[] 1. Cover 2. Table of contents பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள்   அண்ணாதுரை     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/letters_of_peraringar_anna மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி இரண்டாவது மாநில மாநாடு - பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன் தம்பி! “கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே’’ - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின்”அனுமதி’ பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா? ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு “பாஸ்போர்ட்’ கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும்.”பாஸ் போர்ட்’ போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்’’ என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு! ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை! ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது. நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்! எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்! நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு அருமையான "கட்டம்’ வந்திருக்கிறோம் என்பது விளங்கும். நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்! தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று - எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ள மெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம் கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி. தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம். ஓராண்டுக்கு முன்பு இலங்கை "சுதந்திரன்’ ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன் - அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார். நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலானவர்கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர். இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு - எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக் கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூதுவிடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் "சைவத்’ தைத் தாங்கிக் கொண்டிருந்தேன்!! அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கியமான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புருவத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள். துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர் நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது. உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை! அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்,தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!! என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!! தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும். கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார் - தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து - ஆயினும் என்ன செய்வது? நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!! நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன். என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது. என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார். சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல "கனவுகள்’ - விழித்தபடி - நான் கண்டு கொண்டி ருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார். இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும். என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்துதான்! பெரியாரின் "சர்டிபிகேட்டே’ உண்டு இதற்கு. திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம். (யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு பெரிய மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! - என்று பேசினார். அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப்பட்ட போதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண்டிய வர்கள் பகைக்கும்போதும் சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. "விளையாட்டுப் பிள்ளைகள்’ என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்! சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல, அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது. குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு. தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான தல்ல! ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்! இடைவிடாத பொதுமக்கள் தொடர்பு கொண்ட இயக்கம். களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள். விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம் - இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன் - பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார். நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன் - மகிழ்கிறீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வருவதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவருடைய "நாட்களில்’ நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும். நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகிறோம் - ஆனால் நான் எவ்வளவு முயன்றும் "நம் நாடு’ பெரிதாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப்போது, அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை. மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்க வேண்டும். இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செயலாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக்கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம். நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக்கிறது. இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்புகளைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்! இதுகளாவது - கட்சி நடத்துவதாவது - என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!! இதுகளாவது ஒன்றுகூடி வாழுவதாவது - என்ற சாபம் மிரட்டிற்று. ஒன்றுகூடி வாழ்வது மட்டுமா - ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம் - தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம். நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமானதல்ல!! ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர் - இதோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன். தம்பி! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன். வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை. ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன். ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவதுடன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு, புதிய கட்டம், புதிய பொதுச் செயலாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு - அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது. அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள் - பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும். புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத்தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், தம்பி! முயற்சி எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான். சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில் - நடு நாயகமல்லவா, அதனால். அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகிதக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக்கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போதிருந்தே உள்ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி! - பணமும் அனுப்பு! அன்புள்ள அண்ணாதுரை 05-08-1955 புதிய உற்சாகம் மாஸ்டர் தாராசிங்கும் பாஞ்சாலமும் - கழகத்தில் தோழமை தம்பி! முன்பு எழுதிய கடிதம் கண்டு மகிழ்ச்சி தெரிவித்ததற்கு என் நன்றி. நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது. நாட்டு நடவடிக்கைகள் பலவற்றிலும் தொக்கிக் கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு தூய்மையும், வாய்மையும் கொண்டது என்பது விளக்கமாகும். சென்ற கிழமை வடக்கே ஒரு கிழவர் சிறைக் கோட்டம் அழைத்தேகப்பட்டார். மாஸ்டர் தாராசிங் பன் முறை சிறை சென்றவர். சீக்கிய பெருங்குடி மக்களின் ஒப்பற்ற தலைவர் காங்கிரஸ்காரர் அல்ல. அவர் காங்கிரஸ்காரராகி இருந்தால், பாபு ராஜேந்திரப் பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்றாரின் வரிசையில் இடம் பெற்றிருப்பார். ஆனால் அவருக்குக் குறிக்கோள் இருக்கிறது - கருவிலே உள்ள குழவி போன்ற தாகத்தான் இன்னமும் இருக்கிறது - முழு வளர்ச்சி அடைய வில்லை. அந்தக் கருவையே சிதைத்திடத்தான் அவர்மீது கடுமையான அடக்குமுறை வீசப்பட்டு வருகிறது. தாராசிங், சீக்கியர்களுக்காக ஒரு தாயகம் கேட்கிறார். சீக்கிய மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவைகள் பாதுகாக்கப்பட்டு வளமடைய வேண்டுமானால், “பஞ்சாபி மொழி பேசும் பிராந்தியம்’ ஏற்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்து வருகிறார்; சில ஆண்டுகளாகவே, சீக்கியர்களிலே, காங்கிரஸ் கட்சிக்குப் பலதேவ்சிங்குகள் அடிக்கடி கிடைக்கத்தான் செய்கிறார்கள்; நேரு பண்டிதரும் அடிக்கடி அந்தப் பகுதி சென்று பவனி வரத்தான் செய்கிறார் என்றாலும், தாராசிங்கின்”தாரகம்’ பஞ்சாபில் வெற்றி பெற்று வருகிறது. பஞ்சாப் மாகாணம், வங்காளம் போலவே, பாகிஸ்தான் அமைப்பின் போது, இரண்டாக்கப்பட்டது. உனக்குத் தெரியும், இந்திய பூபாகத்துடன் இணைந்து இருக்கும் பஞ்சாபிலே அமிர்தசரஸ் இருக்கிறது - இது சீக்கியர்களின் காசி! தங்கக் கோயில் ஒரு தடாகத்தின் நடுவே இருக்கிறது. கோயிலில் இராமன் - கிருஷ்ணன் - முருகன் - நான்முகன் இப்படிச் சிலைகள் கிடையாது - சீக்கியரின் வேத புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது - சீக்கியர்கள் அங்குச் சென்று தூய மன நிலை பெறுகிறார்கள். காலைச் சூரியன் ஒளியில், தங்கக் கோயிலின் நிழலுருவம் தடாகத்தில் தெரிகிறது. காண்பதற்கு அருமையானதோர் காட்சி நான் அக்காட்சியைக் கண்டு களித்திருக்கிறேன். சீக்கியர் களிடையே உள்ள ஒற்றுமை உணர்ச்சியையும் அதுபோது காணமுடிந்தது. மொழி வழி அரசு அமைந்தால்தான், சுயராஜ்யம் பொலிவும் வலிவும் பெறும் என்று காங்கிரஸ் தலைவர்களே பேசி வந்தனர். அந்த முறையிலே பார்க்கும்போது, தாராசிங் கேட்கும் “பாஞ்சாலம்’ அமைக்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால் காங்கிரஸ் சர்க்கார் இதை எதிர்க்கிறது பிடி ஆட்களைப் பெற்று, இந்தக் கிளர்ச்சியை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. தாராசிங் பணிய மறுக்கிறார்! சிறையில் தள்ளுகிறார்கள் - தணலில் தங்கமாகிறார். சீக்கியர்களிலே சிலரைப்பிடித்து அவரை நிந்திக்க வைக்கிறார்கள்; அவர், அவர்களின் நிலைமையைக் கண்டு பரிதாபப்படுகிறார். அவர் எப்போது கிளர்ச்சி துவங்கினாலும் இளைஞர் அணிவகுப்புத் துணைக்கு நிற்கிறது. அறப்போரில் ஈடுபட ஏராளமானவர்கள் முன்வருகிறார்கள். எனினும் மாஸ்டர் தாராசிங் பற்றியும், அவர் நடத்திவரும் இயக்கத்தைப் பற்றியும், நமக்கெல்லாம் அதிகமாகத் தெரியாது - தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. இருட்டடிப்பு! ஆமாம் இங்கே, திராவிடநாடு பிரிவினை எவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பது எப்படி மற்ற பகுதியினருக்குத் தெரியாதபடி”இருட்டடிப்பு’ இருக்கிறதோ, அதுபோல பாஞ்சாலக் கிளர்ச்சி பற்றிய முழுத்தகவலும் நமக்குத் தெரிவது இல்லை - இருட்டடிப்புத்தான்! நாகநாடு கிளர்ச்சி பற்றி ஒவ்வோர் சமயம் துண்டு துணுக்குகளாகச் செய்திகள் வருகின்றன - தொடர்ந்து அங்கே என்ன நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை - காரணம் இருட்டடிப்புத்தான்! மணிப்பூரில் தனிநாடு கிளர்ச்சி அரும்பியிருக்கிறது - சேதி தாராளமாகக் கிடைப்பதில்லை - இருட்டடிப்பு! பர்மாவில், பல ஆண்டுகாலமாகக் கிளம்பி, படை பலத்துடன் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கரேன்நாடு கிளர்ச்சி - இதுவும் இருட்டடிப்பின் காரணமாக, முழுவதும் நமக்குத் தெரிவதில்லை. இந்தோனேμயாவில் தாருல் இஸ்லாம் என்றோர் கிளர்ச்சி இருக்கிறது. பயங்கரமான நிகழ்ச்சிகள் ஏற்படும்போது மட்டுமே இவைபற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது - தொடர்ச்சியாகச் செய்திகள் தரப்படுவதில்லை. திராவிடநாடு கிளர்ச்சி குறித்தும் இது போலத்தான் - எப்போதாவது திடுக்கிடக்கூடிய சம்பவங்கள் நேரிட்டால், இந்திய பூபாகத்தின் மற்றப் பகுதிகளில் ஒரு சிறிது தெரியும்; மற்றச் சமயத்தில் இருட்டடிப்பு! சென்ற ஆண்டு, "இரயில் நிறுத்தக் கிளர்ச்சி’ நடைபெற்றபோது, இந்தியாவின் எல்லாப் பகுதியிலும், திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, ஓரளவு தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, எப்போதும் போல மூடிவிட்டனர். இந்தக் குறைபாடு நீங்க, திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, பிற இடங்களில் அறிந்து கொள்ளத்தக்க வகையில், ஆங்கில ஏடு நடத்துவது என்ற எண்ணம் எனக்கு நீண்டகாலமாக உண்டு. இருமுறை அதற்கான முயற்சி எடுத்து முறிந்து போனதுமுண்டு இப்போதும் அந்த எண்ணம் இருந்தபடிதான் இருக்கிறது - தக்க வாய்ப்பு ஏற்படவில்லை. தம்பி! நமக்கிருக்கும் குறைபாடுகள் இவை போன்றவையேதவிர, இல்லாததும் பொல்லாததுமாக நம்மைப் பற்றி இடுப்பொடிந்ததுகளும், இஞ்சி தின்றதுகளும், பேசுவதாலும் எழுதுவதாலும் இல்லவே இல்லை என்பதை முதலில் மனதிலே நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம். வீசப்படவேண்டிய பழிச்சொல் அவ்வளவும், எவ்வளவு வேகமாகவும் திறமையுடனும் வீசப்படவேண்டுமோ அவ்விதம் வீசிப் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைப்பதெல்லாம் மறுபதிப்புகள் - எளிய பதிப்புகள் - இலவச வெளியீடுகள்!! இவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நிலையில் நாம் இல்லை. அங்கே வெடிப்பு, இங்கே கொந்தளிப்பு, இங்கே குழப்பம், என்றெல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும்போது ஆத்திரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாய். தம்பி! இதற்கு ஏன் ஆத்திரம், ஆயாசம்? நம்மைப்பற்றிய “செய்திகள்’ பிற கட்சிக்காரர்களும் இதழ்களும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு, நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன என்பதுதானே அதன் பொருள். இதற்கு ஆயாசப்படுவதா!! பேதமும் பிளவும், வெடிப்பும் குழப்பமும் ஏற்பட்டால்தான், நமது இயக்கத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று கிலி கொண்டவர்கள், இப்போது கீறலைக் கண்டு வெடிப்பு என்று கூவிக் களிப்படைகிறார்கள்! இங்கிருந்து செல்பவர்களும், இங்கு இருந்துவிட்டு வந்தவர்கள் என்ற காரணத்தாலேயே வாழ்த்தும் வரவேற்பும் பெறுகிறார்கள் - இந்த உபசரிப்பும் உலாவும் சிலநாட்களுக்கு நடைபெறும். நமது மாஜி நண்பர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படியோ ஒன்று மகிழ்ச்சி பெறட்டும் என்பதுதான் என் எண்ணம். அவர்களை எத்தனை நாளைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது தெரியாததா!! இவ்விதம்”பயணம்’ நடத்தியவர் பலர்; அவர்களிலே யார் இன்று உருவம் தெரியும் நிலையில் இருக்கிறார்கள். ஆயினும் எனக்கு - உண்மையில் கூறுகிறேன் - நமது இயக்கத்தைவிட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால், வருத்தந்தான். கூடுமான வரையில் கூடி வாழ்வதைத்தான் நான் விரும்புகிறவன்- சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டாலும், ஆபத்து இல்லை என்றாலும், பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன். இந்த நோக்குடனேயே நான், சிலர் வெளியேற எண்ணும்போதெல்லாம், சமரசத்திற்காக முயன்றிருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே, வேறு இடத்தில், “அச்சாரம்’ வாங்கி விட்டார்கள் என்று தெரிகிற வரையில், சமரசம் பேசுவேன் -”கைமாறி விட்டது’ என்று தெரிந்தால் என்ன செய்வது சரி அவ்வளவுதான்! என்று எண்ணிக்கொள்வது. அவர்கள் வெளியேறி வேறிடம் சென்றதும், அங்கு கொஞ்சம் காரசாரமாகப் பேசி, கண்டித்துத்தானே "சபாஷ் பட்டம் பெறவேண்டும். எனவே பேசுகிறார்கள். ஏசுகிறார்களே என்று வருத்தப்படலாமா - இங்கே இருந்தபோது எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள்! எவ்வளவு பற்றுப் பாசம் காட்டி யிருக்கிறார்கள்! வழியே போகிறதுகள், வம்புக்கு வருபவர்கள் தொடர்பே அற்றதுகள், இப்படிப்பட்டவர்க ளெல்லாம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம் இயக்கத்தைப் பற்றிப் பேசித்திரியும்போது, இருந்துவிட்டுப் போனவர்கள், இயன்றதைச் செய்தவர்கள், நண்பர்களாயிருந்தவர்கள், பிரிந்த காரணத்தால் இரண்டோர் இடத்தில் கடுமையாகத் தாக்கினால், குடிமுழுகிவிடாது. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே பாவம்! இந்தச் சம்பவங்களைப் பற்றி எல்லாம் படிக்கும்போது தம்பி! நாம் இயக்கத்தை நடத்திச் செல்வதில் இதுவரை காட்டிவரும் தோழமையைவிட, அதிக நேர்த்தியான தோழமையைக் காட்டிவரவேண்டும் என்ற பாடத்தைத்தான் பெறவேண்டும். மற்ற எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு தோழமை உணர்ச்சி நமது கழகத்திலே இப்போது இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பண்பு மேலும் வளரவேண்டும். தேர்தல் எனும் முறையே இன்றி, ஒரு இயக்கத்தின் தலைவர் பார்த்து வைத்ததுதான் சட்டம் என்றிருக்கும்போது தோழமை உணர்ச்சி அல்லது, பயம் போதும். நாமோ, சிற்றூர் கிளைக் கழகம் முதற்கொண்டு, பொதுச் செயலாளர் வரையில் தேர்தல் முறை வைத்திருக்கிறோம். தேர்தல் என்றால் போட்டி, கட்சி சேர்த்தல் என்பதுதான் உடனடிப் பொருள் எனவே தேர்தலின் காரணமாகச் சிறுசிறு சச்சரவுகள் எழத்தான் செய்யும். இந்தச் சச்சரவும் தேர்தல் ஊழல்களும் நம்முடைய கழகத்திலே மிகமிகக் குறைந்த அளவிலேதான் இருக்கிறது - வேறு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சின்னாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தேர்தலில் போது - வாய்ச் சண்டை வளர்ந்து மேஜை நாற்காலிகள் வீசிக்கொள்ளப்பட்டன என்று படித்திருப்பாய். இது, காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில், அதுபோலவே வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தேர்தலிலும் "ரசாபாசம் நேரிட்டதாகச் செய்தி வந்தது. இலங்கையில் தொழிலாளர் அமைப்பிலே நடைபெற்ற தேர்தலிலும், போட்டி, பூசல் அளவுக்குச் சென்று, தேர்தல் வேலையே வெற்றிகரமாகச் செய்ய முடியாமற் போய்விட்டது. இவைகளை எடுத்துக் காட்டுவதன் காரணம், நமக்குள்ளாகத் தேர்தல் தகராறு எழுவது சரிதான் என்று வாதாட அல்ல. தேர்தல் தகராறுகள் நம்மில் பிறரிடம் இருக்கும் அளவுக்கு இல்லை என்பதை நினைவுபடுத்தி, இப்போது எழும்பியுள்ள சிறு தகராறுகளும் எழாத வகையில் இனி நாம் பணியாற்ற வேண்டும் என்பதைக் கூறத்தான். ஏனெனில், நமது இயக்கத்திலே காணக்கிடக்கும் மாண்புகளை, மாற்றார்கள் போற்ற மாட்டார்கள்; ஆனால், ஒரு சிறு தகராறு தெரிந்தாலும் போதும், சுட்டிக் காட்டிச் சிரிப்பார்கள். இதற்கு இடமளிக்கும் முறையில் யாரும் நடந்துகொள்ளக்கூடாது. தேர்தல் காரணமாகச் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டி ருந்தாலும், தாங்கிக்கொள்ளும் பெரிய மனமும், மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்றும் தோழமையுள்ளமும் வேண்டும். கழகத்தின் பொதுப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்திக் காரியமாற்ற, நமது பொதுச் செயலாளருக்கு நேரமும் நினைப்பும், திறனும் வாய்ப்பும் பயன்பட இடமளிக்க வேண்டுமேயல்லாமல், இத்தகைய தேர்தல் தகராறுகள் இடம்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் கவனித்து ஆவன செய்யும் தொல்லையை, அவருக்கு நாம் தருவது முறையாகாது. இதிலே, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் முழுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள்தான் தத்தமது வட்டாரத்தில் காணப்படும் மனத்தாங்கைத் துடைத்திட முயற்சிக்க வேண்டும். கழகத்துக்குள் அடிப்படை பிரச்சினைமீது அல்ல, தவறான எண்ணம், மனச் சங்கடம் ஆகியவற்றின் காரணமாக எழும் சிக்கலைத் தீர்க்கும் திறம் இல்லாமற் போய்விட்டால் பிறகு எங்ஙனம், பொதுமக்களை அணுகி, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அவர்களை இயக்கத்தில் கொண்டுவந்து சேர்ப்பது? எனவே, வெற்றி பெற்ற தோழர்கள், தத்தமது வட்டாரத்தில் ஒற்றுமையும் தோழமையும் மலருவதற்குப் பாடுபட்டு, அதிலே வெற்றி காணவேண்டும் தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றியையே பெரிதென்று எண்ணவேண்டும். வடநாடு தென்னாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் வருகிறது; ஐந்தாண்டுத் திட்டத்திலே ஓரவஞ்சனையாகத்தான் நடந்து கொண்டது என்ற கருத்தும், இந்தியைத் திணிப்பது, எதேச்சாதிகார முறை, மொழிவெறி, ஏக பாஷைப் பித்தம், இதைக் கண்டித்தே தீர வேண்டும், இந்த முயற்சியை எதிர்த்தேயாக வேண்டும் என்ற கருத்தும், இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலேயே வெகுவாகப் பரவிவிட்டது - வெளிப்படையாகவே பேசப்படுகிறது. இந்த நல்ல சூழ்நிலையைக் கழகத் தோழர்கள் தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திராவிட நாடு கேட்பதற்கான காரணங்களை, முன்பு, காதால் கேட்பதும் "பாபம்’, தேசியத்துக்கு விரோதமான காரியம் என்று எண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களலேயே ஒரு பகுதியினர், இப்போது திராவிட நாடு பிரச்சினையைத் தெரிந்துகொள்ள ஆவல் காட்டுகிறார்கள். அவர்கள் உணரும் படியும் ஒப்பும்படியும் எடுத்துக் காட்ட நம்மிடம் ஏராளமான காரணங்கள், புள்ளி விபரங்கள் உள்ளன. அவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் முறையில், நாம் அவைகளை எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றக் கொள்ளும் நாம், அதற்கேற்றபடி பெரிய மனம் படைத்தவர்களாகித் தீர வேண்டும். இருட்டடிப்புப் பற்றிக் குறிப்பிட்டேன். அது, வெளியே நமது கருத்தும் வளர்ச்சியும் தெரியவிடாமல் செய்வது பற்றி மட்டுமல்ல, இங்கேயே உள்ள இருட்டடிப்பு பற்றியுந்தான். இங்குள்ள "பத்திரிகைகள்’ நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் களும் கூட, இயக்க கருத்துக்களையும் அக்கருத்துக்களுக்கு ஆக்கம் தரும் நிகழ்ச்சி பற்றியும், அவ்வப்போது துண்டு அறிக்கை வெளியிட்டு வீடு தோறும் வழங்க வேண்டும். நமது இயக்கக் கருத்துக்கள் பொதிந்த பாடல்களையும், நாடகங்களையும் மேலும் வளமும் வண்ணமும் உள்ளதாக்க வேண்டும் புள்ளி விவரங்களைத் தயாரித்து. முச்சந்திகளில் பொறித்து வைக்க வேண்டும் கழகத் தோழர் ஒவ்வொருவரும் இம்முறையில் ஏதேனும் ஒரு பணியாற்றி, இயக்கத்துக்குத் தொண்டாற்ற வேண்டும். ஒரு திங்கள் இம்முறையில் பணியாற்றிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே புதியதோர் உற்சாகம் பிறக்கும். நோக்கம் இவ்வகையில் திரும்பினால், பிறகு, சிறு சச்சரவுகள் பற்றிய சிந்தனையும் அற்றுப்போகும், சீரழிவானவர் வீசும் சிறு சொல்லும் நம்மைச் சுடாது. அன்புள்ள அண்ணாதுரை 22-5-1955 மத்தாப்பூ நேருஜியின் புகழ்! - டிட்டோவிற்கு வரவேற்பு!- ஐந்தாண்டுத் திட்ட ஊழல். தம்பி! உலகமெல்லாம் எங்கள் நேருஜியைப் புகழ்கிறது - உதவாக்கரைகளே! நீங்கள் அவருடைய ஆட்சியை, அவர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கிறீர்களே, இது முட்டாள்தனமல்லவா, போக்கிரித்தனமல்லவா, என்றெல்லாம் மேடை அதிர அதிரக் காங்கிரசார் பேசுகிறார்கள் என்று எடுத்துக் காட்டியிருக்கிறாய். உலகம் புகழ்கிறதே, என்பதற்கு ஆதாரமாக, நேரு பண்டிதர் சர்வதேச விவகாரங்களிலே கலந்து கொள்வதையும், அவர் பல்வேறு நாடுகளிலே பவனி வருவது, ராஜோபசாரம் பெறுவது ஆகியவற்றையும் சுட்டிக் காட்டு கிறார்கள். அமெரிக்கா சென்றார், சீனா சென்றார், இந்தோசீனா சென்றார், இந்தோனேμயர் சென்றார். சீமைக்குப் பல தடவை சென்றார், இதோ இப்போது ரஷ்யாவுக்குப் போகப் போகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள். உலகம் இருவேறு முகாம்களாகி இருப்பது உனக்குத் தெரியும். ஒரு முகாமில் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை நாடுகளும், மற்றொரு முகாமில் அதற்கு எதிரிடையான ஆட்சி முறை நாடுகளும் உள்ளன. இரு முகாம்களும், தத்தமது கட்சிக்கு ஆள் பிடிக்கும் காரியத்தில் ஈடுபட்டுவிட்டிருக்கின்றன. தம் கட்சியில் சேரா விட்டாலும் பரவாயில்லை, எதிர்க்கட்சியில் சேராதிருந்தால் போதும், நடு நிலைமை வகித்தால் போதும் என்று பாடுபடுகின்றன. இதற்காக, புகழுரை, பாராட்டுரை, உபசாரம், விருந்து இவைகளை அள்ளி அள்ளி வீசுகின்றன. பணம் தேவையா, தாராளமாகத் தருகின்றன! நிபுணர்கள் வேண்டுமா, கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கிறார்கள்! இந்தப் புகழுரை, போதை தருமளவு தரப்படுகிறது! நேரு பண்டிதர் இதிலே மயங்கிவிட்டாரோ இல்லையோ தெரிய வில்லை. காங்கிரஸ் ஏடுகளிலே வெளியிடப்படும் படங்களையும் செய்திகளையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள். இதே விதமான உபசாரம் நேரு பண்டிதருக்கு மட்டும் அல்ல, இலங்கை கொத்தலாவலைக்கும், பிலிப்பைன் தீவு ராமு லோவுக்கும் வழங்கப்படுவதைக் காங்கிரசார் கவனிக்கவில்லை. நேரு பண்டிதரின் பீக்கிங் விஜயத்தின் போது ராஜோபசாரம் நடந்ததென்றால், அதே விதமான உபசாரம் பர்மிய பிரதமர் சென்ற போதும் நடக்கிறது! தம்பி! டிட்டோ இங்கு வந்தார்! ராஜோபசாரம் எப்படி எப்படிச் செய்தார்கள்! அவர் வருகிற கப்பலை நமது கப்பல்கள் சென்று எதிர்கொண்டு அழைத்தன! டில்லியில் மக்கள் கூடி டிட்டோ ஜிந்தாபாத் போட்டனர்! மாலைகள் குவிந்தன! விருந்துக்கு மேல் விருந்து! வரவேற்பு வைபவம், டிட்டோவைத் திணரடிக்கும் அளவுக்கு நடந்தது. ஆவடி காங்கிரசிலும், ராஜபவனத்திலும் அவருக்கு நடைபெற்ற பல்வேறு வகையான விருந்துகளும், கலா காட்சிகளும் சாமான்யமா! இப்போது ஆறு நாட்கள் நேரு பண்டிதர் டிட்டோவின் விருந்தாளியாக, யுகோ நாடு செல்கிறார். டிட்டோ என்ன, பண்பு அறியாதவரா! நேரு பண்டிதரின் மனம் குளிரும் வண்ணம், தனக்கு இந்தியாவிலே கிடைத்த வரவேற்பு சாமான்யம் என்று கூறத்தக்க விதமாக, விருந்தும், உபசாரமும் ஏற்பாடு செய்யாமல் இருப்பாரா? பார், பார்! எங்கள் பண்டிதருக்கு யுகோவில் கிடைக்கும் ராஜோபசாரத்தை என்று பேசிப் பூரித்துப் போவதால் என்ன பலன்! டிட்டோ இங்கு வந்திருந்த போது, இங்கே அவருக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைப் பற்றி, யுகோ நாட்டுப் பத்திரிகைகள் சக்கைப் போடு போட்டன! டிட்டோவுக்கு இந்தியாவில் இணையில்லா வரவேற்பு! ராஜபவனத்தில் ரசமான விருந்து! மகாராஜாக்கள் மலர்மாரி பொழிந்தனர்! மதுரமான இசை விருந்து அளிக்கப்பட்டது! நேர்த்தியான நாட்டியம்! இந்தியாவின் தொழில் முயற்சியை டிட்டோ பார்வையிட்டார் இவ்விதமெல்லாம் யுகோ நாட்டுத் தினமணிகள் தலைப்புகள் தரத்தான் செய்தன தம்பி! இவ்வளவு என்ன, இங்கே உள்ள பத்திரிகைகள், பாண்டுங் மகாநாடு நேருவின் வெற்றி என்று புகழ்ந்தன அல்லவா, எகிப்து நாட்டிலே நாசிர், பாண்டுங் மகாநாட்டுக்குப் பிறகு சென்றதும், அவரை வரவேற்க மோட்டாரிலும் குதிரை மீதும் ஒட்டகை மீதும் கால் நடையாகவும் பல்லாயிரக் கணக்கான எகிப்தியர் வந்தனர். அவர்கள் என்ன முழக்கம் இட்டனர் தெரியுமோ? பாண்டுங் வீரரே வருக! இந்தியாவை வசீகரித்த இணையில்லாத் தலைவரே வருக! இப்படித்தான். இந்தோனேசியாவில் தெரியுமா! இருபத்தொன்பது நாடு களும் பெருமைப்படுத்திய தலைவர்களே, வாழ்க! என்று அந்த நாட்டு இதழ்கள் சுகர்னோ, ஜோஜோ ஆகிய தலைவர்களை புகழ்ந்து எழுதின! ஒருவர்க்கொருவர் உபசாரத்தைப் பொழிந்து கொள்வது, இன்றைய உலகிலே கொழுந்துவிட்டெரியும் புதுமுறை. இதைக் கொண்டு, தப்புக் கணக்குப் போடுகிறார்கள் தம்பி! அவ்வளவு தான்! அமெரிக்கா உறவு பற்றியும், அந்த நாட்டினிடம் உதவியும் கடனும் பெறுவதால் ஏற்படக்கூடும் இழிவு, ஆபத்து பற்றியும் ஆச்சாரியாரே சொல்லிச் சோதிக்க வேண்டி நேரிட்டதைக் காங்கிரஸ் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள். உலகமே உள்ளன்புடன் நேரு பண்டிதரைப் புகழ்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதனால் அவருடைய ஆட்சியிலே காணக்கிடக்கம் அவலட்சணங்களை, அதனால் எற்படும் அவதிகளை, குறிப்பாக திராவிடத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியுமா! எடுத்துக் காட்டாதிருப்பது அறிவுடைமை தானாகுமா? "மத்தாப்பு’ கொளுத்தும்போது பார்த்திருப்பாயே தம்பி! எவ்வளவு வண்ணம்! எத்துணை ஒளி! ஆனால் தம்பி! எவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்து போய் விடுகிறது! அது போலத்தான் ராஜ தந்திர முறை காரணமாக நடத்தப்படும் உபசாரம் தரும் ஒளி! சிறு அகல் விளக்கானாலும் பரவாயில்லை, மத்தாப்புப் போல அல்ல, நின்று நிதானமாக ஒளிவிட்டு இருளை அகற்றும். அதுபோலத்தான் உள்நாட்டிலே மக்களின் உள்ளம் குளிரும்படி ஆட்சி நடத்தினால், நிரந்தரமான பெருமையும் நிலையான செல்வாக்கும் கிடைக்கும். வெறும் நேத்திரானந்தத்தால் பலன் என்ன? நேரு பண்டிதரின் "உலகப் புகழ்’’ பற்றி ஓயாமல் பண்பாடும் பத்திரிகைகளே, உள்நாட்டு விவகாரத்தில், ஆட்சியின் கோணல் காரணமாக ஏற்படும் அவதிகளைச் சுட்டிக்காட்டி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடித் திணறுவது தெரியாததா! பழமொழி சொல்வார்களே, உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி என்று. அது போலல்லவா தேசிய ஏடுகளில் நிலைமை ஆகிவிடுகிறது! நாற்றமடிக்குமளவுக்கு ஊழல்கள் நிர்வாகத் துறையில் நாலு நாளைக் கொரு முறை மாற்றித் தீர வேண்டியவிதமாக அவசரமாகத் தீட்டப்படும் திட்டங்கள். முன்யோசனை இல்லாததால் ஏற்படும் கோடிக்கணக்கான பொருள் நஷ்டம். வீண் ஆடம்பரத்துக்காக விரயமாகும் பெரும் பணம். காகிதத் திட்டங்கள்! அவரைப் பற்றிக் கவைக்குதவாப் பாராட்டுரைகள்! தம்பி! பார், பார், பண்டிதரின் புகழொளியைப் பார்! என்று படம் காட்டுகிறார்களே காங்கிரஸ் நண்பர்கள், அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள், அல்லது தெரியாததுபோலப் பாவனை காட்டுவார்கள். நீ மறந்திருக்கமாட்டாயே, பத்து நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளிலே வெளிவந்த செய்தியை. உலகமே கண்டு வியக்கிறது. எங்கள் பெரும் பெரும் அணைத்திட்டங்களை என்று பெருமை பேசினார்களே. அதிலே காணக்கிடக்கும் கோளாறு வெளிவந்து விட்டது. கோடி கோடியாகப் பொருள் செலவிட்டு, பெரும் பெரும் நூதனமாக யந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன, இந்தத் திட்டங்களுக்காக. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே செலவிடப்பட்ட பணத்திலே பெரும்பகுதியை, அணைகள் கட்டும் திட்டம்தான் விழுங்கிவிட்டன! அதிலே நடைபெற்றுள்ள அவலட்சணத்தைக் கேள் தம்பி! பொறுப்பும் திறனும் உள்ள ஆட்சியிலே இப்படி நடைபெறுமா என்று யோசித்துப் பார்! கோபம் அடையாத காங்கிரஸாரைக் கேட்டு வேண்டுமானாலும் பார்! இந்த அணைத்திட்டங்களுக்காக, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கினார்களே யந்திரங்கள், அவைகளில் கிட்டத் தட்ட பாதி சும்மா கிடக்கின்றனவாம்! கேட்டாயா, விபரீதத்தை! ஏழை மக்களின் வியர்வை, பணமாக்கி இந்தக் கருவிகள் வாங்கப்பட்டன! ஆனால் வேலைக்கு உபயோகமாகவில்லை. பொய்க்கால் குதிரை! அச்சு முறிந்த வண்டி! அஸ்திவாரமற்ற கட்டிடம்! இது போலாகி விட்டது. ஏன்? கல்யாணம் செய்தும் பிரமச்சாரியாக இருக்கக் காரணம்? இந்தக் கருவிகள் பழுதாகிப் போனால், பொருத்தக்கூடிய சில்லறை சாமான்கள் கிடைக்க வில்லையாம்! எப்படி இருக்கிறது நிர்வாகம்! இலாடம் கிடைக்கவில்லை, குதிரை கொள்ளு தின்கிறது, கொட்டிலில் கொழுக்கிறது. வண்டியும் மேட்டில் கிடக்கிறது! ஆணி கிடைக்க வில்லை, அதனால் ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கிய அழகான படம், பரணில் கிடக்கிறது! சாவி இல்லை, எனவே பூட்டு மூலையில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது! ஓடு கிடைக்க விலலை; ஆகவே தளத்துக்குத் தேவையான சாமான்கள் துருப்பிடித்துக் கொண்டு கிடக்கின்றன! பாய்மரமில்லை; எனவே கப்பல் பாழாகிக் கொண்டிருக்கிறது! கூந்தல் இல்லை, மலர் வாடி உதிர்கிறது. இப்படி இருக்கிறது அணைத்திட்டத்திற் கென்று பெரும் பொருள் செலவிட்டு வாங்கிய யந்திரங்கள் சிறு துணைச் சாமான்கள் கிடைக்காததால், தூங்கித் துருப்பிடித்து போகும் காட்சி! எந்த நாட்டிலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? இவ்வளவு திறனற்று, அக்கறையற்று எந்த தனிப்பட்ட முதலாளியாவது நடந்து கொள்வானா? பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? அவர்களுக்குப் பதில் கூற வேண்டி வருமே? என்ற அச்சம் கொண்ட எந்த சர்க்காரிலாவது இப்படி ஊழல் நடை பெறுமா? இந்நேரம் பொது மக்கள் சீறி இருப்பார்கள் பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள் தேளாகி இருக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப் பட்டிருப்பார். இங்கு? இதோ பண்டிதரின் அடுத்த பவனி, ரஷ்யாவில் என்று வேடிக்கை காட்டுகிறார்கள். பணம் பாழாகிறது, ஊழல் தலை விரித்தாடுகிறது. இது மட்டும்தான் என்று எண்ணிவிடவேண்டாம் - இது இப்போது தெரியு ஊழல். இது போல் ஏராளம்! ஆட்சி - அப்பழுக்கற்றது, அதைக் குறைகூறுவது கூடாது, என்று கூறுகிறார்களே காங்கிரஸ் நண்பர்கள், சரியாகுமா! அரசாங்க நிர்வாகம் ஒழுங்காக இல்லை. நாடகமேடையில் நடிக்கப்படும் கேலிக்கூத்தாக இருக்கிறது, சர்க்காரின் போக்கு. பொது மக்களின் பணம் விரயமாகிறது! இவ்விதம் சொன்னால், காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்து விடுகின்றன. அரசாங்கம் திறமைக் குறைவாக நடந்து கொள்கிறது! என்று கூறுங்கள் பக்கத்தில் கல் இருக்கிறதா நம்தலைமீது தூக்கிப்போட, என்று தேடுவார்கள், தெளிவை இழந்துவிடும் அளவுக்கு தேசியம் கொண்டுள்ள காங்கிரஸ்காரர்கள்! முட்டாள்தனம். என்று சொல்லுங்கள். . .! ஏ! அப்பா. ஆவேசம் வந்தவர் போல் ஆடி, அடிப்போம், உதைப்போம் என்றெல்லாம் ஏசுவர். ஆனால் இவ்வளவும் உண்மை. நாம் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் - அடக்கி வைக்க முடியாமல் ஒரு காங்கிரஸ் ஏடு நேரு ஆட்சியைப் பற்றி சில தினங்களுக்கு முன் இவ்விதமாக வெல்லாம் கூறியிருக்கிறது. காங்கிரஸ் நண்பர்கள் போலவே இந்த ஏடு எமது பண்டிதருக்கு உலகமே பாதபூஜை செய்கிறது என்று பராக்குக் கூறுவதுதான்! எனினும், அதனாலேயே சகித்துக் கொள்ள முடியாமல், ஆட்சி கே-க்கூத்தாக இருக்கிறது; பொதுமக்கள் பணம் விரயமாகிறது; திறமைக் குறைவாக நடந்து கொண்டிருக்கிறது என்று கண்டித்து எழுதிவிட்டது. முட்டாள் தனத்துக்கு முதல் பரிசு பெறுகிறதாம் சர்க்கார்!! நாம் கூற அஞ்சுகிறோம். ஆனால் இதோ "கல்கி’’யின் கண்டனத்தைப் பாருங்கள்:- "ஏழு வருஷ காலமாக பாங்கிச் சிப்பந்திகள் கிளர்ச்சி செய்யும் போதெல்லாம் இந்திய சர்க்கார் பாங்கி முதலாளியின் கட்சியில் இருக்கிறார்கள் என்று புகார் சொல்லி வந்தார்கள். இதை அவ்வளவாக பொதுமக்கள் நம்பவில்லை. ஆனால் ஸ்ரீ வி. வி. கிரியின் ராஜினாமா மேற்படி புகாரை இதுவரை நம்பாதவர்களையும் ஓரளவு நம்பும்படி செய்துவிட்டது.’’ இந்த பாங்கிச் சிப்பந்திகள் தகராறு விஷயமாகக் கையாளப் பட்டிருக்கும் மௌடிகத்தனம் எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாக இருக்கிறது. அரசாங்க நிர்வாகச் சரித்திரத்தில் திறமை இன்மைக்கும் மௌடிகத்துக்கும் முதற் பரிசு கொடுப்பதாக இருந்தால் இதற்குத்தான் கொடுக்க வேண்டும். டிரிபுனலுக்குமேல் டிரிபுனல் நியமிப்பது, விசாரணைக்கு மேல் விசாரணை நடத்துவது, இதற்காக கோடிக் கணக்கில் பொது மக்களின் பணம் விரயமாவது, கடைசியாக வெளியாகும் தீர்ப்பை அவசர உத்தரவு போட்டு நிறுத்தி வைப்பது என்றால், இவையெல்லாம் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தைச் சேர்ந்ததா, நாடக மேடையில் நடிக்கப்படும் கே-க்கூத்தா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்போது என்ன சொல்கிறார்கள், நம்மீது எரிந்து விழும் காங்கிரஸ்காரர்கள். கோபுரமேறி கொடி காட்டுவது பற்றிக் குதூகலிப்பது இருக்கட்டும், நண்பர்களே! இதோ கூரையேறிக் கோழி பிடிக்காததற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள்! உலகம் புகழ்கிறது என்கிறீர்கள் - மெத்தச்சந்தோஷம், ஆட்சியிலே இந்த அவலட்சணம் இருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஊர்க்கோடியில் கோதானம் கொடுக்கிறார் என்று புகழ்கிறீர்கள்! இங்கே மாதா மடிப்பிச்சை எடுக்கிறாளே இதற்கென்ன சொல்கிறீர்கள்! என்றெல்லாம் கேட்டால், காங்கிரஸ் நண்பர்களுக்கு வெட்கமும் துக்கமும் சேர்ந்துதாக்கும். வேறென்ன செய்வார்கள், நம்மீது சீறி விழுகிறார்கள்! ஒரு உண்மையைத் தெரிந்து கொள் தம்பி! நம் மீது கோபிக்கி றார்களே தவிர அவர்கள் மனதிலேயும் உண்மை உறுத்தாமலில்லி, "இந்தப் பாவிகள் நடந்து கொள்வதும், இந்தப் பயல்கள் கே- செய்வது போலத்தான் இருக்கிறது. பண்டித நேருகூட அடிக்கடி அந்த மாநாடு இந்த மாநாடு என்று அலைந்து கொண்டிராமல், ஆட்சியை ஒழுங்காக்கி ஊழலை ஒழித்து, நிர்வாகத்தைச் சரிப்படுத்தி, மக்கள் சுபிட்சமடையும் மார்க்கத்தை கவனித்தால் நன்றாகத்தான் இருக்கும் அந்தப் பயல்கள் குத்திக் கிளறிக் காட்டும்போது கோபமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆர அமர யோசித்துப் பார்த்தால், வெட்கமும் துக்கமு மாகத்தான் இருக்கிறது’’ என்று அவர்கள் மனம் எண்ணாமல் இல்லை. அதை மறந்து விடாதே! ! உண்மை, அவர்களையும் நம் பக்கம் மெள்ள மெள்ள ஆனால் நிச்சயமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடும். அந்த பக்குவம் ஏற்படுகிற வரையில், பழித்துத்தான் பேசுவார்கள், பகைவர் போல்தான் நடந்து கொள்வார்கள். நாம்தான் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வேளை நெருங்க நெருங்கத் தாயின் கூச்சல் அதிகமாகத்தான் இருக்கும். அன்புள்ள அண்ணாதுரை 29-5-1955 ஆவடியும் காவடியும் ஆவடிக் காங்கிரஸ் மாநாடு பாண்டுங் மாநாடு. தம்பி ! ஆவடியில் நடைபெற்ற காங்கிரசின் அலங்காரத்தைக் கண்டதாலே சொக்கிப் போனேன்! அங்கு நேரு பண்டிதரைப் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல "தலைவர்கள்’’ மொய்த்துக் கொண்டிருந்தனர். மோட்டார்கள் மட்டும், இதுவரை யாரும் பார்த்திராத அளவு அங்கு! ஏ! அப்பா அப்படிப்பட்ட ஒரு மகாநாட்டை இதுவரை யாரும் கண்டிருக்க முடியாது. லலிதா பத்மினியின் நாட்டிய நாடகமென்ன, வேறு பல கலா நிகழ்ச்சிகள் என்ன-நேர்த்தியான காட்சிகள், மிக நேர்த்தியான காட்சிகள்! அப்படிப்பட்ட மகத்தான செல்வாக்கை எதிர்த்து வேலை செய்ய முடியுமென்று எண்ணுகிறீர்களே, அப்பாவிகளே! முடிகிற காரியமா! இவ்விதம் சில காங்கிரஸ்காரர்கள் பேசுவது பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறாய்; தம்பி! நீயேகூட ஆவடியால் ஓரளவுக்கு மயக்கம் அடைந்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது சகஜமும் கூட! இன்று காங்சிரஸ், சர்க்கார்! எனவே, எப்போதும் சர்க்காரின் தயவினாலே, சொத்து சுகம் ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ளவும் அதிகமாக்கிக் கொள்ளவும் விரும்பும் "கனதனவான்கள்’’ யாவரும் அங்கு சென்று, கட்டியம் கூறி நின்றனர். அதனாலே அங்கு பெரிய திருவிழா! அதைக் கண்டு சிலர் சொக்கி விடுவதும் சகஜந்தான்! ஆனால், இலட்சியத்துக் காகப் போரிடும் யாரும், இத்தகைய திருவிழா கண்டு மயக்க மடைந்து விடமாட்டார்கள். தம்பி! எங்கள் ஊர் “கருட சேவை’’ உற்சவத்துக்கு இலட்சக் கணக்கிலே மக்கள் வருகிறார்கள்! கும்பகோணம் மகா மகம், மதுரைச் சித்திரைத் திருநாள், திருவண்ணாமலை தீபம், திருமலை புரட்டாசி, தில்லை ஆருத்ரா இப்படி இருக்கிறது ஒரு பெரிய பட்டியல்! இதிலே கூடும் மக்கள் இலட்சக் கணக்கில். இவைகளைக் கண்ட பிறகும், ஆண்டு தோறும் இவை நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தும் தான், சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டது என்பதை மறந்துவிடாதே! இவ்வளவு இலட்சம் இலட்சமாக மக்கள் தேர் திருவிழாவுக்குக் குவியும் போது, சுய மரியாதை இயக்கம் நடத்துவதாலே பயன் என்ன என்று ஆயாசப்படுவது சரியல்ல - இவ்வளவு கோலாகலமான திருவிழாக்கள் நடைபெற்றும், சுயமரியாதை இயக்கம் எழுவது தடைபடவில்லை! அதை எண்ணிப்பார் உண்மை விளங்கும். இலட்சக் கணக்கான பொருள் செலவிட்டு இரசமான விழாக்களை நடத்துகிறார்கள். தங்க மயிலில் தகப்பன் சாமி வருகிறார் தையல் நாயகியோ தங்கப் பல்லக்கில்! வெள்ளித்தேர்! தங்க ரிஷபம்! பொற்கவசமிட்ட கருடன்! இப்படிக் கண்ணுக்குக் கவர்ச்சிகள்! வேத கோஷ்டிகள்! பஜனைக் கூட்டங்கள்! பக்தர்கள் வெள்ளம்போல்! சீமான்கள் சீமாட்டிகள்! வேல்விழி சுழற் கண், குழல் அழகி, குயிலி இப்படிப்பட்ட பட்டாளம் பவனிவரக் காண்கிறோம். அமெரிக்காவில் ஆறு ஆண்டு, இங்கிலாந்தில் ஏழாண்டு, சென்ற மாதம் ஜெர்மனி, இப்படி மேல் நாடுகள் சென்று திரும்பிய மேதாவிகள் கலந்துகொள்வதைக் காண்கிறோம். கவர்னரின் காரியதரிசி, சர்க்காரின் பிரதம இஞ்சினீயர், டாக்டர், பிரபல வக்கீல், உயர் நீதிமன்றத்தின் அதிபர் இப்படிப்பட்ட பதவியாளர்களைக் காண்கிறோம். ஆடை அணிகள் அலங்காரங்கள் அமோகமாக! நாத வெள்ளம்! வாணவேடிக்கை! - இவ்வளவும் இருந்திடக் காண்கிறோம். எனினும், இவைகளாலே நாம் மயக்கம் அடையவில்லை சொக்கிப் போகவில்லை, சோர்வு கொள்ளவில்லை, கும்பலோடு கோவிந்தா போட்டுவிடவில்லை, இவைகளைக் காண்கிறோம். என்னே இவர்தம் போக்கு! எரியும் தணலில் கற்பூரக் கட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்களே! என்னே இவர் தம் விசித்திர சித்தம்! என்று எண்ணிக் கொள்கிறோம். - இவ்வளவும் வீண் ஆரவாரம், சுவைக்குதவாதவை, என்று எடுத்துக் கூறுகிறோம். இங்கு சென்றீரே இன்னவிதமாகத் தொழுதீரே, அங்கு சென்றீரே அந்தத் தேவனை வேண்டிக் கொண்டீரே, வேலழகன் விழாவிலும் வேழ முகத்தான் உற்சவத்திலும் கலந்து கொண்டீரே, அன்பரீர்! கண்ட பலன் இன்னது என விண்டிட இயலுமா? உலகுக்குக் கிடைத்த பலன் இன்னது என எடுத்துரைக்க இயலுமா? என்று கேட்கிறோம். திருவிழா சென்று திரும்பியவரும்கூட அசட்டுச் சிரிப்புடன் - ஆமாம் - ஒரே கூட்டம் - இடியும் இடர்ப்பாடும்தான் கண்டோம் என்று கூறிடக் கேட்கிறோம். சுயமரியாதைப் பணியினை தொடர்ந்து நடத்துகிறோம். ஒரு ஆவடி கண்டு, சொக்கிப் போனவர்கள் பேசுவது கிடக்கட்டும். ஒவ்வோர் தலத்திலும் ஆண்டுக்கோர் ஆவடி நடை பெற்ற வண்ண மிருக்கிறது எனினும் பகுத்தறிவு பரப்பும் பணி பட்டுப் போகவில்லை, வளர்ந்த வண்ணம் இருக்கிறது. உனக்குத் தெரியுமோ தெரியாதோ, இலட்சக் கணக்கான மக்களை இழுக்கும் வைகுண்ட ஏகாதசி, சீரங்கத்தில்”ரொம்பப் பிரமாதம்’’ என்கிறார்கள் அல்லவா, அந்த ஏகாதசியின்போது, அந்தஊரிலே உள்ள சுயமரியாதை இயக்கத் தோழர்கள், ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு, இரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில், ஒரு பெரிய ஓவியம் தயாரித்து வைத்திருந்தனர். என்ன ஒவியம் என்று எண்ணுகிறாய். ஏசுநாதர் சிலுவையில் அறைபடும் காட்சி ஒரு புறமும், புன்னைமரத்தில் அமர்ந்து புல்லாங்குழல் ஊதும் கண்ணனிடம், களவாடிய சேலைகளைத் தந்தருளும்படி, கோபிகையர் குளத்திலிருந்தபடி கேட்கும் காட்சி மற்றோர் புறமும்! ஏகாதசி காண வந்தவர்கள், இந்தப் பகுத்தறிவு ஓவியக் காட்சியைக் கண்டு, அடே! அடடே! இதைப் பாருடோய்! அட, இப்படித்தான் இருக்கு! செச்சே, மானத்தை வாங்கித் தொலைக்கிறானுங்க! இப்படிக் கடவுள் செய்வாரா? இப்படிச் செய்பவர் கடவுள் ஆவாரா? இப்படி என கதை கட்டினார்கள்? நாம் என்னத்தைக் கண்டோம்! அவரவர் மனப்பக்குவத்திற்குத் தக்கபடி, பேசிச் சென்றனர். ஆவடியில் நடைபெற்ற திருவிழாவைப் பிரமாதப்படுத்திப் பேசுவதாலே, காங்கிரசிலே மலிந்து கிடக்கும் குறைபாடுகளை ஒரேயடியாக மறைத்து விடவும் முடியாது; ஆட்சியிலே காணக் கிடக்கும் அவலட்சணங்களையும் மறுத்துவிட முடியாது. ஒரு ஊரிலே தொடர்ந்து ஒரு பத்து நாளைக்கு நாடகம் நடைபெற்றால், அந்த ஊரிலே உள்ள "சபல புத்தி’’ படைத்தவர்கள், நடை நொடிபாவனை, உடை, உரையாடல் ஆகியவைகளிலே, தங்களையுமறியாமல் நாடக பாணியைக் கலந்து கொள்வார்கள்! ஒட்டுவார் ஒட்டிபோல, நாடகபாணி வேலை செய்யும் - சில நாளைக்கு - பலர் பார்த்துக் கேலிபேசி அதைப் போக்கும் வரையில். ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துவிட்டால் போதும், அந்த ஊரில் உள்ள வாலிபவர்களுக்கு, உடலிலே "காயம்’’ ஏற்பட்டே விடும் - உயரத் தாண்டுதல், தாவிக் குதித்தல், சைகிள் சவாரியில் வேலை காட்டுவது, இப்படிச் சர்க்கஸ் செய்வதால்! அதுபோலவே தம்பி, ஆவடி போய்விட்டுவந்தவர் சில நாளைக்கு அந்தப் பாணியில்தான் பேசுவார்கள். பிறகு, நிலைமை அவர்களுக்கும் உண்மையை உணர்த்தும். நேரு பண்டிதருடைய பிரத்யேகத் திறமையே, இத்தகைய "சொக்க வைக்கும்’’ காரியத்தைச் சோர்வில்லாமல் செய்வது தான்! பாண்டுங் மகாநாடு பற்றிப் பத்திரிகைகளிலே பார்த்தாயல்லவா! இதிலே காட்டிய வர்ண ஜாலங்களுக்காகச் செலவழிக்கப் பட்ட தொகையின் அளவு தெரியுமா என்று கேளுங்கள் காங்கிரஸ் நண்பர்களை! தலைவர்கள் தங்குவதற்காக இரண்டு பெரிய ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. அந்த ஓட்டல் அறைகளைப் புதுப்பித்து வசதிகளைப் பெருக்க 15 இலட்சம் ரூபியா அதாவது 80 இலட்சத்து 60 ஆயிரம் வெள்ளி (மலாய் நாணயம்) செலவிட்டனர். மகாநாட்டுக்காக மொத்தம் 6 கோடி ரூபியா, அதாவது 160 இலட்சம் வெள்ளி இதுவரை செலவாகி இருக்கிறது என்று, ஏப்ரல் 9ஆம் தேதி மலாய் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இப்படிப் பணத்தை வாரியிறைத்து நடத்தப்படும் மகாநாடுகள், பவனிகள், கண் காட்சிகள், இவையாவும், அடிப்படைக் குறைபாடுகளை மக்கள் சில காலம் உணராமல் இருக்கச் செய்ய உதவுமே தவிர, கடைசிவரை காப்பாற்றிவிடாது. திறமைமிக்க ஓவியனொருவன், பழக் கொத்து தொங்குவது போலத் திரையிலே தீட்டித் தொங்கவிட்டிருந்தானாம். பறவைகள் சில பழத்தைக்கொத்தித் தின்பதற்காக வட்டமிட்டனவாம்! ஓவியனுடைய கைத்திறனை அனைவரும் பாராட்டத் தானே செய்வர். ஆனால், பறவைகளும் பாராட்டுரை வழங்கினோரும், ஓவியத்திலே கண்ட பழமே போதும் என்றா இருந்து விட முடியும். பாராட்டுவர், பிறகோ பழச்சுவை தேடி வேறிடம் செல்வர். பறவைகளே கூடப் பறந்துபோகும் பழத்தோட்டம் நோக்கி. அதுபோலத்தான் ஆவடிகள்! ஆவடிபோல வேறு எந்த கட்சியினாலும் நடத்திக் காட்டவே முடியாது என்பதல்ல. ஆவடிபோல விமரிசையாக மாநாடுகள் நடத்தவே கூடாது என்பதல்ல தம்பி! ஆவடி நடத்திக் காட்டிவிட்டு, இத்துடன் திருப்தி பெருக! இன்னலை மறந்திடுக! இன்பம் பெற்றதாக எண்ணிக் கொள்க! என்று கூறுவது கூடாது என்பதைத்தான் கூறுகிறேன். "ஆவடி கண்டேன், ஆனந்தம் கொண்டேன், இனி நான் காவடி தூக்கி ஆடிடுவேன், களிப்புச் சிந்து பாடிடுவேன், காங்கிரஸ் கட்சியினருடன் கூடிடுவேன்’ என்ற பேசிடும் போக்கினர் பற்றிக் கவலை கொள்ளாதே. நமக்கென்று ஒரு மகத்தான குறிக்கோள் இருக்கிறது - அதிலே வெற்றி பெறுவதற்காகப் பணியாற்றும் நாம், ஆவடி கண்டு அயர மாட்டோம், பாண்டுங் பசப்புக்கும் பலியாகி விடமாட்டோம். ஆவடியிலும் பாண்டூங்கிலும், அலங்காரம் கண்டு அன்பர் சிலர் சொக்கிப் போகின்றனர். நாமோ இவ்வளவு ஆவடிகளுக்குப் பிறகும்கூட, அங்கோர் சமயம் இங்கோர் சமயம் என்ற அளவிலாவது, சிலர் பலர், அரசியலில் இன்று காணப் படும் அவலட்சணத்தையும், வடநாட்டு ஆதிக்கத்தையும், கண்டிக்க முன்வருவது காண்கிறோம், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொள்கிறோம். ஆவடி, அனைவரையுமல்ல, வழி தவறியோர், வழுக்கி விழுந்தோர், வாழ்த்திப் பரிசு பெறுவோர் ஆகியோரைத்தான் சொக்கிடச் செய்கிறதே தவிர, கொள்கையில் உறுதி படைத்த எவரையும் காவடி தூக்கியாக்கிடாது - மாறாக, காவடி தூக்கிடும் போக்கினை அத்தகையோர் கண்டித்த வண்ணம்தான் இருக்கிறார்கள். "ஐயன்மீர்! ஆவடி நடத்திக் காட்டினீர், இருபது இலட்சம் செலவிட்டீராம்! உங்களிடம் வசதி இருக்கிறது, செலவிட்டீர்கள்! பாண்டுங் பற்றிப் பேசுகிறீர்கள் பரவசத்துடன். கோடி என்கிறார்கள் அதற்கான செலவு! சரி! ஆனால் இவைகளில் பலனாக, ஏழை கண்டது என்ன? இடர்பாடு எது களையப் பட்டது? எதேச்சாதிகார முறை ஒழிக்கப்பட்டதா! இல்லாமை இயலாமை துடைக்கப்பட்டதா! ஓவியத்தில் உள்ள பழக்கொத்துதானே, உங்கள் ஆவடிகள்,’’ என்று கேட்கிறார்கள், சொக்குப் பொடியால் மயக்கமடையாதவர்கள். "இங்கே நடைபெறும் ஆவடியைக் காட்டி, இந்நாட்டிலே செல்வாக்கு எவ்வளவு செழிப்பாக இருக்கிறது காணீர் என்றும், பாண்டுங் காட்டி வெளிநாடுகளில் கிடைக்கும் மகத்தான செல்வாக்கைக் காணீர் என்றும் விளம்பரம் பேசி வருகிறீர்கள் - எனினும் காய்ந்த வயிறுடன் இங்கும், கண்ணீருடன் வெளி நாடுகளிலும் இந்நாட்டு மக்கள் வதைபடுகின்றனர். அதை இம்மியளவு போக்கவும் இந்த ஆவடிகளும், பாண்டுங்குகளும் பயன்படக் காணோமே’’, என்று கேட்கின்றனர், திருவிழாக் கண்டு தெளிவை இழக்காதவர்கள். பர்மியப் பிரதமர் இருக்கிறாரே நூ, அவர் நேரு பண்டிதருக்கு அத்யந்த நண்பர்! சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அங்கு வந்து அளவளாவுகிறார். பண்டிதரும் அந்தப் பக்கம் போகும் போதெல்லாம், நூவினால் உபசரிக்கப்படுகிறார். பத்திரிகைகள் பத்தி பத்தியாக இந்த "நேசம்’’ பற்றிச் செய்திகளைத் தருகின்றன. ஆசியாவிலே கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலே மூண்டு கிடக்கும் பிரச்சினை களையும் ஒரு சேரத் தீர்த்துவைக்கும் "அபாரமான’’ வேலையின் நிமித்தம் கூடினரே, பாண்டுங்கில். அதற்காகப் புறப்பட்ட போதுகூட நேரு பண்டிதர், இரங்கூனில் தங்கி, அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டார். நூவுடன் பண்டிதர் பர்மிய உடையில், சிரித்துப் பேசி மகிழும் சினிமாக் காட்சி போன்ற படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இவ்வளவு நேசம், பாசம், இருக்கிறது இரு தலைவர்களுக்கு இது தந்துள்ள பலன் என்னவென்று கேட்டுப் பார்த்ததுண்டா, தம்பி இவ்வளவு தோழமையின் விளைவாக, பர்மா வாழ் மக்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள், வசதிகள் சலுகைகள் என்னவென்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? "இந்தியர்கள் விட்டுவந்த பிறகு பர்மாவில் அநேக விஷயங்கள் நடந்து விட்டன. வீடுகளையும் நிலங்களையும் பர்மியர்கள் வந்து ஏற்றுக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்; யுத்தம் காரணமாக விட்டுச் சென்ற நிலபுலன்களை, வீடு வாசல்களை சுவான்தார்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று சட்டம் இருப்பினும், இரங்கூனில் மட்டும் அது செல்லுபடியாகாது. நகருக்கு வெளியே விஷயம் எப்படியென்றால், வீட்டுக்காரர்களுக்குக் குடித்தனக்காரர்களை வெளியேற்றும் உரிமை சட்ட பூர்வமாக மறுக்கப்பட்டது. பார்க்கப்போனால் வீட்டுக் குடையவர்கள் எல்லாரும் இந்தியர்கள். அதிலே வசிப்பவர்கள் பர்மியர்கள். இப்போது இன்னொரு பெரிய கண்றாவி. ஒரு குடித்தனக்காரன் தன் ஜாகையை மற்றொரு குடித்தனக்காரனுக்கு மாற்றி விடுவான். வீட்டுக்காரன் கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஒன்றும் சொல்வதற்கில்லை. அட, வீடே வேண்டாம், நிலமே வேண்டாம், விற்றுவிட்டுப் போவோம் என்றாலும், இன்னொரு சட்டம் இருக்கிறது. பர்மியப் பிரஜைகளுக்குத் தவிர வேறொருவனுக்கு ஸ்தாவார சொத்துக்களை விற்பனை செய்யவோ அடைமானம் வைக்கவோ குத்தகைக்கு விடவோ அனுமதிகிடையாது. இந்தியரிடம் விலைக்கு வாங்கவும் பர்மியர் எவரும் தயாராக இல்லை இதனால் அங்கு அடைமானத்தில் கடன் வாங்கியுள்ள இந்தியர்கள்கூட தங்கள் ஸ்தாவரச் சொத்துக்களைக் கடனுக்கு ஈடாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் செய்வதின்னதென்றறியாமல் இருக்கிறார்கள். சுதந்திர சட்ட அரசியல் சட்டப்படி உத்தியோகம் இனி பர்மியர்களுக்கே என்று ஆகிவிடவே, அனேகர் வேலை இழக்கும் திண்டாட்டத்திலும் சிக்கியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி ஒரு புதிய பெரிய மசோதாவையும் பர்மியப் பார்லிமெண்டு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிராத நிலச்சுவான்தார்களின் நிலங்களை எல்லாம் சர்க்கார் எடுத்துக் கொண்டு விடுவது என்பதே இதன்சாராம்சம். விவசாயிகளாக இருந்தால் தலா ஐம்பது ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். இங்கே சுமார் ஐயாயிரம் இந்தியர் வரை 26 இலட்சம் ஏக்கராவுக்குச் சொந்தக்காரர்கள். அதன் வருமானம் நாற்பது கோடி வரை மதிக்கப் படலாம். பர்மிய விவசாயி மந்திரி சட்டதிட்டமாக, நிலம் எல்லாம் ராஜ்ய சர்க்காருக்கே சொந்தம்; நிலச்சுவான் தாரருக்கு அதை வைத்துக் கொண்டு அதில் சாகுபடி செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது; சர்க்கார் உசிதம் போல் இந்த ஏற்பாட்டை ஒழுங்கு செய்யவோ, மாற்றவோ, ரத்துச் செய்யவோ உரிமை பெற்றது. . . என்றார். பொதுவாக இந்தியர் நிலைமை திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அந்நிய நாட்டவர் களாகவே மதிக்கப்படுகிறார்கள்; வருமானம் மிகவும் குறைவு; ஆகையால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது; எனவே பர்மியரிடையே அந்தஸ்து என்பது அவர்களுக்கு அதிகம் இல்லை. தம்பி! பர்மாவில் உள்ளவர்களில் தமிழரே அதிகம். பர்மாவில் இன்றுள்ள நிலைமை இது. அறுபது நாட்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவிட்டு வந்த ஆனந்தவிகடன் எழுத்தாளர் ஒருவர் தீட்டியதைத்தான் தந்திருக்கிறேன். இத்தனை இன்னலுக்கு ஆளாகியிருக்கிறீர்களே, இங்கிருந்து சென்றவர்கள், நேரு பண்டிதருக்கு பர்மிய முதல்வரிடம் உள்ள நேசமும் பாசமும் என்ன பலன் கொடுத்திருக்கிறது? நேரு பண்டிதரைக் காணும்போதே, பர்மிய முதல்வரின் முகம் மலருகிறது, கட்டித் தழுவிக் கொள்கிறார், ஆசியாவின் வழிகாட்டி நீரே என்று உபசாரம் பொழிகிறார், விருந்து நடத்துகிறார், ஆனால் தன் சொந்த நாட்டுப் பிரச்சினை எழுகிறபோது, இந்த நேசமும் பாசமும் ஓடி ஒளிகிறது. பர்மியரின் உரிமைக்களுக்காகவே பணியாற்றுகிறார். எமது பண்டிதருக் குள்ள செல்வாக்கினைப் பாரீர், அவர், "செக்கு மாடென உழைத்திடுவீர், செல்வம் கொழித்திடச் செய்திடுவீர், அதை டாடாவும் பிர்லாவும் செல்லாக அரித்தாலும் சீறி எழாதீர்’ என்று கூறினாலும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிப் பூரித்திடுவீர் என்று பேசுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவருக்கு வேறொரு நாட்டிலே அபாரமான செல்வாக்கு இருக்குமானால் செல்வாக்குள்ள தலைவரின் நாட்டவருக்கு அந்த வேற்று நாட்டிலே, மதிப்பு உயரும், வசதிகள் கிடைக்கும், சலுகைகள் கூடப் பெறவழி ஏற்படும். இவர்களோ, பர்மாவில் பண்டிதருக்கு மிகுந்த செல்வாக்கு என்று பண் இசைக்கிறார்கள் என்று ஆனந்த விகடனைச் சேர்ந்தவரே ஆயாசத்துடன் கூறுகிறார். பண்டிதரின் செல்வாக்கின் பொருள்தான் என்ன? ஆவடி காட்டியும் பாண்டுங் பற்றிப் பாராட்டிப்பேசியும் தென்னாட்டவர் காணும் பலன் என்ன? காவடி தூக்கித் திரிய வேண்டி இருக்கிறது, எதற்கும் எப்போதும்! டில்லி நிதி மந்திரி தேஷ்முக் நாமெல்லாம் ஏதோ விளக்க மறியாதார் என்ற எண்ணத்தோடு பேசுகிறார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வடநாட்டுக்கே அதிகத் திட்டங்கள் செய்து தரப்பட்டன என்று குறை கூறுகிறார்கள் - ஏன் அப்படிச் செய்ய நேரிட்டது என்றால், திட்டம் முதலில் வடநாட்டுக்காகத் தீட்டினோம், என்கிறார். இது சமாதானம் என்று அவர் கருதுகிறார். அவ்வளவு பெரியவர் சொல்லுகிறாரே என்பதற்காக, இங்குள்ள அடிவருடிகளும், “ஆமாம் சாமி’’ போடுகிறார்கள். திட்டம் தீட்டும்போது, ஏன் வடநாட்டின் கவனம் மிகுந்திருந்தது. தென்னாடுபற்றி ஏன் அக்கறையற்ற போக்கு, அலட்சியம் ஏற்பட்டது என்பதற்கு அவரும் காரணம் கூறவில்லை; இங்கு உள்ளவர்களும் கேட்கக் காணோம். உங்களுக்கு இரண்டாவது பந்தியிலே சாப்பாடு போடப்படும் என்று விருந்து சாப்பிட்ட”தெம்பில்’’ ஏப்பம் விட்டபடி தேஷ்முக் கூறுகிறார். இங்குள்ள "பிக்ஷாந்தேஹி’’களும் ஏதோ பின் கட்டில் உட்காரவைத்துப் போட்டாலும் பரவாயில்லை, பசி வயிற்றைக் கிளறுகிறது என்று கூறுகிறார்கள்!! இது தானே ஆவடி தந்த அந்தஸ்து! “பிக்ஷாந்தேஹி’’ என்ற நாம் சொன்னால் காங்கிரஸ் நண்பர்களுக்குக் கோபம் கொதித் தெழுகிறது. ஆஹா! எங்களையா பிச்சைக்காரர்கள் என்ற ஏசுகிறீர்கள், என்பார்கள். மைசூர் ராஜ்ய முதலமைச்சர் பேசியிருக்கிறார் இது போல!! டில்லி சர்க்காரின் போக்கை மைசூர் சட்ட சபையில் மிக வன்மையாகக் கண்டித்துப் பேசுகிறார்! டில்லி, தென்னாட்டுத் தலைவர்களை, அவர்களை இங்க நாம் பட்டேல் என்று புகழ்ந்தாலும் சரி, திலகர் என்று கொண்டாடினாலும் சரி, அவருக்காகக் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு மேலே விழுந்து வேலை செய்தாலும் சரி அவர் மேனியில் துளி தூசி பட்டாலும் என் கண்ணிலே மிளகாய்ப்பொடி விழுவது போல உருகி இருக்கிறது என்று உருகிப் பேசினாலும் சரி,”அவருடைய ஆட்சியை ஆதரிப்பதையே என் தவமாகக் கொண்டுவிட்டேன்’ என்று பேசிப் பணியாற்றி வந்தாலும் சரி, எப்படிப்பட்ட செல்வாக்கை இங்கே பெறக்கூடியவராக இருந்தாலும், அந்தத் தலைவர்களை அங்கு பிச்சைக்காரர்கள் போலத்தான் நடத்து கிறார்கள் என்பதை உணர்ந்து, சற்றுக் கோபமாகவே பேசுகிறார். "மத்திய சர்க்காரிடம் நாம் சொல்லும் போதெல்லாம், நாமும் நமது யோசனையைக் கூற வேண்டும்; ஏதோ பிச்சைக்காக வாங்கப் போகும் போக்கிலே நடந்து கொள்ளக் கூடாது.’’ என்று இடித்துரைக்கிறார். இதன் பொருள் விளக்கமாக இருக்கிறதே, தம்பி! ஏன் காங்கிரஸ் நண்பவர்களுக்கு மட்டும் விளங்கவில்லை! டில்லியில் தென்னகத்துத் தலைவர்களைப் பிச்சை வாங்க வருபவர்களை நடத்துவதுபோல நடத்துகிறார்கள் என்பதைத் தோழர் அனுமந்தையா, தனியான தோர் பாணியில் எடுத்துரைக்கிறார். “அவ்வப்போது, கடன் வேண்டும், மானியம் வேண்டும் என்றெல்லாம், மத்திய சர்க்காரிடம் கெஞ்சிக் கேட்டபடி இருக்க வேண்டிய நிலைமை எப்படி இருக்கிற தென்றால், மத்திய சர்க்கார்”வசதிகளை’’ குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இராஜ்ய சர்க்காருக்கே உரிமையானதான விஷயங்களில்கூட, இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய்யுங்கள் என்று வற்புறுத்துகிறது, கடன் தருகிறேன் மானியம் தருகிறேன் என்று ஆசைகாட்டி!! தன்னிடம் உள்ள ஏராளமான "வசதிகளை’’ வைத்துக் கொண்டு, மத்திய சர்க்கார், மெள்ள மெள்ள, ஆனால் வெற்றிகரமாக, இராஜ்ய சர்க்காரின் நடவடிக்கைகளிலே புகுந்து, ஆதிக்கம் செலுத்துகிறது. மத்திய சர்க்காரின் போக்கு எப்படி இருக்கிறது என்றால், அமெரிக்கா, பணம் கடனாகவும் இனாமாகவும் கொடுத்துத் தன் ஆதிக்கத்தை இங்கும் வேறு பல நாடுகளிலும் புகுத்துகிறதே, அதுபோல இருக்கிறது.’’ தம்பி! இவ்வளவும் கூறுபவர், வகுப்புவாதி, விஷமி அல்ல. பிற்போக்கு வாதியல்ல; காங்கிரஸ்காரர் தான்! ஆனால் இவருக்கு முதுகெலும்பு இருக்கிறது. வடநாட்டுத் தலைவர் களுக்கு வால்பிடித்தால் நமது அரசியல் வாழ்வு ஒளிவிடும் என்ற அடிமைப் புத்தியில்லை. ஆகவே, அஞ்சாமல் நிலைமையைக் கூறுகிறார். ஆவடி பார்! அதன் அற்புதம் கேள்! என்று தெம்மாங்கு பாடிக் காட்டினாலும், காவடி தூக்கித் திரியும் நிலைக்குத் தென்னாடு வருவது கண்டு மனம் வெதும்பிப் பேசுகிறார். பிச்சைக்காரரை நடத்துவது போல நடத்துகிறார்கள். இராஜ்ய விவகாரங்களிலே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அமெரிக்கா பணத்தை வீசி, பல்லிளிக்கச் செய்து, தன் படைவீடாகப் பல நாடுகளை அமைத்துக் கொள்வது போல டில்லியும் செய்கிறது. இவ்வளவு குற்றச்சாட்டுகளை ஏவுகிறார் தோழர் அனுமந்தையா! ஆவடிகள் நடத்துவதால் கிடைக்கும் பலன் இதுதானே, தம்பி! வேறென்ன? திருவிதாங்கூர்-கொச்சியில், முதலமைச்சராக முன்பு இருந்த தோழர் கேசவன் என்பவர் ஓரிரண்டு திங்களுக்கு முன்பு மலாய் நாடு சென்றார். கோலாலம்பூரில் மலையாளிகள் அவருக்கு வரவேற்பும் விருந்தும் நடத்தினர். அங்கு அவர் பேசியது என்ன தெரியுமா? ஆவடியின் பெருமையைப்பற்றியும் அலகாபாத் பண்டிதரின் அளவற்ற செல்வாக்கைப் பற்றியுமா? இல்லை; இல்லை டில்லியின் மாற்றாந் தாய்ப் போக்கினைக் குறித்துத்தான் பேசினார். தாயகத்திலிருந்து வந்த தலைவரை, வாழ்த்தி வரவேற்று, ஏதோ நாங்கள்தான் பிழைப்புக்கு வழிதேடிக் கொண்டு இந்தக் கண்காணாச் சீமைக்கு வந்து சேர்ந்தோம், அங்கே தாயகம் தலைகள் ஒடித்தெறியப்பட்ட நிலையில் தன்னரசு நடத்துகிறதே, தரணியெங்கும் பரணி பாடிவரும் நேரு பண்டிதரின் ஆட்சி நடக்கிறதே, எப்படி இருக்கிறது? தாயகம் இன்பம் வழிந்தோட வேண்டுமே? என்று கேட்கிறார்கள். தோழர் கேசவன் முன்னாள் முதலமைச்சர், அதையா கேட்கிறீர்கள் அன்பர்களே? என்று கூறி பெருமூச் செறிகிறார். "நாங்கள் புதிய கைத்தொழில்களைத் தொடங்க இடையறாது மத்திய சர்க்காரின் உதவியை நாடி வந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு புதிய கைத்தொழிலும் வடஇந்தியாவிலே தொடங்கப்படுகிறது. பிரம்மாண்டமான பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் தற்போது, பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு வருவதையும், மண் ஆராய்ச்சிப் பாக்டரியும் அப்பகுதியில் அமைக்கப்படுவதையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். மத்திய அரசாங்கம் இத்தகைய மாற்றாந்தாய்ப் போக்கை அனுஷ்டிப்பது கண்டிக்கத் தக்கதாகும்.’’ தோழர் கேசவன் என்பவரின் பேச்சு, இது!! கண்டிக்கத்தக்கது என்கிறார், காரணமும் காட்டுகிறார். கண்டனம் பிறக்கிறது, அது பிறவாதிருக்கத் தான் ஆவடி அலங்காரம் காட்டப்பட்டது. ஆவடி மூலம், காவடி தூக்கிகளாக இருக்கத் தென்னாடு இசைகிறதா, இணங்குகிறதா, என்பதுதான் பரிட்சை பார்க்கப்பட்டது. இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆவடியைப் பார்த்தீர்களா, என்று கண்ணையும் வாயையும் அகலத் திறந்து கொண்டு, அன்பர் சிலர் கேட்கிறார்கள். என்ன செய்யலாம் தம்பி! அவர்களின் மனமயக்கம் தெளிய வேண்டும் - அதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும். அன்புள்ள அண்ணாதுரை 5-6-1955 வளை ஒலி கேட்கிறதா!! அண்ணாவின் வடநாட்டுப்பயணம் - ஹரித்துவாரமும் சாதுக்களும் தம்பி! சில தினங்களுக்கு முன்னர் நேரு பண்டிதர் ஹரித்துவாரம் எனும் ஊருக்குச் சென்றிருந்தார்; இமயமலையின் அடி வாரத்திலே இருக்கிறது இந்த ஊர்; இந்துக்கள் இதைப் புண்ணிய ஸ்தலம் என்று கொண்டாடுகிறார்கள். இங்கு வந்து இமயத்திலே இருக்கும் ரிμகேசம் போன்ற ஸ்தலங்களுக்குப் போகிறார்கள். சிறிய ஊர்தான். நான் அங்குப் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்கிறேன், பெரியாரின் அன்புப் பாத்திரமாக இருந்தபோது! - அந்தப் பழைய நாட்களில். அப்போது நான் "விடுதலை‘’யில் எழுத்தாளன். பெரியாருடன் வரும் பேச்சாளன். ஆமாம், மறந்து போகிறேன் பார் தம்பி, திராவிடர் கழகச் செயலாளனாகவும் இருந்து வந்தேன். பார்ப்பனரை இந்த நாட்டை விட்டு ஓட்டும் ஒரே அபார சேவை செய்வதற்காகவே, இன்று அல்லும் பகலும் கடுமையான நோயைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவோ லாபகரமான தொழில்கள் வருந்தி அழைத்தும், வருக! வருக! என்று பலர் பணத்தைக் கொட்டி ஆசை காட்டியும், “லட்சியத்தைக் கைவிடேன்! துரோகிகளை ஒழித்துக்கட்டியே தீருவேன்! என்று முழக்கம் (ஆறு திங்களில் நான்கு முறையேனும்), செய்து கொண்டும், நாள் தவறாமல் எழுதிக் கொண்டும் வரும் சிலம்புக் கூட்டத்தார், என்னைக் கேபேசி யும் பெரியாரைப் பின்பற்றும்”பேதமை’‘யை எடுத்து விளக்கிக் கொண்டும், இதை நாம் உட்கொள்வதற்காக வேண்டி, இடையிடையே சுவையுள்ள விருந்து (அன்புடன்தான், மறக்க முடியுமா!) அளித்துக்கொண்டும் இருந்த நாட்கள்! திடீரென்று ஒரு தினம் பம்பாயிலிருந்து எனக்கோர் தந்தி வந்தது. "உடனே கிளம்பி ஹரித்துவாரம் வந்து சேரவும்’’ என்று. தந்தி தந்தவர்கு பெரியார்; அவர் பம்பாய் பகுதி சென்று அங்கிருந்து ஹரித்துவாரம் சென்றுவிட்டு, வடநாட்டிலே வேறு பல ஊர்போக திட்டம் இட்டு இருந்தார் போலிருக்கிறது, எனக்கென்ன தெரியும்? யாருக்குத்தான், எப்போதுதான் அவர் போடும் திட்டம், அவராகச் சொல்லுமுன் தெரிகிறது? ஹரித்துவாரம் வந்து சேர் - எனக்கு இப்படி ஒரு தந்தி. என் சுபாவம், "உனக்குத் தெரியும், ஏன், ஏறக்குறைய கழகத் தோழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே. பக்கத்திலே உள்ள ஆற்காடு போவதானாலும் நாலு நண்பர்கள் கூட வேண்டுமே எனக்கு. அப்படிப் பழகிப்போன என்னை ஹரித்துவாரம் வரச் சொல்கிறார்: என்ன செய்வது? கிளம்பினேன்: தோழர் குருசாமி இரயிலடி வந்திருப்பதாக நினைவு. பத்து நாட்கள் ஹரித்துவாரத்தில் இருந்தோம், ஒரு ஐயர் வீட்டில். அவர் காலஞ்சென்ற பேரறிஞர் எம். என். ராய் அவர்களின் இயக்கத்தவர். எனவே, எங்களை அன்புடன் தமது இல்லத்தில் வைத்து, உபசரித்தார். உங்களில் பலருக்குத் தெரிந்திராது தம்பி! பெரியார் அங்குதான், வால்மீகி இராமாயணம் பற்றிய குறிப்புரைகள் தயாரித்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதின கவனம் இருக்கிறது. அந்த ஹரித்துவாரம் “சாதுக்களின்’’ கோட்டை! எந்தத் தெருவுக்குச் சொன்றாலும், சந்நியாசிகள்! எவ்வளவு”கம்பீரமாக’’ நடந்து செல்கிறார்கள் தெரியுமா! அவர்களும் சரி, கொழுத்துக் கிடக்கும் பெரிய பெரிய பசுக்களும் சரி. ஹரித்துவாரத்து வீதிகளிலே நடமாடும் உரிமை தமக்கே என்ற தீர்மானத்துடன் இருப்பது போலத்தான் தோன்றும். கங்கை-நடுப்பகல் இரண்டு மணிக்குக் கால் வைத்தாலும் "ஐஸ்’’ போல இருக்கிறது, கொட்டுகிறது. ஹரித்துவாரத்தில், ஆற்றோரத்தில் அழகான சோலைகள் - பழமுதிர் சோலைகள்! சோலைகளை வேலிகளாகக் கொண்ட பெரிய மடங்கள் - ஒவ்வொரு மடத்திலும் நூற்றுக்கணக்கான சாமியார்கள்: உலக மாயையை மிக நன்றாக உணர்ந்து உலகோர்க்கு உபதேசம் செய்யும் “புனிதத் தொண்டு’’ புரியும் அவர்களுக்காக, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கோதுமை மாவும், டின் டின்னாக மணம் கமழும் நெய்யும்! இந்த மடங்களில் ஒரு குறையும் இருத்தல் ஆகாது என்பதற்காக ஏராளமான”சொத்து’’ சாசனப்படுத்தப்பட்டிருக்கிறது. மாலை வேளைகளிலே பெரியார் உலாவச் செல்வார். சாலையில் உடன் நான் சொல்வேன். வெண்ணிறத் தாடி; பொன்னிறமேனி; ஆரஞ்சு நிறச் சால்வை நான் கொட்டும் குளிருக்குப் பயந்து முரட்டுத்துணிச் சட்டை போட்டுக் கொண்டு, அதற்குள் கரங்களை விட்டுக் கொண்டு, கை கட்டிய வண்ணம் அவர் பின்னால். சாது சந்நியாசிகளைக் காண்பதையே வேலையாகக் கொண்ட அந்த நாட்டு மக்கள், ஹரித்துவாரம் இதுவரை காணாத மகிமை பொருந்திய குரு மகான், தன் பிரதம சீடனுடன் செல்கிறார் என்று எண்ணிக் கொண்டு, பக்தியுடன் கைகூப்பித் தொழுவர். இப்போதும் மனக்கண் முன்னால் அக்காட்சியைக் காண முடிகிறது; எங்களுடன் மணி இருப்பார். ஓஹோஹோ! மணி என்றதும், ஆச்சரியத்தால் கண்களை அகலத் திறக்கிறாயா தம்பி! விடுதலை அச்சகத்தில் மணி என்றோர் அச்சுக் கோர்ப்போர் இருந்தார். அவர் பெரியாருக்குப் பணிவிடை செய்வதற்காக வந்திருந்தார், அவரைக் குறிப்பிட் டேன்; அப்போது ஈ.வெ.ரா. மணியம்மையார் பற்றிய நிழல் உருவச் செய்தியும் கிடையாது. இவ்வளவு மடங்கள் - கவாத்துக் கொடுத்து, காக்கி உடை அணிவித்து, கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட்டால், பட்டாளத்திலே “சர்தார்களாக’க் கூடிய உடற் கட்டமைந்த சன்னியாசிகள் கூட்டம் கூட்டமாக - அவர்களின் பராமரிப்புக் காக இலட்சக் கணக்கில் பொருட் செலவு - அவர்களோ இகலோகத்தின் இழிதன்மையைப் பற்றியும் பரலோகத்தின் பெருமையைப் பற்றியும் உபதேசம் செய்வர். இந்த விசித்திரக் காட்சி, என் உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்களைக் கிளறும். இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழி காட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு”பட்டாளமே’’ இருக்கிறதே! எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா! இங்கு அடிதொழுது கொண்டிருப்பதைப் பெறற்கரிய பேறு என்றல்லவா கருதுகிறார்கள்; வேதனை நிரம்பிய விசித்திரமாக இருக்கிறதே, என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன். சம்சாரி உழைத்து சன்யாசி கொழுக்க தருமம் புரி எனல் ஆஸ்திகமா? அது சரியில்லை என்பது நாஸ்திகமா? என்று உடுமலை நாராயணகவி "சொர்க்கவாசல்’’ படத்துக்குப் பாடல் தீட்டினார். கே. ஆர். ராமசாமி பாடினார். நண்பர்கள் சிலரும் கேட்டு இன்புற்றோம். நீ கேட்டிருக்க முடியாது தம்பி. சென்சார் அதைக் கத்தரித்து விட்டு பாரதப் பண்பை காப்பாற்றி விட்டதாகப் பூரிப்படைந்தனர். அந்தப் பாடலும் அதற்குரிய காட்சியும் தயாரிக்கப்பட்டபோது எனக்கு ஹரித்துவாரக் காட்சி நன்றாகத் தெரிந்தது. நேரு பண்டிதருக்கு, இந்த "மாமிச மலைகளை‘’க் கண்டதும், உண்மையிலேயே கோபம் கொந்தளித்திருக்கிறது ஆனால், பாமர மக்களின் அன்பை இழக்க நேரிடுமே என்ற அச்சம் அவரை வாட்டி வதைத்தும் இருக்கிறது; எனவேதான் அவர் ஹரித்துவாரத்தில் கண்ட "ஆள்விழுங்கிகளை’ப்’ பற்றிய கண்டனத்தை, வேறொரிடம் சென்று, ஜாடைமாடையாகக் குறிப்பிட்டுப் பேசினார் - 50 இலட்சம் சாதுக்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில் - இவர்களில் ஒரு சிலர் உண்மையானவர்களாக இருக்கலாம், - பெரும் பாலானவர் பிறர் உழைப்பைத் தின்று கொழுப்பவர்கள் - இவர்கள் நாட்டுக்குப் பெரியதோர் சுமை - நஷ்டம் - என்ற கருத்துப்பட நேரு பண்டிதர் பேசினார். அதுமட்டுமல்ல! ஹரித்துவாரத்தைப் பற்றியே அலட்சியமும் அருவருப்பும் கலந்த முறையில் குறிப்பிட்டார். அவர் பேசினார், "ஹரித்துவாரம் இந்துக்களின் புண்ணியஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது’’ என்று. கவனித்தாயா, தம்பி! அவர் பேச்சை. ஹரித்துவாரம். புண்ணிய ஸ்தலம் என்று கூறவில்லை - அப்படிக் கருதப்பட்டு வருகிறது! நான் கருதவில்லை, பாமரர்கள் கருதுகிறார்கள் அவ்விதம் என்ற கேலி அதிலே தொக்கி நிற்கிறது. தெரிகிறதா. அவர் அப்படி ஒன்றும் கேலி பேசவில்லை. நீயாகக் கற்பனை செய்கிறாய் என்று பக்தர்களும் கூறக்கூடும். காங்கிரஸ் நண்பர்களும் கூறக்கூடும். ஏன் வீண் சந்தேகம்? பண்டிதரின் பேச்சு முழுவதையுமே கூறுகிறேன், அப்போது விளக்கமாகி விடுகிறது. "ஹரித்துவாரம் இந்துக்களின் ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபுவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன.’’ நேரு பண்டிதர் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காகச் சாமியார் கோலம் பூண்ட சோற்றுத் துருத்திகளைப் பற்றி, நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி பிறக்கத்தானே செய்யும் - அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு காலம் கழித்துவிடுவோம் என்று வேதியத் தலைவர் இங்கு நடந்து கொள்ளும் முறையுடன் இதை ஒப்பிடும்போது, நேரு பண்டிதரிடம் மதிப்புக்கூட பிறக்கிறது. ஆனால் அந்தோ! மறு கணமோ, அவர் பிரச்சினையை விட்டுவிட்டு, வெகு வேகமாக வேறு பக்கம் சென்றுவிடுவதைக் காண நேரிடுகிறது. கோபமும் வருகிறது. வருத்தமாகவும் இருக்கிறது. நச்சரவம் புரளுகிறது என்று தெரிந்து தெரிவித்துவிட்டு, என்ன செய்யச் சொல்லவேண்டும் - நச்சரவம் நெளியும் இடம் இது. இதைப்போய் நாதன் அருள் பெறும் தலம் என்கிறார்களே. நல்லவர்களே! நாசத்துக்கு இடமளிக்காதீர்கள். நச்சரவத்தை ஒழித்திட வாரீர். நச்சரவம் குடிபுகும் புற்றுக்களை ஒழிப்போம். புற்றுக்கள் தோன்றக்கூடிய காட்டினையே அழிப்போம், கிளம்புங்கள், என்று சொல்லத்தானே வேண்டும். தண்டச் சோற்றுத் தடிராமன்கள் இலட்சக்கணக்கிலே உலவுகிறார்கள், இவர்களை நம்பி உழைத்துச் சேர்த்ததைக் கொட்டி அழ வேண்டாம், என்று தானே அறிவுரை கூற வேண்டும்; ஏமாளிகளை ஏய்த்துப் பிழைப்போரைச் சாடவேண்டும். சட்டத்தின் துணையையும் நாடி இத்தகைய சழக்கர் கூட்டத்தைக் கலைக்கவேண்டும்; மக்களுக்குத் தெளிவும் துணிவும் பிறந்திடத் தக்கவகையில் பகுத்தறிவு புகட்ட வேண்டும். நேரு பண்டிதர் இதைச் செய்கிறார் இல்லை!! நச்சரவம் உலவுகிறது. நாவற் பழமும் தின்போம் வாரீர்! என்று ஒன்றுக்கொன்று ஒட்டாத முறையில், எதையோகூற விரும்பி, இடையே பயந்து, வேறு எதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார். ஹரித்துவாரத்தை அவர் புண்ணிய ஸ்தலமாகக் கருதவில்லை - கூறுகிறார். நீங்களும், பேதமை கொள்ளாதீர்கள். புண்ணிய ஸ்தலமாவது பாப பூமியாவது என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறாரா இல்லை!!மாறாக, கும்பமேளம் கண்டு களிக்கும் பெரும் கூட்டத்தை, இவர் கண்டு களிப்படைகிறார்!! சாதுசன்யாசிகள் என்றபேரால் சோம்பித்திரிந்து, சொகுசாக வாழும் சழக்கரைக் கண்டித்துவிட்டு, அடுத்தகணம் ஐந்தாண்டுத் திட்டம், அணுகுண்டு யுகம், ஐசன் அவர் போக்கு என்று, வேறு பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறார்! புண்ணிய ஸ்தலம் எனக்கு ஹரித்துவாரமல்ல, எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடக்கிறதோ, அவைதாம் எனக்கு புண்ணிய ஸ்தலம் என்கிறார்; ஆனால், இவர் பெற்றுள்ள இந்தப் புத்தறிவை மற்றவரும் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை! எனக்குச் சீரகச் சம்பாவில் சாதம், தக்காளி சூப், கோழிக் கறி வறுவல் இவைதான் பிடிக்கும் என்று, புளித்த காடியும் புழுத்துப்போன கருவாட்டையும் சுவையான உண்பண்டம் என்று எண்ணிக் கிடப்போனிடம் கூறிப் பயன் என்ன? அவர்களின் மனப்போக்கை அல்லவா மாற்றவேண்டும். அவர்களைச் சாது சன்யாசிக் கோலத்தில் உலவும் சடலங்களைக் கொழுக்கச் செய்யும்’’ சேவை’’யில் ஈடுபட விட்டுவிட்டு எனக்கு இது பிடிக்காது, என் காசி சிந்திரி, என் கங்கை பக்ரா நங்கல், என் கயா சித்தரஞ்சன், என் புண்ணியஸ்தலம் அபிவிருத்தி வேலை நடக்கும் இடம் என்று பேசிப் பயன் என்ன? இங்குதான், நாம் தேவைப்படுகிறோம், தம்பி! பெரிய இடத்திலே உள்ளவர்கள், பாமரரின் சீற்றத்தைக் கிளறிவிடக் கூடிய ஒரு சொல்லும் கூறமாட்டார்கள்! உலகுக்கு உபதேசம் செய்வார்கள்! ஊராரிடம் பகுத்தறிவு பேசமாட்டார்கள். “ஓட்டு’’ இருக்கிறதே தம்பி, அது”வாய்ப்பூட்டு’’ போட்டு விடுகிறது!! நாம்தான் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பணியினைத் தொடர்ந்து செய்கிறோம், துணிந்து செய்கிறோம், தூய்மையின் நோக்கத்துடன் செய்கிறோம். தக்க பலன், மலரவும் காண்கிறோம், மகிழ்கிறோம். பட்டவர்த்தனமாக, மூடத்தனத்தைக் கண்டித்துப் பேசினால், பாமர மக்கள் சீறிப் பாய்வர், அரசியல் பீடத்தி லிருந்து உருட்டிவிடக் கிளம்பக்கூடும் - எனவே ஜாடைமாடை யாக மட்டுமே கூற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அறிவு முதிர்ச்சியின் காரணத்தால் அல்ல, தம்பி, அச்சத்தால்தான். நமக்கு அவ்விதமாக அச்சம் எழக் காரணம் இல்லை. நாமோ அரசியல் ஆண்டிப் பண்டாரங்கள்! எனவே பிறர் அச்சத்தால் வாயடைத்துப் போகும் நிலையிலும், நாம் பேசுகிறோம்; ஏசுகிறார்கள், மேலும் பேசுகிறோம்; கல் வீசுகிறார்கள், தொடர்ந்து பேசுகிறோம்; காலிகளை ஏவுகிறார்கள், எனினும் பேசுகிறோம். நாம் இம்முறையில் துணிந்து செயலாற்றினால்தான், அச்சம் காரணமாக வாயடைத்துக்கிடப்போரும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்வோரும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறிவோரும், நாம்தானா இதற்கெல்லாம் என்ற சலிப்படைவோரும், மெள்ளமெள்ளத் தமது போக்கை மாற்றிக் கொண்டு, ஜாடைமாடையாக முதலிலும், வெளிப்படையாகவே பிறகும், வீரத்துடன் எதிர்காலத்திலும் பேச முற்படுவர்; குன்றக்குடி அடிகளாரின் போக்கைக் கவனித்து வருகிறார்யல்லவா தம்பி! பார்க்கிறாயல்லவா அவர் சைவ மாவட்டத்தில் சுயமரியாதை மாநாடு நடத்திவரும் வேடிக்கையை பயனுள்ள வேடிக்கையை. அதுபோல எண்ணற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்ட உள. ஹரித்துவாரத்தை புண்ணிய ஸ்தலம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்து, எங்கெங்கு அபிவிருத்தி வேலை நடக்கிறதோ அவைகளே என் புண்ணிய ஸ்தலங்கள் என்று பேசிடும் பண்டிதரின் கருத்துரையை அலசிப் பார் தம்பி. புண்யம் என்றால் என்ன? எதைப் பாமர மக்கள் புண்ணியம் என்று எண்ணி ஏமாறுகிறார்கள்? அறிவுத் தெளிவுள்ளோர் எதைப் புண்ணியம் என்று கொள்வர்? மக்கள் வாழ வழி செய்வதும், வாழ்வின் வளத்தைப் பெருக்குவதும்தான் "புண்ணியம்’ அதற்கான வேலைகள் நடைபெறும் இடமே புண்ணிய ஸ்தலம். மடங்களிலே உள்ள சடலங்களாலல்ல, தொழிற்சாலைகளிலே நரம்பு முறியப் பாடுபடும் பாட்டாளிகளால்தரன் நாடு செழிக்கும். புண்ணிய தீர்த்தத்தால் அல்ல, புதிய புதிய நீர்த் தேக்கங்களால் தான் பாலைவனம் சோலைவனம் ஆகும். ஆறுகால பூஜை, அபிஷேகம், ஆராதனை இவைகளால் அல்ல, அணைக்கட்டு, மின்சார நிலையம், உர உற்பத்தி இவைகளால்தான் மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் என்ற இன்னோரன்ன கருத்துக்களெல்லாம் ஊற்றெடுத்து ஓடிவரும்! ஆனால் அலசிக் காட்டும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. தம்பி! ஐந்தாண்டுத் திட்டத்திலே நடைபெற்ற ஓர வஞ்சனையைப்பற்றி, நாம் உள்ள உரத்துடன், ஊராள்வோரின் பகைபற்றிக் கவலைப்படாமல் காங்கிரசில் இருப்போரும் நுழைவோரும் கண்டிப்பது பற்றிச் சட்டை செய்யாமல் எடுத்துக் காட்டியதால்தான், இப்போது காங்கிரஸ் வட்டாரமேகூட அதுபற்றிப் பதைத்தும் பதறியும் துக்கம் தொண்டையை அடைக்க, வெட்கம் பிய்த்துப் பிடுங்கும் நிலையில் பேசிடக் கேட்கிறோம். சதேசமித்திரன் கேலிச்சித்திரம் போட்டிடக் காண்கிறோம். தலைமை நிலையத்திலிருந்து உங்கள் ஊருக்கு வந்திருக்குமே படம்!! தம்பி! இடையே இதையும் சொல்லி வைக்கிறேன். எவ்வளவோ செலவாகிறது. எதெதற்கோ செலவாகிறது, எதையாவது குறைத்து பணம் சேர்த்து அந்தக் கேலிக் சித்திரத்தைப் பெரிய அளவில் பத்தாயிரம் மக்கள் கொண்ட கூட்டத்திலும், கோடியில் உள்ளவருக்குப் பளிச்சென்று தெரியும் வகையில் துணியில் ஓவியமாக்கி வைத்துக்கொண்டு, நமது கழகக்கூட்டங்கள் நடைபெறும்போது மேடை அருகில் அதைத்தொங்கவிடு - ஒரு மணிநேரச் சொற்பொழிவை அந்தப் படம் தந்துவிடும். காங்கிரஸ் வட்டாரமே இப்போது துணிந்து கிளம்புகிறது தம்பி, வடநாட்டின் போக்கைக் கண்டிக்க. ஆமாம், வீணுக்கா உழைத்தோம், தூவிய விதை என்ன, பதறா? காங்கிரஸ் நண்பர்களின் மனம்தான் என்ன வறண்ட பாலையா? பலன் தெரிகிறது மெள்ள மெள்ள! பல இதழ்கள், சில சோகமாகவும், சில கோபமாகவும், மத்திய சர்க்காருக்கு அநீதியை எடுத்துக் காட்டுகின்றன. வடநாட்டுச் சர்க்கார் என்று விளக்கமாக நாம் சொல்கிறோம். இந்த ஏடுகள், மத்திய சர்க்கார் என்ற விநயமாகச் சொல்கின்றன. ஆரம்பக் கட்டமல்லவா, கூச்சம், அச்சம், இருக்கிறது. காதல் கனிரசமா, துவக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது, கடைக்கண் வீச்சுதானே, தம்பி, அது என்ன சாமான்யமானதா!! எத்தனை இன்பக் கனவுகளைக் கிளறிவிடுகிறது!! அதுபோலத்தான், இந்த இதழ்கள் அச்சத்துடனும், கூச்சத்துடனும் இப்போது எழுதுவது!! யாராவது பார்த்துவிட்டால்!! வெட்கமாக இருக்கிறது!; உஹும், நாளைக்கு! சோலையில்!? என்று கொஞ்சுமொழி பேசி விட்டுக் காதலன் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் நத்தை, என்று வைத்துக்கொள்ளேன்! சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஏடுகள் இப்போது மத்திய சர்க்காரின் போக்கைப் பற்றி எழுதுகின்றன - கவனித்தாயா!! ஹரித்துவாரம் பற்றிப் பேசிய நேரு பண்டிதர், புண்ணிய ஸ்தலம் என்பதுபற்றி தமது கருத்துரையை அளித்தவ ரல்லவா. அதையே, சாக்காக வைத்துக் கொண்டு ஒரு காங்கிரஸ் ஏடு மத்தியச் சர்க்காரின் போக்கை இடித்துரைத்திருக்கிறது. கன்னத்தில் இடித்து "காலை பிறந்ததும் என் நினைவே போய்விடுமல்லவா, கண்ணாளா’’ என்று கேட்கும் காரிகை போல, கதைகளில் இந்த ஏடு எழுதுகிறது - இத்தனைக்கும், விகடன் செய்யும் வேலையை மேற்கொண்டுள்ள ஏடுதான்!! ஆனந்தவிகடன், அது எழுதுகிறது. "அரித்துவாரம் இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன என்று கூறித் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். புண்ணிய ஸ்தலங்கள் என்னும்போது வடஇந்தியாவை விடத் தென்இந்தியாவிலேயே இவை அதிகம் என்று கூறலாம். எனினும் பொருளாதாரத் துறையில் தென்னிந்தியா பின்னணியிலேயே இருந்துவருகிறது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும், தென்னிந்தியா நேருஜியின் அர்த்தப்படி புண்ணிய ஸ்தலங்களாகச் சீர்பட வில்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும் தென்னிந்தியா பொருளாதாரப் புண்ணிய ஸ்தலமாகத் திகழும் பாக்கியம் பெறாதோவென ஐயுற வேண்டி யிருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வடஇந்தியாவிலேயே நிர்மாணிக்கப்படுவதைப்பற்றியும், தென்னிந்தியா அலட்சியம் செய்யப்படுவதைக் குறித்தும் வினவினால், நிதி மந்திரி தேஷ்முக் உட்பட இந்திய சர்க்கார் மந்திரிகள் அனைவரும் சரியான பதில் அளிப்பதில்லை. தம்பி! எப்படி, எந்த இடத்திலிருந்து நமது பிரச்சாரம் பலன் அளித்திருக்கிறது பார்!! காரம் இல்லை என்பாய் - ஆமாம் - எப்படி இருக்கமுடியும் - இப்போது? எழுதுகிற பாணிகூட அரசியல் எழுச்சி ஊட்டத்தக்கதாக இல்லை - தெரியாததால் அல்ல, ஏ அப்பா! வெளிநாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதும்போது பார், புரட்சி படமெடுத் தாடும் இந்த ஏடுகளில்! ஆனால் நேருஜியை பற்றி எழுதும்போது, நாம் நெளிய வேண்டியிருக்கிறது, "நெஞ்சில் இடம் கொண்டான்’’ ஆயிற்றே அதனால். அவளுக்குத்தானா கண்ணா! பாரிஜாதம்! எனக்குக் கிடையாதா! என்னிடம் அன்பு இருந்தால் எனக்குப் பாரிஜாதம் தரவேண்டும்’ என்று, ராதா கேட்கிறாள் கண்ணனிடம். பாரிஜாத புஷ்ப ஹரணம் பார்த்திருப்பாயே நாடகம். பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பு நடக்கும். அந்தப் பாணியில் எழுதுகிறது விகடன்-என்றாலும், விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டது அல்லவா, இதற்காக நாம் பட்ட கஷ்டம் கொஞ்சமா? எல்லாத் தொழிற்சாலையும் வடநாட்டில், தென்னிந்தியா அலட்சியப்படுத்தப்படுகிறது. விகடனிடமிருந்து இந்தக் கருத்துரை - இடித்துரை - வருமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? திராவிடம் என்ற சொல்லையே கூற முடியவில்லை விகடனால். தென்னிந்தியா என்று எழுதுகிறது, - பரவாயில்லை. அதனால் என்ன - அத்தான் என்று அன்பு சொட்ட அழைத்திட ஆரணங்கால் முடிகிறதா? "அப்பா எங்கேடா கண்ணு!’’ என்று குழந்தையைப் பார்த்துக் கேட்பதுதான் தெரியுமே நமக்கு. அதுபோல் இது என்று எண்ணிக் கொள்வோம். விகடன் மட்டும் அல்ல, வேறு வேற வேலையாகக் கூறிடும்போது, யாராருக்கோ இந்தக் கருத்துதான் வருகிறது! யார் உள்ளத்தையும் இந்தக் கருத்துச் சும்மா விடுவதில்லை. புகுந்து குடைகிறது!? தங்களுக்கு இப்போதுள்ள அதிகாரம் போதாது, மேலும் சில பல அதிகாரம் வேண்டுமென்று கேட்க மாநாடு நடத்துகிறார்கள், சென்னை ராஜ்ய நகராட்சி மன்றத் தலைவர்கள்! அங்கு "ஏகமனதாக’’ நிறைவேறியிருக்கும் தீர்மானம் இதுதான் - முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது எல்லா பெரிய தொழிற்சாலையும் வடநாட்டிலேயே அமைத்து விட்டார்கள். இந்த இரண்டாவது திட்டத்திலாவது தென்னாட்டில் அதிகமான பெரிய தொழிலும், திட்டமும் வேண்டும். சாலையிலே, சோலையிலே, ஆற்றோரத்தில், அக்கிர காரத்தில், பத்திரிகை நிலையத்தில், கமிட்டிக் கூட்டங்களில், வியாபாரச் சங்கத்தில், விசேஷ மாநாடுகளில், அமைச்சர் மாளிகையில், அரசாங்க அலுவலகங்களில், எங்கும் பேசப்படும் பிரச்சினையாகிவிட்டது - எங்கும் நிறைநாதமாகிவிட்டது - செங்கொடிக்காரன் இடம் தவிர. அவர்களுக்குப் பாவம், ஒரே அதிர்ச்சி, அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி, எனவே இந்த எழுச்சி புக இடமில்லை - நேரமுமில்லை. அந்த ஒரு இடம் தவிர, மற்ற எல்லா இடத்திலும், சிந்தனையைக் கிளறி விட்டிருக்கிறது நாம் எடுத்துக் காட்டியிருக்கும் பிரச்சினை. ஐயே! உங்களைத்தான், காதிலேயே விழலையா நான் கூப்பிடறது - இந்தாருங்கோ காப்பி! - என்று கதவிற்குப்பின் புறம் மறைந்து நின்றபடி, காரிகை அழைக்கும்காட்சி தெரிகிறதா, கைவளை ஒலி கேட்கிறதா!! அன்புள்ள அண்ணாதுரை 12-6-1955 மானே! தேனே!! தென்னவர் பற்றி வடவர் பசப்பு! திராவிடத்தின் சிறப்பு - வட நாடு, தென்னாடு வேற்றுமை தம்பி! “ஏனோதானோ’’ என்று அந்நாள் வரை இருந்து வந்தவன்,”மானே! தேனே!’ என்று மயக்க மொழி பேசினான். அடிமூச்சுக் குரல் அன்பின் அறிகுறியாக மட்டுமல்ல, நம்பினோரை நாசமாக்கவும் பயன்படும் என்பதை அறியாமல், நாரீமணி, பூங்கொடி தென்றலில் ஆடுவது போலானாள். புது வாழ்வு பிறந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவனோ, அவளை இன்பபுரிக்கு அழைத்துச் செல்லவில்லை; அவளிடமிருந்து இருபது பவுன் "செயினைப்’’ பெற்றுக்கொண்டு, நடையலங்காரி ஒருவளை நாடிச் சென்றான்! கதை, தம்பி கதை. காதலின்பம் பெறவேண்டிய காரிகையர் சிலர் கருத்தழிவதைக் காட்டும் கதை. "கொழுந்தே, உனக்கு மிட்டாய் வேணுமா, ஊதுங்கோல் வேண்டுமா, ஆடும் குதிரை, பாடும் பறவை எல்லாம் வாங்கித் தரட்டுமா?’’ "மிட்டாயா, வாங்கிக் கொடுங்கோ மாமா, எனக்கு ரொம்ப இஷ்டம்.’’ "கடைத் தெருவுக்குப் போகலாம வா, கண்ணு.’’ "ஐயோ, அம்மா அடிக்குமே. நான் போய் அம்மாவிடம் சொல்லிவிட்டு. . .’’ "அம்மாவிடம் சொன்னா, உன்னை அனுப்பமாட்டாங் களே, மிட்டாய் தின்னப்படாதுன்னு சொல்லுவாங்க.’’ "அம்மாவுக்கு தெரியாமெ, ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா?’’ நஞ்சு நிறை நெஞ்சினன் என்பதறியாத அந்தப் பிஞ்சு, வயலோரத்தில் கசக்கிப் போடப்படுகிறது - கையிலே மிட்டாய் இருக்கிறது - ஆனால் கைவளையும் காது லோலாக்கும் இல்லை. திருவிழாக்களின் போது கேள்விப்படுகிறோம், இது போன்ற நிகழ்ச்சிகளை. கனி மொழி, சுவையுள்ளதுதான், ஆனால் நஞ்சுக்கு அதனை உரையாக்கிடும் போக்கினரும் உண்டு - எனவேதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்கிறார்கள். அழகும் மணமும் கொண்ட செந்தாழை இருக்கிறது பார் தம்பி, அதிலே, இதழ்களின் இடையே, ஒட்டிக்கொண்டிருப்ப துண்டாம் சிறுநாகம் - தீண்டினால் தீர்ந்து போவார்களாம்! அதனால், அனுபவமுள்ளவர்கள் செந்தாழையைப் பிரித் தெடுக்கும்போது, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பர். தம்பி, முரட்டுத்தனத்தினாலே மட்டுமே, தீயகாரியங் களைச் சாதித்துக்கொள்வது என்ற முறை, இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது - தீய காரியம் குறையவில்லை முறை மாறிவிட்டிருக்கிறது. "கழட்டடி கழுதே! உங்கள் அப்பன் வீட்டிலே போட்டா என்னவாம்? இப்ப கழட்டிக் கொடுக்கறயா, இல்லையானா, இடுப்பை முறிச்சிக்கப் போறியா?’’ இந்தக் "கணவன்’’ இப்போது - "என்ன செய்யறது; வேற எங்கேயும் கிடக்கலையாம், என் உயிரை வாங்கறான் வேலாசாமி. கலியாண வேலையை முடிச்சிட்டு உடனே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்சறான்; பரிதாபமாயிருக்கு; நம்மிடம் இருக்கவே நானும் அவனுக்கு வேண்டியவனாக இருக்கிறதாலே, ஒரு நாலு நாளைக்கு இரவல் கொடுன்னு கேட்கறான். இதுக்கு என்னமோ மூக்காலே அழறியே. எடு! எடு! கொடு! கொடு! நேரமாவுது, ரயிலுக்கு’’ என்று பேசி நகையைப் பறித்துக் கொள்ளவும், அதைக் கிண்டி ரேசுக்குப் பயன்படுத்தவும், பயிற்சி பெற்றுவிட்டான். முரட்டுத்தனமாக அவன் இருந்த போதாவது பரவாயில்லை. அடி உதை கிடைத்தாலும், அண்டை அயல் பஞ்சாயத்துக்கு வருகிற முறையில், அழுகுரல் கிளம்பி இருக்கும். சில வேளைகளில், அதற்கு அஞ்சி, அவன், புற்றுக்குள் புகுந்து கொள்ளும் பாம்பாகிவிடவும் கூடும். மானே! தேனே! என்று அவன் தித்திப்பு ஊட்டும்போது, பாபம், அவள் தப்ப வழியே கிடைக்காதல்லவா! ஆதிக்கக்காரர்களின் போக்கிலே இப்போது இதுபோன்ற மாறுதல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது - இதன் பயனாக ஆபத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது. புலி, உறுமும் - அந்தச் சத்தம் கேட்டு, கிலி பிறப்பினும், ஒரு படை திரட்டிவிடவும், அதை வேட்டையாடிக் கொன்று போடவும், வழியும் கிடைக்கக்கூடும். ஆனால், முல்லை பறித்திட மலர்த்தோட்டம் சென்று, பச்சைப் பட்டோ என்று பரவசப் படத் தக்க பசும் புற்றரையில் நடந்து செல்லும் போது, அரவமின்றி ஊர்ந்து வந்து தீண்டிவிடும் நாகமாக இருந்தால், என்ன கதியாவது? ஆதிக்கக்காரர்கள் புலியாக இருப்பதாலே ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, இப்போது புற்றரைப் பாம்பாகி இருக்கிறார்கள். எல்லோருமே அவ்விதம் எப்போதுமே அவ்விதம், என்று சொல்லவில்லை; இப்போதும் பழைய முறையே சாலச் சிறந்தது என்று எண்ணும், போர்ச்சுகீசிய ஆதிக்கக்காரர் இருக்கத்தான் செய்கிறார்கள் - கொக்கரிக்கிறார்கள், சுட்டெரிக்கிறார்கள். ஆனால் குறிப்பிடத் தக்க அளவிலே, புலி, பாம்பாகிவிட்டிருக்கிறது. கதை படித்திருப்பாயே, சிறு வயதில்? பல்லின் கூர்மையும், நகத்தின் கூர்மையும் பட்டுப்போன கிழப்புலி பாய்ந்து சென்று தாக்கி, பிய்த்து ரத்தம் குடித்துப் பசி தீர்த்துக் கொள்ள முடியாது என்ற தெரிந்துகொண்டு தங்கக் காப்பைக் காட்டி, ஆசையை மூட்டி, அருகே வருபவனை அடித்துத் தின்றது, என்றோர் கதை உண்டு. பேராசைக்காரப் பார்ப்பான் ஒருவன். இப்படி ஒரு கிழப்புலியிடம் சிக்கிக் கொண்டான் என்பது கதை. பேராசைக்காரப் பார்ப்பான் என்று சொல்லக்கூட, இந்த சர்க்காரிலே அனுமதி கிடைக்காது போலிருக்கிறது, தம்பி! இதற்கோர் கண்டனக் கூட்டம் போட்டு, இருபதாம் தேதி மாறடித்தழுவோம் என்று “இந்து’ தீர்மானித்துவிடக் கூடும்! நாடு அவ்வளவு முன்னேறிவிட்டிருக்கிறது.”நம்ம காமராஜா’’ என்று சொல்லிச் சொல்லி நாக்குக்கூடத் தழும் பேறிவிட்டிருக்கும்; எனினும், "அவர்களின்’ போக்கிலே மாறுதல் காணோம். அது கிடக்கட்டும் - அந்தப் பிரச்னை தீர, விருதுநகர் வித்தகரிடமா மருந்து கிடைக்கப்போகிறது? ஆதிக்கக்காரர்களின் போக்கிலே ஏற்பட்டு வரும் மாறுதலைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதைக் கூறத்தான் விரும்புகிறேன். தம்பி! இடையே இந்த சர்க்கார் கவனம் வந்தது, விட்டுத் தள்ளு. சென்னையில் ஒரு பகுதிக்கு இப்ஹஸ்ரீந் பர்ஜ்ய் கருப்பர் ஊர் என்ற துணிந்து பெயரிட்டனர், வெள்ளையர்! அது, கொடுக்கிறாயா, கொல்லட்டுமா? என்று கேட்கும் நிலை. பிறகு, கருப்பர் பட்டினம் ஜார்ஜ் டவுன் என்று ஆயிற்று - வேலாசாமி இரவல் கேட்கிறான் என்று புளுகி, நகையைப் பறித்த கட்டம் போன்றது. கருப்பர் - இன்று, அன்பர், நண்பர், தோழர், என்றெல்லாம் ஆகிவிட்டது! ஏகாதிபத்யம் போக்கை மாற்றிக் கொண்டது - நீதி, நேர்மை, நியாயம் இவைகளுக்காகவா? செச்சே! அதற்கல்ல; நோக்கம் நிறைவேறப் பழைய முறை உதவாது என்று புரிந்துவிட்டதால். திராவிடத்தைத் தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டுள்ள வடநாட்டுத் தலைவர்கள் சிலர், வரலாறு காட்டும் இந்த நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டி ருக்கிறார்கள்; எனவே அவர்கள், அச்ச மூட்டுவதால் பலனில்லை, ஆசை காட்டவேண்டும் என்று புரிந்து கொண்டு, செயலாற்றத் தொடங்கியுள்ளனர். காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளிய வெள்ளைக்காரனே, காலம் தெரிந்து, கருத்தை மறைத்திடவும், கனி மொழி பேசிடவும் கற்றுக் கொண்டான் என்றபோது, "அதிர்ஷ்டப் பரிசு’’ச் சீட்டு வாங்கியவனுக்கு ஆறு இரட்சம் கிடைத்ததுபோல, களத்தில் கடும் போரிட்டு அல்ல, வீர தீரத்தைக் காட்டியல்ல, நமது கோட்டைகளைத் தாக்கித் தகர்த்து கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி, நம்மைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து அல்ல, வெளியேறிய வெள்ளையனுடைய கண் பார்வையில் இருந்த ஒரே காரணத்தால், திராவிடத்தை ஆளும் நிலையை வடநாட்டுத் தலைவர்கள் பெற்றனர் - அப்படிப்பட்டவர்கள், கனிமொழி பேசித்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும் என்று முறை அமைத்துக் கொள்வதிலே, ஆச்சரியம் என்ன இருக்கிறது. வெள்ளையன் இங்கு நுழைந்த நாளிலிருந்து வெளியேறிய நாள் வரை, நடை, நொடி, பாவனை, மதம், மொழி, வாழ்க்கை, வழி ஆகிய எல்லாவற்றிலும்தான் வேறுபட்டவன் மட்டுமல்ல மேம்பட்டவன் என்று நம்பிக்கொண்டிருந்தான்; கூசாமல் சொல்லியும் வந்தான். வடநாட்டுத் தலைவர்கள் அப்படியல்ல - காங்கிரஸின் துணைக்கொண்டு, “பந்த பாசம்’’ இருப்பதாகச் சொல்லி, பாரத தேசம், பாரத மக்கள், இந்தியர் என்ற இனிப்புப் பண்டமளித்து, திராவிடரை மயக்கி வைத்திருந்தனர். நாடகங்களிலே பார்க்கிறோ மல்லவா இருவகையான கொலைக் காட்சிகள் - ஒன்றில், வாள் வாளைச் சந்திக்கும், இரத்தம் கொட்டப்படும், ஓடிஓடிப் போரிடுவர், உயர இருந்து கீழே குதிப்பர், கூடம் களமாகும், எதிரேயிருக்கும் சாமான்கள் உடைபடும், கடைசியில் ஒரு கொலை! மற்றோர் வகையிலே, வாள் உறையிலே தூங்கும், வாட்கண் அவன் நெஞ்சத்தைத் துளைக்கும்; அவள் இடை அசையும், இவன் இதயம் விம்மும்; அவள் கடைகாட்டுவாள், இவன் கருத்திலே ஏதேதோ கொந்தளிக்கும், கண்ணாளா! என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கனவல்லவே கட்டழகி! என்ற குழைந்து கூறுவான்; அவள் புன்னகை புரிவாள். இவன் புத்தி தடுமாறும்; அவள் இதோ கனிரசம் என்று அளிப்பாள், அவன் அவள் கரம் தொட்டு அதைப்பெற்றுப் பருகுவான், கண்ணிலே ஒரு திரை போடுவது போலாகும், கால் நடுக்குறும், அழகால் அழிவு தரும் ஆரணங்கை ஆசையுடன் பார்த்தபடி அருகே நெருங்குவான்; அவள்”இலாவகமாக’’ ஒதுங்கிக் கொண்டு ஒரு பசப்புச் சிரிப்பொலி கிளப்புவாள்; இதற்குள் இவன் பார்வை மங்கும், பூமியில் கால் பரவாது, கீழே சாய்வான், பிணமாவான்! தென்னாட்டவர், தீரர், வீரர், தேச பக்தர்! தென்னாட்டவர், என்னாட்டவரும் வியக்கத்தக்க நுண்ணறிவு படைத்தவர்கள்; எதையும் சாதிக்கவல்லவர்கள். எத்துணை கஷ்டத்தையும் பொருட்படுத்தாதிருக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள். தென்னாட்டவருக்கு எத்தனை மொழி கற்பதானாலும், சிரமமிராது - பாண்டித்யம் பெறமுடியும். தென்னாட்டவர் இந்தியைக் கற்பது மட்டுமல்ல, வெகு விரைவில் வடநாட்டுக்கே இந்தி ஆசிரியர்களாகி விடக்கூடிய திறமைசாலிகள்! தென்னாடு! அறிவாளிகள் நிரம்பிய இடம்! எல்லாக் கலையும் கொஞ்சி விளையாடும் பூந்தோட்டம் தென்னாடு! அழகிய மங்கையரின் முக விலாசமும், அறிவாளர்களின் முக தேஜசும், இயற்கை எழிலுடன் சேர்ந்து, தென்னாட்டைக் காந்தர்வபுரியாக்குகிறது! தென்னாட்டின் அருமை பெருமைகளை அறியாதார் அறியாதாரே! முல்லை காட்டி, பாகு கலந்த சொல்லமுது ஊட்டி, பாவை பம்பரமாக ஆட்டிவைக்கிறாள்! மாவ்லங்கர், தத்தர், தேபர், மகதாப் என்று வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள், இத்தகைய மயக்க மூட்டும் நோக்குடன். ஒருவர் இயற்கை வளத்தைப் புகழ்கிறார். இன்னொருவர் மொழி வளத்தைக் கண்டு வியப்படைகிறார். தேச சேவையை பாராட்டித் தேன் கொட்டுகிறார் ஒருவர். தெய்வ பக்திமிகுந்த இடமல்லவா என்று பரவசம் பாய்ச்சுகிறார் இன்னொருவர். அனைவருக்கும் ஒரே நோக்கம். ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்பதுதான்! அதற்கு ஆர்ப்பரிப்பு பலனில்லை, அன்பு ஆலாபனமும், புகழ் பல்லவியும் தாஜா’’ செய்யும் தாளமும் தேவை என்பது முறையாக்கப் பட்டிருக்கிறது. பன்னெடும் காலமாகவே திராவிடர், இப்படி பசப்பு வோரிடம் நம்பிக்கை வைத்து நாசமாகி இருக்கிறார்கள். இல்லையானால், காய்ந்த புல்லைக் கையிலே கொண்டிருந்த கூட்டத்திடம், கட்கமேந்திப் போரிடுவதைக் காதலுக்கு ஈடான நிலையில் வைத்துப் புகழ் ஈட்டிய திராவிட இனம், அடிமைப் பட்டிருக்கவே முடியாதே! வடநாடு, ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்படாமலிருந்த நாட்களிலேயே, இங்கு திராவிடம் ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒழுக்கத்தை ஓம்பி வளர்த்திடும் திருநாடாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. செல்வம் கொழிக்கும் நிலையும், செங்கோல் ஓச்சும் மன்னர்களும் பெற்ற நிலையில், வடநாடு சித்தரிக்கப்படும் கட்டத்தைக்கூட, வேண்டுமானால் திராவிட நாட்டு வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லு, தம்பி, திராவிடத்தின் தனிச் சிறப்பு விளக்கமாகத் தெரியும். மன்னர் இருந்தனர். இங்கும், அங்கும் மணிமுடி இருந்தது, இரு மன்னர் முடியிலும். எனினும் இரு வேறு முறையன்றோ காண்கிறோம் அவர் தம் போக்கில். மக்களுக்காக அரசு. அரசு செம்மையாக நடந்துவர மன்னன் என்பது திராவிடத்தில், தத்துவமாக மட்டுமல்ல, திட்டமாக இருந்து வந்தது அந்த நாட்களிலும். மன்னன் செம்மையாக வாழ ஒரு அரசு, அந்த அரசு வளமுடன் இருக்க மக்களின் உழைப்பு என்ற தன்மை இருந்து வந்தது வடக்கில். வெட்டிப் பேச்சல்ல, தம்பி. மன்னன் தன்னிடம் அரசாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கருதிப் பணியாற்றினான் இங்கு. அங்கு அங்ஙனமல்ல! நாடு மன்னன் உடைமை! அதன் பயனைப் பெறும் அனுமதியை மன்னன் மக்களுக்கு அளிக்கிறான் அங்கு. எனவேதான் காண்கிறோம், நாடு மன்னனால் எப்படி வேண்டுமானாலும் ஆக்கப்பட்டுவிடும் அக்கிரமத்தை! கேகயன் மகள் ஒரு கோகிலம்! தசரதமன்னன் நரைத்த தலையினன்!! அங்கம் தங்கம், அந்த அரசிளங்குமரிக்கு; உடலெங்கும் காலம் தந்த சுருக்கம் இந்த அரசனுக்கு. எனினும் அந்த சிற்றிடைச் சிங்காரியைச் சரசக் கருவியாகக் கொள்ள வேண்டுமென்று இந்த சத்திழந்தவர் விரும்பினார் - என்ன செய்தார்? என்னைக் களிப்பிக்கும் தொண்டு புரிய இந்தத் தோகை இசையட்டும். நான், அவள் வயிற்றில் உதிக்கும் மகனுக்கே என் இராஜ்ஜியத்தைத் தருகிறேன் - இப்போதே, இதோ என் இராஜ்ஜியத்தைத் தந்து விடுகிறேன் என்று வாக்களிக்கிறான். வயோதிகருக்கு அந்தக் கணை புகுந்தால், கருத்து எப்படி ஆகிவிடுகிறது என்பதைக் கவனிக்கச் சொல்லவில்லை - இதை அறிய இராமாயண காலத்துக்கா போக வேண்டும், நமது நாட்களிலேயே பார்க்கிறோமே!! கொடுத்த வாக்குறுதியைத் தசரதன் காப்பாற்றாதது குற்றமல்லவா என்று "இராமதாசர்களை’’க் கேட்கும்படி கூடச் சொல்லவில்லை - இதைவிடக் காரசாரமான கேள்விக் கணைகளால் தாக்குண்டு, அவர்கள் வைகுண்ட வாசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் உன்னை கவனிக்கச் சொல்வது எது தெரியுமா தம்பி, தசரதன் தன் ஆட்சியில் இருந்து வந்த இராஜ்ஜியத்தை, தன் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் தர முடிகிறது. இது வடநாட்டில்தான், இங்கு இதுபோல் நடைபெற்றதில்லை. சூதாடித் தோற்கிறான் இராஜ்ஜியத்தை - நளன் - தருமன். தானமாகக் கொடுத்து விட்டுச் சுடலை காக்கச் செல்கிறான் அரிச்சந்திரன். இவை வடநாட்டு மன்னர்களின் முறை - மன்னர்களிடம் நாடு உடைமையாக்கப்பட்டு விடும் - கேடான கொள்கையைத் தென்னகம் ஏற்றுக் கொண்டதில்லை. பெரிய தத்துவத்துக்குப் போவானேன் தம்பி, ஜவருக்கு ஒரு மாது பத்தினியாக இருக்கலாம் என்பதைக் கற்பனைக்கும் ஒத்ததாகத் திராவிடர் கருதவில்லை - வடக்கே அப்படிப்பட்ட பத்தினி பற்றிய காதை எழுதி, அந்த அம்மையின் உற்ற "இரக்ஷகராக’’ பகவானே உடனிருந்து வந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. பண்பு நிச்சயமாக இங்கே வேறுதான் - அங்கே இருந்து வந்த "ஆசாபாசங்களை’’ பண்பு என்று கூறக் கூசுகிறது. எல்லாம் சரி! ஆனால் இன்று என்ன நிலைமை? வடநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகிறார்கள், புகழ் கிறார்கள், நமது அருமை பெருமை கண்டு அகமகிழ்கிறார்கள், ஏன்? இப்படிப்பட்ட பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதான பொன்னாடு, தங்களின் பிடியில் இருக்கிறது என்ற பூரிப்பு!! ரோம் நாட்டவர் கிரேக்க நாட்டைத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர். பொன்னும் மணியும் வண்டிவண்டியாகக் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றுடன் கிரேக்கர்பலரை அடிமைகளாகக் கொண்டு சென்றனர். மாளிகையில் மந்தகாசமாக, ரோம் வீரன் அமர்ந் திருப்பான்; நண்பர் அவனுடன் உரையாடுவதும், தங்கக் கோப்பையிலே வார்த்துத் தரப்படும் திராக்ஷை ரசத்தைப் பருகுவதும், போதை ஏறிய நிலையில், பொழிலில் கண்ட கடைக் கண்ணழகி பற்றியும், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட காலால் சேயிழை தன் மார்பகத்தே உதைத்த போது அடைந்த உவகை பற்றியும், பேசிக் களிப்பர். “ஆஹா! மறந்தேபோனேன், நண்பர்களே! வெண்ணிலவில் வேல்விழியாளுடன் ஆற்றோரம் உலவினால் அடையும் ஆனந்தம் பற்றிய அரும் கவிதை ஒன்று இருக்கிறது, கேட்டதில்லையே நீங்கள் - சுவையுள்ள கவிதை என்பான் விருந்தளிப்போன்,”அப்படியா! கவிதையா! பாடிக் காட்டு நண்பா!’’ என்று கேட்பர் விருந்துண்போர். “நானா பாடுபவன்! என்னிடம் இருக்கிறான் ஒரு அடிமை அழகழகாகப் பாடுவான்’’ என்று கூறி அழைப்பான் புலமைமிக்க கிரேக்கன், அடிமைக் கோலத்திலே வந்து நிற்பான்,”ஏ! கவி! நேற்று பாடிக் காட்டினாயே கவிதை, அதைப் பாடு இப்போது, இவர்கள் கேட்கட்டும்’ என்று கூறுவான். அடிமை பாடுவான். கீர்த்தி மிக்க கிரேக்க நாடு தாழ்ச்சியுற்ற போது நேரிட்ட, நெஞ்சைப் பஞ்சாக்கும் சோகச் சம்பவம். இப்போது, பரதநாட்டியம், கருநாடக சங்கீதம், கதகளி, திராவிடமொழி, திராவிடச் சிற்பம், இவைகளை இன்னும் பதம் கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும் போது, எனக்குத் தம்பி! ரோம் நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக் கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது. "மிகப் பழங்கால முதற்கொண்டே வளமாக இருந்த திராவிடம்’ என்று அவர்கள் புகழ்கிறார்கள். திராவிடரோ மலேயா காடுகளிலே மிருக வாழ்க்கையில் இருக்கிறார்கள் - கடல் கடந்து சென்று கைகட்டிச் சேவகம் செய்வது மட்டுமல்ல, கட்டை வெட்டுகிறார்கள், கல் உடைக்கிறார்கள், குப்பை கூட்டுகிறார்கள். மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். பாராட்டிவிட்டு, எனினும் "இந்தி’’ படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள். அறிவாளரின் வாழ்விடம், கலையின் பிறப்பிடம் என்றெல்லாம் பேசுகிறார்கள் - பேசிவிட்டு, இவ்வளவு தகுதி இருப்பதால், தனி அரசு அமைத்துக் கொண்டு தரணியில் ஒரு மணி விளக்காகத் திகழ்வீர் என்றா கூறுகிறார்கள்? "இந்தியப் பேரரசின்’’ ஒரு பகுதி என்று பசப்புரை கூறி, அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொன் விளையும் பூமி என்கிறார்கள் - தரித்திரம் போக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். அவசரப்படாதீர்கள் என்கிறார்கள். அவர்களின் புகழுரை நாணயமானதாக இருந்தால், ஏன் திராவிடம் தனி நாடாகத் திகழ்வதற்கு இசைவு தரக் கூடாது? இவ்வளவு புகழுரைகளுக்கு ஏற்றதாக ஒரு எழில் நாடு இருக்க, ஏன் அதனை அடிமைக்காடாக்கி வைத்திருக்கிறார்கள்? நல்ல பெண்! மிக நல்லவள்! கொஞ்சம் கூச்சம்! பயம்!! அடே அப்பா! கரத்தைப்பிடித்திழுத்ததும் சிவந்தேவிட்டது? கன்னத்தைத் தொட்டேன், மலர், மலரே தான்! மஞ்சம் சென்றபோது, சிறு குழந்தை போல, விக்கிவிக்கி அழுதாள்! பிறகு மயங்கிக் கீழே வீழ்ந்தாள்! தரையில் அவள் கிடந்த போது, சிற்பி செதுக்கிய சித்திரப்பாவை தவறிக் கீழே விழுந்து கிடந்தது போல இருந்தது. இப்படி ஒரு காமுகன் பேசினால், அதைக் கேட்டுக் காரிகையின் பெற்றோர், பெருமையா கொள்வர்? பூரிப்பா அடைவர்? சிறிதளவு ரோஷமுள்ளவர் சீறிப் போரிடுவர் - அது அற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வர். அமைச்சர் சுப்பிரமணியம் வடநாட்டுத் தலைவர்கள் வழங்கும் புகழுரைகளைக் கேட்டுப் பூரித்துப் போகிறார், புளகாங்கித மடைகிறார்! அவரால் முடிகிறது! அவர் போன்றோரால் முடிகிறது! நம்மால் முடியவில்லையே? நமக்குத் திராவிடம் அன்று வாழ்ந்த பெருவாழ்வுடன் இன்று அடைந்துள்ள அவல நிலையை ஒப்பிடும்போது, அணி மணி பறிகொடுத்த ஆரணங்கு, கழுத்து நெறிக்கப்பட்ட பேசும் பசுமை, மானமழிக்கப்பட்ட மாது - இத்தகைய கொடிய காட்சிகளல்லவா நினைவிற்கு வருகிறது! நெஞ்சு நெருப்பிலிட்ட புழுவாகாமலிருக்குமா? அவர்கள் மகிழ்கிறார்கள் - அத்தனைக்கும் ஈடாக அமைச்சர் பதவி கிட்டிவிட்டது என்று! நமக்கோ அரசு இழந்தோம், முரசு இழந்தோம், வளம் இழந்தோம். வகை இழந்தோம், தன்மானமும் அழிந்து படவேண்டும்? என்று எண்ணம் பிறக்கிறது. “பைத்தியக்காரர்களே! என்னைப் பாருங்கள்! நான் உங்களைப் போல உதவாக்கரைக் கருத்துகளுக்கு என் மனதில் இடமளித்து இருந்தால், இந்த நிலையிலா இருந்திருப்பேன்? மூலையிலல்லவா முக்காடிட்டு அழுதபடி இருந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்?’’ என்ற கருத்துப்பட”கனமான’ சுப்பிரமணியம் கழறுகிறார்! புகழுரையை அபினாகத்தரும் புதுமுறையில் ஈடுபட்டுள்ள வடநாட்டுத் தலைவர்களிலே ஒருவர், தத்தர் என்பார் பேசிய கூட்டத்திலே, அமைச்சர் சுப்பிரமணியம் தீப்பொறி பறக்கப் பேசி, "தீகா’ வாவது என்று ஏசினாராம்! அரிய உண்மையையும் அருளியிருக்கிறார் அது போது. பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பேச்சைக் கேட்டு இருந்தால் நான் என்ன கதியாகி இருப்பேன்? இப்போது இந்த தீகா தீமுகா தலைவர்கள் இருக்கிறார்களே அதுபோல எங்கோ ஒரு மூலையில் அல்லவா கிடந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்? என்று பேசியிருக்கிறார். இதிலே ஒரு அரிய உண்மை இருக்கிறது, தம்பி; நிச்சயமாக இருக்கிறது. காங்கிரசில் சேர்ந்தால்தான், சுப்பிரமணியம் போன்றார், சபை நடுவில் சன்னத்துடன் இருக்கமுடிகிறது! இல்லையேல், மூலை முடுக்குதான்; சந்தேகம் இல்லை! காங்கிரசின் தயவு இருக்கிறது என்ற தகுதி தவிர, தமது நிலைமைக்கு வேறு தகுதி இல்லை என்பதை அவர் நெஞ்சார உணருகிறார்! நேர்மையாகச் சொல்லியும் விட்டார்! ஆனால் மற்றோர் பேருண்மை அவருக்குப் புலப்படவில்லை - இன்று அவர் இருக்கும் நிலையில் புலப்படாது! “அது சரிடி அம்மா! அந்தப் பாவியோட குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தா, இன்னேரம் கூலிக்காரியாகி, புளித்த கூழுக்கும் அழுகல் மாங்காய்க்கும் அலைந்து திரிந்து கிடக்க வேண்டித்தான் வந்திருக்கும்’’ என்று துணிந்து கூறுகிறார்; கொண்டவன் வறுமையின் பிடியில் இருப்பது கண்டு குலுக்கி நடந்து குட்டிக் குபேரனை வலையிட்டு, அவனுடன் வாழ்க்கை நடத்தி, வங்கி ஒட்டியாணத்துடன் மாங்காய் மாலையும் வைர ஓலையும் பச்சை மோதிரமும் பத்து ஏக்கர் நஞ்சையும் பங்களா தோட்டமும்,”சம்பாதித்த’’ சல்லாபி! ஆனால் உலகம், காரி உமிழ்கிறது! ஆஹா! அப்படியா! அம்மணீ! வாழும் வழி கற்றுக்கொடுத்த வனிதா மணியே! வாழி! வாழி!! என்று கூறி வாழ்த்துவதில்லை. அவளிடம் வண்டி ஒட்டி வயிறு கழுபவன் கூட, வாழ்த்த மாட்டான் - பாழும் அங்கத்தை வளர்க்க இந்தப் பங்கப்பட்ட பாவியிடம் அல்லவா வேலை செய்ய வேண்டி "விதி’’ இருக்கிறது என்றெண்ணி வேதனைப்படுவான். ஆனால் இதெல்லாம் சாமானியர்கள் விவகாரம்! பேசினவர் அமைச்சர்; உன்னையும் என்னையும் போல "உருப்படத் தெரியாத’’ வரா! எனக்கும் உனக்கும் தம்பி! அவர் போல "அந்தஸ்து’’ பெறுவதற்கு என்ன வழி என்பது தெரிய வேண்டாம் - நாடு பொலிவு பெற, தன்னரசு பெற்றுத் திகழ வழி என்ன என்ற விஷயம் புரியட்டும் - போதும். புகழுரை பொழிவதன் மூலம் மயக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, நாம் ஏமாளிகள் அல்லவென்பதை எடுத்துக்காட்ட வேண்டும். வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள். அவர்களின் உண்மை நோக்கத்தை உணர்ந்ததாலேதான், சேலத்தில் தோழர்கள், சீறி எழுந்து கண்டனக் குரலைக் காட்டினர். மேலும் விளக்கமாவதற்காகக் கருப்புக் கொடியும் காட்டினர். “அடிக்கடி செல்வோம், அன்பாகப் பேசுவோம், புகழ்பாடுவோம், புன்னகை காட்டுவோம், அவர்கள் ஏமாந்து போவார்கள்,”எடுபிடி’’ யாகி விடுவார்கள்!’’ என்று எண்ணு கிறார்கள், முறையை மாற்றினால் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து விடலாம் என்று எண்ணும் வடநாட்டுத் தலைவர்கள். சாகஸத்துக்குப் பலியாக மறுத்திடும் அணிவகுப்பு ஒன்று இருக்கிறது. அது வளர்ந்த வண்ணமும் இருக்கிறது, என்பதைக் காட்டியாக வேண்டும். எனவே இனி திராவிடம் வந்து "தந்தினம்’’ பாடி மேலும் தலைகளைப் பூட்டிட எண்ணும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, கழகம் கருப்புக்கொடிமூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் பலர் கூறியுள்ளனர் - நான் முறைப்படி அதனை நமது பொதுச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறேன். தடியடி! துப்பாக்கி! சிறை! கலகம்! குழப்பம்! கல்லெறி! எனும் பலப்பல கிளம்பக் கூடும் - எனினும் இவைகளைக் கண்டு கண்டு நாம் பழக்கப்பட்டவர்கள் தம்பி! உன் கருத்து என்ன? கண்ணே! மணியே! கற்கண்டே! என்று அன்புடன் பேசுகிறோம்; அக்ரமக்காரர்களே, எங்களுக்குக் கருப்புக் கொடியா காட்டுகிறீர்கள், என்று வடநாட்டுத் தலைவர்கள் நெருப்பைக் கக்கக் கூடும். காட்டு மிராண்டிகள்! பைத்தியக்காரர்கள்! சிறு பிள்ளைகள்! என்று மீண்டும் ஒரு முறை நேரு பண்டிதர் நாக்கைத் தீக் கோபமாகக்கக் கூடும். ஆனால், நமக்கு வடநாட்டுத் தலைவர்கள் நம்மைப்பற்றி எப்படிப் பேசுகிறார்கள், புகழ்ந்தா? இகழ்ந்தா? வெல்லமா? வெடிமருந்தா? என்பதல்ல, கவனிக்க வேண்டிய பிரச்னை. தம்பி! மலத்தை மிதித்து விட்டாலும், கழுவி விட்டால் நாற்றம் போய் விடுகிறது; பூசிய சந்தனம் வியர்வையில் கரைந்து காற்றோடு போய்விட்டாலும், மணம் மடிந்து படுகிறது! நம்மை வடநாட்டுத் தலைவர்கள் புகழ்கிறார்களா, இகழ்கிறார்களா - சந்தனம் பூசுகிறார்களா, நரகல் நடையில் ஏசுகிறார்களா, என்பதல்ல பிரச்னை. நமக்குள்ள பிரச்னை - நம்மைப் போன்ற சாமான்யர் களுக்கத்தான் தம்பி, அமைச்சர்களுக்கு அல்லவே அல்ல - வடநாட்டார் நமது தாயகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான்! அடிமைத்தலை பூட்டியா, அல்லது நேசநாடாக்கிக் கொண்டா என்பதுதான் பிரச்னை. வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும்; தாயகத்தின் தலை ஒடித்திட நாம் பணியாற்றுவோம் - நமது பங்கினை செலுத்துவோம். அன்புள்ள அண்ணாதுரை 19-6-1955 மகுடி ஊதும் மகானுபாவர்கள்! கலையைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துதல் - ஆச்சாரியாரின் இலக்கிய நுழைவும் குழப்பமும் தம்பி! "ஆமாம். இவர்கள் பூஜையும் பக்தியும் பத்தி எரிஞ்சாப் போலத்தான் இருக்கு சுட்ட செங்கல்லை வைத்துச் செய்கிற பூஜைக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?’’ என்றாள். அவர்கள் பூஜித்த தெய்வம் செங்கல்லால் ஆனதுதான். எனக்குக் கோபம் வந்தது. "நீ கோவிலிலேபோய்க் குடும்பிகிற கருங்கல் சாமியிடம் மாத்திரம் என்ன இருக்கிறதாம்?’’ என்றேன். "போதும்’ பேசாமல் இருங்கள். கோவில்களிலே மந்திரங்கள், யந்திரங்கள் எல்லாம் செய்து விக்ரஹங் களைப் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். அந்த விக்ரஹங் களும் இந்தச் சுட்ட செங்கல்லும் ஒன்றாய்விடுமாக்கும்?’’ என்றாள். "அது எனக்குத் தெரியாது. முன்பு கஜனி மகமதும் அவனுடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி, விக்ரகங்களை எல்லாம் மசூதிகளில் வாசற்படிகளாகப் போட்ட காலத்தில், இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்ததுபோல், அந்த வாசற்படிகளி லிருந்து வந்து. கஜனியின் ஆட்களை; ஹிரண்யனைக் கிழித்தது போல கிழித்துவிட வில்லை. பூஜைக்குக் கருங்கல்லாய் இருந்தாலென்ன? தெய்வம் கல்லுக் குள்ளேயா இருக்கிறது? நெஞ்சுக்குள்ளே வேண்டும்’’ என்றேன். ராணியும் நானும் இப்படிப் பேசிக்கொண்டோம் என்று எண்ணிவிடாதே - வாதாடும் அளவுக்கு நேரம் கூடக் கிடைக்கிறதா! இது சில நாட்களுக்குமுன் நான் படித்த கதையில், ஒரு புருஷனும் மனைவியும் நடாத்தும் உரையாடல், சிறுகதை பெரிய தத்துவ விளக்கத்துக்காகத் தீட்டப்படும் “ரகம்’’ இது என்று முன்னுரை சிபாரிசு செய்கிறது. கதை கூறுகிறேன். ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறான் ஒரு இலக்கிய ஆய்வாளன்! வெளியில் ரிக்சாக் காரர்கள் செங்கல் ஒன்றை நிறுத்திவைத்துப் பூச்சொரிந்து பூஜை செய்கிறாôகள். சரஸ்வதி பூஜை!! இந்த இலக்கிய ஆய்வாளரும், சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டுத்தான் உட்காருகிறார். ரிக்ஷாக்காரர் நடத்தும் பூஜையில் உண்மையான பக்தி இருப்பதை இவர் உணருகிறார். (இவர் உணர்ந்து என்ன பலன்! கடவுளல்லவா உணர வேண்டும்! உணர்ந்தால் இந்த ஜென்மங்களை ஏன் மனித மாடுகளாக்கி வேதனைப் படுகுழியில் தள்ளவேண்டும்? என்று கேட்பாய், தம்பி.) உணர்ந்து உவகையுடன் தன் இல்லாளைக் கூப்பிட்டு, இதோ பார்! இவர்கள் நடத்தும் பூஜையை. இதிலல்லவா உண்மை பக்தி இருக்கிறது’’ என்று கூறுகிறார். அந்த அணங்கு, செங்கல்லை வைத்துக் கும்பிடுவதைக் கேலி செய்கிறாள். உடனே, இவர், இலக்கிய ஆய்வாளர் அல்லவா, ஒரு தத்துவத்தை எடுத்து வீசுகிறார்;”கடவுள் கல்லிலா இருப்பார், நெஞ்சிலல்லவா இருக்கிறார்’’ என்கிறார். கூறிவிட்டு “மறுப்பாயோ இதனை’’ என்று கேட்கிறார்; மாது சிரோமணி”எனக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம். இட்டிலிக்கு அரைக்கணும்’’ என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள். சுயமரியாதைக்காரர் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருத்துக் குலுங்கும் கதை தீட்ட முடியும் என்று எண்ணிக் கொள்வாய். நீ மட்டும் என்ன தம்பி, நானும் அப்படித்தான் எண்ணினேன்; எழுதினவரும் நாமெல்லாம் அவ்விதம் எண்ணிக்கொள்ள இடம் வைத்துத்தான் எழுதினார். ஆனால், கதையின் நோக்கம் முற்றிலும் வேறு!! எழுதியவர், சுயமரியாதைக்காரராக இருக்கத் துணிய வில்லை; "மேதை’’ யாகிவிட விரும்புகிறார். எனவே கடவுள் எங்கு உறைபவர்? கருத்திலா, கல்லிலா, என்ற விவாதத்தைத் துவக்கி, முடிவு கூறாமல், அம்மையை மாவு அரைக்க அனுப்பி விட்டு, ஐயாவைக் கொண்டு, கார்ல் மார்க்ஸைத் தோற்கடிக்கச் செய்கிறார்!! ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தாரல்லவா, பக்தியுடன் பூஜை செய்யும் ரிக்ஷாக்காரர்களை. அவர்கள் அன்று இரவு குடித்துவிட்டு அடிதடியில் இறங்கி ஆபாசமாக நடந்து கொண்டார்களாம். இதைக் கண்டு இவர் மிக வருந்துகிறார். இவ்வளவுதானா இவர்களின் பூஜையும் பக்தியும் என்ற எண்ணி உள்ளம் நைந்து போகிறது. இந்தக் கட்டத்தோடு கதையை முடித்துப் பூஜைகள் செய்து விடுவதாலேயே, போக்கு மாறிவிடுவதில்லை. பூசல் ஒழிந்து போவதில்லை, புத்தி தெளிவாவதில்லை என்று அறிவுரை தருகிறாரா என்றா கேட்கிறாய். தம்பி? அது நமது "முறை’ - மேதைகள் அப்படிச் செய்வார்களா? இலக்கிய ஆய்வாளர் இல்லக்கிழத்தியுடன், கல்லிலா கடவுள் இருப்பார், இருந்திருந்தால் கஜனி மகமது கண்டதுண்ட மாக்கப்பட்டிருக்க மாட்டானா? என்று வாதாடினாரல்லவா! அதே முறையில், கல்லைக் கடவுளாகக் கருதிக் கும்பிடுவதும், பூஜை செய்வதும், கன்னத்தில் அடித்துக் கொள்வதும், காப்பாற்று சாமி என்று வேண்டிக் கொள்வதும், நல்லறிவையும் நன்னெறியையும் தரக்கூடுமானால், காலையிலே (இவர் பார்த்து மெச்சத்தக்க வகையில்) பூஜை செய்த ரிக்ஷாக்காரர்கள், மாலை குடித்துவிட்டு வந்து கும்மாளமடிக்கும் நிலை வந்திருக்கலாமா, என்றெல்லாம் ஆராயவில்லை. ஆராய்வாரா! "மேதை’ யாக இருக்க வேண்டுமானால், அத்தகைய ஆபத்தான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாதே! சுயமரியாதைக் காரணாக்கி விடுமே! இவருடன் வாதாட முடியாமலோ, விருப்பமில்லாமலோ, மனைவி, இட்லிக்கு மாவு அரைக்கச் சென்றுவிட்டார்கள்; இவர், இந்தக் காட்சி கிளறிவிடக் கூடிய கருத்துக்களைச் சந்திக்க அஞ்சி, தூங்கச் செல்கிறார். காலையில் மார்க்கட்டுக்குச் செல்கிறார். குடிபோதையில், எந்தச் சாமி, பந்தலை ரிக்ஷாக்காரர் பிய்த்திப் போட்டனரோ, அதை அவர்கள் செப்பனிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறார்! இவர், உங்கள் மனதிலே நேற்றைய பூஜை உயரிய எண்ணங்களைத் தரவில்லையா! மனிதன் தேவனாகக் கூடும் பூஜா மகிமையால் என்று கூறப்படுகிறது. நீங்களோ கேவலம் மிருகமாகி விட்டீர்களே நேற்றிரவு - என்று விரிவுரையாற்றி னாரா? இல்லை! சிறிதளவு பயம் இருந்திருக்கலாம், “சரிதான், போசாமி! சும்மா என்னமோ எங்களைத் திட்டறே! வா, சாமி, என்கூட! எத்தினி பெரிய பார்ப்பானுங்களெல்லாம் குடிச்சிப் போட்டு மில்ட்டேரி ஒட்டல்லே பிரியாணி குர்மாவைத்தின்னு ஏப்பம் விடறானுங்கோன்னு காட்டறேன்’’ என்று ரிக்ஷாக்காரன்,”வம்பு தும்பு’ பேசிவிடக் கூடும். எனவே, இவர் இதமாக அவர்களிடம் பேசி, குடிக்கக்கூடாது என்று உபதேசிக்க, அவர்களும் சாமி சாட்சியாகக் குடிப்பதில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். இதுதான் கதை! இதிலிருந்து இவர் பெற்று, படிப்போரு க்குத் தரும் பாடம் என்ன தெரியுமோ? கபந்த தத்துவத்தைப் போதித்த கார்ல் மார்க்சின் போதை சித்தாந்தம் கொஞ்சமும் உண்மையில்லை - என்பது பாடம் - பாடமாம்!! இவர் தீட்டிய கதைக்கும் மார்க்சின் தத்துவத்துக்கும், என்ன தொடர்பு? எந்தச் சம்பவம் மார்க்சின் தத்துவத்தைப் பொய்ப்பிக்கிறது? - இவை பற்றி விளக்கினாரா - இல்லை! ஏன் விளக்க வேண்டும்! மேதைகளுக்கு அதுவா வேலை!! மார்க்ஸ், மதம் மக்களுக்கு அபின் என்றார். அபின் போதை தருவது, மதமும் மக்கள் மனதிலே ஒரு மயக்கமளிக்கிறது, என்பது பொருள்! அந்தத் தத்துவம் பொய் என்று கதை எங்கே காட்டுகிறது? மதம் - பூஜை செய்ய வைத்தது - செய்தனர். குடி - சண்டையைக் கிளப்பிற்று - சண்டை போட்டனர். சண்டையை நிறுத்தி சன்மார்க்கத்தில் ஈடுபடுத்த மதமா பயன்பட்டது? இல்லை! குடிக்காதீர்கள் என்ற அறிவுரை பயன்பட்டது. குடித்துவிட்டுக் கூத்தாடிய ரிக்ஷாக்காரர்கள் தெளிவு பெறுகிறார்கள், இவர் "போதை’ கொள்கிறார் - மதபோதை!! இதைக் கக்க, ஒரு கதை! இந்தக் கதையின் இடையே கடவுள் எங்கே இருக்கிறார். கல்லிலா, நெஞ்சிலா என்று ஒரு விவாதம் - முடிவு பெறாமல்!! மேதைகளென்றும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களென்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள், பெரும்பாலும், இதே "பாணி’யில் தான் எழுதுகிறார்கள். முற்போக்குக் கருத்துகள் தூவப்படும்! பிறகு, அது மறைக்கப்படும் அளவுக்குப் பழைமை கொட்டப்படும்!! இந்தப் போக்கினர்தான், கதை, நாடகம், சினிமா இவைகளிலே பிரச்சாரம் கூடாது - பொதுவாகக் கலையைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினால், அதன் மேன்மையே குலைந்து போகிறது, தூய்மை நாசமாகிறது என்று "இலக்கிய உபதேசம்’’ செய்பவர்கள். கார்ல் மார்க்சின் தத்துவத்தைக் கண்டிக்கவேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது இதிலே? ஏன் அதைச் சொருகிக் காட்டுகிறார்! இது பிரசாரமல்லவா? பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற பேசுபவர்கள், தமது ஒவ்வொரு முயற்சியிலும் பிரசாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் - வெற்றி பெறுவதில்லை, பாபம். அதனால் தான், வெந்த உள்ளத்துடன், பிறர் வெற்றிகரமாகக்கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது கண்டு வெகுண்டு, கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள். “அது என்ன வழக்கம், சார்? எனக்குத் துளியும் பிடிப்ப தில்லை, மனைவியைக் கூட்டிக் கொண்டுதான்,”பீச்’ சுக்கு வர வேண்டுமா? பொம்பனாட்டிங்களோடு அவளை வரச் சொல்லிவிட்டு, வரப்படாதோ! நான் அப்படித்தான்’’ என்கிறார் எம்பெருமாளய்யங்கார்! காரணம் இருக்கலாம் - அவரைப் பொறுத்த வரையில்! அம்மையின் திருப்பாதங்கள். கஜமுகன் அருள் பாலிக்கப்பட்டவையாக இருக்கலாம், வெளியே அழைத்து வந்தால், ஆபாசமாக இருக்குமென்று ஐயங்கார் சுவாமிகள் கருதியிருக்கலாம். “இந்த”ஜட’‘த்தோடு யார் போவா, பீச்சுக்கு? இது மூஞ்சியும் முகரக் கட்டையும் பார்த்தாலே, "பீச்’சுக்கு வர்ரவா, கேலியான்னா பேசுவா? இதனோட "தொணதொணப்பை’ ஆத்திலே சகிக்கிறது போதாதுன்னு, பீச்சுக்குப் போய் வேறே பிராணனை விடணுமா? - வேண்டாம்டிம்மா நான் போகல்லே, அவரோட’’ என்று சகதர்மணி கூறிவிட்டிருக்கலாம். அநாகரிகமான வேறு பல காரணங்களும் இருக்கலாம். அவர், தமது துணைவியை உடன் அழைத்து வராததாலேயே, அதுதான் முறை, தமது இல்லக்கிழத்தியுடன் வருபவர்கள், நாகரீக மற்றவர்கள் என்று பேசுவது அறிவுடைமையாகுமா! அதுபோலத்தான், இவர்களால் கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கிட்டவில்லை. இதைக் கொண்டு, கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பார்த்து, பொம்மனாட்டிகளை ஏன் அழைச்சிண்டு வரணும் என்று கேட்கும் போக்கில், கலையில் பிரசாரம் இருக்கலாமா, என்று இந்த "மேதைகள்’ பேசுகிறார்கள். தம்பி! நான் இப்படிச் சொல்வதால், சுவையும் அழகும் கொண்ட வகையில் எழுதக்கூடியவர்கள் நம்மவர்கள் மட்டும்தான், மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அவ்விதம் எழுதவே தெரியாது, என்று அகம்பாவம் கொள்கிறேன் என்று எண்ணிக் கொள்ளப்போகிறார்கள் - சொல்லிவிடு அவர்களுக்கு நான் அப்பப்பட்டவனல்ல என்பதை! அவர்கள் தோல்வி அடைவதற்குக் காரணம் அழகாக, அருமையாக எழுதத் தெரியாததால், அந்தத் திறமை இல்லாததால் அல்ல! அவர்களின் தோல்விக்குக் காரணம், அவர்கள் மனதிலே, தெளிவான திட்டமான கொள்கையும், அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை. பழைமை செத்து விடுகிறதே என்ற துக்கம் குடைகிறது. அதேபோது இந்த நாட்களில் பழைமையை ஆதரிப்பதா என்ற வெட்கமும் வேலாகிக் குத்துகிறது. எந்த முகாமில் இருப்பது, என்பது பற்றி முடிவெடுக்க இயலாமல், அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்! அந்தக் குழப்பம், அவர்களின் திறமையை மண்ணாக்கி விடுகிறது. இந்தக் கதையையே பாரேன்? கல்லுக்கு மந்திர சக்தி ஊட்டுகிறார்கள் தெய்வம் ஆகிறது - என்ற பழைமையைப் "பாரியாள்’ கூறிடக் கேட்டோம். இது நமக்குப் புரிகிறது! ஓஹோ! இது பத்தாம் பசலி! எவ்வளவு சொன்னாலும் ஏறாது!! என்பது தெரிகிறது. ஆனால் இலக்கிய ஆய்வாளனாகவும், அந்த மாது சிரோமணியின் மணவாளனாகவும் இருப்பவரின் போக்கு எப்படி இருக்கிறது? பழைமையின் பக்கம் நிற்கிறாரா! புதுமைக்காகப் போர்முரசு கொட்டுகிறாரா? என்று பாருங்கள்; குழம்புகிறார், வேறென்ன! புதுமைக் கருத்திலே திளைத்தவர் போல மனைவியிடம், "கஜனி மகமதும் அவருடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி விக்ரஹங்களை எல்லாம் மசூதியிலே வாசற் படிகளாகப் போட்ட காலத்தில் இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்தது போல அந்த வாசற் படிகளிலிருந்து வந்து கஜனியின் ஆட்களை ஹிரண்யனைக் கிழித்தது போலக் கிழித்து விடவில்லை,’’ என்று கூறி, ஏன் என்று கேட்கிறார்? எவ்வளவு தீவிரத் தன்மை சுடர்விடுகிறது! எத்துணைப் பகுத்தறிவுக் கதிர் தெரிகிறது! ஆனால் எற்றுக்கு!! நேக்கு இந்த வம்பு தும்பு தெரியாது என்று கூறிவிட்டு அந்த அம்மை இட்லிக்கு மாவு அரைக்கச் சென்று விடுகிறார். நான் அந்த அம்மையை மதிக்கிறேன். நமக்குத் தெரியாது தேவையற்றது இந்தப் பிரச்னை என்ற தன்னடக்கம் இருக்கிறது, இவர்களிடம். சரியோ, தவறோ, பழமைதான் பிடித்தமாக இருக்கிறது! அதற்கு ஆதாரம் தேட வேண்டாம் என்ற அவசியமும் தோன்றவில்லை! அவர்களின் நிலை, புரிகிறது, நன்றாக. ஆனால் இவர்! அசகாயசூரர் போல ஒரு பிரச்னையைக் கிளப்புகிறார். தூணிலிருந்து வெளிப்பட்ட துளசிமாலையோன், ஏன் கஜனி மகமதைக் கிழித்தெறியக் கல்லிலிருந்து வெளிவரவில்லை என்று கிளப்பி விட்டு, பதில் அளிக்கிறாரா, எந்தப் பக்கமாகவாவது? அதுதான் இல்லை! அம்மைசுட்டுத் தரப்போகும் இட்லிக்குக் காத்துக் கொண்டிருக்கிறவராகத் தெரிகிறதே தவிர, கடவுள் எங்கு இருப்பார், கல்லிலா, நெஞ்சத்திலா என்ற சிக்கலான பிரச்னையைக் கிளப்பி விட்டோமே, ஒரு கதையில்; இதற்கு ஏதாவதோர் சார்பில் பதில் தரவேண்டாமா என்ற பொறுப்புக் கொண்டவராகத் தெரியவில்லை. “தெற்கே போகிற வண்டிங்களா! நீங்க எங்கே மதுரைக்குப் போகிறிங்களா?’’ என்று பன்னிப் பன்னிக் கேட்டு விட்டு,”அந்த ரயில் வந்ததும் வராததும் எனக்குத் தெரியாதுங்க’’ என்று பேசும் திம்மப்பன்போல, “யாருக்கு? உன் மக கலியாணமா! ஆவணி பதினைந்தா! ஆற்காட்டிலா! ஆறு பவுனிலா செயின் போடனும்! செலவு ஆயிரத்துக்கு மேலே ஆகுமோ! நல்ல மனுஷன், உனக்குச் சகாயம் செய்ய யாருக்கும் இஷ்டம்தான், பகவான் எல்லாக் காரியத்தையும் சுபமாக முடித்து வைப்பார், கவலைப்படாதே’’ என்று உபசாரத்தை வாரி வழங்கிவிட்டு, கடைசியில்,”இப்ப என்னிடம் பணம் இல்லையே, வேறே இடம் பாரப்பா!’’ என்று கடன் தந்து உதவாமல் விரட்டிவிடும் திமிரப்பன் போல், கடவுள் கல்லில் இருந்தால் கஜினியைக் கிழித்தெறிந்திருக்க வேண்டாமா என்று சூரத்தனமான கேள்வியைக் கிளப்பிவிட்டு, சுட்டுக் கொண்டு வா, இட்லியை என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுவதா!! இந்தப் போக்கினால்தான், இவர்களைவிட இலக்கியத் திறமையும் எழுதும் திறமையும் குறைந்த அளவு பெற்றுள்ள நம்மவர்கள் பெறுகிற வகையான அளவுள்ள வெற்றியை இவர்களால் பெற முடிவதில்லை. ஆச்சாரியாரல்லவா இந்தக் கோஷ்டிக்’க்குத் தலைமை வகிக்கிறார்! எவ்வளவு பரிதாபம் பாருங்கள்? இந்தத் தள்ளாத வயதில், இதுநாள் வரை தாம் பெற்ற அனுபவத்தின் காரணமாக பெறக் கிடைக்கும் அரசியல் நுணுக்கங்களை எழுத வேண்டியவர், அனுமனின் வாலில் மூட்டப்பட்ட தீ பற்றி எழுதிக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது! பழமைக்கு ஏதோ புது விளக்கம் கொடுத்து, நம்மவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி விடுவதாக மனப்பால் குடிக்கிறார்கள்; புதுமையோ எந்தத் திக்கிலும் இவர்களைத் தாக்கித் தகர்த்த வண்ணம் இருக்கிறது! இவர்களின் பழைமைப் பிரசாரத்தின் காரணமாக, பக்தர்’களாக இருந்து வருபவர்கள், இவர்கள் நமக்குச் சமாதானம் கூறுவதற்காக விளக்கங்கள், தத்துவார்த்தங்கள் தருகிறார்களே. அவைகளையாவது ஏற்றக்கொண்டு, அவைகளின்படியாவது தங்கள் போக்கை மாற்றிக் கொள்கிறார்களா என்று பார்த்தால், அதுவுமில்லை வயலில் விளைச்சல் அதிகம் வேண்டும் - அதற்கு வனதேவதைக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்ற பழைமை எண்ணம் பிடித்த ஆதிவாசிகள், கடந்த கிழமைதான், எட்டு வயதுப் பாலகளைக் கொன்று படைத்திருக்கிறார்கள்! எத்தன் இவன் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினான் என்கின்றனர் போலீசார்; பிடிபட்ட பாஸ்கரராவ் என்பவனோ, நான் பக்தன் எத்தனல்ல! பணத்தை எடுத்தேன்; செலவிட்டேன்; எதற்கு? பகவானைப் பிரத்யட்சமாகக் காட்டுவதாகப் பக்கிரிசொன்னான், அவன் சொன்னபடி பூஜை பல செய்யவே செலவிட்டேன்! களவு என்கிறீர்கள், கடவுளைத் தேடிக காணச் சென்ற என் புண்ணிய காரியத்தை! என்று வாதாடுகிறான். புதுமையின் வேகத்தையும் தடுக்க முடிவதில்லை - பழைமையாளர்களையும், நாசுக்காகவாவது திருத்தமடயச்செய்ய முடிவதில்லை. காரணம், இவர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல; உள்ள சரக்கு மகாமட்டம். ஊசல் சரக்கை உண்மை அறிந்த மக்கள் குப்பைக்குப் போடுகிறார்கள்; இவர்கள் அதைக் குனிந்தெடுத்து, கூவிக் கூவி விற்கிறார்கள்! வியாபாரம் மிக மந்தமாக இருக்கிறது! தம்பி, ஆச்சாரியார் போன்ற அதிமேதாவிகளுக்கே ஏற்படும் குழப்பத்தைப் பாரேன், நிலைமை விளங்கும். சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும். திருநீறு, திருநாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை, "சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக் குறியிலிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லாருக்கும் தெரியும்படியாகப் போட்டுக்கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக்கிறார்கள்.’’ இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். சைவர்களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மை யுடன் ஒப்புக்கொள்வோம். திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரேதவிர, அவருக்குக் குழப்பம் வராமலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர்களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியிலே நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது, "எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை’’ என்று கூறுகிறார்! எப்படி இருக்கிறது வாதம்? எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு?’ திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சார்யாள் சொல்லியிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்! வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும், அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.! நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சார்யாளின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும். எதிலும் உறுதிப்பாடும் உத்வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!! இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப் படுவதிலே ஆச்சரியமென்ன. தம்பி! இவைபற்றி நான் எழுதுவதற்குக் காரணம், இவர்களைக் கேலி பேசிக் களிப்பூட்ட வேண்டும் என்பதல்ல. நாம் பெற்றுள்ள கருத்துகள், மேற்கொண்டுள்ள பணி, எவ்வளவு மாண்புள்ளது என்பதை விளக்கத்தான்! திறமை முழுவதையும், ஆற்றல் அவ்வளவையும், தந்திரம் அத்தனையையும் உபயோகித்தாலும், வெற்றி காண முடியாத நிலையில் ஆச்சாரியார் போன்றோர் தள்ளப்பட்டுள்ளனர் - காரணம், அவர்கள் செத்த பாம்பின் முன்பு மகுடி ஊதிப்பார்க்கிறார்கள்!! இவர்களைவிட "எனக்கொன்றும் தெரியாது. இட்லி மாவு அரைக்க வேண்டும்’’ என்று கூறிவிட்டுச் சென்ற அம்மையார் எவ்வளவோ மேல், என்பேன். செத்த பாம்பைப் படமெடுத்தாடச் சொல்லி மகுடி ஊதும் இந்த மகானுபாவர்களைவிட இந்த மாது சிரோமணி எவ்வளவோ மேல்தான், சந்தேகமின்றி! அன்புள்ள அண்ணாதுரை 26-6-1955 பேசட்டும், தம்பி, பேசட்டும் ராஜா சிதம்பரத்தின் காங்கிரஸ் நுழைவு - அமைச்சர் சுப்பிரமணியம் - தொழில் துறையில் சென்னையின் பின் தங்கிய நிலை. தம்பி! அமைச்சர் சுப்பிரமணியம் ரொம்ப ரொம்ப ரோஷக்காரர்! நிறுத்து அண்ணா! யார் ஒப்புக்கொள்வார் இதை? துளியாவது அவருக்கு ரோஷம் இருப்பதாகக் காணோமே? என்று கூற எண்ணுகிறாய். தம்பி, சென்ற கிழமை அவர் லால்குடியிலும் திருச்சியிலும் பேசியதைப் பத்திரிகையில் பார்த்திருப்பாயே, அதற்குப் பிறகுமா, அவர் ரோஷக்காரர் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் என்கிறேன் நான். போ! போ! அண்ணா! ஏதோ இரண்டோர் கூட்டத்திலே தலைகால் தெரியாமல் அந்த ஆசாமி துள்ளிக் குதித்து, கண்மண் தெரியாமல் பேசிவிட்டதாலேயே, அவரைரோஷக் காரர் என்று கூறிவிட முடியுமா? எத்தனையோ வில்வங்கள், துளசிகள் விதவையானதுகள், இதைவிடக் கடுமையாகத் தாக்கிப் பேசி, தமது எரிச்சலைக் குறைத்துக்கொள்ள முயன்றன. இதை ஒரு காரணமாகக் கொண்டு, அமைச்சர் சுப்பிரமணியத்தை ரோஷக்காரர் என்று கூறினால், நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரோஷக்காரர்தான் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பொன்று அவருக்குக் கிடைத்தது - ஆனால், அவரோ தமது ரோஷத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, அகப்பட்டதை விடுவேனா என்று கூறினாரே தவிர, ரோஷக்காரராக நடந்து கொள்ளவில்லை, என்று கூறுவாய். தம்பி! கிடக்கட்டும்; நமக்குள் ஏன் தகராறு? அவர் கோபக்காரர், அதை ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறேன் - மறுக்க முடியாதல்லவா உன்னால்!! அதிலும் சென்ற கிழமை "கோபாதிபதி’ அவருக்கு உச்சஸ்தானத்தில் இருந்திருக்கிறான்! எப்படி இல்லாமலிருக்க முடியும்? குடந்தையில் வரவேற்பு, திருச்சியில் விழா, சென்னையில் கொண்டாட்டம், கோவையில் குதூகலம், மதுரையில் மகத்தான வரவேற்பு என்றெல்லாம் பத்திரிகையில் செய்திகள் வருகின்றன - எல்லாம் தீனா மூனா கானக்களுக்கு! இதோ அவர் இருக்கிறார், அமைச்சர் வழக்கறிஞர், ஆச்சாரியாரின் அத்யந்த நண்பர்; அவரை அல்லவா நாடு இப்படிக் கொண்டாடவேண்டும். நாவலர் நெடுஞ்செழியனுக்கா இப்படிப்பட்ட நல்வரவேற்புகள் என்று எண்ணும்போதே உள்ளம் எரிமலையாகிறது - கக்கிவிட்டார்!! சப்தரிஷீஸ்வரர் கோயில் அதிகாரிகள் பூர்ண கும்பம் எடுத்து வரவேற்க, எடயாத்து மங்களந்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹாலாஸ்யநாத குருக்கள், லால்ழுடி தாலூகா அர்ச்சகர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு உபசாரப் பத்திரம் வாசித்தளிக்க, வருக, அமருக! மாலை அணிந்து கொள்க! என்று வட்டாரப் பெரியவர், ராஜா சிதம்பரம் அன்பு ஒழுக ஒழுக உபசரிக்கப் பவனிவந்த, சென்னை ராஜ்ய நிதி அமைச்சர் கனம் சுப்ரமணியம் அவர்கள், பிரம்மானந்தமடைந்து, "ஓஹோ ஹோ! நமக்கும் இவ்வளவு அமோகமான ஆதரவு இருக்கிறதா, இனி என்ன தயக்கம், இதுகளை இதே நேரத்தில் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்’ என்று தீர்மானித்து, நமது கழகங்களின்மீது பாய்ந்திருக்கிறார் சென்ற கிழமை!! ஆஹா ஹாரம் செய்து தமது மலைபோன்ற உடல் குலுங்கக் குலுங்க ராஜா சிதம்பரம் நகைத்திருப்பார்; அவ்வளவு காரசாரமாகப் பேசினாராம் அமைச்சர், ராஜா சிதம்பரம் அவர்களின் வீரதீரத்தைப் பாராட்டினாராம்!! ராஜா சிதம்பரம் முன்பு காங்கிரசை எதிர்த்துவந்தார்; இப்போது காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; இது கோழைத்தன மல்ல; இதுதான் வீரம்! மந்திரியின் மணிவாசகம் இது. இதன் பொருள் பற்றிய விளக்கத்தைப் பிறகு கவனிப்போம், தம்பி! முதலில், இவர் இது போலப் பேசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி எண்ணிப் பார்த்தால், ருசிகரமான பல விஷயங்கள் தெரியும். யாராரோ ஏதேதோ பேசி இருக்கிறார்கள், ராஜா சிதம்பரத்தின் போக்குப்பற்றி! அமைச்சரிடமே சிலர் கூறியிருக்கக் கூடும் - பலர் அவர் காதில் படும்படி பேசி இருக்கவேண்டும். அல்லது, தன் போக்கைக் கேவலமானது, நாணய மற்றது நயவஞ்சகமானது என்ற பலரும் கூறி ஏசுகிறார்கள் என்று ராஜா சிதம்பரம் அவர்களே, அமைச்சரிடம் கூறி அழுதிருக்க வேண்டும். "பாரப்பா பார்! இந்தப் பெரிய மனிதர்களுடைய யோக்கியதை எப்படியிருக்கிறது பார்? ராஜா சிதம்பரம், காங்கிரஸ் மந்திரியை வரவேற்கிற காட்சியைப் பார்! காங்கிரசை முழு மூச்சாக எதிர்த்த கனவானப்பா இவர்! இப்போது பார், காவடி தூக்கி ஆடுகிறார்.’’ "காங்கிரஸ் கவிழ்ந்துவிடப் போகிறது. எதிர்க் கட்சிகளுக்குத்தான் சான்சு. அதிலே இருந்தால்தான் நமக்கு ஒரு மந்திரி வேலை கிடைக்கும் என்கிற ஆசை மனுஷனைப் படாதபாடு படுத்திற்று - பிறகோ, காங்கிரஸ், பீடத்திலே உட்கார்ந்து கொண்டது. ஆசாமிக்குச் சப்பிட்டுவிட்டது - இனிக்காங்கிரசிலே சேர்ந்தாத்தான் ஏதாச்சும் துண்டு துணுக்காவது கிடைக்க முடியும் என்கிற எண்ணம் ஏற்பட்டது- இப்போது, எங்கள் மந்திரி! எங்கள் மந்திரி! என்ற மங்களம் பாடுகிறார்! பதவிப்பித்தம் இருக்கே, அடே அப்பா! ஆட்டிப்படைக்குது!’’ "பெரிய வீராதிவீரர்போலே பேசி வந்தார், காங்கிரஸ் பதவிக்கு வராது என்கிற தைரியத்திலே! இப்போது ஒரே பயம் பிய்த்துத் தின்னுது. எதிர்க்கட்சியிலே இருந்தா ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லே என்கிற பயம் வந்து விட்டது. எனவே சரணாகதிப் படலம் ஆரம்பமாகிவிட்டது’’ இப்படிப் பலர் பலவிதமாகப் பேசாமலிருந்திருக்க முடியுமா! இவ்வளவு சாவதானமாகவும் அமைதியாகவும் பேச முடியாதவர்கள், சுருக்கமாகப்பேச, சுடு சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும். கோழைத்தனம் - பதவிப்பித்தம் - சுயநலவெறி என்பனபோன்ற பட்டங்களைச் சூட்டியிருக்கக்கூடும். இது பற்றி ஏதோ ஓர் அளவுக்குத் தெரிந்ததால்தான், அமைச்சர் சுப்பிரமணியம், ராஜா சிதம்பரத்தின் போக்கை ஆராய்ந்திட வேண்டிய அவசியம் வந்தது. அந்த அறிஞர் பெருமானின் அபார ஆராய்ச்சியின் முடிவு யாதெனின், ராஜா சிதம்பரம் காங்கிரசிலே வந்து சேர்ந்தது கோழைத்தனமாகாது, அதுதான் வீரம் என்பதாகும். காட்டிக்கொடுத்தவர் - கட்சி மாறியவர் - என்றெல்லாம் கண்டிக்கிறார்கள் ஊரார், இதோ ஒரு "கனம்’ வருகிறார். வாழ்க வீராதி வீரனே! என்று வாழ்த்துகிறார், விருதளிக்கிறார். பொதுமக்கள், ராஜா சிதம்பரத்தின் போக்கை, எப்படி வரவேற்றனர், எத்தகைய தீர்ப்பளித்தனர், என்பது மாவட்ட ஆட்சிமன்றத் தேர்தலில் தெரிந்தது. மிகமிகச் சாமான்யர் தர்மு, நமது கழக மாவட்டச் செயலாளர், அவர் தூக்கி அடித்தார் இந்த கிங்காங்கை இப்போது குப்புற விழுந்தவருக்குத் தங்கத் தோடா தருகிறார், அமைச்சர்! ராஜா சிதம்பரத்தைப் பாராட்டி, வீரராக்கி, உபசரித்ததுடன் இருந்திருந்தால் நமக்கு வேலையே எழாது. அமைச்சர் அத்துடன் விடாமல், பெரியாரென்றும் அறிஞர் என்றும் சொல்லிக் கொண்டால் போதுமா? அவர்களுக்கு இத்தகையவீரம் வர வேண்டாமா!! என்று கேட்டிருக்கிறார்! அருமை, அருமை!! அமைச்சர் பெருமானே! உமது அறிவின் முதிர்ச்சி இருக்கிறதே, அருமையினும் அருமை!! ராஜா சிதம்பரத்தைப் பிடித்துக்கொண்ட வீரம் எமக்கும் பிடிக்கவேண்டும் என்கிறீர்; எவ்வளவு அழகாக, வட்ட வடிவமாக, வெண்ணிலவு போல உடலெங்கும் காட்சி அளிக்கிறது, என்று குஷ்ட நோயாளியைப் பாராட்டிவிட்டு, அதுபோல உமக்கும் வரலாகாதா என்று வேறு கூறுவதுபோல இருக்கிறது, உமது பேச்சு - என்றெல்லாம் கூறத் தோன்றவில்லை., தம்பி! எனக்கு நான் முறுக்குத் தளராத வாலிபனாக இருந்தபோது கேள்விப்பட நேரிட்ட ஒரு கதை - நிஜச்சம்பவம் நினைவிற்கு வந்தது. மணி பத்தாகும் - பாவை பாகு கனிமொழி தருவாள், பாலில் சீனியும் சேர்த்துத் தருவாள் - பருகுவான், என் நண்பன். எனினும் அவன் நினைவு பத்மாவின் பஞ்சணை மீதிருக்கும் - பத்மா அவன் மாதவி, அவன் கண்ணகியின் பெயர் குணவதி, அவனுக்குப் பெயரோ அன்பரசன்! கொட்டாவி விடுவான். கோகிலம், அவன் குறிப்பறிந்து வெற்றிலை மடித்தளிப்பாள்! குதப்பிவிட்டு, கடைவீதி சென்று நொடியில் வருகிறேன் - ஒரு கப் சாயா சாப்பிட்டுவிட்டு என்பான்! குணவதி, இதற்கு ஏன் வெளியே போக வேண்டும், இதோ நொடியில் நான் தயார் செய்கிறேன், என்பாள். செச்சே! காலை ஆறு முதல் இரவு பத்து வரை தான் வேலை செய்து அலுத்துக் கிடக்கிறாயே, இனியும் உனக்கேன் சிரமம், இதோ ஒரு அரைமணி நேரம் வந்து விடுகிறேன், என்று கூறுவான். பத்மா அழைக்கிறாள் அவன் என்ன செய்வான்! சீக்கிரம் என்பாள், குணவதி கொஞ்சு மொழியில்! "இதோ’ என்பான், அவனும் கொஞ்சவதுபோல; எதற்கும் கதவைத் தாளிட்டுவை, என்று கூறிவிட்டு, கோடிவீதிக்கு, ஓட்டம் பெருநடையாகச் செல்லுவான். சாயாக் கடை திறந்திருக்கும், அங்கு அவன் செல்லான், நில்லான், நேரே அங்கு!! கதவு தாளிட்டிருக்கும், இடுக்கின் வழியாகப் பார்த்தால் விளக்கொளி மினுக்கிடும். மெள்ளத் தட்டுவான், "பத்மா! பத்மா!’’ பத்மா படுக்கையில் - தூக்கமல்ல, கோபம்! கதவு தட்டுவான் அவள் கண் மூடுவாள்! இதழில் புன்னகை இருந்திடும்!! பத்மா! பத்மா! - மெல்லிய குரலில்தான் கூப்பிட முடியும். அண்டை அயலார் காதில் விழக்கூடாது. பத்மா, அவன் படும்பாடு அறிவாள். எனினும், தான் படும் பாடு அறியாமல் நடந்துகொள்வதற்குத் தண்டனை தருவதாக எண்ணிக்கொண்டு, நீண்ட நேரம் கதவு திறக்கவே கூடாது என்று துணிவாள். பத்மா! பத்மா! ஏ! பத்மா! அவள் மனம் இளகிவிடும். இன்ப இரவு இப்படி சங்கடத் தோடு தொடங்கலாமா! அப்போதுதான் விழித்துக் கொண்டவள் போல. யாரது? என்பாள், “நான் தான். . . . பத்மா நான் தான்’ என்கிறான். சாயா சாப்பிடக் கிளம்பியவன்.”நான் தான் என்றால்’’ என்று கேட்டபடி, பூங்கொடி அசைந்தாடி வருகிறது, கதவு திறக்கிறது, கைவளை ஒலிக்கிறது, கன்னம் படாதபாடு படுகிறது. "போதும் உங்களோட கொஞ்சுதலும், சரசமும்!’’ "என்ன பத்மா! ஏன் ஒரு மாதிரியா இருக்கறே?’’ "மணி என்ன இப்ப?’’ "பத்து இருக்கும்’’ "குணா கடியாரத்திலே பத்து - பத்மாவீட்டுக் கெடியாரம் இப்ப பன்னிரண்டு அடித்தது’’ "இருக்காதே!’’ "சரி, ஒரு அரையோ காலோ குறைவாக இருக்கட்டும் - ஆனா, ஏனுங்க இப்படி என் மனசைச் சங்கடப்படுத்தறிங்க. எவ்வளவு நேரம் விழிச்சிக்கிட்டு இருக்கிறது - பத்து மணிக்காச்சும் வரப்படாதா.’’ "எப்படி, பத்மா, அவ்வளவு பொழுதோடு வரமுடியும். யாராவது பார்த்து விட்டால். . . .’’ "பார்த்துவிட்டால்தான் என்னவாம்! அட அடா! இந்தப் பாழாய்ப்போன பயம் ஏன் உங்களுக்கு இவ்வளவு இருக்கிறதோ?. . .’’ "கண்டவர் கண்டபடி பேசுவார்களே என்கிற பயம் தான். . .’’ "பயம்! பயம்! பயம்! செச்சே, இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது - ஆண்பிள்ளைதானே நீங்கள் . . . பக்கத்து வீட்டு மக்கு இருக்கே, சொக்கு, உங்க சினேகிதர் சிதம்பரத்தோட ஜோடி . . . அவர் எத்தனை மணிக்கு வந்தார் தெரியுமா, எட்டுக்கூட அடிக்கல்லே அவர் வருகிறபோது. . . உங்களைப் போல பயந்து பாதிராத்திரிக்குத் திருடன் போலவா அவர் வருகிறார். அவருக்கு இருக்கிற தைரியம் ஏன் உங்களுக்கு வரக்கூடாது. பயந்து பயந்து சாகிறீர்களே. . . செச்சே இவ்வளவு கோழைத்தனம் கூடாது. . .’’ இப்போது கனம் சுப்பிரமணியனார் பத்மா பாணியில் பேசுகிறார்; கதை நினைவிற்கு வந்ததும் எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. ராஜா சிதம்பரம் எவ்வளவு தைரியமாகக் கட்சி மாறினார்.மக்கள் எக்கேடோ கெடட்டும், எப்படி வேண்டு மானாலும் பேசட்டும். காரியம் பெரிதே தவிர, கண்ணியம், நாணயம் இவைகளெல்லாம் அல்ல, என்று துணிந்து கதராடைக் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கிறார். இதைப் பார்க்கிறீர்களே, ஏன் உங்களுக்கு அந்தத் தைரியம், வீரம் வரவில்லை என்கிறார். வழிதவறி நடந்திடும் வாலிபனுக்கு விருந்தளித்து வசியப்படுத்த முனையும் வழுக்கி விழுந்த வனிதையின் பேச்சுப்போல, நாட்டில் மாபெரு:ம போராட்டம் நடாத்தி விடுதலை பெற்றுத் தந்ததென விருது படைத்த காங்கிரசில் கலந்து, கனமானவர் பேசுவது, ஆசை வெட்கமறியாதாமே!! அமைச்சர் பெருமானின் அகராதிக்கு, நாம் மதிப்பளிக்க மறுக்கிறோம்; அவருடைய அழைப்பு, ராஜா சிதம்பரம் போன்றோரோடு நிற்கட்டும். தமக்கென்று ஒரு கொள்கையும் அதிலே வெற்றிகாணப் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியும் திறமையும் பெற்றோர்களிடம் இத்தகைய அழைப்பும் அங்கலாய்ப்பும், நிந்தனையும் நையாண்டியும் வீசிப்பயனில்லை. இதை ஓரளவுக்கு உணர்ந்து, அமைச்சர், கடைக் கண் காட்டுவதை நிறுத்திக் கொண்டு, கனலை உமிழ்ந்து பார்த்தி ருக்கிறார்; கனிமொழி கேட்டுச் சொக்கிடாத நிலை மட்டுமல்ல, கனலைக் கண்டு கலங்கிடாத உள்ளமும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதை, அவர் அறியார் போலும்! அவருடைய குருநாதரிடம் அக்கினி யாஸ்திரங்களைக் கண்டு கெக்கலி செய்தவர்களிடம், இவர் தீக்குச்சி யாஸ்திரங்களை வீசிப் பார்ப்பது விந்தைதான்! அமைச்சர், நாம் ஐந்தாண்டுத் திட்டத்திலே காட்டப்பட்ட ஓர வஞ்சனை பற்றிக் கூறிவருவது கண்டு, பீதி அடைந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தை, ஐந்தாண்டுத் திட்ட கண்டன நாள் கூட்டங்கள், ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மந்திரிகளாம், மந்திரிகள்! சுளை சுளையாகப் பணம் மட்டும் வாங்குகிறார்கள் சம்பளமாக! துளியாவது சூடுசொரணை காணோம். சூறாவளிபோலப் பிரசாரம் நடைபெறுகிறது, வடநாடு, தென்னாடு என்று! தடுத்திடும் ஆற்றல் காணோம் - நம்மைக் காணும்போது மட்டும், தாசானுதாசன் என்று தோத்தரிக்கிறார்கள்! ஏன் அந்தப் பிரிவினைக் கிளர்ச்சிக் காரருக்கு எதிர்ப்பிரசாரம் செய்யக்கூடாது? இதைவிட வேறு என்ன வேலை இவர்களுக்கு? இதையும் செய்ய முடியவில்லை யானால் இவர்களுக்கென்ன பட்டம், பதவி! என்று மேலிடம் இடிக்கும்போலத் தெரிகிறது - அந்த இடி தாங்காமல், இப்போது கனம்கள் "வடநாடு, தென்னாடு’ பேதம் பேதமை, அதைப் போக்குவதே எமது கடமை என்று பேச ஆரம்பித்துள்ளனர். "புது டில்லியில் இருந்துகொண்டு மத்திய சர்க்கார் ஆட்சி செய்து வருகிறது. ஆகையால் தென்னாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. என்று தென்னாட்டில் பலத்த சந்தேகத்தைப் பலர் கிளப்பி வருகின்றனர் இதில் என்ன விசேஷமென்றால், சமீபகாலத்தில் நன்கு படித்தவர்கள் கூட இந்தப் பிரசாரத்தினால் ஓரளவு பாதிக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது.’’ அழகேசனார் திருவாய் மலர்ந்தருளுகிறார் இதுபோல குடந்தையில் இந்தத் திங்களில் - தமது திக்விஜயத்தின்போது - மன்னிக்க வேண்டுகிறேன் - தீர்த்த யாத்திரையின்போது!! பலத்த சந்தேகம் பரவி இருக்கிறது. நன்கு படித்தவர்கள்கூட இந்தப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிகிறதா நிலைமை!! இந்தப் பிரசாரம் பரவாது “பிசுபிசுத்து’ விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இப்போது பார்த்தாலோ, இது பரவிக்கிடக்கிறது. நன்றாகப் படித்தவர்கள்கூட இதை ஒப்புக் கொண்டு பேசுகிறார்கள் - என்பது அழகேசனாரின் கருத்துரை. அம்மி நகருகிறது என்று பொருள்!! பாடுபட்டு வருகிறோம் பலன் தெரியத் தொடங்கிவிட்டது! அமைச்சர்கள்”ஜல்லடம்’ கட்டுகிறார்கள் - அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது, நமது பிரச்சாரம்!! என்னதான் சமாதானம் சொல்லுங்கள், வடநாடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அரசியல் சட்டதிட்டமே வடநாட்டு ஆதிக்கத்துக்கு வழி வகுப்பதாகத் தானே அமைந்திருக்கிறது ஐந்தாண்டு திட்டத்தின் புள்ளிவிவரம் கூறும் கதையைப் பார்த்தால், நன்றாகத் தெரிகிறதே தென்னாடு புறக்கணிக்கப்படுவது. இவ்விதமெல்லாம் படித்தவர்கள், அழகேசனார் காதுபடச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு மறுப்புரை, தெளிவுரை கூற முடியாமல் திண்டாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது - எனவேதான் திடுக்கிட்டுப்போன நிலையில் பேசுகிறார் திருவாளர் அழகேசனார், நன்றாப் படித்தவர்களும். . . .! இப்படி எண்ணுகிறார்களே, என்று கூறி, ஆயாசப்படுகிறார். அடுத்த கட்டம் அச்சம்!! வேறென்னவாக இருக்க முடியும்!! அமைச்சர் சுப்பிரமணியம் திகைப்புக்கு இடமளிக்கவில்லை; தீ மிதிக்கிறார்! தென்னாடு ஐந்தாண்டுத் திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டது, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டது என்ற புகாரை, நான் அதிகார பூர்வமாக மறுக்கிறேன், என்கிறார்!! அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது, அதனால் மறுக்கிறார் என்பதுதான் இதற்குப் பொருள்! அமைச்சர் அதிகாரம் இவருக்கு அளிக்கப்பட்டிருப்பதே இப்படி மறுப்புரைகள் பேசத்தான் என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால், மக்கள் அறிய விரும்புவது, இவருக்கு உள்ள அதிகாரம் எத்தகையது என்பது அல்ல; அவர்கள் இன்று நினைவுப் பரணையிலே, பல மாஜி அமைச்சர்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள் - வர்க்கியும் மாதவமேனனும், குருபாதமும் ஜோதியும், அவினாசியாரும் வேங்கடசாமியாரும், ராஜா ராமரும் பிறரும், அதிகாரம் பெற்றிருந்தவர்கள் - இன்று, . . . பார்மோசாக்களிலே வாசம்! கனம் சுப்பிரமணியம் அவர்கள் மட்டும் என்ன! கனமாவதற்கு முன்பு அவரை நாடு அறியாது; கனம் குறைந்ததும் நாடு நாடாது! எனவே, அவர் நமது குற்றச்சாட்டுகளை "அதிகாரபூர்வமாக’ மறுக்க முனைய வேண்டாம். நமக்கு நல்லறிவு கொளுத்தவாவது புள்ளி விவரம் காட்டி மறுக்க முன்வரட்டும்! வக்கு ஏது அதற்கு? திருச்சிக் கூட்டத்துச் சுப்பிரமணியனாரை, பெரியநாயக்கன்பாளையத்தில் பேசிய சுப்பிரமணியனார், இழித்தும் பழித்தும், என்னே இச்சிறுமதி! ஏனோ இந்தக் கெடுமதி! இங்கொன்று அங்கொன்றா? உள்ளொன்று புறமொன்றா?- என்று இடித்து இடித்துக் கேட்பாரே! ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை என்று திருச்சியில் பேசிய திருவாய், ஏன் பெரியநாயக்கன்பாளையத்திலே, வேறு விதமாக மென்றது என்று அறிய நாட்டார் விரும்புகிறார்கள். அங்கு அவர், வடநாடு சென்றறியாதவர்கள்தான், இப்படிப் பேசுகிறார்கள் என்ற பேசி, நம்மை நிந்திப்பதாக எண்ணிக் கொண்ட இவரை ஒத்த நிலையிலுள்ள பலரைப் பழித்துப் பேசுகிறார். வடநாடு செல்கிறர், இவர்; அறிவோம்: காவடி தூக்கிடும் கனம் செல்லவேண்டும் அடிக்கடி, அறிந்திருக்கிறோம். வடநாடு நாம் சென்றறியோம் என்று பேசி, தமது ஞான சூன்யத்தைக் காட்டிக் கொள்ளட்டும், குறுக்கிடவில்லை: ஆனால் நாம் போனதில்லை என்றே வைத்துக்கொள்வோம், அம்புஜம் அம்மையாரென்ன, அனுமந்தையா என்ன, கேசவமேனன், அன்னா மஸ்கரினீஸ், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனுவாசனென்ன, இவர்களெல்லாம் கண்டித்திருக்கிறார்களே வடநாட்டு ஆதிக்கத்தை - அமைச்சர் அப்போதெல்லாம், ஏன் வாயடைத்துக் கிடந்தார்!! "தொழில் முறையில் சென்னை மாகாணம் பின்தங்கிய நிலையிலிருக்கிறது. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தின் கவனத்தைத் தென்பகுதி பெறவேண்டுமோ அந்த அளவுக்குப் பெறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை’’ என்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது தமிழ் நாடு 24-6-55-இல்!! அமைச்சர் என்ன பதிலளிக்கிறார் இதற்கு!! அடுக் கடுக்காக ஆதாரங்களைக் கொட்டிக் குவித்துக் காட்டி வருகிறோம். எதை மறுத்தார் - எதை மறுத்திட முடியும்? நாள் தவறாமல் வந்த வண்ணமிருக்கிறதே, நன்றாகப் படித்தவர் களையும் கவரும் வகையில்! எப்படி இதனைத் தடுத்திடப் போகிறார் வாய்ப்பறை கொண்டு ஊர்ப்பகை தேடிக்கொள்ளும் இந்த உத்தமர்! காரமான ஒரு சிறு துண்டு தருகிறேன் - இப்போதுதான் பறித்தெடுத்தது அமைச்சர் பதவியைச் சுவைத்திடும் வாயால் இதையும் சிறிதளவு சுவைத்துப் பார்க்க வேண்டுகிறேன். இங்கு, மிளகாய் உற்பத்தி அதிகமாகிச் சரக்குத் தேங்கிக் கிடக்கிறது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் அனுமதி டில்லிதான் தரவேண்டும்! ஆதிக்கம் அவ்விதம் அமைக்கப்பட்டிருக்கிறது. மிளகாய்க்கு மட்டுமல்ல, எதற்கும் இதேதான் நிலைமை கிடக்கிறது, வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவு டில்லி நிர்ணயித்திருப்பது போதுமானதாக இல்லாததால். எனவே, டில்லி பாதுஷாக்களே! அருள் கூர்ந்து, மிளகாய் ஏற்றுமதியின் அளவைச் சற்றே அதிகப்படுத்தித் தருவீராக - என்று சென்னை வர்த்தக சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்ற செய்தி, அமைச்சர் தீப்பொறி பறக்கத் திருச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிவருகிறது ஜூன் 21ஆம் தேதிய பத்திரிகைகளைப் பார்க்கலாம் - தேசய இதழ்களையே!! தென்னாட்டின்மீது வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது சான்று அல்லவா! வடநாட்டு ஆதிக்கம் இருப்பது மட்டுமல்ல, இந்தச் செய்தி மூலம் தெரிவது. வர்த்தக சபை கூறுகிறது. இங்கிருந்து மிளகாய் வெளிராஜ்யங்களுக்கு (வடக்கே உள்ள ராஜ்யங்கள் சென்று அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.) தம்பி, தெரிகிறதா இதிலே காணப்படும் அக்ரமம்! வெளிநாட்டுக்கு, மிளகாய் நாம் நேராக அனுப்ப முடியாது; டில்லி அனுமதிக்க வேண்டும். டில்லியோ, மிகக் குறைந்த அளவுதான் ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கிறது. இங்கே சரக்குத் தேங்கிவிடுகிறது. தேங்கிக் கிடக்கும் சரக்கை, வடநாட்டு ராஜ்யங்கள் இங்கிருந்து தருவித்துக் கொள்கின்றன. அங்ஙனம் தருவித்திடும் சரக்கை, அந்த ராஜ்யங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை அனுபவிக்கின்றன. "அனுகூலம் இங்குள்ள உற்பத்தியாளருக்கோ வியாபாரிக் கோ கிடைப்பதில்லை.’’ என்று வர்த்தக சபை தெரிவிக்கிறது, நாசுக்காக. பச்சையாகக் கூறுவதானால், இங்குள்ள விவசாயி வயிற்றிலும், வியாபாரியின் வாயிலும் அடித்து, வடநாடு மிளகாய் ஏற்றுமதி மூலம் இலாபம் பெறுகிறது, என்பதுதான்! இதற்கு என்ன பெயரிடுவது - பாரத்வர்ஷத்தின் விரிந்த பரந்த மனப்பான்மை என்றா? - நேரு சர்க்காரின் நேர்மை என்றா? - அல்லது அமைச்சர் பதவியை சுப்பிரமணியனார்கள் ஆண்டு அனுபவிப்பதற்காக, நாட்டு மக்கள் தரும் "முறிப்பணம்’ என்பதா - என்ன பெயரிடச் சொல்கிறார் அமைச்சர் - எப்படி இந்த அக்ரமத்தைச் சகித்துக்கொள்ள முடியுமென்கிறார். வடநாடு தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தாமலிருந்தால், இந்த அநீதிக்கு இடம் ஏது? மிளகாய் பற்றிய சம்பவம் காரம் அதிகம் கொடுத்திடும்; "கனம்’ தாங்கமாட்டார். எனவே, தம்பி, அவருக்குச் சிறிது ருசியும் பசையும் உள்ள பண்டம் குறித்த சம்பவத்தைத் தருவோம். பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து, இங்கு, பருப்பு நவதானியம் தருவிக்கப்பட்டு வருகிறது. தம்பி! இதற்கு இரயில்வே வாகன்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஏன்? வாகன்களின் அளவு குறித்து அனுமதி அளித்திடும் அதிகாரம் அங்கே இருக்கிறது - டில்லியில்! இதனால் போதுமான அளவு வாகன்கள் கிடைக்காமல், திகைப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு வாங்கி வைக்கப் பட்டுள்ள சரக்கு, வாகன்கள் கிடைக்காததால், பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும் கிடைக்கின்றன - வெயிலும் மழையும், எலியும் பிறவும் பண்டத்தைப் பாழாக்குகின்றன - இங்கு மார்க்கட்டில் விலை சூடு பிடிக்கிறது, அங்கே வாங்கிய சரக்கு, முடமாகிக் கிடக்கிறது, ஏன் தம்பி! இந்த நிலை வரவேண்டும்? வடநாடு பார்த்து வைப்பதுதான் சட்டம், திட்டம் என்று இருப்பதால் தானே, வாகன் கிடைக்குமா என்று இங்குள்ளவர்கள் தவம் கிடக்கவேண்டி வருகிறது, வரம் தாருமய்யே என்று தென்னிந்திய வர்த்தக சங்கம் அறிக்கை மூலம் இறைஞ்சுகிறது டில்லியை! ஜுன் 21-ஆம் நாள் இதழில் இதையும் காணலாம். அக்ரமம், இன்னும் வெளிப்படையாகவே தெரிகிறது தம்பி, அந்த அறிக்கையில். பம்பாய் - கல்கத்தாவுக்கு மட்டும் வாகன்கள் தேவையான அளவு ஒதுக்கப்பட்டு சென்னை புறக் கணிக்கப்படுகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பதவியைச் சுவைத்திடும் மகிழ்ச்சியில், "கனம்’ இங்கு நம்மீது காய்கிறார். பாய்கிறார்! தம்பி! “கனம்’ சைவரோ, சுவையும் சத்தும் தேவை என்பதற்காக”அன்னிய பதார்த்தம்’ சாப்பிடுகிறவரோ, எனக்குத் தெரியாது - சைவராக இருந்தால் சிறிது நெடியாக இருக்கும்; இல்லையானால் நாவில் நீர் ஊறும், இப்போது தரப்போகும் சம்பவத்தைக் கவனித்தால். ராட்டு என்கிறார்கள் - இறா என்பார்கள் - அந்தக் கடற்கனி ஏராளமாகப் பர்மாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, திருவிதாங்கூர் கொச்சிப் பகுதியிலிருந்து, பெரும் அளவில். இதை நம்பி வாழும் மீனவர்கள் ஏராளம் - வியாபாரிகளும் உளர். இப்போது பர்மா சர்க்கார், இதற்கான அனுமதி வழங்கும் முறையிலே நட்டுத் திட்டம் கடுமையாக ஏற்பத்திவிட்டி ருக்கிறது; இந்த ஏற்றுமதி சிதைந்துவிட்டது. இதன் பயனாக இலட்சக்கணக்கான சிறியதல்ல குடும்பங்கள் அல்லற் படுகின்றன. பிரச்சினை சிறியதல்ல தம்பி! பண்டம் வேண்டுமானால், சாதாரணம் என்பர். எட்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்று கோடி ரூபாய் பெருமானமுள்ள பண்டம் தேங்கிக் கிடக்கிறது. அஜீத் பிரசாத் ஜெயின் எனும் வடநாட்டு மந்திரியிடம்தான் முறையிட்டுக்கொள்ள வேண்டிஇருக்கிறது. பர்மா போன்ற வெளிநாட்டுச் சர்க்காரிடம் பேசவும், வசதி வாய்ப்பு, சலுகை உரிமை இவைகளைப் பெறவும் இங்கே உள்ள அமைச்சர் அவைக்கு அதிகாரம் ஏது? எல்லாம் டில்லியப்பன்தானே! எதற்கும் டில்லியப்பன் துணையும் தயவும் இருந்தால்தான் நடக்கும். எனவே, அஜீத் பிரசாரத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறது, “ஐயனே! மீனவரைப் பாரீர்! அவர் குறை தீர்த்திட வாரீர்! பட்டினியால் வாடுகிறோம், பண்டம் பாழாகிறது, பிழைப்பிலே மண் விழுகிறது’’ என்று கெஞ்சுகிறார்கள்.”அப்படியா, உமக்குற்ற குறை பற்றி நாம் இனி எண்ணிப் பார்த்திடுவோம். எமது அண்டை நாடாம் பர்மாவின் இந்தப் போக்குக்க உள்ள காரணம் யாவை என ஆராய்ந்த பின், யாது செய்திடல் முறை என்பது பற்றி எண்ணித் துணிவோம்!’’ என்று பேசுகிறார் அஜீத்! அவரா பேசுகிறார், வடநாட்டு ஆதிக்கம் பேசுகிறது!! திருச்சியில்பாருங்கள், திரிலோகமும் புகழும் சுந்தரன்! வீரன்! சூரன்! யானே.’’ என்று கனம் பாடுகிறார். ராஜா சிதம்பரனார், "ஆமாம! இதை அறியேன் முன்னாலே. “ஆகவே என் பிழை பொறுத்து ஆதரிக்க வருவீர், ஐயே!’’ என்று”ட்யூட்’ பாடுகிறார்! செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லிச் சொல்லி, பெரும் பலன் கண்டனர் காங்கிரசார். "கப்பலோட்டிய தமிழன்’’ வாழ்க்கைக் கலம் சுக்கு நூறாயிற்று. அந்தச் சோகக் காதையைக் கூறிக்கூறி, இன்று அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர்! இதோ கேள், தம்பி, ஒரு கப்பலின் கதை கூறுகிறேன். சென்னை-ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர். முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்திவந்த தொழில், சுதேசி இயக்க தத்துவம் காரணமாக, சிந்தியாவுக்குக் கிடைத்தது. சிந்தியா கப்பல்விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக்கொண்டது. இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும். இதிலே இங்கிருந்து, ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர் - கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது. பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும். பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்குவரும் மொத்தத்தில், தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து. நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு பழுதாகிவிட்டது. புதுப்பிக்கப் பெரும் பொருள் செலவாகும், என்று கூறியும், சிந்தியா இப்போது இந்தக் கப்பலை நிறுத்திவிட்டது. ஏழைக்கு இடி! சென்னை-ரங்கூன் வியாபாரத் தொடர்புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பி இருக்கிறது. இனி, சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று, அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும். அந்தக் கப்பலில், ஏழைகளுக்கான "மேல் தட்டு’ பிரயாணவசதி மலிவான கட்டண வசதி - அதிகம் கிடையாது. இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும். பண்டங்களை அனுப்புவதிலும், பாரம் ஏறும். பாரம் ஏறினால், வடக்கே வங்கம், வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும் சரக்குடன், தென்னகத்துச் சரக்கு போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது. இவ்வளவு இன்னல் இருக்கிறது! ஏன் என்று கேட்கவோ, சிந்தியா போனால் என்ன, இதோ ஒரு விந்தியா என்று கூறிக் காரியமாற்றவோ, சென்னையால் முடியாது! டில்லி கண் திறக்க வேண்டும்! நஷ்டஈடு தந்து சிந்தியாவைத் தொடர்ந்து கப்பலை நடத்தச் சொல்லலாம். புதிதாகக் கப்பல் உதவலாம், அல்லது பழுது பார்க்க வசதி செய்து தரலாம். எதையாவது இந்திய சர்க்கார் செய்ய வேண்டும். தினமணியின் அழுகுரல் கேட்கிறது இதுபோல ஜுன் 23இல். ஏன் சிதம்பரனாரின் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் புனித புரியாக்கப்பட்டுள்ள தென்னகத்துக்கு, அந்த அவல நிலை, என்று நாம் கேட்கிறோம்? வடநாடு தென்னாட்டை அடிமைப் படுத்திற்றா? யார் சொன்னது? இதோ என்னைப் பாருங்கள், என்று கேட்கிறார். அமைச்சர் சுப்பிரமணியனார், “பார்க்கிறேன்! பெருமூச்சு எறிகிறேன்! பாவியேன் இந்தப்”பரிசு’ கிடைக்குமா கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறேன்! கனமாகும் காலத்தை, கடவுளே! சீக்கிரம் தாருமே’’ என்று மலைபோன்ற உடலை வில்போல வளைத்தபடி, வரம் கேட்கிறார். வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் "இன்சால்வென்ட்’ போட்டிடும் போக்கில், தேர்தலின்போது மக்களிடம் அளித்திட்ட வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, சேற்றை வாரியும் நம்மீது வீசிட முற்பட்டிருக்கும் ராஜா சிதம்பரனார்! அந்தச் சிதம்பரனார் பிறந்த அதே நாட்டில் இப்படியும் ஒரு சிதம்பரனார்! தம்பி! நமது கழகத்துக்கு நாட்டிலே வளர்ந்து வரும் செல்வாக்குக் கண்டு, ரோஷம் பொங்கி இப்படிப் பேசுகிறார் போலிருக்கிறது இந்த “கனம்’ - ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் - துவக்கத்திலேயேதான் சொல்லிவிட்டாயே, காரணம் எனக்கும் தெரிந்ததுதானே - ரோஷக்காரராக இருந்திருந்தால் இவர் ஆச்சாரியாருடைய தொண்டரடிப்பொடி ஆழ்வாராக இருந்தபோது புகுத்திப் போற்றிப் பாராட்டிய குலதர்மக் கல்வித் திட்டத்தை, காமராஜர் கட்டளையிட்டதும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுச் சுடலைக் காசுபோலப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பாரா?”என் திட்டம் இல்லையா. அப்படியானால் நான் பதவியில் இரேன். நான் ரோஷக்காரன், கொங்கு வேளாளர் குடிப்பிறந்த எவரும், இப்படிக் குட்டக் குட்டக் குனிந்து கொடுத்து, எட்டுக் குட்டுக்கு ஆறணா எடு, ஆறுôறு முப்பத்தாறு இரண்டேகால், ரூபா. என்று கேட்கும் போக்கில் இருக்க மாட்டார்கள். அதற்கு வேறு ஆளைப் பாருமய்யா. நான் இதோ பதவியை விட்டுப் போகிறேன். கோர்ட் அழைக்கிறது, கொங்கு நாடு அழைக்கிறது, மானம் கட்டளையிடுகிறது, ரோஷம் குத்திக் குடைகிறது’’ - என்று கூறியல்லவா, வெளி ஏறியிருந்திருக்க வேண்டும். மந்திரியாகத்தானே இருக்கிறார். "அவர் கட்டிய தாலியை இதோ அறுத்தெரிந்துவிட்டேன், சுவரேறிக் குதித்து வந்த சுந்தரனே! கட்டுதாலி உன்கையாலே! அதற்கும் விருப்பம் இல்லையேல், அதுவும் வேண்டாம், வேளைக்குச் சோறு, சாயம் போகாச் சேலை, சாயந்திரத்தில் மல்லி, சாய்ந்துகொள்ள மெத்தை. . .’’ என்று பட்டியல் கூறிடும் கண்வெட்டுக்காரி, மன்றம் ஏறிவாழும் வழி பற்றிப் பேசிடுவ தில்லை; அமைச்சரல்லவா, பேசுகிறார்! பேசட்டும் தம்பி! பேசட்டும்! பூர்ணகும்பம், அர்ச்சகர் சங்க வரவேற்பு, நிலப்பிரபுவின் விருந்துபசாரம். இது கூடவா, பேசக் கூடாது? பேசட்டும் தம்பி, பேசட்டும். நமது வேலையை இந்தப் பேச்சும் ஏச்சும், துளியும் பாதிக்காது. அன்புள்ள அண்ணாதுரை 3-7-1955 குருபீடம் தோழர் என்.வி. நடராசன் அவர்களின் காங்கிரஸ் வாழ்க்கை- காங்கிரசில் புதியதோர் நுழைவு- செட்டி நாட்டு அரசர். தம்பி! வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் - அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும். அதுவரையில் நமக்குத்தான் பொறுமை வேண்டும். நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும் போது பயமென்ன? எப்படியும் இன்றுமாற்று முகாமில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத்தான் போகிறது! உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி. நடராசன் தெரியுமல்லவா! அவரை என்ன வென்று எண்ணிக் கொண்டாய்!! ஏ! அப்பா! அதி தீவிரக் காங்கிரஸ் காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத்யேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர் எதிர்கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒரு சான்சு அடித்தால் எம்.எல்.ஏ ஆகலாம் என்றும் கூறி வந்தனர் - சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த “எலும்பு மனிதர்’ காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை!! நான் கார்ப்பரேஷன் தேர்தலில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க, முழுமூச்சாக வேலை செய்தவர். அப்போதெல்லாம், அவரிடம்”நாலாம் தமிழ்’ நடமாடும்! நாலாம் தமிழ் என்றால், தெரியவில்லையா, இயல் இசை நாடகம் - முத்தமிழ்! வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப்பெயரிட்டு அழைக்க வேண்டிய அளவுக்கு வசை இருந்தது, என்கிறாயா கேள், தம்பி; சொல்கிறேன்! நீ, எத்தனையோ விபூதி வில்வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருப்பாய், இதுபோலக் கேட்டதுண்டா சொல், பார்ப்போம். "நெஞ்சிலே இருக்கிற மஞ்சா சோறு வெளியே வரும் - ஆமாம்.’’ இதற்கு நாலாம் தமிழ் என்று தனிச் சிறப்பு அளிக்காம லிருக்கலாமா, சொல்லு. பொருள் என்ன தெரியுமோ இதற்கு - ஒரு தாக்குத் தாக்கியதும் கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி எடுக்க வேண்டி நேரிடும் - அப்போது உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக வெளியே வரும்! இது தான் பொருள்! பேசினது - நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச்சனை! தேர்தல் காலம்! தேச பக்தி அவருக்குத் தலையில் ஏராளமான! தூபம் போட சத்தியமூர்த்திகள்; எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப் பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி அந்த நடையை இப்போது மறந்துவிட்டார் என்று கூடச் சில சமயங்களிலே ஆச்சரியமாக இருப்பதுண்டு. நடை இது; உடை கதர்! படையும் உண்டு. மாலைக் கலகத்துக்கு ஆறணா; இரவுக் கலகத்துக்கு எட்டணா; நோட்டீசைக் கிழிக்க ஒரு ரூபாய்; சாணிவீச இரண்டணா; கனைத்துக்காட்ட ஒரு அணா; முண்டா தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டை போட மூன்று ரூபாய் இப்படி “ரேட்’ பேசிக் கொண்டு, பாரதமாதாவுக்குச் சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும் நண்பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல்வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே ஏதாவது தொழிலாளர் சங்கத்துக்குக் கடிதம் வந்துவிட்டால்,என்னிடம்தான் கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது-மாலை வந்தாலோ”போலோ பாரத்மாதாக்கீ’ யாகி விடுவார்! அப்படிப்பட்டவர் இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார், திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல்லவா! கட்டாய இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார். இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம் பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், பணியாற்றினோம் - காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அரும்பிற்று; நடராசன் போன்ற பல காங்கிரஸ் நண்பர்கள். நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமிழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு அடிமையாக மாட்டோம்’ என்று பேசினர் - முதலில் நம்மவர்களைச் சந்திக்கும் போது - பிறகு தங்களுக்குள்ளேயே - அதற்கும் பிறகு காங்கிரஸ் மேடைகளிலேயே!! இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தி எதிர்ப்பும் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது, சத்தியமூர்த்திகளுக்கு. சத்தியமூர்த்திகள் தடை விதித்தாலும் மீறி, தாய் மொழியைக் காக்கும் பணிபுரிந்தாக வேண்டும் என்ற கட்டம் வந்துவிட்டது, நடராசன் போன்றோருக்கு. சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது! நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில் பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார்! தாய்மொழிப்பற்றுக்கு இடமளித்து விட்ட பிறகு, நடராசன் காங்கிரசின் கட்டுதிட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளி வந்து விடுவார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே, நான், நமது நண்பர்கள், சென்னை பெத்துநாயக்கன்பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி. நடராசன் பேசுவார் என்று துண்டு அறிக்கை அச்சிட்டு, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம் அனுப்பி விட்டேன். உள்ளே, கெஞ்சுதல், கொஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா ரசமான கட்டமும் நடந்தேறி, நடராசன் ராஜிநாமா செய்துவிட்டு வெளியே வந்தார் - அவரிடம் இந்த “நோடீஸ்’ தரப்பட்டது -”எப்படி இதற்குள் அச்சிட்டு விட்டீர்கள்’ என்று கேட்டார் - இது காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலத்தான் நடக்கும் என்று தெரிந்து அச்சிடப்பட்டது என்று கணேசன் கூற, நடராசன், அப்படியா? என்று கேட்டுவிட்டு, நேரே, இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்று துவக்கப்பட்ட அரும்பணி, நாளாகவாக, தரமும் திறமும் வளரும் வகையில் நடைபெற்றவண்ணம் இருக்கிறது, எனவே தான் தம்பி, “நான் சொல்வது, காங்கிரஸ் நண்பர்களிடம், நமது கொள்கையை எடுத்துக் கூறுவதிலே, பண்புவேண்டும் என்று அவர்கள் இன்று கோபம் கொண்டவர்களாக இக்கிறார்களென்றால், நாம் இன்னும் அவர்கள் உள்ளத்தில் புகத்தக்க விதமாக, நமது கொள்கையை எடுத்துரைக்கவில்லை என்று தான் பொருள்! நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள் அவர்களை”நம்மவர்’களாக்கிக் கொள்ளும்திறமை நமக் கெல்லாம் வளரவேண்டும்!! அவர்கள் எப்போதும் எதிர் முகாமிலேயே இருந்து தீருவோர்கள் என்று எண்ணி, அவர்களைக் கண்டதும் முகத்தைச் சுளித்துக் கொள்வதும், அவர்கள் உருட்டு விழி காட்டினால் நாமும் அது போலாவதும் கூடாது. நாளாகவாக அவர்களுக்கு, காங்கிரஸ் இன்று யாருடைய கூடாரமாகி வருகிறது என்பது புரியத்தானே போகிறது! உழைக்க ஒரு கூட்டம், அரசியல் உல்லாச வாழ்வு நடாத்த வேறோர் கூட்டமல்லவா வந்துவிட்து! தடியடியும் சிறைவாசமும், முத்துராமலிங்கத் தேவருக்கு! மந்திரிப் பதவியும் அதனால் கிடைக்கும் மதிப்பும், ராமநாதபுரம் ராஜாவுக்கு - அதாவது ராஜாவாக இருந்தவருக்கு!! பட்டேல் வருகிறார் - பணப்பை ஜாக்கிரதை!! என்று லட்சக்கணக்கில் எச்சரிக்கை நோடீஸ், அபாய அறிவிப்புத்தாட்களை அச்சிட்டு வழங்கிய வட்டி வேந்தர்கள், காங்கிரஸ் வட்டாரத்திலே இன்று வட்டமிடுகிறார்கள். உண்மை ஊழியம் செய்து, காங்கிரசை ஊராளும் கட்சியாக மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தக் காட்சி, பெருமையும் பூரிப்புமா தரும் என்றுஎண்ணுகிறாய்! அவர்களும் மனிதர்கள்தானே, தம்பி! மனம் படாதபாடு படத்தான் செய்யும். செட்டிநாடு அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு செல்லப் பிள்ளையாக இருக்கிறார்! இது காங்கிரசின் வளர்ச்சியையா காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப் பார்த்து, கேபேசும் கண்களல்லவா, செட்டி நாட்டரசருக்கு இருந்திடக் காண்கிறோம்! ஆளுங்கட்சிக்கு எந்நாளும் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு வந்தான், வெண்சாமரம் வீசி நின்றோம். இடையே தமிழார்வம் ஓங்கி நின்றது, ஆட்சி தமிழரிடம் வந்து சேரும்போல் தோன்றிற்று, உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும் ஆளவந்தாரின் ஆதரவாளர் நாங்கள் என்று தானே செட்டி நாட்டரசரின் புன்னகை பேசுகிறது. இது காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா! கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழர் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டுக் கொண்டு ப்யூக்கும் செவர்லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து, கடற்கரைவரையில் நடந்து வந்தார், இன்றைய செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா. நாமாவது அவரை ஓரளவுக்கு வேலை வாங்கினோம் - மணிமாடத்துக்குச் சொந்தக்காரர். அவர், எனினும் மணல்மேடுகளுக்கு இழுத்து வந்தோம்! வியர்வை அரும்புமோ என்று எண்ணினாலே வெட்டிவேர் விசிறி கொண்டு வீசிட ஏழெட்டுபேர் எப்போதும் தயாராக இருந்தனர் அவருக்கு - கொட்டிடும் வியர்வையைத் துடைக்கவும் கூச்சப்பட்டுக் கொண்டு, கொடி பிடித்து ஊர்வலத்தில் நடந்தார் குமாரராஜா! நாம், குமாரராஜாவுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டதால், அவருக்கு ஏற்றபடி கொள்கையைக் குறுக்கிக் கொள்ளவில்லை, கொள்கையின் குணமும் மணமும் வளர்ந்தது - வளருகிறது - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, அவர் அந்தப் பக்கம் திரும்பினார், அங்கு அழைப்புக் கிடைத்தது. சென்றார், வென்றார்; வென்றார் என்றால் உண்மைக் காங்கிரசைக் கொன்றார் என்று பொருள் - நாமோ, இருந்தார், சென்றார்; நாம் இலட்சியபுரி நோக்கி நடைபோடுவோம், என்று தொடர்ந்து நமது பணியினை ஆற்றி வருகிறோம் காங்கிரஸ் நண்பர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்! இவை தெரியாதது போல இருக்கிறார்கள் - ஆனால் நமது கழகம் மக்கள் மன்றமாகி விட்டதையும் காங்கிரஸ் சிங்காரச் சீமான்களின் மாளிகையாகிவிட்டதையும் அவர்கள் அறியாமலில்லை - அறிந்தோர் மனதிலே ஆயாசம் எழாமலில்லை! வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் - அதுவும் கொஞ்சகாலம் வரையில் தான்! தம்பி! சென்ற கிழமை, காங்கிரசின் உண்மை உழைப்பாளியின் உள்ளன்பைப் பெற்று உயர்இடத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவப்படத்தை, மத்திய சர்க்கார் மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் திறந்து வைத்து, பாராட்டுரை வழங்கியிருக்கிறார், என்றோர் செய்தி வந்தது, பார்த்திருப்பாய். யார், இந்த, டி.டி.கி.? காமராஜர் வனவாசம் செய்த போது உடன் இருந்தவரா? இல்லை! இல்லை! அப்போது சுகவாசம் செய்து கொண்டிருந்தவர்! சிறையில் தோழரோ? இல்லை உப்புச் சத்தியாக்கிரகத்துக்கும் திட்டம் தீட்டிய தீரரோ? கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்ட கர்ம வீரரோ! அன்னியச் சாமான்களை பகிஷ்கரித்த ஆற்றல்மிக்க தேசபக்தரோ? இல்லை, தம்பி, இல்லை. சோப்புச் சீமான்; சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தவர், அன்னிய நாட்டு லக்சும், வினோலியாவும் அவருடைய கதர், கைராட்டை, காங்கிரசைத் தேர்தலிலே எதிர்த்து முறியடித்து, ஒரு முறை சென்னை சட்டசபையில் எதிர்க்கட்சியிலும் வீற்றிருந்தார். ஆகஸ்டுப் புரட்சி, செப்டம்பர் சத்தியாக்கிரகம், எதிலும் அவர் ஈடுபட்ட தில்லை. ஆனால் இன்று, அவர் மத்திய சர்க்கார் மந்திரியானார்! அவர் திருக்கரம் பட்டால் மதிப்பு, அவருடைய திருவாயால் புகழுரை சொரிந்தால் பெருமை என்று கருதும் வகையில் அவரைக்கொண்டு காமராஜரின் திருவுருவப்படத்தைத் திறக்கச் செய்தனர். அந்த நேரத்தில், அந்நாள் இந்நாள் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உள்ளம் கொண்ட உண்மைக் காங்கிரஸ் காரர் வெட்கமும் வேதனையும் அடையாமலிருக்க முடியுமா? வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் - உள்ளத்திலே வேதனை அரித்தபடிதான் இருக்கும். அவர்களெல்லாம், ஒரு கொள்கை புனிதமானது, திட்டம் தேவையானது, என்று உணரும் வரையில்தான் நம்மீது காய்வர், பாய்வர். ஆனால் நாம் எடுத்துரைக்கும் கொள்கை நியாயமானது, திட்டம் தேவையானது என்று உணர்ந்து விட்டால், நிச்சயமாக, நம்மைப்பின்னணியில் தள்ளிவிட்டு, முன்னணியில் நின்று, வீரப்போர் புரியக்கூடியவர்கள்-இதை அவர்களிடம் பேச நேரிடும் போதெல்லாம் மட்டுமல்ல, நம்மைப் புரிந்து கொள்ளாததால் அவர்கள் நம்மை ஏசும் போதெல்லாம்கூட நினைவிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். மேடை தவறாமல் நம்மை நிந்தித்துத்தான் வருகிறார்கள் - ஐந்தாண்டு திட்டத்தை நாம் கண்டிப்பது அக்ரமம் என்று பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் குற்றாலத்திலேகூடி என்ன தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா, தம்பி. தென்னாட்டிலே சில பெரிய கனரகத் தொழிற் சாலைகளையாவது அமைத்தாக வேண்டும் என்று, வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள். "இப்படியாவது ஒரு தீர்மானம் போடாவிட்டால் மக்களின் மனம் எரிமலையாகும்.’’ "வடநாட்டாருக்கு, நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டும்.’’ "குட்டக் குட்ட குனிந்து கிடப்பது, அறிவுடைமையு மல்ல, ஆண்மையுமாகாது.’’ "முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் துரோகம் செய்தனர்-ஏமாற்றப்பட்டோம்-இரண்டாவது திட்டத்தி லாவது நியாயம் கிடைக்கவேண்டும்’’ "கழகக்காரர்கள் மானம்போகிற மாதிரிப் பேசு கிறார்கள் - அவர்கள் சொல்வதும் உண்மையாகதான் இருக்கிறது. வடநாடு, நம்மைக் கேவலமாகத்தான் நடத்துகிறது’’ "கழகம் கிடக்கட்டும், சுதேசமித்திரன் கார்ட்டூனுக்கு என்ன சொல்கிறீர்கள்?’’ "அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்; தூங்குபவன் துடையில் கயிறு திரிக்கத்தான் செய்வார்கள்’’ இதுபோலவும், இதைவிடக் கடுமையாகவும் பேசினவர்கள், எத்துணை பேரோ, யார் கண்டார்கள். ஒரு தீர்மானம் போட்டாக வேண்டிய நிலைமை பிறந்திருக்கிறது - சாதாரணமென்றா இதற்குப் பொருள்! குற்றாலத்துத் தீர்மானம், கண்களை இறுக மூடிக்கொண்டு, காதுகளையும் அடைத்துக் கொண்டு இருப்பதுபோலக் காணப்பட்டு வந்த காங்கிரஸ் நண்பர்கள், உண்மையில், நாம் கூறிவந்ததை மிகக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதையும், நம்மைக் கண்டித்துப் பேசியவர்கள், அதேபோது உள்ளூர வடநாட்டு வஞ்சனையைப் கண்டித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும்தானே, காட்டுகிறது. இல்லையானால். இப்படி, ஒரு தீர்மானம் தீட்டவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன வந்தது? தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற உண்மை உள்ளத்தை உறுத்துவதாலேதான், இரண்டாவது திட்டதிலாவது நியாயம் கிடைக்கச் செய்யுங்கள் என்று கேட்கவேண்டி வந்தது. இல்லையானால் வீரதீரமாக, வடநாடு தென்னாட்டுக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் துரோகம் செய்தது என்று கூறுவது தேசத்துரோகம்-என்று கனல் கக்கிடும், தீர்மானம் நிறைவேற்றி விட்டல்லவா மறு காரியம் பார்த்திருப்பார்கள். தம்பி! நம்மைவிட அடிக்கடி, வடநாடு போய் வருகிறவர்கள்தானே, காங்கிரஸ் தலைவர்கள்! அங்கே பொங்கிடும் வளமும், அதன் பயனாக ஓங்கிடும் கர்வமும் அவர்கள் காணாமலா இருக்கிறார்கள்! கண்டு வெட்கமும் வேதனையும் கொண்டு, பிறகு, கட்சி கட்டு திட்டம் இவைகளை எண்ணி விம்முகிறார்கள்! வீறுகொண்டெழும் காலம் வெகு தொலைவில் என்று கருதாதே - விரைவிலே வரக்கூடும். நீயும் நானும், அவர்களுடைய இதயத்தைத் தொடும் வகையில், விஷய விளக்கம் தரவேண்டும். எங்களுக்கும் தெரியும் - என்று ஆரம்பத்தில் ஆதீன கர்த்தா பாணியில் பேசுவர். எங்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கிறது - என்று அன்பாகப் பிறகு கூறுவார். எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதற்காவன செய்வோம் - என்று உறுதி அளிக்க முன்வருவார்கள் அடுத்த கட்டத்தில். நாம் ஒன்றுபட்டுக் கேட்டால்தான், வடநாடு வழிக்கு வரும்! கொஞ்சியது போதும் - இனி கிளர்ச்சிதான்! மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒருகை பார்த்தோம்; இந்த மார்வாடி ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதா முடியாத காரியம்! விழித்தெழுவீர் விடுதலைப் போரில் ஈடுபடுவீர்! திராவிடநாடு திராவிடருக்கே! இவ்விதமெல்லாம், படிப்படியாகத்தான், பிரச்சினை உருவெடுக்கும். அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டியதுதான் நமது பொறுப்பு. திருவாவடுதுறை ராஜரத்தினம் பாணி, தம்பி, உனக்குத் தெரியுமோ என்னமோ! அவருடைய உள்ளத்தில் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட வேண்டும். பிறகு, கேளேன் அந்த நாத இன்பத்தை! வீணையும் பிடிலும், குழலும், ஷனாயும், கோட்டும் பிறவும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு, வெளியே உலவி, கேட்போரின், மனமெல்லாம் இசைமயமாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள நாயனம் நமக்கு நல்ல இசை அமுது அளிக்க வேண்டுமானால், நமக்கு மகிழ்வளிக்க வேண்டும் என்று அவர் எண்ணினால்தானே! கால் ஆயிரம் தருகிறேன் காம்போதி வாசித்துக் களிப்பூட்டு; ஆயிரம் தருகிறேன், தோடி நடக்கட்டும்; மேலும் தருகிறேன், மோகனம் நடக்கட்டும், என்று கூறினால், இசையா கிடைக்கும்? கங்கிரசிலுள்ள உண்மை ஊழியர்கள், இதுபோலத்தான், அவர்களின் உள்ளம், நமது கோரிக்கைக்கு இடமளிக்கவேண்டும்-பிறகு பாரேன், அவர்களின் தீவிரத்தை! தீரத்தை! அந்த நிலையைப் பெற, நாம்தான், முறையாகப் பணியாற்ற வேண்டும். இழிமொழி, பழிச்சொல், ஈனத்தனமான தாக்குதல், இட்டுக்கட்டிப் பேசுவது, இல்லது புனைதல், ஏசல் வீசுதல், என்பன போன்ற எத்தகைய கணையும் நம்மை நிலை இழக்கச் செய்யக்கூடாது. இந்தப் பரிபக்குவம் நமக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் இல்லாமற் போகவில்லை - இருந்து விட்டு வந்த இடத்தில் நுழைந்து கொண்டு, நோட்டம் பார்க்கும் நண்பர் வீசும் நரகல் நடை நமக்கு வேறு எதற்குப் பயன்படுகிறது என்று எண்ணுகிறாய்! இந்தப் பரிபக்குவம் பெறத்தான்! ஒரே கலத்தில் உண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தக்க அளவுக்கு உறவு இருந்த இடத்திலிருந்தே நித்த நித்தம், குறி தவறினாலும் கவலைப் படாமல், ஏசல் பாணங்கள் சரமாரியாகக் கிளம்புகிறது - துவக்கத்தில் தம்பி, உன் போன்றவர்களுக்குக் கோபமாகக்கூட இருந்தது. இப்போது நாலு நாளைக்கு அவ்விதமான பாணம் கிளம்பாவிட்டால், ஐயோ பாவமே; என்ன உடம்புக்கு, என்று கேட்கும் பரிதாப உணர்ச்சி அல்லவா வருகிறது - அந்த தூற்றல் பாணங்களைப் பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாராம் ஏவும் கண்டனக் கணை பிரமாத மானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டாராம் கணைவிடுகிறது. நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம் கணைவிடுகிறது!! பொறுமை, அமைதி, கண்ணியம் எனும் அருங்குணத்தையும் பெறவும்; தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் வீசும் நிந்தனையைப் பொருட்படுத்தலாகாது என்ற உள்ளப்பாங்கையும் நாம் பெற இப்போதும் குருபீடம் அருள் புரிகிறது!! இன்னும் நமக்கென்ன குறை!! குருபீடத்தில் நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறவாமல், நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். என்னைப் பொறுத்த வரையில், தம்பி! நான் அங்கு இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும் பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம்-என் உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற்றுக் கட்சிக்காரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக் கேட்டுக் கொள்ளமுடிகிறது; அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தான் இவ்விதம் கூறுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 3-7-1955 அங்கே பவனம் இங்கே படம்! பம்பாயில் பீரஹத் பாரதிய சமாஜம்- வெளிநாடு களில் திராவிடர் நிலை - நம் நாட்டில் அகதிகள் உயர்நிலை. தம்பி! ஆறடுக்கு மாடிகொண்ட மாளிகை எழும்பப் போகிறது - பன்னிரண்டு இலட்ச ரூபாய் செலவில்! சர்க்காரின் திட்டங்களிலே ஒன்று போலும் என்று எண்ணிவிடாதே தம்பி! ஒரு சமாஜம் கட்டப்போகும் அரண்மனை இது. அரண்மனை மட்டுமல்ல, ஆராய்ச்சிக் கூடமுங்கூட! பீரஹத் பாரதிய சமாஜம் என்பது இதன் பெயர்-இதன் பணி, வெளிநாடுகளிலே சென்று தங்கியுள்ள இந்தியர்களுக்கும் இடையே தொடர்பு, தோழமை ஏற்படுத்தி வைப்பது. இது மட்டுமல்லாமல், வெளிநாடு சென்றோரின் வரலாறு பற்றிய நுணுக்கங்கள், செல்லவேண்டிய காரணம் என்ன, சென்றபோது அடைந்த சிரமம் எப்படிப்பட்டது, சென்று அங்கு கண்ட அனுபவம் எத்தகையது என்பன போன்றவைகளைக் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும். இத்தகைய நேர்த்தியான நோக்கத்துக்காக, அண்ணாந்து பார்ப்போரின் கழுத்து வலி எடுக்கும் அளவு உயரமாக, அன்னிய நாட்டினர் பார்த்து ஆச்சரியப்படத் தக்கவகையில், சமாஜக் கட்டிடம் சமைக்கப் போகிறார்கள். மாளிகை அமைக்க 12 இலட்சம், அதிலே மற்ற வசதிகள், ஒரு படிப்பகம் உட்படக் காண மற்றோர் நாலு இலட்சம். இதற்கு நிதி குவிகிறது. இந்திய சர்க்காரிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது. கருத்தறிந்தால் போதாதா, நன்கொடை வாயு வேகம் என்கிறார்களே, அவ்விதம் வந்து சேரப்போகிறது. பம்பாயில்! - இங்கா கட்டுவார்கள்! பம்பாயில்தான். கோடீஸ்வரர்களின் கோட்டத்தில்தானே, இத்தகைய கொலு மண்டபம் அமைக்க முடியும்; அமைக்கிறார்கள். இந்த பவனத்தில், வெளிநாட்டார் வந்து தங்க, வகை வகையான ஏற்பாடுகள். வெளியிலிருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு அறுசுவை உண்டி. செவிச் சுவை உண்டு. சிந்தனைக்கும் விருந்து தருவார்கள் - படிப்பக மூலம். இவைகளுக்கான நிதி திரட்டும் ஏற்பாடு, விமரிசையாகத் துவக்கப்பட்டு, வேகமாக வளர்ந்து, இப்போது வெற்றிக் கட்டத்தை நோக்கித் துரித நடைபோட்டுத் செல்கிறது. வெளிநாடுகளிலே வதியும் இந்தியர்கள்! - என்ற சொற்றொடரைக் கவனித்தாயா, தம்பி. பொருள் எளிதாயிற்றே, இதை ஏன் கவனப்படுத்துகிறாய், என்று கேட்டுவிடாதே. பொருள் எளிதுதான், ஆனால் இதிலே புதை பொருளும் இருக்கிறது, அதைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல. இந்தியர்கள் என்ற பட்டியலில் நாமும் இருக்கிறோம். நம்மவர்கள் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள் - ஆமாம். பல இலட்சம்! வடக்கத்தியர்களும் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள். வெளிநாடுகளிலே சென்றுள்ளவர்களை, வடவர் திராவிடர் என்று இரு பிரிவாக்கிக் காட்டுவதற்குக் காரணமும் இருக்கிறது - அதிலே நாடு அறியவேண்டிய கருத்தும் நிச்சயமாக இருக்கிறது. வடவர் வெளிநாடுகள் சென்று வதிகிறார்கள் - திராவிடர் வெளிநாடு சென்று வதைபடுகிறார்கள்.. வெளிநாடு சென்றுள்ள வடவரில் பதினான்கணாபாகம், முதலாளிகளாய், நிலச்சுவான்தார்களாய், ஆலைகளின் சொந்தக்காரர்களாய் வாழ்கிறார்கள். அவர்கள் சென்று வாழும் இடங்களிலே, அரசியல் சூத்திரக் கயிறுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். வெளிநாடு சென்றுள்ள வடவரிலும், கிழக்கு ஆப்பிரிக்கர் மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலே சென்று தங்கி, சீரும் செல்வாக்கும் பெற்றுள்ள வடவர்களுக்கு அங்கே உள்ள பிரச்சினை; சொத்துகள் வாங்க உரிமை தரப்படவேண்டும்; அரசியல் ஆதிக்கத்திலே கிடைக்கும் பங்கின் அளவு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்; வேறு வேறு நாட்டவரிடமிருந்து கிளம்பக்கூடிய வியாபாரப் போட்டிகளை வேரறக்களைவதற்கு இந்திய சர்க்கார் தக்க திட்டம் தயாரித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்; என்பவைகளாகும். கூலி போதவில்லை, கும்பி நிரம்பவில்லை, கொட்டும் குளிரைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லை, கொடுக்கும் கசையடியால் பீறிட்டு வரும் குருதியைத் துடைக்கவும் நேரமில்லை, வேலையில் நிம்மதியுமில்லை. அது நிலைத்து இருக்கும் என்பதற்கும் உறுதி இல்லை, - இவைகளல்ல, பவனபுரியினருக்குள்ள பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளெல்லாம் நம்மவர்களுக்கு - நாடாண்ட இனம் என்று கூறுகிறோமே, அந்தத் திராவிட மக்களுக்கு - வெளிநாடுகளிலே வாழ்பவர்களுக்கு அல்ல - வதைபடுவர்களுக்கு! பவனம் அமைகிறது, அவர்களுக்கு படகு அழைக்கிறது, நம்மவர்களை! பல்வேறு நாடுகளிலே பரங்கியர் போலாகி விட்டுள்ளனர், அவர்கள். சென்ற இடமெங்கும் வறுமைச் செந்தேள் கொட்டுகிறது, திராவிடரை. தேயிலைத் தோட்டம் அமைக்கிறார்கள், மோட்டார் பஸ்கள் நடத்துகிறார்கள், பல சரக்குக் கிடங்குகள் அமைக்கிறார்கள், அவர்கள். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து, அட்டைக்கடி அரணைக்கடி பெற்று, ஆவி பிரியாதது ஒன்றுதான் பாக்கி என்று கூறத்தக்க அவல நிலையில் இருக்கிறார்கள், திராவிடர்! ராஜாங்கத்திலே நாங்கள் ஏன் நடு நாயகர்களாக்கப் படக் கூடாது? என்று கேட்டு, புருவத்தை நெரித்துக் காட்டுகிறார்கள், அவர்கள். ரப்பர் பாலை எடுத்துவிட்டு, இராத்தூக்கமின்றி, கைகளைப் பிசைந்தும், கண்களைக் கசக்கிக்கொண்டும், கலங்கி நிற்கிறார்கள், திராவிட மக்கள். அவர்கள் எதிர்காலத்தை மேலும் எழிலுள்ளதாகவும், நிலையை ஏற்றமுள்ளதாகவும் செய்ய, பவனம்! நம்மவர்களுக்கு, இந்த ஒரு வேளைக் கஞ்சியும் ஏன் தரவேண்டும் என்று சிங்களம் பேசிக்கொண்டு, சிங்கக் கொடி சர்க்கார் படகுகளைக் காட்டுகிறது, ஏறிச்செல்-எங்கள் நாட்டிலே இடமில்லை, போ, போ! என்று. இவர்களுக்கு, ஒரு குடில் இல்லை இங்கு. அவர்களுக்காக அக்கறை காட்டும் அன்பர் குழாம், ஆறடுக்கு மாடி கட்டுகிறது - ஆனந்தத்துடன் சிந்து பாடுகிறது! ஏன்? அவர்கள், ஆளும் இனத்தினர்! திராவிடர், அடிமை இனத்தவராக்கப்பட்டுவிட்டனர்! வேங்கைக் காட்டிலேதான் நரி ஆட்சி நடக்கிறதே - நரிக்குத்தானே பிறகு, எல்லா வைபவமும் கிடைக்கமுடியும். திராவிடர்கள் இலங்கையில், பர்மாவில், மலாய் நாட்டில் எங்கும் இன்று இடர்ப்பட்டு, இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களின் வாழ்வு துலங்க, வகை என்ன, வழி என்ன என்பதற்கு, ஓர் அறிவியற்கூடம் இல்லை, ஆற்றல் அரங்கு காணோம். அங்கே ஆறடுக்கு மாடி அமைத்து அந்தப் பவனத்தில் ஆராய்ச்சி நடத்தப்போகிறார்கள், ஏன் சென்றனர்? எப்படிச் சென்றனர்? சென்று எவ்வகையில் அங்கு வாழ்வு பெற்றனர்? என்பன பற்றி! துரத்தி அடிக்கிறதே இலங்கை சர்க்கார், அந்தத் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் திராவிட மக்களுக்கு, மீட்சிக்கு மார்க்கமுண்டா, என்று கேட்க நாதியில்லை, கவனிக்க நேரமில்லை. கண் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது, ஆனால் இந்தப் பிரச்சினையைக் கவனிக்க அல்ல. இலங்கை சர்க்கார், திராவிட மக்களைத் தேளெனக் கொட்டி, அம்மக்கள் தேம்பித்தவித்துக் கொண்டிருந்தபோது,விஜயலட்சுமி பண்டிட் அங்கு பவனி சென்றதும், அதுபோது ஆசியாவின் ஜோதியின் குடும்பக் குமரிகள், குதூகல விருந்திலே கலந்து கொண்டது மட்டுமல்ல, கொத்தலாவலையுடன் மேனாட்டு முறையில் நடனமாடி ரசித்ததும் தம்பி, நாடு கண்ட காட்சி! கண்ணீர் பொழிகிறான், காவிரிக் கரைக்காரன்; பன்னீரில் குளித்தெழுந்து, பரிமள கந்தம் பூசி, பட்டுப் பட்டாடை அணிந்து கொண்டு, பரங்கியர் முறையிலே "பால் டான்சு’ ஆடினர், பண்டிதரின் இல்லத்துச் செல்வக் குமாரிகள் - படாடோபம் கூடாது - ஆர்ப்பாட்டம் ஆகாது - செல்வச் செருக்கு கூடாது - ஏழை மக்கள் புழுப் போலத் துடிக்கும் போது பணக்காரர்கள் பகட்டாக வாழ்ந்து காட்டுவது வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பண்டிதர், இந்த அக்ரமத்தைக் கண்டித்தாரில்லை. பிரான்சுப் புரட்சி வெடிக்கும் முன்பு இது போல நடை பெற்ற துண்டு - மாளிகையிலே மதுக்குடம் உருளும், இடை நெளியும், கடைசிவக்கும், கனவான்கள் கனகப் பந்துகளைப் பெறுவர் காரிகையர் கோலமயில் போலாடுவர், குயிலெனக் கூவுவர், சாகசச் சமரில் யாருக்கு யார் தோற்பது என்பதறிய முடியாதது பிரச்னையாகும், இந்த அநீதியைத் தடுத்திட "காய்கதிர்ச் செல்வனே! நீ யாவது முயன்று பார்’’ என்று கூறிவிட்டு, நிலவு மங்கை மறைவாள். கோழி கூவும், கோகிலங்களின் குறட்டை கேட்டு அஞ்சும் - அதே நாட்டில், வயலில் செந்நீரும் கண்ணீரும் சேறாகும்; கருவுற்ற காரிகையின் கதறலொலியைக் கேட்கக் சகியாத கணவன், கர்த்தனின் ஆலயமணிச் சத்தத்தைக் கிளப்பி, சிந்தனையை வேறு பக்கம்திருப்பிட முயல்வான். சவுக்கடி ஒரு புறம், சகதியில் வீழ்தல் மற்றோர் புறம், பட்டினிச் சாவு ஒரு பக்கம், பயங்கர நோய் மற்றோர் பகுதியில், என்று இவ்வண்ணம் ஏழை எளியோர் வதைபடுவர். பவனம் அமைக்கிறார்கள், பம்பாயில், திருட்டுப் படகேறியா வந்தாய், திரும்பிப் போ, என்று துரத்துகிறார் கொத்தலாவலை, திரு இடத்தவரை. வடநாட்டினன் என்றால் அவன் அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும் இனத்தவன் என்ற காரணத்தால், மதிப்பும் சலுகையும் பெறுகிறான். அகதிகளுக்காக இந்திய சர்க்கார் அள்ளித் தந்த பணம் கொஞ்சமா? அகதிகளுக்கு இங்கு எல்லாவகையான வியாபாரமும் செய்து கொள்ள, வழியும், வசதியும் தரப்பட்டன. புதிய அங்காடிகளே அமைக்கப்பட்டன. அலுவலகங்களிலே நுழைவர் அகதிகள் -ஆடவனாக இருந்தால் ஆத்திரத்தோடு சொல்வான், நானோர் அகதி - என் சொத்து அத்தனையும் பாகிஸ்தானில் பறிபோய்விட்டது - பத்து ரூபாய் தருவாயா - என்று கேட்பான். இரண்டோ மூன்றோ கிடைக்கும், இவ்வளவு அற்பனா நீ, என்று கேட்பது போல, நம்மை முறைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு போவான் ஆரணங்குக்கோ இதழில் கீதம், கண்ணில் நடனம், - நம்மவர்களோ, நாலோ ஐந்தோ அதிகம் தர இயலவில்லையே என்ற கவலையுடன் தருவர். ஒரு நமஸ்தே, கிடைக்கும்; ஒரு பெருமூச்சுப் பிறக்கும். அகதிகளுக்காக ஆற்றோரத்தில் அழகு நகர்கள் உண்டாக்கப்பட்டன திராவிடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டன. இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள் திராவிடர் - நாட்டற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படுகிறார்கள் - யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்? இந்தப் பிரச்சினையைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார். எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக் கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராஜரோ, இது ஒரு பிரச்சினையே அல்ல - இலங்கையிலிருந்து வருபவர்கள், தாங்களாகவே இங்கு வேலைதேடிக் கொள்வார்கள், பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடுகிறார். பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படீல், கிழக்கு ஆப்பிரிக்கா சென்று, அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்து கொண்டு வந்திருக்கிறார் - இந்த பவனம் அமைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இலட்சக் கணக்கிலே பணம் தந்து, பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது, வடவரால், கண்ணீரைத்தான் காண்கிறோம் இலங்கையில் இடர்ப்படும் திராவிடரிடம் - அதைக் காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அவர்களுக்கென்று இங்கோர் தாயகம் இருக்கிறது. எல்லா வளமும் கொஞ்சும் நாடு. எனினும், அவர்களுக்கு இங்கு ஒரு கவளம் சோறு இல்லை. அவர்கள் படும் அவதியைத் துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்க்கார் இல்லை. அவர்கள் சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து சேரும் போது, விதவை மகளைக் கட்டித் தழுவி விம்மிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு. வாழ்கிறார்கள் வளமாக வெளிநாடுகளிலேயும், வடவர்; அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல். "தாராவி எங்கே இருக்கிறது?-’’ என்று நான் கேட்டேன் - என்னை அழைத்துச் சென்ற பெரியாரிடம். பம்பாய் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் அழைப்பின் பேரில் அங்கு போயிருந்தோம். “தாராவியா?…’’ என்று கேட்டபடி, இப்புறமும் அப்புறமும் பார்த்தார். அவருடைய நாசி விரிந்தது, குவிந்தது,- என்ன இது என்று நான் கூர்ந்து கவனித்தேன்.”இதோ அருகாமையில் தான் தாராவி - நாற்றமடிக்கிறதே, தெரியவில்லையா?’’ என்று கேட்டார் - கேட்டுவிட்டு விளக்கமளித்தார். தோல் பதனிடுகிறார்கள், அந்தத் துர்நாற்றம் அடிக்கிறது. இப்படிப் பட்ட இடம்தானே நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும், அதனால் தான் தாராவி அருகாமையில் இருக்கிறது என்று கூறினேன் என்றார். உண்மையாகவே, தாராவியை நெருங்கிக் கொண்டிருந்தோம். திராவிடர் வடநாடு ஆனாலும் இலங்கையானாலும், சென்று வாழ்கின்றார்கள் என்பதல்ல பொருள், வதைபடுகிறார்கள். கங்கைகொண்டான், இமயத்தில் கொடி பொறித்தான்’ ஈழம் சென்றான், கடாரம் வென்றான், சாவகம் சென்றான், யவனம் கண்டான் என்றெல்லாம் ஆராய்ச்சி அறைகிறது - உண்மையிலேயே, நமது இதயத்திலே அறைவது போலத்தான் இருக்கிறது, ஆராய்ச்சியாளர் கூறும்போது. இன்றோ! பம்பாயில் பவனம் கட்டுகிறார்கள், பதினாறு இலட்சம் செலவிடுகிறார்கள் - பாண்டியன் பரம்பரை என்ற பட்டயம் பெற்றுள்ள திராவிடர்கள் "கள்ளத் தோணிகள்’ என்று நிந்திக்கப்படுகிறார்கள். தொழிலெல்லாம் அங்கே, துரைத்தனம் அங்கே என்று ஆகிவிட்ட போது, ஒரு பவனம் தானா கட்ட முடியும்! வடநாடு, தென்னாடு என்று பேதம் பேசாதே, பவனம் பம்பாயில் இருந்தால் என்ன, அதற்குச் சாக்கடை சுத்தம் செய்யும் மேஸ்திரி யார் தெரியுமா? நான் தான்; தெரிந்து கொள் - என்று நம்மை மிரட்டுகிறார் அழகேசனார். அவர்களின் கருத்திலே, இலங்கைத் திராவிடர் பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகக் கூடத் தெரிவதில்லை - பிரன்சுப் பிரபுக்களிடம் பில்லைச் சேவகம் பார்த்துப் பிழைத்து வந்தவர்கள், பிரபு போதை மிகுதியால் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், கோப்பையில் மிச்சமாக இருந்த பானத்தைப் பருகிவிட்டு, நானும் இப்போது பிரபுதான் என்று குளறுவராம். கேளுங்கள் கோவைக் கோமானை, விருதுநகர் அண்ணலை, சோப்புச் சீமானை, தண்ணீரில்லாத ஆறுக்கு இரும்பே சேராத பாலம் கட்டிப் பரவசப்படும் ஓமலூர் கனவானை - செச்சே! தொழில் எங்கே வளர்ந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில்தானே - என்ற சமரசம் பேசுகிறார்கள் - அதற்காகச் சம்பளமும் தருகிறார்கள்! ரகுபதி ராகவ ராஜாராம் - பதீத பாவன சீதாராம் - கியாகர்ணா பகவான் - வைஷ்ணவ ஜனதோ இப்படிப் பஜனைப் பாடுகிறார்கள்; பகவத் நாமத்தைக் கூறுகிறார்கள் பாலகர்கள். பாபா! மாராஜ்! பாய்யோ! சேட்ஜீ! நமஸ்த்தே; நமஸ்த்தே! என்று கூவிப் பிச்சை எடுக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், மேற்குவங்கம் இங்கிருந்தெல்லாம், சிறார்களை ஒரு கயவாளிக் கூட்டம் ஏய்த்து அழைத்துக் கொண்டு போகிறதாம். உங்களுக்கு நல்ல சாப்பாடு; நல்ல துணிமணி, படிப்பு சொல்லித் தருகிறோம் எங்களோடு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏழை எளியவர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகிறார்கள். தொலை தூரத்தில் அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்களை பிச்சையெடுக்கச் சொல்லிப் பயிற்சியளிக்கிறார்கள். பஜனை பாட,பல்லைக் காட்டிக் கெஞ்ச, நமஸ்த்தே சொல்ல, கண்ணீர் சிந்த - இத்தகைய பாடம் சொல்லிக் கொடுத்து, சிறார்களை பிச்சை எடுக்கச் செய்கிறார்கள். அந்தச் சிறுவர்கள், இம்சை தாளாமல், பிச்சைக்காரர்களாக, குழல் ஊதிக் கொண்டும், மேளம் கொட்டிக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும், உள்ளம் உருகச் செய்யும் பாடல்கள் பாடிக் கொண்டும், தெருத் தெருவாகப் பிச்சை எடுத்து, அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்கிறார்களாம் - சோறு, கந்தல் - இவை கிடைக்குமாம் சிறுவர்களுக்க. ஓடிவிட முயன்றால, உதை, குத்து. பிச்சைக் காசு குறைந்தால் தலையில் குட்டு, கன்னத்தில் அறை, இப்படிக் கொடுமைகள்! 1400-சிறுவர்கள்; 147-சிறுமிகள் காப்பாற்றப்படும் ஒரு ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் - நீங்கள் தருகிற பணம் அந்த ஆசிரமத்துக்குத்தான் என்று புளுகிப் பிச்சை எடுக்கும்படி, சிறுவர்களை, அக் கயவர்கள் மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். போலீசுக்கு, இந்த அக்ரமம் தெரிந்து, இப்போது கயவர் சிலர் பிடிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. டில்லி சர்க்காரில் மந்திரி வேலை பெற்றுக் கொண்டு, இங்கே அடிக்கடி பவனிவந்து வடநாடு தென்னாடு என்று பேசுவது கூடாது, அகில பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவத்தைத் தாரகமாகக் கொள்ள வேண்டும் என்று இங்கு "பிரசங்கம்’ செய்பவர்களின் மீது நினைவு சென்றது எனக்கு, இந்தச் செய்தியைப் படித்தபோது. ஏய்த்துப் பிழைப்பவர்கள் ஏமாளிச் சிறுவர்களைப் பிச்சைக் காரர்களாக்கி, பணம் பறிக்கிறார்கள். பதவிக்குப் பல்லிளிப்போரை, பசப்பிடத் தெரிந்த வடநாட்டுத் தலைவர்கள், மந்திரி வேஷம் போடச் செய்து, தொண்டரடிப்பொடி ஆழ்வார்களாக்கி, திராவிடத்திலே "பஜனை’ செய்யச் சொல்கிறார்கள். இங்கே வரி வசூலித்துத் தருகிறார்கள் - பஜனையும் நடத்துகிறார்கள் - பாதி தேங்காய் மூடியும் ஒரு பிடி சுண்டலும் கொஞ்சம் வெண் பொங்கலும் கிடைக்கிறது - உண்டு, உருசி உருசி! என்று கூவி ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள் இந்த அடிவருடிகள். இவர்களின் இனத்தவர், திராவிடர், வெளிநாடு சென்றாவது வாழ்வு நடத்துவோம் என்று கடல் கடந்து சென்றும், வறுமையையே கண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் சார்பாக வாதாடவும் வகையற்றுக் கிடக்கிறார்கள். - அதேபோது, வெளிநாடுகளிலே வியாபாரக் கோமான்களாகி வடவர் கொழுக்கிறார்கள் - வெளிநாடு சென்றுள்ளவர்களின் சீர்சிதையாதிருக்கப்பாதுகாப்புத் தேடப்படுகிறது, ஆறடுக்குப் பவனம் கட்டப்படுகிறது. அங்கே பவனம்! இங்கே? தம்பி, அழகேசர்களின் கவனமெல்லாம், தங்களுக்கு அடுத்த முறை என்ன பதவி கிடைக்கும் என்று ஆருடம் பார்ப்பதிலும். நேருவின் தயவைப் பெற்றால் எங்காவது ஒரு ராஜபவனத்தில் கொலுவிருக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று ஏங்கிக் கிடப்பதிலும்தான் செல்லும். அவர்கள், ஏன் வடநாடு, தென்னாடு என்று பேசுவது பேதமை என்று கூறுகிறார்கள் என்ற சூட்சமம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது; எனவே, அவர்களின் பேச்சுப் பற்றிக் கவலைப் படாமல், நீ, வடநாட்டவர்கள் பவனங்களில் வாழ்வதை எடுத்துக் காட்டி, இது நியாயமா? ஏன் இதனை அனுமதிக்க வேண்டும்? எத்தனை காலத்துக்கு இதைச் சகித்துக் கொள்ள முடியும்? நமக்கென்று ஓர் நாடு இல்லையா? அது ஏன் அன்னியரின் வேட்டைக்காடாகி இருக்கிறது? என்று கேட்டுக் கேட்டு அவர்களின் முகம் கேள்விக் குறியாக மாறும்படி செய். தம்பி! பிறகு பார், இந்த அழகேசர்களின் நிலையை! ஆப்பசைத்த மந்தி கதை தெரியுமல்லவா - சிறுவனாக இருக்கும் போது சொல்வார்களே - அந்த நிலைதான்! அங்கே பவனம், தம்பி, இங்கே படகுப் பயணம். அங்கே ஆறு அடுக்கு மாளிகை, இங்கே சேரி. இதை எடுத்துக் காட்டு, தம்பி; நித்த நித்தம் எடுத்துக் காட்டு; தொடுக்கப்படும் தூற்றல் கணைகளைத் துச்சமென்று எண்ணி தூய உள்ளத்துடன் தாயக விடுதலைக்கான தன்னிகரற்ற தொண்டாற்றிக் கொண்டிரு. பிறகு பார், நாட்டிலே புதியதோர் பொலிவு பூத்திடுவதை; உன் பணியினால், நம் நாடு பொன்னாடு ஆகத்தான் போகிறது. ஒப்பற்ற பணியிலே தம்பி, நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உன் அருந்திறனை நம்பித்தான், மார்தட்டி நின்று மாற்றாரிடம் சொல்லி வருகிறேன், திராவிட நாடு திராவிடருக்கே என்று. அன்புள்ள அண்ணாதுரை 17-7-1955 போர்! போர்!! பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டமும் தி.மு.க.வும். தம்பி! போர்! போர்! போர்! - இப்போது உலகிலே ஒரு பயங்கரமான போர் மூண்டு, மனிதகுலமே அழிக்கப்பட்டுப் போய் விடுமோ என்று அறிவாளர்களெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்களே, அத்தகைய போர் எழாது, என்று தைரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்ளக்கூடிய சூழ்நிலை மலர்ந்திருக்கிறது - துள்ளித் திரியும் குழந்தைகள், மொட்டுகள், பிஞ்சுகள். சமர்ச் சூறாவளியால் பாழாகா என்ற தைரியம் பிறந்திருக்கிறது. இது, உலக நிலையைப் பொறுத்துக் காணப்படும், களிப்பூட்டும் செய்தி. ஆனால் இங்கே, நமது மாநிலத்தில், போர்! போர்! போர்! என்ற முழக்கம், பல்வேறு முனைகளிலிருந்து கிளம்பி விட்டது. ஜல்லடம் கட்டி, சங்கம் ஊதி, கட்கமேந்தி, களம்குதித் தோட, கட்டளையை எதிர்ப்பார்த்துக் கொண்டு கணக் கற்றவர்கள் (போர் முடிவு பெற்ற பிறகுதானே கணக்குத் தெரிய முடியும்) உள்ளனர். போர்! போர்! எல்லையைக் காத்திடும் ஏற்புடையதோர் போராட்டம் வருகுது! தொல்லைகளைத் துடைத்திடுவோம், துடை தட்டிக்கொண்டு வாரீர், துந்துபி கேளீர், துரிதமாக வாரீர். . . என்றோர் புறமிருந்து முழக்கம் கேட்கிறது. கோவா அட்டூழியத்தைக் காணீரோ! அந்த அக்ரமத்தை ஒழித்திட அனைவரும் ஒன்று சேரீரோ! என்று மற்றொருபுரம், முழக்கம் கிளம்புகிறது! ஆலயங்களிலே அர்ச்சனை நம் அருந்தமிழ் மொழியிலன் றோ இருத்தல் வேண்டும், அத்திக அன்பர்காள்! அஞ்சாது போரிடவாரீர், அரன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெஞ்சமரில் ஈடுபட வாரீர், என்று வேறோர் போர் முழக்கம் கேட்கிறது. பாட்டாளிகளின் துயர் துடைக்கும் போரன்றோ போர்! மற்றவை பேரளவு போர் என்ற பெயர் பெறுதலும் ஆகுமோ! ஆண்மையாளர்களே! அணிவகுத்து நில்லுங்கள்! அழைப்பைச் செவியில் கொள்ளுங்கள்! போர்! போர்! புத்துலகம் காணப் பெரும் போர்! புனிதப் போர் ஒரே போர்! ஒப்பற்ற போர்! - என்று கம்யூனிஸ்டுக் குரல் கணகணவென ஒலிக்கிறது. பெரியாரின் ஆகஸ்ட்டுப் போர் பற்றிய அறிவிப்பும் வந்து விட்டது. ஆகஸ்ட்டு முதல் நாளன்று தேசியக் கொடிகளைத் கொளுத்தி. அதன்மூலம் வடநாட்டுச் சர்க்காரை, திராவிடத்தின் மனநிலையை அறியும்படி செய்வது என்பது, போர்த் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காமராஜர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே பெரியார் சென்று கொண்டிருப்பார். திராவிட நாட்டுக்கான பிரச்சினைகளைக் காலாவதி ஆகும்படி செய்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போயிருப்பர், இந்தப் போர்த் திட்டம் கேட்டு. இந்தத் தீனா மூனா கானாக்களுக்கு அரசியல் நாகரீகமே தெரிய வில்லை-பெரியார், கம்யூனிஸ்டுகளை ஒழித்தாக வேண்டும் என்ற புனிதமான (!) கோட்பாட்டுக்காக, இடைத் தேர்தல்களில் காங்கிரசை ஆதரித்து வருகிறார் இது அல்லவா யூகம் அரசியல் கண்ணியம் - ஜனநாயகம் - என்றெல்லாம் பேரிகை கொட்டினர், காங்கிரசின் சின்னசாமிகள் அவர்கள் கண்டார்களா பெரியாரின் மனதிலே உருவாகிக் கொண்டுள்ள போர்த்திட்டம் பற்றி. இப்போது ஆகஸ்ட்டுப் போர்பற்றி அவர் அறிவித்ததும், அந்த வட்டாரம், திகைத்துப்போய்க் கிடக்கிறது. தம்பி, நமது வட்டாரத்திலே என்ன கருத்து நிலவுகிறது என்பதைக் கேட்க ஆவலாக இருப்பாய்; கேள். 1. ஆகஸ்ட் கிளர்ச்சியில் ஈடுபடும்படி எல்லாக் கட்சிகளையும் அழைக்கிறேன் என்று பெரியார் கூறுவதன் பொருள் என்ன? ஓஹோ! எல்லாக் கட்சிகளும் என்றதும், உனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது: சகஜந்தான்! எல்லாக் கட்சிகளும் என்றால், நாட்டிலே உள்ள கட்சிகள் எல்லாம் என்று பொருள் கொள்ளலாமா! பொருத்தமாக இராது! காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பிரஜா, இந்து மகாசபை, தமிழரசு ஆகிய கட்சிகள் யாவும், இந்தி விஷயமாகக் கொண்டுள்ள எண்ணம், இந்தி கூடாது என்பதல்ல; கட்டாயப்படுத்த வேண்டாம்; அவசரப் படுத்தவேண்டாம் என்பதுதான். பெரியார், இந்தி கூடாது, ஏனெனில் இந்தியாவின் ஆட்சிக்குள் திராவிடம் இருத்தல் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டவர். எனவே இந்தியை எதிர்த்து பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் ஈடுபடாது; அக்கரை காட்டாது. 2. அப்படியானால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ள கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தானே! ஏன், பெரியார், தி.மு.க.வுக்கு அழைப்பு என்று பேசவில்லை. என்னைக் கேட்கிறாயே! 3. கட்சிகள் பல ஒன்று கூடி, ஒரு கிளர்ச்சியில் ஈடுபடுவது உண்டா? ஏன் இல்லை! உண்டு!! இலட்சியம் ஒரேவிதமாக இருந்தால், ஒன்று கூடுவது சாத்தியமே 4. அதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது! அந்தக் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கலந்துபேசித் திட்டம் வகுத்துக்கொண்டு பிறகு செயலில் ஈடுபடுவது. முன்பு ஒரு முறை நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கான திட்டமும் முறையும் வகுத்துக்கொள் வதற்காக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக ஒத்த கருத்தை வெளியிட்டு வந்த ம.பொ. சிவஞானம் அவர்களை அழைத்து, மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் கலந்துபேசி, திராவிடர் கழகம் (அப்போது நாம் அங்கே தான்) பணியாற்றி - ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டி இருக்கிறது. ம.பொ.சி. அப்போதும் தமிழரசுக் கழகம் தான் நடத்திக் கொண்டிருந்தார். 5. பெரியார் அப்படி ஏதும் செய்யக் காணோமே? தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம். தி.மு.க. பொதுச் செயலாளரை அழைத்துப் பேசி, திட்டம் வகுத்தால், ஒன்று கூடிக் கிளர்ச்சி நடத்தும் ஆர்வம் ஏற்படும் என்று கூட வேண்டுகோள் விடப்பட்டது. 6. ஏன் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா? 7. இப்போது, எல்லாக் கட்சிகளையும் அழைப்பதன் பொருள்? நல்ல திட்டம் என்று நம்பி, வருவதானால் வரட்டும் என்பதுதான். 8. வராவிட்டால்? வராவிட்டாலா! அழைத்தும் வரவில்லை, அற்பர்கள் என்று எப்போதும் ஏசுவோர் ஏசுவர்! 9. வருவதானால்? வந்தார்கள் - என் திட்டத்தின்படி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்! வேறு வழி, இதுகளுக்கு? என்று குத்தல் பேச்சு கிளம்பும். அவ்விதமாக இந்தி எழுத்து அழிப்புப் போரில் ஈடுபட்டபோது ஏசினர் என்று நமது துணைச் செயலாளர் துயரத்துடன் கூறுகிறார். 10. அப்படியானால் என்ன செய்யலாம்? அதென்ன என்னைக் கேட்கிறாயே! உனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது-அது அழைக்கப்படவில்லை - ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் அவரை அழைக்கக் காணோம் - வேறொர் கட்சி, தன் நிர்வாகக் கமிட்டியில், தனக்கு சரியென்று பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி கிளர்ச்சி துவக்குகிறது - நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே - நீதான் சொல்லேன்-! 11. அப்படியானால். . . . . . . போர் நடைபெறப் போகிறது-இதிலே நாங்கள் காட்டப்போகும் அபாரமான ஆற்றலையும், அடையப் போகும் வெற்றியையும் அறிவிலிகாள்! ஆற்றலற்றதுகாள்; காண்மின், காண்மின்! - என்று கூறிவிட்டுக் களம் செல்லும் கர்ம வீரர்களைக் காண நேரிட்டால், நான் கைகூப்பித் தொழுவேன்! போர் நடைபெறப் போகிறது - அதன் நோக்கம் இது - முறை இவ்விதம் இருக்கும் - இதிலே கலந்து பணியாற்ற வருவாயா, உனக்கு இந்த நோக்கமும் முறையும் புரிகிறதா, பிடிக்கிறதா என்று கேட்டால் கைகூப்பித் தொழுவது மட்டுமல்ல. காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, இது தான் கண்ணியமான முறை, காரிய சித்திக்கு ஏற்ற வழி, பகைவர் கண்டு திடுக்கிடத்தக்க வகையான திட்டம், போர் முறை பற்றிக் கலந்து பேசுவோம், என்று கூறி, ஆர்வத்துடன் பணிமனையில் நுழைவேன். இருவிதமுமின்றி, போர் போர்! போரிடும் ஆற்றலுள்ளவர் களெல்லாம், வரலாம்! வருவோர் சேர்த்துக் கொள்ளப்படுவர் - விளக்கம் கேட்போர், கலந்துரையாட வேண்டுமென்று கூறிடும் துணிவு கொண்டோர் தேவைப்பட்டார். கலந்து கொள்ளாத வர்கள், ஈனப்பிறவிகள், நாட்டுத் துரோகிகள் - அவர்கள் அழிக, அழிக அடியோடு அழிந்துபடுக! என்று சபித்துக் கொட்டினால், நான் என்ன செய்ய முடியும். நீயும்தான் என்ன செய்ய முடியும். 12. நெருக்கடியான சமயம் - இறுதியான போர் - தீவிரமான கிளர்ச்சி - இதிலே நாம் ஈடுபடாமலிருக்கலாமா? நாமும் ஒரு கட்சிக்குப் பொறுப்பானவர்கள்! நாமும் பிறர் பார்த்து மெச்சத்தக்க கிளர்ச்சிகளை நடத்தி, கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். அப்போது உதவிதர, உபசாரம் கூற, ஒரு சிறு புன்னகை காட்ட யாரும் வரவில்லை! மாறாக, அற்பமான கிளர்ச்சி - பயனற்ற வேலை என்று கேலியும் கண்டனமும் பிறந்தது. மேலும், ஆகஸ்ட்டு கிளர்ச்சியோடு எல்லாப் பிரச்னைகளும் முடிந்து விடுகின்றன என்றா பொருள்! எவ்வளவோ கிளர்ச்சிகள் கருவில்! ஒரே நோக்கம் கொண்ட இருவேறு அமைப்புகள் கலந்து பேசி ஒரு திட்டம் தீட்டி, தக்க விதமான கிளர்ச்சி நடத்தும் காலம் ஒன்று வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டியதுதான். அது வரையில் அந்தந்த அமைப்பும், அதனதன் சக்திக்கும் சுபாவத்துக்கும் ஏற்றவகையான கிளர்ச்சியில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. நாம் துவக்கிய மும்முனைப் போராட்டத்தின் போது "விடுதலை’யில் கிளர்ச்சிகள் என்ற அருமையான கட்டுரையில், இந்தக் கருத்துப்பட பெரியார் எழுதியுமிருக்கிறார். 13. போர்முறை பற்றி என்ன கருதுகிறீர்? கொடி கொளுத்தும் போர் முறைபற்றித் தானே! அதுபற்றி நமது கருத்து என்ன, நமக்கு அது உடன் பாடானதா அல்லவா என்று எங்கே கேட்டார்கள் - எப்போது கேட்டார்கள்? பொதுச் செயலாளரை அழைத்துப் பேசியிருந்தால், அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இதுபற்றி என்ன கருதுகிறது என்று தெரிவித் திருக்கக்கூடும். பொதுவாக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட கிளர்ச்சிகளை எல்லாம் வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப்படுத்திவிட்டதால், இப்போது வடநாட்டு சர்க்கார் பரபரப்படையக்வடிய வகையில், கொடியைக் கொளுத்தப் போகிறோம் என்று அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்; இந்தி எதிர்ப்புக்கான கிளர்ச்சியை வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப் படுத்துவதை நாமும் கண்டிருக்கிறோம்; வடநாட்டுச் சர்க்காருடைய கவனத்தைக் கவரும்படி இருக்க வேண்டுமென்றுதான் நாம் இரயில் நிறுத்தக் கிளர்ச்சி நடத்தினோம்,. நாம் கலந்து பேச அழைக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ் காரர்களையும் நமது பக்கம் சேர்க்கும்படியானதாக இருக்க வேண்டும்; கொடி கொளுத்துவது போன்ற முறைமூலம், காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஓர் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்; எனவே வேறு முறையைக் கொள்வோம் என்று எடுத்துச் சொல்லி இருப்போம். இன்று நமது கருத்தினை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் காங்கிரஸ் காரர்களே, நமது கோரிக்கையை உணர்ந்து, மனம் மாறி நமது இயக்கத்துக்கு ஆக்கம் தேடுவதற்கான உதவி அளிக்க முன்வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதாக நமது கிளர்ச்சி இருக்க வேண்டும். அவர்கள் கேட்டாலே வெறுப்பும் வேதனையும் அடையதக்க முறை சரியாகாது, அவர்களை நம்மோடு அழைத்துச் செல்லும் வழியு மாகாது, இந்தக் கொடி கொளுத்துவது என்பதை எடுத்துச் சொல்லி இருந்திருப்போம். நாம் இப்படிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்துதானோ என்னமோ கொடி கொளுத்தும் திட்டம் தீட்டும் கமிட்டிக்கு நமது பொதுச்செயலாளரை அழைக்க வில்லை. பிள்ளையார் உடைப்பின் போதே, நாம், நம்மோடு நாளாவட்டத்தில் வந்து சேர வேண்டியவர் களை, வீணாக வெறுப்படையச் செய்துவிடும் என்றதனால் தான், ஒதுங்கி இருந்தோம். 14. ஒதுங்கி இருந்தால் ஒழிந்து விடுவார்கள் என்று பேசுகிறார்களாமே! திராவிட முன்னேற்றக் கழகம், போராட்டங்களை நடத்தி இருக்கிறது- தனித்து நின்று. திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் துவக்கிய போராட்டம், தாங்கள் தீட்டிய திட்டத்துக்கு ஒத்ததாக இருந்த நேரத்தில், துணையாக இருந்திருக்கிறது. வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டி, தடியடி, சிறை இவைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாங்கிக் கொண்டது. துணை யாரும் கிடையாது! அழைக்கவும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், ஒதுங்கியும் இருந்திருக்கிறது. 144 தடையை மீறி, தடியடி சிறைமட்டுமல்ல, துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம் - தனியாகக் களத்தில் இறங்கி. இரயில் நிறுத்தம், ஆச்சாரியார் வீட்டின்முன் மறியல்-என்பவைகள், மாற்றுக் கட்சிக்காரரெல்லாம்கூட மறக்கமுடியாத சம்பவங்கள் - தனியாகத்தான் நடத்தி னோம் - சர்க்காரின் குண்டுகள் மட்டுமல்ல, ஏசலையும் தாங்கிக் கொண்டோம்; இரத்தம் பீறிட்டது; பிணமும் வீழ்ந்தது. எனக்குத் தெரிந்த அளவில் நமது சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து கவனத்தில் வைத்துச் சொல்கிறேன், நாம் நடத்திய கிளர்ச்சியை ஒடுக்க சர்க்கார் துப்பாக்கியின் போதும், குன்றத்தூரில் தடை உத்தரவை மீறிய நேரத்திலும் தான்! மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாட்டிலே துப்பாக்கிச் சத்தம் கேட்டது - அது நம்மை நோக்கி அல்ல, அக்ரமமாக நமது மகாநாட்டிலே தீ வைத்த காங்கிரஸ்காரரை நோக்கி. எனவே, திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் வடிவம் கொண்ட பிறகு, நாம் ஒரே குடும்பமாக இருந்தபோது கண்டதைவிட, கடுமையும் கொடுமையும் மிகுந்த அடக்கு முறையைச் சந்தித்திருக்கிறோம். அதுபோலவே, அவர்கள் நடத்திய, இந்தி எழுத்து அழிப்புப் போரில் நாமும் ஈடுபட்டோம் - அதற்கான திட்டம் தீர்மான உருவில் நம்மிடம் ஏற்கனவே இருந்ததால். அதுபோலவே, அவர்கள் வடநாட்டுத் துணிக்கடை மறியல் செய்தனர்! அதிலே அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்! கலந்து கொள்ளாதவர்கள் கல்லாவர், மண்ணாவர், கால்தூசு ஆவர், என்று சாபம் கொடுத்தனர். இனி, இதுகள் இருக்குமிடம் தெரியாது ஒழிந்து போகும் என்று எச்சரித்தனர். எனினும், நாம் அந்தக் கிளர்ச்சியில் கலந்து கொள்ளவில்லை-மடிந்துபடவில்லை!! அதுபோலவே, பிள்ளையார் உடைப்பு! நாம் அதிலே ஈடுபட்டோமில்லை! இனி இதுகள் செல்லாக் காசுகள் என்று அவர்கள் ஆருடம் சொல்லாமலில்லை! எனினும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் போக்கினால், வளர்ச்சி குன்றிப்போனதாக, அவர்களே கூறமுடியாது. 15. இவர்கள் கொடி கொளுத்தும் கிளர்ச்சியில் ஈடுபடாவிட்டால் என்ன, நாங்கள் அதிலே வெற்றி காண்போம் கண்டு வெட்கப்படட்டும் என்ற பேசுகிறார்களாமே! பேசட்டுமே, அதனால் என்ன; நம்மைக்கலந்து வகுக்கப்பட்ட திட்டமல்ல அது; அதை நடத்தும் முழுப் பொறுப்பும் அவர்களைச் சார்ந்தது; அதிலே வெற்றி கிடைத்து, கீர்த்தி கிடைத்தால், நமக்கு நிச்சயமாகப் பங்கு வேண்டாம்; அவர்களே அதற்கு உரியவர்கள் என்று நாமே கூறிவிடுவோம் - அவர்கள் களத்திலே, எல்லாத்திசைகளிலும் பாய்ந்து முன்னேறி வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் பெறும்பெற்றி எத்தகையது என்றால் இனிவேறு யாருக்கும் எந்தவகையான வேலையும் இல்லை என்று சொல்லத்தக்க வகையான முழுவெற்றி என்றே வைத்துக் கொள்வோம் அதனால் என்ன, நஷ்டம்; நமக்கென்ன கஷ்டம்? நந்தவனத்துக்கு நாள் பூராவும் நீர் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, கிணற்றடி போகிறான் - பெருமழை பெய்தால், என்ன கஷ்டகாலம்! நாம் நீர் பாய்ச்ச முடியாமல் போய்விட்டதே என்றா ஆயாசப்படுவான்? நமக்கு வேலை இல்லை, மழை வந்தது நல்லதாயிற்று, மழையே வாழி! என்று வாழ்த்துவான்; வெறென்ன!! தம்பி! இவைகள் தானே நீ கேட்க விரும்புவாய்-நீ கேட்பதாக வைத்துக்கொண்டு நானே பதிலும் எழுதிவிட்டேன். இது போதாது! நமது கழகப் பொதுச் செயலாளரின் கருத்து என்ன என்று கேட்பாய். பொதுச் செயலாளரும் துணைச்செயலாளரும் இதே கருத்தினைத்தான் என்னிடம் கூறினார்கள்; நான் உன்னிடம் கூறிவிட்டேன்; நீ, தம்பி! மற்றவர்களுக்குச் சொல்லிவிடு!! அன்பன், அண்ணாதுரை 24-7-1955 சிறை அனுபவங்கள் அபிதான சிந்தாமணி படித்தமை - பெரியாரின் அன்பு - குஞ்சிதம் குருசாமியின் பாசம் தம்பி! உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரே புளகாங்கித மடையலாம் - வீரத் தமிழனின் பழைய வரலாறு மீண்டும் ஓர் முறைகாணும் வாய்ப்பு நேரிடும், கோட்டை கொத்தளங்கள் தூளாகும், கொடிமரங்கள் பெயர்த்தெறியப்படும், முரசு கொட்டுவர், சங்கம் ஊதுவர், பாவாணர் வெற்றிப் பண் இசைப்பர், திருமதிகள் "திருஷ்டி’ கழிப்பர், மக்கள் தெந்தினம் பாடுவர், ஆகஸ்ட்டுப் போரின் அலாதியான அருமை கண்டு என்று எவ்வளவோ மனப்பால் குடித்தேன். இப்படி ஒரேயடியாக என்னையும் அவரை நம்பிக் கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வீரர்களையும் நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று துளியும் எண்ணவில்லை; எனினும், என்ன செய்வது, தோழர் ம, பொ சிவஞானம் அவர்கள் தமது ஆகஸ்ட்டுப் போராட்டத்தை நிறுத்தி விட்டார். என்னைக்கூடச் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார் அழைப்பு வருமென்று எதிர்பார்க்க வேண்டாம், சேருக! சீர் பெறுக! என்றார் நானும் நீயும் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவர் கூறிடும் எல்லைப்போர் நடைபெறட்டும், தமிழரின் தொல்லை ஒன்றுக்கு முடிவு தெரியட்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பிடிமண் அள்ளிப் போட்டு விட்டார், செங்கோலார். தக்க காரணம் உண்டு கேண்மினோ! என்றும் அறிக்கைவிடுகிறார். நேரு பண்டிதரிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்திருக் கிறதாம் - கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னைக் கேட்காதே தம்பி, அவரே கூறவில்லை. இரகசியம் இருக்கு மல்லவா! பாரதத்தின் தலைவரும் தமிழ்மாநிலத்தின் தலைவரும் நடத்திக்கொள்ளும் கடிதப் போக்குவரத்து என்ன சாதாரண மாகவா இருக்கும், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்குக் கூற! ஏதேதோ இருக்கும். நேரு பண்டிதர் கெஞ்சி இருக்கக் கூடும் - கொஞ்சி இருக்கக் கூடும் - எல்லைக்கு ஒரு போரா? ஏனய்யா தலைவரே! அதற்காக ஒரு குழு வேலை செய்ய இருக்கிறதே தெரியுமா? என்று கேட்டிருக்கலாம். என்ன இருக்கிறதோ கடிதத்தில், தெரியாது - கடிதம் பெரிய இடத்தது - எனவே விஷயம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணிக்கொள்வார்கள் என்று ம.பொ.சி. நம்புகிறார், மறுத்தீர் களோ, தமிழின்மீது ஆணையிட்டுவிடுவார்! எப்படியோ ஒன்று, காண்போரும் கேட்போரும் மயிர்க் கூச்செறியும் நிலை பெற இருந்த மகத்தான வாய்ப்புப் போய் விட்டது - ஆகஸ்ட்டுப் போர் நிறுத்தப்பட்டுவிட்டது. இவருடைய போர்ப் பிரகடனம், பிறகு அதை நிறத்தி விட்டதாகத் தரும் அறிவிப்பு இதைக் கவனிக்கும் போது, தஞ்சையில் மாணவத் தோழர்கள் நடத்திய கிளர்ச்சி என் நினைவிற்கு வருகிறது. மாணவர்கள் அங்கு ஒரு தலைமை ஆசிரியர் சம்பந்தமாகக் கிளம்பிய பிரச்சினைக்காகக் கிளர்ச்சி செய்தனர்; இப்போது கிளர்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது - காரணம் மாணவர்களின் கோரிக்கையைக் கவனித்து குறையினைக் களைந்துவிடுவதாக ஊர்ப்பெரியவர்கள், பல கட்சிகளிலும் உள்ள பிரமுகர்கள் - கடிதம் கொடுத்து அல்ல - பொதுக்கூட்டம் போட்டு வாக்களித்தனர் தங்கள் கிளர்ச்சி பலன் தந்தது என்று மாணவர்கள் கிளர்ச்சியை நிறத்தி விட்டனர். ஆகஸ்ட்டுப் போராட்டத்தை அன்பர் சிவஞானம் நிறுத்தி விட்டாரே, அத்துடன், மாணவர்கள் தமது முயற்சியில் வெற்றிபெற்ற தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்படிப் பட்ட போர் அறிவிப்பாளர்களுடன் கூட இருப்பதைக் காட்டிலும், மாணவனாக இருப்பது எவ்வளவோ மேலானது என்று உனக்குத் தோன்றுகிறதல்லவா - எனக்கு அவ்விதம்தான் தோன்றுகிறது, தம்பி. தம்பி, இதைவிட மகத்தான முறையிலே அகாலிகள் கிளர்ச்சி நடத்தி வெற்றிபெற்றுள்ளனர் - பதினாயிரம்பேர் சிறை புகுந்தனர் - நாலைந்து M.P. க்கள் பத்துப்பன்னிரண்டு M.L.A. க்கள் - இவர்களை நடத்திச் செல்ல தாராசிங் எனும் முதுபெரும் கிழவர். தடை உத்தரவை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தப்பட்டது - தடை உத்தரவை சர்க்கார் "வாபஸ்’ பெற்றனர். கிளர்ச்சி நிறுத்தப்பட்டது - தாராசிங்கோ இன்னும் சிறையிலேதான் இருக்கிறார். அகாலிகள் நடாத்திய இந்த அரும்பெரும் போராட்டம்பற்றி அதிகம் தெரிந்திருக்காது நமது மக்களுக்கு - தாராசிங் பாஞ்சாலத்தில் இருக்கிறார் - அவருடைய போர் குறித்து இங்கு முழக்கம் செய்ய எந்த இதழும் இல்லை! நமது நினைவெல்லாம் ஈர்த்திடக் தக்க வகையிலே, இரு கிழமைகளாக இங்கு புயலென வீசி வருவது, பெரியாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிதான். இந்தக் கிளர்ச்சி எந்த வகையில் உருவெடுக்கும் என்று கூறிடும் நிலை, மெல்லிய கோடுகளே தெரிவதால், இப்போதைக்கு, (அதாவது நான் உனக்குக் கடிதம் தீட்டும் போது) இல்லை. உன் கருத்து இக்கடிதத்தில் பதியும் நேரத்தில், பெரியாரின் கிளர்ச்சி, எந்தக் கட்டத்தை அடைகிறது என்பது தெரிந்து விடக்கூடும். தம்பி, இப்படி, போர்! போர்! என்ற முழக்கமும், போர் எப்படி எப்படி எல்லாம் இருக்கப் போகிறது தெரியுமா என்ற ஆர்வமூட்டும் அறிவிப்புகளும் கிளம்பி, என் உள்ளத்தை ஒரேயடியாகக் கிளர்ச்சி வயத்ததாக்கிவிட்டன. பெரியாரின் ஆகஸ்ட்டுப் போரில் நாம் கலக்கவில்லை என்றாலும், போர் பற்றிய முழக்கம் கிளம்பியுள்ள இந்த வேளையில், என் மனமும் உன் மனமும்கூடத்தான், போராட்டங் களில் ஈடுபடும் வாய்ப்புகள் நமக்கெல்லாம் கிடைத்தபோது கண்ட அனுபவங்களைப் பற்றித்தானே எண்ணிடும்! இயற்கை அல்லவா!! நாம் திராவிடர் கழகமாக இருந்தபோதும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். முன்னேற்றக் கழகமாகி வெளிவந்தபோதும் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். எனவே, எங்கும் போர்! போர்! என்று பரணி பாடப்படும் நேரத்தில், பழைய நாட் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக் மனத்திரையிலே பளிச்சுப் பளிச்செனத் தோன்றத்தான் செய்கிறது. எனவே என் சிறை அனுபவங்களிலே சில உனக்குக் கூறுகிறேன் - உன் சிறை அனுபவத்தை எனக்குக் கூறிடுவாய், என்ற நம்பிக்கையுடன். அபிதான சிந்தாமணி "நாலுமாதம்’ என்றார் மாஜிஸ்டிரேட்! நாலு மாதம் என்று லேடி டாக்டர் கூறிடுவது கேட்டு மகிழும் ஆரணங்கு போலானேன். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி 1938-ஆச்சாரியார் ஆட்சிக் காலம் - என்மீது, குற்றம் புரியும்படி தூண்டிவிடுதல். உடந்தையாக இருத்தல் எனும் குற்றங்கள் - வழக்கு நடைபெற்று, அன்று சென்னை எழும்பூர் கோர்டில், நாலுமாதம் என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் இவனுக்கு உண்டு என்று இயக்கமும் இயக்கத்தின் போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்களும் நல்ல தீர்ப்பு அளித்துவிட்டனர் - பரீட்சையில் தேறிவிட்டோம் என்றெண்ணினேன். விவரிக்க முடியாததோர் மகிழ்ச்சி - வெற்றி பெறுகிறோம் என்ற நம்பிக்கை. சென்னைச் சிறையில், பெரியாருடன் ஒரே வரிசைக் கட்டிடத்திலே தங்கியிருக்க நேரிட்டதை ஒரு வாய்ப்பாகவே கொண்டேன். குற்றாலத்துக்கோ, கொடைக்கானலுக்கோ செல்பவர்கள், உள்ளே நுழைந்ததும், தனக்கு வேண்டியவர்கள் - இருப்பது கண்டால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் - எனக்கு, உள்ளே நுழைந்ததும், வந்துவிட்டாயா? வா! வா( ஆறா, எட்டா? நாலா, மூன்றா?’’ என்று கேட்டபடி நண்பர்கள் என்னிடம் அன்புடன் வந்தபோது, அதுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சியைத் தொடர்ந்து அனுபவிக்க முடியவில்லை. காரணம் வீட்டைவிட்டு இந்தக் கூட்டுக்குள்ளே வந்து விட்டோமே என்ற கவலையல்ல; போட்டுக்கொள்ளப் பொடியில்லை! என்ன செய்வேன்? உனக்குத் தெரியுமே, தம்பி! நான் அந்தக்கெட்டபழக்கத்துக்கு ஆட்பட்டு அல்லற்படுவது; கடை வீதியா, சண்முகம் கொண்டுவா, அம்பாய் வாங்கிவா என்று சொல்ல? சிறை!! என் சங்கடத்தை அறிந்துகொண்ட அடிகள் "இது தானே வேண்டியது! இதோ’’ என்று கூறி ஒரு சிறு காகிதப் பொட்டலம் கொடுத்தார் - பொடி’’ நெடி குறைந்து போன நிலை! பக்குவமாகத்தான் மடித்து வைத்திருந்தார்; ஆனால், காகிதத்தில் இருந்ததால் பொடிபதம் கெட்டுக் கிடந்தது - எனினும் எனக்கிருந்த பசி, அசல் சண்முகம் இதனிடம் என்ன செய்யும் என்று களிப்புடன் கூறச் செய்தது. இந்தப் பொடிப் பொட்டலத்தை நான் என்றுமே மறப்பதற்கில்லை. முதல் சிறை அனுபவம் - மூக்குப் பொடிக்கே அலைய நேரிட்டது முதல் அனுபவமல்ல! நாலு மாதமும் நாங்கள் அங்கு, தமிழ்! தமிழ்! தமிழ்! என்ற உணர்ச்சி வயமாகி இருந்துவந்தோம், பெரியாருடன் பன்னிரண்டு மணி நேரம் (இரவில்தான் தனித்தனியாகப் போட்டுப் பூட்டிவிட்டார்களே) ஒன்றாக இருக்க, பேச, கேட்க பழக அருமையான வாய்ப்பு. இரசமான விருந்து. சுவையுள்ள காலமாக அந்த நாலு மாதங்கள் இருந்தன. சிறை செல்கிறேன் என்பதறிந்த என் கெழுதகை நண்பர் புலவர் அருணகிரிநாதர், அங்கு நிரம்ப நேரம் கிடைக்கும், பல்வேறு விஷயங்களைப் படிக்க இது தூண்டுகோலாக இருக்கும் என்று கூறி, என்னிடம் அபிதான சிந்தாமணி எனும் புத்தகம் கொடுத்திருந்தார். அவர் உனக்கு அவ்வளதாகத் தெரிந்திருக்கக் காரணமில்லை, தம்பி, பொதுவாழ்வுத் துறையிலே துவக்கக் கட்டத்தில் எனக்குற்ற தோழராக இருந்தவர் - அவரே ஒரு அபிதான சிந்தாமணி - மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம், பலபல விஷயங்களைக் குறித்து. எல்லா விஷயங்களைப் பற்றியும் ஏதேனும் ஓரளவுக்குக் கூறும் வகையான கல்வியும் கேள்வியும் படைத்தவர் - எனவே அவர், சிறையில் என்னோடு இருப்பது போலவே எனக்குத் தோன்றிற்று அபிதான சிந்தாமணியைப் படிக்கும் போதெல்லாம். அந்த "அபிதான சிந்தாமணி‘யை நான் மறப்பதற்கில்லை. இப்போதும் "அபிதான சிந்தாமணி’யைக் காணும்போதெல்லாம், எனக்கு அந்த நாலு மாதக் கடுங்காவல் நினைவிற்கு வரும்; நினைவிலே அந்தச் சம்பவம் தோன்றியதும், எனக்குள்ளாகவே ஓர் மகிழ்ச்சி, கொள்கை! கொள்கை! என்று கொக்கரித்துக்கொண்டிருந்து விட்டு, அடக்குமுறை கிளம்பியதும் ஓடிவிடும் "கோழை உள்ளம்’ இல்லை அழைத்தார்கள் அறப்போரில் ஈடுபட்டான், சிறைத்தண்டனை பெற்றான், என்று எவ்வளவு குரோத எண்ணம் கொண்டவர்களும் ஒரு சமயமில்லாவிட்டாலும் மற்றோர் சமயம் சொல்லிக் கொள்வார்களல்லவா! முதல்சிறை அனுபவத்தின்மீது அபிதான சிந்தாமணி, இரண்டாவது முறை என்ன தெரியுமோ? கேளேன் அதையும். ஆலாபனம் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாகிவிட்டார்; சென்னை வருகிறார் பவனிக்காக; கூண்டோடு பிடிபட்டுச் சென்னைச் சிறையில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தோம் - 1948 இல்! நிர்வாகக் கமிட்டியினர் அவ்வளவு பேரும் - அதிகநாட்களில்லை - ஒரு வாரம்தான்! அதற்குள் ஆச்சாரியார் வந்தார், பவனி நடத்தினார், கருப்புக்கொடியை வெண்புறா பறக்கவிட்டுக் கொண்டு வானத்திலே வட்டமிடக் கண்டார், கட்டுக் காவல் பலமாக இருந்தும், அத்தனையையும் துளைத்துக் கொண்டு சென்று சிலர் கருப்புக்கொடி வீசிடக் கண்டார். நாங்கள் உள்ளே இருந்தோம். பெரியார் இருக்கிறார்; சம்பத்து அதுபோதுதான் ஆபத்தான டைபாய்டிலிருந்து விடுபட்டு அவன் துணைவி கண்டு பரிதாபப்படத்தக்க (இப்போது பயப்படுவதாகக் கேள்வி! உருவம் கண்டு!) நிலையில் எலும்புக்கூடாக இருக்கிறான். மற்றும் பலர் எல்லோரும்; குடும்பம் முழுவதும்; இருமி இளைத்து ஈளைகட்டிய நிலையில் இருந்த நமது மனதுக்குகந்த அழகிரிசாமி அண்ணன் உட்பட. நானும் அழகிரி அவர்களும் அப்போது பக்கத்துப் பக்கத்து அறை. இரவு நேரத்தில், எனக்கு விருந்து கிடைக்கும் - பக்கத்து அறையிலிருந்து, "காணக் கண் கோடி வேண்டும்’’ - என்று ஆரம்பிப்பார் ஓரடி பாட ! பலே! பலே! ஒன்ஸ்மோர்! என்று நான் இந்தப் பக்கத்து அறையிலிருந்து கூவுவேன். “தூங்கவில்லையா இன்னும் - அடே அப்பா! நீ தூங்கினால்தான் நான் பாட முடியும்; நான் பாடுவதைக் கேட்டு விட்டுக் காலையில் கேலி செய்ய நினைக்கிறாய் - இடங்கொடேன்’’ என்பார்.”அண்ணேன்! உண்மையாக நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் ஆலாபனையும் நடக்கட்டும்’’ என்பேன் - அழகிரி அவர்களின் ஆலாபனமும் அருணசலக் கவிராயர் இயற்றிய கீர்த்தனையும் கிடைக்கும். இரண்டாம் முறையாகக் கண்ட சிறை அனுபவத்திலே எனக்குக்கிடைத்த இந்த ஆலாபனத்தையும், நான் எப்போதும் மறந்திட முடியாது. எப்படி முடியும்? எவ்வளவு சுவை என்கிறீர்கள் - நித்த நித்தம்! அலாதியானதோர் வகையான சுவை கிடைத்தது மூன்றாம் முறை சென்றபோது - இதுவும் சில நாட்கள்தான் - இந்தச் சுவை, ஆறு பிஸ்கட்டுகளால், கிடைத்தது, அதைக் கேட்கிறாயா தம்பி, கூறுகிறேன். ஆறு பிஸ்கட்டுகள் "ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்’’ என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி, பெரியாரும் அதே நாளில், அதேவிதமான தண்டனை பெற்று, அதே சிறைக்கு வந்தார், இருவரையும் ஒரே போலீஸ் வானில்தான் ஏற்றிச் சென்றார்கள். திராவிடர் கழகமாக இருந்தபோது இப்படித்தானே நடந்திருக்கும், இதிலே என்ன ஆச்சரியம் என்று சொல்லுவாய், தம்பி! இது திராவிட முன்னேற்றக் கழகமாக நீயும் நானும் மாறின பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சி - 1949 இல். "ஆரிய மாயை’ எனும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை. "பொன் மொழிகள்’’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை. திருச்சி கோட்டாருக்கு இப்படி ஒரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசைபோலும். இரண்டு தனித்தனி வழக்குகள்; தனித்தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் "தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில், பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கைப் பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதை தொடர்ந்து, ஒரே வானில் ஏற்றிச் சென்றனர்; அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டுவந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்; எனக்கு உள்ளூரப் பயந்தான்! கேள்விக்கணையுடன் நிறுத்திக்கொள்ளாமல், அன்புக் கணையையும் ஏவினால், என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். ஆனால் இடை யிடையே ஒரு தைரியம் எனக்கு; பெரியார் அவ்விதமெல்லாம் எண்ணமாட்டார் - அவர் மனதில் அந்த அளவுக்கு விரோதத்தைவடித்தெடுத்துப் பாய்ச்சிவிட்டிருக்கிறார், அந்த வித்தையிலே விற்பன்னர்; எனவே பயமில்லை என்றிருந்தேன். பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள், இங்கு சிறிது நேரம், அங்கு சிறிது நேரம். இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியேவர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்றுவிடுவேன். இப்படிப் பத்து நாட்கள்!! நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் - முன் தினம் நடுப்பகலுக்கு மேல், ஒரு உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்துவந்த கைதி என் அறைக்குள் நுழைந்து, "ஐயா! தரச்சொன்னார்’’ என்று சொல்லி என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும், என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்த போது கண்ட காட்சிகளின்மீது சென்றது. மறுநாளே திடீரென்று "விடுதலை’ கிடைத்தது. அந்த வேடிக்கையையும் கேள் தம்பி. எங்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்ற செய்தி, உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச்செல்ல நண்பர்கள் வெளியே “முஸ்தீபுகள்’ செய்யத் தொடங்கிவிட் டிருந்தனர். நமது கழகத்தார் முஸ்தீபுகளிலே மும்முரமாக ஈடுபட்டு, நேரத்தை மறந்துவிட்டனர்; எனவே, சிறைக்கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும், வாசற்படி அருகே, பெரியாரை அழைக்க வந்தவர்கள் கொண்டுவந்த”மோட்டார்’ தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர்; இது போதாதென்று, "போட்டோ’ எடுப்பவர் ஒருவர் ஓடிவந்தார் - இருவரும் அப்படியே, நெருக்கமாக நில்லுங்கள் என்று, போட்டோ எடுப்பவர்களுக்கே உரித்தான சாமர்த்தியத்துடன்கூறி, போட்டோவும் எடுத்துவிட்டார், அது வெளியிடப்படவில்லை; வெளியிடாதிருந்தது நல்லதுதான் என்றே சொல்லுவேன், அவ்வளவு திகைப்பு என் முகத்தில் இருந்தது, அவர் எப்படி இருந்தாரோ, எனக்குத் தெரியாது. வேதாசலம் அவர்கள் வீடுவரையில் சென்று, அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன். கவனித்தாயா, தம்பி, எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அமைப்புக்குப் பெரியதோர் ஆபத்து, இந்தப் பத்து நாட்கள் என்று நண்பரொருவர் கூறினார். உண்மைதான். நான் அவ்வளவு சுலபத்திலே மனதைக் கரையவிட்டு விடுபவன்தான். ஆனால் பத்து நாட்கள் அவருடன் பேசி, மீண்டும் பழைய நேசத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு என்னைத் தட்டித்தட்டி அழைத்த போதும், நான் அந்தச் சபலத்துக்கு இடம் கொடுக்காமலிருந்தேன். காரணம் கிராதகன் என்பதல்ல, நான் ஒரு அமைப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டு விட்டதால், நான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும், அந்த அமைப்பை உருக்குலைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்ற நேர்மையான எண்ணத்தினால்தான். நாலு சாக்லெட்! மும்முனைப் போராட்டத்திலே ஒரு நாள், எனக்கு நண்பர் குருசாமியுடன் சேர்ந்து சிறையில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் சிறையில் கீழ்வரிசை அறையிலே தங்கியிருந்தார் - நான் தம்பிகளுடன் மேல் அறையில், மாடியில்! பார்! பார், இதிலே கூடக் கீழ்மேல் பேசுகிறான் என்று கூறிவிடப் போகிறார்கள். தம்பி, குருசாமிக்கு அப்போது உடல் நலம் இல்லை, எனவே மாடி ஏறவில்லை. அந்த ஒரே நாளில் எனக்குச் சுவையானதோர் அனுபவம் - அதையும் நான் மறப்பது இயலாது. என்னைக் காண நண்பர் சிலர் வந்தனர் – அதே சமயத்தில் தோழர் குருசாமி அவர்களைக்காண தோழியர் குஞ்சிதமும், ரμயாவும் (விரைவில் டாக்டர்!) வந்திருந்தனர். சந்தித்தோம் - கம்பிகள் இடையில் ! கம்பிகள் மட்டுமா, அமைப்புகளே வேறு வேறு ஆகிவிட்ட நிலைமை. தோழியர் குஞ்சிதம் அவர்கள் நாலு சாக்லெட்டைத் தந்தார்கள்! அதைவிடச் சுவையுள்ள உணவு எனக்கு அவர்கள் இல்லத்தில் பலமுறை கிடைத்தது உண்டு. ஆனால், அந்த நாலு சாக்லெட்டுக்கு உள்ள சுவையே அலாதியானதல்லவா. ஐயாயிரவர் தம்பி! எனக்கு ஏற்பட்டது போன்ற பல்வேறு வகையான சுவையுள்ள சிறை நினைவுகளை இப்போது பெறக் கூடியவர்கள் ஐயாயிரம் தோழர்கள் உள்ளனர், நமது கழகத்தில்அவர்கள் இன்று ஒரு அமைப்பைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தத்தமது தனி உணர்ச்சிகள், அமைப்பின் தரத்தையும் தன்மானத்தையும் உயர்த்துவதாக இருத்தல் வேண்டும் என்ற நேர்மையுணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம், சாதாரணமானதல்ல; நடாத்திய அறப்போரும் சாமான்யமானதல்ல. நாம் அடக்குமுறைகண்டு அஞ்சுபவர்களா, அதனை எதிர்கொண்டு மார்பில் ஏற்றுக் கொண்டவர்களா என்பதை பெற்றுள்ள தியாகத் தழும்புகள் நமக்கெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன - பிறர் தரும் தீர்ப்புத் தேவையில்லை - நாம் பட்ட தடியடியும், சிறைவாசக் கொடுமையும், நினைவிலே எப்போதும் இருக்கிறது. ஒரு பெரும் போராட்டத்தை நடத்திடத் தக்க அமைப்பு முறையும் ஆற்றலும் நமக்கு உண்டா? நாம் இப்போதுதானே பிரிந்து வந்து புதுப்பாசறை அமைத்திருக்கிறோம், என்ற அச்சமும் சந்தேகமும் எனக்கு இருந்தது - அதிலும் எங்கள் ஐவரை முதலிலேயே கூண்டுக்குள்ளே தள்ளி மூடிவிட்ட பிறகு, என் சந்தேகம் அதிகமாகிவிட்டது. "சம்பத்து! சரியாக நடக்குமா. . . ?’’ என்று கேட்பேன் ஆயாசத்துடன். "நீங்கள் உள்ளே வந்துவிட்ட பிறகு, கிளர்ச்சி நடப்பதற்குத் தங்கு தடை ஏது, ஜோராக நடக்கும்’’ என்பான் குறும்புடன். “ஒரு ஐந்நூறு பேர் சிறைப்படுவார்களா?-’’ என்று கேட்பேன் தைரியத்தோடல்ல.”ஐந்து நூறா. . . இருக்கும். . . ஆயிரம்கூட இருக்கலாம்’’ என்று உற்சாகத்தை மெள்ளமெள்ள வரவழைத்துக் கொண்டு பேசுவார் நெடுஞ்செழியன். பத்திரிகைகளைப் பிரித்தோம், ஏ! அப்பா! நாம் சம்பந்தப் பட்ட இயக்கமா இது - என்று நான் ஆச்சரியப்பட்டேன் - பத்திபத்தியாக - பக்கம் பக்கமாக - கிளர்ச்சிச் செய்திகள் - நூறு, ஐந்நூறு, ஆயிரம், இரண்டு, மூன்று என்று வளருகிறது ஐயாயிரம் என்று சொல்லத் தக்க அளவிலே வளர்ந்தது. தடியடி பட்டோர், துப்பாக்கிக் குண்டடிபட்டோர், என்ற வகையில் செய்திகள் உருவெடுத்தன. தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய பூபாகம் முழுவதிலுமே, இந்தக் கிளர்ச்சி பற்றிய பரபரப்பான செய்தியைத்தான் கவனித்தன. அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் "செய்தி’ வெளிவந்தது என்றால், பார்த்துக்கொள் தம்பி, கிளர்ச்சி எந்த அளவு வலுத்து இருந்தது என்று. தம்பி! எந்தப் போராட்டத்தையுமே தங்கள் போராட்டத் துக்குச் சமமாகாது என்று எண்ணி, ஏளனம் பேசுவதும், தாங்கள் துவக்கும் போராட்டத்திலேதான் மற்றவர்கள் வலிய வலிய வந்து சேரவேண்டுமே தவிர, பிறர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதோ, அது முடியாது என்றால் இன்முகம் காட்டுவதோகூடத் தேவையில்லை, என்றும் பேசுபவர்களல்லவா, கம்யூனிஸ்டுகள். அந்த அதி தீவிரக் கட்சியின் தலைவர்களிலே இருவர், ங.க.ஆ-க்கள். மணலி கந்தசாமியும், ஈரோடு கே. டி. ராஜு அவர்களும் சிறையில் என்னைச் சந்தித்து, வெளியே நடைபெறும் நமது போராட்டம் பற்றித் தங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை, பாராட்டுதல் ஆகியவைகளைத் தெரிவித்துச் சென்றனர் என்றால், கிளர்ச்சியின் தன்மை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அன்புள்ள அண்ணாதுரை 31-7-1955. அளவுகோல் எது? பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டம்- பெரியார் தன்மைகள். தம்பி! நாடு பெருங் கொந்தளிப்பில் சிக்கிவிடும், திராவிடர் வீடுகளில் இளைஞர் பலர் துப்பாக்கிக்கும் தடியடிக்கும் இலக்காகி இம்சிக்கப்பட்டது பற்றியும், சிறையில் போட்டு அடைக்கப்பட்டனர் என்பது குறித்தும் பேசிடும் காட்சிகள் இருக்கும், கலாம் செய்வோருக்கும் குழப்பம் விளைவிப் போருக்கும் நல்ல வேட்டையாடும் வாய்ப்பு ஏற்படும். சச்சரவுகள், சமர், சந்துமுனை அடிதடிகள், உருட்டுக் கண்ணினர் மிரட்டும் குரலினர் ஆகியோருக்கெல்லாம் நிரம்ப வேலை கிடைத்து வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் பல நெளியும் என்றெல்லாம் நீயும்நானும் அச்சப்பட்டுக் கொண்டிருந்தோம், சென்ற கிழமை. பெரியார் சிறைப்படுவதுடன், அவர்மீது பயங்கரமானது என்று கருதப்படும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு நடைபெறும், என்று அஞ்சினோம். டில்லி மந்திரி பந்த் மிரட்டிய போதும் சரி, பெரியார் தமது போர் பற்றிய விளக்கமளிக்கையில் 300 பேர் சாக வேண்டி நேரிடலாம், 1000 பேர் காயப்படவேண்டி நேரிடக்கூடும். ஒரு பத்தாயிரம் பேர் சிறை செல்லவேண்டி ஏற்படக்கூடும் என்று கூறினார் - அதனைக் கேட்டபோதும் உண்மையிலேயே நான் பதறிப் போனேன். எப்படியோ ஒன்று நமக்கெல்லாம் நிம்மதியும் நாட்டுக்கு அமைதியும் கிடைத்திடத்தக்க விதமாக நிலைமைஉருவெடுத்தது - மகிழ்கிறேன், தம்பி, உண்மையிலேயே பூரிப்படைகிறேன். அதிர்ச்சி தரும் அமளிகள், மயிர்க் கூக்செறியத்தக்க கிளர்ச்சிகள், மூக்கின்மீது விரல்வைத்து ஆச்சரியப்படத் தக்கதான போராட்டங்கள் ஆகியவைகளின் மூலமாகப்பெறக் கூடிய புதுவலுவைவிட, நாட்டு மக்களிடம், குறிப்பாக இன்னமும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம் கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும் விரும்புகிறவன். அப்படிக் கூறுவதால் போரே கூடாது என்பவனல்ல; போரில் கலந்து கொள்ளாதவன் என்றோ போர் வாடை அடிக்கும்போது புதுடில்லிக்கு உத்தியோக வேட்டைக்கு ஓடிவிட்டவனென்றோ பொருள் கொள்ளப் பொறுப்புள்ள யாரும் துணியமாட்டார்கள் - எதையும் துணிவுடன் கூறிடும் போக்கினர் பற்றி நான் பொருட்படுத்தப் போவதில்லை. காங்கிரஸ்காரர் மனதில், வேதனை, வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக்கூடிய வகையிலே கிளர்ச்சிகள் அமைவதை, நான், இன்று அல்ல, எப்போதுமே விரும்பிய தில்லை. இந்த என் எண்ணத்தை எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை. ஆகஸ்ட்டு முதல் நாள் அய்யா அவர்கள் சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், நிச்சயமாக அவரைத் தூசி கூட அணுகாது. அவரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பு; எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது. ஆனால் அன்று மூண்டிருக்கக்கூடிய பகை உணர்ச்சியும் வெறுறுப்புணர்ச்சியும் நிச்சயமாக திராவிட இயக்கத்தைப் பல ஆண்டுக் காலத்துக்குப் பழிக்கும் பகைக்கும் உள்ளாக்கிவிட்டிருக்கும். "பரவாயில்லை, அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது’ என்று சொல்லும் அளவுக்கு நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அளவுக்கு நம்மை விட்டு விலகிவிடுவார்கள். தம்பி, ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்துப் பணியாற்றும்போது நாளாகவாக எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக அந்தக் கொள்கை ஒரு சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமல்ல, வெற்றிக்கு வழி, நாளாகவாக எவ்வளவுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது, மாற்றாரை உற்றார் ஆக்குகிறது, என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும். இந்த முறையிலேதான், நான், பலகாலமாகவே, காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள திராவிடத் தோழர்களில் - அந்தக் கட்சியாலேயே வாழ்ந்து தீரவேண்டியவர்கள் தவிர - மிகப்பலரை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி வேண்டும் என்று கூறிவருகிறேன். கோழைத்தனம் என்கிறார், பெரியார். ஏறக்குறையப் பதினைந்து ஆண்டு பயிற்சிக்குப் பிறகும் பெரியாரிடம்தான் - பார் தம்பி! என்னை விட்டுக் கோழைத்தனம் போகவில்லை என்றால், (பெரியாரே கூறுகிறார்?) என் போன்றவர்களையே ஏராளமாகக் கொண்டுள்ள திராவிடச் சமுதாயத்துக்கு, ஏற்றதான ஓர் திட்டமல்லவா தீட்டவேண்டும், தாங்கிக் கொள்ள வேண்டுமே, தம்பி! ஒரு படைத் தலைவரின் ஆற்றலும் அஞ்சாமையும், இடுக்கண் கண்டு கலங்காத போக்கும், ஒரு படையிலுள்ள கோழைகளையும் வீரர்களாக்கிவிடும் வரலாறு அத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் காட்டுகிறது - ஆனால், தம்பி, உற்றுக் கவனித்தால் உனக்கு உண்மை விளங்கும் - இவைகள் சம்பவங்கள்! அவ்வளவுதான்! போர் முறை என்பது இந்தச் "சம்பவங்களை’ இலக்கண மாகக் கொள்வத அல்ல. எதிரே ஒரு பெரிய படை, தம்பி, எல்லாப் போர்க் கருவிகளுடனும். இந்தப்புறம் ஒரு சிறு படை, பழுதான படைக் கலங்களுடன். ஒரு சிறு கணவாய்தான இடையில். அதைக் கடந்து அப்பெரும்படை வந்துவிட்டால் இந்தப் படை சின்னா பின்னமாகிவிடும் - என்று வைத்துக் கொள் - தம்பி, நீயும் நானும் அந்தச் சிறிய, ஆனால் சீரிய படையில் இருப்பதாக எண்ணிக்கொள் - நமது படைத் தலைவர் அந்தச் சமயத்தில், அபாரமான வீரதீரம் காட்டி, கணவாயைக் கடந்து, பெரும் படையினைத் துளைத்துக்கொண்டு செல்வ ஆயத்தமாகி வருக! என்று உத்தரவிட்டு முன்னேறுகிறார், என்றால், பெரியபடை கண்டு பீதி கொள்ளத் தக்க வகையில் சிறிய படை தழலெனப் பாயும், கணவாய் இரத்த ஆறாக மாறும். உலக வரலாற்றிலே வீரத்துக்கு ஓர் ஒப்பற்ற சம்பவம் பொறிக்கப்பட்டு விடும். இதைத்தான் நான் சம்பவம் என்கிறேன். இத்தகைய சம்பவம் பற்றிப் படிக்குந்தோறும் படிக்கப் பக்கம் நின்று கேட்குந்தோறும், வீரம் வீறிட்டெழச் செய்கிறது. என்றாலும், தம்பி, சிறிய படை கணவாயில் பாய்ந்து சென்று பெரிய படையைத் தாக்கி வெற்றி தேடுவதுதான், போர் முறை என்று இலக்கணம் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். போர்க்களத்து எடுத்துக்காட்டினைக் கூறினால், என்னமோ போல இருப்பதானால், தம்பி, இதோ இந்த உதாரணத்தை வேண்டுமானால், கேள். கட்டுக் காவலில் உள்ள கட்டழகி, மாடியில். அவளைக் காதலிக்கும் ஆணழகன், பக்கத்துத் தோட்டப் புறத்தில். கண்ணும் கண்ணும் பேசிவிட்டது - பெற்றோர் பேயராகி விட்டனர் - நெஞ்சைத் தொட்டிடும் காதற் கடிதம் தீட்டியிருக்கி றான் அந்த நேரிழையாளுக்கு; அதை நேரிடையாகத் தரமுடியாது; எனவே, அதனைச் சிறு கல்லில் சேர்த்துக் கட்டி விட்டெறிகிறான் - அது அவள்மீது பட்டபோது, கல்லே மலராகி விடுகிறது - கண்களில் ஒத்திக் கொள்கிறாள்… இது காதலருக்கு ஒரு சம்பவம், ஆனால், காதலுக்கே இதுதான் இலக்கணம் என்று கொண்டுவிடக் கூடாதல்லவா. போரிலும் காதலிலும் சந்தர்ப்பங்கள், சில சம்பவங்களை உருவாக்கும்; அந்தச் சம்பவங்களை மட்டுமே கொண்டு, அவைகளுக்கு இலக்கணம் வகுத்துக் கொள்ளக்கூடாது. அதே முறையிலேதான், கொடிகளை எரிப்பதும், கோட்டைக் கொடிமரத்தை வெட்டிச் சாய்ப்பதும், குத்தீட்டி வீசுவதும், கொல்லும் வேழத்தை ஏவுவதும் - எல்லாம் சம்பவங்கள் - விடுதலைப் போரிலே - பல நாடுகளிலே. அந்தச் சம்பவங்கள், திட்டமிட்டு நடைபெற்றவை அல்ல. அந்தச் சம்பவங்களை கொண்டு, ஒரு போர்முறை வகுக்கப்படுவதில்லை. இந்த எண்ணம் எனக்கு மேலிட்டதால்தான், ஆகஸ்ட்டில் நடைபெற இருந்த அந்தக் காரியம், அவசியமற்ற பகையையும், அணைக்க முடியாத குரோதத்தையும், போக்க முடியாத பழியையும் உண்டாக்கிவிடும் என்று அஞ்சினேன். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. கடைசிநேரத்தில், கொடி கொளுத்துவதைப் பெரியார் நிறுத்திக் கொண்டார். எனக்குள்ள பிரச்சினை, போதுமான வாக்குறுதி பெற்றுக் கொண்டு நிறுத்தினாரா, இல்லையா என்பதல்ல. என் மகிழ்ச்சி கொடி கொளுத்துவது நிறுத்தப்பட்டது என்பதில்தான். பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான்ய மானதல்ல - அதைக் குறைத்து மதிப்பிடும் கயவனமல்ல நான் - காங்கிரசிலே உள்ளவர்களிலேயே சில பலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை, உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளும் நான், பெரியாருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன். அவருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவராற்றியுள்ள அரும் பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்ல! எதிர் நீச்சலில் பழகியவர்! கொடி கோட்டை வாசலில் உள்ளதை கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து பற்றித் துளியும் கவலைப்பட மாட்டார். அது அவருக்குச் சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண்களிலேயே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக் கண்டிருக்கிறேன், அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன், சில வேளைகளில் பிரிவு பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன். ஒருபோதும் அந்தக் கண்களிலிருந்து பயம் கிளம்பக் கண்டதில்லை. நானொன்றும், தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பூரித்திடும் இரசிகனல்ல. பக்கத்திலேயே பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தவன்; அவரைப் பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் - பல பிரச்சினைகள் குறித்த அவருடைய பிரத்தியேகக் கருத்துக்களை அறிந்தவன் - "மேஸ்திரி’ வேலையல்லவா பார்த்திருக்கிறேன். எனவேதான், திராவிட இயக்கத்தில் வகுக்கப்படும் போர்த்திட்டம், அவருடைய ஆற்றலை அளவு கோலாகக் கொண்டு மட்டும் அமையக் கூடாது, எந்தக் கொள்கைக்காக இயக்கம் நடைபெறுகிறதோ, அந்தக் கொள்கைக்குத் தீராப் பகையைத் தேடிப் பெறுவதாக இருத்தல் ஆகாது - பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலுல் பரிவு ஊட்டக் கூடியதுமான தாகத் திட்டம் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல இது, ஒன்றாக இருந்து நாள்தொட்டு எனக்குள்ள கருத்து. துளைத்துவிட்டார்! துளைத்துவிட்டார்! என்று இனிப்புப் பண்டத்தைச் சப்பிக்கொண்டு களிப்புக் கூச்சலிடும் சிறார் போல, பெரியார், கடற்கரைக் கூட்டத்திலே தி.மு.க. வையும் குறிப்பாக என்னையும் துளைத்தெடுத்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், குத்தும் குணாளர். அவருக்கு மகிழ்ச்சி கிடைப்பது பற்றி எனக்கு எப்போதுமே அதிருப்தி இருந்ததில்லை. நான் "துளைக்கப்பட்டேன்’ என்று எந்தக் கடற்கரைப் பேச்சுபற்றி அந்த நண்பர் களிப்படைகிறாரோ, அந்தக் கடற்கரை மணல் அறியும், பெரியார் குறித்து இவர் கொண்டிருந்த கருத்துகளை. பழங்கதை - பழங்கதையாகவே போகட்டும். என்னை ஏசட்டும், பரவாயில்லை. - நான் தாங்கிக் கொண்டு பழக்கப்பட்டுவிட்டேன். ஆனால் ஆகஸ்ட்டு நடைபெற்றிருந்தால், அதனால் ஏற்பட கூடிய பகை உணர்ச்சி, திராவிடர் இயக்கத்துக்கு நிச்சயமாக ஊறு செய்திருக்கும். காங்கிரஸ் வட்டாரத்திலே கிளம்பக்கூடிய பகை உணர்ச்சியும், பொதுமக்கள் மனதிலே கிளம்பக் கூடிய அருவருப்பு உணர்ச்சியும், பெரியாரை அசைக்காது! அவர் அத்தகைய விரோதப் பெருவெள்ளத்தை எதிர்த்து நிற்க வல்லவர். ஆனால், அவர் விரும்புகிற கொள்கைக்காக இருந்து பணியாற்றும் இயக்கம் இருக்கிறதே, தம்பி, திராவிட இயக்கம், அது விரோதப் பெருவெள்ளத்தால் மெத்தப் பாதிக்கப்பட்டுவிடும். எனவேதான், கோழை என்றோ காட்டிக்கொடுப்பவன் என்றோ, வஞ்சகன் என்றோ, பிஞ்சு சொத்தை என்றோ, எதைச் சொல்லி என்னை ஏசினாலும் பரவாயில்லை, இயக்கத்துக்கு மட்டும், அதிர்ச்சி தராமலிருந்தால் போதும் என்று கருதினேன். பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும், எதிர்நீச்சுத் தன்மையும், எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும், எவருடைய விரோதம் குரோதம், பகையாயினும் சரி, எத்தகைய பூசலாயினும் சரி, இவைகளைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இயக்கத்தில் நிரம்பி, ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை. பெரியாருக்கும் அந்த நம்பிக்கை இல்லாததால்தான், அடிக்கடி அவர் இப்படிப்பட்ட சமயத்தில்என்னையே நம்பி இதிலே ஈடுபடுகிறேன் என்று வெளிப்படை யாகவே எடுத்துக் கூறி இருக்கிறார். நாம் மேற்கொண்டுள்ள நாட்டு விடுதலை வெற்றி பெறுவதற்கு, இத்தகைய ஒப்பற்ற ஒரு தலைவரின் உள்ளத் திண்மை மட்டும் போதாது, மேலும் மேலும் வலுவு பெற்ற வண்ணம் ஒரு கட்டுப்பாடான இயக்கம் வளர்ந்தாக வேண்டும். அந்த வளர்ச்சியை ஆகஸ்ட்டுக் கெடுத்துவிட்டிருக்கும் - என்பதனால்தான், நான் அதை விரும்பவில்லை. பெரியார், எப்படிப்பட்ட "வெறுப்பை’க் காங்கிரஸ் வட்டாரம் வெளிப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்- இயக்கம் தாங்கிக் கொள்ள முடியாது - இது, தம்பி, அங்கு உள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை - நான் இதைக்கூறும்போது பெரியாருக்கு நான் ஏதோ ஊறு தேடுவதாகக் கருதுகிறார்கள். அவர்பால் கொண்ட அன்பைக் காட்டிக் கொள்வதற்கு, எளிதான, சுவையுள்ள வழி உன்னையும் என்னையும் ஏசுவதுதான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பெரியாருடைய திறமையையும் அவர் பெற்றுள்ள செல்வாக்கையும் இம்மி அளவும் நான் குறைத்து மதிப்பிடாததால்தான், அவர் தன் நிலைக்குத் தகுந்த திட்டம் தீட்டும்போது, அது முறையல்ல, இயக்கத்தின் இன்றைய நிலைமைக்குத் தக்கபடியானதும், அதன் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காத முறையிலும் திட்டம் வேண்டும் என்று கேட்கிறேன் - ஓஹோ! நீ யார் கேட்க, என்பார்கள்! வினயமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களையும் பெரியாருக்குச் சமமானவராகவும், (உள்ளூர, அதைவிட உயர்ந்த திறமையுள்ளவராகவும்) அவருக்கு ஏற்றதத்தனையும் தமக்கும் உடன்பாடே என்று சொல்வதுதான், தாங்களும் பெரியார் அளவுக்கு வளர்ந்து விட்டதாகக் காட்டிக் கொள்வதற்கான வழி என்று கருதுபவர்களாகவும் உள்ளவர்கள்தான், அவர் கூறும் திட்டத்தை அப்படியே ஒப்புக்கொண்டு - அதற்காகச் "சபாஷ்’ பட்டம் வெறுகிறார்கள். பெரியாரின் நிலை வேறு! இயக்கத்தின் நிலை வேறு! பெரியாரால் தாங்கிக்கொள்ளக் கூடியதை எல்லாம் இயக்கமும் தாங்கிக்கொள்ள முடியும் என்பது தப்புக் கணக்கு. பெரியாருக்கு உள்ள தன்மையையும் திறமையும், இயக்கத்தில் உள்ள தங்கள் ஒவ்வொருவருக்கும் அதே அளவிலும் வகையிலும் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வது, அவரைப் பூரணமாக அறியாததால் ஏற்படும் தவறு; தங்களைப் பற்றி மிகைப்படுத்திக் கணக்குப் போடுவதால் ஏற்படும் தவறுமாகும். தம்பி! அண்ணன் தம்பி இருவர் - அண்ணன் ஊர்ப் பெரிய தனக்காரன் - எங்கும் கலியாணம் கார்த்தி என்றதும், பஞ்சாயத்து பாகப்பிரிவினை என்றதும், அண்ணன்தான் செல்வான் - அமளி அடங்கும், ஊர் சீர்ப்படும். தம்பி, ஏருண்டு தானுண்டு என்று இருப்பவன். தம்பி, அண்ணன் தனக்கேற்றது செய்கிறான், நாம் நமக்கு ஏற்றது செய்கிறோம் என்றுதான் “தலையணை மந்திரம்’ ஏறுகிற வரையில் எண்ணிக் கொண்டிருந்தான். அது தலைக்கேறியதும்”ஏன்! நீ மட்டும் தான் ஊர்ப் பெரிய தனம் பார்க்க வேண்டுமா - நான் என்ன நம்ம குடும்பத்து உழவுமாடா?’ என்று அண்ணனிடம் வம்புக்கு நின்றான். அண்ணன் சூஷமம் தெரிந்து கொண்டான் - "தம்பி! நீயே இனி, ஊர்ப் பெரிய தனக்காரர் வேலையைப் பார் நான் காடு கழனியைக் கவனித்துக் கொள்கிறேன் - எதற்கும் இரண்டோர் நாள் என்னோடு வா? ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் என்னோடு வா? ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் எப்படி எப்படிக் கவனிக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வாய்’’ என்று கூறி அழைத்துச் சென்றான். அன்று ஒரு சாவு - மகன் கோவெனக் கதறி அழுகிறான், தாய் இறந்ததற்காக. ஊர்ப் பெரிய தனக்காரனான அண்ணன், அவனைத் தேற்றி, "என்னப்பா செய்யலாம்! எவ்வளவு அருமையான குணம், அம்மாவுக்கு எங்களிடமெல்லாம் எவ்வளவு அன்பு தெரியுமா? அதிகம் சொல்வானேன். அவர்கள் உனக்கு தாய் அல்ல, எனக்கும் தாயாகத்தான் இருந்தார்கள்’’ என்றான். தம்பி, கேட்டுக்கொண்டான் - பூ! பூ! இவ்வளவுதானா, பெரிய தனக்காரன் வேலை - என்று எண்ணினான் - மறுநாளே பட்டத்துக்கு வந்துவிட்டான். எட்டாம் நாள் வேறோரிடத்தில் ஒரு இழவு. மனைவியைப் பறிகொடுத்த கணவன், மண்ணில் புரண்டு அழுகிறான் - “ஐயோ! அவள் போனபிறகு நான் எப்படிவாழ்வேன் - எனக்கேன் சாவுவரக்கூடாது! என் ஆசைக்கனியே! அமுத நிலவே!’’ என்றெல்லாம் கூறிக் கதறுகிறான். பெரிய தனக்காரனான தம்பி. அருகே சென்றான். அவனை அனைத்துப் பிடித்தபடி,”அழாதே அப்பா! அழாதே! என்ன செய்யலாம்! எவ்வளவு நல்லவர்கள், எவ்வளவு அன்பு! அதிகம் சொல் வானேன், அவர்கள் உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தார்கள், எனக்கும்தான்’’ என்றான். சாவு வீடு, படுகளமாகிவிட்டது. "அண்ணா அண்ணா! எனக்கு வேண்டவே வேண்டாம் இந்தப் பெரியதனக்கார வேலை’’ என்று சொன்னான் தம்பி. கதைதான் - ஆனால் தம்பி! பெரியார் தனது ஆற்றலுக்குத் தகுந்ததைச் செய்யும்போது, அதை நானும் செய்வேன், என்னால் முடியும் என்று சொல்லிக் கிளம்புவது, சரியாகாது என்பதற்கான பாடம் இந்தக் கதையில் இருக்கிறது. இயக்கம் உள்ள நிலையையும், அதன் எதிர்க்காலவளர்ச்சி யையும் கருத்தில் கொண்டுதான் நான் ஆகஸ்ட்டை விரும்ப வில்லை, பெரியாரைச் சரியாக மதிப்பிடாததால் அல்ல, மிக மிகச் சரியாக மதிப்பிட்டதால்தான். எனவே, ஒரு இயக்கம் நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, அதன் தலைவரின் தனிப்பெருந் தன்மையை மட்டும் அளவு கோலாகக் கொண்டு அமைதல் கூடாது, அந்த இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஏற்றதாகவும், எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காததாகவும் இருக்க வேண்டும் என்கிறேன். நன்றாக எண்ணிப்பார். தம்பி! நன்றாக - ஒரு முறைக்கு இருமுறை படித்து விட்டு. அன்புள்ள அண்ணாதுரை 7-8-1955 ஆலையில்லா ஊரில். . . போராட்டங்களைப்பற்றி அண்ணா இந்திப் போராட்டம் பெரியாரிடம் தி.மு.க. பற்றிய தவறான செய்திகள். தம்பி! நீ மிகவும் பொல்லாதவன்! ஒரு பெரிய “போராட்டம்’ உருவாகிக்கொண்டிருக்கும்போது சும்மா இருந்தாய் - சரி, ஒரு சமயம் திகைப்பினால் அவ்விதம் இருக்கிறாய் என்று எண்ணிக் கொள்வோம் - போராட்டம் முடிந்து, அதன்”பலாபலன்’ பற்றிய கணக்குப் பார்க்கும் இந்தக் கட்டத்திலாவது, உன் கருத் துரையைக் கூறுவாய் என்று எண்ணினேன்-நீயோ அப்படி ஒரு போராட்டம் நடந்ததாகவே கவனிக்க மறுக்கிறாய் - மிகப் பொல்லாதவன்!! உனக்குத் தெரியுமா? நாம் அந்தப் போராட்டத்திலே கலந்து கொள்ளாததால், நம்மைக் "கோழைகள்’ என்று ஏசுகிறார்கள்!! என்னடா தம்பி. சிரிக்கிறாய். இது என்ன புதிதா! கோழைகள் என்ற வார்த்தைகளைவிட மிகமிகக் கேவலமான, நஞ்சுகலந்த நிந்தனைகளை எல்லாம் கேட்டிருக்கிறோமே, இது எம்மாத்திரம், என்கிறாய் போலும். உண்மைதான், நமது கழகத் தோழர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள்!! சிறு சொல் கேட்டுச்சீறும் கட்டம், கண்டனம் கேட்டுக் குமுறும் கட்டம், போய்விட்டது. நாம் பதில் கூறவேண்டியது நமது நெஞ்சுக்குத்தான் நம்மை வஞ்சகர் என்று கூறிடும் போக்கினருக்கு அல்ல! உடலில் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய, நாம் நமது உடலைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அடுப்படியைத் தொட்டுப் பார்த்துமல்ல, ஐஸ் கட்டியைத் தொட்டுப் பார்த்துமல்ல. கோழைகள்!! நாம்!! தடியுடன் உள்ள போலீஸ்காரர்கள் சிரிப்பார்கள்! சிறை அதிகாரிகள் சிரிப்பார்கள்! நாம் பெற்ற தியாகத் தழும்புகளுக்கு முடியுமானால், அவை இடி இடியெனச்சிரித்து, அவர்களைப் பார்த்து ஏளனம் செய்யும்!! தம்பி, காங்கிரஸ்காரர்கள் தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் கொளுத்துதல் போன்ற முறையில் ஆகஸ்ட்டுப் போராட்டம் நடத்தினர் 1942 இல்! நாம் கலந்து கொள்ள வில்லை. நாம் என்றால் தம்பி, நானும், நீயும் மட்டுமல்ல - தி.க., தி.மு.க. என்றுள்ள இரண்டும் ஒன்றாக இருந்ததே, அந்தக் குடும்பம் பூராவும். நாம் பயங்கொள்ளிகள், அடக்குமுறைக்குப் பயந்து ஓடிவிட்டோம், என்றா பொருள்! அந்த முறைகள் சரியல்ல என்று மனதாற நம்பினோம் - வீணான கலகம் கலவரம் குழப்பம் பொருட் சேதம், இவைதான் மிச்சம் என்று எண்ணினோம். எனவே ஒதுங்கி நின்றோம். அதுபோலத்தான் இப்போது, கொடி கொளுத்தும் காரியத்தில் தி.மு.க. கலந்து கொள்ளவில்லை - இது கோழைத்தனம் என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும். வேண்டுமானால், தமிழ்நாட்டு அரசியலில் இது வாடிக்கை - ஒருவர் மற்றவருடைய கருத்தை அறியும் அளவுக்குக்கூட பாசம் நேசம் கொள்ளாமல் ஒரு திட்டம் தீட்டிவிட்டு, அதன் காரணமாக அதிலே கலந்துகொள்ள மறுப்பவர்களைக் கோழைகள் என்று ஏசுவது தமிழகத்தின் வாடிக்கை, என்று கொள்ளவேண்டியதுதான்! தங்கள் ஆகஸ்டில் சேராததற்காகக் காங்கிரஸ்காரர்கள் திராவிடரைக் கோழைகள் என்று ஏசினர்! இப்போது நடைபெறும் கிளர்ச்சிகளில் கொடி கொளுத்துவதில் மட்டுமல்ல, எந்தப் போராட்டத்திலாயினும் சரி, நாம் சேராமலிருந்தால், கோழைகள் என்று ஏசுகிறார்கள்! இது பொருளுள்ளது என்று கருத முடியுமா? நீண்ட காலமாக இருந்துவரும் வாடிக்கை - பழக்கம் என்றுதான் கொள்ள வேண்டும். நமக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. நாம் கூடிக் கலந்து பேசிச் சில பல கிளர்ச்சிகள் நடத்தியுமிருக்கிறோம். இனியும் நடத்துவதற்கான முயற்சி இருந்துவருகிறது. இதை எல்லாம் கவனிக்காமல், அவரவர்கள் துவக்கும் கிளர்ச்சிகளில் நாம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறுவதும், கலந்து கொள்ளாத போது கண்டிப்பதும், ஏன் என்று யோசித்ததுண்டா தம்பி! நாம், அவ்வளவு அருமையாகப் பணியாற்ற கூடிய பக்குவம், பயிற்சி, திறம் படைத்தவர்கள் என்ற எண்ணம், எல்லா முகாமிலும் இருக்கிறது-எனவே எல்லோர் கண்ணும் நம்மீது விழுகிறது என்று பொருள்! ஆமாம். தம்பி, எவ்வளவு கடுமையான கிளர்ச்சிக்கும் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் என்பதை மும்முனைப் போர் நன்றாக எடுத்துக் காட்டிவிட்டது - எனவேதான், யார் எத்தகைய போராட்டம் துவக்கினாலும், நாம் வரவேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் - ஆவல் அதிகமாகி, அது நிறைவேறாதபோது கோபம் அதிகமாகிறது - கண்டனம் வீசுகிறார்கள்! வேறென்ன! பிறர் மனம் மகிழும்படி நடந்துகொள்வது நல்லதுதான் - பண்புகூடத்தான் அது - ஆனால் தன்மானம் என்ற ஒன்றும் இருக்கிறதே, ஒரு அமைப்பின் தன்மானம், அது அழைக்கப் பட்டது. அதைக் கலந்து திட்டம் தீட்டப்பட்டது என்று நிலைமை இருந்தாலல்லவா நிலைக்கும். தழைக்கும்! போர் முடிந்துவிட்டது! பலாபலன் தெரிந்துவிட்டது!! என்ன காண்கிறோம் தம்பி. காமராஜரின் அறிக்கை!! யூனியன் பார்லிமெண்டு சபாநாயகர், மாவ்லங்கர் இந்தி கட்டாயத்தின் மூலம் நுழைக்கப்படாது என்ற சேலத்தில் மே 31-இல் பேசி இருக்கிறார், (மெயில்-ஜூன் 1) இந்தியைத் திணிக்கவில்லை - திணிக்கமாட்டோம். இந்தி படிக்கும்படி தூண்டுகிறோமே தவிர, கட்டாயப்படுத்தவில்லை என்பதாக யூனியன் தொழிலாளர் மந்திரி கந்துபாய் தேசாய் மே 28-இல் திருச்சூரில் தெரிவித்திருக்கிறார். (மே29-மெயில்) உத்தியோகத்தை நாடுபவர்களுக்குத் தொல்லை வராத படிதான் இந்தியைப் பக்குவமாகப் பரப்புவோம், என்று யூனியன்டிப்டி போலீஸ் மந்திரி தத்தார் தெரிவிப்பு, மே - 4, மெயி-ல் காணக்கிடக்கிறது. இந்தியை மக்கள்மீது கட்டாயப்படுத்தித் திணிக்கும் பிரச்சினைக்கே இடமில்லை என்று மே 11-இல், பூரியில், யூனியன் மந்திரி கேஸ்கர் தெரிவித்திருப்பது, இந்துவில் வெளிவந்திருக்கிறது. இந்தியைத் திணிக்கமாட்டோம் கட்டாயப்படுத்த மாட்டோம் - தமிழ்நாட்டு மக்கள் தாமாக இந்தியில் பயிற்சி பெற்று வருகிறவரையில் காத்துக்கொண்டிருப்பேன் - என்பதாக, யூனியன் மந்திரி கேஸ்கர் மதுரையில் ஜூலை-6 இல் பேசியிருக்கிறார். இந்தத் தெரிவிப்பு மெயிலில் வெளியாகி இருக்கிறது. தென் இந்தியாமீது இந்தியைத் திணிப்பது சர்க்கார் நோக்கமல்ல என்று குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், ஹைதராபாத்தில், ஜூலையில்தான் பேசியிருக்கிறார். நேரு பண்டிதர், பல தடவைகளில் இந்தி வெறியர்களின் போக்கைக் கண்டித்திருக்கிறார். எந்த மொழியும் சொந்த மொழிக்கு ஈடாகாது என்று பலமுறை பண்டிதர் பேசி இருக்கிறார். வடநாட்டிலேயே, பல தலைவர்கள் வங்கம் - மராட்டியம் - கலிங்கம் - பாஞ்சாலம் - ஆகிய பகுதியினர், இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினர். மொழி அல்லது கல்வி சம்பந்தமான விழாக்கள் நடை பெறும்போதெல்லாம், இந்தி திணிக்கப்படமாட்டாது என்று டில்லி தர்பாரினரே பேசுகிறார்கள்; இனியும் பேசப் போகிறார்கள். தாலமுத்து நடராசன் உயிர் குடித்ததோடு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்டாய இந்தி மடிந்தது என்று திட்டவட்டமாகக் கொள்ளலாம். மத்திய சர்க்காரின் நிலையைப் பல தடவைகளில் இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்திவிட்டனர் - "ராஜ்ய சர்க்காருக்கு யுக்தம் போல்’ நடந்துகொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. எனவேதான், ஆந்திரத்தில், ராஜ்ய சர்க்கார் இந்தியைக் கட்டாய பாடமாக்கிட முடிந்தது; சென்னை இராஜ்யத்தில். இந்தி கட்டாய பாடம் என் ஆக்கவில்லை என்று ஆந்திராவைச் சுட்டிக் காட்டி, மத்திய சர்க்கார் கேட்கவில்லை. "கட்டாய இந்தி’ மத்திய சர்க்காரின் திட்டமாகவும் இன்று இல்லை; சென்னை ராஜ்யமும் அதைத் திட்டமாகக் கொள்ளவில்லை - அது போன்ற நோக்கமோ முயற்சியோ இல்லை. இந்த நிலையில், இந்தியைக் கட்டாய பாடமாக்குவ தில்லை, திணிப்பதில்லை என்று வாக்குறுதி ஏன் நமக்கு? எனவே, இப்போது கொடி கொளுத்துவதாகக் கூறி ஓர் போர்ச் சூழ்நிலையை உருவாக்கி, அதனைக் காட்டி, காமராஜர் அறிக்கை என்ற "வரம்’ பெற்றதாகக் கருதிப் பூரிப்படைய நமக்கு மனம் இடந்தரவில்லை - அது பெரியாருக்குப் பெருமை தருவது என்று கூறி, அவருடைய பெருமையைக் குறைத்திடவும் விருப்பம் எழவில்லை - அந்தக் காரியத்தை அவருடைய இன்றைய நண்பர்கள், ஒத்துழைப்பாளர்கள், திறம்படச் செய்து வருகிறார்கள் - அந்தச் சிரமத்துக்காகப் பணமும் பெறுகிறார்கள்!! அந்த நண்பர்கள், பெரியாரிடம். தி.மு.க. பற்றி, மிக மிகத் தவறான கணக்குகளைத் தருகிறார்கள் - உண்மையை மறைக்கிறார்கள். அவர்களின் கணக்குப்படி, திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு அரை டஜன் சிறுவர்கள் கொண்டது!! இராயபுரத்தில் எங்கோ ஒரு இடத்தில் கிடப்பது! அது, கரைந்து கலைந்து, குலைந்து, நலிந்து மெலிந்து, மாண்டுபோகும் என்று "நல்வாக்கு’ கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள் - ஆறு ஆண்டுகளாக !! அதிலிருந்து, அவர் விலகினார், இவர் விலகப் போகிறார் என்று கரடி விட்டு, பெரியாரைக் களிப்படையச் செய்கிறார்கள். "அதுகளுக்குச் செல்வாக்கே இல்லை! என்கிறீர்களே, மாநாடு நடத்துகிறார்கள், ஆயிரம் பத்தாயிரம் என்று மிச்சம் காட்டுகிறார்களே, எப்படி முடிகிறது?’ என்று பெரியார் கேட்கிறார் அத்துடன் விடுகிறாரா, நீங்களும் பிரமாதமாக என்னிடம் நம்பிக்கை ஊட்டிவிட்டு, மாநாடு போடுகிறீர்கள். மிச்சம் என்ன என்றால், சொச்சம் தரவேண்டி இருக்கிறதுஎன்கிறீர்கள், பந்தல்காரனுக்கும் பாண்டு வாத்தியக்காரனுக்கும்! என்று கேட்கிறார். என்ன செய்வார்கள், என்ன சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள். "அது. . . அவர்கள் சினிமாக்காரரை, நாடகக்காரரைக் காட்டிப் பணம் திரட்டுகிறார்கள். . . அதனாலேதான் . . . . ’ என்று இழுத்துப் பேசுகிறார்கள் - அவர் அவர்களைக் கோபத்துடன் பார்த்துவிட்டுக் கனைத்துக் காட்டுகிறார் - பொருள் உண்டு அதற்கு, நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் குதிரை மீதமர்ந்தல்லவா, மாநாடுகளின் ஊர்வலம் நடக்கிறது - அது அவருக்குத் தெரியாதா - சினிமாக்காரர் கலந்து கொள் வதால், தி.மு.க. ஜொலிக்கிறது என்றால், சினிமாக்காரர்களே கண்டு பாராட்டும் நடிகவேள் இருக்கும் இடத்துக்கு அல்லவா, ஆதரவு பெருகி வழிய வேண்டும்! இதுபோலவே, ஒவ்வோர் உண்மையும் அவரிடமிருந்து மறைக்கப்படுகிறது. ஜனவரியோடு ஒழிந்துவிடுவார்கள்! மார்ச் வந்தால் மாண்டுபோவார்கள். ஜூனில் ஜன்னி பிறந்துவிடும் - ஜூலையில் ஒழிந்துபோவார்கள் - ஆகஸ்ட்டு அவர்களை அழித்தே போடும்- என்று சூனியக்காரன், கோழி முட்டைக்கு மஞ்சள் குங்குமம் தடவி, எதையோ முணுமுணுத்துவிட்டு, இதைக் கொண்டுபோய் மாட்டுக் கொட்டிலில் மூன்றடி ஆழக் குழியில் புதைத்துவிட்டு வந்துவிடுகிறேன், மூன்று மணி நேரத்தில் அவன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கக்கி இறந்துபடுவான் பாருங்கள் என்று கூறிவிட்டு, கூலியை வாங்கி முடிபோட்டுக் கொண்டு சாராயத்தை வெறி ஏறும் அளவுக்குக் குடித்துவிட்டுப் போகும் கதைபோல, இதோ ஏழு கட்டுரை, மூன்று பிரசங்கம் இவைகளாலேயே ஒழித்துக் கட்டிவிடுகிறேன் பாரும் என்று பெரியாரிடம் பேசி, அவரை நம்பச் சொல்கிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்களின் பெயரைக் கூறி, "அவர் நமது கழகம் - தங்களிடம் நிரம்பப் பக்தி - வெளிப்படையாக வரமாட்டார், ஆனால் மனதுக்குள்ளே, நிரம்பக் கொள்கைப் பற்று - நெற்றியிலே குங்குமப் பொட்டு இருக்கும், ஆனால், குடி அரசு படிக்காவிட்டால் தூக்கம் வராது-’’ என்று பெரியாரிடமும் புளுகி வைக்கிறார்கள். அந்த ஊரில், எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - அந்தப் பயல்களுக்கு? - என்று பெரியார் கேட்கிறார். உடனே அவர்களுக்கு ஒரு ஆள்கூடக் கிடையாது என்று கூறிவைக்கிறார்கள் வடநாட்டுக் கடைகளை மறியல் செய்வோம் - அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள், உடனே, வடநாட்டுக் கடைக் காரனை விட்டுவிட்டு, அவர்கள்மீது பாய்வோம், ஒழித்துக் கட்டிவிடலாம், 9 கட்டுரை போதும் என்று கூறுகிறார்கள். 99 கட்டுரைகள் தீட்டுகிறார்கள், ஒழிவதாகக் காணோம் - ஓய்ந்தால் தேய்ந்தோம் என்ற அச்சத்தில் மேலும் சில கட்டுரைகள் தீட்டி, அவர்களை ஒழிக்கப் பயன்படாவிட்டாலும், நமக்கு எழுதும் பழக்கம் வளரட்டும் என்ற அளவில் திருப்தி அடைந்து இவ்வளவு எழுதும் எனக்கு இன்னும் ஓர் இருபது என்று பெரியாரிடம் சென்று இளிக்கிறார்கள்! இவைகளைப் பெரியார் அறியாமலில்லை! ஆனால் என்ன செய்வது? ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ, சர்க்கரை என்பார்களே! அதுதான்! தெரிகிறதா, தம்பி!! அன்புள்ள அண்ணாதுரை 14-8-1955 இந்திராணி சேலை! சர்க்கார் திட்டங்களில் ஊழல் பார்லிமெண்ட், பத்திரிகை கருத்துகள். தம்பி! புராண மதிபடைத்த ஓர் மன்னன் - மந்தகாச வாழ்வால் மதியை மங்கவைத்துக் கொண்ட மந்திரிமார்கள் - அந்தச் சபைக்கு வந்தான் ஒரு சாகசக்காரன்! “அரசே!’’ என்றான்,”என்ன?’’ என்று தர்பார் முறையில் கேட்டான் மன்னன்! "அரசரே! நான் எத்தனையோ இராஜாதிராஜக்களைப் பார்த்தேன், அவர்களோடு பழகினேன் - ஆனால் ஒருவருக் காவது, தங்களுக்கு உள்ளது போன்ற வீரதீரம், பராக்கிரமம் இல்லை, எனவே தங்களைக் கண்டதும், அது தங்களுக்கே உரியது என்று தீர்மானித்து விட்டேன், என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். காவலா! என்றான், காவலன், காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஒருவன் கேட்பது கண்டு மகிழ்ந்து, அங்ஙனமே ஆகுக! காணிக்கைப் பொருள் யாது?’’ என்று கேட்டான். "ஈரேழுபதினாலு உலகத்திலும் இதற்கு ஈடு கிடையாது வேந்தே.’’ "அப்படியா! மெத்தப் புகழ்கிறாயே! என்ன அது! நவரத்தின மாலையோ - முத்துப் பல்லக்கோ - தந்தக்கட்டிலோ, தங்கப் பாளமோ. . .’’ "மன்னா! இதெல்லாம் சாமான்ய மன்னர்களுக்கு! தங்களுக்கு நான் தரப்போவது. . .?’’ "என்ன! என்ன! அது?’’ "இந்திராணி தேவியாரின் எழில் மிக்க சேலை - தங்கள் பட்ட மகிμ பூரிப்படைய!. . .’’ "இந்திராணி தேவியார்!’’ "ஆமாம் அரசர்க்கரசே! தேவேந்திரனுடைய பார்யாள், சாட்சாத் இந்திராணி தேவி, தவிமிருந்து பெற்ற சேலை, அதை அணிந்து கொண்டால், அரசே! வெள்ளை யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கற்பக விருட்சம், காமதேனு, குற்றேவல் புரியும், அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது. . . ’’ "அப்படியா. . .நம்ப முடிய வில்லையே’’ “இப்போது நம்ப வேண்டாம் மகாராஜா! சேலையை நான் இந்தச் சபையிலே. பிரித்துக் காட்டப் போகிறேனே, அப்போது நம்புங்கள் - இப்போது ஏன்! ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா!!’’”தேவேந்திரனுடைய தேவியின் சேலை. . .’’ "தங்கள் திருச்சபையில் கொண்டு வந்து காட்டப் போகிறேன். . .’’ "யார்? நீ?’’ "உரு கண்டு எள்ளற்க, மன்னா! உண்மையைப் பொறுத் திருந்து பாரும்.’’ "எப்போது கொண்டு வருவாய்?’’ "ஆறேழு மண்டலம் பூஜை - அது முடிந்ததும் அந்த அற்புதமான சேலை. . .’’ இந்த உரையாடலுக்குப் பிறகு, சாகசக்காரனுக்கு, அரண்மனையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டன பூஜை நடத்தி வந்தான்! மலர்களை விடப் பழங்கள் அதிகம் செலவாயின, பூஜைக்கு!! தேனும் பாலும் குடம் குடமாக! தேவ பூஜைக்குத் துணை செய்ய தத்தைகள்!! பொன், கேட்கும் போதெல்லாம். இப்படிப் போக போக்கியமாக சாகசக்காரன் இருந்து வந்தான் - ஆறு மண்டலம் முடிந்தது. ஏழும் வந்து சென்றது - மன்னன் இன்னும் ஏன் தாமதம் என்றான்; மன்னா! பூஜை முடிய வில்லையே, ஆறேழு மண்டலமாகும், என்றேனே மறந்தீரா?’’ என்றான் சாகசக்காரன், “நான் எப்படி மறப்பேன், நேற்றொடு ஏழு மண்டலம், இருநூற்று எண்பது நாட்கள் முடிந்தனவே’’ என்றான் மன்னன்; பெருஞ்சிரிப்பொலி கிளம்பிற்று, மன்னா, ஆறேழு மண்டலம் என்றேன் - தாங்கள் அதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்ளவில்லை - ஆறேழு - நாற்பத்திரண்டு -நாற்பத்திரண்டு மண்டலங்கள் - நாற்பத்திரண்டு நாற்பது நாட்கள் - என்று விளக்கமுரைத்தான் - மன்னன் திடுக்கிட்டுப்போனான் - எனினும் என்ன செய்வது - இந்திராணியின் சேலை - அதன் மகிமையால், வெள்ளை யானை, காமதேனு, கற்பக விருட்சம்!! சரி! - என்றான் - சாகசக்காரன் இராஜபோகத்தில் மூழ்கினான். நாட்கள் நகர்ந்தன - கடைசியில் அவன் சொன்ன நாள் வந்தது,”நாளை தர்பாரில்!’’ என்று சாகசக்காரன் தவயோகி பாணியில் சொன்னான். மன்றம் கூடிற்று - மன்னன் ஆவல் நிரம்பிய கண்களுடன்!! சாகசக்காரன், உள்ளே நுழைந்தான் - ஓம்! என்றான் மும்முறை! மேலே பார்த்தான், கரத்தை உயர்த்தினாள், ஆஹா! என்றான், கண்களில் ஒத்திக்கொண்டான், எழுச்சி மயமான நிலை பெற்றவன் போலாகி, என்னை நம்ப மறந்தீர்களே காவலனே! இதோ பாரும்! வானவில் இதனிடம் என்ன செய்யும்-? ஆஹா! பார்த்துக் கொண்டே யுகக் கணக்கில் இருந்துவிடலாம் போலிருக்கிறதே! என்ன பளபளப்பு! எத்தகைய ஜொலிப்பு! தொட்டால் வெண்ணெய் மீது கைபடுவது போலிருக்கிறதே’’ என்று பேசலானான் - மன்னன் திகைத்தான் - மந்திரிகள் மருண்டனர் - ஏனெனில், சாகசக்காரன் வெறுங்கையுடன்தான் தெரிகிறான்! "இந்திராணியின் சேலை. . . எங்கே. . .’’ என்று மன்னன் இழுத்தாற்போலக் கேட்டான். "இதோ மன்னவா! என்னுடைய சித்து முறைக்கு மெச்சிச் சிவனார் அருளிய வரத்தின் விளைவு - வண்ணச் சேலை - இதோ - இதோ’’ என்று கூறியபடி சேலையைப் பிரித்துக் காட்டுவது போலப் பாவனை செய்தான்! "எனக்குத் தெரியவில்லையே. . .’’ என்று ஏக்கத்துடன் கூறினான் மன்னன். “திகைத்தவன் போலானான் சாகசக்காரன் - பயந்தகுரலில்-”மன்னா! தங்களுக்குத் தெரியவில்லை என்றா கூறகிறீர்கள் . . . ’’ என்றான். “ஆமாம் தெரியக் காணோமே. . .’’ என்றான் மன்னன்.”ஐயகோ! ஒரு விஷயத்தைக் கூற மறந்தேன், அறிவிலி நான்! அரசே! யாருடைய அன்னை பத்தினியோ, அப்படிப்பட்டவர் களின் கண்களுக்குத்தான் இது தெரியும் உத்தமியாயிற்றே உமது அன்னை-உமக்குத் தெரிந்தாக வேண்டுமே’’ என்றான் - மன்னனுடைய மாதாவின் மீது மாசு உண்டு - மன்னனுக்கும் அது தெரியும் - எனவே, குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று குமுறி, "ஆஹா!’’ அற்புதம்! இதெல்லவா தேவப்பிரசாதம்!’’ என்று கூறியபடி, சாகசக்காரன் கையிலிருந்து சேலையைவாங்கினான் (பாவனைதான்!) மந்திரிகளிடம் காட்டினான். அவர்களோ, மன்னனுக்கு ஒத்து ஊதினர்! சாகசக்காரன் வெற்றிபெற்றான். திட்டங்கள் தீட்டும் காங்கிரசாட்சியினர். இது போலவே “இந்திராணி சேலை’ காட்டுகிறார்கள் தம்பி. தெரியவில்லையே என்றால், உனக்குத் தேசபக்தி இல்லை அதனால்தான் தெரியவில்லை என்கிறார்கள். நமக்கேன் இந்த வீண்பழி என்று பயந்து, பலபேர், தங்களைத் தேசபக்தர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவே,”தெரிகிறது! தெரிகிறது’’ என்று குதூகலம் காட்டிப் பேசுகிறார்கள். பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஆகஸ்ட்டு நீ பற்றிய சிந்தனையில், நீயும் இருந்தாய், நானும் இருந்தேன் - ஆகையால், உனக்கு, முன்பே இதைக் கூறமுடியாமல் போய்விட்டது. காங்கிரஸ் தீட்டும் திட்டங்கள், எவ்வளவு அவலட்சண மாக இருக்கிறது என்பதைப் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் காட்டிற்று. சர்க்காருடைய "மேற்பார்வை’ பெற்று, நிதி உதவி பெற்று, தொழில்களின் பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. தொழில்துறை நிதிக் கார்ப்பரேஷன். திட்டம் அருமையானது, வரவேற்கத்தக்கது. வளர்ச்சி பெறக்கூடிய ஒரு தொழில், அதற்குத் தேவையான முதல் -பணம்-கிடைக்காததால், குன்றிப்போகக் கூடாது, சர்க்கார் அதற்கு நிதி அளித்து, அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம். தம்பி, தாய்ப்பால் குடிக்கிறது குழந்தை! எதுவரையில்? வேறு உணவுகளை உண்டு ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம் பெறுகிற வரையில். தொழில் துறைக்குச் சர்க்கார் அளிக்கும் உதவியும், அதைப் பெறும் தொழிலமைப்பு, வளரும் பக்குவத்தைப் பெறுவதற்காகத்தான். இந்த நல்ல திட்டம் எவ்வளவு இலட்சணமாக நடைபெற்றி ருக்கிறது, தெரியுமா? டில்லி சட்டசபையில், சரமாரியாகக் கண்டனக் கணைகள்! காங்கிரசின் எதிரிகள் தொடுத்தது அல்ல. காங்கிரஸ் உறுப்பினர்களே கணைவிட்டுத் துளைத்தனர். ஊழல், திறமைக் குறைவு, நெளிகிறது! நாற்றமடிக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந்திருக்கிறது. ஒரு கண்ணாடித் தொழிற்சாலை - வடக்கே - சோடேபூர் என்ற ஊரில்! இது, திட்டத்தின்படி உதவி நிதி கேட்டது. சர்க்காருக்கு, இப்படிப்பட்ட திட்டங்களுக்காகப் பணம் இருக்கிறது - வெற்றி வியர்வைதான் அது! ஏழையின் குருதி எவ்வளவு அக்ரமமாகப் பாழாக்கப்பட் டிருக்கிறது என்பதைக் கேள் தம்பி, நாம் எப்படிப்பட்ட ஆட்சியிலே சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியும். தேசியம் பேசி, நம்மிடம் பகை காட்டும் காங்கிரஸ் நண்பர்களையும், இதைப்பார்த்து, சிந்தித்து, கருத்தளிக்கச் சொல். சோடேபூர்க் கண்ணாடித் தொழிற்சாலைக்கு 21-இலட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள் - பல தவணைகளில். 21 இலட்சத்தையும் வாங்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டான் பிறகு, துளியும் அச்சமின்றி, யார் நம்மை என்ன செய்ய முடியும் என்ற துணிவுடன், அந்தத் தொழிற்சாலையைக் குன்றவைத்து, அதற்குப் போட்டியாக இருந்த வேறோர் கண்ணாடித் தொழிற்சாலைக்கு, மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார்கள்! அக்ரமத்தின் தன்மை தெரிகிறதா? பசுவுக்குப் பருத்தியும் புல்லும் வைக்கப் பணம் தருகிறான் ஒரு தர்மதாதா! பசுவுக்கு அது தரப்பட்டால், மதுரமான பால் கிடைக்கும் என்று எண்ணுகிறான் உதவி அளித்தவன். அதற்காகத்தான் உதவி, “நல்ல தரமான பசு; நல்லபடி தீனி வைத்தால், கொழுத்து வளரும், தீஞ் சுவைப்பால் அளிக்கும், அதற்காகச் செலவிடப் பணம் எங்களிடம் இல்லை,’’ என்று கூறித்தான்”தர்மம்’ கேட்டுப் பெற்றனர். பசுவோ, எலும்புந்தோலுமாகி விடுகிறது. பிறகு அதனை, "கசாப்பு’ கடைக்காரருக்கு மலிவான விலைக்கு விற்று விடுகிறார்கள். எத்தன்! கடினசித்தன்! பொது மக்கள் துரோகி என்றெல்லாம், நீ கண்டிக்கத் துடிப்பாய். தம்பி, நீயும் நானும் என்ன, டில்லி சட்டசபையில், சுதேச கிருபளானி சோதிராம் கித்வானி தாகூர்தாஸ் பார்க்கவா மோகன்லால் சாக்சேனா துளசிதாஸ் கிசன்சந்து எச். வி. காமத் எஸ். என். தாஸ் டி.என். சிங் இப்படிப்பட்டவர்கள் இடித்துரைத்தார்கள். இவ்வளவுக்கும் குகா என்னும் மந்திரி, அமைதியாக "அது சரி! என்ன செய்யலாம்(! அவ்வளவு மோசம் இல்லை! ஊழல் ஏற்பட்டு விட்டது! கவனக்குறைவால் வந்த கேடு! அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்! போனது போகட்டும்!’’ - என்று இந்த முறையில்தான் பேசியிருக்கிறார். ஜனநாயகம், தக்கமுறையில் தழைத்து, ஒரு பலம் பொருந்திய எதிர்க்கட்சி இருந்திருக்குமானால், குகாவும் அவருடைய கூட்டுத் தோழர்களும், வெட்கித் தலைகுனிவது மட்டுமல்ல, மிரண்டு பணிந்திருப்பார்கள். ஆனால், இப்போதுதான் எல்லாம் காங்கிரஸ்மயம்; காங்கிரசுக்கோ நேரு அபயம், என்று நிலைமை இருக்கிறதே! கண்டிக்கிறார்கள்! புள்ளி விவரம் காட்டுகிறார்கள்! பசுவோ சாகடிக்கப்பட்டு விட்டது! பாபிகளா இப்படியும் அக்ரமம் செய்யலாமா? யார் இந்தத் தீய காரியம் செய்தவர்கள்? பிடித்திழுத்து வாருங்கள் விசாரணை செய்த தண்டிப்போம், என்று பேசுகிறார்கள். ஆனால் அந்த ஆசாமியோ, சர்க்காரிடம் சன்மானம், விருது, சான்று பெற்று, வேறு இடம் தேடிச்சென்றிருக்கிறார். பொறுப்பற்றவர்கள், பொது மக்களிடம் துளியும் அச்சமில்லாதவர்கள், தட்டிக்கேட்க யார் இருக்கிறார்கள் என்றுஎண்ணும் நெஞ்சழுத்தக்காரர்கள், என்றெல்லாம் சொல்லும் போது, கோபம் கொதித்தெழுகிறது காங்கிரஸ் கட்சியினருக்கு. ஆனால் சோடேபூர் சம்பவத்துக்கு அவர்கள் என்ன சமாதானம் கூறுகிறார்கள்.? இலட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பாழாகிறது. பகற் கொள்ளைக்காரனாவது, போலீஸ் தாக்குமோ, ஊரார் ஒன்று திரண்டு வந்து எதிர்ப்பரோ என்று அஞ்சி அஞ்சிக் காரியம் செய்ய வேண்டி இருக்கிறது. ஏமாளித்தனம் அரச பீடத்தில் இருப்பது கண்டு, எத்தர்கள், ஒரு சிரமமுமின்றி, துளியும் நடுக்கமின்றி, அடிக்கிறார்கள் கொள்ளை ஆகுமா? என்று கேட்டாலோ, “இதோ ஆசியாவின் ஜோதியின் ரிμப விஜயம், படம் பார். பத்தாயிரம் அடி, கலர்’’ என்று கூறி, இந்த”அபின்’ போதும் மக்கள் மயக்க என்று எண்ணுகிறார்கள். முறையும் சரியல்ல, நீண்ட காலத்துக்குப் பலன்தரத்தக்கதுமல்ல. "பாராளுமன்றத்தில் தொழிலுதவி நிதிக் குழுவின் நிருவாகத்தைப் பற்றி நடந்த வாதம் சில முக்கியமான கருத்துக்களை வறுபுறுத்தியுள்ளது. அவை நிருவாகத்தின் ஒழுங்கீன விவரங்களை வெளியிட்டதோடு கூட, இந்திய அரசாங்கம்அவற்றைக் குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், நிருவாகத்தை ஆராய்ச்சி செய்த விசாரணைக் குழுவின் ஆலோசனைகளுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை யென்றும் குறிப்பிடுகின்றன. நிதிக் குழுவின் நிருவாக ஒழுங்கீனங்களை, கணக்குத் தணிக்கையாளர்கள் விளக்கிக் கூறியிருந்தும், அரசாங்கம் யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்கு ரூ.2,000,000 சிறு தொகைகளாக 21 தவணைகளில் கொடுக்கப்பட்டது சோடேபூர் தொழிற்சாலை நிருவாகம் வேண்டுமென்றே ஒழுங்கீனமாக நடத்தப்பட்டதென்றும், அதனாலே பெரு நட்டம் ஏற்பட்டதாகக் காட்டப்பட்ட தென்றும், பின்னர் அதனுடைய போட்டித் தொழிற்சாலை அதிபருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதென்றும், விசாரணைக் குழுவின் முன்னர் சான்று கூறப்பட்டது. இவ்வளவு ஊழல்களுக்கும் காரணமாயிருந்த நிருவாக ஆணையாளருக்கு, அவருடைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, ஆறுமாத ஊதியத் தொகையை இலவசமாக அளித்து, அவருக்கு ஒரு நற்சான்று பாராட்டுரையும் அரசினர் வழங்கியிருக்கிறார்கள்! பொது மக்கள் நிதி இங்ஙனம் மோசடி செய்யப்பட்டதற்கு அரசாங்கமும் உடந்தையாயிருந்ததாகத்தான் கொள்ள வேண்டு மென்று, பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காங்கிரசுக் கட்சித் தலைவர், பண்டித் தாகூர்தாசு பார்க்கவா, சுட்டிக் காட்டியிருக்கிறார். உத்தரப்பிரதேசக் காங்கிரசுக்குத் தலைவர் திரு. மோகன்லால் சாக்சேனா, காந்தி நினைவு நிதியிலிருந்து ரூ.1,65,00,000 தொழிலுதவி நிதியில் முதலீடாக வைக்கப்பட்ட தென்றும், ஏழை மக்களிடமிருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்பட்ட இத்தொகை ஒழுங்கீனமான முறையில் விரையமாக்கப் பட்டிருக்கிறதென்றும் கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் நேரடியான மேற்பார்வையிலிருந்த நிதியே இக்கதியை அடைந்திருக்கிறதென்றால், பொது மக்கள் யாரை நம்ப முடியும்? "தமிழ்நாடு’ தலையங்கத்தில் உள்ள கருமுத்துக்கள் இவை! "தமிழ்நாடு’ பாரதமாதாவின் முரசு அல்ல; அது அப்படித்தான் எழுதும்’ என்று கூறித் தப்பித்துக் கொள்ள வெட்கத்தால் வேதனைப்படும் காங்கிரசார் முயல்வர், தம்பி, அவர்களுக்கு இதோ, இவைகளைக் காட்டு. "கார்ப்ரேஷன் 1948 -ஆம் ஆண்டு முதல் வேலைசெய்து வருகிறது. ஆரம்பமானது முதல் இதுவரை சுமார் ரூ. 21 கோடி கடன் தரப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் கடன் உதவிபெற்ற ஸ்தாபனங்கள் வேரூன்றியுள்ளன என்பதைத் தெரிவித்து கொள்வதற்கான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்த ஸ்தாபனம் வேலை செய்யும் விதத்தைப் பற்றிப் புகார்கள் கிளம்பி ஸ்ரீமதி கிருபளானி தலைமையில் ஒரு விசாரணைக் கமிட்டியை சர்க்கார் நியமித்ததும், அதன் யாதாஸ்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானதும் வாசகர்கள் அறிந்ததே. அதன் நிர்வாக டைரெக்டர் தம்மிஷ்டப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பது பொதுப்படையான புகார். இதுவரை இருந்து வந்த ஏற்பாட்டின்கீழ் டைரெக்டர்கள் தமக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காண்பித்து அதிகாரததை துஷ்பிரயோகம் செய்வதாகப் பல மெம்பர்கள் புகார் செய்தனர். ஒரு கண்ணாடித் தொழிற்சாலைக்கு ரூ.21 இலட்சம் கொடுத்தும் அது வேலை செய்யாமல் நின்று போய்விட்டது. உத்தரவாதப்படி டிவிடெண்டு தருவதற்காகச் சென்ற ஆண்டில் ரூ.4 இலட்சதுக்குமேல் சர்க்கார் தம் கையைவிட்டுத் தரவேண்டியதாயிற்று. இம்மாதிரி கார்ப்பரேஷன் ஆரம்பித்ததி லிருந்து இதுவரை இந்த வகையில் சர்க்கார் நஷ்டப்பட்ட தொகை ரூ.21 இலட்சம் இவையெல்லாம் திருப்திகரமான நிர்வாகத்தின் அறிகுறிகளல்ல. இது சர்க்கார் பொறுப்பேற்று நடத்திவைக்கும் ஸ்தாபனம், 14 டைரெக்டர்களில் சர்க்கார் நேரடியாகவும் ரிசர்வ் பாங்கு மூலமாகவும் 6 பேரை நியமிக்கிறார்கள். இன்ஷ்யூரன்ஸ் ஸ்தாபனங்கள் கூட்டுறவு பாங்குகள் முதலியவை மற்றவர்களை நியமிக்கின்றன. எல்லோரும் பெரிய ஆசாமிகள். கடன் தருவதோ அயனான சொத்தின் ஆதாரத்தின் மீது. அதன் மதிப்பில் 60% அளவுக்குத்தான். இந்த ஸ்தாபனம் சரிவர நடைபெறாமல் சர்க்கார் வருஷா வருஷம் பையை அவிழ்க்க வேண்டியிருக்கிறது என்றால், கடன் தரும் விஷயமாக வேறு துறைகளில் சர்க்கார் பரவலாக செயல்படுவதற்கு முன் எவ்வளவு சிந்தனையும் ஜாக்கிரதையும் அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை’’ "தினமணி’ கக்கிடும் தீச்சுடர்கள் இவை!! எப்படி இருக்கிறது காங்கிரசாட்சியிலே உள்ள நிர்வாக இலட்சணம். ஜீப்கார் ஊழல் டிராக்டர் ஊழல் உரபேர ஊழல் ரெடிமெட் வீடு ஊழல் இலண்டன் மாளிகை ஊழல் தம்பி, எந்தச் சர்க்காரும் வெட்கப்படக்கூடிய அளவு இருக்கிறது - வளர்ந்தும் வருகிறது, சர்க்கர். துணிந்து யாராவது இத்தகைய ஊழல்களை எடுத்துக்காட்டிக் கண்டித்தால், மூடி மறைக்கவும், மிரட்டி அடக்கவும், நேருவைக் காட்டி மயக்கவும்தான் முயலுகிறதே தவிர, இத்தகைய ஊழல்களை ஒழித்துக்கட்டத் துணிவும் கொள்ளவில்லை; அத்தகைய தூய எண்ணம் இருப்பதாகத் தெரியவும் காணோம். நேரு பண்டிதருக்கோ இவைகளெல்லாம் கடுகு! அவருடைய கண்ணோட்டம், உலக சமாதானத்தின்மீது ஆழப் பதிந்து விட்டதாம். இங்கே, நிர்வாகத்தில் ஊழல் நெளிகிறது; பொது மக்களின் பணம் விழலுக்குப் பாய்கிறது; ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுகிறது. 21 இலட்ச ரூபாயைச் சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்குக் கொட்டி அழுத இந்த அமைப்பு, இதுவரையில், 21 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது - தொழில்களின் வளர்ச்சிக்கு!! என்னென்ன வளர்ந்ததோ! யார் கூறமுடியும்! இந்த ஊழல்களில் நூற்றில் ஒரு பங்கு நடைபெற்றால் கூட, தம்பி, மற்ற ஜனநாயக நாடுகளில், மந்திரி சபைகள் கவிழும், மக்கள் சீறி எழுவர்!! சீனா போன்ற நாடுகளிலே, ஊழலுக்குக் காரணமாக இருந்தவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள். இங்கே, சோடேபூர் கண்ணாடித் தொழிற்சாலை நிர்வாகிக்கு, அவருடைய பதவிக்காலம் முடிந்தபிறகு, மேற்கொண்டு ஆறுமாதச் சம்பளம் கொடுத்து, அவருடைய அருமை பெருமையைப் பாராட்டி நற்சாட்சிப் பத்திரமும் கொடுத்து அனுப்பினார்களாம்!! இந்த வெட்கக்கேட்டுக்கு, என்ன கூறுகிறார்கள், காங்கிரசார்!! அன்புள்ள அண்ணாதுரை 21-8-1955 எழிலோவியம் தலபுராணங்கள் - குற்றாலத்தின் எழில் தம்பி! முத்தனையார் வரம் பழித்தோர் முதுகுரவர்க்கு இடம் புரிந்தோர் முக்கண்ணானை நத்தனை, நான் முகத்தோனை இகழ்ந்தோர் பல்லுயிர் செகுத்தோர் நன்றி கொன்றோர் கத்தனை விட்ட மர்க்களத்திலோடினோர், நம்பினர்க்கு கபடம் செய்தோர் எத்துணை பாதகரேனும் வடஅருவி படிந்தவர் வீடு எய்துவர் இது தெரியாது, எனக்கு, இங்கு புறப்பட்டபோது; தெரிந்திருந்தால், வேறு சிலருக்கு முன்கூட்டியே “சிபாரிசு’ செய்திருக்கலாம்; இங்கு வந்து”தலபுராணம்’ படித்தபோதுதான், இது இத்தனை பெரிய “பாவமன்னிப்பு’ இடம் என்பது தெரிந்தது! பாவம் செய்தவர்களுக்கே, கரை கழுவி விடப்படுகிறது என்றால், பாவி என்று பாதகர்களால் ஏவி விடப்பட்ட பாமரரால் தூற்றப்படுபவர்களுக்கு பலன் நிச்சயமாகக் கிடைக்கத்தானே செய்யும்! இங்கு, நான் பலர் குளித்துக் குதூகலிப்பதைக் காண்கிறேன். காவி உடையும் பொன்னிற மேனியும், கருத்துச் சுருண்டு கவர்ச்சிகரமாகக் காட்சி தரும் தாடியுடன் கூடிய”தருமபுர’த்தையும் காண்கிறேன், துள்ளித்திரியும் பருவத்தினர், துவண்டு போகும் நிலையினர், தொங்கு சதையினர், தோலால் எலும்புக் கூட்டினைப் போர்த்திருப்போர், சீமான்கள், அவர்களைச் சீமான்களாக்கியதால் சீரழிந்து கிடப்போர், மதி முகவதிகள், அது அற்ற நகைப்பொதிகள், பலர், பலப்பலர்! அனைவருக்கும் இன்பம் அளித்திடும் அந்த அழகிய அருவி, என்றென்றும் இதேவள்ளற்றன்மையோடு இருந்திடுவதாக என்று வாழ்த்துவதுடன், நம் திருவிடத்தில் என்னென்ன இயற்கை எழில் காணக் கிடக்கிறது என்பதை எண்ணி எண்ணிப் பூரிப்படைகிறேன். தலபுராணம் எத்துணையோ இடங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. படிப்போர், அகமும் முகமும் மலர்ந்து, நந்தம் நாட்டின் சிறப்புத்தான் என்னே! இத்துணை இடங்கள் உள்ளனவே பாவங்களைப் போக்க, என்று இறும்பூதெய்து கின்றனர். தம்பி-நான் உள்ளபடியே வெட்கப்படுகிறேன், வேதனையுமடைகிறேன் - இவ்வளவு இடங்கள் தேவையாக இருக்குமளவுக்கா இங்கு பாபம் மலிந்து குவிந்து வளர்ந்து கிடக்கிறது என்பதை எண்ணிடும்போது. தத்தமது பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட இடங்களை, விளம்பரப்படுத்தும் முறையில், தலபுராணங்களை ஆக்கினரேயன்றி, பிற எந்த நாட்டுக்கும் தேவையில்லாதிருக்கும்போது இங்குமட்டும் ஏன் இத்தனை பாபம் போக்கும் பதிகளும் நதிகளும்! இங்குள்ளோர் பாவச் செயல்களில் விடாமல் ஈடுபட்டுக் கிடக்கும் இழிதன்மையிலா உளர் என்பதுபற்றி எண்ணிப் பாராதாரில்லை. ஏனோ? "ஐயோ! உம்மை போட்டோ எடுக்கப் போகிறேன்.’’ "என்னையா? ஏன். . .’’ "ஏன் என்பது கிடக்கட்டும். போட்டோ எடுத்துக் கொள்வதாலே உமக்கென்ன நஷ்டம், கஷ்டம், பணம் தர வேண்டாம்; இலவசமாகவே போட்டோ எடுத்துத் தருகிறேன்.’’ "இலவசமாக!. . . ஆச்சரியமாக இருக்கிறதே. . .’’ "நேரமாகிறது! அப்படியே அந்த மரத்தடியில் நில்லும். . . இதோ பாரும் சட்டையைக் கழட்டி விடும். . . ’’ "சட்டையைக் கழற்றிவிடுவதா? ஏனய்யா! சட்டை நன்றாகத்தானே இருக்கிறது. . .’’ "அடா அடா! பெரிய தொண தொணப்பு ஆளாக இருக்கிறீரே. சட்டையில்லாமல் தானய்யா போட்டோ எடுக்க வேண்டும். . . இதோ பாரும். . . ஊரெங்கும், நாடெங்கும். . . உம்போட்டோவை ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் அச்சிட்டு ஒட்டப் போகிறோம், தெரிகிறதா! எங்கும் எம் போட்டோ! மதில் சுவர்களில், மாட மாளிகைகளில், கடை வீதிகளில், வண்டி வாகனங்களில், சினிமாக் கொட்டகையில், சிங்காரப் பூந்தோட்டங்களில், எங்கும் உம் போட்டோ இருக்கும். . .’’ "புரியவில்லையே. . . சரி. . . நான் போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டேன். . .’’ "பத்து ரூபாய் இனாம் தருகிறேன். . .’’ "உஹும். . .முடியாது. . .என்னமோ சூக்ஷமம் இருக்கிறது. ஐம்பது கொடுத்தால்தான் நான் ஒப்புக்கொள்வேன்.’’ "பேராசைக் காரரய்யா நீர்! இருபது தருகிறேன். . .’’ "ஐம்பதுக்குச் சம்மதமானால் பேசு. . . இல்லையானால் போகலாம். . .’’ "சரி! சரி!…. கழற்று சட்டையை…. கைகளைத் தொங்க விடய்யா…. போதும்….. சிரிப்புக் வடாது…. சும்மா பாரும் போதும்…., போட்டோ எடுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் விளம்பரத் தாட்கள்! போட்டோ படத்தின்கீழ். . . இப்படிப்பட்ட கடுமையான குஷ்டரோகியும் எமது குஷ்ட விநாசனி தைலம் பூசிக் கொண்டால் முப்பது நாளில் பொன்னிற மேனி பெறுவர்!- என்று விளம்பரம் காணப்பட்டது. ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்ட அப்பாவியை அவனுடைய நண்பர்களே கூட "குஷ்டரோகி’ என்று எண்ணி ஒதுக்க ஆரம்பித்தனர்!! மருந்து விளம்பரத்துக்காக, அப்பாவியைக் குட்ட நோயாளனாக்கிக் காட்டியதுபோல, ஆறுகளுக்கும், திருக்குளங் களுக்கும், சோலைகளுக்கும், ஊர்களுக்கும் கீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, "தலபுராணங்கள்’ புனையப்பட்டன! அதனால், அந்தத் தலங்களின் மகிமை தெரிவதைவிட, விளக்கமாக, பாவச்செயல் புரிவோர் மிகுத்திருக்கிறார்களா என்று எண்ணித்தான் நம் போன்றார் ஆயாசப்பட வேண்டி இருக்கிறது. பாரேன் தம்பி, துவக்கத்தில் உள்ள பாடலை, பாவங்களின் பட்டியலைக் கொடுத்து, இவ்வளவு பாபங்களையும் போக்கும் பதி இது என்று கூறப்பட்டிருக்கிறது. பாவங்களைப் போக்கிடும் என்று மட்டும் கூறினால் போதாது, என்றெண்ணி, "தலபுராணக்காரர்’ எல்லாப் பருவத்தினரின் பாபமும் போக்கப்படும் என்று வேறு கூறுகிறார். அறியாமல் இளமையில் செய் பாவமெலாம் நண்பகலில் ஆடத் தீரும்! காளையராய் மனதறியச் செய்த பாவம், சிறுகாலை படிந்திடில் போம்! வறிதான புன்மாலை படிந்தார்க்கு முதுமையில் செய் மாபாவம் போம்!! முப்பொழுது ஆடில், எழுபிறப்பும் பெயர்க்கும்!!! இவ்வளவு மகிமை கூறப்பட்டிருக்கும் குற்றாலத்தில் இருந்து கொண்டு இதை எழுதுகிறேன், தம்பி! இருந்துகொண்டு என்றால் சாதாரணமாகவா! சிங்கம்பட்டி ஜெமீன்தார் மாளிகையில் இருந்துகொண்டு எழுதுகிறேன். அழகான மாளிகை! நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கூடம், "தர்பார்’ நடத்துவதற்கான இடம்! ஜெமீன்தாரரின் உருவப்படங்கள் என்னை நோக்கியபடி!! நுழைவு வாயிலில், அவர் புலியுடன் - யானையுடன் - இருக்கிறார் - படங்கள் - வேட்டையில் அவர் சாகடித்தவை! ஏதேது! அண்ணனுடைய நிலை ரொம்பரொம்ப! உயர்ந்து விட்டது போலிருக்கிறது, சிங்கம்பட்டி ஜெமீன் அரண்மனை யிலல்லவா இருக்கிறார், என்று எண்ணிக்கொள்வாய், தம்பி, என் நிலை உயர்ந்துவிடவில்லை, சிங்கம்பட்டி ஜெமீன் நிலை அவ்விதமாகி விட்டது!! சிங்கம்பட்டியின் இந்தச் சிங்கார மாளிகை போடி நாயக்கனூருக்கு வந்து சேர்ந்து, இப்போது ஒருவர் மொத்த வாடகைக்கு எடுத்து, சீசனின்’ போது, அன்றாட வாடகைக்கு விடுகிறார். அந்த முறையில், இந்த மாளிகையின் ஒரு பகுதியை நாளொன்றுக்கு நாலு ரூபாய் வாடகைக்கு என் நண்பர் மதுரை டாக்டர் அருணாசலம் எடுத்திருக்கிறார். அவருடைய விருந்தினன் நான்! புரிகிறதா! உன் அண்ணனுடைய நிலை உயர்ந்ததன் காரணம்!! கட்டினால் என்ன, கட்டிடத்தில் தங்கியிருந்தால் என்ன, இடம் எழில் நிரம்பியதாக இருப்பதால், களிப்பூறத்தான் செய்கிறது. இங்கு நின்று பார்த்தால், எதிரே தெரியும் சிறு குன்று, பச்சைப்பசேலென்றிருக்கிறது. அந்தப் பச்சைப் பட்டாடை அணிந்த பாவைக்கு முத்தாரம்போல அருவி! காலையில் நீர்வீழ்ச்சி மாலையில் மக்கள் எழுச்சி!! காலையில் குளிக்கிறேன்! மாலையில் களிப்படைகிறேன்! காலையில், மாலையும் அதன் பசுமையும், அருவியும் அதன் குளிர்ச்சியும், என்னிடம் ஏதேதோ பேசிடக் கேட்கிறேன். மாலையில், இத்தகைய இன்பக் காட்சிகளின் இல்லமாக உள்ள தாயகத்தின் நிலை பற்றி மக்களிடம் நான் பேசுகிறேன்!! செந்நெல்லுக்கு வரப்பு, வாழை! வாழைக்கு வரப்பு, கரும்பு! கரும்புக்கு வரப்பு, கதலி! கதலிக்கு வரப்பு, கமுகு! கமுக்கு வரப்பு, தாழை! தம்பி, குற்றாலம் பற்றிய படப்பிடிப்பு இது! காண்போருக்கு கவிதை வடிவில் உள்ள காட்சி, அப்படியே தெரியத்தான் செய்கிறது. வளம் கொஞ்சும் இடம் இங்கு குறிப்பிடத்தக்க அளவுள்ள வயல், குற்றால நாதருக்கும் குழல் வாய்மொழி அம்மைக்கும் சொந்தம்! இந்த வயலின் செல்வம், தக்க முறையிலே "குத்தகை’ விடப்படாததால், முழுவதும் நாதனுக்குச் சேருவதில்லையாம்!! பூ! பூ! குத்தகை முறையிலே குற்றம் கண்டுபிடித்து விட்டார்களே, குறும்பர்கள்!! நமது ஆதீனத்துக் குத்தகைமுறை யினை அறியின் இம்மாந்தர் இதனினும் அதிகமாகக்கூடக் கண்டிப்பர்! ஆயினென்! இவர்தம் கண்டனத்துக்காக, எமது முறையினை மாற்றிக்கொள்ளவா இயலும், என்று கூறுபவர் போல, “தருமபுரம்’ நீர்வீழ்ச்சியில் குளித்திடக் காண்கிறேன்! மூவர் உடனிருக்கிறார்கள், அவருக்கு”சேவை’ புரிய. அவரோ காக்கி உடையற்ற, ராணுவ வீரர் போலவே, அந்த வழுக்குப் பாறைகளிலும், கூழாங்கற்களிலும் நடந்து செல்கிறார்? ப்யூக் கார் காத்துக் கொண்டிருக்கிறது அவருக்காக!! முறை மாறித்தான் விட்டது! ஆனால், அவருக்கு நலன் அளிக்கும் துறையில் மட்டும்தான்! அரன் அருளை, ஆயிரக்கணக்கான வேலிநில உருவில் பெற்று வாழும் ஆதீனகர்த்தா அவருடைய, "இரும்புப் பல்லக்கில்‘, ஏறுகிறார். திருவருள் கண்டதும் கடுவேகத்துடன் காமக்குரோத மதமாச்சாரியாதிகள் பறந்து செல்கிறதாமே, அது போல, "ப்யூக்’ செல்கிறது. போகட்டும்!! இதோ நீர் வீழ்ச்சி!! வேகம் குறைவு, சாரல் சுகம் அவ்வளவு இல்லை, தண்ணீரின் அளவும் குறைவு என்கிறார் பொன்னம்பலனார் - அவருக்குக் குறைவாக இருப்பது, எனக்கு அதிகமாகத்தானே இருக்கும்! என் உடல் சிவந்து விடுகிறது - தம்பி சம்பத் பொன்குன்றாக இருக்கிறான்!! எல்லோரும் குளிக்கிறார்கள்! களிப்புடன் விடுதி செல்கிறார்கள்! மீண்டும் வந்து குளிக்கிறார்கள்! மீண்டும் மகிழ்ந்து விடுதி செல்கிறார்கள்!! மீண்டும் குளிக்கிறார்கள்!! ஐந்தருவி எனும் இடத்தில் அதிகக் கூட்டம் இராது என்றனர் - ஆனால் அங்கும் பெரிய கூட்டம் குவிந்துவிட்டது - சாரல் முடிகிற நேரமாம். எனவே சந்தர்ப்பத்தை இழந்துவிட மனமில்லாதவர்கள், ஒவ்வொரு நாளும், பல்வேறு இடங்களி லிருந்து வந்த வண்ணம் உள்ளனர்! சேல் குதிக்கும் மலர்ச் சோலை! தேன் குதிக்கும் நான்கு திக்கும்! - என்று கூறப்பட்டிருப்பது, மொழியின் அழகுக்கு மட்டுமல்ல, இடத்தின் எழிலுக்கு முற்றிலும் பொருத்தந்தான்! எரிமலை இல்லை, நீர்வீழ்ச்சி உண்டு! பாலைவனம் இல்லை, சோலைவனம் எங்கும்!! - திருவிடம் இப்படியல்லவா இருக்கிறது சொக்க வைக்கிறது காண்போரை அதன் நிலையை எண்ணிடும்போதோ நெஞ்சு நோகிறது. தம்பி, இங்கு உட்கார்ந்து கொண்டு, எழிலைப் பருகி, இன்புற்று இருக்கும்போதுதான், ஏடா! மூடா! இதுதானா திராவிடம்! இதோ பார், உன் திராவிடம்! என்று இடித்துக் கூறுவதுபோல, நாளிதழ்கள் காட்டுகின்றன. முதலமைச்சர் காமராஜரும், நிதி அமைச்சர் சுப்பிரமணியனாரும், டில்சென்று, 400 கேட்டு 200 பெற்று, திரும்பிய சோகக்காதையை!! கொற்றம் நம்மிடமில்லாததால், நமக்கு இழைக்கப்படும் கொடுமை இங்ஙனம் உளதன்றோ, என்ற எண்ணிடும்போது குற்றாலத்துக் குளிர்ச்சியும், உள்ளத்து வெப்பத்தைப் போக்கிட இயலாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. "என்னைக் குறை சொல்லாதே மகனே, நான் உனக்கு எல்லாம் அளித்திருக்கிறேன். இதோ பார், என் அன்புப் பெருக்கு’’ என்று தாயகம் கூறுவதும் தெரிகிறது - அருவி வடிவில். சேதியோ, செந்தேளாகிறது. வண்டாடு மலர்க் கூந்தல் வாராடுங் களப முலை கண்டாடு மாதர் இதழ், கனியாடு மதுரமொழி விண்டாடும் கிளிப்பிள்ளை வியந்தாடும் மடப்பூவை கொண்டாடும் குயிற்பேடை கூத்தாடும் பசுந்தோகை. குற்றாலம், தம்பி. குற்றாலம்! இங்கு அருவி அழகு! ஆனால் திருவிடத்தின் பொலிவு இஃதொன்றேதானா? அதோ காவேரி! இதோ தாமிரபரணி! வைகைக்குத்தான் என்ன! இந்த ஆற்றோரங்களிலே வளர்ந்த பண்பாடு எத்தகையது! இதோ உழவர், இதோ கற்றுணர்ந்த பெரியோர்கள் சிற்றறிவினரின் செயல்கண்டு வருந்தித் தலைகுனிந்து விடுதல்போல, செந்நெல் கற்றைகள். பழமுதிர் சோலைகள், வாளை துள்ளும் வாவிகள், எல்லாம், எனினும் ஆயிரம் மைல் “யாத்திரை’ நடத்தியும், அரும்பெருந் தலைவரே, ஆசியாவின் ஜோதியே, என்று அர்ச்சித்தும், நமது ஆட்சியாளர்கள் பெறுகிற தொகையோ இருநூறு - ஆயிரத்தில் இருநூறு. குற்றாலம் இருந்தென்ன, கொடைக்கானல் எழில் காட்டி என்ன, ஒத்தைக் கல் மன்று,”ஊட்டி’யாகி உல்லாசமளித்தென்ன, எல்லாமிருந்தென்ன, எமக்கென்று ஓர் அரசு இல்லையே, என்றெண்ணி ஏங்கத்தான் செய்கிறது. அவர் கூறுகிறார், தான் கண்ட அற்புதமான காட்சியை. இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள். கார்நிறக் கூந்தல் என்று வண்ணத்தை மட்டுமல்ல, அது …..சுருண்டு சுழிந்து அழகுற இருக்கிறதாம். விழி, இலேசானதா? நெஞ்சைச் சூறையாடுகிறதாமடா, தம்பி. குழை யேறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள். கேட்டாயா? கெண்டை மீன்போன்ற கண்கள் என்று மட்டும் சொல்லவில்லை, அந்தக் கெண்டைகள் நெஞ்சைச் சூறையாடுகின்றனவாம். அரும்பு இதழினாள், கரும்பு மொழியினால், முல்லைப் பல்லினாள், பிறை நுதலினாள்! அழகு சரி, பருவம்? என்று கேட்பரே, இதோ அதையும் கூறுகிறார். மங்கைப் பருவத்தாள், மங்கைப் பருவத்தாள் என்றால் என்ன செய்கிறது தெரியுமோ அந்தப் பருவம், அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள். . . அறிவை மயக்குகிறதாம். மதி முகம் அவளுக்கு, முத்துப் பற்கள், அந்த முத்து வரிசையை எட்டிப் பார்ப்பது போலிருக்கிறதாம் அவள் மூக்கிலொரு முத்து - பல்லினழகை எட்டிப் பார்க்கும் மூக்கிலொரு முத்தினாள். உற்சாகத்தின் உச்சி சென்று அவர் கூறுகிறார். கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் இரு. . . . குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் இப்படி ஒரு வசந்த வல்லியைக் காட்டுகிறார். எங்கே அந்த எழில் மங்கை? முத்துப் பல்லினாள் எங்கே? துடியிடை எவ்விடம் உள்ளாள்? கனகவல்லி எங்கே? மதி முகவதி எவ்விடம் இருக்கக் காண்கிறீர்? பூ இதழா, பொன்மேனியா, அறிவை மயக்கும் பருவத்தாள் என்கிறீரே, அவளைக் காணா முன்பே அறிவு மயக்க மேலிடுகிறதே, எங்கே உள்ளனள் அந்த ஆரணங்கு? அவள் என் நெஞ்சைச் சூறையாடுவது இருக்கட்டும், புலவரீர்! உமது கவிதை என் நெஞ்சைச் சிதறடிக்கிறதே, எங்கே அந்தச்சிற்றிடை, கூறுக, என்று கேட்டிடத் தோன்றும், குற்றாலக் குறவஞ்சி படிக்கும்போது, நான் அந்த மாளிகைக் கூடத்திலே அமர்ந்து குறவஞ்சியைப் படித்தபோது, தம்பி, கவி தீட்டிக் காட்டிய அந்த பெண் பாவையை அல்ல, நமது திரு இடத்தைத்தான் எண்ணிக்கொண்டேன் அத்துணை எழில் நிரம்பிய நாடு. ஆயின், என்ன நிலை இன்று என்று எண்ணும் போது, இன்று திருவிடம் இருக்கும் நிலையினைப் படம் பிடித்தளிக்க ஓர் புலவர் முன்வரக்கூடாதா என்றுகூட எண்ணினேன். குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் தீட்டியது, வசந்தவல்லி எனும் கற்பனைக் காரிகைப் பற்றி! அந்தக் காரிகை, குற்றால நாதருக்குக் காணிக்கையாகிவிடுவது, நூலின் பொருள். வசந்தவல்லிபோன்றே கண்டோரை கவர்ச்சிகொள்ளச் செய்யும் எழில் ததும்பும் நம்நாடு, இன்று வடவருக்கல்லவா கால் வருடக் காண்கிறோம். வசந்தவல்லி வருகிறாள், பந்தாடி மகிழ்கிறாள், குற்றால நாதரின் கோலம் கண்டு காதல் கொள்ளுகிறாள், குறத்தி வருகிறாள், குறி சொல்கிறாள், நாதனைத் தேடிப் பெற்றுக் கூடி மகிழ்கிறாள், என்று நூல் எடுத்தியம்புகிறது. அங்ஙனம் இருத்தலுக்குப் பதிலாக, இத்துணை அழகு ததும்பும் வசந்தவல்லி வந்தாள், பந்தாடி நின்றாள், அவனை ஓர் மலைப்பாம்பு விழுங்கிற்று, இடைவரை உள்ளே, மற்றப்பகுதி மேலே, அவள் அலறுகிறாள், துடிக்கிறாள், அது கேட்டு ஓடிவந்தவர்கள் மலைப்பாம்பின் அழகு கண்டு மயங்கி நின்றனர், மங்கை நல்லாளின், கண்களிலே நீர் ததும்பிற்று, அவர்களோ, மலைப்பாம்பு, மெள்ள மெள்ள அவளை உள்ளுக்குக் கொண்டு செல்லும் திறத்தினைக் கண்டு வியந்தனர், என்று நூல் இருந்திருக்குமேல், எவ்வளவு வேதனை கொள்வோம் தம்பி, தாயகத்தின் இன்றைய நிலை அங்ஙனமன்றோ இருக்கிறது. என் செய்வோம், திரு இடத்தின் எழிலை எங்கு நோக்கினும் காண்கிறோம், காணுந்தோறும் காணுந்தோறும். இத்துணை எழில்மிக்க நாடு, அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்ற எண்ணமன்றோ மேலிடுகிறது. அடிமையின் கரத்திலே ஆணிப் பொன்னாபரணம் இருத்தல்போல, வடவருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் திராவிடத்திலே எழில் இருக்கிறது அந்த எழிலோவியங்களில் ஒன்றுதன் குற்றாலம்! அன்புள்ள அண்ணாதுரை 28-8-1955 துறவி - காவியில்லை! ஆரியத் தவசிகளும், துறவிகளும் - மேல்நாட்டு எலினார் அந்தனி கதை. தம்பி! இயற்கை தீட்டித் தந்துள்ள “எழிலோவியம்’ குற்றாலம், கண்டேன், களித்தேன் என்று கூறினேன் அல்லவா, நினைவிருக்கிறதா, அருவியில்,”தருமபுரம்’ கண்டேன் என்று குறிப்பிட்டிருந்ததை. அந்தத் "துறவியைக் கண்டதும், என் எண்ணம், துறவறத்தின்மீது சென்றது. இதோ பாரேன், நாமெல்லாம்படுகிற தொல்லைகளை. திராவிடம் ஏன் தனி நாடாக இல்லை, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நமது பலம் பொருந்திய மந்திரிமார்கள், டில்லியால் இளித்த வாயராக்கப்பட்டு விட்டார்களே! என்ன வெட்கக் கேடு இது? சேலத்து இரும்பும் நெய்வேலி நிலக்கரியும் நமக்குப் பயன் படவில்லையே, எவ்வளவு அநீதி இது? என்றெல்லாம் கவலைப் படுகிறோம்; கோவாவில் படுகொலை, பீகாரில் சித்திரவதை, பஞ்சாபில் அடக்குமுறை, என்ற இவைகளைப் பற்றி எல்லாம் எண்ணுகிறோம். நெஞ்சில் பாரம் அதிகமாகிறது, இதோ தருமபுரத்’ துறவியானதால், இத்தகைய சுமைகளைத் தாங்கித் தத்தளிக்க வேண்டிய தொல்லைக்கு ஆளாகாமல், மந்திரமாவது நீறு! சுந்தரமாவது நீறு! என்று கீதமிசைத்துக் கொண்டு, (மெல்லிய குரலில்-மனதுக்குள்ளாகவே சில வேளைகளில்) உமையொரு பாகனை எண்ணிப் பெருமிதம் கொண்டு, சிவானுக்கிரகத்தைப் பருகி, பொன்னர் மேனியராக விளங்கி, காமாட்சி மீனாட்சி விசாலாட்சி நீலாயதாட்சி சிவகாமசுந்தரி குழல்வாய்மொழி குவளைக்கண்ணி கோமதி குமாரி என்று அம்மைக்கு அஞ்சலி செலுத்தியும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளே! என்றும், பாகுகனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா! என்று முருகனைத் தோத்தரித்தும், “அருக்கு மங்கையர் மலரடி வருடியும் கருத்தறிந்தபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் ஆங்குள அரசிலை தடவியும் அழியாதே’ என்று அறநெறி உரைத்துக் கொண்டும், திருக்கோலம் காட்டியும், அடியார் தரும் காணிக்கையைக் குவித்துக் கொண்டும், கோலோச்சமுடிகிறது. பண்டங்களின் விலை வீழ்ந்தாலும் ஏறினாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்தாலும் கூடினாலும், எது பற்றியும் கவலையின்றி இவைகளைப்பற்றி எண்ணி ஏங்கிடச்”சாமான்யர்கள்’ உளர், நாம் சதாசிவத்தின் பூலோகப் பிரதி பிம்பமாகக் காட்சி தருவோம் என்று கூறாமற் கூறிக் கொலு வீற்றிருக்க, அவரால் முடிகிறது. துறவி! எனவே அவருக்கு எதுவும் துரும்பு! வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும்போது ஏன் அவர் ஏழையர் உலகுக்கு வந்துற்றிடும் இடர்ப்பாடுகள் பற்றி ஏக்கம் கொள்ளப் போகிறார்! விடைஏறும் எம்மான், அவருக்கு அளித்துள்ள பதவி இருக்கும்போது, பஞ்சமும் பட்டினியும், பசியும் கொட்டுவதாலே பதறிப் பரதவிக்கும் பாமரரின் நிலையிலா அவர் இருக்க வேண்டும்! செச்சே! சிவனருள் சாமான்யமோ! செய்வருக்கும் சில பல மனக்குறை எழக்கூடும்! கோட்டையில் கொடிகட்டி ஆள்வோருக்கும் சிற்சில வேளைகளில் தொல்லையும் துயரமும் தாக்கிடும். இந்தத் தறவிக்கோ, எல்லாம் இன்பமயம்! எங்கும் இன்பமயம்! காலையிலே, மாலையிலே, காகம் கரையும் வேளையிலே மடத்திலே, வேறு இடத்திலே, எங்கும், சிவானுபவம், சுகானுபவம்! துறவிக்கன்றோ கிட்டும் இத்தகைய தேன் சொட்டும் வாழ்க்கை! தம்பி, துறவிக்குக் கிடைக்கும் இந்த "இன்ப வாழ்வு’ பற்றிய எண்ணம். எனக்கு மேலிட்டதால், நான் முன்னாளில் துறவியின் நிலை இருந்த தன்மை பற்றியும், இந்நாளில் துறவி என்பது எத்தகைய பக்குவமான பதவியாக மாறிவிட்டது என்பது பற்றியும் எண்ணிடலானேன். அரண்மனையில் பிறந்த இளங்கோவும் துறவிதான்! இதோ என்று அடுப்படி உழன்றோர் கூட துறவிகளாவதன் மூலம், அரண்மனை அந்தஸ்துப் பெறுகிறார்கள்! துறவி இளங்கோ தமிழில் காவியம் இயற்றினார் - சிலம்பு ஒலிக்கிறது! இன்றையத் துறவிகளின் சன்னதியில், நூபுரம் கலீர் கலீரென நேத்திரம் சுரீல் சுரீலென பாத்திரம் பளா! பளாவென! தோத்திரங்கள் நடைபெறுகின்றன என்று கேள்விப்படுகிறோம். ஒரு வேடிக்கை தெரியுமா, தம்பி! துறவி - தவசி - என்று இரு சொற்கள் கேட்டிருக்கிறோமல்லவா - முன்னது பெரிதும் தமிழகத்துக்கே உரிய தனிப்பண்புக்கு உறைவிடமாகவும், பின்னது ஆரிய கலாச்சாரத்தின் இருப்பிடமாகவுமே, ஆதி நாட்களி லேயே இருந்து வந்திருக்கிறது. இன்பமான வாழ்க்கையில் இருப்பதற்கான நிலை இருந்து, அதனைத் துறந்திடும் பெரியோன், துறவி! அத்தகைய துறவிகளைத் தமிழகம் அந்நாளில் கண்டது. கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் வாய்ப்பும், கோகில மொழியாள் கொஞ்சிட, மஞ்சமதில் மிஞ்சு சுகம் பெறுவதற்கான வசதியும், நிரம்ப இருந்ததைத் துறந்தார் இளங்கோ அடிகள்! பட்டுப் பட்டாடையைத் துறந்து, காவி அணிகிறார்! வரி கட்டினாரா? கப்பப் பணம் தப்பின்றி வந்து சேர்ந்ததா? கரிப்படையில் குறைவேதேனும் உளதோ! வேற்படைத் தலைவனைக் காணோமே, எங்கே? - என்று கேட்டு அரச காரியத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலை இருந்தது, இதனைத் துறந்தார், செந்தமிழின் சிறப்பினை விளக்கிடும் சிலம்பு சமைத்தளித்த சீலர், கணிகையர் குலத்துதித்த மணிமேகலை, துறவுக்கோலம் பூண்டு மக்களின் பசிப்பிணிப் போக்கிடப் பாத்திரமேந்தி நின்றதுடன், மக்கள் தம் பவப்பிணி ஒழித்திடும் மார்க்கம் போதித்து வந்தது பற்றிப் படித்துப் பெருமிதம் கொள்கிறோம். துறவு இத்தகைய தூய்மைக்கு நிலைக்களனாக, தொண்டுக்கு வாய்ப்பாக, இருந்தது. எல்லாத் துறையிலும் செம்மை கண்ட நந்தம் நாட்டிலேதான்! ஆனால் ஆரிய பூமியிலோ! தவசிகள் உண்டு! துறவிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம்! துறவிகள் மனிதருள் மனிதராக, ஆனால் மாமனிதராக இருந்து வந்தனர்! ஆரியத் தவசிகளோ, மனிதருள் தெய்வங்களெனக் கருதப்பட்டு வந்தனர். காடு சுற்றியும் கானாற்றின் கீதம் கேட்டு இன்புற்றும், கல்சொல்லும் கவிதையையும் காரிருளைப் போக்கிடும் மதிதரும் அன்புரையையும் மக்களுக்கு உய்யும் வழி கிடைத்தற்கான அறநெறியையும், அருளினர், நந்தம் நாட்டுத் துறவிகள்! அடி வீழ்ந்து வணங்கிட மன்னர்களும், கேட்டபோது நவநிதி கொட்டித்தரக் காவலரும், ஆடிடும் அணங்குகளும், பாடிடும் பாவையரும், பணிவிடைக்காகப் பட்டுடுத்திப் பார்வையால் கொல்லும் பசுங்கிளிகளும், தேவை என்று நமது துறவிகள் கேட்டதில்லை - அந்நாளில்! மலரம்பு பட்டதால் துடித்துக் கிடக்கும் பட்டத்தரசர்களுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியூட்டும் மாமந்திரம் கூறிடும் ஆற்றலற்றவர்கள் நமது துறவிகள்! ஆரியத் தவசிகளோ! பர்ணசாலைகள், ஆற்றோரத்தில் சோலையின் நடுவில். சாலைப் பக்கத்தில்! தென்றல்சாமரம் வீச, தேமாங்கனி குலுங்கும் பூங்காவிலிருந்து கிளியும் நாகணவாய்ப்புள்ளும், குயிலும் புறாவும் பிறவும் இசை பயில, மான்கள் துள்ளித்திரிய, மன்னர்கள் கைகட்டி, வாய்பொத்தி நின்று, கேட்டது தர, பணிவிடைப் பெண்கள் புடைகுழ, பத்தினிகளுடன் "ரசானுபவத்தைப்’ பருகி இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஈசனை மறந்தனரோ எனின், இல்லை, இடையிடையே யாகம், யோகம், உண்டு. வேள்விப் புகை கானகத்தை மணக்காடாக்கும் - தவசியின் பர்ணசாலைகளைச் சிங்காரக் கூடமாக்கும்! தேவலோக மேனகை தொட்டிட, காமம் துளிர்த்தது ஆஸ்ரமத்திலன்றோ! திலோத்தமையும் ரம்பையும், ஊர்வசியும் மற்ற மற்ற விண்ணு லகத்து ஆடலழகிகளும், ஆட்கொல்லிகளும் அடிக்கடி வந்து, தடைகாட்டி, கனகப் பந்தினை ஆட்டி, காவி கமண்டலமேந்தி களைப், பம்பரமாக்கி கலகலவெனச் சிரித்து, பொலபொல வெனக் கண்ணீர் உகுத்து, இன்பப் பெருக்கால் ஆஸ்ரமங்களை இந்திராதிதேவர்களும் கண்டு பொறாமைப் படத்தக்கதான புனித ஸ்தலங்களாக்கி உள்ளனர். “கோழி கூவிற்று கோகிலமே! ஆறு சென்று அனுஷ்டா னாதிகளை முடித்துக் கொண்டு வருகிறேன்! அன்னமே! ஏன் எழுந்திருக்கிறாய்! கமண்டலத்தை நான் தேடி எடுத்துக் கொள்கிறேன். ஆயாசம் நிரம்ப இருக்கிறது ஆருயிரே! நீ சற்று நேரம் அயர்ந்து நித்திரை செய்’’ என்று கூறிவிட்டு அவர் செல்ல, அவள் கண் அயர்ந்த நிலையில்,”அன்னமே! சொர்ணமே! கன்னலே மின்னலே! கட்டித் தங்கமே! எட்டிப் போகாதே என் இன்பமே!’’ என்று மீண்டும் கொஞ்சுமொழி கேட்ட பாவை, கேட்டார்க்குக் கேட்டது அருளும் வள்ளல் போல் மனதறிந்து நடந்துகொள்ள, அந்த விருந்து உண்ட நிலையில், அவன் ஆஹஹாரம்! போட, புதுமையா இருக்கிறதே! இதுநாள் வரை நான் கண்டறியாத பேரின்பமாகவன்றோ இது உளது! என்றெண்ணி, அந்தப் பூவை புளகாங்கிதமடைய, கபடமறிந்த கௌதமன், கல்லாக்கிய, அந்தக் கட்டழகி அகலிகை கண்ணாயிரம் உடையான் என்று இன்று பாமரர் கொண்டாடும் இந்திரனைக் கூடிச் சுகித்த இடம் தவசியின் ஆஸ்ரமமன்றோ! அங்கம் தங்கம்! ஆடும் முல்லை பாடும் கண்கள்! தேடும் இதழ்! என்றெல்லாம் பரவசப் பட்டுக் கூறி, கெண்டை அழகும் கொண்டை அழகும், இடையின் நெளிவும் தொடையின் தரமும், அங்கம் ஒவ்வொன்றிலும் பருவ கருவம் பதிந்து கிடக்கும் பான்மையும் இருத்தலைக் கண்டு, துஷ்யந்தன் மனமகிழ்ச்சி கொண்டு, மானும், அன்னமும் மிரண்டோட, மலர்கசங்க கனிசிதற, கன்னியர் வெட்கத்தால் கண் பொத்திக் கொண்டு, வேறுதிக்கு நோக்கி ஓடிட, துடியிடையாளைத் தொட்டிழுத்து முத்தமிட்டுப் பட்டத்தரசி யாக்குவேன்! கட்டிக்கரும்பே! என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்! என்று கனிமொழி பேசி, கன்னியின் புதுப்பார்வையால் துளைக்கப்பட்ட கட்டுடலின்மீது பட்ட காமன் கணைகள் பொடிபட இன்பம் பெற்று இகத்தில் இதோ பரம் கண்டேன் என்று பூரித்துக் கூறிக் சகுந்தலையை வாரி அணைத்துக் கொண்ட இடம், கண்வரின் ஆஸ்ரமம் அல்லவோ!! அத்திரியும் பிறரும், தவசிகளில் குறிப்பிடத்தக்க எவர் பற்றியும் கூறப்பட்டுள்ள புண்யகாதைகளில் இந்தப் "புனிதம்’ ததும்பிடக் காண்கிறோம். தவசிகள் இருந்தநிலை, பல ஆண்டுக்காலம் பகலென்றும் இரவென்றும் பாராமல், ஊணும் உறக்கமும்கூட மறந்து தொழில் நடத்திப் பெரும் பொருள் ஈட்டி, இனித் தம்மிடம்குவிந்துள்ள செல்வம், சிதையாது குறையாது என்ற நிலை பிறந்ததும், பாரிசு சென்று, என்னைப் பார் என் அழகைப் பார் கண்ணாலே! என்று இதழால் கூறிடும் இன்ப வல்லிகளுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடும் கனவான் போன்று பெரிதும் இருப்பதைக் காணலாம். ஆரியத் தவசிகள், ஆசாபாசங்களை விட்டொழித்தவர்களாகவோ, காமக் குரோதாதிகளைச் சுட்டெரித்தவர்களாகவோ, பற்று அற்றவர்களாகவோ காட்டப்பட்டு இல்லை! மாபெரும் போர் பல புரிந்த பிறகு, மன்னர்கள் பெறக்கூடிய மதுநிகர் இன்பத்தை இந்தத் தவசிகள், மகேசனுக்கு எம்மிடம் மட்டற்ற அக்கறை உண்டு என்று கூறுவதாலேயே பெற்றனர்! அவர்களுக்கு குலச் சண்டை, குடும்பச்சண்டை, குமரிகளால் மூண்டிடும் குத்து வெட்டு, யாருக்கு யார் சீடர், என்பது பற்றிக் கிளம்பிடும் சச்சரவு சமர், யாருடைய அந்தஸ்து பெரியது என்பதுபற்றிய அமளி,எல்லாம் உண்டு!! காட்டு ராஜாக்கள் என்று கூறி, அது எத்தகையது என்பதுபற்றி எண்ணிப்பார்த்துத்தெரிந்துகொள்க என்று கூறிடத் தோன்றுகிறது, தம்பி, அவ்வளவு கோலாகலமாக இருந்து வந்தனர் ஆரியத் தவசிகள்! ஆரியத் தவசிகள் துறவிகளல்ல மிக மிகக் கர்விகள் என்பதைத்தான் அவர் பற்றிய சில பல கதைகள் காட்டுகின்றன! இன்று தமிழகத்தில் உள்ள துறவிகள், இளங்கோ காட்டிய வழியில் செல்கின்றாரில்லை, செல்லும் திறனும் இருப்பதாகத் தெரியவில்லை, அவர்தம் நெஞ்சை இன்று ஆட்கொண்டி ருப்பது. அன்றைய ஆரிய தவசிகள் முறைதானோ என்று எண்ணத்தக்க வகையில், காரியம் பல நடைபெற்று, மூடி மறைக்கப்பட்டதுபோக, புடைத்து வெடித்து வெளியே சில தெரிந்திடக் காண்கிறோம். துறவிகள் தவசிகளாகி விட்டனர். தம்பி, துறவிகளின் நிலை பற்றிய எண்ணம் குடைந்த நிலை யிலிருந்த எனக்கு, ஒரு துறவி பற்றிய சிறு ஏடு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெரோம் - கே-ஜெரோம் - என்பவர், ஆங்கில உரைநடை யாசிரியரில் கீர்த்தி பெற்றவர். நகைச்சுவை ஏடுகள் தீட்டுவதில் சமர்த்தர். அவர்தம் ஏடுகள், பல்வேறு மொழிகளிலே வெளியிடப்பட்டன. அவருடைய புத்தகமொன்று படித்தேன், குற்றாலத்தில், கதைதான்! மிகமிகச் சாதாரணமான கதை! அதிலே சரசம் சாகசம், சதி, துப்பறிதல், கொலை வஞ்சம் தீர்த்தல். இயற்கை வருணனை, வழக்கு மன்ற வாதம், இவைகள் ஏதும் கிடையாது. ஒரு சாமான்யனுடைய மிகச் சாதாரணமான கதை. கொல்லன் மகன் ஒருவன், உழைப்பாலும் திறமையாலும் ஏழ்மையை விரட்டி அடித்து, செல்வனான வாழ்க்கை வரலாறு. காதல், நெஞ்சை அள்ளத்தக்க வகையில் இல்லை! நள்ளிரவு சந்திப்புகள், நயவஞ்சகனின் எதிர்ப்பு, ஏந்திழையாள் உகுத்த கண்ணீர், இவன் இதயத்தைத் துளைத்திடுவது இதெல்லாம் இல்லை. சாதாரண கதை. சரி, கேளேன், கதையைத்தான். அந்தனி ஜான் என்பது பெயர்; கதாநாயகன் பெயரும் அதுதான். அந்தனி, ஒரு கொல்லன் மகன்! தந்தை கடுமையாக உழைக்கிறார். போதுமான வாழ்க்கை வசதி கிடைக்கவில்லை. தாயார் பாடுபடுகிறார். குடும்பம், தட்டித்தடுமாறி நடந்து கொண்டிருக்கிறது. சிறுவனாக இருப்பது முதலே, அந்தனி, சுறுசுறுப்பும் அறிவுத் திறனும் மிகுந்தவனாக இருக்கிறான். எதையும் துருவித்துருவி ஆராய்கிறான், ஏன்? ஏன்? என்ற கேள்விதான் அவனுக்கு அரிச்சுவடியாக அமைகிறது. முறைப்படி அந்தனியைப் படிக்க வைக்கிறார்கள்; கல்வியில் அவன் கருத்தூன்றிப் பலன் காண்கிறான். அவன் மாமன், ஒரு முரடன் ஊரார். அவனை நாத்திகனென்கிறார்கள். அவனிடம் அந்தனி, அன்பு கொள்கிறான். அந்தச் சிற்றூரில் ஒரு சீமான் குடும்பம்! சீமான் வழக்கறிஞர், வணிகர், இதனாலேயே சீமானானவர்; நல்லவர்; பிறருக்கு உதவிபுரியும் நன்னெஞ்சினர். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் பெய்ô, பெட்டி. அந்தக் குடும்பத்தின் உதவி கிடைக்கிறது, அந்தனிக்கு பெட்டி அந்தனியிடம் பாசம் கொள்கிறாள். அது காதலாக மலரும் என்று பலரும் கருதுகிறார்கள்! தொழிலில் தேர்ச்சிபெற்று, அந்தனி, தன் குடும்ப நிலையை உயர்த்துகிறான். ஊழியனாகச் சேர்ந்தவன், நாளா வட்டத்தில், சீமானுடைய தொழிலில் பங்காளனாகிறான்; பணம் குவிகிறது; படாடோபம் தலைதூக்கவில்லை; பணம் கெடாத வகையில் வாழ்க்கை நடத்துகிறான். எல்லோரும் அந்தனி, சீமானின் மருகனாவான் என்று எதிர்பார்க்கிறார்கள். பெட்டியும் மறுத்திருக்க மாட்டாள். எனினும் அந்தனியின் மனம் வெறோர் மங்கையை நாடுகிறது. பெட்டி கண்ணீர் பொழியவுமில்லை, "காதகா! பாதகா! கனவு கண்டதெல்லாம் பொய்த்துப்போய் விட்டதே! இனி என் எதிரே நிற்காதே! என் மாளிகையில் உனக்கு இடம் கிடையாது. நட, நட!’’ என்று கனல் கக்கவில்லை. எலினார் மணமகளாகிறாள். குடும்பம் குதூகலமாக நடந்து வருகிறது - குழந்தைகள் பிறக்கின்றன. சீமானும் அவன் மகனும் இறந்து விடுகிறார்கள். அந்தனி, ஏழைகளுக்கு இதம் தரும் பணிகள் பல செய்கிறான். புகழ் பெறுகிறான் - எனினும் அவன் மனதில் சாந்தி இல்லை. கடவுள் பற்றி அவன் சிறு வயது முதல் சிக்கல் நிரம்பிய சிந்தனையில் ஈடுபடுகிறான். முடிவில், கடவுள் தன்மை பற்றி இதுவரை கூறப்பட்டு வந்த கொள்கைகள் பொருளற்றவை என்று உணருகிறான். ஏழைகளுக்கு உதவுவதற்காகப் பொருள் ஈட்டுவது முறை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தவன், அதுவும் தவறு என்று உணருகிறான். உண்மையான தொண்டு, தன்னலமற்றதாக இருத்தல் வேண்டும் என்று உணருகிறான். மிகுந்த செல்வ நிலையில் இருந்தவன், அனைத்தையும் துறந்துவிடத் தீர்மானிக்கிறான். மீண்டும் ஏழைகளிடையே சென்று, எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டு, அவர்களுக்கான பணியாற்ற முனைகிறான். பெட்டி, அவனுடைய போக்கை ஆதரிக்கிறாள். சுகபோகமும், செல்வநிலையும் இழந்தாலும் பரவாயில்லை, அந்தனிக்குத் துணைநிற்பதுதான் அறிவுடைமை அன்புடைமை என்று எலினாரும் முடிவு செய்கிறாள். அந்தனி, துறவியாகிறான்! மனைவி, குழந்தைகள், உண்டு!! தொழில் நடத்துகிறான், தன்வாழ்க்கைக்கான வசதிபெற! தொண்டுபுரிகிறான்! அவனுடைய துறவு, ஏழைகளுக்கு ஓர் நல்வாய்ப்பாகிறது. தம்பி! இதுதான் கதை!! ஒரு கவர்ச்சியும் தெரியவில்லை அல்லவா!! இச்சொலியும் விம்மலும், முழக்கமும் முணுமுணுத் தலும், கூடிப்பிரிதலும் கொண்டாட்டமும் ஏதுமில்லை. எனினும், இந்தக் கதையின் மூலம், ஜெரோம்-கெ-ஜெரோம், அளிக்கும் கருத்து, உண்மையிலேயே, படிப்போரை, புதியதோர் உலகுகொண்டு சேர்க்கிறது. உண்மைத் துறவு, என்ன என்பதை உணரமுடிகிறது! இக்காலத் துறவிகளைக் கண்டு, என்னே! காலத்தின் கோலம்! என்று ஏங்கும் மனத்தினருக்கு, அந்தனி கதை, உண்மைத் துறவு நிலை எங்ஙனம் மேம்பாடுடையதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. குப்பை மேட்டில் பிறந்த அந்தனி, கோலாகலமான வாழ்க்கை நடத்துவதற்கான வசதியைப் பெறுகிறான். கொல்லன் பட்டறையில் பிறந்தான், கோட்டை போன்ற மாளிகையைப் பெறமுடிந்தது. நாற்றமடிக்கும் சேரியில் பிறந்தான், உல்லாச உலகிலே இடம் பெற்றான்; ஏழையர் விடுதியில் நாற்றம் குறையவும், சிறிதளவேனும் அவர்களுக்கு ஏற்றம் கிடைக்கவும், அவன் வழிகண்டான். எனினும், இறுதியில், அவன் தன்னலமறுப்பு ஒன்றின் மூலமாகத்தான் ஏழையர் உலகுக்கு உய்வுதேட முடியும் என்று உணருகிறான் - துறவியாகிறான்! அவன் விரும்பி இருந்தால், சீமானாகவும் தர்மவானாகவும் மதத் தலைவனாகவும், ஊராள்வோனாகவும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். உழைப்பால் உயர்ந்தோன்-என்று ஊரார் அவனைப் பாராட்டினர். ஏழையாகப் பிறந்தாலென்ன, அறிவு இருந்தால், அந்தனி போல அந்தஸ்தான நிலை பெறமுடியும் என்று அனைவரும் கூறினர். அவன் ஒரு எடுத்துக்காட்டாக, விளங்கினான், எனினும், உடைமைகளை உதறிவிட்டு உயர்ந்த இடத்தை விட்டு விலகி, எளிய வாழ்க்கையையும் ஏழையர் உலகிலே ஒரு இடத்தையும் மீண்டும் கொள்கிறான் - துறவியாகிறான். துறவின் மூலம், அவன் வானுலகில் இடம் கேட்டா னில்லை-வணங்கத்தக்க தெய்வத்தினிடம் வரம் கேட்க அல்ல, அவன் துறவியானது, துடிக்கும் ஏழையர்க்குத் தொண்டாற்றத் துறவியாகிறான். அந்தத் துறவியுடன், நாம் காணும் ஆதீனத் துறவிகள், அஷ்ட ஐஸ்வரியத்தைப் பெற்று ஆனந்த வாழ்வு நடாத்தும் துறவிகள், ஆகியோரை ஒப்பிடும்போது, நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது. அந்தனிஜான் கதையில் சிறுசிறு சம்பவங்கள் மூலம், ஆசிரியர், அரிய கருத்துக்களை அள்ளித் தருகிறார். இந்தச் சம்பவங்களின் மூலம், படிப்படியாக, அருள்நெறி எவ்வகையில் இருக்கும் என்பதையும், கடவுட் கொள்கை பற்றிய கருத்துக்களில் எவ்வளவு பொய்ம்மையும் பொருளற்றவையும் உள்ளன என்பதையும் ஆசிரியர் அழகுற எடுத்து விளக்குகிறார். அந்தனி சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் - கவனி தம்பி! கருத்துக்கு விருந்து! ஒரு மாலை, ஆறேழு பேர்கூடி, பஜனை செய்துகொண்டிருந்தனர். கடவுள், பரமண்டலத்தில் இருக்கிறார். அவருடைய சன்னிதானத்தின் முன்பு அனைவரும் தொழுது நிற்கவேண்டும். ஆண்டவனிடம் "பயபக்தி விசுவாசம்’ இருக்க வேண்டும்- என்று ஒரு மாது கூறினார்கள். சிறுவன் அந்தனிக்கு, தொழிலகக் கதவைத் திறந்து வைத்துவிட்ட நினைவு வந்தது; ஓடிச்சென்று கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்தான். அருள் பாலிக்கும் ஆண்டவன் அனைவரும் போற்றுதும் வாரீரோ என்று பஜித்தனர். அந்தனியின் தாயார், அடிக்கடி வெளியே சென்று, பல பண்டங்களை பெற்றுக்கொண்டு வருவதுண்டு. எங்கே, யார் தருகிறார்கள், என்பது சிறுவனுக்குத் தெரியாது. ஆனால் நல்லதைத் தருபவர் ஆண்டவன் என்று பஜனை நடத்தியோர் கூறிடக் கேட்டதால், தன் தாயாருக்கு இந்தப் பொருளைத் தருபவரும், ஆண்டவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அந்தப் பிஞ்சு உள்ளம் எண்ணிற்று. அவனுக்கு எப்படியும் ஆண்டவனைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே ஆவல். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஐயன் என்றல்லவா அனைவரும் பஜிக்கின்றனர்; அத்தகையவரைக் காண வேண்டும் என்று ஒரே துடிப்பு. ஆண்டவனல்லவா, நம் தாயாருக்குப் பண்டம் அளிக்கிறார்; அவரை தரிசிக்கவேண்டும் - என்று எண்ணிக் கொண்டான். "அம்மா! இன்று என்னையும் அழைத்துக்கொண்டுபோ’’ என்று கெஞ்சினான்; தாயும், அந்தனியை உடன் அழைத்துச் சென்றனர். நீண்டதூரம் சென்ற பிறகு ஒரு மாளிகையை அடைந்தனர்; அங்கு ஒரு முதியவர் இருந்தார்; தாய் அவருக்கு வணக்கம் கூறினாள், முதியவர் சிறுவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, பணம் கூடக் கொடுத்தார். தாயார் உட்பக்கம் சென்றுவிடவே, சிறுவன் கூடத்தில் இருந்தான். வேறு மாதர் சிலர் அவனுக்குப் பாலும் பலகாரமும் கொடுத்தனர். சிறிது நேரம் கழித்துத் தாயார், ஒரு சிறு மூட்டையுடன் வந்து, சிறுவனை அழைத்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டாள். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சிறுவன், “அவர் அப்படி ஒன்றும் பிரமாதமான தேஜசுடன் இல்லையே அம்மா!’ என்றான்,”யார்?’’ என்று தாயார் கேட்டாள்; “ஆண்டவன்!’’ என்று சிறுவன் கூறினான். தூக்கிவாரிப்போட்டது தாயாருக்கு. என்னடா சொல்லுகிறாய்? ஆண்டவன் கீண்டவன் என்று என்னமோ சொல்கிறாயே, என்ன அது? என்று அவள் கேட்க, சிறுவன், மாளிகையைச் சுட்டிக்காட்டி”அவர் தானம்மா, ஆண்டவன்! அவர்தானே நமக்கு நல்ல பொருளெல்லாம் தருகிறார் ஆண்டவன்தான் அனைவருக்கும் நல்லது தருகிறார் என்று பேசிக்கொண்டிருந்தீர்களே நீங்களெல்லாம். நான் கேட்டுக்கொண்டுதானே இருந்தேன்’’ என்று அந்தனி விளக்கமளித்தான் அவன் தாய்க்கு நீண்ட நேரம் வரையில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. "அவர் ஆண்டவன் அல்ல! சர். வில்லியம் கூப்பர்! அவரிடம் நான் ஊழியம் செய்திருக்கிறேன்’’ என்று நீண்ட நேரத்துக்குப் பிறகு கூறினாள். "ஒரு விதத்தில் நமக்கு இந்தப் பொருளை ஆண்டவன் தான் கொடுக்கிறார் என்று கூறவேண்டும். சர். வில்லியம் மனதிலே ஆண்டவன்தானே, கருணை பிறக்கச் செய்கிறார்; அதனால் தானே நமக்கு சர். வில்லியம் இந்த உதவியை செய்கிறார்; எனவே நமக்கு ஆண்டவன் தான் இந்தப் பொருளை எல்லாம் தருகிறார் என்று சொல்ல வேண்டியதுதான்!’’ - என்று மேலும் விளக்க முரைத்தாள் அன்னை. சிறுவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, "ஆனால், அம்மா! இந்தப் பொருள், சர். வில்லியமுடையதுதானே’’ என்று கேட்டான். "ஆமாம்! ஆனால் ஆண்டவன்தான் அவருக்கு அவைகளைக் கொடுததார்’’ என்று தாயார் கூறினாள். கடவுள் இப்படி சுற்றி வளைத்து நடந்துகொள்வது சரியான வழியாக அந்தோனிக்குப்படவில்லை. "ஏனம்மா, கடவுள் நமக்கு இந்தப் பொருள்களைத் தர மாட்டேனென்கிறார்! நம்மிடம் அவருக்கு ஆசை இல்லையா?’’ என்று சிறுவன் கேட்டான். என்ன பதில் கூறமுடியும்! பாபம்! அந்த மாது சரி, சரி, இப்படியெல்லாம் கேட்கக்கூடாது; தெரிகிறதா; என்று கூறித்தான் சிறுவனை அடக்க முடிந்தது! ஆனால் மனம்? சிந்தனை? இன்னும் சர்வ சாதாரணமாக "மேதைகள்’ கூறிடும் வகையிலேதான், அந்தனியின் தாயார் பேசுகிறார்கள்! கொடுக்கும் ஆள் யாராக இருந்தாலும், கொடுக்கும் கரம் ஆண்டவனுடையது என்பதுதான், எங்கும் எவரும் பேசும் தத்துவம்! அந்தத் தத்துவத்தைக் கூறிவிட்டு, அந்த மேதைகள் தமது அறிவுத் திறனைக்கண்டு, தமக்குத் தாமே பாராட்டிக் கொள்கிறார்கள்! சிறுவனல்லவா, கேட்கிறான் - ஏனம்மா! ஆண்டவன், இப்படி சுற்றிவளைத்து வேலை செய்கிறார். நமக்கு உதவி செய்ய விரும்பினால், ஏன் நேரடியாகச் செய்யக்கூடாது!- என்றல்லவா கேட்கிறான். அவன் வாயை, அன்னை அடக்கிவிடுகிறார்கள்! அந்த அன்னை மட்டுமா - இன்று மேதைகளும் சிக்கலான, சங்கடமான, அடிப்படையை ஆராயும் விதமான கேள்விகளைக் கேட்பவர்களின் வாயை அடைக்கத்தான் முனைகிறார்கள். வாய் மூடிக்கொண்டான், அந்தனி! ஆனால் மனம்? சிந்தனை? சும்மாவா இருக்கும்! அடக்க, அடக்க வேகமாக வேலை செய்கிறது. நியூட் மாமாவை, நாஸ்திகன் என்று பலரும் கூறினர், அந்தப் பாளையத்துக்குப் பணியாற்றவந்த பாதிரிமார்கள் ஒவ்வொருவரும், இந்த நாத்திகனைத் திருத்தி வெற்றி காண வேண்டும்மென்று வெகு பாடுபட்டனர். ஆனால் நியூட் மாமாவோ, பிடிவாதமாக இருந்து வந்தார்! நரகத்தில் சிக்கி அவன் நாசமாகப்போவது திண்ணம் என்று பலர் பேசுவர்; நரகம் என்றால் கொடியவர்களைத் தண்டிக்கும் இடம் என்று அந்தனி கேள்விப்பட்டிருக்கிறான்! நியூட் மாமாவைப் பார்த்தாலோ, கொடியவராகவே தெரிய வில்லை! எனினும் அவர் நரகத்தில் தள்ளப்படப்போவது நிச்சயம் என்று மாமியே கூறுகிறார்கள்! "மாமி! மாமா, மிகவும் கொடியவரா?’’ "கொடியவரல்லடா? எவ்வளவோ கொடியவர்களை நான் பார்க்கிறேன், உன் மாமா அப்படிப்பட்டவரல்ல’’ "அப்படியானால், அவர் ஏன் நரகம் செல்லவேண்டும்?’’ "போகத் தேவையே இல்லையே! அவராக அல்லவா, பிடிவாதம் பிடிக்கிறார்! நம்பிக்கை கொண்டாரானால். காப்பாற்றப்படுவார்! நரகம் போகத் தேவையே இல்லையே’’ "நம்பிக்கையா? எதை நம்பச் சொல்கிறீர்கள்?’’ "விவரமாகச் சொல்ல எனக்கு நேரமில்லை சொல்வதை நம்பினால் போதும்; உன் மாமா அதைத்தான் செய்யமாட்டே னென்கிறார்’’ "யார் சொல்வதை நம்பவேண்டும் என்கிறீர்கள்?’’ "எல்லோரும் சொல்வதைத்தான். நானே எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் - கேட்டால்தானே. ஏதேது நீயும் உன் மாமனைப்போலவே கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போகிறாயே. இப்படி எல்லாம் பல கேள்விகள் கேட்கக்கூடாது - தெரிகிறதா!’’ சிறுவனுடைய வாயை மாமி அடக்கிவிட்டாள். ஆனால் மனம்? சிந்தனை? தூங்கிவிடுமா என்ன? அது கொதித்துக் கொண்டேதான் இருந்தது. அன்னையும், மாமியும் சிறுவனுடைய சந்தேகத்தைத் துடைக்கவில்லை. விருப்பம் இல்லாததால் அல்ல, அவர்களால் இயலவில்லை! இப்போது மட்டுமென்ன? எந்த மேதை, விளக்கம் அளிக்கிறார் - சந்தேகத்தை நீக்குகிறார். சீறுகிறார், சபிக்கிறார். போக்கிரித்தனமான பேச்சு இது, நாத்திகப் போக்கு, என்று நிந்திக்கிறார். "மாமா! நீ, ஏன் நம்பிக்கை கொள்ளக் கூடாது.?’’ "எதை நம்பவுது?’’ "எல்லோரும் நம்புவதைத்தான்’’ "அவர்களை நம்பாதே அந்தனி, நம்பாதே. அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையில், அவர்கள் யாருக்கும், நம்பிக்கை கிடையாது. சும்மா, அப்படிச் சொல்லி வைக்கிறார்கள். ஏதோ அந்த நம்பிக்கை மூலம் பலன் கிடைக்குமென்று எண்ணி அவ்விதம் சொல்கிறார்கள்.’’ சிறுவனுடைய சிந்தனையையும் கிளறிவிட்டான்; அருகே இருந்த நெருப்பையும் கிளறிவிட்டபடி, மாமன் மேலும் பேசலானான். "அவர்கள் எதெதில் நம்பிக்û இருப்பதாகச் சொல்கி றார்களோ, அவற்றிலே அவர்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், இந்த உலகமே உத்தமபுரியாகி இருக்குமே! அதைத்தான் நான் அவர்களிடம் பல முறை கேட்கிறேன். பதில் கூறினதில்லையே அவர்கள், கூறமுடியாதே!’’ மாமன், பேச்சை நிறுத்தவில்லை. "போகப்போக நீ அவர்களுடைய போதனைகளை எல்லாம் தெரிந்துகொள்வாய். உன்னைப்போல் பிறரையும் நேசி அனைத்தையும் ஏழை எளியோருக்கு கொடு அவர்களுக்கு ஆண்டவன் கூறுவது இது. அவர்கள் அது போல நடந்துகொள்வதை நீ கண்டது உண்டா? அவர்கள் நம்பிக்கை கொள்வதைக் காண்கிறபோது, நானும் நம்பிக்கை கொள்வேன்.’’ பஞ்சம், வேலை நிறுத்தத் தொல்லை, குளிர் கொட்டுகிறது. வறுமை போட்டியிடுகிறது. நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அப்பாடா, என்று ஆறுதல் கூறுவதற்குள் எஃகுத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் கிளம்பிவிட்டது, மொத்தத்தில் ஏழைகளுக்குக் கடுமையான சோதனைக் காலமாக இருந்தது. அந்தனிக்கு, கடவுள் ஏன் இதை அனுமதிக்கிறார் என்று ஆச்சரியம். மாமியிடம் பேசுகிறான். "கடவுள் ஏன் இதனைத் தடுத்து நிறுத்தக்கூடாது!!’’ "எதை நிறுத்துவது?’’ "வேலை நிறுத்தத்தைத்தான் மாமி! ஏன் கடவுள் அனைத்தையும் சரியாக வைத்திருக்கக்கூடாது? அவரால் முடியாதா.’’ “ஏன் முடியாது நிச்சயமாக முடியும். அவர் மனது வைத்தால் ஆகாத காரியம் உண்டா?’’” ஏன் அவர் மனது வைக்கவில்லை, மாமி! அனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்ப வில்லையா!’’ "அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பது தானடா, அவருடைய விருப்பம். ஆனால் மக்கள் கெட்டவர் களாக இருக்கிறார்கள்; பிறக்கும் போதே கொடியவர்க ளாகிறாôகள்!’’ "ஏன் நாமெல்லாம் பிறக்கும்போதே கொடியவர்களாகப் பிறக்கிறோம். ஆண்டவன்தானே நம்மை எல்லாம் படைக்கிறார்!’’ "அனைவரையும் அவர்தான் படைத்தார், அதிலென்ன சந்தேகம், எல்லாம் அவர் சிருஷ்டி!’’ "ஏன், அவர் நம்மை நல்லவர்களாகப் படைக்கவில்லை?’’ "அவர், நல்லவராகத்தான் அனைவரையும் படைத்தார் ஆதாமும் ஏவாளும். அவர் படைத்தபோது பரிசுத்தப் பிறவிகள்! ஆனால் அவர்கள் ஆண்டவனுடைய கட்டளையை மீறி, (பாபப்) பழத்தைத் தின்று தொலைத்தனர். இல்லையானால் நாமெல்லாம் நல்லவர்களாகவும் பிறந்திருப்போம். ஆனந்த மாகவும் வாழ்ந்து கொண்டிருப்போம்.’’ "ஆதாம் என்பவன்தான் முதல் மனிதன்! அப்படித் தானே மாமி!’’ "ஆமாம்! ஆண்டவன் ஆதாமைப் படைத்தார், நல்லவ னாகத்தான்.’’ "எவ்வளவு காலத்துக்கு முன்பு நடந்தது மாமி, இந்தச் சிருஷ்டி.’’ "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!’’ "மாமி! தவறு செய்துவிட்டேன், மன்னித்து அருளுக! என்று ஏன் ஆதாம் கூறி, ஆண்டவனுடைய மன்னிப்பைப் பெறவில்லை?’ "விபரீதம் நேரிட்டுவிட்டதே, ஆதாம் என்ன செய்ய முடியும்? பழத்தைத் தின்றான் பிறகு, பகவானிடம் முறையிட்டு என்ன பலன்?’’ "சாத்தான், ஆதாமையோ ஏவாளையோ, கெட்ட நினைப்புக்கொள்ளும்படி தூண்டினானே, ஏன் கடவுள் அதைத் தடுக்கவில்லை? கடவுள் சர்வசக்தி உள்ளவர்தானே! சாத்தானை ஏன் அழித்திருக்கக் கூடாது!’’ மாமி, மருண்டு போனாள்! போக்கிரிப்பயல், என்னென்ன கேள்விகளைக் கேட்கிறான்! என்று கோபங்கூட வருகிறது. "சரி, பள்ளிக்கூடத்திற்கு நேரம்மாகிறது. போ, போ’’என்று கூறி, அவனை அனுப்பிவிடுகிறார்கள். அந்தனியும் வாயை மூடிக்கொண்டு செல்கிறான்! வாய் மூடிக்கிடக்கிறது! ஆனால், மனம்? சிந்தனை? மாமி மருண்டு போகிறாள் மேதைகள் இன்று மிரட்சியுற்று "ஈதேது பயங்கரமான புரட்சி தலைவிரித்தாடுகிறதே!’ என்று பேசுகிறார்களே, அதுபோல. ஆனால் அந்தனியின் உள்ளத்திலே ஊறிய எண்ணங்கள் மாமியும் பிறரும் அடக்க அடக்க, வேகமாக வளர்ந்தது.- மடியவில்லை. அந்தனி உழைப்பால் உயர்ந்து, ஊராரின் நன்மதிப்பைப் பெற்றான் - ஆனால் சுயநலம் அவனை அடிமைப்படுத்திவிடவில்லை - சுகபோகத்தில் அவன் மூழ்கிவிடவில்லை. பக்தர்களின் பேச்சிலே சகல அறிவும் இருப்பதாகக் கருதும் போக்கினனாக அந்தனி இருந்திருந்தால், செய்த புண்ணியத்தின் பலனாக ஆண்டவன் தனக்கு இந்த நல்ல நிலையை அருளினார், எனவே அவருக்கு மேலும் சேவைசெய்ய வேண்டும் என்று கருதி, ஆலயத் திருப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு, பெரிய பக்திமான் என்று விருந்து பெற்றிருக்கக்கூடும்! ஆனால் அவனோ ஒரு சந்தேகி! சிறு பருவ முதலே. எனவே அவனுக்கு மனதிலே சிக்கல் குறைய வில்லை! எல்லாம் அவன் விட்டவழிப்படி நடக்கும் என்று எண்ணி, சோம்பித் திரியவில்லை. துணைவி நோய்வாய்ப்பட்டதால் அந்தனி துயர்க்கடலாழ்ந்தான். ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டால் அவர் ஆபத்தைப் போக்குவார், எதையும் சாதிக்கவல்லவரல்லவா சர்வேஸ்வரன், என்று எண்ணிடுபவனல்லவே! எனவே, அந்தனி "பூஜை’கள் செய்து, தன் துயரைத் துடைத்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, ஏழைகளுக்கு இதம் தரும் தொண்டாற்றினால், அதன்மூலம் இறைவனுடைய அருளைப் பெற இயலும் என்று எண்ணி, மும்முரமாக அந்தப் பணியில் ஈடுபடலானான். ஏழை மக்களின் இருப்பிடம்தான், சேச்சே! எவ்வளவு கேவலமாக இருக்கிறது! எங்கும் ஒரே அசுத்தம்! நோய் அவர்களைப் பிய்த்துப் பிடுங்காமலா இருக்கும்! படுகுழிகள்! அதன்மீது படுதாக்கள் போர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சேரிகளை ஒழித்திடவேண்டும். இந்த “நரகத்துக்கும்’ ஏழைகள் எவ்வளவு”வாடகை’ கொட்டி அழவேண்டி இருக்கிறது, பணம் பிடுங்கும் செல்வர்களுக்கு! இந்த அக்ரமத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். ஏழைகளைக் கசக்கிப் பிழியும் கொடுமையாளர்களிடமிருந்து மீட்கும் திட்டம் காணவேண்டும். மலிவான, அதேபோது சுத்தமான விடுதிகள் அமைக்கவேண்டும். ஏழைகளின் வாழ்வில் ஒரு குளிர்ச்சியும் மலர்ச்சியும் காணவேண்டும் - என்று எண்ணினான். அந்தனி. லாண்டிரிப் என்பான் கட்டிட வேலையில் நிபுணன், அந்தனிக்கு நண்பனானான். திறமையுள்ளவன் மட்டுமல்ல, புதிய தத்துவங்களில் நாட்டமுள்ளவன், லாண்டிரிப். மக்கள் பணியே மகேசனுக்கு உகந்த பூஜை! ஏழைகள் இதயத்தில் களிப்பூட்டும் பணிபுரிதலே பகவானுக்குத் தேர், திருவிழா, யாவும்! தூய உள்ளமே கோயில்! நலிந்தோரைத் தேற்றுவதே தோத்திரம்! மக்களிடம் சகோதரத்துவம் மலரவேண்டும்; அதற்க அன்பு ஆட்சி செய்தல் வேண்டும். ஒரு பகுதி மக்களைச் சேற்றிலும் சகதியிலும் நெளியும்படி விட்டு வைப்பது சமுதாய முழுவதையுமே நாசமாக்கும். பிறரையும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்தால்தான், நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இவைகளே லாண்டிரிப் போற்றி வளர்த்துவந்த கருத்துக்கள். சர்வ வல்லமை உள்ளவர், சர்வேஸ்வரன், ஏன் மனிதனை அறிவுச் சூனியனாகவும் குற்றங்கொள் கலமாகவும் படைக்க வேண்டும்! சுயநலம், பேய்க்குணம், வெறிச்செயல், இவைகளிலே மூழ்கிடும் போக்கினனாகும் நிலையில் மனிதனைப் படைக்காமல் துவக்கத்திலேயே மனிதனை, "நித்யானந்தத்தை! அனுபவிக்கத் தக்க, ஆற்றலைப் பெறக்கூடியவனாகவும், அருங்குணவானாகவும், ஏன் படைத்திருக்கக் கூடாது! இது, அந்தனியின் மனதிலே நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கல். கிறிஸ்துவின் புனிதக் காதை மூலம், இந்தச் சிக்கலைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்துவின் புனித மொழிகளின்படி நடந்து கொள்பவர்களே, மிகமிகக் குறைவு! மேலும், தவறுகளைச் செய்துவிட்டுப் பிறகு அதனைத் திருத்தும் நிலையில் ஏன் கடவுள் இருக்க வேண்டும், முறை அல்லவே என்று அந்தனி எண்ணினான். லாண்டிரிப் சொன்னான் : “நான் வணங்கத்தக்க கடவுள் ஒருவர் உண்டு; பூவுலகத்தையும் பரமண்டலத்தையும் சமைத்தவர் அல்ல அவர்; விண்மீன்களையும் பிரபஞ்சத்தையும் படைத்தவ ரல்ல! கடியாரம் காண்கிறோம், அதை ஆக்கினவன் ஒருவன் உளன் என்பது அதன் மூலம் தெரிகிறது, என்கிறார்கள். தத்துவம் சரி! ஆனால் என் உள்ளத்துக்கு உகந்த ஈசன் பிரபஞ்சத்தைப் படைத்த பெரியவன் அல்ல, ஆக்கவும் அழிக்கவும் வல்ல பரம்பொருள் என்கிறார்களே, அதனிடம் என்மனம் இலயிக்க வில்லை. உலகின் கேடுகளைக் களைந்திட, உழைத்திடும் உத்தமனாகவும், அந்தத் திருத்தொண்டிலே, என்னைப் பங்கு கொள்ளும்படி செய்பவனாகவுமுள்ள, காப்பாளனை, உழைப்பாளனை,நான்கர்த்தனாகக் கொள்கிறேன். இது நாள் வரையில், மக்கள், தங்கள் மனதிற்குப்பட்ட வகையிலே தாமே ஆக்கிக்கொண்ட கடவுளைத் தொழுது வருகிறார்கள்; சர்வசக்தி வாய்ந்தவர்! தேஜஸ் மிகுந்த தேவாதி தேவன்! வரம் அருளும் வல்லமை படைத்தோன்! தீயோரைத் தண்டிக்கும் ஆற்றல் மிக்கோன்! என்றெல்லாம் பூஜிக்கிறார்களே, அந்தக் கடவுளை அல்ல நான் தொழுவது. என்”கடவுள்’ கேட்ட வரம் அருளுபவரல்ல, அவர் என்னிடமிருந்து, அன்பு, நேர்மை, தூய்மை இவைகளைக் கேட்பவர், என்று கூறினான். அந்தனியின் மனதிலே புதிய கருத்துக்கள் தூவப்பட்டன என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய கருத்துரைகளில், இது அந்தனிக்கு ஒருவகையில் பிடித்திருந்தது. எலினார், பிழைத்துக்கொண்டாள். ஆபத்து, விலகி விட்டது, அந்தனியின் உள்ளத்திலே சொல்லொணாத மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் பாலித்துவிட்டார். நான், ஏழைகளுக்காகத் தொண்டாற்றினேன்; தூயவர், என்பால் திருநோக்கைத் திருப்பி, என் ஆவியை என்னிடம் ஒப்படைத்து விட்டார்; என் இதயராணி பிழைத்துக்கொண்டாள். பெரியவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் முற்றிலும் உண்மைதான். சத்தியவாக்குத்தான் அவை. நீ இன்னின்ன நல்ல காரியங்களைச் செய், நான் அதற்கு ஈடாக உன் மனைவிக்கு வந்துற்ற ஆபத்தைப் போக்குகிறேன், என்ற முறையில் ஆண்டவன் நடந்து கொண்டாரே, வியாபார ஒப்பந்தம் போலல்லவா இது இருக்கிறது - சரியாகுமா இந்த முறை - என்று கேட்பர்; ஒப்பந்தம் என்றே வைத்துக் கொண்டால்தான், என்ன தவறு! எனக்கு எலினாரிடம் உள்ள பாசத்தையே சாக்காக்கிக்கொண்டு, கடவுள், என் மூலம் ஏழைகளுக்கு நலன் கிடைக்கச் செய்திருக்கிறார்; இதிலே என்ன குற்றம் காண முடியும்? என் மக்களுக்காக நீ, இன்னின்ன நலன்களைச் செய்து கொடு, நான் உன் இல்லக்கிழத்தியின் இன்னுயிரை மீட்டுத் தருகிறேன் என்று கடவுள் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்; இதிலே தவறு என்ன - என்று அந்தனி எண்ணி மகிழ்ந்தான். ஆனால் மகிழ்ச்சியும் திருப்தியும் நிலைத்து நிற்கவில்லை, மீண்டும், அந்த நீண்டகாலச் சிக்கல்தான் தலைதூக்கிற்று. எல்லாம் சரி, ஏன் சர்வேஸ்வரன் தன் சிருஷ்டியான கேவலம் மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுகிற முறையில் நடந்து கொள்ளவேண்டும், விநாடிப் போதில் அவர் விரும்பினால், சாதிக்கக்கூடிய காரியங்களை, ஏன் ஆண்டவன், சுற்றிவளைத்து நிறைவேற்றப் பார்க்கிறார்? துவக்கத்திலேயே, எதையும் குற்றமற்ற முறையிலே படைத்திருக்கலாமே. ஏன் ஆண்டவன் சிருஷ்டியிலே ஆயிரத்தெட்டு அலங்கோலங்கள், மனிதனை இரத்த வெறி கொண்டலையும் நிலையில் படைத்திடுவானேன், பிறகு அந்த வெறியை ஒழித்து அவனைச்சன்மார்க்கத்தில் செல்லச் செய்வதற்கு பல்வேறு வழிவகைகளை அருளுவானேன் - அந்தனியின் உள்ளத்திலே, எழும்பிய இந்த அலை அடங்க மறுத்தது. லாண்டிரிப் சொன்ன கடவுட் தத்துவம் அந்தனியின் உள்ளத்தைத் தொட்டது. சர்வ வல்லமை உள்ள ஆண்டவன், மனிதனிடம் எதைத்தான் எதிர்பார்க்கவேண்டும், ஏன் எதிர்பார்க்க வேண்டும் மண்பாண்டம் செய்பவனுக்கு எவ்வகையில் நன்றி கூறுவது என்று களிமண் எண்ணுவது போலல்லவா இருக்கும், சர்வேஸ்வரனுக்கு நன்றி கூறவேண்டும் என்று மனிதன் எண்ணினால்! ஆண்டவனைத் தொழுவது, தோத்தரிப்பது, மண்டி யிடுவது. இவைகளால் அவருக்கு என்ன பயன்? நமது வாழ்த்துதலும் வணக்கமும் அவருக்கு எற்றுக்கு? எது எது எப்படி எப்படி நடைபெறவேண்டும் என்பதனைத்தையும் அவர் எப்போதோ தீர்மானித்துத் தீட்டிவைத்திருக்கிறார் என்றால், அவருடைய திரு அருளைத் தேடிப்பெறத் தொழுகை நடத்துகிறோம் என்று கூறிக் கொள்வதிலே பொருள் என்ன இருக்கிறது? இத்தகைய கடவுட் கோட்பாட்டைவிட, லாண்டிரிப் கூறுவது, பொருத்தமுடையதாகத் தெரிகிறது. மனிதனுக்காகப் பாடுபடும் மாவீரனாக, மனிதனை நேசிக்கும் தோழனாக, மனிதனை மாண்புள்ளவனாக்கும் மகத்தான சேவை செய்யும் நண்பனாகக் கடவுளைக் கொள்வது, சாலச் சிறப்புடையதாகத் தெரிகிறது. அத்தகைய ஈசனை அறிய முடிந்தால்? இன்பம்தான். இங்ஙனம் ஒவ்வொரு சம்பவத்தின்போது, அந்த அடிப்படைக் கேள்விதான் கிளம்பிற்று. ஏன் ஐயனுடைய சிருஷ்டியிலே இவ்வளவு அலங்கோலம்? ஏன் கொடுமைக் குணங்களைப் பிறந்திடச் செய்கிறார்? பிறகு மனிதனைக் கொடுமையாளனாகாதிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்? அந்தனிக்கு இது, ஆண்டவன் வேண்டுமென்றே எடுத்துக் கொண்ட வீண்வேலை என்று தோன்றிற்று. பாதிரிமார்களால், சிறுவனாக அவன் இருந்த நாள்களிலேயே, விளக்கமளிக்க முடியவில்லை. இப்போது அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள். பெட்டி, பலநாடுகள் சென்று வருவது வாடிக்கை. பெட்டிக்கு, மணமாகவில்லை - அந்த நினைப்பும் எழவில்லை. எனவே, அடிக்கடி, பல நாடுகள் சென்று, அறிவுக்கு விருந்து பெற்று மகிழ்ந்தாள். ஒரு நாள், அவளிடம், அந்தனி, இந்த அடிப்படை விஷயமாகப் பேசும்போது, அவள் ஒரு விளக்கமளித்தாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சான்பிரான்ஸிஸ்கோ விலிருந்து ஹாங்காங் போகையில், ஒரு சீனக்கனவானுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மனிதனுடைய முன்னேற்றத் துக்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது கடவுள்தான் என்று அந்த சீனப் பெரியவர் சொன்னார். நான் திகைத்துப் போனேன். "தனக்காக வேண்டியதனைத்தையும் கடவுள் தருவார். "நமக்கெல்லாம் புரியாத ஒரு முறையிலே, கடவுளின் திருவருள் வேலை செய்கிறது, அதன் விளைவாக, பூலோகம் சுவர்க்க பூமியாகப் போகிறது. "மனிதன் செய்யவேண்டியதெல்லாம், பொறுத்திருக்க வேண்டும், பகவானிடம் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். அவ்வளவுதான்.’’ இங்ஙனம் மனிதன் வெறும் கருவி; ஆண்டவன் ஆட்டிவைக்கிறபடி ஆடும் பதுமை, என்று நம்பித்தான் மனிதன் நாசமாகிறான். மனிதன் கடவுளின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு சோம்பிக்கிடப்பதை விட்டு முயற்சியில் ஈடுபடுவானானால், மண்ணுலகில் விண்ணுலகம் காணலாம். ஆனால் அதற்கு, மனிதன், தன்னலத்தை விட்டொழிக்க வேண்டும்.அது கடினமானது; எனவே மனிதன், எளிதான வழி தொழுது கிடப்பது, தேவன் எதையும் தனக்காகச் சாதித்துத் தருவான் என்று நம்பிக்கிடப்பது என்ற நிலைக்கு வந்து விட்டான். அதனாலேயே மனிதகுல முன்னேற்றம் குந்தகப்படுகிறது. கடவுளைத்தேடித்தேடி, இல்லை என்று தெரிந்து கொள்கிறான். கடவுள் நம் உள்ளத்திலல்லவா இருக்கிறார். நாம்தான் கடவுள்! மனித சக்தி மட்டற்றது. மனிதன் தன் தீயநினைவுகளைக் கட்டுக்குள்கொண்டுவரவும், களையவும் பழகிக் கொண்டால், விண்ணுலகு, மண்ணுலகில் மலரும். தன்னலத்தைத் தகர்தெறிவது; சாத்தியமானதுதான் வரலாறு மனிதனுடைய பாதகச் செயலையும் தவறுகளையும் காட்டும் களஞ்சியம்தான் என்றாலும், மனிதகுல முன்னேற்றத் துக்குத் தடையாக உள்ளவைகளை மனிதனால் தகர்த்தெறிய முடிந்தது என்பதை விளக்கும் சம்பவங்களும் அதிலே சுடர் விட்டுக் கொண்டுள்ளன. அன்பு! இதைத்தான் அனைவரும் உபதேசித்து வந்தனர். அன்பு காட்டுவது எளிதுதான் - வெறுப்பை மனிதன் சிரமப் பட்டு உள்ளத்தில் வளர்த்துக்கொண்டு வருகிறான். சிறிதளவு முயற்சி எடுத்துக்கொண்டாலும், அன்பு உள்ளத்தில் ஆட்சி புரியும். இப்போது சிறுபிள்ளைப் பருவமுதல், வெறுக்கக் கற்றுத் தரப்படுகிறது. அன்புடன் வாழவேண்டிய மக்களிடம், இனம், நிறம், நாடு, மதம், எனும் பல்வேறு காரணங்காட்டி வெறுப்பை ஊட்டி ஊட்டிக் கெடுக்கிறோம். அன்பு அரசோச்சினால் அவனியே சுவர்க்கமாகும். ஐயன் செய்து தருவார் என்று இராமல், மனிதன் முயற்சிக்க வேண்டும். அவனால் முடியும், அவன் வெற்றி பெறத்தான் போகிறான். சீனப் பெரியவர் சொன்ன சித்தாந்தத்தை பெட்டி, இவ்வாறு விளக்கியது, அந்தனிக்கு, ஓரளவு ஆறுதல் அளித்தது. கடவுள் பற்றி எவ்வளவு கருத்தற்ற கொள்கைகளை மனிதகுலம் கொண்டிருக்கிறது, என்பதைச் சீனப் பெரியவர் எடுத்துக் காட்டினார். இதையே இப்போது நாம் கூறும்போது சீலர்கள் சீறுகிறார்கள் - ஆதினங்கள் ஆத்திரமடைகின்றன. ஆஸ்தீகர்கள் - அடி, உதை, என்றே கிளம்புகிறார்கள். பெட்டி, பேசியது கேட்ட அந்தனி சிந்தித்தான். மனதிலே புகுந்து விட்ட புனிதம் பற்றி அவன் பேசலானான். "உடைமைகள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்குக் கொடுத்து விடு, என்று ஏசுநாதர் ஒரு இளைஞருக்கு உபதேசித்தாரே, பெட்டி! ஏழைகளுக்காக அல்ல, அந்த இளைஞனுடைய நலனுக்காகவே ஏசு அதுபோல் கூறினார் என்று நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. ஏழைக்கு அந்த இளைஞன் தானம் தந்தால், ஏழையின் அல்லல் ஒரு கணம் துடைக்கப்படும். ஆனால் அந்த இளைஞனுக்குக் கிடைக்கும் பலனோ மகத்தானது. அவன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அவனைப் பிணைத்து வைக்கும் பொருளை எல்லாம் அவன் நீக்கிவிட்டதும், நிம்மதி பெறுகிறான். உடமைகளால் உள்ளத்துக்கு ஏற்பட்ட சுமை ஒழிந்து போகிறது. விடுதலை கிடைக்கிறது. நான், சாத்தான் இருப்பதை நம்புகிறேன், பெட்டி! நாம் பாசுரங்களில் குறிப்பிடுகிறோமே, அந்தச் சாத்தான் அல்ல - கடவுள் சன்னிதானத்தில் கலாம் விளைவித்து அவரால் பூலோகத்துக்கு விரட்டப்பட்டுக் கிடக்கும் சாத்தான் அல்ல நம்மிடம் குடிகொண்டிருக்கும் தீய குணத்தைக் குறிப்பிடுகிறேன். வெறுப்புணர்ச்சி, பேராசை போன்ற தீய குணங்களை நமக்குத் தந்தது யார்? மனிதன், கடவுளின் கட்டளைக்கா, சாத்தானுடைய கட்டளைக்கா, எதற்குக் கட்டுப்படுகிறான்? குழப்பம் ஏற்படுகிறது. பெட்டி! தன்னல மறுப்புதான், சாத்தானை விரட்டும் வழி - உய்யும் மார்க்கம். நாம் போராட வேண்டும், கடவுளுக்குத் துணையாக நின்று போராடவேண்டும். சிலர் இந்தத் தூய பணிபுரியக் கிளம்பினால் போதும். பிறர் பிறகு வருவர். இன்பலோகமாம் சுவர்க்க பூமியில் இடம் பிடிக்க அல்ல, பெட்டி; உலகைக் காப்பாற்றப் பணியாற்ற வேண்டும். தீயகுணம் எப்படியும் தன்னால் மடிந்தொழியும், கடவுள் அதனை ஒரு நாள் ஒழித்தே தீருவார் என்று எண்ணிப் பயனில்லை. தீய குணத்தை ஒழித்திட நாம் தீவிரமாகப் பணியாற்றித் தீரவேண்டும். கடவுள் தீயசக்திகளை ஒழிப்பதில் வெற்றி பெறவில்லை. அவரை மூலைக்கு ஒதுக்கி விட்டு, தீய சக்தி, மணிமாடத்தில் கொலுவிருக்கிறது. எனவே கடவுளின் காரியத்தைச் செய்ய, தன்னலத்தை விட்டொழித்துப் பணி புரியவேண்டும். துறவிகள் வேண்டும்.’’ அந்தனி விளக்கம் பெற்று விட்டான் என்பதை மட்டும் இச் சம்பவம் காட்டவில்லை. தன்னலமறுப்புக்கு அவன் துணிந்துவிட்டான் என்பதையும் இந்த உரையாடல் எடுத்துக் காட்டிற்று. பெட்டி, அவன் உள்ளத்தில் பெரு நெறி தவழ்வதை உணர்ந்தாள்; வாழ்த்தினாள். வெற்றி கிடைத்துவிட்டது. போர் முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் துறந்துவிடுவது என்ற முடிவுக்கு அந்தனி வந்தாகிவிட்டது. உலகின் செல்வம் அனைத்தையும் குவித்து ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்தாலும், மீண்டும் தொல்லையும், துயரமும் தலைவிரித்தாட அதிக காலம் பிடிக்காது. தன்னலம் தலைதூக்கும். பேராசை பேயாட்டமாடும். ஏழைகளுக்குக் காசு வீசிடும் கருணாமூர்த்திகள், பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறார்கள். ஏழைகள் தொகையோ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணம் சர்வரோக நிவாரணியல்ல. சேவை, தன்னலமறுப்பு இவை மூலமாகவே பலன் காண முடியும். எனவே, நான், என் தாயார் வசிக்கும் விடுதிக்குப் பக்கத்தில், ஒரு சிறு குடிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அங்குதான், ஏழைகளின் தோழனாக வாழ்க்கையைத் துவக்கப் போகிறேன். அவர்களுக்கு உதவி செய்வதே வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொள்வேன். வழக்குகள் ஏழைகளுக்குள் கிளம்பினால், வழக்கறிஞனாக நான் சமரசம் செய்து வைப்பேன். என் தேவைக்கானதை நான் சம்பாதித்துக் கொண்டு, எளியோருடன் எளியோனாக வாழ்க்கை நடத்தப் போகிறேன். மனைவி மக்கள் இல்லாத துறவிகள் மட்டும் போதும், தூய்மையையும் வாய்மையையும் வெற்றி பெறச் செய்ய என்று கொள்வதற்கில்லை. குடும்பத்துடன் உள்ள துறவிகள் தேவை; நான் அத்தகைய துறவி ஆகப் போகிறேன். எலினார், எளிய வாழ்க்கையில் ஈடுபட, எல்லாம் இருந்தும் அனைத்தையும் துறந்து விட்டு அன்றாடம் தேடிப் பெற்று வாழ்க்கை நடத்துவதை ஏற்றுக்கொள்ளுவாளா? செல்வத்தைக் கண்டவள்! சுகத்தை அறிந்தவள்! எப்படிஇவைகளை விட்டுவிட மனம் வரும், என்றெல்லாம் அந்தனி எண்ணிக் குழப்பமுற்றான். ஆனால் அந்தக் குணவதியோ, அவன் கூறியதே செந்நெறி என்று உணர்ந்தாள்; தன்னல மறுப்பு, ஏழையர்க்குத் தொண்டாற்றுதல், உடைமைகளைக் கட்டிக்காத்து அவைகளுக்கு அடிமையாகிச் சிதைந்து போகாதிருத்தல், இவையே உண்மைத் துறவியின் இலட்சணம் என்பதை, அந்தனி மூலம் அறிந்தாள்; அகமகிழ்ச்சி யுடன், அவன் துவக்கத் தொடங்கிய புதிய வாழ்க்கையில் துணை நிற்க இசைந்தாள். துணைவியுடன் ஏழையர்க்குத் தொண்டாற்றக் கிளம்பினான். அந்தத் துறவி. தம்பி, “தருமபுரத்தைக்”கண்ட அன்று, நான் கதையில் இந்தத் "துறவி’யைச் சந்திக்கிறேன் என்றால், என் உள்ளம் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்! "வயலூரிலிருந்து நெல் வண்டிகள் வந்து விட்டனவா? கோட்டையூரார் குத்தகைப் பணத்தைக் குறைவின்றிக் கொடுத்துவிட்டாரா? பட்டணப் பிரவேசத்துக்கு இந்த ஆண்டு, செலவு எவ்வளவு என்று புள்ளி போட்டாகி விட்டதா? வாழைத் தோட்டத்திலே புதிய வாயிற்படி வைத்தாகி விட்டதா? முல்லைத் தோட்டத்திலே ஊஞ்சல் அமைத்து விட்டார்களா? சென்னை வழக்கு எந்தக் கட்டத்தில் இருக்கிறது? கல்கத்தாவிலிருந்து மருந்து பார்சல் இன்று வந்துவிட்டதா? கனகாம்பரக் கலர் ஆடை வாங்கியாகிவிட்டதா? கை வளைகள் எங்கே? தோடு மேலும் இரண்டு ஜதை வேண்டும்! தொங்கட்டம், பார்வையாக இல்லை! தில்லைத் தாதன் வந்ததும் எனக்குச் சொல்லு, கொல்லைப்புறக் கதவைத் தாளிட்டுவிட வேண்டும். பல்லைக்காட்டி நிற்கும் பாக்கியத்துக்கு, பத்து கொடுத்துத் துரத்து. ஏன், உரத்த குரலில் கத்திக் கத்தி என் உறக்கத்தைக் கெடுக்கிறார்கள், நால்வரின் பாடல்களை மனதுக்குள் படித்திடச் சொல்லு.’’ இன்றையத் துறவிகள் இங்ஙனம் பேசி இருந்திடக் காண்கிறோம். கதை மூலம், உண்மைத் துறவி எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பது குறித்து, ஒரு ஆங்கில ஆசிரியர் காட்டுகிறார். வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா - என்றுதான் தம்பி உன்னைக் கேட்கிறேன். நமது இயக்கத்தால் நாட்டிலே தாத்தீகம்தலைவிரித்தாடுகிறது என்று நாப்பறை கொட்டும் நல்லவர்களைக் கேள் தம்பி, துறவியின் இலட்சணம் என்ன என்று. காதிலே குண்டலம், கழுத்திலே தாவடம், சேவடியில் பாதுகை, உடலில் காவி, என்று கூறுவர். சரி ஐயன்மீர்; கோலம் கிடக்கட்டும், உள்ளம் எப்படி இருக்கவேண்டும் என்று கேள். உடைமைகள், அவை பற்றிய உரிமைகள், இவை பற்றிய எண்ணம் கொண்டிருப்பது, துறவு ஆகுமா? என்று கேள். இன்றைய ஆதினங்கள் அந்தனி போன்ற துறவுகொண்டு தூய்மையான தொண்டாற்ற முன்வருவாரா என்று கேள். சிவனருளால், எமது காலம் வரையில், இந்தச் சுகபோகம் நிலைத்து இருந்தால்போதும் என்று எண்ணுவோரும், விடை ஏறும் பெருமானுடைய அருளால், வழக்கும் வல்லடியும் தாக்காதிருந்தால்போதும் என்று எண்ணுவோரும் துறவிகளாகத் "தர்பார்’ நடத்த அல்லவா காண்கிறோம். தம்பி, நான் ஏட்டிலே சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். உனக்கும் அப்படித்தான் தோன்றும், தேடினால் கிடைப்பார்களா என்று எண்ணுவதைவிட, தம்பி நாம் அப்படிப்பட்ட "துறவிகளாகிவிட வேண்டும். குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது. துணைவி இருப்பாள், நமது தொண்டுக்குத் துணைபுரிய. குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த. தொழிலில் ஈடுபடுவோம். வாழ்க்கை நடத்த, ஆனால் உடமைகளுக்குக் கட்டுப்பட்டுவிடாமல், தன்னலத்துக்கு ஆட்பட்டுவிடாமல், சுகபோகத்திலே ஆழ்ந்து விடாமல், வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா, என்ற கேட்கும் ஆற்றலையும், அத்கைய கேட்டினைக் களைந்திட அறப்போர் நடாத்தும் திறத்தினையும் பெற்ற, மடம் தேடாமல், தாவடம் அணிந்த சடம் ஆகாமல், காவி, தேடாமல், அதனுள் மறைந்திடும் காமி ஆகாமல், தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத்திலே இடம் பிடிக்க அல்ல நமது இதயத்திலே அன்புக்கு, இடமளித்து, அறநெறியை நாட்டிலே புகுத்தி, மக்களைப் புதியதோர் இன்பம் பெறச் செய்யும் புனிதத் தொண்டாற்றும் துறவியாக வேண்டும். நாட்டிலே இத்தகைய துறவிகளேஇன்று அவசரமாகத் தேவை. ஏழையின் அழுகுரலை எளியோரின் கண்ணீரை பதிகம் பாடியும் மணி அடித்தும் போக்கிட முடியாது, தம்பி! முடியாது. துறவிகள் வேண்டும், புதிய துறவிகள். வெள்ளை உடை போதும். காவி தேடி அலைய வேண்டாம். காவிகளைத்தான் பார்க்கிறோமே! அளக நிரை குலைய விழி குவிய வளை கல கலென அமுத மொழி பதறி யெழ அணியாரம் அழகொழுகு புளகமுலை குழைய இடை துவளமிக அமுத நிலை அதுபரவ அதி மோகம் உள முருக வரு கலவி தரு மகளிர் கொடுமையெனு முறுகபட மதனில் மதி அழியாதே என்று உலகுக்கு உருக்கமாக உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள்! உபதேசம்! நாம், தொண்டாற்றும் துறவிகளாக வேண்டும். தருமபுரத்தையும் கண்டுவிட்டு, அந்தனி ஜான் என்ற ஏட்டையும் படித்த பிறகு, இந்த எண்ணந்தான் எனக்கு ஏற்பட்டது. அன்புள்ள அண்ணாதுரை 4-9-1955 “ழ’ கரமும்”ற’ கரமும் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பு - மொழிவழி அரசு அமைதல். தம்பி! புதிதாகப் பதவியேற்ற பிரன்ச்சு அமைச்சர், அலுவலகத் தைப் பார்வையிடச் சென்றார் - முதல் அறையில் பணியாளர் இல்லை! இரண்டாவது அறையிலும் யாரும் இல்லை! மூன்றாவது அறையில் நாற்காலியில் உட்கார்ந்தபடி ஒரு பணியாளர் உறங்கிக்கொண்டிருந்தார்! அமைச்சருடன் வந்தவர், உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புவதற்காக அருகே சென்றார். அமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தி, "வேண்டாம்! வேண்டாம்! அவரை எழுப்பிவிடாதே! எழுந்தால், அவரும், மற்ற இருவரும் வெளியே சென்றுவிட்டது போல, அலுவலகத்தை விட்டுப் போய்விடப் போகிறார்!’’ என்று கூறினாராம். ஒருவர்கூட அலுவலகத்திலே இல்லாதிருப்பதைவிட, உறங்குபவர் நிலையிலாவது ஒருவர் இருக்கட்டும், என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார் போலும்! பொறுப்பற்ற தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குவதாக இருக்கிறது. பிரன்ச்சு அமைச்சர் உறங்கிக் கிடப்பவரை எழுப்பிவிடா தீரய்யா, அவரும் வெளியே போய்விடப் போகிறார் என்று கூறி, வேதனையை நகைச்சுவையால் மாற்றினார். இன்று நமது திரு இடத்தில் ஒரேவழி ஒருவரிருவர், இங்கொன்றும் அங்கொன்றுமாக, மொழி, நாடு, இனம், என்பன குறித்து ஒருசிறிதுபேசும்போது, அவர்கள் இவ்வளவுதானா கூறுவது, அவர்களின் பொறுப்பும் பணியும் இந்த அளவோடு முடிந்துவிடல் வேண்டும், அவர்தம் அறிவாற்றலுக்கு ஏற்ற அளவுக்கா இப்பணி இருந்திடக் காண்கிறோம் என்ற எண்ணம் நமக்கெல்லாம் எழத்தான் செய்கிறது; தம்பி! அத்தரத்தினர் மீது நீ கோபித்துக்கொள்ளும்போது, எனக்கு அந்தப் பிரன்ச்சு அமைச்சருக்கு ஏற்பட்டது போன்ற கவலைதான் பிறந்துவிடுகிறது. இவர்களைக் கோபித்துக்கொண்டால், இவர்கள் இதனையும் கூறாதிருந்துவிடின் என்ன செய்வது - ஏதோ இதையாவது சொல்கிறார்களே - ஓரோர் சமயத்திலாவது பேசுகிறார்களே - சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பாதுகாப்புச் சுவர்களையும் பக்குவமாக எழுப்பிகொண்ட பிறகேனும், சிலகூற வாய் திறக்கிறார்களே, இவர்களைத் தம்பி, கடிந்துரைத்தால், இதனையும் கூறாது இருந்துவிடுவரே என்ற அச்சம் எனக்கு. பேராசிரியர் சேது(ப்பிள்ளை), அவர்கள் செந்தமிழின் சுவையினை நாட்டு மக்களுக்கு விருந்தாக அளித்திடும் நல்லவர்! பொன்னாடை போர்த்தி அப்புலவரைப் பெருமைப்படுத்தினர். நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேனில்லை எனினும், இருக்குமிடத்திருந்தே அவர் பெற்ற ஏற்றம் கண்டு இறும்பூதெய்து பவன், அவர் அறியார் என்று எண்ணுகிறேன், அவரிடம் தொடர்புகொண்ட குழாத்தினரில் கூட - அவர் பால் பெருமதிப்புக் கொண்ட என்போன்றார் அதிகம் இரார். பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலிமாட்சி குறித்து, அழகுறப் பேசியிருக்கிறார். தமிழ் மொழிக்கே அணியாக விளங்கிடும் “ழ’ கரம்”ற’ கரம் குறித்து எடுத்துக்கூறி, "ழ’ அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகையை ஒலி மாட்சியை, பிறமொழிகள் பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகைகொள்ளாதிருத்தல் குறித்தும் அதன்உயர்வறியாது அதனைப் பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார். எழுந்திரு-ஏந்திரு என்றாகிவிட்டதையும், திருவிழா-திருவிஷா என்று கெடுவதையும், பழம்-பளம் ஆகிப் பாழ்படுவதையும், கிழவி, கியவி ஆகி “ழ’ கரம் கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய் மொழிக்கே அழகளிக்கும்”ழ’ கரம் இங்ஙனம் பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி மொழி யினைக் கொலை செய்கிறார்களே என்றுகூறிக், கசித்துருகி நிற்கிறார். "ற’ கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்றனர், உரையாடலில்! “ற’ கரம் வன்மையான வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல்,”ற’வை, படாத பாடுபடுத்துகிறார்கள் நம்மனோர். காற்று, காத்தாகிவிடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயோ! அம்மவோ! சிலம்பளித்த செல்வன், அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! என்று கண்ணகி கூறுவதாகச் செப்புகிறாரே, ஆறு றகரம் ஒலிக்கிறது கேண்மின் - என்று எடுத்துக்காட்டுகிறார். மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக் கவலைப்படுகிறார். “ழ’ கரம் -”ற’ கரம் பாழ்படுகிறது!! "ழ’ தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பளிக்கும் அழகணி, இதனை அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போ ராகின்றனர்! அவர்தம் போக்குக் கண்டு, மொழியின் சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும், “ழ’ கரத்தின் அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும் முறையே- குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு”ற’ கரம் ஒலித்திடும் சிலப்பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையி லேயே, அந்த "ற’ கரங்கள், தமிழ்மொழியின் ஒலி மாட்சியையும், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கிறோம். மறுப்பாரில்லை! அத்தகைய மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாமலில்லை! மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால் செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்கதோர் நிலைதான். ஐயமில்லை! ஆனால் . . . .! மொழியின் "ஒலி’ மட்டுமா இன்று பாழ்பட்டுக் கிடக்கிறது. "ஒளி’ மங்கி மறைந்து கொண்டிருக்கிறது! ஒலிகெட்டும் ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. பாவலரும் காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும், ஆடலரங்கிலும், புலவர் மன்றமதிலும், பூங்காவிலும், கடலின் மீதும், குன்றின்மீதும், களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங்கவலை கொள்வதுபோல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறது! கேட்பார் யார்? எங்குளர்? மொழியின் வளம் பேசிமகிழ்வோர் உளர்! ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின்நிலை! அந்நிலைக்கு வந்துள்ள கேடு? அக்கேட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம்பெற எண்ணும் முதுகெலும்பற்றோர்! இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்? அவள் காற்சிலம்பு! கைவளை! அவள் மேனியில் இடம் கொண்டோம் என்பதால் கர்வம் கொண்டிருந்த கச்சு! அவள் கரம்பட்ட செம்பஞ்சுக் குழம்புக் கலயம்! அவள் தோகை மயிலெனச் சாய்ந்திருந்த மஞ்சம்! . . . என்று காட்டிக் காட்டி, பெருமூச்சுவிட்டு, கண்ணீரையும் சிந்தவிட்டு, அம்மங்கை நல்லாள் எங்கே? என்று கேட்பவனிடம், "அவளா? இமயத்தான் இழத்துச் சென்றான் - என்னை எண்ணி எண்ணி அவள் சிந்தும் கண்ணீர் வெள்ளத்தில், அவன் ஓர்நாள் அழிந்தொழிந்து போவான் - உறுதி! உறுதி! உறுதி! - என்று கூறிப்பயன் என்ன? இருந்ததை இழந்தோம் என்பது கேவலம். இழந்திடுவோம் என்ற நிலையை முன்கூட்டி அறிந்திடாதிருந்தது மடைமை. அறிந்தபிறகு தடுத்திடும் முயற்சியில் ஈடுபடாதிருத்தல் கொடுமை. இழந்தபின் காதணி, காலணி, காட்டிக் கண்ணீர் சிந்துவது, இவை யாவும் கூட்டிச்சேர்த்த சேறு அன்றோ! மொழி இன்று தாக்கப்படுகிறது. சிறுகச்சிறுக அழிக்கப் பட்டு வருகிறது - அரசு அவை அதனை ஏற்க மறுக்கிறது - அஞ்சல் நிலையத்தார் அதனை அடித்து விரட்டுகிறார்கள் - நாணயம் அதனைத் தாங்கிட மறுக்கிறது - நயாபைசா வருகிறது! இந்நிலையில், பழம் பளமானது பற்றியும், கிழவி கியவியானது பற்றியும் காற்றைக் காத்தாக்கி, நாற்றை நாத்தாக்கி விட்ட கொடுமை பற்றியும் எடுத்துப் பேசுவது, சாமான்யர்களுக்கே ஏற்றதாகாது என்றால், போராசிரியர்களுக்கே இவ்வளவுதான் கூறமுடியும் என்றா நாம் மன அமைதி கொள்ளமுடியும்! கேட்டால், இதனையும் கூறாது சேது(ப்பிள்ளை) பெரும் பேராசிரியர் வையாபுரி(ப்பிள்ளை)யாக வடிவமெடுத்து விடுவாரோ, என்றல்லவா அச்சம் பிறக்கிறது. எழுப்பி விடாதே இவனும் வெளியே போய்விடப் போகிறான், என்று கூறினபிரன்ச்சு அமைச்சன் போலல்லவா, ஏதோ, இதனையாவது பேசுகிறாரே என்று எண்ணிக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது மிகப் பெரியவர்கள் மிகத் துணிவுடன் மிகப்பெரிய உண்மைகளை மிகச் சாமர்த்தியமாக மறைத்துவிடும் காலமாக இருக்கிறது! காலமாகவா? மிகப் பெரிய மனிதராவதற்கு, இஃதொன்றேயன்றோ, வழியாகவே அமைந்துவிட்டிருக்கிறது. தம்பி, பணிக்கர் தெரியுமல்லவா உனக்கு! சீனாவிலும், ஈஜிப்டிலும், பணியாற்றிய பெரியவர். அவர் கூறுகிறார் துணிந்து, மொழி, பண்பாட்டுக்கு உயிர் என்கிறார்கள். மொழி மூலமாகத்தான் பண்பாடு உருவாகிறது வளருகிறது என்கிறார்கள், அது தவறு, பண்பாட்டினை எடுத்துக்கூறும் முறைகளில் மொழி ஒன்று, அவ்வளவுதான்! என்கிறார் கூறிவிட்டு, மொழிவழி அரசு கேட்பது தவறு, மிகப் பெருந்தவறு! என்று பேசுகிறார். அவர் சென்னையில் பல்வேறு இடங்களில் பேசியிருப்பதிலிருந்து, அவர் மொழிவழி அரசு கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, "எனக்கு என்ன வழி?’’ என்று நேரு பண்டிதரைக் கேட்கிறார் என்பதும் நன்றாகத் தெரிகிறது. "மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொடர்பு இல்லை’ என்று துணிவுடன் கூறுகிறார் பணிக்கர். பண்பாடு, பாரதத்தில் இருக்கிறது, இராமாயணத்தில் இருக்கிறது. வங்க மொழிமூலம் ஓர் பண்பாடு, மராத்தி மூலம் மற்றோர் பண்பாடு, தமிழ்மூலம் தனியானதோர் பண்பாடு ஏற்பட்டுத் தழைத்திருக்கிறது என்று கூறுவது தவறு என்கிறார். மொழி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஓய்வோ வாய்ப்போ பெறமுடியாத அளவுக்கு, உலகு எங்கணும் ஓடோடிச் சென்று, உபசார மொழிகளைச் சொறிந்து உச்சி ஏறி நிற்கும் தலைவர்களுடன் உறவாடிடும் பணிக்கர், “தொல்காப்பியம் என்றோர் ஏடு உண்டு ஐயா! அது எமது தொன்மையான பண்பாட்டினை உருவாக்கிய கருவூலம்’’ என்று கூறினால், அவர்”ஒரு சர்வதேச ரீதியான! “புன்னகையை வருவித்துக் கொண்டு, இதெல்லாம் பழைய - கஞ்சி என்று கூறிவிடுகிறார்! மொழியின் தொன்மை மென்மை, வளம், இவைகள் இடது கரத்தால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியன என்கிறார். வலக்கரம் கொண்டோ, இராமாயண பாரதச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் செந்தாமரை இதழ்களைப் பொறுக்கி எடுக்கும் பணியிலே ஈடுபடுகிறார். பெரியவர்! எனவே பெருந்துணிவுடன் இவ்வண்ணம் பேசுகிறார்! பேராசிரியர்களோ,”ழ’ கரம் பாழ்பட்டுவிட்டதே. “ற’ கரம்”ட’ கரமாகிவிட்டதே என்ற கவலையில் தங்களை மறைத்துக் கொள்கிறார்கள்! இமயம் முதல் குமரிவரை, பணிக்கர், இராமனையும் கிருஷ்ணனையும் பார்க்கிறாராம். "பாரதம்’ முழுவதும் பகவத்கீதை இருக்கிறதாம். எனவே, மொழிகளைக் கடந்து ஓர் பண்பாடு இருந்திடுவது புலனாகிறதாம். எப்படி, வாதம்? வாதத்தின் திறத்தை அல்ல தம்பி, நான் கவனிக்கச் சொல்வது. அந்தத் துணிவைக் கவனித்தாயா!! இராமனும் கிருஷ்ணனும், இமயம் முதல் குமரி வரை இருக்கிறார்கள் - எனவே மொழிவழி அரசு கேட்பதோ, மொழி வழி பண்பாடுகள் அமைகின்றன என்று கொள்வதோ கூடாது என்று வாதாடுகிறார் - இந்தத் துணிவு, எவரிடம் காட்டப் படுகிறது என்று கவனித்தாயா தம்பி! இங்கு, திரு இடத்தில்! திரு இடத்தில் மட்டுந்தான்! லிஸ்பனிலிருந்து லெனின்கிராட் வரையில், இலண்டனி லிருந்து ஜிப்ரால்டர் வரையில், ஆட்டவாவிலிருந்து அடிலெய்ட் வரையில், என்று இப்படி குறுக்கும் நெடுக்குமாகப் பல கோடுகள் கீறிக்காட்டி, நீயும் நானும் கூறமுடியும். இங்கெல்லாம் ஏசுநாதர் தெரியும்! பைபிள் படிக்கப்படுகிறது! எனினும் இங்கெல்லாம் ஏசுவும்மேரி அன்னையும் தெரிவதால், பைபிள் இங்கெல்லாம் புனித ஏடாக இருப்பதால், ஒதே பண்பாடுதான் இருக்கிறது என்று அறிக, எனவே ஒரே அரசு அமைதலே பொருந்தும் என்று உணர்க என்று கூறிடவும், அமெரிக்கா, கானடா, மெக்சிகோ, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே ஸ்வீடன், ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, என்றெல்லாம் தனித்தனி அரசுகளாக ஆகாது, ஒரே பண்பாடு, ஒரே அரசு என்று பணிக்கர் அங்கு எங்கும் பேசத் துணிவு கொள்ளமாட்டார். இங்குதான், எதையும் பேச எவரையும் அனுமதித்து விடுகிறோமே! பேசுகிறார்! ஜாதி - வர்ணாஸ்ரமம் - சுவர்க்கம் - இவைபோன்ற முறைகளே எமக்கு உரியன அல்ல, எனவேதான் எமது மொழியில் அச்சொற்களே இல்லை, என்று புலவர் பெருமக்கள் கூறுகின்றனர். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிபம் எமது முறையல்ல. எமது இலக்கியம் காண்போர் இதனினை அறிவர் என்று புலவர் பெருமக்கள் பேசுகின்றனர். எமது நிலமே, ஐந்தாகத் தரப்பட்டிருக்கிறது. எம்மிடம் திணை ஒழுக்கம் உண்டு. எமது ஆட்சிமுறை, போர்முறை யாவுமே தனியான பண்பாடு விளக்கமளித்திடும். இவ்விதமெல்லாம் பேசுகின்றனர் - முத்தமிழ் என்று யாம் இயல், இசை, நாடகம் என்று கூறும் நிலை பிற மொழியாளருக்கு இல்லை என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். எமக்கென ஓர் மொழி, அம் மொழிவழி எமக்கென்றோர் பண்பாடு, அப்பண்பாட்டுக்கு உறைவிடமாகவும் உள்ள ஓர் அரசு - இவற்றினுக்கெல்லாம் எம்மிடம் சான்றுகள் உள்ளன என்று சாற்றுகின்றனர். எனினும் இவர்தம் சான்றுகளைச் சருகு என்கிறார். சேற்றிலே சந்தன மணம் கமழ்கிறது என்கிறார், துணிந்து பணிக்கர். அறிவு அறை போகிய பொறி அறுநெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! என்பதில் காணக்கிடக்கும் “ற’ கரத்தின் பெருமையில் பேராசிரியர் நீந்திக் களித்திடுகிறார் - இன்று இறைமுறை பிழைத்தோன் வாயிலோனாக உள்ள பணிக்கர்கள் கண்ணீர் பொழிந்திடும் கண்ணகிகளை”வழக்காடவும் துணிந்தனையோ! அவன் தலை வெட்டுண்டதுபோல உன் நாவும் வெட்டுப்பட வேண்டியோ, எமது கொற்றத்தினைக் குறைபேசி நிற்கிறாய்’’ என்று கேட்கின்றனர். நமது பேராசிரியர்கள் அந்த வாயிலோன் எது செய்யினும் பரவாயில்லை, "ழ’ கரம் பாழ்படாது இருக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். லோக்சபா - ராஜப்பிரமுக் - ராஷ்டிரபதி - நயாபைசா! இவ்வண்ணம் படை எடுக்கின்றன, வழக்கில் நடமாட வேண்டிய சொற்கள்! “ழ’ வும்”ற’ வும் மட்டுமா, மொழியே பிழைப்பது கடினம் என்று நிலை பிறந்திருக்கிறது. கேட்கும் உரிமை உணர்ச்சி, அதற்கான உள்ள உரம் எழக்காணோம்! இரயில்வே நிலையங்களில் இந்தி, அஞ்சல் அட்டைகளில் இந்தி, நாணயங்களில் இந்தி, அலுவலகங்களின் பெயர் பொறிப் பலகைகளில் இந்தி, பட்டாளத்தில் இந்தி - என்று எங்கும் இந்தி நுழைக்கப்படுகிறது! ஆட்சி மன்றங்களிலிருந்து அங்காடி வரையில் இந்தி அரசோச்சக் கிளம்பிவிட்டது. கேட்பார் இல்லை! "தமிழ் இலக்கியம் எதையும சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தில் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவி லிருந்தே அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன.’’ பிலியோஜாத் எனும் பிரன்ச்சு நாட்டு, மொழித்துறை ஆராய்ச்சியாளர் கூறுகிறார். நாள் பத்து ஆகவில்லை இங்ஙனம் இவர் சென்னையில் கல்லூரியில் நடைபெற்ற, தமிழ்க்கலைக் கழகக் கூட்டமொன்றில் பேசி! பேராசிரியிர் சேது(ப் பிள்ளை) அவர்களும் அந்த மன்றத்தில் அமர்ந்திருந்தார் என்று தெரிகிறது. எனினும், என்ன பயன்? ஏற்புடையது! ஈடில்லாதது! தனியாக இயங்கவல்லது! பண்பின் பெட்டகம்! இன்ப ஊற்று! என்றெல்லாம் கூறித்தான் என்ன பயன்? இந்தி இழிவு படுத்துகிறது - அதனை இழிவென்று எண்ணாதீர், என்னைப் பாரும், என் சொல்லைக் கேளும், அடுத்த உத்தியோகம் கிடைக்கும்வரை நான் இப்படி "அடப்பம்’ தாங்கும் பணிபுரிபவன் அறிமின்! என்று கூறி வருகிறார் பணிக்கர். பணிக்கர்கள் இதுபோலப்பேசுவது கேட்டும், பாரத அரசில் பணியாரத்துண்டுகள் வெறுவதற்காகப் பல்லிளித்துக் கிடப்போர், மொழி, பண்பாடு, அரசு எனும் எதனை விட்டுக் கொடுத்தேனும், நத்திப்பிழைத்திடும் போக்கிலே செல்வதைக் காணும்போதும், மிகுதியும் துக்கம் துளைத்திடுகிறது. அந்த வேளையில், ஓரோர் இடத்திலிருந்து உள்ளத்திலுள்ளதை ஒரு சிலர் துணிந்து கூற முன்வருவது காண்பது, பாலைவனத்திலே கிடைக்கும் நீரோடை போலாகிறது. மகிழ்ச்சி இனிப்பூட்டுகிறது. இதோ மற்றோர் தமிழாசிரியர்; ழ’ கர "ற’ கரத்தோடு நிற்பவரல்ல, நம்மோடு நெடுந்தூரம் வருபவருமல்ல, எனினும், நாம் செல்லும் திசையைச் சுட்டிக்காட்டிடும் அளவுக்கு முன்னணி வருகிறார், டாக்டர் இராசமாணிக்கனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் உள்ளவர். "இந்திய வரலாற்றுக் காலம் தோன்றிய நாள் தொட்டு வெள்ளையர் ஆட்சி ஏற்படும் வரையில், தமிழகம் இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசாலும் ஆளப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் பெரும் பகுதியை ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட அசோகன் காலத்திலும், தமிழகம் தனியாட்சி புரிந்தது என்பதை அப்பேரரசன் வெளியிட்ட கல்வெட்டுக்களே தெரிவிக் கின்றன. இங்ஙனம் பல நூற்றாண்டுகளாகத் தனிப்பட்டு இருந்த தமிழகம் தனக்கென ஒரு மொழியையும் அதற்குரிய இலக்கியங்களையும் தனிப்பட்ட பண்பாட்டையும் வளர்த்து வந்தது.’’ தமிழாசிரியர்கள் அனைவரும் இத்தகைய வரலாற்று உண்மைகளை எடுத்துக்கூறும் உள்ளத் திண்மை பெற்று விட்டால், மொழி ஆராய்ச்சித் துறையிலே அல்ல, ஆட்சியாளர்களுக்கு நேசத்தொடர்புகளை ஏற்படுத்தித் தரும் துறையிலே, பணியாற்றும் பணிக்கர் இவ்வளவு பதட்டமாகவா பேசிடுவார்! ஏன், தமிழறிந்தோர் துணிவு பெறாதுள்ளனர்? டாக்டர், அந்த நோயின் தன்மையையும் விளக்குகிறார். "தமிழன் - தமிழனாக வாழ்தல் வேண்டும். அவன் தன் தாய் மொழியின் சிறப்பை அறிதல் வேண்டும்; தமிழிலேயே தனக்குரிய சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று தமிழில் வல்ல சான்றோர் கூறினால், இவர்கள் நாத்திகர்கள் - வடமொழியை வெறுப்பவர் - ஒருமைப்பட்டுள்ள சமுதாயத்தில் வேற்றுமையை உண்டாக்குகின்றனர் என்று ஒரு சாரார் பழிதூற்று கின்றனர். இவர்களுக்குள்ள நாளிதழ்களின் செல்வாக் காலும். உயர் அலுவலரது மறைமுகமான செல்வாக்காலும் இச்சான்றோர் பலவாறு அழுத்தப்படுகின்றனர். தமிழருள்ளே அறிவற்ற புல்லுருவிகளை ஏவிவிட்டுத் தூற்றவும் செய்கின்றனர்’’ +இந்த அச்சம்தான் பலரை “ழ’ கர”ற’ கரத்தோடு நிறுத்திவிடுகிறது. புல்லுருவிகள்! பொன்னுருவிகள்! கண் சிமிட்டிகள்! காசு வீசுவோர்!- அந்தப் படைவரிசையில் உள்ளவர்கள் பல வகையினர். ஒன்றால் வீழ்த்த முடியாவிட்டால், மற்றொன்றால்! அடிக்கும் கரத்தால் ஆகாததை அணைக்கும் கரம் சாதித்துத் தருகிறது. பலத்தால் முடீயாததை பாவத்தால், பரதத்தால், சாதித்துக்கொள்ள முடிகிறது! எல்லாவற்றையும்விட "பழி’ தாக்கிடும் என்ற பயமே, பலரை வீழ்த்திடப் பயன்படுகிறிது. படித்திருப்பாயே தம்பி, பம்பாயில் பத்து நாளைக்கு முன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது என்று ஒரு புரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை எவனோ ஒரு எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி வைத்திருக்கிறான், கடல்நீர் இன்றுமட்டும் இனிக்கும் என்று அவ்வளவுதான், சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம். கடல் நீர் கரித்தது! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். எனவே கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்து மாவுக்குத்தான் இனிக்கும் என்று கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்து விட்டனர் - பெரும்பாலோர்! துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும்போல் கரிக்கத்தான் செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும் புரளி என்று! ஆம்! - என்று கூட பக்தர்கள் கூறவில்லையாம் - முகம் "ஆம்’ என்றதாம்’ அதுபோலத்தான் தம்பி, தேசத் துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - சமுதாயத்தில் பிளவு மூட்டுபவன் - என்று பழி சுமத்துவரே என்று அஞ்சி, “ழ’ கர”ற’ கரத்தோடு நின்றுவிடுகிறார்கள். இந்தியப் பேரரசு, இந்தி தேசிய மொழி; என்பவைகளை மறுப்பது ஆபத்தாக முடியும் என்று அஞ்சிக் கிடப்பதும் , “ழ’ கரத்தையும்”ற’ கரத்தையும் காத்திட நம்மாலான முயற்சி செய்வோம் என்று முனைவதும், பலனளிக்காது. வேரிலே கொதி நீர் ஊற்றும் காதகர்கள் இருக்கும்போது, இதழின் அழகு பற்றிப் பேசி மகிழ்வது பலன் தராது! “ழ’”ற’ மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழகத்துக்கு ஆபத்து என்பதை அஞ்சாது எடுத்துரைக்க முன்வருதல் வேண்டும். தம்பி! பேராசிரியர், “ழ’ கர”ற’ கரத்தோடு நின்று விட்டாலும், நீயும் நானும், நம் போன்ற சாமான்யர்களும், கடல்நீர் கரிக்கிறது - பணிக்கர் பேச்சு புளிக்கிறது - டில்கொட்டுகிற து - என்ற உண்மைகளை எடுத்துரைப்போம். பேராசிரியர்களின் பெரும்புலமை நாட்டுக்குப் பலனளிக்கத் தவறிவிட்டாலும், நாம் நமது தூயதொண்டு மூலம், நாட்டு விடுதலைக்கான "சூழ் நிலை’யை உருவாக்க வல்லோம் - அதிலே எனக்குள்ள உறுதி , நான் நாட்டு மக்களின் நல்லார்வத்தைக் காணுந்தோறும் காணுந்தோறும், வளர்கிறது, மிளிர்கிறது!! அன்புள்ள அண்ணாதுரை 11-9-1955. “எங்கள் நாடு” காகிதத் தொழிலில் வடநாட்டு முதலாளிகள் - திராவிடநாடு விடுதலையின் அவசியம் - இந்திய உபகண்ட வாழ்க்கை நிலை தம்பி! "எங்கள் நாடு! இது எங்கள் நாடு! எங்கும் புகழ் தங்கும் நாடு வளம் பொங்கும் நாடு வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!!’’ கவர்னர், சேலம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இந்தப் பாட்டுக் கேட்டாராம்! பள்ளிச் சிறுமிகள் இந்தப் பாட்டுப் பாடி, அதற்குத் தகுந்த நாட்டியமாடிக் காட்டினராம். தம்பி, கவர்னர் நல்ல கலாரசிகர்! திருவல்லிக்கேணி, மயிலை, அடையாறு, இவைகள், நமது நாட்டுப் பண்பாடு இன்னதென்று அறியாத வெள்ளைக்காரர்களுக்கே "கலாரசனை’ ஊட்டின என்றால், நமது கவர்னருக்கு அதை ஊட்டச்சிரமம் என்ன ஏற்பட்டிருக்கப் போகிறது. அவரும் கலா நிகழ்ச்சிகளிலே அடிக்கடி கலந்து கொள்கிறார். எனவே, பள்ளிச்சிறுமிகள் பாடிஆடிய போது, அவர் அரும்பும் - மணம் தருகிறது என்றெண்ணி இருக்கக்கூடும். கலை, கடற்காற்று வீசும் இடங்களிலே மட்டுமல்ல சிற்றூர்களிலும் சிறப்புடன் விளங்க முடியும் என்று எண்ணி மகிழ்ந்திருப்பார். கலைவளர்ச்சிக்கு இந்தச் சிறுசுகளின் சிங்கார நடனம் ஒரு எடுத்துக்காட்டு என்பதுபற்றிக் கவர்னர் எண்ணிக்கொண்டிருந்திருப்பாரே தவிர, அந்தப் பாட்டின் பொருள்பற்றி அவர் சிந்தனையைச் செலவிட்டிருக்கமாட்டார்; பொருள் தெரிந்த சிலரும், எங்கே இந்தப் பாடலின் பொருள் கவர்னர் பெருமானுக்குத் தெரிந்துவிடுகிறதோ என்றுதான் கவலைப்பட்டி ருப்பார்களே தவிர, பொருளை விளக்கி இருக்க மாட்டார்கள். எல்லா வளமும் பொங்கிடும் எழில் நாடு, எங்கள் தமிழ் நாடு! ஆனால் யாராரோ வந்தார்கள், வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்துக் கொடுத்து, ஏமாந்த நாடு இது என்று, இரக்கமும் வெட்கமும் எழத்தக்கவிதமான பொருள்கொண்ட பாடல் அது. “ஓர் இரவு’ எனும் படக் காட்சியில் இருப்பது; பாடலைத் தீட்டியவர் முத்தமிழ்க் கலா வித்வரத்ன டி.கே. சண்முகம் அவர்கள். அவர்கூட, இன்றைய நிலையில், விரும்ப மாட்டார் என்று எண்ணுகிறேன், இப்படிப்பட்ட கருத்தமைந்த பாடலைத் தீட்டியவர் என்பதை வெளியே எடுத்துரைக்க, நிச்சயமாகக் கவர்னருக்குப் பொருள் எடுத்துரைக்கப்பட்டி ருந்தால், அவர் கலையைக்கூடக் கண்டித்து விட்டுப் போயிருப்பார்! கலையை, கவர்னர்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியும், காதுக்கு விறுவிறுப்பும், இதயத்துக்கு இன்பமும், நரம்புக்கு முறுக்கும், இரத்தத்துக்குச் சிறிதளவு சூடும் தருவதற்கான சாதனமாக்கிக்கொள்ள விரும்புவார்களே யன்றி, வேறு வகையாகப் புகுத்துவது கடினம் என்று சொல்லத்தக்க கருத்துக்களை, கலைமூலம் புகுத்தவேண்டும் என்ற நோக்கத் துடனா கொள்வார்கள்! செச்சே! கவர்னர்களுக்கு என்ன”விதியா’ இப்படி அல்லற்பட! ஆனந்தமாக வாழ, அவர்கள் அரும்பாடு பட்டு, அரசர்களையும், அரசாண்ட ஆங்கிலேயரையும் விரட்டி அடித்து, அரண்மனைகளைக் கைப்பற்றிக்கொண்டு, அறுவடை கண்டு அகமகிழ்கிறார்கள். அந்தநிலையில் உள்ளவர்களிடம், மக்களின் உளநிலையை மாற்றக் கலை பயன்பட வேண்டும் என்று சொன்னால், நிச்சயமாகக் கோபிப்பர். கவர்னர்கள் உணரமறுப்பர். கவிதை தீட்டியோரும் அக்கருத்தினை வலியுறுத்திக்கூற விரும்பார். பள்ளியின், பொறுப் பாளர்களும், பாடலின் பொருள் அறிந்தல்ல அதைத் தேர்ந் தெடுத்தது - ஆனால், தம்பி, நம்கெல்லாம், அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, “என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!”வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!’ என்ற பாடலை, வந்தமர்ந்து கோலோச்சும் கவர்னர் எதிரே பாடிக் காட்டினரே, எவ்வளவு அருமை! எத்துணைத் திறமை!’’ என்று எண்ணிப் பூரித்திடச் செய்கிறது. வளமிருந்தும், எழில் நிரம்பியும், வரலாற்றுச் சுவடியில் நல்லிடம் பெற்றும் உள்ள நம் நாடு, வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு - என்ற உண்மையை மட்டும், நாட்டின் பிரச்சினைகளிலே நல்லார்வம் காட்டும் இளைஞர்கள் உணர்ந்து கொண்டு விடுவார்களானால். . . ! தேனென இனிக்கிறது. தம்பி, நாம் செய்ய வேண்டிய பணி, இதுநாள் வரை இதனை உணராதிருப்பவரெல்லாம், இந்த உண்மையை உணரச் செய்வதுதான்! ஓரளவுக்கு நமது முயிற்சி வெற்றிபெற்றுக் கொண்டு வருகிறது - இல்லையானால், ஏமாற்றமும் மனச்சோர்வும் நம்மை எல்லாம் மண்ணாக்கி விட்டிருக்குமே! தமது முயற்சி வெற்றி பெறுவது கண்டு மனம் புழுங்குவோர், நமது மூக்கினைச் சொரிந்துவிடவும், தமது நாக்கினைத் தீட்டிக் கொண்டு நம்மை நிந்திக்கவும் முற்படுகிறார்களல்லவா! தம்பி, நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அறிகுறிகள் அவை. நம் நாடு - திரு இடம் - இன்று "வடவருக்கு’ பல்வேறு துறைகளிலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது, என்ற பொது உண்மையை நாட்டவரில் மிகப்பெரும் அளவினர் உணர்ந்து கொண்டுவிட்டனர்; சிலர் திகைப்புற்றுக் கிடக்கின்றனர்; வேறு சிலர் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமலிருக்கும் வரையில் மனதுக்கு அமைதி இருக்கும் பிறகு புயலல்லவா புகும், நமக்கேன் வீண்வேலை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்; ஆர்வமுள்ளவர்களோ, அடிமைத்தனத்தின் பொருளைக் கண்டறிந்து விளக்கும் அரும்பணியில் ஈடுபட்டபடி உள்ளனர். ஒரு தம்பி, இதை எனக்கு அனுப்பி, வடநாட்டு ஆதிக்கம் எப்படி எப்படி வடிவமெடுத்திருக்கிறது பார், அண்ணா! என்று கூறுகிறார். "இந்திய உபகண்டத்தின் பெருமளவு உற்பத்தியில் ஓரளவு பெரிய பங்கு பெற்றிருப்பது காகிதத் தொழிலாகும். காகிதத் தொழிலின் முடிசூடா மன்னர்களாக இன்றைய நிலையில் காணப்படுவது - ஆளுகை நடத்துவது வடநாட்டுப் பெரு முதலாளிகளே. இந்தியாவின் வட பகுதியில் :- 1. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 2. டிடாகூர் பேப்பர் மில்ஸ் 3. பெங்கால் பேப்பர் மில்ஸ் 4. இந்தியா பல்ப் பேப்பர் மில்ஸ் 5. ஸ்ரீகோபால் பேப்பர் மில்ஸ் 6. பெல்லார்பூர் பேப்பர் மல்ஸ் 7. ஸ்டார் பேப்பர் மில்ஸ் 8. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ் 9. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ் 10. இந்தியா பேப்பர் மில்ஸ் 11. போபால் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 12. குஜராத் பேப்பர் மில்ஸ் 13. அரவிந்த் பேப்பர் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 14. டெக்கான் பேப்பர் மில்ஸ் 15. சிர்பூர் பேப்பர் மில்ஸ் 16. ஆந்திர பேப்பர் மில்ஸ் 17. மைசூர் பேப்பர் மில்ஸ் 18. காவேரி பேப்பர் மில்ஸ் 19. புனலூர் பேப்பர் மில்ஸ் இன்னும் பெயர் குறிக்க முடியாத வெகு சிறிய 4 அல்லது 5-காகித ஆலைகள் இந்திய நாட்டில் உள்ளன. ஆக மொத்தம் உள்ள 23 ஆலைகளில் 4-தென்னகத்தில் உள்ளன. ஒன்று தக்காணத்தில் உள்ளது. தென்னகத்தில் உள்ள ஆலைகளில் ஒன்று செயல்படுவது கிடையாது. மீதமுள்ள மூன்று ஆலைகளில் ஒன்று அரசாங்கத் துக்கு சேர்ந்தது - ஒன்று அரசாங்கத்தின் ஓரளவு மேற் பார்வையில் திறம்பட நடந்து வருகிறது - ஒன்று ஆங்கில முதலாளிகளுக்குச் சேர்ந்தது. தென்னக ஆலைகள் மூன்றும் - ஆந்திரத்தில் ஒன்றும் - கன்னடத்தில் ஒன்றும் - மலையாளம் (திருவாங்கூர் - கொச்சியில்) ஒன்றுமாகத் தமிழகத்தில் ஏதுமில்லாமல் வியாபித்தும் இருக்கின்றன. ஆலைகள்தான் இல்லையென்றாலும் கூட, ஆலைகளின் "ஏஜெண்டுகளாவது’’ தமிழர்களாக உண்டா என்றால் அதுவும் கிடையாது. கண்ணாடிக் காகிதம் தயார் செய்யும் ஒரே ஒரு ஆலை மட்டும் தமிழர்களின் சொத்தாக திருவாங்கூர் - கொச்சியில் செயல்பட்டு வருகிறது - அதுவும்கூடத் தமிழகத் தேவைக்கு சிறிது கூட "சப்ளை’’ செய்ய முடியாத நிலையில், வடநாட்டுக்கே பெருமளவு கட்டுப்பட்டுத் தொழில்பட வேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. எனவே அது தமிழகத்தைப் பொறுத்தவகையில் இருந்தும் இராததாகவேதான் உள்ளது. குறிப்பாக, "அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்’களின் பட்டியலை நோக்குவோம். 1. இந்திய நாட்டின் மிகப் பெரிய காகித ஆலைகளின் பெரியதான டிடாகூர் பேப்பர் மில்ஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், சௌத் இந்தியன் எக்ஸ்போர்ட் கம்பெனி லிமிடெட். 2. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்ý லாலா கோபி கிருஷ்ணா கோகுல்தாஸ். 3. பெங்கால் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: வில்சன் அண்டு கோ லிமிடெட், முன்னர் விற்பனையாளர்களாகச் சொல்லப்பட்டு வந்தனர். 4. இந்திய பல்ப் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பேரி அண்டு கோ லிமிடெட். 5. ஸ்ரீ கோபால் பேப்பர் மில்ஸ், பெல்லார்பூர் : ஜெய்தயாள் கபூர். 6. ஸ்டார் பேப்பர் மில்ஸ். 7. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளையர்ஸ் லிமிடெட், ஈஸ்ட் அண்டு வெஸ்ட் டிரேடிங் கம்பெனி, ஜெ. பி. அத்வானி அண்டு கோ லிமிடெட். 8. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்: லாலா கோபி கிருஷ்ண கோகுல்தாஸ். 9. இந்தியா பேப்பர் மில்ஸ். 10. போபால் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்: பரசுராம் ஜெதானந்த். 11. குஜரத் பேப்பர் மில்ஸ்; ஜெ. தடானி அண்டு கோ லிமிடெட். 12. அரவிந்த் ஸ்ட்ராபோர்டு: எ. எம். ஆறுமுகம். 13. டெக்கான் பேப்பர் மில்ஸ் லிமிடெட். 14. சிர்பூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளையர்ஸ் லிமிடெட். 15. ஆந்திரா பேப்பர் மில்ஸ் : டி.என். கங்கப்பா. 16. மைசூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட். 17. காவேரி பேப்பர் மில்ஸ் லிமிடெட். 18. புனலூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: W.A. பியர்ட்செல் அண்டு கோ லிமிடெட். கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் பட்டியலை நன்றாகக் கவனித்து வாருங்கள். ஏறக்குறைய 24/25 ஆலைகளின் பூரண விற்பனையாளர்களாக வடநாட்டார்களாகவும், ஒரு சிலவற்றிற்கு அன்னிய நாட்டினருமே விற்பனையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தென்னாட்டின் காகித வாணிபம் அனைத்தும் வடநாட்டினரின் கைக்குள் அடக்கப்பட்டு, தென்னாட்டுக் காகித வாணிபம் அனைத்தும் "எடுப்பார் கைப்பிள்ளை’யின் நிலையை ஒத்ததாக அமைக்கப்பட்டு விட்டது - பரிதாபத்துக் குரிய செய்தி. அவர்களின் கண்டு விரல் அசைந்தால், தென்னாட்டு காகித வாணிக மன்னர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது திடுக்கிடும் செய்தியே யானாலும், உண்மையானதே. மறுக்கமுடியாத, பரிதாபத்துக் குரியநிலை, அழிக்கப்பட வேண்டிய நிலை என்றைக்கு வருமோ, அன்றேதான் நம் வாழ்வு விடியும். அந்நாள் எந்நாளோ’’ வாழ்வு விடியவேண்டும்! அந்நாள் எந்நாளோ!! - என்று ஏக்கத்துடன், இந்தக் கோவைதம்பி குமுறுகிறார்-"காகிதம்’ மட்டும்தான் இங்கு கவனிக்கப்பட்டது - இதற்கேகூட, இந்த ஏக்கக் குரல் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே ஒரு எக்காளம் கேட்கிறது - வடக்கே, மற்றோர் புதிய காகித ஆலை துவக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. காகித ஆலைகள் சம்பந்தப்பட்ட மட்டும்தானா இது? இல்லை, இல்லை! எந்தத் தொழிலிலும் வடநாடுதான் ஆதிக்கம் செய்கிறது - சர்க்கார் தீட்டும் எந்தத் திட்டமும் மேலும் மேலும் வடநாட்டைக் கொழுக்கச் செய்வதாகத்தான் இருக்கிறது - சர்க்காரே வடநாடு தானே! இந்தியா ஒரே தேசம் என்ற கண்ணோட்டம் வேண்டும்; வடக்கு, தெற்கு என்று பிரிப்பது தவறு, தீது, அறிவீனம் என்று பேசுவதால் "மேதை’ப் பட்டம் கிடைத்துவிடும் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களின் தொகையும் குறைகிறது; அவர்களிடம் மக்களுக்கு அருவருப்பும் வளருகிறது! வடநாட்டு முதலாளி - தென்னாட்டு முதலாளி என்று ஒரு பாகுபாடு உண்டா! மதியிலிகாள்! மார்க்சின் சித்தாந்தத்தை அறியாத வகுப்புவாத வெறியர்காள்! ஏழை எங்கும் வதை படுகிறான். வடக்காக இருந்தால் என்ன, தெற்கு ஆனால் என்ன? வடக்கையும் வறுமை வாட்டுகிறது, இல்லாமை, போதாமை கொட்டுகிறது! - என்று பேசுகின்றனர் கம்யூனிஸ்டுகள்! காங்கிரஸ்காரர்களைவிடக் காரசாரமாகப் பேசி, வடநாட்டுக்குக் கங்காணி வேலை பார்க்கும் இந்தக் கம்யூனிஸ்டுகளின் வாயும் அடைபடும் விதமாக நிலைமை வளர்ந்து விட்டிருக்கிறது. வடநாடு - தென்னாடு என்று பேசுவது வர்க்கப் போராட்ட சித்தாந்தத்துக்கு உகந்ததல்ல என்று பேசிவந்தவர்கள், இன்று, நாடு மெள்ள மெள்ள, ஆனால் உறுதியுடன் போர்க்கோலம் கொள்வதையும், நாட்டை வடவருக்குக் காட்டிக் கொடுப்பவர் களைக் கயவர் என்று கண்டித்து அவர்தம் கருத்தினைக் கருக்கிடவும், பிடியினை நொருக்கிடவும் துடிதுடித்துக் கொண்டிருப்பதையும் கண்டு, கிலிகொண்டு, பொது மக்களின் சீற்றத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டு விடுவோம் என்ற அஞ்சி, இப்போது, தென்னாட்டுக்குத் தொழிற்சாலைகள் வேண்டும். சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை வேண்டும், நெய்வேலி நிலக்கரியை வெளியே கொண்டு வந்தாக வேண்டும், என்று “முழக்கம்’ கிளப்ப முன் வருகிறார்கள். உள்ள, இரும்புத் தொழிற்சாலைகள் போதாது, மேலும் ஒன்று வேண்டும், அது சிந்து நதி தீரத்திலோ, சீராளாவிலோ, அசாமிலோ, அமிர்த சரசிலோ, எங்கே அமைக்கிறீர்கள் என்பதுபற்றி எமக்குக்கவலை இல்லை; நாங்கள் அத்தகைய குறுகிய மனப் போக்கினரல்ல, எமது கண்ணோட்டம் பரந்து விரிந்து இருப்பது, எமக்கு வடக்கும் கிடையாது தெற்கும் கிடையாது, என்று பேசுவது மிக விரைவில், சீந்துவாரற்றுப் போகும் நிலையைத் தந்துவிடும் என்று கிலிகொண்டு, சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி என்று பேசுகிறார்கள் - எங்களைக்”காட்டிக்கொடுப்பவர்கள்’’ - “கயவர்கள்’’”கங்காணிகள்’’ என்று கண்டித்து எதிர்த் தொழித் திடக் கிளம்பிவிடாதீர்கள், நாங்களும், சேலம், நெய்வேலி இவை சார்பாக வாதாடுகிறோம் என்று கூறி, பல்லிளிக்கத் தொடங்கி விட்டனர்! ஜனாப் ஜின்னா, பாகிஸ்தான் பரணி பாடியபோது, காங்கிரஸ்காரர்களை விடக் கடுமையாகத் தாக்கினார்கள், கம்யூனிஸ்டுகள். நாடு துண்டாடப்பட விடமாட்டோம் என்று முழக்கமிட்டனர். பிரிவினை எதிர்ப்பு நாள் மாநாடு - மகஜர் - வெகுஜன எதிர்ப்பு - பொதுஜன அணிவகுப்பு - என்றெல்லாம் பலப்பல அதிர்வேட்டுகள் கிளம்பினர். “ஆனானப்பட்ட காந்தியாரும், அதி வீரதீரர் படேலும், அலகாபாத் பண்டிதரும், பஞ்சதந்திரம் தெரிந்த ஆச்சாரியாரும் கிளப்பிய எதிர்புகளே முறிய ஆரம்பித்தன - அவர்களே ஜின்னாவின்”முக வாய்க்கட்டை‘யைப் பிடித்துக் கொண்டு, கெஞ்சும் நிலை பிறந்தது- ஏதேது கப்பல் கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது என்று தெரிந்ததும், கம்யூனிஸ்டுகள் தங்கள் போக்கை அவசர அவசரமாக மாற்றிக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு தரத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டினர். எங்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சுகிற தீர்மானமாக இருந்தது. பத்திரிகை நிருபர்கள் ஜனாப் ஜின்னாவைக் கண்டு, கம்யூனிஸ்டு தீர்மானத்தை எடுத்துக் காட்டி, அவர் கருத்தைக் கேட்டனர். அவர் சொன்னார், “பாகிஸ்தான் திட்டத்துக்கு ஆதரவு திரண்டு வராதிருந்த கட்டத்தில், அதன் நியாயத்தை இந்த யோக்கியர்கள் மதித்து ஏற்றுக் கொண்டிருந்தால், நான் இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கு நன்றி செலுத்தி இருப்பேன்! என் திட்டத்தை விளக்கமறியாத முஸ்லீம்களும், வீம்புக்காரக் காங்கிரசாரும் எதிர்த்தபோது, கம்யூனிஸ்டுகள் அவர்களோடு சேர்ந்துகொண்டு என்மீது கல் வீசினர். இப்போது, பாகிஸ்தான் பெறப்போவது உறுதி என்ற கட்டம் பிறந்துவிட்டது. இப்போது இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவுத் தீர்மானம் போட்டு என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்! என்னுடைய நன்றியையா? பைத்தியக் காரர்கள்! அவர்களுக்கு இப்போதாவது தெளிவும் யூகமும் ஏற்பட்டதே என்று மகிழ்ச்சி அடைகிறேன் - அதுவே தவிர என் நன்றிக்கு அவர்கள் உரியவர்களல்ல’’ என்று கூறினார். சுருண்டு கீழே விழுந்த அந்தச் சூரர்கள் மறுபடியும் எழுந்து அவர் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு பலமான அடிவிழுந்தது. அதே போக்கிலேதான், திராவிட நாடு விஷயமாகவும், கம்யூனிஸ்டுகள் கையாண்டு வருகிறார்கள். வடக்காவது தெற்காவது என்று”பாரதம்’ பேசி வந்தவர்கள். இப்போது தெற்கிலேயும் தொழில் வளரவேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளனர். தாயகத்தைத் தருக்கர்கள் அடிமைப்படுகுழியில் தள்ளிய போது, செல்வத்தைச் சுரண்டியபோது, தொழில்களை நசுக்கிய போது, அறிவை அழித்தபோது, தன்மானத்தை ஒழித்த போது, அடக்குமுறையை அவிழ்த்து விட்டபோது, உன்னை ஈன்றெடுத்து இயல்புகளை அளித்து, இயற்கைச் செல்வத்தால் உன்னைஊட்டி வளர்த்த தாயகம் தலைவிரி கோலமாக்கப்பட்டு, மானமழியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, வடவரால் வதைக்கப் பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தாய்? ஏதுமறியாத ஏமாளியாக இருந்தாயா? என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக்கிடந்தாயா? அங்ஙனமாயின். நீ ஓர் அப்பாவி! வீரக்குலத்திலே தப்பிப் பிறந்த பதர்! விளக்கமறியாத வீணன்! தூத்தூ! திருவும் அறிவும், வீரமும் மாண்பும் பொங்கும் நாட்டிலேயா இத்தகைய ஏமாளி பிறந்திட வேண்டும்! உன் தாயகம், தன்னரசு இழந்ததை, தன் மொழி இழந்ததை, விழியைக் குளமாக்கிக் கொண்டதைக் கண்டறியும் அளவுக்குமா உனக்குக் கருத்துத் தெளிவு ஏற்படாமற் போய்விட்டது! ஏடா! மூடா!! உன்னைச் சுற்றிலும் அழகிய மலையும், எழிலோங்கும் ஆறுகளும், பச்சைப் பசேலென்ற வயலும், பாங்கான பல தருக்களும் இச்சையூட்த்தக்க எத்தனையோ வளமும் இருந்தும் வறுமை நம்மைவாட்டிடக் காரணமென்ன? உழைப்பு ஏன் வீணாக்கப் படுகிறது? உண்டு கொழுத்திடுபவன், உழைத்திடக் காணோமே, அது ஏன்? கொட்டிக் கொடுக்கும் வரிப்பணம் வேறு எங்கோ கொண்டு செல்லப்படுகிறதே, சரியா? பட்டியில் மாடுகள் போல, ஆளவந்தார்கள் உள்ளனரே, முறையா? என்றெல்லாம், எண்ணிப் பார்த்திடத் தெரியவில்லையா உனக்கு பேதையே! அறிவுக் களஞ்சியத்தின் அழகினைக் கெடுத்திடும் அவமானச் சின்னமே! வெட்கப்படு! வெட்கம் வேலாகிக் குத்தட்டும் உன்னை! தலைகுனிந்து நட-தையலரும் தன்னரசுக்கான போர்புரிய முன்வந்தபோது, "அசை’ போட்டுக் கொண்டு கிடந்தோமே என்றெண்ணி, முக்காடிட்டுக் கொண்டு நட! விடுதலைப் போரிலே வீழ்ந்துபட்ட வீரர், நடந்துசென்ற பாதையில் காணக்கிடக்கும் குருதிக் கரையிலே, கண்ணீர் சொரிந்து வேண்டிக்கொள்! ஓர் நாள், இப்படி "ஏமாளிகள்’ கேட்கப்படுவர், திராவிட விடுதலை கண்ட பிறகு, விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திய மாவீரர்களால்! திரு இடத்தின் இன்றைய தாழ்நிலையை அறியுமளவுக்குத் தெளிவு அற்றுக் கிடக்கும் ஏமாளிகள் கண்டிக்கப்படுவீர், ஆனால் அனுதாபத்தோடு! பரிதாபம்! அவன் கருத்துக் குருடன், ஆகவேதான் தந்தையர் நாட்டினை மீட்டிடும் தன்மானப் போரில் ஈடுபடாதிருந்தான், என்று எண்ணுவர். ஆனால் அறிவில் தெளிவு இருந்தும், உண்மைக்காகப்பரிந்து பேசவும், உரிமைக்காகப் போரிடவும் முன் வராததுடன், எத்தகைய ஏசல், எதிர்ப்பு, இடர், இன்னல், பழி பாதகம், எதுவரினும் அஞ்சாது, அறப்போரில் ஈடுபட்டு, அன்னையின் கரத்தினில் விலங்குகளா! என்று ஆர்த்தெழுவோரை, எதிர்த்திடும் அற்பர்கள், காட்டிக் கொடுக்கும் கயவர்கள், எதிரிகளுடன் கூடிக்கொண்டு கொலுப் பொம்மைகளாகும் துரோகிகள் இருக்கிறார்களே, இவர்களை, விடுதலைபெற்ற திராவிடம், சும்மாவிடாது! பெற்ற தாயை மானமழித்திடத் துணிந்தவனுக்குத் தாள்பிடித்துக் கிடந்தவனே, பிறந்த கொன்னாட்டை மாற்றான் சீரழிக்கும்போது கண்டு, கரம் அசைக்காமல் அவனுக்குக் கட்டியம்கூறிக் கிடந்த கடையனே! உனக்கென்று ஒரு மொழியும், மொழிவழி ஓர் சீரிய வாழ்வும் அளித்து, உனக்காகத் தென்றலையும் தேனையும், தினையையும் நெல்லையும், தீஞ்சுவைக் கனிகளையும் சுவைமிகு சுனைகளையும் கானாறு களையும் களிறுகளையும், ஓங்கி வளர்ந்த வரையினையும் சந்தனத் தருக்களையும், கடல் முத்தையும், கட்டித் தங்கத்தையும், மலர்க்கொல்லைகளையும், மான் கூட்டங்களையும், வேட்டைக்கு வேங்கையையும் வீட்டுக்கு ஆவினங்களையும், எங்கும் பச்சையையும், உன் இச்சையைப் பூர்த்தி செய்ய எல்லா வளங்களையும் தந்த தாயகத்தை, மாற்றான் வெள்ளாட்டியாக்கி, கூந்தலைக் கலைத்து, குங்குமத்தைக்குலைத்து, ஆடையைக் குறைத்துக் காலால் உதைத்து, ஏடி! வெள்ளாட்டி! தொட்டி ழுக்கும் வேளையிலே, வெட்டுவேன் என்று பதட்டம் பேசுகிறாய், என் சுட்டு விரல் அசைத்தால், உன்னைச் சுக்கு நூறாக்க என் சூறாவளிப் படை கிளம்பும், உனக்கேன் ஒரு தனிக்கொற்றம், வீழ்ந்துகிட என் கொட்டகையில், பிழைத்துப் போ, நான் தரும் பிச்சையை உண்டு, பேய்க்கோலம் காட்டுவாயேல், வாட்டிடுவேன் சூட்டுக்கோலால்! - என்று கொக்கரித்தபோது, மாமிசப் பிண்டமே! உன் இரத்தம் கொதிக்கவில்லையா? இதயம் துடிக்க வில்லையா? உடல் பதறவில்லையா? கண்களை இறுக மூடிக் கொண்டாயா! எப்படி உன் மனம் இடம் தந்தது, தாயகத்தைக் காலின் கீழ் போட்டு மிதித்தவனுக்குக் கைகட்டி வாய்பொத்தி நிற்க! சிறு குத்தீட்டி கிடைக்கவில்லையா உனக்கு? ஒரு முழக் கயிறுக்கும் பஞ்சமா? ஆழ்கிணறோ, மலை உச்சியோ, கிடைக்காமலா போய்விட்டது? உயிரையும் வைத்துக்கொண்டு உன் அன்னைக்குப்பங்கம் விளைவித்தவனை எதிர்க்கும் வீரப்போரில் ஈடுபடாமலிருக்க உன்னால் எப்படி முடிந்தது? கோழையானால் கூடப் பரவாயில்லை, மன்னித்து விடலாம்! கொடியவனே! நீ, மாற்றான் கோட்டைக்குக் காவலாக அல்லவா நின்றிருந்தாய்? உன் உடன் பிறந்தானின் உடலைக் கழுகும் காக்கையும் கொத்தித் தின்ற வேளையில், கூடப் பிறந்த கேடே! நீ, மாற்றான் தந்த மதுவையும் மாமிசத்தையும் உண்டு கிடந்தாயே! இயற்கையாகச் சுரக்க வேண்டிய நாட்டுப் பற்று? எழாத உள்ளத்தைக் கொண்டு, ஒரு உடலம் நிற்பதா-எம் கண்முன் நடமாடுவதா? - எமது தாயகம் இத்தகைய இழி மகனை, இனத்துரோகியைச் சுமந்து கொள்வதா, விடுதலைப் போரிலே வீரர் கொட்டிய குருதியால் புனிதமாக்கப்பட்டுள்ள இந்த மண்ணில், மாபாவி! உன் நிழல் படுவதும், கேவலம், ஓடிப்போ! மனித உருவம் தாங்கி நிற்கும் மிருகமே, எமது கோபம், வேலாக, வாளாக, தூக்குக் கயிறாக, துப்பாக்கிக் குண்டாக மாறுமுன், ஓடிப்போ! கிழங்கு தோண்டித் தின்று பிழைத்துக்கொள்! கிழப்புலி கொன்று தின்ற மானின், மிச்சம் மீதி கிடைத்திடின்,தின்று பசி போக்கிகொள்! வீரக்கோட்டத்தைக் களங்கப்படுத்தாதே! அகமும் புறமும்கண்டு அகமகிழ்ந்த தமிழர் திருநாட்டில், வாயும் வயிறும் பெரிது என்றெண்ணிக்கிடந்த வஞ்சகனே, உனக்கு இடம் இல்லை! ஓடிவிடு, ஓடிவிடு, காதலனைக் களத்திலே இழந்தகாரிகையரின் கண்ணீர் உன்னைச் சுட்டெரித்து விடும், பல்லிழந்த பாட்டியின் சொல்லம்பு கூட உன்னைச் சல்லடைக் கண்ணாக்கிவிடும். சிறார்காணின், அவர் தம் விழி சிவந்திடும். உன்னைப்பற்றி மேலும் பேசிடின், எம் வாயும் நாறிடும். நாசகாலனே, நாட்டைக் காட்டிக் கொடுத்தவனே, ஓடு, ஓடு, உனக்கு ஏற்ற ஓர் உதவாக்கரை இடம் தேடி, ஓடு,’’ - என்றெல்லாம் கண்டிப்பர், கடமையை நிறைவேற்றி வெற்றி கண்டோர் - எதிர்கால இன்பத் திராவிடத்தில். மெல்லிய கோடுகள் தெரிகின்றன, கம்யூனிஸ்டுகளுக்கு - ஆகவேதான், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தென்னாட்டுக்குத் தொழில் சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி, - என்று பேசிப் பார்க்கிறார்கள். இப்போதும் இவர்களும், காங்கிரசிலே உள்ளவர்களில் சிலரும், தென்னாட்டுக்குத் தொழில் வளம் செய்து தர வேண்டும், திட்டங்கள் வகுப்பதில் ஓர வஞ்சனை காட்டுவது கூடாது. என்றுதான் டில்லியிடம் கேட்கிறார்கள், விண்ணப் பித்துக் கொள்கிறார்களே தவிர, ஏன் இந்தக் கேவல நிலை, தொட்டண்ணன் தோட்டத்திலே வெட்டண்ணன் மாடு மேய்வானேன், அதைக் கொஞ்சம் பிடித்துக்கட்டு என்று புட்டண்ணன் கெஞ்சிக் கிடப்பானேன், என்று எண்ண மறுக்கிறார்கள். வாழ வழி இருக்க, வளம் யாவும் குறைவின்றி இருக்க, வாழும் வழியை அமைத்துக் கொள்ளும் அறிவாற்றல் இங்கிருக்க, வாழ்ந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக, வடவரிடம் நமது பிடரியைக் கொடுத்து விட்டு, பிறகு, "மெள்ள, மெள்ள’ வலிக்கிறது, வலிக்கிறது, என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? இங்கு இல்லாத எதையும் நமக்காகப் பெற்றுத் தரும்படி, வடவரை நாம் கேட்டோ மில்லை - இங்கு புகுந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, எமது செல்வம் எமக்குப் பயன்படாமற் செய்யும் கொடுமையைத் தானே எதிர்க்கிறோம். மாதாவுக்கு மத்தாப்பூ வண்ணச் சேலையா கேட்கிறோம். அன்னையின் ஆடையை, அக்ரமக்காரனே, பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்ரமம் என்றல்லவா கேட்கிறோம், உரிமையைக் கேட்கிறோம் உபகாரம் அல்ல. இழந்ததைக் கேட்கிறோம், இரவல்பொருள் அல்ல; எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம் பிச்சை அல்ல; இந்த மூலக் கருத்தை உணரா முன்னம், வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். தம்பி! இந்த மூலக் கருத்தைத்தான் உன் துணைகொண்டு, நமது கழகம் நாட்டிலே பரப்பிக்கொண்டு வருகிறது. பளிச்செனத் தெரியா விட்டாலும், விடிவெள்ளியின் வரவுக்கான வண்ணம், மெல்லிய அளவிலே தெரியத்தான் செய்கிறது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வகுப்புவாதியா என்று கேட்டுப்பார் காங்கிரசாரை? பகைப்புயலால், பதவி ஆட்டம் கொடுத்தபோது, அதைக் காத்திட முடியாமற் போய்விட்ட பரிதாபத்துக்குரிய பெரியவர் என்று வேண்டுமானால் கூறுவார்கள் - அவரை வகுப்பு வாதி, பிளவு மனப்பான்மையினர் என்று காங்கிரசாரே கூற மாட்டார்கள். ரொம்ப பொறுமைசாகூட அவர். அதுமட்டுமல்ல, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கருதுபவர். இல்லையானால், தம்பி, நாடாண்ட அந்த நல்லவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக மக்கள் தொண்டு புரிந்து உரம் பெற்றவர், இப்போது, ஒரு பள்ளிக்கூடம், குருகுலம் நடத்தினால் போதும், ஏதோ கண்ணைப் பறித்த கடவுள் இந்தக் கோலாவது கொடுத்தாரே என்ற முறையில், முதலமைச்சர் பதவி போனால் போகட்டும், ஏதோ குருகுல அதிபர் எனும் நிலையாவது கிடைக்கட்டும், என்று திருப்தி அடைவாரா? அவ்வளவு நல்லவராலேயே, வடநாடு நடந்து கொள்ளும் போக்கும், தென்னாடு புறக்கணிக்கப்படும் தன்மையும் கண்டு, சகித்துக் கொள்ள முடியவில்லை. நம் ராஜ்யத்தில் எவ்வளவு வரிபோட முடியுமோ அந்த அளவுக்குப் போட்டாகிவிட்டது. மத்திய சர்க்காரிடமிருந்து கிடைப்பது அதிகமாக இல்லை. மத்திய சர்க்காரிடமிருந்து உதவி வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்பது தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் குறைவு, தலைவிதி என்று நினைத்துக்கொண்டு, நாம் சும்மா இருந்து விடுகிறோம். மத்திய சர்க்காரிடம் இதை வற்புறுத்த வேண்டும். கட்சிச் சார்பில்லாமல் போரிடவேண்டும் - அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். ஆகையினாலே தமிழ் நாட்டு மக்கள் அதிகக் கூச்சல் போடவேண்டும். அப்போது தான் ஏதாவது கிடைக்கும். நமது மந்திரிகள் மத்திய சர்க்காரிடம் சண்டை பிடித்து வெற்றி காண வேண்டும். ஆகஸ்ட்டு 23-இல், மேல் சபையில் பேசுகிறார் இதுபோல! அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்கிறார்! அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் என்றோர் பழமொழி தெரியுமல்லவா தம்பி, அதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறார் சுப்பிரமணியனார். "ஐந்து கண்ணன் பிடித்துக் கொள்வான்’’ என்று மிரட்டுவது போல, ஐந்தாண்டுத் திட்டம் என்று டில்கூறிவிடுகிறது! இங்கே குழந்தை அழுகிறது - குடல் வற்றிப் போகிறது, - அல்லது மிரட்டி அடக்கப்படுகிறது, அங்கே? வடக்கே? வடக்காவது, தெற்காவது, எல்லா இடத்துக்கும் வறுமை பொதுவாகத்தான் இருக்கிறது என்று பொது உடைமை பேசுகிறார்கல்லவா, அவர்களின் முகத்தில் அறைவதுபோல, சர்க்கார் இலாகாவின் புள்ளி விவரமே பேசுகிறது. சராசரி வருமானம் தலைக்கு, வடக்கே 600 - தெற்கே 300. புள்ளி விவரங்கள்தான் பொது உடைமையருக்குப் பூஜா மாடப் பொருளாம். இதற்கு என்ன சொல்கிறார்கள், 600 வடக்கே - 300 தெற்கே? வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்லும்போது, எல்லாத் திக்குகளுக்கும் தம்மை காவலராக்கிக் கொண்டு விட்டதாக மனப்பால் குடிக்கும், "மார்க்சால் மன்றம் ஏறியோர்’ பேசுகிறார்கள், கேலியுடன், வடக்காவது, தெற்காவது என்று. 600-300- இதற்கு என்ன விளக்கமளிக்கிறார்கள், 600 அங்கே. 300 இங்கே! என்றால் என்ன பொருள்? மூன்று வேளை உணவு அங்கே; பகல் பட்டினி அல்லது இராப் பட்டினி, இங்கே. மானம் காப்பாற்றப்படும் அளவு ஆடை அங்கே, இங்கே அரை ஆடை. வடக்கு வாழ்கிறது, வளருகிறது - தெற்கு தேய்கிறது. தேயும் தெற்கில் இந்த "மேதைகள்’ வேறு மேய்கிறார்கள். பொதுப்படையான புள்ளி விவரம் போதாது என்று, போக்கை மாற்றிக்கொள்வதற்கு ஒரு மேலிடம் பார்த்துக் கிடக்கும் அந்த மேதைகள், கூறுவரேல், தம்பி, இதோ, விளக்கமான மற்றோர் புள்ளி விவரம், இதுவும் சர்க்கார் தருவதுதான், எடுத்துக்காட்டு, விவசாயிக்கு சென்னையில் நாளொன்றுக்குக் கிடைக்கும் ஊதியம், சராசரி, ஆடவருக்கு 1-4-0, பெண்களுக்கு 0-12-0. பெப்சுவில் ஆடவருக்கு 2-8-0; பெண்ணுக்கு 1-8-0. மேற்கு வங்கத்தில் ஆடவருக்கு 1-12-0; பெண்டிருக்கு 1-4-0. கொத்துவேலை கொல்லன்வேலை போன்ற வகைகளில் ஈடுபட்டவர்களுக்கு, இங்கு, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரையில் கிடைக்கிறது. பெப்சுவில் நாலு முதல் ஐந்து வரையில் கிடைக்கிறது. வடக்கு ஆதிக்கம் செலுத்துவதால் வந்துற்ற அவதியை விளக்க, இந்தப் புள்ளிவிவரம் போதாதா? போதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவருக்கு, நாட்டுப் பற்றினை இழந்து சோற்றுத் துருத்தியாவது கேவலம் என்ற உணர்ச்சிகொண்ட அன்பர்களுக்கு. எம்மிடம் என்ன இருக்கிறது தெரியுமா, சக்கரம் - சம்மட்டி என்று "விருதுகளை’க் காட்டியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணிக் கிடப்பவர்களுக்கு, புள்ளி விவரம் மட்டும்போதாது, தம்பி, பன்னிப் பன்னிச் சொல்லியாக வேண்டும், பள்ளிச் சிறுமிகள் பாடிக் காட்டினார்களாமே . கவர்னருக்கு அதுபோலப் பாடியும் காட்டவேண்டாம், நாடகம் கூடத்தான், எல்லாம் எதற்கு? எங்கள் நாடு எழில் பொங்கும் நாடு இனி எவர்க்கும் அடிமை அல்ல எமக்கது சொந்த நாடு! திராவிட நாடு! திராவிடர்க்கே! என்ற எழுச்சிப் பண்பாடி, தாயகத்தின் தளைகளைப் போக்கி, தன்னரசு காணத்தான். தம்பி, இத்தகைய உன்னதமான பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது பற்றி எண்ணும் போது புத் தார்வம் பிறக்கிறதல்லவா? அன்புள்ள அண்ணாதுரை 18-9-1955 கண்ணீரும் பன்னீரும் நேருவின் வருகைச் செலவு - வரவேற்பும் உபசாரமும் தஞ்சை-திருச்சி-புயல் கொடுமை தம்பி! கோட்டைமீது, கொடி மரத்துக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பேசப்போகிறார் நேரு பண்டிதர், சென்னையில். காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்திலே உள்ள மேடுபள்ளங்களைச் சமனாக்கி பாதையைச் செப்பனிடுகிறார்கள், அங்கு பண்டிதர் பேசப்போகிறார். பண்டிதர் பவனிவர இருக்கிற "ராஜபாட்டை’யைப் புதுப்பிக்கிறார்கள் - பல ஆயிரம் செலவு!! பண்டிதர் செல்ல இருக்கும் திருச்சி, குடந்தை, மாயவரம், காரைக்கால், புதுவை, வேலூர் போன்ற ஒவ்வோரிடத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகள், எழிலூட்ட, இன்பம் காட்ட எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. கோகிலவாணி குரலும் குழலும் இழைந்து, ஊனும் உயிரும் உருகத்தக்க வகையிலே இசை அளிக்க, என்னென்ன பாடல்களை அளிக்கலாம், "எனது உள்ளமே, நிறைந்த தின்ப வெள்ளமே!’’ "கண்டதுண்டோ கண்ணன்போல்!’’ "மாலைப் பொழுதினிலே. . .’’ "அழைத்துவா, போடி!’’ இப்படிப் பல உண்டே, எதைப்பாடுவது, இந்தியாவின் முடிசூடா மன்னன் அவையில் என்று எண்ணி எண்ணி, இராத்தூக்கமிழந்து, அந்நாளின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும். அமைச்சர்கள் புதிய கதர்ச்சட்டைகள் தைத்துக் கொள்கிறார்ளாம்! போலீசும் பட்டாளமும், பவனி, பரணி, இரண்டுக்குமே தக்க ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் காரியத்திலே, மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காஞ்சீபுரத்தில் மட்டும் பண்டிதரின் பவனி பாங்கான முறையில் அமையவேண்டும் என்பதற்காக ஏறத்தாழ முப்பதினாயிரம் ரூபாய் செலவிடத் திட்டம் என்கிறார்கள். ஒரு தலைவரின் வருகைக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா, இத்துணைப் பெருஞ் செலவா, இருண்ட தெருக்களும், நாற்ற மடிக்கும் சேரிகளும் இருக்க, அவைகளைச் செப்பனிட்டு ஒளிதர முன்வராத ஆட்சியாளர்கள், பண்டிதரின் பவனிக்காகப் பாதைகளைச் செப்பனிடுவதற்கும் எழிலளிப்பதற்கும் இவ்வளவு பெரும்செலவு செய்யத்தான் வேண்டுமா? இல்லாமையும், போதாமையும் நெளியும் நாட்டிலேயா இப்படி? பாலின்றி அழும் பச்சிளங் குழந்தையைக் கதறக் கதறத் தொட்டிலில் கிடத்திவிட்டு, பன்னீரில் குளித்திடப் பளிங்காலான திருக்குளம் செல்லும் தாய், உண்டா? - என்றெல்லாம் கேட்டுப் பண்டிதருக்கு அளிக்கப்படும் ராஜோபசாரத்தின் பொருட்டுப் பெருந்தொகை செலவிடப்படுவதை நான் கண்டிக்கவில்லை! பண்டிதருக்கு வைபவம் நடத்தும் சாக்கிலாவது, இதுவரை ஏறெடுத்துப் பாராமலிருந்த பாதைகளைச் செப்பனிடவும் பாங்கு அளிக்கவும் முன்வந்தனரே, என்று மகிழவும் செய்கிறேன். "ஏன் இவ்வளவு செலவு?’ என்று கேட்டால், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கடும் கோபம் காட்டி, இங்குள்ள பாதைகளைச் செப்பனிட்டோம், பண்டிதரின் பெட்டிக்கா பணம் போய்ச் சேருகிறது, நமது நகர்களின் சீருக்குத்தானே செலவிடப்படுகிறது, அறிவிலிகாள்! இதனையுமா அறிந்தீர் இல்லை, என்ன மதியற்ற தன்மை! என்று கூறிக் கண்டிப்பர். வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தின்போது, கவர்னர், வைசிராய், ஆகியோர், இதுபோல "விஜயம்’ செய்வர். அப்போதெல்லாம், இதுபோலத்தான் பெரும் பணம் செலவிட்டு, பூசி மெழுகியும் புதுக் கோலம் காட்டியும், பாதைகள் அமைத்தும், பாங்கினைச் சமைத்தும் காட்டுவர். திருவிழாக்கோலம் எழும்! அந்தச் சமயத்திலெல்லாம், கிளர்ச்சிக்காரர்களாக இருந்த காங்கிரஸ்காரர்கள். ஆடம்பரத்தைக் கண்டீரா? அக்கிரமத்தைக் கேளீரோ? கவர்னர் வருகிறானாம் பணம் பாழாகிறது! பரங்கி வருகிறான். பாதையைச் செப்பனிடுகிறார்கள். ஒரு தனி மனிதன் விஜயத்துக்குப் பணம் தண்ணீர் பட்ட பாடாகிறது, தர்மமா! கேட்பார் இல்லையா? நம்மைப்போன்ற மனிதன், தேவனல்ல! அவன் வருகிறான் என்றதும், ஏன் இந்தப் பரபரப்பு, எதற்காகப் படாடோபம்! பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் நாட்டிலே, பவனியாம், பவனி! வெட்கமில்லையா! வேதனையா யில்லையா! விசேஷ ரயிலாம்! பிரத்யேகப் பாதையாம்! அலங்கார மேடையாம்! போலீஸ் அணிவகுப்பாம்! எவ்வளவு ஆடம்பரம் பார்த்தீர்களா! ஏழையின் பணம் பாழாகும் விதத்தைக் கண்டீர்களா! ஏழை எளியவர் கொட்டுவது கண்ணீர், ஏய்த்துப் பிழைப்பவன் குளித்திடப் பன்னீர்! ஏனென்று கேட்டிட வீரர் இல்லையா, விவேகி இல்லையா, தீரர் இல்லையா, ஆண் மகன் இல்லையா? என்றெல்லாம் சிலர் முழக்கமிட்டனர், முணுமுணுத்தனர் பலர், பத்திபத்தியாக எழுதித் தள்ளினர் சிலர் பாமர மக்கள் பதைத்தனர், பதறினர், பணம் பாழாகிறது! பணம் பாழாகிறது!! என்று கொதித்தெழுந்து கூறினர். கவர்னர், வைசிராய் ஆகியோரின் "விஜய’த்தைச் சாக்காகக் கொண்டு, நமது நகரங்களைத்தானே அழகுபடுத்துகிறார்கள், நமது பாதைகளைத்தானே செப்பனிடுகிறார்கள், இது நமக்க மறைமுகமாகக் கிடைக்கும் நன்மைதானே, என்று அப்போது வாதாட, தேசியவாதிகளின் மனம் இடம் தரவில்லை! இப்போது நேரு பண்டிதரின் பவனி, நித்திய நிகழ்ச்சியாக இருக்கிறது. பிரத்யேக விமானம்! ஸ்பெஷல் இரயில்! ஸ்பெஷல் கார்! மக்களைக் காணமட்டுமல்ல, மலை உச்சி ஏறி மகிழ, மலர்த் தோட்டம் கண்டு இன்புற, அலங்காரப் படகு மூலம் ஆறுகளைகடந்து ஆனந்தம்கொள்ள, கிராமிய நடனம்கண்டு களிப்படைய, குகைச் சித்திரங்களைக் கண்டு வியந்திட, கோயிற் சிற்பங்களைக் கண்டு ஆச்சரியப்பட, கொலு மண்டபங்களைக் காண, கோட்டைகளின் மீதேறிக் காட்சி தர, கோலாகல வரவேற்பு வைபவங்களில் கலந்துகொள்ள - இன்னோரன்னவற்றுக் கெல்லாம், நேரு பண்டிதருக்கு நேரம் கிடைக்கிறது. இவர் இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்திடும் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்துதர ஏற்படும் செலவு பெரும் பாரமாகிறது - எனினும், எற்றுக்கு இந்த ஆடம்பர ஆரவாரம், பயனற்ற படாடோபம், பாமரரை வஞ்சிக்கும் பகட்டு, பணம் பாழாகும் விழாக்கள், என்று எண்ண மறுக்கிறார்கள்; துணிந்து எவரேனும் கேட்டாலோ, ஏடா! மூடா! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? எங்கள் நேருவுக்கு இதுவும் செய்வோம், இதற்கு மேலும் செய்வோம்! என்று கூறி மிரட்டுகிறார்கள். நேருவுக்காக நடத்தப்படும் பவனிகள், வைபவங்கள், வரவேற்புகள், கொண்டாட்டங்கள், கோலாகலங்கள் போன்றவைகள், வெள்ளைக்காரன் காலம் தொட்டு இருந்து வருகிற, ஏகாதிபத்திய முறையாகும்! அன்று ஏகாதிபத்திய முறையினைக் கண்டித்தவர்கள், இன்று அதே முறையைக் கையாண்டு, களிப்பும் பெருமையும் அடைகிறார்கள். அன்றும் இன்றும், ஏழை கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கிறான்! தம்பி, ஒரு கதை உண்டு. பரம ஏழையாக இருந்த ஒருவன், தேவாலயத்தின் அருகே பாதையில் நடந்து, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானாம்! கந்தல் ஆடை, கையில் திருஓடு, கண்ணில் காமாலை, கைகால்களில் புண்-இந்தக் கோலத்தில். ஆண்டவனின் அடிபணிந்து அர்ச்சித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அருளைப் பெறுவதற்காகப் பிரபுக்கள் பட்டுடை அணிந்து பளபளக்கும் அணிபணிபூண்டு, பொன்னவிர் மேனியரோடு வண்டி வாகனங்களில் செல்வர்; இதைக் கண்ட பிச்சைக்காரன், மனம் நொந்து, "ஆண்டவனே! ஏதோ என்னை இல்லாதவ னாகவும், இவர்களைச் சீமான்களாகவும் படைத்துவிட்டாய். அதுவே அக்ரமம். அது போதாதென்று, இருவருக்கும் பொதுவாக ஒரு பாதையையும் அமைத்திருக்கிறாயே. ஏழைகள் செல்வதற்கு ஒரு பாதை, சீமான்கள் பவனிக்காக மற்றோர் பாதையாவது அமைத்திருக்கக் கூடாதா? என் கண்ணிலே, இந்தப் பளபளப்பும் மினு மினுப்பும், தகத்தகாயமும் தெரியாமல் இருந்தாலாவது, வேதனை குறையுமே!’’ என்று சொல்லிக் கொண்டானாம். எப்படியோ, அவன் ஒரு பெரும் சீமானாகிவிட்டான் - பட்டுடை! பரிமளகந்தம்! பல்லக்கு! பாவையர்! எல்லாம் கிடைத்துவிட்ட நிலை! பல்லக்கில் செல்கிறான். பரம ஏழையாக இருந்தவன், “பரம்பொருளின்’ அருள் பெற! பாதையிலே, பஞ்சை பராரி, ஏழை, நடைப்பிணம், கண்டான்! கண்களை இறுக மூடிக்கொண்டு, கலக்கத்துடன்,”கடவுளே! இதென்ன கொடுமை? ஏன் இப்படிப்பட்ட "கோர’மான காட்சி என் கண்ணில் படும்படி செய்கிறாய்! நான் என்ன குற்றம் இழைத்தேன்! இறைவா! இந்த ஜென்மங்கள் எமது கண்களிலே தெரிந்து இதயத்தைத் தாக்காதிருக்கும் வண்ணம், இதுகளுக்கென்று ஒரு தனிப் பாதையும், உன் அருளைப் பெற்ற எமக்கென்று ஒரு தனிப் பாதையும், அமைத்துத்தரக் கூடாதா!’’ என்று இறைஞ்சினானாம். பஞ்சை பிரபுவானதும், பஞ்சைகளைப் பார்ப்பதும் வேதனை என்று எண்ணுகிறான் - அதற்காக ஆண்டவனிடம் கோபித்துக்கொள்கிறான்! பஞ்சை பிரவுவானதும் அவன் மனதிலே எத்தகைய நஞ்சு நெளிகிறது பார், தம்பி! காங்கிரஸ்காரர்கள், தேசியத் திருக்கோயிலிலே பூஜை நடாத்திய காலம் தீர்ந்துவிட்டது; இப்போது அவர்கள் பவனி வரும் பிரபுக்களாகி விட்டனர் - நெஞ்சமெலாம் நஞ்சாகி விட்டது - என் செய்வது? வஞ்சியர் பாடி ஆடி மகிழ்வூட்ட, சீமான்கள் பூச் சக்கரக் குடை பிடிக்க, ஆளவந்தார்கள் சாமரசம் வீச, வைபவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன! உற்சவம் நடத்துகிறார்கள். உபதேசம் கிடைக்கிறது!! ஊர் மக்களின் வறுமையும் வேதனையும், எப்போதும்போலத்தான் இருந்து வருகிறது!! தஞ்சை திருச்சி மாவட்டங்களிலே, தம்பி, பெரும் புயலடித்து படுநாசம், விளைந்ததே, நினைவிலிருக்கிறதா? நெற்களஞ்சியம், பொய்யாத பொன்னியால் பாலூட்டப்பட்டு வளரும் தஞ்சை. அங்கு ஊரெலாம் வெள்ளக்காடாகி, பெருமரங்கள் சாய்ந்து, பேய்க்காற்றால் ஏழைகள் இருப்பிடங்க ளெல்லாம், பிய்த்தெறியப்பட்டு, பெருஞ்சேதம் விளைந்த சமயம். அந்த நேரத்தில், பண்டிதர் வந்தார்! "வாரீர் தலைவரே! எமக்கு வந்துற்ற அவதியைக் காணீர் பண்டிதரே! பூந்தோட்டம் அழிந்து கிடக்கும் கொடுமையைக் காணீர்! பொன்னியின் செல்வர்கள் புலம்பிக் கிடக்கும் கோரத்தைப் பாரீர்! கண்ணீர் துடைத்திடுவீர்! கஷ்டத்தைப் போக்கிடுவீர்! காவலரே! வாரீர், வாரீர்! வேதனை குறையும், நம்பிக்கை மலரும். ஒரு நல்ல வார்த்தை, சிறிதளவு ஆறுதல்மொழி கூறவாரீர்! புயலே! கடலே! பேய்க்காற்றே! பெருவெள்ளமே! எம்மை அழித்திடக் கிளம்பினீர்! அழிவையும் ஏவினீர்! எனினும், அஞ்சற்க! அஞ்சற்க! உமக்கு வந்துற்ற இன்னலைத் துடைத்திடுவேன், இடுக்கண் வருங்கால் நகுக! அழிவை ஒழித்திடுவேன், அல்லலைத் துடைத்திடுவேன்! என்று எமக்கு ஆறுதலளித்திட எமது அருமைத் தலைவர், நேரு பண்டிதர் வருகிறார், என்று கூறி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, நம்பிக்கை பெறுவோம்! வருக பண்டிதரே! வருக! எம்மை வாழ்விக்க வந்த பெம்மானே வருக, ஈடில்லாத் தலைவரே! இணையில்லா வீரரே! வருக! வருக!’ என்று அழைத்தனர். நேரு பண்டிதர் வந்தார் - தென்னகத்துக்கு! தஞ்சை தலைவிரிகோலமாகக் கிடக்கிறது. பண்டிதரோ நேரே, சிந்தை அணி ஒவ்வொன்றும் சிலிர்த்திடும் கவர்ச்சியூட்டும் கேரளம் சென்றார். குன்றின்மீதேறி, பளிங்குமாளிகையில் அமர்ந்து, அங்குள்ள அடவியில், கரியும் கரியும் களியாட்டம் நடாத்திடும் காட்சியை, வேங்கை சீறி வேழத்தைத் தாக்குவதை, புலிக்கு அஞ்சிப், புள்ளிமான்கள் சிட்டாகப் பறப்பதை, காட்டெருமைக் கூட்டம் பெருமரங்களைச் சாய்ப்பதை, வர்ணஜாலமிக்க விந்தைப் பறவைகள் விதவிதமான ஒலி கிளப்பி மகிழ்வதை, இந்த "ஆரண்ய’’ அழகினைக் கண்டு அக மகிழ்ந்திருந்தார்! திருவிதாங்கூர் மன்னரின் பிரத்யேக விருந்தினர்! கேரள நாடு! மன்னரின் விருந்தினர்! குன்றின்மீது மாளிகை! இன்பத்தேன் பாயாதிருக்குமோ! இதைக் காண வந்த நேருவை, ஐயோ! அப்பா! அம்மா! ஐயகோ! என்று தஞ்சை அழைத்தால், வருவாரா? வரவில்லை! புயல் தஞ்சைப் பூங்காவை அழித்த போது ஏற்பட்ட வேதனையைவிட அதிகமாகத்தான் வேதனை, நேரு பண்டிதர் அந்தச் சமயத்தில் "ஆரண்யரசம்’ பருகிய சேதி கேட்டவர்களுக்கு! வெள்ளைக்காரன், இதுபோலச் செய்யத் துணியவில்லை. செய்திருந்தால், ஆயிரம் ஆயிரம் மேடைகள் அதிர்ந்துவிடும்! நேரு செய்தார்-ரோமாபுரி தீப்பிடித்து எரியும்போது நீரோ மன்னன் யாழ் வாசித்து மகிழ்ந்தான் என்பார்களே, அது போல! அண்ணனுக்கு நானென்ன மட்டமா! என்று கேட்பது போல, விஜயலட்சுமி அம்மையாரும், அவர் குடும்ப அலங்காரவதிகளுடன், சீர்கெட்டுப் பேர் கெட்டு, ஊர்விட்டு ஊர் ஓடி சிரமப்பட்டுச் சிதையும் தமிழர்களை, பிடரியில்கால் வைத்து உதைத்துத் தள்ளிடும் போக்கில், கொத்தலாவலை சர்க்கார் நடந்து கொண்ட நேரமாகப் பார்த்து, விருந்து வைபவத்தில் கொண்டாட்டமாகக் கலந்துகொண்டார்; குமரிகளோ கடையும் இடையும் நடையும் உடையும் மேனாட்டு மங்கையரை வெட்கிடச் செய்கிறது பார் என்று கூறுவதுபோல, கோலம் காட்டி, ஆங்கிலமுறை நடனமாடி, அகமகிழ்ந்தனர்!! வெளிப்படையாக, வெட்கமின்றி, யார் கேட்கமுடியும் என்ற துணிவுடன்தான், வடநாட்டு வன்கணார்கள், "தர்பார்’ நடத்துகிறார்கள் வாயடைத்துப் கைகட்டியும் நிற்பதுதான் தேசியம் என்று கருதப்படுகிறது - ஆகுமா இத்தகைய அக்ரமம் என்று கேட்கத் துணிபவரையோ, தங்கள் கோபப் பார்வை யாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடலாம் என்று எண்ணு கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்! கோட்டைமீது ஏறி, கவர்னரும் முதல் மந்திரியும் புடைசூழ அமர்ந்து, நேரு பண்டிதர் பேசப் போகிறார். என்ன பேசுவார்! பஞ்சசீலம், பாரதத்தின் புகழ் பாரெலாம் பரவிடும் பெருமை, உழைப்பின் மேன்மை, கோவாக் கொடுமை, கொரியாவில் நமது கடமை, ஆப்பிரிக்க சர்க்காரின் மடைமை, ரμய உபசாரத்தின் இனிமை, இவை பற்றி எல்லாம் பேசப் போகிறார்! ஏழ்மை, அறியாமை, மார்க்கத்துறையிலே உள்ள மடைமை, திராவிடத்துக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமை இவை பற்றிப் பேசிட முன்வரார் - இவை பற்றிப் பேசுவோர்மீது சினம் கொட்டத் தவற மாட்டார்! சிறுபிள்ளைத்தனம் பைத்தியக்காரர்கள் அர்த்தமற்ற ஆபாசம் என்றெல்லாம் ஏசுவார்! எதிர்ப்புகளை அழித்தொழிப் போம் என்று எக்காளமிடுவார்! பண்டிதரைக் காணச் செல்லும் பெருங்கூட்டமும், அவருக்குப் பாரிலே கிடைத்திடும் புகழ் மாலை, அவருக்காகப் பிற நாட்டார் நடத்திய விருந்துகள், வைபவங்கள், அறுபதைத் தாண்டியவர் இருபதுவயது வாலிபர் என உற்சாகமாகக் காணப்படும் காட்சி, அவருடைய மேனியிலே தெரியும் மினுமினுப்பு, கண்களிலே உள்ள குறுகுறுப்பு, ஆகியவை பற்றிப் பேசி மகிழ்வர் - அவரிடம் தான் இந்திய பூபாகம் எட்டு ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே மக்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பாளர் அவரே! அந்நிலையில் உள்ளவர், இவ்வளவுகவர்ச்சி பெற்றவராக இருந்தும் மக்களைச் சொக்கிடச் செய்யவும் பிற அரசுகளின் நேசத்தைப் பெறவுமான திறமை இருந்தும், அவருக்கு, எதிர்ப்பு என்பது உருவான முறையில் எங்கும் இல்லாதிருக்கும் நிலையில் நாட்டினுக்கு எந்த அளவுக்கு வாழ்வளித்திருக்கிறார் - வறுமையை ஓட்டிட, வாட்டத்தைப் போக்கிட, அறியாமையை அகற்றிட இல்லாமையை ஒழித்திட என்னென்ன காரியங்களில் ஈடுபட்டார், என்ன சாதித்துள்ளார் என்பது பற்றி, எண்ணிடப் போவதில்லை - காட்சியில் சொக்கி நிற்பர்! மறுக்க முடியாத உண்மை ஒன்று இருந்திடக் காண்கிறோம் காந்தியாருக்குப் பிறகு, பாமர மக்கள், நேரு பண்டிதரிடம்தான், அளவற்ற பாசம் கொண்டுள்ளனர். இந்த அளவுக்கு பாமரரின் பாசத்தைப் பெற்றுள்ள தலைவர்கள், இன்று இங்கும் சரி, வெளிநாடுகளி லேயும் சரி, அதிகம் பேர் கிடையாது! நேரு பண்டிதரைக் காணும் போது, உவகை கொண்டு நமது மக்கள் முகமலர்ச்சியுடன் அவரை வரவேற்கத் திரண்டிடுவதுபோல, ஈடனுக்கோ, ஐசனவருக்கோ, அவர்தம் நாட்டிலே உண்டா என்பது கூடச் சந்தேகம்தான். திறந்த காரில் நின்ற வண்ணம் தெருவின் இருமருங்கிலும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறாரும் அணிவகுத்து நிற்கும் காட்சியைக்கண்டு புன்னகை காட்டியும் பூச்செண்டு வீசியும், நேரு பவனி வருவதுபோல ஈடனும் பிறரும் பவனி வருவதில்லை. அந்த நாடுகளிலெல்லாம் மக்கள், உற்சவம் கொண்டாடும் கட்டத்தைக் கடந்து விட்டனர்; இங்கு உற்சவம் விமரிசையாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. பல திருவிழாக்களிலே, நேரு பவனியும் ஒன்றாகக் கருதப்பட்டு, விழாக் காட்சிகளிலே கவர்ச்சி கண்டு, அதோ பார் பொய்க்கால் குதிரை, இதோ பூத நடனர், அதோ கொம்பு ஊதுகிறார்கள், இங்கேபார் கோணங்கி கூத்து, என்று சுட்டிக்காட்டிசிரித்து மகிழ்வதுபோல, அதோ பார் நேரு சிரிக்கிறாô, ஆமாம், ஆமாம், எதையோ உற்றுப் பார்க்கிறார், மாலையை வீசுகிறார் பார், மாதர் பக்கமாக, மகள் இந்திரன் நேருவின் முகம் மலர்கிறது பார், அதோ அந்த மோட்டாரில் கேவல்சிங், இது பிளப்வாலா அந்த ப்யூக்கில் இருப்பவர்தான் காமராஜர் என்று காட்சிகளைக் காட்டி காட்டிப் பேசி மகிழ்சிறார்கள். இவ்வளவு நேசத்தையும் பாசத்தையும், உற்சாகத்தையும் உற்சவத்தையும் பெறுகிற நேரு பண்டிதரால், இதோ வறுமையை ஒழிக்கும் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வழி, புதிய தொழிற்சாலைகள், வாழ்வுக்கு புதிய வசதிகள், தருகிறேன் மகிழ்ச்சி பெறுவீர்!. . . . என்னிடம் இத்துணை அன்பு கொண்ட நண்பர்களே! நம்பிக்கை வைத்திருக்கும் நல்லவர்கலே உங்கள் நல்வாழ்வுக்காக நான் சந்தித்துள்ள காரியங்களின் பட்டியலைக் கூறுகிறேன் கேண்மின் என்று எடுத்துக் கூறுகிறாரா, கூற முடிகிறதா, கூறும் வழி இருக்கிறதா, என்றால்? இல்லை, இல்லை, அதுதான் இல்லை. அன்பு சொரிகிறார்கள் மக்கள்; அகமகிழ்கிறார் நேரு. பிறகு அகில உலகச் செய்திகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக் கூறிவிட்டு, ஆகவே "ஜெய் இந்து’ என்று முழக்கமிடச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார் - திருவிழாக் கோலம் கலைகிறது, தெருக்களில் எப்போதும் போலத் திகைத்தவன், தத்தளிப்பவன், வாழ்க்கைக்கு வழி தேடி அலைபவன், வறுமையால் வாட்டப்படுபவன்! மாடென உழைத்திடும் மனித உருவங்கள், வாலிபத்தை வயோதிகமாக்கிக் கொண்ட வறுமையாளர்கள், பிணிகொண்டோர் பிச்சைக்காரர் ஆகியோர் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். கண்ணீர் வற்றிவிடவில்லை; கை பிசைந்து கொள்வது நின்று போவதில்லை. கண்டோம் களித்தோம் நேரு பண்டிதரை, நமக்குற்ற இன்னல் ஒழிந்திடக் கண்டோம், இன்பம் பெருகிடக் கண்டோம், இதனை நமக்கு அளித்திட்ட ஏந்தலைப் போற்றுதும், அவர் ஆட்சியின் மாட்சியைப் போற்றுதும், என்று கூறிட மக்களால் முடிய வில்லை! பாமரரின் நிலை இது எனின், இந்தியப் பேரரசு எந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது, எவ்விதமான எதேச்சாதிகாரம் கொழுந்து விட்டு எரிந்து ஜனநாயக மலரினைக் கருக்கி விடுகிறது? எத்தகைய அடக்கு முறைகள் அவிழ்த்து விடப்பட்டி ருக்கிறது, அதன்விளைவாக விடுதலை வேட்கையும் உரிமை ஆர்வமும் கொண்டவர்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்? தீட்டப்படும் திட்டங்களிலே உள்ள தவறுகளை எடுத்துக் காட்டுவோரும், அவை நிறைவேற்றப்படுவதிலே ஏற்படும் ஒழுங்கீனங்களைச் சுட்டிக் காட்டுவோரும் எவ்விதம் அலட்சியப் படுத்தப்படுகிறார்கள், ஆட்சி முறையின் காரணமாக ஏழை மேலும் ஏழை ஆக்கப்படுகிறான்? இலட்சாதிகாரி கோடிஸ்வரனாகிறானே, முறையா, என்று கேட்போர் மீதுகண்டனம் எப்படி வீசப்படுகிறது என்பனவற்றை அறிந்துகொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு படைத்தவர் களோ, நேருவின் பவனியிலே உள்ள கவர்ச்சிக்கும் நாட்டு மக்களுடைய வாழ்வின் முன்னேற்றத்துக்கும் ஒருதொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுள்ளனர் எனினும் அந்தப் பெருங்கூட்டம், விழாக்கோலம், கவர்ச்சி ஆகியவைகளைக் கண்டதும் திகைப்புற்று, இவ்வளவு மகத்தான செல்வாக்குப் பெற்றிருக்கும் பெரந்தலைவரை, மக்களை மயக்கும் சக்தியை இந்த அளவுக்குப் பெற்றுள்ள நேரு பண்டிதரை, அண்டிப் பிழைத்தால்தான் வாழ்வு, எதிர்த்தாலோ, மூலையில் தள்ளப்பட்டு விடுவோம் என்று அஞ்சி, அவர்களும் கோலாகலத்திலே கலந்து கொள்வதே சாலச் சிறந்தது என்று எண்ணி விடுகிறார்கள்! காங்கிரஸ்காரர்களோ, பெருமழை பெய்து, தெரு வெல்லாம் தண்ணீர் ஆறென ஓடும்போது, பாதையிலே இருந்த ஆபாசங்கள் அடித்துக்கொண்டு போகப்பட்டுத் தெரு துப்புரவாவது போல, நேருவின் பவனியால் ஏற்படும் உற்சாக வெள்ளம், காங்கிரசாட்சியினால் ஏற்பட்டுள்ள அல்லலை, அவதியை, அதிருப்தியை, அவலட்சணத்தை, எதிர்ப்பை, எரிச்சலை, ஒரே அடியாகத் தள்ளிக் கொண்டு போய்விடும், எங்கும் காங்கிரஸ் கட்சியின், மதிப்பும் செல்வாக்கும் ஓங்கித் தழைத்திடும், மாற்றார் உற்றாராவர் உற்றார் உவகையால் துள்ளிக் குதிப்பர், ஊராளும் முறையினால் ஏற்பட்ட உற்பாதங்களையும் மறந்து மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தருவர், அன்பினைச் சொரிவர் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இவர்களின் அச்சத்துக்குக் காரணம், நேருபண்டிதரால் பாமரரைப் பெருமளவுக்குத் திரட்ட முடிவதால், அவருடைய செல்வாக்கை எதிர்த்தால், மக்கள் தம்பால் கசப்படைவர் என்பதுதான். இன்றைய நிலையைத்தான் இவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களே தவிர, உண்மையை எல்லா மக்களும் உணர்ந்து, நாம் வஞ்சிக்கப்பட்டோம் இம்சிக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து கொதித்தெழப் போகும் ஓர் நாள் வந்தே தீரும் என்பதையும், அந்நாளில், எமக்குக் கொடுமைகளும் துரோகமும் இழைக்கப்பட்டபோது, அந்த நேருவுக்குப் பராக்குப் பாடிக்கொண்டும், பல்லக்குச் சுமந்து கொண்டும் இருந்தவர்தானே நீர்! எம்மை இம்சித்த போது அவரிடம் இளித்துக் கிடந்தவரல்லவா நீர்! எமக்குத் துரோகம் இழைக்கப்பட்டபோது அவர்முன் துதிபாடி நின்றீரல்லவா! விளக்கமறியாதாருக்கு விளக்க வேண்டும் என்ற பொறுப்பை மறந்து, கும்பலில் கூடிக் குலவினால், நமக்கும் சுவைத்திடச் சில கிடைக்கும் என்றுதானே அவர்பின்னோடு சுற்றித் திரிந்தீர் என்று கேட்கப் போகிறார்கள் என்பதை மறந்தேவிடுகிறார்கள். அதனால்தான், அறிந்ததைக் கூறவும் அச்சப்பட்டுக்கொண்டு "அடைப்பம்’ தாங்கி, அதிலேயே ஆனந்தம் தேடிக்கொள் கிறார்கள். இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்திடத் துணிவும் மக்களிடம் எடுத்துக்கூறிவிடும் நெஞ்சு உரமும் கொண்டவர் களின் அளவு குறைவுதான், தம்பி, ஆனால் அவர்கள் தமது கடமையைக் கலக்கமின்றிச் செய்து கொண்டு வருகிறார்கள். அரசியலில் புதுப் புதுக்காற்றாடிச் சண்டைகளைக் கிளப்பிக் கொண்டு இருப்பதில்லை. நிழலை உருவமெனக் கூறிப் போராட்டம் நடத்துவதில்லை. பிரச்சினை எதற்கும் பரிகாரம் தேடும் முழு உரிமை எமக்கே பிறருக்கு இதிலே பின்னோடி வரத்தான் சலுகை அளிக்கப்படும் என்று பேசிடுவதில்லை. தொடர்ந்து, திராவிடருக்கு இழைக்கப்படும் கொடுமையை, துரோகத்தை, மக்களிடம் எடுத்துக் கூறி, அவர்களின் மனமயக்கத்தைப் போக்கிய வண்ணம் உள்ளனர். தம்பி! அந்த அரும்பணியாற்றிடும் அஞ்சா நெஞ்சினர் கொண்ட கழகத்தில்தான், நானும் நீயும் இருக்கிறோம். அன்புள்ள அண்ணாதுரை 25-9-1955 உலாவும் ஊழலும்! ஈஜிப்ட் நாட்டுப் போர்க்கருவி விற்பனை முறையில் ஏமாற்றுதல் - இந்திய அரசின் தொழில்துறை ஊழல் - கணக்காய்வாளர் காட்டும் பல அரசு ஊழல்கள். தம்பி! ஒரு "போர்க்களம்’ காணலாம், புறப்படு. காணமட்டுமா! என்ன அண்ணா! இது! என்னை என்ன கட்கம் ஏந்தத் தெரியாதவன், கடும் போருக்கு ஏற்றவனல்ல என்றா எண்ணிக்கொண்டாய்? மாற்றான் முன் மண்டியிடும் பரம்பரையினனா? மறத்தமிழனன்றோ! என்றெல்லாம் கேட்டுவிடாதே, நான் உன்னை, முடிந்துபோன போர் பற்றிய "செய்தி‘யைக் கேட்கச் சொல்கிறேன் - நீ "போர் முரசு’ கேட்கிறது எண்றெண்ணி ஆர்த்தெழுந்துவிடாதே. ஒரு களம் - இருதரப்புப் படைகள், எதிர் எதிர்! “துப்பாக்கிகள் தயாரா? தோட்டாக்களைப் பொருத்தி விட்டீர்களா?”குதிரை‘யைச் சரிபார்த்துக் கொண்டாகி விட்டதா? சரி! ஏறு! முன்னேறு! ஏறு, முன்னேறு! தாக்கு! உம், தாமதம் ஏன்? தாக்கு!! சுடு! வேகமாக!’’ படைத் தலைவன் இதுபோலக் "கட்டளை’ பிறப்பித்து பிட்டான். படைகள், பாய்ந்தன எதிரியை நோக்கி. வேட்டுகள் கிளம்பின! துப்பாக்கிகள், பீரங்கிகள் முழக்கமிட்டன! எதிரிப்படை வரிசையிலிருந்து, ஏளனச் சிரிப்பொலி கிளம்பிற்று! வேட்டுகள் கிளம்புகின்றன! தோட்டாக்கள் பறக்கின்றன! துப்பாக்கிகள் முழக்கமிடுகின்றன! படை பாய்ந்து முன்னேறு கிறது! எதிரிப் படையோ, “கெக்கலி’ செய்கிறது, கைகொட்டிச் சிரிக்கிறது!! ஏன் தெரியுமா, தம்பி! துப்பாக்கி சுடுகிறது, ஆனால் ஆளைச் சாகடிக்க மறுக்கிறது! வேட்டுகள் கிளம்பிவேகமாகப் பாய்கின்றன, ஆனால் யாரையும் பிணமாக்க மறுக்கின்றன. அழிவுக் கருவிகள்,”அஹிம்சா’ விரதம்பூண்டுவிட்டன! வாண வேடிக்கை போன்ற சத்தம் கேட்கிறதே தவிர, ஆளைக் கொல்லும் "சக்தி’ இல்லை, தோட்டாக்களுக்கு! துப்பாக்கிகள், பார்வை அளவில் நேர்த்தியாகவே உள்ளன! ஆனால் அவைகளை நம்பிக் களத்திலே கடும்போரில் ஈடுபடச் சென்ற படை வீரர்களை, காட்டிக் கொடுத்துவிட்டன! வெடிக்கின்றன, ஆட்களைச் சாகடிக்க மறுக்கின்றன! தோட்டா இல்லாத துப்பாக்கி என்று கேலி மொழி பேசுவர்! தோட்டாவும் துப்பாக்கியும், பலாத்காரச் செயலிலே ஈடுபட மறுத்திடும் நிலைக்கு’ என்ன கூறுவது? கண்டனர் எதிரிகள் - "வெத்து வேட்டுகளை’த் தாக்கினர் கொன்று குவித்தனர்! வீரம் இருக்கிறது நிரம்ப, ஆனால், "வஞ்சகம்’ அந்த வீரர்களை, இந்தக் கதிக்கு ஆளாக்கிற்று. நம்மை நாசமாக்கும் எதிரி, இங்கே இல்லை, களத்தில் இல்லை, அவன் நம் நாட்டிலே இருக்கிறான். அரண்மனையில் அழகிகளின் ஆலிங்கனத்தில் சுகமனுபவித்துக் கொண்டி ருக்கிறான். நம்மைக் களம் சென்று கடும் போரிடும்படி கட்டளை யிட்ட காவலன், கட்டழகிகளைத் தொட்டிழுத்து - முத்தமிட்டு மகிழ்கிறான் - தொலையட்டும் - இதழ்கொத்தி இன்புறுகிறான் ஒழியட்டும் - கொய்யாக் கனிகளின் கோலாகலத்திலே தன்னை மறந்து கிடக்கிறான் - கிடக்கட்டும் காமாந்தகாரன் - ஆனால் நம்மிடம் அவன் தந்தனுப்பிய போர்க்கருவிகள் இப்படியா இருப்பது! ஆளைச் சாகடிக்க முடியாத ஆயுதமா! வெடிச்சத்தம் கிளம்புகிறது எதிரியைச்சாகடிக்கும்சக்தி காணோமே! வெத்து வேட்டுகளைக் கொடுத்தா, வெஞ்சமருக்கு நம்மை அனுப்புவது? மாற்றானிடம் காட்டிக் கொடுத்தானே, மன்னவன் என்ற பட்டம் பெற்றுக் கிடக்கும் அந்த மாபாவி! என்று கொதித்துக் கூவினர். களத்தில் பிணமலை! இரத்தமும் கண்ணீரும் பீறிட்டெழுந்த நிலை. வஞ்சகத்தால் வீழ்ந்தோம் எதிரியிடம் ஒரு எத்தனால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம். சித்திரவதைச் சாவடிக்கு நம்மைத் துரத்திவிட்டு சிற்றிடையாளுடன் சித்திர மண்டபத்தில் காதல் சிந்துபாடிக் கொண்டிருக்கிறான், மாமிசமலை. தாயகமே! உன் பொருட்டு எதையும் இழக்கத் தயங்கோம். இன்னுயிர் தரத் தயார். ஆனால் எமது உயிர் பிரியுமுன், தாய் நாடே! உன்னை இழிவு படுத்தக் கிளம்பும் எதிரியின், உயிரைக் குடித்திட வேண்டாமா; போரிட்டு மடியத்தயார், அன்னையே! போரிட்டு மடியச் சித்தமாக இருக்கிறோம், ஆனால், இதோ பாரும், எமக்குத் தரப்பட்டுள்ள போர்க்கருவிகளை! வெத்து வேட்டுகளை! எதிரியிடம் எங்களைக் காட்டிக் கொடுக்கும் கருவிகளை! வீரம் இருக்கிறது, பிறந்த நாட்டைக் காப்பாற்ற! ஆனால் ஒரு வேந்தன் இருக்கிறானே, எங்களை எதிரியிடம் காட்டிக் கொடுக்க. படைக்கலத்தைப் பார் தாயே! பார், பஞ்சை நாடு, பராரி நாடு, போர்க்கருவிபெற வழியில்லை என்றுகூறட்டும். கரங்களே துப்பாக்கிலிபாய்ந்து சென்று, மாண்டவர் போக, மீதமுள்ளோர் எதிரி மீது பாய்ந்து, குரல் வளையை நெரித்தே கொன்று போடுகிறோம். ஆனால், அரசன் செய்ததென்ன, அருமையான படைக்கலங்கள் என்று கூறி, இந்த “ஓட்டை ஒடிசல்களை’,”வெத்து வேட்டுகளை’க் கொடுத்து, களம் அனுப்பினானே! தாயகமே! நீயே கூறு, யார் நம் எதிரி? எதிரே? இருந்து போரிடும் படையா, எழில் அரண்மனையில் இருந்துகொண்டு, எம்மைக் காட்டிக் கொடுக்கிறானே அந்த வேந்தனா? யார், ஒழிக்கப்படவேண்டும்? போரிடும் படையா? முதுகிலே கட்டாரி கொண்டு குத்துவது போன்ற துரோகமிழைத்த அந்தத் தூர்த்தனா? இறந்து படுகிறோம், தாயே! இறந்து படுகிறோம். எதிரியால் கொல்லப்பட்டவர்களாகவல்ல, எம்மை ஆள்வதற் கென்று ஏற்பட்ட எத்தனால் இந்தக்கதிக்கு ஆளானோம். தம்பி! நாடகமேடையானால், இவ்விதமெல்லாம், "வீரர்கள்’ பேசமுடியும் - கொட்டகை அதிரும், பணம் குவியும். இது களம்! ஓட்டை ஒடிசல், வெத்து வேட்டுகள், தொட்டு இழுத்ததும் துண்டாகிப்போகும் கருவிகள் - இப்படிப்பட்ட படைக் கலங்களைக் கொடுத்து, எதிர்த்து வந்த படையுடன் போர் நடாத்தும்படி ஈஜிப்ட் படை அனுப்பப்பட்டது! சித்திரவதைக்கு ஆளாயிற்று! தோல்வி கண்டனர், துயரம் துளைத்தது, வெட்கம் வேலாகக் குத்திற்று! படைக்குத்தேவையான “கருவிகளை‘ச் சேகரித்தளிக்கும் பொறுப்பு மன்னனுடைய உரிமைகளில் ஒன்று! மன்னனோ, அவனுடைய “கோப்பை தூக்கிகள்’’”குறிப்பறிந்து கோல மயிலினைக்கொண்டு வருவோர்’’ ஆகியோரிடம்”ஆயுதம் வாங்கித் தரும்’ பணியினை ஒப்படைத்திட, அவர்கள், கொள்ளை அடித்திடும் குணத்தினராதலால், வெத்து வேட்டு‘களையும் "ஓட்டை ஒடிசல்களையும்’ கொண்டு வந்து குவித்து, கொற்ற வனிடம் கோடிப் பொன் பெற்றுப் போயினர்! மதியற்ற மன்னன், மக்களின் வரிப்பணத்தால் திரண்ட நிதியைப் பாழாக்கியதுடன், நாட்டின் கண்மணிகளைக் களத்திலே கண்டதுண்டமாகும்படிச் செய்தான் - நாட்டுக்கும் இழி நிலை பிறந்தது! இத்தாலி நாட்டில், அரசு இழந்து, அரசும் ஈடாகாது என்று கூறத்தக்க எழில் படைத்த காதற் கிழத்தி நாரிமனையும் பிரிந்து, அரண்மனையின் அலங்கோல வாழ்வின் விளைவாகக் கிடைத்த தொங்கு சதை உடனிருந்து குலுங்க, கண்டோர் உதடசைத்துக் கேலி செய்யப் பரூக் உலவிக் கொண்டிருக்கிறான். பழுதுபட்ட படைக் கலங்களை, விற்ற அந்த "பரம தயாளர்’ எங்கே இருக்கிறார்கள், தெரியுமா? பாதகம் விளைவித்த பரூக், பட்டமிழந்தான் - காதகர்கள் கெட்டொழிந்தனர் - "ஓட்டை ஒடிசலை’ விற்ற அந்தப் படுபாதகர்கள், என்ன ஆயினர்? கோடிக்கணக்கான பொருள் நஷ்டம் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான அரும் உயிர்களைக் குடித்த, அந்தக் கொடியவர்கள், கண்டு பிடிக்கப்பட்டு, நானிலம் காரி உமிழத்தக்க நிலை பெற்றனரா? எங்கே உளர் அந்த எத்தகர்கள்? என்ன கதிக்குத் துரத்தப்பட்டனர்? கண்டித்தால் மட்டும் போதாதே அந்தக் கயவர்களை, கடுமையாகத் தண்டிக்கவும் வேண்டுமே! பழுதுபட்ட படைக்கலனை விற்பனை செய்த பாதகர் யார்? எங்கு உளர்? என்று கேட்டுப்பார், தம்பி! காங்கிரஸ் நண்பர்களை! கோபம் பிறக்கும்! அனியாயமாக ஆயிரமாயிரம் உயிரைப் பலிவாங்கிய அந்தப் பாதகர்கள், இப்போது! "பாரத நாட்டிலே’ இருக்கிறார்கள், தம்பி! “கைதிகளாகவா?’’ என்று கேட்கிறாய் உன் நெஞ்சில் நேர்மை அவ்வளவு சுரக்கிறது! நேரு மகான், அவர்களைக் கைதிகளாக’ அல்ல,”ஆசிரியர்களாக’ இங்கு அமர்த்தி வைத்திருக்கிறார்! அக்ரமம், அனியாயம் அடுக்காது - என்றெல்லாம்! என்னைப் பார்த்து முழக்கமிட்டு என்ன பலன், தம்பி; இந்திய சர்க்காரின் ஆதரவில் அரவணைப் பில், அந்த "ஆயுத கர்த்தாக்கள்’ இப்போது இருக்கிறார்கள். ஈஜிப்ட் நாட்டுக்கு, "பழுதுபட்ட’ போர்க்கருவிகளை விற்பனை செய்த மகானுபாவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டுக் கம்பெனியார். "பாரத நாட்டு’க்கு, படைக் கருவிகள் தயாரிக்கும் தொழிலகம், சர்க்காரால் அமைக்கப்பட்டு, இதுவரை எராளமான பொருளை விழுங்கி இருக்கிறது. இந்தத் தொழிலகத்தில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், ஆயுத உற்பத்திக்கான "அருங் கலை’யைக் கற்றுத் தரவும், பெரும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அமர்ந் திருப்பவர்கள், இந்த சுவிட்சர்லாந்து கம்பெனியைச் சேர்ந்தவர்கள். எந்தக் கம்பெனி, கொள்ளை அடிக்கும் போக்கில், ஈஜிப்ட்டுக்கு பழுதுபட்ட பேர்க்கருவிகளை விற்பனை செய்து, அந்த நாட்டுக்குத் துரோகம் விளைவித்ததோ, அதே கம்பெனியினர்தான், இங்கு ஆயுதத் தொழிற்சாலைக்கு ஆசிரியர்கள். வழுக்கி விழுந்தவள், "பத்தினிகள், பள்ளிக்கு’த் தலைமை ஆசிரியை. எவ்வளவு பொறுப்பற்ற போக்கு! எத்துணை அலட்சிய சுபாவம்! அக்ரமம் செய்த அந்தக் கம்பெனியாரிடம், ஆயுதம் தயாரிக்கும் தொழில் அமைக்கும் பொறுப்பு ஒப்படைத்தனர் - ஆண்டுகள் உருண்டோடின - இலட்ச இலட்சமாகப் பணம் கரைந்தது - ஆயுதம் உருவாகச் செய்தனரோ? இல்லை ஆயுதம் செய்வதற்கான தொழில் நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குக் கற்றுத் தந்தனரோ? அதுவும் இல்லை. என்ன செய்கிறார்கள்? ஊதியம் பெறுகிறார்கள்! உண்டு கொழுக்கிறார்கள்; நேரு சர்க்காருடைய ஏமாளித்தனத்தை எண்ணி எண்ணிக் கேசெய்து கொண்டிருப்பார்கள். வேறென்ன செய்வர்? நாம் யார், நமது நடவடிக்கை எத்தகையது என்பதைத் தெரிந்தும், நம்மை அழைத்து வந்தார்களே, இவ்வளவு "இளித்தவாயர்’ இருக்கும்போது, நமக்கென்ன குறை என்று எண்ணிக் கொள்வர். இந்தத் தொழில் அமைப்பு பெருமளவுக்கு நஷ்டம் கொடுத்து விட்டது. எதிர்பார்த்த தரத்திலோ, அளவிலோ, கருவிகள் உற்பத்தி செய்யப்படவில்லை. தொழில் நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குப் போதிக்க, சுவிட்சர்லாந்து நிபுணர்களால் முடியவில்லை. டில்லி பார்லிமெண்டில் அமைச்சர், வெட்கமின்றி, ஒப்புக் கொள்கிறார்; ஒப்புக்கொண்டு, கூறுகிறார்; இது சகஜம், போகப் போக எல்லாம் சரியாகிவிடும். நஷ்டம், கஷ்டம். இவைகளைப் பார்த்தால் ஆகுமா? இவைகளைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். தம்பி, தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமாம். கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினாலும், இந்த இயந்திரத் தொழில் அமைப்பு சரிப்பட்டு வராது என்று ஸ்காயிப் எனும் பிரிட்டிஷ் நிபுணர் கூறிவிட்டார். இந்த பிரிட்டிஷ் நிபுணரை வரவழைத்து, இந்தத் தொழில் அமைப்புகளைப் பரிசீலனை செய்து கருத்துரை அளிக்கும்படி கேட்டுக் கொண்டது, நேரு சர்க்காரேதான். தாங்கிக் கொள்வதாமே தம்பி! எவ்வளவு தாங்கிக் கொள்வது! எத்தனை ஊழல்களை, எத்துணை பொருள் நஷ்டத்தை, எத்தகைய நாற்றங்களை! தம்பி, செப்டம்பர் 18-இல் புதுடில்லியிலிருந்து, பொதுக் கணக்கு கமிட்டி எடுத்துக் காட்டுவதை, சுதேசமித்திரன் வெளியிடுகிறது - படித்துப் பார். "அபிவிருத்தி திட்டங்களுக்குப் பணத்தைச் செல வழிக்கும் விஷயத்தில் சர்க்கார் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று பொதுக் கணக்குக் கமிட்டி தனது யாதாஸ்தில் குறிப்பிட்டிருக்கிறது. பார்லிமெண்டு அனுமதிக்கும் பணத்துக்கு மேல் ஒரு அணாகூட அதிகமாகச் செலவழிக்கக் கூடாதென மந்திரி சபைகளுக்கு மேற்படி கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய கடன் சம்பந்தமாக இந்திய சர்க்கார் அந்த நாட்டுடன் உடனே ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டுமெனக்கமிட்டி தெரிவித்திருக்கிறது (பாகிஸ்தான் இந்தியாவுக்கு 300-கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்.) வருமான வரி விஷயமாக சர்க்கார் காட்டியுள்ள சலுகையையும் கமிட்டி கண்டித்திருக்கிறது. அமுக்கி வைக்கப் பட்ட பணம் சம்பந்தமாக சரியான வருமானவரி விதிக்கப்பட வில்லையென்றும், விதிக்கப்பட்ட வரியால் கிடைத்த பணம், கிடைக்க வேண்டிய பணத்தில் 15-சதவிகிதமே யென்றும் கமிட்டி அபிப்பிராயம் சொல்லியிருக்கிறது. பிரிட்டிஷ் கம்பெனி விஷயத்தில் சர்க்கார் கையாண்ட கொள்கையும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னாலே தயார் செய்த பகுதிகளைக் கொண்டு வீடு சிருஷ்டிக்கும் முறையைக் கையாளும் மேற்படி கம்பெனி கட்டிய வீடுகள் சாதாரண முறையில் கட்டப்படும் வீடுகளைவிட அதிக விலையாகி யிருப்பதைப் பற்றிக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது. தேசத்துக்கு புட்டிப்பால் வாங்கி அதனால் சர்க்காருக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டமேற்பட்டிருக்கிறது. புட்டிப்பால் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென கமிட்டி கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியத் தூதராலயங்களில் இருக்கும் இந்திய அதிகாரிகள், பொய் சர்டிபிகேட் காட்டி அலவன்ஸ் வாங்குவதையும் கமிட்டி தீவிரமாகக் கண்டித்திருக்கிறது. 2 பவுன் முதல் வைத்து ஆரம்பித்த ஒரு உதவாக்கரை கம்பெனியோடு சர்க்கார் உடன்படிக்கை செய்து கொண்டு 17000 பவுன்களை அளித்திருக்கிறார்களென்றும், அதுவும் அந்தக் கம்பெனிக்கு டைரக்டரான ஒருவர் கையெழுத்தின் மேல் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பணம் வாங்கின தேதியில்தான் அவர் டைரக்டராயிருப்பதாகவும், இப்படிப் பணம் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்க தென்றும் கமிட்டி கூறுகிறது. கொள்ளை போகிறது பணம் இவ்வண்ணம்; கோட்டை மீதேறிப் பேச வருகிறார் கோமான். நாற்றமடிக்கிறது ஊழல், நாட்டிலே பவனி வருகிறார் நேரு பண்டிதர். 1-9-55-ல், கணக்கு ஆய்வாளர்கள், ரயில்வேதானியக் கடையில் நிர்வாக ஊழலின் விளைவாக ஆறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினர் - நேரு என்ன செய்தார்? சோவியத் நாட்டிலே தான்கண்ட சோபிதத்தை எடுத்துரைத்தார் - வாயைப் பிளந்துகொண்டு மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர் - ஊழல் நிர்வாகத்தின் பொறுப்பாளர்கள், கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, புன்னகை செய்தனர். தானியம் வாங்கிய விலை 11 கோடி விற்பனையானது 5 கோடி ரூபாய்க்கு; ஆறு கோடி நஷ்டம். ஆறு கோடி நஷ்டமா, அனியாயம், அனியாயம் என்று பேச்சு எழுந்ததும், பண்டிதர், பாரெல்லாம் பஞ்ச சீலம் எனும் கொள்கையை வரவேற்பதுபற்றிப் பேசலானார். 4000 ரூபாய் பெறுமானமுள்ள ஓட்டை விமானத்தை மெருகு கொடுத்து 1,60,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததுடன், பழுது பார்த்த செலவு, டைரக்டர் ஊதியம் என்று பல புள்ளிகள் கொடுத்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டது, விமானக் கம்பெனி, சர்க்கார் விமானத் தொழிலை தேசியமயமாக்கியபோது. தம்பி, பெரிய விஷயங்களிலேதான் “கோட்டை’ விடுகிறார்கள் என்று எண்ணிக் கொள்ளாதே - மிக மிகச் சாமான்யர்கள்கூட ஏமாறாத விஷயத்திலெல்லாம்,”சர்வதேசப் புகழ் பெற்ற நேரு சர்க்கார்’ எளிதாக ஏமாறுகிறது. குடி இருந்து கொண்டு வாடகை தராமலிருப்பது அக்ரமம்; வாடகை வசூலிக்காமலிருப்பது ஏமாளித்தனம்! அல்லவா? நேரு சர்க்கார், குடி இல்லாமலே வாடகை செலுத்துகிறது! இதைத் கண்டிக்க எனக்கு வார்த்தை தெரியவில்லை - காங்கிரஸ் நண்பர்களையே கேட்டுத் தெரிந்துகொள்! 4,60,000 ரூபாய் வாடகை செலுத்தியிருக்கிறது சர்க்காருடைய தபால் தந்தி இலாகா - கல்கத்தாவில் இரண்டு கட்டிடங்களுக்கு. 1948-லிருந்து 1952 வரையில் வாடகை தந்திருக்கிறார்கள் - ஒரு நாள் கூட அதிலே வாழவில்லை! தபால் தந்தி இலாகா அலுவலத்துக்காகத்தான் "பிரம்மாண்ட’மான இரண்டு கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தனர்; ஏற்கனவே உள்ள அலுவலகக் கட்டிடம் கலனாகி விட்டதால், புதுப்பித்துக் கட்டத் திட்டமிட்டனர். புதிய கட்டிடம் எழும் வரையில் வாடகைக் கட்டிடம் தேவை என்று எண்ணி, பெரிய மாளிகைகள் இரண்டை வாடகைக்கு எடுத்து, ஒழுங்காக, வாடகைப்பணம் செலுத்தி வந்தனர்; அவ்விதம் செலுத்திய வாடகைப் பணம்தான் நாலு இலட்சத்து அறுபதினாயிரம். ஆனால் திட்டமிட்டபடி, பழைய கட்டிடத்தை இடிக்கவு மில்லை. வாடகைப் பணத்தை மட்டும் கட்டிக் கொண்டுவரத் தவறவில்லை! ஏறக்குறைய ஐந்து இலட்ச ரூபாய் வாடகை செலுத்தியான பிறகு, கணக்கு ஆய்வாளர் பார்த்து, வீணாக ஏனய்யா வாடகை தருகிறீர்கள் என்று கேட்ட பிறகுதான், இந்திய சர்க்காருக்கு, காலியாக இருக்கும் கட்டிடத்துக்கு வாடகை செலுத்தி வந்த ஏமாளித்தனம் தெரிந்தது தெரிந்து? ஐந்து இலட்சம் கரைந்தது. இவ்விதம் பாழான பணம், கோணலாகிப் போன திட்டம், நாற்றமடிக்கும், ஊழல், வளர்ந்தபடி இருக்கக் காண்கிறோம். வெட்கமின்றி அமைச்சர் சொல்கிறார் "தாங்கிக்கொள்ள வேண்டும்’ என்று. ஊழல்கள் பெருகிய வண்ணமுள்ள பண்டிதரின் உலாவோ, நடந்தபடி இருக்கிறது!! அன்புள்ள அண்ணாதுரை 2-10-1955 ஆரியம் இருக்கும் இடம்! "விடுதலை’யில் ஆரியர் பற்றிய செய்தியும், அரசும்- சென்னை அரசு போஸ்டர் வாபஸ் பெற்றமை. தம்பி! ஆரியரை நடுத்தெருவில் நாள் முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது! என்ன அண்ணா! இப்படி ஒரே போடு போடுகிறோயே! இவ்விதமெல்லாம் கூறும் வழக்கமோ-கருதும் சுபாவமோ கிடையாதே, என்ன காரணம் இவ்வளவு மோசமான நடையிலே பேச, என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, உனக்கு. பலே! பலே! இது ரோஷமான பேச்சு! இது வீரனின் முழக்கம்! இவ்விதம் பேசினால்தான் பிரச்சினை தீருமே தவிர, மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? என்று கேட்டுக் களிப்பால் துள்ளிக் குதிப்போரும் இருக்கிறார்கள். தம்பி! நீ கலக்கமடையவும் காரணமில்லை, அவர்கள் களிப்படையவும் தேவையில்லை. ஏனெனில், ஆரியரை நடுத் தெருவில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் இன்று கேட்பதற்கு நாதி இல்லை என்ற மணிவாசகம் என்னுடையது அல்ல! "விடுதலை’யில் வெளிவந்த வீர முழக்கம் அது; 28-9-55-ல்!! அக்ரகாரங்கள் இந்த வீராவேச உரை கண்டதும் இடி கண்ட நாகமாக வேண்டுமென்று எண்ணினாரோ, அல்லது படை வீரர்களுக்குச் சிறிதளவு உணர்ச்சிப் பானம் கிடைக்கட்டும் 242 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி ஒன்று 243 என்று கருதினாரோ, எதற்காக இவ்விதம் தீட்டினாரோ, நானறியேன் - ஆனால் ஆரிய இனத்தை நடுவீதியில் போட்டு அடித்தாலும் ஏன் என்ற கேட்க நாதி இல்லை என்று எழுதியவ ருடைய "கைவலி’ தீருவதற்கு முன்பே, நாடாளும் காங்கிரஸ் தலைவர்கள், ஆரியரின் முகம் சிறிதளவு சுளித்துவிடுகிறது என்று தெரிந்ததும், நடு நடுங்கிப் போகிறார்கள் எனும் உண்மை, இப்போது தெரிகிறது. வீரம் தேவை - நிச்சயமாக! போர் முழக்கம் வேண்டும் அவ்வப்போது உணர்ச்சியூட்ட! உள்ள நிலைமைக்குத் துளியும் பொருத்தமோ பொருளோ அற்ற வகையில், ஓங்காரக் கூச்சலிடுவது, சுவைக்கு உதவாது, என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம் ஒன்று நடை பெற்றிருக்கிறது. ஆரியர் - சமூகத்திலே அனைவராலும் வெறுத்து ஒதுக்கித் தள்ளி விடப்பட்டது போலவும், கள்ளர், கயவர், கை ஏந்தி நிற்போர், ஆகியோர் எவ்வண்ணம் காரி உமிழப்பட்டும், கண்டோரால் ஏசப்பட்டும், கடிந்துரைக்கப்பட்டும், தாழ்நிலை அடைவரோ, அதுபோல ஆரியரின் நிலை ஆகிவிட்டது போலவும், அவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் அடித்து விரட்டினாலும், ஏனென்று கேட்க ஒருவரும் இல்லை என்று கூறத்தக்க அளவுக்கு, ஆரியரை அன்னியர், அக்ரமக்காரர், அகற்றப்பட வேண்டியவர்கள், விரட்டப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்குச் சமூகத்தில் பெரும்பகுதியினர், அல்லது குறிப்பிடத்தக்க அளவினர் வந்துவிட்டது போலவும் எண்ணிக் கொண்டு, "ஆரியரை நடுத்தெருவில் நாள் முழுவதும் போட்டு அடி அடி என்று அடித்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை’ என்று தீட்டுகிறார். தீ! தீ! தீ! என்று மும்முறை சொன்னதும் எந்தத் திக்கு நோக்கி கூறுகிறாரோ, அது பற்றி எரிந்து போகும் என்று எண்ணிடும் இயல்புடையவர். “விடுதலை’யில் இந்த மணிவாசகம் வெளிவந்ததினாலேயே, இது பெரியாரின் கருத்து என்று கொண்டு விடுவதற்கில்லை. ஏனெனில், பெரியார்”விடுதலை’யிலேயே எனக்கு விருப்ப மில்லாத கருத்துகள் சில வேளைகளிலே வந்து விடுகின்றன, அவைகளை என் கருத்துக்கள் என்று நம்பி விடாதீர்கள். என் கையெழுத்திட்டு வெளிவரும் தலையங்கத்தில் காணப்படும் கருத்துத்தான் என் கருத்து, என்பதாகக் கூறியிருக்கிறார். எனவே ஆரியரை நடுவீதியில் போட்டு உதைத்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை என்ற அருமையான கண்டு பிடிப்புப் பெரியாருடையது என்று கூறுவதற்கில்லை! பெரியார் ஸ்தானத்தை வேகமாக எட்டிப் பிடித்திடுவதாகக் கொட்டாவி விடும் குணளர் அவ்விதம் கருதக் கூடும்!! திரிலோகமும் புகழும் சுந்தரன்! தீரன்! வீரன்! கெம்பீரன்! உதாரன்! என்று நள்ளிரவில் நாலுவீதி கேட்கும்படி உரத்தகுரலில் பாடிவிடுபவன், போர்க்களத்தில் பெற்ற அரிய அனுபவத்தினால் அவ்விதம் பாடுகிறான் என்று பொருள்கொள்வார் உண்டா! அதுபோல, வீரமூட்ட, இதுபோல ஆரியராவது மண்ணாங் கட்டியாவது! நடுவீதியில் அடித்தாலும் கேட்க நாதி ஏது என்று பேசுவதன்மூலம், சமூகத்தில் தன்னம்பிக்கை அற்று, தாசர் நிலைபெற்று, எடுப்பார் கைப்பிள்ளையாய், ஏவல்புரிபவராய், எடுபிடியாய்க் கிடப்பவர்களின் உள்ளத்தில் வீரம் முளைத்திடச் செய்யலாம் என்பதற்காகக் கூறி இருக்கக் கூடும். அல்லது, ஆரியர் உண்மையிலேயே பெற்றிருக்கும் செல்வாக்கும் வலிவும் வளருவது கண்டு அச்சப்பட்டு, வீரதீரமாகப் பேசி அந்த அச்சத்தை மறைத்துக் கொள்வதற்கும் இந்த முறை கையாளப் பட்டிருக்கக்கூடும்; இவ்விதமாகக்கூட இல்லாமல், ஏதோ இன்றைய "அயிடம்’ அது, காரசாரமாக இருக்கிறதா இல்லையா பார்த்துக்கொள் என்ற போக்கிலே எழுதப்பட்டுமிருக்கலாம்; எக்காரணம் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், நாடாளும் காங்கிரஸ் தலைவர்களுடைய போக்கைக் கவனிக்கும்போது, இந்த வீராவேசப் பேச்சுத் துளியும் பொருந்துவதாகக் காணோம். நாதியில்லை! என்று துந்துபி முழக்கம் கேட்கிறது! ஆரியர் தாக்கப்பட்டாலும் கேட்க நாதி இல்லை என்று முழக்கமிடும் நேரத்தில், "சென்னை ராஜ்ய சர்க்கார்’ என்ன செய்கிறது, தம்பி! கவனித்தாயா? ஆரியரின் மனதிலே ஒரு துளி சஞ்சலம், முகத்திலே ஒரு சிறு கோபக்குறி, பேச்சிலே ஒரு விதமான வருத்தம் தெரிந்ததும், கிடுகிடுவென ஆடி முகத்தைத் துடைக்கவும், முகமன் கூறவும், ஐயா! வருந்தற்க! பிழை பொறுத்திடுக! தவறு ஏற்பட்டிருந்தால், எடுத்து இயம்பிடுக! ஏற்ற முறையில் கழுவாய் தேடிக்கொள்ளக் காத்துக் கிடக்கிறோம்! உமது உள்ளத்தில் ஒரு துளி வேதனை தோன்றினாலும் உலகம் தாங்காதே! கோபம் கொண்டு ஐயன்மீர்! எம்மீது சாபத்தை வீசாதீர்! சரணம் ஐயா! சரணம்!- என்ற கெஞ்சிக் கூத்தாட முன் வருகிறது. விடுதலையார் கூறுகிறார் வீதியில் போட்டு அடித்தாலும் ஆரியருக்காகப் பரிந்து பேச நாதி இல்லை என்று நாடாளும் தலைவர்களோ, நான், நீ, என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வருகிறார்கள், ஆரியரின் முகக் கோணலைப் போக்க; மனவருத்தத்தை நீக்க!! ஆரியர், அடித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று சமூகமே முடிவு கட்டிவிட்டது என்ற பொருள்பட அன்பர் எழுதுகிறார்; அவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான தலைவர்களோ, தாசானு தாசர்’களாகி, ஆரியரின் தயவுக்குத் தவம் கிடக்கும் போக்கினராக உள்ளனர்! காரணம் காட்டாமல் நண்பர் "காரசாரமாக’ எழுதிவிட வில்லை; காரணம் காட்டுகிறார், நம்பிக்கையுடன். ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடித்தாலும் ஏன் என்றுகேட்க நாதி இல்லை என்கிறார், ஏன் என்ற காரணமும் கூறுகிறார். ஆரியர் செத்த பாம்புகளாகி விட்டனர்! பாம்பு உயிரோடு இல்லை, எனவே, அதைப் போட்டு அடிப்பதால் ஆபத்து இல்லை!! அந்தத் "துணிவு’ கொண்டு அடிக்கும் வீரனை, ஏன் என்று யார் கேட்கப் போகிறார்கள் - கேட்க மாட்டார்கள்! ஆனால், செத்த பாம்பை யாரும் அடிக்க மாட்டார்கள்! கூட்டுக்கோல்கொண்டு குப்பை மேட்டில் தள்ளுவர்; குப்பை குளம் போட்டுக் கொளுத்துவர்! பிரத்யேகமான இயல்பு படைத்த வீரர்தான் "செத்த பாம்பு’ கண்டதும் அடிப்பார்! ஆரியர் செத்த பாம்பு ஆகிவிட்டனர் - அதாவது செல்வாக்கு படுசூரணமாகிவிட்டது - எனவே அவர்களை எப்படித் தாக்கினாலும் ஏன் என்று கேட்க "நாதி’ இல்லை, என்று எழுதி, மகிழ்கிறார். ஆரியர் செத்த பாம்பானது எப்படி? அதற்கும் காரணம் காட்டுகிறார் - ஆரியர்களின் அட்ட காசம் பல நூற்றாண்டுகளாக இங்க எல்லைமீறிய நிலையி லிருந்தது. ஆனால் சு.ம. இயக்கத்துக்குப் பிறகு இவர்கள் செத்த பாம்புகளாகி விட்டனர்! படித்து, வீரஉணர்ச்சி பெறச் சொன்னார்களா, பிரித்துப் பிரித்து விளக்கமும் பொருத்தமும் பார்க்கச் சொன்னார்களா! அதிலும் நான் எழுதுவதை!! - என்று அந்த சோர்விலாச் சொற் போர்க் கோமான் கோபத்துடன் கூறக்கூடும் - நமக்கு அப்படி ஒரு பழக்கத்தைப் பெரியார் ஏற்படுத்திவிட்டதாலே இந்தத் தொல்லை - யார் கூறினாலும், பொருள் இருக்கிறதா, பொருத்தம் இருக்கிறதா, முன் பின் சொன்னதற்கு முரணாகாமல் இருக்கிறதா, மூலக் கருத்தினைக் கெடுத்திடாத வகையில் அமைந்திருக்கிறதா, என்றெல்லாம் பார்க்கச் சொல்கிறது! இடி ஓசை கேட்கும்போது, ஆதிதாளமா, ரூபகமா என்று யாரும் ஆராய வேண்டியதில்லை. ஆனால் மன்றத்தில் அமர்ந்து, இசைபாடும்போது, தாளம் சரியாக இருக்க வேண்டும் என்று தானே யாரும் எதிர்பார்ப்பார்கள் - அந்த முறையிலே, நான் பார்க்கிறேன், தம்பி, வேறென்ன! ஆரியருக்கு நாதி இல்லை, - இந்தப் பேருண்மையை நாட்டுக்கு அளிக்கிறார். நாதி இல்லை என்பதை விளக்க உதாரணம் தருகிறார், ஆரியரை அடித்தாலும் கேட்க ஆள் இல்லை - என்று கூறுகிறார். சந்து முனையில், இருட்டு வேளையில், ஒண்டி சண்டியாக வரும் ஆரியரை அடித்துவிட்டு ஓடிவிடும் அற்ப காரியத்தை அல்ல அவர் கூறுவது, வாசகத்தைக் கவனி, தம்பி! நடுத்தெருவில் நாள் முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது! நாள் முழுதும்! இதற்குக் காரணம், ஆரியர் செத்த பாம்பு ஆனது! ஆரியர் செத்தபாம்பு ஆனதற்குக் காரணம், சு.ம. இயக்கம்! சரி! தம்பி! இப்படி வாதம் நடத்திப்பார். சு.ம. இயக்கத்தின் பலனாக ஆரியர் செத்தபாம்பு ஆகி விட்டார்களென்றால், செத்தபாம்பை அடிக்கக் கிளம்புவானேன். நடுத்தெருவில், நாள் முழுவதும் செத்தபாம்பைப் போட்டு அடித்துக் கொண்டு கிடப்பானேன்! கோபத்தால் ஒரு தாவு தாவுவார் நண்பர், இவ்விதம் வாதாடினால். எனவே அவருக்கு அல்லல் வேண்டாம், அந்த வாதத்தை இந்த அளவுடன் நிறுத்திக்கொள்வோம். நாதி இல்லை என்கிறாரே, அது பொருந்துகிறதா, என்று இந்தக் கிழமை சட்டசபை நடவடிக்கையைப் படித்துவிட்டு எனக்குக் கூறு தம்பி! நடுத்தெருவில் நாள் முழுவதும் அடித்தாலும், கேட்க நாதி இல்லை என்று அரிய உண்மையை, செயல்மூலம் செய்து காட்டிடும், அரும்பெரும் காரியத்தை அவர்கள் செய்யவிட்டு விடு - அவர்களுக்கே அந்த ஏகபோக உரிமை இருக்கட்டும்! ஆரியரை இப்போது யாரும் அடிக்கவில்லை! சர்க்கார் சில பிரச்சாரத் தாட்களை அச்சடித்தனர். நாதி இல்லை! நண்பரின் திருவாக்கல்லவா இது! சர்க்கார், அச்சடித்தார்கள், ஆரியர் எச்சரித்தார்கள்; சர்க்கார் அச்சடித்ததை அழித்தொழித்தாôகள். நடுவீதியில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் கேட்பதற்கு நாதி இல்லா நிலைக்கு இது எடுத்துக்காட்டா, தம்பி! எண்ணிப்பார்! தீண்டாமை ஒழிப்பு சர்க்கார் திட்டத்திலே ஒன்று - மிக முக்கியமானதும் கூட! அரசியல் சட்டம் இதை வலியுறுத்துகிறது. நாட்டு மக்களுக்கு இதை எடுத்துக்காட்டி, நல்லறிவுச் சுடர் கொளுத்த, அரிஜன இலாகாவின் மூலம், சர்க்கார், பிரசாரத் தாட்கள் வெளியிட்டு, நாடெங்கும் அனுப்பினர். தம்பி! சர்க்கார் வெளியிட்டதை அநேகமாக நீ கண்டிருக்கமாட்டாய், நமது கழகம் அதுபோல அச்சிட்டு அனுப்பியது கண்டிருப்பாய்! இப்போதும் ஒரு முறை, அதைப் பார், தம்பி! அதிலே, ஆரியரை இழிவுபடுத்துவது என்ன காண்கிறோம்!! மோட்ச லோகம் என்று புரட்டுப் பேசி என்னிடம்பறித்த பொருளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறாயா, முழு மோசக்காரா! இறக்கு மூட்டையை! எடு ஓட்டம்!! என்று கேட்டு, ஒரு சிறு கூட்டம், ஆரியனை அடித்து விரட்டுவது போலப் "போஸ்டர்’ அல்ல அது. ஐயா! உலகோரே! உங்கள் நாட்டிலெல்லாம் இல்லாத ஒரு அதிசயம் காணீர் இதோ இவன், பிரமனின் முகத்தில் பிறந்தவன்! என்று கூறி, ஆரியரை, மற்ற நாட்டவரிடம் காட்ட, அவர்கள் கைக் கொட்டிச் சிரித்து, மடத்தன மிக்கவனே! அப்படியா கூறினாய்? என்று கேட்டுக் கேலி செய்வது போன்ற, பிரசார போஸ்டர் அல்ல! பிச்சைக்காரன் கோலம், பெருந்திண்டிக்காரன் கோலம் காட்டிடும் போஸ்டர்கூட அல்ல! தீண்டாதவனை, தொடாதே என்று கூறும், வைதீகன் சர்க்கார் சட்டப்படி, சிறையில் தள்ளப்படுகிறான் என்பதை விளக்கும் போஸ்டர்! இது, ஆரியருக்கு ஆத்திர மூட்டிவிட்டது! செத்த பாம்பு, படமெடுத்தாடிற்று! சென்னை சர்க்கார், “நாக பூஜை’ செய்து,”சினம் விடுக! பிழை பொறுத்திடுக’ என்று கெஞ்சுகிறது! டால்மியாபுரம், கல்லக்குடி ஆக்கப்படவேண்டும் என்பதற்கான கிளர்ச்சி, பொதுமக்களிடம் பரவி இருந்ததுபோல, இரயில்வே ஸ்டேஷன் போர்டுகளில் இந்தி ஆதிக்க மொழி இருப்பது அக்ரமம், அதனை அழித்திட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சி நாட்டில் வலிவுடன் வடிவெடுத்ததுபோல, தமிழரின் எல்லையைப் பிற மொழியாளர் பறித்திடும் அக்ரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற கிளர்ச்சி, நல்லோர் உள்ளத்தை எல்லாம் தொட்டு, நாட்டிலே நல்ல நிலை அடைந்தது போல, ஆஹா! ஆரியரை இங்ஙனம் அவமதிப்பதா, அரசாங்கம் இந்த அக்ரமத்துக்கு இடம் தருவதா, என்று கோபித்துக் கொதித்தெழுந்து பொதுமக்கள் கேட்டனரா, என்றால் இல்லை! பார்ப்பனர்கள் சிலர் - அதிலும், சர். சி. பி. இராமசாமி ஐயர், இராமசாமி சாஸ்திரிகள், இராஜகோபாலாச்சாரியார், அனந்தராமகிருஷ்ண ஐயர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, வி.டி. இரங்கசாமி ஐயங்கார் போன்ற பிரபலஸ்தர்கள்கூட அல்ல; சிலர் கூடினர், சீறிப்பேசினர், திருச்சியில் நகர்ச்சதுக்கத்தில் - "இந்து’ ஒரு குட்டித் தலையங்கம் தீட்டிற்று. அவ்வளவுதான்! சர்க்கார், சத்தம் வரும் திக்கு நோக்கிச் சரணம்! சரணம்!! என்று கூவுகிறது!! துக்க தினம் கொண்டாடுவோம் - இந்த போஸ்டர் எமது மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது - உடனே வாபஸ் பெறுக - என்று செத்த பாம்புகள்’ கூறின. உடனே, சகல கட்சிகளையும் அணைத்துக்கொள்ளும் சரசாங்கிச் சர்க்கார், அடியற்ற நெடும்பனையாகிறது! நாதி இல்லை! பார்த்தாயா தம்பி, நாதி, யாருக்கு இல்லை என்பதை!! 30, 125 போஸ்டர்கள் அச்சிட்டனர், 5000 ரூபாய் செலவிட்டனர். ஆரியர் ஒரு சிறு கண்டனம் கிளப்பினர், அவ்வளவுதான், சர்க்கார், பாய் சுருட்டிக்கொண்டது! இந்த நிலைமைக்கு என்ன பெயர்? நாதி இல்லை என்பதா! பார்ப்பனரின் மனம் புண்படக் கூடாது என்று சர்க்கார் கருதுவதுகூட ஆச்சரியமல்ல, உமது மனம் புண்படும்படி அந்த போஸ்டர் இல்லையே என்று விளக்கம் கூறக்கூடச் சர்க்கார் அச்சப்படுகிறதே, அதுதான் உண்மையிலேயே ஆச்சரியம். தீண்டாமை எனும் கொடுமை, ஆரிய மார்க்கத்தின் விளைவு - ஆரிய மார்க்கத்தின் பாதுகாவலர் ஆரியர். ஆகவேதான் ஆரிய உருவம் பொறித்தோம் - இதை ஆட்சேபித்துப் பேசுவது அறிவற்ற செயலாகும். சர்க்கார் இத்தகைய அறிவற்ற செயலை மதிக்காது, தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளாது என்று எடுத்துரைக்கும் ஆண்மையாளர் அங்கே காணோம் - நடுவீதியில் போட்டும் அடித்தாலும் கேட்க நாதி இல்லை என்று பேசும் வீரம் இங்கே இருக்கிறது, ஏட்டில்! அந்த ஏடு, ஆட்சிக்குக் கேடயம்’ ஆகி மகிழ்கிறது! தம்பி! ஆரியர் கைகொட்டிச் சிரித்திட இதைவிட வேறு என்ன வேண்டும்? வைதீகர்கள் தீண்டாமையை ஆதரிக்கிறார்கள்; அவர்களுக்குச் சட்டத்தை நினைவுபடுத்தவே, இந்தப் போஸ்டர், இதிலே பொறிக்கப்பட்டுள்ள உருவம், பார்ப்பனருடையது என்று பார்ப்பனர் ஏன் கருதவேண்டும்? தோழர் விநாயகம் M.L.A. இதைக் கேட்டார் - அந்த நேர்மையை நான் பாராட்டுகிறேன். உச்சிக் குடுமியும் பூணூலும் பார்ப்பனருக்கு மட்டும்தானா, வன்னியகுல க்ஷத்திரியரிலே சிலருக்கு இல்ûலா? ஆசாரி குலத்திலே இல்லையா? என்று தோழர் விநாயகம் எடுத்துக் கேட்டதுடன், சர்க்கார் இந்த எதிர்ப்புக்கு மறுப்பளிக்காமல், முதுகெலும்பற்ற முறையில், நடந்து கொண்டதை இடித் துரைத்தார். அவர் எடுத்துக் காட்டியபடி, "உச்சிக் குடுமியும் பூணூலும்’’ ஆரியரல்லாதவர்களிடமும் இருந்திடக் காண்கிறோம் - பொதுவாக, பண்டைப் பெருமையும் இந்து மத மாண்பும், உச்சிக் குடுமி பூணூல், மடிசஞ்சி போன்ற கோலத்தில் இருப்பதாகக் கருதுபவர்கள், ஆரியக் கோலத்தில் உள்ள திராவிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போஸ்டர், பார்ப்பனரைக் குறிப்பிட்டு அல்ல, வைதீகத்தைக் குறிப்பதாக இருக்கிறது என்று சர்க்கார் விளக்கம் அளித்திருக்கலாம் - ஆனால் முதுகெலும்பு இல்லை, முப்புரியினரின் கோபத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லை; எனவே சரணாகதி அடைகிறது! தம்பி! இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்ப்பன ரல்லாதாருக்கு "வேலைகள்’ கொடுத்ததாம் இந்தச் சர்க்கார் - இதற்கே வெண்சாமரம் வீசுகிறோம் என்கிறார்கள் - வேடிக்கை அதுகூட அல்ல, நாங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகிறோம் தெரியுமா. நீ வெண்சாமரம் வீசலாம் என்று எண்ணுகிறாய், உனக்கு அந்த இடம் தரக்கூடாது, என்பதற்காகவே நாங்கள் வெண்சாமரம் வீசுகிறோம் என்று வாதாடுகிறார்களே, அதுதான் வேடிக்கை போகட்டும் வலி எடுக்கும் வரையில் வீசட்டும். ஆனால் ஒன்று! பார்ப்பனரல்லாதாருக்கு வேலைகள் கொடுத்து விடுவதால், ஆரிய ஆதிக்கத்தை ஒழித்துவிடமுடியுமென்றால், அந்தத் திட்டத்தை மட்டுமே மலை என நம்பிவந்த ஜஸ்டிஸ் கட்சி போதுமென்று இருந்துவிட்டிருக்கலாமே! ஆரிய ஆதிக்கம் என்பது அவ்வளவு எளிதாக, சிலபதவி களைப் பார்ப்பனரல்லாதார் பெறுவதன் மூலமாக மட்டுமே போகக்கூடியதுமல்ல, ஆரியரை அடித்து விரட்டுவோம், நடு வீதியில் நாள் முழுதும் அடித்தாலும் கேட்க நாதி கிடையாது என்று பேசிவிடுவதால் போகக்கூடியதுமல்ல. ஆரியர் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினரிடம் இன்னும் பெருமளவுக்கு இருப்பத னாலும் ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆள வந்தார்கள் இருப்பதினாலும்தான். எனவேதான் தம்பி! நமது கழகம், ஆரியரை ஒழித்திடும் வேலையை அல்ல, ஆரியத்தை ஒழித்திடும் வேலையில ஈடுபடுகிறது! இது ஆரியரை ஆதரிக்கும் அற்பத்தனம் என்று கூறுவோர், நாம் மனித உருவம் பெற்றிருப்பதே சகிக்க முடியாத அக்ரமம் என்ற அளவுக்குத் "துவேஷம்’ கொண்டவர்கள். ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன் காமராஜரின் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்ட மாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம். ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம். “போஸ்டர் விஷயத்திலே,”சர்க்கார்’ இந்த அளவுக்கு ஆரியரிடம் அச்சப்பட்டு அடிபணிகிறது என்றால், அக்ரகாரத்தைக் கொளுத்த பெட்ரோல் டின்கள் வாங்கித்தரும் என்று எதிர்பார்த்தா, அதற்குச் சாமரம் வீசிக்கொண்டு கிடப்பது! தமிழரிடம் பற்றும் பரிவும் கொண்ட ஒரு சர்க்காருக்காக நாம் தவம் கிடந்தது கண்டு காலதேவன் கருணைகொண்டு, காமராஜர் சர்க்காரை நமக்கு அருளி இருப்பதுபோலவும், இந்தச் சர்க்காருடைய சக்தியைத் துணைகொண்டு, ஆரியரை ஒழித்திடும் காரியத்தைக் கூடச் சாதித்துக் கொள்ளலாமென்றும் பகற்கனவு காண்போருக்கு, இந்த சர்க்காரும் ஏனைய சர்க்கார் போலவே ஆரியருக்கு அடிபணியும் சர்க்கார்தான் என்பதைச் சென்ற கிழமை சட்டசபைப் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை! எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்! கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்! படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்! மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்! ஆரியம், ஒரே இடத்தில், ஒரே கூட்டத்தாரிடம், ஒரே முறையில் இருக்குமானால், அந்த ஒரு இடத்தை, ஒரு கூட்டத்தை, ஹிட்லர், யூதர்களை விரட்டினானே, அதுபோலச் செய்துவிடவேண்டும் என்று பேசுவது, ஓரளவுக்காவது பொருத்தமானதாகத் தெரியக்கூடும். ஆனால், ஆரியம், இருக்கும் இடம், அக்ரகாரம் மட்டுமல்ல! பாரேன், தம்பி! ஆரிய ஆச்சாரியார் விலகினார், திராவிடக் காமராஜர் வந்தார் என்று, "உருவம்’ கண்டு உள்ளம் பூரித்துக் கிடந்தது என்ன ஆயிற்று! ஆரியம் திராவிட உருவினர் ஆட்சியிலும் இருந்துகொண்டு, வெற்றி! வெற்றி! என்று கொக்கரிக்கிறதே! எனவே, நமது மணி தம்பி! அக்ரகாரத்தை நோக்கிப் படை எடுத்து அதை "பஸ்மீகரம்’ செய்துவிடப் போவதாகக் கூறிவருவது அல்ல; ஆரியம் இருக்கும் இடம் எல்லாம் அறிவு சுடர்கொளுத்தி அதன் மூலம், ஆரியத்தை ஒழிப்பது ஆகும்! உடல் படபடவென ஆடாது. உள்ளம் “கிடுகிடு’ வெனக் குதிக்காது! பேச்சிலே, எள்ளும் கொள்ளும் வெடிக்காதே!- இந்தத் திட்டத்தில் என்பார்கள் - ஆனால், வெற்றிக்கு வழி நாம், கொண்டிருப்பதுதான், அது இராயபுரத்து”அரை டஜன் சிறுவர்கள் தீட்டியதுமல்ல, பெரியார் தந்த திட்டம்!! அன்புள்ள அண்ணாதுரை 9-10-1955 அத்தர் வியாபாரம் லெனின் கிராட் முன்னும் பின்னும் பல்கலைக் கழகத்தில் இராதாகிருட்டிணன் கருத்துரை திராவிடர் இழி நிலை தம்பி! லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினீர் - தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது - இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின் கிராட் - பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது - இலட்சியபுரி அது? மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும் பெரும்புரட்டன் ஆட்டிப்படைத்து வந்தான். தூணிலும் துரும்பிலும். கல்லறையிலும் காணாறு பாயும் காடுகளிலும், பிலங்களிலும் பிம்பங்களிலும், தேவனைக் கண்டனர்- கண் மூடிக்கிடந்த மக்கள்; காலடிவீழ்ந்து காணிக்கைக் கொட்டினர் மத குருமார்களுக்கு! கபட வேடதாரிகளோ, கைகூடாக் காதலுக்கும் பிடிபடாக் கோட்டைக்கும், நவநிதிபெறுவதற்கும், “நல்லவிளைவு’ கிடைப்பதற்கும், எதற்கும் பிரார்த்தனை - ஆசி தாயத்து - மந்திரக் கயிறு கவசம் தருவர் - மக்கள் ஏமாற்றப்பட்டோம் என்று எண்ணினதில்லை, எம்மான் அருளை இவர் மூலம் பெற்றோம் என்றெண்ணிப் பூரித்தனர். வறுமை வாட்டும், குளிர் கொட்டும், குழந்தைகள்”கோ’ வெனக் கதறும், குமரிகள் உடலை விற்று உருமாறி உழல்வர், - கோயிலில் மணிகள் ஒலிக்கும், குருவின் பவனி கோலாகலமாக நடைபெறும், "தர்மதாதா’க்கள் திருவிழா நடத்துவர், ஆசி அளித்திடும் அருளாளர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில், ஏராளமான எடு பிடிகளும், பொறுக்கி, எடுக்கப்பட்ட பொற்கொடிகளும் புடைசூழ கொலு வீற்றிருப்பர்! கயற்கண்ணழகி ஒருவளைக்கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்து, பெருமூச்செறிந்து, அந்தக் கட்டழகி! கன்னல் மொழியாள்! மின்னல் இடையாள்! பேசும் பேரின்பம்! எனக்குக் கிட்டிட மார்க்கமொன்று காட்டிட வேண்டும் , மாதவம் செய்தவரே! மனிதகுலத்தை உய்விக்க வந்த மகானே! என்று இறைஞ்சி, பொன்னும் பொருளும் காலடியில் கொட்டி, கண்ணீர் சிந்தினால், மூவாசையைத் துறந்து, துறந்ததால் மூலத்தை உணர்ந்து “மேலோன்’ என்ற விருதுபெற்ற”குருமார்கள்’ காதற்கனியை அந்தக் கனவான் பெறுவதற்கான "ஆசி’ அருளுவார்!! கட்டணம், காரிகையின் அழகுக்குத் தக்கபடி! காளையைத் துளைத்திடும் காமக் கணையின் கூர்மைக்கு ஏற்ற வண்ணம் அமைந்திருக்கும்! ஏழை எளியோர்களை ஏறெடுத்துப் பாரார்போலும் இந்தக் "குருமார்’ என்று எண்ணிவிடாதே தம்பி! ஏழைக்கும் குருமார்களுக்கு இரையாகிடும் வாய்ப்புக் கிடைத்திடும். “அம்மை நோய் ஐயனே, என் ஐந்தாண்டுப் பாலகனுக்கு அருகே நெருங்கவே முடியவில்லை! அவன் போடும்,”ஐயோ அம்மா‘வைக் கேட்க முடியவில்லை! ஆவி துடித்திடும் நிலை!’’ என்று ஏழை அழுதபடி கூறுவான், அருளை விற்றிட அங்காடி வைத்திருந்த அதிசய மனிதர்கள், “சக்திக்கேற்றபடி’ காணிக்கைத் தரச் சொல்லுவர் - ஜெபமாலையால் புனிதப்படுத்தப்பட்ட ஆடை, அருளாலயத் தோட்டத்து மூலிகை, அபிஷேக நீர் - இப்படி ஏதேனும் தருவர்! இவ்வளவு எதற்கு! விளைச்சல் சரியாக இருப்பதற்காக, நிலத்தில்,”மந்திர நீர்’ தெளித்திடும் கைங்கரியம் செய்யும் மகான்களும் இருந்தனர்! அப்படிப்பட்ட நாட்டிலே, லெனின் பிறந்தார் - பாடுபட்டார் - வெற்றி பெற்றார் அதனை எடுத்துக் காட்டவே அந்த எழில் நகருக்கு, லெனின் கிராட் என்று பெயர்! கூனன், ஏறு நடையோனானான்! விழியற்றவன், கனல் கக்கும் கண்ணினனானான்! ஊமை, பேசினான்! கொடுமை ஒழிந்தது! புதுமை பூத்தது! புதுமுறை ஏற்பட்டது! மதத்தைக் காட்டி ஏய்த்த மாபாவிகளை, மக்களின் திரண்டெழுந்த சக்தி மண்ணோடு மண்ணாக்கிற்று! அத்தகைய லெனின் கிராட் நகரில், சாமான்யர்கள்கூட அல்ல, பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மதம் வேண்டும்! என்று இன்று கேட்கிறார்கள் என்று இந்தியக் குடிஅரசுத் தலைவருக்குத் துணைசெய்பவராக விருது பெற்றுத் திகழும் வேதியர், வேத வேதாந்த வித்தகர். வியாகர்ணப் பண்டிதர், தத்துவாசிரியர், இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்! "அப்படியா! ஆஹா! ஆண்டவன் கருணையே கருணை! நாத்திகம் நசித்ததா! நாதன் அருளை நாடுகின்றார்களா! ஈசன் பெருமையே பெருமை! ஈதன்றோ அருமை! - என்று ஆதீனங்களும் அருளாலய அதிபர்களும் மட்டுமல்ல, சுட்ட சட்டியை ஏந்திப் பிழைத்திடுவோரும், காவிகட்டியதால் வயிறு நிரம்பிற்று என்று எண்ணுவோரும், மொட்டைத் தலையரும், காவடிச் சாமியாடிகளும் கூடக் களிநடனம் புரிவர்! டாக்டர் இராதாகிருஷ்ணனேகூட, பெருமிதத்துடன்தான் பேசுகிறார் - பரோடாவில் இந்தத் திங்கள் பத்தாம் நாள். லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர் களையும் மாணவர்களையும், நான் என் வழிக்குக் கொண்டு வந்து விட்டேன். வாதாடினர் திறமையாக - என் எதிர் வாதம் கேட்டுத் திடுக்கிட்டனர்! கடாவினர், நான் வீசிய பதில்களைக் கண்டு கவிழ்ந்தனர்! அப்பப்பா! என்னென்ன கேள்விகள், எத்தனை குறுக்குக் கேள்விகள்! இவ்வளவுக்குப் பிறகு, அவர்கள் ஆம்! ஆம்! தாங்கள் கூறும் மதத்தை நாங்களும் விரும்புகிறோம் - ஏற்றுக் கொள்ள இசைகிறோம் என்று கூறினர் - என்கிறார். பாமர மக்காள்! பாமர மக்காள்! பண்டித ஜவஹர் ஏதேதோ நாடுகளில் பவனி வருகிறார், தலைவர்களைக் காணுகிறார், வெற்றி மாலை சூடுகிறார், என்றெல்லாம் பேசிக் கிடக்கிறீர்களே, நான் என்ன செய்திருக்கிறேன், எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறேன், எத்தகையவர்களை நம் வழிக்குத் திருப்பி இருக்கிறேன் என்பதை அறியாமற் கிடக்கிறீர்களே கூறுகிறேன் கேண்மின், லெனின் கிராட் நகரப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் மதத்தை ஏற்றக் கொள்ளச் செய்திருக்கிறேன் - மகத்தான வெற்றி அல்லவா, அகிலம் புகழத் தக்க வெற்றியல்லவா இது! லெனின்கிராடில் மதத்துக்கு இடம் கிடைக்கும்படி செய்துவிட்டேன்! மதம் மக்களுக்கு அபின் என்று எங்கு பேசப்பட்டதோ, அங்கு, மதம் தேவைதான் எங்களுக்கும் மதம் வேண்டும் என்று பேசச் செய்துவிட்டேன், இந்த மகத்தான வெற்றி பெற்றதும், சாமான்யமான முயற்சியால் அல்ல, மெத்தச் சிரமப்பட்டு, விளக்கமளித்து, தர்க்கம் நடத்தி, கேள்விக் கணைகளைத் தூளாக்கி, சந்தேகத்தைத் துடைத்து, பிறக வெற்றி பெற்றேன்!- என்ற கருத்துப்பட டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தம்பி, என்ன சொன்னதால், இந்த "வெற்றி’ கிடைத்தது தெரியுமா! அதைத் தெரிந்துகொள்ள, ஒரு சிறுகதை, கூறுகிறேன் கேள். யாருக்கும் அடங்காத, எவரையும் எதிர்க்கும் முரடன் ஒருவன் இருந்தானாம் ஒரு ஊரில்! (ஊருக்கு ஒரு முரடன் போதுமல்லவா!) எதிரே யார் வந்தாலும், கன்னத்தில் ஒரு அறை கொடுப்பானாம். பற்கள் முப்பத்து இரண்டும் பொலபொல வெனக் கீழே உதிர்ந்து போகுமாம். அப்படிப்பட்டவனிடம் அந்த ஊரிலேயே, "தொடைநடுங்கி’ என்று யாவராலும் என்ளி நகையாடப்பட்டு வந்த ஒருவன், சென்றானாம் - சவாலுக்கு! ஒரு நாள்! ஊரே அதிசயப்பட்டது! ஒரு மணி நேரத்துக்கெல்லாம், வெற்றி! வெற்றி! என்று கூவியபடி, ஊருக்குள் வந்தான். வந்தவனை ஊரார் சூழ்ந்து கொண்டு என்ன சேதி! என்ன சேதி! என்று ஆவலோடு விசாரித்தனர். அவன் பெருமையாக என்னை அவன் அடிக்கவில்லை! என் பற்களை உதிர்க்கவில்லை என்று சொன்னானாம்! "எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கன்னத்தில் அடித்து பற்களை உதிரச் செய்பவன், உன்னைமட்டும், சும்மாவிட்ட காரணம் என்ன?’’ ஊரார் கேட்கிறார்கள்! "காரணமா? என் சாமர்த்தியம்தான்!’’ என்றான் தொடை நடுங்கி. "என்ன நடந்தது! எப்படி அவனைச் சமாளித்தாய்? விவரமாகச் சொல்லு’’ என்று கேட்டனர் ஊர் மக்கள். அவன் சொன்னான். “நேராக அவனிடம் சென்றேன். கன்னத்தில் அடிக்க கையை ஓங்கினான்! நிறுத்து! நிறுத்து! உன்னால் என்னை அடித்து, என் பற்களை உதிர்க்க முடியாது என்றேன். என்ன சொன்னாய்! என்ன சொன்னாய்! என்று அவன் கொக்கரித்தான். நீ கொக்கரித்து என்ன பலன்? நிச்சயமாகச் சொல்கிறேன். உன்னாலே, என் பற்கள் உதிரும்படி அடிக்கமுடியாது! பந்தயம் கட்டுகிறேன் என்றேன். அவனுக்குப் பிரமாதமான கோபம், அடே அற்பப்பயலே! சுருள் கத்திசுப்பன், அரிவாள் கந்தன், சம்மட்டி சதாசிவம் போன்ற சூரனெல்லாம், என்”அறை’ பட்டதால், “பொக்கை’ வாயர்களாகிப் போனார்கள்! நீ சுண்டைக்காய்! என் முன்னாலே சூரத்தனமா பேசுகிறாய்! என்று மிரட்டினான், கண்களை, உருட்டினான், நான்;”அப்பா நீ அசகாயச் சூரனாக இருக்கலாம்! நீ கொடுத்த அறையிலே, வீராதி வீரனுக்கெல்லாம் பல் போயிருக்கலாம். ஆனால், என்னை அறைந்து என் பற்களை உதிரச் செய்யமட்டும் உன்னாலே முடியாது; இது உறுதி - என்ன பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன்’’ என்றேன். அவனுக்குத் தலைகால் தெரியாத கோபம் வந்துவிட்டது - “ஆஹா! பந்தயமா உன் பற்களை என்னால் உதிர்க்க முடியாமல் போனால், இனி ஒருவனையும் நான் கன்னத்தில் அடிப்பதில்லை! என்றான், சத்தியமாகவா என்றேன். ஆமாம், என்று கூறிவிட்டு கையை ஓங்கினான். உடனே நான்,”நிறுத்து! நிறுத்து!’’ என்று கூறியபடி என் வாயைத் திறந்து காட்டினேன்! பயல் கல்லாகிப் போனான்! ஏன் தெரியுமா? என் வாயிலே ஒரு பல்கூடக் கிடையாது! எனக்குத்தான் பற்கள் இல்லையே! என்ன செய்வான்! தோற்று விட்டான்! அட பாவிப் பயலே இந்தச் சூது தெரியாமல் போய்விட்டதே? எங்கே உன்னுடைய பற்கள்? என்று கேட்டான்; பற்களை உதிரச் செய்யும் சூரப்புலி நீ ஒருவன்தானா, நேற்றிரவே என் பற்களை உதிர்த்து விட்டாள், என் மனைவி, என்றேன். உண்மையும் அதுதான் அவன் "இடி இடி’ எனச் சிரித்துவிட்டு, பல்லே இல்லாதபோது, பல்லை எப்படி உடைக்க முடியும். பயலே, நீ கெட்டிக்காரன்தான், என்ற என்னைப் பாராட்டினான். இது அவன் சொன்ன கதை. கேட்ட ஊர் மக்களும் கை கொட்டிச் சிரித்தனர். ஏற்கனவே மனைவி கொடுத்த அறையால் பல்லை இழந்துவிட்ட காரணத்தால், அறை கொடுத்துப் பற்களை உதிரச் செய்யும் முரடனை அவனால் "ஜெயித்திட’ முடித்தது. அதுபோல டாக்டர் இராதாகிருஷ்ணன், லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும் நடந்து கொண்டதால் வெற்றி கிடைத்திருக்கிறது. புதிய அறிவின் காரணமாக, மதத்திலே எந்தெந்த ஆபாசங்கள் புரட்டுகள், உள்ளனவோ அவைகளெல்லாம் உதிர்ந்து போய்விட்டன - தத்துவம் மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது - அந்த தத்துவத்தைக் காட்டி, இந்து மத்தை ஏற்றுக் கொள்ள என்ன தடை என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்வார்கள்? என்ன சொன்னான் கதையில் வரும் முரடன்! அது போலத்தான். லெனின் கிராட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் இவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்டனர் - என்ன பதிலளித்தார் என்பதுபற்றி, இந்த வேதாந்தி தம்முடைய பரோடா சொற்பொழிவிலே கூறவில்லை. மதம் என்றால், சத்தியத்தை, நற்குணத்தை, அழகை நாடிக் கண்டறிவது என்று சொன்னேன்; அந்தப் பேராசிரியர்களும் மாணவர்களும், சரி சரி! சந்தோஷம்! இதுதான் மதம் என்றால், அந்த மதத்தை நாங்களும் விரும்பு கிறோம் என்று கூறினர் என்று இவர் கூறுகிறார். பற்கள் இருந்தால், கொடுக்கிற அறையில், பொல பொல வென உதிர்ந்திருக்கும், பற்கள் இல்லை. எனவே அறைவிழ வில்லை - கதையில். "பாரதத்தில்’ மதம் என்பதன் பெயரால் என்னென்ன இருக்கிறது, எத்தகைய இழிதன்மைகள், கொடுமைகள், மடைமைகள், ஆதிக்கம், என்பதை எல்லாம், காட்டாமல், மதம் என்றால் உண்மையை உணருவது, நற்குணத்தை நாடுவது, அழகை அடைவது என்று கூறினார். கூறவே, இதுதானா, மதம், இம்மதம் எமக்கும் சம்மதமே என்றனர், லெனின் கிராட் மக்கள். சத்தியம் - சன்மார்க்கம் - அழிவில்லா அழகு! இதை யார் இல்லை, என்பர் எவர் வேண்டாமென்பர்! உண்மையை உணரவும், உத்தமனாக வாழவும் வழி வகுப்பதே மதம் என்று கூறவதை யார் மறுப்பர்! லெனின் கிராட் வாசிகளிடம், “மதம்’ - பாரதத்தில் என்னென்ன”வடிவம்’ கொண்டு இருக்கிறது, என்னென்ன நினைப்புகளுக்கு இடமளிக்கிறது, எவ்விதமான நடவடிக்கைகளைச்செய்யச் செய்கிறது, என்பனவற்றை விளக்க, சித்தரித்துக் காட்டிவிட்டு, இதுதான் மதம், எமது மதம், எமது முன்னோர்கள் காலமுதல், சிதையாமல் இருக்கும் மதம், என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசிவிட்டு, பிறகு, மதம் வேண்டுமா? என்று கேட்டிருந்தால், தெரிந்திருக்கும் வேடிக்கையாகவும் இருந்திருக்கும் பற்களோடு போயிருந்தா லல்லவா, தெரிந்திருக்கும் - கதையில் நாம் கண்ட "தொடை நடுங்கி’ அவன்தான், பற்களை ஏற்கனவே அவனைப் பதியாகக் கொண்டிருந்த பஜாரிக்கு அர்ப்பணித்து விட்டானே. டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள், ஊரும் உலகமும் தம்மையும் தமது திறமையையும் மெச்சும்படியாக நடந்து கொள்வதற்காக, அங்கெல்லாம் சென்று, மதமென்றால், அன்பு அறிவு உண்மை பண்பு அழகு என்றெல்லாம், பேசிவிடுகிறார்கள், இங்கு அவர்கள் காண்பது என்ன? ஆமை அனுமான் வராகம் காளை போன்ற வாகனாதிகளிலே ஏறும் சாமிகள்! அவைகளைச் சுமந்து, “காப்புக் காச்சி’ போல உடலம் படைத்தவர்கள்! மேலே அமர்ந்து மேனியில் பூசப்பட்டுள்ள சந்தனக் குழம்பை”விசிறி’ ஆறவைக்கும் விப்பிரர். காவடி மோடி சூலம் வீதியில் புரள்வது வேல்குத்தி ஆடுவது மொட்டை அடித்துக்கொள்வது கண்ட குட்டையில் புரள்வது! இவை போன்றவைகள்! சத்யம் சன்மார்க்கம் அழகு லெனின் கிராடிலே இது பேச்சு, வெண் பொங்கல் புளியோதரை தயிரன்னம் அக்கார வடிசல் ஆரியருக்கு மானியம் விடுவது காணிக்கை கொடுப்பது திராவிடர் செய்யும் திருப்பணி! கேள்விகள் கேட்டனர் என்கிறார் - பதிலும் அளித்தாராம், சொல்கிறார். தம்பி, அங்கு என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை அவன் கூறவில்லை. போகட்டும். இங்கு, நீயோ நானோ கேட்கும் கேள்விகளுக்கு இவரும் இவரைப் போன்றாரும் பதில் கூறுவாரா, சபிப்பர். கேட்க வேண்டியது ஒன்றா இரண்டா, ஓராயிரம் உண்டே, எதற்குத்தான் பதிலளிக்க முடியும். இங்கே உள்ள குப்பை கூளத்தைக் கூட்டிச் சுத்தம்செய்ய முடியவில்லை, அங்கே போனாராம், அற்புதமாகப் பேசினாராம், வெற்றி பெற்றாராம். பளா, பளா, அடுக்களை நாற்றத்தைக் கழுவாமல் அத்தர் வியாபாரம் செய்யப் போனது போலல்லவா இருக்கிறது. அன்புள்ள அண்ணாதுரை 16-10-1955 அத்தர் வியாபாரம் லெனின் கிராட் முன்னும் பின்னும் பல்கலைக் கழகத்தில் இராதாகிருட்டிணன் கருத்துரை திராவிடர் இழி நிலை தம்பி! லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினீர் - தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது - இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின் கிராட் - பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது - இலட்சியபுரி அது? மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும் பெரும்புரட்டன் ஆட்டிப்படைத்து வந்தான். தூணிலும் துரும்பிலும். கல்லறையிலும் காணாறு பாயும் காடுகளிலும், பிலங்களிலும் பிம்பங்களிலும், தேவனைக் கண்டனர்- கண் மூடிக்கிடந்த மக்கள்; காலடிவீழ்ந்து காணிக்கைக் கொட்டினர் மத குருமார்களுக்கு! கபட வேடதாரிகளோ, கைகூடாக் காதலுக்கும் பிடிபடாக் கோட்டைக்கும், நவநிதிபெறுவதற்கும், “நல்லவிளைவு’ கிடைப்பதற்கும், எதற்கும் பிரார்த்தனை - ஆசி தாயத்து - மந்திரக் கயிறு கவசம் தருவர் - மக்கள் ஏமாற்றப்பட்டோம் என்று எண்ணினதில்லை, எம்மான் அருளை இவர் மூலம் பெற்றோம் என்றெண்ணிப் பூரித்தனர். வறுமை வாட்டும், குளிர் கொட்டும், குழந்தைகள்”கோ’ வெனக் கதறும், குமரிகள் உடலை விற்று உருமாறி உழல்வர், - கோயிலில் மணிகள் ஒலிக்கும், குருவின் பவனி கோலாகலமாக நடைபெறும், "தர்மதாதா’க்கள் திருவிழா நடத்துவர், ஆசி அளித்திடும் அருளாளர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில், ஏராளமான எடு பிடிகளும், பொறுக்கி, எடுக்கப்பட்ட பொற்கொடிகளும் புடைசூழ கொலு வீற்றிருப்பர்! கயற்கண்ணழகி ஒருவளைக்கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்து, பெருமூச்செறிந்து, அந்தக் கட்டழகி! கன்னல் மொழியாள்! மின்னல் இடையாள்! பேசும் பேரின்பம்! எனக்குக் கிட்டிட மார்க்கமொன்று காட்டிட வேண்டும் , மாதவம் செய்தவரே! மனிதகுலத்தை உய்விக்க வந்த மகானே! என்று இறைஞ்சி, பொன்னும் பொருளும் காலடியில் கொட்டி, கண்ணீர் சிந்தினால், மூவாசையைத் துறந்து, துறந்ததால் மூலத்தை உணர்ந்து “மேலோன்’ என்ற விருதுபெற்ற”குருமார்கள்’ காதற்கனியை அந்தக் கனவான் பெறுவதற்கான "ஆசி’ அருளுவார்!! கட்டணம், காரிகையின் அழகுக்குத் தக்கபடி! காளையைத் துளைத்திடும் காமக் கணையின் கூர்மைக்கு ஏற்ற வண்ணம் அமைந்திருக்கும்! ஏழை எளியோர்களை ஏறெடுத்துப் பாரார்போலும் இந்தக் "குருமார்’ என்று எண்ணிவிடாதே தம்பி! ஏழைக்கும் குருமார்களுக்கு இரையாகிடும் வாய்ப்புக் கிடைத்திடும். “அம்மை நோய் ஐயனே, என் ஐந்தாண்டுப் பாலகனுக்கு அருகே நெருங்கவே முடியவில்லை! அவன் போடும்,”ஐயோ அம்மா‘வைக் கேட்க முடியவில்லை! ஆவி துடித்திடும் நிலை!’’ என்று ஏழை அழுதபடி கூறுவான், அருளை விற்றிட அங்காடி வைத்திருந்த அதிசய மனிதர்கள், “சக்திக்கேற்றபடி’ காணிக்கைத் தரச் சொல்லுவர் - ஜெபமாலையால் புனிதப்படுத்தப்பட்ட ஆடை, அருளாலயத் தோட்டத்து மூலிகை, அபிஷேக நீர் - இப்படி ஏதேனும் தருவர்! இவ்வளவு எதற்கு! விளைச்சல் சரியாக இருப்பதற்காக, நிலத்தில்,”மந்திர நீர்’ தெளித்திடும் கைங்கரியம் செய்யும் மகான்களும் இருந்தனர்! அப்படிப்பட்ட நாட்டிலே, லெனின் பிறந்தார் - பாடுபட்டார் - வெற்றி பெற்றார் அதனை எடுத்துக் காட்டவே அந்த எழில் நகருக்கு, லெனின் கிராட் என்று பெயர்! கூனன், ஏறு நடையோனானான்! விழியற்றவன், கனல் கக்கும் கண்ணினனானான்! ஊமை, பேசினான்! கொடுமை ஒழிந்தது! புதுமை பூத்தது! புதுமுறை ஏற்பட்டது! மதத்தைக் காட்டி ஏய்த்த மாபாவிகளை, மக்களின் திரண்டெழுந்த சக்தி மண்ணோடு மண்ணாக்கிற்று! அத்தகைய லெனின் கிராட் நகரில், சாமான்யர்கள்கூட அல்ல, பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மதம் வேண்டும்! என்று இன்று கேட்கிறார்கள் என்று இந்தியக் குடிஅரசுத் தலைவருக்குத் துணைசெய்பவராக விருது பெற்றுத் திகழும் வேதியர், வேத வேதாந்த வித்தகர். வியாகர்ணப் பண்டிதர், தத்துவாசிரியர், இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்! "அப்படியா! ஆஹா! ஆண்டவன் கருணையே கருணை! நாத்திகம் நசித்ததா! நாதன் அருளை நாடுகின்றார்களா! ஈசன் பெருமையே பெருமை! ஈதன்றோ அருமை! - என்று ஆதீனங்களும் அருளாலய அதிபர்களும் மட்டுமல்ல, சுட்ட சட்டியை ஏந்திப் பிழைத்திடுவோரும், காவிகட்டியதால் வயிறு நிரம்பிற்று என்று எண்ணுவோரும், மொட்டைத் தலையரும், காவடிச் சாமியாடிகளும் கூடக் களிநடனம் புரிவர்! டாக்டர் இராதாகிருஷ்ணனேகூட, பெருமிதத்துடன்தான் பேசுகிறார் - பரோடாவில் இந்தத் திங்கள் பத்தாம் நாள். லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர் களையும் மாணவர்களையும், நான் என் வழிக்குக் கொண்டு வந்து விட்டேன். வாதாடினர் திறமையாக - என் எதிர் வாதம் கேட்டுத் திடுக்கிட்டனர்! கடாவினர், நான் வீசிய பதில்களைக் கண்டு கவிழ்ந்தனர்! அப்பப்பா! என்னென்ன கேள்விகள், எத்தனை குறுக்குக் கேள்விகள்! இவ்வளவுக்குப் பிறகு, அவர்கள் ஆம்! ஆம்! தாங்கள் கூறும் மதத்தை நாங்களும் விரும்புகிறோம் - ஏற்றுக் கொள்ள இசைகிறோம் என்று கூறினர் - என்கிறார். பாமர மக்காள்! பாமர மக்காள்! பண்டித ஜவஹர் ஏதேதோ நாடுகளில் பவனி வருகிறார், தலைவர்களைக் காணுகிறார், வெற்றி மாலை சூடுகிறார், என்றெல்லாம் பேசிக் கிடக்கிறீர்களே, நான் என்ன செய்திருக்கிறேன், எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறேன், எத்தகையவர்களை நம் வழிக்குத் திருப்பி இருக்கிறேன் என்பதை அறியாமற் கிடக்கிறீர்களே கூறுகிறேன் கேண்மின், லெனின் கிராட் நகரப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் மதத்தை ஏற்றக் கொள்ளச் செய்திருக்கிறேன் - மகத்தான வெற்றி அல்லவா, அகிலம் புகழத் தக்க வெற்றியல்லவா இது! லெனின்கிராடில் மதத்துக்கு இடம் கிடைக்கும்படி செய்துவிட்டேன்! மதம் மக்களுக்கு அபின் என்று எங்கு பேசப்பட்டதோ, அங்கு, மதம் தேவைதான் எங்களுக்கும் மதம் வேண்டும் என்று பேசச் செய்துவிட்டேன், இந்த மகத்தான வெற்றி பெற்றதும், சாமான்யமான முயற்சியால் அல்ல, மெத்தச் சிரமப்பட்டு, விளக்கமளித்து, தர்க்கம் நடத்தி, கேள்விக் கணைகளைத் தூளாக்கி, சந்தேகத்தைத் துடைத்து, பிறக வெற்றி பெற்றேன்!- என்ற கருத்துப்பட டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தம்பி, என்ன சொன்னதால், இந்த "வெற்றி’ கிடைத்தது தெரியுமா! அதைத் தெரிந்துகொள்ள, ஒரு சிறுகதை, கூறுகிறேன் கேள். யாருக்கும் அடங்காத, எவரையும் எதிர்க்கும் முரடன் ஒருவன் இருந்தானாம் ஒரு ஊரில்! (ஊருக்கு ஒரு முரடன் போதுமல்லவா!) எதிரே யார் வந்தாலும், கன்னத்தில் ஒரு அறை கொடுப்பானாம். பற்கள் முப்பத்து இரண்டும் பொலபொல வெனக் கீழே உதிர்ந்து போகுமாம். அப்படிப்பட்டவனிடம் அந்த ஊரிலேயே, "தொடைநடுங்கி’ என்று யாவராலும் என்ளி நகையாடப்பட்டு வந்த ஒருவன், சென்றானாம் - சவாலுக்கு! ஒரு நாள்! ஊரே அதிசயப்பட்டது! ஒரு மணி நேரத்துக்கெல்லாம், வெற்றி! வெற்றி! என்று கூவியபடி, ஊருக்குள் வந்தான். வந்தவனை ஊரார் சூழ்ந்து கொண்டு என்ன சேதி! என்ன சேதி! என்று ஆவலோடு விசாரித்தனர். அவன் பெருமையாக என்னை அவன் அடிக்கவில்லை! என் பற்களை உதிர்க்கவில்லை என்று சொன்னானாம்! "எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கன்னத்தில் அடித்து பற்களை உதிரச் செய்பவன், உன்னைமட்டும், சும்மாவிட்ட காரணம் என்ன?’’ ஊரார் கேட்கிறார்கள்! "காரணமா? என் சாமர்த்தியம்தான்!’’ என்றான் தொடை நடுங்கி. "என்ன நடந்தது! எப்படி அவனைச் சமாளித்தாய்? விவரமாகச் சொல்லு’’ என்று கேட்டனர் ஊர் மக்கள். அவன் சொன்னான். “நேராக அவனிடம் சென்றேன். கன்னத்தில் அடிக்க கையை ஓங்கினான்! நிறுத்து! நிறுத்து! உன்னால் என்னை அடித்து, என் பற்களை உதிர்க்க முடியாது என்றேன். என்ன சொன்னாய்! என்ன சொன்னாய்! என்று அவன் கொக்கரித்தான். நீ கொக்கரித்து என்ன பலன்? நிச்சயமாகச் சொல்கிறேன். உன்னாலே, என் பற்கள் உதிரும்படி அடிக்கமுடியாது! பந்தயம் கட்டுகிறேன் என்றேன். அவனுக்குப் பிரமாதமான கோபம், அடே அற்பப்பயலே! சுருள் கத்திசுப்பன், அரிவாள் கந்தன், சம்மட்டி சதாசிவம் போன்ற சூரனெல்லாம், என்”அறை’ பட்டதால், “பொக்கை’ வாயர்களாகிப் போனார்கள்! நீ சுண்டைக்காய்! என் முன்னாலே சூரத்தனமா பேசுகிறாய்! என்று மிரட்டினான், கண்களை, உருட்டினான், நான்;”அப்பா நீ அசகாயச் சூரனாக இருக்கலாம்! நீ கொடுத்த அறையிலே, வீராதி வீரனுக்கெல்லாம் பல் போயிருக்கலாம். ஆனால், என்னை அறைந்து என் பற்களை உதிரச் செய்யமட்டும் உன்னாலே முடியாது; இது உறுதி - என்ன பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன்’’ என்றேன். அவனுக்குத் தலைகால் தெரியாத கோபம் வந்துவிட்டது - “ஆஹா! பந்தயமா உன் பற்களை என்னால் உதிர்க்க முடியாமல் போனால், இனி ஒருவனையும் நான் கன்னத்தில் அடிப்பதில்லை! என்றான், சத்தியமாகவா என்றேன். ஆமாம், என்று கூறிவிட்டு கையை ஓங்கினான். உடனே நான்,”நிறுத்து! நிறுத்து!’’ என்று கூறியபடி என் வாயைத் திறந்து காட்டினேன்! பயல் கல்லாகிப் போனான்! ஏன் தெரியுமா? என் வாயிலே ஒரு பல்கூடக் கிடையாது! எனக்குத்தான் பற்கள் இல்லையே! என்ன செய்வான்! தோற்று விட்டான்! அட பாவிப் பயலே இந்தச் சூது தெரியாமல் போய்விட்டதே? எங்கே உன்னுடைய பற்கள்? என்று கேட்டான்; பற்களை உதிரச் செய்யும் சூரப்புலி நீ ஒருவன்தானா, நேற்றிரவே என் பற்களை உதிர்த்து விட்டாள், என் மனைவி, என்றேன். உண்மையும் அதுதான் அவன் "இடி இடி’ எனச் சிரித்துவிட்டு, பல்லே இல்லாதபோது, பல்லை எப்படி உடைக்க முடியும். பயலே, நீ கெட்டிக்காரன்தான், என்ற என்னைப் பாராட்டினான். இது அவன் சொன்ன கதை. கேட்ட ஊர் மக்களும் கை கொட்டிச் சிரித்தனர். ஏற்கனவே மனைவி கொடுத்த அறையால் பல்லை இழந்துவிட்ட காரணத்தால், அறை கொடுத்துப் பற்களை உதிரச் செய்யும் முரடனை அவனால் "ஜெயித்திட’ முடித்தது. அதுபோல டாக்டர் இராதாகிருஷ்ணன், லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும் நடந்து கொண்டதால் வெற்றி கிடைத்திருக்கிறது. புதிய அறிவின் காரணமாக, மதத்திலே எந்தெந்த ஆபாசங்கள் புரட்டுகள், உள்ளனவோ அவைகளெல்லாம் உதிர்ந்து போய்விட்டன - தத்துவம் மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது - அந்த தத்துவத்தைக் காட்டி, இந்து மத்தை ஏற்றுக் கொள்ள என்ன தடை என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்வார்கள்? என்ன சொன்னான் கதையில் வரும் முரடன்! அது போலத்தான். லெனின் கிராட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் இவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்டனர் - என்ன பதிலளித்தார் என்பதுபற்றி, இந்த வேதாந்தி தம்முடைய பரோடா சொற்பொழிவிலே கூறவில்லை. மதம் என்றால், சத்தியத்தை, நற்குணத்தை, அழகை நாடிக் கண்டறிவது என்று சொன்னேன்; அந்தப் பேராசிரியர்களும் மாணவர்களும், சரி சரி! சந்தோஷம்! இதுதான் மதம் என்றால், அந்த மதத்தை நாங்களும் விரும்பு கிறோம் என்று கூறினர் என்று இவர் கூறுகிறார். பற்கள் இருந்தால், கொடுக்கிற அறையில், பொல பொல வென உதிர்ந்திருக்கும், பற்கள் இல்லை. எனவே அறைவிழ வில்லை - கதையில். "பாரதத்தில்’ மதம் என்பதன் பெயரால் என்னென்ன இருக்கிறது, எத்தகைய இழிதன்மைகள், கொடுமைகள், மடைமைகள், ஆதிக்கம், என்பதை எல்லாம், காட்டாமல், மதம் என்றால் உண்மையை உணருவது, நற்குணத்தை நாடுவது, அழகை அடைவது என்று கூறினார். கூறவே, இதுதானா, மதம், இம்மதம் எமக்கும் சம்மதமே என்றனர், லெனின் கிராட் மக்கள். சத்தியம் - சன்மார்க்கம் - அழிவில்லா அழகு! இதை யார் இல்லை, என்பர் எவர் வேண்டாமென்பர்! உண்மையை உணரவும், உத்தமனாக வாழவும் வழி வகுப்பதே மதம் என்று கூறவதை யார் மறுப்பர்! லெனின் கிராட் வாசிகளிடம், “மதம்’ - பாரதத்தில் என்னென்ன”வடிவம்’ கொண்டு இருக்கிறது, என்னென்ன நினைப்புகளுக்கு இடமளிக்கிறது, எவ்விதமான நடவடிக்கைகளைச்செய்யச் செய்கிறது, என்பனவற்றை விளக்க, சித்தரித்துக் காட்டிவிட்டு, இதுதான் மதம், எமது மதம், எமது முன்னோர்கள் காலமுதல், சிதையாமல் இருக்கும் மதம், என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசிவிட்டு, பிறகு, மதம் வேண்டுமா? என்று கேட்டிருந்தால், தெரிந்திருக்கும் வேடிக்கையாகவும் இருந்திருக்கும் பற்களோடு போயிருந்தா லல்லவா, தெரிந்திருக்கும் - கதையில் நாம் கண்ட "தொடை நடுங்கி’ அவன்தான், பற்களை ஏற்கனவே அவனைப் பதியாகக் கொண்டிருந்த பஜாரிக்கு அர்ப்பணித்து விட்டானே. டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள், ஊரும் உலகமும் தம்மையும் தமது திறமையையும் மெச்சும்படியாக நடந்து கொள்வதற்காக, அங்கெல்லாம் சென்று, மதமென்றால், அன்பு அறிவு உண்மை பண்பு அழகு என்றெல்லாம், பேசிவிடுகிறார்கள், இங்கு அவர்கள் காண்பது என்ன? ஆமை அனுமான் வராகம் காளை போன்ற வாகனாதிகளிலே ஏறும் சாமிகள்! அவைகளைச் சுமந்து, “காப்புக் காச்சி’ போல உடலம் படைத்தவர்கள்! மேலே அமர்ந்து மேனியில் பூசப்பட்டுள்ள சந்தனக் குழம்பை”விசிறி’ ஆறவைக்கும் விப்பிரர். காவடி மோடி சூலம் வீதியில் புரள்வது வேல்குத்தி ஆடுவது மொட்டை அடித்துக்கொள்வது கண்ட குட்டையில் புரள்வது! இவை போன்றவைகள்! சத்யம் சன்மார்க்கம் அழகு லெனின் கிராடிலே இது பேச்சு, வெண் பொங்கல் புளியோதரை தயிரன்னம் அக்கார வடிசல் ஆரியருக்கு மானியம் விடுவது காணிக்கை கொடுப்பது திராவிடர் செய்யும் திருப்பணி! கேள்விகள் கேட்டனர் என்கிறார் - பதிலும் அளித்தாராம், சொல்கிறார். தம்பி, அங்கு என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை அவன் கூறவில்லை. போகட்டும். இங்கு, நீயோ நானோ கேட்கும் கேள்விகளுக்கு இவரும் இவரைப் போன்றாரும் பதில் கூறுவாரா, சபிப்பர். கேட்க வேண்டியது ஒன்றா இரண்டா, ஓராயிரம் உண்டே, எதற்குத்தான் பதிலளிக்க முடியும். இங்கே உள்ள குப்பை கூளத்தைக் கூட்டிச் சுத்தம்செய்ய முடியவில்லை, அங்கே போனாராம், அற்புதமாகப் பேசினாராம், வெற்றி பெற்றாராம். பளா, பளா, அடுக்களை நாற்றத்தைக் கழுவாமல் அத்தர் வியாபாரம் செய்யப் போனது போலல்லவா இருக்கிறது. அன்புள்ள அண்ணாதுரை 16-10-1955 போலீஸ்! போலீஸ்! - 1 பண்டித நேருவின் போக்கு - மொழிவழி அரசின் அவசியம் தம்பி! "எங்கெங்கு கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்படக் கூடும் என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் பலமான பாதுகாப்பு அமைத்துக்கொள்ள வேண்டும்; அது குறித்து, உடனே எமக்குத் தெரிவிக்க வேண்டும்’’ போலீஸ் பாதுகாப்பு அமைத்துக் கொள்வதென்றால் என்ன என்பதைத்தான், எல்லோரும் அறிவார்களே! பொதுக் கூட்டத்திலே போலீஸ் வளையம் இருக்கும்! அத்துமீறிப் பேசினார்கள் என்ற காரணம் காட்டி வழக்குகள் தொடரப்படும். தடியடி, துப்பாக்கி, இவைகளெல்லாம் கிளம்பும். கல்லக்குடியிலும் தூத்துக்குடியிலும் நாம் அனுபவித்தோம். பிற கட்சிக்காரர்கள் பிற இடங்களிலே கண்டனர். போலீஸ் பாதுகாப்பு! தம்பி! வெள்ளைக்கார ஏகாதிபத்யம் எந்தமுறையைக் கையாண்டு வந்ததோ அது இன்னும் மடிந்துபட வில்லை. மாறாக, புது மெருகுடன் புறப்படுகிறது. கொதிப்பும் கொந்தளிப்பும் உள்ள இடங்களிலே போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கட்டும் என்றால், அதன் பொருள், மக்கள் தங்கள் மனக்குறையை எடுத்துக் கூறினால், குமுறலை வெளியிட்டால், பிடி, அடி, சுடு, விடாதே என்பதுதான். கொதிப்பும் கொந்தளிப்பும், மக்களிடம் ஏன் ஏற்பட்டது. மக்களுடைய இயல்பா அது, பொழுது போக்கா! பாடு பல பட்டு கிடைப்பதைக் கொண்டு குடும்பம் நடத்திச் செல்வோம் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டுவரும் மக்கள், அமைந்திருக்கிற சர்க்கார் கேட்கும் வரி கொடுத்து, காட்டும் வழி நடந்து, திட்டும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டுவரும் மக்கள், ஏன்கொதிப்பு அடைகிறார்கள்? என்ன காரணத்தால் கொந்தளிப்பு ஏற்படுகிறது, அந்தக் கொதிப்பையும் கொந்தளிப்பையும் போக்குவதற்கான வழிவகை என்ன என்பது பற்றி எண்ணிப் பார்த்திடாமல், அதற்கேற்ற முறையில் காரியமற்ற முன்வராமல், “கொதிப்பா? கொந்தளிப்பா? சரி! சரி! சரியான முறையிலே போலீஸ்பாதுகாப்பு அமைத்து பயல்களின் கொட்டத்தை அடக்கிவிடு!’’ - என்று கட்டளை பிறப்பித் திருக்கிறது டில்லி. ஆமாம், தம்பி! டில்லி சர்க்கார் மாகாண சர்க்கார்களுக்கு அனுப்பியுள்ள”தாக்கீதின்’ கருத்தினைத்தான் நான் துவக்கத்திலே குறித்திருக்கிறேன். நேரு பண்டிதரின் நேர்த்தி மிக்க குணங்களைப் பாராட்டி’ அவருடைய "பவனி’யைக் கோலாகலமான விழாவாக்கிக் கொண்டாடி, மகரதோரணம் கட்டி, ஊரெல்லாம் அழகாக்கி, பாதைகளைச் செப்பனிட்டு, மரங்களுக்கும் சாயமடித்து, மட்டற்ற உற்சாகத்தோடு மகோற்சவம் கொண்டாடினார்களே, அந்த மக்களுக்கு - ஏலக்காய் மாலையும், பொன்னாடையும், ரோஜாவும், மல்லியும், வரவேற்பும் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு சென்றாரே அந்தப் பண்டிதர், சுடச் சுடத்தருகிறார், உடனடியாகத் தெரிவித்துக்கொள்கிறார், தமது நன்றியறிதலை! போலீஸ் படை தயாராக இருக்கட்டும்! யாரார், இது அறமல்லவே, அழகல்லவே என்று கூறுகிறார்களோ, அவர்கள் மீது, எங்கெங்கு ஏன் என்ற குரல் கிளம்புகிறதோ அங்கெல்லாம் போலீஸ் கண் பாயட்டும்; எங்கெங்கு மனக்குறை வெளியிடப் படுகிறதோ, அங்கெல்லாம் போலீஸ் இருக்கட்டும்; உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எனக்கு அறிவித்து விடவேண்டும்! - என்று கூறி இருக்கிறார்! கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட இருக்கிறது என்பதைப் பண்டிதர் உணருகிறார்: ஏனெனில் பண்டிதரின் போக்குத்தான், இந்த கொதிப்புக்கும் கொந்தளிப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது! கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பப் போகிறது, ஆகவே போலீஸ் படைகளை அனுப்பி, அடக்கு! அடக்கு முறையை அவிழ்த்துவிடு, என்கிறார் அகில உலகிலும் பவனி வந்து சாந்தி, சமாதானம், சமரசம் போன்ற பேருண்மைகளைப் பேசிவரும், பஞ்ச சீலர்! கொதிப்பும் கொந்தளிப்பும் கொள்ளக் கூடும் - காரணம் கண்டறிக; குறை கூறுவர், சமாதானம் கூறுக; துயர் அடைவர், துயர் துடைத்திடுக! - என்று கூறுவார் எமது பண்டிதர். அதிகார வெறியும் ஆணவப் போக்கும், ஏகாதிபத்தியத் திமிரும் கொண்டவர்களன்றோ, மக்களிடம் கிளம்பும் கிளர்ச்சியைத் தடுக்க அடக்குமுறை வெறி நாய்களை அவிழ்த்துவிடுவர்; காலமெல்லாம் விடுதலைக்குப் போராடிய கர்மவீரன், காந்தி அடிகளின் வாரிசு, மனிதருள் மாணிக்கமாம் எமது நேருவா, வெள்ளையன்போல் வெறியாட்ட மாடுவார், என்று பேசிடும் காங்கிரஸ் அன்பர்கள், முக்காடிட்டுக் கொள்ள வேண்டிய வகையிலே, நேரு சர்க்காரின் உத்தரவு உருவெடுத்திருக்கிறது. கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பினால், குண்டாந் தடியும் குண்டு மாரியும் புறப்படும் என்று! அஹிம்சையை அவனிக்கே போதித்த அண்ணல் காந்தியின் ஒப்பற்ற வாரிசே, வருக! அவனி புகழும் அன்பு நெறியை, அறநெறியை, போர் வெறி கொண்டு அலையும் வல்லரசுகளுக்கும் ஊட்டி வெற்றி கண்ட, முடிசூடா மன்னா வருக! மக்களாட்சியின் மாண்பினை அறிந்து ஒழுகும் மனிதகுல மாணிக்கமே வருக! இவை போன்ற புகழ் மாலைகளை, அவர் "பெரும்பாரம்’ என்று கூறத்தக்க அளவு சூட்டி மகிழ்ந்தனர், மக்கள், பெருந் தன்மையுடன். அவர்களிடம் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பும் எனத் தெரிகிறது, எனவே உடனே அடக்கிடப் போலீசை ஏவுக! என்று கட்டளையிடுகிறார் கண்ணியர்! தம்பி! வெள்ளைக்காரன் போடும் உத்தரவுபோல இருக்கிறதே என்று கேட்கிறாயா! ஆமாம். இன்றைய டில்லி ஆட்சி நிறத்திலே சற்றுப் பழுப்பே தவிர, நடவடிக்கையிலே அதற்கு அண்ணன் என்பதை அடிக்கடி நினைவூட்ட, துப்பாக்கிச் சத்தம் கிளப்பியபடிதானே இருக்கிறது துரைத்தனம்! எதாவது ஒரு பிரச்சினை எழுப்பினால், மக்கள் உள்ளத்தை அந்தப் பிரச்சினை உலுக்கினால், வெள்ளைக்கார ஆட்சி முதலில் “கவனியாமல்’ இருக்கும், பிறகு அலட்சியமாகச் சில”புத்திமதி கூறும், பிறகு கண்டிக்கும், எச்சரிக்கை விடும், பிரச்னை குறித்து மக்களிடம் அக்கரை தொடர்ந்து இருக்குமானால், மக்களைச் சில காலம் செயலற்றவர்களாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்யும் - அதுதான் கமிஷன் அமைப்பது என்பது! "பிரச்சினை, சிக்கல் நிறைந்தது - பலர் பலவிதமான கருத்துரை கூறுகின்றனர் - உண்மை எது பொய்யுரை எது என்பது விளங்கக் காணோம் - எனவே இது சம்பந்தமான எல்லா உண்மைகளையும் அறிந்து ஆய்வுரை வழங்க ஆண்டிப்பட்டி வேந்தர் தோண்டியப்பர், ஆஸ்தீக பூஷணம் ஆனந்தாச்சாரி, மவுலானா மவுலவி ஷருபுதீன், மேரிமாதா கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் ஆகியோர் கொண்ட கமிஷனை நியமித்திருக்கிறோம்’’ என்று அறிக்கை வெளியிடுவர்! “கமிஷன்’ அமைக்கப்படுகிறது என்றால்,”பிரச்சினை’ குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காதே என்பது மட்டுமல்ல, பேசாதே, சிந்திக்காதே, என்பது பொருள்! காலங்கடத்தும் மார்க்கம்! கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிடும் தந்திரம்! துரைமார் சர்க்கார் இதை அடிக்கடி கையாண்டனர்; இப்போது அவர்களே மூக்கின்மீது விலல்வைத்து ஆச்சரியப்படும் வகையில், அந்தத் தந்திரத்தை நேரு சர்க்கார் கையாண்டு வருகிறது! ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் அமைப்பு இத்தகைய தந்திரத்திலே ஒன்றுதான்! இங்கு மக்கள், சாத்பூரா மலைச்சாரலிலிருந்து குமரி வரை யிலும், கேட்டது ராஜ்ய புனரமைப்பு அல்ல! மக்கள், கேட்பது மொழிவழி அரசு! மொழிவழி அரசுக் கிளர்ச்சி வலுப்பெற்றது; வெள்ளையர் போலவே வடவர் அழைத்துள்ள சர்க்கார், ஒரு "கமிஷன்’ அமைத்தது. கமிஷனுக்குச் சர்க்கார் இட்ட வேலை, மொழிவழி அரசு எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதல்ல; ராஜ்யப் புனரமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதாகும்! மொழிவழி அரசு என்ற மக்கள் கோரிக்கையை மதித்து அதன்படி நடத்திடத் துரைத்தனத்தார் முடிவு செய்திருப்பார் களானால், எல்லைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; ராஜ்ய புனரமைப்பு என்ற ஏமாற்று வேலைக்கு இடம் ஏற்பட்டிருக்காது! ஆனால் டில்லி சர்க்கார், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை, மழுப்பவும், காலத்தை ஓட்டவும், கவனத்தை வேறு பக்கம் திருப்பவுமே விரும்பினர் : எனவேதான், ராஜ்யப் புனரமைப்பு கமிஷன் அமைத்தனர். அப்போதே இதனைக் கண்டித்தனர், விளக்கமறிந்தோர்; ஆட்சியாளர்களின் ஆதரவு தேடி அலையும் அடிவருடிகளோ, மொழிவழி அரசுபற்றி இப்போது ஏதும் கிளர்ச்சி வேண்டாம், இதோகமிஷன் அமைந்துவிட்டது; நியாயம் கிடைக்கும்; நேரு ஆட்சியிலே நீதி கிடைக்கும், என்று நல்வாக்குக் கொடுத்தனர். "கமிஷன்’ தன் அறிக்கையை நீட்டிவிட்டது; நாட்டிலே பல்வேறு இடங்களில் கொதிப்பும் கொந்தளிப்பும் கருவில் உருவாகிவிட்டன; இது தெரிந்ததும், கொந்தளிப்பு கிளம்பக் கூடிய இடங்களுக்குப் போலீஸ் படைகளை அனுப்புக! என்ற டில்லி உத்தரவு பிறப்பித்து விட்டது!! கண் விழித்துக் கொண்டால், அவன் தலை மீது போடுவதற்கு, பாராங்கல் ஒன்றை முதலிலேயே தயாராக வைத்துக் கொள் - என்று கைதேர்ந்த திருடன், ஆரம்பக்காரனுக்குச் சொல்வானாம்!! மாகாண சர்க்காருக்கு மத்திய சர்க்கார், கூறுகிறது, மக்கள் கிளம்பினால், உடனே மண்டையிலடித்து உட்கார வைக்கத்தக்க முறையில், போலீஸ் ஏற்பாடு தயாராகட்டும் என்று! கமிஷன் வெளியிட்ட அறிக்கை, நிச்சயமாகக் கொதிப்பையும் கொந்தளிப்பையும் உண்டாக்கும் என்பதை நேரு நன்றாக அறிவார்! மக்களுடைய உரிமை மண்ணாக்கப்படும் போது, நீதி புறக்கணிக்கப்பட்டு, நியாயம் நசுக்கப்படும் போது, கொதிப்பும் கொந்தளிப்பும் மட்டுந்தானா. புரட்சியே வெடித்திருக்கிறது என்பதையும், அதனை அழித்தொழித்திட போலீசும் படையும் பாய்ந்தோடித் தாக்கியும் முடியாது போயிற்று என்பதையும் வரலாற்றுச் சுவடி எடுத்துக் காட்டத்தான் செய்கிறது. எனினும், நேரு பண்டிதர், மக்களிடம் தாம் ஊட்டிவிட்ட போலித் தேசிய அபின்’ அவர்களைச் செயலாற்றவர்களாக்கி விட்டது; அவர்களுக்கு, தங்களுக்குள்ளாகவே தகராறுகளை வளர்த்துக் கொள்ளவும் சிண்டு பிடித்துச் சண்டையிடவும், சிறு மதி கொண்டு சச்சரவு கொள்ளவும், கூடிக் கெடுக்கவும், காலை வாரிவிடவும், காட்டிக்கொடுக்கவும்தான் விருப்பமும் பயிற்சியும் இருக்கிறதே தவிர, அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டுக் கொடுமையைக் களைந்திட, அக்ரமத்தை எதிர்த்திட, அடிமைத் தலைகளை நொறுக்கிட ஆற்றலுடன் போரிடமாட்டார்கள், என்று நம்புகிறார் மக்களைப்பற்றி மதோன்மத்தர்கள், கொண்ட கருத்தைத்தான் இந்த மனிதகுல மாணிக்கமும் கொண்டிருகிறது! எனவேதான், போலீஸ்! போலீஸ்!! என்று டில்லி கொக்கரிக்கிறது! மொழிவழி அரசு என்பது இன்று நேற்று முளைத்ததல்ல! காந்தீயக் கழனியிலே பயிரிடப்பட்டதாகும்! அதற்கும் முன்பேகூட, விடுதலைக் கிளர்ச்சிக்கான முயற்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, மொழிவழி அரசு மக்கள் மன்றத்திலே உலவிற்று. பாரத மக்களே! பரங்கியின் ஆட்சியை நீக்கிட வாரீர் - என்று மட்டும் கூறினாரில்லை. பாலகங்காதர திலகர்! - அவருடன் இருந்தோரும் அவர் வழி வந்தோரும் விளக்கமாகவே பேசினர், மக்கள் வீறு கொண்டு எழத்தக்க வகையில் மொழிவழி அரசு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன். சுயராஜ்யப் போர்ப்படை திரட்டிப் பணியாற்றிய சோர்விலாத் தலைவர்கள், எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழி யாளர்களைக் கண்டனரோ, அவர்களுடைய வரலாற்றை எடுத்துக் காட்டித்தான், உணர்ச்சியூட்டினர்! சேரனும் சோழனும் பாண்டியனும் ஆண்ட செந்தமிழ் நாட்டவரே! இன்று செக்குமாடுகளென நம்மை நடத்தும் வெள்ளையன் ஆதிக்கத்தை எதிர்த்திட வாரீர்! என்று கூவி அழைத்தனர். மாவீரன் சிவாஜியின் வழி வழி வந்த வீரர்கள்! மராட்டியம் இன்று மமதை நிறைந்த வெள்ளையன் பிடியிலேசிக்கிச் சீரழிவதைப் பார்த்தும் உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா! எங்கே சிவாஜி ஊட்டிய வீரம்! அந்த மாமன்னன் தந்த விடுதலை உணர்ச்சி மங்கிக் கிடக்கிறது. மராட்டிய மாவீரர்காள்! மடிந்து போகவில்லை! மாற்றானை ஓட்டிட வாரீர்! மராட்டியத்தின் கீர்த்தியை மீண்டும் நிலை நாட்டிட வாரீர் - என்றுதான் அழைத்தனர்! விஜய நகர சமஸ்தான காலத்தைக் கவனப்படுத்தித்தான் ஆந்திரர்களை அழைத்தனர்! ரஞ்ஜித் சிங்கின் அருமை பெருமைகளை எடுத்துரைத் தனர், பாஞ்சாலத்தில்! ஷா ஆலம் சக்கரவர்த்திக்கு வெள்ளையர் இழைத்த கொடுமைகளை எடுத்துக் கூறித்தான், டில்லி வட்டாரத்தினரை, இஸ்லாமியரை அழைத்தனர்! இங்ஙனம், மொழிவழி அமைத்திருந்த அரசுகளின் முன்னால் சிறப்புகளை எடுத்துக் காட்டித்தான், போர்முகாம் அமைத்தனர்! இது போதாது என்று, காந்தியார், தெளிவுபட, திட்டவட்டமாகத் தெரிவித்தார், சுயராஜ்யம் கிடைத்ததும், "மொழிவழி அரசு’ தான் அமைக்கப்படும் என்று. அன்று முதல் இன்று வரை, "மொழிவழி அரசு’ என்ற பிறப்புரிமைக் கிளர்ச்சி இருந்து வருகிறது. மக்களுடைய கிளர்ச்சிக்கு மதிப்பளிக்கும் மாண்பு இருந்திருக்குமானால், "மொழிவழி அரசு’ திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர நேரு சர்க்கார் முனைந்திருக்கமே தவிர, மூக்கில் கொஞ்சம் நாக்கில் கொஞ்சம் அறுத்து எடுத்து ஒட்டு வேலை நடத்தச் சொல்லும் ராஜ்ய புனரமைப்புக் கமிஷனையா நியமித்திருக்கும்!! மொழிவழி அரசு என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டால், எந்தெந்த இடத்தில் எந்த மொழியாளர் தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து அந்த வகையிலே எல்லைகளை நிர்ணயிக்கும் வேலை நடந்திருக்கும்: ராஜ்ய புனரமைப்பு என்ற "கபட நாடகம்’ நடைபெற்றிருக்காது. பொறுப்பற்ற முறையில், மக்களுடைய உரிமையை உதாசீனம் செய்துவிட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கும் திட்டத்தை நீட்டி, இதைக் கண்டு மக்கள் குமுறினால், சும்மா விடக்கூடாது கூப்பிடு "போலீசை’ என்றா கூவுவது’ இதற்கா நேரு சர்க்கார்! இந்த நேர்த்தியான முறையிலே ஆட்சி நடத்துகிறார் என்று மகிழ்ந்தா தம்பி, ஊரெல்லாம் உற்சவம் கொண்டாடி னார்கள், உலகெலாம் சுற்றி வரும் அந்த மலைமகனுக்கு!! அன்புள்ள அண்ணாதுரை 23-10-1955. போலீஸ்! போலீஸ்! - 2 தேவிகுளம் பீர்மேடு சிறப்பும் அது பற்றிய பிரச்சினையும் - காமராஜரின் போக்கு - அவர் தேர்தல் முறை. தம்பி! பச்சை மாமலைகள்! பாங்கான காட்சிகள்! பாடும் அருவி? பயமற்ற மிருகங்கள்! ஓங்கி வளர்ந்த மரங்கள்! தேயிலைத் தோட்டங்கள்! முக்கனி குலுங்கும் பழத் தோட்டங்கள்! தேக்கங்கள்! தேனாறுகள்!! தமிழகம் தந்திடும் எழிலோவியங்களைக் கண்டு, என்னை மறந்து கிடந்ததால், சென்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றேனில்லை. மலைவளமும், காட்டு வளமும், கானாறுகளும், களிறுகளும், மான்கூட்டமும், மலர்த் தோட்டமும், புரண்டோடும் பேராறுகளும், கெம்பீரமாகக் காணப்பட்ட நீர் நிலைகளும், சிந்துபாடிடும் சிங்காரச் சிற்றருவிகளும், வாளை துள்ளிடும் வாவிகள், கெண்டை புரண்டிடும் ஆறுகள், பொன்பூத்திடும் வயல்கள், - தம்பி - கண்ட காட்சிகள், எதைக் கூறுவேன், எப்படிக் கூறினால், எழிலை விளக்கிட முடியும்! கண் கண்டது - கருத்தில் நின்றது - கவி அல்ல பாடிக்காட்ட, ஓவியனல்ல தீட்டித்தர!! அத்தகைய காட்சிகளை, 3500 அடி உயரம் ஏறிச் சென்று கண்டிடும் வாய்ப்புப் பெற்றேன் சென்றகிழமை! சென்றது, மாநில மாநாட்டுக்கான நிதிபெற! கண்டது தமிழருக்கு இயற்கை அளித்துள்ள பெரு நிதியை!! பாண்டி மண்டலத்தில் பல்வேறு இடங்களில் சென்று பற்றும் பரிவும், பாசம் கொள்ளத்தக்க வகையிலே வழங்கிடும் தோழர்களைப் பெருமளவில் கண்டு மகிழ்ந்து விட்டு, பாண்டி நாட்டுடன் ஒட்டிக் கிடப்பினும், அரசியல் நிர்வாகத்தின் கொடுமையினால் வெட்டுண்டு கிடக்கும் பீர்மேடு "தாலூக்காவி லுள்ள வண்டிப் பெரியாறு எனும் இடம் சென்று, அங்கு அரும்பாடுபட்டு, நமது அகம் மகிழும் வண்ணம் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் தோழர்களிடம் அளவளாவி மகிழ்ந்தேன். போலீஸ்! போலீஸ்! என்ற கூக்குரலை, நான் அங்கு செல்வதற்கு ஒரு கிழமைக்கு முன்பிருந்தே, ஆங்குள்ள சிலர் கிளப்பினராம்! தந்திகள் பறந்தனவாம், தடை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி! கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது - குழப்பம் விளையும் - கொந்தளிப்பு மூண்டுவிடும் என்று கூறினராம் மலையாள நண்பர்கள்! பாவம்! அவர்கள் மருட்சி அடைந்துள் ளனர்! வண்டிப் பெரியாறு கூட்டம், தேவிகுளம், பீர்மேடு தாலூக்காக்களின்மீது தமிழரின் “படை எடுப்பு‘க்கான ஏற்பாடு என்ற அச்சத்தில், மலையாளத் தோழர்கள் திருவிதாங்கூர் சர்க்காருக்குத் “தந்திகள்’ கொடுத்திருந்தனர். எனினும்”பனம்பள்ளி’ சர்க்கார் பதட்டம் கொள்ளவில்லை; கூட்டம் நடைபெற்றது; மலையாளத் தோழர்களுக்கு”விளக்கம்’ தரும் வேலையை ஓரளவுக்குச் செம்மையாகவே செய்து முடித்தேன். தம்பி! தேவிகுளம் பீர்மேடு வட்டாரத்திலே காணப்படும், மலைவளமும், காட்டுவளமும் உண்மையிலிலேயே, திருவிதாங்கூர் சர்க்கார் திகில்கொண்டு, தீப்பட்ட குழந்தை போல், துடிதுடித்துக் கதறச் செய்யும், வகையில்தான் அமைந்திருக்கிறது! ஏலமும், தேயிலையும், வாழையும் வகைவகையான பயன்தரும் தருக்களும், காணக்காட்சியாக இருக்கிறது எங்கும்! அதோ ஓர் மேகக் கூட்டம் - வெண்மை நிறத்துடன் - மறு விநாடி பழுப்பேறுகிறது - மெள்ளமெள்ள அணிபணி பூண்ட ஆரணங்கு, "ஜடை’ பாரம் தாங்காமல், இடை துவள நடை பயிலும் அழகுடன் உலவுகிறது - உள்ளத்தைச் சிலிர்த்திடச் செய்யும் ஓர் மென்காற்று வீசுகிறது - உடனே கருமுகில் ஆகிவிடுகிறது - சூல் கொண்ட மேகம், மழை முத்துக்களை உதிர்த்திட அவை ஏற்றுத் தாலாட்டுகின்றன, தருக்களும் செடி கொடிகளும்! தம்பி! ஓங்கி வளர்ந்திடும் மரங்களும், பலன் பல தரும் தருக்களும் கீழேயும்தான் காண்கிறோம். மலை மேலும்தான் உள்ளன - ஆனால், மகத்தானதோர் வித்தியாசம் இருந்திடக் காண்கிறோம். கடிமணம் புரிந்தவன் காதலைச் சொரிந்தும், கன்னல் மொழியை வழங்கியும், இன்ப வாழ்வு நடத்திடுவதால், எழில் குலுங்கிடக் காட்சி தரும் ஏந்திழையின் முகத்திலே காணப்படும் விளக்கொணாததோர் “தகத்தகாயம்’ இந்தக் தருக்களிலும் செடி கொடிகளிலும், புல்பூண்டு, உதிர்ந்து கிடக்கும் சருகுகளிலும் கூடக் காண்கிறேன். இங்கே நாம் எப்போதும் காணும் தருக்களிடம், கடமை தவறாத கணவனின் பராமரிப்பிலே இருக்கும் பாவையரிடம் காணப்படும், பொறுப்பு தெரிகிறது; அங்கு தம்பி! கண்ணாளன் பொழிந்திடும் காதலால் காரிகை கொண்டிடும்”பொலிவு’ தெரிகிறது இலையில்? மலரில், செடியில், கொடியில்!! சிவப்பு, வெளிர் சிவப்பு, நீலம், வெளிர் நீலம், பச்சை, ஊதா, மஞ்சள், பொன்நிறம் தம்பி! வண்ணம் வகைவகையாகக் கொட்டிக் காட்டப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான ஓவியச் சாலைபோல், அங்கு மலர்கள்?! மலர்த் தோட்டங்களை அங்கு யாரும் அமைத்திடும் முயற்சியில் ஈடுபட்டில்லை - அவர்கள் காயும் கிழங்கும், கனிவகையும், தேயிலையும், ஏலமும், இவை போன்றவையும் பயிரிட்டுப் "பலன்’ காணத்தான் பாடு பல படுகிறார்கள். அவர்களின் உழைப்பின் திறம் கண்டு உளம் கனிந்து, புன்னகை பூத்திடும் முகத்தினளாகி நிலமகள். அவர்களின் உள்ளத்துக்கு உவகை தர இந்த மலர் சொரிகிறாள் மகிழ்ந்து என்று கூறவேண்டும் போலிருக்கிறது. உடன் வந்த தோழர்களில் பலருக்கு அந்த மலர்களின் பெயர்களே கூடத் தெரியவில்லை - எனக்குத் தெரியாது என்ற துணிவில் சிலர், மலர்களுக்கு ஏதேதோ பெயர் கூறினர். தேயிலை தோட்டங்களால் பெரும்பொருள் ஈட்டிடும் முதலாளிமார்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த மாமலைகளைப் பணத்தோட்டங்கள் ஆக்குவதற்காகப் பாடுபட்டு, பாடுபட்டு, மேனி கருத்துக்கிடக்கும் தமிழ்ப் பாட்டாளிகளை ஏராளமாகக் கண்டேன். தேயிலைச் செடிகளை - அவர்கள் வளர்த்திடும் திறத்தினையும், அதற்கு “நோய்நொடி’ வராமல் பாதுகாத்திடும் வகையினையும் கூறித், தமிழ்த் தொழிலாளர்களின் இரத்தம் இந்தச்”செல்வம்’ விளைவதற்காக எவ்வளவு கொட்டப்பட்டது என்பதை, என்னிடம், தோட்ட வேலை அனுபவமுள்ள நண்பரொருவர் எடுத்துச் சொன்ன போதுதான் எனக்குப் புரட்சிக் கவிஞர். சித்திரச் சோலைகளே! உமைத் திருத்த இப்பாரினிலே எத்தனை தோழர்கள் தம் இரத்தம் சொரிந்தனரோ வேரினிலே! என்று பாடியிருக்கிறாரே, அந்தக் ‘கவிதை’யின் முழுப்பொருள் விளங்கிற்று. புலியும் பிறவும், களிறும் காட்டெருமைகளும் ஏராளமாக உலவிடும் பெருங்காடுகளாக இருந்த நாட்களில், அந்தப் பகுதியில், தருக்களை மலைப்பாம்புகள் தழுவிக் கொண்டு கிடக்குமாம். காட்டாறுகள் சிலவேளைகளில் கரிக்குட்டிகளை உருட்டிக் கொண்டோடுமாம். அங்கு காபியும் தேயிலையும், ஏலமும் இன்னபிறவும் பயிரிட்டுப்பணம் பண்ண இயலும் என்ற எண்ணம் எழக்கூட முடியாத நிலை இருந்ததாம்! தமிழர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியும், அளித்த கடும் உழைப்பும்தான், காடு கனியும் நிலையைத் தந்தது என்று விளக்கமளித்தனர்; வியப்புற்றேன்!! காடுகளை அழித்தும் களிறுகளை விரட்டியும், காட்டெருமைகளால் தாக்குண்டும், கடும் புலிகளுடன் போராடியும் தமிழர்கள் அமைத்துக்கொடுத்த இடங்களே இன்று ‘கண்ணன் தேவன்’ தோயிலைத் தோட்டங்கள், என்றனர்! பாராட்டுவதா, பரிதாபப்படுவதா! அகமகிழ்வதா அனுதாபப்படுவதா!! - என்று தெரியாமல் திகைத்தேன்! தமிழர் பலரின் இன்னுயிரைக் குடித்து விட்டுத்தான். தோட்டங்கள் துரைமார்கள் கொழுத்திடத்தக்க செல்வத்தைக் கொடுத்துள்ளன!! நான் சென்று அன்றிரவு தங்கி இருந்த இடத்துக்குப் பெயரே, ஆணைக்கல் என்றால், தம்பி! இடத்தின் முன்னாள் இயல்பு எவ்வண்ணம் இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலா மல்லவா - ஓரளவுக்கேனும். அன்றிரவு கூட்டம் முடிந்தது, "ஆனைக்கல்’ தோழர் லியான் அவர்களுடைய இல்லத்தில் அன்பு விருந்து உண்டான பிறகு, இரவு எட்டு மணிக்குக் ‘கீழே’செல்ல விரும்பினேன் - தோழர் லியான், வேண்டாம் மூடுபனி பாதையைக் குறுக்கிடக்கூடும், அதுகூடப் பரவாயில்லை, வழி தவறி வரும் யானை குறுக்கிடும், பிறகு, என்று பீதியுடன் கூறினார் - நான் தைரியமாக வாதாடிவிட்டு, பாதுகாப்பு உணர்ச்சியுடன் பயணத்தை ‘ரத்து’ செய்துவிட்டு இரவுப் போதை அங்கு கழித்துவிட்டு, விடிந்தபிறகுதான் பயணத்தைத் துவக்கினேன். ஆனால், தோழர் லியான் எதிர் பாராத வேறோர் ஆபத்து குறுக்கிட்டது - அது கூறுமுன், தம்பி, வேறுசில கூறி விடுகிறேன். தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் எனும் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் சேர்த்தாக வேண்டும் என்பதற்காக, எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கும் துணிவு கொண்ட உள்ளம் படைத்தவர்கள் நாஞ்சில் பகுதியில் நமது கழகத்தில் ஏராளமாக உள்ளனர் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன் - இப்போது இதற்கான ஆர்வம் கொண்ட தமிழர்கள் மலையில் மட்டுமல்ல, அதைத்தொட்டுக்கொண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டும் உள்ள பெரியகுளம் தாலுக்கா முழுவதிலும் ஏராளமாக உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டேன். மலை அடிவாரமாக உள்ள கூடலூர், ஓர் நல்ல பாசறை, கம்பம் - தேவாரம் - கோம்பை - போடி - பெரியகுளம் - இங்கெல்லாம், நமது கழகம் மிக வலிவும் பொலிவும் கொண்டதாக இருக்கிறது. பொதுவாகவே பெரியகுளம் வட்டாரத்தினர், மலை மீதுள்ள ஏலத் தோட்டங்களின் உரிமையாளர்கள் - அந்த வட்டாரத்து வாழ்க்கைத் தரமே, மலையில் அவர்களுக்கு உள்ள தொடர்பைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பெரும் செல்வர்கள், காமராஜர் தமது பாதுகாப்பாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கான கிளர்ச்சிக்கு வீரர்கள் - தியாகிகள் - அஞ்சா நெஞ்சுடன் அறப்போரில் ஈடுபடவல்லோர் தேவைப்படும்போது, நமது கழகம்தான், பணியாற்ற முடியும். வாய்ச்சொல் அருளவும், வழிவகை கூறவும் தலைவர்கள் பிற முகாம்களில் கிடைக்கக்கூடும். ஆனால், காரியமாற்றவும் கடும் கிளர்ச்சிகளில் ஈடு படவும், கழகம்தான் முன்வரவேண்டிய வாய்ப்புப்பெற்றிருக்கிறது. மலைமீதுள்ள தமிழ்த் தோழர்களிடம் நாம் பெறக்கூடிய ஆதரவினைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அளவு பெரியகுளம் வட்டாரத்திலே திரட்ட இயலும்-திரட்டிட வேண்டிய நிலைமைதான் ஏற்படும். ஒன்று மட்டும் முன்கூட்டியே தெரிந்துகொள்வது. களம் அமைக்க பெரிதும் உதவக்கூடியது என்று எண்ணுகிறேன் - திருவிதாங்கூர் சர்க்கார் எளிதில் இடமளிக்காது - இணங்காது! - தமிழரின் உரிமையைப் பறிப்பது அறமாகாது என்று கருதும் நேர்மை மலையாளநாட்டு தலைவர்களில் ஒருவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை - தமிழர்களைக் கூலிகள் - பிழைக்க வந்தவர்கள் -அன்னியர்கள் - என்று மலையாளிகள் கருதும்படி- (ஏசும்படி மட்டுமல்ல) பலமான பிரச்சாரம் நடை பெற்றிருப்பதுடன், விளைவுபற்றி எண்ணிப்பாராமலேயே வீரத்தை வீம்பாக்கிப் பேசிடும் வித்தகர் சிலரால், தமிழர் - மலையாளி மனமாச்சரியம், கொழுந்துவிட்டெரியும் நிலையும் இருக்கிறது - இதனை மறைத்தும் பயனில்லை - குறைத்து மதிப்பிடுவதும் தவறு - இந்த மாச்சரியம் மேலும் வளரும் தன்மையில் கிளர்ச்சிகள் உருவாக்கப்படுவதும், அங்கு உள்ள தமிழர்களுக்குப் பேராபத்தாக முடியும். மற்றுமொன்று விளக்கமாக்கப்பட வேண்டும்-வண்டிப் பெரியாறு கூட்டத்தில் நான் இதனை வலியுறுத்திக் கூறினேன் - மத்திய சர்க்கார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் திறம்பட நடத்தவே திட்டமிட்டு விட்டிருக்கிறது. எனவே, தமிழர் - மலையாளி மனமாச்சரியம் வளருவதை, டில்லி புன்னகையுடன் பார்த்துக் கொண்டு, ‘மோதுதல்’ ஏற்பட்டால் போலீஸ்! போலீஸ்! என்று கொக்கரித்து அடக்குமுறையை அவிழ்த்துவிடவே செய்யும். தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடியர் - என்போர் திராவிடர் என்ற இன உணர்வுகொண்டு, கூட்டாட்சிக்கான வேட்கை கொள்வர். அது, நமது ஏகாதிபத்தியத் திட்டத்தைத் தகர்த்துவிடும் என்ற கிலி டில்லிக்கு ஓரளவுக்கு ஏற்பட்ட சமயமாக, இந்த ‘மொழிவழி அரசு’ப் பிரச்சினை கிளம்பிற்று - இதிலே, தமிழரும் மலையாளியும், மனமாச்சரியம் கொள்வதும், தமிழரும் ஆந்திரரும் தகராறு மூட்டிக் கொள்வதும், தமிழர் கருநாடகத்தார் மனக்கசப்புக் கொள்வதும், டில்லிக்கு, மிக மிக மகிழ்ச்சி யூட்டுகிறது. டில்லியின் எதோச்சாதிகாரம், மார்வாடி ஆதிக்கம், நேரு ஏகாதிபத்தியம், வடநாட்டுச் சுரண்டல், எனும் ‘பேச்சு’ ஓரளவிக்கு நிறுத்தப்பட்டு, தேவிகுளம் யாருக்குச் சொந்தம், திருப்பதியை ஆந்திரர் கொள்வதா, பெல்லாரியை இழப்பதா, காசர்கோடு களவாடப்படுவது அக்ரமம், என்று இத்தகைய பிரச்சினைகள் முன்னணிக்கு வந்துசேரும், என்பதற்கான அறிகுறி கண்டு, டில்லி களிப்படைகிறது! ‘மொழிவழி அரசு’ நேர்மையுடனும் உரிமை முறைப்படியும் அமைவதற்கான ‘அமளி’யை மூட்டிவிட்டு விட்டால், இதற்காக இவர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக்கொண்டு கிடப்பர்-நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே டில்லியின் திட்டம். பிரித்தாளும் சூழ்ச்சியைப் பிரிட்டிஷாரிடமிருந்து வடநாட்டுத் தலைவர்கள் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு பிரச்சினைக்கான கிளர்ச்சியின் போது மக்கள் மன்றத்திலே, வடநாட்டுச் சர்க்காரின் இந்தப் பிரித்தாளும் சூதுபற்றி எடுத்துரைத்து, உண்மைப் பகைவன் யார் என்பதைச் சுட்டிக் காட்டும் வேலையை பிறகட்சிகள் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை! நேருவின் நெரிந்த புருவத்தைக் காணவும் அஞ்சுகிறார்கள் அந்த வீரர்கள்! அந்தக் காரியத்தைச் செய்யும் ‘தனி உரிமை’யை நாம் தான் நிறைவேற்றித் தீர வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்கான ஆர்வம், இந்தப் பகுதியில் மிக வளமாக இருக்கிறது. நல்லார்வம் கொண்ட தோழன் ஒருவன்தான், எங்களை மலைமீது மோடார் வானில் கொண்டு சென்றான் -ஆர்வம் அவனைச் சளசளவென்று பேசச் செய்தது கலகல வென்று சிரிக்க வைத்தது, பட படவென்று நடந்துகொள்ளச் செய்தது. வண்டியோ ‘லொட லொட!!’ அதை அவன் பொருட் படுத்தியதாகவும் தெரியக்காணோம். நாங்கள் அதனைக் கவனிக்கவும் முடியாத நிலையில், காட்சியின் கவர்ச்சியிலே சிக்குண்டு கிடந்தோம். மலையினின்றும் கீழே வண்டி வருகிறது - உதைத்துக் கொள்கிறது, உறுமுகிறது - உருளைகளிலே ஏதோ சிக்கிக் கொண்டு விட்டது போன்ற சத்தம் கேட்கிறது - ஆர்வம் நிரம்பிய அந்தத் தோழனோ, எவ்வளவு பழுதுபட்ட வண்டியும் தன் கைவண்ணத்தினால் செலுத்த முடியும் என்பதை எடுத்துக் காட்டும் ஒரே நோக்கம் கொண்டவனாகக் காணப் பட்டான். என் செய்வது? ‘பழுதுபட்டிருக்கிறதோ?’ என்று கேட்கிறார் தோழர் லியான், ஏதோ ஓர் மோட்டார் உறுப்பின் பெயரைக் குறிப்பிட்டு-அவன் அலட்சியமாகக் கூறுகிறான், இதுதானா! பிரேக்கே கூடத்தான் சரியாக இல்லை! என்று. வண்டி உருண்டோடி வருகிறது - கீழே அல்லவா இறங்குகிறோம். இரண்டு வண்டிகள் ஒரு சேரச் செல்ல முடியாத பாதை; வளைவுகள். ஒரு புறம் மலைகள், மறுபுறம் பெரும் பெரும் பள்ளங்கள்; கீழே இன்னும் இறங்க வேண்டியது 1,500 அடி இருக்கும். திடீரென்று மோட்டார் உருளுவது, தேய்ந்தும் ஊர்ந்தும் செல்வது போலாயிற்று. பாதையிலே வண்டி எக் காரணத்தாலோ ஒட்டிக்கொண்டுவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு திருப்பம் வந்தது, ‘பன்ச்சர்’ ஆகிவிட்டது போலிருக்கிறது என்று கூறி வண்டியை நிறுத்தச் சொல்லுகிறேன். வண்டி தானாகவே நின்றுவிட்டது; எந்தச்சக்கரத்திலே "பன்ச்சர்’ ஆகி விட்டது என்று பார்க்கக் கீழே இறங்கினேன் - உடனிருந்த தோழர்கள் பொன்னம்பலனாரும் மதியழகனும் இறங்கினர். நான்கு சக்கரங்களில் எது கெட்டுக் கிடக்கிறது என்று பார்க்கிறோம். வண்டியில் மூன்று சக்கரங்கள் மட்டுமே உள்ளன! பின் சக்கரங்களிலே ஒன்றுகாணோம்! திகைத்துப்போய் நின்றோம். நீங்கள் என்னை விட்டுவிட்டாலும் நான் உங்களிடம் வந்து சேராமல் இருப்பேனா என்று கூறுவது போல அந்தச்சக்கரம் பின்புறம் உண்டு வந்து கொண்டிருந்தது. ‘அச்சு’ முறிந்துவிட்டது; 1,500 அடி பள்ளம் கீழே. எதிரே திருப்பம்; பாதையோ வளைவு! வண்டியிலேயோ மூன்று சக்கரங்கள்! அவ்வழி வந்தவர்கள் அனைவரும் இக்காட்சி கண்டு திடுக்கிட்டுப் போயினர். அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்ட பிறகுதான், எவ்வளவு ஆபத்தான நிலை ஏற்பட்டது என்பதும், எவ்வளவு எதிர்பாராதவிதத்தில் தப்பித்துக் கெண்டோம் என்பதும் எங்களுக்கே தெரிந்தது. தம்பி! நமது இயக்கத் தோழர்களிடம் நல்லார்வம் நிரம்ப இருக்கிறது - அதுபோலவே, நம்மிடம் உள்ள சாதனங்கள் பழுது பட்ட நிலையில் உள்ளன - ஆர்வம்தான் துணை நிற்கிறது - நாலுக்கு மூன்று என்றாகும் போது, எப்படியோ நமது பயணம் நடந்தேறிவிடுகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு இது போல, என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. எனவே, நாம் நமது ஆர்வம் திறமை ஆகியவற்றினைச் செம்மையாக வைத்துக் கொள்வது போலவே, ‘சாதனங்களை’யும் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் சர்க்காரிடமிருந்து, தமிழ்ப் பகுதிகளைப் பெற எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி இருக்கிறதே, அது ஏறத்தாழ நான் குறிப்பிட்ட இந்தப் ‘பயணம்’ போன்றது. முதலமைச்சர் காமராஜர் எமக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நண்பர் போலவே, அச்சு முறிந்தாலும் அதையும் கவனிக்காமல் இருந்திடும் அலட்சியப் போக்கிலே தான் நடந்து கொள்கிறார். நிபுணர்களைச் சிந்திக்க வைக்கும் பிரச்சினையாக இருக்கட்டும், மக்களின் மனதிலே குழப்பமும் கொந்தளிப்பும் மூட்டிடத்தக்க பிரச்சினையாக, இருக்கட்டும், எவ்வளவு இன்றியமையாத பிரச்சினையானாலும், இடர்மிகுந்ததானாலும், இவருக்கு மட்டும் சர்வ சாதாரணமாகத்தான் எந்தப் பிரச்சினையும் காணப்படுகிறது. எதுபற்றியும் ஒரு அக்கரையற்ற தன்மை, அலட்சியப் போக்குக் காண்கிறோம். ஆகட்டும் பார்ப்போம். அதற்கென்ன அவசரம், அது என்ன முக்கியம், அதுதானா வேலை, ஏன் இந்தப் பிரச்சினை, என்ற பேச்சிலேயே மன்னராக இருக்கிறார்! பிரச்சினைகளின் சிக்கல் புரியாததால் இவ்விதம் இருக்கிறாரா, புரிந்து, நம்மால் என்ன செய்யமுடியும் என்று திகைத்துப்போய், அந்தத் திகைப்பை மறைத்துக் கொள்ள இவ்விதம் பேசித் தொலைக்கிறாரா, என்பதும் புரியவில்லை ! தமிழ்நாடு என்று சென்னை இராஜ்யத்துக்குப் பெயர் இருக்க வேண்டும் என்று, நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூறுகின்றன - அவருடைய ‘சகாக்களே’ கூடத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூறுகிறார்கள். ஒரு துளி பரபரப்பு, சிறிதளவு மன எழுச்சி கொஞ்சம் ஆர்வம் தெரிகிறதா? இல்லை! இல்லை! தமிழ்நாடு என்று பெயரா? ஏனாம்? அதற்கென்ன இப்போது அவசரம்? தெலுங்கரும் மலையாளி களும், சென்னை இராஜ்யத்தை தமிழ்நாடு என்றுதான் அழைப்பார்கள்! நாமே நம்மைத் தமிழ்நாடு என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா! - என்று கேட்கிறார். பெரியார் ‘தமிழ் நாடு’ என்ற பெயர் பெறக்கூட முடியா விட்டால், நாம் எதற்குத்தான் யோக்கியதை பெற்றவர்கள் என்று இடித்துக் கேட்கிறார், காமராசர் இளிக்கிறாரே, தவிர, ஒரு பிரச்சினையாகவே கொள்ள மறுக்கிறார். குடகு தனி அமைப்பாக இருத்தல் வேண்டும் - அதைக் கருநாடகத்துடன் இணைத்தல் கூடாது என்று கிளர்ச்சி இருக்கிறது - ஒரு ராஜ்ய முதலமைச்சராயிற்றே என்பதால் இவரிடம் இதுபற்றி முறையிடுகிறார்கள், என்ன பதிலளிக்கிறார் தெரியுமா இந்த நிபுணர்! குடகு தனி அமைப்பாக இருந்தால் என்ன, கருநாடகத்தின் நிர்வாகத்தில் இருந்தால் என்ன, இதற்கு ஏனய்யா தகராறு, இது ஒரு பிரமாதமான பிரச்சினையா? என்று கேட்கிறார். தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றினைத் தமிழர்கள் பெறப் பாடுபடுவீர்களா? என்று கேட்கிறார்கள் - பதில் என்ன தெரியுமோ? அதற்கான முயற்சியைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்கிறது - அதுபற்றி நீங்கள் யாரும் வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம் - முயற்சிப்போம்; பெறமுடியாது போனாலும் குடி முழுகிப் போகாது; நாமெல்லாம் ‘இந்தியர்’கள் தானே, எந்த இடம் யாரிடத்தில் இருந்தால் என்ன? மைசூர் மைசூர் மக்களுக்கே, என்கிறார்களே அது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! வேங்கடம் முதல் குமரி வரை என்று தமிழர் பேசுகின்றனரே அது அவருக்கு "அற்ப’ விஷயமாகத் தோன்றுகிறதாம்! சென்னை ராஜ்யம் என்ற பெயர் கூடாது, தமிழ் நாடு என்றுதான் இருந்தல்வேண்டும் என்கிற விஷயம், சின்ன விஷயமாகி விடுகிறது இந்தப் பெரியவருக்கு! வடநாடு வளருகிறது தெற்கு தேய்கிறதே என்று பொருளாதார நிபுணர்களெல்லாம்கூடக் கலக்கமுற்றுப் பேசுகிறார்களல்லவா, அந்தப் பிரச்சினையும் இவருக்குத் தேவையற்ற பிரச்சினையாகத் தெரிகிறது! தொழில்கள் வடக்கே இருந்தால் என்ன, தெற்கே இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது என்று மிகமிக அலட்சியமாகப் பேசிவிடுகிறார். அவருக்குப் பாவம், இத்தகைய பிரச்சினைகளில் உண்மையிலேயே பழக்கம் இல்லை. எனவே அக்கரை எழக் காரணம் இல்லை! இவை போன்ற பிரச்சினைகளைப்பற்றிக் கவனித்தாக வேண்டிய இடத்திலே அவர் அமர்ந்துவிட்டதால், இவரிடம் இவைகளுக்கெல்லாம் விளக்கம், பரிகாரம், கேட்கிறார்கள். அவருக்கோ ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது. அவர் கடந்த முப்பதாண்டுகளாக ஒரேஒரு பிரச்சினையைத்தான் அறிந்திருக்கிறார். இன்றும் அவருக்கு அந்த ஒரே பிரச்சினையிலேதான் அக்கரை இருக்கிறது-மாடு! மாடு!! மாடு!! சிங்கம் - ஒட்டகம் - சைகிள் - ஆலமரம் - குடிசை - கதிரி அரிவாள் - தாமரைப்பூ! - இவைகளெல்லாம் தோற்கவேண்டும், ‘மாடு’ வெற்றிபெற வேண்டும். இது ஒன்றுதான் அவருடைய பிரச்சினை - இதிலேதான் அவருக்கு அக்கரை - இதற்குத் தகுந்த திறமையையும் வசதிகளையும் பெற்றுக்கொள்வதிலேதான் அவர் காலங்கழிக்கிறார் - இந்த நோக்கம் வெற்றி பெறுவதற்கான தொடர்புகள் -துணை- தோழமை - கூட்டு - இவைகளிலேதான் அவர் அபாரமான அறிவாற்றலைக் காட்டுகிறார் - இதுதானா ஒரு ராஜ்ய முதலமைச்சருக்கு வேலை என்று கேட்டவரிடம், இதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது என்று, அவர் கேட்கவே செய்தாராம்! ஒவ்வோர் ‘ராஜ்ய’முதல்வர்களும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், எமக்கு இந்தத் திட்டம் வேண்டும், இவ்வளவு தொகை வேண்டும் - இராஜ்யங்கள் புதிதாக அமையும் போது இன்னின்ன பகுதிகள் வேண்டும், இன்னின்ன உரிமைகள் வேண்டும் என்று கேட்டும், கிளர்ச்சி நடத்தியும் வருகிற நேரமாகப் பார்த்து, இவர் செய்தது என்ன? ஓட்டகத்தை நுழைய விடாதீர்கள், சிங்கத்தை விரட்டுங்கள்; அருணாசலம் நல்லவர் ஆண்டியப்பன் வேண்டியவர், மாடு நல்ல பிராணி மறவாது ‘சூடு போடுங்கள்’ என்று இந்த "வேலை‘யைத்தான் செய்து கொண்டிருந்தார். இதுதான் இவருக்கு உகந்த வேலை, இதற்கு மட்டுமே இவர் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே நேருவாகப் பார்த்து, நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, தமிழரின் உரிமைகளைத் தந்தால் உண்டே தவிர, தம்பி! காமராஜர் தமது திறமையினால், தமிழரின் உரிமையைப் பெற்றுத் தருவர், என்று என்னால் துளியும் நம்பமுடியவில்லை. கேட்பார் - புள்ளி விவரம் தரப்படும், அதைத் தபாலில் அனுப்புவார் - டில்லி இணங்க மறுத்தால் சரி, போனால் போகட்டும் தேவிகுளம், இங்கு இருந்தால் என்ன அங்கு இருந்தால் என்ன என்று கூறிவிடுவாரே தவிர, தமிழர் உரிமை தமிழகம், இவைபற்றித் துளியும் அக்கரை காட்டமாட்டார். நாம் தான் அவரைப் பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம் - அவர், மொழி, இனம். நாட்டு உணர்ச்சிகளுக்குத் தமது உள்ளத்தில் இடமளித்துப் பழக்கப் பட்டவரே அல்ல - அவருக்குச் சுறுசுறுப்பும் தெம்பும் தரக்கூடிய ஒரே பிரச்சினை, ‘ஓட்டு வேட்டை’ ஒன்றுதான். வேறு எதிலும் அவருக்கு அக்கரையும் கிடையாது, பயிற்சியும் ஏற்பட்ட தில்லை - வேறு எல்லாப் பிரச்சினைகளும் அவருக்குச் ‘சின்ன விஷயம்’- ஆகட்டும் பார்க்கலாம் - அதனால் என்ன, என்பவைகளே!! அன்புள்ள அண்ணாதுரை 6-11-1955 குன்றெல்லாம் கேட்கிறது! நாகநாட்டு விடுதலைக் குரல் - திராவிட நாட்டுப் பிரிவினை. தம்பி, அமைச்சர் வருகிறார்! நேரு பண்டிதரிடம்கூட நெரித்த புருவத்துடன் பேசும் நிலைபெற்ற அமைச்சர் வருகிறார்!! உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு யாரிடம் இருக்கிறதோ, அப்படிப்பட்ட அமைச்சர் வருகிறார். உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு என்றால், சாமான்ய மானதா! இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் விதித்திடும் ஆற்றல் இந்த அமைச்சரிடம் இருக்கிறது என்பது பொருள்! "ஜாலியன்வாலா’ நடக்கட்டும் என்று அவர் உத்தரவிட்டால் போதும், நூற்றுக்கணக்கான ‘டயர்கள்’ ஓடோடி வந்து தமது திறமையினைக் காட்டி, பட்டமும் பதக்கமும் பெற்று அவருக்குப் பணிவிடை புரியக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பொருள்! வீடுகளைத் தரைமட்டமாக்குங்கள்! விம்மிடுவோருக்கு விலங்கிடுங்கள்! வீரம் பேசுவோரின் விலாவை நொறுக்குங்கள்! கண்டனக் குரல் கிளம்பினால், காட்டு மிருகங்களை வேட்டை யாடுவது போல், துரத்தித் தாக்குங்கள் என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறவர் என்று பொருள்! இந்தியத் துணைக்கண்ட முழுவதும் உள்ள ‘போலீஸ் படைகள்’ அவர் சுட்டுவிரல் காட்டும் திக்கு நோக்கித்தாவும்! அது போதாதென்று அவர் கருதினால், பட்டாளத்தையும் வரவழைக்க முடியும். கடும் தண்டனை! கடும் தண்டனை! காலை மாலை கன்றுக்குட்டிக்குப் பாலை ஊட்டாதே! இந்தக் காவலன் இட்ட தடையை மீறி வாலை ஆட்டாதே! ஆட்டினால், கடுந்தண்டனை! என்ற உடுமலைக் கவியின் பாடலைச் “சொர்க்க வாசலில்’ கேட்ட துண்டல்லவா - அது போன்ற தடை உத்தரவுகள் போடவும், கடுந் தண்டனைகளை விதிக்கவும்”உரிமை’ பெற்றவர் என்பது பொருள்! பேச்சிலே, காரம் அதிகம்! போக்கு, பாதுஷா போன்றது! இத்தகைய அமைச்சர் பண்டித பந்த் பவனி வருகிறார், உமது பிரதேசத்தைப் பார்வையிட வருகிறார் பராக்! பராக்! பச்சைப் பந்தல்களைப் போடுங்கள்! பாதைகளைச் செப்பனிட்டு வையுங்கள்; தோரணங்கள் கட்டுங்கள்! மலர்களை வாரித் தூவுங்கள்! மாலைகள் பலப்பல தொடுத்திடுங்கள்! அவர் அக மகிழ்வது உமக்குத்தான் நல்லது! புன்னகை பூத்த முகத்துடன் அவரை வரவேற்றால், புதுவாழ்வு கிடைத்திடும் உங்கட்கு. புகை கிளம்பக் கூடாது; பகை தெரியக்கூடாது. வருகிறவர், சாதாரண அமைச்சர் அல்ல; போலீஸ் மந்திரி! தம்பி! நாகநாடு சென்றார், டில்லியில் தர்பார் நடாத்தும் பண்டித பந்த். அவர் ‘விஜயம்’ பற்றி செய்தியை மிகச் சிரமப்பட்டு அசாம் சர்க்கார் பரப்பி, பண்டிதரின் பவனியை இரம்மியமானதாக்க முயன்றனர். நாகநாடு, உனக்குத் தெரியும் - விடுதலைக் கிளர்ச்சித் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இடம் என்பது. குற்றேவல் புரிந்து கிடந்திடும் வர்க்கமல்ல நாங்கள், நத்திப் பிழைத்திட மாட்டோம், கோடி கொட்டிக் கொடுத்தாலும் மாற்றானின் அடிவருட மாட்டோம், எமக்கு வீரவாழ்வு வேண்டும், தனி அரசு வேண்டும் என்று கூறிடும் விடுதலை வீரர்கள், அசாம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டுக் கிடக்கும் குன்றுகள் சூழ்ந்த நாகநாட்டிலே உள்ளனர். அவர்களின் விடுதலைக் கிளர்ச்சி காலை அரும்பி மாலை கருகும் என்று டில்லியில் பலமுறை ‘ஆரூடம்’ கணித்தனர். எல்லா ஆருடமும் பொய்த்துப் போய்விட்டன. விடுதலைக் கிளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது - ஏன் வளராது! குன்றேறி அந்நாட்டுக் குமரர்கள் காணும் தாயகத்தின் எழில், அடவிகளில் அருவிகளில், வயல்களில் வாழ்க்கை முறைகளில் தெரியும் தனித்தன்மை அவர்களைத் தன்னரசு பெற்றாகவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்ளச் செய்கிறது. பதவிக்குப் பல்லிளிக்கும் போக்கும், அடக்கு முறைக்கு அஞ்சிடும் தன்மையும், மலைக் காற்றினை உண்டு வளம்பெற்றுத் திகழும் அந்தமக்களிடம் எழமுடியாதல்லவா! தங்கத்தால் செய்த கூண்டு எனினும் தத்தை சிறையை விரும்புவதில்லையே. இரும்பை ஒடித்திடும் ஆற்றல் இல்லை என்பதையும் அறியாமல், சிறகடித்த வண்ணமல்லவா இருப்பது காண்கிறோம். பச்சைப் பசுங்கிளியே! உனக்குப் பாலும் பழமும் தந்திடுவேன்! என்று கொஞ்சினாலும் கிளியின் நினைவு அத்தனையும், பூங்காமீது இருக்கும் அளவுக்கு அன்பு பொழிந்திடும் அந்தப் பூவையிடம் இருப்பதில்லையே! பூனைக்கு, நித்த நித்தம் ஒரு கிள்ளை‘யைக் கொடுத்துக் கொண்டேனும், எஜமான் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நாகநாட்டிலே இல்லை! மனிதர்களின் தலையைச் சீவி, மண்டை ஓடுகளை மாலைகளாக்கி போட்டுக்கொள்ளும் மகா பயங்கரமான காட்டு மிராண்டிகள் இந்த நாகர்கள் என்று இழிமொழி பேசுவோர் உளர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்று ஈடுபட்டிருப்பது தலைகளை நொறுக்கிடும் தன்னிகரற்ற தூய பணியில் - தலைகளை வெட்டும் வேலையில் அல்ல! நாகநாடு நாகருக்கே! என்கிறார்கள்; டில்லிக்கு வியப்பாக இருக்கிறது! மலையும் காடும், ஒரு நாடா? பொன்னும் பொருளும் குவிந்தா கிடக்கின்றன? தொழிலும் வாணிபமும் பெருகியா இருக்கின்றன? மாடமாளிகை கூடகோபுரம் உண்டா? மணி அணி அணிந்திடும் சீமாட்டிகளும் அவர்தம் மஞ்சத்தில் மிஞ்சு சுகம் காணும் பிரபுக்களுமா உள்ளனர்? ஒரு டாடா, ஒரு பிர்லா, ஒரு டால்மியா உண்டா? பசும் புல் சோலை இருக்கிறது; பல பொருள் தரும் ஆலை உண்டா? பெற்றெடுத்த செல்வத்தைத் தாய்மார் முத்தமிடுவது இருக்கலாம், எழிலரசிகளின் மார்பகத்திலே புரளும் முத்து மாலைகள் உண்டா? இராஜ பவனங்கள் இல்லை! இரசாயனச் சாலைகள் இல்லை! இந்நிலையில் உள்ளபோது, நாகநாடு நாகருக்கு என்று முழக்கமிடுகிறார்களே! என்ன பேதைமை! என்ன பேதைமை! என்று டில்லி வியப்படைகிறது. நாகர்களோ, என்னென்ன இல்லை இல்லை என்று கூறி இழித்தும் பழித்தும் பேசுகிறார்களே, அவைகளையும் அவைகள் அனைத்தையும் மிஞ்சக் கூடியனவற்றையும் பெற்றிடும் பேராற்றல் எமக்கு உண்டு. கட்டுண்டு கிடந்தால் இழி நிலைதான் நீடிக்கும். எமக்கென்று ஓர் கொற்றம் அமைந்திடின், ஏற்றம் பெறுவோம் - இதிலே சந்தேகம் கொள்வோர் எமது கட்டுடலைக் காண்பீர், கனல் கக்கும் கண்களைக் காணீர்; தோள் வலுவைக் காண்பீர், இயற்கை எமக்கென்று அளித்துள்ள ஓர் நில அமைப்பைக் காணீர், என்று கூறுகின்றனர். கடலில் முத்து, காட்டிலே சந்தனம், வயவில் எருதுகள், வாவியில் அன்னங்கள். ஆறுகளில் வாளைகள், அவைகளை மயக்கிடும் குவளைகள், தாமரை பூத்த குளம், தேன் சிந்தும் தோட்டம் வேழமும் வேங்கையும் ஒன்றோடொன்று போரிட்டுக் களம் அமைக்கும் காடுகள், அவைகள் மயங்கிடும் வண்ணம் பார் முழுதும் ஏர் முனையிலே என்று பண்பாடும் உழவர் தரும் செல்வம், தங்கம், இரும்பு, நிலக்கரி - காவிரி பெண்ணை, கோட்டை கொத்தளம், சிலம்பு மேகலை, செழியன் வள்ளுவன், - எனும் எதை எதையோ காட்டி, திராவிடநாடு திராவிடருக்கே, என்று நாம் முழக்க மிடுகிறோம்! புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னார் இழையும் துகிலும் பூண்டு - நமது மாதர் காட்சி தருவதைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர். புல்லர்கள் இக் காட்சி கண்டு மாசு கொண்ட மனத்தினராகிவிடுவரோ என்று அஞ்சுபவர் போல, எமது தாயகத்துத் தையலர் பொன்னாடை பூண்டவர், பொழிலினில் உலவிடுபவர், ஆனால் அப்பா! அவர்கள் கனிமொழி பேசி இல்லறம் நாடும் காதல் மாதர் என்று இயல்பை எடுத்துக் காட்டுகிறார்! இவ்வளவும் கேட்டுவிட்டு, இறுமாந்து கிடக்கும் வடவர், நாக நாட்டினரின் முழக்கத்தை மட்டுமா எளிதில் கவனிப்பர்! எங்கோ ஓர் மூலையில் கிளம்பும் காட்டுக் கூச்சல் என்றுதான் அலட்சியமாகக் கருதுவர், என்றுதான் தம்பி! நீ எண்ணிக்கொள்வாய். உண்மை அதுவல்ல! நம்மைவிட, நாகநாட்டினரால் டில்லி அதிபர்களின் கவனத்தை ஈர்த்திட முடிந்திருக்கிறது மட்டுமல்ல - டில்லிக்குக் கலக்கமே ஏற்பட்டிருக்கிறது. நாடுகளிலே நல்லறிவுப் பிரசார முறைகளின் மூலம் நடைபெறும் விடுதலைக் கிளர்ச்சியை, அப்பாவிகளைத் தட்டிக்கொடுத்தும், அற்பர்களுக்கு ‘பவிஷு’ கொடுத்தும், அடுத்துக் கெடுப்போரைத் தூக்கி விட்டும், கெடுத்திட, குலைத்திட முடிகிறது, ஓரளவுக்கேனும்! காணும் காட்சி அனைத்தும் நெஞ்சு உரத்தை வழங்கும் தன்மையில் அமைந்துள்ள அந்த மலை மண்டிலத்து மக்களிடம், இந்த முறைகள் பலன் தரவில்லை! டில்லி, புன்னகை காட்டுகிறது, பொன்னை வீசுகிறது - நாகநாடு ஏறெத்துப் பார்க்க மறுக்கிறது. நண்பர்களே! நாகர்களே! எங்கே இருக்கிறீர்கள்? உங்களைக் காணவே வந்துள்ளோம் - என்று உபசார மொழி பேசுகிறது டில்லி. குன்றுகளிலே, இங்கும் அங்கும் தெரிகிறார்கள். சிறிது நேரத்தில் எல்லாக் குன்றுகளிலும் தெரிகிறார்கள், பாதைகள், மலைகளுக்கிடையில்! மலைகளுக்குத் துணையோ காடுகள்! இடையிடையே உள்ள சிற்றூர்களிலேயோ, நாகர்கள். அவர்களின் உள்ளமோ, வீரம் நிரம்பி பெட்டகம். டில்லி திகைக்கிறது. நாகர்களின் தலைவன் பிசோமீது டில்லி, வகை வகையான கணைகளை வீசிப் பார்த்தது, பாராளுமன்றத்தின் பளபளப்பு, இராஜபவனச் சிறப்பு, பதவிப் பசை - எதனாலும் இந்த மாவீரனை மயக்க முடியவில்லை. வெளிநாட்டாரின் கையாள் என்று பழி சுமத்தினர் - வெற்றுரை என்று கூறி, எள்ளி நகையாடினர் நாகர்கள். கிருஸ்தவப் பாதிரிமார்கள் சிலர் தூண்டிவிடும் கிளர்ச்சி இது என்றனர் - இப்பொய்யுரையைக் கூறிட உங்கட்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டனர், நாகர். நாகநாடு, வளமும் வசதியும் குறைந்த நிலையில் இருக்கிறது - நல்ல பாதைகள் - நவீன சாதனங்கள் - சமூக சேவை அமைப்புகள் - இவைகளுக்கெல்லாம் நாங்கள் பணம் தருகிறோம் வேண்டியமட்டும் - பெற்றுக்கொண்டு, நாட்டை அழகுபடுத்தி மகிழுங்கள் என்று டில்லி கூறிப் பார்த்தது. வழுக்கி விழுந்த வனிதை அல்லவா, மாலைக்கும் சேலைக்கும் மயங்குவாள்? நாகர்கள், டில்லியின் உதவித் தொகையைத் தீண்ட மறுத்தனர். ஊராட்சி மன்றங்கள் அமைக்கிறோம் - அவைகளிலே அமர்ந்து உங்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொண்டு, உரிமையைச் சுவையுங்கள் என்றனர்! கெண்டையை வீசி வராலைப் பிடித்திடும் தந்திரம் என்று கண்டு கொண்டனர்; தேர்தல்களை வேண்டாமென்றனர். டில்லியின் ஒப்பற்ற தலைவர்கள், ‘இராணுவம்’ புடை சூழப் பவனி வந்தால், காட்சி கண்டு கவர்ச்சி அடைவர் என்று எண்ணி, அந்த முறையையும் கையாண்டு பார்த்தனர் - பலன் இல்லை. பிசோ, நாகர்களை மலைச்சாரல்களில், அடர்ந்த காடுகளில், சிற்றூர்களில், திரட்டினான் - தாயக விடுதலை ஆர்வத்தை ஊட்டிய வண்ணமிருந்தான். இப்புறமிருந்து டில்லியின் படைகள் தாக்கியதால், மலைப் பாதைகள் வழியாகக் காடு பல கடந்து, பர்மா சென்றனர் நாக நாட்டு விடுதலை வீரர்கள்; இந்தியாவின் நேசத்துக்குப் பாத்திரமாக இருக்கும் பர்மாவைத் தட்டிக் கொடுத்து, அங்குத் தஞ்சம் புகுந்த நாகர்களைத் துரத்திப் பிடித்தது டில்லி. இந்த முறைகளால் பலன் கிடைக்காது போகவே, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் திட்டத்தைக் கையாண்டு, நாகர் தேசியக் கழகம் எனப்படும் பாசறையில் பிளவு ஏற்படுத்தி, அதன் பயனாக விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கலாம் என்று முனைந்தது டில்லி - பத்து தலைவர்கள் கிடைத்தனர் என்று மகிழ்கிறது! அவர்களையோ நாகர்கள், ‘துரோகிகள்,’ ‘தூர்த்தர்கள்’ என்று கூறுகின்றனர். இந்தப் பத்துத் தலைவர்களும், நாகநாடு கோரிக்கையை மறுக்கவில்லை! பிசோவின் பலாத்கார முறையைக் கண்டிக்கிறார்கள்! ஆனால் பிசோ பலாத்காரம் என் கொள்கை அல்ல என்று முன்பே திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். அசாம் மாகாண முதலமைச்சர் விஷ்ணுராம்மேதி என்பவரைக் கண்டு பேசிப் பலாத்காரத்தைக் கண்டித்து பிசோ அறிக்கையே தந்திருக்கிறார்! எனினும் நாகர் விடுதலைக் கிளர்ச்சி என்பது பயங்கரமானதோர் பலாத்தார இயக்கம் எனவே அதனை ஒடுக்கியே தீருவோம் என்று டில்லி கொக்கரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையிலேதான், தம்பி! பண்டித பந்த் கிளம்பினார் நாக நாட்டுக்கு வருகிறார். அமைச்சர், வரவேற்பு வளைவுகள் அமையுங்கள். என்று அசாம் சர்க்கார் மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாகர்களில் மயக்கத்தில் சிக்கக்கூடியவர்களைப் பிடித்திழுத்து வைத்து பழகிய யானையைக் கொண்டு காட்டிலே யானைகளைப் பிடிக்கிறார்களாமே, அந்த முறைப்படி வேலைசெய்து பார்த்தனர் நாகர் விடுதலைக் கழகமோ, அமைச்சருக்காக ஏற்பாடாகும் வரவேற்பு வைபவங்களில் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டது. நெஞ்சு உரத்தையும் நேர்மைத் திறத்தையும் கவனித்தாயா தம்பி! வருகிறவர், பெரிய தலைவராக இருக்கலாம் - புகழ் தாங்கியாக இருக்கலாம் - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனும் சிங்கத்தை அதன் குகைக்குள்ளே பிடரியைப் பிடித்தாட்டிய பெரு வீரனாக இருக்கலாம் - ஆனால், நாகர்களைப் பொறுத்த வரையில், அவர் வெறுக்கப்படவேண்டிய பகைவன் என்பதிலே ஐயமில்லை. ஆகவே, வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நாகர் தலைவன் கூறுகிறார் - டில்லி அறிக்கையே, நாகர் தலைவனின் அறிக்கை வெற்றி பெற்றது ஓரளவுக்கு என்று குறிப்பிடுகிறது. தம்பி! இதற்குப் பொருள் என்ன தெரிகிறதா? பண்டித பந்த் பவனி வந்தார் - தோரணங்களைக் கண்டார் - கொடி அலங்காரம் தெரிந்தது -அதிகாரிகள் அசடு வழிய நின்றனர் - ஆனால், நாகர்கள் சீந்தவில்லை. இஃதல்லவா நாட்டு விடுதலை உணர்ச்சி வீறுடன் இருப்பதற்கான அறிகுறி! இங்கே? எண்ணும்போது வெட்கமும் பிறக்கிறது. வேதனையும் கொட்டுகிறது. டில்லி பாராளுமன்ற உறுப்பினர், திருச்சிப் பிரமுகர், கொடை பல தந்த குணவான், பெரியாரின் பேராதரவு பெற்ற சீமான், நேரு பண்டிதர் வந்தபோது, அவருக்கு மாலை சூட்டி, மகிழ்வூட்டி, பெருமிதம் அடையத் துடியாய்த் துடித்தாராம் - மனுச் செய்துகொண்டு, மாலை தயாரித்து மாளிகையை அலங்கரித்து விட்டு மாவீரன் நேரு வருகிறார். அவருக்கு மரியாதை செய்வோம் என்று ஆவலுடன் இருந்தாராம் - மனு நிராகரிக்கப்பட்டது - எமது மாபெருந் தலைவருக்குத் தாங்கள் அணிவிக்க விரும்பும் மாலையை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பதை அறிவித்துக்கொள்கிறோம் என்று சர்க்கார் அதிகாரிகள் கூறிவிட்டனராம்! தம்பி! மதுரம் M.P. தரும் மாலையை ஏற்றுக்கொள்ள நேரு பண்டிதருக்கு நேரம் கிடைக்கவில்லை - பாட்டுக்கார அம்மாளைக் காணவும், ஆட்டம் ஆடும் அம்மாவிடம் பேசவும் இத்தனை பெரிய தலைவருக்கு நேரம் கிடைத்தது! என்று பெரியார் பேசினது தெரிந்தபோது, எனக்குக்கூட உருக்கமாகத்தான் தெரிந்தது! ஆனால், வேறொன்றைப் பார்க்கும் போது, வேதனைதான் பிறக்கிறது! நாகநாட்டுத் தலைவரிடம் எழுந்துள்ள நாட்டுப்பற்றுணர்ச்சி விடுதலை வேட்கை. வீராவேசம், மதுரம் அவர்களிடம் இருந்திருந்தால், மாலையும் கையுமாகவா காத்துக்கொண்டிருந்திருப்பார்? இங்கே மாலையும் கையுமாக மதுரம்! நேரமில்லை இதற்கெல்லாம் என்று கூறி அலட்சியப்படுத்தும் நேரு! தம்பி! நாகநாட்டிலே, வருகிறார் அமைச்சர், வரவேற்று உபசரியுங்கள் என்று சர்க்கார் சங்கு ஊதுகிறது; நாகநாட்டுத் தலைவன், நமக்கு அந்த வரவேற்பிலே வேலை இல்லை என்று கூறுகிறார்; நாகர்கள் நமது விடுதலைக் கிளர்ச்சியை ஒடுக்கும் பகைவனை நாம் வரவேற்பதா-மானக் கேடல்லவா என்று கூறுவதுபோல, வரவேற்பிலே கலந்து கொள்ளாது ஒதுங்கி விடுகிறார்கள். நாக நாடு! திராவிட நாடு ஒப்பிடும்போது, என்ன தோன்றுகிறது, தம்பி? தம்பி! அதுமட்டுமல்ல, கோலாகலமாகப் பவனி வந்தார் அமைச்சர் - நாக நாட்டு விடுதலை வீரன், அவரைச் சட்டை செய்ய வில்லை - சென்று பார்க்கவில்லை! நாக நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பண்டித பந்த் தெரிந்துகொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்? நாக நாடு நாகருக்கே! என்ற திட்டத்தை விட்டுவிடுகிறேன். (டில்லி ஆதிபத்தியத்துக்கு) இந்திய குடியாட்சிக்குக் கட்டுப்படுகிறேன் என்று வாக்களித்துவிட்டு, அமைச்சரைப் பேட்டி கண்டு பேசலாம் என்றனராம் அதிகாரிகள். பிசோ இணங்கவில்லை, என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது! இணங்காததை வார்த்தைகளால் சொல்லி இருக்கமாட்டார் தம்பி! ஒரு அலட்சியமான புன்னகை மூலமே பதிலளித்திருப்பார்! பைத்தியக்காரர்களே! நாக நாடு நாகருக்கே எனும் என் இதயகீதத்தை இழந்துவிட்டு, இந்த உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கவா? என்ன பைத்தியக்காரத்தனம்! வெள்ளையனை எதிர்த்துச் சுயராஜ்யப் போர் நடத்தினீர்களாமே. உங்களுக்கு விடுதலை உணர்ச்சியின் மாண்பு விளங்காத காரணம் என்ன? கண்ணை விற்றுவிட்டுச் சித்தரம் வாங்குவதாம்! என்றெல்லாம் புன்னகை பேசியிருக்கும், “வறுமையை ஓட்டுவோம் - வாட்டத்தைத் துடைப் போம் - புது வாழ்வு அளிப்போம் - மான்யம் தாராளமாகவும் ஏராளமாகவும் அளிக்கிறோம் - தயக்கமின்றிக் கேளுங்கள் - தனி நாடு என்று மனப்பான்மை கூடாது - இந்தியாவில் இருந்தால் எல்லா வசதியும் கிடைக்கும்”-என்றெல்லாம் பண்டித பந்த் பேசினாராம். அமைச்சரைச் சூழ்ந்து நின்றிருந்த அதிகாரிகள், இடையிடையே (ஏற்பாட்டின்படி) கை தட்டி ஆரவாரம் செய்திருப்பர்! ஆனால், நாகநாட்டு விடுதலை வீரன் பிசோ? எந்தக் குன்றின்மீது நடந்து சென்றுகொண்டே வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர், வேறொன்று வேண்டுவரோ! என்ற பண் பாடியபடி புதிய பாசறைகளை அமைப்பதற்காக ஏறு நடை போட்டுக்கொண்டிருந்தானோ! இங்கே அலங்காரப் பந்தலின்கீழ் அமர்ந்து, அமைச்சர், படை பலம், பண பலம் ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, “தோழனே! விடுதலை கிடைத்திடும் அறிகுறி தெளிவாகி விட்டது….’’ "வீரத்தலைவனே! மெத்த மகிழ்ச்சி; என்ன அறிகுறி கண்டிர்….’’ “அறியாயோ, அதனை! நம்மை அடிமைகொண்ட அரசின் தலைவருள் ஒருவன் பவனி வருகிறான், நாக நாட்டில்” “பெருமைக்குரியவரே! இதனையா நற்குறி என்கிறீர்? நமது தாழ்நிலையையன்றோ காட்டுகிறது இக்காட்சி?” “இல்லை, நண்பனே! இல்லை! எதேச்சாதிகாரி பவனி வருகிறான், பவனியில் நமது மக்கள் இல்லை! பேசுகிறான் பிரமாதமாக, கேட்கும் நாகர் இல்லை!” “மகிழ்ச்சி! மகிழ்ச்சி!” “சீந்துவார் இல்லை!’’ “தாங்கள் ஊட்டிய வீர உணர்ச்சி வீண் போகுமோ வீரத் தலைவ!” “சீறினர்-சிந்தை நைந்தோமில்லை! தாக்கினர் அழிந்துபட வில்லை. பிளவு மூட்டினர் - பதர் பறந்தது! மயக்க வந்தனர் - மன்றத்தில் நாகர் இல்லை. மகத்தான எழுச்சி, மகத்தான உணர்ச்சி! மலைகளே, கேண்மின்! வெண்மேகங்களே, காண்மின்! நாக நாடு நாகருக்கே! அந்தப் பிறப்புரிமையைப் பறித்திடப் படையும் பணமும், சிரிப்பும் சீற்றமும், பவனியும் விழாவும் பயன்படுமா, கூறுக!” “நாக நாடு நாகருக்கே!” “ஆமாம்! நண்பனே! நாக நாடு நாகருக்கே, என்ற முழக்கம், குன்றெல்லாம் கேட்கட்டும், குறைமதியுடையோர்கள் தெளிவு பெறும் அளவுக்குக் கேட்கட்டும்! எங்கும் எழட்டும் அந்த இலட்சிய முழக்கம்.” தம்பி! இதுபோல உரையாடிக் கொண்டிருந்திருப்பர், நாகர்கள்!! அங்கே அது! தம்பி! இங்கே நாம், மாலையிட வந்தபோது - எந்தன் மன்னவன் மறுத்துவிட்டானே என்று சோக கீதம் கிளம்பக் காண்கிறோம்! திரு இடமே! நாக நாட்டினைப் பார்த்தேனும் வீறுகொண்டெழு என்று கூறத் தோன்றுகிறது, பண்டித பந்த் நாகநாடு சென்று சீந்துவாரற்றுத் திரும்பிய "சேதி’ யைப்படித்தபோது. நான் மட்டும் முயன்றால் முடிகிற காரியமா? ஆகவேதான் தம்பி! உன்னிடம் கூறுகிறேன்! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அல்லவா!! அன்புள்ள அண்ணாதுரை 13-11-1955 ஹெலிகாப்டரும் இரதமும்! வேதகாலமும் விஞ்ஞானப் பொருள்களும் - நாய்பூஜை - புல்கானின் வரவேற்பு. தம்பி, ஊரெல்லாம் ஒரே விழாமயம், பார்க்கிறாயல்லவா!! ஆசியாவின் ஜோதி வந்தார் - விழா காட்டப்பட்டது! ஒரு திங்களாயிற்று. இதோ பாபு ராஜேந்திர பிரசாத் பவனிக்கான விழா நடைபெறுகிறது! இது கண்டு மகிழ்வோரின் மனம், விழாக் கோலத்தைக் கலைத்துக்கொள்வதற்குள், புல்கானின் வருகிறார். பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது. அவருக்கு நடத்தப்படும் விழாவிலே இன்னின்ன வண்ணம் தெரியவேண்டும் என்று திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கும்போதே, நேபாள நாட்டு மன்னரும், மஹா ராணியாரும் வரவேற்கப்படவேண்டிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலம் விமான நிலையத்தில் வரவேற்பு - குழந்தைகள் பூச்செண்டு அளித்தல் -முப்படைப் பிரிவினரைப் பார்வையிடல், நேரு பண்டிதரின் கைகுலுக்குதல், ராஜ கட்டம் சென்று காந்தியார் சமாதியில் மலர் சொரிதல், ஜனாதிபதி மாளிகையில் விருந்து, அதை அடுத்து பார்லிமெண்டில் பேச்சு, அதை அடுத்து ஒரு விருந்து, பிறகு தாஜ் மஹால், ஜூம்மா மசூதி, தங்கக் கோயில் ஆகிய காட்சிகளைக் கண்டு வியப்படைதல், இடையிடையே இன்னிசை, நடனம் - பிறகு பக்ரா -நங்கல், சிந்திரி, சித்தரன்ஜன், இப்படிப்பட்ட ‘க்ஷேத்திரங்களைக்’ கண்டு மகிழ்தல், பிறகு தெற்கே திருவிழாக் கோலம், திரும்பவும் டில்லியில் கோலாகலம், இறுதியில் வந்தவரும் பண்டிதரும் சேர்ந்து உலகுக்கு அறிக்கை வெளியிடுவது. இது ‘விழா’ முறையாக இருந்து வருகிறது! புல்கானினுக்கும் இதுதான், டல்லசுக்கும் இதுவே தான்!! நேபாள மன்னர் இந்தச் ‘சுவை’யினை ரசித்துக் கொண்டிருக்கிறார். புல்கானின் வந்து போன பிறகு, சவுதி அரேபிய மன்னர், இந்தச் சுவைகளைப் பெறப்போகிறார். சவுதி அரேபிய மன்னர், உலகிலே உள்ள பெரும் பணக்காரரில் ஒருவர்! அவருக்குச் சொந்தமாக உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலமாக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். புல்கானின் ‘விஜயம்’ செய்து, அதன் பயனாக இங்கு ‘சமதர்மம்’ மணம் நமக்கெல்லாம் மகிழ்வூட்டியதும், சவுதி அரேபிய மன்னர் வருவதும், அவருடைய ‘விஜயம்’முதலாளித்துவ, மோகத்தை தேவைப்படுவோருக்கு ஊட்டுவதுமாக எவ்வளவு நேர்த்தியான முறையிலே அமைந்திருக்கிறது. பாரீர், பாரதப் பண்பாடு. எதற்கும் இடம் உண்டு, எதுவும் எதனுடனும் இருக்கும், இது இன்னாருக்கு உரியது என்று இராது. பர்ணசாலை என்றால், அங்கு, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மூவாசையைத் துறந்திடவும், மூலத்தை உணர்ந்திடவும், முறையும் நெறியும் கிடைக்கும் இடம் என்றுதான் கூறுவர் - பாரதப் பண்பாடு அப்படி அல்ல! - இங்கு பர்ண சாலையில் துஷ்யந்தன் சகுந்தலையை அடைகிறான்! நல்லது மட்டுமே சொல்கிறேன், கல்லான கதையை விட்டுவிடுகிறேன். அந்த நாள் தொட்டு இந்த நாள் வரை எது செயல் முறை, எதைக் கொள்ளல் வேண்டும் எதைத் தள்ளிட வேண்டும், என்பதைப் பற்றி அதிகமான அளவு அக்கறை காட்டாமல், கிடைப்பதை இருப்பதுடன் சேர்த்துக்கொள்வதும், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று’ என்று திருப்தி அடைவதுமாகவே காலந்தள்ளி வந்திருக்கிறார்கள்; இதைப் பெருமைக்குரியதாகவும் போற்றிப் புகழ்கிறார்கள். பிரிட்டிஷ் - அமெரிக்க முதலாளிகள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள், ‘இந்தியா’ தொழிற்கூடமாவதற்கான முயற்சிக்குப் பணம் பெரும் அளவுக்கு நாங்கள் போடத் தயாராக இருக்கிறோம் - ஆனால், தொழில்களைத் தேசிய உடைமை ஆக்குவது என்ற திட்டமோ, அன்னியநாட்டாருக்கு இங்கு பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம் இருத்தல் ஆகாது என்ற திட்டமோ கிடையாது என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும். தொழிலில் கிடைக்கும் இலாபத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்குத் தங்கு தடை இருக்கக் கூடாது என்று கேட்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பாரதப் பிரதிநிதியும், இங்குள்ள நிதி மந்திரியும், ‘ததாஸ்து’ - என்கிறார்கள். அதாவது, அன்னிய நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக இந்த நாட்டை குத்தகைக்கு விடுவதற்குச் சம்மதிக்கிறார்கள். அதேபோது, ஆவடித் தீர்மான மூலம், சமதர்மம் அளிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இந்த முரண்பாடு சரியா என்று கேட்டாலோ, இதுதான் பாரதப் பண்பாடு, நாங்கள் மிகச் சிரமப்பட்டுக் கண்டறிந்துள்ள "சீலம்’ என்றும் பேசுகிறார்கள். புல்கானினும் வருகிறார், சவுதி அரேபிய மன்னரும் வருகிறார்; இருவருக்கும் விழா; இருவரும் குதூகலமடை கிறார்கள்; இருவருக்கும் நேரு பண்டிதர் நண்பர்! சவூதி அரேபியா மன்னர் விஜயம் செய்வது தவறு என்று கூறுவதற்காக இவ்விதம் எழுதவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கும் நேர்மையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமலேயே எவரிடமும் இன்முகம் காட்டி. எதற்கும் இசைவு அளித்துக்கொண்டு செல்லும் போக்கிலே நாடு நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன். கடவுள், மனிதனின் சிருஷ்டி! மதம், மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட மனமயக்கம். என்று சென்ற திங்கள், மாஸ்கோ "ரேடியோ’ தெரிவித்தது என்று இங்குள்ள ஏடுகளெல்லாம் அறிவித்தன! அந்த நாட்டு புல்கானின் வருகிறார் - அவருக்குக் கல்கத்தாவில் இராமாயணம் நிழல் நாடகமாக உதயசங்கர் நடனக் குழுவினரால் நடத்திக் காட்டப்பட ஏற்பாடாகி இருக்கிறது. ஒரு பெரும் தலைவருக்குப் பொழுதுபோக்குக்காக நடத்திக் காட்டப்படும் ‘காட்சி’யைப்பற்றி, நான் வலிந்து பொருள் கொள்வதாகக் கருதாதீர்கள். காரணமின்றி அல்ல, இராமாயணம் காட்டப்படுவது! காளிதாசரின் ‘சாகுந்தலம்’ காட்டப்பட்டால், இளங்கோவின் சிலப்பதிகாரம் காட்டப்பட்டால், இதுபோல் ஒவ்வோர் மொழியிலும் உள்ள கலை ஓவியங்கள் காட்டப்பட்டால், வெளி நாட்டுத் தலைவருக்கு இந்நாட்டுக் கலைக்காட்சி நடத்திக் காட்டப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம். நடத்தப்படுவது இராமாயணம்! இது போலவேதான், ‘பாரதப் பண்பாடு’ பல்வேறு முனைகளிலும் தலைவிரித்தாடுகிறது. டில்லிப் பட்டணத்தில், ஆசியா கண்டத்திலேயே இதுவரை இப்படிப்பட்ட ஓர் பிரம்மாண்டமான காட்சி நடத்தப் பட்டதில்லை என்று எவரும் வியந்து கூறத்தக்கதான ‘பொருட்காட்சி’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ரμயாவும் பிரிட்டனும் பிற நாடுகளும், தத்தமது தொழில் திறமையை, விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்கிடும் வகையில் பொருள்களைக் காட்டியும், பொருள் செய்முறைகளை விளக்கியும் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காண்போர், முற்போக்கு நாடுகள் தொழில் துறையிலே எவ்வளவு ஆச்சரியகரமான முன்னேற்ற மடைந்துள்ளன என்பதைப் பாராட்டுகின்றனர். நேரு பண்டிதர், இந்தப் பொருட்காட்சியின் தத்துவத்தை விளக்கி விரிவாகப் பேசியுமிருக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் சென்று காண்கின்றனர். கண்ணாடி மனிதன் என்றோர் காட்சிப் பொருள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள மனித உடல்! மனித உடலுக்குள்ளே என்னென்ன உறுப்புக்கள் என்னென்ன முறையிலே அமைந்து, எவ்வகையிலே இயங்குகின்றன என்பதை, கண்ணாடி மனிதன் மூலம் பாமரனும் கண்டறியலாம். இரத்தக் குழாய்கள் தெரிகின்றன. இரத்தம் எப்படி எப்படி ஓடுகிறது என்பது காட்டப்படுகிறது. இதயத்துடிப்பு, மூளையின் அமைப்பு, நரம்புகளின் படைப்பு - எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, கண்ணாடி மனிதன் மூலம்! பொருட்காட்சியிலே இந்த விஞ்ஞானப் பாடம் அளிக்கப் பட்டு வரும் இதே நேரத்தில், பாரதத்தின் மற்றோர் பகுதியில்,வேத காலத்து இரதங்கள் ஓடுகின்றன! அதை இலட்சக் கணக்கான மக்கள் கண்டுகளித்து ஆரவாரம் செய்கின்றனர். விஞ்ஞான அறிவளிக்கும் பொருட்காட்சியை நேரு பண்டிதர் திறந்து வைக்கிறார் - இந்த வேதகாலக் காட்சியைத் துவக்கிட, பம்பாய் கவர்னர் மேதாப் முன் வருகிறார். உலகில் சாந்தி, சமாதானம், சுபீட்சம் ஆகியவை ஏற்பட ஐ.நா.சபை, நால்வர் மாநாடு, ஜினிவா மந்திராலோசனை, பாண்டுங் முயற்சி, நேருவின் பஞ்சசீலம், இவை ஒன்றும் முறையாகாது - கோடிக்கணக்கான மக்கள் சமாதானம் கோரலாம், பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து சென்று பண்டிதர் உலக சமாதானம் பற்றி உள்ளத்தை உருக வைக்கலாம், புல்கானின் வாக்களிக்கலாம், சூயென்லாய் சமரசம் பேசலாம், மாலடோவ் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கலாம், அமெரிக்காவும் சமாதானம் பேசலாம், ஆனால் இவையெல்லாம் உலக சமாதானத்தை ஏற்படுத்தா - உலகிலே சாந்தி நிலவ இதோ நாங்கள் தொண்டு புரிகிறோம் பாரீர் என்று கூறுவது போலச் சில பண்டிதர்கள் கிளம்பி, யாககுண்டங்களை வெட்டச் செய்தார்கள், டன் டன்னாக விறகும் டின் டின்னாக நெய்யும் கொண்டுவரச் செய்தார்கள், ‘கோஷ்டி கோஷ்டி’யாகக் கிளம்பிச் சென்று வேத பாராயணம் செய்து, வாஜபேயயாகம் செய்தனர்! யாகம் நடைபெற்ற இடத்திலே, இப்போதும் வெப்பம் இருக்கக் கூடும் - புல்கானின் வருகிறார். பூனா நகரில், வாஜபேய யாகம் பிரஜாபதி தேவனுக்காக நடத்தப்பட்டிருக்கிறது. ஏழு நாட்கள் நடைபெற்றன, மூன்று நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த யாகம் நடைபெற்றதில்லையாம். நூற்றுக்கணக்கான புரோகிதர்கள், யாக குண்டத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, வேதமந்திரங்களைச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் ‘பூஜை புனஸ்காரம்’ செய்து புண்ணியம் தேடிட, பம்பாய் மாகாண கவர்னர் அரிகிருஷ்ண மேதாப் இந்த யாகத்தின் மேன்மை பற்றித் தமது மேலான கருத்தினைக் கூற, ஆனே எனும் பழம் பெரும் தேச பக்தர், நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அங்கு படுக்கையுடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டு, அவரும் தமது உரையை அருள, இலட்சம் மக்கள் கண்டு கழிபேருவகை பூத்தனர், இந்தத் திங்களில். பூனாவில் இந்தப் புண்ய யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நேரு பண்டிதர், என் க்ஷேத்திரம் அணையும் தேக்கமும், தொழிலும் வளமும் என்ற தமது பேச்சை அமிருதசரசில் அளித்துக் கொண்டிருக்கிறார். வாஜபேய யாகத்தை முடித்துக்கொண்டு, பாரதத்தின் பழைய காலமுறைப்படி, வேதகால இரதங்கள் ஜோடித்து, பலர் ‘ரிμகளாகக்’ காட்சி தந்து, இரத சாரத்யப் பந்தயம் நடத்திக் காட்டினராம்!! கடைசி நாளன்று. இராமனும் கிருஷ்ணனும், சேதி நாட்டரசனும், அவந்தி தேசாதிபதியும், கர்ணனும் சகுனியும், சகாதேவனும் "சல்லியனும், அபிமன்யுவும் பிறரும் புயலெனச் செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட இரதங்களிலே சென்றனர் என்று புராணம் படிக்கிறார்களல்லவா, அந்தச் செல்லரித்த ஏடுகளிலே காட்டப்படும் காட்சிகளைக் காண, வேதகால இரத சாரத்யக் காட்சியை ஏற்பாடு செய்து காட்டினர் - பல்லாயிரவர் கண்டனர் - பரவசமடைந்தனர். அதேபோது டில்லிப் பட்டணத்தில் வேறோர் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. புல்கானின் விஜயத்தின் போது, உற்சாக மிகுதியால் இலட்சக்கணக்கில் கூடிடும் மக்கள் கட்டுக்கடங்காது போவர் என்ற கவலையால், போலீஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானத்தில் ஏறிக்கொண்டு, மேலே தாழ்வாகப் பறந்து கொண்டே, மக்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் தயாரிக்கிறார்கள். புனாவில், வேதகால இரதம் ஓடிக்கொண்டிருக்கிறது, டில்லியில் ஹெலிகாப்டர் விமானம் தயாராகிறது!! ‘பாரதம்’ எவ்வழி செல்கிறது என்று கூற முடியும். யாக குண்டமும் தெரிகிறது. விஞ்ஞானக் கூடமும் அமைக்கப்படுகிறது! இரதமும் ஓடுகிறது. ஹெலிகாப்டரும் பறக்கிறது! புல்கானின் வரவேற்கப்படுகிறார். சவுதி அரேபிய மன்னருக்கும் இராஜ உபசாரம் தயாராகிறது. மேதாப் பேசுகிறார், பாரதம் யாக யோகாதிகளிலே சிறந்த தேசம் - என்று. நேரு பண்டிதர் அதே கிழமை வேறோர் பகுதியிலே பேசுகிறார், இன்னமும் நாம் சாணியுகத்தில்தான் இருக்கிறோம் - என்று. உலகம் அணுயுகத்தில் இருக்கிறது - பாரதம் சாணியுகத்தில் இருக்கிறது என்று கூறுகிறார் நேரு பண்டிதர் - மனம் நொந்து கூறுவதுபோலத்தான் இருக்கிறது. அவர் இவ்விதம் கேலியும் வேதனையும் கலந்த குரலில் எந்தச் சாணியுகம் பற்றிக் குறிப்பிடுகிறாரோ, அதைச் சிலாக்கியமானது என்று புகழ்ந்து பேசி, வாஜபேய யாகத்தைத் துவக்கி வைக்கிறார் கவர்னர் மேதாப்! எல்லாம், பாரதத்தில். எது தான் நமக்கு உரியது? எவ்வழிதான் நல்வழி? எந்த முறையைப் பின்பற்றப் போகிறீர்கள்? என்று கேட்டாலோ, தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள் - குழப்பம் அடைகிறார்கள். இவர்கள் இவ்விதம்தான் ‘பத்தாம்பசலிகள்’; பண்டிதர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்தான் காசி அரித்துவாரம் சேது சீரங்கம், திருப்பதி தில்லை, இவைகளல்ல என் திவ்ய க்ஷேத்திரங்கள்; என் திவ்ய க்ஷேத்திரங்கள், தேக்கம் அணை சிந்திரி, சித்தரன்ஜன், என்ஜின் எழில் என்று பேசுகிறாரே! அவர் நாட்டினை, அறிவுலகத்தின் சார்பில் நடத்திச் செல்வார், விஞ்ஞானப் பாதை வழி நடத்திச் செல்வார் என்று எண்ணித்தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம் என்றாலோ, இவ்வளவு பகுத்தறிவும் பேசிவிட்டு, அவரும் இராமலீலா, பார்க்கச் செல்கிறார், பேரப் பிள்ளைகளுடன்! அவரும் இவ்வளவுதான் என்று தெரிகிறபோது ஆயாசப்படாமல் என்ன செய்வது? அந்த வாலிபன் பதறினான் இளம் பெண் பதைபதைத்தது கண்டு! அவள் அழுகுரல், அவன் இதயத்தைத் துளைத்தது. ஐய்யோ! என்று அணங்கு அலறுகிறாள். அந்தோ! கொடுமை! கொடுமை! என்று கூவுகிறான் இளைஞன். பெரு நெருப்பிலே பெண்ணை இறக்கினர். புத்தாடை உடுத்துக் கொண்டாள் பூவை-மஞ்சள் குங்குமம் இட்டுக் கொண்டு, மாங்கலியத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டு, மாமி மாமன் காலில் விழுந்து வணங்கிவிட்டு, சூழநின்ற சுற்றத்தாரைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் பிணக்குழியைப் பற்றிக் கொண்ட பெரு நெருப்பை மும்முறை வலம் வந்து, “ஈசா! இதோ நானும் என் நாதனுடன் வருகிறேன், ஏற்றுக்கொள். பதியை இழந்து பாவை புவியில் வாழ்வது பெரும் பாபம். எனவே இதோ, உடன்கட்டை ஏறுகிறேன். உன் திருவடியில் சேர்த்துக் கொள்!” என்று பிரார்த்தனை செய்கிறாள். “உத்தமி உடன்கட்டை ஏறுகிறாள், பத்தினி, பர்த்தாவுடன் செல்கிறாள் - அவளுடைய பாததூளி பட்டாலே பாபம் சம்ஹரிக்கப்படும். உடன்கட்டை ஏறிடும் காட்சியைக் கண்டோருக்குக் கர்மம் கழுவப்படும்; கடவுளருள் கிட்டும்’ என்று பயபக்தியுடன் பேசுகின்றனர். பத்தினிப் பொண்ணு பாரதக் கண்ணு என்று பாடுகிறார்கள்; தாளம் கொட்டுகிறார்கள். தீயின் அருகே செல்லச் செல்ல, அவள் கண்களிலே ஓர் மிரட்சி ஏற்படுகிறது; வாலிபனுக்கு அது விளங்குகிறது. “ஜெய் மகாதேவ்! ஜெய்சங்கர்! ஜெய்சீதாராம்!” என்று கோஷம் கிளம்புகிறது. ஆயிரம் நாவுகள் படைத்த கோர உருவம்போல, நெருப்புத் தெரிகிறது, பெண்மணியின் கண்களுக்கு; எனினும் அவள் அருகே செல்கிறாள். மகளே! அருமை மகளே! என்று தாய், அழுது என்ன பயன்? அவள் உத்தமி பத்தினி, எனவே அவள் சுட்டுச்சாம்பலாக்கப்பட வேண்டியவள்! இளம் பெண், இந்த வயதிலா இந்தக் கதி என்று சிலர் பச்சாதாபப்படலாம். ஆயினுமென்ன, அவள் பாரதப் பெண் -பதி பிணமானான், அவன் உடல் அதோ நெருப்பில், இவள் இனிப் பூவுலகில் இருப்பானேன். உயிருடன் இருந்தபோது யாருடன் மஞ்சம் ஏறிக் கொஞ்சிக் கிடந்தாளோ அவனுடன்தான் இப்போதும் இருக்க வேண்டும். அதுதான் பாரதப் பண்பாடு. போ, மகளே, போ. நாதன் இருக்குமிடத்துக்குத்தான் நாயகி செல்ல வேண்டும். அது மலர் தூவிய பஞ்சணையானாலும் சரி, கொழுந்து விட்டெரியும் நெருப்பானாலும் சரி, அதுதான் உன் இடம்; போடி பெண்ணே, போ, போ. நெருப்பு அணைந்திடுவதற்குள் போ. நீறு ஆகிவிடுவாய். நேராகச் சொர்க்கம் சேர்ந்திடுவாய். சதியும் பதியும் இணைபிரியாமல் வாழ்வீர்கள். அவன் செல்கிறான், உன்னை அழைக்கிறான், போடி மகளே, போ” - என்று பாரதப் பண்பாடு கூறுகிறது. அந்தப் பெண் செல்கிறாள் - வாலிபன் பதைக்கிறான். நெருப்பில் இறங்குகிறாள். “ஐயோ” என்று அலறித் துடித்து, அதைவிட்டு வெளிவர எழுகிறாள். நீண்ட கம்புகளைக்கொண்டு “சாஸ்திர சம்பிரதாய ரட்சகர்கள்” அவளை மீண்டும் நெருப்பில் தள்ளுகிறார்கள். அவள் உடலைத் தீ பற்றிக்கொள்கிறது - வேதனையால் துடிக்கிறாள் - வேதமுணர்ந்தவர்கள் அவள் தீக்குண்டத்தைவிட்டுவெளி ஏறாவண்ணம், கோல்கொண்டு தடுத்து, அவளைப் பிணமாக்குகிறார்கள். பாரதத்துக்கு மற்றோர் பத்தினி கிடைத்து விட்டாள். ஆனால் ஒரு ஒப்பற்ற சீர்திருத்த வீரனும் கிடைக்கிறார். அவர்தான் ராஜா ராம்மோகன் ராய். தன் அண்ணி, உடன்கட்டை ஏறியபோது, வைதீக வன்கணாளர்கள் காட்டிய குரூரத்தைக் கண்டபோதுதான், ராஜாராம் மோகன் ராய், மடைமையில் விளையும் கொடுமை குறித்து உணரமுடிந்தது. சுடலையில் அவர் எடுத்துக்கொண்ட சூளுரையை நிறைவேற்ற அவர் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்துவரை சென்று போரிட்டார் - வெற்றி கண்டார். சதி சட்டப்படி தடுக்கப்பட்டது. வைதீகர்கள் அவர்மீது காட்டிய குரோதம் கொஞ்சமல்ல. அவர்கள் சாஸ்திரத்தை, யுகயுகமாக இருந்து வந்த சம்பிரதாயத்தை எடுத்துக் கூறினர். ராஜாராம் மோகன் ராய்க்கு சுடலையில் கண்ட காட்சி உடனே மனக்கண்ணில் தெரியும். அவர் இதயத்தில் பெருநெருப்பு மூளும். பொறிகள் வார்த்தைகளாகி வெளிவந்து, வைதீகத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிற்று. சதியை ஒழித்தார் ராஜா ராம் மோகன் ராய்! நான் அறிவேன்! நான் அறிவேன்! உடன்கட்டை ஏறுவது என்பது எவ்வளவு கொடுமை என்பதை நான் அறிவேன், என் கண்ணால் கண்டேன், அலறினாள், துடித்தாள் உயிருக்காக மன்றாடினாள், உலுத்தர்கள் என்ன செய்தனர்? கோல் கொண்டு அவளை நெருப்பில் தள்ளினர் - உயிர் கருக்கினர். அபலையின் அழுகுரலைக் கேட்டால், கல்நெஞ்சக் காரனுக்கும் கருணை பீறிட்டெழும். அந்த அழுகுரல் பிறர் செவியில் விழக்கூடாது என்பதற்காக வைதீக வெறியர்கள், காது செவிடு படும்படி சங்கும் ஊதினர், தாளம் தட்டினர், மேளம் கொட்டினர், பஜனைச் சத்தமிட்டனர், எல்லாம் ஒரு பெண்ணைப் பிணமாக்க; தங்கள் பைத்தியக்கார முறையை வாழவைக்க; நான் கண்டிருக்கிறேன் அந்தக் கயமையை - என்று ராஜாராம் கர்ஜனை புரிந்தார்; தர்க்கம் நடத்தினார்; ஏடுகள் தீட்டினார்; வாதுக்கு வந்தோரை முறியடித்தார்; வஞ்சகரின் எதிர்ப்புகளைச் சமாளித்தார்; சீமை சென்று பேசினார்; பார்லிமென்டில் சொற் பெருக்காற்றினார்; வென்றார்; சதி எனும் மடமையைக் கொன்றார். பாரதத்தில் இப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாகச் ‘சதி’ நடக்கிறது. சட்டம் இருக்கிறது; எனினும் ‘சதி’ நமது பாரதப் பண்பாட்டின் சின்னம் என்று கருதுவோர் இருக்கிறார்கள்; அவர்களிடம் ஒரு புதுத் துணிவும் காணப்படுகிறது. “மதுந்தா என்ற இடத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் இறந்துவிட்டதும் அவருடனேயே ‘உடன் கட்டை’ ஏறியதாகச் சென்ற கிழமை ஒரு செய்தி கிடைத்திருக்கிறது தனது கணவன் உடல் எரிந்துகொண்டிருக்கும் போது, மஞ்சள் நிறச் சேலை அணிந்துகொண்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் தோன்றி மயானத்தில் கூடியிருந்தவர்களிடம் தான் உடன் கட்டை ஏறப்போவதாகத் தெரிவித்துவிட்டு நெருப்பில் குதித்துவிட்டாளாம். அந்தப் பெண்ணை எவரும் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை. நெருப்பில் விழுந்த அந்தப் பெண், துடித்துத் துடித்து அலறினாளாம். ஆனால் அந்த அலறலைவிட அதிக உரத்த தொனியில் தாரை, தப்பட்டைகள் முழங்கினவாம்; குருக்கள்மார் வேதங்கள் ஓதினராம்; சில நிமிட நேரத்தில் அந்தப் பெண் சாம்பலானாளாம்.” நாடு, எவ்வழி நடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதில் ஓர் திட்டவட்டமான கொள்கையில்லாததால், விளையும் கோரங்களில் இஃதொன்று, வேறென்ன? பாபு ராஜேந்திர பிரசாத் தமிழகத்துச் சுற்றுப் பயணத்தில், ஓரிடத்தில், “நாடு இப்போது பழைய காலத்திலும் இல்லை; புதிய காலத்திலும் இல்லை; இவை இரண்டும் போட்டியிடும் ஓர் இடைக் காலத்தில் இருக்கிறது” என்ற கருத்தைக் கூறியிருக்கிறார். அவர் பழமையின் பக்கமா, புதுமையின் சார்பிலா என்பதை அறிவிக்கவில்லை. அவருடைய அலுவல்கள் அதனை அறிவிக்கின்றன. திருப்பதியின் தெரிசனம். சமஸ்கிருத பரீஷத்தில் பிரசன்னம், மடாதிபதியின் சமயப் பிரசார ஸ்தாபனத்தில் பேச்சு - இப்படி அவர் அலுவல்கள். மதத்தின் பெயர் கூறிக்கொண்டு எப்படிப்பட்ட மூடத் தனத்தையும் செய்ய வைக்கலாம் என்ற நெஞ்சழுத்தம்,வைதீகத்தின் துணை கொண்டு ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. யாராருக்கோ ‘யோகம்’ அடிக்கிறது மனிதர்களைத் தள்ளிவிடுங்கள். நாய்க்கு அடித்திருக்கிறது யோகம்! மஞ்சள் குங்குமம் தடவி, மலர் சூட்டி, விருந்து வைத்துப் பூஜை செய்திருக்கிறார்கள், நாய்களுக்கு! இங்கு, நாம் தம்பிரான்களுக்கு ஏனய்யா தங்கப் பாதக். குறடு, சைவத்தைப் போற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு ஏன் மாமிச மலைகளைப் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து திரிகிறீர்கள் என்று கேட்கிறோம். சங்கரர் தந்து சென்ற அறிவு விளக்கம் ஆத்மீக வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு, பாத பூஜை செய்தால் பவப்பிணி போகும் என்று நம்பிக்கொண்டு, காலைக் கழுவி நீரைக் குடிக்கிறாயே என்ன கேவலமான புத்தி ஐயா! உனக்கு என்று கேட்கிறோம். இப்படியா கேட்கிறாய், என்னைத் திருத்த நீ யார், என் விருப்பம் போல் நான் செய்வேன்; எனக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் புனித ஏடுகளிலுள்ளதை, பூஜிதர்கள் கூறுவதைக் கேட்டு நான் நடந்து கொள்வேன்; அதைத் தவறு, அறிவீனம் என்று விளக்கிட நீ ஆயிரம் காரணம் காட்டுவாய்; அதனாலென்ன, நீ சொல்வதாவது நான் கேட்பதாவது என்று நம்மிடம் வாதாடுகிறார்கள். வைதீகத்தின் பிடியிலுள்ள மக்கள் நாய்க்குப் பூஜை செய்திருக்கிறார்கள் - புல்கானின் வருகைக்காக நாடு விழாக் கோலம் கொண்டிருக்கிற இப்போதுதான்! இப்போது டில்லியில் வரவேற்பும், பம்பாயில் இராஜோ பசாரமும் பெற்றுக் கொண்டிருக்கிறாரே, இந்தியாவின் நண்பர் நேபாள மன்னர் - அவருடைய நாட்டில். நாய்கள், மங்கள ஸ்நானம் செய்விக்கப்பட்டு, மஞ்சள் குங்குமம் அணிவிக்கப்பட்டு, மாலைகள் சூட்டப்பட்டு, காத்மாண்டு நகரவீதிகளில் செல்கின்றன! கல்லடிபட்டுக் கொண்டும், எச்சில் இலை பொறுக்கிக் கொண்டும், ஒன்றுக்கொன்று கடித்துக்கொண்டும், குரைத்துக் கிடக்கும் இந்த நாய்களுக்கு, இப்போது விசேஷ விருந்து அளித்து விழுந்து கும்பிடுகிறார்கள். யமதர்ம ராஜனுடைய வாசலில் இரண்டு நாய்கள் காவலாம். நாய்களுக்கு இங்கு இந்தப் பூஜை செய்தால், யமதர்மனுக்குத் திருப்தியாம். யமனுக்குச் சந்தோஷம் என்றால் என்ன - மரண பயம் கிடையாது. எனவே இந்த நாய் பூஜை நடக்கிறது - தீபாவளிப் பண்டிகையின் போது. நாய்க்கு நடத்தப்படும் பூஜை போலவே, எருமைக் கிடாவுக்கும் பூஜையாம். நேபாள நாட்டுத் தீபாவளி இவ்விதம் இருக்கிறது. இங்கே பசுவுக்குப் பூஜை செய்வோரும், பாம்புக்குப் பால் ஊற்றுவோரும், செச்சே இது என்ன பைத்யக்காரத்தனம், நாய்க்குப் பூஜையா, மஞ்சள் குங்குமம், மாலை மரியாதையாம், பூஜையாம் நாய்க்கு. இதுவா பக்தி? இதுவா மதம்? என்று கேபேசுவர். இங்கு பசு, பாம்பு - அங்கு நாய். எல்லாம், மதத்தைப்பற்றி மனதிலே குடிகொண்டிருக்கிற மயக்கத்தின் விளைவுதான். நாய்களுக்குப் பூஜை செய்யும் நாடு நேபாளம் என்று ஒரு மேயோ கூறிவிட்டால் மட்டும், கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறது; நாம் மதத்தின் பெயரால் மூடத்தனம் நிலவுகிறது என்று கூறினாலோ, ஏடா, மூடா, எமது மார்க்கத்தில் பொதிந்து கிடக்கும் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் நீ அறிவாயா? என்று பேசிடும் பெரியவர்கள் கிளம்பிவிடுகிறார்கள். இதோ நாய்களுக்குப் பூஜை நடக்கிறது. அருவருப்பு அடைவோர் இல்லை, வேண்டுமானால், விஷயம் கேள்விப்பட்டதும். இங்கு அந்த பூஜை முறையின் விவரம் தெரிந்துகொள்ள ஆவல்கொள்வோர் கிடைப்பர். “நாய் என்றால் கேவலம் என்று பொருளா? தெரியுமா, பைரவர் என்று நமது புனித ஏடுகளில் கூறப்பட்டிருப்பது, அவருக்கு வாகனம் நாய்தான்” என்று ஆதாரம் பேசுவர் பஜனைக் கூடத்தார். நாயைக் கும்பிடுவது பற்றி இந்தச் சூனாமானாக்கள் கேபேசுகிற ôர்களே நாயிடம் கொஞ்சி விளையாடலாமா, நாய்க்கு பிஸ்கட்டும் பாலும் கொடுப்பதைக் கண்டித்தார்களா? நாய் வளர்த்து, நம்மையும் நாய் வளர்க்கப் பழக்கப்படுத்திய வெள்ளைக்காரனைக் கண்டித்தார்களா? நாய், சுதந்திரப் போருக்குத்தியாகம் செய்தது இவர்களுக்குத் தெரியுமா? நாய் செய்த தியாகம்கூடச் செய்யாதவர்கள்தான் இந்தச் சூ.மா.க்கள் கேளீர், கதையை. சத்யாக்கிரகத் தொண்டரைத் தாக்க ஒரு வெள்ளைக்கார வெறியன் ஓடி வந்தான். கையில் துப்பாக்கி, நெஞ்சில் வஞ்சகம். சத்யாக்கிரகி என்ன செய்வான்? ஓடாதே, கோழையாகாதே என்று மனம் கூறிற்று. புத்தியோ, ஓடு ஒளிந்துகொள், அது கோழைத் தனமாகாது, பாரததேவியின் விலங்கினை ஒடித்திட நீ சேவை செய்ய வேண்டும், அதற்காக உயிர் வாழ வேண்டும், எனவே இப்போது உயிரைக்காப்பாற்றிக்கொள் என்று இடித்துரைத்தது. அவன் ஓடினான், அவனா ஓடினான், அடிமை இந்தியா ஓடிற்று! ஆங்கில ஏகாதிபத்யம் துரத்திக்கொண்டு வந்தது. அப்போது கேவலம் ஒரு நாய் - ஆனால் பாரதத் திருநாட்டிலே பிறந்து வளர்ந்த நாய், கிளம்பிற்று வீராவேசமாக! நாய் பாரதத்தின் சேய் என்று உரிமையுடன் முழக்கமிட்டது; வெள்ளையன் மேலே பாய்ந்தது, குரல் வளையைக்கடித்தது; அவன் திணறினான், கூவினான். ஏகாதிபத்யம் மரணக் கூச்சலிட்டது; நாய் பாரத மண்ணிலே பரங்கி ஆதிக்கமா, என்று கேட்கவில்லை; ஆனாலும் தேசபக்தர்களின் பேச்சு அந்த நாயின் உள்ளத்திலேயும் வீராவேசத்தை ஊட்டி விட்டிருக்க வேண்டும் - எனவே அது புலியாயிற்று. போர், கடும்போர் பைரவருக்கும் பரங்கிக்கும் போர் மூண்டது! இறுதியில், அந்தப் பாதகன், பரங்கி, தன் கைத்தடியால் நாயின் மண்டையில் ஓங்கி அடித்தான் - இரத்த வெள்ளம் - கடைசி முழக்கம் - நாய் மண்ணிலே பிணமாயிற்று செத்தும், அதன் கண்கள் மூடிக்கொள்ளவில்லை - அன்னியனைவிட மாட்டேன் என்று அப்போதும் கூறுவது போலிருந்தது. அப்படிப்பட்ட ‘நாய்’ சேவை செய்ததை அறியாத இந்த அறிஞர்களும், பெரியார்களும், இப்போது நாய் பூஜை செய்வதைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதைத் தேசியவாதியாகிய நான், செக்கிழுத்த சீலரின் வழி நிற்கும் நான், அனுமதிக்க மாட்டேன் - என்று பேசி, தங்கள் திறமையைக் காட்டிக் கொள்ளவும் சிலர் உண்டு - ஒருவராவது, இது என்ன கேவலப் போக்கைய்யா, நாயைப் பூஜித்தா நாதன் அருளைப் பெறுவது என்று கேட்க மாட்டார்கள்? ஏன்? நாதன் அருள் பெற்றதாகக் கூறப்பட்டுள்ள புண்யக் காதைகளில், இதைவிட அருவருப்பான நிகழ்ச்சிகள் உள்ளன - படித்தும் பக்கம் நின்று கேட்டும் பரவசப்படும் நாடாயிற்றே! நாய்களுக்குப் பூஜை செய்வது, கேவலம்தான், ஆனால் அதைக் கேட்டால், கைகொட்டிச் சிரித்திடத்தான் தோன்றுகிறது. வேறென்ன என்பார்கள். கேட்டதும், கோபமும் வேதனையும் கிளம்பத்தக்க செயலிலும், மதத்தின் வழி நிற்பதாகக் கூறிக் கொள்வோர், இப்போது ஈடுபடுகிறார்கள். வாரீர், வணங்கிடுவோம் வாரீர், இந்த உத்தமனை மறவாதீர், இவன் நமக்காக, நமது ஜீவனாம் இந்து மதத்துக்காக சர்வபரித் தியாகம் செய்த மகான - மாவீரன். உயிரைத் துச்சமென்று எண்ணி, மார்க்கத்தை இரட்சித்த மகா புருஷன். நமது புராதன மார்க்கமாம் இந்து மார்க்கத்துக்கு பேராபத்து நேரிடும் போதெல்லாம், இப்படிப்பட்ட ‘ரட்சகர்’ அவதரிப்பது நமது பாரதத்துக்கே தனிச் சிறப்பளிக்கிறது. இந்தப் பாரத வீரனை, இந்து மார்க்க ரட்சகனை, மதக்காவலனை, கொண்டாட வாரீர் - என்று அழைத்திருக்கிறார் ஒரு பாரத்வாசி. இவ்வளவு புகழுரைகளும் அர்ச்சித்துக் கொண்டாட வரும்படி கூறுவது, யார்பொருட்டு, மகாத்மா காந்திக்காகத்தானே, அந்த மகானுக்குத்தானே இந்தக் கொண்டாட்டம் என்று கேட்பீர்கள். மூர்ச்சையாகிவிடாதீர்கள். இது மகாத்மாவின் நினைவு நாள் கொண்டாட்ட அழைப்பு அல்ல - அவரைச் சுட்டுக் கொன்றானே கோட்சே, அவனுக்காக! ஆமாம், தம்பி! ஆமாம், பகிரங்க அழைப்பு, கொண்டாட் டத்துக்கான ஏற்பாடு!! 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ல் அம்பாலா சிறையில் அகிலம் போற்றிய உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற உலுத்தன், ஆரிய கோட்சே தூக்கிலிடப்பட்டான். இந்த நவம்பர் 15-ந் தேதி, இந்தக் கொலைகாரனுடைய ஆறாவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டம் நடத்த குவாலியரில், தண்டாவாடே எனும் இந்துமகாசபைக்காரன், தன் சகாக்களுடன் கூடி ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். மகாத்மா கொல்லப்பட்ட வழக்கிலே இவனும் சிக்கினான் - விடுதலை செய்யப்பட்டான். இவனுக்கு, நேரு பண்டிதரின் ஆட்சி இருக்கும்போதே, கொலைகாரக் கோட்சேயை அவதார புருஷன் போலக் கொண்டாட்டம் நடத்திப் பாராட்டும், துணிவு ஏற்பட்டு விட்டது! ஏன்? மார்க்கரட்சகன் கோட்சே! இந்து மதத்தைக் காப்பாற்றவே காந்தியைக் கொன்று, தன் உயிரைப் பலி கொடுத்தான் என்று பேசிட, பெருமைப்பட, உற்சாக மூட்ட, இந்து மதவெறி இடமளிக்கிறது!! கலாம் விளையும் என்று காரணம் காட்டி அவன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டான். பாரத நாடு தவிர வேறெங்கு இத்தகைய ‘பாதகன்’ துணிவு பெற முடியும்? நாட்டிலே இன்றும் கப்பிக் கொண்டிருக்கும் குருட்டறிவை, கொலைகார கோட்சே கும்பல் நம்பிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாக இருக்கிறது. நாய்க்குப் பூஜை செய்கிறார்கள்! கொலைகாரனுக்குக் கொண்டாட்டம் நடத்த முயற்சிக்கிறார்கள்!! இவை யாவும் எதன் விளைவு? பழைமைக்கு பாதுகாவலராக ஆளவந்தார்கள் உளர் என்ற நிலைமைதான். பாபு ராஜேந்திரப் பிரசாத் கூறியது போல பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலே உள்ள ஓர் கொந்தளிப்பில் நாடு இருக்கிறது ஆனால் ஆளவந்தார்கள், நிச்சயமாகப் பழைமையின் பாதுகாவலர்களாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். புதுமையை அவர்கள் அடியோடு விலக்கிடவில்லை, இயலாததாலும், அதன் இனிமை அவர்களுக்குச் சுவை அளிப்பதாலும். ஆனால் இந்தத் தலைமுறையில் நாடு எவ்வழி செல்வது என்பது பற்றி முடிவு எடுத்தாக வேண்டும் - ஹெலிகாப்டரா? வேதகால இரதமா? - என்பது தீர்மானமாகி விட வேண்டும். அன்புள்ள அண்ணாதுரை 20-11-1955 தங்கத் திரை ரஷியாவின் சிறப்பு- சோவியத் தலைவர்கள் வருகை - இந்தியத் திட்டங்களில் குறைபாடுகள். தம்பி, அன்னிய நாட்டுச் சகோதரர்களே! வாருங்கள் எங்கள் ஊருக்கு! வந்து பாருங்கள் எங்கள் நகரத்தை! சிரித்து மகிழ்ந்து அளவளாவும் இனிய சுபாவமும், அதிதிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் நற்பண்பும் கொண்டவர்கள் எங்கள் மக்கள். எங்கள் நகரில் கொடிய குளிரும் பனியும் உண்டு. ஆனால் எங்கள் இதயங்கள் மென்மையானவை - அன்பின் கதகதப்பு அவற்றில் நிறைய உண்டு. சண்டை சச்சரவுகள் அற்ற சமாதான உலகம், அடக்குவோர் அடக்கப்பட்டோர் இல்லாத உலகம், அனைவருக்கும் இன்பகரமான வாழ்வை அளித்திட, சகல இனத்தவரும் நிறத் தவரும் சகோதரர்களாக ஒருமித்துப் பணியாற்றும் நல்லுகம் - இதுவே எங்கள் வேட்கை. சோவியத் நாடு எனும் ஏடு, இந்த அன்பழைப்பினை வெளியிட்டிருக்கிறது; இதே கருத்துப்பட இங்கு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்று உள்ளம் பூரித்த புல்கானின், குருஷெவ் இருவரும் பேசியுள்ளனர். காமராஜரே, ரஷியா போகிறாராம்! ரஷியா போய்விட்டு வந்தவர்களெல்லாம், (இராஜகுமாரி அமிர்தகௌர் உட்பட) அங்கு உள்ள வளம், வசீகரம், இவைகளை வழங்கிய முறை, இவை குறித்துப் பாராட்டினர். அந்தப் புதுமுறை பூத்திடும் பொன்னுலகு பற்றிய ஆய்வுரைகளைப் படித்து இன்புற்றோரும், அந்நாட்டின் ஏற்றம், எழில் பற்றி மகிழ்ந்து பேசினர். காமராஜர் இந்த இரு வாய்ப்புகள் பெற்றாரில்லை. எனினும் ரஷிய நாட்டு முறை பற்றிக் குறைகூறிப் பேசக் கூசவில்லை. ரஷியாவை ஏதோ சொர்க்க பூமி என்று பேசுகிறார்கள் - சொக்கிப் போகிறார்கள். சுத்தத் தப்பு. அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு பெரிய ஜெயில் மாதிரி. சோத்துக்கே அங்கு கஷ்டம். அங்கு சுதந்திரம் கிடையாது, சுகமும் கிடையாது - என்று காமராஜர் பேசுவது வாடிக்கை. அவருக்கு ரஷியா செல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பயணம், பக்குவத்தையும் பயனையும் அளிக்க வேண்டும். ரஷியா சென்று வருபவர்களைக் கேலி பேசும் காமராஜர் ரஷியா போகும் நிலை ஏற்படுவது கூட ஆச்சரியமல்ல. அவரை ரஷியாவுக்கு அழைத்துக்கொண்டு வருவதாக ராமமூர்த்தி வாக்களித்தாராமே, இந்தப் பூணாரம் பூண்ட புதுமைதான் எல்லா வற்றினையும்விட ஆச்சரியமானது. வெளி உலகத் தொடர்புகொள்வதிலே விசேஷ அக்கறையோ அவசரமோ காட்டாமலிருந்து வந்த சோவியத் தலைவர்கள், இப்போது சில காலமாக, பல்வேறு நாடுகளுடன் நேசத் தொடர்புகள் கொள்ள முயற்சிக்கிறார்கள் - அமெரிக்கா அச்சப்படும் அளவிலும், பிரிட்டன் பீதி கொள்ளும் விதத்திலும் வெற்றியும் பெறுகிறார்கள். குபேரபுரியின் சொந்தக்காரர்கள் சாம்ராஜ்யாதிபதிகள் என்ற வகையில், முறையே அமெரிக்காவும் பிரிட்டனும் உலகில் உலவி உயர் இடம் கேட்டுப் பெற முடிந்தது. உலகில் இல்லாமையை விரட்டி அடித்து, ஏழை எளியோருக்கு வந்துற்ற இடர்ப்பாடுகளை ஒழித்துக்கட்டி, எல்லோருக்கும் எல்லாம் எனும் தூய கருத்து நடைமுறையில் மலர்ந்து மணமளிக்கத் தக்கதோர் புதுமுறை கண்ட நாடு என்ற முறையில், சோவியத் எவருடைய கவனத்தையும், ஏழை எளியோரின் அன்பையும், பெறத்தக்க ஒப்பற்ற நிலையில் இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு மேலாகவே இந்த அதிசயபுரி பற்றி, கவிஞர்கள் பாடி வந்தனர். இலட்சியவாதிகள் புகழ்ந்து வந்தனர், பொதுமக்கள் பூரிப்புடன் பாராட்டி வந்தனர் - எதேச் சாதிகாரிகளும் ஏய்த்துப் பிழைத்திடும் போக்கினரும், மதவாதிகளும் மாமிசமலைகளும் அருவருப்பையும் அச்சத்தையும் கக்கி வந்தனர், ஏளனமும் எச்சரிக்கையும் கலந்த குரலில் ஏசி வந்தனர் - எவரும் மறக்க முடியாததோர் மகத்தான நிலையில் சோவியத் நாடு முப்பதாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இல்லாமையை ஒழித்த இன்பபுரி என்றனர் மக்கள். ஈசனை மறந்த இழிநிலையில் உள்ள நாடு என்றனர் எத்தர்கள், வீரமும், தீரமும் பொங்கிடும் நாடு, விம்மிடும் ஏழையின் கண்ணீரைத் துடைத்த நாடு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு கொழுத்திருப்போரை விரட்டிய வீரர் கோட்டம் சோவியத் நாடு. தூங்கிக் கிடந்த அரிமா, விழித்தெழுந்து, தன் பிடரியில் ஒட்டிக்கொண்டு கிடந்த பூச்சி புழுக்களை உதறித் தள்ளி விட்டு, காட்டரசன் என்ற நிலையில் அடவியில் ஆட்சி செலுத்துவதுபோல, சுரண்டிப் பிழைப்போர் சூது மதியினர், ரசுபுடீன்கள், ராஜகோலாகலர்கள், உழைப்பைத் திருடுவோர், ஊரை அடித்து உலையில் போடுவோர் போன்ற நச்சுப் பூச்சிகளை நசுக்கிச் சாகடித்து, மக்களின் சக்தியை முழு அளவில் மிளரச் செய்து, உலகிலேயே ஒப்பற்ற நாடாக விளங்குவது சோவியத் நாடு என்று உள்ளத்தில் உயர் கருத்துக்களுக்கு இடமளிப்போர் பெருமிதத்துடன் கூறினர் - கோயில்களை இடித்துக் குளங்களைத் தூர்த்துவிட்டு, ஆத்மீகத்தை அழித்து விட்டு, ஞானிகளை விரட்டிவிட்டு, மதத்தை மாய்த்துவிட்டு, மக்களை மாக்களாக்கி கொடுங்கோலால் அவர்களைக் கருத்துக் குருடர்களாக்கி, பெரியதோர் சிறைக் கூடமாக நாட்டினை மாற்றி, இந்த உண்மைகளை உலகு அறிந்திடா வண்ணம் ஓர் "இரும்புத் திரை’ போட்டுக்கொண்டு, வன்னெஞ்சம் கொண்டதாகச் சோவியத் இருந்துவருகிறது, எங்கும் எந்த வேளையிலும் ஏதேனும் கலாம் விளைந்தவண்ணம் இருத்தல் வேண்டும் என்பதற்கான திட்டமிட்டு ஒற்றர்களையும், கூடிக் குடிகெடுப்போரையும் ஏவிவிட்டு, பிறநாடுகளின் பலத்தை ஒடுக்கி, அங்கு அமளியை மூட்டிவிட்டு, அதன் இறுதியில், அங்கெல்லாம் தன் ஆதிபத்தியத்தைப் புகுத்தி, உலகினை ஆள வேண்டும் என்ற கெடுமதி கொண்டுள்ள நாடு சோவியத்; தீயாரைக் காண்பதும் தீது, தீயார் சொல் கேட்பதுவும் தீது என்ற முறையில், திருவருளை இகழ்ந்து வாழும் அந்நாட்டுடன் எத்தகைய தொடர்பு கொள்வதும் தீது மட்டுமல்ல. ஆண்டவனுக்கே இழைக்கும் துரோகமாகும்! என்று தம்மை அருளாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், பீதி மூட்டினர். நாட்டிலே பெருங்காற்று வீசிடினும், காட்டிலே பெருங் கூச்சல் எழுந்திடினும், ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டோடி வந்திடும்போதும், காட்டுத் தீ கட்டுக்கடங்காது பரவிடும்போதும், நில நடுக்கத்தின்போதும், தொத்துநோய்படை எடுத்திடும் போதும், பஞ்சம் பரவிடும்போதும் இயற்கைக் கோளாறு எது நேரிடும்போதும், “எல்லாம் ஈசன் சோதனை - மகேசனை மறந்தனர், ஐயன் தண்டிக்கிறார் - பக்தி குன்றிற்று, இன்னல் வந்துற்றது - நாத்திகம் தலைகாட்டுகிறது. நாசம் தலை விரித்தாடுகிறது ஈசன் நாமத்தைப் பஜியுங்கள்’’ என்று உபதேச மூலம் ஊர்மக்களைமிரட்டினர் ஆதினகர்த்தாக்கள்; அவர்களின் அடிதொழுது காணிக்கை கொட்டிக்கொடுத்து அந்தத் திருத் தொண்டு மூலமே தம்மைச் சீலர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்ற சுயநலக்காரர்கள், எதேச்சாதிகாரிகள், ஏன் என்று கேட்பவனையும், ஆகுமா என்று பெருமூச்சு விடுவோனையும், பாடுபடும் எனக்கா இந்தப் பஞ்சமும் நோயும்? உறிஞ்சிப் பிழைப்போனுக்கா உல்லாச வாழ்வும் வாழ்க்கையில் விருந்தும்? இடுப்பொடிய உழைக்கிறேன் இல்லாமை கொட்டுகிறதே, ஊருக்கு உழைக்கிறேன், உருக்குலைந்து போகிறேன், நான் வெட்டி எடுக்கும் இரும்பே எத்தரிடம் சிக்கி என் கரங்களில் தளைகளாகவும், என் நெஞ்சைத் துளைக்கும் குண்டுகளாகவும் உருவெடுக்கிறதே, ஈதென்ன அக்ரமம்? இதற்கோ நான் எலும்பு முறியப் பாடுபடுவது? நான் கட்டிக் கொடுக்கும் பாசறையும் நான் சமைத்துத் தரும் படைக் கலங்களும், நான் அமைத்துத்தரும் அரண்மனைகளில் புகுந்துகொண்டு அரசோச்சும் அக்ரமக் காரரிடம் சிக்கி, என்னையே அல்லவா கொடுமை செய்திடக் காண்கிறேன், இதுவோ நல்லாட்சி முறை? இதற்கோ நான் ஆயிரம் தொழில் செய்வது? காட்டில் உலவும் புலிக்குக் குகையும், நச்சுப் பல் கொண்ட பாம்புக்குப் புற்றும், நயவஞ்சக நரிக்குப் புதரும் கிடைக்கிறது; ஆயிரமாண்டுகள் அழகொளியுடன் நிற்கத்தகும் அரண்மனைகளும், மந்தகாச வாழ்வுக்கான மாளிகைகளும், மாற்றாரைத் திகைக்கச் செய்யும் கோட்டை கொத்தளம், அரண் அகழி ஆகியவற்றினையும் கட்டித் தந்திடும் எனக்குத் தங்க ஓர் குடில் இல்லை! இது அக்ரமம் என்று எடுத்துக்கூற எந்தத் தூய்மையாளனும் தோன்றிடக் காணோம், சாமான்யன் இதைக் கேட்டாலோ, சன்மார்க்கமறியாதான், சழக்கருடன்கூடி நாசமானோன், சர்வேசன் திட்டத்தை எதிர்த்திடும் சண்டாளன் என்று ஏசுகின்றனர். மலை மலையாக ஏடுகள் உள்ளன, படித்துப் படித்துப் பக்குவம் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். மேதைகள் தீட்டியன மட்டுமல்ல, மேலே உள்ள தேவன் திருஅருளால் கிடைத்தன என்றும் இந்த ஏடுகள் பற்றிக் கூறுகின்றனர் - ஒரு ஏடும் எமக்கு நீதி வழங்குவதுதான் முறை என்று கூறக்காணோமே - என்று ஏழை கேட்கிறான் - பசியால் பதைத்து, கொடுமைக்காளானதால் குமுறி, துரத்தப்பட்டுத் துரத்தப்பட்டு மேலே சென்று தப்பிட வழி அடைபட்டுப் போன நிலையில், நிமிர்ந்து நிற்கவும், புருவத்தை நெரிக்கவும், கரத்தை உயர்த்தவும், கனல் கக்கவும் தொடங்கு கின்றான் - உடனே ஆத்மீகப் பாதுகாவலரும் அரசியலில் எதேச்சாதிகாரம் செலுத்துவோரும் அவனைத் தாக்கிடுகின்றனர் - தாக்கும்போது. இவன் ரஷிய ஏஜண்டு, பொது உடைமைக்காரன், புரட்சிக்காரன், அழிவு வேலைக்காரன், ஆண்டவனுக்கு விரோதி என்று பழி சுமத்துகின்றனர்! அப்போதெல்லாம், சோவித் ரஷியா பற்றித்தான் பேசுவர் - ஏசுவர். உழவன் உள்ளம் குமுறிப் பேசும்போதும், பாட்டாளி பதைத்தெழுந்து நீதி கேட்கும்போதும், தாழ்த்தப்பட்டோன் தலை நிமிர்த்தி ஆண்டவன் படைப்பிலே பேதம் ஏதய்யா என்று கேட்கும்போதும், புரோகிதப் புரட்டு, மதத்தின் பெயரால் புகுத்தப்பட்டுள்ள மடத்தனம், ஆகியவற்றினைப் பகுத்தறிவாளர் கண்டிக்கும் போதும் - ரஷியா, ரஷ்யா! - அந்த நாசபுரியின் நண்பர்கள் இந்த மாபாவிகள், இவர்களைத் தூண்டிவிட்டு, இந்த நாட்டைப் பிடித்தாட்ட பெருந் திட்டம் தீட்டுகின்றனர் ரஷியாவில் பேயாட்சி நடத்திடுவார் - உடனே அழித்தொழித்திட வேண்டும் - எம் முறையும் மேற்கொள்வோம் - கையில் கிடைத்ததைக்கொண்டு தாக்குவோம் - என்று கொக்கரித்துக் கிளம்புவர், ஒவ்வோர் நாட்டுக் கொடுங்கோலர்களும்! பட்டினி கொட்டும், பஞ்சம் பரவும், அகவிலை தலை விரித்தாடும் - நன்மையும் தீமையும் பகல் இரவு போல மாறி மாறி வரத்தான் செய்யும், அவனவன் பாவ புண்யத்துக்குத் தக்கபடி ஓர் புனிதன் படி அளக்கிறான், ஆட்டுக்கும் அளந்துதான் வால் அமைக்கிறான் ஐயன், இட்டார்க்கு இட்ட பலன், அன்று எழுதினான் இன்று நடக்கிறது என்று பேசிட பூசாரிக் கூட்டம் எங்கும் கிளம்புகிறது; ஏழையின் வாயை அடைத்துவிடுகிறது. “ரஷியா என்றோர் நாடு இருக்கிறதாம். . . . அங்கு. . . .” என்று ஏழை பேசத் தொடங்கினாலோ,. . . . “அங்கு தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது, வாரி வாரிப் பருகலாம், பாடுபடாமல் பிழைக்கலாம். . . . பைத்யக்காரா! பைத்யக்காரா! பொய்யுரைகேட்டுப் பூரித்துப் போகிறாயே! அது ஓர் பாப பூமி! பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள், எதையும் இல்லை என்று கூறிடும் வஞ்சக நெஞ்சினர், ஏழை மக்களை இம்சித்து வேலை வாங்கி, மிருகங்களைப் பட்டியில் அடைத்து வைத்துத் தீனி போடுவதுபோல, கடுமையாக வேலை வாங்கி, கட்டுக் காவலில் வைத்துவிட்டு, ஏதோ தீனிபோட்டு வருகிறார்கள், அங்கு ஞானமும் மோனமும் கிடையாது, கலையும் காவியமும் காண முடியாது, தேர் திருவிழா இல்லை, தேவனருள் கிடையாது, மகிழ்ச்சி இல்லை, எழுச்சி இல்லை, செக்கு மாடுகள் போல மக்கள் கிடந்துழல்கின்றன; இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய், பொறுமையாகப் பதில் அளிக்கிறோம், அஞ்ஞானத்தால் உளறுகிறாய், மெய்ஞ்ஞானம் போதிக்கிறோம், சந்தேகப் பேய் பிடித்தாட்டுகிறது அதைப் போக்குகிறோம் - அங்கு இதுபோல் முடியுமா? ஏன் என்றுகேட்டு வாய்மூடு முன் பிணமாவாய்! எதிர்த்து வேலை செய்ய எண்ணினால் போதும் சைபீரியா பாலைவனத்துக்குத் துரத்துவர் - அங்கு உன்னைச் சாகடிக்கத் துப்பாக்கி தேவை இல்லை, கடுங்குளிர் போதும்” - என்று கூறி மிரட்டிவிடுவர், ஆட்சியாளர்களும் ஆலய அதிபர்களும். நாம் என்ன கண்டோம்! நமக்கென்ன புரிகிறது! - என்ற மனப்போக்குடன் பல ஆண்டுகள் பாமரர் இருந்துவந்தனர் - அந்த நிலை மெள்ள மெள்ள மாறலாயிற்று. சோவியத் நாட்டின் சோபிதம் பற்றிய சொல்லோவியங்களைக் காணவும், ஆய்வுரைகளைக் கண்டு தெளிவுபெறவும் வாய்ப்புகள் கிடைத்தன; சோவியத் நாடும் ‘பரீட்சைக்கூடம்’ என்ற நிலையிலிருந்து பாசறையாகி, இன்று சமதர்ம அறிவு பரப்பிடும் பல்கலைக் கழகமாகித் திகழ்கிறது உலகப் பெரும் போரிலே ரஷியா காட்டிய ஆற்றல், அவனிக்கே ஓர் பாடமாக அமைந்தது - பிரிட்டனும் அமெரிக்காவும் பேயாட்சி நடத்தப்படும் பாப பூமி என்று எந்த ரஷியாவைக் கண்டித்துப் பேசினரோ, அந்தப் பேரரசின் பெருந்தலைவனாம் ஸ்டாலினுடன் கூடிப் பணியாற்றினர் - உலகில் ரஷியாவுக்கு ஓர் உயர் இடம், உரிய இடம் கிடைத்திடத்தான் போகிறது என்ற உறுதிப்பாடு, ஹிட்லரின் வீழ்ச்சியின் மூலம் ஏற்பட்டுவிட்டது! இனி எத்தர்கள் தம் சித்தம் போல் பேசி மக்களை ஏமாளிகளாக்கிவிட முடியாது என்ற கட்டம் பிறந்துவிட்டது; பல்வேறு நாட்டுப் போர் வீரர்கள், சோவியத்தின் செஞ்சேனை வீரர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது; மிருக நிலை என்றனர், இவர்களோ மென்மையான இதயம் படைத்தோராக உள்ளனர். ஏதும் அறியாதவர்கள் என்று ஏளனம் செய்தனர், இவர்களோ எல்லாம் அறிந்து பேசுகின்றனர்; கலை அறியார் என்றனர், இவர்களோ ஆடலிலும் பாடலிலும் அகமகிழ்கிறார்கள்; ஆட்சியாளரின் கொடுமையால் இவர்கள் ஆமைகளாய் ஊமைகளாய் உள்ளனர் என்று கூறினர், இவர்களோ ஸ்டாலினைத் தமது ரட்சகர் என்று புகழ்ந்து கொண்டாடுகின்றனர், இல்லாமையை ஒழித்துக் கட்டிய ஆட்சி முறையைக் காப்பாற்ற இன்னுயிரைத் தத்தம் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சூளுரைக்கின்றனர்; மற்றானைத் தாக்கும் போது புலியாகின்றனர், நண்பர்களிடம் பழகும்போது குழந்தை போலாகின்றனர்! இவர்களா பாப பூமியினர்!! செச்சே! வீண் புரளி! வேண்டுமென்று கூறப்பட்ட கட்டுக்கதை, நமது கண்களை மறைத்திட, கருத்தைக் குழப்பிட, காதகர்கள் கட்டிய பொய்யுரை! சோவியத் ஆட்சி, நல்லாட்சிதான், ஏனெனில் அங்கு மக்களின் மாட்சிக்கு மதிப்பு இருக்கிறது - என்று களம் சென்ற காளையர் கூறினர்; சோவியத் நாடு பற்றி இருந்துவந்த இருள்திரை பல்வேறு இடங்களில் கிழிந்தது - சமதர்ம ஆட்சியின் ஒளிக் கதிர்கள் மெல்லிய கோடுகளாக, உலகின் பல்வேறு இடங்களில் தெரியலாயின; மிகச் சிரமப்பட்டு அமெரிக்கா, தங்கத்திரை யிட்டுத் தன் மக்களின் பார்வையை மறைத்து வந்தது - இன்றுங்கூடப் பெருமளவுக்கு இந்நிலைதான் அமெரிக்காவில். மீண்டும் ஓர் பயங்கரப் போரை மூட்டிவிட்டு, வல்லரசுகள் தமது பலத்தை ஒன்று திரட்டி, ஏமாந்த நாடுகளைத் தமது முகாமுக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு, எழிலும் ஏற்றமும் பெற்று, எவருடைய மனதையும் வசீகரிக்கத்தக்க முறையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவரும் சோவியத் நாட்டின் மீது கடைசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, அமெரிக்கப் பேரரசு வள்ளல் வேடமிட்டுக்கொண்டு கிளம்பியது கண்டு, சோவியத் நாடு இனியும் நாம் வாளாயிருத்தல் தேவையில்லை, வண்ணம்தனைக் காட்டுவோம், வலிவும் பொலிவும் பிறர் காணட்டும், நல்லோர் மகிழவும் நாசகாலர் மிரளவுமான நிலையை நாம் பெற்றிருக்கிறோம், இனி உலகினரே! காண்மின்! உயர்ந்த திட்டம் இது என அறிமின்! - என்று கூறிட நமக்கு இயலும் என்று பெருமிதத்துடன் பேசிடும் கட்டத்தில் நிற்கிறது. இந்தக் கட்டத்தில் சோவியத் நாடு இருக்கும் நேரத்தில் புல்கானினும், குருஷேவும், இந்திய துணைக்கண்டத்திலே சுற்றுப்பயணம் செய்து, இங்குக் களிப்புச் சுறாவளியைக் கிளம்பி விட்டனர் - அது கடல் கடந்து பிரிட்டனையும், அமெரிக் காவையும் மிரட்டிவிட்டது. பத்து இலட்சம் மக்கள் கூடினர்! பதினாறு மைல் வரையில் மக்கள்! கட்டுக்கடங்காக் கூட்டம். மலர் மலை போல! மக்கள் கூட்டம், கடல் போல! ஆரவாரம் அலைபோல! ஆனந்தம், பெரு வெள்ளம் போல! கண் கொள்ளாக் காட்சி! சரிதம் காணா வரவேற்பு! இவைபோல, தயாரிக்கப்பட்ட தலைப்புகள் அல்ல, விளக்கம் வெளியிடுகின்றன, நாட்டிலே உள்ள ஏடுகளெல்லாம்; பட்டி தொட்டிகளிலும் புல்கானின், குருஷேவ்! என்று பேசுகின்றனர்; பார்த்தோர் பிறருக்குக் கூறுகின்றனர், அனைவரும் திருவிழாப் போலக் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்வளவுக்கும் வந்தவர்கள் ஈராண்டுகளுக்கு முன்பு வரையில் இந்நாட்டுப் பொதுமக்களுக்கு அறிமுகமாகாதவர்கள். ஸ்டாலின் அல்ல, வந்திருப்பது - புல்கானின் - குருஷேவ் - ஸ்டாலின் வழி நிற்பவர்கள் - அவர்கள் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்து நடத்துபவர்கள். இங்கு டிட்டோ வருவதற்கு முன்பு, அவரைப் பற்றி மக்கள் தெரிந்திருந்த அளவுக்குக் கூட, புல்கானின், குருஷேவ் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததில்லை. எனினும், சோவியத் நாடு, அதன் முறை, நெறி ஆகியவை பற்றி, ஏறக்குறைய ஒரு தலைமுறை கேட்டுக் கேட்டு, மக்கள் மனதிலே ஏற்பட்டிருந்த எழுச்சி இன்று வெள்ளம்போல் கரை புரண்டோடிற்று - என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை எங்கும் நான் கண்டதில்லை என்று எப்போதும் மாபெருங் கூட்டங்களைக் காணும் நேரு பண்டிதரே கூறத்தக்க வகையில் கூடிற்று. சுகர்னோவும் யூநூவும், நாசரும், டிட்டோவும், இங்கு வந்தனர் - அவர்களெல்லாம் அந்தந்த நாட்டு நேருக்களாக இருப்பவர்கள். எனவே, நாட்டு விடுதலைக்காக வீரப்போரிட்ட தலைவர்கள் என்ற முறையில், மக்களும் மக்களின் தலைவர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஈடனும் டல்லசும் வந்திருந்தனர் - அவர்களை மாளிகை வாசிகளும், அவர்களிடம், மக்களுக்குத் தம்மிடம் உள்ள பாசத்தைக் காட்டி, நண்பர்களாக்கிக்கொண்ட ஆளவந்தார்களும், மதிப்பளித்து வரவேற்றனர். நேபாள மன்னர் வந்தார், பிரியமாகத் தலைவர்கள் வரவேற்றனர், கவர்ச்சி மிக்க காட்சியைக் காண்போம், பொழுது போக்குக்காக என்ற அளவில் மக்கள் கூடினர். இதோ இப்போது சவுதி அரேபிய மன்னர் வந்திருக்கிறார் - உலகில் மிகப் பெரிய பணக்காரரில் அவர் ஒருவராம் - எனவே அவரைப் பயம் கலந்த பாசத்துடன் வரவேற்று, மகிழ்ச்சியூட்டிட ஆட்சியாளர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். புல்கானின் குருஷேவ் வரவேற்பின் போதோ மக்கள் இதயத்தி-ருந்து அன்பு பொழிந்தது, வழிந்தது; காரணம், இவர்கள், ஆற்றலால் தியாகத்தால் நாட்டின் அடிமைத் தளைகளை உடைத்தவர்கள் என்று மட்டுமல்ல, உலகினுக்கே புதுமையாகவும் புதிராகவும் பூத்திட்ட ஓர் புது ஆட்சி முறையை மக்களுக்கு ஒரு புதுவாழ்வு முறையை அமைத்திட, உலகக் கொடுங்கோலர்களை எதிர்த்து வீரமாகப் போரிட்டு வெற்றி பெற்ற பரம்பரையில் இன்றைய வாரிசுகள். எனவே இலட்சக்கணக்கிலே மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஏழை என்றும் அடிமை என்றும் மனிதன் இடர்ப்படவும் இழிநிலை அடையவும் தேவை இல்லை. அது நீக்க முடியாத விதி என்று வெட்டிப்பேச்சுப் பேசி வீண்பொழுது ஓட்ட வேண்டியதில்லை, ஏழையை வாழவைக்க முடியும், இல்லாமையைப் போக்க முடியும், சீமான்களின் சீற்றத்தையும் மதத் தலைவர்களின் சித்தாந்தத்தையும் எதிர்த்து நிற்கும் அறிவாற்றல் மட்டும் கொண்டு, கஷ்ட நஷ்டம் ஏற்கும் திறம் பெற்றுவிட்டால், புதியதோர் உலகு செய்வோம்’ என்ற கவிதாவாக்கை, நடைமுறைத் திட்டமாக்கிக் காட்ட முடியும் என்பதைச் சோர்விலா உழைப்பிற்குப் பிறகு சொல்லொணாத கஷ்டநஷ்டங்களை ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்று உலகினுக்குப் புதுப்பாடம் தந்தவர்கள் வருகிறார்கள்; நமக்காக ஓர் நல்லரசு முறை அமைத்திடும் வழிகாட்டியவர்கள் வருகிறார்கள்; மாளிகைகளிலேதான் மேதைகள் தோன்ற முடியும் கொலுமண்டபங்களில் இருந்துதான் வீரர் கிளம்பமுடியும், ஏழை உழைத்திடுவான், ஆனால் உயர்ந்த திட்டம் தீட்டிடும் வகையறியான், பாடுபடுவான, ஆனால் எம்முறையில் பாடுபட்டால் பலன் மிகுதியும் காண முடியும் என்ற பக்குவம் அறியான், கூர்வாள் போன்றான், திறம்பட உபயோகிக்கும் ஆற்றலை ஆண்டவன் சீமான்களிடம் மட்டுமே ஒப்படைத்து அருளினார், எனவே அந்தச் சீமான்கள் காட்டும் வழி நடந்தால்தான்ஏழையின் உழைப்புக்கே உயிரூட்டம் ஏற்படும். பெரும் போரிலே மாள ஏழையால் முடியும், ஆனால் பேரரசைக் கட்டியாள அவன் தகுதி பெற்றிடவில்லை, தயாபரன் அந்தத் தகுதியைத் தன்வந்தர்களுக்குத்தான் தந்திருக்கிறார் என்று ஜெபமாலையினர், தூபநீபநைவேத்தியத்தின் துணைகொண்டு உபதேசம் செய்தனரே, அது புரட்டரின் பொய்யுரை என்பதைப் புவியறியச் செய்த புரட்சி வீரர்கள் வருகிறார்கள் - அவர்கள் ஆட்சி நடத்தும் நாட்டினிலே, வளமுள்ள வயல் இருக்கிறது. இங்கு போல - ஆனால், அவை மக்களின் உடைமை - தொழிற் சாலைகள் உள்ளன - அவை தம்மை உடைமையாகக் கொண்ட டாட்டாக்கள் இல்லை - உல்லாசக் கூடங்களிலே மானோ! மயிலோ! அன்னமோ! அழகு நிலவோ! என்று வியக்கத்தக்க விதத்தில் அணங்குகள் உளர். ஆனால், அவர்களின் சீமான்களின் சிற்றின்பக் கருவிகளாக இல்லை, நாட்டுக்கலைக் கருவூலக் காவலர்களாக உள்ளனர் - மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கின்றனர் - என்ற உண்மையை அறியும்போது, இங்கு மட்டு மல்ல எந்த நாட்டிலும் உள்ள மக்களின் மனதிலே ஆர்வம் அன்பாகப் பொங்கி வழியத்தான் செய்யும். “அதைத்தான், சென்னையும் கோவையும், பம்பாயும்”டில்லியும்’ கல்கத்தாவும் போட்டியிட்டுக்கொண்டு காட்டின. பொற்காலம் பிறந்தது, பொல்லாங்கு மடிந்தது, புரட்டர் ஒழிந்தனர், புல்லர்கள் சாய்ந்தனர்; மக்களுக்கே உடைமை, மக்களுக்கே அரசு என்ற புதுத் திட்டத்தை நிலைநாட்டினர் இஃதோர் வானவில், காற்றினிலே மிதந்து வரும் கீதம், சின்னாட்களிலே மறையும், மடியும் - நாட்டு வளம் குன்றும், ஆட்சி ஆட்டம் கொடுக்கும், வாணிபம் நலியும், தொழில் துவளும், கல்வி கெடும், கலை மடியும், செய்வதெது வெனத் தெரியாது, புயலில் சிக்கிய சிறார் போல்வார் தலைவர்கள் என்று கூறினர், சென்றது இனி மீளாது என்பதை ஏற்க மறுத்திடும் உள்ளம் படைத்த உலுத்தர்கள். முப்பதாண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன - முதலாளித்துவ நாடுகள் என்னென்ன வளம் காட்ட முடியும் என்று கூறினவோ, அவை யாவும், மும்மடங்கு பெருகிய நிலையில் பொதுவுடைமை நாடு காட்டுகிறது. களிப்பும், கலையும், தொழிலும் தோழமையும் கைகோர்த்துக் கொண்டு நடமிடுகின்றன. வீரமா? உலகு வியக்கத் தக்க அளவில், தியாக உள்ளமா? கேட்போர் எழுச்சி பெறத்தக்க வகையில்! இந்த நிலை வந்தது, வாரீர்! காணீர்! கேளீர்! - என்ற நம்பிக்கையும் உற்சாகமும் கலந்த குரலில், புல்கானினாலும் குருஷேவாலும் மக்களிடம் பேச முடிகிறது. இரும்புத் திரையிட்டுள்ளனர் என்று பிறநாட்டார், குறிப்பாக வல்லரசுகள் பேசிய காலையில், கொல்லன் உலைக் கூடத்து வெப்பம் போல, ரஷியாவின் புதுமுறை உருவாகிக் கொண்டிருந்தது என்று கூறலாம். இன்று வடிவெடுத்த வாளைக் காண வாரீர், என்று புல்கானின் அழைக்கிறார் - வந்திடின் காண இன்னின்ன காட்சிகள் உள்ளன என்று குருஷேவ் பட்டியல் தருகிறார். எவரும் வரலாம். எம்மை மதிப்போரும் வரலாம், எமது முறையினைக் குறித்து மட்டமான கருத்துக் கொண்டோரும் வரலாம் என்று அழைக்கிறார்கள் ரஷியத் தலைவர்கள். நமது நாட்டு விவசாய மந்திரி பக்தவத்சலத்தைக்கூட அழைத்தார்களாம். பிறநாடுகளிலிருந்து இதுவரை வந்திருந்த தலைவர்கள் யாருக்கும் தரப்படாத வகையில் மக்கள், இவர்கட்கு வரவேற்பு அளித்தனர் என்பது மட்டுமல்ல, பிற எந்தத் தலைவரும் மக்களிடம் காட்டாத வகையில் அன்பையும் அக்கறையையும் இவர்கள் காட்டினர். இன்னிசை கேட்டு இன்புறுதல் நாட்டியம் கண்டு மகிழ்தல் குல்லாயணிந்து குதூகலப்படுவது குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு கும்பிடுவது இளநீர் பருகுவது நமஸ்தே கூறுவது! இவைகளெல்லாம், பொதுவான முறைகள் - இங்கு வரவேற்கப்படும் யாருக்கும் ஏற்பாடாகும் உபசார முறையாகும். ஆனால் மக்களின் முகத்திலே ஓர் மலர்ச்சி, திரு விழாக்கோலாம், தோழமை உணர்ச்சி - இவைகளை யார் தீட்ட முடியும், ஊட்ட முடியும்! அது போன்றே, மக்களின் சார்பிலேயே எந்தக் காட்சியானாலும், சம்பவமானாலும், பொருளானாலும், பேச்சானாலும், ரஷியத் தலைவர்கள் கண்டனர், பேசினர், இங்கு வந்தது மக்களைக் காணவும் மக்களிடம் பழகவும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், அறியவும் - என்ற நோக்குடனேயே அந்தத் தலைவர்களின் போக்கு இருந்து வந்தது. குதுப்மினாரையும், தாஜ்மஹாலையும், ஜூம்மா மசூதியையும் அமெரிக்க நாட்டுத் தலைவர்களோ பிரிட்டிஷ் பிரபுக்களோ கண்டால், உடனே எத்தனை கோடி பவுன்கள் செலவாகியிருக்கும் - இவ்வளவு செலவிடத் தக்க நிலையில் பொன் பூத்திடும் பூமியாக இருக்கிறது இந்நாடு….. இது நம் ஆதிக்கத்துக்கு உட்பட்டால்….. என்று ஆசை ஊறும் நெஞ்சுடன் நிற்பர்! பேசும் போதோ, இந்தியாவின் பண்டைப் பெருமையை, கலைத் திறனை, அழகினை நுகரும் அருந்திறனைப் பாராட்டுவர். புல்கானின், குருஷேவ் கண்டனர் - அழகொளியுடன் விளங்கிடும் அந்த அற்புதமான கட்டிடங்களைக் கண்டதும், அவர்கள் மனக்கண் முன்பு என்ன காட்சிகள் தெரிந்தன? இவைகளைக் கட்டுவதற்காக எத்தனை எத்தனை ஏழைகள் அடிமைகள், வேலை வாங்கப்பட்டிருக்க வேண்டும், மக்களின் பொருள் மன்னனிடம் எவ்வளவு மிகுதியாகக் குவிந்திருந்தால் இத்தகைய மணி மாடங்களும் கூடங்களும் கட்டித் தமது கீர்த்தியை நிலைநாட்டிட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - என்ற எண்ணங்களைக் கிளரத்தக்க காட்சிகளே தோன்றின. பாரிஸ் பட்டினத்துக்காரனின் மனக்கண்ணில் இந்தக் காட்சியா தெரிந்திருக்கும்? ஆஹா! இவ்வளவு ‘ரசிகத் தன்மை’ கொண்ட பாதுஷாவின் அந்தப்புரத்தில் எத்தனை எத்தனை துடியிடை, காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுத் துவண்டதோ, சிரிப்பையும் சிருங்கார ரசத்தையும் சிந்திய சிட்டுகள் எத்தனையோ! சேல் விழியாள் பாதம் வருடிய பாதுஷாவின் கரம் செம்பஞ்சுக் குழம்பினைப் பூசியதால் பெருமைப்பட்டதோ அல்லது ஆலம் ஏற்ற விழிச்சியரின் அதரம் கொண்டிருந்த சிவப்பினை அவர்தம் கண்கள் கொண்டிட, அஃதறிந்து ஆவன செய்ததால், பிறகு அப்பப்பா! இனி ஆகாது! இது அடுக்காது! என்று எப்படி எப்படி அவள் கொஞ்சு மொழியில் கெஞ்சினளோ, என்னென்ன பானங்களோ, எவ்விதமான பளிங்குக் கிண்ணங்களோ…… எப்படி எப்படி இன்பம் கண்டனரோ……. என்று இவ்வகையில் எண்ணம் நெளியத்தக்க வகையான காட்சிகள்தான் தெரிந்திருக்கும். ரஷியத் தலைவர்களின் கண்களுக்கோ உழைத்து அலுத்த மக்கள், உப்பரிகையில் உலவிக்கொண்டு உத்தரவுப் பிறப்பித்த பாதுஷாக்கள் - இந்தக் காட்சிதான் தெரிந்தது. குருஷேவ்! இதனைக் கூறியும் விட்டார்! வல்லரசுகளை நடத்திக்கொண்டு, வஞ்சகத்தைப் புன்னகையாலும் பூச்சாலும் மறைத்திடுவோருக்கு இது பண்பு குறைந்த பேச்சாகத் தென்படும். குருஷேவ், மக்களின் சார்பில்தான் பேச வேண்டும், அது மாளிகையின் இலக்கணமல்ல எனினும் பரவாயில்லை! - என்று துணிந்து கூறினர். பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலையில், குருஷேவ், மக்களின் தலைவன், எதைக் கண்டறிய வேண்டும், கண்டறிந்ததை எங்ஙனம் கூறிடல் வேண்டும், என்பதை விளக்கிய முறையில் பேசிய பான்மை ஆச்சர்யகரமானது. உமது முயற்சி பாராட்டத் தக்கது என்று கூறுவதற்கு அனுமதியளிக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் மனமுவந்து சம்மதம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் கூற விரும்புகிறேன் - என்று இவ்வண்ணம் சொல்லரண் கட்டி கருத்தை மறைத்திடும் போக்கிலேதான் பிறநாட்டுத் தலைவர்கள் பேசுவர், பூசுவர்! குருஷேவ் அவ்விதமல்ல; “எம் பொருட்டு இந்தத் தொழிற்சாலையை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் - குருஷேவ் அவர்களே! தயவு செய்து அதனைப் பார்வையிட்டு, அதிலே குற்றம் குறையிருப்பின் எடுத்துக் கூறுக!’ என்று மக்கள் கேட்டுக் கொண்டு, அனுப்பி வைத்திருப்பது போலவே, குருஷேவ், பெரம்பூர் தொழிற் சாலையைப் பார்த்துவிட்டு, சிறிதளவு கோபமாகவே, செச்சே! ஏன் இப்படி கட்டிட வேலைக்கு எஃகு உபயோகித்தீர்கள் - இது வீண் நஷ்டம்! பாழ்படுத்திவிட்டீர்கள். இங்கு உபயோகித்திருக்கும் எஃகிலே முக்கால் வாசியை மிச்சப்படுத்தியிருக்கலாம். சிமிட்டியில் கட்டியிருக்கலாம். எஃகு பாழாக்கப் பட்டுவிட்டது. என்று கண்டித்து விட்டார். தொழிற்சாலை அதிகாரிகள் சமாதானம் கூற, சமர்த்துடன் முயற்சித்தனர். குருஷேவ் சம்மட்டியடி கொடுப்பது போல, என்மீது கோபித்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். இதுபோல, எந் நாட்டிலேயும் சொல்லுகிறேன். எமது நாட்டில் இவ்விதம் எஃகு பாழாக்கப்படுவதில்லை. வந்து பாருங்கள், எமது நாட்டினை என்று கூறினார். எவ்வளவு பிரமாண்டமான கட்டிடம்! எத்துணை உற்சாகத்துடன் வேலை நடக்கிறது. எல்லாம் என் ஆட்சியில், என் திட்டப்படி - என்ற முறையில் தான் நேரு பண்டிதரே பெரம்பூர் தொழிற்சாலையைப் பார்த்தார், பூரித்துப் போனார், பாராட்டுரை வழங்கினார்; இங்கு எஃகு இவ்வளவு பாழாக்கப்படுகிறது என்பதை அவர் கண்டறியவு மில்லை, அவருடைய கருத்து அவ்வழி செல்லவுமில்லை. நேரு பண்டிதரும், பிறநாடுகளிலே காணப்படுகிற பெருந் தலைவர்கள் போலவே, நாட்டிலே அணை வேண்டும், தேக்கம் வேண்டும், தொழிற்சாலைகள் வேண்டும் என்பது பற்றியும், தம்மாட்சியிலே இத்தகைய “வெற்றிகள்” உருவெடுக்க வேண்டும் என்பது குறித்துந்தான் எண்ணுகிறாரே தவிர, இவைகள் மக்கள் சார்பிலே நடத்தப்படுகின்றனவா, மக்களின் பொருள் பாழாக்கப் படாமல் இருக்கிறதா, என்பது பற்றிய அக்கறையைச் செலுத்தக் காணோம். அவருக்கு மலைகள் எல்லாம் மலர்த் தோட்டங்களாக வேண்டும் எனற ஆசை இருக்கிறதே தவிர, மந்திகள் அங்கு நுழைந்து பாழாக்கா வண்ணம் அரண் அமைக்க வேண்டுமே என்பது பற்றிய, எண்ணம் எழுவதில்லை. “என் திறமையை மா மன்னா! கூறிடப் பெருமைப் படுகிறேன். கேட்டிடின் தாங்களே பூரிப்படைவீர்கள்’’ என்றான் மல்லன். மாமன்னன், “கூறு, கேட்டிடுவோம், வீரச் செயல் யாது செய்தனை?” என்றான் “ஒரே அறை - கன்னத்தில், காவலா, ஒரே ஒரு அறைதான், அதுவும் இலேசாகத்தான் - பற்கள் முப்பத்திரண்டும் பொல பொலவெனக் கீழே உதிர்ந்தன” என்றான் மல்லன். “பளா! பளா! ஒரே அறையில் 32 பற்களும் உதிர்ந்தனவா? அருமை! அருமை! அமைச்சரே! மல்லன் செய்ததைக் கேட்டீரோ? தங்கத் தோடா, முத்து மாலை பரிசு அளித்தோம்” என்றான் மாமன்னன். அமைச்சர் குறுக்கிட்டு. “அரசர்க்கரசே! மல்லன் திறம் கண்டு மகிழ்வது சரியே; பரிசுக்குரியவன் எனத் தாங்கள் உரைத்ததும் மன்னர்க்கழகுதான்; ஆனால், ஒரே அறையினால் எல்லாப் பற்களையும் இழந்தவன் யார் தெரியுமா?” என்று கேட்டான். மாமன்னன், “ஆமாம், ஆமாம், அதை மறந்தேன். யார் அவன்?” என்றான் மல்லன் திகைத்தான். அமைச்சன் கூறினான். “மன்னவா! மல்லன், தன்மதிமிக்க மகனுடைய பற்களைத்தான் அங்ஙனம் உதிரச்செய்தான். அவன் குற்றம் ஏதும் செய்யாதவன். குடித்துப் புரளும் தந்தையைக் கண்டித்தான் - கோபத்தால் மல்லன் இக்கொடுஞ் செயல் புரிந்தான். இதற்கோ பரிசு” என்று கேட்டான். மன்னன் வெட்கித் தலைகுனிந்து, மல்லனைத் தண்டித்தான். கதைதான்! ஆனால் கடைசியில் தண்டனை கிடைக்கிறது, தகாத செயல் புரிந்துவிட்டு அதனைத் தம் தீரத்துக்குச் சான்று என்று பேசிய மல்லனுக்கும். . . . பாரதத்தின் முடிசூடா மன்னனோ ஜீப் ஊழல், உரபேர ஊழல், மாளிகை வாங்குவதில் ஊழல் என்று அடுக்கு அடுக்காக, தன் ஆட்சியிலே ஊழல்கள் நடந்து கொண்டிருப்பது பற்றி அக்கறையே காட்டாமல், ஒரே அறையில் 32 பற்களும் வீழ்ந்ததா! என்று வியந்திடும் நிலையில் இருக்கும் போது, பெரம்பூரில் எஃகு பாழாக்கப்படுவது பற்றியா அக்கறை காட்டுவார்! குருஷேவ் வந்து அல்லவா இதைக் கூறிக் கண்டிக்க வேண்டியிருக்கிறது. மக்களை ஆள்வது என்பதற்கும் மக்களாட்சி நடத்துவது என்பதற்கும், உள்ள வித்தியாசம் நன்கு தெரியத்தானே செய்கிறது. நேருவுக்கும் குருஷேவுக்குமே, மனப்போக்கிலும் கண்ணோட்டத்திலும் இந்த வகையான மாறுபாடு இருக்கிறது என்றால், தங்கத் திரைக்குப் பின்னாலே வீற்றிருக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் குருஷேவுக்கும் மனப்போக்கிலே உள்ள வித்தியாசம், சாமானியமானதாகவா இருக்கும்! “என்னவென்றே எனக்குப் புரியவில்லையே! இந்த ஜனங்கள் ஏன் இப்படி இந்த ரஷியத் தலைவர்களை வரவேற்கிறார்கள். என்ன தந்தார்கள் இந்த ரஷியத் தலைவர்கள்? என்ன தரமுடியும்? ஒரு இரும்புத் தொழிற்சாலை அமைத்துத் தர இசைந் திருக்கிறார்களா? அதற்கும் இந்தியா 47 கோடி ரூபாய்தரவேண்டுமாம்; அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்குக் கொடுத்துள்ள தொகையின் அளவையும் செய்திருக்கும் உதவியின் வகையையும் ஒப்பிடும்போது, ரஷியர்கள் கொடுத்தது சுண்டைக்காய் அளவுதானே இருக்கிறது! இருந்தும், இவ்வளவு அமோகமாக வரவேற்கிறார்களே! காரணம் தெரியவில்லையே!” ஸெஸ்டர் பியர்சன் என்ற கனடா நாட்டு மந்திரி இந்தக் கருத்துப்பட, நியுயார்க் நகரில், இந்தத் திங்கள் 28-ந் தேதி பேசினார். காரணம் தெரியவில்லையாம் - எப்படித் தெரியும்? தங்கத் திரை கண்ணை மறைக்கிறது. தங்கத் திரை கண்ணைப் பறிக்கும்வகையில் அமைந்திருக்கிறது, அமெரிக்காவும் அதன் ஆதீனத்திலே சிக்கிக் கொண்டுள்ள நாடுகளும், அந்தத் திரையின் தகத்தகாயத்தைக் கண்டு சொக்கிக் கிடக்கின்றன. பியர்சன், இந்தப் பொன்னொளி கண்டு மயங்காமல் சோவியத் தலைவர்களிடம் ஏன் சொக்கிப் போகிறார்கள் இந்த மக்கள் என்று கேட்கிறார். இரும்புப் பெட்டியைத் திறந்து காட்டுகிறது அமெரிக்கா! இதயத்தை திறந்து காட்டுகின்றனர் ரஷ்யத் தலைவர்கள்!! காரணம் கேட்கிறாரே, பியர்சன், காரணம் இதுதான். ஆனால் இதை அவர் போன்றார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - ஏனெனில் அவர்கள் இன்னமும் இரும்புப் பெட்டியிடம் அச்சத்தால் ஆசை கொள்பவர்களாக உள்ளனர்; அது மட்டுமா, நேரு பண்டிதரும் இரும்புப் பெட்டிக்காரரின் தோழமையை இழக்க விரும்பாத ஆட்சி முறை நடத்துபவர்தானே என்ற எண்ணம் வேறு, பியர்சன் போன்றாரின் உள்ளத்தைக் குடைகிறது. இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் உள்ள வேறுபாடும் முரண்பாடும் கூறிட ஆசை எழுகிறது, ஆனால் தம்பி! அடிகள் கோபிக்கிறார், இடம் இல்லை என்று எனவே அடுத்த வாரம் பார்ப்போம். அன்புள்ள அண்ணாதுரை 4-12-1955 உன்னால் முடியும் - (1) புயலின் கொடுமை - மக்கள் துன்பம் - கழகப் பணி. தம்பி, எந்தப் பிரச்சினையும், நினைவிற்கு வரவில்லை; நெஞ்சமெலாம் துக்கம் துளைத்தெடுக்கிறது - திகைப்பு தாக்குகிறது - வேதனைப்படு! வேதனைப்படு! வெற்றி ஒளியின் கீறல்களைக் காண்கிறேன்! உள்ளத்தில் உறுதிகொண்டோரின் அணிவகுப்பு காண்கிறேன்! விடிவெள்ளி காண்கிறேன்! என்றெல்லாம் எக்களித்துக் கிடக்கும் ஏமாளியே! வேதனைப்படு! வேதனைப்படு! ஒன்றா இரண்டா உனக்கு வந்துறும் துயரங்கள்! எதை எதைத் தாங்க வேண்டும் என்பதறியாமல் ஏதோதோ பேசிக் கிடக்கிறாயே! பித்து மனம் கொண்டோனே! இதோ பார் என் கண்ணெதிரே, வெறிநடமிடும் அழிவினை! என்று கொக்கரிக்கிறது நிலைமை. கண்களைத் திறந்து கிடப்பினும், மூடிக் கிடப்பினும், பேசாது கிடப்பினும், ஏதேனும் பேசிக் கொண்டிருப்பினும், தனிமையிலமர்ந்து தாங்கிக்கொள்ள முயற்சித்தாலும், துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளப் பிறருடன் பேச்சில் ஈடுபட்டாலும், பெற்றோரின் பேரன்பு, துணைவியின் கொஞ்சுமொழி, குழந்தைகளின் மழலை, இசை, இன்ப நினைவுகள், எதைத் துணைக்கு அழைத்தாலும், எல்லாம் தோற்றோடுகின்றன, துக்கம் எல்லாவற்றையும் துரத்தி அடிக்கிறது - இமை திறந்திருப்பினும் மூடிக் கிடப்பினும், எதிரே தெரிவதெல்லாம் பேய் மழை, சூறைக் காற்று, கடற்கொந்தளிப்பு, பிணக்குவியல், அழிவு, அழிவு! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - தம்பி! ஆயிரம் முறை கூறுவேனல்லவா இதனை! தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டுகூட இருக்கிறேன் - எனக்கென்று வரும் ஆபத்து, துக்கம், இழிமொழி இன்னல், பழி இவைகளை. ஆனால், இது தம்பி! என்னால் மட்டுமல்ல, எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடி! நூற்றுக்கணக்கான கிராமங்களே காணோமே! நகரங்கள் பலவும் களத்தில் படுகாயமுற்றுக் கிடக்கும் வீரர்போல! ஆயிரம் பேர் கொல்லப்பட்டுப் போயினராம்! ஐயகோ! எப்படி இதைத் தாங்கிக் கொள்ள இயலும்? எதை எண்ணி இதயத்துக்குச் சாந்தி தேடிக் கொள்ள முடியும்? யாரை நோவது? யாரைச் சுட்டிக்காட்டிச் சாடுவது? தாமரை பூத்த தடாகமான தஞ்சையில், வெள்ளத்தில் அழுகிய பிணங்களடா தம்பி! பிணங்கள்! பேசிவிட்டுப் படுத்திருப்பான், கொஞ்சிக் குலாவிவிட்டுப் படுத்தாள் பாவை, மார்புடன் அணைத்துக் கொண்டாள் மதலையை வெண்ணெய் காய்ச்சின நெய் கலந்த சோறு காணாவிடினும் அன்னையின் அன்பு கலந்த உணவினை உண்டு உறங்கினர் சிறார் - அவர்களைச் சூழ, அவர்தம் உழைப்பினைப் பெற்று, செந்நெற் பயிர் ஆடிக் கிடக்கிறது, ‘இளநீர்’ சுவையுடையதாக இருக்கலாம், தென்னையே! நீயோ அதனைச் சுலபத்தில் மக்களுக்குத் தர மனமின்றி உயரத்தில் வைத்துக் கொண்டு கிடக்கிறாய், நான் அவ்விதமல்ல, என் உள்ளம் இளகியது. இதோ பார், கனிகளைப்பெற வருபவருக்குக் கஷ்டம் அதிகம் தரக்கூடாது என்று எந்த அளவில் நிற்கிறேன்! - என்று கதலி தென்னைக்குக் கூறுகிறதோ என்று எண்ணத்தக்க நிலையில்! நாளைக் காலையில் இதைச் செய்ய வேண்டும், இவ்விதம் செய்ய வேண்டும் என்று - பேசிவிட்டுப் படுத்தனர், உழைத்திடும் அந்த உத்தமர்கள். அந்தோ! அந்தோ! அவர்கள் காலையில் கண்டது கதிரவனை அல்ல - அவர்களைக் காலைவரையில்கூட விட்டு வைக்கவில்லை சாவு, பற்றி இழுத்துக்கொண்டு சென்று சின்னா பின்னமாக்கிவிட்டது. கடலிலே கொந்தளிப்பு! பேய்க் காற்று வீசுகிறது, பெருமரங்கள் சாய்கின்றன வேரறுந்து; தோப்புகள் சிதறுகின்றன! - பெருமழை பெய்கிறது - இருள் கப்பிக் கொள்கிறது - வயலெல்லாம் ஏரிகளாகி, ஏரிகளெல்லாம் கடலாகி, வாய்க்கால்களெல்லாம் ஆறுகளாகி, ஆறுகளெல்லாம் அழிவு தருவனவாகி, எங்கும் வெள்ளக் காடாகிறது! துக்கம் கலையுமுன் பேரிடி மனதைப் பிளக்கிறது - உயிர் காத்துக்கொள்ள முயற்சிக்கு முன்பு உருத்தெரியாதபடி வெள்ளம் மக்களைக் கொள்ளை கொள்கிறது. தம்பி! நாசம் விளைவித்துள்ள அளவுமட்டுமல்ல, அதன் வேகம் திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. எனவேதான், இத்தனை அளவு உயிரிழப்புகள் - பொருட்சேதம் - அழிவு. கடல்நீர் ஊருக்குள் படை எடுத்தால், கதிகலங்கிப் போகாமல் என்ன செய்ய இயலும் - எட்டடி பத்தடி உயரத்துக்கு எழும்பி, பேரிரைச்சலுடன் அலைகள் ஊருக்குள்ளே படை எடுக்கும்போது, பீதி போதும் கோழைகளுக்கு, நமது உடன் பிறந்தோர் வீரமாகப் போரிட்டுப் பார்த்திருக்கிறார்கள் - ஒன்றைச் சமாளிப்பதற்குள் மற்றொன்று - என் செய்வர் - கடல் அலைக்குத் தப்பிட, ஒதுக்கிடம் தேடிச் செல்லலாமென்றாலோ, பாதைகள் அழிந்து பட்டுப் போய் எங்கும் வெள்ளம், பெரு மழை தாக்கியவண்ணமிருக்கிறது, பேய்க் காற்று வீசியபடி! இந்த நிலையில் வீசி எறியப்பட்டவர்கள், மூழ்கி மூச்சுத் திணறிப் போனவர்கள், மோதி நசுக்குண்டவர்கள். அம்மவோ! எண்ணும்போதே, செவிகளில் பேய்க் காற்றின் கூச்சலையும் மீறிக்கொண்டு கிளம்பும், கதறல் கேட்கிறது அந்தோ! என்ன எண்ணினரோ, எதை எதை எண்ணிக் கொண்டனரோ, விபரீதம் விளைவித்த அந்த விநாடியின் போது குழந்தைகள், மந்தி கரம்பட்ட மலராகிவிட்டன! சிறுமதி படைத்தோரிடம் சிக்கிய செல்வம்போல, தமிழகத்தின் உண்மைச் செல்வங்களாம் நம் சிறார்கள், சின்னாபின்னமாகிவிட்டனர். பெரியவர்களோ! பேய்க் காற்றினால் முறிந்து போயினர். தஞ்சையும் இராமநாதபுரமும், இந்த அழிவுக்கு இலக்காகி, நொந்து கிடக்கின்றன. நமது நெஞ்சம் வெடித்திடும் நிலையில் இருக்கிறது. இதை எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும்? எரிமலை! நெருப்புக் குழம்பினைக் கக்கும்-பொறி நூறு மைல்களுக்கு அப்பாலும் தெறிக்கும் - தீயிலே நகரங்கள் கருகும், சூழ இருந்த சுந்திரபுரிகள் யாவும் சுடுகாடுகளாகும்! - என்று இன்னுமோர் திங்களுக்குப் பிறகு, எவரேனும், வெசுவியஸ் எரிமலை குறித்தோ, ஜப்பான் நிலை பற்றியோ கூறினால்-ஆமாம்! அந்த அழிவு பயங்கரமானதுதான் அத்தகைய ஆபத்திலே சிக்கிக் கொள்வதென்றால் கொடுமைதான் என்று கூறிட முடியும் - மக்கள் சமுதாயம் இதுபோன்ற அழிவுகளை ஓரோர் சமயம் சமாளித்துத்தான் தீரவேண்டி இருக்கிறது, என்ன செய்வது; கடற் கொந்தளிப்புக்கும், கடும்புயலுக்கும், நில நடுக்கத்துக்கும், எரிமலைக்கும், ஆபத்து கக்கிடும் எண்ணற்ற பல நிலைமை களுக்கும் இடையிலேயேதான் மனித சமுதாயம் நிற்க வேண்டி இருக்கிறது என்று பேசிடக்கூட இயலும். ஆனால் இன்று? மனம் வேலை செய்ய மறுக்கிறது! ஏடுகள் பலவற்றிலே நாடுகள்சிலவற்றிலே நேரிட்ட அழிவுகள் பற்றிப் படித்த நினைவுகூட நசித்துப் போகிறது - நெஞ்சம் வேதனை ஒன்றைத் தவிர வேறெதனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் வீசியது புயலல்ல - சிறிதளவு வேகமாக வீசிய தென்றல் என்று கூறத் தோன்றுகிறது இது போது நேரிட்டிருக்கும் ‘அவதி’யைக் காணும்போது. தென்னையும் வாழையும் அழிந்தது அதிகம் அப்போது - உயிர்ச்சேதம் அதிகமல்ல; இப்போது உயிர்ச்சேதம், கேட்போர் உள்ளத்தை உடைத்திடும் அளவில் கிராமம் கிராமமாக அழிந்து கிடக்கின்றன. பிணமலை! கால்நடைகள் அழுகிக்கிடக்கின்றன. புதைக்கு முன்பு, இன்னின்னார் என்று அடையாளம் கண்டறியக் கூட முடியாத நிலையில், உடலங்களழுகி விட்டனவாம். காலமெல்லாம் உழைத்து உழைத்து, ஊரை வாழ வைத்து வந்த உத்தமர்களே, மிக அதிகமான அளவில் நாசத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், அவர்கள் தானே, பாபம், கடலோரத்தில் குடில்கள் அமைத்துக்கொண்டு வதிகிறார்கள். செல்வம் படைத்தோர், கடலிடம், உள்ளத்துக்கு உற்சாக மூட்டும் காற்றினையும் முத்துக்களையும் மட்டும் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டு வாழ முடிகிறது - இந்த ஏழைகள் கடலிடமிருந்து பெறுவது அலைகளைத் தானே! இப்போது, அவதியே அலை அலையாக "வந்துள்ளது. கடல், சாவினையே அலையாக்கி அவர்மீது ஏவி இருக்கிறது. காற்று சிறிதளவு பலமாக வீசினாலே போதும், குடில்கள் கூளமாகிவிடும்! மழையின் அளவு சிறிது அதிகமானாலே போதும், குடில்கள் மிதந்துகிடக்கும் நிலை ஏற்பட்டுவிடும் இப்போது, நாட்டு வளத்தை அழித்திடவே கடற்படையும் காற்றுப் படையும் மழைப் படையும் தாக்கினவே, என் செய்வர், எளியோர் - பிணமாயினர் - அழுகிக் கிடக்கின்றன உடலங்கள். சேரிகள் - பரதவர் குடில்கள் - பாட்டாளிகளின் குடிசைகள் - உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள் - இவை யாவும் நாசமாகிவிட்டன - அந்த உத்தமர்களிலே நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டு போயினர் - மீதமிருப்போருக்கு வீடில்லை, வயலில்லை, உயிர் இருக்கிறது. உள்ளத்தில் திகைப்பின்றி வேறெதுவுமில்லை - ஆனால் தம்பி! நமது முதலமைச்சர், காமராஜர், அவர்கள் மத்தியில் இருக்கிறார்! பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர், இருக்க வேண்டிய இடம்! ஆம்! அங்கு பெரிய அதிகாரிகள் புடைசூழ இருக்கிறார்! பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது, கொந்தளித்தெழுந்த கொடுங் கடலே! குடும்பங்களை அழித்த பேய்க் காற்றே! மக்களை அழிவிலே மூழ்கடித்த பெரு மழையே! அழிவினை, இரக்கமின்றி எம்மீது ஏவினீர் - கர்வம் கொள்ளற்க - பிணமலை கண்டு பெரு வெற்றி கொண்டு விட்டோம் என்றெண்ணிப் பேயுள்ளம் கொள்ளற்க - அழிவு ஏவினீர் - இதோ எமக்கு ஆறுதல் அளிக்க, எமது முதலமைச்சர் வந்துள்ளார்! எமது கண்ணீரைக் காணுகிறார், தமது கண்ணீரைச் சிந்துகிறார், அழிவு சூழ் இடங்களில் ஆறுதலை அள்ளித் தருகிறார்! கோட்டையில் அமர்ந்து கொண்டு, ‘உத்தரவுகள்’ போடும் முதலமைச்சர் அல்ல இவர்! ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும் பூஜாரி அல்ல! நமது ஆட்சியின் போது இந்த அழிவு வந்துற்றதே என்று உளம் பதைத்து, பறந்து வந்தார் எமக்கு வாழ்வளிக்க என்று மக்கள் எண்ணி வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்; தம்பி! சொல்லத்தானே வேண்டும். முதலமைச்சர் காமராஜரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம். அளவு குறைவு - முறை குறையுடையது என்று நிபுணர்கள் பேசக்கூடும், நாலாறு மாதங்களுக்குப் பிறகு. ஆனால் முதலமைச்சரின் இதயம் தூய்மையானது, ஏழை எளியோர்பால் அவர் இது சமயம் காட்டிய அக்கறை தூய்மையானது என்பதை, எவரும், எந்நாளும் மறந்திடமாட்டார்கள் - இயலாது. வளம் கொஞ்சும் தஞ்சை, வாளை துள்ளும் வாவிகளும், கெண்டை புரளும் ஆறுகளும், கமலம் முகம் காட்டும் கழனிகளும், என்றெல்லாம் நாவலரும் பாவலரும் பன்னெடுங் காலமாகவே பாட்டு மொழியால் பாராட்டியுள்ளனர். அங்கு இப்போது பிணமலை. பேயா மழை பேயுது, பெரிய வெள்ளம் வருகுது! ஆனால் எல்லாம் வேற்றுச் சீமைகளில்; எங்கள் தரணிக்கும் மழைக்கும் நீண்ட காலமாகவே பகை நெளிகிறது என்று அவலச் சுவைப்படக் கூறுவர், இராமநாதபுரம் மாவட்டம் குறித்து. அங்கு இப்போது, வெள்ளக்காடு! காமராஜர் காண்கிறார், கண்ணீர் உதித்திடாமலிருக்க முடியுமா? உபநிஷதம் படித்து உள்ளத்தைப் பாறையாக்கிக் கொண்டவர்கள் தவிர, மற்ற எவரும் மனம் உருகிடத்தான் செய்வர் - நிலைமை கண்டு. நமது அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் ஆலாய்ப் பறக்கின்றன - அழுகுரல்! பிணங்களைத் தேடித் தேடி எடுக்கிறார்களாம்! உருவமே தெரியாதபடி அழுகிப் போய்விட்டனவாம்! தினசரி வரும் செய்திகளைக் கேட்கத் திகைக்கிறோம். தாயை இழந்த தனயர்கள், பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர், ஜோடி ஜோடியாகப் பலர், தூங்கியோர் தூங்கிய நிலையில், ஒதுங்கி ஒண்டினோர் கூண்டோடு, குழந்தைகள், வாலிபர்கள், வயோதிகர்கள் - இவ்விதம் நூறு நூறாகச் செத்துக் கிடக்கிறார்களாம், தென்னஞ் சோலைக் குள்ளும், இடிந்து விழுந்த வீடுகளுக்கடியிலும், செய்திகளை அறிய, அறியத் திகைக்கிறோம். செய்வதென்ன வென்றறியாது விழிக்கிறோம் - தென்னகம் இதுவரை இப்படியொரு கோரத்தைச் சந்தித்ததில்லை. கடல் நீர், ஊருக்குள்ளே! பச்சை பசேலெனக் காட்சி தரும் நன்செய் எல்லாம் வெள்ளக்காடு! வள்ளல் தருக்களாம் தென்னந்தோப்பைக் கொண்டு வயிறு கழுவும் பட்டுக் கோட்டை முத்துப்பேட்டைவாசிகள் பரிதவிக்கிறார்கள்! உப்பளம் வேதாரண்யம் - ஒரு செய்தியையும் அங்கிருந்து தெளிவாகப் பெற முடியாத நிலை. மதுரை, திருச்சி, இராமநாதபுரம் - ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், நெஞ்சு வெடிக்கத்தக்க நிகழ்ச்சிகளைப் போய் பார்த்த மதுரை மாவட்டச் செயலாளர், முத்துவும், திருச்சி மாவட்டச் செயலாளர் தர்மலிங்கமும் எழுதுகிறார்கள். இளங்கோ தஞ்சை மாவட்டச் செயலாளர், என்ன நிலையிலிருக்கிறார் என்றறியத் தபால் போக்குவரத்தே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு இயற்கையின் நாச நர்த்தனத்துக்கு ஆளாகி அவதிப்பட்டனர் - மக்கள். அதே மக்களுக்கு அதை விடப் பெரிய பேரிடி! கட்டுமரம் கட்டிச் சென்று கடலை அளந்து, மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் எத்தனை பேர் எங்கே போனார்கள் என்றும் திகைப்பாயிருக் கிறதாம்! அவர்தம் கலங்கள் உடைந்து, ஊருக்குள் வந்து கிடக்கும் படங்களைப் பார்க்கும்போது, வயிறு எரிகிறது! வளைந்து கிடக்கும் மின்சாரக் கம்பங்கள் - தூள் தூளாகிப் போன நெல் ஆலைகள் - பள்ளிக்கூடங்கள் - ஏழை ஆதிதிராவிடச் சேரிகள் - ஐயோ, நாசம்! நாசம்! படுநாசம்! துயர் துடைக்க ஓடிய முதலமைச்சரையும், அதிகாரி களையும், பொதுமக்கள் தொண்டர்களையும் பாராட்டுகிறோம், தத்தமது கடமையைச் சரியான சமயத்தில், தவறாமல் செய்தார்களே எனும் மகிழ்ச்சியால். இந்த உதவிகளும் இல்லாது போனால், என்னாகியிருப்பரோ நம்மவர்கள் என்றெண்ணும் போது, பெருமூச்சு விடுகிறோம். அந்தக் கோரத்தை எண்ணவே முடியவில்லை. ஏற்பட்டிருக்கிற நாசம் சாதாரணமானதல்ல - எங்கோ ஓரிடத்தில் தோழர் காமராஜரைக் கேட்டதற்கு, “இறந்து போனவர்களைப் பற்றி, எதுவும் செய்ய முடியாது சர்க்காரால். உயிரோடிருப்பவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து தரும்” என்று சொன்னாராம். உண்மைதான்! இயற்கையின் பல்லுக்கு இரையான நமது மக்களின் வாழ்வை, இனி எப்படிப் பெற முடியும் எம்மால்? அவர்களுக்காக, வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அவதியுறுவோரின் அச்சத்தையும் துக்கத்தையும் ஆற்ற நம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டும்! ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தை எண்ணிடிலோ, உதவி, பெயரளவில் இருந்தால் போதாது - ஒருவர் இருவர் வழங்கிவிட்டாலும் போதாது - சர்க்கார் பெருத்த அளவில், பல கோடி ரூபாய்களை, ஒதுக்க நேரும் என்றே கருதுகிறோம். இடிந்து போன கட்டிடங்கள், அதோ நிற்கின்றன. அதற்கருகில், அழுதவாறு கிடக்கிறார்கள், வீட்டின் சொந்தக்காரர்கள். விவசாயி, அழுகிறார் - இடுப்பொடியப் பாடு பட்டேன் - கதிர் முளைத்த காலையில், என் கழனி வெள்ளக் காடாகிவிட்டதே ஐயா, எப்படி காலந்தள்ளப் போகிறேன் - ‘கிஸ்தி’ எப்படிக் கட்டப்போகிறேன் என்று - தென்னஞ் சோலையையும், வாழைத் தோட்டங்களையும் நம்பி வாழ்ந்தோர் அதோ மடமடவெனச் சாய்ந்துவிட்டதே எமது வாழ்க்கை. ஐயகோ என்று நிற்கிறார்கள். இவர்களனை வருக்கும் உதவியளிப்பது என்றால், சாதாரணமான காரியமல்ல. பல குடும்பங்களிலே புதிதாக விளக்கு ஏற்றி வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுவிட்டது அவ்வளவு பெரிய நாசம். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அவதி கண்டு உளம் பதைத்த நாம், நமக்கு நாட்டிலே உள்ள வாய்ப்புக்கு ஏற்ற முறையில் ஓரளவு பணியாற்றி ஏறத்தாழ முப்பதாயிரம் திரட்டி ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் வாங்கி, சர்க்கார் மூலமாகவே அனுப்பி வைத்தோம். இதுபோது, அவதியுறும் மக்களுக்கு வாழ்வளித்திடவும், அழிவு தந்த புண்களை ஆற்றிடவும், விபத்தால் ஏற்பட்டுள்ள வடுக்களைப் போக்கிடவும், பலமும் மக்கள்பால் பரிவும்கொண்ட சர்க்காரன்றி வேறு, எந்த தனிப் பட்ட அமைப்பினாலும் இயலாது என்று திகைக்க வேண்டி இருக்கிறது. கலத்தைச் சுக்கு நூறாக்கத்தக்க சூறையும் சுழலும் வீசும் போது, கலத்தைக் காத்திடக் கட்டுமரம் ஏறிச்சென்று என் செய்வது? பெருந் தீ பற்றிக் கொண்ட நிலையில் பிடிமண் தூவியா அணைத்திட முடியும்? நிச்சயமாகப் பல கோடி ரூபாய்களைச் செலவிட்டாக வேண்டும் - உடனடி உதவி அளிக்கும் திட்டங்கள்அளிப்போரின் உள்ளங்களுக்கு மகிழ்வளிக்கும். அவதிக் காளானோருக்கு வாழ்வளிக்கவோ, நீண்ட கால திட்டங்கள் தேவை. பணம் சர்க்காரின் பெட்டியிலிருந்து செலவிட வேண்டும் என்று கூறிவிட்டு பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடப் பேசுவதல்ல இது - சர்க்காருக்கு நாட்டில் உள்ள எல்லாப் பெட்டிகளும் சொந்தம் - முறைப்படியும் உறவுகொண்டும், அவைதமைத் திறந்து, பணத்தை அள்ளி எடுத்துச் சர்க்கார் செலவிட முன் வரவேண்டும். “அடே! அடே! என்ன அக்ரமம் செய்கிறாய்?” என்றான் குறும்பன், நண்பன் திடுக்கிட்டுப் போனான், காரணம் அவன் ஒரு அக்ரமமும் செய்யவில்லை. அங்கமெலாம் தொழு நோயால் தாக்குண்டு கிடந்த ஒரு பிணியாளனுக்கு ஒரு அணா கொடுத்தான் - அதை அக்ரமம் என்று கண்டித்த குறும்பன், அரை மணி நேரத்துக்கு முன்புதான் தன் குழந்தைக்கு ஒரு ஆடும் குதிரைப் பொம்மை வாங்க, ஐந்து ரூபாய் பெற்றான் - நன்கொடையாக. “அக்ரமம் என்ன செய்தேன்….” என்று திகைத்துக் கேட்டான் நண்பன். குறும்பன் ‘‘அக்ரமமல்லவா இது? அக்ரமம் மட்டுமல்ல, ஆண்டவனுக்கு விரோதமான காரியமுமாகும். குஷ்டரோகிக்குப் பணம் தந்தாயே, தரலாமா? இந்தப் பாவி பூர்வஜென்மத்திலே செய்த கொடுவினைக்காகத்தானே, பகவான் இவனுக்கு இக்கொடு நோயை ஏவித் தண்டிக்கிறார். நீ இவனுக்குப் பணம் அளித்து, அவன் படும் கஷ்டத்தைக் குறைத்திடுவது, ஆண்டவனுக்கு எதிராகச் செய்யும் காரியமாகாதா! தர்மப் பிரபு என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற சூதான எண்ணம் உனக்கு!” என்று குறும்பன் குத்தினான். நண்பன், பதிலேதும் பேசவில்லை - சிரித்தான் - இத்தகைய சிறுமதியாளனையும் நண்பனாகக் கொள்ள நேரிடுகிறதே என்று. இக் கதை போல, வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் என்ற சாக்கு கூறிக்கொண்டு அரசியல் கட்சிகள் வெளிச்சம் போடும் - அது கூடாது - ஆமாம்! கூடவே கூடாது - என்று கூவிடும் குறுகிய மதிபடைத்தோர்கூட இருக்கிறார்கள். எது இல்லை நாட்டில்! மலர்த் தோட்டத்திலேயே ஒரு முலையில் மலம் இருக்கிறதல்லவா! பழத் தோட்டத்திலே ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறதல்லவா! அது போல தன்னாலும் முடிவதில்லை, பிறர் செய்தாலும் பார்த்துச் சகித்துக்கொள்ள மனம் இடம் தருவதில்லை. ‘‘இவ்வளவும் மலமாகத்தானே போகிறது” என்று விருந்து சாப்பிடுவோரிடம் கேட்டானாம், விரட்டி அடிக்கப் பட்டவன்; அதுபோல் இது ஒரு ரகம் - கிடக்கட்டும். இத்தகைய மந்தமதிக்காரர்களின் மண்டையிலடிப்பது போலப் பெரியார் புயல் நிவாரணத்துக்கு ஓராயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார். கெடுமதி எனும் புழு நெளியும் உள்ளத் தினருக்கு தக்கதோர் புத்திமதி புகட்டிடவே பெரியார் இந்த அன்புக் காணிக்கை தந்தார் என்பது மட்டுமல்ல, வந்துற்ற அவதி எவ்வளவு பயங்கரமானது என்பதை அனைவரும் அறியச் செய்ய வேண்டும் என்ற பெரு நோக்கும் இதற்குக் காரணம் என்று கூற வேண்டும். தம்பி! நமது கழகத்தின் சார்பில் ஓராயிரம் தரப்பட்டிருப்பது பற்றிப் பத்திரிகைகளில் பார்த்திருப்பாய். சென்னையில் நமது பொதுச்செயலாளருடன் நானும், அறிவகத்தின் தொடர்பினை அடிக்கடி கொள்ளும் கழகத் தோழர்கள் சிலரும் பேசினோம் - அவர் பட்டுக்கோட்டை தெரியுமல்லவா - கண் கலங்கிய நிலையில் இருந்தார். கடலில் கடுகு, இந்த ஆயிரம். செய்யவேண்டியது இனி தொடர்ந்து; இது உதவி செய்யும் சீலர்களுடன் நாமும் சேருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் சிறு அறிகுறி. தம்பி! முன்பு நாம் நாடகமாடியும் நல்லோரிடமும் கரம் நீட்டியும் நிதி திரட்டினோம் - அப்போது இக்காரியத்தில் ஈடுபட மற்றவர்கள் துடித்தெழுந்து கிளம்பாததால், இம்முறை நாட்டிலுள்ள நல்லோர் எல்லோருமே, நான், நீ என்று போட்டியிட்டுக் கொண்டு உதவி திரட்டிட முனைந்திடுகிறார்கள் - மகிழ்கிறேன் - மகிழ்வாய். நாம் அந்த முயற்சியில் நமது பங்கினைச் செலுத்த உடனே முற்பட வேண்டும். காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள், கழகத்தார்கள், என்று ‘அளவு கோல்’ போட்டு அளக்க வேண்டிய விஷயமல்ல இது! வீடு தீப்பற்றிக்கொண்டு எரியும்போது பேரம் பேசுபவன் வீணன். எனவே, துயர் துடைக்கும் எந்த முயற்சியில் யார் நம்முடைய ஒத்துழைப்பைக் கேட்டாலும் தரத் தயாராயிருக்கிறோம் - நம்மாலான உதவிகளைச் செய்யவும் சித்தமாயிருக்கிறோம். ஏனெனில், நிகழ்ந்திருக்கிற நாசம் சாதாரணமானதல்ல, அவதிப்படும் மக்கள் தொகையும் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, அதன் துயர்களையும் பொறுப்பில், அரசுக்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளை யாவரும் செய்ய வேண்டும். அதே சமயத்தில் அரசினரும், பணத்தைப் பணம் என்று பார்க்காமல் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியானோர் அனைவரின் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைக்கும் பெருமுயற்சியிலீடுபட வேண்டும். ஆபத்துக்கு ஆளாகி அல்லற்படுபவர்கள், நமது உடன் பிறந்தோர்கள், இதில் கட்சி பேதம் கலக்கக் காரணமில்லை - கருணையுள்ளம் கொண்ட அனைவரும் ஈடுபட்டு, வழியும் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டும் - அதுதான், திண்டாடும் நமது சகோதரர்களுக்கு நாம் காட்டக்கூடிய அன்பும் - அனுதாபமும். கூட கோபுரங்கள் மாட மாளிகைகள் வணிகக் கோட்டங்கள் சினிமாக் கொட்டகைகள் நடுத்தர மக்கள் இல்லங்கள் அலுவலகங்கள் இங்கெல்லாம், ‘ஒரு நாளைய வருமானம் இந்த நிவாரணத்துக்கு என்று ஒதுக்கி, திரட்டி, சர்க்காரிடம் தரும் முயற்சியில் ஆட்சியாளர்களாகியுள்ள கட்சியினரே! பல்வேறு கட்சித் தோழர்களே! பணிபுரிய வாரீர் என்று அழைக்கிறோம். அமைச்சர்களே! எல்லா இடங்களிலும் என்று இல்லா விடினும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகர்களில் வீதிகளிலே செல்லுங்கள்! மக்கள் வேண்டிய மட்டும் பணமும் பண்டமும் அளிப்பர். கடை வீதிகளிலே வாருங்கள்! ஆடைகளைக் குவிப்போம், அமைச்சர்கள் மட்டுமல்ல, அருளாளர் ஆதீனகர்த்தர்கள், எவரும் இப்பணிக்கு முன் வருதல் வேண்டும் - அனைவரும் மனிதரன்றோ! கலை உலகத் தோழர்களே! உமது பணி, இச்சமயம் மிக்க பலனளிக்கும். நிதி திரட்டவும், ஆடைகள் பெறவும், அங்காடிகளிலும் பெருஞ்சாலைகளிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். பெருநோக்கும் கருணை வழியும் உள்ளமும் கொண்டவர்கள் கலை உலகில் ஏராளமாக உள்ளனர்; எனவே, அவர் தம் முயற்சிக்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். அனைவரும் பணியாற்றித் தீரவேண்டிய கட்டம். இன்றே துவக்குக! என்று வேண்டுகிறோம். தி.மு.க. தோழர்களிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்பு கேட்பினும், கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம். தேம்பித் திகைத்துக் கிடக்கும் தோழர்களே! உடன் பிறந்தோரே! இதோ உதவி, இதோ, இதோ என்று கூறிப் புறப்படுக; பணிபுரிக. ஆமாம், அண்ணா! எல்லாம் சரி, டில்லி என்ன செய்கிறது, என்று கேட்கிறாய், தெரிகிறது, தம்பி! அதுபற்றி இப்போது எண்ணிக்கிடப்பது வேண்டாம். ஏதேனும் செய்யும். இப்போது என் கண்ணுக்கு டில்லி தெரியவில்லை - வெள்ளம், பிணமலை தெரிகிறது - நீயும் நானும் இருக்கிறோம். நம்மாலானதைச் செய்வோம், உடனே புறப்படு! ஒரு பிடி அரிசி தாயே! ஒரு பிடி அரிசி, என்று கேள். கேள், கொடுக்கப்படும். ஆடை கேள், அளிப்பர் - பழைய ஆடையேனும். கோபுர வாயில்களிலேயும் கேட்டுப் பெறலாம். நீ வேண்டாம் தம்பி, குன்றக்குடியாரின் குறுநகையில் பெருமதி கண்டோரெல்லாம். உடனே, தோழர்களுடன் கலந்துபேசி - அமைப்பு ஏற்படுத்து - அன்பு உள்ளம் கொண்டோர்களிடம் சென்று முறையிடு - பலன் நிச்சயம் கிடைக்கும் - பாதிப் பிணமாகக் கிடக்கும் பரிதாபத்துக் குரியவர்களைக் காப்பாற்றிடும் தூய பணியில் பங்குபெற எவரும் முன் வருவர் - எவரும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எனக்குக் கூறு. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொதுச் செயலாளருக்குக் கூறு. முறைகூட அல்ல தம்பி, இப்போது முக்கியம், உடனடியாகப் பணியாற்றித் தீர வேண்டியதுதான் முக்கியமானது, உன்னால் முடியும். அன்புள்ள அண்ணாதுரை 11-12-1955 கலை உலகக் காணிக்கை புயல் நிதி திரட்டுதல் கழகக் கலைஞர் பணி. தம்பி, புயலும் வெள்ளமும் விளைவித்த வேதனையும் பெரு நஷ்டமும் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன; நெஞ்சைப் பிளக்கும் செய்திகள். கிராமம் கிராமமாக அழிந்து போயின - குடும்பம் குடும்பமாக இறந்துபட்டுள்ளனர் - மீதமிருப்போர் இப்போது படும் துயரம் சொல்லுந்தரத்தன்று. எங்கு நோக்கினும் அழிவு - எப்பக்கம் பார்ப்பினும் பேரிடி, பெருநஷ்டம். ஏழை எளியவர்கள் வாழ்விலே வேதனைப்படுவதை பல காலம் கண்டு பாறை நெஞ்சினராகிவிட்டவர்கள்கூட, பதறிப் போயுள்ளனர், இந்த அழிவு கண்டு. பழந்தமிழகத்தின் திருவும் பண்பும் சிறந்து விளங்கிய பூம்புகார், கடலால் அழிந்த காதையைப் படித்துமட்டுமே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்; இப்போது, பெருமழையும் பேய்க் காற்றும் கூடி இழைத்துள்ள கொடுமை குறித்த ‘அழிவு’ பூம்புகார் அழிந்துபட்டதை நினைவிற்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. அரசு இழந்து, அதனால் வாழ்வு இழந்து வளம் வகைப் படுத்தப்படாததாலும், உழைப்பின் பலன் சுரண்டப்படுவதாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கிடக்கிறோம்; கொற்றம் இழந்தோம், கோலெடுத்தவனுக்கு ஏவலராகி இழிநிலை பெற்றோம்; விண்ணை அண்ணாந்து பார்த்து விம்முவோரும், மண்ணில் இரத்தக் கண்ணீர் சொரிவோரும், திகைப்பால் தாக்குண்டுக் கிடப்போரும், என்ற நிலைக்குத் துரத்தப்பட்டு, துயருற்றுக் கிடக்கிறோம்; இந்த அல்லலும் அவமதிப்பும் போதாதென்று, இயற்கையுமா நமது நாட்டைத் தாக்கிட வேண்டும்? கண்ணெடுத்துப் பாரீரோ! காரியமாற்ற வாரீரோ! எம் இனத்தின் பண்பறிந்து அதற்கேற்ற வாழ்வளிக்க இணங்கீரோ! - என்றெல்லாம், ஆதிக்கம் செலுத்தி வரும் வடவரிடம் உரிமைக் குரல் எழுப்பி வருகிறோம். தங்கமும் தரித்திரமும், இரும்பும் இல்லாமையும், நிலக்கரியும் நொந்த வாழ்வும், வயலும் வறுமையும், என்றுள்ள வேதனைத் தொடரினை விளக்கி, மக்களை வீறுகொண்டெழச் செய்து வருகிறோம்; விடுதலைப் பேரார்வத்தையும் அறப்போருக்கான அஞ்சாமை, இடுக்கண் வருங்கால் இதயமொடிந்து போகாமை ஆகியவற்றினையும் ஊட்டிடும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளோம்; எங்கணும் வீர முழக்கம், எவரிடமும் விடுதலை வேட்கை; இந்த நிலை கண்டு பெருமிதம் கொண்டு, பெற்ற பொன்னாட்டின் விழிப் புணர்ச்சியைக் கண்டு, இதயம் விம்மி, கண்களிலே களிநடமிடும் ஆர்வம் கண்டு, வெற்றி பற்றிய பெருநம்பிக்கை கொண்டு இறுமாந்திருக்கும் நேரத்தில், கொடுமையை வீசிற்றே கடல்! அழிவை ஏவிற்றே காற்று! பேயாகிவிட்டதே பெருமழை! என் செய்வோம்! எங்ஙனம் இதனைத் தாங்கிக்கொள்வோம். மூழ்கி விட்ட கிராமங்கள், மிதக்கும் உடலங்கள், அவர்கள் உழைத்து உருவாக்கிய திரு அத்தனையும் அழிந்த நிலை! இந்தக் கோரக் காட்சியைக் கண்டு எங்ஙனம், உள்ளத்தில் எழும் குமுறலை அடக்கிக்கொள்ள முடியும். “அண்ணா! சென்ற தடவை தாங்கள் இங்கு வந்திருந்த போது தங்கியிருந்தீர்களே, அழகான சோலை, அதன் நடுவே அமைந்திருந்த எனது இல்லம், இன்று அவை அழிந்துபோய் விட்டன. இந்தப் பகுதியில் நமது தோழர்கள் பெருத்த நஷ்டப்பட்டுப் போயுள்ளனர்; என் வேதனை சொல்லுந்தரத் ததல்ல,’’ என்று நண்பர் பேராவூரணி அடைக்கலம் எழுதிய கடிதத்தில் என் கண்ணீர் சிந்திற்று. தம்பி! நான் அந்த அழகிய விடுதியில் தங்கியிருந்தபோது, நான் கண்ட செழுமைதான் எவ்வளவு! இன்று அழிவல்லவா காண்கிறார் நண்பர் அடைக்கலம். நானிருக்கக் குறை என்ன! என்று கேட்டு, நம்பிக்கை நாதத்தை மீட்டுவது போல, காற்றினிலே அசைந்தாடிய வாழையும் தென்னையும், அவைதமை வேலிகளாகக் கொண்டிருந்த செந்நெல் வயலும், அதனூடே சென்ற வாய்க் கால்களும், நடுவே இருந்த அழகிய விடுதியும், அங்கு அமர்ந்து எம்மை உபசரித்து, முகமலர்ச்சியை எமக்கு அளித்த அன்பன் அடைக்கலமும் - இன்று? எண்ணும்போதே, துக்கம் கரத்தைத் தடுக்கிறது, கருத்தைப் பிளக்கிறது, திவலை கண்களைக் கப்பிக்கொள்கிறது! இன்று அடைக்கலம், அழிவினை அல்லவா எங்கும் காண்கிறார். இப்படி அடைக்கலங்கள், பதின்மரா இருபதின்மரா, நூற்றுக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலல்லவா உளர்? என்ன செய்வோம்? நிதி திரட்டுகிறோம், ஆடைகளைச் சேகரிக்கிறோம், உணவு திரட்டுகிறோம். எல்லாம் எற்றுக்கு? எல்லாம் இழந்து தவித்திடுவோர்க்கு, இவை எம்மட்டு? கணக்கறியும்போது கலக்கம் மேலிடுகிறது; ஏற்பட்டுப்போன உயிர்ச் சேதத்தை நினைக்கும் போது உள்ளம் வெடித்துவிடும் நிலை ஏற்படுகிறது. எனினும், நாம் இந்தப் பெருநட்டத்தை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை நிலைநாட்டியாக வேண்டும். “எல்லாம் இழந்தோமே! என் செய்வோம்?” என்று கதறிடும் நமது உடன் பிறந்தார்க்கு, உடன் பிறந்தோரே! உத்தமர்காள்! குடும்பத்தில் கண்மணிகளை, கருஊலங்களை, இன்பவாரிதிகளை, இதயராணிகளை, பேசும் பொற்சித்திரங்களை, பாழும் வெள்ளத்துக்கு இரையாகக் கொடுத்துவிட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறீர். வீடிழந்தோம், வயலிழந்தோம், உடமை அனைத்தையும் இழந்தோம், வாழ்விழந்தோம் என்று கூறிடுவீர். உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை - ஆனால் அன்பர்காள்! எல்லாம் இழந்தீர் எனினும், எம்மை இழந்துவிடவில்லை - உமக்கு வாழ்வளிக்க நாங்கள் இருக்கிறோம் - எமது ஆற்றல் மிகுதியானதன்று, ஆயினுமென், இதயத்தில் பொங்கி எழும் உணர்ச்சி எமது ஆற்றலைப் பன்மடங்கு அதிகமாக்கிடும், அறிவீர்! ஊரெங்கும் செல்கிறோம், உற்ற ‘உற்பாதத்தை’ எடுத்துரைக்கிறோம், காண்போரிடமெல்லாம் கை ஏந்தி நிற்கிறோம். கல்நெஞ்சக் காரனையும் கனிய வைக்கிறோம். ஓயமாட்டோம், உறங்க மாட்டோம், உதவி திரட்டும் ஓராயிரம் வழிகளையும் கண்டறிந்து பணியாற்றுவோம்! நேரிட்ட கொடுமைக்குப் பரிகாரம் தேடிட கட்சிகளை மறந்து காரியத்தில் ஈடுபடுவோம். ஆடுவோம்! பாடுவோம்! ஊருக்கும் ஓடுவோம்! எப்பாடுபட்டேனும் உதவி திரட்டும் பணியில் வெற்றிபெற்றுத் தீருவோம். மீண்டும் உமக்கு வாழ்வு - முன்பு நீவிர் கண்டனுபவித்த குதூகலம் குறைந்துபடினும் - வாழ்வு செம்மையாக அமைவதற்கான எல்லா முயற்சியையும் எடுத்துக்கொள்ளத் தயங்கப் போவதில்லை - என்று நாமனை வரும், தம்பி! எடுத்துக் கூறிட வேண்டும். நாட்டிலே எந்த அளவுக்கு நற்பண்பு இருக்கிறது என்பதை நாமெல்லாம் உணரத்தக்க வகையில், உதவி திரட்டிக் குவித்திடும் காரியம் வேக வேகமாகவும், வகைவகையாகவும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஏழை எளியோரின் கஷ்ட நஷ்டத்தை நன்குணர்ந்த ஓர் நல்லவர் நாடாள்கிறார், வழக்கமாக ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிர்வாக இயந்திரமே இன்று புயல் வேகத்தில் பணியாற்றிடக் காண்கிறோம், அள்ளித்தரச் செல்வர்களுடன் சாமான்யர்கள் போட்டியிடுகின்றனர். தம்பி! நமது கலைச்செல்வர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சென்ற இதழிலே குறிப்பிட்டிருந்தேன், காண்கிறாயல்லவா, அவர்தம் கொடைத் திறனை! இன்று அந்த கலைச்செல்வர்கள், வைரம் மின்னிட, தங்கம் ஒளிவிட, தந்தக் கட்டிலில் அமர்ந்து வெள்ளி வட்டிலில் இனிப்புப் பண்டம் வைத்து உண்டு மகிழத்தக்க நிலை பெற்றவர். எனினும் அவர்களில் எல்லோருமே, இல்லாமை கொட்டுவதை, வறுமை வாட்டுவதை அனுபவித்து அறிந்தவர்கள். ஏழையின் இதயக் குமுறலை நன்கு தெரிந்தவர்கள். கருணை அவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சுரக்கத்தான் செய்யும். ஆகவே, அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. சென்ற கிழமை அவர்கள் கூடி நிதி திரட்டத் துவங்கினர்; துவக்கக் கட்டமே வெற்றி அளித்திருக்கிறது: தொடர்ந்து பணியாற்றுவர்; அவர்தம் பணியின் பலன், அழிந்தது போக மீதமிருக்கும் வலிவு கொண்டு வாழ்வுடன் போராடி, உழைப்பால் மீண்டும் பொலிவு பெறும் ஏழை எளியவருக்கான அழகிய குடில்களாகக் காட்சி தரட்டும், அழிவு தோற்றோடட்டும்! நாசத்தின் கோரப் பற்களால் ஏற்பட்ட புண் ஆற்றிடும் மாமருந்து கிடைக்கும். நமது அருமருந்தன்ன நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் மதுரையம்பதி கடைவீதியில் சென்று, கை ஏந்தி நின்று பணமும் பண்டமும் கேட்டும் பெற்று உதவினார் என்றோர் செய்தி கேட்டு, இத்தகு இதயம் படைத்தவரை, நண்பராகப் பெற்றிருக்கிறோமே, நமது கழகத்தினராகவும், கொண்டிருக்கிறோமே என்பது எண்ணிப் பெருமைப்படுகிறேன் - பெருமைப்படுகிறேன். கலைச் செல்வர்களின் பணி, உண்மையிலேயே போற்றுதற்குரியதாகவே அமைந்திருக்கிறது. எனினும்…. ஆமாம், தம்பி! எனினும் என்று கூறத்தான் வேண்டி இருக்கிறது - ஏனெனில் அவர்கள் மூலம்தான் பல இலட்சங்கள் இந்த நற்காரியத்துக்கு, கேடு சூழந்துள்ள நாட்டினை மீட்டிடும் தூயதொண்டுக்கு, கிடைத்தாக வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். தமது இசையாலும், நடன மூலமும், நாடக படக் காட்சி மூலமும் நாட்டு மக்களுக்கு இன்பமும் நல்லறிவும் தந்துதவுபவரிடம் நான் சில பல இலட்சங்களை எதிர்பார்ப்பதிலே என்ன தவறு? அவர்கள் அறிவார்கள் அல்லலுறும் மக்களின் அவல நிலையைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சி எவ்வளவு மாமலை போன்றதென்பதை. எனவே நம்பிக்கையுடன் நாடு அவர்கள் உதவியை நாடலாம். என்ன செய்ய நண்பரே! ஒன்று இரண்டு என்று இன்று ஆயிரக்கணக்கில் கொடுத்திருக்கிறோம் - இன்னும் என்ன செய்ய? அங்காடிகளில் சென்று வசூலிக்கவா, இசை அரங்குகள், கலா, நிகழ்ச்சிகள், திறந்த வெளி நாடகங்கள் மூலம் நிதி திரட்டவா? என்று கேட்பர்; இவைகள் மூலமெல்லாம் திரட்டத்தான் வேண்டும் - இன்றே துவங்கி; தொடர்ந்து; ஆனால், இம்முறையில் பணம் குவிய, பாடும் அதிகம், காலமும் மிகுதியாகத் தேவைப்படும். மதுரை அங்காடியிலே நமது நண்பர் ராமச்சந்திரன் சென்ற காலை, நேரிட்டது என்ன? உதவியும் உபத்திரவமும், தோழமையும் தொல்லையும், நேசப்பான்மையும் நெருக்கடியும் போட்டியிட்டு, அவர் மேற்கொண்ட பொறுப்பான காரியத்தைக் குலைத்தே விட்டது. நடிகர்கள் அங்காடி சென்றாலே இது! நட்சத்திரங்கள் சென்றாலோ!! எனவே, நமது கலைச் செல்வர்களுக்கு நானோர் யோசனை கூறுவேன். N.S. கிருஷ்ணன் M.K. ராதா M.R. ராதா K.R. ராமசாமி M.G.ராமச்சந்திரன் T.K. சண்முகம் T.K. பகவதி சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் S.S. ராஜேந்திரன் இப்படிப்பட்ட கலைச் செல்வர்கள் (பட்டியல் பூர்த்தியானதல்ல.) T.R. ராஜகுமாரி லலிதா பானுமதி பத்மினி அஞ்சலி வரலட்சுமி T.A. மதுரம் போன்ற கலைச் செல்வியர்கள் இவர்கள் யாவரும், ஒரு சேர ஒரே படத்தில் நடித்தால் . . . . ! எந்த முதலாளிக்காகவுமல்ல, தாயகத்தின் தவிப்பைப் போக்குவதற்கு, நாலு அல்லது ஐயாயிரம் அடி அளவிலே அமைத்துவிட்டாலும் போதும், பத்தே நாளில் படம் தயாரித்து, அதனை, கலைச்செல்வர்களின் அன்புக் காணிக்கையாகப் படைத்தால். . . . . இலட்சங்கள் புயல் வேகத்தில் குவியும். இந்த நற்காரியத்தை ஒரு நடிகர் குழு மேற்கொண்டால், எந்தப் படம் தயாரிக்கும் அமைப்பும் இலவசமாக வசதிகளைச் செய்தளிக்கும். ஆர்வத்துடன் பணியாற்றினால், இரண்டு வாரத்தில், படம் தயாராகிவிடும். இத்தனை கலைச் செல்வர்களையும் ஒரே படத்தில் காணும் வாய்ப்பு. இவர்கள் அனைவரும் தூய ஒரு காரியத்துக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறார்கள் என்ற மதிப்பு. இவை போதும், இலட்சங்களைக் கொண்டுவர! இதற்கென்று ஒரு கதை - அதிலே பல கட்டங்கள் - இது அல்ல நான் குறிப்பிடுவது. சலிப்பாக இருக்கிறது என்று கூறிக் கண்ணை மூடிக்கொள் கிறோமல்லவா, சர்க்கார் வெளியிடும் சில செய்திப் படங்கள். நான் குறிப்பிடுவது செய்திப் படம் போன்றது - ஆனால், செய்திப் படத்தை சர்க்கார் வெளியிடுகிறார்களே அத்தகைய சத்தற்ற, சாரமற்ற விதத்தில் அல்ல. கொடுமைக் காட்சிகள் - அவை பற்றி நமது கலைஞர்கள், நாட்டு மக்களிடம் முறையிடுதல். நாட்டுக்கு இத்தகைய நெருக்கடிகள் தாக்கும்போது, மக்கள் காட்டவேண்டிய வீர உணர்ச்சி, தியாக உள்ளம். இழப்புகளுக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதல் மொழி. இவ்வகையிலே படம் அமையலாம். முறை அல்ல முக்கியம் - என் மனம் இருக்கும் நிலையில் அது பற்றித் தெளிவுகூட இல்லை என்னிடம் - நான் விரும்புவது, கலைச் செல்வர்களின் முயற்சி, இப்படியோர் அன்புப் படையலாக இருத்தல் வேண்டும் என்பது. நிதி குவியவும், வேகமாகக் குவியவும், தக்க பலன் தரக்கூடிய அளவில் குவியவும், இது நல்ல முறை என்று எண்ணுகிறேன். சர்க்கார் இதற்கு ‘வரி’ இல்லாமல் விலக்களிக்க வேண்டும். கலைச் செல்வர்கள் கூடிக் குழு அமைத்தால் ஒரு திங்களில், பலன் பூத்துக் காய்த்துக் கனியும்; நாடு சுவையும் பயனும் பெறும். தம்பி! கலைச்செல்வர்களுக்கு, நான் கூறிடும் இந்தக் கருத்து, சரி என்று உனக்கும் தோன்றினால், நீயும் அவர்களிடம் சொல்லு. சரி, அது போதுமல்லவா அண்ணா! என்று கூறிவிட்டு வேறு காரியத்தில் மூழ்கிவிடாதே. வாழ்விழந்து வதைபடும் நமது தோழர்களைக் கைதூக்கிவிட முயற்சியில் ஈடுபட்ட வண்ணம் இருக்க வேண்டும். ஒரு படி அரிசி; ஒரு சிறு துண்டு. . . . ஒரு சிறு பணமுடிப்பு - தம்பி! எது பெறமுடிந்தாலும், அதற்காகக் காடு கடந்திட வேண்டுமாயினும், பரவாயில்லை, பெற்று வரவேண்டும் - இத்தகைய ‘உதவிகளை’ அவரவர் தனித்தனி அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு திரட்டுவது, நமது நிதி அமைச்சருக்குப் பிடிக்கவில்லை - கிடக்கட்டும் - அவர் நாட்டு மக்களின் அமைப்புகளை நம்பவில்லை - நாம் அவரை நம்புவோம், நஷ்டமில்லை - அவர் குறிப்பிடும் இடங்களுக்கே வேண்டு மாயினும் அனுப்பிவை. நானும் அதே பணியில் என்னாலான அளவு ஈடுபட்ட வண்ணம் இருக்கத்தான் செய்தேன். அன்புள்ள அண்ணாதுரை 18-12-1955 குரு பக்தி அமைச்சர் சுப்பிரமணியமும் ஆச்சாரியாரும் - நேருவும் மொழிவழி அரசும் - ம.பொ.சி-யின் குரு பக்தி தம்பி, இந்தப் பழைய பாடத்தைப் பற்றிப் புதிதாக இப்போது சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது - என்ன அவசியம் வந்தது - எத்தனையோ பிரச்சினைகள் நெஞ்சைக் குலுக்கும் வகையினதாக உள்ளனவே-அண்ணன் ஏன் இந்தப் பழசுக்குப் போகிறார் என்று எண்ணுகிறாய், தெரியும் எனக்கு. எனக்கும் ‘பழசு’ பிடிக்காதுதான், தெரியுமே உனக்கும்; என்றாலும் எனக்கு ஏனோ இன்று இங்கு வந்தவுடன் (சென்னைக்கு) ‘பழசு’ மீது நினைவு சென்றது - அதற்குக் காரணம் இருக்கிறது - ‘அறிவகத்தில்’ சிறுகுன்றுபோல, பழையதுணிகள் உள்ளன, சிறுசிறு மூட்டைகளாக - நமது தோழர்கள் இங்கு திரட்டியவை. மிகமிகத் தேவையான காரியத்துக்கு இவை பயன்படப் போவதால், பழைய துணிகள்மீது ஒரு பாசமும், அதைத் தொடர்ந்து பொதுவாகவே "பழசு’ மீது எண்ணமும் சென்றது - அதன் விளைவு தான், தம்பி, பழைய பிரச்சினையாகிய ‘குரு பக்தி’ மீது என் நினைவு சென்றது. பிரச்சினை ‘பழசு’; ஆனால் இந்தப் புதிய காலத்திற்கு முற்றிலும் தேவையற்றது என்று தள்ளிவிடக் கூடியதல்ல - பொருளும், பொருள் அறியும் முறையும், பயனும், பயன்காணும் வகையும் புதுப்பிக்கப்பட வேண்டியதாகவோ, பழுதுபார்க்கப் பட வேண்டியதாகவோ இருக்கலாம்; ஆனால், அந்த ‘எண்ணமே’ தேவை இல்லை என்று விரட்டிவிட முடியாதல்லவா? எனவே இன்று ‘குரு பக்தி’யைக் குறித்து நீயும் நானும் எண்ணிப் பார்ப்பது தேவையற்றதுமல்ல, பயனற்றதுமல்ல - உண்மையிலேயே, இந்தப் பிரச்சினையை ஆராய்வதன் மூலம் பயன் தரத்தக்க சில பல கருத்துக்களைப் பெறவும் முடியும். தம்பி! குரு என்றவுடன் பழைமையில் மூழ்கிக் கிடப்போரின் மனக்கண்முன், ஜடையும் தாடியும் கொண்ட, வளைந்து தைலம் தீர்ந்து போன உடலுடன் காட்சி தரும் வயோதிகர், மரத்தடியில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதும், அவர் எதிரே ‘சிறுசும் பொடிசு’மாகச் சீடர்கள் பயபக்தியுடன் வீற்றிருப்பதுமான காட்சிதான் தெரியும். அந்தக் காலம் மலையேறிவிட்டது - எனினும் அந்தக் காலம் மீண்டும்வராதா என்று ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஆச்சாரிய ஸ்வாமிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பழைய நாட்களிலே, ‘குரு’மார்கள் ‘பலரகம்’ இருந்திருக் கிறார்கள்; அனைவரும் அறிவர். ‘கட்டை விரலை வெட்டிக்கொடு காணிக்கையாக என்று கேட்டவரும் இருந்திருக்கிறார், கட்டழகியைச் சீடன் கொட்டி விட்டதைக் கண்டு மட்டற்ற துயருற்ற குருவும் இருந்திருக்கிறார். கைகால் பிடித்துவிடவும், கட்டைகள் வெட்டி வரவும், கால் நடைகளை ஓட்டிச் செல்லவும், கறிகாய் நறுக்கித் தரவும் மட்டுமே பயிற்சி பெற்று, பாடம் கிடைத்ததெனப் பர்ணசாலையை விட்டு வெளியேறிய சீடரும் இருந்திருக்கிறார்கள் - குரு, பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே ‘வெட்டிவா என்றால் கட்டிக் கொண்டு வருகிற’ வகையில், அறிவுத் தெளிவு பெற்று விளங்கிய சீடர்களும் இருந்திருக்கிறார்கள். ‘பழைய’ நாட்களிலே இருந்த ‘ரகம்’ கிடக்கட்டும், இப்போது உள்ளவர்பற்றி எண்ணிப் பார்ப்பது, உடனடிப் பலனளிக்க உதவுமல்லவா, தம்பி, அதற்குச் சிறிது சிந்தனையைச் செலவிடு. இப்போது, நிதி அமைச்சராக இருக்கும் கனம் சுப்பிரமணியம் காமராஜர் முதலமைச்சராக இருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார் - ஆனால் அவர் காமராஜைத் தலைவராகவோ, குருவாகவோ, கொள்பவரல்ல - அவருடைய ‘குருநாதர்’ ஆச்சாரியார்தான்! அவர் அரியாசனத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அரிகதா காலட்சேபம் நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, சுப்பிரமணியனாருக்கு ஆச்சாரியார் மீதுதான் குரு பக்தி; அதை வெளியிட வேண்டிய நேரத்தில், தவறாது செய்கிறார் - சில வேளைகளில் பொருத்தம்கூட இருப்பதில்லை, ஆனால் ‘பக்தி’க்குத்தான் பொருத்தம்கூடப் பார்க்க வேண்டிய தில்லையாமே! அதனால் எந்தச் சமயம் கிடைத்தாலும், தமது குரு பக்தியைக் கொட்டிக் காட்ட, கனம் தவறுவதில்லை. நாடே குமுறிடத்தக்க கேடொன்று நேரிட்டது - புயற் கொடுமை கேள்விப்பட்டதும் ஓடோடிச் சென்றார் முதல் அமைச்சர் - வெறுங்கையுடன் அல்ல - விதவிதமான பண்டங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக் கொண்டும் - உயர்தர அதிகாரிகளை உடன் அழைத்துக் கொண்டும் சென்றார் - கண்ணீரைக் கண்டார், கண்ணீர் சொரிந்தார் - வேகவேகமாக ‘நிவாரண’ வேலைகளைத் தொடங்கினார்: புயற்கொடுமைக்கு ஆளாகியுள்ள மக்கள் புண்ணியவானே என்று அவரை வாழ்த்துகிறார்கள். இது கண்டு, நாமெல்லாம் எதிர்க் கட்சியினர், எனினும் நல்ல இதயம் கொண்டோரை, நற்பணியாற்றுவோரைப் பாராட்டும் பண்பு அறிந்தவர்கள் என்ற முறையில் காமராஜரையும் அவர் நடத்திச் செல்லும் துரைத்தனத்தையும் மனதாரப் பாராட்டுகிறோம். ஆனால் உடனிருந்து பதவி பெற்று வாழ்ந்து வரும் கனம் சுப்பிரமணியனாருக்கு, யார்மீது ‘நினைவு’ செல்கிறது என்கிறாய்! யாரிடம் பாசம், பரிவு,பக்தி, பீறிட்டுக் கொண்டு கிளம்புகிறது என்கிறாய்? முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றவர்மீதல்ல, எப்புரியில் எது நேரிடினும், ‘முப்புரி’க்கு ஆபத்தேதும் வராமலிருக்கும் வகையில், ஆயாசப்பட வேண்டியதில்லை என்று எண்ணும் ஞானவான் இருக்கிறாரே, ஆச்சாரியார், அவர்மீதுதான் செல்கிறது அமைச்சரின் நினைவு!! தம்பி! குரு பக்தி - தலைக்கு அவ்வளவு ஏறி இருக்கிறது. நந்தவனத்திலே, உலவிக் கொண்டிருந்த நாரீமணியை ஒரு "பூதம்’ சிறையெடுத்துச்சென்று யாரும் நுழையமுடியாத காட்டிலே இருந்த மாய மாளிகையில் சிறைவைத்துப் பொன்னும் பொருளும் கொட்டிக் காட்டி புன்னகை தந்தால் போதுமென்று கேட்க, நவநிதி கொடுத்தாலும், என் நாதனை நான் மறவேன் என்று அந்த நாரீமணி சொன்னாள் - என்று கதைகளில் படிக்கிறோமல்லவா, அதுபோல, நிதிக்கும் மதிக்கும் அமைச்சரே! என்ன மாறுதல் நேரிடினும், எவர் போனாலும் எவர் புதிதாக வந்தாலும் உமக்கு ஓர் இடம் உண்டு! என்று சொல்லி அமைச்சரவையில், இவருக்குக் காமராஜர் இடமளித்திருந்த போதிலும் இருந்திருந்து, "வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் குளிருதடி, சகியே!’’ என்று உருகிப் பாடுகிறார், நிதியமைச்சர், குருபக்தி, தம்பி குரு பக்தி! இவருடைய குருநாதர் ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலேயும் புயல் கொடுமை விளைவித்து - என்ன செய்தார் குருநாதர்? பகவத் சோதனை என்று கூறிவிட்டு, மற்றக் காரியங்களைக் கவனிக்கலானார். இரவு பகலென்று பாராமல், வெள்ளம் வெடிப்பு என்று அஞ்சாமல், அந்தஸ்து பற்றித் துளியும் கவனிக்காமல், அவதியுறும் மக்களைக் கண்டு, இன்னலைத் துடைத்திட வேண்டும் என்று காமராஜர் சென்றார் - ஆச்சாரியாரோ - கோட்டையில் கொலுவிருந்தார்! அவருக்கு, இப்போதும், சீடர் நன்றி கூறுகிறார் - குரு பக்தி என்றால் இஃதல்லவா குரு பக்தி! வெள்ளம் விளைவித்த பெரு நஷ்டத்தால், வேதனைப் பட்டுக் கிடக்கும் மக்களுக்கு மீண்டும் வாழ்வளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், இதற்குப் பெரும் பொருள் செலவாகும் - இதற்கு மத்திய சர்க்கார் - டில்லி தேவர்கள் - பெருந்தொகை உதவ வேண்டுமென்பதை நேருவுக்கு உணர்த்தினார் காமராஜர் - நாட்டிலே காமராஜர் ஆட்சி எத்தகைய அமைதியை (ஆனந்தத்தை அல்ல) ஏற்படுத்தி இருக்கிறது, எதிர்ப்புகள் எந்த அளவுக்குச் சுருங்கிப் போயுள்ளன என்பதை எல்லாம் கண்ட நேருவும், நிவாரணத்துக்காகச் செலவிடப்படும் தொகையில் ‘பாதி’ அளவு மத்திய சர்க்கார் அளிக்கும் என்று தெரிவித்தார். இதற்கு யாருக்கு நன்றி கூற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய் தம்பி! நம் போன்ற செய்நன்றி மறவாதார் டில்லியின் மனமும் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஓரளவுக்கு இளகும்படி செய்தார் என்பதற்காகக் காமராஜருக்குத்தானே நன்றி கூற வேண்டும் என்று எண்ணுவோம். நிதி அமைச்சர் அப்படி எண்ணவில்லை. அவருடைய மனம், குருநாதன், மீது சென்றது. ஜயனே போற்றி! மெய்யனே போற்றி! போற்றி! உமது ஆசியால், அருளால்தான், இந்தப் பேறு பெற்றோம்! என்று கூறிக் குருவைத்தான் பூஜிக்கிறார். ‘‘டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை நிருபரிடம் இந்தத் திங்கள் பத்தாம் தேதி; ‘‘மத்திய சர்க்கார் மனமுவந்து செலவுத் தொகையில் பாதியளவு தர முன்வந்ததற்கு, நாம் ராஜகோபாலாச் சாரியாருக்குத்தான் நன்றி கூற வேண்டும் - ஏனெனில் 1952-ல், இப்படி ஏதேனும் ஒரு விபத்து நேரிட்டால், மத்திய சர்க்கார் பண உதவி தரவேண்டும் என்று ஆச்சாரியார்தான், நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினார் - அதற்கு இணங்கியே, மத்திய சர்க்கார் இந்த உதவி செய்கிறது” என்று கூறியிருக்கிறார். பார்த்தாயா, தம்பி! குரு பக்தியை!! வெள்ளமென்றும் வெடிப்பென்றும் பாராமல் சுற்றிச் சுற்றி வந்தாரே காமராஜர், வீழ்ந்துபட்ட மக்களுக்காக வெந்த மனதுடன் வாடிக்கிடக்கும் மக்களிடம் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாரே, காமராஜர் - அவருக்கல்ல நன்றி! இராஜ கோபாலாச்சாரியாருக்கு நன்றி! ஏன்? 1952-லேயே அவர் இந்த அரிய யோசனையைக் கூறிவிட்டாராம், அதனால். இதுதான் தம்பி கடைந்தெடுத்த குரு பக்தி!! ‘குரு பக்தி’ யைக் கொட்டிக் காட்டியதோடு விட்டுவிட வில்லை, இந்த வீரர். இரண்டு இலாக்காவுக்கல்லவா அமைச்சர். அதுபோலவே இரண்டு சீரியதொண்டு புரிவதை அல்லவா அவர் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் - ஒன்று குருநாதரையும் அவருடைய கூடாரத்தினரையும் குதூகலப்படச் செய்வது, மற்றொன்று இன எழுச்சியூட்டும் நம்மைக் குத்திக் குதூகலிப்பது. எனவே, குரு பக்தியைக் காணிக்கையாக்கியதும், நம்மைக் குத்தி மகிழ்கிறார் - குத்துவதால் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கும் என்கிறாயா, தம்பி! சிலருக்கு அப்படி ஒரு நினைப்பு. தாங்கள் குத்துவதால், நமக்கு வலிக்கும், வேதனை அடைவோம், அதைக் கண்டு மகிழ வேண்டும் என்பது. அமைச்சர் சுப்பிரமணியம் அந்த ரகம். வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறவர்கள், வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று கண்டனம் கிளப்புகிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாயடைத்துப்போகும். - ஏனெனில் தெற்கே நேரிட்ட கொடுமைக்கு, வடக்கு வாரி வாரிக் கொடுக்கிறது - என்கிறார் நிதியார், பாபம்! நமது வாயடைத்துப் போக வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை மேலிட்டு இப்படிப் பேசுகிறார் - ஆனால், நிலைமையை அவர் அறிய முயற்சிக்கவில்லை. ஒருவேளை முயன்றும் முடியவில்லையோ! மதிக்கும் அவர் அமைச்சராக்கப் பட்டிருப்பதால், உண்மை நிலையை அறிய அவர் முயற்சித்துப் பார்க்கலாம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்றோர் முதுமொழி உண்டல்லவா! தெற்கிலே அவதி; அதற்கு வடக்கு வாரி வழங்குகிறது! இது தேனாக இருக்கிறது. அமைச்சருக்கு; தெற்கே எழுந்த அவதி துடைக்கப்படுகிறது என்பதால் அல்ல; நமது வாய் அடைக்கப் படும் என்பதால் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான எண்ணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நான் வயதில் அவ்வளவு பெரியவன் அல்ல என்பதால் சொல்லக் கூசுகிறது. வடக்கு வாரி வழங்குகிறது என்றால், வடக்கே உள்ளவர்கள் பதைத்து எழுந்து பல முனைகளிலும் நிதி திரட்டிக் குவித்து இங்கு அனுப்பியுள்ளனர் என்று எண்ணிவிடச் சொல்கிறார் போலும் !! இன்றுவரை அதுபோன்ற முயற்சியில், வடக்கே உள்ள பெருந்தலைகளும் ஈடுபடவில்லை, மக்கள் மனமும் உருகிடக் காணோம்; உருகாதது கண்டு நாம் யாரும் ஆச்சரியப் படவுமில்லை. தமிழகத்தில் இந்தத் தத்தளிப்பு என்று கண்டதும், கடல் கடந்து சென்றுள்ள தமிழர்களுக்குக் கண்ணீர் கொப்பளிக்கிறது. மலாயாவில் நிதி திரட்டுகிறார்கள். காபூலிலும் கராச்சியிலும் எந்த அளவுக்குக் கருணை பிறக்குமோ, அதே அளவிலேதான் கல்கத்தாவிலும் டில்லியிலும் பிறந்திடக் காண்கிறோமே அன்றிப் பீகார் பூகம்பம் அசாம் வெள்ளம் ஆகியவற்றின் போது, தெற்கேயுள்ள மக்கள் "குடும்ப பாசம்’ கொண்டோர் போலாகிப் பணத்தைத் திரட்டி அனுப்பினார்களே, அதுபோல, இதுபோது வடக்கே யாரும் கிளம்பிடக் காணோம். வடக்கே அமைந்திருக்கிற சர்க்கார், பண உதவி தருகிறது என்றால், அது கருணையுமல்ல, கனிவுமாகாது, கடமை - வேறென்ன? நமக்கும் துரைத்தனமாக இருக்கிறது, நமது வரிப்பணத்தையும் தோலைநீக்கிச் சுளையாகக் கொண்டு செல்கிறது. வாழ்விலே வளம் பிறக்கத்தக்க வழியை எல்லாம் தன் கரத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது. செல்வப் பெருக்கத்துக்கான வாய்ப்பு அவ்வளவும் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இயற்கையாய் விளைந்துள்ளகோரம் மிகுந்த இடர்ப்பாட்டிலே சிக்கி நாம் சீரழியும் போது பணம் தரவேண்டிய பொறுப்புக் கூடவா கிடையாது? இதைச் செய்வதால் வடக்கு தெற்கு என்ற பிரச்சினை எப்படி நின்று விடும்? வாயடைத்துப் போகுமோ!! என்ன மந்த மதி? கூர்ந்து பார்க்கும்போது, வடக்கு - தெற்கு என்பது பற்றிய பிரச்சினையின் உண்மையல்லவா, மேலும் பளிச்செனத் தெரிகிறது. நமது தமிழகத்தில் ஒரு பெரும் விபத்து நேரிட்டிருக்கிறது, இலட்சக்கணக்கான மக்கள் துயருற்றுக்கிடக்கின்றனர், கோடிக் கணக்கில் பொருள் நஷ்டம், உயிர்ச் சேதம் உள்ளத்தை வேகவைக்கும் நிலையில், ஐயோ! என்று அலறும் மக்களுக்கு ஆறுதலளிக்க, எல்லாம் இழந்தோமே, ஏதும் அற்றவர் ஆனோமே என்று கதறும் மக்களைத் தேற்ற, பிணக்காடாகிப் போன நஞ்சையை மீட்டிட, ஊர்களை வெள்ளக் காடுகளிலிருந்து வெளியே கொண்டுவர, வீடிழந்தோருக்கு ஒரு குடில் அமைத்துத் தர, இவைகளுக்கான பெரும் செலவுக்கான பணம் நம்மிடம் இல்லையே! தங்கம் விளையும் நாட்டிலே, இதற்குப் பணம் இல்லையே! ஏன்? செல்வம் கொழிக்கும் நாடு தானே, இயற்கையமைப்பின்படி இங்குள்ள நாம், கையேந்தி நிற்கிறோம், கண்ணீரைப் பொழிகிறோம், கருணை நிதி நிறைந்தோரே! எமக்கு வந்துற்ற கொடுமையைக் கண்ணால் பாரும், உதவி புரிந்திட முன்வாரும்! என்று இறைஞ்சி நிற்கிறோம், விளைந்துள்ள பெரு நஷ்டத்தைக் கண்டு, நிலைமையை மீண்டும் சீராக்கப் பல கோடி தேவைப்படுமே என்ன செய்வது, பேழையோ கல்லார் மனம் போலக் காலியாகக் கிடக்கிறது என்றெண்ணி அமைச்சர்கள் திகைக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? வடக்குக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதாலல்லவா? தெற்குத் தேய்ந்து போனதாலல்லவா? வடக்கு ஆதிக்கம் செலுத்தாமல், இங்குள்ள செல்வத்தைச் சுரண்டாமல், தொழிலைப் பாழ்படுத்தாமல், தெற்கு வளர வழி செய்திருந்தால், நாம் ஏன் இன்று பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் இழிநிலையில் இருக்கப் போகிறோம்? இங்குள்ள மக்களின் உழைப்பு உடலும் உயிரும் ஒன்றியிருக்க மட்டுமே பயன்படுகிறது - துரைத்தனத்துக்கு உள்ள அதிகாரமோ மக்கள் பசியால், போதாமையால், இல்லாமையால், இப்படி ஏதேனும் ஒருவகையில் சாவதற்கு முன்பு, ‘தற்கொலை’ செய்து கொள்ளாமல் தடுத்து நிறுத்திவைக்க மட்டுமே பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது. எனவேதான், கையேந்தி நிற்கிறோம். இந்தக் கேவலம் தெரியத் தானே செய்கிறது! தமிழகத்திற்கு வந்துற்ற விபத்து உண்டாக்கியுள்ள வடுக்களைப் போக்கும் அக்கறை இருந்தும், இங்குள்ள சர்க்காருக்கு ஆற்றல் இல்லையே! வஞ்சனை இருக்கிறது, வசதி இல்லை! கருணை பிறக்கிறது, காசு இல்லை! பேரன்பு கொண்டோரிடம் பேழையில் பணம் இல்லை! ஏன்? எல்லாம் டில்லியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதால்தானே? பசியால் துடிக்கும் குழந்தை, பால்வேண்டி, தாயின் மார்பினைச் சுவைத்து, பால் காணாது கதற, சேய் அழக்கண்டு தாய் அழுவது போல, குடில் இழந்து குடும்ப மணிகள் இழந்து கதறும் மக்கள் காமராஜரைக் கண்டுகையேந்தி நிற்கிறார்கள் - அவர் கண்களைத் துடைத்துக்கொண்டு, நேருவிடம் கையேந்தி நிற்கிறார்! இதுதானே நிலைமை? இது, வேதனைக் கிடையிலும், நமது இழி நிலைமையைத்தானே காட்டுகிறது. வடக்குக்கு உள்ள ஆதிக்கம் விளக்கமாகிறதே! யார் அறிந்து கொள்ளமாட்டார்கள் இதனை. எனினும் இந்த நேரத்திலும் நம்மைக் குத்துவதிலே, அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி! திருவல்லிக்கேணியும் திருமயிலையும், ‘நம்ம சுப்பிரமணியம்’ என்று அணைத்துக்கொள்ள வேண்டுமே, ஆச்சாரியார் என் குருநாதர் என்று கூறிப் பூஜித்தால் மட்டும் போதுமா, ‘அதுகளை’யும் சாடினேன் என்று காட்டினால் தானே, ‘என்னதான் சொல்லுங்கோ, நம்ம சுப்ரமணியத்துக்கு உள்ள புத்தி தீட்சணியம், இந்தக் காமராஜுக்குக் கிடையாது’ என்று அக்கார வடிசல் கிடைக்கும். அதற்காக அவர் அர்த்தமற்றதைப் பேசுகிறார். வடக்கு தெற்கு என்ற பிரச்சினை, வெள்ளம், விபத்து, அவதி, அல்லல், இவைகளுக்காகத் தரப்படும் உதவி, இவற்றுடன் நின்று போவதல்ல. அரசியல் என்பது அன்னதான சமாஜமுமல்ல. உரிமைக் கிளர்ச்சி என்பது உண்டிப் பெட்டி நிரம்பிவிட்டால் கருகிப்போவதுமல்ல. காட்கில் என்னும் மாவீரர் முழக்கமிடுவது போல, தன்மானத்தை இழந்துவிட எந்த ஆண்மகனும் சம்மதியான், கற்பை இழந்திட எந்தக் காரிகையும் சம்மதிக்க முடியாது. அதுபோன்றே உரிமையை இழந்திட எந்த நாடும் ஒருப்படாது. சப்ரமஞ்சக் கூடம், சல்லாத் துணி, ஜரிகை வேலைப்பாடு, சந்தனம் பன்னீர் என்று காட்டி, கற்பைச்சூறையாடுபவன் பேசுவதாகக் கதைகளில் படிக்கிறோம். கனம் சுப்பிரமணி யாமே, சவக்குழி தோண்ட மண்வெட்டி உதவினானே மகானுபாவன், அவன் பாதம் போற்றுதும் என்று பேசிடும் பேதமை போல, ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, நம்முடைய செல்வத்தைச் சுரண்டி வைத்துக்கொண்டு, கொடுமையில் சிக்கித் தவித்திடும் வேளையில் கொஞ்சம் தாராளம் காட்டுகிறதே, அதுவே போதும் என்கிறார்; அதனால் நாம் வாயடைத்துப் போவோம் என்று வேறு எண்ணுகிறார். தனக்கென்று ஓர் இலட்சியம் கொண்டோர் எவரும், அதற்கான பணியாற்றுகையிலே, குறுக்குப் பாதைகள் கண்டால், அதிலே நுழைந்து, இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்க மாட்டார்கள். இலட்சியத்தை நோக்கிச் செல்வோருக்கு, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிப்போரே தலைவர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், ஞானாசிரியர்கள். இடையில் இளநீர் கொடுப்போர் நன்றிக்கு உரியோர், இதயம் நோகப் பேசுவோர் பரிதாபத்துக்குரியோர், உடனிருந்து கெடுப்போர் கண்டனத்துக்கு உரியோர், பாதையில் பயணத்தின் கடுமை தாங்கமாட்டாமல் பட்டுப்போவோர், அனுதாபத்துக்குரியோர். அமைச்சர் சுப்பிரமணியனாருக்குச் சிலபல அலுவல்கள் உள்ளன- தரப்பட்டுள்ளன! அவ்வளவே தவிர அவர் ஓர் இலட்சியத்துக் காகப் பணியாற்றும் பொறுப்பில் ஈடுபட்டவரல்ல. எனவேதான் அவர் குரு பக்தியைக் கொட்டுவதிலும், நம்மைக் குத்துவதிலும் குதூகலம் காண்கிறார். காணட்டும், களிப்பூட்டப்படட்டும். நமக்கேதும் நட்டமில்லை, தமக்கென்று ஓர் குறிக்கோள், அது குறையுடையதோ நிறைமிகுந்ததோ, நாடு கொண்டாடுவதோ அல்லவோ, தன் நெஞ்சார நம்பும் ஓர் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் எந்தத் தலைவரும், அதற்குக் குந்தகம் விளைவிப்போர் எவ்வளவு பெரியவராயினும், பெருநிலையைப் பிடித்துக் கொண்டவராகவே இருப்பினும், குருபீடத்தில் அமர்ந்திருப்பவராகவே இருப்பினும்கூட, அவரை விட்டு விலகவும், வேறு பாதை தேடவும், அவர் மூலம் இழிவும் பழியும் கிடைப்பதாயினும் ஏற்றுக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும், இடுப்பொடிந்ததுகளும், ஆசை அலைமோதுவதால் அங்கலாய்ப் போரும், அடிவருடிகளாகி ஏசலை வீசினும் பொருட்படுத்தாமல், எடுத்த காரியத்தை முடித்திடும் நோக்குடன் பணியாற்றுவர். நேரு பண்டிதருடன் அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு உள்ள தொடர்பு, நாடு அறிந்ததுதான். நேரு பண்டிதரின் தர்பார்களிலே உள்ள பத்துப் பதினாறு தலையாட்டும் துரை மகனார்களிலே இவர் ஒருவர் என்ற அளவிலே உள்ள தொடர்பு தான்! மராட்டிய மண்டலத்து காட்கில் அப்படி அல்ல. நேரு பண்டிதருடைய எழுச்சி மிக்க வரலாற்றிலே, காட்கில் ஒரு சிறப்பான இடம் பெற்றவர்; உடனிருந்து பணியாற்றியவர்; விடுதலைக் கிளர்ச்சியில் முன்னணியில் நின்றவர். அவருக்கு அமைச்சர் அலுவல் இல்லை; எனவே ஆசாபாசத்துக்கு ஆட்படவேண்டிய கேவலம் ஏற்படவில்லை; அவருக்கு ஓர் குறிக்கோள் இருக்கிறது; எனவே அவர் பூஜித்துக்கிடக்க மறுக்கிறார், இலட்சிய முழக்கமிடுகிறார் - குருபக்தி - கட்சிப்பாசம் - பதவியில் பற்று - அதிகாரத்தைக் கண்டு அச்சம் - இவைகள் தலைகாட்ட மறுக்கின்றன. டில்லி ஆட்சி மன்றத்திலே அஞ்சா நெஞ்சுடன் பேசுகிறார். நேசம் மறக்கவில்லை, பாசம் பட்டுப்போகவில்லை. எனினும், இவைகளுக்காகக் குறிக்கோளை இழக்க முடியாது என்று முழக்கமிடுகிறார். அவ்வளவு பெரியவர் தொட்டிழுத்த போது, நான் என்ன செய்ய முடியும் என்று வாதாடுபவளைப் பத்தினியாகவா கொள்ள முடியும்? நாளைக்கு அவர் எவ்வளவு பெரியவராவாரோ, யார் கண்டார்கள்? இன்றே எனக்கு அவர் நெஞ்சம் கிடைத்துவிட்டது என்றெண்ணிப் பூரித்திடுவாள், கண்டாரைக் கொல்லும் காரிகை. காட்கில், எவ்வளவு பெரியவரானால் என்ன, உரிமை, எல்லாவற்றிலும் பெரிது என்கிறார். அமைச்சர் சுப்பிரமணியம் இப்படிப்பட்டவர்கள் வாயடைத்துப் போக வேண்டும் என்று தவமிருக்கிறார். காட்கில் கேட்கிறார். தன்மானம், கற்பு, உரிமை இவைதமை இழக்க எப்படி முடியும் என்று. வெள்ளத்துக்கு உதவி செய்கிறது வடக்கு, எனவே அதற்கு வெள்ளாட்டியாக இருப்பதிலே வெறுப்படைவதோ, வெண்சாமரம் வீசுவதைக் கண்டிப்பதோ கூடாது; அப்படி எல்லாம் பேசுபவர்களின் வாய் இனி அடைத்துப் போகும் என்கிறார், சுப்பிரமணியனார். தேசிய உணர்ச்சி இல்லையா, மராட்டியருக்கு மராட்டிய மண்டலம் என்று பேசுகிறீரே, என்று இங்கு நம்மைச் சுப்பிரமணியர்கள் கேட்பது போல, காட்கிலைக் கேட்கிறார்கள், சந்தனமே! மணமாக இரு! என்று சொல்வாருண்டா? மராட்டியர்களைப் பார்த்து, தேசிய உணர்ச்சி கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்களே என்று காட்கில் கேலியால் அவர்களைக் கொல்கிறார். வெட்டும் குத்தும், கலகமும் குழப்பமும், இரத்தக் களரியும் கூட நடத்த முடியும் - இவை போன்ற முறைகளிலெல்லாம் ஈடுபட வேண்டிய அளவுதான். நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது என்று எச்சரிக்கையே செய்கிறார் காட்கில். ‘‘இராஜ்யப் புனரமைப்புக் கமிஷன் மராட்டியர்களைக் குறித்துக் கூறியுள்ள கருத்து, மராட்டிய இனத்தை இழிவு படுத்துவதாக இருக்கிறது. கடந்த 600 ஆண்டுக் காலத்தில் இப்படிப்பட்ட இழிமொழியை மராட்டியர் மீது யாரும் வீசியதில்லை. இந்த இழிவைத் துடைத்திட பதிலளித்திட எமக்குத் தெரியும் - ஆனால் அந்த முறைகள் இன்று சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப் படாதனவாக உள்ளன - குடி அரசுக் கோட்பாட்டுக்கு முரணாகவும் உள்ளன” என்று மனம் குமுறிப் பேசுகிறார் காட்கில். பதிலளிக்கத் தெரியும் - பதிலளிக்கும் முறைகள் உள்ளன - என்று காட்கில் கூறினாரே, தம்பி! அதிலேதான், கொலை கொள்ளை, குத்து வெட்டு, இரத்தக் களரி யாவும் அடங்கியுள்ளன. மராட்டியரை மட்டநிலையில் வைத்திடவும், அவர்களின் உரிமைக்கு உலைவைக்கவும் இன்று டில்லியில் ஓர் அரசு முயற்சிக்கும் போது, அதே இடத்திலிருந்து பாதுஷாக்கள் முயன்ற காலமும், அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும், மாவீரன் சிவாஜியின் பரம்பரையில் வந்த காட்கில் அறிவாரல்லவா? அமைச்சர் சுப்பிரமணியம் அவ்விதமல்லவே, அவர் இராமனுக்குத் தாசனான அனுமனின் பிரபாவம் பற்றிய பெருங் கதையைப் பயபக்தியுடன் கேட்டு இரசிப்பவர்தானே! எனவேதான், குரு பக்தியையும், குருவின் மனம் மகிழும் என்ற எண்ணத்தில் நம்மைத் தாக்கிப் பேசுவதையும் செய்து காட்டியிருக்கிறார். குறிக்கோள் கெடுகிறது என்று தெரிந்தால், சிலருக்குக் குரு பக்திகூட மெள்ள மெள்ளக் குறைந்துவிடத் தொடங்குகிறது என்பதை விளக்கும் வகையில், நண்பர் ம.பெ.சிவஞானம் அவர்கள் இப்போது எழுதுகிறார். அவருடைய குறிக்கோள் ‘மொழிவழி அரசு’ என்கிறார். இதுதான் சாலச் சிறந்தது, மற்ற குறிக்கோள்கள் யாவும் போலி என்கிறார். மற்றக் குறிக்கோள்கள் யாவும் போலி என்று தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டால்தான். தான் மேற் கொண்டுள்ள குறிக்கோளிடம் தமக்கே ஒரு அச்சம் கலந்த ஆர்வம் பிறக்கும் என்று எண்ணுகிறார் போலும். எப்படியோ இருக்கட்டும் - அவர், மொழிவழி அரசு கிடைத்திடப் பணியாற்று வதைத் தமது கழகத்தின் தலையாய கொள்கையாகக் கொண்டிருக்கிறார். அதேபோது அவருக்கு நேரு பண்டிதரிடம் ‘பக்தி’ உண்டு; காங்கிரஸ் கட்சியிடம் ‘பாசம்’ நிரம்ப. நேரு பண்டிதரை யாராவது - கண்டித்தால் - ம. பொ. சிக்கு எரிச்சல் எழுகிறது. பண்டிதரைப் பதட்டமாகப் கண்டிக்கும் பதர்களை விட்டு வைக்கமாட்டேன் என்பார். தாய் - சேய் - உறவு, எனக்கும் காங்கிரசுக்கும் என்று அனாதைப் பிள்ளை ஆக்கப்பட்ட பிறகுங்கூடக் கூறுகிறார். ‘நேரு பண்டிதரின் அமோகமான அறிவாற்றல்தான் என்னே! அவருக்கு உலக அரங்கிலே கிடைத்துள்ள பெரும் புகழ்தான் என்னே! என்னே!’ என்று வியந்து கூறுகிறார். தமிழர்களை மிக மிகத் தாழ்வாக நேரு பண்டிதர் கண்டித்த போது தம்பி! சீறி எழுந்து, கிளர்ச்சி நடத்தி, கடும் தண்டனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் - அவரல்ல. அவர், நேரு பண்டிதரைக் கண்டிக்காதது மட்டுமல்ல, முட்டாள்கள்! சிறுபிள்ளைத்தனம்! என்று நேரு பண்டிதர் இவர்களையா ஏசிப் பேசினார், எங்களையன்றோ அதுபோல் பேசினார், அதற்காக இவர்கள் ஏன் கிளர்ச்சி செய்தனர்? அடாது! அடாது!! என்று பேசவே செய்தார். அவ்வளவு குரு பக்தி அவருக்கு! ஆனால் இப்போது, நேரு பண்டிதரின் போக்கு, மொழிவழி அரசுக் கொள்கையைப் போற்றுவோரைப் புல்லர்கள் என்று கண்டிக்கும் வகையினதாகவும் இருந்திடக் காண்கிறோம் - குரு பக்தியின் வேகம் குறைகிறது!! தோற்றால் துடிப்பார்! பொய் பேசுவார்!! ஆவேசமாடுவார்! குப்புற விழுந்தார்! என்று ம. பொ. சி. இப்போது எழுதுகிறார் - நேருவைப் பற்றி. ‘பிறர் தகுந்த காரணத்துக்காக’ தடியடி சிறை என்று அஞ்சாமல் நேருவை எதிர்த்து நியாயமான முறையில் கிளர்ச்சி நடத்திய போது, ‘எங்கள் நேருவுக்கா கண்டனம்? எற்றுக்கு? பாரத நாட்டின் அந்தஸ்தைப் பாரெல்லாம் உயர்த்தி விட்டாரே, அதற்கா? பஞ்சமும் நோயும் பாரத நாட்டிலா என்று கேட்டுப் போரிட்டு அவைதமை விரட்டி அடித்தாரே, அதற்கா? எதன் பொருட்டய்யா, எம்மானை, நேரு பெம்மானைக் கண்டிக்கிறீர்?’ என்று காய்ந்துகேட்டாரல்லவா, அதே ம. பொ. சி.க்கு, ‘மொழிவழி அரசு’ என்பது வெறும் வறட்டுக் கூச்சல், வகை கெட்ட திட்டம், பொருளற்ற வாதம், புத்தி கெட்ட பேச்சு என்றெல்லாம் பொருள்படும்படி நேரு பேசுகிறார் என்றதும், கோபம் கோபமாக வருகிறது. கொதிக்கிறார், குமுறுகிறார், கோல் எடுக்கிறார், நேருவைத் தாக்க! குரு பக்தி குறைகிறது, குலைகிறது!! தனக்கு வரும்போதுதான் தெரிகிறது, தலைவலியும் காய்ச்சலும். பொய்யர் - புரட்டர் - ஆவேசக்காரர் என்றெல்லாம் ஒரு போதும் எமது ம. பொ. சி. கூறமாட்டார் என்று கூறும் சிலர் உளர். தம்பி! மிகச் சிலர். எனினும் அவர்களுக்கும் நாம் விளக்கமளிப்பதுதான் கண்ணியம். தமது அந்தஸ்து தாக்கப்படும் போது, தம்முடைய கருத்திலே காலூன்றி நிற்க முடியாத போது, தோல்வி மனப்பான்மை கொண்டு மற்றவர்களுக்குச் சவால் விட்டுப் பேசுவது நேருஜியின் சுபாவமாகி விட்டது. ம.பொ.சி. தமது ஏட்டில் தீட்டுகிறார் இதனை : சவால் விடுவது நேருவின் சுபாவம். தோல்வி மனப்பான்மை கொள்ளும்போது இவ்விதம் நேரு சவால் விடுவார். தமது அந்தஸ்து தாக்கப்படும்போது, இவ்விதம் சவால் விடுவார். தம்முடைய கருத்து நிலைக்காதபோது சவால் விடுவார். இவ்வளவு கண்டனங்களையும் மணிகளாக்கித் தமது சொற் சிலம்புக்குள் போடுகிறார் ம.பொ.சி. இம்மட்டோ! இதோ மேலும்! பெரிய பதவியிலிருக்கும் நேரு உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார். ராஜ்யங்களைத் திருத்தி அமைப்பதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தாம் தயாராக இல்லையென்றும் நேரு ஆவேசத்துடன் கூறியிருக்கிறார். மொழிவாரி இனங்களிடையே எழுந்த உரிமைக் கிளர்ச்சி, அவருடைய முதுகுக்கு மண் காட்டி விட்டது! அந்தத் தோல்வியை மறைக்க என்னென்னவோ பேசுகிறார். குரு பக்தி, ம.பொ.சி.யை, நேருஜி, தலைவர் நேரு என்றெல்லாம் அர்ச்சிக்கச் சொல்கிறது; கொள்கையோ, நேரு பண்டிதரை, வீணுரை பேசுவோர், குப்புறவிழுந்த பிறகும் வீரம் பேசுவோர், பொய்யர் என்றெல்லாம் கூறச் சொல்கிறது. அடக்கமாகத் துவக்க வேண்டும், இல்லையானால் அவர்கள் போலாகி விடும் என்று கவலை குடைகிறது. கண்டிக்காமல் இருக்கக் கூடாது, கண்டிக்காது விட்டோமாயின் கொள்கை புதைகுழி செல்லும் என்று அச்சமும் துளைக்கிறது. எனவே, நேருஜி என்ற மரியாதையும், உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்ற கண்டனமும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு வெளிவருகின்றன. ‘‘மேன்மை தங்கிய ஐயனே! தங்கள் மீது சிறு தூசும் வீசும் நோக்கமுடையேனல்லேன். எனினும், என் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டிய இடத்தில் தாங்கள் இருப்பதால் தங்கள் மீது சுட வேண்டி இருக்கிறது,” என்று கூறினானாம். கைத் துப்பாக்கியால் ஒருவனைக் கொல்லக் கிளம்பியவன். அதுபோல் உண்மைக்கு மாறாகப் பேசுகிறாரே, என்று எழுதுகிறார், ம. பொ. சி. குரு பக்தி குலைகிறது என்பதுதானே பொருள்? கொள்கையின் வழி பணியாற்றப் புகும்போது, குரு பக்தி குறுக்கிட்டாலும் அதனைச் சமாளிக்கத்தான் வேண்டும். அந்த நிலைமை, ம.பொ.சி.க்களுக்கும் வந்தே தீரும் என்பதை இச்சம்பவம் விளக்குகிறது. சுப்ரமணியனார், தமக்கு அந்தச் சங்கடத்தை வைத்துக் கொள்ளவில்லை. மொழி, இனம், உரிமை இவைகளெல்லாம் அவருக்குச் சொற்றொடர்கள்!! பதவி, பவிசு இவை அவருக்குப் பொருளுள்ளவை. இவை தாக்கப்படாதிருக்கும் வரையில், அவரால் நிற்கதியாகக் குரு பக்தி காட்டிக் கொண்டிருக்க முடிகிறது. காட்கில் போன்றோர் கடும் கோபம் கொள்வது போலவோ, ம.பொ.சி. போன்றோர் சிந்தாகுலராவது போலவோ, சுப்ரமணியனாருக்குச் சங்கடம் நேரிடுவதில்லை. அவருக்கு அதனால், ‘குரு பக்தி’யை வெளியிட்டுக் கொண்டிருக்க முடிகிறது; செய்கிறார்; செய்யட்டும், பாவம், இதையேனும் ‘‘என்ன புத்திக் குறைவடா, சீடா! கீழே விழுந்த பொருளைக் கண்டெடுக்காமல் விட்டுவிட்டு வந்தனையே. ஈதோ உன் குரு பக்தி?” என்று கேட்டார், குருநாதர்; பயணத்தில் அவருடைய பீதாம்பரம் தவறி கீழே விழுந்து விட்டதைச் சீடன் கவனியாமலிருந்ததால். சீடன் ‘‘புத்தி! குரு தேவா! புத்தி புத்தி”, என்று கூறிவிட்டு, பிறகு மிகக் கவனமாக, கண்ணுங் கருத்துமாகப் பணிபுரிந்து வந்தான். முடிவு என்ன தெரியுமா தம்பி? மடம் போய்ச் சேர்ந்ததும் ஒரு பெரிய “மூட்டை’யைக் கொண்டு போய், குருவின் முன் வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான் சீடன். “என்னடா இது?” என்று கேட்டார் குரு. ‘‘ஒன்று விடாமல் எடுத்து வந்தேன். கீழே விழுந்ததை யெல்லாம் எடுத்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தேன்” என்று கூறி, மூட்டையைப் பிரித்துக் காட்டினான் சீடன். அவ்வளவும் குதிரையின் லத்தி (மலம்). குரு-சீட தொடர்பில் இப்படியெல்லாம் ‘ரகம்’ இருந்திருக்கிறது. கனம் சுப்பிரமணியம் இதில் ஒரு ரகம். பாவம்! அன்புள்ள அண்ணாதுரை 25-12-1955 “பாவி, பொல்லாதவன்…” வாஷிங்டன் கதை - இராமாச்சாரி கதை - தட்சிணப் பிரதேசமும் தமிழ்நாடும் - டில்லியின் ஆதிக்கம். தம்பி, அந்தக் காரியாலயத்துக்குத் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கவந்த இளைஞர், மேனாடு சென்று, பல அலுவலகங்களின் வேலை முறைகளைக் கண்டறிந்து வந்தவர். இதுவரையில்தான் இராமாச்சாரி தலைமை அதிகாரியாக இருப்பவர்களை ஏய்த்து வந்தார். இனி அவர் ‘ஜம்பம்’ பலிக்காது; புதியவர் நெருப்பு என்கிறார்கள்; சோம்பேறித் தனமாக இருப்பவர்கள், சூதாக நடந்து கொள்கின்றவர்கள், தவறான வழி செல்பவர்கள் ஆகியோரைக் கண்டு பிடித்து விடுவார் என்று அலுவலகத்து ஊழியர்கள் பேசிக் கொண்டனர். நீண்ட காலமாகத் தன்னிச்சையாக நடந்துகொண்டு வந்த இராமாச்சாரிக்கு இனி பிடித்தது தலைவலி என்றனர். இரண்டு மாதங்கள் சென்றன! அலுவலகத்திலே புதிய கண்காணிப்பு, புதிய கண்டிப்பு. எந்த வேளையிலே தலைமை அதிகாரி குறைகண்டு பிடித்து விடுகிறாரோ, அதனாலே என்ன தண்டனை கிடைக்குமோ என்று பயந்து பயந்து பணியாற்றி வந்தனர். எல்லோரும் இராமாச்சாரிக்குத்தான் முதல் தாக்குதல் கிடைக்கும்; அவருடைய ‘சீட்டு’தான் கிழிக்கப்பட்டு விடும் என்று பேசிக் கொண்டனர். இரண்டு மாதம் சென்றதும், இராமாச்சாரிக்கு வேலை உயர்ந்தது! மற்ற யாரையும் விட திறமையில் குறைவானவர், தில்லுமுல்லு செய்பவர், இராமாச்சாரி; அப்படிப்பட்டவருக்கு ‘மேலிடம்’ தரப்பட்டது கண்டு பலரும் திகைத்தனர். புதிய மேலதிகாரி, எதையும் நுண்ணறிவுடன் கண்டு பிடிக்கக் கூடியவர் என்றல்லவா எண்ணிக் கொண்டோம். இராமாச்சாரி சூதுக்காரன் என்பதை எங்கே கண்டறிந்தார்? தெரிந்திருப்பாரானால், அவனுக்கா மேலிடம் தருவார்? என்று பேசிக் கொண்டனர். இராமாச்சாரிக்கு மேலிடம் கொடுத்தது மட்டுமல்ல, மேலதிகாரி மேகநாதன் அவரை வெகுவாகப் பாராட்டி, குறிப்பு எழுதி வைத்தார். ‘‘பயல்கள் இஞ்சி தின்ற மந்தி போலாகி விட்டார்கள். புதிய மேலதிகாரி வந்ததும் என் தலை மீதுதான் கை வைப்பான் என்று பேசிக்கொண்டனர். இப்போது, அவனே எனக்கு மேலிடம் கொடுத்ததுடன், என் திறமையைப் புகழ்ந்து குறிப்பும் எழுதி இருக்கிறான். காரணம் என்னவென்று கண்டுபிடிக்க எல்லோரும் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டு கிடக்கின்றனர்!” என்று கேலி செய்தார் இராமாச்சாரி, தன் ‘பார்யாளிடம்’ பேசும் போது. ‘‘நீர்தான், யாரையும் சொக்குப்பொடி போட்டு விடுவீரே! உம்மோட சமர்த்து நேக்கல்லவா தெரியும்?”என்றாள் சகதர்மிணி. ‘‘உன்னாலேகூட அப்பாவோட சாமர்த்தியத்தைக் கண்டு பிடிக்க முடியாதடி அம்மா” என்றான் வாசுலி இராமாச்சாரியாரின் ஏகபுத்ரன். ‘‘அப்படிச் சொல்லுடா, சிங்கக் குட்டின்னேன். இவ என்ன, இவளைப் படைச்ச பிரம்மதேவன் வந்தாலும், என்னோட முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதுன்னேன்” என்று பெருமை பேசினார் இராமாச்சாரி. ‘‘உம்ம பிரதாபத்தை நீரே பேசிண்டிரும், நேக்கு நேரமில்லை, அதை எல்லாம் கேட்டுண்டிருக்க, நேந்திரங்கா வந்திருக்கு, ‘பொடி மாஸ்’ பண்ணனும்’ என்று கூறி விட்டு, அம்மையார் அடுக்களை சென்ற பிறகு, மகன் கேட்டான் தந்தையை ‘‘எப்படியப்பா, மடக்கினீர்? என்னமோ இலண்டன் போய் வேலை கற்றுண்டு வந்தானாமே, வெள்ளைக்காரனிடம்” என்று. ‘‘வெள்ளைக்காரனிடம் வேலை கத்துண்டு வந்துவிட்டாப் போதுமாடா! எல்லாம் ஏட்டுப்படிப்புத்தானே! ஒரு விநாடியிலே நான் அவனை எடை போட்டு விட்டேன். நிறைய படிச்சிருக்கான், ஆகையாலே ஜீரணமாகி இராது என்பது புரிந்தது சரி, இவனைச் சுலபமாக மயக்கலாம்னு, தைரியமும் வந்தது. ஒருநாள் ரயிலுக்கு ஒரு பத்து பார்சல் அனுப்புவதற்கு, பார்சல் கிளார்க், மோசஸ், வேலை செய்துண்டு இருந்தான். அவன் ஒரு முசுடு. உலகத்தையே பறிகொடுத்தவனாட்டம் எப்பவும் ‘உம்’முனு இருப்பான். ஒரு காரியம் அவனாலே ஆகவேண்டி இருந்தது. அங்கே போயிருந்தேன் - கிடங்கு அறைக்கு. மோசஸ் வழக்கப்படி, கூலியாட்களை வாய்க்கு வந்தபடி வைதுண்டு இருந்தான்; அதனாலே அவாளும் வேலையை ஒண்ணும் பாதியுமா செய்துண்டிருந்தா. ஆனா ஒரு பய மட்டும், ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்துண்டிருந்தான். நான் அவனையே கவனிச்சிண்டிருந்தேன் என்பது அவனுக்குத் தெரியாது. மோசஸ் நாற்காலியில் உட்கார்ந்துண்டு, நாயே! பேயே!ன்னு கூலியாட்களைத் திட்டிண்டு இருந்தான். நானும் அவனோடு சேர்ந்துண்டு திட்டுவது உண்டு. சில வேளைகளிலே நாலு தட்டு கூடத் தட்டுவதுண்டு. அப்படிப்பட்ட எனக்கு அன்னக்கி வேறுவிதமா நடந்துகொள்ளோணும்னு எண்ணம் வந்தது. ‘‘மோசஸ்! தொழிலாளிகளை இப்படி அமுல் செய்தா வேலை எப்படி சரியா செய்வா? இதமாத்தான் பேசவேணும். மேலும், அவாளும் மனுஷ ஜென்மம்தானே. கூடமாட வேலை செய்தா உன் கௌரவமா கெட்டுவிடும்” என்றேன். மோசஸ் திகைத்துப் போனான், கூலிக்காரன்லே ஒருத்தன் ரொம்பச் சுறுசுறுப்பா இருந்தான் என்றேன் பார், அவனோட முகத்திலே ஒரே ஆனந்தம் தாண்டவமாடறது நன்னாத் தெரிந்தது. சரின்னு என்ன செய்தேன் தெரியுமோ, கோட்டைக் கழற்றி வைத்துவிட்டு, நானே பார்சல்களைத் தூக்கறதும் இறக்கறதுமா, கூலிக்காரர் களுக்கு உதவியா இருந்தேன்…” "ஏன்! ஏன்! அதென்ன பைத்தியக்காரத்தனம்?’’ ‘‘இதே போல எண்ணிண்டுதான் மோசசும் என்னைக் கேட்டான். என்னோட செய்கைக்கு என்ன காரணம் என்கிறது, அவனுக்கு எப்படித் தெரியும். . . இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அதாவது மறுநாள், என்னை மேகநாதன் தன் ஆபீஸ் அறைக்கு அழைத்து, வெகுவாகப் பாராட்டி, ‘மேலிடம்’ கொடுத்தார்.” ‘‘கூலிக்காரர்களுக்கு உதவி செய்ததற்குப் பரிசா?” ‘‘அப்படின்னு அவன் சொல்லோணுமோ? நாமே தெரிஞ்சுக் கொள்ள வேண்டியதுதான். . . .” ‘‘ஆமாம். . . . கூலிக்காரர்களுக்கு உதவி செய்தீர் என்பதனாலே. . . ?” ‘‘மண்டு! ஒரு உத்யோகஸ்தன், தன்னோட அந்தஸ்து, கௌரவம் இவற்றைக் கவனிக்காமப்படிக்கு, ஆபீஸ் காரியம் நடக்கோணும் என்கிறதுக்காக, கூலிக்காராளுக்கு உதவி செய்தான் என்றால் அவனுக்கு ஆபீஸ் காரியத்திலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு அர்த்தம். அவனுடைய நிர்வாகத்திலே வேலை செய்கிறவாளுக்கு, எவ்வளவு அபிமானம் ஏற்படும், அதனாலே காரியாலயத்துக்கு அவர்கள் எவ்வளவு அன்போடு பாடுபடுவா, இதெல்லாம் புரியாதோ, எந்தத் தலைமை அதிகாரிக்கும். அதனாலேதான், கூலிக்காராளுக்கு இவ்வளவு உபகாரமாக இருந்தவனுக்கு உண்மையிலேயே சிலாக்கியமான குணம் இருக்கு என்பதை எண்ணி எனக்கு மேலிடம் கொடுத்தான் மேக நாதன்.” ‘‘சரி, நீர் கூலிக்காரனுக்கு உதவியாக இருந்தீர் - உம்முடைய அந்தஸ்து, கௌரவம் இவைகளைக்கூடக் கவனிக்காமல் பாடுபட்டீர், அவாளோடு பக்குவமாகவும் பிரியமாகவும் பேசினீர் என்பது மேகநாதனுக்கு எப்படித் தெரிந்தது?” ‘‘அசடே! அவன்தான் என்னோட வேலையைப் பார்த்துண்டே இருந்தானே. . . .” ‘‘பார்த்துண்டு இருந்தானா? எங்கே இருந்து?” ‘‘அந்தரத்திலே இருந்து! சொல்றேன் கேள். மண்டு! நான்தான் இந்த மேகநாதன் நிறையப் படித்தவன் என்று சொன்னேனே. ஒருநாள் அவன் ரொம்ப சுவாரஸ்யமாக வாஷிங்டன் சரிதம் வாசித்திண்டிருந்தான், பார்த்தேன். வாஷிங்டன் தெரியுமாடா. . . ?” ‘‘தெரியாமலென்ன. அமெரிக்க பிரசிடெண்டு.” ஆமாம்! அதைக் கவனிச்சுண்டேன். கூலிக்காரனுக்கு நான் உதவி செய்தது இருக்கே, அந்தச் சூட்சமம், மேகநாதன் வாஷிங்டன் புத்தகத்தைப் படித்ததாலே ஏற்பட்டதுதான். ஏண்டா பேந்தப்பேந்த விழிக்கறே? இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்கிறாயோ! இருக்கு. வாஷிங்டனைப்பற்றி ஒரு கதை சொல்லுவாளே தெரியுமா. . . . ? ஒருநாள், வாஷிங்டன் வெளியே படை வீரர்கள் வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டு வரச் சென்றான். ஒரு இடத்தில், பிரம்மாண்டமான மரத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நாலைந்து போர் வீரர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாக இருந்தவன், உதவி செய்யவில்லை, ஆகட்டும் சீக்கிரம், தூக்குங்கள் சோம்பேறிக் கழுதைகளா! என்று மிரட்டிக் கொண்டிருந் திருக்கான், நம்ம மோசஸ் போலவே. அப்போது இன்னொரு குதிரை வீரன் அங்கு வந்தான் - இதைப் பார்த்தான். பார்த்து விட்டு, ஏன் ஐயா! இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே, .நீரும் ஒரு கை கொடுத்து உதவி செய்யக் கூடாதோ? என்று கேட்டான். அவன், ஏய்! யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறே, நான் இவர்களுக்குத் தலைவன் என்று அவன் தற்பெருமையுடன் கூறினான். குதிரை வீரன், அப்படியா! அது தெரியாது எனக்கு என்று கூறிவிட்டுக் குதிரையைவிட்டுக் கீழே இறங்கி வந்து, மரத்தைத் தூக்குவோருக்கு உதவி செய்துவிட்டு, போகும்போது சொன்னான்: ‘‘ஐயா! இதுபோல எப்போதாவது உதவிக்கு ஆள்தேவை என்றால் உடனே எனக்கு சொல்லி அனுப்பும், வருகிறேன் - நான்தான் வாஷிங்டன், சேனாதிபதி என்றான். எப்படி இருக்கும் அந்தத் தலைவனுக்கு! அசடு வழிந்திருக்கும், பயம் பிய்த்துத்தின்னிருக்கும், மேகநாதனிடம் வாஷிங்டன் புத்தகம் இருப்பதைப் பார்த்ததும் எனக்கு இந்தக் கதை கவனத்துக்கு வந்தது. வந்திருக்கும் குதிரை வீரன் வாஷிங்டன் என்று தெரியாததால் தானே, அந்த அசடன் மாட்டிண்டான். அதுபோல நான் மாட்டிக் கொள்வனோ? அன்று மோசசிடம் திட்டுக்கேட்டுண்டு அதே போது சுறுசுறுப்பாக இருந்தான் ஒரு கூலிக்காரன் என்று சொன்னேனே, அவன் வேறு யாருமில்லை, சாட்சாத் மேகநாதன்தான். . . .” ‘‘அதெப்படி உனக்குத் தெரிந்தது. . . .” ‘‘எப்படி என்பது இருக்கட்டும், அது தெரிந்தது. அதனாலே தான், எனக்கு வாஷிங்டன் கதை கவனத்துக்கு வந்தது. உடனே இதுதான் மேகநாதனை வளையக் கட்டச் சரியான சமயம் என்று கூலிக்காராளைச் சகோதராளாக பாவித்து நடத்த வேணும் என்று மோசசுக்குச் சொன்னேன், நானே அவாளோடு சேர்ந்து பாடுபட்டேன். இதைக் கண்டு மேகநாதன் பூரிச்சுப் போகாமலிருக்க முடியுமோ! அதனாலேதான். மறுநாள் என்னைப் பாராட்டி, "மேலிடம்’ கொடுத்தான். நான், எப்போதும் இதுபோல வேலையாட்களுடன் சரிசமமாகப் பழகி, உதவி செய்து, பக்குவமாக நடந்துகொள்பவன் என்று எண்ணிக்கொண்டான். அந்த ஏட்டுச் சுரைக்காய். அவன் கண்டானா, என்னோடது நடிப்பு என்பதை, ஏமாந்து விட்டான். ஆபீசிலே உள்ள அத்தனை பேரும் சேர்ந்துண்டு, அவனிடம் சொல்லட்டும், இராமாச்சாரி சுத்தச் சோம்பேறி, ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார், எல்லோர் மீதும் எரிஞ்சு விழுவார் என்று சொல்லிப் பார்க்கட்டும்; மேகநாதன் ‘‘பொறாமை பிடித்தவர்களே, அந்தத் தங்கமான மனுஷனை அவ்விதம் சொல்லாதீர், எனக்குப் பிரமாதமான கோபம் வரும். என் கண்ணாலே பார்த்தேன். அந்த ஆசாமி கூலிக்காரர்களிடம் அன்பாகப்பழகி, கூடவே இருந்து வேலை செய்ததை; அவரைப் போய், வாய்க்கு வந்தபடி பேசுகிறீர்களே. வயிற்றெரிச்சல்தானே இதற்குக் காரணம்?” என்று கூறிக் கண்டிப்பான்.’’ ‘‘அது சரி, மேகநாதன் அங்கு இருந்தது உமக்கு எப்படித் தெரிந்தது என்பதைக் கூறவில்லையே. ..” ‘‘கூலிக்காரர்களிலே ஒருவன், மற்றவர்களைவிட அதிக சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான் என்று சொன்னேனல்லவா. அவன் சில சமயங்களிலே மோசசைப் பார்த்த பார்வை எனக்கு ஒரு சம்சயத்தைக் கிளப்பிற்று; மேகநாதன், மாறுவேடம் போட்டுக் கொண்டு வந்து இப்படி வேவு பார்க்கிறானோ என்றோர் சந்தேகம். வாஷிங்டன் புத்தகம் அவன் படித்தானே. அது கவனத்துக்கு வந்தது. வேலையின் போது இரண்டோர் நிமிஷம் அவன் தனியாகச் சென்றிருந்தான். பிறகு, அவன் போய்விட்டு வந்த இடத்தை, நான் போய்ப் பார்த்தேன். பாதி இருக்கும், சிகரட், அவன் பிடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தான். கூலிக்காரனாவது இப்படி பாதி சிகரெட்டை வீணாக்குவதாவது! சரி, இவன் மாறு வேடம் போட்டுக் கொண்டிருக்கும் மேகநாதன்தான் என்று முடிவுசெய்து கொண்டேன். சிகரெட்டைக் கூர்ந்து பார்த்தேன், விலையுயர்ந்தது, 555. போதுமல்லவா ஆராய்ச்சி. ஆசாமி, ஏதேதோ புத்தகத்தைப் படித்து விட்டு இப்படிச் செய்கிறான். இவனை இதே சமயத்திலேதான் சாய்க்கணும்னு ‘பிளான்’ செய்தேன். உடனே தான், தொழிலாளியானேன் - தோள் கொடுத்தேன் பார்சலைத் தூக்க. அசடன், அதை நம்பியே விட்டான். ” ‘‘பலே! பலே! உன்னோட சமத்து வேறு யாருக்கும் வராதப்பா.” ‘‘புத்தி தீட்சணியம் இருக்கவேணும்; சமயமறிந்து நடக்க வேணும்.” தம்பி! இராமாச்சாரி கதை ஏன் கூறுகிறேன் என்று எண்ணுகிறாய் அல்லவா! இராமாச்சாரிகள் இப்படி நரித்தந்திரம் செய்து பிழைக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக மட்டுமல்ல, மேனாடு சென்று படித்து, புதிய முறைகளிலே தேர்ச்சி பெற்று ஏடு பல படித்துப் பக்குவம் தேடிடும் மேகநாதர்கள் கண்களில், வெகு எளிதில், இராமாச்சாரி போன்றார்களால் மண்ணைத் தூவி விட முடிகிறது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், மேகநாதர்கள் மனம் எதிலே இலயிக்கும், என்பதைக் கண்டறிய வேண்டியதுதான். அதை அன்பர் ஆச்சாரியார் செய்து நேரு பண்டிதரை எளிதாகத் தம் வலையில் விழச்செய்கிறார் - முன்பு பல முறை செய்திருக்கிறார் - இப்போதும் செய்கிறார். இதை எண்ணிப் பார்த்தபோது எனக்கு இராமாச்சாரி கதை கவனத்துக்கு வந்தது. நாட்டிலே எங்கோ, எப்போதோ நடைபெற்ற சம்பவத்தைத்தான் கதையாக்கினேன் தம்பி! ஆச்சாரியார், ‘தட்சிணப் பிரதேசம்’ கேட்டார்; யாருக்கும் உதிக்காத ஓர் அற்புதமான யோசனை இவருக்கு உதித்ததே - ஞானவான்களுக்கு எப்போதும் இப்படித்தான் என்று ஆச்சாரியாரின் திருப்பல்லாண்டு பாடுவதிலே பயிற்சி பெற்ற கூட்டம் பாராட்டிற்று. தமிழ் நாடு - மிகச் சிறிய அமைப்பு - இந்திய அரசியலிலே இந்தச் சிறிய அமைப்புக்குச் செல்வாக்கு ஏற்படாது - பெரிய அளவில் உள்ள உத்தரப் பிரதேசம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்று காரணம் காட்டினார், ஆச்சாரியார். எப்போது இதைச் சொன்னார் என்றால், ஆந்திரம் பிரிந்த போது அல்ல; ஆந்திரம், கருநாடகம், கேரளம் எனும் அமைப்புகளை எப்படி எப்படி உருவாக்குவது, எந்த அடிப்படையில் என்பது பற்றி மூவர் கூடி ஒரு அறிக்கை வெளியிட்ட பிறகு!! தமிழ்நாடு - மிகச் சிறிய அமைப்பு, ஆகவே அதற்குச் செல்வாக்கு இராது என்று கூறினதும், அப்படியானால், ‘சிறுசு பெரிசு’ பார்த்துத்தான் இந்திய அரசியல் நடந்து கொள்ளுமா, நீதி, நேர்மைக்கு இடமளிக்காதா - தமிழ்நாடு சிறிய அளவாகவும் உத்தரப்பிரதேசம் பெரிய அளவிலும் இருந்தாலென்ன, எல்லாவற்றுக்கும் ‘மேலே உள்ள அதிகாரி, நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடாதோ என்று யாரும் கேட்கவில்லை! கேட்டால் மட்டும் என்ன, ஆச்சாரியார் காதில் போட்டுக்கொள்வாரா! அவர்தான் கேளாக் காதர் என்பதை நாடு அறியுமே. உலகிலே, பிரிட்டனும் பிரான்சும் அளவிலே சிறிய நாடுகள் - விரிந்து பரந்துகிடக்கும் அமெரிக்காவுடன், உலக அரங்கிலே அவை சமமாகத்தான் நடத்தப்படுகின்றன - அது மட்டுமல்ல, மிகப்பெரிய சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ‘முடிவு’ காண, இந்த நாடுகளிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது. தனி அரசு நடாத்தும் நாடுகளிலேயே, அளவுபற்றி அல்ல அந்தஸ்து கிடைப்பது என்பதற்கு இதுபோன்ற ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன - தமிழகத்து மன்றங்களிலே தளராது நமது தோழர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். தம்பி! மிகப் பெரிய சீனாவை, இராணுவத் திறனாலும் அமெரிக்க உதவியாலும், சிறிய ஜப்பான், ஆட்டிப் படைத்ததே! ஜப்பான் விமானம் வட்டமிடுகிறது என்ற பீதியில் சென்னை நகரே காலி செய்யப்பட்டதல்லவா - உடைமையுடையோர்களால்! பெரிய அளவு - சிறிய அளவு என்பதல்ல, ஒரு நாட்டின் செல்வாக்கை நிர்ணயிக்கும் காரணம் - அதற்கு ஏற்ற எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய நாடுதானே பண்டிதரின் பாரதம், நாள் தவறாமல் நானிலத்திலே பல நாடுகளிலே இருந்தும், ‘தலைவர்கள்’ பவனி வருகிறார்கள், பாராட்டுத் தருகிறார்கள், பொது உடைமைத் தலைவரும் பூர்ப்படைகிறார், மத அதிபர் எனத் தக்க முறையிலே உள்ள சவூதி அரேபிய மன்னரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார், எனினும் போர்ச்சுகல் போர்க்கோலமே போட்டுக்காட்டுகிறதே, கோவா - என் கொல்லை என்று கொக்கரிக்கிறதே! அளவுதான் ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிப்பது என்றால், போர்ச்சுகல் பாரதத்தை நிமிர்ந்து நின்று பார்க்கக் கூட முடியாதே! என்ன செய்ய முடிகிறது பண்டிதரால்? அகிம்சை பேச முடிகிறது! அவ்வளவுதானே!! நாட்டுக்கே அளவு முக்கியமல்ல என்றால், ஒரே பேரரசில் ஒரு அங்கமாக உள்ளவைகளிலே, ஒன்று பெரிய அளவு, மற்றொன்று சிறிய அளவு என்று இருந்தால், என்ன குடிமுழுகி விடும்? நீதியுடன் பரிபாலனம் செய்யும் ஆட்சியில், அளவு பற்றிய கவலை கொள்வானேன்! வங்கமும் பாஞ்சாலமும் துண்டாடப்பட்டுப் போயின - அளவு குறைந்துவிட்டன, எனவே அவைகளை, மூலையில் தள்ள வேண்டியதுதான், தென்னகம் என்ற பெரிய அமைப்பு ஆந்திரம், தமிழகம், கேரளம், கருநாடகம் என்றெல்லாம் தனி அமைப்புகளாகி விட்டன, சிறிய அளவு - எனவே, சீந்தத் தேவையில்லை, என்று ஒரு அரசு எண்ணுமானால், நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட மறுக்கிறது என்று பொருள். ஆச்சாரியாருக்கு இந்தச் சந்தேகம் வருவானேன்? ஏதோ ‘வாடை’ அடிக்கிறது. ஊரிலே உள்ள சுருள் கத்திக்காரனுக்குத்தான் போலீசில் மரியாதை கிடைக்கிறது, சாதுவுக்கு மரியாதை கிடையாது என்று கூறினால், அந்த ஊர் போலீசின் தரமல்லவா, மிக மட்டம் என்று பொருள்? பெரிய அளவான அமைப்புக்குத்தான் செல்வாக்கு கிடைக்கும், சிறிய அளவுக்குச் சீரழிவுதான், ஏற்படும் என்று சொல்லும்போது, மேலே உள்ள அரசு, வலுத்தவனுக்கும் இழுத்தவனுக்கும் பெண்டாகும் போக்கிலே உள்ளது என்று ஆச்சாரியார் கருதுகிறார் என்றுதானே பொருள்! அவரும் ‘ஜாடைமாடையாக’ அதைக் கூறவும் செய்கிறார் - மாகாண ஆட்சி என்று ஒரு புகைக் காட்சிதான் இருக்கிறது. உண்மையில், ‘பாரதம்’ இன்று ஒரு பண்டிதருடைய ஆட்சியில்தான் இருக்கிறது என்று கூறுகிறார். கூறி, அங்கலாய்க்கிறாரா, ஆனந்திக்கிறாரா என்று தெரியவில்லை. ஒரு நேரு - என்று அவர் கூறுவதற்கு, ஒரு என்பதற்கு இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம். ஓரு - ஒப்பற்ற என்றும் கெள்ளலாம். ஓரே ஒரு தனி மனிதர் என்று வெறுப்புக்கும் இடமளிக்கிறது. உபநிஷத் படித்த பெரியவர் ஒரு என்ற பதத்துக்கு அவர் இன்னும் பல பொருள்களை வைத்துக் கொண்டிருக்கக்கூடும் - ஒவ்வோர் இடத்துக்கு ஒரு பொருள் என்ற முறையிலே. மறைந்த மதிவாணர் சர். சண்மும், பொருளற்றா கூறினார், ஆச்சாரியார் குல்லூக பட்டர் என்று! ஒரு நேருதான் பாரதத்தை ஆட்சி செய்கிறார் என்றால், அவருக்கு நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கையும் பற்றும் இருப்பதாக ஆச்சாரியார் மனதார நம்பினால், ஏன் தமிழ் நாடு சிறிய அளவான அமைப்பாயிற்றே, செல்வாக்கு ஏற்படாதே, சீர் குலைந்து போகுமே என்று சிந்தாகுலராக வேண்டும்? ஒரு நேருவிடம், அளவற்ற அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது - பல "அரசுகள்’ உள்ளன பாரதத்தில் என்று கூறப் பட்டாலும், உண்மையில் அரசாள்வது பண்டிதர்தான் என்றால், ஆட்சியிலே அனைவருக்கும் பங்கும் பலனும், நீதியும் நேர்மையும் கிடைக்க வேண்டும் என்று ஆச்சாரியா கருதுவாரானால், அவர் ராஜ்யங்களின் அளவுபற்றி அல்ல கவலைப்பட வேண்டியது. தமிழ்நாடு எவ்வளவு அளவுள்ளது, ஆந்திரத்தின் அகலம் என்ன என்பது அல்ல, அவர் கவனிக்க வேண்டிய பிரச்சினை! சாவிலிருந்து காப்பாற்றுவதா, சர்வேஸ்வரன் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடுவதா என்பதுதான் பொருளுள்ள பிரச்சினையாக இருக்கலாமே தவிர, கழுத்தை நெறித்துச் சாகடிப்பதா, விழித்திருக்கும்போதா தூங்கும் போதா, விஷமிட்டா, கத்தியால் வெட்டியா என்பதையா பிரச்சினையாக்கிக் கொள்வது? அது போலவே, ஒரு நேருவிடம், எல்லா அதிகாரமும் குவிந்திருக்கிறதே, இந்த ஆட்சி முறை நல்லதா, அல்லது ஆட்சிப் பொறுப்பும், அதனை நிறைவேற்றுவதற்கான வசதிகளும் வாய்ப்புகளும், பாரதத்தில் பல்வேறு பகுதிகளிலே உள்ள அரசு களுக்கும் நீதி நேர்மையின் அடிப்படையிலே பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதுதான் நல்லாட்சி முறையா என்றுதான் ஆச்சாரியார் பேசியிருக்க வேண்டும். அது விஷயமாக அவருக்கு ஒரு தெளிவான, முடிவான கருத்து இருப்பதாகவே தெரியக் காணோம். உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு என்பார்களே அது போல, சென்னையிலே செல்வாக்கு கிடைத்தால், டில்லியில் இவ்வளவு அதிகாரமா என்று எண்ணுகிறார், சென்னையிலே பிடி தளர்ந்தால், டில்லியிடமே இருக்கட்டும் எல்லா அதிகாரமும் என்று எண்ணுகிறார். தன்னைத்தான் மிக முக்கியமாக முன்னாலே நிறுத்தப் பார்க்கிறாரே தவிர, தாயகம், தனி அரசு என்ற முறையிலே அவர் இந்தப் பிரச்சினையை அணுகவே இல்லை. தன்னிலிருந்து, எப்போதாவது வளருகிறார் என்றால், தன் இனத்துக்கு எது நல்லது, சென்னையில் அதிகாரம் வளமாக இருப்பது நல்லதா அல்லது டில்லியில் குவித்து வைப்பது நல்லதா என்று யோசிக்கும் நிலைக்குச் செல்கிறார். அவ்வளவுதானே தவிர, அதிகாரங்கள் அனைத்தையும் டில்லியில் குவித்து வைத்து விடுவதால் தென்னகம் தேய்கிறது, தன்மானம் மாய்கிறது என்பது பற்றிய கவலை அவருக்கு எழுவதாகக் காணோம். ஆகவே, அவர் இப்போது, தமிழ் நாடு அளவில் சிறியதாகி விடுவதாலே, இந்தியப் பேரரசிலே செல்வாக்கு இராது, என்று பேசும் போது, அவருடைய ‘இதய சுத்தி’யிலே நமக்கெல்லாம் சந்தேகம் வரத்தானே செய்யும்? டில்லியில் ஏன் இவ்வளவு அதிகாரம்? டில்லி எதற்காக இந்த ஆதிக்கம் செலுத்த வேண்டும்? சென்னை, கப்பம் கட்டி கட்டியங் கூறி, காவடி தூக்கி, சேவடி தாங்கி தன்மானமிழந்து தவிக்கிறதே, இது தகுமா? இவைபற்றி அல்ல அவர் கேட்பது? இவைபற்றிக் கொதித் தெழ அவருக்கு மனம் இடம் தரவில்லை. இதுதான் பிரச்சினை என்று அவர் கூற மறுக்கிறார். டில்லியில்தான் எல்லா அதிகாரமும் இருக்கும், அதன் ஆதிபத்தியத்தின் கீழ்தான் எல்லா இராஜ்யங்களும் இருக்கும், இராஜ்யங்கள் வரிகளைத் திரட்டும்; டில்லி வாரிக் கொண்டுதான் போகும், இதை மாற்ற வேண்டியது பிரச்சினை அல்ல! இந்த ஆதிக்கம் டில்லியிலிருக்கும் போது, சென்னை, அதைத் தாங்கிக் கொள்ளும் ‘வலிவு’டன் இருக்க வேண்டுமே - தமிழகம் என்று பிரிந்து, குறைந்த அளவிலே இருக்குமானால், எப்படித் தாங்கிக்கொள்ளும் என்று கேட்கிறார் ஆச்சாரியார்! ‘‘பாவி! பொல்லாதவன்! படுக்கையைத் தட்டிப் போடு!! - என்று கூறிய பாட்டியின் கவலை, பாவையின் கற்பைக் காப்பாற்றுவது அல்ல - அது முடியாத காரியம் என்று பாட்டி விட்டு விட்டாள் - கற்பை இழந்துவிடப் போகும் காரிகைக்குக் குத்தும் வெட்டுமாவது இல்லாமலிருக்கட்டுமே என்பதுதான் பாட்டியின் கவலை. ஆச்சாரியாருக்கும், டில்லிக்கு ஏன் இந்த ஆதிக்கம் என்று கேட்கும் துணிவும் எழக் காணோம், தூய்மை உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவலையெல்லாம், டில்லியின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளும் ‘வலிவு’ வேண்டுமே, ‘தமிழ் நாடு, என்றாகிவிட்டால், வலிவு இராதோ என்ற சம்சயம்தான். தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்தில், வேறு எந்தத் தத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘‘பாவி! பொல்லாதவன்! படுக்கையைத் தட்டிப்போடு” என்று பேசும் பாட்டிப் போக்குத்தான் இந்தத் தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்திலே தொக்கிக் கிடக்கிறது. இனி, மேகநாதனை இராமாச்சாரி எப்படித் தந்திரமாகத் தன் வலையில் விழச்செய்தாரோ அதுபோல, நேருபண்டிதரை, ஆச்சாரியார், தம்முடைய தட்சிணப் பிரதேசத்துக்கு அழைத்து வர எடுத்துக் கொண்ட முயற்சி எப்படிப்பட்டது என்று அறிய ஆவல் ஏற்படும், தம்பி. அடுத்த கிழமை வரையில் ஆவலை அடக்கிக் கொண்டிரு. நல்ல தம்பியல்லவா. . . . அன்புள்ள அண்ணாதுரை 1-1-1956 அகலிகையும் ஆச்சாரியாரும் ஆச்சாரியாரின் தட்சிணப் பிரதேசம் - பாகிஸ்தான் பிரிவினை. தம்பி, பாவி, பொல்லாதவன், படுக்கையைத் தட்டிப் போடு என்று பயத்தால் ஒரு பாவையை, பாதகனொருவனின் காமப் பசிக்குப் பலியாக்கிடும் பாட்டியின் சேட்டைக்கு ஒப்பிட்டேன் ஆச்சாரியாரின் ‘தட்சிண ராஜ்ய’ திட்டத்தை; மானத்தையும் மாண்பையும் மதித்திடும் இனத்தினரும் வகையினரும், இந்தப் ‘பாட்டி’ போல நடந்துகொள்ளவும் மாட்டார்கள், நாட்டுப் பற்றே எல்லாவற்றிலும் மேலானது என்று எண்ணிடும் எவரும் ஆச்சாரியார் தருவது போன்ற திட்டத்தைத் தரமாட்டார்கள். எது எப்படியாயினும், என் சபதம் நிறைவேற வேண்டும், என் நோக்கம் ஈடேற வேண்டும் என்று எண்ணிடும் போக்கினர் தமக்கென ஒரு உயர்ந்த இலட்சியத்தினைக் கொண்டிராதவர்கள் போக்கிலே, ஆச்சாரியார் செல்வதுகண்டு நான் உள்ளபடியே வருந்துகிறேன். பெரியார் பலமுறை இவரைப் பாராட்டிப் பேசுவதை - பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல, தனியாக உரையாடும்போதும் - கேட்டுக்கேட்டு எனக்கு ஆச்சாரியாரிடமிருந்து, நாடு அதிகம் எதிர்பார்க்கலாம், முயற்சித்தால் அந்த முதியவராலே பல பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட துண்டு. கூர்ந்து பார்ப்பதனால் ஒரு உண்மை எனக்குப் புலப் படுகிறது. தம்பி! கருடன், மிக மிக உயரமாகப் பறப்பதைப் பார்க்கிறாயல்லவா? அழகாகக்கூட இருக்கும் பார்ப்பதற்கு. கழத்து மட்டும் தூய வெள்ளை நிறம் கொண்ட கோலத்தில் உள்ள கருடன் மேலே எழும்பி வட்டமிடுகிறது - எதற்கு என்று எண்ணுகிறாய்? உலகம் எப்படி இருக்கிறது என்று அழகு காணவா? ஊரார் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் குறை வந்துளதோ என்று கண்டறியவா? இல்லை, இல்லை! இரை தேடுகிறது. அதற்காக அவ்வளவு உயரத்தில் பறக்கிறது. அதற்குத் தேவையான ‘இரை’ அங்கே கிடையாது. கீழேதான் இருக்கிறது - ஆனால் அதைப் பெற, கருடன் மேலே வட்டமிட்டுப் பார்க்கிறது. கருடனுடைய கூரிய கண்ணுக்கு, அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும்போதும், கீழே உள்ள பொருள் பளிச் சென்று தெரியுமாம், அவ்வளவு கூரிய பார்வை - கண்டறியும் திறன். ஆனால் இவ்வளவு உயரம் மேலே பறந்து, இவ்வளவு திறமையாக, கூரிய பார்வைகொண்டு, கருடன் கண்டெடுக்கும் இரை என்ன தெரியுமா, தம்பி, செத்துப் போன எலி, சாக இருக்கும் தவளை, இப்படி! இதற்கா இவ்வளவு உயரம் பறந்து இலாவகமாக வட்டமிட்டு கூரிய கண்களால் கண்டறிய வேண்டும்? செத்த எலிக்கும் தவளைக்கும், இத்தனை உயரம் பறந்திடும் கருடன் போல, ஆச்சாரியார் உயர உயரச் செல்கிறார். மந்திரியிலிருந்து கவர்னர், அதிலிருந்து வைசிராய் என்று இப்படி உயரப் பறக்கிறார். கடைசியில் ஏதாவதொரு செத்த எலி, சாக இருக்கும் தவளை கிடைக்கிறது! பரிதாபமாகத்தானே இருக்கிறது! ஆச்சாரியார் தமது உயர்ந்த நிலையையும், திறமையையும் தக்க முறையில் பயன்படுத்தினால், நிச்சயமாக, தாயகத்தைத் தருக்கரிடமிருந்து மீட்டிடும் காரியத்தை, காந்தியார் காலத்திலேயே துவக்கி இருந்திருப்பார். அங்ஙனம் அவர் செய்யாததற்குக் காரணம், எனக்குத் தெரிந்த அளவில் இரண்டு; ஒன்று, அவருக்கு எதைச் செய்தால் வேறு எது கெட்டுவிடுமோ என்ற அச்சம், சுருட்டுக்காக நெருப்பைத் தேடினால், நெருப்புப் பட்டு மீசை போய்விடுமோ என்ற பயந்தான் என்று ஏமாளி பற்றிய கதை கூறுவார்களல்லவா, அதுபோல! அவருக்கு, தாயகத்தை வடநாட்டாரிடமிருந்து மீட்டிடும் காரியத்தில் ஈடு பட்டால், இங்கே ஆரியத்துக்கு ஆபத்து எளிதாக உண்டாக்கி விடுவார்களோ என்று அச்சம் கிளம்பி விடுகிறது. ஆரியத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நாட்டு விடுதலை எனும் நல்ல இலட்சியத்தைத் தலைமுழுகிவிடத்தான் வேண்டும் என்று துணிந்து விடுகிறார் மற்றொன்று, அவருக்குக் கூரிய மதி இருக்கிறது. மறுப்பார் இல்லை. ஆனால், மிகமிகக் காலங் கடந்தே அது பயன்படுத்தப்படுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று சொல்லுவார்கள்: தீராத தலைவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் ஒரு மன்னன்; இதை தீர்த்து வைப்பவர்களுக்குப் பதினாயிரம் வராகன் பரிசு என்று முரசறைவித்தான். ஆண்டு ஒன்று ஆயிற்று - மருத்துவனோ, மகானோ யாரும் வரவில்லை - தலை வலி அதிகமாகிவிட்டது. இந்தப் பொல்லாத தலைவலியைப் போக்கிடும் மூலிகையோ, தைலமோ தருபவனுக்கு என் இராஜ்யத்தில் பாதி பகிர்ந் தளிக்கிறேன். என்று பறைசாற்றச் சொன்னான் - பலன் ஏற்படவில்லை. இராஜ்யத்தில் பாதி மட்டுமல்ல, என் மூத்த பெண்ணையும் கலியாணம் செய்து தருகிறேன். மூலிகை தரும் மருத்துவனுக்கு என்று மூன்றாமாண்டு தெரிவித்தான்; ஒருவரும் முன்வரவில்லை. கோபம் மூண்டுவிட்டது; நாலாம் ஆண்டு பரிசு தருவதாகப் பறைசாற்றவில்லை, மனதுக்குள்ளாகவே ‘சபதம்’ எடுத்துக் கொண்டானாம், என் தலைவலியை எவன் போக்குகிறானோ, அவன் தலையை வெட்டிவிடுகிறேன் என்று - ஏனெனில் நாலு ஆண்டுக் காலமாக இவ்வளவு வேதனையை அனுபவிக்கக் காரணம் இவன் தானே, முதல் தடவை முரசு அறைந்தபோதே மூலிகை தந்திருந்தால், கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லையல்லவா! ஆகவே, தலை வலி போக்கும் வழி தெரிந்திருதும், மன்னனுடைய மண்டைக் குடைச்சலைப் போக்க முன்வராதவன், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனே என்று தீர்மானித்தான். அதுபோலவே, ஒரு மருத்துவன் மன்னனுடைய தலை வலியை நீக்கினான், தன் தலையைப் போக்கிக் கொண்டான் - என்றோர் கதை உண்டு. அது போலவே, ஆச்சாரியார், எந்தத் திட்டம் பற்றித் தமது கருத்து, பரிகாரம் கூறுவதாக இருந்தாலும், தேவைப்படும் நேரத்தில், பயன்படக்கூடிய வேளையில், வகையுள்ள விதத்தில் கூறுகிற வாடிக்கையே கிடையாது. மாறாக, எவ்வளவு கடுமையாக எதிர்க்கலாமோ அவ்வளவும் செய்வார்; கடைசிக் கட்டத்தி லேயோ, குப்புற விழுவது போலாகிவிடுவார். இதற்குள் பிரச்சினை, ஒன்று தீர்ந்துபோயிருக்கும் அல்லது வேறு உருவம் கொண்டுவிட்டிருக்கும் அல்லது இவருடைய பரிகாரமோ பரிவோ தேவையில்லை என்று கூறத்தக்க கட்டம் பிறந்து விட்டிருக்கும். பொங்கும் போது சிறிதளவு நீர் தெளித்து, பால்பக்குவம் கெடாதபடி காய்ச்சிக் கீழே இறக்கத் தவறிடும் தாய்மார்கள் பால் பொங்கி, வழியக் கண்டு பதைபதைத்து ஓடிச்சென்று, அவசரத்தினால், இன்னது செய்வதென்று தெரியாமல், பாத்திரம் நெருப்பாகி இருக்குமே என்பதையும் மறந்து, பதட்டத்துடன் அதைப் பற்றிட, பாதிப்பால் அடுப்பிலும் பாதி அவர்கள் ஆடையிலுமாகி அவதிப்படுவார்களே - அதுபோலத்தான் ஆச்சாரியார். நாடே கொதித்தது, பாகிஸ்தான் கிளர்ச்சியின் போது - உலகமே உற்றுக் கவனித்தது. உயர்ந்த அறிவாளி என்ற உன்னதமான பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்த உத்தமர் செய்தது என்ன? இது அடக்க முடியாத ஆர்வம்? கொழுந்து விட்டெரியும் இனக் கிளர்ச்சி? எனவே, இந்தக் கோரிக்கை வளர்ந்து வளர்ந்து, எதிர்ப்பின் காரணமாகக் கோர உருவம் பெற்று, எதிர் காலத்தில் கொலையிலும் குழப்பத்திலும் கொண்டு போய் விடும்; ஆகவே இதனை உடனடியாகக் கவனித்துத் தக்க பரிகாரம் தேடியாக வேண்டும் என்று புறப்பட்டாரோ? இல்லை! இவரும் கோடையிடிகளுடனும் பீடிப்பெருமான்களுடனும் கூடிக்கொண்டு, பாகிஸ்தானாவது மண்ணாவது, அதையாவது நாங்கள் தருவதாவது, நாடாவது பிரிப்பதாவது, பாரத மாதாவை வெட்டுவதா, பசுவை அறுப்பதா, பாலகனைத் துண்டுபோடுவதா என்றெல்லாம் தான் பேசினார். பக்குவம் எப்போது ஏற்பட்டது என்கிறாய், தம்பி! பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற பக்குவம் இவருக்கு எப்போது ஏற்பட்டது? பாஞ்சாலம் படுகளமாகி, சிந்து சீறி எழுந்து, எல்லைக் காந்தியே தொல்லைக்கு ஆளாகி, வங்காளம் கச்சையை வரிந்து கட்டி எழுந்து, வெளியே உள்ள வல்லரசுகள், வஞ்சகம் கக்கும் கண்களுடன், இங்கே உருவாகிக் கொண்டிருந்த களக்காட்சியைக் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான், இவருடைய அறிவில் ஓர் விறுவிறுப்பு ஏற்பட்டது, பேச்சிலே ஒரு பரபரப்பு காணப்பட்டது, போக்கிலே ஒரு பக்குவம் தெரியத் தலைப்பட்டது. ஆச்சாரியார் இந்தப் பக்குவம் பெறுவதற்குள், ஜின்னா, எந்த நிலைக்குச் சென்று விட்டார்! நீங்களாகப் பாகிஸ்தான் தருகிறீர்களா? நானாக எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டே விட்டார், தம்பி! பிறகுதான், ஆச்சாரியார், காரணங்களைக் காண்பிக்கவும், கதை மூலம் விளக்கவும், தத்துவம் தரவும், தூதுபோகவுமாகி, பாகிஸ்தான் தரப்படத்தான் வேண்டும் என்று கூறினார். இதற்குள், நான் குறிப்பிட்ட கதையில் உள்ளது போல, மூன்று முறை முரசு அறைந்தாகி விட்டது - நாலாவது ஆண்டு பிறந்தது, இனிப் பரிசு இல்லை, பரிகாரம் தருபவனுடைய தலை வெட்டி வீழ்த்தப்படும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. துவக்கத்திலே, பாகிஸ்தான் திட்டம் வெற்றி பெற்றே தீரும் என்பதை அறிந்து உரைத்திருந்தால், ஆச்சாரியாருடைய ‘தீர்க்க தரிசனம்’ , துணிவு இரண்டுமே விளங்கி இருக்கும். கடைசி நேரத்தில், கட்டைக்குப் போகிற சமயத்தில் காஷாயம் தரிப்பது போல, இஸ்லாமியர்களின் இதயதாபத்தைக் கவனிக்காவிட்டால் இந்தியா ரணகளமாகும், எனவே பாகிஸ்தான் தரப்பட வேண்டியதுதான் என்று பேசினார். காலதாமதம்! இரயில் எப்போதும், குறித்த நேரத்தில் புறப்படுவதில்லை, போய்சேர வேண்டிய நேரத்துக்குப் போவதுமில்லை! இதில் மட்டுமல்ல, அவருடைய அரசியல் வாழ்வில் இது போல அடுக்கடுக்காக. சின்னாட்களுக்கு முன்புதானே சொன்னார், ‘‘இந்தி நமது மொழிகளில் எதற்கும் ஈடாகாது” என்று. சொன்னதுடன், ‘‘இந்தி வெறியர்கள் இங்கு, மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக, இந்தியைத் திணிப்பதை யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; எனக்கே கோபம் கோபமாக வருகிறது” என்று கூடச் சொன்னாரே! ஆனால், எப்போது ஏற்பட்டது இந்த ‘இதோபதேசம்’ - புத்தறிவு!! விருத்தநாரி பதிவிரதா!! அப்போதுதானே - ஆற்றுவார் இல்லை, தேற்றுவார் இல்லை, என்று ஆனபிறகு ஆலயப் படிக்கட்டில் அமர்ந்து, ‘‘கோவிந்தா! கோபாலா!” போடும் போக்குத்தானே இது. இந்தி வெறியர்களை இன்று கண்டிக்கும் இந்த சக்கரவர்த்தியாரின் இந்தி வெறிக்குப் பலியாகி உயிரிழந்தவர்கள் தானே தாலமுத்துவும் நடராசனும். ‘‘எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய, நான் யாரைக் கேட்க வேண்டும்?” என்று இறுமாந்து பேசிய அதே ஏந்தலுக்குப் பார்த்தாயா, தம்பி! வந்திருக்கும் ஞானோதயத்தை - ஆனால் எவ்வளவு பரிதாபம் என்பதைக் கவனித்துப் பார், காலங்கடந்துதான் வருகிறது. அது போலவே, தமிழும் தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் ஒரே மூலம் கொண்ட மொழிகள் - ஒரு இனத்துக்குப் பொதுவானவை, என்று திராவிட ஒருமைப் பாட்டினை நாம் வலியுறுத்திக் கொண்ட நேரத்திலே, இவர் வாய் பொத்திக் கொண்டும் இருந்தாரில்லை. வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி, தமிழும் தெலுங்கும், மலையாளமும் கன்னடமும் மட்டும் தான் ஒன்றுக்கொன்று சொந்தமும் பந்தமும் உள்ள மொழிகளோ? வங்கம், மராடம், குஜராத் எனும் ஏனைய மொழிகளுள் மட்டும் என்ன? அவை அன்னிய மொழிகளோ? ஏன், என் மொழி! என் மொழி! என்று வெறிகொண்டு அலைகிறீர்கள்? எல்லா மொழியும் பாரத மொழிதான்! இதிலே தனித் தமிழ் என்று ஒரு கிறுக்கு! திராவிட மொழிகள் என்று ஒரு பித்தம்! செச்சே! ஏன் இப்படிப் பேதம் காட்டி நாசமாக்குகிறீர்கள்? என்று கேட்டார் இந்தப் பெரியவர்; இப்போது பேசுகிறார், ‘‘இவை நான்கும் ஒரே மூலத்தில் தோன்றிய மொழிகள்” என்று; அத்துடன் அமையவில்லை, “எனவே’’ போடுகிறார்! எனவே இவை ஒன்று கூடி, ‘‘தட்சிணராஜ்யம்” அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் அருளுகிறார். எதன் பொருட்டு என்று கேட்கும் போது தான், பாவி, பொல்லாதவன் படுக்கையைத் தட்டிப் போடு என்கிறார்; உத்தரப்பிரதேசம் ஓங்கி உருவெடுத்திருக்கிறது, டில்லி எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விடுகிறது, இந்த ஆபத்தைச் சமாளிக்க வேண்டுமானால், நாம் ஒன்றாக இருந்து, உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் - அதுதான் தட்சிண ராஜ்யம் என்கிறார். இதே யோசனையை இவர் ஐந்தாண்டுக் காலத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கூடச் சிறிதளவு செல்வாக்குக் கிடைத்திருக்கக் கூடும். நாம் திராவிடநாடு கேட்டு, மொழி வழியில் தனித்தனி அரசுகளாக, தமிழகமும், ஆந்திரமும், கேரளமும், கருநாடகமும் பிரிந்திடினும், இனவழி ஒன்றுபட்டு ஓர் கூட்டாட்சி அமைத்து, அந்தக் கூட்டாட்சி, மூலம், வடநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நாடெங்கணும் பேசிவந்தோம். அதேபோது இவரும், ‘நான்கு மொழிகளும் ஒரே மூலத்தவைதான் - நான்கு பகுதிகளும் ஒரு கூட்டாட்சிக்குள் இருக்கத் தக்கவையே’ என்று பேசியிருந்திருப்பாரானால், பலருடைய செவிக்கு விருந்தாகவும், சிலருடைய சிந்தனைக்கு வேலை தருவதாகவும் அமைந்திருக்கும். இப்போதுள்ள நிலைமையோ வேறு மட்டுமல்ல, விசித்திரமானது. மொழிவழி அரசு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய திட்டமாகிவிட்டது. இந்தத் திட்டத்தைத் ‘திராவிடம்’ கேட்கும் நாமும் கேட்கிறோம், அதன் உட்பொருளை உணர மறுத்திடும் தமிழரசுக் கழகத்தாரும் கேட்கின்றனர். பாரத ஆட்சியிலே இன்னமும் பாசம் கொண்டிருப்பவர்களிலே சிலரும் கூடக் கேட்கிறார்கள். பாரதம் ஒன்றுதான் - அதைப் பிளக்கவோ, பிரிக்கவோ கூடாது என்று பேசுவோரும் பாரதத்திலே எந்தப் பகுதி எந்த மொழிக்காரரிடம் இருந்தால் என்ன என்று பேசிடக் கூசுகின்றனர்; எல்லோரும் பாரத மக்கள் என்பது இருக்கட்டும் ஒரு புறம், அதைச் சாக்காக்கி என் நாட்டிலே சில பகுதிகளைச் செதுக்கி எடுத்து உன் நாட்டுக்குச் சுவை தேடிக்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்று முழக்கமிடுகிறார்கள். திராவிட நாடு திராவிடருக்குத்தான் - ஆனால் அதைச் சாக்காக்கிக்கொண்டு தேவிகுளம் பீர்மேடும் எனக்கு என்று அபகரிக்க மலையாளத் தோழர்களை அனுமதிக்க மாட்டோம்; அதேபோலத்தான் தமிழர்க்குரிய இடங்களை ஆந்திரர் கொள்ள விட மாட்டோம் என்று நாம் கூறுகிறோம். இந்தச் சமயமாகப் பார்த்து, வீடு தீப்பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக்கேட்கும் போக்கிலே, சித்தூர் யாருக்கு? தேவிகுளம் எவருக்கு? என்று நமக்குள் சண்டை போட்டுக் கொண்டால் நல்லதா? அதோ பார். உத்தரப்பிரதேசத்தை, டில்லியைப் பார், எல்லோரையும் ஆட்டிப்படைப்பதை. ‘இந்த உற்பாதத்தை’ ஒழித்துக் கட்ட ‘தட்சிணப் பிரதேசம்’தேவையே தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பேசுவது சரியல்ல என்று சாந்தோபதேசம் செய்கிறார் - சாணக்கியர் - தூங்கி எழுந்து விட்டு, மாலையைக் காலை என்றெண்ணி மயங்கிடும் சாணக்கியர். இப்போது மூன்று திட்டங்கள், எல்லோருக்கும் புரிகிறது - ஒவ்வொரு சாராருக்கு ஒவ்வொன்று பிடிக்கிறது. பாரதம் ஒன்றேதான் - இதிலே மொழிவழி அரசுகள் கேட்பதே தவறு - தேவையற்றது - என்றோர் கருத்து இருக்கிறது. எதேச்சாதிகாரப் போக்கினருக்கு இது இனிக்கிறது; முதலாளிகளுக்கு இது சுவை தருகிறது; பெரிய அதிகாரிகளுக்கு இது, ‘பிரேம கீதம்”ஆகியிருக்கிறது! பாரதத்துக்கு டில்லியில் ஒரு பெரிய ஆட்சி இருக்கட்டும் - ஆனால் மொழிவழி அரசுகள் நிச்சயமாக இருக்கவேண்டும் - இதிலே ஒரு மொழிக்காரரை மற்றோர் மொழிக்காரர் வஞ்சிக்க அனுமதிப்பதோ, உடந்தையாக இருப்பதோ கூடாது, என்று மற்றோர் பிரிவினர் கொள்கை கொண்டுள்ளனர். இதை உரிமையற்ற முறையில், பிறமொழியாளரின் செல்வக் கோட்டங்களைச் சுரண்டிச் சுகபோகிகளாக உள்ள சூது மதியினர் எதிர்க்கின்றனர் - ஏளனம்கூடச் செய்கின்றனர். நாம் மொழிவழி அரசும் வேண்டும் - அதிலே ஓரவஞ்சனையும் இருத்தலாகாது - இதை மட்டும் பெற்றால் போதாது; எல்லாவற்றையும் அடக்கி ஆதிக்கம் செலுத்தும், டில்லி ஆட்சிப் பிடியும் ஒழிந்தே ஆகவேண்டும் என்கிறோம். இதை ஆகுமா? என்றெண்ணும் பெருமூச்சுக்காரர்கள், ஐயையோ! என்று கூறும் அலறல்காரர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர். ஆச்சாரியார், இந்த எதிலும் சேரவில்லை அவருக்கு சர்வம் டில்லிமயம் என்பதும் கசக்கிறது. மொழிவழி அரசு என்றால் குமட்டுகிறது. எனினும், ஒரு குடும்ப மொழிகள் என்று சொந்தம் கொண்டாடிடவும், அதன் காரணமாகவே ‘தட்சிணராஜ்யம், என்ற அமைப்பிலே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கருநாடகம் எனும் தனி அரசுகளை விட்டுவிட்டு ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணவும் முடிகிறது; சொல்லவும் துணிகிறது. அப்போதுதான் டில்லி ஆதிபத்யத்தின் போக்கைச் சமாளிக்க முடியும் என்று காரணம் காட்டவும் முன் வருகிறார்! அதே போது வடநாட்டு ஆதிக்கத்துக்கு உட்பட்டு, உருக்குலைந்து போவானேன், தனித் திராவிடம் அமைக்கலாமே என்று அழைத்தாலோ, குமட்டுகிறது, குடலைப் புரட்டுகிறது, ஏதேதோ அச்சம் புகுந்து குடைகிறது. பரிதாபமல்லவா, தம்பி, இந்த நிலைமை? தெரிந்ததாம், இது வேறு ஆசாமி போலத்தான் இருக்கிறது! இதுநாள் வரை கண்டதற்கும் இவரிடம் காணும் சுகத்திற்கும் நிச்சயமாக மாறுபாடு இருக்கிறது - எனினும் மதுரமாகவும் இருக்கிறது. இவர், அவரல்லபோல் தோன்றுகிறதே, என்ன செய்வது? இனிச் செய்வது என்ன, நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன, நாம் கண்ணை மூடிக்கொள்வோம் என்று அகலிகை அம்மையார் கருதினார்களாமே, அதுபோல, இவர் வட நாடு ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறது, ஒரு நேருதான் எல்லா வற்றையும் நடத்திச் செல்கிறார், இருந்தாலும் என்ன செய்வது? கண்ணை மூடிக்கொள்ள வேண்டியதுதான் என்று கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டால் போதும் என்று கருத முடிந்தது அகலிகைக்கு. ஆச்சாரியாருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில் வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்தி, அழகுபடுத்தி, ஆளுக்குக் கொஞ்சம் என்று சேர்த்துத் தொல்லையை அனுபவித்தால் நல்லது என்று தோன்றுகிறது. அகலிகை போக்கும் ஆச்சாரியார் போக்கும் இந்த அளவிலே மட்டும்தான் தம்பி! ஒப்பு உவமை. வீணாக நீ, கயிறு திரிக்காதே. ஆமாம், நான் அகலிகையைப்பற்றி நன்றாகப் படித்திருக்கிறேன், ஆச்சாரியாரைப் பார்த்திருக்கிறேன். இருவருக்கும் வேறோர் வகையிலேகூட உவமை இருக்கிறது. அம்மையும் ஒரு படுகிழத்துக்கு வாழ்க்கைப்பட்டுக் கிடந்தார்கள். ஆச்சாரியாரும் படுகிழமாகிப் போன கோட் பாடுகளைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறார். அன்புள்ள அண்ணாதுரை 8-1-1956 விழாக் கோலம் உழவர் திருநாள் எல்லைப் பிரச்சினை இயற்கையின் கோரத்தாண்டவம் அன்பு மலர் தம்பி! தெரிகிறது, தெரிகிறது, உன் முகத்திலே அழகு பொங்கி நிற்கும் காரணம் - புத்தாடை அணிந்துள்ள உன் நடை, காட்டுப் பாதையில் செல்லும் வேழம், வேங்கையின்மீது உராய்ந்து செல்லும்போது ஏற்படுவதுபோன்ற ஓசையை அல்லவா எழுப்புகிறது? கிளியும் புறாவும், நாகண வாயும் சிட்டும், குயிலும் மயிலும், காட்சிக்கினிய பொருளத்தனையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கலந்துறவாடுவது போலன்றோ, இல்லம் விளங்கிடவேண்டுமென விழைகிறாய்! என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை; ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே - ஓஹோ! உன்னை உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா - பால் பொங்கிற்றா என்று! "ஆம்’ எனப் பதிலும் கூறவேண்டுமா - அகத்தினழகுதான் முகத்தில் தெரிகிறதே! தம்பி! மகிழ்ச்சி பொங்கும் நிலையில் நீ இருப்பதற்கு இந்நாள் வந்தது, எனக்குப் பெருமகிழ்வு தருகின்றது. எப்போதும் உன்னை - பிரச்சினை, பணி, கடமை என்பவைகளைத் தந்து சுவைத்திடச் சொல்கிறேனல்லவா - அவை யாவும், மெத்தச் சிரமப்பட்டு உண்டால் மட்டும் உவகை தருவன! இன்று, உனக்காக, கரும்பு காத்துக்கொண்டிருக்கிறது; பாற்பொங்கல் படைப்பார்கள்; உண்டு மகிழப் போகிறாய் - உன்னை அந்தக் கோலத்தில் காணவும் விழைகிறேன். அறப்போர் வீரனாக, அஞ்சா நெஞ்சனாக, அடக்கு முறையை எதிர்த்து நிற்போனாக, மடமையிலாழ்ந்துவிட்ட மக்களிடை அறிவு கொளுத்துவோனாக, ஆதிக்கவெறி பிடித்தலையும் வடவராட்சியை எதிர்த்து ஆற்றலுடன் பணிபுரிவோனாக - இவ்விதமெல்லாம் உன்னைக் கண்டு, உளம் பூரிக்கிறேன். இன்று, உன்னை விழாக் கோலத்தில் காண மகிழ்கிறேன். - இல்லத்தில் ஒளியளித்து களிப்புடன் விருந்துண்டு உலவும் நிலையில் உன்னை இங்கிருந்து காண்கிறேன். காட்சி, கவர்ச்சி தருகிறது - பார்த்ததும்; ஒரு கணம் பிறகோ. . . .! இன்று திருநாள்! இல்லந்தோறும் இளைஞரும் முதியோரும், இருபாலரும், “பொங்கலோ பொங்க’லென்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பி, தாமும், தம்மைச் சூழ இருப்பவை யாவுமே புதியதோர் பொலிவு பெற்றிருப்பது கண்டு,”நலிவெலாம் ஒழிந்தன; நல்லன யாவையும் இனிக் கிடைத்திடும்’ என்று நம்பி, அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மற்றையோரும், மனைதோறும் மனைதோறும் இருத்தல் கண்டு, நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது என்று பெருமிதம் கொள்வதற்கே அமைந்த விழா நாள்! “பால் பொங்கிற்றா?’ - என்று, அன்பு பொங்கக் கேட்டு, அகமகிழச் செய்யும் நன்னாள்! இன்பம் பொங்கும்! எங்கும் தங்கும்! மகிழ்ச்சி பொங்கும்! மனையெல்லாம் வழியும்! புத்தம் புதுக்கோலம்பெற்று, இல்லமெல்லாம் எழிலோவியமாகும்; அன்பு மணம் எங்கும் கமழும்; பூங்கா சென்ற புள்ளினமும், மலரிடை உலவும் வண்டினமும்”கானம்’ கிளப்பிடுவது போன்றதோர் களிப்பொலி எங்கும் எழும்! பனி தொலைந்தது; பரிதி அப்பகையினை விரட்டினாள்! நிலமடந்தைக்குப் புதிய எழிலூட்டினாள் - நடுக்கும் குளிர் இனி இல்லை; வாழ்வை நொறுக்கும் கேடுகட்கு இனி ஆதிக்கம் இல்லை! விளைந்தது குவிந்திடக் கண்டோம்; வினையின் பயனைக் கொண்டோம்; செயலின் செழுமை விளங்கிற்று; செய் தொழிலின் மேன்மை துலங்கிற்று; உழவன் பெருமையை உலகே புகழ்கிறது; உலகுக்கே அத்தொழில் அச்சாணி என்று உளமகிழ்ந்து உரைக்கின்றனர், அறிஞர் பெருமக்கள்! அவன் காலில் படிந்த “சேறும் சகதியும்’ வாழ்வுக்குச் சந்தனமாகி மணம் அளிக்கிறது. அவன் பூட்டிய ஏர் அளித்த வளம், பெருந்தேரோடும் நிலையை அரசர்க்கே அளிக்கிறது எனில், மற்றையோர் ஏற்றம் பெறாதிருப்பரோ! அவன்”கஞ்சி’ தான் குடித்தான்; கலயமோ மண்ணாலானது; கழனிப் பக்கம் அமர்ந்து கடும் உழைப்புக்குப் பிறகு, உச்சிப்போதிலே அவன் "இச்சைக்கினியாள்’ தந்தது! இதோ, அவன் இஞ்சியும், மஞ்சளும், வாழையும், பலாவும், மாவும் பிறவும் அளித்து, தன் திறமையையும், வள்ளற்றன்மையும் எடுத்துக் காட்டுகிறான். கல்லிலும், முள்ளிலும் நடந்தான் - காரிருள் கலையும் நேரமறிந்து எழுந்தான் - பகலெலாம் பாடு பட்டான் - முளைவிட்டதும் மகிழ்ந்தான் - களை கண்டு கவலை கொண்டான்; உழைத்தான், உழைத்தான் - கழனி பச்சை நிறம் பெற்றது; மீண்டும் பாடுபட்டான்; இதோ, பொன்னாடை போர்த்துக்கொண்டு புவிப் பெண்ணாள், செந்நெல் மணி மாலைகள் அணிந்து தென்றலாளுடன் தேனொழுகப் பேசி, தெவிட்டாது பாடி, கோலம் காட்டி நிற்கிறாள்! ஓவியன், நீல நிற வானிலே பல்வேறு உருவமாக உலவிடும் கார் கண்டு, தீட்டுகோல் எடுப்பான்; ஏரடிக்கும் சிறு கோலுடைய உழவுப் பெருமகனோ, அண்ணாந்து பார்க்கிறான்; அகமகிழ்கிறான். எதன் பொருட்டு? தன் வாழ்வு சிறக்கும் வகை கண்டோம் என்பதுபற்றி எண்ணி அல்ல; நாட்டின் நல்லறிவாளர் படித்து இன்புறும் ஏடுகள் குறித்து அல்ல; அவனைப் பற்றித் தமிழ்ப் பேரரறிவாளர்கள் - மூதறிஞர்கள் கூறிச் சென்ற பொன்னுரைகள், அகத்திலும் புறத்திலும், தொகையிலும் கலம்பகத்திலும் ஏராளம், ஏராளம்; அவன், அவைபற்றி ஏதும் அறியான்! அவனுக்காக வாதாடிய புலவர் களை அவன் கண்டானில்லை; கருத்தூட்டமளிக்கும் கவிவாணர் பலர், அவன் செய்தொழிலின் சிறப்புக் குறித்துச் செப்பியுள்ள ஒப்பில் புலமை நிறை மணிகளை அவன் கண்டானில்லை; சேரன் அவையின் சிறப்பு, பாண்டியன் பாசறை அமைத்த பெருமை, சோழ நன்னாட்டான் பாடியும் மாடியும் கண்ட அருமை இவைபற்றி அவன் அறியான்; “கருக்கலிலே போகவேண்டும் - பசுந்தழை பத்து வண்டி வேண்டும் - பன்ணையாரிடம் இன்னது கூறவேண்டும் - வேலியை இவ்விதம் சரி செய்யவேண்டும்’ - என்ற இவைபற்றித்தான் பேசுகிறான்.”பயிர் எவ்வளவு காணும்’ என்பதை உரைக்கிறான் - “மணி’ அவனுக்கல்ல என்பது தெரிந்தும் மகிழ்ச்சியுடன். அவன் அளித்திடும்”அம்பாரம்’ பண்ணையாரைப் பொன்னார் மேனியனாக்குகிறது - புது யாளும் வாய்ப்பினைத் தருகிறது! அவன், தன் கண்ணாரப் பயிர் ஏறுவது கண்டு களிப்பெய்துகிறான் - தன் உழைப்பு நற்பலனைத் தந்தது என்பதறிந்து! "உழவர் திருநாள், இப்பொங்கற் புதுநாள்’ - என்பதை, அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை “சங்கராந்திப் பண்டிகை’ யாகவும்,”சூரிய நமஸ்காரப்’ பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, “அறுவடை விழா’ என்றும்,”உழவர் திருநாள்’ என்றும், “தமிழர் விழா’ -”திராவிடர் திருநாள்’ என்றெல்லாம் ஏற்றம்பெற்று விளங்கிடக் காண்கிறோம். மற்றையோர், கிழமைதோறும், விழா நடத்துபவர்; விழா நடத்துபவர் என்பதைவிட, விழாவினால் நடத்திச்செல்லப் படுபவர் என்பதே பொருந்தும். பெம்மான் பிள்ளைக்கறி கேட்ட நாள்; பேயாண்டியாகிக் கூத்தாடிய நாள்; வெண்ணெய் திருடிய கண்ணன் வேல் விழியாரிடம் மத்தடிபட்ட நாள்; அடிமுடி காண அயனும் அரியும் முயன்ற நாள்; அறுமுகன் சூரனை வதைத்த நாள்; அரிமுகங்கொண்டு அரிபரந்தாமன் அரக்கனை அழித்த நாள்; அன்னை ஜானகியை ஐயன் மணந்த நாள்; - என்று, அடுக்கடுக்காக விழா கொண்டாடுகின்றனர்; புரோகிதரின் பாதம் பணிகின்றனர்; பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஒரு சேர இழக்கின்றனர். பண்படுத்திப் பரம்படித்து, எருவிட்டு, ஏர் பிடித்து, விதை தூவி, நாற்று நட்டு, களை எடுத்து, கதிர் முற்றிடக் கண்டு அறுத்தெடுத்துப் புடைத்துக் குவித்து உணவுப் பொருளை உலகோர்க்கு உழவர் அளிக்கும் இவ்விழாதான், நாம் மகிழ்ச்சி யுடனும் பெருமையுடனும் கொண்டாடும் ஒரே விழா! ஒருநாள் - ஊரெல்லாம் விழா! ஒரு திங்களும் போதுமான தாக இல்லை - நமக்கு, நாட்டவரிடம் இவ்விழாவின் மாண்பினைக் குறித்து, வியந்து விரித்துரைத்திட! ஆண்டுக்காண்டு, இவ்விழாவின் "கோலம்’, வண்ணம் கொள்கிறது; வஞ்சகரின் பிடியில் சிக்கிக் கிடப்போரும்கூட, பிற விழாக்கள்போலன்றி, இஃது பெருமை அளிப்பதாய் அமைந்திருத்தல் கண்டு இன்புறத் தொடங்கியுள்ளனர். நமது இயக்கத் தோழர்கள், உள்ளமெலாம் உவகை பொங்க, இந்நாளில் காட்சி கண்டு களிப்புக்கொண்டு, மன்றங்கள் சென்று தமிழரின் தொன்மைச் சிறப்பினை மக்களுக்கு நினைவுபடுத்தி, பொங்கற் புதுநாள் விழாவினைக் கொண்டாடுவது, நாட்டில் ஓர் புத்தார்வத்தை எழுப்பியிருக்கிறது. ஊர், விழாக்கோலம் கொள்ளவேண்டும்; இசையும் கூத்தும், உடற்பயிற்சி விளையாட்டுகளும் இன்ன பிறவும் நடைபெறவேண்டும்! தமிழரின் தொன்மை பற்றியும், மூதாதையர் காலத்தில் இருந்த பொலிவு பற்றியும், அஃதே பிறகு நலிவாக மாறிவிடும்படி செய்த நயவஞ்சகர் போக்குப் பற்றியும் முத்தமிழ் மூலம் ஆர்வமூட்டி வருதல்வேண்டும். பிற எந்த விழாவும், வீட்டோடு அமையும்; அல்லது, கோயிற் பெருவெளியில் நிகழும். மக்கள் மன்றம் கூடி, மகிழ்ச்சிப் பெருக்குடன் கலந்து களிப்பதற்கான விழாவாக இப்பொங்கற் புதுநாளே அமைந்திருக்கிறது. இந்த ஆண்டும், நாம் விழாக் கொண்டாடியும், மன்றமதில் நின்று மறத்தமிழன் மாண்பினைக் கூறியும், இன்று வந்துற்ற இழிநிலையைப் போக்குவது குறித்தும் எடுத்தியம்பத்தான் போகிறோம். ஆரிய மன்னராம் கனகவிசயன் மீது கல்லேற்றிய சேரன் செங்குட்டுவனைக் காட்டுவோம்; ராஜராஜ சோழன், குலோத்துங்கன், வேளிர்கள் ஆகிய அனைவரின் திறம், தீரம் ஆகியவைபற்றி மக்களிடம் பெருமிதத்துடன் பேசி நிற்போம்; தமிழகத்து நிலவளம், நீர்வளம், மலைவளம், காட்டுவளம் அனைத்தையும் காட்டுவோம்; பிற நாட்டவருக்குக் கிடைத் திலாத அரும்பொருள்கள் - கடலிடை முததும், கானிடைக் களிறும், மலையிடைச் சந்தனமும், தென்றலும் நமக்கு உண்டு என்பதனை எடுத்தியம்பி இறும்பூதெய்தி நிற்போம். எனினும், இந்த ஆண்டு, ஓர் பெரிய மனக்குமுறலுக்கு இடையிலேயே இந்த விழா கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. நமக்கு வந்துற்ற இடரும் இன்னலும் எத்தகைய நெஞ்சுறுதி கொண்டோரையும் நிலைகுலையச் செய்வதாக இருக்கிறது. தம்பி! வடவருக்கு நாம் அடிமைப்பட்டு, வாழ்விழந்து தன்மானம் அழிக்கப்பட்டுத் தத்தளித்துக் கிடக்கிறோம் - மனம் எதுபோல் உள்ளது என்பதை அதோ, மத்திடைத் தயிர் காட்டும்! எந்த மொழிக்காரனும், "சிந்தைக்குச் செந்தேனாக அமைந்துள்ள இத்துணை இலக்கியத்தை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பெற்றிருந்தீரே! என்னே, உம் நாட்டு மனவளம்! எத்துணை நல்லிசைப் புலவர்கள் வீற்றிருந்தனர்! அரசு, அத்தகைய மொழிவளம் மலர்ந்திடச் செய்ததே! கோனாட்சி யிலே இந்த நல்லறம் பூத்ததே! இஃதன்றோ பெருமைக்குரிய செய்தி’ - என்றெல்லாம் கூறி வியப்புறுவான்; எனினும், நாம், இந்திக்குத் தலைவணங்கவேண்டுமென இறுமாந்து கூறும் போக்கினரிடமன்றோ சிக்கிக் கிடக்கிறோம். விழா நாளன்று விசாரம் ஆகாது எனினும், எண்ணிடும் போது நெஞ்சு பதைத்திடாது இருக்குமோ! எண்ணாது விடத்தான் இயலுமோ! வடவரின் பிடியுடன் தொல்லை விட்டதோ! இல்லை! எல்லையைக் களவாடி, ஏனையோரும், நமது திராவிட இனத்தினராம் தெலுங்கரும் மலையாளிகளும், இனத்தையும் மறந்த நிலைகொண்டு மொழிவழி அரசு எனும் உரிமையையும் இகழ்ந்து, தமிழருக்கு உரிய பகுதிகளைக் கவர்ந்துகொண்டு, வட்டாட்டமாடுகின்றனர்; இதனைக் கண்டு நீதி வழங்கும் நேர்மையற்று, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது வடவராட்சி. தேவிகுளம், பீர்மேடு தமிழரின் குருதி படிந்த களிறு உலவும் காடுசூழ் இடங்கள்; அங்குச் செழித்து வளரும் தேயிலைத் தோட்டத்தில், ஓய்வின்றி உழைத்து மாய்ந்த தமிழர் ஓராயிரமல்ல, பல்லாயிரவர்! இன்று, "அம்மலைநாட்டினை உமக்களித்திட ஒருப்படேன்’ என்று கூறி நிற்கிறது மலையாள நாடு! டில்லி மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழும் போக்கிலே இருக்கிறது. வடவேங்கடம் - தென்குமரி - என்ற உரை, அரசியல் கிளர்ச்சிக்காரர் இட்டுக் கட்டிய தொன்றல்ல; இலக்கியம், வரலாறு சமைத்தளிக்கும் உண்மை. அதனை மதிக்க மறுத்திடும் ஆந்திரருடன் உடந்தையாக நிற்கிறது, டில்லி - என்று எண்ணத்துக்கும் போக்கிலே, ஆட்சி நடந்துகொள்கிறது. விழாவின்போது இவைபற்றி எண்ணாமலும், மக்களிடம் எடுத்து இயம்பாமலும் இருத்தல் இயலுமா? எண்ணிடும் போதோ, விழாக் கோலமே கலைகிறது; வேதனை பொங்கி வழிகிறது; "எந்தமிழர் நாட்டிலே ஏன் இந்த அவல நிலை’ - என்றெண்ணி வாட நேரிடுகிறது. இம்மட்டோ! அந்தோ! தமிழகம் பெற்றுள்ள வடு, இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுவிட்ட புண் - எண்ணும்போதே, கண்ணீர் கன்னத்தில் புரள்கிறது; கையறைந்து, முகத்தில் மோதிக்கொண்டு கதறும் நிலைக்குச் செல்லவேண்டிய வருகிறது, எனினும், என் செய்வது! விழா, திங்கள்தோறும் வருவதன்று - ஆண்டுக்கோர் விழா; எனவே, கண்ணீரைத் துடைத்துக்கொண்டேனும் இதனைக் கொண்டாடுகிறோம்! "நேரிட்டுவிட்ட பேரிடியினால் நெஞ்சு ஒடிந்து கிடக்கும் நிலையினை ஓரளவுக்கு மாற்றிக்கொள்வதற்கேனும், விழா பயன்படாதா’ - என்ற ஆசை வேறு, உந்துகிறது. ஏற்பட்ட அழிவை எண்ணிடும்போதோ, உள்ளம் வெந்தழலிடையிட்ட மெழுகாகிறது! பொங்கிய புயலின் கொடுமை, ஐயகோ! எத்தனை நாசத்தை விளைவித்துவிட்டது! அன்பு பொங்கிட அமைந்த இத்திருநாளில், எத்தனை எத்தனை குடும்பங்களிலே, சென்ற ஆண்டு ஓடி விளையாடிய சேயை இழந்து தவிக்கும் தாய்மார்களின் கண்ணீர் பொங்கி வழிகிறதோ; எத்துணைக் குடும்பம் சிதறுண்டு, சிதைத்து, சீர்குலைந்துபோனதனால் வேதனை பொங்கிக் கொப்புளித்துக் கொண்டிருக்கிறதோ; குடியிழந்த மக்கள். “கொட்டும் குளிர் போயிற்று - குதூகலப் பொங்கல் பிறந்தது - பாலும் பழமும். சோறும் சுவையும் கூட்டிக் குழைத்து உண்டு மகிழும் விழா வந்துற்றது’ - என்று பிறர் பேசக் கேட்டு,”எமக்கும் ஓர் இல்லம் இருந்தது - அங்கு அணியும் மணியும் இருந்ததில்லை; அன்பும் பண்பும் மிகுதியும் இருந்தன. அங்குப் பொன்னும் பொருளும் இருந்ததில்லை; பேசும் பொற்சித்திரங்கள் இருந்தன - கரியும் பரியும் கட்டி வைத்து யாங்கள் கனவான்களாக இருந்தில்லை; அன்புடன் தன் நாவினால் கன்றினைத் தடவிக் கொடுக்கும் அழகிய பசு இருந்தது - உப்பரிகையும் ஊஞ்சலும் இருந்த தில்லை; கொடியும் செடியும், பயனும் மணமும் அளித்து வந்தன - எல்லாம் போய், ஏதுமற்றவரானோம்; எங்கெங்கோ பொங்கல்! பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! - என்று கூவுகிறார்கள்; எம்மைக் கண்டால், ஈரமனம் படைத்த அவர் கண்கள் புனல் நிறையும்; எனவே, அவர் காணாது இருத்தலே சிறந்தது; கண்டிட நேரிடினும், அவர்தம் மகிழ்ச்சியை, நந்தம் துயரத்தைக் காட்டிக் கெடுத்திடாதிருக்கும் திறனாவது நமக்கு வருதல்வேண்டும்’ - என்றெல்லாம் எண்ணிக்கொண்டுள்ளனர். அவதிக்காளாகியுள்ளோருக்கு, "புயலின் கொடுமை எத்துணை வேகமாக அடித்தால் என்ன; அன்பும் பண்பும், எம்மவர்க்குக் கடலினும் பெருமளவு உண்டு; அது எம்மை, எதையும் மறந்திடச் செய்யும் அளவிலும் வகையிலும் வந்து சேர்ந்து, வாட்டத்தை ஓட்டுகிறது,’ - என்று கூறத்தகும் வகையிலே, விழா கொண்டாடுவோர், விரைந்து உதவியை அனுப்புதல் வேண்டும். நமது கழகம், இத்துறையில் நல்லோர் கண்டு மகிழத்தக்க வகையிலும், நாடாள்வோர் கண்டு மனம் புழுங்கும் நிலையிலும் ஈடுபட்டிருக்கிறது, என்பதை எண்ணியே, வேதனையைக் குறைத்துக்கொள்ள முடிகிறது - ஓரளவுக்கேனும்! விழாவினன்று, நமது நாடு இன்று எத்துணைத் துயருற்று இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சோகச் சித்திரமாக, புயல் எனும் சிறுகதை இருக்கக் காண்பீர்கள்; கருத்தில் பதியும் விதத்தது, "நாயகம்’ என்பார் தருவது. திருவிடத்தின் நிலை ஏன் சீர் கெட்டுக் கிடக்கிறது என்பதைக் குடை ராட்டினம் எனும் கட்டுரை மூலம், அறிவழகன் - அன்பழகனின் இளவல் அறிவுறுத்தியிருக்கிறார். வேதனைக் காட்சிகளைக் கண்டதால், உள்ளத்தில் எழும்பிய புயலை, சித்தார்த்தர் புத்தராகி உலகுக்குப் பொன்னொளி அளிப்பதற்குப் பயன்படுத்திய பாங்கினை, "வெள்ளி முளைத்தது’ எனும் வரலாற்று ஓவியம் காட்டுவதாக இருக்கிறது. ரஷ்ய நாட்டு மேதை டால்ஸ்டாய், பேராசைக்காரன் மெருமளவு நிலத்துக்கு ஆசைப்பட்டு ஆறடி நிலம் பெற்றதைக் கூறியிருக்கிறார் - இதனையும் "வெள்ளி முளைத்தது’ தந்த அரங்கண்ணல் தந்திருக்கிறார். ஒய்யாரியை ஓவியம் தீட்டித் தரச் சொன்ன மகா அலெக்சாண்டரிடம், துணிந்து, உயிரோவியத்தைத் தருமாறு கேட்டது குறித்துத் தேனொழுகும் பாவினைத் தருகிறார் "சுரதா’. நம் நாட்டிலே உள்ள நலிவு போன்றும், அதற்கு மேலும் இருந்த நலிவுகள் அத்தனையும் போக்கிடச் சீன நாட்டிலே பாய்ந்தோடிய "அன்பின்அருவி’க்கு அழைத்துச் செல்கிறார் - நீவிர், அடிக்கடி சந்திக்கும் வாணன். கனவிலே சொர்க்கலோகச் சுந்தரிகள் தோன்றி, தத்தமது சுகானுபவத்தை அல்ல - சொர்க்கத்தில் நரகம் இருப்பதை எடுத்துக் கூறும் கற்பனை ஓவியம் “சொர்க்கத்தில் நரகம்’ -”யார் கண்டது, சொர்க்கத்தை’ - என்று கேட்டுவிடவேண்டாம் - நானாகக் கற்பனை செய்துகொண்டதன் விளைவு, இக்கட்டுரை. பூலோகத்திலே ஒரு புரட்டன், மந்த மதியினருக்குச் சந்தான சப்ரமஞ்சம் அமைத்துத் தந்தான்! அவன் போன்றோர் நடாத்திய மாயம், மந்திரம் எனும் புரட்டுகளினின்றும் மக்கள் சமுதாயம் ஆராய்ச்சித் துறையிலே அடி எடுத்துவைக்கப்பட்ட கஷ்டங்களைக் காட்டும் வரலாற்றினைப் படித்தறியும் ஆர்வம் எழவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை தந்திருக்கிறேன். பாவையின் பயணம் - ஒரு நாடகத் தொடர்; மண வினைக்குப் பக்குவம்பெற்றுள்ளோருக்குத் தேவையான நற்கருத்தளிக்கும் நோக்குடையது. புதிய பொலிவு - கிராமியக் காதை; இருவேறு உலகிடை உள்ளோருக்குள் ஏற்படும் கூட்டுறவும், அமைந்துவிடும் சூழ்நிலையும், விளக்கமாக உதவும். மேலதிகாரி - இன்றைய சூழ்நிலையில் நம்மவர்கள் "அவாளிடம்’ சிக்கிப் படும்பாட்டினை எடுத்துக்காட்டுவதாகும். மற்றுமுள்ளவைகள், நான் இம்முறை தரவேண்டும் என்று எண்ணி எழுதியதில் ஒரு பகுதிதான்! தம்பி! சம்பத், "கல்கத்தா பாதை’யில் சென்று வந்திருக் கிறான் - என்னைக் காஞ்சியில் கைகடுக்க எழுதிக்கொண்டிருக்கச் செய்துவிட்டு; இருக்கட்டும்; பாடம் கற்பிக்காமலா போவேன்! நண்பர்கள் பலர் அனுப்பி உதவிய, "விருந்து’, மலர் சிறிய அளவானதால், வைத்து அளிக்க முடியாமல் போய்விட்டது - இப்போதைக்கு! செங்கரும்பு, பலா, மா, வாழை, செந்நெல், ஆவின்பால், புத்தாடை - ஏதேதோ தரலாம், தம்பி, உனக்கு! ஆனால் என்ன செய்வது? இவைகளை எல்லாம்விட, என் "அன்பு’ இம்மலர் மூலம் உனக்குக் கிடைத்திடச் செய்தலே முறை என்று எண்ணினேன். உன்னிடம் கூறவேண்டுமென்று எண்ணிய கருத்துக்கள் பல; பலப்பல; ஒரு சிலவற்றைத்தான் கதை, கட்டுரை வடிவாக்கி அளித்திட முடிந்தது. இவற்றினைப் பார்க்கும்போது, உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வேறு பல நற்கருத்துகளை ஒழுங்குபடுத்தி, வரிசைப்படுத்தி, நற்செயலுக்கு உறைவிடமாக்கி, நமது நாட்டினுக்கு நல்கி, பொங்கலன்று காணும் மகிழ்ச்சி நாட்டின் பொதுமகிழ்ச்சி ஆவதற்கான நற்பணியாற்றிட வரவேண்டும் என்று அழைக்கிறேன் - உரிமையுடன் - நம்பிக்கையுடன். "இன்று கூடவா, அண்ணா!’ என்றா கேட்கிறாய்? சரி, சரி, போ! போ! அதோ பொங்கும் இன்பத்தைப் பெறு; பொலிவு கண்டு அகமகிழ்ந்திரு; உள்ளம் நிறைந்திடும் உவகை யுடன் உரையாடிக் களிப்புற்று இரு; நின் இல்லம் இன்பப் பூங்காவாகத் திகழட்டும்; அங்கு அறிவு மனம் கமழட்டும்; அன்பு பொங்கட்டும்; அறம் தழைத்திடத்தக்க அரும்பணியாற்றிடும் ஆற்றல் எழட்டும். பொங்கற் புதுநாளன்று என் அன்பு நிறைந்த வாழ்த்துதலை வழங்கி மகிழ்கிறேன். அதோ, பெற்றோர் அழைக்கிறார்கள் போலும் சென்று, செங்கரும்பின் சாறன்ன அன்புரை பெற்று இன்புற்றிரு! அண்ணன், 14-1-1956 தம்பி, தயார்! தயார்! மொழிவழி அரசு - தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை - இந்திய யூனியனில் ஆங்கில மொழி - பிப்ரவரி 20 போராட்டம் தம்பி, சிறைக் கதவுகள் தூளாயின! போலீஸ் ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன! இரயில்வேக்கள் தடம் புரண்டன! வட்ட மிடும் விமானம் வந்திறங்க முடியவில்லை, பாடவந்த பாகவதர்கள் வீடு திரும்பியோடினர், ஆலைச் சங்கு ஊத வில்லை, மாலைக் காட்சிகள் கொட்டகையில் இல்லை, பள்ளிக்கூடம் இல்லை பணிமனைகள் வேலை செய்யவில்லை, போக்கு வரத்து செயலற்று நின்றது - நாடு போர்க்கோலம் பூண்டு விட்டது. ‘‘எத்தனை எத்தனை இலட்சம்! அவர்கட்குத்தான் என்னிடம் எத்தகைய பக்தி! எவரும் கண்டு சொக்கிடும் வகையிலல்லவா வரவேற்புகள் அளிக்கிறார்கள்! மலர் மாரி பொழிகிறார்கள்! இதயத்தைக் காணிக்கையாக்கித் தருகிறார்கள். நான் செல்லும் பாதையில் மலர் தூவி, என் முன் சிரம் தாழ்த்தி நிற்கிறார்கள். என் சுட்டு விரல் காட்டும் வழியில் சென்று செயல் புரியக் காத்துக் கிடக்கிறார்கள் கோடிக்கணக்கான மக்கள். வெள்ளிப் பனி படர்ந்து, வண்ணப் பூக்களும் வகை வகையான பழங்களும் குலுங்கிடும் பூஞ்சோலைகளும், படகு வீடுகள் மிதந்திடும் பாங்கான ஏரிகளும் கொண்ட எழில்மிகு காஷ்மீரி லிருந்து, கடல்கள் ஒன்றை ஒன்று முத்தமிட்டுத் தழுவிக் கொள்வது கண்டோ என்னவோ முறுவலித்து நிற்கும் குமரிமுனை வரையிலும், அவர்கள், பஞ்சாபிகள், சிந்திகள், மார்வாடிகள், குஜராத்திகள், வங்கத்தார், கலிங்கத்தார், மராட்டியர், ஆந்திரர், ஓரியர், தமிழர், கேரளத்தார், கன்னடத்தார், இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்தவர் எனும் எவராக இருப்பினும், அவரெல்லாம் என்னைக் காணுந்தோறும் காணுந்தோறும், ‘எமை ஆளும் தலைவா வருக! எமக்கு வாழ்வளித்த மாவீரனே வாழ்க! உலகில் உயரிடம் பெற்றவனே வருக! ஆசிய ஜோதியே வருக! அகிலம் புகழும் ஆற்றலரசே வாழ்க!’ என்றெல்லாம் வாழ்த்தி வரவேற்கிறார்கள். என்னே அவர்தம் அன்பு! எவரிடத்தும் இது நாள் வரை காட்டாத பேரன்பை என்பால் இம்மக்கள் காட்டுகின்றனர்! உலகப் பெருந் தலைவர்கட்கெல்லாம், இந்தக் காட்சியைக் கண்டால், சிறிதளவு பொறாமையாகக்கூட இருக்கும்!-” என்றெல்லாம் எண்ணி, எந்தப் பண்டித நேரு புளகாங்கிதமடைகிறாரோ, அதே பண்டிதர்தான் ஆட்சி செய்கிறார். அவர்தம் கொற்றம் கவிழவில்லை, எனினும் கோல் சாய்ந்தது என்று அறிந்த மக்கள், எத்துணைப் பேராதரவு அளித்துப் பெருந்தலைவராக்கினோம், காட்டிய வழியெல்லாம் சென்றோம், களத்தில் நின்று கடும் போரிட்டோம், கேட்ட காணிக்கை எல்லாம் கொடுத்தோம், அவரைக் கண்டதும் அகமும் முகமும் மலர நின்றோம், ஆயிரம் புகழுரைகளால் அர்ச்சித்தோம், நீதியின் பிறப்பிடமே! நேர்மையின் இருப்பிடமே! உரிமையின் உயர்வை உணர்ந்த உத்தமனே! மக்கள் மனப்போக்கை மதித்திடும் மாவீரனே! என்றெல்லாம் சிந்து பாடினோம்; வந்தனை வழிபாடு செய்து, நொந்த வாழ்வினைச் செம்மைப்படுத்தி அருளும்படி தேவனைத் தொழுதிடும் பக்தர் போல இவர் முன் நின்றோம்; அவர் பவனி வருகிறார் நமது பட்டினத்துக்கு என்றால், அந்நாளைத் திருநாளாக்கினோம், ஊரெல்லாம் எழிலாக்கி, உளமெலாம் மகிழ்வு மயமாக்கி, மணிக்கொடியைப் பறக்கவிட்டு, மகரதோரணங்கள் கட்டி, பாதைகளைச் செப்பனிட்டு, இல்லங்களில் புத்தொளிகாட்டி, வரவேற்று மகிழ்ந்தோம். நம்மிடம் இத்துணை அன்பினைப் பெற்றவர், நம்மிடம் இவ்வளவு ஆதரவு பெற்றவர், ஐயகோ! இவ்வளவு கன்நெஞ்சராகவா மாறிவிட வேண்டும்? யாரிடம் நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்த்து, ஏத்தி ஏத்தித் தொழுது வந்தோமோ, அவரே அல்லவா, அநீதிக்குப் பரிந்து பேசுகிறார், அக்ரமத்துக்கு உடந்தையாகிறார்! எவரிடம் நல்வழி காட்டிடும் இன்மொழி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோமோ, அவரிடமிருந்தல்லவா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சும், ஏறெடுத்தும் பாரேன் என்ற போக்கும், என் ஆணையை அறியீரா என்ற ஆர்ப்பரிப்பும், என்னை எதிர்ப்போர் என்ன கதி அடைவர் தெரியுமா என்ற மிரட்டலும் பீறிட்டுக் கிளம்புகிறது. பண்டிதரே! பண்டிதரே! பாமரருக்குப் பாதுகாவலர் என்ற பட்டப் பெயர் பெற்றது போதும், இனி ‘இம்’மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்று தண்டனை கொடுக்கும் கொடுங்கோலராகி மகிழலாம் என்று துணிந்து விட்டீரோ! ஏனோ இக் கெடுமதி? எதற்கோ இக்கடும் சித்தம்? இதற்கோ நீர் எமக்கெல்லாம் இத்துணைக் காலம் நம்பிக்கை ஊட்டி வந்தீர். அழகாக ஆடிடும் பாம்பு, "படம்’ கண்டு பரவசமடைந்திருப்போன் சிறிதளவு ஏமாந்ததும், அவனைத் தன் நச்சுப் பல்லால் தீண்டிக் கொல்வது போலல்லவா நிலைமை ஆகிவிட்டது! இறுமாந்து கிடந்தோம். எமது பண்டிதருக்கு இணை ஏது என்று கேட்டு மகிழ்ந்தோம்! அவர் அறியாத பொருளில்லை, அவர் புகழ் பரவாத நாடில்லை, அவர் சொல் கேளாத தலைவனில்லை, அவர் உறவு நாடாத நாடில்லை! கர்ஜனை புரியும் கம்யூனிஸ்ட் நாட்டுத் தலைவர்கள், அவர் முன் காதல் கானம் பாடி நிற்கிறார்கள்! தங்கத் தாளம் கொட்டிப் பிறரை ஆடச் செய்யும் அமெரிக்காவும், தங்கத்தையும் கொட்டிக் கொடுத்துவிட்டுத் தயவுக்கும் காத்துக்கிடக்கிறது! கண்ட துண்டோ இவர் போல்!! என்றெல்லாம் கேட்டோம். மார்பை நிமிர்த்தி நின்று கேட்டோம்! பேதைகளே! என்னை முழுவதும் கண்டுவிட்டீர்களோ! வீர சுதந்திரம் வேண்டி நின்ற கோலம், காந்தியாரின் பாதம் பணிந்த கோலம், வெஞ்சிறையில் வாடிக்கிடந்த கோலம், சமதர்மம் பேசி மகிழ்வித்த கோலம், அரியனை அமர்ந்த கோலம், அவனி எங்கணும் பவனி வந்த கோலம், இவைகளைத்தானே கண்டீர்! இவைகளைக் கண்டு விட்டால் போதுமோ? கருத்தற்றவர்களே! கோலமெல்லாம் கண்டு விட்டதாக உமது எண்ணமோ? இதோ காணீர் ஓர் கோலம்! கண் அலட்சியத்தை உமிழ, கரம் துப்பாக்கி தூக்கி நிற்போரை ஏவிடும் குறி காட்ட நின்று "என்’’ என்று கேட்போரை என் பாதையில் குறுக்கிடுவோரை, ஏன் அறிவைச் சந்தேகிப்பவர்களைச் சுட்டுத் தள்ளிடும் ‘சம்ஹாரக் கோலம்’ காட்டுகிறேன். காணீர் இதுவும் கண்டால் தான் என்னைக் கண்டறிந்து கொண்டதாக முடியும் என்று கூறுபவர் போலல்லவா, கொடுங்கோலர்கள் எந்த மொழி பேசுவரோ, எந்த வழி காட்டுவரோ, எந்த முறை கொள்வரோ, அது போன்று நடக்கத் தலைப்பட்டுள்ளார்! இத்தனைக்கும் நாம் அவர்க்கு இழைத்த தீங்கு ஏதேனும் உண்டோ! மணிமுடியைத் தட்டிப் பறித்திடத் திட்டமிட்டோமா, அவருடைய அரண்மனை வாழ்வுக்குக் குந்தகம் விளைவித்தோமா, அடிதொழ மறந்தோமா, அன்பு பொழிவதை நிறுத்திக்கொண்டோமா! இல்லையே! விளக்குக்கு எண்ணெய் கேட்டோம், விழிக்குப் பார்வை இருத்தல் வேண்டுமென்று’ சொன்னோம், உரிமை கேட்டோம் - உப்பரிகை வாழ்வுகூடக் கேட்டோமில்லை! வாக்களித்ததைக் கேட்டோம், பல காலமாகக் கூறிவந்த ஆசை வார்த்தையை நிறைவேற்றித் தரும்படி கேட்டோம், இழந்ததைக் கேட்டோம், பிறர் எவர்க்கும் இடரோ இழிவோ தராத தன்மான உரிமை கேட்டோம். தாயகம் கேட்டோம்! தாயகம் கேட்டோம், பேயகம் ஆக்கி விடுகிறேன் நாட்டை என்றா இப்பெருந் தலைவர் கிளம்பிட வேண்டும்! பிறப்புரிமை கேட்டோம், அதற்கோ நம்மை வேட்டையாடி வாட்டி வதைக்கக் கிளம்பி விட்டார் இந்த வல்லவர்! தாயகம் கேட்பது தவறா? கேளாதிருப்போன் மனிதன்தானா? கேட்டோர் பெறாது போயினர் என்று வரலாற்றுச் சுவடி காட்டுகிறதோ? தாயகம் தரப்படும், சுற்றிலுமுள்ள கள்ளி காளானும், சூழ்ந்து கொண்டுள்ள வெள்ளை ஆட்சி எனும் முட்புதரும் அழிக்கப்பட்டான பிறகு, நிச்சயம் தாயகம் தரப்படும்! மலைமேல் செல்வது மூலிகை எடுக்க, கடலில் குளிப்பது முத்து எடுக்க, காடு செல்வது சந்தனம் பெற, பூமியைக் குடைவது பொன் எடுக்க என்பது போல, வெள்ளையரை எதிர்த்துப் போராடிச் சுயாட்சி பெறுவதே, தாயகம் அவரவர்க்குக் கிடைக்கச் செய்வதற்கேதான் என்று சொன்ன சொல் கொஞ்சமா, கொடுத்த வாக்குறுதி வெறும் வார்த்தைக் கோவைதானா, தீர்மானங்கள் எழுதப்பட்ட தாட்கள், குப்பைதானா?- இவைதமை மறந்து, மமதை மிகுந்து, தாயகமா வேண்டும் தாயகம்! இதோ அங்குச் செல்லும் வழி என்று இறுமாப்புடன் கூறி, துப்பாக்கியை அல்லவா பேச வைக்கிறார்! கேட்டது தாயகம், அவர் கொடுப்பதோ கல்லறை! இஃதோ இவர், நம்மிடமிருந்து பெற்றதத்தனைக்கும் நன்றி காட்டும் செயல்! என்று கேட்டனர், கொதித்தெழுந்தனர் - ஓடும் இரயில் நின்றது, பாடும் இடம் பீதி கொண்டது, பள்ளிகளில் மாணவருமில்லை, ஆசிரியருமில்லை, வகுப்பறையில் நடைபெற்ற பாடமத்தனையும் அளித்த உரிமை உணர்ச்சி அவர்களைச் சீறிப் போரிடச் செய்தது, அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டனர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் கதிகலங்கிப்போயினர், போலீஸ்! போலீஸ்! என்று கூவியபடி ஓடினர் - எங்கும் கலாம் - பம்பாயில், கோலாப்பூரில், புனாவில், கட்டாக்கில், கல்கத்தாவில், நாசிக்கில்! சட்டம் சரிந்துவிட்டதோ என்று இங்குள்ளோர் கேட்டிடவும், நேருவின் செல்வாக்குக் காகிதக் கோட்டை தானோ என்று வெளிநாடுகளில் கேலி பேசிடவுமானதோர் நிலைமை ஏற்பட்டது. எல்லாக் கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில் தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப் போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுபது பிணங்கள், நூற்றுக்கணக் கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை, எமது உரிமையையாவது தாருங்கள், அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார் காட்டி நின்றனர் மக்கள். இவர்கள்தானா புல்கானின் பவனியின் போது நேரு பண்டிதரின் புகழ் பாடி நின்றவர்கள் என்று எவரும் திடுக்கிட்டுக் கேட்பர். எங்கிருந்து பிறந்தது இந்த வீரம்? எவரிடமிருந்து கற்றனர் இந்த உரிமை முழக்கத்தை? ‘ஜே’ போட்டுத் திரிந்தவர்கள் ‘சீ’ கூறி உமிழ்கிறார்களே, படத்திறப்பு விழா நடத்தியவர்கள், சிலைகளை மூளியாக்குகிறார்களே, என்று எண்ணிச் சர்க்கார் திகைக்கவேண்டி வந்தது. தம்பி, இந்தத் திங்கள், உத்தரப் பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும், வெளிநாட்டுத் தலைவர்கள் மெச்சிக்கொள்வதற்காக, நேரு, முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டோம் என்று வீரம் பேசுகிறார் - ஆனால், நடுக்கம் காலில் மட்டுமல்ல, கருத்திலும் புகுந்து விட்டது. மொழிவழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது. கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை. பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப்போய் நிற்கிறது. புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பம்பாயில் உத்தரப் பிரதேசப் போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப் பிரதேசப் போலீஸ்! இவ்விதம் "ராஜதந்திரம்’ கையாளப்பட்டு வருகிறது. எரிமலை மீண்டும் எப்போது நெருப்பைக் கக்கும் என்று கூறமுடியாத நிலைமை. நாடு பெருஞ் சோதனையில் சிக்கிக் கிடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களே பீதியுடன் பேசுகின்றனர். அருந்தமிழ் நாட்டில் மட்டும், தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்ரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும் அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங் காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்; மற்றையோரில் ஒரு பகுதியினர் மனம் இறுகிக் கிடக்கின்றது; மற்றோர் பகுதியில், மனமாச்சரியங்களை விட்டொழிக்க முடியாது திண்டாடுவோரும், பிரச்சினையின் அளவுகண்டு, நம்மால் எப்படி இதனைத் தீர்த்து வைக்க முடியும் என்று திகைத்துக் கிடப்போரும், பிரச்சினை தீருகிறதோ இல்லையோ, இதை யார் தீர்த்து வைப்பதால் செல்வாக்குப் பெற்றுவிடுவார்களோ என்று பொச்சரிப்பால் பயமடைவோருமாக இங்கு இருப்பதால் தம்பி! அக்கிரமம் செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அதனால் என்ன என்றும், ஆமாம் அப்படித்தான் என்றும், ஆனது ஆகிவிட்டது இனிச் செய்யக்கூடியது ஏதுமில்லை என்றும் பேசும் அமைச்சர்களும், எஜமானுக்கு உடலைச் சொரிந்து விட்டு அவர் மகிழும்போது ஊதியத்தை உயர்த்தச் சொல்லிக் கெஞ்சும் ஊழியக்காரன் போக்கிலே சில அமைச்சர்கள் இங்கு பேசவும், உரிமைக்காகத் துணிந்து பேசுபவர்களை ஏசவும் துணிவு பெறுகிறார்கள் - துரைத்தனம் இருக்கிறதல்லவா துணைக்கு, அதனால். தம்பி! பிரச்சினை உனக்கு நன்கு தெரியும் - விளக்கம் தேவையில்லை. ‘‘மொழிவழி பிரிந்து, இனவழி ஒன்றுபட்டு, சோஷலிசத் திராவிடக் குடி அரசுக் கூட்டாட்சி அமைப்பது” என்பதல்லவா நமது கொள்கை. அதற்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் - அதற்காகப் பணியாற்றி வருகிறோம். நாம் இதற்கு இப்போது போரிட்டாக வேண்டிய கட்டம் பிறந்து விட்டது - போர் என்றால் கண்ணியம் கடமை கட்டுப்பாடு கெடாத, அமைதி குலையாத, பலாத்காரம் தலைகாட்டாத அறப்போர் என்பதையும் அறிந்திருக்கிறாய், தம்பி! அதற்கான வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், பூத்தக் கிடக்கும் மல்லிகைக்கொத்தினைப் பறித்துச் சூடிக்கொள்ளப் பூங்கொடியாள் புள்ளி மானெனத் துள்ளி ஓடுவது போல, களம் சென்று பழக்கப்பட்டும் இருக்கிறாய். தி.மு. கழகத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் உள்ளவர்கள், குறிப்பாக நமது பொதுச் செயலாளர், இதனை மறந்து, இது நாள் வரை வாளா இருந்துவிடவில்லை. நாட்டிலே கிடைத்திடக்கூடிய, நல்லோர் அனைவரும் தந்திடக்கூடிய ‘சக்தி’ அவ்வளவையும் ஒன்றாகத் திரட்டி, ஒரு முனையில் நிறுத்தி, ஒழுங்குபடுத்திப் போரிட வேண்டிய நிலைமை இப்போது. ஆற்றல் நம்மிடம் நிரம்ப இருக்கிறது - ஆயிரமாயிரம் தோழர்கள் வீரச் செயலுக்கும் கஷ்ட நஷ்டம் ஏற்பதற்கும் உளர் - அறிந்து அகமகிழ்கிறேன் - எனினும், ஆற்றல் கொண்டவர் என்ற முறையில், நாம் அறப்போர் துவக்கினால், பிறரிடமிருந்து பெறக்கூடிய துணையை இழந்திட வேண்டி நேரிடக்கூடும் என்பது மட்டுமல்லாமல், நாம் அவசரப்பட்டுத் துவக்கி விட்டதால், அருமையாக அமைய இருந்த ஓர் ‘ஐக்கியம்’ கூட்டு முயற்சி கெட்டு விட்டது என்று பழி கூறுவோர் இருக்கிறார்களே தம்பி! அதற்கேன் இடமளிக்க வேண்டும், சிறிதளவு பொறுத்திருப்போம். பெருமுயற்சி ஒன்று எடுத்துப் பேரவை என்று கூறத் தக்கதோர் கூட்டு முயற்சிக்கு வழி காண்போம் என்று எனக்குத் தோன்றிற்று; ஆச்சரியம் இதிலே இல்லை; பொதுச் செயலாளருக்கும் தோன்றிற்று; அவருடன் அடிக்கடி அரசியல் பிரச்சினைகளையும் கழகப் பிரச்சினைகளையும் கலந்து பேசும் வாய்ப்பினை நான் பெற்று மகிழ்பவன். எனவே, கலந்து பேச முடிந்தது, ஒத்த கருத்து அவர் உள்ளத்திலும் இருக்கக் கண்டேன்; களிப்புற்றேன். இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன் - கண்களை அகலத் திறந்து பார்த்தேன் - ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத் திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. பாழும் மனம் கேட்கிறதா! எவ்வளவு பட்டாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சபலம் இருப்பதுதான் உனக்குத் தெரியுமே. எனவே அப்படியோர் அருஞ்செயலைச் செய்வதற்கு மட்டும் முன் வந்து, நம்மைப் பற்றிக் கொண்டுள்ள வெறுப்பையும், அதன் பயனாகவே அவராகவே வளர்த்துக் கொண்ட வேதனையையும், பொது வாழ்க்கைத் துறையிலே, ஓட்டை ஒடிசல்கள், ஓடுகாலர்கள், கூடுவிட்டுப் கூடுபாய்வோர் ஆகியவர்களைக்கூடச் சகித்துக் கொள்ளுவேன், ‘இதுகளை’ மட்டும் நடமாடவிட மாட்டேன் என்று பேசும் போக்கையும் மாற்றிக் கொண்டால், ஆஹா! இங்கு எத்தகைய இன்பச்சூழ்நிலை, இன எழுச்சி, விடுதலைக் கிளர்ச்சி காணக் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணினேன். நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன் - நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’ களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்? இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது - கலந்து பேசலாம் என்பதாக. சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார் - எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள். ‘‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’’ என்றார் ம.பொ.சி. ‘‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி. யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா - முதலில் பெரியாரும் ம. பொ. சி. யுமல்லவா சந்தித்தனர் - பிறகு தானே நாம், பரவாயில்லை - என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக் கேட்டு இன்புற்றேன். தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார் - களிப்புற்றேன் - அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார். எனினும், 27-ந் தேதி நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம் முன்னாளே காட்டினார். அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது, தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல - ஆனால் ஒன்றுமட்டும் கூறுவேன், அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவையாகாது. மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத் தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கிவாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால் சொன்னவர் தினத் தந்தி! நான் அவரிடம் சொன்னேன், ‘‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூற முடியும்? நாளைக்கு 28-ல், வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் - பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அது மட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?” என்று கேட்டேன். காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம. பொ. சி. யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் - அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒரு சேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார். இதுவும் பொருத்தமாகப்படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும் தான் கவனிக்கப்பட இருக்கிறது; அங்குப் பெரியார், தம்முடைய மற்றப் பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர்; எனக்குப் புரிந்தது - புன்னகையும் பிறந்தது. தம்பி! 27-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொண்ட மாபாவிகளிலே பலர், 28-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொண்டனர்; அங்குப் பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார். ம. பொ. சி. யும், பொதுச் செயலாளர் நெடுஞ்செழியனும், இரத்தினம் M.L.A.யும், பி. டி. இராஜனும், சுயம்பிரகாசமும் 27-லும் 28-லும் கலந்து கொண்டனர்; நானும், இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். பெரியார் 27-ல் வரவில்லை 28-ந் தேதிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். 27-ந் தேதிய கூட்டம் தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக. 28-ந் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரபூர்வமான மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28-ந் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும், அதிலே ‘இதுகள்’ இருந்த போதிலும் வந்தார்! நான் திகைத்துப் போனேன் - உன் நிலை எப்படியோ? ஒன்று மறந்தேனே கூற, 28-ந் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ்மணி கிருஷ்ண சாமி ஐயரும், K.S.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27-ல் இந்த ‘ஜமா’ இல்லை! எப்படியோ ஒன்று தம்பி! இரண்டு கூட்டங்களிலும், நல்ல பலன் விளைந்திருக்கிறது; இதிலே, நமது மூலாதாரக் கொள்கைக்குக் கேடோ, நமது கழகத்தின் கண்ணியத்துக்கு மாசோ ஏற்படக்கூடியது எதுவும் ஏற்படாதது மட்டுமல்ல, நாட்டை எதிர்நோக்கி நிற்கும் பலமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொது முயற்சிகள் ஏற்பட்டால், நாம், தடைக்கல்லாக இருக்க மாட்டோம். என்பதை எடுத்துக் காட்டும் நல்வாய்ப்பும் கிடைத்தது! 27-ல், தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை என்ற பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம், தி. மு. க. தமிழரசுக் கழகம் கம்யூனிஸ்டு கட்சி ன்சர்μய-ஸ்டு கட்சி பிரஜா ன்சர்ஷியலிஸ்டு கட்சி திராவிட பார்லிமெண்டரி கட்சி ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன் வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி திரு. கொச்சி இணைப்புக் கமிட்டி எழுத்தாளர் சங்கம் நடிகர் சங்கம் புதுவை முன்னணி ஐஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி. டி. இராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம. பொ. சி. அமைப்புச் செயலாள ராகவும், நமது என்.வி. நடராசன், ப. ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர். இந்தச் செயற்குழுவில் நமது பொதுச் செயலாளர் இருந்து பணியாற்ற இசைவு தந்தார். இது போன்றதோர் "கூட்டணி’ இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர தயாராகிவிட்டனர். இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை. தேவிகுளம் பீர்மேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம். இல்லையேல், பி. டி. இராஜன் தலைவர், ம. பொ. சி. யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம், ஏசப்பட்டிருக்கிறோம் - எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங் கேட்டினை நீக்கிட - நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு உளம் பூரித்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர் - நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன் - அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு - அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந் தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்தியபான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசியதை நான் என்றும் மறந்திட முடியாது. இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக் கூடும் - நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை? எனினும், ஒன்று நாடு அறியும், பெரியதோர் பிரச்சினை நம்மை நோக்கி நிற்கும் போது, ஒதுங்கி நின்றோம், ஒற்றுமைக்கு இணங்க மறுத்தோம் என்ற குற்றச்சாட்டு, நம் கழகத்தின் மீது ஏற்படாத வகையில் நமது பொதுச் செயலாளர் நடந்து கொண்டார். இந்தக் கூட்டணி அமைந்ததால், தத்தமது கட்சி கலைக்கப் பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணிய மாட்டான். ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள். தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! - என்று இரு தரப்பிலும் பேசிடுவது, அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டு முயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில், தனித்து நின்று, ஆனால் ஒரு அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம. பொ. சி. யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்ற காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந் துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்து கொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. ம. பொ. சியும் அதனையே உற்சாகத்தோடும் உள்ளன்போடும் கூறினார். கொஞ்ச நஞ்சம் அதிலே பயமோ சந்தேகமோ இருந்தாலும், 27-ந் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினை’ப் பார்த்தபோது, இஃதன்றோ, தமிழகம் காண வேண்டிய காட்சி என்று தோன்றிற்று. பார்ப்பனர்களைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும். பார்ப் பனீயத்தை ஒழிக்கிறேன் என்று இதுகள் பேசும்! அது தப்பு, தப்பு, சுத்தத் தப்பு. அக்கிரகாரம் கொளுத்தப்பட வேண்டும். இப்போது செய்து விடாதீர்கள் - நாள் தருகிறேன் - என்று பெரியார் பேசுவது, ஆச்சாரியாருக்கோ, இராமசாமி சாஸ்திரியாருக்கோ, கிருஷ்ணசாமி ஐயருக்கோ தெரியாதா? தெரியும். இவர்கள் பார்ப்பனர்கள் - பார்ப்பனத் தலைவர்கள் என்பது பெரியாருக்குத் தெரியாதா? பேதையும் அங்ஙனம் கூறான். அன்று ஆச்சாரியார் சொன்னார் : ‘‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப்போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்” என்று பேசினார். பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால். பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி! என் அன்புக்குரிய ஆச்சாரியார், நண்பர், தலைவரென்றே சொல்லலாம்” என்று துவங்கி, ‘‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்” என்றார். தம்பி! இது 28! 27-ல் நாமும், ம.பொ.சி. யும் ஜீவாவும் அந்தோணிப் பிள்ளையும், பாரதிதாசன் அமரும் அவையில் பி.டி. இராஜன் நடத்திச் செல்லும் குழுவில் இருக்கச் சம்மதித்தது, 28-க்கு முன்னறிவிப்பு போல் இருக்கிறதல்லவா? ஆமாம், இனிக்கவும் செய்கிறது. 28-ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழிகாண ஏற்பட்டது. 27-ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும், சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப் பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது. 28-ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது. அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம். 27-ந் தேதி செய்த முடிவு, தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20-ல் நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் செய்வது என்பதாகும். தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றிப் போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது. அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில் ! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும். தம்பி! தயார்! தயார்!! அன்புள்ள அண்ணாதுரை 29-1-1956 முத்தான வாய் திறந்து… பொதுக் குழுவில் உறுப்பினர் கருத்துக்கள் - ஐஸ்டிஸ் கட்சியில் அண்ணா - பொது வேலை நிறுத்தம் தம்பி, பொதுக் குழு, நமது பொதுச் செயலாளர் ஈடுபட்டுள்ள சர்வகட்சிக் கூட்டணி முயற்சிக்கு ஆதரவளித்துத் தீர்மானம் நிறை வேற்றி விட்டது. எனவே நாம் அனைவரும் சர்வகட்சிக் கூட்டணி மேற்கொண்டுள்ள ‘பொது வேலை நிறுத்த’ நடவடிக்கையை வெற்றிகரமானதாக்கிக் காட்டும் பெரும் பொறுப்பை மேற் கொண்டு விட்டோம் என்பது பொருளாகிறது. பொதுக்குழுவில், இது பற்றிய விளக்க உரையாற்றினார் நமது நாவலர்; பிற அமைப்புகளிலே வாய் பிளந்து கொண்டு கேட்பவர்கள், கொட்டாவி விட்டபடி கேட்பவர்கள் இருக்கிறார்கள், இவ்வளவு என்ன? மாதாமாதம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ள சட்டசபை உறுப்பினர்களிலேயே பல பேர், முக்கியமான விவாதம் நடைபெறும்போது, மன்றத்தில் இருப்பதில்லை; வெளியே மரத்தடியில் நின்று கொண்டு, காண வந்தவர்களிடம் கதை பேசிக்கொண்டும், ‘காபி’ விடுதியில் உட்கார்ந்து கொண்டும் இருப்பதாக அவ்வப்போது ‘தகவல்’ வெளி வருகிறதே! உள்ளே, பல கோடி மக்களின் வாழ்வினைப் பாதிக்கக்கூடிய ‘பிரச்சினை’ பேசப்பட்டு வருகிற போது நில உடைமையின் உரிமை எந்த வகையிலே கட்டுப்படுத்தப்படுவது, எவ்வளவு அளவு இருக்கலாம் என்பது பற்றிப் பேசப்பட்டு வருகிறபோது, ஆட்சி மன்றத்தில் அமர்ந்திருந்து அக்கறையுடன் பிரச்சினையை அலசிப் பார்த்து அறிவுரை அளித்திட வேண்டியவர்கள், அந்தக் காரியம் செய்வதாக மக்களிடம் வாக்களித்து ‘ஒட்டுப்’ பெற்றவர்கள், காப்பிக்கொட்டை கணேசர் மார்க்கா, காளி மார்க்கா, பவுடரா, பசுவின் பாலா என்பன போன்றவை பற்றிப் பேசிச் சுவை காணுகின்றனர்; மணி அடிக்குமாம் ‘ஓட்’ எடுக்கிறார்கள் என்பதை அறிவிக்க; இவர்கள் அப்போதுதான், அவசரம் அவசரமாக ஓடுகிறார்களாம் உள்ளே! இந்த இலட்சணத்தில் நடைபெறுகிறது, சட்டசபைகளிலே இது! கட்சிக் கூட்டங்களிலோ, சொல்லத் தேவையில்லை. இந்த இழவெல்லாம் நமக்கென்ன புரிகிறது! - என்ற போக்கினரே அதிகம். நமது பொதுக் குழுவில் அங்ஙனமில்லை. காரம் சற்று அதிகம் - எப்போதும் எனக்கு இனிப்பு அதிகமாக இருப்பதைவிடக் காரம் சற்று அதிகம் இருப்பது பிடித்தம்தான் - எனவே நமது பொதுக் குழுவில் ‘காரம்’ சிறிதளவு அதிகமாக இருப்பது காணும் போது களிப்பாகவே இருக்கிறது. ஆனால் காரம், புளிப்பு, கசப்பு, உவர்ப்பு எனும் எதுவும் அளவுடன் இருந்தால், சுவை கெடாது, பண்டம் பாழாகாது, பக்குவம் இருக்கும், பயனும் மிகுதி! எனினும் இவை சிறிதளவு அதிகமானாலும் பரவாயில்லை, உப்பு மட்டும் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொண்டால் போதும் ! நமது பொதுக் குழுவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள் அனைவரும், பிரச்சினைகள் குறித்து அதிகமான அளவு அக்கறை காட்டுவது, உள்ளபடி ஜனநாயக வளர்ச்சிக்குத் தேவையாகிறது; நமக்கென்ன? அது என்னவோ? புரிய வில்லையே! - என்ற அலட்சியப் போக்குத்தான், ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும்; வேண்டிய அளவை விடச் சிறிது அதிகமாகவே காரம் கூட்டப்பட்டாலுங் கூடப் பரவாயில்லை, அக்கறை கொள்கிறார்கள் என்றால், அது வரவேற்கத்தக்கது. எந்தப் பிரச்சினையிலும், நமது ‘பொதுக் குழு’ உறுப்பினர்கள் மிகுந்த அளவு அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது என்று நான் எண்ணுவதற்குக் காரணம், பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் எந்தத் தீர்மானமும் நம் அனைவரையும் கட்டுப்படுத்துவதால், பொதுக்குழு காட்டும் வழியில் நாட்டை நடத்திச் செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதால், பேசப்படும் பிரச்சினைகள் குறித்தும், எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கை பற்றியும், தீட்டிடும் தீர்மானங்கள் குறித்தும், அளித்திடும் தீர்ப்புப்பற்றியும், நடத்தப்படும் ஆய்வுரைகள் பற்றியும், மிகமிக அக்கறை காட்டியாக வேண்டும் - பிரச்சினையின் சகல கோணங்களையும் கண்டறிய வேண்டும். ‘எல்லாம் அவருக்குத் தெரியும’ என்ற எண்ணமும் கூடாது ‘‘எதுதான் நமக்குப் புரிகிறது?” என்ற மனப்போக்கும் ஆகாது; பொதுக் குழுவில் மேற்கொள்ளப்படுகிற எல்லா நடவடிக் கைகளும், நமது பொறுப்பையும் ஆற்றலையும் நம்பியே விடப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்; ஜனநாயகத்தில் அப்போதுதான், தரம், திறம், பக்குவம், பலன் கிடைக்கிறது. நமது வயலிலே விளையும் செந்நெல்லாயினும் நாமே அல்லவா புடைத்து எடுக்கிறோம் - பதர் போகவும், மணி கிடைக்கவும்! நாம் பெற்ற செல்வமாயினும் நாமே அல்லவா, குளிப்பாட்டி அழுக்கு நீக்கி, ஆடை அணி புனைந்து பிறகு கொஞ்சுகிறோம். அதுபோலத்தான், தம்பி, நமது பொதுக் குழுவில் காரியமாற்றுவதற்கான வேலைமுறை பற்றிக் கலந்துரையாடும்போது நாம் அக்கறை காட்ட வேண்டும். தம்பி! நான் ஜஸ்டிஸ் கட்சிக் காலத்திலிருந்து, இப்படிப் பட்ட குழுக்களில் அமர்ந்திருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன் - பெருந் தலைவர்கள், அருகே நெருங்கவே முடியாத நிலையினர், அரண்மனை வாசிகள் ஆகியோர் அமர்ந்து அரசோச்சிய அவைகளிலே, ஒப்பி என்னையும் உடனிருக்கச் செய்திருக்கிறார்கள் - பொப்பிலியும் செட்டிநாட்டுக் (அப்போது) குமாரராசாவும், சர் முகமது உஸ்மானும் அவர் போன்ற வேறு பல கனவான்களும் வீற்றிருந்த குழுக்களில் (அப்போது) அரும்பு மீசையும், கல்லூரி முலாமும் கொண்ட நான் அமர்ந்திருக்கிறேன் - அப்போதெல்லாம், கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மறு அறையில் உள்ளவர்களுக்குக்கூடத் தெரியாது - கேட்காது - அவ்வளவு மெல்லிய குரலில், விட்டு விட்டு வார்த்தைகள் வெளிவரும், அதுவும் ஒருவர் இருவரிடமிருந்து; மற்றையோ ரெல்லாம், இவ்வளவு செல்வவான்கள் நமது முகாமில் இருக்கும் போது தேர்தலைப் பற்றிய பயமென்ன என்று எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். உறுப்பினர்களிலே பலருக்கு, அந்தக் குழுவிலே இடம் பெற்றது, அந்தஸ்தின் அறிகுறியே தவிர, பணியாற்றும் வாய்ப்பு என்றோ, பொறுப்பான செயலென்றோ எண்ணம் இருந்ததில்லை. போடியும் போலாவரமும், வெங்கடகிரியும், வடபாதியும், காளஹஸ்தியும் கார்வேட்டியும், சிங்கம்பட்டியும், உத்தம பாளையமும், பொப்பிலியும் பிறவுமாக வீற்றிருக்கும் இடத்தில் பணியாற்றும் வாய்ப்பு, பொறுப்பேற்கும் பேறு என்றா எண்ணம் இருக்க முடியும்! நான், தம்பி! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட ‘புது இரத்தம்’ - இளவெட்டு - ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக் காட்டு என்ற அளவிலே, அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டிருந்தேன்; அந்த நிலை கிடைத்ததற்கும் காரணம், ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டம் பிறந்ததுதான். தம்பி! அந்தப் பழைய நாளை நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம், அந்த நாட்களிலே, கட்சியின் கனவான்கள், கட்சிக்கு நீங்காத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளிலே, எந்த அளவுக்கு அக்கறை கொண்டவர்கள் என்ற வேதனை தரும் வேடிக்கையை உனக்குக் கூறுவதற்குத்தான்! அப்போது, அரசியலில் மிகச் சூடான பிரச்சினை, திலகர் சுயராஜ்ய நிதி என்ற பேரால் திரட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய், காங்கிரஸ்காரர்களால் பாழாக்கப்பட்ட பயங்கரச் சம்பவம்தான். டி.ஏ.வி. நாதன் எனும் எனது நண்பரும், ‘சண்டே அப்சர்வர்’ ஆசிரியரும், என்னை ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு’ இழுத்துச் சென்றவருமான பி. பாலசுப்பிரமணியமும், ‘ஜஸ்டிஸ்’ இதழில், வெளுத்து வாங்கினார்கள், திலகர் சுயராஜ்ய நிதி மோசடிபற்றி. கடப்பையில், ஜஸ்டிஸ் மாநாடு! நான் அதிலே பேசினேன் - திலகர் நிதி மோசடி குறித்து - அப்போது, நான்தான் சொன்னேனே, ‘அரும்பு மீசை’ என்று-அதற்கேற்ற வகையில், ஆங்கிலத்தில்! பெருந்தலைவர்கள், வழக்கப்படி கைக் கடியாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டனர் - முகம் சுளித்தபடி அல்ல; ஆங்கிலத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமல்லவா, அதனால் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் - ஆத்திரம் தீரப் பேசி முடித்தேன் - அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வளவு பேரும், என் எதிரிகள் போலவும், அவர்கள் யாவரும் திலகர் நிதி மோசடியே நடை பெறவில்லை என்று என்னிடம் வாதாடக் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது போலவும், எண்ணிக் கொண்டு பேசுகிறேன் - பழுப்பேறாத மிளகாய், அப்போது நான் அதனால்! தேனீர் விருந்துக்காகக் கலைந்து சென்றோம் - நான் கற்பனைக் காற்றில் மிதக்கிறேன் - இனிப் பரவாயில்லை - திலகர் நிதி மோசடி பற்றி நாடே சீறி எழும் என்று எண்ணியபடி ஒரு தலைவர், என் நன்மதிப்பினைப் பெற்றவர் - முதுகில் என்னைத் தட்டிக் கொடுத்தபடி, தனியே அழைத்துச் சென்று, ‘‘அண்ணாத்துரை! இதென்ன ஏதேதோ பேசிவிட்டாயே! உன் ஆங்கில நடை அழகை நான் ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் நீ பேசிய அண்டப் புளுகுகளை எப்படி ஏற்றுக் கொள்ளுவேன்? இப்படி எதற்காகப் பேசினாய்!” என்று கேட்டார். நானோ, தம்பி! நாட்டு மக்களுக்கு ஒரு பேருண்மையை விளக்கி விட்டோம், காங்கிரஸ் கட்சியினர் செய்த ஒரு கயமைத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டோம் என்ற பூரிப்பில் ‘ராஜ நடை’ போட்டுக் கொண்டு செல்கிறேன். இந்தப் பெரியவரோ, அண்டப்புளுகு பேசுவது அழகா என்று என்னைக் கேட்கிறார், என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார். நான், கூச்சத்துடன், ஆனால் துணிவினைத் தருவித்தபடி, திலகர் நிதி மோசடிபற்றி அவரிடம் விளக்கலானேன். நான், அவருக்கு! சாமான்யன் - பிரமுகருக்கு!! தொண்டன் - தலைவருக்கு!! அப்படியா? உண்மையாகவா? ஒரு கோடியா? பாழாவிட்டதா! என்று மேலும் மேலும் ஆச்சரியத்தால் தாக்குண்ட நிலையில் கேட்டார் அவர் - நான் திகைத்துப் போனேன். ஆனால், தம்பி, கடைசியாக என்னைத் திணற வைத்தது அது அல்ல. ‘‘அதென்ன பெரியவரே! இதெல்லாம் தெரியாது என்கிறீரே? பத்துக் கட்டுரைகள் வெளிவந்தனவே இது குறித்து, நம் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையில் என்றேன் நான். அமைதியாக அந்த அருந்தலைவர் சொன்னார், ‘‘நான் ஜஸ்டிஸ் படிப்பதில்லை” என்று! தம்பி! அவர் ஜஸ்டிஸ் கட்சியிலே முக்கியஸ்தர் - மற்றோர் முறை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபை அமைத்திருந்தால், அவர் நிச்சயம் மந்திரியாகி இருப்பார்! அவர், ‘ஜஸ்டிஸ்’ படித்திடும் வழக்கமில்லை என்பதை பதறாமல் கூறுகிறார்!! கேட்டுக்கொண்டேன, தம்பி, கேட்டுக்கொண்டேன்!! இப்படி எத்தனையோ!! எதற்குக் கூறுகிறேன் என்றால், ஒரு கட்சியின் முக்கியஸ்தர் அதன் நிர்வாகக் குழுவிலே இடம் பெற்றவருக்கு இந்த அளவுக்குத் தான் ‘அக்கறை’ இருந்தது!! அதை எல்லாம் பார்த்துப் பார்த்து, கசப்பும் கிலியும் கொண்டிருந்த எனக்கு, இப்போது, நமது பொதுக் குழுவில் உறுப்பினர்கள் காட்டும் அக்கறையும், அளித்திடும் ஆய்வுரையும், பெற்றுள்ள தெளிவும், காட்டும் துணிவும், உள்ளபடி, தெம்பு தருவதுடன், தென்னகத்தில் நாம் நடத்திக் கொண்டு வரும் ஜனநாயகப் பரீட்சையில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தம்பி! பொதுக் குழு கூடி, பிப்ரவரி - 20 பொது வேலை நிறுத்தம் நடத்திக் காட்டுவது, தாயகத்தின் தன்மானத்தை அழித்திட எண்ணும் தருக்கரின் அகந்தையை எதிர்த்து அறப் போர் நடாத்திக் காட்டுவது என்று முடிவு செய்துவிட்டது. இனி, உனக்கும் எனக்கும், பெரியதோர் பொறுப்பு ஏற்பட்டு விட்டது. நீயும் நானும், இந்தப் பெரும் பொறுப்பை எந்த அளவில், வகையில் நிறைவேற்றி வெற்றி காணப் போகிறோம் என்பதைக் காண, நாடு தயாராகி விட்டது. பொது வேலை நிறுத்தம் என்றால், தமிழகமெங்கும் ஒரே நாளில், ஒரே முறையில் வெற்றியுடன் நடத்தப்பட வேண்டிய மகத்தானதோர் செயல்!! சாமான்யமானது என்று எண்ணி விடப் போகிறார்கள். தம்பி! இதனுடைய முக்கியத்துவத்தைத் தயவு செய்து நன்றாக விளக்கிச் சொல்லு. இதென்ன பிரமாதம்? அடைக்கச் சொன்னால் அடைக்கிறார்கள்! அமளிக்குப் பயந்து அங்காடி மூடப்படும்! - என்றும் அலட்சியம் காட்டலாகாது. ‘‘இது ஒரு தீவிரமான திட்டமா? அங்கங்கே நடைபெறுகிற காரியத்தைப் பார்க்கும் போது இது உருசியற்ற, பசையற்ற காரியம்!” - என்றும் கவலையற்று இருந்துவிடக்கூடாது. இது வெற்றிகரமாக நடத்த விடக்கூடாது என்று இப்போதே நாட்டை ஆளும் ‘நல்லவர்கள்’ நானாவிதமான காரியத்திலும் ஈடுபட்டு விட்டார்கள் - அதனைக் கவனித்தால், தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எத்தகையது என்பது தெரியும். குதிரை பறிபோன பிறகும் கொட்டிலைப் பூட்டாத குணவான் ஒருவரை முதலமைச்சராகப் பெற்றிருக்கிறோம். அவர் காதில் இடியோசை விழாது, மின்வெட்டு கண்ணில் படாது, பெருங்காற்று அவர் மேலாடையையும் அப்புறப் படுத்தாது! அவ்வளவு இறுகிப் போன மனம்! எதிலும் ஓர் அலட்சியம், அக்கறையற்ற தன்மை! அதது தானாக உருவாகட்டும் என்று இருக்கும் போக்கு! மீன் பிடிப்போன்கூட, ‘தக்கை’ தண்ணீருக்குள் போகிறதா என்று கவனித்தபடிதான், அரைத் தூக்க நிலையில் கரையில் உட்கார்ந்திருக்கிறான். இவரோ, மீன் தானாகத் தூண்டிலைப் பிடித்து ஆட்டினாலும், என்ன தொலை இது! மீன் நேராகத் துள்ளி ஓலைக்கூடைக்குள்ளேயே குதித்துத்தொலைக்கக் கூடாதா என்று கருதும் போக்கினராக இருக்கிறார்! எந்த ஒரு பிரச்சினைக்காக நாடே இன்று கொந்தளித்துக் கிடக்கிறதோ, அது இவருடைய உள்ளத்தைத் தொட்டதாகக் கூடத் தெரியக் காணோம், அபாரமான நம்பிக்கையே இந்தப் போக்குக் காரணம் என்கிறார்கள் ஆதரவாளர்கள்; திகைப்பால் செயலற்று மட்டுமல்ல, சிந்தனையற்றும் போய் விட்டார் என்று செப்புகிறார்கள், ஆய்வுரை வல்லோர். அப்படிப்பட்ட ‘அசமந்த’ப் போக்கினரே, “பொது வேலை நிறுத்தம்’ என்று கூறப்பட்டதும், பேசுகிறார்! ஆமாம், தம்பி! வழக்கமாக ‘இரத்தினச் சுருக்க’ மாகப் பேசும் முதலமைச்சர், ‘வேலை நிறுத்தம்’ என்று கேள்விப்பட்டதும்,”நீண்ட பிரசங்கம்’ செய்திருக்கிறார் - ‘சுதேசமித்திரன்’ கூறுகிறது. செஞ்சியில், முதலமைச்சர் போர்வையைக் கிழித்துக் கொண்டு, மெள்ள மெள்ளப் பழைய காமராஜர் வெளி வருகிறார்!! சர்வ கட்சி மாநாடு கூடி, வேலை நிறுத்தம், கடை அடைப்பு இதெல்லாம் செய்யப்போவதாகத் தீர்மானம் செய்திருக்கிறார் களாம். ஏன் இதெல்லாம்? என்னிடம் வந்து சொல்லலாமே! - என்று துவக்கி, இறுதியில், ‘கபர்தார்’ கூறுகிறார். பம்பாயைப் பார்த்துமா புத்தி வரவில்லை! - என்று கேட்டிருக்கிறார். தம்பி! பொருள் தெரிகிறதல்லவா? பம்பாயில், என்ன செய்தோம் தெரியுமா? தடியால் தாக்கினோம், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினோம், 71-பேர் பிணமானார்கள், நூற்றுக் கணக்கிலே படுகாயமடைந்தனர், ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையிலே அடைத்து விட்டோம், புதிய புதிய போலீஸ்படை கொண்டு வந்தோம் - பட்டாளத்தையே ஏவினோம் - தெரியுமல்லவா - ஜாக்கிரதை! - நீங்கள் ஏதேனும் கண்டனம் தெரிவித்தால், சுட்டுத் தள்ளுவோம்! என்கிறார். பாழாய்ப் போன பதவிக்காக, மெத்தச் சிரமப்பட்டு, சமரசவாதி, எதிர்க்கட்சிகளை அணைத்துச் செல்பவர், எதையும் ஆத்திரப்படாமல் கவனிப்பவர், என்றெல்லாம் ‘ராஜதந்திர’ ‘பட்டுப் பட்டாடை’ போர்த்திக் கொண்டு, புது மனிதராகத் தோற்றமளித்து வந்தார், இத்தனை நாளாக! வேலை நிறுத்தம் - நாடெங்கும் - எல்லாக் கட்சியும் கூட்டாகி நடவடிக்கையில் ஈடுபடும் என்று தெரிந்ததும், பழைய காமராஜர், பட்டாடையைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறார், பார்! பம்பாய் நகரை! என்று கூறிப் பயமுறுத்தப் பார்க்கிறார்! துப்பாக்கி இருக்கிறதாம்! அதனால் நாம் பயந்து சாக வேண்டுமாம்!! தம்பி! துப்பாக்கியின் பெயர் கேட்டுப் பயந்து சாவதைவிட, துப்பாக்கியின் குண்டு பட்டே இறந்துபடுவோமே! தமிழனால் இது கூடவா முடியாது!! குடியாத்தம் தேர்தலில் குடும்பம் குடும்பமாக இவருக்குப் பணியாற்றியதற்கு அவரும் ஏதாவது ஒருவகையில் நன்றி காட்ட வேண்டாமா! அதனால்தான் பம்பாய்! என்று பேசுகிறார். இவர், ‘நம்மவர்’ என்று நாம் நாத்தழும்பேறப் பேசியதும், ‘நல்லவர்’ என்று நாடெங்கும் பறை அறைந்ததும், உள்ளபடி இவரை நம்மவராகவும் - நல்லவராகவும் ஆக்கியிருந்தால், ‘‘பண்டிதரே! உமது பேச்சுக்கு நான் மறு பேச்சுப் பேசாதவன், அறிவீர்!! ஆனால் இதோ, நாடு உள்ள நிலைமையைப் பாரும்!! கொதித்தெழுகிறது, போர்க்கோலம் கொள்கிறது! என்னைக் குணாளனே! குலக்கொழுந்தே! என்றெல்லாம் கூறி மகிழ்ந்த மக்கள், இன்று தாயகத்துக்கு வந்துற்ற கேட்டினைக் கண்டு, மனம் பதறி, என்னையும்மீறி, எழுச்சி பெற்றுள்ளனர், இதனை "ஏதோ’’ என்று எண்ணி விடாதீர், பதவி பெறும் சூதல்ல, துவேச மனப்பான்மையல்ல, இப்போது எழுந்துள்ளது, விழிப்புற்ற தமிழகத்தின் வேதனைக் குரலொலி, தன் மானம் காத்திடத் தாயகம் எழுந்துள்ள காட்சி, இதிலே சகலரும் முனைந்து நிற்கிறார்கள் - சட்டத்தை மதித்திடும் பி.டி. ராஜன் தலைமை வகிக்கிறார். தமிழரசுக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்டுக் கட்சி பிரஜா சோஷியலிஸ்டுக் கட்சி சோஷியலிஸ்ட் கட்சி ஜஸ்டிஸ் கட்சி எல்லைப் பாதுகாப்புக் கமிட்டி இணைப்புக் கமிட்டி எனும் எல்லாம் ஈடுபடுகின்றன. ஏதோ என்னிடம் கொண்டுள்ள ‘சபலம்’ பெரியாரை ஓரளவு தடுத்து நிறுத்தி யிருக்கிறது அதுவும் நிரந்தரம் என்று கூறிவிட முடியாது; தமிழகத்தில் இதற்குமுன் எப்போதும் இது போன்றதோர் கூட்டு முயற்சி உருவானதில்லை - இதனை அலட்சியப் படுத்துவதோ, அடக்கப் பார்ப்பதோ, பெரும் ஆபத்தாக முடியும் - எனவே - தீது பயக்கும் தீர்ப்பை மாற்றுக. தமிழக எல்லைகளைத் தருக! சென்னைக்குத் தமிழ்நாடு என்று பெயரிடுக! தட்சிணப் பிரதேச யோசனையைக் கை விடுக! எதற்கும் நானிருக்கிறேன், எந்த நிலைமையையும் நான் சமாளித்து விடுவேன், என்று நான் ஆச்சாரியார் போலக் கூறி உம்மை ஏமாற்ற விரும்பவில்லை, அமைந்துள்ள கூட்டணியை எதிர்த்து நான் அடக்குமுறை ஏவினால், நாடு காடாகும் - எதிர் காலம் இருள் சூழும் - என்று காமராஜர் டில்லிக்குக் கூறுவார்! ஆனால், அவரோ, நம்மைப் பயமுறுத்துகிறார்! தம்பி!, பொது வேலை நிறுத்தம், நீண்டகாலப் போர்த் திட்டத்துக்கான முதல் முழக்கமாக அமையப் போகிறது! எனவே தான், முதலிலேயே இதனை முறியடித்திடக் காமராசர் சர்க்கார் முயற்சிக்கிறது. டாக்டர் வரதராஜுலு, ‘முட்பொறுக்கி’ ஆழ்வாராகி, நமக்குப் புத்திமதி கூறுகிறார் - வேலை நிறுத்தம் வேண்டாம் என்று பேசுகிறார். பம்பாய் என்றவுடன், தம்பி இவர்கள் சுட்டுக் கொன்ற மக்களின் தொகையும், அடித்து நொறுக்கியவர்களின் எண்ணிக்கையும் மட்டும்தானா தெரிகிறது? பாபம்! அடக்கு முறையிடம் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கும் அன்பருக்கு, இதுதான் தெரிகிறது; நமக்கோ, நாட்டின் தன்மானத்தை, இனத்தின் எதிர்காலத்தை, மொழிவழி அரசுகோருபவரின் உரிமையை அழித்திட, எவ்வளவு உச்ச கட்டத்தில் வீற்றிருந்து அரசோச்சுபவர் முயற்சித்தாலும், நாடு, எவ்வளவு சீறி எழுகிறது, கோழையும் வீரனாகி, கோட்டைகள் மண்கூடுகளாகி, வாழ்வுக்கும் சாவுக்கும், வீட்டுக்கும், சிறைக்கும் வித்தியாசம் தெரியாத மனநிலையை மக்கள் பெற்று, புதியதோர் ஒற்றுமை, அசைக்க முடியாத நம்பிக்கை பெறுகிறார்கள் என்பதல்லவா தெரிகிறது! பதவியைக் கால் தூசு என்று உதறித் தள்ளும் வீரர்களைக் காண்கிறோம்! மேலிடத்துக்குக் காவடி தூக்க, கட்டியங்கூற, மறுக்கும் தீரர்களைக் காண்கிறோம்! கொடிகட்டி ஆள்பவர்கள் கொடுங்கோலராகி விட்டதால், இன்று குலைநடுங்கிப் பதுங்கும் நிலையைக் காண்கிறோம். மராட்டிய இன எழுச்சி கொழுந்துவிட்டெரியக் காண்கிறோம். மாவீரன் சிவாஜியின் மரபினர் நாங்கள் - மமதையாளர்கள் முன் மண்டியிட மாட்டோம் - வேண்டுமானால் - எம்மை வெட்டி வீழ்த்துங்கள் - கழுகு தின்னட்டும், கயவர்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதைவிட அது எவ்வளவோ மேலான தாகும் என்று கனலும் புனலும் ஒருசேரச் சோரும் விழியுடன் கூறிடக் காண்கிறோம். நகரமும் குக்கிராமமும், ஆலையும் அங்காடியும், பள்ளியும் பண்டக சாலையும், துறைமுகமும் பிறவும், பாசறைக் கோலம் அடைந்தது காண்கிறோம். பம்பாயைப் பார்த்துமா புத்திவரவில்லை என்று நாமும் கேட்கிறோம்; அகந்தையுடன் அக்ரமத்தைத் திணிக்கும் போக்கினரைக் கேட்கிறோம். எந்தப் பம்பாயில் நேரு பண்டிதர் வந்தால் ‘ஜனசமுத்திரம்’ கூடுகிறதோ, அங்கு, இன்று, நேரு படத்துக்கே பாதுகாப்புத் தேவைப்படுகிறதே! துப்பாக்கி தெரிகிறதா என்று காமராஜர் கேட்கிறார் - அதற்கு அஞ்சாமல் மார் காட்டி நின்ற மாவீரர்களை நாம் காட்டுகிறோம். தம்பி! துப்பாக்கிகளைத் தாண்டித்தான், தூய விடுதலைப் போர் வெற்றிகளைக் கண்டிருக்கிறது!! எந்தக் கொடுங் கோலனிடம் துப்பாக்கி இல்லை - எந்தக் கொடுங்கோலாட்சி துப்பாக்கியினால் காப்பாற்றப்பட்டிருக்கிறது? எனினும், காமராஜர் இதுபோல் பேசினதற்குக் காரணம், அவருக்கு ஏற்பட்டு விட்ட பீதி! ஆமாம்! வெற்றிகரமான பொது வேலை நிறுத்தம் என்பது, ஆட்சியாளர்களுக்கு ஓர் அவமானச் சின்னம்!! அதை அறிந்துதான், முத்தான வாய் திறந்து முதலமைச்சர் பேசுகிறார் - சத்தான பேச்சல்ல, எனினும் அவருக்குச் சுவையான பேச்சு அது! துப்பாக்கியைத் துரைத்தன மூலம் பெறுவதற்கு முன்பே, அவர், "கட்டை விரல்களை’ ஒட்ட வெட்டி விடுவேன் என்று பேசியவர்தான்!! தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்த தமிழகம் மொழிவழி அரசாக தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் சேர சென்னைக்குத் தமிழ் நாடு என்று பெயர் கிடைக்க இத்தனைக்கும் சேர்த்தே பிப்ரபரி 20!! பொதுக் குழு, வாக்களித்துவிட்டது - நம்மை நம்பி, நாம் கடமையறிந்து, கண்ணியம் தவறாமல், அமைதி குலையாமல், பலாத்காரத்துக்குத் துளியும் இடமளிக்காமல், பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன், பொதுச் செயலாளர், எல்லாக் கட்சியினருக்கும் வாக்களித்து விட்டார் - சகல கட்சியினரும் கூடிய அந்த அவையில், சூள் உரைத்து விட்டார் - உடன் இருந்து ஒப்பமளிக்கும் வாய்ப்பினை நானும் பெற்றேன் - பொதுக் குழுவும் ஏற்றுக் கொண்டது - எனவே, தம்பி! பொறுப்பு இனி உனக்கும் எனக்கும்! புறப்படு! புறப்படு! பிப்ரவரி-20 வெற்றி காண பணியாற்றப் புறப்படு! இதோ நானும் புறப்படுகிறேன்!! இந்தத் திங்கள் 12-லிருந்து 15-வரையில், தமிழகமெங்கும் உள்ள தம்பிமார்களை (பொதுக் கூட்டத்தில் அல்ல) சந்தித்துப் பேச, வரக்கூடும் திட்டம், ‘நம் நாடு’ வெளியிடும்! தம்பி! நான் நேரில் வந்தால்தானா? இதோ என் வேண்டுகோள்! எனக்குத்தான் வீறுகொண்டெழுந்து ஏறுநடை போட்டுப் பணியாற்றக் கிளம்பும் உன் உருவமே தெரிகிறதே, மனக்கண் முன் பம்பாய்! பார்! பார்! என்றல்லவோ பயம் காட்டுகிறார் காமராஜர்! நாம் யார்? என்பதைக் காட்ட வேண்டாமா? நாமென்ன, அடக்கமுறைக் கண்டஞ்சும் கோழைகளா? சாகத் துணியாத சடங்களா? உரிமையின் மாண்பறியா மரக்கட்டைகளா? தமிழரல்லவா நாம்! பிப்ரவரி 20-ல் அது தெரியட்டும், தம்பி! நன்றாக, ஆனால் அமைதியாக, பளிச் சென்று ஆனால் பலாத்காரமற்ற வகையில்! அன்புள்ள அண்ணாதுரை 5-2-1956 மேற்கொண்டுள்ள மேலான பணி தமிழ் நாட்டின் சிறப்பு - பொதுச் செயலாளர் சுற்றுப் பயணம். தம்பி, காஞ்சிபுரம், வாலாஜா, செங்கற்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், புதுவை, கடலூர், சேத்தியா தோப்பு அணைக்கரை, மாயவரம், குடந்தை, தஞ்சை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, நெல்லை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ஓட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, பவானி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர் ஆற்காடு, இராணிப்பேட்டை காவேரிப்பாக்கம், பெருமந்தூர், பூவிருந்தவல்லி. இங்கே மோட்டார், மேலால் போக மறுக்கிறது! அங்கு இதயத்து மொழியை விழி காட்ட, ‘‘இதுவோ நான் உம்மிடம் எதிர்பார்ப்பது?” என்று கேட்டு நிற்கும் துணைவியாரின் கணையால் தாக்குண்டு நின்று விடுகிறார், நமது பொதுச் செயலாளர்; ஆனால் அதற்குள் ஆறு இரவுகள் ஓடிவிடுகின்றன - 12-ந் தேதி கிளம்பி 17-ந் தேதி இரவுதான் சுற்றுப்பயணத்தை முடிக்க முடிகிறது - ஓரளவுக்கு. ஆறு நாட்கள், ஓரிடத்தில் மணிக்கணக்கில் தங்காமல், இரவு நடுநிசிக்குப் படுத்துறங்கி, விடிய எழுந்து பயணம் துவக்கி நடத்தி, இவ்வளவு இடங்களை மட்டுமே காண முடிகிறது - விடுபட்டுள்ள இடங்களோ, இதுபோல் பன்மடங்கு - நாகையும் திருத்துறைப்பூண்டியும், மன்னார்குடியும் பிறவும், கரூரும் ஆத்தூரும், ராசிபுரமும் நாமக்கல்லும் அருப்புக்கோட்டையும், காரைக்குடியும், சிதம்பரமும் வேறுபல பாசறைகளையும் காணமுடியாது - விடுபட்ட சிற்றூர்களோ, ஏராளம்; எனினும், வேறேதும் செய்வதற்கில்லை; இதற்குமேல் அதிக நாட்கள் இந்தக் காரியத்துக்காகச் செலவிடுவதற்கில்லை - என்ற வருத்தம் உடனிருக்க, இவ்வளவேனும் காணவாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதே என்ற உற்சாகம் ஊக்கிவிட, நமது பொதுச் செயலாளர், தம்பி! அனைவரையும் கண்டு பேச வருகிறார். நான் வரக்கூடும் என்று சென்ற கிழமை அறிவித்து இருந்தேன் - சென்னையில் நான் தங்கியிருந்து கவனிக்க வேண்டிய சில பணிகள் ஏற்பட்டுவிட்டன. சிரமம் பாராமல், நாவலர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் - தோழர் என்.வி. நடராசன் உடன் வருகிறார்; தோழர் கண்ணதாசனும் வருகிறார். பிப்ரவரி 20-ல், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், எவ்வளவு அமைதியான முறையில் நடைபெற்றாக வேண்டும் என்பதனை விளக்கிக்கூறிடவும், சர்வகட்சிக் கூட்டணி சம்பந்தமான முயற்சி பற்றி எடுத்துரைக்கவும் வருகிறார். பொது வேலை நிறுத்தம் என்பது சாமான்யமான காரியமல்ல. ஜனநாயகம் நன்கு மதிக்கப்படும் நாடுகளில், ஆட்சியாளர்கள், இதனைத்தான் தமக்கு ஏற்பட்டுவிடக்கூடிய பெருத்த அவமானம் என்று எண்ணுவார்கள். காந்தியார், ‘‘யங் இந்தியா” பத்திரிகையில் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, ‘‘ஆயிரம் பிரசங்கங்களைவிட இந்த அர்த்தால் பலனுள்ளது” அதிலும் பிப்ரவரி-20, எந்த ஒரு கட்சியும் தனி உரிமை கொண்டாடும் காரியமாக இல்லை; பல்வேறு கட்சிகளும் தத்தமது சக்தியைக் கூட்டிக் காட்டிடும் மாபெரும் சம்பவமாகும். எனவேதான், நமது கழகத் தோழர்கள் துளியும் புகாருக்கு இடமற்ற முறையில், எவரும் கண்டு பாராட்டத்தக்க வகையில், நடந்து காட்ட வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சியை, பொங்கி எழும் ஆர்வத்தால் உந்தப்பட்டிருக்கும் தோழர்கள், மறந்துவிடலாகாது என்பதற்காகவே, பொதுச் செயலாளர் இந்த மின்னல் வேகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். தம்பி! காமராஜரும் பயணமாகி இருக்கிறார் - கடுங்குளிர் கொட்டும் அமிர்தசரசுக்கு. இருவரும் போகும் திக்குகள் மட்டுமல்ல, வேறு வேறாக இருப்பது, இருவரின் நோக்கமும் வேறு வேறு!! அமிர்தசரஸ் சென்றுள்ள காமராஜர், நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு வரப்போகிறார் - உங்களைக் காண வருபவரோ, நீங்கள் காட்டிடும் உற்சாகத்தைக் கண்டு களித்துப் புதியதோர் நம்பிக்கை பெற்று வரப் போகிறார். திரும்பி, வந்தவுடன், காமராஜர், போலீஸ் மேலதிகாரி களுடன் பேசக் கூடும். ‘‘பிப்ரவரி-20, என்ன நேரிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” ‘‘சர்வகட்சிக் கூட்டணியாக இருப்பதால், சற்று வெற்றிகரமாகவே, அர்த்தால் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.” ‘ ‘எந்த நிலைமையையும் சமாளிக்கத் தக்க ஏற்பாடுகள் உள்ளன அல்லவா!” ‘‘ஆகா! தாராளமாக தங்கள் உத்தரவைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” ‘‘ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள்?” ‘‘வேலை நிறுத்த விஷயத்திலே அக்கறை காட்டுகிறார்கள், ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் கூட்டங்களில் - உற்சாகம் காட்டுகிறார்கள்.” ‘‘அது சரி! அது சரி! ஒரு நாளைக்கு நேருவை அழைத்து வந்து கூட்டம் போட்டால் போகிறது. இவர்கள் இப்போது செய்யும் காரியம் ஒரு பிரமாதமா? அது கிடக்கட்டும் - நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?” ‘‘நாமா. . . . தாங்கள் சொல்கிறபடி செய்யலாம். . . . முதலிலேயே, முக்கியமானவர்களைப் பிடித்துப் போட்டு விடலாம். . . . ” ‘‘நாற்பது ஐம்பதாவது இருக்கும் போலிருக்கே. . . . பிடிக்கப்பட வேண்டியவர்கள். . . .” ‘‘இருக்கும். . . . கமிட்டியில் 27 பேர். . . .” ‘‘கமிட்டியை அப்படியே. . . .” ‘‘அரெஸ்டு செய்துவிடலாம், எல்லோருடைய விலாசமும் குறித்து வைத்திருக்கிறோம். அன்றாட நடமாட்டம் பற்றிக் கூட குறிப்பு எடுத்திருக்கிறோம். விநாடி தவறாமல் கண்காணித்து வர ஏற்பாடு இருக்கிறது.” ‘‘அரஸ்டு செய்யலாம் ஆனால். . . .” ‘‘முன்பு தி.மு.க. மும்முனைப் போராட்டத்தின் போது, இது போலத்தான், அவர்கள் கூடி முன்னேற்பாடுகள் செய்வதற்குள், துளியும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தலைமை நிலையம் சென்று, சுற்றி வளைத்துக் கொண்டோம்; கமிட்டியை அப்படியே கொண்டு வந்து விட்டோம்.” ‘‘ஆமா. . . மாம். . . .” ‘‘ஏன்? ஏன்? ஏன் சிரிக்கிறீர்கள்?” ‘‘சிரிப்பா! இது என்ன சிரிப்பு! அப்போது நானும் என் நண்பர்களும், இதைவிடப் பலமாகக் கைகொட்டிச் சிரித்தோம். . . . என்ன பைத்தியக்காரத்தனம்! சீப்பை ஒளிய வைத்துவிட்டால் கலியாணம் நின்றா போகும்?. . . . இந்தக் கிழவர், இப்படி முக்கியமானவர்களை முன்னாலேயே சிறையில் போடுகிறாரே. . . . அந்த ஆத்திரம் போதுமே, மற்றவர்களுக்கு வீராவேசம் ஊட்ட! என்ன பைத்தியக்காரத்தனமான போக்கு இது? என்று பேசிச் சிரித்தோம். . . .” ‘‘அப்படியானால். . . .?” ‘‘அதே பைத்யக்காரத்தனத்தை நானும் செய்வதா? வேறு முறை கூறுங்களய்யா. . .” ‘‘வேறு. . . ! கலகம் குழப்பம் என்றால் முதலில் கண்ணீர்ப் புகை குண்டு வீசி விட்டு, பிறகு துப்பாக்கி. . . .” ‘‘பிறகு கீழே விழும், பிணத்தைப் பார்த்து மக்கள், என்னை வாழ்த்துவார்களா! . . .” ‘‘அதுவும் கவனிக்க வேண்டியதுதான். . .” ‘‘கடைகளை மூட வேண்டாம் என்று கூறி, போலீஸ் பாதுகாப்பு பலமாகக் கொடுத்து, கடை அடைப்பைத் தோற் கடித்தால் என்ன? அதற்குப் போதுமான போலீஸ் இருக்கிறதல்லவா?” ‘‘மாமாங்கத்துக்குப் போவது போக, மிச்சமிருப்பதைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். . . . ஆந்திரா, மலபார். . . . போலீசும் தருவிக்கலாம். . . . பட்டாளத்தைக்கூட பம்பாயில் தருவித்தார்கள்.” திரும்பி வந்ததும் நமது பொதுச் செயலாளரோ, எங்கும் எழுச்சி எங்கணும் முழக்கம் எவர் உள்ளத்திலும் உறுதி சென்ற இடமெல்லாம் வீரம் பரணி பாடி நிற்கின்றனர் தியாகத்துக்குத் தயாராக உள்ளனர் என்ற "சேதி’யை, இங்கு அவர் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் என்னிடமட்டுமல்ல, சர்வகட்சிக் கூட்டணியில் உள்ள தலைவர்களிடமெல்லாம் கூறப் போகிறார். - ஆமாம், தம்பி! உன்னைக் கண்டால், எவர் உள்ளத்திலேதான், வீர உணர்ச்சியும் நம்பிக்கையும் ஊற்றெடுக்காது. ஆர்வம் கொழுந்து விட்டு எரிகிறது தம்பி, எங்கும். தமிழ் இனம், தன் இயல்பை இழந்துவிடவில்லை; வீழ்ச்சியுற்றது போல் காணப்படினும், எழுச்சி பெற நேரம் அதிகம் பிடிக்காது என்பதை எடுத்துக் காட்டவும், இடித்துக் காட்டவும் முடியும் தமிழகத்தால் என்பதை உணருகிறேன். தயார்! தாயர்! என்ற பேரொலி கிளப்பிடும் ஆயிரமாயிரம் தோழர்களைக் காணும்போது, வீரம் எத்துணை இங்கு இருக்கிறது என்ற எண்ணம் தேனென இனிக்கிறது. . . . ஒருகணம் - எனினும், மறுகணமோ, இத்துணை வீர உணர்ச்சி வீறிட்டெழும் நிலையில் நாடு இருக்கும் போதே, எத்தனை அக்ரமத்தைச் செய்ய, அநீதியைப் புரியத் துணிந்து விட்டனர், நேரு சர்க்கார் என்பதை எண்ணும்போது, துக்கம் நெஞ்சினைத் துளைக்கிறது. ஒட்டகத்தின், “நகாரா’ கொட்டுவோர்- ஓராயிரம் ஈராயிரம் என்ற அளவில், புதுச்சட்டை கிடைத்த மகிழ்ச்சியுடன் தொண்டர்கள். பூர்ண கும்பம் எடுப்போர், பொட்டிட்டு மகிழ்வோர், தட்டுத் தூக்குவோர், தாளம் கொட்டுவோர், கட்டியங் கூறுவோர், கானம் பாடுவோர், விட்ட அம்பு பாய்வது போலாகிய இட்ட பணியினைச்செய்து முடித்திடவல்லேன் என்று வீரம் பேசுவோர், வெட்டி வா என்றால் கட்டி வருவேனே நான்! என்று வீம்பு பேசி விருது தேடுவோர் ஆகிய அணிபணிபுனைந்த படைபுடை சூழ நேரு பெருமகனார், தலைவர் பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் தேபர் பராக்குக் கூற, அமிர்தசரசில் பவனி வருகிறார் - அவர் ஆணையை நிறைவேற்றித் தருவதற்கு, அதன் பயனாக அரசுக்கு இழுக்கு வரினும் மக்களுக்கு உரிமை பறிபோயினும், ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கப்படினும் கவலையில்லை, அவருடைய புன்னகை நம்மைக் கவர்னராக்கக் கூடும், அவருடைய தயவு நம்மைக் கோடீஸ்வரனாக்கக் கூடும், அவர்”தெரிசனம்’ நமக்கு எத்தனையோ இலாபம் தரவல்லது, அது போதும், இந்த மக்கள் கிடக்கட்டும்! இதுகளுக்கென்ன! வறட்டுக் கூச்சலிடும் - சில நாட்கள்!! வீரம் பேசும்- சில வேளைகளில் காட்டவும் செய்யும் - துரத்தி அடித்தால் போகிறது - துப்பாக்கிக்கு முன் என்ன செய்யும் இந்தக் கும்பல்!! - என்று இறுமாந்து கூறிக்கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சர்கள், முடிச்சமைச்சர்கள் ஆகியோர். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும் கனோசும், காமரூபமும் மாளவமும், கூர்ஜரமும் பிறவும் உருவாகாத நாட்களிலேயே, அயோத்தியும் அஸ்தினாபுரமும், காசியும் ஹரித்துவாரமும் "திவ்யக்ஷேத்திரங்கள்’ ஆகாததற்கு முன்பே, பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிரி எனும் பல்வேறு துறை முகங்கள் கொண்டதாய் விளங்கியது எந்த நாடோ, எந்த நாட்டிலே முரசு மூன்று. தமிழ் மூன்று வகை என்றும், தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டிருந்தனவோ, எந்த நாட்டிலே நிலமே ஜவகையாக இயல்பும் எழிலும் பயனும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவழமும் பிறநாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித்தனரோ, எந்த நாட்டுப் புலவர்கள் புவியாளுவோரையும் துச்சமென்றெண்ணி அறநெறிக்கு மக்களை அழைத்துச் சென்றனரோ, எந்த நாட்டிலே முகிலின் முழக்கமும் முழவின் ஒலியும், மின்னல் ஒளியும் கன்னல் சுவையும், ஆடலழகியரின் கடையிடையும் ஆற்றலரசர்களின் கட்டாரியும் கொல்லவும் வெல்லவும் பயன் பட்டனவோ, எங்கு, நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு, ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை என்றபடி, பேரிலக்கியங்கள், கற்றோர் ஈட்டிய கருவூலமாக உளதோ, அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையினதான மொழிக்கும் கலைக்கும் இடமளித்துவிட்டு, இடர்ப்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத்தக்க விதத்தில் மானமழிந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்படுகிறது! எட்டுத் திக்கும் ஒரு காலத்தில் புகழ்க் கொடி பட்டொளி வீசிப் பறந்திட்டதாம்! இன்றோ, திக்குத் தெரியாத காட்டிலே சிறகொடிந்த நிலையில், தத்தித் தத்திச் செல்லும் தத்தை போலாகிக் கிடக்கிறது! முத்துப் பந்தலளித்து முழங்காற்படியிட்டுப் பணிந்தான் ஓர் மன்னன்! தந்தக் குவியல்களைக் காலடியில் கொட்டி, அரசர்க்கரசே! என்று அஞ்சலி செய்தான் மற்றோர் வேந்தன். படைகொண்டு வருவேன் என்று கூறினதும், திறை கொண்டு வந்தேன் என்று பதிலிறுத்தனர் மன்னர் பலர். காவிரிக் கரையிலே காதல் கீதம் பாடிய கட்டிளம் காளை, கட்கம் ஏந்திக் கங்கைக் கரையினரைப் போரிலே வென்று, அவர்தம் தேர்ச்சிலைச் சிலையினை, தமக்கு அதரத்தேனளித்து ஆட்கொண்ட ஆரணங்குகள் விளையாட வைத்திருந்த பொம்மைகளுக்கு அளித்தானாம். தம்பி! தம்பி! ஏன் பிறந்தோம் இந்நாட்டில்! பிறந்திடினும், தொதவர், தொம்பரவர் போல் இருந்து தொலைத்திடக் கூடாதா! ஏனோ, நம்மை எல்லாம் தமிழர் என்ற இன உணர்வும், அதனாலாய பெருமையினையும் பெறுமாறு நாவலரும் பாவலரும் செய்துவிட்டனர். அதனாலன்றோ நமக்கு நமது நாட்டின் அந்நாள் ஏற்றம் தெரிகிறது; தெரிவதனாலன்றோ, இன்றுள்ள இழிநிலையும், இனி எதிர்காலம் எப்படியோ என்ற அச்சமும் பிடித்தாட்டுகிறது- அல்லற்படுகிறோம் - அழுது நிற்கிறோம். இவை பற்றி ஏதும் தெரியாத காரணத்தால், அதோ பார், அந்த ‘அரும்பெருந் தலைவர்’ தொல்லையற்றுத் துயரற்று, அமிர்தசரசில், ஆனந்தமாகக் காட்சிகளைக் கண்டு களித்தபடி, தமிழ் நாடு தனியாக இருத்தல் கூடாது என்கிறீர்களா? சரி சரி! மெத்தச் சரி, தட்சிணப் பிரதேசமா? ஆஹா, அதனாலென்ன, ஏற்பாடு செய்வோம், கேரளமும் கருநாடகமும் தமிழகத்துடன் கூடி, ஓரரசு ஆகட்டும் என்று ஆணை பிறப்பிக்கிறீர்கள். சரி, அங்ஙனமே ஆகுக என்று கூறிக்கொண்டு நிற்கிறார், இங்கே அலைகிறார் அலைகிறார், ஐயகோ, தமிழரே! பரணை எல்லாம் பழந்தமிழ்ச் சுவடிகள், பாளையமெங்கும் பாவாணர் மரபுகள், வயலெலாம் செந்நெல், வாவி எல்லாம் வாளை, நினைவெலாம் நேர்மையின்மீது என்றெலாம் செப்பிடுவர் செந்தமிழ்க் காவலராம் பாவலர் பலர். இன்றோ, தமிழகம் தமிழர்க்கு இல்லையாம், தகுதியற்றோமோ, திறமை அற்றோமோ, அறிந்தோமில்லை. மொழி வழி அரசு எனப் பலகாலும் மொழிந்து வந்தனர், வாக்கினைத் தாமே மாய்த்திடும் வன்கணார்களாகி விட்டனர் ஆளவந்தோர். எனவே அரசு இனி, தமிழ் நாட்டுடன் அமையாது என்று அறைந்து விட்டனர்; பிற மொழியாளருடன் கூடி ஓர் அரசு நடாத்துவதே பெருமை அளிக்குமாம், சிறுமை ஒழிக்குமாம், பிணக்குத் தீர்க்குமாம், பிளவு போக்குமாம். இங்ஙனம் ஏலாதனவெல்லாம் கூறிப் பொய்யுரையைத் துணிந்து கூறிப் பொலிவுள்ள தமிழகத்தை, களமாக்கத் துணிந்து விட்டனர். சங்கம் அறிந்த சான்றோரே! சிலம்பொலி கேட்டுச் சிந்தையில் தேன் பெய்தது என்று கூறிக் களித்திடுவோரே? வீரம் செறிந்த தமிழ் நாடே! உன்னை வாழ்த்துகிறேன் என்று போற்றிடும் அன்பர்காள்! ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி வாக்கினை மாய்த்திட ஓர் மாபாதகத் திட்டம் வகுத்து விட்டனர் - வாய்க் கரிசியும் கைக்கிழங்கும் கிடைத்தால் போதுமென்றெண்ணி விட்ட ஆளவந்தார்கள், அத்தீய திட்டத்தினை நிறைவேற்றித் தர ஓப்பம் அளித்து விட்டனராம். ஓங்கு புகழ் நம்முடையது என்று ஓராயிரம் புலவர் பெருமக்கள், நம் இதயம் விம்மும் அளவு பாடி வைத்து விட்டனர்! ஒரு நொடியில் அதனை அழித்திடுவேன் என்று கூவுகிறார் நேரு; தாளம் கொட்டுகிறார் காமராஜர். இதற்கென்ன செய்வது? கூறுமின்! கூறுமின்! கூடிப் பணியாற்றிட வாரீர். பிப்ரவரி 20-ல், முதல் முழக்கம். அன்று தமிழரின் பெருமூச்சு, டில்லி செங்கோட்டையில் வீற்றிருக்கும் பாறை மனம் கொண்டோருக்கும் இரக்கம் எழத்தக்கதாக வேண்டும். அதற்கான அழைப்பினை நேரிலேயே தந்துவிட்டுப் போகவே, இதோ நான் வந்துள்ளேன். உமது வீரத்தை, ஆர்வத்தை, மொழிப்பற்றை, நாட்டுப் பற்றை, பண்பு கெடாமல் பணியாற்றும் திறத்தை நம்பி, பிறவேறு கட்சியினர் கூடியதோர் பேரவையில், சூழ் உரைத்து விட்டேன். அவர்களும் ஆமாம், உமது அணி வகுப்பின் ஆற்றலை நாங்கள் அறிவோம், நாடு அறியும் என்று கூறினர். நண்பர்களே, நாள் அதிகம் இல்லை. நாடெங்கணும் நடந்தாக வேண்டும், கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும். எனவே, உடனே துவக்குவீராக; வெற்றிக்கு வழிவகுத்துத் தருவீராக! தமிழகம், தன் வீரத்தை, உமது வெற்றியின் மூலம் விளக்கட்டும் - வீறு கொண்டெழுந்து இரத்தச் சேற்றிலே தள்ளப்பட்டாலும் தாயகத்துக்கு வர இருந்த தாழ்வினைத் தடுத்திடத் தவறினேன் இல்லை; இன்னுயிர் போகுமுன் அன்னையின் பொருட்டுப் பணியாற்றிவிட்டேன்; ஆவி பிரிகிறது எனினும், கண்மூடுமுன், இக்காரியத்தைத் தொடர்ந்து நடாத்தி வெற்றி காணும் வீரர் குழாம் எனைச்சூழ நிற்கக் காண்கிறேன் - அக்காட்சி தீட்டிடும் புன்னகையுடனேயே, புகழ்பெற்று மறைகிறேன் - தமிழ்நாடு மறையாது - மறையாது - என்று கூறும் அளவுக்கு வீர உணர்ச்சி கொள்வீராக - என்றெல்லாம் எடுத்துக் கூறிக்கொண்டு அலைகிறார், வாள் பெற உலைக்கூடமெங்கணும் சென்று காணும் பான்மை போல, அறப்போருக்கான அணிவகுப்பு அமைத்திட, வீரர் கோட்டமெலாம் வருகிறார். அவர்தம் வருகையின் போது வெற்றுரையும் வேண்டாம், விழாவும் கூடாது - வேலைத் திட்டம் தாருங்கள், பெறுங்கள் - நெடுஞ்சாலையோரமெல்லாம் நின்றிருந்து உரையாடுங்கள், கடும் போராயினும் கலங்க மாட்டோம் என்ற உறுதியினைத் தாருங்கள்; அமிர்தசரசில் ஆக்கப்பட்டு வரும் அக்ரமம், எந்த வடிவுடன் வந்தாலும், அதனை எதிர்த்தொழிக்கா முன்னம், ஊண் கொள்ளோம், உறக்கம் இல்லை என்று உறுதி கொள்ளுங்கள். ஆளைக் கொண்டுவருபவருக்கு ஜயாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் - என்று இந்தியப் பேரரசு, நாகர் தலைவன் பிஜோ குறித்து, அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது; அந்த உரிமைப் போர் வீரனுடைய சிரிப்பொலியை எதிரொலித்துக் கொண்டு குன்றும் மலையும், குணங்கெட்ட குடிலர்களின் கொற்றம் கொடுமை பல செய்கிறது, கொடுமை அதிகமாகவாக, அது அற்று வீழ்வது உறுதி என்று கூறுவது போல் நிமிர்ந்து நிற்கின்றன. நமக்கும், அது போன்றதோர் ‘கொடுமை’யினைத் தாங்க வேண்டிய கட்டம் பிறக்கக்கூடும். பிப்ரவரி 20-ஒரு பெரும் பயிற்சி நாள். சர்வ கட்சிக் கூட்டணியின் பின்னால் திரண்டுள்ள சக்தியினை அறிந்துள்ள சென்னை சர்க்கார், டில்லி, சிண்டு பிடித்திழுத்து மண்டை ஓட்டு மாலையைக் கொண்டு வந்து தந்தாக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாலொழிய, நம்மைத் தீண்டும் என்று கூறுவதற்கில்லை, தீண்டியவர் என்ன ஆனார் என்பது அந்த நிலையிலேயே முதலமைச்சரானவருக்கா தெரியாமற் போகும்? ஆனால் அதிகாரம், அத்தகைய அகந்தையை ஈன்றெடுத் தளித்திடும் - அதன் வயப்பட்டோருக்கு முன்னாள் நிலைமைகளும் நினைப்புகளும்கூட மறந்து போவதுண்டு. எனவே, எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் தாங்கிக் கொள்ளும் தியாக உள்ளத்துடன் பணியிலே ஈடுபட வேண்டும். உனக்கென்ன, அறிவுக்கோ ஆற்றலுக்கோ பஞ்சமா? பழக்கமோ பயிற்சியோ இல்லையா? களம் பல கண்டவன்! வாகை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது; வழியிலே உள்ள முட்புதருக்காக அஞ்சிச் சிரித்திடும் முல்லையைப் பறித்திடாது திரும்பிடும் பேதையும் உளனோ? தம்பி! உன்னைக் காணவரும் பொதுச் செயலாளரிடம் உறுதி கூறு, பிப்ரவரி 20-ல் அமைதி கெடாது பலாத்காரம் தலைகாட்டாது கண்ணியம் கெடாது கட்டுப்பாடு குலையாது களங்கம் ஏற்படாது! என்று. உள்ள நாட்களோ குறைவு, மேற்கொண்டுள்ள பணியோ மேலானது. அன்புள்ள அண்ணாதுரை 12-2-1956 புலித்தோலும் எலிவாலும்… மறவரும் மகளிரும் - மொழிவழி அரசும் பெரியாரின் கருத்தும் தம்பி, கிள்ளையும் நாகணவாய்ப் புள்ளினமும் அளித்திடும் இசையையும், சிரித்திடும் முல்லை பரப்பிடும் மணத்தினையும், வீசிடும் தென்றல் அளித்திடும் குளிர்ச்சியினையும், பெற்று மகிழ்ந்தவன்; இத்தனையையும் இவற்றினுக்கெல்லாம் மேலானதாக ‘காதல்’ கனிரசத்தினையும் பருகிடும் பருவத்தினன்; சோலையும் சாலையும், வாவியும் வயலும், மாடமும், கூடமும், எங்கும் எழிலாளின் இன்முகம் அன்றோ தெரிகிறது, ‘குறி’ இடம் சென்று அக்குமரியிடம் கொஞ்சுமொழி பெற்று மகிழ்வதற்குத் தடையாகவன்றோ கதிரோன் கண்விழித்தபடி உள்ளான், அவனுக்கு மதி புகட்டிட வளர்மதியே வாராயோ! என்று எண்ணிடும் இயல்பினன்; கொழுகொம்பினைத் தழுவிடும் கொடியினையும், பெடையுடன் பெருமிதத்துடன் உலவும் அன்னத்தினையும் கண்டு காதல் தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்தினனாகி தோழியின் பேருதவியைத்தொழுது பெற்றுத் தோகையாள் வரக்கண்டு விழ கூத்தாட, மொழி குளற, வழி தெரிந்ததோ, வாடாப்பூ மேனியாளே! மனம் இளகிற்றோ இப்போதேனும்! அச்சமும் மடமும் அரிவையர்க்கு அணிகலன் தான், ஆயினும், பிஞ்சுநிலை சென்றுவிட்ட என்னை ஏறெடுத்தும் பாராதிருந்திடலாமோ! என்றெல்லாம்பேசி, ஏந்திழையாளை, அருவிக்கரைக்கழைத்து மருவி மகிழ்ந்திடும் மணாளன், பிறகோர் நாள், என்ன இக்காளை, பெற்றோர் ஈட்டிய பெரும் பொருளைத் தின்றுதீர்த்திடும் போக்கினனாக உள்ளானே, குந்தித் தின்றால் குன்றும் கரையும் எனும் மொழியினையும் இவனயானோ! கடல் கடந்து சென்றேனும் பொருள் ஈட்டி வாழ்வதன்றோ பெருமைக்குரியது என்ற தமிழ் முறையை இவன் ஏனோ அறியாது போயினன் என்று பெரியோர் பேசிடக் கேட்டு, பொருள் ஈட்ட வெளிநாடு செல்லக் கிளம்புவான் - முன்னாளில் தமிழ் இளைஞன். செல்லுமுன்,சேயிழையை அருகழைத்து ஆயிரம் உறுதி மொழிகளை அளித்து, முகம் துடைத்து, முத்தமளித்து, மெல்ல மெல்லச் சேதிதனைச் சொல்லுவான்; சொல்லக் கேட்டதும் அனலிடை மெழுகாவாள்; புனல் பொங்கிடும் கண்களைக் கண்டு கலங்குவான், அவன், ‘‘பொன்னா வேண்டும்?” என்று கேட்பாள் அப்பூவை, அதைப் பெற என்னைப் பிரியவா துணிந்தீர் என்பாள்; உமக்கு அந்தத் துணிவு ஏற்படக் கூடும், ஆடவருக்கே அது இயலும், எனினும் என்னிடம் கூறுகிறீரே, நான் அதைக் கேட்டுக்கொள்ளும் துணிவு உடையவளோ- என்பாள்-இவ்வளவு மங்கையரின் தனி மொழியாம் கண்மூலம்! பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம், மின்னிடும் கண்ணொளியே போதும். பேச்சுக்கும் ஏச்சுக்கும் அஞ்சினேன், பிறிதொன்றில்லை. ஆடிப்பாடிக் காலங் கழிக்கிறான், பொருள் ஈட்டும் வகை அறியான் என்று பேசுவது கேட்டேன் - பிரிய எனக்கு மட்டும் மனம் இடம் தருமா? என்றெல்லாம் கூறி, அவளை அருகே அழைத்துக் கண்ணீர் துடைத்திடுவான். பொருள் பெறப் பிரிதல் - இத்துனை இடர்ப் பாட்டுடன் துவங்கும். எனினும் அதே மங்கை, அத்தமிழ் மகன் பொருள் ஈட்ட அல்ல, புகழ் ஈட்ட, தாய்நாட்டின் மானம் காக்க, உரிமையை அழித்திட எண்ணிடும் உலுத்தரின் கொட்டத்தை அடக்கிக் களம் செல்லக் கிளம்புங்காலை, கண்ணீர் சிந்தியோ, கரம் கூப்பியோ, தடுத்து நிறுத்தியோ, தழதழத்த குரல் காட்டியோ, காதற்கணவனை இல்லத்தில் இருந்திடச் செய்வதில்லை! வாளையும் வேலையும் எடுத்துத் தந்து வாகையுடன் திரும்பி வாரீர் என்று கூறி வழியனுப்பி வைப்பாள்! ஆற்றல் மறவர், அவர் தமக்கு ஏற்ற மகளிர்!! எல்லையைக் கடந்து பகைவன் வந்ததில்லை - வந்தவன் தோற்றோ டாமல் இருந்ததில்லை. பிறருடைய கொல்லையில்கூடத் தமிழன், காரணமற்று நுழைந்ததில்லை - எனினும், தாயகத்தில் ஒரு பிடி மண்ணையும் மாற்றான் கவர்ந்திட விட்டதில்லை. வேண்டிக் கேட்பவனுக்கு இன்னுயிரும் தருவான்; பகை எனிலோ ஏழு கடலையும் கலக்குவான்! கட்டழகியின் கட்டளைக்குக் கட்டுண்டு, மலர் கொய்து தருவான்; அதே கரங்கள், தாயத்தை இழித்துரையாடுபவனின் தலையினைக் களத்தில் கொய்திடும். செம்பஞ்சுக் குழம்பெடுத்து அவள் பாதத்தில் தடவி மகிழ்பவன், மாற்றான் வீசிய வேல், மார்பிலே பாய்ந்திட, அதனை அப்புறப்படுத்தும் போது, கொப்பளித்துக் கிளம்பும் குருதியைக் கண்டு களித்திடுவான் களத்தில், வீரமிக்க நாட்களைப்பற்றி விரித்துரைத்திடும் ஏடுகளிலே காணக்கிடக்கும் சொல்லோவியம், பலப் பல. எந்நாட்டவர் கண்டறியினும், நாமேன் இந்நாட்டவராகப் பிறந்தோமில்லை என்று எண்ணுவர், அத்துணை ஏற்றம் பெற்று வாழ்ந்தனர், கொற்றம் இழக்காத நிலையிலிருந்த தமிழர்! இன்று? கொற்றமில்லை; அஃது இல்லையே என்ற மனக் குமுறலும் போதுமான அளவு எழக் காணோம். புகழ் ஈட்டச் செல்லுங்காலை, பொற்கொடியும் தடுத்திடாள், பழந் தமிழ் நாட்டில் என்று செப்பும் ஏடுகளே, செல்லரித்துக் கிடக்கின்றன! எனவேதான், இன்று எவனுக்கும் இந்நாட்டில் எதனையும் செய்து வெற்றிபெற முடியும் என்ற துணிவு பிறந்து விட்டது; பணிவோனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப்படும், எதிர்த் திடுவோனை இருக்குமிடம் தெரியாமல் ஒழித்திடுவேன் என்று - வீரம் பேசுகின்றனர், பிற பிரச்சினைகளிலே பேசிப் பேசிப் பணிந்திடும் பெருந் தலைவர்கள்!! எல்லை குறைந்துபடும், அதனாலென்ன? எழிலிடங்கள் கவரப்படும், அதனாலுமென்ன! மொழிவழி அரசு அமைத்திட ஒப்பளிக்க மாட்டோம், என்ன செய்து விடுவாய்! உரிமை என்று நா உலரும்வரை கதறிக் கிட, இல்லை, இல்லை, அதனையும் நான் அனுமதிக்கமாட்டேன், என் காதுமல்லவா குடையும், எனவே துக்கம் துளைத்தால் தாங்கிக்கொள். எதிர்த்துப் பேசினாலோ, இருப்பதும் போகும் அறிவாய், அடங்குவாய் - என்று உலகுக் கெல்லாம் சாந்தம் போதிக்கும் நேரு பெருமகனாரே பேசுகிறார்! கல்லினைக் கசடர் தலையில் ஏற்றியது அந்த நாள்! சுடு சொல்லினைத் தாங்கி, கருகிய உள்ளத்துடன், உழலுவது இந்த நாள்!! தமிழகமே! தாய் நாடே! இத்துணை தாழ்ச்சியுறவோ நீ ஓர் நாள் அத்துணை ஏற்றத்துடன் பொலிவினைக் காட்டி நின்றாய்!! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எழில் நிரம்பி இருந்தது என்று எல்லா வரலாற்றாசிரியரும் எடுத்தியம்புகின்றனர்! ஏ! ஏ! இதென்ன காட்டுமிராண்டிப் பேச்சு! என் மொழி! என் இனம்! என் நாடு! என் அரசு! என்றெல்லாம் பேசுகிறாயே! என்று ஏசுகிறார் நேரு பெருமகனார்! இந்த இழி நிலையினைத் தாங்கிக் கொள்ள மறுக்கும் தமிழர் உளர். இந்நிலையினை ஒழித்திட, தளராது உழைத்திடுவோம் என்று ‘சூள்’ உரைத்துக் கிளம்பும் தமிழர் உளர். தமிழர்க்குத் தமிழ்நாடு வேண்டும், தமிழ் நாட்டுக்குச் சொந்தமான இடம் பிற நாட்டுடன் பிணைபட்டு இருந்திடும் கொடுமை களையப்பட வேண்டும், எல்லை குறைதல் கூடாது, எமது இடத்துக்கு உரிய பெயராம் தமிழ்நாடு என்பதே எமக்கு வேண்டும், இவைதமை மறுத்திடும் போக்கில், மாய்த்திடும் கருத்துடன் வடநாட்டு ஆட்சியாளர் வகுத்துள்ள சூதுத் திட்டத்தை, அக்ரம ஏற்பாட்டை, அநீதியான தீர்ப்பை, நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், உரிமையும் நீதியும் கிடைக்கும்வரை போராட நாங்கள் உறுதி கொண்டு விட்டோம், கொடியும் கோட்டையும் வேறு வேறு, போக்கும் நோக்கும் பிற பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், வேறு வேறுதான், எனினும், தமிழ்நாடு அமைய வேண்டும், அது எல்லை குறையாத, ஏற்றம் கெடாத, உரிமை பெற்ற, மொழிவழி அரசாக மலர வேண்டும் என்பதிலே, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டிராததோர் ‘கூட்டணி’ காணீர்! - என்று எடுத்துக் காட்டும், ஏற்புடைய நாள், எழுச்சி யூட்டும் நாள், நாடு விழிப்புற்று இருக்கிறது என்று விளக்கிடும் நாள், தாயகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடும் வீரம் கொண்டோர் முதல் முழக்கம் தரும் நாள், பிப்ரவரி 20. பிப்ரவரி 20 என்ற நாள்பற்றி எண்ணிடும் போதே, தம்பி, பிற எந்த நாட்டாரும் பெற்றிராத எழிலரசினை நாம் ஓர் காலத்தில் பெற்றிருந்தோம் என்பதையும், பல்வேறு நாடுகள், பனி படர்ந்தும், பாலை மிகுந்தும், இடர் குவிந்தும் இயல்பு கெட்டும் இருந்திடுவது போலன்றி, வளமெல்லாம் குறைவறப் பெற்று, வாழ்விலே பெறத்தக்க பேறுகளை அடைவதற்கான அறிவாற்றலைக் கொண்ட மக்கள் மன்றமாக நமது நாடு, பன்னெடுங் காலத்துக்கு முன்பே பொலிவு பரப்பி வந்தது என்பதும் நினைவிலே நிற்க வேண்டும். வானிடை மிதந்திடும் தென்றலிலே மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே தேனிடை யூறிய செம்பவள இதழ்ச் சேயிழை யாருடன் காதலின்பம் பெற ஆடிப்பாடி மகிழ்ந்தும், பகல் இரவாகி விட்டதோ என்று கூறத்தக்க வகையில் பெரும் புழுதி கிளம்பிடச் சுழலெனச் சுற்றிப் போரிட்டு வெற்றி காணும் வீரத்தைக் களத்திலே காட்டியும், அடிப்படை உண்மைகளை ஆய்ந்தறிந்து அவனியோருக்கு அளித்திடத்தக்க அறிவினை மன்றங்களில் விளைவித்தும் வந்த நம் தந்தையர் நாட்டிலே, இன்று, ‘அண்டை அயலார்கள்’ ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிழைத்திருக்க வேண்டுமானால், ஆளடிமை ஆகவேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். நீதி கேட்கிறோம் - வீதியில் நிறுத்திவைத்துச் சுட்டுத் தள்ளுவோம் என்கிறார்கள், நம் கொற்றம் பறித்தோர். எமது உரிமையும் உடைமையும் பறிக்கப்படலாமா என்று வாதாடுகிறோம்; பேதையே! உயிரைவிட்டு வைத்திருக்கிறோமே, அது போதாதோ என்று கேட்கின்றனர், நம்மைப் பிடித்தாட்டும் பெருந் தலைவர்கள்!! அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டிலே, நேரு பண்டிதர், நடுவீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு அங்கேயே பதிலளிக்கப்படும் என்று பேசி, கோபமூட்டப்பட்டால், நான் டயரையும் மிஞ்சுபவனாகிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இத்தனைக்கும், தம்பி, பிப்ரவரி 20-ல், நாம் நாட்டிலே என்ன நடைபெற வேண்டுமென்று கூறுகிறோம்? பாசறைகளைத் தாக்குக; ஆயுதக் கிடங்குகளைச் சூறையாடுக; அலுவலகங்களில் புகுந்து கலாம் விளைத்திடுக - என்றா கூறுகிறோம்? இல்லை, இல்லை, முக்காலும் இல்லை. அமைதி! அமைதி! என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறோம். பலாத்காரம் அறவே கூடாது என்பதைப் பன்னிப் பன்னிக் கூறுகிறோம். பட்டி தொட்டிகளிலும் இந்த அறிவுரை பரவ வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன், நமது பொதுச் செயலாளர், கழகத் தோழர்களை, ஆங்காங்குக் கண்டு பேசி வருகிறார்!! கடை அடைப்பு - பொது வேலை நிறுத்தம் - காந்தியார் கையாண்ட தூய்மையான முறை - கருத்துக் கெட்டுக்கிடக்கும் ஆட்சியாளர்களுக்கு நல்லறிவு அளிக்கும் அறநெறி-இதுவே பிப்ரவரி 20-ல் நாம் மேற்கொள்ளும் திட்டம். ரயில்களைத் தடுத்து நிறுத்துவதா என்று கேட்கின்றனர் நமது கழகத் தோழர்கள் - தம்பி! இது சர்வகட்சிக் கூட்டணி. தி.மு.க. மட்டும் நடத்துவதல்ல. எனவே, பணியாற்றச் செல்லாதீர்கள் என்று பட்டாளிகளை வேண்டிக் கேட்டுக் கொள்வதும், அன்று மட்டும் பயணப்படாதீர்கள் என்று பொது மக்களை வேண்டிக் கொள்வதுந்தான், நாம் கையாள வேண்டிய முறையே தவிர, தண்டவாளத்தில் படுப்பதோ, சங்கிலியைப் பிடித் திழுப்பதோ அல்ல, என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அனைவர் மனதிலும் அன்று ஓர் தூய்மை மலர வேண்டும். மலரச் செய்யும் அளவுக்கு நம்மிடம் அன்பு முறை எழ வேண்டும் என்றுதான் நாம் அவாக் கொண்டுள்ளோம். ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் நமது நோக்கமே அல்ல. நாட்டின் நல்லோர் நமது நோக்கத்தை அறிந்து, பாராட்டி, துணைதர முன்வந்துள்ளனர். துரைத்தனத்துக்குத் தூபதீப நைவேத்தியம் செய்து ‘பிரசாதம்’ பெற நினைக்கும்போக்கினர், நமது முயற்சியைக் குலைத்திட முயல்கிறார்களாம்! வெண்மேகத்தழகினையும், அது விதவிதமான உருவம் காட்டி உலவுவதையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் ஓவியனைத் தீண்டிடக் கட்டுவிரியன், ஓசைப்படாமல், பசும்புற்றரையில் மறைந்து மறைந்து, வளைந்து வளைந்து வருகிறதல்லவா! மனித இனத்தில் நற்காரியத்தைக் கெடுத்திடும் பேராற்றல் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! இவர்களெல்லாம் கூடி, இப்படி எல்லாம் செய்வதா? அது வெற்றிகரமாக நடப்பதா? அதை நான் கண்டு சகிப்பதா? என்று எண்ணும் ‘நல்ல உள்ளம்’ படைத்தவர்கள் இருக்கிறார்களே! புள்ளிமான் துள்ளி விளையாடக் கண்டு, செச்சே! அடவியில் நானிருக்க, அழகு மான் இப்படியா ஆட்டம் போடுவது என்றுதானே சிறுத்தை பாய்கிறது! தம்பி! நாடு, சர்வ கட்சிக் கூட்டணியின் திட்டத்துக்குப் பேராதரவு தரத் தயாராகி விட்டது கண்டு, நடுக்கம் கொண்டுவிட்டவர்கள் நானாவிதமான, நய வஞ்சகமும் செய்து நமது அறப்போரின் தூய்மையைக் கெடுத்திட எண்ணங்கொண்டு, பல கூறுவர். நண்பர் போல், உசுப்பி விடுவர் உடன் இருந்துகொண்டு - மிகமிக விழிப்பாக இரு! ஆமாம், தம்பி! மிகமிகப் பொறுப்பான செயலில் ஈடுபட இருக்கிறாய் என்பது மட்டுமல்ல, இதிலே கிடைக்கும் வெற்றி வேறு பல நல்ல திட்டங்களுக்கு வித்தாகப் போகிறது! தம்பி! இன்னுயிரையும் இழக்கச் சித்தமாகி, மாற்றானை விரட்டிடக் களம் சென்ற தமிழ் மரபிலே வந்த உதித்தவர்களை, நாம் பிப்ரவரி 20-ல் செய்யச் சொல்வதெல்லாம், அன்று தெருவெல்லாம் முடங்கி, நடமாட்டம் நின்று, அலுவல்கள் ஒடுங்கி, எங்கும் ஓர் அமைதியான செயலற்ற சூழ்நிலை தெரியச் செய்யுங்கள் - இந்நிலை கண்டால், முன்பு இனிக்க இனிக்கப் பேசினோமே, இப்போது வேண்டி நிற்கும் மக்களிடம் கடுகடுத்த முகம் காட்டலாமா என்பது பற்றியும் எண்ணிப் பாராமல், நெரித்த புருவத்துடன் நின்று, ஏகாதிபத்தியப் பொறி பறக்கும் போக்கில் பேசும் நேரு பண்டிதர் தம் கோலத்தை மாற்றிக் கொண்டாக வேண்டிய ‘காலம்’ வந்து விட்டது என்பதை அறிந்து கொள்வார்; நீதி வழங்கும் நிலைக்கு வந்து சேருவார்! முப்பதாண்டு காலமாக, கருவில் உருவாகி வந்து இன்று ஓங்கி வளர்ந்துள்ள உரிமை உணர்ச்சி. மொழிவழி அரசு என்பது. மொழிவழி அரசு அமைக்காமல், ஆணவ வழியில் அரசு அமைத்துக் கொண்டான் ஆங்கிலேயன்; அவனது ஆட்சி அழிக்கப்பட்டானதும் ‘இந்தியா’வில், மொழிவழி அரசு ஏற்படும் என்று ‘மகாத்மா’வே வாக்களித்தார். மாநாடு தவறாமல், இதற்கான தீர்மானங்கள், நிறைவேற்றப் பட்டன; நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வளர்ந்தது. தலைவர்கள் மேடைகளிலே பேசும் போது, இந்த மொழிவழி அரசுத் திட்டத்தை வலியுறுத்தினர், விளக்கினர், அதனால் கிடைக்கக் கூடிய சுவையும் பயனும் பற்றி உணர்ச்சியூட்டினர்! காங்கிரஸ், தேர்தல்களின் போதெல்லாம் மொழிவழி அரசு ஆதரவு காட்டியே ‘ஓட்டு’ வாங்கிற்று. இப்போது, ‘நம்பிக்கை மோசடி’ நடத்தத் துணிந்துவிட்டனர். முதுபெருங்கிழவர் ஆந்திர நாட்டுத் தலைவர் பிரகாசம் கூறினார், ஆந்திர அரசு அமைந்த நாளில்: ‘‘மொழிவழி அரசு அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற தூய்மையான திட்டம் தந்தவர் தேசப்பிதா மகாத்மாவாகும். அவர் ஆணைப்படி, ‘இந்தியா’ மொழிவழி பிரிந்து, 21 அமைப்புகள் கொண்ட நிலையில்தான் காங்கிரசின் அலுவலே நடைபெற்று வந்தது.” வங்க மாகாணக் காங்கிரஸ் கமிட்டி, மராட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி என்ற முறையிலேயே, காங்கிரஸ் கமிட்டிகள் பெரிதும் மொழிவழி அமைந்து பணியாற்றி வந்துள்ள பேருண்மையைப் பிரகாசம் சுட்டிக் காட்டினார். மகாத்மாதான் மறைந்துவிட்டாரே, இனி அவர்தம் மணிவாசகந்தனைக் கல்லில் செதுக்கிவிடுவோம், நம் நெஞ்சினின்றும் அவர் தந்த நல்லறிவைக் கல்லி எடுத்து எறிந்திடுவோம் என்று துணிந்து விட்டனர், அவர் பெயர் கூறி ஆளவந்தார்களாகிவிட்ட மகானுபாவர்கள். ‘மொழிவழி அரசு’ இருந்தால் மட்டுமே, உண்மை ‘தேசியம்’ உறுதியான ஜனநாயகம் மலரும் என்று அறிவாளர் பலர் கூறினர்; ஆமாம் என்றனர் நேரு உள்ளிட்ட தலைவர்கள். ஆள்பவருக்கும் ஆளப்படுவோருக்கும் ஓர் தொடர்பும் தோழமையும் ஏற்பட்டால்தான், குடி அரசுக் கோட்பாடு தழைத்திடும். எனவே, அந்த அரசிலே உள்ள மக்களின் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்; அம்முறைப்படி, ஆந்திரருக்கு அமையும் ஆட்சி மன்றத்தில் தெலுங்கு மொழிக்கும் ஏற்றம் இருந்திடல் வேண்டும்; எனவே மொழிவழி அரசு வேண்டும் என்றனர், தேசியம் அறியாதவர்களல்ல, அது நின்று நிலைத்து, கனிந்து சுவைதர யாது செயல் வேண்டும் என்பதனை அறிந்த அரசியல் நிபுணர்கள். ‘ஆந்திர நாடு’ அமைக்கப்படுவதற்கான திட்டம், டில்லி மக்கள் மன்றத்தில் அலசப்பட்ட போது, கட்ஜு கூறினார்: ‘‘புதிய ஆந்திர மாகாணம், இனி அமைய இருக்கும் மொழிவழி அரசு அமைப்புகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. மக்கள் ஆட்சி மன்றங்கள் பல மொழி பேசும் இடங்களாக இருக்குமாயின், அங்கு, ஜனநாயகம் எப்படிச் சரியாகப் பணியாற்ற முடியும் என்பதை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை’’ என்று மேதைப் பேச்சளித்து, மொழிவழி அரசு அமைவதுதான், ஜனநாயகத்துக்கு வெற்றி தரும் என்றார். கட்ஜு, நேருவின் நேசத்தைப் பெற்று, தேசத் தலைவர்களிலே ஒருவராக விளங்கிடும், காங்கிரஸ் பிரமுகர். கண்டிப்பானவர்; அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட மறுப்பவர்: அவர், மொழிவழி அரசு மூலமே ஜனநாயகம் உயிரூட்டம் பெறும் என்று 1953 செப்டம்பர் 8-ஆம் நாள் டில்லியில் பேசினார்; நேரு பெருமகனார் இதை மறுத்தாரில்லை இன்றோ - அதே டில்லியில் பலமொழி ராஜ்யமே சாலச் சிறப்புடையது என்று கூறப்படுகிறது- காரணமும் காட்டப் படுவதில்லை. மத்ய பாரதத்தைச் சேர்ந்த தேஷ்முக் எனும் காங்கிரஸ் தலைவர், அதுகாலை, பலமொழி ராஜ்யங்கள்தான் இந்தியாவின் ஒற்றுமையை வளர்த்திடும் என்று கருதுவது தவறு - என்று இடித்துரைத்தார். தியோகிரிகார் எனும் பம்பாய் காங்கிரஸ் தலைவர், நீண்ட காலமாகத் தூய்மையானது, தேவையானது என்று காங்கிரஸ் கட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிவழி ராஜ்ய அமைப்புத் தத்துவத்தை, இன்று கசக்கிறது என்று காங்கிரஸ் மூலவர்கள் ஏன் கூறுகிறார்களோ தெரியவில்லையே சரியில்லையே அவர்தம் போக்கு என்று கூறினார். இந்தியாவில், நாம் ஏன் மாகாணங்களைப் பிரித்து அமைக்கிறோம், அறிவீரா? என்று கேட்டுவிட்டு, கட்ஜு பதிலளிக்கிறார். இந்தியாவின் ஒற்றுமையைத் தக்கவிதத்தில் பாதுகாக்கவும், ஜனநாயகம் திறமையுடன் பலனளிக்கவும், சிறு அரசு அமைப்புகளே தேவை. அரசு, சிறிய அளிவினதாக இருந்தால்தான், ஆட்சி மன்றங்களிலே மக்களின் குரலுக்கு மதிப்பு இருக்கும், ஆட்சி நடைபெறும் விதம் பற்றி மக்கள், அறிந்து கொள்ள முடியும், ஆட்சியின் போக்கை மக்கள் கண்காணிக்க இயலும். எனவேதான் சிறிய அளவினதாக ராஜ்யங்கள் இருத்தல் வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம் - என்று அறிவளித்தார். இன்றோ, அதே டில்லியில், "என்ன அறிவீனம்! என்ன அறிவீனம்! மொழிவழி அரசு என்பது காட்டு மிராண்டித் திட்டம், சிறிய அரசுநாட்டு ஒற்றுமையைச் சீர்குலைக்கும்’’ என்று பேசுகிறார் பண்டிதர் - காரணம் காட்டாமலேயே கண்டிக்கிறார். இந்தியா எங்கணும், மொழி வழி ராஜ்யங்கள் அமைந்திட வேண்டும் என்று நேரு பண்டிதருக்கு எடுத்துரைக்க ஓர் தனி மாநாடே கூட்டினர் 1953 செப்டம்பர் 26-இல். அதிலே நேரு பண்டிதரால் அலட்சியப்படுத்திவிட முடியாதவகையில் நாட்டுப் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். பட்டாபி சீதாராமையா, மொழிவழி ராஜ்யம் அமைவது, இந்தியாவைப் பிளவுபடுத்துவதாகும் என்று எண்ணுவது பெரும் பிழை, தவறான வாதம் - என்று கருத்துரை வழங்கினார். அவர் இன்று கவர்னர்! நேரு பெருமகனாராலேயே இந்த ஏற்றம் அளிக்கப்பட்டது. இன்றோ பட்டாபி எதை அறிவீனம் என்று கூறிக்கண்டித்தாரோ, அது டில்லியில் பேரறிவு என்று கொண்டாடப்படுகிறது. மனு, வேண்டுகோள், மாநாட்டுத் தீர்மானம், உண்ணா விரதம், பொட்டி சீராமுலுவின் உயிர்த் தியாகம், இத்தனைக்கும் அசைந்து கொடுக்காத இந்த ஆட்சி, ஆந்திரம் பெற்றே தீருவதென்று, மக்கள் வீறுகொண்டெழுந்து வீதிகளில் வந்த பிறகு தான், வழிக்கு வந்தது; ஆந்திர நாடு தந்தது! இம்முறைதான் ஏற்றது, என்று ஆட்சியாளர்கள், மொழிவழி அரசு கோரும் மற்றவருக்கும் கூறுகின்றனரா? என்றே கேட்டு விட்டார் ஒருவர், மக்கள் மன்றத்தில், அன்று. இன்று நடுவீதியில் மக்கள் கூடினால் சுட்டுத் தள்ளப்படுவர் என்று மிரட்டுகிறார், ஜாலியன் வாலா படுகொலையைக் கண்டித்த, மனிதருள் மாணிக்கமான, மாபெரும் தலைவர் - ஜவஹர் பண்டிதர்! மொழிவழி அரசு கூடாது என்று இன்று, பண்டிதர் பேசுவதைப் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தமது எண்ணத்தை வெளியிட அவர்கட்கு உரிமை அளிக்கப்படவில்லை - மீறுவோர் மீது கட்டுப்பாடு எனும் கட்டாரி வீசப்படுகிறது - எனவே பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிட வேண்டி ஏற்பட்டு விட்டது. உள்ளத் தூய்மைகொண்டவர்கள், ஒருவரிருவர், இன்றும் முழக்கமிடுகின்றனர் - வீரமும் உரிமை வேட்கையும் அறவே அற்றுப் போய்விடவில்லை. காட்கில் அமிர்தசரசிலேயே பேசுகிறார். அந்த அவையில், பல தலைவர்களின் வாழ்வை ஆக்கவும் அழிக்கவும் வல்லமைபெற்ற பண்டிதர் இருக்கிறார் என்பதை அறிந்தும், அவர் ஆதரவு சேக் அப்துல்லாக்களை ஷேரேகாஷ் மீர் ஆக்கும், அவர் வெறுப்பு, அதே அப்துல்லாவைக் கைதியாக்கி, விசாரணையுமின்றிச் சிறைக்குள் இருக்கச் செய்திடும் - என்பதை அறிந்தும், அஞ்சாது கூறுகிறார், பல மொழி ராஜ்யம் பற்றிய தத்துவார்த்தம் பேசுங்கள், கேட்டு ரசிக்கிறேன், ஆனால் அதை நடைமுறைத் திட்டமாக்கி, என் நாட்டை என் நாட்டவர்க்கு அளிக்காது இருப்பீரேல், மராட்டிய மண்டலம் அமைத்து, பம்பாயை மராட்டியருக்கு அளித்திடாது போவீரேல், பெரியீர்! பேராற்றல் கொண்டோரே! நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் - கட்சி பெரிது, என் நாடல்ல, மக்களல்ல, என்று கூறிக் கிடந்திட மாட்டேன், அறப்போர் தொடுத்து, உரிமையைப்பெறவே உறுதி கொள்வேன் என்று பேசுகிறார். மொகலாய ஆதிக்கத்தின் முன்பு நாம் எங்ஙனம் தலை காட்ட முடியும், என்று கோழைகள் குப்புறக் கவிழ்ந்தகாலை, குன்றேறிக் கொடி நாட்டிய மாவீரன் சிவாஜியின் மரபு பட்டுப் போகவில்லை. காட்கில், மரபு காத்திடுகிறார். 1953, அக்கேடாபர் 1-இல் ஆந்திர அரசு அமைந்தது; மொழிவழி அரசு அது. பொட்டியின் உயிரைக் குடித்தான பிறகு, பெட்டிப் பாம்பானார் பண்டிதர். கொட்டு முழக்கத்துடன் கர்னூல் வந்தார், ஆந்திரருக்கு அரசு அமைத்துத் தந்தார். தந்தகாலை, வாழ்த்தியோரும் வரவேற்றோரும் கூறினர், இதோ ஓர் புது அரசு-மொழிவழி அமைகிறது; இது எந்த வகையில் வளர்ச்சி பெறுகிறது; இதனால் தேசியம் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து, பிற ராஜ்யங்களை அடுத்தடுத்து அமைப்போம் என்று கூறினர். இன்று, என்ன இழிவும் பழியும் வந்துற்றது? ஆந்திர அரசு அமைந்தான பிறகு, என்ன அல்லலும் அவதியும் வந்துற்றது? உறவு கெட்டு விட்டதோ? அல்லது உள்ளன்பு பட்டுப் போயிற்றோ? இல்லையே! ஆந்திர மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கூறுவது போல, பிரிந்து சென்று தனி ராஜ்யம் அமைத்துக்கொண்ட பிறகு, ஆந்திரர் தமிழரிடம் முன்பெலாம் கொண்டிருந்த கசப்பும் கிலேசமும் போக்கப்பட்டு, இன்று அன்பராய், நண்பராய், தொடர்பு கொண்டு மகிழ்கின்றனர். அது போன்றே, மொழிவழி அரசு அமைந்துவிட்டால், பாரதம் பிளவு பட்டுவிடும் என்று பீதி காட்டினர். ஆந்திர அரசு, பிளவுச் சக்தியாகவா இன்று உளது? எனின், இன்று மொழிவழி அரசு கூடாது, கேடு பயப்பது, என்று கூறிடக் காரணம் என்ன? தம்பி! கொண்டைக்கு ஒரு செண்டு மல்லிகை கேட்டாளாம், கொண்ட கணவனிடம்; அந்தக் குணக்கேடனோ, கொண்டை உள்ளமட்டும் இவள் செண்டு கேட்டுத் தொல்லை தந்தபடிதான் இருப்பாள், எனவே, செண்டு தேடிடும் சங்கடம் நமக்கு இல்லாமலிருக்க, இவள் கொண்டையை அறுத் தெறிவோம் என்றானாம். மொழிவழி அரசு என்ற திட்டத்தின்படி பம்பாய் மராட்டியருக்கு, தேவிகுளம் பீர்மேடு ஆகிய தமிழ் வட்டாரங்கள் தமிழ்நாட்டுக்கு என்பது குறித்து, கிளர்ச்சி இருக்கிறது; இதிலே அநீதியான தீர்ப்பு வழங்கினார் நேரு; எதிர்க்கின்றனர், உரிமை வேட்கை கொண்டோர்; இதனைக் கண்டு, கொண்டை இருந்தால் அல்லவா மல்லிகைச் செண்டு வேண்டும் என்பாள், இதோ, பிடித்திழுத்து வா, கொண்டையை அறுத்து எறிகிறேன் - என்கிறார் பண்டிதர். மொழிவழி அரசு என்று பேசுவதால் அல்லவா, இது யாருக்கு, அது யாருக்கு என்று சச்சரவு கிளம்புகிறது, மூலத்துக்கே வேட்டு வைத்து விடலாம் என்று கூறுகிறார். நீதியா? வணிகப் பெருங்குடியினரே! வாழ்வளிக்கும் தொழில் பல புரிவோரே! நாட்டின் கண்மணிகளாம் மாணவத் தோழர்காள்! நீதிதானா? கூறுங்கள். உமது தீர்ப்பு, பிப்ரவரி 20-இல், நாடறியச் செய்ய வேண்டும். காந்தியார் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை வெட்டிப் புதைக்கிறார்கள். முப்பதாண்டுகட்கு மேலாக நாட்டவருக்குத் தரப்பட்ட வாக்குறுதி மீறப்படுகிறது. தேர்தல் சிலவற்றிலும் மக்களுக்குத் தரப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. ஆந்திரர் பெற்றுப் பயன்காணும் மொழிவழி அரசு, நமக்கு மறுக்கப்படுகிறது. மொழிவழி அரசு கேட்டால், விழியில் ஒன்றினை இழந்துவிட வேண்டுமாம் - தேவிகுளம், பீர்மேடு கிடையாதாம்! தேவிகுளமும் பிறவும் தேவை என்று நாம் கேட்டாலோ, மொழிவழி அரசு கிடையாதாம்! கொண்டை மிஞ்சவேண்டுமானால், செண்டு கேட்காதே! - நேரு கூறுகிறார். நேர்மையுள்ளம் படைத்தோரே! இதனை மாற்றிட வழி இருக்கிறது. எல்லா ஜனநாயக நாடுகளிலும் கையாளப்பட்டு வெற்றி அளித்திட்ட வழி, காந்தியார் கைகண்ட மருந்தாக உபயோகித்த வழி, கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம். நீதி மறுக்கப்படுகிறபோது, நேர்மை நசுக்கப்படுகிறபோது, உரிமை அழிக்கப்படுகிறபோது, தன்மானம் தகர்க்கப்படுகிற போது, அன்பர்கள்! பழந்தமிழ் வீரன், கட்கமேந்திச் சென்றான் களம் நோக்கி. நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்வதெலாம், பிப்ரவரி 20, ஒரு நாள் மட்டும் கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் செய்து, இந்தப் புனிதமான காரியத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள், - என்பதனைத் தம்பி, அங்காடியிலும் அலுவலகங் களிலும் உள்ள அன்பர்களிடமெலாம், கூறு. தம்பி! காங்கிரஸ் கட்சியினரில் சிலருக்கு நாம் ஈடுபட்டுள்ள இந்தக் காரியத்தைக் கெடுப்பது, ஏதோ ‘தேசிய கைங்கரியம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. ‘தினமணி’ இதற்கான திருத் தொண்டினை நடத்தி வைத்து இருக்கிறது. காலிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வர் என்று கிலி மூட்டியும், பலத்த போலீஸ் வளையம் உங்களுக்குப் பாதுகாப்பளிக்கும், கடைகளைத் திறவுங்கள் என்று ஆசை காட்டியும், இப்போது ஒரு முடிவும் தமிழருக்கு விரோதமாகச் செய்யப்படவில்லை என்று நயவஞ்சகம் பேசியும், அந்த ‘அன்பர்கள்’சர்வகட்சிக் கூட்டணியின் முயற்சியைக் கெடுக்கலாம் என்று எண்ணி வேலையில் ஈடுபட்டுள்ளனர். சிலர், இந்தக் கூட்டணியினரைக் கூண்டிலே தள்ளி விடுங்கள் முதலில், பிறகு நாங்கள் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறோம் என்று சர்க்காரிடம் ‘காவடி’ எடுக்கிறார்கள் என்றும், ஆச்சாரியார் செய்த அதே தவறை நாமும் செய்வதா, ஆப்பை அசைப்பானேன், பிறகு அதனால் அவதிப்படுவானேன் - நடப்பது நடக்கட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு இருந்து விடுவோம் என்று சிலரும் பேசுகின்றனராம்! கடைகள் மூடிக்கிடக்கட்டும், செயலற்றுக் கிடக்கட்டும் நாடு, நாங்கள் மறுதினம் ‘சேதி’யை முழுவதும் இருட்டடிப்பு நடத்திவிட மாட்டோமா! என்று தேசிய இதழாசிரியர்கள் பேசுகிறார்களாம். கண்ணை மூடிக்கொண்ட பூனை, உலகமே இருண்டு விட்டது என்று எண்ணிக் கொண்டதாமே, அதுபோல, இருட்டடிப்பு மூலமோ, இடர் தருவதன் மூலமோ, எதன் மூலம் நமது ஏற்பாட்டினைக் கெடுத்திட எண்ணினாலும், தம்பி! நாம் நமது கடமையைக் கண்ணியத்துடன் செய்து முடித்தோமா என்ற ஒரே எண்ணம்தான், உனக்கு இருக்க வேண்டும். எவ்வளவு குத்தினாலும், சகித்துக்கொள்ள வேண்டும். தாக்கினால், தாங்கிக் கொள்ள வேண்டும். சிறையில் தள்ளினால் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று நமது தூய்மை நிரம்பிய இந்தக் காரியத்தைக் கெடுத்திடக் கருதும் காங்கிரஸ்காரர்கள்கூட, அவர்கள் ஏசினாலும் எரிச்சலூட்டினாலும், எதிர்த்தாலும், இழிமுறையால் தாக்கினாலும், தம்பி! தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். உன் உள்ளத்தில் ஒரு துளியும் ஆத்திரம் எழலாகாது. உள்ளத்து உறுதியும், கஷ்டநஷ்டத்தை ஏற்றுக்கொள்ளும் திறனையும் கண்டு, அந்தக் காங்கிரஸ் நண்பர்களேகூட தமது போக்கினை மாற்றிக் கொள்வர். தம்பி! நாமென்ன கண்டோம்? இன்று நமக்கு ‘விரோதம்’ செய்யும் காங்கிரஸ்காரர்களிலே எத்தனை பேர். எதிர்காலத்தில் நமது கிளைக் கழகச் செயலாளர்களாகப் போகிறார்களோ!! அவர்களெல்லாம், இன்று இல்லாவிட்டால் நாளை, நமது "முகாம்’ வந்து சேருவர் என்ற எண்ணத்துடனேயே, உன் பணி அமைந்திருக்க வேண்டும். அவர்கள் சிறிதளவு சிந்தித்துப் பார்த்தால் பிப்ரவரி 20-ல் நாம் மேற்கொண்டுள்ள, அறநெறியின்படி அமைந்துள்ள காரியம், அவர்களின் தன்மானத்தையும் சேர்த்துக் காப்பாற்றிடுவதற்கே என்பது புரியும். தேவிகுளம் பீர்மேடு ஆகியவை, தமிழ்நாட்டுக்குத்தான் என்பதை, காங்கிரஸ் அமைச்சர்கள் உட்பட ஆதரித்தனர். சென்னைச் சட்டசபைகளிலே தீர்மானம், ஆர்வத்துடன் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கமிட்டியிலும் இதே கோரிக்கை! கக்கன் அவர்களும் இதற்கு உறுதிமொழி அளித்தார். காமராஜரோ, நான் கவனித்துக்கொள்கிறேன் என்றார். சுப்பிரமணியம், கனம் - புள்ளி விவரங்களாகக் கொட்டிக் காட்டினார், நமக்குத் தேவிகுளம் என்று பூரிப்புடன், நேருவுக்குத் தமிழர் என்றாலே தனியான அன்பு, ஆகவே அவர் நியாயம் வழங்குவார் என்றார். நாம், தேவிகுளம் பற்றிப் பேசிய போதெல்லாம், எதுக்கு இதுகள் வீண் கூச்சலிட்டுக் கிடக்கின்றன? எமது தலைவர்கள் தேவிகுளத்தைப் பெற்றே தீருவர் என்று காங்கிரஸ் நண்பர்கள் கூறினர். இன்று, எல்லோருடைய ஆசையிலும் மண்விழுந்து விட்டது. நாமெல்லாம், எதிர்க்கட்சிக்காரர்கள். எனவே நம்மைத் துச்சமாக மதிக்கிறார்கள். சரி, பொறுத்துக்கொள்வோம். காமராஜர் சுக்கன், சுப்பிரமணியம், பக்தவத்சலம், மேல்சபை, கீழ்சபை, கரங்கிரஸ் கமிட்டி, தீர்மானம், எல்லாமே இன்று துச்சமாக ஒதுக்கித்தள்ளப்படுகிறதே, இதற்கென்ன சொல்லு கிறார்கள்? அந்த வெட்கக்கேட்டால் விளையும் வேதனையை எண்ணியாவது, வேலை நிறுத்தத்தில் காங்கிரசார் பங்கு கொள்ள வேண்டும். பாசமும், நேசமும், பயமும், பக்தியும், பணிவும், கட்டுப் பாடும் இருக்கட்டும் மலை அளவுக்கேனும்; தன்மானத்தில் பற்றுதல் இருக்க வேண்டாமா? எனவே, தம்பி! நீ மட்டும் உண்மையை அவர்கள் உணரு மட்டும், பொறுமையை இழக்காமல், ஆர்வம் குன்றாமல், துணை தருவோர் அதிகமா, தொல்லை தருவோர் மிகுதியா என்பது பற்றிய வேலையற்று, நமது கடமையை நாம் செய்கிறோம் - என்ற பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்று. பார், தம்பி! பிறகு அவர்களிலே எத்தனை பேர், ‘நம்மவர்’ ஆகிறார்கள் என்று! இன்றே இல்லையா நமது கழகத்தில் - மாஜி காங்கிரஸ்காரர்கள். ஒன்று மட்டும் உறுதியாக வைத்துக்கொள். இந்த நற்காரியத்திலே ஈடுபடும்போது, அடக்குமுறை எந்த வடிவிலே வீசப்பட்டாலும், அதனை நாம் தாங்கிக் கொள்ளும் திறமிருக்கிறதே, அது, தாயக விடுதலைக்கான உறுதி அளிக்கிறது. தியாகத் தழும்புகள் ஏறாமுன்பு நாட்டு விடுதலை எங்ஙனம் கிடைக்கும்? தம்பி ! நாம், எத்தகைய மரபினிலே வந்துற்றோம், அறிவாயே! அன்பே! இந்த “வடு’ . . . என்று கேட்டிடும் அஞ்சுகத்தை ஆரத் தழுவிய ஆணழகன்,”கட்டழகி! கலிங்கப் போரிலே நான் பெற்ற வடு இது. . . . இதோ பார், இது நான் சிங்களச் சீமையிலே பெற்றது, கடாரம் தந்த தழும்பு இது,’’ என்றெல்லாம் அவன் கூறிட, அது கேட்ட காரிகை என் கணவன், கண்ணுக்கு இனியவன் மட்டுமல்ல, கருத்துக்கு மிகு இனியவன், அவன் அம்புலி காட்டவும் அருவியில் நீந்தவும் மட்டுமே பழகியவனல்ல, சீறிப்போரிட, செந்நீர் சிந்திட வல்லவன். புகழக் குறிகளாம் போர்த் தழும்பு பெற்றவன்! என்று பூரித்துப் போவாள்! அத்தகைய தமிழகத்தில் பிறந்தோம். இற்றை நாளில் கொற்றம் இழந்தோம். எனினும் நமது இயல்பு பட்டுப் போகவில்லை!! இன்றேகூட, தமிழகத்தில் ஆறாயிரம் தோழர்களேனும் உளர், தமது உள்ளத்தை வென்றாரிடம் உவகையுடன் தியாகத் தழும்புகளைக் காட்டி இது முன்ஷி வந்தபோது கிடைத்த முத்திரை, இது மேதாப் வந்தபோது ஏற்பட்டு வடு, இது தடை உத்தரவை மீறியபோது ஏற்பட்ட சிறுகாயம், இது ஆச்சாரியார் ஆட்சி தந்த தழும்பு என்றெல்லாம் காட்டி நிற்போர்! எனவே, தம்பி! எனக்கு நம்பிக்கை நிரம்ப உண்டு! பிப்ரவரி 20-ல் என் உள்ளம், மேலும் பெருமிதம் கொள்ளத்தக்க விதத்தில், நீ பணியாற்றி வெற்றி பெற்றுத் தருவாய் என்பதும் தெரியும். கடுமையான அடக்குமுறை வீசப்படலாம் என்றாலும், அதற்காகக் கலங்கவா போகிறோம்? இல்லை! உட்பகை கூடாது, ஊர்க் கலகம் ஆகாது, கட்டுப்பாடு கெடலாகாது, கண்ணியம் பாழ்படக் கூடாது, பலாத்காரம் தலை காட்டவே கூடாது என்பது பற்றித்தான் எனக்குக் கவலையை தவிர, கடுமையான அடக்குமுறை கொண்டு, நம்மைத் தாக்கிடுவரோ துரைத்தனத்தார் என்பதுபற்றிக் கடுகளவும் கவலை கொள்ளேன். கொள்பவனும் என் தம்பி அல்ல. தம்பி! காட்டிலே வேட்டையாடி, கொன்ற புலியின் தோலினைக் காட்டி மகிழ்பவனைத்தான் வீரன் என்று உலகு ஏற்குமே தவிர, காரக் கருவாட்டைப் பக்குவமாக வைத்து பொறியில் விழச் செய்து, நான் கொன்ற எலியின் வால் காணீர் என்று கூறுபவனையா, உலகு மதிக்கும்? புலித்தோலுக்கும் எலிவாலுக்கும் உள்ள வேற்றுமை, ஒரு வீரனுக்கும் ஒரு வீணனுக்கும் உள்ள வேறுபாட்டினையன்றோ விளக்குகிறது! எனவே, உயிர் போவதாயினும் உரிமை பறிபோக விடமாட்டோம் என்ற உறுதிப்பாடு கொண்ட என் தம்பிமார்களிடம் எனக்குத் தளராத நம்பிக்கை உண்டு. எனவே, எதிர்ப்புகள் மலை என வளரினும், வெற்றிபெற்றுத் தருவர் என்று உறுதி கொண்டிருக்கிறேன். தமிழ்நாடு ஒரு நாதியற்ற நாடாகி விட்டது என்று பெரியாரின் ‘விடுதலை’ கூறும் போது, நாமும் நம்மாலானதைச் செய்து தமிழ்நாட்டில் தமிழர் சிலரேனும் உளர் என்பதைக் காட்ட வேண்டாமா? பெரியார், இந்தக் கிளர்ச்சியை விரும்பவில்லையாமே என்று கேட்கிறாயா தம்பி! உண்மை அது அல்ல; பெரியார் இந்தக் கிளர்ச்சியையும் இதைவிடத் தீவிரமான கிளர்ச்சியையும் விரும்புகிறார். அவர், நம்மைத்தான் விரும்பவில்லை - இனி அவரும் நம்மை விரும்பும் வகை ஏற்பட வேண்டுமானால், அவரே பார்த்து, "பயல்கள் பரவாயில்லையே, ஓரளவுக்குச் செம்மையாகவே செய்து காட்டினார்கள்’’ என்று கூறத்தக்க விதமாகக் காரியமாற்றிக் காட்ட வேண்டும். மும்முனைப் போராட்டத் துவக்கத்தின் போதும் அவர் இப்படித்தான், "இன்றைய வழிப்போக்கர்களின் மனமகிழ்ச்சிக்காக, இதுகளுக்கு ஒரு போராட்டமா!’ என்று ஏளனம் பேசினார்; ஆனால், தம்பி! நாடே கண்டு ஆச்சரியப்படத்தக்க அளவில் கிளர்ச்சி வளர்ந்து இருட்டடிப்பினையும் கிழித்துக் கொண்டு, நாள் தவறாமல், நமது கழகச் சேதிகள், எல்லா ஏடுகளிலும் வெளி வந்தது கண்டு, அவரே அல்லவா சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினார். நம்மீது சர்க்கார் அடக்குமுறை வீசியது கொடுமை என்று! இன்று, மீண்டும் ஏளனம் செய்கிறார் என்று கேள்விப்படுகிறேன்! இதிலே கவலைப்படவோ கோபப்படவோ என்ன இருக்கிறது! - நாம் அவருடன் ஒன்றாக இருந்த போது கூட இப்படித்தான் வேடிக்கையாகப் பேசுவார், ஏளனத்தால் குத்துவார், எல்லாம், நாம் நமது காரியத்தைச் சரியாக செய்ய வேண்டுமே என்கிற அக்கறையினால்தான்!! பெயரளவில் தமிழ்நாட்டில் தமிழர்களே எட்டுக்கு ஏழு பேர் மந்திரிகளாக இருக்கிறார்கள் என்றாலும், ஒருவருக்காவது தமிழர் இனம், தமிழ்மொழி, தமிழர் ஆட்சி என்கின்ற உணர்ச்சியே இருப்பதாகத் தெரிவதற்கு அடையாளம் இல்லை. முதலாவது, தமிழன் என்பதற்கு அறிகுறியாகத் தமிழ் மொழி உணர்ச்சியாவது எந்தத் தமிழ் மந்திரிக்காவது இருக்கிறதா என்று பார்த்தால், ஏதோ தமிழரை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக நடக்கிற முறையில்தான் தமிழ் உணர்ச்சியைக் காட்டுகிறார்களே தவிர, காரியத்தில் காட்டுவது மிகமிக அருமையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஒரு நாதியற்ற நாடாக ஆகிவிட்டது. இந்த மந்திரிசபை காலத்திலாவது இந்த விஷயங்களில் ஏதாவது கவனம் செலுத்தப்படுமா என்று பார்த்தால், நாள் எண்ணவும், சம்பளம் வாங்கவும், நாட்டில் பவனி வரவும், விருந்து, நாட்டியம், கோலாகல வாழ்வு அனுபவிக்க பெரு நேரம் செலவாகிவிடுகிறது. -9-8-55 ‘விடுதலை’ தலையங்கம். தமிழர்களிடம் இருக்கின்ற தமிழ் மொழிப்பற்று, தமிழ் இனப் பற்று, வடமொழி எதிர்ப்பு, ஆரிய வெறுப்பு ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதற்காகவே இம்முயற்சி (தட்சிணப் பிரதேசம்). . . . . இம் முயற்சியில் ஈடுபடுவார்களானால் என்ன நடக்கும் தெரியுமா?. . . . தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்படியாக மாபெரும் இரத்தப் புரட்சியே நடக்கப்போகிறது. . . . . தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கி, பிணக்காடாக்கி விட்டுத் தான் தட்சிணப் பிரதேசம் என்ற புது இணைப்பைக் காணப் போகிறார்கள் மேலிடத்திலுள்ள காங்கிரஸ்காரர்கள். இவர்களுக்கும் இவர்கள் கட்சிக்கும் அழிவுகாலம் நெருங்கி விட்டதென்றே கூறலாம். -9-9-55 "விடுதலை’ தலையங்கம். இப்போது என்ன சொல்லுகிறாய் தம்பி! பெரியாரின் மனம் என்ன பாடுபடுகிறது பார்த்தனையா, நாட்டிலே காங்கிர சாட்சியினர் செய்யும் அலங்கோலம் கண்டு? இதற்காகத்தானே நாம் எதிர்க்கிறோம், பிப்ரவரி 20-ல். பிறகு, பெரியாருக்கு ஏன் கோபம் வரப்போகிறது? சரியாகச் செய்வார்களோ, இல்லையோ என்பது அவருக்குள்ள சஞ்சலம். தம்பி! உன் வெற்றி மூலம் அவருக்கு உள்ள சஞ்சலத்தையும் போக்க முடியும். செய்வாயா? காங்கிரஸ் கட்சிக்காரர்கள், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தட்சிணப் பிரதேசப் பிரச்சினைபற்றி வாய்மூடி இருந்து வந்தனர். பிற கட்சிகள் கண்டித்தன. அந்தக் கண்டனம் இப்போதே ஓரளவுக்குப் பலன் அளித்திருக்கிறது. டில்லியிலிருந்து திரும்பிய காமராஜர், தட்சிணப் பிரதேச திட்டத்தைப் பலரும் கண்டிப்பது தனக்குத் தெரிகிறது என்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மவுனமாக இருந்ததுபோல நாமெல்லாம் இருந்து விட்டிருந்தால், நாடு, தட்சிணப் பிரதேச திட்டத்தைக் கண்டிக்கிறது என்பது நேருவுக்கோ காமராஜ ருக்கோ எப்படித் தெரிந்திருக்க முடியும்? இதனால்தான், தக்க சமயத்தில் முற்போக்குக் கட்சிகள், தீமை பயக்கும் திட்டங்கள் கிளம்பியதும், கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகிறது! அதே கடமை உணர்ச்சிதான் பிப்ரவரி 20-க்கும் காரணம். காமராஜர், இது தேவையுமில்லை, விரும்பத்தக்கதுமல்ல என்கிறார். தேவிகுளம் பீர்மேடு ஆகிய எல்லை குறித்து, டில்லியின் தீர்ப்பு அமுலுக்கு வராது என்றோ, அந்தப் பகுதி மக்களிடம் வாக்கெடுப்பை நடத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள நேரு சம்மதமளித்திருக்கிறார் என்றோ காமராஜர் உறுதியளிக்கவில்லை. அர்த்தால் செய்தால், விரும்பத்தகாத பல நிகழ்ச்சிகள் நேரிட்டுவிடும் என்பது மட்டும் அவர் காரணமாகக் காட்டுகிறார். பொறுப்புணர்ச்சி, அவருக்கு நம்மைவிட உடனடித் தேவை என்பது உண்மை. ஆனால், அர்த்தால் நடத்தத் திட்ட மிட்டிருக்கும் சர்வ கட்சித் தலைவர்கள், பொறுப் புணர்ச்சியற்றவர்கள் என்று காமராஜரே கூற முடியாது. அர்த்தால், அமைதியாக, பலாத்காரமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதைக் கூட்டணித் தலைவர் பி.டி. இராஜன், இப்போதும் ஓர் அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார். தேவிகுளம் பிரச்சினை சம்பந்தமாக நாடு எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கிறது என்பதை டில்லி அறிந்தாக வேண்டும். அர்த்தால் அருமையான வாய்ப்பு. தேவிகுளம் பிரச்சினையில், காமராஜருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இருப்பது உண்மையானால், தமிழரின் உரிமையையும், தமிழ் நாட்டின் எல்லையையும் காத்திட வேண்டுமென்பதிலே முதலமைச்சருக்கு அக்கறையும் நம்பிக்கையும் இருப்பது உண்மையானால், அவர் கூட்டணியின் திட்டத்துடன் ஒத்துழைத்து, வெற்றிகரமாக்கி, இந்த அர்த்தால் கட்சிப் பிரச்சினை அல்ல, நாட்டுப் பிரச்சினை என்பதை டில்லியே அறிந்திடச் செய்யலாம். எனவே, அர்த்தால் மூலம் ஏதேதோ நேரிடும் என்ற பீதி காட்டாமலும் கொள்ளாமலும், காமராஜர் துணிந்து பிப்ரவரி 20-ல் அர்த்தாலுக்கு தமது ‘ஆத்மீக ஆதரவு’ அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அர்த்தால் சமயத்தில், சமூக விரோதிகள், அல்லல் மூட்டுவோர் என்ற ‘தினமணி’ வாதத்தை, நாடாளும் பொறுப்பேற்றுள்ளவரும் கூறுவது அழகல்ல. சர்வ கட்சிக் கூட்டணி அமைதியான அர்த்தாலைத்தான் திட்டமிட்டிருக்கிறது. நாட்டின் அமைதியிலும், அதேபோது தமிழர் உரிமையிலும், ஜனநாயகக் கோட்பாட்டிலும், காமராஜருக்கு நம்பிக்கை இருக்குமானால், நிச்சயமாக அவர் நம்முடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தட்சிணப் பிரதேச திட்டம் இப்போதைக்கு இல்லை என்ற அளவு மட்டுமே காமராஜர் அறிக்கை மூலம் தெரிகிறது. இதுவே, மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், தேவிகுளம் பிரச்சினை அப்படியே இருக்கிறது என்பதை எப்படி மறந்துவிடுகமுடியும்? தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின், சித்தூர் ஆகிய தமிழ்ப் பகுதிகளை, கேரளத்துடன் இணைக்கும் திட்டம் உயிரோடு இருக்கிறது. அது மார்ச் மாதத்திலேயே சட்டசபைக்கு வருகிறது. முன்பே சட்டசபை இதுபற்றி அளித்த தீர்ப்பு, டில்லியால் குப்பைக் கூடைக்குப் போடப்பட்டது. மீண்டும் அதே கதி ஏற்படாமல் இருக்க வேண்டும்; அதற்கு பிப்ரவரி 20 வெற்றிகரமாக நடைபெற வேண்டும். அமைதி குலையாதிருக்கவும், கலாம் எழாதிருக்கவும், என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற யோசனைகளைக் கூறவும், கூட்டணியின் ஒத்துழைப்பைப் பெறவும், காமராஜருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அச்சத்தைக் காட்டி, அர்த்தாலைக் கைவிடச் சொல்வதிலே பொருள் இல்லை. எனவே, கூட்டணித் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பை அளித்து, காமராஜர் தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 19-2-1956 தண்டோரா சர்க்கார் - 1 சர்வ கட்சிக் கூட்டணி - தமிழர் பெருமை - பி.டி. ராஜன் தம்பி, கண்ட காட்சியோ பெரியதோர் நம்பிக்கை அளித்தது - கடலலை ஒலியையும் அடக்கிடும் வகையில் முழக்கம், காண்போரின் கோழைத்தனத்தைக் கல்லி எறிந்திடும் விதமான வீரத் தோற்றம், காரியமாற்றும் திறன் படைத்த காளையர் இலட்சக்கணக்கில் உளர் என்ற பேருண்மையை எடுத்துக் காட்டிடும் எழுச்சி, எல்லாம் கண்டேன். வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் பிறந்தோமே, வீரர் குறைந்து, வீணர் மிகுந்துள்ள நாட்டிலே வாழ்கின்றோமே, உரிமை உணர்வற்று உண்போம், உறங்குவோம், இடையில் உல்லாசம் தேடுவோம் என்றுள்ளனரே மக்கள், என் செய்வோம், மரபினை மறந்து தாயகத்தின் மீது தளை பல பூட்டிடத் தருக்கர் துணிந்திடுவது தெரிந்தும் சிறு விரலையும் அசைக்காது உளரே பெரும்பாலோர், என் செய்வது என்று திகைத்துக் கிடந்த என்னை, அன்று நான் கண்ட காட்சி, தட்டி எழுப்பிற்று. ஏடா! ஏதேதோ எண்ணி ஏங்கிக்கிடந்திடும் அசடனே! கண்டாயா, இப்பெரும் படையினை! இவர்தம் உறுதியினை அறிவாயோ! எதையும் தாங்கிக் கொள்ளும் இதயம் கொண்டோர்! எந்தையர் நாட்டின் உரிமை காத்திட இன்னுயிரையும் ஈந்திடும் உரம் கொண்டோர்! துரைத்தனத்தார் அவிழ்த்துவிடும் அடக்குமுறை கண்டு அஞ்சுவோர் இவர் அல்ல! துப்பாக்கி உறுமட்டும், தூற்றல் துளைக்கட்டும், தூய உள்ளம் படைத்த இத் தமிழ்ப் பெருங்குடி மக்கள், துளியும் அஞ்சப் போவதில்லை! நீ ஏதேதோ பேசுகிறாய், பலப்பல எழுதுகிறாய், இதோ இவர்கள் நாளையதினம் "வீரகாவியம்’ திட்டிக் காட்டப் போகிறார்கள்! கலிங்கமும் கடாரமும் வென்றவர் அல்லவா, தமிழர்! அவர் வழி வந்தோர் காட்டாட்சி நீட்டிடும் தடியடி துப்பாக்கிக்கா அஞ்சுவர்! வீண் பயம் உனக்கு! காரணமற்ற சந்தேகம்! அதோ அந்தக் கண்ணொளி தந்திடும் கருத்துரை அறிகிறாயா? இவர்கள் இத்துணை இலட்சம், திரண்டிருக்கக் கண்டும், என்ன ஆகுமோ, எது நேரிடுமோ என்று கலங்கிக் கிடக்கிறாயே, சந்தனம் இருக்கும்போது ‘மணம்’ கிடைக்குமோ இல்லையோ என்றும் கலங்கிடப்போமோ! - என்றெல்லாம், எண்ணிடச் செய்ததோர் எழில் நிறை காட்சியைக் கண்டேன், உளம் உணர்ச்சியின் ஊற்றாயிற்று. களிப்பிலே மிதந்தேன், கற்பனைச் சிறகடித்து எண்ண வானில் பறந்தேன், இன்பம், இன்பம் என்னென்பேன் நான் கொண்ட இன்ப எண்ணங்கள். எனினும், மீண்டும் மனம் குழப்பத்துக்கு இடமளித்தது கடற்கரையில், கூடினர் நான்கு லட்சம் மக்கள்! தலைவர்களின் ‘அழைப்பு’ கேட்டுத் திரண்டெழுந்து வந்தனர்! பண்டைப் பெருநாட்களிலே பாராண்ட மன்னர்கள், தமிழகத்தின் மானம் காத்திட, மாற்றானைத் தாக்கிடக் கிளம்பிய காலை, நம் மூதாதையர் இங்ஙனம்தான் கூடியிருப்பர், கோட்டைப் பெருவெளியில்! அன்று அவரிடம் வடித்தெடுத்த வாளும் வேலும் இருந்தன! களிறுகள் ஏப்பமிடுவது போலப் பிளறிக் கொண்டிருக்க, காற்றையும் வெல்ல வல்லோம் என்று பரிப்படை கனைத்திட, இவற்றினைக் கண்டு, வேட்டை! வேட்டை! என்று வீரர் கூட்டம் துடித்தெழுந்தது! ஆனால் அது, அன்று! இன்று? இனமும் இயல்பும் கெட்டு, இழிவும் பழியும் படர்ந்திட, பான்மைபட்டுக் கிடக்கும் நாளன்றோ! தமிழன் என்றோர் இனம் உண்டு! தனியே அவர்க்கோர் குணம் உண்டு! - என்று நாமக்கல் கவிஞரும், ‘தேசியத்தையும்’ மறந்து பாடிட வேண்டிய விதமாக அல்லவா, தமிழர் என்ற இன உணர்வு குன்றிக்கிடக்கிறது. இதனை அறிந்தல்லவா, குடிலர்கள் கோலோச்சத் துணிந்தனர், குணக்கேடர்கள் ஆசான்களாக முன் வந்தனர்! இந்நாளில், எழுச்சி ஏற்படுவதெங்ஙனம் இயலும்! ஏன்? என்று கேட்கும் திறனற்று, அநீதியை எதிர்த்து நிற்கும் வீரமற்று, பிறந்துதொலைந்தோம், இறந்துபடும் வரையில் வாழ்ந்து தொலைப்போம். கைகட்டி வாய்பொத்தியேனும், காடு கரம்பு உழுது கிடந்தேனும், பல்லெலாம் தெரியக்காட்டிப் பிச்சை எடுத்தேனும், இச்சகம் பேசிக் கிடந்தேனும், பிழைத்துக் கிடந்தால் போதும் என்று எண்ணிடும் பேதயரானோமே, அஃது அறிந்தன்றோ, மூதாதையர் காலத்தில் முழங்காற்படியிட்டுக் கிடந்த இனத்தோரெல்லாம் இன்று, முடுக்கும் மிடுக்கும் காட்டுகின்றனர், - இந்நிலையில், இழிவினை ஒழித்திட அறப்போர்ப் படை திரளட்டும் என்று நா உலர, நெஞ்சம் உலரக் கூவித்தான் பயனென்ன, என்று மனம் குமுறும் நிலையில் இருந்திடுபவனல்லவா நான்! பிப்ரவரி 9, மாலை, கடற்கரையில் கூடிக் கடமை உணர்ச்சியை இழந்தோமில்லை, காரியமாற்றிடும் திறனை இழந்தோமில்லை, வேற்றார் மாற்றாராயினர் என்பதறிந்தால் அவர்தம் கொட்டம் நொறுக்குவோம், நமக்கென்றோர் கொற்றம் அமைப்போம், கோழை என்று எண்ணாதீர்! அண்ணா! கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியும் எம்மால்! குழப்பமடையாதீர்! கோல் கொண்டோன் உருட்டி மிரட்டட்டும், கலங்கப் போவதில்லை! விரட்டித் தாக்கட்டும், கீழே வீழ்ந்துபடும் வரையில் வீரப் போரிடுவோம்? எம்மைச் சந்தேகிக்க வேண்டாம், உடன் பிறந்தாரிடம் நம்பிக்கை கொள்ளாமல், வேறு அதனை எங்ஙனம் பெறுவீர், எவரிடம் பெறுவீர், கலப்பை தூக்கிய கரங்களெல்லாம், அதற்கான காலகட்டம் வந்தபோது, வாளேந்திக் களம் சென்ற காதையினை மறந்தனையோ! ஏரடிக்கும் சிறுகோலும், எருதுகளும்தான் இவன் அறிவான், இவனுக்கு வாளேந்த, ஈட்டி எறிய, எங்ஙனம் இயலும் என்று எண்ணினரோ நமது முன்னோர்! மடைகட்டி அறிவானே தவிர, படையில் பணியாற்றத் தெரியுமோ இவனுக்கு! மேடு வெட்டிப் பள்ளம் நிரப்புவான், வாய்க்கால் வெட்டுவான், வளமளிக்க நீர் பாய்ச்சுவான், அறுத்தெடுப்பான், புடைத்து எடுப்பான், குவிப்பான், களிப்புறுவான், இவ்வளவுதான் இவனறிவானேயன்றி, பாய்ந்து தாக்கவும், பக்கவாட்டத்தில் செல்லவும், கோட்டைச் சுவர் ஏறவும், கொத்தளங்களைத் தூளாக்கவும் இவனுக்கு என்ன தெரியும் என்று சந்தேகித்தனரோ முந்தையோர்! இல்லை! இல்லை! உழவனெனினும், களம் அமைத்துக்கொண்டன்றோ பணியாற்றுகிறான்! எனவே காலம் கட்டளையிட்டதும், கரம் வாளாகும், உழவன் உயர்தரமான போர் வீரனாவான்! என்றன்றோ எண்ணினர். அஃதேபோல நாங்கள் கடை வைத்துப் பிழைக்கிறோம், கட்டை வெட்டி வாழ்கிறோம், கல் பிளந்தோ மண் சுமந்தோ கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழிதேடிக் கொள்கிறோம், தொழில்கள் ஆயிரம் புரிகிறோம், துயரமோ மலையத்தனை காண்கிறோம், ஆலைகளில் கரும்பாகிப் பிழியப்படுகிறோம், ஆவிசோரப் பாடுபடுகிறோம், கட்டுமரம் ஏறிச்சென்று கடலில் பிழைப்புத் தேடுகிறோம், ஆமாம், அரைவயிற்றுக்காக ஆலாய்ப் பறக்கிறோம், அது உண்மைதான்; எனினும், ஆன்றோரும் சான்றோரும் வாழ்ந்த நந்தம் நாட்டுக்கு ஓர் ஆபத்துச் சூழ்ந்திடுகிறது என்று அறியும்போது, நாங்கள் அஞ்சிடும் போக்கிலா இருந்திடுவோம், நம்மால் ஆகுமா என்று பெருமூச்சு விட்டபடியா முடங்கிக் கிடப்போம், வாள் கிடைக்காது போயினும் எதிரியின் வாளை ஒடித்திட இக்கரங்களைப் பயன்படுத்துவோம், மார்பிலே மாற்றார் வீசும் கணைகளைத் தாங்கிக்கொள்வோம், களம் எது காட்டிடு, காலம் குறித்திடு, செயல் முறையினைச் செப்பிடு, செய்து முடித்திடுவோம், இல்லையேல் செத்து ஒழிந்திடுவோம்! ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு இலாபம் உண்டோ?’ என்று பாடியவர் நம்முடைய பாரதிதாசனல்லவா! அந்தப் புரட்சிக் கவிஞன் கிளப்பிய பொறிகளெல்லாம் எங்கே போய் விட்டன? இதோ, எமது கண்ணொளி காண்பாய்! இங்கே வந்தன்றோ, அவை அத்தனையும் குடி ஏறிவிட்டன என்றெல்லாம் எனக்கு எடுத்துரைப்பது போலிருந்தது பிப்ரவரி 19-ல் நான் சென்னைக் கடற்கரையில் கண்ட காட்சி. தம்பி, நான் மந்திரியல்லவே, அதனால் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன். எழுச்சியூட்டும் பெருங்கூட்டம் பலவற்றிலே கலந்து கொண்டிருக்கிறேன் - எனினும் எனக்கு ஒரு கணம் திகைப்பே ஏற்பட்டு விட்டது, அன்றைய கூட்டத்தின் அளவையும், அங்குக் காணப்பட்ட எழுச்சியின் வகையையும் கண்டு! மக்களோ, ஒரே மேடையில், ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கிடக்கும் பல்வேறு கட்சியினர் அமர்ந்திருப்பது கண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். காலை மலர்ந்ததும், நாடெங்கும் கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற வேண்டும். அது எந்த அளவு வெற்றிபெறுகிறதோ இல்லையோ, கலாம் ஒரு துளியும் நடைபெறக் கூடாது. ம.பொ.சி. பி. டி. ராஜன் பாராட்டிப் புகழத்தக்க விதமாகப் பேசுகிறார், ‘எத்தனை சதவிகிதம் கடை அடைப்பு வெற்றி பெற்றது என்பதைவிட, எத்தனை சதவிகிதம் அமைதி நிலவுகிறது என்பதுதான் முக்கியம்’ என்று. நான், பன்னிப்பன்னி ‘அமைதி, அமைதி! அடித்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும்; தாக்கினால் தாங்கிக்கொள்ள வேண்டும்; தூற்றுவர், கோபம் கொள்ளக் கூடாது; இழித்தும் பழித்தும் பேசுவர், ஏளனம் செய்வர், அது கேட்டு மன எரிச்சலடையக் கூடாது, என்கிறேன். நமது முறையில் பலாத்காரம் தலைகாட்டக் கூடாது, யாரையும் நாம் வற்புறுத்தவும் கூடாது, கடை அடைப்பிலும் வேலை நிறுத்தத்திலும் ஒவ்வொருவரும் தாமாக மனமுவந்து ஈடுபட வேண்டும், யாரையும் நாம் பலவந்தப்படுத்தக் கூடாது என்று தமக்கே உரித்தான பண்புடன் பேசுகிறார், பி. டி. ராஜன். மக்களோ, அப்போதே நகரெங்கும் குழுமிக் கிடக்கும் கவசத் தொப்பி தரித்த போலீசைக் காண்கிறார்கள்; அவர்களின் முகம் கடுகடுத்து இருப்பதும் தெரிகிறது. இவர்கள் என்னென்ன ‘இம்சை’கள் தருவார்களோ என்றும் எண்ணுகிறார்கள். இங்கோ தலைவர்கள், காந்தியார் பார்த்து மெச்சத்தக்க வகையில், ‘சாந்தோபதேசம்’ செய்கிறார்கள் - போலீஸ் முகாமிலோ, துப்பாக்கிகளுக்குத் தோட்டாக்களைப் பொருத்திக் கொண்டும், தடிகளுக்குப் போடப்பட்டுள்ள ‘பூண்கள்’ சரியாகப் பொருந்தியுள்ளனவா என்று சரிபார்த்துக் கொண்டும் உள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில். அவர்களை ‘அடக்கி ஆள’ ஆயிரக்கணக்கில் புதிய புதிய போலீஸ் படைகள் வந்திறங்குகின்றன. ஆந்திர நாட்டிலிருந்து கூடப் போலீஸ் படைகள் தருவிக்கப்பட்டிருப்பதாக, அன்று தோழர் விநாயகம் அறிவித்தார். தம்பி! 19-ந் தேதிய கூட்டத்தையும் கண்டேன், தலைவர்கள் காட்டிய அடக்கத்தையும் அவர்கள் தந்த அறிவுரையையும் எண்ணி எண்ணிப் பார்த்தேன் - என் கண்களில் நீர் துளிர்த்தது! சென்னை நகரை, என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் அன்று இரவு! ஆம், தம்பி! என்ன வேண்டு மானாலும்! எழுக, வீழ்த்துக-என்று தலைவர்கள் அன்று கட்டளையிட்டிருந்தால், எதனை? என்று கூடக் கேட்டுக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள், எதையாவது வீழ்த்திவிட்டு, வேறு எதை வீழ்த்த வேண்டும் என்று கேட்டிருப்பர். அவ்வளவு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர் மக்கள். என்னால், எண்ணத்தை வெளியிடாமல் இருக்க முடிய வில்லை. இன்று ஆளவந்தார்களாக உள்ள இதே காங்கிரசாரிடம் இந்த ‘ஜன சக்தி’ கிடைத்தபோது, அம்மவோ! என்னென்ன செய்து மகிழ்ந்தனர்; எதிர்க் கட்சியினரைத் துரத்தித்துரத்தித் தாக்கினர். துரைத்தனத்தைத் துழைத்து எடுத்தனர். சட்டமாவது மண்ணாவது! அமைதி என்று கோழைத்தனம் பேசுவதா, அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ளும் அரும் வாய்ப்பினை இழந்து விடுவதா? தத்துவம் பேச இதுவா தருணம்? தாக்குக, நொறுக்குக, தண்டவாளங்களைப் பெயர்த்திடுங்கள், தபாலாபீசுகளைக் கொளுத்துங்கள்! சர்க்கார் கட்டிடத்துக்குத் தீ மூட்டுங்கள், தனியே சிக்கிடும் அதிகாரியின்மீது திராவகம் ஊற்றுங்கள் - என்றெல்லாம் பேசினர் - மக்களை எதெதற்கோ ஏவினர் - பலாத்காரத்தை அவிழ்த்து விட்டனர். மக்களின் ஆற்றலைக் கொண்டு, நாசவேலையைச் செய்து முடித்தனர். இதோ, பி. டி. ராஜன் எதிரில் நான்கு இலட்சம் மக்கள். சர்வகட்சிக் கூட்டணியின் தலைவர் அவர். அவர், தம்மிடம் தரப்பட்டுள்ள நான்கு இலட்சம் மக்களைக் கண்டு, என்ன எண்ணுகிறார்? இந்தப் பெரும் படையினைக் கொண்டு, எத்தகைய பேயாட்டம் நடத்திக் காட்டலாம் என்றா? இல்லை தம்பி, இல்லை. பெருநோக்கம் கொள்கிறார்! மகத்தானதோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக் கிறோம், எதையும் சாதிக்கவல்லதோர் ஆற்றல் படை இதோ அணிவகுத்து நிற்கிறது! இதனை நாசப் பாதையில் நாட்டம் கொள்ளாதிருக்கச் செய்ய வேண்டும், தமிழ்ப் பண்பு அழியும் விதமான போக்கிலே நடந்து கொள்ளாதிருக்கச் செய்ய வேண்டும் என்பது பற்றித்தான், மிகமிகப் பொறுப்புடன் பேசினார். எனக்குத் தம்பி, உண்மையாகவே உருக்கமாக இருந்தது. மாற்றுக் கட்சிக்காரர்களுக்குத் தன் "வலிவை’ எடுத்துக் காட்டுவதற்கான எத்துனை பெரிய வாய்ப்பு இது. இதனைப் பெற்றும், மகிழ்ச்சியடைந்தும், வாய்ப்பு, பெரும்பொறுப்பு தவிர, பகை கக்குவதற்கான சாதனம் அல்ல என்பதை உணர்ந்து பேசுகிறாரே, இவரல்லவா கண்ணியவான் என்று எண்ணிக் கொண்டேன், பெருமிதம் கொண்டேன். இலட்சக்கணக்கிலே கூடி இருந்த மக்களிடம் சொன்னேன். தங்களிடம் மக்கள் சக்தி குவிந்திருந்த போது கொடுமையையும் நாசத்தையும் அவிழ்த்துவிட்ட அந்த அரசியல் வாதிகள் எங்கே? தமிழகம் தன் பக்கம் திரண்டு நின்று ஆர்வம் கொப்பளிக்கும் நிலையில் ஆதரவு காட்டி நிற்பது அறிந்தும், அமைதியுடன் நீதியைப் பெற அறநெறி நிற்கவேண்டும் என்று அறிவுரை தரும் இவர் எங்கே? தமிழ் நாட்டின் கண்ணியம், இதோ இங்கு அமர்ந்திருக்கிறது. காண்பீர்! என்று எடுத்துச் சொன்னேன். என் இதயம் பேசிற்று. அத்தகைய "கண்ணியவான்’ ஜனவரி 27-ந் தேதிய சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார் - கூட்டணித் தலைவரானார்; பிப். 20, பொதுவேலை நிறுத்தம், கடை அடைப்பு, அன்றே தீர்மானிக்கப்பட்டது. பி. டி. ராஜன், அரசியலில் இப்போது நுழைந்த டி.டி.கே. அல்ல. காலமெல்லாம் வேறு வேலை பார்த்துவிட்டு, சமயமறிந்து காங்கிரசில் பதுங்கும் ‘சந்து’ தேடிடும் சந்தர்ப்பவாதியல்ல. கப்பல் மூழ்குவது தெரிந்தாலும், அதில் உள்ளோர் தப்பிச் செல்ல வழி செய்துவிட்டு, நான் தப்பித்துச் செல்வது அறமாகாது, நானும் கப்பலுடன் சேர்ந்து மூழ்கினாலும் கவலையில்லை என்று கூறி, கொடி வணக்கம் செய்தபடி, கப்பல்மேல் தட்டிலே நிற்கும் கப்பல் தலைவன் போல, ஜஸ்டிஸ் கட்சியில் நின்றவர். காமராஜ், அரசியல் இயக்கத்தில் தொண்டராக, கொடி ஏந்தியாக இருந்த நாட்களிலே, கோலோச்சும் அமைச்சராக இருந்தவர்; துள்ளி விளையாடும் சிறுபிள்ளைப் பருவத்தில் காமராஜர் இங்கு இருந்த நாட்களில், சீமை சென்று பார்-அட்-லா படித்தவர். பண்புக்கும் அன்புக்கும் உறைவிடம்; அரசியல் நாகரிகத்துக்கே ஆசான். அவரைச் சந்தித்து, பிப்ரவரி 20 குறித்துப் பேச வேண்டும் என்ற அளவுக்குக்கூட, தமது உயர்ந்த இடத்திலிருந்து கீழே இறங்க, காமராஜருக்கும் மனம் இடம் தரவில்லை. அழைத்துப் பேசவும் அவருக்குத் தோன்றவில்லை. அலட்சியப்படுத்தினார் - கூட்டணி என்றோர் அமைப்பு உருவாக்கி இருப்பதையே கவனிக்க வேண்டிய அளவில் நான் சாமான்யனல்ல, ஒஹோ! அதனை அறிவீரா? நான் இந்த இராஜ்ய முதல் மந்திரி! என்று எண்ணி இறுமாந்து கிடந்தார். ‘அர்த்தால்’ நடத்தத் தேவையில்லை; கோரிக்கைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன் என்று கூறிட, முன்வரவில்லை. ஒருவேளை, முதல் மந்திரிக்கு இருக்கும் மிகுதியான, பலரக வேலைகளிலே, இதனை அவர் கவனிக்கவே இல்லையோ என்றால் தெரிந்திருக்கிறது, தூற்றிப் பேசியுமிருக்கிறார் செஞ்சியில். வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினார் - துச்சமென்று எண்ணினார் - கூட்டாவது குழம்பாவது என்றார் ! அப்படிப்பட்டவருக்குக் "கண்ணியம்’ காட்டினார், பி.டி. இராஜன். தமிழனின் புகழ்க்கொடி, உயர உயரப் பறந்தது, தம்பி, பறந்தது! நாடு, சர்வ கட்சிக் கூட்டணியின் அழைப்புக்கு ஆதரவு காட்டிற்று. தம்பி, நீ உன் முழுத்திறமையையும் அளித்து பிப். 20 வெற்றி தேடித் தந்திருக்கிறாய், நான் உன்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அந்த அளவு குறைவு, இன்னும் அதிகம் நான் உன்னிடம் எதிர்பார்க்கலாம் என்பதை எடுத்துக் காட்டிவிட்டாய். தித்திக்கும் செய்திகளாகவே அனைத்தும் இருந்து விடவில்லை. குருதி கொட்டினர் நண்பர்கள்; தடியடிக்கும் ஆளாயினர் அன்பர்கள்; அரசியல் பிரச்சினையிலே அக்கறை கொண்டுள்ள தமிழர்கள் அத்துணை பேரும், அவர்கள் எந்தக் கட்சியினராயினும், ஏதேனும் ஓர் வகையில் தமது பங்கினைச் செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் பணியாற்றினர் - வெற்றி பெற்றனர். வாழ்த்துகிறேன் - வணங்குகிறேன். அவர்களின் ‘தோழனாக’ இருக்கும் ‘பேறு’ கிடைக்கப்பெற்றதற்காகப் பெருமகிழ்வு கொள்ளுகிறேன். சைமன் கமிஷனை பகிஷ்கரித்தபோதுகூட இப்படி இருந்ததில்லை என்றும், ரவுலட் சட்ட எதிர்ப்பின் போதும் இதுபோல் கொதிப்பு எழுந்ததில்லை என்றும், இராஜ்யம் பூராவிலும் நடைபெற்ற மிகப் பெரிய அர்த்தால் இதுதான் என்றும். எதிர்க்கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்த அர்த்தாலில், இது போல் மகத்தானது வேறு ஒன்றும் இதற்குமுன் நடை பெற்றதில்லை என்றும், பெரிய பத்திரிகைகளின் ஒத்துழைப்பு ஒரு துளியுமின்றி, அவைகளின் எதிர்ப்பையும் ஏளனத்தையும் தாங்கிக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றது இந்த அர்த்தால் ஒன்றுதான் என்றும், காலித்தனமோ குழப்பமோ, பலாத்காரமோ பயங்கரமோ இல்லாமல், மிக மிக அமைதியாக, மக்கள் பெருமளவுக்கு நடந்து கொண்டது, இந்த அர்த்தாலில்தான் என்றும், ஓரிரு இடங்களில் கட்டுக்கடங்காத ஆர்வத்தினால் சில காரியங்கள் நடைபெற்றிருந்தாலும், அவை விதிவிலக்கு அல்லது ‘திருஷ்டி பரிகாரம்’ என்று கூறத்தக்க வகையில்தான் இருந்தது என்றும், இந்த அர்த்தாலின் போதுதான், பொதுமக்கள், பயமற்று உலவிய, காட்சிகளைக் காண முடிந்தது என்றும், பெரும் பணத்தைச் செலவிட்டு, முதலாளிமார்கள் முன் முழங்காற்படியிட்டு, போலி வெற்றி தேடிடாமல், மனமுவந்து, தாமாக மக்கள் ஈடுபட வேண்டுமென்று முறை வகுக்கப்பட்டு, நடத்தப்பட்டது இந்த அர்த்தால் ஒன்றுதான் என்றும், நேர்மை உள்ளம் படைத்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகை யானாலும், மணம் இருந்தால் ரசிக்கத் தெரிந்தவர்கள், அனைவரும் கூறினர் - பாராட்டினர். கண்டித்துப் பேசவும், கேலி பொழியவும், பகை உமிழவும் பொறாமையைக் கக்கவும் தலைவர்கள் இல்லாமற் போகவில்லை. முட்டாள்கள் - பைத்யக்காரத்தனமான செயல்- என்று மேதை பக்தவத்சலனார் பேசியிருக்கிறார்! தம்மம்பட்டியிலும் கல்லக்குறிச்சியிலும் குண்டடிபட்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள், நாங்கள் குண்டடிபட்டபோது குற்றுயிராய்க் கீழே கிடந்த போது, மருத்துவரிடம் சிக்கியபோதுகூட எமக்கு இவ்வளவு வேதனை ஏற்பட்டதில்லை; மொழி காக்கவும், மொழிவழி அரசுக்காகவும், நீதிக்காகவும் அறப்போர் நடத்தியவர்களை, முட்டாள்கள் - பைத்யக்காரர்கள் என்று ஏசுகிறாரே ஒரு மந்திரி தமிழ் இனத்தவர் - அதைக் கேட்கும் போதுதான் எமக்கு அதிகமான வேதனை மூண்டுவிடுகிறது என்று கூறுவர். உள்ளம் உண்மையிலேயே வேதனைப்படத்தானே செய்யும். கல்லக்குறிச்சியில் மூவர், தம்மம்பட்டியில் மூவர் குண்டடி பட்டு மருத்துவ மனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாழ வேண்டியவர்கள், அவரவர் இல்லங்களிலே இன்று இரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளனர். மகனுக்குக் குண்டடிபட்டதாம் - குருதி கொட்டக் கொட்டக் கீழே வீழ்ந்தனராம் - குற்றுயிராயினராம் - என்று கேட்டதும் தாய் எப்படிப் பதறினார்களோ, என்னென்ன கூறிக் கதறினார்களோ! வம்புதும்புக்குப் போகாதவன், யாரிடமும் இன்முகம் காட்டிப் பேசுவான், ஊருக்கு உழைப்பதிலே ஆசைமிக்கவன், ஒருவரிடமும் விரோதம், குரோதம் கொள்ளமாட்டானே, ஐயோ! அப்படிப் பட்ட என் அருமை மைந்தனை, துப்பாக்கியால் சுட்டார்களாமே! பெற்றெடுத்து வளர்த்துப் பெரியவனாக்க நாங்கள், சுட்டுத் தள்ள சர்க்கார்! இந்தக் கொடுமைக்கு என்னதான் பரிகாரம்? யாரும் இல்லையா நீதி கேட்க?. . . . என் மகன் என்ன, வெடிகுண்டு வீசினானா? வெட்டரிவாள் தூக்கினானா? வீடு புகுந்து கலாம் விளைவித்தானா? போவோர் வருவோரைத் தாக்கினானா? கொலையும் கொள்ளையும் நடத்துவோனை அடக்கப் பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி கொண்டா, கொள்கைக்காகப் பணியாற்றுவோரைத் தாக்குவது, இப்படி ஒரு துரைத்தனமா? இதற்குத் தூபதீப நைவேத்தியம் வைத்தல்லவா தேர்தலில் ஓட்டுக் காணிக்கை தந்தோம், மாட்டுப் பெட்டிக்கு ஓட்டளியுங்கள், மகத்தான நன்மைகள் செய்து தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்; சாரை சாரையாகச் சென்று ஓட்டு அளித்தோம் - இப்போது தடியும் துப்பாக்கிக் குண்டுமல்லவா தருகிறார்கள். என் மகனைத் துப்பாக்கியினால் சுட்டிருக்கிறார்களே! அவதார புருஷன் என்றும், அஹிம்சா மூர்த்தி என்றும், ஒப்பற்ற முனிவன் என்றும், போற்றப்பட்ட உலக உத்தமராம் மகாத்மாவின் சீடர்கள், வாரிசுகள் என்று கூறிக்கொண்டே, இவ்வளவு கொடுமைகளச் செய்கிறார்களே, ஏனென்று கேட்க யாரும் இல்லை, பெற்ற வயிறு பற்றி எரிகிறதே; இந்த அநீதியை, அக்ரமத்தை ஏனென்று கேட்க நீதிமான் யாரும் இல்லையா! காட்டில் உள்ள புலி நாட்டுக்குள் நுழைந்து விட்டால், வீட்டுக்கோர் வீரன் கிளம்பிச் சென்று வேட்டையாடிக் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கி, புலியைக் கொன்று போடுகிறார்களே, நாட்டைக் காடு என்றுஎண்ணிக்கொண்டு, மக்களை அடக்குமுறைக் கொடுமைக்கு ஆளாக்கும் ஓர் ஆட்சி நடத்துகிறது, அறிஞர் பெரு மக்களும் ஆண்மையாளர்களும், குடி அரசின் கோட்பாட்டின் பாதுகாவலர்களும் வாய் மூடி இருந்திடலாமா? என்றெல்லாம் அவர்களுக்குப் பேசத் தெரியாது. ஆனால் கண்ணீருக்கு வேறென்ன பொருள்? தம்பி, தம்மம்பட்டிச் சம்பவம், கேட்கும்போதே நெஞ்சு உருக்குவதாக இருக்கிறது. தம்மம்பட்டி, ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள ஒரு சிற்றூர். மாபெரும் புரட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தினாலும் மொத்தமாக ஒரு ஆயிரம் மக்கள் திரண்டிட முடியாது. அங்குள்ள மக்களுக்கு, நமது இயக்கத்தைப்பற்றி அறிவிக்க, தம்மம்பட்டியில் நமது கழகக் கூட்டம்கூட நடைபெற்றதில்லை. சுற்றுப்புறமுள்ள இடங்களிலே நடைபெற்ற, நமது கழகக் கூட்டங்களின் மூலமாகப் பெற்ற உணர்ச்சிதான், தம்மம்பட்டிக்கு இருந்து வந்தது. ஆனால், பிப். 20 அர்த்தால் பற்றிய சர்வக் கட்சிக் கூட்டணியின் பிரசாரம் தம்மம்பட்டிக்கும் பரவிற்று - தமிழர் வீறுகொண்டெழுந்தனர் - ஊர்வலம் நடந்தது. தம்மம்பட்டி சென்ற வந்த தம்பி மதியழகன், அறுபது எழுபது பேருக்கு மேல் ஊர்வலத்தில் செல்லவில்லை என்று தெரிந்து வந்து அறிவிக்கிறார். இதைப் "புரட்சிப் படை’ , போலீசைத் தாக்கவந்த படை, நாசம் விளைவிக்கக் கூடிய படை என்றெல்லாம் கருதிக் கொண்டு, அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூவர், தம்பி! குண்டடிப்பட்டு, மருத்துவ மனையில் இருக்கிறார்கள். மகாத்மா, மொழிவழி ராஜ்யமே தேவை என்று வலியுறுத்தி வந்தார். மக்களுக்கு வாக்களித்தார். அவர் ‘வாரிசு’ ஆகவந்து அரசோச்சும் நேரு பண்டிதரோ, மகாத்மாவின் மொழிவழி ராஜ்யத் திட்டத்தைக் கிழித்தெறிகிறார். மகாத்மாவின் உபதேசத்தைப் புறக்கணித்து நடக்கும் நேரு பண்டிதருக்குப் பக்கபலமாக இருப்பதில் பெருமை கொள்ளும் காமராஜர் சர்க்காரோ, தம்மம்பட்டி, கல்லக்குறிச்சி நடத்தி மகிழ்கிறது. தருக்கரிடம் ஆட்சி சிக்கிக்கொண்டதால், குண்டடிக் கொடுமைக்கு ஆளான தம்மம்பட்டித் தோழர்களே! நீங்கள் அனுபவித்த கொடுமையை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடிக்கிறோம் - முதலில் - பிறகோ தாயகத்தின் உரிமை முழக்கமிட்டு, அதனை ஒடுக்க எண்ணுவோரின் குண்டினைத் தாங்கிக் கொண்ட, நெஞ்சு உரம் கொண்ட தோழர்காள்! உமது வீரத்துக்குத் தலை வணங்குகிறோம் என்று நான் மட்டுமா, சர்வ கட்சிக் கூட்டணித் தலைவர்களெல்லாம், ஏன், தமிழகமே கூறுகிறது. கல்லக்குறிச்சியிலும் தடியடி - குண்டடி; அங்கும் மூவர் படுக்கையில். கேட்கும்போது, கண்ணீர் வருகிறது - பிறகோ, மார்பு நம்மையுமறியாமல் நிமிர்கிறது. தமிழகமே! தாயகமே! உன் மக்களில் வீரரும் தீரரும் இல்லாமற் போகவில்லை - அனைவருமே பக்தவத்சலங்களாகிவிடவில்லை - இதோ தம்மம்பட்டியும் கல்லக்குறிச்சியும் உனக்கு இரத்தக் காணிக்கை தந்திருக்கின்றன, தருக்கராட்சிக்குக் குருதி மேலும் தேவை என்றாலும், தரச் சித்தமாக உள்ள வீரர் அணிவகுப்பு, உன் தளைகளை ஒடித்திடும் வல்லமையை மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாகப் பெற்றுக் கொண்டு வருகிறது என்று எண்ணி எக்காளமிடத் தோன்றுகிறது. கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும்தான் நடத்தினோம் - அதிலும், வற்புறுத்தல், துன்புறுத்தல், வம்பு வல்லடி செய்தல், குறுக்கே படுத்தல், மறித்து நிறுத்துதல் கூடாது என்று கூறிவிட்டோம் - கொழுந்து விட்டெரியும் ஆர்வத் தீயைத் தணியச் செய்து கொள்ள முடியாததால், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில நடைபெற்றுவிட்டன சிந்தை நொந்து தமது வருத்தத்தைத் தெரிவிக்கிறார் கூட்டணித் தலைவர். சென்னையில், ஊர்வலத்துக்கு வந்த மக்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அன்பர் ஜீவாவும், கம்யூனிஸ்டுத் தலைவர் வெங்கடராமனும் போலீசால் தாக்குண்டனர். ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர், இது கேட்டு இன்னமும் வெட்கித் தலை குனியக் காணோம். இத்தகைய அக்கிரமத்தில் இறங்கியவர்களைக் கண்டித்ததாகவும் தெரியவில்லை. கட்சியின் நடுநாயகங்களாக விளங்கும் இருவர், நாற்பதாண்டுகளாகப் பொதுப் பணியாற்றி வரும் மக்கள் தலைவர்கள், தாக்கப் படுகின்றனர், பட்டப்பகலில் நடுவீதியில், அமைதியைக் காத்திட அவர்கள் ஈடுபடுகிற நேரத்தில். அமைதி பிறகு எங்ஙனம் நிலைக்கும்? தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தலைவர்களைக் கண்ணெதிரே போலீஸ் அடிக்கக் கண்டால், மக்கள் மனம் என்ன பாடுபடும்? கொதித் தெழுவரன்றோ மக்கள்! ஆமாம், அதைத்தான் விரும்புகிறார்கள், அடக்குமுறையில் பயிற்சி பெற்றோர். மக்களைக் கொதித்தெழச் செய்வது, கொதித்தெழுந்த மக்கள்மீது தம்மம்பட்டி, கல்லக் குறிச்சி நடத்துவது! இதுதான் முறை என்றால், இதற்கு ஜனநாயகம் என்ற போர்வை ஏன்? தோழர் கோவிந்தசாமி M.L.A. கடலூரில் கைதானார் - குற்றம் என்ன தெரியுமா தம்பி, கொள்ளை அடித்தார் என்பது. நம்ம கோவிந்தசாமியேதான், எஸ். எஸ். இராமசாமி படையாச்சியார் காங்கிரசுக்குத் ‘தத்து’ போனபோது, தொத்திக் கொண்டிருந்தால், சீமானாகி இருக்கக்கூடும் - அந்த வாய்ப்பு வேண்டாம், வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும், மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது, பதவி அல்ல முக்கியம், பண்புதான் என்று உணர்ந்து உழைப்பாளர் கட்சியை உருவின்றிப் போகச் செய்ததைக் கண்டித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமை கொண்டு பொதுப் பணியாற்றி வருகிறாரே, புன்னகை மாறாத முகமும், புன்மொழி பேசிடா வாயும், எவரிடமும் இன்மொழியே பேசிப் பழக்கமும் பெற்றுள்ள பண்பாளர் இருக்கிறாரே, அவர், ‘‘என்னை மீறி நடக்கிறானே, பார், பார், ஒழித்துக் கட்டிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று மந்திரி மிரட்டியபோதும் மனம் தளராமல் மக்கள் தொண்டனாகி மகத்தான பணியாற்றிக்கொண்டு வரும் அதே கோவிந்தசாமி தான், தம்பி, கொள்ளைக்காரனாக்கப் படுகிறார். ஆட்சியாளர்களின் கண்களுக்கு, வழக்கு இருக்கிறது. எனவே மேலாக அது குறித்துக் கூறுவதற்கில்லை. தமிழகத்தில் ஓட்டு மொத்தம் ஆயிரம் தோழர்களைப் போலீசார் இழுத்துச் சென்றனர். - இப்போது நூறு தோழர்கள் மீது வழக்கு தொடரப்படக்கூடும் என்று தெரிகிறது. தோழர்கள் A. கோவிந்தசாமி, M.L.A., நாமக்கல் இராமசாமி M.L.A., திருச்செங்கோடு அர்த்தநாரி M.L.A., சென்னை ப. ஜீவானந்தம், M.L.A., சென்னை V. முனிசாமி கார்ப்பரேஷன் கவுன்சிலர், வேலூர் நகரசபை உறுப்பினர்கள் மூவர் - ஆகியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் - இதிலே தோழர் A. கோவிந்தசாமி அவர்கள் மீது மட்டும் வழக்குத் தொடரப்படுகிறது. வழக்கம்போல், தீவிரக் கிளர்ச்சியில் முன்னணியில் நின்று பெருமை பெற்றிருக்கிறார் நமது அலுமேலு அப்பாத்துரையார் - தமிழரசுக் கழகத் தோழியர் சரோஜினி நாராயணசாமி அவர்களுக்கும் இதே பேறு கிடைத்திருக்கிறது. மொத்தத்திலே, நாமெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகுங்கூட எண்ணிப் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படத்தக்க விதமாகவே நிகழ்ச்சிகள் இருந்திருக்கின்றன. எவ்வளவு கடுமையான கிளர்ச்சியானாலும், எவ்வளவு நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்றாலும், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பும் திறனும் நிரம்ப இருக்கிறது என்பதும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டிவிடப்பட்ட சிற்சில இடங்களில் தவிர, மற்றெல்லா இடங்களிலும் பண்பறிந்து மக்கள் நடந்து கொண்டனர் என்பதும் மகிழ்ச்சியூட்டுகிறது - அவ்வகையில் நடத்திச் செல்லும் திறமையைப் பெற்றதாகச் சர்வ கட்சிக் கூட்டணி அமைந்திருக்கிறது என்பதும், நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இவ்வளவுக்கும், சர்வ கட்சிக் கூட்டணியைப் பிளவு படுத்த, பலத்த முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நமது பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் தமிழக மெங்கணும் கூட்டணித் திட்டத்துக்கு நமது கழகத் தோழர்களிடம் ஆதரவு திரட்டச் சென்றிருந்தனர். தோழர் மதியழகன் கோவை, சேலம், வடாற்காடு மாவட்டங்களிலே சுற்றுப் பயணம் செய்து வந்தார். தம்பி சம்பத்து முழக்கம் கேட்ட வண்ணமிருந்தது - நான்தான் இங்கே சென்னையில் தனி ஆளாக விடப்பட்டிருந்தேன்! எனக்கு எப்போதுமே இத்தகைய கிளர்ச்சியின்போது உடனிருந்து உற்சாக மூட்டவும், என் கோபதாபத்தில் பங்கேற்றுக் கொள்ளவும், சம்பத்து வேண்டும். இம்முறையோ நாட்கள் அதிகம் இல்லாததால், நானே, சம்பத்து பல ஊர்களுக்குச் சென்றுவர வேண்டும் என்று விரும்பினேன். இதனால், இங்கு தம்பி! என் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவோ, கலந்து பேசிப் புதிய கருத்துப் பெறவோ, மெத்தத் திண்டாடிப் போனேன். நாள் தவறாமல் கூட்டம் - பலப்பல ஆயிரம் மக்கள் - பேரார்வம், போரார்வம் என்று கூடச் சொல்லலாம் - எனினும் அலுத்துவந்தமர்ந்து, கண் அயரும் வேளை வரையில், அன்றைய நிலைமைபற்றி உரையாட, அவர் வருவாரா, இவர் வருவாரா என்று எதிர்பார்த்த வண்ண மிருப்பேன். எவரும் வருவதில்லை. ‘வேலைவெட்டி’ யற்றா அனைவரும் இருக்கிறார்கள், இந்தத் தொல்லைபிடித்த காரியம் பற்றி என்னுடைய ‘தொண தொண’ப்பைக் கேட்டுக் கொண்டிருக்க-எனினும், துணைக்கு நாங்கள் இருக்கிறோம், நாங்கள் கழக முன்னணியில் இல்லாமற்போனது எங்கள் குற்றமல்ல என்று கூறாமற் கூறிக்கொண்டு, என்னுடன் கலந்துரையாடவும், கருத்துக்களைத் திரட்டித் தரவும் தோழர்கள் போளூர் சுப்பிரமணியமும், சென்னை வேதாச்சலமும் இருந்தனர். என்னைப் போன்ற மற்றோர் ‘மாஜி’ இல்லையா சென்னை கே. எம். கண்ணபிரான், அவரும் இருந்தார் - அறிவகத்தில் உள்ள கழகத்தோழர் சிவஞானம் - இவர்கள் இருந்தனர். இந்தக் கட்டத்திலேதான், சர்வ கட்சிக் கூட்டணியின் தலைவர்களுடன் அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டபடி இருந்தது. அதனால் எனக்கு உற்சாகம் ஏற்பட்டதுடன், எங்களுக்குள் ஓர் உள்ளன்பு வளர்ந்திருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ம.பொ.சி யுடன் மீண்டும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருமே இதனை மெத்தச் சுவைத்தோம் என்று எண்ணுகிறேன். தமிழரசுக் கழகத் தோழர்களில் எனக்கு நீண்ட காலமாகவே நண்பர், உமாபதி; கூட்டணி காரணமாக நாங்கள் சந்திப்பதும், பொதுவாகத் திட்டம் தீட்டுவதும், காணக் காண அவருக்கு மெத்த மகிழ்ச்சி - அலாதியான ஆனந்தம்! கோவை சின்னதுரையும், சென்னை சுப்பிரமணியமும், ஈரோடு சின்னச்சாமியும், சென்னை அந்தோணிப் பிள்ளையும், அவரவர் தொடர்பு கொண்டுள்ள தொழில் சங்கங்களின் மூலம் சர்வகட்சிக் கூட்டணி பெறக்கூடிய வாய்ப்புகள் பற்றிக் கூறியும், பிரச்சினைகளை அன்புடன் விவாதித்தும், திட்டங்கள் காணுவதிலே தெளிவும் துணிவும் காட்டியும், எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டினர். ஜீவாவைப் பற்றித்தான் சொல்லத் தேவையில்லை! ‘‘பொல்லாத ஆசாமி, சொல்லாமல் கொள்ளாமல் வேறு இடத்துக்குக் குடிபோய் விட்டார்,” என்று நாமெல்லாம், எப்போதும் சொந்தம் கொண்டாடிப் பேசும் நிலையில் உள்ள தோழர். இவ்வளவு பேருக்கும் அன்பை அள்ளிக்கொடுத்து, முற்றிலும் தமக்குப் பழக்கமே இல்லாத முறைகளையும் திட்டங் களையும் நாங்கள் திணிக்க முயற்சித்த போதெல்லாம், புன்முறுவல் காட்டி, எங்கட்கெல்லாம் பொறுப்புப் பற்றி அடிக்கடி நினைவு படுத்தி, எம்மை ஊக்குவித்து வந்தார், உடனிருந்து நடத்திச் சென்றார், பி. டி. ராஜன் அவர்கள். சர்வ கட்சிக் கூட்டணிக்கு, சட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற பொறுப்பைத் தாங்கித்தாங்கித் தழும்பேறிப் போனவர் தலைவர்; அதிலே உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பாலோர், ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வந்தவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தியே சர்வாதிகாரியாகி விடுகிறார்கள் என்ற உண்மையை அறிவதால், ஆத்திரமே கொள்பவர்கள்! இந்தக் ‘கூட்டு’ எத்தனை நாளைக்கு நிலைக்கும்? ஒரு சிறு விவாதத்தில் சச்சரவு மூண்டுவிடாதா? திட்டம் தீட்டும் போதே தகராறு கிளம்பி விடாதா? கொள்கைக்கு விளக்கமளிக்கும் போதே ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணம் சென்று விடமாட்டார்களா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டுதான் காமராஜர்கூட, கூடட்டும், கூடட்டும், தீட்டட்டும் தீட்டட்டும் என்று கூறிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். அப்படியே அவருக்குச் சிறிதளவு ஆயாசமோ அச்சமோ ஏற்படவிடக் கூடாது என்பதற்காகவே, பெரியாரும் "பூ, பூ! இதுகளெல்லாம் கூடி ஒரு காரியம் செய்ய முடியுமா? யார் இதுகளை நம்புவார்கள்? இதுகள் யார் என்பது யாருக்குந் தெரியாது?’ என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தார். எனினும், தமிழகம் கண்டு பாராட்டத்தக்க விதமாக, கூட்டணி செயலில் ஈடுபடுவதிலே, தோழமை உணர்ச்சியையே காட்டிற்று. ஒவ்வொரு சந்திப்பும், நேசத்தை வளர்த்தது. ஒவ்வொரு விவாதமும், தோழமைக்கு அழைத்துச் சென்றது. கூட்டணி முறியவில்லை என்பதையும், பெரியாரின் பகைப் பிரசாரத்துக்குப் பிறகும், கூட்டணியின் குரலுக்கு நாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்த பிறகுதான், ஜனவரி 27-ல் அமைக்கப்பட்ட கூட்டணியை அலட்சியப்படுத்தி, தலைவருடன் பேச முயற்சிக்காமல் முடுக்குடன் இருந்து வந்த காமராஜர் சர்க்கார், கூட்டணித் தலைவரைக் கண்டு பேசவும், அர்த்தாலைக் கைவிட்டு விடும்படி அவரைக் கேட்டுக் கொள்ளவும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டம் பிறந்தது! ஆனால், அதற்குள் கூட்டணி அலுவலகக் கதவு தாளிடப்பட்டு விட்டது; தட்டினால் திறக்கப்படும், கேட்டால் விளக்கம் அளிக்கப்படும், கெஞ்சினாலும் மிஞ்சினாலும் அர்த்தாலைக் கைவிடுவது என்பது மட்டும் முடியாது என்பது அறிவிக்கப்பட்டாகி விட்டது. அரசியலில் அமளிகளைத் தடுத்துச் சமரசம் காண்பதற் கென்றே தம்மை ஒப்படைத்திருப்போர் மூலம், "சமரசம்’ பேசப் பட்டது - பலன் ஏதும் இல்லை. காரணம், கூட்டணி தன் திட்டத்தில் தடுமாற்றமற்ற நிலையில் இருந்ததுதான். 19-ந் தேதி காலை, தம்பி! இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை - ஏதேதோ வித விதமான வதந்திகள்! நானும் விதவிதமான புத்தகங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டேன், உள்ளே போக. . . . விடியற் காலையில் மதுரையிலிருந்து தலைவர் சென்னை வருகிறார். வருகிறவரிடம் கெஞ்சுவது போலவும் கொஞ்சுவது போலவும் ஓர் அறிக்கையும், வழிக்குவராவிட்டால் தாக்குவோம் என்று மிரட்டும் விதமாக மற்றோர் அறிக்கையும் சர்க்கார் வெளியிட்டு விட்டார்கள். பி. டி. ராஜன் வருவார், இந்த அறிக்கைகளைக் காரணமாகக் காட்டுவார், கடை அடைப்பு வேண்டாமென்று கூறி விடுவார், கூட்டணி உடைபடப் போகிறது! என்றெண்ணிக் குதூகலம் கொள்கிறார்கள். மாற்றார் என்செய்வேன் நானும் காலையிலே எழுந்தேன், தலைவரைக் காணச் சென்றேன். தம்பி! அந்தக் காட்சியை நான் என்றைக்கும் மறந்திட முடியாது. பி. டி. ராஜன் அவர்கள் முகத்தில் ‘சோப்பு’ போட்டுக் கொண்டிருக்கிறார், உள் அறையில்; நான் வெளி அறையில் நுழைகிறேன். எப்படியாவது காமராஜரின் அறிக்கையில் திருப்தி பெறச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நண்பரும் இருக்கிறார் நான் சிறிதளவு பயந்து போனேன். இருவரிடமும் எனக்குச் சாதகமாக இருந்தாக வேண்டும் என்று சண்டை போடக் கூடிய அளவு உரிமை உண்டு - எனினும் அதேபோல அவர்களுக்கும், நாங்கள் சொல்லுகிறபடி கேட்டுத்தானாக வேண்டும் என்று என்னிடம் கூற உரிமை உண்டல்லவா. அதனால் பயந்து போனேன். என் மனநிலையைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, பி. டி. ராஜன் என்னைப் பார்த்ததும், " "அண்ணாதுரை ! என்ன, விஷயமெல்லாம் எப்படி இருக்கிறது? எது எப்படி இருப்பினும், 20-ந் தேதிய காரியத்தில் நான் உங்களோடு இருப்பது உறுதி விட்டு விட்டுப் போய்விடுவேன் என்று மட்டும் எண்ணிக் கொள்ளாதே!” என்றார். வெற்றிப் புன்னகையுடன் நான், சமரசத் தூதுவரைப் பார்த்தேன். அவர் மட்டும் என்ன செய்வார்? அவருக்கே உரித்தானதோர் பரிவான பார்வை காட்டினார், தம்பி! உன்னை மனக்கண்ணால் கண்டேன், உறுதி கொண்டேன். அன்புள்ள அண்ணாதுரை 26-2-1956 தண்டோரா சர்க்கார் - 2 பொது வேலை நிறுத்தமும் சர்க்காரும் - பிப்ரவரி 20-ன் வெற்றி! தம்பி, ‘‘இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், யாரோ ஒரு விஷமி, நமது மகாராஜாவுக்கு "வெண் குஷ்டம்’ கண்டிருக்கிறது என்று ஓர் வதந்தியைப் பரப்பிவிட்டிருக்கிறான். நமது மக்களில் சிலர் அதை அப்படியே நம்பிவிட்டதாகத் தெரிகிறது. மகாராஜாவின் உடம்பு பத்தரை மாற்றுப் பசும்பொன் போன்றே எப்போதும் போல இருக்கிறது. ‘ஸநானம்’ செய்தானதும் சிவபக்தராம் நமது அரசர் பெருமான் தூய வெண்ணீறு அணிந்து கொள்வது வாடிக்கை, அதையே சில துஷ்டர்கள் ‘வெண்குஷ்டம்’ என்று கூறி விட்டிருக் கிறார்கள். இந்த வதந்திக்கு ஒரு துளியும் ஆதாரமில்லை.’’ நகரெங்கும் இப்படி ‘தண்டோரா’ போடச் செய்தான் மந்திரி - இராஜாவின் பெயரைக் காப்பாற்ற! அரசனுக்குக் குட்ட நோய் கண்டிருப்பதாக, யாரோ வதந்தி கிளப்பி விட்டார்கள் என்று கேள்விப்பட்ட ‘மந்திரி’ இராஜாவின் மரியாதையையும் புகழையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிறது, அதைத் திறமையாக நிறைவேற்றி விட வேண்டும், மன்னர் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, இவ்விதம் ‘தண்டோரா’ போடச் சொன்னானாம். நகரெங்கும் தண்டோரா போட்டனர். ஊர் மக்கள் அங்காடியிலும், நெடுஞ்சாலைகளிலும், முச்சந்திகளிலும் கூடினர். ‘’விஷயம் தெரியுமா?” ‘‘எது? மகாராஜாவுக்கு வெண் குஷ்டம் என்பதுதானே. உனக்கு இப்போதுதான் தெரியுமா? எனக்கு நெடுநாளாகவே தெரியுமே” ‘‘அப்படியா, ஊரில் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டதால்தான், “தண்டோரா’ போட்டார்கள் போலிருக்கிறது.” ‘‘ஆமாம். . . தண்டோரா போட்டு ஊர் மக்கள் ‘வாயை’ மூடி விடலாம் என்று எண்ணுகிறார் இந்தப் புத்திசாலி மந்திரி.” ‘‘திருநீறு பூசிக்கொள்கிறார் மன்னர்; அது குஷ்டம்போல இருக்கிறது என்று தண்டோரோ மூலம் தெரிவிக்கிறார்களே?” ‘‘வேறே, எப்படித் தெரிவிப்பார்கள்? பைத்யக்காரனாக இருக்கிறாயே, மகாராஜாவுக்குக் குஷ்டம் பிடித்து விட்டிருப்பது உண்மைதான் என்றா தண்டோரா போடுவார்கள்? திரு நீறு இவர் மட்டுமா பூசிக்கொள்கிறார்? திருநீறு பூசிக்கொள்கிறவர்களை எல்லாமா வெண்குஷ்டம் பிடித்திருக்கிறது என்று கூறுகிறோம்? ‘‘இல்லாமற் பிறவாது, அள்ளாமற் குறையாது.” ‘‘குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். மகாராஜாவுக்கு உண்மையிலேயே குஷ்டம் இல்லை என்றால், எவனோ பைத்தியக்காரன் எதையோ உளறினான் என்று சும்மா விட்டு விட்டிருப்பார்களா, இல்லை, இல்லை, மகாராஜாவுக்குக் குஷ்டம் இல்லை என்று “தண்டோரா’ போடுவார்களா?” ‘‘அதுதானே, நானும் யோசிக்கிறேன். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று திகில், எங்கே ஊரிலே இதுபற்றி இழிவாகப் பேசுகிறார்களோ என்ற பயம். அதனாலே “தண்டோரா’ போடுகிறார்கள்” ‘‘தண்டோரா போட்டு விட்டால், மக்கள் ஏமாந்து விடுவார்களா?” ‘‘அதெப்படி முடியும்? எனக்கு உண்மையில், தண்டோரா போட்ட பிறகுதான் ராஜாவுக்குக் குஷ்டம் என்கிற விஷயமே தெரிய வந்தது.” மந்த புத்தி படைத்த மன்னர்களும், மதியற்ற மந்திரிகளும் இருந்த காலத்துக் கதை இந்தக் காலத்திலும் இப்படி “தண்டோரா’ போடும் மந்திரி இராஜ்யம் இருக்குமென்று என்னால் நம்பமுடியவில்லை - ஆனால் செவியில் விழுகிறதே”தண்டோரா.’ கடைகளை மூட வேண்டாம் கடைகளை மூடவே வேண்டாம் போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறோம் போலீஸ் பாதுகாப்புப் போதுமான அளவு தருகிறோம், கடைகளைத் திறந்து வையுங்கள் அர்த்தாலில் சேர வேண்டாம். என்றல்லவா "தண்டோரா’ போடுகிறார்கள்! அதற்கும் போலீஸ் பாதுகாப்பு!! மன்னனுக்குக் குட்டம் கிடையாது என்று தண்டோரா போட்ட பிறகே, ஊரிலே அனைவரும், மன்னனுக்குக் குட்டம் இருப்பதுதான் உண்மை என்று பேசிக் கொண்டனர் - அது போலவே, வசதிக் குறைவிலே இருந்து வந்த நம்மாலே தெரிவிக்க முடியாத இடங்களுக்கும் தண்டோரா மூலம் பிப். 20 அர்த்தால் நடைபெறப் போகிறது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. அங்காடியிலும் நெடுஞ்சாலையிலும் அர்த்தாலைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளலாயினர். அர்த்தாலாமே? யார் சொன்னது? சர்க்காரே தண்டோரா போட்டார்கள்! அர்த்தால் நடத்தச் சொல்லியா? இல்லை இல்லை, அர்த்தால் கூடாது என்று. ஏன் கூடாதாம்? அதைச் சொல்லவில்லை. வேறே என்ன சொன்னார்கள்? போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம், கடைகளைத் திறந்து வையுங்கள் என்று ‘தண்டோரா’ போட்டார்கள். அப்படியானால் நடக்கப்போகிற அர்த்தால், ரொம்பப் பிரமாதம் என்று தெரிகிறதே. இல்லையானால், ஒரு சர்க்காரே தண்டோராப் போடுமா? ஆமாமாம்! “தண்டோரா” இதற்குத்தான் பயன்பட்டது. ஜனவரி 27-ல் சர்வகட்சிக் கூட்டணி, "அர்த்தால்’ பற்றிய தீர்மானம் தீட்டிற்று. காங்கிரசும் திராவிடர் கழகமும் தவிர, பொதுமக்களிடம் தொடர்பு கொண்ட சகல கட்சிகளும், கூட்டணியில் இருந்த போதிலும், அவ்வளவு கட்சிகளும், பிரச்சார சாதனமான பெரும் பத்திரிகைகள் இல்லாமலிருந்து வருவன எனவே, பொதுக் கூட்டங்கள் மூலமாக மட்டுமே நாட்டு மக்களுக்கு பிப்-20 அர்த்தால் பற்றிய செய்தியைக் கூற முடிந்தது. ‘இந்து’வுக்கும் ‘மித்திர’னுக்கும், ‘தினமணிக்’கும் ‘எக்ஸ்பிரசு’க்கும், ‘மெயி’லுக்கும் இதுவா வேலை!! இந்த நிலையில், தண்டோரா போடச் சர்க்கர் முன் வந்தது கூட்டணியின் திட்டத்தை அனைவரும் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. சர்க்காரை நடாத்தும் பெரிய கட்சியே, ‘தண்டோரா’ போட்டு, அர்த்தாலில் சேராதீர்கள், சேரவில்லை என்பதற்காக யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்று அஞ்சத் தேவையில்லை, நாங்கள் பலமான போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம் என்று கூறவேண்டிய நிலமை வந்ததென்றால், ‘அர்த்தால்’ குறித்து, மக்களிடம் வெகுவாகச் செய்தி பரவி விட்டது, அர்த்தாலில் நாடு ஈடுபடத் தயாராகி விட்டது, சர்க்காரே குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தினாலொழிய அர்த்தால் முழு மூச்சுடன் நடைபெறும் என்பது விளங்கி விட்டது! அந்த அளவுக்கு இந்தத் "தண்டோரா’ நமக்கு உதவியாக இருந்தது. மகிழ்ச்சி, நன்றி. மகா மேதை என்று கொண்டாடப்படும் ஆச்சாரியாரின் இராஜ தந்திரக் குறைவான போக்கு கண்டு, செச்சே! என்ன இந்தக் கிழவர் இப்படி ஆழம் தெரியாமல் காலை நுழைத்து விட்டு அவதிப்படுகிறார், இவர் அவதிப்படுவதுடன் காங்கிரஸ் கட்சியின் பெயரையுமல்லவா பாழடிக்கிறார். வயதாகி விட்டதாலே, வீணான வம்பு வல்லடிக்குத் தாமாகப் போய்த் தலை கொடுத்து விடுகிறார், நான் இப்படி நடந்து கொள்ளமாட்டேன். எனக்குப் ‘பக்குவம்’ தெரியும், பதம்பார்த்து நடந்து கொள்வேன், அனைவரையும் அணைத்துச் செல்லுவேன், எதிர்க் கட்சிகளைத் தோழமை கொள்ளுவேன், அதற்கெல்லாம் என்னிடம் ‘மந்திரம்’ இருக்கிறது. யாருக்கு எதிலே விருப்பம், எதைச் சொன்னால் யாருக்கு இனிக்கும், பிடிக்கும் என்பதை அறிந்து நடந்து கொள்வேன், ஏங்கித்தவிக்கும் இடங்களாகப் பார்த்து இரண்டொன்று வீசுவேன், இப்படி நடந்து கொண்டால் எதிர்ப்பாவது முளைப்பதாவது, எல்லாம் எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டுக் கொலுவீற்றிருக்கப் புறப்பட்ட கோமானல்லவா காமராஜர்! அவர் பார் தம்பி! தமது பக்குவம், திறம், பண்பு ஆகியவற்றைக் காட்ட வேண்டிய நேரம் வந்ததும், “எல்லாம் சொல்லுமாம் பல்லி, காடிப் பானையில் விழுமாம் துள்ளி’ என்ற பழமொழிப்படி, ‘மகா மேதை’ செய்தது போலவே, தரக் குறைவும் ரசக் குறைவுமான காரியத்தில் ஈடுபட்டார்!”தண்டோரா’ போடச் செய்தாரே!! கலகம் குழப்பம், கல்லெறி கத்திக்குத்து, கொள்ளை கொலை, ஆகியவை எப்போது எங்கே நேரிட்டு விட்டாலும், தடுக்க, ஆட்களை மடக்க, பிடிக்க, தண்டிக்க, போலீஸ் எப்போதுமே இருக்கிறது, இதைத் தண்டோரா போட்டுத் தெரிவிக்க வேண்டிய அவசியமென்ன வந்தது!! அதிலும் ‘அர்த்தால்’ நடத்தும்படி, மக்களைக் கேட்டுக் கொண்ட நாமெல்லாம் பெரிய கட்சியினரா, பெருந் தலைவர் களா, இல்லையே! வசதியற்ற, வாய்ப்பு இல்லாத கட்சிகள்! "இதுகள்’ பேச்சை, யார் கேட்கிறார்கள் என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம். பி. டி. ராஜனும், ம. பொ. சி. யும் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சுண்டல் கடையோ தண்டல் கடையோ, எதனையும் யாரும் அடைக்க மாட்டார்கள்; இதுகள் கரடியாய்க் கத்தி விட்டு, கடைசியில் முகத்தில் கரிபூசிக் கொள்ளட்டும், அப்போது நாம் பார்த்துக் கைகொட்டிச் சிரிப் போம் என்று இருந்திடும் தைரியம் காமராஜருக்கு ஏன் வரவில்லை. முதல் மந்திரி வீட்டிலே மறியல் செய்தால் என்ன, குடியா முழுகிப் போய்விடும், ஒரு நாளைக்கு ஓடும் இரயிலை நிறுத்தித் தொலைத்தால், என்ன, "பிரளயமா’ வந்துவிடும். அதற்காக வேண்டி, தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் செய்து, இந்தக் கிழப் பார்ப்பனர் காரியத்தைக் கெடுத்துத் தொலைத்தாரே! ஊரெல்லாம் கொதிக்கிறது - எல்லோரும் என்னையல்லவா கேட்கிறார்கள்? நானல்லவா, காங்கிரசின் செல்வாக்கைக் காப்பாற்றித் தீரவேண்டி இருக்கிறது - என்றெல்லாம் கதை அளந்து கொண்டு ‘கனம்’ ஆவதற்குப் பல்விளக்கிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, ‘அர்த்தால்’ நடத்துவதா? இதுகளா என் காலத்திலா? அதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா? என்று கருவிக் கொண்டு கிளம்பி, ‘தண்டோரா’ போட்டுவிட்டால் போதும், கடைக்காரர்கள், இவர் இருக்கும் திக்குநோக்கித் தெண்டனிட்டு விட்டு கடைகளைத் திறந்து வைத்துக் கொள்வார்கள் என்று எண்ணினார், காமராஜர். சர்வகட்சிக் கூட்டணி அர்த்தாலுக்காக எடுத்துக் காட்டிய காரணங்களை அங்காடி நண்பர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற அச்சமும், தக்க காரணம் காட்டப்படுவதால், கடைக்காரர்களும் அலுவலகத்தினரும் பிறரும், தமக்கும் நீதியிலும் நேர்மையிலும் நாட்டம் உண்டு என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அர்த்தாலுக்குத் தமது ஒத்துழைப்பை அளிக்க முன்வருவர் என்று புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பீதியும், சர்வ கட்சிக் கூட்டணி அர்த்தாலுக்காக எடுத்துக் கூறிய காரணங்களை மறுத்துரைக்க வக்கும் வழியுமில்லையே என்பதாலே ஏற்பட்ட மிரட்சியும் சேர்ந்து, சர்க்காரை, "தண்டோரா’ தூக்க வைத்தது! இந்த விந்தையைக் கண்டவர்கள் கடை அடைப்பதுடன், கை கொட்டியும் சிரிப்பரே என்று காமராஜர் சர்க்காருக்குத் தோன்றாமற் போயிற்று!! ‘தண்டோரா’ போடும்போதே தம்மிடம் போலீஸ் படைகள் ஏராளமாக உண்டு என்பதையும் ஊராருக்குக் காட்டி விட வேண்டும் என்று எண்ணி, வகை வகையான போலீசை, நகரெங்கும் துரத்திற்று துரைத்தனம். சர்வ கட்சிக் கூட்டணி பிப். 20 அர்த்தால் குறித்து, நகரில் வெளியிட்ட சுவரொட்டிகளை, மூவர்ணச் சினிமா விளம்பரங்கள் விழுங்கியே விட்டன! புன்னகை பூத்த முகத்துடன் பூவையும், பொறி பறக்கும் கண்களுடன் கதாநாயகனும் பொன்னொளியும் புகழொளியும் பரப்பும் விதமாகச் சுவரெங்கும் காட்சி தந்தபோது, பிப்.20-ல் அர்த்தால் என்று நாம் வெளியிட்ட சுவரொட்டி எவ்வளவு மக்களுடைய கண்ணை ஈர்க்கும் என்று நான் கவலைப் பட்டதுண்டு. அந்தச் சுவரொட்டிகள் வெளியிடுவதற்கான பணம் தேடவே ‘உன்னைப் பிடி என்னைப் பிடி’ என்றாகி விட்டது! கவச மணிந்த போலீசும், சைக்கிள் போலீஸ் படையினரும், போலீஸ் வான்களும் கிளம்பி நகரெங்கும் "பவனி’ வந்தன - மக்கள் பிப்.20 நடைபெறவேண்டிய அர்த்தால் பற்றி, விவரமாக அறிந்து கொள்ள இந்நிலை பேருதவி புரிந்தது. அர்த்தாலுக்குப் பேராதரவு இருக்கிறது - சர்வ கட்சிக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்திட மக்கள் தயாராகி விட்டனர் - அர்த்தால் வேண்டாம் கூடாது என்று, துரைத்தனத்தார் சொல்வது தூசுக்குச் சமம் என்று மக்கள் தீர் மானித்து விட்டார்கள். அர்த்தால் நடைபெறப் போவது உறுதி, நிலமையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமே என்ற கவலை, சர்க்காரைக் குடைகிறது. எனவேதான் கவசத் தொப்பி கிளம்பி விட்டது, சைக்கிள் படை புறப்படுகிறது, போலீஸ் லாரிகள் பவனி வருகின்றன என்று ஊரெங்கும் பேசிக்கொள்ளத் தலைப்பட்டார்கள்! மன்னனுக்கு நிச்சயமாகக் ‘குட்டம்’ இருக்கிறது! - மக்கள் கூறி விட்டனர். துரைத்தனத்துக்குத் துதி பாடவும், ஆதரவு தேடவும், பெரிய இதழ்கள் பாடுபட்டன! அர்த்தால் வேண்டாம் - ஜனநாயக ஆட்சியில் அர்த்தாலுக்கு அவசியமே இல்லை - என்று எழுதின. பிப். 14-ல் அர்த்தால் வேண்டாம் என்று "தினமணி’ தலையங்கம் தீட்டிற்று. பரிதாபம் என்ன என்கிறாய் தம்பி, பிப்.20-ல் இத் ‘தினமணி’ விற்பனை செய்யப்படும் கடைகளே திறந்தில்லை!! வேடிக்கை ஒன்று தெரியுமா உனக்கு? அர்த்தாலாவது நடப்பதாவது, அர்த்தால் என்றால் என்ன சாமான்யமா? மகாத்மா நேரு போன்றவர்கள் நாட்டுக்குப் பெரிய நெருக்கடி ஏற்படுகிறபோது மட்டுமே ‘கட்டளை‘யிடுவார்கள், அப்போது தான் ‘அர்த்தால்’ நடைபெறும், கண்டவர்கள், கண்ட கண்ட காரணம் காட்டிக் கடை அடைக்கச் சொன்னால் நடக்குமா? என்று கேலி பேசிய ஏடுகளை, பிப்.20-ல் எப்படி வெளியே அனுப்பி வைத்தார்கள் தெரியுமா? 19-ந் தேதியே, ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஆகிய இரு இதழ்களுக்காகவும் துண்டு அறிக்கைகள் வெளிவந்தன. பிப்.20-ந் தேதிய "இந்து’ விடியற்காலை 4-30க்கே, தயாராகிறது. ஏஜண்டுகள், அங்கேயே வந்து பெற்றுக் கொள்ளவும். "இந்து’ இதழை, நகரில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு வந்து தருவதற்கில்லை-அன்று அர்த்தால், ஆகவே கடைகள் திறந்திருக்காது-விடிந்து 6, 7, ஆகிவிட்டாலும், இங்கு வந்து இதழ்களை வாங்கிக் கொண்டு போவதிலே தொல்லை இருக்கும். எனவே, வெள்ளி முளைக்கு முன், 4-30-க்கே, ஓசைப்படாமல், ஒருவருக்கும் தெரியாமல், இங்கேயே வந்து, இதழ்களை எடுத்துக் கொண்டு போய்விடுங்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. கண்ணே! கதிரவன் ஒளிக்கீறல் தெரிகிறது! இனியும் நான் இங்கு இருப்பது, ஆபத்து! சென்று விடுகிறேன்! - என்று கூறிவிட்டு, யாரும் காணாவண்ணம் மறைந்து மறைந்து செல்வான் காதலன் என்று கதைகளில் படிக்கிறோமல்லவா! “இந்து‘-விடியுமுன் வருக! என்று ஏஜண்டுகளை, முன்னாளே அறிக்கை மூலம் அழைத்தது. எக்ஸ்பிரசோ, 3-30க்கே வந்து விடுக என்று ஏஜண்டுகளை அழைத்தது, அறிக்கை வெளியிட்டது. பிப்.20 அர்த்தால் வெற்றியுடன் நடைபெறப் போகிறது என்பது. “இந்து’”எக்ஸ்பிரஸ்’ ஆகிய இதழ்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டன. ஆனால்”மிடுக்கும் முடுக்கும்’ குறையலாமா’ அதனால் அர்த்தாலை அலட்சியப்படுத்துங்கள் என்று மக்களுக்கு மட்டும் எடுத்துக்கூறி வந்தன. மொழிவழி அரசு பிரச்சினை சம்பந்தமாக, என்ன செய்வது என்பது தெரியாமல், சர்வ கட்சிக் கூட்டணியினர் திண்டாடிப்போய், எதையாவது செய்வோம் என்று இந்த அர்த்தாலில் ஈடுபட்டது போலவும், அவர்களுக்குச் சிறிதளவு தெளிவைத் தன் மேதாவிலாசத்திலிருந்து எடுத்தளித்தால் போதும் என்று எண்ணிக் கொண்டும் "தினமணி’ எழுதிற்று. "தமிழர் சம்பந்தப்பட்ட வரையில் தமது கோரிக்கைகளைத் தெரியப்படுத்துவதற்கு ஜனநாயக வசதிகள் நிறைய இருக்கின்றன. கூட்டம் போடுவது, விவாதம் நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புவது முதலியவைகள்தாம் சகஜமாகப் பின்பற்ற வேண்டிய முறைகள்.’’ பார் தம்பி, பார்-அட்-லா படித்து அமைச்சர் வேலை பார்த்தும் பி. டி . ராஜனுக்கு, "முறை’’ தெரியவில்லை! தமிழர் நலனில் அக்கறை காட்டியதற்காகவே, வேட்டையாடி வாட்டப்படும், இன்னமும் காங்கிரசிடம் கனிவு காட்டுபவரான, ம.பொ.சி.க்குத் தெரியவில்லை! மற்றும் ஜீவா, அந்தோணிப்பிள்ளை, சின்னத்துரை இவர்களுக்கெல்லாம், கோரிக்கைகளை எப்படித் தெரியப் படுத்துவது என்ற சாதாரண விஷயம் தெரியவில்லை. இதய நாதத்தையும் இயற்கை எழிலையும், தமிழ்ப் பண்பையும் கலைச் செறிவினையும் கண்டறிந்து கவிதை வடிவாக்கித் தரும் பாரதிதாசனுக்கு இது தெரியவில்லை. ’திணமணி’க்குத் தெரிகிறது - தெரிந்து, இவர்களுக் கெல்லாம் அருளுகிறது - கனியிருக்கக் காய் கொள்கிறீரே, கருத்தற்றோரே! கருத்தற்றோரே! கோரிக்கையைத் தெரியப்படுத்தும் வழி தெரியாமல் திண்டாடித் தவித்துத் திறந்திருக்கும் கடைகளை மூடச் சொல்கிறீர்களே, தெளிவற்றோரே! என்னைக் கேட்கக் கூடாதா! சரி, இதோ கூறுவேன் கேண்மின் கோரிக்கைகளைத் தெரியப்படுத்த, கூட்டம் போடலாம் விவாதம் நடத்தலாம் தீர்மானம் நிறைவேற்றலாம் தீர்மானங்களை அனுப்பலாம் இவை போதும் - என்கிறது. அன்றிரவு ஆசிரியர் ஆனந்தமாகத் தூங்கி இருப்பார் என்று எண்ணுகிறேன். நாட்டுக்கு வர இருக்கும் ஒரு நெருக்கடியை ஒரு தலையங்க மூலம் தடுத்து விட்டோம். இதற்காக, "பத்மவிபூஷண்’ நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பார், தம்பி, கனவிலே கலாராணி வைஜயந்தி நாட்டியம் கண்டிருப்பார் - விருந்து வைபவம் பட்டமளிப்புக்காக நடைபெறுமல்லவா! அரிய பெரிய உண்மையை, அந்தரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சர்வகட்சிக் கூட்டணியினருக்கு அளித்துவிட்டோம், இனி அர்த்தால் இராது என்று எண்ணிப் பூரித்திருப்பார். ஒரு சமயம் இவ்வளவு அரிய பேருண்மையைக் கேவலம் ஒரு அணாவுக்கு விற்றுவிட்டோமே என்றெண்ணி வருத்தப்பட்டாரோ என்னவோ, அப்படியும் இருக்கலாமல்லவா! எப்படியோ ஒன்று, அர்த்தாலை நிறுத்திவிட, அவருக்குத் தெரிந்த காரணத்தைக் காட்டினார். ஏன், இந்த ஜனநாயக முறை இருக்க, சர்வ கட்சிக் கூட்டணி “அர்த்தால்’ திட்டமிட்டது? கூட்டம் போடலாம், தீர்மானம் நிறைவேற்றலாம், அவைகளை அனுப்பி வைக்கலாம் என்றல்லவா”திணமணி’ கூறுகிறது. இவைகளைச் செய்யாமல் வேலைக்குச் செல்லாதீர், கடைகளைத் திறவாதீர் என்று ஏன் சர்வ கட்சிக் கூட்டணி கூறிற்று? ஜனநாயக முறைகளில் நாட்டமற்றதாலல்ல; திறனற்று மல்ல; அந்த முறைகள் யாவும் செய்து பார்த்தாகிவிட்டது. யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது! ஆமாம், தம்பி! ஒரு பிரபல தமிழ் இதழாசிரியரின் "வாக்கை’ எடுத்துக் கையாண்டிருக்கிறேன். அவர்தான், தமிழ் மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளைப் பல வழிகளிலும் எடுத்துக்கூறினர், மத்திய சர்க்காரிடம்; எனினும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது என்றார். "ராஜ்ய சீரமைப்புக் கமிஷன் சிபாரிசுகள் மீது இந்திய சர்க்கார் அறிவித்துள்ள முடிவுகள், தமிழர் சம்பந்தப்பட்ட வரை, அநீதியாகவே இருக்கின்றன. அடுத்தாற்போல் உள்ள ராஜ்யங்களில் தமிழர் பெரும்பாலோராயுள்ள பகுதிகள் (பீர் மேடு, தேவிகுளம் உட்பட) சென்னை ராஜ்யத்தில் சேரவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைத் தமிழகம் ஒரு குரலில் கேட்டது. இதை இந்திய சர்க்கார் அடியோடு நிராகரித்து விட்டனர். எல்லாக் கட்சிகளும் இதை வற்புறுத்தின. அரசியலுக்குப் புறம்பாகவுள்ள பல ஸ்தாபனங்களும் ஒருமித்து இதைக் கேட்டன. சட்ட சபையின் இரு மன்றங்களும் இதை மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் கோரின. அநேகமாக எல்லா நகர சபைகளும் ஜில்லா போர்டுகளும் இந்தக் கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானங்களை நிறைவேற்றின. மேலும் ராஜ்ய சர்க்காரும் போதிய புள்ளி விவரங்களுடனும், ஆதாரங் களுடனும், நிதானம் தவறாமல், இந்தக் கோரிக்கைக்கு இணங்கு மாறு இந்திய சர்க்காரைக் கேட்டனர். இராஜ்ய மந்திரிகளும் பல்வேறு ஸ்தாபனத்தினரும் டில்லி சென்று பன் முறை நியாயம் வழங்குமாறு வேண்டினர். இம்மாதிரி தமிழகம் ஒருமித்துக் கேட்டும் பயனில்லை. "எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.’’ தமிழர், ஜனநாயக முறைகளைக் கையாண்டது வீணாகிப் போனது, இவ்விதம் விளக்கப்படுகிறது. இந்த “விவேகி’ யார் என்கிறீர்களா? அர்த்தால் எதற்கு? கூட்டம் போடலாமே, தீர்மானம் நிறைவேற்றலாமே, ஜனநாயக முறை எவ்வளவோ இருக்கிறதே, அவைகளை விட்டுவிட்டு, அர்த்தால் ஏன் ஏற்பாடு செய்கிறார்கள் என்று நமக்கெல்லாம், நாட்டுக்கெல்லாம்”புத்தி’ கூறினாரே, அதே “விவேகி’ தான், இப்படியும் எழுதினார். இதைக் கூறினவரும்”தினமணி’ ஆசிரியர்தான்! ஜனநாயக முறைகளைத் தமிழர்கள் கையாண்டனர்; கூட்டம் போட்டனர்; தீர்மானம் நிறைவேற்றினர்; மேலிடம் அனுப்பி வைத்தனர். தமிழரின் ஆட்சியாளர்களாக அமர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும், இதே ஜனநாயக முறைகளைச் செய்தது. கக்கனே, எடுத்தார் பேனாவை, எழுதினார் காகிதத்தில், விடுத்தார் அறிக்கை, விடமாட்டோம் தேவிகுளம் பீர்மேடை என்று. "மணி மகுடம் தரித்துக் கொண்டுள்ள ஏழைகளின் பாதுகாவலர்’ இருக்கிறாரே காமராஜர் (விடுதலை தரும் விருது) அவரும் நாட்டுக்கு வாக்களித்தார், நானிருக்கிறேன் - கவனித்துக் கொள்கிறேன் என்று. இந்த ஜனநாயக முறை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று! பிறகே, கூட்டணி அர்த்தால் நடத்தத் திட்டமிட்டது! தமிழரின் முகத்தில் பொதுவாகவும், காங்கிரசார் முகத்தில் குறிப்பாகவும், காமராஜர் முகத்தில் சிறப்பாகவும், டில்லி கரிபூசிய “கண்ணறாவிக் காட்சியைக் கண்ட பிறகுதான் கூட்டணி டில்லியின் போக்கையும் நோக்கையும் மாற்றக் கூடிய வேறு முறை தேடலாயிற்று; காந்தியார் அருளிய அறிவுரை நினைவிற்கு வந்தது. எனவே”அர்த்தால்’ நடத்தத் தீர்மானித்தது. செவிடன் காதிலே மேலும் சங்கு ஊதுங்கள் என்கிறது “திணமணி’. மக்கள், மதிநுட்பமுள்ளவர்கள்; அவர்கள் ஆசிரியர்களாக இல்லாதிருக்கலாம், அங்காடியிலோ, வேறு ஏதேனும் அலுவலிலோ ஈடுபட்டிருக்கக்கூடும், எனினும் அவர்களுக்குப் புரட்டு எது, புல்லர் யார், என்பனவற்றைக் கண்டறியும் திறன் இருக்கிறது; சிற்சில சமயங்களிலே இத்திறன் பழுதுபட்டுவிடுகிறது. எனினும் அடியோடு பட்டுப் போய்விட வில்லை. இந்த உண்மையை உணராமல், எதைக் கூறினாலும் நம்பிவிடும் ஏமாளிகள் இந்த மக்கள் என்று எண்ணிக்கொண்டு, இறுமாந்த நிலையில் இருப்பதால்தான் ஜனவரி 18-ல் தமிழரின் ஜனநாயக முயற்சியாவும் செவிடன் காதுக்குச் சங்கு போலாகி விட்டது என்று இடித்துரைத்தோமே, அதற்கான காரணமும் விளக்கிக் காட்டினோமே, அதைப் படித்த அதே மக்களிடம், பிப்ரவரியில் அர்த்தால் கூடாது, ஜனநாயக முறைகள் உள்ளன என்று கூறுகிறோமே என்ன எண்ணிக் கொள்ளுவார்கள் மக்கள், வேளைக்கொரு பேச்சா? நாளைக்கு ஒரு நோக்கமா? என்று கேபேச மாட்டார்களா? நமது அறிவுடைமை பற்றியே கூடச் சந்தேகிக்கமாட்டார்களா? என்பதுபற்றி எல்லாம் துளியும் எண்ணிப் பார்க்காமலேயே,”தினமணி’ எழுதிற்று - எனவே, என்ன மதிப்பு தரவேண்டுமோ அதைத் தந்தார்கள் மக்கள்- பொட்டலத்துக்கு, ஏற்ற காகிதமாகக் கொண்டனர்; தமது போக்குக்கு வழிகாட்டும் ஆசானாகத் "தினமணி’யைக் கொள்ளவில்லை. எனவேதான், அர்த்தாலை மக்கள், வெற்றிகரமாக்கினர். தம்பி, நம்மிடம் வெறுப்புணர்ச்சி கொண்ட பெரியவர்கள், நடமாடும் நாசம் - வலைவீசும் வன்கணாளர் - வயிற்றுப் பிழைப்புக்காகவே பொதுவாழ்வில் இருப்போர் - வஞ்சகர் - சூதகர்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றி எண்ணிக் கொண்டும் கூறிக் கொண்டும் வருபவர்கள், நாம் ஈடுபட்ட காரணத்தாலேயே சர்வகட்சிக் கூட்டணியை அலட்சியப் படுத்தவும், எதிர்த்துப் பேசவும் முற்பட்டனர். காங்கிரஸ் ஏடுகளெல்லாம்கூட, ஒரே அடியாக உண்மையை எப்படி மறைப்பது என்று திகைத்தது கண்டு, இது என்ன கஷ்டம்? என்னைப் பாருங்கள், முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறேன் என்று கூறுவது போல, அர்த்தால் வெற்றிபற்றி இருட்டடிப்புச் செய்து காட்டவும் முன் வந்ததுடன் இப்போது, அர்த்தாலைக் காலித்தனம் என்றும், போலித்தனம் என்றும் தேர்தல் சூது என்றும், தெளிவிலாதாரை ஏய்த்து விட்டனர் என்றும் ஏதேதோ பேசுகின்றனர். இதுவரை தமிழகம் கண்டிராத அளவு வெற்றிகரமான அர்த்தால் நடை பெற்றது - கண்டோர் வியந்தனர் - பிறர் பற்றி என்ன, தம்பி! நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. 20-ந் தேதி பகல் பதினொரு மணி இருக்கும் - நான் வெளியே எந்த அளவுக்கு வெற்றியோ என்ற கவலையுடன், மூலையில் முடங்கிக் கிடந்தேன் - நண்பர் W.K. தேவராசனார் மோட்டார் கிடங்கில்! தமிழரசுக் கழகக் கொடியும், தி. மு. க. கொடியும் கட்டப்பட்டிருந்த ஒரு மோட்டர் வான் வந்து நின்றது - பழந்தமிழ்ப் போர் வீரர் போன்ற உடலும் பரிவும் பண்பும் ததும்பும் உள்ளமும் படைத்த என் நண்பர் உமாபதி - தமிழரசுக் கழகம் - அண்ணா! என்று கூறிக்கொண்டே கீழே இறங்கினார். அவர் முகத்திலே வெற்றிக்களை கண்டேன் - எளிதில் களிப்புப் பெறாத இயல்பினரல்லவா நமது பொதுச் செயலாளர், அவரும வெற்றி! வெற்றி! என்று கூறியபடி உடன் வந்தார் - எதிர்பார்த்ததைவிட அதிகம், ஆமாம், பரிபூரணக் கடை அடைப்பு என்றார் ம. பொ. சி. வந்து பாருங்களேன் அந்தக் காட்சியைத் தான் என்றழைத்தார் தோழர் விநாயகம்; அண்ணாவுக்கு எப்போதும் இப்படித்தான் குழப்பம், சந்தேகம் என்று கேலி பேசினார், நடராசன். கடைகளெல்லாம் . . . . ? எல்லாக் கடைகளும் மவுண்ட் ரோடு? ஒரு கடை கிடையாது! சைனா பஜார்? சம்பூரண வெற்றி! மூர் மார்க்கெட்? திறக்கவே இல்லை! திருவல்-க்கேணி? நிசப்தம்! மயிலாப்பூர்? ஒரு கடை இல்லை! தியாகராயநகர்? வந்து பாருங்கள், வெற்றியை! கலகம்? குழப்பம்? எல்லாம் காமராஜர் மனதோடு சரி! ஊரில் எங்கும் உணர்ச்சி மயம்! உற்சாக மயம்! ஆலைகளில் நிலைமை? அந்தோணிப் பிள்ளையின் அபாரமான சாதனையை வந்து பாரப்பா, ஆச்சரியப்படுவாய்! தீப்பெட்டித் தொழிற்சாலை? மூடிக் கிடக்கிறது! கல்லூரிகள்? திறந்துள்ளன - மாணவர் அணிவகுப்பு நெடுஞ் சாலைகளில். . கொத்தவால் சாவடி? கீரை விற்கும் கிழவிகூட அங்கு இல்லை! அப்படியானால் . . . .? அப்படியாவது இப்படியாவது நம்மால் இவ்வளவு சாதிக்க முடியும் என்று நேற்று யாராவது கூறியிருந்தாலும் நம்ப மாட்டோம். இப்போது பார்த்தாலல்லவா, தமிழ் மக்களின் பேரார்வம் விளக்கமாகத் தெரிகிறது. காட்சியைக் காண்போம், பட்டபாடு வீண்போகவில்லை. ஆட்சியாளர் மிரட்டலுக்கு நாடு செவிசாய்க்கவில்லை. முழு வெற்றி! மகத்தான வெற்றி!! தம்பி! பல ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நான், "புளகாங்கிதம்’ கொள்ளத்தக்க பல சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், அன்று நான் நண்பர்களுடன், சென்னையின் பல பகுதிகளிலும் சுற்றிப் பார்க்கும்போது, என்னவென்று சொல்வேன், என் மனம் களிநடமாடிற்று; பாதை ஓரத்தில் ஆங்காங்கு நின்றுகொண்டு, அமைதியைக் காத்து நின்ற வீர இளைஞர்கள், வெற்றிப் புன்னகையுடன் இருந்த காட்சியைக் கண்டேன். கண்களில் நீர் துளிர்த்தது!! இதோ தமிழகம்! தன்மானத்தை இழக்கத் துளியும் சம்மதியோம், உரிமைக்கான போரிடத் தயங்கோம்! என்று உலகுக்கு அறிவிக்கும் தமிழகம்! மூடிக்கிடக்கும் கடைகள், வெறிச்சென்று கிடக்கும் அங்காடிச் சாலைகள், பள்ளிகளில் ஆசிரியர்கள், வெளியில் மாணவர்கள், சர்க்கார் நடத்தும் மோட்டார் பஸ்கள், ஆள்தேடும் காட்சி, மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் காட்சி, ஆலைகளில் ஆள் இல்லை, அரவம் இல்லை, எங்கும் வெற்றி, எவர் முகமும் வடிவழகுடன் அர்த்தால் கூடாது என்று முன்பு ஆர்ப்பரித்தோர் கூட, ஊருடன் ஒத்துப் போயினர், தம்பி! அப்படிப்பட்ட மகத்தான வெற்றியை நான் கண்டதில்லை!! எவ்வளவு ஏளனங்களைத் தாங்கிக் கொண்டோம் - எத்துணை இடர்ப்பாடுகள் - என்னென்ன வகையான பழிச்சொற்கள்! மக்களைத் திரட்டி, மகத்தான சக்தியாகிடும் “மாமந்திரம்’ தெரிந்த பெரியார், நமக்கு ஆதரவாக இல்லை, ஏதோ நடக்கட்டும், எப்படியோ தொலையட்டும் என்றும் இருந்துவிட வில்லை. ஏதாவதொரு காரணத்துக்காகக் காமராஜர் கூடச் சும்மா விட்டுவிடுவார் போலிருக்கிறது, இவரோ விடமாட்டே னென்கிறார், வெளுத்து வாங்குகிறார், பத்திரிகையிலும் மேடையிலும்,”இது கடைந்தெடுத்த காலித்தனம்; கண்ணீர்த் துளிகளின் கயவாளித்தனம்; அர்த்தால் தேவையில்லை’’ என்றெல்லாம். அவருடைய எதிர்ப்பு ஒரு புறம் - அவருடைய ஊசிகளும் முட்களும் மற்றோர்புறம் - காமராஜர் சர்க்காரின் தண்டோரா! - காங்கிரஸ் கமிட்டிகளின் மறுப்பு வெளியீடுகள் - ஒன்றா, இரண்டா, எதிர்ப்புகள், இவ்வளவுக்குமிடையில் நேற்று வரை முரண்பட்டுக் கிடந்தவர்கள் அமைத்துள்ள சர்வ கட்சிக் கூட்டணியிலே, குழப்பமும் பிளவும் ஏற்படுத்தும் முயற்சிகள் வேறு. “ஹலோ!”ஹலோ!. . . . ’’ "யாரு நீங்களா?’’ "ஆமாம், நான்தான். . . . வணக்கம், வணக்கம். . . . ஆமாம், இரண்டு நாளாகச் சென்னையில்தான். . . . ’’ "சரி, என்னய்யா நடுராத்திரியில். . . . . ’’ "நடு நிசிதான், ஆனால் என்ன செய்வது. . . . எப்படியாவது இந்த அர்த்தாலை. . . . ’’ "நிறுத்துவதா? என்னய்யா இது வேடிக்கை பேசுகிறீர்?’’ "அவர் ரொம்பச் சங்கடப்படுகிறார்.’’ "அவருக்கு என்ன சங்கடம் இதிலே. அர்த்தால் ஏற்பாடு செய்கிற எங்களுக்கல்லவா சங்கடம், சஞ்சலம் எல்லாம்.’’ "என்னிடம் நம்பிக்கை வைக்கக் கூடாதா? நான் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்ள மாட்டேனா? என்றெல்லாம் ரொம்பச் சொல்கிறார். தங்களிடம் நேரிலேயே பேச வேண்டுமாம். . . ’’ "என்னிடம் பேச என்ன இருக்கிறது. இது கூட்டணித் திட்டமய்யா - ஒருவர் தீர்மானிக்கும் விஷயமல்ல.’’ டெலிபோனில் விவரம் பேச முடியவில்லை. நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்னை வந்தால் நல்லது, ரொம்பவும் விரும்புகிறார்.’’ "வருவதற்கு இயலாதே! 19-ந் தேதி காலைதான் சென்னை வருகிறேன்’’ "ஐயோ! 19-ந் தேதி வந்து என்ன செய்வது? உடனே பிளேனில் புறப்பட்டுவரச் சொல்கிறார்.’’ "முடியாத காரியம். மேலும் நான் வந்து செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஏதாவது பேச வேண்டுமானால், அண்ணாதுரை யிடம் பேசுங்கள்.’’ "அந்த ஆள் இணங்கிவர மாட்டானே. . . . ’’ "நான் மட்டும் என்னவாம் ! என்னய்யா இது ! அர்த்தால் நிச்சயம் நடைபெறும். அது அமைதியுடன் நடத்தப்பட நான் சர்க்காருடன் ஒத்துழைக்கத்தான் விரும்புவேன். அதுவே தவிர, அர்த்தாலைக் கைவிட முடியாது. அது தெளிவாகி விடுவது நல்லது. . . .’’ சென்னைக்கும் மதுரைக்கும் நடுநிசியில் இப்படி “டெலிபோன்’’ - கோவைக்கும்”சேதி’ - தூத்துக்குடிக்குத் “தூது’’ - எங்கெங்கு சமரசவாதிகள் - சந்தர்ப்பவாதிகள் - கிடைப்பார்களோ அங்கெல்லாம், தூது பேசுவதும், பேரம் பேசுவதும் மும்முரமாக நடைபெறுகிறது. நீ தம்பி, இவை பற்றி ஏதுமறியாமல்,”அர்த்தால்’ வெற்றிகரமாக நடைபெறுவதற்கான காரியத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட வண்ணமிருக்கிறாய். நாங்கள் இங்கே, சதிச் சுழலில் சிக்கி, இந்த முயற்சிக்கு நூறாகி விடுகிறதோ, யார், எத்தகைய பிளவு உண்டாக்கும் பேதத்தைத் தூவுகின்றார்களோ என்று பயந்தபடி இருந்து வந்தோம். “சர்வ கட்சிக் கூட்டணி என்ற பெயரால், பிப். 20-இல் நடைபெற இருக்கும் காலித்தனத்தைக் கண்டித்துப் பெரியார் பேசப் போகிறார் - அனைவரும் - வருக!’’ - என்று சிதம்பரம் தெருக்களில் 9-ந் தேதி பகலில், பட்டப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் வாலிபரொருவர் ஒலிபரப்புகிறார்! எங்கெங்கு, வாய்ப்புக்கிடைக்கிறதோ அங்கெல்லாம், காமராஜர் கேள்விப் பட்டதும், முதுகில் தட்டிக்கொடுத்து,”சபாஷ்’ கூறிப் பாராட்டத் தக்க வகையில், பெரிய இடத்தவர்கள் சீரிய காரியத்தில் ஈடுபட்டனர். பாவம் சிரமத்துக்கு ஏற்ற பலன் கிட்டவில்லை; நாடு, அர்த்தாலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியாயிற்று. கடை அடைப்புக்கூட ஓரளவுக்கு நடைபெற்றுவிடும்; ஆனால், இவர்களால் அர்த்தால் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நேரிடாதபடி, கலாம் விளையாதபடி தடுத்திட எங்ஙனம் முடியும், வீறுகொண்டெழும் மக்களிடையே திடீரென்று கோபப் புயல் கிளம்பிவிட்டால், விபரீதம் நேரிட்டு விடுமே, எதிர்ப் பட்டோரைத் தாக்குவது, எந்த நாசம் பற்றியும் கவலை கொள்ளாத போக்கு, சாவு பற்றிய பயமற்ற துணிவு, இவை கிளம்பி விடுமே, இவை எல்லாவற்றையும்விட வீடு வேகிற போது கிடைத்தவரையில் பறிப்போம் என்று காலிகள் கிளம்பி விடக்கூடுமே, அவர்களை எல்லாம் எப்படித் தடுக்க முடியும்? இவர்களுக்கு ஏது அந்த ஆற்றல், இவர்கள் என்ன போர் பல கண்டவர்களா? இவர்கள் கெஞ்சிக் கூத்தாடினாலும், தொண்டை உலர உலரக் கூவினாலும், மக்களைக் கட்டுப்படுத்த முடியுமா? அர்த்தால் என்றால் சாமான்யமா, என்னென்ன நடைபெறப் போகிறதோ யார் கண்டார்கள்? பம்பாயில் பார்த்தோமல்லவா, கொலையும் கொள்ளையும், கற்பழித்தலும், கத்திக்குத்தும்! பயங்கரமான பலாத்காரமல்லவா தலை விரித்தாடிற்று, இங்கும் அதுதான். பிறகுதான் தெரியப் போகிறது இந்தப் "பச்சுக்கானா‘க்களையும் கத்துக்குட்டிகளையும் நம்பினால் என்னென்ன நாசம் விளையும் என்ற பேருண்மை - இப்போது, என்னவோ, இதுகள் தூண்டிவிடுவது கேட்டு ஆட்டம் போடுகிறார்கள், பிப். 20-இல் பல இடங்களில் பிணக்காடு பார்க்கப் போகிறார்கள், கொலையும், கொள்ளையும் கோர தாண்டவமாடப் போகின்றன, பெண்டுபிள்ளைகள் குய்யோ முறையோ என்று கதறிப் பதறி ஓடப் போகிறார்கள் - அப்போதல்லவா "இதுகள்’ முகத்திலே காரித் துப்பப் போகிறார்கள் நாட்டு மக்கள் - என்று நம்முடன் சேர மறுத்து, அதனாலேயே தமக்குத்தாமே வேதனையை வருவித்துக் கொண்ட பெரியவர்கள் பீதி மூட்டினர். எனக்கும் தம்பி, பயம்தான். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் ஈடுபடும் கிளர்ச்சியானால், கட்டு மீறி யாரும் காரியமாற்ற மாட்டார்கள்; எவரேனும் அது போலானால், அவர்களிடம் மன்றாடும் உரிமை எனக்கு உண்டு, ஒத்துழைக்கும் பண்பு நமது கழகத் தோழர்களிடம் நிரம்ப உண்டு என்பது அறிவேன் -எனவே கலாம் எழாதபடி தடுத்திட முடியும் என்று மார்தட்டிக் கூறுவேன். அதுபோன்றே, இப்பக்கம் செல்க! அப்பக்கம் செல்லற்க! என்று கூறிடவும், கட்டுக்குக் கொண்டு வரவும் முடியும் நண்பர் ம. பொ. சி. யால், தமிழரசுக் கழகம் மட்டும் கிளர்ச்சி நடத்துவதாக இருந்தால். அது போன்றே ஒவ்வொரு கட்சிக்கும். ஆனால், இதுவோ சர்வகட்சிக் கூட்டணி! பல்வேறு அணி வகுப்புகள்! ஒவ்வோர் அணிவகுப்புக்கும் பழக்கமாகியுள்ள முறைகள் உண்டு! எப்படி, இந்தக் கூட்டணியைக் கட்டுப் படுத்துவது? யாருடைய சொல்லுக்கு எந்த அளவு மதிப்புக் கிடைக்குமோ? யாரால் கலாம் விளைந்தது என்பதைச் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாதே! இந்நிலையில் கூட்டணிக் கிளர்ச்சி, மூட்டிவிடுபவர்களின் சாகசத்துக்கு இரையாகி, கட்டுக்கு மீறிச் சென்று விட்டால், என்ன செய்வது? சென்னை சென்னைதான், பம்பாயல்ல என்று மார் தட்டித் தட்டிப் பேசி விட்டோமே, அந்த நற்பெயர் கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமே, எப்படி? எப்படி? என்று எண்ணி எண்ணி நான் பெருங்குழப்பமுற்றுக் கிடந்தேன். தம்பி! ஒரு தூய கொள்கைக்காக மக்கள் சக்தி திரண்டெழுந்தால் அந்தக் கொள்கைக்காகப் பாடுபடும் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படுவர் - பெருந் தலைவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுவோம், இவர்கள் சொல்வதென்ன, நாங்கள் கேட்பதென்ன என்று இருந்துவிட மாட்டோம், எமக்கு இலட்சியம் முக்கியமே தவிர, தலைவரின் தோற்றம்கூட அல்ல என்று கூறுவது போல மக்கள் நடந்து கொண்டனர். எப்போதும் நான் இதனை உணர்ந்து உவகை கொள்வேன். பிப். 20, இலட்சம் மக்கள் திரண்டெழுந்து நடத்திய மகத்தான ஊர்வலம், எனக்கு மக்களிடம் ஏற்கெனவே உள்ள நம்பிக்கையை மேலும் அதிகமாக்கிற்று. ஆனால் ஒன்று, தம்பி, நான் "குட்டை‘யனல்லவா? அது பற்றி எனக்கு இதற்குமுன் எப்போதும் வருத்தம் இருந்ததில்லை. பிப். 20-இல், அடடா! இப்படிக் “குள்ளமாக’ இருக்கிறோமே,”உயரமாக’ இல்லாமற் போய் விட்டோமே, என்று நான் உள்ளபடியே வருத்தப் பட்டேன். ஏன் என்கிறாயா? கொஞ்சம் ஆவலை அடக்கிக் கொள்ள, தம்பி! அடிகள், இடம் இல்லை என்கிறார், அடுத்த கிழமை கூறுகிறேன். அன்புள்ள அண்ணாதுரை 4-3-1956 தண்டோரா சர்க்கார் - 3 கூட்டணித் தலைவர்களும் ஊர்வலமும் - காமராஜர் ஆட்சி - கழகத்தை ஒழிப்பவர். தம்பி, ஏன் நான் உயரமாக இருந்திருக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு பிப். 20-இல் ஏற்பட்டதென்று சென்ற கிழமை கூறினேனல்லவா! காரணம் என்ன தெரியுமா? அன்று சென்னையில், அதுநாள் வரையில் கண்டிராத மகத்தானதோர் ஊர்வலம் நடைபெற்றது. அதிலே கலந்து கொள்ளும் அவசியம் எனக்கு வந்துற்றது! எதிரே என்ன நிலை, பின்புறம் என்ன நிலைமை, பக்கவாட்டங்களிலே எப்படி இருக்கிறது என்பவைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன், ஆனால், நான் குள்ளமாயிற்றே - என்னால் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் சிறிதளவு உயரமாக இருந்தால், ஊர்வலத்தின் போக்கையும் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும், நிலைமைக்குத் தக்கபடி, தோழர்களை நடத்திச் செல்லவும் முடியும் என்று எண்ணினேன். எண்ணி என்ன பயன்? வருத்தப்பட்டேன்!! ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது என்பதையும், நமது கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் அவ்வப்போது நடத்தும் உற்சாகமான ஊர்வலத்தின் போது, என்னைத் தேடிப் பிடித்திழுத்து வந்தாலும், நான் ஓடி ஒளிந்து கொள்பவன் என்பதும் உனக்குத் தெரியும். அப்படிப்பட்ட சுபாவமுள்ள நான், அன்றைய ஊர்வலத்தை நடத்திச் செல்பவர்களில் ஒருவனாக வேண்டி நேரிட்டது. ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கினார், பி. டி. ராஜன், உடனிருந்து நடத்திச் சென்றார், ம. பொ. சி. நமது பொதுச் செயலாளர் ஊர்வலத்தில், படைத் தலைவர், தமது படை வரிசைகளை ஒழுங்குற நடத்திச் செல்லும் பான்மையில் சென்றார். நானோ, தம்பி! திகிலும் திகைப்பும் கொண்ட நிலையில் இவ்வளவு திரளான மக்கள், எதைக் கண்டு கோபம் கொண்டு விடுகிறார்களோ, எந்த "விஷமி’ எத்தகைய கலகமூட்டி விடுவானோ, அதனால் எத்தகைய விபரீதம் விளைந்துவிடுமோ, என்ற அச்சத்துடன் சென்றேன் - சென்றேனா! - ஓட்டமும் பெருநடையுமாகச் சென்றேன். ஊர்வலம், "ஐலண்ட்’ மைதானத்திலிருந்து கிளம்புவதற்குள், போலீஸ் தடியடியும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடைபெற்று, மக்கள் பல திசையிலும் துரத்தப்பட்டு, ஒரே குழப்பமாகிவிட்ட நிலை; ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகக் கிளம்பிய நமது பொதுச் செயலாளரையும், துணைச் செயலாளரையும் வழியனுப்பிவிட்டு, கிடங்கில் இருந்தேன், ஒரு அரைமணி, முக்கால் மணி நேரத்துக்கெல்லாம் நமது நாவலர் சென்ற மோட்டார் திரும்பி வந்தது. ஒரே குழப்பமாகிவிட்டது. சுட்டு விட்டார்கள்! மக்கள் ஆத்திரமடைந்து விட்டார்கள்! தலைவர் தாக்கப்பட்டார். மக்களைப் போலீஸ் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து விரட்டுகிறது. பெரிய அமளி! என்று நண்பர் வந்து கூறினார்; என்ன செய்வேன், கிளம்பினேன். திடல் சென்றேன். மக்கள் கூட்டம், கண்களை மிரட்டும் அளவுக்கு! அவர்கள் மனநிலையோ என்னை மருட்டும் விதத்தில்! ஆனால், ம. பொ. சி. யும், பி. டி. ராஜனும், நாவலரும் பிறரும் அங்கு நிலைமையைச் சரிசெய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுக்குத் துணையாக நின்றேன். போலீஸ் அதிகாரிகள், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்ற காரணம் காட்டி ஊர்வலத்தைத் தடுத்து விடலாம் என்று எண்ணியிருப்பர். தடியடி, தலைவர்கள் தாக்கப்பட்டனர், மக்கள் கொதிப்புற்ற நிலை. கண்ணீர்ப் புகைக் குண்டு கிளப்பிய, புகையும் நெடியும், தடியடியால் ஏற்பட்ட தழும்பும் குருதியும், இவை எல்லாவற்றையும்விட, நடுங்கும் குரலில், கண்ணீர் சிந்தியபடி நண்பர் நடராசன் நடைபெற்ற சம்பவத்தை என்னிடம் சொன்னதும், என்னை வெகுவாக உருக்கிவிட்டது. பி. டி. ராஜன் என்ன சொல்கிறார்? என்று கேட்டேன். ஊர்வலம் நடத்தியே தீர வேண்டும் என்று கூறுகிறார். போலீஸ் அதிகாரிகளிடம் கூறிவிட்டார் - என்றார் நடராசன். தம்பி! பி. டி. ராஜன் இருக்கும் இடம் நோக்கி என் விழிகள் சென்றன. அந்தத் தமிழ்த்தலைவர், மக்களை அமைதிப்படுத்திக் கொண்டும், ஒழுங்குபடுத்திக் கொண்டும் இருந்த காட்சி என் உள்ளத்தைத் தொட்டது. ஊர்வலம் கிளம்பிற்று; ம. பொ. சி. உடனிருந்தார்; நான் ஓழுங்கு! அமைதி! ஒழுங்கு! அமைதி! என்று கூவினேன் - "வாழ்த்தொலி’ என்னைக் களிப்பிலாழ்த்திற்று - கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது ஊர்வலம். தம்பி, எழுச்சியுற்ற தமிழகத்தைக் கண்டேன், எந்தையர் நாடு இனி எத்தரின் பிடியிலிருந்து விடுபடும் என்று உறுதி கொண்டேன், அதே தமிழர், வரிசை வரிசையாக வருகிறார்கள் - வாழ்த்தொலியுடன் அடிபட்டார்கள் தடியால் - போலீஸ் துரத்திற்று, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது - கலங்கினரோ தோழர்கள்? கடமையை மறந்தனரோ? இல்லை, தம்பி! பெருங்கூட்டம் ஆத்திரமடைந்து, கட்டுக்காவலை மீறிக் கையில் கிடைத்ததைக் கொண்டு எதிர்த்தோரைத் தாக்கி இடர் விளைவித்து நாசம் நர்த்தனமாடச் செய்வதற்கான, எரிச்சல் என்னென்ன உண்டாக்க முடியுமோ, அவ்வளவையும், மக்கள் போக்கறியாப் போலீஸ் செய்துவிட்டது. அமைதியை நிலை நாட்டச் சென்ற ஜீவாவைத் தாக்கிக் கீழே சாய்ப்பதைக் கண்ட பிறகும், மக்கள் எங்ஙனம் கட்டுக்கு அடங்கி நிற்க முடியும்? எந்த விநாடியிலும், எரிமலை நெருப்பைக் கக்கும் என்ற நிலை - குமுறலே, பயமூட்டுவதாக இருந்தது. எனினும் எடுத்த காரியத்தைப் பழுதின்றி முடித்தாக வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும், ஆத்திரத்துக்கு இடமளித்தால் அதுவரை பெற்ற மகத்தான வெற்றிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும், தமிழரின் பண்பாடு கெட்டு விடும், இழிவும் பழியும் வந்து தாக்கும் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பொறுமையும், மக்களை ஒரு கட்டுக்குள், ஒப்பற்ற ஒழுங்குக்குள் கொண்டுவந்து நிறுத்தி வைத்தது. ஆகஸ்ட்டுக் கலகம் அறிந்த மக்கள் - பம்பாய் சம்பவம் பற்றிய பத்திரிகைச் சேதிகளைப் படித்த மக்கள், அன்று மட்டும் தமது கோபத்துக்கிடமளித்திருந்திருப்பாரானால், தம்பி! வெண்ணிற மணல் செந்நிறமாகி இருக்கும், நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிந்தோ அல்லது வெட்டுண்ட கரம், கால் கண்டு துக்கித்துக் கொண்டோ இருந்திருப்போம். மயில்தானே ஆட வேண்டும்! வான்கோழியுமா? காங்கிரஸ் பெருந் தலைவர்கள் மட்டுந்தானே, அர்த்தால் நடத்த முடியும் - இதுகளெல்லாமா என்று கேட்டு, இந்நேரம், தண்டோரா சர்க்கார் நம்மை இடித்துரைத்திருக்கும் - இழித்துரைத்திருக்கும்; நாமும் பதிலளிக்க முடியாமல் திண்டாடித் தேம்பிக் கிடந்திருப்போம். ஆனால் தீயில் தள்ளப்பட்டது போன்ற நிலை எனினும், தமிழர், தமது பண்பினை இழந்தாரில்லை! வீரம் கொழுந்து விட்டெரிந்தது. ஆனால் வெறி தலை காட்டவில்லை. ஆர்வம் ஆற்று வெள்ளம் போல் எழும்பிற்று. எனினும் கரை உடைபடவில்லை. குறிக்கோளை மறவாத பொறுப்புடன் நடந்து கொண்டனர். தம்பி! “உறுதிமொழி’ எடுத்துக் கொள்ளும்படி, கூட்டணித் தலைவர் கேட்டுக்கொண்ட போது, அவர் நிகழ்த்திய உரை, என்னென்பேன், நெஞ்சம் கரைந்தது, கண்களில் நீர் நிரம்பிற்று, எங்கிருந்து கிடைத்தது அவருக்கு அந்த உருக்கம்? எவரிடம் கற்றார் அந்தக் கனிவு? மக்கட் கூட்டத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ளாதவர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளான ஓர் கட்சியின் தலைவர், அன்று மக்களைத் தன் வயப்படுத்திய திறமையை இதுநாள் வரையில் எங்கே”ஒளிய’ வைத்திருந்தார் என்று நான் எண்ணி எண்ணி வியந்தேன். "திருஷ்டி பரிகாரம்’ போல, சிறு குழப்பம் நடைபெற்றது - அது கண்டு நான் வருந்துகிறேன் - அதுவும் இல்லாதிருந்திருக்கு மானால், நாம் இன்று பெற்றுள்ள வெற்றி, மாசுமறுவற்றதாகும் என்று கூறினார் கூட்டணித் தலைவர். கண்ணியத்தை அணியாகக் கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே, அது போல் கூறியிருக்க முடியும். பொதுவாகவே தம்பி! மக்கள், பெருந்திரளாக, வெள்ளம் போல் கூடியிருக்கும் நேரத்தில், அவர்களிடம் ஆத்திரத்தை மூட்டிவிடுவதும், அவர்களைப் பலாத்காரத்தில் ஈடுபடச் செய்வதும் எளிதான காரியமாகும். அது மட்டுமல்ல, இரண்டாந்தர மூன்றாந்தரத் தலைவர்கள், அதே மன அரிப்புடன் இருப்பர்; இச்சமயம் தவறினால் மறு சமயம் வாய்ப்பதரிது என்ற போக்கிலே, இழுத்துப் போட்டு உதையுங்கள்! இடியுங்கள்! உடையுங்கள்! கொளுத்துங்கள்! அஞ்சாதீர்கள், தாக்குங்கள்! போலீஸ் சுண்டைக்காய்போல்! குண்டுகள், உமது கரங்களுக்கு விளையாட்டுச் செண்டுகள்! என்றெல்லாம் "தூண்டிவிட்டு’க் கலகம் மூட்டிவிடுவதற்குத் தான் துடியாய்த் துடிப்பர். தமிழ்த் தலைவர்கள் அங்ஙனமா நடந்து கொள்வர்! அன்று, பி. டி. ராஜன் கொண்டிருந்த கவலையெல்லாம், மக்களைச் சமாதானப்படுத்தி, மனக் கொதிப்பை மாற்றி, அவர்களை அமைதியான முறையில் தத்துமது இல்லம் சென்று, அன்று நடத்திய அர்த்தாலின் வெற்றியை நேர்த்தியானதாக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதுதான். அவரே, பிறகு கூறியபடி, அப்படிப்பட்ட மக்கட் கூட்டத்தை அவர் அதற்கு முன்பு கண்டதில்லை. மக்களோ, தடியடி கண்டு கொதிப்படைந்த நிலையில் உள்ளனர். ஒரு இலட்சத்திற்குக் குறையாது என்று மாற்றார்கள் ஒப்புக் கொள்வர். அவர்கள் ஆலைகளிலிருந்தும் தொழிற்சாலை களிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் குடில்களிலிருந்தும் வந்துள்ளனர். எளிதாக, அவர்களைத் துப்பாக்கி மிரட்டிவிடாது! கண் எதிரே, தமது தோழன் சுடப்பட்டுச் சுருண்டு கீழே வீழ்ந்தாலும்; அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மாற்றாரை நோக்கிப் பாய்ந்து தாக்கிடும் வல்லமை பெற்றோர். மார்பில் பாய்ந்த வேலினை இழுத்தெடுத்து, எதிரேவரும் வேழத்தின் மீது வீசிய வீரர் வழி வந்தவரல்லவா! வீரத்திற்கும் நெஞ்சு உரத்துக்கும் பஞ்சமா? அவர்கள் ஈடுபட்டிருக்கும் காரியமோ, தாயகத்துக்கு வந்துற்ற கேட்டினை ஓட்டிடும் விடுதலைக் கிளர்ச்சி! இந்நிலையில் அவர் அச்சம் கொள்வரோ? அப்படிப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு அமளியை மூட்டிவிடுவதுதானே எளிதான காரியம். ஆனால், பி. டி. ராஜன் இதயத்திலிருந்து கிளம்பி, கேட்போர் இதயத்தில் சென்று தங்கும் திறன் படைத்த பேருரையால், அவ்வளவு மக்களையும் அமைதியுறச் செய்தார்! அன்று, ஒரு துளி கலகமும், சிறு அடிதடியும், எத்தகைய கூச்சலும் குழப்பமுமின்றி, அவ்வளவு மக்களும் கலைந்து சென்றனர். எத்தனை சம்பவங்களை இதற்கு ஈடாகக் காட்ட முடியும், எங்கள் கட்சி பெரிய கட்சி என்று "விருது’ பேசுவோரால்! தம்பி! கோவாவில் நடைபெற்ற கொடுமையைக் கண்டிக்கச் சென்னையில் அர்த்தால் நடத்தினர். சர்க்கார் துணை நின்றனர். சகல கட்சிகளும் கலந்து கொண்டன. எதிர்ப்பாளர், ஏளனம் பேசுவோர், எவரும் கிடையாது, தண்டோரா இல்லை. அர்த்தால் வேண்டாமென்று தலையங்கம் தீட்டவில்லை. பெரியார் கூட, அதனைப் பலாத்காரம் என்று பேசினாரில்லை. திராவிடர் கழகமும், திருநாளில் கலந்து கொள்வது போல, அதிலே கலந்து கொண்டது. கண்ணீர்த் துளிகள் கலந்து கொள்ளும் காரியத்தில் நாங்கள் கலந்து கொள்வதா, என்ன ஆவது எமது கண்ணியம் என்று வாதாடவில்லை. அதே கடற்கரையில், கூட்டம் நடைபெற்றது. எதிர்ப்பே இல்லாத அந்த அர்த்தாலில்கூட, அமளி மூண்டது; குழப்பம் ஏற்பட்டது. பிப். 20-ல் நடைபெற்ற அர்த்தாலை நடத்தியவர்களை, கக்கன் அரசியலில் தோற்றோடிப் போனவர்கள் என்று கேபேசின ôரல்லவா, அவர், வாய் பொத்திக் கொண்டுதான் கிடந்தார். நமது நடராசன் ம. பொ. சி. சுயம்பிரகாசம் விநாயகம் இரத்தினம் ஜீவானந்தம் ஆகியோரெல்லாம் இருந்துதான் அர்த்தால் கூட்டம் நடத்தினர். டாக்டர் வரதராஜுலுவும், ராஜாராம் நாயுடுவும், அண்ணாமலைப் பிள்ளையும், இவர்களுடன் தோளோடு தோள் சேர நின்றனர். தேசியம் தீட்டுப்பட்டுவிடவில்லை! நாடு நாசமாகி விடவில்லை! காமராஜர் சர்க்கார், “தண்டோரா’ போட்டுக் கடைகளைத் திறவுங்கள், போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம் என்று கனிவு காட்டவில்லை; ஜனநாயக முறைகள் இருக்கும் போது, ஏன் அர்த்தால் நடத்துகிறீர்கள் என்று”தினமணி’ கேட்கவில்லை, ‘மெயில்’ தன் "மேதாவிலாசத்தை’க் காட்டவில்லை. முதன் மந்திரி காமராஜர் காலையும் மாலையும் நகரைச் சுற்றிப் பார்த்தார் - எல்லாம் அமைதியாகவே இருக்கிறது என்றார். அமைதியின் இலட்சணம் எப்படி இருந்தது தெரியுமா, தம்பி! "பஸ்கள் ஓடின; ஊர்வலம் நடத்தியோரும் தொழிலாளர்களும் குறுக்கிட்டதால் நின்றன! மீண்டும் ஓடத் தொடங்கின! மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பஸ்கள் நின்று விட்டன.’’ இது, கோவாவுக்கான அர்த்தாலின்போது! "தினமணி’ யே எழுதியது. கூட்டணியோ, பஸ்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது. மக்களை மறிக்கவும் கூடாது - ஒருவரையும் வற்புறுத்தக் கூடாது - என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்த அர்த்தால் கண்டிக்கப்பட்ட.து. கோவாவுக்கான அர்த்தால் பற்றியோ, கொஞ்சுமொழி பேசினர், வேளைக் கேற்ற கொள்கை பேசும் போக்கினர். கல்லெறி சரமாரியாக நடைபெற்றிருக்கிறது, கோவா அர்த்தாலின்போது. காலிகள் கல் வீச்சு - என்று கூறவில்லை. “தினமணி’ கனிவுடன் பேசுகிறது! பஜாரியை மனைவியாகக்கொண்ட பயங்தாங்கொள்ளிக் கணவன், அவளிடம்”பாத பூஜை’ பெற்றாலும், கோபம் காட்டாமல், உதைக்காதே பெண்ணே! உன் கால் வலிக்கும்படி கண்ணே என்று பேசுவானாமே, அதுபோல கல்லடி கண்டும், கனிவு ஒழுக ஒழுக எழுதுகிறது. "சந்தடி சாக்கில் சில பொடியன்கள் ஸ்மால்காஸ் கோர்ட் பகுதியில் கற்களை வீசினர்.’ பொடியன்கள் - காலிகள் அல்ல! தெரிகிறதா தம்பி, தேசியம்!! நடைபெற்றது என்ன தெரியுமோ? எல்லாக் கதவுகளையும் மூடிக் கொண்டு, ஹைகோர்ட் வேலையைக் கவனிக்கலாயிற்று, கோவா அர்த்தால் கூட்டத்தினர் விடவில்லை, கோஷமிட்டுக் கொண்டு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் கோர்ட்டுகளுக்குள் புகுந்தனர். உடனே, துப்பாக்கி முழங்கிற்றா? இல்லை! உடனே ரிஜிஸ் டிரார், பிரதம நீதிபதியைக் கலந்து கொண்டு, கோர்ட்டுகள் மூடப்படும் என்று அறிவித்தார்! இரண்டு கவுண்டர்களையும், மேஜை நாற்காலிகளையும், ஜெனரல் போஸ்டாபீசில், ஒரு கூட்டம் நுழைந்து உடைத்தது. அரை குறையாகத் திறந்து வைத்திருப்பவை போலத் தோன்றிய கடைகள், ஸ்தாபனங்கள் முன்னிலையில் ஆர்ப் பாட்டக்காரர்கள், கோஷமிட்டனர்; மூடச் செய்தனர். தம்பி! "தினமணி‘யிலிருந்து திரட்டித் தந்திருக்கிறேன், சேதிகளை. தொழிலாளர்களுக்கும், தேவிகுளம் கிளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? தொழிலாளர்களே! அரசியல் கட்சிகளின் வலையில் விழாதீர் - என்று மாய்மாலம் பேசினார்களல்லவா, தம்பி! கோவா அர்த்தாலுக்கு, "தினமணி’, திருப்தியுடன் எழுதுகிறது, "ராஜ்ய சர்க்காரின் தொழிற்சாலைகள் கார்ப்பரேஷன் ஓர்க்ஷாப் பெரம்பூர் ரயில்வே ஓர்க்ஷாப் பி. சி. மில் சால்ட் - கோட்டர்ஸ் கூட்ஸ்ஷெட் இவை யாவும் மூடிக் கிடந்தன என்று. இவை மட்டுமா, கப்பல்களில் சாமான்கள் ஏற்றுமதி இறக்குமதி இல்லை - ஏனென்றால், அந்தத் தொழிலாளர்களும் அர்த்தாலில் சேர்ந்து கொண்டனர் என்று செப்புகிறது "தினமணி’ மாணவர்களை விட்டு விடுங்களய்யா! அவர்களை, இத்தகைய அர்த்தால் கிளர்ச்சிகளிலே ஈடுபடச் செய்யாதீர்கள் என்று மகானுபாவர்கள் கூறினர் - கல்வித் துறைத் தலைவராகி, தமிழரின் கலி தீர்த்தவர் இருக்கிறாரே, சுந்தரவடிவேலர் (குத்தூசியாரின் சகலை), அவர் பலமான தாக்கீது பிறப்பித்தார் - பள்ளிகள் அடைபட்டுக் கிடக்கக்கூடாது என்று கோவாவின் போது. பச்சையப்பன் லயோலா சட்டக் கல்லூரி வைத்தியக் கல்லூரி கிண்டி கல்லூரி தாம்பரம் கல்லூரி எல்லாம் மூடிக் கிடந்தன. மாணவர்கள், அர்த்தால் ஊர்வலம் நடத்தினர் என்று தேசீயம் பேசுகிறது, "தினமணி’. அர்த்தாலால் கஷ்டம் ஏற்படவில்லையா என்றால், நிரம்ப என்பதும், “தினமணி’ மூலமே தெரிகிறது. ஆனால் அதனை அந்த ஏடு, கூறும்”தினுசு’ இருக்கிறதே, வேடிக்கை அதுதான். திடீல்னு தொடவே, நான் தடாலுன்னு கீழே விழுந்து விட்டேனுங்க, ஜாடை மாடையா முன்கூட்டியே சொல்லி யிருந்தா நான் கொஞ்சம் சிங்காரிச்சுக்கிட்டு வந்திருக்க மாட்டேனா - என்று கேட்கும் “இரவு ராணிகள்’ பற்றிக் கதை கதையாகப் படிக்கிறோம் அல்லவா! அதெல்லாம் எந்த மூலைக்கு! இதோ பார், தம்பி”தினமணி’ யின் எழுத்தை. "ஒரு நாள் இடைவெளி கொடுத்து, முன்னறி விப்புடன் திட்டமிட்டு நடத்தியிருந்தால், யாரும் கஷ்டப்படாமல் அர்த்தால் நடந்திருக்கும் என்பது பொதுஜன அபிப்பிராயம்.’’ நாம் நடத்திய அர்த்தாலோ, பல நாள் திட்டமிட்டு, பலாத்காரம் எந்தெந்தச் சந்துகளின் வழியாக வந்துவிடக் கூடுமோ அவைகளை எல்லாம் அடைத்துவிட்டு, பொது மக்களுக்குக் கூடுமானவரையில், சங்கடம் ஏற்படாதிருப் பதற்காகப் பல "விதிவிலக்குகள்’ அளித்து, காரியம் பெரிதே தவிர வீராப்புப் பெரிதல்ல என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது. தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையை, தமிழர் - மலையாளி மாச்சரியமாக்க நாம் விடவில்லை! நாம், பாராட்டிப் புகழ வேண்டிய வகையில் மக்கள் நடந்து கொண்டனர். இத்தனைக்கும், மலையாளிகளைத் துரத்துங்கள்! மலையாளிகள் ஆதிக்கம் ஒழிக! மலையாளிகளின் ஆதிக்கம் தெரிய வேண்டுமானால், ஆபீசுகளைப் பார்; ஓட்டல்களைப் பார், ரயில் வண்டிகளைப் பார்! - என்றெல்லாம், "விடுதலை’ மும்முரமாக முரசறைந்து வந்தது. அர்த்தாலைக் காரணமாக்கிக் கொண்டு, யாராவது இரண்டொரு எரிச்சல் பேர்வழிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு விடுவார்களோ என்று நான் அஞ்சியதுண்டு. தமிழ்நாடு முழுவதும் வெற்றியுடன் நடைபெற்ற இந்த அர்த்தாலில், ஒரு இடத்திலாவது தமிழர்-மலையாளி மோதுதல் ஏற்படவில்லை என்பது, கூட்டணி பொறுப்புள்ள கண்ணியவான்கள் கொண்டது என்பதற்கு மறுக்கொணாச் சான்றாகும். மிகப் பெரும்பாலோர், பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கூட்டணியின் முயற்சியில் காணக்கிடக்கும் தூய்மையை அறிந்தும், கூட்டணியில் இடம் பெற்றவர்களிடம் நம்பிக்கை வைத்தும், இந்த "அர்த்தாலை’த் தங்கள் காரியமாகக் கொண்டனர். அதனாலேயே, இவ்வளவு எளியவர்களால் இத்துணை சிறப்பான வெற்றி பெற முடிந்தது. போகட்டும், வெற்றிகரமாக அர்த்தால் நடைபெற்றான பிறகாவது, போக்கை மாற்றிக் கொண்டனரா என்றால், இல்லை. தம்பி, அந்த அளவுக்குக் கூடக் கண்ணியம் அரும்பிடக் காணோம். மாறாக, அறிக்கையும் தலையங்கமும், முழக்கமும் முணுமுணுப்பும் மீண்டும், நையாண்டி செய்யும் போக்கிலேயே உள்ளன. "என்ன மகா அர்த்தால்! மோட்டாரெல்லாம் ஓடிற்று - ரயிலெல்லாம் ஓடிற்று-ஆபீசெல்லாம் வேலை செய்தது’’ என்று ஏளனம் செய்தனர். இவர்கள் ஏதோ திங்களுக்கொருதரம் அர்த்தால், திட்டம் வைத்துக்கொண்டிருப்பதுபோலவும், அப்போதெல்லாம், காக்கை குருவியிலிருந்து கனவேக ஆகாய விமானம் வரையில் வானத்தில் பறந்திடாது, நத்தை நண்டிலிருந்து மோட்டார் ரயில் வரையில் நகராது, நடவாது, சத்திரம் சாவடியிலிருந்து சர்க்கார் பணிமனை வரையில் திறவாது, அலுவலாற்றாது மூடிக்கிடப்பது போலவும், நம்மால் இந்த அளவுக்கு வெற்றி காண முடியாததால், நாம் வெட்கித் தலை குனிய வேண்டும் போலவும் பேசுகின்றனர். நாம் நடத்திக் காட்டிப் பெற்றதைவிட மகத்தான வெற்றியைப் பெறக் கூடியவர்கள் முன்வருவார்களானால், நாம் குறுக்கே நிற்கப் போவதுமில்லை, குறை கூறித் திரியப் போவதுமில்லை, அனுமதி அளித்தால் அவர்தம் கொடி ஏந்திகளாகக் கூடப் பணியாற்றுகிறோம்! ஆனால், சற்றே அவர்கள் தங்கள் குறிப்பேட்டினைக் காட்டச் சொல்லு தம்பி! அர்த்தாலை வெற்றிகரமாக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடத்திக் காட்டவேண்டுமானால், நம்மைக் குறை கூறுவோரில் பலர் முன்வரக் கூடுமே தவிர, சர்க்காரின் தண்டோராவும், சந்தர்ப்பவாதிகளின் எதிர்ப்பும், முதலாளிக்குக் கையாட்களாக உள்ள தொழிலாளர் தலைவர்களின் தெகிடுதத்தமும், மூக்குவரை நம்மீது கோபம் கொண்டோரின் குத்தலும் ஏற்பட்டும், சமாளித்து நாம் பிப். 20 - இல் வெற்றி கண்டது போல, நடத்திக் காட்டச் சொல்லு பார்ப்போம்! நேராப் பார்க்கிறா, ஜோரா இல்லை! என்னைப் போல மாறு கண்ணு உண்டாடி, மங்கத்தாயி ! - என்று கிராமத்திலே பாடுவார்கள், அது போல், இயலாதவர்கள், தமது இயலாமையை மறைத்துக் கொள்ள ஏதேதோ பேசுகிறார்கள், வேறென்ன! "அர்த்தால் வெற்றியாம்! என்ன வெற்றி! கடைகளை மூடி விட்டார்கள்! ஆனால் ஏன் மூடினார்கள்? இவர்களுடைய வேண்டுகோள் கேட்டா? அதுதான் இல்லை! காலிகளுக்குப் பயந்து கடைகளை மூடினார்கள்!’’ என்று ஒத்த கருத்தினர் ஒரே குரலில் பேசுகின்றனர்! எவ்வளவு நேர்த்தியான வாதம்! காலிகளுக்குப் பயந்து கடை மூடினார்களாம்! ஏனய்யா பிப். 20-இல் மட்டும், காலிகளுக்குப் பயந்தனர்? 19, 21, ஏன் அந்தப் பயம் இல்லை? என்று கேட்டுப் பார், தம்பி. கொழுக்கட்டை இல்லாமலே, வாய் மூடிக்கிடக்கும். காலிகளுக்குப் பயந்து கடை மூடினார்கள் என்ற வாதம் ஏதோ நமக்கு இழிவளிப்பது என்று எண்ணிக் கொண்டு பேசுகிறார்களே தவிர, அலசிப் பார்த்தால் அது, ஆட்சியாளர்களுக்கே பெருத்த அவமானம் அளிப்பதாகும் என்பதை அறியலாம். காமராஜர் ஆட்சி எப்படி இருக்கிறது? காலிகள் நிறைய இருக்கிறார்கள் - கடைக்காரர்கள் எல்லோரும் கண்டு அஞ்சத்தக்க அளவுக்கு இருக்கிறார்கள்! இவ்வளவு பலம் பொருந்திய நிலையில் காலிகள் இருப்பானேன்? கையாலாகவில்லை, அவர்களை அடக்க, ஒடுக்க ஒழித்துக்கட்ட! ஒரு ஆட்சியின் திறமைக்கு இதுவா நற்சான்று? காலாகாலத்தில், தக்க முறையில் அடக்கினால், காலிகள், ஏன் ஆட்சியாளர்கள் குறிப்பிடத்தக்க அளவிலும், கடைக்காரர் அஞ்சத்தக்க தொகையிலும் இருக்கப் போகிறார்கள்? ஏன், காலிகள் அடக்கப்படவில்லை? முயற்சிக்கவில்லையா? முடிய வில்லையா? இரண்டில் எதுவாக இருப்பினும் வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளவர்களன்றோ! காலிகளுக்கு அஞ்சாதீர்! கலவரத்துக்குப் பயப்பட வேண்டாம்!, போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம்! என்று "தண்டோரா’ போட்டீரே, அப்படியிருந்தும், கடைக்காரர்களுக்கு அச்சம் இருப்பானேன்? கவசத் தொப்பியைக் காட்டினீர்கள், விரைந்து செல்லும் சைக்கிள் போலீசை அனுப்பினீர்கள், கடுகிச் செல்லும் போலீஸ் வான்களை முடுக்கினீர்கள், தடியும் துப்பாக்கியும் ஏந்தினர், சந்து பொந்துகளிலும் நின்றனர், நெடுஞ்சாலைகளில் சென்றனர். எல்லாம் காட்டினீர்களே, ஏன் கடைக்காரர்களுக்குத் தைரியம் பிறக்கவில்லை? உங்களிடம் நம்பிக்கை இல்லை! அப்படித்தானா, ஐயா, ஆட்சியாளர்களே! உங்களால் காலிகளை அடக்க முடியாது, கலவரத்தைச் சமாளிக்க முடியாது, உங்கள் போலீஸ் பாதுகாப்புப் பயனில்லை - என்று கடைக்காரர்கள் எண்ணுகிறார்கள். ஏனய்யா, “மணிமகுடதாரி’ என்று”விடுதலை’யிடம் பட்டப் பெயர் பெற்றுள்ளவரை முதல்வராகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களே! அப்படித்தானா? உங்களிடம் நம்பிக்கை இல்லையா, கடைக்காரர்களுக்கு? காலிகளை அடக்கக்கூடத் திறனற்றவர்கள் என்று கடைக்காரர் உங்களைப் பற்றித் தீர்ப்பளித்து விட்டார்கள் என்றல்லவா ஏற்படுகிறது உங்கள் வாதத்தை அலசினால்! வெட்க மில்லையா உங்களுக்கு? காலிகளைக்கூட அடக்க முடியாத உங்களுக்கு ஏனய்யா, ஆட்சியும் அந்தஸ்தும்? போலீஸ் இருக்கிறது தொகை தொகையாக! காலிகளைக் கண்டு, கடைக்காரர் அஞ்சினராம்! சொத்தையானது மட்டுமல்ல, தமக்குத்தாமே இழிவு தேடிக் கொள்ளும் வாதமல்லவா இது. சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, இப்படியா சத்தற்ற பேச்சுப் பேசுவது! . இங்கே உள்ளவர்கள் இந்த வாதத்தைக் கேட்டு என்ன எண்ணுவார்கள் என்பது கூடக் கிடக்கட்டும், வெளிநாட்டில் உள்ள ஆட்சியாளர்கள், இந்த விசித்திர வாதத்தைக் காண நேரிட்டால் என்னென்ன பேசுவர், எண்ணும் போதே வெட்கம் வேலாகிக் குத்துமே! சென்னையில் காமராஜர் என்றோர் "கனவான்’ முதல் மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறாராம். மகா சாமர்த்தியசாலி யாம்! எதிர்ப்பே எழாமல் தடுத்துக் கொள்வதில் சூரராம்! எவரையும் கண்டு அஞ்சாது போரிடும் பெரியாரையே சொக்க வைத்து விட்டவராம்! அப்படிப்பட்டவர் ஆட்சியிலே, காலிகள் ஏராளமாகி விட்டனராம், கடைக்காரர்கள் அஞ்சினராம்; பயம் வேண்டாம், போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்று காமராஜர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாராம்! கடைக்காரர்களுக்கு நம்பிக்கையோ, தைரியமோ வரவேயில்லையாம். அதனால்தான், அர்த்தாலின் போது கடை அடைத்துவிட்டனராம் - என்று பேசிடும் போது, காங்கிரஸ் நண்பர்களே! கைகொட்டி மட்டுமா, அவர்கள் சிரிப்பார்கள், செச்சே! எனக்கே எண்ணும்போது வெட்கமும் வேதனையுமாக இருக்கிறது!! கடை அடைத்ததற்குக் காரணம், இவர்களை மதித்து அல்ல, இவர்கள் எடுத்துக் காட்டிய பிரிச்சினையை மதித்துக் கடை மூடினர் என்று வாதாடினால், அதிலே தரக் குறைவோ, ரசக்குறைவோ ஏற்படாது. நாங்கள் "சின்ன மனிதர்கள்’ என்று எள்ளி நகையாடித் திருப்தி கொள்ளலாம் - கவலையில்லை. பிரச்சினையின் கண்ணியம் கடைக்காரர் மனதைக் கவர்ந்தது என்று சொல்லலாமே. எங்களையும், நாங்கள் எடுத்துக் காட்டிய பிரச்சினையையும் சின்னதாக்கிக் காட்ட வேண்டும் என்ற சிறுமதியால், எப்படிப் பேசினால் எப்படி எப்படிப் பொருள் கொள்வர் என்பது பற்றியும் எண்ணாமல், சொத்தை வாதத்தில் இறங்கி, காலிகளுக்கல்லவா, போலீசைவிட, அதை ஆளும் ஆட்சியாளர் களைவிட மேலான இடம் கொடுத்து விட்டீர்கள்! சரியா? ஆட்சியாளர்களுக்கே அல்லவா இது அவமானம். கடைகளை மூடியதற்குக் காரணம், காலிகள் பற்றிய பயம் என்று வாதாடிவிட்டு, அடுத்த விநாடியே, கலவரம் அன்று ஏற்படாததற்குக் காரணம், கூட்டணித் தலைவர்களின் கட்டுப்பாடு முறை அல்ல, எமது போலீசின் திறமைதான் அதற்குக் காரணம் என்று பேசுகிறார்கள். பொருந்துகிறதா, பொருளிக்கிறதா? அர்த்தாலன்று கலகம் எழாதபடி பாதுகாப்பளித்திடும் திறமை படைத்தது உமது போலீஸ் என்றால், காலிகளையும் அடக்கி, கடைக்காரரின் அச்சத்தையும் துடைத்து, கடைகளைத் திறக்கச் செய்து அர்த்தாலை முறித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? ஏன்? ஏன்? தண்டோரா போட்டும், "கபர்தார்’ கொடுத்தும், கவசம் மாட்டியும், கைத்துப்பாக்கி கொடுத்தும், கடைக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியாத ஒரு சர்க்கார் இருக்கிறது. அதனை, அதுவே கூறிக்கொள்ளவும் செய்கிறது. இது சிறப்புக்குச் சான்று என்று ஆட்சியாளர்களும் அவர்தம் ஆதரவாளரும் எண்ணிக் கொண்டால், நமக்கென்ன நட்டம்? போகட்டும். அர்த்தாலால் கண்டது என்ன? என்று, கை நிறையத் தண்ணீரை வாரி இறைத்தானதும் காயும் கனியும் பறித்தெடுத்திடக் கூடை தேடிடும் குணாளர்கள் குத்தல் பேச்சுப் பேசுகிறார்கள். கோவா அர்த்தால் நடந்த மறுநாள் போர்ச்சுகீசியன் போய் விட்டானா என்று நாம் கேட்டோமில்லை. ஏனெனில், அற்பத்தனமும் அரசியலும் ஒன்று கலந்தால், அசிங்கமும் அயோக்கியத்தனமும்தான் நாட்டில் தலைவிரித்தாடும். அர்த்தாலில் ஈடுபட்ட எவரும், அர்த்தால் வெற்றி பெற்றான உடனே, தேவிகுளம் கிடைத்துவிடும் என்று எண்ணிடும் ஏமாளிகளல்ல; அவ்விதம் எண்ணிட இது ஏமாளிகள் நாடல்ல; அறிவு செறிந்த நாடு. அர்த்தால் மூலம், தமிழரின் விழிப்புணர்ச்சி, எழுச்சித் திறன், நெருக்கடியான நேரத்தில் ஒன்றுபடும் உளப்பண்பு, கட்டுப்பாட்டுணர்ச்சி, பொறுப்புணர்ச்சி இவை, விளக்கமாகி விட்டன. மதிப்பான பலன்கள்; மாண்புள்ள விளைவுகள். இதுவரை எவருமே சொல்லாதது, யாரையும் திடுக்கிட வைப்பது, பெரியார் துவக்கும் கொடி எரிப்புப் போர் - என்றனர். நாடு, அலறித் துடித்தது - நண்பர்கள் நல்லுரை கூறித்தோற்றனர் - திராவிடர் கழகத்தின் கடமை உணர்ச்சியினர் கொடி தயாரித்தனர், "விடுதலை’ பட்டியல் வெளியிட்டது. பெரியார் சுழல் வேகச் சுற்றுப் பயணம் செய்தார் - நாளை என்ன நேரிடுமோ - என்று மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நின்ற நிலை அனைவருக்கும் - ஆயினுமென்ன? ராஜ தந்திர நிபுணர் ரணகளச் சூரர் காமராஜர் ஒரு சிறு அறிக்கை வெளியிட்டார் - பெரியார் தணிந்தார், துணிந்தோர் பணிந்தனர், கொடி எப்போதும் போலப் பறந்தது, கோட்டை மாளிகையிலே, குறு நகையுடன் கொலுவீற்றிருந்தார் காமராஜர். "என்ன ஆயிற்று கொடி எரிப்பு?’’ “நின்று விட்டது!’’”அப்படியா? எப்படி?’’ "நான் அறிக்கை வெளியிட்டேன். . . . பெரியார் கொடி எரிப்பை நிறுத்திவிட்டார். . . . ’’ "அச்சா! பஹுத் அச்சா!’’ நேரு பெருமகனாருக்கும் காமராஜருக்கும் இதுபோல் உரையாடல்! அதே முறையில், கூட்டணி திடுக்கிடத்தக்க, திட்டமல்ல, சாத்தியமான ஒரு திட்டம் தீட்டிற்று. நாட்கள் பல சென்றன; நாடு ஆதரிக்கத் தொடங்கிற்று; காமராஜர் கடைசி நாளன்று, ஒரு அறிக்கை விட்டார், திட்டம் கைவிடப்பட்டது இப்படி ஒரு "சரித்திரம்’ தேடினார் காமராஜர். கிடைக்கவில்லை, தம்பி கிடைக்கவில்லை. ஒன்றுக்கு இரண்டாக அறிக்கை வெளியிட்டார்! ஓடோடி வேலை செய்தனர், திட்டத்தை நிறுத்த, கூட்டணியை உடைக்க, ஒட்டை ஒடிசலை உண்டாக்க முடியவில்லை. காமராஜரின் ராஜ தந்திரம், எல்லோரையும் பலிபீடத்துக்கு அழைத்துச் செல்லாது என்பது விளக்கமாகிவிட்டது. மகத்தான வெற்றி என்பேன் இதனை; ஏனெனில், காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அரசியலில், சபலத்துக்கு இடமளித்து விட்டு, குறிக்கோள் நிறைவேற ஒரு தனி கட்சி வைத்துக் கொண்டிருப்பது, இயலாத காரியம், அரசியல் அறவுமாகாது. காமராஜர்மீது பகை கக்கவே, இந்த முயற்சி என்று சிலர் காதல் பேசுகின்றனர். காதல் கடிமணமாக மாறுவதை நான் வரவேற்கிறேன். அது வெறும் "கண்ணடி, கைப்பிடி, கடிதவீச்சு, அவசர அணைப்பு’’ என்ற முறையில் இருப்பதில், சுவை இருக்கலாம், பயன் இல்லை. காமராஜர், தமிழரின் நலனைக் காப்பாற்றக் கூடியவர், அவர் ஆட்சியில் ஏழை எளியவர் காப்பாற்றப்படுவர்; எவர் உரிமையும் பறிபோகாது; இனமும் தன்மானமும் தழைத்திடும் என்பதிலே உள்ளம் நிறைந்த நம்பிக்கை ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அவருடைய கரத்தையும் வலுவடையச் செய்யலாம், நம் கருத்தையும் புகுத்தி வெற்றி காணலாம் என்று கருதிக் கூடிக்கொள்பவர்களை நான் பின்பற்ற முடியாது என்றாலும், அவர்களின் நேர்மைக்கும் நெஞ்சு உரத்துக்கும் மரியாதை காட்டத் தயங்கமாட்டேன். எனக்கென்று ஒரு கட்சியும் கொடியும் உண்டு, வேண்டும். அதற்கான கொள்கையும் திட்டமும் உண்டு, வேண்டும். காங்கிரஸ் கட்சி, இந்த என் கொள்கை, குறிக்கோள், திட்டம், கட்சி ஆகியவற்றுக்கு விரோதி, துரோகி. ஆகவே நான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை, முடியாது. ஆனாலும் நான் காமராஜரை ஆதரிப்பேன்; அவர் முதல் மந்திரியாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவேன்; காங்கிரஸ் மேஜாரிடியாக வந்தால்தான் அவர் முதல் மந்திரியாக முடியும், ஆகவே காங்கிரஸ்காரர் தேர்தலில் ஜெயிக்க முழு மூச்சாகப் பாடுபடுவேன், காங்கிரசை எதிர்த்து, அதன் மூலமாகக் காமராஜருக்குச் சங்கடம் விளைவிக்கத் துணிபவர்களைக் கண்ட துண்டமாக்குவேன், இதனாலே, நான் காங்கிரசில் சேர்ந்துவிட்டேன் என்று எண்ணாதீர்கள், எனக்கென்று ஒரு தனிக் கட்சி உண்டு, கொடி உண்டு, கொள்கை உண்டு, காங்கிரஸ் என் விரோதிதான், நாட்டுக்குத் துரோகிதான்!! - என்று வாதாடும் போதுதான், தம்பி! எனக்கு மயக்கம் வருகிறது. இத்தனைக்கும் காமராஜரைப் பெரியார் படம் பிடித்துக் காட்டியிருப்பதைப் பார்க்கும் போது, காமராஜர் ஏதோ "தூய்மையான ஒரு தேவன்’ என்று எனக்குத் தோன்றவில்லை. ஆச்சாரியாரையும் காமராஜரையும் ஒப்பிட்டுப் பெரியாரின் "விடுதலை’யில் எழுதப்பட்டிருக்கிறது; "இருவரில் கழகத்தை ஒழிப்பதில், கழகக் கொள்கைகளை எதிர்ப்பதில், பார்ப்பனீயத்தை வளர்ப்பதில், வடநாட்டானுக்குக் கங்காணி வேலை செய்வதில், நேருவுக்கு வெண்சாமரம் வீசுவதில், ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரல்ல!!’’ தம்பி! படப்பிடிப்பு பார்த்தனையா! திராவிடர் கழகத் தோழர்களிடம் காட்டிவிடாதே, அவர்களின் கண்கள் கொப்பளிக்கும். கழகத்தை ஒழிப்பவர் கழகக் கொள்கைகளை எதிர்ப்பவர் பார்ப்பனீயத்தை வளர்ப்பவர் வடநாட்டானுக்குக் கங்காணி நேருவுக்கு வெண்சாமரம் வீசுபவர்! இது, காமராஜர், பெரியார் படப்பிடிப்பின்படி. காமராஜர் எதிர்க்கப்பட்டால், என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பெரியார் கூறுவானேன்? சுந்தரவடிவேலு ராஜரத்தின முதலியார் அப்பாத்துரைப் பிள்ளை என்று ஏதோ ஒரு பட்டியலைக் காட்டிவிடுவதால், பார்ப்பனீய வளர்ப்பு கங்காணி வேலை வெண்சாமரம் வீசுவது கழகத்தை ஒழிப்பது ஆகியவை யாவும் இனிப் "பஞ்சாமிருதம்’ ஆகிவிடுமா! கோழைகள்! துரோகிகள்!! - என்றெல்லாம் வெளுத்து வாங்குகிறார், காமராஜர் கூட்டணியை. மலை குலைந்தாலும் மனம் குலையாத மன்னன் - இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே, துளியாவது "சட்டை’ செய்தாரா-என்று காமராஜர் பற்றிப் புகழ் பாடினோர், இப்போது கண்களை அகலத் திறந்தபடி, என்ன இவர் இவ்வளவு கிலிகொண்டு குளறுகிறாரே! - என்று கேட்பர், அப்படி, ஆர்ப்பரித்திருக்கிறார் காமராஜர் - கல்லூரிக் கூட்டமொன்றில். என்னைப் பொறுத்தமட்டிலே, தம்பி! எனக்கு இந்தக் காமராஜர்தான் புரிகிறது!! ஏனெனில், இதுதான் உண்மைக் காமராஜர், நாம் சந்தித்தாக வேண்டிய காமராஜர். மெத்தச் சிரமப்பட்டு அவர், தம்முடைய இயல்பை மறைத்து வைத்திருந்தார் - மயங்கிக் கிடந்தனர் நமது தோழர்களிலேயே சிலர்! இப்போது உண்மைக் காமராஜர், லயோலா கல்லூரி உறுமல் மூலம் தெரிகிறார்; நம்மவர், நல்லவர் என்று சொந்தம் கொண்டாடும் தோழர்களின் மயக்கம் தெளிய இது உதவும் - இன்னும் இரண்டோர் "கர்ஜனைகள்’ தேவை- அவசரமாகத் தேவை! தேனி நடத்துவதும், தெருச் சண்டையும், சிண்டுமுடிந்து விடுவதும், சீட்டு எழுதி அனுப்புவதும், கட்டை விரலை வெட்டுவேன், நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் கண்டபடி பேசுவதும், முறைகளாகக் கொண்டு தலைவரானவர், எவ்வளவு நாட்களுக்கு நாசுக்குப் பூச்சும் நளினமான பேச்சும் கொண்டு மறைந்து வாழ முடியும்? உண்மைக் காமராஜர் லயோலா கல்லூரியில் தெரிகிறார். கோழைகள் - என்று நம்மை ஏசிவிடுவதாலேயே, இவர் வீராதி வீரர் என்று ஆகிவிடாது - மெத்தக் கோபம் வந்து விட்டது என்பதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்தப் பேச்சின் மூலம் இருக்காதா, தம்பி! அறிக்கை விட்டுக் கிளர்ச்சிகளை நிறுத்திவிடும் அலாவுதீன் என்றல்லவா இவருக்கு வடக்கே கீர்த்தி இருந்து வந்தது. அது போய்விட்டதல்லவா, அதனால் பாபம், அவருக்கு எரிச்சல், குடைச்சல்; அந்தக் குடைச்சலால் குளறுகிறார். அர்த்தால், இம்முறையில், உண்மைக் காமராஜர் வெளியே தெரியச் செய்தது குறித்து, நான் மகிழ்கிறேன். ஏனெனில், சீறும் சிறுத்தைகளைவிட நயவஞ்சக நரிகள்தான், அரசியலுக்குப் பேராபத்து. தம்பி! நாம் சில கொள்கைகளைக் கொண்டவர்கள் - எனவே கோணல் வழி போகக்கூடாதவர்கள் என்ற உணர்வு நமக்கு உயிரூட்டம் அளிக்கிறது. அந்த உயிரூட்டம்தான் சர்வ கட்சிக் கூட்டணியில் சேர்ந்து நாம் நமது "பங்கினைச் செலுத்துவதற்கான திறத்தை நமக்கு அளித்தது. இதிலே கிடைத்த வெற்றிக்காகக் குருதி கொட்டிய தோழர்களின் "நாமத்தை’ப் பூஜிக்கிறேன். அவர்கட்கு என் வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன். கஷ்டநஷ்டமேற்ற நண்பர்கட்கு, என் மரியாதை கலந்த வணக்கம் செலுத்துகிறேன். கண்ணியத்தை நாம் கடைப்பிடிக்கவும், காரியமாற்றும் திறனைப் பெறவும் நமக்குப் பேருதவி அளித்த கூட்டணித் தோழர்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொள்கிறேன். அரியதோர் வெற்றி கிடைத்திருக்கிறது. இது நமது ஆற்றல் வளரவும், ஆர்வம் பொங்கவும் மட்டுமல்ல, தம்பி! அடக்க உணர்ச்சியை நாம் பெறவும், அறநெறியில் அசையாத நம்பிக்கை கொள்ளவும் உதவுமாக. வாழ்க கூட்டணி! வளர்க வெற்றி! அன்புள்ள அண்ணாதுரை 11-3-1956 கிளிக்குப் பச்சை பூசுவதா? தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் - தமிழ் மொழியின் இனிமை. தம்பி, எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை, சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர். நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; "அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் - நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்’’ என்றேன் - கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர். அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம் செல்லுமிடம் எது? கூறும் என்றேன், குறும்புக்காக. அன்று என்னவோ ஒருவிதமான மகிழ்ச்சி. மாநில மாநாட்டுக்காக நல்லதோர் திடல் கிடைக்க இருக்கிறது, அதற்கான "உத்தரவு’ பெற, மாவட்டக் கலெக்டரைத் துறையூர் சென்று காணப் புறப்படுகிறேன் என்று நண்பர் அன்பில் தர்மலிங்கம், அப்போது தான் கூறிவிட்டுச் சென்றார், அதனால் ஏற்பட்ட குதூகலம் என்று எண்ணுகிறேன். நண்பர் நடராசன், பதில் ஏதும் கூறவில்லை - வழக்கமாக அவரிடம் வெளிப்படுமே ஒருவிதமான வெறிச்சென்ற பார்வை, அதனைச் செலுத்தினார். நான் விடவில்லை. "சொல்லுமய்யா, சூலூரிலிருந்து புறப்பட்டு வருகிறோம், பிறகு . . . . ’’ என்றேன். அவர் பதிலளிக்காதது மட்டுமல்ல, என்னிடமிருந்தே அதற்கான பதிலை எதிர்பார்த்தார். சூலூரிலிருந்து (கருவிலிருந்து) புறப்பட்டு, பாலூர் (அன்னையின் அன்புப் பாலூட்டப் பெறுகிறோம்) செல்லுகிறோம், பிறகு முறைப்படி வளர்ந்து வளர்ந்து, வேலையூர் (தொழில் செய்தல்) செல்கிறோம், அங்குப் பக்குவம் பெற்ற பிறகு சேலையூர் (திருமணம்) சென்று இன்புறுகிறோம், பிறகு வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டுக் கடைசியில் சுடலையூர் சென்று அமைதி பெறுகிறோம் - என்று நான் கூறினேன். "என்ன அண்ணா! பெரிய தத்துவம் பேச ஆரம்பித்து விட்டீர்கள் - வேதாந்தம் பேசுகிறீர் - என்று நடராசன் கேட்டார். கருவிலிருந்து கிளம்பி கல்லறைவரை நடத்தும் பயணத்தையும், அந்தப் பயணத்தில் பொதிந்துள்ள தத்துவத்தையும் விளக்கவே, நான் சூலூரிலிருந்து நாமனைவரும் புறப்பட்டுச் சுடலையூர் பயணமாகிறோம் என்று சொன்னதாக அவர் எண்ணிக் கொண்டார். ஆனால் தம்பி, நான் வேதாந்த விசாரத்தில் அப்போது மூழ்கியுமில்லை; நான் பேசினதும் தத்துவம் அல்ல; இலக்கணத்தில் மனம் செலுத்திக் கொண்டிருந்தேன். சூலூர் பாலூர் வேலையூர் சேலையூர் வசதியூர் சுடலையூர் இப்படி "ஓசை’ நயம், கற்பனை செய்து கொண்டிருந்தேன் - காரணம், நமது கழக வளர்ச்சி கண்டு அகத்தில் குடைச்சலும் முகத்தில் கடுகடுப்புங் கொண்ட யாரோ ஒருவர், தமிழில் அடுக்கு மொழி பேசிப் பேசி மக்களை மயக்கிவிடுகிறீர்கள், அப்பாவி மக்களும் ஓசை நயத்தில் மயங்கி உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறார்கள், அதனாலேயே உங்களால், கூட்டம் சேர்த்திட முடிகிறது என்று ஏளனம் பேசினாராம், அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட தம்பி ஒருவர், ‘"அண்ணா! இவ்வித மெல்லாம் பேசுகிறார்கள்’’ என்று கூறிக் குறைபட்டுக் கொண்டார்; அதனால் என் மனம், அடுக்கு மொழி, இரட்டைக் கிளவி, எதுகை மோனை ஆகியவற்றின் எழில், பயன் மீது சென்றது; அதே நேரத்தில் சூலூர் எனும் இடத்திலிருந்து வருகிறேன் என்று நண்பர் நடராசன் கூறினார்; உடனே, சூலூர் பாலூர் வேலையூர் சேலையூர் வசதியூர் சுடலையூர் என்றெல்லாம் பேசலானேன். ஓசை நயம் தேடுவதும் தருவதும் குற்றமல்ல, இசைக் கலையே ஓசை நயத்தைத் தரப்படுத்தித் தரப்படுவதுதானே! ஆனால் சிலர், ஓசை நயம் என்பது ஏதோ ஓர் இழுக்கான செயல் போலவும், அதன் பயனாக மாபெருங் கேடு மனித இனத்துக்கு ஏற்படுவது போலவும் பேசுவர். ஆராய்ந்து பார்த்தால், அவர்தம் போக்குக்குக் காரணம் கோபம் என்பதும் அந்தக் கோபத்துக்குக் காரணம் கவலை என்பதும், கவலைக்குக் காரணம் அவர்கள் ஓசை நயம் காட்ட முயன்று ஏற்பட்ட தோல்வி என்பதும் விளங்கிவிடும். வீட்டிலே, சின்னத் தம்பி இருந்தால், அவன் எதிரில், குழல் கொண்டு இசை எழுப்பிப் பார் - சிறுவன் சிரித்து மகிழ்வான், சிட்டுப் போலே பறப்பான், எனக்கு எனக்கு என்று கொஞ்சுவான், கொடுத்தால், ஊதிப் பார்ப்பான், ஓசை நயம் கிடைக்காது, ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு ஓசைக் கொலையாகும், தோல்வி கண்டு துயருற்று, கோபமுற்று, ஊது குழலை ஓங்கிப் பூமியில் அறைவான். மொழியில் ஓசை நயம் பெறவும் காட்டவும் முயன்று, முடியாததால் கவலை கொள்பவர்கள், கோபம் கொண்டு, தமக்குத் துணைவர மறுக்கும் ஓசைநயம், பிறரிடம் பேரன்பு காட்டுவது கண்டு பெருங் கோபம் கொண்டு, ஓசை நயம் என்பதே தவறானது, தீதானது என்று தூற்றத் தொடங்குவர். காதல் கைகூடாவிடத்துத் தென்றல் தேள்கடியாகும், நிலவு தீயாகச் சுடும், மலரே முள்போல் தைக்கும் என்கிறார்களல்லவா! காதல் மட்டுமல்ல, எது கைகூடாவிட்டாலும் கடுப்பு ஏற்படுவதும், அந்தக் கடுப்புக்குக் காரணமாகக் கடுங் கோபம் மூள்வதும், அதன் விளைவாகக் கடுஞ் சொற்கள் கிளம்புவதும் நிரம்பக் காண்கிறோம். அந்த முறையில்தான், தமிழின் இனிமையை ஓசை நயத்தின் வழியாகக் காட்ட முயன்று தோற்பவர்கள், அந்த முறையில் வெற்றி கண்டோரைக் காணும் போது கொதிப்புற்றுச் சுடு சொல் வீசுகின்றனர். தம்பி, சம்பத்திடம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வேடிக்கைக்காகக் கேட்டாராம். “என்னடா சம்பத்து, உங்கள் அண்ணாத்துரை, அடுக்குமொழி பேசுகிறான். எதற்காக? அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா? சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி”ஜிலேபி’ யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா? அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுபடுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான்?’’ என்று கேட்டாராம். சம்பத்து “சரிதானய்யா,”ஜிலேபி’ யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன? உங்கள் சீனியும் பருப்பும், “ஜிலேபி’ வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது?’’ என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து,”பொல்லாத பயல்! போக்கிரிப் பயல்!’ என்று செல்லம் பொழிந்தார். ஓசை நயம் குறித்து நம்மீது குறை கூறுவோர், நம்மைக் குறை கூற இதுவரையில் ஓராயிரம் காரணங்களைச் சிரமப்பட்டுத் தேடித் தேடி அலுத்தவர்கள் - ஒவ்வொன்றும் கிளம்பும் வேகத்தைவிட அதிக வேகமாக மடிந்தொழியக் கண்டு மன வேதனையுற்றவர்கள். எனவே அவர்கள், மொழியை நாம் கையாளும் வகை பற்றிக் குறை கூறிப் பேசுவது குறித்து நாம் கவலைகொள்வதற்கில்லை. குழலும் யாழும் குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடா என்று கூறினவர் வள்ளுவர், அடா! அடா? காது குடைகிறது, ஏன்தான், இதுகள் கழுதை போலக் கத்துகின்றன, கோட்டான் போலக் கூவுகின்றன என்று குழந்தைகளைப் பேணி வளர்ப்பதில் பொறுமையும் திறமையும் அறியாதவர்கள் அலறக் கேட்கிறோம்; கவலையா கொள்கிறோம்; இல்லை, இல்லை, கைகொட்டிச் சிரிக்கிறோம். முரசொலி, வீரர்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது, வீணில் உண்டு கொழுத்து இருப்போருக்கோ! ஐயோ முரசு அறைகிறார்களே, போரல்லவா மூளும் போலிருக்கிறது என்று திகில் பிறக்கிறது. எனவே, அவர்கள் முரசு முழங்கிடும் போது அதிலே ஓசை நயம் காண்பதில்லை. சதங்கைச் சத்தம் கேட்டதும், சாலைக்கும் சோலைக்கும் அதற்குள் பல நூறுதடவை நடந்து நடந்து அலுத்துப் போய்ச் சலித்துக் கொண்டுள்ள காதலன், புன்னகை கொள்கிறான், காதவருகிற ôள், ஓசை நயம் அதனைத்தான் அறிவிக்கிறது என்று. காதலிக்குப் பதிலாக வேறோர் காரிகை அங்கு வந்து, தந்தை தடுத்து விட்டார், தத்தை இன்று வரமாட்டாள் - என்ற செய்தியை அளித்தால், ஓசை நயத்தின் விருந்துண்டவனே வேம்பு தின்றவனாகிறானல்லவா! ஆலயமணியோசை, ஆலைச் சங்கொலி, சோலைக் குயிலின் கூவல், காலையில் காகம் கரைதல், கன்று தாயை அழைத்தல் ஓசை நயம் ஒவ்வொன்றில் ஒவ்வொருவருக்கு, அவரவர் இயல்புக்குத் தக்கபடி கிடைக்கத்தான் செய்கிறது. எனவே "ஓசை நயம்’ என்பது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதேபோது. . . . அதோ பார் குகை அங்கு முடிப்பேன் என் பகை அறிவாயோ, என்னிடம் தோற்றவர் தொகை ஆயிரம் உண்டு போர் வகை!! குகை - பகை - தொகை - வகை மேலும்கூடக் கூட்டிக் கொள்ளலாம், சிகை, நகை என்றெல்லாம். ஓசைநயம் தமிழில் நிரம்பக் கிடைக்கும் - ஆனால் அதை மட்டுமே நம்பி, "நடை’ காட்டினால், சிறிது நாட்களில், தமிழின் இனிமைபற்றி அனைவரும் இன்று ஏற்றுக் கொண்டிருக் கிறார்களே, அதற்கேகூட ஊனம் வந்து விடும். ஓசை நயம் - அடுக்குத் தொடர் - இரட்டைக் கிளவி - போன்றவைகள், பூங்காவிலுள்ள கவின் மலர்கள் போன்றவை! தாமாக மலர வேண்டும் - மணமுள்ளவைகளைப் பதமாகப் பறித்துப் பக்குவமாக மாலை தொடுக்க வேண்டும் - அப்போதுதான் கவர்ச்சி கிடைக்கும். ஓசை நயத்தை எப்படியும் பெற்றுத் தீர வேண்டும் என்று முயற்சித்தாலோ, காது குடைச்சல் ஏற்படுவது மட்டுமல்ல, மொழிக்கு ஏற்பட்டுள்ள பெருமதிப்பும் குன்றும், குறையும். கழுதூர் பழுதூர் தொழுதூர் வழுதூர் தம்பி, இந்தப் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாயா? ஓசை நயத்துக்காகவே வேண்டுமென்றே இட்டுக்கட்டியது போலல்லவா தோன்றுகிறது? குகை பகை தொகை வகை என்று தேடிப் பிடித்திழுத்து, கூட்டிக் கலக்கித் தருவது போலவே வழுதூர், தொழுதூர், கழுதூர், பழுதூர், கற்பனைக் கலவை என்றுதான் எண்ணிக்கொள்வாய்; ஆனால், உண்மை யிலேயே இந்தப் பெயர்கள் கொண்ட ஊர்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அனைத்தையும் ஒருசேரக் கூறும்போது குகை, பகை, தொகை, வகைபோல, வேண்டுமென்றே ஓசை நயத்துக்காகவே கூறப்படுபவை போலத் தோன்றும். ஓசை நயத்தில் இயல்பாகவே அமைந்து, பொருள் செறிந்து, பொலிவு தருபவையே தேவை. பொருளற்று, பொலிவற்று வலிந்து கொண்டு வருவது, மொழிக்கு நாமே நம்மையும் அறியாமல் செய்துவிடும் தீங்காகும். ஓசை நயம் உயர்தரமாகவும், இயற்கைக்கு முற்றிலும் பொருந்திய தன்மையிலும் அமைந்துள்ள காப்பியங்களும் பாக்களும், தமிழ் மொழியில் உள்ள அளவு, பிற மொழிகளிலே உண்டா என்பது சந்தேகமே. . மொழி வளமுள்ளதாகவும் நெடுங் காலமாகப் புலவர் பெருமக்களால் வளர்க்கப்பட்டதாகவும் இருந்தால் மட்டுமே, சுவையும் பொருளும் ஒருசேரத் தரவல்ல ஓசை நயம் - அடுக்குத் தொடர் ஆகியவை கிடைக்கும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நமக்கு அந்தச் செல்வம் நிரம்ப இருக்கிறது. கண்டறிவதும் கொள்வதும் எளிது; கொண்டதைப் பொருள் உணர்ந்து தருவது கடினம்; எனினும் இயலாததன்று. எப்படியும் “ஓசை நயம்’ தந்தாக வேண்டும் என்ற”மன அரிப்பை‘ச் சிறிதளவு அடக்கிக்கொண்டால் போதும், உயர்தரமான, "ஓசை நயம்’ கிடைக்கும். என்ன அண்ணா! தமிழாசிரியர் "வேலை’யைத் துவக்கி விட்டாயே என்று கேட்கிறாயா, தம்பி! அடுக்கு மொழியாலும், ஓசை நயம் காட்டியும், மக்களை மயக்கி அவர்களை ஆகாத வழியெலாம் அழைத்துச் சென்று ஆன்றோரும் சான்றோரும் அமைத்தளித்த அறநெறியை, அருள் நெறியைக் கெடுத்தொழிக்கிறோம் என்றோர் பழி படர்ந்திருக் கிறதல்லவா, நம்மீது; அது பற்றிய "விளக்கம்’ விரும்பினார் ஒரு தம்பி! அவருக்குக் கூறுவதை உனக்கும் காட்டுவோமே என்ற எண்ணத்தில் இதை எழுதினேன். கலை சிலை வலை நிலை உலை மலை தலை இலை இவை, சிறு சிறு மாற்றங்கள் செய்து விட்டால், காலை மாலை என்று புதுவடிவம் மட்டுமல்ல, பொருளே மாறி விடுகின்றன! மிகக் குறைந்த அளவு எழுத்தில் மாற்றங்கள் செய்து, முற்றிலும் வேறான பொருள் பெறத்தக்க வகையில், தமிழ் மொழி, அழகுற அமைந்திருப்பதைக் காணும் போது, நமக்கெல்லாம் பெருமையே பிறக்கிறது. ஆனால், இவைகளை ஒரே இடத்திலே கூட்டி வைத்துக் காட்டியாக வேண்டுமென்ற "மன அரிப்பு’ ஏற்பட்டுக் கலை வலை என்பார், சிலைக்கும், உலைக்கும், மலைக்கும், தலைக்கும், இலைக்கும் ஓலைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் உள்ளவர்கள் என்று ஒரு தொடர் கட்டிக் காட்டி, இதிலே கலை, சிலை, வலை, நிலை, உலை, மலை, தலை, இலை, ஓலை, அத்தனையையும் அடைத்துக் காட்டி இருக்கிறேன், எப்படி என் திறம்? என்று கேட்பது மொழிக்குத்தான் பெருமை தருகிறதா, அதைக் கையாள்வோருக்குத்தான் பெருமை தருமா? நாம், ஓசைநயம் காட்டி, அடுக்கு மொழி பேசி, மயக்கி விடுகிறோம், என்று குறை கூறுவோரில் பலர், ஓசை நயமும் அடுக்கு மொழியும் இவர்களுக்குத்தானா, எமக்கும் எளிதுதான் என்று கூறி, வேட்டையாடி, நான் இப்போது காட்டிய "தொடர்’ போன்றவைகளைக் சுட்டிக் காட்டுகிறார்கள்; விலைபோகாதது கண்டு கோபமும் கொள்கிறார்கள். துடுக்குத்தனமாக அடுக்குமொழி பேசுவோரை மடக்குவதற்கு வெடுக்கு மொழி பேசி முடுக்குடன் நான் வந்தால் தடுக்கும் பேர்வழி யார்? நமது "அடுக்கு மொழி’யைக் கண்டிக்கத் துடுக்கும் அடுக்கும், மடக்கும் வெடுக்கும், முடுக்கும் தடுக்கும் சரமாரியாகக் கிளம்புகின்றன. எல்லாம் குறி தவறி விடுகின்றன, கூரும் மழுங்கிப் போகின்றன. "அடுக்கு மொழி’ ஆகாது என்பதாலோ, அது தவறு என்பதாலோ அல்ல, பிறர் அது குறித்து, நம்மைக் கண்டித்துப் பேசுவது. அடுக்குமொழி பேசவேண்டும் என்பதுதான் அவர் கட்கும் உள்ள ஆவல்; ஆனால் அது சுவைபடவும் பொருள் தரவுமான முறையில் நம்மிடம் இருப்பது கண்டு, இது இவர்களிடம் இருக்கிறதே என்ற எரிச்சலில் பழம் புளிக்கிறது என்கிறார்கள்! வேறொன்றுமில்லை. அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும், நாம் மொழியின் அழகு விளங்கிடும் வகையான அடுக்குமொழியின் ஓசை நயத்தினை விட்டு விடவும் தேவையில்லை; ஓசை நயமும் அடுக்கு மொழியும் இருந்தால் மொழி அழகு பெறும் என்பதற்காகவே, தேடித் திரிந்து கூட்டில் அடைத்து வைத்து அழகு பார்க்கவுந் தேவையில்லை. இருளைக் கீறிக் கொண்டு செல்லும் போதுதான், மின் மினியே அழகளிக்கிறது; மின்மினி ஒளிதருவது கண்டு, அதனைக் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து வைத்து, அழகு காண முயற்சித்தல் சரியல்ல. ஓசை நயம் தமிழ் மொழிக்கு மட்டுமே நிரம்பவும் நேர்த்தியுடனும் இருக்கிறது என்பதற்காகவே, அம் மொழி வேறெல்லா மொழிகளையும்விட உயர்ந்தது என்று மார்தட்டத் தேவையுமில்லை; அது அழகுமாகாது. இருபத்து ஆறு எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கில மொழி இன்று, உலக அரங்கம் எங்கணும் உயர்வு பெற்றுத் திகழ்கிறது; மறப்பது கூடாது. கா மா வா தா போ பா பூ தை வை கை தீ ஈ நீ சீ தூ இப்படி ஒரே எழுத்துக்கூடத் தமிழ் மொழியில் பொருளளிக்கும் திறம் பெற்றுத் திகழக் காண்கிறோம்; எனினும் இதனை வேண்டுமென்ற ஒரு கூட்டுக்குள் பிடித்திழுத்துப் போட்டுக் காட்ட "நடை’ தேடுவது நல்லதல்ல; அதாவது அளவும் முறையும், தேவையும் அறிந்து பயன்படுத்தினால், எழிலும் சுவையும் நிரம்பக் கிடைக்கும்; தவறினால் எரிச்சல் கிளம்பும். ஏளனம் பிறக்கும். முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது - பார். வானக் குரிசில் வள்ளலாய் - வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய் வழங்கு மாறும் புறப்பட்டே - புனல் முழங்கு மாறும் தலைப்பட்டே தானக் களிறு படிந்திடக் - கொலை ஏனக் களிறு மடிந்திடத் தழையின் ஆரம் உந்தியும் - பசும் கரையின் ஆரம் சிந்தியும் கானக் குளவி அலையவே - மது பானக் குளவி கலையவே முக்கூடற்பள்ளு தரும் ஓசை நயம் இங்ஙனம் அமைந்திருக்கிறது. எனவே ஓசை நயம் எற்றுக்கு என்று கேட்போர் பற்றி நாம் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் முறையற்ற ஓசை நயம் கூடாது என்ற எண்ணம் நமக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும், இல்லை என்றால், பள்ளாம் பள்ளு தள்ளு தூரத் தள்ளு என்று "விளையாட’த் தோன்றும் - துவக்கத்தில் அது விலை போகவும் செய்யும். பிறகோ மொழியின் அழகுக்கு நாமே ஊறு செய்கிறோம் என்ற உணர்வு வந்து தாக்கும். “கூட்டுப் புருவம்’ சில குமரிகளுக்கு இருந்திடக் கண்டிருப்பாய் - புருவமே இப்போது அருமையாக மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாக இருக்கிறது - எனவே”கூட்டுப் புருவம்’ நிரம்பக் கிடைத்திடாது; ஆனால் அது இயற்கையாக அமைந்தாலோ அந்த அணங்குக்கு அது தனியானதோர் அணியாகவே விளங்கிடும் - ஆனால் அதனைக் கண்டு, சரி, சரி, கூட்டுப் புருவம் அழகளிக்கிறது, எனவே இரு புருவங்களையும் மை கொண்டு இணைத்து, கூட்டுப் புருவம் ஆக்கிக் காட்டுவோம் என்று செய்தால் தூரத்துப் பார்வைக்கு அழகளிக்கக் கூடச் செய்யும். அருகே செல்லச் செல்ல, "மைவண்ணம்’, காண்போம், கண்டு, இவ்வளவுதானா! என்போம்; ஏளனம் கூடச் செய்யத் தோன்றும், நமக்கு ஏற்படுவதைவிட அதிகச் சங்கடம் கூட்டுப் புருவம் தீட்டிக் கொண்ட குமரிக்கு ஏற்படும், வண்ணம் எப்போது கைபட்டுக் கலைந்து விடுகிறதோ என்ற அச்சம் குடையும். மொழியின் ஓசை நயம் குறித்தும், இதே கதிதான். தம்பி! சினிமாக்களில் ஒரு முறையைக் கையாளுகிறார்கள். அங்குக் கதைகட்டு ஏற்றவகையில் புருவங்கள் தேவைப் படுகின்றன! குனித்த புருவம், கூட்டுப் புருவம், நெரித்த புருவம், படர்ந்த புருவம், வில்லுப் புருவம் - இப்படிப் பலப்பல. நல்ல பெண்மணியின் புருவம் வில்போல் வளைந்து இருக்கும் - இருக்க வேண்டும். காதகிக்குப் புருவம் அரவம்போல அச்சமூட்டுவதாக அமைதல் வேண்டும். அப்படி அங்கு ஒரு முறை!! எந்த ஏந்திழையிடம் இத்தனை புருவங்கள் கிடைக்க முடியும். எனவே அங்கு முதலில், ஏந்திழையின் இயற்கைப் புருவத்தை எடுத்து விடுகிறார்கள், வழித்தெடுத்து விடுகிறார்கள் - இயற்கை பறிக்கப்பட்டான பிறகு, எழில் காட்டும் கலைஞன் தன் இச்சைக்கு ஏற்ப, புருவங்கள் அமைக்கிறான் - காதளவு வளர்ந்த கண்ணினை என்னென்பேன், காமன் தன் கருப்புவில் போன்ற புருவத்தைக் கண்டேன்’ அதன் அழகை எவ்வாறு, கூறுவேன் என்றெல்லாம் பிறகு திரைக் காதலன் பாடம் படிக்கிறான். கொட்டகைக் கோமான்கள் குதூகலமடை கிறார்கள். ஆனால் உண்மையில் இயற்கையாக இருந்த "புருவம்’ பறிபோய் விட்டது, இரவல் புருவம் பிறர் காணும்போது எழில் காட்டும் வகையில் அமைக்கப்படுகிறது. தமிழ் மொழியிலும், தம்பி, அதற்கென்று இயற்கையாக அமைந்துள்ள, எழில் முறைகளைக் களைந்தெறிந்துவிட்டு, பிறமொழிச் சொற்களையும் முறைகளையும் கலந்து புதிய எழில் காட்டுகிறோம் என்று கூறுவாருளர். சினிமாக்களுக்குச் சிதைத்தலும், சேர்த்தலும், கூட்டலும், குறைத்தலும், மறைத்தலும் மிகுத்தளித்தலும் தேவைப்படுகிறது; அந்த உலகத்து இலக்கணம் அது; குறை கூறுவதற்கில்லை; ஆனால், மொழித் துறையில் இந்த துறையைப் புகுத்தி, உள்ள எழிலை உருக் குலையச் செய்து, பாழ்படுத்துவது அடாத செயலாகும். ஆனால் "மேதை’கள் பலர், பிற மொழிச் சேர்க்கையும், பிற முறைகளின் சேர்க்கையும், தமிழ் மொழியை வளமாக்கும் என்று காரணம் காட்டி, இந்தத் தீய செயலைச் செய்து வருகின்றனர். இதனை அறிந்து, தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பணியாற்றும் நம்மாலேயே கூட, (சற்று அதிகமாகவே என்னால்!) பிறமொழிச் சேர்க்கையையும் பிற முறைகளின் சேர்க்கையையும் நீக்கிப் பேசவும் எழுதவும் முடியாமலாகி விட்டிருக்கிறது - ஏனெனில், நாம் தூய தனித் தமிழ் சித்திரவதை செய்யப்பட்டுப் பிறமொழியும் பிற முறையும் கலந்து பேச்சும் எழுத்தும் “மணிப் பிரவாளம்’ என்ற வடிவு கொண்டு, தமிழும் வடமொழியும் குழைத்து வழங்கப்பட்ட நாட்களில் பயின்றவர்கள். எனினும், புலவர் பெருமக்களின் அறிவுரை கேட்டதால், இந்தக்”கலவை’ தீது பயப்பது என்று தெரிந்து, தமிழ் மொழிக்கு மீண்டும் தனியானதோர் ஏற்றம் தேவை என்ற தூய நோக்குடன் பணியாற்றி வருகிறோம். எனவே, நம்மாலே முற்றிலும் "தனித் தமிழ்’ எழிலைக் காட்ட இயலவில்லை. நானே, பல தடவைகளில், பேசியான பிறகும், எழுதியான பிறகும். இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கலாமே - தவறிவிட்டோமே என்று எண்ணி வருத்தமுறுவதுண்டு. எனினும், தம்பி, எங்கள் மூலம் நீ இவ்வளவுதான் பெறலாம் - அதிகம் எதிர்பார்க்காதே - ஆனால் உன்னாலே முடியும் இந்தக் குறைகளையும் களைய - நாடு உன்னிடம் நிச்சயமாக அதிகம் எதிர்பார்க்கிறது. ஆரிய மதக் கற்பனைகளுக்கு நிரம்ப இடமளித்து விட்டதால், தமிழ் மொழிக்குரிய இயல்பு எத்துணை கெட்டொழிந்தது என்பதளை அறிய, வேறெந்தத் துறையினையும் விட "உவமை’ கூறுகிறோமே, அந்தத் துறையினைப் பார்த்தால், மிக மிக விளக்கமாகத் தெரிந்து விடும். சனியனே! உயிரை வாங்காதே. எமன் போல வந்து தொலைத்தான். பெரிய அரிச்சந்திரன்தான், வாயை மூடடா! துர்வாசர் போலச் சீறுகிறான். போதும், போய்ப் படுத்துத் தூங்கடா, அனுமாரே! துரோபதை போலக் கதறுகிறாள். கலியுக பீமசேனன் என்று அவனுக்குப் பெயர். ஆசாமி, அர்ஜுனன் தான்! அவள் ரம்பையேதான். அமிர்தம் போல இனிப்பான பானம். குபேர பட்டினம் போலக் காட்சி அளித்தது. நிரம்பப் பேசுகிறோம், இதுபோல மேடைகளிலும், வீடுகளிலும், பழமை விரும்பிகள் மட்டுமல்ல, நாம் கூட. கொல்லிமலைப் பாவை! என்று கூற நமக்கும் தோன்றுவ தில்லை; கூறிடின் புரிந்துகொள்வோரும் புலவர் அவையிலே மட்டுமே கிடைப்பர்; மக்கள் மன்றம் மறந்தேவிட்டது. கொல்லிமலையில் ஓர் சித்திரப் பாவை செதுக்கப்பட்டிருந்ததாம். அத்துணை எழிலாம், அப்பாவைக்கு. தொலைவிலிருந்து காண்போர், அழகால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்வராம், காண்பராம், உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்பராம், நிற்பராம், அந்த அழகு அவர்தம் உயிர் குடித்திடும் வரையில் நிற்பராம். மயக்கி மாய்த்திடும் பொலிவு, கொல்லிமலைப் பாவைக்கு! ஆனால், நாம் இதனை "உவமைக்கு’க் கையாண்டதுண்டோ? இல்லை; ஏன்? நமது எண்ணத்திலேயே, பிறமொழிக் கருத்துக் கலக்கப்பட்டு விட்டதால், அழகு பற்றியோ, அதனால் வந்துறும் அவதிபற்றியோ எடுத்துரைக்க நினைக்கும் போதெல்லாம் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இவர்களே நமது நாவில் நின்றுவிடுகிறார்கள். தமிழ் மொழியில் காணக் கிடக்கும் கொல்லிமலைப் பாவையை மறந்தே விட்டோம். இயற்கைப் புருவத்தை எடுத்தான பிறகு, கூட்டுப் புருவம், மிரட்டும் புருவம், எல்லாம் அமைத்துக் கொள்கிறோம். எனவேதான், தம்பி! தமிழ் மொழியில் காணக் கிடைக்கும், “ஓசை நயம்’ போன்ற எந்த எழிலையும் இழந்துவிடக் கூடாது என்று கூறிவருகிறோம்; அதேபோது, அந்த எழில் வேண்டும் என்பதற்காகவே,”இட்டுக் கட்டியும்’ "இழுத்துக் குழைத்தும்’ தரக்குறைவு ஏற்பட்டு விடும்படியும் செய்துவிடக் கூடாது என்கிறோம். தமிழ், எழிலும் பயனும் அளித்திடும் இன் மொழியாகத் திகழ்வதன் பொருட்டு முந்தை நாளில் புலவர் பெருமக்கள் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகள் பலப்பல. செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன் நாஉழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர செவியில் பொல்லாத சொற்களே புகுவதில்லை செவிகளின் வழி பாய்வது சான்றோர் செய்யுட்களாம்! நாவினையே ஏராகக் கொண்டு புலவர் உழுதுண்டனர். அவர்தம் மொழிகள் பழங்கதைகளாக இல்லை; புது மொழிகள் தந்தனர் - அவைதமை மக்கள் கொள்ளைகொண்டு உண்டனர். இத்துணைச் சிறப்புடன் புலவரும் அவர்தம் உழவின் பலனை உண்டு களித்த மக்களும் வாழ்ந்திருந்ததனால், நாம் இன்று ஓர் உயர்தனிச் செம்மொழிக்கு உரிமையாளரானோம். உலகிலே எத்துணையோ தேயங்கள், இத்தகு மொழி பெற்றோமில்லையே என்று வாடிக் கிடந்திடுவதனையும், பிறமொழிகளின் துணையினைத் தேடி அலைவதனையும் காண்கிறோம். கள்ளக் கடத்தலைக் குறித்திட "இந்தி’யில் சொல்லொன்று கிடைக்காது திகைத்தனர் ஆட்சியாளர் என்றோர் செய்தி, கண்டோமல்லவா சின்னாட்களுக்கு முன்பு. இயலாமையை இந்த அளவுக்குப் பெற்றுக் கிடக்கும் "இந்தி’ மொழிக்கு ஏற்றம் கிடைக்கிறது; தமிழ் இனத்துதித்தோரில் சிலர் அம்மொழி எம்மொழி என்றும் பேசிடக் கேட்கிறோம். கருத்தினை விளக்கிட எழுத்து ஒன்று போதும், ஈரெழுத்து மட்டும் போதும் பொருளளிக்க, சிறு சிறு எழுத்து மாற்றங்கள் மூலமே, பொருள் மாற்றம் பெரிதும் காட்டிட இயலும், அதனையும் அழகுபட, ஓசை நயத்துடன் எடுத்துக் கூற முடியும் என்ற இத்துணைச் சிறப்புடன் தமிழ்மொழி இருந்திடக் காண்கிறோம், எனினும் அதற்கென்று ஓர் தனி இடம், உயரிய இடம், உரிமையான இடம், பெற்றளிக்கும் திறனுமற்றுக் கிடக்கிறோம். கானவன் யானைமீது வீசிய கவண்கல் வேங்கையின் பூவைச் சிதறி, ஆசினிமென்பழத்தை உதிர்த்து, தேனின் இறாலைத் துளைப்படுத்தி, மாவின் குலையை உழக்கி, வாழையின் மடலைக் கிழித்து, பலாவின் பழத்துட் சென்று தங்கும். குறிஞ்சிக் காட்சியினைக் கூறுகிறார் புலவர். இவ்வளவுதானே, உமது புலவர் பெருமகனாரால் கூற முடிகிறது; இதோ கேளும் எமது புராணீகர் கூறுவதை, எம் பெருமான் ஸ்ரீராமச்சந்திரருடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய "அஸ்திர’மானது புயற்காற்றெனக் கிளம்பிச் சென்று, இராவணன் மார்பைத் துளைத்து, உயிரைக்குடித்து, அவன் உள்ளத்தில் எங்கெங்கும், சீதாதேவி மீது காமக் கருத்து இருக்கிறது என்று தேடிப்பார்ப்பது போல உள்ளத்தைச் சல்லடையாகத் துளைத்து, பிறகு காரியம் வெற்றிகரமாக முடித்தான களிப்புடன், கடலிற் சென்று குளித்துக் கறை போக்கிக் கொண்டு, மீண்டும் பறந்து வந்து காகுத்தன் அம்பறாத் தூணியில் சேர்ந்தது, என்கிறார் நம்பெருமாள் ஜயங்கார்! மொழி, வரிவடிவத்தால் மட்டுமல்ல, மொழி மூலம் தரப் படும் கருத்துக்களின் வகை மூலம், ஒன்றுக்கொன்று எவ்வளவு மாறுபட்டன என்பது, குறிஞ்சியைக் காட்டிய நந்தமிழ்ப் புலவர் தரும் பாவுடன், இராமனின் வீரத்தை விளக்கிடப் புராணீகன் தரும் ஆரியத்தினை ஒப்பிட்டுப் பார்த்தாலே விளங்கிவிடும். புராணீகனின் கருத்தினை மறுத்திடாமல், ஆய்ந்து பாராமல், ஏற்றுக் கொள்வதாயினும், இராமனுடைய “தெய்வீகம்’ வேண்டுமானால் விளங்குமே தவிர, பா நயமோ, இயற்கை உண்மையின் அழகோ அதிலே துளியும் கிடைக்காது. இராமனுடைய”அஸ்திரம்’ மட்டுமே புராணீகன் சொன்னபடி செய்ய முடியும்! குறிஞ்சி குறித்துப் பாடிய புலவன் காட்டும் கவண்கல் இருக்கிறதே தம்பி, அது நீயும் நானும், எடுத்து வீசினாலும், செய்யுளிலே காட்டப்படும் செயலைத்தான் முறைப்படி செய்யும்; அவ்வளவு இயற்கையோடு ஒட்டியதாகக் கருத்தினைத் தந்துள்ளார் புலவர். பெரிதும், கண்டகாட்சிகளைக் காண்பதால் ஏற்படும் கருத்துடன் இணைத்துத் தருவதற்கே பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பினர். காடுகளையும் கானாறுகளையும், ஓடைகளையும் அவை தமில் துள்ளும் மீன்களையும், குவளையையும் தாழையையும், யானையையும் பெடையையும், செங்கால் நாரையையும் கருங்குயிலையும், கடுவனையும் மந்தியையும், உதிர்ந்த பூக்களையும் உலர்ந்த தருக்களையும், பாய்ந்தோடும் அருவிகளையும் பட்டுப்போன மொட்டுக்களையும் காணும் போதெல்லாம் அவர்கட்குக் கருத்து ஊற்றெடுத்திருக்கிறது, அத்துணைக் கருத்தும், உண்மையோடு ஒட்டியவையாக, கேட்போர் மறுக்கொணா வகையினதாக, கேட்டு இன்புறத் தக்கதாக அமைகின்றன. இந்தச் சிறப்பு புலவர் தேடித் தந்தது; புராணிகன் தேடித் தருவது அஃதன்று. கானவன் கவண் வீசுகிறான் தம்பி! துவக்கத்திலேயே, புலவர் கானவனைக் கவண் வீசச் சொல்கிறார், ஏனெனில் வீச வேண்டிய முறைப்படி அதற்கேற்ற பயிற்சிபெற்ற நிலையிலுள்ளவன் வீசினாலல்லவா, கவண்கல் செய்ய வேண்டியதைச் செம்மையுறச் செய்யும். தாக்க வந்தவனை, ஆட்டுக் குட்டியைத் தூக்கி எறிவது போல எறிந்தான் - என்ற கருத்தை அளிக்க முற்பட்டால் மல்லன் என்ற சொல்லைக் கோத்தாக வேண்டுமல்லவா, ஏனெனில் மல்லன் செய்யக் கூடிய காரியமல்லவா, அது; அது போலத்தான், யானைமீது வீசவேண்டும் கல்லினை - எனவே புலவர், கானவனைத்தான் காட்டுகிறார். கானவன், கவண்கல் வீசுகிறான் யானைமீது! புராணீகனுடைய கல் அல்ல அது; எனவே யானை சாக வில்லை, மிரண்டோடி விட்டது; வீசப்பட்ட கல்லோ வேங்கை மரத்தின் மீது உராய்ந்து செல்கிறது. வேகமாகச் செல்வதால், பூத்துக் கிடக்கும் பூ சிதறுகிறது. கல் சென்று கொண்டிருக்கிறது, ஆசினிப் பழத்தை உதிர்க்கிறது, தேன் அடை துளைக்கப் படுகிறது, மாவின் குலை தாக்கப்படுகிறது, வாழை மடலைக் கிழிக்கிறது, இறுதியாகப் பலாப் பழத்துட் சென்று தங்கி விடுகிறது. கல் செல்லும் வழியெலாம் ஒரு முறை கருத்தைச் செலுத்திப் பார் தம்பி, சுவையுள்ள இடம் சேருவாய், கல்லே, சுவை மிகும் பலாப் பழத்தை அல்லவா சென்று சேருகிறது. வீசப்பட்ட கல்லின் வேகம், படிப்படியாகக் குறையும், வேகம் குறையக் குறைய, அதன் செயல்படும் வலிவும் குறையும் என்ற உண்மையை, யானைமீது வீசப்பட்ட கல், வேங்கை மரத்துப் பூக்களைச் சிதறச் செய்து, ஆசினிப் பழத்தை உதிரச் செய்து, தேன் அடையைத் துளைத்து, வாழை மடலைக் கிழித்து, இறுதியில் பலாவிடம் அடைக்கலம் புகுந்து விடுவதாகக் கூறி விளக்கும் அழகினைப் பார். யானை மீதே கல் பட்டிருந்தால், கல் பிறகு யானை மீது மோதுண்ட காரணத்தால், மேலால் செல்லாது, கீழே "தடும்’ என விழும்; பிறகு வேங்கையும், ஆசினியும், மாவும், பிறவும், புலவர்தம் பாவினிலே வரத் தேவை ஏற்பட்டிராது. வேங்கையின் மலர், ஆசினிப் பழம் இவற்றினைச் சிதறவும் விழவும் செய்தாரே தவிர, இதற்குள் கல்லின் வேகம் குறைந்து போயிருக்கும் என்ற இயற்கை உண்மையை உணர்ந்தவராதலால், மாங்குலையின் மீது கல் பட்டபோது, உலுக்கி விடும் அளவுக்கும், பிறகு வேகத்தால் கிடைக்கும் வலிவு கல்லுக்குக் குறைந்து விடுவதால், வாழை மடலைக் கிழித்திட மட்டுமே இயலுமாகையால், அதனை மட்டும் கூறி, வேங்கை உயரத்துக்கு வேகமாக மேலெழும்பிய கவண்கல், பிறகு ஆசினி, மா, வாழை என்ற அளவுக்குக் கீழே இறங்கி, கடைசியில் பலாவில் சென்று தங்குகிறது - பழம், எனவே, கல் புக முடிந்தது; பலாப்பழம் எனவே அதற்குள்ளேயே ஒட்டிக்கொண்டு விட்டது என்றார். தம்பி! இவ்வளவு இயற்கையோடிணைந்ததாகக் கவிதை தருகிறார்; செய்யுட் சுவையுடன் கூடவே நெந்தமிழ் நாட்டு வளம் தெரிந்திடச் செய்கிறார். யானை உலவும் காடுகள்; அங்குத் துணிவுடன் உலவும் கானவர்; அவர்கள் கவண் வீசும் திறம்; ஓங்கி வளர்ந்த வேங்கை மரம்; கனிதரும் மாவும் வாழையும் பலாவும், கானகத்தில்! இவ்வளவு வளம் தமிழகத்தில்; குறிஞ்சிமட்டுமல்ல, எந்த நிலம் பற்றிப் பாடினாலும், இதே முறை - உண்மையை அழகுபட உரைத்திடுவது; இல்லை, தம்பி, உண்மையை உரைக்கிறார், அதிலே அழகு தவழ்ந்து வருகிறது! இந்தத் “தமிழ்’ இனிமை பெற,”இரவல்’ எற்றுக்குப் பெற வேண்டும்? புள்ளிக் கலாபம் படைத்த மயிலுக்கு, வான்கோழிச் சிறகாலான தோகை தரவேண்டுமா?! கிளி அழகு பெற, அதற்குப் பச்சை வண்ணம் பூச வேண்டுமா? கேட்க வேண்டாம் தம்பி! கோபிப்பர்! எண்ணிப் பார், அது போதும்!! அன்புள்ள அண்ணாதுரை 18-3-1956 எங்கள் பெரியார் அரசனும் அமைச்சரும் - கதை - இராதாவின் நாடகம் - திராவிடக் கழகக் கிளர்ச்சியும் தி. மு. க. வும். தம்பி, ஆற்றலரசர்கள் காலம் முடிவுற்று, "அரசன் மகன் அரசன்’ என்ற நிலை பிறந்த பிறகு இருந்த ஒரு முடிதாங்கிக் காலத்துக் கதை கூறுகிறேன் - குடி அரசுக் காலத்து நிகழ்ச்சிக்கு விளக்கம் காணப் பயன்படுகிறது. காலையில் கண் விழித்த காவலன், அரண்மனை "மாடி‘யில் வந்து நின்றான், “அரச பாட்டையில்’ ஒருவன் அரண்மனையை அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்; அரசன் கண்களுக்கு வேறு விருந்து ஒன்றும் கிடைக்கவில்லை; சரி, என்று சலித்தபடி பார்த்துவிட்டு உள்ளே சென்றான்; செல்லும் போது,”வாசற்படித் தூலத்தில்’ தலை மோதிக் கொண்டது, இரத்தம் கசிந்தது. அப்பப்பா! என்று அரசன் அலறினான்; களம் கண்ட காவலனல்லவே, வளை ஓடிந்ததாலும், பல் படிந்ததாலும் மட்டுமே ஏற்படும் வடுக்களைக் கண்டவன். எனவே, தலையில் அடிபட்டதும், துடியாய்த் துடித்தான். அரசனல்லவா? எனவே, "அப்பப்பா’வைக் கேட்டதும், ஆட்கள் ஓடோடி வந்தார்கள். மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள், அமைச்சருக்கு ஆள் அனுப்பப்பட்டது. அவனுடைய வேட்டைக்குச் சிக்கி, சேட்டைக்குப் பலியான மாதரசிகள்கூட, என்னவோ ஏதோ என்று பதைத்தனர்; கசிந்த குருதியைத் துடைத்தபடி காவலன், “சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப் பலன் ஏற்பட்டது!’’ என்று முணுமுணுத்தான். அமைச்சர் கேட்டார்,”அரசே! எந்தச் சனியன்? யார் முகத்தில் விழித்தீர்கள்? என்ன கூறுகிறீர்கள்?’’ என்று. அமைச்சர் அறிவார், அப்படி ஒன்றும் அவலட்சணங்கள் அரண்மனையில் கிடையாது என்பதை - அவலட்சணத்தை அணிபணி, பூச்சு ஆகியவற்றால் மறைத்திடும் திறமையுள்ளோரே மன்னனுக்கு மனோகரிகளாக இருந்தனர். "காலையில் எழுந்ததும், அமைச்சரே! மாடியில் நின்றேன், வீதியில் ஒரு சனியன் சென்று கொண்டிருந்தான். அவன் முகத்தில்தான் விழிக்க நேரிட்டது. கண நேரத்தில் இந்தக் கதி நேரிட்டது’’ என்றான் மன்னன். “அப்படியா! அப்படிப்பட்ட”சகுனத் தடை’ ஏன் இராஜபாட்டையில், அதிகாலையில் நடமாட அனுமதித்தார்கள், மடையர்கள்! இனி மன்னா! காலையில், மங்கள ஆரத்தியுடன் மாதர்கள், மலர்க்கூடைகள், பசு, இப்படிப்பட்ட "தரிசனம்’ தான் இருக்க வேண்டும், விடிந்ததும் - அதை இனிக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு’’ என்று ஆறுதலளித்தான் அமைச்சன். "எவ்வளவு மோசமான ஜென்மமாக இருக்க வேண்டும், அந்த மனிதன்; அவன் முகத்தில் விழித்ததும், இரத்தக் காயம் ஏற்பட்டதே, யார் அவன்?’’ என்று கேட்டான் மன்னன். "யாரடா அவன்? என்று முழக்கமிட்டார் அமைச்சர். மெய்ப் பாதுகாப்பாளனை நோக்கி. "ஏ! யார் அந்தச் சனியன்?’’ என்று போர் வீரனை நோக்கிக் கர்ஜித்தான் மெய்ப் பாதுகாப்பாளன். ஓடோடிச் சென்று "இராஜபாட்டை’யின் கோடியில் அசைந்து சென்று கொண்டிருந்தவனைப் பிடித்திழுத்து வந்தான் போர் வீரன். விசாரணை நடைபெற்றது - மன்னன் முன் அல்ல. தீர்ப்பு அளிக்கப்பட்டது அமைச்சரால். "மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மாபாவி முகத்தில் மன்னர் அதிகாலையில் விழிக்க நேரிட்டது என்பது நிரூபிக்கப் பட்டிருப்பதால், இவன் ஓர் சகுனத் தடை என்பது தெளிவாகி விட்டது. இத்தகையவன், அதிகாலையில் இராஜபாட்டையில் நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்.’’ மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன் மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க முற்றுக் கீழே விழவில்லை, ‘இடி இடி’ யெனச் சிரித்தான். அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம். பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள் தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர். "ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை துண்டிக்கப்படும், இன்று மாலை - புரிகிறதா?’’ என்று விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர். “புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது’’ என்று கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு,”மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த காரணத்தால். அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு, அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக் காரணம்?’’ என்று கேட்டான். “ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க நேரிட்டதால்’’ என்று அமைச்சர்”விவேகம்’ பேசினார். “விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம் இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில் மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டது அப்படிப்பட்ட”சனியன் பிடித்த முகம்’ எனக்கு. போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல் விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில் விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி. எத்தகைய “பாக்யம் அருளும்’ முகமய்யா அவருக்கு. அதி காலையில்”இராஜ தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல “யோகம்’ கிடைக்குமென்று ஒரு”ஞானி’ சொன்னார். அதனால்தான் அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும் விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன். இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது பூபதி. பார்த்தால் போதும், பிராணண் போகிறது. நான் சனியன் பீடை தன்னைப் பார்த்ததால் மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது - இரத்தம் கசிந்தது, அவருடைய முக தரிசனம் கண்ட எனக்கோ, மரண தண்டனை கிடைக்கிறது’’ என்று கூறிச் சிரித்தானாம். தம்பி, நாம் கூட இருப்பதால் மாற்றுக் குறைகிறது, ஆற்றல் குன்றுகிறது, தூய்மை கெடுகிறது, ஏனெனில், நாம் சுயநலவாதிகள், வயிற்றுப் பிழைப்புக்காகவே பொது வாழ்வில் இருப்பவர்கள், சூதர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நாம் ஒழிந்தால் மட்டுமே உண்மைக்கும் உயர்வுக்கும், தீரத்துக்கும் தியாகத்துக்கும், அதிதீவிர திட்டத்துக்கும் அபார வெற்றிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். வயலில் களை போல் இருக்கிறோம், எனவே நாம் ஒழிந்தது மிக மிக நல்லதாகப் போய் விட்டது. இனி, தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும், எவரும் கண்டிராத, கேட்டிராத, மகத்தான பலன்கள் கிடைக்கத்தக்க, மயிர்க் கூச்செறியும் போராட்டங்களும், மாபெரும் வெற்றிகளும் கிடைத்து விடும். பொறுக்கி எடுக்கப்பட்ட மணிகள், புடம் போட்ட தங்கக் கட்டிகள், கொள்கை தவிர வேறேதும் அறியாத கோமான்கள், கீறிய கோட்டினைத் தாண்டாத கடமை வீரர்கள் ஏன் என்று கேட்காத ஏந்தல்கள், எப்படி என்றுகூட எண்ணிடாத சுத்த வீரர்கள், இவர்கள் மட்டுமே இப்போது பாசறையில் இருக்கிறார்கள் என்றனர் பூரிப்புடன். நமது கூட்டுறவு கேடு பயப்பது, காட்டு வெள்ளத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் வீரர்கட்கு நாம் வேண்டாத சுமையாக, கால் கட்டாக இருந்து வந்தோம், வெளியே ஓடி விடுகிறோம், அதனால் இனி “சொரி சிறங்கு! நீங்கிய உடலோன் போல தி. க.”தேஜோன்மயமாக’ விளங்கப் போகிறது. தொட்டால் போதும், பட்டமரம் துளிர்க்கும், பார்வை பட்டால் போதும், பனையில் பலாச்சுளை தொங்கும்’ என்றெல்லாம் "ஆரூடம்’ பேசினர். தம்பி, இப்போது தி. க. “பத்துப் பாட்டு பாடுகிறது - அவர்கள் பத்து மாபெரும் காரியங்களில் ஈடுபட்டார்களாம், நாம் அவர்களுடன் சேரவில்லையாம் - பாவிகாள், இப்படி எங்களைக் கைவிட்டது நியாயமா? களத்திலே நாங்கள் இறங்கிக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கைகொடுத் தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா - என்னென்று புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே! இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள், இந்தப் பாவிகள் செய்த பாதகச் செயல்கள் - என்று பட்டியல் கொடுக்கிறது தி. க. ஏன்? பத்துக் காரியங்களையும் துவக்கிய போது, தமது பாசறையில் போதுமான”சரக்கு’ இல்லை என்பதும், துவக்கிவிட்டு, ஒவ்வொன்றும் துவண்டு போகக் கண்டு துடியாய்த் துடித்ததும், இப்போது மெள்ள மெள்ளத் தெரிகிறது என்றுதானே பொருள். நடிகவேள் இராதாவின் “இழந்த காதல்’ பார்த்திருக்கிறாயா தம்பி! நாம்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றபடி, நம்மை நையாண்டி செய்தாலும்,”நம்ம இராதா’ என்ற பாசத்தை விடாப்பிடியாகக் கொண்டவர்களாயிற்றே. ஆகவே, இராதாவின் நாடகத்தைக் காண்கிறோம், அடிக்கடி, "இழந்த காதல்! நாடகத்திலே ஒரு கட்டம்! வெறிக்கக் குடித்துவிட்டு, தலை கால் தெரியாமல் ஆடிக் கொண்டு வீட்டிக்குள் நுழைவார் ஜெகதீஸ். பத்மா, "கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று எண்ணும் பத்தினிப் பெண்! பயந்தபடி கணவனுக்குப் பணிவிடை புரிவாள். அந்தப் பணி விடைகளிலே ஒன்று, ஜெகதீசுக்குச் சிகரெட் கொடுத்து, அதைப் பற்றவைப்பது. இராதாவின் நடிப்பு அபாரமாக இருக்கும் இந்தக் கட்டத்தில். ஆனால் தம்பி, அது ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க உதவும் என்று நான் அப்போது எண்ணியதே இல்லை! “சிகரெட்’ எடுத்துப் பத்மா, ஜெகதீசன் கரத்திலே கொடுப்பாள் - அவனுக்குக் கால் பூமியில் பாவாது, கரம் ஒரு நிலையில் நிற்காது, கண்களோ”துறைமுகத்து’ விளக்குப் போலச் சுற்றும், சுழலும், ஒளிவிடும், குறையும். வாய் திறப்பான் கண்ணை மூடிக்கொண்டு - சிகரெட்டை வாயில் திணிப்பாள் - உதட்டுக்கும் சிகரெட்டுக்கும் சண்டை நடக்கும் - சிகரெட் ஒருவாறு வெற்றி பெறும் - தீக்குச்சி எடுத்துச் சிகரெட் பற்ற வைக்க பத்மா முயற்சிக்க வேண்டும் - ஒவ்வொரு தீக்குச்சியும் சிகரெட் அருகே செல்லும்போது அணைந்து போகும். குடிபோதை மிகுதியால் அவன் ஆடிக் கொண்டே இருப்பதும், மேஜைமீது இருக்கும் மின்சார விசிறிக் காற்று பலமாக இருப்பதும்தான் காரணம். அதைச் சொல்லக்கூடப் பயம் பத்மாவுக்கு, பத்துத் தீக்குச்சிகள் அணைந்து போகும், ஜெகதீசனுக்குக் கோபம் வரும். “ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய வில்லையா. . . . கழுதே’’ என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத் தடுக்க முயன்றபடி பத்மா,”தீக்குச்சி அணைந்து அணைந்து போகிறது’’ என்று கூறுவாள். "ஏனடி அணைகிறது?’’ என்று கேட்பான் ஜெகதீஸ். "விசிறி . . . . காற்று. . . . அதனால்’’ என்பாள், பத்மா. ஒரு கேலிச் சிரிப்புடன், ஜெகதீஸ், அவள் கரத்திலிருந்து தீப்பெட்டியைப் பறித்துக் கொண்டு, “விசிறினால் என்னடி, விசிறினால் என்ன? விசிறி இருக்கும்போது சிகரெட் பற்ற வைக்க முடியாதா? எவண்டி சொன்னது? இதோ பாரடி நான் கொளுத்துகிறேன் - பாரடி இப்போ, விசிறி இருந்தால் தீக்குச்சி அணைந்து விடுமாம் - எந்த”இடியட்’ சொன்னாண்டி அப்படி? நான் பற்றவைக்கிறேன் பாரடி. . . . இதோ பார் - நன்றாகக் காற்றடிக்கட்டும் - பலமாக அடிக்கட்டும் - இதோ பார் . . . ’’ என்று கூறுவான். தீக்குச்சி ஒவ்வொன்றும் அணைந்து கொண்டிருக்கும் - கொட்டகையில் சிரிப்பொலி கிளம்பும் - “இதோ பார், கொளுத்திக் காட்டுகிறேன்’’ - என்று மீண்டும் கூறியபடி, தீக்குச்சியைப் பாழாக்குவான், திடீரென்று,”சீ! சனியனே! விசிறியை நிறுத்தேண்டி, அதுதான் விசிறிக் காத்தாலே தீக்குச்சி அணையுதே - பார்த்துக் கொண்டே சும்மா நிற்கிறியே, சனியனே!’’ என்று கூறிக் கூச்சலிடுவான். கொட்டகையில் கையொலி இடி முழக்கம் போலாகும். தம்பி! விசிறிக் காற்று இருக்கும் போது, தீக்குச்சி கொண்டு சிகரட் பற்றவைக்க முடியவில்லை என்று பத்மா சொன்ன போதும் கோபிக்கிறான்; காற்று இருந்தால் என்ன, நான் பற்ற வைத்துக் காட்டுகிறேன் பார் என்று “சவால்’ விடுகிறான்; செய்ய முடியாமல் போனதும், கோபம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது, விசிறியை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டுப் பத்மாவை ஏசுகிறான். பரிதாபத்துக்குரிய பத்மாவுக்கு எதைச் செய்யும் போதும், எதைச் செய்யாமலிருக்கும் போதும் திட்டு, திட்டுதான் -”இழந்த காதல்’ நாடகத்தில். நாம் “பத்மா‘வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறது தி. க. தம்பி. தம்பி, அந்தமட்டும்தான் உவமை - அதை முழு அளவுக்கு நீட்டிச் சென்று, - “ஓஹோ! எங்களைக் குடிகாரன் என்றா கண்டிக்கிறாய், உன் தலையில் இடி விழ, இல்லையானால் சாப்பாட்டு இலையில் ஈயாவது விழ,’’ என்று”சாபம்’ கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம்,”பத்மா’ போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுவதுதான். பத்துப் போர்களில் நாம் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே, இன்று, அன்று நாம், யோசனை கூற அனுமதிக்கப்பட்டோமா, கலந்து பேசி, ஏதாவது ஒரு திட்டம் தீட்டப்பட்டதா? அவர்கள் அழைத்து, நாம் நிராகரித்தோமா? ஏ! அப்பா! இவ்வளவு பயங்கரமான போரில் ஈடுபட எம்மால் முடியுமா? இதற்குத் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம், எம்மிடம் ஏது என்று கூறிவிட்டா, கைகட்டி வாய்ப்பொத்தி நின்றோம். இல்லை. ஒவ்வொரு "போர்‘ப் பிரகடனம் வெளிப்பட்ட நேரத்திலும், நோக்கம், முறை, அமைப்பு எனும் மூன்று விஷயங்கள் குறித்த விளக்கமும், கலந்து பணியாற்றும் அழைப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இருந்து வந்தோம் - நம்மில் சிலர் ஏங்கிக் கிடந்ததுமுண்டு. “போர்’ அறிவிக்கப்பட்ட போது,”இதுகளை’ ஒரு கட்சி என்று மதித்து, அழைப்பு வேறு அனுப்ப வேண்டுமா! கால்தூசு! அறுந்து போன செருப்புகள்! ப்யூஸ் போன பல்புகள்! போக்கிடமத்ததுகள்! என்றெல்லாம் சாக்கடை மொழியில் ஏசிவிட்டு, பத்தும் விதவைக்கரு வேஓரத் தில் அழுகிக் கிடப்பது போலான பிறகு, பத்துப் போரிலும் ஈடுபடாத பாவிகள், பழிகாரர்கள் என்று தூற்றுவதா! இதென்ன நியாயம்? எவர் ஏற்பர் இதனை? தி. க. வின் போர்த் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரும் வேலையை, நாமாக, வலிய வலியச் சென்று, வசையையே விருந்தாகக் கருதி மேற்கொள்ள வேண்டுமாம். தம்பி மன்னன் ஆயிரம் மடங்கு மேல் என்பேன் அவனுக்காவது, மண்டையில் அடிபட்டது, நாமோ, நம்மால் இவர்களுக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி கெடலாமா, நாம் ஒதுங்கிக் கொள்வோம், நம் கூட்டுறவு இல்லாவிட்டால்தான், இவர்கள் எதிரிகளின் கோட்டைகளைத் தூளாக்குவர், கொடி மரத்தை வெட்டி வீழ்த்துவர் என்று கருதினோம் - பாதை திறந்து இருந்தது, எனினும், இப்போது, வெற்றி கிட்டாததால் ஏற்பட்ட வேதனை கோபத்தைக் கிளப்பிவிட, நாங்கள் துவக்கிய "பத்துக்’ கிளர்ச்சிகளிலே இவர்கள் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம் என்று பட்டியல் வெளியிடுகிறார்கள். இதைப் போன்ற வேடிக்கை - நான் துவக்கத்தில் சொன்ன கதை, ‘இழந்த காதல்’ நாடகம் இரண்டிலுமே கூடக் கிடைக்காது. தி.க.-வின் "பத்து’ அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து. நமக்கு அதிலே பங்கு கிடையாது - கேட்க நமக்கு உரிமையும் கிடையாது - வெற்றி தோல்விக்கு தி. க. தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - பிறர்மீது, உதவி செய்யவில்லை என்று பழி சுமத்துவது, தோல்வியை மூடி மறைக்கக்கூட உதவாது. எந்த முற்போக்கான கட்சியும், நாம் மேற் கொண்டுள்ள மூலாதாரக் கொள்கைக்கு ஊறு நேரிடாத வகையிலும், நமது கழகத் தன்மானத்துக்குக் கேடு சூழாத வகையிலும், எந்தப் போராட்டம் துவக்கி, அதிலே கலந்து பேசிக் காரியமாற்ற அழைத்தாலும், நாம் தயாராக இருக்கிறோம் என்பதை அடிக்கடி அறிவித்திருக்கிறோம் - இப்போதும் அறிவிக்கிறோம். எங்களால் முடியாவிட்டால்தானே, பிறரை - அழைக்க என்று வாதாடுவோருக்கு, நாம் மதிப்பளிக்கிறோம் - அவர்கள் பேச்சுக்கேற்ப வெற்றியும் பெற்றால், அவர்கட்கு வாழ்த்தும் வணக்கமும் கூறுகிறோம். இவர்களை மதித்து நாங்கள் அழைக்க வேண்டுமா? என்று கேட்பரேல், அரசியல் நாகரிகம் அல்ல அது என்று பணிவுடன் எடுத்துக் கூறுவோம். அழைப்பானேன், தாமாக வந்து கலந்து கொள்வதுதானே! என்று வாதாடுவரேல், தன்மானத்துக்கு அது அழகுமல்ல, தானாகத் தாவிக் குதித்து நாங்கள் போட்டிருந்த திட்டத்தை நாசமாக்கி விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஒரு சமயம் ஆளாக வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறுகிறோம். ஒருவர் தயவை, கூட்டுறவை, ஒத்துழைப்பை, எதிர்பாராமலேயே நாங்களே நடத்தி நாங்களே பெற்ற வெற்றி காணீர், இதிலே எவனும் பங்கு கேட்கக் கூடாது என்று கூறுவரேல், வேண்டாம் ஐயனே! முழுக் கீர்த்தியும் உமக்கே இருக்கட்டும், எமக்குப் பங்கு ஒரு துளியும் தரவேண்டாம் என்று கூறுகிறோம். ஆனால், போர் நோக்கம், முறை, அதற்கான அமைப்பு யாவும் எங்கள் இஷ்டம் போல்தான் இருக்கும். யாரையும் கலந்து பேசமாட்டோம், எவரையும் அழைக்க மாட்டோம், நாங்களே நடத்துவோம் மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப் பலமாகக் கண்டிப்போம், சாபம் கொடுப்போம், என்று ஒரு அரசியல் கட்சி கூறுகிறது என்றால், நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள், நமக்கென்ன என்று இருந்து விடுவதன் விளைவு இந்த விபரீதப் போக்கு என்று கூறுவதன்றி, வேறென்ன தம்பி கூறமுடியும்? எனினும், ஒரு விதத்திலே எனக்கு அந்தப் "பத்து’ பார்க்கும் போது அலாதியான மகிழ்ச்சி. பத்து வெற்றிகளைக் காட்டி, வீணர்காள்! நீங்களெல்லாம் பந்தாடிக் கொண்டும், பந்தியில் சுவைத்துக்கொண்டும் இருந்தீர்கள், நாங்கள் பள்ளமென்றும் மேடென்றும் பாராமல், பகலென்றும் இரவென்றும் கவனியாமல், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற எழுச்சியுடன், களத்திலே காற்றெனச் சுற்றிக் கடும் போரிட்டுப் பெற்றோம் பத்து வெற்றிகள், காணீர்! காணீர்! என்று கூறவில்லை. நாங்கள் பத்து விதமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டோம், அவைகளில் இவர்கள் சேரவில்லை என்று கூறுகிறார்கள்; கூறுவதன் மூலம் இவர்கள் சேராததால் நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தோம், வெற்றி கிட்டவில்லை என்று ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்! வேறென்ன? வஞ்சகி! கன்நெஞ்சக்காரி! ஏறெடுத்தும் பார்க்க மறுத்து விட்டாள் - என்றான் ஏமாந்த காதலன். நண்பன் கேட்டான், அவர்களுடைய காதலைப் பெற நீ எடுத்துக் கொண்ட முயற்சி என்ன என்று. நானா? கல் வீசினேன். காட்டேரி! மூளி! என்று ஏசினேன். அவள் பாதையில் படுகுழி வெட்டினேன். அவள் தோட்டத்து மலரை அழித்திட மந்தியை ஏவினேன். இவ்வளவு செய்தும் அவள் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். என்னென்பது அவளுடைய கன்நெஞ்சத்தை. காதகி! பாதகி! அவளைக் கண்டிக்க, ஊராரே! உலகோரே! ஒன்றுகூடுமின், உடனே எழுமின்! என்று கூறினால் எப்படி இருக்கும்! தி. க. நாம், "பத்து’க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம் காட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. அவர்களை அழைத்தீர்களா? இல்லை! அவர்கள் கருத்தறிந்து போர் வகுத்தீர்களா? இல்லை! அவர்களிடம் ஒரு துளி அன்பு காட்டினீர்களா? இல்லை! அவர்களை இழித்தும் பழித்துமாவது பேசாதிருந்தீர்களா? நாள் தவறாமல் ஏசி வந்தோம். இப்படி ‘வாதாடுகிறது’ நாம் நமது உழைப்பைக்கொட்டி ஆக்கி வைத்த தி. க. பத்மாதான் ஜெகதீசுக்கு வாழ்க்கைப்பட்டாள் - எனவே வதைபட்டாள். மரண தண்டனை பெற்றவன் மன்னன் ஆட்சியில் ஓர் குடிமகன். எனவே, அவன் அக்ரமத் தீர்ப்புக்கு ஆளாக நேரிட்டது. மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஏன் அவர்கள் அத்தகைய நிலைமைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்? நாம் விலகி வந்தவர்கள் - அவர்களும் நாம் விலகியான பிறகு, நம்மை விரட்டி விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள். நாம், வாழ்க்கைப்பட்டும் இல்லை; அந்த ஆட்சியில் குடி மக்களாகவும் இல்லை. நமக்கென்று ஓர் குடும்பம், ஓர் கொற்றம் அமைத்துக் கொண்டாகி விட்டது. எளிய குடும்பமாக இருக்கலாம், ஏழெட்டு இலட்சம் இல்லாமலிருக்கலாம். குறுநிலக் கொற்றமாக இருக்கலாம், குவலயத்தில் கீர்த்தி சாமான்யமானதாக இருக்கலாம். அளவும் தரமும் எப்படி இருப்பினும், நாம் அந்தக் குடும்பக் கட்டளைக்கோ, கொற்றத்துத் தீர்ப்புக்கோ அடங்கித் தீரவேண்டும் என்று பேசுவது எப்படி நியாயமாகும்? பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி வைக்கிறபடி ஆடவும் வேண்டும் என்று நாடகத்திலும் கூறார்களே! அதுபோலவே தி. க. வில் உள்ளவர்கள், பத்தோ பதினைந்தோ, தேவையோ அல்லவோ, தலைமை தரும் போர்த் திட்டங்களைத் தாங்கித் தமது பத்தினித்தனத்தையும் குரு பக்தியையும் காட்டித் தீர வேண்டியதுதான் முறை. நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏன் அந்த நினைப்பு வர வேண்டும்? அதிலேதான் தம்பி சூட்சமம் இருக்கிறது! அவர்கள் எவ்வளவுதான் நம்மை ஏசினாலும், ஏளனம் செய்தாலும், நமது வளர்ச்சியும் கட்டுப்பாட்டு உணர்ச்சியும், அவர்களையும் அறியாமல் நம்பால் ஈர்க்கிறது - ஈர்த்ததும், ஆஹா! இவர்கள் மட்டும் நாம் சொல்கிறபடி ஆடினால் . . . . என்று எண்ணம் பிறக்கிறது! அவ்வளவுதான்! அவர்களின் ஆசைக்காகப் பத்து அல்ல, இருபது போர் எனினும், நாம் ஈடுபடக்கூட முயற்சிக்கலாம். ஆனால், எந்த நேரத்தில், எந்த வகையில் போர் அமையும், நோக்கம் எதுவாக இருக்கும், முறை எப்படி இருக்கும், போர் எந்தெந்தக் கட்டம் செல்லும், எப்போது நின்று போகும், ஆகிய எது நமக்கோ, நாட்டுக்கோ புரிகிறது? தெரிகிறது? சொல்லேன் கேட்போம். மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ, "ஈயம்’ பேசுகிறார்கள் - ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்கள் - பார்ப்பனீயம் என்று பேசுவது, கோழைத்தனம், பார்ப்பனர்கள் - கள் ! அதுதான் எமக்குப் போர்த் திட்டம் - பார்ப்பனீயம் - ஈயம் அல்ல! என்று பேசுகிறார். "ஈயம்’ ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம், துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம் என்றெல்லாம் குத்துகிறார். நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க "ஜல்லடம்’ கட்டிக் கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக் கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக் கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம் இல்லையா? அல்லது காலம் சரியில்லையா? பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் - அதற்காக இதோ திட்டம், போர்த்துவக்கம் இன்ன நாளில், படைத் தளபதிகள் இன்னின்னார், களம் இன்னின்ன இடத்தில் என்று அறிவித்துவிட்டு, "ஜாம்ஜா‘மென்று நடத்த வேண்டியது தானே! காலமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பதுதானா! இதற்கு, “நாம்’ வேறு எதற்கு? அவர்களே போதுமே! நாளைக்கொரு தடவை குத்துவது, குடைவது - களிப்படைவது - இதுதான்”போர்’ என்றால், இதற்கு நாம் ஏன்? உண்மை என்ன தெரியுமா தம்பி! பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்பது "தீவிரத் திட்டம்’ புரட்சிகரமான திட்டம், பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும் என்பது சொத்தைத் திட்டம் என்று பேசி, அதனைச் சாக்காகக் கொண்டு நம்மை ஏசலாம். இது ஒரு நோக்கம். மற்றொன்று, பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும். அக்ரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் வீரதீரமாகப் போர் முழக்கம் செய்வார்கள் - அதற்காக அவர்களுக்கு அடிபணிந்துவிட்டு, நாம், பார்ப்பனர்கள் மீது பாய வேண்டும் - படவேண்டிய கஷ்டம் படவேண்டும் - பிறகு அவர்கள் பரிகாசம் பேசவும், பாவிகள் பலாத்காரத்தை அல்லவா தூண்டிவிட்டார்கள், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதன் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லையே, கெடுத்தே விட்டார்களே என்று பழி சுமத்தலாம். இது மற்றோர் நோக்கம். பார்ப்பனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று புரட்சி பேசுவது - பயங்கரமான சூழ்நிலை உருவாவதாகச் சித்தரிக்க வேண்டியது - தகுந்த சமயமாகப் பார்த்துக் காமராஜர் குறுக் கிட்டு, இதெல்லாம் வேண்டாம் என்பார். உங்கள் வார்த்தைக் காக வாளை உறையில் போடுகிறேன் என்று கூறி, அவருக்கு நேருவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவது. இது மற்றோர் நோக்கம். இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன், பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே இருக்க வேண்டும்? செயலுக்கு என்ன தடை? வீரதீரமாக நீங்கள் கிளம்பி, வெட்டிக் குவித்தோ, விரட்டி அடித்தோ பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டால், இருந்த இடம் தெரியாமல், ஈயம் பேசுவோர் ஓடி விடுகிறார்கள்! "ஈயம்’ பேசுகிறார்களே, ஈயம் பேசுகிறார்களே என்று எத்தளை நாளைக்குச் சாக்குக் கூறித் தப்பித்துக் கொள்வது! இந்த இலட்சணத்தில் இருக்கிறது திட்டம், இதிலே நாம் சேராதது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களாம்! இதிலாவது எத்தனை நாட்களுக்கு, ஒரே விதமான நிலையான கருத்து இருக்கும் என்று யார் கூறமுடியும்? இன்று, பார்ப்பனர்களை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் தி. க. வில் தம்பி, நீயும் நானும் இருந்தபோது வெறும் கொடி தூக்கியாகவோ, கும்பி நிரப்பிக் கொண்டோ அல்ல, “பெட்டிச் சாவியைக் கொடுக்க ஒரு தனி மாநாடு போடுகிறேன்’’ என்று பெரியார் திராவிடத்துக்கு அறிவித்திடும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க”இடம்’ பெற்று இருந்தபோது, பார்ப்பனீயம ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் திட்டம், பார்ப்பனர்களை ஒழிப்பது என்பது அல்ல! இன்றைய தி. க. வுக்கு எது "ஈயம்’ என்று ஏளனமாகப்படுகிறதோ, அதுதான், நாம் அங்கு இருந்தபோது, திட்டம். அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களே தவிர, அதற்குப் பிறகு, காரணம் காட்டப்படாமலும், நமது கருத்து அறியாமலும், அவர்களாக ஒரு திட்டம் - தீவிரமானதாக, தீ பறப்பதாக, கேட்போர் திடுக்கிடக்கூடியதாக இருக்கட்டும் என்பதற்காகத் தீட்டிக் கொண்டால் அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களா? அதன் முழுப் பொறுப்பும் இன்றைய தி. க. வுடையது, அதன் வெற்றிக்கு முழுமூச்சுடன் பிறரை ஏசாமல் வேறுயாரும் துணைக்கு வரவில்லையே என்பது பற்றிப் பொருட்படுத்தாமல் - பழி கூறாமல் - துவக்கி வெற்றி காண்பதுதான் முறை. அதை விட்டுவிட்டு இங்கே திரும்பிப் பார்ப்பது ஏன்? தி. க. வின் நினைப்புக்கும் நிலைக்கும் நாமும் பொறுப் பாளிகளாக இருந்த வரையில், பார்ப்பனீய ஒழிப்புத்தான் திட்டம் - நாம் இன்றும் அதைத்தான் திட்டமாகக் கொள்கிறோம். அது போதாது என்றால், இன்றைய தி. க. அதி தீவிரத் திட்டத்துக்குப் பயணமாகட்டும், நாமொன்றும் சுங்கச் சாவடி வைத்தில்லையே! நாமறிந்த தி. க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல் கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பார்ப் பனர்களை ஒழிப்பது அல்ல. தம்பி! இதோ கேள், பெரியாரின் பேரன்பர் ஒருவர் பேசுகிறார்: "தமிழ்த் தாத்தா அவர்களே! தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடக் கழகம் பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார் ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப் படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே, பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்’’ பேசுபவர், தம்பி! ஆர். ஹீனிவாசராகவன் எனும் பார்ப்பனர்! மூன்று வேடிக்கைகள் இதிலே காணலாம். பெரியார் இதில் தமிழ்த் தாத்தா - திராவிடத் தந்தை அல்ல! பிராமணர்கள் என்றுதான் வார்த்தை, பார்ப்பனர் என்ற வார்த்தைகூட உச்சரிக்கப்படவில்லை. இவ்வளவும், 6-1-53 "விடுதலை’யில் உள்ளது. எப்போதும் “விடுதலை’யில் பார்ப்பனர் பற்றி எழுதப்படும் போது பார்ப்பனர் என்றுதான் வார்த்தை இருக்கும். இந்த 6-1-53 பேச்சு மட்டும்”விடுதலை’யில் பார்ப்பனர் என்ற பதமே இராது - பிராமணர் என்றுதான் பதப்பிரயோகம் இருக்கும் - அவ்வளவு பவ்வியம் - அவ்வளவு நாகரிகம் - தேவைப்பட்டது. காரணம், பேசிய இடம் மயிலாப்பூர், இலட்சுமிபுரம் யுவர் சங்கம்! பெரியாரிடம் பவ்வியமாகப் பேசி, யாரோ பார்ப்பனர் ஏமாற்றுகிறார் என்று தோன்றும். தம்பி, பெரியார் பேச்சை நம்ப வேண்டுமல்லவா? சரி! 8-1-53 "விடுதலை’யைப் பார், புரியும். "எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்கள் பேசும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். அதாவது, யாரோ சில பிராமணர்கள் அவரை "பெரியார் இராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்’ என்று சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிட கழகமும் நானும் சொல்லுவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு, சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்களை வாழக்கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு, அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்; ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனது முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.’’ தம்பி! 1953-இல், பிராமணர்களை ஓட்டச் சொல்லவில்லை. அது ஆகிற காரியமுமல்ல. பிராமணர்களுக்கும் நமக்கும் என்ன பிரமாதமான பேதம்? என் முயற்சியில் பலாத்காரம் இருக்காது என்று பெரியார் பேசுகிறார் -அது "ஈயம்’ என்றா ஏளனப் பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும் பொருத்தமும் உள்ளது என்றால், திடீரென்று, பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதாது, பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று தாவுவதற்கு என்ன காரணம்? பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்று மில்லை என்று 1953-இல் கூறிவிட்டு 54, 55-இல் அக்ரகாரத்தைக் கொளுத்தவும் பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று கூறவேண்டிய விதமாக, பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம் என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற! 1953-இல் மட்டும்தானா அப்படி! இப்போதும் நான், தம்பி, கண்ணாரக் கண்டேன் - பெரியார், பார்ப்பனத் தலைவர்களிடம் எவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வளவு சாந்தமாய், சமரசமாய்ப் பேசுகிறார் என்பதையும் காதாரக் கேட்டேன். நாம் “ஈயம்’ பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம், அதுதான் நடக்கக்கூடிய நாணயமான நாகரிக முறை; அதை நாம் கையாள்கிறோம் என்பதால் வந்த எரிச்சலாலேயே தவிர, தி. க. பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பதாக, யாரும் எண்ணமாட்டார்கள். அப்படி உண்மையிலேயே ஒரு தீவிரமான புரட்சித் திட்டம் இருந்தால், நீயும் நானும் தம்பி! தடுக்கவா போகிறோம்! நடத்தட்டும்! நாடு மட்டுமல்ல, உலகே உண்மையில்”கிடுகிடுக்கும்’’ நாம், தம்பி! பார்ப்பனீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின் பாதையில் செல்வோம் - அதிலே தவறுமில்லை - துரோகமுமில்லை. ஈயம். . . . ஈயம். . . . என்று ஏளனம் கூறுவோர் கூறட்டும். . . . நாம் கூறுகிறோம், ஈயம் தந்தார் எங்கள் பெரியார். . . . அது ஏளனத்துக்கு உரியது என்று நாங்கள் எப்படிக் கருத முடியும்? உங்களிடம் உள்ள பெரியார் வேறு விதமான திட்டம் தந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் - பொது மேடைகளில் தனியாகப் பேசும்போதோ, பெரியாரை நான் அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று எக்காளமிடுகிறாராம் ஒரு இடம் பிடித்தான் - எப்படி இருப்பினும், அதை அவர்கள் நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக் கிளர்ச்சியிலும் சேரவில்லையே என்று எதற்காகப் பதைக்க வேண்டும்? அன்புள்ள அண்ணாதுரை 25-3-1956 அன்பில் அழைக்கிறார் திருச்சியில் மாநில மாநாடு தோழர்கள் திறமை தம்பி, மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, “ஓஹோ’ என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக் கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது? பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே”புதிய பிரச்சினை’ யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு. மாற்றார்களின் தோற்றம் - என்று இங்குக் குறிப்பிடப் படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக அமையும் பண பலம் படை பலம் இவை. இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம் பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக் காரர்களுக்கு, “பிரம்மாண்டமான’ வராகத்தான் தெரியும். காரணம், அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது கண்களுக்கு”பிரம்மாண்டமாக’த் தெரிகிறார்கள் என்று பவுஜாடே கூறுகிறார். அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு, காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் “இந்து’ பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி கூட ஏற்படும் - இந்த”இதழ்’ தரும் ஆதரவினால் வலிவு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற காரியமா. . . . ? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம் இருக்கிறது - “இந்து’ இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே”அறிவகம்‘. இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற பிரம்மாண்டமான "கோட்டைகளைத்’, துணையாகப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான் கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக் கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட மானவனல்ல! என்று கூறுகிறார். நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக மகிழ்ச்சியடைந்தேன் - ஏனெனில் என்னைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால் பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம் நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும் போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே "பிரம்மாண்ட’மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது! நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர் களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி கொள்கிறோமே, அதேபோது, கோட்டை போல நிலையங்களைக் கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல் வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல், எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத் தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள், பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும் அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின் பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி நிலையங்களிலே அவர்களின் வாடை!! களியாட்டக் கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!! எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி முடிகிறது இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில் ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள், எல்லா நாடுகளிலும் நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள், வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள் - இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை, தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம் கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே! விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது! நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர் சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல், பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில் கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் - மொத்தமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம் செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை சதுக்கத்திலும், வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க ! வாழ்கவே! என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது இவர்களால்? கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும் அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன் போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச் செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு கொண்டாடுகின்றன. நம்மிடம், ஆசை கொண்டேன் உந்தன் மேலே! மோசம் நான் செய்யமாட்டேன்! என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை பெற்றிருக்கிறோம், இவ்வளவு “பிரம்மாண்டமாக’ வளர்ந்து விட்டிருக்கிறோம், இந்தப்”பொடியன்கள்’ ஒரு வசதியுமற்ற வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே, எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர் ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும் மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம், எனவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல், நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் - நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக் கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும் வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்! காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள் ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை. எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற் பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக் காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை! நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில் ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது, விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும் தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே, கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே! ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக் கடலே! - என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும், இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற் செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின் தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே கேட்போம். அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து, “நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே! அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம் அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம் எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்! எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக் கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத் தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும், பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள் பல தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம் தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில், பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக் குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர் கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும் கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம் காண்பதெல்லாம் கடுகாகும் - இன்று காணக்கிடைக்கும் மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம், அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும் - என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித் தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி, நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர், கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும், பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும், பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய,”தொடை நடுங்கிக்’ கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு, உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம் என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம் தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம் நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி “போரிடும்’ வீரர் பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன் செங்குட்டுவனைப் பற்றிய”சேதி’யைத் தெரிந்து கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில் அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்! தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும் அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா திகிலூட்டும்! “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது - இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித் திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று, செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான்,”கள்ளத்தோணி’ என்றல்லவா ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க “அனுமதி’ கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட,”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!’’ என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில் செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா, கதற வேண்டி இருக்கிறது. நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம், வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா. பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் - இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம், வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக் கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர் கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி! குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர் விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள். . . . தெரிகிறதா . . . மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான் தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்! வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம், வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான். அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, "இந்திக்கு வந்தனை செய்திடுவோம், அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்’ என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம். முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும் அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான் வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா, தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே. ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை. . . . தன்னாட்சியின் உயர்வினை, எண்ணுந்தோறும். . . . என்று பேசி, என்னை உருக வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் - ஆனால், இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம் காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக் கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின் சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும். முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும் வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!! இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் - இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும், சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள் - குதூகலம் காணப் போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!’’ என்று வாழ்த்தி வரவேற்கிறது. அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!. . . . என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம். தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன் வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன் உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப் பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக் காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும். அன்பில் அழைப்பதும் அதற்குத்தான். "நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்’’ காண விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது, நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம். மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும் நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச் சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்! திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில் தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை. சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக் கிறோம் - முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம், எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல் மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க, இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும், இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப் பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும் சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர். எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச் சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை! சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும் மிகுதியாகவே இருக்கும். இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர், வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள். இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு! இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி, ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம் பெறப் பட்டபாடு கொஞ்சமல்ல. வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது - வெட்ட வெளியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில் இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும் குடைகிறது. பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று "சட்டம்’ இருக்கிறது! என் செய்வது! திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே வந்து விட்டது. கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவது என்று முடிவு செய்தோம் - அந்த வேளையில், கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில் அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும், அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் - எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற "குழு’ சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது - அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம். மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் - பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை. தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று - நீ காணும்போது, அங்கு ஒரு சிறிய - சீரிய எழிலூர் காணப்போகிறாய்! பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு. மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் - உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் - ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் - எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான். சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி அடைப்பு; வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச் செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும் இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும். இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக் கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும் கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும். தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க வேண்டும். உன்னாலா முடியாது!! எனக்கு இப்போது, "புற’ க் காட்சி அமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின் மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது. மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் - கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, “என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?’’ என்று எண்ணிக்கொண்டு,”இதுகள்’ இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் - சிலரையாவது. அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை. உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை, அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும் பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம் நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும் சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம் அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார். அன்புள்ள அண்ணாதுரை 1-4-1956 நாவலர் நம் கழகக் காவலர் ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை - திராவிடரின் மறம் - திருச்சியில் மாநாடு. தம்பி, ஒரு அலங்காரக் கூடம் - இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது - சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன - வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம் - பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் உள்ளன - ஒரு புறத்தில் "ராஜாஜி’ இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள். சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக் கொண்டிருக்கிறார் - பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்? சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். . . . சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது. சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே, வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும் துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும் இருந்தன்; அது முன்பு! இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்! சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள். "என்னடா. . . ’’ "கிடைக்கலிங்க. . . ’’ "மடையா. . . . கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா . . . . பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?’’ "பார்த்தேனுங்க. . . . . ஒரு கடையிலேகூட இல்லிங்க. . . . ’’ "படக்கடையிலே?’’ "இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி. . . . ’’ "என்ன சொன்னாரு?’’ "விழுந்து விழுந்து சிரிக்கிறாரு. . . . . அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு. . . . . ‘’பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே. . . .’’ "இல்லிங்க. . . . போசு படம் இருக்குதுங்க. . . . தாகூர் படம் கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க. . . . விவேகானந்தரு படம் கிடைக்குதுங்க. . . ’’ "வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர் படம் கிடைக்கல்லே. . . . ’’ "இல்லிங்களே. . . . ’’ என்னடா பெரிய இழவாப் போச்சு. . . . . இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே. . . . ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே’’ "இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க… கிடையாதுங்க. . . . ’’ "நாசமாப் போச்சி. . . ’’ "ஐயாமாரெல்லாம் வருகிறாங்க. . . . ’’ என்று கூறிக் கொண்டு கணக்கபிள்ளை உள்ளே நுழைகிறார்; சீமான் வேலையாளை வெளியே விரட்டி விட்டு முகத்தை மலரச் செய்து கொள்கிறார். உள்ளே கதராடைக் கனவான்கள் வருகிறார்கள். சீமான் : வாங்க ! வாங்க ! நமஸ்காரமுங்க. . . . நமஸ்காரம். . . . இப்படி இந்தச் சோபாவிலே. . ஒருவர் : நமஸ்தே ! நமஸ்தே! மற்றொருவர் : வந்தே மாதரம், மூன்றாமவர் : நீங்க உட்காருங்க. . . . சீமான் : பரவாயில்லிங்க . . . . நான்காமவர் : சிவ! சிவா! நீங்க நிற்கறது, நாங்களெல்லாம் உட்காருவதா, சேச்சேச்சே! உட்காருங்க . . . . சீமான் : ஆகட்டுங்க . . . . முதலாமவர் : (ஒருவரைக் காட்டி) இவர்தான். . . . சீமான் : இதென்னாங்க அறிமுகப்படுத்தவேணுமா! உலகமறிந்தவர் ஊராள்றவரு, அவரைத் தெரியாதவங்களும் உண்டா? நம்மைப்பத்திச் சொல்லுங்க அவருக்கு. முதலாமவர் : சொல்லித்தானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் - உங்களோட தயாள குணத்தையும், தர்ம சிந்தனையையும், காங்கிரஸ் பக்தியையும் கேள்விப்பட்ட பிறகு தான், அவர் தம்முடைய பல வேலைகளை விட்டுவிட்டு வந்தார். சீமான் : என் பாக்யம்னுதான் சொல்லோணும் . . . . பாருங்க, இங்கே ஒரு தொண்டன், இந்த மாதிரி ஆளுக வீட்டுக்கு எங்க தலைவரு வரவே மாட்டாருன்னு, கடை வீதியிலே பேசி விட்டிருக்கான் கண்டபடி, என்னைப் பத்தி, இல்லாததும் பொல்லாததுமாப் பேசினானுங்க. மற்றவர் : தள்ளுங்க குப்பையிலே . . . தடியடி பட்டேன். . . . ஜெயிலுக்குப் போனேன். . . . நான் தியாகி, தேச பக்தன், அப்படி இப்படின்னு சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம்னு பார்க்கிறவனுங்க அவனுங்களெல்லாம், அவனுங்க பேச்சை விட்டுத் தள்ளுங்கள். சீமான் : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை. ஒருவர் : சரி. . . . அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை. . . . சீமான் : சொல்லுங்கள் ஒருவர் : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும் வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி . . . சீமான் : ரொம்ப சந்தோஷமுங்க . . . . மற்றவர் : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ . . . . சீமான் : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா ? காணோமே . . . . ஒருவர் : அதல்ல. . . . . ஆவடி காங்கிரஸ் பற்றி . . . . சீமான் : அதுங்களா . . . . ஒவ்வொரு நாளும் வருதுங்க . . . . படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க . . . . மற்றவர் : செலவு ஏராளமா இருக்குது. . . . சீமான் : இதென்னங்க பிரமாதம் . . . . பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது . . . . மற்றவர் : அப்படிச் செய்யலாமா . . . . அதிகாரம் இருக்குன்னு வையுங்க . . . . எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான் . . . . ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க . . . . . அதனாலேதான், பணம் "தண்டி’ . . . . . பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி . . . . . உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு . . . . சீமான் : நீங்க ஒரு வேடிக்கை . . . . டாட்டாவும், பிர்லாவும் தரலாம் . . . . . நான் என்னங்க, தகரக் குவளை . . . . என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க . . . . மற்றவர் : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத் தெரியாதாம் . . . . . பிறர் சொன்னாத்தான் தெரியுமாம் . . . . கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட முடியும்னு. . . . ஜாம்பவான் சொன்னாராம் . . . . அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு . . . . தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது. . . . நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல. . . . உங்கள் யோக்யதைக்கும். . . . சீமான் : பிடிவாதம் செய்யாதிங்க . . . . பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப் போடாதிங்க. . . . இந்த வருஷம் ரொம்ப "டல்லு’ங்க . . . . வியாபாரம் சரியில்லை . . . . நம்ம ஆபீசருங்களும் புலியாப் பாயறாங்க . . . . மேலே விழுந்துக்கறாங்க . . . . எந்த மாதிரியா எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான் தெரியுது . . . . . நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன் . . . . . ஏதோ என் அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு . . . . ஒருவர் : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை . . . . சீமான் : சரிங்க… நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன். ஒருவர் : அதென்னங்க அஞ்சும் பிஞ்சும்…. சீமான் : உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு…. ஒருவர் : இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா…. இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டோம். அவர் : பரவாயில்லை… எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்…. பத்து கொடுக்கிற வங்க "லிஸ்டு’ ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது… அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை சீமான் : அப்படிங்களா… நீங்க உத்தரவு போடுங்க… நான் மீறவா போறேன்… ஐயா! கணக்குப்பிள்ளை!! (கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், "பாதாம்கீர்’ அனைவருக்கும் தரப்படுகிறது.) எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ் சென்றுள்ளனர். ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட, தேசியப் போராட்டம், “இந்திய முதலாளிகளுக்கு’ச் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த”பிர்லாக்கள், "காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு, ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும் குறிப்பிடாத "செக்’கும் அனுப்பினாராம். மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள் பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள் கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், “செக்’ அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில்”சேதி’ வெளியிட்டார்கள். ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர் களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற “நப்பாசையால்’ அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள்”கூர்க்கா’வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில் ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர். தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன். சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன். தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன். இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்! காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை "உடைமை’ கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது. “யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும்,”யார்? அந்த இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில் கண்டேன் இந்தக் காரிகையை . . . . ’’ என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டுள்ள "ராஜாக்களும்’ கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்! “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது - இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித் திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று, செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான்,”கள்ளத்தோணி’ என்றல்லவா ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க “அனுமதி’ கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட,”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!’’ என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில் செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா, கதற வேண்டி இருக்கிறது. நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம், வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா. பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் - இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம், வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக் கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர் கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி! குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர் விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள். . . . தெரிகிறதா . . . மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான் தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்! வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம், வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான். அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, "இந்திக்கு வந்தனை செய்திடுவோம், அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்’ என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம். முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும் அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான் வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா, தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே. ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை. . . . தன்னாட்சியின் உயர்வினை, எண்ணுந்தோறும். . . . என்று பேசி, என்னை உருக வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் - ஆனால், இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம் காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக் கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின் சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும். முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும் வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!! இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் - இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும், சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள் - குதூகலம் காணப் போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!’’ என்று வாழ்த்தி வரவேற்கிறது. அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!. . . . என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம். தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன் வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன் உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப் பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக் காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும். அன்பில் அழைப்பதும் அதற்குத்தான். "நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்’’ காண விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது, நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம். மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும் நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச் சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்! திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில் தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை. சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக் கிறோம் - முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம், எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல் மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க, இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும், இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப் பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும் சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர். எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச் சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை! சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும் மிகுதியாகவே இருக்கும். இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர், வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள். இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு! இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி, ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம் பெறப் பட்டபாடு கொஞ்சமல்ல. வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது - வெட்ட வெளியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில் இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும் குடைகிறது. பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று "சட்டம்’ இருக்கிறது! என் செய்வது! திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே வந்து விட்டது. கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவது என்று முடிவு செய்தோம் - அந்த வேளையில், கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில் அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும், அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் - எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற "குழு’ சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது - அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம். மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் - பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை. தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று - நீ காணும்போது, அங்கு ஒரு சிறிய - சீரிய எழிலூர் காணப்போகிறாய்! பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு. மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் - உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் - ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் - எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான். சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி அடைப்பு; வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச் செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும் இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும். இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக் கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும் கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும். தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க வேண்டும். உன்னாலா முடியாது!! எனக்கு இப்போது, "புற’ க் காட்சி அமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின் மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது. மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் - கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, “என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?’’ என்று எண்ணிக்கொண்டு,”இதுகள்’ இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் - சிலரையாவது. அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை. உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை, அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும் பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம் நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும் சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம் அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார். அன்புள்ள அண்ணாதுரை 1-4-1956 நாவலர் நம் கழகக் காவலர் ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை - திராவிடரின் மறம் - திருச்சியில் மாநாடு. தம்பி, ஒரு அலங்காரக் கூடம் - இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது - சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன - வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம் - பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் உள்ளன - ஒரு புறத்தில் "ராஜாஜி’ இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள். சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக் கொண்டிருக்கிறார் - பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்? சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். . . . சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது. சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே, வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும் துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும் இருந்தன்; அது முன்பு! இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்! சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள். "என்னடா. . . ’’ "கிடைக்கலிங்க. . . ’’ "மடையா. . . . கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா . . . . பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?’’ "பார்த்தேனுங்க. . . . . ஒரு கடையிலேகூட இல்லிங்க. . . . ’’ "படக்கடையிலே?’’ "இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி. . . . ’’ "என்ன சொன்னாரு?’’ "விழுந்து விழுந்து சிரிக்கிறாரு. . . . . அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு. . . . . ‘’பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே. . . .’’ "இல்லிங்க. . . . போசு படம் இருக்குதுங்க. . . . தாகூர் படம் கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க. . . . விவேகானந்தரு படம் கிடைக்குதுங்க. . . ’’ "வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர் படம் கிடைக்கல்லே. . . . ’’ "இல்லிங்களே. . . . ’’ என்னடா பெரிய இழவாப் போச்சு. . . . . இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே. . . . ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே’’ "இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க… கிடையாதுங்க. . . . ’’ "நாசமாப் போச்சி. . . ’’ "ஐயாமாரெல்லாம் வருகிறாங்க. . . . ’’ என்று கூறிக் கொண்டு கணக்கபிள்ளை உள்ளே நுழைகிறார்; சீமான் வேலையாளை வெளியே விரட்டி விட்டு முகத்தை மலரச் செய்து கொள்கிறார். உள்ளே கதராடைக் கனவான்கள் வருகிறார்கள். சீமான் : வாங்க ! வாங்க ! நமஸ்காரமுங்க. . . . நமஸ்காரம். . . . இப்படி இந்தச் சோபாவிலே. . ஒருவர் : நமஸ்தே ! நமஸ்தே! மற்றொருவர் : வந்தே மாதரம், மூன்றாமவர் : நீங்க உட்காருங்க. . . . சீமான் : பரவாயில்லிங்க . . . . நான்காமவர் : சிவ! சிவா! நீங்க நிற்கறது, நாங்களெல்லாம் உட்காருவதா, சேச்சேச்சே! உட்காருங்க . . . . சீமான் : ஆகட்டுங்க . . . . முதலாமவர் : (ஒருவரைக் காட்டி) இவர்தான். . . . சீமான் : இதென்னாங்க அறிமுகப்படுத்தவேணுமா! உலகமறிந்தவர் ஊராள்றவரு, அவரைத் தெரியாதவங்களும் உண்டா? நம்மைப்பத்திச் சொல்லுங்க அவருக்கு. முதலாமவர் : சொல்லித்தானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் - உங்களோட தயாள குணத்தையும், தர்ம சிந்தனையையும், காங்கிரஸ் பக்தியையும் கேள்விப்பட்ட பிறகு தான், அவர் தம்முடைய பல வேலைகளை விட்டுவிட்டு வந்தார். சீமான் : என் பாக்யம்னுதான் சொல்லோணும் . . . . பாருங்க, இங்கே ஒரு தொண்டன், இந்த மாதிரி ஆளுக வீட்டுக்கு எங்க தலைவரு வரவே மாட்டாருன்னு, கடை வீதியிலே பேசி விட்டிருக்கான் கண்டபடி, என்னைப் பத்தி, இல்லாததும் பொல்லாததுமாப் பேசினானுங்க. மற்றவர் : தள்ளுங்க குப்பையிலே . . . தடியடி பட்டேன். . . . ஜெயிலுக்குப் போனேன். . . . நான் தியாகி, தேச பக்தன், அப்படி இப்படின்னு சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம்னு பார்க்கிறவனுங்க அவனுங்களெல்லாம், அவனுங்க பேச்சை விட்டுத் தள்ளுங்கள். சீமான் : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை. ஒருவர் : சரி. . . . அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை. . . . சீமான் : சொல்லுங்கள் ஒருவர் : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும் வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி . . . சீமான் : ரொம்ப சந்தோஷமுங்க . . . . மற்றவர் : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ . . . . சீமான் : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா ? காணோமே . . . . ஒருவர் : அதல்ல. . . . . ஆவடி காங்கிரஸ் பற்றி . . . . சீமான் : அதுங்களா . . . . ஒவ்வொரு நாளும் வருதுங்க . . . . படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க . . . . மற்றவர் : செலவு ஏராளமா இருக்குது. . . . சீமான் : இதென்னங்க பிரமாதம் . . . . பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது . . . . மற்றவர் : அப்படிச் செய்யலாமா . . . . அதிகாரம் இருக்குன்னு வையுங்க . . . . எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான் . . . . ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க . . . . . அதனாலேதான், பணம் "தண்டி’ . . . . . பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி . . . . . உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு . . . . சீமான் : நீங்க ஒரு வேடிக்கை . . . . டாட்டாவும், பிர்லாவும் தரலாம் . . . . . நான் என்னங்க, தகரக் குவளை . . . . என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க . . . . மற்றவர் : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத் தெரியாதாம் . . . . . பிறர் சொன்னாத்தான் தெரியுமாம் . . . . கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட முடியும்னு. . . . ஜாம்பவான் சொன்னாராம் . . . . அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு . . . . தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது. . . . நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல. . . . உங்கள் யோக்யதைக்கும். . . . சீமான் : பிடிவாதம் செய்யாதிங்க . . . . பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப் போடாதிங்க. . . . இந்த வருஷம் ரொம்ப "டல்லு’ங்க . . . . வியாபாரம் சரியில்லை . . . . நம்ம ஆபீசருங்களும் புலியாப் பாயறாங்க . . . . மேலே விழுந்துக்கறாங்க . . . . எந்த மாதிரியா எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான் தெரியுது . . . . . நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன் . . . . . ஏதோ என் அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு . . . . ஒருவர் : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை . . . . சீமான் : சரிங்க… நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன். ஒருவர் : அதென்னங்க அஞ்சும் பிஞ்சும்…. சீமான் : உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு…. ஒருவர் : இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா…. இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டோம். அவர் : பரவாயில்லை… எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்…. பத்து கொடுக்கிற வங்க "லிஸ்டு’ ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது… அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை சீமான் : அப்படிங்களா… நீங்க உத்தரவு போடுங்க… நான் மீறவா போறேன்… ஐயா! கணக்குப்பிள்ளை!! (கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், "பாதாம்கீர்’ அனைவருக்கும் தரப்படுகிறது.) எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ் சென்றுள்ளனர். ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட, தேசியப் போராட்டம், “இந்திய முதலாளிகளுக்கு’ச் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த”பிர்லாக்கள், "காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு, ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும் குறிப்பிடாத "செக்’கும் அனுப்பினாராம். மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள் பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள் கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், “செக்’ அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில்”சேதி’ வெளியிட்டார்கள். ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர் களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற “நப்பாசையால்’ அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள்”கூர்க்கா’வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில் ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர். தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன். சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன். தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன். இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்! காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை "உடைமை’ கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது. “யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும்,”யார்? அந்த இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில் கண்டேன் இந்தக் காரிகையை . . . . ’’ என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டுள்ள "ராஜாக்களும்’ கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்! உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக் கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும் சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும் காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும். அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள் கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின் புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக் கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச் சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில் உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம், கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள் ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர் மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில் பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால், காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச் சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம் காண்கின்றனர். நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர், வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது! படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக் கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும் கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி, கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன் போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல், இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று எதிர்பார்த்திடாதே! திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு ஒரு திட்டம் காட்டும் திருச்சபை - வாழ்விழந்தோருக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி - வழி தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி! ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி பூத்திடும் !! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம் மாநாடு. மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!! பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு "கர்வம்’ கூடக் கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே, எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம் சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப் பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய், புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர் துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய் புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப் பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்! வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம். திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும் கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடை யாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான் நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக! நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால் முடியவில்லை. நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும், நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந் தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன் - உல்லாசம் காண அல்ல. திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள் - திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல! வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த் தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல் மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக, மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, "நான் உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?’’ என்று தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக் காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம் அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம் காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா ! காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும் உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப் பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும் ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே! செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர் களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும், அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே! பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம் விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான், உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்! அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர். அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி, சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின், மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! - என்று கூறிட வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன். வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட் படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச் செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர். முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம் சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப் பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம் எள்ளி நகையாடுகிறது. பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே! பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது, எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள், கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும் சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள் துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா? - என்று ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி. வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம் பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல், கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக் காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும், ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும் திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்! நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார் காமராஜர். வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர். இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா! களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம். பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல, நமது "வரலாறு’ பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல! களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள். வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழிவகை காணக் கூடுகிறோம். கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம். நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம். நாவலர் - நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன் ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும் துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின் வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும் போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!! அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே தம்பி காடு மலை வனம் குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும் தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத் திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத் துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி! உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும். உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும். உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை அனைவருக்கும் அறிவிக்கட்டும். குன்றுகளிலும், சிற்றூர்களிலும், வயலோரங்களிலும், ஆலைகளிலும், பள்ளிகளிலும் பணிமனைகளிலும், பட்டினங் களிலும், அங்காடிகளிலும் பண்புள்ளோர் காணப்படும் எல்லா இடங்களிலும், இன்றிலிருந்து, தம்பி, எடுத்துக்கூறு, திருச்சி தீரரை அழைக்கிறது, மே 17, 18, 19, 20 நாட்களில் என்பதை. தேனென இனிக்கும் சேதி என்பர் திராவிடர்; பிறர்க்குக் தேட்கடிபோல் தோன்றும், இச்சேதி. புதியதோர் அரசு காணப் புறப்படுவோம், புல்லர்தம் புரட்டாட்சி ஒழித்திடப் போரிடுவோம். திருஇடம் காண்பதற்கே திரண்டிடுவோம், தீரரெலாம் திருச்சி மாநகரில்தானே!! அன்புள்ள அண்ணாதுரை 8-4-1956 குடும்ப பாசம் தி.மு.க. - வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள் தம்பி, நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பத்திடம் - இப்போதாவது புரிகிறதா, நான் ஏன் சங்கடப்படுகிறேன் ? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும் பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி கொண்டது. டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான், அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது. அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன், எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன் கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான் நண்பர்களிடம், “இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட . . . . ’’ என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக் கேட்டேன்,”இப்போதாவது புரிகிறதா? இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா? ஏன் எனக்குத் தொல்லை?’’ என்று கேட்டேன். திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம் திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர் வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி, சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப் பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் "விடுதலை’யில் கூடிப் பணியாற்றிய காலம் அது. விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார் - விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான் - சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டனர். இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில் சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு - போகும் போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது போலிருக்கிறது. ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக் கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள். இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித் தானா? பொறுப்பேற்கத் தயக்கமா? இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத் தவறினால், நாடு நம்மை நிந்திக்கும். குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார். விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது. இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக் கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத் தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன் செயலாற்ற இணங்கினேன் - ஆனால் அதே போது, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித் தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போலிருந்த, டிஸ்ரேலி படக் காட்சி என்னைத் தூக்கி வாரிப்போட்டது; அதனால்தான் பெருமூச்செறிந்தபடி சம்பத்தை, "இப்போது புரிகிறதா என் சஞ்சலத்துக்குக் காரணம் இருப்பது?’’ என்று கேட்டேன். அவன் தந்த பதிலோ, காட்சியைக் கண்டதால் ஏற்பட்டதைவிட அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது - உன்னிடம் சொல்வதிலே தவறு என்ன? சிறிதளவு வெட்கம்கூடத்தான் ஏற்பட்டது. சம்பத்து மட்டுமே என்னிடம் அவ்வளவு தாராளமாகவும், சரளமாகவும் பேச முடிகிறது. சம்பத்தை மட்டுமே, நான் எவ்வளவோ முயன்றாலும்கூட, அவர் இவர் என்று கூற முடிவதில்லை! பொறுப்பேற்றுக் கொள்வதிலே உள்ள கலக்கத்தைக் காட்டும் காட்சியையும், அதன் மூலம் பெறப்படும் கருத்தையும் நான் என் நிலைக்குக் காரணமாகக் கொண்டு, இப்போது புரிகிறதா? என்று சம்பத்தைக் கேட்டேனல்லவா - பதில் என்ன கிடைத்தது தெரியுமா? இவ்வளவு பெரிய பாரத்தை, சுமையை எப்படி நான் தாங்க முடியும்? என்றல்லவா டிஸ்ரேலி கேட்ட முறைப்படியே நான் கேட்டேன் - பதில் என்ன என்று எண்ணுகிறாய் ? “சுமையை - பாரத்தை - தாங்கப் போவது நான் ஒருவன்தான் என்று ஏன் அண்ணா! நீங்கள் எண்ணிக் கொள்கிறீர்கள்? சுமையைத் தாங்கப் போவது, நாம் - நாம் - உம்மீது மட்டுமல்ல பாரம் - ’’ என்றானே அந்தப் போக்கிரி! நான் உண்மையில் வெட்கப்பட்டேன். இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய சுமை - பாரம் - பொறுப்பு - அவ்வளவும் என் மீது மட்டுமே ஏற்றப்படும் - என்று எண்ணினதால்தானே, இவ்வளவு சுமையைத் தாங்க என்னால் எப்படி முடியும் என்ற கலக்கம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறானது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சம்பத்து அளித்த பதில் - அந்தப் பதிலிலே பொதிந்துள்ள தத்துவம்தான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அச்சாணியாக அமைந்திருக்கிறது -”நாம்’ என்பது வலிவும் பொலிவும் கொண்டதோர் தத்துவம் - "நான்’ என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம் அல்லது மனமயக்கம் என்கிறார்கள் என்றால், அரசியலில் அது அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால் ஆபத்தை, அடுக்கடுக்காகக் கிளப்பிவிடக் கூடியதுமாகும்! காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு தத்துவங்களிலும் எது மேலானது என்பதை மேதினிக்கு விளக்கிக் காட்டுகிறார்கள். "நான்‘- என்பது தவறு - "நாம்’ - என்பதுதான் நிலைமை என்பதை அன்று படக்காட்சிக் கொட்டகையில் கண்டதிலிருந்து, அந்தப் பொலிவும் வலிவும் பொருந்திய தத்துவம், கழகத்துக்கு எவ்வளவு மாண்பளித்திருக்கிறது என்பதை அறியவும், அகமகிழவும், வாய்ப்புகள் பலப்பல வந்தவண்ணமுள்ளன. "நாம்’ என்ற கூட்டுச் சக்தியை - குடும்ப சக்தியைக் காட்டிடும் அந்தச் சொல்லுக்கு எழிலோவியமாக அமைந்து விட்டது, தி. மு. க. நானும் நீயும் - நம்மில் ஒவ்வொருவரும் - அந்த "நாம்’ என்பதிலே இருக்கிறோம் - அதிலே இருப்பதன் மூலம் ஏற்றம் பெறுகிறோம் - அந்த ஏற்றம் நாட்டுக்குப் பயன்படுகிறது. “நாம்’ என்ற அந்தக் கூட்டுச் சக்தியைக் காட்டிடும் சொல்லினுள் பொதிந்துள்ள அரிய பாடம், ஜனநாயகப் பண்பாட்டுக்கே அடிப்படையாகிறது - அகில உலகிலும், எங்கு, எந்தச் சமயத்தில் எத்தகைய அரசியல் குழப்பமோ, அவல நிலையோ விளைகிறது என்றாலும்,”நாம்’ என்பதிலே உள்ள தூய்மையிலே ஏதோ ஓர்வித தூசு படிந்து விட்டது என்று கூறலாம் - “நான்’ என்பது,”நாம் என்பதை வலுச்சண்டைக்கு இழுக்கிறது என்று பொருள் கொள்ளலாம். தம்பி! “நான்’ - என்பதிலிருந்து”நாம்’ என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!! இவ்வளவு “பலி’ வாங்கிய பிறகும்கூட, இன்றும்”நாம்’ என்பதை "நான்’ என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப் பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!! திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் துறையில், பிறர் பார்த்து, பாராட்டத்தக்க (பிறர் என்பது நம்மை மனிதர் என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது) அளவில், வெற்றிபெற்று, வீரர் கோட்டமாய், தோழர்களின் கூடமாய், குடும்பமாய்த் திகழ்கிறது, அந்தக் குடும்பத்துக்குக் குதூகலத் திருவிழா மே 17, 18, 19, 20-ல், எப்படி வராமலிருக்க முடியும், குடும்பத்தில் ஒருவர் என்ற பாசம் உள்ளவர்களால்? நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார். பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும் இடையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து கிளம்புகிறோம் அண்ணா! என்று "சேதி’ தருகிறார் மற்றோர் தோழர். பல்வேறு ஊர்களிலிருந்து “சைக்கிள்’ படைகள், திருச்சி வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது, தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும்,”நாம்’ என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான் - நான் - நான் - என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச் சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, "நாம்’ பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது, வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது. "என்னையே நம்பி’ என்ற சொற்றொடருக்கு, தி. மு. க. இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது; என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக் காண்கிறோம். கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக் காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப் பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும் வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர் எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும் பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி. மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம். இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்! இங்கு கிளை! அங்கு கிளை! எங்கும் தழைக்கிறது கிளைகள்! இடைவிடாத பிரச்சாரம்! இணையில்லா ஊக்கம்! மகத்துறை ஊழல்களைத் தாக்குகிறாக்ள். ஆளவந்தாரின் போக்கை அம்பலப்படுத்துகிறார்கள்! இழந்த இன்பத்தை மீட்போம் என்று முழக்க மிடுகிறார்கள்; சுகபோகிகளையும் சுரண்டிப் பிழைப்போரையும் சாடுகின்றனர். புதிய அரசு கேட்கின்றனர். பெரும் பத்திரிகைகளின் இருட்டடிப்பு! பணம் படைத்தோரின் பரிகாசம் மதப் புரட்டர்களின் சாபம்! மாற்றுக் கட்சியினரின் தூற்றல். ஆளவந்தாரின் அடக்குமுறை. இவ்வளவும் கிளம்பிக் கொக்கரிக்கின்றன - எனினும் வளருகிறார்கள் - வளர்ந்த வண்ணமிருக்கிறார்கள். ஏன்? எப்படி? எதற்காக ? நாடு கேட்கிறது இவ்வண்ணம். நமது வளர்ச்சி நாட்டிலே புதிய பிரச்சினையாகிவிட்டது. கழகம் ஒரு கேள்விக் குறியாகி விட்டது - அபாயக் குறி என்று அலறுபவர்களும் உளர். எனவே, நமது முழு உருவமும் விளங்கும் வண்ணம் மாநில மாநாடு அமைதல் வேண்டும். குடும்பத்திலோர் குதூகலவிழா - மாநில மாநாடு - தடையும் பணமுடையும் குறுக்கிட்டாலும், யாரும் திருச்சிக்கு வருகிற கடமையிலிருந்து மட்டும் தவற முடியாது - குடும்ப பாசம் அனைவரையும், மே 17, 18, 19, 20 நாட்களில் திருச்சிக்குக் கொண்டு வந்தே சேர்க்கும். நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம் சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம் நடாத்தி நவநிதியைக் குவித்த ஓர் இனம், பாபத்துக்குக் கழுவாய் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்லேந்தியின் பாதம் கழுவிய பரிதாபக் காதை, கோட்டை கட்டிக் கொற்றம் நடாத்திய ஓர் இனம், வேட்டையாடி வீரத்தைக் காட்டிய ஓர் இனம், சேட்டைகளைச் சடங்குகளாகக் கொண்டு, "கேட்டை மூட்டை’ களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுத்து ஏமாளிகளாகி விட்ட இதயம் நோகச் செய்யும் காதை - இவைகளை உணராமலேயே, நாடு, இனம், மொழி, வாழ்க்கை முறை அனைத்தையும் மறந்துபோய், மாற்றானை மகேசனின் தூதுவன் எனக்கொண்டு, மதி இழந்து, மதிப்பிழந்து போன, மனதை வேகவைக்கும் காதை; கப்பிக் கொண்டிருந்த மன இருள் விடிவெள்ளியால் மெள்ள மெள்ள விலகிய வரலாறு, ஒளி கிடைத்ததும் உள்ளத்துக்கு ஏற்பட்ட உத்வேகம், அதன் பயனாக ஏற்பட்ட இயக்கம், அதன் வளர்ச்சி ஆகிய இன்றைய வரலாறு, இதன் மூலம் நாம் அடைய இருக்கும் இலட்சியம், அது அளித்திடப் போகும் இன்பம், அதன் பயனாக நாடு பெறப் போகும் ஏற்றம், அதன் விளைவாக ஏற்பட இருக்கும் பெருமிதமிக்க எதிர்காலம் பற்றிய கணக்கெடுப்பு ஆகிய இவைபற்றியெல்லாம் நாம் பேசவும், பேசுவதைக் கேட்கவும், உரையாடவும், உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்ளவும், வழிவகை பற்றி ஆய்வுரை வழங்கிடவும், திட்டம் தீட்டிடவும், செயல்படு முறைபற்றித் தீர்மானித்திடவும், நாலு நாட்கள் போதா! நாலே நாலு நாட்கள்தான்!! அந்த நாலு நாட்களுக்குள், நாம் நமது உள்ளத்திலே ஊற்றெடுக்கும் ஓராயிரம் எண்ணங்களையும், வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, செயல்படத்தக்க செம்மையினைத் தேடிப் பெற்றிடவும் வேண்டும். தலைமுறை தலைமுறையாக - பன்னெடுங் காலமாகப் பாழ்பட்டுப் போயுள்ள நிலையினை மாற்றிடத்தக்க மகத்தானதோர் பணியில் ஈடுபட்டுள்ள நாம், மாநில மாநாடு நடாத்துவது, கூடிக் கலைந்திட அல்ல - குடும்ப பாசத்துடன் கூடி, நாட்டு விடுதலைக்கான நல்லார்வத்தை எந்த அளவிலும் வகையிலும் மற்றையோருக்கு ஊட்டினோம் என்பது பற்றி ஆய்ந்தறிந்து, நமது முறைகளிலே குற்றம் குறை உளவா என்று பேசிக் கண்டறிந்து, திருத்தப்பட வேண்டியவை, நிறுத்தப் பட வேண்டியவை; புகுத்தப்படத்தக்கவை, களையப்பட வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து, நாம் ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட எழுச்சியும் விழுச்சியும் வீறுகொண்டெழுந்துள்ள இந்தக்கால கட்டத்துக்கு ஏற்ற வழிவகை கண்டறிந்தாக வேண்டும். நாலே நாட்கள் மட்டுமே உள்ளன! எனவே, ஒவ்வோர் நாளும், ஒவ்வோர் மணியும் மிக மிக அக்கறையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமாகிறது. பொதுச் செயலாளர் நான் இந்தக் கட்டுரை தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் யூகித்துக் கொள்ளவும் முடிகிறது - பரிதாபப்படவும்தான் செய்கிறேன். இளமை எழிலளிக்கிறது, இன்பபுரிக்கு அழைக்கிறது. இயக்கமோ அவரை திருச்சிக்குத் துரத்துகிறது ! தாமரை பூத்த தடாகத்தருகே சென்று முகத்தாமரையாளிடம் அகத்துறை இலக்கணம் கற்றிட வேண்டிய காளையர்தான் - பருவத்தை எண்ணிடின் - எனினும், களம் சென்று தமிழரின் தன்மானத்தைக் காத்திட வேண்டிய கட்டம் வருகிறபோது, வல்லூறு வட்டமிடும் களத்தில், மலர்த் தோட்டத்தில் காணும் இன்பத்தைவிட அதிகமன்றோ காண்பராம், வீரத் தமிழர்கள் - வீழ்ச்சியுறாத நாட்களில், நமது பொதுச் செயலாளர், அகமும் புறமும் நன்கு பயின்றவர் - எனவே, புறநானூற்றுக் காட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றுள்ளார். பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது? பாய்களை வாங்கிவிட்டீரோ? பணிமனையில் இன்று என்ன நிலைமை? கொடி மரம் உயரம் எவ்வளவு? இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வோர் வேலையையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். அவர் உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற்கெனவே "சிட்டு’ப் போல் பறந்து பணியாற்றிக் கொண்டுவரும் திருச்சித் தோழர்களுக்கு, மேலும் உரமும், திறமும், தரமும் தருகிறது - வேலை மும்முரமாக நடைபெற்ற வண்ணமிருக்கிறது. வேலையோ, தம்பி, ஏராளம், ஏராளம்!! தடைபல கடந்திட வேண்டி இருக்கிறது - ஒவ்வோர் கட்டமும் புதுப்புதுப் பிரச்சினையைக் கிளப்புவதாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டானதும், வெற்றி இன்பத்தைக் கூடச் சுவைக்க முடிவதில்லை. வேறோர் பிரச்சினை கிளம்பி விடுகிறது. நாலே நாலு நாட்கள் - அப்பப்பா! கடந்த நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை. ஆனால், திருச்சி தாங்கிக்கொள்ளும். நினைவிருக்கிறதா, தம்பி, எனக்குச் செந்தேனாக இனிக்கிறது நினைவு - திருச்சிதான், திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் பணியாற்றத் தொடங்கியதும், நாம் நடாத்திய முதல் மாநாடு - மாவட்ட மாநாடு!! திருச்சியில் அந்த மாநாடு நடத்த நாம் திட்டமிட்ட உடனே, உனக்குத் தெரியுமோ என்னவோ, திகிலூட்டினார்கள் - நம்மை நிந்திப்பதிலே நித்யானந்தம் காண்பவர்கள். திருச்சியிலா? மாநாடா? மக்கள் வருவார்களா? எங்கே இருந்து கொண்டு வரப்போகிறார்கள்? இடம் கொடுப்பவர் யார்? இரண்டு நாள் தங்கிட வசதி உண்டா? ஒரு வேளைச் சோற்றுக்கு வழியுண்டா? திருச்சியிலா, மாநாடு! பேஷ்! பேஷ்! இங்கு தோல்வி தாக்கும் - மூலைக்கு ஒருவராக முக்காடிட்டுக் கொண்டு ஓடிவிடப் போகிறார்கள்!! - என்றெல்லாம் திகிலூட்டினர், எரிச்சலை மூட்டினர். என்னைத் தான் தம்பி, உனக்கு நன்றாகத் தெரியுமே! சிறு சங்கடமென்றாலும் பெருத்த குழப்பம் புகுந்துவிடுமே உள்ளத்தில். அதனால் நான் பயந்து போனேன். மாவட்ட மாநாட்டுக்கான கொட்டகை அமைக்கப்பட்டு விட்டது - மறுநாள் மாநாடு - முன்னாள் மாலை சென்று பார்க்கிறேன் - பசியுடன் உள்ள பெரும் புலி தன் அகன்ற வாயைத் திறந்துகொண்டிருப்பது போல, கொட்டகை காட்சியளிக்கிறது. இதோ என் மனக்கண்ணால் காணமுடிகிறதே அந்தக் கொட்டகையை. "சாம்பு!’’ "என்னண்ணா! . . . ’’ "பந்தல் . . . . கொட்டகை . . . . ?’’ "அவசரத்தில் போட்டது. இவ்வளவுதான் முடிந்தது. . . .’’ “இவ்வளவுதான் முடிந்ததா. . . . என்ன சாம்பு, விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன் போட்டாய்? யார் போடச் சொன்னது? இவ்வளவு பெரிய கொட்டகைக்கு, ஆட்கள் எங்கே இருந்து கொண்டு வந்து குவிப்பது? நாளைக்கு இதிலே கால் பகுதிக்குக்கூட தோழர்கள் வருவார்களோ இல்லையோ! இவ்வளவும் நாளைக்குக்”காலி‘யாக இருக்குமே! எப்படி அந்த அவமானத்தைத் தாங்குவது? என்ன வம்பு செய்துவிட்டாய், சாம்பு!’’ "அண்ணா! கொட்டகை பெரிது என்கிறாயா?’’ "இதிலே சந்தேகம் வேறா உனக்கு. போ, சாம்பு. போய், பந்தல்காரர்களை அழைத்து வா. பந்தலில் பாதி அளவுக்கு மேல், தனித்தனி விடுதிகளாக மாற்றி அமைத்தாக வேண்டும். காலி இடமாகக் கொட்டகை தெரியக் கூடாது. இதிலேயே ஒரு இடத்திலே தொண்டர்கள் முகாம், மற்றோர் பக்கம் பிரதிநிதிகள் ஜாகை, இன்னோர் பக்கம் ஏதாவது ஓர் விடுதி, எதையாவது செய்து கொட்டகையின் அளவைக் குறைத்திட வேண்டும்.’’ "வேண்டாம் அண்ணா!’’ "சாம்பு! என்னிடம் விளையாடாதே! இதுதான் முதல் மாநாடு. நாம் கழகம் துவக்கி, காலை ஊன்றி வைக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்திலே, மாகாண மாநாட்டுப் பந்தல் போலக் கொட்டகை போட்டுவிட்டு, ஆள் கிடைக்காமல், நாளைக்கு அசிங்கப்படுவதா? வீண் விஷப் பரிட்சை வேண்டாம். காலையில் நான் பார்க்க வருவேன் - அதற்குள் கொட்டகையின் அளவு சிறிதாக்கப்பட வேண்டும். . .’’ "சரி, அண்ணா. . . . ’’ "தர்மு, இந்த வேலையை உடனே கவனி. பராங்குசம், என்னவோ ஏதோ என்று இருந்துவிடாதே! மணி, கவனமிருக்கட்டும்! சாம்பு! உடனே வேலை நடந்தாக வேண்டும்.’’ கொட்டகை பெரிது, கூடிட ஆட்கள் வரமாட்டார்கள் என்ற சந்தேகம் குடைந்தது - சாம்புவிடம் சண்டைக்கு நின்றேன். அதே திருச்சியில், அதே சாம்புவே, இரண்டா யிரத்துக்கு ஆயிரம் என்ற அளவிலே கொட்டகை அமைத்துக் கொண்டிருக்கிறார்! தம்பி! இந்த இன்பம் எத்தகையது என்பதை எண்ணும்போது, ஆஹா! எப்படியிருக்கிறது என்கிறாய்!! சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை, இந்த இன்பத்தை உடனிருந்து சுவைக்க - இயற்கையெய்தி விட்டார் - ஓடி ஆடி வேலை செய்து, சிறப்பினைக் கூட்டித் தந்திட நண்பர் இருதயராஜ் இல்லை, அணைந்து விட்டது அந்தத் திருவிளக்கு - இந்த வாட்டம் என்னை வதைக்கத்தான் செய்கிறது. தயக்கத்துடன் நாம் திருச்சியில் முதல் மாவட்ட மாநாடு துவக்கினோம் - தூய உள்ளத்துடன் பணியாற்றி வந்த வண்ணமிருக்கிறோம் - கொள்கையிலிருந்து வழுவினோமில்லை, கொடுமைகளைக் கண்டு கலங்கினோமில்லை, பாதை வகுத்துக் கொள்வதிலே பொறுப்புக் காட்டினோம், வகுத்துக் கொண்ட பாதையிலே நடந்து செல்லும் போது குறுக்கிட்ட இடையூறு கண்டு அஞ்சி அயர்ந்தோமில்லை - பயணம் துவக்குமுன்பு பல்வேறு மனக்குழப்பமிருந்தது - எண்ணித் துணிந்தோம் - இதோ இன்று இரண்டாவது மாநில மாநாடு, திருச்சியில் நடை பெறுகிறது - நகருக்குள் கிடைக்கும் திடல்கள் போதுமானவை அல்ல என்று, ஊர்ப்புறம் தேடி, விரிந்து பரந்து கிடக்கும் திடலை நாடினோம் - அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டோம். காரணம், தம்பி, நாம் - நாம் - அதனால்!! நாத்திகர்கள் ! துவேஷிகள் ! குழப்பக்காரர்கள் ! கூவித் திரிவோர் ! வகுப்புவாதிகள் ! என்னென்னவோ ஏசுகிறார்கள் - கேட்கும் மக்களின் தொகை குறையக் குறைய, வகை மட்டமாக மட்டமாக, தூற்றலின் வேகம் அதிகமாகக்கூடத் தெரிகிறது. கட்டைவிரலை வெட்டிவிடுவேன். கையில் கிடைப்பது கொண்டு அடிப்பேன். ஈ, எறும்புபோல நசுக்கிவிடுவேன். இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன். கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் !! காமராஜரும் சரி, ஆச்சாரியாரும் சரி, இதுபோல உருட்டி மிரட்டிப் பேசத் தவறியதில்லை. உருட்டல் மிரட்டலோடு நின்று விடவில்லை - "தேனீ’ நடத்திக் காட்டிடவும் அவர்களுக்கு வசதி இருந்தது. நாவலர் மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த, உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர் இடம் பெற்றவர்கள் - தியாகராசர்கள் முனைந்தனர் ! 144-ம் தடியடியும், சிறையும், சித்திரவதையும், துப்பாக்கியும், நம்மைத் தாக்கின - தாக்குதலின் வேகமான கட்டத்துக்குத் துரைத்தனம் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்! கழகத்தின் முன்னணியில் நின்று பணியாற்றுவோர் அனைவருமே சிறை அனுபவம் பெற்று விட்டார்கள்! சாமான்யர்களாகிய நாம், ஒரு விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும்போது, அலட்சியப் பார்வையால், ஏளனப் புன்னகையால், இரண்டோர் இழிமொழியால் நம்மை இருக்குமிடம் தெரியாமல் செய்திட முடியும் என்றுதான், கோட்டையில் கொடி நாட்டியவர்கள் எண்ணிக்கொள்வார்கள். நாம் வளர்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதே தங்கள் பெருமைக்குக் களங்கம் என்ற அளவுக்கு ஆணவம் பிடித்தவர்கள், நமது மாற்றார்கள் - இதனையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. நாம் வளர்ந்துவிட்டோம், இனி மறைத்துப் பயனில்லை என்ற கட்டம் பிறந்ததும், முழு மூச்சுடன் நம்மை எதிர்ப்பர் -கடுமையாக எதிர்ப்பர் - என்பதும் எதிர்பார்த்ததுதான். இவை கட்கெல்லாம், நான் அஞ்சியதில்லை, "நாம்’ ஓர் இலட்சியத் துக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆதலால். எனக்கு மட்டும் ஒரு அச்சம் இருந்தது - அது திராவிட கழகத்தைப் பற்றி. ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பகைத்துக் கொள்வதற்கான காரணம் பல கிளம்பிவிடினும், திராவிடர் கழகம் என்பது, நமது “பாசத்தைப்’ பெற்ற இடமல்லவா!! சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சியே இனி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட வேண்டியதுதான் என்று”அண்ணாத்துரை தீர்மானம்’ என்ற பெயரிட்டு பெரியார் திட்டம் தந்தாரல்லவா, அதற்கும் முன்பே, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் என்பதாக அமைப்பு அரும்பிற்று. சேலத்துக்குப் பிறகு, சீமான்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளவும், பதவிப் பிரியர்களின் பகையை எதிர்த்து நிற்கவும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது, சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு "சிண்டு’ முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம் அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி தேடிடப் பல முயற்சி - இவ்வளவு தொடர்பு பாசத்தை மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின் திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி, முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது, எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி, எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல - பிரிந்து போனார்கள் பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள், அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன், அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள் என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள், போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால் போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே, அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும் எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள், என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள், ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் - என்று பெரியார் அன்புடன் பேசினால் - பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!! பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான் அப்போது என்ன செய்திருக்க முடியும்? என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு குறையவில்லை. என்ன காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !! என்னவோ "விஷக்கடி வேளை’ என்பார்களே, அது போல, திருமண மூலம் ஒரு பேதம் - பிளவு ஏற்பட்டது - அவரோ நம்மைப் பகைவர் என்று கொள்ளவில்லை - பரிவு காட்டுகிறார் - பாசம் வைத்திருக்கிறார். பிரிந்து, தனியாகிவிட்ட போதிலும், எதிரிக்கு நம்மைக் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையை நாம், நமது முகாமிலிருந்து பரப்புகிறோம் என்ற வகையில் மகிழ்கிறார் - ஆதரிக்கிறார். கோபம் கொண்டு நாம்தான் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டோமே தவிர, அவருடைய பொன்னான குணத்தைப் பார். துளியாவது நம்மிடம் துவேஷம், பகை, இருக்கிறதா? இப்போதும், நல்ல பிள்ளைகள், நம்ம பிள்ளைகள் என்று பாசத்தோடு பேசுகிறார். இப்படிப்பட்ட பெரியாரிடமிருந்து நாம் பிரிந்துவிட்டோமே! என்ன பேதமை! என்ன பேதமை!! தம்பி! இவ்விதமெல்லாம் தானே நாம் எண்ணி இருந்திருப்போம் - கோபம் தணிந்து விட்டிருக்கும் - வெட்கம் கூட நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும் - மெள்ள மெள்ள, நம்மிலே சிலரே, போகட்டும், நண்பரே! ஏதோ நடந்தது நடந்து விட்டது - இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம். அவர் இவ்வளவு அன்பும் பாசமும் காட்டும்போது, நாம் பேதமும் விரோதமும் காட்டுவது சரியல்ல. திருமணம்பற்றித் திடுக்கிட்டுப் போனோம் - கோபத்தால் வெளியே வந்தோ - வெளியே வந்ததால், வேறு கட்சியாகப் பணியாற்றினோம், அவர் இவ்வளவுக்குப் பிறகும் நம்மிடம் பிரிவு காட்டும்போது, நாம் பழையபடி ஒன்றாகிவிட வேண்டியதுதான் - என்று கூறிடத் தானே செய்திருப்போம் - பிறகு முன்னேற்றக் கழகம் ஏது! ஒன்றாகிவிட்டிருக்க வேண்டியதுதான்! இடையிலே, ஓடியதும், ஆடியதும், பரணி பாடியதும், படை கூடியதும் வீண்! வீண்!! இவ்விதமான ஓர் நிலைமை ஏற்பட்டுவிடுமா, என்ற அச்சம் மட்டும் எனக்குத் துவக்கத்தில் இருந்தது. எதையும் தாங்கிக் கொள்ள முடியும், ஆண்டு பலவாக நம்மை நடத்திச் சென்றவர், நாம் அறிந்த ஒரே தலைவர், யாருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை எல்லாம் தத்துவம் என்று கொண்டாடும் அளவுக்கு நாம் "பக்தி’ செலுத்தி வந்தோமோ, அப்படிப்பட்ட பெரியார், அன்புக் கணைகளை ஏவியிருந்தால், அதனை மட்டும் நம்மால் எதிர்த்திருக்கவே முடியாது. பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை எழும்பியிருந்தால் போதும், முன்னேற்றக் கழகம் இல்லை! பெரியாரின் போர்முறை இவ்விதம் அமைந்துவிடுமானால் தனிக் கழகம் தானாகவே வீழ்ந்துபடும் - இதற்கு, ஆயிரம் பாடுகள் படுவானேன் - என்று நான் எண்ணினதுண்டு. ஆனால், அந்த என் அச்சம், பொருளற்றதாக்கப்பட்டு விட்டது. அன்பினால் நம்மை வீழ்த்தியிருக்க முடியும் - ஆரம்பக் கட்டத்தில் - பாசத்தால் நம்மை இழுத்துக்கொண்டிருக்க முடியும் - நேசம் காட்டி இருந்தால், நம்மில் பலருக்கு நெறித்த புருவம் இருந்திராது. ஆனால், அந்த முறைக்கு இடமில்லாதபடி "சர்வ ஜாக்ரதை’யுடன், மிகத் திறமையாகக் கவனித்துக் கொண்டார், தூண்டிவிட்டு, துண்டு தேடிக்கொண்டு ஒடிவிட்ட உத்தமர். என்றென்றும் ஒன்று கூடவே முடியாத நிலையில் “இரு பிரிவுகளையும்’ வைத்துவிட்டார், இடம் தேடி ஏங்கிக் கிடந்தவர். அன்பு எங்கே சுரந்து விடுகிறதோ - என்று பயந்து. நரகல் நடையை அள்ளி அள்ளி வீசியும், அபாண்டம் சுமத்தியும், பழி பாவத்துக்கு அஞ்சாத புகார்களை அவிழ்த்து விட்டும் பெரியாரின் பெருந்தொண்டுக்குரிய பலனை,”குத்தகை’க்கு எடுத்துக்கொண்டார் அந்தக் குணாளர். துரோகிகள் காலிகள் கூலிகள் போக்கிடமற்றவர்கள் வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்றவர்கள் அப்பாவிகள் சூதர்கள் கொலைபாதகர்கள் பொறுக்கிகள் தம்பி! எழுதக்கூடக் கூச்சமாக இருக்கிறது, அப்படி யெல்லாமல்லவா ஏசத் தலைப்பட்டார்கள்! ஒவ்வொரு தூற்றலும், பிரிந்தோர் பிரிந்தோரே என்பதை உறுதிப்படுத்தத்தான் உதவிற்று!! பிரிவினால் இலாபம் தேடியவருக்கு மகிழ்ச்சி பிடரியைப் பிடித்தாட்டிற்று. "அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்றார் வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி செய்து விட்டார் நீண்ட நாள் பசியால் வாடிக்கிடந்தவர். அந்த "இராஜதந்திரம்’ அவருக்குப் பெருத்த இலாபம் என்று எண்ணி மகிழ்கிறார் என்கிறார்கள். மகிழட்டும்! ஆனால், அந்தப் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைநிறுத்திவிட்டதுடன், அதன் மூலம், நாட்டிலே புதியதோர் "சக்தி’ வளர வழி செய்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கோபத்தினின்றும் முளைத்தது என்ற நிலை மாறி, கொள்கையைப் பண்புடன் பரப்பிடவும், ஆற்றலுடன் செயல்படுத்தவும், அஞ்சா நெஞ்சுடன் அறப்போர் நடாத்தவும், இறுதி இலட்சியம் ஈடேறும் வரையில், இன்பத் திராவிடம் காணும் வரையில், இடையறாது பாடுபடவும், இடையில் எவர் புகுந்து இளித்தாலும், கண் சிமிட்டினாலும், இது, அது என்று ஆசை மூட்டினாலும், எமது இலட்சியம் இன்பத் திராவிடம், அதைப் பெறவே எமது கழகம் என்று கூறி, ஏறு நடையுடன் இலட்சியப் பாதையில் நடந்திட ஓர் நேர்மையான படை, நேர்த்தியான குடும்பம் நிலைத்து விட்டது. நிந்தனை நமது கழகக் கழனிக்கு உரமாயிற்று. தூற்றல், நமது குடும்பத்துக்குள் தோழமை மலர்ந்திடச் செய்தது. இழிமொழியும் பழிச்சொல்லும் வீசினர்; நமது இதயத்தில் ஈட்டி கொண்டு தாக்கினர். மனப்புண் போக்கிட மாமருந்து தேடினோம். குடும்ப பாசம், அந்த மருந்தாக அமைந்தது. அத்தகைய குடும்பம் நடாத்தும் குதூகல விழாவல்லவா தம்பி, 17, 18, 19, 20 !! கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்கும் வரலாறு, இத்தகைய சம்பவங்களைப் பொன்னெனப் போற்றுகிறது. வா, தம்பி, வா!! நண்பர் குழாத்துடன் வா!! அன்புள்ள அண்ணாதுரை 15-4-1956 நல்ல தீர்ப்பு விநாயகரும் தீர்ப்பும்- தி.மு.க. சொற்பொழிவாளர்கள்- தி.மு.க.வின் பணி- திருச்சி மாநாடு. தம்பி, "விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய பாட்டனார்! கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து, உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர், இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில் தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும் பயனும் வரக்கூடியவிதமாக்கினார். ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும், இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும் கூறுவார்கள் - இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக இருக்கும் "பாத்யதை’ உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்’’ - ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக் காட்டினார். அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு, வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும். ஆதாரங்களை எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர். நிச்சயமாக அறம் வளர்த்தான் பிள்ளைதான், கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்படுவார் என்று கூறினர். ஆனால், வழக்கு மன்றத் தலைவரோ விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்! அப்பழுக்கற்ற ஆதாரம் காட்டினார் வழக்கறிஞர். சாட்சிகள் யாவரும் ஒழுங்காக உண்மையை எடுத்துரைத்தனர். என்ன அக்ரமம், எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகத் தீர்ப்பளித்தாரே! வீராசாமி நாயகர் தர்மகர்த்தாவாமே! அவரேகூட இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! அவர் வழக்குத் தொடுத்ததன் காரணமே, அறம் வளர்த்தான் பிள்ளைக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்கே தவிர, தர்மகர்த்தாவாக வேண்டும் என்பதற்கு அல்லவே! அக்கிரமமான தீர்ப்பு! அநியாயமான தீர்ப்பு! ஊரே கண்டித்தது-அறம் வளர்த்தான் பிள்ளையே வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறினார்: "தாங்கள் தங்கள் கடமையைத் துளியும் குறைவின்றித்தான் செய்தீர்கள்- என்ன செய்யலாம்-இப்படி ஆகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை-வருத்தப்படாதீர்கள்’’ என்றார். “இதுபோல ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதே இல்லை- சிக்கலற்ற வழக்கு-இதிலே இப்படித் திடுக்கிடத்தக்க தீர்ப்பு கிடைப்பது என்றால், என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை’’ என்றார் வழக்கறிஞர். சொல்லிவிட்டு,”இவ்விதமான அநியாயத் தீர்ப்புக்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை’’ என்று ஆயாசப்பட்டார். வழக்கறிஞரும் மற்றவர்களும் இந்தத் தீர்ப்பை, "அநியாயம்’ என்று கூறிக் கண்டித்தனரே தவிர, வழக்கு மன்றத் தலைவர், தெளிவுடன் பேசினார்: “என் தீர்ப்பை”அநியாயம்’ என்று கூறுகிறார்களாமே! என்ன அறிவுச் சூன்யம் இவர்களுக்கு! அறம் வளர்த்தான் பிள்ளையின் "வக்கீல்’ திறமையாகத்தான் வாதாடினார் திறமையைக் கண்டு, நான் மயங்கி, நீதியிலிருந்து தவறிவிடுவதா?’’ என்று வழக்குமன்றத் தலைவர், தன் மனைவியிடம் கூறினார். “என்னதான் காரணம், உங்கள் தீர்ப்புக்கு’’ என்று மனைவி கேட்டார்-வழக்கு மன்றத் தலைவர், கோயில், அறம் வளர்த்தான் பிள்ளை குடும்பத்தாருக்குச் சொந்தமென்று ஏதேதோ ஆதாரம் காட்டினார் வக்கீல். ஆனால், மறுக்க முடியாத ஒரு ஆதாரம் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டுதான், வீராசாமி நாயகர் பக்கம் தீர்ப்பளித்தேன்’’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.”என்ன அந்த ஆதாரம்?’’ என்று அந்த அம்மையார் கேட்டதற்கு, அவர், "கோயில், விநாயகர் கோயில்; நான் தர்மகர்த்தாவாக நியமித்திருப்பது வீராசாமி நாயகரை! விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர் தர்மகர்த்தா ஆகாமல், வேறு யார் ஆக முடியும்? கோயில் நாயகர் கோயில்! விநாயகர்!! ஆகவே, தர்மகர்த்தாவும் நாயகர்! அதுதானே முறை. பெயரைக் கேட்டதுமே எனக்கு உண்மை புலனாகிவிட்டது. விநாயகர் கோயில், வீராசாமி நாயகர்!’’ என்று விளக்கமளித்தார். அம்மைக்கு முழுத் திருப்தி-தன் கணவன், நியாயம் தவறவில்லை, தவறாதது மட்டுமல்ல, வாதத் திறமையால், நீதியைக் குலைத்திட ஒரு வழக்கறிஞர் முனைந்தபோது, துளியும் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். அதுவல்லவா நேர்மை! என்றெண்ணிக் களிப்படைந்தார். விநாயகர் - என்ற பதத்திலே நாயகர் என்று இருக்கிறது. வீராசாமி நாயகர் என்ற பதத்திலேயும் நாயகர் என்று இருக்கிறது எனவே, நாயகர் நாயகருக்கே என்று தீர்ப்பளித்தார். அத்தகைய தீர்ப்பு அளித்திட வழக்குமன்றத் தலைவரால் முடிந்ததற்குக் காரணம், அவர் ஒரு துரைமகன் - வெள்ளைக்காரன். விநாயகர் என்பதிலே உள்ள நாயகர் என்பதற்கும், வீராசாமி நாயகர் என்ற பதத்திலே உள்ள நாயகர் என்பதற்கும், பொருள் வேறு வேறு என்பது தெரியாது. எனவே, அவர் விநாயகர் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். ஊரார் இதை அநியாயத் தீர்ப்பு என்று கூறினர் - அவரோ இதைவிட நேர்மையான தீர்ப்பு தரமுடியுமா என்று கேட்டார்-தம் தீர்ப்பு அநியாயமானது என்று ஊரார் கூறினது கேட்டு, கோபித்துக் கொண்டார். ஆதாரங்கள் அப்பழுக்கற்றதாக இருந்தாலும், அதை எடுத்துரைக்கும் ஆற்றல் குறைவின்றி இருந்தாலும், வழக்குமன்றத் தலைவருக்கு, "பிரச்சினை’ புரியவில்லை என்றால், அநியாயத் தீர்ப்புதானே கிடைக்கும். பிரச்சினை புரியவேண்டுமானால், வழக்காடு’ மக்களுடைய முறை, நெறி ஆகியவற்றினைத் தெரிந்துகொள்ளத் தக்கவராக, வழக்கு மன்றத் தலைவர் இருக்க வேண்டுமல்லவா! துரைமகனுக்கு, இங்கு உள்ள ஜாதி அமைப்பு முறைகள் என்ன தெரியும்? எனவே, விநாயகர், வீராசாமி நாயகருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். கைக்கூலி பெற்றுக்கொண்டு அநியாயத் தீர்ப்பு அளிப்போர் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அந்தத் தூய இடத்தைவிட்டு அகற்றப்பட வேண்டியவர்கள். நியாயம் எது? அநியாயம் எது? என்று புரிந்துகொள்ளும் திறனற்று அநியாயத் தீர்ப்பு அளிப்போன் என்றும் எள்ளி நகையாடத் தக்கவன், அந்த இடத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவன். கைக்கூலி பெற்றதாலும் அல்ல, மெய் எது? பொய் எது? என்று ஆய்ந்தறியும் திறனற்றதாலும் அல்ல, வழக்கிலுள்ள பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கான மனப்போக்குக் கொள்ள முடியாதபடி, இனத்தால், மொழியால், பண்பாட்டி னால் முற்றிலும் மாறுபட்டவராக இருப்பதால், பிரச்சினையைத் தவறாகப் புரிந்து கொண்டு, நியாயமான தீர்ப்பு என்று எண்ணிக்கொண்டு, அநியாயத் தீர்ப்பு அளிப்பவர் குறித்து என்ன எண்ணுவது? துரைமகனுக்கு பிரச்சினை புரியவில்லை - புரியாது! எனவேதான் விநாயகர் கோயில் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தான். தம்பி, திராவிடநாடு திராவிடருக்கு என்று வழக்காடும் நாம் எடுத்துக்காட்டாத ஆதாரமில்லை, விளக்கிக் காட்டாத வரலாறு இல்லை, தேடிக்காட்டாத புள்ளி விவரமில்லை. இவைதமை நாம் எடுத்துரைக்கும் திறன்பற்றியும் யாரும் குறை கூறிவிடுவது முடியாது. வாயாடி வம்பர்கள் - ஒன்றுக்கு ஒன்பது காரணம் காட்டுபவர்கள் - எதையும் கிளறிக்கிளறிக் காட்டுபவர்கள் என்றெல்லாம் மாற்றார்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்களல்லவா - பிரச்சினையை நாம் அவ்வளவு விளக்கிக் காட்டுகிறோம் என்பதுதானே அதற்குப் பொருள். ஆகவே, வழக்கை எடுத்துரைப்பதிலே நாம் ஆற்றலற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. எனினும், விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தா என்று தீர்ப்புக் கிடைக்கிறது. எடுத்துக்காட்டுக்காக குறிப்பிடப்படும் விநாயகர் கோயில் வழக்கிலே தவறான தீர்ப்பு தரப்பட்டதற்குக் காரணம், தீர்ப்பளித்தவர் ஒரு துரைமகன் - பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள அன்னியன். நமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காததற்குக் காரணம். அன்னியன், நமது பிரச்சினையை புரிந்துகொள்ளாதவன், வழக்கு மன்றத் தலைவனாக வீற்றிருக்கிறான் என்பதல்ல. அதுமட்டுமல்ல. கைக்கூலி வாங்கிக்கொண்டு அநியாயத் தீர்ப்பளிப்போர்; கருத்திலே தெளிவற்ற காரணத்தால், வழக்கின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், அநீதியான தீர்ப்பளிப்போர்; நீதியாகத் தீர்ப்பளித்தால், அக்ரமக்காரன், தன்னை நிந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால், அநியாயத் தீர்ப்பளிப்போர் இவ்விதம் எல்லா வகையானவரும், வழக்கு மன்றத்தில் கொலு வீற்றிருக்கிறார்கள். நீண்டகாலமாக, மூடி மறைக்கப்பட்டுப்போன ஒரு கொலை வழக்கில், இறந்துபோன வனுடைய நகத்தின் நுனி, கொலை செய்தவனுடைய சட்டையில் பதிந்து கிடப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் துப்பினைத் துணைகொண்டு, திறமைசாலி, மேலும் தீவிரமாக வேலை செய்து, இன்னான்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்து, அவனைக் கூண்டிலேற்ற வேண்டும் என்று எண்ணும்போது, அவனேதான் வழக்குமன்றத் தலைவன் அல்லது போலீஸில் உயர்தர அதிகாரி என்பது தெரிந்தால், அந்தத் துப்பறிவோனுக்கு எப்படி இருக்கும்? அதுபோன்ற நிலை, நமக்கு? குற்றவாளிகள், கொற்றம் நடத்தும் கொடுமையைக் காணவேண்டி இருக்கிறது. சாட்சிகளைத் திரட்டவும், அவர்களின் மனமயக்கத்தை, மருட்சியைப் போக்கவும், மிகமிகச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டி நேரிடுகிறது. வழக்கு மன்றம் வந்திருந்து உண்மை பேசுவதாக ஒப்புக் கொள்ளும் சாட்சிகளிலேயே சிலர், நெருக்கடியான கட்டம் எழுகிறபோது, நெளிந்துவிடுகிறார்கள். பகைக்கு அஞ்சி மாற்றாருடன் கூடிக்கொள்ளும் சாட்சிகளைக்கூடக் காண நேரிடுகிறது. இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தான பிறகு, தீர்ப்பளிக்கும் கட்டத்தின்போதோ கைக்கூலி வாங்குவோர் கருத்துக் குழப்பம் கொண்டோர் பிரச்சினைக்குப் புதியவர்கள் அலசி உண்மை காண முடியாத அன்னியர் என்ற வகையினர் வீற்றிருக்கின்றனர் - விபரீதமான தீர்ப்பு கிடைக்கிறது. இல்லையானால், தம்பி, சிக்கலற்ற வழக்கு நம்முடையது, அப்பழுக்கற்ற ஆதாரம் இருக்கிறது. அதனை எடுத்துரைப்ப திலும் நமது தோழர்கள் ஆற்றல் மிக்கவர்கள். எனினும் நமக்குச் சாதகமான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லையே - காரணம் என்ன காட்ட முடியும்? திராவிட நாடு திராவிடருக்கே என்பது நமது இதயகீதம்-உரிமை முழக்கம். திராவிடம் நமது நாடு, முன்னாளில் தனியாட்சியுடன் இருந்த நாடு. இதை அடிமைக் காடாக்கி விட்டனர். திராவிட நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு. இதை வடநாட்டுச் சரக்குக்குச் சந்தையாக்கிவிட்டனர். திராவிட நாடு, ஜாதி, மத, பேதம் எனும் பித்துப் பிள்ளை விளையாட்டு இல்லாததாக இருந்தது - அன்று. இன்று திராவிடத்தை ஜாதி மத வெறியரின் வேட்டைக் காடு ஆக்கிவிட்டனர். திராவிட நாடு பஞ்சமும் பட்டினியும் பசியும் அறியாதிருந்த நாடு. பருத்திக் கொட்டையும் புளியங் கொட்டையும் கத்தாழைக் கிழங்கும்கூட தின்று வதைபட வைத்து, பஞ்சக் காடாக்கினர். திராவிடத்தின் புகழ் தரணி முழுவதும் பரவி இருந்தது - முன்பு. இன்று திராவிடத்தின் "தலைவிதி’ டில்லியில் எழுதப்படுகிறது. திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி வைத்தது. இன்று மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு. திராவிடம் தேய்கிறது. தன்மானம் அழிகிறது. வீரத் திராவிட மக்களே! விடுதலை வேண்டாமா? பிறப்புரிமையைப் பெற வேண்டாமா? திராவிட நாடு திராவிடருக்காக வேண்டாமா? இதனை எடுத்துக் கூறுவதிலே நமது தோழர்கள் திறமை யற்றவர்களா என்றால், இல்லை, இல்லை என்பதை மாற்றாரும் கூறிவிடுவர், நாடெங்கும் நடைபெறும் நமது இயக்க நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்போர், மகிழ்கின்றனர், வியப்படைகின்றனர், பாராட்டுகின்றனர்-பொறாமையால் தாக்குண்டு புலம்புவோரும் உளர். நாவலர் நடையில் தமிழ் இலக்கியம் ஆட்சி செய்கிறது. நடராசன் பேச்சிலோ எளிமையும் தோழமையும் சுவை தருகிறது. கருணாநிதியின் பேச்சு கலை முரசு. கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது. ஆசைத்தம்பியின் பேச்சில் அழுத்தந்திருத்தம் அழகு பெறுகிறது. சீனுவாசன் பேச்சிலே சிந்து பைரவி கேட்கிறது. இளங்கோ பேச்சில் எதிரியை மடக்கிடும் முடுக்கு தெரிகிறது. சம்பத்து பேசுகிறார்; சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள். M.S.இராமசாமி பேசுகிறார்; எதிரியின் மனமும் இளகிவிடுகிறது. சிற்றரசு பேசுகிறார்; சீறி வருவோரும் சிரித்தபடி குழைகின்றனர். சத்தியவாணி பேச்சிலே சுவையும் சூடும் கலந்து கிடைக்கிறது. குடந்தை நீலமேகம் அனுபவத்தைக் கொட்டுகிறார். மதுரை முத்து தமிழ் மரபாம் வீரத்தை விளக்குகிறார். கோவை இராஜமாணிக்கம் கோலோச்சும் வழியே கூறுகிறார். ப.உ. சண்முகம் பேச்சில் பண்பும் பயனும் காண்கிறோம். காஞ்சி அண்ணாமலை கனிவு பொழிகிறார். தென் ஆற்காட்டிலே சாம்பசிவம் சாந்தம் எழப் பேசுகிறார். வடாற்காட்டு முல்லை சத்தி எண்ணப் பண்ணைக்கு வண்ணம் தேடி அளிக்கிறார். பராங்குசம் பேசும்போது பாட்டாளி படை திரளுகிறது. திருச்சி மணி பேசும்போது தீ கிளம்பித் தீயோரைக் கருக்கிவிடுகிறது. வில்லாளன் பேசுவதிலே வீரமும் விவேகமும் காண்கிறோம். தூத்துக்குடி சாமி துரத்தி அடிக்கிறார் எதிரிகளை. தங்கப்பழம் பேசுகையில் மாற்றார் பங்கம் அடைகிறார்கள். சிவசாமி பேசும்போது சீறும் மாற்றாரும் சிந்திக்கின்றனர். போளூர் பேசினால் போகக் கிளம்பும் பேர்வழிகளும், உட்கார்ந்து மகிழ்கிறார்கள். அரக்கோணம் கிருஷ்ணசாமி பேசும்போது ஆற்றல் புரியும் வகை அறிகிறோம். மதியழகன் பேச்சு மாணவர் உள்ளமெல்லாம் நிறைகிறது. பொன்னம்பலனார் பேச்சு புகையும் எரிமலை. அலமேலு அப்பாதுரையின் பேச்சிலே ஆர்வம் கொந்தளிக்கிறது. அருண்மொழியும் பூங்கோதையும் அழகு தமிழில் அகில உலகப் பிரச்சினைகளைக்கூட அலசிக் காட்டுகிறார்கள். யார்தான் அந்த இயக்கத்திலே அழகாக, சுவைபட, பொருள் விளங்க, பயன் கிடைத்திடும் வகையில், பேசாமலிருக்கிறார்கள்-பேச்சில் வல்லவர்கள், எழுத்தும் அவ்விதமே என்று கூறாதார் இல்லை. நம்மை நிந்திப்போரும் எதிர்ப்போருங்கூட, நமது நடையைப் பயின்றுகொள்ளவேண்டி வருகிறது. எனினும் தம்பி, நாம் எடுத்துரைக்கும் வழக்குக்குக் கிடைக்க வேண்டிய நீதியான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. காரணம் என்ன என்பது பற்றியும் எண்ணிப் பார்த்திட வேண்டும்-நீதியான தீர்ப்பு நமக்குக் கிடைத்திடச் செய்யும் வழிவகை யாது என்பது பற்றியும், நாம் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும். மாநில மாநாடு அத்தகையதோர் மன்றத்தில் நாமனைவரும் கூடி இருந்து, பிரச்சினைகளையும் நிலைமை களையும் ஆராய்ந்து முடிவுகள் காணும் வாய்ப்பாகும். எனவே, திராவிட விடுதலையில் நாட்டம் கொண்டுள்ள எவரும், எந்தக் காரணம் கொண்டும், இந்த வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது. தீர்ப்பளிப்போரின் கெடுமதி நமக்குக் கேடு பயப்பதாக உளது என்றாலும், காலம் எனும் பெருமன்றம், உயர்மன்றம் ஒன்று உளது - அங்கு எத்தகைய அநீதியும் துடைக்கப்பட்டு விடும் - அக்ரமம் அழிக்கப்பட்டே தீரும் - நீதி நிலை நாட்டப்படும். வரலாறு அத்தகைய "நீதி நிலைநாட்டப்பட்ட’ நெறி விளக்க நிகண்டுதானே. வகுப்பு நீதி சாயக்கண்டு வேதனை அடையும் மாணவர்கள் வகுப்பு நீதி மாயக்கண்டு திகில் கொள்ளும் அதிகாரிகள் விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நடுத்தர மக்கள். சோற்றுக்கு வழியின்றி வேதனைப்படும் ஏழை பாழைகள். நூலுக்குத் திண்டாடி, கூலிக்குப் போராடி, வாழ்வுக்குத் திண்டாடும் நெசவாளர்கள். அகவிலையால் அவதிப்பட்டு தேய்ந்து போகும் தொழிலாளர். கோழியுடன் எழுந்து கோட்டான் கூவும்போது தூங்கி, காலமெல்லாம் உழைத்து, கால்வயிற்றுக் கூழுக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள். மக்கள் பணியாற்றச் சென்று அடக்குமுறையால் தாக்கப் பட்டு, வதைக்கப்படும் பொதுநல ஊழியர்கள். இவர்கள் சார்பாகப் பேச, நீதி கேட்க, உரிமைக் கிளர்ச்சி செய்ய, நேர்மையாளர்கள், அறநெறி கொண்டோர் யாரும் இல்லையா திராவிடத்தில்? ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டிக்கும் ஆண்மை யாளர்கள் இல்லையா? இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற முறையில் நிலைமை இருக்கக் கண்டு அச்சமா? ஆமையாய், ஊமையாய் வாழ்வதா தமிழர் வீரம்? உரிமை வேட்கை கொண்டோரே! ஊருக்குழைக்கும் உத்தமர்காள்! என்ன வழிகாட்டப் போகிறீர்கள்? திரண்டெழுந்து வருகிறார்கள் திராவிடப் பொருங்குடி மக்கள், திருச்சியில், மே 17, 18, 19, 20. திட்டம் தீட்டித் தர வாரீர்! திருநாட்டை மீட்டிடும் தூய பணியாற்ற வாரீர்! திராவிடம் அழைக்கிறது. மே, 17, 18, 19, 20 திருச்சியில் மாநில மாநாடு. அரும்பு கோணிடினும் மணம் குன்றாதன்றோ! கரும்பு கோணிடினும் சுவை கோணுமோ! இரும்பு கோணியே யானையை அடக்கும் ஆயுதமாகிறது. அதுபோல நமது கழகம், "அகில உலகு’ அறிந்ததாக, விளம்பர வனப்புகள் பெற்றதாக இல்லை எனினும், அது கூறும் நீதி நிலைத்தே நிற்கும். நிதி குறைந்திடினும் நீதி குறையாது. நீளப் புகழ் பரப்பி, நெடுமரத்தில் கொடி கட்டி, நிகர் இல்லை என்று நிகண்டு தீட்டி நீட்டிடினும், நீதிதனை மறக்கும் கட்சி, நின்ற சுவர் மாரியில் சரிந்து வீழ்வதே போல், சடுதியில் சாய்ந்தே தீரும். தங்கத்தால் கோட்டை கட்டி, வைரம் இழைத்த வாயில் அமைத்து, அதனை எதிர்த்து எவரும் வராதபடி, சுற்றிலும் ஆத்திகமெனும் ஆழி அமைத்து, மத குருமார்களெனும் முதலைகளை அதிலே வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும் கொடிமரம் நாட்டி, அதிலே படாடோபம் எனும் கொடியைப் பறக்கவிட்டு, பார்ப்போரின் கண் கூசும் பளபளப்புடன், கேட்போர் செவி குடையும் அட்டகாசத்துடன் ஆண்ட கொடுங்கோலனெல்லாம், பகல் பட்டினிகளால் பஞ்சை பனாதைகளால், நொந்த உள்ளத்தினரால், தாக்குண்டு, தகர்ந்து, தரைமீது சிதறிச் சிதறி வீழ்ந்து மண்மேடுகளானது, புராணமல்ல, வரலாறு. அதனை அறிந்தோர் நாம். நாம் கூடுகிறோம், திருச்சியில்! ஏன் உங்கட்குமட்டும் இந்தத் தொல்லை? எப்படி எதிர்த்து நிற்பீர்கள் அவ்வளவு பெரிய ஆற்றலை? வேண்டுவதைக் கேட்டுப் பெற வாய்ப்பு இருக்கிறதே? வெண்சாமரம் வீசுவோருக்கு வாழ்வில் விருந்தே கிடைக்கிறதே? அதை விட்டு, ஏன் ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்று காங்கிரசின் புதிய காதலர்கள், கேட்கக்கூடச் செய்கின்றனர். கூண்டிலடைப்பட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர் சோலை, பசும்புற்றரைக்கடுத்துள்ள சாலை, பழைய கட்டிடத்தின் சாளரம், தளிர், பூ, செங்கனி ஆகியவற்றின் மீதுதானே கருத்து இருக்கும். சிறகை அடித்தடித்துக் கூண்டுக்குள் பறந்துவிழும் தத்தை, நித்த நித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக் காட்சிகளை எண்ணி எண்ணியே ஏங்கும். கொவ்வைக் கனி தருவாள் ஓர் கோகிலம்; கொஞ்சுவாள் மற்றோர் குமரி; தங்க வட்டிலில் பால் தருவாள் இன்னோர் தையல். சுவைமிகு பண்டமும் தந்து பாவையர் அதனெதிர் நின்று முல்லை காட்டி முறுவலித்தாலும், கிளியின் கருத்து மாறாது, பழைய நினைவுகொண்டு, பதறும்; துடிக்கும்; விடுதலை எப்போது என்று கேட்பதுபோலக் கூண்டுக்குள்ளேயே சிறகடித்துக் கிடக்கும். கிளியின் போக்கு இவ்வண்ணம் இருந்திடக் காண்கிறோம். நாமோ, "அறங்கிடந்த நெஞ்சும், அருளொழுகு கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும்’’ கொண்ட மரபினர். நாமா, ஆமையாய் ஊமையாய், ஆளடிமை செய்யும் அடிமையாகிக் கிடப்பது! உடலெங்கும் இரத்தமயம்! உடையோ சுக்குநூறு! வடுக்களிலிருந்து ஒழுகும் குருதியைத் துடைத்திடவும் கரம் பயன்படவில்லை! தூக்க முடியவில்லை-கரத்திலேயும வடு! எனினும் அந்தப் போர் வீரன் முகத்திலே புன்னகை பூத்திருக்கிறது. ஏன்? அவன் காலடியிலே, வாயில் குருதியொழுக பற்கள் கீழே உதிர்ந்து கிடக்க, தோல் கிழிந்து, புலியொன்று பிணமாகக் கிடக்கிறது. புலியுடன் போரிட்ட சிங்கம் அவன்! புலியின் பொல்லாப் பற்கள் அவன் உடலெங்கும் புண்ணை ஏற்படுத்திவிட்டன. நகத்தால் கீறியும், பற்களால் கடித்தும், உடலால் மோதியும், புலி, அவன் உயிர்குடிக்கத் துணிந்தது. அவன் தனியன்! இளைஞன்! ஆனால் தமிழன்!! எனவே அவன் புலியினைக் கட்டிப் புரண்டான் - அதன் இடியையும் கடியையும் பொறுத்தான். வாள் ஒடிந்தது-வீரனின் மனம் ஒடியவில்லை. கரத்தால் குத்தினான்-வாயைப் பிளந்தான் - வாலைப் பிடித்திழுத்து, புலியைத் தூக்கிச் சுற்றினான் கரகரவென்று. ஓங்கி அடித்தான் பாறைமீது, கோரக் கூச்சலிட்டுச் செத்தது. குற்றுயிராகக் கிடக்கிறான் குமரன்! அவனைக் கண்டோர், வியந்து "வேங்கையைக் கொன்ற வீரனே, எம் தோழனே, உன்னுடன் பிறந்ததற்காக நாங்கள் உள்ளம் பூரிக்கிறோம். உன்னை, எப்பாடுபட்டேனும், எமது இன்னுயிரை ஈந்தேனும், பிழைத்திடச் செய்வோம்’’ என்று கூறிப் பெருமைப் படுவர். அஃதேபோலத் தம்பி, நெஞ்சில் உரம் உண்டு; கொள்கைக்காக, கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் திறம் உண்டு; அறம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு; அதற்காக எமது ஆவியைக் கேட்டிடினும் அளித்திடும் திடமனமும் உண்டு என்று கூறி, செயலிலும் செம்மல்களாகி, மாற்றாரின் சித்திரவதைக்கு ஆளாகினாலும் சித்தம் கலங்காமல் செருமுனையில் நின்றோமானால், இன்று ஆரியத்துக்கும் வடநாட்டாட்சிக்கும் அடங்கிக்கிடப்போரெல்லாம் பெருமிதம் கொள்வர்-பீதி அழிந்தொழியும், அவர்களும், நமது நெறி நிற்கும் துணிவு பெறுவர்- நாடறியா நடராசன் நமது தமிழ் காக்க நானுழைப்பேன்!- என்று கூறி நடந்தான் சிறைச்சாலை நோக்கி! சென்று வா மகனே! வென்று வா! என்று செப்பினார் அவர் தந்தை. பாழுஞ் சிறையிலே, படுத்த படுக்கையிலே, பைந்தமிழ் வீரன், நோயுற்று நொந்தான். மரணம் நேர் வந்து நின்று அணைத்துக் கொண்டது. புகழ் மணம் பரப்பிக் கொண்டு புதல்வன் சிறையினின்றும் வெளிவருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் வீரனின் தந்தை. மாடியில்லா மண் வீட்டில் பிணம் வந்து சேர்ந்தது! தமிழரின் கண்களிலே வெள்ளம் புரண்டது. தாலமுத்து என்றோர் தீரன் தீந்தமிழைத் தாக்க ஒரு தில்லுமொழி துணிந்ததா என்றுரைத்து நுழைந்தான் சிறைக்குள்-பிணந்தான் வெளியே எடுத்தெறியப்பட்டது. முழக்கமிட்டுக்கொண்டு சிறைக்குள்ளே நுழைந்தான், மூச்சு போய்விட்டான பிறகே வெளியே அனுப்பினர். இன்னலால் தாக்குண்டாள் இளம் மனைவி. இனி உலகே எனக்கோர் சிறையன்றோ என்று கேட்டு கண்ணீர் வடித்து நின்றாள். சூழ இருந்தோர் புழுப்போல் துடித்தனர். தம்பி! இந்த வீரமும் தியாகமும் வீண் போயிற்றோ! இல்லையே. கட்டாய இந்தி கல்லறை சென்றே விட்டது! கபட இந்திதான் காலாட்டம் நடத்துகிறது! தாலமுத்துவும் நடராசனும், எந்த கட்டாய இந்தியை எதிர்த்தொழித்திட நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்டு உயிர் நீத்தனரோ, அந்தக் கட்டாய இந்தியைப் புகுத்திய, ஆச்சாரியார் இன்று, இந்தி வெறியை, இந்தி ஆதிக்கத்தைக் கண்டிப்பதுடன், பொது மொழியாக இருக்கும் ஆற்றல் இந்திக்கு இல்லை, ஆங்கிலமே பொது மொழியாதல் வேண்டும் என்று எடுத்துக் கூறிடவும், நம்மை எல்லாம் அழைத்துப் பேசிடவும் முன்வந்துள்ளார் என்றால், வீரம் வீண்போயிற்று என்றா பொருள்! தியாகம் ஒளி விளக்காகிக் காட்டுகிறதே இன்று. நாமும், தம்பி! நமது ஆற்றல் மூலம், தியாகத்தின் மூலம், விடுதலை விளக்கு ஏற்றி வைத்திட வேண்டும். ஏறத்தாழ ஆறாயிரவர் நம்மில் சிறை சென்றவர்களாகி விட்டோம். நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தடியடியும் கிடைத்து விட்டது. நமது தோழர்களிலே சிலர், துப்பாக்கிக்கும் பலியாகி விட்டனர். ஆடவரும் கண்டு அஞ்சத்தக்க ஆற்றலைக் காட்டும் ஆரணங்குகள் நமது அணிவகுப்பில் உளர். எதையும் தாங்கிக்கொள்ளலாம், அண்ணா, வேல் பாயட்டும் விலாப்புறத்தில், வாள் வீசட்டும் கரத்தில், கழுத்தில், ஆனால் வன்கணாளர் வீசும் இழி மொழியை, பழிச் சொல்லை எப்படித் தாங்கிக்கொள்வது என்று துவக்கத்திலே கேட்டுக் கொண்டிருந்தோரெல்லாம் கூட, இன்று, எதையும் தாங்கும் இதயம் உண்டு என்பதைக் காட்டி விட்டனர். எனவே தம்பி, விடுதலைக் கிளர்ச்சியிலே வெற்றி பெறுவதற்கான எல்லாம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது; நாட்டிலே காணக்கிடக்கும், நயவஞ்சகம், ஏமாளித்தனம், ஆகியவற்றினுக்கு மட்டும் அஞ்சாமல், அளிக்கப்படும் அக்ரமத் தீர்ப்புகளை மாற்றி அமைத்திடும் வழி அறிவோம் என்று சூள் உரைத்து அறப்போரில், ஈடுபடுவோமானால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது திண்ணம். இந்த உறுதியைக் காட்ட உள்ள உரம் படைத்தோரை, உன் உடன்பிறந்தோரை, உடைமை போயினும், உயிரே போவதாயினும் உரிமையை மட்டும் இழந்திடமாட்டோம் என்று முழக்கமிடும் விரத்தோழர்களை, உடனழைத்துக் கொண்டு, கோழையையும் வீரனாக்கும் பார்வையுடன், கொல்லும் புலியும் அஞ்சத்தக்க நடையுடன், அரிமாபோல் நோக்கம் கொண்டு, அருமைத் தம்பி! திருச்சிக்கு வந்து சேர். 17, 18, 19, 20 திருச்சி வருவதற்கு முன்பு உனக்கு, நீ இருக்குமிடத்திலும், உலவும் இடங்களிலும் நிரம்ப வேலை இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநில மாநாடுபற்றி எங்கும் எடுத்துக் கூறவேண்டும்-எல்லா வகையாலும் நாடறியச் செய்திட வேண்டும். பெரிய "இதழ்கள்’ ஒரு வரியும் எழுதா! ரேடியோவில் மூச்சு பேச்சு இராது. இரயில் நிலையங்களிலே விளம்பரப் பலகைகள் கிடையாது. உன்னைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார் - நமது பொதுச் செயலாளர். எனவே, பேச்சும் எழுத்தும், மாநில மாநாடு பற்றியே இருத்தல் வேண்டும்! பட்டிதொட்டிகளிலும் சேதி பரவிடச் செய்ய வேண்டும். எத்தனை பெரிய இருட்டடிப்பையும் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்பும் ஆற்றல் உனக்குண்டு. எனவே தம்பி, இன்றே புறப்படு நண்பர்களைக் காண, உற்சாகத்துடன் எடுத்துக் கூறு மாநில மாநாடு பற்றி. எம்மைச் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமா, வாருங்கள் திருச்சிக்கு வந்து காணுங்கள் எழுச்சியை; எமது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள ஆவல் கொண்டோரே, திருச்சி வருவீர், எமது தோழர்கள் தரும் தெளிவுரையைச் செவி மடுப்பீர்; இதுகளா என்று ஏளனம் பேசுவோரே, இதுகள் சாதித்திருக்கும் செம்மையை அறிந்துகொள்ளத் திருச்சி வாரீர் என்று அனைவரிடமும் எடுத்துக் கூறு. தம்பி! நமது மாநாடு, ஓர் பாசறை மட்டுமல்ல- ஓர் பல்கலைக் கழகம் என்பதையும் அவர்கட்கு எடுத்துச் சொல்லு. சாக்ரடிஸ் முதல் ஷா வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலே வாழ்ந்து, உலகை வாழவைத்த உத்தமர்கள் பற்றிய விரிவுரைகளென்ன, விஞ்ஞான வித்தகர்கள் பற்றிய தெளிவுரைகளென்ன, விடுதலை வரலாறு பற்றிய விளக்க உரைகளென்ன-இவை யாவும், நாலு நாட்கள் நடைபெறும் நமது மாநாட்டிலே, தித்திக்கும் தமிழை எத்திக்கும் பரப்பிடும் சொல்லேர் உழவர்கள் எடுத்துரைத்திடப் போகும் சிறப்பினை அவர்கட்கெல்லாம் எடுத்துக் கூறு. காவியக் கனிரசமும், ஓவியச் சிறப்பும் உண்டு என்பதனை எடுத்தியம்பு. கருத்தைத் தெளிய வைத்திடும் தேனமுதை கலை வல்லோர் இசை மூலமும் நாடக மூலமும் தர இருக்கும் நேர்த்தியை எடுத்துக் கூறு. எல்லாவற்றினுக்கும் மேலாக, எந்தையர் நாடு இன்றுள்ள இழிநிலை போக்கப்பட்டு, தனி அரசு பெற்று, தரணியில் ஓர் திலகமெனத் திகழ்வதற்கான வழிவகை பற்றிய பரணி பாடிட ஓர் படை திரண்டு நிற்கும் காட்சியின் மாட்சியினை எடுத்துக் கூறு. நாட்கள் அதிகமில்லை தம்பி! நினைவிலிருக்கட்டும். பல செலவினங்களை இப்போதே சுருக்கிக்கொள்ள வேண்டும்-வசதிகளைத் தேடிப் பெறவேண்டும். திரண்டெழுந்து வந்து, இருண்ட மனத்தினரும் அறிவுச் சுடர் பெறுமளவுக்கு, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கி, திராவிடத்திலோர் புத்தொளி எழச் செய்யும் பெரும் பொறுப்பு உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒளி படைத்த கண்ணினாய், வா, வா, வா! உறுதிகொண்ட நெஞ்சினாய், வா, வா, வா! என்று உரிமையுடன் அழைக்கிறேன். தமிழுண்டு தமிழ் மக்கள் உண்டு இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற பண் எழுப்பி, படை திரட்டிக்கொண்டு வா. பாழ்படும் பழமை சூழ்வது திறமா? பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா? என்று நாட்டிலே இன்னமும் நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்டுத் தெளிவு பெறாமலிருக்குமிடங்களிலெல்லாம், சென்று கேட்டு-சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களை எல்லாம் திருச்சிக்கு வருக! திரு இடம் இதுவென அறிக என்று கூறி அழைத்து வா. நல்ல தீர்ப்பு நமக்குக் கிடைக்க வேண்டும் தம்பி அதைப் பெற்றுத்தர, உன்னால்தான் முடியும். அந்த நோக்குடன் திருச்சி மாநாட்டுக்கு வந்து எழில் காட்டி, எழுச்சியூட்டி, இன்பத் திராவிடம் காண்பதற்கான வழிவகை தீட்டிச் செயலில் ஈடுபட, உறுதியுடன் வந்து சேர வேண்டுகிறேன். நமது நோக்கம் தூய்மையானது - வழக்கு சிக்கலற்றது - ஆதாரம் அப்பழுக்கற்றது; முயற்சியில் நாம் சிறப்புடன் இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்புதான் திருச்சி மாநாடு - மறவாதே! "எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக வல்லார்க்கும் மற்றுமுள்ள செல்வர்க்கும் நாட்டுடமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும் விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே.’’ அன்பன், அண்ணாதுரை 22-4-56 அரிமா நோக்கு! தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள்- திராவிட நாடு. தம்பி, ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி. பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டிருக்கிறான். வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம், இந்த மாறுதலுக்குக் காரணமாக இருந்த புத்தர், அவர் எதிரே இந்த மாறுதலின் காரணமாக மதிப்பிழந்த மமதைக்காரன். புத்தருடைய உள்ளத்திலே ஓர் உக்கிரமான புயல் கிளம்பும், கடுஞ்சொற்களை அவர் அள்ளி வீசுவார், உடனே காகூவெனக் கலாம் விளைவிக்கலாம் என்பது அக் கபடனின் கருத்து. அக் கசடன் எண்ணியபடியா புத்தர் இருப்பார்! அதற்கா அவர் புத்தர் ஆனார்! "அன்பரே! ஒன்று கேட்கிறேன். ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்பாக ஒரு பொருளை அளிக்கிறார். ஆனால் மற்றவரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். அப்போது அந்தப் பொருள் யாருக்கு உரியது?’’ என்று புத்தர் கேட்டார். வேத மார்க்கத்தவனுக்கு இந்தக் கேள்வியே வேடிக்கையாகப் பட்டது. வேதத்தின் உட்பொருள்பற்றிய கேள்விகள் உபநிஷத்திலே சில சந்தேகங்கள், இப்படி ஏதேனும் கேள்வி கேட்கக்கூடாதா - என் பாண்டித்தியத்தைக் காட்டி இருப்பேனே! இந்தப் புத்தர், சிறுவர்களுக்கும் எளிதில் விளங்கும் விஷயமாக ஒரு கேள்வி கேட்கிறாரே! சேச்சே! என்ன கேவலம் இது - என்று எண்ணிக்கொண்டு அலட்சியமாக "ஒருவர் தந்த பொருளை மற்றவர் வேண்டாம் என்று கூறிவிட்டால், அப்பொருளை அளிக்க முற்பட்டவருக்கே அந்தப் பொருள் உரிமையாகும்’’ என்று பதிலளித்தான். "சரி இப்போது நீர் எனக்கு அளித்த வசைமொழிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதை நீரே வைத்துக் கொள்ளும்’’ என்றார் புத்தர். வேத மார்க்கத்தவன் திகைத்துப் போனான் - வெட்கமுமடைந்தான் - ஏனெனில் தந்த பொருளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், தந்தவருக்கே அப்பொருள் மீண்டும் வந்து சேர்ந்துவிடும் என்ற தத்துவத்தின்படி, புத்தர்மீது புரோகித மார்க்கத்தான் பூட்டிய வசை மொழிகள் அத்துணையும் திரும்ப அவனிடமே அல்லவா வந்துவிடுகின்றன! அந்த வசை மொழிகளுக்கு அவனே அல்லவா உரிமையுள்ளவனாகி விடுகிறான். எவ்வளவு கேவலமான வசைமொழிகளை வீசினான். கெடுமதியாளன் மதத் துரோகி வேத நிந்தகன் நாத்திகன் நாசமாய்ப்போவான் நரகம் சேர்வான் அவன் வீசிய வசைமொழிகளிலே, இவை தரத்தில் சிறிதளவு உயர்ந்தவை! இவையும் இவற்றினைவிட மட்டமான இழி மொழிகள் அத்தனையும், புத்தர் திருப்பி அல்லவா தந்துவிட்டார்! யாரிடமிருந்து கிளம்பினவோ, அவனிடமே அல்லவா அவை வந்து சேர்ந்துவிட்டன! வெட்கப்பட்டான் – அது மட்டுமல்ல - புத்தருடைய பேரறிவு, அவன் மனதை வென்று விட்டது. எத்துணை அடக்கம்? என்ன விநயம்? எவ்வளவு திறம்பட என் கேவலத் தன்மையை நானே உணரும்படிச் செய்துவிட்டார்! இவர் உத்தமர், ஐயமில்லை! உயர்ந்தோர், அட்டியில்லை! புத்தர் இவரே, புவி எங்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றெல்லாம் அவன் உள்ளம் எண்ணிற்று. தம்பி! அடிக்கடி என்னிடம் நீ மல்லுக்கு நிற்கிறாய் - மாற்றார்கள்-உற்றார்களாக இருக்கவேண்டியவர்கள் கூட - தம் மனம்போன போக்கிலே நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள் - பழிச்சொற்களை வீசுகிறார்கள்-இழிவாகப் பேசுகிறார்கள் - கேட்கச் சகிக்கவில்லை - வேதனையாகவும் இருக்கிறது - ஏன் நாம் பதிலளிக்கக்கூடாது - ஏன் நாம் அவர்களின் குட்டுகளை உடைத்திடத் தயங்க வேண்டும் - அவர்களிடம் உள்ள கொள்கைக் குழப்பங்களையும் முரண்பாடுகளையும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கேவலப் போக்கினையும், சொல் வேறு செயல் வேறாக இருக்கும் தன்மையினையும் ஏன் அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்கிறாய் அல்லவா! எனக்கு, நான் இப்போது உனக்குக் காட்டினேனே காட்சி, இதிலே உள்ள கருத்துத்தான், வேதனை பிறக்கும்போதெல்லாம் துணை நிற்கிறது. நமது உள்ளத்தில் தூய்மை இருந்தால், தூற்றல்பற்றி நமக்கென்ன கவலை - அது நம்மை என்ன செய்துவிடும்? தம்பி! தூற்றல் நம்மை என்ன செய்துவிட்டது? நம்முடைய எந்த முயற்சியைக் குலைத்துவிட்டது? எந்த வேலையைக் கெடுத்துவிட்டது? எந்தத் திட்டம் பட்டுப்போயிற்று? வளர்ச்சி பாழ்பட்டதா-கவர்ச்சி கெட்டொழிந்ததா? தூற்றுவோர் தூற்றித் தூற்றி, தமது தூற்றல் ஆற்றலற்றுப் போவது கண்டு மனம்புழுங்கி மேலும் தூற்றிக்கொண்டே காலம் கடத்தி வருகிறார்களே தவிர, இந்தத் தூற்றலின் காரணமாக, நாடு, நம்மிடம் காட்டவேண்டிய நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டதா? ஆதரவும் அன்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதைத்தான் காண்கிறோமே தவிர, பரிவும் பாசமும் வளரத்தான் காண்கிறோமே ஒழிய, நமக்கு என்ன குந்தகம் ஏற்பட்டுவிட்டது? ஒன்றுமில்லை. “போதுமா, போதுமா?’’ என்றுதான் கேட்கிறார்கள். மிகப் பெரிய அளவில், திருச்சியில் தோழர் சாம்புவின் மேற்பார்வை யிலே போடப்பட்டு வரும் கொட்டகையைக் கண்டு.”எதற்காக இவ்வளவு பெரிய கொட்டகை?’ என்று எவரும் கேட்கக் காணோம். நமது வளர்ச்சி, தூற்றலால் துளைக்கப்பட்டிருந்தால், சாம்புவுக்கு இத்தனை பெரிய அல்லல் ஏற்பட்டிராதே! - நிம்மதியாக - கெம்பீரமாக - திருச்சி தேவர் மண்டபத்தில் கூடிக் கலைந்துவிட்டிருக்கலாம். இப்போது தமிழகமே அல்லவா தம்பி, மாநாட்டு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. துண்டு வெளியீடுகளை ஊரூருக்கும் தருகிற தொண்டிலும், அங்காடிகளிலும் சதுக்கங்களிலும் அழகான விளம்பரத் தட்டிகள் அமைத்திடும் காரியத்திலும், அலுவலகத்திலே என்னென்ன காரணம் காட்டி விடுமுறை பெறுவது என்ற வித்தையிலும், இந்தச் செலவைக் குறைப்போமா, அந்தச் செலவை நீக்குவோமா, என்ன செய்தால் இருபதோ முப்பதோ மாநாட்டுச் செலவுக்காகக் கிடைக்கும் என்று சிக்கனம் பயில்வதிலும் ஈடுபட்டுள்ளவர்களின் தொகை கொஞ்சமா! இவர்கள் அனைவரும் யார்? தூற்றுவோரின் அகராதிப்படி துரோகிகள் மாபாவிகள் அப்பாவிகள் தூற்றல் நம்மைத் துளைத்துவிட்டது என்றா பொருள்? நாம் காணும் இந்த எழுச்சியுடன் மகிழ்ச்சியும், தூற்றுவோர் குறித்துக் கவலை கொள்ளற்க, நாங்கள் அந்தத் தூற்றலை ஏற்றோமில்லை, பொருட்படுத்தினோமில்லை, அணிவகுத்து நிற்கிறோம், அறப்போரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம், அழைப்பை ஏற்றுக்கொண்டு களம்புகத் தயாராகிவிட்டோம், திட்டம் தயாராகட்டும், தியாகத்துக்குப் பஞ்சமில்லை, தீரருக்குக் குறைவில்லை, திருவிடம் தலைநிமிர்ந்து நிற்கிறது - என்று நாடு, நம்மை நோக்கிக் கூறுகிறது என்றல்லவா பொருள்? நடந்தே வரப்போகிறோம். சைக்கிள் படை கிளம்புகிறது. மாட்டு வண்டிகளில் வருகிறோம் தனி இரயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம். என் அருமைத் தம்பி! தூற்றல் நமது வளர்ச்சியைக் கெடுத்துவிடுமோ, குலைத்துவிடுமோ என்பதல்ல-நமக்குக் கிடைத்துள்ள இந்த வளர்ச்சியின் வேகத்தையும், அளவையும், தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொண்டு, அதை நல்லமுறையில் பயன்படுத்தி குறிக்கோள், வெற்றிபெறச் செய்ய வேண்டுமே அதற்கான அறிவுடைமை நமக்கு ஏற்பட வேண்டுமே, அதற்குத் தகுந்த கூட்டு எண்ணம், கூட்டு முயற்சி, நம்மிடம் குன்றாமல் குறையாமல் நின்று நிலவ வேண்டுமே என்பதுதான். ஐந்து ஆறாயிரம் தோழர்கள் நம்மில் சிறை சென்றிருக்கிறோம். 144 தடைகளைத் தூளாக்கி இருக்கிறோம் - போலீஸ் தடியடி நம்மில் நூற்றுக்கணக்கானவர்களைப் பதம் பார்த்து விட்டது! துப்பாக்கியும் துளைத்துவிட்டிருக்கிறது. இவைகளைத் தாங்கிக்கொள்ளும் “சக்தி’ நமக்குக் கிடைத்திருப்பது மட்டுமல்ல நாம் கவனிக்க வேண்டியது, இப்படிப்பட்ட”அடக்குமுறை’ மூலம் நம்மை அடக்கித் தீரவேண்டும் என்ற நிலைக்கு ஆட்சியாளர் வந்து தீரவேண்டி இருக்கிறதே. அதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பதவிப் பிரியர்கள் பல்லிளித்துக் கிடக்க, பணக்காரக் கூட்டம் பாதசேவை செய்ய, பத்திரிகை முதலாளிகள் பராக்குப் பாட பவனி வருகிறது, பாரத மாதாவின் ஆசி பெற்ற ஒரு கூட்டம். இதனை, பஞ்சையும் பராரியும் பகல் பட்டினியும் பக்கிரியும் எதிர்க்கிறது. அதிகார வெறியரால் அலட்சியப்படுத்த முடியவில்லை, அடக்குமுறை வீசித்தான் இந்த எதிர்ப்பை ஒழிக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கிறது. தோள் வலியும் வாள் வலியும் கொண்ட அரசுகளே, புரட்சிப் புயலில் சிக்கியகாலை பொடிப் பொடியான செய்தியைச் சுவைபடக் கூறுகிறது வரலாறு. சூதுச் சூலில் தோன்றி வஞ்சனைத் தொட்டிலில் ஆடி, சூழ்ச்சிப் பள்ளி பயின்று, கெடுமதியைத் தோழனாகக்கொண்டு, கொடுங்கோலைக் குருவாக்கிக்கொண்ட ஒரு கொற்றவன், சீறி எழும் மக்களின் அறப்போரை எதிர்த்து நிற்கவா முடியும்! அங்ஙனம் எண்ணுவது பேதமை! ஆயினென்! பெரும்பாலும் கொடுங்கோலர், பேதமையைத்தான் பெருந்துணையாகக் கொள்கின்றனர். எனவேதான் வீழ்ந்துபடுகின்றனர். எனினும் வரலாறு அறியா மக்கள் இங்கு ஏராளம் என்ற எண்ணத்தால் ஓர் அசட்டுத்தனமான துணிவு பெற்று, இன எழுச்சியை, விடுதலைக் கிளர்ச்சியை எதிர்த்தொழித்திடக் கிளம்புகின்றனர், சொந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சுகபோகிகள். திருச்சி மாநில மாநாடு - அரிமா நோக்கு - என்றார் நம் நாவலர். காட்டரசனாம் சிங்கம் நடந்து செல்வதிலே காணப்படும் கெம்பீரத்தை மட்டுமல்ல, அதன் பார்வையிலே காணக்கிடக்கும் வீரம் மட்டுமல்ல, அவர் குறிப்பிடுவது, சென்று கொண்டிருக்கும் காட்டரசன் ஓரிடத்திலே நின்று, தான் நடந்துவந்த வழியினை ஒரு முறை பார்த்துவிட்டு, மேலால் நடக்குமாம். அதபோலத் தம்பி, நாம் மாநில மாநாட்டிலே கூடி, இதுவரை நாமாற்றியுள்ள பணியினைப்பற்றி எண்ணிப் பார்த்து, எழுச்சிபெற்று, மேற்கொண்டு நமது பணியினைத் தொடங்கப்போகிறோம். நாம் கடந்து வந்த இடம், சாதாரணமானதல்ல. இன்னல்கள் பலவற்றினைச் சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம். இதயம் எதையும் தாங்கும் வலிவு பெற்றுவிட்டது. அல்ஜீரியா, தூனீசியா, மொராக்கோ, சைப்ரஸ் - எங்கும் விடுதலைக் கிளர்ச்சி முழக்கம் கேட்கிறது. அங்கெல்லாம், இரத்த வெள்ளத்திலே நீந்துகின்றனர் விடுதலை வீரர்கள். தாயகத்தை மீட்பேன்! - என்று சூளுரைத்திடும் வாலிபன் சுட்டுத் தள்ளப்படுகிறான். குண்டுமாரி பொழிந்து, கொடியோர் விடுதலைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிடத் துணிகின்றனர்! கொடுமைதான் - எனினும் மாற்றான் முன் மண்டியிடுவதைக் காட்டிலும், அவன் வீசும் குண்டுக்குப் பலியாகி வீழ்வதே மேல் என்று வீரர்களால் துணிவுபெற முடிகிறது. இங்கு நடைபெறுவதோ, அத்தகைய கொடுமை அல்ல; கேவல மானதோர் போக்கினை, மாற்றார் அல்ல, உற்றார், உடன்பிறந்தோர் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியை இழித்துரைத்திடவும், மாற்றானுடன் கூடிக்கொண்டு சொந்த நாட்டவனைக் காட்டிக் கொடுக்கவும் முன் வந்துள்ளனர். வடநாட்டு ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும், திராவிடம் தனி அரசாகவேண்டும் என்று நாம் பரணி பாடும்போது, வடநாட்டார் வரிந்து கட்டிக்கொண்டு நம்மை எதிர்த்திடக் கிளம்பினால், நாம் திகைத்திடமாட்டோம்-திராவிடர்களிலேயே சிலர்-தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள மறுக்கும் சிலரன்றோ, சீறி எழுகின்றனர், சதிபுரிகின்றனர், விடுதலைக் கிளர்ச்சியை ஒழித்திடத் துடிக்கின்றனர். இந்த வேதனை தரும் கொடுமை, வேறு எங்கும் இல்லை! அல்ஜீரியாவுக்கு இப்போது ஏன் விடுதலை? பிரான்சு ஆட்சியிலேயே இருக்கட்டும் என்று பேசிட அந்நாட்டிலே பக்தவத்சலங்கள் இல்லை!! இங்கு அத்தகையோர் ஆளவந்தார்களாகி உள்ளனர். ஐஸ்லந்து காஸ்ட்டா ரிகா ஜோர்தான் லக்சம்பர்க் லிபியா நைகார்குவா பனாமா இவைகள் யாவும் ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினர்களாகி உயர்வு பெற்றுள்ளன. எமது சிங்கப்பூர் இந்த நாடுகளை விட அளவிலே பெரிது. நியூஜிலாந்து, ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினரான போது, அந்த நாட்டிலே இருந்ததைக் காட்டிலும் அதிகமான குடிவளம் சிங்கப்பூரில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினராக உள்ள சுதந்திர நாடுகள் 16 சிங்கப்பூரின் வருவாயைவிட குறைந்த அளவு வருவாய் கொண்டன. எனவே, சிங்கப்பூர் தனி அரசு நடாத்த சகல உரிமையும் வசதியும் கொண்டதேயாகும். எனவே, சிங்கப்பூர் இனியும் பிரிட்டிஷ் காலனியாக இருக்கும் இழிநிலை இருத்தல் கூடாது - சுதந்திர நாடாக வேண்டும். சிங்கப்பூர், மலேயா போன்றே, பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இடம் பெற்று வாழ விரும்புகிறது - ஆனால் சுதந்திர நாடாகவேண்டும். டேவிட் மார்ஷல் இதுபோல, சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்று இப்போது இலண்டனில் கேட்டுக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனுடன் பேசி முடிவு காண்பதற்காக, 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக்குழு சென்றிருக்கிறது, டேவிட் மார்ஷல் தலைமையில். இந்தத் தூதுக் குழுவில் எல்லா அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன - சிங்கப்பூர் முதலமைச்சராக உள்ள டேவிட் மார்ஷல் தலைமை வகிக்கிறார். பேச்சு வெற்றி அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மலேயாவின் சுதந்திரத்துக்காக, இதுபோல, பிரிட்டனில் உள்ள ஆட்சியாளர்களிடம் பேசி வெற்றி கண்டார் துங்குரகிமான். அதுபோன்றே டேவிட் மார்ஷலின் முயற்சியும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சுதந்திரம் கேட்கிறது சிங்கப்பூர்! தன்னைவிட அளவிலே - எந்தெந்த நாடுகள் சிறியவை - அவைகளெல்லாம் சுதந்திர நாடுகளாகத் திகழ்ந்து, ஐக்கிய நாடுகள் சபையிலேயும் இடம்பெற்று, ஏற்றம்பெற்று வாழ்வதை ஆதாரமாகக் காட்டி சுதந்திரம் கேட்கிறது. துணிவுடனும் உரிமையுடனும், கட்சிப் பாகுபாடுகளை மறந்தும், நாட்டுப் பற்றுகொண்டு, விடுதலை உணர்ச்சி கொண்டு, சுதந்திரத்துக்காக முழக்கமிடும் சிங்கப்பூரின் ஜனத்தொகை 12,00,000! "திராவிட நாடு என்ற நமது இலட்சிய நாட்டிலே, தமிழர்கள் மட்டும் இரண்டு கோடி!! பன்னிரண்டு இலட்சம் மக்கள் கொண்ட சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டுமென்று கேட்கிறது, - திராவிட நாடு என்பது, துண்டு போடும் திட்டம் - சிறு நாடாக்கிச் சீரழியும் திட்டம் என்று இங்கு பேசுவதற்குக் கட்சிகள் உள்ளன! பன்னிரண்டு இலட்சம் மக்களே கொண்ட நாடாயிற்றே, இதற்கோ சுதந்திரம் என்று ஐயம்கொள்ள வேண்டாம். இதனினும் குறைந்த ஜனத்தொகைகொண்ட ஜோர்தானும், லிபியாவும், லக்சம்பர்க்கும் பிறவும் சுதந்திர நாடுகளாக உள்ளன அறிந்துகொள்மின் என்று டேவிட் மார்ஷல் எடுத்துரைக்கிறார், மாற்றுக் கட்சிகள் எல்லாமும் "மற்றப் பிரச்சினைகளிலேதான் மாறுபாடான கொள்கை எமக்கு உண்டு, நாடு சுதந்திரம் பெறும் பிரச்சினையில், எமக்குள் கருத்து வேற்றுமையே கிடையாது. சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்பதிலே எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமனப்பட்டு உள்ளன’ என்று கூறுகின்றன. இங்கு திராவிடநாடு திராவிடருக்கு என்றால், திராவிட நாடாவது சுடுகாடாவது என்று பேச கட்சிகள் உள்ளன. சிங்கப்பூருக்கென்று ஒரு வரலாறு -பண்பாடு - மொழி - மார்க்கம் - ஏதேனும் தனியான சிறப்பு அளிப்பதாக இருக்கிறதா என்றால் - இல்லை. திராவிடமோ, பிற பல நாடுகள் வடிவமும் வண்ணமும் வாழ்வும் வளமும் பெறாத நாட்களிலேயே, தனிச்சிறப்புடன் திகழ்ந்ததற்கு வரலாறு காணக்கிடக்கிறது. எனினும், இங்கு, "தமிழ்நாடு என்ற பெயர் எப்போது இருந்தது’ என்று தமிழில் கேட்டிட ஓர் தமிழர் இருக்கிறார்!! தொல்காப்பியம், அகம், புறம், சிலம்பு, மணி-எவையும் சிங்கப்பூருக்குக் கிடையாது. அங்கு இளங்கோவோ, காக்கைப் பாடினியாரோ, கபிலரோ, வள்ளுவரோ, கம்பரோ காளமேகமோ இருந்ததில்லை - எனினும் அந்தச் சிங்கப்பூர் சுதந்திர நாடாக விரும்புகிறது, இங்கோ வடவருக்கு அடிபணிந்து, நமது நாவலர் அடிக்கடி எடுத்துக்கூறுவது போல, “சோற்றா லடித்த பிண்டங்களாக’’ இருந்திடச் சம்மதம் அளித்து, அதையே”தேசியம் என்று தெகிடுதத்தம் பேசிட ஓர் கூட்டம் இருக்கிறது-அக்கூட்டம் கோலோச்சும் நிலையையும் கைப்பற்றிவிட்டிருக்கிறது. தம்பி! இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கித் தீர வேண்டும். கோலோச்சும் நிலையினின்றும் இக்கெடுமதி யாளர்கள் விரட்டப்பட்டாக வேண்டும். விடுதலைக் கிளர்ச்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக இந்தக் காட்டிக் கொடுக்கும் கயவர் கூட்டத்தினைக் கருவறுத்திட வேண்டும். அதற்கான திட்டமெல்லாம் தீட்டி, தம்பி! நண்பர் குழாத்துடன், திருச்சி வந்து திரு இடத்து மணிவிளக்கென ஒளி தந்து, மாநாட்டினை மகத்தான வெற்றிகரமாக்கு. மாநாடாமே… இதுகளுக்கு?… என்று இன்றும் ஏளனம் பேசுவோர் உளர்! அவர்கள், கண்டு திகைத்திடத்தக்கதோர் பிரம்மாண்டமானதோர் அணிவகுப்பு கூடியாக வேண்டும் திருச்சியில். அன்பன், அண்ணாதுரை 29-4-56 திருமணம் சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் திருமண விழாவும். தம்பி, ஒரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதால் பண்பு கெட்டுப்போன திராவிடச் சமுதாயத்தில், புத்தறிவு புகட்டும் புதுமுறை முயற்சியல்லவா, நமது சீர்திருத்தத் திருமண முறை! அதைக் காண்பதிலேயே ஓர் களிப்பு, அதில் கலந்து கொள்வதிலே ஓர் பெருமை, அதனால் ஓர் இனிமை ஏற்படுமே! நானா, திருமணம் காணத் தடை சொல்லப் போகிறேன். வா, அண்ணா! போகலாம் என்றுதான் கூறப் போகிறாய் தெரியும். அங்கு சென்றால், பண்டைத் தமிழகத்தின் பாங்கும், பகைவரின் பாதம் பற்றுவோராக நம் இனத்தவர் கீழ்நிலை சொல்லுமுன் திருஇடத்தில் இருந்து வந்த சீரும் சிறப்பும், தலைவன் தலைவி என்ற தொடர்பிலே இருந்த தூய்மையும் தோழமையும், சத்தற்ற சடங்குகட்கும் பொருளற்ற மந்திரங்கட்கும், புரோகிதப் பித்தலாட்டத்துக்கும் ஆட்படாமல், காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற கொள்கையும், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்ற மறைமணி ஒளியும், திருமணம் என்பது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் எனும் பேருண்மையும், கேட்போர் ஏற்கும் வண்ணம் எடுத்தியம்பிட நமது தோழர்கள் வருவார்கள், கேட்டு இன்புற, பழைமை விரும்பிகள் கூடப் பேராவல் காட்டுவர். மணமாலை அணிந்து முகத்தை மலராக்கிய நிலையில் மணமக்கள் அமர்ந்திருப்பர், அங்கு புகையும் நெடியும், குமுறலும் குளறலும், வாதமும் பேதமும், வம்பும், வல்லடியும் இரா. எவரிடமும் இன்முகமும் இன் மொழியுமே காணப்படும், அப்படிப்பட்ட அழகிடம் வருவதற்கு யாருக்குத்தான் விருப்பம் எழாது, இதோ வருகிறேன், அண்ணா! எங்கே அந்தத் திருமணம்? தலைமை தாங்குபவர் யார்? எவரெவர் பேசுவர் என்றெல்லாம்தான் கேட்டிடத் துடிக்கிறாய். ஆனால் தம்பி, நான் உன்னை அழைப்பது, சீர்திருத்தத் திருமணத்துக்கு அல்ல! இது வேறோர் வகையான - முற்றிலும் வேறான - திருமணம். எனினும், கண்டால், உள்ளத்திலே ஓர் எழுச்சி பொங்கும், உரையிலே ஓர் புது உறுதி ஒலிக்கும், கண்களிலே ஓர் புத்தொளி எழும். இத்தகைய திருமணம், அடிக்கடி காணக் கூடியதுமல்ல, கண்டால் எளிதிலே மறந்துவிடக்கூடியதுமல்ல என்பதனை நீயே ஒப்புக்கொள்வாய். நெடுந்தொலைவிலே நடைபெறும் திருமணம் - தம்பி - சிந்தனைச் சிறகடித்துக்கொண்டு கிளம்புகிறோம். எளிதாகச் சென்றுவிடலாம், கடலும் மலையும் குறுக்கிட்டு நம்மைத் தடுத்திட முடியாது - பல்வேறு நாட்டுக்கட்டு திட்டம், சட்டம் எதுவும் நம்மைத் தொட்டிழுத்திடாது அல்லவா! மணமக்கள், தம்பி, ஆமாம்! முகத்திலே இனிமையுடன் ஓர் கெம்பீரம் தெரிகிறதல்லவா!! மணவிழாவில் கலந்து கொள்வதிலே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டோராகக் கூடி இருப்போர், ஏன், மணமக்களை அப்படிப் பாசத்தோடு பார்க்கின்றனர் என்று புரியவில்லை அல்லவா? இதைக் கேள் தம்பி, புரியும். மணமகன் - ஓர் கைதி! ஆமாம், தம்பி, சிறையினின்றும் விடுதலை பெற்று, உடனே, முன்பே ஏற்பாடாகி இருந்த திருமணத்தை முடித்துக் கொள்கிறான் போலும் என்று எண்ணிக்கொள்வாய். அது போன்ற நிகழ்ச்சியேகூட உள்ளத்திலோர் நெகிழ்ச்சி தரவல்லதுதான். இஃது, அதனினும் அரியதோர் நிகழ்ச்சி. மணமகன், கைதி! திருமணம் செய்துகொள்வதற்காக மட்டுமே, "விடுதலை’ இவ்வீரனுக்குத் தரப்பட்டிருக்கிறது; திருமணமானதும் மீண்டும் சிறை செல்ல இருக்கிறான். கைதிக்குக் கடிமணம்; அதைக் காண ஓர் கூட்டம்; காண்பதிலே ஓர் பெருமை! வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. இந்தக் கைதி, ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தைத் தன் தொண்டினால் தொட்டுவிட்டவன்; எனவேதான் அவன் திருமணம் காணத் திரண்டுள்ளனர். இடம், சைப்ரஸ்! தீவு!! இந்தத் தீவு இன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறது. தாயகமான கிரீஸ், இந்தத் தீவு, அன்னியர் பிடியில் இருப்பதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளும்? சைப்ரஸ் தீவும் எப்படி, தாயகத்திலிருந்து வேறாக்கப்பட்டு, பிரிட்டனுக்கு வெள்ளாட்டி வேலை செய்து பிழைக்கும் தாழ்நிலையை ஒப்பும்? எனவே, அங்கு விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெறியைத் தாங்கிக்கொண்டு, வீர இளைஞர்கள் விடுதலைப் போர் நடத்துகிறார்கள். மனுப் போடுவதும் மாநாடு நடத்துவதும் பலன் தரவில்லை! நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தினர், மதிக்கவில்லை. கல்லூரிகளில் விடுதலை முழக்கம் கேட்டது - கவலை கொள்ளவில்லை. மாதா கோயில்களிலே "விடுதலை மான்மியம்’ உபதேசிக்கப்பட்டது-சட்டை செய்யவில்லை. கர்த்தரின் ஊழியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்-அதனையும் மதிக்க மறுத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பிறகு கைக்குண்டு வீசியும் காடுகளில் பாசறை அமைத்துப் போராடியும், பிரிட்டிஷ் தளங்களைத் தாக்கியும் போரிடலாயினர். சைப்ரசில், பிரிட்டிஷ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதிரியானாலும் பல்கலைக் கழக மாணவனானாலும், அடுக்களை அணங்காயினும், அலுவலகத் தானாயினும், சைப்ரஸ் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கம் காட்டினால், பிரிட்டிஷ் எதேச்சாதிகாரிகளால், சிறைச் சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்! இந்த மணமகன், அதைப்போலச் சிறைப்பட்டவன்! தாயக விடுதலைக்காகப் பாடுபட்டான்; எதேச்சாதிகாரி களிடம் பிடிபட்டான்; சிறை சென்றான்!! அவன் காதலைப் பெற்றவள் கண் கலங்கி நின்றாள். பேயரிடம் பிடிபட்டவன், என்ன முடிவு எய்துவானோ? வீர சுதந்திரம் வேண்டுபவரை, வெறியர், எதுதான் செய்யா திருப்பர். மகாரியாஸ் பாதிரியாரை, அவர் ஜெபதப மூலம் கர்த்தரின் அருளைப்பெற்று அனைவருக்கும் வழங்கிடும் பூஜிதர் என்பது பற்றியும் கவலையற்று, அவர் காட்டிய நாட்டுப் பற்றினையும் விடுதலை வேட்கையினையும், மன்னிக்க முடியாத குற்றமெனக் கொண்டு, கண்காணா இடம் இழுத்துச் சென்றல்லவா, சிறைப்படுத்தி விட்டனர்! இவனோ காளை! இவனை பிரிட்டிஷ் ஆட்சியாளர் என்னென்ன கொடுமை களுக்கு ஆளாக்குவரோ - சிரச்சேதமோ சித்திரவதையோ - என்ன நேரிடுமோ… என்றெல்லாம் எண்ணி எண்ணி, அவனைக் காதலனாகப் பெற்ற காரிகை கண்ணீர் உகுத்திடாதிருந்திருக்க முடியுமா? கண்டனர் - காதல் கொண்டனர் - கடிமணம் அவர்கட்கு இன்ப வாழ்வளிக்கும் - என்று உற்றார் உறவினர் எண்ணி யிருப்பர்; ஊரார் பொருத்தமானதோர் காதல் ஜோடி இது என்று கூறி வேடிக்கை பேசியிருப்பர். எல்லாம் கனவு! எல்லாம் கனவு! என்று - கூறுவது போல, இளைஞன், சிறைக்குள் தள்ளப்பட்டு விட்டான். அவள் கன்னத்தைக் கிள்ளிய போதும், கூந்தலைக் கோதியபோதும், அதரம் அதரத்துடன் உறவாடிய வேளையிலும், ஆரத்தழுவிய போதும், அன்பே! ஆருயிரே! என்று கொஞ்சியபோதும், இருவரும் இன்பலோகம் சென்றிருப்பர். ஆனால் காதலியைப் பெற்றதால், அவன் அடைந்த களிப்பு-அவன் கண்களை மறைத்துவிடவில்லை-அதேபோது அவனுக்குத் தன் தாயகம் தளையுண்டு, தருக்கர் ஆட்சியில் சிக்குண்டு, மதிப்பிழந்து கிடந்திடும் கீழ்நிலையும் தெரிந்தது - தெரிந்ததும் நெஞ்சிலோர் தணல் நுழைந்தது. பக்கத்திலே ஓர் பாவை, காதற் கனிரசம் ஊட்ட! பருவமோ காதற் பாங்கினை அனுபவித்திடுவதற்கு ஏற்றது! எனினும், உலவும் மண், உள்ளே புகும் காற்று-அடிமை முடைநாற்றம் வீசுவதாக இருக்கிறது! நாடு அடிமைக் காடாகிக் கிடக்கிறது - காதல் வாழ்விலே நாம் இன்பம் தேடிக்கொள்கிறோம் - நாடோ அன்னியன் பிடியில் சிக்கி நாற்றமடித்துக் கிடக்கிறது இந்நிலையில் நாட்டை மறந்து, நாம் காதற் தோட்டத்திலே உலவிக் களிப்படைவது இயலுமா, முறைதானாகுமா? என்று அந்த இளைஞனால் எண்ண முடிந்தது. தம்பி! காதலியின் கடைப்பார்வை கண்டு விட்டால், எதனையும் மறந்து, எல்லாம் இந்த ஏந்திழையாளின் முகத்தில் கண்டிடலாம் என்றிருப்பதற்குத் தான், மிகப் பெரும்பாலான இளைஞர்களால் முடியும். முதியவர்களே, தின்றதை மென்று அசைபோடும் முறையில், அப்போது நடந்தவைபற்றி எண்ணி மகிழத் தொடங்கிவிட்டால், மற்றவற்றை மறந்திடும் நிலைபெற்று விடுகிறார்கள் என்றால், இளைஞன் நிலை எங்ஙனம் இருந்திடும். எனினும், காதலின்பத்தில் கட்டுண்டு கிடந்த இக் காளைக்கு, நாட்டு நிலை பற்றியும் எண்ணிட முடிந்தது - நாட்டு அடிமைத்தளைகளை உடைத்திடும் நற்பணியாற்ற வேண்டும் என்று துணிந்திடவும், செயல்படவும் முடிந்தது! சிறைப்பட்டான்! கண்ணீர் சிந்தியிருப்பாள், அவன் விரும்பிய சிற்றிடையாள் - எனினும் அந்த நிலையிலும், அவள் முகத்திலோர் தனிவகை எழில் பூத்துத்தான் இருக்கும்; என் கண்ணாளன் என் அருகில் இல்லை - என் எதிரில் இல்லை-என்னைத் தொட்டிழுத்து விளையாடவும், கட்டி முத்தம் தந்திடவும் முடியாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டுத்தான் இருக்கிறான், சிறைக்கொட்டடியில், அவனைக் காணாததால் என் களிப்பு கருகிடத்தான் செய்கிறது! ஆனால், என்னை வென்றோன், நாட்டு விடுதலை வீரன் - அஞ்சாநெஞ்சன் - தன் சுகம், தன் இன்பம் பெரிதல்ல, தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் கடமையே பெரிது என்று கொள்கைகொண்ட குணக்குன்று என்று எண்ணும்போது, நெஞ்சிலே சுரக்கும் தேன் ஊற்று கருகிடும் களிப்பை, செழித்திட வைக்கிறது. புதியதோர் பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன் என்று அந்தப் பூவை எண்ணாமலிருக்க முடியுமா? அவளும் அவனும், சைப்ரஸ் தீவுக்கு மட்டுமல்ல, விடுதலைக் காவியத்துக்கே ஏற்றவர்களாகி விடுகின்றனர். எப்போது திருமணமடி உனக்கு? அவர் வெளியே வந்ததும்! இந்த உரையாடலில், பிரிவாற்றாமை தரும் வாட்டத்தை ஓட்டி விடுமளவுக்கு, காதலன் நாட்டுக்கு உழைத்ததால் சிறைப்பட்டிருக்கிறான் என்ற உணர்வு தரும் பெருமையுமல்லவா ஒலிக்கிறது! அத்தகைய திருமணமடா, தம்பி இது!! நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைத்திடும் போக்கினருக்கு, எக்காரணத்தாலோ, நகைச்சுவையும் இருக்கும்போல் தோன்றுகிறது. ஆகவேதான், எந்த வீரனைப் பிடித்து வெஞ்சிறையில் அடைத்தனரோ, அவனை, திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து, அதற்காக வெளியே சென்றுவர "விடுதலை’யும் தந்தனர். கைதியைக் கடிமணம் செய்துகொள்ள, காரிகைக்கு மனம் இடம் தராது என்றெண்ணினரோ - அன்றி, கைதியாக இருக்கும் நிலையில் கலியாணம் ஒருகேடா, என்று அந்தக் கர்மவீரனே சலித்துக்கொள்ளுவான் என்று எண்ணினரோ - காரணம் எதுவோ தெரியவில்லை. சிறைப்பட்டுக் கிடந்தவனைத் திருமண விழாவுக்காக மட்டும் வெளியே விடுவித்தனர். "அவனும் அவளும்’ சைப்ரஸ் தீவின் எழுச்சியும் எழிலும் உருவெடுத்ததுபோல, மணவிழா நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்; இந்த வீரனுக்கு நடைபெறும் மணவிழாவில் கலந்துகொண்டு விடுதலை வரலாற்றிலே இடம் பெறப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் உற்றார் உறவினரும் ஊர்ப் பெருமக்களும் கூடி உள்ளனர். மணமகன் பெயர் ஆண்டிரியாஸ் ஜோனைட்ஸ். ஜோவுலா ஜோனாட்பூர் என்பது மணமகள் பெயர். உச்சரிக்கவோ, நினைவிற்கொள்ளவோ, கடினமான பெயர், தம்பி. எனவே நாம் மணமகனை எழுச்சி என்றழைக்கலாம், மணமகளை எழில் என்று அவனை அழைத்திடச் சொல்வோம். திருமணம் நடைபெறும் இடத்தின் பெயரும், உச்சரிக்கக் கடினமானது - கோகிநோட்ரிமிதியா - நமக்கேன் தொல்லை - இந்தச் சிற்றூருக்கு நாம் வீரபுரி என்று பெயர் வைத்தழைப்போம். மணமகன், கரங்களில் விலங்குடன்தான் அழைத்து வரப்பட்டான்… போலீஸ் அதிகாரிகள் உடன்வந்தனர். திருமண மண்டபத்துக்குள் நுழையும்போதுதான், விலங்குகள் அகற்றப்பட்டன. அவனை மணாளனாகக் கொள்ளும் எழில் இருபதாண்டுப் பாவை! பாதிரியார், ஆசீர்வதிக்கிறார்-அந்தச் சிற்றூரின் மக்கட் தொகை ஆயிரத்துக்கும் குறைவு - ஆனால் அவ்வளவு மக்களும் அங்கு கூடி இருக்கிறார்கள்; முக மலர்ச்சியும் கண்ணீரும் சேர்ந்து காட்சி தருகிறது. வாழ்க! வாழ்க! என்று அவர்கள் தழதழத்த குரலில் வாழ்த்துகிறார்கள். தம்பி! மணமக்களை மட்டுமா? வீரத்தை வாழ்த்துகிறார்கள்! பெருமைக்குரிய அந்த மணப்பெண்ணின் உளத்திண்மையை வாழ்த்துகிறார்கள்! இத்தகைய சம்பவங்கட் கெல்லாம் பிறப்பிடமாகிவிட்ட தமது தாயகத்தை வாழ்த்துகிறார்கள். அதோ பார் தம்பி! கிராமத்து மக்களின் கனிவை - பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். கண்ணீரைத் துடைத்தபடி, மணமக்களின் கைகுலுக்கி வாழ்த்துகிறார்கள்! வெண்ணிற ஆடை அணிந்த மணமகள் - மணமகனைத் தழுவிக்கொள்கிறாள்! இருவரும் ஏதோ பேசுகிறார்கள். என்ன பேசுவார்கள்? எண்ணம் ஈடேறிவிட்டது, இன்பமே! கனவு பலித்தது, கண்ணாளா! வானகம், வையகம் வந்தது என் வண்ணப் புறாவே! தேனமுதைச் சொல்லாக்கித் தருகிறீரே, என் தேவனே! மலர் பறிப்போமா, என் மனோஹரி! மணம் தேடிச் செல்கிறீரோ, என் மணாளரே! பெரும் பிழை புரிந்துவிட்டேன், பெருமைக்குரியவளே உன் முகமலர் என் கரத்திலிருக்க, நான் வேறு மலர் தேடுவது, மடத்தனம்தான். போதும் விளையாட்டு! புனலாடலாம், பொழுது சாயும்வரை. பிறகு… அதற்குப் பிறகு…. உன் மடியில் நான்…. என் கரத்தில்…. அந்தி சாய்ந்ததும், ஆரணங்கே…. அந்தி சாய்ந்ததும்… கன்னங்களைக் கீறிக் கீறி… கண்ணே… என்ன, அன்பே! குழந்தைபோல! நகரத்து நாட்டிய சாலைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்… சாயம் பூசிய உதட்டுக்காரிகளின் சல்லாபம் பார்க்கவா…? வேண்டாம்…. படக்காட்சிக்குச் செல்வோமா….? அங்கு காதல் கிடைக்கப் பெறாததால் கலங்கும் காட்சி காட்டுவர்.. வேண்டாம், அன்பே… ஓவியக் காட்சி…? எனக்கென்று உள்ள இந்த உயிரோவியம் போதும் என்று சொன்ன சொல்லை மறந்தீரோ….? மறப்பேனா, மாதரசி! உன்னை மகிழ்விக்க, நான் என்ன காட்சிக்குத்தான் அழைத்துச் செல்வது…? என்னை மகிழ்விக்கவா, மன்னா? ஆமாம், என் இன்பமே!…. என்னை மகிழ்விக்க…. எங்கு அழைத்துப்போக, ஆருயிரே…. என்னை மகிழ்விக்க… என் குணாளா! எங்கும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்… என் அருகில் இருந்தால் போதும்…. என் அருகில் இன்னும்…. இடைவெளி இல்லா நிலையில் இதுதான் கண்ணே என் இன்பம்…. ஆம்! வேறு மகிழ்ச்சி தரும் இடமும் உண்டா என்னைப் பிரியா நிலை வேண்டும்…. என் அருகே… இன்னும் அருகே… இது போலவும் இதனினும் சுவை கொட்டவும் காதலர்கள் பேசிக்கொள்வர்…. நாடக மேடையிலேனும்!’’ தம்பி! கடிமணம் முடிந்தது - இவர்கள் ஏதும் அதிகம் பேச முடியாது. அதோ வந்துவிட்டார்கள் அதிகாரிகள், அவனை அழைத்துச் செல்ல. மணமகன், மீண்டும் கைதியாகிறான்! கரம் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள் - இதோ அந்தக் கரங்களில் மீண்டும் விலங்கு பூட்டுகின்றனர். திருமணம் முடிந்தது - அவனுக்கு மணவிழா விருந்து இல்லை; சிறையில் வழக்கமாகத் தரப்படும் ரொட்டியும் தண்ணீரும்தான்!! மணவிழா முடிந்தது, மணமக்கள் இருவரும் கை கோத்துக் கொண்டு மலர்ச் சோலை செல்லப் போவதில்லை, அதோ மணமகன் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டான்! சென்று வருகிறேன்! - அவன் கை அசைத்துக் கூறுகிறான். கண்ணாளா! திருமணம் முடிந்ததும், பிரிவுதானா…? தையல் தேம்புகிறாள்! தாயகமே! சைப்ரசே! இங்கு இளம் தம்பதிகள், பிரித்து விடப்படும் கொடுமையைப் பார்! பார்! அம்மா, உன் மக்களுக்கு வந்துற்ற அவதியைப் பார்! - ஊர் மக்கள் புலம்புகிறார்கள். நீ, ஏனடா, தம்பி, அழுகிறாய்? என் கண்களிலே ஏன் நீர் துளிர்க்கிறது? என்றா கேட்கிறாய். என்ன செய்வது? கண்ணீர், அவர்கட்கு நாம் அளிக்கும் காணிக்கை! சைப்ரஸ் தீவிலே இதைக் கண்டோம்! தம்பி! நாட்டுப் பற்று மக்களை எத்தகைய வீறுகொள்ளச் செய்கிறது என்பது கண்டோம். எழுச்சி தரும் நிகழ்ச்சியாக அமைந்த திருமணத்தைக் கண்டோம். காதற் கணவனை எண்ணிக் கண்ணீர் உகுத்திட, அப்பெண்மணி சென்றுவிட்டாள். என் வாழ்வுக்குத் திருவும் மணமும் தேடிக்கொண்டேன். என் தாய்நாட்டுக்கு விடுதலையும் வாழ்வும் பெற்றளிக்க, இனி நான் செய்ய வேண்டியது என்ன என்ன என்று எண்ணித் திட்டமிட்டபடி மணாளன் சிறை சென்றுவிட்டான். கடிமணம் புரிந்துகொண்டான். கடுஞ்சிறையில் கொண்டு சேர்த்தனர்-இத்தகைய காதகர் ஆட்சியை வீழ்த்துவது எங்ஙனம் என்று எண்ணிக் குமுறியபடி வீரபுரி மக்கள் தத்தம் வீடுகளுக்கும் வயல்களுக்கும் சென்றுவிட்டனர். தம்பி! வா! இனியும் நமக்கு இங்கு என்ன வேலை? நமது தாயகமாம் திராவிடத்தின் விடுதலைக்காக, நாம் செய்ய வேண்டிய பணியினைத் திறம்படிச் செய்தற்கான, உள்ள உரம் தரும் மாநில மாநாடு காணச் செல்வோம்!! கரம் பிடித்த காதலியைக் கண்ணீர் பொழியும் நிலையில் விட்டு விட்டு, சிறைக் கோட்டம் சென்றுள்ள எழுச்சியை நினைவிலே வைத்துக்கொண்டு, திருச்சி மாநில மாநாட்டுக்குப் போய்ச் சேருவோம். தத்தமது நாடுகளை விடுவிக்க அரும்பாடு பட்டவர்கள், ஆற்றல்மிக்க வீரர்கள், தியாகிகள், அனைவரையும் மனதிலே கொண்டு பிறந்த நாட்டுக்கு வந்துற்ற இழிவும் இன்னலும் நீங்கிடப் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட, நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதற்கான பாசறையாக அமைந்துள்ள மாநில மாநாட்டுக்குச் செல்வோம். எல்லோரும் என் காலில் சிக்குண்டு போயினர் - இதுகள் ஏனோ தாவிக் குதிக்கின்றன! இதுகள் நடத்தும் கட்சி ஒரு அரசியல் கட்சியா? இது குழப்பக் கட்சி! தேர்தலுக்கு நிற்பார்களாமே - நிற்கட்டும் - நிற்கட்டும் - தீர்த்துக் கட்டிவிடுகிறேன்! பெயர் மாற்ற ஒரு போராட்டமாம் - பூ! பூ!-இது ஒரு கட்சியா…? தம்பி! பச்சைத் தமிழர் காமராஜர் இதுபோலக் கேவலமாகப் பேசுகிறார், நமது கழகம் பற்றி! உன் நோக்கத்தைக் கேவலம் என்கிறார்; உன் அறிவாற்றலை அபத்தம் என்கிறார்; உன் வீரத்தைக் கேலி செய்கிறார்; தியாகத்தைத் தூசு என்கிறார்; நாட்டையே கூட அல்லவா, தமிழ்நாடு என்று அழைக்க மறுத்துக் கேவலப்படுத்துகிறார். இதற்கு-இவர்தம் ஆணவப் பேச்சுக்கு - அலட்சியப் போக்குக்கு - என்ன பதில் அளிப்பது - எவ்வகையில் பதில் அளிப்பது? திருச்சி மாநில மாநாடு, வீரர் கோட்டம் என்பது விளக்கப்பட்டால், பட்டிதொட்டிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரவர் கிளம்பி, பல இலட்சமாகப் பெருகி, எழுச்சி வெள்ளமாகக் காட்சி அளித்தது மாநில மாநாடு என்றால், அங்கு எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், இனிமை பயக்கும் கலை விருந்து இவற்றோடு அமைந்துவிடாமல் திறம்படப் பேசி, செயல்படத் துணிவுகொண்டு, தீவிரமான திட்டம் தீட்டினர் என்றால், திருச்சி மாநில மாநாடு அரசியல் வட்டாரத்துத் திருவிழா அல்ல, விடுதலை வரலாற்றிலே ஓர் கட்டம் என்பது விளக்கப்பட்டால், கேவலமாகப் பேசிவரும் காமராஜர், உண்மையை உணர முடியும்! அவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உலகு உணரும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்று அந்த உளப் பண்பு உணர்ந்த அறங்கூறும் பெரியோன் குறிப்பிட்டது, ஜாதியை அல்ல-குணத்தை-அறிவை- ஆற்றலை! உலகம் உணரட்டும் தம்பி, உன்னையும் என்னையும் ஆட்கொண்டிருக்கும், விடுதலைக் கிளர்ச்சி, வீண் வேலை அல்ல என்பதனையும், உயர் இடம் அமர்ந்து கொண்டவர்களின் அலட்சியமும் ஆணவமும், அந்த விடுதலைக் கிளர்ச்சியைக் குலைத்துவிடாது என்பதனையும். தம்பி! சைப்ரஸ் தீவுத் திருமணத்திலே நாம் கண்ட எழுச்சி- எழில்-நினைவிலே பதிந்து நிற்கிறதல்லவா! வாழ்க சைப்ரஸ்!-என்ற வாழ்த்தொலியை மணவிழாவிலும் கேட்டோம். வாழ்க திராவிடம்!-என்று முழக்கமிட்டபடி, திருச்சி செல்வோம், வா அன்பன், அண்ணாதுரை 6-5-56 அறச்சாலை தி. மு. க. மீது தாக்குதல் - காட்கில்லின் "மராட்டியர்’ உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும். தம்பி, சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் “மனக்கசப்பை’ வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம் பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற”கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்’ திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள், நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளை யிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல - அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன் - என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா…. தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை "திருமணம்’ காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண! காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே கக்குகிறார், செல்லுமிடமெல்லாம். கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார். காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது - எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்! பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான "சேவை’ செய்ய முடிகிறது அவரால்!! அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான "சாடி’ கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார். ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, "பக்கத்துக்குப் பக்கம்‘, முதலமைச்சரின் "அடாணா’ வாகவே இருக்கிறது! தி. மு. க. மீது கண்டனம் தி. மு. க.வுக்கு எச்சரிக்கை தி. மு. க. ஒரு குழப்பக் கட்சி தி. மு. க.வை ஒழித்துக்கட்ட வேண்டும். என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் - காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது "தாக்குதலை’ நடத்திய வண்ணம் இருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப் படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது. ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்! அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை! அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக! என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம். அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி! அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்! வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்! பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், "பழுத்த ஓலை’ ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது. எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை! குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது. சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் "இருப்பு’க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும் மகளே,…. அம்மா,…. வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த "மாதரசி’ மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள். மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம். காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை. சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்! ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் - என்று தாய், தலையி லடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது. "அம்மா!’’ என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது. "மகளே!’’ என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது. சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்! மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்! ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது! பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை - என்று தாய் கூற - என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம். காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்! அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்! காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்! தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதறிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார். மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது, இக் காட்சியினைக் காணத் தருகிறது. காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, அறப்போர் நடத்திச் சிறைப்பட்டுள்ளனர். மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்! எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்! கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா? காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர். கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில். காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் - ஆற்றல் மிக்கவர். அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர். மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர். ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர். இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும். வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம்- எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர். ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது. காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச் சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் - காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் - குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் - காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந் தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்! அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார். அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள். காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி! இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம். மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்! அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஒர் மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை! வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, - அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார். அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ?- என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா? தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் - இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை "உள்ளே’ அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது. மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை - மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள். காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா? சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென்றாலும் துயரமில்லையாம்! இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது. சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது. அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் - அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! - என்று அவரால் பேச முடிகிறது. வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம். சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன! வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது - அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் "விடுதலை’ பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம். பீகாரும் - வங்கமும் இணைகிறது - என்றார், வங்க முதலமைச்சர்! இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில் தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடி குண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த "தர்மவான்’ எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? - என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்! பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும். பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் - பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன. ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் - காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை. இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, "விஷப்பரீட்சை’யாகி விட்டது. யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்! இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! - என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!! எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம். இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், "தமிழ்நாடு’ என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் - அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர் என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார். "ஓட்டு’ இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு? "தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா? எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா? தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா? அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா? செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக "ஓட்’ அளித்தனர். தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், “கனம்’ ஆகிக் காலந்தள்ளும்”கண்ராவி‘க் காட்சி காணவா "ஓட்’ அளித்தனர்? தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா "ஓட்’ அளித்தனர்? தமிழருக்குரிய “நிலத்தை’ இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா”ஓட்’ அளித்தனர்? தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில். இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி. இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம் தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி - உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா…?…. இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் - அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் - என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது, அவர்கள் எனக்குத் "தைரியம்’ ஊட்டுகிறார்கள். திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று. பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு - இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார். லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தா லல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி - கண்ணபிரான் கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான். ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார். விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும், கொண்டுவந்து குவிக்கிறேன் - என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன். எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், "உண்டி‘ப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா - இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் "பாகமுறை’’ என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர். எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா? ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும். அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும். இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள "கம்பம்’ தனில் காணக் கிடைக்கும். இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் - எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்! வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி, கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட! ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் - அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள். அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்! போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும் - மாநில மாநாட்டு வெற்றி மூலம். அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு. நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா; "மன்றம்’ நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!! என்ற பண் பாடிட வாராய். அன்பன், அண்ணாதுரை 13-5-1956 FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.