[] [புகைப்பட அனுபவங்கள்] புகைப்பட அனுபவங்கள் கல்பட்டு நடராஜன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com புகைப்பட அனுபவங்கள் பதிப்புரிமை © 2015 இவரால் / இதனால் கல்பட்டு நடராஜன். This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - புகைப்பட அனுபவங்கள் - ஆசிரியர் பற்றி - 1. படங்களும் பாடங்களும் - 2. மையப் புள்ளிகள் - 3. வெட்டும் கோடுகள் - 4. இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines) - 5. படத்தினுள் கோடுகள் - 6. தவிர்க்கப் பட வேண்டியவை - 7. புகையும் பனியும் புகைப் படம் ஆகலாம் - 8. பெருமாளும் நானும் - 9. பறவைகளைப் படம் பிடித்தல் - 10. தேன் சிட்டு - 11. தையல்காரக் குருவி - 12. “வண்ணாத்திக் குருவி” புகைப் பட அனுபவங்கள் - 13. ஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - 14. பிடித்தேன் நானும் ஆந்தைகள் படங்கள் - 15. “அதோ பார் அங்கே ஒன்று..” - பூ நாரை - 16. பக்கி என்றொரு பறவை - 17. வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா? - 18. வேறு ஒரு உலகம்..- விலங்குகளைப் படம் பிடித்தல் - 19. பூச்சிகளைப் படம் பிடித்தல் - 20. கிராமப்புறங்களில் படம் பிடித்தல் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 புகைப்பட அனுபவங்கள் [Cover Image]   கல்பட்டு நடராஜன் knn1929@gmail.com http://kalpattaarpakkangkal.blogspot.co.in   மின்னூலாக்கம் – சடையன் பெயரன் – tsuresh250@gmail.com அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com   http://photography-in-tamil.blogspot.in தளத்தில் வெளியான தொடர்.   2 ஆசிரியர் பற்றி 19 ஆகஸ்ட் 2012, உலக ஒளிப்பட தினத்தில் தினகரன் வசந்தம் இதழில் வெளியான பேட்டி.   []   எட்டுவார முயற்சியில் எடுக்கப்பட்ட படம் இதுதான்: [] [pressbooks.com] 1 படங்களும் பாடங்களும் படங்களும் பாடங்களும் _____________________________ திரு கல்பட்டு நடராஜன் நரசிம்மன் அவர்கள் தன்னுடைய புகைப்பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள மனமுவந்து ஒப்புக் கொண்டுள்ளார். அவருடைய வலைப்பூ :http://kalpattaarpakkangkal.blogspot.com/ அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவர் வாயிலாகவே வயதில் முதிர்ந்தவன் (81முடிந்து விட்டது). எனது அனுபவங்கள் “கொடேக் பேபி ப்ரௌனி’ கால அனுபவங்கள். டி.எஸ்.எல்.ஆர். கால அனுபவங்கள் அல்ல. பெருத்த ஏமாற்றம் அடைவீர்களோ என்று வருந்துகிறேன். ஒரு காலத்தில் கழுத்தில் கேமிராக்களை (ஒரு ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஒரு சிங்கிள் லென்ஸ் ரிஃப்லெக்ஸ்) தொங்க விட்டுக் கொண்டு காட்டிலும் மேட்டிலும் அலைந்திருக்கிறேன், பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கும் எண்ணத்தில். சில படங்களும் எடுத்திருக்கிறேன். புகைப் படக் கண்காட்சிகளில் 13 முதல் பரிசுகளும் பெற்று இருக்கிறேன். ஏ.எஃப்.ஐ.ஏ.பி. (Associate de la Art Photographique) என்ற பட்டமும் பெற்றேன் Nature Photography யில். F.I.A.P. (Federation Internationale de La Art Photographique) என்பது இங்கிலாந்தின் ராயல் போடோக்ராஃபிக் சொஸைடி போன்ற ஒரு ஐரோப்பிய அமைப்பு. இதன் அத்தாட்சிப் பத்திரத்தினை குடியரசுத் தலைவர் கைகளில் இருந்து 1971ல் பெற்றேன். இனி அவருடைய புகைப்படப் பயணத்தில் நாமும் சேர்ந்து பயணிப்போமா ? வாருங்கள். பள்ளி நாட்களில் நண்பன் ஒருவனின் கொடேக் பேபி ப்ரௌனி கேமெராவை வைத்துக் கொண்டு பார்ப்பவரை எல்லாம் படம் பிடித்து வந்தேன். பின்னர் கான்பூரில் வேலை பார்த்த போது சொந்தமாக வாங்கிய யாஷிகா ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதும் நான் எடுத்த படங்கள் எல்லாம் மனிதர்களின் படங்களே. எப்போதாவது ஒரு சமயம் சமுத்திரக் கரையில் படகும் மீனவரும், சூரியோதயம் போன்ற படங்களை எடுத்தேன். அவற்றில் பல குறைந்த அல்லது அதிக நேரம் எக்ஸ்போஸ் ஆன படங்களாக இருக்கும். எட்டுக்கு ரெண்டு தேரும். அந் நாட்களில் தானியங்கிக் கேமிராக்கள் வரவில்லை. வேலை நிமித்தம் பங்களூரிலிருந்து ஹைதராபாத் போயிருந்த போது, எனது காரிலிருந்து வண்டி ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம், எனது காசோலைப் புத்தகம் இவை திருட்டுப் போயின. பங்களூரு திரும்பியதும் ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம் இவற்றின் நகல் பெற விரும்பி ஆடோமோபைல் அஸ்ஸோசியேஷன் சென்ற போது உபேந்த்ரா என்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பல விஷயங்கள் பற்றிப் பேசியபோது, புகைப் படம் எடுத்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் நான் எடுத்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். “முதலில் உங்கள் படங்களைக் காட்டுங்கள்” என்றேன். அவர் எடுத்த படங்கள் சில வற்றைப் பார்த்ததும் நான் எடுத்த படங்களைக் காட்ட மறுத்தேன். காரணம் அது வரை எனக்குத் தெரியாது புகைப் படம் பிடித்தலில், பிக்டோரியல், லேண்ட்ஸ்கேப், போர்ட்ரைட், இயற்கை, டேபிள் டாப் ஸ்டடி, ஃபேஷன், இண்டஸ்ற்றியல் என்று பல பிரிவுகள் இருக்கின்றன என்பதும், ஒருவர் நல்ல புகைப் படக் கலைஞராக வேண்டுமென்றால் இவற்றில் ஒன்றினை தீவிரமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்.. உபேந்த்ரா என்னை விலங்குகள் பறவைகள் இவற்றைப் படம் பிடிப்பதில் வல்லுனரான டி.என்.ஏ.பெருமாள் என்பவருக்கும் சி.ராஜகோபால் என்பவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அன்று பிடித்தது எனக்கு புகைப் படம் எடுப்பதின் மீதான காதல். ராஜகோபால் ஒரு ஏரோனாடிகல் எஞ்சினியர். அவர் ஒரு பிக்டோரியலிஸ்ட். நிலப் பறப்புகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பவர். உலக அளவில் பெயர் பெற்றவர். அவர் பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் சுமார் பத்து இருக்கும். பரிசுகள் எண்ணில் அடங்காது. அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர் ஒரு கதை சொன்னார். அவரது உறவினர் ஒருவர் 8mm சலனப் படக் காமிரா வாங்கினாராம். அந்த நாட்களில் வீடியோக் கேமிராக்கள் வரவில்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியை சலனப் படமாகப் பிடித்துக் காட்ட வேண்டும் என்றால் 8mm கேமிரா தான் துணை. கேமிரா வங்கியவர் ஒரு கல்யாணத்தினைப் படம் பிடித்து அதை பிறருக்குப் பெருமையோடு ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாராம். தெருவில் எடுத்த காட்சிகளும், மேடையில் பெற்றோமேக்ஸ் வெளிச்சத்தில் எடுத்த படங்களும் சுமாராகத் தெரிந்தன. அடுத்து வந்தது விருந்துக் காட்சி. ஆகாசத்தில் விட்டு விட்டு நீண்ட் வெள்ளைக் கோடுகள். மற்ற இடமெல்லாம் கருப்பு. அவை அங்கிருந்த குழாய் விளக்குகள். ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களின் சட்டைகள். திடீரெனெ வெள்ளையாக கும்பாரமாய்க் குவித்து வைக்கப் பட்ட ஒன்று காற்றிலே மிதந்து வந்து கொண்டிருந்தது. நடுவில் ஆங்காங்கே ஒரு வினாடி அது நிற்கும். அதிலிருந்து கொஞ்சம் வெள்ளை இடம் மாறும். பின் அங்கிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாறி சிறிது தூரம் மேலழும்பிப் பின் மறைந்து விடு.ம் அந்த உருண்டைகள். அது வேறு ஒன்றும் இல்லை. சரியான அளவு எக்ஸ்போஷர் கொடுக்காததால் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் வெள்ளையாயிருந்த சாதம் மட்டுமே தெரிந்திருக்கிறது. இருந்தாலும் உறவினருக்கோ தன் படைப்பில் பரம சந்தோஷம். இப்படித் தான் நம்மில் பலரும் ஆரம்ப நாட்களில் இருக்கிறோம். பிறந்த போதே யாரும் புகைப் படக் கலைஞராகப் பிறப்பதில்லை. ஆனாலும் ஒரு கேமிரா கைக்கு வந்த உடன் சில விஷயங்கள் பற்றித் தெரிந்து கொண்டால் நாமும் வெட்கப் படாது நமது படைப்புகளைப் பிறருக்குக் காட்ட முடியும். அவை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் இதோ இன்னொரு கதை. ஒரு விட்டில் விருந்தினர்களுக்கு வீட்டுக் கார அம்மா புகைப் பட ஆல்பத்தினைக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, “அதோ லில்லி அத்தை” என்று கத்தியது அவர் குழந்தை. “எங்கே?” என்று அனைவரும் கேட்க, “அதோ” என்று காட்டியது குழந்தை படத்தில் ஒரு ஓரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த லில்லி அத்தையின் பின் பகுதியை! படம் புரட்டப் படுகிறது. மீண்டும் குழந்தையின் குரல், “அதோ எங்கள் டாமீ”. “எங்கே?” என்று கேட்போருக்குக் குழந்தை காட்டுகிறது, படத்தில் ஒரு விளிம்பில் தெரியும் டாமியின் வாலை. லில்லி அத்தையையோ, செல்ல நாய் டாமீயையோ படத்தில் காட்ட வேண்டும் என்றால் அவர்களின் முகத்தை அல்லவா காட்ட வேண்டும்? நாம் பிடிக்கும் படங்கள் எல்லாமே ‘படங்கள்’ என்று சொல்ல முடியாது. ‘ஆகா இந்தப் படத்தைப் பெரிதாக்கி வீட்டில் சுவற்றில் மாட்டோமா’ என்ற எண்ணத்தையோ அல்லது பார்ப்பவரின் மனத்தில் ‘மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமோ’ என்ற ஆவலையோ தூண்டும் படங்களே ‘படங்கள்’. மற்றவை எல்லாம் ஜடங்களே. திரு ராஜகோபாலின் படங்கள் கருப்பு வெள்ளை படங்கள் தான். அவைகளில் ஒளியின் விளையாட்டினக் கொண்டு கரியினால் வரையப் பட்ட ஒரு ஓவியம் போன்ற தோற்றத்தினைக் கொண்டு வந்திருப்பார். காலஞ் சென்ற திரு ராஜகோபால் பற்றி சொல்லி விட்டு அவரது படம் ஒன்றையும் உங்களுக்குக் காட்டா விட்டால் எப்படி? பலராலும் வெறுக்கப் படும் எலியையும் அதனை நெருப்பில் வாட்டித் தின்போரையும் வைத்துக் கொண்டு பரிசுகள் பெற்றிடும் படம் ஒன்றினை எடுக்க முடியுமா? ஏன் முடியாது என்று கேட்காமல் அதை செய்து காட்டினார் திரு ராஜகோபால். இங்கே அந்தப் படம். [] 2 மையப் புள்ளிகள் சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர (Rectangle) வடிவில்தான் இருக்கும். படங்களில் மையப் புள்ளிகள் (Focal points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்திற்ககுதான் அதிகமாக இழுத்துச் செல்லப்ப் படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சம பாகங்களாக வெட்டும் போது அந்த நான்கு கொடுகளும் சந்திக்கும் இடங்களான ஏ,பீ,சீ,டீ. தான் மையப் புள்ளிகள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். [] நீங்கள் எடுக்கும் படங்களில் எந்த ஒரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த நான்கு புள்ளிகளில் ஒன்றின் அருகில் வைத்தால் அது படம் பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்க்கும். அந்த நான்கு புள்ளிகளில் எதன் பக்கத்தில் வைப்பது என்பதை இனி பார்க்கலாம். நீங்கள் ஒருவரது இடுப்பிற்கு மேலான படம் (Bust) எடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம், அதுவும் சிறிதளவு ஒரு பக்கம் திரும்பினாற்போல. அந்தப் படம் அதில் உள்ளவரின் குணாதிசயத்தினை வெளிக் கொணற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும்? ஒருவரது முகத்தில் எந்த உறுப்பு அவரை அடையாளம் காட்டும்? கண்கள்தானே? ஆங்கிலத்தில் சொல்வதுண்டு “Your eyes are the most expressive part of your body” என்று. ஆக கண்கள் மையப் புள்ளிகள் இருக்குமிடத்தில் வைத்தால் படம் கவர்ச்சியாக இருக்கும். மேற் சொன்ன படத்தின் கண்கள் வலது பாதியில் மேல் புள்ளியின் அருகே வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் அவர் தன் வலப்புறம் திரும்பிப் பார்த்திருந்தால். அப்படிச் செய்வதால் படத்தில் உள்ளவரின் முகமோ கண்களோ பார்ப்பதற்கு இடம் இருக்கும். அப்படி இல்லாமல் இடது பாதியின் மேல் புள்ளியின் அருகேவோ, அல்லது கீழ் புள்ளிகள் அருகேவோ கண்கள் வருமாறு வைத்தால் படம் அதன் அழகை இழந்து விடும். படத்தில் இருப்பவர் கண்களோடு, பார்ப்பவரின் கண்களும் படத்தை விட்டு வெளியே போய் விடும். படத்தில் உள்ளவர் அவரது இடது புறமாகத் திரும்பிப் பார்த்து இருப்பாராகில் அவரது கண்கள் பார்ப்பதற்க் ஏதுவாக படத்தின் வலப்புறத்தில் இடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தைப் பாருங்கள். [] (படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு) இந்த விதி தனி மனிதர்களின் படங்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. எல்லாப் படங்களுக்குமே ஓரளவு பொருந்தும். இந்த விதிக்கு மேலும் ஒரு விளக்கம் அடுத்த மடலில் தர முயற்சி செய்கிறேன். 3 வெட்டும் கோடுகள் வெட்டும் கோடுகள்: ஒரு கடற்கரைக் காட்சியையோ அல்லது சூரிய உதயம் அல்லது அஸ்தமனம் இவற்றையோ நீங்கள் படம் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் அடிவானக் கோடோ (Horizon) அல்லது கடற்கரையோ படத்தின் வெட்டும் கோடாகக் குறுக்கே ஓடும். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். படம் A [] [] படம் A யில் வெட்டும் கோடு படத்தினை இரு சம பாதிகளாகப் பிரித்திருக்கிறது. படம் B யிலும் C யிலும் கோடு அதனை 1/3, 2/3 எனப் பிரித்திருக்கிறது. இப்போது கீழே உள்ள படங்களைப் பாருங்கள். [] [] முதல் படத்தில் வெட்டும் கோடான அடிவானக் கோடு படத்தினை இரண்டாக வெட்டுகிறது. படத்தினை உங்கள் கேமிராவில் சிறிது பார்க்கும் கோணத்தில் மாற்றம் செய்து இரண்டாவது படத்தில் இருப்பது போல எடுத்திருந்தால் எப்படி இருக்கும்? இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு படங்களில் எது உங்கள் மனதைக் கவருகிறது என்று. வெட்டும் கோட்டினை எங்கு வருமாறு எடுக்க வேண்டும் என்ப்பது நீங்கள் எந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அடுத்த மடலில் இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines) பற்றிப் பார்ப்போம். ஆங்கிலத்தில் விளக்குவது எளிதாக இருந்திருக்குமோ என்னவோ. நான் சொல்ல நினைப்பது உங்களுக்குப் புரிகிறதா? இதற்கு பதில் கிடைப்பதைப் பொறுத்து இருக்கிறது நான் இந்த இழையைத் தொடருவதும் நிறுத்துவதும். 4 இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines) நீங்கள் பிடிக்கும் படங்களில் ஒரு கோடு வெளியில் இருந்து பட்த்தின் உள்ளே செல்லலாம். அது ஒரு குச்சியாகவோ மரக் கிளையாகவோ, சாலையாகவோ, நதியாகவோ இருக்கலாம்.அப்படிப் பட்ட கோடுகள் வெளியில் இருந்து உள்ளே வருபவையாக இருக்க வேண்டும். அவை பார்ப்பவர் கண்களை படத்தின் முக்கிய அம்சத்திற்கு இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தைப் பாருங்கள். [] இந்தப் படத்தில் தூரத்தில் இருந்து கேமிராவை இயக்கிடும் காற்றுக் குழாய் ஒரு இழுத்துச் செல்லும் கோடு என்று சொல்லலாம். ஆனால் அது என்ன செய்கிறது? பார்ப்பவரின் கண்களை படத்தின் பிரதான கதா நாயகனான தேன் சிட்டுக்கு இழுத்துச் செல்கிறது. அடுத்து இழுத்துச் செல்லும் கோடு தேன் சிட்டின் அலகும் நாக்கும் ஆகும். ஆனால் இதுவும் ஒரு நல்ல வேலையே செய்கிறது. உங்கள் கண்களை கேமிராவிற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு ஒரு கதை சொல்கிறது. இதே படத்தில் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு மரத்தின் கிளையோ, சாய்ந்த கம்பமோ நீட்டிக் கொண்டிருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அது என்ன செய்யும் உங்கள் கண்களை படத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்று விடும். ஒரு ஆளோ. ஆடோ, மாடோ படத்தின் வெளி வரம்பு அருகே படத்திற்கு வெளியே பார்த்தது போல நடந்து வந்து கொண்டிருந்தாலும் இதே வேலையை செய்து விடும். இப்படிப் பட்டவை எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை. இழுத்துச் செல்லும் கோட்டிற்கு இதோ மற்றுமொரு உதாரணம்.. [] இந்தப் படத்தில் சாலையும் அதன் வேலியும் இழுத்துச் செல்லும் கோடுகள். அவை உங்கள் கண்களை நேராக அந்த் அழகிய சிவப்பு வீட்டிற்கு இழுத்துச் செல்கின்றன. அதே சாலை நேராகச்சென்றோ அல்லது வலது பக்கமாகத் திரும்பியோ படத்தின் வ்ரம்புக்கு வெளியே சென்றிருக்குமானால் அது கண்களை வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளாக அமைந்திருக்கும். என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? 5 படத்தினுள் கோடுகள் படத்தினுள் கோடுகளா? அப்படி என்றால்? சில சமயம் நீங்கள் பிடிக்கும் படத்தினுள் உள்ள மனிதர்களோ, பொருட்களோ ஒரு கோடு போன்று அமையலாம். அது வரிசையாக நிற்கும் மரங்களாக இருக்கலாம். அல்லது ஒரு சாலையாக இருக்கலாம். சாய்ந்த கம்பமாக இருக்கலாம். அல்லது இரவில் வரிசையாக நின்று வெளிச்சம் தரும் விளக்குகளாக இருக்கலாம். அல்லது ஓடும் கார்களின் முன் விளக்குகளும் பின் விளக்குகளுமாக இருக்கலாம். அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் கூட்டமாக இருக்கலாம். வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளாக இருக்கலாம். அல்லது ஒருவர் பின்னர் ஒருவராக ரயில் வண்டி விளையாடும் குழந்தைகளால் ஏற்படும் கோடாக இருக்கலாம். அப்படிப் பட்ட கோடுகள் வரும் போது கவனிக வேண்டிய சிலெ விதிகள் உள்ளன. கடிகார விளம்பரங்கள் பார்த்திருக்கிறிகள் தானே? அதில் உள்ள கடிகாரம் என்ன மணி காட்டும்? 10-10. ஏன் தெரியுமா? இதோ கீழே உள்ள மூன்று படங்களைப் பாருங்கள். படம் – 1 [] படம் – 2 [] படம் – 3 [] இந்த மூன்று படங்களில் உங்கள் கண்களை உறுத்தாமல் இருக்கும் படம் எது? அதே காரணத்திற்காகத் தான் கடிகார விளம்பரங்கள் 10-10 என்ற மணியைக் காட்டுகிறது. ‘சரி’ என்று சொல்வதற்கான குறியீடும் அது தானே? [] அதனால்தான் உங்கள் படங்களில் உள்ள ‘கோடு’ சரி என்று சொல்லும் குறியீட்டினைப் போல அமைந்தால் அழகாயிருக்கும். ‘கோடுகள்’ பற்றி சில விதிகள் உள்ளன என்று சொன்னேன். அவை என்னவென்று பார்க்கலாம். 1. கோடுகள் ஒரு போதும் பட்த்தின் எல்லைகளைத் தொடக் கூடாது. 2. கோடு வளைவாக இருத்தல் நலம், கடிகாரத்தின் 10-10 போல. 3. கோடு ஒன்று வெளி எல்லையில் இருந்து உள்ளே சென்று முடிந்தால், அந்தக் கோடு முடியும் இடத்திலே உங்கள் படத்தின் முக்கியப் பொருள் இருக்க வேண்டும். அல்லது அங்குள்ள பொருள் உங்கள் கண்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். அதாவது அந்தக் கோடு உங்கள் கண்களை படத்திற்குள்ளேயே கட்டிப் போட வேண்டும். இந்த விதிகள் ஏன் என்று பார்ப்போம். ‘கோடு’ படத்தின் உள்ளிருந்து ஆரம்பித்து எல்லை தாண்டிச் சென்றால் அதன் கூடவே உங்கள் கண்களும் சென்று விடும். பின் அவை படத்திற்கு மிண்டும் திரும்பி வர விருப்பப் படாது. “அடுத்த படம்?” என்று கேட்டிடும். கடிகாரத்தின் 10-10 மணி காட்டுதல் போல மைந்திருந்தால் அந்தக் ‘கோடு’ பார்ப்பவர் கண்களுக்கு இதமாகாக இருக்கும். மூன்றாம் விதியின் ஒரு சிறு மாற்றம் தான் ‘படத்தினுள் முக்கோணம்’ விதி என்பது. கிழே உள்ள படத்தில் ஒரு முக்கோணம் உள்ளது. அது மூன்று கோடுகளால் ஆனது. [] படத்தைப் பார்த்தவுடன் நம் கண்களை இழுத்திடுது ஹரிகேன் விளக்கு. அந்த விளக்கும் பெரியவரின் இடது கையும் அதன் நிழலும் சேர்ந்து முதல் கோடு. இரண்டாவ்து கோடு பெரியவரின் வலது கையும் அதன் நிழலும். மூன்றாவது கோடு சிறுவனும் அவன் கையில் உள்ள புத்தகமும். இதில் மூன்றாவது கோடு மீண்டும் முதல் கோட்டினைப் பார்த்தே இருப்பதால் உங்கள் கண்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து படத்தையே சுற்றிச் சுற்றி வரும். 6 தவிர்க்கப் பட வேண்டியவை ஏற்கெனெவே சொன்னேன் படம் எடுக்கும் போது அந்தப் படத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று. மனிதர்களைப் படம் பிடிக்கும் போது தவிர்க்கப் பட வேண்டியவை சில உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். 1. வெட்டப் பட்ட உருவங்கள் (பாதி உடல் படத்திலும் பாதி வெளியிலுமாக இருந்திடும் உருவங்கள், அதுவும் ஃப்ரேமில் இருந்து வெளியே செல்பவரின் அரை உருவம்). 2. முன் பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ, தனியாகக் கிடந்திடும் காலணிகள், துடைப்பம், பழய செய்தித் தாள்கள் இவை படத்தினுள் இருக்கக் கூடாது. படம் எடுக்கும் போது இருக்கும் ஆர்வத்தில் இவை இருப்பதை நீங்கள் பார்க்கத் தவறி விடுவீர்கள். பின்னால் படம் வந்த போது தான் புரியும் இவற்றின் கோரம். இன் நாட்களில் இவற்றைப் படம் எடுத்தபின்னும் அழித்திட முடியும் என்பது வேறு விஷயம். ஆனால் இது எல்லாராலும் முடியாது. 3. மனித உருவங்களின் பின்னிருந்து கிளம்பும் செடிகளோ, மரங்களோ. அவை அவர்கள் தலையில் இருந்து முளைப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்திவிடும். 4. மர இலைகள், கிளைகள் வழியே வந்து உங்கள் பட நாயகன் / நாயகி முகத்தில் திட்டு திட்டாக விழுந்திடும் வெளிச்சம். (இப்படி எடுக்கப் பட்ட படம் அவருக்கு இல்லாத வெண் குஷ்டம் இருப்பது போன்ற் ஒரு பிரமையை உண்டாக்கி விடும்). இதே போன்று தரையிலும் சூரிய வெளிச்சம் திட்டுத் திட்டாக விழுமானால் அதுவும் படத்தைக் கெடுக்கும். அதே சமயம் திட்டாக விழுந்திடும் சூரிய வெளிச்சமே ஒரு நல்ல படத்தினை உங்களுக்கு அளித்திடலாம் கீழே உள்ள் படம் போல. [] (படம்: சி.ராஜகோபால்) 5. எந்த நிலையிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று கேமிராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமிராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமெராவையே நகர்ந்திடச் செய்வர். இதைத் தவிர்க்க ஆள்காட்டி விரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டை விரலால் கேமிராவின் எதிர் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடை வெளி குறிகிடுமாறு செய்து ஷட்டரை இயக்க வேண்டும். மற்றொரு வழி கேமிராவை உங்கள் உட்லோடு ஒட்டினாற் போல வைத்துக் கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது. 7 புகையும் பனியும் புகைப் படம் ஆகலாம் எறியும் குப்பையில் இருந்து எழும் புகையோ, அல்லது களத்து மேட்டில் எழும் தூசியோ, மூடு பனியோ அழகான புகைப் படங்களை உங்களுக்கு அளித்திடும் உங்களுக்கு அழகினை ரசித்திடும் கண்கள் இருந்தால். அந்தப் படங்களில் வெரும் புகையோ பனியோ இருந்தால் போதாது. வேறு சிலவும் இருந்திடல் வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். அப்போதுதான் அவை கதை சொல்லும். கண்களைக் கவரும். [](படம் எடுத்தது: நடராஜன் கல்பட்டு) இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது. இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது, [] 8 பெருமாளும் நானும் இத் தொடரின் முதல் கட்டுரையில் திரு உபேந்த்ரா என்பவர் என்னை திரு டி.என்.ஏ. பெருமாள் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று சொன்னேன். #1 டி.என்.ஏ.பெருமாள்[]பெருமாள் பறவைகள், விலங்குகளை படம் எடுப்பதில் நிபுணர். அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் எனக்குக் குருநாதரானார். அன்று முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெருமாள், உபேந்த்ரா, நான் ஆக நாங்கள் முவரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தோம் விலங்குகள், பறவைகள் இவற்றைப் படம் பிடித்திடும் நோக்கில். எனது அனுபவங்கள் பற்றி எழுது முன் பெருமாள் எடுத்த சில படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்: # 2 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு புலி [] # 3 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு காட்டு யானை [] # 4 சிங்கம்[] # 5 கோடுகள் போட்ட ஆந்தை [] (இந்தப் படம் குறுக்கிடும் ஒளிக் கதிர்களால் இயக்கப் பட்ட கேமிரா கொண்டு எடுத்தது.) பெருமாள் அதிகம் பேச மாட்டார். அவருடன் சுற்றியதில் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவரை சந்தித்திரா விட்டால் நான் பறவைகள் படங்கள் எதுவுமே எடுத்திருக்க முடியாது. பல பறவைகளைப் பற்றி அறிந்திருக்கவும் முடியாது. பெருமாளின் கூற்றுப் படி, “ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களைக் காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கு பற்றி.” பறவைகளைப் படம் பிடிக்க விரும்புவோருக்கு பெருமாள் சொல்லும் அறிவுரைகள் பற்றி அறிய வேண்டுமா? படியுங்கள்: Photography/Green tips from T.N.A. Perumal 9 பறவைகளைப் படம் பிடித்தல் பறவைகளைப் படம் பிடிப்பது என்பது ஓடி ஆடித் திரியும் சின்னஞ் சிறு குழந்தையைப் படம் பிடிப்பதை விடக் கடினமான ஒரு காரியம். காரணம் குழந்தை பல சமயங்களில் உங்களை நோக்கி வரும். ஆனால் பறவையோ மனிதர்களைக் கண்டால் தங்கள் பின் புறத்தை உங்களுக்குக் காட்டிக் கொண்டு பறந்து சென்றிடும். அப்படி என்றால் எப்படி பறவைகளின் அழகான படங்களைப் பலர் எடுக்கின்றனர்? அதைப் பார்ப்போம் இப்போது. உங்கள் நண்பர் ஒருவரை நீங்கள் சந்தித்துப் பேச விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அவர் வீட்டிற்குச் செல்வீர்கள். அல்லது அவர் வேலை செய்திடும் அலுவலகத்திற்குச் செல்வீர்கள். இதே தான் பறவைகள் விஷயத்திலும் நீங்கள் செய்ய வேண்டும். ஒரு பறவையின் வீடு என்பது அதன் கூடு. அலுவலகம் என்பது அது இரை தேடும் இடம். எனவே இவை இரண்டில் ஒன்றினை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.   கூட்டினைக் கண்டு பிடிப்பது எப்படி? ஒரு பறவை தன் அலகுகளில் ஒரு குச்சியையோ, புல், வைக்கோல், பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ எடுத்துச் சென்றால் அது கூடு கட்ட ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதே போல ஒரு பறவை தான் எடுத்த, அல்லது பிடித்த இரையை அங்கேயே உண்டிடாமல் எடுத்துச் சென்றால் அதற்கு ஒரு கூடு இருக்கிறது. அதில் குஞ்சுகள் இருக்கின்றன என்று அர்த்தம். மேற் சொன்ன இரு காரியங்களில் எது ஒன்றை ஒரு பறவை செய்தாலும் அதை நீங்கள் உங்கள் கண்களாலும் உடலாலும் தொடர்ந்து செல்வீர்களானால் உங்களால் அதன் கூட்டினைக் கண்டு பிடித்து விட முடியும். இப்போது பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். இனி மீதிப் பாதி. # 1 ஏஷி ரென் வார்ப்ளர் என்னும் பறவை தன் கூட்டருகே.. [] (படம் நடராஜன் கல்பட்டு) கூட்டைக் கண்டு பிடித்தாயிற்று. இனி….? பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று “கூடு வழி” (Nest technique). மற்றது டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்திய கேமிராவினால் எடுப்பது. முன்னதில் கேமிராவும் தேவையானால் ஃப்ளேஷும். கூட்டின அருகில் ஸ்திரமாகப் பொறுத்தப் படும். பறவையின் கூடு ஃபோககஸ் செய்து வைக்கப் படும். பின்னர் துரத்தில் மறைந்திருந்தோ அல்லது ஒரு கூடாரத்திற்குள் அமர்ந்திருந்தோ ஷட்டரை இயக்கிடும் உபகரணங்கள் உதவி கொண்டு பறவை கூட்டில் வந்தமர்ந்திடும் போது படம் பிடிக்க வேண்டும். இவ் விஷயங்கள் பற்றியெல்லாம் நான் கற்றது திரு பெருமாளிடம் இருந்து தான். # 2[] (சிரித்திடாதீர்கள் என் படம் வரைந்திடும் திறமை பார்த்து) முன் நாட்களில் வாயு கொண்டு இயக்கப் படும் பிஸ்டன் அல்லது பலூன் உள்ளடக்கிய கருவி ஒன்று ஒரு சிறு கம்பியை வெளித்த் தள்ளும். அக்கம்பி ஷட்டரை இயக்கிடும். வாயு கொண்டு இயக்கப்படும் பிஸ்டன் கொண்ட கருவி ஒன்றினை நான் வாங்கினேன். பின்னர் வீடுகளில் முன்பெல்லாம் உபயோகிக்கும் படுக்கையில் இருந்து இயக்கிடும் ஸ்விட்ச் ஒன்றினை வாங்கி அதன் குடலை உருவி விட்டு ஒரு குட்டி ரப்பர் பலூன், சிறிய பிளாஸ்டிக் மூடி இவற்றைக் கொண்டு நானே ஒரு கருவியையும் செய்து வைத்துக் கொண்டேன். இக் கருவி எனது ட்வின் லென்ஸ் கேமிராவை இயக்கப் பயன் பட்டது. இது என்னிடம் இல்லாதிருந்தால் பெரிய ஆந்தை படம் ஒரே சமயத்தில் கலரிலும் கருப்பு வெள்ளையிலும் என்னால் எடுத்திருக்க முடியாது. (நான் கடையில் வாங்கிய கருவியையும், வீட்டில் தயார் செய்து வைத்திருந்த கருவியையும் படம் பிடித்துப் போடலாம் என்றெண்ணி கடந்த ஒரு மணி நேரம் என் வீடு பூராவும் தெடினேன். கிடைக்க வில்லை.) :-(( இந்நாட்களில் ஒளிக் கதிர்கள் கொண்டு கேமிராவை இயக்கிடும் கருவிகளும் வந்து விட்டன. பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கப் போதும் போது உங்கள் உடை விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். வெள்ளை ஆடை அணியக் கூடாது. பழுப்பு நிற (ப்ரௌன் அல்லது காக்கி) ஆடையோ அல்லது ராணுவத்தினர் காடுகளுக்குள் சென்று போர் புரியும் போது அணிந்திடும் இலைகள், மலர்கள் படம் போட்ட ஆலிவ் க்ரீன் ஆடைகளோ அணிய வேண்டும். ‘கூடு வழி’ முறையில் படம் பிடிக்கும் போது சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆர்வத்தினால் சுமார் பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் நீங்கள் கூட்டின் அருகில் இருந்தீர்களானால் தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை கொடுக்காமல் இருக்குமாதலால் குஞ்சுகள் இறந்து விடும். உங்கள் கேமிராவிற்கு நல்ல காட்சி தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டின் முன்பிருக்கும் இலை கிளைகளை வெட்டி எடுத்து விட்டீர்களானால் காகம் போன்ற பறவைகள் கூட்டினை எளிதாகக் கண்டு பிடித்துக் குஞ்சுகளைக் கொன்று தின்று விடும். மறைத்திடும் இலை, கிளைகளை ஒரு மெல்லிய நூல் கொண்டு வேறு புறம் இழுத்துக் கட்டிடுதல் நல்லது. எக்காரணம் கொண்டும் குஞ்சுகளைக் கையினால் தொடாதீர்கள். அப்படித் தொடப் பட்ட குஞ்சுகளை பல சமயம் தாய்ப் பறவை கூட்டை விட்டு வெளியே தள்ளிவிடும். இம் மூன்றினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் பறவைகளின் சந்ததி வந்திடலைத் தடை செய்தவர்களாகி நீங்களே பறவைகளுக்கு எமனாகி விடுவீர்கள். சில சமயங்களில் பயந்து போன தாய்ப் பறவை கூண்டிற்கு நிறந்தரமாகத் திரும்பாமலே போய் விடலாம். இதுவும் ஒரு பரிதாபமான நிகழ்வு. பெருமாளுடன் சென்று நான் பிடித்த முதல் படம் இதோ: # 3[] பார்ப்பதற்கு ஒரு சிட்டுக் குருவி போலிருக்கும் இப் பறவையின் பெயர் பைடு புஷ் சேட் (Pied Bush chat) என்பதாகும். இது பங்களூரில் இருந்து சுமார் பத்துப் பதினைந்து கிலோ மீடர் தூரத்தில் இருந்த் ஒரு கிராமத்தில் ஒரு வைக்கோல் போரில் கூடு கட்டி இருந்தது. இந்த முதல் முயற்சி எனக்கு மிகுந்த ஊக்கத்தினை அளித்தது. இரவு பகல் என்னேரமும் இதே சிந்தனையாய்க் கழிந்தன அடுத்த மூன்றாண்டுகள். *** 10 தேன் சிட்டு நான் படம் பிடித்த இரண்டாவது பறவை தேன் சிட்டு. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் “கீ வூ…கிக்வூ…கிக்வூ…” என்று கத்தியபடி பறந்த நிலையிலேயே செம்பருத்திப் பூவில் தேன் குடித்திட வரும் ஒரு சிறு பறவையைப் பார்த்திருப்பீர்கள் அதுதான் தேன் சிட்டு. ஒரே இடத்திலேயோ, முன்னும் பின்னுமோ பறந்திடும் சக்தி கொண்டது இப்பறவை. இதை அமெரிக்காவின் ஹம்மிங்க் பேர்டின் சொந்தக் காரன் எனலாம். # 1 தேன் சிட்டு பெண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்) [] # 2 பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் – ஆண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்) [] இந்தப் பறவை நம் தோட்டங்களில் உள்ள செடிகளில் இருந்து தொங்கிடும் கூடு ஒன்றை அமைத்து, அதில் நான்கு முட்டைகள் இட்டு, அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். கூடு காய்ந்த இலை, சரகு, மெல்லிய குச்சிகள், பேபர் துண்டுகள், தட்டு போன்ற எட்டுக் கால் பூச்சியின் முட்ட்டைகளின் பைத் தோல் இவற்றை ஒட்டடை, சிலந்தி வலை இவற்றால் ஒட்டித் தயார் செய்திடும். கூடு கட்டும் போது பெண் பறவை கூட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கூட்டைத் தயார் செய்யும். ஆண் பறவை தானும் கஷ்டப் பட்டு வேலை செய்வது போலக் கூடக் கூடப் பறந்திடும். (கீழ்வரும் அனைத்து கருப்பு வெள்ளைப் படங்களும்: நடராஜன் கல்பட்டு) # 3 தேன் சிட்டு பெண் பறவை [] # 4 தேன் சிட்டு ஆண் பறவை [] பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றின் உணவும் ஒரு விதம். தேன், தானியம், பழம், கொட்டைகள், தேனீ, புழு பூச்சிகள், பல்லி, ஓணான், எலி, பாம்பு, இறந்த மிருகங்களின் இறைச்சி, ஏன் மனிதனின் மலம் கூட பறவைகளின் உணவு. ஆனால் எல்லாப் பறவைகளுமே தங்கள் குஞ்சுகளுக்கு மாமிச பதார்த்தங்களையே உணவாக அளிக்கும். காரணம் என்ன தெரியுமா? குஞ்சுகள் குறைந்த கால அவகாசத்தில் வளர்ந்து பறக்கும் திறமையை அடைய வேண்டும். அதற்குப் புரதச் சத்து (protein) அதிகமுள்ள உணவு தேவை. தேன் சிட்டு கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு சிறிது நேரம் உணவளித்த பின் தாய்ப் பறவை தங்களுக்கே தெரிந்த மொழியில், “நீ இவ்வளவு நேரம் உணவு உட்கொண்டுவிட்டாய். இனி மலம் கழிக்க வெண்டும்”, என்று சொல்லும். குஞ்சும் திரும்பிக் கொண்டு மலம் கழிக்கும். அவ்வாறு வெளியேற்றப் படும் மலத்தினை தாய்ப் பறவை அலகில் கொத்திக் கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்று எறிந்துவிடும். மலமும் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் பொன்ற வஸ்துவால் மூடி இருக்கும். மலப் பை (fecal sac) என்று அதற்குப் பெயர். இவ்வாறு மலம் கூட்டில் படாமல் வெளியேற்றப் படுவதற்கு கூட்டின் சுத்தம் (nest hygiene) என்று சொல்வார்கள். இதற்கு நேர் எதிர் புறாக்கள். குஞ்சுகள் கூட்டிலேயே மலம் கழிக்கும். ஆனால் கூடு இடைவளி அதிகம் கொண்டு குச்சிகளால் கட்டப் பட்டு இருக்குமாதலால் மலம் வெளியே விழுந்து விடும். # 5 [] (மலம் கூட்டினுள் விழுமுன் வெளியேற்றப் படுகிறது) ‏தேன் சிட்டில் இரு வகைகளைக் காணலாம். ஒன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் சன்பேர்ட். முன்னதை நம் தோட்டங்களில் காணலாம். பின்னதை சாதாரணமாக காடுகளில் காணலாம். தேன் சிட்டினை நான் படம் பிடித்த போது ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்’ அதிகம் கலவரப் படவில்லை. ஆனால் ‘பர்பிள் சன் பேர்டோ’ மிகுந்த கலவரப் பட்டு ஆத்திரத்தில் கேமராவையே தாக்கியது. அதை மற்றொரு கேமெரா மூலம் பதிவு செய்தேன். அந்தப் படம் இதோ: # 6 “என்னிடம் அனுமதி பெறாமல் என்னையா படம் பிடிகிறாய் நீ?”[] 11 தையல்காரக் குருவி மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்? பறவை களில் இல்லையா? ஏன் இல்லை. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் “கிவீ…கிவீ…” என்று கணீரென ஒரு குருவியின் குரல் கேட்கிறதா? சற்று கூர்ந்து கவனியுங்கள். பறவையின தையல் காரரை உங்களால் பார்க்க முடியும். அதுதான் ‘Tailor bird’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக் குருவி. குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக. #1 (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)[] வண்ணப்படம் நன்றி: Wikipedia இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா? சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும். இவ்வாறு செய்வதால் ‘ரிவெட்’ அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களா? குப்பை மேட்டிலிருந்துதான்) இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடுபடும். #2 (குஞ்சுகளுக்குக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்) [] படம்: நடராஜன் கல்பட்டு தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம். தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளயில் உட்கார்ந்து, உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளி (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்து கொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான். # 3 (எங்களுக்குத் தூக்கமா வருது) [] படம்: நடராஜன் கல்பட்டு நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்க்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும். சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தூக்கம் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும். அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை! *** 12 “வண்ணாத்திக் குருவி” புகைப் பட அனுபவங்கள் இந்தத் தொடரை எழுதி வரும் திரு நடராஜன் கல்பட்டு அவர்களின் புகைப்பட அனுபவங்கள் பேட்டியாக  பொதிகை தொலைக்காட்சியின் “பொன்னான முதுமை” நிகழ்ச்சியில் ஒளி பரப்பாக உள்ளது. பேட்டி இரு பகுதிகளாக  நாளை டிசம்பர் 19 மற்றும் 26 தேதிகளில் மதியம் 3:30மணியளவில் ஒளி பரப்பாக உள்ளன. மீண்டும் இரு பகுதிகளும் டிசம்பர் 21 மற்றும் 28 தேதிகளில் நள்ளிரவு 12-00 மணிக்கு மறு ஒளி பரப்பாக உள்ளன. பேட்டியோடு அவர் எடுத்த ஒளிப்படங்களையும் நிகழ்ச்சியில் காண்பிக்க இருக்கிறார்கள். – PiT ————————————————————————————————————————— வண்ணாத்திக் குருவி பறவைகளில் தையல் காரரையும் நெசவாளியும் பார்த்தோம். இவர்கள் இருக்கும்போது ஒரு சலவைத் தொழிலாளி வேண்டாம்? ஆங்கிலத்தில் ‘Magpie Robin’ என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்?  வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக் குருவிக்கு இப்பெயரோ?  அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ? #1 [] வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் பிரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளை    களிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான்.  வீட்டு வேலை அதிகம் செய்வதால் அந்த நிறமோ!  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும்.   இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவா?  எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும். வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்.  நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்து விட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.     சொந்த அனுபவத்தில் தான் இதைச்சொல்கிறேன். இந்த விஷயத்தை எனது அண்ணன் மகனிடம் சொன்ன போது அதை ஒரு கேலிச் சித்திரமாக்கி விட்டான் அவன்.  அந்தப் படம் இதோ: [] வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்த பின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும். வண்ணாத்திக் குருவியை 1965ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ. பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம்.  அலுவலகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், “என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் கும்பலாக வந்தவர்களில் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க அலுத்துப் போய் பதில் சொல்லாமல் நின்றோம் ஒரு கணம்.  மறு கணம் அவர்களில் ஒருவர், “விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க” என்றாரே பார்க்க வேண்டும்! அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது நாங்கள் வண்ணாத்திக் குருவியின் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்பது! *** 13 ஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங்(Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing)என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள். இவ்வுறுப்பு இப்பறவைக்குத் தேவையான ஒரு உறுப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இது நாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை. 1 [] (மஞ்சள் மூக்கு ஆள் காட்டிக் குருவி-படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு) 2. [] (சிவப்பு மூக்கு ஆள் காட்டிக் குருவி – படம் – நடராஜன் கல்பட்டு) ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி,தூக்கணாங்குருவி போல அழகிய கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே மூன்று அல்லது நாலு முட்டைகள் இடும்.*இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ? பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும். ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள். ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்…கிரக்…” என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே“Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும். ஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள். அப்படித் தாக்கிடும் போது தாக்குதலின் வேகமும், சத்தமும் நீங்கள் கூடு இருக்கும் இட்த்தினை நோக்கி நடக்கும் போது குறையும். கூடு இருக்கும் இட்த்தில் இருந்து வேறு திசையில் நடக்கும் போது அதிகரிக்கும். அதனால் நீங்கள் கூடு அந்த திசையில் இருப்பதாக எண்ணித் தேடிக் கொண்டிருப்பீர்கள். உங்களைத் தாக்கிடும் பறவை வெகு தூரம் வட்டமாகப் பறந்து சென்று தரை இறங்கி குனிந்த படியே நடந்து தன் கூட்டிற்கு வந்து விடும். என்ன ஒரு சாமர்த்தியம்! இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது? இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம் இதோ. [] (ஆள் காட்டிக் குருவிக்கு உடலெல்லாம் கூசுது!) அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நோக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?….Did you do it? என்றபடி)பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான். இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?     ***   14 பிடித்தேன் நானும் ஆந்தைகள் படங்கள் “ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் ” என தினகரன் வசந்தத்தில் நடராஜன் கல்பட்டு அவர்கள் அளித்த பேட்டியை முன்னர் பகிர்ந்திருந்தோம். விரிவாக அந்த அனுபவத்தை விவரிக்கிறார் இதோ.. —————————————————————— ஆந்தைகளில் பல வகை உண்டு.  நம் நாட்டிலேயே புள்ளி ஆந்தை, இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தை, தானியக் கிடங்கு ஆந்தை, இமயத்து ஆந்தை, பழுப்பு மீன் பிடிக்கும் ஆந்தை, கோடு போட்ட ஆந்தை என்று ஆறு வகை ஆந்தைகள் உள்ளன.   ஆந்தைகள் இரவில் சஞ்சரிக்கும் பறவைகள்.  அவை தப்பித் தவறி பகல் நேரத்தில் வெளியே வந்து விட்டால் அவ்வளவுதான் காக்கைகளால் தாக்கப் பட்டு உயிரிழக்கும்.  அல்லது ஊடல் ஊனமடைந்து விடும். புள்ளி ஆந்தை மனித நடமாட்டம் உள்ள இடங்களில் கூட மரப் பொந்துகளிலும், கோவில்கள், இடிந்த கட்டிடங்கள் இவற்றிலும்  வசிக்கும். []   (புள்ளி ஆந்தை)  []   (இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தை) கொம்பு கொண்ட ஆந்தை என்ற உடன் ஏதோ ஆடு மாடு போல கொம்பு இருக்கும் என்று எண்ண வேண்டாம்.  அதன் தலையில் உள்ள சில இறகுகள் சற்றே நீண்டு கொம்பு போல இருக்கும். அதனால் தான் அந்தப் பெயர். ஆந்தைக்கு பல விசேஷ்ங்கள் உண்டு. 1.            அவற்றின் உணவு எலிகள்.  முழு எலியை விழுங்கி விட்டு சில மணி நேரங்களுக்குப் பின் வாயினால் ஒரு கோழி முட்டை வடிவிலான உருண்டையைக் கக்கும்.  அதைக் கையில் எடுத்து நசுக்கிப் பார்த்தால் முற்றிலும் சுத்தம் செய்யப்ப் பட்ட எலும்புகளும், மயிரும் இருக்கும்.  (உலகப் புகழ் பெற்ற ஜீரணி மருந்தான ஹ்யூலெட்ஸ் மிக்ஸ்சர் பாட்டிலின் விளம்பரப் படம் ஆந்தை!) 2.            ஆந்தை பறக்கும் போது சத்தமே வராது.  புறா, காடை, கௌதாரி போன்று பட பட வென்று சத்தம் வருமானால் எலிகள் எளிதாகத் தப்பித்து விடுமே!  இது எப்படி முடிகிறது தெரியுமா?  ஆந்தையின் இறக்கை சிறகுகள் மிக மிக மிக மிருதுவானவை.  ஒரு முறை கையில் எடுத்துப் பார்த்தால் தான் தெரியும் அவை எவ்வளவு மிருதுவானவை என்று. 3.            ஆந்தைக்கு இரவில் கண் மிகத் துல்லியமாகத் தெரியும்.  காரணம் அவற்றின் கண்களின் பாப்பா விரியும் போது முழுக் கரு விழியின் அளவுக்கு விரியும். 4.            இரவில் இரை தேட ஆந்தைகள் தங்களது சக்தி வாய்ந்த கேட்கும் திறனையும் கண் பார்வையையும் நம்புகின்றன. [] (தானியக் கிடங்கு ஆந்தை) ஆந்தைகளின் பிரதான உணவு எலிகள்.  ஆகவே தானியக் கிடங்குகள் அருகே அவற்றைப் பார்ப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.    []   (பழுப்பு நிற மீன் பிடிக்கும் ஆந்தையும் கீழே அதன் குஞ்சும்..)   [] *** இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தையைப் (பதிவின் இரண்டாவது படத்தில் இருக்கும் Indian Great Horned Owl) படம் பிடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. பங்களூரில் இருந்து ஒயிட்பீல்டுக்குப் போகும் பாதையில் அறுபதுகளில் கட்டிடங்கள் எதுவுமே கிடையாது.  கரடு முரடான தரிசு நிலம் தான்.  அங்கு சுண்ணாம்புக் கற்கள் போன்ற ஒன்றினைத் தோண்டி எடுத்ததாலும், மழை நீர் அரிப்பினாலும் ஒரு சுமார் பதினைந்தடிப் ஆழம் கொண்ட ஒரு குட்டிப் பள்ளத்தாக்கு உண்டாகி இருந்தது.  அதன் சுவற்றின் ஒரு பள்ளத்தில் ஜனவரி 1ம் தேதி ஒரு ஆந்தையின் கூட்டினையும் இரண்டு முட்டைக்ளையும் பார்த்தோம். மறு நாள் சென்று கூட்டருகே சுவற்றில் ஒரு மரக் கட்டை (சுமார் இரண்டடி நீட்டிக் கொண்டிடுக்கும் படியான பல துளைகள் கொண்ட கட்டை) ஒன்றினைச் சொருகினோம். அதற்கடுத்த வாரம் அந்தக் கட்டையில் கேமிரா அளவில் ஒரு சிறிய அட்டைப் பெட்டியைப் பொருத்தினோம்.  மூன்றாம் வாரம் அட்டைப் பெட்டிக்கு பதிலாக பள பளக்கும் தகர டப்பாவினைப் பொறுத்தினோம். நான்காவது வாரம் தகர டப்பாவிற்கு பதிலாக ஒரு சைகிளில் பொருத்திடும் பேட்டரி விளக்கினை வைத்து அதை எரிய விட்டு வந்தோம். ஐந்தாம் வாரம் பேட்டரி லைட்டின் அருகிலேயே கேமிராவும் ஃப்ளேஷ் லைட்டும் பொருத்தப் பட்டது.  பள்ளத்தில் சுமார் இருபது அடி தூரத்தில் எங்களது சிறிய கூடாரம்.  கேமிராவில் பொருத்தப் பட்டுள்ள, தூரத்தில் இருந்து இயக்க உதவிடும் கருவியில் இருந்து ஒரு மெல்லிய ரப்பர் குழாய் கூடாரத்தினுள் இருப்பவரின் கையில் உள்ள ரப்பர் பந்தோடு இணைக்கப் பட்டது. இப்படி இடைவெளி விட்டு விட்டு வேலை செய்யா விட்டால் ஆந்தை தன் கூட்டிற்குத் திரும்ப வராமலே இருந்து விடும். [] (இந்திய பெரிய கொம்பு ஆந்தை படமெடுக்க ஏற்பாடுகள் – ஏணியிம் மேல் உபேந்த்ரா.  ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பது எனது நண்பன் ஒருவன். வலது கீழ் மூலையில் கூடாரம்.) இந்த வேலைகளுக் கெல்லாம் ஒரு சுமார் எட்டடி நீள ஏணி வேண்டி இருந்தது.  ஆகவே எனது காரின் மேல் சனி ஞாயிறுகளில் ஒரு ஏணி கட்டி இருக்கும். படம் பிடிக்க ஒவ்வொருக்கும் ஒரு நாள் அவகாசம் கிடைக்கும்.  படம் பிடிக்கும் போது மூவருமாக சூரியன் மறையும் நேரம் கூடாரம் வரை சென்று விட்டுப் பின் இருவர் காருக்குத் திரும்பி விடுவோம்.  அப்படிச் செய்தால் தான் ஆந்தை தன் கூட்டிற்கு வரும்.  ஆந்தைகளுக்கு எண்ணத் தெரியாது என்பதால் அவை எமாந்து விடும் ஒரு வரும் கூடாரத்தில் இல்லை என்று நம்பி. ஒரு ஆந்தை உயரமான ஒரு இடத்தில் உட்கார்ந்து, “பூ…புபோ…பூ…புபோ…” என்று கத்திக் கொண்டிருக்கும்.  (இவ்வாந்தையின் ஆங்கிலப் பெயர் ‘புபோ புபோ’)  மற்றொரு ஆந்தை தான் தேடிப் பிடித்த எலியினை வாயில் கவ்விக் கொண்டு, “கீஷ்..கீஷ்..” என்று கத்தியபடி ஒவ்வொரு இடமாக உட்கார்ந்து மெல்ல கூட்டிற்கு வந்து எலியினைத் தன் குஞ்சிற்குக் கொடுக்கும்.  அப்போது படம் பிடிக வேண்டும். சூரியன் மறைந்ததும் அந்த இடத்தில் எலிகள், பாம்பு, தேள் இவை சகஜமாக நடமாடும். கூட்டம் கூட்டமாகக் கொசுக்கள் வந்து தாக்கும்.  கொசுக்களிடம் இருந்து தப்ப யூகலிப்டஸ் எண்ணையைத் தடவிக் கொள்ளுவோம்.  கண்களில் கண்ணீர் வந்து கொஞ்ச நஞ்சம் தெரிவதையும் மறைத்து விடும்.  (அந்த நாட்களில் ஓடோமாஸ் வரவில்லை.) படம் எடுக்க ஆரம்பித்த மூன்றாவது ஞாயிறு எனது முறை.  நான் அன்று கிளம்பு முன் எனது ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமிராவில் கருப்பு வெள்ளை ஃபிலிமும், எஸ்.எல்.ஆர். கேமிராவில் கலர் பிலிமும் போட்டு இரண்டையும் ஒரே ரப்ப்ர் குழாய்க்கு ஒரு ‘டி-.கனெக்ஷன்’ போட்டு இணைத்து கைப் பந்தை அழுத்தினால் வெண்ணை போலிருந்த ட்வின் லென்ஸ் கேமிராவின் ஷட்டர் இயங்கியது.  எஸ்.எல்.ஆரின் ஷட்டர் இயயங்க வில்லை.  எஸ்.எல்.ஆர். கேமிராவை வீட்டில் வைத்து விட்டு கிளம்பத் தயாரானேன். அப்போது என் மனைவி கேட்டாள், “உங்களிடம் இரண்டு கேமிராக்கள், இரண்டு இயக்கிகள், இரண்டு நீண்ட ரப்பர் குழாய்கள், இரண்டு பந்துகள் உள்ளன.  உங்களுக்கோ இரண்டு கைகளும் உள்ளன.  ஏன் ஒரே கையால் அவற்றை இயக்க நினைக்க வேண்டும்?”  மீண்டும் என் சாமான்களைப் பையில் எடுத்துக் கொண்டேன்.  அன்று எனக்கு மிக நல்ல கலர் மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் கிடைத்தன. பெரிய ஆந்தை இரண்டு குரல்களில் கத்துவது பற்றிச் சொன்னேன்.  அவற்றுக்கு ஒரு மூன்றாவது குரலும் உள்ளது.  தப்பித் தவறி யாராவது அவற்றின் கண்களில் படும் படி கூட்டருகே சென்று விட்டால் அவை ஒரு பெண்ண்ணின் குரல்வளையை அழுத்திக் கொல்ல முயலும் போது அலறுவாளே அது போன்ற ஒரு ஒலியையும் எழுப்பிடும்.  அந்த சத்தம் கேட்பவரின் ரத்தத்தினை உறைய வைத்திடும். (blood curdling noise). எனது நண்பர் ஒருவர் என் கூட ஒரு நாள் வந்திருந்தார்.  (படத்தில் ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பவர்).  அவர் தானும் கூட்டினைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி உபேந்த்ரா இறங்கியதும் ஏணியின் மீது ஏறினார்.  அப்போது கூட்டருகே ஆந்தை திரும்ப வந்திடவே அது ஒரு அலறல் சத்தம் எழுப்பியது.  பயந்து போன நண்பர் ஏணியில் இருந்து எம்பிக் கீழே குதித்து ஓடினார்.  ஏணியைப் பிடித்துக் கொண்டிருந்த நான் அவர் அருகே சென்று அவர் இதயத் துடிப்பைப் பார்க்க எண்ணி என் கையை அவ்ர் மார்பின் மீது வைத்தேன்.  உடனே அவர், “நான் ஒன்றும் பயப்பட வில்லை.  யாரோ கஷ்டத்தில் அலறுவது போலக் கேட்டது.  ‘நான் இங்கிருக்கிறேன் உதவி செய்ய. வேண்டுமா உதவி?’ என்று கேட்டேன்.  அவ்வளவு தான்” என்று சொன்னார்! மறு நாளும் போக வேண்டும் என்று தோன்றவே அவரைக் கேட்டேன், “நீ என் கூட வருகிறாயா?” என்று.  அவர் சொன்ன பதில், “அப்பப்பா அந்தப் பக்கமே நான் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டேன்!” மறக்க முடியுமா ஆந்தையைப் படம் பிடித்த அனுபவத்தை? *** (படங்கள் அனைத்தும் எடுத்தது நடராஜன் கல்பட்டு) 15 “அதோ பார் அங்கே ஒன்று..” - பூ நாரை நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப் பட்டு உள்ள பெயர் என்பதாகும்.ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். [] [வண்ணப்படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg ] பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிகச் சன்னமாக ஒரு    ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள். பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து வழக்கம் போல சைபீரியாவில் இருந்து வரும் பறவைகள் என்று விடுகின்றனர்.  (வலசை வரும் பறவைகள் அனைத்துமே சைபீரியாவில் இருந்து வருபவை அல்ல என்பது வேறு விஷயம்.) சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல பூ நாரை ஜோடிகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா? முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நட்த்திய ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள். “ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா…கா… ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?” “தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?” “சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது) “சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா?  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?” இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று? [] (ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்) பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 – 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த சரி செய்யும் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா? கூட்டில் குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு. []    (குடை விரித்திருப்பது குழந்தைகளுக்காக) வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.  [] (கூடு ரிபேருக்குக் குச்சி வருது) குச்சி கொண்டு வந்த பறவை தானே கூட்டினை சரி செய்யும் வேலையைத் துவங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொண்டு வந்த குச்சியைக் கொடுக்கும், ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ பணி மாறிடும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை குச்சியை வாங்கிக் கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுகளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி. (மூக்கு ஒரு முழ நீளம் நீட்டிக் கொண்டிருந்தால் மூக்கால் தானே முத்தமிட்டுக் கொள்ள முடியும்!)  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து “கா… கா…” என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் முழுவதுமாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா. குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி. இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை தொண்டையிலிருந்து வெளியே கொண்டு வராமல் “அதோ பார் அங்கே ஒன்று”,என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.  [] (அங்கெ பாருங்க.  கூட்டுலெ ரெண்டு மீனு கெடெக்கு) குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்னவில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.   ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்குத் தான் எத்தனை அறிவு! இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா?  நான்தான் 30 அடி உயரத்தில் சவுக்கு, மூங்கில் இவற்றால் கட்டப் பட்ட நான்கு கால் சாரத்தில், சாக்குக் கூடாரதினுள் உட்கார்ந்து பார்த்தேனே படங்கள் பிடித்திடும் போது. தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் வேறு சில இடங்களிலும் காணலாம். இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள். *** ( கருப்பு  வெள்ளை படங்கள் அனைத்தும் எடுத்தது: நடராஜன் கல்பட்டு ) 16 பக்கி என்றொரு பறவை பக்கி என்றொரு பறவை.  இதன் ஆங்கிலப் பெயர் நைட் ஜார் என்பதாகும்.  இரவில் காதுக்கு நாராசமான “சச்….சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒலி (jarring sound) எழுப்புவதனால் இந்தப் பெயர் கொடுத்திருப்பார்களோ இதற்கு? இந்தப் பறவையை பாதுகைக் குருவி என்று அழைப்பதும் உண்டு.  காரணம் இது தரையில் உட்கார்ந்திருக்கும் போது கவிழ்த்துப் போட்ட பாதுகை, அதான் செருப்பு, போலக் காணப்படும். வாகனங்களில் நெடுஞ் சாலைகளில் பயணிக்கும் போது சில சமயம் சாலை ஓரங்களிலோ அல்லது தாழ்வான மரக் கிளைகளிலோ இரு மாணிக்கக் கற்கள் (இதை கெம்பு அல்லது சிவப்பு என்று சொல்வதும் உண்டு) ஜ்வலிப்பது போன்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அவை நம் பக்கியின் கண்களே.   பக்கி திடீரெனெப் பறந்து சாலையின் குறுக்கே செல்வதையும் பார்த்திருப்பீர்கள்.  அவை அவ்வாறு பறப்பது வாகனங்களின் விளக்கொளியில் துல்லியமாகத் தெரிந்திடும் பறக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னதான். பறந்திடும் பூச்சிகளைப் பிடிக்கும் போது அவை தப்பி விடாமல் இருக்க பக்கியின் வாயின் இரு புறமும் வரிசையாக பல ‘மீசை’  மயிர்கள் இருக்கும். பகலில் பக்கிகள் மரக் கிளைகளிலோ அல்லது செடிகளின் அடியிலோ படுத்துரங்கும்.  அப்போது அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்.  காரணங்கள் இரண்டு.  ஒன்று அதன் நிறம் மரப் பட்டைக்ளோடும், தரையில் இருக்கும் சரகு, வேர், காய்ந்த புல் இவற்றோடும் ஒன்றி விடும்.  இரண்டாவது காரணம் அவை மரக் கிளைகளில் உட்காரும் போது மற்ற பறவைகளசிப் போல் குறுக்கு வாட்டத்தில் உட்காராமல் கிளை போகும் வாட்டத்திலேயே உட்காரும். +-----------------------------------------------------------------------+ | [] | +-----------------------------------------------------------------------+ |  கிளையின் நீள வாட்டத்தில் உறக்கம். | | | | (படம் நன்றி: இணையம்) | +-----------------------------------------------------------------------+ பக்கிகளின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Goat sucker’ ஆட்டுப் பால் உறிஞ்சி.  இப் பெயர் வரக் காரணம் இரவில் தொழுவங்களில் பறந்திடும் பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக வந்திடும் பக்கிகளை அவை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்காக வந்துள்ளதாக மக்கள் எண்ணியது தான். சில மிருகங்கள் ஒத்துக் கொள்ளாத பருவ நிலையில் உணவு தேடி அலைந்திடாமல் நீண்ட உறக்கத்தில் ஈடு படுவது போல (Hibernation) அமெரிக்காவில் காணப்படும் பக்கிகள் பல வாரங்கள் பாறை இடுக்குகளில் படுத்துறங்கும்.  பறவை இனத்தில் ஆழ் உறக்கத்தில் ஈடுபடும் ஒரே பிராணி பக்கிதான். பக்கி தன் முட்டையையும் குஞ்சையும் அவற்றின் மீது படுத்துறங்கிக் காத்திடும். +-----------------------------------------------------------------------+ | [] | +-----------------------------------------------------------------------+ | முட்டையைக் காத்திடும் பக்கி | | | | படம்: கல்பட்டு நடராஜன் | +-----------------------------------------------------------------------+ +-----------------------------------------------------------------------+ | [] | +-----------------------------------------------------------------------+ | குஞ்சின் மீது படுத்துறங்கும் பக்கி | | | | படம்: கல்பட்டு நடராஜன் | +-----------------------------------------------------------------------+ குஞ்சின் மீது படுத்திருக்கும் போது அதன் கண்கள் மூடி இருக்குமே ஒழிய அவை முற்றிலுமாக நித்திரையில் ஆழ்ந்து விடுவதில்லை. ஒரு முறை பக்கி படுத்திருந்த இடத்தை நெருங்கிய போது, குஞ்சு தன் சிறகினை அடித்துத் தாய்ப் பறவையை எழுப்பியது.  தாயோ, “சும்மாக் கிட.  அவுங்களாலெ நம்மெக் கண்டு பிடிக்க முடியாது” என்பது போல இருந்த்து.  அவ்வளவு நம்பிக்கை தன் மாய்மாலத்தின் மீது! அப்போது என் காலடியில் இருந்து ஒரு கல் நகர்ந்து கூட்டை நெருங்க, திடீரெனப் பறந்தது அது. கூடு என நான் சொன்ன போது அது எதோ பிரமாதமாகத் தயார் செய்திருக்கும் என்று நினைக்காதீர்கள்.  சிறு கற்களிடையே முட்டையினை (ஒன்றோ இரண்டோ) இட்டிடும்.  அவ்வளவே.  தன் முட்டைக்கோ குஞ்சுக்கோ ஆபத்து என்று தோன்றினால் அவற்றைத் தன் அலகினால் வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடும்.  இந்த சாமர்த்தியம் இருக்கும் போது தனியாக சொந்த வீடு எதற்கு பக்கிக்கு? *** 17 வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா? 1970_ல் ஹைதராபாதில் புகைப் படக் கலையில் ஆர்வம் உள்ள ஒரு வக்கீல் நண்பருடன் வாரங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு எப்போதுமெ ஒரு பழக்கம் வாகனத்தில் பயணிக்கும் போது எனது கவனம் சாலையில் மட்டும் இராது.  சாலையிலும் அதன் இரு புறங்களிலும் பறந்திடும் பறவைகளையும் பார்த்துக் கொண்டே செல்வேன்.  அன்று என் கண்களில், அலகில் இரையுடன் பறந்து சென்று வயலில் இறங்கிய, ஒரு வானம்பாடி பட்டது. உடனே காரை நிறுத்தி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம்.  நாங்கள் அந்த இடத்தை அடைவதற்குள் அந்தப் பறவை பறந்து சென்று விட்டது.  ஆனால் அதன் கூடும் அதில் இருந்த இரு குஞ்சுகளும் என் கண்ணில் பட்டன.  நண்பர் நான் பார்த்த்தைக் கவனிக்க வில்லை.  உடனே அந்தக் கூட்டைச் சுற்றி ஒரு ஆறடி ஆரத்தில் ஒரு வட்டக் கோடு போட்டு, “இந்த வட்டத்திற்குள் ஒரு பறவையின் கூடு இருக்கிறது.  உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?” என்று கேட்டேன்.  அவர் சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் அவரால் கூட்டினைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  காரணம் அது சுற்றுப் புரத்தோடு அவ்வளவு அழகாக ஒன்றி இருந்த்து. நண்பர் கூட்டின் மீது கால் வைத்திடப் போகும் சமயம் அவரைத் தடுத்து நிறுத்தி அவருக்கு அந்த வானம்பாடியின் கூட்டினையும் அதில் இருந்த இரண்டு குஞ்சுகளையும் காட்டினேன்.  பின்னர் தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட வந்த போது அந்த அழகினை தூரத்தில் இருந்து படம் பிடித்தேன்.  அந்தப் படம் இதோ: #1 ----------------------------------------------------------------------- [] (சாம்பல் தலை வானம்பாடி – Ashy crowned  finch lark புகைப்படம்: நடராஜன் கல்பட்டு) ----------------------------------------------------------------------- வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா? சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே சில மீடர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும். இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும். #2 ----------------------------------------------------------------------- [] (ஆகாசத்துலெ இருந்து நான் பாடற பாட்டு ஒங்களுக்குப் புடிச்சிருக்கா? படம்: இணையத்திலிருந்து..) ----------------------------------------------------------------------- இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு. வானம்பாடியின் இசை கேட்டிட இந்தச் சுட்டியில் அழுத்தவும் (Control + Click) http://www.youtube.com/watch?v=tkk7bnTG5JM&feature=related நம் நாட்டில் மூன்று வித வானம்பாடிகள் உள்ளன.  அவை ஆகாசத்து வானம்பாடி (Sky lark),  சாம்பல் நிறத் தலை கொண்ட வானம்பாடி (Ashy crowned finch lark)  மற்றும் கொண்டை கொண்ட வானம்பாடி (Crested lark) என்பவை ஆகும்.   #3 ----------------------------------------------------------------------- [] (ஆகாசத்து வானம்பாடி – Sky lark படம்: கல்பட்டு நடராஜன்) ----------------------------------------------------------------------- #4 ----------------------------------------------------------------------- [] (கொண்டை கொண்ட வானம்பாடி – Crested lark படம்: இணையத்திலிருந்து..) ----------------------------------------------------------------------- பள்ளி நாட்களில் இந்தக் கதையைப் படித்திருப்பீர்கள். ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், “அம்மா, அம்மா… இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னார் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா” என்றன. தாய்ப் பறவை சொல்லிற்று, “கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.”  “சரிம்மா” என்றன குஞ்சுகள். இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, “அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.” தாய்ப் பறவை, “கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க,” என்றது. மறு நாள் மாலை, “அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,”  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, “இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான்” என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது. இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது. தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே செடிகளின் வேர் அருகே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர், இலை, சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை வானம்பாடி அமைக்கும்.  குஞ்சுகளுக்கு இரை அளிப்பது ஆண் பெண் இரண்டு குருவிகளுமே. இயற்கையில்தான் பார்த்து ரசித்திட எத்தனை அழகிய காட்சிகள்!  காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரியும் போது நீங்கள் சுவாசிக்கும் தூய்மையான காற்றே ஒர் அலாதி சுகமளிக்கும்.  கூட்டுப் புழுவாய் வீட்டுச் சுவற்றுள் அடைந்து கிடக்காது வெளியே வாருங்கள்.  இயற்கையின் அழகினக் கண்டு ரசியுங்கள். (வண்ணப் படங்கள் மட்டும் இணைய தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை) *** 18 வேறு ஒரு உலகம்..- விலங்குகளைப் படம் பிடித்தல் சரணாலயங்களில் நடந்தோ, யானை மீதோ, நீர் தேக்கங்களில் படகிலோ சென்று, பார்த்தல்,விலங்குகளைப் படம் பிடித்தல் என்பது ஒரு இன்ப மயமான அனுபவம். நீங்கள் சுவாசித்திடும் சுத்தமான காற்றும், மனித ஆரவாரமற்ற நிலையும், பறவைகளின் சங்கீதமும், ஓடைகளில் ஓடிடும் நீரின் சலசலப்பும் உங்களை உடலோடு தூக்கி வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும். படம் பிடித்திடும் ஆர்வத்தில் தனியாக மட்டும் சென்றிட வேண்டாம்.  வனக் காவலர்கள் துணையுடனோ அல்லது அனுபவம் மிகுந்தவர்களுடனோ செல்வது எப்போதுமே நல்லது. #1  [] (பெரியாறு ஏரிக் கரையில் ஒரு யானைக் கூட்டம்) தனியாக இருக்கும் யானைக்குத் தக்க மரியாதை கொடுத்து வெகு தூரத்திலே இருந்தே அதைப் பாருங்கள்.  யானைக கூட்டமாக இருக்கும் போது அவ்வளவு ஆபத்தானது அல்ல. காட்டு விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, புலி இவையும் சற்று ஆபத்தானவையே. ஒரு முறை கர்னாடகாவில் உள்ள கெமன்குண்டி மலைப் பிரதேசத்தில், ஆளுயரப் புல் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே எனது குரு பெருமாள் அவர்களும் மற்றொரு நண்பருமாக நடந்து சென்று கொண்டிருந்தோம்.  ஓரிடத்தில் ஒரு புதிய வாடையை நுகர்ந்து ஒரு வினாடி நின்று சுற்று முற்றும் பார்த்தேன்.  என் பின்னே வந்து கொண்டிருந்த பெருமாள் சைகையால், “நிற்காதே.  போ” என்றார்.  நானும் நடந்தேன்.  சற்று தூராம் சென்ற பின் பெருமாள் கேட்டார், “ஏன் தெரியுமா உன்னை நிற்காதே என்றேன்?  அங்கு ஒரு புலி நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த்து” என்று.  பதிலுக்கு நான் சொன்னேன், “நானும் அதற்காகத் தான் நின்றேன்.  புலி கண்ணில் படுகிறதா என்று பார்த்திடலாம்” என்று. விலங்குகளை அவற்றின் இயற்கையான் சூழலில் இருப்பது போன்ற படங்களைப் பிடித்திட சரணாலயங்களுக்குத் தான் போகவேண்டும் என்பதில்லை.  உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றால் கூட நல்ல படங்கள் பிடித்திடலாம்.  அப்படிப் பிடிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று விலங்குகள் இருக்கும் கூண்டுகளின் கம்பிகளோ தடுப்புச் சுவர்களோ படத்தில் வராத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு நான் பிடித்த சில படங்கள் கீழே: #2  []  (யோவ்…. பொண்ணு குளிக்கற எடத்துலெ ஒனக்கு என்னையா வேலெ?) #3  [] (கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா இங்கெயும் வந்துட்டாங்கையா படம் புடிக்க) #4 +-----------------------------------------------------------------------+ |  [] | +-----------------------------------------------------------------------+ |  (ராஜா ராணி) | +-----------------------------------------------------------------------+ #5 --------------------------------------------------  [] (புலி சிங்கம் இருந்தா ஒரு மான் இருக்க வேண்டாம்?) --------------------------------------------------   #6  +-----------------------------------------------------------------------+ |  [] | +-----------------------------------------------------------------------+ | (என்னெயெப் போல சோம்பேறியா இருக்காதீங்க.  சுறு சுறுப்பா இருங்க.) | +-----------------------------------------------------------------------+   #7  [] (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…………….கிட்டெ வராதீங்க!) பறவைகள் ஆச்சு. விலங்குகள் ஆச்சு.  மனுசங்களெப் பத்தி சீக்கிரத்துலெ பாக்கலாம். அதுக்கு முந்தி பூச்சிகளெப் பத்தி அடுத்த பகுதிலெ பார்க்கலாம். ( படங்கள் – நடராஜன் கல்பட்டு) ***  19 பூச்சிகளைப் படம் பிடித்தல் இந்தக் கட்டுரை ஒரு நேயர் விருப்பம்.  அன்பர் அகமது சுபைர் அவர்கள் ஒருநாள் கேட்டார், “பறவைகளுக்கு 20 பாகம்… விலங்குகளுக்கு ஒரு பாகம் தானா???  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்டெ… :).” என்று.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதுகிறேன் இங்கு. பூச்சிகள் உருவத்தில் மிகச் சிறியவை.  ஆகவே அவற்றைப் படம் பிடிக்க சிறிது சிரமப் பட வேண்டும்.  அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்’ கள் கிடையாது.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமிராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும்.  ஆனால் கேமிராவின் லென்ஸோ ஒரு குறிப்பிட்ட தூரத்திகு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையை சமாளித்திட பெல்லோஸ் ஸ்கோப் என்ற ஒரு கருவியின் உதவி தேவை.  துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமிராவின் லென்ஸைப் பொறுத்தி, ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்.  []   உங்கள் கேமிராவின் லென்ஸைக் கழற்றி எடுத்து அந்த இடத்தில் பெல்லோஸ் ஸ்கோப்பைப் பொறுத்தி, லென்ஸை அதில் பொறுத்திப் படம் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பிடித்த மூன்று படங்கள் இதோ: -----------------------------------------------------------------------------------------  [] (சிலந்தி முட்டைகளை தானே நூற்ற நூலால் சுற்றி பந்தாகச் செய்து தன்னுடனே சுமந்து செல்கிறது) ----------------------------------------------------------------------------------------- இந்த சிலந்தி தோட்டங்களில் தரையில் வாழ்ந்திடும் ஒன்று.  சுமார் 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் இது.  இந்தப் படம் ஒரு அங்குல தூரத்தில் இருந்து எடுக்கப் பட்ட்து. சிலந்திக்கு மூன்று அல்லது நான்கு ஜோடிக் கண்கள் உண்டு, தூரத்துப் பார்வை, பரந்த பார்வை, கிட்டத்துப் பார்வை, தூரத்தினை அளந்திடும் வகை செய்ய முப்பரிமாணப் பார்வை உள்ள கண்கள் என்று. -----------------------------------  [] (அன்று பிறந்த வண்ணாத்திப் பூச்சி) ----------------------------------- இடையான் பூச்சிகளில் பல விதங்கள் உண்டு.  புல் வடிவில், இலை வடிவில், சருகு வடிவில், மலர் வடிவில் என்று.  ஆனால் அவை எல்லா வற்றிற்கும் சில பொதுக் குணங்கள் உண்டு.  அவை மாய்மாலம் (சுற்றுப் புறத்தோடு நிறத்தில் ஒன்றிடுதல்), தன்னைவிடப் பெரிய உயிரினங்களையும் பிடித்துத் தின்னல் என்று.  சில வகை இடையான்கள் கணவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கணவனின் தலையைக் கடித்துத் தின்று விடும்!  தலை இழந்து கணவன் துடிக்கும் போது மனைவிக்கு இன்பம் அதிகரிக்கிறது என்று ஒரு பூச்சி ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கிறார்!! -----------------------------------------------------------------------  [] (முன்னங் கால்களை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் குச்சி ரக இடையான் பூச்சி) ----------------------------------------------------------------------- இவ்வுலகில் லட்சக் கணக்கான பூச்சிகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, அவற்றைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுது போக்கு.  அப்படிப் படம் பிடிக்கும் போது அவை பற்றி பல விஷயங்களையும் அறிந்திட வாய்ப்பு கிடைக்கும். ( படங்கள் – நடராஜன் கல்பட்டு) 20 கிராமப்புறங்களில் படம் பிடித்தல் கிராமப் புறங்களில் அழகான படங்கள் பிடித்திட பல வாய்ப்புகள் கிடைக்கும்.  குடிசை வீடுகள், வயல் வெளிகள், களத்து மேடு, கிராம மக்கள் என இப்படிப் பல உங்கள் கண்களைக் கவரும்.  அவற்றை சரியான கோணத்தில், தேவையான வெளிச்சம் பட, சரியான தருணத்தில் எடுத்திருந்தால் கதை சொல்லும் பல அழகிய படங்களை நீங்கள் எடுத்திடலாம்.  உதாரணத்திற்கு சில படங்கள்: #1 ---------------- [] (உழைப்பாளிகள்) ---------------- #2 ------------------------ [] (வறுமைக்கோட்டின் கீழே) ------------------------ #3 ------------ [] (தொழிலாளி) ------------ #4 -------------------- [] (இயற்கை வைத்தியம்) -------------------- #5 --------------------------- [] (கண்ணீர் இன்றித் தண்ணீர்) --------------------------- கிராமப் புறங்களில் படம் பிடிக்கும் போது மிகுந்த கவனம் தேவை.  இல்லை என்றால் நீங்கள் அனாவசியமாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க நேரிடும்.  முதலில் நீங்கள் அவர்களோடு பேசி உங்களை அவர்களோடு ஒருவராக ஆக்கிக் கொண்டு, பின் அவர்களது அனுமதியுடன் படம் பிடிக்க வேண்டும்.  இந்த விதி பெண்களைப் படம் பிடிக்கும் போது கட்டாயம் அனுசரிக்க வேண்டிய ஒன்று.  இல்லை என்றால் ஒரு கிராமத்தில் நாங்கள் பட்ட அவஸ்தையினை நீங்களும் பட வேண்டி வரும். ஒரு முறை ஏரிக்கரையில் தலையில் புல்லுக் கட்டோடு வந்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் தன் கேமிராவைத் தூக்கி என் நண்பர் நோட்டம் விட, அவள் கன்னடத்தில் ஏதோ கத்த, வயல்களில் இருந்து ஐந்தாறு ஆட்கள் கையில் அரிவாளோடு ஓடி வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டு மிரட்ட, அன்று அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பட்ட பாடு, அப்பப்பா, சொல்லி மாளாது! படங்கள் அனைத்தும்: நடராஜன் கல்பட்டு. 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !