிறாய். நான் நினைத்தால் ஒரேயொரு அம்பினால் உன்னைக் கொன்றுவிட முடியும். ஆனால் நான் உன்னைக் கொன்றுவிட்டால் ஏற்கெனவே உன்னைக் கொல்வதாக என் தம்பி வீமன் செய்திருக்கும் சபதம் வீணாகப் போய்விடும். அதற்காகத்தான் இப்போது உன்னை உயிருடன் விடுகிறேன். போ! ஓடிப்போய் விடு. இனி இந்தப் போர்க்களத்தில் என் முகத்தில் விழிக்காதே,’ தருமன் கூறியதைக் கேட்காமல் திரும்பவும் ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டு படைகளுடன் அவனை எதிர்க்க வந்தான் துரியோதனன். தருமனோ தொலைவிலிருந்தே அம்புகளைக் சரமாரியாகத் தொடுத்துத் துரியோதனனையும், அவன் படைகளையும் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்து விட்டான். அந்தச் சமயத்தில் துரியோதனன் மட்டும் ஓடாமல் நின்றிருந்தால் தருமனுடைய அம்புகள் நிச்சயம் அவன் உயிரைப் பறித்திருக்கும். தருமனிடம் தோற்றுப் படைகளோடு பதறியடித்துக் கொண்டு ஓடிவரும் துரியோதனனைக் கர்ணன் கண்டான்! உள்ளூர அவனுக்கு வெட்கமாக இருந்தது. “துரியோதனா பயப்படாதே இப்போது நானும் கூட வருகிறேன். நாம் இருவருமாகச் சேர்ந்து கொண்டு தருமனை எதிர்த்து அழிப்போம்” - என்று கூறி அவனையும் அழைத்துக்கொண்டு தருமனை எதிர்க்கச் சென்றான் கர்ணன். அப்போது அசுவத்தாமனும் அங்கு வந்து சேர்ந்தான். “என் தந்தை சாவதற்குக் காரணமாக இருந்த அந்தத் தருமனை எதிர்ப்பதற்கு நானும் உங்களுடன் துணைக்கு வருகிறேன்” -என்று அவனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இவர்கள் மூன்று பேரும், இவர்களுடைய படைகளும் போதாதென்று கிருபாச்சாரியனும், சல்லியனும், வேறு தங்கள் படைகளோடு இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். ஆகவே, துரியோதனன், கர்ணன், அசுவத் தாமன், கிருபாச்சாரியன், சல்லியன், என்ற ஐந்து பேர்களும் சேர்ந்து கடல் போன்ற படைகளுடனே திரண்டு சென்று தருமனை வளைத்துக் கொண்டு போரிடுவதற்கு முற்பட்டார்கள், தருமனுக்கு ஏற்பட்ட இந்த அபாயத்தை அர்ச்சுனன் முதலியவர்கள் கண்டனர். உடனே அவர்களும் படைகளோடு ஒன்று திரண்டு தருமருக்கு உதவியாக வந்து நின்று கொண்டார்கள். நல்ல சமயத்தில் தருமன் காப்பற்றப்பட்டான். தருமனைச் சுலபமாக வென்றுவிடலாம் என்றெண்ணிக் கொண்டு வந்திருந்த துரியோதனன், கர்ணன் முதலியவர்கள் அர்ச்சுனன் உதவிக்கு வந்ததைக் கண்டதும் திடுக்கிட்டனர். இருவருக்கும் போர் ஆரம்பமாயிற்று. நீண்ட நேரம் போர் நடந்த பிறகு துரியோதனனுடைய படைவீரர்கள் மிரண்டு ஓடத் தலைப்பட்டனர். படைகள் ஓடிவிட்டதும் கர்ணன் முதலியவர்களும் புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர். தருமனின் வெற்றி சத்தியத்தின் வெற்றியாக நின்றது. அந்த நிலையில் பதினாறாவது நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவதற்குரிய நேரமும் வந்தது. ஆகையால் அன்றைய போர் நிகழ்ச்சிகள் அவ்வளவில் நின்றன. பதினேழாம் நாள் காலை விடிந்த பொழுது வெறும் பொழுதாக விடியவில்லை. ஆத்திரம் நிறைந்த பொழுதாக விடிந்தது. முதல் நாள் அடைந்த தோல்வியை எண்ணிக் கொதிக்கும் உள்ளத்தோடு மறுநாள் போருக்குத் தயாரானார்கள் கௌரவர்கள். பாண்டவர்களோ, அன்றையப் போரிலும் வெற்றியைத் தாங்களே அடைய வேண்டுமென்று ஆர்வத்தோடு புறப்பட்டிருந்தார்கள். கர்ணன் அன்று போருக்குப் புறப்பட்ட போது மிக அற்புதமான அலங்காரத்துடன் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளித்தான். நிர்மலமான ஒளிநிறைந்த அவன் முகம் காண்போரைக் காந்தம் போலக் கவர்ந்து இழுத்தது. அணையப் போகிற தீபம் சுடர்குதித்து எரிகின்ற மாதிரி விளங்கிற்று அந்த அழகு. அன்று அந்தப் பதினேழாவது நாள் அவனுடைய வாழ்வை நிர்ணயிக்க வேண்டிய நாள். மனத்தினுள் அன்று காரணம் புரியாத ஒருவிதக் கலக்கம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு முடிவினால் எங்கோ ஓர் இடத்திற்குப் போகப் போவது போன்ற கலக்கம். அது தானாகவே அவனைப் பீடித்தது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தன் அறிவையெல்லாம் ஒன்று திரட்ட முயன்றான் அவன். முடியவில்லை. தயங்கும் உள்ளமும் தயங்காத கால்களுமாக அவன் பதினேழாவது நாள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டான். துரியோதனனுடைய மனத்தில் கர்ணனுக்கு ஏற்பட்டிருந்ததைப் போலக் கலக்கம் எதுவும் ஏற்படாவிட்டாலும் போரில் யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி என்று உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்திருந்தது. இந்த மாபெரும் போரில் எத்தனையோ பல உறவினர்களைக் கொன்றான். அதே போலப் பாண்டவர்கள் வில்லுக்குப் பலரைப் பலிகொடுக்கவும் செய்தான். இவ்வளவும் செய்த பின்னும் வெற்றி இதுவரை அவனுக்குக் கிட்டவில்லை. இது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது அவனுக்கு. துரியோதனன் கர்ணன், இவர்கள் இருவர் மனத்தில் மட்டுமில்லை, ஒவ்வொரு கெளரவ வீரனிடமும் அந்திமகாலத்தின் நம்பிக்கையற்ற ஆசைச் சிதறல்கள் தெளிவில்லாத முறையில் குமுறிக் கொண்டிருந்தன. அந்தப் பதினாறு நாட்களாக ஏற்படாத குமுறல் அன்றைக்கு மட்டும் ஏற்படுவானேன்? முடிவு நெருங்கும் போது ஆற்றமாட்டாத இதயத்தின் அவலம் அப்படித்தான் குமுறுமோ, என்னவோ? துட்டத்துய்ம்மன், தருமன், வீமன், கண்ணன், அர்ச்சுனன் முதலியவர்களும் போருக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்த கெளரவ சேனையிலுள்ள ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு அரசனும் முதல்நாள் புறமுதுகு காட்டி அஞ்சி ஓடியவர்கள் தாம். ஆனாலும் வெட்கமின்றி மீண்டும் போருக்கு வந்திருக்கிறார்கள். “கண்ணா! உன்னை ஒன்று கேட்கிறேன், இந்த உலகத்தில் அறிய முடியாததும் ஏதாவது இருக்கிறதா? இந்தப் போர் இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் நடந்து கொண்டிருக்கும்? என்றாவது ஒருநாள் முடிவு தெரிந்துதானே ஆகவேண்டும் இருபக்கமும் பதினாறு நாட்களாக எவ்வளவு உயிர்கள் மடிந்திருக்கும்? கர்ணனுடைய முடிவு எப்போதோ?” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கேட்டான். தருமனுடைய கேள்வியில் இலட்சியம் நிறை வேறத் தாமதமாகும் போது ஏற்படும் தயக்கமும் ஏக்கமும் தொனித்தன். “தளராதே தருமா! உன் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கு மறுநாள் அஸ்தினாபுரியின் அரியணையில் பாண்டவர்களின் ஏகப் பிரிதிநிதியாக நீ அரசு வீற்றிருக்கப் போகிறாய். இன்று போர் முடிவதற்குள் கர்ணனின் காலமும் முடிந்து விடும். அர்ச்சுனன் கைகளால் கர்ணனுக்குச் சாவு நேரும். நாளைக்குப் போர் முடிவதற்குள் வீமன் கைகளால் துரியோதனனுக்குச் சாவு நேரும்” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான். வெறும் சிரிப்பா அது? காலத்தையே வென்று கபளீகரம் செய்யும் சிரிப்பு அப்போது கண்ணன் சிரித்த சிரிப்பு. கண்ணனின் பேச்சும், சிரிப்பும், தருமனுக்கு நிறைய ஆறுதலை அளித்தன. நன்றிப் பெருக்கால் தருமன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். தழுதழுக்கும் குரலில் அவனைப் பாராட்டினான். “மாயாவதாரனே! எங்களையும் எங்கள் நலனையும் காப்பாற்றுவதற்காகவே நீ பிறந்தாய் போலிருக்கிறது. இன்று வரை நீ எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளை எவ்வாறு அளவிட்டு எண்ணுவது? கங்கை நதியில் துரியோதனன் நட்டிருந்த கழுக்களிலே பாய்ந்து செத்திருக்கவேண்டிய எங்களை அன்று நீதான் காப்பாற்றினாய். எங்கள் மானத்தைப் பறித்தது போதாமல், அவை நடுவில் திரெளபதியின் மானத்தைப் பறிக்க முற்பட்ட நேரத்தில் சத்திய வடிவான தோன்றாத்துணையாக வந்து காப்பாற் றினாய் துருவாச முனிவன் துரியோதனனால் ஏவப்பட்டுப் பசி வெறியோடு எங்களைச் சோதிக்க வந்தான். அட்சய பாத்திரத்திலிருந்து பருக்கையை உண்டு துருவாசரைப் பசி தணிவித்து எங்களை வாழ்த்திவிட்டுச் செல்லுமாறு செய்தாய். எல்லாரையும் யாவற்றையும் ஏவி வாழும் நீ என் ஏவலை மேற்கொண்டு கெளரவர்களிடம் எனக்காகத் தூது சென்றாய் விதுரன் எங்களுக்கு எதிரியாகாமல் வில்லை முறித்தெறிந்துவிட்டு யாத்திரை போகுமாறு ஏற்பாடு செய்ததும் நீதான் . உனது மாயங்களின் மகிமையை அளவிட நான் யார்? இந்தப் போர் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் விநாடியும் நீ எங்களுக்குச் செய்திருக்கும். உதவிகளுக்கு நன்றி செலுத்த நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் காணாது” - தருமன் சாஷ்டாங்கமாகக் கண்ணனுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். கண்ணன் தருமனை அன்போடு எழுப்பி மார்புறத் தழுவிக் கொண்டான். “பாண்டவர்களாகிய உங்கள் ஐவரையும் காப்பாற்றி, வாழ்விப்பதற்குத் தானே நான் வாழ்கிறேன். உங்களுடைய சகல சுக துக்கங்களையும் நான் ஒருவனே தாங்குகிறேன். கவலைப்படாதீர்கள்” என்று தருமனுக்குப் பதில் கூறிவிட்டுக் கண்ணன் துட்டத்துய்ம்மன் பக்கம் திரும்பினான். “துட்டத்துய்ம்மா! இதுவரை தருமனும் நானுமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டோம். நீயும் மற்றவர்களும் கூட அதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டீர்கள். போருக்கு நேரமாகிவிட்டது. அதோ எதிரிகளைப் பார்! அவர்கள் தயாராகிவிட்டார்கள். நீயும் படைகளை அணிவகுத்து நிறுத்து” துட்டத்துய்ம்மன் உடனே படைகளை அணிவகுத்து வரிசை வரிசையாக நிறுத்தினான். தருமன் முதலியவர்களும் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டனர். எதிர்த் தரப்பில் கர்ணன் சல்லியனைத் தன்னுடைய தேர்ப்பாகனாக அமர்த்திக் கொண்டான். அர்ச்சுனனுக்குச் சூழ்ச்சியும் வல்லமையும் மிகுந்த கண்ணன் தேரோட்டியாக அமைந்திருப்பதனால் தனக்கும் அத்தகைய தேர்ப்பாகன் ஒருவன் வேண்டுமென்று துரியோதனனிடம் அனுமதி பெற்றே சல்லியனைத் தேர்ந்தெடுத்து நியமித்துக் கொண்டிருந்தான். “உனக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தால்தான் உன்னிடம் நான் பெற்றிருக்கும் உதவிகளுக்கு நன்றி செலுத்திய திருப்தி எனக்கு ஏற்படும். துரியோதனா! நீ துணிவு கொள். அஞ்சாதே! இந்த கர்ணன் உயிருடன் இருப்பதற்குள் சகல சாம்ராஜ்யங்களையும் வென்று உன் காலடியில் குவிக்கப் போகிறான். அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய செஞ்சோற்றுக்கடன் எப்படிக் கழிவது?” - என்று கர்ணன் பெருமையாக வீர மொழிகளைப் பேசிக் கொண்டான். அந்திம காலத்துப் போர் கர்ணனின் வேண்டுகோள்படியே சல்லியனை அழைத்துத் துரியோதனன் அவனுக்குத் தேரோட்டியாக அமர்த்திக் கொடுத்தான், சல்லியனும் கர்ணனுக்குத் தேரோட்டியாக அமருவதற்கு இணங்கினான். “சல்லியா, பாண்டவர்களில் அர்ச்சுனன் வெற்றி மேல் வெற்றி அடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? எல்லா வகைகளிலும் திறமை வாய்ந்தவனாகிய கண்ணன் அவனுக்குத் தேரோட்டியாக அமைந்திருப்பதுதான் காரணம். நீயும் அதுபோல் கர்ணனுடைய தேரோட்டியாக அமைந்து சிறப்பிக்க வேண்டும்” - என்று துரியோதனன் வேண்டினான். முதலில் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கி விட்ட சல்லியன் பின்பு ஆற அமரச் சிந்தித்தான். திடீரென்று என்ன நினைத்துக் கொண்டானோ! எப்படி மனம் மாறினானோ! கர்ணனுக்குத் தேரோட்டியாக இருப்பது தன் சுயமரியாதைக்கே அகெளரவம் போலத் தோன்றியது அவனுக்கு, சல்லியன் ஆத்திரங் கொண்டு கண்கள் சிவக்க வாய் துடிதுடிக்கச் சினத்தோடு துரியோதனனை எதிர்த்துப்பேச ஆரம்பித்தான்:- “துரியோதனா! நீ என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாய் யாருக்கு யார் தேரோட்டுவது? எதற்காக ஓட்டுவது? மத்திரதேசத்து மன்னனாகிய என்னைப் போன்ற பேரரசன் ஒருவன் கேவலம் ஊர் பேர் தெரியாமல் உன்னை வந்து அண்டிய கர்ணனுக்குக் கீழ்ப் படிந்து தேரோட்ட வேண்டுமா? என்னுனடய வீரத்திற்குக் கர்ணனுடைய வீரத்தை இணை சொல்ல முடியுமா? வேண்டுமானால் ஒன்று செய்! பகைவர்களுடைய படையை இரு பிரிவாகப் பிரித்து என்னிடமும் கர்ணனிடமும் அவற்றை அழிக்கச் சொல்லிக் கட்டளையிடு! யார் முதலில் வெற்றிவாகை சூடுகிறார்கள் என்று பார்! நான் முதலில் மிக விரைவாக என் பங்குப் படைகளை அழித்து விட்டுப் பின் கர்ணன் பங்குப் படைகளையும் என் கையாலேயே அழித்துவிடுவேன். அத்தகைய பேராற்றலும் பெரும் வீரமும் உள்ள என்னைத் தேரோட்டி மகனாகிய கர்ணனுக்கு சாரதியாக அமரச் சொல்கிறாயே! நாக்குக் கூசாமல் இச்சொற்களைக் கூறி நீ எவ்வாறு எனக்கு இந்தக் கட்டளையை இட்டாய்?” சல்லியனின் திடீர் மனமாற்றத்தைக் கண்டு துரியோதனன் திடுக்கிட்டான் மனத்திற்கு இதமான சொற்களைக் கூறி அவனைச் சமாதானப்படுத்த எண்ணினான். துரியோதனன் உடனே மீண்டும் சல்லியனை அருகில் அழைத்துக் கூறலானான். “சல்லியா! நான் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு ஆத்திரப்படாதே. உன்னை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காக உனக்கு நான் இந்தக் கட்டளையை இடவில்லை. உன்னுடைய திறமையையும், தகுதியையும், உணர்ந்து கொண்டுதான் உனக்குப் பெருமை அளிக்கத் தக்க விதத்தில் இந்தக் கட்டளையை இடுகின்றேன், சர்வேசுவரனாகிய ஸ்ரீ கண்ணபிரான் தனக்கு அடங்கிய ஒரு சிறு வீரனான அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருக்க வில்லையா? வீரமும் ஆண்மையுமில்லாத உத்தரகுமாரனுக்கு மகாவீரனான அர்ச்சுனன் தேரோட்டியாக இருக்கவில்லையா? அதனாலெல்லாம் அவர்களுக்கு அவமானமா ஏற்பட்டு விட்டது? இந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் உன்னைத் தவிர வேறு யார் தேரோட்டியாக இருந்தாலும் கெளரவர்களுக்கு வெற்றி கிட்டாது என்ற பெரிய நம்பிக்கையோடு உன்னை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், மறுக்காமல் ஏற்றுக்கொள்.” துரியோதனன் சோகம் ததும்பி நிற்கும் சொற்களால் உருக்கமாக வேண்டிக் கொண்ட வேண்டுகோள் சல்லியனுடைய சினத்தையும் மனத்தையும் ஒருங்கு நெகிழச் செய்தது. கர்ணனுக்குத் தேர் ஓட்டுவதற்குத் தான் முழு மனத்தோடு இணங்குவதாக அறிவித்தான் சல்லியன். துரியோதனருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. சல்லியனுடைய சம்மதம் கெளரவ சேனையில் யாவருக்குமே மகிழ்ச்சி அளித்தது. தனக்குத் தேர் ஓட்டியாக இருப்பதற்குச் சல்லியன் இணங்கிய செய்தி தெரிந்ததும் கர்ணன் முன்பு இந்திரனுக்கு அளித்து இழந்த கவச குண்டலங்களைத் திரும்பப் பெற்றது போலக் களிப்புக் கொண்டான். கர்ணனுடைய தேரில் அழகிய உயர்ந்த சாதிக் குதிரைகளைப் பூட்டித் தயார் செய்து கொண்டபின் தேரோட்டியின் ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் சல்லியன். படைகள் போருக்கு ஏற்ற முறையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. போரில் தனக்கு வெற்றிகளும், நலங்களும், விளையவேண்டுமென்று போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் பலதான தருமங்களைச் செய்தான். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எல்லோரும் கர்ணனிடமிருந்து தானம் பெற்றுத் திருப்தி கொண்டனர். போர் தொடங்குவதற்கு முன்னால் கர்ணன் சல்லியனுக்குச் சில வீர உரைகளைக் கூறினான். “சல்லியா! நீ தேரோட்டியாக அமைந்தது என்னுடைய பெரும் பாக்கியம். எனக்கு வெற்றி கிடைப்பதற்கு ஒரு சிறந்த நன்னிமித்தம். பகைமையை நாசம் செய்யக் கூடிய சக்தி வாய்ந்தவில் என்னிடம் இருக்கிறது. அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே சக்தி மிக்க நாகாஸ்திரத்தை என் வசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய யுத்தத்தில் எல்லா வெற்றிகளும் நம் பக்கமே நிகழ்வதற்குரிய வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கண்ணபிரானை விடச் சிறந்தவனாகிய நீயே எனக்குத் தேரோட்டியாக அமைந்திருக்கிறாய்!” கர்ணன் சல்லியனிடம் பேசிய பேச்சில் தற்பெருமை நிறைந்திருந்தது. ஏற்கெனவே கர்ணனைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவனாகிய சல்லியனுக்கு இந்தத் தற்புகழ்ச்சி கொஞ்சமும் ஏற்றதாகப் படவில்லை “ஏன் இந்த வீண் பெருமை? வாய்ப் பேச்சில் இதைப் பேசி என்ன பயன்? அல்லது உன் பெருமைகளை நான் ஒருவன் தெரிந்து கொள்வதனால் என்ன ஆகப்போகிறது? நீ உண்மையிலேயே வீரனானால் வாய்ப் பேச்சை விட்டு விட்டு அர்ச்சுனனோடு போர் செய்யும்போது உன் ஆண்மையைக் காண்பிக்க வேண்டும். வெறும் வாய் பேச்சுப் பேசிப் பயன் இல்லை. உன் வீரம் எத்தகையது? அர்ச்சுனனுடைய வீரம் எத்தகையது? இருவருடைய வீரத்தின் தராதரத்தையும் நான் நன்கு அறிவேன். நீங்கள் இருவரும் செய்யப் போகிற போரின் முடிவு தெரிந்த பிறகு உங்களில் யார் வீரர் என்பது தானாகவே தெரிந்து போகும்!’ - சல்லியனுடைய பேச்சு கர்ணனை மறைமுகமாகக் குத்திக் காட்டி அவமானப்படுத்தியது. கர்ணன் வெகுண்டெழுந்தான். சல்லியனை அந்த விநாடியில் அங்கேயே கழுத்தை நெரித்துக் கொன்று விடத் துடித்தன அவன் கரங்கள். “சல்லியா! இந்த நட்ட நடுப் போர்க்களத்தில் இத்தனை வீரர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் இடையே வேண்டுமென்றே என்னை நீ அவமானப்படுத்தி விட்டாய். உன் தகுதியை மீறி நீ பேசலாமா? சம்மதமானால் தேரை ஓட்டு! இல்லாவிட்டால் தேர்த்தட்டிலிருந்து கீழே இறங்கி உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ! என்னுடைய தகுதியைப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?” சல்லியனின் விழிகள் சிவந்தன. புருவங்கள் வளைந்து ஆத்திரம் கோடிட்டது. தேர்த்தட்டிலிருந்து கீழே குதித்து அவன் தன் இடையிலிருந்த வாளை உருவினான். கர்ணனுக்கு முன்னால் அவனை எதிர்த்துச் சல்லியனின் வாள் வேகமாச் சுழன்றது. “அடே! ஊர் பேர் தெரியாத கர்ணா! உனக்கு நான் எதற்காகத் தேரோட்ட வேண்டும்? நீ எலியை ஒத்தவன், இழிந்தவன். பூனை எங்கேயாவது எலிக்குப் பணிந்து நடக்குமா? உன்னால் முடியுமானால் என் வாளுக்குப் பதில் கூறு.” சல்லியனுடைய சொற்களால் சினங்கொண்ட கர்ணனும் தேரிலிருந்து கீழே குதித்து வாளை உருவி விட்டான், சல்லியனுக்கும், கர்ணனுக்கும் பயங்கரமான வாட்போர் நடக்கத் தொடங்கிற்று. தாங்கள் இருவரும் ஒரு தரப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமையுணர்வையும் மறந்து பகைவர்களெல்லோரும் கைகொட்டிச் சிரித்து இகழும் படியாக இவர்கள் வாட்போர் வளர்ந்தது. தூரத்திலிருந்த துரியோதனன் இந்த விபரீத நிகழ்ச்சியைப் பார்த்து விட்டான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் ஓடோடி வந்து கர்ணனுக்கும் சல்லியனுக்கும் நடுவே நுழைந்து வாள்களின் சுழற்சியை நிறுத்தினான். “கர்ணா! சல்லியா! ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல நீங்கள் இப்படிக் கேவலமாக நடந்து கொள்ளலாமா? உங்களுடைய இந்த உட்பகையைப் பகைவர்களுக்கு முன்னால் எல்லோரும் காணும் படியாக வெளிப்படுத்தலாமா? முதலில் சொந்தப் பகைகளை மறந்து விட்டுக் கடமைகளைச் செய்யுங்கள்.” என்று பலவாறு சமாதான வார்த்தைகளைக் கூறி இருவரையும் போர் நீங்கி மீண்டும் ஒன்றுபடச் செய்தான். கர்ணனும் சல்லியனும் அப்போதைக்குத் தங்கள் பகைமையை மறைத்துக் கொண்டு கடமையில் முனைந்தனர். அவர்கள் மனத்திலுள்ள பகையுணர்ச்சியை அறவே மாற்றி விட வேண்டுமென்று கருதிய துரியோதனன் மேலும் சில அறிவுரைகளை அவர்களுக்குக் கூறினான். “மகா மாயவனாகிய கண்ணனுடைய கருத்துக்கு இணங்கி விதுரன் என் கண்முன்பே வில்லை ஒடித்தெறிந்துவிட்டுத் தீர்த்த யாத்திரை போய் விட்டான். முதலில் எனக்குப் படையுதவி செய்வதாக வாக்களித்த பலராமனும் கடைசியில் மனம் மாறி விதுரனோடு சேர்ந்து கொண்டு தீர்த்த யாத்திரைக்குச் சென்றுவிட்டான். பாட்டனாராகிய வீட்டுமர் அதியற்புதமான முறையில் போர் செய்துவிட்டு மரணப்படுக்கையை அடைந்துள்ளார். விற்கலையில் வல்லவராகிய துரோணர் போரிலே வீர சொர்க்கம் அடைந்து விட்டார். முருகப்பெருமான் அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்தருளினான். அதுபோல் நீங்களும் என்னைக் காக்க வேண்டும். கர்ணா! சல்லியன் மேல் இருக்கும் விரோதத்தை இந்தக் கணத்தோடு உன் மனத்திலிருந்து அகற்றிவிடும். அவன் பாண்டவர்களுக்கு உறவினனாயினும் இப்போரில் நமக்கு உதவி செய்கிறவன். என் மேல் பேரன்பு கொண்டவன். விற்போரில் வல்லாளன். தன்னிகரில்லாத போர்வன்மை கொண்டவன். என்னுடைய வேண்டுகோளுக்காகவே உனக்குக் கீழ்ப்படிந்து உன்னுடைய தேரோட்டியாக அமைந்துள்ளான். நல்ல சுபாவமுள்ள இவனோடு பகைத்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதே. இருவரும் ஒற்றுமையாகப் போரில் ஈடுபடுங்கள். பகைவர்களை வெற்றி கொள்வதில் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுங்கள்.” துரியோதனனுடைய சொற்கள் கர்ணன் சல்லியன் இருவர் மனத்திலுமிருந்த குரோதத்தைப் போக்கின. இருவரும் வாட்போரை நிறுத்தினர். பகைமை தற்காலிகமாக மறைந்துவிட்டது. இருவரும் பழையபடி தேரில் ஏறிக் கொண்டனர். அந்தச் சமயத்தில் பாண்டவர் பக்கமிருந்து துட்டத்துய்ம்மன் படைகளோடு போருக்குப் புறப்பட்டு வந்தான். சோமக வம்சத்தைச் சேர்ந்த தலைமை சான்ற பெருவீரர்கள் பலரும் துட்டத்துய்ம்மனோடு சேர்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பெரிய படை கர்ணனுடைய தேர் நின்று கொண்டிருந்த இடத்தை யடைந்ததும் சோனாமாரியாக மழை பெய்வதுபோல் அம்புகளை எய்தது. சல்லியன் சாமர்த்தியமாகத் தேரை முன் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். கர்ணனும் தன்னுடைய படைகளுடன் துட்டத்துய்ம்மன் கோஷ்டியரை எதிர்த்துப் போர் புரிந்தான். விரைவில் போர் உச்சநிலையை அடைந்தது. வீரர் பலர் இரு தரப்பிலும் அம்புகள் பட்டு ஆற்ற முடியாமல் இறந்தனர். திடீரென்று கர்ணனும் அவனுடைய படைகளும் விரைவாக முன்னேறினர். துட்டத்துய்ம்மனை மிகக் கடுமையாகத் தாக்கினான் கர்ணன். அந்தத் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் தன்னுடைய தேரை வந்த வழியே திருப்பிச் செலுத்திக் கொண்டு தோற்று ஓடினான் துட்டத்துய்ம்மன். தங்களுடைய படைத் தளபதியாகிய துட்டத்துய்ம்மனைக் கர்ணன் தோற்று ஓடச் செய்வதைப் பார்த்தான் தருமன். உடனே அவன் வீமனை அழைத்து “நீ போய்க் கர்ணனை எதிர்த்துப் போர் செய்து அவன் கொட்டத்தை ஒடுக்கு” என்று ஏவினான். அதை நிறைவேற்றக் கருதி ஆத்திரத்தோடு கர்ணனிருந்த திசையில் பாய்ந்து சென்றான் வீமன். அவனுக்கும் கர்ணனுக்கும் பயங்கரமான வில்யுத்தம் ஆரம்பமாயிற்று. இருவர் உடம்புகளும் அம்புக் குவியலின் இடையே மறைந்து விடுமோ என்று அஞ்சும்படியாக விற்களிலிருந்து அம்புகள் பாய்ந்து கிளம்பின. வீமனுக்கு அப்போது கர்ணன் மேலே இருந்த கோபத்தில் அவனைக் கொன்று தீர்த்துவிடலாம் போலத் தோன்றியது. ஆனால் அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டான். காரணம் என்ன? தன் கையால் கர்ணனைக் கொல்லப் போவதாய்ச் சபதம் செய்திருந்தான் அர்ச்சுனன். ‘அவனுடைய அந்தச் சபதம் வீண் போய்விடக்கூடாதே, - என்று தான் கர்ணனைக் கொல்லுவதற்குத் தன் மனத்தில் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டதோடு மட்டுமின்றிக் கர்ணனுடன் போரிடுவதையே நிறுத்திவிட்டு வேறோர் பக்கமாக விரைந்து சென்று விட்டான். போர்க்களத்தின் வேறு பல பகுதிகளில் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சாத்தகிக்கும் - விடசேனனுக்கும், சோழனுக்கும் - மகதனுக்கும், அர்ச்சுனனுக்கும் - அசுவத்தாமனுக்கும் போர்கள் நடந்தன. சாத்தகியோடு போர் புரிந்த விடசேனன் தேரையும் ஆயுதங்களையும் பறிகொடுக்க நேர்ந்தது. சோழனோடு போர் புரிந்த மகதமன்னன் மாண்டு வீழ்ந்தான். அவனுடைய மரணத்தால் பயமடைந்த கெளரவசேனை அரண்டு பின்வாங்கி ஓடியது. அர்ச்சுனனுக்குச் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய இயலாத அசுவத்தாமன் முதுகு காட்டி ஓடிவிட்டான். இப்படி துரியோதனனைச் சேர்ந்தவர்கள் ளெல்லோரும் பயந்தும் ஆற்றாமலும் தோற்று ஓடிக் கொண்டிருந்தபோது அவன் தம்பிமார்களில் ஒருவனாகிய கதக்கண்ணன் முன் பக்கத்தில் பாய்ந்து ஓடி வந்தான். தன்னந்தனியாய் ஓடி வந்த அந்த இளைஞனை நகுலன், தன் வில்லிலிருந்து அனுப்பிய அம்புகளால் மிரண்டு போய்த் திரும்பி ஓடச் செய்து விட்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் தோற்று ஓடி வந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு கர்ணன் தருமனை எதிர்க்க முன் வந்தான். கர்ணன் கோஷ்டியாரும், தருமன் கோஷ்டியாரும் எதிரெதிரே சந்தித்துப் போர் தொடங்கினார்கள். கூற்றுவனுக்கு நல்விருந்தாக இருபுறத்திலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். கர்ணன் எய்த சில கணைகள் தருமனுடைய உடலில் தைத்தன. கர்ணனுடைய இரண்டு தோள் பட்டைகளிலும் அம்புகள் நிறையப் பாய்ந்து குருதி வடிந்து கொண்டிருந்தது. எங்கே இரண்டு தோள்களும் அறுந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க அபாயகரமான நிலையில் இருந்தான் கர்ணன். போதாத குறைக்கு அவனுடைய வில்லை வேறு முறித்துக் கீழே தள்ளிவிட்டான் தருமன். இந்தத் தீய அறிகுறிகளெல்லாம் கர்ணனுடைய அந்திம காலம் நெருங்குவதைக் குறித்தன. தீயவன் தீர்ந்தான் குருதி வெள்ளத்தின் இடையே நின்று கொண்டிருந்த கர்ணனைத் தருமன் விட்டுச் சென்றதும் துட்டத்துய்ம்மனை மீண்டும் பிடித்துக் கொண்டான். சகாதேவன், தண்டதரன் தண்டகன், சித்திரதேவன் என்னும் பெயர்களை உடைய துட்டத்துய்ம்மனின் தம்பிமார்களும் அவனோடு கூடப் போருக்கு வந்திருந்தனர். ஆனாலும் கர்ணனுக்கும் துட்டத்துய்ம்மனுக்கும் நிகழ்ந்த போரில் இம்முறையும் துட்டத்துய்ம்மனே தோல்வியடையும் நிலைக்கு இளைத்துத் தளர்ந்து போனான். அந்த இக்கட்டான சமயத்தில் தருமன் தன்னுடைய படைகளோடு துட்டத்துய்ம்மனுக்கு உதவுவதற்காக அவனோடு வந்து சேர்ந்து கொண்டான், தனக்குத் தேரோட்டியாக இருந்த சல்லியனின் உதவியால் கர்ணன் உடலில் பல இடங்களில் காயம்பட்டிருந்தும் பொறுத்துக்கொண்டு ஆவேசத்தோடு போரிட்டான். தருமன் திரும்பவும் கர்ணனுடைய வில்லை ஒடித்தான். தேர்ச் சட்டங்கள் சிதறிப் போகுமாறு ஒடித்துத் தள்ளினான். தேரோட்டியாகிய சல்லியனின் உடம்பு சல்லடைக் கண்களாகுமாறு துளைத்தான், சல்லியனின் உடலில் அம்பு பாய்வதற்கு இனி இடமே இல்லை என்று சொல்லுமாறு அணுவளவு இடங்கூட எஞ்சவிடாமல் அம்புகள் பாய்ந்துவிட்டன. தேரின் முன்புறம் கட்டப்பட்டிருந்த குதிரைகளும் அம்புக்கு இரையாயின. கர்ணனுக்குத் துணையாக வந்திருந்த வடகலிங்கத்து வீரர்களைத் திக்குமுக்காடச் செய்து விட்டான் தருமன். எதிரிகள் யாவரையும் தோற்கச் செய்து முடித்தவுடன் தன் வெற்றிச் சங்கத்தை விண்ணதிர மண்ணதிர, எண்திசைகளுமதிர, எடுத்து முழங்கினான். ஈரேழு பதினான்கு புவனங்களிலும் அந்த வெற்றி முழக்கம் கணீரென ஒலித்து அடங்கிற்று. வெற்றி முழக்கத்திற்குப் பின் சிறிது நேரம் அமைதியிற் கழிந்தது. கர்ணன் தன் பாசறைக்குச் சென்று மீண்டும் படையெடுத்து வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். தருமன் முழங்கிய வெற்றிச் சங்கொலி ஓய்கிற நேரத்துக்கு இன்னொரு சங்கொலி அதனினும் பெரியதாக எதிர்ப்புறமிருந்து கிளம்பிற்று. தருமன் அந்தப் புதிய சங்கொலியைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கர்ணன் தேரில் நின்று சங்கு முழங்கியவாறே படைகளோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். தருமனுக்கு அருகில் வந்ததும் வில்லை வளைத்து அம்புகளைத் தொடுத்தான் அவன். திடீரென்று ஏற்பட்ட இந்தத் தாக்குதலைத் தருமன் சமாளிக்க முற்படுவதற்குள் அவனுடைய மார்பிலும் தோளிலும் சில அம்புகள் ஆழமாகப் பாய்ந்து விட்டன. தருமனுடைய தேரின் பல பகுதிகளிலும் அம்புகள் சடசடவென்று மோதியதால் தேர்ச்சங்கரங்களும் அச்சுகளும் முறிந்தன. தேர்ச் சாரதியின் உடலில் அம்புகள் மார்பு வழியே முதுகில் ஊடுருவிப் பாய்ந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. கர்ணன் தர்மனைப் பழிக்குப் பழிவாங்க எண்ணுகிறவனைப் போல ஆக்ரோஷமாகப் போர் செய்து கொண்டிருந்தான். தருமனும் கர்ணனை எதிர்த்து அம்புகளைச் செலுத்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால் கர்ணன் கைகளே மேலோங்கியிருந்தன. ஏனோ தெரியவில்லை. தருமனுடைய மனத்தில் தளர்ச்சியும் பயமும் தோன்றிவிட்டன. அன்று தருமனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை அதற்கு முன் என்று மேற்பட்டிராததாகும். சமயசஞ்சீவியைப் போல வீமன் தன் படைகளோடு அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வீமனைக் கண்டதும் தருமனை விட்டுவிட்டுக் கர்ணன் அவனோடு போர் செய்ய முன் வந்தான், கர்ணனுக்கும் வீமனுக்கும் போர் ஆரம்பித்து விடவே இடையிலிருந்த தருமனுக்கு ஓய்வு கொள்ள அவகாசம் கிடைத்தது. வீமனிடம் கர்ணனுடைய திறமைகள் பலிக்கவில்லை. வீமன் அவனை எதிர்த்துக் கடும் போர் செய்தான் மார்பில் ஆழமாகப் பாய்ந்த ஓர் அம்பு கர்ணனுக்குத் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. அவன் அப்படியே தன் நினைவு இழந்து மூர்ச்சையாகித் தேர்த் தட்டில் வேரறுபட்ட அடிமரம் போற் சாய்ந்தான். அதைக் கண்ட சல்லியன் கர்ணனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிவதற்கான சிகிச்சைகளைச் செய்யலானான். இதனால் சிறிது நேரத்தில் கர்ணனுக்கு மூர்ச்சை தெளிந்தது. பிரக்ஞை பெற்று எழுந்திருந்த கர்ணன் முன்னினும் அதிக ஆவேசத்தோடு போர் செய்யத் தொடங்கினான். அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் பலருடைய உயிர்களைப் பறித்தன, சிங்கசேனன் என்ற மகாவீரன் உட்பட ஏழுபாஞ்சாலர்களைக் கொன்றான் கர்ணன். அவனுடைய ஆவேசத்தைக் கண்டு வீமனே பயந்து போய்விட்டான். வீமனும் அவனுடைய படைகளும் போர்க்களத்திலிருந்து கர்ணனுக்கு எதிர் நிற்க முடியாமல் தறிகெட்டு ஓடத்தலைப்பட்டனர். கர்ணன் ஓடுகிறவர்களைத் துரத்த முற்படுவதற்குள் அர்ச்சுனன் படைகளோடு வந்து அவனை வழி மறித்துக் கொண்டான். இருவருக்கும் போர் ஏற்பட்டது. கர்ணன் படையிலும், அர்ச்சுனன் படையிலும், அவரவர்களுக்குத் துணையாகச் சில சிற்றரசர்களும் வந்திருந்தனர். எல்லோருமே வில்யுத்தத்தில் வல்லவர்களாக இருந்ததனால் இருதரப்புப் படைகளுக்கும் இடையே விற்போர் தொடங்கிற்று. கர்ணன் படையினரும் அர்ச்சுனன் படையினரும் எய்து கொண்ட அம்புகள் வான்வெளி யெங்கும் நீக்கமற நிறைந்து ஒரே அம்பு மயமாகக் காட்சியளித்தது. இவர்கள் இருவருக்கும் இந்த மாதிரிப் போர் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அசுவத்தாமன் தன் படைகளோடு தானும் வந்து கர்ணன் பக்கத்தில் சேர்ந்து கொண்டான். ‘அர்ச்சுனனுடைய சரீரத்தையே அம்புகளால் மூடிவிடுவேன்’ என்பது போல் ஒரே அசுர வேகத்தில் அசுவத்தாமன் அம்புகளைப் பொழிந்தான். அசுவத்தாமனுடைய தாக்குதலால் தளர்ச்சியடைந்த அர்ச்சுனன் திகைத்து நின்று விட்டான்! உடனே கண்ணன், “அர்ச்சுனா! இந்த அருமையான சமயத்தில் தளர்ந்துவிடாதே மனத்தைத் திடப்படுத்திக்கொள். அசுவத்தாமனை எதிலும் சாதாரணமானவனாக நினைத்து விட்டுவிடாதே! இது சரியான சமயம் அர்த்த சந்திர வடிவான அம்பு ஒன்றை எடு. அவன் மார்பைக் குறிவைத்து அதைச் செலுத்து” என்று அர்ச்சுனனைத் தேற்றினான். கண்ணனுடைய ஊக்கம் மிகுந்த சொற்களால் தெளிவு பெற்ற அர்ச்சுனன் பிறைச் சந்திரனைப் போன்ற உருவத்தில் அமைந்த அம்பு ஒன்றை எடுத்து அசுவத்தாமன்மேல் அதைத் தொடுத்தான். அந்த அம்பு அசுவத்தாமனுடைய மார்பில் பாய்ந்து மார்பைப் பிளந்தது. அதே அம்பு வேறொருவனை அந்நிலையில் தாக்கியிருக்குமானால் அவன் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போயிருப்பான். ஆனால் அசுவத்தாமன் சிரஞ்சீவித்துவ வரம் பெற்றவன். எளிய முறையில் மரணம் அவனை அணுக முடியாது. எனவே அம்பு பாய்ந்ததும் இறந்து விடவில்லை, மெல்லத் தளர்ந்து தேரின் மேல் விழுந்தான். அவனை விழவிடாமல் ஓடிவந்து தாங்கிக் கொண்டான் துச்சாதனன். அசுவத்தாமனுடைய உடல் கெளரவர் பாசறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் தெளிவும் வலிமையும் பெற்று இன்னோர் தேரில் ஏறிக்கொண்டு அர்ச்சுனனோடு போரிடுவதற்கு வந்தான் அசுவத்தாமன். அப்போது சித்திரவாகனன் என்னும் பாண்டிய மன்னன் அவனை வழிமறித்துக் கொண்டு போர் செய்ய ஆரம்பித்தான். பாண்டியனுக்கும் அசுவத்தாமனுக்கும் நிகழ்ந்த போரில் பாண்டியன் கை மேலோங்கியது. அவன் அசுவத்தாமனின் வில்லையும் தேரையும் தகர்த்தான். திரும்பிச் சென்ற அசுவத்தாமன் வேறு வில்லோடு வேறு தேரில் ஏறி வந்தான். பேரலைகளை வாரி இறைக்கும் மாபெருங் கடலையே வேல் கொண்டெறிந்து அடக்கிய பாண்டியனுக்கு அசுவத்தாமனையும் அவனோடு இருந்த சிறிய படையையும் அடக்குவது பெரிய செயலா? சித்திரவாகன பாண்டியனை எதிர்க்க முடியாமல் பல முறை புறங்காட்டினான் அசுவத்தாமன். கடைசி முறையாக ஆத்திரத்தோடு வந்த அசுவத்தாமன் பாண்டியனுடைய தேரை ஒடுக்கி நிறுத்திவிட்டான். சற்று நேரத்தில் தேர் ஒடிந்து போகுமாறு செய்யவே பாண்டியன் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு போரைத் தொடர்ந்தான். அசுவத்தாமன் அந்த யானையையும் அம்பு எய்து கொன்று விட்டான். ஏறிக் கொண்டு போர் செய்வதற்கு வேறு வாகனம் அகப்படாமல் திகைத்த பாண்டியன் தரையில் நின்று கொண்டே அசுவத்தாமனோடு போரிட்டான். பாண்டியன் செலுத்திய பல அம்புகள் அசுவத்தாமன் உடம்பைத் துளைத்துக் குருதி சிந்தச் செய்துவிட்டன. அம்புகள் பாய்ந்த வலியினாலும் பாண்டியன் மேலிருந்த கோபத்தினாலும் தூண்டப்பட்ட அசுவத்தாமன் சக்தி வாய்ந்த கணை ஒன்றை எடுத்துத் தொடுத்தான். அந்தக் கணை பாண்டியனுடைய மார்பில் பாய்ந்து ஊடுருவியது. பாண்டியன் அலறிக் கொண்டே கீழே விழுந்து உயிர் துறந்தான். அவனுடைய படைகள் பயந்து ஓடின, அசுவத்தாமனும் அவனைச் சேர்ந்த கெளரவர் படைகளும் வெற்றி முழக்கம் செய்தனர். அசுவத்தாமன் பாண்டியனைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியைத் தென்னாட்டின் மற்றோர் பேரரசனாகிய சோழ மன்னன் கேள்விப்பட்டான். ‘பாண்டியனைக் கொன்றவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்’ என்று சோழன் போர்க்கோலம் பூண்டுவந்தான். சோழனும் பாண்டவர் பக்கமே தன் படைகளோடு சேர்ந்திருந்தான். பாண்டவர்களுடைய பாசறை ஒன்றில் அவன் ஓய்வு கொண்டு உட்கார்ந்திருந்த போதுதான் சித்திரவாகன பாண்டியனுடைய மரணச் செய்தி அவனுக்கு எட்டியது. உடனே படைகளோடு போர்க்கோலம் பூண்டு அசுவத்தாமனை எதிர்ப்பதற்குக் கிளம்பி விட்டான் அவன். “ஏ! அசுவத்தாமா! தரையில் நின்று கொண்டு போர் புரிந்த சித்திரவாகன பாண்டியனை நீதேர்மேலிருந்து அம்பு செலுத்திக்கொன்றது நீதியாகுமா? நீ ஓர் ஆண் மகனாக இருந்தால் இப்படிச் செய்ததற்கு வெட்கப் படவேண்டும். உன் தந்தையைக் கொன்றானே துட்டத்துய்ம்மன், அவனைப் பழிவாங்குவதற்குத் திறமை இல்லை உனக்கு. நீயும் ஒரு வீரனென்று பெருமைப் பட்டுக்கொள்கிறாயே? என்று இகழ்ந்து கூறிக்கொண்டே சோழன் அசுவத்தாமனோடு போரிட்டான். சோழன் எறிந்த வேல் பாய்ந்து அசுவத்தாமன் பிரக்ஞையிழந்து வீழ்ந்தான். அவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு போய்த் துரியோதனனுடைய தம்பியர்களும் சகுனியும் பிரக்ஞை வரவழைப்பதற்கு முயன்றனர். சோழன் அன்று செய்த போரில் வேறு பல முக்கியமான எதிரிகள் இறந்தனர். துன்மருஷ்ணனின் அன்புக்குரிய மகன் சுவாகு, துன்முகனின் புதல்வனான சுவாது கர்ணன் குலக்கொழுந்தாகிய சங்கன் ஆகிய அரசிளங்குமாரர்கள் சோழனால் போரில் மாண்டு போயினர். இங்கு நிலைமை இவ்வாறிருக்க, போர்க்களத்தின் வேறோர் பகுதியில் வீமனும், துச்சாதனன் கோஷ்டியாரும் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தனர். துச்சாதனனுடன் அவனுடைய இளைய சகோதரர்கள் ஒன்பது பேர் உடனிருந்தனர். துச்சாதனன் தன் பலத்தையும் வலிமையையும் பெரிதாக நினைத்துக் கொண்டுவீமனை நோக்கி, “பாண்டவ வம்சத்தையே இன்று பூண்டோடு அழித்து விடுகிறேன். இது என்னுடைய சபதம்” - என்று கூறினான். அதைக்கேட்ட வீமன் இகழ்ச்சி தொனிக்கும் குரலில் பெரிய இடிச்சிரிப்புச் சிரித்தான். சிரித்துவிட்டுத் துச்சாதனனை நோக்கிக் கூறலானான் :- “அடே! துச்சாதனா! நீயும் ஓர் ஆண்மகன் மாதிரி எண்ணிக்கொண்டு பேச வந்து விட்டாயே. உன் ஆண்மையைப் பற்றி ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இன்று உனக்குக் கேடுகாலம். இனிமேல் அதிக நாழிகை நீ உயிரோடிருக்கப் போவதில்லை. உன்னைக் கொன்று என் சபதத்தை இன்று நான் முடித்துக் கொள்ளப் போகிறேன். திரெளபதியும், தன் கூந்தலை முடிந்து கொள்ளப் போகிறாள். உன் தொடையைப் பிளந்து ஒழுகும் குருதியில் என் கைகள் இன்று படியப் போகின்றன. இன்று உன்னை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன். நாளை உன் தமையனாகிய துரியோதனனை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன் எடு வில்லை” - என்று வீமன் இடிமுழக்கம் போன்ற குரலில் பேசி முடித்தான். துச்சாதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வில்லை வளைத்து வீமனுடன் போரிடத் தொடங்கினார்கள். வீமனும் அம்புகளைப் பொழிந்தான். துச்சாதனனின் சகோதரர்கள் ஒன்பது பேர் வரிசையாக அடுத்தடுத்து இறந்த வேதனை அவன் மனத்தை வாட்டியது. வீமனிடம் அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் போர் செய்தான். போரின் கடுமையால் இருவருடைய தேர்களும் அச்சு முறிந்து நொறுங்கிப் போயின. விற்போரை நிறுத்தி விட்டு, இருவரும் தரையில் குதித்தனர். கதாயுதங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் போரைத் தொடங்கினர். கதையோடு கதை மோதும் ஒலி விண்ணதிர எழுந்தன. மோதிய கதைகளில் சூடு பிறந்து கனற்பொறிகள் சிதறின. இருவரும் பாய்ந்து பாய்ந்து தாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் தழலெனச் சிவந்தன. உடலெங்கும் வியர்வை பெருகி வெள்ளமாக வழிந்தோடியது. அடியும் மோதலுமாக எவ்வளவு நேரந்தான் அந்தக் கதாயுதங்கள் தாங்கும் இருவர் ஆயுதங்களும் உடைந்து போயின. உடைந்த ஆயுதங்களைக் கிழே எறிந்துவிட்டு மற்போர் செய்ய ஆரம்பித்தார்கள் இருவரும். மூக்கு முகம் பாராமல் ஒருவரை ஒருவர் கடுமையாகக் குத்தித் தாக்கிக்கொண்டார்கள். ‘விண்’ ‘விண்’ - என்று குத்துக்கள் விழுந்தன. வீமன் துச்சாதனனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மேல் ஏறி உட்கார்ந்தான். துச்சாதனன் திமிறினான்; முடியவில்லை. வீமனுடைய முரட்டுக் கைகள் துச்சாதனன் மார்பைக் குத்திக் கீறின. இரணியனைத் திருமால் நரசிம்மாவதாரத்தில் குடலைப் பிளந்தது போல் துச்சாதனனின் மார்பைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் குருதியில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தான் வீமன். அதன்பின் துச்சாதனன் எழுந்திருக்கவேயில்லை. இரத்த வெள்ளத்தினிடையே துடிதுடித்துக் கொண்டு கிடந்தது தீமையே உருவமாகிய அவனுடைய உடல், வீமனுடைய சபதமும், துச்சாதனனுடைய வாழ்வும் திரெளபதியினுடைய கூந்தலும், அன்று ஒரே சமயத்தில் முடிக்கப்பட்டன. தீமையின் உருவமொன்று அழிந்து விட்டது.  சங்கநாதம் துச்சாதனனுக்கு இந்தக் கதி நேரிட்டதும் இதைக் கண்டு நடுங்கிப் போன அவனுடைய படைகள் போர்க் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தன. கெளரவர்களின் சேனாபதியாகிய கர்ணனால் கூட அந்தப் படைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வீமனுக்கு முன்னால் நிற்பதற்கே அஞ்சித் தறிகெட்டு ஓடியது படை துச்சாதனன் மார்பைப் பிளந்து வீமன் கொன்ற காட்சி யாவர் மனத்திலும் பயங்கரமும் கோரமும் நிறைந்த ஒரு குரூர நினைவாகப் பதிந்து போயிருந்தது. துச்சாதனன் வீமனால் கொல்லப்பட்ட செய்திகண்ணன் தருமன் முதலியவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் வீமன் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். வீமன் வெறியினால் துச்சாதனனுடைய உடலை இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தான். “திரெளபதியின் தலையை இழுத்த கைகள் இவையல்லவா? அவள் புடவையை இழுத்து அவமானப்படுத்த முயன்ற கைகளும் இவையல்லவா?” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கைகளை மிதித்துச் சிதைக்கத் தொடங்கினான். அளவு கடந்த வெறியால் துச்சாதனனுடைய இரத்தத்தை அள்ளிப் பருகுகிற அளவுக்குக்கூட வீமன் துணிந்து விட்டான். இரு கைகளாலும் பருகுவதற்காக அவன் இரத்தத்தை வாரி அள்ளியபோது நல்லவேளையாகக் கண்ணன் அந்த இடத்திற்கு வந்து அவனைத் தடுத்தான். “அந்தப் பாவியின் விஷ ரத்தத்தைப் பருகாதே, உடனே நிறுத்து” என்று கண்ணன் சப்தமிட்ட பின்பு தான் வீமனை அந்தச் செயலிலிருந்து நீக்குவதற்கு முடிந்தது. ‘சபதத்தை முடித்து விட்டேன். இனிமேல் கவலை இல்லை’ - என்று கூறிக் கொண்டே தருமனை வீமன் வணங்கினான். கண்ணனையும் வணங்கினான். இருவரும் அவனை வாழ்த்தினர். துச்சாதனனுட்படத் துரியோதனனுடைய தம்பியர்களில் மொத்தம் பத்துப்பேரை வீமன் கொன்று விட்டதை அறிந்த போது தருமனுக்கும் கண்ணனுக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால் துரியோதனாதியர்களின் தளபதியான ‘கர்ணன்’ என்ன செய்வதென்றே புரியாமல் திக்பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்து விட்டான். சொல்லி மாளாத கவலை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. வெந்த புண்ணில் வேல் நுழைப்பதைப்போல் இந்தச் சமயம் பார்த்துச் சல்லியன் வேறு அவனைக் குத்திக்காட்டினான், “என்ன கர்ணா! பாண்டவர்கள் வெற்றி முழக்கம் செய்கிறார்கள்! நீ பேயடித்தவன் போல் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய். உனக்கு ஏதாவது அச்சம் வந்து விட்டதோ?” என்று சல்லியன் கூறிய சொற்கள் கர்ணனின் மனத்தில் சுருக்கென்று தைத்தன. “துச்சாதனன் இறந்து விட்டானே என்று வருந்தியிருந்தேன். வேறு ஒன்றும் இல்லை” - என்று கர்ணன் சல்லியனுக்கு மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் போருக்குத் தயாரானான். சிதறி ஓடிய கெளரவப் படைகள் சிறிது சிறிதாக மீண்டும் ஒன்று சேர்ந்தன. வில் ஒலியும், வாள் ஒலியும் தேர்கள் ஓடும் ஒலியும் போர்களமெங்கும் மீண்டும் ஆரவாரம் கிளம்பியது. அமைதி, அனுதாபம், மரண பயம் திகைப்பு எல்லாம் சில விநாடிகள்தான். போர்க்களத்தில் எந்த உணர்ச்சிகளுமே சில விநாடிகளுக்கு மேல் நிலைக்க முடிவதில்லை. கர்ணனின் புதல்வனான, விட சேனனுக்கும் நகுலனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விடசேனன் நல்ல பலசாலி. நகுலனைத் தாக்கினான் நகுலன் மூர்ச்சை அடைந்ததைக் கண்ட அர்ச்சுனன்: “இந்த விடசேனன் முரடன்: இவனை அழித்தாலொழிய நம் பக்கத்துப் படைகளுக்கு அதிகம் அழிவு நேரிடும்” என்று எண்ணிக் கொண்டு விட சேனன் மேல் அம்புகளைச் செலுத்தி எதிர்த்தான். அர்ச்சுனன் விட்ட அம்பு ஒன்று விடசேன னுடைய தலையை அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. நட்ட நடுவில் களத்தின் இடையே திடீரென்று தலையறுந்து வந்து விழுந்ததைக் கண்ட படைகள் திடுக்கிட்டு மயங்கின. அவர்கள் ஓடிப் போய்க் கர்ணனிடம் முறையிட்டார்கள். கர்ணன், தலை கிடந்த இடத்தில் வந்து பார்த்தபோது அது தன்னுடைய மகன் தலையாக இருந்ததைக் கண்டு அலறிக் கண்ணீர் சிந்தினான். அந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் தேர்ப் பாகனாகிய சல்லியன் தன்னுடைய சொந்தப் பகையையும் மறந்து கர்ணனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். போர் மீண்டும் தொடங்கியது. தொலைவிலிருந்து போரில் கலந்து கொள்ளாமல் போர்க்களத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமனுடைய மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. துச்சாதனன், விடசேனன் ஆகியோர் வரிசை வரிசையாக இறந்து வருவது மனத்தைக் கலக்கியது. ‘அளவற்ற உயிர்களைக் கொன்று குருதியை ஓடவிடும் இந்தப் பயங்கரமான போர் இன்னுமா நிகழ வேண்டும்? போரை நிறுத்திவிட்டுப் பாண்டவர்களும், கௌரவர்களும் சமாதானமாகப் போனால் என்ன?’ - என்று அசுவத்தாமன் தனக்குள் எண்ணினான். உடனே அவன் உள்ளத்தில் இன்னும் என்னென்ன எண்ணங்கள் உண்டாயினவோ, தெரியவில்லை. திடீரென்று துரியோதனனைச் சந்திப்பதற்காக அசுவத்தாமன் அவன் இருப்பிடம் சென்றான். அவன் துரியோதனனைக் கண்டதும் சாந்தம் தவழும் குரலில் கூறலானான்:- “துரியோதனா! இந்தப் போரினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்த்தாயா? எத்தனை, எத்தனை உயிர்கள் மடிந்தன்! உறவினரும் நண்பரும் துன்பமுறும்படி இனியும் இந்தப் போரை எதற்காகச் செய்யவேண்டும்? உன் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பாண்டவர் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை நடந்ததை மறந்து விடுங்கள். இனி நடக்கப் போவதை நினையுங்கள். போரை நிறுத்திவிட்டுச் சமாதானமடையுங்கள், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களையும் அரசாட்சியையும் நியாயமாக அவர்களுக்கு அளித்து விடலாம். குடிகெடுக்கும் யுத்தமும் கோபமும் வேண்டாம். பார்க்கப்போனால் பாண்டவர்களும் வேற்றவர்கள் இல்லையே? உன் சகோதரர்கள் அல்லவா?” - என்று அசுவத்தாமன் உருக்கமாகக் கூறிய அறிவுரையை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. “அசுவத்தாமா! அரசாட்சியிலும் நாடு நகரங்களை வென்று ஆள்வதிலும் கூட எனக்கு இன்பமில்லை. ஆனால் நாம் வீரர்கள். மரணத்துக்கும் போர் அழிவிற்கும் பயந்து கொண்டு யுத்தத்தை நிறுத்துவது நம்முடைய ஆண்மைக்கு அழகு இல்லை. ஆகையினால் என்ன நேரிடினும் போரை நிறுத்தவே மாட்டேன்” என்று கர்ணன் மகன் இறந்த செய்தி தெரிந்ததும் துரியோதனன் தானே போர்க்களத்திற்கு நேரில் சென்று கர்ணனைக் கண்டு தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டான். அசுவத்தாமனுடைய முயற்சி தோற்றுவிட்டது. “என் மகனைக் கொன்ற அர்ச்சுனனைப் பழிக்குப் பழி வாங்கினாலொழிய என் மனம் ஆறாது” என்று சபதம் செய்து விட்டு அர்ச்சுனனோடு போரில் ஈடுபட்டான் கர்ணன். அசுவத்தாமன் போர் செய்யும் ஆசையின்றி ஒரு புறமாக ஒதுங்கியிருந்தான். கர்ணன் பக்கம் போய் நின்று கொண்டு அவனுக்கு உதவியாகப் போர் செய்யுமாறு துரியோதனன் வற்புறுத்தினான். அசுவத்தாமனும் அதை மறுக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக எழுந்திருந்து சென்றான். அசுவத்தாமன், கர்ணன் இருவருமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கினர். வில்யுத்தம் என்று சொல்லப் படுகின்ற கலையின் சாமர்த்தியங்களை எல்லாம் வெளிக் காட்டினார்கள் கர்ணனும் அர்ச்சுனனும். வில்லைக் கொண்டு குறி தவறாமல் அம்புகளைச் செலுத்துவதற்கு வசதியாகச் சல்லியன், கண்ணன், இருவரும் முறையே அவரவர் தேர்களைச் செலுத்தினர். போர் வெகுநேரம் நிகழ்ந்தது. கர்ணனும் அர்ச்சுனனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போரிட்டனர். சர்வக்ஞனான சிவபெருமான் இருவேறு மனிதர்களாக அவதாரம் எடுத்து இரண்டு மேருமலைகளை இரண்டு விற்களாக வளைத்து யுத்தம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது கர்ணனும் அர்ச்சுனனும் போர் செய்த காட்சி. போரில் திசைக்கோணங்கள் நடுநடுங்கும்படி இடையிடையே இருவரும் சங்கநாதம் செய்து கொண்டனர். அர்ச்சுனனிடம் இருந்த சங்கு ‘தேவதத்தம்’ - என்னும் பெயரை உடையது. அதை அதன் முழக்கியவுடன் அதற்குப் போட்டியாகக் கர்ணனும் ‘பராபரம்’ என்னும் பெயரை உடைய தன் சங்கை எடுத்து முழக்கினான். சக்தியும் தெய்வீகமும் வாய்ந்த அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். சூரிய புத்திரனாகிய கர்ணனிடம் தகப்பன் கொடுத்த சிறப்பான கணைகள் சில இருந்தன. அர்ச்சுனன் எய்த அம்புகளை எல்லாம் தன்னிடமிருந்த விசேஷக் கணைகளால் அறுத்து முறித்தான் கர்ணன். இருவரில் எவர் கை ஓங்கும்? எவர் கை தாழும் என்று சொல்ல முடியாதபடி போர் நடந்து கொண்டிருந்தது. அர்ச்சுனனுடைய தேர் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல் செய்வதற்கு எண்ணிய கர்ணன் அம்புகளாலேயே அர்ச்சுனனுடைய தேரைச் சுற்றி ஒருவலை போலப் பின்னி அசைய முடியாமலும் நகர முடியாமலும் செய்துவிட்டான். கண்ணபிரான் இதைக் கண்டார். உடனே கர்ணனுடைய தேரைச் சுற்றிலும் அதே போல் அம்புகளால் வலை போல் அமையுமாறு செய்தார். கர்ணன் தன் வினை தன்னைச் சுட்டதைக் கண்டு திகைத்தான். ஒன்றும் செய்ய முடியாமல் மயங்கி நின்ற கர்ணன் போரை நிறுத்திவிட்டான். அர்ச்சுனனும் போரை நிறுத்தினான், அர்ச்சுனன் தேரைச் சுற்றியிருந்த அம்புகள் கண்ணன் அருளால் நீங்கியிருந்தன. போர் செய்ய முடிகின்ற நிலையிலும் அர்ச்சுனன் சும்மா இருப்பதைக் கண்டு காரணம் விளங்காமல் திகைத்தான் கண்ணன். அப்போது அர்ச்சுனனுடைய கண்களுக்கு மாயையினால் ஒரு பொய்த்தோற்றம் உண்டாயிற்று. எதிரே அம்பு வலைக்கு உட்பட்ட தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனுடைய உருவம் தருமனுடைய உருவமாக மாறித் தோன்றியது. தருமனே அந்தத் தேரில் நின்று கொண்டு திகைத்துத் திணறி வருந்துவது போல் அவன் கண்களுக்குத் தோன்றவே அவன் தயக்கமடைந்து வில்லைக் கீழே வைத்துவிட்டான். இதைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த கண்ணன், ‘ஏன் போர் செய்யாமல் சும்மா நிற்கின்றாய்? கர்ணனை ஒழிக்க இது தானே தக்க சமயம்?" என்று அவனை நோக்கி வினாவினான். “எதிரே தேரில் என் அண்ணனாகிய தருமன் நின்று வருந்திக் கொண்டிருக்கிறானே? அவனோடு நான் எப்படிப் போர் புரிவது?” “அடே முட்டாள்! மாயை உன் கண்களை மறைக்கிறது. தேரில் இருப்பவன் தருமனில்லை, கர்ணன்தான். வேண்டுமானால் என்னோடு வா. உன் தமையனாகிய தருமன் வேறோரிடத்தில் இருப்பதைக் காட்டுகிறேன்” என்று கண்ணன் அர்ச்சுனனை அங்கிருந்து அழைத்துச் சென்றான். தருமன் உண்மையாகவே நின்று கொண்டிருந்த இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய், “அதோ பார் உன் தமையன் தருமன்” என்று சுட்டிக் காட்டினான். அப்போது அர்ச்சுனா கர்ணனைக் கொன்றுவிட்டாயா? இல்லையா? அதற்குள் ஏன் திரும்பினாய்?" என்று அவனை நோக்கிக் கேட்டான் தருமன். அர்ச்சுனன் உண்மைத் தருமனுக்கும் மாயத்தருமனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான். “இல்லை அண்ணா! நான் இன்னும் கர்ணனைக் கொல்லவில்லை. இனி மேல் தான் கொல்ல வேண்டும்.” என்று தருமனுக்கு மறுமொழி கூறினான் அர்ச்சுனன். அந்த மறு மொழியைக் கேட்டவுடன் அர்ச்சுனனைக் கோபம் பொங்கப் பார்த்தான் தருமன். “உன்னுடைய கையில் ஆயுதமும் மெய்யில் வீரமும் இருந்து என்ன பயன்? இன்னும் கர்ணனைக் கொல்லாமல் வீரனைப் போல் என் முன் வந்து நிற்கிறாயே?” என்றான் தருமன். தருமன் தன்னுடைய வில்லையும் ஆண்மையையும், கேவலமாகப் பேசியதைப் பொறுக்க முடியாமல் அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. “என் வில்லும் ஆண்மையும் எவரால் பழிக்கப் பட்டாலும் அவர் யாரென்றும் பாராமல் உடனே கொல்வது தான் என்னுடைய வழக்கம்” என்று கூறிக் கொண்டே வில்லை ஓங்கி அடிப்பதற்காகத் தருமன் மேல் பாய்ந்து விட்டான் அர்ச்சுனன். தம்பியின் எதிர்பாராத ஆத்திரத்தால் மருண்ட தருமன் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நின்றான். அப்போது கண்ணன் அர்ச்சுனனைத் தடுத்து நிறுத்தினான். “உனக்கு ஏன் இன்று இவ்வளவு ஆத்திரம் வருகிறது அர்ச்சுனா? மூத்தவர்களை எதிர்த்துப் பேசுவதே பாவம் நீயோ தருமனைக் கொல்வதற்கே கிளம்பிவிட்டாய், உன் மனமார நீ செய்த சபதம் நிறைவேற வேண்டுமானால் தருமனைக் கொல்ல வேண்டாம். சில இழிந்த சொற்களைச் சொல்லித் திட்டினாலே போதும்” என்று கண்ணன் கூறினான். அவனுடைய சொற்படியே சில கேவலமான வார்த்தைகளைச் சொல்லி அர்ச்சுனன் தருமனைத் திட்டினான். ‘சபதத்துக்காக ஏதோ திட்ட வேண்டும்!’ என்று திட்டிய அந்த வார்த்தைகளைத் தருமன் உண்மையென்று நினைத்துக் கொண்டான். “அர்ச்சுனனே என்னை இப்படியெல்லாம் திட்டுகிறான். இனி நான் எதற்காக இங்கே இருக்க வேண்டும்? சந்நியாசியாக மாறிக் காட்டுக்குப் புறப்படவேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே போர்க்கோலத்தைக் களைந்து விட்டுக் காட்டுக்குக் கிளம்பத் தொடங்கிவிட்டான் தருமன். “இதேதடா வம்பு? சபதம் வீண் போகக் கூடாதே என்பதற்காக இவனைச் சில சொற்களால் வைவது போலக் கூறினால் இவன் உண்மையென்று நினைத்துவிட்டானே?” என்று பயந்து கண்ணனும் அர்ச்சுனனும் தருமனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனைச் சமாதானப் படுத்தினர். கர்ணன் மரணம் விரைவிலேயே தருமன் சமாதானமடைந்தான். ‘உடனே கர்ணனைக் கொன்று தீர்ப்பதாக’ வாக்குறுதியைக் கொடுத்தான் அர்ச்சுனன், அந்த வாக்குறுதியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டபின் தருமன் அவனை மன்னித்தான். தான் காடு போவதையும் தருமன் நிறுத்திக் கொண்டான். இதன்பின் அர்ச்சுனன் மீண்டும் தேரில் ஏறி கர்ணனோடு போருக்குப் புறப்பட்டான். அர்ச்சுனன், கர்ணன் இருந்த இடத்தை அடையும் போது ஏற்கெனவே அங்கே வீமனுக்கும் கர்ணனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. போன வேகத்தில் நெருப்புக் கணையை எடுத்து கர்ணன் மேல் செலுத்தினான் அர்ச்சுனன். கர்ணன் உடனே வருணா ஸ்திரத்தை ஏவி நெருப்புக்கணையை அழித்து விட்டான். பின்பு இருவரும் மாறி மாறிப் பல கணைகளைத் தொடர்ந்து ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்டனர். ஒன்றை ஒன்று விழுங்கியும், ஒன்றைவிட ஒன்று எஞ்சியும், இருவர் அம்புகளும் போர்க் களத்தைச் செங்குருதி வெள்ளமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடைசியாக அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினான். ருத்திராஸ்திரத்தினால் அதைச் சுட்டுப் பொசுக்கி விட்டான் கர்ணன். இதன் பின் ‘ஒருவரை ஒருவர் எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் இருவருமே சிறிது நேரம் சும்மா இருந்து விட்டனர். கர்ணனுடைய உள்ளத்தில் குரோதம் புகைந்தது. அர்ச்சுனனை எப்படியாவது கொன்று தீர்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு அதற்கென்றே தான் பல நாட்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த நாகாஸ்திரத்தை எடுத்தான் கர்ணன். காண்டவ தகனம் முடிந்த தினத்தில்லிருந்தே அர்ச்சுனனைப் பழி வாங்குவதற்குக் கர்ணனிடம் வளர்ந்து வந்தது அந்த அஸ்திரம். நாகாஸ்திரத்தை வில்லிலே வைத்துத் தொடுத்து அர்ச்சுனனுடைய கழுத்துக்கு நேரே குறி வைத்தான் கர்ணன். அப்போது அவனுடைய தேர்ப்பாகனாகிய சல்லியன் அவனைத் தடுத்தான். “கர்ணா! நான் சொல்வதைக் கேள், மாயா வினோதனாகிய கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு அருகில் இருக்கிறான். அவன் ஏதாவது சூழ்ச்சி செய்து உன் அஸ்திரம் அர்ச்சுனனை அணுக முடியாது செய்து விடுவான். ஆகையால் நீ அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத் தொடுக்காதே, அர்ச்சுனனுடைய மார்புக்குக் குறி வைத்து அஸ்திரத்தைத் தொடு” சல்லியனிடம் தனக்கு அந்தரங்கமாக இருந்த மனஸ்தாபங்களை உத்தேசித்து கர்ணன் அவனுடைய எச்சரிக்கையைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தான் முதலில் தீர்மானித்திருந்தபடியே அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத்தான் நாகாஸ்திரத்தைச் செலுத்தினான். கர்ணன் அர்ச்சுனன் கழுத்தை நோக்கி நாகாஸ்திரத்தைச் செலுத்துவதைக் கண்ணன் பார்த்துக் கொண்டுவிட்டான். அந்த நாகாஸ்திரத்தை அப்படியே விட்டுவிட்டால் அது அர்ச்சுனனைக் கொன்று முடித்துவிடும் என்பதும் அவனுக்குத் தெரியும். பார்த்தான் கண்ணன். ஒரே ஒரு விநாடி ஆழ்ந்து சிந்தித்தான். பின்பு ஒரு தந்திரம் செய்தான். நாகாஸ்திரம் அர்ச்சுனனுடைய கழுத்தை நெருங்குவதற்கு முன்பே தேர்ச் சக்கரங்களை பன்னிரண்டு விரற்கடை ஆழம் கீழே பூமியில் பதிந்துவிடும்படி அழுத்தினான். இதனால் விளைவு முற்றிலும் மாறிவிட்டது. கழுத்தை நோக்கி வந்த நாகாஸ்திரம் குறி தவறி அர்ச்சுனனுடைய கிரீடத்தை உருட்டித் தள்ளியதோடு போயிற்று. இதனால் கர்ணன் பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். அப்போதே சல்லியன் சொன்னபடி கேட்டு மார்புக்குக் குறி வைத்திருந்தால் தேர் கீழே அழுத்தினாலும் கழுத்தையாவது தாக்கியிருக்குமே! கேட்காமல் அலட்சியம் செய்து தோற்று விட்டோமே என்று மனம் குமுறினான் கர்ணன். நாகாஸ்திரம் தன் முடியை இடறிக்கொண்டு விழுந்த உடனேயே அதன் மேல் வேறு ஓர் அம்பை எய்து அதை இரு கூறாக்கினான் அர்ச்சுனன் . ஆனால் எப்படியும் அர்ச்சுனனைப் பழிவாங்கியே தீருவது என்று பிடிவாதத்தோடு இருந்த அந்தப் பாம்பு திரும்பவும் கர்ணனிடம் சென்று, “கர்ணா! இன்னொரு முறை என்னை அர்ச்சுனன் மேல் ஏவு! நான் இம்முறை கட்டாயம் அவனைக் கொன்று தீர்த்து விடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டது. ஆனால் கர்ணன் அதனுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. “ஒரு முறைக்கு மேல் உன்னை அர்ச்சுனனிடம் ஏவமாட்டேன் என்று நான் குந்திக்கு வரம் கொடுத்திருக்கிறேன். ஆகையால் இனி உன்னை ஏவமுடியாது, நீ சென்று வரலாம்” என்று கூறி மறுத்துவிட்டான் கர்ணன். மனவேதனையுற்ற நாகாஸ்திரம் அப்பொழுதே அழிந்து மாண்டது. கர்ணனிடம் நாகாஸ்திரத்துக்கு ஆளாகாமல் அர்ச்சுனன் பிழைத்துவிட்ட செய்தி தருமன், வீமன் முதலிய சகோதரர்களுக்கும் பாண்டவ சைனியங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சல்லியன் கர்ணனை இகழ்ந்து பேசத் தொடங்கினான். “அப்பொழுதே நான் கூறினேனே, நீ கேட்டாயா? மார்புக்குக் குறி வைத்திருந்தால் இப்பொழுது அர்ச்சுனன் பிழைத்திருக்க முடியுமா? மற்றவர்களுடைய சொற்களுக்கு மதிப்புக் கொடுக்காத அறிவிலி நீ. உன் போன்றவனுக்கு என்னால் தேர் ஓட்டியாக இருக்கமுடியாது. நீயும் முட்டாள், உன்னால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருக்கிறானே துரியோதனன்; அவனும் முட்டாள்” என்று கூப்பாடு போட்டு விட்டு கர்ணனுடைய தேரிலிருந்து கீழே இறங்கித் தனது தேரில் தனியே போய் ஏறிக்கொண்டான் சல்லியன். கர்ணனால் அவனைத் தடுத்து நிறுத்தவோ, சமாதானப்படுத்தவோ முடியவில்லை. ‘சரிதான்! முன்பு பரசுராமன் நமக்கு ஒரு சாபம் கொடுத்திருக்கிறான். ‘நீ படித்த யுத்த தந்திரங்களும், பிற கலைகளும் பயன்பட வேண்டிய சமயத்தில் பயன் படாமல் உனக்கு மறந்து போகட்டும்’ என்று அவன் அளித்த சாபம் இப்போது பலிக்கும் நேரம் நெருங்கி விட்டது போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை தோல்விகளையும், துன்பங்களையும், எனக்கு நானாகவே தேடிக் கொள்கிறேன்’ என்று கர்ணன் இவ்வாறு தன் மனத்திற்குள் சிந்தித்துக் கொண்டான். சல்லியன் பிரிந்து சென்ற பிறகு கர்ணனுக்கு வேறு தேரோட்டி கிடைக்கவில்லை. தேர்ப்பாகன் இல்லாத சாதாரணத் தேர் ஒன்றில் ஏறிக்கொண்டு சென்று அவன் அர்ச்சுனனோடு போர் செய்தான். கர்ணனை எப்படியேனும் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அர்ச்சுனன் அதுதான் சமயமென்று அவனை வளைத்துக்கொண்டு கடும் போரில் இறங்கினான். போதாத காலம் நெருங்கி விட்டதோ, அல்லது பரசுராமருடைய சாபம் பலிக்கும் வேளையோ கர்ணனுடைய தைரியமும், வீரமும் விநாடிக்கு விநாடி நலிந்து கொண்டேயிருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனுடைய இடையெங்கும் பாய்ந்து குருதியொழுகச் செய்து கொண்டிருந்தன. கர்ணனுடைய இதயமே அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிரிவுக்குத் தயாராகிவிட்டது போலிருந்தது. ஆனாலும் அந்த மனவேதனையைப் பொறுத்துக் கொண்டே அர்ச்சுனன் மேல் அம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தான் அவன். சூரியன் ஒளி மங்கி மறையப் போகிற நேரம், அத்த மனகிரியை அவன் அடைவதற்கு இன்னும் இரண்டு விற்கிடை (வில் கிடக்கின்ற அளவு தூரம்) தான் இருந்தது. அந்தச் சமயத்தில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! சிறிது நேரம் போரை நிறுத்து. ஒரு முக்கியமான காரியமாக நான் எதிரி பக்கத்தில் போய் ஓர் ஆளைப் பார்த்துவிட்டு வரவேண்டும்” என்று கூறினான். அர்ச்சுனன் அதற்கிணங்கிப் போரை நிறுத்தினான். கண்ணன் தேரிலிருந்து இறங்கி ஒரு வயதான கிழவேதியனைப் போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றான். யாரோ ஒரு வேதியர் பருவம் முதிர்ச்சியையும் பாராமல் நம்மை நாடி வருகின்றாரே’ என்று வியந்த வண்ணமே தேரிலிருந்து கீழே இறங்கி மரியாதையாக நின்று கொண்டு, “ஐயா வேதியரே! வாருங்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவரை வரவேற்றான் கர்ணன். “கொடை வள்ளலே! நான் மேருமலையில் இறைவனை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தவன். வருவோர்க்கெல்லாம் ‘வரையாது வழங்கும் வள்ளல்’ என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் ஏழ்மையினால் பெருந்துன்பமடைந்தவன். உன்னைத் தேடி இப்போது வந்திருக்கிறேன். நீ எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது!” என்று மாய வேதியனாகிய கண்ணன் நடிப்புக்காக வரவழைத்துக் கொண்ட கிழட்டுக் குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான். ஒரு பாவமுமறியாத கர்ணன் அந்த வேதியனுக்காக மனம் இரங்கினான். “ஐயா வயது முதிர்ந்த அந்தணரே, உமக்கு என்னிடமிருந்து எது வேண்டுமோ அதைக் கேளும்! கட்டாயம் கொடுக்கிறேன்” - கர்ணனின் குரலில் உறுதி தொனித்தது. “வள்ளல் பெருந்தகையே! இதுவரை நீ செய்திருக்கும் புண்ணியம் எல்லாவற்றையும் எனக்கு அப்படியே கொடு. நீ சொன்ன சொல் தவறாதவன். ஆகவே நான் கேட்டதைத் தயங்காமல் கொடுப்பாய் என்று எண்ணுகிறேன்.” ஒரு கணம் கர்ணன் அந்த வேதியரைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்தான், ஒரே ஒரு கணம்தான். மறுகணம் அவனுக்கே உரிய பெருந்தன்மை காரணமாக அந்த முகம் மலர்ந்தது. அதில் ஒரு வள்ளலுக்கே உரிய தாராள குணத்தின் சாயல் நிழலிட்டது. “வேதியரே! உயிர் உடலின் உள்ளே இருக்கிறதா? வெளியே போய்விட்டதா? என்று நானே அனுமானித்து உணர முடியாத அந்திம காலத்தில் நீர் என்னைத் தேடி வந்திருக்கிறீர். யார் எதைக் கேட்டாலும் நான் தயங்காமல் வாரி வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் வராமல் போர்க்களத்தில் உயிருடனும் உடம்புடனும் போராடிக் கொண்டிருக்கும் வேதனை நிறைந்த சந்தர்ப்பத்தில் வந்திருக்கிறீர் பரவாயில்லை. இப்போது இந்த ஒன்றுமில்லாத நிலையிலும் உமக்கு வேண்டியதாகவும் என்னால் கொடுக்க முடிந்ததாகவும் ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது. அதை உமக்குக் கொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இதோ என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும்” என்று கூறிக்கொண்டே கர்ணன் தன் புண்ணியம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அந்த வேதியரின் கால்களில் விழுந்து வணங்கினான். “கர்ணா! மிகவும் நன்றி. கையில் தண்ணீரைத் தாரை வார்த்து முறைப்படி உன் புண்ணியத்தை எனக்குத் தானம் செய்து கொடு” என்றான் வேதியன். ஆனால் அந்த நேரத்தில் பயங்கரமான போர்க்களத்தின் இடையே தண்ணீர் ஏது, தாரை வார்த்துக் கொடுக்க? தன் மார்பிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை ஏந்தி அதையே வேதியனின் கையில் தண்ணீராக வார்த்து, தான் செய்த புண்ணியம் முழுவதையும் கர்ணன் அவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். வேதியன் சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டான். “கர்ணா! நான் கேட்டதை நீ மறுக்காமல் கொடுத்து விட்டாய். இனி நீ உனக்கு வேண்டிய வரம் ஒன்றை மறுக்காமல் என்னிடம் கேள். நான் கொடுக்கிறேன்.” “எனக்கு வேண்டிய வரமா? வேறென்ன வேண்டும்? இன்னும் எத்தனை ஜன்மங்களில் நான் பிறந்தாலும் இல்லையென்று வருந்தி என்னிடம் வருபவர்களுக்கு நான் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து உதவும் நல்ல மனத்தை எனக்கு அளித்தருளுங்கள். அதுதான் நான் உம்மிடம் கேட்கும் ஒரே ஒரு வரம்!” “அப்படியே ஆகட்டும்! நீ எவ்வளவு பிறவி பெற்றாலும் ஒவ்வொரு பிறவியிலும் மாபெரும் செல்வத்தையும் கொடைக் குணத்தையும் பெற்று வாழ்வாயாக! பின்பு கிடைப்பதற்கரிய மோட்ச பதவியும் உனக்குக் கிடைக்கும்!” இறுதியில் விடை பெற்றுக் கொண்டு செல்வதற்கு முன் அந்த மாய வேதியன், “கர்ணா! இதோ நன்றாக என்னைப் பார். ஒரே ஒரு விநாடி உண்மையில் நான் யார் என்பதை உற்றுப் பார்” என்று கூறிக்கொண்டே சங்கு சக்ரதாரியாக தேஜோமயமான காட்சி கொடுத்தான். கர்ணன் விழிகள் வியப்பால் மலரச் சிரமேல் கைகளைக் கூப்பி வணங்கினான். தன் முன் சாஷாத் நாராயணனாகிய மகாவிஷ்ணு நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட பரவசமும் மகிழ்ச்சியும் இவ்வளவு அவ்வளவென்று சொல்லி முடியாது. சிறிது நேரத்தில் கண்ணன் மீண்டும் தன்னுடைய பழைய வேதிய உருவை மேற்கொண்டு வந்த வழியே திரும்பி அர்ச்சுனன் இருந்த இடத்திற்குச் சென்றான். அர்ச்சுனன் அருகே சென்றதும் சுயவுருவில் தேர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, “அர்ச்சுனா! உன்னிடமுள்ள அஞ்சரீகம் என்னும் அஸ்திரத்தை எடுத்து கர்ணன் மேல் செலுத்து. இம்முறை அது அவனுடைய உயிரை வாங்கிவிடும்” என்றான். அவ்வாறே அர்ச்சுனன் அஞ்சரீகக் கணையை எடுத்து வில்லிலே வைத்துக் கர்ணன் மேல் செலுத்தினான். நல்வினைகளையெல்லாம் இழந்து சாதாரண மனிதப் பிறவியாகத் தளர்ந்து ஒடுங்கித் தேரின் மேல் நின்றுகொண்டிருந்த கர்ணன் மார்பிலே பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது அந்த அஸ்திரம். உயிர் தளர்ந்து பிரியும் வேதனையோடு கீழே விழுந்து நெருப்பில் அகப்பட்ட மலர் போலத் துடிதுடித்தது அவன் உடல் துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும் பெருமையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மகாவீரன் அந்த விசாலமான போர்க்களத்தில் கேட்பாரில்லாமல் தன்னந்தனியே வீழ்ந்து இறந்து கொண்டிருந்தான். அவனுடைய உடலிலிருந்து உயிர் அணு அணுவாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. ஒளி மெல்ல மெல்ல ஒடுங்கியது. துயர அமைதி இன்னதென்று புரிய முடியாத உணர்வுகளால் அலைமோதிக் கொண்டிருந்த குந்தியின் மனத்தில் இனம் புலப்படாத சோக இருள் சூழ்ந்தது. வலக்கண்ணும் தோளும் புருவமும் தீய நிமித்தமாகத் துடித்தன. உடல் காரணமின்றி நடுங்கியது. ‘உன் மகன் கர்ணன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று ஏதோ உருவமற்ற தெளிவிழந்த குரல் ஒன்று இடைவிடாமல் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் பயந்தாள். அவளுடைய மனமும் எண்ணங்களும் குழம்பி நடுங்கின. பதறியடித்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடினாள். அவளுடைய கால்களைக் காட்டிலும் படுவேகமாக மனம் அங்கு ஓடியது. அங்கே சென்றதும் சற்று முன் அவள் எதைப் ‘பிரமை’ என்று எண்ணினாளோ, அதுவே உண்மையாக நடந்திருந்தது! ஆம்! கர்ணன் குருதி வெள்ளத்தில் இடையே வீழ்ந்து கொண்டிருந்தான். குந்தி அவனை அந்த நிலையில் கண்டு ஓவென்று கதறியழுது புலம்பினாள். தளர்ந்து உணர்விழந்து சாவை நெருங்கிக் கொண்டிருந்த அவன் உடலைத் தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு பலவாறு புலம்பினாள். பெற்ற பாசத்தினால் அவளுடைய மார்பகங்களில் பால் சுரந்தது, பிறந்த அன்று கிடைக்காத தாய்ப்பால் அப்போது போர்க்களத்தின் பயங்கரமான சூழ்நிலையில், மரணத் தறுவாயில் கர்ணனுக்குக் கிடைத்தது. பெற்றும் வளர்க்கப் பயந்து ஆற்றிலே விட்டவளின் இதயத்திலிருந்து அத்தனை காலத்துக்குப் பிறகு சுரந்த அந்தச் சில துளிபாலை உட்கொண்ட பின் கர்ணனுடைய உடலிலிருந்து உயிர் அமைதியாகப் பிரிந்து சென்றது. ‘குந்தி கர்ணனின் உடலை எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அழுகிறாள்? அவளுக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணனுடைய மரணத்தைச் சகிக்காமல் அவள் அலறியழுவதேன்?’ என்று பாண்டவர்கள் உட்படப் போர்க்களத்தில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் எதுவுமே தெளிவாக விளங்கவில்லை. அங்கே அந்த மாபெரும் இரகசியம் இரண்டே பேருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் கண்ணன், குந்தி ஆகிய இருவரே. இப்படி இவர்கள் வியப்பில் மூழ்கி வருந்திக் கொண்டிருந்த போது துரியோதனன் ஒருபுறம் கர்ணன் பிரிவு தாங்க முடியாமல் கதறி அழத் தொடங்கினான். அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையாகிய கர்ணனும் அழிந்து போய்விட்டான். அவனால் பொறுத்துக் கொள்ள முடியாத அழிவு அது. “வீராதி வீரனே! நீ இறந்து விட்டாய். இனிமேல் என் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு யார் இருக்கிறார்கள்? ஒப்பற்ற நண்பா! உன்னை இழந்த இனி நான் எப்படி வாழப் போகிறேன். இனி நான் போரில் வென்று ஆகப்போவது தான் என்ன? இனி இந்த உலகத்தை நான் ஆளவும் வேண்டுமா? நீ போன பின் எனக்கு வேண்டியது எது? வேண்டாதது எது?” துரியோதனன் கல் நெஞ்சுக்காரன். அவனே விக்கி விக்கி அழுததைப் பார்த்தபோது போர்க் களத்திலிருந்தவர்களுக்குப் பரிதாபமாக இருந்தது. “தங்களுடைய தாய் கர்ணனுக்காக ஏன் இவ்வளவு அலறியழுகிறாள்?” என்று திகைத்து மயங்கிய பாண்டவர்கள் கண்ணனிடம் போய்க் கேட்டார்கள். உடனே கண்ணன். “கர்ணன் உங்களுடைய தமையன். அவன்தான் தர்மனுக்கும் மூத்தவன்” என்று கூறிக் கர்ணனுக்கும் குந்திக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விவரித்தான். அவற்றைக் கேள்விப்பட்டவுடன் பாண்டவர்களும் அலறியழுது கொண்டே கர்ணனின் சடலத்தை நோக்கி ஓடினார்கள். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்று அறிந்ததும் அவர்கள் நெஞ்சு பதறியது; உடல் நடுங்கியது. “அம்மா! நீ ஏன் இந்த இரகசியத்தை முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை? ஐயோ! நாங்களே கர்ணனின் உயிருக்கு உலை வைத்து விட்டோமே” என்று குந்தியை நோக்கிப் பாண்டவர்கள் ஐந்து பேரும் கதறினர். “ஏ! கண்ணா நீ பொல்லாத சூழ்ச்சிக்காரன். உனக்கு இந்த இரகசியம் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் இருந்து விட்டாயே? தாயும் நீயுமாகச் சேர்ந்து கொண்டு எங்களைப் பெரிதும் ஏமாற்றி விட்டீர்கள் வஞ்சகம் செய்து விட்டீர்கள். உன் சூழ்ச்சிகள் மனிதர்களுக்குப் புரியவே மாட்டேனென்கிறதே! இரணியனை அவன் பெற்ற பிள்ளை பிரகலாதனைக் கொண்டே கொல்லித்தாய். அரக்கனான இராவணனை அவனுடைய தம்பியாகிய விபீஷணனைக்கொண்டே அழித்துவிட்டாய். எங்கள் முன் பிறந்தவனாகிய மூத்த தமையனை எங்களைக் கொண்டே கொன்றுவிட்டாய். நீ மாயவதாரன். கபட நாடக சூத்திரதாரி. உன் மாயைகளை மனிதர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லையே?” என்று கண்ணனைக் குறை சொல்லி முறையிட்டார்கள். அவன் பாண்டவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. மறுமொழி கூறாமல் தலையைக் குனிந்து கொண்டான். அப்போது அவனுடைய முகத்தில் சிரிப்பா, அழுகையா, சோகமா, மகிழ்ச்சியா, எது என்றே இனங்கண்டு கொள்ள முடியாததோர் மெல்லிய சலனம் புலப்பட்டது. யாருக்குத் தான் புரியும் அவனுடைய அலகிலா விளையாடல்கள்? கர்ணனுடைய மரணம் போர்க்களம் முழுவதும் ஒருவிதமான சோகம் ததும்பி நிற்கும் துயர அமைதியை உண்டாக்கிவிட்டிருந்தது. அவனுடைய மரணமாகிய வேதனையால் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு சாரருமே துயரங் கொண்டனர். அந்திமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடை பெறலாயின. போட்டியும், பொறாமையும், பகைமையும், குரோதமும் நிறைந்து நின்ற அந்தப் போர்க்களம் கர்ணனுடைய மரணத்தால் யாவற்றையும் மறந்து சோகம் என்ற ஒரே ஓர் உணர்வில் ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தது. அன்றிரவு துரியோதனனுக்குத் தூக்கமே இல்லை. உணவு, உறக்கம், மறுநாள் போர், எதைப் பற்றியுமே கவலைப்படாது கர்ணனைப் பிரிந்த துன்பத்தில் மூழ்கியிருந்தான் அவன். சகுனி அப்போது அங்கே வந்தான். “துரியோதனா! இறந்தவன், நாம் வருத்தப்படுகிறோம் என்பதற்காக இனி மேல் திரும்பியா வரப்போகிறான்? கவலையைக் கைவிட்டு விடு. நாளைப் போருக்கு யாரைத் தரைவனாக நியமிக்கலாம். அதைப்பற்றி இப்போதே தீர்மானித்துக் கொள்ள வேண்டாமா?” என்று சகுனி துரியோதனனைக் கேட்டான். பின்பு ‘படைத் தலைவனாக யாரை நியமிப்பது’ என்பது பற்றி அன்று இரவு சகுனியும் துரியோதனனும் நீண்ட நேரம் விவாதித்தனர். இறுதியில் இருவரும் ஏகமனதாக ஒரே முடிவுடன் ஒரே ஆளைத் தேர்ந்தெடுத்தார்கள். பதினெட்டாவது நாள் போருக்குச் சல்லியனைப் படைத் தலைவனாக்குவது என்பதே அவர்களுடைய அந்தத் தீர்மானம். கர்ணனுக்குப் பின்னர் கெளரவ சேனையில் எஞ்சியிருந்தவர்களில் சல்லியனைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள் வேறு எவரும் இல்லை. அவன் ஒருவனால் தான் இனிமேல் அவ்வளவு பெரிய கெளரவ சேனையை நிர்வகித்து நடத்த முடியும். இத்தகைய காரணங்களாலேயே துரியோதனன், சகுனி இருவரும் சல்லியனைத் தேர்ந்தெடுத்தனர். உறக்கமில்லாத அந்த நீண்ட துயர இரவு கழிந்ததும் பதினெட்டாம் நாள் பொழுது புலர்ந்தது. துரியோதனன் போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை வேண்டா வெறுப்பாகச் செய்தான். சல்லியனை அழைத்து, சல்லியா! இன்றைய படைத் தலைவன் நீ தான். என்னுடைய படைகளை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். இனி என்னுடைய உயிர், உடல், வாழ்வு, துணிவு, வெற்றி, நம்பிக்கை எல்லாம் உன் வசத்தில்தான் இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொறுப்பை - வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டிய சோதனையைத் துணிந்து உன் கையில் கொடுக்கிறேன். யானை, தேர், குதிரை, காலாள் என்ற எனது நான்கு வகைப் படைகளுக்கும் இந்த விநாடியிலிருந்து நீயே தளபதி. இதோ அதற்குரிய அடையாள மரியாதைப் பொற்பட்டத்தை உனக்கு அணிவிக்கிறேன். ஏற்றுக்கொள்" என்று சல்லியனிடம் உருக்கமாகக் கூறித் தளபதிப் பதவியை அளித்தான். சல்லியன் மகிழ்ச்சியோடும் பயபக்தியோடும் தனக்களிக்கப்பட்ட சேனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டான். துரியோதன்னுடைய படைகளுக்கு நடுவே கம்பீரமான பட்டத்து யானை மேல் ஏறி உட்கார்ந்து அணிவகுப்புக்காக வீரர்களை ஒழுங்குபடுத்தினான் சல்லியன். துரியோதனனின் படை வீரர்கள் சல்லியனுடைய தலைமையை மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து வரவேற்றனர். சல்லியன் அன்றைய போருக்கு ஏற்றபடி வீரர்களைத் தனித்தனிப் பிரிவாக அணிவகுத்து நிறுத்தினான். துரியோதனனுக்குப் போர்க்களத்திற்கு வரவேண்டுமென்ற ஆசையோ, ஆர்வமோ அன்று இல்லாவிட்டாலும் கடமைக்காக வரவேண்டியிருந்தது. பதினெட்டாம் நாள் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அவனும் போர்க்களத்துக்கு வந்து படைகளை அணிவகுப்பதில் சல்லியனுக்கு உதவியாக இருந்தான். கெளரவர் சேனை சல்லியன் தலைமையில் பதினெட்டாம் நாள் போருக்குத் தயாராக அணிவகுத்துக் களத்தில் வந்து நின்றுவிட்டது. ஆனால் பாண்டவ சேனையையோ, பாண்டவ வீரர்களையோ இன்னும் காணவில்லை. அவர்கள் நிலை என்னவென்று இப்போது சென்று கவனிக்கலாம். உண்மையில் பார்க்கப்போனால் கர்ணனுடைய மரணத்தினால் கெளரவர்களைவிட பாண்டவர்கள்தாம் அதிகத் துயரம் அடைந்தனர். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்ற உண்மை வேறு அவர்களுக்குத் தெரிந்து விட்டதே? அதனால் அவர்களுடைய சோகமும் வேதனையும் வளருவதற்கு வழி ஏற்பட்டதே ஒழியக் குறையவில்லை. எந்த அர்ச்சுனனுடைய கைகள் கர்ணனுடைய மார்பில் அம்பு எய்து கொன்றனவோ, அதே அர்ச்சுனனுடைய கைகள் அன்றிரவு விடிய விடியத் துடி துடித்துக் கொண்டிருந்தன. செய்யத் தகாத காரியத்தைச் செய்து விட்டோமே என்ற வேதனை அவனை உறங்கவிடவில்லை. தருமனுக்கோ இனிமேல் போர் செய்ய வேண்டுமென்ற ஆசையே இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது. வீமன், நகுலன், சகாதேவன் முதலிய யாவருமே கர்ணனை இழந்த துன்பத்தில் மூழ்கிப் பதினெட்டாம் நாள் போரை மறந்திருந்தனர். கண்ணன் ஒருவன் மட்டும் நினைவூட்டி அவர்களை ஊக்கி முயற்சி செய்திருக்கா விட்டால் அவர்கள் அன்றையப் போருக்குப் புறப்பட்டு வந்திருக்கவே மாட்டார்கள். “இன்பமோ? துன்பமோ? க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் அவற்றில் முற்றிலும் ஆழ்ந்து மூழ்கிப் போய்விடக்கூடாது. க்ஷத்திரியனுக்குக் கடமையைவிடப் பெரியது ஒன்றுமில்லை. அதை மறப்பதைவிடக் கேவலமும் வேறொன்று இல்லை. துன்பத்தை மறந்து போருக்குப் புறப்படுங்கள்” - என்று கண்ணன் கூறிய பின்புதான் பாண்டவர்கள் மனம் தேறித் தங்கள் படைகளுடன் போர்களத்திற்குப் புறப்பட்டு வந்தனர். துட்டத்துய்ம்மன் தலைமை தாங்கி வந்தான். அங்கே சல்லியன் முன்னேற்பாடாகத் தன் கட்சிப் படைகளைப் பெரிய பெரிய வியூகங்களில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைத்திருந்தான். அதைப் பார்த்த போது பாண்டவர்களும் மற்ற வீரர்களும் திகைத்தனர். அவ்வளவு பெரிய வியூகங்களில் வரிசையாக நிற்கும் கெளரவ சேனையைக் கண்டு தருமன் முதலியவர்களுக்கு மலைப்பாக இருந்தது. “கண்ணா! இன்று கெளரவ சேனை அணிவகுக்கப் பட்டிருக்கும் விதத்தையும், சல்லியன் அதற்குத் தலைவனாக நிற்கும் தோரணையையும் பார்த்தால் நாம் நிச்சயமாகத் தோற்றுவிடுவோமோ என்று பயமாக அல்லவா இருக்கிறது? என்ன செய்யலாம்?” என்று தருமன் அச்சம் தொனிக்கும் குரலில் கண்ணனைப் பார்த்துக் கேட்டான். அர்ச்சுனன், வீமன் முதலிய மற்றவர்களும் அதே சந்தேக நிழல் படிந்த முகத்தோடு கண்ணனை ஏறிட்டுப் பார்த்தார்கள். தருமன் வாய் திறந்து கேட்ட சந்தேகத்தையே அவர்கள் கண்பார்வையால் தன்னைக் கேட்பதை கண்ணன் புரிந்து கொண்டான். “பாண்டவர்களே! கவலைப்படாதீர்கள். நான் சொல்லுகிற முறைகளை அனுசரித்து இன்றைய போர் நடந்தால் வெற்றி உங்களுக்குத்தான். சல்லியனின் வலிமைக்கு இணையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீயும் (தருமனைப் பார்த்து) வீமனும் சேர்ந்து போரிட்டால் சல்லியனைக்கூட வென்றுவிடலாம். அர்ச்சுனன் அசுவத்தாமனை எதிர்த்துப் போரிட வேண்டும். சகாதேவன் சகுனியோடு போர் செய்து அவனைத் தொலைக்க வேண்டும். நகுலன் கர்ணனுடைய புதல்வர்களை எதிர்த்துப் போரிட வேண்டும் இந்த முறை மாறாமல் நீங்கள் கௌரவ சேனையை எதிர்த்துப் போர் புரிந்தீர்களானால் நிச்சயம் உங்களுக்குத்தான் வெற்றி, சந்தேகமில்லை” - என்று கூறி தருமனையும், வீமனையும், சல்லியனை எதிர்ப்பதற்கு அனுப்பிவிட்டு, தான் அர்ச்சுனனுடைய தேரில் ஏறிக் கொண்டான் கண்ணன் அர்ச்சுனனின் தேரைக் கண்ணன் அசுவத்தாமன் இருந்த திசையை நோக்கிச் செலுத்தினான். வீமனும் தருமனும், சல்லியன் இருந்த பக்கமாகத் தத்தம் தேர்களைச் செலுத்திக் கொண்டு சென்றனர். சகாதேவன் சகுனியை நோக்கியும், நகுவன் கர்ணனின் புதல்வர்களை நோக்கியும் சென்றனர். ஊழிக் காலத்து ஓலிகளைப் போன்ற பெரிய சப்தங்களுடன் பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது. அம்புடனே அம்புகளும், வாளுடன் வாளும், கதையுடன் கதையும் மோதி ஒலி வெள்ளம் ஆரவாரித்துப் பொங்கி எழுந்தது. வெற்றி தோல்வியின் இறுதி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது, அன்றைய தினம் நடந்து கொண்டிருந்த இறுதிப் போராட்டம். {கர்ண பருவம் முற்றும்) சௌப்திக பருவம் அழிவின் எல்லையில் வெற்றி எவர் பக்கம் தோல்வி எவர் பக்கம்? - என்று நிர்ணயிக்க வேண்டிய பதினெட்டாம் நாள் போரும் தொடங்கிவிட்டது. தருமனும் சல்லியனும் நேருக்கு நேர் எதிர்த்துப் போர் புரிந்தனர். சல்லியனுடைய சங்கநாதம் விண்ணதிரச் செய்தது என்றால், தருமனுடைய சங்கநாதம் திசையதிரச் செய்தது. வாயால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பகைமையின் ஆத்திரத்தை எல்லாம் வில் முனையில் பேசித் தீர்த்துக் கொண்டார்கள் இருவரும். யாராவது ஒருவரை யாராவது ஒருவர் தோற்கச் செய்து விடவேண்டும் என்ற மாதிரி அவர்களிருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு போர் செய்வது போலத் தோன்றியது. நேரம் ஆக ஆகச் சல்லியன் கை ஓங்கியது. தருமனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த சாரதியின் தலையை அறுத்து வீழ்த்தினான், சல்லியன். தேரின் மேலிருந்த குடையின் மேற்பகுதியையும் உடைத்துவிட்டான். இவற்றையெல்லாம் பார்த்தபோது தருமனுடைய தளராத நெஞ்சமும் சிறிது தளர்ந்தது. நல்லவேளை! அப்போது அருகில் போர் செய்து கொண்டிருந்த வீமன் தருமனுக்கு உதவியாக வந்து சல்லியனை எதிர்த்தான். வீமன் வரவு கண்ட தருமன், ‘நம்மைக் காட்டிலும் சல்லியனை எதிர்ப்பதற்கு வீமனே தகுதி வாய்ந்தவன்’ என்று எண்ணிக் கொண்டு தான் ஒதுங்கிக் கொண்டான். இதனால் வீமனுக்கும் சல்லியனுக்கும் நேரடிப் போர் தொடங்கிற்று. மந்திர சக்தி வாய்ந்த அம்புகளை ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். இவர்களுக்கிடையே நிகழ்ந்த கடும் போரைத் தருமன் பார்த்துக் கொண்டிருந்தான். சல்லியன் மேல் சினமுற்ற வீமன் விற்போரை நிறுத்திவிட்டுக் கதாயுதத்தோடு தேரிலிருந்து கீழே குதித்தான். சல்லியனுடைய தேரை நெருங்கிக் கதையால் அடித்து நொறுக்கலானான். ‘சல்லியன் இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்க வில்லையாகையினால் வீமனை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினான். சல்லியனுடைய தேர்ப்பாகன், குதிரைகள், தேர்ச் சக்கரங்கள் ஆகியவை எல்லாம் வீமனுடைய கதைக்கு இலக்காகி அடிபட்டு நொறுங்கின. கதாயுதத்தைவிடப் பெரிய ‘கோமரம்’ என்னும் ஆயுதத்தை ஓங்கிக்கொண்டு வீமன் மேல் பாய்ந்தான் சல்லியன். வீமன் சல்லியனை எதிர்ப்பதற்குள் சல்லியனுடைய கோமரம் வீமன் நெற்றியில் விழுந்தது. அந்தப் பலமான அடி வீமனை ஒருகணம் பொறிகலங்கச் செய்துவிட்டது. ஆனால் அந்தக் கலக்கம் ஒருகணம்தான் நீடித்தது. மறுகணமே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் போரில் ஈடுபட்டான் அவன். சல்லியனும் வீமனும் போர் செய்ததைப் போலவே அவரவர் கட்சியைச் சேர்ந்த படைவீரர்களும் தனித்தனியே போர் புரிந்தனர். இறுதி நிலையில் இவருக்குத் தான் வெற்றி, இவருக்குத்தான் தோல்வி, என்று கண்டு கொள்ள முடியாதபடி கடுமையாக முற்றியிருந்தது போர். போர் என்றால் வெற்றி தோல்விகளைப் போலவே உயிர் பிழைப்பதும், உயிர் இழப்பதும் கூட இயற்கையாக நேரக்கூடியவையே! நகுலனை எதிர்த்து கர்ணனின் புதல்வர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திர தீர்த்தி என்ற இளைஞர்கள் மூவரும் தாக்குதல் நடத்தினர். நகுலனுடைய அனுபவம் மிகுந்த வீரத்துக்கு முன்னால் இந்தச் சிறுபிள்ளைகள் எவ்வளவு நேரம்தான் நிலைத்து நிற்க முடியும்? பாவம்! கால் நாழிகைப் போரிலேயே இந்த மூவரையும் கொன்று முடித்துவிட்டான் நகுலன், உலூகன், சைந்தவன் என்ற தன் பிள்ளைகள் புடைசூழச் சகுனி நகுலனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். ஆனால் நகுலன் செய்த சண்டமாருதப் போரை எதிர்த்து நிற்க முடியாமல் உடனே புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர் அவர்கள். துரியோதனாதியர் பக்கம் ஏற்பட்ட இவ்வளவு அழிவுக்கும் பதிலாகப் பாண்டவர்கள் பக்கம் ஒரே ஓர் அழிவுதான் ஏற்பட்டிருந்தது. ‘கேதுதரன்’ - என்னும் பாண்டவர் படைவீரன் துரியோதனன் கையால் இறந்திருந்தான். மீண்டும் போர் தொடர்ந்து நிகழ்ந்த போது சல்லியன் வீமனை எதிர்த்தான். வீமன் தரப்பைச் சேர்ந்த சுமித்திரன் என்ற வீரன் சல்லியனுடைய அம்புக்கு இரையாகி மாண்டான். சுமித்திரன் இறந்தபின் சல்லியன் தனது முழுப்பலத்தையும் வீமனைத் தாக்குவதில் காட்டினான். வீமன் திணறினான். அதைக் கண்ட நகுலன், சகாதேவன், சாத்தகி ஆகியோர்கள் வீமனுக்கு உதவுவதற்காக ஓடிவந்தார்கள். ஆனால் அவர்கள் நான்கு பேருமாகச் சேர்ந்தும்கூடச் சல்லியனை எதிர்க்க முடியவில்லை. சல்லியனுக்குப் போர் வெறி பிடித்திருந்தது. ஊழிக்காலத்து மழைத் துளிகள் போல அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் அவர்களைத் திக்குமுக்காடச் செய்தன. வீமன் பார்த்தான். ‘இந்தச் சல்லியனை இப்படியே கைமீற விட்டுவிட்டால் பின் நம்மைச் சும்மா விடமாட்டான்’ என்றெண்ணிக்கொண்டு ஆவேசத்தோடு சல்லியனின் தேரை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த விநாடியில் வீமன் சீறிப்பாயும் மின்னலாக மாறிவிட்டான். அவன் கையிலிருந்த ஆயுதம் தேரைத் தாக்கியது. தேரோட்டியைத் தாக்கியது. தேர்க் குதிரைகளைத் தாக்கியது. வெறிகொண்டு தாக்கிய அந்தத் தாக்குதலால் சல்லியனின் தேர்ப்பாகன் இறந்தான். தேர் உடைந்தது. படைகள் சிதறி ஓடின. சல்லியனின் அணிவகுப்பும் உடைந்துவிட்டது. போர்க்களத்தின் மற்றொரு பகுதியில் அர்ச்சுனனும் அசுவத்தாமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தார்கள். அர்த்த சந்திர வடிவாக வளைந்த கத்தி போலிருந்த பல அம்புகளை அர்ச்சுனன் மேல் செலுத்தினான் அசுவத்தாமன். அவை அசுவத்தாமனுடைய திறமையை வெளிப்படுத்தின. இதனால் அர்ச்சுனன் உடலில் பல இடங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அர்ச்சுனனும், அசுவத்தாமனுடைய உடலில் பல காயங்களை உண்டாக்கினான். இருவருடைய தேர்க்குதிரைகளும் அழிந்தன. இருவரும் தரையில் இறங்கிப் போர் செய்தனர். சிறிது நேரத்தில் அசுவத்தாமன் புறங்காட்டி ஓடினான். அவன் உண்மையாகவே புறங்காட்டி ஓடுவதாக எண்ணிக் கொண்டிருந்த அர்ச்சுனன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு அஜாக்கிரதையாக இருந்தான். அசுவத்தாமன் அப்போது ஓடுவது போல் பாசாங்கு செய்துவிட்டுக் குபீரென்று திரும்பி ஒரு பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். ஆனால் உடனே அர்ச்சுனன் அதைத் தன் அம்புகளால் தடுத்து முறித்துவிட்டான். அடுத்து ஒரு பருமனான கதாயுதத்தை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். அதையும் உடைத்து விட்டான் அர்ச்சுனன். கடைசியில் வேறு வழியின்றிப் புறமுதுகு காட்டி ஓடினான் அசுவத்தாமன். அவன் ஓடிய பிறகு கிருபாச்சாரியன் வந்து அர்ச்சுனனோடு போரிட்டான். அர்ச்சுனன் விரைவில் அவனையும் தோற்று ஓடச் செய்தான். எல்லோரும் தோற்று ஓடிய பின்னர் தன் சகோதரனாகிய வீமனுக்குப் பக்கபலமாகப் போய் நின்று கொண்டான் அர்ச்சுனன். சல்லியனுக்கு உதவியாகத் துரியோதனன் வந்து சேர்ந்து கொண்டான். அவன் வந்து சேர்ந்த பின்பு சல்லியனுக்குத் துணிவும் புதிய ஊக்கமும் உண்டாகியிருந்தன. சல்லியனோடு போர் செய்து கொண்டிருந்த சாத்தகியும். நகுலனும் தோற்றனர். சகாதேவனும் தோற்றான். சல்லியனின் ஆண்மையும், ஆற்றலும் பெருகிக் கொண்டே வந்தன. வீமன், தருமன், அர்ச்சுனன் மூன்று பேரும் எதிர்க்கிறபோது தான் ஒருவனாகவே நின்று அவன் அவர்களைச் சமாளித்தான். சல்லியனுடைய அம்புகள் தருமன் முதலியவர்களின் உடலைத் துளைத்தன. சல்லியன் மேல் சினங்கொண்ட வீமன் அவன் தலையில் தரித்திருந்த கிரீடம் கீழே விழுமாறு ஓங்கி தட்டினான். வீமன். இப்படிச் செய்ததைக் கண்டு அதிக ஆத்திரம் அடைந்த துரியோதனன் வில்லை வளைத்து அவன் மேல் அம்பு செலுத்தினான். துரியோதனன் தன்னைத் தாக்குவதைக் கண்ட வீமன் சல்லியனை விட்டு விட்டு துரியோதனன் மேல் பாய்ந்தான். துரியோதனனுக்கும் வீமனுக்கும் போர் ஏற்பட்டது. ஆனால் துரியோதனன் வீமனை எதிர்த்து நிற்கமுடியாமல் விரைவிலேயே தோற்று ஓடினான். துணையிழந்த சல்லியன் தனியாகவே பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டான். அவனுக்கு உதவியாக எண்ணற்ற கெளரவப் படை வீரர்கள் அருகிலிருந்தனர், ஆனால் அவன் ஒருவன். பாண்டவர்களோ பலர். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்று இவ்வளவு பேர்களும் ஒன்று திரண்டு சல்லியனை எதிர்த்தார்கள். போர் கடுமையாக நடந்தது. அந்தப் போரில் ஈடுபட்டிருந்த எல்லா வீரர்களுக்கும் உடம்பில் கவசங்களும் கருவிகளும் இருந்தன. ஆனாலும் அந்தக் கவசத்தைக் காட்டிலும் மேலான கவசம் அவர்கள் மனத்தில் இருந்தது. ‘மானம்’ என்ற கவசமும் வீரம் என்ற கருவியும் அவர்கள் மனத்தில் நிறைந்திருந்தன. அவற்றைக் கொண்டு அவற்றிற்கு எதனாலும் பங்கம் வந்து விடாத முறையில் போரிட்டனர் அவர்கள். சல்லியனைக் கொன்று தொலைத்துவிட வேண்டுமென்ற ஆவேசத்தோடு தருமனும், தருமனைக் கொன்று தொலைத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு சல்லியனும் போரிட்டனர். தருமனுடைய தேர், குதிரைகள், படைகள் ஆகிய எல்லாவற்றையும் அழித்து அவனை நொடிப் பொழுதிற்குள் வெறுங்கையனாக்கினான் சல்லியன். அவமானமடைந்த தருமன் வேறோர் தேரில் ஏறிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். ‘சல்லியனைக் கொல்வது அல்லது தானே இறப்பது’ - என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போரை இம்முறை தருமன் தொடங்கியிருந்தான். தன் மனத்திலிருந்த கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கூரிய வேலை எடுத்துச் சல்லியன் மார்பைக் குறிவைத்து வீசி எறிந்தான் தருமன். அந்த வேல் சல்லியன் மார்பில் பாய்ந்து முதுகை ஊடுருவிச் சென்றது. போர்களம் முழுதும் எதிரொலிக்கும்படி குரூரமாக அலறிக்கொண்டு தேரின் மேல் சாய்ந்தான் சல்லியன். வேல் பாய்ந்த இடத்திலிருந்து குருதி பீறிட்டுக் கிளம்பியது. சில கணநேரம் ஈனஸ்வரத்தில் அரற்றிக்கொண்டு கிடந்த பின் சல்லியன் இறந்துவிட்டான். தங்கள் தலைவனைக் கொன்றதற்காகப் பழிவாங்கும் எண்ணத்தோடு சல்லியனின் நூற்றுக்கணக்கான வீரர்கள் தருமனுடைய தேரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். துரியோதனனும் சகுனி, தன் தம்பியர், முதலியவர்களை அழைத்துக் கொண்டு தருமனை, எதிர்க்க வந்து விட்டான். ஆனால் தருமனுக்கு ஒருவிதமான ஆபத்தும் அவர்களால் ஏற்பட முடியாதபடி வீமன், துட்டத்துய்ம்மன் முதலியவர்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர். சோம குலத்து வீர இளைஞர்கள் வேறு உடன் வந்தனர். படைத் தலைவனாகிய சல்லியனைப் பறிகொடுத்த பின்னும் தயங்காமல் எதிர்த்தனர் துரியோதனாதியர். ஆனால் அதிகச் சேதம் துரியோதனன் பக்கமே ஏற்பட்டது. துரியோதனனுடைய சகோதரர்களில் எஞ்சியிருந்த ஏழு பேரும் வீமன் கையால் மாண்டு போனார்கள். எஞ்சியிருந்தவர்களில் இன்னும் ஐந்து சகோதரர்களை அழைத்துக்கொண்டு கிருதவன்மன் வீமனை எதிர்ப்பதற்கு வந்தான். “வாருங்கள்! வாருங்கள்! ஏழுபேரும் எந்த இடத்திற்குப் போனார்களோ அங்கே உங்களையும் அனுப்புகின்றேன்” - என்று அவர்களை வரவேற்றான் வீமன். சிறிது நேரம் போர் நடந்தது. சித்திரபாகு, பலசேனன், ஜெயசூரன், சித்திரன், உத்தமவிந்து என்னும் பெயர்களையுடைய அந்த ஐந்து சகோதரர்களைத் தவிர மற்றவர்களெல்லோரும் வீமனுக்குப் பயந்து போர்க்களத்தை விட்டே ஓடிவிட்டனர். இந்த ஐவர் மட்டும் மாண்டு போவதற்காகவே வந்தவர்களைப் போல ஓடாமல் நின்று நிலைத்துப் போர் செய்து கொண்டிருந் தார்கள். மிக விரைவிலேயே இவர்களும் விண்ணுலக வாசம் அடையுமாறு கொன்று குவித்தான் வீமன். ‘அடுத்த பலி நாங்கள்தான்’ என்று சொல்லிக் கொண்டு வருகிறவர்களைப் போல் இன்னும் ஒன்பது சகோதரர்கள் தருமனையும் வீமனையும் எதிர்ப்பதற்காக சகுனியின் தலைமையில் ஓடிவந்தார்கள். வீமன் அவர்களை எதிர்ப்பதற்குத் தயாரானான். வீமனுக்கும் துரியோதனன் தம்பிமார்கள் ஒன்பது பேருக்கும் இடையறாத போர் நடந்தது. முடிவில் முன் சென்றவர்களைப் பின்பற்றி அவர்கள் ஒன்பதின்மரும் உயிரிழந்து போயினர். கூட்டம் கூட்டமாகத் தம்பிகள் சென்றபோதெல்லாம் வீமன் அவர்களை ஒருவர் விடாமல் கொன்று தொலைப்பதை அறிந்ததும் துரியோதனன் மலைத்தான். ‘தன்னுடைய முடிவுகாலம் நெருங்கிவிட்டதோ?’ என்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. பிரமித்துப் போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்து விட்டான் அவன். அந்த நிலையில் அருமை மாமனான சகுனி வந்து துரியோதனனைத் தேற்றி ஊக்கப்படுத்தினான். “துரியோதனா! நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இப்போது உன் சார்பாக நான் வீமனிடம் போருக்குப் போகிறேன். அவனை இலேசில் விடுகிறேனா பார்?” என்று வீறாப்புப் பேசிவிட்டுப் படைகளைத் திரட்டிக்கொண்டு வீமனை எதிர்க்கக் கிளம்பினான் சகுனி. வீமனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று. “வா? வா! நீ ஒருவன் தான் வரவில்லையென்று எண்ணிக் கொண்டிருந்தேன். உனக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது” என்று சிரித்துக்கொண்டே கூறி சகுனியை வரவேற்றான் வீமன். சகாதேவன் வீமனுக்கு உதவியாகப் போரிட்டான். சகுனிக்கு உதவுவதற்காக வந்த துரியோதனன் ஒரு வேலாயுதத்தை எடுத்து சகாதேவன் மேல் எறிந்து விட்டான். அது சகாதேவனை நன்றாகத் தாக்கிவிட்டதனால் அவன் பிரக்ஞை தவறிக் கீழே நிலைகுலைந்து வீழ்ந்து விட்டான். தம்பியைத் துரியோதனன் தாக்கிவிட்டதைக் கண்டு மனம் கொதித்த வீமன் தன் மனக் கொதிப்பையெல்லாம் சகுனி மேல் காட்டினான். சகுனியைக் காப்பாற்றுவதற்காக, துரியோதனனும் அசுவத்தாமனும் பெருமுயற்சி செய்தார்கள். வீமன் அம்புகளை எய்து துரியோதனனை முர்ச்சையுறச் செய்தான். வீமனுக்கு உதவியாக வந்த சோழ மன்னன் எய்த அம்புகள் அசுவத்தாமனைப் பிரக்ஞையிழக்கச் செய்தன. இவர்களெல்லாம் இந்த அவலமடைந்ததைக் கண்டு கிருபாச்சாரியார் எஞ்சியிருந்த கெளரவப் படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்தார். சோழனோ அவரையும் அவரோடு வந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அடித்துவிட்டான். இதற்குள் சகாதேவன் பிரக்ஞையுற்று எழுந்திருந்தான். அவனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று. தன்னை வேலால் எறிந்தது போலவே சகுனியின் மேலும் வேலால் எறிய எண்ணினான் சகாதேவன். சகாதேவன் கையில் வேலை எடுத்து, சகுனியின் மார்பைக் குறிவைத்து எறிந்தான். சகாதேவனுடைய அந்தக் குறி தவறவில்லை. சகுனியின் மார்பை இரண்டாகப் பிளந்து வீழ்த்தியது அந்த வேல். சகுனி கீழே விழுந்து இறந்தான். எல்லாச் சூழ்ச்சிகளுக்கும், எல்லா வஞ்சகங்களுக்கும் காரணமாக இருந்த அவனுடைய மரணம் பாண்டவர்களுக்குள் மகிழ்ச்சி உண்டாக்கியது. முன்பு துரியோதனனுடைய சபையில் சகுனியைக் கொல்வதாக அவன் செய்திருந்த சபதமும் நிறைவேறி விட்டது. ஏற்கெனவே தம்பியரைக் கொல்லக் கொடுத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருந்த துரியோதனன் சகுனியின் சாவுச் செய்தி கேட்டு ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பெரும் புயல் வீசும் பொழுது நட்ட நடுக்கடலில் மாலுமியில்லாத மரக்கலம் உடைந்து போனாற் போன்ற நிலையை அடைந்தான் அவன். அடுக்கடுக்காகத் தோல்விகளையும், மரணங்களையுமே கண்ட அவன் மனம் கலக்கத்தின் சிகரத்தை அடைந்தது. “என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? முட்புதரில் கைகளை நுழைத்துவிட்டோம்! எடுப்பது எப்படி?’ - என்று தான் விளங்கவில்லை. ஐயோ! எதற்காக இந்தத் துர்ப்பாக்கியமான போரைத் தொடங்கினோம்?” - அழிவின் எல்லையில் தோல்வி அணு அணுவாகத் தன்னை நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தபின் துரியோதனன் இப்படிச் சிந்தித்தான். முன்பு ஒரு முனிவர் தனக்கு உபதேசித்திருந்த மந்திரம் ஒன்று இப்போது அவனுக்கு நினைவில் வந்தது. அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஜபித்துத் தவம் செய்தால் போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர் பெறச் செய்து பாண்டவர்களை எதிர்க்கலாமென்று எண்ணினான். உண்மையில் அந்த மந்திரம் வலிமை வாய்ந்ததுதான். பிரம்மாவிடம் கற்ற அந்த மந்திரத்தைச் சுக்கிராச்சாரி சகமுனிவனுக்குக் கூறினான். சகமுனி வியாழ பகவானுக்குக் கற்பித்திருந்தான். வியாழபகவானிடம் சீடனாயிருந்து அவன் கருணைக்குப் பாத்திரமான ஒருவன் மூலம் துரியோதனன் அதைக் கற்றுக்கொண்டிருந்தான். முடிவு நெருங்குகிறது போர்க்களத்தில் நின்று அந்தத் தவத்தைத் செய்ய இயலாதென்று தோன்றியது. துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடினான். சிறிது தொலைவு சென்றதும் ஒரு குளமும் அதன் கரையில் பெரிய ஆலமரமாக வளர்ந்திருந்த இடம் வந்தது. குளத்தில் இறங்கி நீராடி ஆலமரத்தின் நிழல் படும்படியாகத் தண்ணீரிலேயே நின்றுகொண்டு அவன் தவத்தை ஆரம்பித்தான். தவத்தில் ஈடுபட்ட அவன் சுற்றுப்புறத்தைக் கவனிக்கவே இல்லை. மந்திரமும் தானுமாக இரண்டறக் கலந்து ஒன்றி விட்டான். இந்த நேரத்தில் அங்கே போர்க்களத்தில் அசுவத்தாமன் முதலியோர் துரியோதனனைக் காணாமல் திகைத்தனர். போருக்குப் பயந்து தோற்று ஓடிவிட்டனா? அல்லது போரில் மாண்டு விட்டானா? - என்றெண்ணிக் கலங்கிய நெஞ்சத்தோடு அவனைத் தேடுவதற்குக் கிளம்பினார்கள். போர்க்களத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் கால் கடுக்க அலைந்து பார்த்தும் அவன் அகப்படவில்லை. இப்படி அவர்கள் அலைந்து கொண்டிருந்தபோது சஞ்சய முனிவர் எதிரே வந்தார். அசுவத்தாமன் முதலியவர்கள் தங்கள் கலக்கத்தை அவரிடம் கூறித் துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டார்கள். முக்காலமும் அறியவல்ல அந்த முனிவர் துரியோதனன் இருந்த இடத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அவர்களுக்குக் கூறினார்: “அன்பர்களே! நீங்கள் நினைப்பது போல் துரியோதனனுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இங்கிருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றால் ஒரு குளமும் ஆலமரமும் இருக்கும். அக்குளத்தில் துரியோதனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள். போரில் இறந்தவர்களையெல்லாம் பிழைத்தெழச் செய்து மீண்டும் போர் செய்வதற்கு முயல்கிறான் அவன்.” “முனிவர் பெருமானே! தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரியமாகச் செல்கிறீர்கள்?” - என்று அவரைக் கேட்டான் அசுவத்தாமன். “அப்பா! அதையேன் கேட்கிறாய்? நான் உயிர் பிழைத்து வந்தது கருணை வடிவமான அந்தக் கண்ணன் அருளாலேயே ஆகும். துருபதேயனைப் போன்ற கொடியவர்கள் சிலர் என்னைக் கொல்வதற்கு ஓடிவந்தனர். நல்ல வேளை கண்ணன் வந்து என் உயிரைக் காப்பாற்றினான். இப்போது நான் திருதராட்டிர மன்னனையும் அவன் மனைவி காந்தாரியையும் சந்திப்பதற்காகச் செல்கிறேன்” - என்றார் முனிவர். முனிவருக்கு வணக்கமும், நன்றியும், தெரிவித்துவிட்டு அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் முதலியவர்கள் விரைந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் சென்றபோது தண்ணீரின் நடுவே நின்று கொண்டு கண் இமைகளை மூடி ஆடாமல் அசையாமல் நிஷ்டையில் இருந்தான் துரியோதனன். அவர்கள் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். இரைந்து கத்தினார்கள். ஆலமரத்து விழுதுகளை அசைத்தும் நீரை அளைந்தும் ஓசை உண்டாக்கினார்கள். என்ன செய்தும் அவனுடைய மோனத்தவத்தைக் கலைக்க முடியவில்லை. அசுவத்தாமன் தன் மனத்திலிருந்த எண்ணங்களையெல்லாம் அள்ளித் கொட்டி ஒரு நீண்ட பிரசாங்கமே செய்து பார்த்தான்: “துரியோதனா! இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்குத் தவம் வேறு செய்ய வேண்டுமா? இப்போது நான் தற்பெருமை பேசவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் போரில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு! வாளேந்திய கைகள் தண்டும் கமண்டலமுமா ஏந்துவது? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! எங்களோடு புறப்பட்டு வா. இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் பாண்டவர்களின் வாழ்வை முடித்துவிடுகிறேன். பின் இந்த உலகம் முழுவதற்கும் ‘ஏகசக்ராதிபதி‘ நீதான்” அசுவத்தாமனின் இந்த நீண்ட சொற்பொழிவைக் கேட்ட பின்பும் துரியோதனன் கண்களைத் திறக்கவே இல்லை. பழையபடி எதையும் பொருட்படுத்தாத நிஷ்டையிலேயே ஆழ்ந்திருந்தான். “சரி! இனிமேல் இவனைக் கலைக்க முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் இவனுடைய நிஷ்டை நீங்காது” - என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். யார் வந்தார்கள்? யார் போனார்கள்? எதற்காக வந்தார்கள்? இவையொன்றுமே தெரியாமல் தன்னுள் இலயித்திருந்தான் துரியோதனன். இவர்கள் நிலை இங்கு இவ்வாறிருக்க அங்கே போர்க்களத்தில் எதிரிகள் ஒருவரையும் காணாது வியந்தனர் பாண்டவர். துரியோதனன் எங்கே? அவனுடைய மீதமிருந்த படைகள் எங்கே? இனிமேல் நம்மால் முடியாது என்று பயந்து ஓடிவிட்டார்களா? அல்லது வேறு எங்காவது மறைந்து சூழ்ச்சி செய்கிறார்களா என்று பாண்டவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. “துரியோதனன் எங்கே போய்விட்டான்? என்ன செய்கிறான்” என்று கண்ணனைக் கேட்டார்கள் அவர்கள். கண்ணன் ஞானதிருஷ்டியால் துரியோதனன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்தை உணர்ந்தான், அவன் அப்போது எதற்காகத் தவம் செய்கிறான் என்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டான். “பாண்டவர்களே! துரியோதனன் தவம் செய்கிறான். எதற்காகத் தெரியுமா? போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர்பெறச் செய்து உங்களோடு போரிடுவதற்காக. அவனுடைய தவம் வெற்றி பெற்று விடுமானால் நிச்சயம் அவன் உங்களை வென்று விடுவான்” - என்று கூறினான் கண்ணன். பாண்டவர்கள் இதைக் கேட்டதும் மலைப்படைந்தனர். “துரியோதனனின் தவத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிடுவோம். அவ்வளவு ஏன்? தவம் முடிவதற்குள் அவன் வாழ்வையே முடிந்துவிட்டால் போகிறது. வாருங்கள்! இப்போதே அவன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் அவனைத் தொலைத்துவிடுவோம்” - என்றான் வீமன். மற்றவர்களும் அதற்கு இணங்கி உடன் கிளம்பினர். துரியோதனன் தவம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தடிக்குளத்திற்குச் செல்லும் வழியில் கண்ணபிரான் பாண்டவர்களை அழைத்துக் கொண்டு போனான். அங்கே துரியோதனன் முன் போலவே கண்மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்தான். மற்றவர்கள் கரையோரத்தில் ஒதுங்கிக் கொள்ள விமன் மட்டும் நீரருகே இறங்கி அவனை வம்புக்கு இழுத்தான். “அடே! துரியோதனா! உனக்குத் தவம் ஒரு கேடா? வீட்டுமன், துரோணன், கர்ணன் முதலிய மகாவீரர்களை எல்லாம் போரில் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் உயிரோடு தவம் செய்வதற்கு வந்துவிட்டாயோ? நீ ஒரு கையாலாகாத மனிதன் வாளேந்திப் போர் செய்யத் தெரியாத நீ தவம் செய்தா எதிரியை மடக்கிவிடப் போகிறாய்? பேடிக்கும் உனக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? ஆண்மையில்லாத பேடிதான் பெண்பிள்ளையைப் போல் ஒடுங்கிக் கிடப்பான். வீரமில்லாத நீ முனிவனைப் போல அடங்கித் தவம் செய்வதாகப் பாசாங்கு செய்கிறாய். ஆனால் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன். அன்று அரசர்கள் கூடிய பேரவையில் எங்கள் திரெளபதியை நீ அவமானப்படுத்திய போது நான் ஒரு சபதம் செய்தேனே? அது உனக்கு நினைவிருக்கிறதா? அந்தச் சபதத்தை நிறைவேற்றுவதற்குரிய நேரம் இப்பொழுது நெருங்கிவிட்டது. இன்று நீ என்னை ஏமாற்ற முடியாது. உன்னோடு போர் செய்து உன்னைத் தொலைப்பதற்காகவே இப்போது இங்கே வந்து நிற்கிறேன். எழுந்திரு, கரையேறி வா!” வீமனின் பேச்சு, துரியோதனனுடைய பொறுமையைச் சோதித்து விட்டது இயற்கையாகவே அவனுக்குரிய கீழ்மைக் குணம் அவனைப் பற்றிக் கொண்டது. முன்பு அசுவத்தாமன் முதலியோர் வந்தபோதுங்கூடத் தவத்தைக் கைவிடாமல் இருந்தவன், இப்போது ஆத்திரத்தினால் வீமனை எதிர்ப்பதற்காகத் தவத்தைக் கைவிட்டுக் கரையேறினான். வீமன்மேல் துரியோதனனுக்கு ஏற்பட்டிருந்த கோபம் நிஷ்டையைக் கலைத்தே விட்டது. பாண்டவர்களைச் சினத்தோடு நோக்கினான் அவன். “தனியாக ஆயுதமின்றித் தவகோலத்தில் நிற்கும் என்னைப் போருக்கு அழைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் ஐந்தாறு பேராகத் திரண்டு ஆயுதங்களோடு வந்துள்ளீர்கள். நானோ தன்னந்தனியனாய் நிற்கிறேன். ஆகவே உங்களில் யாராவது ஒருவர் மட்டும் என்னோடு யுத்தம் செய்ய வாருங்கள்” - என்று அழைத்தான் துரியோதனன். உடனே கண்ணன் துரியோதனனை நோக்கி மறுமொழி கூறலானான் :- “பயப்படாதே! நாங்கள் எல்லோரும் உன்னோடு போர் செய்து உன்னைத் துன்புறுத்தி விடமாட்டோம். உன்னை எதிர்ப்பதற்கும் அழிப்பதற்கும் பிறந்தவன் ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன் தான் வீமன். அந்த வீமன் உன்னைக் கொல்வதாகச் சபதம் செய்திருப்பதை நீ மறந்திருக்க மாட்டாய். ஆகவே நீயும் வீமனும் இப்போது போர் புரியுங்கள். உங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் இந்தப் பரந்த தேசத்தையும் இதன் ஆட்சி உரிமையையும் சொந்தமாகப் பெறலாம்.” கண்ணனுடைய நிபந்தனைக்குத் துரியோதனன் இணங்கினான். வீமனை வென்று மண்ணையும் மண்ணாளும் உரிமையையும் பெற்றுவிட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது. வீமன், துரியோதனன் இருவரும் தங்களுக்குள் கதாயுதத்தால் போர் செய்வது என்று தீர்மானமாயிற்று. போரை எந்த இடத்தில் நடத்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது. இருவருக்குள் நடக்கும் போரானாலும் அதற்கு வசதியும் தகுதியும் நிறைந்த இடம் வேண்டுமல்லவா? ஏற்ற இடம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு எல்லோரும் சேர்ந்து கண்ணபிரானை வேண்டிக் கொண்டார்கள். இவர்கள் ஆலமரத்தடிக் குளக்கரையில் நின்று இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது பல நாட்களாக யாத்திரை போய்ச் சுற்றிவிட்டு வந்திருந்த விதுரனும் பலராமனும் அந்தப் பாதையில் வந்தார்கள். பாண்டவர்களும் விதுரனும் ஆச்சயரித்தோடும், எதிர்பாராத சந்திப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். தீர்த்த யாத்திரை சென்ற இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விதுரனும் பலராமனும் விரிவாகக் கூறினார்கள். போர்க்களத்தில் பதினேழு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாண்டவர்கள் விதுரனுக்கும் பலராமனுக்கும் கூறினார்கள். பரஸ்பரம் பேச்சு குசலப் பிரச்னம், எல்லாம் முடிந்தபின், இப்போது இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்!" என்று பாண்டவர்களைக் கேட்டான் விதுரன். “செய்வதென்ன? பாண்டவர், கெளரவர் ஆகிய இருசாராருக்கும் வசதியாக ஒரு முடிவு செய்திருக்கிறோம். பாண்டவர்கள் சார்பாக வீமனும், கௌரவர்கள் சார்பாகத் துரியோதனனும் கதாயுதங்களால் போர் செய்வது. போரில் யாருக்கு வெற்றியோ அவர்கள் அரசாள வேண்டியது என்று தீர்மானித்திருக்கிறோம். தீர்மானப்படி போரை எந்த இடத்தில் நடத்துவதென்பது தான் யோசனையிலிருக்கிறது.” விதுரனை நோக்கி இப்படிக் கூறிவிட்டுப் பலராமன் பக்கமாகத் திரும்பி, “இவர்கள் போரை எந்த இடத்தில் நடத்தலாம் என்பதை நீதான் சொல்லேன் அண்ணா! நீ சொன்னால் இவர்கள் இருவருமே அதை ஒப்புக் கொள்வார்கள்!” - என்று பலராமனைக் கேட்டான் கண்ணன். “இல்லை இல்லை நான் சொல்வது பொருத்தமில்லை நீயே ஓர் இடத்தை இருவருக்கும் பொதுவாக நிர்ணயித்துக் கூறிவிடு” என்றான் பலராமன். “சரி! அப்படியானால் சமந்த பஞ்சகம், என்னும் இடம் இங்கிருந்து சமீபத்தில் தான் இருக்கிறது. அந்த இடம் நீங்கள் போர் புரிவதற்குப் பொருத்தமானது” - என்று கண்ணன் கூறினான். உடனே விதுரன், பலராமன் உட்பட யாவரும் அருகிலிருந்த சமந்த பஞ்சகம் என்னும் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் நிகழ்வதற்குரிய ஏற்பாடுகள் அங்கே நடந்தன. தனி ஆளாக இருந்த துரியோதனனுக்கு மனத்தில் குழப்பமும், கலக்கமும், ஏக்கமும், நிறைந்திருந்தன. ‘தருமனுக்கு நான்கு தம்பிமார்கள். எனக்கு நூறு தம்பிமார்கள் . தருமனுடைய நான்கு சகோதரர்களும் இதோ அவன் அருகிலேயே நிற்கின்றனர். ஆனால் என்னுடைய நூறு சகோதரர்களில் இப்போது ஒருவன் கூட உயிருடன் இல்லை‘ - என்று ஏங்கினான் துரியோதனன். அவனுடைய அகத்தில் மட்டுமல்ல, முகத்திலும் அந்த ஏக்கம் பிரதிபலித்தது. பளிங்கின் உள்ளே நிறைந்த பொருள் அந்தப் பளிங்கு வழியாகவே வெளியில் தெரிவது போல் துரியோதனனுடைய நெஞ்சின் ஏக்கம் தருமனுக்கு அவன் முகத்திலிருந்தே நன்கு தெரிந்தது. “துரியோதனா! இந்த உலகத்தில் உண்மையான அன்பும் நேசமும் கொண்டு சகோதரனாக வாழ்வதைப் போல் சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை. இப்போது இந்தக் கடைசி விநாடியில் நீ விரும்பினாலும் போரை நிறுத்திச் சமாதானமடைந்து எங்கள் அன்புச் சகோதரனாக உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீ அதற்குச் சம்மதிக்கின்றாயா?” என்று கேட்டான் தருமன். ஆனால் துரியோதனன் அதற்குச் சம்மதிக்கவில்லை. “என் உற்றார் உறவினர், உடன் பிறந்தவர்களையெல்லாம் போரில் கொன்று விட்டீர்கள். என் பரம வைரிகளாகிய உங்களோடு சமாதானம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ மரணமோ, முடிவு எதுவானாலும் அதைப் போர் செய்தே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பாண்டவர்களிடம் திமிரோடு பேசினான் அவன். “சரி! நீயே போருக்கு ஆசைப்படுகிறபோது எங்களுக்கென்ன வந்தது? செய்; போரைச் செய்து உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக்கொள்” என்றான் தருமன். சமந்த பஞ்சகத்திலுள்ள ஒரு பெரிய பூஞ்சோலையில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஆரம்பமாயிற்று. ஒருவர் கதை ஒருவர் மேல் புடைக்க இருவர் மேலும் அடிகள் திடும் திடுமென்று விழுந்தன. “அடே துரியோதனா? உன் உடலைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் இரத்ததைக் குடிக்கவில்லையானால் என் பெயர் வீமனில்லை. இது சாதாரணப் போரில்லை. ஒன்று இந்தப் போரில் நீ என்னைக் கொல்ல வேண்டும் அல்லது நான் உன்னைக் கொல்ல வேண்டும்” என்று கூறிக்கொண்டே போர் புரிந்தான் வீமன். பயங்கரமானதோர் காட்டில் இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு போர் செய்வது போல் தோன்றியது. கதாயுதமும் கதாயுதமும் மோதிக் கொண்டனவா? அல்லது மலையும் மலையும் மோதிக் கொண்டனவா? - என்று வியக்கத்தக்க விதத்தில் நடந்தது அந்தப் போர். போர் நடந்துகொண்டிருக்கும் போது துரியோதனன் ஒரு தந்திரம் செய்து வீமனின் உயிர்நிலை இருந்த இரகசியத்தை அறிந்து கொண்டான். “வீமா! நீ எவ்வளவு பெரிய வீரன்? உன்னுடைய உயிர்நிலை உடம்பில் எங்கே இருக்கிறதென்று சொல்லேன்; பார்ப்போம். எனக்குத் தெரிவதனால் ஒன்றும் கெடுதல் இல்லையே?” - என்று கேட்டான். இந்தக் கேள்வியின் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத வீமன் சுபாவமாகத்தான் துரியோதனன் இப்படிக் கேட்கிறானென்று எண்ணிக் கொண்டு, “அதுவா? அது என் தலையில் இருக்கிறது” - என்று பதில் கூறிவிட்டான். பின்பு சிறிது நேரமானதும் வீமனுடைய தலையில் ஓங்கி ஓங்கி அடித்தான் துரியோதனன். உயிர் நிலையில் தொடர்ந்து அடி விழுந்தபோதுதான் துரியோதனனுடைய வஞ்சகம் புரிந்தது. ‘ஆகா! இவனிடம் நாம் ஏமாந்துவிட்டோமே. இவன் நம்மைத் தொலைப்பதற்காக அல்லவா உயிர்நிலையைப் பற்றி விசாரித்திருக்கிறான். சரி! இவன் பாடத்தை இவனிடமே திருப்பி படிப்போம்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, “துரியோதனா! என் உயிர்நிலை எங்கிருக்கிறது? என்பதைப் பற்றிக் கேட்டாய். உடனே பதில் கூறினேன். இப்போது நான் கேட்கிறேன். உன் உயிர்நிலை உடலின் எந்தப் பாகத்தில் இருக்கிறது சொல்?” - என்று கேட்டான் வீமன். வீமனுடைய கேள்விக்குத் துரியோதனன் சமர்த்தியமாகப் பொய் சொல்லிச் சமாளித்து விட்டான். தன் உயிர் நிலை தனது தொடையிலிருந்தும் அதைச் சொல்லாமல், “வீமா! உன்னைப் போலவே எனக்கும் தலையில் தான் உயிர் நிலை இருக்கிறது” என்று புளுகினான். அதை நிஜமென்று நினைத்துக் கொண்டவீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கையால் ஓங்கி ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு உறைத்த மாதிரியே தெரியவில்லை. அவன் சிறிதும் வலியின்றிச் சிரித்துக் கொண்டே ஊக்கம் தளராமல் வீமனை எதிர்த்தான். உண்மையில் எது உயிர்நிலையோ, அங்கே அடிபட்டிருந்தால் தானே வலி, தளர்ச்சி எல்லாம் ஏற்படும்? வீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் வீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கவுமில்லை; விழவுமில்லை. அருகில் நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கவனித்தான். துரியோதனன், வீமனை ஏமாற்றிவிட்டான் உன்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. கண்ணன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ச்சுனனை அழைத்து இரகசியமாக அவன் காதருகே இதைக் கூறினான்:- “அர்ச்சுனா! துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது. ஆனால் தலையிலிருப்பதாக உன் அண்ணனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் அவன். இப்போது உண்மையை நாம் வீமனுக்குத் தெரிவித்து விடவேண்டும் நீ ஒரு காரியம் செய்! ஜாடையாக வீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவித்துவிடு” என்று கண்ணன் கூறியபோது, அர்ச்சுனன் அப்படியே செய்வதாக கூறிச் சென்றான். வீமனுக்கு அருகே போய்க் கையால் தொடையைத் தொட்டுக் காட்டிக் கண்ணால் ஜாடை செய்தான் அர்ச்சுனன். அவ்வளவு சொன்னால் போதாதா வீமனுக்கு? துரியோதனனுடைய உயிர்நிலை அவன் பொய்யாகச் சொன்னது போல் தலையில் இல்லை; தொடையில் தான் இருக்கிறது என்று வீமனுக்குப் புரிந்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது துரியோதனனுடைய உயிர்நிலை எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், ‘இனி இவனை அழிப்பது கடினமில்லை’ என்று தோன்றியது வீமனுக்கு. உடனே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டிக் கதையை ஓங்கித் துரியோதனனின் தொடையில் அடித்தான். பலமாக விழுந்த அந்த அடியைத் தாங்க முடியாமல் தலைகிறங்கிச் சோர்ந்து அலறிக் கொண்டே கீழே வீழ்ந்தான் துரியோதனன். அவன் கீழே விழுந்த பின்பும் வீமனுடைய சினம் அடங்கவில்லை. மார்பில் ஓங்கிக் குத்தினான். கன்னங்களில் அறைந்து பற்கள் சிதறி வாயிலிருந்து இரத்தம் ஒழுகுமாறு செய்தான். துரியோதனன் சிரசில் அணிந்து கொண்டிருந்த பொற்கிரீடம் உருண்டு மண்ணில் புதைந்தது. தோள்களிலும், மார்பிலுமாக வீமனிடமிருந்து துரியோதனன் வாங்கிக் கொண்ட அடிகள் கணக்கு வழக்கிற்கு அடங்காதவை. கடித்துக் குதறி எறியப்பட்ட மாமிசப்பிண்டம் போலத் தரையில் கிடந்தது துரியோதனனின் உடல், “ஏ கண்ணா! நீ சூழ்ச்சிக்காரன். நீ செய்ததெல்லாம் எனக்குத் தெரியும். அர்ச்சுனன் மூலமாக என் உயிர் நிலை எது என்பதை நீ குறிப்பாக வீமனுக்குத் தெரியப்படுத்திவிட்டாய். இல்லையானால் வீமன் இப்படி என்னை நொறுக்கித் தள்ளுவானா? ஆனால் உன்னுடைய இந்தச் செயல் பெரிய வஞ்சகம். நேர்மையான போர் முறை ஆகாது இது. நீ ஓர் இடையன், பெருந்தன்மை இல்லாதவன். ஆகவேதான் நீ இப்படிப்பட்ட கேவலமான செயலைச் செய்தாய், பரம்பரை அரச குலத்தில் பிறந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்யக் கூசுவார்கள்” என்று வேதனைமிக்க குரலில் கதறினான் துரியோதனன். அடிபட்டு இரணமாகியிருந்த உடலின் வலி வேதனை அவன் குரலில் தொனித்தது. சிறிது நேரம் இவ்வாறு முனகிக்கொண்டும் கதறிக்கொண்டும் கிடந்தபின், திரும்பவும் வீமனோடு போர் செய்வதற்கு எழுந்தான் துரியோதனன். அவன் எழுந்திருப்பதைப் பார்த்து, “துரியோதனா! உன் உடலில் எழுந்திருப்பதற்குக் கூடவா இன்னும் வலிமை மீதமிருக்கிறது? இதோ பார்! அந்த வலிமையையும் போக்கிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவனைக் கால்களால் உதைத்துக் கீழே தள்ளினான் வீமன். “ஐயோ! அப்பா! கொல்கிறானே?” என்று பரிதாபகரமாகச் சப்தமிட்டுக் கொண்டே திரும்பவும் கீழே விழுந்தான் துரியோதனன். வீமன் துரியோதனனைக் குற்றுயிரும் குலையுயிருமாக அடித்துக் கீழே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. துரியோதனனுடைய நிலை கண்டு அவன்மேல் இரக்கம் கொண்டு விட்டான் பலராமன். “அடே வீமா! நிறுத்து உன் சாகஸத்தை. நீங்கள் செய்வது போர் முறைக்குச் சிறிதும் பொருந்தாது. அப்போதிருந்து நடப்பதை எல்லாம் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். முறை தவறிய போரை யார் செய்தாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் தம்பியான கண்ணனே இதற்குக் காரணமாக இருந்தாலும் நான் அதை வெறுக்கிறேன். கதைப் போர் செய்வதென்றால் அதற்கு ஓர் ஒழுங்கில்லையா? இடுப்புக்கு மேல் அடிப்பதுதான் கதைப் போர். இடுப்புக்குக் கீழே தொடையில் வீமன் துரியோதனனைத் தாக்கியிருக்கிறான். தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற திமிரினால் தான் வீமன் இப்படிச் செய்திருக்கிறான். இதோ இந்த வீமனை நானே அடித்து நொறுக்கிவிடுகிறேன்” என்று ஆத்திரத்தோடு கூறிக்கொண்டே ஓர் இரும்பு உலக்கையினால் வீமனை அடிப்பதற்குத் தாவிப் பாய்ந்தான் பலராமன். அவனுடைய முன்கோபம் பயங்கரமாக இருந்தது. பலராமன் ஓங்கிய உலக்கையின் அடிமட்டும் வீமன்மேல் விழுந்திருக்குமானால் அவன் எலும்புகள் பொடிப் பொடியாக நொறுங்கியிருக்கும். கண்ணன் குறுக்கே பாய்ந்து தடுத்தனால்தான் வீமன் பிழைக்க முடிந்தது. “அண்ணா! பொறு! கோபப்படாதே. உன்னுடைய முன் கோபத்தால் எல்லா ஏற்பாடுகளும் கெட்டுப் போய்விடும். இவர்கள் பகையில் குறுக்கிடுவதற்கு நீ யார்? இளம் பிராயத்திலிருந்தே இவர்களுக்குள் கொடும்பகை நிலவி வருகிறது. அந்தப் பலநாள் பகையை இவர்கள் தங்களுக்குள் தாங்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு எவ்வாறு சாவு நேரும் என்பது பற்றி மைத்திரேய முனிவர் இட்ட சாபம் உனக்கு மறந்து விட்டதா?”துரியோதனனின் தொடை இரத்தத்தைப் பூசினாலொழியக் கூந்தலை முடியமாட்டேன்’ என்று திரெளபதி சபதம் செய்திருக்கிறாள். துரியோதனனைத் தன் கையாலேயே கொன்று முடிப்பதாக வீமனும் சபதம் செய்திருக்கிறான். அந்தச் சபதங்களெல்லாம் நிறைவேறியாக வேண்டாமா? நீயும், விதுரனும் தீர்த்த யாத்திரை சென்று விட்டு இப்போது தான் திரும்பி வருகிறீர்கள். கழிந்துபோன பதினேழு நாட்களாகப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. வீமன் துரியோதனனைக் கதாயுதத்தால் அடித்து விட்டதைப் ‘பெரிய வஞ்சகம்’ என்று கூறிக் குமுறுகிறாய் நீ! கடந்த பதினேழு நாட்களில் பாண்டவர்களுக்கு எதிராகத் துரியோதனன் செய்திருக்கும் அளவற்ற வஞ்சகங்களை நீ பார்த்திருந்தால் இப்படிப் பேசவே மாட்டாய், சிவேதன், அபிமன்னன் போன்ற பாண்டவர் தரப்பு வீரர்களையெல்லாம் துரியோதனன் வஞ்சகத்தினாலேயே கொன்றிருக்கிறான். அத்தகைய துரியோதனனை எதிர்த்து வீமன் எப்படிப் போர் புரிந்தாலும் தகும். ஆகவே அண்ணா நீ இதில் தலையிட்டுக்கொள்வது சிறிதும் பொருந்தாது" என்று பலராமனைத் தடுத்தான் கண்ணன். வீமனை அடிப்பதற்காக ஓங்கிய பலராமனின் கைகள் தயங்கின. இரும்பு உலக்கை கீழே விழுந்தது. பேசாமல் தலை குனிந்தவாறே அந்தத் தோட்டத்திலிருந்தே வெளியேறிவிட்டான் அவன். யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளக் கூட அவனுக்குத் தோன்றவில்லை. இருள் போர்வைக்குள் உலகமும் ஒளியும் மூழ்கி இரண்டறக் கலக்கும் நேரம். கீழே அடிபட்டு விழுந்த துரியோதனன் வேதனை தாங்காமல் மெல்லிய குரலில் முனகிக் கொண்டிருந்தான். சூரியன் மறைகின்ற நேரமும் அவனுடைய வாழ்வு மறைகின்ற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தன. “சரி வாருங்கள் போகலாம். இனி இவன் விதியை இவனே கவனித்துக் கொள்ளட்டும்” என்று கூறிப் பாண்டவர்களையும் விதுரனையும் அழைத்துக்கொண்டு சென்றான் கண்ணன். எல்லோரும் சமந்தபஞ்சக மலைத் தோட்டத்திலிருந்து கிளம்பினர். மன்னாதி மன்னனாகிய துரியோதனன் மட்டும் கவனிக்க ஆளின்றி அநாதைபோல் வீழ்ந்து கிடந்தான். அவனுடன் இருந்தவை அவநம்பிக்கை, வேதனை, சிந்திய ரத்தம், ஏமாற்றம் இவைகளைத் தவிர வேறெவையும் இல்லை. மலையிலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் நேரே குருக்ஷேத்திரத்திலுள்ள தங்கள் பாசறைக்குப் போய்த் தங்க வேண்டுமென்றார்கள். “இன்றிரவு பாசறையில் தங்கக்கூடாது. அதனால் எவ்வளவோ கெடுதல்கள் விளையலாம், இது இராஜீய இரகசியம். வெற்றிபெற்ற அரசர்கள் தோல்வியுற்றவனின் படைகளுக்கருகே உள்ள தமது பாசறையில் வசிப்பது பலவிதத்திலும் ஆபத்தைத் தரக்கூடியது. நீங்கள் பேசாமல் என்னோடு வாருங்கள். நம்முடைய படைகள் வேண்டுமானால் பாசறையிலேயே தங்கியிருக்கட்டும். அவற்றைப் பற்றிக் கவலை இல்லை. நாம் மட்டும் பக்கத்தேயுள்ள ஒரு காட்டில் போய்த் தங்கி இரவுப் பொழுதைக் கழிப்போம்” என்று கூறி அவர்களை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றான் கண்ணன், பாண்டவர்களும் அந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டு கண்ணனோடு காட்டிற்குச் சென்றனர். இதற்குள் துரியோதனன் சமந்தபஞ்சக மலையிலுள்ள பூஞ்சோலையில் குற்றுயிரும் குலையுயிருமாக அடிபட்டுக் கிடக்கிறான் என்ற செய்தி அசுவத்தாமன் முதலிய கெளரவப்படை வீரர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. கெளரவர்படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் செய்தியைக் கேள்விப்பட்ட மறுகணமே சமந்தபஞ்சக மலைக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். அங்கே சென்றதும் இரத்த வெள்ளத்தினிடையே கிடக்கும் துரியோதனனுடைய உயிர் நீங்கப் போகிற உடலைத் தாங்கிக் கொண்டு கதறியழுதான் அசுவத்தாமன். “ஐயோ! உன் கதி இப்படியா ஆகவேண்டும்? மகாமன்னனாக வாழ வேண்டிய நீ இப்படி மண்ணிலா கிடப்பது? பாண்டவர்களை நாளையே தோற்று ஓடச் செய்து இந்த மண்ணுலகத்தின் ஏக சக்ராதிபதியாக உன்னை ஆக்கவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேனே? அந்தக் கனவையெல்லாம் பாழாக்கி விட்டாயே, என்னை முன்பே படைத் தலைவனாக ஆக்கியிருந்தால் உனக்கு இந்தக் சுதி நேராதபடி உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்பேனே? யார் யாரோ திறமையற்றவர்களை எல்லாம் படைத் தலைவர்களாக்கி உன் வினையை நீயே தேடிக் கொண்டாய். அந்தோ! உன் நிலை பரிதாபத்துக்குரிய தாகிவிட்டது. இவற்றையெல்லாம் இப்போது பேசி என்ன பயன்? விதி முடிகின்ற நேரம் இது. ஆயிற்று. எல்லாமே முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரியோதனா ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் உனக்கு நான் இந்த அந்திம காலத்தில் அளிக்கின்றேன். உன் உயிர் சாவதற்குள் உன் கண்கள் காணும்படியாகவும், காதுகள் கேட்கும்படியாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுகின்றேன். பார்த்து விட்டு அல்லது கேட்டுவிட்டு அதன் பிறகு நீ மாண்டு போகலாம். உன்னை இக்கதிக்கு உள்ளாக்கிய வீமனையும், அவனுடைய சகோதரர்களையும் கொன்று குவிக்கிறேன். இதை என்னால் செய்ய முடியுமா என்று திகைக்காதே. நான் செய்யத்தான் போகிறேன். தேவாதி தேவர்களின் கிருபையால் தவம் செய்து பெற்ற பல அஸ்திரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் இன்று பாண்டவர்கள் மேல் தொடுக்கப் போகிறேன். என் சொற்களை நம்பு" என்று வீர உரை பேசினான் அசுவத்தாமன். “செய் அசுவத்தாமா செய்! உன்னால் இதைச் செய்ய முடிந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இதோ என் அன்புக்கும், நன்றிக்கும் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்” என்று கூறிக் கீழே உருண்டு கிடந்த தன் முடியிலிருந்து ஒரு மணியை எடுத்து நடுங்கும் கைகளால் அசுவத்தாமனிடம் கொடுத்தான் துரியோதனன். அசுவத்தாமனும் பயபக்தியோடு அதைப் பெற்றுக் கொண்டான். துரியோதனன் அளித்த மணியைப் பெற்றுக் கொண்ட பின் அசுவத்தாமன் முதலியோர் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சமந்தபஞ்சகமலையிலிருந்து புறப்பட்டுத் தங்களுடைய பாசறையை அடைந்தனர். கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய இருவரோடும் கலந்து ஆலோசித்த பின் பாண்டவர்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டான் அசுவத்தாமன். தாக்குதலின் போது அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக மற்ற இருவரும் ஒப்புக் கொண்டனர். பாண்டவர்களைத் தாக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல நிமித்தமும் தென்பட்டது. பாசறையின் அருகே இருந்த ஆலமரம் ஒன்றில் ஓர் ஆந்தை காக்கைகளை எதிர்த்துப் பூசல் செய்து கொண்டிருந்தது. பகலில் என்னைத் துன்புறுத்திய காகங்களை இரவிலே பழிவாங்குவேன் என்று முயற்சி செய்வது போல் ஆந்தை கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. ‘பகலில் நம்மை வென்ற பாண்டவர்களை நாம் இந்த இரவில் தான் வெல்ல வேண்டும். இதற்கு இந்த ஆந்தையின் செயல் ஒரு நல்ல நிமித்தம்’ என்று எண்ணிக் களிப்படைந்தான் துரியோதனாதியர் படையைச் சேர்த்த அசுவத்தாமன். இரவோடிரவாகப் பாண்டவர்களின் பாசறையில் திருட்டுத்தனமாய் நுழைந்து அவர்கள் ஐந்து பேரையும் ‘கொலை செய்து விடுவது’ என்று திட்டம் உருவாயிற்று. பாண்டவர்கள் பாசறையில்தான் தங்கியிருக்கிறார்களா? அல்லது வேறெங்காவது போய்த் தங்கியிருக்கிறார்களா? என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை. அசுவத்தாமன், கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய மூவரும் ஆயுதபாணிகளாக இருளில் பதுங்கிப் பதுங்கி மறைந்து மறைந்து பாண்டவர்கள் பாசறை வாசலை அடைந்தனர். பாசறைக்கு இம்மாதிரி ஆபத்துக்கள் நேரலாம் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்த கண்ணன் மாயையினால் உருவாக்கப்பட்ட பயங்கரமான பூதம் ஒன்றைப் பாசறை வாயிலில் காவலாக நிறுத்தி வைத்திருந்தான். இப்படி ஒரு பூதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விஷயமும் அசுவத்தாமன் முதலியோருக்குத் தெரியாது. அவர்கள் மூவரும் பாசறை வாயிலை அடைந்தபோது பூதம் குபீரென்று பாய்ந்து பிடித்துக்கொண்டது. ‘ஐயோ! அப்பா! பூதம்! பூதம்!’ என்று அவர்கள் அலறினார்கள். அவர்கள் அலறலைப் பொருட்படுத்தாமல் நையப் புடைந்து விரட்டியது பூதம். கிருதவன்மாவும், கிருபாச்சாரியனும், பூதத்தினிடமிருந்து தப்பித்தால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போய்விட்டனர். அசுவத்தாமன் பூதத்தை எதிர்க்க முயன்றான். அதன் விளைவாகப் பூதம் தன் கை வரிசையை அவனிடம் மிகுதியாகக் காட்டி வெளுத்து விட்டது. இனியும் இந்தப் பூதத்தினிடம் அகப்பட்டுக் கொண்டால் இது நம்மைக் கொன்றே போட்டுவிடும்’ என்று பயந்து ஓடினான் அவன். பாண்டவர்களின் பாசறை வாயிலில் பிடித்த ஓட்டம் தன் பாசறை வாசலில் இருந்த ஆல மரத்தடியில் வந்துதான் நின்றது. மூச்சு இரைத்தது. சோர்ந்துபோய் அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. “பாண்டவர்கள் ஐவரையும் கொன்று அவர்கள் தலைகளைச் சமந்தபஞ்சக மலைக்குக் கொண்டுவந்து காட்டுவதாகத் துரியோதனனுக்கு வாக்குறுதி அளித்து விட்டேன். அந்த வாக்குறுதியை இனி எப்பாடுபட்டாவது நிறைவேற்றித் தீரவேண்டும். நிறைவேற்றத் தவறிவிட்டால் என் வாழ்வே பயனற்றதாகிவிடும். கடைசியாக எனக்கு ஒரே ஒரு வழி புலப்படுகிறது. இறைவன் என்னைக் கைவிடமாட்டான். பாண்டவர்களை அழிக்கும் வலிமை வாய்ந்த அஸ்திரத்தைக் கொடுக்குமாறு இறைவனை எண்ணித் தவம் செய்கிறேன்” இந்தத் தீர்மானத்துடன் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை எண்ணித் தவம் செய்யலானான். அவன் தவம் பலித்தது. இறைவன் அவன் முன் தோன்றி, “அசுவத்தாமா! என்னை எதற்காக எண்ணினாய்! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “இறைவா! நீ கருணை வடிவினன். என் வரத்திற்குச் செவி சாய்த்து அருள். பாண்டவர்களைக் கொல்வதற்கு எனக்கு ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து உதவு” என்றான். இறைவன் அவனுடைய விருப்பப்படியே ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். இறைவனின் அஸ்திரத்தை அடைந்த அசுவத்தாமன் புதிய ஊக்கம் பெற்றுக் கிருபனையும், கிருதவன்மாவையும் உடன் கூட்டிக்கொண்டு திரும்பவும் பாண்டவர்கள் பாசறையை நோக்கிச் சென்றான். மறுபடியும் இவர்கள் வருவதைக் கண்டு பூதம் ஆவேசமாகப் பாய்ந்தது. ஆனால் அசுவத்தாமன் தன்னிடமிருந்த தெய்வீக அஸ்திரத்தைக் காட்டியவுடன் பூதம் பயந்து போய் அங்கிருந்து ஓடிவிட்டது. பூதம் ஓடியபின் தன்னோடு வந்திருந்த இருவரையும் பாசறை வாயிலில் காவல் வைத்துவிட்டு ஆயுதங்களோடு தான் மட்டும் பாசறைக்குள் நுழைந்தான் அசுவத்தாமன். அவன் எதிர்பார்த்தது போல் பாண்டவர்கள் பாசறையில் இல்லை. படை வீரர்களும் தளபதி துட்டத்துய்ம்மனும் மட்டுமே அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது பாவம். ஆனால் அசுவத்தாமனின் ஆத்திரத்தில் பாவத்தையும் புண்ணியத்தையும் கவனிக்க நேரம் ஏது? துட்டத்துய்ம்மனைத் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்தான் அவன். அந்தச் சப்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமன் மேல் பாய்ந்தனர். ஆனால் தன்னிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொலை செய்தான் அவன். அப்போது பாண்டவர் சகோதரர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்திருந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்குப் பாண்டவர்களைப் போலவே இருந்ததனால் அசுவத்தாமன் அவர்களையே பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டான். எனவே துரியோதனனிடம் வாக்களித்திருந்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். இளம் பாண்டவர்களாகிய ஐவரின் மக்களை அசுவத்தாமன் கொன்ற செய்தியை அறிந்து சோழமன்னனும் அவனுடைய வீரர்களும் குமுறி எழுந்தனர். அசுவத்தாமனை எதிர்த்தனர். ஆனால் அசுவத்தாமனிடம் இருந்த தெய்வீக அஸ்திரத்தால் சோழனும் அவன் படைகளும் தோற்று ஓட நேர்ந்தது. பாண்டவர்கள் பாசறையிலிருந்த யாவரையும் வென்று முடித்தபின் இளம் பாண்டவர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்தபஞ்சக மலைக்குக் கிளம்பினான் அசுவத்தாமன். சமந்தபஞ்சக மலையை அடைந்து துரியோதனன் கிடந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, “துரியோதனா! இதோ என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். உன்னிடம் கூறிவிட்டுச் சென்றபடி பாண்டவர்களின் தலைகளை - அறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று கூறித் தலைகளை அவன் முன் வீசி எறிந்தான். அதைக் கண்டதும் துரியோதனனுடைய முகத்தில் மகிழ்ச்சி மலரும் என்று எதிர்பார்த்தான் அசுவத்தாமன். ஆனால் துரியோதனனுடைய முகம் சிவந்தது. அவன் திடுக்கிட்டான். எதற்குமே நடுங்காத அவன் சரீரம் நடுங்கியது. இரத்தம் கொதித்தது. மெல்ல எழுந்திருந்து தனக்கு முன் கிடந்த தலைகளை உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் ‘ஓ’வென்று அலறிக் கூச்சலிட்டான். “ஐயோ! பாவி! அசுவத்தாமா! என்ன காரியம் செய்தாய்? நீயும் ஒரு பிராம்மணனா? பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் புதல்வர்களைக் கொன்று தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? அடே! பாதகா! நீ விளங்குவாயா? உன் குலம் உருப்படுமா? குருகுலத்தின் கொழுந்துகளாகிய இந்தப் பச்சிளம் பாலகர்கள் உனக்கென்ன தீமை செய்தார்கள்?” என்று தன் ஆத்திரத்தை அசுவத்தாமன் மேல் திருப்பினான் துரியோதனன். அறத்தின் வாழ்வு தலைகளை வெட்டிக்கொண்டு வந்ததற்காகத் துரியோதனன் தன்னைப் பாராட்டி நன்றி கூறுவான் என்று எதிர்பார்த்த அசுவத்தாமனுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. துரியோதனன் தன் செயலையும் தன்னையும் இவ்வாறு பழித்துக் கூறி வெறுப்பான் என்று அசுவத்தாமன் எதிர்பார்க்கவே இல்லை. தான் வெட்டியது பாண்டவர் தலைகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன். இப்போது இளம் பாண்டவர் தலைகளை வெட்டி விட்டோம் என்று உணர்ந்தபோது அவனுக்கே சதை ஆடி நடுங்கியது, துரியோதனனுக்கு முன்னால் குற்றவாளியைப்போல் வெட்கித் தலைகுனிந்து நின்றான் அவன். ‘சீ! துரோகி! இன்னும் ஏன் என் முன் நிற்கிறாய்? ஓடு! ஓடிப்போய் உன் பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடு. தொலை, தொலைந்து போ. எங்காவது போய்த் தவம் செய்’ என்று கத்தினான் துரியோதனன். அசுவத்தாமன் அங்கிருந்து புறப்பட்டான். பாசறைக்கு வந்து கிருபாச்சாரியனையும், கிருதவன்மனையும், அழைத்துக் கொண்டு வியாசர் வசித்து வந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். அப்படிச் செல்லும்போது அவன் மனம் ஒரேயடியாகக் குழம்பியிருந்தது. அசுவத்தாமன் சென்றபின் மரணப்படுக்கையிலிருந்த துரியோதனன் சஞ்சயனைக் கூப்பிட்டு அனுப்பினான். சஞ்சயன் சமந்த பஞ்சகத்துப் பூஞ்சோலைக்கு வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனன் உணர்வு ஒடுங்கிப் போன மெல்லிய குரலில் சஞ்சயனிடம் கூறினான்:- “சஞ்சயா! இதோ இன்னும் சில விநாடிகளில் நான் இறந்து விடுவேன். இறப்பதைப்பற்றி எனக்குப் பயமில்லை. என்னுடைய சாவுக்காக மற்றவர்களும் கவலைப்படக் கூடாது. என்னைப்போல் வாழ்நாளெல்லாம் தீமையே வடிவாக வாழ்ந்த எவருக்கும் இப்படிப்பட்ட கேவலமான சாவுதான் கிடைக்கும். உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்கும் இந்த அந்திம நேரத்தில்தான் நான் செய்த தீமைகளை எண்ணிக் கண்ணீர் விடுகிறேன். நான் எப்படி வாழ்ந்தேன்?’ என்பதும், ‘எப்படி வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்?’ என்பதைப் பற்றியும் இப்போது தான் சிந்திக்கிறேன். இனிமேல் சிந்தித்து என்ன பயன்? வாழப் போகிறவன் அல்லவா சிந்திக்க வேண்டும்? செத்துக் கொண்டிருப்பவன் சிந்தித்துக் கொண்டே செத்தால் என்ன? சும்மா செத்தால் என்ன? நீ எனக்கு ஓர் உதவி செய். அத்தினாபுரத்துக்குச் சென்று என் பெற்றோரிடம் என்னுடைய மரணச் செய்தியைச் சொல். நான் இறந்துவிட்டேனென்பதற்காக அவர்கள் அதிகமாகத் துயரப்படவேண்டாம்! நீ அவர்களுக்கு ஆறுதல் கூறு.”உங்கள் மகன் துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் வணங்காமுடி மன்னனாக அரசாண்டான். ஆனால் இப்போது குனிந்த தலையுடன் குற்றங்களை எண்ணி வினைகளின் சூட்டில் வெதும்பிச் சமந்தபஞ்சகத்துப் பூஞ்சோலையில் ஒரு குற்றவாளியாகச் செத்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்களிடம் சொல்" - இதற்குமேல் துரியோதனனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண் விழிகள் பிதுங்கின. அவன் இரு கைகளையும் தூக்கிச் சஞ்சயனுக்கு நமஸ்காரம் செய்தான். சஞ்சயனுக்குக் கண்களில் நீர் துளித்தது. துரியோதனனுடைய மரணத்தைக் கண்களால் காண விருப்பமில்லாதவனாய் அங்கிருந்து புறப்பட்டு அத்தினாபுரிக்குச் சென்றான் அவன். துரியோதனனுடைய பெற்றோரான திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் மரணச் செய்தியைத் தெரிவித்து ஆறுதல் கூறினான். துரியோதனன் அந்திம காலத்தில் நெஞ்சுருகிக் கூறிய செய்திகளையும் அவர்களிடம் எடுத்துரைத்தான். இஃது இவ்வாறிருக்கத் துரியோதனனால் வெறுக்கப்பட்டு வியாசர் ஆசிரமத்தை அடைந்த அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாச முனிவரை வணங்கி நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவரிடம் கூறினர். எல்லாவற்றையும் கேட்ட அவர் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார். “அசுவத்தாமா! நீ செய்த பாசறைப் படுகொலைகள் மகா பாதகம் நிறைந்த செயல்தான். ஆனாலும் நீ என்ன செய்வாய்? உன்னுடைய விதி உன்னைப் பழிகாரனாக்கிவிட்டது. அந்தப் பழியைப் போக்கிக் கொள்வதற்குத் தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீயும் கிருபாச்சாரியனும் இந்த ஆசிரமத்தில் தங்கி உங்கள் பழி, பாவம் நீங்க வேண்டுமென்று இறைவனை நோக்கி நீண்ட நாள் பெருந்தவம் செய்யுங்கள். கிருதவன்மா அவனுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்” என்று யோசனை கூறினார். அந்த யோசனைப்படியே அசுவத்தாமனும், கிருபாச்சாரியனும், தவம் செய்யத் தொடங்கினர். கிருதவன்மன் வியாசரை வணங்கிவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான். தவத்தில் மன அமைதியையும் திருப்தியையும் கண்டு சாந்தம் பெற்றான் அசுவத்தாமன். பதினெட்டாம் நாள் போர் முடிந்து பத்தொன்பதாம் நாள் காலை பொழுது புலர்ந்தபோது காட்டில் தங்கியிருந்த பாண்டவர்களும் கண்ணனும் பாசறைக்குப் புறப்பட்டனர். இரவில் பாசறைக்குள் திருட்டுத்தனமாய்ப் புகுந்து அசுவத்தாமன் செய்த அட்டூழியங்களைப் பற்றி அப்போது அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பாசறை வாயிலை அடைந்தபோது திரெளபதி அங்கே இறந்து கிடந்த முண்டங்களைக் கட்டி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் பாண்டவர்கள் திடுக்கிட்டனர். அருகில் நெருங்கிப் பார்த்தபோதுதான் அந்த முண்டங்கள் தங்கள் ஐந்து பேருடைய புதல்வர்களின் இறந்த உடல்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே பாண்டவர்கள் திரெளபதியோடு சேர்ந்து தாங்களும் கதறியழுதனர். பாசறைக்குள் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகள் எப்போது நடந்தன? கொலை செய்தது யார்? என்பதை அறியாமல் மயங்கினர். “கண்ணா! உன்னால் மோசம் போனோம். பாசறையைத் தனியே விட்டுவிட்டுக் காட்டில் வசிக்க வேண்டுமென்று நீ சொல்லியபடி கேட்டதனால்தானே இவ்வளவு வினைகளும் வந்தன.” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கதறினான்; அழுதான். கண்ணன் சாந்தம் நிறைந்த முகபாவத்தோடு மெல்லிய குரலில் பதில் கூறினான்: “தருமா நாம் காட்டில் தங்காவிட்டால் நம்மையும் இப்படிக் கொலை செய்திருப்பார்கள். நேற்று நள்ளிரவில் அசுவத்தாமன் இங்கு புகுந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறான்! இவர்கள் தூங்கும் போதே இவர்களைக் கொலை செய்திருக்கிறான் அந்தப் பாவி,” “ஓகோ! அந்த அசுவத்தாமன் இப்போது எங்கே இருக்கிறான்? முதல் வேலையாக அவன் தலையை அறுத்துக் கீழே தள்ளிப் பழிக்குப் பழி வாங்குகிறேன்” என்று வாளை உருவிக் கொண்டு ஆவேசமாகக் கிளம்பிவிட்டான் வீமன். அர்ச்சுனன் முதலியவர்களும் வாளை உருவிக்கொண்டு அசுவத்தாமனைத் தேடிச் செல்லத் தயாராகிவிட்டனர். “பொறுங்கள்! இனி நீங்கள் அசுவத்தாமனைத் தேடிக் கொலை செய்வதால் ஒரு பயனுமில்லை. இப்போது நீங்கள் கொலை செய்வதற்கேற்ற நிலையிலும் அவன் இல்லை. அவன் வியாசருடைய ஆசிரமத்தில் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடித் தவம் செய்து கொண்டிருக்கிறான்’ என்று கூறி அவர்களைத் தடுத்தான் கண்ணன். முதல் நாள் மாலை சமந்தபஞ்சகத்தில் துரியோதனனைச் சந்தித்து அசுவத்தாமன் வாக்குறுதி அளித்தது முதல் பாசறையில் பூதத்திடம் அடிபட்டது, பின்பு இறைவனை எண்ணித் தவம் செய்தது, தவத்தால் அஸ்திரம் பெற்றுப் படுகொலை செய்தது, இளம் பாண்டவர்களைப் பாண்டவர்களாக எண்ணிக் கொண்டு தலைகளை அறுத்துப் போய்த் துரியோதனனிடம் எறிந்தது. துரியோதனன் அசுவத்தாமனை வெறுத்து விரட்டியதுவரை, எல்லா நிகழ்ச்சிகளையும் கண்ணன் பாண்டவர்களுக்குக் கூறினான். “நாம் மட்டும் நேற்றிரவு இந்தப் பாசறையில் இருந்திருந்தால் கொலை செய்ய வந்த அசுவத்தாமனைச் சும்மா விட்டிருப்போமா?” என்று கண்ணனை எதிர்த்துக் கேட்டான் வீமன். “முடியாது வீமா! நேற்றிரவு இங்கு யார் இருந்திருந் தாலும் அசுவத்தாமனை எதிர்த்திருக்கமுடியாது. அவன் தவம் செய்து பெற்ற அஸ்திரத்தின் பெயர் ‘பாண்டியம்’ என்பது! அதைக் கொண்டு அவன் எவ்வளவு பெரிய பலசாலியையும் கொன்றுவிடமுடியும். அவ்வளவு ஏன்? பாண்டவர்களாகிய நீங்கள் ஐந்து பேரும் பாசறையில் இருந்திருந்தால் கூட உங்கள் தலைகளை அசுவத்தாமன் அறுத்துக் கொண்டு போயிருப்பான். ஆகவே இனிமேல் பேசிப் பயனில்லை. அசுவத்தாமனைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். துரியோதனனோ இறந்துவிட்டான். மகத்தான இந்தப் பதினெட்டு நாள் யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அரசாளும் உரிமை உங்களைச் சேர்ந்துவிட்டது. நடந்ததை மறந்து விடுங்கள். இறந்தவர்களைப் பற்றிய கவலைகளை இந்த விநாடியோடு நினைவிலிருந்து அகற்றி விடுங்கள். மேலே நடக்கவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றிக் கவனியுங்கள்…” என்று நீண்ட அறிவுரை கூறினான் கண்ணன். “கண்ணா! நீ மனித நிலையைக் கடந்தவன். பாச பந்தங்களில் சிக்கிக் கொண்டிருப்பது போல் காட்டிக் கொண்டே அவைகளில் சிக்காமல் ஒதுங்கி வாழ்பவன். உன்னால் துன்பங்களைச் சீக்கிரமே மறந்துவிடமுடியும். உற்றார், உறவினர், அண்ணன், தம்பி, பெற்ற மக்கள், யார் இறந்தாலும் அதை மறந்துவிடத் தக்க உறுதியான நெஞ்சு உனக்கு இருக்கின்றது. நாங்கள் சாதாரண மனிதர்கள் தானே? எங்களால் துன்பத்தை அவ்வளவு விரையில் மறந்துவிட முடியுமா? அதுவும் சொந்தப் புதல்வர்களின் உயிரற்ற சரீரங்களைக் கண் முன் கண்ட பின்பும் அழாமலோ, வருந்தாமலோ இருக்க முடியுமா?” என்று மனமுருகிக் கேட்டான் தருமன். அதைக் கேட்டதும் கண்ணன் கலகல வென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே தருமனை நோக்கிக் கூறினான்:- “தருமா! உலகின் நிலையாமையைப் பற்றிய மெய்யுணர்வு இல்லாமையினால் நீ இப்படிப் பேசுகிறாய், இந்த மாபெரும் போரில் இன்றுவரை எத்தனை கோடி உயிர்கள் இறந்திருக்கின்றன? எத்தனை அரசர்கள்? எத்தனை அரச குமாரர்கள்? எத்தனை வீர தீரர்கள் மாண்டிருக்கின்றனர்? - அவர்களுக்கெல்லாம் வருத்தப்படாத நீ இந்த ஐந்து புதல்வர்களுக்காக மட்டும் நெஞ்சு குலைந்து அழுவது ஏன்? உன் மக்கள் என்ற பாசம் காரணமாகத்தானே? அப்படியானால் அந்தப் பாசம் எவ்வளவு குறுகிய உருவத்தை உடையதாக இருக்கிறதென்று நீ சிந்தித்தாயா? அகிலாண்ட கோடி ஜீவராசிகளுக்கும் நாயகனான கடவுள் இந்தப் போரில் இறந்த கோடிக் கணக்கான உயிர்களுக்காக எவ்வளவு வருத்தமடைவான்? இவ்வளவிற்கும் காரண பூதனான என்னைப் பார்! வெறும் தேரோட்டியான கண்ணனாக எண்ணிக் கொண்டு பாராதே. உலகமாகிய தேரை ஓட்டும் சர்வேசுவரன் உனக்கு முன் நின்று கொண்டிருக்கிறான் என்று எண்ணிப்பார். இத்தனை கோடி உயிர்களும் மாண்ட இந்தப் போர்க்களத்தை உயிர்களின் நாயகனான நான் எப்படிப் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்? உலகத்தில் ஜனங்கள் பெருகி விட்டார்கள். ஜனங்கள் பெருகியதோடு தீமைகளும் பெருகிவிட்டன. பூமியின் சுமை அளவுக்கு மீறிக் கனத்துவிட்டது. அந்தச் சுமையை மேலும் மேலும் பெருகவிட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? பிரளயம் ஏற்பட்டுவிடும்! இந்த மாபெரும் குருக்ஷேத்திரப் போர் ஏற்பட்டதற்குக் காரணம் உனக்கும் துரியோதனனுக்கும் நடுவில் இருந்த பகை மட்டுமல்ல. உங்கள் இருவருக்கும் நடுவிலிருந்த பகையைக் கருவியாகக் கொண்டு ஒரு போரை உண்டாக்கி அந்தப் போரின் மூலம் பூமியின் பாரத்தைக் குறைக்க வேண்டுமென்ற என் ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டேன். நடந்தது அவ்வளவுதான். இதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைச் செய்துவிட்டு அத்தினாபுரத்திற்குப் புறப்படுங்கள். அரசாட்சியைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை இனிமேல் நீங்கள் கவனிக்கவேண்டும்” - என்று கூறித் தன் நீண்ட உரையை முடித்தான் கண்ணன். இந்த நீண்ட சொல் மழையினால் தருமன் முதலியவர்களுடைய உள்ளத்திலிருந்த களங்கம் நீங்கிவிட்டது. மனத்தில் தெளிவும் அமைதியும் தோன்றின. இறந்தவர்களுக்காகச் செய்ய வேண்டிய கருமங்களை அமைதியாகச் செய்து முடித்தனர். மக்களை எண்ணி அழுது கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த திரெளபதியைக் கண்ணன் தேற்றினான். “அம்மா! திரெளபதி! சபதப்படி துரியோதனன் தொடையிலிருந்து ஒழுகி குருதியைப் பூசி உன் கூந்தலை முடித்துவிட்டாய். இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அழுவதனால் இறந்தவர்கள் திரும்பி விடமாட்டார்கள். மனத்தைத் தேற்றிக் கொண்டு அமைதி அடைய வேண்டும்” - என்றான் கண்ணன். இதன் பின் எல்லோரும் அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். திருதராட்டிரன் சஞ்சயன் கூறிய ஆறுதல் உரைகளால் மனந்தேறியிருந்தானாயினும் தன் மகனைக் கொன்ற வீமனை எப்படியும் பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவன் உள்ளத்தில் நிறைந்திருந்தது. துரியோதனன் ஒருவனை மட்டுமின்றித் தன் புதல்வர்கள் நூறு பேரையும் வீமன் ஒருவனே கொன்றிருந்தான் என்று அறிந்து வீமன் மேல் கொதிப்படைந்திருந்தது திருதராட்டிரன் உள்ளம். கண்ணனும் பாண்டவர்களும் அத்தினாபுரத்து அரண்மனை வாயிலை அடைந்து தாங்கள் வந்திருக்கும் செய்தியைத் துரியோதனனுடைய தந்தைக்குச் சொல்லியனுப்பினர். திருதராட்டிரன் அவர்களை மிகுந்த அன்போடும், பாசத்தோடும் வரவேற்பவன் போல் நடித்தான். ‘ஆகா பாண்டவர்களே நீங்கள் புண்ணிய சீலர்கள் போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள். முன்னோர்கள் வீற்றிருந்து ஆண்ட இந்தச் சிம்மாசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மகனை இழந்த துயரம் தாங்காமல் வருந்திக் கொண்டிருக்கும் நான் நீங்கள் வந்ததும் இராஜ்யத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் செய்வதற்காகக் காட்டிற்குப் போகலாமென்றிருக்கிறேன். உங்களைச் சந்தித்து வெகு நாட்களாயிற்றல்லவா? புதல்வர்களே! என் அருகில் வாருங்கள். உங்களை மார்புரத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது!" - என்று குழைந்த குரலில் வேண்டினான் அவன். இந்த வஞ்சக வேண்டுகோளின் அந்தரங்கத்தைக் கண்ணன் உடனே புரிந்து கொண்டான். “சரி! வீமனைத் தழுவிக் கொள்ளும்போது அப்படியே அவனை நொறுக்கிக் கொன்று விடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறான் இந்தக் குருட்டு மன்னன். வீமனை இவனிடம் அனுப்பக் கூடாது” - என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் அவன். தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராகத் திருதராட்டிரனிடம் அருகிற் சென்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு திரும்பி வந்தனர். “எங்கே வீமன்? அவன் மட்டும் ஏன் வரவில்லை ?” என்று கத்தினான் திருதராட்டிரன். கண்ணன் ஒரு தந்திரம் செய்தான். ஏறக்குறைய வீமனின் உயரம், பருமன், ஆகிருதி எல்லாப் பொருத்தமும் உடையதாக அங்கிருந்த இரும்புத் தகட்டினாலான சிலை ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திருதராட்டிரனுக்கு அருகில் நிறுத்தினான். “இதோ வீமன் வந்து நிற்கிறான். தழுவிக் கொள்ளுங்கள்” - என்று கூறினான். உடனே திருதராட்டிரமன்னன் குபீரென்று பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு அந்தச் சிலையின் மேல் பாய்ந்து அதைத் தழுவிக் கொண்டு அழுத்தி நெரித்தான். இரும்புச் சிலை தூள் தூளாக உடைந்து விழுந்தது. வீமன் மேல் அவனுக்கிருந்த கோபம் இந்த நிகழ்ச்சியால் புலனாயிற்று. கண்ணனுடைய தந்திரமான ஏற்பாட்டால் வீமன் பிழைத்தான் ‘இரும்புச் சிலையை நிறுத்தித் தன்னை ஏமாற்றி விட்டார்கள்’ - என்று உணர்ந்தபோது திருதராட்டிரன் சபையில் அத்தனை பேருக்கும் நடுவில் வெட்கித் தலை குனிந்தான். சபையிலிருந்தவர்களெல்லோரும் அவன் வஞ்சத்தைக் கண்முன் கண்டு அருவருத்து வெறுப்புக் கொண்டனர். திருதராட்டிரன் அவமானம் தாங்க முடியாமல் தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். பின் அங்கு திரும்பி வரவேயில்லை. சில நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல நாள். உலகெலாம் அன்பும் அறமும் இன்பமும் பொங்கி வழியும் நாள் அது. அத்தினாபுரத்தின் சிம்மாசனத்தில் தர்மம் ஏறி ஆட்சி செலுத்தியது. பாண்டவர்களின் தமையனும் அறத்தின் நாயகனுமான தருமன் அந்தச் சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டான். திரெளபதி பட்ட மகிஷியாக அருகில் அமர்ந்திருந்தாள். வீரமும், அழகும், தூய்மையும் வாய்மையும் ஆகிய நாற்குணங்களும் நான்கு சகோதரர்களாக மாறி அவன் அருகே ஏவலுக்குக் காத்து நிற்பது போல் வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நான்கு தம்பிமார்களும் அரியணையருகே வணக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர். அந்த நல்ல நாளில் வானத்து முகில்கள் தண்ணீரை வாரிச் சொரிந்தன. கற்பகத் தருவின் கிளைகள் புஷ்பங்களை உதிர்த்தனர். தேவர்களின் கைகள் மலர்மாரி பொழிந்தன. தர்மதேவதையின் வதனத்தில் மந்தகாசப் புன்னகை நெளிந்தது. திசைப்பாலகர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். எங்கெங்கு கண்டாலும் இன்பம் பொங்கிப் பாய்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அன்பும் அருளும் அந்தப் பிரவாகத்தில் சங்கமமாயின. இதற்கெல்லாம் காரணமென்ன? பதினான்கு வருஷங்களாகக் காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறியதே; அதுதான் காரணம்! ஆம், அதுவேதான் காரணம். முற்றிற்று இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html