[] மகாகவி பாரதியார் வரலாறு வ. ராமசாமி சென்னை மகாகவி பாரதியார் வரலாறு Copyright © 2014 by Public Domain. This book was produced using PressBooks.com. Contents - மகாகவி பாரதியார் வரலாறு - 1. பகுதி 1 - 2. பகுதி 2 - 3. பகுதி 3 - 4. பகுதி 4 - 5. பகுதி 5 - 6. பகுதி 7 - 7. பகுதி 8 - 8. பகுதி 9 - 9. பகுதி 10 - 10. பகுதி 11 - 11. பகுதி 12 - 12. பகுதி 13 - 13. பகுதி 14 - 14. பகுதி 15 - 15. பகுதி 16 - 16. பகுதி 18 - 17. பகுதி 17 - 18. பகுதி 19 - 19. பகுதி 20 - வ. ராமசாமி - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 மகாகவி பாரதியார் வரலாறு [Cover Image]   ஆசிரியர் – வ. ராமசாமி   உரிமை – Public Domain http://mahakavibharathiyar.info/varalaru.htm   மின்னூல் ஆக்கம் – சீனிவாசன் – tshrinivasan@gmail.com அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com மூலம் - http://www.indusladies.com/forums/attachments/movies/162477d1344496622t-pics-related-to-celebrities-396783_266849836750234_326116240_n.jpg       [pressbooks.com] 1 பகுதி 1 “என்ன அநியாயம், பார்த்தீர்களா? ” என்றார் நண்பர் கேசவன். திடீரென்று கேள்வி கேட்டால் யாருக்குத்தான் திகைப்பு உண்டாகாது? “போலிக் கவிகளைத் தண்டிப்பதற்குப் பிள்ளைப் பாண்டியன், வில்லிபுத்தூரார். ஒட்டக்கூத்தர் முதலியவர்கள் இல்லாமையார் எவரும் தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே என்ற பாட்டு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ஒரு பாரதியார் தோன்றி மறையப் பல பாரதியார் முழக்கத்துடன் வெளிவந்துள்ளார்கள்” என்று நண்பர் மிகுந்த ஆவேசத்துடன் பிரசங்கம் செய்தார். “பட்டத்திலேனும் பாரதியாரைப் பலர் பின்பற்றுவது பாரதியாருக்கு ஒப்பற்ற பெருமையல்லவா?” என்றேன். தனிக்காதல் கொண்ட உத்தமி ஒருத்தி தன் கணவன் பெயரை, வேறு ஒருத்தி ருசியுடன் சொன்னால் பொறுப்பாளா? நண்பர் கேசவனுக்குப் பாரதியாரின் பெயர் அதைப் போலத்தான். “ஞாபகமிருக்கிறதா அல்லது நினைவூட்ட வேண்டுமா?” என்றார் நண்பர். “நல்ல மாட்டுக்கு ஒரு சூடும், நல்ல பெண்சாதிக்கு ஒரு வார்த்தையும் போதாதா?” என்றேன். நல்லது நீங்கள் பாரதியாரை முதன் முதலாகச் சந்தித்த வரலாற்றை விவரமாகச் சொல்லுங்கள் என்றார். கதைக்கு அடியெடுத்துக் கொடுத்த புண்ணியத்தைப் புராவும் அவருக்கே கொடுத்துவிட்டதாக உறுதி கூறினேன். “வீணாகக் காலம் கடத்துகிறீர்கள்” என்றார் நண்பர். “சொல்லுகிறேன், கேளும்” என்றேன். “1910 ஆம் வருடம் மார்ச்சு, ஏப்ரல் மாதத்திய தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டினால், ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம். எங்கே போனார்? எப்படிப் போனார்? ஸ்விட்ஸர்லாந்து தேசத்திலே, ஜெனிவா நகரில் இருக்கிறார் என்ற தலைப்புகளுள்ள தந்திகள் பறந்தன. யாரை பற்றி? ” “பாரதியாரைப்பற்றியா?” என்றார் நண்பர். “ஏமாந்து போனீர்கள் பாரதியாரைப்பற்றியல்ல. பாபு அரவிந்த கோஷ் அவர்களைப்பற்றி. கடைசியாக ரகசியமாய்ப் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதாகச் செய்தி வந்தது. காலஞ்சென்ற கனம் கொடியாலம் வா.ரங்கசாமி அய்யங்கார் மாசற்ற தேசபக்தர் உண்மையான பிரபு. அவருக்கு அரவிந்தரிடம் மகத்தான பக்தி. “புதுச்சேரிக்கு அரவிந்தர் வந்துவிட்டதாகச் சொல்லப்படும் செய்தி உண்மையாக இருக்குமா?” என்று அய்யங்கார் என்னைக் கேட்டார். “குறி சொல்லத் தெரியாது ஆரூடமும் பழக்கமில்லை” என்றேன். அப்படியானால், புதுச்சேரிக்குப் போக உம்மைச் சபித்திருக்கிறேன் என்றார் அய்யங்கார். “ரிஷி சாபத்துக்குப் பின்பலம் தவம் உங்கள் சாபத்துக்குப் பின்பலம் பணம்” என்றேன். “தந்தேன்” என்றார். புறப்பட்டேன் புதுச்சேரிக்கு. புறப்படுவதற்கு முன் இரண்டொரு வார்த்தைகள். சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் சுதேசமித்திரன் ஆபீஸில் இருந்தார் என்பது 1910 இல் தெரியாது. இந்தியா பத்திரிகையில் இருந்தது தெரியும். பாரதியார் சென்னையில் இருந்த காலத்தில், அவரைவிட மிகவும் வயதான இரண்டு நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்களிருவருக்கம் பாரதியாரிடமிருந்த மோகத்தை அளவிட்டுச் சொல்லவே முடியாது. அவர்களுடைய பெயர்களைச் சொன்னால் நீங்கள் திடுக்கிட்டுப் போகவும் கூடும். ஒருவர், ஹைகோர்ட்டு ஜட்ஜாயும், கவர்னர் நிர்வாக சபை அங்கத்தினராயுமிருந்து உயிர் நீத்த கனம் வி.கிருஷ்ணசாமி அய்யர். மற்றவர், போலீஸ் டெபுடி கமிஷனர் வேலை பார்த்து விலகிய ஏ.கிருஷ்ணசாமி அய்யர். இந்த இரண்டு கிருஷ்ணசாமி அய்யர்களும் இணைபிரியாத் தோழர்கள். இவர்களுடைய தூண்டுதலினால்தான் பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றார் என்று பின்னர் எனக்குத் தெரிய வந்தது. கனம் வி.கிருஷ்ணசாமி அய்யர் தமிழ்நாட்டுககுச் செய்த ஓர் ஒப்பற்ற தொண்டை மட்டும்தான் குறிப்பிடாமலிருக்க முடியாது. தமிழர்கள் அதிகால வர்க்கத்தினரின் கொடுமைக்கு அஞ்சி, அநாகரிக பயத்துக்கு ஆட்பட்டுக் கிடந்த அந்தக் காலத்தில், கனம் அய்யர், பாரதியாரின் சுதேச கீதங்கள் இரண்டு பகுதிகளாக அச்சுப் போட்டுப் பிரசுரம் செய்தார். அந்தக் கீதங்களைப் படித்துப் படித்துப் பரவசமானவர்களில் நானும் ஒருவன். இது 1910 ஆம் ஆண்டுக்கு முன்னர். நண்பர் இரட்டிப்பு ஆனந்தம் அளித்தது. அந்தக் காலத்தில், பிரெஞ்சு இந்தியாவின் தலைநகரான புதுச்சேரிக்குப் போகும் பேர்வழிகளைப் போலீசார் கண் பரிசோதனை செய்வது வழக்கம் “ராஜ பார்வை பொல்லாதது” என்று பாட்டிகள் சொல்லுவார்கள். அந்த அனுபவம் எனக்குக் கிடையாது. ஆனால் சூரியனைக் காட்டிலும் மணல் சுடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். போலீஸ் கண்ணுக்குத் தப்பிப் போய்வர வேண்டுமே என்று என்பேரில் இரக்கங் கொண்டு நண்பர் அய்யங்கார் மனம் ஏங்கினார். என்னைப்பற்றி என்ன சொல்லட்டும்? எனக்கு உண்டான ஆனந்தத்தில், நான் இந்த மண்ணுலகத்தில்தான் இருக்கிறேனா என்று சந்தேகமேற்பட்டது. ரயில் வண்டி காலை சுமார் ஐந்தரை மணிக்குப் புதுச்சேரி போய்ச் சேர்ந்தது. வழியில் யார் என்மீது கண் வீசினார், கண் வீசவில்லை என்ற கவலையே எனக்குக் கிடையாது. மலரிலிருக்கும் தேனைக் குடித்துவிட்டு, மதிமயங்கி, மதோன்மஸ்தாய் ரீங்காரம் செய்துகொண்டு ஆகாயத்தில் விசையுடன் விர்ரென்று பறக்கும் வண்டைப் போல நான் இருந்தேன் என்றால், அது கற்பனையே அல்ல. இத்தகைய உணர்ச்சி, ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு தரமாகிலும் ஏற்பட்டிருக்கும். அந்தக் காலத்தில், எனக்கு வண்டி ஏறியே பழக்கமில்லை. கால் படைக்கப்பட்டது நடப்பதற்கேயன்றி வண்டி முதலிய வாகனங்களில் ஏறுவதற்கல்ல என்பது அந்நாளைய கர்நாடகக் கொள்கை. இது காசில்லாத் தத்துவம் என்று சிரிக்கிறீர்கள். நல்லது. சிரியுங்கள் சிரித்தால் ஜீரணமாகும் என்கிறார்கள். புதுச்சேரி ‘புஷ்’ வண்டி எனக்குப் புதிது. பெரிய இடத்துக்குப் போகிறபொழுது, பதவிசாகப் போக வேண்டுமானாலும் கௌரவத்தையும் இழக்கக் கூடாது என்று திடீரென்று எனக்குத் தோன்றிற்று. புஷ் வண்டியைக் கூப்பிட்டேன். ஆள் வந்தான் வண்டி வரவில்லை. “பாரதியார் வீடு தெரியுமா?” என்றேன். “பட்டணத்து எஜமான், பாட்டுப் பாடுகிற எஜமான், மீசை வச்சிருக்காங்களே, அவுங்கதானே? அவுங்க இருக்கிற வீடு நல்லாத் தெரியுமே” என்றான். அவன் சொன்ன முன்னடையாளங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால், மீசை சங்கதி எனக்கு எப்படித் தெரியும்? நான்தான் அதுவரையிலும் பாரதியாரைப் பார்த்ததில்லையே ஈசுவர தர்மராஜா கோயில் வீதியின் ஒரு கோடியிலிருந்த வீட்டின் எதிரே புஷ் வண்டியை நிறுத்தினான். அதுவரையிலும் ஆனந்தம் அலைமோதிக்கொண்டிருந்த என் உள்ளத்தில், என்ன மாயவித்தையினாலோ, பயம் வந்து புகுந்தகொண்டது. மார்பு படபடவென்று அடித்தது. எனது கேவலமான நிலைமையை வெளியே காண்பித்துக்கொள்ள மனமில்லாமல், வாய் பேசாமல் கொஞ்சம் அதிகமானவே வாடகை கொடுத்து, புஷ் வண்டிக்காரனை அனுப்பிவிட்டேன். இடக்கையால் மார்பை அணைத்துக்கொண்டு, மெல்லப் படியேறினேன். மூட்டை, முடிச்சு கிடையாது ஆள் பாரம், உடை பாரம், சில ரூபாய்கள் பாரம் – இவ்வளவுதான். இரவில் தூக்கமில்லாமையின் பெருஞ்சுமை, சிறிதளவு கண்ணிமையிலே தொங்கிக்கொண்டிருந்தது. அதையும் ஒப்புக் கொள்கிறேன். “ஸார்” என்றேன் ஒருதரம் இரண்டாந்தரம் மூன்றாவது தரமும் கூப்பிட்டேன். பயில்வானைப்போல் இளவயதுப் பையன் ஒருவன் வந்து, “யார்?” என்றான். “யார் என்றால் நான்தான்” என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தான். நானும் அவனை அப்படியே பார்த்தேன். ராஜிக்கு வந்தான். “யார் வேண்டும்?” என்றான். “சுப்பிரமணிய பாரதியார்” என்றேன். “சரி, மேலே வாரும்” என்றான். இருவரும் மேலே மாடிக்குப் போனோம். “மீசை வச்சிருக்காங்களே அவுங்களைக்” கண்டேன். சட்டை, அங்கவஸ்திரம் முதலியன இருப்பதாகவே நினைவில்லை. சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன். புலி பாய்வதைப் போலப் பாய்ந்து, என்னைத் தூக்கி நிறுத்தி, “நமஸ்காரம் வேண்டாம். நீர் யார்? வந்த காரியத்தைச் சொல்லும்” என்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றுகொண்டிருந்தேன். அவரது பொலிவு நிறைந்த முகத்தை அப்படியே கண்ணால் விழுங்கிக்கொண்டிருந்தேன். “நல்லது, பல் விளக்கியாகிவிட்டதா? ஏதாவது சாப்பிட்ட பிறகு பேசிக்கொள்ளலாம். பாலு பல்பொடியும் தண்ணீரும் கொண்டுவா” என்றார். என்னை வாயிற்படியண்டை எதிர்த்து நின்ற பயில்வானுக்குப் பெயர் பாலு என்பதைத் தெரிந்துகொண்டேன். பல் தேய்த்துகொண்டிருக்கிற சமயத்தில் ஒரு கிழவர் வந்தார். “வாரும் விளக்கெண்ணெய்ச் செட்டியாரே” என்றார் பாரதியார். எவ்வளவு வரவேற்பு அளித்தாலும், செட்டியாரின் உடம்பு பட்ட பாட்டை நான் எவ்வாறு வர்ணிப்பது செட்டியார் யார் தெரியுமா? பாரதியார் குடியிருந்த வீட்டுக்கு உடையவர். அவர் வாடகைப் பணம் பாக்கி. என்றாலும், கேட்பதற்கு நடுக்கம் விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்பது பாரதியார் கொடுத்த செல்லப் பெயர் “செட்டியாரே என்ன அவசரம் நல்ல பதவிக்காக ஜன்மம் ஜன்மமாய்ப் பிறக்கலாம் என்ற ஹிந்து பரம்பரையிலே பிறந்து வளர்ந்த உமக்கு, ஏன் வாடகைக்கு அவசரம்? இன்னும் பத்து வருஷத்துக்குள் சுயராஜ்யம் வரப்போகிறது. அந்த ராஜாங்க கஜானாவுக்கு ஒரு செக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுமே” என்று சொல்லிவிட்டு, வெண்கலத்தை இடைவிடாமல் தட்டியதுபோலக் கலகலவென்று சிரித்தார். தரித்திரத்தை நிந்தனை செய்யும் நகைப்பு! செட்டியார் என்ன செய்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். “மகான்! உங்கள் உண்டியல் ஏன் செல்லாது? கூசாமல் கொடுங்கள். வாங்கிக்கொள்கிறேன்” என்று செட்டியார் முணுமுணுத்தார். “செட்டியாரே, உமக்கு நூறு வயது. போம். பணம் வந்தவுடன் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல் அனுப்பி வைக்கிறேன்” என்றார். செட்டியார் வணக்கத்துடன் மறைந்தார். ஏதோ சாப்பிட்டோம். வந்த சங்கதியை மெல்ல மெல்லச் சொன்னேன். “அரவிந்த பாபு இங்கே இருக்கிறார் என்று உமக்கு எப்படித் தெரியும்? அது எனக்கே தெரியாதே! அதிருக்கட்டும். தமிழ்ப் பாட்டிலே உமக்கு அபிமானம் உண்டா?” என்றார். நான் சிரித்தேன். “சிரித்தற்கு அபராதமாக ஒரு பாட்டுக் கேளும்” என்றார் “இந்த மாதிரி பாரதியார் எனக்கு அபராதம் விதித்ததில், எனக்கு ஆட்சேபனை இருக்கும் என்று நீர் நினைக்கிறீரா, கேசவா?” “உம்முடைய பாக்கியத்திலே எனக்குப் பொறாமை” என்றார் கேசவன். நண்பர் கேசவன், பாரதியாரை நேரே பார்த்ததேயில்லை. 2 பகுதி 2 “கேசவா! உம்மிடத்தில் ஒரு சிறு தவறு சொல்லிவிட்டேன். பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், யார் என்று கேட்டார். தமிழில் பதில் சொல்லியிருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.” “அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா. அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை” என்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று. “ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை. அப்பொழுது அவர் பாடிய பாட்டு, மறவன் பாட்டு என்று பாடியிருக்கிறாரே, அதுதான். அவர் பாட்டும் குரலும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. என் நினைப்பும் என்னிடத்தில் இல்லை. என் மனம் என்னை விட்டு அகன்றே போயிற்று எனலாம். அன்றைக்குத்தான் யோகம் என்பது இன்னதென்று கண்டேன். என்னுடைய மயக்கம் ஒருவாறு தெளிந்தது. எனது உள்ளப் பூரிப்பைப் பாரதியார் கண்டுகொண்டார்; நாட்டின் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்கினார் “நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்…” இவ்வாறு அடுக்கிக்கொண்டே போனார். வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்போழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியாரிடந்தான். தமிழுக்கு உயர்வு உண்டு; தமிழனுக்கும் பெருமை உண்டு என்பதை பாரதியாரைப் பார்த்த பின்னர்தான் என் மனத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. வெறும் வந்தேமாதரக் கூச்சலிட்டு வந்த சிறு பிள்ளையான எனக்கு, பாரதியாரைக் கண்ட பின்னர் அபரிமிதமான உற்சாகம் வந்தது என்றால், அது கற்பனையே அல்ல. “தேமதுரத் தமிழ்” ஓசையை, அன்று நான் நேரே கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் உருவமும் வலிமையும் பொலிவும் மேன்மையும் உண்டென்று அன்றுதான் கண்டேன். “பாட்டு எப்படி இருக்கிறது?” என்று சாதாரண மனிதன் கேட்பது போல, பாரதியாரும் கேட்பாரோ என்று எண்ணினேன். பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொல்லவும் பயந்தேன். நான் இருந்த நிலைமையைப் பாரதியார் நன்றாக உணர்ந்துகொண்டார். இன்னும் சில பாட்டுகள் பாடினார். என் பாக்கியத்தை நான் அளவிட்டுச் சொல்ல முடியாது. கடல்மடை திறந்துவிட்டது போல, ஓயாமல் பாட்டுகள் வந்துகொண்டேயிருந்தன. நானும் பரவசமானேன். பாரதியார் பாட்டையும் நிறுத்தினார். பிறகு, ஸ்நானமும் சாப்பாடும் முடிந்தன. பிற்பகலில், சுமார் நான்கு மணி அடித்திருக்கும். “வெளியே போவோம் வாரும்” என்றார் பாரதியார். வெளியே புறப்பட்டுப் போனோம்; சிறிது தூரத்துக்கெல்லாம், ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம். “பாரதி, வாரும்” என்று இனிய குரலில், ஒருவர் எங்களை வரவேற்றதைக் கேட்டேன். அந்த வீடு சீனிவாஸாச்சாரியார் இருந்த வீடு. “இந்த நண்பர் அந்த முரடனைப் பார்க்க வேண்டுமாம்” என்றார் பாரதியார். முரடன் என்று குறிப்பிட்டது அரவிந்தரை என்று தெரிந்துகொண்டேன். “எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகியும், புதுச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்தும் இந்தச் தேச பக்தர்களின் கேலியும் நகைப்பும் ஒழிந்தபாடில்லை. போய்க் கேட்போம்; பிறகு நடக்கிறது போல நடக்கட்டும்” என்றார் சீனிவாஸாச்சாரியார். அரவிந்தரின் முக்கிய குணம் முரட்டுத்தனம் என்று இவர்களுடைய பேச்சினின்றும் வெளியாயிற்று. “அவ்வளவு கஷ்டமாயிருந்தால் வேண்டாம்” என்றேன். “இந்தப் புத்தி உமக்கு ஊரிலேயே வந்திருந்தால் புதுச்சேரிக்கு வந்த பணம் மீதமாயிருக்குமே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாரதியார். எனக்கு முன்னும் ஓடவில்லை, பின்னும் ஓடவில்லை. மௌனந்தான் எல்லாக் காரியங்களுக்கும் சாதகம் என்று எண்ணி, சும்மா உட்கார்ந்துகொண்டிருந்தேன். சற்று நேரம் பொறுத்து, மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறினோம். பாரதியாரிடம் முக்கியமான குணமொன்றைக் கவனித்தேன். பேசினால் பேசிக்கொண்டிருப்பார். பேச்சு ஓய்ந்ததானால், உடனே பாட்டில் பாய்ந்துவிடுவார். மௌனம் அபூர்வம். யார் பக்கத்திலே இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவரிடம் இருக்காது போலிருக்கிறது. நடக்கும்போதும் பாட்டுதான். போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்கு கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார். சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்றுவிடுவார். ஆனால், பேசினவர் எல்லோரும் பாரதியாருக்குக் காண்பித்த மரியாதை அளவு கடந்ததாயிருந்தது. ஏழை பாரதியாருக்கு எப்படி இவ்வளவு மரியாதை கிடைத்தது என்பது அப்போது சிறிதும் விளங்கவேயில்லை. பாரதியாருடைய பாட்டின் மகிமையை அவர்கள் தெரிந்துகொண்டு கும்பிட்டார்களா என்பது சந்தேகம். ஆனால், புதுச்சேரியில் பலருக்குப் பாரதியார் குருவாக விளங்கினார் என்பது உண்மை. சீமான் சங்கர செட்டியார் வீட்டுக்குப் போனோம். என்னைத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அவர்களிருவரும் உள்ளே போனார்கள். போய்வருவதற்குக் கொஞ்சம் நாழிகையாகியிருக்கும் போலிருக்கிறது. நான் திண்ணையில் படுத்துக்கொண்டு தூங்கிப்போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. பாரதியார் என்னைத் தட்டி எழுப்பினபோதுதான் எனக்குத் தெரியும். செட்டியாரின் வீட்டு மூன்றாவது மாடிக்குப் போனோம். ஒரு மூலையில், ஒதுக்குப் புறத்தில், அரவிந்தர் தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டிருந்தார். அரவிந்தரை நமஸ்கரித்துவிட்டு நாங்களும் உட்கார்ந்தோம். பேச்சை யாரும் தொடங்கவில்லை. பாரதியார் சட்டென்று எனக்குத் துணைபுரிந்தார். “தமிழ்நாட்டுத் தேச பக்தன்” என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்துவைத்தார். “சர்க்காருக்கு மனுப்பண்ணிக்கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை. “அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலை நிமிர்ந்துகொள்வதற்கு எனக்குத் தைரியம் உண்டாயிற்று. பாரதியார் உயரத்தில் பெரியவர்; அரவிந்தவர் உருவத்தில் சிறியவர். பாரதியார் ஸங்ககோசி; அரவிந்தரும் ஸங்கோசிதான். பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை; அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கம் புதிய புதிய கருத்துக்களும் சித்திரச் சொற்களும் திடீர்த் திடீரென்று புதைவாணங்களைபோலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்து வந்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் துளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார். இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார். இதோடு பாதியாரை நான் சந்தித்த கதையை நிறுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுகிறேன். கேசவா! என்ன சொல்லுகீறீர்? என்றேன். “பூரண சம்மதம்” என்றார் நண்பர். 3 பகுதி 3 “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” இது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ்நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை, அவர் வாயினின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய அடிநாள் வரலாற்றைப் பற்றிய பேச்சை சம்பாஷணையிலே நுழைத்துப் பார்த்திருக்கிறேன். வெகுசாமர்த்தியமாக, இந்தப் பேச்சை சம்பாஷணையிலேயே கிள்ளிக் கிடத்திவிட்டு வேறு ஏதேனும் ருசியுள்ள சங்கதியைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார். பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் துக்கடாக்களை நண்பர்கள் பலர் சேர்ந்து திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது. சுப்பிரமணிய சிவம் நடத்திவந்த ‘ஞானபாநு’ என்ற பத்திரிகையில் பாரதியார் ‘சின்னச் சங்கரன் கதை’ என்ற ஒரு கதை எழுதிவந்தார். ஏழு அத்தியாயங்கள் வந்தன என்பது என் நினைவு. அது பூராவும் அச்சுக்கு வருதற்கு முன்னமே, அதன் மூலக்கையெழுதுப் பிரதி திருட்டுப் போய்விட்டது. பாரதியாரிடம் வேலை பார்த்து வந்த பக்தன் ஒருவன் துரோகியாகிச் சின்னச் சங்கரன் கதையையும், வேறு சில பாட்டுகளையும், தஸ்தாவேஜிகளையும் திருடி, புதுச்சேரியில் கூடாரமடித்திருந்த ரகசியப் போலீசாரிடம் கொடுத்துவிட்டதாக அந்நாள் வதந்தி. கதை சுமார் முப்பது அத்தியாயங்கள் கொண்டது; பூர்த்தியாகவில்லை. அரசாங்கத்தாரிடம் இருந்தாலும், அதைத் திரும்பக் கொடுக்க அவர்கள் பெரிய மனது பண்ணினால், தமிழுக்கு லாபம். சின்னச் சங்கரன் கதையை அனேகமாய்ப் பாரதியாரின் சுயசரிதம் என்றே சொல்லலாம். வரிக்கு ஒரு தடவையேனும் விழுந்து விழுந்து சிரிக்கும்படியான எழுத்து. பாரதியாரைப்பற்றி நல்ல விவரங்கள் கொடுக்கக் கூடியவர்களுள் முதன்மையானவர் மண்டையம் சீனி வாஸாச்சாரியார். அவர் சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் வசித்து வருகிறார். இன்னொருவர் துரைசாமி அய்யர். இவர் சென்னையில் பிரபல வக்கீல். ராயப்பேட்டையில் பழைய பாம் குரோவ் என்ற பங்களாவில் இருந்தார்; இப்பொழுது புதுச்சேரியில் அரவிந்த ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். “லோகோபகாரி” பத்திரிகையின் ஆசிரியர் பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்குப் பல குறிப்புகள் தெரிந்திருக்கலாம். பாரதியாரின் மனைவி ஸ்ரீமதி செல்லம்மாள், பாரதியாரின் குடும்ப வாழ்க்கையையும் மற்றும் பல விவரங்களையும் பற்றி உண்மையான தகவல்களைத் தர முடியும். புதுச்சேரியில் வசிப்பவரும் “பாரதிதாஸன்” என்ற புனைபெயருடன் பாரதியாரைப் போலவே அருமையாகக் கவி பாடும் ஆற்றல் கொண்டவருமான வாத்தியார் சுப்புரத்தினம், பல வினோதத் துக்கடாக்கள் சொல்லக்கூடும். அரவிந்தர் ஆசிரமத்தில் வசித்து வரும் மகா புத்திசாலியான அமிருதா என்ற ஆராவமுத அய்யங்கார், நகைச்சுவையில் பொருள் செறிவு கலந்து பாரதியாரைப்பற்றிப் பல குறிப்புகள் தரக்கூடும். பாரதியாரின் தம்பி விசுவநாத அய்யர் (பி.ஏ., எல்.டி.) சிலவற்றை சொல்லக்கூடும். பாரதியாரைப் படம் பிடித்தது போலவே, பாரதியாரின் பாட்டுகளைப் பாடக்கூடிய சங்கர அய்யர் (பாரதியாரின் அத்தை மகன்) சென்னையில் இருக்கிறார். அவருக்குப் பாரதியாரைப் பற்றித் தெரியும். பாரதியாருக்கும் அவரிடம் நிரம்ப அன்பு உண்டு. பாரதியாரின் பக்தர்களும் அபிமானிகளும், இவர்கள் யாவரையும் கலந்துகொண்டால் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு பூர்த்தி செய்யலாம். இதனிடையே என்னாலான கைங்கர்யத்தைச் செய்கிறேன். 1882 ஆம் வருஷத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவதரித்தார். பிறந்த ஊர் எட்டயபுரம். இது திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. எட்டயபுரம் ஒரு பெரிய ஜமீன். ஆனால், ஜமீன்தாருக்கு ராஜா என்ற பட்டம். இந்த சமஸ்தானத்தைக் “கவுண்டனூர் சமஸ்தானம்” என்று பாரதியார் சின்னச் சங்கரன் கதையிலே வர்ணிக்கிறார். பாரதியார் பிறப்பிலே, ஸ்மார்த்த பிராமண, கண்டர மாணிக்க பிரகசரண வகுப்பைச் சேர்ந்தவர். “தோடி நாராயண அய்யங்கார், பல்லவி சுப்பராமய்யன், கம்பராமாயணம் முத்திருளுத்தேவர்” (இவை யாவும் புனைபெர்யள்) முதலிய புலவர்கள் அலங்கரித்த சமஸ்தானத்திலே (எட்டயபுரத்திலே) சேவல் சண்டையால் செருக்கடைந்த அடாணா ராமசாமிக் கவுண்டரின் (சமஸ்தானாதிபதிக்குப் பாரதியார் சின்னச் சங்கரன் கதையில் கொடுத்த கற்பனைச் செல்லப் பெயர்) குடைக்கீழ், பாரதியார் திருவவதாரம் செய்தார். பாரதியாரின் தகப்பனாருக்குச் சின்னச்சாமி அய்யர் என்று பெயர். அவருக்கும் சமஸ்தானத்துககும் இடையே அளவு கடந்த நேசம். அவர் சம்பந்தப்பட்ட வரையில் அரண்மனைப் பாரா எதுவுமே கிடையாது. தாராளமாய் எந்த நேரத்திலும் அரண்மனையில் உட்புகுந்து வெளியே வரலாம். சின்னச்சாமி அய்யர் கணித சாஸ்திரத்தில் ருசியும் தேர்ச்சியும் பெற்றவர். பரம்பரையையும் பழக்கத்தையும் துணைக்கொண்டு, அய்யர் தமது குமாரனைக் கணிதப் புலவனாகச் செய்யப் பெரிதும் முயன்றார். அவருக்கு யந்திரப் பழக்கம் மிகுதியும் உண்டாம். மேனாட்டு யந்திரங்களை, அக்காலத்திலேயே (சுமார் அறுபது வருஷங்களுக்கு முன்னரே) தாமே, எவர் உதவியுமில்லாமல் பிரித்து, மறுபடியும் பூட்டக்கூடிய சாமர்த்தியமும் சக்தியும் பாரதியாரின் தகப்பனாருக்கும் இருந்ததாம். கணித சாஸ்திரத்திற்குக் கற்பனா சக்தி அதிகம் தேவையில்லை என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில நாட்டு மேதாவி எழுதியிருக்கிறார். யந்திரம் ஓட்டும் வேலைக்கு அதிகமாகப் புத்தி நுட்பம் வேண்டியதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். இவ்விரு துறைகளிலும் பையன் பாரதி தேர்ச்சியடைந்து, குவியல் குவியலாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பது தகப்பனாரின் கருத்து. அல்லது ஏதோ அற்பப் படிப்புடன் இந்தியாவை விட்டு வெளியேற்றி, சீமையிலே தள்ளி, சில காலம் அங்கே இருக்கச் செய்யவேண்டும்; தமிழ் நாட்டுக்கு வரும்பொழுது, பாரதியார் ஜில்லா கலெக்டராய்க் கைச்சொக்காய், கால் சராயுடன் வரவேண்டும் என்பது தகப்பனாரின் பேரவா. ஆகவே, பிள்ளையின் ஆரம்பப் படிப்பு விஷயத்தைத் தாமே கொஞ்ச காலம் நடத்தி, பிறகு ஆவலுடன் மேற்பார்வை பார்த்து வந்தார். கணக்குப் போடப் பையனைத் தகப்பனார் கூப்பிட்டால், பாரதியார் மனத்துக்குள்ளேயே, கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று தொடர் அடுக்கிக் கொண்டே போவார். யந்திரத்துககு நேர்ந்த கதியும் அதுதான். யந்திரத்துக்கு மட்டும் பாரதியாரின் கற்பனையிலே அடுக்குத் தொடர் அகப்படுவது அருமையா? தகப்பனார் மிக்க ஆவலுடனும் தெளிவுடனும் கணக்கைப் பையனுக்குப் போதிக்க எத்தனித்தார். ஆனால் பிள்ளையோ, தமிழ்ச் சொற்களைச் சந்தத்துடன் அடுக்கிக்கொண்டே போகும். இந்த வெள்ளைத் திருட்டைத் தகப்பனார் கண்டுகொண்டார். ஏதேனும் வைதால், திட்டுக்குச் சந்த அடுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தகப்பனாருக்கு உண்டு. ஏதோ ஒரு சமயம், கணக்குப் போடாமல் பாரதியார் விழித்துக்கொண்டிருந்ததைத் தகப்பனார் கண்டார். இது என்ன விழி? என்றார் உடனே பாரதியார் உரக்கவே, “விழி, பழி, வழி, பிழி, சுழி” என்று கூறிக் கணக்கிலே சுழி போட்டுவிட்டாராம். பையனுக்குச் சித்தப் பிரமையோ என்று எண்ணித் தகப்பனார் மனம் ஏங்கிப் போனார். சின்னச்சாமி அய்யருக்குப் பிள்ளையினிடத்தில் அளவில்லாத வாஞ்சை. பிள்ளையை அடித்துத் தொந்தரவு செய்ய அவருக்கு விருப்பமில்லை. பாரதியாருக்கு மிகவும் மெல்லிய உடல். அந்த உடலிலும் ஆவி இருக்குமோ என்று தோன்றும். சாகும் வரையில் பாரதியாருக்குத் தேகப் பயிற்சியில் ரொம்ப உற்சாகம். குஸ்திபோட வேண்டுமென்று பல காலம் சொல்லுவார். எவரேனும் நேர்த்தியாக ‘கஸ்ரத்’ செய்தால், பாரதியார் சொந்த நினைவு இல்லாமல் தாம் உட்காந்திருக்கும் இடத்திலேயே தம்முடைய கை கால் உடம்பு முதலியவைகளை அப்படியுமிப்படியும் ஆட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவருடைய நண்பர்கள் வாய்க்குள்ளாகவே சிரிப்பதுண்டு. பாரதியார் தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்தினால் (பாரதியாரின் குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தாயார் இறந்துபோனார்) சின்னச்சாமி அய்யர் தமது பையனைத் தொட்டு அடிப்பதற்கு மனங்கொள்ளவில்லை. தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்து பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார். தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான். வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததேயில்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிடுவார். அவர் மனதில் என்ன என்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை. “என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையில் கூவுவார். ஆகவே, கணிதத்தில் புலமை வாய்ந்த, உயிருள்ள தகப்பனார் தம் பையனைக் கணித சாஸ்திரியாகச் செய்ய முடியவில்லை. மறைவிலிருந்தே தாய், பாரதியாரைக் கவியாக வளர்த்துவிட்டாள். பையனாக இருக்கையில், பாரதியாருக்கு எட்டயபுரம் அரண்மனையில் சலுகை அதிகம் உண்டு. சமஸ்தானம் பாரதியாரை அன்புடன் நோக்கி வந்ததால், சமஸ்தான வித்துவான்களும் மற்றவர்களும் பாரதியாரிடம் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்கள். பாரதியாருக்குப் “பாரதி” என்ற பட்டம், சமஸ்தான வித்துவான்களால் அளிக்கப்பட்டதுதான். தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றிச் சந்தேகம் வேண்டாம். குழந்தையாயிருக்கும்பொழுதே பாரதியார், கேட்போர் திகைக்கும்படி, வெடுக்கு வெடுக்கென்று பேசுவார்; பதில் சொல்லுவார். நூற்றுக் கிழவனுடைய அனுபவத்தை, பாரதியார் தமது இளம்பருவத்திலேயே காட்டி வந்தார். சமஸ்தானத்தின் ஸன்னிதானத்தில் புலவர்கள் நூல்களை அரங்கேற்றுகையில், இளம் பாரதியார் சபையில் ஒரு மெம்பர். பாரதியார் தமது அபிப்பிராயத்தைக் கூசாமல் சொல்லிவிடுவாராம். “பழுதை என்று மிதிக்கவும் முடியவில்லை; பாம்பு என்று மதிக்கவும் கூடவில்லை” என்று வித்துவான் கள் முணுமுணுப்பார்களாம்! சிறு பிராயத்தில், பெரிய புலவர்களின் நட்பும், சமஸ்தானத்தின் தயவும் பாரதியாருக்கு அபரிமிதமாகக் கிடைத்திருந்தபடியால், அவர் தேனை நுகரும் வண்டைப் போலக் களி எய்தி வாழ்ந்து வந்தார். லேசாகப் படிப்பதும், எளிதிலே பரீட்சையில் தேறுவதும் அவரது வழக்கமாயிற்று. இலக்கணத்தின் கொடிய விதிகளில் சிலவற்றை உடைத்தெறிந்துவிட்டுக் கவிகள் பாடத் தொடங்கினார். சிங்கார ரஸம் பொங்கிய சமஸ்தானமானதால், பாரதியார், ‘மடல்களும் உலாக்களும்’ முதலிலே பாடினார். நல்ல வேளையாக, அவை இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல், மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்டன. அவை இப்பொழுது உயிருடன் இருந்திருக்குமாயின், பாரதியாரின் பெரும் புகழுக்கும் பெயருக்கும் குறுக்கே வந்து படுத்துக்கொண்டிருக்கும். நண்பர்களின் நிமித்தம், பாரதியார் தனிப் பாடல்கள் பாடுவதுண்டாம். அவை காகிதத்தில் எழுதப்படாததனால், செல்லரித்திருக்க வழியில்லை; உலகத்தின் ஒலியிலே கலந்தொளிந்து போயிருக்கலாம். பாரதியாருக்கு வயது வருமுன்னரே அவருடைய தகப்பனார் மரணமடைந்தார். 4 பகுதி 4 பாரதியாரின் தாயார் இறந்து போனபின், சின்னச்சாமி ஐயர் மறுதாரம் விவாகம் செய்துகொண்டார். அந்த அம்மாள் மூலமாய், சின்னச்சாமி அய்யருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பாரதியாரோ, சமஸ்தானத்துச் சிறு கவிராயர். தம்பியும் தங்கையும் சிறு குழந்தைகள். யந்திர முயற்சியை இந்தியாவில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தினால் சின்னச்சாமி அய்யர் தமது சொத்து முழுமையையும் இழந்தார். இந்த நிலைமையில், பாரதியாரின் சீமைப் படிப்புப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையே இல்லாமல், சின்னச்சாமி அய்யர் இறந்துபோகவே, அந்தக் குடும்பம் தவித்துத் தத்தளித்ததை விவரித்துக் கூற வேண்டுமா? இந்த அனுபவம் ஏகதேசம் எல்லாம் குடும்பங்களிலும் காணக்கூடியதுதான்; குடும்பத்தின் மூலபுருஷன் மறைந்து, அவருக்குப் பின், அவரை அண்டி வாழ்ந்து வந்தவர்கள் திக்கற்றுத் தவிப்பதை, நமது தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்களில், நாம் சாதாரணமாய்ப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் அதிகமாக முழங்கவில்லை. அப்படியிருப்பினும் சின்னச்சாமி அய்யர் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம் கட்டியிருப்பாரோ என்பது சந்தேகம். அதற்குக் கட்டக்கூடிய பணத்தை, யந்திரத்தைப் பழுது பார்க்கச் செலவு செய்யத்தான் அவருக்குப் புத்தி போயிருக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். தாம் கொண்டிருந்த ஒரே கருத்தில் சின்னச்சாமி அய்யர் ரொம்பப் பிடிவாதம் காட்டுவார் என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவதுண்டு. இந்தச் சமயத்திலோ, கொஞ்ச காலம் பொறுத்தோ (நிச்சயமாய்ச் சொல்லுவதற்கில்லை) பாரதியாருக்குக் கலியாணமும் ஆகிவிட்டது. ஆகவே, புலவர் வறுமை அவரைப் பால்யத்திலே பிடித்துக்கொண்டுவிட்டது என்று சொல்லலாம். தகப்பனார் இறந்தவின் பாரதியாரின் படிப்பு விஷயம் எப்படியிருக்கும்? நல்ல நாளிலேயே நாழிப்பால் கறக்காத பசுமாடு சங்கதிதான். சிறு பிராய முதலே, பாரதியார் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். எட்டயபுரம் ராஜா பாரதியாரின் பேச்சில் ஈடுபட்டுப் போனதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? ஆனால், சிங்கார ரஸஸ பாட்டுகளை மிகுதியும் வேண்டின ராஜாவோடு, பாரதியார் நீண்ட காலம் சல்லாபம் வைத்துக்கொள்ள முடியாமல் போயிற்று. ‘விளையும் பயிர் முளையிலே’ என்று சொல்லுகிறார்களே, அதைப் பிரத்யட்சமாகப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். சாதாரணமாய்ப் பத்தாயிர ரூபாயுள்ளவனைப் பணக்காரன் என்று மதித்து, அவனுடைய உறவை நாடும் மனிதர்களையே நாம் எல்லோரும் பார்க்கிறோம். மகா புத்திசாலிகளுங்கூட வயிற்றுப் பிழைப்பை உத்தேசித்து, அசதட்டுப் பணக்காரனுடைய அவலச் சொற்களில்கூட அழகும் அர்த்தமும் இருப்பதாக வர்ணிக்கும் இந்தத் தேசத்தில், பாரதியார் எட்டயபுரம் ராஜாவின் நன்மதிப்பைப் பெரிதாகக் கொள்ளவில்லை என்றால், அது தினமும் நடைபறுகின்ற சம்பவமா? ராஜாவின் நட்பினால், பாரதியாருக்கு நஷ்டமாக ஏற்பட்டது ஒரு கெட்ட பழக்கம். பாரதியாரின் உடம்பு ரொம்ப ‘பூஞ்சை’ (மெல்லிய உடல்) தேகத்திலே அதிகமாக வலு கிடையாது. ராஜாவுக்குப் பாரதியாரின் பேரில் ரொம்ப வாஞ்சை. “தம்பி! உடம்பை நீ இப்படி வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. உன்னைப் பார்த்தால், புளிச்சேப்பக்காரன் மாதிரி இருக்கிறாய், நீ நன்றாகச் சாப்பிட வேண்டும். பசி ஏற்படுவதற்கு நீ பூரணாதி லேகியம் சாப்பிட்டால் நல்லது. பூரணாதி லேகியத்தின் மகிமை உனக்குத் தெரியாது. அந்த லேகியம் சாப்பிட்டால் ஓர் அண்டாச் சோறு வறிற்றுக்குள்ளே போய்விடும். அது மட்டுமா? அண்டாவே உள்ளே போனாலும் போய்விடும்” என்று விகடம் பேசித் தட்டிக் கொடுத்து, பாரதியாரைப் பூரணாதி லேகிய யோகத்தில் தலைகுப்புற இறங்கும்படியாகச் செய்துவிட்டார். இந்தச் சம்பவத்தை, பிற்காலத்தில் தமாஷாயிருக்கிற சமயத்தில், ரொம்ப வேடிக்கையாகப் பாரதியார் வர்ணிப்பதுண்டு. கங்காபானம் செய்ய வேண்டும் என்று பெரியார்கள் சொல்லுவதை வேறு விதமாக மாற்றி, பாரதியார் சிறு பிராய முதல் ‘கஞ்சாபான’ முயற்சியில் மோகங்கொண்டார். பணக்காரர்களின் உறவு ஏழைகளுக்கு நல்ல பழக்கதை உண்டாக்காது என்று பலர் சொல்லுவதற்குப் பாரதியாரே பெரிய அத்தாட்சியாக விளங்குகிறார். உடல் வலிமைக்காகப் பாரதியார் பூரணாதி உட்கொண்டதும், அதே உடல் வலிமையின் பொருட்டுக் காந்தி தமது சிறு பிராயத்தில் திருட்டுத்தனமாய் மாமிச போஜனம் செய்து, இரவில் பசியில்லை என்று தம் தாயிடம் சொன்னதும் குறிப்பிடத் தக்கவை. பாரதியாருக்கு உபதேசம் செய்த ராஜாவுக்கும் காந்தி உபதேசம் செய்தவருக்கும் கெட்ட எண்ணம் கிடையாது. பால்யத்தில் ஒன்றைக் கேட்டாலும் பார்த்தாலும் அது எவ்வாறு அழுத்தமாகப் பதிகின்றது என்பதை இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆகவே, சிறு பிள்ளைகள் விஷயத்தில் வயதில் பெரியார்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு, இந்த இரண்டு சம்பவங்களும் எச்சரிக்கைகளைப் போல இருக்கின்றன. எட்டயபுரத்தில் இருக்க மனமில்லாமல் பாரதியார் காசிக்குத் தமது அத்தை வீட்டுக்குச் சென்றார்; கல்கத்தா சர்வகலாசாலைப் பிரவேசப் பரீட்சைக்குப் படித்தார். காசியிலேயே, தனிப் பல்கலைக் கழகம் (சர்வ கலாசாலை) அப்பொழுது இல்லை. அக்காலத்தில் சர்வ கலாசாலையாக அமையாத ஸென்ட்ரல் ஹிந்து காலேஜைச் சேர்ந்த, உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பாரதியார் படித்தார். தாம் பள்ளிக் கூடத்துக்குப் போன விதரணையைப் பாரதியார் கேலி செய்து பேசுவதுண்டு. அந்தக் கேலியின் சாரம் இதுதான். “காலை மாலை நூலை ஓது என்கிறார்கள். அது தப்பு. நான் படித்த காலத்தில், நான் நூலையே ஓதினதில்லை. பள்ளிக்கூடத்துக்குக் காலையில் போனால் மாலையில் போகமாட்டேன்; மாலையில் போகலாம் என்று எண்ணிக் காலையில் போகமாட்டேன். பிறகு ஓர் எண்ணம் தோன்றும். மாலையிலும் போகமாட்டேன். காலை மாலை உருண்டோடிப் போகும். புஸ்தகம் ஹஸ்தபூஷணம் என்பதும் தவறு. ஹஸ்தத்துக்குப் பூஷணம் (கைக்கு அலங்காரம்) நல்ல ஸில்க் சட்டை, ஜோரான பச்சைக்கல் மோதிரம். நான் புஸ்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போனதேயில்லை. சட்டை ஜேபியில் சில கடிதங்கள், ஒரு பென்சில் – இவைகள்தான் இருக்கும். வாத்தியார் பாடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரைப் பற்றி ஹாஸ்யக் குறிப்புகள், வசனத்திலும் பாட்டிலும் எழுதி அடுத்த பையனிடம் நீட்டுவேன். இருவரும் சிரிப்போம். பிறகு பெஞ்சு பூராவும் பரவிவிடும். ஒரே சிரிப்பு. என்ன சத்தம் என்று வாத்தியார் கேட்குமுன்னரே, மெதுவாக வகுப்பிலிருந்து நழுவிவிடுவேன்; வீட்டுக்கு வந்து, மாடியிலேறி, கங்காப் பிரவாகத்தைப் பார்த்துக் களிப்பேன். இதுதான் நான் படித்த கதை” இவ்வாறு பாரதியார் பிற்காலத்தில் கேலி செய்வதைக் கொண்டு, அவர் ஒன்றும் படிக்கவில்லை என்று யாரும் அவசரமாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம். பாரதியார் பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு டோகர் கொடுத்தாலும், பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினார். அக்காலத்தில் காலேஜ் படிப்புக்கு முதல் படியான எப்.ஏ. வகுப்பிலும் சேர்ந்தார். குடும்பக் கவலையினாலோ கல்லூரிப் படிப்பில் மனமில்லாததாலோ, ஒரு வருஷத்துக்குள் அந்தப் படிப்பிற்கும் சலாம் போட்டுவிட்டு நின்றுவிட்டார். ‘தத்தாரி’ மனங்கொண்ட (ஒரு விஷயத்திலும் பிடிப்பில்லாத; இந்தப் பிள்ளையை, உற்றார் உறவினர் எவ்வாறு நேசித்து, பராமரித்து, பாதுகாக்க முடியும்? பாரதியார் ‘மண்டு’வாக இருந்தாலும் அவர்கள் ஒருவாறு தங்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டிருப்பபார்கள். வீட்டிலே அதிகமாகப் படிக்காமல் பரீட்சையில் முதல் வகுப்பிலே தேறின பாரதியார், ‘ரொம்ப புத்திசாலி’ என்று அவர்கள் கண்டுகொண்டார்கள். அதனாலேதான் தொல்லைப்பட்டார்கள். பரீட்சை தேறினதில் இன்னொரு விசேஷம். பிரவேசப் பரீட்சைக்கு இரண்டு பாஷைகள் வேண்டும். இங்கிலீஷ் ராஜாங்கத்தில் ஒரு பாசை இங்கிலீஷ் என்று சொல்லவும் வேண்டுமா? காசியிலே தமிழ் பாஷை கிடையாது. ஆகவே, பாரதியார் தமிழிலே பரீட்சை கொடுக்க முடியாது. இரண்டுடொரு வருஷங்களில் ஹிந்தி பாஷையைக் கற்றுக்கொண்டு, பரீட்சையில் முதல் வகுப்பில் பாரதியார் தேறினது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்லவா? பாரதியாரின் ஹிந்தி உச்சரிப்பைக் கேட்டவர்கள், அவர் வடக்கத்தி ‘கோஸாயி பிராமணரோ’ என்று சந்தேகப்படும்படி இருக்கும். அவ்வளவு ‘டாண்டாண்’ என்று பேசுவார். ஹிந்தி பாஷையிலே, சில சப்தங்களைத் தொண்டைக்குக் கீழிருந்தே (நாபிக் கமலத்திலிருந்து என்றுகூடச் சொல்லலாம்) கொண்டுவர வேண்டும். தமிழர்களுக்கு அது ரொம்பக் கஷ்டமாயிருக்கும். ஆனால் பாரதியாருக்கு அது தண்ணீர் பட்ட பாடு; ரொம்ப லேசாக வரும். பாரதியார் ஹிந்தி ரொம்ப அழகாகப் பேசுவார், உச்சரிப்பார். என்ன காரணத்தினாலே, பாரதியாருக்குக் காசியும் படிப்பும் பிடிக்கவில்லை. எட்டயபுரத்துக்கு வரும்படியாக ராஜா பாரதியருக்குக் கடிதம் எழுதினார். அதுதான் சாக்கு. எட்டயபுரத்துக்கு வந்த பாரதியார், காசிக்குத் திரும்பிப் போகவேயில்லை. படிப்பு முற்றிற்று, அரண்மனைத் தயவைத் தவிர, நிலைத்த உத்தியோகம் கிடையாது. ‘கையில் காசு’ சங்கதியைச் சொல்லத் தேவையில்லை. 5 பகுதி 5 படிப்புக்கு ஓர் உதை; காசிக்கு ஒரு கும்பிடு; கங்கையிலே கடைசி முழுக்கு. பாரதியார் எட்டயபுரத்துக்கு வந்து சேர்ந்தார். காசியிலிருந்து எட்டயபுரத்துக்கு வர, வழிப் பிரயாணச் செலவுக்கு யார் பாரதியாருக்கு பணம் கொடுத்தார்களோ! அனேகமாய் ஜமீன்தார் அவர்கள்தான் கொடுத்திருக்க வேண்டும். காசிக்கு ஜமீன்தார் கடிதம் எழுதியதின்பேரிலேதான் தாம் எட்டயபுரத்துக்கு வந்ததாகப் பாரதியார் சொல்வதுண்டு. ஜமீன்தாருக்கும் பாரதியாருக்கும் ஒரு வினோதமான நட்பு. இருவரும் சேர்ந்திருந்தால் சண்டை; பிரிந்திருப்பின் பிரிவு ஆற்றாமை. இந்த விசித்திரக் காட்சியை, தற்போதுள்ள சினிமா நடிகக் காதலர்களுக்குள்ளேதான் காண முடியும். ஜமீன்தாருக்குத் தமது செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருமை. பாரதியாருக்குத் தாம் பாரதியார் என்ற உணர்ச்சிப் பெருமை. ஒருவர் மற்றவரைப் பெரியவர் என்று கொண்டாடி வணங்க முடியுமா? தனவந்தரின் தயவு சுழற்காற்றைப் போலச் சுற்றிக் கொண்டேயிருந்கும்; ஒரே இடத்தில் ஒரே மனிதனிடம் நீண்ட காலம் தரித்திருக்காது. பாரதியார் வரும் வரையிலேதான், ராஜாவுக்கு ஆத்திரமும் அன்பும். நேரில் அவரைப் பார்த்ததும் தாம் ‘ராஜா’ என்ற எண்ணம். இந்தத் தொல்லைக்கு என்ன செய்கிறது? பாரதியார் வந்ததும் அவருக்கு வேலையில்லலாத உத்தியோகம்! ஆனால் சம்பளம் உண்டு. இவ்வளவு என்று தஸ்தாவேஜில் குறிப்பிடப்படவில்லை; ராஜாவின் தயவு இருக்கும் வரையில் சம்பளத்துக்கு பயமில்லை. ஆனால் பெரிய இடத்துத் தயவைப் பற்றித்தான் சந்தேகம். அதைத் திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஜமீன்தாரின் உறுதியற்ற மனத்தைப்பற்றி, பாரதியார் சின்னச்சங்கரன் கதையில் நன்றாக வர்ணித்திருக்கிறார். “ராக்கப்பிள்ளைக்கு நிலம் கொடுக்கவும்” என்று மொட்டையாக ஓர் உத்தரவு போடுவாராம் ராஜா. எந்த ராக்கப்பிள்ளை? எவ்விடத்தில் நிலம்கொடுக்கிறது? நிலம் எவ்வளவு கொடுக்கிறது? நஞ்சையா புஞ்சையா, வீடு கட்ட நிலமா என்ற விவரமே தெரியாதாம்! உத்தரவின் அர்த்தத்தை விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்காக, அரண்மனை காரிய நிர்வாகிகள், ஜமீன்தாரைக் கிட்ட அணுக அஞ்சுவார்களாம்! எனவே, அவர்கள் தங்கள் இஷ்டப்படி உத்தரவை நிறைவேற்றி வைப்பார்களாம்! கேள்விமுறை இல்லாத கண்மூடித் தர்பார் என்பார் பாரதியார். “இந்தக் கண்மூடி ராஜ்யத்தில் தான் எப்படிக் காலந்தள்ள முடியும்!” என்று பரிதாபத்துடன் பாரதியார் கேட்கும்பொழுது, மற்றவர்கள் என்ன பதில் சொல்ல முடியும்? தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி கிடையாது. இக்காலத்து வாழ்வைப்பற்றி, பாரதியார் சிறிதளவு, சமயம் நேர்ந்தபொழுது, சொல்லுவதுண்டு. ‘கூளப்ப நாயக்கன் காதல்’ என்ற நூலிலே ராஜாவுக்கு ரொம்பப் பிரியமாம்! அதை அவர் படிக்கக் கேட்டு மகிழ்வாராம்! (இந்தச் சம்பவம் “சின்னச் சங்கரன் கதை”யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.) சிங்கார ரஸம் ததும்பும் பாட்டுகளிலும், நாட்டியக் கச்சேரிகளிலும் ராஜாவுக்கு அளவு கடந்த மோகமாம்! காதலைப் பற்றி ராஜா புலம்புவாராம்! பிரசங்கம் செய்வராராம்! இவற்றையெல்லாம் பாரதியார் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமாம்! “ராஜாவின் சிங்கார ரஸப் பேச்சு என்னைப் பலவீனப்படுத்தியதும் பயமுறுத்தியதும்போல, வெள்ளைக்காரர்களின் சட்டங்கூடச் செய்ததில்லை” என்று பாரதியார் அடிக்கடி சொல்வதுண்டு. ராஜாவின் சிங்காரம், அவருடைய நிலையில்லாத தயவு, வேலையில்லாத உத்தியோகம், சிப்பந்திகளின் அற்பப் பொறாமை, குடும்பம், பாரதியாரின் உள்ளத்தின் தனிப்போக்கு – இவை யாவும் சேர்ந்து கொண்டன. முடிவு என்ன? எட்டயபுரத்தைவிட்டு வெளியேற, பாரதியார் தீர்மானங்ககொண்டார். ராஜாவின் மனம் உறுதியற்றது என்றால், அதைக் காட்டிலும் அதிகமாகப் பாரதியாரின் மனம் நிலையற்றது போலத் தோன்றுகிறதே என்று சிலர் சந்தேகப்படலாம். பெரியவர்களின் வாழ்விலே, இத்தகைய நிகழ்ச்சி மிகச் சாதாரணமாகும். தங்கள் ஆத்மவேகத்துக்கு உவப்பான வேலை கண்ணில் தோன்றும் வரையில் அவர்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் திடீர் திடீர் என்று மாறுவார்கள். அதுவரையிலும் அவர்களுக்குச் சஞ்சலந்தான். சத்தியாக்கிரக உபாயத்தைக் காணும் வரையில் காந்திக்குச் சஞ்சலம். ஆத்ம சம்பந்தமான தன்னிலையை அறியும் வரையில் புத்தன் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. விவேகானந்தரின் உள்ளம் அமைதி பெறும் வரையில் பட்ட கஷ்டத்தை எழுத்துக்குள் அடக்க முடியாது. சுவாமி ராமதீர்த்தரின் கதியும் இதுவேயாகும். ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிடிப்பு ஏற்படும் வரையில், நிலையற்ற மனம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை. சமஸ்தானத்தை விட்டால் குடித்தனத்துக்கு வழி என்ன என்ற சிந்தனை செய்தார் பாரதியார். பிடித்திருக்கும் கொம்பை விட்டாலொழிய, குரங்கு வேறு கொம்புக்குத் தாவி, அதைப் பிடிக்க முடியாது என்று பாரதியார் கேலி செய்வார். ‘பழைய கொம்பு கை நழுவி புதுக்கொம்பும் அகப்படாவிட்டால், -குரங்கு என்ன செய்யும்?’ என்று யாரேனும் கேட்கத் துணிந்தால், “கீழே விழுந்து மண்டை உடைந்து இறக்க வேண்டியதுதான். அதற்குப் பயப்பட்டுப் பயனில்லை” என்று பாரதியார் படீர் என்று முடித்துவிடுவார். ஆனால், பாரதியாரின் உபமானக் குரங்கின் கதி அவருக்கு நேரவில்லை. பாண்டி நாட்டுக்குத் தலைநகரான மதுரையில் சேதுபதி உயர்தரப் பள்ளிக்கூடத்தில் இந்தச் சமயத்தில் தமிழ்ப் பண்டிதர் வேலை காலியாயிற்று. அந்த வேலை பாரதியாருக்குக் கிடைத்தது. பாரதியார் மனுப் பண்ணிக் கொண்டார் அல்லது எவரேனும் சிபாரிசு செய்து அங்கே பாதியாரைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்களா என்பதற்கு விவரம் அகப்படவில்லை. பாரதியார் தமிழ்ப் பண்டிதர் வேலையில் அமருமுன், எட்டயபுரத்தில் அவருக்கு ஒரே ஒரு நண்பர்தான் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கம் உரியவராயிருந்தாராம். அந்த இளைஞர் அய்யங்காராம். சமஸ்தானத்து குமாஸ்தா, அந்த இளைஞரைப்பற்றிப் பேசுகையில் பாரதியார் கண்ணீர் விடுவார். சொற்ப சம்பளத்தில் குமாஸ்தா வேலை பார்த்துவந்த அந்த இளைஞர் மேதாவி என்றும், அவர் அபூர்வமான தமிழ் நாடகம் ஒன்று எழுதினார் என்றும், அது அச்சுக் வராமல் போனது பெரிய நஷ்டம் என்றும், பாரதியார் சொல்லுவார். அந்த இளைஞர் யாரோ, அவர் இப்பொழுது எங்கு உயிருடனிருக்கிறாரோ – இந்தச் சங்கதிகள் எனக்குத் தெரியா. 1901 அல்லது 1902இல் பாரதியார் தமிழ்ப் பண்டிதர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது என் உத்தேசம். 1903ஆம் ஆண்டு முடிவுக்குள்ளாகவே அவர் சென்னைக்குப் போய்விட்டார். ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ சேதுபதி பள்ளிக்கூடத்தில் பாரதியார் தங்கியிருந்ததாகத் தெரிய வருகிறது. தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த லட்சணங்கள் வினோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான லட்சணம் என்று எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்த சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகந்தான். “தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் மூன்றும் மொழிமூ விடத்து மாகும்” இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிகூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவவளவு வெறுப்புக்கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்தியோகம் பார்த்தார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. வகுப்பிலே படித்த சில பையன்கள் பெரிய பையன்கள். பாரதியாருக்கு அப்பொழுது வயதும் அதிகமாக ஆகவில்லை. வாட்டசாட்டமான உடலும் அவருக்குக் கிடையாது. உடம்பிலே சக்தியும் அதிகமாகக் கிடையாது. இலக்கண அறிவும் பூஜ்யம் என்றே சொல்லலாம். தமிழ்ப் பண்டிதர் வேலை தமக்குச் சாசுவதமான தல்ல என்று அவரும் ஜபித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஊரும் புதிது. இந்த நிலைமையில் பாரதியார் தமிழ்ப் பண்டிதராய் எவ்வாறு காலந்தள்ளினாரோ! இந்தச் சமயத்தில் சென்னையில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையை நடத்தி வந்த, காலஞ்சென்ற ஸ்ரீமான் சுப்பிரமணிய அய்யர் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது சுப்பிமணிய அய்யர் பாரதியாருக்கு அறிமுகமானார். பாரதியாரின் மேதையை அவர் உடனே தெரிந்துகொண்டார். உள்ளூர அவருக்கு ஆனந்தம். எப்படியாவது பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு போய்விடுவது என்று அய்யர் தீர்மானங்கொண்டார். தமிழர்களை அரசியல் துறையில் கண் விழிக்கச் செய்த மகான் சுப்பிரமணிய அய்யர். அவரிடம் அற்பத்தனம் சிறிதும் இருந்ததில்லை. பாரதியாரின் மேதையை நேரில் கண்ட அய்யர், சென்னைக்கு வரும்படி பாரதியாரை வேண்டிக்கொண்டார். தற்காலத்துப் பத்திராதிபர்கள், தவிக்கும் மேதாவி ஆசிரியர்களுக்குத் தக்க பரிவு காண்பிப்பார்களோ என்பது சந்தேகம். அய்யர் அவர்களின் அரசியல் தொண்டையும், அவர் பாரதியாரிடம் காண்பித்த பரிவையும், அன்பையும் தமிழர்கள் ஒரு நாளும் மறக்க முடியாது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். பாரதியார் பத்திரிகைத் தொழிலை மேற்கொண்டது ஊதியத்தின் பொருட்டா, அல்லது அவரது தேசபக்தி ஊக்கம் காரணமா? இதைப்பற்றி எனக்குச் சிறிதளவு சந்தேகமிருந்தது. 1904ஆம் வருஷத்திலிருந்து பாரதியாருக்கு நண்பராயிருந்து வந்த எஸ்.துரைசாமி அய்யர் அவர்களிடம் கேட்டேன். அவர் சொனனதாவது: “நமது நாட்டிலே பொதுவாகத் தேசபக்தி உணர்ச்சி தோன்றியது வங்காளப் பிரிவினையினால்தான். அக்காலத்தில் விபின சந்திர பாலரின் எழுத்தும், பிரசங்கமும் நம்மவர்களைப் பெரிதும் கலக்கி வந்தன. இது 1905ஆம் வருஷத்துக்குப் பின்னர். ஆனால் பாரதியோ (பாரதி என்றுதான் துரைசாமி அய்யர் சொல்லுவார்) 1904ஆம் வருஷத்திலேயே எனக்கு அரசியலில் தீவிர ஊக்கமும் உற்சாகமும் வரும்படி செய்தான். (நெருங்கிய நண்பர்களாதலால் செய்தான் என்று சொல்ல அவருக்குப் பாத்தியமுண்டு) பாரதியின் தேசபக்தி, கடன் வாங்கின சரக்கல்ல. அது அவனுடைய சொந்தச் சொத்து, தமிழ்நாடுதான் பாரதி. அப்படித்தான் எனக்குச் சொல்லத் தெரியும்” இதைக்காட்டிலும் அதிகமாக வேறு யாரால் சொல்ல முடியும்? 6 பகுதி 7 பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தமது புதய ஆத்திசூடியில் பெரிதினும் பெரிதுகேள் என்று அவர் எழுதியிருக்கிறார். இதையே அவரது வாழ்க்கைத் தத்துவமாகவும் வைத்துககொள்ளலாம். பெரிதினும் பெரிதை விரும்பும் பாரதியாருக்கு, சுதேசிமித்திரன் பத்திரிகையில் இடம் இல்லாமல் போனது ஆச்சரியமல்ல. சுதேசமித்திரன் புரட்சியை நாடும் பத்திரிகையாக அக்காலத்திலும் நடத்தப்படவில்லை. அக்காலத்துக் காங்கிரஸ் கொள்கையையும் முறையையும் அது ஆதரித்து வந்தது. அக்காலத்துக் காங்கிரஸ், மிதவாத காங்கிரஸ் திலகர் நாளிலே, காங்கிரஸுக்குப் புதிய உணர்ச்சி உண்டாயிற்று. அந்தப் புதிய உணர்ச்சியின் சிறு பகுதி கல்கத்தா காங்கிரஸிலும், பெரும் பகுதி சூரத் காங்கிரஸிலும் வெளித்தோன்றிற்று. 1906ஆம் ஆண்டில், அப்பொழுது வைஸ்ராயாக இருந்த கர்ஸன் பிரபு வங்காளத்தை மேல் வங்காளம், கீழ் வங்காளம் என்று இரண்டு கூறுகளாகப் பிரித்தார். வங்காளிகள் இந்த ஏற்பாட்டை ஆத்திரத்துடன் எதிர்த்தார்கள். இந்தக் கிளர்ச்சியினின்றும் பிறந்ததுதான் சுயராஜ்யக் கிளர்ச்சி. வங்காளப் பிரிவைனக் காலத்துக்குச் சிறிது முன்னும் அதை ஒட்டியும், பாரதியார் தமது தேசபக்தித் துடிதுடிப்பைத் தாங்க முடியவில்லை. அந்தத் துடிதுடிப்பின் முடிவு சிறைதான் என்று ஜி.சுப்பிரமணிய அய்யருக்கு நன்றாய்த் தெரியும். எனவே, இரண்டு பேரும் மனம் ஒப்பிய பிறகே, பாதியார் சுதேசமித்திரன் பத்திரிகையை விட்டு விலகிக்கொண்டார். பாரதியாரிடம் சுப்பிரமணிய அய்யருக்கு இருந்த பிரேமை, அய்யர் சாகும்வரையில் இருந்து வந்தது. பாரதியார் மனக்கசப்பால் சுதேசமித்திரனை விட்டார் என்ற வதந்திக்கும் ஆதாரம் இல்லை. ஜி.சுப்பிரமணிய அய்யர் கோகலேயைப் போல மிதவாதி அல்லர்; காந்தியைப் போலப் புரட்சிக்காரருமல்லர். எனவே, அரசியலில் அதி தீவிர புரட்சி மனப்பான்மை கொண்ட பாரதியார், அய்யரின் காரியாலயத்தினின்றும் வெளியேறியது ரொம்பப் பொருத்தமுள்ளதாகும். சுதேசமித்திரனை விட்ட பாரதியார் சும்மா இருக்கவில்லை; பல நண்பர்களின் உதவியைக்கொண்டு இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். சிவப்பு நிறம், அபாயக்குறி என்ற கொல்லுவதுண்டு. இந்தியா பத்திரிகை சிவப்புத்தாளில் அச்சிடப் பெற்றது. வாரத்துக்கு ஒரு முறையானாலும் அந்த நாளில், இந்தியா மிகவும் ஆவலுடன் படிக்கப் பெற்றது. நாலாயிரம் பிரதிகளுக்கு மேல் செலவழிந்ததாம். இது 1906 ஆம் ஆண்டில் நடந்தது. இந்தியா பத்திரிகையின் நூதனங்கள் எனனவெனில் (1) உள்ளதை உள்ளபடியே, அஞ்சாமல் அழகாக, வலிமையுடன் எடுத்து உரைக்கும் எழுத்து, (2) பாட்டு, (3) கேலி செய்யும் கூடார்த்த படங்கள், (4) பெரியார்களின் ஜீவிய வரலாறு ஆகும். அவ்வப்போது, சிற்சில ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வந்துகொண்டிருந்தன. இந்தியா பத்திரிகை ஆரம்பித்த சிறிது காலத்துக்குள் பாரதியார் பெயர் பரவலாயிற்று. வங்காளப் பிரிவினை கூடாது என்று வங்காளிகள் கிளர்ச்சி செய்தார்கள் என்றேனே, அதன் பயன்கள் என்னவெனில், நவசக்தி, யுகாந்தரம், வந்தேமாதரம், நியூ இந்தியா முதலிய புரட்சிப் பத்திரிகைகள் வங்காளத்தில் தோன்றின. வங்காளத்தில் எழுந்த சுயராஜ்ய உணர்ச்சியும் கோஷமும் இந்தியா தேச முழுதும் சூழ்ந்து போயின. 1906இல் கல்கத்தா காங்கிரஸில் தாதாபாய் நவரோஜி தலைவர்; வயதான கிழவர். என்றாலும், அவர் கல்கத்தா காங்கிரஸில், சுயராஜ்யம் என்ற மூல மந்திரத்தைத் துணிவுடன் ஜபித்தார். முக்கியமான நான்கு தீர்மானங்கள் காங்கிரஸில் நிறைவேறின. சுதேசி, அந்நிய நாட்டுச் சாமான் பகிஷ்காரம், நாட்டுக் கல்வி, சுயராஜ்யம் – இவைகளைப்பற்றி ஆணித்தரமான தீர்மானங்கள் நிறைவேறின. மிதவாதிகளும் அரசாங்கத்தாரும் ஏக காலத்தில் பயப்பட்டுப் போனார்கள். நாளது வரையில் ஒழுங்காகத் தடையின்றி நடைபெற்று வரும் தேச பக்தர்களின் சிறைவாசத்துக்கக் கல்கத்தா காங்கிரஸே காரணமாகும். மிதவாதிகள் அரசாங்கத்தாருக்கத் துணை; மிதவாதிகளுடன் சேராத தேசபக்தர்களுக்குச் சிறை. இது மாமூல். கல்கத்தா காங்கிரஸ் நிறைவேற்றிய ஆணிவேர்த் தீர்மானங்களை மாற்ற வேண்டும் என்பது மிதவாதிகளின் முயற்சி. இதற்குச் சர்க்கார் தூண்டுதலும் உண்டு. அதுவரையிலும் சர்க்காருக்கு மனுப்பண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ் தன் சொந்த சக்தியுடன் தலைநிமிர்ந்து நிற்கலாமா என்பது சர்க்காரின் மூளையைக் கலக்கின பிரச்சினையாகும். காங்கிரஸின் புதுக் கொள்கையைத் தாங்கி பாரதியார் இந்தியா பத்திரிகையில் எழுதி வந்தார்; வாராவாரம் புதுக் கட்சி உற்சாகமே, நாடெங்கும் உற்சாகம். இநதச் சமயத்தில் வங்காளத்திலிருந்து விபின சந்திர பாலர் சென்னைக்கு விஜயம் செய்தார். சென்னையில் அவர் செய்த ஐந்து பிரசங்கங்கள் தமிழர்களின் அரசியல் பொக்கிஷமாகும். விபின பாபுவின் சென்னை விஜயத்துக்கு, பாரதியாரும் அவருடைய நண்பர்களுமே காரணஸ்தர்கள். வங்காளத் தலைவரை வரவேற்க, பழைய சென்னைத் தலைவர்கள் மிகுதியும் அஞ்சினார்கள். பாரதியாரின் ஷ்டியார் சிரமம் எடுத்துக்கொண்டு வேலை செய்திராவிடில், விபின பாபுவின் சென்னைப் பிரசங்கங்கள் நடந்திருக்க முடியாது. பாபுவின் முதல் பிரசங்கத்துக்கு தலைமை வகிக்க வந்த பெரிய மனிதரும் சம்மதிக்கவில்லை. அவ்வளவு பயம். ஸ்ரீமான் ஜி.சுப்பிரமணிய அய்யர் மட்டும் இசைந்தார்; அய்யர், சமயத்தில் தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றினார். சுப்பிரமணிய அய்யர் சம்மதத்திற்குப் பாரதியார் காரணம் என்று வைத்துக்கொள்ளலாம். அந்நிய நாட்டுத் துணிகளுக்கு முதன் முதலில் தீ வைத்தவர் காந்தியல்லர். சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், விபின பாபுவின் பிரசங்க காலத்தில்தான் முதலில் தீ தோன்றிற்று. நல்ல நல்ல ஆல்பாக்கா சட்டைகளும் உயர்ந்த குல்லாக்களும் நூற்றுக்கணக்கில் தீயில் விழுந்தன. சென்னை நகரத்தினரின் அரசியல் மனப்பான்மையில் திடீரென்று புரட்சி ஏற்பட்டது. சென்னையில் மகாஜன சபை என்று ஒன்று இருந்தது. அக்காலத்தில் அதன் அங்கத்தினர்கள் சர்க்க்ர் பக்தர்கள்; உருப்படியான எந்த வேலையையும் செய்யத் துணிந்ததில்லை. எனவே, பாரதியார் சென்னை ஜன சங்கம் என்று ஒன்றை ஸ்தாபிக்க முயன்றார். சங்கமும் ஸ்தாபிக்கப்பட்டது. அது தோன்றி அழியும் வரையில், போலீசார் அதன்மேல் கடைக்கண் பார்வை செலுத்துவதை நிறுத்தவில்லை. 1907இல் சூரத்தில் காங்கிரஸ் கூடியது. இதற்குள் வங்காளத்தில் வெடிகுண்டு உதயமாயிற்று. துப்பாக்கிச் சத்தமும் கேட்கும் என்று தோன்றிற்று. நாடு முழுவதும் பரபரப்பு, கல்கத்தாவிற்குப் பின், காங்கிரஸ் நாகவுரியிலே கூட வேண்டும், ஆனால் கல்கத்தா காஙகிரஸின் மூல தீர்மானங்களில் சாத்த்தைகளை மாற்றி, சாரமில்லாமல் அடித்துவிட வேண்டும் என்பது மிதவாதிகளின் தீர்மானம். இந்த ஆவலுக்கு, நாகபுரி காங்கிரஸ்வாதிகளில் பெரும்பான்மையோர் இடங்கொடுக்கவில்லை. மிதவாதக் கோட்டையென்று அப்பொழுது கருதப்பட்ட சூரத் நகருக்கு !இந்த நகரம் குஜராத்திலிருக்கிறது; காங்கிரஸை மாற்றிவிட்டார்கள் மிதவாதிகள். தேசபக்தர்களுக்கு ஆத்திரம். தியாகம் செய்யத் துணிந்த தேச பக்தர்களுக்கு லோகமான்ய திலகர் தலைவரானார். சூரத் காங்கிரஸில், கல்கத்தா தீர்மானங்களை எள்ளளவும் மாற்றக் கூடாது என்பது திலகர் கோஷ்டியாரின் பிடிவாதம். திலகருக்குச் சாதகமாக பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட நூறு தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் சூரத்துக்குச் சென்றார்கள். சூரத் காங்கிரஸிலே, மிதவாதிகளின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்குச் செருப்படி விழுந்ததும், நாற்காலிகள் முடிந்ததும், கைக்குத்துச் சண்டை கலவரம் எழுந்து பொங்கியதும், காங்கிரஸ் நடைபெறாமல் போனதும் பழங்கதை. சூரத் காங்கிரஸ் உடைந்தது. தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளின் முரட்டுத்தனத்தால்தான் என்று அக்காலத்தில் கூரப்பட்டது. சூரத் காங்கிரஸ் உடைபட்டது நாட்டு நன்மைக்காயின் அந்தப் பெரிய புண்ணியத்தைத் தமிழர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஆனால், அவ்வாறு நேர்ந்தது தமிழர்களால் அல்ல என்று ஸ்ரீமான் எஸ்.துரைசாமி அய்யர் சொல்லுகிறார். துரைசாமி அய்யர் பாரதியாரோடு சூரத்துக்குச் சென்றிருந்தவர். சென்னையிலிருந்து சூரத் வரையிலும், தமிழ்ப் பிரதிநிதிகளின் வழிப்பிரயாண உற்சாகத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது என்கிறார் அய்யர். பாரதியார் இருக்கிற கூட்டத்தில் உற்சாகக் குறைவு இருக்க முடியுமா? ஒரே ஒரு சமயம், அதைக் குறிப்பிட்டுவிட்டு, இந்த அத்தியாத்தை முடித்துவிடுவோம். பாரதியார் சூரத் காங்கிரஸுக்கு முன் திரகரைப் பார்த்ததில்லை. பார்க்க ஆவல். காங்கிரஸ் சமயத்தில் சூரத்தில் கனத்த மழை; காங்கிரஸ் கொட்டகைக்கும் பிரதிநிதிகள் தங்கியிருந்த இடத்துக்கும் இடையே நல்ல பாதையில்லை. செப்பனிடப்பட்ட பாதையும், மழையால் சீர்குலைந்து போய்விட்டது. அந்தப் பாதையை ஆள்களைக் கொண்டு செப்பனிட்டுக்கொண்டிருந்தார் திலகர். அந்த மகானுக்க எந்த வேலை சிறிது, எந்த வேலை பெரிது? திலகரைக் காண வேண்டுமென்ற ஆவலினால், பாரதியார் தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே போய் விசாரித்தார். திலகர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல யாருக்கும் தெரியவில்லை. கசந்த மனத்துடன், பாரதியார் குறியில்லாமல், காங்கிரஸ் பாதையில் நடந்து சென்றார்; நூறு ஆள்கள் வரையிலும் பாதையைச் செப்பனிடுவதைக் கண்டார்; கிட்டே நெருங்கினார். குடை பிடித்துக்கொண்டு, தலைமை மேஸ்திரியாக ஒருவர் பாரதியாரின் பார்வைக்குப் பட்டார். பின்னர் நடந்ததைப் பாரதியார் பின் வருமாறு என்னிடம் சொன்னார்: “போய்க்கொண்டிருக்கையில், குடையின் பின் பக்கத்தைக் கண்டேன்; எதிரே போனேன்; அந்த மனிதனுடைய கண்களைப் பார்த்தேன். அவை உயிர்த்தணலைக் கக்கும் குண்டுகளைப் போல் என் பேரில் பாய்ந்தன. ஒன்றும் பேசாமல், அவர் பாதத்தைத் தொட்டு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன்!” லோகமான்யரின் தீ விழிகளைக் கண்டவர், பயபக்தி கொள்ளாமலிருக்க முடியாது. இந்தியாவின் சுதந்தர தாகமும் சக்தியும் லோகமான்யரின் அக்கினி ஜுவாலைக் கண்களில் பிரகாசித்ததில் ஆச்சரியம் உண்டா? 7 பகுதி 8 1905 ஆம் வருஷம் இந்தியாவின் சரித்திரத்தில் ஓர் எல்லை. ஸ்மரணையற்றுத் தூங்கிக்கொண்டிருந்த இந்தியர்கள், அந்த வருஷம் கண் விழித்துக்கொண்டார்கள். 1907 ஆம் வருஷம் முதல் நாட்டாருடைய தேச பக்தியின் போக்கு மாறிற்று. இவ்விரண்டுக்கும் வங்காளப் பிரிவினையும், லோகமான்ய திலகரும் காரணங்கள். 1906 ஆம் ஆண்டுக்குமுன் இந்தியர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும், அவை சுய மதிப்பை வளர்க்கும் கஷ்டங்கள் அல்ல. நமக்கு நேரும் கஷ்டங்கள் இருவகை; நம்மமையறியாமலே வரும் கஷ்டங்கள்; நாம் வருவித்துக்கொள்ளும் கஷ்டங்கள். வண்டியிலே பூட்டின மாடு கணடத்தை அனுபவிக்கிறது. எதிரி மாட்டை எதிர்த்துச் சண்டை போட்டாலும் கஷ்டமனுபவிக்கிறது. மாட்டின் முதல் கஷ்டம் அதன் சுய மதிப்புக்கும் சுதந்தர வாழ்வுக்கும் பாதகமான கஷ்டம். பிந்திய கஷ்டம் அதன் சுய மதிப்பையும் சந்தோஷத்தையும் வளர்க்கும் கஷ்டம். கஷ்டத்தைக் கண்டோ, காணாமலோ அஞ்சுகிற மனிதன் எந்த வேலையையும் உருவாகச் செய்து முடிக்க முடியாது. கீர்த்திக்கு நிலைத்த வழி கஷ்டத்தை அனுபவிக்கக்கூடிய சக்திதான். விருப்புடன் வரவழைத்துக்கொண்ட கஷ்டம் மனிதனுக்குப் பொறுப்பையும் குர்த்தியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மனிதன் கஷ்டப்படும்பொழுது அனுபவிக்கும் ஆனந்தந்தான் சிறந்தது. சூரத் காங்கிரஷ் உடைபட்டுப் போனது மட்டும் விசேஷமல்ல; இன்னொரு விநோத சம்பவமும் நேர்ந்தது. 1906ஆம் வருஷம், லாலா லஜபதிராயும், ஸர்தார் அஜீத்சிங்கும் பஞ்சாபிலிருந்து பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். லஜபதியின் பிரலாபம் என்று பாரதியார் பாடியிருக்கிரே, அந்தப் பாட்டு லஜபதியின் தேசப் பிரஷ்ட வாழ்வைக் குறித்துத்தான். 1907ஆம் வருஷக் காங்கிரஸுக்கு லஜபதியைத் தலைவராக்க வேண்டும் என்பது திலகர் கோஷ்டியாரின் கருத்து, அரசாங்கத்தாரின் கோபத்துக்கு அஞ்சி, மிதவாதிகள் இந்த யோசனைக்கு இடங்கொடுக்கவில்லை. பின்னர் லஜபதி விடுதலையடைந்து நேரே சூரத் காங்கிரஸுக்குப் போய்ச் சேர்ந்தார். கொள்கையில், லஜபதிக்குத் திலகரிடம் பக்தி, மிகவாத சிரேட்டரான கோகலேயிடம் லஜபதிக்குப் பிரியம். இவர்களிருவரையும் இவர்களுடைய கூட்டத்தார்களையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்று லஜபதி அரும்பாடு பட்டார்; பயன்படவில்லை. இந்தக் காலத்தில் இந்திய மந்திரியாக இருந்தவர் ஜான் மால்லி என்ற பெரியார். மிண்டோ பிரவு இந்தியாவுக்கு வைஸிராய். மிதவாதிகளை அணைத்துக் கொள்ளுங்கள் என்ற இந்தியா மந்திர மார்லி சீமையிலிருந்து வைஸிராய்க்குத் தந்தியனுப்பினார். இது கோகவே உள்ளிட்டவர்க்குத் தெரியும். மிதவாதிகளை எதிர்த்து நிற்கும் கோஷ்டியாரைச் சர்க்கார் மடக்கிச் சிறை புகுத்துவது நிச்சயம் என்று கோகலே, 7ஜபதியின் மூலமாய், திலகருக்கச் செய்தி அனுப்பிவைத்தார். லஜபதி இந்தச் செய்தியைத் திலகருக்குச் சொல்லியதும், அரவிந்தர் முதலியவர்களைக் கலந்து திலகர் பதில் கொடுத்ததும் ஆன இந்த ஸீனை அரவிந்தர் வாயால் வர்ணிக்கக் கேட்டால், மயிர்க் கூச்செறியும். மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்படவில்லை என்பது சரித்திரம். திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக்கொண்ட தீர்மானமாகும். இந்தத் தீர்மானமே, நமது நாட்டாரின் மனோபாவத்தை அடியோடு மாற்றிய தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர். பாரதியாருடைய வாழ்வின் போக்குக்கு, இந்தச் சம்பவங்கள் சிறப்பான காரணங்கள். பாரதியார் ஒப்பற்ற கவி என்ற முறையிலே, கவி ரவீந்திரரைப் போல் அரசியல் கிளர்ச்சியில் தீவிரமாகக் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் அரசியலில் தீவிரமாகக் கலந்து கொண்டதற்குத் திலகர், அரவிந்தர், விபின்பாபு – இவர்கள் காரணம் என்று சொல்லலாம். பாரதியார் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும் வழியையும் ஆதரித்து, இந்தியா பத்திரிகையில் சண்டப் பிரண்டமாய் எழுத ஆரம்பித்தார். 1908ஆம் வருஷம் திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலகர் கோஷ்டியைச் சேர்ந்த பெரிய மரங்களை ஒவ்வொன்றாய் அரசாங்கத்தார் சாய்க்கத் தொடங்கினார்கள். சர்க்காரின் முதல் அடி, தேசியக் கூட்டத்தாரைக் கலகலக்கும்படி செய்துவிட்டது. அடுத்தது யார் என்று ஜனங்கள் பேர ஆரம்பித்தார்கள். பாரதியார் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையின் எழுத்து, சென்னை சர்க்காருக்குப் பிடிக்கவில்லை. முதல் பாணம், இந்தியா பத்திரிகையைப் பிரசுரிப்பவர் பேரில் பாய்ந்தது. அடுத்த பாணம் பாரதியாரின்பேரில் பாயும் என்று அவரது நண்பர்களுக்குத் தெரியும். பாரதியாரின் வாழ்விலே இது ரொம்ப நெருக்கடியான சந்தர்ப்பம், நண்பர்கள் ஒன்று கூடி யோசித்தார்கள். இந்தச் சமயத்தில் பாரதியார் சிறை செல்வது உசிதமல்ல என்பது சில நண்பர்களின் யோசனை. பாரதியாருக்குத் தேச பக்தர், கவி என்ற இரண்டு வகையிலும் பெருமை. பாரதியாரின் சிறைச் சேவையைக்காட்டிலும் கவிதைத் தொண்டு உயர்ந்தது என்பது இலக்கியச் சுவை கொண்ட நண்பர்களின் கட்சி. சிறை செல்ல வேண்டும் என்பது சிலரின் வாதம். இந்தப் பகுதியை நான் ஏன் விஸ்தாரமாக எழுத வேண்டும் என்பதற்குக் காரணம் உண்டு. உள்ளே நடந்த சம்பவங்களைக் கவினிக்காமல், பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதியார் பயங்கொள்ளி அல்ல, ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியாரின் எழுத்திலே அச்சத்தை தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவர் அவர் அல்லர் என்பதற்கு ஒரு சம்பவத்தைப் பின்னால் சொல்லுகிறேன். பாரதியார் புதுச்சேரிக்குப் போவதற்குக் காரணம் அவருடைய நண்பர்கள். இதை விவரமாக இப்பொழுது சொல்லத் தேவையில்லை. நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதியாருக்கு எல்லையற்ற நம்பிக்கை. பாரதியாரின் கவிதைத் தொண்டு நாட்டுக்குத் தேவை என்று நண்பர்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள். மனிதனுக்குத் தருமசங்கட நிலைமை ஏற்படுதென்றால், இப்படித்தான் ஏற்படும். கடமை இரண்டு அம்சங்களாகக் கண்ணில் தோன்றம். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலவும் தோன்றும். எதைத் தள்ளுவது, எதைக் கொள்ளுவது என்பதிலேதான் தருமசங்கடம். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதியார் பட்ட கஷ்டங்கள், சிறைக்கஷ்டங்களைக்காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல் ஆயிற்று பாதியாரின் புதுச்சேரி வாசம். 1908ஆம் வருஷத்தில் பாரதியார் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தார். புதுச்சேரி ஓர் ஆபத்தான ஊர். பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியாவிலே மிச்சப்பட்டிருக்கும் துளித்துளி இடங்களில் புதுச்சேரி ஒன்று. 1870 ஆம் வருஷத்து பிராங்கோ-ஜெர்மன் யுத்தத்திற்கப் பிறக, பிரெஞ்சுக்காரர்கள், இங்கிலீஷ்காரர்களின் தயவை நாடும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். எனவே !தயவை எதிர் பார்த்து; இந்திய ராஜாங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் புதுச்சேரித் துரைத்தனத்தார். அந்தக் காலத்தில் புதுச்சேரியில், தக்க ஜனத் தலைவர்கள் இல்லை. ஜனங்களும் பிரெஞ்சு சுகபோக நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஜனங்களுக்குள் கட்டுப்பாடு அதிகமில்லை. இந்த நிலைமையில் பாரதியாரின் கவித்திறன் அவர்களுக்கு எவ்வாறு அர்த்தமாகும்? அரசாங்கத்துக்குப் பயந்து, பாரதியார் ஓடிவந்துவிட்டார் என்ற புதுச்சேரிவாசிகளில் சிலர், யோசனையின்றித் தொடக்கத்தில் ஏளனம் செய்தார்கள். பாரதியாருக்கு ஒத்தாசை செய்யாததற்கு,. இந்தக் காரணமே போதாதா? நிரம்ப சக்தி படைத்த சர்க்காரை எதிர்த்த கலகக்காரர் பாரதியார் என்று நினைத்து, மற்றும் பெரும்பான்மையோர் பயந்து போனார்கள். இவர்கள் பாரதியாரிடத் கிட்டே அணுகுவார்களா? இவர்களிடமிருந்து பாரதியார் எவ்வித ஒத்தாசையை எதிர்பார்க்க முடியும்? ஊர் புதிதது; கையில் பசை அதிகமில்லை; சர்க்கார் பகையும் கூடவே இருக்கிறது. இப்படி நிலைமை ஒருக்குமாயின், பாரதியாரின் வாழ்வு பஞ்சு மெத்தைமேல் படுத்துறங்கும் வாழ்வாக இருக்க முடியுமா? முதன் முதலாக ஈசுவரன் தர்மராஜா கோயிலைச் சுற்றியிருக்கிற வீதியொன்றில், ஓர் அய்யங்கார் வீட்டில் பாரதியார் குடி புகுந்தார். தனித்துப் புதுச்சேரிக்கு வந்த பாரதியார், சம்பாஷணை நட்புக்குத் திண்டாடிப் போனார், கடன் கொடுக்க நிர்வாகமில்லாதவர்கள் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தால், அவர்களை யாருமே கவனிக்க மாட்டார்கள். நூற்றோடு நூற்றொன்று என்று சேர்த்துக்கொள்ளுவார்கள். அதற்குமேலே, உள்ளத்தில் ஒன்றுமே பரபரப்பு ஏற்படாது. பாரதியார் புதுச்சேரிக்குச் சென்றதும், அவரை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிந்துகொள்ளவே, ஏற இறங்கப் பார்த்தார்கள். கடற்கரையில் அமைக்கப் பெற்றிருக்கும் இரும்புப் பாலத்தில், பாரதியார் ஒரு பெஞ்சியின்மேல் உட்காரப்போய் வேறு எவரேனும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தால் அவர்கள் பெஞ்சியைக் காலி செய்துவிட்டு, சொல்லிக்கொள்ளாமல் அப்பால் நகர்ந்து போய்விடுவார்கள்; இது மரியாதையால் அல்ல; மிதமிஞ்சின பயத்தால். இந்த வாழ்வு, சிறையிலே தனிக்காவல் இருப்பதைக் காட்டிலும் கேவலமானதாகும். பசிக்கிற ஒருவனுக்கு நாலாப்பக்கங்களிலும் பக்குவமான ஆகாரங்கள் நிறைந்திருந்தாலும், உண்ண வகையில்லாமல் போனால், அவன் நிலைமை எப்படியிருக்கும்? இத்தனை ஜனங்களும் முதலில் பாரதியாரை அனுபவிக்க முடியாமல் போனதைப் பற்றி என்ன சொல்வது? எல்லாரும் வீர்களாயிருக்க வேண்டும் என்பதில்லை. வீர்களாயிருக்க முடியாமல் போனால், எல்லாரும் கோழைகளாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? பயப்படுவதற்கும் ஓர் எல்லை இல்லையா? அதுவும் புதுச்சேரி வாசிகள் பயப்படுவதற்கு எல்லை நிச்சயமாய் இருக்கலாம்; இருக்க முடியும். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தாலும், அதில் வசிப்பவர்கள் இந்தியர்கள்தானே. தமிழரகள்தானே! அச்சத்தை லட்சணமாய்ப் பழகிக் கொண்டிருக்கிறவர்களுக்கு அதற்கு எல்லை போடாவிட்டால், லட்சணம் அவலட்சணமாய்ப் போய்விடாதா? பாரதியார் புதுச்சேரிக்கும் போய்ச் சேர்ந்த சிறிது காலத்துக்குப் பிறகு மண்டையம் சீனிவாஸழச்சாரியாரும் புதுச்சேரிக்கும் போய்ச் சேர்ந்தார். புதுச்சேரியிலிருந்தே இந்தியா பத்திரிகையை வெளியிட வேண்டும் என்பது தேசபக்தர்களின் யோசனை. யந்திரம் முதலிய யாவும் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் வந்து சேர்ந்தன. ரூ துய்ப்ளெக்ஸ்! தூப்ளோ வீதி; என்ற ரோடிலிருந்த ஒரு கட்டத்தை வாடகைக்குப் பேசினார். அங்கிருந்து இந்தியா வெளி வந்து கொண்டிருந்தது. இதற்கு, பாரதியார் பேரிலும் வாரண்டு. பாரதியாரை அரசாங்கத்தாரின் கண்ணில் குற்றவாளியாகத் தொன்றும்படி செய்தது. இந்திய வில் பிரசுரமான எந்த எழுத்துத் தெரியுமா? ஓர் எழுத்து எனக்கு நினைவு இருக்கிறது. என்று தணியும் இந்தச் சுதந்தர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று பாரதியார் ஆரம்பித்திருக்கிறாரே, அந்தக் கிருஷ்ண ஸ்தோத்திரம் தான். எனக்குப் பசுக்களைக் கொடு; தேக ஆரோக்கியத்தைக் கொடு. என் குடும்பமும் நானும் ஷேமமாயிருப்பதற்கு அருள் புரிவாயாக! உன் பாத மலர் என்றைக்கு என் கண்ணில் படுமோ? யம தூதர்கள் என்னை வேதனை செய்யாமல் தடுப்பாயாக! என்று கடவுளை ஸ்தோத்திரம் செய்தால் அது பழைய கதை; மிகப் பழைய வேதம். இந்தத் துதியை யாரும் ஏற்பார்கள்; அரசாங்கத்தாரும் ஒப்பக்கூடம். தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் தனியாக மௌனமாகக் கடவுளை ஸ்தோத்திரம் செய்தால், அதை யார் கவனிக்கப் போகிறார்கள்? எங்கள் அடிமையில் மோகம் என்று பாரதியார் சொன்னால், அதனால் பொது ஜனங்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் கோபம் வராதா? எங்கள் அடிமையில் மோகம் என்று சொல்வதற்குப் பாரதியார் யார் என்று ஜனங்களும் அரசாங்கத்தாரும் கேட்கத்தானே செய்வர்? குத்துகிறாப் போல ஸ்தோத்திரம் செய்தது ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. வளர்த்துக்கொண்டே, புதிய வகையில் மாற்றிக்கொண்டே வந்தாலாழிய, ஜனசமூக வாழ்வு நாசமாய்ப்போகும் என்ற உண்மையை அறிந்த அரசாங்கத்தால், பாரதியாரின் புதுப் பேச்சையும், உயிர் நிறைந்த புது சிருஷ்டியையும் காணப் பொறுக்கவில்லை. இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து எவ்வளவு காலம் வெளி வந்துகொண்டிருக்க முடியும்? ஜனங்களின் பயமும் அரசாங்கத்தாரின் கோபமும் ஒன்று சேர்ந்தால், நல்ல பத்திரிகைக்கு அல்ப ஆயுள்தான். பெரும்பாலும், அந்தப் பத்திரிகை தானாகத் தற்கொலை செய்து கொண்டு மடிய வேண்டிய நிலைமைக்கு வந்துவிடும். இருந்தாலும் இந்தியா பத்திரிகைக்குச் செல்வாக்கு இருந்தது; அதாவது கள்ளக்காதல். கள்ளக்காதல் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? கள்ளக்க காதலுக்கு உயிரும் மோகமும், அது பகிரங்கமாகாதிருக்கும் வரையிலேதான். வெளிப்படுப்போனால், அந்தக் காதலைத் தாங்கி, கஷ்டங்களை அனுபவிக்கக்கூடிய தைரியம் பெரும்பான்மையான காதலர்களிடம் இருப்பதில்லை. தேசபக்தியும், ஒரு நிலைமையில் கள்ளக் காதலைப் போலவே இருக்கும். அரசாங்கத்தார் பயமுறுத்தாத வரையில், தேசபக்தி ராஜபாட்டையில் செல்லும். கஷ்டங்கள் நேராத வரையில் எல்லோரும் தேசபக்தர்கள்தான். எல்லோரும் வந்தேமாதரக் கூச்சல் போடுவார்கள். இந்த இடத்தில் கோஷம் என்ற நல்ல வார்த்தையைப் பிரயோகம் செய்வது தவறாகும். பாரதியார் இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்து நடத்திவந்த காலத்தில், இந்தக் கள்ளக்காதல் தேசபக்திதான் முழக்கம். இந்தியா பத்திரிகையை வாங்கிப் படிக்கும் தமிழர்கள் அதைப் பகிரங்கமாகப் படிக்கமாட்டார்கள். பறிமுதலான புஸ்தகத்துக்கு கிடைக்கும் இரகசிய மரியாதைதான் இந்தியா பத்திரிகைக்குக் கிடைத்தது. மனிதன் ஆபத்தினால் அநேகமாய்ச் சாவதில்லை. ஆபத்து வருமே என்ற எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய்விடுகிறான். இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்து வரவொட்டாமல் சென்னை சர்க்கார் தடுத்து விடுவார்களோ என்று ஜனங்கள் நினைக்க ஆரம்பித்தபொழுதே இந்தியாவின் ஆயுள் காலம் குறுகிவிட்டது என்று சொல்லலாம். இந்தியா பத்திரிகை நின்று போவதற்கு முன்னர் அதை நடத்திவந்த அன்பர்கள் !பாரதியார் உள்பட) பட்ட கஷ்டங்களைச் சொல்லி முடியாது. நல்ல முயற்சிக்குப் பணக்கஷ்டம் எல்லாத் தேசங்களிலுமுண்டு. ஆனால், நம்முடைய நாட்டில் அந்தக் கஷ்டத்துக்கு எல்லை கோல முடியாது. நாய் வேஷம் போட்டுக்கொள்ளுகிறவன்தானே குரைத்துத் தீரவேண்டும்? மற்றவர்கள் அதைப் பார்த்து நற்சாட்சிப் பத்திரம் கொடுப்பார்கள்; பணத்தால் சன்மானம் செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் எழை எளியவர்கள்தான் தேசபக்தர்களாக இருப்பார்கள். அவர்கள் கையில் பணமேது? சிறைமுதல் தூக்குமேடை வரையில் செல்ல அவர்கள்தான் தயாராயிருக்க வேண்டும். இடையே ஜீவனத்துக்கு நல்ல வழியில் முயற்சி செய்ய வேண்டும். கற்பனையும் தேச பக்தியும் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்; விஸ்தாரமாகச் சொல்லத் தேவையில்லை. இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து சரிவர வெளியூர்களுக்குப் போய்ச் சேராது. இந்தியா காரியாலயத்துக்கு வந்துசேர வேண்டிய பணம் சரிவர வந்து சேராது. தபாலாபீசிலும் சதா சில்லறைத் தகாராறுகள் நேர்ந்துகொண்டிருந்தன. ஆக, மொத்தம் பாரதியார் பட்டினி; காரியாலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கஷ்டம். மொத்தத்தில் எல்லோருக்கும் கற்பனை செய்துகொள்ள முடியாத தொல்லை. முயற்சி திருவினையாக்கும் என்றார் வள்ளுவர். முயற்சி என்ற சொல்லுக்குப் பதிலாக, உணர்ச்சி என்ற சொல் பிரயோகம் செய்யலாமே என்று நான் யோசிக்கிறேன். தேச பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்ச்சிதான் வற்றாத ஊற்று; குறையாத பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தைக் கொண்டீதான், பாரதியாரும், அவரது அருமை நண்பர்களும் இந்தியா பத்திரிகையை நடத்தி வந்தார்கள். பத்திரிகையை நடத்துவது சுளுவான வேலைதானே என்று நீங்கள் சிரிக்கவும் கூடும். அலை ஓய்ந்து நீராடுவது என்பது என்றைக்குமே சாத்தியப்படாத சங்கதியாகும். எல்லோரும் தேசபக்தர்களாகி, அவர்கள் யாவரும் தனவந்தர்களாகவும் ஆன பின்னர் நாட்டின் சுதந்தர முயற்சிகிளில் ஈடுபட வேண்டும் என்று வேதாந்தம் பேசினால் அந்தப் பேச்சு கதைக்கு உதவுமா? இந்தியா பத்திரிகை நிற்பதற்கு முன்னமே பாரதியார் தமது வீட்டை மாற்றிக்கொண்டார்; ஈசுவரன் தர்மராஜ கோயில் வீதிக் கோடியில் விளக்கெண்ணெய் செட்டியாரின் வீட்டுக்குக் குடி மாற்றிக்கொண்டார். இந்தத் தங்கமான செட்டியாரைப்பற்றித்தான் தொடக்கத்தில் நான் பிரஸ்தாபம் செய்தது. விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் உண்மையான பெயர் எனக்கு ஞாபகமில்லை. காந்தி அன்புடன் அளித்த ஹரிஜன் என்ற திருநாமத்துக்குப் பிறகு, ஆதித் திராவிடர் என்ற அர்த்தமற்ற பெயரில் யாருக்கு ஆசை இருக்கும்? விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் வீடு இல்லாமல் போனால், பாரதியாரின் புதுச்சேரி வாசம் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும். நானறிந்து செட்டியார் பாரதியாரை வாடகைப்பணம் கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார்; பாரதியார் பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார்; பிறகு மௌனமாய் வெளியே போவார். பாரதியார் பேச்சுக்கொடுத்தாலொழிய, செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார். செட்டியார் வருவார், நிற்பார், போவார். வீட்டுக்குச் சொந்தக்காரர் வாடகைக்காக, அதுவும் ஆறு மாத வாடகைக்காக, கால் கடுக்க நின்றுகொண்டிருப்பது அதிசயமல்லவா? விளக்கெண்ணெய்ச் செட்டியாரின் வீடு சங்கப் பலகை, கானமந்திரம், அபய விடுதி, சுதந்தர உணர்ச்சிக் களஞ்சியம், அன்னதான சத்திரம், மோட்ச சாதன வீடு, ஞானோபதேச அரங்கம். இத்தனைக் காரியங்களும் அங்கே நடைபெற்றன என்று சொல்லுவது மிகையாகாது. இவைகள் நடைபெறும் காலங்களில் பாரதியார் எல்லாவற்றிற்கும் சாசுவதத் தலைவர். போட் எடுத்து, தலைமைப் பதவி பெறவில்லை. மணித்திரு நாட்டின் தவப்புதல்வர் அவர் என்ற உரிமை ஒன்றே போதாதா? இதனிடையே, அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்தது 1910 ஆம் ஆண்டில் என்பது என் நினைவு. மானிக்டோலா வெடிகுண்டு வழக்கில் விடுதலையடைந்த பின்னர். அரவிந்தர் கர்ம யோகின் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையைக் கல்கத்தாவில் நடத்தி வந்தார். சுமார் நாற்பது மலர்கள் வெளிவந்தன. அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து மறையுமுன்னவே கர்மயோகின் பத்திரிகை மறைந்து போயிற்று. அரவிந்தரின் பத்திரிகையைத் தழுவி, பாரதியார் கர்மயோகி என்ற தமிழ்ப் பத்திரிகையை வெளியிட்டார். அது புதுச்சேரியில் ஸெய்கோன் சின்னையா அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. அச்சு முத்துமுத்தாய் அழகாயிருக்கும், அந்தப் பத்திரிகையில் எழுத்துப் பிழை ஒன்றும் காண முடியாது. 8 பகுதி 9 கர்மயோகி பத்திரிகையைப் பாரதியார் தொடங்கி நடத்திய காலத்தில் இந்தியா முழுதும் அரசியல் கிளர்ச்சி அதிகம். இதனிடையே லோகமான்ய திலகருக்கு ஆறு வருஷம் சிறைவாசம். அவர் பர்மாவுக்கு கொண்டுபோகப்பட்டார். அரசாங்கத்தார் இரண்டு வித உபாயங்களைக் கையாண்டார்கள்; அடக்குமுறையை வலக்கையால் உபயோகப்படுத்திக்கொண்டார்கள்; இடக்கையால் சீர்திருத்தம் வழங்கினார்கள். இதற்கு மிண்டோ-மார்லி சீர்திருத்தம் என்று பெயர். இந்தச் சீர்திருத்தத்தின் மூலமாய், மாகாணச் சட்ட சபையில் ஜனங்களின் பிரதிநிதிகள் பெரும்பன்மையில் இருப்பார்களென்று மார்லி பிரபு சத்தம் போட்டு சீமையிலிருந்து சொன்னார். இது தவறு என்று அரவிந்தர் தமது கர்மயோகி் பத்திரிகையில் தெளிவாக எடுத்துக் காண்பித்தார். சட்டசபையில் கேள்வி கேட்கும் உரிமைதான் ஜனப் பிரதிநிதிகளுக்கு மிச்சப்படும் என்றும், கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சர்க்கார் பிரதிநிதிகளிடமிருந்து பெற முடியாது எனறும் அரவிந்தர் எழுதியிருந்தார் அரவிந்தர் 1909 ஆம் ஆண்டில் எழுதியதை, தேசமக்கள் இருபது வருஷங்களுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள். சில்லறைச் சீர்திருத்தங்கள், புரட்சிகரமான பெரிய சீர்திருத்தங்களுக்கு விரோதிகள் என்று மார்லி பிரபு ஓரிடத்தில் கூறிய உண்மையைத் தேசபக்தர்கள் எடுத்துக் காண்பிப்பதற்கு அப்பொழுது சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பாரதியார் கைநழுவவிடவில்லை. ‘கர்மயோகி’யில் அழுத்தமாக அழுத்து வேலை நடந்துகொண்டு வந்தது. பதஞ்சலி யோக சூத்திரம் சமஸ்கிருதத்தில் இருந்ததைச் சுவாமி விவேகானந்தர் இங்கீலீஷில் மொழிபெயர்த்தார். மூலத்துக்கும் விவேகானந்தருடைய மொழிபெயர்ப்புக்கும் சில இடங்களில் முரண் இருக்கிறது என்பது பாரதியாரின் எண்ணம். மூலத்திலிருந்தே அவர் யோக சூத்திரத்தைத் தமிழில் தர்ஜமா செய்து, பகுதி பகுதியாகக் ‘கர்மயோகி’ பத்திரிகையில் வெளியிட்டார். மொழிபெயர்ப்பு வேலையே எப்போதும் சிரமம். எழுதிய ஆசிரியரின் மனோபாவத்தை உணராமல், மொட்டைத்தனமாய் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜமா செய்வது பள்ளிக்கூடப் பையன்களுடைய வழக்கம். பாரதியார் மொழிபெயர்த்தது நிரம்ப நன்றாயிருக்கிறதென்று அரவிந்தர் முதலிய பெரியார்கள் சொன்னது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மகா பாரதத்தைக் கிரிப்பித் என்ற இங்கிலீஷ்காரரும் ராமேஷ்சந்தர தத்தர் என்ற வங்காளியும் தனித்தனியே தர்ஜமா செய்திருக்கியார்கள். இவைகள் சாரமற்றவை என்பது அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. அய்யர் – இவர்களின் கருத்து. மொழிபெயர்ப்பைப் பற்றிய இவ்வளவு விஸ்தாரமாகப் படிப்பவர்களுக்கு அலுப்பு வரக்கூடிய அளவில் ஏன் பேசவேண்டுமென்றால், ஒரு காரியத்தின் வெளியுருவத்தைக் காட்டிலும் அந்தக் காரியத்தைத் தூண்டும் மூல சக்தியும் மனோபாவமுந்தான் உயர்ந்தவை என்று சொல்லுவதற்குகவே. மேதாவிகள், விஷயத்தின் மர்மத்தை விரைவில் உணர்கிறார்கள்; மற்றவர்கள் வெளியுருவத்தைக் கண்டு மயங்கிவிடுகிறார்கள். பாரதியார் வெறும் கவி மட்டுமல்லர். தத்துவதரிசனத்தில் அவருக்கு அளவிலா ஆவல், ‘சொல் வேண்டும்’ என்று பாரதியார் பாடியிருக்கும் பாட்டு, அவருடைய தத்துவ தரிசனத்தின் ஆவலைக் காண்பிக்கிறது. இயற்கையின் மர்மத்தை விண்டு காண்பிக்கும் சொல் வேண்டும்; அதன் மூலமாய்த் தமிழர்களும் ஏனையோரும் எல்லையற்ற சக்தியைப் பெற வேண்டும் என்பது பாரதியாரின் வாழ்க்கை ஆவல். பத்திரிகைத் தொழில் நின்று, பட்டினி கோர உருவத்துடன் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. பட்டினிக் காலங்களில் மேதாவிகள், கர்மவீரர்கள், வள்ளுவரைச் சரண்புக வேண்டியதுதான். செவிக்கு உணவில்லாத பொழுது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவர் வாக்கை, வயிற்றுக்கும் உணவில்லாதபொழுது, செவியைக் கொண்டு காலந்தள்ள வேண்டும் என்று மாற்றிவிடலாம் எனத் தோன்றுகிறது. வரம்பில்லாமல் தத்துவம் பேசிக்கொண்டே போகிறேன் என்று நீங்கள் வருந்தக்கூடாது. இவையெல்லாம் தத்துவமே இல்லை. பூரண வாழ்வு வாழத்துணிந்த மேதாவிகளுக்கு, வீரர்களுக்குப் பொதுவாக எந்த நாட்டிலும், சிறப்பாகச் சுதந்தரமில்லாத நாட்டில் எத்தனை விதத் துன்பங்கள் நேருகின்றனவென்றும், அவைகளை மேதாவிகள் எவ்விதம் ஜீரணம் செய்து கொள்ளுகிறார்கள் என்றும் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? நாம் எல்லோரும் ஞானிகள் அல்ல; வீரர்களுமல்ல, ஞானம் பிறக்கிறது என்பது பெரும்பாலும் தவறு. கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதைப் போல, தப்பிதத்திலிருந்து ஞானோதயம் ஏற்படுவது சாதாரணம், விளையாட்டுச் செயலிலிருந்து வீரத்தனம் உண்டாவது சகஜம். மேதாவிகளுக்குத் தப்பிதம் செய்யத் துணிச்சல் இருக்கிறது. மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் சாதாரணமாய் இருப்பதில்லை, மேதாவிகளையும் வீரர்களையும் ஆட்டி வைப்பது அவர்களுடைய உணர்ச்சி. அந்த உயர்ச்சி கட்டுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அஞ்சி ஒடுங்குவதில்லை. புதுச்சேரியில் மறைந்த தேசபக்தர்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தாருக்குக் கோபம் வராத நிலைமையில் அவர்களால் பத்திரிகை நடத்த முடியாது. தேசபக்தர்களுடைய உணர்ச்சி துடிதுடிக்கிற அளவுக்குத் தக்கபடி, அரசியல் நிர்வாகிகளுக்குக் கோபம் உண்டாவது இயல்பு. 1910 ஆம் வருஷத்தில் பாரதியாரின வாழ்விலே, மேற்சொன்ன வகையில் ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. லோகத்தில் ஒரு விசித்திரம் உண்டு. இணையற்ற மேதாவிகள் பிறந்தாலும், அவர்களுடைய மேதையைச் சிலரால்கூட அனுபவிக்க முடியாமல் போனால், மேதாவிகள் கதி அதோகதிதான். எவ்வளவுதான் திட சித்தம் இருப்பினும், மேதாவிகள் மனம் உடைந்து போகக்கூடிய நிலைமைக்கு வந்துவிடுவார்கள். பிற நாட்டுச் சரித்திரங்களைக் கொண்டுதான் மனத்தில் தைரியம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். பாரதியார் மனமுடைந்து போகவேண்டிய தருணத்தில அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். மானிக்டோலா வெடிகுண்டு வழக்குக் காலத்தில் காவலிலிருந்த அரவிந்தர், சிறையில் கண்ணனைக் கண்டு தைரியமும் மனச்சாந்தியும் கொண்டதாக ஒரு பிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார். இத்தகைய மேதாவியைக் கண்ட பாரதியார் உள்ளப் பூரிப்படைந்தார். அரவிந்தரின் சம்பாஷணையினால் பாரதியாரின் ’ஊக்கமும் உள்வலியும்’ வளர்ந்தன. பாரதியாரின் பேச்சினால் அரவிந்தர் மகிழ்ச்சியடைந்தார். அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்ததும், பங்களா முதலிய வசதிகள் அவருக்கு இருக்கவில்லை. கலவை சங்கர செட்டியார் வீட்டு முன்றாவது மெத்தையில் அரவிந்தரும் அவரது சிஷ்யர்களும் வாசம் செய்து வந்தார்கள். சாயங்கால வேளைகளில் பாரதியாரும் பொறுக்கி எடுத்த அவரது நண்பர்கள் சிலரும் சம்பாஷணைக்காக அரவிந்தரின் இடத்துக்குச் செல்வார்கள். அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்த தலைவர்களிடம் ஏகதேசம் எனக்குப் பழக்கம் உண்டு. சத்தியாக்கிரக இயக்கத்துக்குப்பின் தோன்றிய தலைவர்களிடமும் சிறிது அறிமுகமுண்டு. காந்திஜீயையும் தெரியும். ஆனால், சம்பாஷணையின் மாண்பிலும் இனிப்பிலும், அரவிந்தருக்கும் பாரதியாருக்கும் இணையாக யாரையுமே சொல்ல முடியாது என்பது என் கருத்து. ஒரு வேளை, காந்திஜியையும், கபர்தேயையும் விலக்காகச் சொல்லலாமோ என்னவோ? திலகரின் சம்பாஷணையில் பொருளும் சக்தியும் இருக்கும்; ஆனால், வழவழப்பும் இனிப்பும் உறாஸ்யமும் இரா. தோழரான கபர்தேயின் பேச்சில் வியக்கத்தக்க நகைச்சுவையும் சிங்காரமும் செழித்து இருக்கும். சுரேந்திரநாதரின் பேச்சே பிரசங்கம். விபினசந்திரபாலரின் பேச்சில் கசப்பும், சுளிப்பும் கலந்து நிற்கும்; ஆனால், சக்தியும் நவீனமுங்கூட இருக்கும். கோகலேயின் பேச்சு தங்கக் கம்பி இழை சன்னப் பேச்சு. பிரோஸ்தா மேத்தாவின் பேச்சு தடியடி முழக்கம். லஜபதிராய், அமெரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நிறைந்த பேச்சுப் பேசுவார். சரித்திர மேற்கோள் இல்லாமல் பேசவே மாட்டார். பாரதியார் – அரவிந்தர் சம்பாஷணையில் நவரசங்களும் ததும்பும், ஒழுகும். கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம், குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல், அபரிமிதமான இலக்கியச் சுவை, எல்லை இல்லாத உடல் பூரிப்பு எல்லாம் சம்பாஷணையினிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும். அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக்கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன். சம்பாஷணையில் சிற்சிலகட்டங்களும் குறிப்புகளுந்தான் இப்போது என் நினைவில் இருக்கின்றன. தினசரி டயரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை, அளவற்ற நஷ்டம். இப்போது என்ன செய்வது? புதுச்சேரித் தேசபக்தர்களுள் வ.வே.சு. அய்யரைப்போல நூல் பயிற்சி உள்ளவர்கள் யாருமே இல்லையெனச் சொல்லலாம். அபாரமாகப் படிப்பார். வீரர்களின் சரித்திரம், இலக்கியம், யுத்த சாஸ்திரப் புஸ்தகங்கள், பழைய தமிழ்க்காவியங்கள், பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் இவைகளை அய்யர் இடைவிடாது படித்துக்கொண்டிருப்பார். கஸ்ரத் செய்வதில் அய்யருக்குரொம்ப ஆவல். நீந்துவார்; ஓடுவார்; பாரதியாருக்கு இவைகளில் எல்லாம் நிரம்ப ஆசைதான். ஆனால், செய்வதேயில்லை. எல்லாவற்றையும் பக்கத்திலிருந்து கொண்டு, உற்சாகத்துடன் வேடிக்கை பார்ப்பார். அய்யர், கஸ்ரத் செய்யும்போது பாரதியார் பார்த்துக் கொண்டிருந்தால், அய்யர் எப்படி உடம்பை வளைக்கிறாரோ, அதைப்போல் பாரதியார் தன்னினைவு இல்லாமல் வளைப்பார். பாரதியாரின் உள்ளம் அவ்வளவு உற்சாகம் நிறைந்த உள்ளம்; மெழுகு உள்ளம்; யோசித்து ஈடுபடுகின்ற உள்ளமல்ல. நல்ல காரியங்களில் யோசனையின்றி அவரது உள்ளம் ஒட்டிக்கொள்ளும். இதற்குத்தான் கவிதை உணர்ச்சி என்று பெயர். இதுவே காதல் உள்ளமாகும். அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார் முதலியோர் அரவிந்தரின் வீட்டுக்குச் சென்று பேசத்தொடங்கினால், பொழுது போகிறதே தெரியாது, மாலை நான்கு மணிக்கு பேச ஆரம்பித்தால், இரவில் பத்து மணி வரைக்கும் வேறு எந்தச் சிந்தனையுமே இருக்காது. சாப்பாட்டைப்பற்றிக் கவலை எதற்கு? இந்தச் சம்பாஷணையின் அற்புதம் என்னவென்றால், அவர்கள் சந்நிதானத்தில் இருக்கும் வரையில், சாதாரணமாக முடியாதவை என்று தோன்றும் காரணங்களையெல்லாம் சுளுவாகச்செய்து முடித்துவிடலாம் என்று தோன்றும். காரியசித்திக்கு நடுவே கஷ்டம் இருப்பதாகவே தோன்றாது. மலையை நகரச் செய்யும் தன்னம்பிக்கை இவர்களிடம், இந்தக் கூட்டத்தில் இருந்தது என்று சொல்லலாம். லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் காரியத் திட்டத்தால், தந்தரமும் சரித்திரமும் பிறப்பதில்லை. ஆழத்திலிருக்கிற பொருளை எடுக்க வேண்டுமானால், தண்ணீரில் தலைகீழாகப் பாயத் தூண்டும் தன்னம்பிக்கைதான் தேவை. 9 பகுதி 10 பாரதியார் சுந்தர ரூபன், மாநிறம், ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம். அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு. அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப்பட்டதைப் போலிருக்கும். அந்த அழகிய நாசி, ஸீஸர், ராஜகோபாலச்சாரியாருடையவை போல, கருட மூக்கல்ல ஸீஸர் மூக்கு நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி, கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும். பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போலிருக்கும். நீண்ட நாசி, அந்த நீளத்தில் அவலட்சணம் துளிகூட இருக்காது. பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜுவலிப்பன போலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது. அவருடைய நெற்றி, பரந்த நெற்றி. நெற்றியின் இரண்டு கங்குகளிலும், நிலத்தைக் குடைந்துகொண்டு போயிருக்கும் கடலைப் போல, முகம் தலைமயிரைத் தள்ளி குடைந்துகொண்டு போயிருக்கும். கங்குகளின் மத்தியில், முகத்தின் நடு உச்சியில், மயிர் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும். நெற்றியிலே இந்தச் சேர்மானம் அவருக்கு வர்ணிக்க முடியாத அழகைக் கொடுத்தது. பேர் பாதிக்கும் அதிகமாக அவர் தலை வழுக்கை. இந்த வழுக்கையை மறைத்து மூடுவதற்காக, கங்குக் கேசத்தை இரண்டு பக்கங்களிலுமிருந்து உச்சந்தலைக்குக் கொண்டுபோய் அதைப் படியச் செய்யும் பாரதியாரின் கவலை நிரம்பிய முயற்சி, சிறு பிள்ளைகளுக்குச் சிரிப்பை உண்டாக்கலாம். தலைமயிரைச் சிங்காரிப்பதில், அவர் அரை மணி நேரத்தக்குமேல் செலவழிப்பார். நாளுக்கு ஒரு மாதிரியாக அணிவகுப்பு. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்ஸர் மீசையல்ல; கத்தரிக்கோல் பட்ட ’தருக்கு’ மீசையல்ல. தானாக வளர்ந்து பக்குவப்பட்டு, அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை எழுதாத நேரங்களிலெல்லாம் அனேகமாய் மீசையிலிருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு ’டிரில்‘ பழக்கிக் கொடுப்பது போலத் தோன்றும். சில சமயங்களில் தாடி வைத்துக்கொண்டிருந்தார். அனால், அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி மீசை மட்டுந்தானிருந்தது. ஒரே ஒரு சமையந்தான் மீசை இல்லாமலிருந்தார் என்பது என் நினைவு. அவருடைய நடுநெற்றியில் சந்திர வட்டத்தைப் போலக் குங்குமப்பொட்டு எப்போழுதும் இருக்கும். குங்குமப்பொட்டு இருப்பதில் அவருக்கு ரொம்பக் கவனம். இடுப்பிலே, ’தட்டுச் சுற்று’ வேஷ்டி. சாதாரணமாய்ச் சொல்லப்படும் ’சோமன் கட்டு’ அவர் கட்டிக்கொள்வதில்லை, சில சமயங்களில் ’சோமன் கட்டு’ கட்டிக்கொண்டிருந்து, அலுத்துப் போய், அதை விட்டு விட்டார். உடம்பிலே எப்பொழுதும் ஒரு பனியன் சட்டை இருக்கும். வேஷ்டிகளையோ, சட்டைகளையோ, அவர் சலவைக்குப்போட்டு நான் பார்த்ததில்லை. யாராவது ஒரு பக்தனோ, வீட்டு வேலைக்காரியோ துவைத்துக்காய வைத்திருப்பார்கள். பனியனுக்குமேல் ஒரு ஷர்ட்டு. அது கிழிந்திருக்கலாம். அனேகமாய்ப் பித்தான் இருக்காது. இதற்குமேல் ஒரு கோட்டு. அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார். ஷர்ட்டின் இடப்பக்கப் பித்தான் துவாரத்தில் ஏதாவது ஒரு புதிய மலர் செருகி வைத்துக்கொள்வார். ரோஜா, மல்லிகைக் கொத்து முதலிய மணங்கமழும் பூக்கள் அகப்பட்டால் நல்லதுதான். இல்லாவிட்டால் வாசனையில்லாத புதுப்பூ எது அகப்பட்டாலும் போதும். வேப்பம்பூவாயிருந்தாலும் பரவாயில்லை. ’நாள் மலர்’ ஒன்று அந்தப் பித்தான் துவாரத்தில் கட்டாயமாக இருந்துதான் ஆக வேண்டும். இடக்கையில் ஒரு நோட்டுப் புஸ்தகம், சில காகிதங்கள், ஒரு புஸ்தகம் – இவை கண்டிப்பாய் இருக்கும். கோட்டுப்பையில் ஒரு பெருமாள் செட்டி பென்சில் இருக்கும். பவுண்டன் பேனா அவரிடம் தரிப்பதில்லையோ என்னவோ, பவுண்டன் பேனாவிவினால் அவர் எழுதி, நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் பென்ஸில் எழுத்துதான். எழுத்து குண்டுகுண்டாயிருக்கும். ஓர் எழுத்தின் பேரில் இன்னொரு எழுத்து படாது; உராயவும் உராயாது. க-வுக்கும் ச-வுக்கும் வித்தியாசமில்லாமல் நம்மில் பலர் எழுதுகிறார்களே, அத்தகை அலட்சியப் புத்தியைப் பாரதியார் எழுத்தில் காண முடியாது. ஒற்று எழுத்துக்களுக்குமேல், நேர்த்தியான சந்தனப் பொட்டைப் போல, புள்ளி வைப்பார். அவர் எழுத்தை அட்சராப்பியாஸம் ஆரம்பிக்கும் குழந்தைககள் கூடப் படிக்கலாம். ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் இடையே தாராளமாக இடம் விட்டு எழுதுவார். காகிதத்தின் இரண்டு கங்குகளிலும் போதிய இடம் விட்டுவிடுவார். உடை விஷயத்தில் ஒன்று பாக்கி. வடநாட்டு சீக்கியர்களைப் போல முண்டாசு கட்டிக்கொள்வதில் அவருக்கு ஆசை அதிகம். அந்தத் தலைபாகையுடன்அவர் ஹிநதுஸ்தானி பேசினால், அவரைத் தமிழன் என்று யாருமே சொல்ல முடியாது. அவ்வளவு தெளிவான உச்சரிப்பு. பாரதியாரின் வெளிப் புறப்பாட்டுக்கு இத்தனை அங்கங்களும் தேவை. இவ்வளவோடு சேர்ந்த குதுஹலமான குமரிச் சிரிப்பு. சங்கீத வித்வான்கள் ரவை புரட்டுவது போல, பாரதியாரின் சிரிப்பில் அபரிமிதமாக ரவை புரளும். பாரதியார் இடக்காலைக் கூசாமல் தரையில் வைக்க மாட்டார். இடக்கால் பாதத்தில் அவருக்கு முக்கால் பைசா அகலத்தில் ஆணி விழுந்திருந்தது. சில சமயங்களில் கவனக்குறைவால் அவர் இடக்கால் கல்லிலோ வேறு கடினமான பொருளிலே பட்டுவிட்டால், அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்துவிடுவார். பாரதியார் கனிந்து நடந்ததே கிடையாது. ” கூனாதே கூனாதே” என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார். கொஞ்சங்கூடச் சதையே இல்லாத மார்பை, பட்டாளத்துச் சிப்பாய் போல முன்னே தள்ளித் தலைநிமிர்ந்து, பாடிக்கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரெம்பப் பிரியம். ”லா மார்ஸேய்ஸ், லா ஸாம்பர் தே மியூஸ்” என்ற பிரெஞ்சுப் படைபெயர் பாட்டுகளைப் பாடிக் கொண்டு, அவைகளின் தாளத்திற்கேற்ப நடப்பதில் பாரதியாருக்கு பிரம்மானந்தம். இந்தப் பாட்டுகளின் மெட்டுகளைத் தழுவித் தமிழில் பல பாட்டுகள் பாட வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருப்பார். இரண்டொரு பாட்டுகள் பாடியுமிருக்கிறார். பாரதியார் இருக்கிற இடத்தில் கூட்டத்திற்கு ஒரு நாளும் குறையிருக்காது. கந்துவட்டிக்கடையில்கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. குறைந்தது நாலைந்து பேர்களாவது இருப்பார்கள். வெளியே புறப்பட்டால் இரண்டொருவரேயினும் அவரைப் பின்தொடர்ந்து செல்லாமலிருப்பதில்லை. கூடவே ஆனால், எட்டத்திலேயே போய்க்கொண்டிருக்கும் ரகசியப் போலீசாரைப்பற்றிக் குறிப்பிடத்தேவையா? புதுச்சேரி வீதியில் பரதியார் நடக்கும்பொழுது, திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் வேகமாய் எழுந்து நிற்பார்கள்; கும்பிடு போடுவார்கள். நின்று பதில் கும்பிடு போட்டுவிட்டு, சிறிதளவு ஷேம சமாசாரம் விசாரித்த பின்னர்தான், அந்த இடத்தைவிட்டுப் பாதியார் நகர்வார். புதுச்சேரிக்குப் போயிருக்கிறவர்களுக்குப் ’புஷ்’ வண்டியைப்பற்றித் தெரிந்திருக்கும். அது ’ரிக்ஷா’ வண்டியல்ல. சில புஷ் வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள் இருக்கும்; சிலவற்றிற்கு மூன்று சக்கரங்களே இருக்கும். அதாவது, வண்டியின் முன் புறத்தில் ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரம் இருக்கும். வண்டியைப் பின்னே இருந்து ஆள் தள்ளுவான். புதுச்சேரியில் புஷ் வண்டியைத் தள்ளுபவர்கள் பெரும்பாலும் ஹரிஜனங்கள் – ஆண்பிள்ளை ஹரிஜனங்கள். பாரதியார் வெளியே புறப்பட்டுவிட்டால், இந்தப் புஷ் வண்டிக்காரர்களுக்கு ஆனந்தம். பாரதியாருக்கு முன்னே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள் பாரதியாரை நடக்கவும் விடமாட்டார்கள்; போய்ச் சேர கூலி பேசவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்; வேண்டிய இடத்துக்குப் போனதும், பாரதியார் வாடகைப் பணம் கொடுப்பார். வாங்க மாட்டார்கள். ” என்னாத்துக்குங்க எனக்குக் காசு” என்பான். ” ரூபாய் வேனுமோ?” என்று சொல்லிப் பாரதியார் சிரிப்பார். ”எதுக்குங்க ரூபாய் ?” என்பான். புஷ் வண்டிக்காரனுடைய நேளிவு பாரதியாருக்குத் தெரியும். சிறிது நேரம் சம்பாஷணைச் சல்லாபம் செய்வார்; துணி வேண்டும் என்று அவன் வாயால் வரும்படியாகச் செய்வார். தாம் மேலே போட்டுக்கொண்டிருப்பது பட்டாயிரந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாயிருந்தாலும் சரி, சரிகைத் துப்பட்டாவாயிருந்தாலும் சரி, அது அன்றைக்குப் புஷ் வண்டிகாரனுக்குப் ’பிராப்தி’. பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு கூர்ந்து யாரேனும் நண்பர் அவருக்குப் புதிய அங்கவஸ்திரம் கொடுத்தால், அதற்கும் மேற்சொன்ன கதி நேர்ந்தாலும் நேரும். புதுச்சேரி புஷ் வண்டிக்காரர்கள், அதிலும் பாரதியார் குடியிருந்த வட்டாரத்திலிருந்த புஷ் வண்டிக்காரர்கள், கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாரதியாருக்குத் துணிப்பஞ்சம், சட்டைப்பஞ்சம் ஏற்படலாம்; அவர்களுக்கு ஏற்படாது. ஏழைகள், ஹரிஜனங்கள் என்ற காரணத்தினால் அவர்களிடம் பாரதியாருக்கு அளவு கடந்த அன்பு. வீதியில் நடந்துகொண்டே இருக்கும்போது பாரதியாரின் மனம் அருமையான விஷயங்களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். திடீர் திடீரென்று நெருப்புப் பொறி பறப்பது போல் அவரது மூளையிலிருந்து அற்புதமான கருத்துகள் தெரித்து வரும். ஒரு சமயம், அவரும் நானும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க்கெண்டிருந்தோம். வழியிலே பிரெஞ்சு இலக்கியத்தின் பெருமையையும் விக்டர் ஹியூகோ அவர்களின் மேதையைப் பற்றியும் வெகு நேர்த்தியாக, எனக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார். திடிரென்று திண்ணையிலிருந்து ஒரு பையன் ’இளமையில் கல்’ என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார், ’முதுமையில் மண்’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. மேதையென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டுமென்று எண்ணித் திகைத்துப் போனேன். பாரதியார் சொல்லுகிறார்: ”ஓய்! உமக்குத் தர்க்க சாஸ்திரப் பயிற்சி இல்லைபோலிருக்கிறது! இளமையிலே கல்லாயிருப்பவன் முதுமையில் கவனிப்பாரற்ற மண்ணாவது நிச்சயம். இதைப்பற்றி நீர் ஏன் அதிசயப்படுகிறீர் ? இரண்டாயிரம் வருஷங்களாக, நமது மூதாதைகள் இளமையில் கல்லாகவும் முதுமையில் மண்ணாகவும் இருந்திருந்து போய்விட்டார்கள், நம் காலத்திலே நமக்கு எதை எடுத்தாலும் திகைப்பும் திண்டாட்டமுமாக இருக்கிறது. இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன நமது குழந்தைகள் ஜுவலிக்க வேண்டும், அப்படி ஜுவலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள். பின் சந்ததியார்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால், நாம் இப்பொழுது பழி சுமத்துவது போல, நம்மை நம் பின்சந்ததியார்கள் தூற்றுவார்கள். 10 பகுதி 11 துத்துக்குடியில் சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று (1906 இல் என்று என் நினைவு) ஏற்பட்டது. அந்தக் கம் பனிக்கு உயிர்நாடி, தேசபக்த ஜாம்பவான் ஸ்ரீ வ.உ. சிதம்பரம் பிள்ளை. அந்தக் கம்பெனி பி.ஐ.எஸ்.என். என்ற இங்கிலஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக நிறுவப்பட்டது என்பது கொள்ளைக்கார வியாபார கோஷ்டியாரின் எண்ணம். பி.ஐ.எஸ்.என். கப்பல் கம்பெனிக்கு கப்பல் கட்டணத்தை எவ்வளவோ குறைத்துப் பார்த்தும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் வெள்ளைக்காரக் கப்பலில் ஏறுவதுமில்லை. சாமான் அனுப்புவதுமில்லை. இந்தச் செய்தியை விஸ்தாரமாக வர்ணித்துப் பேசுவதில் பாரதியாருக்கு மிகுந்த உற்சாகம். ”நம்ம ஜனங்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு யாதொரு குறையும் ஏற்படாது” என்று ரிஷிகள் வரங்கொடுப்பதைப் போலப் பேசுவார். பின்னர், சிதம்பரம் பிள்ளை சிறை சென்றதும், கம்பெனி நிர்வாகம் ஊழல் நிறைந்து உடைந்து போனதும், திருநெல்வேலி கலகக் கேஸ் நடந்ததும் பழங்கதை. கடைசியாகச் சுதேசிக்கப்பல் கம்பெனிக்கு மிகுந்து இருந்தது ’கோயாலண்டே’ என்னும் கப்பல் ஒன்றுதான்; இதை யாரிடம் விற்பது, எப்படி விற்பது?’ என்ற நிலைமைக்கு வந்துவிட்டது கம்பெனியின் நிர்வாகம். பிரெஞ்சு இந்தியாவில் ஒரு ஸ்தலமாகிய சந்திர நாகூர் என்னும் பட்டினத்தில் (இது கல்கத்தாவுக்கு மேற்கில் இருக்கிறது.) வசித்து வந்த புதுச்சேரி சட்டசபை மெம்பரான வங்காளி ஒருவரின் மூலமாய், இந்தக்கப்பலை விற்பதற்குப் பேரம் நடந்தது. இது 1913 இல் என்று நினைக்கிறேன். எந்த செள்ளைக்காரக் கம்பெனி, சுதேசிக் கப்பல் கம்பெனியின் சீர்குலைவுக்கு முக்கிய காரமாணமாயிருந்ததோ, அதே பி.ஐ.எஸ்.என். கம்பெனியிடம் சுதேசிக்கப்பலை விற்கும்படி நேர்ந்ததது. இதைப்பற்றிப் பேசும் பொழுது பாரதியாருக்கு ஆத்திரமும் துக்கமும் அடைத்துக்கொள்ளும். ”ஏதோ ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு விற்று, இந்தத் தேசத்தின் நஷ்டத்தைப் போக்க இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ? மானங்கெட்டவர்கள்! கப்பலைச் சுக்குச் சுக்காய் உடைத்துக் கடலில் மிதக்க விடுகிறதுதானே! இந்தத் தேசம் தாங்கும். மானம் பெரிது, மானம் பெரிது ” என்று உள்ளம் பொங்கித் துடிப்பார் பாரதியார், ” நடிப்புச் சுதேசிகள் ’ என்று பாதியார் பாடியிருக்கும் பாட்டுகளில் மானம் மானம் என்று அதையொன்றையே அவர் அழுத்திக் கூறியிருக்கிறார். மனிதனுக்கு உயிரைக்காட்டிலும் மானம் பெரிது என்று இடித்திடித்துச் சொல்லுவதில் பாதிரயாருக்கு அலுப்புத்தட்டுவதேயில்லை. ”மானமில்லாதவனுக்கு மரியாதை தெரியாது. அவன் ஒருநாளும் வளர மாட்டான் ” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். இடையே, நீலகண்ட பிரம்மசாரி என்பவர் புதுச்சேரிக்கு வந்தார். இவர் பாரதியாருக்கு எப்படிப் பழக்கமானார் என்பது எனக்குத் தெரியாது. பின்னர், திருநெல்வேலி சதியாலோசனை வழக்கில் இவர் முக்கிய எதிரியாயிருந்ததைச் சர்க்கார் தஸ்தாவேஜில் காணலாம். இந்த நீலகண்டர் – இவருக்குக் கண்டம் மட்டும் கறுப்பல்ல; உடம்பு முழுவதுமே அட்டைக் கரி – புதுச்சேரியில் ’சூர்யோதயம்’ என்ற பத்திரிகையை நடத்தினார். இந்தப் பத்திரிகைக்குப் பாரதியார் கட்டுரை தந்து உதவி செய்து வந்தார். நாங்கள் ( பக்தர்களும் நண்பர்களும் கூடி ) ஒரு நாள் பாதியாரோடு வாதாடினோம். ” நீங்கள் ஏன் உங்கள் பழைய ’சுதேசமித்திரன்’ பத்திரிக்கைக்கு எழுதப்படாது? ” என்று கேட்டோம். ”எழுதலாம்” என்றார். ”எழுதுகிறததானே ?” என்றோம். எழுத முடியாது என்று முடித்துவிடுவதைப் போலக் கண்டிப்பாய்ப் பேசினார். பாரதியாரிடம் எங்களுக்கு அன்பு பாத்தியம், பக்தி பாத்தியம் ஏராளமாய் உண்டு. அவர் சொன்ன ஜவாப்பு எங்களுக்குத் திருப்தி உண்டாக்கவில்லை. மறுபடியும் கிளறிக் கேட்டோம். ”பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா ?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார். ”ஆமாம்” என்று சொல்லி, நாங்கள் இன்னும் அழுத்தமாக வாயை மூடிக்கொண்டோம். ”நீங்கள் பச்சைக் குழந்தைகள்; உங்களுக்குச் சங்கதி தெரியாது; ’சுதேசமித்திரன்’ பழைய காலத்துப் பத்திரிக்கை பாரதி எழுத்தைப் பிரசுரித்து, அது தன்கௌரவப் பெயரைக் கெடுத்துக்கொள்ளுமா?” என்று சொல்லி சிரித்தார். இநத்க் கேலி சமாதானத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அடுத்தகேள்விக்கு இடம் வைத்துக்கொள்ளாமல் பாரதியார் சொன்னார்: ” எனக்கும் ’சுதேசமித்திர’ னுக்கும் கொள்கையில் வேறுபாடு, என் எழுத்தை உங்கள் பத்திரிகையில் போடுங்கள் என்று நான் அவர்களிடம் சொல்லுவது நியாயமாகுமா? மேலும், இப்பொழதோ தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ’ நித்திய கண்டம்.’ என் ஓர் எழுத்தின் மூலமாய்ச் சுதேசமித்திரனுக்கு ஆபத்து வந்தால் என்ன செய்கிறது? நான் எங்கெங்கே எழுதுகிறேனோ அதையெல்லாம் சர்க்கார் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ’சுதேசமித்திரன்’ பேரில் அவர்கள் ’லபக்’ கென்று பாய்ந்தாலும் பாய்வார்கள். இப்பொழுது ஒழுங்காக நடக்கிற பத்திரிகை ’சுதேசமித்திரன்’ ஒன்றுதான். என்னால் அதற்கு ஏன் ஆபத்து வர வேண்டும்?” எங்களில் ஒருவருக்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தி; ”அவர்கள் உங்களை எழுதும்படி கேட்டார்களா ?” என்றார் அவர். கேட்காதவற்றைச் ’சுதேசமித்திரன்’ நிர்வாகிகளின்பேரில் போட்டாலொழிய, அந்த நண்பருக்கு மனச்சமாதானம் உண்டாகாது போலத்தோன்றிற்று. பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார்; யாரையும் கண்டிப்பார். ஆனால், எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதுறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிகூடக் கிடையாது. ’சுதேசமித்திரன்’ ஆபிசிலிருந்து எனக்கு ஏன் எழுத வேண்டும்? நீங்கள் அவர்கள்பேரில் வீண் பழி சுமத்தப் பார்ப்பது தவறு. பாரதி உங்களுக்குப் பெரியவன். அவர்களுக்கும் பெரியவனாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? உலகமறியாத பச்சைக் குழந்தைகள் ” என்று முடித்தார். இந்தப் பதில் எங்களுக்கு ஒருவாறுதான் சமாதானத்தைத் தந்தது, பாதியார் ’சுதேசமித்திரன்’ நிர்வாகிகளை ஆதரித்துப் பேசினாலும் அவருக்கிருந்த மனக்குறையை அந்தப் பேச்சு ஒருவாறு வெளிக்காண்பித்துவிட்டது. எங்களுக்கோ ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. ஆனால் என்ன செய்கிறது? 1910 – 1911 ஆம் வருஷங்களில், பாரதியாரின் பெயரும் கீர்த்தியும் நாடு முழுவதும் பரவவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவர் என்று மட்டும் தெரியும். இலக்கியத்தையும் அரசியல் போராட்டத்தையும் பிரித்துப் பார்த்து, பாரதியாரின் இலக்கியமேதையை, கல்வித்திறனை அளந்து பார்க்க அப்பொழுது முடியாமற்போனால், அதைப்பற்றி இப்பொழுது யாரும் நிஷ்டூரம் பேசலாகாது. ரொமென் ரோலண்டு என்ற பிரெஞ்சு ஆசிரியரின் மேதையை உலகம் ஒப்புக்கொள்ளச் சுமார் நாற்பது வருஷங்கள் செல்லவேண்டியிருந்தது. 1905 – 1910 இந்த வருஷங்களுக்குள் பாரதியாரின் மேதையைத் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்ளாதது பெருந்தவறாகாது. முன்னொரு காலத்தில், சென்னையில், ’ஸ்டாண்டர்ட்’ என்ற ஆங்கிலத் தினசரி ஒன்று நடந்து வந்தது. அதற்கு ராமசேஷய்யர் என்பவர் அதிபர். இந்தபப் பத்திரிகையைத்தான், பின்னர் ’நியு இந்தியா’ என்ற பெயருடன் ஸ்ரீ அன்னிபெஸண்டு நடத்தி வந்தார். ’ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையில் பாரதியாருக்கும் கும்பகோணம் புரரொபஸர் சுந்தரராமய்யர் அவர்களுக்கும் அத்வைதத் தத்துவ தரிசனத்தைப்பற்றிச் சுமார் நான்கு மாத காலம் வரையில் வாதம் நடந்து வந்தது. இந்த வாதத்தில் ஒரு ஸ்வாரஸ்யம். தத்துவத்தின் வியாக்கியானத்தில் இரண்டு பேருக்கும் அபிப்பிராய பேதம் வந்துவிட்டது. சுந்தரராமய்யருக்குச் சாஸ்திர ஆராய்ச்சிப் பழக்கம் நிரம்பவும் உண்டு. பாரதியாருக்கு அவ்வளவு பழக்கமில்லை. இவர்களுடைய வாதம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவனிக்க இந்தக் கட்டுரைகள் வரும் பத்திரிகையை எதிர்பர்த்த வண்ணமாய், நாங்கள் துடிதுடித்துக்கொண்டிருப்போம். சுந்தரராமய்யருக்குப் பக்க பலம் அவருடைய நூல் பயிற்சி. பாரதியாருக்குப் பக்க பலம் அவருடைய நுண்ணிய அறிவும் மேதையும் ஆவேசமுமாகும். இரண்டு மத்தகஜங்கள் மோதிக்கொண்டால் அது எப்படி இருக்கும்? வீரனுடைய தன்மையை இன்னொரு வீரன்தான் அறிய முடியும்; சுந்தரராமய்யர் படித்த புலவர்; பாரதியாரோ மேதாவி. ஆச்சாரிய சங்கரருடைய தத்துவம் எளிதிலே பாரதியாருக்குப் பிடிபட்டுப் போய்விட்டது. எவனும் ஈசுவரத்தன்மையை அடையலாம் என்பது பாரதியாருடைய கட்சி. எல்லாம் ஈசன் என்பது அய்யருடைய வாதம். பார்வைக்கு இரண்டும் ஒன்று போலத்தோன்றும். எல்லாம் ஈசன் என்பது காகிதத் தத்துவம் என்பார் பாரதியார். மனிதன் ஈசுவரத் தன்மையை அடைவதாவது என்று அய்யர் ஏளனம் செய்வார். எங்களுக்குப் பாரதியாரிடம் அளவு கடந்த பிரேமை. எனவே, அவர் சொல்லுவதுதான் சரி என்பது எங்களுடைய எண்ணம். இரண்டு பேருடைய ஆராய்ச்சி வாதங்களையும் சீர்துக்கிப் பார்த்து, முடிவுக்கு வரவேண்டிய தேவையே எங்களுக்குக் கிடையாது, ஆனால், தெளிந்த தெரிந்த இடத்தில் இதைப் பற்றிப் பேச்சு வந்தபொழுது, நாங்கள் நினைத்தது சரியென்ற முடிவுக்கு வந்தோம். அதாவது, இதைப்பற்றி அரவிந்தரின் பங்களாவில் சம்பாஷணை பிறக்கும். சுந்தரராமைய்யருக்கு உண்மையில் அனுபூதி கிடையாத என்று அரவிந்தர் சொல்லுவார். ’ தத்துவத்தைத் தர்க்கத்தால் காண முடியாது. அதை அனுபவிக்க வேண்டும்’ என்பார் அரவிந்தர். பெரும்பாலும் நூல் பயிற்சியுள்ள பண்டிதர்களுக்குத் தத்துவ அனுபவம் இருப்பதில்லை. அவர்கள் தர்க்க ஆராய்ச்சி கஜக்கோலால், மகத்தான உண்மைகளை அளக்கப் பார்க்கிறார்கள். மிதவாத கோகலேக்கும், லோகமான்ய திலகருக்கும் வித்தியாசம் என்ன? சரித்திரத்தில், பொருளாதாரத்துறையில், இலக்கியத்தில், பேச்சில், கோகலே இணையற்றவர், ஆனால், லோகமான்ய திலகர்தானே, தேசத்தாரின் உணர்ச்சியையும் சக்தியையும் ஒன்றுகூடச் செய்தார்? விமர்சனத்தில் கைதேர்ந்தவன், நூல் எழுதவேண்டுமென்பதுண்டா? கோகலே இயற்கையின் பணியாள் திலகர் இயற்கையின் புதல்வன், ஈசனுடைய தன்மை நந்தனாருக்குத் தெரியும். நந்தனாரின் ஆண்டைக்குத் தெரியுமோ? நந்தனாரின் ஆண்டை, எத்னையோ வண்டி சாஸ்திரங்களை ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்திருக்கிறார். என்றாலும், கடைசியில் ஆண்டை நந்தானாரை அடிபணிய வேண்டியிருந்தது. தமிழ்நாடடுக் கணித சாஸ்திரி மேதாவி ராமானுஜம் யாரிடம் கணித சாஸ்திர சிட்சை பெற்றார்? ஆக்ஸ்போர்ட சர்வகலாசாலை நிபுணர் ஹார்டி அவர்களுக்கு ராமானுஜம் கணக்குப் போட்ட வழி புலப்படுவதற்கே நீண்ட காலமாயிற்று. குழந்தைக்குப் பாலிருக்கிற இடம் தெரியும். மற்றவர்களுக்குப் பாலே தேவையில்லை பாலைப்பற்றித் தர்க்கவாதந்தான் தேவை. சுந்தரராமய்யர் பாரதியாரின் ஆங்கிலப் புலமையைப் போற்றினாரேயொழிய, பாரதியாரின் வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதே சுந்தரராமய்யர், அரவிந்தர் எழுதிய ’ கீதை கட்டுரைகளை’ அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார், வாதமும் கண்டனமும் புலவர்களின் பொழுதுபோக்கு. உண்மையை நாடுவதும் அதற்காக உயிரை விடுவதும் மேதாவிகளின் கடமை. 11 பகுதி 12 புதுச்சேரிக்கு ஒரு மைல் வடக்கே முத்தியாலுப்பேட்டை என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிருஷ்ணசாமி செட்டியார் என்று ஓர் இளைஞர் இருந்தார். அவருக்குத்தான் வெல்லச்சுச் செட்டியார் என்ற அருமையான செல்லப் பெயரைப் பாரதியார் கொடுத்தது. கிருஷ்ணசாமி செட்டியார் ரொம்பக் ‘குள்ளை’ நல்ல கெட்டியான, இரட்டை நாடி உடம்பு. அவரிடம் உடலிலோ மனத்திலோ சோர்வை ஒரு நாளும் பார்த்ததில்லை. அவருக்குச் செல்லப் பெயர் அமைந்தது, அவருடைய உடல் உறுதியின் காரணத்தினால். இந்த செட்டியருக்குத் தொழில், நெசவு. கொஞ்சம் பூஸ்தியும் பணமும் உண்டு. துணி வியாபாரமும் நடந்துகொண்டு வந்தது. அவர் அடிக்கடி பாரதியாரின் வீட்டுக்கு வந்துவிடுவார். எத்தனை நாழிகை வேண்டுமானாலும் மௌனமாய் உட்கார்ந்திருப்பார். முதலில் பாரதியாரை, ’ஸ்வாமி’ என்று கும்பிடுவதோடு சரி. பாரதியாருக்கு அவரிடம் நிரம்பப் பிரியம். அவரிடம் தாம் பாடிய பாடல்களைப் பாடிக் காண்பிப்பதில் பாரதியாருக்கு நிரம்பத் திருப்தி. செட்டியாரின் முகத்தைப் பார்த்தால், அவர் ஓர் இலக்கிய ரஸிகரென்று தோன்றாது. அவருக்கு அப்பொழுது (1910 – 1911) வயது சுமார் இருபது இருக்கலாம். ” இவரிடம் பாரதியார் வீணாக வாசித்துக் காண்பிக்கிறாரே! ” என்று எங்களில் சிலர் எண்ணியதுண்டு. ஆனால், சிரிக்க வேண்டிய பகுதியில், எங்களுக்கு முன்னமே ’களுக்’ கென்று சிரித்துவிடுவார். சோக ரஸக் கட்டம் வ்ந்தால், செட்டியாரின் முகத்தைக் கண் கொண்டு பார்க்கமுடியாது. முகத்தில் உருக்கம் தாண்டவமாடும். பார்வையிலே நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதற்கு, கிருஷ்ணசாமி செட்டியாரை ஒர் உதாரணமாகப் பாதியார் அடிக்கடி சொல்லுவார். ”எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, யார் கண்டார்?” என்று பேச்சை முடித்துவிடுவார் பாரதியார். இம்மாதிரி சமயங்களில், பாரதியார் சில கதைகள் சொல்லுவார். அது பழைய கதைதான். நண்பர் செட்டியாருக்கு அதைப் பாரதியார் பிரயோகம் செய்ததால், அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இரண்டு பேர், காட்டுப்பாதையாகப் போய்க் கொண்டிருந்தார்களாம். ஒருவர் குடியானவர். மற்றவர் செட்டியார். காட்டுப்பாதையில் திருடர் பயம் ஜாஸ்தி இருட்டுக்கு முன் காட்டைக் கடந்துவிடலாம் என்று இருவரும் பயணம் புறப்பட்டார்கள். ஏதோ அவகேட்டால், இருட்டிப் போனபிறகுதான் அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள். இந்தக் கட்டத்தில், ” ஏன் செட்டியாரே! கதை சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தச் சமயம் திருடர்கள் வரலாமா, அல்லது கொஞ்ச தூரம் வழி நடந்து, சிறிது நேரம் ஆன பிறகு வரலாமா?” என்று பாரதியார் கேட்பார். ”எந்தச் சமயத்தில் வந்தாலென்ன? நான் பாரதியாரோடு வழிப்பிரயாணம் செய்கிற செட்டி எனக்கு என்ன பயம், என்ன அவமானம் ?” என்பார் செட்டியார். அச்சா அப்படிச் சொல்லப்பா, தங்கமே!” என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பார். நாங்கள் மட்டும் சிரிக்காமல் இருப்போமா? திருடர்கள் குடியானவனை நையப் புடைத்து, அவனிடமிருந்ததைப் பிடுங்கிக் கொண்டனர். செட்டியார் (கதைச் செட்டியார் தான்) பார்த்தார்; பேச்சு மூச்சு இல்லாது படுத்துக்கொண்டார். திருடர்கள் செட்டியாரைக் கோலால் தட்டிப்பார்த்து, ’ கட்டைக் கிடக்கிறது’ என்றார்கள். ” உங்கள் வீட்டுக் கட்டை பத்து ரூபாய்ப் பணத்தை மடியில் கட்டிக் கொண்டிருக்குமோ?” என்றார் செட்டியார். ” என்ன செட்டியாரே, சரிதானே கதை?” என்றார் பாரதியார். ” கதை எப்படி இருந்தாலும், அது இப்பொழுதுதான் முடிந்தது ” என்று மடியிலிருந்து பத்து ரூபாய்நோட்டை எடுத்துப் பாரதியாரிடம் கொடுப்பார் செட்டியார். ” கதையில் திருடர்கள்; நான் பகல் கொள்ளைக்காரன்” என்று சொல்லி, பாரதியார் கடகடவென்று சிரிப்பார். பாரதியார் சிரித்துகொண்டு இருப்பதை பார்ப்பதில் செட்டியாருக்குப் பிரமானந்தம். கண்கொட்ட மாட்டார். பாரதியாரின் முகத்தை அப்படியே அள்ளி விழுங்கி விடுவதை போல லயித்து போயிருப்பார். அத்தகையச் செட்டியாரிடம் தவிர, வேறு யாரிடமும் அவ்வளவாக நான் பார்த்ததில்லை. என்ன ஆச்சரியம்! செட்டியாரைப் பார்த்தால் ஒன்றுமே தெரியாத, ஒன்றுமே விளங்காத அப்பாவியைப்போல இருப்பார். ஆனால், அவர் செய்கிற காரியமும், அபாரமாய் இருக்கும். பாரதியார் சொல்லிய கதையை, செட்டியார் எவ்வளவு நேர்த்தியான நகைச்சுவையுடன் முடித்தார் ! விளையாட்டுக்காக அவர் பாரதியாரிடம் அந்த ரூபாய்களைக் கொடுக்கவில்லை, பாரதியாரின் நிலைமையை அறிந்தே கொடுத்தார். பணங் கொடுக்கிற சங்கதியில், பாரதியாரோடு நிரம்ப ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவருடைய கையில் பணம் இருக்காது என்பது உண்மை. ஆனால், பிச்சைக்காரனுக்குப் பிச்சைப் போடுவதைப் போல நினைத்துக்கொண்டு எவரேனும் உதவி செய்ய முன்வந்தால், அவர்கள் பாரதியாரிடம் அவமானம் பட்டுப் போவார்கள், ” மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ! ” இந்த மாதிரிப் பாரதியார்ப் பாப்பாப் பாட்டில் பாடியிருப்பது உங்களுக்கு நினைவு இருக்கலாம். பாரதியாருக்குப் பிச்சைப் போடுவதாக எண்ணிக்கொடு ஆடம்பரத்துடன் உதவி செய்பவர்களுக்கு, மேற்சொன்ன பாட்டில் உள்ள இரண்டு தண்டையும் நிச்சயமாகக் கிடைக்கும். அந்தச் சமயங்களில் பாரதியாரின் ரௌத்திரம் பொங்கி எழும். முகத்தைப் பார்க்கவே முடியாது. கண்கள் தீப்பொறிகளைக் கக்குவன போல இருக்கும். மீசை துடிதுடிக்கும். ” மடயன்! நான் ஏழையோ! அவன் சத்திரம் கட்டி வைத்திருக்கும் சீமானோ?” என்று ஆத்திரத்தோடு பேசுவார். பாரதியாருக்கு யாரும் பிச்சைப் போடமுடியாது. பயப்பக்தி விசுவாசத்துடன் கப்பம் வேண்டுமானால் கட்டலாம். அவர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா? அவர் குடைக் கீழ் வாழும் மாந்தர்களும் மனன்னர்களும் கிஸ்தி செலுத்தலாம் அல்லது கப்பங்கட்டலாம். காலணா கேட்கும் கடைத்தெருப் பிச்சைக்காரனா அவர்? இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இங்கிலீஷ் ஆசிரியர்களுக்குள், ஸாமுவேல் ஜான்ஸன் என்று ஒருவர் இருந்தார். அவர் மேன்மை வாய்ந்த குணசீலர்; மகத்தான தயை உள்ளவர்; மேதாவி. ஆனால் நித்திய தரித்திரர். அவருடைய தரித்திரத்தின் கொடுமையை ஓர் அன்பரால் தாங்க முடியவில்லை. ஜான்ஸனுடைய பாதரட்சைகள், அடி அட்டை தேய்ந்து நாலாப் பக்கங்களிலும் பிய்ந்து கிழிந்து போயிருந்தன. அன்பருக்கு ஜான்ஸனிடம் நடுக்கம். ஜான்ஸனுக்குத் தெரியாமல், நடுராத்திரியில், ஜான்ஸன் குடியிருந்த அறையில், புதுப் பாதரட்சை ஜோடி ஒன்றை அன்பர் வைத்துவிட்டுப் போய்விட்டார். காலையில் புது ஜோடுகள் ’முகத்தில் விழித்தார்’ ஜான்ஸன். யாரடா அவன், என் ஏழ்மையைக் கண்டு ஏளனம் செய்யத் துணிந்தவன்?’ என்று அவர் எண்ணிக்கொண்டார். ஜோடுகளை அறைக்கு வெளியே கொண்டுபோய், கைக்கெட்டுகிற உயரத்தில் கட்டி, ”இந்த ஜோடுகளைத் திருட்டுத்தனமாக இங்கே கொண்டு வைத்தவனை, இவைகளாலேயே அடிப்பது உசிதம்” என்று காகிதத் துண்டில் எழுதி, அதை ஜோடுகளில் ஒட்டி வைத்து விட்டார். மறுநாள் இரவில், ஜோடுகள் இருந்தவிடம் தெரியாமல் போய்விட்டன. இது நடந்த கதை. ஜான்ஸனுக்கு வந்தது விநோதமான, அசட்டக் கோபமல்லவா என்று நம்மில் பெரும்பான்மையோர் சாதாரணமாகவே எண்ணலாம். ”அதானாலேயே நாம் அசட்டு அடிமைகளாக இருக்கிறோம்” என்று வாய்த்துடுக்காகப் பதில் சொல்ல எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துடுக்கான பதில் சொல்வதால் லாபமென்ன? பணம் சம்பந்தமாக, பாரதியாரிடம் இங்கிதத்துடன் பழகவேண்டும். அவருடன் பழகிய நண்பர்களுக்கெல்லாம் இது நன்றாகத் தெரியும். பாரதியார் யாரிடமும் நன்றாய்ப் பழகித் தெரிந்தாலொழிய – லேசில் பணம் கேட்டுவிடமாட்டார். கேட்டு வாயிழப்பதும் அவரால் தாங்க முடியாத காரியம். ஒரு சமயம், பணத்துக்கு ரொம்ப முடை. வீட்டில் உணவுச் சாமான்கள் இல்லை. ஐந்து ரூபாய் வேண்டுமென்று ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதி அனுப்பினார் பாரதியார். கடிதத்துக்குப் பதில் இல்லை. சாயங்காலம் அந்த நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. ”பாரதி! உங்களுக்கு நான் அனுப்பியிருப்பேன். இந்த ஒத்தாசை நான் செய்திருந்தால், உங்களுக்கு மனச்சமாதானம் ஏற்பட்டு, உங்களுடைய மேதையின் கூர்மை மழுங்கிப் போயிருக்கும். உங்கள் மேதையை அழித்துவிட எனக்குச் சம்மதமில்லை” என்று முந்திக்கொண்டு நண்பர் சொன்னார். பாரதியாருக்குத் தாங்க முடியாத ஆத்திரம். ”ஓய்! அளப்பை நிறுத்தும். மேதைக்கு தரித்திரம் மட்டும் போதாதா! அதோடு, நீர் ஏளனம் வேறு செய்ய வேண்டுமா! உம்முடைய மனப்பான்மையைச் சீர் திருத்தம் செய்ய முடியாது. அதை அடியோடு தலைகுப்புற அடிக்கும் புரட்சித் தத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார். புலவர் வறுமையை, கவிகளின் தரித்திரத்தை ஏளனம் செய்யத் துணிந்தவர்கள் மனிதப் பதர்கள். அவர்களுக்கு லட்சிய உயர்வும், உணர்ச்சிகளின் மேன்மையும் விளங்கவில்லை என்பது தெளிவு. ”காலம் போம்; வார்த்தை நிற்கும்” என்ற அபூர்வமான பழமொழியின் உண்மையைக் கனவிலும் கண்டறியாதவர்கள் அவர்கள். வறுமையில் சிறுமைத்தனம் கொண்ட காரியம் எதுவும் செய்யப்படாது. ஜான்ஸன், பாரதியார் செய்ததையும், நம்மில் பலர் ’வயிற்றுப் பிழைப்பு’ என்று சற்றும் கூச்சமில்லாமல் கூச்சல் போடுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் செய்கையிலுள்ள நயம் நன்றாய்த் தெரியும். மாலை வேளையில் நண்பர்கள் கூடிக்கொண்டால், அவர்களுக்கு ஏதேனும் சிற்றுண்டிகள் வழங்க வேண்டும் என்று பாரதியாருக்கு ஆசை உண்டாகும். அந்தச் சமயத்தில், அருமை கிருஷ்ணசாமி செட்டியார் அங்கே அடக்கமாய் இருப்பார். பாரதியாரிடம் ஏதாவது செல்லாப் பணமிருக்கும். அதை எடுத்து நண்பர்களிடம் காட்டி, ”இது செல்லுமா, பார்த்துச் சொல்லுங்கள்” என்பார். நண்பர்கள் செல்லாது என்றால், ”செல்லும் செல்லாததற்குச் செட்டியார் அதோ இருக்கிறார்” என்று பாரதியார், வாஞ்சையுடன் ’வெல்லச்சு’ நண்பரைச் சுட்டிக் காண்பிப்பார். மகா சூட்சும புத்தியுள்ளவரான கிருஷ்ணசாமி செட்டியாருக்கு இந்தக் குறிப்பு தெரியாதா? உடனே நோட்டோ பணமோ வெளியே வரும். பணமில்லாமல் பாரதியாரிடம் வரலாகாது என்பது செட்டியாரின் சங்கற்பமா? செட்டியார் மடியில் எப்பொழுதும் பணம் இருக்கும் என்பது பாதியாரின் நம்பிக்கையா? செட்டியாரைப்போல அபூர்வமான குணங்களைப் படைத்தவர்கள் நம் நாட்டில் சில பேர்களே. இந்தச் செட்டியாருக்கு, முத்தியாலுப்பேட்டைக்கருகாமையில் ஒரு தோட்டமிருந்தது. இந்தத் தோட்டந்தான் பாரதியாரின் ”குயில் பாட்டுக்” குக் காட்சி ஸ்தலம். இந்தத் தோட்டத்தில் ஓர் அற்புதம் நடந்தது. அதைப் பற்றிப் பிறகு சொல்லுகிறேன். 12 பகுதி 13 மனிதர்களுக்கெல்லாம் நடமாட்டத்தில் ஆசை. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பது முடியாத காரியம். அடைபட்டுக் கிடப்பது சிறைவாசம் போல. கண்ணுக்குப் புதிய காட்சி, காதுக்குப் புதிய குரல்கள், காலுக்கு நடமாட்டம், ரத்தத்துக்கு ஓட்டம், உள்ளத்துக்குப் புத்தம் புதிய உணர்ச்சிகள் – இவை மனிதனுக்குத் தேவை. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தால் கால் ’மரத்துப் போய்விட்டது’ என்று சொல்லி, அதை நீட்டவும் மடக்கவும் உதைக்கவும் செய்கிறார்கள். மனத்துக்கும் நடமாட்டம் வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் ’மரத்து’ப் போகும். பாரதியாருக்குப் புதுச்சேரிவாசம் சிறை வாசத்தைப் போலவேதானிருந்தது. எவ்வளவு காலம் ஒரேவித முகங்களைப் பார்த்துக் கொண்டு, ஒரே ’ஸெட்’ ஆள்களோடு பேசிக்கொண்டிருப்பது? புதுச்சேரி அரசியலில் பிரிட்டிஷ் இந்திய தேசபக்தர்கள் கலந்துகொள்ளக்கூடாது. துடிதுடிக்கும் உள்ளம் படைத்தவர்கள், இத்தகைய நிபந்தனைகளுடன் சுகமாகக் காலந்தள்ள முடியாது; மனம் தாழ்ந்துபோகும். அற்ப மனிதர்களுடன் பேச்சுச் சல்லாபம் வைத்துக் கொள்வதைக்காட்டிலும் மௌன விரதம் மேலானது என்று ஓர் அறிஞர் கூறியிருப்பது உண்மை. வார்த்தைகளுக்கும் கருத்துகளுக்கும் லட்சியத்துக்கும் கௌரவம் கெட்டுப்போகும். சுகம் என்றால் பிறரை வஞ்சித்துத் தனக்கு மட்டும் தேடிக்கொள்ளும் சுகம் என்று அற்பன் எண்ணுகிறான். உலக சுகம் என்றால் அது ஏமாற்று வேலை, ஏமாற்றுக்கருத்து என்று எண்ணுகிறான் மூடன். கவிதை என்றால் கூத்துப்பாட்டு என்ற ஆபாச எண்ணம் அவன் மனத்தில் தோன்றுகிறது. சுதந்தரம் என்றால் உயிரை இழப்பதற்கு எற்பட்ட தற்கொலைச் சந்தர்ப்பம் என்று அவன் மயங்குகிறான். இந்தக் கேவலமான நிலையில் மனிதர்கள் இருப்பார்களாகில், மேதாவிகள் என்ன செய்வது? இந்த நிலையில் மூன்று காரியங்கள் செய்யலாம். ஒன்று, மௌனமாய் இருக்கலாம்; அறிவிலிகளின் அவதூறைப் பொருட்படுத்தாமல், பிடிவாதமாகத் தங்கள் கருத்தை உலகத்துக்குத் தெரிவிக்கலாம்; களைத்துச் சோர்ந்து போகுங்காலத்தில், இயற்கைத் தாயினிடம் சரண் புகலாம். இந்த மூன்று காரியங்களையும் பாரதியார் செய்தார். தோட்டங்களில் வசிப்பது, கடற்கரைக்குப் போய், கடலின் ஓய்விலா அலை ஒலியில் ஊடுபட்டுத் தம் கவலையை மறப்பது; சிறிது காலம் மௌன விரதம் கொள்ளுவது; தம் கருத்தை வெளியிடுவது—இவைகளைப் பாரதியார் செய்து வந்தார். பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் மரஞ்செடி கொடிகளுள்ள தோட்டத்தைக் காணுவதில், அதில் வசிப்பதில், பாரதியாருக்கு அளவில்லாத ஆனந்தம். வளர்ச்சியில் சுரணையில்லாதவர்களுடைய முகங்களைப் பார்ப்பதைக்காட்டிலும் வளருகிற கொடியைப் பார்த்து ஆனந்தமடையலாம் என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவார். ”ரோஷமில்லாத முகத்தை எப்படி ஓய் பார்த்துக்கொண்டேயிருப்பது ?” என்று நொந்துக்கொண்டு சொல்லுவார். இந்த மாதிரி, வெறி பிடித்தாற்போலப் பேசும் காலத்தில் பாரதியார் வீட்டுக்குள் இருக்க இசைவதில்லை; யாரையேனும் அழைத்துக்கொணடு, நண்பர் கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்துக்குப் போய்விடுவார்; அல்லது புதுச்சேரிக்கு அடுத்த வில்லியனூருக்குப் போவார். தோட்டத்தில் மரங்களையும் செடிகளையும் குளத்தையும் சின்னஞ்சிறு குருவிகளையும் பார்த்தவுடனே, பாரதியாரின் அலுப்பு சலிப்பு எல்லாம் எங்கேயோ மாயமாய்ப் பறந்து போய்விடும். ரஸிகத்தன்மை படைத்த உயிருள்ள தோழர்களுக்கு நடுவே இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வாரோ என்னவோ? ஸரிக-க-காமா என்று அவர் வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்பை வெளியே தள்ளி, தலையைஎவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம்நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ-ஸஸ்ஸ-ஸஸ்ஸ என்று மூச்சுவிடாமல், உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப்போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மௌனம். ”சொல் ஆழி வெண் சங்கே ” என்ற கூக்குரல், கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று, ”மத்தகஜம் என வளர்த்தாய்”என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா. குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனைதான். உற்சாகமும் சோர்வும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லிவிடலாம். புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முரித்துவிடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவ களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது. கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துகளை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடு படுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ள முடியாது. புதுக் கருத்து ஒன்று-ஜீவ களை நிறைந்த கருத்து; தர்க்கவாதம் நிறைந்த கருத்தல்ல-மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள், அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப் பிராணனாகச் செய்துவிடுகிறது. உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை. இந்த மாதிரி அவர்கள் ஏன் உயிரை விடவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அது இயற்கைத் தாயின் கொடிய விதி. இயற்கைச் சட்டத்தை ஏளனத்தால் கொல்ல முடியாது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்குப் பால் சரப்பதைத் தடுக்க முடியுமா? குழந்தைகளைப் பல ஏராளமான மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்குமளவும், மேதாவிகள், நிமிஷம் தவறாமல் உள்ளத்தில் பிரசவ வேதனைப்பட வேண்டியதுதான். ராமகிருஷ்ண பரமஹம்சர், பக்தியின் பலவித பாவங்களை அனுபவிப்பதற்காக, பல வகை சிருஷ்டிகளாகத் தம்மைப் பாவித்துக்கொண்டாராம். கிருஷ்ணனிடம் ராதைக்கு இருந்த காதல் பக்தியை உயர்ந்ததாகச் சொல்லுவதுண்டு. அதை அனுபவிப்பதற்காகச் சேலையுடுத்திக்கொண்டு, தம்மைப் பெண்ணாகப் பாவித்து, நடந்துகொண்டாராம். ராமனிடம் ஹனுமானுக்கு இருந்த இணையற்ற விசுவாச பக்தியை உணரும்பொருட்டு, வாலைக் கட்டிக்கொண்டு, மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, ராமநாமம் ஜபிப்பாராம். இவை ராமகிருஷ்ணரது கேலிச் சேஷ்டைகளல்ல; நாடகமேடை வேஷங்களல்ல. படைப்பு, கவிதை மயம், கவிதை உள்ளத்தைப் பெறாவிடில், படைப்பின் நுட்பத்தையும் ரகசியத்தையும் அறிய முடியாது என்று பாபு விபின சந்திரபாலர் அபூர்வமான உண்மை தரிசனத்துடன் சொல்லியிருக்கிறார். கவிகளின் உள்ளம் கபடம் இல்லாமல் ஒட்டிக்கொண்டு உறவாடும் பான்மை, கவிகளுக்கு மிகுதியும் உண்டு, புகழேந்திக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சண்டை. புகழேந்தி அபூர்வமான கவி. ஒட்டக்கூத்தரை அகராதிக்கவி எனலாம். பல ரகங்களான வார்த்தைகளைக் கொட்டுவதில் ஒட்டக்கூத்தர் சமர்த்தர். சோழ ராஜனுக்கு இருவர் பேரிலும் பிரியம். பாட்டுப்பாடவேண்டும் என்று அவர்களிருவரையும் அரசன் வேண்டிக்கொண்டான். ஒட்டக்கூத்தர் முதலிலே பாடினார். பின்பு, அதை ”வெட்டிப் பாடவோ, ஒட்டிப் பாடவோ ?” என்றார் புகழேந்தி. ”ஒட்டிப் பாடுக” என்றான் அரசன் ஒட்டக்கூத்தரை ஒட்டிப் புகழேந்தி பாடியதாகக் கதை. இயற்கையே ஓர் அற்புதமான ஒட்டு வேலை. ஜீவராசிகள் அனைத்தும் தனித்துத் தனித்து நிற்பதாகத் தோன்றினாலும், அவை யாவும் சூட்சமமாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றன. மனிதனுடைய தேகத்தையே எடுத்துக்கொள்வோம். காலோடு தலை ஒட்டிக்கொண்டிருக்கின்ற அற்புதம் எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது! தலையின் தொழிலென்ன! காலின் வேலையென்ன! தினையளவுகூடப் பொருத்தமில்லாத வேலைகள்! என்றாலும், இவை இரண்டுக்குமிடையே இருக்கும் ஒட்டுதலைப் பார்த்தால் பிரமிக்கும்படி இருக்கிறது. பாரதியார் பாடுகிறார். ” காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும், எங்கள் கூட்டம் ! நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக்களி யாட்டம் !” இதுதான் கவிகள் உலகத்துக்கு எடுத்து உபதேசம் செய்யும் மூலமந்திரம். ஜீவராசிகளுக்குள் இந்த ஒட்டுதல் எப்படியெல்லாம் புகுந்து கிடக்கிறதென்பதை நவரஸங்களும் ததும்ப, விஸ்தாரமாக, விதரணையுடன் பேசவதே கவிகளின் வேலை. ”நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி, அவனுக்குப் பகைமை கிடையாது; எனவே, பலவீனம் துளிக்கூடக் கிடையாது. ”நோக்கக் களியாட்டம் ” அவனுக்கு ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது? முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல – வெறிகொண்டவனைப் போல – சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாக, பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும்பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா? குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயந்தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும். குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்துபோய், மண் தரையில் படுத்துக்கொள்வார்; தலைக்குயரமாய் எதையும் வேண்டார். எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை. இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்! சிறிது நேரம், கண்ணயர்ந்தது போலப் பாரதியார் படுத்துக்கொண்டிருப்பார். அப்பொழுது அவர் உள்ளத்தில் என்ன நிகழுமோ தெரியாது. தூக்கி வாரிப் போட்டாற்போல எழுந்திருப்பார். சேங்கன்றை நினைத்துக்கொண்டு மேய்ச்சல் தரையிலிருந்து அம்மா என்று அலறிக்கொண்டு ஓடிவரும் பசுவாக அப்பொழுது பாரதியார் என் கண்ணுக்குப் படுவார். சேங்கன்றைப் பார்த்தபின், அல்லது அதன் குரலைக் கேட்டபின்தான் பசுவின் தாபம் தணியும். சிறிது நேரத்துக்குமுன் நிகழ்ந்த இயற்கையின் ஆவேசம் கெட்டு மடிந்து போயிற்றோ என்ற அச்சத்தால், பாரதியார் திடீரென்று எழுந்திருப்பாரோ, என்னவோ? இத்தகைய சந்தர்ப்பங்களில் பாரதியாரின் முகவிலாசம் மிகவும் வசீகரம் கொண்டதாயிருக்கும். அகம்பாவம், மாச்சரியம் முதலிய சேஷ்டை உணர்ச்சிகளின் சின்னத்தை முகத்தில் காணவே முடியாது. இயற்கையோடு ஒட்டிக் கொண்ட உள்ளத்தில் சிறுமை இருக்குமோ? எனவே, அதன் சின்னம் முகத்திலே எப்படித் தோன்றும்? ஆயிரம் வருஷங்கள் உயிரோடிருந்தாலும், பாரதியாரின் இந்த அற்புத முகத் தோற்றத்தை நான் மீண்டும் எப்போது பார்க்கப் போகிறேன்? கவிதை பிறக்குந்தருணத்தில் காட்சியளிக்கும் பாரதியாரின் ஜோதி முகத்தைத் தமிழர்களில் ஆயிரம் பேர் பார்த்திருந்தாலும் போதுமே? நம் நாடு நிச்சயமாய் இதற்குள் கடைத்தேறி இருக்குமே? எனக்கு ஏற்பட்ட பாக்கியம் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்றுதான் என் நெஞ்சம் வருந்துகிறது. ’பாரதி தாஸன்’ என்ற புனைபெயருடன் ஆச்சரியப்படத்தக்க தமிழ்க்கவிதை எழுதும் வாத்தியார் கனகசுப்புரத்தினத்தைப்பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கின்றேனல்லவா? அவர் பாரதியாருக்குத் தோழன்; சிஷ்யன். மேற் சொன்ன தோட்டத்தைப்பற்றி அவர் அதிசயமான சேதியொன்றைச் சொன்னார். ”காற்றடிக்குது கடட்ல குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே!” என்று பாரதியார் பாடியிருக்கிறாரே, அது புதுச்சேரியில் அடித்த பெரும்புயல் சம்பந்தமாகத்தான். இன்றைக்குச் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன், புயல் அடித்தது. தமிழ்நாடு முழுவதும் வெள்ளமும் புயலுமானது உடைத்துக்கொள்ளாத ஆறுகள், ஏரிகள் இல்லை. .மரங்கள் சடசடவென்று சரிந்து வீழ்ந்தன. ”காடெல்லாம் விறகான செய்தி ” ஆயிற்று நாடு முழுவதும். புதுச்சேரி கடற்கரை நகரம்; புயலால் நேர்ந்த சேதத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. ஒதியஞ்சாலை என்ற தோட்டத்திருந்த அழகான மரங்கள் எல்லாம் தலைகுப்புற வீழ்ந்தன; தந்திக் கம்பங்கள் முரிந்து போயின; கட்டடங்கள் சரிந்தன; கூரைகள் அப்படியே கூடாரம் அடித்ததுபோல உட்கார்ந்துவிட்டன. நகரம் முழுவதும் ’ பேய் மேய்ந்த ’ காட்டைப் போலத் தோற்றம் அடைந்தது. இவ்வளவு பயங்கரமான சேதத்திற்கு நடுவே, முத்தியாலுப்போட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலிருந்த மரங்கள் மட்டும் விழவில்லை என்று பாரதிதாஸன் சொன்னார். எனக்கும் அவருக்கும் அற்புதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், நிகழ்ந்ததை நம்பித்தானே ஆக வேண்டும? இந்த மரங்கள் தப்பித்துக்கொண்ட காரணத்தை முழுவதும் ஆராயாமல், அற்புதம் என்று அதைக் கொள்ள என் மனம் கூசுகின்றது. தனது ரகசியத்தைப் பாரதியாருக்குப் போதித்த இடம் கெடாமல் இருக்கவேண்டும் என்பது இயற்கைத் தாயின் விருப்பமோ, என்னவோ என்று கற்பனை கலந்து பேசலாம். ஆனால், மனிதனுடைய அறிவிலே அற்பமும் மகத்துவமும் கலந்து நிற்கின்றன. இயற்கையின் சூதை அற்ப அறிவினால் அளக்க முடியாது; அளப்பதற்குக் கவிதை உள்ளம் வேண்டும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தோ பதினொன்றோ, சரியாக நினைக்கவில்லை; அந்த வருஷ மத்தியில் தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் புதுச்சேரிவாசிகளான பிரிட்டிஷ் இந்திய தேசபக்தர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சென்னை மாகாணப் போலீசாரின் சூசனை. பாரதியாரைப்பற்றிச் சென்னை அரசாங்கத்தால் சத்தேகப்படுவதற்கே காரணமில்லை. மான்டோலோ வெடிகுண்டு வழக்கில் எதிரியாக இருந்த அரவிந்தரும் ( அரவிந்தர் மேற்படி வழக்கில் விடுதலை அடைந்தார்) பாரிஸ்டர் ஸவார்க்கரோடு நெருங்கிப் பழகிய வ.வே.சு அய்யரும் புதுச்சேரியில் இந்தக் காலத்தில் வாசம் செய்து வந்ததுதான் மேற்சொன்ன சந்தேகத்துக்குக் காரணம் என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தச் சந்தேகம் எப்படித் தொலைந்து போனாலும் போகட்டும்; அதைப்பற்றி நாம் அதிகமாகக் கவலைப் பட வேண்டியதில்லை. அந்தச் சந்தேகத்தின் விளைவுதான் விபரீதமாகப் போயிற்று. இந்தக் கொலைக்குப் பிறகு சென்னை மாகாணப் போலீசார் புதுச்சேரியை முற்றுகை போட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். புதுச்சேரிக்குள்ளேயே நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் இந்தியப் போலீசார், பாரதியார் வீடு, அய்யர் வீடு அரவிந்தர் வீடு – இவைகளின் பக்கத்திலே, கும்பல் கும்பலாக உட்கார்திருப்பதை அக்காலத்தில் காணலாம். எல்லாம் பொம்மலாட்ட வேடிக்கையப் போல நடக்கும். தேசபக்தர்கள் வீட்டுக்குடள் இருந்தால், போலீசார் பக்கத்து வீடுகளில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வெளியே சென்றால், போலீசார் எழுந்திருந்து, அவர்களைப் பின் தொடர ஆரம்பித்துவிடுவார்கள். தேச பக்தர்களுக்கு முதலில் ஏற்பட்ட அவஸ்தை பின்னர், அவர்களுடைய புதுச்சேரி நண்பர்களுக்கும் ஏற்பட்டது. இந்த மாதிரிப் பின் தொடர்ந்து போவதில் பல சில்லறை வேடிக்கைகள் நடைபெறும். இந்த வேடிக்கைகளைத் தேசபக்தர்கள் செய்வதில்லை; அவர்களுடைய புதுச்சேரி நண்பர்கள் செய்து ஆனந்தமடைவார்கள். போலீசாரால் பின்தொடரப்பட்ட நண்பர்களில் சிலர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அதன் பின்புறமாய் வெளியே போய்விடுவார்கள். உள்ளே நுழைந்த ஆள் வெளியே வருவார் என்று, வெளியே இருக்கும் போலீசார் காத்துக்கொண்டிருந்து, அலுத்துப் போவார்கள். ஆணை விட்டுவிட்டால், ’பிளாக் மார்க்’ வருமே என்று லபோலபோவென்று பரிதாபமாகக் கூக்குரலிடவார்கள். நண்பர்கள் செய்யும் இந்தச் சேஷ்டைகளைப் பாரதியார், அய்யர், அரவிந்தர் – மூவரும் கண்டித்திருக்கிறார்கள். ” இது என்ன அற்பத்தனமான காரியம்?” என்று பாரதியார் அடிக்கடி கண்டித்துப் பேசுவார்.. இது சம்பந்தமாகப் பாரதியாருக்கும் ஒரு நண்பருக்கும் வாதம் நடந்தது. நண்பர் : தாங்கள் எங்களைக் கண்டிப்பது நியாயமில்லை. போலீஸ்காரர் எங்களைப் பின்தொடரும்படியாக நாங்கள் என்ன செய்தோம்? பாரதியார் : நீங்கள் எங்களோடு பழகுகிறதுதான் நீங்கள் செய்கிற குற்றம். சகவாச தோஷத்துக்குப் பாலன் கிடையாதா ? நண்பர் : புத்தகத்தைத் தலையணையாக வைத்துப்படுத்துக்கொண்டிருந்தால், சகவாச தோஷத்தினால் படிப்பு வரும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே! பாரதியார் : ஓய்! நாங்கள் அச்சுப் புத்தகங்களல்ல. நாங்கள் உயிருள்ள புத்தகங்கள். இது சர்க்காரின் மதிப்பு நாங்கள் என்ன செய்கிறது? நண்பர் : நல்ல மதிப்பு இது! காத்தானுக்கு வியாதி வர, தீத்தானுக்கு மருந்து கொடுத்தார்களாம்! புத்திசாலிகளோட பேசக்கூடாது என்றுகூடச் சர்க்கார் உத்தரவு போட்டாலும் போடுவார்கள் போல இருக்கிறதே! பாரதியார் : புத்திசாலி சும்மா இருப்பானா? சும்மா இருக்க முடியுமா? தன் கட்சியை வலுப்படுத்தத்தான் பார்ப்பான். எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் தேசக்தியைப் புகட்டுவிடுவோம் என்று சர்க்கார் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் இயற்கைதானே? அந்தப் பயங்கூட அவர்களுக்கு இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பேது? ஜனங்களுக்கு எங்களிடம் இயற்கையாகத்தோன்றாத மதிப்பை, சர்க்கார் எங்களுக்கு வருவித்துக் கொடுக்கிறார்கள். சென்னைச் சட்டசபை மூலமாய்ச் சர்க்காருக்கு வந்தனமளிப்பு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை. இப்படிப் பாரதியர் சொல்லவும், அந்த நண்பர் தமது பெரிய சரீரத்தைக் குலுக்கிக் குலுக்கிச் சிரிப்பார். பிரஸ்தாப நண்பர் புதுச்சேரிக் கல்லூரியொன்றில் ஆச்சாரியார்; நல்ல சங்கீத ரஸிகர்; பிரெஞ்சுப் பாஷையில் நிபுணர்; சரித்திரத் துக்கடாக் கதைகள் சொல்லுவதில் சமர்த்தர்; ஹாஸ்யமாகப் பேசுவதில் திறமைசாலி ; பரம ரஸிக சிரோமணி. அவருடைய பெயர் சுப்பிரமணிய அய்யர். ஒழிந்த நேரங்களில் அவருடன் சம்பாஷணைச் சல்லாபம் செய்வதில் பாரதியாருக்கு ரொம்பப் பிரியம். அவரும் பாரதியாரின் பாடல்களைக் கேட்டு ஆனந்த பரவசமடைந்தார். தினம் ஒரு தடவையேனும் பாரதியார் அவரைக் கண்டு யோகஷேம சமாசாரம் விகாரிக்காமலிருக்க மாட்டார். பாரதியாருக்குப் பிரெஞ்சு உச்சரிப்பிலும் பாஷையிலும் சந்தேகமிருந்தால், சுப்பிரமணிய அய்யரிடந்தான் சந்தேக நிவர்த்தி செய்துகொள்ளுவார். இந்தப் போலீஸ் அமளிக் காலத்திலே, பாரதியாரின் வீட்டில் சில வினோதங்கள் நிகழும். இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து, பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், அய்யருக்குங்கூட உண்டு. ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம் வருமாறு: ஹே! கவிச்சக்கரவர்த்தி! தங்களுடைய திவ்வியமுகமண்டல ஜோதியைக் கண்டும், தங்களுடைய அமிருத வர்ஷதாதைகளான பாடல்களைக் கேட்டும் ஆனந்தப்படுவதற்காக, கையில் காசில்லாமல், ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி, டிக்கெட்டில்லாமல் கடைசியாகப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன். இப்பொழுது ஓர் இடத்தில் மறைந்துகொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணிக்குத் தங்கள் வீட்டுக்கு வருகிறேன் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைத்துக் கொண்டிருந்தால் நல்லது. தங்கள் பக்தன், இலக்கியப் பிரியன், திருநெல்வேலி அன்பன், ” ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி வந்த பக்தன், இலக்கியப்பிரியன், திருநெல்வேலி அன்பன் ’ ஏழு மணிக்கு வந்தார். ஆனால், பாரதியார் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைக்கவில்லை; ’’ மறவர் பாட்டு” என்ற தமது பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தார். அந்தப் பாட்டிலே, ” நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ” என்று ஓர் அடி இருக்கிறது. ஏழு மணி அடிக்கிற சமயத்தில், இந்த அடியைப் பாரதியார் பாடிக்கொண்டேயிருந்தார். வந்தவரும் இதைக்கேட்டுக்கொண்டே வந்தார். ” நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு! சீ, சீ, சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு !” என்று உரக்கப் பாடினார் பாரதியார். வந்தவர் நல்ல தேக அமைப்புள்ளவர், தலை மொட்டை; விவேகானந்தரைப் போல, கழுத்து முதல் கால்வரையில் காவிச் சட்டை. முகத்திலே நேர்த்தியான குங்குமப்பொட்டு. பாரதியர் பாட்டை நிறுத்தினார். வந்தவர் கும்பிட்டார். ”ஆஹா! தர்மம் நாசமாய்ப போகிறதே! கிருஹஸ்தன் நமஸ்காரம் செய்யணும். சந்நியாசி ஆசீர்வதம் செய்யணும். தலைகீழ்ப் பாடமாய்ச் செய்துவிட்டீர்களே!!” என்று அவரைப் பார்த்துப் பாரதியார் கேலி செய்தார். வந்தவர் சிரிக்கவேயில்லை. மடியில் கனம் போலிருக்கிறது. பாரதியாரின் சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. ”சரி! என்னைப் பார்த்தாய்விட்டது, போய்விட்டு வாருங்கள்” என்றார் பாரதியார். அன்பர் லேசிலே விடுகிற பேர்வழியல்ல. ஹிந்தி, இங்கீலீஷ், தமிழ் மலையாளம் முதலிய பாஷைகளில் ஒன்றுவிடாமல் பேசித் தீர்த்து விட்டார். பாரதியாருக்கு அடங்காத கோபம். ” அரவிந்தரை எப்பொழுது பார்க்க முடியும்?” என்றார் அன்பர். ”அய்யரைப் பார்த்தாகிவிட்டதோ. இலையோ?” என்று பாரதியார் ஆத்திரத்துடன் கேட்டார். வந்தவருக்கு அப்பொழுதுதான் பாரதியாரின் ஆத்திரமும், சூட்சுமப் பேச்சும், பாட்டும் விளங்கின. வந்தவர் உத்தரவு கேட்டுக்கொண்டு வெளியே போகுமுன், ”ஓய்! அர்ஜுன சன்னியாசி ! உசிதமாய் வாழும்! உயரமாய் வாழும் ! மட்டத்திலே ஆசை வைக்காதேயும்” என்று சொல்லிப் பாரதியார் அவரை வழியனுப்பபினார். சன்னியாசி வேஷம் மட்டுமா? ஒரு நாள் நவரத்ன வியாபாரி ஒருவர் வந்தார். வியாபாரி வேஷம் அவருக்கு நன்றாகப் பலித்திருந்தது. கற்கள் ஏதேனும் வேண்டுமா?” என்றார் அவர் பாரதியாரிடம். பாரதியார் அவரை ஏற இறங்கப் பார்த்தார். பாரதியரின் சுடர் விழிப் பார்வையைக் கண்டு அவர் ஆச்சமடைந்தார். ”ஓய்! என்னிடத்தில் கொஞ்சம் நவரத்தினங்களிருக்கின்றன. அவை விலைபோகும்படியாக, உங்கள் சர்க்காரிடம் கொஞ்சம் சிபார்சு செய்யுங்களேன். உம்மிடம் போலீஸ் டயரி இருக்கிறதா?” என்றார் பாரதியார். ரத்ன வியாரிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ”பெரியவாளுக்கு நமஸ்காரம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சில சமயங்களில், பலாத்காரப் புரட்சியைப்பற்றிப் பாரதியார் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை அறியத் தலைப்பாகை, கோட், ஷர்ட் முதலிய அங்கங்களுடன் சில இங்கிலீஷ் படித்த ’வித்வான்கள்’ வருவார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் இரகசியப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். பாரதியாரின் கண்கள் இவர்களின்பேரில் அம்புகளைப் போலப் பாயும். ஆனால், வந்தவர்களெல்லோரும் பாரதியாரின் பெருமையை உணராமல் போனதில்லை. சில சமயங்களில் அவர்களுடன் பேசாமல் பாரதியர் பாடிக் கொண்டேயிருப்பர். எந்த வேஷம் போட்டுக்கொண்டாலும், எந்த மனிதனாவது நாட்டை மறக்க முடியுமா? வயிற்றப் பிழைப்பு மனிதனைச் சாறாகப் பிழிந்து சக்கையாக அடித்துவிடுவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்குக்கூடப் பாரதியாரைக் கண்டதும் இயற்சையான மனித சுபாவம் திடீரென்று வந்துவிடும். அந்த நரம்பில் ’கைவைத்து’ அழுத்தப் பாரதியாருக்குத் தெரியும். 13 பகுதி 14 புதுச்சேரியில் வசித்து வந்த பாரதியாரின் பேரிலும் அவருடைய சகாக்களின்பேரிலும் பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் ஏற்பட வேண்டும்? தென்னாப்பிரிக்கா போயர் யுத்த காலத்தில், கிம்பர்லி, லேடி ஸ்மித் கோட்டைகளை (இங்கிலீஷ் சேனைகளை உள்ளே வைத்து) போயர்கள் முற்றுகை போட்டது போலவே, பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் புதுச்சேரியை முற்றுகை போட்டார்கள். முற்றுகை என்ற பதத்தை நான் விளையாட்டுக்காக பிரயோகம் செய்ததாக எண்ண வேண்டா. ’புதுச்சேரிக்கு வெளியே, கடலிருந்த கிழக்குப் பாகத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும். போலீஸ் உடையோடும், போலீஸ் உடையில்லாமலும் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்த செய்து வந்தார்கள். இவர்களோடு மாமூல் எக்ஸைஸ் – அப்பகாரி இலாகாகாரர்களும் சேர்ந்து கொண்டார்கள். புதுச்சேரியிலிருந்து வந்த சந்தேகப்பட்ட பேர்வழிகளையெல்லாம் பிரெஞ்சு எல்லைப்புறத்தில் கடுமையாகச் சோதனை செய்தார்கள். மற்றும் பலரை நிரம்ப பயமுறுத்தினார்கள். இன்னும் சிலரைக் கைது செய்து, சிறையில் அடைத்து, சில நாள்கள் வைத்திருந்து, புதுச்சேரி தேசபக்தர்களுடன் சேரப்படாது என்று எச்சரிக்கை செய்து வெளியே விட்டார்கள். வியாரத்துக்காக வெளியூர்களுக்குச் செல்ல நேர்ந்த புதுச்சேரிவாசிகள் பலர் இந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள். பாரதியாருடன் இருந்தமுருகேசன் என்ற பையனைப் போலீசார் நிரம்பவும் வெருட்டிப் பயமுறுத்தினார்கள்; அவன் சென்னைக்கு வரும் சமயம் பார்த்து அவனைக் கைது செய்து, இரண்டொரு மாதம் காவலில் வைத்திருந்து, சோளக்கொல்லைப் பொம்மையாக ஆக்கி வெளியே விட்டார்கள். போலீசாரின் வெளி பந்தோபஸ்து அமல் இல்லாது நடந்து வந்தது. புதுச்சேரியில் அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள், தெரியுமா? பிரிட்டிஷ் இந்தியப் போலீசார், தனியாக ஒரு பங்களாவையே வாடகைகக்குப் பிடித்துக்கொண்டார்கள். இவர்களுக்குத் தலைமையாக, ஒரு டெபுடி சூபிரண்டு. இந்தப் பதவியில் அப்துல் கரீம் என்பவர் இருந்தார். அவர் இப்பொழுது பென்ஷனும் கான்பகதூர் பட்டமும் பெற்று, சுகமாக இருக்கிறார். அவருக்குக் கீழே குருவப்ப நாயுடு, ரங்கசாமி அய்யங்கார் என்ற இரண்டு கெட்டிக்காரப் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள். புதுச்சேரி தேசபக்தர்களை வளைத்து நசுக்கிவிடுவதற்காக, கற்பனைக் கடங்காத அபார வலைகள் செய்தார்கள். இவர்களுக்குக் கீழே, சப் இன்ஸ்பெக்டர்கள், ’ஏட்டு அய்யாக்கள்’, காண்ஸ்டபிள்கள் மொத்தம் இருநூறு பேர்களுக்குக் குறையாமலிருந்தார்கள். கான்ஸ்டபிள்களுக்கும் ஏட்டுகளுக்கும் பங்களாவிலேயே சமையல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பத்துத் தேசபக்தர்களுக்காக! புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் பட்டாளத்தின் செலவு என்ன என்று சென்னை அரசாங்கத்தார் சொல்லிவிட்டார்கள். இந்தப் போலீஸ் குழாம் புதுச்சேரியில் செய்த வேலை மெச்சத் தகுந்தது. தேச பக்தர்கள் வெளியே சென்றால் பின்தொடர்பவர்கள் போக, பாக்கியுள்ளவர்கள் பிரிந்து பிரிந்து புதுச்சேரி நகரத்தில் வேலை செய்து வந்தார்கள்; தங்கள் உத்தியோக மதிப்புக்குத் தக்கபடி அவர்கள் புதுச்சேரிவாசிகளைக் கண்டு பேசுவார்கள். சாதாரணப் போலீஸ் கான்ஸ்டபிள்கள், வெற்றிலை பாக்குக் கடைக்காரன், புஷ் வண்டிக்காரன் முதலியவர்களுடன் பழகி, தேச பக்தர்களிடம் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பிரசாரம் செய்வார்கள். பயமுறுத்தவும் செய்வார்கள். சப் இன்ஸ்பெக்டர்கள், பெரிய பெரிய கனவான்களைப் பேட்டி கண்டு, தேச பக்தர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாக வேலை செய்கிறார்கள் என்று சொல்லி, ’சுதேசிகளுக்கு’ அவர்கள் எந்த வகையிலும் ஒத்தாசை செய்யலாகாது என்று எச்சரிக்கை கலந்த புத்திமதி கூறுவார்கள். புதுச்சேரியில் வாழ்ந்து வந்த தேச பக்தர்களை புதுச்சேரிவாசிகள் ’சுதேசிகள்’ என்று அழைத்து வந்தார்கள். புதுச்சேரி பிரெஞ்சுப் போலீசும், பிரிட்டிஸ் இந்தியப் போலீசும், ரஸ்தாக்களிலும், கடைத்தெருக்களிலும், மார்க்கெட்டிலும், கடற்கரையிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் கூடிக் கலந்து, ’குசு குசு’ வென்று இரகசியம் பேசிக்கொண்டு சல்லாபம் செய்யும் காட்சியை வர்ணிக்கவே முடியாது. குருவப்ப நாயுடுகாரு, ரங்கசாமி அய்யங்கார் இவர்களிருவரும் பாரதியாரைக் கண்டு பேசுவார்கள். இவர்களிரண்டு பேர்களிலும் ரங்கசாமி அய்யங்கார்தான் அடிக்கடி பாரதியாரின் விட்டுக்கு வந்துவிடுவார். பாரதியாரை ஏய்த்து உளவு சம்பாதித்துவிடலாம் என்ற நோக்கமோ அல்லது பாரதியாரின் கவிதைத் திறமையிலே, பேச்சுத் திறமையிலே அவருக்குப் பிரேமையோ அது இன்னதென்று தெரியவில்லை. உளவு என்று சொன்னேனே, அது எதைப்பற்றி? ஆஷ் கொலைக்கும் புதுச்சேரி ’சுதேசி’களுக்கும் சம்பந்த இழை இருப்பதாகப் பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருக்குச் சந்தேகம். தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை என்பவர், திருநெல்வேலிச் சதி வழக்கில் அப்ரூவராக மாறி, சில அபாண்டாமான பழிகளைப் புதுச்சேரி ’சுதேசி’களின் பேரில் சொல்ல நேர்ந்தது. இந்தச் சதி வழக்கில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையவர்கள் போலீசாரின் கையில் அகப்படாமல் எங்கேயோ தப்பி ஓடிப் போய்விட்டார். (ஒட்டப்பிடாரம் என்பது தூத்துக்குடிக்குச் சமீபத்தில் இருக்கிறது.) இன்று வரையில் மேற்சொன்ன மாடசாமிப் பிள்ளை எங்கு இருக்கிறார் என்ற செய்தி யாருக்குமே தெரியாது. அவர் உயிருடனிருக்கிறாரா அல்லது இறந்து போய்விட்டாரா என்ற தகவலும் கிடையாது. இது நடந்து முப்பத்து மூன்று வருஷங்காகின்றன. மாடசாமிப் பிள்ளை புதுச்சேரிக்குப் போய், அங்கே ’சுதேசி’ களால் போஷிக்கப்பட்டு, ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று அந்தக் காலத்தில் போலீசார் ரொம்பும் சந்தேகப்பட்டார்கள், இந்த இரகசியத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். மேலும், புதுச்சேரி ’சுதேசிகள்’, துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பிரான்சு முதலிய அந்நிய நாடுகளிலிருந்து தருவித்து, எங்கேயோ மறைவிடத்தில் ஒளித்து வைத்துச் சேகரித்து வருகிறார்கள் என்ற அபத்த வதந்தியும் போலிசாரின் சுறுசுறுப்புக்குக் காரணம். இது காரணம் பற்றியே ரத்தின வியாபாரியாயும், வக்கீலாயும், தேசபக்தராயும், சன்னியாசியாயும், காவிய ரசகராயும் வேஷம் போட்டுக்கொண்டு, பாரதியரையும் மற்றுமுள்ள ’சுதேசி’களையும் போலீசார் பேட்டி கண்டார்கள். அரவிந்தர் யாரையுமே பார்ப்பதில்லை. அவர் வெளியே புறப்படுவதுமில்லை. பங்களாவுக்குள்ளாகவே அவருக்கு வாசம். பாரதியார் முதலியவர்கள் அந்த நியதி வைத்துக்கொள்ளவில்லை. மேலும், பாரதியார் ஒரு வகையில் ரொம் ஸரஸி. அந்நியர்களிடமும் முகத்தைக் ”கடு கடு” என்று வைத்துக்கொண்டு பேசவே அவருக்குத் தெரியது. தேசத்துரோகியாயிருந்தாலும், திக்கற்ற மனித ஜீவன் என்ற முறையில், அவனிடமும் பாரதியாருக்கு அளவுக்கு மிஞ்சிய காருண்யமுண்டு. அந்தக்காலத்தில் புதுச்சேரியில் சகஜமாய்க் கிளம்பிய புரளிகளைக் கேட்டால், உங்களுக்குச் சிரிப்பு வரும். ’சுதேசி’களை அப்படியே மோட்டார்களில் வைத்து, பிரிட்டிஷ் இந்தியவுக்குத் தூக்கிக்கொண்டு போகும்படியாகப் போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள் என்று ஒருவன் வியர்க்க வியர்க்க வந்து சேதி சொல்லுவான். பாரதியார் குலுங்கக் குலுங்க நகைப்பார். ’சுதேசிகள் புதுச்சேரியிலிருந்து இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் வெளியே போய்விடவேண்டுமென்று பிரெஞ்சுக் கவர்னர் உத்தரவு போட்டுவிட்டார். அந்த உத்தரவைச் சாதரா செய்யப் பிரெஞ்சுப் போலீஸ்காரர்கள் இதோ வந்துகொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை வருகிற வழியில் பார்த்தேன்” என்று ஒருவன் ’கேட்டை குந்தாணிப் புளுகு’ ளேடபபபடன, ”கூண்டோடு கைலாசம்; எல்லாஹிந்துக்களும் ஆசைப் படுகிற சங்கதி” என்று பாரதியார், அந்தப் புளுகைக் கேட்டு ஆனந்தமாய் அனுபவிப்பார். நந்தகோபாலு செட்டியார் என்பவர் புதுச்சேரி அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தைலைவர். அவர் செம்படவச் செட்டியர். கப்பல் ’கடநடிலபடமமு’, கடலைக் கொட்டை வியாபாரம் அவரது தொழில்கள். நத்நகோபாலுவின் பெயரைச் சொன்னால் புதுச்சேரி நடுங்கும். அவருக்கு ’அடியாள்’ ஜமாநிரம்ப ஜாஸ்தி என்று பிரஸ்தாபம். ஒரு வேடிக்கைப் பல்லவிகூட அவரைப்பற்றி உண்டு. ”நந்தகோபாலு பாந்து (கூட்டம்) வருது; சாக்கோ, சாக்கோ (ஜாக்கிரதை, ஜாக்கிரதை)” என்று புதுச்சேரியார் சொல்லிக்கொண்டு அச்சப்படுவதுண்டு. நந்தகோபாலு இப்பொழுது இறந்துபோய் விட்டார். ‘சுதேசி‘களைப் பலவந்தமாய்ப் படித்துக் கொடுப்பதாக நந்தபோபாலு பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அந்தக் காரியம் இரண்டு மூன்று நாள்களுக்குள் கட்டாயம் நடந்துவிடுமென்று ஒருவன், கிலிபிடித்த கண்களோடு, வாய் குளறித் தடுமாறும்படி வந்து சொல்லுவான். ஆச்சரியம் என்னவெனில், சற்று முன்னர்தான், பாரதியாரையும் சீனிவாசாச்சாரியையுடம் பார்த்துப் பேசி சல்லாபம் செய்துவிட்டு நந்தகோபாலு பேயிருப்பார். நந்த கோபாலின் சல்லாபப் பேட்டிக்கு விபரீத அர்த்தம் கொடுத்துப் புரளியைக் கட்டிவிடுவார்கள் போலீசார். நந்தகோபாலு தமது உண்மையான கருத்தை மறைத்து நயவஞ்சகத்துடன் ‘சுதேசி‘களோடு சல்லாபம் செய்து விட்டுப் போனார் என்று மேற்கொண்டும் சூட்சும அர்த்தம் கற்பிப்பார்கள். தெய்வக் காதலிலே, கவிதை உணர்ச்சி கொண்டு ஆழ்ந்து கிடக்கும் பாரதியாரை, விலைமாதரைக் கொண்டு ஏய்த்துவிடப் போகிறார்கள் என்று ஒரு புரளி. இந்தப் புரளிக்கெல்லாம் அஸ்திவாரம் ஒரே இடந்தான். அந்த இடம் எது என்று நான் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமா? கடைசிப் புரளியைக் கேட்டு, பாரதியார் துடிதுடிட்ததுப் போவார். “மனிதப் பதர்கள்! பாரதியை அவர்கள் யாரென்று எண்ணிக்கொண்டார்கள்? அதமர்கள்! நாட்டின் மனோபாவம் இவ்வளவு கீழ் நிலைமையிலிருக்கிறதே! இந்தக் கீழ்த்தரமான மனோ நிலையிலிருந்த அவர்களை மேல்படிக்கு எப்படி கொண்டு வருகிறது?” என்று முகவாட்டத்துடன் வருந்துவார். புதுச்சேரியில், போலீசார் முற்றுகை போட்ட காலத்தில், ‘சுதேசி‘கள் எவ்வளவு கஷ்டத்துக்கு, எத்தகைய இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று சொல்ல முடியாது. பணக்கஷ்டத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தபால் சரியாகக் கிடைக்காது. மணியார்டர் வந்து சேராது. பயந்துபோன புதுச்சேரிவாசிகளின் மூலமாய்ப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து சில்லறையாகக் சாமான்கள் கடன் வாங்கிக் கொடுப்பதுகூட அருமையாகப் போய்விட்டது. தேச விடுதலை, புதிய உலக நிர்மாணம், நூதன உண்மைகளை நிலைக்கச் செய்தல் இவை சிரிய சங்கதிகள் அல்ல. எவ்வளவு தியாகம் செய்தாலும் போதாதே என்று எண்ண வேண்டிய காரியங்கள் இவை. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்பார்கள். சிரேஷ்டர்கள் மனம் புழுங்கிப் புழுங்கி இறந்தாலொழிய, ஏழைகள் கண்ணீர் சொரிவதில்லை. பாரதியார், அரவிந்தர், காந்தி முதலிய சிரேஷ்டர்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளானால்தான், தேசத்தாரின் மனச்சாட்சி கூராகும். போலீஸ் நெருக்கடியான காலத்தில் பாரதியாருக்கு உற்ற துணைவர்களாயிருந்தவர்களில் முக்கியஸ்தர்களாக மூன்று பேர்களைச் சொல்ல வேண்டும். ஒருவர் சுந்தரரேச அய்யர் என்பவர். இவர் தெலுங்கர்; மணிலாக்கொட்டை வியாபார ஸ்தலமொன்றில் குறைந்த சம்பளம் வாங்கி வந்த குமாஸ்தா. இவர் தமது மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விற்றும் எவ்வளவு பணம் பாரதியாரக்குக் கொடுத்திருப்பார் என்று சொல்ல முடியாது. பாரதியாரின் கவிதையிலே இவருக்கு அளவு கடந்த மோகம். இன்னொருவர் பொன்னு முரகேசன் பிள்யைவர்கள். இவர் பாரதியார் குடியிருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால் ஈசுவரன் தர்மராஜா வீதியில் இருந்து வந்தார்; சொத்துடையவர்; தெய்வமே கிடையாது என்று சங்கள்பங்கொண்டவர்; பிரெஞ்சு பாஷையில் அபூர்வமான பயிற்சி பெற்றவர்; நல்ல உடல்கட்டு வாய்ந்தவர். இவர் விட்டிலேதான் பாரதியார் குடியாகக் கிடப்பர். பாரதியாரோடு கட்சிவாதம் செய்வதில் பிள்ளையவர்களுக்கு அடங்காத ஆர்வம். பாரதியாரின் ஈசுவர பக்தியை இகழ்ந்து பேசுவதில் பிள்ளையவர்களுக்குப் பேரானந்தம். பிள்ளையவர்கள் பாரதியாருக்குப் பண உதவி செய்ததில்லை. பிள்ளையவர்களின் மூத்த குமாரன் ராஜா பகதூர் பாரதியாரின் பக்தன். முருகேசம் பிள்ளையின் மனைவியார் பாரதியாருக்குச் செய்த சேவையை எப்படிப் புகழ்வது என்று எனக்கே தெரியவில்லை. உத்தம கணங்கள் பொருந்திய இந்த லட்சுமியைப் பற்றி, அத்தியாயக் கணக்கில் எழுதினாலும் என் ஆசை தீராது. பாரதியாரின் பட்டினி சமயம் பார்த்து, வற்புறுத்தி அன்னமளித்து உபசாரம் செய்வதில், இந்த அம்மாள் இணையற்றவர். பின்னர் அந்த அம்மாளைப்பற்றி விவரமாகச் சொல்லுகிறேன். பாரதியார் அநேகமாய் எப்பொழுதும் பொன்னு முருகேசன் பிள்ளையவர்கள் வீட்டிலேதான் தங்கியிருப்பார். முருகேசன் பிள்ளைவர்களின் வீடு விஸ்தாரமான வீடு. மெத்தை உண்டு. மெத்தையிலே ஓர் அறையிலே, பாரதியார் இருப்பார். இரவுப் பொழுதையும் சில சமயங்களில் அங்கேயே போக்கிவிடுவார். இந்த வீட்டிலே கோவிந்தன் என்று ஓர் அருமையான பையன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். கோவிந்தனும் அவனது சகோதரர்களும் சேர்ந்து மூன்று பேர்கள். இவர்களுடைய தாயார் நிரம்பத் தைரியசாலி. இந்த அம்மாள் பாரதியாரின் வீட்டிலே சுற்றுக்காரியங்கள் செய்து வந்தாள். உடம்பு குச்சி போல இருக்கும். பற்கள் வெளியே நீண்டிருக்கும். காது கேட்காது. ஜாடையிலே பேசினால், அதை வெகு நுட்பமாகக் கண்டுகொள்ளுவாள். பாரதியார் சம்பளம் கொடுப்பாரோ கொடுக்கமாட்டாரோ, இந்த அம்மாள் யாதொரு முணுமுணுப்புமின்றி வேலை பார்த்து வந்தாள். வேலையிலே நிரம்பச் சுறு சுறுப்பு. சோம்பல் என்பதே அந்த உடம்பில் கிடையாது. கூலி வேலை செய்தாலும், கௌரவம் என்ற வஸ்துவை வெகு ஜாக்கிரதையாகப் பந்தோபஸ்து செய்து வைத்திருந்தவள். அவளிடம் சச்சரவு செய்து யாரும் மீளவே முடியாது. ஏன்? அவள் அசத்தியமாகப் பேசினதே இல்லை எனலாம். அகௌரவமான காரியமும் செய்ததில்லை; யாருக்கும் உபகாரம் செய்வாள். அவளுடைய பெயர் அம்மாக்கண்ணு. அவள் சம்மந்தமாக பாரதிதாஸன் ஓர் அருமையான கதை சொன்னார். இந்தக் கதை நிரம்பப் பின்னால் நடந்திருக்கலாம். அம்மாக்கண்ணு பெயர் வருகிற இந்த இடத்தில் சொல்லிவிடுவது சற்றுப் பொருத்தமாயிருக்கும். பாரதியார் ஒரு சமயம், அதிகமான வருத்தத்தினால் புதுச்சேரியை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போய்விடுவது என்று தீர்மனங்கொண்டாராம். இது 1917 ஆம் வருஷம் நடந்திருக்க வேண்டும். ஆத்திரப்பட்டுக்கொண்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் விட்டார். அவரைத் தடுக்க யாரால் முடியும். இளமைப் பருவத்தில் பாரதியாருடன் அவருடைய மனைவி ஸ்ரீமதி செல்லம்மாள் எதிர்த்துப் பேச முடியாது. நண்பர்களும் அப்படியே. பாரதியார் கோபங்கொண்டு எங்கேயோ வெளியே போய்விட்டார் என்ற சேதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அம்மாக்கண்ணு வீட்டிலில்லை. அம்மாக்கண்ணு வீட்டிலிருந்திருந்தால் பாரதியாரை வெளியே கோபித்துக்கொண்டு போக விட்டிருக்கவே மாட்டாள். பாரதியாருக்கு யோசனை சொல்லியோ, அவரோடு கண்டை போட்டோ அல்லது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோ காரியத்தில் வென்றிருப்பாள். பாரதியார் கோபமாய்ப் போனதைக் கேட்டு, அம்மாக்கண்ணு புதுச்சேரியில் எங்கேயெல்லாமோ தேடி அலைந்து பார்த்தாள். பாரதியார் அகப்படவில்லை. சுப்புரத்தினம் (பாரதிதாசன்) நேரே புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய், அங்குப் பாரதியார் இருப்பதைக் கண்டார். பாரதியார், கண்களில் தீப்பொறி பறக்க, ஸ்டேஷனில் யாருடனும் பேசாமல் உலாத்திக் கொண்டிருந்தார். சுப்புரத்தினத்தைப் பார்த்ததும் பாரதியாரின் முகம் ஒருவாறு மலர்ச்சி அடைந்தது. பிறரிடத்தில் – சம்பந்தமில்லா மூன்றாம் மனிதனிடத்தில் கோக முகத்தை அல்லது வருத்த முகத்தைக் காண்பிப்பது நல்ல பழக்கமில்லையல்லவா? பாரதியாரைச் சமாதானம் செய்த எப்படியோ சுப்புரத்தினம் திருப்பி அழைத்துக்கொண்டு வந்தார். இருவருக்கும் புஷ் வண்டி சவாரி. தர்மராஜா கோயில் வீதியிருந்த தமது வீட்டுக்கு வர முடியாது என்று பாரதியார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். வேறு வீதி வழியாக, சுப்புரத்தினம் வீட்டுக்குப் போவதாகத் தீர்மானித்து, புஷ் வண்டியை அந்த வழியே செலுத்தினார்கள். வழியிலே அம்மாக்கண்ணு நின்று கொண்டிருந்தாள், சுண்டல் முதலிய தின்பண்டங்களுடன். பாரதியார் திரம்பி வருகிற செய்தியைப் பையன்கள் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும். பாரதியார் அன்றைக்குப் பட்டினி. அது அம்மாக்கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அம்மாக்கண்ணு வழி மறித்து இந்த உபசாரங்கள் செய்ததும் பாரதியாருக்கு அளவிலா மகிழ்ச்சி. ” தேவாமிருதம்” என்றார் பாரதிதாஸன். உடனே தேவலேக நினைப்பு பாரதியாருக்கு வந்திருக்க வேண்டும். புஷ் வண்டிக்காரனைப் பார்த்து, ” ஓட்டடா ரதத்தை” என்றாரம் அவர். ஒரு சொல்லின் மூலமாய் மனிதனுக்கு எத்தகைய அபூர்வமான கற்பனை தோன்றுகிறது என்பதற்கு, இந்தச் சம்பவம் இணையற்ற அத்தாட்சி. தேவாமிருதம், தேவலோகம், ரதம் இவை படிப்படியாக வந்த கற்பனைக் காட்சிகள். கற்பனையில்லாத மனிதன் கால் மனிதன்கூட அல்ல. அம்மாக்கண்ணு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடித்தனக்காரி; மகா குரூபி; கிழப்பருவம் எய்தியவள்; குணவிசேஷங்களைத் தவிர, பழக்கத்தால் ஏற்படும் கல்வி முதலிய சக்திகள் ஒன்றுமில்லாதவள். இப்பேர்பட்ட அம்மாக்கண்ணுக்குப் பாரதியாரிடம் பக்தி ஏற்பட்டது ஆச்சரியம் என்பீர்கள் எனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. அம்மாக்கண்ணு லேசான பேர்வழி அல்லள். அவள் ”வீரை, சக்தி சொரூபம்.” அவளுக்குக் கல்வியில்லாமலிருக்கலாம். இயற்கை அறிவுகூட இல்லாமல் போய் விட்டதா? இயற்கை அறிவு , இயற்கை உணர்ச்சி – இவைகளைக்கொண்டு பாரதியாரை அவள் எடை போட்டுப் பாத்திருக்க வேண்டும். பாரதியாரின் இயற்கையான மேன்மைக் குணங்களைக் கண்டு, அவள் பரவசமாகியிருக்க வேண்டும். பாரதியாரின் வீட்டிலே சலிக்காமல் தொண்டு செய்தவள் அம்மாக்கண்ணு. அவளுடைய பக்தி தேவதாவிசுவாசம் போன்றது. பொன்னு முருகேசம் பிள்ளைக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை அவளுக்கு வயது பத்து அல்லது பதினொன்று இருக்கலாம். இனிமையான தொண்டை வாய்ந்தவள். அந்தப் பெண் தினசரி வீட்டு வேலைக்கான நேரம் போக, தன் மாமன் முருகேசம் பிள்ளையவர்களின் வீட்டிலேயே இருப்பாள். அவளுக்குப் பாரதியாரிடம் இருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்ல முடியாது. அந்தக் குழந்தை அதிகமாக வாய்விட்டுப் பேசினதேயில்லை. உத்தமப் பெண்ணுக்குரிய லட்சணங்களை அவள் முகத்திலே காணலாம். நல்ல பொறுமைசாலி. முகம் சாந்த சொரூபம். அதோடுகூட, மறையாத, அழியாத புன்னகை. பாரதியாருக்குச் சில்ல்றைத் தொண்டுகள் செய்வதில் அவளுக்கு அளவு கடந்த ஆவல். இந்தக் குழந்தைப் பெண் பாரதியாரின் குழந்தை மனப்பான்மையில் ஈடுபட்டுப் போயிருக்க வேண்டும். பாரதியார் குழந்தைகளுக்கு நல்ல விளையாட்டுத் தோழர். மனிதர்களின் எந்த மனோ நிலைமையை அவரால் கற்பனை செய்துகொள்ள முடியாது. பொன்னு முருகேசம் பிள்ளையவர்களின் மனைவியார் பெண்மையின் வேறொரு ’ஸாம்பிள்’. அந்த அம்மாளின் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவர் இறந்து போய்விட்டார். மேற்சொன்ன மற்ற இருவரும் இப்பொழுது உயிரோடிருக்கிறார்கள். பிள்ளையின் மனைவியாருக்கு இரட்டை நாடி உடம்பு. குங்குமப் பொட்டு அவருடைய முகத்தில் எப்பொழுதும் அழகு செய்துகொண்டிருக்கும். தூக்கத்தில்கூட அந்தப் பொட்டு கலைவதில்லை. ஏனெனில், விடியற்காலத்தில் அந்த அம்மாள் எழுந்திருந்தவுடன், நான் பார்த்திருக்கிறேன். சிறிய பூரண சந்திரணைப்போலிருக்கும் அவருடைய குங்குமப் பொட்டு, எந்த ஓரத்திலும் கலைந்திருந்தது கிடையாது. அசுரத் தூக்கமில்லாத தேவகணத்தைச் சேர்ந்தவர் அவர். அவருக்கு இரட்டைநாடி உடம்பாயினும் சோம்ட்ல துளிக்கூடக் கிடையாது. பிரஸ்தாபக் காலத்தில் அவருக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கலாம். ராஜாபகதூர், கனகராஜா என்று இரண்டு பயன்கள் அவருக்கு. ராஜாபகதூர் பாரதியாரின் பக்தன். ராஜாபகதூரைப்பற்றிப் பாரதியார் நிரம்பவும் கொண்டாடிப் பேசுவார். நான் புதுச்சேரியில் இருந்த காலத்தில், ராஜாபகதூர் மேல் படிப்புக்காகப் பிரான்ஸ் தேசத்துக்குப் போயிருந்தார். ராஜாபகதூரின் தாயார் பூமி அதிர நடந்து நான் பார்த்ததில்லை. குரலைத் தூக்கிப் பேசினதைக் கேட்டதில்லை. முகத்தைச் சுளித்துக்கொண்டதைப் பார்த்ததேயில்லை. யாரிடமாவது ‘வெட்டி வம்பு’ பேசினதை ஒருபொழுதும் கண்டதில்லை. மௌனமாய், இங்கிதமறிந்து, காரியம் செய்வார். அந்த அம்மாள் பாரதியாரோடு அதிகமாகப் பேசினதையும் நான் கண்டதில்லை. பாரதியாரை ராஜா பகதூரின் அண்ணனாகப் பாவித்து வந்திருக்க வேண்டும் அந்த அம்மாள். காலையில் பாரதியார் எழுந்திருந்தால், பல் விளக்குவதற்குப் பல்பொடியும் தண்ணீரும் தயாராக மெத்தையில் காத்துக்கொண்ருக்கும். பாரதியார் பல் தேய்த்து முகம் கழுவியது, வீட்டின் அடுப்பங்கரையிலிருக்கும் அந்த அம்மாளுக்கு எப்படித் தெரியுமோ, உடனே காபி, இட்டிலி அல்லது ஏதாவது தின்பண்டம் வந்துவிடும். குழந்தையின் முகம் பார்த்து உணவு ஊட்டும் தாயைப் போல நடந்துகொண்டு வந்தாள் அந்த அம்மாள். பெரிய மனிதர்கக்கு, துன்பமயமான அவர்களுடைய பாலைவன வழ்க்கையில் மேற்சொன்னது போல் சில இன்பமான சில்லறைச் சம்பவங்கள் நீர்ச்சுனைகளைப் போல நேர்ந்தாலொழிய அவர்களுடைய கழுத்திலே சுருக்குக் கயிறு ஏறிவிடும் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம். ராஜாபகதூரின் தயாருக்குச் தேச விடுலையில் கவலையா? இல்லை. பாரதியர் அவருக்கு உறவா? இல்லை. பாரதியார் கவிதை மேதையை அவர் கண்டறிந்தவரா? அதுவுமில்லை. பாரதியார் பிறருக்குச் சில்லறைத் தொல்லைகள் கொடுக்காதவரா? இல்லை. பாரதியார் தமக்குத் தாமே ஒன்றும் செய்துகொள்ளத் தெரியாதவர்; பழக்கமில்லாதவர். அவர் உடைகளைப் பிறர் வெளுத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமயம் பார்த்துச் சாப்பாட்டுக்குக் கூப்பிட வேண்டும். வேலையிலிருக்கையில் அவரை யாரும் கிட்டே நெருங்கமுடியாது. நடத்தைக் கிராமத்தில் மரியாதை விஷயத்தில் பிறர் துளி தவறி நடந்தாலும், பாரதியாருக்கு ரோஷமும், ஆத்திரமும் வந்துவிடும். இரவிலோ, விடியற்காலையிலோ, எப்பொழுதேனும் வெறி பிடித்தாற்போல் பாரதியார் பாட ஆரம்பித்துவிட்டால், பாட்டு நிற்பதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் பிடிக்கும். தெருவாருக்கும் தூக்கம் கெடலாம். வீட்டிலுள்ளவர்களுக்கும் தூக்கம் போய்விடலாம். ஆனால், யாரும் இதைப்பற்றிப் பாரதியாரிடம் குறை கூறிக்கொண்டதே கிடையாது. பாரதியாரிடம் ஒரு கெட்டபழக்கம் உண்டு. எச்சிலை எட்டப் போய்த் துப்ப மாட்டார். இருந்த இடத்திலிருந்து துப்புவார்; அது எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கு அதுதான் பிராப்தி. பிள்ளையவர்களின் வீட்டிலும் இந்த அட்டஹாசம் நடைபெறும். இதைப்பற்றி ராஜா பகதூரின் தாயார் அருவருப்புக் கொண்டதே இல்லை. எங்களுக்குப் பாரதியாரின் இந்தப் பழக்கம் பிடிக்கவில்லையாயினும், அவரிடம் நேரே சொல்ல எங்களுக்கு அச்சமும் கூச்சமும் ஏற்படும். பாரதியார் வெளியே போகும் காலம் பார்த்து, அவர் இருந்த அறையைச் சுத்தம் செய்வார், அந்த அம்மாள். இதைப்பற்றி வீட்டிலே யாரும் மூச்சு விடக் கூடாது. முருகேசம் பிள்ளையவர்களும் பக்தி நிறைந்த கனவான். அவரும் பாரதியாரின் இந்தப் பழக்கத்தைக் கவனிப்பதே இல்லை. ராஜா பகதூரின் தாயார், ஹிந்துக் குடும்பத்தில் உத்தம நெறி பற்றி, இல்லறம் நடத்தியவர். பாரதியாருக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது, ஹிந்துக் குடும்ப வாழ்க்கைப் பழக்கத்தினால் என்பது எனது துணிவு. தாய் மனப்பான்மை கொண்டவர் அவர். இப்பேர்ப்பட்ட புண்ணியவதிகளான பெண்மணிகள் நமது நாட்டில் லட்சக்கணக்கில் தோன்றினால், நமது நாடு எந்த நாட்டுக்கும் கீழான நிலையில் இருக்காது என்பது உறுதி. 14 பகுதி 15 ஒரு நாள் காலை, சமார் ஏழு மணி இருக்கும். காப்பி சாப்பிட்டு முடிந்த சமயம். கட்டை குட்டையாக ஒரு கனவான் விட்டுக்குள் வந்து நுழைந்தார்; “ பாரதி ” என்று உரக்கச் சத்தம் போட்டுக்கொண்டு, நமஸ்காரம் செய்த, பாரதியாரை இறுகத் தழுவிக்கொண்டார். பாரதியாரும் மெய்மறந்துபோய் வந்தவரைக் கட்டிக் கொண்டார். இரண்டொரு நிமிஷங்கள் கழிந்தன. இருவர் முகங்களிலும் கண்ணீர் வராத குறைதான். பாரதியாரின் உடலைத் தீண்டிச் சொந்தம் கொண்டாடியவர் எவரையும் நான் அதுவரையில் கண்டதே இல்லை. எனக்கு இந்தச் சம்பவம் வெகு ஆச்சரியமாக இருந்தது. வந்தவர் யாராயிருக்கலாம் என்று ஊகிக்க ஆரம்பித்தேன். பாரதியாரின் வெளியூர் நண்பர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், வந்தவர் இன்னாரென்று அனேகமாய் ஊகம் செய்யலாம். நான் அதிகமாய் கேள்விப்பட்டதில்லை. “ பாரதி! உன்னை எங்கே பார்க்க முடியாமல் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன். நான் விடுதலையடைந்து இரண்டு மாதகாலமாகிறது எங்கேயெல்லாமோ சற்றி அலைந்தேன்; உன்னைப் பார்க்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். நீ சௌக்கியமாயிருக்கிறாயா – ” என்றார் வந்தவர். ஜெயிலாம்! விடுதலையாம்! பாரதியாரைப் பார்ப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டிரந்தாராம்! பார்க்காமல் விடுவதில்லை என்கிறார்! பாரதியாரை, ‘நீ, நீ’ என்று ஏகவசனமாக அழைக்கிறார்! இவர் யார்! இவர் எந்தச் சிறையிலிருந்த விடுதலையடைந்தார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. “ ஜெயில் உனக்குச் சௌக்கியமாயிருந்ததா? உன் உடம்பு பார்வைக்கு அவ்வளவு நன்றாயிருக்கவில்லையே! உன் உடம்பே ஜெயிலில் இவ்வளவு இரக்கம் காணுவதென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம். முதலிலே ஏதாவது சாப்பிடு ” என்றார் பாரதியார். வந்தவர் பல் விளக்குவதற்காகக் கொல்லைப்புறம் சென்றிருக்கையில் , “ஓய்! இவரை உனக்குத் தெரியுமா?” என்று பாரதியார் என்னைக் கேட்டார். தெரியாதென்றேன். “இவர்தான் சுரேந்திர நாத் ஆர்யா, இவர் தெலங்கில் அபூர்வமாகப் பிரசங்கம் செய்வார்; என் சென்னைத் தோழர்களுள் ஒருவர். ஆறு வருஷம் இவருக்குக் கடுங்காவல்” என்று பாரதியார் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, ஆர்யா அங்கு வந்து சேர்ந்து கொண்டார். ஏதோ பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும், “பாரதி! உனக்கு ஒரு சேதி தெரியாதே! நான் கிறிஸ்தவன் ஆகிவிட்டேன். சிறையிலும் வெளியிலும் டேனிஷ் மிஷன் பாதிரிமார்கள் எனக்குப் பரிவு காட்டிச் செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச் சொல்வது? நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா. “இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு, நீ என்ன செய்வார்? ஹிந்து சமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது; உயிர் அற்ற ஜன சமூகம்!” என்று பாரதியார் பதறிக்கொண்டே சொன்னார். “ஜெயிலிலிருந்து நான் வெளி வந்த பிறகு என்னிடம் ஒருவரும் பேசத்துணியவில்லையே! எங்கே போனாலும் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். பாதிரிமார்கள் தாம் என்னிடம் நல்ல முகம் காண்பித்து, எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள். பிரசங்கத்திலே கை தட்டுகிறதும், வீட்டுக்குப் போனதும் பயப்படுகிறதுந்தான் ஹிந்துக்களின் வேலை. இந்தக் கூட்டத்திற்குள் இருக்க எனக்குச் சற்றுகூடப் பிடிக்கவில்லை. நான் கிறிஸ்தவனானதில் உனக்கு வருத்தமோ!” என்றார் சுரேந்திராநாத் ஆர்யா. பாரதியார் ஒன்றுமே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்; பிறகு சொன்னார் : “ மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு ஹிந்துவும், அதுவும் புத்தியும் தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு ஹிந்துவும் ஜனகமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்க முடியாமல், வேறு மதத்துக்குப் போய்விட்டால், அந்த ஹிந்துஜன சமூகத்தின் கதி என்னவாகும்! புருஷன் செய்த தவறுக்காக மனைவி தற்கொலை செய்துகொள்வதும், மனைவியின் தவறுக்காகப் புருஷன் சன்னியாசம் வாங்கிக் கொள்வதும் சகஜமாய்ப் போனால், குடும்ப வாழ்க்கை என்பதைப் பற்றியே பேச முடியாது. இனி, நீ பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்க வேண்டியவன். உன்னுடைய தீவிர தேசபக்தியை (இந்த இடத்தில் பாரதியார் கண்ணீர் விட்டார்) அவர்கள் மதப்பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும். உனக்கு நான் உபதேசம் செய்வது தவறு.” இவ்வாறு பாரதியார் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, ஆர்யா பொலபொலவென்று கண்ணீர் சொரிந்துவிட்டார். எனக்கு இன்னது செய்வதென்று தோன்றவில்லை. தாயுமானவர் கூறும் “மத்த கஜங்கள்” கண் கலங்குவதென்றால், அப்பபொழுது சின்னப் பிள்ளையாயிருந்த என்னைப்பற்றி ஒன்றுமே சொல்லத் தேவையில்லை. ஒரு நிமிஷம் பொறுத்துச் சொன்னார்: “ பாரதி, நான் அமெரிக்காவுக்குப் போகப்போகிறேன். பாதிரிமார்கள் எனக்கு ஒத்தாசை செய்வதாகச் சொல்லுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்வது உசிதம் என்று எனக்குத் தோன்றிற்று. இந்தத் தேசத்திலேயே கௌரவம் இருந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். நான் அமெரிக்கவுக்குப் போய் வருகிறேன். போவதற்கு முன் உன்னைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று இங்கே வந்தேன். உன்னைப் போல உயர்ந்த கவியாயிருந்தாலும் பரவாயில்லை; அப்பொழுது நான் அயல் நாட்டுக்குப் போகவேண்டா.” பாரதியாரின் முகத்திலே ஈயாடவில்லை. அவர் சொன்னார்: “உன் தீர்மனத்தை மாற்ற நான் ஆசைப்படவில்லை. ஆனால் ஒருவன் செய்த உதவிக்காக நன்றி பாராட்டுவது மனித இயற்கை. அதை ஒப்புக்கொள்ளுகிறேன். அந்த இயற்கை இல்லாமற்போனால் உலகம் கட்டுக்கொள்ளாது. ஆனால், நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்டா? “ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள். கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். அவைகளை ஒழிக்க முடியாது என்று பயந்து, வேறு மதத்தில் சரண் புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி, எல்லா மதங்களிலும் உண்மை உண்டு. “நம் ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம் வரலாம். அதற்காக அவர்களை ஒழிக்க, அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க, நாம் எண்ணலாகாது அவ்வப்போது எத்தனையோ ஆச்சாரியார்களும் பக்தர்களும் தோன்றி, ஹிந்துக்களின் வாழ்க்கைப் புனிதப்படுத்த முயன்றிருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள் அந்த கூட்டத்தில் சேரத்தகுந்தவர்கள். நீ கிறிஸ்தவனானது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “அமெரிக்காவிலோ வேறு அயல் நாடுகளிலோ படிக்கப் போன நமது இளைஞர்கள் பலர், வெள்ளை மனைவிகளுடன் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார்கள். நமது தேசம் இப்பொழுது இருக்கிற நிலையில், அது கூடாது என்பது என் எண்ணம். ஐம்பது வருஷங்களுக்குப் பின் அந்த மாதிரி நடந்தாலும் பாதகமில்லை. “உனக்கு உபதேசம் செய்வதாக நீ எண்ணிக்கொள்ளாதே; ஏதோ, என் மனதுக்கு உண்மை என்று தோன்றியதைச் சொல்லிவிட்டேன்; சொல்லலாம் என்ற பாத்தியத்துடன்தான் சொன்னேன். உனக்கு மனத்திலே ஆயாசமே வரப்படாது. அமேரிக்காவுக்குப் போ; என்ன வேண்டுமானாலும் செய்; தேசத்தை மட்டும் ஒரு நாளும் மறக்காதே.” ஆர்யா விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். பாரதியாருக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. “தேசத்துக்காக உழைத்துப் பாடுபட முன்வருபவர்களை இந்தத்தேசம் காப்பாற்ற முடியாமல் போனால், இதற்கு விமோசனம் ஏற்படப் போகிறதா? ஆர்யா எவ்வளவு யோக்கியன்! என்ன தீரன்! எதைக் கண்டும் அலுத்துக் கொள்ள மாட்டானே! அவனுக்கு அலுப்பும் மனக்கசப்பும் வருகிறதென்றால்! பராசக்தி! நீதான் இந்தத் தேசத்தை காப்பாற்ற வேண்டும்!” என்று தாமே பேசிக்கொண்டார். “வரால் மீனுக்கும் மீசை இருக்கிறது; உங்களுக்கும் மீசை இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?” என்று திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பிரங்கத்தில் துடுக்காக ஜனங்களைக் கேட்ட தீரன் இந்த ஆர்யாதான். அமெரிக்காவில் டாக்டர் பட்டம் – வைத்திய டாக்டர் அல்ல, தத்துவ டாக்டர் பட்டம் – பெற்று இந்தியாவுக்குத் திரும்பி வந்து, சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்த அர்யா இவர்தான். இவர் பாரதியாருக்கு ஆதிகால நண்பர். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து நூற்றக்கணக்கான போலீசார் புதுச்சேரிக்கு வந்து முகாம் போட்டார்கள் என்று சொல்லியிருந்தேன். இந்தப் போலீசாரால் ‘சுதேசி’களுக்கு, அதாவது அரவிந்தர், பாரதியார் உள்ளிட்ட தேசபக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கண்டும் கேட்டும், புதுச்சேரிவாசிகள் வெகுவாக மனமிரங்கினார்கள். புதுச்சேரியிலிருந்த ‘சுதேசி’களை எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும் என்று போலீசார் நிரம்பவும் பிரயத்தனம் செய்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மயற்சியும் பயனற்றுப் போய்விட்டது. முதல்படியாக அவர்கள் புதுச்சேரிவாசிகளின் துணையை நாடினார்கள். போலீசாரின் நய பய வார்த்தைகளைப் புதுச்சேரிவாசிகள் ஏற்கவில்லை. ‘சுதேசி’களின் சக்தியும் செல்வாக்கும் நாளுக்கு நாள் விருத்தியடைந்துகொண்டே வந்தன. புதுச்சேரி ஒதியஞ்சாலை என்றவிடத்தில் ஸ்தாபிக்கப்பட்ட “ஸர்க்கிள் ஸ்போர்டிப்” என்ற இளைஞர் கூட்டத்தார் அரவிந்தரை மொய்க்கத் தொடங்கினார்கள். பாரதியாருக்குப் புதுச்சேரி முழுமையும் கீர்த்தி. பொதுஜனங்கள் ஆதவைப் பெறாத போலீசார் வேறொரு யுக்தி செய்தார்; பிரெங்சு அரசாங்கத்தின் உதவியை நாடினார்கள். புதச்சேரி பிரெஞ்ச் கவர்னர் அவர்களைப் பெரிய போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி பேட்டி கண்டடார்கள். இவர்கள் கவர்னரோடு செய்த சம்பாஷணையின் சாரம், அவ்வப்போது ‘சுதேசி‘களின் காதுக்கு எப்படியோ எட்டிவிடும். எவ்வித அரசியலைபும் விரும்பாதவர்களுக்கு அராஜகர்கள் என்று பெயர். அவர்களுக்கு எவ்வித அரசியல் முறையும் கூடாது. அவர்களுக்கு ஐரோப்பாவில் “அனார்க்கிஸ்ட்”, “நிஹிலிஸ்ட்” என்று பெயர்கள் வழங்கி வந்தன. இந்தக் கூட்டத்தின் தனி நபர்களுக்கோ, இந்தக் கூட்டத்துக்கோ, ஐரோப்பாவில் எந்த அரசாங்கமும் இடங்கொடுப்பதில்லை. நாட்டை விட்டுத் துரத்திவிடுவார்கள். அனார்க்கிஸ்டாயிருப்பது ஐரோப்பாவிலே பயங்கரமான குற்றமாகப் பாவிக்கப்பட்டு வந்தது. புதுச்சேரியில் வசித்து வந்த ‘சுதேசி‘கள் அராஜகர்கள் என்று போலீசார், பிரெஞ்சுக் கவர்னருக்கு மந்திரோபதேசம் செய்தார்கள். ருசு வேண்டும் என்றார் கவர்னர், ருசுவுக்குப் போலீசார் எங்கே போவது? புதுச்சேரியிலிருந்து ‘சுதேசி‘களை நாடு கடத்த முடியாது என்று கவர்னர் சொல்லிவிட்டார். ஏதோ ஒரு ஜந்துவுக்கு ஆயிரம் உபாயங்கள் தெரியும் என்று சொல்வார்கள். போலீசாரின் இந்த யுக்தி பலிக்காமல் போனால் அவர்கள் வசம் வேறு உபாயங்கள் இல்லையா? பண்டை காலத்துப் போர்களிலே, ஓர் அஸ்திரம் பலிக்காமல் போனால், வீரர்கள் வேறு அஸ்திரங்களைப் பிரயோகம் செய்ததில்லையா? போலீசார் வேறு உபாயத்தை நாடினார்கள். ‘சுதேசி‘கள் யாவரும் அந்நியர்களல்லவா? அவர்களுக்குப் பிரெஞ்சுப் புதுச்சேரியில் குடியிருப்புப் பாத்தியம் இல்லாமல் அடித்துவிடவேண்டும் என்பது போலீசாரின் புதிய முயற்சி. அதன்பொருட்டு, பிரெஞ்சு இந்திய சட்டசபையில் ‘ அந்நியர் சட்டம்’ என்று ஒரு புதிய சட்டம் செய்யுமாறு பிரெஞ்சு அரசாங்கத்தைத் தூண்டினார்கள். இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தால், எப்படியேனும் ‘சுதேசி‘களை வெளியேற்றிவிடலாம் என்பது போலீசாரின் கருத்து. இத்தகைய சட்மொன்று உண்டாக்க, பிரெஞ்சுக் கவர்னர் சம்மதித்தார். அந்நியர்களின் தூண்டுதலின் பேரில், எந்த அரசாங்கமாவது சட்டம் செய்யுமா என்று கேட்கலாம்; பிரெஞ்சு இந்தியாவின் நிலைமை அப்படியிருந்தது. 1911 – 1912 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் தேசத்திதன் நிலைமை மிகவும் கேவலமாயிருந்தது. பக்கத்திலே, ஜன்ம விரோதிகளான ஜெர்மானியர்களுக்குத் தலைவர் கெய்ஸர். கெய்ஸர் செய்த காரியங்களெல்லாம் தங்களை அவமானப்டுத்தும்பொருட்டே செய்தார் என்பது பிரெஞ அரசாங்கத்தாரின் கருத்து. மொராக்கோ தேசத்தில், அகாதிர் என்ற துறைமுகத்திலே, கெய்ஸர் தமது யுத்தக்கப்பலை நிறுத்தி அட்டஹாசம் செய்தது பழங்கதை. இதையும் கெய்ஸரின் ஏனைய செயல்களையும் கண்டு, பிரெஞ்அரசாங்கத்தார் வெகுண்ட போனர்கள். இங்கிலாந்தின் உதவியைப் பெற்றாலொழிய, ஜெர்மனியரின் அதிக்கிரமத்தைச் சமாளிக்க முடியாது என்று பிரெஞ்சு அந்நிய நாட்டு மந்திரி தீர்மானங்கொண்டார். எனவே, பிரெஞ்சு அரசியலார் தமது பழைய பகைமையை மறந்து, இங்கிலாந்தினிடம் காதல்கொண்டு உறவாட ஆரம்பித்தார்கள், இங்கிலீஷ்காரர்களின் மனம் கோணாத வகையில் நடந்தக்கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கொண்டாகள், பிரெஞ்சு அரசியல் நிர்வாகிகள். இந்த நிலைமைதான், பிரெஞ்சுக் கவர்னரைப் புதிய சட்டத்துக் இசையத் தூண்டியது. ‘சுதேசி‘களை அடியோடு கெடுத்துவிடப் புதுச்சேரி சட்டசபை மெம்பர்கள் துணியவில்லை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த தேதிக்கு முன்னால், ஒரு வருஷ காலம் புதுச்சேரியில் வசித்திருக்கும் அந்நியர்கள், ஐந்து ஆனரரி மாஜிட்ரேட்டுகளிடமிருந்து கையெழுத்து வாங்கி பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொண்டால், அவர்கள் குடியிருக்கலாம் என்ற ஷரத்து அந்தச் சட்டத்தில் புகுத்தப்பட்டது. இந்தச் சிறிய ஷரத்து அந்தச் சட்டத்தில் புகுவதற்குச் ‘சுதேசி‘கள் என்ன மயற்சி செய்யவேண்டியிருந்தது என்பத இப்பொழுது யாருக்குத் தெரியும்? பிரெஞ்சுக் கவர்னரைத் தூண்டுவதோ பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம். ‘சுதேசி‘களோ பஞ்சைப் பேர்வழிகள் என்று கருதப்படுபவர்கள். பிரெஞ்சுக் கவர்னர் இங்கிலீஷ்காரர்களின் சொல்லைக் கேட்பாரா, ‘சுதேசி‘ சொல்லைக் கேட்பாரா? மேற்சொன்ன திருத்தத்தைப் பிரிட்டிஷ் போலீசார் பெரிதாக மதித்து லட்சியம் செய்யவில்லை. ஏன்? ஐந்து கௌரவ மாஜிஸ்ட்ரேட்டுகளின் கையெழுத்துகள் (அத்தாட்சிகள்) ‘சுதேசி‘களுக்கு அகப்படாமல் செய்து விடலாம் என்பது அவர்களுடைய தைரியம். சென்ற ஐரோப்பியப் போரில், இங்கிலீஷ் சேனைகளைப்பற்றிக் கேவலமாக எண்ணிய கெய்ஸர் என்ன வாழ்ந்தார்? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பெரியோர்கள் சொல்லுவதை ஏளனம் செய்யலாகாது. அந்நியர் சட்டம் அமலுக்கு வந்த சில தினங்களுக்குள், ‘சுதேசி’கள் (அந்நியர்களானபடியால்) பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஐந்து ஆனரரி மாஜிஸ்ட்ரேட்டுகளை எங்குக் கண்டு பிடிப்பது ? உள்ளபடியே எந்தக் காலத்திலும் பணக்காரர்கள், பதவிகள் பெற்றவர்கள் அரசாங்கத்தின் சார்பாகத்தானிருப்பார்கள். இதை நம்பித்தான் மேற்சொன்ன சிறு திருத்தத்துக்குப் பிரிட்டிஷ் போலீசார் இணங்கியது. இந்தத் தடவை, ‘சுதேசி’கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் வர்க்கத்தாருக்கு ஆனந்தம். எல்லா ஆனரரி மாஜிஸ்ட்ரேட்டுகளையும் அவர்கள் கண்டு பேசியாகிவிட்டது. வெற்றி அவர்களுக்குத்தான் என்று முடிவு கட்டிக்கொண்டு, அவர்கள் உல்லாசமாய்க் காலம் போக்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு வருஷ ஷரத்து இருக்கிறதே, அததான் ‘சுதேசி’களுக்குக் கடைசி அடைக்கலமாகும். எப்படியாவது ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளைப் பிடிக்க வேண்டும். யார் யார் கௌரவ மாஜிஸ்ட்ரேட் என்பரே ‘சுதேசி’களுக்குத் தெரியாது. யாரைப் போய்ப் பார்ப்பது? ‘சுதேசி’கள் முகவாட்டத்துடனிருந்தார்கள். அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார் முதலிய பெரியவர்கள் அரவிந்தரின் பங்களாவில் இதைப்பற்றிக் கூடிப் பேசுவார்கள். யோசனை புலப்படவில்லை. எல்லோருக்கும் சிறிது மனக்கலக்கம் என்று சொல்லத் தேவையில்லை. “ சரி! நாளைக்குச் சாயங்காலம் பேசிக்கொள்ளுவோம் ” என்றார் பாரதியார். இரவு ஒன்பது மணியிருக்கும். பாரதியார் வீட்டுக்குத் திரும்பிப் போனார். அப்பொழுது அரவிந்தர் பங்களாவில் எனக்கு ஜாகை. ‘ ஓய் ’ என்று என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, நாளைக்குக் காலமே எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வாரும் ! ” என்று சொல்லிவிட்டுப் பாரதியார் போய்விட்டார். மறுநாள் காலையில் குறித்த நேரத்துக்கு, நான் பாரதியாரின் வீட்டுக்குப் போனதும், “புறப்படவோமா?” என்றார் பாரதியார். முதல் நாளிரவு பாரதியாரின் முகத்தில் காணப்பட்ட அதைரியம் அப்போது இருந்தவிடம் தெரியவில்லை. “எங்கே போகிறது ?” என்றேன். “கேள்வி கேட்காமல் கூட வரணும்” என்றார் பாரதியார். கேள்வி கேட்காமல், ஒன்றும் பேசாமல் கூட எதற்குப் போகிறது என்று எனக்கு விளங்கவில்லை. எனக்குக் கொஞ்சம் ஆத்திரம் வந்தது. ஆத்திரம் வந்து பிரயோசனம் என்ன? கூடவே மௌனமாய்ப் போனேன். சிறிது தூரம் சென்றதும், ‘சபாஷ்’ என்று என்னைப் பாரதியார் தட்டிக்கொடுத்தார். ஆகாயத்திலிருந்து விழும் மழைத்துளிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சாதகப்பட்சியின் நிலைமை என்னுடையது. எனக்குச் சற்று முன் வந்த ஆத்திரம், வந்த வழி, போன வழி தெரியவில்லை. இரண்டு பேரும் கலவலா சங்கர செட்டியாரின் விட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். செட்டியார் நடுக்கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். “சுவாமி” என்று எழுந்து நின்று கும்பிட்டார் செட்டியார். “நீங்கள் எல்லாரும் இருந்தும், நாங்கள் புதுச்சேரியை விட்டுப் போக வேண்டுமா? புதுச்சட்டம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ ?” என்றார் பாரதியார். சட்டம் செய்யும் காலத்தில் செட்டியார் புதச்சேரியில் இல்லை. அவர் சென்னைக்குச் சென்றிருந்தார். யாதொரு தகவலும் அவருக்குத் தெரியாது. பாரதியார் அந்நியர் சட்டத்தின் ஷரத்துகளை எடுத்து விரிவாகச் சொன்னர். “இவ்வளவுதானே!” என்றார் செட்டியார். நான் சின்னப் பிள்ளை. இதைக் கேட்டதும் எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. “ என்ன செய்யலாம்?” என்றார் பாரதியார். “ஐந்து பேர் கையெழுத்துகளும் வாங்கித் தருகிறேன், பிரமாதமான காரியமில்லை. நானும் ஒரு கௌரவ மாஜிஸ்ட்ரேட்தான்” என்றார் செட்டியார். “ நல்லது. இன்றைக்குள் முடியுமா?“ என்றார் பாரதியார். “இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் காரியம் முடிந்துவிடும். கையெழுத்து வாங்க வேண்டிய தஸ்தாவேஜியை எழுதி என்னிடம் கொடுங்கள். நான் இரண்டு மணி நேரத்துக்குள் உங்களை உங்கள் வீட்டில் வந்து பார்க்கிறேன்” என்றார் செட்டியார். ஞாபகம் வந்தது போல “புதுப்பாட்டு ஏதாவது பாடுங்களேன் ” என்றார் செட்டியார். ” ஜயமுண்டு பயமில்லை மனமே ” என்ற பாட்டைப் பாடினார் பாரதியார். அப்பொழுதுதான் அதைக் கவனம் செய்தார் என்று நான் சொல்லவரவில்லை. அதை இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் புதிதாகப் பாடியிருக்கவேண்டும். கையெழுத்தாகி, அன்று பிற்பகல் மூன்று மணிக்குள் அரவிந்தர், அய்யர், பாரதியார், சினிவாசாச்சாரியார், மற்றும் நாங்கள் எல்லோரும் பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்துகொண்டோம். எங்கள் தஸ்தாவேஜிகளைப் பிரெஞ்சுப் போலீசார் ஒப்புக்கொண்டார்கள். தொல்லை தீர்ந்தது. அன்று எங்கள் பின்னே வந்த பிரிட்டிஷ் இந்தியப் போலீசாரின் முகத்தில் ஈ ஆடவில்லை. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? ஆண்டவன் இருக்கிறதை அவர்கள் மறந்தார்கள் போலும்! அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வி. சில்லறை உபாயங்கள் பயன்படாமல் போகவே, பெரிய யோசனையொன்று செய்தாகள். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதீனத்துக்குள்ளிருந்த இடங்களை இங்கிலீஷ்காரர்கள் வாங்கிக்கொண்டு, அதற்குப் பரிவர்த்தனையாக, மேற்கு இந்தியத் தீவுகளில் சிலவற்றைப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்துவிடுவது என்று இங்கிலாந்து மந்திரிகள் பேரம் பேசினார்கள். இதற்குப் பிரெஞ்சு ஆரசாங்கத்தார் அனேகமாய்ச் சம்மதிப்பார்கள் போல் இருந்தது. பாரிஸ் நகரத்திலிருந்த லா போர்த், போல் புளூஸன் முதலிய பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார். பாரதியாரின் நண்பரான பொன்ன முருகேசம் பிள்ளைக்குச் செல்வாக்குள்ள பல பிரெஞ்சுக்காரர்களைப் பாரிஸ் நகரிலும் ஏனைய நகரங்களிலும் கடிதப் போக்குவரத்து மூலமாய்த் தெரியும். சில பிரபல வியாபாரிகளையும் அவருக்குத் தெரியும். பிரான்சிலே, மந்திரிகள் மாறகிற சமயம். இந்த யோசனையை எப்படியாவது காலங்கடத்த வேண்டும் என்பது ‘சுதேசி’களின் கருத்து. பாரதியார், பொன்னு முருகேசம் பிள்ளையையும் ஏனைய நண்பர்களையும் பிரான்சுக்குக் கடிதம் எழுதும்படி செய்தார். பரிவர்த்தனை செய்யப்படாது என்று புதுச்சேரியயில் கூட்டம் போட்டுத் தீர்மானம் செய்ததாகக்கூட என் நிநைவு; நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. லா போர்த், போல் புளூஸன் முதலியவர்கள் இந்த விஷயமாக அரும்பாடு பட்டார்கள். அவர்களுடைய முயற்சிகளும் பயன்படாமட்ல போகுமோ என்று பயமாயிருந்தது. இந்தச் சமயத்தில் பிரெஞ்சு மந்திரி சபையில் மாறுதல் எற்பட்டது. ப்வாங்கரே அவர்கள் பிரெஞ்சு முதல் மந்திரியானார். (இந்தப் பெயரை “ பாயின் சேகர் ” என்று தமிழ்நாட்டில் த்வறாக எழுதுகிறார்கள், உச்சரிக்கிறார்கள்.) ப்வாங்கரே முதல் மந்திர்யானதும், கணீர் என்று ஒரு வார்த்தை சொன்னார்: “பிரெஞ்சு கொடி பறக்கும் எந்த நாட்டையும் பரிவர்த்தனை செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். பிரெஞ்சு ரத்தம் சிந்திய மண் எனக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் புனிதமானது, அதுவும் துய்ப்ளெக்ஸ் உருவச்சிலை நிற்கும் புதுச்சேரியயை, யாருக்கும் பரிவர்த்தனை செய்யப் பிரெஞ்சுக் காரர்கள் இடக்கொடுக்கலாகாது” என்று பிரெஞ்சு டெபுடிகளின் சேம்பரில் (பார்லிமெண்டு சபையில்) பேசினார். புதுச்சேரியில் வசித்து வந்த ’ சுதேசி’களின் மனக்கலக்கம் ஒருவாறு ஒழிந்தது. ஆனால், பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் பிடிவாதக்காரர்கள், அவர்கள் தங்கள் தோல்வியைப் பொறுத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவார்கள்? 15 பகுதி 16 உபகாரி சங்கர செட்டியாரின் தீவிர முயற்சியால் ஐந்து கௌரவ மாஜிஸ்ட்ரேட்டுகளின் கை எழுத்துகள் கிடைத்துவிடவே, அப்பொழுது புதுச்சேரியிலிருந்த ‘சுதேசி’கள் அத்தனைபேரும் ‘எத்ராங்ஷேர்’ (அந்நியர்) சட்டத்துக்கு இரையாகாமல் தப்பித்துக் கொண்டார்கள். முற்றுகை போட்டு வந்த போலீசாரின் முகங்களைப் பார்க்க வேண்டுமே! ஈ ஆடவில்லை. புதுச்சேரிச் சட்டசபையில் இந்தச் சட்டம் விவாதத்துக்கு வரும் என்று கேள்விப்பட்ட நாள் முதல், சட்டம் பூர்த்தியான தேதி வரையில் ‘சுதேசி’களளக்குக் கவலைதான். ஸ்ரீஅரவிந்தர்கூட இந்தக் கவலையை அடிக்கடி முகத்தில் காண்பித்துக்கொண்டார் என்றால், வேறு என்ன சொல்ல வேண்டும்? ‘சுதேசி’களுள் நிரம்பவும் கவலைப்பட்டவர் வ.வே.சு.அய்யர்தான். ஏன் அவர் மட்டும் அவ்வளவு கவலைப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால் பாரதியாரோ, வசந்தகாலக் கயிலைப் போலப் பாடிக்கொண்டுதான் இருந்தார். சிரிப்புக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தக் ‘கண்டம்’ சுதேசிகளை ஒன்றும் செய்யாது என்று அவருக்கு மட்டும் மனேதிடமும் நம்பிக்கையும் ஏற்பட்டதற்குக் காரணம் தெரியவில்லை. கேட்டால், பராசக்தி இருக்கிறாள் என்று பாரதியார் ஒருகால் சொல்லியிருக்கக்கூடும். அது என்னவே, மனம் கலங்காதவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அந்தச் சந்தப்பத்தில் இலேசாகச் ‘சப்பையாய்’ப் போய்விட்டார்கள். காரியம் செய்யத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி வந்த பாரதியார்தான் இந்த நெருக்கடியில், முதல் பரிசு பெறக்கூடிய மனோதிடத்தைக் காண்பித்தார். ‘சுதேசி’கள், வலையில் அகப்படாமல் தப்பிப்போனது முற்றுகைக் போலீசாருக்குப் பிடிக்கவில்லை. ஓர் உபாயம் தோற்றால் என்ன? இன்னோர் உபாயம். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மட்டும் ‘சுதேசி’களுக்குத் தெரியவில்லை. பாரதியார் சொல்லுவதைப் போலச் ‘சுதேசி’கள் ‘கியால்’ பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ‘சுதேசி’களின் பாடு வேறுவகையில் திண்ணடாட்டமாகப் போய்விட்டது. அவர்களுக்கு வரக்கூடிய ‘மணியர்டர்கள்’ எல்லாம் தபாலாபீஸிலேயே தடுக்கப்பட்டுவிட்டன. அவசரத்துக்குக் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நல்லது என்று யோசனையே இல்லாத பாரதியாரின் நிலையும் நிரம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. இந்த விஷயத்தில் வ.வே.சு.அய்யர் நிரம்பவும் சமர்த்தர்; கையிலே போதுமான பணம் வைத்துக்கொண்டிருந்தார். சீனிவாஸாச்சாரியாருக்கும் பாதகமில்லை. அப்பொழுது அரவிந்தரின் நிலைமையும் பாதகமில்லை. இத்தகைய சமயத்தில், இருக்கிறவர்கள் இல்லாதவ்ர்களுக்கு உதவி செய்வதுதான் தேசப்பிரஷ்டமான தேசபக்தர்கள் எந்த நாட்டிலும் கைக்கொள்ளும் முறையாகும். அத்தகைய உதவி ஒன்றும் பாரதியாருக்குக் கிடைக்கவில்லை. காலம் போவது கஷ்டமாய்ததான் இருந்தது. இப்படி இருக்கையில், அய்யர் வீட்டில் ஒரு நாள் காலையில் அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. வேலைக்காரி கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்கையில், வாளியில் ஏதோ தடுக்கப்பட்டது போலத் தோன்றிற்று. அவள் அதை அய்யரிடம் சொன்னாள். அய்யர் கிணற்றைத் துழாவித்துழாவிப் பார்த்தார். நன்றாக ‘சீல்’ வைத்திருந்த மை ஜாடி ஒன்று அகப்பட்டது. ஜாடி கொஞ்சம் பெரிய ஜாடிதான். அதை அய்யர் வெறியே எடுத்தார். அய்யருக்கு உடனே சந்தேகம் உண்டாகிவிட்டது. எதிரிகளின் சூழ்ச்சி என்று மனத்தில் முடிவு கட்டிக்கொண்டார். ஜாடியின் சீலைப் பெயர்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அவருக்கு ஆசை, இருந்தாலும், சீலை உடைக்காமலே அதைப் பிரெஞ்சுப் போலீசாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றிற்று. இந்த மாதிரி ஜாடி அகப்பட்டதை உடனே அரவிந்தர், பாரதியார் முதவியவர்களுக்கு அய்யர் தெரியப்படுத்தினார்; ஜாடியைப் பிரெஞ்சுப் போலீசாரிடம் ஒப்படைத்து, அது கிடைத்த வகையைப்பற்றி வாக்குமூலம் கொடுத்தார். பிரெஞ்சுப் போலீசார் சீலைத் திறந்து பார்த்தார்கள். தமிழ்நாடு முழுவதும் சதிக் கூட்டங்கள் இருப்பதாகவும் அவை புதுச்சேரித் தலைமைக் காரியாலயத்தால் நடத்தப்ட்டு வருவதாகவும் ஜாடியில் துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. வெடிகுண்டு செய்யும் முறையும் துண்டுப் பிரசுரங்களில் விவரிக்கப்பட்டிருந்தது. சில ஆணிகளும் ஊசிகளும் ஜாடிக்குள் இருந்தன. இது ‘சுதேசி’களைச் சிக்க வைக்கத் தக்க ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. திறமையான கற்பனையோடு செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியில் வெட்கக்கேடான சங்கதியைக் கேளுங்கள். புதுச்சேரித் தலைமைச் சதிக்காரியாலயத்துக்கு நீலகண்ட பிரம்மசாரி தலைவராம்! அரவிந்தர், பாரதியார் போன்ற பெரியோர்கள் அந்தக் கூட்டத்தில் சாதராண அங்கத்தினர்களாம்! பிரெஞ்சுப் போலீஸார், ‘சுதேசி’களின் வீடுகளைச் சோதனை போட்டார்கள். சோதனை அதிகாரி ஒரு பிரெஞ்சக்காரர். சுமார் இருபத்தைந்து வயது இருக்கும். இவருடைய உத்தியோக அந்தஸ்தில் இவருக்கு ‘ஜுட்ஜ் ஆன்ஸ்திரிக்ஸியோன்’ என்று பெயர். பிரிட்டிஷ் இந்தியப் ’பிராஸிக்யூட்டிங் இன்ஸ்பெக்டர்’ மாதிரி. ஆனால், இவர் மற்ற நீதிபதிகளுடன் சமமாக உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் உரிமை பெற்றவர். இவர்தான் சோதனைபோட வந்தவர். அரவிந்தரின் பங்களாவுக்கு வந்ததும், அவர் வழக்கமாக எழுதும் மைஜையின்பேரில் க்ரீக் புஸ்தகம் ஒன்றையும், லாடின் புஸ்தகம் ஒன்றையும் சோதனை அதிகாரி பார்த்தார். “தங்களுக்கு லாடின் தெரியும்? கிரீக் பாஷை தெரியும்-” என்று அரவிந்தரைக் கேட்டார். “ஆம்” என்றார் அரவிந்தார். அதற்குப் பிறகு சோதனையே இல்லை. அதிகாரி போய்விட்டார். பாரதியாரின் வீட்டுக்குப் போனார் ; நிறையக் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்தார்; அவை என்ன என்று பாரதியாரைக் கேட்டார். “இவை நான் எழுதும் கவிதைகள்” என்று பாரதியார் பதில் சொன்னார். “ தாங்கள் கவிதை எழுதுவீர்களா?” என்று சோதனை அதிகாரி கேட்டார். “ஆம்” என்றார் பாரதியார். அதோடு அந்த வீட்டிலும் சோதனை நின்றுவிட்டது. வ.வே.சு.அய்யர் வீட்டில் மட்டுந்தான் கடுமையான சோதனை நடந்தது. இரண்டு மூன்று மணி நேரத்துக்கு அதிகமாகவே சோதனை நடந்தது. ஆனால், போலீசார் எதிர்பார்த்தப்டி அவர்களக்கு வேண்டுமென்றாற்போல எதவும் கிடைக்கவில்லை. என்றாலும் ‘சுதேசி’களின் பேரில் கேஸ் நடந்தது. இந்தக் கேஸில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். என் பெயர் என்ன என்று கேட்டார்கள். வ.ராமஸ்வாமி என்றேன். ‘வ.ரா. வா?’ என்று திரும்பக் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். “அப்படியானால் துண்டுப் பிரசரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராமஸ்வாமி நீர் அல்ல” என்று முதலிலேயே என்னை விலக்கிவிட்டார்கள். அய்யர், அரவிந்தர் முதலானவர்களின்பேரில் கேஸ் நடந்து வந்தது. சுமார் இரண்டு மாத காலம் வரையில் நடந்தது. ஒவ்வொருவராக விலக்கப்பட்டார்கள். கடைசியில் அய்யரும் நிரபராதி என்று நீதிபதிகள் தீர்ப்புச் சொன்னார்கள். முற்றுகைப் போலீஸாரின் இந்தச் சாமர்த்திய வேலையும் பலிக்காமல் போகவே அவர்கள் சிறிது காலம் எவ்வித சேஷ்டையிலும் இறங்காமல் சும்மா இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டது. ஜனங்கள் அவர்களைப் பார்த்து நையாண்டி செய்யத் தொடங்கினார்கள். தருமத்தை ஒரு நாளம் வெல்ல முடியாது என்று பேசிக்கொள்ளுவார்கள் புதுச்சேரிவாசிகள். இந்தச் சம்பவத்துக்ப் பின் பிரெஞ்சு சர்க்கார் அதிகாரிகளுக்குச் ‘சுதேசி’களின்பேரில் இருந்த சந்தேகம் சிறிதும் குறைந்து போய், நம்பிக்கையும் உண்டாயிற்று, என்றாலும், பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் மட்டும் அவர்களைக் கண்காணிப்பதைச் சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. ‘சுதேசி’களுக்கு ஆளுக்கு இரண்டு போலீஸ்காரர்களைக் காவல் போட்டார்கள். நாங்கள் இநத்ச் சந்தர்ப்பத்தை கைநழுவ விடவில்லை. அவர்களுக்கு நாங்கள் சுயராஜ்யப் பிரசாரம் செய்வோம். நாங்கள் சொலவது அவ்வளவும் உண்மை என்று நினைப்பதைப் போல முகத்தை வைத்தக் கொண்டு அவர்களும் கேட்டக்கொண்டிரப்பர்ர்கள். மொத்தத்திலே இரு தரப்பாருக்கும் பொழுதுபோக்கு. சில போலீஸ்காரர்கள், எங்களிடத்தில் வெகுவாகக் ‘கரடி‘ விட்டுப் பார்ப்பார்கள். எங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போகச் சில புதுச்சேரிக் காலிகள் எற்பாடு செய்துகொண்டிருப்பதாக எங்களிடம் சொல்லுவார்கள். மூன்றாவது தடவையாக முற்றுகைப் போலீசார் தோற்ற பிறகு ‘சுதேசி’களின் பண வருவாய் ஊற்றுகளை அடியோடு வற்றும்படியாகச் செய்துவிட்டார்கள். இந்த முயற்சியின் பயனாக, அரவிந்தரிடமும் பணமில்லாமல் போய்விட்டது. எப்படி உணவுப் பொருள்களை வாங்குவது? நான் அப்பொழுது அரவிந்தரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். முறையாக வைத்து, இரண்டு இரண்டு பேர்களாக நாங்கள் சமைப்போம். ஒரு நாள் காலையில், சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை. காய்கறி வாங்கக்கூடப் பணமில்லை. என்ன செய்வது என்று அரவிந்தரைக் கேட்டோம் என்ன சாமான்கள் மிச்சமிருக்கின்றன என்று அவர் எங்களைக் கேட்டார். “அரிசி, மிளகாய் வற்றல், நல்லெண்ணெய், உப்பு” என்றோம். “சாதம் சமைத்து, மிளகாய் வற்றலைப் பொரித்து வையுங்கள்” என்றார். பொரித்த வற்றலைப் பொடியாக்கிச் சாதத்தில் கலந்து. உப்பைச் சேர்த்து, அன்றைக்குச் சாப்பிட்டோம். அரவிந்தர் மட்டும் அன்றைக்கும் வழக்கமாய்ச் சாப்பிடும் அளவு சாப்பிட்டார். அரவிந்தர் மகான் என்பதற்கத் தடை என்ன? அடிமை நாட்டில், சிறந்த தேசபக்தர்களாகவும் மேதாவிகளாகவும் இருப்பவர்களுக்கு நேரும் கதியைச் சிந்தனை செய்து பாருங்கள். பரோடா சமஸ்தானத்தில் சுகமாக 1000 ரூபாய் சம்பளம் வாங்கியவரும், சுமார் ஒரு டஜன் பாஷைகளில் புலவரான இணையற்ற இங்கிலீஷ் எழுத்தாளர் என்ற கல்கத்தா ஹைகோட்டு நீதிபதிகளால் புகழப்பெற்றவருமான அரவிந்தர், மிளகாய் வற்றல் சாதம் சாப்பிட நேர்ந்தது என்பதைச் சாதாரணவிதிக்கு அடுக்குமா? வற்றல் சாதம் சாப்பிட்டாலும் சாப்பிட்டார்; அன்றைக்கே அரவிந்தருக்கு யாரோ ஒரு நண்பர் இரண்டாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடுத்தார். இந்தச் சம்பவம் வேடிக்கையாக இருக்கிறதல்லவா? இரே மாதிரி, பாரதியார் சம்பந்தப்பட்ட வரையில் பல தடவைகளில் நடந்திருக்கிறது. ஒரு சமயம், தென் ஆப்பிரிக்கா, டர்பனிலிருந்து பாரதியாருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தது. ஆனால் அந்தத் தொகையை ஒரு வாரத்துக்குமேல் கண்ணால் காண முடியவில்லை. இந்த மாதிரிப் பல வகைகளிலும் அமளி நேர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மகத்தான நஷ்டம் ஒன்று பாரதியாருக்கு ஏற்பட்டது. அது தமிழ்நாட்டின் நஷ்டம் என்று சொல்லவும் வேண்டுமோ? ‘சின்னச் சங்கரன் கதை’ என்று பாரதியார் ஒரு புத்தகம் எழுதி அனேகமாக முடித்து வைத்திருந்தார். இருபத்தொன்பது அத்தியாயங்கள் கொண்ட நூல் அது என்பது என் ஞாபகம். அருமையான புத்தகம்! அது எதைப்பற்றிய நூல் என்று கேட்கிறீர்களா? அது நாவல் அல்ல; பாரதியாரின் சுய சரிதமும் அல்ல; விகடம் நிறைந்தது; ஆனால் வேடிக்கைக் கதை அல்ல; புராணம் அல்ல; முழுவதும் கிண்டலுமல்ல. என்றாலும், நான் மேலே குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதையே, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு என்றுகூடச் சொல்லலாம். சோக ரஸத்தில் எழுதப்பட்ட நூல் அல்ல; நகைச்சவையும் கிண்டலும் குமிழிவிட்டுக் கொந்தளிக்கும் புத்தகம். பாரதியார் எதை எழுதினாலும், அதை நெருங்கிய நண்பர்களுக்குப் படித்து காண்பிக்காமல் இருப்பதில்லை ஒரு தற்பெருமை உணர்ச்சியால் எழுந்த ஆசையல்ல. நாம் எழுதும் தமிழ் பெரும்பான்மைத் தமிழர்களுக்குப் புரிய வேண்டும் என்பது பாரதியாரின் திடமான கொள்கையாகும். எனவே, தாம் எழுதினதைப் பிறர் எளிதிலே புரிந்தகொண்டு ரசிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் படித்துக் காண்பிப்பார். படித்துக்கொண்டு போகும் பொழுதே, கேட்பவர்களின் முகத்தைக் கவனித்துப் பார்த்துக்கொண்டே போவார்; எந்தச் சமயத்திலாவது, அவர்களுடைய கண்கள் ஒளியிழந்து, முகம் அசட தட்டிப் பொகுமாகில், உடனே படிப்பதை நிறத்திக்கொள்வார்; அவர்களுக்கு விளங்காத வார்த்தையை உடனே எடுத்தவிட்டு, வேறு வார்த்தையை உபயோகப்படுத்துவார்; கடடினமான கருத்தாக இருந்தால் அதைத் தெளிவுபடக்கூடிய பாஷையையும் உபமானத்தையும் கைக்கொள்ளுவார். “சின்னச் சங்கரன் கதை’யை, அவர் படித்த நாங்கள் (சிலர்தான்) கேட்டிருக்கிறோம். சிரித்து, சிரித்து, வயிறு அறுந்து போவது மாதிரி இருக்கும், சிரிப்பினால் குடல் ஏற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பல காலம் பயந்ததுண்டு. படீர் படீர் என்று வெடிக்கும் ஹாஸ்யமும், அந்தக் கதையில் நிறைந்து கிடந்தது. கிண்டல் என்றால் சாதாரணத் தெருக்காட்டுக் கிண்டலா? நமது ஜனங்கள் எப்படியும் வாழத்தகுமா என்ற துக்கம் தோய்ந்த கிண்லைத்தான் நாங்கள் அந்தப் புத்தகத்தில் கண்டோம். ‘சின்னச் சங்கரன் கதை‘யின் கையெழுத்துப் பிரதி எப்படி மாயமாய் மறைந்து போய்விட்டது என்று தெரியவில்லை. முகேசன் என்ற இளைஞன் அப்பொழுது பாரதியாரின் வீட்டில் வேலை செய்துகொண்டருந்தான் அவன் திடீரென்று காணாமல் போனான். புதுச்சேரியில் அவனைக் காண முடியவில்லை. அவன் மறைந்த சமயத்தில் தான் ‘சின்னச் கிங்கரன் கதை‘யும் காணமால் போய் விட்டது. காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் விழுந்தால், காக்கைதான் அதைத் தள்ளிவிட்டது என்று ஊகிப்பது தர்க்க சாஸ்திரமல்லவா? அந்தத் தர்க்க முறையை ஒட்டி, முகேசன்தான் குற்றவாளி என்று எங்களில் சிலர் எண்ணத் துணிந்தார்கள். இதைக் கேட்டதும் பாரதியாருக்கு வந்த கோபத்துக்கு எல்லையே இல்லை. எங்களைக் கடிந்து பேசினார்; முருகேசனைப் புகழ்ந்தார். ஓர் இடத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்தால், அந்த வீடோ ஸ்தாபனமோ ஒரு நாளும் உருப்படாது என்று எங்களுக்கு எடுத்துக் காண்பித்தார். இருந்தாலும், “முருகேசன் ‘நிரபராதி‘ என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? அவன் ஏன் ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை? அவனைப் புதுச்சேரியில் காணோமே!” என்று நாங்களும் விடாப்பிடியாகக் கேட்டோம். பாரதியாரின் மனம் மாறவில்லை. ஆனால், அவர் மௌனமாக இருந்துவிட்டார். சுமார் நாற்பது நாள் கழித்து, முருகேசன் தோன்றினான். அவன் எலும்புந்தோலுமாக இருந்தான். அவனை அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாற்பது நாள்களுக்குள் அவன் எப்படிச் சோளக்கொல்லைப் பொம்மை போல ஆனான் என்ற நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். காலை நேரம். பாரதியார் அப்பொழுது படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. முருகேசனை, நாங்கள் பாதி அனுதாபத்தோடும் பாதி சந்தேத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று பாரதியார் அங்கே வந்துவிட்டார். உடனே முருகேசன், தேங்கிக்கிடந்த நீர், அணையை உடைத்துக்கொண்டு பிரவாகமாவது போலத் தேம்பித் தேம்பி அழுதான். பாரதியார் எங்களை ஒருமுறை பார்த்தார்; மின்னலைப் போலப் பாய்ந்த முருகேசனைக் கட்டி அணைத்துக்கொண்டு, “எதற்காகடா அழுகிறது? குடிமுழுகிப் போய்விட்டதா ஆண் பிள்ளைகள் அழப்படுமோ? “ என்று சொல்லி அவனைத் தேற்றினார். இதைப் பார்த்து நாங்கள் திகைத்துப் போனோம். “ஏண்டா முருகேசா! நீ எங்கேடா போயிருந்தாய்? இந்திரஜித் மாதிரி திடீரென்று மறைந்துபோய் விட்டாயே!” என்று சிரித்துக்கொண்டே பாரதியார் கேட்டார். முருகேசன் அழுகையயை நிறுத்திக்கொண்டு, பின் வருமாறு சொன்னான் : “பிரிட்டிஷ் இந்தியப் போலீஸில் ஒருத்தர் என்னோடு அடிக்கடி பேசிக்கொண்டு, அன்பாக இருந்தார். ‘வா தம்பி, விழுப்புரத்துக்கு‘ என்று கூப்பிட்டார். தமாஷாகப் போய் வரலாம் என்று எண்ணி, அவரை நம்பி, அவரோட ரயிலில் போனேன். விழுப்புரம் போனதும் என்னை ‘அரஸ்ட்‘ செய்திருப்பதாகச் சொன்னார். என்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போனார்கள்; என் உடம்பை நன்றாகத் துவட்டி எடுத்து விட்டார்கள். ‘பாரதி வீட்டிலே வேலை செய்கிறாயே, அவரைப் பற்றி உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லு‘ என்றார்கள். ‘அற்பப் படிப்புள்ள எனக்குங்கூட விளங்கும்படியாக, தமிழ்க்கவிதை எழுதுகிறார்‘ என்றேன். ‘இதைச் சொல்லுவதற்குத்தான் உன்னைச் சென்னைக்குக் கூட்டி வந்ததோ:” என்று என்னை, எப்படி எப்படியோ அடித்து உதைத்து இம்சை செய்தார்கள். ஒரு மாதம் காவலில் வைத்திருந்து என்னை விடுதலை செய்தார்கள். புதுச்சேரிக்கு டிக்கெட்கூட வாங்கிக் கொடுக்கவில்லை. சென்னையில் ஓர் உறவினரிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு புதுச்சேரிக்கு வந்தேன்!“ இதைக் கேட்டதும் பாரதியார் நிரம்பவும் வருத்தப் பட்டார். ஆனால் நாங்களோ, இது வெறும் அளப்பு என்று தீர்மானித்துவிட்டோம். போலீசார் அம்மாதிரி செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையால அல்ல. முருகேசன், கதை சொன்ன தோரணை ஒழுங்கயில்லை என்று சந்தேகப்பட்டோம். என்றாலும், அன்றைய தினத்திலிருந்து, முருகேசன் தம் வீட்டில் வேலை பார்க்கலாம் என்று சொல்லி, பாரதியார் அவனைத் திரும்பவும் அழைத்துக்கொண்டார். பாரதியாரின் தாராளமனப்பான்மையைக் கண்டு திகைத்துப்போனோம். ஆனால், அதைப் பாராட்டி அனுபவிக்க முடியவில்லை. முருகேசன் கையெழுத்துப் பிரதியைப் பேலீஸாரிடம் கொடுக்கவில்லை, கொடுத்திருக்க மாட்டான் என்று பாரதியார் நம்பினாரேயொழிய ‘சின்னச் சங்கரன் கதை’ போலீஸாரிடம் எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது என்பதில் பாரதியாருக்குத் துளிக்கூடச் சந்தேகம் எற்படவில்லை. நாங்களோ பாரதியார் எண்ணியது போல இரண்டு வகைகளிலும் எண்ணவில்லை. கதை கெட்டுப் போனதைக் குறித்து எங்கள் எல்லோருக்கும் நிரம்ப வருத்தந்தான். திரும்பவும் அதை எழுதக்கூடாதா என்று நாங்கள் பாரதியரைக் கேட்டுக்கொண்டோம். ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினார்; அதற்குப் பின் மனது செல்லவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், ‘சின்னச் சங்கரன் கதை’யைப் பற்றி அவர் பிறகு பிரஸ்தாபம் செய்ததேயில்லை. திருத்தி எழுதிய ஐந்தாறு அத்தியாயங்களும் ஸ்ரீசுப்பிரமணிய சிவம் நடத்தி வந்த ‘ஞான பானு’ பத்திரிகையில் பிரசுராயின. அவ்வளவுதான். தமிழ்நாடு, ஆறு அத்தியாயங்களோடு திருப்தியடை வேண்டிய மகத்தான துர்ப்பாக்கியத்துக்கு ஆளானது தான் மிகுதியும் வருந்தத்தக்கது. பாரதியார் கோழை என்று சில முட்டாள்கள் அப்பொழுது வாக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாரதியாரின் தன்மை தெரியாமல் போனது ஆச்சிரியமாகும். வ.வே.சு. அய்யர் சீமையிலிருந்து மாறுவேஷம் தரித்து, இந்தியப் போலீஸாரின் கையில் சிக்கிக் கொள்ளாமல், புதுச்சேரி வந்து சேர்ந்தததை ரொம்ப வக்கணையுடன் வர்ணத்துவிட்டு, இந்த மாதிரி பாரதியால செய்ய முடியுமா என்பது போலப் பெசிக்கொள்வார்கள். வ.வே.சு. அய்யர் செய்தது அபாரமான வேலை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக, பாரதியாரின் தைரியத்தைக் குறைத்துப் பேச வேண்டும் என்பதுண்டா? காலஞ்சென்ற கொடியாலம் வா. ரங்கசாமி அய்யங்கார் அருமையான தேசபக்தர். திருச்சி ஜில்லாவில் அவர்களுடைய குடும்பம் மிகவும் பிரசித்திபெற்ற குடும்பம். பெருத்த பூமியாளர்கள். சென்னைக் கவர்னர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தால், இவர்களுடைய குடும்பத்தார்களுக்குத்தான் முதல் பேட்டி அளிப்பார்கள். இரண்டு வகைகளிலும் செல்வாக்குப் படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ரங்கசாமி அய்யங்கார், கள்ளி வயிற்றில் அகில் பிறப்பது போல, அருமையான தேசபக்தராகத் தோன்றினார். தம்முடைய தேசாபிமானத்தை, அவர் பல வகைகளிலும் காண்பித்திருக்கிறார். அய்யங்கார் அவர்களுக்கு அரவிந்தரிடம் அளவு கடந்த பக்தி; வ.வே.சு. அய்யரிடம் மரியாதை. பாரதியார் தேச பக்தர் என்ற முறையில் தான் அய்யங்காருக்கு அவரிடம் வாஞ்சை. பாதியாரின் அற்புதக் கவிதை திறனை 1943 ஆம் ஆண்டில்கூட உயரமுடியாத பிரகஸ்பதிகள் தமிழ்நாட்டில் இருக்கும்பொழுது அய்யங்கார் 1910 – 1912இல் பாரதியாரின் ஈடுஜோடி இல்லாத மேதையை அறிந்துகொள்ள முடியுமா? அடிமைப்பட்டுக் கிடந்த கிரேக்கர்களைத் தட்டி எழுப்புவதற்காக, லார்ட் பைரன் என்ற ஆங்கிலக் கவி “ஐஸ் ஆப் கிரிஸ்” என்ற அரமையான விடுதலைக் கவிதை ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, இதே அய்யங்கார், இனாமாக எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். அய்யங்கார் சுதந்தர ஆர்வங்கொண்டவர்; என்றாலும், பாரதியாரின் பெருமையை உணர முடியாத நிலையில் இருந்தார். இவரைப் போலவே, ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுதந்தரப் பிரியர்கள், தமிழில் பற்று இல்லாமல் இன்னமும் இருக்கும் பொழுது, அக்காலத்தில் அருமையான தேசபக்தராயிருந்த அய்யங்காரிடம் காணுவது வீணான வேலை. பாரதியாரிடம் மதிப்பு அதிகமில்லாத அய்யங்காரே பிரமித்துப் போகும்படியாகப் பாரதியார் ஒரு காரியம் செய்துவிட்டார். தஞ்சாவூர் ஜில்லாவில், மன்னார்குடிக்கு அருகில், நாகை ( நாகப்பட்டணம் அல்ல) என்று ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கே ரங்கசாமி அய்யங்காருக்கு ஒரு நேர்த்தியான பங்களா இருந்தது. அய்யங்கார் நாகைக்கு அடிக்கடி போய், அங்கு பல நாள்கள் தங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு சமயம் அய்யங்கார் அங்கே இருக்கும்பொழுது நடந்த சம்பவத்தை, அவர் என்னிடம் சொன்னார். அய்யங்கார் என்னிடம் சொன்னதாவது; “ஒரு காலையில் பதினொரு மணிக்குச் சாப்பாடு முடிந்து, நான் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்! ஒரு மணி நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்திருப்போம். குதிரை வண்டி ஒன்று பங்களா வாசலில் வந்து நின்றது. வண்டியில் ஒருவர் மட்டும் இருந்தார். மூட்டை முடிச்சு ஒன்றுமில்லை; அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி வந்தார். தலை வழுக்கை; மீசை இல்லை. பித்தான் இல்லாத ஷர்ட்டு. அதன் மேலே ஒரு கோட்டு. இடுப்பில் பஞ்சகச்சம்; தோளிலே அழகான சரிகை வேஷ்டி. வண்டியிலிருந்து இறங்கி, அவர் வேகமாகப் பங்களாவின் படி ஏறி வந்தார். முதலில் எனக்கு அடையாளம் புரியவில்லை. நிதானித்துப் பார்த்தேன். பாரதி ! எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மீசையை அவர் எடுத்துவிட்டதால், சட்டென்று அடையாளம் தெரியவில்லை. கூட இருந்த நண்பர்களுக்குப் பாரதி என்று தெரியக்கூடாது என்று, ‘வாருங்கோ’ என்று பாரதியை மெத்தைக்கு அழைத்துக்கொண்டு போனேன். அப்பொழுது பாரதிபேரில் வாரண்டு இருந்தது. புதுச்சேரியிலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போலீஸ்காரர்களுக்கும் அவரை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமல்ல. அப்படியிருந்தும் பாரதி என்னமாய் நாகைக்கு வர முடிந்தது? அய்யர் சீமையிலிருந்து மாறுவேஷத்தோடு வந்ததுகூட என் கண்ணில் பெரியதாகப் படவில்லை. அய்யரை, இந்தியாவில் போலீஸாருக்குத் தெரியாது. பாரதியை எல்லோருக்கும் நன்றாகத் தெரியுமே! “அப்படியிருக்க, அவர்களின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, அவர் எப்படி வர முடிந்தது? பாரதிக்குத் தைரியம் அதிகமாக இருக்காது என்று நான் எண்ணினது நிரம் அசட்டத்தனம் என்பது எனக்கு அப்பொழுது நன்றாகத் தெரிந்தது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, யார் கண்டார்கள் என்ற பெரியவாள் சொல்லுவது உண்மைதான். மனுஷாளை மதித்பிடும் பொழுது நிரம்ப உஷாராயிருக்கணும் என்கிற புத்தி அப்பொழுது எனக்கு அழுத்தமாக ஏற்பட்டது. “பாரதி ஒரு வாரம் வரையில் என்னோடு நாகையில் தங்கியிருந்தார். சுந்தரமய்யர் என்று பெயர் என்று சொல்லி, அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். பாரதி தங்கியிருந்த ஒரு வாரமும் ஒரே சிரிப்பும் குதூகலமுந்தான். அரசியலைப்பற்றி அவர் அப்பொழுது பேசவே இல்லை; தினமும் பாடுவார். நண்பர்கள் எல்லோரும் அவரிடம் ஈடுபட்டுப் போனார்கள்.“ ரங்கசாமி அய்யங்கார் இவ்வாறு என்னிடம் சொன்னார். பாரதியார் நாகைக்கு வந்திருந்தார் என்று பின்னால் அவரே நண்பர்களுக்குச் சொல்லி, அதை விளம்பரப்படுத்திவிட்டார். பாரதியாரின் துணிவும் ஸாகசமும் எவ்வளவு வரையில் இருந்தன என்பதை இந்தச் சம்பவம் காண்பிக்கின்றது. இது சம்பந்தமாக அதிகமாய் விவரித்துச் சொல்ல எனக்கு மனமில்லை. மரியாதைக்கும் வினயத்துக்கும் இருப்பிடம் என்று சொல்லக்கூடிய பாரதியார் சில சமயங்களில் ‘நாக்கில் நரம்பில்லாமல் ‘ பேசிவிடுவார். அவ்வாறு நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்று சொல்லத் தகுந்தது. புதுச்சேரிக் கடற்கரையில், பியரில் (பியர், கடலில் கட்டப்பட்ட பாலம் ; இது சுமார் ஒன்றரைப் பர்லாங்கு இருக்கும். கப்பலில் வரும் சாமான்களைப் பியரில்தான் இறக்குவார்கள். ) ஆனந்தமாகக் காற்று வாங்கிக் கொண்டிருந்தோம். (விலை கொடுத்து வாங்கவில்லை!) பாரதியார் அருமையாகப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரக்கு நண்பரான திருச்சி வக்கீல் ஒருவர் (ரொம்ப பிரபஸ்தர்) எங்களுடன் இருந்தார். பாட்டு முடிந்ததும் அந்த வக்கீல் பேச ஆரம்பித்தார். “ஏன் சார்! ஒங்க டிலக் இப்போ எங்கே இருக்கான் ?“ என்று வ.வே.சு. அய்யரை அவர் கேட்டார். டிலக் என்று சொன்னது லோக மான்ய திலகரை. அய்யரின் முகம் சிவந்து போயிற்று. அவர் தமது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டார். ஆனால், பாரதியார் ஒரே வெடியாக வெடித்துவிட்டார். கடகடவென்று அவர் கொட்டத் தொடங்கினார். “ஏண்டா ! நீ தமிழன் இல்லையா? நீ வெள்ளைக்காரனா! என்னடா ‘டிலக்‘ வேண்டியிருக்கு? திலகர் என்று சொல்ல உன் நாக்கு கூசுகிறதா? எங்கள் திலகர் தலைவர், உங்கள் விட்டு மாட்டுக்காரனா? அவன் இவன் என்று அந்த மகானை, மரியதையில்லாமல் பேசுகிறாய். முழுமூடா!“ என்று நிரம்பக் கேவலமாகப் பேசிவிட்டார். வக்கீலின் முகம் அப்படியே வெளுத்துப்பொய் விட்டது, வக்கீல் வேண்டுமென்றே மாரியதைக் குறைவாகப் பேசவில்லை என்று பின்னால் தெரிந்தது. தமிழ்நாடுப் பிராமணர்களுக்குள் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பிரசன்னமாக இல்லாத பேர்வழியை, அவன் இவன் என்று ஏக வசனத்தில், மரியதையில்லாமல் சொல்லுவது, இந்தக் கூட்டத்தாருக்கு ஒரு கெட்ட பழக்கம். இந்தப் பழக்கத்தக்குப் பலியானவர் வக்கில் அவ்வளவுதான். வக்கீல் நிரம்பவும் மன வேதனை அடைந்தார்; மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது பாரதியாரைப் பார்க்க வேண்டுமே அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. மனத்தில் நிரம்பவும் சிரமப் பட்டுப் போனார். “நீங்கள் செய்தது அறியாப் பிழை என்று தெரிந்துகொண்டதால், எனக்கு ஒரு புறம் வருத்தம்; ஒரு புறம் சந்தோஷம். நீங்கள் வேண்டுமென்றே உதசீனமாகச் சொல்லிவிட்டீர்களோ என்று எண்ணி, நான் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டேன். தயை செய்து மன்னித்துவிடுங்கள் “ என்று பாரதியார் மிகவும் அங்கலாத்துக்கொண்டு சொன்னார். பாரதியாரைப் பற்றிச் சில இடங்களில் எப்படி எப்படியே தவறாக அபிப்பிராயங்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பாரதியாரின் உண்மையான தன்மை இப்படிப்பட்டது என்பதைச் சந்தேசமில்லாமல் தெரிந்துகொள்ளுவதற்காகவே மேலே சொன்ன சம்பவங்களை நான் குறிப்பிட்டேன். 16 பகுதி 18 பாரதியார் புதுச்சேரி வாழ்வில் (அரசியல் கிளர்ச்சியில் தவிர) பூரணமாகக் கலந்துகொண்டு, பத்து வருஷம் அங்கே வாழ்ந்து வந்தார். யார் வீடு என்று பாப்பதில்லை; என்ன ஜாதி என்று விசாரிப்பதில்லை. கலியாணத்துக்கோ எந்த விசேஷத்துக்கோ அவரைக் கூப்பிட்டால், உடனே போய்விடுவார். சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, புதுச்சேரியில் பல இடங்களில் பிரசங்கங்கள் செய்திருக்கிறார். பத்து வருஷகாலத்துக்குள். புதுச்சேரிவாசிகளின் பூரண அபிமானத்தையும் பாரதியார் பெற்றார் என்று தாராளமாகச் சொல்லலாம். புஷ் வண்டிக்காரர்களுக்குப் பாரதியாரைக் கண்டால் கொண்டாட்டம். அவர்கள் கேட்டதைப் பாரதியார் உடனே கொடுத்துவிடுவார். சென்னையிலிருந்து துரைசாமி அய்யரோ, வேறு ஊர்களிலிருந்து அன்பர்களோ அழகான அங்க வஸ்திரம் பாரதியாருக்கு என்று அனுப்பியிரக்கலாம். ஆனால், புஷ் வண்டிக்காரன் அதைக் கண்ணால் வெறித்துப் பார்த்துவிட்டால், அது அந்த நிமிஷமுதல் அவனுடையதுதான்; பாதியாருடையது அல்ல. “அவனுக்குச் சரிகை வேஷ்டி போட்டுக்கொள்ள ஆசை. அவன் கையில் பணம் ஏது? அவனுக்கு யார் வாங்கிக் கொடுப்பார்கள்?“ என்பதுதான் பாரதியர் சொல்லும் சமாதானம். புதுச்சேரி வாழ்க்கையில் பாரதியாருக்கு உதவி செய்தவர்களில், மக்கியமாகக் குவளைக் கண்ணனையும், சுந்தரேச அய்யரையும் குறிப்பிட வேண்டும். குவளைக் கண்ணன் எஜமான விசுவாசமுள்ள வேட்டை நாயைப் போன்றவர். பாரதியாருக்கு, சரீரத்தால் அவர் எல்லையில்லாமல் உழைத்தார். பாரதியாரைப் பற்றி யாரும் இளப்பமாக அவர் காது கேட்கும்படி பேச முடியாது. கன்னத்தில் அறை கண்டிப்பாய் விழுந்துவிடும். சுந்தரேசய்யர், மணிலாக்கொட்டை வியாபாரம் செய்து வந்த குப்புசாமி அய்யர் என்பரிடம் குமாஸ்தா வேலை பார்த்துவந்தார். நெருக்கடி காலங்களிலெல்லாம், சுந்தரேசய்யர்தான் பாரதியாருக்கு வாய் பேசாமல் பண உதவி செய்து வந்தார். சுந்தரேசய்யர், தம் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் விற்றும் பாரதியாருக்குப் பணம் கொடுத்து உதவியது எனக்குத் தெரியும். பாரதியாரிடம் சுந்தரேச அய்யர்க்கு அவ்வளவு பக்தி. வெல்லச்சுச் செட்டியார் என்று பாரதியார் செல்லமாய் அழைக்கும் முத்தியாலுப்பேட்டை கிருஷ்சாமி செட்டியார் என்பதையும் இவர் வெறுங்கையோடு பாரதியாரைப் பார்க்க வரமாட்டார் என்பதையும் முன்னமே கூறியிருக்கின்றேன். வருகின்ற சமயங்களிலெல்லாம் இவர் பத்து ரூபாய்க்குக் குறையாமல் கொடுத்துவிட்டுப் போவார்; அடிக்கடி வருவார்! மாதத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் கூட வருவார். பொன்று முருகேசம் பிள்ளையின் குடும்பத்தாரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பாரதியாரைத் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றே அவர்கள் எண்ணி வந்தாகள். வேலைக்காரி அம்மாக்கண்ணு தனிப்பிறவி அவள் அஞ்சாநெஞ்சு படைத்தவள். 1914 ஆம் வருஷத்தில் தொடங்கிய மகாயுத்தத்தின் மூலமாக இந்தியவுக்குப் பல நன்மைகள் ஏற்படலாம் என்று பாரதியார் நம்பியிருந்தார்; 1918 ஆம் வருஷத்தில், தாம் காணுவது வீண் கனவு என்று தெரிந்து கொண்டார். பிறகு, புதுச்சேரி வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிடவேண்டும் என்று தீர்மானங்கொண்டார்; எ. ரங்கசாமி அய்யங்காருக்கு எழுதிக்கேட்டார். வெளியே வருவதற்குத் தக்க காலம் அதுதான் என்று அவர் பாரதியாருக்கு யோசனை சொன்னார். பாரதியார் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டு பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைப் பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் கை செய்து கடலூர் சப் ஜெயிலில் கொண்டுபோய் வைத்தார்கள். பாரதியாரைக் கைது செய்த செய்தி தெரிந்ததும், ஏ. ரங்கசாமி அய்யங்கார் மாகாணப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் சென்று, அவரைப் பேட்டி கண்டு, பாரதியாரைப்பற்றிய உண்மையான விவரங்களைச் சொன்னார். தீவிர அரசியலில் கலப்பதில்லை என்று பாரதியார் வாக்குக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னார். பாரதியாரை இவ்வாறு செய்யும்படியாகக் கேட்பது அவரது உத்தமமான குணத்துக்கு இழுக்காகும் என்று அய்யங்கார் வாதாடினார். மேலும், பாதியாரின் உடம்பு மிகவும் சீர்குலைந்து போயிருந்தது. அதையும் எடுத்துச் சொன்னார். வாக்குறுதி கொடுத்தது போலும் இல்லாமல், கொடுக்காமல் இருந்தது போலும் இல்லாமல், ஒரு சூத்திரத்தைத் தமது சாஜதந்திர மூளையால் அய்யங்கார் தயார் பண்ணி, போலீஸ் அதிகாரியின் மனத்துக்கு நிம்மதியை உண்டாக்கி, பாரதியாரை விடுதலை செய்யும்படியான ஏற்பாட்டைச் செய்தார். ‘தங்களுக்குச் ‘சுதேசமித்திர‘னில் எப்பொழுதும் தஙகுமிடம் உண்டு‘ என்று ரங்கசாமி அய்யங்கார் பாரதியாரிடம் நேரில் தெரிவித்துக்கொண்டார். பாரதியார் சிறிது காலம் திருநெல்வேலி ஜில்லா, கடயத்தில் வாசம் செய்தார்; பின்னர், சென்னைக்குத் திரும்பி வந்தார். “எழுதினாலும் எழுதாவிட்டாலும் ‘சுதேசமித்திர‘னில் தங்களுக்கு உத்தியோகம்“ என்று ரங்கசாமி அய்யங்கார் மீண்டும் தெரிவித்துக்கொண்டார். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதியார் குடியிருந்தார். கோயில் யானையோடு அவர் சகோதரத்துவம் கொள்ளப்பார்த்த கதை விசித்திரமானது. பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் போகும்பொழுதெல்லாம் பாரதியார் கையில் தேங்காய் பழம் கொண்டு போவார், இவைகள் சுவாமிக்காக அல்ல; வெளியே கட்டியிருக்கும் யானைக்காக. யானையைத் தமது சகோதரனாகப் பாவித்த பாரதியார், அதற்குதேங்காய் பழம் முதலியவைகளைக் கொடுத்து நல்லுறவு ஸ்தாப்பித்துக்கொள்ள முயன்றார் ; பழக்கம் அதிகமாக அதிகமாக, அதன்கிட்டே போய் இவைகளைக் கொடுக்கவும் செய்வார். சில சமயங்களில் துதிக்கையைத் தடவியுங்கொடுப்பார். சகோரதத்துவம் முதிர்ந்து வருகிறது என்பது பாரதியாரின் எண்ணம். இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் வழக்கம் போல, ‘சகோதரா!’ என்று பழங்களை நீட்டினார். யானையோ வெறிகொண்டு பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத்தான் இருக்கும் கோட்டத்துக்குள் கொண்டுபோய்விட்டது. பாரதியாரை யானை காலால் மிதித்து விடுமோ என்று பக்கத்தலிருந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பாரதியார் கோட்டத்துக்குள் படுகிடையாகக் கிடந்தார். பாரதியாருக்கு நேர்ந்த விபத்தை எப்படியோ, எங்கிருந்தோ கேள்விப்பட்ட குவளைக்கண்ணன், பறந்து வந்தது போல ஓடிவந்து, யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்துக்கள் பாய்ந்து, பாரதியாரை எடுத்து நிமிர்த்தி, கிராதிக்கு வெளியே நின்றவர்களிடம் தூக்கிக் கொடுத்தார். சபாஷ் குவளைக்கண்ணா! இவ்வாறு யார் செய்யமுடியும்? பாரதியாரிடம் உயிராக இருந்த குவளைக் கண்ணனால்தான் முடியும் ! யானைக்கு மதம் பிடித்திருந்த சமயம், ஆனால், அதைப் பற்றிக் குவளைக்கண்ணனுக்கு என்ன கவலை? பாரதியார் பிழைத்தார்; குவளைக்கண்ணனும் கோட்டத்திலிருந்து வெளியே வந்தார். பயம் அறியாது உயிரைத் துரும்பாக மதித்த வீரனைப் படம் பிடிக்க வேண்டுமானால், அப்பொழுது காட்சி அளித்த குவளைக் கண்ணனைப் படம் பிடித்திருக்க வேண்டும். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்று பாடிய பாரதியார். யானையோடு சகோதரத்துவ்ம் கொண்டாடிய இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் வெகு காலம் உயிரோடிருக்கவில்லை. யானையின் சேஷ்டையால், பாரதியாரின் தேகம் முழுதும் ஊமைக்காயங்கள். இவைகள் பாரதியாருக்கு மரண வலியைத் தந்தன. அவ்வளவு பொறுக்க முடியாத வலி! காயங்களால் ஏற்பட்ட வலியெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாரதியார் இறந்து போனார். “கல்தூண் பிளந்துஇறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்.“ சகோதரத்துவத்தை ஒரு வகையில் பாராட்டிப் பழகி வந்த தம்பியான யானை, இறுதியில் ஏமாற்று வித்தை செய்தது, பாரதியாரின் உள்ளத்தில் பெருமபாரமாகத் திடீரென்று விழுந்திருக்க வேண்டும். பெரும்பாரம் தாங்கின், தளர்ந்து வளைந்து கொடுக்கும் சுபாவம் பாரதியரிடம் கிடையாது. எனவே பிறர் கண்ணுக்குப் படாதபடி, அவருடைய மனம் உடைந்துபோயிருக்க வேண்டும். அதனால்தான் அவ்வளவு விரைவில் பாரதியார் மறைந்து போனார். பாரதியார் மறைந்த நாள் 1921 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி. உலக மகா கவிகளில் தலைசிறந்து விளங்குபவரும் தமிழ்நாட்டுப் புரட்சிக்கவியுமான பாரதியாரின் பூத உடலை அடக்கம் செய்வதற்குப் போதிய பணம் அவரது வீட்டார்களிடம் இல்லையென்றும், சில பக்தர்களின் பண உதவியைக்கொண்டுதான் உடலை அடக்கம் செய்ய முடிந்ததென்றும் பாரதியாரின் பக்தரும் சிறந்த தேசபக்தருமான ஒருவர் என்னிடம் சொன்னார். அவர் சொன்னதை, அப்படியே, கூட்டிக்குறைக்காமல் தமிழர்கள் தங்கள் உள்ளங்களை இப்பொழுதாவது சோதித்துப் பார்ப்பார்களாக! இதை முடிக்குமன், இரண்டொரு சட்மபவங்கள் குறிப்பிடத்தக்கவை. பாரதியார் புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபின், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவது வழக்கம். பாரதியாரின் சொற்பொழிவைக் கேட்க, இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கூடிவிடுவார்கள்; வெகுநேரம் காத்துக்கொண்டிருப்பார்கள். “பாரதியாரின் சொற்பொழிவு வெறும் பிரசங்கமா? அது சண்டமாருதமல்லவா?“ என்று அவர்களில் பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு கூட்டப்பட்ட கூட்டங்களில் ஒன்றில், ஸ்ரீசத்தியமூர்த்தியும் இன்னொருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) முதலில் பேசிவிட்டார்கள். அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதைக் கூடக் கவனிக்காமல் சத்தியமூர்த்து துடுக்காக, ‘நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதியார் நாளைக்குப் பேசுவார். இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவுபெற்றது‘ என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார். ஆனால், கூட்டம் கலையவில்லை. பாரதியார் எழுந்திருந்தார். ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு அழகான சொற்களில், விதரணையாகச் சன்மானம் கொடுத்தார். பிறகு, காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது போல் ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே, பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார். அன்றிரவு கூட்டம் கலையும் பொழுது மணி பதினொன்று இருக்கும். அன்றைக்குத்தான் என்றும் உயிரோடு இருக்கக் கூடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே!‘ என்ற அற்புதப் பாடலைப் பாரதியார் பாடினார். கூட்டம் பதினொரு மணி வரையில் கலையாமல் இருந்ததற்கு வேறு காரணமும் வேண்டுமா? பாரதியாரைப் பின்காலத்தில் புகழ்ந்துகொண்டாடின ஸ்ரீ சத்தியமூர்த்தி கூட, அக்காலத்தில் சரியானபடி அவருடைய பெருமையைத் தெரிந்துகொள்ளாமல் போனதுதான் ஆச்சரியம். சத்தியமூர்த்தியாக இல்லாவிடின், சகஜமாக நேரக்கூடிய சம்வந்தான் என்று இதைப்பற்றிக் கவனம் செலுத்தாமலே விட்டிருக்கலாம். சத்தியமூர்த்தியின் சம்பந்தம் இருந்ததால் இதைப்பற்றிச் சொல்ல நேர்ந்தது. மேலும், “பாரத சமுதாயம் வாழ்கவே!“ என்ற அமுதமயமான பாடல் அரங்கேறிய நாளையும் வகையையும் குறிப்பிட வேண்டுமல்லவா? அதற்காகவும் இந்தச் சம்பத்தைச் சொல்ல நேர்ந்தது. இன்னொரு சம்பவம் ஏககாலத்திலும் மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் உரிய சம்பவமாகும். அட்சரலட்சம் கொடுக்கும்படியான ஐந்து பாட்டுகளைப் பாரதியார் மகாத்மா காந்தியின்பேரில் பாடியிருக்கிறாரே, அவ்விருவரும் சந்தித்து உறவாடியாதாக இதுவரையிலும் தெரியவில்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரதியாரும் மகாத்மாவும் சந்தித்தார்கள்; பேசினார்கள்; ஒரே தடவையில், ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள். 1919 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ரௌலட் சட்டம் என்ற அநியாயச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தலைமை வகித்து அதைக் காந்தி நடத்த வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பிரமுகர்களில் பலர் காந்தியை வேண்டிக்கொண்டார்கள். காந்தி இசைந்தார். அதற்காகத்தான், காந்தி முதன் முதலில் சென்னைக்கு விஜயம் செய்தார். சத்தியாக்கிரக இயக்கத்தை ஆரம்பிக்குமுன் அணைகோலுவதைப் போலிருந்தது இந்த விஜயம். அப்பொழுது ராஜாஜி, கத்தீட்ரல் ரோட், இரண்டாம் நெம்பர் பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில் தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாள்கள் தங்கியிருந்தார். ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக்கொண்டிருந்ததைப் பக்கத்தில் உட்காந்திருந்தார் மகாதேவ தேசாய் எழுதிக்கொண்டிருந்தார். காலஞ்சென் சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சுவருக்கு எதிர்ச்சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்துகொணடு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன். யாரையும் உள்ளே விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு. நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்தச் சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்துகொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்! “ என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்துவிட்டார். என் காவல் கட்டுக் குலைந்த போய்விட்டது. உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்காந்துகொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது: பாரதியார் : மிஸ்டர் காந்தி ! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்த கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா? காந்தி : மகாதேவபாய் ! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன? மகாதேவ் : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும். காந்தி : அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா? பாரதியார் : முடியாது, நாள் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன். பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், ‘இவர் யார்?‘ என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்காந்துகொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி“ என்று சொன்னார். அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?“ என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மகாத்மா காந்தியிடம் பாரதியார் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கப்படாது என்று சிலர் எண்ணலாம். நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்று கொண்டு விண்ணப்பம் செய்துகொள்கிறதா? ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும், அவரை அழகாக, காந்திக்கு அமுகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அனாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமான வரையில் சரியாகப் பாரதியாரை மதிப்பிட்டு விட்டார். இல்லாவிட்டால், “இன்றைக்கு நமது அலுவல்கள் என்ன?“ என்று மகாதேவைக் கேட்காமலோ, ‘இப்பொழுது முக்கியமான ஒர ஜோலியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நலமாயிருக்கும் ‘ என்று காந்தி சொல்லியிருக்கலாம். பாரதியாரும் குறிப்பறிந்து கொண்டு வெளியே போயிருப்பார். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்பார்கள். மேதாவியான காந்தி, மேதாவி பாரதியாரை, அவரது முக்கொலிவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியாதா? மேலும், ‘தங்கள் இயக்கத்தை ஆசீர்வதிக்கிறேன்’ என்று உள்ளன்போடு பாரதியார் சொன்னபொழுது தமது இயக்கத்தை ஆசீர்வதிபப்பதாகச் சொல்லக்கூடிய ஒருவர் பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று காந்தி முடிவு செய்துகொள்ள முடியாதா? 17 பகுதி 17 ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்துகொண்டிருந்தது. சிலர் வேதமந்திரம் ஜபித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆசனத்தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்துகொண்டிருந்தான். புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரோபஸரைக் கேட்டேன். “கனகலிங்க“த்துக்ப் பூணூல் போட்டு, காயத்ரீ மந்திரம் உபதேசமாகிக்கொண்டிருக்கிறது“ என்றார். “உட்கார்ந்திருப்பது ஹரிஜனக் கனகலிங்கம்தானே! அதிலே சந்தேகமில்லை,“ என்று மறுபடியும் அவரைக் கேட்டேன். “சாக்ஷாத் அவனேதான்! அவனுக்குத்தான், பாரதி காயத்ரீ மந்திரம் உபதேசம் செய்தகொண்டிருக்கிறார்“ என்றார் புரொபஸர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான், என் பூணூலை எடுத்துவிடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார். அவரோ, வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார். தமது பூணூலை எடுத்துவிட்டு, என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்குத் திடீரென்று வைதிக வெறி தலைக்கு ஏறி விட்டதாக என்று எண்ணினேன். மௌனமாக உட்கார்ந்திருந்தேன். பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு, “கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்; எதற்கும் அஞ்சாதே; யாரைக் கண்டும் பயப்படாதே. யார் உனக்குப் பூணூல் போட்டுவைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டுவைத்தான் என்று அதட்டியே பதில் சொல். எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்துவிடாதே“ என்று பாரதியார் அவனுக்கு வேறு வ்கையில் உபதேசம் செய்தார். இதைக் கேட்டு, யாரேனும் வாய்க்குள்ளாகவே சிரிக்கிறார்களோ என்று பார்த்தேன். பாரதியார் சொன்னதை ஆமோதிப்பதைப் போல, அவர்கள் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த வைபவத்துக்கு வந்தவர்கள், தாம்பூலம் வாங்கிக்கொண்டு, பாரதியாரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். கனகலிங்கமும் போய்விட்டான். யாரோ ஒருவனைக் கூப்பிட்டு, “நீ கனகலிங்கத்துடன் கூடப்போய், அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா“ என்று பாரதியார் சொன்னார். எல்லோரும் போனபின், பாரதியார் தாம் போட்டுக் கொண்டிருந்த பூணூலை எடுத்துவிட்டார். ‘என்ன ஓய்!‘ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். “இரண்டு பத்தினிமார்கள், பதினாயிரம் கோபிமார்கள் இவர்களோடு லீலைகள் புரிந்த கண்ணனுக்கு நித்ய பிரம்மசாரி என்ற பெயர் வந்த கதையாக இகுக்கிறதே, உங்கள் பிரம்மேபதேசம்“ என்றேன். “நாடறிந்த பர்ப்பானுக்குப் பூணூல் எதற்கு ? உமக்கும் எனக்கும் வேண்டா. புதுப் பார்ப்பான் கனகலிங்கத்துக்குப் பூணூல் தேவை. எப்பொழுது நான் அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தேனோ, அப்பொழுது எனக்கும் பூணூல் இருக்க வேண்டும். அது முடிந்துவிட்டது இனிமேல் எனக்கு என்னத்துக்குப் பூணூல் –“ என்று பேச்சை அழகாக முடித்துவிட்டார் பாரதியார். இதைப்பற்றி வேறு எதுவும் பேச இடங்கொடுக்காமல், புரொபஸர் சுந்தரராமனோடு கீதை சம்பந்தமாக நடத்திய விவாதத்தில், அன்றைக்கு எழுதிய கட்டுரையைப் பாரதியார் படித்துக் காண்பித்தார். கீதா விவாதம் வேடிக்கையான விவாதம். அப்பொழுது சென்னையிலே, ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்‘ என்ற தினசரி இங்கீலீஷ் பத்திரிகை ஒன்று நடந்து வந்தது. அதற்கு ஸ்ரீராம சேஷய்யர் ஆசிரியர். ஸ்ரீ சுந்தரராமனுக்கும் பாரதியாரக்குமிடையே, கீதையைப்பற்றிய விவாதத்தை அவர் எப்படியோ தூண்டிவிட்டார். ஸ்ரீ சுந்தரராமன் சம்பிரதாய முறைப்படி கீதைக்கு வியாக்கியானம் செய்து, விவாதத்தை நடத்தி வந்தார். எதிலும் நவீன சம்பிராதாயத்தை நாட்ட வந்த பாரதியார், தமது மேதை காண்பித்த போக்கில் விவாதத்தை நடத்தினார். அரவிந்தர், பாரதியாரின் கட்சி வாதத்தை ஆதரித்தார். விவாதம் ரஸாபாசமாகப் போகும் நிலைக்கு ஸ்ரீ சுந்தரராமன் அதைக் கொண்டு வந்து விட்டார். பாரதியார் விவாதத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. இந்த விவாதம் நடக்கையில், விஷயம் செதரிந்த புதுச்சேரி நண்பர்கள் ஆச்சரியப்பட்டது ஒரு சங்கதியைப் பற்றித்தான். “ பாரதியாருக்கு இவ்வளவு சமஸ்கிரதம் தெரியுமா? பாரதியார் இங்கிலீஷில் இவ்வளவு அழகாகவும் வன்மையோடும் எழுத முடியுமா?“ என்று அவர்கள் தலையை அசைத்துக்கொண்டு ஆச்சரியப்பட்டார்கள். உலகம் மதிக்கிற விதமே இப்படித்தான். தங்களுக்குப் பக்கத்திலிருப்பவர்களிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது, இருக்க முடியும் என்று பெரும்பான்மையோர் எண்ணுவதேயில்லை. இத்தகைய விபரீதத்துக்கு விமோசனம் என்றைக்கு ஏற்படப் போகிறதோ! கடுமையான விவாதத்தில் பாரதியாருக்கு எவ்வளவு ஆர்வம்! தமது கட்சி செயிக்க வேண்டும் என்பதற்காக அல்ல! எப்படியாவது உண்மை விளக்கம் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவரது ஆவல். இவ்வளவு ஆவல், வேடிக்கை செய்வதிலும் அவருக்கு உண்டு. புதுச்சேரி, ஈசுவரன் தருமராஜா கோயில் தெருக்கோடியில் (கடற்கரைப் பக்கத்தில்) ஒரு சத்திரம் இருக்கிறது. ஒரு சமயம் அங்கே கதா காலட்சேபம் நடைபெற்றது. கதை செய்யும் பாகவதர் நிரம்ப மோசம்! தமது தொழிலில் திறமை போதாதவர். எனவே, கூடியிருந்தவர்களால் கதையை இரசிக்க மடியவில்லை. அங்கே பாரதியாரும் நானும் இருந்தோன். கூட்டத்தில் எல்லோரும் சத்தம் போட்டுப் பேசத் தொடங்கிவிட்டார்கள். சப்தத்தை அடக்குவதற்குப் பாகவதருக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்போலிருக்கிறது. அடிக்கொரு தரம் அவர் ‘கோபிகா ஜீவன ஸ்மரணே‘ என்று சொல்வதும், இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் (வழக்கமாகச் சொல்வது போல) ‘கோவிந்தா கோவிந்தா‘ என்பதும் ஓயாத சம்பவமாகிவிட்டது. பாகவதருக்குக் கதை மேலே ஓடவில்லை. பாரதியாருக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை! வெளியே வந்துவிட்டார். வந்து சும்மா இருக்கவில்லை, பொன்னு முருகேசம் பிள்ளைக்குக் கோவிந்தன் என்று ஒரு வேலைக்காரன் உண்டு. அவனைக் கூப்பிட்டு, “கோவிந்தா! இன்னொரு தரம் ஜனங்கள் ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று கோஷம் செய்து முடிந்ததும், நீ சபைக்குள்ளே போய், ‘ஏன் எல்லோருமாகச் சேர்ந்து என்னைக் கூப்பிடுகிறீர்கள்‘ என்று கேள்“ என்று தயார் பண்ணிவிட்டுவிட்டார். கோவிந்தன் இந்தக் தமாஷாவில் பூரணமாகக் கலந்துகொண்டான்; பாரதியார் சொன்னது மாதிரியே செய்தான். சபையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ( பாகவதரும் அவரது பக்கவாத்தியக்காரர்களும் நீங்கலாக) கொல்லென்று சிரித்தார்கள். பாகவதர் சீக்கிரமாகக் காலட்சேபத்தை முடித்துவிட்டார். சன்மானமும் அதற்குத் தகுந்தாற்போலத்தான் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்களின் ஜனசுமுதாயத்தைப் புனர் நிர்மாணம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பாரதியாருக்கும் இந்த மாதிரி வேடிக்கை செய்வதற்கு மனமும் பொழுதும் இருந்ததா என்று சிலர் ஆத்திரத்தோடும், பலர் ஆச்சரியத்தோடும் கேட்கலாம். நகைச்சுவை இல்லாதவர்கள்தாம் ஆத்திரப்படுவார்கள். பாரதியாரிடம் அபரிமிதமான நகைச்சுவை இருந்தது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. “நகைச்சுவை இல்லாவிடில் நான் எவ்வளவு காலத்துக்கு முன்பேயோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்“ என்று காந்தி சொன்னது, எல்லாப் பெரியார்களைப்பற்றியும் சொன்ன உண்மையாகும். பெரிய பிரயத்தனங்களைச் செய்து படுதோல்வி அடையுங்காலையில், மனிதன் மனம் உடைந்து போகமாட்டானா? தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் அவனுக்கு அப்பொழுது தோன்றும். இந்த விபத்திலிருந்து அவனை விலக்கக்கூடியவை இரண்டே இரண்டுதான். ஒன்று, கடவுளிடம் பக்தி; இன்னொன்று அபரிமிதமான நகைச்சுவை. பாரதியாருக்கு இரண்டும் நெருக்கடி காலங்களில் துணையாக நின்றன. பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும் சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால், இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. அய்யர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்துவிடுவார். “ அய்யரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத்தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை குட்டிகள் பிறக்கா” என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார். அய்யருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக்காய்கள்! பாரதியாருக்கோ, காய்கள் குழந்தைகள் மாதிரி. சீட்டிலே, கர்னாடக ஆட்டமான ஓர் ஆட்டந்தான் பாரதியாருக்குத் தெரியும். 304 (முந்நூற்று நான்கு ) என்கிறார்கள், அதுதான். அதுவும் நன்றாக ஆடத்தெரியாது. பாரதியார், என்னைத் தவிர வேறு யாரும் தமது கட்சியில் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவதில்லை. தமக்கு வந்த சீட்டுகளில் குலாம் என்ற ஜாக்கி ஒன்றோ இரண்டோ இருந்தால், பாரதியார் குதூகலப்படுவார்; கையைத் தூக்கித் தமது கட்சிக்காரனுக்கு ஜாடை காண்பிப்பார். சதுரங்கத்தில் அய்யரிடம் தோற்கும் படுதோல்வியை, எப்படியாவது சீட்டாட்டத்தில் அவருக்குத் திருப்பிக் கொடுட்ததுவிட வேண்டும் என்று பாரதியார் மிகுதியும் ஆசைப்படுவார். கணக்கில் அகப்படாத மேதையைப் படைத்த பாரதியார், இப்படிக் குழந்தை மாதிரி இருக்கிறாரே என்று எனக்குச் சிரிப்பு வரும். அய்யரும் சீனிவாசாச்சாரியாரும் ஒரு கட்சி. பாரதியாரும் நானும் எதிர்க்கட்சி. அவர்கள் தோற்றுப் போய்விட்டால், பாரதியார் செய்கிற ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க வேண்டுமே! “அய்யரே! இது நெப்போலியன் தலைகுப்புற வீழ்ந்த வாட்டர்லூ சண்டையாக்கும். இனிமேல், நீர் ஸென்ட் ஹெலீனாவுக்கு (ஸென்ட் ஹெலீனா என்பது நெப்போலியனைப் பிரிட்டிஷார் காவலில் வைத்திருந்த தீவு) போக வேண்டியதுதான்! “ என்று சொல்லிக் கும்மாளம் போடுவார். பாரதியாருக்குக் கடலில் நீந்த வேணடும் என்ற ஆசை; அனால், நீந்தத் தெரியாது. அய்யரும் நானும், மற்றவர்களும் கடலில் நீந்தினால், பாரதியார் கரையில் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார். காவேரி ஆற்றில் நீந்தி எனக்குப் பழக்கம் அதிகம். எனவே, கடலில் வெகுதூரம் போய்விடுவேன். அய்யர் பின்தங்கிவிடுவார். நாங்கள் கரைக்கு வந்ததும், “அய்யரே, என் கட்சிக்காரரிடத்தில் உம்ம ஜம்பம் செல்லவில்லையே!“ என்று சொல்லிச் சொல்லிக் கைகளைக் கொட்டுவார் பாரதியார். ‘என்ன குழந்தை, பாரதியார்!‘ என்று அப்பொழுதும் எனக்குச் சிரிப்பு வரும். விளையாட்டுக் குழந்தை மனப்பான்மை கொண்டிருப்பது மேதையின் லட்சணமோ என்னவோ? கணக்கில் மகாமேதாவி என்று கொண்டாடப்பட்ட காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீராமானுஜம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிட்டிற்று. மிகச் சாதாரணம் என்று கருதப்படுவதைக்கூட அவர் கேட்டால், குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, ‘அப்படியா!‘ என்பார். கிண்டலுக்காக அப்படிச் செய்கிறாரோ என்று முதலில் நான் சந்தேகப்பட்டேன். கணிதத்தில்தான் அவர் மேதாவி! மற்ற எல்லா விஷயங்களிலும் பச்சைக்குழந்தை மாதிரி என்பதைப் பிறகு தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டேன். ராமானுஜத்தைப் போலவே, பாரதியாரும் சில விஷயங்களில் குழந்தையாய் இருந்தார். பாரதியாருக்கு ஸயன்ஸில் அபாரப் பிரியம். டெலஸ்கோப் என்ற தூரதிருஷ்டி பூதக்கண்ணாடி மூலமாக வானத்தைப் பார்த்துப் பார்த்து அவர் பரவசமடைந்ததை எழுத முடியாது. சந்திரன் பூமிக்குப் பக்கததில் இருப்பது மாதிரி தெரிந்ததாம். புள்ளி புள்ளியாகத் தோன்றிய நக்ஷத்திரங்களும் கிரகங்களும் மிகப் பெரியவையாகக் கண்ணில் படவே, அவைகளைக் கண்டு பாரதியார் குதூகலமடைந்தார். தாம் பார்த்ததோடு நில்லாமல், தம்முடைய மனைவி, குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுபோய், டெலஸ்கோப் மூலமாக ஆகாயத்தைப் பார்க்கச் செய்தார். இலேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தப்பிரமை, அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்குப் பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்று சங்கற்பம் செய்துகொண்டார்; “பைத்தியம் என்பது மனத்தைப் பிடித்த கோளாறுதானே? பார்த்துக்கொள்ளலாம்“ என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார். பையனை அநேகமாக எப்பொழுதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழவகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில் ஊட்டவும் செய்வார்; இரவில், தம்முடன் கூடவே, தம் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்; கொஞ்சுகிற மாதிரி ‘என்ன கண்ணு! என்ன ராஜா!‘ என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான். பையனுடைய சித்தப் பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்களுடைய அழுத்தமான எண்ணம். பாரதியார் இல்லாத இடங்களில், இல்லாத காலங்களில், நாங்கள் ஒருவரை ஒருவர், ‘என்ன கண்ணு சாப்பிடடி அம்மா! தங்கமோன்னோ! தாமரமோன்னோ! அட கப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்!‘ என்று பேசி, நையாண்டி பண்ணிக்கொண்டிருப்போம். சித்தப் பிரமை சிகிச்சை, சுமார் ஒரு மாதத்துக்குமேல் மிகவும் சிரமமாக நடந்து வந்தது. கடைசியில், நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த எங்களைப் பாரதியார் அடிமுட்டாள்களாக ஆக்கிவிட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்துபோய், அவன் நல்லபடியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால், வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அகம்பாவக்குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை. இந்த நாள்களில், ஈசுவரப் பிரார்த்தனைதான் மிகவும் வலுவாக இருந்தது. பையனுடைய பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்; சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பாரதியாரை வாழ்த்தினார்கள். அசடு தட்டின முகங்களை வைத்துக்கொண்டு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எட்டையபுர ராஜா பழக்கி வைத்த தாது புஷ்டிலேகியத்தை (அபினை) வெகு காலம் பாரதியார் மறந்திருந்தார். புதுச்சேரிக்குப் போய், மூன்று நான்கு வருஷங்கள் வரையில், அதாவது 1911 ஆம் வருஷம் வரையில், அபினைப்பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஆனால், முழு ஜாதிக் காயை வாயில் போட்டு அடக்கிக்கொண்டு, அதை ஊறவைத்துச் சுவைத்துக் கொண்டிருப்பார். புரெபஸர் சுப்பிரமணிய அய்யருக்கு ஒன்றுவிட்ட தங்கை, புதுச்சேரிக்கடுத்த வில்லியனூரில் வாசம் செய்து வந்தார். அந்த அம்மாள் விதவை. பாரதியாரின் பாடல்களை, அவர் பாடக் கேட்பதில், அந்த அம்மாளுக்கு நிரம்ம ஆசை, ஏகதேசம் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை, பாரதியார் புஷ் வண்டியில் வில்லியனூருக்குப் போவார்; ஒரு தடவை, என்னை அழைத்துக் கொண்டு போனார். ஸ்நானம் செய்தவற்கு முன், முழு ஜாதிக்காய் ஒன்றை – அது நல்ல பருமனாகவே இருந்தது – என்னிடம் கொடுத்து, அதைச் சாப்பிடச் சொன்னார். பாதி ஜாதிக்காயைக் கடித்துத் தின்றிருப்பேன். எங்கேயோ, ஆகாயத்தில் பறப்பது மாதிரி தோன்றிற்று, கால்கள் நிதானம் தவறிவிட்டன. எனக்கு ஒன்று கொடுத்துவிட்ட, பாரதியார் இரண்டைத் தமது வாயில் போட்டு அடக்கிக்கொண்டார் அந்தப் பாழாய்ப்போன ஜாதிக்காய் அவரை ஒன்றும் செய்யவில்லை. தமது பாடல்களைத் தமிழர்கள் ஏராளமாக ரசிக்க முன்வரவில்லையே என்ற வருத்தத்தாலோ அல்லது புதுச்சேரியில் தமக்குச் சரியனா தோழமை இல்லை என்ற எண்ணத்தாலோ, பாரதியார் மீண்டும் அபின் பழக்கத்தைப் பிடித்துக்கொண்டார். அவர் அபின் சாப்பிடுவது எனக்குத் தெரியவே தெரியாது. ‘ஹோமத்துக்குச் சாமக்கிரியை வாங்கிக்கொண்டு வா‘ என்று ஒரு நாள் அவர் பாஷையில் ஒரு பக்தனிடம் சொன்னார். அந்தப் பக்தனிடமிருந்துதான் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். ’நீங்கள் இந்தப் பழக்கத்தை வைத்துக்கொள்ளக் கூடாது‘ என்று பாரதியாரிடம் சொல்ல, எங்களில் ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை. அபின் பழக்கம் நாளாவர்த்தியில் அவருடைய உடம்பை நிரம்பவும் கெடுத்துவிட்டது. புதுச்சேரியில் பாரதியார் நடத்திவந்த அல்லது பாரதியாருக்காகவே நடந்து வந்த பத்திரிகைகள் நடக்கமுடியாத நிலைமையைப் பிரெஞ்சு சர்க்கார் எற்படுத்தி விட்டார்கள். சைகோன் சின்னையாவுக்கு நல்ல அச்சுக்கூடம் ஒன்று இருந்தது. சின்னையாவுக்குப் பாரதியாரிடம் நிரம்பப் பிரியமும் பக்தியும். புதுச்சேரி பிரெஞ்சு சர்க்கார் காண்பித்த மனோபாத்தாலும் எடுத்துக்கொண்ட நடவடிக்கையினாலும் சின்னையாகூடப் பயந்து போனார். எனவே, பாரதியாரின் நூலையோ பத்திரிகையையோ, சின்னையாவின் அச்சுக்கூடத்தில் அச்சடிக்க வழியில்லாமல் போய்விட்டது. பத்திரிகைப் பிரசுரம் பாரதியாருக்கு மூச்சுக்காற்று போன்றது. அந்தப் பிராணவாயு இல்லாமல் அடித்து விட்டால், பாரதியார் என்ன செய்வார்? சென்னையில் பிரசரம் செய்யும் வசதி இல்லை. இந்த மாதிரி மனம் வாடிக்கொண்டிருக்கிற சமயத்திலே, காலஞ்சென்ற எ.ரங்கசாமி அய்யங்கார் ‘சுதேசமித்திரன்‘ பத்திரிகைக்கு அரசியல் கலப்பில்லாத கட்டுரைகளையும் பாடல்களையும் தந்து உதவும்படி பாரதியாரை வேண்டிக்கொண்டார். கட்டுரைக்கோ பாடலுக்கோ இவ்வளவு பணம் என்று நிர்ணயம் கிடையாது. மாதம் முப்பது ரூபாய் மொத்தமாகக் கொடுத்துவிடுவதாக அய்யங்கார் தெரிவித்தார்; மாதம் முழுவதும் பாரதியார் எதுவும் எழுதாவிட்டாலும், இந்த முப்பது ரூபாய் புதுச்சேரியில் அவரது கதவைத் தட்டிக் கொண்டு வந்து சேரும் என்று சொல்லி அனுப்பினார். பாரதியாருக்குச் சன்மானத்தைப்பற்றியே கவலை இல்லை. பிரசுரத்துக்கு ஒரு சாதனம் கிடைத்ததே என்று குதூகலமடைந்தார். ரங்கசாமி அய்யங்கார் பாரதியாருக்கு முப்பது ரூபாய்தானா கொடுத்தார் என்று யாரும் அசட்டுத்தனமாகக் கேட்க வேண்டா. அய்யங்கார் ‘சுதேசமித்திரன்‘ வாங்கி நடத்துகையில், அது நஷ்டத்தில்தான் நடந்து வந்தது. மேலும், அப்பொழுது முப்பது ரூபாய் என்பது இப்பொழுது நூறு ரூபாய்க்குச் சமானம். ஜீவாதாரமாக மாதம் முப்பது ரூபாய் பாரதியாருக்குக் கொடுத்து வந்து, அவரது பாடல்களைப் பிரசுரம் செய்த ரங்கசாமி அய்யங்காரைத் தமிழர்கள் எக்காலத்திலும் மறக்கலாகாது. அவரையும், அவரது ஜீவ நாடியைப் போல விளங்கி வந்த ஸி.ஆர். ஸ்ரீனிவாசனையும் தமிழ்நாடு முழுமனத்துடன் பாராட்டி வாழ்த்த வேண்டியதுதான் நேர்மையான கடமையாகும். மாதந் தவறாமல் வந்துகொண்டிரந்த முப்பது ரூபாய், குடும்பத்துக்குத் தேவையான மூலப்பொருள்களின் பஞ்சத்தை ஓட்டிவிட்டது. வேதாரண்யத்தில் பிள்ளையார் கோயிலில், தாயுமான ஸ்வாமிகள் பாடிய பாடல்கள், அவரது பக்தராக விளங்கிய அருளையர் (வீரசைவர்) இல்லாவிடின், வெளிவந்திருக்க முடியுமா? அந்தப் பாடல்களைப் படிக்கும் பாக்கியமே தமிழ் நாட்டுக்கு எற்பட்டிருக்காது. அருளையரைப் போல், ‘சுதேசமித்திரன்’ பாரதியாருக்குத் தொண்டு புரிந்தது என்று சொல்வது மிகையாகாது. தம்முடைய பாடல்களை, ஆண் பெண் அடங்கலும் தமிழ்நாட்டில் பாட வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. ராகம், தாளம் எல்லாம் தெளிவாக இருக்கவேண்டும் என்று, புரொபஸர் சுப்பிரமணிய அய்யரின் தம்பி சாமிநாதனுடைய உதவியைக் கொண்டு அதை அழகாகச் சீர்படுத்திவிட்டார். பாரதியார் ஒரு பாடலை ஒரு ராகத்தில் பாடியிருப்பார். ஆனால், இந்த ராகத்தில் இன்ன தாளத்தில் அதைப் பாடினால், எழுச்சியுடன் எடுப்பாகவும் இருக்கும் என்று ‘தம்பி‘ சொன்னால், அதைத் தட்டவே மாட்டார்; ஆப்தர்கள் நிபுணர்களாயிருந்தால், அவர்களுடையை யோசனையைப் பாரதியார் நிராகரிக்கவே மாட்டார்; அட்டியில்லாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்வார். முதல் தரமான சங்கீத வித்வானைப் போலப் பாட வேண்டும் என்று பாரதியார் முறையாகச் சுரம் பாடுவதில் சிக்ஷை சொல்லிக்கொண்டார்; நினைத்த பொழுதெல்லாம் அசர சாதகம் செய்வார்; பக்கத்தில் யார் இருக்கிறார், இல்லை என்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல், பாடத் தொடங்கிவிடுவார்; ராத்திரியில் வெகுநேரம் வரையில் பாடிக்கொண்டிருப்பார். அக்கம் பக்கத்துக்காரர்கள், பாட்டு நிற்கப்படாதே என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டே, பாரதியாரின் சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ‘மகா வைத்தியநாதய்யர், புஷ்பவனம் – இவர்களுடைய சாரீரங்களைக்காட்டிலும் நயமாகவும் எடுப்பாகவும் பாரதியாரின் சாரீரம் இருக்கிறது‘ என்று விஷயம் அறிந்தவர்கள்ள சொல்லக் கேட்டிருக்கிறேன். பியாக், சகானா முதலிய துக்ககடா ராகங்கள் பாரதியாருக்குப் பிடிக்காத ராகங்கள். ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதியில், புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் வீட்டுத் திண்ணையிலும், அதை ஒட்டியிருக்கும் தாழ்வாரத்திலும் பாரதியா இரவு வெகுநேரம் வரையில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பார். எலிக்குஞ்சு செட்டியார் போன்றவர்கள் – பாரதியார் எழுதிய கட்டுரைகளில் பிரகாசிக்கின்றார்களே – அவர்கள் எல்லோரும் உண்மையான போர்வழிகள்தாம். அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள். சபை கூடிவிட்டால் சபாநாயகரும் பிரசங்கியாரும் பாரதியார்தான். புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் மட்டும் இடையிடையே ஏதேனும் சொல்லுவார்; பொருத்தமாக ஒன்றைச் சொல்லி, மேன்மேலும் பேசப் பாரதியாரைத் தூண்டுவார். மற்றவர்கள் யாவரும் பாரதியார் பொழிவதைக் கேட்டு அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். பிரெஞ்சுப் பாஷையில் பாரதியாருக்குச் சந்தேகம் வந்தால், சுப்பிரமணிய அய்யரையும் பொன்னு முருகேசம் பிள்ளையையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவார். அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்த புதிதில், அவர் வீட்டிலே ‘சுதேசி’கள் கூடிப் பேசுவார்கள். இந்தச் சம்பாஷணைகள் தெவிட்டாத அமுதமாகும். ராஜாஜி சமீபத்தில் எழுதியிருக்கும் ‘அச்சமில்லை‘ என்ற சிறு புத்தகத்தில், பாரதியார் தேசபக்தராக வாழ்க்கையைத் தொடங்கி, கவிதையாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்திருக்கிறார் என்பது போலக் குறிப்பிட்டிரக்கிறார்; இந்த மாறுதல் இந்த நாட்டின் பண்பாட்டைத் தழவியதேயாகும் என்று முத்திரையும் வைத்திருக்கிறார். லோகமான்ய திலகர் ஒன்று சொல்வதுண்டு. தேசபக்தன் ஒருவன் தீவிரவாதியாகவோ புரட்சிக்காரனாகவோ தனது வாழ்க்கையைத் தொடங்கி, தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றியைக் காணமால் போனால், அவன் மிதவாதியாகிவிடுகிறான்; அல்லது ராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து, வெள்ளக்கஷ்ட நிவாரண வேலையிலும் பஞ்ச நிவர்த்தி வேலையிலும் ஈடுபடுகிறான் என்று திலகர் மனக் கிலேசத்தோடு சொல்லுவதுண்டு. ராஜாஜி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது (நல்ல எண்ணத்தோடு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்) லோகமாண்யர் சொன்னதை ருசுப்டுத்துகிறது. இந்த மாறுதல் பாரதியாருக்குப் பிடித்ததுமல்ல. இந்தியாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு வருகிறார் அரவிந்தர் என்று அவரிடத்தில பாரதியாருக்கு அளவு கடந்த பிரேமை. ஆனால், அரவிந்தர் அரசியல் போராட்டத்தை விட்டு விலகிக்கொண்டு போவதாகத் தெரிந்ததும், பாரதியார், கொஞ்சங்கொஞ்சமாக அவரை அணுகுவதையே நிறுத்திக்கொண்டார். பாரதியார் ஆத்ம விசாரம் செய்யும் கழைக்கூத்தாடியல்லர். அவர் சாகா வரம் கேட்டால், அது இந்த மண்ணில் கீர்த்தியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான். விரைவில் பரலோக யாத்திரை சித்திக்க வேண்டும் என்று ஜபம் செய்துகொண்டிருக்கும் சோம்பேறிகளின் கூட்டத்தைக் கண்டால், பாரதியார் சீறி விழுவார். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகம் இருப்பது எதற்காக என்று கேட்ட பாட்டை, பாரதியாரின் வாழ்க்கையில் கடைசிப் பாட்டாக வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பாட்டிலே, அசட்டு வேதாந்தம் எதுவுமில்லை. ‘எல்லோரும் இந்நாட்ட மன்னர்‘ என்று பிரகடனம் செய்யும் பாரதியார், தோல் ஆண்டி அல்லர். வையத் தலைமையை வேண்டுகின்ற பாரதியாரை ராஜாஜி அர்த்தமில்லாமல், வேதாந்த வீணர்களின் கோஷ்டியில் சேர்ப்பது வருந்தத்தக்கது. பாரதியார் கடைந்தெடுத்த தேசபக்தர். அவருக்குக் கலைகளில் அபரிமிதமான நம்பிக்கை. “கவிபெருக்கும் கலைப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்!“ என்று கணீரென்று பாடியிருக்கும் பாட்டில் அசட்டு வேதாந்தம் ஏதேனும் தொனிக்கிறதா? வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கையான மாயையைக் கண்டால் பாரதியார் சீறி விழுவார். “தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி; நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தான்; நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூரித்தான்; நமது குழந்தைகளை வளர்த்தால். அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவளிடம் கேட்கிறேன்; குழந்தைகள் பொய்யா?“ என்று பாரதியார் ஆத்திரத்தோடு கேட்கிறர்ர். எனவே, பாரதியாரை வேதாந்தி என்று அழைப்பது பெரும்பிழையாகும். மேலும், இந்த நாட்டில், ஒருவர் இறுதியில் தேவதாந்தியாகப் பாழுப்பது இந்நாட்டுப் பண்புக்கு ஒவ்வினது என்று சிலர் சொல்லுகிறார்களே, அதனால் எத்தனையோ பிரீதங்கள் விளைந்துவிட்டன. தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் போய், தோல்வியையே அடுத்தடுட்தது அனுபவிக்க நேர்ந்தால், அப்பொழுது ஒவ்வொருவனும் தோல்வி மனப்பான்மை என்ற பேய்க்கு ஆளாகின்றான். அந்தப் பேயின் மூலமாகத்தான் அவன் வேதாந்தியாகப் பழுக்கிறான் போலும்! ஒன்று அகப்படாததால் ஏற்படும் வியாதிக்கு ஒழிவு என்று பெயர் கொடுக்க முடியாது. அது ‘சீ சீ! இந்தப் பழம் புளிக்கும்‘ என்று கிடைக்காத பழத்தைப்பற்றி நரி விரக்தியோடு பேசின கதையைப் போன்றதுதான். ஒன்றைப் பூரணமாக அனுபவிப்பதன் மூலமாக ஏற்படும் ஒழிவுதான் உண்மையான ஒழிவு. நமது நாட்டில் தரித்திரந்தான், அதாவது எளிமையான வாழ்க்கையும் விரக்தியுந்தான் நமது நாகரிக்த்தின் அடிப்படை என்றும், அப்பேர்ப்பட்ட நாகரிகத்துக்கு உலகத்திலேயே ஈடு எதுவும் இருக்க முடியாது என்றும் மேடைப் பீரங்கிகள் சொல்லுவது தவறு. வெள்ளைக்காரர்கள் செல்வ நாகரிகத்தையும் சுகபோகக் கருவிகளையும் இந்த நட்டுக்குக் கொண்டுவந்ததும், நமது பண்டைய எளிமை வாழ்க்கையும் விரக்தியும் எங்கேயோ பறந்து போய்விட்டன. எனவே, விரக்தி வழியை இந்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், அது அவர்கள்மீது கட்டாயமாகச் சுமத்தப்பட்டபடியால், திக்கற்ற நிலைமையில், அதை அவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தூக்கித் திரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதென்பதும், தக்க சமயம் வந்தவுடன் விரக்தி வழியை உதறித் தள்ளிவிட நம்மவர்கள் தயாராயிருந்தார்கள் என்பதும் இப்பொழுது வெட்டவெளியாகிவிடவில்லையா? எல்லாம் மாயை என்ற தத்துவத்தின் மூலமாக, இந்நாட்டு மக்கள் மதி மயங்கிக்கொண்டு, பல நூற்றாண்டுகளாக, இகலோகப் பிரவிருத்திகளுக்கும் பரலோ விரக்திக்கும் ராஜி செய்துகொண்டு வாழ எத்தனித்து, அது முடியாமல்போய் மனந்தடுமாறி, செய்யும் காரியம் இதுதான் என்று தெரிந்துகொள்ள வகையறியாமல், பராதீனப்பட்டுப் போய், சுதந்தரததை இழந்து வாழ்கிறார்கள். இது சரித்திரம். எனவே, தோல்லிவ மனப்பான்மையின் மூலமாக யாரும் வேதாந்தியாகப் பழுக்க வேண்டா என்று ஹிந்துக்களின் பல நூற்றாண்ளு அடிமை வாழ்வு அவர்களை எச்சரிக்கை செய்கிறது. விதுரன் திருதராஷ்டிரனைப் பற்றிச் சொன்னதைப்போல ‘அண்ணே! கேட்கும் காதையும் இழந்துவிட்டால்?!‘ பாரதியார் ஆஷாடபூதி வேதாந்தியே அல்லர். அவர் மகாகவி; இணையற்ற கலைஞன்; உலகத்தை ஆண்டு அனுபவிக்க வந்த உத்தமன். எனவே, ராஜாஜி போன்றவர்கள் செப்பிடுவித்தை செய்து, பாரதியாரை வேதாந்தச் சிமிழிலே போட்டு அடைக்க வேண்டா. 18 பகுதி 19 பாரதியாரின் கவிதை ‘பரவாயில்லை‘ என்று சொன்ன காலம் போய், அதற்குப் சமானமான கவிதை இந்நாட்டிலோ, அல்லது வேறு எந்த நாட்டிலோ இருக்குமோ, இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இப்பொழுது எற்பட்டிருக்கிறது. பாரதியாரின் கவிதைக்குச் சமானமான கவிதை இருப்பது அபூர்வம் என்ற உறுதி சிறிது காலத்துக்கள் ஏற்பட்டுவிடும் என்பது நிச்சயம். இந்த நாட்டிலும் சரி, அயல் நாடுகளிலும் சரி, கவிகள் பெரும்பான்மையில் கலைஞர்களாய் இருந்தார்கள். அதாவது கலைஞர்கள் அழகையோ, அவலட்சணத்தையோ, அநீதியையோ கண்டு, அதைச் சொல்சித்திரத்தில் வரைந்தார்கள். சரியாய்ச் சொன்னால் அவர்கள் கட்சிக்காரர்களாய் இருக்கவில்லை; சாட்சிக்காரர்களாய் இருந்தார்கள். ‘கவிதை உள்ளம்‘ என்ற சரக்கு அவர்களிடம் நிறைந்திருக்கவில்லை. அப்படியானால் கவிதை உள்ளம் என்பது என்ன? படைப்பில் எல்லா ஜீவராசிகளோடும் அவைகளின் சலனத்தோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மைக்குக் ‘கவிதை உள்ளம்‘ என்று பெயர். கலைஞன் தன்னுடைய சித்திரத்தை வரையும்போழுது, தான் வேறு, சித்திரம் வேறு என்ற உணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், கவிஞனுக்கு அப்படிப்பட்ட நிலைமையே இருக்க முடியாது. கவிஞன் புயலைப்பற்றிக் கவிதை எழுதினால், அவன் புயலோடு புயலாய் ஒட்டிக்கொண்டிருப்பான்; அன்பை வர்ணித்தால், அவன் அன்பு மயமாக ஆய்விடுவான்; அநீதியைத் தாக்கினால் அவன் உள்ளம் சீறி எழும். கவிஞன் ஓர் ஆளையோ ஒரு பொருளையோ கேலி செய்தால், அது அவன் தன்னைத்தானே கேலி செய்துகொண்டமாதிரி இருக்கும். அதாவாது கவிஞனின் உள்ளம் இரண்டறக் கலக்கும் உள்ளமாகும். அவன் கட்சி பேச முடியுமே ஒழிய, சாட்சி சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கவிஞர்கள்தான் முதல்தரமான கவிஞர்கள். அவர்கள்தான் ‘உலக மகாகவி‘ என்றபெயருக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். பாரதியாருக்கு இப்பேர்ப்பட்டட ஸ்தானம் வெகு எளிதிலே கிடைக்கும். ஏனென்றால், அவர் ஈடு ஜோடி இல்லாத கவிதை உள்ளத்தைப் படைத்தவர். இந்தக் கவிதை உள்ளத்தைப் பாஷையிலே உருவாக அமைத்துக் காண்பிப்பதற்கு, இந்நாட்டு மேதாவிகள் சில வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வழிகளுக்கு ‘நவ ரஸங்கள்‘ என்று பெயர். கவிதை உள்ளம் சரளமாக ஓடும் பாதையை, ஓடும் வேகத்தை, ஓடும் தன்மையை அவர்கள் ரஸம் அல்லது சுவை என்ற பெயரால் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதியாரின் கவிதை உள்ளம் நவரஸங்கள் வழியாக வழிந்தோடி வெள்ளப் பெருக்கொடுத்திருப்பதை அவருடைய பாடல்களில் காணலாம். கவிஞர்களில், ரஸத்தை உடைத்து உடைத்துப் பின்னப்படுத்திக் காண்பிக்கும் பேர்வழி அல்லர் பாரதியார். அந்தந்த ரஸத்தின் சாயையை அல்லது மூர்ச்சை ஸ்தானத்தை மட்டும் பாரதியார் காண்பிக்க மனங்கொள்ளார். அவைகளின் பூரண உருவத்தையும் தன்மையையும் வலிவுடனும் பொலிவுடனும் வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர் பாரதியார். ஆகவே, எந்தக் கவிஞன் நவரஸங்களையும் வெகு லாவகமாகக் கையாளுகின்றானோ, கையாள முடிகிறதோ, அவனே உலக மகாகவி என்ற பீடத்தில் அனாயாசமாக, எவருடைய உதவியுமின்றி, எவருடைய சிபர்சையும் கோராமல் ஏறி உட்கார்ந்து கொள்கிறான். அப்படியானால், பாதியாருக்கு உலக மதிப்பு ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்று கேட்கலாம். அரச மரத்தைப் பிடித்த பிசாசு பிள்ளையாரையும் பிடித்துக் கொண்டது என்பார்கள். அது உண்மை என்றே தோன்றுகிறது. அது போலவே பாரதியாருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் தற்போதைய தாழ்வடைந்த, அலங்கோலமான, குறியில்லாத, நெறியில்லாத வாழ்க்கைதான் பாரதியாருக்கு உலக மதிப்பு வராததன் காரணம். இன்னொரு காரணமும் உண்டு. உலகம் இப்பொழுது கவிஞனைப் பாராட்டாமல், கொலைஞனைப் பாராட்டும் கோரமான தெழிலில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மனப்பான்மையில் மயங்கிக் கிடக்கும் உலகம். கவிதைக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடியாது. பாரதியார், எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களில் சிரேஷ்டமானவர். இதை அடிக்கபடி நம்முடைய மனத்தில் சிந்தனை செய்துகொண்டு, நாம் பெருமையும் தைரியமும் கொள்ளவேண்டும். பாரதியாரின் பாடல்களில் அவருடைய கவிதை உள்ளம் எப்படி அழகாக மலர்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இப்பொழுது சில வரிகளைத் தருகிறேன். “ காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ “ பாரதியார் உயிருள்ள, உயிரில்லாத பொருள்களோனடு எப்படி ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றார் என்ற ஆச்சரியத்தை நீங்கள் காணவில்லையா? “ இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம் !“ பாரதியாரின் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருவதை இங்கே காணலாம். “ நல்லறும் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள்தாய் – அவர் அல்லவ ரரியின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடு வாள் “ சரித்திர உண்மையை இவ்வளவு அழகாக வேறு யார் இதுவரையிலும் வர்ணித்திருக்கிறார்கள்? “ கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரோ? “ என்ன அழகான, ஆணித்தரமான சித்திரம்! “ தாதரென்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநிகர் சமான மாக வாழ்வ மிந்த நாட்டிலே “ பாரதியாரின் நம்பிக்கையும் உறுதியும் ஒரு நாளும் பொய்யாகப் போவதில்லை. “ புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோல“ கொடுங்கோலர்கள் சரிந்து வீழ்ந்த இந்தச் சித்திரத்தைச் சிந்தனை செய்து பாருங்கள். “ காடெல்லாம் விறகான செய்தி“- பாரதியார்தான் இந்த மாதிரி எழுதமுடியும். “ தனி ஒருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.“ இவ்வளவு அன்பும் ஆத்திரமும் பொங்கி வழிந்த கவிஞனை (பாரதியாரைத் தவிர) நீங்கள் பார்த்ததுண்டா, அல்லது கேள்விப்பட்டதுண்டா? எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் சக்தி பாரதியாரின் தனிப் பொக்கிஷமாகும். “ கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்“ என்ன பிரயாசை இல்லாத முற்றுமோனை ! அர்த்தத்துக்கு ஆபத்தாய் வாராத முழு முற்று மோனை! “ துன்பமே இயற்கை யனும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டிநிற்போம் “ ஆமாம், ‘உலகம் மாயை‘ என்ற போலித் தத்துவத்தைப் பாரதியார் அடித்து வீழ்த்தும் அற்புதத்தைப் பாருங்கள். “ காவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் !“ இது ஜெய பேரிகை கொட்ட வேண்டிய செய்திதான்; சந்தேகமே இல்லை. “ பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார் வீட்டிலே பெண்டாட்டி மேல்பூதம் வந்ததென்பார் பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்“ சேவர்களுடைய குறும்புகளைப் பாரதியார் நகைச் சுவையோடு வர்ணிக்கும் விந்தையே விந்தை ! “ சின்னஞ் சிறுகிளியே – கண்ணம்மா செல்வக் களஞ்சியமே“ * * * * ‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே “ எத்தனை அண்டுகள் தவங்கிடந்தாலும் வேறு எவராலும் இந்த மாதிரிச் சித்திரம் வரைய முடியாது. குழந்தை பேசும் பொன் சித்திரமே! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் ! “ அழகுள்ள மலர்கொண்ட வந்தே – என்னை அழஅழச் செய்துபின் கண்ணை மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன்‘ என்பான் – என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் “ குறும்புக் காதலை இதைக்ககாட்டிலும் அழகாக வர்ணிக்க முடியுமா? “ காதலடி நீஎனக்கு – காந்தமடி நானுனக்கு வேதமடி நீஎனக்கு – விந்தையடி நானுனக்கு “ காதலன் காதலி ஒன்றியிருக்கும் இந்த உலகத்தைப் பாரதியார் நமக்குப் பரிசாக அளித்திருக்கிறார். இணையில்லாத கற்பனை! குயில் பாட்டில் ஆரம்பம் முதல் கடைசி வரையில் இன்ப மயமான நகைச்சுவைப் அதிலே எதை எடுத்து, எதை விடுவித்துக் கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவையின் சிகரத்தில், அதாவது பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்காத நகைச்சுவையின் சிகரத்தில், பாரதியார் ஏறி உட்கார்ந்திருக்கிறார். பாஞ்சாலி சபதத்தில், வீரரசம் ஊடுருவிப் பாய்ந்து கொண்டே போவதைக் காணலாம். பாஞ்சாலி சபதத்தை, பாரதத்தின் மொழி பெயர்ப்பு என்று பாரதியார் அடக்கத்தடன் சொல்லிக்கொண்டார். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் காணப்படும் கம்பீரமும், வீரமும், துடிதுடிப்பும், சொல்வன்மையும், கருத்தமைப்பின் அழகும் வியாபாரத்தில் இருக்குமோ என்று பாஞ்சாலி சபதத்தைப் படித்த அன்பர்கள் பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். வழிநூல், முதல் நூலையே அமிழ்த்தித் தள்ளும்படியாக இருந்தால், அதை வழிநூல் என்று சொல்லலாமா? ஊழிக்கூத்தைப் படித்தால், பயங்கர உணர்ச்சி விறுவிறு என்று உடம்பில் ஏறிவிடும். “ஊழிக்கூத்தைப் போன்ற கவிதையை வெள்ளைக்கார நாட்டு இலக்கியத்தில் தாங்கள் கண்டதுண்டா?“ என்று ஆங்கில இலக்கிய நிபுணரான தமிழர் ஒருவரை நான் கேட்டபொழுது அவர் ‘இல்லை‘ என்று சொன்னதோடு, ‘ என்ன ஆச்சரியமான கவிதை ! ஊழி நர்த்தனந்தான். அதில் சந்தேகமே இல்லை ‘ என்று பெருமூச்சு விட்டார். நவரசங்களையும் அனாயாசமாயக் கையாண்ட பாரதியாருக்கு உலக மகா கவிகளுக்குள் எந்த ஸ்தானம் கொடுப்பது என்று தெரியவில்லை. இதற்கென்று தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனி நூலாக அந்த ஆராய்ச்சியை வெளியிடவேண்டும். அதை யார் செய்யப் போகிறார்களோ, பார்க்கலாம். பாரதியார் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்த தினத்தைத் தமிழர்கள் வருஷா வருஷம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் நியாயமாகவும் பெருமையோடும் செய்ய வேண்டிய காரியங்களில் இது ஒன்று. ஆனால், தமிழ்ப் பாஷையின் மாண்பையும், பாரதியாரின் பெருமையையும் தமிழர்கள் சரியாகத் தெரிந்துகொண்டார்களா என்பது சந்தேகந்தான். ஒரு மகான் எந்தத் துறையில் வேலை செய்தாலும், அவரது ஜீவிய காலத்திலேயே, அவருக்கு எற்ற பெருமையுடன் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. உலக மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரை அவருடைய காலத்தில் மதித்தார்களா? ‘மான் திருடி‘ என்று அலட்சியமாக அவரைப்பற்றிப் பேசிய மனிதப்பதர்கள்தாம் அவரது காலத்தில் அதிமாயிருந்தார்கள். இன்றைக்கோ ஷேக்ஸ்பியர் என்றால் உலகம் பரம ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறது. பெரியவர்கள் எல்லாருமே அவரவர் காலத்தில் மிகுதியும் ஏளனத்துக்கு உள்ளானதைத்தான் உலகம் இதுவரையிலும் கண்டிருக்கிறது ( இந்த விதிக்கு விலக்கு, காந்தி.) ஆகவே, பாரதியாரின் பெருமையைத் தமிழர்கள் சரிவர உணரவில்லையென்று வருத்தப்பட்டுக் கொள்ளுவதில் பயனில்லை. தீர்க்கதரிசிகளாக இருப்பவர்கள், தங்கள் தீர்க்க தரிசனத்தைக்கொண்டு எக்காலத்தும் எந்த நிலைமைக்கும் பொதுவான, தேவையான, அழிவில்லாத உண்மைகளைக் கண்டுவிடுகிறார்கள். ஆனால், அவைகளை மனிதர்கள் நேரே உணர்ந்துகொள்ளுவதில்லை. சாப்பாட்டு ராமனுக்குச் சோற்றிலே குறி. திருடனுக்குத் திருட்டிலே குறி, விடனுக்குப் பெண்ணின் பேரிலே கறி. மோசக்காரனுக்கு முட்டாள்பேரில் குறி. இப்படிப்பட்ட கீழ்த்தரமான மக்கள் அதிகமாகப் பரவிக் கிடக்கும் காலத்தில் பெரியார்களின் திருவாக்கு, மதிப்புக்கு உரியதாகப் பாவிக்கபடுவதில்லை. இதைப் போலவே பாதியாரைப் பற்றியும் சிறிது காலம் மதிப்பு இருந்து வந்து. பாரதியார் இலக்கணம் அறியாக் கவிஞன் என்று பண்டிதர்கள் ஆதாரமும் பொருளுமின்றிப் பேசினார்கள். பாரதியார் வெறும் தேசியக் கவி என்று பலர் பேசிக்கொண்டார்கள். பாரதியார் பெண் விடுதலை நண்பன் என்று சிலர் ஆத்திரப்பட்டார்கள். மற்றும் பலர் ஆர்வத்துடன் பேசினார்கள். பாரதியார் வெறுங்கஞ்சாப் புலவர் என்று ஏசினதையும் என் காதால் கேட்டிருக்கிறேன். ‘மார்க்கெட்டில் ஒன்றும் வாங்கத்தெரியாமல், ஒரு கூடைக் கிரையை வாங்கின பாரதிதானே?‘ என்று சிலர் புரளி செய்வதைக் கேட்கும் துர்பாக்கியமும் நான் பெற்றதுண்டு. ஆனால், இவைகளெல்லாம் யோசிக்காமல் ருசுவில்லாமல் எதையும் பேச முடியும் என்பதற்கு அத்தாட்சிகள் ஆகின்றனவே அல்லாமல், பாரதியாரைப் பற்றிய விமர்சனம் ஆகமாட்டா. மனித வர்க்கத்துக்கு உய்வு, கலையும் கவிதையுந்தாம். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் கவிதைதான். தத்துவத்திலே தர்க்கம் நிறைந்திருக்கலாம். பௌதிக சாஸ்திரத்திலே அறிவு மிதந்து கிடக்கலாம். மதத்திலே பக்தி பூரித்து நிற்கலாம். காதலிலே கனிவும் கீதமும் குழைவும் மண்டிக் கிடக்கலாம். கலையிலே அழகும் ஆனந்தமும் விம்மி விழிக்கலாம். ஆனால், இவை எல்லவற்றையும் தனக்கு அங்கங்களாகக் கொண்டிரக்கும் கவிதையைக் கடவுள் என்று நான் போற்றுகின்றேன். ஒப்புயர்வில்லாத கவிதையைப் பாடியவர் சப்பிரமணிய பாரதியார் என்று நான் உரக்கக் கூவுகிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, உலகத்துக்குக் காட்சியளிக்கும் வளர்பிறை பாரதியார் என்று சொல்லுகிறேன். வானை நோக்கிக் கைகள் கூப்பித் தொழுது நிற்கும் பக்தர்களுக்கும் உயிரும் உற்சாகமும் அளித்து உரப்படுத்தும் சூரியன் பாரதியார் என்று வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிதர்கள் உறுமினாலென்ன? பாமரர்கள் உறங்கினாலென்ன? இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் இறுமாப்பினால் உளறினாலென்ன? பாரதியார் இன்னல் வாய்ப்பட்டு அகால மரணம் அடைந்தாலென்ன? ‘அவர் தொடாதது ஒன்றும் இல்லை. தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை‘ என்ற டாக்டர் ஜான்ஸன், கோல்ட்ஸ்மித் என்ற மேதாவி எழுத்தாளரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதையே இன்னம் அதிகமான அழுத்தத்துடன் பாரதியாரைப் பற்றிச் சொல்ல முடியாதா? பாப்பா முதல் பாட்டி வரையில், காதலன் முதல் காதகன் வரையில், குரங்கு முதல் குயில் வரையில், பதிதன் முதல் பக்தர்வரையில், காலிமுதல் கவி வரையில், கசடன் முதல் காந்தி வரையில், அன்பன் முதல் அரக்கன் வரையில், வம்பன் முதல் கம்பன் வரையில், பாரதியார் யாரை, எதைத் தொட்டு அழகு செய்யவில்லை? பாரதியாரின் கவிதை, ஆழமும் கரையும் காணமுடியாத கடலாகும். பாரதியாரைப் போகியும் போற்றுவான், யோகியும் போற்றுவான். ஆகாத்திலிருந்து விழும் நீர்த்துளிகள் யாவும் எப்படியோ கடலுக்குப் போய்ச் சேர்ந்துவிடுவது போல, பல்வேறு தன்மைகள் கொண்ட மனித உள்ளங்கள், மகாகவி என்ற அலையிலாப் பெருங்கடல் உள்ளத்தில் போய் அடங்கிவிடுகின்றன. ஆகவே, மகாகவி எல்லோருக்கும் சொந்தம்; எல்லா நாடுகளுக்கும் பொது. இங்கிலீஷில் எழுதியதால் ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் மகாகவிகள் ஆகவில்லை; எல்லோருடைய உள்ளங்களையும் கவர்கின்ற தன்மை அவர்களிடம் இருப்பதால்தான் அவர்கள் மகாகவிகள். பாரதியாரின் கவிதையிலே நகைச்சுவை வேண்டுமா? இருக்கிறது. சோகம் வேண்டுமா? உண்டு. அற்புதம் வேண்டுமா? அபரிமிதமாக உண்டு. ஆத்திரம் வேண்டுமா? கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கும். ஆறுதல் வேண்டுமா? ஏடு ஏடாயிருக்கிறது. வேதாந்தம் வேண்டுமா? பத்தி பத்தியாய்ப் பார்க்கலாம். வளர்த்திக்கொண்டு போவானேன் ! எது இல்லை? பாரதியாரை நினைத்தால் எனகுப் பயமாயிருக்கிறது. ஏன்? நேற்றைக்குப் படித்த கவிதையை இன்றைக்குப் படித்தால் புதிது புதிதாக அழகும் பொருளும் சுவையும் கண்ணுக்குத் தென்படுகின்றன. நாம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்துகொண்டு போகிறோமோ, அதற்குத் தகந்தாற்போல, பாரதியாரின் கவிதை என்ற சங்கப்பலகை நீண்டுகொண்டே போய், நமக்குத் தங்குமிடம் கொடுக்கிறது. இது என்ன விசித்திரமான கவிதை! மேற்சொன்ன மாதிரி, நான் எவ்வளவு காலத்துக்கு முன்பேயோ எழுதினேன். 1943 ஆம் வருஷ பாரதியார் கொண்டாட்ட வைபவ வாரத்தில் ராஜாஜி சொன்னதாவது : “மாகாண பாஷைகளில், அதாவது வங்காளி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி போன்ற பாஷைகளில், சென்ற முந்நூறு வருஷ காலமாக, பாரதியாரைப் போன்ற கவி தோன்றவில்லை. பாரதியார் தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்தது தமிழர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.“ நிகரில்லாத தமிழ்ப்புலவர் திரு.வி. கல்யாணசுந்த முதலியார், “ இது பாரதி சகாப்தம். தமிழர்களின் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் பாரதி, உன்னதமான புரட்சியை உண்டாக்கிவிட்டார். பாரதியாரின் கவிதை, டாகூரின் கீதாஞ்சலியைக்காட்டிலும் உயர்ந்தது. பாரதி உலக மகாகவி “ என்று சொன்னார். பாரதியார் உலக மகாகவி என்று சொல்ல இந்தப் பெரியார்களுக்கு இருபது வருஷம் பிடித்தது. இப்பொழுதேனும் கூச்சப்படாமல் அவர்கள் வாய்விட்டுச் சொன்னார்களே! பாரதியாரின் கவிதைகளைத் துண்டு துண்டாகவும், பிரிவு பிரிவாகவும் வகுத்து நான் இந்த நூலில் ஆராய்ச்சி செய்யப் புகவில்லை. அதை வேறு புத்தகமாக எழுதினால்தான் நியாயமாக இருக்கும். பாரதியாரின் வாழ்க்கையில் சில குறிப்புகளைத் தந்து அவரைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைக் கொண்டுதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. ஒன்றைமட்டும் தமிழர்கள் அனைவரும் நன்றாகக் கவனிக்க வேண்டும். வங்காள பாஷையிலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் இப்பொழுது ஏராளமாகக் கதைகளைத் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் என்ன? தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்பதா? பாரதியாரின் வழிபற்றி, அதிசயிக்கத்தக்க திறமையுடன் எழுதும் எழுத்தாளர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் தமிழுக்கு ஏன் இன்னும் சரியான மதிப்பு ஏற்படவில்லை? ஜாதிப்பிரிவினையும் சில்லறைப் பொறாமையுந்தாம் இதற்குக் காரணங்கள் என்று திட்டமாகச் சொல்லிவிடலாம். தமிழ் இலக்கியத்தின் மூலமாகத்தான் தமிழர்களின் மனத்தைப் பண்படுத்த முடியும் என்பதைப் பாரதியார் வெகு அழகாக எடுத்துக்காண்பித்திருக்கிறார். அதற்காகத்தான், ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்‘ என்று பாரதியார் தமிழர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதைத் தலைமேல் கொண்டு உலகத்திலுள்ள எல்லா ரஸமான விஷயங்களையும் தமிழில் கொண்டுவந்து சேர்க்க நம்மில் ஒவ்வொருவரும் அரும்பாடுபட வேண்டும். பாரதியார்தான் தமிழ். பாரதியாரிடம் பக்தி செலுத்துபவர்கள், தமிழுக்கும் தேசத்துக்கும் தொண்டு செய்யத்தான் வேண்டும். இதுதான் எனது வேண்டுகோள். 19 பகுதி 20 பாரதியார் பிறந்த காலம் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட வரையில் வினோதமான காலம். நகர நெருக்கடி தோன்றாத காலம். கிராமம் பாழாகாத காலம். பஞ்சமும் பருவ மழையும் ஆண்டவனது லீலைச் சோதனைகள் என்று ஆலோசனை செய்யாமல் மக்கள் அலறிக்கொண்டிருந்த காலம். காபி என்பதே தெரியாத காலம். காலணா நாணத்தைக் கையில் வைத்துச் சுண்டிச் சுண்டி அழகு பார்த்த காலம். தானியங்களின் அகவிலை ஏறாத காலம். தேரும் திருவிழவும் தெருக்கூத்துகளும் ஜனங்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்த காலம். ஜோசியம் சொல்லும் வள்ளுவர்கள், உயர்ந்த படிப்பாளிக்குக்கூடத் தாசில் உத்தியோகத்துக்கு மேலே சொல்லத் தெரியாத காலம். ‘ஐகோர்ட்டு பாரிஸ்டர்‘ என்று வெகு மரியாதையுடன், தெவலோகப் பிறவியைப் பற்றிப் பேசுவதைப் போல, காதோடு காது வைத்த கைகளையும் காதுகளையும் மார்புகளையும் அலங்காரம் செய்யாத காலம். பருத்திப் புடைவையைத் தவிர, பட்டுப் புடைவையை அதிகமாக அறியாத காலம். கதாகாலட்சேபங்கள் மூலமாகக் கல்வியைக் கேட்ட காலம். பரத நாட்டியத்தைப் பரத்தையர் மட்டும் ஆவலுடன் ஆதரித்துப் போற்றிவந்த காலம். போன உயிரைத் திருப்பிக் கொண்டுவந்த காலம். போன உயிரைத் திருப்பிக்கொண்டுவரும் வித்தையைத் தவிர வேறு எல்லா வித்தைகளிலும் கைதேர்ந்த வெள்ளைக்காரன் என்று இங்கிலீஷ்காரனை வாயாரப் புகழ்ந்த காலம். விக்டோரியா மகாராணி காலத்தில விபரீதம் எதாவது தோன்ற முடியுமா என்று ராஜபக்தி ஓங்கி நின்ற காலம். கிராமத்தில் சேர்நத்ற்போல ஆயிரம் ரூபாயைப் பார்க்கமுடியாத காலம். நோட்டுகள் மலியாத காலம். வயிற்றுப்பிழைப்பிற்கு வேறு என்ன வழி என்று வயிற்றுப் பிழைப்பைப் பெரிய பிரச்சினையாகப் பேசிவந்த காலம். ‘கோச்சு வண்டி‘ இரட்டைக் குதிரை சாரட்டுப் பேர்வழிகளைச் சிறு குபேரர்களாக மதித்து மயங்கிய காலம். இந்தக் காலத்திலே தமிழர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தாயுமானவர், ‘யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும், உறங்குவதுமாக முடியும்‘ என்று பாடியிருக்கிறாரே, அவ்வாறே தமிழர்களின் வாழ்க்கை நடைபெற்றது. கலையைப் பற்றித் தமிழர்களுக்குக் கவலையா? கல்வியைப் பற்றிக் கவலையா? பொன்னைப்பற்றிக் கவலையா? அரசியலைப்பற்றிக் கவலையா? கவிதையைப்பற்றி அவர்கள் யோசித்ததுண்டா? தமிழ்மொழி, தோல் சுருக்கம் காணுவதைப் போலச் சுருக்கம் கண்டு வந்ததைப் பற்றி அவர்கள் சிந்தனை செய்தார்களா? கைத்தொழில்களைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டார்களா? ‘ஆண்டவனுடைய பிரதிநிதியாக, ஆங்கிலேயன் இந்த நாட்டின் அரசியல் பொறுப்பை ஏற்று, நீதித் தராசைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் வரையில், நமக்கென்ன கவலை?‘ என்று அவர்கள் பிதற்றிக்கொண்டிருந்தார்கள். கையில் நீதித் தராசைப் பிடித்துக்கொண்டிருக்கும் இங்கிலீஷ்காரன், ‘தன் பையில் பணம் நிரம்புகிறதா என்பதைத்தான் தனது லட்சியமாகக் கொண்டிருந்தான்‘ என்று அப்பொழுது யாரேனும் தமிழர்களிடம் சொல்லி, தண்டப் பிரயோகம் பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா? “நம்முடைய மதத்தில் அவர்கள் தலையிடுகிறார்களா? நமது பெண்களை அவர்கள் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களா? நம்முடைய ஆசாரங்களை அவர்கள் கெடுக்கிறார்களா? ஏதோ கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்ளுகிறார்கள். அதனாலென்ன? தேன் எடுப்பவன் புறங்கையயை நக்காமல் இருப்பானா?“ என்று இங்கிலீஷ்காரர்களுக்குப் பரிந்து பேசும் கூட்டந்தான் இந்த நாட்டில் பெரும்பான்மையாய் இருந்தது. வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டும் என்று பொதுவாக எல்லாரும் ஆசைப்பட்டார்கள்; அதற்கு ஆரம்ப அஸ்திவாரமாக, இங்கிலீஷ் படிப்பதில் அளவற்ற மோகங்கொண்டார்கள். நாட்டிலோ தரித்திரம் தாண்டவமாடுகிறது. இத்தச் சமயத்தில் சீமையிலிருந்து சுகபோக வாழ்வுக்கு ஏற்ற சாமான்களை, இங்கிலீஷ்காரர்கள் இந்த நாட்டில் கொண்டுவந்து ஏற்றினார்கள். இவைகைளை அனுபவிக்கும் ஆசை, தமிழர்களின் உள்ளத்தில் உதிப்பது இயற்கைதானே? ஆனால், ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்‘ என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிட்டார்கள். சாமான்களை வாங்குவதற்குச் செல்வ நிலை சரியாக இருக்க வேண்டாவா? ஆனால், இதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆண்டவன் படைத்த இந்த மண்ணுலகில் மனுஷன் கவலைப் பட்டுச் செய்கின்ற காரியம் எதுவுமே இல்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள். இதன் பயன் என்ன? பொறுப்பு உணர்ச்சியும் சோதனைத் திறனும் தமிழர்களை விட்டுவிட்டுப் போய்விட்டன. எந்த வகையிலும், எதற்காகவும் பொறுப்பை எற்க மனமில்லாத நிலைக்குத் தமிழர்கள் வந்துவிட்டார்கள். ‘முள்ளைத் தைத்துக்கொண்டேன்‘ என்று சொல்வதுதான் முறையும் உண்மையுமாகும். ஆனால், பொறுப்பை எற்க மனமில்லாத தமிழன், ‘முள் தைத்து விட்டது‘ என்று முள்ளின்பேரில் பழியைப் போட்டு, அந்த விஷயத்தில் தனக்குச் சிறிதளவுசுடப் பொறுப்பில்லாதது போலப் பேசும் ஆச்சரியத்தைப் பாருங்கள். பொறுப்பற்ற, சதந்தரமில்லாத வாழ்வுக்கு, சோம்பலே ஆட்சி புரியும் வாழ்வுக்குச் சுகவாழ்வு என்று பெயர் கொடுத்து அழைத்து, தமிழன் அகமகிழ்ந்தான். சோலுள்ளவன் செயல் செய்வானா? கைச் சுண்டுவிரலைச்கூட அவன் அசைக்க மாட்டான். உழைப்பின் மூலமாக எதையும் பெற முடியும் என்பதில் அவனக்கு நம்பிக்கை இருந்தால்தானே? ஆனால், அவன் உழைப்புக்கு ஒரு மாற்று கண்டுபிடித்து அகமகிழ்ந்தான், அதன் பெயர்தான் அதிருஷ்டம். இந்த அதிருண்டம் என்ற பொய்க்கு வேறு பெயர்களும் உண்டு. காலம் என்று ஒரு பெயர். திருவருள் என்று இன்னொரு பெயர். லக்ஷ்மிகடாட்சம் என்று மற்றொரு பெயர். ஈசன் கருணை என்று பிறிதொரு நாமதேயம். இவ்வாறு அசடு என்ற படுகுழியில் அவன் வீழ்ந்தான். பிறருடைய செயலால்தான், தான் நன்மை அடைந்து, முன்னேறிச் சுக வாழ்வு வாழ முடியும் என்று திடமாக நம்பின தமிழனை, விதிப் பிசாசு வேறு கெட்டியாக பிடித்துக்கொண்டது. இப்பேர்ப்பட்ட நிலைமையில் இருந்த தமிழர்களை அடக்கி ஆள வேண்டிய அவசியமே இல்லை. அடக்குவதற்கு என்ன எதிர்ப்பு இருக்கிறது? யார் உருட்டினாலும் பந்து உருண்டு கொண்டே போகும். இதைப் போலவே, தமிழர்களின் வாழ்வும் கண்ட அன்னியர்கள் எல்லாம் தமிழர்களின் வாழ்வைப் பந்தாடிவிட்டார்கள். தங்களுடையது என்று உள்ளப் பூரிப்போடும் கர்வத்தோடும் தமிழர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக, எதுவும் அவர்களுக்குக் கிடையாது என்று தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பொய்யான பிரசாரத்துக்கு தமிழர்கள் பலியானார்கள். இந்தப் பிசாரம்கூட, இங்கிலீஷிலும் பிறமொழிகளின் மூலமாயுந்தான் செய்யப்பட்டது. தமிழ்ப் பாஷையைத் தமிழர்களே அலட்சியம் செய்தார்கள; ‘தமிழ் கற்றால், அது வயிற்றுக்குச் சோறு போடுமா? இடுப்புக்குக் கட்டத் துணி கொடுக்குமா?‘ என்று அசடு வழியும் ஆபாசக் குப்பைகளைக் கிளப்பினார்கள்; காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை அடியோடு மறந்து போனார்கள்; முக்திக்குப் பதிலாக, சர்க்கார் உத்தியோகமே மோக்ஷம் என்று வாதாடத் துணிந்தார்கள். தன்னம்பிக்கையும் சுதந்தர தாகமும் சயமரியாதையும் தமிழர்களின் இதயக்கண் முன்னே காட்சி அளிக்க மறுத்துவிட்டன. பராதீனம் என்பது பழுத்த கனியாகிவிட்டது. கைவிரிப்பும் பெருமூச்சுந்தாம் கண்ட பலன்கள். பாலைவனத்தில் காணும் நீர்ச்சுனைகளைப் போல, சிரின் உள்ளத்தில் தமிழன் என்ற பெருமை உணர்ச்சி உற்றுப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் செயலற்றசாதுக்களாக வாழ்ந்தார்கள் கடவுளை விகானந்தர் தமது இளம்பிராயத்தில் நம்பவில்லை. இந்த மனப்பான்மையோடு, அவர் ராம கிருஷ்ண பரமஹம்ஸரை நாடினார்: கடவுள் இருக்கிறாரா என்று பரமஹம்ஸரைக் கேட்டார். இருக்கிறார் என்றார் அவர். ‘தங்களால் எங்களுக்குக் கடவுளைக் காண்பிக்க முடியுமா?“ என்று கேட்டார் விவேகானந்தர். ‘ஆனந்தமாய்க் காண்பிப்பேன்‘ என்ற பரமஹம்ஸர் சொன்னதைக் கேட்டு விவேனாந்தரின் பார்வை அடியோடு மாறிவிட்டது. பரமஹம்ஸர் வெறும் சன்னியாசி சாதுவாக இருந்திருந்தால், அவர் சவாமி விவேகான்தரின் மனத்தைச் சிறிதளவுகூட மாற்றியிருக்க முடியாது. தமிழன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த சிலர், வெறும் சாதுக்களாக வாழ்ந்ததால், அவர்களால் தமிழர்களின் இதயத்தைத் தொட்டு, பெருவாழ்வு என்ற இன்ப விளக்கை ஏற்றிவைக்க முடியவில்லை. ‘ஏதோ பொழுது போகவில்லை போலிருக்கு. தமிழனது பெருமையைப் பற்றியக் கதை கதைக்கிறார்கள்’ என்று ஏளனக்குரலில், அந்தச் சாதுக்களைக் கேலி செய்தார்கள் மற்றவர்கள். தமிழர்களின் இத்தகைய பரிதாபகரமான மனநிலைமைய மாற்ற வெறும் சாதுக்களால் முடியுமா? முப்பாலும் பாழாகி, அதற்கப்பால் படர்ந்தொளி திகழும் பரமனின் பாதமே கதி என்று சொல்லும் வேதாந்தியும், உலகமே நிலையில்லாததென்ற சொல்லித் தனக்கு மட்டும் அறுசுவை உண்டி வேண்டும் ஆண்டிப் பண்டாரமும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியாது. தமிழனைத் தட்டி எழுப்பி, அவனை முன்னேறச் செய்பவர் திடசங்கற்பமுள்ளவராக இருக்க வேண்டும்; தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர், கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாடவேண்டும். குழந்தைக்குத் தோழனாகவும், பெண்மைக்குப் பக்தனாகவும், அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும், சுதந்தரத்துக்கு ஊற்றுக்கண்ணாகவும், சுற்றி நில்லாதே போ பகையே என்னும் அமுத வாய் படைத்த ஆண் மகனாகவும், கவிதைக்குத் தங்குமிடமாகவும், உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப்பெற்றவனாகவும் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் தூங்கும் தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன். இப்பேர்ப்பட்ட முர்த்திகரம் வாய்ந்த பாரதியார், தமிழ்நாட்டில் தோற்றியிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தனை செய்வதே சிரமமான வேலையாகும். அழுகிப்போன வாழைச்சிங்கம் வளர்வதை நீங்கள் பார்த்திருக்கிகறீர்களா? “ அழுகின சிங்கமா இவ்வளவு வாளிப்போடு வளர்ந்திருக்கிறது!“ என்று வியப்படையும் படியாக அது வளர்ந்திருக்கும். அந்த இயற்கை எழில் காட்சியைப் போல, பாரதியார் தமிழ்நாட்டில் தோன்றினார். தமிழர்களின் வாழ்க்கை அழுகிப்போனது. அது அடியோடு மறைவதற்காக அல்லவென்பதையும், அது மறுமலர்ச்சியின் ஆணித்தரமான விதையின் வீர்யம் என்பதையும், நாம் பாரதியாரின் தோற்றத்திலிருந்து கண்டுகொண்டோம். “ பொழுது புலர்ந்தது யாம்செய் தவத்தால் புன்மை இருள்கணம் போயின யாவும்“ பொழுது புலர்ந்ததையும் புன்மை இருட்கணம் போனதையும் பாரதியார், தமது இளம்பிராயத்திலேயே, தாம் சம்பந்தப்பட்ட வரைக்கும் தெளிவாகத் தெரிந்து கொண்டா. அனாயாசமாகக் கவிபாடும் திறன் தம்மிடமிருப்பதைக் கண்டு அவர் அகம்பாவம் அடையவில்லை; அந்தத் திறனைத் தமது தாய்நாட்டின் உய்வுக்காக அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று துணிபு கொண்டார்; தீர்மானங்கொண்டார், பள்ளிப் படிப்பில் அவருக்கு அக்கறை இல்லாமல் போனதற்கு இதுவே காரணம். இளம்பிராத்திலேயே தமது இலட்சியம் இன்னது என்று தெரிந்துகொண்டதால், அதற்கான சாதனம் இன்னவைதாம் என்று எளிதிலே தெரிந்துகொள்ளவும் அவரால் முடிந்தது. மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் அந்தத் திருப்பணியில் சேர்த்துப் பிணைத்து விட்டார். தமிழர்களைத் தமிழ்மொழி மூலமாகத்தான் உயர்த்த முடியும் என்ற உண்மையை ஓர்ந்தார்; தமிழுக்குத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்டார். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் ‘என்று யாரோ பேதை அவதூறு பேசியது அவரது உள்ளத்தில் சுருக்கொன்று தைத்தது. வந்த அவதூறைப் பொய்யாக்க வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார்; இந்தக் கைங்கர்யத்திலேதான் அவர் மறையும் வரையில் ஈடுபட்டிருந்தார். உலக இலக்கியமனைத்தையும், உலக இயக்கங்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தார்; பசையான ஒன்று அவைகளில் எதில் கண்ணில் பட்டாலும், அதைத் தமிழோடு சேர்த்து ஒட்டிக்கொள்ளும்படியாகச் செய்து வந்தார். தேக்கமடைந்து கிடக்கும் தமிழர்களின் சமூகம் ஏன் தேக்கமுற்று இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குடைந்து குடைந்து ஆராய்ச்சி செய்தார்; அச்சமே முக்கிய காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார்; அறிவுப் பெருக்கமில்லாமை மற்றொரு காரணம் என்பதையும் கண்டார்; எனவே, அறிவை வளர்ப்பதற்கும் அச்சத்தைப் போக்குவதற்கும் பல துறைகளிலும் பாடுபட்டார். கவிதை எழுதினார்; கட்டுரை எழுதினார்; தர்க்கம் செய்தார்; தட்டிக்கொடுத்தார்; வீணர்களைக் கண்டால் வெட்டிப் பேசுவார்; பலவீணர்களிடம் கருணையையும், போக்கிரிகளிடம் கடுமையையும் காண்பிப்பார்; தம்மை ஆரம்பப்பள்ளி வாத்தியாராகக் கருதிக்கொண்டு, பொறுமையை இழக்காமல் மக்களுக்குப் போதித்து வந்தார். தமிழருக்கு வசன நடை புதிது ஆனதாலும், பெரும்பான்மையான தமிழர்களுக்குக் கல்விப் பழக்கம் இல்லாததாலும் அவர்களுக்குப் பண்டிதர்களின் உதவியில்லாமல், படித்தவர்களின் தூண்டுதல் இல்லாமல், புரியும்படியான தமிழை எழுதினார்; அப்படியே மற்றவர்களும் எழுதவேண்டும் என்று தமது வாழ்நாள் முழுவதும் வற்புறுத்தி வந்தார். மேல்நாட்டு அறிவுநூல்களைத் தமிழ்ப்படுத்துவதில் அக்கறை காண்பித்து, எவ்வளவு தம்மால் முடியுமோ அவ்வளவு வரையில் அவர் உழைத்தார்; அர்த்தமற்றதும் அநியாயமானதுமான சமூகக் கட்டுப்பாடுகளைத் தமது வாழ்க்கையினின்றும் உதறித் தள்ளினார். பாரதியார் விதைத்த சிறுசிறு விதைகள் எல்லாம் பெரும்பயிர்கள் ஆயின அவர் இறைத்த சிறு நீர்த்துளிகள், பெரிய வெள்ளமாக மாறிவிட்டன. ஓயாமல் உழைப்பதே மேதைக்கு இலட்சணம் என்றும், அலுத்துக்கொள்ளாமல் செயல் செய்வதே பக்தனுக்கு அடையாளம் என்றும் சொல்லுவதுண்டு. பாரதியார் மேதாவி; அவர் அருமையான தேசபக்தர். எனவே, சலிக்காத உழைப்புக்கும் தடையே இல்லாத செயலுக்கும் கேட்கவும் வேண்டுமா? பாரதியார் தமது மூர்த்திப் பிரதாபத்தின் மூலமாகவே பலருடைய சந்தேகங்களைத் தீர்த்துவிடுவார். நினைத்துக்கொண்டு வந்த சந்தேகமெல்லாம் அவரது திவ்யமான முகப்பொலிவைக் கண்டதும், எங்கேயோ மறைந்து ஒளிந்துகொள்ளும். நெறி தவறியவர்களும் அற்பர்களுந்தாம் அவரைக் கண்டு அஞ்சுவார்கள். மற்றவர்களோ, அவருடைய தேஜோமயமான முகத்தைப் பருகிக்கொண்டே இருக்காலாமே என்று எண்ணுவார்கள். வா, வா என்று அழைக்கும் அவருடைய முகத்தைக் கண்டு, குழந்தைகள் கூத்தாடுவார்கள. நாணிக் கோணி நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் பெண்மணிகூடப் பாரதியாரின் முன்னிலையில், நாணிக்கோணி நடக்க மாட்டாள். எதிலும் இயற்கை எழிலோடு நட என்று சொல்வது போல இருக்கும் அவரது முகம். சிக்கலான சந்தர்ப்பங்களில் அது சிறந்த வழிகாட்டியாக இருந்தது என்றால் மிகையாகாது. இவ்வாறாக, பாரதியார், மக்களுக்குத் தெரிந்த, தெரியாத சாதனங்களின் மூலமாகத் தமது இலட்சியமாகிய ‘பூரண மனிதனை’த் தமிழர்களின் உள்ளங்களில் உருவகப்படும்படியாகச் செய்து வந்தார். வெயில், பயிர்களுக்கு உயிர் கொடுப்பதைப் போல, பாரதியார், தமிழர்களின் உள்ளத்தை மலர்ந்து விரியச் செய்தார். தமிழர்களைத் தக்க சமயங்களில் பட்டவர்த்தனமாக ஏசுவார்; உடனே அவர்களை அணைத்துக் கொஞ்சுவார்; ‘இதைச் செய்ய மாட்டீர்களா-‘ என்று கெஞ்சுவார். செய்யாவிட்டால், அழிவு உறுதி என்று உறுமுவார்; என்ன இருந்தாலும், தமிழனுக்கு நிகராக யார் இருக்க முடியும் என்ற உண்மையை, விளையாட்டுப் போல, அவனது உள்ளத்தில் ‘இஞ்செக்ஷன்‘ செய்திடுவார். எத்தனையோ நூற்றுக்கணக்கான தமிழர்களை, நேர்முகமான சம்பாஷணை முறையால், அவர் அடியோடு மாற்றியிருக்கிறார். தாம் நடு வயிதிலேயே மறைத்துவிடுவோம் என்பது அவருக்குத் தெரியுமோ என்னவே, கையில் அகப்பட்ட சந்தர்ப்பங்களைக் கைநழுவிப் போகும்படியாக விட்டு விட்டு, சந்தர்ப்பமே வாய்க்கவில்லையே என்று பொய்யாக உளறும் மனிதர்களை போல அவர் செய்ததே கிடையாது. செய்ய வேண்டியதை இன்றே செய்வதும், அதிலே இன்னே (இப்பொழுதே) செய்வதுந்தான் பாரதியாரின் சுபாவம். நாளை என்பது நமது நாள் அல்ல வென்றும், அது நமனது நாள் என்றும் அவர் கபிலரைப் போல் முடிவு செய்துகொண்டார் போலும். அதனாலேதான், முப்பத்தெட்டு வயதில் அவர் மறைந்த போதிலும் அவர் செய்த வேலை அபாரமாகக் கண்ணில் படுகிறது. பாரதியார் எழுதியன யாவும் தங்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றும், அவற்றில் தங்கம், தாமரம், தூசி, ‘துடைப்பக் கட்டை‘ எல்லாம் சேர்ந்துதான் இருக்கின்றனவென்றும் பலர் ஏளனமாகப் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். இருக்கலாம். அதனாலென்ன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உபயோகமாகும்பொழுது, ஏற்றத்தாழ்வு கற்பித்து, ஏளனம் செய்வதற்கு அர்த்தமுமில்லை, அவசியமும் இல்லை. தங்கத்தைத் தூசியைப் போட்டு மூடி மறைத்தால் தான் தங்கம் பறி போகாமல் இருக்க முடியும். மேலும், ஜனசமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளால், பல்வேறு ருசி படைத்த மக்கள் இருப்பர்களாகையால், குற்றமில்லாத நாகரித்துக்குப் பங்கம் ஏற்படாத முறையில், எல்லாருடைய ருசிகளுக்கும் ஏற்ற சுவைப் பொருள்களைக் கொடுப்பதுதான் நியாயமாகும். வேப்பிலை கசக்கிறது என்பதற்காக, அதைப் பயிர் செய்யலாகாது என்று தடுத்து, ஒட்டகத்தின் வாயில் மண்ணைப் போடுவதா? அவ்வாறாயின், ஒட்டக இனத்தையும் அழித்துவிடத்தான் வேண்டும். இந்த மாதிரிப் போய்க்கொண்டிருந்தால், படைப்பில் மனிதக் கூட்டத்தான் மிஞ்சும். மனிதக் கூட்டத்திலும், உண்ணும் உணவு செரிமானமாகாத நோயாளிகள்தாம் மிஞ்சுவார்கள்; அல்லது ஆகாரமே வேண்டா என்று அடம் பிடிக்கும் பேர்வழிகள் தாம் மிஞ்சுவார்கள். தாம் எதை எழுதினாலும் எதைப் பேசினாலும் அதற்குத் தேவை இருப்பதை உணர்ந்துதான் பாரதியார் அவ்வாறு செய்திருப்பார். ஆட்டுக்கு வால், ஆண்டவன் அளந்துதான் வைத்திருப்பான் என்று சொல்லுவார்கள், அதைப் போலவே, பாரதியார் எதையும் நிதானித்து, தீர்க்கமாக யோசித்தத்தான் செய்வார். உலகத்திலே மகான்கள் என்று போற்றப்படும் மனிதர்கள் எல்லாக் காரியங்களையும் தவறு இல்லாமல் செய்துவிடுகிறார்களா? இமயத்தைப் போன்ற பிழைகளைக் செய்தேன் என்று காந்தி சொல்லவில்லையா? அதற்காக அவருடைய ‘மகாத்மா‘ பட்டத்தை, அவரிடமிருந்து பறிமுதல் செய்துவிட்டார்களா? நோயாளிகள் பலரைக் குணப்படுத்த முடியாமல் போனதற்காக, வைத்தியரின்மீது கொலைக்குற்றம் சாட்டுவதா? சில சமயங்களில், உயிர் வாழ்தல் அவசியமாகும்; வேறு சில சயங்களில், உயிர் வாழ்தல் அவமானமாகும். எனவே, மட்டம் என்றும் உயர்வு என்றும் பாகுபாடு செய்து, பாரதியாரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் சித்திரவதை செய்வதில் பயன் எதுவும் எல்லை; பொருளுமில்லை. சில பாட்டுகள் குழந்தைகளுக்கு ஆகும்; சில சோம்பேறிகளுக்குப் பிடிக்கும். மற்றும் சில வீரர்களுக்கு நல்ல விருந்தாக அமையலாம் வேறு சில, பெண்மணிகளுக்குப் பஞ்சாமிர்தமாக இருக்கலாம். சிலவற்றைச் சங்கீத இரசிகர்கள் பாடிப்பாடிப் பரவசமடையலாம். படைப்பு ஒரேமுகம் கொண்டதாயிருந்தால, ருசியும் ஒன்றாக இருக்கலாம். அப்படி இல்லாத காரணத்தினாலே, பாரதியாரின் பலவகைப் படல்களும் அவ்வப்போது தேவையாக இருப்பபதைக் கண்கூடாகப் பார்க்கலாம். பாரதியார் பிறந்த காலத்தில் தமிழ்மொழியும் ஜனசமூகமும் அவ்வளவாக நல்ல நிலைமையில் இல்லை. ஏங்கிக்கிடந்த தமிழர்கள், தூங்கிக் கிடந்த தமிழ்மொழி- இதுதான் பாரதியார் கண்டது. இந்த நிலையிலிருந்த தமிழர்களை மாற்றி, ஊக்கமும் உள்வலியும் ஏற்படும் படியாகச் செய்வது மிகவும் அசாத்தியமான வேலையாகும். ஆனால், இந்த வேலையைப் பாரதியார் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். தமது கலைத்திறனாலும் கவிதை வெள்ளத்தாலும் பாரதியார் இந்தக் காரியத்தை எளிதிலே சாதித்துவிட்டார்; உணர்ச்சிப் பெருக்கு என்ற வெள்ளத்தில் தமிழர்களை மிதக்கும்படியாகச் செய்தார்; விவேகம் என்ற அரிய சாதனத்தைக்கொண்டு வாழ்க்கைச் சம்பவங்களை அளந்து எடை போட வேண்டும் என்பதற்கு வழி காண்பித்தார். தமிழன் தலைநிமிர்ந்து நடக்கும்படியாக, அவனை ஆண்மகனாக ஆக்கிய பெருமை, பெரும்பான்மையில் பாரதியாரைச் சேர்ந்ததாகும். பாரதியாருக்கு மேல்நாட்டு இலக்கியத்தில் நிபுணத்துவம் உண்டு. நம் நாட்டு மக்களின் இயல்பையும் நன்கு அறிவார். எனவே, அவர் எழுதியனவெல்லாம் ஒட்டுமாங்கனியைப் பொல அபரிமிதமான ருசி படைத்தவையாக ஆகிவிட்டன. பாரதியாரின் கவிதைக்கு, உலக இலக்கியத்தில் எந்த இடம் கிடைக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். மனிதனுடைய மூலாதாரமான உணர்க்சிகளைக் கணக்கெடுத்து, அவைகளைப் பரிமளிக்கச் செய்ய வேண்டும் என்பது பாரதியாரின் இலட்சியமாகும். எனவே, அவருடைய கவிதைக்குத் ‘தேசியம்‘ என்ற எல்லையைக் கோலி, அதைப் கட்டுப்படுத்த முடியாது. சிறப்பாகத் தமிழன் பாரதியாரின் கண்ணில் பட்டாலும், மனிதன் என்ற வகையிலேதான், பாரதியார் அவனைப் பார்த்தார். தமிழன் என்பதற்குப் பதிலாக, எந்த நாட்டினுடைய பெயரைக் கொடுத்தாலும், பாரதியாரின் கவிதை, அந்த நாட்டுக்கும் பொருத்தமுள்ளதாக இருக்கும். எனவே, அவர் சர்வதேசக் கவி; அதாவது உலக மகாகவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை இப்பொழுது மனித வர்க்கம் மாறிக்கொண்டு போவதைப் பார்த்தால், பாரதி சகாப்தம் என்பதற்கு ஐந்நூறு வருஷத்திற்குக் கறையாமல் ஆயுள் காலத்தை நிர்ணயிக்கலாம். எந்த நாட்டானும் தனது என்று கொஞ்சிப் பாராட்டக்கூடிய பாரதியாரின் கவிதையைப்பற்றி அதிகமாக என்ன சொல்வதற்கு இருக்கிறது? வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திரு நாடு !!! வந்தே மாதரம். 1 வ. ராமசாமி http://ta.wikipedia.org/s/nfi கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. -------------- ---------------------- வ. ராமசாமி பிறப்பு 1889 இறப்பு செப்டெம்பர் 17, 1951 அறியப்படுவது எழுத்தாளர் -------------- ---------------------- வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா) (1889 – செப்டெம்பர் 17, 1951, தமிழ்நாடு) தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஒரு முன்னோடி ஆவார். தஞ்சை மாட்டம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் உள்ள திங்களூரைச் சேர்ந்த இவரின் பெற்றோர் வரதராஜ அய்யங்கார், பொன்னம்மாள் தம்பதியினர் ஆவர்.1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார். இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மூடப்பழக்க வழக்கங்களே என்று முழுமையாக நம்பினார். அதனால் அதனை எதிர்த்துப் போராடுவதில் வ.ரா. முனைந்து நின்றார். வ.ரா. வைதீக வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குல ஆசாரங்களைக் கைவிட்டார். பூணூல் போடுவதில்லை; குடுமி யை நீக்கிக் கொண்டார். பெற்றோர், உற்றார், சகோதரர் ஆகிய உறவுகளைத் துறந்தார். இலங்கையில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது, புவனேஸ்வரி அம்மையாரை மணந்து கொண்டார். வ. ராமசாமி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார். அறிஞர் அண்ணா தமது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவைப் பற்றி எழுதுகையில் ” அக்கிரகாரத்து அதிசய மனிதர் ” என்று வருணித்தார் . பொருளடக்கம் - 1 கல்வி - 2 படைப்புத் திறன் - 2.1 பாரதியின் உரைநடை வாரிசு - 3 நூற்படைப்புகள் - 4 வெளி இணைப்புகள் கல்வி தஞ்சை மாவட்டம், உத்தமதானபுரம் கிராமத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வ.ரா.வின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு தஞ்சை, திருச்சி என்று பல இடங்களில் அவர் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தை வரதராஜ அய்யங்கார் நடுத்தரக் குடும்பத்தினர் பரம வைதீகர், பிழைப்புக்காக திருப் பழனம் என்ற ஊரில் குடியேறினார். தன் மகனைக் கல்வியில் சிறக்கச் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அவருடைய நெருங்கிய நண்பர் கொடியாலம் வி.ரங்கசாமி அய்யங்கார், வ. ராமசாமியின் கல்விக்கு பல முறை உதவினார். 1911 முதல் 1914 வரை அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கினார். அரவிந்தரின் அன்பையும், ஆசியையும் பெற்றார். படைப்புத் திறன் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களில் எழுதினார். 1914 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். பிறகு வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றினார்..இவர் ஆசிரியராக இருந்த மணிக்கொடி தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய இதழாக விளங்கியது. வ.ரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் சேர்ந்து, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அந்த வகையில் கல்கி, புதுமைப்பித்தன் போன்றவர்களைக் கூறலாம். கல்கியின் முதல் புதினமான விமலாவை, சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார். காத்தரின் மேயோ என்ற அயல்நாட்டுப் பெண் இந்திய மாதர் என்ற பெயரில் எழுதிய நூலில் இந்தியர்களை மிகவும் இழிவாகச் சித்தரித்திருந்தார். இதனை மறுக்கும் விதத்தில் வ.ரா. எழுதிய “மாயா மேயோ அல்லது மாயோவுக்கு சவுக்கடி” என்ற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆங்கிலேயர்களின் கண்டனத்துக்கும் உள்ளானது. சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத்தீவு போன்ற புதினங்களை எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகளில் சமூகத்துக்குச் சாட்டையடி கொடுத்துப் போராடும் தன்மை இருந்தது. 1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் “ஜெயில் டயரி” என்ற பெயரில் நூலாக வெளி வந்தது.சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இருந்த ஆசுத்துமா நோய் மிகவும் அதிகமானது. உடல் நலிந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிர வாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார். இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும். பாரதியின் உரைநடை வாரிசு புதுவையில் அரவிந்தருடனும் பாரதியுடனும் வ.ரா வசித்த பொழுது வங்காளி மொழியைக் கற்றுக் கொண்டு, பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஜோடிமந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் . தினமும் சில பக்கங்கள் என்ற முறையில் மொழி பெயர்த்து , அதை நோட்டில் எழுதிக் கொண்டுவந்தார். ஒருமுறை வ.ரா தனது மொழிபெயர்ப்பை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தபொழுது வந்த பாரதி, ” என்ன ஓய் ! ரகசியம் ஒளிக்கிறீர் ? எடும் இப்படி ! ” என்று எழுதிய நோட்டைப் படிக்க ஆரம்பித்தார் , மேலும் அரவிந்தரை அழைத்து, ” பாபுஜி இந்த குறிப்புப்புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ? பக்கிம் பாபுவின் ” ஜோடிமந்திரங்களின் மொழி பெயர்ப்பு. நம் ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார். அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்கு வேலையில்லை ,கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்றார். நூற்படைப்புகள் 1. சுவர்க்கத்தில் சம்பாஷணை (நூல்) 2. கற்றது குற்றமா (நூல்) 3. மழையும் புயலும் (நூல்) 4. வசந்த காலம் (நூல்) 5. வாழ்க்கை விநோதங்கள் (நூல்) 6. சின்ன சாம்பு (நூல்) 7. சுந்தரி (நூல்) 8. கலையும் கலை வளர்ச்சியும் (நூல்) 9. வ.ரா. வாசகம் (நூல்) 10. விஜயம் (நூல்) 11. ஞானவல்லி (நூல்) 12. மகாகவி பாரதியார் (நூல்) 13. வாழ்க்கைச் சித்திரம் (நூல்) வெளி இணைப்புகள் - மணிக்கொடி சிற்றிதழ் 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook:  https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus:  https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin   alagunambiwelkin@fsftn.org - Arun   arun@fsftn.org -   இரவி Supported by - Free Software Foundation TamilNadu,  www.fsftn.org - Yavarukkum Software Foundation  http://www.yavarkkum.org/ 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  - தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks