[] புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் பூ.கொ. சரவணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் Copyright © 2013 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. Contents - புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் - பூ.கோ.சரவணன் - உரிமை - முன்னுரை - 1. கதிரியக்கம் கண்டறிந்த பெக்கொரல் ! - 2. வெர்மீர்,மீக்ரேன்,ஓவியங்கள்-முப்பது மில்லியன் டாலர்கள் ! - 3. அண்ணாந்து பார்க்க ஈபில் ! - 4. நான் சொன்னது நடந்திடுச்சா- கேட்கிறார் நாஸ்ட்ரடமஸ் - 5. பார்வை போனாலும் பாடிய மில்டன் ! - 6. வான்தொட்ட வால்ட் டிஸ்னி ! - 7. குதிராம் போஸ் எனும் வீரன் ! - 8. மஞ்சள் காய்ச்சல்,கொசுக்கள்,பின்லே ! - 9. எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் ! - 10. எவரெஸ்ட் அளந்த இந்தியா ! - 11. பூட்டோவின் பெருங்கதை இது ! - 12. காலங்களை கடந்த கலைவாணர் ! - 13. மகாத்மா புலே! - 14. புரூஸ் லீ எனும் ஜென் வீரன் ! - 15. வாழ வைத்த வர்கீஸ் குரியன் ! - 16. அரசியலமைப்பு சட்டம் ஆக்கிய அண்ணல் அம்பேத்கர் ! - 17. சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ! - 18. சார்ல்ஸ் டார்வின் தந்த வெளிச்சம் ! - 19. கென்னடியின் மரணமும்,அவிழாத முடிச்சுகளும் ! - 20. ஊழலின் உச்சம் கிளைவ் ! - 21. தீரர் திப்பு சுல்தான் ! - 22. இலக்கியத்தில் இதயம் தொட்ட டால்ஸ்டாய் ! - 23. வீரப்பெண்மணி ஜான்சி ராணி லட்சுமி பாய் ! - 24. இவர் தான் இந்திரா ! - 25. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ! - 26. இந்திரா இறந்த கதை ! - 27. நோபல்,ஆஸ்கர்,பாரத ரத்னா எதுவும் வேண்டாம் !-இது இன்னொரு பக்கம் - 28. இது தான் இறுதி-சச்சினின் கடைசி கண்ணீர் நிமிடங்கள் ! - 29. சச்சினை ஏன் இந்தியர்கள் காதலிக்கிறோம் ? - 30. வானோடு விளையாடிய கெப்ளர் ! - 31. ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே ! - 32. கோட்சே மட்டுமா காந்தியை கொன்றான் ? -முழுக்கதை இது - 33. ஆஹா பதினான்கு ! - 34. சாதித்து விட்டு சாக வேண்டும் !-சிலிர்க்க வைக்கும் சிறுவர்கள் - 35. சிறியன சிந்தியாத நேரு ! - 36. சிறகை விரித்து சிலிர்க்க வைத்த சலீம் அலி ! - 37. மதங்களைக்கடந்து மனிதம் பேசிய ஆசாத் ! - 38. சரண்டர் நாட் பானர்ஜி ! - 39. எதிர்த்து நின்ற மார்ட்டின் லூதர் ! - 40. மரணத்தோடு நாட்டுக்காக ஒரு மற்போர் ! - 41. ஆல்பர்ட் காம்யுவோடு ஒரு கோப்பை காபி ! - 42. வித்தியாச வேந்தர் ஜகாங்கீர் ! - 43. அடடா ஐன்ஸ்டீன் ! - 44. தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் ! - 45. மேரி க்யூரி எனும் அறிவியல் அன்னை ! - 46. நோபல் பெற்ற ராமன் ! - 47. நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ் ! - 48. விராட் கோலி என்றொரு வீரர் ! - 49. மனிதக்கணினி சகுந்தலா தேவி - 50. அதிரவைத்த அவுரங்கசீப் ! - 51. இரும்பு மனிதர் படேல் ! - 52. ஆந்திரா எழுந்த கதை ! - 53. ஏஞ்சலோ எனும் ஏஞ்சல் ! - 54. பொருளாதார அன்னை தெரசா அமர்த்தியா சென் - 55. சிவந்த மனிதர் டூனன்ட் ! - 56. மைக்ரோசாப்ட் மாயன் கேட்ஸ் ! - 57. கொறிக்க கொஞ்சம் கோயபலஸ் வரலாறு ! - 58. சுதந்திர தேவி சிலை இது ! - 59. ஹச்சிகோ-ஒன்பதாண்டு காத்திருப்பு கதை இது ! - 60. டெட்டி தேடிவந்த கதை இது ! - 61. சில்வியா-தீரா சோகத்தோடு கீதம் இசைத்த தங்கமலர் ! - 62. தூரிகையால் பின்னிய பிகாஸோ ! - 63. லான்ஸ் எனும் வீழ்ந்த நாயகன் ! - 64. ரோசா பார்க்ஸ் - 65. பேட்மேனின் தந்தை இவர் தான் ! - 66. காமன்மேனை தந்த கார்டூனிஸ்ட் - 67. குள்ளம் என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம் ! - 68. secular ஆர்.எஸ்.எஸ்.,மதவாதி காந்தி-இப்படியும் சொல்வார்கள் சீக்கிரம் ! - 69. தனிமை தந்த தனித்துவப்பரிசு-நோபல் கதை இது ! - 70. Money ஐ விட மனிதர்கள் முக்கியம் - Matrix நாயகன் ! - 71. சம்திங் சம்திங் உங்களுக்காக !.. - 72. சரித்திரமான சந்திரசேகர் ! - 73. இவர் தான் எடிசன் ! - 74. புரியாம புரிஞ்சுக்கலாம் ! - 75. குனிவது நிமிரவே என் தோழனே ! - 76. பிரிந்தது பெருவங்கம் ! - 77. அக்பர் எனும் அற்புதர் ! - 78. சக் தே மிர் ரஞ்சன் நெஹி -ஒரு உண்மைக்கதை - 79. ஜான் லெனான் எனும் ஜாலக்காரர் ! - 80. காந்தி இன்னமும் உயிர்ப்போடே இருக்கிறார்,உலகையே உலுக்குகிறார் அவர்- ராமச்சந்திர குஹா - 81. சே எனும் உலகப்போராளி ! - 82. கடவுள் துகளும்,ஒரு நோபல் பரிசும் ! - 83. அடிமைத்தனம் போக்கிய அட்லி ! - 84. டூடு எனும் அமைதிக்காவலர் ! - 85. ஹெலன் எனும் ஏஞ்சல் ! - 86. காந்தியை மறுவாசிப்பு செய்தல் ! - 87. சிவாஜி எனும் சிம்மம் ! - 88. ரூமி எனும் கவி ராட்சசன் ! - 89. உயிர் காத்த உத்தமர் பாஸ்டர் ! - 90. பகத் சிங் எனும் மாவீரன் ! - 91. நாகேஷ் எனும் நாயகன் ! - 92. சாகும்வரை காதலிப்போம் சூப்பர் மேன் ! - 93. நெருடா எனும் காதலன்,கவிஞன்… - 94. கம்யூனிஸ்ட் சாப்ளின் ! - 95. கொடுமுடி கோகிலம் ! - 96. அகராதி மனிதர் சாமுவேல் ஜான்சன் ! - 97. எம்.ஆர்.ராதா எனும் புரட்சிக்காரன் ! - 98. இன்று பல தகவல்-தென்கச்சி நினைவலைகள் ! - 99. வாழ்வே சங்கீதம் -எம்.எஸ். எனும் சகாப்தம் ! - 100. உன்னோடு போனதே அண்ணா ! - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் [saravanan-book-cover]   பூ.கொ. சரவணன் வகை : வரலாறு pu.ko.saravanan@gmail.com   உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ் வெளியீடு :  http://FreeTamilEbooks.com   அட்டைப்படம் நன்றி http://www.flickr.com/photos/hamed/327939900/ அட்டைப்படம் உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ் 2 பூ.கோ.சரவணன் [saravanan]   படித்தது விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல். விகடனின் தலைசிறந்த மாணவ நிருபர். விஜய் டிவியின் ‘பெரிதினும் பெரிது கேள்’ நிகழ்வின் நட்சத்திர பேச்சாளர். மேடைப்பேச்சில் இருநூறுக்கும் மேற்பட்ட மேடைகள். பொறியியல் பாட நூல்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். வரலாறு,அறிவியல்,ஆளுமைகள்,தன்னம்பிக்கை,விளையாட்டு ஆகியவற்றைப்பற்றி எளிய ,மொழியில் எழுதுவது பிடிக்கும். http://saravananagathan.wordpress.com/ pu.ko.saravanan@gmail.com 3 உரிமை http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US   Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported (CC BY-NC-ND 3.0) You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - NonCommercial — You may not use the material for commercial purposes. - NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. - No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. 4 முன்னுரை சுவையான பல நிகழ்ச்சிகளாலும், சுவாரசியமான ஆளுமைகளாலும் நிரம்பிய வரலாற்று செய்திகளை, உரிய நாட்களில் பதிவிடுகிறார் பூ.கோ.சரவணன். அவரது வலைப்பதிவு http://saravananagathan.wordpress.com/ இல் இருந்து ஒரு 100 செய்திகளை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தனது வலைப்பதிவை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிட்ட நூலாசிரியருக்கு நன்றிகள்.   ஸ்ரீனிவாசன். tshrinivasan@gmail.com       [pressbooks.com] 1 கதிரியக்கம் கண்டறிந்த பெக்கொரல் ! திசெம்பர் 15, 2013 ஹென்றி பெக்கோரல் பிறந்தநாள் இன்று. கதிரியக்கத்தை இவரே கண்டுபிடித்தார். 1895 இல் எக்ஸ் கதிர்களை ராண்ட்ஜன் கண்டறிந்து இருந்தார் ;அதன் பண்புகள் பற்றி மேலும் ஆய்வுகள் செய்ய விரும்பிய இவர் பொட்டாசியம் உரனையில் சல்பேட் எனும் உப்பில் ஆய்வுகள் செய்தார் .அதை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து பின் அதை சுற்றி ப்ரொமைட் பூசப்பட்ட போட்டோகிராப் தட்டுகளை வைத்தார் .அதை எந்தவித ஆற்றல் இழப்பில் இருந்து தடுக்க கருப்பு தாளை சுற்றி வைத்தார் .படங்கள் பதிவாகின. சூரியனில் இருந்து எக்ஸ் கதிர்களை யுரேனிய உப்பு உள்வாங்கி கொண்டு அதை எக்ஸ் கதிர்களாக வெளியிடுவதாக முடிவுக்கு வந்தார் . இரண்டு சம்பவங்கள் அவர் எண்ணத்தை மாற்றின ஒன்று -காந்தப்புலங்களில் இக்கதிர்கள் தங்களின் நேரான பாதையை விட்டு விலகி பயணிப்பதை பார்த்தார் .எக்ஸ் கதிர்கள் அவ்வாறு பயணிக்காது;இரண்டாவது சூரியன் வெளியவே வராத ஒரு கும்மிருட்டு நாளிலும் ப்ளேட்டில் படம் பதிவாகி இருந்தது .ஆகவே அங்கே ஏற்படும் உருவத்துக்கு வேறேதோ ஒன்று காரணம் என அவருக்கு புரிந்தது .அதற்கு கதிர்வீச்சு என யுரேனியத்தில் இருந்து ரேடியத்தை பிரித்த அவரின் மாணவர்களான க்யூரி தம்பதியினர் பெயரிட்டனர் . [] இவருக்கும்,அவர்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது . ஒரு விந்தையான தகவல் இவரின் தந்தையின் நண்பர் இக்கண்டுபிடிப்புக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்பே யுரேனியம் சில கதிர்களை உருவாக்கி அதன் மூலம் போட்டோ ப்ளேட்களில் உருவங்களை உருவாக்குகிறது என குறிப்பெழுதி விட்டு போயிருக்கிறார். 2 வெர்மீர்,மீக்ரேன்,ஓவியங்கள்-முப்பது மில்லியன் டாலர்கள் ! திசெம்பர் 15, 2013 வெர்மீர் மறைந்த தினம் இன்று. உலகின் தலைசிறந்த ஓவியர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் வெர்மீரை கண்டிப்பாக தவிர்க்க முடியாது. மொத்தம் முப்பத்தி ஆறு ஓவியங்கள் தான் அவரின் படைப்புகளாக நமக்கு கிடைக்கின்றன. அவரின் வாழ்க்கைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. மொத்தம் பதினைந்து பிள்ளைகள்,விடுதி காப்பாளர் நடுநடுவே ஓவியர் என்று ரொம்பவும் கலங்கலான அளவுக்கே தெரிந்திருக்கிறது. [] அவர் காலத்தில் வெர்மீரின் ஊரைத்தாண்டி அவர் போனதே இல்லை. ரிஜீவன் எனும் செல்வந்தர் இவரின் பெரும்பாலான ஓவியங்களை வாங்கிக்கொண்டார். பிரெஞ்சு அரசர் தாக்குதலில் இவரின் ஹாலந்து தேசத்தில் பொருளாதார் வீழ்ச்சி ஏற்பட்டு வறுமை இவரை வாட்டியது. பதினைந்து குழந்தைகள் ஒரே ஒரு காதல் வாழ்க்கையில் பிறந்திருந்தாலும் நான்கு குழந்தைகள் இறந்து போனார்கள். பதினோரு குழந்தைகளை வளர்க்கும் சுமை தலைமீது விழவே மாமியாரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தினார். பொருளாதார வீழ்ச்சியால் ஓவியங்களை வாங்கிக்கொள்ள ஆளே இல்லாமல் போனது. [] கடைசி மூன்று வருடங்களில் ஓவியம் தீட்டுவதை வெர்மீர் நிறுத்தி விட்டார் என்றே சொல்லவேண்டும். அவர் இறந்த பிறகு கொடுக்க வேண்டி இருந்த கடன்களுக்காக வீட்டில் இருந்த ஓவியங்களை கடன்காரர்கள் தூக்கிக்கொண்டு போனார்கள். குடும்பம் திவால் என்று மனைவி அறிக்கை கொடுத்தார் ; நுண்ணோக்கியை கண்டுபிடித்த ஆன்டன் வான் லீவன்ஹூக் கடன்களை அடைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். [] வெர்மீர் காலத்துக்கு இருநூறு வருடங்கள் கழித்து தோர் எனும் பிரெஞ்சுகாரர் அவரின் ஓவியங்களை உலகத்துக்கு அறிமுகம் செய்தார். உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது. பல கோடிகளில் ஓவியங்கள் விலைக்கு போயின. இதற்கு நடுவில் மீக்ரேன் வந்தார். வெர்மீரின் ஊர்க்காரரான அவர் மறுமலர்ச்சி கால ஓவியர்கள் பாணியில் ஓவியங்கள் தீட்டினார். காப்பி அடிக்கிறார் என்று நிராகரித்தார்கள். உடனே ஒரு விபரீத முடிவெடுத்தார். [] மறுமலர்ச்சி கால ஓவியர்களின் ஓவியங்களை கச்சிதமாக பிரதியெடுப்பது என்கிற திட்டம் தான் அது. ஆறு வருடம் உழைத்து அதே மாதிரி பீலை தரும் ஓவியங்களை தீட்டினார். வெர்மீரின் படைப்புகள் என்று அவர் விற்ற போலிகள் முப்பது மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனைக்கு போயின. யாருக்கும் துளி சந்தேகம் வரவில்லை. பல டச்சுக்காரர்கள் ஹிட்லர் இவர்கள் நாட்டை முற்றுகையிட்ட பொழுது ஓவியங்களை பாரம்பரியத்தை காக்கவேண்டும் என்று வாங்கியது இவருக்கு இன்னமும் பணத்தை கொட்டியது. ஒரு இரண்டு ஓவியங்கள் அமெரிக்காவின் தேசிய அருங்காட்சியகத்தில் தொங்கிக்கொண்டு சிரித்தன. [] எராம்ஸ் இரவு விருந்து எனும் இயேசுவின் வெர்மீர் ஓவியத்தை இவர் எடுத்த பிரதியை மாஸ்டர் பீஸ் என்று அது போலி என்று தெரியாமல் உலகே கொண்டாடியது. எல்லாவற்றுக்கும் ஒருநாள் முடிவு வந்தது. உலகப்போர் முடிந்து நாஜிக்களுக்கு பழைய ஓவியங்களை விற்றார் மீக்ரின் எனும் குற்றச்சாட்டோடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். மரண தண்டனை தான் என்று புரிந்தது. உண்மையை சொன்னார். எப்படி போலி ஓவியங்களை உருவாக்கினேன் நான் என்று டெமோ கொடுத்தார். அதிர்ந்து அவர் விற்ற ஓவியங்களை செக் செய்தால் எல்லாம் தற்கால பெய்ன்ட்களால் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. ஒரு வருடம் ஜெயிலில் இரு தம்பி என்று தீர்ப்பு கொடுத்தார்கள். ஆனால்,மாரடைப்பு வந்து இறந்து போனார் மீக்ரேன் ! வெர்மீர் வாழ்க்கை மட்டுமில்லை அதை பிரதியெடுத்தவரின் வாழ்க்கையும் சோகத்தோடு முடிந்தது ஆச்சரியம் தான் . இந்த முத்து தோடுகள் அணிந்த ஓவியத்தை கொண்டு வெர்மீருக்கு ஒரு வேலைக்கார பெண்ணிடம் ஈர்ப்பு இருந்ததாக கற்பனை செய்து ஒரு சுவையான நாவலும் எழுந்தது. 3 அண்ணாந்து பார்க்க ஈபில் ! திசெம்பர் 15, 2013   அளவில்லாத தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான குஸ்தாவ் ஈபில் பிறந்த தினம் இன்று . இளம் வயதில் மிகவும் சுமாரான மாணவராக இருந்த மனிதருக்கு பொறியியல் சீட் கிடைக்கவில்லை . ஆர்ட்ஸ் பக்கம் கரை ஒதுங்கினார் . பாலிடெக்னிக் பக்கம் நுழையலாம் என்றால் அதற்கு தகுதியில்லை என்று ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள் . ரொம்பவும் கடினப்பட்டு தொழிற்பயிற்சி பெற்றுவெளியே வந்தார் ;பாலம் ஒன்றை கட்டுவதில் கலக்கி எடுத்தார்   உலக வணிக பொருட்காட்சியில் கண்ணைக்கவர ஒரு கோபுரத்தை உருவாக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கொடுத்தார்கள் .அதற்கான உரிமையை இவர் பெற்று மாற்றங்கள் செய்தார் ;இவர் சொதப்பி விடுவார் என சொன்னார்கள் .அரசாங்கம் கேட்ட ஆறரை லட்சத்தில் கால்வாசியை தான் கொடுத்தது முதலைப்போட்டு கட்டி பின் இருபது வருடம் அதை கஷ்டப்பட்டு மக்களிடம் இருந்து வசூலித்தார் இன்னொரு கூட்டம் “கலை அழகு மிகுந்த பாரிசில் கருப்பு அசிங்கமாக அது இருக்க வேண்டுமா” என குரல் எழுப்பினார்கள் .”அது பிரெஞ்சு புரட்சிக்கு நன்றி தெரிவிப்பதாக இருக்கும் .இப்பொழுது வருகிற நூற்றாண்டை குறிக்கும் ; எகிப்துக்கு பிரமிட் போல நமக்கு இது அமையும் “என்றார் இந்த அளவுக்கு நவீன வசதிகள் இல்லாத சூழலில் 300 வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தி வேலையை முடித்தார்கள் .கட்டுமானத்தின் பொழுது ஒரே ஒரு நபர் தான் இறந்து போனார். ஈபில் பெயராலே அக்கோபுரம் எழுந்தது. [] அமெரிக்க விடுதலை பெற்று நூறு வருடம் ஆனதன் பொருட்டு ஒரு சிலையை பரிசளிக்க பிரெஞ்சு மக்கள் முடிவு செய்தார்கள். நிதி திரட்டுவது தான் சிக்கலாக இருந்தது.அமெரிக்காவில் பல்வேறு நாடகங்கள் மூலமும்,புலிட்சர் பரிசு உருவாக காரணமான ஜான் புலிட்சர் தன் பத்திரிக்கையில் விளம்பரபடுத்தி நிதி சேர்த்தார் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த நம் குஸ்தாவ் ஈபில் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் ;பீடம் அமெரிக்காவில் வடிவமைக்கபட்டது;சிலை கப்பலின் மூலம் அமேரிக்கா வந்து சேர்ந்தது.முழுவதுமாக அல்ல ;பாகம் பாகமாக கொண்டுவரப்பட்டு பின் இணைக்கப்பட்டது. பொறியியல் படிக்க லாயக்கில்லாதவர் என குறிக்கப்பட்ட ஈபில் கைவண்ணத்தில் சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபில் கோபுரங்கள் எழுந்து நிற்பது சுவையான முரண். அவரின் பிறந்தநாள் இன்று [] 4 நான் சொன்னது நடந்திடுச்சா- கேட்கிறார் நாஸ்ட்ரடமஸ் திசெம்பர் 14, 2013 நாஸ்ட்ரடமஸ் பிறந்த நாள் இன்று. இப்படி ஆரம்பிப்பதிலேயே அவரின் வாழ்க்கையின் சுவாரசியம் துவங்கி விடுகிறது. அவர் இன்னுமொரு ஏழு நாட்கள் கழித்து பிறந்தார் காலண்டர் குழப்பம் என்று சொல்வதில் இருந்து அவர் சொன்னவை வரை எல்லாமே செம த்ரில் தருபவை. நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்கிற ஜோசியர்கள் பலபேரை பார்த்திருப்போம். பல நூறு வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததைப்போல சொன்னவர் தான் இவர் பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் இவர். கலை,மருத்துவம் என்று எதெதையோ படிக்கப்போய் எதையும் முழுதாக முடிக்காமல் வெளியேறினார் இவர். மருத்துவம் படிக்கிற காலத்தில் சொந்தமாக மருந்து தயாரித்தார் என்று சொல்லி வெளியேற்றினார்கள். பின்னர் அவர் வெற்றிகரமான மருத்துவரானார். அவர் கொடுத்த ரோஸ் மாத்திரை ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியது. எகிப்தின் பிரமிடுகள் பற்றிய ரகசியங்கள்,ரசவாதம்,யூத கிறிஸ்துவ,இஸ்லாம் மதங்களின் மாந்த்ரீக வேலைகள்,கப்பாலா என்கிற ஆருட முறை என்று பலவற்றை தேடிக்கற்றுக்கொண்டார் இவர். தீர்க்கதரிசனங்கள் என்கிற நூலை எழுதினார் அவர். அதில் பிக்காடர் எனும் பதினான்காம் நூற்றாண்டு பிரெஞ்சு மொழி பாணியில் சங்கேத மொழியில் பாடல்கள் எழுதி வைத்துவிட்டுப்போனார் இவர். ஒருநாள் பிரபு ஒருவரின் வீட்டில் சாப்பிட போயிருந்தார் இவர். அவரின் வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு பன்றிகளில் எதை இன்று இரவு உண்போம் என்று கேட்டார் செல்வந்தர். “கருப்பு பன்றி தான் இரவு உணவுக்கு ! வெள்ளை பன்றியை ஓநாய் தின்று விடும் !” என்றார் நாஸ்ட்ரடமஸ். செல்வந்தர் வெள்ளைப் பன்றியை சமைக்க சொன்னார். இரவு உணவின் பொழுது “எப்படி இருக்கிறது வெள்ளை பன்றி ?” என்று செல்வந்தர் கேட்ட பொழுது வேலையாள் ,”வெள்ளை பன்றி மாமிசத்தை நாய் தின்று விட்டது. கருப்பு பன்றியை தான் உண்கிறீர்கள் ” என்றான். அந்த நாயின் பெற்றோரில் ஒன்று ஓநாய் ! தன்னுடைய மகன் ஜோசியத்தால் இறப்பான் என்று சரியாக சொன்னார் அவர். இன்று ஊர்ப்பற்றிக்கொள்ளும் என்று அவன் சொன்னது நடக்காமல் போகவே மக்கள் அவனை நெருங்கி வந்தார்கள். கம்பளியில் தன்னை சுற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டான் அவன். ஊரும் பற்றி எரிந்தது,அவனும் இறந்து போனான். பிரான்ஸ் அரசி அவரைப்பார்க்க அழைத்திருந்தார். அவரிடம் ராஜ வம்சத்தைப்பற்றிய தன்னுடைய ஆரூடத்தை சொன்னார் அவர். ஏழு பிள்ளைகளும் அரசு ஆள்வார்கள் ; கடைசிப்பிள்ளை மட்டும் நிலையான ஆட்சியை தருவான் என்று துல்லியமாக சொன்னார் நாஸ்ட்ரடமஸ் . அவர் அங்கே சொல்லாமல் முன்னரே அவரின் தீர்க்கதரிசனங்கள் நூலில் எழுதியிருந்தது ராணியின் கணவரின் மரணம் பற்றி ! தங்கக்கூண்டில் கண்கள் குத்தப்பட்டு இறப்பார் என்று அவர் எழுதியிருந்த மாதிரியே வீர விளையாட்டின் பொழுது கண்கள் குத்தப்பட்டு அரசர் மரணமடைந்தார். நாஸ்ட்ரடஸ் தான் இறக்கிற பொழுது கூடவே ரகசிய ஆவணங்கள் சிலவற்றை தன்னோடு சேர்த்து புதைக்க சொன்னார். அதை சர்ச் தோண்டி பார்த்தது. அவரின் கழுத்தில் 1700 என்று தோண்டி பார்த்த வருடம் கச்சிதமாக குறிக்கப்பட்டு இருக்கவே அப்படியே விட்டுவிட்டார்கள். பிரெஞ்சு புரட்சி சமயத்தில் நாஸ்ட்ரடமஸ் மண்டை ஓட்டில் மது ஊற்றி குடித்தால் ஆரூடம் சொல்லும் திறன் வரும் என்று நம்பிய வீரர் கூட்டம் ஒன்று அவரின் கல்லறையை நோண்டியது. அதனுள் “நான் இறந்த நூறாவது ஆண்டில் என் கல்லறையை தோண்டி எடுக்கும் இழிவானவன் மரணமடைவான் !” என்று எழுதியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். அதைப்படித்து கொண்டிருக்கும் பொழுதே தோட்டா பாய்ந்து இறந்து போனான் அந்த வீரன் ‘இத்தாலியில் பிறக்கும் பேரரசன் பேரிழப்பு தருவான் ; அவனின் சேர்க்கை அவனின் கூட்டு அவனை மன்னன் என்று சொல்லாது கசாப்பு கடைக்காரன் என்று எண்ண வைக்கும்” என்று அவர் நெப்போலியனை பற்றி முன்னமே சொல்லிவிட்டார்.லண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்தை வருடத்தோடு துல்லியமாக நூறு வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். பிரெஞ்சு புரட்சியை ,”இளவரசர்களும்,பிரபுக்களும் தலையில்லா மூடர்கள் ஆக்கப்படுவார்கள் அடக்கப்பட்டவர்களால் !” என்று பாடி சென்றிருக்கிறார் [Napoleón y Hitler] லூயிஸ் பாஸ்டரின் பெயரோடு அவரை கடவுள் போல மறைக்கப்பட்ட ஒன்றை கண்டுபிடித்ததால் மக்கள் கொண்டாடுவார்கள் என்று முன்னூறு வருடங்களுக்கு முன்னரே பதிந்து விட்டுப்போய் இருக்கிறார். டயானாவின் மரணதைப்பற்றியும் புள்ளி வைத்தது மாதிரி பதிந்து விட்டார் அவர். அவரின் இறுதிக்காதலன் நபியின் துணைப்பெயரை கொண்டிருப்பான் என்றும் சொன்னார். அப்படியே நடந்தது. அந்த காதலனின் பெயர் முகமது அல் பயத் ! “ஏழைகளின் பிள்ளையொன்று மேற்கு ஐரோப்பாவின் ஆழங்களில் இருந்து எழும் ! நாவால் பெரும்படையை பேச்சால் இழுத்து கிழக்கில் புகழ் பெறுவான் அவன் !” என்று ஹிட்லரை பற்றி அவர் எழுதி இருந்தார். அதை கூடுதலாக கொஞ்சம் மசாலா அயிட்டங்கள் தடவி பிரபலம் ஆக்கினான் ஹிட்லர். சர்ச்சில் அவனின் வீழ்ச்சியைப்பற்றி நாஸ்ட்ரடமஸ் எழுதி இருந்ததை அச்சடித்து விநியோகித்து பதிலடி தந்தார். “இரு நகரங்களின் வாசலருகே இருபெரும் ஆயுத தாக்குதல் நிகழும் ! பஞ்சம்,கொடிய நோய்கள் வாளின் முனையில் கோரங்கள் அரங்கேறும் ! மக்கள் இறைவனிடம் உதவிக்கு இறைஞ்சி அழுவார்கள் !” என்று ஹிரோஷிமா,நாகசாகி அணுகுண்டு வெடிப்பு நடப்பதை எச்சரித்து விட்டார் நாஸ்ட்ரடமஸ். “ஆயிரம் வருடங்கள் முடியும் காலத்துக்கு சற்று முன்னர் எழில் வரும் ஓராண்டில் விளையாட்டில் படுகொலைகள் நிகழும் ! கல்லறையில் இருந்து வருவார்கள் புதைக்கப்பட்டவர்கள் !” என்று முனிச்சில் நடந்த ஒலிம்பிக் படுகொலைகளை ஆருடம் சொல்லியிருக்கிறார் [] ஜான் கென்னடியின் கொலை செய்யப்படக்கூடும் என்று முன்னரே உளவுத்துறை எச்சரிக்கும் அவர் இருந்தாலும் சுடப்படுவார் அவரின் சகோதரரும் இறப்பார் என்றும் பாடலில் பாடிவிட்டார். 3797 இல் உலகம் அழியும் என்று வேறு அடித்துச்சொல்லிவிட்டு போயிருக்கிறார் நாஸ்ட்ரடமஸ். [] இந்தியாவைப்பற்றி ஏதேனும் தீர்க்கதரிசனம் உண்டா நாஸ்ட்ரடமஸ் அவர்களிடம் ? உண்டு ! இந்திரா,ராஜீவ்,ஜான்சி ராணி,போஸ் என்று நீளும் பட்டியல் அது. “துரத்தப்பட்ட ராஜ்யத்தை மீண்டும் பெறுவாள் அவள் ; சதியாளர்கள் எதிரிகள் ஆவர் ! மூன்று மற்றும் எழில் அவளுக்கு மரணம் நிச்சயம் !” என்று எழுதியிருக்கிறார். இந்திரா 70-3 = 67 வயதில் இறந்தார் என்பதை கொண்டும,எமேர்ஜென்சியால் ஆட்சியை இழந்து மீண்டும் அவர் வந்தார் என்பதையும் பொருத்திக்கொள்ளுங்கள். “தான் தோற்பதை நேரில் காண்பாள் ! ஆணின் வீரத்தோடு போரிடுவாள் ; குதிரையில் ஏறி தனியே நதியை கடப்பாள். இரும்பு தொடர்ந்திட நம்பிக்கைகளை பொய்யாக்கிடுவாள் !” என்று ஜான்சி ராணி பெண் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்பதை உடைத்து போரிட்டு குதிரையில் தப்பி போனதை நேரில் பார்த்தது போல குறிக்கிறார். எண்ணற்றோரின் தலைவன் வெவ்வேறு பண்புகள் உள்ள நாட்டில்,மொழியில் வீரர்களை உத்வேகப்படுத்துவான் . நீரில் தப்பி போவான் ” என்று போஸின் வாழ்க்கை பதிவு செய்யப்படுகிறது. போஸ் நீர் மூழ்கி கப்பலில் தப்பினார். ! ராஜீவ் காந்திப்பற்றிய பாடலோடு முடிக்கலாம். ராஜீவ் பதவிக்கு வந்து ஏழு வருடங்கள் கழித்து இறந்தார். அவரின் மனைவி சோனியா வெனிட்டோ மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநில தலைநகர் வெனிஸ் ! “அரச ஆணையால் பெரும் விமானி அனுப்படுவார் ; படையை விட்டு உயரிய இடம் நோக்கி ; ஏழு ஆண்டுகள் கழித்து ரத்தாகும் ; காட்டுமிராண்டிகளின் கொடுஞ்செயல் வெனிசை பயத்துக்கு உள்ளாக்கும் !” நாஸ்ட்ரடமஸ் பிறந்தநாள் இது என்று ஆருடம் சொல்லப்படுகிறது 5 பார்வை போனாலும் பாடிய மில்டன் ! திசெம்பர் 9, 2013 ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம் கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர் ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள் வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள். [] சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து,இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது. நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார். கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள். “பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ,கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு,இருட்டு,இருட்டு மட்டுமே !” என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார். [] இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார். “வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ? என் அறிவை அழிக்க வருகிறது மரணம் பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு “எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?” என்று கேட்கிறேன் நான் முணுமுணுப்போடு பதில் வருகிறது “இறைவன் இதை செய்யவில்லை. மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன. சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள். எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல் உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே கொண்டாடும் அவனை !” [] “நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !” என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன். மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன்,பார்வை,பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு ஒன்றைத்தொடங்கினார் கெல்லர். மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று : அறுபது வருடங்களில் காதலை கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன் பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன எது அது எனும் கேள்விகள் தவிர்த்து மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது… நீ போய்விட்டாய் பெருங்கடலும்,கண்டமும் நடுவில் நின்று நகைக்கின்றன நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து எதோ சில ஏனோ திரும்பவருகின்றன வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம் விசித்திரமான,விரகம் தரும் ஒன்று நடக்கிறது எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் : கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த புத்துலகு பிறந்தது,அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் ! 6 வான்தொட்ட வால்ட் டிஸ்னி ! திசெம்பர் 5, 2013 தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான வால்ட் டிஸ்னி வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி,இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது எல்லையில்லாத காதல் மனிதருக்கு. ஆம்புலன்ஸ் டிரைவராக உலகப்போர் சமயத்தில் இளைஞனாக டிஸ்னி கலந்து கொள்ள போன பொழுது அவரின் வண்டி முழுக்க விலங்குகள் விதவிதமான வடிவங்களில் வரையப்பட்டு இருக்கும் அது அவரை உந்தித்தள்ளியது . தொடர்ந்து கார்டூன்கள் வரைந்துகொண்டே இருந்தார் மனிதர்-பல்வேறு உருவங்களை உருவாக்கினார்.அவரை படைப்பாற்றல் இல்லாதவர் என்று பலர் துரத்தினார்கள்;பசி வயிற்றை கிள்ளியது,ஆஸ்வால்ட் என்கிற முயலை உருவாக்கினார் ;நல்ல பெயரை சம்பாதித்து தந்த அதையும் முட்டாள்தனமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இழந்துவிட்டார். . “உங்களுக்கு கற்பனை வளம் குறைவு கிளம்புங்கள் பாஸ் “என கதவைக்காண்பித்தார்கள் . அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னி வசித்த பொழுது எலிகளை வளர்த்தார் . தெருவில் இருந்த தொட்டியில் இவர் போடும் சாப்பாட்டு மிச்சங்களுக்கு காத்திருக்கும் அவை இவருக்கு ஹாய் சொல்லும் . அதிலும் பிரவுன் கலர் எலி அவருக்கு ரொம்ப செல்லம். எதுவுமே இல்லாமல் ட்ரெயினில் கண்கள் கலங்க போய்க்கொண்டு இருந்தவர் கண்களில் அங்கே எதையோ கொறித்துக்கொண்டு இருந்த எலி ஒன்று கண்ணில் சிக்கியது. பிரவுன் எலியின் ஞாபகம் வந்திருக்க வேண்டும் . அதன் சேட்டைகள் இவருக்கு பிடித்திருந்தன . கொஞ்சமாக சிரித்தார் ; பென்சிலை எடுத்துக்கொண்டார் . மனிதனின் சாயலில் ஒரு எலியை உருவாக்கினார் .!அதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைக்க,அது நன்றாக இல்லை என அவரின் மனைவி வைத்தப்பெயர் தான் மிக்கி. அந்த எலியை உருவாக்கியதற்கு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கப்பட்டது. சிண்ட்ரெல்லாவின் கதையை அனிமேஷன் படமாக எடுக்க கிளம்பினார். ரயில்வே பாத்ரூமில் வாரத்துக்கு ஒரு முறை குளியல்,படுக்க பெட்ஷீட் இல்லாமல் திரைச்சீலையே படுக்கையாக இருந்த போதும் மனதில் மட்டும் கற்பனை வளம் பொங்கியது. ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும் படத்துக்கு பிரம்மாண்ட பட்ஜெட் போட்டார். பத்து லட்சம் படங்கள் வரையப்பட்டு இரண்டே இரண்டு லட்சம் படங்கள் மட்டுமே பட உருவாக்கத்தில் பங்கு பெற்றன. கச்சிதம்,கடும் உழைப்பு எல்லாமும் சேர்ந்து உலகம் பார்க்காத பெரிய வெற்றியை தந்தன [] ஒட்டுமொத்த சொத்தையும் கொட்டி மீண்டும் தானாக வறுமையை தேடிக்கொண்டு டிஸ்னி லேண்டை உருவாக்க திட்டத்தை வால்ட் டிஸ்னி தீட்டினார். ஹாலிவுட்டே ஏளனமாக பார்த்தது. அவரின் அந்த கனவுக்கு பின் சின்ன வயது அழுகைகள் இருந்தன. வறுமையால் ரயில் வண்டியில் கூட ஏற முடியாத அளவுக்கு வீட்டில் கஷ்டம். அதனால் தான் வீட்டில் சின்னதாக ஒரு ட்ராக் வைத்து அறுபது வயதில் ரயில் வண்டி விடுகிற ஒரே ஒரு ஆடம்பரம் அவருக்கு இருந்தது. மற்றபடி எளிய ஆடைகளே அணிவார்,நடந்தே பயணம் போவார். கோடிகளை கொட்டி நிறுவனத்தை உருவாக்கினார். குழந்தைகள் தங்களின் கனவுலகில் இங்கே வாழ வேண்டும் என்று ஆசை பொங்க சொன்னார் “நீங்கள் கனவுகள் கண்டால் அதை விடாமல் துரத்துங்கள். ஒரே எலி,பெரிய கனவு இவற்றால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்த பொழுது உங்களால் முடியாதா ?” என்று டிஸ்னி சிரித்தபடியே கேட்டார். எப்படி சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது ,” குழந்தைகளின் உலகில் குழந்தையாகவே வாழ்கிறேன் நான் !” என்றார் அவர். நம்பினால் நம்புங்கள் மொத்தம் அறுபத்தி நான்கு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருபத்தி ஆறு முறை வென்று இருக்கும் இவரின் சாதனை எப்பொழுதும் நிலைத்து நிற்கும் 7 குதிராம் போஸ் எனும் வீரன் ! திசெம்பர் 3, 2013 டிசம்பர் மூன்று குதிராம் போஸ் எனும் வீர இளைஞன் பிறந்த தினம் இன்று .இவருக்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார் . [] இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது .யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் ; அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள் அவரில்லை;இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ் . அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கை கொண்டவர்கள் அவர்கள் .பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி ,”ஏன் சிரிக்கிறாய் ?நான் சொன்னது புரிந்ததா ?”என கேட்க ,”நன்றாக புரிந்தது “என சொல்ல ,இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்”என அவன் சொன்ன பொழுது நம்புங்கள் வயது பதினெட்டு தான் ! தூக்கில் போடப்பட்ட பொழுது பதினெட்டு வயது ஏழு மாதம் பதினொரு நாள் வயதான இளைஞன் அவர் . அவர் தூக்கில் போடப்பட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம் ! குதிராம் இறக்கிற பொழுது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார் குதிராம். “ஒருமுறை விடைகொடு அம்மா! என் அருமை அம்மா! நான் மீண்டும் பிறப்பேன் சித்தியின் வயிற்றில்… பிறந்தது நான்தான் என்பதையறிய குழந்தையின் கழுத்தைப் பார் அதில் சுருக்குக் கயிற்றின் தடம் இருக்கும்” அவரின் பிறந்தநாள் இன்று.  சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை! 8 மஞ்சள் காய்ச்சல்,கொசுக்கள்,பின்லே ! திசெம்பர் 3, 2013 கார்லோஸ் ஃபின்லே பிறந்த தினம் இன்று. மஞ்சள் காய்ச்சல் எனும் நோயின் மீது மஞ்சள் வெளிச்சம் பாய்ச்சியவர் இவர். க்யூபாவில் பிறந்தவர் இவர். சைமன் பொலிவருடன் இணைந்து சண்டையிட்ட இவரின் தந்தை ஒரு மருத்துவர். ஹவானாவில் இளமைக்காலத்தை கழித்த இவர் காலரா,டைபாய்டு நோய்களால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தன்னுடைய கல்வியை முடித்தார். ஐரோப்பாவில் படித்துவிட்டு அமெரிக்காவில் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்கலாம் என்று கிளம்பி வந்த இவரை சேர்த்துக்கொள்ள பிலடெல்பியாவில் இருந்த ஒரே ஒரு மருத்துவக்கல்லூரி மட்டுமே தயாராக இருந்தது. அங்கே தான் கிருமிகள் தான் நோயை உண்டாக்குகின்றன என்கிற தியரியில் நம்பிக்கை கொண்டிருந்த மிட்செல்லை சந்தித்தார். மருத்துவர் ஆனதும் ஏழை மக்களுக்கு இலவசமாக க்யூபாவில் மருத்துவம் பார்த்தார். பயணிக்கிற இடங்களில் எல்லாம் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தார் அவர். மஞ்சள் காய்ச்சல் வந்தால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் குறைந்தபட்சம் இறந்து போவார்கள். இவர் மருத்துவர் ஆன காலத்தில் மிக வேகமாக அந்நோய் பரவிக்கொண்டு இருந்தது. அதைப்பற்றி ஆய்வுகள் செய்தார் கார்லோஸ். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கொசுக்கடிக்கு உள்ளானதை கவனித்தார் இவர். மஞ்சள் காய்ச்சல் கொண்டிருந்த நபர்களின் ரத்தத்தை எடுத்துக்கொண்டார் ; அவற்றை கொசுக்களை குடிக்க செய்தார். பின்னர் இந்த கொசுக்களை நல்ல உடல்நலம் உள்ள மனிதர்கள் மீது செலுத்திய பொழுது அவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. இதை அவர் உறுதியாக கொசு தான் நோய்க்கான காரணியை கடத்துகிறது என்று அடித்து சொன்ன பொழுது உலகம் சிரித்தது. ரீட் எனும் அமெரிக்க மருத்துவர் இவர் சொன்னது உண்மை என்று நம்பினார் மேலும் ஆய்வுகள் செய்து அதை உறுதிப்படுத்தினார். பனாமா கால்வாய் உருவாக்கத்தின் பொழுது கொசுக்களை முற்றாக கொன்றுவிட்டு வேலையை தொடங்கினார்கள். இந்த மாதிரி கட்டுமானப்பணிகளில் பத்து சதவிகிதம் பேர் மஞ்சள் காய்ச்சலால் இறந்து போவார்கள் இந்த முறை அது தவிர்க்கப்பட்டது. காரணம் கார்லோஸ் அவர்களின் கண்டுபிடிப்பு. [] டெட்டானஸ் நோய் தாக்கி எண்ணற்ற பால்குடி பறக்காத பிஞ்சுகள் இறந்துபோவதை உற்று கவனித்தார் இவர். அந்த குழந்தைகளின் தொப்புளில் சுற்றப்படும் பஞ்சு துணியில் பாக்டீரியாக்கள் இருந்து நோய் உண்டாக்குவதை கண்டறிந்தார். . அதை ஆய்வு செய்து பார்த்தலில் டெட்டனஸ் நோய் பரவவுதில் அந்த துணியில் இருக்கும் நுண்கிருமிகளுக்கு பெரும்பங்கு உண்டு என்று உணர்ந்தார். அவற்றை தவிர்க்க செய்து பல குழந்தைகளை காப்பாற்றினார். அவருக்கு இன்று நூற்றி எண்பதாவது பிறந்தநாள் . அவரை கூகுள் டூடுல் வெளியிட்டு நினைவுகூர்ந்து உள்ளது. அதில் நீரில் மிதக்கும் இலைகளின் மேலே இருக்கும் கொசுக்கள் ஒருபுறமும்,கார்லோஸ் இன்னொரு புறமும் இருக்கிறார். 9 எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் ! திசெம்பர் 1, 2013 ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார். [] பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவியலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார். அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக். அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள். [SCN 2067a] எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது. உதவிய கட்டுரைகள் : http://www.outlookindia.com/article.aspx?220961 http://news.bbc.co.uk/2/hi/south_asia/3193576.stm 10 எவரெஸ்ட் அளந்த இந்தியா ! திசெம்பர் 1, 2013 டிசம்பர் ஒன்று ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம். இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும் ? . ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார் ; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால்,நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார். [] இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம் அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று,இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார்.[]டைபாய்டு காய்ச்சல்,மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன் !” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக்கொண்டு போய் பார்த்துவிட்டு கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைதுப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள். [] இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும்,டெஹ்ராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர் ; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை -நானூறு மைல்கள். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதிதிருந்தார் எவரெஸ்ட் [] தென் ஆப்ரிக்காவில் படுத்துக்கொண்டு உடல்நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும் குறிப்பு என்ன தெரியுமா ? “லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48′ என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது. ஜார்ஜ் எவரெஸ்ட் அவர்களின் நினைவுதினம் இன்று.- 11 பூட்டோவின் பெருங்கதை இது ! நவம்பர் 30, 2013 ஜுல்பிகர் அலி பூட்டோ தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்த தினம் இன்று. பூட்டோ அரசியல் களத்தில் அடித்து ஆடியவர் ; அந்த அதிரடியின் இறுதியில் தானே மரணத்தை தழுவியது எதிர்பாராத திருப்பம். பூட்டோவின் தந்தை ஜூனாகாதின் திவானாக இருந்தவர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு அப்பகுதியை தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு முதலில் வென்றார் அவர். பின்னர் இந்திய ராணுவம் நுழைந்து ஓட்டெடுப்பு நடத்தி இந்தியாவின் பகுதியானது அது என்பது தனிக்கதைபூட்டோ அமெரிக்காவில் படித்துவிட்டு,இங்கிலாந்தில் பாரீஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். அயுப் கான் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்ததும் இவரை இளவயதிலேயே அமைச்சர் ஆக்கினார். சீன்ப்போரில் இந்தியா தோற்றதும் சீனாவை நோக்கி நட்ப்புக்கரம் நீட்டினார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோ. காஷ்மீரில் பிடித்திருந்த பகுதிகள் சிலவற்றை சீனாவுக்கு வார்த்துவிட்டு இந்தியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு தந்திரமாக அழைத்தார்.இந்தியா குஜராத்தின் கட்ச் மீதான எல்லை சிக்கலில் அடக்கி வாசித்ததை கண்டதும் ஆபரேசன் கிப்ரல்டார் என்கிற பெயரில் பாய்ந்தார். பாகிஸ்தானின் பகுதிகளுக்குள் புகுந்து இந்திய ராணுவம் கலக்கி எடுத்தது. சாஸ்திரி தாஸ்கண்டுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போனார். கோசிஜின்,அயுப் மற்றும் பூட்டோ சேர்ந்து கொண்டு இந்தியா போர்க்கைதிகளை விடுவிக்க வேண்டும் கைப்பற்றிய கார்கில் உள்ளிட்ட பகுதிகளை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி சாதித்தார்கள் பூட்டோவின் ராஜதந்திரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லவேண்டும். அடுத்து அயுப் கானுடன் சிக்கல் ஏற்பட்டு பதவியை துறந்தார் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தொடங்கினார். யஹியா கான் அதிபராக ஆகி இருந்தார். தேர்தல் வந்தது . முஜுபிர் ரஹ்மான் தலைமையில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் திரண்டிருந்தார்கள். வங்க மொழி பேசிய அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் போலவே அரசு நடத்தி வந்திருந்தது. கூடவே பதவிகள்,வரிப்பகிர்வு,வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி இருந்தார்கள். தேர்தலில் பெரும்பான்மையை அள்ளி இருந்தது ரஹ்மானின் கட்சி. ஆட்சியை அமைக்க கூடாது அவர்கள் என்று முஷ்டி முறுக்கினார் பூட்டோ. ஏற்கனவே ஒரு போருக்கு காரணமான அவர் இந்த முறையும் அப்படி ஒரு சூழலுக்கு நாட்டை நகர்த்தினார். எண்ணற்ற மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்கள்.. லட்சக்கனக்கனோர் அகதியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். போர் மேகம் எழுந்து வங்கதேசம் உருவானது. அப்பொழுதும் சிறையில் இருந்த ரஹ்மானை சந்தித்து இன்னமும் போர் முடியவில்லை ஐம்பதாயிரம் டாலர் மற்றும் ஜனாதிபதி பதவி தருவதாக பேரம் பேசினார் பூட்டோ. []இவரே போருக்கு பின்னர் நாட்டின் தலைமைபொறுப்புக்கு வந்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்து பிரதமருக்கு அதிகாரங்களை அதிகப்படுத்தினார் அவர். மீண்டும் தன்னுடைய தந்திரத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை இந்தியாவிடம் இருந்து மீட்டுக்கொண்டு போய் இந்திராவிடம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். அணு ஆயுத திட்டத்தை வேகமாக முன்னெடுத்து “புல்லை தின்றாவது இந்தியாவைப்போல அணு குண்டு வெடிப்போம் !” என்று சபதம் செய்தார். ஆனால் அகமதியா மதப்பிரிவை இஸ்லாமில் சேராது என்று சொன்னதில் அப்துஸ் சலாம் நாட்டைவிட்டு வெளியேறியது ஒரு பின்னடைவாக இருந்தது. சீனாவின் உதவியில் அக்கனவு நிஜமானது. பல்வேறு துறைகளை தேசியமயமாக்கி இருந்தார் பூட்டோமீண்டும் தேர்தல் வந்த பொழுது எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலில் நின்றன. இருந்தாலும் வென்றார் இவர் ; தேர்தலே மோசடி என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடு கொதிநிலையில் இருந்தது. ஜியா உல் ஹக் எனும் தளபதி ஆட்சியை கைப்பற்றினார். அகமது ராசா கஸ்துரி எனும் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து அவரின் குடும்பத்தை பூட்டோ கொன்றார் என குற்றச்சாட்டை வைத்து கோர்ட்டுக்கு போனது வழக்கு. ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்த நீதிபதி அனுப்பப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தூக்கு விதிக்கப்பட்டது இவருக்கு. [] சுப்ரீம் கோர்ட் வரை போயும் இவரை காப்பாற்ற முடியவில்லை. ஜியாவிடம் கருணை மனுக்கள் ஆயிரக்கணக்கில் இவருக்காக குவிந்தும் மரண வாசலை தொட்டார் இவர். “நான் அந்த தவறை செய்யவில்லை என்று என் இறைவனுக்கு தெரியும் !” என்று சொன்ன பூட்டோ அதற்கு முன் செய்த தவறுகளைப்பற்றி என்ன இறைவன் நினைத்திருப்பார் என்று உள்ளுக்குள் நினைத்திருக்கலாம் ! 12 காலங்களை கடந்த கலைவாணர் ! நவம்பர் 29, 2013 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது. [] நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம் திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு “இவன் என் நாடக கம்பெனி ஆள் !”என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார். சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று [] அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே. என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா . என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார் என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி “நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? “என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார். அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு [] ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,”நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !” என்று சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார். 13 மகாத்மா புலே! நவம்பர் 28, 2013 இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று .இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் இவர். இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பிரமாணர்கள் கீழ்சாதி ஆள் எனச்சொல்லி அவரை அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது . ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ; மேற்குலகின் நூல்களை படித்தார் .தாமஸ் பெய்னின் மனிதனின் உரிமைகள் நூல் nஅவரை ஈர்த்தது. வேதங்களை படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சார்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தார் .அவர் தன்னுடைய கட்டுரைகள் எழுத்துகளில் எங்கேயும் இந்து என்கிற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை -பிரமாணியம் என்றே குறித்தார் .உடல் உழைப்பை கொட்டித்தரும் மக்களை சூத்திரர் என பாகுபடுத்தி சோம்பிக்கிடக்கிற வேலையை தான் பிராமணர்கள் செய்கிறார்கள் என்றார் .1857 விடுதலைப்போரை உயர் சாதிகளின் செயலாகவே அவர் பார்த்தார் . தாழ்த்தப்பட்ட மக்கள் படைகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிக்கப்பட வேண்டிய விஷயம் அவரின் ‘அடிமைத்தனம்’ புத்தகம் பெரிய அலைகளை உண்டு செய்தது. அதைப்பற்றி செய்தி வெளியிடவே இதழ்கள் யோசித்தன. மண்ணின் உண்மையான மக்களான சூத்திரர்களை ஒதுக்கிவிட்டு வெளியே இருந்து இங்கே வந்த பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; மக்களின் அறியாமையை கொண்டும் தங்களின் வஞ்சகத்தாலும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று அவர்கள் இழைத்த அநீதிகளை எழுதினார் புலே. அந்நூலில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் நூறில் ஒரு பங்கை கூட பதிவு செய்யவில்லை என்று சொன்னார். அந்நூலை அமெரிக்காவில் நீக்ரோக்களின் விடுதலைக்கு பாடுபட்டவர்களுக்கு அர்ப்பணித்தார் [] பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. இயல்பாக பகடி செய்து செல்லும் அந்த கடிதம் இது தான் பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன் தந்தை பெயர் : ஆதி நாராயணன் இடம் : எங்கும் பார்க்கலாம் அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு, பார்ப்பனர்களின் மூலமாக உலகுக்கு சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைக்க செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம். அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும். இப்படிக்கு தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின் நிஜத்தை சோதிக்க விரும்பும் ஜோதிராவ் கோவிந்தராவ் புலே கல்வி அறிவை தராமல் மக்களை ஒடுக்கும் வேலையை செய்த இந்து மதத்தின் காவலர்களை பகடி செய்தார் .‘சத்திய சோதக் சமாஜ்’ எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார் . சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்கள் என சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக அவ்வமைப்பின் மூலம் செயலாற்றினார். ஒரு மதத்தை விட்டு வெளியேறி அதை விமர்சிப்பதை விட அதை உள்ளிருந்தே அதன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார் .தன் மனைவி சாவித்திரிபாய் புலே உடன் இணைந்து தாழ்த்தப்பட்ட ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார் . [] உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள் ;போகிற பொழுது சாவித்திரியின் மீது கல்லெறிந்தார்கள் . சனாதானிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து புலேவின் தந்தை அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். என்றாலும் தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார் .பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே. சாவித்திரி பாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண் ஆசிரியராக ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் . தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ;அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் . ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார் அவரின் பார்வை இன்றைக்கும் அவசியமாக இருப்பதை இவ்வரிகளே காட்டும் ,”தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக- பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்” அவரை நினைவு கூர்வோம் 14 புரூஸ் லீ எனும் ஜென் வீரன் ! நவம்பர் 27, 2013 தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீஅப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் “ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்” என்று கேட்க ,”கலை எல்லாருக்கும் பொதுவானது தானே ” என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். “அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால் நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு ” என்றார் அவர். []இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கச்செய்தது .தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். “நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது” என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார். [] புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. “எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !” என்றார் அவர். ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார். வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது. நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை [] நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,”நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !” என்றார் அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள். [] அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது : மேற்கே காற்றை எல்லாம் தங்கமயமாக்கி கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்கரைந்துருகும் பனித்துளிக்கு வெகுதூரம் தள்ளி மலையுச்சியின் மீது தங்க டிராகன் தனித்து தன் கனவுகள் வெளிச்ச மேற்கில் தேய,மறைய சலனமில்லாமல் நிற்கிறது !   15 வாழ வைத்த வர்கீஸ் குரியன் ! நவம்பர் 26, 2013   நவம்பர் 26-வர்கீஸ் குரியன் எனும் வெண்மை புரட்சியின் தந்தை பிறந்தநாள் இன்று. இவரின் கதை ரொம்பவே சுவாரசியமானது.கேரளாவின் கோழிகோட்டில் பிறந்த இவர் சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற பின் ,கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்; அதன் பின் மிச்சிகன் பல்கலைகழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவிற்கு வந்ததும் அவர் கொஞ்சகாலம் டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதற்கு பின் அவர் எடுத்தது தான் நாட்டின் வரலாற்றை திருப்பி போட்ட தருணம். கால்நடை பொறியியல் படித்து விட்டு குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில உள்ள அரசு பாலேடு ஆய்வு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கொஞ்ச நாளில் வேலை அலுப்பைத்தரவே அதைவிட்டு விட்டு வேறேதாவது வேலை பார்க்கலாம் எனக் கிளம்பினார். அவரின் நண்பர் திருபுவன்தாஸ்பாய் படேல் அழைப்பின் பேரில் எளிய மக்கள் பால் கொண்டு வந்து தரும் பால் கூட்டுறவு சங்கத்தை காண சென்றார் ;அப்பொழுது அவர்களின் துன்பப்படும் நிலையை பார்த்து வெளியேறும் திட்டத்தை கைவிட்டார். அங்கே இருந்து அவர்களின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க கனவு கண்டார் . அவருக்கு உண்மையில் பாலே பிடிக்காது என்பது சுவையான முரண் அவர் முன் நின்ற மிகப்பெரிய சவால் அன்றைய நிலையில் இந்தியா பால் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் வாசலை தட்டி விவசாயிகளின் பாலை கொள்முதல் செய்ய வேண்டுகோள் விடுத்த பொழுது அவை அவரின் யோசனையை நிராகரித்தன. வலியோடு வெளியேறிய அவர் ,தொழில்நுட்பம் விவசாயிகளின் கையில் போய் சேரும்பொழுது வெற்றி பெறும் என நம்பினார். ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனம் (அமுல்) எல்லா தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு சொல்லித்தந்தார்;எந்த அளவுக்கு என்றால் மாடுகளை செயற்கை கருத்தரித்தலுக்கு உட்படுத்தலையே விவசாயிகளுக்கு சொல்லி தந்தார். மேலும் வெறும் பாலை விற்றால் பிரயோஜனம் இல்லை ,அது மிகப்பெரிய சந்தையை திறந்து விடாது என தெளிவாக உணர்ந்திருந்த அவர் பல்வேறு புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்து காட்டினார் ; அதற்கான ஊக்கத்தை பால் விவசாயிகளுக்கு தந்தார். எந்த அளவுக்கென்றால் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் எருமைப்பாலை ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அதிலிருந்து வெற்றிகரமான பால் பவுடரை தயாரித்து காண்பித்தார். அவற்றை விளம்பரப்படுத்தலும் அவசியம் என உணர்ந்தார் ;விவசாயிகளுக்கு விளம்பரத்தில் அவசியத்தை புரிய வைத்து சாதித்தார். [] இதில் உள்ள அடிப்படை சிக்கல் முழுக்க முழுக்க இந்த விஷயங்களில்சம்பந்தப்பட்டவர்கள் எளிய பெரும்பாலும் படிக்காத மக்கள். அவர்களுக்கு எளிய முறையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்ததும் ,அவர்களின் பாலை இடைத்தரகர்கள் இல்லாமல் பெற்றதும் முடியாத என பன்னாட்டு நிறுவனங்கள் நிராகரித்த எளிய ஏழைகளின் பால் கூட்டுறவு சங்கத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் வெற்றி நிறைந்த பிராண்ட் ஆக உயர்த்தியது. மேலும் அமுலின் வெற்றியை கண்டு வியந்த அரசு இந்திய முழுக்க இந்த திட்டத்தை செயல்படுத்த அவரை அழைத்தது. ஆபரேசன் ஃப்ளட் என பெயரிடப்பட்டு மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அத்திட்டம் வெண்மை புரட்சியானது. பால் பற்றாக்குறையில் கடினபட்ட தேசம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் ஆனது . வர்கீஸ் குரியன் அறுபதாண்டு காலம் அமுலின் தலைமை பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனைக்கும் டாடாவில் பெற்றதை விட மூன்று மடங்கு குறைவே !, [] “இத்தனை எளிய ஏழை மக்களின் கனவுகளை தாங்குகிறோம் என்பதே நிறைவு தருகிறது. எனக்கு பாலை அருந்த பிடிக்காது ;ஆனால் இத்தனை பேரின் தூத்வாலா (பால்காரன் )என என்னை அழைத்து கொள்வதிலேயே நிறைவு கொள்கிறேன் !”என தன் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கிற அவருக்கு உலக உணவு பரிசு,பத்ம விபூஷன் முதலிய பல்வேறு விருதுகள் கிடைத்து உள்ளன. எனக்கும் ஒரு கனவு இருக்கிறது என்ற அவர் மோடியின் சர்வாதிகார போக்கு பிடிக்காமல் அமுலை விட்டு விலகியது சோகமான முடிவு. இவரின் மீதான ஒரு குற்றச்சாட்டு இந்திய பசுக்களை ஒழித்து வெளிநாட்டு பசுக்களை உள்ளே விடுகிற வேலையை இவர் செய்தார் என்பது. இவரின் வீட்டின் முன் பசு மாடுகளை கட்டி மக்கள் போராட்டமெல்லாம் செய்தார்கள். என்றாலும் வர்கீஸ் குரியன் அது மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை “எனக்குமொரு கனவு இருந்தது !”என்பது அவரின் பிரபலமான வாசகம்;கனவுகள் தேசத்தின் மீதான எல்லையற்ற காதல் .தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தது என்பவையெல்லாம் அவரின் எளிய கனவை தேசத்தின் வாழ்வாக்கியது;அவரை பாரதத்தின் வெண்மை புரட்சியின் தந்தை என அறிய வைத்தது..அறுபது வருடங்கள் ஓய்வே இல்லாமல் உழைத்த அவர் நிரந்தரமாக ஒய்வு எடுத்துக்கொண்டார் அவருக்கு ஒரு வெண்மை வணக்கம் 16 அரசியலமைப்பு சட்டம் ஆக்கிய அண்ணல் அம்பேத்கர் ! நவம்பர் 26, 2013 நவம்பர் 26 ஒப்பிலாத ஒரு மாபெரும் ஆளுமையின் மிகப்பெரும் சாதனை ஒன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் இன்று. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று தான். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையில் விடாமுயற்சி மற்றும் ஓயாத வாசிப்பால் உயர்ந்த அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் சட்டத்தை வடிவமைக்கும் சட்ட வரைவு குழுவின் தலைவர் ஆனார். உலகிலேயே மிகப்பெரிய முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்ட அந்த சட்ட வரைவை அம்பேத்கர் அவர்கள் தனியாளாக வடிவமைக்கிற அளவுக்கு பல சமயங்களில் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அசமந்தமாக நடந்துகொண்டார்கள். இந்த நாட்டின் அச்சாணியாக,ஜனநாயகம் ஓரளவிற்காவது உயிர்ப்புடன் இருப்பதை எப்பொழுதும் உறுதி செய்த வண்ணம் இருக்கும் அரசியல் சாசனத்தை ஆக்கி முடித்தார் அண்ணல். [] இதற்கு பின் இன்னொரு சம்பவம் உண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல சமயங்களில் காந்தி மற்றும் காங்கிரஸ் ஆகியோரோடு முரண்பட்ட அம்பேத்கரை விடுதலைக்கு பிந்திய அமைச்சரவையில் நேரு சேர்க்கவில்லை. அம்பேத்கர் பெயரே இல்லாமல் அமைச்சரவை பெயர் பட்டியலை காந்தியிடம் காட்ட .”அம்பேத்கர் பெயர் எங்கே ? இது காங்கிரஸ் அமைச்சரவையா இல்லை எல்லாருக்குமான அமைச்சரவையா ? “எனக்கேட்டார் காந்தி.அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஆற்றலாக அவர் இருந்தார். [] அரசியல் சாசனத்தை அரசியல் சாசன நிர்ணய மன்றம் இன்றைக்கு ஏற்றுக்கொண்டது.ஆனாலும்,பூரண சுதந்திரம் என தேசியக்கொடியை நேரு ஏற்றிய லாகூர் காங்கிரஸ் மாநாடு நடந்த ஜனவரி 26 அன்று அன்று அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. கொடுமை என்ன தெரியுமா ? இத்தகு பெரிய செயலை கிட்டத்தட்ட ஒற்றை ஆளாக செய்த அரசியலமைப்பின் தந்தையை அப்படி பல மாநில அரசுகளின் பாட புத்தகங்கள் பதிவு செய்ய மறுக்கின்றன. 17 சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ! நவம்பர் 26, 2013 விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர்;கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் . குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்.இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார். காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ். தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார் ; காஷ்மீரை இன்னமும் ரத்தம் தோய்ந்த பூமியாக அவரின் செயல்கள் ஆக்கின. [] இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன .சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார். [] ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நவம்பர் 26 அன்று  ஐந்து வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார் அத்வானி மண்டல் கமிஷன் ராஜீவ் காந்தி 18 சார்ல்ஸ் டார்வின் தந்த வெளிச்சம் ! நவம்பர் 25, 2013 உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை ,”இது தவறு !”என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும்.அது டார்வினிடம் இருந்தது . சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார். தட்டான்பூச்சி,மண்புழுக்கள்,பட்டாம்பூச்சி,வண்டுகள்,அணில்கள்,புறாக்கள் என்று இவற்றை சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் “உனக்கு படிக்கவே வரலை ; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது !”எனத்தன் மகனைப்பார்த்து சொன்னார் அந்த அப்பா . அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதற கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார் . (அப்பொழுது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை ). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது,தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி இயற்கையியல் வல்லுநர் ஆனார். தென் அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களை கண்டார்;பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார் .அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன ;அவையே ,மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார் . என்றாலும் இவற்றை இணைத்து அவரால் உடனே பார்க்க முடியவில்லை. அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களை திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளை கண்டார். ஒரு தீவில் கடலையை கொத்த பட்டையான மூக்கோடு ஒரு தீவிலும்,எலியை தின்ன கூர்மையான மூக்கு இன்னொரு தீவிலும்,புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கும் இருப்பதை கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று சொன்னார். பதினேழாயிரம் விலங்கு,பறவை,படிமங்கள்,பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை அவர் பெற்றிருந்தாலும் வாயைத்திறக்கவே இல்ல டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின் அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனை கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது. [] அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின்மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார் 1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது ) 2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி ) 3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள் ) பரிணாம கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது.பலர் ஏற்றுக்கொண்டனர்;இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள் ; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளை பேய் தினம் என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள் மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர் ,கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை . அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இன்றைக்கு தான் 154 ஆண்டுகளுக்கு முன் ORIGIN OF SPECIES என்கிற தன் ஆய்வுத்தாளை சமர்ப்பித்தார். “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”என சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார் [] ‘நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக்கிடக்கத் தயார்’ என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது. 19 கென்னடியின் மரணமும்,அவிழாத முடிச்சுகளும் ! நவம்பர் 22, 2013 அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபர்களின் வரிசையில் முன்னணியில் எப்பொழுதும் இருக்கும் ஜான் எப் கென்னெடி சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று. டல்லாஸ் நகரின் வழியாக போன பொழுது மக்கள் தன்னை நன்றாக பார்க்கட்டும் என்று காரின் மேற்பகுதியை திறந்துவிட்டு மக்களை நோக்கி கையசைத்தார் கென்னெடி.அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அவர் மனைவி ,”டல்லாஸ் மக்களுக்கு உங்களைப்பிடிக்கவில்லை என இனி எப்பொழுதும் சொல்ல மாட்டீர்கள் தானே !”என கேட்க ,”ஆமாம் !” என்பது போல தலையசைத்தார் கென்னெடி. டீலே பிளாசா வழியாக கார் போன பொழுது திடீர் என்று வெடிச்சத்தங்கள் கேட்டன,கென்னெடி விழுந்து கிடந்தார்,மூன்று முறை வெடிச்சத்தங்கள் கேட்டதாக மக்கள் சொன்னார்கள்.கொனோலி எனும் அமெரிக்க இரண்டாம் உலகப்போர் வீரரும் குண்டடிபட்டார்;மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கென்னெடி முப்பதைந்து நிமிட போராட்டத்துக்கு பின் மரணமடைந்தார்.அவரை கொன்றவன் என ஆஸ்வால்ட் என்கிற நபரை கைது செய்தார்கள் ; சோவியத் ரஷ்யாவில் மூன்றாண்டுகள் தப்பிபோய் வாழ்ந்த இவர் அங்கே குடியுரிமை பெறவும் முயன்று இருக்கிறார் [] பின் அங்கே வாழ்க்கை போர் அடிக்க அமெரிக்கா திரும்பி விட்டார் ,கியூபாவிற்கு ஆதரவாகவும் நாட்டில் செயல்பட்டார்,போலீஸ் துறையில் இருந்த இவர் கென்னெடி கொல்லப்பட்ட அன்று கென்னெடி அவர்களின் துப்பாக்கி சூட்டிற்கு சில நிமிடங்கள் கழித்து வேகமாக வெளியேறிக்கொண்டு இருந்த இவரை கேள்வி கேட்ட டிப்பிட் என்கிற போலீஸ்காரரை சுட்டுக்கொன்றார் ;இவரை இரண்டு நாட்கள் போலீஸ் விசாரணை செய்துவிட்டு சிறைக்கு கொண்டு செல்கிற வழியில் ஜாக் ரூபி என்கிற டல்லாஸ் இரவு விடுதி உரிமையாளரால் கொல்லப்பட்டார்.கென்னெடி மீது கொண்ட அன்பால் அதை செய்ததாக வேறு சொன்னார். “நீ கம்யூனிஸ்ட்டா ?” என கேட்கப்பட்ட பொழுது ஆஸ்வால்ட் ,”இல்லை நான் மார்க்சிஸ்ட் “எனவும்,தான் கென்னெடி மற்றும் டிப்பிட்டை சுடவில்லை என்றும் மறுக்கசெய்தான் ஆஸ்வால்ட். [] ஆனால் வெவ்வேறு விசாரணை குழுக்கள் அவர் தான் கொன்றார் என முடிவு செய்து அறிவித்தன .எனினும் United States House Select Committee on Assassinations மட்டும் ஆஸ்வால்ட் மட்டும் ஆறாவது மாடியில் இருந்து சுடவில்லை இன்னுமொருவரும் சேர்ந்து நான்கு முறை மொத்தம் சுட்டார்கள் அவர் யாரென்பதை கண்டுபிடிக்க தவறி விட்டோம் என்றது.உண்மை தெரிந்த ஆஸ்வால்ட் தன்னை போலீஸ் துன்புறுத்தியதாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்று மட்டும்தான் சொன்னான் ;அதற்கு பின் அவனும் மேலோகத்துக்கு ரகசியத்தோடு பாக்அப் ஆகிவிட்டான் ! 20 ஊழலின் உச்சம் கிளைவ் ! நவம்பர் 22, 2013 நவீன இந்தியாவில் ஊழல்,லஞ்சம்,கட்சித்தாவல் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திய ராபர்ட் கிளைவ் மறைந்த நாள் இன்று. ஒரு எழுத்தராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி கோடிகளில் புரண்டு, பற்பல மாளிகைகள்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கப்பாளங்கள்,ஒளிரும் வைரங்கள் என்று கொள்ளையின் உச்சமாக இருந்தவர் இவர். இவரின் வாழ்க்கைப்பக்கம் சுவாரசியமானது [] வெறும் போக்கிரியாக திரிந்து கொண்டிருந்த இவர் ஆங்காங்கே இருக்கும் கடைகளில் நண்பர்களோடு சேர்ந்து மாமுல் வசூல் செய்வார். அப்படி தராமல் போன கடைகளை  உடைப்பது,சேறு எறிவது,வீணாக வம்புக்கு இழுப்பது என்று இவர் இருந்தது இவரின் அப்பாவின் காதுக்கு போனது. ஒற்றை இலக்க பவுன் சம்பளத்துக்கு இந்திய கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேரச்சொல்லி இவரை அனுப்பினார் தந்தை. இந்தியாவின் வெப்பம்,கடுமையான பணிச்சூழல்,குறைந்த சம்பளம் அவரை திருத்தும் என்று நினைத்தார் அவரின் தந்தை. ஒன்றரை வருடப்பயணத்தில் இந்தியா வந்தார்.சில போர்களில் பங்கு பெற்றும்,அதிகாரிகளை கவனித்தும் முன்னேறிக்கொண்டு இருந்தார். கர்நாடக சூழல் அவருக்கு அருமையான வாய்ப்பை தந்தது []. கர்நாடகம் எனப்பட்ட தென்னாட்டின் பகுதியில் பிரான்ஸ் கலக்கிக்கொண்டு இருந்தது. அவர்களின் கவர்னர் தூப்ளே முக்கிய காரணம் ,அங்கே  நவாப் பதவிக்கு சந்தா சாகிப் ஆசைப்பட்டார். அப்போதைய  நவாப் அன்வரூதின் இத்தனைக்கும் அவரன் உறவினர். ஆந்திர நவாப் பதவிக்கு முஸாபர் ஜங் மற்றும் நாஸிர் ஜங் அடித்துக்கொண்டார்கள். சாந்தா சாகிப்,பிரெஞ்சு படைகள் மற்றும் முஸாபர் ஜங் கூட்டணி போட்டு அன்வரூதினை கொன்றார்கள். அடுத்து நாஸிர் ஜங்கையும் கொன்று ஹைதராபாத் நவாபாக முஸாபாரை ஆக்கினார் தூப்ளே. ஆங்கிலேயப்படைகளும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கொண்டு தான் இருந்தது. ஒரே தோல்வி முகம். [] அப்பொழுது தான் இப்பொழுது இங்கே நிலைமையை தான் சரி செய்வதாக கிளைவ் இறங்கினார். அன்வரூதின் மகன் முகமது அலியின் பின் பிரிட்டன் படைகளை அணிவகுத்தார். முகமது அலியை தாக்கிக்கொன்று விட  திருச்சியில் எதிரிப்படைகள் நின்றுகொண்டு இருந்தன. கர்நாடகத்தின் தலைநகரான ஆர்க்காடு ஆளில்லாமல் இருந்தது ,“அங்கே போனால் என்ன ?” என்று கேட்ட கிளைவ் வெறும் ஐநூறு வீரர்களோடு அங்கே போய் வென்றார். போரின் போக்கு மாறியது. தெற்கு ஆங்கிலேயர் வசம் வந்தது []அடுத்தது வங்கம் பக்கம் பார்வை திரும்பியது. அங்கே வியாபாரம் செய்கிறேன் என்கிற பெயரில் வழங்கப்பட்ட பாஸ்களை முறைகேடாக ஆங்கிலேய அதிகாரிகள் பயன்படுத்திகொண்டு இருந்தார்கள். வங்கத்துக்குள் வந்த பொருட்களுக்கு எக்கச்சக்க வரி போட்டு இந்திய வியாபாரிகளுக்கு தொல்லை கொடுத்தார்கள்.  இவற்றை பார்த்து அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்தார் வங்கத்தின் நவாப் சிராஜ் உத் தவுலா. போருக்கு அவரை அழைத்தது கிழக்கிந்திய கம்பெனி.நவாபின் படைகளை லஞ்சத்தால் ஏற்கனவே வாங்கி இருந்தா கிளைவ். மிர் ஜாபர்,ஜகன் சேத்,அமிசந்த்,காதிம் கான் என்று பெரிய க்யூவில் நின்று நவாபுக்கு துரோகம் செய்தார்கள். லஞ்சம்,பதவி,கட்சித்தாவல் என்று திட்டம் போட்டு சாதித்தது தளபதி கிளைவ். ஆமாம் ! அவரின் வீரத்துக்கு கலோனல் பதவி கொடுத்தது கம்பெனி [] போரில் வெறும் இருபத்தி ஒன்பது பேர் ஆங்கிலேயர் பக்கமும்,நவாபின் பக்கம் ஐநூறு பேரும் இறந்து போனார்கள். சொன்னபடிய மிர் ஜாபர் மற்றும் குழுவினர் கட்சி தாவி நவாபை மாட்டிவிட்டார்கள். போரில் வென்றதும் பணமெல்லாம் எனக்கு,ஆட்சியின் பொறுப்பு உனக்கு என்று கிளைவ் செயல்பட்டார். அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்கள் செய்தார்கள். வங்கத்தை உறிஞ்சி கிளைவுக்கு கொஞ்சம்,கம்பெனிக்கு கொஞ்சம் என்று பல கோடிகளை சுருட்டினார்கள். இந்த எண்ணிக்கை ஒரு புரிதலை தரலாம். அந்தப்போரின் முடிவில் கிளைவுக்கு மட்டும் இருபது லட்சம் தரப்பட்டது. ஆங்கிலேய கம்பெனிக்கு 1,77,00,000.   இது போதாது என்று தங்கங்கள்,வைரங்கள் மற்ற லஞ்சங்கள் வேறு. பின்னர் மிர் ஜாபர் கொடுத்த பணம் போதாது என்று அவரை பதவியில் இருந்து எறிந்து அவரின் மருமகன் மிர் காசிமை கொண்டு வந்தார்கள். அவரும் கப்பம் தர முடியாமல் சுயாட்சி விரும்பி போர் தொடுத்து தோற்றுப்போனார். அப்பொழுது மீண்டும் மிர் ஜபாரை கொண்டு வந்தார்கள். இன்னுமொரு பதினைந்து லட்சம். கூடவே கிளைவுக்கு கவர்னர் பதவி. அப்பொழுதைய வங்கத்தில் வருமானம் 1 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 152  ரூபாய். அதில் இவருக்கு மட்டும் இரண்டரை லட்சம். இந்தியாவில் ஆட்சியைப்பிடிக்க முடியும் என்றெல்லாம் நம்பிக்கொண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. மொத்தமாக கம்பெனியை மூடிவிட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் பாராளுமன்றம் சொல்லிக்கொண்டு இருந்தது. லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி இருந்தார்கள். கிளைவ் தான் அந்த போக்கை மாற்றி ஆங்கிலேய சாம்ராஜ்யத்துக்கு அடிகோலினார் [] எல்லாமும்  சேர்ந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. பிரிட்டனில் எம்பிக்கள் பலரை விலைக்கு வாங்கினார் இவர் . இவரே எம்.பி ஆனார். வங்கத்தில் இவர்கள் அடித்த கொள்ளையின் விளைவு வளம் கொழித்த பூமியாக இருந்த வங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தில்  இறந்து போனார்கள். அவரின் ஊழல்களை நாடாளுமன்றத்தில் விசாரித்தார்கள். நான் நல்லவன் என்று நாடகமாடியும்,கொடுக்க வேண்டியதை கொடுத்தும்   தப்பித்தார் அவர். மனசாட்சி விடவில்லை. அவரின் கடிதங்களில் அந்த வலி தெரிகிறது. [] பித்தப்பை கோளாறு,தூக்கமின்மை ,ரத்த கொதிப்பு ஆகியன துரத்தின. மனச்சிதைவு ஏற்பட்டு போதை மருந்துகள் எடுத்துகொண்டார் கிளைவ். கழுத்தை அறுத்துக்கொண்டு இதே தினத்தில் 49 வது வயதில் இறந்து போனார் அவர். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு தேவலாய சடங்குகள் இல்லை ; அவர்களைப்பற்றி குறிக்கும் கல்லும் பொறிக்கமாட்டார்கள். அதுதான் கிளைவுக்கும் நடந்தது. ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வங்கத்தின் பொன்னில் புரண்ட ஆளுநர் அன்றோ பெற்றது அனாதை சவக்குழி. வரலாறு விசித்திரமானது ! 21 தீரர் திப்பு சுல்தான் ! நவம்பர் 20, 2013   திப்பு சுல்தான்   தினம் இன்று .புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி  . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான் . திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது. ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார் ‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். . [] உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதிமுறை பின்பற்றினார்,நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம் கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை  முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர்- நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில்   இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் . கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் . ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார். இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது [] ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின் பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள் . [] நான்காம் மைசூர் போரில் அவரின் தளபதியின் துரோகம்,ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். இவர்.வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் பிறந்த நாள் இன்று 22 இலக்கியத்தில் இதயம் தொட்ட டால்ஸ்டாய் ! நவம்பர் 20, 2013 டால்ஸ்டாய் மாமனிதர்,தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக,சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு போனார். கரடி ஒன்றினை வேட்டையாட துரத்தி அதன் ரத்தம் சிந்திய ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள் கருணை சுரந்தது பைபிள் அவரை செம்மைப்படுத்தியது. சக மனிதர்களின் மீதான அன்பு அவரின் எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும். [] . கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு போனார். அவற்றின் ஊழல்,போலியான பண்புகள் அவரை புரட்டின. இயேசுவை நான் நேரடியாக உணர்ந்து கொள்கிறேன் என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அனா கரீனினா நாவலை எழுதி பெரும்புகழ் பெற்றார் அவர் ; அதன் மூலம் நல்ல வருமானம். கூடவே ஏற்கனவே இருந்த சொத்துகள் வேறு எக்கச்சக்கம். நல்ல கிறிஸ்துவன் நிறைய சொத்துகள் வைத்துக்கொள்ள கூடாது என்று உணர்ந்தார் அவர். ஏழை மக்களை,பிச்சைக்காரர்களை அழைத்தார். அள்ளி அள்ளி எல்லாருக்கும் கொடுத்தார். மனைவி சோபியா பல்லைக்கடித்து கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார். வன்முறையை விட்டுவிடுங்கள் என்று அழுத்தி எழுதிய அவரின் தாக்கத்தில் காந்தி தன்னுடைய தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார். [] டால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் ?” என்று கேட்டார். எழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது டால்ஸ்டாய் கிட்டத்தட்ட தீவிர எழுத்து வாழ்க்கையை விட்டு விலகி  இருபது வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் .  அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் . பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 மக்கள் டுகொபார்ஸ் இன மக்கள் அன்றைய மத வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தார்கள். முழுக்க சைவமாக இருந்த அவர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் ; அடித்தாலும் திருப்பி தாக்க மாட்டார்கள். கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்தார்கள் ; ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தபடியால் அர அடிபணிய சொன்னது. மாட்டேன் என்று மவுனமாக சொன்னார்கள் இவர்கள். நாட்டை விட்டு கிளம்புங்கள் என்று அமைதியாக,ஆனால்,அழுத்தமாக சொல்லிவிட்டது ஆங்கிலேய அரசு. அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயணச்செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். எழுபத்தி எட்டு வயதில் விழித்துக்கொண்டு இருந்த நேரமெல்லாம் இந்த நாவலையே எழுதி தள்ளினார் டால்ஸ்டாய். ஒருவருட காலத்தில் கிடைத்த ராயல்டி தொகை அம்மக்களை காப்பாற்றியது. டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள். அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள் [] டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆனா கரீனினா இறப்பதாக எழுதப்பட்ட அதே அச்டபோவ் ரயில்வே நிலையத்தில் நிமோனியா தாக்கி இறந்தார். டால்ஸ்டாயின் எழுத்தும்,டுகொபார்ஸ் மக்களும் அவரை என்றும் ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பார்கள் [] 23 வீரப்பெண்மணி ஜான்சி ராணி லட்சுமி பாய் ! நவம்பர் 19, 2013 ராணி லட்சுமி பாய் பிறந்த தினம் இன்று. பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்றுஇளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்குதிருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள். டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர். சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரை இழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய் எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள். இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது. சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார். ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,”போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !” என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி. [] கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி [படிமம்:Jhansirani1850.jpg] குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள் [] இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார். போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் பிறந்தநாள் இன்று 24 இவர் தான் இந்திரா ! நவம்பர் 19, 2013 இந்திரா காந்தி பிறந்த தினம் இன்று. ஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ்வைத்துவங்கி நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது. [] விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில் தான் இந்திரா பிறந்தார். அப்பாவும்,தாத்தாவும் அடிக்கடி சிறைக்கு போவதையும் விடுதலைப்போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே அவரின் இளமைக்காலம் நகர்ந்தது. கூடவே,அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர்களை கொண்டு விடுதலைப்போருக்கு உதவவும் செய்தார். சாந்தி நிகேதனில் பெற்ற கல்வி,நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. இந்திராவுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம் . [] இந்திரா தன் அன்னை உடல்நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். சில போராட்டங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். விடுதலை பெற்ற பின் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற்றினார். பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பி யாக இருந்தாலும் முந்த்ரா ஊழல்,காப்பீட்டு ஊழல் என்று ஊழல்களை வெளியே கொண்டு வந்து காங்கிரசுக்கு சிக்கலை உண்டு செய்தார். [] நேருவும் முறையான விசாரனைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திராவுக்கும்,பெரோஸ் காந்திக்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப்படுவதற்கு முன்னமே பெரோஸ் இறந்து போனார். கையில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலாற்றினார். ஒரு முறை அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு. அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலைக்கச்சொல்லி நேருவை கட்டாயப்படுத்தி அதை சாதிக்கவும் செய்தார். நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ணவில்லை. தன்னுடைய நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகலாம் என்று எண்ணம் என்று குறிப்பிட்டு இருந்தார். [] நேருவின் மறைவுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திராவை மொத்தமாக லண்டனுக்கு தூதுவராக அனுப்பி மொத்தமாக அரசியல் வாழ்வை அஸ்தமித்து விடலாம் என்று எண்ணினார். அவர் தாஷ்கண்ட்டில் இறந்து போக இந்திராவை சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டிகேட்டின் காமராஜர்,நிஜலிங்கப்பா முதலியோர் பிரதமர் ஆக்கினார்கள் நாடாளுமன்றத்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப காலங்களில் திணறிக்கொண்டு தான் இருந்தார் இந்திரா. சிண்டிகேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப்பேற்றியது. அவர்களை மீறி ரூபாயின் மதிப்பை குறைத்தார் ; மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம் செய்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டிகேட்டோ இவருக்கு தொல்லை தரக்கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடைந்தது. பிற கட்சிகளின் உதவியோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் காலத்தில் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். அவருக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் மட்டுமே முதல்வராக தொடர் முடியும் என்கிற நிலை உண்டானது. நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக்கொண்டே போனது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு,பசுமைப்புரட்சி,வங்கதேச உருவாக்கம்,வங்கிகள் தேசிய மயமாக்கம் என்று சாதனைகளும் இந்திரா செய்தார். மாநில அரசுகளை ஒரு வகையான இறுக்கமான சூழலிலேயே இந்திரா தன் காலத்தில் வைத்திருந்தார். மொத்தமாக ஒன்பது,பத்து அரசுகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துகிற அளவுக்கு ஜனநாயகத்தை மறந்தவராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக்கால் வந்தது எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலாளரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தினார்,அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமான உயரத்தில் கூட்டத்தில் பேசினார்,அரசாங்க நிலத்தில் அமைந்த மேடையை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாமல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவித்தது. [] ஏற்கனவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியாது என்று தீர்ப்பு வாசித்து இருந்தார்கள். அதனால் மூன்று நீதிபதிகள் முன்னணியில் இருந்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னவரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித்துறைக்குள் அரசியல் கலந்தார்இந்திரா. ஊழல் மலிந்து போயிருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜெபி போராட்டங்கள் ஆரம்பித்து அசைத்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள்நாட்டு கலகம் என்கிற வார்த்தையின் படி அவசரநிலையை பிரகடனம் செய்தார். எல்லா வகையான சுதந்திரங்களும் பிடுங்கப்பட்டன,ஒரே நாளில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாடாளுமன்றம்,உச்சநீதிமன்றம் எல்லாமும் செயலிழந்தது. எழுத்து,பேச்சு சுதந்திரங்கள் பறிபோயின. சஞ்சய் காந்தி வந்தார் ; பல லட்சம் முஸ்லீம்கள்,தலித்துகள் உட்பட்ட எண்ணற்ற எளிய ஏழை மக்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தார். ஊரை அழகாக்குதல் என்று டெல்லியில் பல லட்சம் மக்களை வெளியேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது. சட்டத்தின் சரத்துகள் திருத்தப்பட்டு இந்திராவின் வெற்றி செல்லுபடியாக்கப்பட்டது. பிரதமர் முதலியோரின் தேர்வை கோர்ட் விசாரிக்க முடியாது என்று மாற்றப்பட்டது. இந்த காலத்தில் பேருந்துகள் முதலிய எல்லா சேவைகளும் ஒழுங்காக நடந்தது. விலைவாசி குறைந்தது ; மக்கள் விதிகளை பின்பற்றினார்கள். என்ன சுதந்திரம் தான் இல்லவே இல்லை. தேர்தல்களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவித்தார். அமைதியாக காத்திருந்த மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். ஜெபியின் ஒருங்கிணைப்பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,இவர் கட்சியை தோற்கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாணத்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார். ஸ்டாம்பை ஒட்டாமல்,போலீஸ் காவல் கேட்காமல் இவர் மீதான வழக்குகளில் கோட்டை விட்டார்கள். காந்தி தேசாயை இந்திரா காத்ததற்கு நன்றிக்கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. சட்ட திருத்தங்களை திரும்ப பெற்றார்கள். உள்நாட்டு கலகத்தின் போது அவசரநிலை என்பதை ஆயுத புரட்சியின் பொழுது என்று மாற்றினார்கள். இவர்களும் மாநில அரசை கலைத்தார்கள். பதவிக்காக அடித்து கொண்டார்கள். மக்கள் நொந்து போனார்கள். மூன்றே வருட இடைவெளியில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதரவளித்த பிந்தரன்வாலே குழு பஞ்சாபை வன்முறை பூமியாக்கி கொண்டிருந்ததது. பொற்கோயில் உள்ளே எக்கச்சக்க ஆயுதங்கள்,பஞ்சாபில் பெருங்கொலைகள் என்றிருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சிகளுக்கு பிறகு ராணுவத்தை அனுப்பினார். போர்க்கள பூமியானது பஞ்சாப். அந்த வன்மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலாளிகள் பறித்தார்கள். இந்தியாவை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவுக்கு வந்தது 25 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ! நவம்பர் 19, 2013 மலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மறைவு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று அழைத்தார்கள் தலைவர்கள். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார். [voc_raattai] இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ்.எஸ். லாவோ” கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார். பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை. தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல் முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது. கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது. ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு. அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,”இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !” என்று குறிப்பிட்டார்.சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார். 26 இந்திரா இறந்த கதை ! நவம்பர் 19, 2013 இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திரா காந்தி தன் காவலர்களாலே சுட்டுகொல்லப்பட்ட தினம் அக்டோபர் 31.  அடிப்படையில் பஞ்சாபி மொழி பேசும் மக்களை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு வலுப்பெற்றது சிரோன்மணி அகாலிதளம்; அதை நீர்க்க செய்ய பஞ்சாப் மாநிலத்தை மூன்றாக பிரித்து ஹரியானா,பஞ்சாப் மற்றும் இரண்டுக்கும் பொதுவாக சண்டிகரை வைத்தார் இந்திரா  .இத்தனைக்கும் பிறகும் பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் காங்கிரசின் வசமிருந்த ஆட்சியை எமெர்ஜென்சி காலத்துக்கு பின் கைப்பற்றிக்கொண்டது. அவர்களை ஒடுக்க காலிஸ்தான் என்கிற (புனித பூமி என அர்த்தம் ) தனி நாடு கேட்ட பிந்தரன்வாலே கூட்டத்துக்கு ஆதரவும்,உதவியும் அளித்தார். அவர்கள் இயக்கம் காலிஸ்தான் தேசிய முன்னணியை இந்திராவை சந்தித்த பின் உருவாக்கியது ; நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் காலிஸ்தான் உருவாக்க விளம்பரம் கொடுத்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டினார்கள். ஜக்ஜித் நாராயண் என்கிற காங்கிரஸ் தலைவரை கொலை செய்த வழக்கில் பிந்தரன்வாலே கைது செய்யப்பட்டதும்,இந்திராவுடன் தொடர்பை முறித்துக்கொண்டு பொற்கோயிலில் ஆயுதங்களோடு தங்களை வலுப்படுத்திக்கொண்டார்கள் காலிஸ்தான் கேட்டவர்கள். அங்கங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். வரிகளை வேறு வசூல் செய்தார்கள் ; தனி அரசாங்கமே நடந்தது. [] பொற்கோயில் உள்ளே போன ஜனாதிபதியின் காதை குண்டு உரசிக்கொண்டு போனது. “வேறு வழியே இல்லை” என்கிற நிலையில் ராணுவம் உள்ளே புகுந்தது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மூலம் பல்வேறு பேர் கொல்லப்பட்டார்கள் பொற்கோயில் ரத்தபூமி ஆனது. இந்திராவின் பாதுகாப்புக்காக இரண்டு சீக்கிய வீரர்கள் இருந்தார்கள் ;அப்பொழுதைய பாதுகாப்பு மந்திரி ஒய்.பி சவான் அவர்கள் இருவரையும் மாற்றி விடலாமா என்றார் “நாட்டின் இறையாண்மை மீது இந்த நாட்டின் பிரதமர் எனக்கே நம்பிக்கை இல்லை என்றால் எப்படி சவான் ?”என மறுத்துவிட்டார் இந்திரா;அவர்கள் இருவரும் சந்திக்காதவாறு தடுத்தார் சவான்.எனினும் குண்டுகள் அவரை இன்றைய தினம் துளைத்தது . அதற்குப்பின் டெல்லி முழுக்க ரேசன் கார்டை வைத்துக்கொண்டு தேடித்தேடி சீக்கியர்கள் பலர் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லபட்டார்கள். இந்திரா இறுதி ஊர்வலத்தில் அவரின் மரணத்துக்கு பழி வாங்குவோம் என்று எழுந்த கோஷத்தை மீண்டும் மீண்டும் அரசு தொலைக்காட்சி காட்டியது. “பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் !”என்றார் பிரதமர் ராஜீவ். அரசாங்க மையங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தன, [] அதற்கு முந்திய கூட்டத்தில், “I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India alive.” என்று சொன்னார் இந்திரா அவர் ரத்தம் மட்டுமல்ல,எளியவர்களின் ரத்தமும் சேர்ந்தே அவரின் மரணம் சிந்தச்செய்தது ! 27 நோபல்,ஆஸ்கர்,பாரத ரத்னா எதுவும் வேண்டாம் !-இது இன்னொரு பக்கம் நவம்பர் 17, 2013 விருதுகளை ஏற்க மறுத்த சிலரைப்பற்றிய சுவையான தொகுப்பு இது : ழான் பால் சார்த்தர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்க மறுத்தார். ,”எழுத்தாளன் ஒரு அமைப்பு,அவன் விருதுகளை ஏற்கக்கூடாது. மேற்கும்,கிழக்கும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டு இருக்கிற பொழுது மேற்கு வழங்குகிற ஒரு விருதை என்னால் ஏற்க முடியவில்லை. எழுத்தாளன் விருதுகளால் தான் ஒரு அமைப்பாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது. அது அவன் எழுத்தை பாதிக்கும் . எனக்கும் முன்னரே நெரூடாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும்” என்றார் அவர் [] வியட்நாமில் அமைதியை கொண்டு வந்ததற்காக ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் லா டேக் தோவுக்கு அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. லா டேக் தோவோ,”எங்கே அமைதி திரும்பி இருக்கிறது ? அமெரிக்கா தன்னுடைய வாக்கை காப்பாற்றவில்லை !” என்று அப்பரிசை ஏற்க மறுத்தார். [LeDucTho1973.jpg] மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார். அதே படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார் [] சாகித்ய அகாடமி வழங்கிய விருதை ஏற்க மறுத்தார்அருந்ததி ராய். “அமெரிக்காவுக்கு அடிபணிந்து நாட்டை மேலும் ராணுவமயமாக்குதல்,தாரளமயமாக்குதல்,தொழிலாளிகளை ஒடுக்குதல் ஆகியவற்றால் இவ்விருதை ஏற்க மறுக்கிறேன் !” என்றார் [] அரசு அதிகாரிகள் விருதுகளை ஏற்க கூடாது என்று கே.சுப்ரமணியமும்,என் துறை சார்ந்த விருதுகளை தவிர மற்ற அமைப்புகளின் விருதுகளை பெறமாட்டேன் என்று பத்திரிக்கையாளர் நிகில் சக்ரவர்த்தியும் பத்ம பூஷன் விருதை பெற மறுத்தார்கள். சீக்கிய பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஷ்வந்த் சிங்கும் இதே விருதை ஏற்க மறுத்தார். ஆனால்,பின்னர் பத்ம விபுஷன் வழங்கப்பட்டதும் அதை ஏற்றுக்கொண்டார். மவுலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து ,”நானே தேர்வுக்குழுவில் இருக்கிறேன். எனக்கு எப்படி விருது ?” என்று கேள்வி எழுப்பினார். 28 இது தான் இறுதி-சச்சினின் கடைசி கண்ணீர் நிமிடங்கள் ! நவம்பர் 16, 2013 இருபத்தி இரண்டு யார்ட்களுக்கும்,இருபத்தி நான்கு வருடங்களுக்கும் இடையேயான பயணம் இது என்று சச்சின் சொன்னது நிச்சயம் ஒரு நெடும்பயணம் ; வேகமாக கடந்து விட்ட அற்புதம் அது. நாடே கவலைகளை மறந்து நிம்மதியாக தூங்கும் மாயத்தை நிகழ்த்திய ஆட்டம் அது ஓய்வு பெறுவது வலி மிகுந்த தருணம் ; நாளைக்கு அந்த உடை,அந்த ஆடுகளம்,அந்த ஆரவாரம் எதுவும் நமக்கானது இல்லை என்கிற உணர்வே என்னவோ செய்யும். கூடவே முப்பது வருடங்கள் மூச்சாக இருந்த ஒன்றிலிருந்து விலகுதல் யாராக இருந்தாலும் கண்களை ஈர்ப்படுத்தவே செய்யும். “நான் கடவுள் இல்லை ; நான் சச்சின் !” என்ற வரிகள் ஏனோ அவர் அழுத பொழுது ஞாபகம் வந்தது இதோடு முடிந்தது என்று காயங்களோடு போராடிய தருணங்களில் மூன்று மணிக்கு எழுப்பி கூட வந்த நண்பர்கள்,தன்னுடைய வாழ்க்கையை தம்பிக்காக நகர்த்தி வைத்த அண்ணன், சச்சின் போட்டதிலேயே சிறந்த பார்ட்னர்ஷிப் தந்த அவரது மனைவி என்று எத்தனை பேரின் பங்களிப்பு தன்னை செலுத்தியது என்று அவர் சொல்லி முடிக்கிற பொழுது அழுகிறார் அவரது மனைவி. எப்பொழுதும் ,”நீ நன்றாக ஆடினாய் சச்சின் !” என்று தட்டிக்கொடுக்காமல் என்றைக்கும் தன்னுடைய மாணவனுக்கு தலைக்கனம் ஏற்படக்கூடாது என்று மவுனம் காத்த இன்றைக்கு மட்டும் ஆட்டத்தை ஆடுகளத்தில் காண வந்த அச்ரேக்கர் அமைதியாக நிற்கிறார். “என் ஆசானே ! இப்பொழுது நான் நன்றாக ஆடினேன் என்று சொல்லுங்கள். இனிமேல் நான் ஆட ஆட்டங்கள் இல்லையே !” என்று அந்த குரலில் தான் எத்தனை வலி ? எத்தனை பேர் எனக்காக வேண்டிக்கொண்டீர்கள்,உண்ணாவிரதம் இருந்தீர்கள் என்று சொல்லவே முடியாது ஒவ்வொரு முறையும் சச்சின் சச்சின் என்று நீங்கள் எழுப்பிய ஆரவாரங்கள் என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்று சச்சின் சொல்லி முடிப்பதற்குள் இறுதியாக ஒரு முறை ,’சச்சின்,சச்சின்’ என்று அரங்கே அதிர்கிறது. [] இருநூறாவது போட்டிக்கான் கேப்பை சச்சின் கையில் தோனி கொடுக்கும் பொழுது ,”இந்திய அணியின்,இந்த தேசத்தின் அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள் !” என்று சொல்லியதை மீண்டுமொரு முறை எல்லாரை நோக்கியும் சொன்ன பின்னர் சச்சினை உலகக்கோப்பையின் பொழுது உலாப்போக விட்டு ஒதுங்கி நின்ற தோனி இந்தமுறை தானே தோள்களில் ஈடிலா நாயகனை தாங்கிக்கொண்டார். போட்டி முடிந்து மணிநேரம் ஆனபின்னரும் யாருக்கும் போக மனமே இல்லை. மெதுவாக எல்லாருக்கும் நன்றிகள் சொன்ன பின்னர் அந்த இருபத்தி இரண்டு யார்ட்களை நோக்கி அந்த தேவன் நடக்கிறார். ஒரு கரம் நடுங்க முதலில் ஆசை பொங்க தடவிப்பார்க்கிறார் ; இன்னொரு கரம் நானும் வருகிறேன் என்று இறுதியாக ஒரு முறை தொட்டுப்பார்க்கிறது. குழந்தையை முதல்முறை தடவுகிற அன்னையை காண்கிற அன்னையின் வருடல் அது. ஆனால்,இதுதான் இறுதி முறை. கண்களில் அந்த மண்ணை ஒற்றிக்கொள்கிறார் அவர். கண்ணீர் அவரையும் மீறி வருகிறது . முடிந்தது ஒரு சகாப்தம்.   #ThankYouSachin 29 சச்சினை ஏன் இந்தியர்கள் காதலிக்கிறோம் ? நவம்பர் 15, 2013 Why Indians love Sachin Tendulkar-RAMACHANDRA GUHA அற்புதமான கட்டுரை. கிரிக்கெட் காதலர்கள்,வெறுப்பாளர்கள் அவசியம் வாசியுங்கள் ஏன் இந்தியர்கள் சச்சினை காதலிக்கிறார்கள் ? அக்டோபர் 10 அன்று மதிய வேளையில் சச்சின் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அன்று நாள் முழுக்க அவரைப்பற்றியே ஊடகங்கள் பேசிக்கொண்டு இருந்தன. இதைப்பார்த்து ஒரு கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர் மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். கோபங்கொண்டு அவர் எழுதிய அந்த கட்டுரையில் ஊரக பீகாரில் அறுபது தலித்துகளை படுகொலை செய்த உயர்ஜாதி தீவிரவாதிகளை விடுதலை செய்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பைப்பற்றி ஒன்றுமே பேசாமல்,ஊடகங்கள் ஒரு ஒரு சாதாரண ஆட்டக்காரர் ஓய்வை அறிவித்ததை நோக்கிப்பார்வையை திருப்பியதை காட்டமாக சாடியிருந்தார். கிரிக்கெட்டின் மீதான காதல் அதுவும் குறிப்பாக ஒரு ஆட்டக்காரரின் மீதான காதல் கண்டிப்பாக சமூக அவலங்கள் பற்றிய அக்கறையின்மையை உருவாக்குகிறது என்பதை முழுமையாக மறுத்துவிட முடியாது. [File picture of Indian students holding a large poster of Indian cricketer Sachin Tendulkar] அந்தக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று இப்படி சென்றது ,”அந்த படுகொலைகள் மிகவும் வருத்ததுக்குரியவை ; அதே சமயம் இந்த சமூகத்துக்கு சச்சின் தந்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரிது. அது எந்த கம்யூனிஸ்ட் புரட்சியும்,ரத்த வெறி பிடித்த தீவிரவாத கும்பல்கள் செய்ததை விடவும் அதிகம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.” என்று போனது அந்த கடிதத்தை எழுதிய நபர் ஊரக பீகாரில் வளர்ந்தவர். அங்கே எப்படி கருப்பு,வெள்ளை தொலைக்கட்சியில் ட்ராக்டர் பேட்டரிகளை போட்டு சச்சின் ஆடுவதை கண்கள் விரிய பார்த்து தான் வளர்ந்தேன் என்று குறித்திருந்தார். “எங்களூரின் ஒரே ஒரு தொலைக்காட்சியின் முன்னர் புமிஹார்கள் ,பிராமணர்கள்,தலித்துகள் ஒன்றாக கூடி நின்று அந்த இளம் வீரனுக்கு உற்சாகமாக ஆரவாரம் செய்தோம் !” என்றும் சொல்லியிருந்தார். கிரிக்கெட்டை வெறுக்கிற அந்த கம்யூனிஸ்ட்டிடம் அழுத்தமாக ,”நமக்கு ஏதேனும் தேவையென்றால் அது நிச்சயம் பல சச்சின்கள் தான். இந்த சச்சின்கள் தான் ஹிந்து-முஸ்லீம்,வடக்கு-தெற்கு,உயர் ஜாதி-தாழ்த்தப்பட்ட ஜாதி எனும் வேறுபாடுகளை கரைப்பார்கள். ” என்றும் அவர் எழுதி இருந்தார் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த 1989 ம் வருடம் எண்ணற்ற சமூக மோதல்கள்,சச்சரவுகள் இந்தியாவில் பின்னணியில் நிகழ்ந்து கொண்டிருந்தன இடைநிலை ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை வலியுறுத்திய மண்டல் கமிஷன் அறிக்கையின் அமலாக்கம் பல்வேறு ஜாதியினரிடையே வன்முறைகளை இந்தியாவில் உண்டாக்கியது. இந்திய பொருளாதரத்தை திறந்த விட்டது வேலை வாய்ப்பின்மை,சமத்துவத்தில் உண்டாகும் இடைவெளி ஆகியன குறித்து பெரிய கவலைகளை உண்டு செய்தது. காஷ்மீரில் ஊடுருவலும்,பாகிஸ்தானுடன் பதற்றங்கள் தொடர்ந்தன. வலதுசாரி ஹிந்துத்வா புத்துயிர் பெற்று இந்தியாவின் மதச்சார்பின்மையை அச்சுறுத்த ஆரம்பித்தது. பல்வேறு மதத்தினரிடையே நடந்த வன்முறைகளில் எண்ணற்ற மக்கள் தங்களின் உயிர்களை இழந்தார்கள். இந்த சமூக பதற்றன்களோடு ஒன்பதாண்டுகளுக்குள் ஏழு பிரதமர்கள் மாறி இருந்தார்கள். இந்த மாதிரியான வெறுப்பு,சந்தேகம்,அச்சம் மற்றும் வன்முறை நிறைந்திருந்த சூழலில் சச்சின் தன்னுடைய முதல் சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்தார். அவரின் திறன் மற்றும் சிறப்பான ஆட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களை தங்களின் பாதுகப்பின்மைகளை மறந்து ஒன்றாக சேர்ந்து புதிய நாயகனுக்கு ஆரவாரம் செய்ய வைத்தது. [] டெண்டுல்கருக்கு முன்னரே இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்திருக்கிறார்கள். நாற்பதுகளில் மெர்ச்சன்ட்,ஹசாரே. எழுபதுகளில் கவாஸ்கர் மற்றும் விஸ்வநாத் ஆகியோர் உலகததரமான ஆட்டக்காரர்கள். அவர்களின் ஆட்டங்கள் நுட்பம் மற்றும் கலைத்துவம் கொண்டதாக இருக்க சச்சினின் ஆட்டத்தில் ஆற்றலும்,ஆதிக்கமும் இருந்தது. அவர் அற்புதமாக தாக்குதல் பாணியில் ஆடிய ஆட்டம் பந்து வீச்சாளர்களை நடுங்க வைத்தது உருவத்தில் சிறியவராக இருந்தாலும் அவர் காலத்தின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட்,பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ்,மேற்கிந்திய தீவுகளின் கர்ட்லி அம்ப்ரோஸ்,ஆஸ்திரேலியாவின் மெக்ராத் ஆகியோரை சந்தித்து சாதித்திருக்கிறார். ஒரு ஹூக்,கட்,ட்ரைவ் எல்லாமும் அவரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக இருந்தது. அவர் வெளித்தோற்றத்தில் சிறியவராக இருந்ததால் அச்சம் தரும் வெளிநாட்டு வீரர்களை அடித்து நொறுக்கிய அவரின் ஆட்டம் இந்தியர்களை இன்னமும் அவரை கொண்டாட வைத்தது. எந்த காலத்தில் ஆடியிருந்தாலும் சச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். ஆனால்,அவர் ஆடிய காலம் சேட்டிலைட் தொலைக்கட்சிகள் வீடுகளை முற்றுகையிட்டதும் ஒரு நாள் போட்டிகள் வளர்ந்ததும் அவரை பல மூலை முடுக்குகளுக்கு கொண்டு போய் சேர்த்தது. கவாஸ்கர்,விஸ்வநாத் ஆகியோரின் ஆட்டம் நகரத்தில் மட்டுமே ரசிக்கப்பட்டது. அந்த பிஹாரி சிறுவனின் அனுபவம் போல சச்சினை குட்டி குட்டி கிராமத்து,நகரத்து மக்கள் ரசித்து கொண்டாட முடிந்திருக்கிறது. அவரின் ஆட்டபாணி ஐம்பது ஓவர் கிரிக்கெட்டுக்கு உகந்ததாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளை முந்திக்கொண்டு இந்த போட்டிகள் தாக்கம் செலுத்த ஆரம்பித்தன. தற்பொழுது இன்னமும் அதிகமான போட்டிகள் சர்வதேச அளவில் ஆடப்படுகின்றன. இவையெல்லாம் மற்ற எந்த இந்திய வீரரை விடவும் சச்சினை பிரபலமாக்கியது. அவரின் எளிமையான ஆளுமை சராசரி இந்தியர்களைவசீகரித்தது. எந்த சர்ச்சைகளிலும் சிக்காமலே அவர் இருந்தார். மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் அர்ப்பணிப்போடு இருந்தார் அவர். இளம் வீரர்களை செதுக்குவதை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். எதிரணி வீரரோடு வாய் சண்டைகள் சச்சின் போட்டதில்லை. அம்பையரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற பாணியில் ஆடுகளத்தில் நடந்து கொண்டதில்லை சச்சின். அவரின் மட்டையை மட்டும் பெசவிட்டார் சச்சின் தன்னுடைய ஆரம்ப கால ஆட்டங்களில் சச்சின் நிம்மதி மற்றும் ஆறுதலை தன்னுடைய தரமான ஆட்டத்தால் நாட்டுக்கு தந்தார். மற்ற இடங்களில் நம்பததகுந்த ரோல் மாடல்கள் குறைவாகவே இருந்தார்கள். அரசியல்வாதிகள் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் ஊழல்மயமாக இருந்தார்கள். சினிமா நட்ச்சத்திரங்கள் பகட்டா,,வெறியூட்டும் வகையில் இயங்கினார்கள். தொழிலதிபர்கள் சுய சேவை செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். தொன்னூறுகளின் இறுதியில் அவரின் ஆட்டத்தின் கனம் அவரை தலைசிறந்த வீரர் என்று கவனிக்க வைத்தது. அப்பொழுது கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த ஆட்டக்காரர் ஆவதற்கான பாதையில் எக்கச்சக்க சதங்களை இரண்டு வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அடித்து சாதித்தார் சச்சின். இந்தியர்கள் சாதனைகளை மிகவும் நேசிக்கிறார்கள் ; அதிலும் மற்ற விளையாட்டுகளில் (ஒலிம்பிக் உட்பட ) சொதப்பி கொண்டிருக்கும் சூழலில் அவரின் சாதனைகள் ஆறுதல் தருகின்றன. முழு கிரிக்கெட் வரையறையில் பார்த்தால் அவர் தலைமுறையின் தலை சிறந்த ஆட்டக்காரர் அவர் மட்டுமே என்று சொல்ல முடியாது. ஆஸ்திரேலியாவின் வார்னே மற்றும் தென் ஆப்ரிக்காவின் காலிஸ் ஆகியோரும் அவருக்கு இணையாக சொல்லத்தக்கவர்கள். வினு மன்கட் மற்றும் கபில் தேவ் எனும் இரு ஆல்ரவுண்டர்களும் கவனிக்கத்தக்கவர்கள். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்,வேறு எந்த வீரரை விடவும்,கிரிக்கெட் ஆட்டக்காரரை விடவும் சச்சின் பரவலாக,ஆழமாக சக வீரர்களால் மதிக்கப்படுகிறார். கவிஞர் சி.பி.சுரேந்திரன் ஒருமுறை இப்படி எழுதினார் “மற்ற வீரர்கள் பேட் செய்ய மட்டுமே கிரீசுக்கு வருவார்கள் ; சச்சின் நடந்து கிரீஸ் நோக்கி வருகிற பொழுது எல்லா வகையிலும் நொறுங்கிப்போயிருக்கும் தேசமும் நம்பிக்கையோடு போர்க்களத்துக்குள் நுழைகிறது ” இங்கே நூறு கோடி இந்தியர்கள் ஒரே ஒரு நாயகனோடு இருந்தார்கள் “ நன்றி : பி பி சி தமிழில் : பூ.கொ.சரவணன் 30 வானோடு விளையாடிய கெப்ளர் ! நவம்பர் 15, 2013 வான்கோள்களின் இயக்க விதிகளைக் கண்டுபிடித்த அற்புத அறிஞர் ஜோகன்னஸ் கெப்ளர் மறைந்த தினம் இன்று.அவர், ஜெர்மனியில் வெய்ல் டெர் ஸ்டாட் என்னும் நகரில் பிறந்தார். பிரஸ்ஸிய வானியல் வல்லுநராகிய கோப்பர்னிக்கஸ், “கோளங்கள் கதிரவனைச் சுற்றி வருகின்றனவேயன்றி, நிலவுலகைச் சுற்றி வரவில்லை” என்னும் தமது கோட்பாட்டினை விளக்கும் நூலை இவர் பிறப்பதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வெளியிட்டிருந்தார் கெப்ளரின் முதல் நூலைப் படித்த புகழ் பெற்ற வானியல் அறிஞராகிய டைக்கோ பிராகி, பிரேகு நகர் அருகிலிருந்த தமது ஆராய்ச்சிக் கூடத்தில் தமக்கு உதவியாளராக வரும்படி கெப்ளரை அழைத்தார். டைக்கோவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட கெப்ளர், 1600 ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு உதவியாளராகச் சேர்ந்தார். டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புக்களை மிகக் கவனமாகக் கணித முறைப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக இவற்றுள் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் துல்லியமாக உறுதியிட்டு விடலாம் என்று கெப்ளர் நம்பினார். ஆனால், பல ஆண்டுகள் அரும்பாடுபட்டுக் கணிதக் கணிப்புகள் செய்து பார்த்தபோது டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்தக் கொள்கைகளில் எதனுடனும் ஒத்திருக்கவில்லை என்பதைக் கண்டு கெப்ளர் மனக்குழப்பமடைந்தார். இறுதியில், சிக்கல் என்ன என்பதைக் கெப்ளர் உணர்ந்து கொண்டார். அவரும், டைக்கோ பிராகி, கோப்பர்னிக்கஸ் போன்ற மரபு வானியலறிஞர்கள் அனைவரையும் போன்றே, கோளங்களின் சுற்றுப் பாதைகள், வட்ட வடிவாக கருதியதை கண்டார் .நீள் வட்ட பாதையில் கோள்கள் சுழல்கின்றன என விளக்கும் மூன்று விதிகளை வகுத்தார் . [] .கெப்ளரின் விதிகள், சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் விவரித்த தன் மூலமாக கோப்பர்னிக்கஸ், கலிலியோ போன்ற மேதைகளுக்குக் கூடி பிடிபடாமலிருந்த ஓர் அடிப்படையான வானியல் சிக்கலுக்குத் தீர்வு காண முடிந்தது. எனினும், கோளங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் சுழல்கின்றன என அவரால் விளக்க முடியவில்லை .நியூட்டன் அதை பின் புவி ஈர்ப்பு விசையின் மூலம் விளக்கினார் . எந்த நவீன கருவிகளும் இல்லாமல் அசாத்தியமான உழைப்பின் மூலம் துல்லியமான விதிகளை கெப்ளர் . வார்த்தெடுத்தார் ஆனாலும் அவர் கண்டதை கலிலியோ முதலிய அறிஞர்கள் நிராகரித்தார்கள் .”எனக்கு கவலை இல்லை ;என் நூல் ஒரு தெய்வீக பரவசத்தை தருகிறது .இறைவனை உணர 6000 ஆண்டுகள் கழித்து தான் ஒருவர் வருகிறார் என்றால் என் கண்டுப்பிடிப்பை ஏற்றுக்கொள்ள பல காலம் ஆனாலும் வருத்தமில்லை !”என நம்பிக்கை பொங்க சொன்னார் அவர் .அது தான் நடந்தது . 31 ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே ! நவம்பர் 15, 2013 ஆச்சார்ய வினோபா பாவே மறைந்த தினம் இன்று. மகாராஷ்ட்ராவின் எளிய குடும்பத்தில் பிறந்த அவர் ரயிலில் தேர்வெழுத போய்க்கொண்டு இருந்த பொழுது அமைதி தேடி காசிக்கு போனார். பின்னர் வங்கத்தில் போய் அமைதி தேடி அலைந்தார். வங்கத்தில் இருந்த கொரில்லாக்களுடன் இணைந்து ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடலாமா என்று கூட யோசித்தார். காந்தியின் பேச்சைநேரில் கேட்டிருந்தார் ; நேரடியாக பார்த்து பேச கூச்சப்பட்டு கொண்டு கடிதம் எழுதினார். சபர்மதி ஆசிரமம் நோக்கி காந்தி வரச்சொன்னார். [] அங்கே வினோபாவுக்கு அமைதி தென்பட்டது. வாழ்நாள் முழுக்க தீவிர பிரம்மச்சரியத்தை கடை பிடித்தார் அவர். “என்னைவிட காந்தியத்தை நன்றாக புரிந்து கொண்டவர் ! எனக்கே குரு போலத்தான் பல சமயங்களில் அவர் தோன்றுகிறார் !” என்று காந்தி சொல்கிற அளவுக்கு வினோபாவே துறவு வாழ்க்கை வாழ்ந்தார். விடுதலைப்போரில் பங்குகொண்டு சிறை சென்றார். போர்க்காலத்தில் ஆங்கிலேயே அரசை எதிர்க்கும் குழுவுக்கு இவரைத்தலைவர் ஆக்கினார். காந்தியின் மறைவுக்கு பிறகு நில சீர்திருத்தங்களை அமல்படுத்துகிறேன் என்று உறுதி தந்திருந்த நேருவின் அரசு அதை அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுத்து விட்ட நகர்ந்து கொண்டது. தெலங்கனா பகுதியில் நிலவுடைமையாளர்களின் கொடுமையும்,சுரண்டலும் மிகுந்திருந்தது. அதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் வழிகாட்டுதலில் எளிய மக்கள்,பெண்கள் எண்ணற்றோர் போராடினார்கள். பல நாளாக அடங்கி இருந்த கோபம் வெளிப்பட்டது. நான்காயிரம் விவசாயிகளுக்கு மேலே ஆறு வருட போராட்டத்தில் இறக்கவும் செய்தார்கள்.மக்களுக்கு நிலங்களும் பெருநில உரிமையாளர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு கொடுக்கப்பட்டது. போலீஸ் கையில் துப்பாக்கியை முதல் முறை கொடுத்து அரசு போராட்டங்களை சமாளித்தது வினோபாவே இந்த சிக்கலை காந்திய முறையில் எதிர்கொள்ள எண்ணி இப்பகுதிகளின் ஊடாக நடைபயணம் போனார். அங்கே எண்ணற்ற மக்களை சந்தித்தார் ; தலித் மக்கள் பலபேர் அவரை கண்ணீரோடு வந்து கண்டார்கள். ,”எங்களுக்கு நிலம் கிடைக்க இருக்கும் ஒரே ஒரு வழி கம்யூனிஸ்ட்கள் தான். அதனால் தான் எங்களின் வறுமை,பசிக்காக அவர்களின் பின்னே நிற்கிறோம் !” என்று சொன்னது அவரை யோசிக்க வைத்தது. பொச்சம்பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில்,” உங்களால் நிலத்தை ஏழை மக்களுக்குத்தர முடியுமா ? ” என்று கேட்டார். பல ஏக்கர் நிலம் கொண்டு ராமச்சந்திர ரெட்டி தான் நூறு ஏக்கர் தருவதாக சொன்னது தான் முதல் புள்ளி. தலித் மக்கள் தங்களுக்கு தேவை எண்பது ஏக்கர் மட்டுமே என்று கம்பீரமாக சொன்ன பொழுது வினோபாவே அசந்து போனார் பல நடுத்தர விவசாயிகள் தாங்களும் நிலம் தர முன்வந்தார்கள். அதைப்பார்த்து தங்களின் தன்மானத்தை காக்க பெருநில உரிமையாளர்களும் முன் வந்தார்கள். தொடர்ந்து இரண்டு மாத காலம் போன பயணத்தில் பத்தாயிரத்துக்கும் மேலே அவரால் நிலங்களை பெற முடிந்தது. புத்தர் பிறந்த நாளன்று பெறப்பட்ட 2,95,054 ஏக்கர் நிலங்களை பிரித்து தர வழிமுறைகள்,சட்டங்கள் வகுக்கப்பட்டன. [] தொடர்ந்து இயங்கினார் வினோபாவே. எட்டு மொழிகளை கற்று அந்தந்த ஊரின் மக்களின் மொழியில் உரையாடி பங்காற்றினார் அவர். மொத்தமாக அவர் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் கிராமங்களில் நாற்பது லட்சம் ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு இருந்தது. இதில் இத்திட்டம் மிக சிறப்பாக பீகாரில் ராஜேந்திர பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அல்சர்,மலேரியா என்று எண்ணற்ற சிக்கல்கள் உடம்பை வருத்தினாலும் ஐந்தடி நான்கு அங்குலம் உயரம் கொண்ட அவர் இருபது மைல்கள் நடந்து நிலங்களை திரட்டுவதை தன் பணியாக கொண்டிருந்தார். அசாமில் பல்வேறு பழங்குடியின மக்களுக்கு இடையே சிக்கல் எழுந்த பொழுது கிராம தான திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு கிராமத்தின் எல்லா நிலங்களும் பொதுவில் வைக்கப்படும். அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப நிலங்களை மக்கள்  பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால்,அந்த நிலத்தை விற்கவோ,அடமானம் வைக்கவோ கூடாது. இன்றும் அத்திட்டம் சிறப்பாக அங்கே செயல்பட்டு வருகிறது. ஜெபி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திராவின் அரசை எதிர்த்து நடத்திய போராட்டத்தை விமர்சித்தார் ; அதே சமயம் எமெர்ஜென்சி வந்ததும் இந்திராவையும் விமர்சிக்க செய்தார். அவரிடம் தரப்பட்ட பல நிலங்கள் பயன்பாட்டுக்கு உகந்தையாகவே இல்லை ; பல இடங்களில் இவர்கள் போனதும் பினாமி ஆக்கி உரிமையாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார்கள். அரசுகளும் மெத்தனமாக இருந்து நில சீர்திருத்தத்தில் கோட்டை விட்டது. நாற்பது லட்சம் ஏக்கரில் அப்படியும் பத்து லட்சம் ஏக்கர் மக்களுக்கு ஒழுங்காக் பகிர்ந்தளிக்கப்பட்டது என்கிறார்கள். ராமன் மகசேசே விருது,பாரத ரத்னா ஆகிய விருதுகளை பெற்ற அவர் டைம் இதழின் அட்டையை அலங்கரிக்கவும் செய்தார். நோபல் பரிசு பெற்ற ரஸ்ஸல் இவரை சந்தித்த பொழுது ,”மனசாட்சியை மனிதர்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை கற்றுத்தந்த பேராளுமை !” என்று புகழ்ந்தார். அவரை நினைவு கூர்வோம். 32 கோட்சே மட்டுமா காந்தியை கொன்றான் ? -முழுக்கதை இது நவம்பர் 15, 2013 இன்றைக்கு கோட்சேவின் இறந்த நாள். ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில் தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான். காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து,அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? ‘என் ராமன் அயோத்தி ராமனில்லை ‘ என்று உறுதியாக காந்தியால் சொல்ல முடிந்தது. கோயில்கள் விபசார விடுதிகளாக இருக்கின்றன என்று வன்மையாக கண்டிக்கிற பண்பு அவரிடம் இருந்தது. கோயில்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்தே இருந்திருக்கிறார் அவர் ; மத ஆச்சாரியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார் அவர். மதத்துக்குள் இருந்து வெறுப்பரசியலை எதிர் கொள்ள வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு இந்தியாவும்,பாகிஸ்தானும் பிரியக்கூடாது என்று அழுத்தி சொன்ன காந்தியே வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கை,ஜின்னாவின் மதவாத அரசியல்,காங்கிரஸ் மதவாதத்தை எதிர்கொள்வதில் காட்டிய அசட்டை,கட்சிக்குள்ளேயே இருந்த வலதுசாரிகள்,பதவி கிடைத்தால் போதும் என நகர்ந்த தலைவர்கள் என்று எல்லாமும் சேர்ந்து நிற்க நாட்டை பிரிக்க ஒத்துக்கொண்டார். வன்முறைகள் பெருமளவில் வெடிக்கும் ஒரே தாயின் கருவுக்குள் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு சாவதை போல இங்கே மரணங்கள் நிகழும் என்று எச்சரித்தார். காந்தி வித்தியாசமான ஆளுமை ; அவரின் அடிப்படை நேர்மையை,எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மையை சந்தேகிக்க முடியாது. காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ தன்னிலிருந்து அந்நியப்பட்ட மனிதரோ அல்ல என்று நந்தி சொல்கிற அளவுக்கு வெறுப்பை உண்டு செய்யும் போக்கை காந்தி தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். ‘காந்தி இருக்கும் வரை ஹிந்து தேசம் சாத்தியமில்லை ,இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு போய் விடும் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். முதலிய ஹிந்து மதவாத அமைப்புகள். இஸ்லாமியர்களையும் மதித்து நடக்க வேண்டும் ,அவர்களை கொல்லாதீர்கள் என்று ஹிந்துக்களை நோக்கி காந்தி சொன்னார். ஏன் இதையே முஸ்லீம்களை நோக்கி சொல்லக்கூடாது என்று கேட்டார்கள் ஹிந்து மதவாதிகள். காந்தி வேறு மாதிரி நினைத்தார் ,”வெறுப்புக்கு வெறுப்பு தீர்வு கிடையாது. எல்லாரும் கண்ணனுக்கு கண் என்று நகர்ந்தால் எல்லாரும் குருடாகத்தான் வேண்டும். ” சிறுபான்மையினர் இப்படி இயங்குவதன் பின்னர் இருக்கும் வெறுப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது ; பெரும்பான்மையினரை மிருகமாக்கும் இதை தேசியம் என்று சொல்லும் குழுவை நோக்கி வேகமாக எதிர்த்து இயங்க வேண்டும் என்று அவர் நினைத்தார். வங்கம்,பிகார்,டெல்லி என்று எங்கெல்லாம் வன்முறைகள் வெடித்தனவோ அங்கெல்லாம் வெறுங்காலோடு ஒரே ஒரு ஜீவன் அமைதிக்காக நடந்தது. மதவாதத்தை எதிர்த்து பிரார்த்தனை செய்யுங்கள் அமைதி காத்திருங்கள் என்று மட்டும் சொல்லி ஒரு மனிதனால் அமைதியை மீட்க முடிந்தது என்பது இன்றைக்கு ஆச்சரியம் தரலாம். “டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. ” என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்: ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.” பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி தரவேண்டும் என்றும் கலவரங்கள் டெல்லியில் ஓய வேண்டும் என்று காந்தி இறுதி உண்ணாவிரதம் இருந்தது ,”காந்தி செத்து மடியட்டும் !” என்று கோஷம் எழுப்புகிற அளவுக்கு வெறுப்பாக மாறி இருந்தது. காந்தியின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி நிற்கிறது என்று காந்திக்கு தெரியும் ; இப்படி பேசுவதற்காக,இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நம்பி இந்தியா வந்திருக்கும் எண்ணற்ற இஸ்லாமியர்களை காக்க தான் கொடுக்கும் குரல் தன் மூச்சை நிறுத்திவிடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது. “போய்விட்டு போகிறது ! நான் நம்பும் இறைவன் என் பணி முடிந்த்து என்று எண்ணிக்கொண்டால் என்னை அழைத்துக்கொள்வான்” என்று அம்புஜம் அம்மாளுக்கு கடிதம் எழுதினார். [] பலபேர் ஏவப்பட்டு இறுதியில் கோட்சே கையால் அது நிகழ்ந்தது. கையில் இஸ்லாமியரின் பெயரை பச்சை குத்தி வன்முறையை தூண்டி நாட்டை ரத்த பூமியாக்க எண்ணிய அந்த மிருகத்தை தான் இங்கே நாயகனாக கொண்டாடுகிறார்கள் பலபேர். அப்பொழுது “காந்தியை கொன்றது ஒரு ஹிந்து !” என்று அழுத்தி சொன்னது ஊடகங்கள். இருந்தாலும் கோட்சேவை அப்படியே நாராயண் ஆப்தேவோடு தூக்கில் போடவில்லை அரசு. ஒழுங்காக வழக்கு விசாரணைகள் நடந்து அவர்களுக்கு என்று வக்கீல் அமர்த்தப்பட்டு ஜனாதிபதி வரை கருணை மனு போய் பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. காந்தி இறந்ததும் பட்டாசு வெடித்து,இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள் சங் பரிவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே இருந்த கோட்சே அப்பொழுது தான் அதில் உறுப்பினரில்லை என்று சொன்னது உடனிருந்தவர்களை காப்பாற்றவே. காந்தியை கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்த சவார்க்கரின் படத்தை பி ஜே பி அரசு நாடாளுமன்றத்தில் வைத்தது ; இந்த கண் கொள்ளா கட்சி வேறு எந்த நாட்டிலும் நிகழாது. உங்களுக்கு காந்தியோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம்,ஆனால்,மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் வெறுப்பரசியலை தணிக்க அயராது செயலாற்றிய அவரை அந்த ஒரு புள்ளியில் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ள முடியும். பெரியார் அதனால் தான் காந்திஸ்தான் என்று இந்தியாவுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று எழுதினார். நேரு காந்தியின் அந்த பன்முகத்தன்மையை முன்னோக்கி எடுத்து சென்றார். தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக மாறியது. காந்தியார் சாந்தியடைய மதவாதத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியம் ; வெறுப்பை தாண்டி மனிதத்தை நோக்கி நம்மை செலுத்த வேண்டியது முக்கியம். அடையாள அரசியல்களை தாண்டி நம்மின் பன்முகத்தன்மையை காக்க ஒன்றிணைந்து நகரவேண்டும். ஆர்.எஸ்.எஸ் மாதிரியான அமைப்புகள் இந்தியாவை ஜனநாயகத்தின் மூலமே மீண்டும் வெறுப்பை தூண்டுவதை செய்யலாம் என்று வேகமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில் காந்தி இன்றைய சூழலில் அதிகம் அவசியமாக இருக்கிறார். ஆதாரங்கள் : http://www.sabrang.com/cc/archive/2004/aug04/cover6.html https://www.facebook.com/permalink.php?story_fbid=193482047495065&id=137250963118174 http://www.thehindu.com/opinion/op-ed/how-savarkar-escaped-the-gallows/article4358048.ece http://www.indiankanoon.org/doc/882541/ http://www.outlookindia.com/article.aspx?218449 http://www.gandhitopia.org/profiles/blogs/gandhis-final-fast-by-dilip http://www.hindu.com/fline/fl3002/stories/20130208300208900.htm (‘மகாத்மா காந்தியின் இறுதிக்கட்டம்’, தொகுதி 2, பக்: 439-40) அடிக்குறிப்பு : கோட்சே ஒரு நாயகன் என்று யாரேனும் கமென்ட் போட்டால் ப்ளாக் செய்யப்படுவீர்கள்  வெறுப்புக்கு என் பக்கத்தில் இடமில்லை 33 ஆஹா பதினான்கு ! நவம்பர் 14, 2013 பதினான்கு வயதில் சாதனை புரிந்த பதினாகு பேரின் கதை இது :   அப்பாவை பிரிந்து,அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும்,வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக்கொண்டு  மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப்பையன் நடிக்கிறான் ;நாடகம் தோல்வியடைகிறது ,”அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் !”என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின் [] உலகப்போர் சமயம் அது;வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களை தொடர்வண்டியில் இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம் செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் ; கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான்.வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும் அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம் [] தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் , அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர்அமைதி விருது வழங்கப்பட்டது [] பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது  விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான் ; உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழ இருக்கும் மாமனிதரே அந்த சிறுவன் [] தந்தை  பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால்  சிறையில் தள்ளப்படுகிறார் ,தங்கை இறந்து போகிறார் -பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார் , சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதையெல்லாம்  மறக்க தானே தனியாக  முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி  படிக்கிறான்.உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான்  அந்த சிறுவன். [] பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் ; யாருமே செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார் ; மின்னல் வேகத்தில் அவனின்  மூவ்கள் இருந்தன -அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் [] அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார் ; சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம்-பள்ளிகல்வியே கிடைக்காமல் தானே முயன்று கற்க வேண்டிய சூழல்;சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின் தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே [] சா பாலோ  மாநில கால்பந்து போட்டிகளில்  கலந்துகொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன்  ,”இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் ; புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில் ஆடுவது பயத்தை தந்தது.ஆனால்,பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன்.” என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள் அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என  நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு ” .அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே(மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர் ) [] மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய பொழுது வயது பதினான்கு ; பதினான்கு சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை இசைத்தார்கள்  எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது ; இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள்  .ரோமை  மீட்க போராடும்  மிட்ரிடேட்  எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது. [] எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு  இணைந்து வடிவமைத்து கொடுத்து  பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ் [] லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும்,ஆன்ட் பெப்பாஎன்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான்.”அகோரமாக இருக்கிறது,ஒன்றும் புரியவில்லை !”என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது ; அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ பிகாசோ. [] பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான் ; அந்த வீரச்சிறுவன் பகத் சிங் . [] படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க  டர்வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே  தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன்  ; அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன்.அவனின் பெயர்தாமஸ் அல்வா எடிசன். [] மும்பை கிரிக்கெட் சங்கம் வருடாவருடம் தேர்ந்தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது ,”போன சீசனில் நீ நன்றாக விளையாடினாய்;விருதுகளை பற்றி கவலைப்படாதே ;பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது / பின் குறிப்பு :விருது கிடைக்காததற்கு வருந்தாதே ;அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான் (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார் )” இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின் [] 34 சாதித்து விட்டு சாக வேண்டும் !-சிலிர்க்க வைக்கும் சிறுவர்கள் நவம்பர் 14, 2013 நவம்பர் 14: குழந்தைகள் தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு ‘சுட்டிங்கன்னா சும்மா குறும்புகள் பண்ண மட்டும் அல்ல… சிலிர்க்க வைக்கும் செயல்கள் செய்யவும் முடியும்’ என உலகுக்கு உரக்கச் சொன்ன நான்கு சுட்டிகளின் கதை இதோ உங்களுக்காக… []ஜான்சன்: அது, அழகான தென் ஆப்ரிக்கா நகரின் ஒரு சின்ன ஊர். பல வண்ண மிமோசா மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பள்ளியை ஆர்வம் பொங்க பார்த்தபடியே நுழைந்தான் குட்டி ஜான்சன். உடன் வந்த கெயில் ஆன்ட்டி, அவனை மடியில் உட்காரவைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சொன்னார்… ”இவன் அம்மா கொடூரமான வியாதிக்கு  பலியாயிட்டாங்க. அப்பாவின் முகம் கூட இவனுக்குத் தெரியாது. நீங்கதான் பள்ளியில் சேர்த்துக்கணும்” என அவர் கெஞ்சுவதைப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான் ஜான்சன். அவன் அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது எச்.ஐ.வி தொற்று வியாதி. பள்ளிகளில் இடம் கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனாலும்,  ‘சாதிக்கப் பிறந்தவன் நீ’ என்று சொல்லி வளர்த்தார் கெயில். எட்டாவது வயதில் ஜான்சனின் உடம்பு  நோயினால் வலி பின்னி எடுக்க, உலக எய்ட்ஸ் மாநாட்டில் பேசிய வரிகள் கேட்பவரின் கண்களைக் கண்ணீரால் நிரப்பின. ”எங்கள் மீது பரிவு காட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் கை, கால்கள் உள்ளன. உங்களின் தேவையே எங்களுக்கும் தேவை. எங்களை ஒதுக்கா  தீர்கள்” என்றான். அதோடு நில்லாமல், இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொண்ட பல தாய்மார் களைப் பராமரிக்க, ஓர் இல்லத்தைக் கட்டவேண்டும் என, உலகம் எங்கும் சென்று நிதி திரட்டினான். இன்று, ஜோகனஸ்பர்க் நகரில் அந்த இல்லம் கம்பீரமாக உள்ளது. நெல்சன் மண்டேலா, ”வாழ்வின் போராட்டக் குணத்துக்கான சின்னம் ஜான்சன்” என ஜான்சனைப் புகழ்ந்தார். ‘நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்’ எனும் புகழ்பெற்ற ஜான்சனின் வரிகள் இன்னமும் பாடலாய் ஒலிக்கிறது. அவனின் மரணத்துக்குப் பின், ‘உலகக் குழந்தைகள் சமாதான விருது’ ஜான்சனுக்கு வழங்கப் பட்டது! ஹெக்டர் பீட்டர்சன்: தென் ஆப்ரிக்காவில், கறுப்பின மக்களை, வெள்ளை அரசாங்கம் அடக்கி ஆண்டது. அவர்களுக்கு உணவு, நீர், இடம் என எல்லாவற்றிலும் சிறிதளவே தந்துவிட்டு, மீதத்தை அபகரித்தது. மொழித் திணிப்பும் நடந்தது. அங்கே பல மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். அரசாங்கமோ… ‘எல்லோரும் ஆங்கிலம் மற்றும் ஆப்ரிக்கான்ஸ் மொழிகளில் மட்டுமே படிக்க வேண்டும்’ என்றது. பனிரெண்டே வயதான பீட்டர்சன், இந்த விஷயத்துக்காக சாலையில் பல மாணவர்களோடு அமைதியாக நின்று போராடினான். அப்போது, திடீர் என வெடிச் சத்தம்… பொத்தென்று விழுந்தான் பீட்டர்சன். ஆம்! அவனை ராணுவ குண்டு துளைத்தது. [] இன்னொரு சிறுவன், பீட்டர்சனைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு ஓடினான். அந்தப் புகைப்படக் காட்சி, போராட்டத் துக்கான சின்னமாக மாறியது. ‘அன்று அவன் உடம்பில் இருந்து சத்தம் இல்லாமல் பிரிந்த மூச்சுக் காற்றுதான், இன்று எங்களுக்கு சுதந்திரக் காற்றாக மாறி இருக்கிறது’. என்கிறார்கள் தென் ஆப்பிரிக்கர்கள்! []அலெக்ஸாண்ட்ரா ஸ்காட்: அந்தச் சுட்டிப் பெண்ணால் ஓடி ஆடி விளையாட முடியாது. மற்றவர்களின் உதவி இல்லாமல்  எந்தச் செயலையும் செய்ய முடியாது. காரணம்… ‘Neurobalstoma’ என்கிற ஒரு வகையான நரம்புப் புற்றுநோய் அவளை ஒரு வயதில் தாக்கியது. அந்தச் சுட்டிக்கு எலுமிச்சை ஜூஸ் என்றால் அலாதி விருப்பம். அவளின் தாய், தந்தையிடம் எப்போதும் உற்சாகமாகப் பேசியபடியே இருக்கும் அவளுக்கு, உடம்பு முழுவதும் ஊசிகள் போடப்பட்டன. பல இடங்களில் கத்தியால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அப்போது எல்லாம், எல்லை இல்லாத மனோ தைரியம் காட்டிய அந்தச் சுட்டிக்கு, ஒரு சிந்தனை தோன்றியது. ‘தனக்கு செலவு செய்ய பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், இதேபோல் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு நாம் உதவ என்ன செய்யலாம்?’ என யோசித்தாள். தன் பெற்றோரை ஒரு எலுமிச்சை ஜூஸ் கடை ஆரம்பித்துத் தரச் சொன்னாள். அதில்  கிடைக்கும் வருமானம் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுட்டி களுக்குப் பயன்படுத்தப் போவதாக  அறிவித்தாள். அதன் மூலம், ஒரு வருடத்தில் பத்து லட்சம் டாலர் பணம் திரண்டது. அதைப் பார்க்க அலெக்ஸாண்ட்ரா உயிருடன் இல்லை. எட்டு வயதில் இறந்து விட்டாள். ஆனால், அவளின் அந்த எலுமிச்சை ஜூஸ் கடையில் வரும் வருமானம் இன்றும் கேன்சரால் வாடும் சுட்டிகளுக்கு ஆதரவு தருகின்றது! இக்பால் மாஷி: அந்தக் குட்டிப் பையனின் பெயர், இக்பால் மாஷி. பிறந்த சில தினங்களில்… தந்தை, குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அம்மா, வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்துவந்தார். அவரால் தன் மகனைக் காப்பாற்ற முடியாத நிலை… ஐநூறு ரூபாய்க்கு அவனை ஒரு கம்பள விரிப்புகள் தயாரிக்கும் முதலாளிக்கு விற்றுவிட்டார். அங்கே, இக்பால் தினமும் 14 மணி நேரம் வேலை பார்த்தான். எப்போதாவதுதான் சாப்பாடு. தூங்கினாலோ, சோர்ந்து போனாலோ சாட்டையால் அடிப்பார் கள். இப்படியே நான்கு வயதில் இருந்து வளர்க்கப்பட்டு வந்தான். [] ஒரு நாள், சிறுவர்களோடு சேர்ந்து தப்பித்து ஓடி, ஙிலிலிதி எனும் அமைப்பின் மூலம் விடுதலை பெற்றான். அப்போது, இக்பாலின் வயது பனிரெண்டு. ஆனால், ஆறு வயது சிறுவன் போலவே காட்சி அளித்தான். அப்படி என்றால், அவனுக்கு நடந்த கொடுமைகளை ஊகித்துக் கொள்ளுங்கள். அவன் உலகம் முழுக்க சுற்றினான். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ஆதரவு திரட்டினான். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில், இக்பால் முயற்சி யால் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3000. அவன் பேசிய நாட்டில் எல்லாம் மக்கள் குவிந்தார்கள். அவனின் பிரபலமான வாசகம், ‘குண்டுகளால் எங்கள் கனவைச் சாகடிக்க முடியாது’ கடைசியில் இக்பால், தன் 13-வது வயதில் துப்பாக்கிக் குண்டுக்கே பலியானான். ஆனாலும், அவனின் கனவு அழியவில்லை. இக்பாலுக்கு வழங்கப்பட்ட ‘ரீபோக் மனித உரிமைகள் விருது’ மற்றும் ‘உலக உரிமைக்கான குழந்தைகள் விருது’ ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட பணம் எல்லாம்… இன்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காகப் பயன்படுகிறது. 35 சிறியன சிந்தியாத நேரு ! நவம்பர் 14, 2013 நவம்பர் 14: நேரு எனும் அற்புத ஆளுமை பிறந்த தினம் இன்று . மாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை அர்ப்பணித்து கொண்ட நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்ததால் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிற ஒரு தலைவராகஇருக்கிறார் . நேரு இங்கிலாந்தில் போய் தன் உயர்கல்வியை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் ;மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று ஐரோப்பாவுக்கு சிறப்பு தொடர்வண்டி வைத்து கூட்டிப்போகிற அளவுக்கு அவர் வீட்டில் செல்வவளம் இருந்தது . மேற்கில் அவர் செய்த பயணங்கள் அவரை சோசியலிசம் நோக்கி ஈர்த்தன . காந்தியின் கீழே இந்திய விடுதலைப்போரில் பங்குகொண்ட மூவாயிரம் நாட்களுக்கு மேலே சிறையில் கழித்தவர் அவர். சொந்த தந்தையை சிறையில் சிறப்பு உணவு சாப்பிடக்கூடாது என மறுத்தவர் .நேரு மோதிலாலுக்கு பின் காங்கிரசின் தலைவர் பதவிக்கு வந்தார். தன் மகளின் முகத்தை இளவயதில் பெரும்பாலும் பார்த்ததே இல்லை ; சிறையில் இருந்து உலக வரலாற்றை மகளுக்கு போதித்த ஒரே தந்தை இவராகத்தான் இருக்க முடியும் . பேரன் பிறந்த பொழுது சிறையை விட்டு மன்னிப்பு கேட்டால் அனுப்புகிறோம் என்ற பொழுது மறுத்தவர் , தெருவில் போலீஸ் வாகனம் போகும் பொழுது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க பார்த்துவிட்டு ,”இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்று தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!”என்று கடிதம் எழுதினார் இந்தியாவின் பிரதமர் ஆனதும் நாட்டை கட்டமைக்கும் வேலையில் இறங்கிய நேரு இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார் . நாடு எப்பொழுதும் மதச்சார்பின்மை கொண்ட நாடாகவே இருக்கும் ;ஜனநாயகத்தை ஒரு புள்ளியில் கூட கைகழுவ கூடாது. நேருவே அடிப்படையில் நாத்திகவாதி ; அம்பேத்கருடன் இணைந்து அதை செயல்படுத்திக்காட்டினார். இந்து மதவாத அமைப்புகள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க எடுத்த முயற்சிகளுக்கு இருந்த தடை நேருவே . அதனால் அவர் இன்றளவிலும் தனிமனித தாக்குதலுக்கு உள்ளாவதை நீங்கள் காண இயலும் இந்துக்களுக்கு என்று பொதுவான சிவில் சட்டத்தை நேரு அம்பேத்கரின் விருப்பபடி கொண்டுவர முயல அதை மதவாதிகள் மற்றும் பழமைவாதிகள் எதிர்த்தார்கள். நேரு தன்னை கைவிட்டு விட்டதாக அம்பேத்கர் மனம் வெதும்பி பதவி விலகினார். நேரு அச்சட்டங்களை தனித்தனி சட்டங்களாக உடைத்து நிறைவேற்றி அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார் .,”நாம் எந்த அளவுக்கு ஒன்று சேர்ந்து முன் செல்கிறோமோ அந்த அளவுக்கு நாடு வளமை பெறும்.அரசியலில் மதத்தை என்றும் இறக்குமதி செய்யக்கூடாது !”என்பது நேருவின் வரிகள் நேரு வாரிசு அரசியலை கொண்டுவந்தவர் இல்லை. இந்திரா அவர் காலத்தில் கட்சியில் ஓரங்கட்டபட்டே இருந்தார் . சாஸ்திரி,தேசாய்,காமராஜ் என பல மூத்த தலைவர்கள் இருந்தார்கள், நேருவின் காலத்தில் கட்சியின் ஜனநாயகம் பலமாக இருந்தது . கட்சி தலைவர்கள் இவர் சொல்வதை எல்லா புள்ளிகளிலும் கேட்கவில்லை ; இவரின் சொல்லை மீறி மெட்ராஸ் மாகாணத்தில் பிரகாசம் முதல்வர் ஆனார் . அவர் காலத்தில் உட்கட்சி தேர்தல்கள் அருமையாக நடந்தன. மிகக்குறைந்த அளவிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்த பொழுதும் அவர் காலத்தில் தான் நெடுநேரம் விவாதங்கள் நடந்தன. நேரு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்க போராட்டங்கள் எழுந்த பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிக்க அனுமதி கொடுத்தார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு கொதித்து எழுந்த பொழுது உங்களுக்கு எப்பொழுது விருப்பமோ அப்பொழுது ஹிந்தியை சேர்த்துக்கொள்ளலாம் என்று விட்டுக்கொடுத்தார் இது போலவே இவரின் வார்த்தையை மீறி ராஜேந்திர பிரசாத் சோம்நாத் ஆலயத்துக்கு போனார். காந்தியின் படுகொலையின் பொழுது ஆர் எஸ் எஸ் இயக்கமும் சம்பந்தப்பட்டு இருந்தது என்ற இவரின் கூற்றை படேல் நிராகரித்தார். எல்லாரின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கிற ஒருவராக நேரு இருந்தார். சிறுபான்மை இன மக்களை காப்பதை தன் முக்கிய பணியாக நேருகருதினார். நேரு வாழ்நாள் முழுக்க பிறர் கருத்தை மதிக்கிற ஜனநாயகவாதியாக இருந்தார்; யார் வேண்டுமானாலும் தன்னை விமர்சனம் செய்யலாம் என அறிவித்து இருந்தார்.மாடர்ன் ரீவியு என்கிற பத்திரிக்கையின் இந்த வரிகளைப்பாருங்கள்,”நேரு சர்வாதிகாரி;அவருக்கு தற்பெருமை அதிகமாகி விட்டது “இதை எழுதியது யார் தெரியுமா ஜவஹர்லால் நேரு அவர்களே தான். யாரேனும் திட்டி கார்டூன் போட்டால் இன்னமும் நன்றாக விமர்சியுங்கள் என கூப்பிட்டு பாராட்டுவார் நேருவிடுதலை பெற்றதும் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனார் .அப்பொழுது அவர் “tryst with destiny ” (விதியோடு ஒரு ஒப்பந்தம்)என ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது .உலகமே தூங்கிக்கொண்டு இருக்கிற பொழுது இந்த நாடு விழித்தெழுகிறது.இந்த நாட்டின் மிகப்பெரும் நல்ல உள்ளங்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்ணீரை துடிப்பதே ஆகும் ;அது நடக்கும் வரை நம் பணி ஓயாது !”என்பது அதன் சாரம் [] விடுதலை பெற்ற பின் பல்வேறு நாட்டு நிர்மாணத்திட்டங்களை ஊக்குகுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், விவசாயம் என எல்லாவற்றிலும் மக்களை ஊக்குவித்து ஈடுபட செய்தார்.அணைகளை திறக்க போனால் அதை கட்டிய எளிய தொழிலாளியை விட்டே அதை திறக்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.இந்தியாவின் பிரதமராக பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து சேவை புரிந்து இருக்கும் நேருவின் சாதனை இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்,விடுதலைக்கு பின் எல்லாவீட்டிலும் ரேஷன் முறை அமலுக்கு வந்தது.நேரு எளிய மக்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். க்ளார்க் பதறியடித்து வந்து “முன்னே வாருங்கள் “என்ற பொழுது.” விதி எல்லாருக்கும் பொதுவானது” என மறுத்துவிட்டார். ஓட்டுபோட்ட சட்டையை போட்டுக்கொண்டு வீட்டை ஒன்பது ரூபாய் மிச்சம் பிடித்து வாழ்ந்தவர் நேரு என்பது இன்றைக்கு ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம் நேரு உலக நாடுகளின் ஒற்றுமைக்காக பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இக்கொள்கை மூலம் உலகம் அமைதிப் பாதையில் சென்றது. அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்து தாயகத்தின் மதிப்பை உலகநாடுகளிடையே உயர்த்தினார். பல மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலனி நாடுகளின் விடுதலையை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார் .இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக அவரே செயல்பட்டார். [] அவர் காலத்தில் ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை,இந்திராவின் பேச்சைக்கேட்டு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளா அரசை கலைக்கிற வேலையை அவர் செய்தது பலரை அதிரவைத்தது. ,அணிசேரா கொள்கை என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் சோவியத் ரஷ்யா ஹங்கேரியை தாக்கிய பொழுது மவுனம் சாதித்தார். கடிதங்களில் தன் எதிர்ப்பை காட்டினாலும் வெளிப்படையாக அதை பதிவு செய்யவில்லை அவர் அவர் சீனாவை ஏகத்துக்கும் நம்பி அது முதுகில் குத்தி தோல்வியை பரிசளித்த பொழுது நொறுங்கிப்போனார் என்பது அவரின் மரணத்தை துரிதப்படுத்தியது. 36 சிறகை விரித்து சிலிர்க்க வைத்த சலீம் அலி ! நவம்பர் 12, 2013 சலீம் அலி என்கிற இந்த பெயரோடு பேசுகிற பொழுது ஏதோ ஒரு பறவை நன்றியோடு கீதம் எழுப்பிக்கொண்டு இருக்கும் என்றே படுகிறது. வாழ்க்கை முழுக்க பறவைகளை பற்றிய ஆராய்ச்சியிலும் ,ஆவணப்படுத்தலிலும் ஒரு மனிதன் பங்காற்ற முடியும் என வாழ்ந்து காட்டியவர் அவர் . அப்பா,அம்மாவை மிக இளம்வயதில் இழந்து மாமா வீட்டில் வளர்ந்த பொழுது மாமாவின் வேட்டையை தொடர்ந்து பார்க்கிற பழக்கம் சசலீம் அலிக்கு இருந்தது. மாமா ஒரு நாள் ஒரு மஞ்சள் நிற தொண்டை கொண்ட சிட்டுக்குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதன் பெயரென்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல் சலீம் அலிக்கு உண்டானது. மாமா மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் மில்லார்ட் எனும் ஆங்கிலேயரிடம் அழைத்து போனார். கண்கள் விரிய நின்று கொண்டிருந்த சிறுவனை நோக்கி அப்பறவையை பற்றி விவரமாக விவரித்து,அதன் பாடம் செய்யப்பட்ட ஒரு மாதிரியை காண்பித்துவிட்டு இரண்டு பறவைகள் பற்றிய புத்தகத்தை தருகிறார். அங்கே தான் பறவைகள் மீதான காதல் சலீம் அலிக்கு தொடங்கியது [] கைடாக இருந்து வருமானம் போதாத நிலையில் மனைவியின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் வந்த பொழுதும் பறவைகளை தேடுவதை அவர் நிறுத்தவே இல்லை. பறவையியலில் முக்கியமாக ஒரு பறவையை வீழ்த்தி அதன் இறக்கை,சிறகுகள்,கால் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள். பின்னர் இரைப்பையை கீறி அது என்ன உண்ணும் என்றும் அறிந்து கொள்வார்கள். அதன் உடம்பில் என்னென்ன உண்ணி உள்ளன என்றும் அறிந்து குறிப்பெடுப்பார்கள். பின் பறவையை பாடம் செய்வார்கள். இதற்கான உழைப்பு அதீதமானது. அதை ஒரு மனிதர் எழுபது வருடங்களுக்கு மேலே செய்தார் என்பதில் இருந்தே சலீம் அலியின் உழைப்பின் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம் [] பறவைகள் காதல் மீதான தான் திருமணம் ஆன பின்னும் பர்மாவின் காடுகளின் ஊடாக பறவைகளை தேடிப்போகிற அளவுக்கு பறந்து விரிந்தது. ஒட்டகங்களோடு பாலைவனங்களில் பயணம் ,லடாக் ஊடாக இதயம் சிலிர்க்கும் பயணம் என ஓடிக்கொண்டே இருந்த நாயகன் அவர். முன்னூறு வகை பறவைகளை கண்டுபிடித்த இவர் ,பறவைகளுக்கு என்றொரு மொழி,உணர்வு,வலி உண்டு எனத்தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் .அவருக்கே காடே ஆய்வகம்.அவரின் பென்சில் ஸ்கெட்ச்களை தேடிப்பாருங்கள். அசந்து போவீர்கள். பிராணி நலன்,விலங்குரிமை,காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை போட்டு குழப்பி கொள்கிறோம் நாம் என்று உறுதியாக பேசினார் அவர். அவரின் சுயசரிதையை எண்பத்தி ஏழு வயதில் எழுதினார். நூலின் ஆரம்பத்தில் மட்டுமே அவரைப்பற்றி பேசுவார். பின்னர் எல்லா இடத்திலும் பறவைகள்,தன்னை ஆக்கிய மனிதர்கள் என்று மட்டுமே நூலை நகர்த்தி இருப்பார். “இன்றைக்கு வாழும் வாழ்க்கை மட்டுமே நிஜம் ; பனிமூட்டம் போன்ற கேள்விகளில் மனதை குழப்பிக்கொள்ளாமல் வாழ்வை நல்ல செயல்களில் ஈடுபட்ட நிலை நிறுத்த வேண்டும் ” என்ற அவர் அப்படியே வாழ்ந்தார். அவரின் சுயசரிதை சிட்டுக்குருவியின் வீழ்ச்சி . ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சியில் தான் அந்த நாயகனின் எழுச்சித்தேடல் தொடங்கியது சுவையான முரண் தான் ! 37 மதங்களைக்கடந்து மனிதம் பேசிய ஆசாத் ! நவம்பர் 11, 2013 வரலாற்றில் வெறுப்பை பேசுபவர்கள் மிக அதிகம். அன்பை,சகிப்புத்தன்மையை,ஒன்றாக இணைந்து இயங்குவதை ஆழமாக மக்களிடம் அழுத்தி சொன்ன ஒரு தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். துருக்கியில் இருக்கும் காலிஃபை உலகப்போர் சமயத்தில் பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் முன்னின்று போராடிய பொழுது காங்கிரஸ் இயக்கம் அதற்கு ஆதரவளித்தது அப்பொழுது காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார் ஆசாத் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டும் சிறை சென்ற இவர் காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிடலாம் என்று முடிவு செய்த பொழுது தேர்தல் குழுவின் தலைவர் ஆனார். பதவிகளுக்கு ஆசைப்படாமல் தீவிரமாக தேர்தல் பணியாற்றி காங்கிரஸ் தேர்தலில் பெரும் வெற்றி பெறுவதை உறுதி செய்தார். ஜின்னா இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித்தனி மக்கள்,இந்த தேசம் இந்துக்களின் தேசம் இது இஸ்லாமியர்களை பிரித்தும்,அடிமைப்படுத்தியும் நடத்தியது என்று வெறுப்பு அரசியலை முன்னெடுத்த பொழுது அதை எதிர்த்து உறுதியாக குரல் கொடுத்தார் ஆசாத். “இந்தியாவில் இஸ்லாமிய மதம் வந்து பதினொரு நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் மதமாக அதை நிலை பெற்று விட்டது. எப்படி ஹிந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற தங்களின் மதத்தின் மீதான பற்றோடு தாங்கள் இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்ள முடியுமோ,ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் தழைத்து ஓங்கிய இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாமும் இந்தியர்கள் என்று பெருமிதத்தோடு சொல்லலாம். கிறிஸ்துவர்களும் அவ்வாறே பெருமைப்பட வேண்டும் !” என்று உறுதிபடச்சொன்னார் இந்து முஸ்லீம் கலவரங்கள் பெரிதான பொழுதும் இஸ்லாமியர்களை அமைதி காக்க சொன்னார். ஜின்னா முதலிய பிரிவினை பேசிய தலைவர்கள் ,”இவர் மதத்துக்கு துரோகம் செய்துவிட்டார் !” என்று தூற்றிய பொழுது ,”அன்பு தானே எல்லா மதத்தின் அடிப்படை. இந்த நாட்டின் கலசாரம் இந்து-முஸ்லீம் ஒற்றுமையால் பிணைந்தது. இதில் நாமும் ஒரு அற்புதமான பங்களிப்பை தந்திருக்கிறோம். நம்மின் பங்களிப்பு,ஒத்துழைப்பை எடுத்துவிட்டால் அது இவ்வளவு பெருமைமிகுந்ததாக இருக்காது. ஒன்றாகவே இருப்போம் நாம். நான் ஒரு இந்தியன். பிரிக்கமுடியாத இந்திய தேசியத்தின் அங்கம் நாம் !” என்றார் அழுத்தமாக. காங்கிரசின் தலைவராக ஆறாண்டுகள் விடுதலைக்கு முந்திய ஆண்டுவரை தொடர்ந்திருந்தார் அவர். [] இந்தியப்பிரிவினையை காந்தியோடு இணைந்து அதிகமாக எதிர்த்தார் ஆசாத். “படேல் பிரிவினையை சீக்கிரம் செயல்படுத்துவதில் ஜின்னாவை விட ஆர்வமாக இருக்கிறார். இடைக்கால அரசில் நம்முடன் அவர்கள் ஒத்துழைக்காதது முக்கிய காரணம். ” என்று வருத்தத்தோடு பதிவு செய்தார். டெல்லி காவல் ஆணையர் கலவரங்களை வேடிக்கை பார்க்கிறார் அவரை மாற்ற வேண்டும் என்று இவர் விடுத்த வேண்டுகோளை படேல் ஏற்கவில்லை. “அது போலீஸ் படையையே மத ரீதியாக பிரிந்திருக்க செய்துவிடும்” என்று படேல் அஞ்சினார். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் சென்ற இஸ்லாமியர்களின் வீடுகளை கொடுக்க வேண்டும் என்ற நேரு மற்றும் ஆசாத்தின் வாதத்தை படேல் ஏற்கவில்லை. “மதச்சார்பின்மை என்றால் எந்த மதத்துக்கும் சலுகை காட்டாமல் இருப்பது தானே ?” என்று கோபமாக கேட்டார் அவர். மதரீதியான அடையாளத்தை விட இந்தியா என்கிற தேசத்தை நம்பி வந்த மக்களை நாம் காக்க வேண்டும் என்று நேருவும்,ஆசாத்தும் எண்ணினார்கள். [] இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான இவர் இந்தியாவின் அறிவியல் வளர்க்சிக்கு முக்கிய காரணமான CSIR அமைப்பை தோற்றுவித்தார். அதே போல ஐ.ஐ.டி.க்கள் இவரின் சிந்தனையில் உருவானதே. பல்கலைக்கழக மானியக்குழுவும் இவரால் உருவாக்கப்பட்டது. ஆரம்பக்கல்வியை எல்லாருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஆசாத். எல்லாருக்கும் கல்வி என்பதை தீவிரமாக நேருவின் அரசு செய்யவில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்யவேண்டும். ‘அரிஸ்டாட்டில்,பிளாட்டோ பிதாகரஸ் ஆகிய மூவரின் திறமையும் ஒன்றாக இணைந்த கற்றலின் பேரரசர் அவர் !” என்று காந்தி குறித்த அவரின் பிறந்தநாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. மனிதம் மதங்களை கடந்து செலுத்துகிறது என்று உரக்க சொன்ன அவரை நினைவு கூர்வோம். 38 சரண்டர் நாட் பானர்ஜி ! நவம்பர் 10, 2013 காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான சுரேந்தரநாத் பானர்ஜி பிறந்த தினம் இன்று . இவர் தன மேல்நிலைக்கல்வியை வங்கத்தில் முடித்த பின்பு இங்கிலாந்து சென்று சிவில் சர்வீசஸ் தேர்வில் தேறினார்.ஆனால்,அப்பதவியில் அவர் உட்காராமல் அவர் வயது மீதான சந்தேகம் எழுப்பி ஆங்கிலேய அரசு தடுத்தது ; ஆறு வருடங்கள் கழித்து நீதிமன்ற பதவியில் அமர்ந்த பின் நிறவெறியால் அப்பதவியை விட்டு விலக்கப்பட்டார். [] பின் தானே உருவாக்கிய ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் ஆனார் ,இந்திய தேசியத்தை தூண்டும் பேச்சை வங்கம் முழுக்க பேசினார் ; வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது அதற்கு எதிராக தீர்க்கமாக போராடினார் .எனினும் மின்டோ மார்லி சீர்திருத்தங்களை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும் என இவர் சொன்னது பலரை கடுப்பேற்றியது காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை ;மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை இவர் வரவேற்று வங்கத்தின் அமைச்சர் ஆனது காங்கிரசாரை கோபத்துக்கு உள்ளாக்கியது . அதனால் மோதிலால் நேருவின் சுயராஜ்ய கட்சி வேட்பாளரிடம் தோற்றுபோனார் .எனினும் விடுதலைப்போரின் முக்கியமான முதல் அமைப்பான இந்திய தேசிய அமைப்பை தோற்றுவித்தவர் ; ஆங்கிலேயரின் சீர்திருத்தங்களின் மூலமே விடுதலை கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார் .அவரை ஆங்கிலேயரே ,”Surrender Not Banerjee”என மரியாதையோடு அழைத்தனர் . 39 எதிர்த்து நின்ற மார்ட்டின் லூதர் ! நவம்பர் 10, 2013 மார்டின் லூதர் எனும் கிறிஸ்துவ மதத்தில் ப்ரோட்டஸ்ட்ன்ட் என்கிற புதிய பிரிவை உருவாக்கிய ஆளுமை பிறந்த நாள் இன்று. இவரும் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஆக இருந்தவரே. இவர் காலத்தில் போப்பின் வருமானம் மிகப்பெரிய செல்வச்சீமான்களின் வருமானத்தை விட அதிகமாக இருந்தது. இந்த தருணத்தில் இவர் நாட்டில் இருந்து பணம் திரட்டுவதன் மூலம் ரோமில் உள்ள பீட்டர் சதுக்கத்தை கட்டமைக்க போப் ஆள் அனுப்பி வைத்தார். பாவங்கள் செய்தவர்கள் பணம் செலுத்தி பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் தங்களின் பாவங்களை கழுவி கொள்ளலாம் என போப் சொன்னதை கடுமையாக சாடினார் . அதோடு அதிக பணம் வைத்திருக்கும் போப் எதற்கு ஏழை மக்களின் பணத்தை சுரண்ட வேண்டும் எனக்கேள்வி எழுப்பினார். அதைச்சார்ந்து போராடினார்.ஆனால்,பணத்தில் கொழுத்திருந்த மதப்பீடங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. [] இவர் பிரிந்து சென்று புதியதொரு பிரிவாக ப்ரோட்டஸ்டன்ட் என்கிற பெயரில் தோற்றுவித்தார்.இறைவனின் போதனைகள் அடங்கிய பைபிளே மிக உயர்ந்த மற்றும் பின்பற்ற வேண்டிய அம்சம் என்றும் போப்பின் பின் அணிவகுக்க வேண்டியதில்லை என்பது இவரின் முக்கியமான அறிவிப்பு. அத்தோடு நில்லாமல் லத்தீனில் இருந்த பைபிளின் பழைய ஆகமத்தையும்,கிரேக்கத்தில் இருந்த புதிய ஆகமத்தையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து மக்கள் மொழியில் மத கருத்துக்களை பரப்பினார் . பாதிரியார்கள் மணந்து கொள்ளக்கூடாது என்கிற விதியை உடைத்து எறிந்து மணந்து கொண்டார் .இவரின் இறுதிகாலத்தில் இவர் யூதர்கள் மீதான எதிர்ப்பை தூண்டி விட்டு அவர்களை நாட்டை விட்டே அனுப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார் என்பது கசப்பான உண்மை ; கிறிஸ்துவை கொல்வதற்கு காரணமானவர்கள் அவர்கள் என்பதை ,அதற்கு முக்கியமான காரணமாக சொன்னார் அவர்களை துரோகிகள் எனவும் அழைத்தார் . 40 மரணத்தோடு நாட்டுக்காக ஒரு மற்போர் ! நவம்பர் 10, 2013   கென் சரோ பீசன் விவா எனும் அற்புத மனிதர் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று. நைஜீரியாவின் வரலாறு மற்ற ஆப்ரிக்க நாடுகளின் வரலாறு போலவே வெள்ளையர்களின் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒரு வரலாறே. அதிலும் குறிப்பாக அந்நாட்டின் எண்ணெய் வளத்தை குறிவைத்து பல ஐரோப்பிய நிறுவனங்கள் குதித்தன . அவை ஒகோனிலான்ட் எனும் நைஜீரியாவின் பகுதியில் மிகப்பெரிய சுரண்டல்களை நடத்தி வந்தன அதிலும் குறிப்பாக சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய தீங்கின் உண்டு செய்து வந்தார்கள் . இதற்கு எதிராக கென் விவா போராட்டங்களை நடத்தும் Movement for the Survival of the Ogoni People (MOSOP) என்கிற அமைப்பை உருவாக்கி நடத்தினார் . சர்வாதிகாரியான சானி அபச்சா இவரை ஒழிக்க முடிவு செய்துகொண்டு செயல்பட்டார். இவர் ஊரை விட்டு வெளியேறி இருந்த நாளில் இவர் கட்சியினர் நால்வர் கொல்லப்பட்டனர் .அதற்கு காரணம் இவர் தான் என ராணுவ நீதிமன்றத்தில் அவசர அவசரமாக ஒரு பக்கச்சார்பாக (வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்கிற அளவுக்கு )வழக்கு நடந்து இவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது [] பல நாட்டின் வேண்டுகோள்கள் புறக்கணிக்க பட்டன. அத்தோடு இல்லாமல் இவர் மரணத்துக்கு காரணமானதாக ஷெல் நிறுவனம் மீது வாரின் வாரிசுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டனர். அதற்கு அக்கோர்ட் அனுமதி அளித்தது .அவரின் மரணத்துக்கு பின்னும் ஷெல் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது ;மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இவருக்கு மாற்று நோபல் பரிசு வழங்கப்பட்டது .நீதிக்காக போராடி உயிர் துறந்த அந்த மனிதரின் நினைவு தினம் இன்று ” I am a man of ideas in and out of prison — my ideas will live.” என்கிற அவரின் வரிகள் தான் எத்தனை உண்மையானது ! 41 ஆல்பர்ட் காம்யுவோடு ஒரு கோப்பை காபி ! நவம்பர் 9, 2013 ஆல்பர்ட் காம்யு பிறந்த தினம் நவம்பர் ஏழு .  நோபல் பரிசை இலக்கியத்துக்காக பெற்றவர் அவர் .அவரின் வாழ்க்கை முழுக்க அன்பு செய்ய சொன்னார் ; எளியவர்களின் வாழ்க்கை முன்னேறி விடாதா என கவலைப்பட்டார் . தனி நபர்களின் விருப்பங்கள் சார்ந்து சுயநலமாக இயங்குவதை தாண்டி மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.கண்டிப்பாக மனித சிக்கல்களை நம்மால் முழுமையாக தீர்க்க முடியாது ;அதற்காக செயல்படாமல் இருக்க முடியுமா என்று கேட்டார் .செயல்பட்டே ஆகவேண்டும் ; வெளிச்சம் வராவிட்டாலும் நம்பிக்கையை விதைத்து கொண்டே இருங்கள் என சொன்ன அவரின் அந்நியன் நாவலை அவசியம் வாசியுங்கள்.  அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக [] என் பின்னால் நடக்காதே ;வழிகாட்டாமல் போகலாம் நான் .முன்னே நடக்காதே ;பின்பற்றாமல் போகலாம் நான் .என் அருகே பிணைந்து நட .என் நண்பனாக இரு மகிழ்ச்சி எதை கொண்டிருக்கிறது என தேடினால் நீங்கள் மகிழ்ச்சியை கண்டடைய மாட்டீர்கள் ;வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடினால் ;நீங்கள் வாழவே மாட்டீர்கள் நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம் நாம் இறப்பதற்கு தகுதியான காரணங்கள் பல உண்டு ; கொல்வதற்கு என்று தகுந்த காரணங்கள் எதுவுமே இல்லவே இல்லை வளையக்கூடிய,ஆனால்,உடைபடா உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை இலையுதிர் காலம் இன்னுமொரு வசந்தம் அங்கே உதிரும் ஒவ்வொரு இலையும் இன்னொரு மலர் எனக்குள்ள ஒரே கடமை எல்லாரையும் எப்பொழுதும் அன்பு செய்வது தான் மனிதன் வாழ வேண்டும் ;படைக்க வேண்டும் – கண்ணீர் துளிகள் அவன் நெஞ்சை நிறைக்கும் வரை எனக்கு இரண்டே தேர்வுகள் தான் ,”ஒன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது ருசித்து ஒரு கோப்பை காபி பருக வேண்டும் !” . எதை செய்யலாம் நான் ? புரட்சிக்காரன் என்பவன் யார் தெரியுமா ? இது இப்படி இருக்கக்கூடாது என உரத்துக்குரல் கொடுக்கிறவனே ! எப்பொழுதும் தனித்து தவறு செய்ய பழகுகிற பொழுது தான் நீங்கள் முன்னேற்றத்தை அடைய ஆரம்பிக்கிறீர்கள் 42 வித்தியாச வேந்தர் ஜகாங்கீர் ! நவம்பர் 9, 2013 அக்பருக்கு பின் முகலாய சக்கரவர்த்தி ஆனவர் ஜகாங்கீர் .இளம்வயதில் ஒழுக்கமே இல்லாதவராக இருந்த இவர் சிறந்த மன்னராக உருவெடுப்பார் என அக்பர் கனவு கண்டு இருக்க மாட்டார் ;அக்பர் ஊரில் இல்லாத காலத்தில் ஆட்சியை கைப்பற்றி பொழுது பதறியடித்துக்கொண்டு வந்து மீண்டும் ஆட்சியை நிலைநிறுத்தினார் அக்பர் . ஓபியம், சல்லாபம், சூதாட்டம் என்று தான் இவரது வாழ்க்கை இருந்தது. வாழ்ந்த இவர் மீது வெறுத்து அக்பர் சாட்டையால் விளாசிய உண்டு; ஜகாங்கீரின் மகன் குஸ்ரு தான் மன்னராக வேண்டும் என அக்பர் விரும்பினார் ;ஆனால் ஜகாங்கீர் மணந்துகொண்ட நூர்ஜகானின் உறவுக்காரர்களின் துணையோடு ஆட்சியை பிடித்த இவர் தன் மகன் குஸ்ருவை ஆட்சிக்கான வாரிசுரிமை போரில் குருடாக்கினார் ;அவருக்கு உதவிய சீக்கிய குருவை தண்டித்தார் இவரின் ஆட்சியில் இரண்டு விஷயங்கள் உச்சத்துக்கு போனது ஓவியம் , கூடவே இவரின் ஓவிய மனைவியின் கோலோச்சலும் தான் – அவரின் முகம் பதித்து நாணயங்கள் வருகிற அளவுக்கு நூர்ஜகான் ஆட்டிப்படைத்தார். [] மத நல்லிணக்கம் இவர் ஆட்சியிலும் அக்பர் காலம் போல தொடர்ந்தது ;ராஜ்யத்தையும் விரிவாக்கினார்; இவர் காலத்தில் தான் உலகின் முதல் உலக உருண்டை உருவாக்கபட்டது. இவர்தான் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வியாபாரம் செய்ய முதன் முதலில் அனுமதி கொடுத்தார். இவரின் இறுதிக்காலம் துன்பம் நிறைந்ததாக இருந்தது; இவரின் செல்ல மகன் குர்ராம் (ஷாஜஹான்)இவருக்கு எதிராக திரும்பியது இறுதிக்கால வேதனை. 43 அடடா ஐன்ஸ்டீன் ! நவம்பர் 9, 2013 நவீன இயற்பியலின் பிதாமகர் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவுக்கு நோபல் பரிசு பெற்ற தினம் இன்று. .ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் மூன்று வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்றே எண்ணினார்கள் , அவருக்கு அவரின் அப்பா கொடுத்த காம்பஸ் பெரிய ஈர்ப்பை உண்டு செய்தது . அது எப்படி மிகச்சரியாக திசை காட்டுகிறது ஆரம்பித்தார் அவர் . பள்ளியில் சொந்தமாகவே நுண்கணிதத்தை கற்றுத்தேறினார் . சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும்சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோதுஇத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்குசென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். ‘உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது ‘என்கிற வாசகம் இன்றைக்கும் அலங்கரிக்கிறது . [] ஐன்ஸ்டீனுக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அப்பொழுது எழுதி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தான் இயற்பியல் உலகின் புதிய ஏற்பாடு எனப்புகழப்படுகின்றன. அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்துக்கு உள்ளானது . இவரின் இந்த சிந்தனை தான் எத்தனை அளப்பரியமாற்றங்களை அறிவியல் உலகில் உண்டு செய்து இருக்கிறது என நினைக்கிற பொழுது சிலிர்க்கிறது நியூட்டன் எனும் மாமேதையின் கருத்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச பல பேர் பயந்த பொழுது ஐன்ஸ்டீன் மட்டும் மிக அழுத்தந்திருத்தமாக தன் கோட்பாடுகளை உலகின் முன் வைத்தார் !சார்பியல் தத்துவம் உதித்தது ! இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வகங்களில் மூழ்கிக்கிடந்தவர் இல்லை !பல இடங்களில் சார்பியலின்அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார் அவர் ஒளி மாதிரி சில சங்கதிகள் தான் மாறாதவை .காலம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது என்றார் . எளிமையாக அதை ஐன்ஸ்டீன் இப்படி விளக்குவார் ,”ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது உட்கார்ந்து பாருங்கள் ஒரு நிமிடம் ஒரு மணிநேரமாக தோன்றும் ;அழகான ஒரு பெண்ணோடு உரையாடிக்கொண்டு இருங்கள் ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல தோன்றும் ” ஸ்டீவன் ஹாகிங் இதை “நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!” சார்பியல் சார்ந்து உருவான E=mc 2 எனும் சூத்திரம் அதில் ஒன்று . இந்த சூத்திரத்தில் ஆற்றல் ஆனது நிறையோடு தொடர்புடையது என்றும் நிறையில் ஏற்படும் இழப்பு ஆற்றலாக வெளிப்படும் எனவும் வரையறுத்து சொன்னார்; இதன் மீது ஆரம்ப காலத்தில் ஏகத்துக்கும் விவாதங்கள் எழுந்தன ;அதனாலேயே நோபல் பரிசு இந்த ஆய்வுதாளுக்கு தராமல் ஒளிமின் விளைவுக்கு தரப்பட்டது. எனினும்,இந்த On the Electrodynamics of Moving Bodies ஆய்வுத்தாள் அடிப்படையாக கொண்டு அணுகுண்டு உருவானது சோகமான வரலாறு.ஏ பாம் ப்ராஜக்டை ஹெய்சன்பர்கை கொண்டு ஜெர்மனியில் ஹிட்லர் தொடங்கி இருப்பதை பற்றி கவலையோடு அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் ;அமெரிக்க அணுகுண்டு சார்ந்த ஆய்வில் இறங்கவேண்டும் என்ற அவரின் வார்த்தையை செயல்படுத்தி அணுகுண்டு தயாரித்தது அமெரிக்கா. உலகை இறைவன் எப்படி படைத்தார் என கண்டறிந்து விட வேண்டும் என சொன்ன இவருக்கு சமயங்களில் பெயரே மறந்து விடும். வீட்டுக்கு வழிதெரியாமல் நின்ற கதைகள் உண்டு . டிஸ்லெக்சியா வேறு இருந்தது . பின் எப்படி இயற்பியல் உலகின் சாதனைகள் சாத்தியமானது என கேட்ட பொழுது “எனக்கொன்று தனித்திறமை எதவுமில்லை .எல்லையில்லா ஆர்வம் மற்றும் அறிவுக்கான தேடல் என்னை செலுத்துகிறது .சிக்கல்களோடு நான் கொஞ்சம் கூடுதலாக போராடுகிறேன் ” என்றார். இன்றைய கல்விமுறை மீன்களை மரமேறுவதன் மூலம் எடை போடுகிறது என்று விமர்சிக்கவும் செய்தார். 44 தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் ! நவம்பர் 8, 2013 திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு . தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் . தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந் த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர்  .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் ‘சுவடி தேடிய சாமியார்’ எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள் ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி  “ஆ, ஏ” எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.   [] 45 மேரி க்யூரி எனும் அறிவியல் அன்னை ! நவம்பர் 7, 2013 மேரி கியூரி பிறந்த தினம் இன்று. அவருக்கு அன்னை,அன்னை தேசம் இரண்டுமே கனவாகவே இருந்தார்கள். அம்மாவுக்கு காசநோய் இருந்ததால் பிள்ளைகளை தொட்டு தூக்க மாட்டார். ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் பணியாற்றி இருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக வேலை செய்து வீட்டின் கஷ்டம் துடைத்தார். அப்பொழுது அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரி ” என்று சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் நிராகரித்தார்கள் தங்கப்பதக்கம் பெற்று மேலே படிக்கலாம் என்று முயன்றால் ,”பெண்களுக்கு இடம் கிடையாது !” என்று பல்கலைகள் பல் இளித்தன..பறக்கும் பள்ளிக்கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி. பின்னர் பிரான்ஸ் நோக்கி மேற்படிப்புக்கு போனார்.அங்கே பசியோடும்,வறுமையோடும் வாழ்ந்து கொண்டே ஆய்வுகள் செய்தார், பேராசிரியர் பியரியை சந்தித்தார் ; இருவரும் இணைந்து இயற்பியலிலும் தங்களுக்குள் காதல் வேதியியலிலும் செழித்து ஓங்கினார்கள்.எளிமையாக திருமணம் செய்துகொண்டார்கள் . மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக்கொண்டு இருக்கும் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்கள்.பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு சொன்பார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு செய்ய முடிவு செய்தார்.அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வந்தார் பியரி. அணுக்கருவில் இருந்தே அந்த கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார் உலகை. பிட்ச்ப்ளேண்டே எனும் உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை இவர்கள் கண்டார்கள் ;அதை உண்டாக்கும் தனிமத்தையும் கண்டுபிடித்தார்கள் . அதற்கு மேரியின் அன்னை நாட்டின் பெயரை கொண்டு பொலோனியம் என பெயரிட்டார்கள் ; பின் ரேடியம் எனும் தனிமத்தையும் கண்டறிந்தார்கள் அதற்கு நோபல் பரிசு கிடைத்தது ;அதை வாங்கக்கூட நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். ரேடியத்தை உடம்பில் தேய்த்த பொழுது முதலில் சிறு சிராய்ப்பு பின்னர் காயம் உண்டாவதை கண்டார்கள் ; அதை கேன்சர் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று புரிந்தது. [] பின் அவரின் கணவர் ஒரு விபத்தில் இறந்து போக தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார் அதற்கு வேதியியலில் நோபல் பரிசு கிடைத்தது அவருக்கு . அந்த பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு இடம் தரமாட்டேன் என்ற போலாந்து பல்கலை அவரின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை அவருடையது தான் ரேடியத்துக்கு காப்புரிமை பெற சொன்னார்கள் பலபேர். எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் அதிலிருந்து பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி. கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற ‘பாந்தியன்’ (Pantheon) அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது . வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. மூன்று நோபல் பரிசுகளை அவரின் குடும்பம் வென்று வரலாறாகத்தான் இருக்கிறது. அறுபத்தி ஏழு வயதில் மரணமடைந்தார் மேரி அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளாமல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான் ;ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை அவர் முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் பிறந்த நாள் இன்று ! 46 நோபல் பெற்ற ராமன் ! நவம்பர் 7, 2013 சி.வி.ராமன் அவர்கள் பிறந்த தினம் இன்று ; திருவானைக்காவலில் பிறந்த இவர் ;படு சுட்டியாக படிப்பில் இருந்தவர். அப்பொழுதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்க பதக்கம் பெற்றவர்;முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர் இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார் .பின் இணை பேராசிரியராக கல்கத்தா பல்கலைகழகத்தில் இருக்கிற பொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார் ; மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம் போகிற பொழுது ஏன் கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருக்கிறது என யோசித்ததன் விளைவு தான் ராமன் விளைவு நோக்கிய அவரின் பயணம் . காம்ப்டன் எக்ஸ் கதிர்கள் சிதறலை பற்றி ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னதும் அது என் கண்ணிற்கு புலப்படும் ஒளியிலும் சாத்தியமாக இருக்க கூடாது என யோசித்தார் ;அதற்கு விலை மிகுந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியை பிர்லாவிடம் வாங்கித்தர சொல்லி கேட்டார் ,”கண்டிப்பா நோபல் பரிசு நமக்குதான் !”என அறிவித்து களத்தில் இறங்கி சாதித்து காட்டினார் இவர். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது எனவும் கண்டார் /அவை படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;(ஆற்றல் இழப்பு இல்லை ) முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல்இழப்பு ) முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல் அதிகரிப்பு ) [] இதை கண்டுபிடித்த ராமன் இதை சாதித்தது மிகப்பெரிய ஆய்வகங்களில் இல்லை. கல்கத்தாவின் எளிய அரசாங்க அலுவலகத்தின் தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவே தன் தீரா வேட்கையால் சாதித்தார். நோபல் பரிசை அறிவியல் துறையில் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமை அவரை வந்து சேர்ந்தது ;ஜூலை மாதமே நோபல் பரிசு தனக்குத்தான் என உறுதியாக நம்பி டிக்கெட் எல்லாம் புக் செய்தார் ராமன் .ஆங்கிலேய அரசு அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க அவருக்கு வரவேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்க செய்தது. மீறி அது அவர் கைக்கு போய் சேர்ந்தது. ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே போய்,”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலை தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு இவ்விருது சமர்ப்பணம் !” என்று கம்பீரமாக சொல்லியே தன்னுரையை வழங்கினார் ராமன். [C. V. Raman's Birthday] ராமன் விளைவு பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ,போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்து ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது . இவரின் கவனிப்பில் இந்திய அறிவியல் கழகம் சிறப்பான அமைப்பாக உருவெடுத்தது. நம் நாடு அறிவியலில் முன்னணியில் நிற்க குழந்தைகளை ஐந்து வயதில் இருந்தே விஞ்ஞானிகள் என மதித்து நடத்த வேண்டும் என்ற இவரின் கனவு இன்னமும் கானல் நீராகவே இருக்கிறது .அவர் ராமன் விளைவை கண்டுபிடித்த பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம். அவரின் பிறந்தநாள் இன்று 47 நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ் ! நவம்பர் 5, 2013 நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடுத்த வழக்கில் இருந்து மீட்டு எடுத்தவர் இவர்தான் .  . காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் நடந்த தேர்தல்களில் பங்கு பெற மறுத்தது. சித்தரஞ்சன் மற்றும் மோதிலால் நேரு இதிலிருந்து மாறுபட்டு  சுயராஜ்ய கட்சியை துவங்கினார்கள். வங்க சட்டசபையில் ஆங்கிலேயே அரசை குதறி எடுத்தது அவரின் வாதங்கள். பல தீர்மானங்கள் நிறைவேறாமல் தடைபட்டன. ஐரோப்பாவின் தொழில்மயமாக்கல் அப்படியே இந்தியாவில் புகுவது சரியில்லை என்று அவர் வாதிட்டார். எளியவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்று உறுதியாக பதிவு செய்தார்.  காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு தன் கட்சியை அதோடு இணைத்தார். கல்கத்தா நகர மேயர் ஆனார். கல்கத்தா நகர மேயர் ஆன பொழுது நேதாஜியை உடன் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு பல்வேறு அற்புதமான செயல்களை நிகழ்த்தினார். இன்றைக்கு நாமெல்லாம் இப்பொழுது கொண்டு வந்ததாக நினைக்கும் கிராம பஞ்சாயத்துகள்,கிராம சுயாட்சி ஆகியவற்றை தன்னுடைய ஐந்து அம்ச திட்டத்தில் இருபதுகளிலேயே பதிவு செய்திருக்கிறார். தொழிற்சங்கங்கள் அமைத்தலை துரிதப்படுத்த வேண்டும்,தொழிலாளிகளுக்கு உரிமைகள் பெற வேண்டியது முக்கியம் என்றும் முழக்கமிட்டார் அவர். [] ஒரு வழக்கிற்கு அன்றைக்கே லட்சம் வாங்கிய இவர் விடுதலைப்போரில் ஈடுபட்ட பொழுது அவற்றை எல்லாம் துறந்தார். கொடுத்து கொடுத்தே ஏழையாகிப்போனார் இவர் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” என்றார் .அப்பொழுது கூட தன் வீட்டை ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் .இறுதி ஊர்வலத்துக்கு செலவழிக்க கூட வழியில்லாத அளவுக்கு வறுமை அவரை பீடித்து இருந்தது. மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அவரை வழியனுப்பினார்கள்.  வங்கதேசத்திலும் இவர் இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகிற அளவுக்கு இவரின் பணிகள் மனிதநேயம் தோய்ந்ததாக இருந்தது . மனிதநேயம் மற்றும் தேசப்பற்று இரண்டிலும் ஜொலித்த இந்த நாயகனின் பிறந்தநாள் இன்று . 48 விராட் கோலி என்றொரு வீரர் ! நவம்பர் 5, 2013 இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பெயர் எடுத்துள்ள விராட் கோலியின் பிறந்த தினம் இன்று அது டிசம்பர் 19,2006. கோட்லா மைதானத்தில் நடந்து கொண்டிருந்த ரஞ்சி போட்டி அது. டெல்லி அணி பெங்களூரு அணியை சந்தித்து ஆடிக்கொண்டு இருந்தது. டெல்லி அணியே ஆட்டம் கண்டிருந்தது என்பது தான் உண்மை ; பாலோ ஆன் ஆகிவிடலாம் என்று முனைந்து பந்து வீசிக்கொண்டு இருந்தார்கள் எதிரணியினர். அந்த பதினெட்டு வயது இளைஞன் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தான் ; தொன்னூறு ரன்களில் பேட்டில் பந்து பட்டு அவன் வெளியேறிய பொழுது அவன் அணி கரைசேர்ந்து இருந்தது. மூன்றரை மணிக்கு வீட்டுக்கு போய் காலை மூன்று மணிக்கு இறந்து போயிருந்த தன் தந்தைக்கு இறுதிக்கடன் செலுத்தினான், விராட் கோலி தான் அந்த இளைஞன். [] அடுத்த ஒரு வருடத்துக்குள் அண்டர் 19 அணிக்கு உலக கோப்பையில் தலைமை தாங்கினான். உணர்வுகளை எக்கச்சக்கமாக காட்டும் இளைஞன் என்பதைத்தாண்டி அப்பாவின் மரணம் கோலியை பக்குவப்படுத்தி இருந்தது. அற்புதமாக பீல்டிங் அமைத்து உடனடியாக முடிவுகள் எடுத்து வழிநடத்தினார். சொல்லவே வேண்டாம். கோலியும் சிறப்பாக ஆடினார். அணி உலககோப்பையை வென்றது. CB தொடர் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்து கொண்டிருந்தது. தொடரை விட்டு இந்தியா அவுட் என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிற அளவுக்கு மிகப்பெரிய ஸ்கோர் 321 கண் முன் இருந்தது. போட்டு அடித்து நொறுக்கினார் கோலி. 86 பந்துகளில் 133 ரன்கள் அடித்து நாற்பது ஓவருக்குள் அந்த ஸ்கோரை சேஸ் செய்ய உதவினார். டெஸ்ட் தொடரில் அணியே சொதப்பிய பொழுது ஒரே ஒரு சதம் இவரால் அடிலெய்டு ஆடுகளத்தில் அடிக்கப்பட்டு இருந்தது. உலககோப்பையில் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார் ; மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அரை சதம் அடித்து உதவினார். முக்கியமான இறுதிப்போட்டியில் கம்பீருடன் இவர் போட்ட 83 ரன் கூட்டணி வெற்றிக்கு அடித்தளம் இட்டது. மூன்று வருடங்களாக ஆயிரம் ரன்களை இயல்பாக கடக்கிறார் கோலி. அவரின் அதிரடி மிகச்சிறந்த அணிகளை அச்சுறுத்துகிறது. சச்சின் இடத்தை கோலி பிடிப்பார் என்று கவாஸ்கரும்,சேப்பலும் அடித்து சொல்கிறார்கள். சிக்கு அதே ஆக்ரோஷத்தோடு அடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார். அதில் சத்தமே இல்லாமல் முதிர்ச்சியும் சேர்ந்து வளர்வதை நீங்கள் கவனிக்க வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோலி 49 மனிதக்கணினி சகுந்தலா தேவி நவம்பர் 4, 2013 அந்த குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர் .அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள் .அவருக்கு அது வெறுத்திருந்தது .சர்க்கஸ் பக்கம் போனார் ;எண்ணற்ற வித்தைகள் செய்வார் .சிங்கத்தை அடக்குவார்,கயிறு மீது நடப்பார் இன்னும் பலபல ஜாலியான மேஜிக்குகள் கூட காட்டுவார் .அந்த சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது ,”அப்பா எனக்கும் எதாச்சும் சொல்லித்தா !” என கேட்டதும் கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதை சொல்லித்தர ஆரம்பித்தார் .கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள் .அப்பா அசந்து போனார் -காரணம் அந்த சுட்டிக்கு வயது மூன்று . இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என முடிவு செய்து கொண்டு அந்த தேவி பாப்பாவை தெருத்தெருவாக கூட்டிப்போய் அவளின் அதிவேக கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார் .”சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அறிவா ?கூப்பிடு செக் பண்ணிடலாம் ” என பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தார்கள் .போன இடத்தில் எல்லாம் அந்த பெண் பின்னி எடுத்தாள் .மைசூர் அண்ணாமலை என கல்விக்கூடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு முன் பதில் வந்து விழ ஆரம்பித்தது வகுப்புகளுக்கு போகவே முடியவில்லை ;வீட்டின் வறுமையை போக்க ஊர் ஊராக இதற்காக சுற்ற ஆரம்பித்து அதுவே வாழ்க்கை ஆகிப்போனது .அப்பொழுது தான் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு .சுட்டிக்கு இப்பொழுது வயது நாற்பத்தி ஆறு .மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா-தெரியவில்லை சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி காலமாகி விட்டார் .சிக்கல் பெரிது தான் 91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771. என்கிற இந்த 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க மூலத்தை கேட்டார்கள் . கணினி 13000 கட்டளைகளுக்கு அப்புறம் ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல தயாரான பொழுது அந்த பெண் 546372891 என பத்து நொடிகள் முன்னமே சொல்லி விட்டாள் !அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது 7,686,369,774,870 x 2,465,099,745,779 என இரு எண்களை பெருக்க சொல்லி லண்டனில் கொடுத்தார்கள் .இருபத்தி எட்டு நொடிகள் -விடை வந்து விழுந்தது .கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் அந்த தேவி என அறியப்பட்ட சகுந்தலா தேவி . ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன் தான் பள்ளிக்கல்வி பெறா விட்டாலும் பல சுவையான நூல்களை பிள்ளைகளுக்காக கணிதத்தை எளிமையாக கதை வடிவில் சொல்லும் வகையில் அமைத்தார் .கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை .நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு,பிறந்த நாள்,ஆடுகிற் விளையாட்டு,பார்க்கிற விஷயங்கள் என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது .அதை சுட்டிகளுக்கு சொல்லித்தர வேண்டும் .கதையாக ஆக்க வேண்டும் . அவர்கள் ரசிப்பார்கள் என்றவர் அவர் .”அவரிடம் ஒரு நூற்றாண்டின் ஒரு தேதியை நீங்கள் சொன்னால் உடனே அது எந்த கிழமை என பதில் வந்து விழும் . [] வேதநூல்களில் உள்ள கணிதத்தை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்கிற ஆசையில் நூறு ஏக்கர் பரப்பளவில் அவர் துவங்க இருந்த வேத கணித பல்கலைக்கழகம் கடைசியில் அவரோடு காற்றில் கரைந்து விட்டது . அவருக்கு இன்று பிறந்தநாள் . உலகின் அதிவேக மனிதக்கணினியை அன்போடு நினைவு கூர்வோம் 50 அதிரவைத்த அவுரங்கசீப் ! நவம்பர் 4, 2013 அவுரங்கசீப் எனும் சில பத்திகளில் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு வரலாற்று ஆளுமையின் பிறந்தநாள் இன்று.ஷாஜகானின் மூன்றாவது மகனான இவர் ஆட்சிக்கு வருவாரென்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.ஆனால் அது தான் நடந்தது, இவரை தக்காணத்தின்ஆளுநராக நியமித்தார் ஷாஜஹான். அங்கே சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில் மராத்தியர்கள் உடன் பெரும் போர்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது ஹீரபாய் என்கிற பெண்ணை சந்தித்தார் அவள் மீது காதல் அரும்பி அதிலேயே மூழ்கிகிடந்தவர் ஆனார் ; ஒரு நாள் கண்முன்னே அவள் இறந்து போனாள். அவரின் சகோதரி ஜஹானாரா தீவிபத்தில் சிக்கி பெரிய காயங்களோடு தப்பிய பொழுது அவரைக்காண மூன்று வாரம் கழித்து ஆறமர இவர் போனது ஷாஜஹனை கடுப்பேற்றியது;மேலும் பல மத மக்களோடு ஒருங்கிணைந்து ஆட்சி நடத்தி வந்த ஷாஜா கனின் செல்லமாக அவரின் மூத்த பிள்ளை தாரா ஷுகோ இருந்தார் அவ்வப்பொழுது கடுமையான போர்களில் ஈடுபட்டு அவுரங்கசீப் வென்றாலும் முக்கியமான கட்டங்களில் அவருக்கு மன்னரிடமிருந்து உதவி கிடைக்காமல் போய் பாதி வெற்றி அல்லது பெரும் தோல்வி ஏற்படும் ஆகவே இதற்கு பின் தாரா ஷுகோ இருப்பதாக அவுரங்கசீபிற்கு சந்தேகம். ஷுகோ சமஸ்க்ருதம் கற்று ஹிந்து பண்டிட்களோடு அன்பு பாராட்டுவது ஒரு நல்ல முசல்மானின் பண்பில்லை என மனம் வெம்பினார் ; எல்லாமும் சேர்ந்து ஷாஜஹான் உடல் நலிவுற்று இருப்பதாக செய்தி வந்த பொழுது அவர் இறந்து இருப்பார் அதை ஷுகோ மறைப்பதாக நினைத்து யாவரும் டெல்லி வந்தார்கள். பல்வேறு போருக்கு பின் ரத்த ஆறுக்கு பின் மூன்று சகோதர்களை கொன்று ஆட்சியை பிடித்துகொண்டார் அவுரங்கசீப். இசை,ஓவியம் ,கலைஞர்கள் ,மது,சூதாட்டம் எல்லாவற்று க்கும் பெரிய நோ தான்;ஷாஜஹான் கட்ட ஆசைப்பட்ட இரண்டாவது கருப்பு தாஜ்மகாலுக்கு தடை போட்டார்;எண்ணற்ற ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன;ஜிசியா எனும் புனிதத்தலங்கள் செல்வதற்கான வரிகள் மீண்டும் விதிக்கப்பட்டன,மத மாற்றங்கள் பரவலாக நடந்தன. அவரை எதிர்த்த தேஜ் பகதூர் எனும் சீக்கிய குரு கொல்லப்பட்டார் . மத நல்லிணக்கம் என்பது இவரின் ஆட்சிகாலத்தில் காணாமல் போனது;மராத்தியர்களை ஒரு பக்கம்.ராஜபுதிரர்களை இன்னொரு பக்கம் ,கூடவே சீக்கியர்களை மறுபுறம் என எல்லாரையும் மீண்டும் வாளேந்த செய்த பெருமை இவருக்கு உரியது. [] இருந்ததிலேயே மிகப்பெரிய பரப்பளவை கொண்டதாக சாம்ராஜ்யத்தை விரிவடைய செய்த இவர் மிகச்சீக்கிரத்தில் மாபெரும் புரட்சிகளை சந்திக்கும் வகையில் அவற்றை கத்திமுனையில் கட்டமைத்து இருந்தார். அவர் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார் ; அவருக்கான கல்லறையை எந்த ஆடம்பரமும் இல்லாமல் அவர் உழைத்து பெற்ற வருமானத்திலேயே அமைக்க சொன்னார். போர்க்களத்தில் கூட தொழுவதை நிறுத்தாத மனிதர் இவர் ;ஆட்சியில் நிதிநிர்வாகம் சிறப்பாக அமைத்துக்கொண்ட மனிதர் அவற்றை ஐம்பாதண்டுகால போர்களில் வீணாக்கியது முரண். முகலாய அரசர்களில் அன்பைக்கொண்டு ஆட்சியை கட்டமைத்ததில் அக்பர் ஒரு எல்லை என்றால் அடக்குமுறை மற்றும் தன் நம்பிக்கையை மட்டும் கொண்டு வெறுப்பால் ஆட்சியைக்கட்டமைத்த அவுரங்கசீப் இன்னொரு எல்லை. 51 இரும்பு மனிதர் படேல் ! நவம்பர் 4, 2013 இரும்புக்கரம் இரும்புக்கரம் என்கிற ஒன்று உண்மையாக கொண்டிருந்த மாமனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் அக்டோபர் முப்பத்தி ஒன்று. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் குஜராத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆனார். காந்திய வழியில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றிகளை மக்களை ஒருங்கிணைப்பதில் செய்து காட்டினார்;ஒரு முக்கியமான தேசபக்தர் ஒருவரை மரண தண்டனையில் காக்க வாதாடிக்கொண்டு இருந்த பொழுது துண்டு சீட்டு ஒன்று வந்தது எந்த மாற்றமும் இல்லாமல் வாதாடி அவரை விடுவித்து விட்டு வெளியே அவர் தன் மனைவி இறந்துவிட்டார் என கூறிக்கொண்டே வீட்டிற்கு போனார் இவர். [] நாடு விடுதலை பெற்றதும் சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று ஆங்கிலேய அரசு அறிவித்து விட்டு போன பொழுது எல்லா ஆப்பிள்களையும் அப்படியே அள்ளி கூடையில் போடுகிற சாமர்த்தியம் படேலின் வலுவான முடிவுகளுக்கு பின் இருந்தது ;இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இப்போதைய இந்தியாவாக நிற்பதற்கு பிதாமகர் இவர்தான். பேச்சு உடன்படிக்கை இல்லையேல் இரும்புக்கரம் என்று செயல்பட்ட இவருக்கும் நேருவுக்கும் ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் இருந்தன -சோம்நாத் ஆலயத்தை மறுநிர்மாணம் செய்வதில் இவர் பங்காற்றினார் நேருவுக்கு அதிலும் வருத்தங்கள் ஏற்பட்டன.ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை காந்தி மரணத்திற்கு பின் தடை செய்ய நேரு விரும்பிய பொழுது படேல் மறுத்தார் ;ஆதாரம் வேண்டும் என்றார். இஸ்லாமியர்களை அச்சத்தோடு அணுகவேண்டும் என்று இவர் எண்ணினார். மத அடையாளத்தை விட இந்தியாவே தங்களுக்கான பூமி என்று இருப்பவர்களை கனிவோடு அணுகவேண்டும் என்று நேரு எண்ணினார். முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களை ஹிந்து அகதிகள் எடுத்துக்கொள்ளவும் படேல் அனுமதித்தார். பாகிஸ்தானில் செய்கிறார்கள் ; இங்கேயும் அப்படியே இருக்கட்டுமே என்பது அவரின் தொனியாக இருந்தது. முஸ்லீம்களை முக்கியமான பதவிகளில் இருந்து ஒதுக்கி வைக்கிற வேலையையும் அவர் செய்தார் தனியாக பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அகதிகளை தங்க வைக்க வேண்டும் என்று நேரு விரும்பினார் ;படேல் மற்ற மக்களுடன் அவர்கள் இணைந்தே வாழ வேண்டும் என்றார்; காங்கிரஸ் எம்பிகள் பெரும்பான்மையானோர் நீங்கள் பிரதமர் ஆகுங்கள் நாங்கள் உங்கள் பின் அணிவகுக்கிறோம் என்ற பொழுது,”நீங்கள் என் பக்கம் இருக்கலாம்;மக்கள் நேருஜி பக்கம் அல்லவா இருக்கிறார்கள்” என அதற்கு உடன்பட மறுத்த தீர்க்கமான மனிதர் அவர் .சீனா தான் பெரிய எதிரி அதை நம்ப வேண்டாம் என நேருவுக்கு எச்சரித்த மனிதர் அவர் இரண்டே வருடங்கள் தான் விடுதலைக்கு பின் அவர் வாழ்ந்தார் என்பது பேரிழப்பு இந்த நாட்டுக்கு. எளிய வாழ்க்கை,நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக இருந்த அவரின் பிறந்தநாள் அக்டோபர் முப்பத்தி ஒன்று 52 ஆந்திரா எழுந்த கதை ! நவம்பர் 4, 2013 ஆந்திரா மாநில அந்தஸ்து பெற்று பின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திர பிரதேசம் உருவானது நவம்பர் ஒன்று . மெட்ராஸ் மாகாணம் என்கிற பெயரில் மிகப்பெரிய பரப்பளவை உள்ளடக்கி சென்னையை ஆண்டார்கள் ஆங்கிலேயர்கள். மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க விடுதலைக்கு முன்னரே காங்கிரஸ் கட்சி தீர்மானம் போட்டிருந்தது. மதத்தின் பெயரால் பிரிவினை நடந்த பொழுது இனிமேல் எந்த வகையான பிரிவினையையும் ஆதரிக்க கூடாது என்று முடிவு செய்துகொண்டார் நேரு. மொழிவாரி மாநிலங்களுக்கும் அதனால் தடை போட்டார். [] ஆந்திரா என்கிற தனி மாநிலம் உருவாக வேண்டும் என்கிற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடம் விடுதலை பெற்ற பின் வலுப்பெற்றது. அதற்கு முன்பே யார் சென்னையை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கே சென்னை ,என்றும் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கே சென்னை என்றும் உரிமை கோர எவ்வளவோ சிக்கலகளுக்கு ஆளானது. பிரகாசம் சென்னை தங்களோடு சேரும் என்று சொன்னார். தமிழ்நாட்டு தலைவர்கள் எதிர்த்தார்கள். மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்க நேரு படேல் பட்டாபி சீதாராமையா இணைந்த கமிட்டி சென்னையைப்பற்றி பேசவில்லை. ஆந்திராவுக்கு சென்னை இல்லையென்று சொன்னாலும் அது தமிழகத்துக்கும் இல்லை என்றார் பட்டாபி சீதாராமையா. இருவருக்கும் பொதுவாக இருக்கும் என்று புது பூதத்தை கிளப்பினார். தமிழ்நாட்டில் போராட்டங்கள் நிகழ்ந்தன சென்னை தமிழகத்து மக்களுக்கே உரியது என நேரு அறிவித்தார். விடுதலைக்கு பின்னும் மெட்ராஸ் மாகாணம் என்கிற பெயரில் தெலுங்கு,கன்னட,தமிழ் மக்கள் இணைந்து இருந்தார்கள். பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திரா வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார்; நேரு கண்டிப்பாக தனி மாநிலம் உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த பின் (மார்ச் 25, 1953) தன் போராட்டத்தை அவர் கைவிட்டார் ;எனினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனதால் மீண்டும் அவர் உண்ணாநோன்பில் குதித்து உயிர் துறந்தார்; கலவர பூமி ஆனது தற்போதைய ஆந்திரா. நேரு அரசு ஆந்திராவிற்கு மாநில அந்தஸ்தை 1953 அக்டோபர் ஒன்று அன்று தந்தது;பின் மூன்று வருடங்கள் கழித்து நவம்பர் ஒன்று அன்று ஹைதராபாத் நிஜாமிடம் இருந்து பெறப்பட்ட தற்போதைய தெலங்கானாவின் பகுதிகள் சேர்க்கப்பட்டு எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டது; அப்போதைய தலைநகராக இருந்த குர்நூல் மாற்றப்பட்டு ஹைதராபாத் தலைநகர் ஆனது . அப்பொழுது ஏற்பட்ட மனஸ்தாபங்கள் தெலங்கானாவுக்கான விதையை வைத்திருந்தன. தமிழகம் மற்றும் கேரளம் ஆகியனவும் மாநிலங்கள் ஆகின. மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் என்கிற பெயர் ஆந்திராவிற்கு சென்று சேர்ந்தது. 53 ஏஞ்சலோ எனும் ஏஞ்சல் ! நவம்பர் 4, 2013 மைக்கலாஞ்சேலோ என்கிற ஒப்பற்ற கலை மேதையின் ஒப்பற்ற படைப்பு மக்களின் காட்சிக்கு விடப்பட்ட தினம் நவம்பர் ஒன்று.;டாவின்சிக்கு இணையாக போற்றப்படுகிற இன்னொரு இத்தாலிய கலைஞர் இவர் ;ஓவியம்,சிற்பம்,கவிதை என பலதளம் தொட்ட மேதை அவர். இளவயதில் அன்னையை இழந்த பின் அரேசோ நகருக்கு இடம் பெயர்ந்தார் அவர்;அங்கே அப்பாவுக்கு சொந்தமான பளிங்கு குவாரியில் எப்பொழுதும் உளி மற்றும் செதுக்கும் சத்தம் கேட்டு கேட்டு வளர்ந்தார்;ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயின்றார் ;அவர் செதுக்கிய பியேட்டா,டேவிட் சிலைகள் உலகை மெய்மறக்க செய்தன.அப்பொழுது இன்னுமொரு வேலையாக சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையை அலங்கரிக்கும் ஓவியங்களை இவரிடம் போப்பாண்டவரால் கொடுக்கப்பட்டது ;கண்ணை இடுக்கி பலகாலம் உற்றுபார்த்து மிக உயரத்தில் இருந்த அங்கு ஓவியங்களை வரைந்தார் அவர் ;இதன் விளைவாக புத்தகங்களை தூரத்தில் வைத்து பார்த்தால் தான் தெரியும் என்கிற நிலைமை மோசமானது.இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காக தன வாழ்வை அர்ப்பணம் செய்துகொண்டவர் . [] உலகின் படைப்பு .ஆதாம் ஏவாள் படைப்பு ,கிறிஸ்துவின் முன்னோர்கள் முதலிய பல்வேறு ஓவியங்களை நான்கு வருடங்கள் தீட்டினார் இத்தனைக்கும் அதற்கு முன் அவர் குறிப்பிடத்தகுந்த ஓவியங்கள் தீட்டியதில்லை ; அவரின் சிஸ்டைன் தேவாலய ஓவியங்கள் மக்களின் பார்வைக்கு இன்றைக்கு தான் வந்தன.மெய்மறந்து மக்கள் சிலிர்த்தார்கள் . அப்பொழுது நிலவிய அரசியல் சூழல் கொதிப்பானது இதைப்பற்றிய தி தேர்ட் மேன் பட வசனம் காதில் அலைமோதுகிறது , இத்தாலியை போர்கிஸ் ஆண்ட முப்பது ஆண்டுகளில் போர்,வன்முறை,தீவிரவாதம்,கொலைகள்,ரத்த ஆறு ஆகியனவே நிறைந்து இருந்தன. ஆனால்,அக்காலத்தில் அவர்கள் ஏஞ்சலோ,டாவின்சி,மறுமலர்ச்சி என கலக்கினார்கள். ஐநூறு ஆண்டுகள் அமைதியும்,ஜனநாயகமும் இருந்தும் என்ன சாதித்தது ஸ்விட்சர்லாந்து கூக்கு கடிகாரம் மட்டும் உருவாக்கினார்கள். !” 54 பொருளாதார அன்னை தெரசா அமர்த்தியா சென் நவம்பர் 3, 2013 அமர்த்தியா சென் எனும் பொருளாதார மேதை பிறந்த தினம் இன்று.கல்விகூடங்களில் மட்டுமே என் வாழ்க்கை கழிந்தது என அவர் தன் வாழ்க்கையை குறிக்கிறார்.அவரின் தந்தை டாக்கா பல்கலைகழகத்தில் பேராசிரியர்;அங்கே இருக்கும் பொழுது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சத்தில் இறப்பதை கண்களால் பார்த்ததும்,இந்திய பிரிவினையின் பொழுது மக்கள் பட்ட பாடுகளை பார்த்ததும் அவருக்குள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் காதர் மியான் எனும் இஸ்லாமியர் மதவெறியர்களால் வீட்டின் பசியைப்போக்க வெளியே சென்ற பொழுது தாக்கப்பட்டு இவர் மடியிலேயே இறந்தது இவரின் கண்களை விட்டு அகலவே இல்லை. ”அடையாளம்,பசி,மக்களின் உயிர்,வன்முறை எல்லாமும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்திருப்பதை அங்கே தான் பார்த்தேன். உலகமே பறவைக்கூடு என்கிற சாந்தி நிகேதனின் வாசகம் தான் அவரின் வாழ்க்கையை இன்று வரை செலுத்துகிறது. பதினெட்டு வயதில் கேன்சருடன் போராடிய பொழுது “என்ன ஆனாலும் சரி ; நம்பிக்கையோடு போராடி முடிப்பேன் !” என்று எண்ணினார் அவர். அதிலிருந்து மீளவும் செய்தார். சாந்தி நிகேதன்,கொல்கத்தா மாநில கல்லூரி,ட்ரினிட்டி கல்லூரி ஆகியவற்றில் படித்த பின் பொருளாதரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின் இருபத்தி மூன்று வயதில் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் துறைத்தலைவர் ஆனார். சமூகத்தேர்வு என்கிற கருத்தியலை ஆழமாக விவாதித்து எழுதினார். அதாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசாங்கங்கள் எண்ணற்ற திட்டங்கள் போடுகின்றன . குதிரை கொடுக்க வேண்டும் என்று அரசுகள் நினைக்கின்றன ; மக்கள் கைக்கு வருகிற பொழுது பல்வேறு காரணங்களால் அவை ஒட்டகமாக மாறிவிடுகின்றன. இதை மாற்றுவது மிகக்கடினமானது. ஆனால்,பல்வேறு வகையான சிக்கல்கள்காரணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நன்றாக மக்களின் சிக்கலை புரிந்து கொண்டு தேர்வுகளை மேற்கொண்டால் சமூக முன்னேற்றம் சிறப்பாக நடக்கும் என்று அவர் வலியுறுத்தினார். பொருளாதாரம் மற்றும் தத்துவத்தை இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே ; ராவ்ல்ஸ் எனும் அறிஞரின் நீதி சார்ந்த கோட்பாட்டுக்கு எதிர்வாதமாக எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களை அற்புதமாக எடுத்து வைத்தார். அடையாள அரசியல் தான் உலகம் முழுக்க வன்முறையை உண்டு செய்கிறது என்பதை உணர்ந்த இவர் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன என்பதை உணர்ந்து இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பஞ்சம்,பசி,வறுமை சார்ந்து இவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை. வங்கத்தில் இருபது லட்சம் பேர் செத்த அந்த பஞ்சத்தின் பொழுது சாகுபடி அதிகமாகவே இருந்தது ; விலை வாசி பதினாகு ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. உணவுப்பதுக்கல் நடந்தது ; அரசும் உணவுக்கப்பலை அனுப்பவில்லை. மக்கள் பசியால் இறந்தார்கள், உணவு இருந்தால் மட்டும் போதாது அதை வாங்க மக்களுக்கு சக்தி வேண்டும் ஆகவே,பஞ்சம் ஏற்படுகிற காலத்தில் மக்களுக்கு சம்பள உயர்வு தரவேண்டும். தானியங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சென் [] சமீபத்தில் அவர் எழுதிய AN UNCERTAIN GLORY புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஜாரத்தின் வளர்ச்சி மாதிரி உண்மையில் நல்ல வளர்ச்சி மாதிரியில்லை ; தமிழகம்,கேரளா ஆகியனவே நல்ல வளர்சிக்கு எடுத்துக்காட்டு. ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் வளர்ந்து இன்னொரு பக்கம் உடல்நலம்,கல்வி,ஆரோக்கியமான உடல்நிலை,சுகாதாரம்,சீரான வருமான பரவலாக்கம் ஆகியன இல்லாமல் ஒரு மாநிலம் இருக்குமென்றால் அது வளர்ச்சி கிடையாது. அந்த வளர்ச்சியை நெடுங்காலத்துக்கு தக்க வைக்க முடியாது என்கிறார் சென். மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரும் என தொடர்ந்து தன் எழுத்துக்களில் வலியுறுத்தி வருபவர்.மக்கள்நலன் சார் பொருளாதாரம் ,வளர்ச்சி பொருளாதாரம் ஆகியவை சார்ந்து இயங்கும் இவர் பொருளாதாரத்துக்கு அறம் சார்ந்த ஒரு கோணத்தை தந்தமைக்காக 1998 இல் பொருளாதார நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . . பொருளாதாரம் என்றால் எல்லாரும் எண்கள்,வர்த்தகம்,கணக்கு என்றிருந்த பொழுது மக்களின் நலன் சார்ந்து சிந்தித்த இவர் வங்கம் வருகிற பொழுதெல்லாம் சைக்கிளில் சுற்றுவார் ; எளிய கடையில் டீ குடிப்பார். ஒரு காலத்தில் கடன்வாங்கி குடும்பம் நடத்துகிற அளவுக்கு எளிய வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார். பிரதாச்சி அமைப்பை உருவாக்கி தன்னுடைய ஒட்டுமொத்த நோபல் பரிசுப்பணத்தை வங்கத்தின் பெண் குழந்தைகளின் கல்விக்கு கொடுத்துவிட்டார் அவர். அமர்தியா சென்னுக்கு அப்பெயரை வைத்தவர் மகாகவி தாகூர். என்றைக்கும் அழிவில்லாதவன் என்று அர்த்தம் ; சென்னின் செயல்கள் அப்படியே அவரை பொருளாதார உலகில் நிலைத்து நிற்க வைக்கும். 55 சிவந்த மனிதர் டூனன்ட் ! ஒக்ரோபர் 30, 2013 அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் மறைந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார். அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார். [] போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர் இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள். அவர் வரிகளிலேயே பாருங்கள்,” நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்” . முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார். ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்; அதுதானே வெற்றி 56 மைக்ரோசாப்ட் மாயன் கேட்ஸ் ! ஒக்ரோபர் 29, 2013 கணிப்பொறியின் காதலன் …ஓயாத உழைப்பின் அடையாளம் …மைக்ரோசாப்டின் மாஸ்டரின் மென்மையான பக்கங்கள் இவை பில் கேட்ஸ் அவர்களின் தந்தை அரசாங்க அட்டர்னி ஜெனரல் .அம்மா பிரபலமான வங்கியின் இயக்குனர்களில் ஒருவர் .கேட்ஸ் சுட்டி பையனாக இருக்கும் பொழுது அதிகமாக படித்து என்சைக்ளோபீடியா தான்…பெரும்பாலும் அதன் மீதே படுத்து தூங்கி விடுவாராம் ! படிப்பில் கெட்டியாக இருந்தாலும் அடிக்கடி வகுப்பை கட் அடித்து விட்டு தனக்கு பிடித்த விசயங்களை செய்ய ஊர் சுற்றுவார் .விளைவு பயந்து போன பெற்றோர் seattle நகரில் உள்ள படு ஸ்ட்ரிக்டான பள்ளியில் சேர்த்து விட்டார்கள் .அங்கே தான் பரந்த உலகின் அற்புதங்களை ரசிக்க கற்றுக்கொண்டேன் என்பார் கேட்ஸ் . பள்ளி காலத்தில் பதிமூன்று வயதில் டிக் டாக் டோ எனும் கேமிற்கு ப்ரோக்ராம் போட்டார் கேட்ஸ் .அதை கணினியில் ஓட விட்டதும் ,மெதுவாக கணினி அதை உள்வாங்கி அந்த கேம் நிஜமாகவே வேலை செய்ய ஆரம்பித்த தருணத்தில் கேட்சின் கண்களில் பெருமிதம் மின்னியது .”இந்த மெசின் ஒழுங்காக வேலை பார்க்கிறது…எனக்கு இது பிடித்து இருக்கிறது.”என பெருமிதம் பொங்க சொன்னபொழுது தான் அவரின் கணினிக்கான காதல் தொடங்கியது. கேட்ஸ் ரொம்பவும் விரும்பி படித்த படங்கள் அறிவியல் மற்றும் கணிதம் .கல்லூரியில் நுழைவதர்க்கான தேர்வில் 1590/1600 எடுத்தார் சுட்டி கேட்ஸ் .அவருக்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது.படித்து முடித்து தந்தையை போல வக்கீல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார் கேட்ஸ் .அங்கே அவருக்கு வேறொரு தோழன் காத்துக்கொண்டு இருந்தான் .பள்ளியில் படிக்கும் பொழுதே அப்போதைய கணினிக்களை பார்த்து பரவசப்பட்டார் கேட்ஸ் .கல்லூரியில் நுழைந்ததும் வகுப்புக்கு கூட போகாமல் பல நேரம் கணினி முன்னேயே உட்கார்ந்து இருப்பார் .இதற்காக பல கணக்கு வகுப்புகளை விரும்பி கட் அடித்துள்ளார் கல்லூரியில் படிக்கும் பொழுது அவரை விட இரண்டு வயது மூத்தவரான பால் ஆலனின் நட்பு கிடைத்தது .இருவரும் குணத்தால் பெரிதும் மாறுபட்டவர்கள் என்றாலும் கணினி மீதான காதல் அவர்களை ஒன்று சேர்த்தது .பல சமயம் பயங்கரமாக சண்டை போட்டு கொள்வார்கள் .ஆனாலும்,ஒன்றாக இணைந்து பல்வேறு ப்ரோக்ராம்களை உருவாக்கினார்கள் .கேட்ஸ்இக்கு கல்லூரி போவது ஏகத்துக்கும் சலிப்பை தந்தது ,பெற்றோரின் அனுமதியோடு கல்லூரியை விட்டு நடுவிலேயே வெளியேறினார் கேட்ஸ் .சொந்த நிறுவனத்தை பால் ஆலன் உடன் இணைந்து தொடங்கிய பொழுது கேட்ஸ் சொன்னது ,”முப்பது வயதிற்குள் நான் கோடீஸ்வரனாகி கட்டுவேன் !”அதை போலவே முப்பத்தி ஒரு வயதில் அவர் கோடீஸ்வரராக ஆகி காட்டினார். பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து மிட்ஸ் என்கிற நிறுவனத்திடம் BASIC ப்ரோக்ராமில் நாங்கள் பல்வேறு விசயங்களை செய்வோம்.எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட பொழுது உண்மையில் எந்த திட்டமும் அவரிடம் இல்லை…ஆனால் அசாத்தியமான நம்பிக்கை அவர்களுக்கு கைக்கொடுத்தது .சொன்ன மாதிரியே செய்து காட்டினார்கள்.இவர்கள் உருவாக்கிய ப்ரோக்ராம் பெரிய பேரை பெற்று தந்தது கேட்ஸ் இந்த காலத்தில் அரசாங்கத்தில் ட்ராபிக்கை கட்டுப்படுத்த மற்றும் அளவிட ப்ரோக்ராம்களை உருவாக்கி தந்தார் .பான்கேக் உருவாக்கத்தில் பயன்பட இவர் உருவாக்கித்தந்த ப்ரோக்ராம் பல வருடங்களுக்கு மிகவும் வேகமான ப்ரோக்ரம்களில் ஒன்றாக அறியப்பட்டது .அதை முந்திய ப்ரோக்ராமின் துல்லியம் அதை விட ஒரு சதவிகதமே அதிகமாக இருப்பது குறிப்பிட தக்கது .HONEYWELL நிறுவனத்தில் சில காலம் ப்ரோக்ராம் உருவாக்குபவர்களாக பால் அல்லன் மற்றும் கேட்ஸ் பணிபுரிந்தார்கள் . HONEYWELL நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என கேட்ஸ் முடிவு செய்து MICROCOMPUTER மற்றும் SOFTWARE ஆகிய இரண்டு பதங்களை இணைத்து மைக்ரோ-சா ப்ட் என அழைத்தார் .நடுவில் இருந்த கோடு வெகு சிக்கிரமே விழுந்து மைக்ரோசாப்ட் என்கிற மந்திர சொல் உருவானது . ஐ.பி.எம் மிடம் இருந்து விலகி தானே தனியாக ஆபெரடிங் சிஸ்டத்தை வெளியிட்டார் கேட்ஸ் .அன்று முதல் டெக் உலகின் முடிசூடா மன்னன் ஆனார் பில் கேட்ஸ்.அதற்கு பின் மக்களுக்கு பிடித்த, எளிமையான,அதே சமயம் தவறுகளை சரிசெய்துகொள்ளும் ஆபெரடிங் சிஸ்டம்களை உருவாக்குவதை தன் எளிய லட்சியமாக கொண்டுள்ளார் கேட்ஸ் உலகின் டாப் பணக்காரராக பல ஆண்டுகள் இருந்தவர் என்றாலும் அம்மாவின் மீது ஏகத்துக்கும் பாசம் வைத்து இருந்தவர் .அவரின் அம்மா பல்வேறு அனாதை சிறுவர்கள்,மாற்று திறனாளிகள்,நோயாளிகள் ஆகியோருக்கு நிதி திரட்டியவர் .அவர் மார்பக புற்று நோயால் இறந்த பொழுது நொறுங்கிப்போனார் பில் கேட்ஸ் .அதன் விளைவாக புற்றுநோய்,எய்ட்ஸ் ,போலியோ ஆகிய நோய்களுக்கு எதிராக நடக்கும் ஆராய்ச்சிக்கு ஏராளமான நிதி வழங்கி உள்ளார் நல்ல ஓவியங்கள் ,பழங்கால பொருட்கள் மீது ஆர்வம் அதிகம் ,மில்க் சாக்லேட்களிலும் மனதை பறிக்கொடுப்பவர்.குழந்தைகளின் மீது அளவு கடந்த ப்ரியம் உண்டு.தன்னை சந்திக்கும் சுட்டிகள் கேட்கும் குறும்பன கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் சொல்கிற பழக்கம் உடையவர் .உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் நலனிற்காக தான் மெலிண்டா கேட்ஸ் அமைப்பில் பணியாற்றி வருகிறார் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இல்லை .மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் சார்பாக உலகம் முழுக்க பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளுக்கு தான் அமைப்பின் முலம் உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .தான் மூன்று பிள்ளைகளுக்கு தன் சொத்தில் வெறும் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கி உள்ளார் .மீதம் எல்லாம் சமுகப்பணிகளுக்காக ஒதுக்கி விட்டது பலருக்கு ஆச்சரியம் உண்டு செய்த செயல் ஹார்வர்டில் இருந்து பட்டம் பெறாமல் போனாலும் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் …இவர் மற்றும் மைக்ரோசாப்ட்இன் மொத்த காப்புரிமைகள் பத்து ஆயிரத்திற்கு மேல் !அவர் பட்டம் பெறமால் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் அதே பல்கலைகழகம் அவருக்கு கவுரவ பட்டம் வளங்கியபோளுது தான் கேட்ஸ் அதிகாரப்பூர்வமாக பட்டதாரி ஆனார் .தான் அமைப்பில் பட்டங்களை அதிகம் பெற்றவர்களை விட மாற்றி சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களையே வேலைக்கு சேர்ப்பதை குறிக்கோளாக கொண்டு உள்ளார் மிகவும் எளிமையான பழக்கங்கள் உடையவர் .அலுவலகத்தில் பல மணிநேரம் வேலை செய்கிற பழக்கம் உடையவர் .ஒரு நாள் காளை உதவியாளர் அறைக்குள் வந்த பொழுது யாரோ டேபிளுக்கு அடியில் யாரோ தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தார் .அதிர்ந்து போய் அருகில் போன பொழுது தான் புரிந்தது அது கேட்ஸ் என்று ..அவரை நோக்கி மென்மையாக சிரித்து விட்டு எதுவும் நடக்காதது போல வெளியேறினாரம் கேட்ஸ். 57 கொறிக்க கொஞ்சம் கோயபலஸ் வரலாறு ! ஒக்ரோபர் 29, 2013 ஜெர்மனியின் ஒப்பற்ற பேச்சாளர் நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னோடி கோயபல்ஸ் பிறந்த தினம் இன்று.மனிதர் அடிப்படையில் இலக்கியங்களில் காதல் என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்;சில நூல்கள் எழுதி அதை பதிப்பகங்கள் நிராகரித்தன. அப்பொழுது தான் ஹிட்லர் கண்ணுக்கு பட்டு அவரின் கட்சியில் சேர்ந்தார்.பொய்யை அப்படியே நம்பும்படி சொல்வதில் செம கில்லாடி இவர் ;இவரின் பேச்சை கேட்டு மக்கள் பாடச்சொன்னால் பாடுவார்கள்;குதிக்க சொன்னால் குதிப்பார்கள். நகைச்சுவை கலந்து வெறுப்பை கலப்பதில் தேர்ந்த நிபுணர்.ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் இவரை பிரசார மந்திரி ஆகினார் என்றால் இவரின் திறனை புரிந்து கொள்ளுங்கள் மனிதர் பதவிக்கு வந்ததும் செய்த முதல் வேலை புத்தகங்களை கொளுத்தச்சொன்னது தான்; அடுத்தது இசை,நாடகம்,பத்திரிக்கை,படம் எல்லாமும் வெறும் ஹிட்லர் புகழ் பாடும் ஊடகமாக மாற்றப்பட்டன. சுய தணிக்கை செய்து கொள்ளுமாறு பத்திரிக்கைகள் மாறின என்கிற அளவுக்கு இவர் வேலை கச்சிதம். [] யூதர்களை கொல்வதை சாதிக்கிற அளவுக்கு ஒரு எதிர்ப்புமில்லாமல் வெறுப்பை வளர்த்தெடுத்தன இவரின் பேச்சுகள் .ஒரு பொய்யை அல்லது செய்தியை தொடர்ந்து ஊடகத்தில் சொல்வதன் மூலம் ,மக்களுக்கு நடுவே அரசின் ஆட்களை கலந்து விடுவதன் மூலம் ,ஜோதிடர்களை விட்டும் சொல்வதன் மூலம் நம்ப வைக்கும் முறை இவர் கொண்டுவந்ததே ! ஹிட்லருக்கு பின் ஜெர்மனியின் சிலநாள் தலைவராக இருந்தார் ;பின் தற்கொலை செய்து இறந்து போனார்.நடுவில் செக் நடிகையுடன் கள்ளத்தொடர்பு வேறு உண்டு.பல வகையில் நம் அரசியல்வாதிகளுக்கு இவர் தான் பிதாமகர் ஆனால் நன்றியே இல்லாமல் இவர் பெயரை சொல்லியே எதிராளியை திட்டுவார்கள் நம்மவர்கள். 58 சுதந்திர தேவி சிலை இது ! ஒக்ரோபர் 29, 2013 சுதந்திர தேவி சிலை திறக்கப்பட்ட தினம் இன்று. அமெரிக்காவின் சுதந்திரத்தில் மிகப்பெரிய பங்கு பிரான்ஸ் தேசத்துக்குண்டு. பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவை விடுவிக்க தன் படைகளை அனுப்பி உதவியது.அதனால் பெரிய நிதி சுமைக்கு உள்ளாகி அது பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக அமைந்தது கிளைக்கதை. அந்த விடுதலை நிகழ்வு நூறு வருடம் ஆனதன் பொருட்டு ஒரு சிலையை பரிசளிக்க பிரெஞ்சு மக்கள் முடிவு செய்தார்கள்.நிதி திரட்டுவது தான் சிக்கலாக இருந்தது.அமெரிக்காவில் பல்வேறு நாடகங்கள் மூலமும்,புலிட்சர் பரிசு உருவாக காரணமான ஜான் புலிட்சர் தன் பத்திரிக்கையில் விளம்பரபடுத்தி நிதி சேர்த்தார் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த குஸ்தாவ் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் ;பீடம் அமெரிக்காவில் வடிவமைக்கபட்டது;சிலை கப்பலின் மூலம் அமெரிக்கா வந்து சேர்ந்தது.முழுவதுமாக அல்ல ;பாகம் பாகமாக கொண்டுவரப்பட்டு பின் இணைக்கப்பட்டது. ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான ஸ்டோலோவை அணிந்து சிலையின் இடது கையில் சட்டப் புத்தகத்தை ஏந்திருக்கும் வகையில் சிலை உருவானது. அதன் முகப்பில் அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறிக்கும் ஜூலை 4, 1786 என்று ரோமன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. அதை நூற்றாண்டு முடிந்து பத்தாண்டுகள் ஆன பின் திறந்தார்கள்;அதை அமெரிக்க ஜனாதிபதி குரோவர் திறந்து வைத்தார். [] ஒரு நகைச்சுவையான வாசகம் உண்டு அமெரிக்கா உலகத்துக்கே சுதந்திரம்,சமத்துவம் ஆகியவற்றை மறுப்பதால் தான் அதை சிலையாக மட்டும் வைத்திருக்கிறார்கள் என்று போகும் அந்த வாசகம். அமெரிக்காவின் அடையாளமாகவே ஆகிப்போன சுதந்திர தேவி சிலை திறக்கப்பட்ட தினம் இன்று. 59 ஹச்சிகோ-ஒன்பதாண்டு காத்திருப்பு கதை இது ! ஒக்ரோபர் 28, 2013 ஹச்சிகோவுக்கு சலிப்பாக தான் இருந்தது ; இப்படி ரத்தம் சொட்டச்சொட்ட சண்டை போடுவது அதன் இனத்துக்கு அழகில்லை. அது அகிதா இனம் சாமுராய்க்கள் ஜப்பானில் பண்டைய காலத்தில் அகிதா நாய்களை சண்டையிட வைத்து அவைகளின் லாவகமான சண்டையில் இருந்து போர் முறையை கற்றுக்கொள்வார்கள். யாருக்கேனும் உடல் நலம் சரியில்லாமல் போனால் ஒரு அகிதா பொம்மை தான் அவர்கள் விரைவில் குணமடைய சொல்லி பார்சல் போகும். இதை நினைத்துக்கொண்டே தன்னுடைய காதுகளை தொட்டு பார்த்தது ஹச்சிகோ. ஒரு பக்கம் உண்ணிகளால் கீழே தொங்கிப்போய் இருந்தது ஒரு காது. இன்னொரு காதும் ரத்தம் குறைந்து வெளுத்திருந்தது. [] மூன்று மணி ரயில் வந்துவிட்டது ; இன்றைக்கு கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேகமாக நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தது ஹச்சிகோ. ஆகிற்று எட்டு வருடம் ப்ரோபசர் யூனோ எங்கே போனார் என்றே தெரியவில்லை. காலையில் குட்டி நாயாக இருக்கும் பொழுது யூனோ தூக்கி வந்து ஹச்சிகோவை வளர்த்தார். அவர் கல்லூரி செல்ல ரயிலேறும் பொழுது பின்னாடியே போய்விட்டு திரும்பி மூன்று மணி ரயிலுக்கு அவர் வரும் பொழுது அவரை அழைத்து செல்லும் வரை அங்கேயே காத்திருந்து பழக்கம் ஹச்சிகோவுக்கு. முதலில் அடித்து விரட்டினார்கள் ; பின்னர் இதழில் ஹச்சிகோ படம் வந்த பிறகு ஒரே மரியாதை. தொடர்ந்து அங்கேயே சாப்பாடு போட்டு வளர்த்தார்கள். யூனோ அந்த மே 21 அன்று போனதோடு சரி இன்னமும் வரவில்லை. [] ஷிபுயா ரயில் நிலையத்தில் செர்ரி மலர்கள் ஏந்திக்கொண்டு பலபேர் கடந்து போனார்கள். யூனோவும் அப்படி செய்வார் ; கொஞ்சமாக ஊளையிட்டு விட்டு மீண்டும் படுத்துக்கொள்ள எண்ணியது ஹச்சிகோ . நடுவில் ஒரு முறை எங்கேயோ பிடித்துக்கொண்டு போய் யூனோவின் நண்பர் வளர்த்தார் ; ‘ஒரே எஜமானன் எனக்கு ‘ என்கிற பாலிஸி ஹச்சிகோவுக்கு. வயிற்றில் எதோ கிண்டிக்கொண்டு இருந்தது ; புழுவாக இருக்கும். பார்த்துக்கொள்ளலாம் ,யூனோ வந்துவிடுவார். கொஞ்சமாக ரத்தம் சொட்டுவது போல இருந்தது மூக்கில் ; வயிற்றில் வேறு அவ்வப்பொழுது எரிந்து தொலைகிறது. தெரு நாயாகவே மாறியாகி விட்டது. மூன்று மணிக்கு ஒடிவருவதற்குள் எத்தனை நாய்கள் கடித்து குதறுகின்றன. புண்களை நக்கியபடியே ஹச்சிகோ வானை பார்த்தது ; மூன்று மணி ஆகியிருந்தது. செர்ரி பூக்களோடு யூனோ நிற்கிறார். வாலை குழைத்தபடியே அவரை நக்கியது. ஒன்பதாண்டு கால காத்திருப்பு முடிந்தது. “ஒன்பது வருஷமா அந்த மனுஷன் செத்து போயிட்டார் அப்படினே தெரியாம இருந்திடுச்சு இங்கேயே. எப்படி கொழுக் மொழுக்குனு இருந்துச்சு தெரியுமா. இன்னைக்கு இப்படி அனாதையா செத்துப்போச்சு. எத்தனையோ பேரு அரவணைச்சுக்க தயாரா இருந்தாலும் நமக்கு யாரை பிடிக்குமோ அவங்களுக்காக காத்திருக்கிறது எல்லா உசுருக்கும் உண்டு போல ” என்றவாறு நகர்ந்தார் செர்ரி பூக்களை ஹச்சிகோ காலடியில் வைத்த அந்த பயணி. [] (ஹச்சிகோவின் சிலை அந்த ரயில்வே நிலையத்தில் இருக்கிறது இன்னமும். இரண்டு படங்கள் வந்துவிட்டன அதன் வாழ்வைப்பற்றி. ஹச்சிகோவை நினைவுகூரும் வகையில் ஜப்பான் மக்கள் ஆண்டு தோறும் நன்றி அறிவிப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர். காத்திருத்தலை செய்பவர்கள் ஹச்சிகோவை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்கள்) 60 டெட்டி தேடிவந்த கதை இது ! ஒக்ரோபர் 27, 2013 டெட்டி பியர் எனும் பெண்களுக்கு ,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொம்மைக்கு அந்த பெயர் தந்த மனிதர் தியோடர் ரூஸ்வல்ட் பிறந்தநாள் இன்று. ஜான் எப் கென்னடிக்கு முன் மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் .ஜனாதிபதியின் மரணத்தால் துணை ஜனாதிபதியான இவர் அந்த இடத்துக்கு வந்தார்; தன் இளம் வயதில் நோபல் பரிசும் வாங்கியவர். அதெல்லாம் இல்லை விஷயம் .காடுகளில் நன்றாக சுற்றுவார் இவர் ;வேட்டை என்றால்அப்படி உயிர். ஜனாதிபதி பதவியை விட்டு இறங்கியதும் அமேசான் காடுகள் பக்கம் போகிற அளவுக்கு காதல் இவருக்கு. ஒரு முறை ஜனாதிபதியாக இருக்கிற பொழுது கரடி வேட்டைக்கு போனார் மனிதர்;கரடியே மிஸிஸிபி மாகணத்தில் இல்லை . [] மூன்று நாட்கள் தேடி களைத்து போனவரை வெறுங்கையோடு அனுப்ப மக்களுக்கு விருப்பமில்லை ;ஒரு வயதான கரடியை எங்கிருந்தோ கண்டுபிடித்துக்கொண்டு வந்து மரத்தில் கட்டி வேட்டையாடுங்கள் என்றார்கள் மனிதர் கருணை கொப்பளிக்க முடியாது பாவம் அது என சொல்லிவிட்டு போனார்;இது அடுத்த சில தினங்களில் கார்டூனாக வந்து விட்டது,அப்பொழுது மோரிஸ் மிச்டோம் தன் மனைவி உருவாக்கிய கரடி பொம்மைக்கு இவரின் செல்லப்பெயர் ஆன டெட்டி என்பதை வைத்துக்கொள்ளலமா என கேட்க இவரும் அனுமதி தந்தார்,டெட்டி பியர் உலகப்பெண்களின் படுக்கையறை தோழன் ஆனது இப்படித்தான் 61 சில்வியா-தீரா சோகத்தோடு கீதம் இசைத்த தங்கமலர் ! ஒக்ரோபர் 27, 2013 சில்வியா பிளாத் எனும் பட்டதை கவித்துவமாக கண்ணீரோடு உலகுக்கு வடித்துக்கொடுத்து விட்டுப்போன கவிஞர் பிறந்த தினம் அக்டோபர் 27. வெறும் முப்பது வருடங்கள் வாழ்ந்த அவர் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது.அவரின் கவிதைகள் அவரின் வாழ்வின் சோகங்களை கரைத்து எழுதப்பட்டவை .தன உணர்வை வெளிக்கொணரும் CONFESSIONAL POETRY வகையான அவரின் கவிதைகள் அபாரமானவை.இளம்வயதில் எட்டு வயதில் செல்ல அப்பாவை இழந்தவர் அவர் ; பின்னர் அன்பு செய்த நார்ட்டன் என்பவர் நோயில் விழ நொந்து போனார். அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும் சில்வியாவுக்கு. அந்த இழப்பை விட்டே வெளிவராத அவர் ஹுக்ஸ் என்பவரை திருமணம் கொண்டார் ; அவர் மீது எல்லையில்லா அன்பு காட்டினார் சில்வியா. அந்த மனிதருடன் ஆன மணவாழ்வில் இரண்டு குழந்தைகள் . அவர் மீது அவருக்கோ பிற பெண்களுடன் தொடர்பு இருந்தது.அன்புக்காக ஏங்கிய சில்வியா நொறுங்கிப்போனார் . அவரை விட்டு விலகி இருபது வயதிலேயே பிள்ளைகளை தனியாக வளர்த்து எடுத்தார்.அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து கவிதை எழுதிவிட்டுப்பின் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே வலியோடு வாழ்க்கை நடத்தினார் ;மனவீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தார்; ஆனாலும் , இவரின் கவிதைகளில் ஒரு தனித்துவம்,வலி இருக்கும்.முப்பது வயது முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகளை ஈரத்துண்டில் சுற்றி வைத்துவிட்டு இன்னொரு அறையில் தீமூட்டிகொண்டு மனப்பிறழ்வு அதிகமாகி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். நெருப்பிலும் தங்கத்தாமரை மலரும் என் ஹுக்ஸ் அவர் கல்லறையில் எழுதி வைத்தார்;ஹுக்ஸ் உடன் வாழ்ந்த இன்னொரு பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார் .அந்த வரிகளை சில்வியாவின் ரசிகர்கள் பலமுறை அழித்து இருக்கிறார்கள் .அவர் இறந்து இருபது வருடங்கள் கழித்து புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது அவருக்கு ! இந்த கருணை எனும் அவரின் கவிதை அவரின் வாழ்வை சொல்லும் : நீ இங்கு தேநீர் கோப்பையோடு வருகிறாய் நீராவி மாலை சூடி இருக்கிறது அது உதிரத்தின் ஊற்றாக பொங்கிப்பாய்கிறது கவிதை எதுவும் அதை தடுப்பதற்கில்லை ஆனால் நீ எனக்கு இரண்டு ரோஜா ,இரண்டு மழலையை தருகிறாய் [] இன்னுமொரு கவிதை : மழலையில்லா மங்கை கருப்பை அதன் கனத்த தோலை கலகலக்க வைக்கிறது நிலவு மரத்தோடு பிரிவுகொண்டு எங்கும் போகமுடியாமல் ஏங்கி நிற்கிறது என் நிலமெல்லாம் ரேகையில்லா நிஜக்கரங்கள் சாலைகள் பின்னி முடிச்சாகின்றன நானே முடிச்சாகி நிற்கிறேன் நீ முகரும் ரோஜா நானே இந்த தேகம் இந்த தந்தம் யாவும் நானே மழலையைப்போல உருவியெடுக்கும் உன் குரல் எழும் சிலந்தியைப்போல கண்ணாடிகளை பின்னுகிறேன் நான் என் உருவத்துக்கு உண்மையாக ! உதிர்க்கிறேன் உதிரம் மட்டும் வேறேதுவுமில்லை ; கருஞ்சிவப்பு உதிரம் அது,உருகிக்குடி என் காடுகளை கடித்திடுக என் இறுதி ஊர்வலம் இந்த மலை,இவை எல்லாம் என் சவங்களின் வாயால் ஒளிர்கின்றன அவரின் பிறந்தநாள் இன்று 62 தூரிகையால் பின்னிய பிகாஸோ ! ஒக்ரோபர் 25, 2013 ஸ்பெயின் நாட்டின் தெருவில் பல ஓவியங்களை அந்த இளைஞன் கடை விரித்து இருந்த பொழுது ,”என்ன பைத்தியக்காரத்தனம் இது ?” என தான் ஊரே சிரித்தது.ஓவியம் என்பது இருப்பதை இருக்கிற மாதிரி வரைவது தான் ஓவியம் என்பதை உடைத்து பல்வேறு தளங்களில் ஓவியத்தை பயணம் போக வைத்தான் அந்த இளைஞன் . தனக்கு தோன்றியதை ஓவியமாக வடித்து தள்ளிய உண்மைக் கலைஞன் பிகாசோ இளம் வயதில் அப்பாவுடன் ஸ்பெயினில் காளைச்சண்டைகள் பார்க்க போனது அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அவருடைய ஓவியங்களில் தொடர்ந்து காளைச்சண்டைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்துவிட்டு இரவு மூன்று மணி வரை ஓவியங்கள் வரைகிற குணம் அவருக்கு இருந்தது. எப்படி தொன்னூறு வயதிலும் இத்தனை ஆர்வத்தோடு இயங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது ,”சிலர் இளவயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறேன் !” என்று அரசியல் கட்சிகளின் பெயர்கள் கூட தெரியாமலே இயங்கிக்கொண்டு இருந்தார் அவர். அவரின் ஓவியங்கள் 1936 க்கு முன்னர் அரசியல் சார்ந்து வரையபட்டதே இல்லை. பாசிஸ சக்திகள் குறிப்பாக ஹிட்லரின் படைகள் அமைதி தவழ்ந்த எண்ணற்ற பொதுமக்கள் இருந்த கார்னிகா நகரத்தை தாக்கி உயிர்களை குடித்து வெறியாட்டம் போட்ட பொழுது தான் பிகாசோ கோபப்பட்டார். அரசு ஒரு ஓவியம் வரையச்சொல்லி ஏற்கனவே கேட்டிருந்தது. எல்லா கோபத்தை,அவர்களின் வெறியாட்டத்தை ஓவியத்தில் அப்படியே கொண்டுவந்தார். பற்றியெரியும் நெருப்பும்,அதில் சிக்கிக்கொண்ட பெண்ணும் என்று அவர் அப்படியே காட்சிப்படுத்திய விதம் உலகம் முழுக்க போருக்கு எதிரான அடையாளமானது. [] அதிகம் பொருள் ஈட்டிய அவர் தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்கள் வரைந்தவர் அவர். அவர் நாட்டை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இருந்தார்;அவரை அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா போகச்சொன்ன பொழுது கம்பீரமாக மறுத்தார் . அங்கே இருந்தே தைரியமாக ஓவியங்கள் வரைந்தார் . அவர் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின் மார்கெட் போய்விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவர். ஸ்டாலின் இறந்த பொழுது அவரை இளைஞராக காண்பித்து ஓவியம் தீட்டி இருந்தார் இவர். கம்யூனிஸ்ட்கள் ஏகத்துக்கும் விமர்சித்தார்கள் இவரை. இவர் இயல்பாக ,”இறந்து போன ஒருவருக்கு வைக்கப்படும் மலர் வளையத்தில் என்ன மலர்கள் இருக்கின்றன என்று பார்ப்பது விந்தையாக இருக்கிறது எனக்கு !” என்றார் பிரான்ஸ் தேசத்தை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது இவர் அங்கேயே இருந்தாரில்லையா ? அப்பொழுது ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி இவரைப்பார்க்க வந்தார். கார்னிகாவை கண்களை விரித்து பார்த்துவிட்டு ,”இந்த ஓவியத்தை நீ தானே வரைந்தாய் ?” என்று கோபத்தோடு கேட்ட பொழுது பிகாஸோ சலனமே இல்லாமல் தீர்க்கமாக ,”இல்லை இதை நீங்கள் தான் வரைந்தீர்கள் !” என்றார். “எல்லாமும் கலையாகுமா ?” என்றொரு இளைஞன் கேட்ட பொழுது ஒரு மிதிவண்டியின் இருக்கை அதன் ஹாண்டில் பார் இரண்டையும் சேர்த்து ஒரு காளையின் தலையை உருவாக்கிவிட்டு “முடியும் !” என்றார் அவர். ஒரு நாளைக்கு பலமணிநேரம் நின்றுகொண்டே வரையும் குணமும் இருந்தது. சலிக்காதா என்று நண்பர் ஒருவர் கேட்ட பொழுது ,”ஒரு மசூதிக்குள் நுழையும் முசல்மான் போல நான் பக்தியோடு ஓவியம் வரைய வருகிறேன். இது என்னுடைய ஹாபி ; நான் மீண்டும் சலிப்படையும் பொழுது மீண்டும் வரைய ஆரம்பிக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டே. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் அவரே ; அதே சமயம் கொரியப்படுகொலைகள்,’போரும்,அமைதியும்’ என்று போரின் தீங்குகளுக்கு எதிராக ஓவியங்கள் தீட்டி கலை மூலம் அமைதிக்காக குரல் கொடுத்தார் அவர். [] மரபை மீறும் ஆவேசம் அவரிடம் இருந்ததுபெரும்பாலான நவீன ஓவியங்கள் குறிப்பாக அவருடைய ஓவியங்கள் புரியவில்லை எனக்கேட்ட பொழுது “உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில் கீதத்தை கூவுதல் மூலம் கசிய விடுகிற பொழுது அதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு ? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாக படிகிறதே பனித்துளி, அதை எந்த பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள் ?. வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.எல்லாவற்றிலும் மனதார கரைந்திடுங்கள் .எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் உலகின் காட்சிகளும்.அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும் “. கியூபிசம் எனும் ஓவிய பாணி அவரால் உருவானது .பைத்தியம் என்ற அதே உலகம் ,”நவீன ஓவியத்தின் தந்தை !”என அவரை ஏற்றுக்கொண்டது.பாப்லோ பிகாசோ எனும் மாபெரும் கலைஞரின் பிறந்தநாள் இன்று .   நன்றி : ஓவியர் ஜீவானந்தன் 63 லான்ஸ் எனும் வீழ்ந்த நாயகன் ! ஒக்ரோபர் 24, 2013 லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கின் சுயசரிதையான It’s not about the bike-My journey back to life  படித்து முடித்தேன். நூலின் கதையை சொல்லிவிட்டு இறுதியில் இன்றைய சூழலுக்கு போகலாம். இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்துள்ளார் லான்ஸ். அப்பாவின் முகமே அவருக்கு கேன்சர் வந்த பொழுது ஒரு பத்திரிக்கை தேடி கண்டறிந்து சொன்ன பொழுது தான் தெரியும் ; அதுவரை அம்மாவிடம் ஒரு வார்த்தை தன்னை பூமிக்கு தருவிப்பதில் ஒரு சிறு பங்காற்றிய ஜீவனைப்பற்றி இவரும் கேட்டதில்லை ; அம்மாவும் சொன்னதில்லை. அடிப்படையில் இளம் வயதில் ட்ரைத்லான் எனப்படும் ஓட்டம்,நீச்சல் ,சைக்கிள் ஓட்டுதல் ஆகிய மூன்றிலும் ஈடுபட்டு தேசிய சாம்பியன் ஆனார் இவர். பின் தன் கவனத்தை சைக்கிள் ஓட்டுதலில் திருப்பினார் -உலக சாம்பியன் ஆகவும் செய்தார் . இத்தாலி தேசத்தில் போட்டியில் கலந்து கொள்ள போன பொழுது போகிற பாதையெங்கும் கண்ணாடி துண்டுகளை போட்டு தடை ஏற்படுத்திய பின்னும் வென்று காண்பித்த பொழுது மனதார பாராட்டிய ரசிகர்கள் பற்றி நெகிழ்வோடு குறிக்கிறார். அவருக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவை ஏகத்துக்கும் நேசிக்கிறார். உலக சாம்பியன் ஆனதும் பத்திரிக்கையாளர்களை ஒதுக்கி விட்ட அம்மாவை கட்டிப்பிடித்து ஓயாமல் அழுதல் செய்துவிட்டு,ஒரு நாட்டின் அரசரை பார்க்கப்போகிற பொழுது அம்மாவுக்கு உள்ள அனுமதியில்லை என்றதும் அம்மாவை விட அரசர் முக்கியமில்லை என்று வெளியேறியது ஆச்சரியம் தரலாம். முக்கியமான போட்டிகளில் எதிராளியை ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சீண்டுவது இவரின் குணம். ஒரு போட்டியில் அப்படி சீண்டிவிட்டு முதலிடத்தை பிடித்தார் இவர். இவர் சீண்டிய நபர் இரண்டாவதாக வந்திருக்க வேண்டியது. அவர் என்ன செய்தார் தெரியுமா ? வண்டியை ப்ரேக் போட்டு நின்றுவிட்டார். “உன்னை மாதிரி நாகரிகம் தெரியாத ஒருவனுடன் மேடையேறி விருது வாங்க சும்மாவே இருக்கலாம் !” என்று சொல்லாமல் சொன்னார் அவர். அன்றோடு அப்படி சீண்டுவதை விட்டார் லான்ஸ் . ஒரு நாள் காலையில் எழுகிற பொழுது விரைப்பை ஆரஞ்சு பழம் அளவுக்கு வீங்கிப்போய் இருந்தது. டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தால் விரைசிறை   (testicular )கேன்சர் என்று தெரிந்தது. வயிறு ,நுரையீரல் என வேகமாக புற்றுநோய் பரவ ஆரம்பித்த பொழுது கூட வாழ்வதற்கு அறுபது சதம் வாய்ப்பு இருப்பதாக சொல்லிவந்த மருத்துவர்கள் ,பின் மூளைக்கும் அது பரவிய பொழுது வாய்ப்பு ரொம்பவே மட்டுபட்டதாக கூறி விட்டார்கள். “இருபது சதவிகிதம் வாய்ப்பு இருக்கா டாக்டர் ?” என்று கேட்ட பொழுது “அதுவுமில்லை ,ஆனால்,நீங்கள் நம்பினால் பிழைக்கலாம்!” என்று சொன்னார் மருத்துவர். இனிமேல் இயற்கையாக பிள்ளை பெற முடியாது என்று விந்துவை சேமித்து விட்டு ஒரு பெரும் போராட்டத்துக்கு தயாரானார் லான்ஸ். லாட்ரிஸ் எனும் நர்ஸ் இவரை பார்த்துக்கொண்டார். மூன்று அறுவை சிகிச்சை,உடம்பு முழுக்க தையல்,மண்டையை பிளந்து,உடலை கீறி ரணகளம் ஆகியிருந்தது. கூடவே உயிரை உலுக்கும் கீமோ வேறு மூன்று முறை பண்ணினார்கள். அங்கே பார்த்துக்கொண்ட இருபது வயது நர்ஸ் லாட்ரிஸ் புன்னகை மாறாமல் லான்சிடம் சொல்வாராம் ,”நான் இனிமேல் மீண்டும் உன்னை இங்கே பார்க்க கூடாது. நீ பிழைத்தபின்  சாம்பியனாக மீண்டும் ஆகவேண்டும். “ செய்திதாள்கள் லான்ஸ் முடிந்தார் என்று எழுதின ; சாகிற நிலையில் இருந்த மனிதனிடம் ஒப்பந்தத்தை முடித்துக்கொள் என்று கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டு போனார்கள். நீ எதற்கும் ஆகதவன் என்று அதற்கு அர்த்தம். முடி முழுக்க கொட்டியிருந்தது. மருத்துவரிடம் கண்ணீர் மல்க நின்ற பொழுது ,”நீ இறந்து விட்டாய் என்று எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள். இனிமேல் தான் எல்லாமே ; மனசை விடாதே !” என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் மருத்துவர் மேலும் அவரே ,” உன்னை உதவாதவன் என்று முடிவு செய்துவிட்டார்கள் ; லான்ஸ் ! அவர்கள் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்று அவர்களுக்கு நீ புரிய வைப்பாய் பார். !” என்று தலையை வருடி இருக்கிறார் மீண்டும் ரேஸிங் பக்கம் போகலாம் என்று ஆசைப்படுகிற பொழுது ,ஏற்கனவே மூன்று அறுவை சிகிச்சை,மூன்று கீமொக்கள் இனிமேல் முடியாமல் போனால் நம் தவறில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு இரண்டு போட்டிகளில் ஐரோப்பாவில் கலந்து கொண்டார் லான்ஸ். டாப் இருபதில் இரண்டிலும் வந்தார் ; போதும் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துவிட முடிவு செய்துவிட்டார். இதற்கு நடுவில் பூத்த காதலின் நாயகி கிக் ,”வீட்டில் சாப்பிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். எதாவது வேலைக்கு போங்க ; இல்லை பைக்கை எடுங்க !” என சொல்ல பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார் இவர். நடுவில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஆசை வேறு வந்தது ; அந்த la என்று குறிக்கப்பட்ட விந்துக்குப்பி வெளியே வந்தது. நன்றாக கிக் வேண்டிக்கொண்ட பின்னர் சோதனைக்குழாய் மூலம் கர்ப்பவதி ஆனார் அவர். “என்ன வேண்டிக்கொண்டாய் கிக் ?” என்று கேட்டார் லான்ஸ். “அந்த la லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்காக இல்லாமல் ,லாரி ஆன்டர்சன்என்று இருக்க கூடாது ! என்று வேண்டிக்கொண்டேன்.!’ என்றார் கிக் முதியவர்கள் எல்லாம் பைக்கில் கடந்து போனார்கள் ; கேன்சரில் இருந்து மீண்டதே பெரிய விஷயம் என்கிற எண்ணம் எல்லாமும் உந்தித்தள்ள முதலில் படாதபாடு பட்டிருக்கிறார். அப்புறம் படிப்படியாக ஜெயிக்க ஆரம்பித்ததும் பூகன் எனும் போட்டியாளரிடம் தோற்றுப்போன பொழுது ,”உன்னை வெகு விரைவில் ஜெயிப்பேன் !” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு டூர் டி பிரான்ஸ் போட்டிக்கு தயாரானார். அப்போட்டி l’tour என்கிற பத்திரிக்கை முழு பிரான்ஸ் தேசத்தையும் பைக்கில் வளம் வரவேண்டும் என்று நூற்றி பத்து வருடங்களுக்கு முன் அறிவித்தது. ஒரு லட்சம் ரசிகர்கள் மூன்று வாரம் நடந்த போட்டியை கொண்டாடி தள்ள அப்படியே தொடர்ந்தது. அதில் தான் இடுப்பு,உடம்பு எல்லாம் தேய கலந்து கொண்டு கலக்கி எடுத்து வென்றார் லான்ஸ். அப்படியே ஒலிம்பிக் நோக்கி போக பயிற்சி செய்தார். கழுத்து எலும்பு உடைந்தது ; படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு பாதி குணமானதும் போட்டிக்கு போய் வெண்கலம் வென்றார். “ஜெயிக்க வேண்டும் ,அல்லது ,போராடி செத்துப்போக வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் லான்ஸ் [] அடுத்தடுத்து ஏழு டூர் டி பிரான்ஸ் வென்றார். பின் ஒய்வு பெற்று livestrong அமைப்பின் மூலம் கேன்சர் நிதி திரட்டல் செய்தார். தன்னுடைய வாழ்வின் உன்னத நாள் என்று அவர் கேன்சர் வந்த நாளை சொல்கிறார். ஏன் தெரியுமா ? “இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்கிற சூழலில் நடந்த அற்புதமான போர் இது. நான் செத்துப்போய் இருக்கலாம். ஆனால்,போராடினேன் என்கிற திருப்தி அதில் தானே உண்டாகிறது,இன்று தப்பி இவ்வளவு தூரம் என்னால் வரமுடியும் என்று கேன்சர் தான் கற்றுத்தந்தது” என்றார் பைக்கின் மீது கை வைத்தபடியே. [] அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. ஏழு பட்டங்களும் பிடுங்கப்பட்டு அந்த வருடங்கள் வெறுமையாக விடப்பட்டன. முதலில் தவறு செய்யவில்லை என்று சொன்னாலும் பின்னர் கண்ணீரோடு ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார் லான்ஸ். பெரும் துயரத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கிற ஊக்கத்தை விளைத்த அதே லான்ஸ் குறுக்குவழிகள் எப்படி நம்மின் ஆளுமையை குறுக்கி விடும் என்கிற முக்கிய பாடத்தையும் தருகிறார். என்றாலும் “We have two options, medically and emotionally: give up, or Fight Like Hell.” என்கிற வகையில் பெரும்போராட்டம் ஒன்றை நிகழ்த்திய அவரின் வாழ்க்கையை கொண்டு உத்வேகமும் அடையலாம். குறுக்கு வழியை கத்தரித்து விட்டு ! 64 ரோசா பார்க்ஸ் ஒக்ரோபர் 24, 2013 மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபடவேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ். மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா பார்க்ஸ்.பிறப்பால் ஆப்ரோ அமெரிக்கர் அவர். [] கணவர் முடிதிருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். கறுப்பின மக்கள் பேருந்தில் தனி இருக்கைகளில் அமர வேண்டும் ; அதுவும் முன்புறம் இருந்து ஏறக்கூடாது. பின்புறம் இருந்தே ஏற வேண்டும். வெள்ளையின மக்கள் வந்தால் இடம் கொடுத்து எழுந்து நகர்ந்துவிட வேண்டும். டிக்கெட் எடுத்திருக்கிறேன் நான் என்று விதியெல்லாம் பேசக்கூடாது. ஒரு நாள் அப்படி பேருந்தில் உட்கார்ந்தவாறு போய்க்கொண்டு இருந்தார் ரோசா. வெள்ளையர் வந்ததால் பின்பக்கம் போய் உட்கார சொன்னார் ஓட்டுனர். முன்பக்கம் போனார் ரோசா. கொட்டும் மழையில் பேருந்தைவிட்டு அவரை இறக்கினார் அந்த ஓட்டுனர் [] அடுத்த முறை,அதே பேருந்து,அதே சூழல்,அதே ஓட்டுனர். இடம் மாற சொன்னார் ஓட்டுனர். “எழ மாட்டேன் நான் !” என்று அமர்ந்திருந்தார் ரோசா. மூன்று ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எழுந்தார்கள். அப்பொழுதும் ரோசா எழ மறுத்தார். முடியாது என இவர் மறுக்க மறுத்தால் கைது செய்வோம் என கண்டக்டர் பயமுறுத்த செய்யுங்கள் என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர்.கைது செய்யப்பட்டார். “எனக்கு நாற்பத்தி இரண்டு வயது தான் ; நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால்,எழுந்து,எழுந்து அடக்குமுறைக்கு பயந்து பயந்து களைப்படைந்து விட்டோம் நாங்கள்.அதனால் எழ மறுத்தேன்.”என்றார் ரோசா கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்.லூதர் கிங் பின் அணி திரண்டார்கள்;நடந்தே போனார்கள் ,டாக்சியில் போனார்கள் ஆனால் ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. நாற்பதாயிரம் மக்கள் அறப்போரில் பங்கு கொண்டார்கள். நடந்து போனார்கள் ; டாக்சி டிரைவர்கள் இலவசமாக தங்கள் வண்டிகளில் அழைத்துப்போனார்கள். ஆனால்,பேருந்தில் மட்டும் ஏறவில்லை இவர்கள். ரோசவுக்கு வேலை போனது ; பல இடங்களில் போராடிய மக்கள் தாக்கப்பட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ; உரிமைக்கான கனத்த மவுனம் மட்டுமே இருந்தது அங்கே. ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள் )அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர் எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறோம் !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள் 65 பேட்மேனின் தந்தை இவர் தான் ! ஒக்ரோபர் 24, 2013 பாப் கேனை தெரியாது அல்லவா உங்களுக்கு ?அவர்தான் பேட்மேன் எனும் சூப்பர் ஹீரோவின் தந்தை .நேஷனல் காமிக்ஸ் என்கிற காமிக்ஸ் கம்பெனியில் வேலை செய்துகொண்டு இருந்தபொழுது சூப்பர்மேன் என்கிற இன்னொரு சூப்பர் ஹீரோ அவர்கள் காமிக்ஸில் பின்னிக்கொண்டு இருந்தார், அதற்கு இணையாக இன்னொரு சூப்பர் ஹீரோ வேண்டும் என்று கேட்ட பொழுது உருவானவர் தான் பேட்மேன் . அப்பொழுது வந்த பேட் விஸ்பெர்ஸ் என்கிற படத்தில் ஒரு குற்றவாளி பிறரை கொல்லும் பொழுது கேப் அணிந்துகொண்டு கொல்வான் ; பின் வவ்வால் முத்திரையை விட்டு செல்வான். இதில் ஈர்கப்பட்டும்,கூடவே டாவின்சியின் படமொன்றில் மனிதனொருவன் வவ்வாலின் இறக்கைகள் கொண்டு பறப்பதை பார்த்தும் பேட்மேனை உருவாக்கினாலும் இப்படி இருக்கும் இரண்டு கொம்பு போன்ற அமைப்பு அவரின் நண்பர் பிங்கர் உருவாக்கியது;பேட்மேன் கண்கள் ஒளிருமாறு செய்ததும் அவரே. [] பேட்மேனை உருவாக்கிய பொழுது இவரின் வயது பதினெட்டு .எந்த சூப்பர்மேன் போன்ற சக்திகள் இல்லாமல் மூளை மற்றும் உடல் ஆற்றல் மூலம் உலகை ஈர்த்தார் பேட்மேன். அவர் காலத்திலேயே அவருக்கு பதிலாக பலர் பேட்மேன் உருவத்தை வரைந்தார்கள்;அவர்களை,”பேய்கள் !”என்று அழைத்தார் இவர். இப்பொழுது நோலனின் இயக்கத்தில் பேட்மேன் கூடவே ஜோக்கரும் மக்களின் மனங்கவர்ந்தது தனிக்கதை.அந்த பாப் கேனின் நினைவு தினம் இன்று 66 காமன்மேனை தந்த கார்டூனிஸ்ட் ஒக்ரோபர் 24, 2013 ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்டூனிஸ்ட் மேதையின் பிறந்தநாள் இன்று,இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன். முதலில் தி ஹிந்துவில் வரைந்த இவர் பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் அறுபதாண்டு காலமாக ‘யூ செட் இட்’ என்கிற தலைப்பில் காமன் மான் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம். [] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த காமன் மான் நினைவாக வெளியிடப்பட்டது. மால்குடி நாட்கள் தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்; எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள்.ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே !இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது . [] இவரின் கார்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின .தற்பொழுது தொன்னூறு வயதை தாண்டி விட்ட அவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து சீர்பெற்று அவ்வளவாக பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.அவரின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது பின்னுகிறார்கள்.இப்பொழுதும் அவர் உருவாக்கிய காமன் மான் சிலை நிற்கிறது மும்பையில் ;அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது.அதுதானே வெற்றி 67 குள்ளம் என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம் ! ஒக்ரோபர் 23, 2013 உடலின் குறைபாடுகளை மிகப்பெரிய சிக்கலாக கருதுகிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால்,எல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று உணரவேண்டியது மட்டும் தான் முக்கியம். நெப்போலியன் சிண்ட்ரோம் என்பார்கள் தான் குள்ளம் என்று எண்ணிக்கொண்டு இருப்பதை. நெப்போலியன்  ஐந்தடி ஆறங்குலம் அது அன்றைய பிரான்ஸ் நாட்டில் சராசரி உயரம் தான். பாவம் மனுசனுக்கு காவலாக நின்ற ஆட்கள் செம உயரம் ; அதனால் தான் குள்ளம் என்று நெப்போலியன் குமைந்தார். தன்னுடைய மனைவியின் வயதை உரக்க சொல்ல சொல்வார் அவர்,அப்படியாவது தான் பெரியவன் என்று ஊர் எண்ணாதா என்று ஏக்க பெருமூச்சு விட்டார் அவர். எக்கச்சக்க பேருக்கு இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் தான் [] தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட அண்ணா குள்ளம் தான். “புரட்சி குள்ளமாக இருக்காது !” என்று தன்னைத்தானே நையாண்டி செய்து கொண்ட அண்ணா இறந்த பொழுது ஒன்றரை கோடி பேர் கூடியிருந்தார்கள் [] சினிமாவில் உயரம் என்பது ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு தலை மேல் வைத்து நங்கென்று கொட்ட ஹாலிவுடில் அண்ணன் டாம் க்ரூஸ் இருக்கிறார். தமிழில் சூர்யாவும் அவ்வாறே. டாமின் மனைவி அவரைவிட ஒரு மூன்று அங்குலம் கூடுதல் உயரம் “காதல் வெற்றி இரண்டுக்கும் வெளி உயரத்துக்கும் சம்பந்தமில்லை.” என்று அழகாக சிரிக்கிறார் டாம் அரசியலில் ஒரு மூன்று பெயர்கள் எப்பொழுதும் நிலைப்பவை. அமெரிக்காவில் அன்பாயுதம் எந்த சொன்ன மார்டின் லூதர் கிங்,பிரெஞ்சு புரட்சிக்கும்,மனிதத்துக்கும் தொடர்ந்து எழுதிய வால்ட்டர்,உலகமெங்கும் அரசுகளை எதிர்க்கும் அசைத்துப்பார்க்கும் முறைகளின் முன்னோடியான உலக ராஜதந்திரி காந்தி இவர்களும் புற ஸ்கேலில் அளந்து பார்த்தால் குள்ளம் தான். உலகத்தின் உன்னத உயரங்களுக்கு கூப்பிட்டு போன இவர்களை கொஞ்சம் அப்படியே நோக்குங்க உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் அப்படின்னு கொண்டாடுற ஹிட்ச்காக்,ஸ்பீல்பெர்க் ரெண்டு பெரும் அஞ்சடி சொச்சம் தான் உயரம். எடுக்கிற படம் தானே பேச வேண்டும் ; எங்களின் உயரத்தை கொஞ்சம் தொட்டுப்பார் !” என்று கூலாக சிரிக்கின்றன அவர்களின் படங்கள்  [] டென்னிஸ் ஆட களத்துக்கு போன பொழுது எகிறி வரும் பந்துகளை லாவகமாக எதிராளியின் பக்கம் தள்ள உயரம் இல்லாமல் ஒரு ஜீவனை மெதுவாக வெளியே அனுப்பினார்கள். அவரை உங்களுக்கு எல்லாம் மற்றவர்களின் பந்துகளை எங்கெங்கோ அனுப்புகிற ஒருத்தராக தெரியும்-சச்சின் அவரின் நாமம் [] பீத்தொவேன் அப்படின்னு ஒரு பையன். நல்ல குள்ளம்,மொசார்ட் மாதிரி ஆகணும் அப்படின்னு சொல்லி பிரம்பால் அடிவாங்கிய கைகள் ; காது வேறு கேட்காது. எல்லா சோகத்தையும்,காதலையும் தேக்கிக்கொண்டு அவர் மீட்டிய செவன் சிம்பனி காலதுக்காமான கீதம். அவரின் அகக்காதுகள் மக்கள் எழுந்து நின்று பரவசமாக கைதட்டிய பொழுது குளிர்ந்தன ; அவரின் குறுகலான உருவம் கலைவானில் பெரிதாக உயர்ந்து நிற்கிறது இன்றுவரை இசையால் ! [] வானம் தொட்ட யூரி ககாரின் ஐந்தடி மூன்று அங்குலம்,மவுனத்தால் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சாப்ளின் ஐந்தடி ஐந்து அங்குலம் மட்டுமே. பொதுவாக கால்பந்து விளையாட்டு உயரமான ஆட்களுக்கு என்கிற நம்பிக்கையை தகர்த்து கால்பந்து களங்களை கலக்கி உலககோப்பை பெற்றுத்தந்த  மாரடோனாவும் அதே உயரம் தான். உள்ளத்தனையது உயர்வு என்று நம்ம தாத்தா சொன்னது மட்டும் மனசில இருந்தா போதும் [:)] வாழ்த்துகள் ! [] 68 secular ஆர்.எஸ்.எஸ்.,மதவாதி காந்தி-இப்படியும் சொல்வார்கள் சீக்கிரம் ! ஒக்ரோபர் 23, 2013 ஆனால் காந்தி தன் எழுத்தில் ஓரிடத்தில்கூட மதச்சார்பின்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியதில்லை என்று ஒரு சமயம் அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டார். அவரது முழு எழுத்துத் தொகுதிகளில் தேடிப் பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும் பிறகு வேறு விதமான பொருளை எனக்குத் தந்தது. ‘மதச்சார்பின்மை’ என்பது காந்தியின் விருப்பமாக நிச்சயமாக இருக்கமுடியாது. அவர் ஒரு ஹிந்து. அப்படித் தன்னைவெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்ன பிரச்னை? நானும்கூட ஒரு ஹிந்துதான். ஒரு கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ வேறு மதம் சாராதவராகவோ உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஹிந்துக்கள்தாம். இதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நம்வாழ்வில் நாம் மதத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த அடையாளம் நீக்க முடியாதது. மச்சம், ரேகை போன்றது.- http://www.writerpara.com/paper/?p=1774 இப்படி எழுதியிருக்கார் Pa Raghavan ஆனால்,உண்மை என்னமோ வேறு அனில் நவ்ரியா தி ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. http://www.hindu.com/2003/10/22/stories/2003102200891000.htm காந்தி தன் வாழ்நாள் முழுக்க மதவெறியை எதிர்த்தார்,ஹிந்துத்வாவுக்கு மிகப்பெரிய எதிரியாக அவர் இருந்ததாலே அவரை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இப்படியாக இருக்கிற பொழுது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு நைசாக காந்தி மதச்சார்பின்மை என்கிற வார்த்தையையே பயன்படுத்தவில்லை என்பது எவ்வளவு சாமர்த்தியமான அரசியல் அந்த தி ஹிந்து கட்டுரையின் தமிழாக்கம் இது : மதசார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாக சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா மற்றும் ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாக புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் ஆகியோர் அங்கத்தினராக அமைந்து மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்க கூடாது என்று வலியுறுத்தியது. மதசார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்த தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின் எழுத்துக்கள் மற்றும் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாக காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தை பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தை தான் ஆதரிப்பதாக குறிப்பிட்டார். மே 6, 1933இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார். மேலும் நவம்பர் 1933இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார். ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன்னால் உரையாற்றினார். “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் மதச்சார்பற்ற சட்டசபை பொண்ட அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் ) ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி காந்தி பேசுகிற பொழுது இப்படி சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொது பயன்பாட்டு அம்சங்களை பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையை பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார் அவர். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத அல்லாத நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பினமைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும். இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது. ”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நாணயம் ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்த புரவலும் ஆங்கில அரசு செய்தது போல தராது என்றும் சொன்னார். இந்த புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான் பாடுபட்டதாக காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்து தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில் எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவை கட்டமைக்க இயலும்.” என்றார் நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லா குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்த தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார். குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தை கொண்டு சோமநாதர் ஆலயத்தை புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதத்ச்சார்பற்ற அரசாங்கத்தை அக்கால சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்த புரிந்துணர்வு 1969க்கு பின்னர் கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன ; காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ ஒரு நன்கு கட்டமைப்பக்கட்ட ஆக்கப்பூர்வமாக செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம் மற்றும் வழிக்காட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்த பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “ காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்கு முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம்பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளை பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய டைரியில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். அழுத்திச்சொல்ல வேண்டியது என்னவென்றால் காந்தி மற்றும் நேரு இருவருமே மதச்சார்பின்மையை தன் பண்பாக கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும்,தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாக பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பிராந்திய தேசியத்தை காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. முரண்பாடுகள் ஒத்துப்போகும் கருத்துக்களை விட ஆழமாக அமைந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாக செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் . என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்தி காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவா சக்திகள் இதை முக்கியப்பணியாக செய்தன. இப்படி காந்தி,நேரு இருவரையும் பிரித்து காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாக காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்து கருத்தியல் ரீதியாக தாக்கமுடியும் என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்த காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதை பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூட தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் . சி பி ஐ பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்கால கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்தி கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் இந்த காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட பிரிவுகளை பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. (இக்கட்டுரை அனில் நவ்ரியாவின் Gandhi on secular law and state எனும் கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி  பெயர்க்கப்பட்டுள்ளது ) 69 தனிமை தந்த தனித்துவப்பரிசு-நோபல் கதை இது ! ஒக்ரோபர் 21, 2013 ஆல்பிரெட் நோபல் பிறந்த தினம் இன்று.இவரின் அப்பா இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர்.ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரை பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டார் ;அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை இலக்கியம் என தன் ஆர்வத்தை வைத்துக்கொண்டு இருந்தார். உடனே அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்து இருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்;அங்கே தான் நைட்ரோ க்ளிசரனை பார்த்தார்;அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது,எனினும் அது கொஞ்சம் அழுத்தம்,வெப்பம் மாற்றங்களில் கூடவெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது. அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர்.இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். அப்பொழுது ‘மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம் !’ என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். ஆல்பிரெட் நோபல் ஸ்டா க்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது. [] இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணை கலந்து டைனமைட்டை உருவாக்கினார்,அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள்,பாலங்கள் கட்ட பயன்பட்டது. ஆனால் அதையே போரில் பயன்படுத்தி பல உயிர்களை குடிக்க ஆரம்பித்தன ராணுவங்கள்,உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார் . தனக்கு உதவ பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம்.அவரின் பாவத்துக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் அவர். உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு. இலக்கியம்,இயற்பியல், வேதியியல் மருத்துவம் . உலக அமைதி பொருளாதாரம் ஆகியத்துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது 70 Money ஐ விட மனிதர்கள் முக்கியம் - Matrix நாயகன் ! கேயானு ரீவ்ஸ் மேட்ரிக்ஸ் நாயகன் என்று நமக்கு தெரியும். வலிகளால் நிரம்பியது அவரின் வாழ்க்கை என்று தெரியுமா நமக்கு ? அப்பா மூன்று வயதில் விட்டுவிட்டு வெளியேறினார். அம்மா அடிக்கடி புதுப்புது பொம்மைகளாக தந்தைகளை மாற்றிக்கொண்டே இருந்தார். பள்ளிக்காலத்தில் சிறந்த நண்பன் பீனிக்சை இருபத்தி ஒன்பது வயதில் இழந்தார். பள்ளியில் டிஸ்லெக்சியா கற்றலில் பின்தங்கிய மாணவராகவே வைத்திருந்தது ; பள்ளியைவிட்டு ஒழுக்கமில்லை என்று வெளியேற்றவும் செய்தார்கள். [] குறைப்பிரசவத்தில் பிறந்த மகள்,அடுத்த இரண்டே வருடத்தில் இறந்த காதலி எல்லாமும் சோக உருவாக ரீவ்ஸை மாற்றியது. சோக மெமேக்கள் அவரை கொண்டு வரவும் செய்தன. ரீவ்ஸ் ஆனாலும் அவை எவையும் தன்னை பாதிக்க விட்டதில்லை. பெரும் மாளிகைகளில் வாழாமல் பிளாட்டில் வாழ்கிறார். உடன் பணிபுரியும் எளிய கலைஞர்களின் கடனை அடைக்கிறார். அவ்வப்பொழுது அவர்களுக்கு கார் பரிசு,மதிய உணவு என்றும் அன்பு காட்டுகிறார். தன் ஒட்டு மொத்த எண்பது மில்லியன் டாலர் சம்பளத்தை ஸ்பெஷல் எபெக்டஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு குழுவுக்கு கொடுத்துவிட்டு ,”மேட்ரிக்ஸ் மாயம் அவர்களுடையது !” என்று சிரிக்கிறார் தன்னுடைய மகள் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது எல்லா படபிடிப்பையும் நிறுத்தி விட்டு அவளுடனே இருந்தார். குணமானதும் கோடிகள் அந்த மருத்துவமனைக்கு நிதியாக ரீவ்ஸ் தந்தார். “பணம் எனக்கு கடைசித் தேர்வு தான். மனிதர்கள் மீதான அன்பே முக்கியம் ” என்கிறார் ரீவ்ஸ் The Idealist முகநூல் பக்கத்தில் இருந்து ! 71 சம்திங் சம்திங் உங்களுக்காக !.. ஒக்ரோபர் 19, 2013 If wrinkles must be written upon our brows,let them not be written upon the heart.The spirit should not grow old.-James A.Garfield ரொம்ப வயசாயிடுச்சு போல இருக்கு என்ன பண்றது அப்படின்னு தெரியலை !; சீக்கிரமா போய்ட மாட்டோமா ? அப்படினு சலிப்பா இருக்கு ; வயசு மட்டும் தான் இருபது சொச்சம் ஆகுது ஆனா ரொம்ப நாள் வாழ்ந்த பீலிங் தான் வருது இப்படிப்பட்ட வசனம் சிலபேர் சத்தமாவும்,பலபேர் உள்ளுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு இருக்கோம். வயசாக வயசாக ஞாபக சக்தி குறையும் சரி . செயல்பாடும் குறையும் அப்படின்னு நீங்க நினைச்சா ஸாரி பாஸ் . அந்த எண்ணத்தை அப்படியே எங்கேயாச்சும் தூக்கி எறிஞ்சுட்டு வாங்க .நிறைய மேட்டர் இருக்கு பேச -இன்னைக்கு நாம படிக்கிற எண்ணற்ற சங்க இலக்கியங்கள் எல்லாம் கிடைச்ச கதை ரொம்ப சுவாரசியமானது . அந்த காலத்தில் பெரும்பாலான சங்க நூல்கள் கோயில்களில் அல்லது அதன் அர்ச்சகர்கள் வசம் தான் இருக்கும்.அதை கரையான் காலப்போக்கில் அரிச்சுக்கிடே வரும் ;பலபேருக்கு அதில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவே தெரியாது . கொஞ்சகாலம் புனிதம் புனிதம் அப்படின்னு சொல்லிக்கிட்டு வெச்சுக்கிட்டு இருந்து அப்படியே அதை அழிய விடுகிற கொடுமை ஏகத்துக்கும் நடந்தது,உத்தமதானபுரம் வேங்கட சாமிநாத ஐயர் என்கிற உ.வே.சா தன்னோட தள்ளாத வயதில் கோயில்களாக நடந்து போய் கண்ணை உருட்டி உருட்டி அரைகுறை வெளிச்சத்தில் எங்கெங்கோ ஓலை சுவடிகளை அம்மா ஆசையா குழந்தையை தடவுற மாதிரி தடவி எல்லாத்தையும் அச்சுக்கு கொண்டுவந்தார் .அவர் அதையெல்லாம் செய்த பொழுது நம் லோக்கல் ஸ்டைலில் கிழடாக தான் ஆகி இருந்தார் [] மணி என்றொரு நாடக நடிகர் ;கவுன்ட்டர் கொடுத்து கொடுத்து அவர் பெயருக்கு முன் அது ஒட்டிக்கொண்டு கவுன்ட்டர்மணி கவுண்டமணி ஆனார் சினிமாவில் நடிக்க வந்தப்ப வயசு நாற்பதை தொட்டுடிச்சு .அவர் தொட்ட சிகரங்களுக்கு வயசு என்ன மேட்டரவா இருந்துச்சு ?ஹாலிவுடில் கெத்தான ரோல்களில் நடிகர்கள் கலக்குவதே ஐம்பதுக்கு பின்னாடி தான் .அட அதை விடுங்க உலகத்திலேயே ஆழமான மரியானா ட்ரெஞ்ச்போய் ஷட்டிங் பண்ணினப்ப ஜேம்ஸ் கேமரூனுக்கு வயசு அறுபதை நெருங்கிட்டு இருந்துச்சு . [] சச்சின் டான் பிராட்மன் கூட பேசிக்கிட்டு இருந்தார் .மனுசர் சாதாரண ஆளில்லை அவர் பண்ணின ஒரு சாதனை என்னைக்கும் நிலைச்சு நிக்கும் டெஸ்ட்டில் அவரோட சராசரி 99.94 ஆவது ஒவ்வொரு டெஸ்ட்டிலும் நூறு ரன்கள் கிட்டே அடிச்சு இருக்கார் சார்.”இப்ப நீங்க ஆடி இருந்தா உங்க சராசரி எவ்வளவு இருக்கும் ?”அப்படின்னு சச்சின் கேட்க ப்ரட்மான் ,”எழுபது !”அப்படிங்கறார் .அது ஏன் எழுபது அப்படின்னு சச்சின் கேட்க அந்த சிங்கம் சொல்லுச்சாம் ,”90 வயசில் ஆடி எழுபது ரன்கள் ஒரு போட்டிக்கு அடிக்கிறது ஒண்ணும் மட்டமில்லையே !”அப்படின்னு [] நெறைய பேரு கே எப் சி யில் சுவைத்து சாப்பிட்டு இருப்பீர்கள் .அதை அதன் ஓனர் சாண்டர்ஸ் ஆரம்பிக்கிறப அவருக்கு வயசு நம்மூரில் ஓய்வு பெறும் வயசு.மாடி மாடியா ஏறி இறங்கி அந்த பொருளை விற்க அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் கேட்டா அவர் செய்த சாதனை சாதாரணம் அப்படின்னு தோணும் .காந்தி இந்திய அரசியலுக்குள் கலக்கி எடுக்க ஆரம்பிச்சப்ப அவருக்கு வயசு ஐம்பது பிளஸ் .பெரியார் தன் இறுதி காலமான 96 வயசில் கிட்டததட்ட இருநூறு மேடைகளில் பேசி இருக்கார் ;எண்ணற்ற போரட்டங்களை நடத்தி இருக்கார் அப்படின்னு கேட்கும் பொழுது மலைச்சுப்போய்டாதீங்க . [] நீங்க செய்வதை அனுபவிச்சு ,அந்த தருணத்தில் மட்டும் வாழ்தலை கொண்டு செயல்பட்டால் போதும் .இதை தான் ஜென் “லிவிங் அட் தி மொமென்ட் “அப்டிங்குது அப்புறம் என்ன என்ன சம்திங் சம்திங் தான் மச்சி …அதான் இளசா ஆய்டீங்க இல்ல ? 72 சரித்திரமான சந்திரசேகர் ! ஒக்ரோபர் 19, 2013 சுப்ரமண்யன் சந்திரசேகர் நோபல் தமிழர் ;நட்சத்திர நாயகன் அவர்களின் பிறந்தநாள் இன்று சந்திரசேகர் அக்டோபர் 19,1910 அன்று பிரிக்கப்படாத இந்தியாவின் பகுதியான லாகூரில் பிறந்தார்.அப்பா பெயர் சுப்ரமண்யன் அம்மா பெயர் சீதாலக்ஷ்மி.அப்பா லாகூரில் ரயில்வேயில் ஆடிட்டராக இருந்ததால் அங்கே பிறந்தார் நம் நாயகன்.ஆனால் தமிழகத்து பிள்ளை இவர் ;நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் இவரின் மாமா, சின்ன வயதில் ரொம்பவும் அம்மா செல்லம்.அம்மா மெத்தப்படித்தவர் அந்த வயதிலேயே உலக புகழ்பெற்ற நாடகாசிரியர் இப்செனின் பொம்மையின் வீடு நூலை தமிழில் மொழிபெயர்த்தவர்.அப்பா நன்றாக வயலின் வாசிப்பார்;கூடவே காலையில் கொஞ்சம் பாடமும் நடத்துவார்.பின் அம்மாவின் அன்பான தமிழில் பாடம் நடத்தல் ;அவரின் தூண்டுதலே அறிவியல் மற்றும் அறிவு மீதான ஆர்வத்துக்கு காரணம் என்பார் சந்திரசேகர். வீட்டில் இவருக்கு முன்னேயே இரண்டு பெண் குழந்தைகள் ஆண் பிள்ளை என்பதால் இவருக்கு செல்லம் அதிகம்.த ன் பொம்மைகளை உடைத்து விட்டு தன் அக்காக்களின் பொம்மைகளை பிடுங்கிக்கொள்ளும் விஷமக்கார சிறுவன் தான் சந்திரசேகர். லாகூரில் இருந்த காலத்தில் நீண்ட நெடிய அனார்கலி மார்க்கெட்டில் நடப்பதும் ,தோட்டங்களில் விளையாடுவதும் சந்திராவுக்கு பிடித்த பொழுதுபோக்கு . வீட்டிலேயே ஆரம்பக்கல்வியை படித்துவிட்டு பின் பதினோரு வயதில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தார் .ரொம்பவே படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் ஒரு வருடம் துவங்குவதற்கு முன்னமே பாடனகளை படித்து விடுவார். இயற்கணிதம் வடிவியல் கால்குலஸ் என எல்லாவற்றையும் முன்னமே முழுவதும் படித்து விடுகிற அளவுக்கு ஆர்வம் உண்டு. சென்னை மாநில கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார்.அவர் படித்த காலத்தின் குறிப்பிடத்தகுந்த விஷயம் அப்பொழுது தான் குவாண்டம் இயற்பியல் என்கிற புதிய துறை நோக்கி இயற்பியல் பயணிக்க ஆரம்பித்து இருந்தது. அப்பொழுது நோபல் பரிசு பெற்ற சோமர்பீல்ட் அவர்களை சந்தித்தது இவர் வாழ்வில் திருப்புமுனை . அவர் குவாண்டம் இயற்பியலை பற்றி விளக்கி சொன்னதும் சந்திரசேகரின் கண்கள் விரிந்தன மாநிலகல்லூரியில் முதல் மாணவராக தேறிய இவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல சிறப்பு ஸ்காலர்ஷிப் இவருக்காகவே ஏற்படுத்தப்பட்டு கேம்ப்ரிட்ஜ் போனார். அங்கே நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போரை சந்தித்தார். பல்வேறு ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டார் . முனைவர் பட்டமும் பெற்றார்.இந்தியாவில் இருந்து கேம்ப்ரிட்ஜ் நோக்கி கப்பலில் போகும் பொழுது தான் புகழ்பெற்ற சந்திரசேகர் எல்லையை வரையறுத்தார் நட்சத்திரங்களின் வாழ்நாளை பற்றி ஆய்வு செய்து ஒரு நீண்ட அறிக்கையை உருவாக்கினார். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்தால் அப்படியே வெள்ளை குட்டையர் எனப்படுகிற வைட் DWARF ஆக மாறும் என்கிற அன்றைய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி சூரியனின் நிறையை போல 1 .4 மடங்கு அதிக நிறை கொண்ட நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்ததும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் இன்னபிற வான்வெளியில் உள்ளவற்றை தன்னுள் இழுத்துக்கொள்ள முயற்சிக்கும் என அறிவித்தார். இதை சந்திரசேகர் எல்லை என அவர் அறிவித்தார் மேற்கூறிய ஆய்வுகளை உலகப்புகழ் பெற்ற வானியல் இயற்பியலாளர் மற்றும் இவரின் மனம் கவர்ந்த எடிங்க்டன் முழுக்க அடிப்படை அற்றது என ஏற்க மறுத்துவிட்டார். தொடர்ந்து அவரின் கட்டுரையை சில அறிவியல் இதழ்களும் நிராகரித்தன. மனம் வருந்தி கேம்ப்ரிட்ஜில் பணிபுரியலாம் என்கிற எண்ணத்தை கைவிட்டு அமெரிக்க நோக்கி சென்றார் . பின் சிகாகோ பல்கலைகழகத்தில் இணைப்பேராசிரியர் ஆனார். தன் மரணம் வரையில் அங்கேயே பேராசிரியராக இருந்தார் தலைசிறந்த ஆசிரியர் என பெயர்பெற்றார் சந்திரசேகர். தன்னை மாணவர்கள் சார் என அழைக்க தடை விதித்தார். வகுப்பில் அனைவரும் தன்னை சந்திரா என அழைக்கலாம் என அறிவித்தார்.”மாணவர்கள் நம் அடிமைகள் கிடையாது ;அவர்கள் நண்பர்கள் நமக்கு” என்பது அவர்கொள்கை . 1980 இல் நோபல் பரிசு பெற்றதாக அறிவிக்க பட்ட பொழுது ஜேம்ஸ் க்ரோனின் இவரின் வகுப்பு இருக்கிறது கவனித்து விட்டு வந்து பதில் சொல்கிறேன் என சொல்கிற அளவுக்கு சிறப்பாக பாடம் எடுப்பார் இவர் [] எர்கேஸ் நிலையத்தில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் இருந்த பல்கலைகழகத்தில் வெறும் இரண்டே மாணவர்களுக்கு கொட்டுகிற பணியில் பாடம் நடத்த போய் விட்டு வருவார் .இரண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த இவ்வளவு தூரம் வரவேண்டுமா என பிறர் கேட்ட பொழுது “இல்லை அந்த இரண்டு மாணவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்.”என்பார்.அவரின் நம்பிக்கையை காப்பாற்றிஅவர்கள் இருவரும் அவருக்கு முன்னமே 1957 இல் நோபல் பரிசு பெற்றனர் .அவர்களின் பெயர் லீ மற்றும் யாங். எடிங்க்டன் எதை தவறு என நிராகரித்தாரோ அதை உலகம் நாற்பது வருடங்கள் கழித்து ஏற்றுக்கொண்டது,அதற்கான நோபல் பரிசு 1983 இல் இவருக்கு அறிவிக்கப்பட்டது. இன்னமும் குறிப்பிட்டு சொல்வதென்றால் வானிய இயற்பியலின் மையப்புள்ளியாக மாறியது அவரின் சந்திரசேகர் எல்லை. ஒரே ஒரு துறையில் தன் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு தளங்களில் ஆய்வுகள் செய்தவர் .அதோடு நில்லாமல் அவற்றை அற்புதமான நூல்களாகவும் வடித்தார்.தன் எண்பத்தி ஐந்தாவது வயதில் மரணமடைகிற அன்று கூட பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் அவர் ,அது தான் சந்திரசேகர் “என்னைப்பற்றி சமகால மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்கு கவலை இல்லை ! வருங்கால சந்ததிகள் என்னுடைய செயல்களுக்குரிய இடத்தை சரியாக தரும்.இப்பொழுது நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்குள் இருக்கும் அறிவுக்கான ஒளியை நல்லது,தீயது,புகழ் என எதிலும் மனதை பறிகொடுக்காமல் காத்தலில் தான் உள்ளது !”என அவர் குறிக்கும் வரிகள் எளிமையாக அவர் வாழ்க்கையை சொல்லிவிடுகிறது 73 இவர் தான் எடிசன் ! ஒக்ரோபர் 18, 2013 Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up. எடிசனின் நினைவு நாள் இன்று . உண்மையில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார். உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் . ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். அதில் தில்லுமுல்லு செய்ய முடியாது. அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை. இனிமேல் மக்களுக்கு உதவும் பொருட்களையே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார் அவர் ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார்.குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார்.பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை , “நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !” என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் . அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,”நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !” என்றார் . தந்தி அனுப்புவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்த எடிசன் தன் முதல் இரு பிள்ளைகளுக்கு டாட் மற்றும் டாஷ் என்று தந்தியின் குறிச்சொற்களால் பெயரிட்டார். ஹலோ என்று போனில் அழைக்கும் முறையைக்கொண்டு வந்ததும் அவரே. [] காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் , பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் . அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,”எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !” மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,”எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !” 74 புரியாம புரிஞ்சுக்கலாம் ! ஒக்ரோபர் 18, 2013 BASIC REASON FOR MOST OF THE MISUNDERSTANDINGS AND COMMUNICATION GAP. we listen half,understand quarter,think zero,react double and remember forever.-Oliver Goldsmith நீ கேட்க போறீயா இல்லையா ? உனக்கு என்னை கடுப்பாக்குறதே வேலையா போச்சு ! என்னை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? இப்படிப்பட்ட வாக்கியங்கள் நம்ம எல்லார் வாழ்க்கையிலும் நம்மாலோ நம்மை சுற்றி இருப்பவர்கள் வாயிலிருந்தோ வருது ;கவனிச்சு பாருங்க .சிக்கல் ஒழுங்காக காத்து கொடுத்து கேட்காத தருணங்களில் தான் ஆரம்பிக்குது.எல்லாத்தையும் ஒரு கண்ணாடி போட்டுக்கொண்டு அணுகுகிற மனோபாவம் ஒரு சமூகத்துக்கே அடையாளம் ஆகுற ஆபத்தான போக்கை பார்க்கலாம் நீங்க. டி.வி.டாக் ஷோக்களில் நீங்க இயல்பா பார்த்தாலே இந்த மனப்பான்மை தெரியும் ;”நீ என்ன வேணா சொல்லு ,நான் சொல்றதில் தான் நிற்பேன்” என்கிற ஸ்டைல் தொனிக்கிறதை ஈஸியாவே பார்க்கலாம். ஏன் இந்த சிக்கல் ? மனுசங்களை நேசிக்கிற குணம் குறைஞ்சு இருக்கிறது இதற்கான முக்கியமான காரணம் ; நாம நேசிச்சு கவனிக்க ஆரம்பிச்சாலே பாதி சிக்கல்கள் அப்படியே படுத்துடும். அவங்க பக்கம் தப்பு இருப்பதாக பட்டாலும் அவர் பக்க நியாயத்தை காது கொடுத்து கேட்டுட்டு செயல்பட்டால் போதும். யாருமே முழுசா சரியுமில்லை ; யாருமே முழுசா தவறாகவும் இருக்க முடியாது. மேஜை மேஜை தான் அப்படி என்கிற ஒரு புகழ்பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் பீட்டர் பிஷெல்லின் கதை உண்டு-ஒரு வயசான பெரியவர் தனிமையில் வாழ்றார். ஊர் முழுக்க தன இறுதி காலத்தில் சுற்றுவார் ; அலுத்துப்போன வாழ்க்கையாக அவர் ட்ராக் போறப்ப ஒரு நாள் நல்லா வானம் இருண்டு இருக்குறப மக்கள் ஒண்ணா நின்னுக்கிட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கிறதை பார்க்கிறார் . யாருமே அவரை கண்டுக்கலை அப்படினாலும் அவர் யாரை பார்த்தாலும் சிரிக்கிறார் ; கனிவை கண்களில் தேக்கிட்டு திரியுறார் . மனுஷன் மனுசங்க படிப்படியா சிரிக்கிறதை,அற்புதமானவங்களா மாறுறதா உணர்வார் . அவர் வீட்டில் இருக்கும் மேஜை கட்டில் மட்டும் மாறாமல் இருப்பதை பார்த்து வருத்தப்படுவார். பொறுத்து,பொறுத்து பார்த்துட்டு ஒரு நாள் மனுஷன் என்ன பண்ணினார்னா மேஜைக்கு கட்டில் ,கட்டிலுக்கு மேஜைன்னு பேர் மாத்தி வெச்சு கூப்பிட்டு சந்தோசபட்டுகிடுவார் . ஊரே மேசை அப்படின்னு கூப்பிடும் பொழுது வாய்விட்டு சிரிப்பார் . அவர் உலகமே அழகானதை சொல்லாமல் சொல்லி அந்த கதை முடியும் இந்த கதையில் வரும் அந்த தாத்தா மாதிரி நாமும் உலகம் ஏன் நம்மகிட்ட கோவமா நடந்துக்குது,கவனிக்க மாட்டேங்குது என கவலை படறோம்,நம்மை நாம மாத்திக்க மாட்டேங்குறோம். கொஞ்சம் மத்தவங்க காது கொடுத்து கேட்டா என்ன அப்படின்னு நெனைக்கிற நாம அதை பெரும்பாலும் செய்யுறதே இல்லை. அல்லது கேட்கிற மாதிரி நடிக்கிறோம். அதற்கு அடுத்து அதை புரிஞ்சுக்கிறதுல நாம பண்ற காமெடி அது இன்னமும் பெரிய சோகம். வீட்டில என்ன சமையல் செய்யணும்னு தெளிவா சொல்லாம ராத்திரி வேறேதோ புரிஞ்சுக்கிட்டு அவங்க செஞ்சு இருந்தா தட்டு பல வீட்டில் பறக்குது. தெளிவாக கனிவாக சொல்கிற விஷயங்கள் ஆழமாக பதிகிறது . கொஞ்சம் வார்த்தைகளில் கனிவை தேக்கிட்டு,இல்லை நம்பிக்கை தேக்கிட்டு பேசினாலே சிக்கல்கள் மட்டுப்படும். இது ஒரு நாள் மேஜிக் இல்லை ;ஆனால் ,நடக்கக்கூடிய ஒரு மாற்றம் மன்னித்தல் என்பது அடுத்த குணம் ,ஒருத்தர் சொன்ன வார்த்தைகளை அப்படியே மனசில தேக்கிட்டு உர்ன்னு இருந்துட்டு என்னத்த சாதிக்கபோறோம் சொல்லுங்க ? மத்தவங்க செய்கிற அல்லது தெரியாம செய்கிற என தெரிஞ்ச தவறுங்களை மன்னிக்கிற மனசு உங்களுக்கு வர ஆரம்பிசுட்டாலே நீங்க சந்தோசமா வாழ ஆரம்பிகிறீங்க அப்படின்னு அர்த்தம். ஜோன் ஆஃப் ஆர்க் அப்படின்னு ஒரு பதினெட்டு வயசு குட்டிப்பொண்ணு பிரான்சில் இருந்துச்சு ,இங்கிலாந்துக்கு எதிரா தன் நாட்டை போராடி ஜெயிக்க வெச்சுது. பொண்ணு மதத்துக்கு எதிரா நடந்தான்னு இங்கிலாந்து ஆளுங்க கிட்ட பணம் வாங்கிக்கிட்டு அவங்க ஆளுங்களே தீ வெச்சு கொளுத்திட்டாங்க.அந்த பொண்ணு தீயில் கறுகும் பொழுது பக்கத்துல நின்ன தீ வெச்ச ஆளை ,”தள்ளி நில்லுங்க நெருப்பு சுட்டுடப்போகுது !”அப்படின்னு கருணையோட சொல்லுச்சாம் .சத்தியமா சொல்றேன் ,உங்களுக்குள்ளேயும் அப்படி ஒரு ஜோன் இருக்கா ,அவளை ஒரு இருபது சதவிகிதம் தட்டி எழுப்பிட்டா வாழ்க்கையே ஆனந்தம் தான் . 75 குனிவது நிமிரவே என் தோழனே ! ஒக்ரோபர் 17, 2013 நிறவெறி எவ்வளவு கொடுமையானது ?பெற்ற வெற்றியை கொண்டாட ஆளில்லாமல் மனிதனாக நடத்தபடாமல் போவது எவ்வளவு வலியானது என உலகிற்கு ஒலிம்பிக்கில் இரண்டு வீரர்கள் உணர்த்திய தினம் இன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை இருநூறு மீட்டர் தூரத்தில் பதக்கம் பெற்ற ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் இருவரும் முறையே தங்கள் வலது மற்றும் இடது கையில் கருப்பு உறை அணிந்து அமெரிக்க தேசிய கீதம் பாடும் பொழுது தலை குனிந்து நின்றார்கள் [] .”எங்கள் தேசத்தில் நாங்கள் வென்றால் அமெரிக்கர்கள்;தோற்றால் நீக்ரோக்கள் என திட்டுவார்கள்…வலது கையில் இருக்கும் உறை கறுப்பின ஆற்றலையும் இடது கையில் இருந்த உறை கறுப்பின விடுதலையையும் வலியுறுத்தியது என்றார்கள் ;மேலும் கறுப்பின மக்களின் வறுமையை குறிக்க காலில் ஷு இல்லாமல் நின்றார்கள்.இதை ஒலிம்பிக்கின் அவமானம் என சொல்லி அவர்களை அந்த கிராமத்தை விட்டே ஒலிம்பிக் கமிட்டி வெளியேற்றியது மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள் என்றார்கள் .அப்படித்தான் ஆனது,முப்பது வருடங்கள் கழித்து கறுப்பின மக்களின் உரிமைக்கு போராடியதற்காக கவுரவிக்க பட்டார்கள்.இன்றும் அவர்களின் சிலை கம்பீரமாக சுதந்திரத்தின் வேட்கையை பறைசாற்றி நிற்கிறது இன்றும். அப்படி கரம் உயர்த்தி நின்ற தினம் இன்று 76 பிரிந்தது பெருவங்கம் ! ஒக்ரோபர் 16, 2013 வங்காளப்பிரிவினை நடந்த தினம் இன்று,இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய காயங்களை,வடுக்களை உண்டு செய்யப்போகிற ஒரு சூழ்ச்சிக்கான விதை ஆழமாக ஊன்றப்பட்ட நிகழ்வு தான் வங்கப்பிரிவினை. இந்தியாவை நெடுங்காலம் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டாலும் சகிப்புத்தன்மை,மற்றும் சகோதரத்துவம் மதங்களை கடந்து மக்களிடம் இருக்கத்தான் செய்தது.1857 இல் இந்துக்களும்,முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடியது ஆங்கிலேயர் கண்ணை உறுத்தியது. உண்மையில் கலாசார ரீதியான பிரிவினை தான் நாட்டில் உண்டே தவிர மதரீதியான பிரிவினை மக்கள் மனதில் பெரும்பாலும் பரவியதில்லை. அப்பொழுது இஸ்லாமியர்கள் பல பேரை தூக்கில் போட்ட அதே அரசு,காங்கிரஸ் என்கிற கட்சி உருவானதும் முஸ்லிம்களை அரவணைப்பது போல காட்டிக்கொண்டது. வங்கத்தில் விடுதலைக்கனல் எப்பொழுதும் பெருக்கேடுத்துக்கொண்டே இருக்கும் ;அதை அணைக்க இந்து முஸ்லிம் வேற்றுமையை உண்டு செய்ய எண்ணிய அரசு நிர்வாக சவுகரியத்துக்காக வங்கத்தை பிரிக்கிறேன் என்று இந்துக்கள் அதிகமாக இருப்பதை ஒரு பகுதியாகவும்,முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதை இன்னொரு பகுதியாகவும் பிரித்தது. வங்கமே கொதித்து எழுந்தது ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் கைகோர்த்து தெருக்களில் நடந்தார்கள்,வந்தே மாதரம் கங்கையில் ஒரே சமயத்தில் இரு மதத்தவரும் நீராடி பாடினார்கள் -அரசு அதைபாடுவதற்கு தடை விதித்தது.சுதேசி இயக்கம் உருவெடுத்து ஆங்கிலேய ஆடை விற்பனை எண்பது சதவிகிதம் வரை வீழ்ந்தது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இரு மதத்தவரும் ராக்கி கட்டிக்கொள்வதும் நடந்தது இந்த பிரிவினையின் முதாலமாண்டில் தான் முதன்முதலாக மூவர்ணக்கொடி பறக்க விடப்பட்டது. தாகூர் அமர் சோனா பங்களா (என் பொன் வங்கமே !)என்கிற கவிதையும்(இதுவே பிற்காலத்தில் வங்கதேசத்தின் தேசிய கீதம் ஆனது ),கோரா என்கிற அற்புத நூலும் எழுதினார்.சுயமாக கல்வி கற்க வேண்டும் என தன் சொத்தையே பலபேர் தாரை வார்த்து கல்கத்தா பல்கலைகழகம் உருவானது-அங்கே தான் இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் உருவானார்கள்.சி.வி.ராமனும் அங்கே தான் தன்னுடைய சிறந்த போன்ற ஆய்வுகளை செய்தார். [] யுகந்தார் முதலிய அமைப்புகள் திலகரின் தீவிரவாதப்போக்கில் ஆயுதம் ஏந்தி போராடின. ஹிந்து கடவுள்களான காளியை முன்னிலைப்படுத்தியது இஸ்லாமியர்களை புண்படுத்தியது. இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதிகள் வளராமல் தடுக்கும் நோக்கத்திலேயே ஹிந்துக்கள் போராடுவதாக சில இஸ்லாமிய தலைவர்கள் நினைத்தார்கள். பிரிவினைக்கு ஆதரவாக அதற்கு பின் எழுந்த முஸ்லீம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. எண்ணற்ற இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பிரிவினையை எதிர்த்தார்கள் என்பது உண்மை. சில சீர்திருத்தவாதிகள் பிரிவினைக்கு எதிராக இயக்கத்தில் பங்கு பெறாமல் சுதேசி இயக்கத்தில் மட்டும் பங்கு பெறுமாறு கேட்டுக்கொண்டார்கள். இந்தப்பிரிவினை மனதளவில் ஒரு மாற்றத்தை உண்டு செய்வதில் வென்றது. மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் தனித்தொகுதிகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கியது முக்கிய திருப்புமுனையாக போனது. அதன் கனிகளை ஜின்னா பாகிஸ்தான் என்கிற பெயரில் ஒரே ஒரு ஸ்டெனோ மற்றும் டைப் ரைட்டர் கொண்டு பெற்று வருங்காலத்தில் சுவைத்தார். இறுதியில் நாடே குருதி தோய இந்திய பாகிஸ்தானாக பிரிந்தது ! 77 அக்பர் எனும் அற்புதர் ! ஒக்ரோபர் 14, 2013 இந்தியா என்கிற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை அக்பரின் ஆட்சியில் இருந்தே நாம் பெற்றுக்கொள்ள முடியும். அக்பரின் அப்பா ஹுமாயுன் மன்னித்தும்,கேளிக்கைகளில் ஈடுபட்டும் தன்னுடைய ஆட்சியை இழந்தார். ஷெர்ஷாவிடம் இழந்த ஆட்சியை மீண்டும் மீட்க முயற்சித்த காலத்தில் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தார் அவர். அப்பொழுது பாலைவனத்தில் வாடிக்கொண்டு இருந்த பொழுது அவரின் பதினைந்து வயது மனைவி ஹமீதா ,”மாதுளம் பழம் வேண்டும் !” என்று கேட்டார். எப்படி கிடைக்கும் இங்கே என்று திகைத்துக்கொண்டு இருந்தார் அவர். ஒரு வியாபாரி ஒட்டகத்தில் அந்த பக்கம் வந்தார் ; அவரின் கூடையில் அவ்வளவு மாதுளம் பழங்கள். “நீ கேட்டது கிடைக்கிறதே .வயிற்றில் இருக்கும் குழந்தை யாரோ ?” என்று ஆச்சரியம் போங்க கேட்டார் ஹுமாயுன். ஹமீதாவின் வயிற்றில் இருந்த பிள்ளை அக்பர் அக்பர் கல்வியறிவை பாடநூல்களில் இருந்து பெற்றதில்லை. அவருக்கு வாசிக்க தெரியாது,என்றாலும்,கற்ற அறிஞர்களிடம் இருந்து ஏகத்துக்கும் கற்றுக்கொண்டார். நிறைய வாதங்களும் செய்பவராக அவர் இருந்தார் ; எக்கச்சக்க நூல்கள் அவரின் நூலகங்களில் இருந்தன.  நூலகப்படிகளில் தவறி ஹுமாயுன் இறந்ததும் பதினான்கு வயதில் அரியணை ஏற வேண்டிய கட்டாயம் அக்பருக்கு வந்தது. பைராம் கானின் பாதுகாப்பில் வளர்ந்த அக்பர் பானிபட் போரில் ஆதில்ஷாவின் தளபதி ஹேமு கைப்பற்றி இருந்த டெல்லியை மீட்டார். பைரம் கானை,அவரை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த வளர்ப்பு அன்னையின் தொல்லையை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்த பின் அக்பர் செய்தது நல்லாட்சி. அக்பரின் காலத்தில் மத நல்லிணக்கம் உச்சத்தில் இருந்தது. மற்ற மதத்தினர் மீதான ஜிசியா வரி நீக்கப்பட்டது. மதுரா போயிருந்த பொழுது ஹிந்துக்கள் மீது வரிவிதிப்பு இருக்கிறது என்று அறிந்து அதை உடனே நீக்கினார் பொது சிவில் சட்டம் வேறு அமலுக்கு வந்தது. [] அதுவரை போரால் வெல்லலாம் என்று மட்டுமே கருதப்பட்ட ராஜப்புத்திரர்களை அன்பால் வென்றார் அக்பர். திருமண உறவுகள் கொண்டார் ; எந்த அளவுக்கு இது போனது என்றால் அரண்மனையில் தீபாவளி,ஹோலி முதலிய பண்டிகைகள் கொண்டாடுவது. அக்பர் ஹிந்து நோன்புகள் இருப்பது ; கூடவே சைவமாகிற அளவுக்கு. சீக்கியர்கள் தங்களுக்கான புனித தலம் கட்டிக்கொள்ள அக்பர் கொடுத்த நிலத்தின் மீது எழுந்தது தான் சீக்கிய பொற்கோயில். சித்தூரை வென்ற பொழுது அங்கே வீரம் காட்டிய ராஜபுத்திர தளபதிகளுக்கு சிலை வைக்கவும் செய்தார் அக்பர் ; காஷ்மீரை வென்ற பொழுது அங்கே பெரும்பஞ்சம் உண்டான பொழுது கச்சிதமாக நிலைமையை கையாண்டார். தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. உழைப்பவர்களின் சம்பளம் ஏற்றப்பட்டது . பஞ்சம் பறந்தோடியது. அக்பரின் காலத்தில் பதேஃபூர் சிக்ரி எனும் அழகிய தலைநகர் உருவானது. அக்பரின் மதஒற்றுமையின் உச்சமாக தீன் இலாஹி என்கிற மதத்தை அன்பின் வழி அவர் உருவாக்கினார். பேரரசர் என்று சொல்வதற்கான் எல்லா தகுதிகளும் உள்ள அக்பர் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் ஆண்டார். அவரின் இறுதிக்காலத்தில் முக்கியமான நண்பர்கள் முன்னமே தவறி தனிமையில் வாடினார் ; மகன் சலீமின் செயல்கள் வாட்ட வேதனையோடு மரணமடைந்தார் அந்த மாமனிதர். 78 சக் தே மிர் ரஞ்சன் நெஹி -ஒரு உண்மைக்கதை ஒக்ரோபர் 12, 2013 பேசுவதற்காக பல்வேறு குறிப்புகளை தேடிக்கொண்டு இருந்த பொழுது மிர் ரஞ்சன் நெஹியை பற்றி வாசிக்க நேர்ந்தது. chakde india திரைப்படம் இவரின் வாழ்வில் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது. அது 1982 ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி. எதிரணி பாகிஸ்தான் இந்திய அணியின் சார்பாக கோல் கீப்பராக நின்று கொண்டிருந்தார் நெஹி. அன்றைக்கு அணி முழுக்க சொதப்பி எடுத்தது. எக்கச்சக்க வாய்ப்புகளை வீணடித்தார்கள்,தடுப்பாட்டம் என்பது என்ன என்றே மறந்து போனது போல அணி ஆடியது. இவரின் கோல் கீப்பிங்கும் படு மோசமாக இருந்தது. அணி 1-7 என்று தோற்றது. இவர் மீது ஒட்டுமொத்த பழியையும் போட்டார்கள். ஏழு லட்சம் வாங்கிக்கொண்டு அணியை தோற்க வைத்தார் என்று சொன்னார்கள். மிர் என்கிற இவரின் பெயரின் முதல் வார்த்தையை எடுத்து இவரை பாகிஸ்தான் மீது பற்றுகொண்ட இஸ்லாமியர் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள். துரோகி என்கிற பட்டம் சுமந்து வலியோடு நகர்ந்தார் நெஹி [] பதினாறு வருட காத்திருப்பு ; ஆண்கள் அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு வந்தார். ஆசிய போட்டியில் இந்திய அணி தங்கத்தை தட்டிப்பறித்தது. மீண்டும் என்னவோ சொல்லி மனிதரை வெளியேற்றினார்கள். பெண்கள் அணிக்கு கோல் கீப்பிங் பயிற்சியாளர் ஆனார் இந்த முறை,”போன முறை பெற்றது எதோ அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி !” என்று வேறு சொன்னார்கள். எதுவுமே பேசாமல் பயிற்சி மட்டும் கொடுத்தார் நெஹி. காமன்வெல்த் போட்டிகள் வந்தன,பெண்கள் அணியும் தங்கத்தை வென்றது. அடுத்து துணை கோச்சாக உயர்த்தினார்கள். பெண்கள் அணி ஆசிய கோப்பையையும் வென்று காட்டியது. “நான் என் தேசத்துக்காக ஆடினேன். அன்றைக்கு எக்கச்சக்க விஷயங்கள் தவறிப்போயின. நான் இந்தியன் என்றே என்றும் உணர்கிறேன். எப்படியோ என் நாட்டுக்காக மீண்டும் வெற்றிகளை பெற்றுத்தந்தது போதும்.” என்று எந்த சலனமும் இல்லாமல் சொன்னார் மிர் ரஞ்சன் நெஹி. வீரர்களை வெற்றுச்சொல்கள் ஒன்றும் செய்வதில்லை ; புதைக்கப்பட்ட பின்னர் புதிதாக வருகிறார்கள் அவர்கள். 79 ஜான் லெனான் எனும் ஜாலக்காரர் ! ஒக்ரோபர் 9, 2013 ஜான் லெனான் எனும் அமைதி பேசிய,காதல் தந்த பீட்டில்ஸ் இசைக்கலைஞனின் பிறந்தநாள் இன்று. அமெரிக்கா வியட்நாமில் போர் செய்ய வர சொன்ன பொழுது படுக்கையில் இருந்து காதல் செய்யுங்கள் என்று சொன்னவர் அவர் கிறிஸ்துவையும் மிஞ்சும் எங்கள் புகழ் என்றார் அவர். அப்பொழுது சிரித்தார்கள். இறுதியில் ஜீசஸ் எனும் சொல்லை விட அதிகம் தேடப்படும் சொல்லாக அவர் மாறினார். அவரின் பிரபல வரிகள் உங்களுக்காக : உலகம் அமைதியால் நிறையும் என்கிறேன் நான். நான் கனவுக்காரன் என்கிறார்கள். நான் தனியனில்லை. நீங்களும் என்னோடு சேருவீர்கள் .. உலகம் அந்நாள் ஒன்றாகும் ! ஐந்து வயதில் அன்னை ,”மகிழ்ச்சி வாழ்வின் சாவி ” என்றாள். பள்ளிக்கு துள்ளிப்போனேன் நான். வருங்காலத்தில் என்னாவாய் என்று வருடிக்கேட்டார்கள் என்னை. “மகிழ்ச்சி ஆவேன். !” என்று எழுதினேன் நான். “வினா புரியாதவன் நீ” என்றார்கள், வாழ்க்கை புரியாதவர்கள் நீங்கள் என்றேன் நான். [] தனியே தன்னந்தனியே காண்பது கனவு மட்டுமே. இணைந்து இயைந்து காண்பதே நினைவாகும் நித்தமும். கடவுளை நம்புகிறேன் நான். ஒரு பொருளில்லை அவன்,வானில் உள்ள கிழவனில்லை அவன். இயேசு,நபிகள்,புத்தர் எல்லார் சொன்னவையும் சரியே. மொழி பெயர்த்தவர்கள் தவறிப்போனார்கள் தங்கமே ! யாரை நேசிக்கிறாய் கவலையில்லை ; எங்கே நேசிக்கிறாய் தேவையில்லை, எதை நேசிக்கிறாய் கேள்வியில்லை, எப்படி நேசிக்கிறாய் பொருட்டில்லை,ஏன் நேசிக்கிறாய் அவசியமில்லை. நேசிக்கிறாயா அது போதும் என் நேசமே ! எளிய இருக்கையில் இருப்போரே இருகரங்கள் சேர்த்து தட்டிடுங்கள். ஏனையோரே உங்கள் நகைகளை குலுக்கி குதூகல நாதம் தந்திடுங்கள் ! 80 காந்தி இன்னமும் உயிர்ப்போடே இருக்கிறார்,உலகையே உலுக்குகிறார் அவர்- ராமச்சந்திர குஹா ஒக்ரோபர் 11, 2013 Ramachandra Guha அவர்களின் ‘GANDHI BEFORE INDIA’ நூல் சமீபத்தில் வெளி வந்தது. அது சார்ந்து அவருடன் தெஹல்கா இதழில் வந்த நேர்முகம்.சவுகத்தாஸ் குப்தா செய்த இந்த நேர்முகத்தின் தமிழாக்கம் உங்களுக்காக : காந்தியை உங்கள் நூலில் உலக ராஜதந்திரி என்கிறீர்களே ? அவரின் எந்த குணம் கலாசாரங்கள்,எல்லைகளைக்கடந்து சாதித்து இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ? முதலில் அவர் பல்வேறு தளங்களில் இயங்கினார். : அவர் ஒரு அரசியல்வாதி , ஒரு சமூக சீர்திருத்தவாதி , ஒரு மத சிந்தனையாளர் மேலும் ஒரு ஆரம்ப கட்ட சூற்றுசூழல் அறிஞராகவும் அவர் இருந்துள்ளார். அவர் மூன்று கண்டங்களில் இயங்கினார். ஏராளமாக எழுதினார். அவரின் முக்கிய பங்களிப்பாக தன்னுடைய அகிம்சை முறையைக்கொண்டு அநீதியை அவர் எதிர்த்ததை சொல்லலாம். காந்தி ட்ரான்ஸ்வாலில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இயங்கிய முறை ஆங் சான் சூகி,மார்ட்டின் லூதர் கிங் ,கிழக்கு ஐரோப்பிய போராளிகள்,சீனாவில் அரசை எதிர்ப்பவர்கள் சமீபத்தில் மத்திய கிழக்கில் போராடிய போராட்டக்காரர்கள் ஆகிய அனைவரும் அவரின் சிந்தனையால்,செயல்முறையால் முழுமையாக அல்லது ஒரளவுக்கேனும் தாக்கம் பெற்றிருக்கிறார்கள் காந்தி ஆனால் இரண்டு வகையில் அதிர்ஷ்டசாலி. அவர் எந்த பதவியையும் காலே,சர்ச்சில்,நேரு போல வகிக்கவில்லை. மிகப்பெரிய தலைவர்களின் பதவிக்காலங்கள் கலவையாகவே உள்ளன. சர்ச்சில் போர்க்காலத்தில் சிறந்த நிர்வாகி,அமைதிக்காலத்தில் அவர் சொதப்பினார், ரூஸ்வெல்ட் தன் குறைபாட்டால் அவதிப்பட்டார். [] இன்னொன்று அவர் ஒரு ஹிந்து மதவெறியனால் கொல்லப்பட்டது. அவர் அப்படியே இயற்கையாக இறந்திருந்தாலும் அவரை கொண்டாடி இருப்பார்கள். என்றாலும் மதக்கலவரங்களின் பொழுது அவர் அமைதி காக்க சொன்னது ,ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் இருந்தது. மதவெறிக்கு தானே பலியானது அவரை ஏகத்துக்கும் விமர்சித்தவர்களை கூட உலுக்கியது. காந்தியை மிகத்தீவிரமாக விமர்சித்த எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வேல் அவரின் பிரம்மச்சரியம்,புலால் உண்ணாமை ஏன் அகிம்சையைக்கூட சந்தேகப்பட்டார் . அதே காந்தி இப்படி இறந்த பொழுது அக்காலத்தின் தலைவர்களுடன் ஒப்பிட்டு ‘காந்தியைப்பற்றிய பிரதிபலிப்புகள்’ கட்டுரையில் “எத்தகு சுத்தமான நறுமணத்தை அவர் விட்டு சென்றுள்ளார்” என்று எழுதுகிறார். என்றாலும் காந்தியின் சாதனைகள் அவரின் அதிர்ஷ்டங்களை விட பலமடங்கு பிரம்மாண்டமானவை காந்தியின் மரணம் அவரை ஒரு புனிதர் என்கிற ஸ்தானத்துக்கு உயர்த்தி விட்டதில் பங்கு வகித்திருக்கிறது. காந்தியின் சித்தாந்தங்களுக்கு வெறும் உதட்டளவில் மரியாதை செலுத்திவிட்டு நாம் நகர்கிறோம் என்றே தோன்றுகிறது. இப்படி அவரை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத வகையில் அவர் பாவமில்லையா ? ராமச்சந்திர குஹா : ஆமாம். அதே சமயம் காந்தி இந்தியாவில் இன்னமும் ஒரு சவாலாக இருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். இன்னமும் அவர் தேவைப்படுகிறார்,உயிர்ப்போடு இருக்கிறார் என்பதற்கு அவரை தீவிரமாக நிரகரிக்கப்பவர்களே சாட்சி. இந்திய மார்க்சிஸ்ட்கள் குறிப்பாக நக்சலைட்டுகள் அவரை வெறுக்கிறார்கள். பி ஜே பி அவர் மீது வெறுப்பும்,விருப்பும் கலந்த தெளிவற்ற எண்ணத்தையே கொண்டுள்ளது. ரகசியமாக ஆர்.எஸ்.எஸ் அவரை வெறுக்கிறது,ஆனால்,பொதுவில் காந்தியை ஏற்றுக்கொள்வது போல அவர்கள் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வெறுப்புகள் எல்லாம் காந்தியின் சிந்தனைகள் இன்னமும் இவர்களை தொல்லைப்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஏன் இந்தியாவுக்கு வெளியே கூட இடதுசாரியான பெர்ரி ஆண்டர்சன் நாற்பதாயிரம் வார்த்தைகளில் காந்தியை தாக்கியிருப்பதை பாருங்கள் . வலதுசாரியான ஆண்ட்ரு ராபர்ட்ஸ் காந்தியின் சில தேர்ந்தெடுத்த எழுத்துக்களை மட்டும் கொண்டு அவரை காமத்தில் திளைத்தவர்,அரசியலில் ஆற்றல் இல்லாதவர் என்றெல்லாம் எழுதினார். இடதுசாரிகள்,வலதுசாரிகள் இருவருக்கும் காந்தியுடன் நிறைய முரண்பாடுகள் உள்ளன. காந்தி உங்களின் அனுமானங்களை,உங்களின் உலகம் பற்றிய பார்வையை தொடர்ந்து அசைத்துக்கொண்டே இருக்கிறார் என்பதே உண்மை. கேள்வி :அவரின் விசித்திரமான பண்புகள் சார்ந்தே விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காந்தியை பெரும்பாலும் எதிர்ப்பாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் தானே பயன்படுத்த முடியும். ஒரு சக்திமிகுந்த அரசாங்கம் காந்தியத்தை பின்பற்றும் அரசாக இருக்க முடியுமா ? அதிகாரத்தை எதிர்ப்பதை நோக்கியே அவரின் முறைகள் மற்றும் சிந்தனைகள் பெரும்பாலும் பயன்படுகின்றன. என்றாலும் ஒரு அரசும் வன்முறையை தன்னுடைய கடைசி தேர்வாக தான் எடுக்க வேண்டும். அதே போல அவரைப்போல வெளிப்படைத்தன்மை அரசாங்கங்கள் கொண்டிருக்க வேண்டும். காந்தி ஒரு கச்சிதமான சமூக ஒருங்கிணைப்பாளர் ; அவர் எப்படி கூட்டணிகளை,குழுக்களை அருமையாக உருவாக்கினார் என்று நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். என்னுடைய இந்த புத்தகம் காந்தியின் அற்புதமான மக்களுடான பிணைப்பை பற்றி பேசுகிறது. இந்தியாவில் அவருடன் இயங்கிய நண்பர்கள்,தொடர்ந்து உரையாடல்கள் செய்தவர்கள் ஆகியோரை தெரியும். அதே சமயம் தென் ஆப்ரிக்காவில் அவரை உருவாக்கியவர்களும் முக்கியமானவர்கள். இந்தியாவில் அவரை எதிர்த்த ஜின்னா,அம்பேத்கரை தெரியும். அங்கே எதிர்த்தவர்கள் பற்றி தெரியுமா ? அவரைச்சுற்றி சுவராசியமான பாத்திரங்கள் பல இருந்துள்ளன-தமிழர்கள்,குஜராத்திகள்,யூதர்கள்,கிறிஸ்துவர்கள் மற்றும் மிகமுக்கியமாக ஜெனரல் ஸ்மட்ஸ். ஒரு அமைப்பை எப்படி உருவாக்க வேண்டும் என்று காந்தி அங்கே தான் கற்றுக்கொள்கிறார். அவர் தமிழ்,ஹிந்தி,குஜராத்தி,ஆங்கிலம் என்று நான்கு மொழிகளில் பத்திரிக்கை நடத்துகிறார். அவர் எல்லா சமூக மக்களையும் சென்றடைய வேண்டும் என்று இயங்கினார். இங்கே தான் மக்களை உத்வேகப்படுத்தும் செயலை அவர் செய்யத்தொடங்குகிறார். காந்தியுடன் வீட்டை பகிர்ந்து கொண்ட ஹென்றி போலாக் காந்தியின் தென் ஆப்ரிக்க செயல்பாடுகளுக்கு நிதி திரட்ட இந்தியா முழுக்க பயணம் செய்கிறார் கேள்வி : காந்தி எழுதியுள்ளவையே எக்கச்சக்கம்,இதில் நீங்கள் அவருடன் தொடர்புடைய நபர்கள் பற்றி தேடியது ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறவர் என்கிற வகையில் அவசியம் என்று நினைக்கிறீர்களா ? கண்டிப்பாக ! காந்தியைப்பற்றி புதிதாக ஏதேனும் எழுத வேண்டும் என்றால் அவருடன் தொடர்புடைய நபர்களைப்பற்றி கண்டிப்பாக தேடிப்போக வேண்டும். போலாக் என்னை பொறுத்தவரை அதற்கு முன் ஒரு பெயர். அவரின் இலக்கிய அறிவு,அற்புதமான நடை,காந்தி மீதான அன்பு,காந்தியுடன் கொண்ட கருத்து வேறுபாடுகள் எல்லாம் எனக்கு தெரியாது. போலாக்கின் மனைவி மில்லி எப்படி காந்தியை ஆணாதிக்கத்தை விட்டு நகர்த்தினார் என்பதும் சுவையானது. காந்திக்கு கிடைத்த எங்கல்ஸ் என்று ப்ரன்ஜிவன் மேத்தாவை நான் குறிப்பிட்டு உள்ளேன். தம்பி நாயுடு எனும் தமிழ் சீர்திருத்தவாதி எப்படி குஜராத்தி மக்கள் காந்தியின் போராட்டத்தில் பங்குகொள்ள மறுத்த பின்னர் தமிழர்களை போராட்டத்துக்குள் கொண்டு வருகிறார் என்றும் எழுதியிருக்கிறேன். நாயுடுவுக்கு தான் பட்டிருந்த கடனுக்காக தானே தமிழ் கற்றுக்கொள்ள முனைவதோடு தன்னுடைய மருமகனையும் கற்றுக்கொள்ள சொல்கிறார் காந்தி. இவர்களுடன் காந்திக்கு இருந்த ஆழமான உறவு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த நபர்கள் நூலில் நிறைய இடத்தை அதனாலே எடுத்துக்கொள்கிறார்கள். கேள்வி : மக்களிடம் காந்தி தன் கருத்துக்களை பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுவதன் மூலம் கொண்டு சேர்த்தார். இந்தப்போக்கு இன்றைக்கு சாத்தியமா ? காந்தியைப்போலவே அதிகம் அறியப்படாமல் நம்பூதிரிபாட்,சவார்க்கர்,நரேந்திர தேவ் முதலிய அரசியல்வாதிகளும் மக்களை தங்களின் இதழ்களின் மூலம் சென்றடைந்தார்கள். இந்த போக்கு இன்றைக்கு பின்பற்றப்படுவதில்லை. ஆங்கிலேயரை எதிர்த்தது அவரை செதுக்கியதா ? காந்தியின் உருவாக்கத்தில் அவை பங்கு வகித்தன. இந்திய போரட்டங்களும் கண்டிப்பாக முக்கிய பங்காற்றின. பஞ்சாப் முதல் கேரளாவரை எண்ணற்ற சிக்கல்கள், எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே பெரிய சவால். வேறெந்த நாட்டுக்கும் இல்லாத ஜாதிய அமைப்பு இங்கே உண்டு. அதனை எந்த நூல்கள் ஆதரிக்கின்றன,அதன் [பொருளாதார,சமூக தாக்கங்கள் என்ன ? அது எப்படி அரசியலை கட்டுப்படுத்தும் என்று எண்ணற்ற புரிதல்கள்,அதை சார்ந்த செயல்பாடுகள் தேவைப்பட்டன. மேலும் ஆணாதிக்கம் மற்றும் இரண்டு பெரிய மதங்கள் வேறு இருந்தன. படிநிலை பண்பாடு ஒன்றில் இயங்க அறிவார்ந்த அலசல்,அசல்தன்மை மற்றும் அனுபவம் ஆகியன் இந்த சூழலை சமாளிக்க தேவைப்பட்டது. நாம் பேசிய ஆளுமைகள் அதற்கான ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். கேள்வி : உங்கள் புத்தகத்தின் இரண்டு பாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன இல்லையா ? உண்மையில் மூன்று. ஆனால்,அது என்னால் முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இந்த தொகுதி தென் ஆப்ரிக்க வாழ்வைப்பற்றி பேசுகிறது. அடுத்த தொகுதி 1915 ல் இருந்து 1948 வரை நடந்த அவரின் வாழ்க்கைக்கதையை பற்றி பேசும். அந்த நூல் வெளிவர ஆறாண்டுகள் ஆகும். நான் என்னுடைய ஐம்பதுகளில் இருக்கிறேன். இன்னம் கூடுதலான காலம் உயிரோடு இருந்தால் உலக காந்தி என்கிற தலைப்பில் உலகில் அவரின் மரணத்துக்கு பின்னர் அவர் பதித்த தடதைப்பற்றி எழுத வேண்டும். சூ கிக்கள் மாதிரியான ஆளுமைகளோடு நின்று விடாமல் நக்ஸலைட்டுகள் வாதங்களுக்கு பதில்கள் சொல்ல வேண்டும். பார்ப்போம் நாம் காந்தியின் தென் ஆப்ரிக்க வாழ்க்கையை வேகமாக கடந்து விடுகிறோமோ ? ஆமாம். காந்தியின் உருவாக்கத்தில் அவை முக்கிய பங்கு வகித்தன. காந்தி அங்கே இயங்கிய சூழல் கொதிநிலையில் இருந்தது. போயர் போர்கள் நடந்தன, சுயாட்சி கொடுக்கப்பட்டு இருந்தது,காலனிகளின் கூட்டாட்சி,வெள்ளையர்கள் கருப்பர்கள் மற்றும் பிற நிறத்தவர்களுக்கு எதிராக கொண்ட போக்கு. இந்த சூழலில் நிறவெறி காலத்தில் காந்தி இயங்கியவை முக்கியமானவை. காந்தியின் நிற ஒதுக்கல் சார்ந்த பார்வையில் அவர் அதன் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அவர் அந்த கட்டமைப்புக்குள் இந்தியர்களுக்கு இன்னமும் நல்ல வாழ்நிலையை உருவாக்க விரும்பினார். இந்த விமர்சனம் முழுமையாக ஒதுக்ககூடியதில்லை. காந்தி தன் கருத்துக்களை படிப்படியாக செம்மைப்படுத்தி கொள்கிறார். காந்தி ஆரம்பகாலங்களில் கறுப்பின மக்களை அந்நியர்கள் என்றும்,காட்டுமிராண்டிகள் என்றும் கருதுகிறார். அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்று காண்கிற பொழுது அவரின் பார்வைகள் மாறுகின்றன ; ஒரு ஆப்ரிக்க காங்கிரசை உருவாக்கிய தலைவர் அவருடன் நேரத்தை செலவிட்டுள்ளார் என்பதை நான் கண்டறிந்தேன். அவர் படிப்படியாக மாறி வந்தார் என்பதே உண்மை. அவர் தென் ஆப்ரிக்காவை விட்டு நீங்கிய பின்னர் இன்னமும் ஆப்ரிக்க மக்களின் சுரண்டல் பற்றி கவலை கொள்கிறார். இந்தியர்கள் ஆப்ரிக்காவின் மற்ற மக்களுடன் இணைந்து போராடி முன்னேற வேண்டுமே என்று நாற்பதுகளில் அறிவுரை தருகிற அளவுக்கு காந்தி மாற்றமடைகிறார். காந்தியை இனம் மற்றும் சாதி சார்ந்த அவரின் சில வாசகங்களை தெரிவு செய்து சொல்லி அவரை நிராகரிக்க சுலபமாக முடியும். காந்தி வர்ணாஸ்ரமத்தை வாழ்நாள் முழுக்க ஆதரித்தார் என்கிற கருத்து பரப்படுகிறது. அவர் 1919 இல் கொண்டிருந்த அந்த சிந்தனை 1930 களில் அவரைவிட்டு நீங்குகிறது. அவர் படிப்படியாக தன்னை மாற்றிக்கொள்கிற,திறந்த மனது உடையவராகஎன்றைக்கும் முன்னேறி செல்லும் மனது கொண்டவராக இருந்தார். இவ்வளவையும் சொன்ன பின்னர் ஒன்றை குறிக்க வேண்டும். காந்தி ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்காக போராடுகிற ஒரு தலைவராகவே இருந்தார். இதை நான் அழுத்தி சொல்வதாக நீங்கள் எண்ணலாம். இன்றைக்கு இப்படிப்பட்ட தவறுகளை ஒத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அரிது. மீடியாக்கள் அரசியல்வாதிகள் தங்களின் கருத்துக்களை மாற்றிக்கொண்டாலும் அவர்கள் முன்னே சொன்னதை குறிப்பட்டு அதை நடக்கவிடாமல் தடுத்து விடுகிறார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும்,திறந்த மனதுடன் இயங்கும்,முன்னர் இருந்த நிலையில் தான் கொண்டிருந்த குறுகிய பார்வை ஆகியவற்றை ஒப்புக்கொள்ளல் என்று காந்தி கொண்டிருந்த பண்புகள் காண்பதற்கு அரிதானவை. காந்தி வக்கீல் தொழிலை விட்டு சமூக சேவைக்கு நகர்ந்த பொழுது அவர் மகன் பாதிக்கப்பட்டார். காந்தி கணவனாக,அப்பாவாக அடைந்த தோல்விகள் தென் ஆப்பிக்காவிலேயே தென் படுகின்றன. . காந்தியின் இந்த முக்கியமான தோல்விகள் அவர் ஒரு ஞானி இல்லை என்பதை காட்டுகிறது. இல்லையா ? அவரின் மதிப்பெண் பட்டியல்கள் எப்படி அவர் ஒரு சுமாரான மாணவர் என்று காட்டுகின்றன என்பதில் இருந்தே நான் நூலை தொடங்குகிறேன். அவர் சில வகைகளில் மந்தமானவராக இருந்திருக்கிறார்,இன்னம் பலவற்றில் தவறுகள் செய்திருக்கிறார். அதே சமயம் மக்களை சென்றடைவதில்,புரிந்து கொள்வதில்,பிரதிபலித்தலில்,அவரின் புற வலிமை ஆகியன நேசிக்கதக்கவை. அவரை தென் ஆப்ரிக்காவில் ஒரு முறை தொடர்வண்டியை விட்டு வெளியே எறிகிறார்கள் . இன்னும் இரண்டு தருணங்களில் இந்தியர்கள் மற்றும் வெள்ளையர்கள் அவர் மீது கொலை முயற்சி செய்கிறார்கள். அன்றைய பத்திரிக்கை செய்திகள் எப்படி அவர் தாக்கப்பட்டார் அதை எப்படி எதிர்கொண்டு அவர் முன்னேறி சென்றார் என்பதை படித்தாலே ஒரு தனி அனுபவமாக இருக்கிறது. காந்தியின் அரசியல் சித்தாந்தம் ,பெண்களின் மீதான பார்வை,ஆப்ரிக்கர்களின் மீதான அடக்குமுறைகள் ஆகியவற்றின் மீதான பார்வை எப்படி மாறுகிறது எனபதை ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் கண்டுகொள்ள முடியும். என்றாலும் எல்லாவற்றையும் விட அவர் கொண்டிருந்த புற வலிமை என்பதை ஒரு வரலாற்று ஆசிரியன் வடித்துச்சொல்லிவிட முடியாது என்றே நான் எண்ணுகிறேன் நன்றி : Tehelka 81 சே எனும் உலகப்போராளி ! ஒக்ரோபர் 9, 2013 “WE MUST STRUGGLE EVERYDAY SO THAT THIS LOVE FOR HUMANITY BECOMES REALITY” சே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது;இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்துக்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி அவர். எங்கெல்லாம் அடக்குமுறையும்,ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விடபட்டதோ அங்கெல்லாம் சே இருப்பார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சே நின்று இருந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியும் கூட; ஆனால் உடல் மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியது தான்;அதோடு கார்ல் மார்க்சையும்,லெனினையும் உள்வாங்கிப் படித்த அவர் ஏழைகளும்,பாட்டாளிகளும் படும் துன்பங்களையும்,சோகம் ததும்பும் அவர்களின் உண்மை நிலையை அறிந்த பொழுது போராளியானார். அர்ஜென்டினாவை விட்டு வெளியேறிய சே, க்யூபாவில் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்த ஆட்சியை காஸ்ட்ரோவுடன் இணைந்து கவிழ்க்க முதல் முறை முயன்று தோற்று, பின் வெற்றியும் பெற்றார். அவரின் அமைச்சரவையில் வங்கி மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் திடீர் என்று காணாமல் போனார்; அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு பொலிவியாவின் காடுகளில் போராடக்கிளம்பிய நாயகன் அவர். அங்கே அவர் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று. இன்றும் சே ஒரு குறியீடு;அவர் ஆசைப்பட்டது மனித சமூகத்தின் சமத்துவம்;அதன் விடுதலை. அதில் நாடுகள் என்கிற வரையறை இல்லை. அவர் இறந்த பொழுது அவருக்கு வயது வெறும் 39 தான்! சாகிறபொழுதும் திறந்திருந்த கண்கள் அவருடையது. ஏனென்றால் என்றைக்கும் கண்ணைமூடிக்கொண்டு கனவு கண்ட போலி புரட்சிக்காரன் இல்லை அவர் ;நிஜ உலகோடு முட்டி மோதி ஜெயித்த தனித்துவன். சே ஆயுதம் ஏந்தி போராடினார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உலகின் மீது கொண்ட எல்லையில்லாத அன்பாலே தான் அப்படி செயல்பட்டார். ” எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.” என்று அவர் எழுதினார். [] “உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே !” என்று சொன்ன சே தன் பிள்ளைகளுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை : “அன்புள்ள இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ.. ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன். நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம்.. குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் நீங்கள். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தொழில் நுட்ப ஞானம் பெறவேண்டும். இந்த அறிவுதான் இயற்கையை நமது கட்டுக்குக் கொண்டு வர நமக்கு உதவும். நாமெல்லாம் தனிப்பட்ட முறையில் முக்கியமற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் எங்கு அநீதி நிலவினாலும் அதைக் கண்டு ஆழமாக வெறுப்புணர்வு கொள்ள வேண்டும். அதுதான் புரட்சிக்காரனின் முக்கியமான குணம்.” சேவின் நினைவு தினமான இன்று வெறுப்புணர்வை வெறுத்து, அன்பை விதைப்போம். வருங்காலம் வண்ணமயமாகும். வாழ்க்கை வளமாகும். வணக்கம் காம்ரேட் ! 82 கடவுள் துகளும்,ஒரு நோபல் பரிசும் ! ஒக்ரோபர் 8, 2013 ஹிக்ஸ் போஸான் கண்டுப்பிடிப்புக்காக இந்த வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசு ஹிக்ஸ் மற்றும் பிரான்கோயிஸ் என்க்லேர்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. பேரண்டம் ஒரு பெருவெடிப்பில் தோன்றியது. அப்படி பேரண்டம் தோன்றுவதற்கு காரணமானவை மூலத்துகள்கள். இவை தங்களுக்குள் நிகழ்த்தி கொண்ட ஈர்ப்பு விசை மற்றும் எதிர்விசையால் தான் இந்த பேரண்டமும் நாமிருக்கும் பூமியும் உருவானது. இந்த மூலத்துகள்கள் மொத்தம் பதினாறு என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். இவை ஃபெர்மியான் மற்றும் போஸான் என்னும் இரண்டு பிரிவுகளுக்குள் வரும். பெர்மி டிராக் புள்ளியியல்படி செயல்படுபவை முதல் பிரிவிலும்,போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் படி இயங்குபவை இரண்டாவது பிரிவிலும் வைக்கபட்டன. [] இந்த பதினாறு துகள்களில் இரண்டு துகள்களை தவிர மற்ற அனைத்தும் நிறை கொண்டவை. இதற்கு எப்படி நிறை வந்திருக்கும் ? அதைத்தந்தது எது என்கிற கேள்வி எழுந்த பொழுது அதற்கு தான் ஹிக்ஸ் பதில் சொன்னார். பேரண்டம் உருவாக காரணமான இந்த துகள்களை சுற்றிக்கொண்டு இருந்தது ஒரு புலம். அதுதான் ஹிக்ஸ் புலம். அந்த புலமானது ஹிக்ஸ் போஸானால் ஆனது. இந்த போஸான் தான் மற்ற துகள்கள் நிறை பெற காரணம். இந்த ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க ஐம்பது ஆண்டுகளுக்கு மேலே ஆகிற்று. [] அவ்வப்பொழுது இந்த துகள் இருப்பதற்கான தடயங்கள் தெரியும். cern ஆய்வகத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்த பொழுது இருந்த சூழலை மீண்டும் உருவாக்கி ஹிக்ஸ் போஸானை கண்டுபிடித்தார்கள். இதற்காக பெருவெடிப்பை லேபில் உண்டு செய்து ப்ரோட்டான் ப்ரோட்டான் மோதலைக்கொண்டு 125 கிகா எலெக்ட்-ரோ வோல்ட்ஸ் உடைய துகளை உருவாக்கினார்கள். சிக்ஸ் சிக்மா அளவில் துல்லியமாக ஹிக்ஸ் போஸான் இருப்பது தெரிந்தது (அதாவது லட்சத்தில் ஒன்று என்கிற அளவில் தான் பிழை இருக்கும் ). ஒரு ட்ரில்லியன் ப்ரோட்டான் ப்ரோட்டான் மோதலில் தான் ஹிக்ஸ் போஸான் கொஞ்சோண்டு நேரம் தென்படும் என்பது அதைக்கண்டுபிடிப்பது ஹிக்ஸ் அவர்களிடம் இதை சொன்ன பொழுது ,”இதை என்னால் நம்பவே முடியவில்லை. என் வாழ்நாளில் இதைப்பார்த்தேனே. வீட்டில் போய் ஒரு ஷேம்ப்பெயின் அடிக்க வேண்டும். ” என்று அப்பொழுது சொன்னார். இதோ அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. இவருக்கும் முன்னமே (ஒரு இரண்டு வாரம் முன்னாடி ) எங்க்லேர்ட் மற்றும் அவரின் தோழர் ராபர்ட் ப்ரவுட் ஆகியோர் இப்படியொரு சூழல் இருக்கவேண்டும் என்பதை சொன்னார்கள். ஆனால்,அப்படி ஒரு துகள் இருப்பதை அடித்து முதன் முதலில் சொன்னது ஹிக்ஸ் தான். ராபர்ட் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இறந்து போனதால் இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு கிட்டியிருக்கிறது. இதை ஏன் கடவுள் துகள் என்கிறார்கள் : ‘The God Particle: If the Universe Is the Answer, What Is the Question?’ என்கிற நூலை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லேடர்மேன் என்பவர் ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதினார். இப்படி பல்லாயிரம் கோடி கொட்டி கொட்டி இந்த துகளை தேடுகிறீர்களே பாவிகளா என்கிற பொருளில் இவர் ,”goddamn particle” என்று பெயரிட்டதாகவும் இவரின் வெளியீட்டாளர் அப்படியே god ஐ மட்டும் கத்தரித்து கடவுள் துகள் என்று நூல் வெளியிட்டு விட்டார். அதையே இங்கே பிரபலப்படுத்தி விட்டார்கள். சரி போஸ் புள்ளியியலில் இயங்குவதால் இந்த பெயர் இந்த போஸ் யார் ? கீழே பொறுமை இருந்தால் படியுங்கள் : சத்யேந்திர நாத் போஸ் எனும் ஒப்பற்ற அறிவியல் மாமேதையை நாம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். .ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் . குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது .குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது ; இவர் விடுதலைக்கு முந்திய பிளவுபடாத வங்காளத்தில் படித்தார் .பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்;காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான் . பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார் .இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம் .தலைசிறந்த பல அறிஞர்கள் இக்காலத்தில் தான் உருவானார்கள் ..வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர் .ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட .இவர் Max Planck’s Law” மற்றும் “Light Quantum Hypothesis” பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார் .அசந்து போனார் அவர் . இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார் அவர் .அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது .அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வில்லை .ஆனால் ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து “அதில் போஸை விட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா ?”என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார் ;உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் நீங்கள் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம் . [] இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டேஇருந்தார் .இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை . இவரின் நினைவாக போஸான் என துகளுக்கு பெயரிடப்பட்டது . நீல்ஸ் போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார் ;கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார் மனிதர் .அது தான் போஸ் .தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்ற போஸ் வங்காள மொழியிலேயே அறிவியலை பயிற்றுவித்தார் அவர். அவருக்கு நோபல் பரிசு இறுதிவரை தரப்படவே இல்லை. 83 அடிமைத்தனம் போக்கிய அட்லி ! ஒக்ரோபர் 8, 2013 உங்களுக்கெல்லாம் வின்ஸ்டன் சர்ச்சில்லை தெரிந்து இருக்கும் ;ஆனால்,கிளமென்ட் அட்லி அவர்களை தெரியுமா உங்களுக்கு ?இந்தியாவிற்குவிடுதலை கிடைத்த பொழுது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் இவர் தான். சர்ச்சில்லை பற்றி சில விஷயங்கள் -சர்ச்சில் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ள அருகதையற்றவர்கள் என்கிற பார்வை கொண்டவர்;இந்தியாவிற்கு சுதந்திரம் எல்லாம் தரமுடியாது என அழுத்தந்திருத்தமாக சொன்னவர் ;இந்தியாவே பசியால் வாடிக்கொண்டு இருந்த பொழுது உணவுக்கப்பலை இங்கே அனுப்ப முடியாது என சொல்லி பல மக்களை பசியில் சாகவிட்டவர் . பாரிஸ்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது சமூக சேவையில் ஈடுபட வந்து படிப்பை துறந்தார் அட்லி. அதோடு ராணுவத்தில் இணைந்தும் போரிட்டார். இளம் வயதில் பேபியன் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். நேரடிப்புரட்சியில் இறங்காமல் படிப்படியாக மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டு வந்து சமூகத்தில் மாற்றத்தை உண்டு செய்யும் இந்த அமைப்பில் பணியாற்றிய பின்னர் சோசியலிஸசம் அவரை ஈர்த்தது. அதே சமயம் அவர் பூர்ஷுவாக்களை வெறுக்கவில்லை. வறுமையும்,பசியும் மக்களை விட்டுப்போக வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அதை ஜனநாயக முறையில் அவர் சாதிக்க எண்ணினார். “இன்றைக்கு இரவு உணவுக்கு வீட்டுக்கு போகிறேன். ஆனால்,இரவு உணவு இருக்குமா என்றுதான் தெரியவில்லை.” என்ற தெருவோர இளைஞனின் குரல் அவரை வாழ்நாள் முழுக்க உலுக்கியது. லேபர் கட்சியில் படிப்படியாக உயர்ந்த இவர் ஹிட்லரை சமாளிக்க அமைக்கப்பட்டு கூட்டரசில் சர்ச்சில் உடன் இணைந்து துணைப்பிரதமராக பணியாற்றினார் .தங்களுக்கு வாக்களித்தால் நாட்டை உலகப்போரின் அழிவுகளில் இருந்து மீட்டெடுப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார் . மனிதரின் சறுக்கல்கள் என்று இரண்டை சொல்லலாம். இந்தியாவின் பிரிவினை என்பதை அவசர அவசரமாக செய்ய மவுன்ட் பேட்டனை அனுப்பினார். அவர் கேட்டபடியே அனைத்தையும் செய்ய அனுமதித்தார். எண்ணற்ற உயிரிழைப்பை ஒழுங்கான திட்டமிடலின் மூலம் தடுத்திருக்க வேண்டிய ஆங்கிலேய ஆட்சி தன் மக்களை மட்டும் காத்துக்கொண்டு போகும் வேலையை சிறப்பாக செய்தது. பாலஸ்தீன் தேசம் உருவாகாமல் யூதர்கள் ஒருங்கிணைந்து நின்று இஸ்ரேலை உருவாக்கிய காலத்தில் ஒரு வார்த்தை கூட எதிர்க்காமல் அதை கச்சிதமாக ஏற்றுக்கொண்டவர் இவர். [] இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியா,பாகிஸ்தான் ,பர்மா.இலங்கை,ஜோர்டான் நாடுகளுக்கு விடுதலை கொடுத்தார்.மேலும் நாடு முழுக்க மேல்நிலைக்கல்வியை இலவசமாக்கினார். நாடே திவாலாகும் என்று கருதப்பட்ட சூழலில் தேசிய அளவில் மருத்துவ நலம் பேணும் திட்டங்களை கொண்டு வந்தார்;விமானத்துறை,மின்சாரம்,ரயில்வே என பலவற்றை தேசியமயமாக்கினார். சர்ச்சில் மற்றும் பெரும்பாலான இங்கிலாந்து பிரதமர்களை போல தான் சொன்னதையே பெரும்பாலும் செயல்படுத்த எண்ணாமல் பலரின் கருத்துக்களை கேட்டு சுமுகமாக ஆட்சி செய்தவர் இவர்,போருக்கு பின் இங்கிலாந்தை கட்டமைத்த சிற்பி .இங்கிலாந்தின் கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த பிரதமராக ஓட்டெடுப்பு ஒன்றில் தெரிவு செயப்பட்டார்.மொத்தத்தில் சர்ச்சிலை விட பல மடங்கு கருணைகொண்ட அல்லது நிதர்சனம் உணர்ந்த பிரதமர் இவர் என்பதே சரி. அவரின் நினைவுதினம் இன்று ! 84 டூடு எனும் அமைதிக்காவலர் ! ஒக்ரோபர் 7, 2013 டெஸ்மாண்ட் டுடு பிறந்த தினம் இன்று. அன்பு என்பதும்,அகிம்சை என்பதும் எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை வன்முறை நிரம்பிய,வெறுப்பு வழிந்து கொண்டிருந்த தென் ஆப்ரிக்காவில் நிறுவிய பாதிரியார் இவர். இளம் வயதிலேயே நிறவெறிக்கு உள்ளானார் இவர். வெள்ளையர்கள் கறுப்பின மக்களை அடிமைகளைப்போல நடத்தினார்கள். இரண்டாம் தர குடிமக்களாக இவர்கள் நடத்தப்பட்டார்கள். இவர் சிறுவனாக இருக்கும் பொழுது காசநோய் வந்து மரணத்தின் விளிம்பு வரை போய் மீண்டு வந்தார். அப்பொழுதெல்லாம் ஏசுவின் கதைகள் அவருக்கு நம்பிக்கையை தந்தன. ஆனாலும்,தங்களை மனிதர்களாக வெள்ளையர்கள் மதிக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் அவரின் பிஞ்சு நெஞ்சிலே கசிந்து கொண்டே இருந்தது. டுடுவும்,அவரின் அம்மாவும் சேர்ந்து நடந்து கொண்டு இருந்த பொழுது ட்ரெவர் எனும் நபர் தன்னுடைய தொப்பியை தூக்கி இவரின் அம்மாவுக்கு மரியாதை செலுத்தினார். அவர் பிறப்பால் வெள்ளையர் ; அவரொரு பாதிரியார் என்று தெரிந்து தானும் அவரைப்போலவே ஆகவேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக பதிந்து போனது இவருக்குள். டுடுவின் இளமைக்காலத்தில் நல்ல கல்வி கிடைத்தது. பின்னர் அரசின் கொள்கையில் கறுப்பின மக்கள் தனியான வசதிகள் இல்லாத,இருளில் மூழ்கி இருக்கும் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு மிக மோசமான கல்வி தரப்பட்டது. இதற்கிடையில் இவர் இறையியல் கல்வியை லண்டனில் முடித்து நாடு திரும்பினார்.சர்ச்சின் பாதிரியார் ஆனார். நிறத்தின் பெயரால் பாகுபடுத்தலை எதிர்த்து அதிபருக்கு கடிதம் எழுதினார். சட்டை செய்யவே இல்லை. இந்த தருணத்தில் ஆப்ரிக்காவில் இருக்கும் எல்லா சர்ச்சுகளின் தலைமைப்பொறுப்பு இவரைத்தேடி வந்தது. மக்களை அன்பைக்கைக்கொள்ள சொன்னார் இவர். அயலானை நேசி என்றும் சொன்னார். சொவேடோ எனும் இடத்தில் பத்தாயிரம் கறுப்பின பிள்ளைகள் பாரபட்சமாக நடத்தப்படுவதை எதிர்த்து போராடினார்கள். போலீஸ் துப்பாக்கியில் சும்மா ஐநூறு பிள்ளைகளை சுட்டுத்தள்ளியது. இரத்தம் கொதித்தது மக்களுக்கு; டுடு சொன்னார் ,” நாம் கண்டிப்பாக வெல்வோம். அதில் சந்தேகமில்லை. உண்மையை பொய்யோ,வெளிச்சத்தை இருளோ,வாழ்வை மரணமோ வெல்ல முடியாது. அன்போடு காத்திருப்போம் ” என்று. வெளிநாடுகளுக்கு ஒரு யோசனையும் சொன்னார். எங்களை நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களின் முதலீடுகளை எங்களின் அறவழி போருக்கு ஆதரவாக திரும்பப்பெறுங்கள் என்பது தான் அது. “அப்படியே !” என்று பல நாடுகள் செயல்பட்டன. தென் ஆப்ரிக்கா ஸ்தம்பித்தது. மண்டேலா ஆயுதம் ஏந்திய போராட்டத்தை ஆதரித்த பொழுது அதை விமர்சிக்கவில்லை இவர். போராளிகளின் பாதைகள் வெவ்வேறு என்பது அவரின் கருத்து. [] இவரின் அமைதி வழிப்போராட்டங்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுத்தந்தன. நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்காவின் அதிபரான பொழுது அவரை நாட்டுக்கு அறிமுகபடுத்தும் வரலாற்று தருணம் இவருக்கு வாய்த்தது. ” இப்பொழுது நான் இறந்தால் அதைவிட பொருத்தமாக இருக்காது. இந்த கணத்துக்காக தானே நாம் தீர்க்கமாக போராடினோம் ?” என்று உணர்ச்சிவசப்பட்டார். இப்பொழுதும் எய்ட்ஸ்,காசநோய் ஒழிப்பு ஆகியவற்றுக்காக பணியாற்றி வருகிறார். ” நடுநிலைமை என்று எளியவர்கள் ஒடுக்கப்படும் பொழுது நீங்கள் சொல்லிக்கொண்டு இருந்தால் அதுவும் அநீதியே. நீங்கள் எலியின் வாலை தன் காலால் மிதித்து கொண்டிருக்கும் யானையை தட்டிக்கேட்காமல் நடுநிலைமை காப்பதாக சொன்னால் உங்களின் நடுநிலைமையை எலி பாராட்டாது.” என்கிற வரிகள் காலத்துக்கும் பொருந்துவது. அவரின் பிறந்தநாள் இன்று 85 ஹெலன் எனும் ஏஞ்சல் ! ஒக்ரோபர் 6, 2013 ஹெலன் வில்ஸ் மூடி என அறியப்படுகிற இந்த பெயர் தான் டென்னிஸ் உலகில் எத்தனை மாயாஜாலங்களைப் புரிந்தது. 15 வருடங்கள் ஆடி, 32 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகள்..180 போட்டிகளில் ஒரு செட் கூட தோற்காத வெற்றி.. 8 வருடங்கள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை..எல்லா சாதனைகளும் இவருடையதே !17 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் ஜெயித்த இவர், இறுதி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதுகுவலியோடு போராடிக்கொண்டே 32 வயதில் வென்றார்;அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அது அவரது எட்டாவது விம்பிள்டன் பட்டமும் கூட. இது எப்படி சாத்தியம் என அவரிடம் கேட்டபொழுது,”முதன்முறையாக அப்போதைய சாம்பியனிடம் விம்பிள்டனில் தோற்றேன் – இது தான் கடைசி முறை இங்கே தோற்பது என சொல்லிக்கொண்டேன் அவ்வளவே!”என்றார். அப்புறம் ஆடிய எட்டு பைனல்ஸ் போட்டிகளிலும் ஜெயித்தது இவரே. [] ‘ இவருக்கு சார்லி சாப்ளின் மாபெரும் விசிறி. அவர் டென்னிஸ் ஆடுகிறபொழுது நடக்கிற நகர்வுகள் தான் நான் பார்த்த காட்சிகளிலேயே அழகானவை’ என சொல்கிற அளவுக்கு சாப்ளின் இவரின் ரசிகர். வாழ்க்கை முழுவதும் டென்னிஸ் மீது காதல் கொண்டு இருந்த இவரின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. தனிமை விரும்பியாகவே இருந்த இவர், ஓவியம் தீட்டுவதில் தன் வலிகளை தணித்துக்கொண்டார். ஒலிம்பிக்கில் தங்கமும் அடித்தார். அவரின் சாதனைகள் இன்றளவும் அவரை நினைவில் நிறுத்துகின்றன. “எப்படி இப்படி ஒரு வெற்றிமிகுந்த ஆட்டம் உங்களுக்கு வாய்த்தது ?”என கேட்ட பொழுது தன் தலையை மெல்ல அசைத்து, சிரிப்புடன் ‘ எல்லா ஷாட்டும் எனக்கு முக்கியமானது’ என பொருள்படுகிற,”every shot, every shot,every shot !” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.அது தான் ஹெலன் வில்ஸ்.அவரின் பிறந்ததினம் இன்று. 86 காந்தியை மறுவாசிப்பு செய்தல் ! ஒக்ரோபர் 1, 2013 காந்தி என்கிற மனிதரைப்பற்றி எந்த வாசிப்பும் இல்லாமல் வன்மம் கொண்டிருந்த காலத்தில் இருந்து படிப்படியாக அவரைப்பற்றி வாசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கும் அவருடனான வாசிப்பு,அனுபவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காந்தியை மரபார்ந்த முறையில் தேசத்தின் தந்தை என்றோ,புனிதர் என்றோ வகைப்படுத்தி அவர் செய்துவிட்டுப்போன போராட்ட முறைகளை அப்படியே பின்பற்றி இது தான் காந்தி,இது தான் காந்தியம் என்று பெரும்பாலானோர் தேங்கி விட்டார்கள். காந்தி நேற்று சொன்னதை நாளை சொல்ல மாட்டார். அவரின் அகக்குரலுக்கு ஏற்ப அவரின் மனசாட்சியுடன் நிகழும் பேச்சுவார்த்தைகள் அவரை தொடர்ந்து செலுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. அவர் ஒரு முழுமையான பிழைகளற்ற ஆளில்லை. அவருக்கு தன் செயல்களில் உண்மையும்,அகிம்சையும் நிறைந்திருக்க வேண்டும் என்கிற உறுதி இருந்தது. காந்தி மதத்தைக்கொண்டு தன் அரசியலை கட்டமைத்தார். அவரின் மதம் புத்தகங்களில் குறிப்பிடப்படும் மதவாதிகள் கொண்டாடும்,தீவிரப்போக்கில் செயல்படும் பிறரை நிராகரிக்கும் மதமில்லை. அவர் எந்தெந்த மதங்களால் தாக்கம் பெற்றாரோ அவை எல்லாவற்றில் இருந்தும் நல்லனவற்றை எடுத்துக்கொண்டார். அவற்றில் உள்ள தீயவற்றை தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். அவரை ஹிந்து மதத்தை சாராதவர் என்று சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். வர்ணாசிரமம் தேவை என்று சொன்னவர் காலப்போக்கில் அம்பேத்கருடன் உடன் நிகழ்ந்த உரையாடல்களுக்கு பின்னர் கலப்பு திருமணம் செய்யதோர் என்னை காண வராதீர்;அப்படி வந்தால் என் ஆசீர்வாதம் உங்களுக்கு இல்லை என்றும்,பீகாரில் தீண்டாமையை பின்பற்றியதால் தான் மக்கள் இறந்து போனார்கள் என்றும் குறிக்கிற அளவுக்கு மாற்றம் உற்றார். காந்தி இருக்கிற கட்டமைப்பை முழுக்க உடைத்துக்கொண்டு புரட்சி செய்கிற மனோபாவம் கொண்டவரில்லை. பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் முறையில் இருந்தே படிப்படியான மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்று உறுதியாக நம்பியவர். காங்கிரஸ் என்கிற பெயரே சும்மா நடக்கும் வருடாந்திர கூட்டத்தை குறிக்க தான் பயன்பட்டது. அதை எளியவர்களின் கட்சியாக காந்தி மாற்றினார். மக்களைக்கொண்டு வரலாற்றை கட்டமைக்கும் அற்புதம் அவரால் நிகழ்ந்தது. எந்த ஆயுதமும் இல்லாத எளியவர்கள் வலிமையான அன்பெனும் ஆயுதமேந்தி தன்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்று உறுதியாக செயல்பட்டார்கள். காந்தி வந்த பிறகு விடுதலைப்போரில் ரத்தம் சிந்தியவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதே அவரின் போராட்ட முறையின் தாக்கத்தை காட்டும் காந்தி நவீனமயம் பேராசைக்கு வழிவகுப்பதை கண்டு அஞ்சினார்; அரசின்மைவாதியாக ஆட்சி அதிகாரங்கள் ஒரு மையத்தில் குவியக்கூடாது என்று அவர் விரும்பினார். கிராம சுயாட்சியை அவர் வலியுறுத்தினார். சாதியத்தின் ஊற்றுக்கண்களாக கிராமங்கள் தொடரும் என்று அஞ்சி நேருவும்,அம்பேத்கரும் அந்த மாற்றத்தை செய்ய மறுத்தார்கள். அரசியல் வாழ்வில்,தான் கொண்ட வாழ்வில் எல்லாவற்றிலும் ஒளிவுமறைவற்ற தன்மையை காந்தி கைக்கொண்டார். தனது குடும்பத்தை பதவி ஈட்டும் மையங்களுக்கு அவர் துரிதப்படுத்தவில்லை. தன் மகன்களில் ஒருவரை தென் ஆப்ரிக்காவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட அனுப்பித்தான் வைத்தார். காந்தி யாரையும் நிராகரித்தது இல்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடக்கும்,தொடர்ந்து உங்களோடு உரையாடுவார். நீங்கள் அவரை தாங்கள் நினைப்பது சரியென்று உணரவைக்க வேண்டும். ஒரு பிடிவாதக்காரர் அவர். காந்தியின் மிகப்பெரிய தோல்வி மற்றும் அவரை தனித்து இந்திய வரலாற்றில் நிற்க வைப்பது மதவாதத்துக்கு எதிரான அவரின் போர். ஹிந்துக்களுக்கு ஆதரவானவர் அவர் என்றால் ஏன் ஹிந்து மதவாதிகள் அவரை கொல்ல திட்டமிட்டார்கள். வெறுப்புக்கு நடுவே அன்பை,சக மனிதன் மீதான மனித நேயத்தை உரக்க சொன்ன அந்த மனிதனுக்கு கிடைத்தது சில தோட்டாக்கள் மற்றும் கோட்சேவை மாட்டிவிட்ட பாவி எனும் பட்டம் தான் . இன்றைக்கு இந்தியா என்கிற தேசம் உயிர்த்திருக்கிறது என்றால் ஹிந்துத்வா கோட்பாட்டால் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டிய காங்கிரசை மீட்ட காந்தியும்,நேருவுமே அதற்கு காரணம். அப்படியே பிரதியெடுப்பது அவரைப்பற்றி நமக்கு சரியான புரிதல் இல்லை என்றே கொள்ளவைக்கும். செய்யும் செயல்களில்,பொது வாழ்வில் அறம் சார்ந்து இயங்குதல்,எளிய மக்களுக்காக குரல் கொடுத்தல்,பிரதிபலன் எதிர்பாராத வாழ்க்கை,மனசாட்சியின் படி தொடர்ந்து இயங்குதல்,திறந்த மனதோடு இருந்தாலும் நம்மின் வேர்களை விடாமல் இருத்தல் என்று காந்தியுடன் நாம் நடத்த வேண்டிய உரையாடல்கள்,காந்தி என்கிற புனித பிம்பத்தை தாண்டி எளியவராக அவரை செலுத்திய அகக்குரலை அறத்தை நாமும் கைக்கொள்வது முக்கியம். [] காந்தி லூயிஸ் பிஷருடன் உரையாடிக்கொண்டு இருந்தார். “உண்மையான கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டை பின்பற்றி இருந்தால் உலகப்போர்கள் ஏற்பட்டு இருக்காது.” என்று வருத்தம் தோய சொன்ன பொழுது பிஷர் “உங்களுக்கும் அதே நிலை வருமென்று எண்ணுகிறீர்களா ?” என்று கேட்டார். காந்தி யோசிக்காமல் ,”என் தேசம் என்னுடனில்லை. என் குரலை கேட்பார் யாருமில்லை” என்றார். ஆட்சியில் நேர்மை என்பதையும்,ஒழுக்கம் என்பதையும் அதிமுக்கியமாக கருதிய அவர் வெள்ளையர் என்கிற பொது எதிரியை எதிர்த்து வென்ற பிறகு காங்கிரஸ் என்கிற இயக்கம் தேர்தல் அரசியலில் அதே பெயரில் ஈடுபடக்கூடாது. கட்சியை கலைத்து விடுங்கள் என்றார். கேட்கத்தான் ஆளில்லை. எல்லாவகையான வெறுப்பரசியலையும் நிராகரித்த காந்தி இன்றைக்கு அவசியத்தேவை. காந்தியின் இந்த வரிகள் சரியாக இருக்கும் ,”ஜன்னல்களும்,கதவுகளும் மூடிகொண்ட வீட்டில் நான் வசிக்க விரும்பவில்லை. உலகின் அனைத்து தேசங்களின்,நிலங்களின் கலாசாரக்காற்றுகள் பாயுமாறு திறந்திருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவைக்கொண்ட ஒரு வீட்டையே நான் விரும்புகிறேன். அதே சமயம் அவற்றில் எவ்வொன்றாலும் நான் வேரோடு பிடுங்கி எறியப்படுவதை விரும்பவில்லை !” 87 சிவாஜி எனும் சிம்மம் ! ஒக்ரோபர் 1, 2013 சிவாஜி கணேசன் – சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கலைஞன். தமிழ்நாட்டின் தமிழ் அவர் வருவதற்கு முன் சினிமாவில் எப்படி இருந்தது என்று நீங்கள் அன்றைய படங்களை பார்த்து இருந்தால் நொந்து போவீர்கள். அந்த சிம்மக்குரல் அதை புரட்டிப்போட்டது. உச்சரிப்பு என்பதையும்,வெளிப்படுத்தல் என்பதிலும் பலரும் அவரைத்தான் திருட்டுத்தனமாக பிரதி எடுத்தார்கள். பானர்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை . சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,”நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !” என்றாராம் கம்பீரமாக அண்ணாவின் ‘சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ‘ சிவாஜி’ என்று பட்டம் தர வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார். திமுகவை விட்டு சிவாஜி விலகியதும்,”நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர்!” என்று கட்சியினர் சொல்ல ,”என்ன பேசறீங்க? அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டித்தான் அதுக்கு பெருமை அப்படிங்கற மாதிரி இருக்கே இது. ” என்று அண்ணா வேகமாக மறுத்திருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இறுதிக்காலம் வரை இருந்தது. நிறைவேறத்தான் இல்லை. என்றைக்கும் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக போக மாட்டார். ஒருமுறை மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் இவர் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் அதிகாலை மூன்று மணிக்கு சூட்டிங் என்றார்கள், இவர் மேக்கப் உடன் வந்து நின்றிருந்தார். யாரும் வந்திருக்கவில்லை. லேட்டாக வந்து தலை சொரிந்தவர்களை பார்த்து “நாளைக்கு மூன்று மணிக்கு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம்” என்றாராம் கூலாக. ஒரு வசனத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்து காட்டினால் போதும் அப்படியே சொல்லி நடித்து விடுவார் “நீயும் நானுமா.. கண்ணா நீயும் நானுமா ? ” பாடலை டி.எம்.எஸ் அவர்களை பலமுறை பாடச்சொல்லி நடித்திருக்கிறார். “ஏன் ?” என்று கேட்டதற்கு “ஒவ்வொரு சரணத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி காட்டியிருக்கார் டி.எம்.எஸ். அவர் பாடின பாட்டுக்கு நான் நியாயம் பண்ணனும் இல்லையா ?” என்று கேட்டாராம். யாருக்கும் வாழ்த்து சொல்ல போகாத காமராஜர் கொட்டும் மழையில் இவரைத்தேடி வந்து மாலை போட்டுவிட்டு போகிற அளவுக்கு இருவரும் நெருக்கம். நயாகரா நகரத்தந்தையாக பண்டித நேருவுக்கு பின்னர் பொறுப்பேற்க வைக்கப்பட்ட இந்தியர் இவர் தான். திலீப் குமார் ஹிந்தி திரைப்பட விழாவில் சிவாஜியை அவரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். “உங்க அளவுக்கு பெரிய நடிகரா ?” என்று அவரின் மகன் கேட்க அவர் அவசர அவசரமாக தலையசைத்து மறுத்து ,”எங்களுக்கெல்லாம் பல மடங்கு மேலே !” என்று சொல்லி கைகளை மேலே உயர்த்தி காண்பித்து இருக்கிறார். [] சிறந்த நடிகருக்கான விருது எப்பொழுதும் அவருக்கு வழங்கப்பட்டதில்லை. ‘தேவர் மகன்’ படத்துக்கு ஸ்பெஷல் ஜூரியின் விருது தரப்பட்ட பொழுது கம்பீரமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘செவாலியே’ விருதுக்கு பிறகு, தமிழகத்துக்கான முதல் தாதா சாகேப் பால்கே விருது இந்த மகத்தான கலைஞனுக்கு வழங்கப்பட்டது. அறுபதில் கெய்ரோ நகருக்கு சிவாஜி ஆசிய ஆப்ரிக்க நடிகர்களின் விழாவுக்கு போயிருந்தார். இவரை ஏதோ தொழில்நுட்ப கலைஞர் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான விருது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு என்று அறிவிக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவேகத்தில் விழப்போன இவரை நடிகை பத்மினி தான் தாங்கிப்பிடித்தார். நடிப்பின் பால நூல்களில் ஒன்றான ஸ்டெனிஸ் லாவோஸ்கி தியரி நூலில் ‘அறுபத்தி நான்கு முகபாவங்களை காட்டும் கலைஞர்’ என்று குறிப்பிடப்படுவது சிவாஜி தான். “நடிப்பு என்பது புலி வேட்டைக்கு போகிற மாதிரி,நெத்தியில் குறி பார்த்து சுடணும். இல்லைனா புலி உன்னை சாப்பிட்டுடும். அந்த பயம் இந்த நாற்பது வருசமும் என் அடி வயித்தில் இருக்கு. அதான் இன்னமும் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு போறேன். ” என்ற அவரின் வரிகளை அவர் எப்படி தன் கலையை மதித்தார் என்பதற்கு சாட்சி. சிவாஜியின் மரண ஊர்வலம் . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் ஆவேசத்துடன் ” இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று கதறினார். நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நிறைய நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதே சிவாஜி என்னும் மகாக் கலைஞனின் பெருமைக்குச் சான்று. 88 ரூமி எனும் கவி ராட்சசன் ! செப்ரெம்பர் 30, 2013 ஜலாலுதீன் ரூமியை தெரியுமா உங்களுக்கு ?எழுநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் இந்த பாரசீக கவிஞரின் கவிதைகள் உலகை வசீகரிக்கின்றன.அவரின் சொன்ன புதையல் கதையை தான் நீங்கள் முகவரி படத்தில் கேட்டு இருப்பீர்கள்.அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மாற்று மொழி கவிஞர் என்கிற சிறப்புக்குரியவரும் இவரே. காதலை பற்றி ரூமி சொன்னதை தான் நம்மூரில் பலபேர் ரொம்ப லேட்டாக சொல்லி கைதட்டல் வாங்குகிறார்கள் -அவர்கள் ரூமியை காப்பி அடிக்கிறார்களா என எனக்கு தெரியாது .அவரின் ஒரு காதல் கவிதையில் லைக் திஸ் என்கிற ஒரு வரி காதலில் சொல்ல முடியாத எல்லா உணர்வையும் சொல்லாமல் அந்த வரி கவிதை முழுக்க கடத்தும்.மரணம் வாழ்வு ,தன்னை உணர்தல் ,சுபி ,தத்துவம் என எதை தொட்டாலும் அதில் அவரின் தனித்துவம் அலாதியானது .அவரின் கவிதைகளின் தலைப்புகளே கிறங்கடிப்பவை.தமிழில் அவரின் கவிதைகள் முழுமையாக மொழிபெயர்க்க பட்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை .அவரின் பிறந்தநாள் இன்று. அவரின் இரண்டு கவிதைகள் என் மொழி பெயர்ப்பில் சிற்பி நான் உருவத்தை உருவாக்குபவன் நான் உருகும் ஒவ்வொரு கணத்திலும் உன்னத சிலைகள் வடிக்கிறேன் நான் உன் முன்னால் அவற்றை உருகவிட்டு உயிர்க்கிறேன் நான் தீராத தீர்க்க சிலைகள் நூறை உன் ஆன்மாவால் நிரப்பி மகிழ்கிறேன் நான் உன் ஆசைமுகம் காணுகையில் அச்சிலைகளை ஆடி வரும் நெருப்பில் இடுகிறேன் நான் உன்னுள் உமிழ்ந்து என் ஆன்மா ஆவியாகிறது என் ஆன்மா உன் சுகந்தத்தை சுகித்து ஜீவிக்கிறது நான் உமிழும் உதிரத்துளி ஒவ்வொன்றும் உன்னோடு நான் மோகிப்பதாக பூமிக்கு செய்தி சொல்கிறது சேறும்,நீரும் நிறை வீட்டில் என் மனம் மங்கிக்கிடக்கிறது மாசிலாதவளே இல்லம் வருக அல்லது என் இன்னுயிரை போக விடுக ! -ஜலாலுதீன் ரூமி [] மீண்டெழுதல்அதியின்ப அதிகாலையில் நான் இக்கணத்தில் காதல் கொள்ள மூன்று முத்தங்கள் தந்தாய் நீ இந்த கணம் நகர்கிறது என உணரும் முன்னே கனவுகளை காதல் பொங்கும் இதயத்தின் இடுக்குகளில் தேடிக்கொண்டு தவித்தேன் ! கனவுகளை கண்ட பொழுது காதல் நிலா என்னை கடத்தி சென்றது உறுதியாக எழுந்து நிற்கையில் என்னிதயம் வழுக்கி உன் வார்த்தைகள் படும் பாதையில் பாடி விழுகிறது காதலுக்கும்,கசியும் உள்ளத்துக்கும் நடுவே எல்லாமும் பட்டு பட்டு பரிதவிக்கிறது பெருநினைவுகள் காணாத உன் கரங்களால் என்னை கர்வமுற வைக்கிறாய் கண்டடைய முடியாத உன் இதழால் என்னை நிறைக்கிறாய் தெரியாத உன்னால் திரிகிறேன் நான் ! என்னை உயிர்த்திருக்க வைக்கும் உன்னதமே ! முத்தங்கள் முடியட்டும் என நீ சொல்லும் காலம் வரும் நீ என்னை அலட்சியம் செய்யும் கணங்களிலும் கனிந்து காதல் செய்வேன் நான் கண் கவியும் கணமேனும் கண்டுகொள் என்னை காரிகையே !   89 உயிர் காத்த உத்தமர் பாஸ்டர் ! செப்ரெம்பர் 28, 2013 லூயிஸ் பாஸ்டர் மறைந்த தினம் இன்று .மனிதர்கள் கொத்து கொத்தாக நோய்களில் செத்துப்போவது கடவுள் தரும் தண்டனை என பலகாலம் நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள் . ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும் நோய்களுக்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும் நினைக்கவில்லை . திராட்சைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பீர் சீக்கிரம் கெட்டுப்போனது . விடாது ஆய்வு செய்தார் பாஸ்டர் .நொதித்தலுக்கு காரணமான கண்டறிந்தார் . நோய்களை பரப்பும் நுண்ணுயிரிகளை கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார் . நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றை கண்ணால் காண முடியாது மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றை காண முடியும் என்றும் சொன்னார். குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றை கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.  .பாலை கெடாமல் காக்க நன்றாக சூடாக்கி உடனடியாக குளிர வைக்கும் [பாஸ்சரைசேஷன் இவர் உருவாக்கியதே . வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். நன்றாக பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையை கொத்தாக வெட்டி எடுத்தல் என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை. மனிதர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்து திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே  நோய்க்கு காரணம் என்று உணர்ந்தார். நாயின்  உமிழ் நீரைத் தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பெற்ற பதினான்கு இடங்களில் கடிபட்டிருண்ட ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி பதினான்கு நாளில் அவனை குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. மருத்துவர்கள் கையுறை அணிவது,அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது . [] ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாக செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளை கொன்று மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் மனிதர். ஐரோப்பா முழுக்க பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டு புழுக்களை பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள் இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்கு போனது என்றால் இவரை திருமண நாளன்று காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி போனார்கள்.அங்கே கூலாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். “உனக்கு கல்யாணம் இன்னைக்கு !” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். அவரை நினைவு கூர்வோம் 90 பகத் சிங் எனும் மாவீரன் ! செப்ரெம்பர் 28, 2013 பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை. [] பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது. லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள். புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங். வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள். பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை. அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங். சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங் பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார் சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-நன்றி தமிழ் தி ஹிந்து அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான் 91 நாகேஷ் எனும் நாயகன் ! செப்ரெம்பர் 26, 2013 நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது. அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர் தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர் இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர் உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம் சேர்ந்திருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும் என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார் மனிதர். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே” என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார் சிவாஜி மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார். நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின் அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார். மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார் ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் ! “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார் அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லைநாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது. அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர் தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர் இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர் உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம் சேர்ந்திருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும் என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார் மனிதர். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே” என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார் சிவாஜி மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார். நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின் அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார். மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார் ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் ! “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார் அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லைநாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது. அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர் தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர் இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர் உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம் சேர்ந்திருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும் என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார் மனிதர். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே” என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார் சிவாஜி மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார். நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின் அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார். மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார் ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் ! “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார் அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லை 92 சாகும்வரை காதலிப்போம் சூப்பர் மேன் ! செப்ரெம்பர் 25, 2013 ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் என்னென்ன இருக்கும்? ஹீரோ முதலில் கலக்கி எடுப்பார். பின்னர் தோல்விகள், அதிலிருந்து மீண்டு வருவார்… இதானே? நடுவில் கொஞ்சம் காதல், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கலந்துவிட்டால் ஒரு சூப்பர் ஹிட் படம் தயார். உண்மையான சூப்பர் ஹீரோவில் ஒருவர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். சின்ன வயதிலேயே சாகசம் என்றால் மனிதருக்கு ரொம்பவே விருப்பம். அட்டைக்கத்திகள் செய்துகொண்டு சகோதரருடன் சண்டை, பனிச்சறுக்கு, ஒரு குட்டி விமானத்தில் ஏறி ஹாயாக அட்லாண்டிக் கடலின் மீது ஒரு த்ரில் பயணம்… வாழ்க்கையில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்… அது தான் மனிதரின் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டார். சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க நிறைய பேர் யோசித்தார்கள்; சூப்பர்மேன் வேடத்தில் நடித்த பலர் அகால மரணம் அடைந்திருந்தார்கள். அதற்கு முன் ஜார்ஜ் ரீவ்ஸ் என்பவர் குண்டடிபட்டு இறந்திருந்தார். நம்ம ஹீரோவுக்கு தான் சாகசம் பிடிக்குமே. விண்ணப்பம் போட்டுவிட்டார். சில்வெஸ்டர் ஸ்டால்லோன், கிளின்ட் ஈஸ்ட்வுட் முதலிய மாபெரும் நாயகர்களை பின்னுக்கு தள்ளி ‘சூப்பர் மேன்’ வாய்ப்பைப் பெற்றார் நடிப்பில் ஆக்ஷனில் பின்னி எடுப்பார் இவர்; டூப் போடலாமே என்றால், “நோ தேங்க்ஸ்!” என்று திடமாக ஒரு வரியில் பதில் வரும். சூப்பர் மேன் படத்தை இயக்குகிற அளவுக்கு மனிதர் வளர்ந்தார். ஹீரோ வேடம் என்றில்லை, எந்த வேடம் நல்ல தீனி என்று தோன்றினாலும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிடுவார். முதல் திருமணம் முறிந்து போய்விட, ஒரு ஹோட்டலில் பாடிக்கொண்டு இருந்த டானாவிடம் கொஞ்சம் காதல், ஒற்றை ரோஸ், ட்ரேட்மார்க் புன்னகை என்று போய் காதலை சொன்னார். அவரும் ஓகே சொன்னார். இப்படி ஒரு ஜோடி இல்லை என்கிற அளவுக்கு உலா வந்தார்கள். சூப்பர் மேன் பட ஷூட்டிங் – இவருக்கு மிகவும் பிடித்த குதிரையேற்ற காட்சி. குதிரை கொஞ்சமாக திணறியது; மனிதர் தலைகுப்புற விழுந்தார். முதுகெலும்பு உடைந்து போய்விட்டது. டாக்டர்கள் கஷ்டப்பட்டு ஓட்ட வைத்தார்கள். நுண்ணிய அறுவை சிகிச்சை. எல்லாம் போய் விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். காரணம் கழுத்துக்கு கீழே ஒன்றும் அசையாது; சூப்பர் மேன் இப்பொழுது சோக மேன் என்று பத்திரிகைகள் எழுதின. டானா வந்தார்; கரங்களை பற்றிக்கொண்டார். மனிதருக்கு ஒன்றும் உணர முடியாது. கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லையே. கண்கள் பேசின, “நானிருக்கிறேன் உங்களுக்கு!” என்றது அவரின் பார்வை. ஒன்பது வருடம் இப்படித்தான் வாழ்க்கை போனது. நடுவில் ஒரு முறை இதயம் ஸ்ட்ரைக் பண்ணி நின்று விட்டது. போராடி மீட்டார்கள் இவரை. அரிதிலும் அரிதான ரத்த குறைபாடு வேறு துரத்திக்கொண்டு இருந்தது. புன்னகை மட்டுமே ரீவ்ஸ் முகத்தில்.. சூப்பர் ஹீரோ பாருங்கள்! ['சூப்பர் மேன்' படத்தில் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்] என்ன பண்ணப்போகிறார் மனிதர் என்று பார்த்தால் படம் இயக்க கிளம்பிவிட்டார். ‘In the Gloaming’ என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். எலும்பு மஜ்ஜை குறைபாடு வேறு குடைய ஆரம்பித்த நிலையில் ரீவ் அறக்கட்டளையைத் தொடங்கி ஸ்டெம் செல் ஆய்வுக்கு பல மில்லியன் டாலர்களை திரட்டிக் காண்பித்தார். நம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் எழுதினார். தன்னம்பிக்கை பொங்க போகிற இடமெல்லாம் பேசினார், “ஒன்றும் நடக்கவில்லை எனக்கு!” என்று கம்பீரமாக சொல்வார். [கிறிஸ்டோபர் ரீவ்ஸ்] மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விழா, அதற்குப் பிறகு ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்று இவரை பேச அழைக்காதே இடமே இல்லை என்கிற சூழல் உருவானது. மாற்றுத் திறனாளிகளுக்கான படத்திற்கு கம்பீரமாக குரல் கொடுத்து எம்மி விருது வென்றார் . தன்னைப் போலவே முடங்கியும் ஜெயித்த ஒரு மனிதனின் கதையை The Brooke Ellison Story எனும் படமாக இயக்கினார். எல்லா இடத்திலும் டானா கண்டிப்பாக கூட இருந்தார். மாரடைப்பு வந்து இறப்பதற்கு முன் கூட Everyone’s Hero என்கிற படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். “நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்!” என்று சொல்லி சாதித்து காண்பித்த இவர் இப்படி இருக்க காரணமான டானா, இவரின் மரணத்துக்கு பின்னும் இவரின் பணியை தொடர்ந்தார். டானா இவரை விட்டு இக்காலத்தில் நீங்கவே இல்லை. “எது தங்களை செலுத்தியது ?” என்று டானாவிடம் கேட்ட பொழுது, “எல்லையில்லா காதல் மற்றும் எதையும் பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை “ என்றார். இதுவல்லவோ காதல்! (செப்.25 – கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பிறந்தநாள்) 93 நெருடா எனும் காதலன்,கவிஞன்… செப்ரெம்பர் 23, 2013 பாப்லோ நெரூடாவின் நினைவு தினம் இன்று. காதல் கவிதைகளும்,சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர் இவர். சிலி நாட்டில் தோன்றிய நெருடா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரயில்வே ஊழியர் இளம் வயதிலேயே அவர் தவறிவிட குடும்பத்தை காப்பான் பையன் என்று எதிர்பார்த்தார்கள். இவர் பிரெஞ்சு படித்துவிட்டு ஆசிரியர் ஆகலாம் என்று முயன்றார். ஆனால், மிஸ்ட்ரலின் பழக்கம் அவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இவர் கவிதை எழுத வீட்டில் கடும் எதிர்ப்பு. செக் நாட்டை சேர்ந்த கவிஞரின் பெயரை புனைப்பெயராக்கி நெரூடா என்கிற பெயரில் குடும்பத்துக்கு தெரியாமல் கவிதை எழுத வந்தார். அதுவே பின்னர் வாழ்வாகிப்போனது.அவரின் கவிதைகளில் காதலும்,சோகமும்,எளிய மக்களின் வாழ்க்கையை பாடும் வரிகளும் நிற்பி வழிந்தன. எண்ணற்ற நாடுகளில் தூதுவராக பணியாற்ற அனுப்பிய அக்காலத்தில் வறுமை அவரை துரத்தவே செய்தது. அங்கெல்லாம் தன்னின் சோகங்களை தாண்டி அற்புதமான கவிதைகளை எழுதினார் அவர். இந்தோனேசியா நாட்டில் தனிமையில் வாடிக்கொண்டு இருந்த பொழுது சந்தித்த பெண்ணுடன் காதல் பூண்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். ‘கவிதை எழுதுபவனும்,ரொட்டிக்காரனும் ஒன்றே. இருவரும் வேற்றுமைகள் பார்க்க கூடாது !’ என்று எழுதிய அவர் அப்படியே இருந்தார் . உலகம் முழுவதும் ஒரே தோலின் நிறம் தான் என்று எழுதினார் அவர். மக்களை ஒடுக்கிய அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்து அடிக்கடி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழலும் அவருக்கு உண்டானது. அவரின் கவிதைகள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக பாட்டாளிகளை ஒன்று திரட்டியது . ஒரு முறை விடேலா எனும் சர்வாதிகாரிக்கு எதிராக தயாரித்த உரையில் சித்திரவதை முகாமில் எத்தனை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள் என்று பெயர் பட்டியலை வாசித்தார் மனிதர். சீக்கிரமே விடேலாவின் ஆட்சி கவிழ்ந்தது. எத்தனையோ துன்பங்கள்,தொடர்ந்து துரத்திய அரசாங்கங்கள் எல்லாமும் அவரை வாட்டிக்கொண்டு இருந்த பொழுதும் மனித குலம் ஒன்று சேரும். போர்கள் நீங்கி உழைப்பாளிகள் உயர்வார்கள் என்று நம்பினார் அவர். அதனால் நம்பிக்கையின் நிறமான பச்சை நிறத்தில் தான் அவர் எப்பொழுதும் எழுதினார். சார்த்தருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பொழுது இதை முதலில் நெருடாவுக்கு அல்லவா கொடுத்து இருக்க வேண்டும் என்று அப்பரிசை ஏற்க மறுத்தார் அவர். நெருடாவுக்கு 1971 இல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது. அறுபது வருடங்களுக்கு முன் ஒரு லட்சம் தோழர்கள் முன் கரகரத்த கவிதை வாசித்த புரட்சிக்காரர் அவர். பல வருடம் காத்திருப்புக்கு பின் அலண்டே காலத்தில் நாடு திரும்பி எழுபதாயிரம் மக்கள் முன் கவிதையை வாசித்தார் என்றால் அவர் மீது மக்களுக்கு எத்தகு பற்று இருந்தது என உணரலாம். புற்றுநோயால் இறந்து போன இவரின் மரணத்தின் பொழுது மக்கள் வந்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனும் பினோசெட் எனும் சர்வாதிகாரியின் உத்தரவை மீறி லட்சகணக்கான மக்கள்,ஊரடங்கை உடைத்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கவிதை வெறுமனே கவர்வதற்கு மட்டும் இல்லை ,கட்டுப்பாடுகளை உடைப்பதற்கும் தான் என பாடிய இவர் வாழ்ந்த மண்ணை தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும் [] அவரின் ‘உங்களுக்கு சில சங்கதிகள் சொல்ல வேண்டும்’ கவிதையின் வரிகள் இவை : துரோகத்தை தந்த தளபதிகளே என் இறந்த வீட்டை பாருங்கள் என் உடைந்த தேசத்தை பாருங்கள் மலர்களுக்கு பதிலாக நீங்கள் மூட்டிய தீயால் தகிக்கும் உலோகம் வழியும் வீடுகளை பாருங்கள் இறந்த எம் குழந்தைகளின் நெஞ்சத்தில் இருந்து துப்பாக்கிகள் துடித்து எழும் உங்கள் பாவங்களில் இருந்து பட்டு தெறிக்கும் குண்டுகள் பிறக்கும் உங்கள் நெஞ்சில் அவை தைக்கும் நீங்கள் கேட்பீர்கள் என் நாட்டின் பெருங்கனவுகளையும்,பெரிய எரிமலைகளையும் இலைகளையும் பாட மாட்டாயா என்று உங்களுக்கு சொல்வேன் ரத்தம் வழியும் என் நாட்டின் தெருக்களை வந்து பாருங்கள் ரத்தம் பாயும் என் தெருக்களை வந்து பாருங்கள் -இப்படி எழுதும் நெரூடா கீழே இப்படியும் எழுதுவார் நிழலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே ரகசியமாக உன்னை இருட்டின் சங்கதிகளை விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன் பூவாத மலரை நேசிப்பதை போல உன் மீது ப்ரியம் கொள்கிறேன் மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை சேமிக்கிறேன் சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன் உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம் நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன் 94 கம்யூனிஸ்ட் சாப்ளின் ! செப்ரெம்பர் 19, 2013 அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்த கதை சுருக்கமாக உங்களுக்காக சாப்ளின் வாழ்க்கை முழுக்க வலிகள் நிரம்பியது. அப்பாவின் பாசம் என்னவென்று தெரியாது; அம்மா பைத்தியமாகி அரசு பராமரிப்பில் வளர்ந்தார்.அன்புக்காக ஏங்கிய அவரின் முதல் காதல் கிட்டாமலே போனது. வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும்,வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர். தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார். ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர்,கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின. அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் இதே தினத்தில் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,”அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் “”என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது.சாப்ளின் ,”நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே!”என்றார்.பின் ஏசுவேஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர் தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார். [] அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் !இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா.நாட்டைவிட்டே அவரை துரத்திய அமெரிக்கா அவர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன் ஆஸ்கர் வழங்கியதன் மூலம் தனக்கு பெருமை தேடிக்கொண்டது தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொண்டது 95 கொடுமுடி கோகிலம் ! செப்ரெம்பர் 19, 2013 கொடுமுடி பாலாம்பாள் சுந்தரம்பாள் என்று அறியப்பட்ட கே.பி.சுந்தரம்பாள் தமிழ் நாடக மற்றும் திரையுலக வரலாற்றில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் தனிப்பெரும் பெண்மணி. ஒற்றை ஆளாக பிள்ளைகளை வளர்க்க முடியாமல் ஆற்றில் குதித்து இறக்க அம்மா பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போக கே.பி.எஸ் அவரை தடுத்து ,”நான் உங்களை காப்பாத்துறேன் !” என்று சொல்லிபாட வந்தார். கோயில்களில் வறுமைக்காக பாட ஆரம்பித்த பொழுது அவருக்கு வயது ஐந்து. ஓரிரு நாடகங்களில் நடித்து நாடகத்தின் மீது தீராத காதல் உண்டானது. நல்லதங்காள் நாடகத்தில் இவர் பாடும் பசிக்குதே! வயிறு பசிக்குதே பாடல் வெகு பிரபலம். அம்மாவின் சொல்லை மீறி ரயிலேறி நாடகங்களில் நடிக்க போய் விட்டார். சென்னைக்கு மகள் போனது தெரியாமல் அம்மா மகள் இறந்துவிட்டாள் என்று காரியமே செய்துவிட்டார். பதினெட்டு வயதில் இலங்கை போனார். இரண்டு வருடங்களில் கொண்டாடி தள்ளிவிட்டார்கள் அங்கே இருந்த மக்கள். இவரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பில் பிள்ளைகளுக்கு சுந்தரம்பாள் என்று பெயர் வைத்தார்கள். ஐந்தரைக்கட்டை குரலில் கே.பி.எஸ் பாடுவதற்கு இணை யாருமில்லை என்ற பொழுது தான் அவருக்கு இணையாக பாடிய கிட்டப்பாவும் ஐவரும் மோதிக்கொண்டார்கள். அந்த மோதலின் முடிவில் காதல் அரும்பியது. சேர்ந்து நாடகங்களில் நடித்தார்கள். பர்மாவுக்கு போன நாடக குழுவை பார்த்து அங்கே இருந்த நபர் “இவ்ளோ கருப்பான பெண்ணை யார் பார்ப்பாங்க ?” என்று கேட்டார். வசூல் மூன்று லட்சம் வந்தது ! [] கிட்டப்பா ஏற்கனவே மணமானவர்;குடிப்பழக்கம்,இன்ன பிற தீய பழக்கங்கள் அவரை படுக்கையில் தள்ளின. கே.பி.எஸ் அவருடன் ஏற்பட்ட மனவருத்தம் அவரின் கட்டாயத்தில் நடிக்காமல் சில காலம் இருந்தார். கிட்டப்பா மறைந்த பொழுது அம்மாவுக்கு வயது இருபத்தைந்து ! நடிப்பே வேண்டாம் என்று இருந்தவரை காந்தி தேச சேவைக்கு வாருங்கள் என்று அழைத்தார்.”ஒட்டு உடையோர் எல்லாம் கேட்டிடுங்கள் !” என்று அம்மா பாடினால் கூட்டம் அலை மோதும். நந்தனார் படத்தில் நடிக்க அன்றைக்கு இந்தியாவிலேயே எந்த நடிகையும் வாங்காத ஒரு லட்சம் சம்பளம் பெற்றார். அதற்கு பின் நடித்த அவ்வையார் படத்தில் நாற்பத்தி எட்டு பாடல்கள்,அதில் இவர் பாடியது மட்டும் முப்பது பாடல்கள். கிட்டப்பா மறைவுக்கு பின்னர் யாருடனும் இணைந்து நடிக்க மறுத்து அவ்வையார்,கவுந்தி அடிகள் என்கிற மாதிரியான பாத்திரங்கள் ஏற்றே நடித்தார். தெலுங்க கீர்த்தனைகளில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் இசையுலகில் தமிழை புகுத்தியதில் கே.பி.எஸ் சுக்கு பெரும்பங்கு உண்டு. காமராஜர் அவரை மேலவை உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார். அப்படி கிடைத்த எல்லா பணத்தையும் மக்கள் நலனுக்கு செலவிட்டார் அவர் என்பது வரலாறு. எழுபத்தி இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அந்த வெண்கலக்குரல் சப்திப்பதை நிறுத்தியது இன்று தான் ! 96 அகராதி மனிதர் சாமுவேல் ஜான்சன் ! செப்ரெம்பர் 18, 2013 ஆங்கில மொழியை உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள் என்று நமக்கு தெரியும். அம்மொழி அவர்களின் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயன்பாட்டில் அருகி இருந்தது என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பிரெஞ்சும்,லத்தீனும் அதன் இடத்தை பிடித்துக்கொண்டு சிரித்தன. பின்னர் மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன். சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. படிக்க புத்தகங்கள் வாங்கித்தரக் கூட காசில்லை, அந்த புத்தக வியாபாரியிடம். “வா மகனே! “ என்று உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் தந்தை. அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொண்டார் அவர். எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். இவரின் நேரமோ என்னவோ பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை,வறுமை மட்டுமே. இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல,கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள். [] பிரெஞ்சு அகராதி உருவாவதற்கு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். இருந்தாலும், நம்பிக்கையோடு ‘மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்’ என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி ஏகத்துக்கும் வேலை வாங்கி தொலைத்தது. செஸ்டர்பீல்ட் கனவானிடம் உதவி கேட்டார்; அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். காசநோய், விரை புற்றுநோய், பல்மோனரி பிப்ரோசிஸ், தௌரேட் சிண்ட்ரோம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறை போய் மீண்டதும் நடந்தது. எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்துபோயிருந்தார். மனிதர் அசரவில்லை. ஒன்பது வருடகாலத்தில் அந்த ஒற்றை மனிதரின் உழைப்பில் அகராதி எழுந்தது. இந்த புள்ளிவிவரம் அது எத்தகைய உழைப்பு என்பதை காட்டும். 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் செம தடியாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்து நாட்டை கலக்கி எடுத்தது. உலகம் முழுக்க மனிதரின் புகழ் பரவியது. பணமே தராத செஸ்டர்பீல்ட் கனவான், தான் உதவி இவர் அகராதியை முடித்தது போல கடிதங்கள் எழுதி வெளியிட்டார். இவர் மெல்லிய நகைச்சுவை இழையோட, “ஏழாண்டு காலம் உங்கள் வீட்டின் முன் காத்திருந்தும் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? “ என்று பொங்கிவிட்டார். அவரது அகராதி நூற்றி ஐம்பது வருடங்களுக்கு ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது.அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவிப்போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார். சாகிற வரை அவரை வறுமை தான் துரத்தியது. என்றாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன அவரின் வரிகளான,”மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்,குறைசொல்லிக்கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்பது அவரின் வாழ்வுக்கே பொருந்தும். ஆனால்,அந்த வாழ்வில் அவர் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார் என்பதே நமக்கான பாடம். சாமுவேல் ஜான்சன் என்கிற இணையற்ற இலக்கிய மேதைக்கு இன்று (செப்.18) பிறந்தநாள். அயராது பங்காற்றி ஆங்கில இலக்கிய உலகின் போக்கை மாற்றியவர் அவர் என இன்றைக்கு அவரை கொண்டாடுகிறார்கள். 97 எம்.ஆர்.ராதா எனும் புரட்சிக்காரன் ! செப்ரெம்பர் 17, 2013 மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா எனும் கலகக்காரனின் நினைவு தினம் இன்று. திருமாவேலன் அப்பாவின் எழுத்தில் இருந்து கொஞ்சம்,நான் வாசித்தது கொஞ்சம் என்று சேர்த்து தந்திருக்கிறேன். வாசியுங்கள் : ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு சட்டத்தை அரசு கொண்டு வந்த வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படிஅரசாங்கம் அஞ்சி இருக்குமா என்று தெரியவில்லை. நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று சொன்னால் ,”மனம் புண்படுபவர்கள் நாடகம் பார்க்க வர வேண்டாம் !” என்று அறிவிப்புகள் தந்தார். நாடகத்தின் பொழுது வீசப்படும் சகலத்தையும் அடுத்த நாள் ,”பேடிகள் விட்டு சென்றவை !” என்று காட்சிக்கு வைப்பார் எழுதப்படிக்க தெரியாது. பிறர் சொல்ல சொல்ல கேட்டே வசனங்களை மனப்பாடம் செய்வார். டைமிங்காக வசனங்கள் பேசுவது அவர் பாணி. இம்பாலா கார் ஒன்றை வாங்கி அதில் தன் ,மகனைக்கூட ஏற விடாமல் அதை இங்கிருந்து வைக்கோலை கிராமத்துக்கு ஏற்றி அனுப்புகிற வேலைக்கு பயன்படுத்தி இருக்கிறார் ;ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒருமுறை பயன்பாட்டுக்கு அதை கேட்ட பொழுது என்னை ஏற்றிக்கொள்ளவே தகுதி இல்லாத கார் அது ;அதிலேன் அவர் ஏற வேண்டும் ?”முடியாது போ “என்றாராம் கூத்தாடிக்கு பெண் கிடைக்காத காலத்தில் தன்னை மெக்கானிக் என உடனிருந்தவர்கள் சொல்லசொன்ன பொய்யை சொல்லியே திருமணம் செய்து கொண்டார் ;பின் இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் .அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே குடிப்பதை விட்டார் அவர். எம்.ஜி.ஆர் உடன் நடந்த மோதலை பற்றி “நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியைவெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?” என்று தனக்கே உரிய எள்ளல் தொனியில் சொன்னார். திருப்பதி போய் தர்ம தரிசனம் கிடைக்காமல் மனிதர் கோயிலையே வெடிகுண்டு வைத்து தகர்க்க பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அது வெடித்து ஒரு எண்பது பேர் காயமடைந்து விட போலீஸ் அதிகாரி நாடக முதலாளிக்கு தெரிந்த நபராக இருந்ததால் தப்பித்துக்கொண்ட பின் ,”சட்டம் எப்பவும் தூங்கிக்கொண்டு தான் இருக்கு ;அதை ரொம்ப தட்டி எழுப்பினால் மட்டும் தான் கொட்டாவி விட்டுக்கொண்டு எழும்பும் .”என்கிறார் “என்ன ரகசியமோ ,எனக்கு தெரிஞ்சவரையில் இப்போ சினிமா ரகசியம் ஒரு சாண் துணியில் இருக்கு .அந்த துணியிலே இருக்கு .அந்த துணியும் சென்ஸார் போர்ட் ன்னு ஒண்ணு இருந்து தொலையுதே அப்படின்னு இருக்கு !” என்று சென்சார் போர்ட் மீதும் பாய்ந்தார் மனிதர். காமராஜர் இவருக்கு புனித ஆடை போர்த்தும் நிகழ்வை செய்தார். “ஆடையில் என்ன புனிதம் இருக்கு ? போர்த்துபவர் புனிதர். அதனால் ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அண்ணா ஆட்சிக்கு வந்தால் இவர் தான் கலை அமைச்சர் என்றார் என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் இவரை வில்லனை போடாமல் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து அவரே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னை சுட சொன்னார் ராதா . மிகவும் புகழ்பெற்ற ஆச்சாரமான நீதிபதி ஒருவர் முன் இவரின் விதவையின் கண்ணீரை தடை செய்ய சொல்லி வழக்கு போன பொழுது இவரின் நாடகத்தை பார்த்து கண்ணீர் விட்டு ,”நீதான் அய்யா மார்க்கண்டேயன் !இப்படிப்பட்ட நல்ல கருத்துக்களை தொடர்ந்து நாடகத்தில் சொல்லு !” என்றார் .பின் பல வழக்குகளில் இருந்து வம்பு சண்டைக்காரர் ஆன இவரை அவர் காப்பாற்றவே அவரை தெய்வம் என சொல்லி கண்ணீர் விட்டார் எம்.ஆர்.ராதா பெரியார்,அண்ணா,சம்பத் எல்லாரும் உன் நாடகத்தை பார்க்க வந்திருக்கிறார்கள் ;இடமில்லை என்ற பொழுது ,”அவர்களை தரையில் உட்கார்ந்து பார்க்க சொல் !”எனக்கம்பீரமாக சொன்னார் .பார்த்து விட்டு நூறு திராவிட இயக்க கூட்டம் போடுவதும் ,ஒரு எம்.ஆர்.ராதா நாடகம் போடுவதும் ஒன்றே !”என அண்ணாவின் புகழ் மாலை இவர்மீது வந்து சேர்ந்தது [] மாணவர்கள் இவரைப்பார்க்க வந்தால் துரத்தி அடிப்பார். அவர்கள் சினிமா பார்க்க கூடாது என்று அழுத்தி சொல்வார். “எங்க வேலையை நாங்க பார்க்கிறோம் ;உங்க வேலையை நீங்க பாருங்க !” என்பது இவரின் வாதம் உலக பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என நாடகங்களில் முதன்முதலில் போட்டது இவர் தான் .போலீஸ் ஜீவனாந்ததை தேடிய பொழுது தன் நாடக அரங்கில் முதல் வரிசையில் மொட்டை அடித்து சந்தானம் பூசி,விபூதி இட்டு உட்கார வைத்திருக்கிறார் .நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்கிற கேள்விக்கு ,”இல்லாதவன் எல்லாருக்கும் அந்த சிந்தனை உண்டாவது இயல்பு தானே ?”எனக்கேட்கிறார் .அவரின் காதலுக்கும் இவரே தெரியாமல் கடிதத் தூது இவரே போயிருக்கிறார் .”என் வாழ்க்கை புரட்சி இதனால் விளைந்தது !”என ஜீவா குறும்பாக சொன்னாராம் “மக்கள் எவற்றையெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவற்றையெல்லாம் எதிர்ப்பது தான் புரட்சி ;காலம் முழுக்க எதிர்ப்பே என் வாழ்க்கையாகி போனது;கலைஞன் என்பவன் பஞ்சமா பாதகத்தில் பார்ட்னர் ;உண்மையான கலைஞன் ரசிகனுக்கு லஞ்சம் கொடுப்பவனாக இருக்க கூடாது .அறிவைக்கொடுப்பவனாக இருக்க வேண்டும் .” என்கிறார் ‘ ‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை’ என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்” என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார் 98 இன்று பல தகவல்-தென்கச்சி நினைவலைகள் ! செப்ரெம்பர் 16, 2013 தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நினைவு தினம் இன்று. நம் பக்கத்து வீட்டு அண்ணாச்சியின் குரல்,சிரிக்காமல் அற்புதமான நகைச்சுவைகளை சொல்லுதல்,எளிய மொழிநடையில் மிகப்பெரிய சங்கதிகளை தொட்டுவிட்டு போகுதல் என்று கலக்கி எடுத்தார் இவர். ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. பதினான்கு நான்கு வருடங்கள் ஓய்வு பெறும்வரை அதையே அவர் செய்தார்.தென்காஞ்சிபுறம் என்று அறியப்பட்டு பின் மருவி தென்கச்சி என்கிற ஊரின் பிள்ளையானஇவரின் வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்ததால் இவரை தென்கச்சி சுவாமிநாதன் என்று ஆசிரியர் மாற்றினார்.ஊரின் தலைவராகவும் ஏழு வருடங்கள் இருந்தவர் இவர். பின்னர் விவசாய நிகழ்ச்சிகளை வானொலிக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். ஒரு நாள் எண்பத்தி எட்டாம் வருடம் டீ சாப்பிட்டுக்கொண்டே நண்பர்களிடம் “தனியார் டிவி எல்லாம் வந்துடுச்சு. இனிமே நாம நிகழ்ச்சி தயாரிக்க பெருசா சிரமப்பட வேண்டியதில்லை” என்று இயல்பாக சொல்ல அது வானொலி இயக்குனர் காதுக்கு போனது. இவரை வாரம் ஒரு நேரம் என்று ஒரு நிகழ்வை ஒரு மாதத்துக்கு மட்டும் தொகுத்து வழங்க சொன்னார் அவர். பின்னர் இவருக்கு கிடைத்த வரவேற்பில் இவரே அதை பதினான்கு வருடங்கள் செய்ய வேண்டியதாக போய்விட்டது. [] குறிப்புகள் எழுதிக்கொண்டு பேசுகிற பாணியிலேயே இயல்பாக சொல்லிக்கொண்டே போகும் இவர் இறுதியில் ஒரு நகைச்சுவை துணுக்கை சொல்லி முடிப்பார். இவர் நிகழ்ச்சியை விட்டு விலகலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்த ஆரம்பகாலத்தில் அகவிழியர் அவரை காண வருவர். அவர்கள் அவரை தடவி பார்த்து உணர்ந்து கொண்டு ,”நீங்கள் நிறைய புத்தகங்கள் படிக்க முடியாத எங்களின் குறையை போக்கி விடுகிறீர்கள். ” என்று நெகிழ்ந்து சொல்லிவிட்டு போகவே அப்படியே அந்த ஊக்கம் இவரை செலுத்தி இருக்கிறது. ஓய்வு பெற்ற பின் சன் டி.வியில் இந்த நாள் இனிய நாள்,சக்தி விகடனில் கல கல கடைசி பக்கங்கள் என அவர் ஆற்றிய பங்களிப்புகள் அற்புதமானவை. பெரிய அழகோ,ஆபரணமான மொழியோஉணர்ச்சிகரமான பாணியோ இல்லாமல் இயல்பாக பேசியே மக்களை கவர முடியும் என நிரூபித்த அவரை நினைவு கூர்வோம்  இவர் பேச்சைக்கேட்டு வளர்ந்தவன் நான்,அவரின் தாக்கம் என்னிடம் நிறைய உண்டு என்பது கடைசிச்சொருகல் 99 வாழ்வே சங்கீதம் -எம்.எஸ். எனும் சகாப்தம் ! செப்ரெம்பர் 16, 2013 வாழ்க்கையில் இசையை தவிர வேறொன்றும் தெரியாத குஞ்சம்மாவை தெரியுமா உங்களுக்கு ?தெரிந்து இருக்க வேண்டும் .நான்கைந்து வரிகளில் அடக்க முடியாத கதை அவருடையது .வாழ்நாள் முழுக்க இசையோடு பயணம் போன பெண்ணவர்-இன்றைக்கு எல்லாம் ஓரளவிற்கு உயரம் போனால் கற்பது நின்று போகிறதே வாழ்நாள் முழுக்க அனுதினமும் கற்றுக்கொண்டே இருந்தவர் இந்த மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாது அவருக்கு ;எல்லாம் அவரின் கணவர் சதாசிவம் பார்த்துக்கொண்டது தான். சம்பாதித்ததில் பெரும்பாலான பங்கை அறக்காரியங்களுக்கு கொடுத்த மனம் அவருடையது. யாரையும் திட்டி பழக்கபடாதவர். ஐ.நா.சபையில் பாடினார் ,இந்திய சுதந்திரத்தின் பொழுது பாடினார்,உலகம் முழுக்க பாடினார். அப்பொழுதும் தன்னை ஒரு எளிய பெண்ணாக தான் பாவித்து வாழ்ந்தார் . மத்திய பிரேதசத்தில் நடந்த சம்மான் விருது வழங்கும் நிகழ்வுக்கு எம்.எஸ். மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் போயிருந்தார்கள். ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது யாரோ ஹிந்தியில் அழைப்பது தெரிந்து வெளியே வந்து பார்த்தார் சதாசிவம். ஒரு பழ வியாபாரி நின்று கொண்டிருந்தார். “அம்மா பாடுறதை கேட்கணும். மீரா படத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டு பாடினால் போதும். !” என்று அவர் கேட்டுக்கொள்ள சதாசிவம் கண்ணசைக்க எம்.எஸ் பாடினார். [] அந்த பழ வியாபாரி கேட்டுகொண்டே இருந்தார். பாடி முடித்ததும்இரண்டு பழங்கள் அம்மாவின் கைக்கு மாறியிருந்தன. சதாசிவம் சொன்னார்,”எல்லாவற்றையும் விட பெரிய சன்மானம் இதுதான் ” என்று. அந்த பழங்களை கண்களில் ஒற்றி எம்.எஸ்.அதை உறுதிப்படுத்தினார் ரஷ்யாவில் எம்.எஸ் பாடப்போயிருந்த பொழுது விழா முடிந்ததும் ஒரு ரஷ்ய பெண்மணி கண்களில் நீர் கோர்க்க எம்.எஸ். அவர்களிடம் வந்து தன் இதயத்தின் மீது கைவைத்து நெகிழ்ந்ததை குறிப்பால் உணர்த்திவிட்டு மலர்கொத்து ஒன்றை எம்.எஸ். அவர்களின் கையில் திணித்தார் குறையொன்றும் இல்லை எனவே வாழ்ந்த அவர் கீதம் காற்றினிலே கலந்துகொண்டே இருக்கிறது ,”நான் யார் போயும் போயும் இந்த இந்திய தேசத்தின் பிரதமர்-ஆனால் எம்.எஸ்.அவர்களோ இசை அரசி அல்லவா?”என நேரு சொல்கிற அளவுக்கு அவரின் இசை இந்தியாவை கட்டிபோட்டது. பாரத ரத்னா பெற்ற முதல் இசைக்கலைஞர் ஆன அம்மாவின் பிறந்த தினம் இன்று. 100 உன்னோடு போனதே அண்ணா ! செப்ரெம்பர் 16, 2013 அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார் பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திரிக்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது ”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார். அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் .NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் . உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம் அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் . அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர் சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் பொடி போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பிலை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம் [] சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் .அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் .அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதலவர் என்ற பொழுது ,”வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார் ”எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது” என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர மாற்றம் பண்ணினார் ;கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் . சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை நேற்று அண்ணாவின் பிறந்தநாள் ! 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள்  இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் சமீபத்திய புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அல்லது www.pressbooks.com   தளத்தையும் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.         இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. http://jayabarathan.wordpress.com/ 3. kaniyam.com 4. blog.ravidreams.net 5. http://mmauran.net/blog 6. http://gnutamil.blogspot.in/ 7. http://tech.neechalkaran.com/p/copyleft.html 8. http://tamilcpu.blogspot.in எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். www.freetamilebooks.com  எனும் தளம் தயார் நிலையில் உள்ளதா ? தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் தயார்நிலைக்கு வந்துவிடும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/