[] 1. Cover 2. Table of contents பேரறிஞர் அண்ணாவின் பாராளுமன்ற உரைகள் பேரறிஞர் அண்ணாவின் பாராளுமன்ற உரைகள்   அண்ணாதுரை     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/parliament_speech_of_peraringar_anna மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc டெல்லியில் அண்ணாவின் முதல் முழக்கம் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? விண்ணி லிரவிதனை விற்றுவிட்டெவரும் போய் மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ? மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ? சுதந்திரக் கனல் பீறிட்டுக் கிளம்புகிற மனிதனின் உள்ளத்தைக் கவிதைக் கண்ணாடியின் வாயிலாகப் பிரதிபலித்துக் காட்டுகிற சாகாக் கவிஞன் பாரதி பிறந்த தென்னகத்து மண்ணின்மீது விளைந்த வீர விடுதலைப் போர் முழக்கத்தின் எதிரொலி, எட்டாத செவிப்பறை இல்லை. முட்டாத எல்லையில்லை. 1962 ஆம் ஆண்டு மே முதல்நாள். திராவிடர்கள் மறக்கமுடியாத எழுச்சிமிகுநாள். ஏற்றங்கொள்நாள். கடல்குமுறியெழுந்து நிலமெங்கும் தாவினால் எரிமலையின் நெருப்புக் குழம்பு, எட்டுத் திசையும் வழிந்தோடினால் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பூமி அதிர்ந்து ஆடி நடுங்கினால் எத்தகைய பரபரப்பு மூளுமோ, அத்தகைய பரபரப்பு இந்தியத் துணைக் கண்டமெங்கும் உருவாயிற்று. துணைக் கண்டத்தின் விளிம்பில் உள்ள நாடுகளும், தொலைதூரத்திலுள்ள தேசங்களும் இந்திய உபகண்டத்தின் அரசியல் வானில் ஏற்பட்ட துடிதுடிப்பான மாறுதலைக் கூர்ந்து கவனித்தது. அடாது என்றனர் ஆகுமா இது? என ஆர்ப்பரித்தனர் அக்கிரமம் என்றனர் அழிக்கப்பட்ட வேண்டிய குரல் அணைக்கப்பட வேண்டிய தீபம் அடக்கப்பட வேண்டி எழுச்சி பியந்தெறியப்பட வேண்டிய பிரச்சினை பேய் பூதங்களின் கூச்சல் வெறித்தனமான கேளிக்கை விடமாட்டோம் விரட்டுவோம் அநுமதியோம் நிர்மூலமாக்குவோம் ஒன்றுசேருவோம் உருத்தெரியாமல் ஆக்குவோம் உயிர் கொடுத்துத் தடுப்போம் இப்படிப்பட்ட வார்த்தை அலைகள் விண்ணுயர எழும்பிக் கொந்தளித்து விடுதலை வீரர்களை விழுங்கிவிடும் பயங்கரக் கூச்சலுடன் ஜனநாயகக் கரையை மோதி அரித்துக் கொண்டிருப்பதையும் உலகம் காணுகிறது. பொன் கொழிக்கும் தென்னகத்தின் காவலராம் அறிஞர் அண்ணா, அன்னைத் திராவிடத்தின் அடிமை விலங்கொடிக்க டெல்லிப் பட்டணத்திலே எடுத்துக்கொண்ட முதல் முயற்சி கண்டுதான் இத்தனை அலறல் இந்தத் துணைக் கண்டமெங்கும் புறப்பட்டிருக்கிறது. கருவிலே சிதையும் முளையிலே அழுகும் பூவிலே கருகும் காயிலே வெதும்பும் என்றெல்லாம் விடுதலை இயக்கத்தின் எதிர்காலம் பற்றி அதன் ஒவ்வொரு பருவத்திலும் ஆரூடம் கணித்துக் கொண்டிருந்த அருவெறுப்பாளர்கள் அந்த இயக்கம் கனி குலுங்கும் தருவாக வளர்ந்துவிட்டது. கண்டு பொறாமை கொள்வதிலே ஆச்சரியமில்லை. திருவாரூர் மாநாட்டுத் தீர்மானமாக திராவிட நாடு இலட்சியம் முகிழ்த்துக் கிளம்பியபோது, இது திருச்சியோடு முடியும். மதுரையோடு முடியும். ஈரோட்டோடுடன் இறந்துபடும் என்றுதான் பலர் கருதினார்களே தவிர, அந்த லட்சியம் வடபுலத்து ஆதிக்க வேந்தர்களின் கோட்டைக் கதவைத் தட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று அந்த லட்சிய மலர் எடுதுச்செல்லப்பட வேண்டியவரால் எடுத்துச் செல்லப்பட்டு தொடுத்துக் காட்ட வேண்டியமுறைப்படி தொடுத்துக் காட்டப்பட்டு, இந்தச் சுதந்திர மாலையை எங்கள் திராவிடத் தாயின் கழுத்தில் அணியும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம் என்று உறுதிமொழியைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டியவரால் சொல்லப்பட்ட தாகிவிட்டது. கடற்கரைகளில் வெட்ட வெளிகளில் நகர்ப்புறங்களில், பட்டி தொட்டிகளில், சந்து பொந்துகளில், ஒலித்துக்கொண்டிருக்கும் விடுதலைக் கீதம், டெல்லிப் பட்டணத்து ஆதிக்கக் காவலர்களின் மணி மண்டபத்திலே போர்ப்பரணியாக முழங்கப்பட்டு, தாயக விடுதலை அணிவகுப்பின் தரமும், உள்ள உரமும் விளக்கப்பட்டு ஒரு விடுதலை இயக்கம் பெறவேண்டிய அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு நாட்டின் விடுதலைக்குக் கடைப்பிடிக்கும் முறைகளில் வேட்டு முறையை வெறுத்துவிட்டு வோட்டுமுறையில் நம்பிக்கை வைத்து அவ்வழியில் இயக்கத்தை மக்கள் மத்தியில் நடத்திச் செல்கின்றவர்கள் நாம். அம்முறையே நன்முறையென எடுத்தோதி, அமைதியும் அறமும் காத்து அன்பு மார்க்கத்தில் நாட்டு விடுதலை பெற்றிட நமக்குத் தலைமையேற்று நிற்பவர்தான் அறிஞர் அண்ணா. அவர் டெல்லி மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் உரைமீது நடந்த விவாதத்திலே கலந்துகொண்டு பேசிய 35 நிமிடப் பேச்சு இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. இந்தியாலிருந்து பிரிந்து போகவேண்டும் என்ற குரல் முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று ஒலித்தது. இந்த முழக்கத்தைத் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணாதுரை இன்று மாநிலங்கள் அவையில் முழங்கினார். இந்திய யூனியனில் இருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டுமென்ற அண்ணாதுரையின் துணிவான வாதம், ஸ்தம்பிக்கச் செய்து விட்டது. என்று பம்பாயிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஏடு குறிப்பிடுகிறது. தி.மு.கழகத் தலைவர் திரு.சி.என்.அண்ணாதுரை, தென்னகத்திற்குச் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்கள் அவை இன்று கூடியிருந்து திராவிட நாட்டின் கொள்கைகாகப் பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சைக் கேட்டது. தேசியத்திற்கு அவர் ஒரு புதிய விதியைத் தந்தார். என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு கூறுகிறது. இது புதுடெல்லியிலிருந்து வெளிவரும் பத்திரிகையாகும். கொள்கையிலே கொண்ட உண்மைப் பிடிப்பாலும், தனது சக்திவாய்ந்த பேச்சுத் திறமையாலும் அண்ணாதுரை, சந்தேகமின்றி ராஜ்ய சபாவைக் கவர்ந்துவிட்டார். என்பதாக இந்து பத்திரிகை தலையங்கத்தில் குறிப்பிடுகிறது. ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட அண்ணாதுரையின் சொற்பொழிவு, என்ன இருந்தாலும் பலமுறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கவில்லை. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் நிறைந்த பெயர் பெற்றுள்ள அண்ணாதுரை அன்று மாநிலங்கள் அவையில் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். என்று மலையாள நாள் இதழ் மாத்துருபூமி எழுதுகிறது. இந்த ஏடுகளும் இன்னும் பிற ஏடுகளும் அண்ணாவின் பேச்சைப் பற்றி நீண்ட விமர்சனங்களும் செய்திருக்கின்றன. அஃதேபோல் மாநிலங்கள் அவையில் அண்ணாவின் உரைகேட்ட மாற்றுக் கட்சியினர் எல்லாம், என்னே சொல்நயம்? என்னே பேச்சுவளம், என்று பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டியவர்கள் எல்லாம் அண்ணாவின் முழக்கத்திற்கு எதிர் முழக்கம் செய்துமிருக்கிறார்கள். முதலில் அண்ணாவின் முழக்கத்தை அவர் பேசிய ஆங்கில மொழி வடிவிலேயே கேட்போம். அதன் பின்னர், திராவிடத்து விடுதலைத் தலைவரின் கீர்த்திமிகு சொற்பொழிவு குறித்து மூலைக்கு மூலை முளைத்துள்ள கண்டனங்கள், கேலிகள், ஏசல்கள் பற்றி விபரங்களைப் பார்ப்போம். இதோ டெல்லி மாநிலங்கள் அவையில் திராவிடத்துக் கொற்றவன் தீட்டுகின்றார் விடுதலைக் காவியம். அறிஞர் அண்ணா டில்லி மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரைமீது ஆற்றிய சொற்பொழிவு வருமாறு: பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, கம்பீரம் நிறைந்த இந்த அவையிலே பேசப்படும் கருத்துக்களோடு என் கருத்துக்களையும் உடன் எடுத்துச் சொல்ல வாய்ப்புத் தந்த உங்களுக்குப் பெரிதும் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இந்தத் தொடர்க் கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்ள முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஏனெனில் என்னுடைய ஆசை, இந்த அவையைக் கவனித்துக் கற்றுக்கொள்வதுதான், பேசிப் பிரச்சினைகளைக் கிளறுவதல்ல. ஆனால், கம்பீரம் மிக்க இந்த அவையில் இணக்கமான சூழ்நிலையைக் காண்கிறோம். இந்தப் பெருநாட்டின் குடியரசுத் தலைவரைப் புகழும் வளமிகு வாழ்த்துரையில் நானும் சேர்ந்துகொள்ளும்படி அது தூண்டிற்று. இப்போது உடல் நலமற்றிருந்தாலும் குடியரசுத் தலைவரின் சுயநலமற்ற பணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்படி õரசேந்திரபிரசாத் அவர்களை வாழ்த்தும்போது, நான் அவரின் அடியொட்டிச் செல்லும் தொண்டனல்ல என்பதையும் கூறிக்கொள்கிறேன். அவர் நெஞ்சம் திறந்து ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் கட்சியின் தத்துவங்களுக்கும் எனக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை. வெகு தூரத்தில் நின்றுகொண்டு, குடியரசுத் தலைவரின் சிறந்த பணிகளைப் பாராட்டுகிறேன். இப்படிப் பாராட்டும் நிலை எனக்கு ஒருவிதத்தில் பலத்தையும் தருகிறது. இன்னொரு விதத்தில் பலவீனத்தையும் தருகிறது. அவருடன் ஒன்றாகப் பணியாற்றினோம்-என்று கூறிக்கொள்பவர்களுக்கு ஏற்படும் தெம்பு எனக்கு ஏற்படாதது மனதின் பலவீனமாக இருக்கலாம்; ஒரு கடமை யுணர்ச்சியுள்ள ஒரு கட்சிக்காரரை இன்னொரு கட்சித் தோழர் பாராட்டுவதாக இல்லாமல், வெகு தூரத்திலிருந்து குடியரசுத் தலைவரின் பணியைக் கண்டு மகிழ்ந்து உண்மையாகப் பாராட்டுவதாக எனது பாராட்டு இருக்கிறது. இது உண்மை அடிப்படையிலமைந்த பலம். நான் இப்படிப் பாராட்டும்போது, துரதிர்ஷ்டவசமாக அவர் ஆற்றிய உரையில் பெரிதும் ஏமாற்ற உணர்ச்சியையே பெற்றேன். அரசியல் சட்ட சரித்திரத்தின் மாணவர்கள் என்ற முறையில், குடியரசுத் தலைவர் பேசினால், அதன் மூலம் அரசாங்கம் பேசுகிறது என்பதை அறிவோம். எனவே அந்த உரையில் ஏதாவது குற்றங் குறைகளை எடுத்துச் சொன்னால், அது குடியரசுத் தலைவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் கூறுவதாகக் கருதப்கூடாது கருத மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அரசு சரியானபடி உள்ளதை உள்ளபடிச் சொல்லவில்லை. எனவே, தலைவர் அவர்களே, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அதைப்பற்றிச் சில கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. திட்டங்கள் பற்றி திட்டத்தின் தந்தை எனப்புகழ்த்தக்க கனம் வி.டி.கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துரைத்ததைக் கேட்கும் பேறு பெற்றேன். குடியரசுத் தலைவர் உரையைப் படித்துப் பார்த்தால், அது ஒரு கம்பெனியின் ஆண்டறிக்கைபோல் இருக்கிறதே தவிர, நம்பிக்கையையும், குறிக்கோளையும் எடுத்தோதுவதாக இல்லை. கம்பெனியின் ஆண்டறிக்கை-என்று குறிப்பிடுவதன் காரணம், அந்தக் கம்பெனி இப்போது உறுப்பினர்களைத் தேடி அலைகிறது; பணத்தேவை மிகுந்துவிட்ட கம்பெனியாகவும் தென்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைமீது பேசிய ஆளும் கட்சியினர் பேச்சில் ஒரு பெருமிதமும், செருக்கும் கொண்டிருக்கிறார்கள். ‘ஓ’ நாமும் மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்! எனவே எதைச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை” என்று எண்ணுகிறார்கள். பொதுத் தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு எந்தக் கட்சியும் பெருமிதம் கொள்ள உரிமையுண்டு. நல்ல அமைப்பு முறையும் நல்ல பண வசதியும் படைத்த காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்பதையும் உங்கள் அனுமதியோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். காங்கிரசின் பலம் அதனிடம் இல்லை, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது. எனவே, வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே முதற்கருத்தைக் கூறும்போதே பொதுத்தேர்தலில் நடந்த ஊழல்களை இந்தத் தரப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள். தேர்தலில் நடைபெற்ற ஊழல் முறைகளைப் பற்றி இத்தரப்பு உறுப்பினர்கள் பேசியபோது ஆளும் கட்சி அங்கத்தினர்கள் அவற்றை நிரூபிக்க முடியுமா என்று கேட்க எழுந்தார்கள். ஆதாரங்கள் மட்டும் எங்கள் கைக்குக் கிட்டும் நிலைமை இருந்தால், அய்யா, நாங்கள் இந்தக் கம்பீரமிக்க அவையில் அவை குறித்துப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை (ஆளும் கட்சியினரை) சட்டமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருப்போம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். போதுமான வசதிகளற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள மற்ற கட்சிகளுக்குத் தக்க ஆதாரம் காட்டி நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் நீதி நடவடிக்கைகளைவிட இப்பிரச்சினையில் உள்ளடங்கியுள்ள தத்துவத்தையே பெரிதும் வலியுறுத்துகிறோம். ஆளும் கட்சி பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெறுவது சட்டபூர்வமானதுதான் என்றாலும் அது ஒழுங்கீனமான செயல் என்று நீதி மன்றங்கள் கண்டனம் தெரிவித்தது. நமக்குத் தெரியாதா? அதற்குப் பிறகும் (ஆளும் கட்சியினர்) டாட்டா பிர்லாக்களின் ஆயுத சாலைகளிலிருந்து பண ஆயுதம் பெற்றிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள் தேர்தல் நிதியைச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதை நாடு மறந்துவிட்டதா? இந்த அடிப்படையில்தான் ஆளும்கட்சி பெருமை கொள்கிறதா? ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறலாம், மற்ற கட்சிகளிடமும் கூட இந்த ஒழுங்கீனம் உள்ளதென்று, இந்த பரந்த துணைக்கண்டத்தின் மூத்த பெரும் கட்சி என்ற முறையில் உயர்ந்த மரபுகளை ஏற்படுத்துவது காங்கிரசின் தலையாய கடமை அல்லவா? இந்த நேரத்தில் பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. மரபுகள் என்று எதையெதை காங்கிரஸ் உண்டாக்குகின்றதோ, அதையெலாம் மற்ற கட்சிகள் பின்பற்றினாலும் பின்பற்றலாம். நான் பின்பற்றினாலும் பின்பற்றலாம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதின் காரணம் அந்த வார்“த்தையில் பின் பற்றாமல் இருந்தாலும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கிறது. எனவே எங்கள் முதல் கருத்தே இந்தத் தேர்தல் சமூகமாகவும், சுதந்திரமாகவும், நடைபெறவில்லை. மக்களின் எண்ணமும், நியாய பூர்வமாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை. எனவே அடுத்த தேர்தலிலாவது பஸ் முதலாளிகளுடனும், லாப வேட்டைக்காரர்களுடனும், பர்மிட்காரர்களுடனும் தொடர்புகொள்ளாமல் திரு.கங்காதரன் சின்கா இங்கே குறிப்பிட்டது போல, பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதத்துக்கு முன் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மந்திரிகளும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் பதவிக்கு வரமுடியுமா என்ற நான் அறைகூவல் விடுக்கிறேன். எனவே, குடியரசுத் தலைவர் பேச்சின் ஒரு பகுதியில், நாமனைவரும் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டுமென்று- திரு.ராமா ரெட்டி (மைசூர்) இதற்கு ஏதாவது முன் உதாரணம் உண்டா? மன்றத் தலைவர்: ஆறு மாதத்திற்கு முன் ராஜிநாமா செய்வதற்கு உதாரணம் உண்டா என்று கேட்கிறார். புபேஷ் குப்தா (மேற்கு வங்கம்): ஒருவரது கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்க முன் உதாரணம் இல்லை. அண்ணா: ஆம், இது என்னுடைய கன்னிப்பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல. எனவே, குறுக்கீடுகளை நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் உரையில் நான் மூன்று உன்னத தத்துவங்கள் மிளிருவதைக் காண்கிறேன் ஜனநாயகம், சோஷலிசம், தேசீயம் என்பவையே அவை. ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்குப் பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்தப் பெரிய உபகண்டத்தில் அமுலாகாதவரை ஜனநாயகத்திற்கான எந்தப் பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. சோஷலிசத்தைப் பொறுத்தவரை, இந்த அவையில் ஒரு புதுவிதப் பொருள் தரப்பட்டது. கனம், ராமமூர்த்தி டாட்டா பிர்லா போன்றோரின் தொழிற்சாலை. நிறுவனங்களைப் பற்றி எடுத்துரைத்தபோது மற்றொரு மதிப்பிற்குரிய உறுப்பினர் பங்குகளைப் பற்றியும் இலாபங்களைப் பற்றியும் வியத்தகு விளக்கம் தந்ததைக் கண்டேன். கோடி கோடியாக இலாபம் குவிக்கப்பட்டாலும், டாட்டா, பிர்லாக்களின் பணப்பெட்டிக்குள் போகாமல், பங்குதாரர்களுக்குப் போய்விடுவதை எடுத்துச் சொன்னார். இதுதான் பொருளாதார விளக்கம் என்றால் நமக்கேன் பொதுத்துறை, தனியார்துறை என்ற இரண்டு, எனது மதிப்பிற்குரிய நண்பர் தனியார் துறைதான் பொதுத்துறை என்றும், டாட்டா பிர்லாக்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுத்துறையைச் சேர்ந்தவை என்றும் கருதினால் பொதுத்துறை, தனியார் துறை என்று ஏன் வேறுபாடு காட்டவேண்டும்? பங்குகளும் இலாபங்களும் பிரிக்கப்பட்டுத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டபோது வேற குறிக்கோளை நோக்கி, அவர் குறிக்கோளை விட்டு எங்கேயோ போய்விட்டார். இந்தப் பிரச்சினையைப்பற்றி ஆராய நாம் அமைத்த குழுக்கள், பலமுள்ள தொழில் சாம்ராஜ்யங்கள் ஏக போக உரிமைகளின் மேல் வளர்ந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. பிரதம மந்திரிகூட இந்த பிரச்சினையைப் பற்றிக் கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டு திட்டங்களினால் உற்பத்தியான வளம் எங்கே, எப்படிப் போயிற்று என்பதைக் கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். எனவே, இங்குள்ள சோஷலிசம் வேறு வகையானது என்று வாதிடுவதைவிட வேறு ஏதாவது பெயர் தந்துவிடலாம். சோஷலிசத்தின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அதற்கு உங்கள் சொந்த விளக்கத்தை ஏன் தருகிறீர்கள்? சோஷலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல, சேமநலத்திற்கு உறுதி தருவது மட்டுமல்ல. சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷலிசம். லாஸ்கியின் கூற்றுப்படி சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சமவாய்ப்பு தருவதாகும். ஆனால், இங்கே சமவாய்ப்பு தரப்பட்டது. தந்து கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியுமா? தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்பட்ட வகுப்பு என்பதெல்லாம் எதைக் குறிக்கிறது? ஹைதராபாத்தில் பழங்குடி மக்கள் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அதில் பிரதம மந்திரியும், ஜகஜீவன்ராமும் கலந்துகொண்டனர். ஐக்கியமாக எக்கருத்தையும் சொல்லாமல், பல்வேறுபட்ட கருத்துக்களைச் சொன்னார்கள். பிரதம மந்திரி அங்கே கூறினார். இனிமேல் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் சலுகைகள் தரக்கூடாது என்று! ஆனால் ஜகஜீவன்ராம், இயற்கையாகவே எழுந்து சொன்னார். சமுதாயத்தின் கடைசித் தளத்திற்கு விரட்டப்பட்ட அவர்களுக்கு இன்னும் சலுகைகள் வேண்டும் என்று. இப்படி இரண்டு பெரியவர்கள் ஒரே கட்சியில் இருந்து இத்தகைய கருத்து வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆளும் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் கொள்கை வேற்றுமை இருப்பதில் ஏதாவது வியப்பு இருக்க முடியுமா? எனவே இங்கு சோஷலிசத்திற்குத் தரப்படும் பொருளும் செயல்படும் முறையும் உண்மையான சோஷலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவில்லை. இந்தியாவின் நண்பரும், இந்த அரசாங்கத்தின் ஆதரவாளரும் அமெரிக்காவின் தூதரும் பொருளாதார நிபுணராயுமிருக்கிற டாக்டர் கால்பிரெய்த் நமது சோஷலிசத்தைப் பற்றிக் கூறியுள்ளதை இங்கு கூற விரும்புகிறேன். அவர் இதனை தபாலாபீஸ் சோஷலிசம் என்று கூறியுள்ளார். ஏன் பேராசிரியர் கால்பிரெய்த் அவ்வாறு கூறினார். அவர் ஏன் அப்படிக் கூறினார் என்றால், இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சர்க்கார் ஏற்று நடத்தும் தொழில்கள் உயர்ந்த அளவு இலாபத்தோடு இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்தவே கூறியுள்ளார். அமெரிக்காவும், ருஷ்யாவும் இதைத்தான் செய்கின்றன என்றும் கூறுகிறார். கிடைக்கும் இலாபத்தை மீண்டும் தொழிலேயே போட்டு மறுமுதலீடாக்கி மக்கள் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் பேச்சின் கருத்து. ஆனால் கனம் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பாசனத் திட்டமானாலும் மின்சாரத் திட்டமானாலும் தொழில் திட்டமானாலும் சர்க்கார் துறையில் எதிர்பார்க்கும் அளவிற்கு இலாபம் வருவதில்லை என்றார் அவர். இப்படி ஏன் இருக்கிறது என்றால் நாம் சோஷலிசத்திற்குத் தரும் வேறுபட்ட விளக்கத்தினால்தான் ஏராளமான பொருள் பொதுத்துறையில் போடப்பட்டிருந்தாலும் அதற்காக செலவிடப்பட்ட உழைப்புக்கேற்ற ஊதியமோ, எந்த நேரத்திற்காக முதலீடு செய்யப்படுகிறதோ அந்த நோக்கமோ நிறைவேறுவதில்லை. சிந்திரிபொகரோ போன்ற மற்ற திட்டங்களைப்பற்றி மக்களிடம் சிந்துபாடி வர்ணிக்க முயற்சி எ’úத்துக்கொள்ளும் அளவுகூட அதன் பலனில் இல்லை. இப்படிக் கூறுவதன் மூலம் நான் திட்டத்திற்கு எதிர்ப்பானவன் என்று நினைத்துவிடக் கூடாது என் ஆதரவு அனைத்தும் திட்டத்திற்கு திட்டத்திற்குத்தான். பொதுத்துறைக்குத்தான். இவ்வளவு குறைவான இலாபம் சம்பாதிக்கும் வகையிலும் இவ்வளவு சேதாரத்துடனும் பொதுத்துறை இல்லாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊழலைப்பற்றிய வதந்திகள் நிறைய உலவுகின்றன. அதுபற்றி புள்ளி விவரங்கள் தரும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஊழலும் தவறான நிர்வாகமும், இதர கேடுகளும் பொதுத்துறையில் இருப்பதாக வதந்திகள் பரவலாக இருக்கின்றன. ஆகையால், சோஷலிசம் என்ற குறிக்கோள் இருந்தாலும் நாம் அதை நோக்கி முன்னேறிச் செல்லவில்லை என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றே உணர்கிறேன். மூன்றாவது தேசியம், எந்தக் கட்சியைச் சார்“ந“திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இப்போது அதிக வழக்கத்திலிருக்கும் வார்த்தையை உபயோகிக்க வேண்டுமானால் அதை தேசிய ஒருமைப்பாடு என்று அழைக்கலாம். அதைப்பற்றிப் பேசமுன் ஒன்று கூற விரும்புகிறேன். சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகள் கழித்து, தேசிய அரசாங்கம் ஒன்று 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பின்னரும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முயற்சி எடுத்துக் கொள்வது இதுவரை செய்து வந்த சிந்தித்து வந்ததற்கெல்லாம் எதிரிடையானது, என்று தானே பொருள்? தேசீயத் தலைவர்கள் இத்தனை நாள் செய்துவந்த முயற்சி அனைத்தும் கனியவில்லை என்று தானே பொருள்? இன்றைக்கு மட்டும் ஏன் தேசீய ஒருமைப்பாடு பற்றிப் பேசவும், திட்டம் தீட்டவும் புறப்பட்டுள்ளோம்? மக்கள் ஒன்றுபட்டபின் ஒருமைப்பாட்டிற்கென்ன வேலை? தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம். அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா? தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன். ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது. கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை. எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். டெல்லியில் அண்ணாவின் முதல் முழக்கம் 2 கனம் உறுப்பினர்களின் அன்பை இங்கு பல தடவை கண்டேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சில இந்திக்காரர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை இது மறக்கடிக்க முயல்கிறது. உங்களோடு ஒரு நாடாக இருக்கக்கூட ஆசைதான். ஆனால் ஆசை வேறு, உண்மைகள் வேறு. நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசீய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை. இங்கு கனம் தாதாபாய் பட்டேல் குஜராத் பற்றிப் பேசும்போது கனல் தெறிக்கப் பேசினார். தொழில் முன்னேற்றமடைந்த பகுதியிலிருந்து வந்த அவர், குஜராத்திலிருந்து வந்திருக்கிறேன். குஜராத்தைப் பற்றிப் பேசுகிறேன். இப்படியெல்லாம் பேசினார். எனது தமிழக மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகையிலும் அது பிற்போக்கானது இங்கே உங்களுக்கு நான்கு எஃகு ஆலைகள், பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு எஃகு ஆலை வேண்டுமென்று கூக்குரலிட்டு வந்துள்ளோம். இவர்கள் என்ன தந்தார்கள்? அந்த கனரக இயந்திர இலாகாவை எங்கள் மந்திரிக்குத் தந்தார்கள். தொழிற்சாலையை அல்ல. கனம் சுப்பிரமணியம் இங்கு வராமலிருந்தால் எஃகு ஆலை வேண்டுமென்று அங்கிருந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். இதுதான் ராஜதந்திரமா, விவேகமா, அரசியல் யுக்தியா? எதுவென்று எனக்குப் புரியவில்லை. அவரை இங்கு அழைத்து வந்து, தென்னகத்தின் கோரிக்கைக்கு அவரையே பதில் சொல்ல வைத்திருக்கிறீர்கள். இதைத்தான் பிரிட்டிஷாரும் செய்து வந்தார்கள். பிரி, ஆள், பண்டமாற்று நடத்தி பணம் வாங்கு, புள்ளி விவரங்களை வீசி வாதத்தைக் கெடு, என்பன போன்ற பிரிட்டிஷ் ராஜ தந்திரத்தைப் போலத்தானே இதுவும் இருக்கிறது. தவறான அடிப்படையில், குரோத மனப்பான்மையால் நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. பிரிவினை என்றவுடனே வடநாட்டில் வாழ்வோரின் எண்ணத்தில், பாகிஸ்தான் பிரிவினைபோது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரிவினையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை நான் அறிவேன். அவர்களுக்கு என் அனுதாபம் உண்டு. எங்கள் பிரிவினை, அந்தப் பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து மாறுபட்டது. எங்கள் இலட்சியம் பரிசீலனை செய்யப்பட்டால், அனுதாபத்தோடு அது கவனிக்கப்பட்டால் அப்போது நம் இருசாரார் இடையே குரோத உணர்ச்சி ஏற்படுவதற்கு அவசியம் இருக்காது. அப்போது (பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்டது போன்ற) பின் விளைவுகள் ஏதும் இருக்காது. நல்ல வேளையாக, தெற்கு ஒரு தனி பூகோள அமைப்பு கொண்டது. அதை நாம் தக்காண பீடபூமி என்றும், தக்காண தீபகற்பம் என்றும் அழைக்கிறோம். எனவே, பிரிவினையால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் குடிபெயர மாட்டார்கள். எனவே, அகதிகள் பிரச்சினை இருக்காது. எனவே இதுபற்றி அமைதியாக ஆழ்ந்து, அனுதாபத்தோடு இந்தப் பிரச்சினைகளைக் காணுங்கள். ஜோஸப் மேத்தன் (கேரளா): தென்னகத்தின் மொழி என்னவாக இருக்கும்? அண்ணா: மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும். என்னதான் இங்கு இருக்கும் நிலையை எடுத்துச் சொன்னாலும், எங்களுக்கு அது கிடைக்காமல் போனாலும் இந்திய அரசின் மீது தான் எங்கள் மக்கள் குற்றம் கூறுகிறார்கள். புதிய தொழிற்சாலைகள் உடனே ஏற்படுத்த முடியாததற்கு சில இயற்கையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்த விநாடி, இரும்பாலை சேலத்தில் வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதிய ரயில்பாதை போட மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதியரயில் பாதை போட மறுக்கப்படுகிறதோ அந்த விநாடியே தென்னகத்து வீதியோர மனிதன் உடனே எழுந்து கூறுகிறான். இதுதான் டில்லியின் போக்கு வடக்கு ஏகாதிபத்தியத்தின் போக்கு இப்படித்தான் அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து வெளியேறாத வரை உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாப்பாக செழிப்பாக முன்னேற்றமாக வைத்திருக்க முடியாது. எனவே நான் இந்தச் சபையில் பிரிவினை பற்றிப் பேசுகிறேன் என்றால் விழிப்புற்றவர்களின் சார்பில் பேசுகிறேன் என்று பொருள். மீராபென் அம்மையார் கொஞ்ச நாட்களுக்கு முன் கூறியதுபோல் பிரிட்டிஷாரை எதிர்த்தபோது உருவாகிய இயற்கை ஒற்றுமை நிலையானது என்று நினைக்கக்கூடாது. பிரிவினைத் தத்துவம் அதற்குரிய சரியான மொழியில் கூறவேண்டுமென்றால் சுயநிர்யண உரிமை உலகப்புகழ் பெற்ற தலைவர்களால் ஏன் இந்த உபகண்டத்தின் நமது பிரதமமந்திரியாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. என் நினைவு சரியாக இருக்குமானால் காபுர்தாலா மைதானத்தில் நேரு அதிகாரப் பூர்வமாகக் கூறினார். ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்கவேண்டும் என்றே முயற்சி செய்யும். ஆனால் ஏதாவது ஒருபகுதி பிரிந்துபோக வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தரும் என்று. இவ்வகையில் காங்கிரஸ் சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொண்டிருக்கிறது. பிரதமரானபோதும் நேருவிடம் தாராள சிந்தனையும், ஜனநாயக உணர்வும் நெஞ்சில் இன்னும் கனன்று கொண்டிருப்பதாக நினைத்து இந்தத் துணிவான வேண்டுகோளை விடுக்கிறேன். பிரிவினையால் இந்தியா தரித்திர நாடாகிவிடாது என்று உறுதி இருக்கும்போது ஏன் தீபகற்பத்திற்கு சுயநிர்ணய உரிமை தரக்கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை உயர்த்துவதாக இருக்கும். இந்தியா ஒன்று என நினைப்போருக்கு சொல்லேன், அது இங்குமங்கும் குழப்ப மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதைக் காட்டிலும் நேசப்பான்மையுள்ள பல நாடுகளாக இருப்பது நல்லதல்லவா? இங்கு உறுப்பினர்கள் எழுந்து அந்தத் திட்டம் வேண்டும். இந்தத் திட்டம் வேண்டும் என்று பிரித்து வாதாடும்போது இந்தியா ஒன்று என்பதையும் அது பிரிக்க முடியாதது என்பதையும் மறந்துவிடவில்லையா? மராட்டிய நண்பர்கள் மராட்டிய மாநிலம் வேண்டியபோது இந்தியா ஒன்று என்பதை மறந்துவிடவில்லையா? பெருபாரி பாக்கிஸ்தானத்திற்குத் தரப்படும் போது வங்காளத் தோழர்கள் கொதிப்படையவில்லையா? ஒரிசாவின் கோரிக்கை கண்டு பீகார் கொதிப்படையவில்லையா? அசாம் வங்கம் ஆகிய இரு பகுதிகளின் மொழித் தகராறில் வெறுப்பு ஏற்படவில்லையா? இதுவெல்லாம் பிராந்திய நோக்கு என்று ஒரேயடியாக மறுப்பது இதையெல்லாம் பூசி மெழுகவேயாகும். எனவே இந்தப் பிரச்சினையைத் தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று இச்சபையைக் கேட்டுக் கொள்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ அந்த திராவிட பூபாகத்திற்கு சுயநிர்ணய உரிமை தாருங்கள். திரு.என்.எம்.லிங்கம்: உங்கள் வாதப்படி சுய நிர்ணய உரிமை தருவதானால், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கேட்பது தானே? அது பொருத்தமாக இருக்கும். அண்ணா: கனம் உறுப்பினர் அதற்கும் வாதாடலாம். ஆனால் நான், எனது திராவிட நாட்டிற்குக் கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் கேட்கவில்லை. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லாப் பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சி பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எய்தலாம். டில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறது. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை என்றாலும் நான் மரமடர்ந்த சாலைகளுக்கு, புதுத் தெருக்களுக்கு, சோலைகளுக்குச் சென்றேன். ஒருசாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்குத் தோன்றாதது ஏன்? இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதைக் காட்டவில்லையா? திருமதி.லட்சுமி மேனன் (வெளிநாட்டு அமைச்சர்): தியாகராஜரோடு என்ற ஒரு ரோடு இருக்கிறது. ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு ரோடு இருக்கிறதே? ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? (மேலும் பல குறுக்கீடுகள்) அண்ணா: கனம் லிங்கம் அவர்களின் வாதம் பற்றி வியக்கிறேன். ஒரு தியாகராய ரோடினால் அது சர் தியாகராயர் பெயரில் அமைந“ததோ அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும் தெற்கிற்குப் போதாது. தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசக சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம். திரு.ராமாரெட்டி: இது ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. மன்றத்தலைவர்: ஆர்டர், ஆர்டர் அவர் தொடர்ந்து பேசட்டும். அண்ணா: அபுல்கலாம் ஆசாத் ரோட்டில் போகலாம். அத்தகைய விஷயம் இங்கேன் இல்லை? தெற்கே உள்ளவர்களின் எண்ணத்தைப் பாருங்கள். தெற்கைப்பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே. எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்டனரோ, என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார்கள். எனவேதான் எழுந்து, அந்த ரோடு இருக்கிறது என்கிறார்கள். இது எனக்குத் தெரியாதா? தென்னகத்திலிருந்து வந்திருக்கிற பிற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பது போலவே நானும் அறிந்திருக்கிறேன். நான் ஒரு தேசிய கொள்கைக்காக வாதாடுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல, கட்சிக் கொள்கைக்காக அல்ல. என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்யண உரிமை கேட்கிறேன். அதன்மூலம், அந்நாடு உலகிற்கு தன் பங்கைச் செலுத்தவிருக்கிறது. அய்யா எங்களுக்கென்று ஒரு தனிக் கலாச்சாரம் உண்டு. திராவிட நாட்டிலிருக்கும் கலாச்சாரத்துக்கும் பிற பகுதிகளிலுள்ள கலாச்சாரத்திற்கும் மேலேழுந்தவாரியாக ஒற்றுமை நிலவலாம். மன்றத்தலைவர் அவர்களே கன்னியாகுமரியிலிருந்து இமாலயம்வரை ராமனும், கிருஷ்ணனும் தொழப்படுவதால் இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொருதடவை கூறிய பாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது. அதேபோல உலகமுழுவதும் மரியாதையுடன் பயத்துடனும் ஏசுநாதர் தொழப்படுகிறார். இருந்தாலும் ஐரோப்பாவில் பலபல தேசீய நாடுகள் இருக்கின்றன. புதிய புதிய தேசீய நாடுகள் உலகில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகையால் தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசீய இனம் பற்றி குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மெத்த வருந்துகிறேன். ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது. சோஷலிசம் காரமற்றதாக்கப்பட்டிருக்கிறது. தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் புது எண்ண ஓட்டத்தின் விளைவாக தென்னகத்தின் தேவையும் தத்துவமும் புனராலோசனை செய்யப்படும் என்று நினைக்கிறேன். நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டிற்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்று கருதுகிறேன். அண்ணாவின் சேவை ஒரு காங்கிரஸ்காரர் கையில் பத்திரிகை வைத்திருக்கிறார். அதில் தி.மு.கவின் பிரிவினைக் கோரிக்கையை எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன என்று கொட்டை எழுத்துக்களில் போடப்பட்டிருக்கிறது. அவர் அண்ணாவுடன் பேசுவதாவது. பலே மிஸ்டர் அண்ணாத்துரை உங்களுக்கு எதிராகவாவது நாடு ஒன்றுபட்டு ஒருமைப்பாடு ஏற்படட்டும். இப்படி டெல்லி ஆங்கில தினசரியான இந்துஸ்தான் டைம்ஸ் கேலிச் சித்திரம் போட்டிருக்கிறது. வெட்டு விழுந்துவிட்டது இது இந்துஸ்தான் டைம்ஸ், இந்துஸ்தான் ஸ்டாண்டர்டு ஆகிய வட இந்திய ஆங்கில தினசரிகளில் வந்திருக்கும் கேலிச் சித்திரமாகும் திராவிட நாடு கேட்டது தற்கொலை முயற்சி என்பது இந்தச் சித்திரத்தின் கருத்து. மாநிலங்கள் அவையில் அண்ணா பேசி முடித்ததும் தாயகத்தில் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமான மூலம் சென்னை வந்து சேர்ந்தார்கள். அண்ணாவை அடுத்து மாநிலங்கள் அவையில் பேசிய எல்லா உறுப்பினர்களும் திராவிட நாடு விடுதலை முழக்கத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். பிரிவினை என்பது இந்தியாவின் அழிவு. முஸ்லீம் லீக்கின் இரண்டு தேசக் கொள்கையைப் போலவே இதுவும் இருக்கிறது. இந்தியாவைப் பிரிக்க வேண்டுமென்று கூறுவோரிடம் எந்தவித சமரசமுமில்லை. இந்தியா முழுவதும் இதை எதிர்த்துப் போராட வேண்டும். பிரிவினை கேட்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டு சரியாகத் தண்டிக்கப்படவேண்டும். என்று ஜனசங்க உறுப்பினர் வாஜ்பேய் என்பவர் கடுமையாகத் தாக்கினார். அழிவு போராட்டம் சட்டப்படி குற்றம் சமரசம் இல்லை தண்டிக்கவேண்டும் இதுபோன்ற கர்ச்சனைத்தான் ஜனசங்கத் தலைவரின் பேச்சிலே திரும்பத் திரும்பக் கேட்கிறதே தவிர, விடுதலை முழக்கத்தின் அடிப்படை உணர்வுக்கான காரணமும் மதிக்கப்படவில்லை. கருத்து விளக்கமும் காணக் கிடைக்கவில்லை. ஒரு நாட்டுக்கான விடுதலையை அறவழியில் நின்று கேட்பது, கொலை, கொள்ளை போன்ற பஞ்சமா பாதகங்களிலே ஒன்றுபோலக் கருதப்பட்டு அதற்கான தண்டனைகளை நிறைவேற்றும் உத்திரவைப் பழைய காலத்து ராஜாக்களைப்போல, அளித்துக்கொண்டிருப்பது நாகரீக உலகம் தேர்ந்தெடுத்திருக்கிற அரசியல் முறைக்கு ஏற்றதாகாது. திராவிட நாடு கோரிக்கை சரியானதல்ல. எனினும் நாம் மண்டலங்களுக்கு அதிகாரம் தரவேண்டும். செய்தி போக்குவரத்து ரயில் நிர்வாகத்தைக்கூட அவர்களிடம் தரவேண்டும். என்று சாக்சானோ எனப்படும் நியமன உறுப்பினர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பேச்சு நமக்கு திருப்தி அளிக்கக்கூடியது அல்ல என்றாலும், அவருக்குத் திருப்தி அளிக்கக்கூடிய அளவுக்காகவாவது அரசினர் அவரது அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை அவர் மட்டுமல்ல, அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கேரளத்தைச் சேர்ந்த பாரதியும், கர்நாடகத்தைச் சேர்ந்த திவாகரும், ஆந்திராவைச் சேர்ந்த அக்பர் அலிகானும், தமிழகத்தைச் சேர்ந்த கரையாளரும், திராவிட நாடு வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள், மாநிலங்கள் அவையில். பார்த்தீர்களா? திராவிடர்களே திராவிட நாட்டை எதிர்க்கிறார்கள் என்று கேலி பேசப்படுகிறது. ஆபிரகாம் லிங்கன், நீக்ரோக்களின் விடுதலைக்காகப் போராடினார். சந்தைப் பொருள் எனவும், மந்தைப் பிராணிகள் எனவும் அந்தப் பரிதாபத்திற்குரிய நீக்ரோக்கள் நடத்தப்பட்டபோது அவர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட கிளர்ச்சியை எதிர்த்தவர்களில் பலர் நீக்ரோக்கள் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்வது கேலி பேசுகிறவர்களுக்குத் தக்க பதிலாகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தவர்களும் மற்ற வடபுலத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திராவிட நாடு என்ற சொல்லையே தங்கள் காதுகளில் நுழையவிடுவது பாபமெனக் கருதுவது போலக் கண்டனம் தெரிவித்தார்கள். அவர்களைவிட அதிக ஆவேசத்தைத் தென்னகத்து உறுப்பினர்கள் காட்டுவது கண்டு, அண்ணா அவர்கள் அவையிலேயே ஏற்ற பதில் தந்திருக்கிறார்கள். தெற்கைப் பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே, எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளோடு தி.மு.கழகத்தில் சேர்ந்துவிட்டனரோ என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார்கள். இந்த உண்மையை சரியான சமயத்தில் அண்ணா அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உயிர் கொடுத்தாவது பிரிவினையைத் தடுப்போம். என்று உணர்ச்சி கொப்பளிக்க உத்வேகத்துடன் மாநிலங்கள் அவையில் உமாநேரு என்னும் பெருமாட்டி எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதுபற்றி விடுதலைத் தலைவர் அண்ணா அவர்கள் சென்னையில் பேசியபோது, குறிப்பிட்ட வீர வரிகளை திராவிட வரலாறு என்றென்றும் கண்களிலே ஒத்திக்கொள்ளும். உயிர் கொடுத்தாவது திராவிட விடுதலையைத் தடுப்போம் என்று பேசியவர்கள் மீது துளியும் எனக்குக் கோபம் இல்லை. தெளிவு பிறக்கும் சூழ்நிலையை நாம் உண்டாக்க வேண்டும். உயிர் கொடுக்கிற பிரச்சினைதான் இது பெறுவதற்கும் உயிர் கொடுக்க வேண்டும். தடுப்பதற்கும் உயிர் கொடுக்க வேண்டும். உயிர் கொடுப்பது எப்படி என்றால் ஒருவருக்கொருவர் குத்திக்கொண்டு சாவது என்று நாங்கள் எண்ணவில்லை. பாகிஸ்தான் கேட்டபோது, உயிரைக் கொடுத்துத் தடுப்போம் என்றவர்கள் பலர் இன்று உயிரோடுதான் இருக்கிறார்கள். பெருபாரி பிரச்சினை வந்தபோது உயிரைத் தந்தாவது பெருபாரியின் இழப்பைத் தடுப்போம் என்று உறுமியவர்கள் யாரும் பிணமாகிடவில்லை. திராவிட நாடு கோரிக்கை, பொருளற்றது ஆதாரமற்றது என்று பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பதிலுரைத்துத் தனது கருத்துக்களைப் பொருளற்றதாக்கிக் கொண்டார். வட மாநிலங்களிலே உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களையும், பிரதமர் நேரு அவர்களையும் மிஞ்சுகின்ற விதத்தில் திராவிட நாட்டுக் கோரிக்கையை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்துக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் புபேஷ் குப்தா அவர்கள் மாநிலங்கள் அவையிலே கனல் தெறிக்கப் பேசினார். திராவிடஸ்தான் என்கிற அபாயகரமான குருட்டுத்தனமான, கருத்தைப் பரப்பும் மேடையாக பாராளுமன்றத்தைப் பயன்படுத்த கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது. என்று திட்டவட்டமாகக் கூறினார். விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் எந்த நாட்டின் மக்களுக்கும் சோவியத் யூனியன் விசுவாசமுள்ள நண்பனாக இருந்துவந்துள்ளது. இனியும் இருந்துவரும். என்ற ரஷ்ய நாட்டுத் தலைவர் குருஷேவ் அவர்களின் பேச்சையும் படித்துவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் போக்கையும் ஆராய்ந்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நாம் கேட்பதை ஒரு நாடாகவே கம்யூனிஸ்டுகளோ மற்றவர்களோ கருதவில்லையா? இது தனிநாடு அல்ல என்பதற்கு என்னென்ன ஆதாரம்? இந்தியாவுடன் திராவிட இணைந்திருக்க வேண்டுமென்பதற்கு என்ன அடிப்படை? எதனால் வடவரும் தெற்கேயுள்ளவர்களும் ஒன்றுபடுத்தப் பட்டிருக்கிறார்கள்? ஒருநாடு தனியாக வாழ்வதற்குரிய இலக்கணங்கள் எவை எவை? அந்த இலக்கணம் அனைத்தும் சோவியத் யூனியனால் ஆதரிக்கப்படுகிறது. பக்டூனிஸ்தான் கிளர்ச்சிக்கு இருக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பக்டூனிஸ்தான் பிரியவேண்டுமெனக் கூறுகிற கம்யூனிஸ்டுகள், இந்துஸ்தானில் இருக்கிற திராவிடஸ்தான் பிரியக்கூடாது என்பதற்குக் காட்டுகிற காரணங்கள் என்ன? சீனத்து ஆக்கிரமிப்பினால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்க கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள ஒரு பிரிவினர் நல்ல பிள்ளை பட்டம் பெறுவதற்காக, திராவிட நாடு கோரிக்கையை மூர்த்தண்யமாக எதிர்த்துவருகிறார்கள் என்பதைத் தவிர அசைக்க முடியாத சான்றுகளை வைத்துக் கொண்டல்ல. விடுதலைப் போரில் முதல் கட்டம், அலட்சியப் படுத்துவது. இரண்டாம் கட்டம், அன்பாகப் பேசிப் பார்ப்பது. மூன்றாவது கட்டம், மமதையாக மிரட்டிப் பேசி அடக்கிப் பார்ப்பது. நான்காவது கட்டம், இவ்வளவு ஆதரவா? திகைப்பது. ஐந்தாவது கட்டம் சரி என்ன வேண்டும்? என்ற சமரசம் பேசுவது. என்று அண்ணா அவர்கள் சென்னையில் பேசியிருப்பதை நாம் மட்டுமல்ல, நம்மை மிரட்டி அழித்துவிடலாமென எண்ணியிருப்பவர்களும் கூர்ந்து கவனித்து நினைவில் வைத்துக்கொள்வது நலமாகும். உபயோகமற்றது. அலட்சியப்படுத்தத் தக்கது யாரோ சில அதிருப்தியாளர் கூக்குரல் என்று கருதப்பட்டு வந்த பிரச்சினையைப் பற்றி அடக்கத்திற்கும் அமைதிக்கும் பேர்போன ராஜதந்திரிகளும் மேதைகளும் அமர்ந்திருக்கும் அவையில் உயிர் கொடுத்தேனும் பிரிவினையைத் தடுப்போம் என்ற ஆவேசம் கிளம்பிற்றென்றால் அது போதாதா? இதற்கு நான் காரணமாயிருந்தேன் என்பதைப் பற்றிப் பெருமைப்படுவதற்கு முன் அங்கே என்னை அனுப்பிவைத்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களிடையே அண்ணா கூறியபோது யாருக்குத்தான் உடல் புல்லரிக்கவில்லை? குடியரசுத் தலைவர் உரை பற்றிக் குறிப்பிட்டு, அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து, ஆட்சியாளரின் ஜனநாயக நேர்மை, தேர்தல் நேரத்தில் எவ்வளவு கெட்டுக் கிடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார விளக்கம் தொழில்துறை பற்றிய கருத்துக்களை அளித்துவிட்டு. நான் திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். நான் எங்கிருந்து வந்தேனோ அந்த திராவிட பூபாகத்திற்கு சுயாதிபத்ய உரிமை தாருங்கள். என்று முதல் முழக்கம் செய்தார். இந்த நிகழ்ச்சியை சரித்திரச் சுவடியிலேயிருந்து யாரும் அகற்றிவிட முடியாது. அதுபோலவே தான் நமது சுதந்திர உணர்வையும் யாரும் அகற்றிவிட இயலாது. சலுகைகள் அளிப்பது சில பல உரிமைகள் வழங்குவது அணைகளைக் கட்டுவது திட்டங்களைத் தீட்டுவது திராவிடருக்குப் பதவிகளைத் தருவது இந்தக் காரியங்களால் திராவிடர் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் சுதந்திர ஜ்வாலையை அணைத்துவிட நினைப்பதுதான் பகற்கனவாகும். வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? இந்தக் கவிதை வரிகள் நம் நினைவைவிட்டு என்றும் அகல முடியாதவை. விடுதலைப் போரில் நாம் மடிய நேரிட்டாலும் இந்த உணர்ச்சி வரிகள் நமது கல்லறைகளில் ஒளிவிட வேண்டுமென்பதே நமது தணியாத ஆசை. ‘திராவிட நாடு – இலட்சியப் பயணம்!‘ திராவிடநாடு கோரிக்கையில் பொதிந்திருக்கக்கூடிய நியாயத்தை வலியுறுத்துவதற்காக, வடக்கிற்கும் தெற்கிற்கும் தொழில் துறையில் இருந்து வரக்கூடிய ஏற்றத் தாழ்வை நான் எடுத்துக் கூறவில்லை. வேறு காரணங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது திராவிட நாடு கோரிக்கை. இவ்வாறு அறிஞர் அண்ணா அவர்கள், மாநிலங்கள் அவையில் நிதிநிலை அறிக்கையின் மீது உரையாற்றுகின்ற பொழுது, திராவிடநாடு இலட்சியத்தில் நமக்கிருந்துவரக்கூடிய உறுதிப்பாட்டினை அழுத்தந்திருத்தமாக அறிவித்தார். நிதி அறிக்கைப் பற்றி நமது கருத்தினை அண்ணா அவர்கள் வெளியிட்ட நேரத்தில், தொழில் துறையில் இருந்து வருகின்ற வட்டார ஏற்றத் தாழ்வைச் சுட்டிக் காட்டி, இந்த ‘ஏற்றத்தாழ்வு உடனடியாகக் களையப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்‘ என வலியுறுத்தினார். இதை ஒரு புகாராகக் கொண்டு, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள் குறுக்கிட்டுத் தம் ஒத்துழைப்புக்கான பின் வரும் நிபந்தனையை வெளியிட்டடார் அது,இது. ஆணித்தரமாக அறிவிக்கிறேன்! “திராவிடநாடு கோரிக்கையை நீங்கள் கை விட்டு விடுங்கள், தமிழகத்திற்கு மேலும் பல தொழில்களைப் பெற்றுத்தர நாங்கள் உங்களுக்குத் துணை புரிகிறோம்“. வட்டார ஏற்றத் தாழ்வு களைப்பட்டுத் தொழில் துறையில் தென்னகம் வடநாடு போல் ஒத்த நிலை பெற ஒத்துழைப்புத் தருவதாகத் தன்னிச்சையாகப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முன் வந்தமைக்கு அண்ணா அவர்கள் தன்னடக்கத்துடன் நன்றி தெரிவித்துவிட்டு, அவ்வொத்துழைப்புக்கு அந்தத்தலைவர் விதித்த நிபந்தனையை ஒதுக்கித்தள்ளும் கருத்துடன், திராவிட நாடு இலட்சியத்தில் தமக்குள்ள உறுதிப்பாட்டினைத் திட்டவட்டமாக வெளியிட்டார். “திராவிட நாடு கோரிக்கையிலிருந்து நான் பின் வாங்குவதோ அல்லது என்னையே ஆளாக்கிக் கொண்டிருக்கக் கூடிய அந்தப் புனிதமான இலட்சியப் பயணத்திலிருந்து என்னை அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தி விடுவது என்பதோ அறவே இல்லை என்பதை ஐயத்திற்குத் துளியுமிடமின்றி ஆணித்தரமாக அறிவித்துக் கொள்கிறேன்“. (நம் நாடு - 22-6-62) ஆளுங்கட்சிக்கு அறைகூவல் 23.2.66 அன்று மாநிலங்களவையில் அண்ணா அவர்கள், குடியரசு தலைவர் உரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய பேருரை. துணைத் தலைவர் அவர்களே! குடியரசுத் தலைவருடைய பேருரை, இரண்டாவது முறையாக வேதனைக் குமுறலுடன் தொங்கப்பட நேரிட்டிருந்தது துர்பாக்கியமானதாகும். (இம்முறை) முன்னாள் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் துக்கமிக்க அதிர்ச்சி தரத்தக்க திடிர் மறைவு குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற முறை, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் வேதனைமிக்க மறைவுபற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. இருமுறை திக்கற்றவர்களாக்கப் பட்டுவிட்ட இந்நாட்டு மக்கள், இம்முறை லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு தரும் மன அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். அனைவருடைய அனுதாபத்தையும் பெற்றுள்ள காலஞ்சென்ற முன்னாள் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு குறித்து, குடியரசுத் தலைவர் தமது பேருரையில் தெரிவித்திருக்கும் வேதனை உணர்ச்சியை இந்த அவையிலும் வெளியிலேயும் உள்ளார் அனைவரும் பகிர்ந்துகொள்வது போலவே, நானும் பகிர்ந்துகொள்கிறேன். நாட்டு நிலையை உயர்த்துவதற்காகக் கடுமையாகவும் சுறுசுறுப்புடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணியாற்றிவந்தவர், இறுதியில், பணியாற்றிக்கொண்டிருந்த நிலையிலேயே மறைந்திருக்கிறார். உள்ளத் தூய்மையாளர்கள் எங்கெங்கு எவ்வெப்பொழுது கூடிச் சமாதானம் நிலவிடச் செய்திடும் பணியில் ஈடுபடினும், அந்தப் பெரியவரின் நினைவு அவர்களுக்கு வழிகாட்டும் ஒளி அளித்து, இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், சமாதானத்திலும் கனிவான தோழமையிலும் நாட்டம் கொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானப் பாதையினை வகுத்துக்கொள்ளத் துணைநிற்கும். என்னுடைய தாழ்மையான அஞ்சலியினை அந்தப் பெரியவருக்குச் செலுத்திக் கொள்கிறேன். இல்லாதது கண்டு மகிழ்ச்சி பிறக்கிறது! எனது நண்பர் பேராசிரியர் முகுத் பீகாரி லால், குடியரசுத் தலைவருடைய பேருரையில், சமதர்மம் என்ற வார்த்தை இல்லாதது குறித்து வருத்தப்பட்டார். விசித்திரமாக, அந்த வார்த்தை அங்கு (பேருரையில்) இல்லாதது கண்டு எனக்கு மகிழ்ச்சி பிறக்கிறது அந்த வார்த்தை (சமதர்மம்) எனக்குப் பிடிக்காது என்ற காரணத்தால் அல்ல-நான் அதனை (சமதர்மத்தை) மிகமிக விரும்புகிறேன். ஆனால், இந்தச் சர்க்கார் கொண்டுள்ள கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது, இத்துடன் அதனை (சமதர்மம் என்ற பெயரை) இணைப்பது, சமதர்மத்தையே கேவலப்படுத்துவதாகிவிடும் என்பதால்! பேராசிரியர் முகுத் பீகாரி லால்-தாங்கள் கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். அண்ணா-அந்தக் கருத்திலே கூறுகிறேன். அந்த வார்த்தை (சமதர்மம்) பொருத்தமானவிதமாகவே விடப்பட்டு விட்டிருக்கிறது! நம்பிக்கை நட்சத்திரம் அது-ஐயத்திற்கு அவசியமில்லை! அவருடைய (லால்பகதூர்) கடைசிச் சாதனை-வரிசையிலே கடைசி வகையிலே அல்ல-பற்றி எண்ணிடும்போது, இங்குள்ள பலரும், நாட்டிலே உள்ள பலரும் கருதுவதுபோலவே-தாஷ்கண்டு ஒப்பந்தத்தை, காலையில் காட்சிதரும் நம்பிக்கை நட்சத்திரமாக நான் கருதுகிறேன். தாஷ்கண்டு ஒப்பந்தம் பற்றி ஐயப்பாடுகள் கொண்டுல்ளவர்கள்கூட, அது மற்றோர்விதமான மூனிச் (சரணாகதி) நிழலாகிவிடுமோ என்றுதான் அச்சப்படுகிறார்கள். அவர்களும், பாகிஸ்தானுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும். நட்புறவுடன் வாழவேண்டும். நேசத் தொடர்புடன் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். மிகுந்த பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டியவர்கள், இந்த அவையிலும் வெளிலேயும் அடிக்கடி எடுத்துக் கூறிக்கொண்டு வந்த கருத்துக்கள், உண்மையான உணர்வு கொண்டுள்ள பலருடைய மனத்திலே அச்சத்தை மூட்டிவிட்டிருக்கிறது. எனினும், தாஷ்கண்டு ஒப்பந்தம், நட்புக்கேற்ற சூழ்நிலையையும், அண்டை நாட்டிடம் நல்ல தொடர்பு பெறுவதற்கான சூழ்நிலையையும் அடைந்திட அழைத்துச் செல்வதனால், இந்த நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து நானும் இதனை (ஒப்பந்தத்தை) வரவேற்கின்றேன். நேசத் தொடர்பின் இலட்சணம் இதுதானா? அந்நிய நாடுகளுடன் நமக்கு நேசத் தொடர்பு இருப்பதாகக் குடியரசுத் தலைவர், தமது பேருரையில் எடுத்துரைக்கிறார். அவர்களுடன் (அந்நிய நாடுகள்) நேசத் தொடர்பு இருப்பதாகக் காட்சிகள் மூலம் காட்டப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புகூட அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர் நமது நாட்டுக்கு வருகைதந்து, நமது நாட்டுத் தலைமையமைச்சருடன் கலந்துரையாடியிருக்கிறார். அன்றையத்தினம் டில்லியில் அங்காடிப் பகுதி ஒன்றில் நான் சென்றுகொண்டிருந்தேன். இரு இளைஞர்கள் பேசிக்கொண்டிருக்கக் கண்டேன். இரு (நாட்டு) கொடிகளும் ஒருசேர அமைக்கப்பட்டுப் பறந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஒரு இளைஞன் மற்றவனைக் கேட்டான் யார் இந்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள்? என்று மற்றோர் இளைஞன் சொன்னான். அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர் வருகை தந்திருக்கிறார் என்று மற்ற இளைஞன்-வேடிக்கைப் போக்கிலேதான். ஆனால், அதிலே பொருளும் பொதிந்திருக்கிறது சொன்னான். ஓ! அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர், பசி நாட்டுத் தலைமையமைச்சரைக் காண வருகை தந்திருக்கிறாரா? என்று. அந்நிய நாடுகளுடன் நமக்குள்ள நேசத்தொடர்பு பயனளித்திருக்குமானால் கனிந்திருக்குமானால், இந்நேரம், பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள மக்களின் குறிப்பாகத் தென்னகத்தவர் தொல்லைகளைத் தீர்த்திடத்தக்க வழி பெற்றிருந்திருப்போம். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை வாணிபத்திலே ஈடுபடுத்தப்பட்டிருந்த தொகையினை சரக்குகளைக் கூடப் பர்மா சர்க்காரிடம் பர்மியப் புரட்சி சர்க்கார் என்று அதனை அழைக்கிறார்கள் விட்டுவிட்டு வந்துள்ளனர். நமது நாட்டுச் சர்க்கார் தலைவர்கள் ஒரு முறைக்கு மேல் பர்மா சென்று வந்தனர். நம்பிக்கையும் நல்ல எண்ணத்தையும் கொண்டுவந்து தந்தனர். ஆனால் இது வரையில் ஒரு பலனும் கிட்டவில்லை. நேசத் தொடர்பு என்றால் இதுதான் என்று குடியரசுத் தலைவர் கருதுவாரானால், அதுபற்றி (பேருரையில்) அவர் குறிப்பிடாமலிருப்பதே நல்லது! பயன்தரத்தக்க குறிக்கோள் கொண்ட நேசத் தொடர்பு பெற வேண்டுமென்றால், இதற்குள் நாம் புதிதாக எழுச்சி பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளுடன் தோழமைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே ஒருவிதமான கூட்டுப் பொது அரசு அமைப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். ஜப்பானியத் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோருடைய நம்பிக்கையைப் பெற்றிருந்திருக்க வேண்டும். இப்போது ஜப்பானியர் கூட்டுவதாக இருக்கிறார்களே… ஆசிய மாநாடு அதனை இந்தியாவே கூட்டியிருந்திருக்க வேண்டும். அந்நியநாட்டு அரசுத் தலைவர்கள் இங்கு வருகை தருவதும் இந்நாட்டு அரசுத் தலைவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வதுமான நிகழ்ச்சியைத்தான் ஒரு சமயம் குடியரசுத் தலைவர், நேசத் தொடர்பு என்று குறிப்பிடுகிறார் போலும்! தாக்குதலை நாங்கள் தாங்கிக்கொள்ள இயலும்: குடியரசுத் தலைவருடைய பேருரையைப் பொறுத்தமட்டில் அதிலே நெருக்கடிநிலை குறித்தும், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பற்றியும் ஏதும் குறிப்பிடாமல் விட்டிருப்பது வருந்தத்தக்கதாகும். திட்டவட்டமாக நீதி நூல் வித்தகர்கள் தந்துள்ள தீர்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் அரசியல் சட்டதிட்டம் பற்றிய நுண்ணறிவினர் கூறிய அறிவுரைகளைப் புறக்கணித்து விடப்பட்டிருப்பதையும், ஆட்சியிலே உள்ளவர்களின் அரசியல் அறிவே மேலானது என்ற அகம்பாவத்தைக் கொண்டு இன்னும் நெருக்கடி நிலையையும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் வைத்துக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம். இந்த அரசியல் கட்சி அல்லது அந்த அரசியல் கட்சி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் நான், நெருக்கடி நிலையையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கும்படிக் கேட்கவில்லை தாக்குதலை நாங்கள் தாங்கிக் கொள்ளமுடியும்-தாங்கிக் கொண்டிருந்திருக்கிறோம். ஆனால், தாஷ்கண்டு ஒப்பந்தத்திற்குப் பிறகும் நெருக்கடி நிலையையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீடித்துக் கொண்டிருப்பது, நாம் தா“கண்டு ஒப்பந்த உணர்ச்சியை உள்ளத்தில் கொண்டில்லை என்ற தவறான விளக்கம் அளித்துவிடும் என்பதாலேயே கூறுகிறேன். மறைந்த பெரியவரின் பெயருக்காவது மதிப்பளித்து, இந்த நெருக்கடி நிலையையும் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கிவிட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்-வலியுறுத்துகின்றேன். சொந்த மக்களிடமே அவநம்பிக்கை ஏன் அரசினருக்கு? எந்தவிதமான விஷமத்தனத்தையும், சமூக விரோத நடவடிக்கையையும் தடுத்திடத்தக்க அதிகாரம் அனைத்தும் அவர்களுக்கு (சர்க்காருக்கு) அவர்களிடம் உள்ள (சாதாரண) சட்டங்கள் மூலமே இருக்கின்றன-போதுமான அளவுக்கு! இந்த நாட்டை ஆபத்துத் தாக்க கிளம்பியபோது நாட்டு மக்களனைவரும் கருத்துவேற்றுமைகளை மறந்து கிளர்ச்சிகளை நிறுத்திவைத்து விட்டு ஒரு மனிதன் போல் எழுந்து நின்றதை நாம் காணவில்லையா? சொந்த மக்களிடமே ஏன் அவர்களுக்கு (சர்க்காருக்கு) இந்த அச்சம்? நாட்டைத் தாக்கிட ஆபத்துக் கிளம்பும்போது எழுந்து நின்றிட (காத்திட) முடியும் என்பதை, இவ்வளவு பெரிய அளவிலும் சீலத்துடனும் இந்நாட்டு மக்கள் விளக்கிக் காட்டியான பிறகும், ஏன் மக்களிடம் இவர்களுக்கு (சர்க்காருக்கு) இந்த அவநம்பிக்கை? இந்தச் சர்க்காரும், இதனை நடத்திச் செல்பவர்களும், நாட்டுப்பற்று உணர்ச்சிக்குத் தாங்களே மொத்த உரிமையாளர்கள் மற்றவர்களுக்கு நாட்டுப்பற்று உணர்ச்சியே கிடையாது என்ற அகம்பாவம் கொள்ளக் கூடாது. ஆகவே, உடனடியாக நெருக்கடி நிலையினையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கியாக வேண்டும் பல ஆண்டுகளாகச் சிறையிலே அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்தாக வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். அவர்கள் (சர்க்கார்) அதைச் செய்தாலொழிய செய்கிற வரையில், நாகரிகம், சனநாயகம் என்பவைகளுக்கு அவர்கள் உரித்தானவர்கள் என்ற உரிமை கொண்டாடமுடியாது! ஏன் இந்த நெருக்கடி நிலையையும், பாதுகாப்புச் சட்டத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதுதான், முதல் கேள்வியாக-முன்னணிக் கேள்வியாக மக்கள் கேட்பர். அந்தக் கேள்விக்கே இவர்கள் (சர்க்கார்) பதில் அளித்தாக வேண்டும். அரசினரின் செயலாற்றலில் திருப்தியற்ற நிலைமை! இந்தச் சர்க்கார் செய்த (கெடுதலான) காரியங்கள் பற்றியும், செய்யத் தவறிய (நல்ல) காரியங்கள் பற்றியும் என் நண்பர் பேராசிரியர் லால் அவர்கள் விரிவாக எடுத்துக்கூறி, என் வேலையின் பளுவை வெகுவாகக் குறைத்துவிட்டிருக்கிறார். அம்மையே! குடியரசுத் தலைவரின் பேருரையை, கணக்குப் பார்த்திடும் முறை என்ற முறையில் கவனிக்க வேண்டும். அதிலும், இப்போது இன்றையச் சர்க்காரும், அதனை நடத்திச் செல்பவர்களும் வெகு சீக்கிரத்தில் நாட்டு மக்களிடம் சென்று மீண்டும் (ஆட்சி நடத்த) உத்தரவு கேட்க இருக்கிறார்கள். வார்த்தைகளால் விளக்கவில்லையே தவிர, குடியரசுத் தலைவர்கூட ஐயப்பாடு கொண்டிருக்கிறார் என்பது (உரையில்) தெரிகிறது. கிடைக்கக் கூடிய பொருளை (உணவுப் பண்டம்) சீராக நியாயமாக (மக்களுக்கு)ப் பங்கிட்டு அளிப்பதற்கான முறைகளை எடுத்தாக வேண்டும் என்று அவர் ஒரு பகுதியில் (தம் உரையில்) தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து, முறைகள் (இதுவரையில்) எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று பொருள்படுகிறது. பொதுத்துறையிலே ஈடுபடுத்தியுள்ள தொகைக்கு ஏற்ற அளவு வருவாய் கிடைத்தாக வேண்டும் என்று உரையில் மற்றோர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பொருள், இதுவரை அவ்விதமான ஏற்ற வருவாய் கிடைக்கவில்லை என்பதுதான். ஆகவே, குடியரசுத் தலைவருக்குக்கூட, இந்தச் சர்க்காருடைய செயலாற்றலில் நிரம்பத் திருப்தி இல்லை என்பது விளக்கமாகிறது. ஆளுங்கட்சியினரிடையே விசித்திர நிலை: குடியரசுத் தலைவர் மட்டுமல்ல-வேறு ஒருவருக்கும் கூட இந்தச் சர்க்காருடைய சாதனைகளில் திருப்தி கிடைக்கவில்லை. ஒருவருக்கும் என்று நான் கூறும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நீக்கிவைத்திடவில்லை! விசித்திரமான நிலைமை, அம்மையே! ஆளுங்கட்சியிலே இரண்டு அணிகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பதவியில் உள்ள அணி மற்றொன்று பதவியில்லாத அணி. சர்க்காருடைய ஒவ்வொரு செயலையும் முந்திக் கொண்டும் தீவிரமாகவும் பதவி அணி ஆதரித்து வாதாடக் கிளம்பும்போது பதவியில் இல்லாதார் அணி எதிர்க் கட்சிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, சர்க்கார் செய்ததிலுள்ள குறை-செய்யாததால் விளையும் குறை ஆகியவற்றினைச் சுட்டிக்காட்டி வருகிறது. கட்சிப் பாசங்களை மறந்து மதிப்பீடு காண்பது அவசியம்: எனக்கு முன்பு பேசிய கனம் உறுப்பினர் ஒருவர், குடித்தண்ணீருக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்! குடித்தண்ணீருக்காக மனுச் செய்து கொள்வது ஒரு சோகக் காட்சியாகும்! பதினெட்டு ஆண்டுச் சுதந்தர ஆட்சிக்குப் பிறகு சுயராஜ்யம் கிடைத்ததும் தேனும் பாலும் ஆறெனப் பெருக்கெடுத்தோடும் என்று மக்களுக்கு அறிவித்தான பிறகு ஆளுங்கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர், இந்த மாமன்றத்தில் எழுந்து நின்று, பருகிட நீர் தாரீர் என்று கேட்கிறார். அந்த உறுப்பினர் அமர்ந்ததும், என் நண்பர் பேராசிரியர் லால் அவர்கள், தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று எழுந்து கேட்டார். எனக்குக் கோபம்-பேராசிரியர் லால் அவர்களிடம்! ஆளுங்கட்சியிடம் அந்தக் கட்சி உறுப்பினர், குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நீர்! இந்தச் சர்க்காரிடம் நீதி வழங்கும்படி கேட்கிறீரே-என்ன துணிச்சல் உமக்கு! ஆகவே, கணக்கெடுக்க வேண்டியிருப்பதால், கட்சிப் பாசங்களையும் மறந்து மதிப்பீடு காண வேண்டியது மிகவும் அவசியமாகிறது! 18 ஆண்டுகால ஆட்சி தேடிவைத்துள்ள கடன்! துணைத்தலைவர் அவர்களே! நாம் சுதந்தர அரசாகத் துவக்கியபோது நமது கணக்கில், அந்நிய நாட்டில் கிட்டத்தட்ட ரூ.1,800 கோடி அளவுக்கு இருப்பு இருந்தது. பதினெட்டு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு இன்றைய ஆளவந்தார்கள் சாதித்திருப்பது வெளிநாடுகளுக்கு நாம் தர வேண்டிய கடன் ரூ.3,39 கோடி! செங்கோட்டையில் சுதந்தரக் கொடியைப் பறக்கவிட்ட போது ரூ.1,800 கோடி இருப்பு இருந்தது வெளிநாட்டில்! அப்போது பிரெட்டன்வுட்ஸ் மாநாட்டுக்குச் சென்று நமது பிரதிநிதிகளுக்கு இருந்த பிரச்சினை இவ்வளவு பிரும்மாண்டமான (இருப்பு) தொகையை என்ன செய்வது? எப்படி முதலீடாக்குவது? எப்படித் திருப்பிக் கொண்டு வருவது? எப்படிச் சரியான முறையில் (இந்தத் தொகையை) பயன்படுத்துவது? என்பதாகும். ஆனால் இப்போதைய சர்க்கார், அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்! நமக்கு வெளியிடத்தில் (இருப்பு) தொகை இல்லை. ஆகவே, பிரச்சினையே இல்லை! ரூ.3,396 கோடி கடன் இருக்கிறது. அதற்காக அவர்கள் (கடன் கொடுத்தவர்கள்) கவலைப்பட்டுக் கொள்ள வேண்டும் நமக்கு இல்லை! இந்தியாவுக்குக் கடன் கொடுத்தவர்களுக்குத் துணிச்சல் வரத்தேவையில்லை கடன் வாங்கியவருக்குத்தான் துணிச்சல் வந்திருக்கிறது. கொடுத்த கடனைப் பெற்றுக்கொள்ள வழி கண்டுப் பிடித்துக் கொள்ள வேண்டிய கடமை, (கடன்) கொடுத்தவர்களுக்கு என்றாகிவிட்டது! பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காட்டப்பட்டுள்ள (கணக்கு) ஓவியம் எது என்றால், வெளிநாடுகளில் இருந்துவந்த (இருப்பு) தொகை அவ்வளவையும் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. உலகுக்கு நாம் ரூ.3,396 கோடி கடன் திருப்பித் தரவேண்டும் என்பது தான்! வீழ்ந்துவிட்டதே ரூபாயின் மதிப்பும்! துணைத் தலைவர் அவர்களே! இந்த ரூபாயின் மதிப்பும் வீழ்ந்துவிட்டது. எந்த அளவுக்கு? பொருளாதார நிபுணர்கள் தமக்குள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ரூபாயின் மதிப்பு இப்போது எவ்வளவு 17 பைசாவா? 19 பைசாவா? அல்லது 20 பைசாவா? என்று. ஒருவேளை சர்க்கார் முன்வந்து தைரியமாகச் சொல்லக்கூடும் இல்லை, இல்லை. (ரூபாயின் மதிப்பு) 22 காசு என்று! எப்படியோ ஒன்று ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவிட்டிருக்கிறது! நிர்வாகச் செலவினத்தில் நாகரிகப் போக்கு! 1948-49 ல், துணைத் தலைவர் அவர்களே! மொத்த வரி வருமானம் ரூ.695 கோடி. இப்போது நமது முன்னேற்றம் மிக அதிகமாகிவிட்டதல்லவா இப்போது 1965-66ல், மொத்த வரி வருவாய் ரூ.2,186 கோடி ஆகிவிட்டிருக்கிறது! சர்க்கார் நிர்வாகச் செலவினம் இருக்கிறதே அதிலே நாம், மிகவும் நாகரிகம் வாய்ந்த-புதுமை மிக்க நாடுகளுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறோம்! 1948-49 ல் (நிர்வாகச் செலவு) ரூ.295 கோடி! 1963-64ல், ரூ.1,049 கோடி என்ற அளவை அடைந்து விட்டோம்! புனிதமான தத்துவம் கேவலமடைவதா? இந்த நிர்வாகச் செலவுடன், பொதுமக்களிடம் வரியாகப் பெற்ற பிருமாண்டமான தொகையையும், அதைவிடப் பெரிய அளவிலே வெளிநாடுகளிடம் கடனாகப் பெற்ற தொகையையும் சேர்த்துச் செலவிட்டதுடன், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் கிட்டத்தட்ட ரூ.14,973 கோடியும் செலவிட்டிருக்கிறோம். இதன் பயனாக எங்கே நாம் வந்தடைந்திருக்கிறோம்? ரூ.2,000 கோடி அளவுக்கு வரி வசூலித்து, ரூ.4,000 கோடி அளவுக்கு வெளிநாட்டுக் கடன் பெற்றுத் திட்டத் தொகைகள் மூலம் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவழித்துக் குடித்தனம் நடத்திய இந்தச் சர்க்கார், இன்று சமூகத்தை வைத்திருக்கும் நிலைமை என்ன? இதோ, தமது கருத்தைக் கூறுகிறார் தேபர். அவருடைய கருத்தை மேற்கோள் காட்டி, இன்றுள்ள நிலைமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தைரியம் பெறுகிறேன். 100 க்கு 60 குடும்பங்கள், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளையும் பெற்றிட முடியாத நிலையில் இருக்கின்றன. என்று அவர் (தேபர்) கூறுகிறார். நான் பேராசிரியர் லால் அவர்களைக் கேட்பேன். அவர்கள் (சர்க்கார்), சமதர்மத்துக்குப் பாத்தியதை கொண்டாடலமாமா? அவர்கள் (சர்க்கார்) அதனை (சமதர்மத்தை) விட்டுவிடுவதுகூட நல்லது. அந்தப் புனிதமான தத்துவமான சமதர்மமாவது, கேவல நிலை அடையாதிருக்கும்! சங்கட நிலைமைக்கு ஏதோ ஓர்சான்று! சத்துள்ள உணவு ஒருவன் பெற (மாதம்) ரூ.35 தேவை என்று சமீபகாலத்து ஆய்வுரை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் மிகக் குறைந்த அளவு வருமானம் இப்போது ரூ.6.60 ரூ.9.60, ரூ.17.70 ரூ.13.23 என்ற அளவில் இருக்கிறது. இவ்வளவு தொகையை தொகையை மட்டுமல்ல 18 ஆண்டுகள் எனும் நீண்டகாலத்தையும் தின்று தீர்த்தான பிறகு (சர்க்கார்) இந்த நாட்டையும் மக்களையும் இந்தச் சங்கட நிலைமையில் விட்டுவைத்திருக்கிறீர்கள்! செலவிட்டீர் கோடி கோடியாக! ஆனால் நிலைமை…! விவசாயத்தை எடுத்துக்கொண்டால் மூன்று திட்டங்களிலும் விவசாயம், நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கு மொத்தத்தில் ரூ.3,289 கோடியை இந்தச் சர்க்கார் செலவிட்டிருக்கிறது. இவ்வளவு செலவிட்டுப் புதிய புதிய அணைகளைக் கட்டியும், 1947 ஆம் ஆண்டிலிருந்து 1965 ஆம் ஆண்டுவரையில், குறிப்பாக அமெரிக்காவிலிருந்தும், பொதுவாகப் பல வெளிநாடுகளிலிருந்தும் அவர்கள் (சர்க்கார்) ரூ.2,634 கோடி பெறுமானமுள்ள உணவுப் பொருளை இறக்குமதி செய்திருக்கிறார்கள். ரூ.3,000 கோடிக்குமேல் விவசாயத்துக்கும், பாசனத்துக்கும் செலவிட்டான பிறகு, ரூ.2,634 கோடிக்கு உணவுப்பொருளை அவர்கள் (சர்க்கார்) இறக்குமதி செய்திருக்கிறார்கள். மீண்டும் ஆட்சி செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? 1949 ஆம் ஆண்டு 100 புள்ளி என்று விலைராசியைக் குறித்துக்கொண்டு பார்த்தால், 1965 ல் விலைவாசி, 161 புள்ளி என்ற அளவுக்கு ஏறிவிட்டிருக்கிறது. இந்த நாட்டிக்கு இவர்கள் தந்திடும் ஓவியம் இந்த விதமானதாக இருக்கும்போது, ஆட்சியிலே மீண்டும் நீடிக்க வேண்டும் என்று கேட்டிட இவர்களுக்கு உள்ள யோக்கியதாம்சம் என்ன என்பதைக் காட்டும்படி இப்போது நான் கேட்கிறேன். இவ்விதம் கூறினால் என்ன பலன் உண்டு? ஆனாலும் குடியரசுத் தலைவர், உணர்ச்சி ததும்ப உரைக்கிறார் நமது நோக்கங்களை அனைவரும் அறிவர். நமது இலட்சியம் தெளிவானது என்பதாக! அம்மையே! மரத்தின் இலட்சணம், அது தரும் கனியில் தெரியும் எழுதி ஒட்டப்பட்டுள்ள லேபிள் மூலமாக அல்ல! இருந்தும், குடியரசுத் தலைவர், நமது நோக்கம் அனைவரும் அறிந்ததே. நமது இலட்சியம் தெளிவானது என்று கூறுகிறார். விசித்திரமாக இருக்கிறது! நோக்கங்கள் தெளிவாக தெரியாமலிருந் தாலாவது, இந்தச் சர்க்காருடைய குறைபாடுகளுக்கு ஒரு மன்னிப்பு இருக்கக்கூடும். இலட்சியம் என்ன என்பதுபற்றிக் கண்டறிவதிலேயே அவர்கள் அலைந்து அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றலாவது, சர்க்கார் தமது குறைபாட்டிற்காக ஓரளவு மன்னிப்புப் பெற்றிடக்கூடும். ஆனால் அவர்கள் கூறுகிறார்கள்-எமது நோக்கங்களை அனைவரும் அறிவர். எமது இலட்சியம் தெளிவானது என்று! நமது சாதனைகளோ இவை! கொள்கை எதுவென்று தெரியால் இலட்சியம் என்ன என்பது புரியாமல் இருந்திருந்தால், உங்களுடைய சாதனை என்னவாக இருந்திருக்குமோ! அதைச் சோகம் கலந்த நகைச்சுவை நாடகாசிரியர் தாம் எழுதவேண்டும்! ஆகவே, கொள்கைகளை அனைவரும் அறிவர். இலட்சியம் தெளிவானது என்று கூறிக்கொண்டிருப்பதிலே பயன் இல்லை! மனமுடைந்து கிடக்கின்றனர் மக்கள்! அன்றோர் நாள் என் நண்பர் தயாபாய் பட்டேல், இவர்கள் (சர்க்கார்) எவ்வளவு சீக்கிரமாகச் சமதர்மத்தை விட்டுவிடுகிறார் களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று கூறினார். அவர் ஒரு நோக்கத்துடன் அதைச் சொன்னார். நான் வேறோர் நோக்கத்துடன் கூறுகிறேன். அவருக்கு (படேலுக்கு)ச் சமதர்மம் என்றால் அருவருப்பு-எனக்கு அப்படி அல்ல நீங்கள் (சர்க்கார்) அல்ல சமதர்மத்துக்காகப் பாடுப்படக்கூடியவர்கள் என்பது என் கருத்து! ஆகவேதான் நான் கூறுகிறேன்-நீங்கள் எவ்வளவு சீக்கிரமாகச் சமதர்மத்தை விட்டுவிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது. சமதர்மத்துக்கு இந்த நாட்டுக்கும் கூட! இந்தப் போக்கினால் இன்று நாட்டிலே எல்லாப் பகுதியிலும் மக்கள், மனம் உடைந்து கிடக்கக் காண்கிறோம்! தொழிலாளர்கள் மனம் உடைந்து போயுள்ளனர்! விவசாயத் தொழிலாளர்கள் மனம் உடைந்துக் கிடக்கின்றனர்! விலைகளின் ஏற்றத்தால் சுமை அதிகமாகி, நடுத்தரக் குடும்பத்தினர் மனம் உடைந்துபோயுள்ளனர்! பிற்படுத்தப்பட்ட மக்கள் நிச்சயமாகவே மனம் உடைந்து காணப்படுகின்றனர்! பேராசிரியர் லால் அவர்கள், பழங்குடி மக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களும் அப்படியே! (மனம் உடைந்த நிலையிலேயே)! அவர்கள் எங்கெல்லாம் உலவலாம் (உரிமையோடு) என்பதைக் கண்டறிய ஒரு குழு, நாட்டிலே சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இப்போதும் சில கிராமங்களில் சில தெருக்களில், இம்சைக்கு ஆளாகாமல் பழங்குடிமக்கள் உலவவில்லை என்று பத்திரிக்கைகளில் அந்தக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சர்க்கார் அலுவலகத்தினர், மனம் உடைந்து கிடக்கின்றனர்! பஞ்சப்படி உயர்வு தரப்படுகிறபோதெல்லாம் விலை முன்னதாகவே உயர்ந்து போயிருக்கிறது! விலைவாசி உயர்வுக்கும் பஞ்சப்படி உயர்வுக்கும் இடையே நடைபெற்றபடி இருக்கும் வேட்டை ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டிருப்பது அவர்களை மனம் உடைந்த நிலைபெறச் செய்துவிடுகிறது! நமது விஞ்ஞானிகள் மனம் உடைந்துள்ளனர்-எங்கு (விஞ்ஞான)க் கல்வி கற்றார்களோ, அந்த நாட்டுக்கே போய்விட விரும்புகிறார்கள்! நமது தொழில் கருவிமுறை நிபுணர்கள் மனமுடைந்து கிடக்கின்றனர். தொழிலமைப்புத் துறையில் தமக்கு உரித்தான இடமளிக்கப்படவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். கிளர்ச்சிக் கனல் மடிந்துவிடவில்லை! துணைத் தலைவர் அவர்களே! இதனையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா நாங்கள் இந்தி மொழி பேசாத மக்கள் மனம் உடைந்து போயிருக்கிறோம்! விவாதத்தை (குடியரசுத் தலைவர் பேருரைக்கு நன்றி கூறும் விவாதத்தை)த் துவக்கிவைத்த என்னுடைய நண்பர் தாம் இந்தி பேசாத பகுதியினர் என்றபோதிலும் இந்தி மொழியினில் துணிந்து பேசுவதாகச் சொன்னார். அது, இந்தி பேசாத மக்களுடைய மனப்போக்கை (விளக்கி)க் காட்டுகிறது! இந்தி பேசும் மக்களே பெரும் அளவில் கூடியுள்ள ஒரு அவையில், இந்தி மொழிக்காரரல்லாத (தாய் மொழியாகக் கொள்ளாத) ஒருவர் இந்தியில் பேசவேண்டுமென்றால், துணிவு வேண்டும் ஏன்? அவருக்குத் தெரியும் அது (இந்தி) தம்முடைய (தாய்) மொழி அல்ல என்று! எவ்வளவு நேர்த்தியாகப் பேசினாலும் இந்தி மொழியாளர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் (இந்தி மொழியாளரல்லாதாரின்) பேச்சின் நடை அமைப்பு ஆகியவற்றிலே குறை கண்டுப்பிடிப்பார்கள் என்பது தெரிகிறது. பேராசிரியர் லால்:- இல்லை, நாங்கள் பாராட்டினோம். அண்ணா:- பேராசிரியர் லால் கூறுகிறார். தாம் பாராட்டியதாக! நாம் எப்போதும் அபூர்வ வேலைப்பாடுள்ள பொருளைப் பாராட்டுகிறோம்! ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால், என்னுடைய நண்பர் தமது பேச்சை, நான் துணிந்து இந்தியில் பேசுகிறேன் என்றுதான் துவக்கவேண்டி வந்தது அதைக் கூறுகிறேன். துணைத் தலைவர் அவர்ளே! தங்களுக்கும், தங்கள் மூலமாக இந்தச் சர்க்காருக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் கனல் அடியோடு மடிந்துபோய் விடவில்லை என்று! இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்பாக மாணவர்கள், அந்நியத் தாக்குதலில் நாடு சிக்குண்டதைக் கண்டபோது கிளர்ச்சியை ஒத்திபோட்டு வைத்தனர். மொழி சம்பந்தமாக இந்தச் சர்க்கார் கொண்டுள்ள கொள்கை, மேற்கொண்டுள்ள வேலை முறை ஆகியவற்றிலே திருப்தி ஏற்பட்டதால் அல்ல. ஆனால் நாட்டுப் பாதுகாப்புக்கு முதல் இடம் தரவேண்டும் என்பதற்காக! சின்னாட்களுக்கு முன்புதான், சென்னையில், மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது, அவர்கள் திட்டவட்டமாகத் தமது உறுதியைத் தெரிவித்திருக்கிறார்கள் இப்போது மேற்கொள்ளப் பட்டுள்ள மொழிக் கொள்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை என்பதே! இந்தி ஏகாதிபத்தியம் ஏற்படவிடப் போவதில்லை! எங்கெல்லாம் இந்த மொழிப் பிரச்சினை எழுந்திடினும்-நல்ல புத்திமதி கூறிடவும், நட்புணர்ச்சியுடன் யோசனைகளை நல்கிடவும், தோழமையுடன் கலந்து பேசிடவும் பலர் முற்படுவதை நான் காண்கின்றேன். என்னையும் என்போன்ற எண்ணம் கொண்டவர்களையும் கேட்கின்றனர்-இந்தியை ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? எந்த மொழி மீதுதான் எதற்காக எதிர்ப்புக் காட்டவேண்டும்? என்றெல்லாம்! தங்கள் மூலமாக, துணைத் தலைவர் அவர்களே! இந்த அவைக்குக் கூற விரும்புகிறேன்-இந்தி மொழியாளர் அல்லாதாருக்கு சிறப்பாகத் தமிழக மக்களுக்கு, தக்க ஆதாரத்தின் மீது (இந்தி மொழி பற்றிய) அச்சம் ஏற்பட்டிருக்கிறது! வீண் பீதி அல்ல அது! இந்தியச் சர்க்காரில் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டுவரும் வலிப்பும் துடிப்பும் கொண்ட நடவடிக்கைகள், எமது அச்சத்தை மேலும் வளர்த்துவிடுகின்றன! ஆகவே, அது, வீணான அச்சம் தேவையற்ற அச்சம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதிலே பயன் இல்லை! ஒரு மொழிக்கு ஏற்றம் ஆதிக்கம் இந்தி ஏகாதிபத்தியம் அமைக்கத் திட்டமிட்ட செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நாங்கள் அஞ்சுகிறோம். அது நடைபெறப்போவதில்லை! தென்னகம் வங்கத்தையும் சேர்த்துக்கொள்கிறேன். நமது நாட்டில் எந்தவிதமான மொழி ஏகாதிபத்தியமும் ஏற்பட விடப்போவதில்லை! நாட்டுப்பற்று பல்வேறு வகையான பற்றுகளின் கூட்டு! மெய்யுணர்வோடும் பொறுப்புடனும் நீங்கள் தேசீய ஒருமைப் பாடு பற்றிப் பேசுவதனால், தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள் நாட்டை மொழிமூலமாகத்தான் இணைக்கமுடியும் என்று கருதாதீர்கள்! அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டைப் பாதுகாத்திட இந்திய சர்க்காருக்கு ஆதரவு தந்திட வேண்டுமென்று இந்திமொழியில் பேசியா எனக்குத் தெரிவித்தீர்கள்? இல்லை! கிழக்கு-மேற்கு முனைகளில் உண்மையிலேயே ஆபத்து இருக்கிறது என்பதை நான் இந்தி மொழிப் பத்திரிக்கைகளைப் படித்துப் பார்த்தா தெரிந்து கொண்டேன்? இல்லவே இல்லை! நாட்டுப் பற்று என்பது, பல்வேறுவகையான பற்றுக்களின் கூட்டு! மொழிப்பற்று என்பது, மற்ற எந்தப் பற்றைக் காட்டிலும் மெய்யுணர்வு அற்றது அல்ல எழுச்சிக் குறைவானது அல்ல! கற்றறிவாளரிடமும் மனக்குமுறல்! ஒரு சனநாயக நாட்டில் நாகரிகமறிந்த ஒரு சனநாயகவாதியின் கடமை, பல்வேறு பற்றுகளில் (எது முதல் எது இரண்டாவது என்பது போன்ற) வரிசை முறை காண்பதுதான்! எந்த ஒரு பற்றும் மற்ற ஒரு பற்றுக்கு மாற்று ஆகிவிடாது (ஈடாகிவிடாது) இதனால்தான் (இதனை உணராததால்தான்), சிலர் எங்கள் மீது குறைகாண்கின்றனர்-நாங்கள், தேவையற்று வீணுக்கு-இந்த மொழிப் பிரச்சனைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் எந்கின்றனர். இங்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்த மொழிப்பிரச்சினை வளர்ச்சிபெற்ற சனநாயக நாடுகளில், சாமானியர்களிடம் மட்டுமல்ல-கற்ற அறிவாளிரிடமும் மனக்குமுறலை மூட்டிக் கொண்டிருந“திருக்கிறது! தவறான வாதத்திற்குத் தயவு செய்து செல்லாதீர்! கனடா நாட்டின் மொழிப் பிரச்சினை சிக்கல் அனைவரும் கூர்ந்து கவனிக்கத்தக்க ந‘லை பெற்றதாகும். ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களால் அமைக்கப்பட்ட நாடு கனடா. ஆங்கில மொழிபேசும் கனடியரும் உள்ளனர்-பிரெஞ்சு மொழி பேசும் கனடியரும் உள்ளனர். பிரெஞ்சு மொழி பேசுவோர் ஒரு குறிப்பிட்ட பகுதியான கியுபெக்கில் உள்ளனர். மொத்தத்தில் பிரெஞ்சு மொழி பேசுவோர் சிறுபான்மையினராக உள்ளனர். கனடாவில் ஒருமைப்பாடு காண விரும்பியதால் கனடா அரசாங்கம், சட்டவழியில் கனடாவை இருமொழி அரசு ஆக்கி பிரெஞ்சு, ஆங்கிலம் எனும் இரு மொழிகளுக்கும் சரிசமமான உரிமை கொடுத்தனர். எனினும், இரு மொழித் திட்டத்தை அமுலாக்குவதில், ஆங்கில மொழி பேசுவோர் மிகுதியான பலனைப் பெற்றனர். (உயர்வு) ஏணியின் உச்சிப்படியில் ஏறினர்! இப்போது கியுபெக்கில் உள்ள பிரெஞ்சு மொழியாளர்கள் (ஆங்கில) மொழி ஆதிபத்தியத்தை எதிர்த்து ஏன் என்று கேட்கவும், கண்டிக்கவும், புரட்சி செய்யவும் முற்பட்டு நிற்கின்றனர். ஆகவே, தேவையற்ற பிரச்சினையைத் தமிழர்கள் தேடுகிறார்கள்-கிளறுகிறார்கள் என்னவோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்ற தவறான வாதத்திற்குத் தயவு செய்து செல்லாதீர்கள் என்று கூறிக் கொள்கிறேன். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நாங்கள்: தமிழர்களாகிய நாங்கள் மிக அமைதியாக இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் மிக மிக உறுதி கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்போதும் அற்ப சொற்பமான விஷயங்களில் ஈடுபடவில்லை. ஏனெனில், நாங்கள் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்! ஆகவேதான், தமிழகத்தில் மொழிப் பிரச்சினை, அரசியல் கட்சித் தொடர்புகளை உடைத்தெறிந்து கொண்டு வருகிறது! இன்று மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி வழக்கறிஞர் சங்கங்களைச் சார்ந்தோரும் முன் வந்துள்ளனர். இந்தி மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற‘ட கண்டித்திட! பிரச்சினை மடியவில்லை-மறுபரிசீலனை தேவை: இந்தச் சர்க்கார், தனது மொழிக் கொள்கையைக் குழப்பமற்ற விதத்தில் தெளிவுபடுத்தித் தீரவேண்டும். இப்போதே காலங்கடந்து விட்ட நிலை. பரபரப்புமிக்க கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இன்றையத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள், சென்னைக்கு வந்திருந்தார் என்பது என் நினைவில் இருக்கிறது. அப்போது அவர்கள், பத்திரிகை நிருபர்களிடம், சென்னைக்கு வந்து ந‘லைமையை கண்டபிறகு, மொழிப் பிரச்சினை பற்றிப் புதிய சிந்தனை, (மறு பரிசீலனை) தேவை என்பதை நான் உணருகிறேன் எனக்கூறினார்கள். ஆனால் இந்தப் புதிய சிந்தனை, அவர்களை எங்கே கொண்டு சென்றிருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை! தலைமையமைச்சராக இல்லாதிருந்தபோதே, மறு பரிசீலனை தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால், இந்த நாட்டு மக்களுடைய வாழ்வை நிர்ணயிக்கும் பாதுகாவலராக அவர்கள் ஆகியிருக்கும் இப்போது, அந்த மறுபரிசீலனை அதிகமாகத் தேவைப்படுகிறது மறுபரிசீலனை செய்திடவும், திருத்தி அமைத்திடவும், நொறுங்கிக் கிடக்கும் தமிழகத்தாரின் நம்பிக்கையினைத் திருப்பித் தட்டி எழுப்பிடவும் அவர்கள் முனைந்திட வேண்டும். எனவேதான், குடியரசுத் தலைவரின் பேருரையில் மொழிப் பிரச்சினை பற்றி ஏதும் குறிப்பிடாமலிருப்பது பற்றி நான் மிகுந்த வருத்தப்பட்டுக் கொண்டேன். ஆனால் அதிலே (பேருரையில்) குறிப்பிடாததாலேயே, நாங்கள் அதனை (மொழிப் பிரச்சனையை) நினைவிலே வைத்துக் கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டு விடாதீர்கள்! கிளர்ச்சிகள் நடைபெறவில்லை என்பதாலேயே, மொழிப் பிரச்சினை மடிந்துபோய் விட்டது என்று தயவு செய்து எண்ணிக் கொண்டு விடாதீர்கள்! கிளர்ச்சி என்பது வேறு-வன்முறை என்பது வேறொன்று! கிளர்ச்சி என்று நான் குறிப்பிடுவது, வன்முறை (பலாத்கார)க் கிளர்ச்சியைக் கூறவில்லை. ஏனெனில், வன்முறை என்பது, பின் விளைவுதான்! எவரும் வன்முறைக் கிளர்ச்சியைத் துவக்குவதில்லை. வன்முறைக் கிளர்ச்சி ஒரே ஒரு முறைதான் திட்டமிட்டு நடத்தப்படும் அதுதான் கடைசி முறையாகவும் இருக்கும் அதுதான் புரட்சியாகும்! ஆனால், எந்தக் கிளர்ச்சியின் போதும் சமூக விரோத சக்திகள் நுழைந்துவிடும் போது, கிளர்ச்சியைத் துவக்கினவர்களே வெட்கப்படும்படியான காரியங்கள் நடைபெற்றுவிடுகின்றன. ஆகவே நான், கிளர்ச்சி என்று கூறும்போது, வன்முறைக் கிளர்ச்சியைக் குறிப்பிடவில்லை. மனம் உடைந்த நிலையில் ஒத்துழைப்புக்கு இடமெங்கே? நான் இந்தச் சர்க்காருக்குச் சொல்லிக் கொள்வேன்-நாங்கள் மனம் உடைந்து இருக்கிறோம்-இன்றையச் சர்க்காருடைய மொழிக் கொள்கையாலும் நடவடிக்கைகளாலும் இந்தி மொழி பேசாத மக்கள் மனம் உடைந்துள்ளனர்! நான் கூறியபடி, துணைத் தலைவர் அவர்களே! எங்கு பார்த்தாலும் மனம் உடைந்த நிலை இருந்து வருகிறது. இவ்வளவு பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டான பிறகு-இவ்வளவு நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த பிறகு மக்களிடம் உள்ள தவிப்பு உணர்ச்சியை உங்களால் (சர்க்காரால்) போக்க முடியவில்லை என்றால், குடியரசுத் தலைவர் விரும்புகிறாரே- நாங்கள் ஒத்துழைக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும் என்று அது எப்படி முடியும்! குடியரசுத் தலைவர் அவர்கள், அரசியல் கட்சிகளுக்குள்ளே ஒத்துழைப்பு வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் கட்சியல்லாத அமைப்புகளுக்கும் இடையே ஒத்துழைப்பு வேண்டும். நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒத்துழைப்பு உணர்ச்சி எழவேண்டும் என்று விரும்புகிறார் எனத் தெரிகிறது. நான் அந்த விருப்பத்தை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களை இந்தப் பிரச்சனைபற்றி இதயசுத்தியுடன் எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் (ஆளுங்கட்சியினர்) மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு உணர்ச்சி காட்டிடும் திறனுடன் இருக்கிறார்களா? சான்றொன்று தருகிறோம்-சீர்தூக்கிப் பாருங்கள்! துணைத் தலைவர் அவர்களே! சான்றொன்று கூறட்டுமா? இந்த அவை அறியும்-தி.மு.கழகத்தினராகிய நாங்கள் சென்னை மாநகராட்சியை நடத்திச் செல்கிறோம் என்பதை! கடந்த ஆறு ஆண்டுகளாகச் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம். ஆயினும் நாங்கள், அரசியல் பூசல்களைக் கிளப்பிவிடத் தக்க அரசியல் அற்பத்தனத்தை மேற்கொண்டிடவில்லை! தி.மு.கழகம், சென்னை மாநகராட்சியில் ஆட்சிசெய்துவரும் இந்த நாட்களிலேதான் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசருக்குச் சிலை அமைத்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றோர். அவையில் (மக்கள் சார்பில்) புகழிடம் பெற்று வீற்றிருந்த காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களுக்கு சிலை அமைத்தோம். இந்தியாவிலேயே இதுதான் முதலாவது என்று எண்ணுகிறேன். மறைந்த பெரியவர் லால்பகதூர் சாஸ்திரிக்குச் சிலை அமைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதனை அரசியல் அற்பத்தனம் என்று கருதுகிறீர்களா? இல்லை! ஆனால் ஆளுங்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழகத்தின் உள்ளே நெடுந்தொலைவிலுள்ள ஒரு நகரத்தில் ஒரு பேருந்து நிலையம் (பஸ் ஸ்டாண்டு) திறக்கப்படுகிறது. அதற்கு தி.மு.க. தலைவர் ஒருவரின் பெயரிடப்படுகிறது. துரதிருஷ்டவசமாக என் பெயர். உடனே தமிழக காங்கிரசு கொதித்து எழுகிறது. தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. பெயர்ப் பலகை அப்புறப் படுத்தப்படுகிறது. கைச்சாத்து (இரசீது) புத்தகங்கள் அச்சிடப்பட்டவை திரும்பப் பெறப்படுகின்றன. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடிஅரசுத் தலைவர் அவர்களோ, ஒத்துழைப்பு உணர்ச்சி வழங்கும்படி எங்களைக் கேட்டுக் கொள்கிறார். ஒத்துழைப்பு உணர்ச்சியை உருவாக்குகிறதா இந்த ஆட்சி? வெற்றி உலாவின்போது, காலஞ்சென்ற லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், சென்னை வந்திருந்தார். சென்னைக் கடற்கரைத் திடலில் அவர் பேருரையாற்றியபோது, அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசர், அங்கு, அவர் உடன் இருந்தார். அகில இந்திய காங்கிரசுத் தலைவர் காமராசருடைய பெயரைச் சொல்லுவதால், அவரிடம் எனக்குப் பகை உணர்ச்சி என்று கருதிக் கொள்ளாதீர்கள். நான் அவருடைய சிறந்த நண்பர்களிலே ஒருவன்-அவர் மேடைமீது இருந்தார். அதற்காக எவரும் குறைபட்டுக் கொள்ளவில்லை! ஆனால், ஒத்துழைப்பு உணர்ச்சி என்பது செயல்படுத்தப்பட வேண்டுமானால், காங்கிரசுக் கட்சியும் தமிழக அரசும், என் கட்சியனரான சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரை அழைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா? அழைக்கப் படவில்லை. தமிழகச் சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தபோது முதலமைச்சர், நாங்கள் காமராசரைத் தனி அழைப்புக் கொடுத்து அழைக்கவில்லை. பலருக்கு அழைப்புக்கள் அனுப்பியிருந்தோம். காமராசர் வந்திருந்தார் என்று பதிலளித்தார். துணைத் தலைவர் அவர்களே! எங்கள் மீது கரி பூசுவதாகக் கொண்டு தமிழக முதலமைச்சர், குழைத்த தார்கொண்டு, அகில இந்தியக் காங்கிரசுத் தலைவருடைய நல்ல பெயர் மீது அப்பீவிட்டிருக்கிறார்! தனியான அழைப்பு ஏதும் இல்லை. பலருக்கு அழைப்பு அனுப்பினோம், அவர் வந்திருந்தார் என்கிறார். திருமதி லலிதா இராசகோபாலன்-ஒரு ஒழுங்குப்ப பிரச்சினை இதற்கும், குடியரசுத் தலைவர் பேருரைக்கும் என்ன சம்பந்தம். துணைத் தலைவர்-அவர் அதுபற்றிக் கூறலாம், நாம் அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலெந்த ஒழுங்குப் பிரச்சனையும் எழவில்லை. ஆமாம், நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்.எம்.அன்வர்-அவர், முழு நேரம் எடுத்துக் கொள்ளட்டும். பி.என்.சாப்ரூ-ஆமாம், நாங்கள் அவர் பேச்சைக் கேட்க விரும்புகிறோம். அண்ணா- அதனால்தான், ஒத்துழைப்பு உணர்ச்சி என்பதைச் செயல்படுத்துவது குறித்து எனக்குச் சந்தேகம் எழுந்தது. ஒத்துழைப்பு உணர்ச்சி செயல்படுத்தப்பட வேண்டுமானால், ஆளுங்கட்சியினரின் மனப்போக்கு முழுவதுமாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அதற்குத் தயாராக இருந்தால், இந்த வரிசையில் உள்ள நாங்கள், ஆளுங்கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்-தீமையை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைக்கிறோம்-எந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவது என்பதிலே ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிடுமானால்! எந்த அடிப்படை மீது நடைமுறை அமைக்கப்பட்டிருக்கிறது? நாம், நமது இலட்சியத்தைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள், இலட்சியம் தெளிவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அடிக்கடி ஆசையுடன் கூறிக் கொள்கிறார்கள்-நாங்கள் தத்துவார்த்தவாதிகள் அல்லர். நாங்கள் நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுபவர்களாக இருக்கப் போகிறோம் என்று! துணைத் தலைவர் அவர்களே! நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுவது என்றால், இலட்சியத்தை இளைக்கச் செய்துவிடுவது அல்லது கேவலமாக்கிவிடுவது என்பதல்ல, நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்கு நடைமுறைக்கேற்பச் செயல்படுவது ஒரு வழியாகக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த நடைமுறை, எந்த அடிப்படை மீது அமைக்கப்பட்டிருக்கிறது? நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுவதும் ஒரு இலட்சியத்தின் மீதுதான் கட்டப்பட வேண்டும். அப்படியானால், உங்கள் இலட்சியம் என்ன? சமதர்மம், அது தெரியாதா உனக்கு? அப்படித்தான் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆமாம், ஆமாம், உங்கள் இலட்சியம் சமதர்மம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஏன் அது-பேராசிரியர் லால் போன்ற பேராசிரியர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த சமதர்மத்திலிருந்து அவ்வளவு மாறுபட்டிருக்கிறது? கலப்படப் பொருளாதாரம்தான் சமதர்மத் தத்துவமா? அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தனர்-சமதர்மம் என்றால், அதிலே லாப நோக்கம் களைந்தெறியப்பட்டு, தொண்டு நோக்கம் தலையாய இடம் பெற்றிருக்கும் என்பதாக! (தொழிலில்) இலாப நோக்கம் குறைக்கப்பட்டு தொண்டு நோக்கம் உயர்த்தப்பட்டிருப்பினுங்கூட, முழு அளவு சமதர்மத்தைப் பெற்றுவிட முடியாது. ஆனால் சமதர்ம பாதையில் செல்கிறோம் என்று ஏற்படும். ஆனால் நாம் இங்கு என்ன காண்கிறோம்? ஆசையுடன் கூறிக் கொள்கிறார்களே-கலப்பட பொருளாதாரம் என்று! அதுதான் அவர்களிடம் இருக்கிறது. ஒரு முறைக்கு மேல் நான் இந்த அவையிலும் வெளியிலேயும் கூறியிருக்கிறேன். அது கலப்புப் பொருளாதாரமல்ல. கலப்படப் பொருளாதாரம் என்று. முதலாளித்துவ முறையில் உள்ள கெட்டதை எடுத்துக் கொள்கிறீர்கள். சமதர்மத்தில் உள்ள நல்லவற்றை விட்டு விடுகிறீர்கள். ஒரு விசித்திரமான கலப்படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதைத்தான் உருவாக்கி இருக்கிறீர்கள்! தொல்லைகள் உள்ள நிலைமைதான் தெளிவான இலட்சியமா? பதினெட்டு ஆண்டுகள் தடுத்து நிறுத்துவாரற்ற விதமான அதிகாரத்தை நடத்திக் கொண்டிருந்துவிட்டு, கனவிலே கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவு தொகையை, கோடி கோடியான தொகையை செலவிட்டான பிறகு, நீங்கள் இந்த நாட்டை எந்த நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் என்றால்-கனம் உறுப்பினர் ஒருவர் எழுந்திருந“து, எனக்கு குடிநீர் வேண்டும் என்று கேட்கிறாரே-அந்த நிலைமைக்கு! ஆனால் நமது இலட்சியம் தெளிவாக இருக்கிறது-நமது நோக்கம் இதோ இருக்கிறது. ஒன்றே ஒன்றுதான் இங்கு, குடிநீர் தேவை என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! குடியிருக்க வீடு வேண்டும் என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! உணவு வேண்டும் என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! வேலை கொடு என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! நீதி வழங்குக என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! இவைகளிலே ஒன்றைக்கூட நாம் தந்திடவில்லை! ஆனால் நமது நோக்கம் தெளிவானது-இலட்சியம் அதோ இருக்கிறது! பார்வை பழுதானதன் விளைவா இது? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னாலே மோசஸ் (கிருத்துவ மத நூலில் கூறப்படும் வழிகாட்டியான மோசஸ் போன்ற நிலையில் தன்னை நினைத்துக் கொண்ட காங்கிரசு அரசு) கூறினார். நாட்டு மக்களை மகிழ்ச்சிபுரிக்கு அழைத்துச் செல்வதாக! குழந்தைகளே! என் பின்னே வாருங்கள்-உங்களை நான் மகிழ்ச்சிபுரி அழைத்துச் செல்கிறேன் என்றார் மோசஸ். மக்கள் கேள்வி எழுப்பாமல், நம்பிக்கையுடன் பற்றுடன் தயக்கமின்றி பின்தொடர்ந்தனர். அவர்களை (மக்களை) நீங்கள் (சர்க்கார்) எங்கே அழைத்துக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்? பார்வையே பழுதுபட்டுப் போயிருப்பதால், கருப்பு சிவப்பாகவும் சிவப்பு கருப்பாகவும் தெரியக்கூடிய ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்! வேற்றுமை ஒழிந்ததா? வேதனை குறைந்ததா? எவ்வளவு (உணவு) உற்பத்தி ஆகிறது என்பது உங்களுக்குத் தெரியாது! உற்பத்தியான உணவுப் பொருள் எங்கே போய்விடுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது! ஐந்தாண்டுத் திட்டங்களால் ஏற்பட்ட பலன்கள் யாவை என்பதுகூட நமக்குத் தெரியாது! நான் தக்க ஆதாரத்துடன் இதைக் கூறுகிறேன். இதோ ஒரு கண்டனக் குறிப்பு. சோஷலிச (சமதர்ம) இலட்சியத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு பதினொன்று ஆன பிறகும், ஏழை பணக்காரன் பேதம் ஒழிவதுகூடக் கிடக்கட்டும்-அந்தப் பேதம் குறையக் கூடக் காணோம்! ஒரு புறத்தில் சீமான்கள் கூட்டம், போகபோக்கியமாகச் செலவிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! மற்றோர்புறத்திலோ, எளியோர்கள், வேதனையிலும் வறுமையிலும் தள்ளப்பட்டுத் தவிப்பதைப் பார்க்கிறோம்! நாளாக ஆக உற்பத்தித்துறை, சாமானியனுடைய அடிப்படைத் தேவைப் பொருள் உற்பத்தியில் நாட்டம் செலுத்தாமல், போகபோக்கியப் பொருள் உற்பத்தியிலேயே ஈடுபட்டிருக்கக் காண்கிறோம்! வல்லாளன் வாயிலிருந்தே வந்த வார்த்தையாயிற்றே! இந்த நாட்டு மக்களை இந்தச் சர்க்கார் அழைத்துச் சென்றுள்ள தரம் இதுதான்! இந்தக் கண்டனம், பொருளாதாரத் துறை வல்லுநர் கூறியது அல்ல, பொருளாதாரத்துறை வித்தகருடையதாக இருப்பின், வெறும் தத்துவார்த்தப் பேச்சு என்று கூறிக் கண்டனத்தை ஒதுக்கித் தள்ளிவிடுவீர்கள். இந்த பக்கமுள்ள எங்களிலே எவரேனும் இதனைக் கூறியிருந்திருப்பின், ஓ! அவர்கள் அதிருப்தியாளர்கள். ஆகவே இதையெல்லாம் சொல்லுகிறார்கள் என்று கூறிவிடுவீர்கள். ஆனால் இது (கண்டனம்) அகில இந்திய காங்கிரசுத் தலைவர் காமராசரிடமிருந்து வருகிறது…. வாஜ்பாய்-வல்லாளன் வாயிலிருந்தே வந்திருக்கிறது. அண்ணா-என் மதிப்புமிக்க நண்பர் வாஜ்பாய், ஒரு வார்த்தையைத் தருகிறார். நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை. நான் கூறுவேன். எந“த வாய்க்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஊட்டி வந்தார்களோ அரசியல் சம்பந்தமாகக் கூறுகிறேன். உடல்கூறு முறையின்படி அல்ல அந்த வாயிலிருந்து வந்திருக்கிறது (கண்டனம்) என்று கூறுவேன். அகில இந்திய காங்கிரசுத் தலைவர், தமது ஜெய்ப்பூர் பேச்சொன்றில் இதுபோலக் கூறியிருக்கிறார். என்றாலும், உங்கள் நோக்கங்கள், அனைவரும் அறிந்தவையே என்கிறீர்கள்! உங்கள் சாதனைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதே! எப்படி உங்கள் நோக்கங்களைக் கேட்டு உற்சாகம் பெறமுடியும். பயன்படவேண்டிய பணம் எப்படிப் பாழாகிறது? உண்மையான நோக்கமும், உண்மையான இலட்சியமும் இருந்திருக்குமானால், எங்களை (நாட்டு மக்களை)ப் பாதி வழியாவது அழைத்துச் சென்றிருப்பீர்கள் அதனைச் செய்தீர்களா? ஒரு சிலரிடம் இதோ மற்றோர் கண்டனம். செல்வம் குவிந்து விடுவதுதான், பணவீக்கத்துக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இதைப் பேராசிரியர் லால் கூறியிருந்தால், அமைச்சர் அவையினர், இது உங்களுக்குத் தோன்றிய கருத்து என்று பதிலளித்து விட்டிருப்பர்! ஆனால் இது, எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்து அல்ல! பணம் படைத்தவர்கள் அட்டகாசமாகச் செலவு செய்வது மட்டுமன்றி, பணத்தைக் குவித்து மறைத்து வைக்கும் போக்கையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் விலைவாசி ஏறிவிடுகிறது! எப்படி என்றால் உற்பத்திப் பெருக்கத்துக்குப் பயன்படவேண்டிய பணம், கெடுக்கும் சக்திக்குப் பயன்பட்டுவிடுகிற காரணத்தால்! சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோமா? துணைத்தலைவர் அவர்களே! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு (கல்லூரி) வகுப்பு அறையில் என்னுடைய பொருளாதாரத் துறைப்பேராசிரியர், இதையேதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். பணத்தை, உற்பத்திச் சாதனத்துக்காகப் பயன்படுத்தாவிட்டால் பணவீக்கம் ஏற்படும் என்று! ஆனால் அதையேதான், பதினோராண்டுகால சமதர்மக் கோலத்துக்குப் பிறகும் இங்கு கூறப்படுகிறது. இதனை கனம் குல்ஜாரிலால்நந்தா கூறியபோது அவர்தான் இவ்விதம் கூறினவர் ஒரு குறுக்கீடு கிளம்பிற்று, கனம் உறுப்பினர் ஒருவர் திரு.மாளவியா நாம் சரியான பாதையிலே சென்று கொண்டிருக்கிறோமா? என்றோர் கேள்வி கேட்டார். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்கள்! நாம் சரியான பாதையிலே சென்றுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி! அதற்குத் தரப்பட்ட பதில் துணைத் தலைவர் அவர்களே-அதைவிட மிகுந்த விசித்திரமானது, இப்போது நாம் சென்று கொண்டிருக்கும் வேகத்திலே போய்க் கொண்டிருந்தால், நாம் எதையும் சாதிக்க முடியாது என்று பதில் அளிக்கப்பட்டது. கேள்வி:பாதை சரியானதுதானா என்பது பற்றி! பதிலோ வேகத்தைப் பற்றி! நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறோமா என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். செல்கிற பாதை சரியானது என்றால், நான் வேகத்தைப் பற்றி அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டேன். ஐந்து வருடத்திலோ… பதினைந்து வருடத்திலோ… இருபத்தைந்து வருடத்திலோ (இலட்சியத்துக்கு) போய்ச் சேரலாம். எந்த நிலையிலே இருக்கிறது இன்று காங்கிரசுக் கட்சி? கண்டனம் என்று வார்த்தையைப் பயன்படுத்தக்கூட நான் அஞ்சுகிறேன். ஆனால் வேறு வார்த்தை இல்லை! என் கண்டனம் என்னவென்றால், நீங்கள் (சர்க்கார்) சரியான பாதையில் சென்று கொண்டில்லை என்பதுதான். ஏன் அவ்விதம் என்றால், சர்க்காரை நடத்திச் செல்லும் கட்சி இலட்சிய அடிப்படையில் இணைந்துள்ளவர்களைக் கொண்டதாக இல்லை. அங்கு (காங்கிரசுக் கட்சியில்) நாம், சுதந்திரக் கட்சியினரைக் காண்கிறோம். பிரஜா சோஷலிஸ்டுகளைப் (போக்கினர்) களைப் பார்க்கின்றோம். கம்யூனிஸ்ட்டுகளைப் பார்க்கின்றோம். சம்யுத்த சோசலிஸ்டுகளைப் பார்க்கின்றோம் துரதிருஷ்டவசமாக என் கட்சியினர் எவரும் அங்கு இல்லை! அந்த (காங்கிரசு)க் கட்சி ஒன்றுபடுத்தப்பட்ட நிலையில் இல்லை அவ்வளவு குழம்பாக இருக்கிறது. உள்ளே எதுவும் புகலாம் எதுவும் வெளியே வந்துவிடலாம், அந்த நிலையில் (காங்கிரசு) கட்சி இருக்கிறது! அதனால்தான் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், நீங்கள் நாட்டை இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை! நோக்கங்களை நிறைவேற்றிவைக்க இயலவில்லை. ஒளிமயம் கண்டு மயங்கிக் கிடக்கிறீர்கள்-அடித்தளத்திலே உள்ள வெடிப்பைக் கண்டுபிடிக்க மறந்து விட்டீர்கள்! மக்கள் சரியாக இருக்கிறார்கள். அடங்கி ஒடுங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதிலே நீங்கள் மகிழ்ச்சி பெறக்கூடும். பிரெஞ்சு புரட்சியின்போது வரலாறு படித்த மாணவர் அறிவர்-புரட்சி வெடித்துக் கிளம்பும் நேரத்திற்கு முன்புவரையில், எல்லாம் சரியாக (அமைதியாக) த்தான் இருந்தது-பாரிஸ் பட்டணத்தில் அரண்மனை போன்ற கட்டிடங்கள் இருந்தன. காவியக் கழகங்கள் இருந்தன. அங்கு சிற்பக் கட்டிடக் கலை நேர்த்திமிக்க மாடங்கள் கூடங்கள் இருந்தன. அவைகளை இலண்டனிலுள்ளவர்கள் வந்து கண்டனர். அதுபோன்ற கட்டிடம் அமைத்திடும் வழி கண்டிட கவிஞர்கள், நாடக இசைப்புலவர்கள் நடன நாரிமணிகள் இருந்தனர். எல்லாம் கண்கவர் வனப்புடன் இருந்தன. புரட்சி கிளம்பி எங்கும் செந்நிறக் குருதி குபுகுபுவென பீறிட்டுக் கிளம்பும் வரையில்! ஏன் அப்படி என்றால், அடித்தளத்தில் வெடிப்பு இருந்தது. அதனைக் கண்டறிய முடியாமற் போய்விட்டது! கலசத்தின் ஒளிமயம் கண்டு மயங்கிக் கிடக்கிறீர்கள் அடித்தளத்திலே வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க மறுந்துவிட்டீர்கள்! துணைததலைவர் அவர்களே! அந்த வெடிப்புதான் மக்களைக் கசக்கிப் பிழியும் வறுமை, ஆபத்தூட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டுவரும் வேலையில்லாத் திண்டாட்டம், நான் துவக்கத்திலே குறிப்பிட்டேனே மனம் முறிந்து போயுள்ள நிலை அது! என்றாலும், நீங்கள் நோக்கங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! காலஞ்சென்ற பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி, விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள பெருந்திரளான மக்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாட்டாளிகள் விலைவாசி ஏற்றத்தாலே நலிந்து கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினர் என்பவர்களுக்கு நிம்மதி கிடைத்திடச் செய்துவதுதான், சமதர்மம் என்று என் மனதிற்குத் தோன்றுகிறது என்று கூறினார். நீங்கள், சமூகத்திலுள்ள இத்தனைப் பகுதியினரையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டிருக்கிறீர்கள், என்றாலும் குடியரசுத் தலைவர், நோக்கம் தெளிவாக இருக்கிறது, இலட்சியம் அதோ இருக்கிறது என்று கூறுகிறார்! ஆகவேதான், மெய்யாகவே அந்த நோக்கம் இருக்கிறதா உண்மையாகவே அந்த இலட்சியம் இருக்கிறதா? என்பதைக் கண்டு பிடித்திட வேண்டும் என்று நான் கூறுகிறேன். சாதனைப் பட்டியலைக் காட்டியா காங்கிரசு வெற்றிபெற்றது? நான், எனது மாநிலத்தில் காங்கிரசு, (பிற கட்சிகளுடன்) ஒத்துழைப்பு உணர்ச்சியைக் காட்டுவதில்லை என்று சொன்ன போது துணைத் தலைவர் அவர்களே! குறுக்கீடுகள் இருந்தன. இதோ இப்போது நான் கூற்போவதிலே மேலும் அதிகமான குறுக்கீடுகள் இருந்து தீரும். இப்போதைய ஆளுங்கட்சி, தேர்தல் வெற்றியின் பேரில் தன் வலிவினை அமைத்திருக்கிறது. அந்தத் தேர்தல் வெற்றியோ, சாதனைப் பட்டியலைக் காட்டிப் பெற்றதல்ல! போலி வாக்குறுதி களையும் சாகசப் பேச்சினையும் கொண்டு பெறப்பட்டது! அது மட்டுமல்ல. இதோ ஒரு நண்பர், காங்கிரசு எப்படி எதனால் ஒட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறது என்பதுபற்றிக் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் கூறும்போது யாருக்காவது கொதிப்பு மூளுமானால், அவர்களுக்குக் கூறுகிறேன். இந்தக் கண்டனத்தின் கர்த்தா நான் என்று தயவு செய்து கருதிக் கொள்ளாதீர்கள். ஒழுக்கச் சிதைவுக்கு எவர் காரணம்? குண்டர்களுக்கு (காலிகளுக்கு) அமைச்சர்களுடைய அரசியல்கட்சித் தலைவர்களுடைய ஆதரவு இருக்கிறது. அமைச்சர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுவரும் வால்காட்டுகள் (எத்தர்கள்) டில்லியில் பலர் இருக்கின்றனர். அமைச்சர்களிடம் உள்ள இத்தகைய செல்வாக்கை அவர்கள் (குண்டர்கள்) தவறான வழிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேல் மட்டத்திலுள்ளவர்களுடன் இவர்களுக்கு (எத்தர்களுக்கு) உள்ள தொடர்பு காரணமாகப் போலீசுத் துறையினரிடையே ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டு விட்டிருக்கிறது. தேர்தலில் ஓட்டுக்களைப் பிடித்துக் கொடுக்க குண்டர்களின் தயவு தேவைப்படுவதால் தான், அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு (குண்டர்களுக்கு) ஆதரவு தருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, டில்லி பிரதேசக் காங்கிரசு கமிட்டித் தலைவர் முஸ்டாக் அகமது சொன்னது இது (கண்டனம்) நானாக இதைக் கூறுவதற்கு நடுங்கி இருப்பேன். ஆனால், காங்கிரசு வட்டாரத்திலிருந்தே இந்தக் கண்டனம் கிளம்பியிருப்பது எனக்கு வலிவளித்திருக்கிறது. எனது மாநிலத்தில், இதுபோல ஓட்டுக்களைப் பிடித்திடக் கையாளப்படும் முறைகள் பற்றிய பல ஆதார நிகழ்ச்சிகள் பற்றி எனக்குத் தெரியும். ஆகவே, நோக்கம் தெளிவாக இல்லை இலட்சியம் தெளிவாக இல்லை-சரியான பாதையிலே அவர்கள் (காங்கிரசு) சென்று கொண்டில்லை அவர்களின் அதிகார பலமும் சந்தேகத்திற்கிடமான ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது! இதனை (வலிவை) நாகரீகமான முறையால் சனநாயகப் பண்பாட்டினால் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ளவில்லை! என்றாலும், அநேகமாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாக அவர்கள் (காங்கிரசு) கூறிக்கொள்கிறார்கள்! குன்றுபோல் நிதி கொடுத்திருக்க பிச்சைப் பாத்திரம் ஏன்? தேவைப்படும் அளவுக்கும் அதற்குமேலாகவும் கூட உணவுப்பொருளை தந்திட அமெரிக்கா வாக்களித்திருப்பதனால், உணவுப் பிரச்சினையையும் தீர்த்துவிட்டதாக அவர்கள் (காங்கிரசு) கூறுகிறார்கள்! முதிர்ந்த நிலையிலுள்ள இந்த நாட்டினர், ஒரு கவளம் சோற்றுக்காகப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றிடுவது இழிவல்லவா என்று அவையின் இந்தப் பக்கமிருந்து கேள்வி எழுந்தால், படால் என பதில் வருகிறது இல்லை என்றால் (பிச்சைப் பாத்திரம் தூக்கிச் செல்லாவிட்டால்) பட்டினிச் சாவு ஏற்படும் என்று! என்னைப் பொருத்தவரையில், பிச்சைப் பாத்திரத்தைக் காட்டிலும் கோரமானது, பட்டினியால் பிணம் விழுவது என்றே கருதுவேன்! ஆனால், பதினேட்டு ஆண்டு சுதந்தர ஆட்சிக்குப் பிறகு இந்தப் பிச்சைப் பாத்திரம் ஏன்? என்று கேட்கலாமல்லவா? கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறதல்லவா? குன்றுபோல நிதி உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்க பெரும் அளவு பணத்தைக் கொடுத்திருக்க மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களையும் முடித்தான பிறகு, இந்தப் பிச்சைப் பாத்திரம் ஏன்? பொறுப்புள்ளவர்களின் மனப்பான்மையில் உள்ள கோளாறு! அவையின் அந்தப் பக்கமிருந்து ஒரு உறுப்பினர் கூறினார் திட்டத்திலே ஏதோ கோளாறு இருந்தாக வேண்டும் என்பதாக! துணைத் தலைவர் அவர்களே! திட்டத்தில் உள்ள கோளாறைவிட, திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலே அதிகக் கோளாறு இருக்கிறது! திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ளவர்களின் மனப்பான்மையிலே அதைவிட அதிகக் கோளாறு நச்சுப் போக்கு இருக்கிறது! ஆகவே, இந்த நாட்டை நடத்திச் செல்வதற்கு ஒரு புதிய சர்க்கார் அமைந்தாலொழிய-புதிய அணி வந்தாலொழிய, உணவுப் பிரச்சினையையும் சரி தொழில் பிரச்சினையையும் சரி நாம் தீர்த்துவைக்கப் போவதில்லை! குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லத்தான் வேண்டும்! நான் மட்டுமல்ல இந்த முடிவுக்கு வந்திருப்பவன்-வேறு பலரும் உளர். இதோ மற்றோர் பெருந்தகையாளரின் உரை. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிறகும் நாடு உணவுப் பொருளை இறக்குமதி செய்தாக வேண்டியிருப்பது துர்ப்பாக்கியமானதாகும். இந்தியா போன்ற விவசாயநாட்டில் உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதையாகிலும் முதலிலே செய்து முடித்திருக்க வேண்டும் மற்ற எதையும் பிறகு செய்திட முனைந்திருக்கலாம். அவர் மேலும் கூறுகிறார் வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய புத்தகம் நினைவுக்கு வருகிறது. ஏழையைப் புறக்கணித்துவிட்டனர் என்ற எனது நாலாவது குற்றச்சாட்டை விட்டுவிடுங்கள். உணவு கல்வி பாதுகாப்பு என்ற மூன்று துறைபற்றிய குற்றச்சாட்டு எழுமானால், இந்தச் சர்க்காரின் கதி என்ன ஆகும்? (எங்கே போகும்)? ஒரு சமயம் சர்க்கார் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களின் ஒப்புதலைப்பெற்று நடந்துவருவதால், நடைபெற்றவைகளுக்கு (கேடுகளுக்கு) மக்களைத்தான் பொறுப்பாளிகளாக்க வேண்டும் என்று கூறப்படக்கூடும். சனநாயகத்தில் உங்கள் (மக்கள்) கடமை என்ன என்பதைப் பற்றிய உணர்வுப்பெற்றாக வேண்டிய காலம் வந்துவிட்டது. டில்லியை நம்பிக் கொண்டு வீட்டில் சோம்பிக்கிடப்பதிலே பலன் இல்லை! டில்லியில், யமுனை மட்டுமல்ல சீமைச் சாராயமும் போதைப் பானமும்கூட ஆறாக ஓடுகிறது! வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் டில்லியைக் கண்டதும் வியப்படைகிறார்கள்! கண்களை மூடிக்கொள்கிறார்கள் ஆச்சரியத்துடன். இது என்ன, இந்தியாவின் தலைநகரமா அல்லது தங்கள் நகரங்களான பாரிசா, இலண்டனா என்று எண்ணி ஆச்சரியப்படுகிறார்கள்! துணைத் தலைவர் அவர்களே! இந்தக் கண்டனம் தெரிவிப்பவர் ஆளுங்கட்சியிடம் பகை கொண்டவர் அல்லர். ஆச்சார்யா வினோபா பாவேயின் கண்டனம் இது! அவர் கேட்கிறார் உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படுமானால் எங்கே இருப்பீர்கள்? என்று நான் அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். நாடு முழுவதிலிருந்து, மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் இந்தக் கேள்விக் கேட்கப்படும்! அந்த அரசியல் கட்சியின் கேள்வி இந்த அரசியல் கட்சியின் கேள்வி என்பதல்ல இது. மனம் முறிந்து கிடக்கும் மக்கள் எழுப்பும் கேள்வி. இதற்கு நீங்கள் (சர்க்கார்) பதில் சொல்லியே ஆக வேண்டும்! எந்தவித முறையுள்ள அரசியலிலும், மனம் முறிந்து கிடக்கும் மக்கள் இருப்பது, பெருத்ததோர் ஆபத்தாகும்! துணைத் தலைவர் அவர்களே! இறுதியாக இன்றைய ஆளுங்கட்சியின் நிலைமைக்கு ஓரளவு பொருத்தமானதாக உள்ள ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது: வாத்து ஒன்று இருந்தது முன்பொரு காலந்தன்னில் உள்ளத்து உணர்ச்சியனை வாலுக்கு உணர்த்த நேரம் எவ்வளவு பிடிக்கும் என்பது அறியாதிருந்தது வாத்து! ஆகவே, அதன் கண்களில் துக்கம் தோய்திருந்தபோதிலும் அதன் சின்னஞ் சிறு வால் ஆடிக் கிடந்ததாம் முன்னாள்பெற்ற மகிழ்ச்சியின் நினைவால்! நீங்கள் (ஆளுங்கட்சி) பழைய மகிழ்ச்சியிலே திளைத்துக் கிடக்கிறீர்கள்! சென்ற தலைமுறையினர் அறுத்தெடுத்துக் கொடுத்த மகிழ்ச்சியைக் கொண்டே வாழ்ந்துவிட முடியாது. இப்போது புதிய தலைமுறை தோன்றிவிட்டது என்று அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் எச்சரித்திருக்கிறார். இந்தச் சர்க்காரின் தோல்விகளைப்பற்றியப் பல வார்த்தைகளால் கூறவில்லை என்றாலும், குடியரசுத் தலைவரின் பேருரை, இந்தச் சர்க்கார் மீது வீசப்பட்ட பயங்கரமான கண்டனமாகவே எனக்குத் தோன்றுகிறது! அந்தப் பொருளில் துணைத் தலைவர் அவர்களே! நான் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நன்றி கூறி, அவருடைய பேருரையை வரவேற்கிறேன். மணிமலர் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு, 1966 சீன ஆக்கிரமிப்பு பற்றிய விவாதம் - 12.11.62 அவைத் தலைவர் அவர்களே! என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கப் பெருமைப்படும் தி.மு.க.வின் சார்பாகவும் உள்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன். அரசாங்கத்திற்கு அளவற்ற அதிகாரங்களைப் பாராளுமன்றங்கள் வழங்குவது அபூர்வமான தாகும். நாட்டின் கௌரவத்தையும், சுதந்திரத்தையும், சுய ஆட்சியையும், காப்பாற்றுகின்ற ஒரு பெரும் உன்னத இலட்சியத்திற்காக நாடே ஒன்று திரண்டு எழும்போது கோஷ்டி, அரசியல் வேறுபாடுகள் மறைந்து போய்விடுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் எல்லாக் கட்சிகளும் இணைந்து அரசாங்கத் திற்கு அசாதாரண அதிகாரங்களைத் தரும் செயலாகும்! ஐயா, வேலூர் மத்திய சிறையிலுள்ள ஓர் அறையில் நான் அடைப்பட்டுக் கிடக்கும்போது சீன ஆக்கிரமிப்புச் செயல்பற்றிய செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இயற்கை யாகவே ஆளும்கட்சி மீது சிறிது ஆத்திரம் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய சிறை வாழ்வின் மிகக் கொடுமையான நாட்கள் கடைசி நாலைந்து நாட்கள் தான். அப்போது தான் சீன ஆக்கிரமிப்புப் பற்றிய செய்தியையும் சீன ஆக்ரமிப்பாளர்கள் அலையலையாக வந்து எல்லையைத் தாண்டியதையும், நமது போர் வீரர்கள் வீரச்சமர் புரிந்தாலும் சில இடங்களையும், சில பல காவல் நிலையங்களையும் விட்டுவிட வேண்டிய நிலைமையை யும் பற்றிய செய்திகளைப் படித்தேன். சூழ்நிலை பற்றி விரிந்த விளக்கங்கள் தருவதற்கு இது நேரமில்லை. தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பதற்கு இது நேரமில்லைதான். உள்துறை அமைச்சர் கொண்டு வந்த இத் தீர்மானம் விவாதிப்பதற்கோ, சொற்போர் புரிவதற்கோ உரியதல்ல என்று நான் கருதுகிறேன். நமது எல்லைப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அடித்துத் துரத்தும் ஒரு மகோன்னதக் கடமைக்கு நம்மைத் தத்தம் செய்து சூள் உரைக்க இன்று நாம் கூடியுள்ளோம்! எனவேதான், கடந்த திங்கள் 24ஆம் நாள் நான் விடுதலை யடைந்ததுமே, நான் சார்ந்திருக்கப் பெருமைப்படும் தி.மு.கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையின்படி தி.மு.கழகம் தன் செயற்திட்டங்களை ஒத்திவைக்கும் என்றும், ஆக்கிரமிப்பாளரை விரட்டும் இந்திய அரசினருக்கு ஆதரவாக தனது சக்தி முழுவதையும் தரும் என்றும் அறிவித்திருந்தேன். - இங்கே ஓர் ஆக்கிரமிப்பாளன் நுழைந்து விட்டான். யாரும் இதில் சந்தேகப்படத் தேவையில்லை. ஆக்கிரமிப்பாளனின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் நமது குறிக்கோள் மிகமிகத் தெளிவானது. நாம் நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க விரும்புகிறோம்; அதேபோன்று ஜனநாயகத்தின் பயனையும், கவுரவத்தையும் பாதுகாக்க விரும்புகிறோம். இந்தப் பெரிய சச்சரவுக்கான காரணங்களை இந்த நேரத்தில் கிளப்புவது வழக்கமல்ல. எனினும், நான் இதை வெறும் எல்லை மீறலாகக் கருத வில்லை; வெறும் ஆக்கிரமிப்பாகவும் கருதவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ நாம் இப்போது ஒரு தத்துவப் போராட்டத்தில் இறங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். இன்றைக்கு உலகம் இரண்டு முகாம்களாகட்’ பிரிந்திருக்கிறது. ஒன்று ஜனநாயக முகாம், இன்னொன்றை ஜனநாயகமற்ற முகாம் என்று கூறுவேன். அந்த முகாமில் உள்ள நாடுகளின் பெயரை நான் சொல்லப் போவதில்லை. எனினும், ஜனநாயக மற்ற முகாம் என்று மட்டும் இருப்பதைக் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒத்துப்போகும் தத்துவம் இருப்பது நமக்கெல்லாம் தெரியும். ஜனநாயகம் அதனுடன் மாறுபட்ட அரசாங்கங்களோடு ஒத்துப்போவது போல், நெருக்கடி நிலை வரும்போது மாறுபட்ட அமைப்புடைய அரசாங்கங்களைவிட அதிகமான பலம் உள்ளது என்பதைக் காட்ட முடியாவிட்டாலும், அந்த அரசாங்கத்தைப் போல் ஜனநாயக அரசும் பலம் படைத்ததுதான் என்பதை நிரூபித்தாக வேண்டும். எனவேதான், ஜனநாயக அமைப்புகள், தங்கள் அரசியல் வேற்றுமைகளை மறந்து, பூசல்களைக் கூடப் பின்னணியில் வைத்துவிட்டு, ஒன்று சேர்ந்து முன்வந்து ஒரே குரலில் “ஆக்கிரமிப்புத் தோற்கடிக்கப்பட வேண்டும், சீனர்கள் அவர்கள் எல்லைக்குள் விரட்டியடிக்கப்பட வேண்டும்” என முழங்குகின்றன. சீன ஆக்கிரமிப்புச் செய்தி என்னைப் போன்ற மனிதர்களை அதிரச் செய்யும் விதத்தில் இருந்தது. என்னைப் போன்ற மனிதன் என்று கூறுகின்ற போது இதுபோன்ற பெருமை மிக்க சபைகளிலே முன்பு பேசும் வாய்ப்பைப் பெறாததைக் குறித்துத்தான் சொல்கிறேன். நான் சாமானியர்களின் பிரதிநிதி! இந்த நாட்டை ஆக்கிரமிக்க யாருக்கும் தைரியம் வராது என்றே நாமெல்லாம் நினைத்து வந்திருக்கிறோம். ஏனெனில், நமது கூட்டுசேராக் கொள்கையையும், நடுநிலைக் கொள்கையை யும் உலகில் உள்ள அறிவாற்றல் நிரம்பிய நாடுகளெல்லாம் பாராட்டியுள்ளன. இந்தியாவின் பிரதமர் சீன - இந்திய நட்பு உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம் நாம் மேலும் நம்பிக்கையோடிருந்தோம். சீனாவின் நலத்துக்குப் போராடியவர் இந்தியப் பிரதமர். நண்பர்களற்ற நிலையில் சீனா இருந்தபோதும் ஐ.நா.சபையிலும், அகில உலக அரங்குகளிலும், இந்தச் சபையிலும், பாராளுமன்றத் திலும் கூடச் சீனாவின் சுதந்திரத்திற்காகப் பரிந்து வாதாடினவர் ஒரே ஒருவர் பண்டித நேருதான்! அவர் ஒருவர்தான் ஐ.நா.வில் சீனாவை அனுமதிக்க வேண்டு மென வாதாடியவர். எனவே, நாம் மிக உறுதியாக நம்பினோம். இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் எந்த மோதலும் ஏற்படாது என்று ! பாண்டுங் மாநாட்டு உணர்வைச் சீனாவின் மனதில் பண்டிதர் ஏற்றியிருப்பார் என்று நாம் நினைத்தோம். பாண்டுங் மாநாட்டு உணர்வு சீன நெஞ்சங்களில் குடியேறியிருக்கும் என நம்பி னோம். எனவே, சீனர்களின் எல்லை மீறலையும் ஆக்கிரமிப்பை யும் பற்றிக் கேட்ட மாத்திரத்திலே சிறிது அதிர்ச்சி அடைந்தோம். என்னைப்போல் அதிர்ச்சியடையாத கட்சிகளும் இந்தச் சபையிலும் பாராளுமன்றத்திலும் இருந்தன - என்பதை நான் உணர்கிறேன் - அந்தக் கட்சியினர் அடிக்கடி “நமது அரசாங்கத்தின் நடுநிலைக் கொள்கை - கூட்டுச் சேராக் கொள்கை - இராணுவக் கூட்டுக்கெதிரான கொள்கை நமது நாட்டை மகிழ்ச்சி மணம் கமழும் நாடாக்காது, அபாயம் விளையும் பூமியாக்கும்” - என்று கூறி வந்தனர். அவர்கள் இப்போது எழுந்து இதுவரை தாங்கள் நடக்கும் என்று பயந்தது நடந்துவிட்டதாகக் கூறினார்கள். அந்தக் கூற்றிலே கூடப் பொறுப்புணர்ச்சியும் தன்னடக்கமும் இருந்தன. இந்த அவையில் 3 அல்லது 4 நாட்களாக நடைபெற்றுவரும் விவாதங்களும், உணர்ச்சியுள்ள பேச்சுக்களும் நமது பொறுப்பு உணர்ச்சியைக் காட்டுகின்றன. இவை பெருந்தன்மை மிக்க ஜனநாயக சபைகளில்தான் காணப்படும். இவையெல்லாவற்றையும் விடப் பிரதமர் முன் வந்து பாதுகாப்பில் முன் எச்சரிக்கையில்லாமல் இருந்ததற்கும், அதற்கு யார் பொறுப்பு என்பது பற்றியும் தக்க காலத்தில் விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்தாரே! அந்தத் தைரியமான அறிவிப்புத் தான் மிகவும் பெருமைப்படத்தக்கது. இதைப்பற்றி விசாரணை நடத்தக் கட்டளையிடுவது என்பது மிகப்பெரிய தைரியசாலிகளுக்குத்தான் வரும்! எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பண்டி ஜவஹர்லால் நேருவிடம் நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிர்வாகத் தலைவர், காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அவர்தான் இந்தப் பூபாகத்தின் பாதுகாவலன் என்பதிலும், இந்த நாட்டை உயிர்த்தெழச் செய்தவர் என்பதிலும், சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சீரிய இலட்சியங்களின் களஞ்சியம் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. எனவேதான் நம்மில் சிலர் கூறிய யோசனைகளைப் பெருந்தன்மையான உணர்வுடன் சந்திக்க, அந்த ஜனநாயகத் தலைவர் பாதிவழி இறங்கி வந்து ஏற்றுக்கொண்டார். அவசியம் போர் முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். சீன ஆக்கிரமிப்பிற்கான உள் நோக்கத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். எல்லைப் பிரச்சினையைப் பற்றிக் கூடிப்பேச இந்த நாடு தயாராக இருக்கும்போது எல்லையில் ஏன் சீனநாடு போரிட வேண்டும்? அலையலையாக வந்து தவாங் அருகில் சில பல இடங்களைப் பிடித்துக் கொண்டு, போர்முகாம்களை அமைத்துக்கொண்டு தவாங்கைப் பாசறை வீடாக்கி மேலும் பெரியதொரு பாய்ச்சலுக்கு ஏன் சீனர் தயாராக வேண்டும்? சீனம் சினம் கொள்ளும்படி இந்த நாடு எந்தச் செயலைச் செய்தது? உத்தரப் பிரதேசத்திற்கருகில் கூடத் தங்கள் எல்லை இருப்பதாக ஏன் சீனர்கள் எண்ண வேண்டும்? சீனரின் இந்தச் செயலுக்கான உள் நோக்கைக் கவனிக்கும் போது நான் முன்பே சொன்னது போல் இது ஒரு தத்துவப் போராட்டம் என்று தோன்றுகிறது. நமது கூட்டுச் சேராக் கொள்கையும் பலவீனமெனப் பொருள் கொள்கின்றனர் சீனர்! நமக்கு நண்பர்களே இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். பஞ்ச சீலத்தை நாம் மேற்கொண்டிருப்பதால் நம்மால் சண்டைபோட இயலாது என்று நினைக்கிறார்கள். தவறான இலக்கண அறிவு படைத்தவர்கள் சீனர்கள் - என்று நான் கூறுவேன்! நாம் சண்டையிட மாட்டோம் என்றுதான் தொடர்ந்து கூறி வந்திருக்கிறோம். இப்படி நாம் கூறியதற்குப் பொருள் நம்மால் சண்டையிட முடியாது - என்பதல்ல! அழிவற்ற புகழ் சார்ந்த மலைச்சாரலில் நமது போர் மறவர்கள் தங்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுதல்களும் வணக்கமும் உரித்தாகுக. அங்கே இப்போது தாக்கும் சக்திபெற்ற வீரர்கள் இருக் கிறார்கள். அவர்கள் மூலம் சீனர்களுக்கு “நாங்கள் சண்டையிட மாட்டோம் என்றால் சண்டையிட முடியாது என்ற பொருளல்ல” - என்ற பாடத்தைப் புகட்டுவோம். எனவே, மேன்மேலும் ஆயுதங்கள் போர் வீரர்களுக்குத் தரப்பட வேண்டும். எல்லையில் போராடும் இராணுவத்திற் காதரவாக நாடே திரண்டு நிற்க வேண்டும்! யுத்த காலத்தில், போர்க் களத்தைப் போலவே உள்நாட்டுத் துறையும் மிக முக்கியமானது. இன்றைய தினம் மக்கள் மனதில் குறிப்பிடத்தக்க உறுதியும், தெளிவும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். துணிச்சல் நிறைந்த போர் வீரர்களிடம் தான் இத்தகைய உணர்வு இருக்க முடியும். மக்கள் தம் உணர்வையும், செல்வத்தையும் அள்ளியள்ளித் தருகின்றனர். இது மட்டும் போதுமா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் போர் மாதக் கணக்கிலோ வருடக் கணக்கிலோ நடைபெறும் போர் அல்ல என்றும், இது நீண்ட காலப்போர் என்றும் பண்டிதர் கூறியிருக்கிறார். இது நீண்டகாலப் போராக இருக்குமானால் நம்முடைய கொள்கைகளை அதற்கேற்றபடி அமைத்துக்கொள்ள வேண்டாமா? சீனா போர்ப் பிரகடனம் செய்ய எண்ணும் வேளையிலாவது அதைச் செய்வது சரியல்லவா? இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே போரே இல்லை என்றும், இந்திய - சீன மக்களின் நட்பு குலைக்கப்படவில்லை என்றும் சீனர்கள் தங்கள் எல்லையைப் பிடித்துக் கொண்ட வர்கள், அல்ல - என்றும் சீனர்கள் இப்போதும் தவறான பிரசாரம் செய்கிறார்கள். போர்க்களத் தாக்குதலைவிடப் பயங்கரமான முறையில் சமாதானப் பிரச்சாரத் தாக்குதலைச் சீனர்கள் நடத்துகிறார்கள். நாட்டின் வளங்களை எவ்வளவு தூரம், எப்படி, எங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதுபற்றி நம் மனதில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டிலுள்ள கீழ்மட்டத்தில் இருப்போர் ஆனாலும்? மேல் மட்டத்தில் இப்போரானாலும் முன் வந்து உதவிகளையும் நன்கொடைகளையும் அளித்துள்ளனர். ஏழை மனிதன் முன்வந்து வாரி வழங்கும்போது, சிற்றரசர்கள் தரும் நன்கொடை மிகக் குறைவாய் உள்ளது. எனவே சிற்றரசர்களுக்குத் தரும் உதவித் தொகையை ஓராண்டுக்காகிலும் குறைத்துப் பாதுகாப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். ஓராண்டுக்காகிலும் இதைச் செய்தால்தான் தரவாரி யாக ஒவ்வொருவரும் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் என்பதைச் சாதாரணமான மனிதன் உணர்ந்து கொள்ள முடியும். ஆனந்த் சந்த் (இமாசலப் பிரதேசம்): முழுத் தொகையையும் குறைத்துவிட்டால், வசதியேதும் அற்றவர்கள் எப்படி வாழ்வார்கள்? ஓர் உறுப்பினர்: அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்! அண்ணா : சிற்றரசர்கள் நிலை அவ்வளவு மோசமாகப் போய் விட்டதென்றால், நாம் கண்டிப்பாக அவர்களுக்கு உதவுவோம்! ஆனந்த் சந்த்: மிகவும் நன்றி! அண்ணா : இந்தச் சபையிலிருந்து சிற்றரசர்களுக்கு வேண்டு கோள் விடப்படுமானால், எனது நண்பர் குறை கூறியது போல் அவர்கள் கூறமாட்டார்கள். ஏனெனில் சிற்றரசர்கள் பெயரளவுக்கு மட்டும் முடிசூட்டிக் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் இயல்பில் நடத்தையில் சிற்றரசர்களாகவும் பெருமகனாகவும் இருக்க வேண்டும்! நாடு முழுவதும் இத்தகைய பேரபாயத்தை எதிர்நோக்கி இருக்கும்போது அவர்களால் தமது உதவித் தொகையைக் கொடுக்காமலிருக்க முடியாது. பா இப்போதைய போர் நீண்ட போராக இருக்குமானால் நான் இன்னொரு யோசனையும் கூற விரும்புகிறேன். நமது வீரர்களுக்கு ஆயுத உதவி அளிக்க எந்த வழி வகையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நாம் ஆராய வேண்டும். போர் முனை பெரிதாகி இன்னும் போர் நீடிக்குமென்றால், அவ்வளவு காலம் எப்படி நம் வீரர்களுக்கு ஆயுத உதவி அளிக்கப் போகிறோம்? எவ்வகையான ஆயுதங்களை அவர்களுக்கு அளிக்கப் போகிறோம்? பிரதம மந்திரி நேற்றைய தினம் கூறினார்கள். ஆயுதங்கள் வேகமாக உற்பத்தி செய்யப்படுவதாக. தொழிற்சாலைகள் வேலை முழுமூச்சுடன் நடப்பதாகவும்! தானே இயங்கும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார். நாம் இப்படி உற்பத்தி செய்துகொண்டிருக்கும்போது சீனா கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்காது என்பதை நாம் உணரவேண்டும். உள்ளபடியே அவர்கள் ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்கிறார்கள்! அவர்கள் இரும்புத் திரைக்குப் பின்னால் இருக்கும் காரணத் தால் அவர்களுடைய உண்மையான பலம் நமக்குத் தெரியாது. அவர்களின் மறைந்துள்ள சக்தியும் நமக்குத் தெரியாது, அவர் களுக்கு மறைந்துதவும் நண்பர்கள் யார் என்றும் நமக்குத் தெரியாது. எனவே, நமக்கு உதவத் துடிக்கும் 40க்கு அதிகமான நாடுகளின் நல்லெண்ணத்தை நாம் பெற வேண்டும்! அதற்குக் குந்தகம் விளைவிப்பதாக நமது கூட்டுச் சேராக் கொள்கை இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டிற்காகத்தான் கூட்டுச் சேராக் கொள்கையே தவிர, கூட்டுச்சேராக் கொள்கைக்காக நாடு இல்லை. கூட்டுச்சேராக் கொள்கை, கொள்கை அளவில் குறைகூற முடியாத ஒன்றாகும். நடைமுறையில் அக்கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது உலகின் வல்லரசு நாடுகள் சிலவற்றின் மனதில் கூடும் சந்தேகத்தைத் தோற்றுவித்து விட்டது. கூட்டுச்சேராக் கொள்கை என்பது போர்வை - மிகவும் சௌகரியமான போக்கு - என்று சில நாடுகள் நினைக்கின்றன. அப்படி நினைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு! யாரோ ஒருவர் கூறினார் - அவர் பெயர் எனக்கு நினை வில்லை. நமது கூட்டுச்சேராக் கொள்கை என்பது உலகின் இரு முகாம்களிலிருந்து உதவி பெறும் ஒரு கொள்கை - அல்லது ஒரு வழி - என்று அவர் கூறினார். இதுதான் கூட்டுச்சேராக் கொள்கை யின் நடைமுறைப் பயன். கூட்டுச்சேராக் கொள்கையின் அடிப்படைத் தத்துவத்தை ஐ.நா. போன்ற சபைகளிலிருக்கும் நமது பிரதிநிதிகள் சரியாக எடுத்துக்கூறி வல்லரசுகளின் மனதைக் கவரத் தவறிவிட்டார்கள். அவர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக நம்முடைய செயல்களும், சொற்களும் நம்மீது சந்தேகத்தைத் தோற்றுவித் திருக்கின்றன. எனவே, கூட்டுச்சேராக் கொள்கையைத் தப்பு அபிப்பிராயம் ஏழாதபடி விளக்கக் கூடியவர்களை ஐ.நா. சபைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்வேன். இந்த நபர்களைத்தான் அனுப்ப வேண்டும் என்றோ, இவர்கள் அனுப்பப்பட வேண்டும் - யாரை அனுப்பக் கூடாது - என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும். யாரை அனுப்ப வேண்டும் என்பதைவிட யாரை அனுப்பக்கூடாது என்று நாட்டினருக்கு மிக நன்றாகத் தெரியும்! கூட்டுச்சேராக் கொள்கை - என்பது கொள்கை அளவில் சரியாக இருந்தாலும், அதில் சிலநேரம் விட்டுக் கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். கூட்டுச்சேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் என்ன வழிகாட்டுதல் நமக்கு இருக்கிறது? அகராதி கூறுகிறது, கூட்டுச்சேருவது நல்லது என்று! மோட்டார் கார்களில் பழக்கமுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். கூட்டு சக்தி (அலைமண்ட் சாதனம்) இல்லையென்றால், கார் நகராது. எனவே கூட்டுச் சேராக்கொள்கை என்பது எதிர்மறைச் செயலாகும். அது நமது முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது. கூட்டுச்சேராக் கொள்கை மூலம் இராணுவக் கூட்டணிக்கு நாம் இழுத்துச் செல்லப்படவோ, இடம் பெறவோ மாட்டோம் என்றால் அதை என்னால் புரிந்து கொள்வும் பாராட்டவும் முடிகிறது. எந்த இராணுவ ஒப்பந்தத்திலும் இந்தியா இழுக்கப்படுவதை நான் விரும்பவில்லை . எனவே, எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்று நான் கூற விழைகிறேன். நமது நாட்டிற்கு உதவத் துடிக்கும் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுக்குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என நான் கருதுகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நம் மீது நட்புரிமை கொண்டாடும் நாடுகளுக்கு அக்குழு சென்று ஆயுத உதவி பெறும் அணி (Arms Aid Consortium) யை நிறுவ வேண்டும். நமக்குத் தேவைப்படும் எல்லா ஆயுதங்களுக்கும் நாம் விலை கொடுக்க இயலாது. சீனர்கள் மேலும் மேலும் ஆக்கிர மிக்கும்போது நாம் மேன்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து தான் உபயோகிக்க வேண்டும் என்றும் நான் கருதவில்லை. எனவே, ஆயுத உதவி பெறும் அணி அமைக்கப்பட வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுக்குழு அமைக்கப்பட வேண்டும். அந்தத் தூதுக்குழுவில் ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி யினரும் இடம் பெற வேண்டும். இதன் மூலம் சர்க்காரின் கொள்கையை ஆளும் கட்சி மட்டுமல்ல - நாட்டிலுள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் கடைப்பிடிப் பதில் உற்சாகமாயுள்ளன - என்பதை உலகிற்குக் காட்ட முடியும் என்பதால் இதைக் கூறுகிறேன். நம்மீது ஆதரவெண்ணம் கொண்டிருக்கும் பிறநாடுகளி லிருந்தும் தொண்டர் படை திரட்டப்படலாம் - எனக் கருது கிறேன். இதில் தவறுமில்லை, இழுக்குமில்லை ! நம்முடைய சமர்க்களங்களில் வேற்று நாட்டு வீரர்கள்தான் போரிட வேண்டும் என்று நான் கூறவில்லை! ஜனநாயகத்திற்காகத் தங்கள் இன்னுயிர் தருகின்ற மக்கள் எங்குமிருக்கிறார்கள் - என்பதை உலகம் உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதைக் கூறுகிறேன். எனவே, நான் கூறியபடி இந்த நல்லெண்ணத் தூதுக்குழு ஜன நாயக நாடுகளுக்குச் சென்று நிதி சேர்த்து, ஆயுதங்கள் சேர்த்து, தொண்டர்கள் சேர்த்து அனுப்ப வேண்டும் - என விரும்புகிறேன். இதன் மூலம் நமது நடுநிலைக் கொள்கை எதிர்மறையான தல்ல, நமது கூட்டுச் சேராக் கொள்கை எதிர் மறையானதல்ல என்பதைச் சீனா உணர வேண்டும். நமது நியாயமான நடைமுறை ஜனநாயக நாடுகளின் மனதில் நல்லெண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பதையும் உணர்த்த வேண்டும். நம் விருப்பத்திற்கேற்றபடி அகில உலகின் நல்ல எண்ணத்தைப் பெறமுடியும் என்பதையும் காட்ட வேண்டும். ஆளும்கட்சியின் சிந்தனைக்குச் சில யோசனைகளை இதுவரை சொன்னேன்! விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று அரசாங்கத் தரப்பி லிருந்து வந்த உறுதிமொழி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். விலைவாசியைக் கட்டுப்படுத்துவதுதான் உள்துறைப் பாதுகாப்புக்குத் தேவையானதாகும். அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயரும்போது, மக்களுக்கு அவை கிடைக்காமற் போகும்போது தான் போர் பற்றிப் பீதி அடைகிறார்கள் மக்கள். அரசாங்கம் முன்வந்து விலைவாசிகளைக் கட்டுப்படுத்து வோம் என்றால் உள்துறை மிகவும் பலமடைந்ததாக இருக்கும். உணவுத் துறையைப் பொறுத்தமட்டில், உணவு தானிய கையிருப்புப் போதுமான அளவு இருக்கிறது என்று உணவு அமைச்சர் உறுதி அளித்தார். கையிருப்பைவிட உற்பத்தி முக்கியமானது. உணவு உற்பத்தி பெருக வேண்டும். அதற்காகத் திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் கூறியுள்ள சீரிய யோசனைகளைக் கவனிக்க வேண்டும். போர்க் காலத்துக்கேற்ற முறையில், சமாதான காலத்துக்கென அமைந்துள்ள பொருளாதார இயந்திர முறையைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார இயக்குநர் அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சமாதானக் காலப் பொருளாதாரம், வளத்தின் அடிப்படையில் அமைவது; போர்க்காலப் பொருளாதாரம் பற்றாக்குறையின் அடிப்படையில் அமைவது. எனவே, பொருளாதார இயக்குநர் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டு, போர்க்காலத்திலும் கூடச் சமாதான காலப் பொருளாதாரச் செழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூற விரும்புகிறேன். இந்த விஷயங்களைக் கவனிக்கும்போது ஆளும் கட்சி எதிர்க் கட்சிகளையும் நம்பிக்கைக்கு உரியனவாக்கிக் கொள்ள வேண்டும். பாதுகாப்புக் கமிட்டிகளைப் பற்றி நான் கூறவில்லை. வேறு பட்ட எதிர்க்கட்சிகளுக்கிடையேயும் ஆளும் கட்சிக்கிடையேயும் நல்ல தொடர்பு ஏற்பட வேண்டும் என்ற பொருளில் கூறுகிறேன். எந்த யோசனையும் வரவேற்கப்பட வேண்டும். எந்த நன்கொடையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்படிச் செய் வதன் மூலம் அந்தக் கட்சி அல்லது இந்தக் கட்சிதான் சீனாவை எதிர்க்கிறது என்றில்லாமல், ஒரே கட்டுப்பாடான பேரணியாக நாம் திரண்டு சீனத் தாக்குதலைச் சந்திக்கலாம்! கருத்து வேறுபாட்டு அடிப்படையில் பேச நான் விரும்ப வில்லை. ஓர் உறுப்பினர் கருத்து வேறுபாடுள்ள பிரச்சினையைத் துவக்கிவிட்டார். திபெத்தியர்கள் பிரச்சினையில் நாம் நடந்தது தவறில்லை என்றார் அவர். நான் அவருடன் மாறுபடுகிறேன். திபெத், பூடான், சிக்கிம், நேபாளம் ஆகிய நாடுகளில் நமக்கு அக்கறை உண்டு! ஏனெனில், இயற்கையாக அவை இந்தியாவின் எல்லை மாநிலங்கள். மஞ்சள் அபாயம் பற்றிய தகவல்களை வரலாற்று ஏடுகளில் காணலாம். ஆண் வம்சங்கள் ஆண்ட போதானாலும் சரி, சன் - யாட் - சென்னின் புரட்சிக் காலமானாலும் சரி, சீனா மஞ்சள் அபாயமாக மாறி - உலகம் முழுவதையும் பயமுறுத்தியது. உள்ளபடியே அங்கே இப்போது மஞ்சளுடன் சிவப்பும் கலந்திருக்கலாம். இந்தக் கலவையால் என்ன வண்ணம் வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், மஞ்சள் அபாயம் பற்றி எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். சீனா எப்போதெல்லாம் பலம் பெறுகிறதோ, அப்போ தெல்லாம் தனது எல்லையைப் பெருக்கவே முனைந்திருக்கிறது. திபெத் நிகழ்ச்சிக்குப் பின் சீனாவின் மிக உயர்ந்த பதவி படைத்தவர் பேசிய பேச்சொன்றைப் படித்தேன். திபெத் சீனா வுக்குச் சொந்தம் - என்று கூறுவதற்குப் பதிலாக, ஒரு விசித்திர வாதத்தைக் கூறினார். “திபெத் சீனாவுக்குச் சொந்தம். பூடானும், சிக்கிமும், லடாக்கும் திபெத்துக்குச் சொந்தம். எனவே, பூடானி யர்களும், சிக்கிமியர்களும், திபெத்தியர்களும், லடாக்கியர்களும் தாயகமான சீனாவுக்குள் சேர வேண்டும்” என்றார். இந்தத் தத்துவம் நடைமுறைப் படுத்தப்படுமானால் இது நீண்டதொரு தகராறு என்பது மட்டுமல்ல; நீண்ட காலப் போருக்கு வழி வகுப்பதாகும். எனவே, எல்லா விளைவுகளுக்கும் தயாராக வேண்டும். ஜனநாயக நாடுகளை நம் அணிக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்த நாடுகள் அவ்விதம் அணி சேரும் என்று நான் நம்புகிறேன். பத்திரிகைகள் போர் விளம்பரத்திற்கு இலவச இடம் தர வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் கனம் கோபால் ரெட்டி விடுத்த வேண்டுகோளைப் படித்தேன். மந்திரி எவ்வளவு இடம் விரும்புகிறாரோ அவ்வளவு இடம் தர எனது கட்சி சார்பான நாளிதழ்களில் கிழமை இதழ்களில் ஏற்பாடு செய்கிறேன். இதைக் கூறும்போது, செய்தி ஒலிபரப்பு அமைச்சர் வானொலி பிரச்சாரத்தைச் சமாதான முறையிலிருந்து போர்க்கால முறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கூற விரும்பு கிறேன். எதிரிகளின் பிரச்சாரத்தைச் சரியான முறையில் முறியடிக்கும் பாசறையாக வானொலி விளங்க வேண்டும். பல்வேறுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஏன் வானொலியில் சொற்பொழிவாற்றும்படி கூறக் கூடாது? தாம் சந்திக்கவிருக்கும் சமர்க்கள அபாயம் பற்றிப் பேசப் போர்வீரர் களை வானொலி ஏன் அழைக்கக் கூடாது? நன்கொடை அளித்தவர் களை வானொலியில் பேசச் செய்து, பிறரையும் தரும்படி அவர்கள் ஏன் தூண்டக்கூடாது? பிரச்சாரம் என்பது மிகச் சிறந்த ஆயுதம். அதை நல்ல முறையில் ஜனநாயக நாடுகளைவிட ஜனநாயகமற்ற நாடுகள் பயன்படுத்துகின்றன. எங்கள் கட்சிக்குரிய பத்திரிகைகளில் இலவச இடம் ஒதுக்க நான் தயாராக இருக்கிறேன். எங்கள் கட்சிக்கு இரண்டு, மூன்று நாளிதழ்களும், பத்து, பதினைந்து வார இதழ்களும் இருக்கின்றன. பிரச்சாரம் வேகமான முறையில் இயங்க வேண்டும். பிற கட்சி களுக்கும் உரிய இடம் தரப்பட வேண்டும். அப்படிச் செய்வதின் மூலம் நாட்டைக் காத்துச் சீனரை விரட்டுவதில் நாம் ஒரே குறிக் கோள் கொண்ட மக்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும். மேலும், இந்த சபையின் நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உள்துறையமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிப்பதில் தி.மு.கழகத்தின் பெயரையும் பதிவு செய்கிறேன். நாட்டின் எதிர்காலத்தையும், கௌரவத்தையும், பாதுகாப்பை யும் காப்பாற்றும் இந்தப் போரின் பெருமைக்குரிய அணிவகுப்புப் பெயர்ப் பட்டியலில் தி.மு.கழகத்தின் பெயரைப் பொறிக்கிறேன். மாநிலங்கள் அவையில் - 12.11.62 (நன்றி: திரு. ம. நடராசன் - தமிழ் அரசி பதிப்பகம், சென்னை - 18.) துணைத் தலைவர் அவர்களே, வரி மசோதா (லோக் சபை) மற்றொரு சபையிலே விவாதிக்கப்பட்டது; இப்போது இந்த அவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது - இப்புறமும் எதிர்ப்புறமும் உள்ள உறுப்பினர்கள் எடுத்துக் கூறிய நல்ல பல யோசனைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். மக்களுக்கு இந்த முறையிலே வரிவிதிக்கப்படுவது ஒருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பது விவாதத்தைக் கேட்டதிலிருந்து தெரிகிறது. புதிய வரிகளுக்கான காரணங்கள் என்னென்ன காட்டினும் இந்த அவையிலுள்ளவர்களிலே எந்தப் பகுதியினரும் சரி, வெளியே உள்ள பொதுமக்களில் எந்தப் பிரிவினரும் சரி, புதிய வரிச்சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. மேலும் மத்திய துரைத்தனத்தாரின் இந்தப் புதிய வரிச்சுமைக்கு முன்பு இரயில்வே அமைச்சு, வரி விதித்திருக்கிறது. இதைத் துரத்திக்கொண்டு இராஜ்ய சர்க்கார்களும் புதிய வரிகளைப் போடப் போகிறார்கள். எனவே, வரி மசோதாவைப் பார்க்கும் போது உடனே ஏற்படுகிற எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள சர்க்கார், தங்களின் தோல்விகளால் திகைத்துப்போய், பொதுமக்களைத் தேவையற்ற பளுவைச் சுமக்கும்படி கேட்கிறது என்பதுதான். தற்போதுள்ள சர்க்கார், தனது தோல்விகளுக்கும் தனது செய்கையாலும், செய்யத் தவறியவையாலும் ஏற்பட்ட கேடுகளுக்கும் சமாதான விளக்கம் தர இயலவில்லை . ஒன்றுதான் கூற முடிகிறது. திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு பளுவையும் மக்கள் சுமக்க வேண்டுமென்பதுதான். இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன, திட்டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப் போகிறதா அல்லது வேறு விதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர்கள், ‘நாங்கள் மிக நல்லவர்கள். இங்கொரு துண்டும் அங்கொரு துண்டுமாக எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து, ஒரு கலப்புப் பொருளாதாரத் திட்டம் தயாரிக்கிறோம்’ என்கிறார்கள். துணைத்தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நிதிமந்திரி, கலப்படக் குற்றத்தைக் கோபத்துடன் கண்டித்துப் பேசினார் லோக்சபையிலே. கலப்படம் செய்யும் குற்றவாளிகளைக் கண்டு பிடித்தால், அவர்களைச் சவுக்காலடிப்பது மட்டுமல்லாமல். மொரார்ஜி தேசாய்: நான் அதைச் சொல்லவில்லை. அவர் களைச் சவுக்காலடிக்க வேண்டுமென்று யோசனை கூறப்பட்டது. அண்ணா : ஆகவே, நிதிமந்திரி, அவர்களைத் தண்டிக்கவும் இஷ்டப்படவில்லை ! என்றாலும், கலப்படம் ஒரு குற்றம், பொருளாதாரத் தத்துவக் கலப்படம் எத்தகைய குற்றம் என்றால், அதற்கான வினையை இக்கால மக்கள் மட்டுமல்லாமல் வருங் கால மக்களும் அனுபவித்தாக வேண்டும். அத்தகைய குற்றம். எனவே, இன்றைய சர்க்கார், பொருளாதாரத் தத்துவ அடிப்படை யிலே தமது கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், அவர்கள் எந்தப் பொருளாதாரத் தத்துவத்துக்கும் புதிய வியாக்கியானம் வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பழைய வியாக்கியானத்தை எடுத்துக் கொள்கிறார்கள். சாதகமாக இல்லாத போது, ‘நாங்கள் தத்துவத்திலே மூழ்கிவிடுபவர்கள் அல்ல, நாங்கள் செயல் முறையில் நாட்டம் உள்ளவர்கள்’ என்று கூறி விடுகிறார்கள். தொல்லை அவ்வளவும் எதனால் ஏற்படுகிறது என்றால், இந்தச் சர்க்காருக்கு ஒரு தத்துவம் இல்லை, பொருளாதார இலட்சியம் இல்லை. நாட்டிலே பணியாற்றுகிற ஒவ்வோர் அரசியல் கட்சியி லிருந்தும் புகழ்தரும் இலட்சியங்களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். பொது உடைமைக் கட்சியிடமிருந்து, சுதந்தரா கட்சியிடமிருந்து, மற்றைய எல்லாக் கட்சிகளிடமிருந்து கருத்துக் களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். இங்கு வேறு எந்த அரசியல் கட்சியும் இருக்கத் தேவையில்லை . ஏனெனில், ‘நாங்கள் சமதர்மவாதிகளாகவும் இருக்கிறோம். எம்மிடம் கூட்டுப் பொருளாதாரத் தத்துவம் இருக்கிறது’ என்கிறார்கள்.’ எனவே, இன்றைய சர்க்காருடைய கொள்கையின் அடிப்படையில் காணப்படும் பொருளாதாரத் தத்துவம் பற்றிய திட்டவட்டமான விளக்கம் தரப்படுமானால், மற்றக் கட்சிகள் தமக்குரிய தத்துவங் களை எடுத்து வைக்க முடியும். கனம் புபேஷ் குப்தா எடுத்துக் காட்டினார். காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒரு கோஷ்டி வலதுசாரி பக்கம் வலிக்கிறது. மற்றொரு கோஷ்டி இடது பக்கம் இழுக்கிறது என்று கம்யூனிஸ்டு கட்சி வலதுசாரிக் கோஷ்டியை வெளியேற்ற, (காங்கிரசில் உள்ள) இடதுசாரிக் கோஷ்டிக்கு உதவி செய்யும் என்று திட்டவட்டமாகக் கூறினார். துரதிருஷ்டவசமாக, புபேஷ் குப்தா அவர்கள், இன்றைய நிதி அமைச்சரை, வலதுசாரிக் கோஷ்டியில் சேர்த்துப் பேசினார். வெளியேற்றப்பட வேண்டிய கோஷ்டியில் வரிவிதிப்புக் கொள்கையின் கீழ் எத்தகைய தத்துவம் காணப்படினும், நேர்முக வரி, மறைமுக வரி இவைகளிலே செய்யப்பட்டுள்ள மாறுதலால் மொத்தத்தில் 717 கோடி ரூபாய் ஒரு முழு வருடத்தில் வருவாய் கிடைக்கிறது. இதிலே 445 கோடி ரூபாய் மறைமுக வரியாகவும், 272 கோடி நேர்முக வரியாகவும் பெறப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளால், வருவாய் வர இருக்கிறது என்று துன்பம் கண்டும் துணுக்குறாத முறையிலே ஒருவிதமாக மகிழ்ச்சியுடன் நிதி அமைச்சர் கூறுகிறார். தாங்க முடியாத வரியைச் செலுத்தும்படி கேட்கும்போது, வற்புறுத்தப் படும்போது மக்கள் அடைகிற உணர்ச்சிகளை அவர் உணர வில்லை. வேதாந்தி போலப் பேசுகிறார். பணம் படைத்தோர், மேலும் மேலும் அதிக அளவு வரி செலுத்த வேண்டும். ஏழைகள், இவை மூலம் முன்னேற்றத்தை அதிகமாகப் பெற வேண்டும். இது எமது சமதர்ம அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்கிறார். இந்த இரண்டு அம்சங்களையும் நிதி அமைச்சர் மெய்ப்பித்துக் காட்ட வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். பணக்காரர் வரிப் பளுவின் அதிகமான பாகத்தை ஏற்றுக் கொள்ளும் முறையிலும், அதன் பலன்களை ஏழைகள் அதிக அளவில் பெறும் தன்மையிலுமா, நிதி அமைச்சர் தமது வரிக்கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறார்? மந்திரி சபையின் மற்றோர் உறுப்பினர் ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர் கூறியுள்ள ஒரு கருத்தை - அதனைக் கண்டனம் என்றே கூறலாம் - எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்திய சர்க்கார் கையாண்டு வருகிற வருவாய் வரிவிதிப்புக் கொள்கை காரணமாக, ரூபாயின் மதிப்புக் குறைந்து கொண்டு வருகிறது. நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்து மக்கள் இழுத்துப் பறித்துக் கொண்டு வாழும் நிலையிலும் அதற்கும் மட்டமாகவும் இருக்கிறார்கள். ‘அதிகமான செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் போய் முடங்கிக் கொள்கிறது’ என்று அவர் கூறி இருக்கிறார். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்புக் கீழே விழுந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், முழுத் தகவல்களும் தெரியாது இவர்களுக்கு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் ‘நான் இலாக்கா இல்லாத மந்திரி, தில்லியை விட்டு வெளியேறுகிறேன், ஏனெனில், இங்கு வேங்கைகள் உலாவுகின்றன என்று’ கூறிவிட்டுச் சென்ற கனம் டிடி. கிருஷ்ணமாச்சாரியாரின் கருத்தை எடுத்துக் கூறினேன், வேங்கையைத் துரத்தி அடித்து விட்டார்கள் என்று நம்புகிறேன், அல்லது கெட்டிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் மீண்டும் இங்கு வந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று பொறுப்பு மிக்க பதவியில் உள்ள டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார். பொறுப்பு மிக்கவர் என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவரிடம் எந்த இலாகாவும் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, எல்லா இலாகாவும் அவருடையதே என்பதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருப்ப தற்கு யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள்? எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர்கள், திட்டங் களை உருவாக்கும்போது, மரியாதைக்குக் கூட எங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. செல்வவான்களின் பணத்தையும், ஏழைகளின் ஓட்டுகளையும் அதிகாரக் குரலில் கேட்டுப் பெறும் அரசியல் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் தேசிய சர்க்கார் 15 ஆண்டுகள் இருந்தும் ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. 100க்கு 95 மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறார்கள். டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துக் காட்டும் நிலைமை இருக்கிறது. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முற்றுப்பெற்று மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடுவிலே இருக்கும் இந்த நிலையில், மந்திரிசபை உறுப்பினராக உள்ளவரின் கண்டனம் இப்படி இருக்கிறது. 100க்கு 95 பேர் இழுத்துப் பறித்துக் கொண்டுள்ள இந்த நேரந்தானா, மக்களுக்கு வரி போடுவதற்கு ஏற்ற நேரம்? அதிலும் மறைமுக வரிகள்! மற்றும் ஒரு புள்ளி விவரம் சர்க்கார் அமைத்த தேசிய ஆய்வுக்குழு கூறியிருப்பது 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரந்தான் வேலை கிடைக்கிறது. 200 இலட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 45 இலட்சம் மக்களுக்கு 4 மணி நேரம் வேலை கிடைக்கிறது, மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கிறோம் - மக்களிடமிருந்து பெற்ற பணம் - கடனாகவும் உதவித் தொகையாகவும் வெளியே இருந்து பெற்ற பணம் - பதினைந்து வருடச் சுயராஜ்யத்துக்குப் பிறகு, பன்னிரண்டு வருடத் திட்ட வேலைக்குப் பிறகு, 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரந்தான் வேலை கிடைக்கிறது. திட்டங்களுக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்த பிறகு திட்டங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டான பிறகு இந்த நிலை இருக்கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு? மற்றொரு நிலைமை என்னவென்றால், நமது வெளிநாட்டு இருப்புக் கரைந்து விட்டது, ஏற்றுமதி விழுந்து விட்டது. வெளி நாடுகள் தரக்கூடிய உதவித் தொகையில் வெட்டு விழும்போல் தெரிகிறது. மறைமுக வரிகள் வளர்ந்தபடி உள்ளன. விலைகள் ஏறியபடி உள்ளன. நேர்முக வரியைச் செலுத்தாமல் நழுவி விடுகிறார்கள். கருப்புப் பணம் பெருகிக் கொண்டு வருகிறது. 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகக் கூறப் படுகிறது. ’ஏன் இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்படாமல் இருக்கிறது? என்று நிதி அமைச்சரைக் கேட்கிறேன். திட்டங்களுக் காக வரி செலுத்தி வரவேண்டும் என்று, மக்களிடம் எந்தத் துணிச்சலில் கூறுகிறார்? 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருக்கிறதே, அவர்களிடம் காட்டுவது தானே கண்டிப்பு! இந்த 118 கோடி ரூபாயில் ஒரு பாதியையாவது இவர் அக்கறை எடுத்துக்கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாண்டு வசூலித்திருப்பாரானால், மக்களுக்கு வரி போடவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே! ஆனால் அவர் துண்டு விழுவதைச் சரிக்கட்ட வரி போடுபவரல்ல! பாதுஷா போலக் கூறுகிறாரே. 71 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் போகிறது என்ற அவருக்கு வரி வசூலிக்கும் கலெக்டர் மனப்பான்மை இருக்கிறதேயன்றி, இந்தப் பெரிய துணைக் கண்டத்து வளர்ச்சியைக் காண விரும்பும் அதிகாரியின் மனப்பான்மை இல்லை. அதனால் தான் எனது நண்பர் புபேஷ் குப்தா, இவர்களின் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் உள்ள அரசியல் தத்துவம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்பினார். எனவே, நான் சாட்ட விரும்பும் முதல் குற்றச்சாட்டு, இதுவே. உங்களிடம் எந்தத் திட்டவட்டமான அரசியல் தத்துவமும் இல்லாததால் நீங்கள் குருட்டாம் போக்கிலே, நாட்டை முட்டுச் சந்துகளிலே இழுத்துக் கொண்டு செல்கிறீர்கள்! ஆகவே, இந்த வரி விதிப்புகளால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன என்று கூடத் தெரிய முடியவில்லை . வரியும், வரி அதிகரிப்பதும் சுபீட்சத்தின் அறிகுறி என்று அவர்கள் பேசிக்கொண்டு போகிறார்கள். சுபீட்சத்தின் அறிகுறி என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் யாருடைய சுபீட்சம் என்பதற்குப் பதில் அளித்தீர்களா? மக்களின் எந்தச் சாராரின் சுபீட்சம்? அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை . எனவே, மறைமுக வரிகள், குறிப்பாக அடிப்படையில் மிகத் தேவைப்படும் பண்டங்களின் மீது விதிக்கப்ட்டுள்ள வரிகளை வரி மசோதா, லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், நீக்கி விட வேண்டும். நிதி அமைச்சர் வேதாந்த மனப்பான்மை கொண்டவர் என்று புகழப்படுகிறார். ஆளுங்கட்சி உறுப்பினர் களின் கண்டனங்களை அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருப்பா ரானால், ஒருவரும் இந்தப் புதிய வரிகளை ஆதரிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். கட்சி கொடுத்த கொறடாவினால் ஓட்டுகள் சாதகமாகக் கிடைத்தன. கட்டுப்பாட்டுக்குப் பணிந்து ஆதரவு அளித்தனர். எனவே, அவர் இந்த வரிகளை விதிக்கத் தர்மம் இடம் தரவில்லை . எனவே அவர், அவருடைய ஆளுங் கட்சி உறுப்பினர்களே சொல்லியுள்ள கண்டனத்திற்கு மதிப்பு அளிப்பாரானால் அவர் இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த வேதாந்தத்தை அவர் மணந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறதோ, அதற்கே கூட, பெரிய மதிப்பு அளித்தவராகத் திகழ்வார். துணைத்தலைவர் அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில், இந் நாட்டிலே விசித்திரமான எங்கும் காணாத விந்தையான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகம் பற்றிச் சிறிதளவு கூற விரும்புகிறேன். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே கோபதாபமாகத்தான், இரு சபைகளிலும் உள்ள ஆளுங் கட்சி உறுப்பினர்கள் புதிய வரி ஏற்பாடுகளைக் கண்டித்துப் பேசினர். ஆனால் வெளியே சென்றாலோ, இன்றைய சர்க்காரை அவர்கள் ஆதரித்துத் தீரவேண்டியது இருக்கிறது. கொறடா கொடுக்கப்படுகிறது. அதனால் சர்க்காருக்குச் சாதகமாக ‘ஓட்’ அளிக்கிறார்கள். இந்த மாதம், விரைவில், கம்யூனிஸ்டுக் கட்சி, ஜனசங்கம், சுதந்தராக் கட்சி நான் எந்தக் கட்சியில் இருப்பதைக் பெருமையானதாகக் கருதுகிறேனோ, அந்தக் கட்சியும் நாங்கள் எல்லோரும் தனித்தனியாக, வரிப்பளுவைக் கண்டித்து, கண்டனக் கூட்டங்கள் நடந்த இருக்கிறோம். மக்களிடம் சென்று இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஏற்கெனவே வறுமையால் வதைப்படும் மக்களை இந்த வரிகள் மேலும் வாட்டி எடுக்கும் என்று நாங்கள் பேசும்போது, இதே காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாம் முன் வந்து, சர்க்காரைப் பாதுகாக்க ஆதரவுப் பிரசாரம் செய்யப் போகிறார்கள். ஆனால், மக்கள் உங்கள் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணாதீர்கள். சர்க்காரை ஆதரிக்க இந்தச் சபைக்கு வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை மட்டுமல்ல, சபையிலே என்ன சொல்லப்படுகிறது என்பதையும் அவர்கள் படிக்கிறார்கள். எனவேதான், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நிதி அமைச்சர் விதித்துள்ள மறைமுக வரிகளைச் சரியான முறையிலும், துணிவுடனும் கண்டித்தது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி அமைச்சர், திரும்பிப் பார்த்து, ஆனால் எனக்குப் பணம் வேண்டுமே! என்று கேட்கக் கூடும். பணம் பெற நான் கூறக் கூடிய வழிகளிலே ஒன்று, வருமான வரி நிலுவையை வசூலிப்பது. ஏமாற்றுபவர்களைக் கண்டு பிடியுங்கள்! நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்! என் நண்பர் புபேஷ் குப்தா சொன்ன வற்றை எல்லாம் நான் மறுபடியும் கூறத் தேவையில்லை. உங்களால் ஜீரணிக்க முடியாமல் போகக்கூடும். ஆனால், இப்போது உள்ள அமைப்பு முறையின்படியே கூடப் பல்வேறு இலாக்காக்களிலே சிக்கனம் ஏற்படுத்தினால் நிர்வாக அமைப்பு களிலே உள்ள சந்து பொந்துகளை அடைத்துச் சீர்படுத்தினால், நிர்வாகத்தை நடத்திச் செல்லக்கூடப் பணம் கிடைக்கும். ஆனால், இப்போது இந்தப் பகுதியில் உள்ள நாங்கள், நிர்வாக அமைப்பு முறைகேடாக இருக்கிறது, இலஞ்ச ஊழல், பதவி தருவதில் சலுகை போன்றவைகள் உள்ளன என்று எடுத்துச் சொன்னாலும் மந்திரிசபை உறுப்பினர்கள் ‘நிரூபித்துக் காட்டு’ என்று கூறுகிறார்கள். ஹைதராபாத் சிக்கனக்குழு, இலஞ்சப் புகாரை மெய்ப்பித்துக் காட்டுவது கடினம் என்று அடிக்கடி கூறுகிறது. அதனாலேயே புகார் எழுகிற போதெல்லாம் விசாரணை நடத்தத் துளிகூடத் தயக்கம் காட்டக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறது என்றாலும், இன்றைய சர்க்கார் மேற்கொண்டுள்ள போக்கு எப்படி இருக்கிறது? முந்திரா ஊழல் நடவடிக்கையின்போது, குற்றம் செய்தவர் என்று காட்டப்பட்ட, இந்திய சர்க்கார் அதிகாரி ஒருவர்… எச்.எம்.படேல் என்பவர், நர்மதாப் பள்ளத்தாக்குக் கார்ப்பரேஷனில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிகையில் பார்த்தேன். தற்காலிகப் பதவிதான். அந்தச் சபையில் இது குறித்துக் கேள்வி கேட்கப்பட்டபோது, பிரதம மந்திரி எழுந்திருந்து……. புபேஷ் குப்தா: இரண்டு வருஷங்களுக்குப் பிறகு அவருக்குப் பத்மவிபூஷண் பட்டம் கொடுப்பார்கள்…! அண்ணா : ஏன் மந்திரி சபையிலேயே இடம் கிடைக்கக் கூடும். லோக்சபையில் கேட்கப்பட்டபோது பிரதம மந்திரி எழுந் திருந்து தமக்கு அது குறித்துத் தெரியாது என்ற பதிலளித்தார். அவர் அவ்விதம் சொன்னது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், அவர் ஆமாம், யார் நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.. என் ஒப்புதல் அதற்கு உண்டு என்று கூறி இருந்திருப்பாரானால் நான் திடுக்கிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளையாக, எனக்கு அது தெரியாது என்று அவர் பதில் அளித்தார். இராஜ்ய சர்க்காருக்கும் மத்திய சர்க்காருக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து அறிவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து தேசிய ஒருமைப் பாட்டுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் உங்கள் சர்க்கார்களிலே ஒருமைப்பாடு ஏற்படுத்துங்கள்! ஏன் அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்? எப்படி அமர்த்தப்பட்டார்? என்பது எனக்குத் தெரியாது என்று கூறுகிற ஒரு பிரதம மந்திரி இருக்கிறார். இது பற்றிப் படிக்கும்போது மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? முந்திரா ஊழல் பிரச்சினையில், இந்த அதிகாரி பிணைக்கப்பட்டிருந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் பசையுள்ள ஒரு வேலையில் அமர்த்தப்பட் டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் படித்தால், மக்கள் என்ன சொல்லுவார்கள்? உங்களுடைய சமதர்மப் பேச்சு, சமதர்மத் தத்துவம் கிடக்கட்டும். (இந்த நியமனம் பற்றி) மக்கள் என்ன பேசுவார்கள்? அதனால்தான், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்கிறேன், ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்கிறேன், ஓட்டைகளை அடைக்க வேண்டு மென்றால் உண்மையான, நிரந்தரமான மாறுதல் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டாக வேண்டும். நிர்வாகத்தில் என்ன சீரமைப்புச் செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வுரை கூற அழைக்கப்பட்ட கோர்வாலா, தமது அறிக்கையில் வருமான வரிமுறை பற்றிக் குறிப்பிடுகையில், இதுபோலக் கூறியுள்ளார்: “வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், பொது மக்கள் முறையிடுவது என்னவென்றால், சாமானியர்களைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துகிறார்கள். ஆனால் பல இலட்சக்கணக்கில் வரி கொடுக்காமல் ஏமாற்றித் திரிபவர்கள் தப்பித்துக் கொண்டு விடுகிறார்கள்” என்பதுதான். வருமான வரி விசாரணைக் குழுவினால் சரியான எந்தப் பலனையும் பெற்றளிக்க முடியவில்லை . துளிகூடக் கவலையின்றி, மிகத்துணிகரமாக, வரி ஏமாற்றும் பேர்வழிகள், தங்கள் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு போகிறார்கள். இதைக் காணும்போது, மிகுதியும் செல்வாக்குள்ள செல்வவான்களுடன் மோதிக்கொள்ள நேரிடும் போது, இந்தச் சர்க்காரின் கையாலாகாத்தனந்தான் தெரிகிறது என்ற நம்பிக்கை மிகப் பரவலாக இருக்கிறது’’ கையாலாகாத் தனம் என்ற வார்த்தையை, நான் அவ்வளவு கடுமையான வார்த்தையைக் கூற ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இருப்பேன். ஆனால், பொது நிர்வாகச் சீரமைப்புக் காண வழி கூறும்படி சர்க்காராலேயே அழைக்கப்பட்ட காரணத்தால் கோர்வாலா அவர்கள் சர்க்காரின் கையாலாகாத் தன்மை என்று கூறுகிறார். உங்கள் சர்க்கார் கையாலாகாதது என்று கூறியிருக்கும்போது, கோடி கோடியாகப் பணம் தரும்படி நீங்கள் எந்த யோக்கியதையின் பேரில் கேட்கிறீர்கள் என்று மந்திரிசபையினரைக் கேட்கலாமல்லவா? எனவே, நிர்வாக அமைப்பிலே இன்னும் சற்று உயிர்ப்புச் சக்தி, செயலாற்றும் திறன் ஏற்பட வேண்டும் என்று நம்புகிறேன். இதோ மற்றொரு கண்டனம், இது வர்த்தகத் துறை அமைச்சுப் பற்றியது. பெரிய வணிக முதலாளிகளின் விருப்பத்துக்கு இசைவு தருவதிலே வணிகத்துறை அமைச்சு மிகவும் கெட்ட பெயர் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைகள் உலவுகின்றன என்று டி.டி.கிருஷ்ணமாச்சாரி சொன்னது ஒரு வேளை இதை எண்ணித்தான் போலும்! வேங்கைகள் வெளியே உலாவுகின்றன என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை, துணிந்து யூகமாகச் சொல்வதானால், வர்க்கத்துறை அமைச்சராக அவரே முன்பு இருந்ததால், அவருக்கு அப்படிப் பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே வணிகத்துறை அமைச்சு கெட்ட பெயர் எடுத்திருக்கிறது. - இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக்கொண்டே போவதை யும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலை இல்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாத நிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம் காட்ட மக்கள் முன் வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அமிசம் சரி, அந்த அமிசம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து திராவிட நாடு பிரிய வேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்றாலும், நீங்கள் தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக் கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ வளர்ச்சியைப் பெறத்தக்க விதமாக இல்லை என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை . புபேஷ் குப்தா: திராவிட நாட்டை விட்டு விடுங்கள். இந்தியக் குடியரசில் ஒரு பகுதியாக இருந்து, தமிழ்நாடு அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம். அந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வோம். அந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொள்கிறீரா? அண்ணா: என்னுடன் இருக்க வேண்டுமென ஆவலாக இருப்பதற்காக நான் புபேஷ் குப்தாவுக்கு நன்றி கூறிக்கொள் கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக்கொடுத்து விட்டு அவரைக் கூட்டாளியாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. நீண்ட காலத் தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில் வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளா தாரப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார்கள். அடிப்படையில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன. அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை. பிரதேசப் பொருளாதாரச் சீரமைப்பு என்பது பற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளா தாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப் போன பகுதி களில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக் கொண்டிருந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஒரு சீராகப் பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந்திருக்கிறீர்கள். முன்பொருநாள், திருமதி தேவகி கோபிதாஸ் வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டு வரப்படு கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்த போது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித்தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும், இந்திய யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படாதது என்ற நம்பிக்கை கொண்டவ ரிடமிருந்து வெளி வருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனி இயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்காவிட் 1ல், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார். சாலமன்: காங்கிரசுக்குள்ளே கூடத் திராவிடக் கழக ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணா : காங்கிரசிலே, திராவிடக் கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்.. சாலமன்: நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகிறேன். துணைத்தலைவர்: மேலும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? அண்ணா : மேலும் ஓர் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள். திருமதி அவர்களே! இந்திய யூனியனுக்கு ஒரு முள்ளாக இருக்கும் என்று அம்மையார் குறிப்பிட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். துணைத்தலைவர் அவர்களே! இதில் கவனம் செலுத்தும்படி, தங்கள் மூலமாகப் புபேஷ் குப்தா அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள் போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம்? வெளியே எடுத்து விடுகிறோம். அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம். புபேஷ் குப்தா: என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்கவில்லை… அண்ணா: உங்களுடன் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை , பிறகு விவாதிக்கலாம். எனவே, திருமதி அவர்களே! இந்திய ஒருமைப்பாட்டிலே நம்பிக்கை கொண்டவர் களாக இருப்பினும், தாம் வாழும் பகுதியில் தொழில் துறையிலே கட்டுப்பாடான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால், இந்திய ஒருமைப்பாடு எனும் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கருதுவதற் கில்லை என்று எண்ணுகிறார்கள். புபேஷ் குப்தா: தமிழ் நாட்டிலே உள்ள ஜனநாயக இயக்கத்தை உங்கள் பிரிவினை இயக்கம் வலிவற்றதாக்கி விடும் என்று நான் நினைக்கிறேன். தமிழ் நாட்டுக் கோரிக்கையையும் அது கெடுத்துவிடும். நீங்கள் விரும்புவது கிடைக்காது. துணைத்தலைவர்: நீங்கள் பேசி முடியுங்கள். அண்ணா: புபேஷ் குப்தாவின் ஆலோசனைக்கு நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயக முறையில் இருக்க முடியுமோ அப்படி இருக்க முயல்கிறோம். ஆனால், அதே போல நடந்து கொள்ளும் என்று நான் கம்யூனிஸ்டுக் கட்சியிடம் எதிர்பார்க்கவில்லை. புபேஷ் குப்தா: நாங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகவாதிகள். உங்கள் யோசனையை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். நல்ல யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வதிலே தவறில்லை. ஆனால், என் யோசனையை ஏற்றுக் கொண்டு, திராவிட நாடு முழக்கத்தை இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டு விடுவீரா? துணைத்தலைவர் அவர்களே, நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். துணைத்தலைவர்: காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக் கொள்ளுங்கள். மொரார்ஜி தேசாய்: அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தைப் புபேஷ் குப்தா எடுத்துக் கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டு விட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார்? புபேஷ் குப்தா: தி.மு.க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது. அண்ணா : துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக் கொண்டே போகலாம். ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை . பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது பற்றி எல்லா அரசியல் கட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக் காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்காக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால் நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக் காட்ட இதனைக் கூறுகிறேன். அது தான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டு செல்ல விரும்பவில்லை. ஓர் அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னைச் சிலோன் போய்ப் பிரச்சாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா? என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும், அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக் கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பி விடப் போவதில்லை. ஆனால், திட்டவட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு, இழிமொழி எதுவும் என்னை நான் ஏற்றுக் கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்து நிறுத்தப் போவதில்லை. அது குறித்துப் பேரப் பேச்சுக்கு இடமே இல்லை. எனவே, நான் பேச்சின் திசையைத் திருப்பப் போவதில்லை. பிரதேச ஏற்றத் தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதற்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன், வருமானவரி நிலுவை களைப் பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்ய வாரியாக அல்லது வட்டார வாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1)பம்பாய் நகரம், (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை, மேற்கு வங்கம், கல்கத்தா நகரம் உட்பட 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே, மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின் பேரிலும் நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்ப வேண்டும். புபேஷ் குப்தா: மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார். அண்ணா : மேற்கு வங்கத்தில் உள்ள முதலில், பெரும்பகுதி வெளியிடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத் துறை வருமானப் புள்ளி விவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில் சென்னையில் எங்களுக்கு 34.33 கோடி ரூபாய் கிடைத்தது. உத்தரப்பிரதேசத்துக்கு 146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசமோ, மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வப் பூமியாவதை நான் குறைகூறவில்லை. ஆனால், திட்டங்களை நிறைவேற்றியதில் முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரதேசத்தை விட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்க முடியும். இப்போது கூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை . சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது. எஸ்.சென்னாரெட்டி: உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது. அண்ணா : அது பாசனத்துக்காக இருப்பதை விட, மின்சார உற்பத்திக்காகத்தான் பெரிதும் இருக்கிறது. அத்தகைய உதவிக ளின்றி எமது விவசாய உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கடுமையாக உழைக்கத்தக்க புத்திக் கூர்மையுள்ள விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் பக்குவம் உள்ள உழவர்கள் இங்கு இருக்கும்போது, விவசாயத்துறைக்கான திட்டம் தீட்டியபோது, தெற்குப் பகுதி மீது பார்வை சென்றிருக்க வேண்டாமா? தெற்கே, மீன்பிடித் தொழிலை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம். போக்குவரத்துச் சாதனத் துறையிலே வளர்ச்சி கண்டிருக்கலாம். எத்தனையோ உள்ளன செய்வதற்கு. எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறி விட்டது மட்டுமல்லாமல், பிரச்சனையை எடுத்தாலே, பிரச்சினை யைத் தள்ளிப்போட முற்பட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சினை களை எழுப்பிய போது எங்கு மூலப் பொருள்கள் கிடைக்கின் றனவோ, அங்குத் தான் தொழில் திட்டம் அமைக்க முடியும். அதுதான் கண்டிப்பான பொருளாதாரத் தத்துவம் என்று கூறிக் கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போதுதான், இனிப் பிரதேச ஏற்றத்தாழ்வினை ஒழித்தாக வேண்டும் என்ற கொள்கையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அறிந்து கொள்வதற்காக ஒன்று கூறுகிறேன். இது போன்றதொரு பிரச்சினை இத்தாலியில் எழுந்தது. வட இத்தாலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெற்கு இத்தாலி தொழில் வளர்ச்சியில் மிகவும் பிற்போக்காக இருந்தது. இத்தாலிய சர்க்கார் அறிவுத் தெளிவும் துணிவும் மிக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டார்கள்; தெற்கு இத்தாலிக்கு எனத் தனியான திட்டங்கள் வகுத்தார்கள்; இத்தாலியின் தெற்குப் பாகத்தை வளமாக்க, உதவித் தொகைக் கடனுதவி ஆகிய சலுகைகளை வழங்கினார்கள். நான் உங்களை வசீகரமான பாதை வழியே அழைத்துச் செல்வதாக எண்ணாதீர்கள். அவ் வழியே சென்று, திரும்பிப் பார்த்து நாங்கள் இத்தாலி கையாண்ட முறைகளை முன்மாதிரியாகக் கொள்கிறோம் என்று கூறப் பார்க்காதீர்கள். நீங்கள் அந்த முறையைப் பின்பற்றக்கூடும். அந்த முறையைப் பின்பற்ற வேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லை . பின்பற்றி நடவுங்கள். ஆனால், அதனால் சமாதான மாகி, எனது அரசியல் கட்சி தனது அரசியல் தத்துவத்தை விட்டுக் கொடுத்து விடும் என்று நான் உத்தரவாதம் தரமுடியாது, தரத்தேவையில்லை, தரமாட்டேன். அதனுடைய தத்துவம், பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால் இந்நேரம் செல்வத்தை மிகுதியாக உற்பத்தி செய்திருக்க முடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததொரு கடலோரம் தெற்கே இருப்பது. துறைமுகங்கள் நிரம்பப் பயன்பட்டுக் கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்பு மிக்க நண்பர் தயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டலாத் துறைமுகம் கிடைத்து விட்டது. எமக்கோ இன்னமும் தூத்துக்குடித் துறைமுகம் அமைக்கப்பட்டாக வில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும் போது எங்கள் இராஜ்யத் தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்கு மானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்குமானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறை பற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக் கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காகத் தன்மீது வரி சுமத்தப் படுகிறது என்று தெற்கு உணருகிறது, உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே, நிதி அமைச்சருக்கும் அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும், வரிவிதிப்புக் குறையவும் ஏற்றவிதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பது பற்றி வழி காண வேண்டும் என்பதாகும். ஆளுங்கட்சியினர் மற்றொரு தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவது பற்றி, பிரித்துக் கொடுப்பது பற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள். உற்பத்தியே உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்ளுவது பற்றி இப்போது பேசாதீர்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதாரப் பாடப் புத்தகங்களிலேதான் முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம் விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறை யிலே, உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்து கொண்டுதானிருக்கும். உற்பத்தி செய்து முடித்து விட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஓர் இடத்தில் கொட்டி வைத்தான பிறகு ஒரு நல்ல நாளில் இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக் கொண்டில்லை. பொருளாதாரப் பாடப்புத்தகங்கள் எழுதும்போது மட்டுமே, அது முறையாகக் கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங்கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக் கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள், சரியான முறையிலே விநியோக மாகியிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால் நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்காது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர்களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித் தொகை தரப்பட வேண்டி ஏற்பட்டிருக்கிறது எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஓர் ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறவேண்டி இருக்கிறது. இத்துணைச் செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும், இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்ன வென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினை மீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது. புதிய புதிய கடிலா கார்களும் புதிய மாளிகைகளும் புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கன்டிராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கி வாரிப் போடுவதாக இருக் கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றொரு நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கெட்டு, கருப்புப் பணம்… என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே. இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம் மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப் பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில் என்ன விலை? கள்ள மார்க்கெட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கெட்டில் என்ன விலைக்கு விற்கப் படுகிறது என்பது தமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரி சபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் - திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்பு மந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கெட்டு இருப்பது சர்க்காருக்கே தெரியும். கள்ளமார்க்கெட்டு எப்படி நடத்தப்படுகிறது என்பது தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கெட்டுக்கார்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கூண்டில் கொண்டு வந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான், கள்ளமார்க்கெட்டுக் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ளமார்க்கெட்டு இருக்கும்போது, கருப்புப் பணம் உணடாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப் போட முடிவதில்லை. தனிப்பட்ட ஓர் அமைப்புக்குத் தொழிலிலே இலாபம் வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப்பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டு போய்ப் போட முடியாது. ஆகவே அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது. இத்தகைய டம்பாச்சாரி போக்கைத் தடுக்க வேண்டும் என்றுதான் அந்த நிதிமந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டு விட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்துவிட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது பத்திரிகைச் செய்திகளிலிருந்து. ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படை யாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது. எனினும், அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள் மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார். அன்று நிதி அமைச்சர், லோக் சபையிலே…. துணைத் தலைவர்: ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள். ஆனால் பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டு விட்டீர்கள். அண்ணா : இன்னும் ஓரிரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன். துணைத்தலைவர்: தயவுசெய்து முடித்து விடுங்கள். ஏனெனில், குறுகிய கால அளவே இருக்கிறது. அண்ணா : அன்று லோக் சபையில் நிதி அமைச்சர் ஒரு தீப்பெட்டியை எடுத்துக்காட்டி, இதோ வத்திப்பெட்டி இதனை நியாயமான விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். இப்போது போய் வாங்கும்படி நான் அவரைக் கேட்டுக்கொள்ளு கிறேன். இப்போது வத்திப் பெட்டியின் விலையும் ஏறிவிட்டது. ஏனெனில் கான்யூட் மன்னனைப் போல, நிதி அமைச்சர் விலைகள் ஏறாது என்று கூறினார் என்றாலும், கான்யூட் மன்னன் கூறியதான கடலலை ஓயவில்லை , விலைகளும் நிதி மந்திரியாரின் பேச்சினால் ஏறாமல் நின்று விடவில்லை. எந்தெந்தச் சமயத்தில் வரி போடப்படுகிறதோ, அப்போதெல்லாம் விலைகள் ஏறிவிடத் தான் செய்யும். விலைவாசி ஏற்றத்தை இந்தச் சர்க்கார் கட்டுப் படுத்த முடிந்தாலாகிலும், புதிய வரிகளுக்கு அதனைக் காரண மாகக் காட்ட முடியாவிட்டாலும், மறைமுக வரி போடப்படுவ தற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ள வசதியாகவாவது இருந் திருக்கும். எனவே, இந்த வரி மசோதா, ஒரு கசக்கிப் பிழியும் திட்டமாகும். கம்பளி நெய்வதற்காக ஆடுகளின் உரோமத்தை வெட்டி எடுக்கிறார்கள். புரிகிறது, அனால் நீங்கள் மக்களைக் கசக்கிப் பிழிகிறீர்கள், ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். திட்டத்தின் பெயரால் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். அதனால் மக்கள் திட்டத்தையே மிரட்சியுடன் பார்க்கச் செய்து விட்டீர்கள். மக்கள் திட்டம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் திட்டம் காரணமாகத் தான் இந்த வரிகளெல்லாம் போடவேண்டி இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, மக்கள் வரிகளை மட்டும் கண்டிக்கவில்லை, திட்டத்தின் அவசியம் பற்றியே சந்தேகப்படத் தொடங்குகிறார்கள். எனவே, ஒரு விதத்தில் எந்தத் திட்டத்துக்கு நீங்கள் கட்டுப்பட் டிருக்கிறீர்களோ அதே திட்ட ஏற்பாட்டையே நீங்கள் குலைத்து விடவும் செய்கிறீர்கள். வாதங்கள், இடையிடையே புள்ளி விவரங்களை வைத்து அடைத்த மறுப்புரைகள் ஆகியவற்றை நீட்டி முழக்க வேண்டாம். வறுமையில் நெளியும் மக்கள், அவர்கள் படும்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்ளுகிறேன். வரி செலுத்தக் கூடிய சக்தியின் கடைசிக் கட்டம் வந்தாகிவிட்டது. எனவே மறைமுகவரிகளை, அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக் கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுவேன். ஏனெனில், எப்போது வரவு செலவுத் திட்டத்தைக் கொடுத்தாலும், வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை. பிறகு சபையிலே மந்திரவாதிபோல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே, இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை, மக்களைக் கசக்கிப் பிழியவேண்டியதில்லை என்று கூறுகிறேன். பிரிவினைத் தடை மசோதா பற்றி அண்ணா ? 25-1-1963 அன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் பிரிவினைத்தடை மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தானும், தன்னைச் சார்ந்த தமிழ்ச்சமுதாயமும் கொண்டுள்ள கொள்கைப்பற்றி - அடிப்படை உரிமை ஆகியவை பற்றி அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் பேசியது - தமிழில்: “சமரசம் பேசுவதற்காகச் சீன ஆக்கிரமிப்பாளரும் மேசை முன் அமர நமது விருப்பத்தையும் ஒப்புதலையும் தெரிவித்தான உடனே, எதிரியை அல்ல - ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்று பவனை அழிக்க, அரசுக்கு ஒரு புதிய சட்ட ஆயுதத்தைத் தருவதற்காக அரசியல் சட்டத்துக்குக் கொணரப்படும் ஒரு திருத்தம் பற்றி நாம் இன்று விவாதித்துக் கொண்டிருப்பது வேதனையிலுள்ள விசித்திரம் போலும்! “மன்றத்தின் இரண்டு தரப்புக்களிலிருந்தும் கூறப்பட்ட பல கருத்துரைகளை நான் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண் டிருந்தேன். "சட்டத்தைத் துணைகொண்டு அடக்கிவிட நீங்கள் முயற்சிக்கும் இந்த இலட்சிய எண்ணத்தைப் புகுத்தியவன் என்ற முறையில் என் நோக்கத்தை மீண்டும் விளக்க அல்ல, ஆனால் எங்களுடைய கோரிக்கை குறித்து ஏற்பட்டுள்ள சில தப்பர்த்தங்களைப் போக்க அந்த இலட்சியம் பற்றிய விளக்கத்தையும் வரலாற்றையும் எடுத்துக்கூற விரும்புகிறேன். “கனம் உறுப்பினர் ஒருவர், பிசோ கேட்டதைக் கண்டு அல்லது அதைத் தொடர்ந்து திராவிடஸ்தான் கேட்கப்படுகிறது என்று கூறினார்; உண்மை அதற்கு வெகுதூரத்தில் இருக்கிறது. சுதந்திரம் வந்த பிறகு இப்படிப்பட்ட பிரிவினை உணர்ச்சிகள் கிளம்பின என்று மற்றோர் உறுப்பினர் கூறினார்; இது உண்மைக்கு நெருங்கி வருவதாகும். ஆனால் உண்மை இது அல்ல. தி. மு. கழகம், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அமைப்பு, திராவிடர் கழகம், சுதந்திரத்துக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது. எதிர்கால அரசியல் முறை அமைப்புப் பற்றிய சர்ச்சைகள் எழுந்தபோது, திராவிடர் கழகம் - (அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக நான் இருந்திருக்கிறேன்) - தென்னகத்துக்கு ஒரு அரசியல் ஏற்பாடு பற்றித் திட்டம் அறிவித்தது. அதனுடைய தொடர்பாகத்தான் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அந்த இலட்சியத்தை எடுத்து விளக்கிக் கொண்டுவருகிறது; எனவே இது ஆளுங்கட்சியின் செயல்கள் அல்லது செயலாற்றாத தன்மை ஆகியவைகளைப் பொறுத்ததாக அமையவில்லை. நாட்டின் வேறு இடங்களிலே உள்ள இதுபோன்ற அல்லது இதைவிடப் பயங்கரமான எந்தப் பிரச்சினைகளுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. பிரச்சினையின்மீது பாய்வதற்கு முன்பு கனம் உறுப்பினர்கள், பிரச்சினையை அலசியாவது பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, ஒரு ஆக்கிரமிப்பாளனைச் சந்தித்துச் சமரசம் பேச ஒப்புதலைத் தெரிவித்த உடனே, பெருமைமிக்க நாட்டுமக்கள் என்ற முறையில் எங்கள் பிரச்சாரத்தைத் தடை போட்டு நிறுத்துவதற்கு முன்பு எங்களைப் புரிந்து கொள்ள வாவது முயலக்கூடாதா என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். நாங்கள் என்ன அவ்வளவு தாழ்ந்துபோய்விட்டவர்களா - அரசியல் அரங்கத்திலே எங்களைத் தீண்டப்படாதவர்கள் போல நடத்துவதற்கு? எங்கள் கோரிக்கை மிக முக்கியமானதல்லவா? நீங்கள் எங்கள் மனத்தைத் திருப்திப்படுத்தவும், மக்கள் ஒத்துக்கொள்ளக் கூடிய முறையை மேற்கொள்ளவும் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டாமா? காரணகாரிய விளக்கங்களைக்கூடக் கேட்கக் கூடாதா நீங்கள்? அந்த முயற்சியையாவது செய்து பார்த்தீர்களா? இந்த மன்றத்தில் இதுதான் என் முறையீடு - கட்சித் தொடர்புகள் பற்றிய கவலையின்றி இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வாருவரும், இந்த அம்சம் பற்றிய தங்கள் சீரிய கவனத்தைச் செலுத்த வேண்டுகிறேன். எங்களுடன் கலந்து பேசிக் கருத்தறிந்தீர்களா? பிரச்சினையை அலசிப்பார்க்க, ஆளுங்கட்சி சிரமம் எடுத்துக் கொண்டதா? நான் ஆளுங்கட்சி என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எதிர்க்கட்சிகள் பலவும் பிரச்சினையை அலசிப்பார்க்க முயற்சி எடுத்துக் கொண்டன; ஆனால், இன்று காலையில் ஒரு உறுப்பினர், இந்தப் பிரச்சினையில் கம்யூனிஸ்டுக் கட்சி கூறியதைப் பெருமைப்படத்தக்கவிதத்தில் துணிவுடன் கூறினார். இலட்சியங்களுக்கும் - தேர்தல் உடன்பாடுகள் ஆகியவற்றிற்கும் சம்பந்தம் இல்லை; இப்போதுகூட - இன்றுகூடச் சென்னை மேயர் தேர்தல் சம்பந்தமாகச் சென்னைக் காங்கிரசுக்கட்சியும் தி. மு. கழகமும் ஒரு ஏற்பாட்டில் இணைந்துள்ளன. இந்த மன்றம், இதை அறிய அக்கறை காட்டும் என்று எண்ணுகிறேன். எனவே அரசியல் நேசத் தொடர்பு என்பது மற்றொன்று; இலட்சியம் முற்றிலும் வேறான விஷயமாகும். கோபார்கடே (மராட்டியம்) :- அப்படியானால், காங்கிரஸ் பிளந்து போவதை ஆதரிக்கிறது. அண்ணா : அதனால்தான் சொல்லுகிறேன். தேர்தல் நேசத் தொடர்பு என்றால் இலட்சியத்தினை இழந்துவிட்டதாகப் பொருள் இல்லை என்று. தன் இலட்சியத்தைக் காத்திடும் வலிவு சென்னைக் காங்கிரசுக்கு இருக்கிறது. சென்னை முதலமைச்சருக்கு வலிவான நம்பிக்கை இருக்கிறது. நமது விவாதங்களில் சென்னைக் காங்கிரசு பற்றியோ, முதல்வர் பற்றியோ வியாக்கியானங்களைச் சொல்வதை நான் விரும்பவில்லை. தம்முடைய இலட்சியங்களை விட்டுக்கொடுக்கா மலேயே, தேர்தல் நேசத் தொடர்புகள் கொள்ள முடியும் என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன். ஆனால், நான் இலட்சியத்தை உணரவேண்டும் - அலசிப் பார்க்க வேண்டும் - ஆய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது இந்த மசோதா, இந்தியாவுடைய அரசுரிமை யையும், பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க - நிலைநிறுத்தக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அரசுரிமைக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது? எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிவிக்கவும் இல்லை . ஒருவேளை சட்ட அமைச்சர் புதிய சட்டம் ஏதாவது தயாரித்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது; அதனால்தான் சபையில் இல்லை. அவர் இங்கு இருந்திருப்பாரானால், திரும்பிப் பார்த்துச் சொல்லுவார் - “நாட்டிலே பிளவுச் சக்திகள் உள்ளனவே, அறியாயா? இந்தக் காரியத்துக்காகவே தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைத்தோமே அறியாயா? தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூறிய யோசனைகளை ஒட்டியே நடவடிக்கை எடுத்து இருக்கிறோமே தெரியாதா?” என்றெல்லாம் கேட்டிருப்பார். தேசிய ஒருமைப்பாட்டுக் குழு, திறமைமிக்க டாக்டர் சர். சி. பி. இராமசாமி (ஐயர்) தலைமையில் அமைக்கப்பட்டதை நான் நன்றாக அறிவேன். அவர், இந்தியாவின் வல்லமை அல்லது - அரசுரிமை, பிரதேச ஒற்றுமை என்பனவற்றில் திடமான நம்பிக்கையுடன், பரிந்து போரிடத்தக்க வீரர்; எந்த அளவு நம்பிக்கை கொண்ட வீரர் என்றால் - திருவிதாங்கூர் திவான் என்ற முறையில் திருவாங்கூர் தனிச் சுதந்திரநாடு ஆகிவிட்டதாகப் பிரகடனம் செய்தவர்! பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அறிவித்தவர்! காங்கிரஸின் அதிர்ஷ்டம் அவர், கூட்டுச்சேராக் கொள்கையினர்! எனவே, அவரை நீங்கள் குழுத் தலைவர் ஆக்கிக் கொண்டீர்கள். இந்தக் குழு எவ்விதம் பணியாற்றிற்று என்பதை அலசிப் பார்க்கும்படி, இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டினை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழி கூறும்படி, இந்தக் குழு பணிக்கப்பட்டது. பிரிவினைப் பிரச்சாரத்தை ஒடுக்கிட மட்டும் அல்ல - தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தச் சிறந்த வழி என்ன என்பதனைக் கண்டறியும் வேலையும் அதற்குத் தரப்பட்டது. ஆக்க வேலைக்காக அக்குழு தந்த யோசனைகள் யாவை? ஆக்க வேலைக்கான திட்டங்கள் யாவை? தேசிய ஒருமைப் பாட்டுக் குழுவின் யோசனைகளிலிருந்து பிறந்துள்ள தடைச் சட்ட ம் தவிர! தேசிய ஒருமைப்பாட்டுக் குழு, தன் சகாக்களுடன் இந்தியா முழுவதும் உலா வந்தது; எங்கள் மாநிலத்துக்கும் வரவேண்டு மென்ற மரியாதை காட்டியது; பல்வேறு அரசியல் கருத்தினர் களைக் கண்டு கருத்தறிந்தது. ஆனால் தி. மு. கழகத்தினரைப் பார்க்க இயலவில்லை; ஏனெனில், அதற்கிடையில் எங்களுக்கு எங்கள் மாநில அரசு, வேலூர் மத்தியச் சிறையில் அறைகள் கொடுத்துவிட்டது! எங்களைச் சந்திக்காததற்குக் குழு கூறிய காரணம் இதுதான். ஆனால், அப்போது தேசிய ஒருமைப்பாட்டுக் குழு, எங்கள் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் - தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்பி இருந்தால் - எங்கள் அமைப்புச் செயலாளர் என். வி. நடராசன் சிறைக்கு வெளியேதான் இருந்தார். க. இராசாராம் எம். பி. வெளியில்தான் இருந்தார். இவர்களில் யாராவது ஒருவரைக் கண்டிருக்க முடியும். டாக்டர் இராமசாமி (ஐயர்) சிறைக்கு வந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன் - மற்றவர்களைச் சிறைக்கு அனுப்பி அனுபவம் பெற்றவர் அவர். சிறைக்கு அவர் போனது இல்லை. ஆகவே அவர் நெடுந் தொலைவு கடந்து சிறைக்கு வந்து எங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சாமானியர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைக் கொண்ட குழு அத்தகைய தாராளத்தனம் காட்டியிருக்க வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஆனால், வெளியே இருந்த சிலருடன் தொடர்பு கொள்ளச் சிரமம் எடுத்துக்கொண் டிருக்கலாம். மன்றத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் வேண்டிக்கொள்கிறேன். ஒருகணம் எங்கள் கோரிக்கையின் பயங்கரத் தன்மை - அதன் ஆபத்தான விளைவுகள் ஆகியவை பற்றி மறந்துவிடுங்கள்; தயவுசெய்து இதற்குப் பதில் கூறுங்கள்; எனக்கு வார்த்தைகள் கூட வேண்டாம். இலேசான புன்னகை - மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டல் - நேசப்பான்மையுடன் தலையை அசைத்தல் இவை போதும். சாதாரண மரியாதைக்காக, மக்களாட்சி முறையின் நாகரிகத் தன்மைக்காகவாவது எங்கள் கட்சியினருடன் இந்தக் குழு தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டாமா? இல்லை. அவர்கள் அதைச் செய்யவில்லை ஆனால் அவர்கள் ஓர் அறிக்கை தந்தனர். 13 - பே. அ. சொ. தொ-2, பூ. வெ. எண். 600 இந்த மசோதாவின் விளக்கத்திலும், தேசீய ஒருமைப்பாட்டுக் குழுவின் யோசனையை முற்றிலும் ஒட்டியே மசோதா கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, மசோதாவின் பிறப்பே முற்றிலும் மக்களாட்சி முறைக்கு மாறானது! இந்தக் கருத்தை உங்கள் முன் வைக்கவே, உமது பொறுமையைப் பாதிக்கும் தொல்லையைத் தர நேரிட்டது. நான் மற்றொரு விஷயத்துக்கு வருகிறேன்; திராவிடஸ்தான் கோரிக்கை ஆபத்தானது என்கிறார்கள் தவறாக! ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலர். சில மாதங்களுக்கு முன்புகூட - சில வாரங்களுக்கு முன்புகூட நாங்கள் என்ன கேட்கிறோம் என்பது தங்களுக்குப் புரியவே இல்லை என்று கூறிக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று மட்டும் புரிகிறது; ஆனால், இது ஆபத்துத் தரத்தக்கது என்றுமட்டும் புரிந்திருக்கிறது. இது எப்படிப் பகுத்தறிவாகும்? அரசியலாகும்? எனக்குப் புரியவில்லை . இந்த மன்றத்திலேயோ, அந்த மன்றத்திலேயோ எனக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை - உள் துறையமைச்சர் சொல்லியிருக்கிறார், ’கட்டுக்கு அடங்காது போனால் குறிப்பிட்ட எல்லையை மீறிப் போனால் - பிரிவினை சம்பந்தமான எல்லாப் பிரச்சாரமும் ஒடுக்கப்படும் என்று! ஒருவரும் அதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்கவில்லை. ஏனெனில் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ - வன்முறைச் செயலில் ஈடுபட்டாலோ - பிரிவினைப் பிரச்சாரம் தடுக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக்கொண்டார்கள். இது சில மாதங்களுக்கு முன்பு உள் துறை அமைச்சர் பேசியது. இந்த இடைக்காலத்திலே என்ன நேரிட்டுவிட்டது? நாங்கள் என்ன மண்டை ஓடுகளையும், தலைகளையும் வேட்டையாடிப் பெறுபவர்கள் ஆகிவிட்டோமா? ஏதாவது சட்டத்தை மீறிய நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவிட் டோமா? இல்லை; மாறாக, சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்டவுடன் தங்குதடையற்ற உள் உணர்ச்சியுடன் கூடிய ஒத்துழைப்புத் தந்தோம் - போர் ஆதரவு முயற்சிக்கு! சட்ட அமைச்சர் இப்போது இங்கு இல்லாததுபற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஓர் உறுப்பினர் : அவருடைய துணை அமைச்சர் இங்கு இருக்கிறார். அண்ணா : ஏனெனில், எங்கள் கட்சியின் தலைவர், அந்த மன்றத்தில் இதே கருத்தைப்பற்றிக் கூறியபோது, சட்ட அமைச்சர் எழுந்து நின்றார் - புன்னகையுடன் அல்ல - கடுமையான பார்வையுடன் கரங்களைக் கம்பீரமாக அசைத்தபடி சொன்னார் - ‘அதெல்லாம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தினால் ஏற்பட்ட நிலைமை’ என்று. சட்ட அமைச்சர் என்ற நிலையில் - சட்டத்துக்குக் கர்த்தா என்ற முறையில் சட்டத்துக்கு உள்ள வீரியம்பற்றித் தூக்கிப் பேசும் உரிமை பெற்றவர் அவர்; ஆனால், சட்டத்தின் சக்தியைப் பெரிதாக்கிப் பேசும் ஆர்வத்தில் அவர், தமது மனத்திலிருந்து சாதாரண மரியாதை காட்டும் உணர்ச்சியைத் துரத்தி அடித்துவிட்டார். தி. மு. கழகத்துக்குச் சட்ட அமைச்சர் நல்வார்த்தை கூறிச் சிபாரிசு செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. மக்களுடைய நல்லாதரவை நிரம்ப நாங்கள் பெற்றிருக் கிறோம். சட்ட அவையின் நல்லுணர்வுச் சிபாரிசு எதுவும், இதனை மேலும் வலுவுள்ளதாக்கிவிட முடியாது. மற்றும் ஒன்று கூறுகிறேன் - சட்டத்தின் சக்தியை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் மற்றொரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார். இன்று காணப்படும் ஒருமித்த நோக்கம், தேசிய ஆர்வம் எல்லாம் இந்தியத் தலைமையமைச்சருடைய திறமையாலும், அவர் கொண்டுள்ள மேலான எண்ணங்களாலும் ஏற்பட்டவை. சட்டங்களைவிட வலிவுமிக்கது அது! சட்டங்கள், தடுக்க - திருத்த உள்ளவை. இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே என்று கூறுகிறது சட்டம். கட்சித் தொடர்புகளைக் கடந்து, பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்தைத் தன் வயப்படுத்தும் தலைமையமைச்சரின் திறமைக்கு உள்ளது போன்ற வலிவு சட்டத்துக்குக் கிடையாது. சட்டத்தின் வலிவை வலியுறுத்திக் காட்டும் ஆர்வத்தில், சட்ட அமைச்சர், எதற்காகத் தலைமை அமைச்சரின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. சட்டத்தின் வலிவை வலியுறுத்திக்காட்டும் ஆர்வத்தில், இன்று காணப்படும் கூடிப் பணியாற்றும் ஆர்வம், பண்டித ஜவஹர்லால் நேருவின் வசீகரிக்கும் தன்மையாலும், ஜனநாயகப் பண்பாட்டு உணர்ச்சியாலும் விளைந்திருக்கிறது என்பதையாவது அவர் சொல்லியிருக்கலாம்; அமைச்சரவைக்குள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. வெளியார் எவராவது சட்ட அமைச்சரின் உரையைப் படித்தால், அவர்கட்கு என்ன எண்ணம் ஏற்படும்? நாட்டிலே அமைதி இருக்கிறது, எதனால்? இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தினால்! இல்லையானால், அனைவரும் நாட்டு விரோதிகளாவர்! தேச பக்தி அற்றவர்களாவர்! தொல்லை கிளம்பியிருக்கும். இப்படித்தான் அவர்கள் எண்ணுவர். அடித்துப் பேசமுற்படும்போது அளவுப் பொருத்தம் பார்த்துப் பேசும்படி சட்ட அமைச்சரை வேண்டிக் கொள்ளு கிறேன். இந்தியப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நாட்டு மக்களுடைய இதயங்களுக்குப் பாதுகாவலனாக இருக்க முடியாது; ஒரு நாட்டு மக்களுக்குச் சிறைக்காவலனாக மட்டுமே இருக்க முடியும்; எனவே, போர் ஆதரவு முயற்சிக்குத் தங்குதடையற்று உதவி தர தி. மு. கழகம் முன்வந்தது என்றால், நான் அதற்காக சர்க்காரிட மிருந்து நன்னடத்தைச் சீட்டுப் பெற எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு நல்லெண்ணம் அளிக்கப்படவேண்டும் என்றுகூட விரும்பவில்லை. ஆனால் எதற்காக இதை எடுத்துக்கூறுகிறேன் என்றால், இதிலிருந்து ஒரு இயற்கையான எண்ணம் - தானாக எழுந்துள்ள ஒரு உள்ளுணர்ச்சி உங்களுக்குப் புலப்பட வில்லையா? அந்த உணர்ச்சியை, காலத்தால் இயற்கையாக வளரச் செய்ய வேண்டாமா? இந்த மசோதா அதற்கான உரமா? இது அந்த உணர்ச்சியை அழிக்கக்கூடியது, எரிச்சலூட்டுவது! ஏன் இந்த உள்ளுணர்ச்சியை இயற்கையான முழு வளர்ச்சி பெற்றுப் பூத்திடச் செய்யக்கூடாது? இந்த மசோதாவுக்கு என்ன அவசரம் வந்தது? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? அதுதான் நான் குறிப்பாகக் கேட்பது. இதை உங்களுக்கு உணர்த்துவதற் குத்தான், போராதரவு முயற்சிக்கு நான் ஆதரவு அளித்ததைக் குறிப்பிட்டேன். நான் முன்பு சொன்னபடி நாங்கள் சாமான்யர் கள்தான். ஆனால் 34 இலட்சம் வாக்காளர்களின் பிரதிநிதிகள் - எந்த 50 இலட்சம் வாக்காளர்கள் எங்கள் மாநிலத்தில் காங்கிரசை ஆளும்கட்சி ஆக்கியிருக்கிறார்களோ, அங்கு! ஐம்பது இலட்சத்துக்கும் முப்பது இலட்சத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் குறித்து நான் அதிகம் வாதாடத் தேவையில்லை என்று நம்புகிறேன். இந்த மன்றத்தின் முன் உறுதி கூறுகிறேன். எங்கள் முன்னேற்றத்துக்கு அழிவு தேடாதிருந்தால், சட்டத் துணையுடன் அடக்கி அழிக்கும் முறைகளைக் கொண்டு வாராதிருந்தால், சென்னையில் அடுத்து வரப்போகும் ஆளுங்கட்சி நாங்கள் என்று உறுதி அளிக்கிறேன். மத்திய அமைச்சர் கனம் சி. சுப்பிரமணியம் அவர்கள் தமது கோவைப் பேச்சிலே எங்களுக்கு ஓர் அன்பழைப்பு விடுத்திருக் கிறார். பிரிவினையை விட்டுவிடுங்கள்; நீங்கள் அமைச்சரவை அமைப்பதை நான் வரவேற்கிறேன் என்று! அப்படிப்பட்ட ஒரு கட்சிக்குத்தான் நீங்கள் சாதாரண மரியாதை உணர்ச்சி காட்ட - ஜனநாயக நாகரிக உணர்ச்சி காட்ட மறுத்திருக்கிறீர்கள். தேசீய ஒருமைப்பாட்டுக் குழுவின்முன் எங்கள் நோக்கத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பினை எங்களுக்கு அளிக்கவுமில்லை; எங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக்கிக் கொள்ளவும் இல்லை . கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் என் மதிப்புமிக்க நண்பர் புபேஷ்குப்தா ஒரு யோசனை கூறினார்; அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய ஏன் எல்லா ஜனநாயக சக்திகளும் தேசிய சக்திகளும் ஒன்று படக்கூடாது? என்று. நான் அதை வரவேற்கிறேன். மக்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய விரும்புகிறேன். ஏன் அப்படிப்பட்ட தீரமிக்க போட்டியிலிருந்து ஓடி விடுகிறீர்கள்? புபேஷ் குப்தாவை இதையும் கவனிக்கும்படி கேட்டுக் கொள்வேன். எங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு, எங்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்வது நல்ல அரசியல் முறையல்லவா? புபேஷ் குப்தா : அதுதான் நான் சொன்னது; நான் முயற்சி செய்கிறேன். அண்ணா : புபேஷ்குப்தாவிற்கு என் நன்றி; ஆனால், எங்கள் மனத்தை மாற்ற அவர் மேற்கொண்டுள்ள முறை பலனளிக்கவில்லையோ அல்லது அவர் விரும்புகிற அளவுக்கு அது செய்யப்படவில்லையோ என்னவோ தெரியவில்லை - பலன் காணோம்! ஆனால், இந்த மன்றத்தைக் கேட்டுக்கொள்வேன். எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்கும் குழு அமைத்து எம்முடன் விவாதிக்க வேண்டும் என்று அரசுக்கு யோசனை கூறுங்கள். தவறு எம்மிடம் என்றால் திருத்துங்கள். உங்களிடம் தக்க காரணம் காட்ட இருந்தால் எங்கள் மனத்தை மாற்றுங்கள். அதை விட்டுவிட்டு எங்களை வற்புறுத்துகிறீர்களே! சட்ட விற்பன்னர்கள் நிரம்பியுள்ள இந்த மன்றத்தில் நான் விளக்கத் தேவையில்லை. சட்டத்தைக் கொண்டு வற்புறுத்துவது, கடைகெட்ட வாதிடும் முறையாகும்! பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துக்கள் போட்டி இடுகின்றன என்றால், அதிலே ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப் போர் நடத்துவதிலிருந்து நழுவிவிடுகிறீர்கள் என்றுதான் பொருள்படும். திருச்செங்கோட்டு இடைத்தேர்தலின் காலம் வரும் வரையில், எங்கள் மாநிலக் காங்கிரசார் வெளியிட்டுக் கொண்டிருந்த கருத்து என்ன? அவர்கள் சொன்னார்கள் - இந்த மன்றத்தில்கூட அது திரும்பவும் கூறப்பட்டது. என் நண்பர் புபேஷ்குப்தா சொன்னார். நான் தன்னந் தனியன் ஒரே. ஒருவன் என்றார். பசி நிறைந்த பார்வை, உனக்கு என்றார். என் பசி போக்கும் உணவு அளிக்கவில்லை இவர்கள். நான் தனியன் என்று அவர் சொன்னார்; மற்றொரு உறுப்பினர் எங்களுக்குக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவைகளில் பிடிப்பு இல்லை என்று பேசினார். அந்த உடன் பிறப்பாளர் மாநிலங்களிலுள்ளவர்களின் மனத்தை மாற்றிவிட்டதாகவோ, மகிழ்ச்சிதரத்தக்க அளவுள்ள ஆதரவைப் பெற்றுவிட்டதாகவோ, நான் எப்போதும் பாத்தியதை கொண்டாடியது இல்லை. நான் குறிப்பிடுவது, நான் இந்த விஷயத்தைக் குறிப்பிடும் போது, அந்த மொழிவாரி மாநிலங்களிலும் அதே உணர்ச்சி ஏற்படும் என்பதுதான். - நான் என்ன எண்ணுகிறேனோ அதனை அப்படியே வால்டேரில், ஐதராபாத்தில், மைசூரில் அல்லது திருவனந்தபுரத்தில் எண்ணுகிறார்கள் என்று நான் உரிமை கொண்டாடியதில்லை. நான் அந்த இடங்களுக்கெல்லாம் செல்லவுமில்லை; ஐதராபாத்தில் நான் ஒரு கூட்டத்திலும் பேசியதுமில்லை. அங்கெல்லாம் நான் ஏன் போகும்படி அனுமதிக்கக்கூடாது? என்னோடு நீங்களும் ஏன் வரக்கூடாது? நான், போட்டிப் பந்தய உணர்ச்சியுடன் ஒரு யோசனை கூடக் கூறுகிறேன் - எல்லாக் கட்சியினரும் கொண்ட, கலந்தாலோசிக்கும் குழு அமைப்போம் - எல்லோருமாக நாடு சுற்றி வருவோம் - நாட்டுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவோமே! மனம் மாறும்படி செய்யுங்கள்; பிறகு நான் கேட்பது, நினைத்துக்கூடப் பார்க்கத் தகாதது என்று சொல்லுங்கள்; ஆனால் இந்த மசோதாவைக் கொண்டுவராதீர்கள் - கொண்டு வந்து வைத்துக்கொண்டு இந்த மசோதாபற்றி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்காதீர்கள். என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார், ‘நாங்கள் தலைமறைவாய் ஆகிவிடுவோம்’ என்று. நாங்கள் எப்போதும், வெளியில் உலவுபவர்கள் - தலைமறை வாகிவிட உத்தேசம் இல்லை; ஆனால் மனம் வெதும்பிய அதிருப்தி மறைவிடம் செல்லும். புபேஷ் குப்தா :- அதுதான் நான் சொன்னது. அண்ணா :- மனம் வெதும்பிய அதிருப்தி நிலை, மறைவிடம் செல்லும்; அதனை எந்தச் சட்டமும் முயற்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது. பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்திலே கிடக்கும் அதிருப்தியைத் தாக்கி ஒழிக்கும் முறையை, அரசியல் தத்துவமுறை இன்னும் கண்டுபிடித்ததில்லை. எனவே இந்தச் சட்ட முயற்சியும் உண்மையான, மனம் வெதும்பும் அதிருப்தியை நீங்கள் மறைவிடத்துக்குத்தான் துரத்துகிறீர்கள். எங்கள் கோரிக்கை, வல்லமையுடைமைக்கு, அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று எதனால் கருதுகிறீர்கள்? எப்படி? இதற்குப் பதில் அளிக்குமுன்பு, அரசுரிமை என்றால் என்ன என்பது பற்றி நாம் தெளிவுகொள்ள வேண்டும். அரசுரிமை என்று கூறுகிறோமே, என்ன எண்ணிக் கொண்டு அதுபோலக் கூறு கிறோம்? அரசியல் சட்டத்தின் பாயிரத்தில் சொல்லப்பட்டிருக் கிறது, அரசியல் அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று. சட்டப்படி உள்ள வல்லமையுடைமை அல்லது அரசுரிமைக்குக் கூட்டாட்சியின் மத்திய அமைப்பிலும், கூட்டாட்சியில் அமையும் மாநில அரசு அமைப்பிலும் பிரித்துத் தரப்பட்டிருக்கிறது. ஏன் எங்கள் திட்டத்தை அரசுரிமை பெற்ற மாநில அமைப்புகள் மேலும் பலன் தரத்தக்க அரசுரிமை பெறுவதற்கான முயற்சி என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது? அந்த முறையிலே கருதினால் என்ன? திராவிடஸ்தான் கேட்டவுடனே அரசுரிமையின் வேர் வெட்டப்படுகிறது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அரசுரிமை முழுவதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலே மட்டுமே இல்லையே? கூட்டாட்சி முறையல்லவா கொண்டிருக்கிறோம்? பல அரசியல் தத்துவவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பெரிய அளவுள்ளது! சொல்லப்போனால் அதனை ஒரு துணைக் கண்டம் என்றே வருணித்திருக்கிறார்கள். பல்வேறு விதமான மனப்பான்மைகள் - பல்வேறான பாரம்பரிய உணர்ச்சிகள் - வரலாறு வெவ்வேறு வகையினதாக இருப்பதால்தான் இங்கு இரும்புக்கூடு போன்ற ஓரரசு முறை இருக்க முடியாது என்பதால்தான் - அரசியல் சட்டதிட்டம் வகுத்தவர்கள் ஓரரசு முறை அமைக்காமல், கூட்டாட்சி முறை அமைத்தனர். எனக்குள்ள குறை என்னவென்றால் - அதற்கு ஆதரவாக பிரஜா சோசலிஸ்ட் உறுப்பினர் - குருபாத சுவாமியும் மற்றவர் களும் கூறியுள்ளனர். இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கூட்டாட்சி முறையை நடத்திவந்தவிதம் மாநிலங்களின் மனம் முறியும்படியாக அமைந்துவிட்டது என்ற கருத்தை அவர்கள் உணருகிறார்கள் - அவர்கள் என் பக்கம் துணை நிற்காமல் இருக்கலாம் - வேக வேகமாக மாநிலங்கள் மானியம் பெறுகிற மன்றங்களாக ஆகிக்கொண்டு வருகின்றன என்று! தாம் பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போனதாக அவர்களுக்கு ஓர் உணர்வு இருக்கிறது. எனவே அதிகாரம் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது. இத்துடன் பிரதேச வளர்ச்சியிலே வேற்றுமையும் இணைகிறது. மொழிப்பிரச்சினை பற்றிய சிக்கலும் சேருகிறது; அந்நிலையில் என்போன்றவர்கட்கு ஏமாற்றம் ஏற்படுவதும், பிரிவினை பற்றி எண்ணுவதும், இயற்கைக்கு மாறானதென்று கருதுகிறீர்களா? எங்களைச் சந்திக்க, பாதிவழி வாருங்கள் - வந்து சொல்லுங்கள் - இதுவரையில்தான் செல்லலாம் - இதற்குமேல் போகக் கூடாது என்று கூறுங்கள். ஆனால், பாதிவழி வந்து, எம்மிடம் அதுபோலக் கூறும்போது, எங்களால் அல்ல - மாநிலங்களுக்குக் குந்தகம் விளையும்படியான முறையில் அரசியல் சட்டதிட்டத்தை நடத்திச் சென்றதால் உண்டாக்கிவிட் டிருக்கிற சிக்கல்களுக்குத் தகுந்த சமாதானம் சொல்ல வேண்டும். நிலக்கரிச் சுரங்கம் சம்பந்தமாக மேற்கு வங்காள அரசுக்கும் மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டிய நிலை ஏற்படவில்லையா? சட்ட அமைச்சர் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருக்கிறார்; வங்காளிகள் முழுத் திருப்தி அடைந்துள்ளனரா? அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்ற முறையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். என் நண்பர் புபேஷ்குப்தா கம்யூனிஸ்ட்டுக் கொள்கை யினராக இல்லாதிருப்பின், மேற்கு வங்க உரிமைக்காக வாதாடுவதில் முதல்வராக இருந்திருப்பார். வங்காளிகளிடம் உள்ள தேசிய உணர்ச்சிக்கு நான் தலை வணங்குகிறேன். புபேஷ் குப்தா : இங்கு நான் உரிமைக்காகப் போராடினேன்; டாக்டர் பி. சி. ராய் அதனை அறிந்திருக்கிறார். அண்ணா : ஆனால் போரிலே தோல்வி ஏற்பட்டு விட்டது. வருந்துகிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் மாநிலங்கள் மேலும் மேலும் மனம் உடைந்த நிலைக்குச் செல்லுகின்றன. அரசியல் சட்டதிட்டத்தைத் திரும்ப ஆராய வேண்டும் - அரசியல் சட்டதிட்டம் பற்றிய புதிய மதிப்பீடு பெற வேண்டும் என்று மத்திய அரசு நினைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. இதிலே என் கருத்துக்கு, நினைத்தபோது அமைச்சரவையி லிருந்து வெளியேறவும் மீண்டும் நுழையவும் சக்திபெற்ற ஒரு பிரமுகரின் ஆதரவு இருக்கிறது - பொருளாதார - பாதுகாப்புத் துறை இணைப்பு அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரைக் குறிப்பிடுகிறேன் - மறைந்த பெரியவர் பேரோஸ் காந்தியின் பெயரால் புதுடில்லியில் அமைந்துள்ள ஒரு மன்றத்தில் 1962 செப்டம்பர் 8-ல் பேசும்போது அவர், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசியல் சட்டதிட்டத்தைப்பற்றிப் பரிசீலனை நடத்த வேண்டும் என்ற விதியைப் புகுத்தத் தவறிவிட்டது குறித்துப் பேசினார் அரசியல் சட்டதிட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என்ற முறையில்! அதுமட்டுமல்ல; இதற்காகப் பொதுமக்களின் கருத்துத் திரண்டெழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பொதுமக்களின் கருத்துக்களைப் பாதுகாப்பவர்களில் ஒருவன் என்று என்னைக் கருதி என்னோடு வாருங்கள்! மாநிலங்களின் மனப்பான்மை என்ன என்பதைக் கண்டறியலாம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினருக்கும் தொல்லையை வருவிக்க நான் விரும்பவில்லை; யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்லுகிறேன். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியில் உள்ளவர்களிலே பலர், இந்தியா ஒன்று, பிரிக்கப்பட முடியாதது என்று ஆணையிட்டுச் சொல்லக்கூடும்; இந்தியாவின் அரசுரிமை மீதும், பிரதேச ஒற்றுமையின்மீதும், ஆணையிடக் கூடும்; ஆனால் அவர்களின் ஏற்பாடுகளில் ஒன்று உதாசீனப்படுத்தப்பட்டால் - அவர்கள் குறிப்பிடும் திட்டங்களிலே ஏதாவதொன்று எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால் - அவர்களுக்குத் தேவையான தொகை அவர்களுக்கென ஒதுக்கப்படவில்லை என்றால் அப்போதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றிய நினைவு பெறுகிறார்கள்! இதனால்தான் அண்ணாதுரை பிரிவினை கேட்கிறான் என்கிறார்கள். சேலத்துக்கு எஃகு ஆலை இல்லை என்று மறுத்துவிடுங்கள் - கிளம்புகிறேன்! தூத்துக்குடி அபிவிருத்தி கிடையாது என்று மறுத்துப்பாருங்கள் தி. மு. க. அங்குத் தோன்றுகிறது! எனவே, கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனை தி. மு. க. என்று கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தின் பெரியவர்கள் நீங்கள்; ஏன் இந்தப் பிரச்சினையைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்? அரசியல் அரங்கிலே, மேலான இடத்திற்குப் பிரச்சினையை உயர்த்துங்கள்! காட்டாட்சியை உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள்! சில உறுப்பினர்கள் திரும்பி என்னைக் கேட்பார்கள். “ஆனால் நீ, பிரிவினை பற்றி அல்லவா பேசிவருகிறாய்” என்று - “நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது” என்கிறார் புபேஷ் குப்தா. மற்றவர்கள் அறிந்திராவிட்டாலும்கூட, சோவியத் அரசியல் சட்டதிட்டம் புபேஷ்குப்தாவிற்குத் தெரிந்திருக்க வேண்டும்; பிரிந்துபோகும் உரிமையை அது அளிக்கிறது. ஆனால், அதனால் அரசுரிமைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று குய்யோமுறையோ எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கவில்லை! புபேஷ் குப்தா : சோவியத் யூனியனில் இருந்து கெட்டவைகளைத்தான் கொள்கிறார் போலும் - நல்லவைகளை அல்ல. அண்ணா : பிரிவினை கேட்டதுமே அரசுரிமைக்கு ஆபத்து வரும் என்பது இல்லை என்று அவருக்கு நான் கூற விரும்புகிறேன். அது மட்டும் அல்ல; எங்கள் பிரிவினைப் பிரச்சாரம், அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று வைத்துக் கொண்டே பார்த்தாலும், அரசை நடத்திச் செல்லும் ஒரு ஜனநாயகக் கட்சி என்ன செய்ய முயல வேண்டும்? அது மக்களிடம் சென்றிருக்க வேண்டாமா? அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று கூறவில்லையா? மக்கள் தான் அரசியல் சட்டதிட்டத்தை ஏற்படுத்தினார்கள். அரசியல் உரிமைகளின் பிறப்பிடமான மக்களிடம்தான் நீங்கள் சென்று முறையிட வேண்டும். நான் நம்பிக்கையுடன் மக்களை அணுகிச்செல்கிறேன் பொதுமக்களுக்கு விஷய விளக்கம் அளித்து, என்னை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் திறமை, ஆற்றல் எமக்கு உண்டு என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அவர்களின் அரசுக்குக் கூறக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உரிமையை ஏன் விட்டுக்கொடுத்து விடுகிறீர்கள்? ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலும், பொதுத் தொண்டாற்றும் பொறுப்புமிக்கவர் என்ற முறையிலும் நீங்கள் அரசுக்கும், எங்களுக்கும் - பொதுமக்களுக்கும் இடையிலே குறுக்கே நிற்க வேண்டாம். அண்ணாதுரை பிரிவினைப் பிரச்சாரம்தான் நடத்துகிறான் என்றால், அதன் ஆபத்தான தன்மையை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம்; நாங்கள் நன்றாக மக்கள் உணரும்படி பிரச்சாரம் செய்வோம் என்று யோசனை கூற வேண்டும். ஜனநாயகவாதி என்ற முறையில் சாமானியர்களுக்கு ஓரளவு மதிப்பு அளிக்க வேண்டும் என்று இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமானியன் நிரம்பப் படித்தவனாக இல்லாது இருக்கலாம் - சிறப்பாக, சட்ட அறிவு பெற்றிருக்காதவனாக இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது - சுண்ணாம்பு எது என்ற வேறுபாட்டைக் கண்டறிய அவனுக்குத் தெரியும். நீங்கள் மசோதாவைக் கொண்டு வருகிறீர்கள் என்றால், நாட்டு மக்கள் அவ்வளவு பேர்களுடைய பொது அறிவுத் திறனிலும் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்று கிறீர்கள் என்று ஆகும்! பிரச்சினையை ஏன் பொதுமக்களுக்கு விட்டுவிடக்கூடாது? நானும், விரல்விட்டு எண்ணக்கூடிய என் கட்சியினர் சிலரும் சேர்ந்துகொண்டு பொதுமக்களை ஏய்த்துவிட முடியும் - தவறான வழியில் அழைத்துச்செல்ல முடியும் என்று கருதாதீர்கள். சட்ட அமைச்சர் மற்றோர் மன்றத்தில் பள்ளிச்சிறார்களை மட்டும் மகிழ வைக்கும் ஒரு காரணம் காட்டினார். ராமிரெட்டி : தவறான முறை செல்லும் தத்துவ வாதம். அண்ணா : என்னுடையதா? ராமிரெட்டி : உங்கள் தத்துவ வாதம் தவறான வழி அழைத்துச் செல்லக்கூடியது. அக்பர் அலிகான் : இந்தியாவின் வரலாற்றில் வகுப்புவாத உணர்ச்சிகள் எந்த முறையிலே வேலை செய்தன? வகுப்புவாத உணர்ச்சியாலும், வகுப்புவாதத்தின் பேரால் வெளியிடப்பட்ட முறையீடுகளாலும் மக்கள் எப்படி வசப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்கள்? என்பதைக் கவனிக்க வேண்டும் என்று நான் அண்ணாதுரையைக் கேட்டுக் கொள்கிறேன். சந்தோஷ்குமார் பாசு : இந்த விஷயத்தை நேர்த்தியான முறையிலே எடுத்துப் பேசிக்கொண்டுவருகிற அண்ணாதுரையை நான் மற்றும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்; மத்திய அரசுக்கு அளவு கடந்த அதிகாரம் இருக்கிறது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கூச்சல் கிளம்பிய பிறகுதான், பாகிஸ்தானுக்கான கூச்சல் கிளப்பப்பட்டது என்பது உண்மை யல்லவா? அண்ணா : துணைத் தலைவர் அவர்களே! நான் சொல்ல வேண்டியவைகளை விளக்கியான பிறகு தாங்கள் அருள்கூர்ந்து எனக்கு மேலும் சிறிது நேரம் தந்தால் அதற்குப் பதிலளிக்க முயல்கிறேன். துணைத் தலைவர் : இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம். அண்ணா : அரசுரிமை மக்களிடம் இருக்கின்றவரையில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்ப்பளிக்க வேண்டிய தகுதிமிக்க அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதுபற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் எடுத்துச் சொல்லிக்கொண்டுவந்தபடி, கூட்டாட்சி அமைப்புமுறை ஒரு குறிப்பிட்ட அளவு கெடுக்கப்பட்டுப் போயிருக்கிற காரணத்தினால் ஓரரசு முறைக்குச் சென்றுகொண்டிருப்பதனால், பிரிவினைக்கான கோரிக்கையை, மற்ற மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியுடன் சேர்த்துப் பார்த்துக் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறேன். எங்கள் பிரச்சாரம் ஆபத்தானது என்று வைத்துக்கொண்டு பார்ப்பதனாலும்கூட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களை எதிர்ப்பிரச்சாரத்தால் சமாளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிக் கொண்டிருந்தேன். அவர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுப்பதாக இருந்தாலும், இந்த உரிமையையும் அரசுக்கு - நிர்வாகத் துறையினருக்கு விட்டு விடுவதாக இருந்தாலும், எங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து சமாளிக்க, அடிப்படை உரிமைகளைக் குறைக்க வேண்டியது அவசியம்தானா என்பதுபற்றி யோசித்துப் பார்க்கும்படி இந்த மன்றத்தின் உறுப்பினர்களை வேண்டிக்கேட்டுக்கொள்வேன். இந்த மன்றம் அதுபற்றி யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அடிப்படை உரிமைகள் கட்டுக்கடங்கக்கூடாதவை அல்ல என்பதை நான் தெரிந்திருக்கிறேன். நன்றாக அறிந்திருக்கிறேன். கட்டு திட்டங்கள் உள்ளன . … அக்பர் அலிகான் : மிக உண்மை . அண்ணா : பாராளுமன்றத்திற்கு அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்த - எல்லாவித உரிமைகளையும் கட்டுப்படுத்த எல்லா வித அதிகாரமும் உண்டு. இவை எளிதாக உணர்ந்துகொள்ளத்தக்க விஷயங்கள். இவைகளைப் புரிந்துகொள்ள அதிகச் சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்தவை கட்டு திட்டங்கள் அல்ல - உரிமைகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளச் சிறிதளவு சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆகவேதான், நமது அரசியல் சட்டதிட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்கு விதிக்கப்படும் கட்டுதிட்டங்கள் தக்க காரணங்களுக்காக இருக்க வேண்டும் என்று . இந்தக் கட்டுதிட்டத்திற்குத் தக்க காரணம் இல்லை என்பது எனது பணிவான முறையீடாகும். தக்க காரணம் இல்லை என்றால், முதலாவதாக நீங்கள் பிறர் பிரச்சினையை அலசிப் பார்க்கவில்லை; இரண்டாவதாக எங்களைப் புரிந்துகொள்ள வில்லை; மூன்றாவதாக நீங்கள் எமக்கு மாற்றுத் திட்டங்களைத் தரவில்லை; நான்காவதாக மக்களை நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கொள்ளவில்லை! சட்டத்துறை முறைப்படி இல்லாதிருக்கக்கூடும்; ஆனால் அரசியல் துறையில் முறைப்படி நீங்கள் புகுத்தும் கட்டு திட்டத்திற்குப் போதுமான காரணம் இல்லை. அடிப்படை உரிமைகளைப்பற்றிப் பேசும்போது, சட்ட அமைச்சர், அந்த மன்றத்தில் வேடிக்கையான ஒரு வாதம் செய்தார் என்பதுபற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். “அடிப்படை உரிமைகளை முழுவதும் அப்படியே பயன்படுத்தி இருந்தால், அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தியே சிலர் சீனர்களையே வரவேற் றிருப்பார்கள்” என்று கூறினார். ஆளுங்கட்சியினர், குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளக்கூடிய சில உணர்ச்சிகளையும் அவர் சேர்த்துக்கொண்டு பேசினார். நான் அதுபற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் சட்ட அமைச்சராகட்டும் வேறெந்த அமைச்சர் தானாகட்டும் பொருள்களை அறிந்து தீர்ப்பளிக்கும் திறமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை, ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்? இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேடைமீதேறி எவராவது, ‘நாங்கள் சீனர்களை வரவேற்கிறோம்’ என்று பேசினால், மக்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்? நமது மக்கள், அரசியல் சட்டதிட்டத்தின் பகுதிகளையும், விதிகளையும் கற்றறியாது இருக்கலாம்; ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளும் திறம் அவர்களுக்கு இருக்கிறது; அதனால்தான் விடுதலைப் போராட்டத்துக்கான அழைப்பு வந்ததும் வலிவுமிக்க ஏகாதி பத்தியம் புகுத்திய அடிமைத்தனம் எவ்வளவு இருந்தபோதிலும் மக்கள் முன்னணியில் வந்து நிற்கத் தயாராக இருந்தனர். எனவே, மக்களிடம் உள்ள நம்பிக்கையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்; அடிப்படை உரிமைகளைப் பொறுத்தவரையில், அந்த மன்றத்தில் சட்ட அமைச்சர் பேசியது, உண்மைக்கு வெகுதூரம் அப்பாற்பட்டது மட்டுமல்ல; ஆழ்ந்த யோசனை கொண்டதுமல்ல! ஆனால், நான் சொல்லிக்கொண்டு வந்தது போல, கட்டு திட்டங்களைப் புகுத்தலாம்; பாராளுமன்றத்துக்குக் கட்டுதிட்டங்கள் போட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்திக் காட்டத்தக்க அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்தே போடப்பட வேண்டும். மோதிலால் நேரு குழுவில் என்று நினைக்கிறேன். 1928-ல் ஜவஹர்லால் நேரு சொன்னார் மிகத் தெளிவாக - “நாம் நமது அடிப்படை உரிமைகளைப் பெறுவது என்பதுமட்டுமல்ல; அந்த அடிப்படை உரிமைகளை எந்த நிலைமை காரணமாகவும், நீக்கிவிடமாட்டோம் என்று நமது மக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்” என்று! என் வார்த்தைகளை நன்கு கவனியுங்கள், துணைத் தலைவர் அவர்களே! தங்கள் மூலமாக மன்றத்து உறுப்பினர்களையும் இந்த வார்த்தைகளைக் கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் “எந்த நிலைமை காரணமாகவும்!” அதற்குப் பிறகு நாம் வலிவற்றவர்கள் ஆகிவிட்டிருக்கக் கூடும்; அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக் கட்டுதிட்டம் விதிக்க வேண்டிய அளவுக்கு ஏதேனும் அசாதாரண நிலைமையாவது எழும்பியிருக்கிறதா? இல்லை. ‘இப்போது தி. மு. கழகம் சட்ட எல்லைகளை மீறாமல் இருந்திருக்கலாம். ஆனால் விஷமம் செய்யும் - ஆபத்து விளைவிக்கும் தன்மை இருக்கிறது. அந்தத் தன்மையை இரும்புக்கரம் கொண்டு ஒழித்துக்கட்டியாக வேண்டும்’ என்று வாதங்கள் கூறப்பட்டன. இந்தத் தன்மை என்ற வார்த்தை பற்றி சட்ட விற்பன்னர்கள் தரும் இடம் என்ன? கொள்ளும் பொருள் என்ன என்பது பற்றி எல்லாம் பேச எனக்கு நேரம் இல்லை என்று கருதுகிறேன். ஆனால் இதனைக் கூறுவோர் மிகச் சிறந்த சட்ட விற்பன்னர்களில் ஒருவர் நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி கூறியிருக்கிறார், “சில விஷக்கிளைகள் தழைத்து வளரக்கூட விட்டுவைக்கலாம், அவைகளை எடுத்துப் போடும் முயற்சியில் தருவையே வெட்டி வீழ்த்தி, உயிர்ப்புச் சக்தியையே நாசமாக்குவதைவிட” என்று. அடிப்படை உரிமைகள் பற்றியும் அதற்குப் போடப்படும் கட்டுதிட்டம்பற்றியும் எடுத்துக் கூறப்பட்ட நீதிமானின் கருத்துக்களிலே அது ஒன்றாகும். அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் பலப்பல இருக்கின்றன. நாம் அவைகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை; ஆனால், ஜனநாயக நாடுகளில், கருத்து முற்போக்குத் தாராளத்தன்மை எவ்விதம் உள்ளது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு காலத்தில், நியூயார்க்கில் என்று கருதுகிறேன். “ஆசிரியர்களாக ஆக விரும்புகிறவர்கள், அரசியல் சட்ட திட்டத்துக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பக்தி, விசுவாசம் காட்டும் ஆணை எடுத்துக்கொண்டாக வேண்டும்” என்று ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டபோது, நியூயார்க் கவர்னர், அத்தகைய முறையில் அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்திக் குறைப்பது தேவையற்றது என்று கூறிச் சட்டத்தைத் தடுத்துவிட்டார். ஆசிரியர் கடமை பாடம் போதிப்பது; அவருடைய நம்பிக்கைகளை, உணர்ச்சிகளை எடுத்துக்காட்டுவது அல்ல என்று அவர் வாதிட்டார். மற்ற ஜனநாயக நாடுகளிலே வளர்க்கப்பட்டுள்ள முற்போக்கான தாராளத் தன்மையுள்ள பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்பவாவது நமது சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அழித்துவிடும் வலிவு இருக்கிறது - எந்த எதிர்க்கட்சியையும் அழிக்கும் வலிவு, இன்று தி. மு. கழகம்; நாளைக்குக் கம்யூனிஸ்டுக் கட்சி; மறுநாள் ஜனசங்கம் என்று கூறுவதானால், நான் கூறுகிறேன் உங்களிடம் அதிகாரம் இருக்கிறது செய்துகொள்ளுங்கள்; ஆனால், சட்டத்தின்மூலம் அடக்குமுறை நடத்தி, வலிவும் ஆதிக்கமும் தேடிக்கொண்ட எந்த அரசும் எங்குச் சென்றன - விளைவு என்ன என்பதை நினைவில் வையுங்கள்; நான் கவனப்படுத்தத் தேவை இல்லை. இன்றுகூடப் பார்த்தோம் - மன்றத்தின் இந்தப் பகுதியிலே புபேஷ் குப்தா, தி. மு. கழகத்தை மட்டுமல்ல ஜனசங்கத்தையும் அது வகுப்புவாத அமைப்பு என்று அவர் கருதுவதால் எதிர்த்துச் சமாளிக்கவேண்டும் என்றார். பிரஜா சோஷலிஸ்டுகள், தி. மு. கழகத்தைவிட அதிக ஆபத்தானது கம்யூனிஸ்டு கட்சி என்று கூறினர். எனவே, நாம் வசதியாகக் கிடைத்துவிடுகிறோம் - எதிர்க்கட்சிகளாக உள்ள நாம். .. கனம் யாஜி : இந்தியாவில் பிரிவினை வேண்டும் என்று வாதாடுகிற எந்தக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடியது அது. கம்யூனிஸ்டுக் கட்சியானாலும் சரி, தி. மு. கழகமானாலும் சரி. புபேஷ் குப்தா :- அவர்தான் திரு யாஜி. துணைத் தலைவர் அவர்களே! நாம் எல்லாரும் சேர்ந்து யாரையாவது எதிர்த்துச் சமாளிக்க வேண்டும் என்றால் அது திரு. யாஜியைத்தான். கனம் ஏ. கே. சென் : (சட்ட அமைச்சர்) துணைத் தலைவர் அவர்களே! இந்த அமைதி இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாகச் சொல்லப்பட்டது; நான் அப்படிச் சொல்லவில்லை; ஓரளவுக்கு அப்படி என்று நான் சொன்னேன்; தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக் காகத்தான் அந்த விதிகள் ஏற்பட்டதாகும். தி. மு. கழகத்துக்காக வேனும் குறிப்பிட்ட இன்னாரொருவருக்காகவேனும் என்றோ நான் சொல்லவில்லை; ஓரளவுக்கு இந்தியப் பாதுகாப்புச் சட்டம் இந்த அமைதிக்குக் காரணம் என்று சொன்னேன். இதில் என்ன தவறு? அண்ணா : நான் எதைக் குறை கூறினேன் என்றால் அவ்விதமான கருத்துரை, பரிவுகாட்டும் உணர்ச்சியல்ல என்பதுபற்றித்தான் குறை கூறினேன். ஏ. கே. சென் :- குழம்பிய குட்டையிலே மீன்பிடிக்க விரும்புபவர்கள் இருக்கிறார்கள். தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்; நாம் அதனைக் காணாமல் இருக்க முடியுமா? கண்களைக் கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? ஆனால் கனம் உறுப்பினர் அதனைத் தமது தலைக்குப் பொருந்தும் குல்லாய் என்று கொள்ளத் தேவையில்லை. நான் அவரையோ அவருடைய கட்சியையோ குறிப்பிடவில்லை. துணைத் தலைவர் : அண்ணாதுரை! நீங்கள் மேலாகப் பேசுங்கள்; இப்போது விளக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நம்புகிறேன். அண்ணா : ஆளுங்கட்சி பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் போக்கிலே சுவைகொள்ளும்படிச் செய்துவிட்டால், இன்று அது தி. மு. கழகத்தைக் குறியாகக் கொண்டிருக்கலாம்; ஆனால் நாளை, மற்றக் கட்சிகளின்மீதும் குறிபார்க்கப்படும் என்பதை மறுக்க உத்தரவாதம் என்ன இருக்கிறது? அதற்காக ஆளுங்கட்சி வாதாடத் தேவையில்லை. நாமே அதற்கானவிதமாக வாதாடிக்கொள்கிறோம். கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டுமென பிரஜா சோஷலிஸ்டு வாதிடுகிறது. ஜனசங்கத்தை ஒடுக்க வேண்டுமென கம்யூனிஸ்டுக் கட்சி வாதிடுகிறது; இது அதிகப்பட அதிகப்பட, ஆளுங்கட்சிக்குக் கொண்டாட்டந்தான். எனவே, மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன், அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் பிரச்சினை என்ற முறையில் இதனைக் கவனித்துப் பார்க்க வேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்கள் பிரச்சாரத்தைத் திடமாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தங்களால் முடியும் என்பதையாவது எடுத்துச் சொல்லட்டும்; எங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து சமாளிக்க முன்வரட்டும்; அந்தக் காரணத்துக்காக இந்த மசோதாவை முழுவதும் அவர்கள் எதிர்க்க வேண்டும். ஏனெனில் என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார், கொள்கை அளவில் இந்த மசோதாவை ஒத்துக் கொள்வதாக; மற்றொரு நண்பர் குருபாதசாமி - இந்த மொத்த நோக்கத்தை ஒத்துக்கொள்வதாகச் சொன்னார். புபேஷ் குப்தா : மொத்தமான அரசியல் நோக்கம் …. அண்ணா : அதன் பொருள் என்னவென்றால் இவர்கள் உரிமைக்குப் போடப்படும் கட்டுதிட்டங்களின் விளைவுகள் பற்றி உணருகிறார்கள் என்பதுதான், எனவே இப்படிப்பட்ட சட்டத்தின் விளைவுகளைப்பற்றி அது எந்தக் கட்சியின்மீது ஏவப்படுகிறதோ அதுபற்றி அல்ல - கருதிப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். தங்களிடத்திலேயும், மக்களிடத்திலேயும் ஆளுங்கட்சி யினருக்கு நம்பிக்கை இருக்குமானால், ஜனநாயக சமூகத்தில் எண்ண - எடுத்துரைக்க இருக்கும் உரிமை குறைக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான விஷயங்களில் உண்மையைக் கண்டறி வதும், அதனை எடுத்துரைப்பதும் சமூகத்துக்கும் அரசுக்கும் உள்ள மிக முக்கியமான நோக்கமாகும். தங்குதடையற்ற விதமாக விவாதித்துப் பேசும் முறை மூலமாகவே இது சாத்தியமாகும். பாகியாட் கூறியபடி, ஏதாவதொரு பக்கத்தில் வன்முறை துணையாக்கப்படுகிறபோது, அது உண்மையின் பக்கம் துணை நிற்கிறதா, பொய்யின் பக்கம் துணை நிற்கிறதா என்பது அறுதியிட்டுக் கூற முடியாததாகி விடுகிறது. கருத்துப்போரில் - உண்மை, இயற்கையாகப் பெறவேண்டிய சாதகங்களை எல்லாம் இழந்துவிடுகிறது. வன்முறை மூலம் அமைதியை ஏற்படுத்தாதீர்கள்! இதய மொழிபேசி நட்புறவு எழச்செய்யுங்கள் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, அடிப்படை உரிமைகளின் சார்பில் நிற்கும்படி ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்குக் கருத்து விளக்கம் அளிக்க உங்களுக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். கருத்து வேற்றுமைகளை எடுத்துரைக்கும் உரிமை, எண்ணும் உரிமை இல்லாது செய்திடச் சட்டத்தின் துணையைத் தேடுவதற்குப் பதிலாக, கடைசியாக எனக்குத் தவறான வழியில் தத்துவ சாஸ்திர முறை இருப்பதாக திரு ராமி ரெட்டி அவர்கள் சொன்னார்களே…. ராமிரெட்டி : தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் வாதமுறை, அண்ணா : எந்த உறுப்பினரும் தவறான வழி அழைத்துச் செல்வதற்கு இணங்கிவிடக்கூடாது; யாரையும் தவறான வழியில் அழைத்துச் செல்லும் திறமை எனக்கு இல்லை. ஒருவேளை என்னுடைய தத்துவ சாஸ்திர முறையே தவறானது என்று சொல்கிறாரோ என்று நினைத்தேன்; ஏனெனில் அந்த முறை அப்பழுக்கற்றதாக எனக்கு இருக்கவேண்டும் என்பதிலே நான் மெத்தக் கவலை கொள்பவன். நான் மற்றவர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்பவன் என்று கூறப்பட்ட புகாருக்கு நான் சொல்ல விரும்புவது, மக்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் வலிவுமிக்கவன் அல்ல நான் என்பதுதான்… - சாரோகி : துணைத்தலைவர் அவர்களே! கனம் அங்கத்தினர் அவருடைய மாநில மக்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்; அதனால்தான் இங்கு மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. ஒருவர் : மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வீர்கள் என்பதுதான், உள்ள பயம். அக்பர் அலிகான் : வகுப்புவாதக் காரணங்கள் பற்றி … துணைத் தலைவர் : சரி, அண்ணாதுரை, தயவுசெய்து பேச்சை முடித்துவிடுங்கள். நீங்கள் மாநில மக்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்வதாகவும், அதற்காகத்தான் இந்தச் சட்டம் தேவைப்படுகிறது என்றும் சொன்னார். சாரோகி : மக்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டு விடுகிறீர்கள்; அவர்கள் அதற்கேற்ப ஆடுகிறார்கள்; அதற்காகத்தான் இந்த மசோதா சட்டமாக்கப்படுகிறது. துணைத் தலைவர் : அவர்களும் ஆடிவிட, நேரிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அண்ணா : துணைத் தலைவர் அவர்களே! இந்த அறிவிப்பு சென்னைக் காங்கிரசுக்கு உள்ள திறமையை - ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தெரிகிறது. சந்தோஷ்குமார் பாசு : என் நண்பர் சொன்னார், வன்முறை வலிவை உபயோகிக்காதீர்கள் என்று. ஆனால், தி. மு. கழகம் வன்முறை வலிவை அறவே நீக்கிவிட்டதா? அல்லது அந்தப் போக்கினருடன் தொடர்பற்று இருக்கிறதா? நீங்கள் எப்போதும் வன்முறை வலிவை நீக்கியிருந்திருக்கிறீர்களா? அண்ணா : நிச்சயமாக; பலமுறை நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். சட்ட திட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளும் கட்சியினர் என்று. பாசு : இரயில்வே நிலையங்களையும் பெயர்ப்பலகை களையும் கொளுத்தியிருந்தாலுங்கூட . . . அண்ணா : இரயில் நிலையங்களை அல்ல - அரசியல் சட்டத்தை. என் மதிப்புமிக்க நண்பர், திராவிடர் கழக நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழக நடவடிக்கைகள் என்று தப்பாகக் கருதிக்கொள்கிறார். தொல்லை இதுதான். மன்றத்துக்கும் இதனை நான் கூறுகிறேன் - இந்த மசோதா வினால், நீங்கள் தி. மு. கழகத்தைத் தேர்தலில் ஈடுபட ஒட்டாமல் தடுத்து விடலாம்; ஆனால் திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கும் கட்சி அல்ல; ஆகவே, இந்தச் சட்டம் அவர்களைப் பாதிக்கப் போவதில்லை. பாசு : எங்களுக்குள்ள கவலை தி. க. வா, தி. மு. க. வா, என்பதல்ல; சட்டம் பற்றித்தான் நாங்கள் கருதுகிறோம்; அது எல்லோருக்கும் பிரயோகிக்கப்படக் கூடியது. வாஜ்பாய் : ஆனால் தி. க., காங்கிரசுக்குக் கூட்டாளி என்று நம்புகிறேன். அண்ணா : அதுபற்றி யோசிக்க வேண்டியது காங்கிரஸ் என் குறிப்பு இதுதான். துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன். அரசுக்குச் சொல்லுங்கள் இந்த மசோதா தேவையற்றது; ஜனநாயகத்துக்கு விரோதமானது; அடிப்படை உரிமையை வெட்டி வீழ்த்துவது என்பதை. நான் அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமை பற்றிச் சொல்லவில்லை. காங்கிரசாருக்கு உள்ள அடிப்படை உரிமைபற்றிச் சொல்லுகிறேன். இந்தப் பிரச்சினையிலே அவர்கள் பங்கு பெற்றவராக இல்லை; அவர்களை விலகி நிற்கும்படி சொல்லப்பட்டுவிடுகிறது. இந்த மசோதா சொல்லுகிறது - அண்ணாதுரையை எதிர்த்துச் சமாளித்தாக வேண்டும்; நீங்கள் அதிலே தோற்றுப் போய்விட்டீர்கள்; எனவே நான் வருகிறேன் - வரவிடுங்கள் என்றுசொல்லுகிறது. நான் மெத்த மதிப்பு வைத்திருக்கிறேன் சென்னைக் காங்கிரசாரிடம். ஆனால் இது, சென்னைக் காங்கிரசாரின் திறமையிலும், ஆற்றலிலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதுபோன்று இருக்கிறது. நான் மதிக்கிறேன். நீங்கள் அவர்களுடைய முக்கியத் துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அதுதான் தொல்லை, எதிர்த்துப் பிரச்சாரம் செய்து சமாளிக்கும் திறமை அவர்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைப்பதாகத் தெரிகிறது; வருந்தத்தக்க நிலைமை இதுதான். ஆகவேதான் ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டு கிறேன். அரசுக்குச் சொல்லுங்கள் நாங்கள் இருக்கிறோம், வீரமிக்க திடகாத்திரர்கள் - பிளவுப் போக்குகளை எதிர்த்துப் போராட, அண்ணாதுரையைக் கவனித்துக்கொள்ளுகிறோம்; எங்களை விடுங்கள்; அவன் நோஞ்சான்; ஒரு பார்வை போதும் - அழுத்தமான ஒரு வார்த்தை போதும் - அந்தப் பயலைப் பொசுக்கித்தள்ள என்று சொல்லுங்கள். உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசுக்கும் இதுபோலச் சொல்லி இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் இது சட்டப் புத்தகத்தில் ஏறிவிட்டால், இப்போது மட்டுமல்ல என்றென்றைக்கும் கருதுவர் - இந்தியாவிலே ஒரு நிலைமை ஏற்பட்டது; அப்போது ஒரு சிறு கட்சியினரைச் சமாளிக்க அல்லது என் நண்பர் புபேஷ் குப்தாவின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதானால் ஒரு தன்னந்தனி ஆளைச் சமாளிக்க இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் கொண்டுவர வேண்டி நேரிட்டது என்று. புபேஷ் குப்தா : இல்லை, இல்லை; நான் அதைச் சொல்லவில்லை. அக்பர் அலிகான் : அண்ணாதுரைக்கு நான் உறுதியாகச் சொல்லுவேன் ஒரு தனி ஆளுக்காகவோ - ஒரு தனி கட்சிக்காகவோ, இது கொண்டுவரப்படுவதல்ல; பிரிவினைத் தன்மைகள் எங்கு இருந்தாலும் பஞ்சாபில், சென்னையில், நாட்டிலே வேறு எந்தப் பகுதியிலிருந்தாலும் அதனை எதிர்க்கத்தான் இந்த மசோதா; அதுவும் கடந்த 30 ஆண்டுகளாக உள்ள வகுப்புவாத உணர்ச்சிகள் இவைகளையும் கவனத்தில் வைத்துச் செய்யப்படுவது. புபேஷ் குப்தா : துணைத் தலைவர் அவர்களே! நான் அவரைத் தனி ஆள் ஒண்டி ஆள் என்று சொல்லவில்லை. அண்ணா : நான் அவருடைய சொற்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன், கண்டித்து அல்ல. கனம் அக்பர் அலிகான் சொன்னதுபற்றிக் கூறுகிறேன். அவர் தமது வாதத்தைக் கூறும்போது அவருக்கு இருந்த தயக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் இதைச் சொல்வேன்; இந்த மசோதா தி. மு. க. மீது மட்டுமல்ல; மற்றும் சிலர்மீதும் குறிப்பார்த்துத்தான் வருகிறது. நான் எந்தக் கட்சியில் இருக்கிறேனோ, அது சம்பந்தப்பட்டமட்டிலே நான் கருத்துச் செலுத்துகிறேன்; அவர்களும் வேறு பிரதிநிதிகள் இருந்தால் இதுபோலப் பேசியிருப்பார்கள். ஆனால் சுயநலத்துக்காக இத்தகைய இலட்சியத்தை மூழ்கடித்துக்கொண்டவர்கள் இருப்பார் களேயானால், அவர்களைப்பற்றி நான் கருதத் தேவையில்லை. தி. மு. கழகத்தின் நோக்கத்தை எடுத்துக்காட்டுவதுதான் என் நோக்கம். வேறு பலர்மீதும் குறிபார்க்கக்கூடும். ஆனால் நாளிதழ்கள், கிழமை இதழ்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரசியல் மேடைப்பேச்சுக்களைக் கேட்கச் சென்றால், அவர்கள், கேடுகெட்ட தி. மு. க. என்றுதான் சுட்டிக் காட்டிக்கொண் டிருப்பதை பார்க்கலாம். ஆகவே, தி. மு. கழகத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டு வதனால், கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு நான் பதிலளித்தேன். கடைசியாக மசோதாவைக் கொண்டுவந்தவரை, ஜனநாயகத்தின் பேரால் - அரசியல் நாகரிக உணர்ச்சியின் பேரால் - கேட்டுக்கொள்கிறேன். தீமையை விலக்கிக்கொள்ளும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கை கொண்டு இந்த மசோதாவைக் கைவிடுங்கள்; அதற்கு இசைவுதர இயலவில்லை யானால், நெருக்கடி நேரத்தை எண்ணி இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினைகளைப் பின்னணியில் வைத்திருக்க வேண்டும். அவைபற்றி இப்போது பேசிக் கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவரும் உறுப்பினர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சியினருடைய முறைகள் நடவடிக்கைகள், மசோதா இவற்றினுக்கு என் கண்டன , எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள் நன்றி - வணக்கம்.” ------------------------------------------------------------------------ 1. அடுத்துவரும் 90 ஆங்கிலப் பேச்சின் தமிழாக்கம் இது ↩︎ இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா ** மாநிலங்களவையில் அண்ணாவின் போர்க்குரல் - 25-8-1963 ** இந்தித் திணிப்பை எதிர்த்து அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் பேசிய பேச்சின் முக்கிய பகுதி. இந்தி எதிர்ப்பையே குறிக்கோளாக வைத்து மாநிலங் களவையில் அண்ணா முழங்கிய போது இந்தி வெறியர்களின் உச்சியில் அறைந்தாற்போல் : “விளைவைக் குறித்து அஞ்சப் போவதில்லை ! இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரிடுவோம்! கைகட்டி வாய் பொத்திக் கிடக்க என் மனச்சான்று இடந்தராது. பல இன மொழிகளைக் கொண்ட துணைக் கண்டத்துக்கு ஒரே ஆட்சிமொழி இருக்க இசையமாட்டேன்!” என முழங்கி : “உத்திரப்பிரதேசம் - பீகார் - இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய தொடர்ந்தாற்போல் இணைந்திருக்கின்ற நிலப்பரப்பைச் சார்ந்த 42 சதவிகித மக்கள் பேசிவருகின்ற மொழி என்ற காரணத்தைக்காட்டி இந்தி மொழி திணிக்கப்படக்கூடாது. இந்தி மொழி பேசுகின்ற இந்த 42 சதவிகித மக்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் பரவி இருந்து, அப்பொழுது அவர்கள் பேசக்கூடிய இந்தி மொழியைத் திணிக்கத் துணிவதானால், அது அறிவுடைமைக்கும் அறநெறிக்கும், அரசியலுக்கும் ஏற்புடையதாக இருந்திடக்கூடும். ஆனால் அரசோ, இந்தியாவில் தொடர்ந்தாற் போல் இணைந்திருக்கின்ற இந்தி மொழி வழங்கும் பகுதிக்கு நிலையான என்றென்றும் நன்மையையும், மற்றப் பகுதிகளுக்கு நிலையான தீங்கையும் இதன்மூலம் வழங்கத் துணிந்திருக்கிறது. இம் மொழிப்பிரச்சினையில் எடுக்கப்படக்கூடிய முடிவின் மீதுதான் பொதுவாகத் தென்னகத்தின் குறிப்பாகத் தமிழகத்தின் எதிர்கால அரசியல் பிணைக்கப்பட்டிருக்கிறது.” இந்திய அரசின் ஆட்சிமொழித் துறையில் இன்றுள்ள நிலையே நீடித்திருந்து வரவேண்டும். - அதாவது, இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆங்கில மொழி நீடித்து வரவேண்டும் என்பதுபற்றி அண்ணா அவர்கள் வலியுறுத்திய பொழுது. ஆங்கில மொழியை, தக்கதோர் கருவி என்றும் அறிவுக்கான சாளரம் என்றும் குறிப்பிட்டார்கள். அவர் மேலும், இந்தி வழங்கப்பட்டு வருகின்ற மாநிலங் களில் முதன் முதலாக இந்தி வளமிக்கதாக ஆக்கப்படவேண்டும் என இடித்துரைத்தார். “இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்ற மொழிகளில் ஏதாவது ஒரு மொழி இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு நான் உடன்படவில்லை. இந்தியா ஒரே நாடு என்ற நிலையில் இருப்பதல்ல; அது ஒரு ஐக்கியநாடு என்ற அமைப்புடன் விளங்கிவருவதாகும்; இதுவுமின்றி, இந்திய சமூகம் பல்வேறு இனங்களைக் கொண்டிருக்கும் ஒன்றாகும்; நமது அரசியல் அமைப்பு பலவற்றை இணைத்திருக்கக்கூடிய இணைப்பு முறையாகும். பல இனமக்களைக் கொண்ட சமூக அமைப்பிலும், இணைப்புமுறை அரசியல் அமைப்பிலும், ஒரே ஒரு பொது மொழி தேவை என வாதாடுவது நமது சமூகத்தின் சில பகுதி மக்களுக்கு எதிர்பாராத அநீதியையும், இக்கட்டுகளையும் ஏற்படுத்திவிடும். பலப்பல இன மக்களையும், மொழிவழி மக்களையும் கொண்டிருக்கின்ற நாடு இந்தியா. இந்தியா ஒரு துணைக்கண்டம் என மிகப் பொருத்தமாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, ஆட்சி மொழியைப் பொறுத்தவரையில் செயல்படத்தக்க ஒரு பொது மொழியை உருவாக்கிக் கொள்ள நம்மால் இயலவில்லை. இன்றும்கூட, தேசியப் பாட்டுகளான ‘ஜனகணமன’வும் ’வந்தே மாதரமும்’ இந்தி மொழியில் இல்லாமல் வங்காள மொழியில் அமைந்திருக்கின்றன. “இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியாவின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் நீடித்திருக்கும்.” எனத் தலைமை அமைச்சர் நேரு கூறிய உறுதிமொழி, மசோதாவில் இல்லை; இம் மசோதா முழுமையானதாக இல்லை; இருபொருள் கொள்ளும் படியாக இது அமைந்திருக்கிறது; இந்தி பேசாத மக்களுக்கு இது மனநிறைவளிக்கவில்லை . வெறுப்பும், பகைமையும் வளராமல் தடுக்க மொழிச்சிக்கல் குறித்து மீண்டும் சிந்தித்து மறு ஆய்வு செய்யவேண்டும். அரசியல் சட்டத்தைத் திருத்துவதன்மூலம் இப்போதுள்ள நிலையே நீடிக்க வழி செய்யவேண்டும். நமது அரசியல் சட்டம் வளைந்து கொடுக்கும் தன்மையது; நமது அரசியல் முறை ஜனநாயகமாகும். அரசியல் சட்டத்தை ஏற்கெனவே பலமுறை திருத்தி இருக்கிறோம். ஆகவே மொழிச்சிக்கல் குறித்து உள் துறை அமைச்சர் மீண்டும் புனராலோசனை செய்ய வேண்டும். தொன்மையான மொழி படைத்த தமிழ் நாட்டு மக்களின் உணர்ச்சிகளை மதிக்க வேண்டும். ஆட்சிமொழியாக இந்தியைத் திணித்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்படும் என்றே தமிழர்கள் அனைவரும் கருதுகின்றார்கள். இந்திமொழி திணிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்து முழு மூச்சாக - ஓயாமல் - கடுமையாகக் கிளர்ச்சி நடத்தும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எதுவாக இருந்தாலும் சரி - நாங்கள் ஓயாமல் போராடுவோம். இந்த மொழிச் சிக்கலைப் பொறுத்தமட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது ஒரு சிறிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த மசோதாவின் எதிர்காலத்தைப் பொறுத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை உயருமா அல்லது அப்படியே இருக்குமா என்பது தெரியும். “இந்திமொழி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கப்படும்” என்ற தலைமை அமைச்சரின் உறுதிமொழி, இம் மசோதா மூலம் நிறைவேற்றப்பட வில்லை. கடந்த ஓராண்டுக் காலத்தில் நாம் உருவாக்கிய அமைதியான சூழ்நிலையையும், ஒற்றுமை மனப்பான்மையையும் குலைத்துக் குரோதத்தை இம்மசோதா ஏற்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று அல்லாமல் இந்தித் திணிப்பையும் அதன் விளைவுகளையும் உணர்ந்த தென்னக மக்களின் அதிகாரப் பற்றற்ற தூதுவன் என்கிற முறையில் நான் பேசுவதாகக் கொண்டு அமைச்சர் ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். ஆங்கில மொழி வசதியான சாதனமாகவும், அறிவின் திறவுகோலாகவும் திகழ்கிறது. எனவே, அது நீடிக்க வேண்டும். இந்தி ஆட்சிமொழி ஆவதற்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு களுக்குத் தக்க மறுமொழி அளித்து மன நிறைவு செய்யும் வகையில் இம் மசோதா இல்லை. இந்தியாவின் ஒரு சிறு பகுதியிலிருந்து இந்த எதிர்ப்புக் கிளம்பவில்லை. இந்தியாவின் தென்பகுதி முழுவதுமே இந்த எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆங்கிலத்தை விரட்ட வேண்டுமென்று திரு. புபேஷ்குப்தா கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருப்பதைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இங்கேதான் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். என் மாநிலத்தில் நான் தமிழில்தான் எழுதவும், பேசவும் செய்கிறேன். மேற்கு வங்காளத்தில் வங்காள மொழியை ஆட்சிமொழி யாக்க திரு. புபேஷ்குப்தா தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். தமிழின் தொன்மையை இந்தியோடு ஒப்பிட்டால் தமிழ் எவ்வளவு பெருமைபடைத்தது என்பதை அறியலாம். தமிழ் 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. 3000 ஆண்டுகள் பழமையான தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அண்மையில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார். தமிழர்கள் சிறந்த பாரம்பரியம் உள்ளவர்கள். 4 ஆண்டுகளானாலும் - 40 ஆண்டுகளானாலும் சிறை செல்வதற்குத் தயார்! தி. மு. கழகத்தின் முன்பு, இப்போது இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று இந்தி’ எதிர்ப்புப் போராட்டம்; மற்றொன்று பிரிவினைத் தடைச் சட்டம். இதுபற்றி எங்கள் பொதுக்குழு முடிவு செய்யும். நான் அரசியலில் மெதுவாகச் செல்பவன்; அவசரமாகப் போய், குழியில் விழுந்துவிடமாட்டேன். அதற்காக பயந்தவன் என்றோ, அஞ்சி ஒதுங்குபவன் என்றோ யாரும் என்னை நினைத்துவிட வேண்டாம். இந்தியை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் 4 ஆண்டுகள் அல்ல 40 ஆண்டுகளானாலும் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். ஆட்சி மொழிப் பிரச்சினை (4-3-65-ல் மாநிலங்களவையில், அண்ணா அவர்கள் குடியரசுத்தலைவர் உரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, ஆட்சி மொழிபற்றி ஆற்றிய பேருரை) அவைத் தலைவர் அவர்களே ! கடந்த பிப்ரவரி 17-ந் தேதி பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று, குடியரசுத் தலைவர் ஆற்றிய பேருரைக்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ‘தளராத நம்பிக்கையுடனும், சிதையாத உறுதியுடனும் நாட்டை நடத்திச்செல்ல’ பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடுபட வேண்டுமென்று குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். ‘தளராத’ - ‘உறுதி’ என்று குடியரசுத் தலைவர் கூறியவை நன்கு சிந்திக்க வேண்டிய சொற்களாகும். அரசாங்கத்தை நடத்திச்செல்லும் போக்கும், எடுக்கும் முடிவுகளும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்ந்து இல்லாதனவாகக் குடியரசுத் தலைவருக்கு ஒருவேளை பட்டிருக்கலாம் - பெரும்பாலும் அது சரியாகக்கூட இருக்கலாம். இந்த ஆட்சியின் அரும்பெரும் ‘சாதனை’ கள்! அரசாங்கத்தை எல்லாவற்றுக்கும் பாராட்டுவது என்ற சபலத்துக்கு ஆட்படாமல் இருந்திருந்தால், குடியரசுத் தலைவர், அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றிப் பலவாறு பெருமைப் படுத்திப் பேசியிருந்திருக்கமாட்டார். ஆனால் அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றி மக்கள் வேறுவிதமாகக் கணக்குப் போட்டு கொண்டிருக்கிறார்கள். “பயங்கரமான உணவு நெருக்கடி - படுகுழியை நோக்கிச் செல்லும் ஊழல் ஆட்சி - விலைவாசி உயர்வு - வேதனை தரும் நலிவுகள்” - இவைகள்தான் இந்த ஆட்சியின் அரும்பெரும் ’சாதனை’களாக இன்று விளங்குகின்றன! வேதனையடைகிறோம் - மகிழ்ச்சிக்கு இடமெங்கே? தென்னாட்டில் நிகழ்ந்த பலாத்காரச் செயல்கள் பற்றிக் குடியரசுத் தலைவர் கூறுவதுபோல், நாம் ஒவ்வொருவரும் வேதனைப் படுகிறோம். அந்த நிகழ்ச்சிகள் குறித்து யாரும் மகிழ்ச்சியடைய முடியாது-குறிப்பாக அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் நிச்சயமாக மகிழ்ச்சியோ, பெருமையோ அடையவில்லை. நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் - பலாத்காரச் செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் - ஒருபோதும் அத்தகைய பலாத்காரச் செயல்களை ஆதரிக்கமாட்டார்கள். தென்னகத்தில் நடைபெற்ற பலாத்காரச் செயல்களுக்குச் சில அரசியல் கட்சியினர்தான் காரணம் என்று யாராவது கூறு வார்களேயானால், அது தற்பொழுதுள்ள நிலைமையைப் புரிந்து கொள்ள மறுப்பது மட்டுமல்ல - நாட்டின் அரசியல் வரலாற்றை யும், தென்னாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் வரலாற்றை யும், அந்தக் கட்சிகளின் வளர்ந்த தன்மையையும் புரிந்துகொள்ளாததுமாகும். பலாத்காரத்தைக் கண்டிப்பதில் நான் தயங்கவில்லை. குடியரசுத் தலைவருடனும், மற்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்து நானும் வன்மையாக - அழுத்தந்திருத்தமாக - பலாத்காரத்தைக் கண்டிக்கிறேன். கழகக் குறிக்கோளில் குறை காண இயலுமா? எனது கழகத்தின்மீது பழி சுமத்தப்பட்டாலும், நான் உள்ளத் தூய்மையுடன், நேர்மை உணர்வுடன் கூறுகிறேன் - ‘நடை பெற்ற பலாத்காரச் செயல்களுக்கும் எங்களுக்கும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ துளிகூடத் தொடர்பு கிடையாது’ என்று. திராவிட முன்னேற்றக் கழகம் தூய்மையான குறிக்கோளை உடையது - உடனடியான திட்டத்தை உடையது - நேர்மையான வழியைப் பின்பற்றுவது - குறிக்கோளிலும், நடைமுறைத் திட்டத்திலும், மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் பின்னடையாதவிதத்தில், தி. மு. கழகம் தூய்மையையும் உயர்ந்த மனப்பாங்கையும் பெற்றிருக்கிறது. மாணவர் கிளர்ச்சியை நாங்கள் தூண்டிவிடவுமில்லை - பலாத்கார முறைகளை நாங்கள் கடைபிடிக்கவுமில்லை. இப்பொழுது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களைச் சமாளிக்க, இவற்றை நான் கூறவில்லை. எந்தக் காலத்திலும் - எந்தக் கட்டத்திலும் - நேர்மையுள்ளம் கொண்ட எவரும், எனது கட்சியின் தூய்மை பற்றியோ, நடை முறைத் திட்டம் பற்றியோ குறைகாண முடியாத விதத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். …… திரு. ஜி. இராமச்சந்திரன் (நியமனம்; தமிழ்நாடு) :- “நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்; இந்தியாவின் ஒற்றுமை என்பது உங்கள் கட்சிக் கொள்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா?” அண்ணா :-” எங்கள் கொள்கையில் இந்திய ஒற்றுமையைத் திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறோம். அது நீங்கள் கொண்டுவந்த சட்டத் திருத்தங்களால் அல்ல - சீன ஆக்கிரம்ப்பு ஏற்பட்டபொழுது, ‘ஒற்றுமையுடன் இருந்தால் தான் அனைவருக்கும் நல்லது’ என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.” திரு. ஜி. இராமச்சந்திரன் :- “சீன ஆக்கிரமிப்புப் பயம் நீங்கி விட்டால், மீண்டும் ஒன்றுபடாத நிலைக்கு நீங்கள் திரும்பப் போய்விடுவீர்களா?” அண்ணா :- “சீன ஆக்கிரமிப்பை ஒரு சின்னமாகக் கூறினேன். அது ஒன்றுமட்டும் காரணம் என்று கூறவில்லை .” வாய்ப்புக் கிடைத்திருந்தால். . …. ? “நமது தலைமையமைச்சர் அவர்கள் இங்கு இருக்கிறார்கள்; தென்னாட்டில் நடந்தவைபற்றி அவரிடம் நேரிடையாக விளக்கிக் கூறுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மாறாக, அரசாங்கத்தரப்பில் தரப்பட்ட விளக்கங்கள்தான் அவருக்கு இதுவரை கிடைத்திருக்கும். எனவே, அதுபற்றி ஒரு சிலவற்றை இந்த அவையின் கவனத்திற்கும், தலைமையமைச்சரின் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன். “மாணவர்கள் கிளர்ச்சி - ஜனவரி 25ந் தேதி ஆரம்பித்தது’. நானும், எனது கழகத்தைச் சேர்ந்த 3,000 பேரும் ஜனவரி 25ந் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, பிப். 2-ந் தேதிவரை சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்பொழுதே, வெளியில் நடைபெறும் பலாத்காரச் செயல்கள் பற்றிய செய்திகளை, சிறைச்சாலைக்குள்ளிருக்கும் நாங்கள் பத்திரிகைகளில் படித்துத் தெரிந்துகொண்டோம். அவ்வளவு தான். பொருந்திவராத ஒன்றுக்குப் பொறுப்பாக்குவதா? இந்த நிலையில், பலாத்காரச் செயல்களுக்கு எங்களைக் காரணமாக்குவது எந்த அளவு பொருந்தும் என்று தெரியவில்லை. நிலைமைக்குப் பொருந்தி வராதது மட்டுமல்ல - எங்கள் கழகத்தின் கொள்கைக்கும் திட்டத்துக்கும் பலாத்காரம் என்பது சிறிதுகூடப் பொருந்தி வராத ஒன்று. ‘சௌரி சௌரா’ பற்றியும், ஜாலியன்வாலாபாக் பற்றியும் தலைமையமைச்சர் அவர்கள் நன்கு அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். மக்கள் சிறைகளில் தள்ளப்பட்ட காட்சிகளையும், மக்கள் சட்டமுறைகளை மீறிய காட்சிகளையும் அவர் கண்டிருப்பார். மக்களுடைய உணர்ச்சி சட்டமுறையில் வெளிவராதபடி தடுக்கப்பட்டால், அது பொங்கி எழுந்து சமுதாயத்தின் பல துறைகளிலும் வெள்ளமெனப் பாய்ந்து செல்லும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். “தென்னாட்டில் உண்டான கிளர்ச்சிகளைத் தி. மு. கழகம் தான் தூண்டிவிட்டது” என்று சிலர், ஆர அமர யோசிக்காமல் பழிச் சொற்களை அள்ளி வீசியபோதிலும், தலைமையமைச்சர் லால்பகதூர் அவர்கள், அத்தகைய அவசர முடிவுக்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன். எனது கட்சிக்கு வாய்ப்புத் தரப்பட்டால், எங்களது குற்றமற்ற தன்மையைத் தலைமை யமைச்சர் அவர்களே கண்டு கொள்ளும்படிச் செய்யமுடியும். ஒழுங்கு வரையறையை மீறியது யார்? பலாத்காரம் பற்றியோ, அது கலந்த கிளர்ச்சி பற்றியோ, நாங்கள் ஒரு அறிக்கையோ - கட்டுரையோ - தலையங்கமோ - இதுவரை தீட்டியது கிடையாது; பேச்சிலும் எழுத்திலும் துளிக்கூட நாங்கள் ஆதரவு காட்டியதுமில்லை - தூண்டிவிடவுமில்லை. உள்ளத் தூய்மையுடன் கூறுகிறேன் - ஒரு நியாயமான முடிவை அமைதியான முறையில் காணவேண்டுமென்று நாங்கள் பாடுபட்டுவருகிறோம்! “மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது” என்று நாங்கள் வலிபுறுத்திவந் திருக்கிறோம்! அரசியல் நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ ஈடு படுமாறு மாணவர்களை நாங்கள் அழைத்தது கிடையாது. நான் இங்கு வெளிப்படையாகக் கூறுவேன் - தலைமையமைச்சர் சார்ந்திருக்கும் கட்சிதான், மாணவர்களை, ‘அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது’ என்று ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி நடந்தது. தஞ்சாவூரில் அதற்காக ஒருமாநாடு கூட்டி, காங்கிரசுத் தலைவர்கள் அதில் தமது ஆர்வத்தை வெளிப் படுத்தினர். ஆக, ஒழுங்கு வரையறையை மீறிய குற்றச்சாட்டு காங்கிரசுக் கட்சிமீதுதான் இருக்கிறதே தவிர, எங்கள் மீது அல்ல! மூடுபனியில் சிக்கிவிட்டால் முடிவைக் காண இயலாது இப்பொழுது நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியில், இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த மாணவர்கள், முன்னணியில் நின்று கிளர்ச்சி செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவர், அப்பொழுது சிறையில் வைக்கப்பட்டார்; அவர்மீது ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் அவர், ஒரு போலீசு அதிகாரியின் மகனுமாவார். ஆக, எல்லாவற்றுக்கும் தி. மு. கழகம்மீது குற்றஞ்சாட்ட நினைப்பது, விவரம் அறியாதோரின் முயற்சி - ஆதாரமற்ற அலங்கோலம்! அத்தகைய பொறுப்பற்ற - ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை இந்தப் பேரவையிலுள்ள கனம் உறுப்பினர்கள், அப்படியே நம்பிவிட்டார்கள்! அத்தகைய மூடுபனியில் சிக்கி விட்டால் முடிவைக் காணமுடியாது - பிரச்சினையைத் தீர்க்க வழியும் ஏற்படாது. உடலை ஒடுக்கலாம் - உணர்ச்சியை மாய்க்க முடியாது! கிளர்ச்சிக்குக் காரணம் ஒரு அரசியல் கட்சிதான் - என்ற கருத்தை நீங்கள் ஆரம்பமாக வைத்துக் கொண்டால், பிறகு, ‘அந்தக் கிளர்ச்சியை அடக்கும் வழி என்ன?’ என்று ஆராயப் புகுந்து, அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியை, ‘எந்த முறையாலாவது அடக்கி ஒடுக்கி அழித்துவிடுவதுதான் நல்லது’ என்ற முடிவுக்கு வருவீர்கள். அத்தகையை அடக்குமுறையில் நீங்கள் ஈடுபட உங்களிடம் அதிகாரம் நிறைய இருக்கிறது; அடக்கமுறை ஆட்சியில் நீங்கள் வெற்றிபெறுதாகக்கூட வைத்துக்கொள்ளலாம்! உடலை ஒடுக்கலாம் - உணர்ச்சியை மாய்க்கமுடியாது! ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் - அவ்வளவுக்குப் பின்னும் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு கண்டு விட்ட நிலைமை ஏற்படுமா? பலாத்காரம் அங்கெல்லாம் தலைதூக்கவில்லையா? இந்தப் பிரச்சினைகளைவிட ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது - அதுதான், பலாத்கார் உணர்ச்சி ஏன் அவ்வப்போது தலைதூக்குகிறது - அது தலையெடுக்காதபடி தடுத்து நிறுத்துவது எப்படி - என்பது! அரசியல் பிரச்சினைகளில் பலாத்காரம் தலைதூக்குவது, பல தடவைகளில் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலக் கிளர்ச்சியில் பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்தபோது, எல்லாரும் அவற்றைக் கண்டித்துப் பேசினார்கள். பலாத்கார உணர்ச்சி கண்டிக்கப்பட்டது - உயர்ந்த பண்புகள் பாராட்டப்பட்டன! ‘பலாத்காரம் மூலம் எதையும் சாதிக்கமுடியாது’ என்று கூறினோம்! மாராட்டிரத் தனி மாநிலக் கிளர்ச்சி வந்தபொழுது - அந்தக் கிளர்ச்சியில் பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்தபொழுது - மீண்டும் யோசனைகள் - குழுக்கள் - உபதேசங்கள் உண்டாயின; பலாத் காரத்தைக் கைவிடும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். மக்களும் பலாத்காரத்தைக் கைவிட்டார்கள் - எப்பொழுது? மராத்திய மாநிலம் தனியாக அமைக்கப்பட்டபின்! மகா குசராத் கேட்டு கிளர்ச்சி மூண்டபொழுது, பலாத்காரம் தலைதூக்கவில்லையா? விதர்ப்ப மாநிலம் கேட்டு கிளர்ச்சி ஏற்படவில்லையா? முதுபெரும் அரசியல்வாதிகளான டாக்டர் ஆனே போன்றவர்கள் காங்கிரசை எதிர்த்துப் போராட வில்லையா? அசாமில் மூண்ட மொழிக் கலவரங்களில் அசாமி யருக்கும் - வங்காளிகளுக்குமிடையில் விரோதம் மூண்டு, பல்வேறு பலாத்காரச் செயல்கள் நடந்தேறின. அடிப்படைத் தன்மைகளை ஆராயவேண்டாமா? “நான் இங்கு குறிப்பிட விரும்புவது – பலாத்காரத்தைக் கண்டித்து உபதேசங்களும், ஆலோசனைகளும் எவ்வளவுதான் வழங்கப்பட்ட போதிலும், பலாத்கார உணர்ச்சியை ஏன் இதுகாறும் அறவே அகற்ற நம்மால் முடியாதுபோயிற்று என்பதுதான்! ‘பலாத்கார உணர்ச்சி தலைகாட்டாமலிருக்க நாம் என்ன செய்யவேண்டும்? - இந்தக் கேள்விக்கு நல்ல பதில் காண்பதுதான் இன்றைய அரசாங்கத்தின் முதற்கடமையாக இருக்கவேண்டும். இந்த அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருப்பவர்கள், ‘சௌரி சௌரா’ பலாத்காரத்தையும் பார்த்திருக் கிறார்கள் - ஜாலியன் வாலாபாக் அடக்குமுறையையும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நிலைமைகளின் அடிப்படைத் தன்மைகளை ஆராய்ந்து பார்க்காமல், அடக்குமுறையையும் இந்தியப் பாதுகாப்புச் சட்டங்களையும் நம்பி, பிரச்சினைக்கு முடிவுகாண இப்பொழுதுள்ள ஆளவந்தார்கள் முயலுகிறார்கள். அமைதியான மக்கள் - நேற்றுவரை சட்டத்திற்குக் கீழ்ப் படிந்து அடக்கமாக இருந்தவர்கள் - திடீரென்று 24 மணி நேரத்துக்குள் ‘பயங்கரவாதிகளாக’ மாறுவதேன்? கலவரங்கள் மூண்ட சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் நான் முன்பு சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்கள் பயங்கரத்தைத் தூண்டுபவர்களாகவோ, அடாத செயல்களைச் செய்யக்கூடியவர் களாகவோ எனக்குப் பட்டதில்லை. அவர்களெல்லாம் அமைதி யானவர்கள் - சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் - ஒழுங்குடன் வாழ்பவர்கள்! அப்பேர்ப்பட்டவர்கள், திடீரெனப் பலாத்காரத்தில் ஈடுபட்டு விட்டார்கள் என்றால், ஏன் அத்தகைய திடீர் மாறுதல்? எந்தக் காரணங்களால் அவர்கள் அந்தப் பயங்கர நிலைமைக்குத் துரத்தப்பட்டார்கள்? மனிதப் பண்புகள் - அமைதிக் குணங்கள் - மறக்கப்படும் நிலைமை எப்படி உருவானது? - இவைகளுக்குத் தக்க பதில்களை நீங்கள் கண்டு பிடித்தாக வேண்டும். பலாத்காரம் என்றால் என்ன?-கட்டுப்படுத்தப் படாத உணர்ச்சி! போலீசு முறைகளை மட்டும் பயன்படுத்திப் பலாத்காரத்தை அடக்கிவிட நினைப்பது முடியாத ஒன்று! உலகிலேயே சரியான விடை காணப்படவில்லையே! அடக்குமுறை-பலாத்காரம்-இதில், எதனால் எது உண்டாகிறது என்பது விவாதத்திற்குரிய ஒரு கேள்வி. உலகில் அதற்குச் சரியான விடை இன்னும் காணப்படவில்லை. “அடக்குமுறையின் கொடுமையால் பலாத்காரம் துவங்கியது” என்று மக்கள் கூறுகிறார்கள்; “பலாத்காரம் துவங்கியதால் அடக்குமுறை ஆரம்பித்தது” என்று அரசாங்கம் கூறுகிறது. இந்தப் பிரச்சினையில் இரண்டுவிதக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இரண்டு தரப்பிலும் சமாதானங்கள் தரப் படுகின்றன. எனவேதான், தமிழ்நாட்டிலுள்ள வழக்குரைஞர் சங்கங்கள், நீதி விசாரணை கேட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளன. நடைபெற்ற சம்பவங்களின் தன்மையையும், காரணங்களையும் ஆராய்வது மட்டுமல்ல - மொழிப் பிரச்சினையில் பொதுவாக உண்டாகியுள்ள சூழ்நிலையையும் நீதி விசாரணையின் மூலம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறிவுத் திறமையைக் குறைத்து மதிக்காதீர் ! கடந்த இரண்டு நாட்களாக மொழிப் பிரச்சினை பற்றி கனம் உறுப்பினர்கள் பேசும்பொழுது, தென்னாட்டில் உண்டான ‘தவறான பயம்’ பற்றிக் குறிப்பிட்டார்கள். நேர்மையற்ற பிரச்சாரத்தால் தவறான பயம் உண்டானது போலவும், அவ்வாறு தவறான பயம் உண்டாவதற்குத் தகுந்த காரணங்கள் இல்லை என்றும் அவர்கள் வாதிட்டார்கள். அவர்கள் கூறியது எனக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை- வேதனையைத் தந்தது! எங்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையை-அறிவுத் திறமையைக் குறைத்து மதிக்காதீர்கள்! எங்களுக்கு உண்டானது தவறான பயம் அல்ல-உண்மையான - தகுந்த அடிப்படையுள்ள காரணம் செறிந்த பயம்தான்! அஞ்சுவது அஞ்சாமை பேதமையாகும், அஞ்சவேண்டிய ஒன்று - அதுபற்றி எங்களுக்கு நியாயமான அச்சம் உண்டானது! அச்சத்துக்கும்-தவறான அச்சத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. மொழிப் பிரச்சினையில் தென்னாட்டில் ‘தவறான அச்சம்’ வளர்ந்துள்ளதாகத் தலைமையமைச்சரும், உள் துறை அமைச்சரும் கூறுகிறார்கள். ஆனால் குடியரசுத் தலைவர், ‘தென் மாநிலங்களில் உண்டான அச்சம்’ என்றுதான் கூறுகிறார். குடியரசுத் தலைவர் ‘அச்சம்’ என்று மட்டும் கூறுவது குறிப் பிடத்தக்கது. ஆனால் தலைமையமைச்சர்தான், ’தவறான அச்சம் என்று கூறுகிறார். விளக்கங்களால் பயன் ஒன்றும் ஏற்படவில்லையே! ஒரு நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தவறானபடி அச்சம் கொள்ள நாங்கள் என்ன பள்ளிக்கூடத்துச் சிறுபிள்ளைகளா? அல்லது நடப்பதை உணர முடியாது திகைக்கும் சித்தப் பிரமைகளா? உங்கள் அறிக்கைகள் - அறிவிப்புகள் - உத்தரவுகள் - சட்டப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து நாங்கள் படித்து வருகிறோம்; நீங்கள் தரும் விளக்கங்களை ஒன்று தவறாமல் கேட்டு வருகிறோம். உங்கள் நடவடிக்கைகளை இடைவிடாமல் கவனித்து வருகிறோம், நீங்கள் கொடுத்த விளக்கங்கள் எங்களைச் சமாதானப்படுத்தவில்லை! அவசரம் வீணானது - தீங்கை விளைவிப்பது ! “இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரு பொது மொழி தேவை” என்று சுலபமாக வாதிடலாம். இந்த வாதத்தைக் கவனித்துப் பார்ப்பதற்குமுன், ‘ஒற்றுமை’ என்பதற்கும் - ‘ஒரேவிதம்’ என்பதற்குமுள்ள வேறுபாட்டை இந்தப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பொது மொழி ஒன்றின் மூலம் இந்தியா முழுவதையும் ஒன்றுபடுத்த நீங்கள் விரும்புகிறீர்கள்; அல்லது ஒரேவிதமாக்க முயலுகிறீர்கள். இதில் தெளிவு வேண்டும். இந்தியா முழுவதையும் ஒரேமட்டமாக்கி விடுவதுதான் உங்கள் முயற்சி என்றால், இப்பொழுதே கூறுகிறேன் - இந்த முயற்சியில் நீங்கள் துளிகூட வெற்றி பெறப்போவதில்லை! எது நேரிடினும் சரி - காலஞ்சென்ற தலைமையமைச்சர் கூறியதுபோல - இந்தியாவில் பலதரப்பட்ட இன - கலாச்சார - மொழிப் பிரிவுகள் இருக்கின்றன. இத்தகைய பலதரப்பட்ட தன்மைகளை ஒத்துக் கொண்டு - மதிப்பளித்து, ஓர் ஒற்றுமையை உண்டாக்க வேண்டுமேயன்றி, ஒற்றுமையென்றால் ஒரே விதமாக இருக்க வேண்டுமென்று தவறாக நினைத்து, வேறுபாடுகளை யெல்லாம் அழிக்க முற்படக்கூடாது! ‘ஒரு நாட்டில் ஒற்றுமையுண்டாக்க, மொழி ஒன்றுதான் அடிப்படையா?’ என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒற்றுமை உண்டாவதற்கு மொழி ஒன்று தான் தடையாக இருக்கிறதா? - நிச்சயமாக இல்லை ! வட்டாரங்களுக்கிடையே பொருளாதரா ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன! தனிப்பட்ட முறையில், வட்டாரப் பற்று - மொழிப் பற்று ஆகியவை இருக்கின்றன! இவையெல்லாம் நீக்கப்பட்டால் தான் ஒருவித ஒற்றுமை எண்ணம் உருவாகுமே தவிர, ‘ஒரே விதம்’ என்ற அடிப்படையில் ஒற்றுமையை உண்டாக்க முடியாது! அக்பர் அலிகான் (காங். - ஆந்திரா):- “இந்தியாவிற்கு ஒரு பொது மொழி தேவையா, அல்லவா? அப்படித் தேவை யென்றால் அது எந்த மொழியாக இருக்க வேண்டும்?” அண்ணா :- “இந்தியாவிற்கு ஒரு பொது மொழி இருக்கலாம்; ஆனால், அது இயற்கையான முறையில் - காலப் போக்கில் - அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாமல் - மக்கள் தாமாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக வேண்டும். அரசாங்கம் - அதிலும் இன்றுள்ள அரசாங்கம் - கட்டாயப்படுத்தும் எதுவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படாமல் வெறுத்து ஒதுக்கப்பட்டு விடும்.” திரு. சந்திரசேகரன் (காங். - மைசூர்):- “உங்கள் அரசாங்கம் மொழிப் பிரச்சினையில் ஒரு மாறுதலும் செய்யப்போவ தில்லை. இந்த அரசாங்கம்தான் ஒரு மொழியைக் கொண்டுவரும். தவறாகவோ சரியாகவோ, இப்பொழுது இருப்பதுதான் நடைமுறையில் உள்ள அரசாங்கம்.” அண்ணா :-“நான் இதுவரை அரசாங்கம் என்று குறிப்பிட்டு வந்தது, மத்திய அரசாங்கத்தை ஆகும். எனது அரசாங்கத்தைப் பற்றி எனக்கு ஒரு தனிப் பற்று உண்டு.” ஆக, ஒற்றுமையின் பேரில் எல்லாவற்றையும் ஒரே சீராக்கும் விபரீத முயற்சியில் இறங்க வேண்டாமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதில் காட்டப்படும் அவசரம் வீணானது - தீங்கை விளைவிப்பது - நாட்டை அல்லற்படுத்த வல்லது! முடிவு எடுக்கக்கூடியவர்கள் நாமல்லர்! ஆட்சிமொழிகள் மசோதா பற்றிய விவாதத்தில் பேசும் போது, ‘மொழிப் பிரச்சினையில் முடிவு கட்டக்கூடியவர்கள் நாமல்லர்’ என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். “விருப்பு வெறுப்புக்களாலும், இன்னும் அமைதி பெறாத சில உணர்ச்சிகளாலும், கட்டுண்டிருக்கும் நாம், இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இல்லை” என்று கூறுவேன். நேற்றையதினம் பேசிய நண்பர் ஏ. டி. மணி அவர்கள் ‘மொழிப் பிரச்சினையை 20 ஆண்டுகளுக்கு ஒத்திப்போட வேண்டும்’ என்று கூறினார்கள்; மற்றும் சிலர், 15 ஆண்டுகள் தள்ளிப்போடலாம் - 10 ஆண்டுகள் ஒத்திவைக்கலாம்’ என்று கூறுகின்றனர். அச்சத்தை அரசாங்கம் மதிக்க வேண்டாமா? எவ்வளவு ஆண்டுகள் என்ற எண்ணிக்கை ஒருபுறம் இருக் கட்டும். இந்த வேண்டுகோள்கள் எதைக் காட்டுகின்றன? அடிப் படையில், ‘இப்பொழுது இந்தி வருவது சரியல்ல’ என்று அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இந்தி இப்போது ஆட்சி மொழியாவதற்கு அவர்கள் தயாராக இல்லை . ஆக, இந்தி இப்பொழுது ஆட்சி மொழியாவது பற்றி ஒருவகை அச்சம் அவர்களுக்கு இருக்கிறது! கட்சி வேறுபாடின்றி மக்களிடையே அச்சம் உண்டாகியுள்ளது! அந்த அச்சத்தை அரசாங்கம் மதிக்க வேண்டாமா? இரும்புக் கரம் மூலம் இதயங்களைக் கவர இயலாது! எனக்குமுன் பேசிய உத்தரப் பிரதேச நண்பர், ‘திடமாக இருங்கள்’ என்று தலைமையமைச்சரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். ‘சட்டம் மீறப்பட்டாலும், ஒழுங்கு குலைக்கப்பட்டாலும், இரும்புக்கரம் கொண்டு அவற்றை அரசாங்கம் அடக்க வேண்டும்’ என்று கூறுவது, அரசியல் துறையின் ஆரம்பப் பாடம் என்பது எனக்குத் தெரியும்! வெளிப்பார்வைக்குப் பலவீனமாகத் தோற்றமளித்த போதிலும், நமது தலைமையமைச்சர் இரும்புக் கரம் படைத்தவர் என்பதும் எனக்குத் தெரியும். இரும்புக் கரம் கொண்டு மண்டைகளைப் பிளக்கலாம் - ஆனால் இதயங்களைக் கவர முடியாது! நமது தலைமையமைச்சருக்கு இரும்புக் கரமும், பொன் போன்ற இதயமும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். ….. பேராசிரியர் இரத்தினசாமி (சுதந்தரா; சென்னை ):- “கரம் தெரிகிறது - இதயம் வெளிப்படையாகத் தெரிய வில்லை” அண்ணா :- “மனிதனுடைய பெருந்தன்மையில் எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. அவருக்குப் பொன் இதயம் இருக்கவேண்டும்.” இரத்தினசாமி :- “இருக்கவேண்டும்.” பூபேஷ் குப்தா (கம், மேற்கு வங்கம்):- “இருக்கவேண்டும்.” அண்ணா :-“அது மட்டுமல்ல; மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக்கு முற்பட்ட பொன்னாக அது இருக்க வேண்டும்; 14 காரட் தங்கமாக அது இருக்கக் கூடாது.” புரிந்துகொண்டுதான் பேசுகிறோம் - போராடுகிறோம்! தவறான அச்சத்தில் - தவறான ‘கருத்தில் நாங்கள் இருப்பதாக நினைத்துப் பேசும் உறுப்பினர்களுக்கு ஒன்று கூறுவேன் - ’முதலில் உங்களுடைய தவறான கருத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்’ என்று. நாங்கள் காரணத்துடன்தான் அச்சப்படுகிறோம் - சரியான முறையில் புரிந்துகொண்டுதான் போராடுகிறோம்! நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன் - தனிப் பட்ட முறையில் இந்தியை நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? இந்திமீது மட்டுமல்ல - எந்த மொழிமீதும் எங்களுக்கு விரோதம் கிடையாது! நண்பர் வாஜ்பாயி பேசுவதைக் கேட்கும்போது, ‘இந்தி ஒரு நல்ல மொழிதான்’ என்று தோன்றுகிறது! மற்றவர்கள் பேசும் பொழுது, ‘வாஜ்பாயி பேசுவது போன்று இது அவ்வளவு நன்றாக இல்லையே’ என்று தோன்றும்! அடிமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்தி ஆட்சிமொழியாவதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல ; ஆட்சிமொழியாக வருவதற்கு இந்தி மொழியே தயாராக இல்லை! அந்த மொழிக்குள்ள குறைபாடுகளை நீங்கள் கவனித் தீர்களா? வளர்ச்சியடைய வேண்டிய - வளமில்லாத ஒரு மொழியை வைத்து, மற்ற வளர்ச்சியடைந்த மொழிகளை நொறுக்கி, அடிமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு மொழியை வைத்து, மற்றொரு மொழியை அடிமைப் படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் அரசாங்கமே. தோல்வி கண்டுள்ளது! இதை மறந்துவிட வேண்டாம்! அரசியல் விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டாமா? ‘திடமான இருங்கள்’ என்று காங்கிரசு நண்பர் கூறினால் கூட, ‘நாங்கள் கூறுவதையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள்’ என்று தலைமையமைச்சரை நான் கேட்டுக்கொள்வேன். திடமாக இருக்கவேண்டியதுதான் - சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பதில் திடமாக இருங்கள்! சீனர்களிடம் காட்ட வேண்டிய திடத்தை - பலத்தை உங்களைச் சேர்ந்த நாட்டு மக்களிடம் காட்டாதீர்கள்! பண்புடன் இருங்கள் - பெருந்தன்மையுடன் இருங்கள் - கனிந்த இதயத்துடன் இருங்கள் - ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் விவேகத்துடன் நடத்துகொள்ளுங்கள். நெருக்கடியான கட்டத்தில் எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு நாட்டைப் பெரிய புயலில் சிக்க வைத்து விடக்கூடும் என்பதை மறவாதீர்கள்! மாநில முதலமைச்சரின் விசித்திரப் போக்கு! மொழிப் பிரச்சினைப்பற்றிய நடவடிக்கைகளில் இந்த அரசாங்கமும், மாநில அரசாங்கமும் பல தவறுகளையும், குறைகளையும் செய்திருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதியை ’துக்க நாளாக’க் கொள்ள நாங்கள் தீர்மானித்தோம். ஜனவரி 26-ந் தேதியைத் தேர்ந் தெடுத்ததற்குக் காரணம், அது குடியரசு நாள் என்பதற்காக அல்ல - அது இந்தி ஆட்சிமொழியாகும் நாள் என்பதுதான்! இந்த நிலைமையில், மாநில முதலமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்? எங்கள் கழகத்தின் அவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து, நிலைமை குறித்து விவாதிக்க ஒரு பொறுப்புவாய்ந்த முதலமைச்சர் முன்வந்திருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? முதலமைச்சர் அழைத்து விவாதிக்கமுடியாத அளவுக்கு நாங்கள் கீழ்ப்பட்டவர்களாக - தேசத் துரோகிகளாக ஆகி விட்டோமா? மொழிப் பிரச்சினைப்பற்றி விவாதிக்கக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு மாநாடு கூட்டப் போவதாகத் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் போக்கைத் தலைமையமைச்சரும் கடைபிடிப்பது என்றால், அத்தகைய மாநாடு முயற்சிக்கே இட மில்லாமற் போய்விடும். பிப்ரவரி 25-ந் தேதியிலிருந்து, தமிழக முதலமைச்சர், சனநாயகத்துக்கு விரோதமான - நினைத்துப் பார்க்கமுடியாத - பலன் தராத நடவடிக்கைகளை மிகக் கண்ணுங்கருத்துமாகச் செயல்படுத்திவருகிறார். தேவைப்பட்ட நேரத்தில் உதவி செய்யத் தவறினர்! கேரளத்திற்குச் சென்றிருந்த தலைமையமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் நிலைமை அறிந்து அங்கு வருகை தருவார் என்று மிகவும் எதிர்பார்த்தேன்; ஆனால் அவர் தமிழ்நாட்டுக்கு வரத் தவறிவிட்டார்! மொழிப் பிரச்சினையில் அசாம் மாநிலத்தில் கலவரம் மூண்டு விபரீதங்கள் விளைந்த நேரத்தில், அப்பொழுது தலைமையமைச்சராக இருந்த பண்டித நேரு அவர்கள் என்ன செய்தார்? - செய்தி கேட்டதும் பறந்து சென்றார்; மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்; ஷில்லாங், நௌகாங்க் போன்ற முக்கிய நகரங்களில் கூட்டங்கள் போட்டு, மக்களுடைய கொந்தளிப்பை அமைதிப்படுத்தும் விதத்தில் பேசினார். பண்டித நேரு அவ்வாறு அமைதி காணப் பாடுபட்டார்கள் - நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் இதைக் கோபத்துடன் கேட்க வில்லை - வேதனையுடன் கேட்கிறேன்! எங்கள் பகுதியில் மக்கள் சுட்டுத் தள்ளப்பட்டார்கள் - பொருள்கள் சேதமாக்கப்பட்டன - உடைமைகள் அழிக்கப் பட்டன - மனிதர்கள் மிருகங்களைப்போலத் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டனர்! கேரளத்துக்குச் சென்ற நீங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் வர வில்லை - வர நினைக்கவில்லை! நேரிடையாக வராமற்போனது மட்டுமல்ல - வானொலி மூலம் பேசியாவது மக்களை அமைதிப் படுத்த - அவர்களுக்கு ஆறுதல் தர முயன்றிருக்கலாம்; அதுவும் செய்யவில்லை! ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக நீங்கள் வந்தீர்கள் - ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியான மதிப்பை நாங்கள் உங்கள் மீது வைத்திருந்தோம்; ஆனால் முக்கியமான நேரத்தில் எங்களைக் கைவிட்டுவிட்டீர்கள் - நான் மிகவும் வருந்துகிறேன். வேறெந்தச் சமயத்திலும் இல்லாத அளவு - வேறெவரிடமும் எதிர்பார்க்காத அளவு நாங்கள் உங்களை எதிர்பார்த்தோம்; தேவைப்பட்ட நேரத்தில் நீங்கள் உதவி செய்யத் தவறி விட்டீர்கள்! நிலைமை மோசமானதற்குக் காரணம் என்ன? தமிழக முதலமைச்சர் அவர்களோ, எவரையும் கலந்து பேச மறுத்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் - இவர்களையெல்லாம் புறக்கணித்து, போலீசு அதிகாரியின் மீது மட்டும் நம்பிக்கை காட்டி அவர் செயல்பட்டார்! சட்டம், ஒழுங்கு - இவை மட்டும் பேசப்பட்டன! தலைமை யமைச்சர் சாஸ்திரி, முன்னால் நிற்கவில்லை! எல்லாவற்றையும் பின் தள்ளி, உள்துறை அமைச்சர் நந்தா, சட்டம் - ஒழுங்கின் சின்னமாகக் காட்சி தந்தார்! அதனால்தான் நிலைமை மோசமானது! ’போலீசு முறையைப் பின்பற்றவதன் பொருள் என்ன? இன்னும் நிலைமை திருந்தியபாடில்லை! தி. மு. கழகத்தைக் கொடுமைப்படுத்தும் விதத்தில் அரசாங்க நடவடிக்கைகள் வளர்ந்தபடி உள்ளன! தி.மு.கழகத்தினர் கைது செய்யப் படுகின்றனர் - காரணமின்றிச் சிறையில் தள்ளப் படுகின்றனர்! இந்தியப் பாதுகாப்புச் சட்டமும் துணைக்கு அழைக்கப் பட்டுள்ளது! கழகப் பொருளாளரும் தமிழகச் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான திரு. கருணாநிதி அவர்கள், இப்பொழுது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்! இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்பது, நாட்டின் பாதுகாப்புக்காக அல்ல - காங்கிரசுக் கட்சியின் பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது’ என்று எனக்கு முன்பு பேசிய திரு. பூபேஷ் குப்தா கூறினார். அந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன பதில் தரப்போகிறீர்கள்? இந்தக் குற்றச்சாட்டை பூபேஷ் குப்தா மட்டுமல்ல - பொது மக்களும் கேட்கத் தலைப்பட்டுள்ளனர்! நீங்கள் அரசியல் முறையைப் பின்பற்றாமல், போலீசு முறை’ யைப் பின்பற்றுவதாக மக்கள் நினைக்கிறார்கள்! சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் கொள்கை மாறுகிறதா? ஒரு நெருக்கடி நிலைமை என்றால், அதைத் தீர்த்துவைப்பது எப்படி? ஆட்சி மொழிப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளலாம். ‘இந்தி ஒன்றுதான் ஆட்சிமொழி’ என்று திரு. வாஜ்பாயி கூறுகிறார்; ‘இருபது ஆண்டுகள் தள்ளிப் போடுங்கள்’ என்று ஏ. டி. மணி கூறுகிறார். ‘இந்தி வரப்போகிறது; அது வருகிறபடி வரவேண்டும்’ என்று, நாட்டின் தலைமையமைச்சர் தெரிவிக்கிறார்! திரு. நந்தா அவர்களோ, ‘ஒரு நாள், இந்தி வரத்தான் போகிறது’ என்கிறார்; இரு மொழிக் கொள்கையைத் தவிர்க்கமுடியாது’ என்று மறுநாள் அவரே அறிக்கை விடுகிறார்! உண்மையான நிலை என்ன? - உறுதியான கொள்கை எது? சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் ஆட்சிமொழிக் கொள்கை மாறுகிறதா? எங்களைச் சமதானப்படுத்தப்போகிறீர்களா, அல்லது பிரச்சினைக்கு முடிவு காணப்போகிறீர்களா? அசைக்க முடியாத ஒன்று அல்ல! பலர் பலவிதமாகப் பேசுகிறார்கள் - ஒருவரே பலவிதமாகவும் பேசுகிறார்! அதனால்தான், ஆட்சிமொழிகள் மசோதா பற்றிப் பேசும்பொழுது, ஆட்சிமொழிக் கொள்கை மீண்டும் புனராலோ சனை செய்யப்பட வேண்டும்’ என்று கூறினேன். அரசியல் சட்டத்தில் ஒரு நிலைமையைச் செய்து வைத்துக் கொண்டு, அதன்படி ஆட்சிமொழிக் கொள்கையைச் செயல்படுத்தத் துடிப்புக் காட்டப்படுகிறது! இந்தி ஆட்சிமொழி ஆவதற்குத் தரப்படும் ஒரே காரணம், அரசியல் சட்டத்தில் அவ்வாறு இருக்கிறது’ என்பதுதான்! ஆட்சிமொழியாக இந்தி வருவதற்கு அதற்குள்ள தகுதி - அவசியம் காரணம் என்ன என்று நான் கேட்கிறேன். ‘அரசியல் சட்டம்’ என்றால், ‘தேவைப்பட்டால் அது திருத்தப்பட வேண்டியது தானே?’ என்று கூறுவேன். அரசியல் சட்டம் அசைக்கமுடியாத ஒன்று அல்ல! அன்றையச் சூழ்நிலை அப்படிப்பட்டது! அரசியல் நிர்ணய சபை கூடிய நேரத்தில் இருந்த சூழ்நிலையை நாம் கவனிக்கவேண்டும். பிரிட்டிஷாரின் கொடி இறக்கப்பட்டு, இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட சமயம் - விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்கள், தமது போராட்டத்தில் வெற்றி கண்டு குதூகலமாக இருந்த நேரம் - அந்தச் சூழ்நிலையில், நெடுந்தொலைவு பார்த்துத் திட்டங்களைப் போடும் மனப்பாங்கு இருக்கிருக்காது. அது ஒரு குறைபாடல்ல - சூழ்நிலையின் தன்மை அப்படிப்பட்டது! 15 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்பொழுது, முதலில் இருந்த சூழ்நிலை மாறி - அப்பொழுது இருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் மாறி - ‘இந்தி ஆட்சிமொழியாவது’ என்ற திட்டம் மீண்டும் ஆலோசிக்கப்பட வேண்டிய கட்டம் உருவாகியுள்ளது! ஒரு பகுதியினர் மொழிக்கா அத்தகைய தகுதி? இந்தி ஆட்சிமொழியாக வேண்டும்’ என்பதற்கு ‘மிகத் தீவிர இந்திப் பிரியர்களே’ காரணம் என்று காட்டுகிறார்கள்; ‘இந்தியா வில் 100-க்கு 40-பேர் இந்தி பேசுவதால், இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி’ என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் 40-சதவிகிதம்கூட அல்ல-20-சதவிகிதம் மக்களாவது இந்தி பேசுபவர்களாக இருந்து, அந்த 20-சதவிகித மக்கள் இந்தியா முழுவதும் பரவலாக இருந்தால், இந்தியைத் தொடர்பு மொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ கொண்டு வருவதில் ஓரளவு அர்த்தமிருக்க முடியும். ஆனால் இவர்கள் கூறுகிற 40-சதவீதம் என்பது-வாதத்துக்கு அதை அப்படி ஏற்றுக் கொண்டாலும் - உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்குள் அடங்கி விடுகிறது. இந்தி, ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறதே யன்றி, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை . ஆக, ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதற்கும் ஆட்சிமொழியாகும் தகுதியைப் பெற்றுவிடாது! ஆங்கிலத்தால் கிடைக்கும் பலனைத் தமிழ்மொழி பெற்றுவிட்டது! “ஆங்கிலம் அந்நிய மொழி; எனவே அதை நாம் நீக்க வேண்டும்” என்று சிலர் கூறுகிறார்கள். ஆங்கில மொழிமீது எனக்கு ஒன்றும் தனிப்பட்ட பற்றுக் கிடையாது. இங்குள்ள நண்பர் கனம் சுப்பிரமணியம் அவர்கள், தமிழகத்தில் அமைச்சராக இருந்தபொழுது, நானும் அங்கு சட்டமன்ற உறுப்பினனாக இருந்தேன். அங்கு சட்டமன்றத்தில், எந்த மொழியில் நாங்கள் பேசினோம்? ஒரே ஒரு தடவை ஓர் உரிமைப் பிரச்சினைமீது இருவரும் ஆங்கிலத்தில் பேசியது தவிர, மற்றெல்லாச் சமயங்களிலும் அவரும் நானும், எனது கட்சி உறுப்பினர்களும் தமிழில்தான் பேசினோம். ஆங்கில மொழிமீது தனிப்பற்று காட்டுவதாக என்னைப் பற்றி யாரும் கருதவேண்டாம். ஆங்கிலத்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பெரும்பாலாக நாங்கள், எங்கள் தமிழ் மொழியில் பெற்றுவிட்டோம். இன்னும் துணிவுடன் என்னால் கூற முடியும் - “ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக ஆட்சி மொழியாகும் தகுதி தமிழுக்கு இருக்கிறது” என்று. சட்டமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அலுவல் ‘மொழியாகும் தகுதியைத் தமிழ் முழுமையாகப் பெற்றுவிட்டது. ஆக, ’ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கட்டும்’ என்று கூறுவது, ஆங்கில மொழிக்காகப் பரிவுகாட்டி நாங்கள் கூறுவதல்ல. திட்டமும் - போக்கும் எங்களுக்குப் புரியவில்லை! பிரிட்டிஷ் ஆட்சி இங்கு இருந்தபொழுது, ஆங்கில மொழிக்காகப் பேசினால்கூட, ‘ஏதோ பிரதிபலனை எதிர் பார்த்துப் பேசுகிறேன்’ என்று கூறிவிடலாம். அத்தகைய பிரதிபலன் எதுவும் இல்லாதபொழுது, ஆங்கில மொழிக்காக ஏன் வாதாடுகிறோம்? - ஆங்கில மொழிப்பற்று காரணமல்ல; அரசாங்கச் சலுகைகள் காரணமல்ல; மாறாக, ’நீங்கள் ஏன் ஆங்கிலத்தை எதிர்க்கிறீர்கள்?” என்று உங்களைக் கேட்டால், என்ன பதில் காரணம் காட்டுவீர்கள்? ஆங்கிலத்தை எதிர்க்கிறீர்களே தவிர, ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதை அறவே அகற்றி விட்டீர்களா என்று பார்த்தால், அப்படியும் கிடையாது! மூன்று மொழித் திட்டத்தின் கீழ் ஆங்கில மொழிப் பயிற்சியைக் கட்டாயமாக வைத்துக்கொண்டுள்ளீர்கள்! ஆக, ஆக, உங்கள் திட்டம் எதுவென்று புரியவில்லை! ஆங்கில மொழி வேண்டா மென்கிறீர்களா? - ஆங்கில மொழியும் கட்டாயமாக இருக்க வேண்டியதுதான் என்கிறீர்களா? திரு. வாஜ்பாயின் போக்கு எனக்குப் புரிகிறது - எனது வாதம் அவருக்குப் புரிகிறது-ஆனால் உங்கள் போக்கு எங்கள் இருவருக்கும் புரியவில்லை ! அதனால்தான் கூறுகிறேன் - ‘ஆட்சி மொழிப் பிரச்சினை முழுவதையும் மீண்டும் புனராலோசனை செய்யவேண்டும்’ என்று. ……….. அக்பர் அலிகான் (காங்: ஆந்திரா):-“நீங்களும் வாஜ்பாயும் பேசி, ஒரு சமாதானத்துக்கு வாருங்கள்-அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” அண்ணா :- “நானும் வாஜ்பாயும் ஏற்றுக்கொள்ளும் முடிவை இந்த அரசாங்கம் அப்படியே நிறைவேற்றுவதாக உறுதி தந்தால், நாங்கள் கலந்துபேசத் தயார். ஆனால், எங்களைப் பற்றி உங்கள் போக்கு என்ன என்பது எங்கள் இருவருக்கும் நன்கு தெரியும். ஆக, உங்கள் வலையில் சிக்க நான் மறுக்கிறேன்.” அரசியலில் கலப்படம் பெருங் குற்றமாகும்! ஆங்கில மொழிபற்றி அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. மூன்று மொழித் திட்டத்தைப் பார்க்கும்போது, ஆங்கிலத்தைக் கைவிடத் தயாராக அரசாங்கம் இல்லை’ என்பது தெரிகிறது. ‘ஆங்கில மொழியைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறுவதற்கு அவர்கள் தெரிவிக்கும் கண்டனத்தைப் பார்த்தால், ஆங்கிலத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்’ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. உங்களிடம் எதுவும் திட்டவட்டமாக இல்லை. வெளிநாட்டுக் கொள்கை - பொருளாதாரக் கொள்கை - ஆட்சி மொழிக் கொள்கை - எல்லாம், குளறுபடியாக இருக்கின்றன! இரண்டு - பொதுத்துறை, தனித்துறை - கலந்த பொருளாதாரம், கூட்டுச் சேரா வெளிநாட்டுக் கொள்கை, திட்டவட்டமில்லாத மொழிக்கொள்கை - இப்படி எல்லாவற்றிலும் கலந்து பல திறப் பட்ட விதமான கொள்கைகள் தரப்படுகின்றன. கலந்து இருப்பது மட்டுமல்ல - கலப்படமே நடைபெறுகிறது! உணவில் இருப்பதை விட, அரசியலில் நடைபெறும் கலப்படம் பெரிய குற்றமாகும். காலவரையறை - இரயில்வே கால அட்டவணையா? ஆட்சி மொழிப் பிரச்சினையை ஒரே ஒரு நாளில் ஒரு மாநாடு கூட்டிப் பேசித் தீர்த்துவிட முடியாது. ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் நிலைமையைத் தொடர்ந்து வைத்துக் கொண்டு, நாம் ஆட்சி மொழிப் பிரச்சினை பற்றி அடிக்கடி கூடிப்பேசி, ஒரு திருப்திகரமான முடிவு காண முயல வேண்டும். இதை முதலமைச்சர்கள் மட்டும் ஒரு நாள் கூட்டத்தில் முடிவு கட்டிவிட முடியாது. நண்பர் ஏ. டி. மணி அவர்களைப் பார்த்து, 20 ஆண்டுகள் ஏன் கேட்கிறீர்கள்?’ என்று வினவினேன்; ‘நம்மால் இப்பொழுது முடிவு செய்ய முடியவில்லை; எனவே, இருபது ஆண்டுகள் ஒத்திப் போடலாமே’ என்று அவர் கூறினார்; ‘இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையை முடிவு செய்ய முடியவில்லை என்றால், அதை ஒத்திப் போடுவதில் - காலவரையறை வகுப்பதில் என்ன பொருள் இருக்கிறது? காலக்கெடு வைக்க நாம் யார்? ஒன்று, இப்பொழுது முடிவு செய்ய வேண்டும்; அல்லது எதிர்காலத்தின் முடிவுக்கு எத்தகைய கால அட்டவணையுமின்றி விட்டுவிட வேண்டும்’ என்றேன். திரு. மணி அவர்கள், ‘20 ஆண்டுகள்’ என்கிறார்; அவர் 20 ஆண்டுகளுக்கு மேலும் நீடூழி காலம் வாழ வேண்டும்; ஆனால் 20 ஆண்டுகள் என்று கூறும்பொழுது, அப்பொழுது அது நம்மைப் பாதிக்காது என்ற நினைப்பில் நாம் பிரச்சினையைக் கவனிக்கக் கூடாது. மற்றும் சிலர், ‘பத்து ஆண்டுகள் - இருபது ஆண்டுகள் - இருபத்தைந்து ஆண்டுகள்’ - என்று காலவரையறை தருகிறார்கள். காலவரையறை தர, இது என்ன இரயில்வே கால அட்டவணையா? இரயில்வேயில் கூட குறித்த நேரத்தில் இரயில்கள் வருவதில்லை - கிளம்புவதில்லை! ஆக, மொழிப் பிரச்சினையில் கால அட்டவணை போட்டுக் கொண்டு உட்காருவது சரியல்ல! பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு காணும்வரை, இப்பொழுதுள்ளபடி ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கட்டும். 14 மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி தரப்படவேண்டும் மொழிப் பிரச்சினையில் தி. மு. கழகத்தின் கொள்கை என்ன வென்று முதலில் திரு. அக்பர் அலிகான் இடையிட்டுக் கேட்டார். அதுபற்றி இப்பொழுது விளக்கம் தர விரும்புகிறேன். இந்தியாவிலுள்ள முக்கிய மொழிகளாக உள்ள பதினான்கும் தேசீய மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டு, ஆட்சி மொழிகளாகும் தகுதி தரப்பட வேண்டும். . . . .அக்பர் அலிகான் :- “அவ்வளவு மொழிகளை வைத்துக் கொள்வது முடியாத காரியம்.” அண்ணா :- “ ‘முடியாத காரியம்’ என்று திரு. அக்பர் அலிகான் கூறுகிறார். சில காலத்துக்குமுன், ‘இந்தியாவை ஒன்றாக வைத்துக்கொள்வது முடியாத காரியம்’ என்று நானும் நினைத்தேன்” பி. கே. பி. சின்கா (காங். உ. பி):- “அரசியல் சட்டத்தில் எட்டாவது பட்டியலில் தரப்பட்ட மொழிகள், ‘தேசீய மொழிகள்’ என்று கூறப்படவில்லை .” பூபேஷ் குப்தா (கம். - மேற்கு வங்கம்):- “இந்தியும் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு மொழிதான்.” அண்ணா :- “நண்பர் சொல்வது உண்மையானால், அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து, அவற்றை தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன்.” வாஜ்பாயி (ஜனசங்கம் - உபி):- “அந்த மொழிகள் எல்லாம் தேசிய மொழிகள்தான் ; அதில் சந்தேகமில்லை.” ஏ. டி. மணி (சுயேச்சை - ம. பி.):- “சட்டத்தில் எப்படியிருந்தாலும் அவை தேசிய மொழிகள்தான்.” அண்ணா :-"ஆக, பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாகும்வரை, ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும். தொடர்பு மொழியாக எது இருக்க வேண்டுமென்பதில், இயல்பான கால வளர்ச்சிக்கு அதை விட்டுவிடலாம். இப்பொழுதுகூட இந்திக்காகச் செய்த பிரசாரத்தில் அரசாங்க முயற்சியைவிடத் தனிப்பட்ட அமைப்பின் முயற்சியே பலன் தந்துள்ளது. அந்தப் பிரச்சினையை மக்களிடம் விட்டுவிடுங்கள்; காலப்போக்கில் அவர்கள் இயல்பாகத் தேர்ந்தெடுத்து வழங்கிக்கொள்கிற மொழி, தொடர்பு மொழியாக பிறகு வரட்டும். அவ்வாறு அரசாங்கக் கட்டாயமில்லாமல், மக்களே இந்திதான் தொடர்பு மொழியாக வேண்டும் என்று நினைப் பார்களேயானால், அது முதலில் நடைமுறையில் தொடர்பு மொழியாகி, பிறகு சட்ட சம்மதம் பெற்றுக் கொள்ளட்டும்.” பி. எஸ். குரியல் (சோஷலிஸ்டு ; உ. பி.):- “முதலில் அரசாங்க அங்கீகாரம் தரப்பட்டால்தான் நடைமுறையில் அது வரும்.” அண்ணா :- “கனம் உறுப்பினருக்கு, அவர் மொழிமீதே நம்பிக்கையில்லை.” ஒற்றுமை குலைந்த இந்தியாவை உருவாக்காதீர்! நண்பர் வாஜ்பாயி அவர்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்வேன் - அவர் தமிழ் மொழியைப் படித்து, அமிழ்தினும் இனிதான தமிழ் இலக்கியங்களை ஒருமுறை சுவைத்துவிட்டால், ‘தமிழ்தான் தொடர்பு மொழியாக இருக்கக்கூடியது’ என்று அவரே தேர்ந்தெடுத்துவிடுவார். ஆக, எது தொடர்பு மொழி என்று தேர்ந்தெடுத்து வழங்கும் வரை, இருக்கும் நிலையை மாற்றாமல் ஆங்கிலத்தைத் தொடர்ந்து வைத்துக்கொள்வது நலம். பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாகும் வரை, மொழிப் பிரச்சினையில் ஒரு திருப்திகரமான - நிரந்தரமான முடிவு ஏற்படப்போவதில்லை! பன் மொழிகளை ஆட்சி மொழி களாக்குவது இந்தியாவை ஒன்றுபட்ட நாடாகக்கொள்ள நாம் தரும் விலை என்று கொள்ளவேண்டும்! இந்தியின் மூலம் ஒற்றுமை குலைந்த இந்தியாவைத்தான் பெற முடியும்! முடியாத காரியமெனக் கூறிவிட இயலாது! ‘இந்தியா’ என்பது இருக்கத்தான் வேண்டும். ஒற்றுமையான இந்தியா வேண்டும் என்றால், ஒரு வட்டாரம் மற்றொரு வட்டா ரத்தை அடக்குகிறது’ என்று எவரும் கருதும் வகையில் எத்தகைய ஏற்பாட்டையும் நீங்கள் செய்யக்கூடாது. ‘இந்தியா’ என்றால் - எல்லோரும் பொதுவாக நம்பிக்கையுடனும், பெருமையுடனும் அதை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்மென்றால் - ஆட்சி மொழிப் பிரச்சினையில் பல மொழித்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும். “பதினான்கு மொழிகளையும் ஆட்சிமொழியாக்குவது என்பது முடியாத காரியம்” என்று அக்பர் அலிகான் கூறினார். அதில் சிக்கல் இருக்கிறது - நடைமுறையில் சிரமங்கள் ஏற்படலாம் - அதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அது முடியாத காரியம் என்று கூறிவிடக்கூடாது. குருட்டுத்தனமான கோட்பாடு அல்ல! சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கின்றன என்றால், அதைவிடப் பல மடங்கு பெரிய நாடாக இருக்கிற இந்தியா, 14 மொழிகளை ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை ! சுவிட்சர்லாந்துக்காரர்கள், பல மொழிப் பிரச்சினையைத் திறம்படச் சமாளித்தார்கள் என்றால், அவ்வளவுகூட திறமையும் விவேகமும் இங்கு உள்ளவர்களுக்கு இல்லை என்று பொருளா? எத்தகைய தடைகளையும் மீறி செயலாற்றவல்ல திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். உங்களுடைய பணியில் எங்களுடைய உதவி தேவை என்று உங்களுக்குப் பட்டால் நாங்கள் எங்களால் இயன்ற அளவு உதவத் தயாராகக் காத்திருக்கிறோம். எங்களுடைய உதவி உங்களுக்குத் தேவைப்படாது என்பது எனக்குத் தெரியும். ‘உதவி தேவை’ என்று நீங்கள் பாவனை செய்தால்கூட நாங்கள் உதவிபுரியத் தயாராக இருக்கிறோம். பல மொழிகள் ஆட்சிமொழிகளாக ஆகவேண்டும் என்பது ஒரு குருட்டுத்தனமான கோட்பாடு அல்ல! பல மொழிகளைக் கொண்ட ஒரு நாட்டில், அது தவிர எல்லாரையும் திருப்திப் படுத்த வல்ல திட்டம் வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . தி. மு. க. கூறுவது ‘மோகத்தால்’ அல்ல! “தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சிமொழிகளாக வேண்டும்” என்ற தீர்மானத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றியுள்ளது என்பதற்காக அதை ஒதுக்கிவைக்காதீர்கள். முன்பு சென்னை கவர்னராக இருந்த ஸ்ரீபிரகாசா அவர்கள், தகுந்த காரணங்களைக் காட்டி பல மொழித் திட்டத்தை ஆதரித்துள்ளார்; “மொழி அடிப்படையில் மாநிலங்களை அமைத்த பிறகு, ஆட்சி மொழிகளாக எல்லா மொழிகளையும் ஏற்றுக்கொள்வதினின்று தப்பமுடியாது” என்று அவர் கூறுகிறார். தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சிமொழிகளாகும் வாய்ப்பையும், தகுதியையும் நாம் தரவேண்டும். முன்பு நான் குறிப்பிட்டபடி, தமிழ் ஆட்சிமொழியாகக்கூடிய தகுதியைப் பெரும் அளவு பெற்றுள்ளது. நண்பர் பூபேஷ் குப்தா அவர்கள், வங்காள மொழி அந்தத் தகுதியை அடைந்துள்ளதாகக் கூறுவார். தேசிய மொழிகள் ஆட்சிமொழிகளாக ஏற்றுக்கொள்ளப் படும் வரை ஆங்கிலம் நீடித்து இருக்கட்டும். 1970-ல், தேசிய மொழிகள் எல்லாம் ஆட்சிமொழிகளாகின்றன என்றால், ஆங்கிலத்தை நாம் அகற்றிவிடலாம்; 1980-ல் அந்த நிலை என்றால், அப்பொழுது ஆங்கிலத்தை நீக்கிவிடலாம். ஆக, ‘ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடித்து இருக்கட்டும்’ என்று தி. மு. க. கூறுவது, ஆங்கில மோகத்தால் அல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் பெருமைப்படுகிறோம். தமிழ் மொழி ஒப்புயர்வற்றது. …. சென் குப்தா (மேற்கு வங்கம்) :- “வங்காள மொழி?” அண்ணா :- “வங்காள மொழியுடன் சேர்ந்து அதற்கு ஈடானது வேறெந்த மொழியும் கிடையாது.” அலைந்து திரியவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! நமது உள் துறை அமைச்சர் நந்தா அவர்கள் இங்கு பேசும் பொழுது, ‘நான் இந்திவாலா அல்ல; என் தாய்மொழி பஞ்சாபி; என் வளர்ப்பு மொழி குசராத்தி; இப்பொழுது நான் இந்தியை ஆதிரிக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். துரதிருஷ்டவசமாக நமக்கு அத்தகைய அனுபவம் கிடையாது. தாய்மொழி ஒன்று - வளர்ப்பு மொழி மற்றொன்று - அதரவு காட்டும் மொழி வேறொன்று - இவை நல்ல அனுபவம் தான்! ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், கட்டவிழ்ந்து அலைந்து வந்திருப்பதாக உள்துறை அமைச்சரே கூறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ எங்களுக்கு நிலையாக ஒரு இடம் இருந்துவிட்டது! அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லாமற்போய்விட்டது! கடலெனப் பரந்துள்ள தமிழ்மொழி தாழ்வுறுவதா? ‘உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி என்னுடைய தாய்மொழி’ என்ற பெருமிதம் எனக்கிருக்கிறது! நீண்ட வரலாற்றையும் புகழ்மிக்க பொற்காலங்களையும் உடைய மொழி - கவிஞர் யாத்த மொழி - கவிதைகள் கொஞ்சும் மொழி - கருத்தாலும் கவினுறு வளத்தாலும் கடலெனப் பரந்து கிடக்கும் மொழி - எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்தமொழி - அந்தத் தமிழ்மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும் வரை, நான் அமைதி பெறமாட்டேன் - திருப்தி அடைய மாட்டேன்! நான் தமிழுக்காக வாதாடுகிறேன்; அதை வைத்து, இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்க வில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும். பஞ்சம் நிரம்பிய மொழியாகிறதே இந்தி! நான் இங்கு இந்தியில் பேசப்பட்டவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வாஜ்பாயின் பேச்சிலேதான் மிகக் குறைந்த அளவுள்ள ஆங்கிலச் சொற்கள் கலந்திருந்தன. மற்றவர்களின் பேச்சுக்களில் ஏதோ தயை - தாட்சண்யத்துக்காக இந்தியைத் தெளித்திருக்கிறார்கள். ‘ஆல் இந்தியா ரேடியோ மே பிலிம் சங்கீத் அச்சா ஹை’ என்ற இம்முறையில் பேசினார்கள் - கேட்டேன். இது இந்தி அல்ல! நான் இந்திக்காக வாதாடுபவனாக இருந்தால் அதனை இவ்வளவு பஞ்சம் நிரம்பிய மொழியாக்கமாட்டேன்! இந்தி வளர்ச்சியில் உற்சாகம் காட்டுங்கள்; ஆனால் அது பரிதாபமானதாக இருக்க வேண்டாம்! அச்சம் நிலவாது! ஏற்றத்தாழ்வுக்கு இடமிருக்காது நமது அமைச்சர் நந்தா வேண்டுமானால், எதிலும் உற்சாகம் காட்டாமல் இருக்க முடியும். அவர், ’எஸ்பிராண்டோ (Esperanto) மொழியினர் பக்கம் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை . ஆனால் எங்களுக்கென ஒரு மொழி இருக்கிறது; அந்த மொழிக்கு ஆட்சி மொழிப் பட்டியலில் இடம் தந்தாக வேண்டும் என்று கேட்கிறோம்; ‘அவ்வாறு இடம் தரப்படும்வரை, அங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்து வரட்டும்’ என்று கூறுகிறோம். ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ இந்தி வருவதால் இழைக்கப்படும் ஏற்றத்தாழ்வு இருக்காது; அரசாங்கத்தில் குழப்பம் வராது; ஒரு வட்டாரம் மற்ற வட்டாரங்களை அடக்கி ஆளுகிறது என்ற அச்சம் நிலவாது அடிப்படைத் தத்துவத்தைக் கவனிக்க மறுக்கின்றனர் “ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டதுபோல், இந்தியையும் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது?” என்று சிலர் எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். ஒருகணம் நினைத்துப் பார்த்தால், என்னுடைய மகன்கள் - இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பேரப் பிள்ளைகள் - இந்தி எழுத்துக்களைத் தடுமாறி உச்சரிக்க ஆரம்பித்தால், அதேபோல் திரு. வாஜ்பாயின் பேரப் பிள்ளைகள்…… ஏ. டி. மணி :-“வாஜ்பாயிக்கு இன்னும் திருமணமே ஆக வில்லை .” அண்ணா :- “இப்பொழுது புரிகிறது - ஏன் வாஜ்பாய் இப்படிப் பேசினார் என்று! அவருக்குச் சொல்வேன் - இந்தியை ஆட்சிமொழியாக்குவது பிறகு இருக்கட்டும்; முதலில் இன்னொரு மொழி பேசும் பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்ளும்.” அநீதியால் வேதனை - உணர மறுப்பானேன்? இந்தி பேசுகிற பகுதியில் பிறந்து வளரும் குழந்தைகள், தாயின் மடியிலேயே இந்திப் பாடல்களைக் கேட்கின்றன; வயலிலும் வரப்பிலும், வீட்டிலும் தோட்டத்திலும், அங்காடி வீதியிலும், ஆற்றோரத்திலும் வாழ்வின் எல்லாப் பக்கத்திலும் நாள் முழுவதும் இந்தி மொழிப் பயிற்சி அவர்களுக்குக் கிடைக்கிறது! புத்தகங்களைப் புரட்டுவதால் அவர்கள் இந்தி கற்றுக் கொள்ளவில்லை; இந்தி பேசும் இடத்தில் பிறந்ததாலேயே அவர்கள் இந்தியைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்! உங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக வருவது, எங்களுக்குப் பள்ளிக்கூடத்து அறிவாகக் கிடைக்க வேண்டும். ஒத்தமுறையில் இதில் எப்படிப் போட்டியிட முடியும்? ரோமப் பேரரசு காலத்தில் ரோம் நாட்டுப் பிரபுக்கள் மேலேயிருந்து வேடிக்கை பார்க்க, கீழே மைதானத்தில் கோரப் பசியுடன் பாய்ந்துவரும் சிங்கங்களுடன் அடிமை வீரர்கள், வெறும் கைகளுடன் சண்டை போடுவார்களாம். அப்படிப்பட்ட சண்டைகளிலிருந்து ஒரு சில அடிமைகள் உயிருடன் திரும்பி யிருக்கக்கூடும் - நமது நண்பர் சத்தியநாராயணா இந்தி பேசவில்லையா, அதைப்போல ! ஆனால் மற்றவர்கள், சிங்கங்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகக் கிழித்து எறியப் பட்டிருப்பார்கள்! எங்களுக்கும் அத்தகைய கதி வரவேண்டுமென ஏன் நினைக்கிறீர்கள்? நாங்கள் என்ன குற்றம் செய்து விட்டோம் - இப்படிப்பட்ட தண்டனைகளுக்கு ஆளாக? உங்களுடைய மொழியை நாங்கள் படித்து, உங்களுடன் நாங்கள் எப்படிப் போட்டி போட முடியும்? அது பெரிய அநீதி - சித்திரவதை! ஒரு மொழியை - ஒரு வட்டார மொழியை மற்றெல்லா மொழிகளுக்கும் மேலாக ஆட்சிமொழியாக ஆக்க நினைப்பதில் உள்ள அநீதி உங்களுக்குப் புரியவில்லையா? எங்களுக்கு எவ்வளவு மனவேதனையை அது தருகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? இந்திக்காக எவ்வளவுதான் பிடிவாதமாக நீங்கள் வாதாடினாலும் - ஆர அமர நீங்கள் யோசித்தால் - நான் கூறுவது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கேலி பேசிப் பயனில்லை - கொந்தளிப்பை அடக்க உதவியது பத்திரிகைகளைப் படிக்கும்பொழுது, இந்திப் பிரியர்கள் கோபதாபங்களுக்கு ஆட்பட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. எங்களுடைய போராட்டத்தின் அடிப்படையை - தத்துவத்தைக் கவனித்துப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். “இந்தியை எதிர்ப்பதற்காக அண்ணாதுரையை மட்டுமல்ல - காமராசரையும் பிடித்துச் சிறையில் போடவேண்டும்” என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர், திரு. சுப்பிரமணியமும், திரு. அளகேசனும் செய்த இராஜினாமா குறித்துக் கேலியாகப் பேசுகிறார்களாம். கலவரம் மிகுந்த நேரத்தில், இவர்கள் செய்த இராஜினாமா எந்த அளவு, மக்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தர உதவியது என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது. யாராவது தமிழ்நாட்டுக் காங்கிரசின் பெயரைக் காப்பாற்றினார்கள் என்றால் - முழு அளவு அல்ல - ஓரளவு, அது சுப்பிரமணியமும், அளகேசனும்தான்! அவர்களிடம் பற்றோ பாசமோ எனக்குக் கிடையாது! தமிழகச் சட்டமன்றத்தில் பலதடவைகள் நானும், சுப்பிர மணியமும் வாதிட்டிருக்கிறோம். அவரை எதிர்த்து நான் பேசி யிருக்கிறேன். எதிர்பாராதவிதமாக என்னை மடக்க அவரும் தவறான வழிகளைக் கையாண்டிருக்கிறார். ஆனால், உரிய நேரத்தில் அவர் செய்த செயல் - தமிழ்நாட்டில் மூண்ட கொந்தளிப்பை ஓரளவு அடக்க உதவியது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. பண்புள்ள மனிதர்கள் தமிழகத்தில் உண்டு அசாம் மாநிலத்தில் மொழிச் சண்டைகள் நடைபெற்ற பொழுது, ஊர் ஊராக சச்சரவு பரவியது; அமைதி காக்கும் அணி ஒன்று புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று அமைதி காக்கப் பாடுபட்டது. அதுபோல, அமைதி காக்கும் பணியில் மாநில முதலமைச்சர் இறங்கி - எங்களையும் சேர்த்து - ஏன் முயற்சி செய்திருக்கக்கூடாது? ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்களைப் பற்றி, ‘அவர் கற் பாறைபோல் நின்றார்’ என்று உள்துறை அமைச்சர் நந்தா புகழ் பாடியிருக்கிறார். ஆம்; பக்தவத்சலம், ஒரு கற்பாறைபோல்தான் நின்றார் - ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்று - இரக்கமற்று, அவர் கற்பாறைபோலத்தான் நின்றார் - துப்பாக்கிகள் வெடித்தன - குண்டுகள் பாய்ந்தன - பிணங்கள் விழுந்தன - அப்பொழுதும் அவர் கற்பாறைபோல நின்றார்! மகனை இழந்த மாதாவின் அழுகுரல், கணவனை இழந்த மங்கையின் கதறல், எதுவும் அவரை அசைக்கவில்லை ! - அவர் கற்பாறை போல நின்றார்! - இதயத்தைக் கல்லாக்கி அவர் நின்றார்! அப்படிப்பட்ட கற்பாறை போன்ற மனிதர்கள்தாம் உங்களுக்குத் தேவையா? தமிழகத்தில் அதைவிடச் சிறந்த பண்புள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்! ‘கற்பாறைபோல அவர் நின்றார்’ என்று நீர் புகழ்கிறீரே! உம்முடைய இதயம் சற்றுக் கனிவானது என இதுவரை நம்பியிருந்தேன்! சாதுக்கள் - சந்நியாசிகள் கூட்டத்தில் இருக்கும் உமக்கு சிறிதாவது சாந்தகுணம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்! 50, 60 பேர்களைப் பிணமாக்கி - ஆறு வயதுப் பையன், ஏழு வயதுச் சிறுமி, எண்பது வயதுக் கிழவர் என்றுகூடக் கண்மண் பாராமல் சுட்டுவீழ்த்தி - வீதியை இரத்தமாக்கி - வீடுகளைச் சோகமாக்கி - ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, ‘கற்பாறைபோல நின்றார்’ என்று புகழ்மாலை சூட்டுகிறீர்களே, உம்மைப்பற்றி நான் என்ன சொல்ல முடியும்‘- நீர் ஒரு ’பெரிய பக்தவத்சலம்’ என்பதைத் தவிர! தவறாக நினைத்துச் சமாதானமடையாதீர்! “சட்டமும் ஒழுங்கும் காப்பாற்றப்பட்டுவிட்டன” என்று தவறாக நினைத்துச் சமாதானமடையாதீர்கள்! சட்டமும் ஒழுங்கும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எனக்குச் சிறிதளவுகூடக் கருத்து வேறுபாடு கிடையாது; பலாத்காரம் சிறிதளவுகூடக் கூடாது என்பதில் நான் கண்ணுங்கருத்துமாக இருப்பவன். நான் கடைசியாகக் கூறுகிறேன் - மொழிப் பிரச்சினையைப் புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாகும்வரை ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப்போக்குக்கு விட்டு விடலாம், நன்றி! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.