[] 1. Cover 2. Table of contents பிரளயத்திற்கு ஒரு நாள் முந்தி பிரளயத்திற்கு ஒரு நாள் முந்தி   அன்பழகன்ஜி   anpoog@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/piralayathirku_oru_naal_munthi மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation என்னுரை அன்பர்களே, வணக்கம். கலில் ஜிப்ரான் சொன்னதைப்போல நான் எப்போதும் மரணத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.  வாழ்வின் இருன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருபவனுக்கே அது சாத்தியம். எவருடைய வாழ்க்கை நிம்மதியாக நகர்கிறது?   நலமா என்ற வினாவிற்கு தாரக மந்திரமாக நலமே என்ற வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.  ஆனால் எதார்த்தம் எங்கோ மூச்சு முட்டி கிடக்கிறது.  அவசர யுகத்தில் அதை கண்டு கொள்வாரில்லை. இறப்பிலும் பிறப்பிலும் வாழ்விலும் என்ன இருக்கிறது?   ஆனால் நாம் இருந்துகொண்டே இருக்கிறோம்.  அந்த இருன்மையை மற்றவர்கள் புரியும்படி வெளிப்படுத்த இயலாமல் படைப்பாளியிடமே சில நேரம் இருண்மையாகி விடுகிறது ஒரு கவிதை சிக்கலா இருப்பதற்கு சமூக சிக்கல்கள்  காரணமாக இருக்கலாம்.    அல்லது   அதை எழுதின கவிஞன் மிகுந்த சிக்கல் அனுபவத்தை கொண்டதால் இருக்கலாம்.  என் குறியீடு கருப்பொருளின் குறியீடு இரண்டிற்கும் தொடர்பில்லாமல் தானே பிறந்திடும் குறியீடு ஆகியவை கூட்டு சேர்ந்து எனது எளிமையான கவிதையின் கழுத்தை பல நேரம் இறுக்கி விடுவது தவிர்க்க முடியாததாகிறது. அரூத்திலிருந்து அரூபத்தைதானே பெற முடியும்.  அதை காலத்தின் நிர்ப்பந்தம் என்றார் ஆத்மாநாம்.  மேலும் அவர் கீழ்கண்டவாறு விளக்குகிறார். ஒரு நல்ல கவிதையும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மையும் முழுக்க கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சில சமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதையில் குற்றமுள்ளது அல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்ல முடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும் என்கிறார். என்னுடைய கவிதைகளில் பெறும்பாலும் இருண்மைத் தன்மை கொண்டதாவே இருக்கின்றன. அவை ஓரிரு முறை படித்தால் புரியும் படியானதாக இருக்கும். அல்லது சிலருக்கு புரியாமலே இருக்கும்.   புதுக்கவிதை என்பது உணர்தலில் இருப்பதாகவும் அதில் கூடுதல் கவித்தும் இருப்பதாகவும் நான் கருதுகிறேன். 1970- 80 களில் இவற்றின் மீதான சர்ச்சை கூடுதலாவே இருந்தது.  அப்போது நான் கவிதைகளின் வாசகனாக மட்டும் இருந்தேன்.  அவ்வாறான கவிதைகளை திரும்ப திரும்ப வாசிப்பேன். ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறான புரிதல் புலப்படும்.  ஆனால் வாசிப்பின் உணர்வு மாறுவதில்லை. இருண்மை (Obscurity) உத்தி மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். சொல்லுக்கும் உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பு புரியாததுபோல் இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொருளை உணர்த்தும்.  அல்லது உணர்தல் இன்றி புரியாமல் போய்விடலாம். குறிப்பிட்ட ஒரே ஒரு பொருளை மட்டும் தருவது கவிதையாகாது என்பதே இதன் மையப்பொருள்  எனலாம்.  எடுத்துக்காட்டாக பெர்ட்டோல்ட் பிரெக்ட் என்பவரின் இருண்மை கவிதை: மாறும் சக்கரங்கள் “சாலையோரத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். டிரைவர் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். புறப்பட்டு வந்த இடத்தை நான் விரும்பவில்லை. போய்க் கொண்டிருக்கும் இடத்தையும் நான் விரும்பவில்லை. பின் எதற்குப் பொறுமையற்று நான் சக்கரத்தை மாற்றும் அவனைப் பார்த்து நிற்கிறேன்?” . தமிழில் : தேசிய இறைச்சிகளான நம் பரிமாற்றம் ஆரம்பிக்காமல் முடிந்துவிட்டது. (தேவதச்சன்) நான் ஒரு உடும்பு ஒரு கொக்கு ஒரு ஒன்றுமேயில்லை (நகுலன்) இருண்மைகள், வாசகனின் பரந்த வாசிப்பையும் உழைப்பையும் எதிர்பார்த்துக் கிடக்கின்றன என்றும்  மேலும் ஒரு பிரதிக்கு அர்த்தம் வாசகரால்தான் உருவாக்கப் படுகிறது என்றும் வாசகரை முதன்மைப்படுத்தும் திறனாய்வுகள் உருவாகிவிட்ட இன்றைய சூழலில், கவிதைக்குள் இருண்மை இருப்பு கொண்டிருப்பது மிகச் சிறந்த அழகியல் செயல்பாடாகக் கருதுவதற்கான வாய்ப்பைப் பெருக்கியுள்ளது என்கிறார் பேராசிரியர் க.பஞ்சாங்கம்.  மேலும் கவிதையை ரசிப்பதற்கு அது முழுமையாகப் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை எனக் கருதுகிறார் டி.எஸ்.எலியட்.  புரிதல் என்பது தனிப்பட்ட விஷயமாகவே நானும் கருதுகிறேன். நகுலன், ஆத்மாநாம், சுந்தரம் ராமசாமி, கல்யான்ஜி போன்ற பிரபலங்களின் கவிதைகளை  வாசித்த அனுபவத்தைத் தொடர்ந்து என் இலக்கியத்தை நான் எழுதுவதே அதனை அடைக்கும் இலக்கணம் என் முடிவுக்கு வந்து  அது என்னை அப்படி எழுத வைப்பதாக உணர்கிறேன்.  அதிலிருந்து வெளிரவே முடியாத எனக்குள்ளான ஓர் இருண்மைத் தன்மை உருவாகி விடுவதாவே கருதுகிறேன்.  ஏனெனில் என்னை நான் கடக்க வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.  சென்றடைதல், வாசிபவரின் அறிதல், புரிதல் எல்லாமே இரண்டாம் பட்சமானதாவே கருதுகிறேன். மரணத்தை  தன் போக்கில் கடந்து போக கற்றுக் கொள்வது கடினமாக இருப்பது போலத்தான் கவிதையின் மீதான புரிதலையும் பொருளையும் அறிந்துகொள்ள வாசிப்பவர் தேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற வேண்டும். கடினமானதாக கற்றுக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் வாசிப்பவர் இருக்கலாம்.  எதுவானாலும் தயக்கமின்றி தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.  கல்லடி பட இந்த மரம் காய்த்து காத்திருக்கிறது. வாருங்கள் பிரக்ஞையோடு சிலாகிப்போம். இக்கவிதைகளில் சில வெளிவந்த கீழ்கண்ட நூல்கள் மற்றும் ஊடகங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்ல கடமைப் பட்டவனாவேன். படைப்பு முகநூல் குழு கல்வெட்டு வானம் வசப்படும் வா நண்பா கவி 400 தொலைதூரத்து மாயப்பாடல். தினமலர் வாரமலர். இந்நூலை யாரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் விற்பனை நோக்கமின்றி எனது பெயருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். இந்நூல் pdf முறையில் வெளிவர உதவிய freetamilebooks.com நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரன்புடன், அன்பழகன்ஜி. கைபேசி : 63810 79122 Mail id.      :  anpoog@gmail.com தொடக்கப்புள்ளி நமது சொற்களுக்கு நியாயம் கற்பிக்கத் தெரியும். பழம் பெருமை பேசுவோம். புதுமைக்கு இடம் கொடுப்போம். எடுத்தாளும் சூட்சியை பகுத்தறிவாக பறைசாற்றுவோம் மரங்களை வெட்டி மரம் வளர்ப்பு பிரச்சாரம் செய்வோம். வார்த்தைகள் நமக்காக அணிவகுக்கின்றன. ஒலிபெருக்கிகள் வாய்திறந்த வண்ணம் ஊமையாய் கிடக்கின்றன. வஞ்சம் செய்ய வார்த்தைகள் கிடைக்காதபோது களவாட கற்றுக்கொள்கிறோம். அந்தோ கீழ் திசையில் சூரிய கதிர்கள் அஸ்தமனத்தை கற்க தொடங்குகின்றன நடுக்கடலில் மீன் குஞ்சுகள் துள்ளி விளையாடுகின்றன. முற்றுப்புள்ளிதான் ஒரு யுகத்தின் ஆரம்பம். படப்பிடிப்பு தளம் மந்திரி வருகையையொட்டி மருத்துவ முகாம் நடந்தது. மருந்து பெட்டிகள் நடுவில் மருத்துவர் வைத்தியம்  பார்த்தார். பாத்திரிகையாளர்கள் படம் எடுத்தார்கள் ஐந்து நிமிடத்தில் அமைச்சர் அடுத்த கூட்டத்திற்கு அவசரமாக கிளம்பிப் போனார் மருத்துவரும் மறுநிமிடம்  மாயமானார். மருத்துவப் பணியாளர்கள் மருந்து பெட்டிகள் சிலவற்றுடன் ஓட்டை ஆம்புலன்ஸில் ஏற்றி ஓடினார்கள். எடுக்காமல் விட்டுப்போன எஞ்சிய பெட்டிகளில்  உள்ள மருந்துகளை அள்ளிக்கொள்ளலாம் என்ற ஆவலில் பொதுமக்கள் அடித்து பிடித்து திறக்க அத்தனையும் காலி பெட்டிகள். ஞான ஒளியின் கானம் வண்ணத்துப்பூச்சியையோ வானவில்லையோ மட்டுமல்ல இரவையும் பகலையும் கூட என்னால் பார்க்க முடிவதில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் பழைய பாடல்கள். சிற்சில புதிய பாடல்கள். என் குரலை ரசிக்காதீர்கள் என் பார்வையை நேசியுங்கள். முடிந்தால் ஐந்தோ பத்தோ உண்டியலில் போடுங்கள் நானோ என் மூதாதையர்களோ எந்த பாவமும் செய்யவில்லை. கடவுளால் மட்டும் அப்படி முடிகிறது. தீபாவளி தீபாவளிடோய் ஒரு குதிரை வாங்க ஆசை. பந்தயத்திற்கோ சவாரிக்கோ அல்ல. கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சியாக்கினால் ஜமீன் என்பார்கள். முன்பொரு முறை குதிரைக்குட்டியை வாங்கி நாளாக அது கழுதையானது. அர்த்த ராத்திரியில் அதை அழைத்துப்போய் ஆற்றங்கரையோரம் தொலைத்து வந்தேன். காலையில் எழுந்து கண்விழித்துப் பார்த்தால் வாசலின் முன்பு வாலாட்டியது. அதை அடித்துத் துரத்த நான் பட்டபாடு நாய் பட்ட பாடு. எனவேதான் வளர்ந்த குதிரையொன்றை வாங்க வேண்டும். குதிரைக் கொம்பை வாங்கும் அளவுக்கு நான் குபேரன் இல்லை. குறைந்த விலையில். . . அது சண்டிக்குதிரையாக இருந்தாலும் சரி. பின்னேக்கி ஓடும் மரங்கள் மரணம், பந்தம் பாசம்,  அன்பு நட்பு, கோபம் காதல், பிறப்பு எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் காலம் எங்கிருக்கிறது? கடிகாரத்தில் என்றால் உடைத்துப் பார்க்கலாம் சுழலும் பூமியிலெனில் வேற்றுக் கிரகம் போய் பார்க்கலாம். அண்டசராசரத்தில் என்றால் அதையும் கூட அழித்துப் பார்க்கலாம். எங்கும் இல்லையென்றால் காலத்தோடு கரைந்து போகவேண்டியதுதான் கரண்ட் ஷாக் குழப்பமாய் இருக்கிறது இது மந்தைதானா? மணியைக் காணும் சாலை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்புறம் போகும். குட்டிச்சுவர்களில் இருந்து வந்தவை. சரி ரகசியம் உடைபடுகிறது. பூவா தலையா? என் கையில் இருப்பது நான்கைந்து செல்லாக் காசுகள். படையெடுப்பு தனக்கு தானே கண்களை இறுக கட்டிக்கொள்கின்றன பூனைகள். சூட்டுக்கொல் மெல்ல குளிர்ந்து விடுகிறது. துண்டு துண்டுகளாக வாழ்க்கை சிதறிக் கிடக்கிறது. இறுகிப்போன மலை உச்சியில் எப்போதேனும் குறிஞ்சி பூத்து விடுகிறது. வெறுங்கை ஒருகை உணவை அள்ளி இறைத்தேன் ஓரிரு காகங்கள் வந்தன இறைக்க இறைக்க ஏராளமாக வந்தன குளத்தை காணவில்லை நீரின்றி குளமேது; மீனேது. காட்டாற்று வெள்ளத்தில் மீண்டு வந்தேன் மீண்டும் வந்தன காகங்கள். அமைதியும் போரும் மரணம் அழகாகத்தான் இருக்கிறது ஆனால் சில பூக்களை போராட வைத்துவிட்டு அமைதியாகப் போகிறது. பின்னர் பழக்கப்பட்டும் போகிறது மீண்டும் அழகைச் சுமந்து அமைதியாக வரும் சில போராட்டங்களை கைகோர்த்துக்கொண்டு. படியெடுப்பு போதனையின் பெருகனவு தன்னைத் தவிர எல்லோரும் புத்தனாகவேண்டும் என்பது. உண்மையில் சொன்னால் பொறாமை  படுவதாய் புலம்பிச் சாகிறார்கள் வசிகர வார்த்தைகளின் முகமூடி நெய்தல்கள் கனவு தொழிற்சாலையின் வக்ரமான வார்ப்படங்களை விட மோசமான திணிவுகள். எழுத்துகளை கொண்டு எழுந்து நடக்க வைக்கும் இந்த ஊன்றுகோல் தாத்தாவின்  ஒற்றைக்காலாய் தனியே கிடக்கும் ஒருநாள். புதிய சிருஷ்டிப்பு வெடிப்பின் சிதறல்கள் அண்டமெங்கும் விழுகின்றன. அடிக்கடி நட்சத்திரங்களுக்கு வால் முளைக்கின்றன. செவ்வாய் கிரகம் நீரூற்றால் நிறைகிறது ராகு கேதுவின் குடையில் ஓட்டை விழுகிறது. பறக்கும் தட்டுகளின் சிறகுகள் ஒடிகின்றன. எழுதுகோலின் நுனிநாக்கு ஒரு புள்ளியை சுவைக்கிறது. மாயஜாலத்தின் கைகளில் பட்டத்தின் நூல் சிக்குகிறது. பொம்மலாட்டக்காரன் விழுந்து உடைந்தான். பொம்மைகள் நடக்கின்றன. வாழ்க்கை சூரியனை இரவில் பார்க்க முடியாது. நட்சத்திரங்களை பகலில் பார்க்க இயலாது. சந்திரனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இல்லாத வானத்தை எப்பொழுதும் பார்க்கலாம். மாலுமிகள் நிறவெளி சூனியத்தில் இருண்மையாய் மலர்ந்து மீண்டும் மீண்டும் ஜனிக்க முடிகிறது. பெரும்பாழ் தனில் பிரசவிக்க தவமிருந்து வார்த்தை வலைக்குள் சிக்கி சேதமின்றி மூழ்கிக் கிடக்கின்றன. இமைகளை உரிக்கும் கைகளைக் கொண்ட கடல் தாத்தாக்களிடம் அவை ஜொலிக்கின்றன. உண்மையில் உண்மை ஜயிக்க வேண்டி ஆமையின் முதுகில் பயணம் செய்யும் பந்தய குதிரை நான். குளிக்கவேண்டுமானால் சகாரா நடுவில் சாகசம் செய்யவேண்டும் ஓடி மறையும் மேகங்கள் வேறு வடிவில் பின்னொறு நாள் வரும். பட்ட மரத்தில் சிறு துளிர்கள் விடும். அப்பொழுது தெரியும் வாழ்க்கை என்பது உயிரோடு இருத்தல் என்று. உயிர்ப்பு இருண்மை கவிதையின் அர்த்தத் தேடலில் இன்னொரு கவிதை. உடைய உடைய உற்பத்தியாகும் நீர்குமிழிகள். ஆதிச் சூரிய ஒளிப்பிழம்புகள் கடைசி குமிழியில் அசலாக ஒளிர்கிறது! கூச்சம் உடைவதற்கு முன் ஒருமுறை சுருங்கியது. வேகமாக பெரும் சுருக்க வெளியில் புள்ளிக்குள் பூத்த ஏகாந்த நெருப்பில் மகரந்தத்தை தேடியது ஒரு வண்டு. கள் இல்லாத பூவில் சொற்கள் மட்டும் குவிந்து கிடந்தன. சிற்றாளின் கால்களில் மிதிபட்ட கற்களுக்கு லட்ஜை. கடைசியாய் இணை கோடுகளின் நடுவில் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. பிடரியை பூக்கள் முத்தமிடும் நேரம் சிதரிய பாறைக் கற்கள் முன்னே வந்து மோதுகின்றன. வளர்பிறை நாளில் முயலாய் ஓடுகிறேன். முடிக்கும்போது ஆமை முந்தி அமாவாசை வந்துவிடுகிறது. கடைசியாய் கிழிக்கப்பட்ட பக்கங்கள் போக அட்டைகள் மட்டுமே எஞ்சிய புத்தகமாகிறது வாழ்க்கை. குருட்டுக் கனவு சென்ற இரவும் இதே கனவுதான் தொலைந்து போனது. என்னைப் போலவே அந்த சிவப்பு கம்பளமும் கால்கள் படாது கூனிக் கிடந்தது. கொலுசுகளின் முத்துக்கள் சில மௌனமாக சிதறிக்கிடந்தன. யுகயுகமாய் விழித்திருக்கும் அந்த  நெருப்பு காற்றை எரிக்கும் முன்பு கடைசியாக தன்னை அணைத்து கொண்டது. முரண் அரங்கின் முன்புள்ள ஆவின் பாலகத்தில் அதன் அதிபதி ஈ விரட்டுகிறார். அருகில் ஓடும் மூத்திரச் சந்தில் சாராய வியாபாரம் ஜரூராக நடக்கிறது. விடியலுக்கு முந்தைய  இரவு காலத்தின் கர்ப்பத்தில் சர்ப்பத்தின் நாக்கு நீளும் யுகங்கள் கண்ட தாளாட்டு ஒப்பாரியாய் ஒலிக்கும். நிஜமான விதைகளின்றி பழங்கள் அழுகும். விண்ணில் சிதலைகள் ஊற விழுதுகள் கைவிரிக்கும். கத்தி முனையில் பூமிப்பந்து சுழலும். பிரபஞ்சத்தின் மூலையில் புழு ஒன்று பூதக்கண்ணாடிக்குள் மெல்ல நகரும். அதுதான் இந்த யுகத்தின் கடைசி ஜீவன். பிறாண்டும் எலி சாலையில் இடதுபுறம் நொருங்காத அப்பளமாய் ஒரு பூனை ஓலமின்றி கிடக்கிறது. தொடரும் வாகனங்கள் ஏறி மிதிக்கின்றன. நோவு இல்லை. பதராய் விழும் இழி சொற்கள். என்ன செய்யும் எந்நேரமும் பூனை எழுந்தோட சந்தர்ப்பம் வரும். பிறவி உடைக்க முடியாத உலோகத்தில் செய்தவை கையிடப்பட்ட விலங்குகள். எஞ்சிய பகுதியில் உருகி உருவாக்கிய கத்திதான் என் இறக்கைகளை வெட்டி வீழ்த்தின. கால்கள் ஒடிந்தபின் காணாமல் போனது உங்களின் உலகம். என் கேள்விகள் பதில்களுக்கு பிந்தியவை. ஜிப்ரான் சொன்னதைப்போல நான் எப்போதும் மரணத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இருத்தல் நவீனத்துக்கும் புதுமைக்கும் இடையிலானது பிராய்லர் கோழி. விடியும்போது கூவலாம். துளைவாய் இல்லாமலும் தடுக்கி விழாமலும் துருத்தி ஏது? நாணல் என்றதும் கோணல் மாணல் ஆகுமா புத்தி? குப்புற விழுகிறதா மல்லாந்து விழுகிறதா நிழல். சொப்பனம் என்பது கனவுதானே. சொற்களை செய்வது புது பிளவுதானே. மெல்லத் தவழும் மேகம் வெயிலை இருத்தும் ஆனால்; மென்மையாகவே உறுத்தும். தடவி பார்க்காது தவழ்ந்து பார்க்கவேண்டும். மௌனம் நிசப்தமாகாது! பகுத்தறிவு கழிவறையில் வசிக்கும் கரப்பான் பூச்சிகள் மீது தண்ணீரை எடுத்து தந்திரமாய் ஊற்றி சாக்கடையில் தள்ளி சாகடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இப்படியே செய்ய இப்போதெல்லாம் என்னை கண்டதும் எஞ்சிய பூச்சிகள் எங்கேனும் ஒடி ஒளிகின்றன. தண்ணீரை ஊற்ற தயாராகையில் தந்திரமாய் தப்பிக்கப் பார்க்கின்றன. எப்படி பெற்றன இந்த பயிற்சியை ? காணாமல் போன கரப்பான் பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்திருக்குமோ ! பழகிப் போகும் ஆளாளுக்கு கமண்டலம் வைத்து அள்ளி எடுத்ததால் தரை காட்டிப்போனது தண்ணீர். கரைகள் காணாமல் போயின. வானம் பார்த்து மடிந்து போயின மரங்கள். பொசுங்கிப் போயின புற்கள். மொத்தத்தில் அது ஒரு புழுதி வனம் அவரவர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களற்ற அவர்களோடு. இடிமுழக்க பயத்தில் செவிப்பறை கிழியும் பேரிரைச்சல் நடுவே ஓய்வெடுப்பதைப் போல துடுப்பு கரையில். விடுதலையின் மிச்சம் குருவிக் கூண்றோன்று வைத்துள்ளேன். புயல்காற்று வருகையில் புகுந்து கொள்ள வசதியான திறந்த கூண்டு அது . எப்பொழுதேனும் ஏதேனும் சிற்சில பறவைகள் ஆயிரம் ஆகாயங்கள் சூழ அதனுள்ளே தஞ்சமாகும் கூண்டைக் காலி செய்கையில் மழை மேகங்கள் என் வானை நிரப்பிக் கொண்டிருக்கும். தனிமையின் வலி(மை) என் தனிமையை அனுமதிப்பதில்லை அது என்னைத் தொடர்ந்து - பின் என்னை தொடர வைக்கும். வெளிச்சத்தை விரும்பாத இருட்டின் நிழல் அது. உணர்வுகளை உடைத்து சிதறவைக்கும் சிதலங்கள். பல்கிப் பொருகி அதுவே பாத்திரங்கள் ஆகும். வெளிச்சத்தின் நிழல் மின்மினிப் பூச்சிகள். இருட்டின் நிழல் பகலில் கூட பார்க்க முடியாத மாயத் தோற்றம். படைத்தவனும் அறியாத பரம ரகசியம். தனிமையின் வலிமை அதுவே. ருசி மரணத்தின் நாக்கு என் தேநீர் கோப்பையின் விளிம்புவரை நீண்டிருக்கிறது. சுவையில்லாத தேநீர் தயாரிப்பது குறித்த வகுப்பில் நான் பயின்றுவருகிறேன். எல்லா சுவையையும் அருந்தும் மனோதிடத்திற்கான யோகா கற்றுத்தரப்படும் அடுத்த அறையில் மரணம் பயிற்சி எடுக்கிறது. காட்சியும் கானமும் கவலை ஏதுமின்றி கடந்து போகிறது காட்டெருமை கூட்டம். வீழ்த்தப்பட்ட பறவை காய்ந்து போன யூக்காலிப்டஸ் மரகிளையில் சிக்கிக்கொண்டது. முதிய வண்டொன்று மூங்கிளை துளைக்கிறது. வேகத்தை குறைக்க ராகங்களின் மீதேறி பயணிக்கின்றன வாகனங்கள். மானச சஞ்சரே ப்ரமணி மானச சஞ்சரரே. அடிபட்ட நாய். குரைத்துக் கொண்டேயிருப்பேன் குறைந்த பட்சம் தூக்கத்தையாவது கெடுப்பேன் வலி தீரும் வரை காயம் ஆறும் வரை விரும்பினால் மேலும் கல்லால் அடித்துப்போ ஏற்கனவே எனக்கு எலும்பு ஒடிந்து போனது தோல் மரத்துப்போனது. சிரசின் மேல் சீழ்க்கை வடிகிறது ஆசைப் பட்டால் அடித்து கொன்றுவிடு இல்லையெனில் வீட்டைசுற்றி வருவேன் ஊர் அடங்கியதும் ஊளையிடுவேன் கதவு திறந்திருந்தால் பதுங்கிப் பாய்ந்து கடித்து குதறிடுவேன். எனக்கு மரணம் பெரிது உனக்கு வாழ்வு பெரிது. ஒடியாத முருங்கை எனக்கென ஒரு கிளையை ஒதுக்கி வைத்திருப்பதாக எல்லா வேதாளங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. பன்றிகள் தொங்குவதைதான் பார்க்க முடிகிறது . எந்த கிளையும் என்னைத் தாங்காதென எனக்குத் தெரியும். அரைகுறை நிழலையும் அசிங்கமிட்டு நிரப்பி பூமியின் கழுத்து ஒடிந்ததே மிச்சம். பன்றிகளை விட முற்றிய முருங்கை காயில் தலைகீழாய் தொங்கும் அணிலின் எடை அதிகம்தான். ஸ்தூலம் என்பது யாதெனில் . . எல்லாம் அர்த்தமற்றவை என்ற நிலைக்கு வரும்போது பிரமாண்டமான அந்த அதிசயம் நடக்கத் தொடங்குகிறது. தலைக்கு மேலே போதிமரம் ஒன்று முளைத்து வளரத் தொடங்குகிறது. அதுவும் சூட்சமமானது என அறியும்போது அதன் இலைகள் உலர்ந்து உதிர்ந்து உருண்டு மௌனமாக குப்பைத் தொட்டிக்குள் தானே விழுந்து விடுகின்றன. பின் எந்நாளும் அதன் கிளைகளில் இலைகள் முளைக்காது. நீங்கள் வேண்டுமானால் அர்த்தமற்றதன் அர்த்தத்தை உணரத் தொடங்குங்கள். அந்த பிரமாண்டத்தின் உச்சியில் போதிமரம் முளைத்து வளரும். உயிர்ப்பிப்புகள் எத்தனை முறை! இன்னொரு முறை இறக்க சாத்தியமில்லை. சிலந்திக்கு என்ன ! கடந்த கால கனவில் வேறொரு வலையை பின்னிக்கொண்டது. மிக நேர்த்தியாக. மேகங்கள் கொஞ்சம் நீரை மிச்சம் வைத்திருக்கின்றன. ஒரு வத்திக்குச்சி கௌரவப்படுத்த காத்திருந்து ஏமாந்து போனது. ஆணியை என் கையில் அடித்த பின்புதானே ஜனனித்தேன். துன்பங்களின் காலடியில் நசுக்கப்பட்ட ஆன்மாவிலிருந்து உயிர்த்து உலாவிக்கொண்டிருக்கிறேன். தொன்மம் நான் நானாக . . விடாமல் விரட்டுகிறது அது. அதுவும் சுயமில்லை எதுவோவில் இருந்தது. நான் அதுவோவா எதுவோவா. எது அதுவோவா நானேவா. வட்டத்தின் மூலைகள் காணாத கனவின் தொலைந்த இடம் காண இமைகள் நான்கையும் இறுக மூடி ஆதியில்தான் அந்தம் இருக்குமென பூம்பாதம் அடியில் புதைந்து போனேன். அரக்கர்களும் பூதங்களும் தேவர்கள் ஆனார்கள் இருள் வெளிச்சமானது. மதுவுக்குள் மகரந்தம் மஞ்சம் விரித்தது. தலை கால் புரியாமல் உல்லாசத்தின் உச்சத்தில் எனை நான் மறந்து எல்லாமும் துறந்து மயங்கி விழுந்து துண்டு துண்டாய் வெடித்துச் சிதறி வீசி எறியப்பட்டேன். தன்நிலை திரும்ப தாறுமாறாய் கிடந்த நான் எடுத்து ஒட்டி எனை நானாக்கி தொடங்கிய இடம் தெரியாமலே மீண்டும் தொலைந்து போனேன். பிரளயத்திற்கு ஒரு நாள் முந்தி ஒலியற்ற வார்த்தைகள் உதிர்கின்றன மௌனம் செவிப்பறையை கிழிக்கிறது கால்களில் றெக்கைகள் முளைக்கின்றன கைகள் சோர்ந்து விழுகின்றன நடந்த மனிதர்கள் நடப்படுகிறார்கள் பூமி சுற்றியவாறு இருக்கிறது விஞ்ஞானம் அழிவுக்கு பயன்படுகிறது புரிந்துணர்தல் வாழ்க்கை எப்போதும் முரண்பட்டு விலகியே நகர்கிறது. அது – வினாக்களற்ற விடைகள் வேதாளத்தைச் சுமக்கும் முருங்கை மரம் புதைகுழிகள் கொண்ட தெளிந்த நீரோடை. நான் - விடைகளற்ற கிழித்தெறியப்பட்ட வினாக்கள். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கருவேலமரம். கோணல் மாணலான ஒற்றைடிப்பாதை. அது - நனவாக தூக்கத்தை இறைத்துச்செல்லும் அருபம் நான் - காலொடிந்த கனவுகளைச் சுமக்கும் உருவம். பார்வையாளனின் பரிதாபம் சாம்பல் நிற பூனையொன்று மதில்மேல் படுத்து சாதுர்யமாக உறங்குகிறது அணில்கள் மரங்களில் உயிர்காக்கும் சப்தத்துடன் உறைந்து போய் உள்ளன. அஞ்ஞான விதிகளும் விஞ்ஞான விதிகளும் பூனையின் நிறமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பனித்துளியா ? மழைத்துளியா ! கவிதை எழுத வாங்கிய நோட்டில் முன்முதலில் ஜே.கே. பற்றி எழுதயெண்ணி காலியாகவே இருந்தன பக்கங்கள். வெற்றிடத்தை ஆக்ரமிக்கும் வெறுமையைப் போல லொட்டு லொசுக்கோடு காதல் கவிதைகளும் சேர்த்துவிட்டன. வியட்னாம் போரை நிறுத்திய சிறுமியின் புகைப்படம் போல மட்டைக்கு இரண்டாக எதைக் கிழித்தன அவை. கிரேக்க இலக்கியவாதிகளை நாடு கடத்தச் சொன்ன அரிஸ்டாட்டில் பக்கமானேன் நான். ஃப்ராய்டிஸ்ட்களே டாடாஸ்டாக மாற்றுங்கள் Note : Dada had only one rule : Never follow any one rule (Anti-art-political-science) கடைசியாய் இணை கோடுகளின் நடுவில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. பிடரியை பூக்கள் முத்தமிடும் நேரம் சிதறிய பாறையின் கற்கள் முன்னே வந்து மோதுகின்றன. வளர்பிறை நாளில் முயலாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். முடிக்கும்போது ஆமை முந்தி அமாவாசை வந்துவிடுகிறது. கடைசியாய் கிழிக்கப்பட்ட பக்கங்கள் போக அட்டைகள் மட்டுமே எஞ்சிய புத்தகமாகிறது. சுட்ட ‘வடை’ உட்கார மரமின்றி ஊரூராய் சுற்றுகிறது வடையை திருடிய காகம். நாட்புறமும் நாய்களின் காவலில் ‘பத்திரமாய்’ இப்போது பாட்டி பணி செய்த கூலியாய் வடைகேட்டு நகராத நாய்கள். குட்டி நாய்களுக்கும் கொடுக்க வேண்டுமாம் கொஞ்சம் வடைகள். பார்த்துவிட ஆசை பாட்டி விற்கும் வடையை. ஒரு, பல மரங்கள் முருங்கை மரங்கள் எத்தனை வெட்டுவது? நீ ஏறும் எல்லா மரங்களிலும் புளியங் கொம்புகள் முளைத்து விடுகின்றன. ஆப்பிள் பழங்களை பறித்துத் தின்றவாறு பொய்யான ஒரே கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறாய். பற்பல பதிலளித்து களைத்து போகிறேன் நான். இயல்பாக்கம் அந்த அறையை ஆய்வகம் ஆக்கினேன். கடிகாரம், கைபேசி அனைத்தையும் அணைத்தேன். கதவு, ஜன்னல்களை அடைத்து காலக் கணக்கீடற்று என்னைத் தவிர எல்லாவற்றையும் துறந்து நான் நானாக துடித்தேன். விழித்திருக்கும்போது வேறாகிப் போனால் கனவில்லா தூக்கம் ஒன்றில் சாகாமல் இருக்கவேண்டி இருட்டுக்குள் புதைந்தேன். அங்காடி நாயைப்போல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விழுந்தது தெரியாமல் விழித்து எழுந்தபோது அந்த மரணக்குழிக்குள் நான் காணவில்லை. கனவும் மரணமும் அற்ற காலக் கடத்தலில் ஒளிந்த இடம் தேடி ஓய்ந்து போகையில் நானாக மாறத்துடித்த நான் இருட்டின் தனிமையாய் இருப்பதைக் கண்டேன். பிள்ளையார் சுழி பாலிருக்க முடியாது பூனைகள் அங்கே போவதில்லை. கனிகள் இருக்க வாய்ப்பில்லை எட்டும் கைகள் கட்டுப்பட்டு கிடக்கின்றன தேன் இருக்கலாம் அதனால்தான் விகார வண்டொன்றின் ரீங்காரம் எருக்கம் பூவை சுற்றி வருகிறது. உச்சத்தின் தலை காலில் இறை தூதனொருவனை இசை கொண்டழைத்து இரண்ட கலந்திட வெட்ட வெளியில் நட்ட நடுப்பகலில் வேகாத வெயிலில் வீணையை மீட்டினேன். ஒலி அடங்கி ஓயும் தூரம்வரை மணலாய் மணல் குன்றாய் ஆளரவமற்று அனாதியாய் அலங்கார வண்டியில் எனையழைக்க வந்தவனின் எழில் தோற்றம் கண்டு எனையிழந்து போனேன். ராக அடுக்குகளில் சுண்டுவிரல் மாட்டி சுதி சேரா ராகம் ஒன்று காற்றை கலங்கடிக்க வீணையின் இதயம் வெடித்துச் சிதறி சுக்கல் நூறாகி கண்ணுக்குப் புலப்படாது காணாது போனது. கட்டை விரல் கொண்டு சக்கரத்தை அழுத்தி சாரதியாய் தேவனாய் புழுதி சிதையுனுள் புதைந்து போனான். தன்னந்தனிமையில் தத்தளிக்கும் என் மனதின் ஏகாந்த ராகத்தை இப்பொழுதும் யாரோ கேட்பது தெரிந்தது. தீர்ந்தபின்  தேடல் இரவை தடவிப் பார்த்தால் கரடு முரடான பகல் தெரிய வரும். அடர்வை அதிகரிக்க கருப்பு மையை ஊற்ற வேண்டும். ஒரு யானையை முதலில் வாங்கவேண்டும் பிறகு கொக்கு ஒன்றை கொள்முதல் செய்ய வேண்டும். முட்டையை உடைக்கும் முன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடைசி வார்த்தையான எழுவாயிலிருந்து மௌன வாக்கியத்தை தொடங்கவேண்டும். அந்த நுகர முடியாத பயணத்தில் பூக்கள் அள்ளி இரைக்கப்படும். நட்சத்திரங்கள் அருகருகே வர தொடங்கும். வெகு தூரத்திற்கு அப்பால் மரணத்தின் கதவுகள் திறந்திருக்கும். உள்ளே வண்ணமும் வாசமுமற்ற ஒரு பூ மட்டும் மலர்ந்திருக்கும். அஃது உதிர்வதுமில்லை. அங்கிருந்துதான் கருவறைக்கான பயணம் தொடங்குகிறது. முந்தும் இடி முழக்கம் மரணத்திற்கு பிந்தைய பிணமாக கிடக்கிறது வாழ்க்கை நான்கும் நான்கும் எட்டென்ற வாய்ப்பாடாக. சாக்கடையில் மூழ்கி மூச்சு முட்டுகிறது பதில். மூக்கை பிடித்துக்கொண்டு வாசம் வருவதாய் வாய்திறக்க மட்டும் உரிமை இருக்கிறது. துறுதுறுவென இருந்தால் கும்ப கர்ணனாக்கி வெயிலில் வீசுகிறார்கள். ஓய்வெடுக்க அலெக்ஸாண்டரின் குதிரையை  தருகிறார்கள். எப்பொழுதேனும் துருத்திக்கொண்டு வரும் கூரிய கம்பிகள் ஒடிக்கப்படுகின்றன. இல்லையெனில் நானே மழுங்கடித்து விடுவேன். இந்த லட்சணத்தில் கடந்து போன வாழ்க்கையை பற்றி என்ன சொல்ல. பொம்மைகள் இவைகளோடுதான் காய்கள் நகர்த்தப்படுகின்றன. வானம்பாடியின் காணம் கேட்காத  செவிட்டு வானம். மின்மினி பூச்சிகளை பார்க்க இயலாத குருட்டுப் பகல் பொழுதுகள் கிளியை கொத்தவிட்டு காயப்படுத்திக் கொள்ளத்து நரகத்திற்குச் செல்ல விரும்பும் கொய்யாப் பழங்கள் இலைகளை உதிர்த்துவிட்டு பறவைகளின் முத்தங்களை பார்க்க ஆளின்றி போனதால் விம்மி விடிக்கும் மரக்கிளைகள். சலனமற்ற காட்டில் நெடிதுயர்ந்த மூச்சுவிடும் பச்சை நிறபொம்மைகளோடு நானும் பொம்மையாய் நகர்த்தப்படுகிறேன் உணர்வுகள் இருக்கின்றன ஆனால் ஒன்று சேர்ந்த காந்தி பொம்மைகளாய் சிருஷ்டிக்கப்பட்டவன் நான். மனங்கொத்திப் பறவை அடிக்கடி அந்தப்பறவை என்னிடம் வந்து வலமாக வட்டமிடும். பூ முகம்காட்டி புன்னகை தூவும் சிற்சில நேரம் ஒளிபுக முடியா கும்மிருட்டுக்குள் என்னை குடியேற்றி போகும். இன்றும் அப்படித்தான் மண்டையை பிளந்து புழு ஒன்றை புதைத்து வெளிச்சத்தை எல்லாம் விழுங்கிப்போனது வீதியில் சென்றவன் ஒரு கை வெயிலை  அள்ளி வீசிவிட்டு போனான். நவீன ஓவியமாய் ஒழுகி மறைந்ததை தலை காலின்றி மகிழ்ந்து தாவிக்குதித்து புளகாங்கிதப்பட்டது புழு. சுற்றித்திரிந்து சோர்வில் வந்த மரங்கொத்தி மறுபடியும் பிளந்து புழுவை விழுங்கி மடமையென ஒப்புக்கொண்டு ஓடிப்போனது. மனங்கொத்தியோ அல்லது மரங்கொத்தியோ - அதுவும் நானும் சராசரியே. அந்திமந்தாரை எத்தனை பருவங்கள் இனி வந்தாலென்ன ! அந்தோ இலையுதிர்கால பாடல்கள் இசைக்க தொடங்கிவிட்டன. ரயில் உறவு தொடர் வண்டியின் இயந்திரம் சில உறவுகளை உறுதிப்படுத்தி நம்மீது பாய்கிறது. சில பிரிவுகளின் ஆழத்தை அதிகப் படுத்தி கடைசிப் பெட்டியின் பெருக்கல் குறி ஒரு புள்ளிக்குள் புகுந்துவிடுகிறது. நிகழ்வற்ற நிகழ்வுகள் சுவரின்மீது அமர்ந்த ஏழெட்டு சிட்டுக்குருவிகள் அலகுகளால் குத்த காயமின்றி கலைகின்றன சிறகுகள். தேவையேதும் இன்றி எச்சத்தை மிச்சம்வைத்து பறந்து போனபின் கழுவி விடவேண்டும். ஒற்றை கம்பிமீது ஓர் அணில் லாவகமாக ஓடி இரண்டு மீட்டர் இடைவெளி உள்ள மரத்தில் தாவிய தருணம் இதயம் கீழே நழுவி மண்ணில் படாமல் இறக்கை அடித்து உயரத்துக்குப் போய் உச்சாணியில் அமர்ந்தது. தோலாலான செவ்வக பட்டையை இணைக்கும் இரண்டு ரப்பர் தகட்டுகளை “ப”  வடிவ கட்டையில் இறுக்கிக் கொண்டிருக்கிறான் குரவன் ஒருவன். கற்களை எடுத்து சொற்களாக்க முடிகிறது என்னால். இன்னும் பற்பல குருவிகள் வரலாம் எத்தனை மொழி கற்பது. ஓலைக் குடிசையின் ஓட்டை வழியே ஒழுகிய ஒளிக்கற்றை மேற்கில் தோன்றி கிழக்காய் நகர்த்து மறைந்து போகும்வரை அந்த நாளில் அவ்வளவு கனம் ஏதுமில்லை. அலரும் நினைவு சாலை விபத்தில் தேடிக் கிடைக்கவில்லை ஜீவாத்மா. நொருங்கிக் கிடக்கிறது பரமாத்மா. மார்ச்சுவாரியில் கிடக்கும் பிணத்தை காவலர் வரைந்த கோடுகள் அடையாளப்படுத்தும். தொடர்ந்து வரும் வாகனங்கள் பயத்தை கழுவிவிடும். எண்ணையும் தண்ணீரும் ஓடும் நதியில் ஒன்றுக்கொன்று உட்புகமுடியாத இரும்பு குண்டுகள் உருண்டு கொண்டுள்ளன. அவை கூழாங்கற்களாக மாற முடியாது. கடலில் கலந்து காணாமல் போகும். இன்றைய ராத்திரி கொஞ்சம் விழிப்புதான். பொறியில் சிக்கிய எலியை காலையில் அப்புறப்படுத்தலாமென்றால் உள்ளுக்குள்ளே உருண்டு புரண்டு ஒரே இரைச்சல். விடுதலைக்கு விருப்பமற்ற மரண பயம். தூங்கும் போது வரும் கனவு புரிவதே இல்லை. விழித்திருக்கையில் காணும் கனவு பலிப்பதே இல்லை. மறுபுறம் அற்ற வானம் போன்றதா? நிறம் போக ஏதுமற்ற வானம் போன்றதா? -   கனவு! உயிர் மெய் பல்வேறு நிறங்களில் பூனைகள் இருந்தாலும் என்னோடு உலாவிக்கொண்டிருப்பது ஒரு சாம்பல் நிறப் பூனை. அது என் வீட்டில் ஒளிந்திருந்த எலியை பிடித்து இழுத்து தெருவுக்கு கொண்டுவந்து சுவைத்தபோதும் அடுத்த தெருவில் வயதான பெரியவர் போய் சேர்ந்த போதும் வெள்ளை ரோஜா என்றேன். பொதுவாக அதை கருப்பாக்கியே அழுவர். அந்த பூனைக்கு பிறாண்டும் நகங்களும் இல்லை கிழிக்கும் பற்களும் இல்லை ஆனால் ; நான்கு ஆணிகளோ கத்தியோ, கயிரோ இயலாமையோ, இயந்திரமோ எதையோ ஒன்றை மறைத்து வைத்திருக்கிறது. நாவல் பழம் உண்ட குரங்கின் இதயத்தை கேட்ட முதலையென அதன் நடத்தையை சொல்லலாம். போராடுவதைவிட அதை ஏமாற்றுவது எனக்கு எளிதாகத் தெரிகிறது. ஆனால் எத்தனை காலம்தான் முடியும். ஒரு நாள் நல்ல உறக்கத்தில் இருக்கையில் என்னை எலியாக்கி கடித்து குதறி வீட்டைவிட்டு வெளியில் இழுத்துப் போட்டுவிடும். இஃது உயிர் மெய் ** ** மூடியற்ற ஒரு ஜாடி காமத்தின் விழுதிறங்கும் யாமப் பொழுதில் அழகிய பெட்டி ஒன்று தயாராகப் போகிறது. பத்து மணி வாக்கில் அது துவங்கி விட்டது. உயிருக்குள் உயிர் ஊடுருவுவது போல காலத்தின் நீளம் கணமாகிப் போகிறது. ஆணி அடிக்கும் சப்தம் அடிவரை பாய்கிறது. இழைப்பின் ஒலி இதயத்திற்குள் ஊடுருவ முடியாமல் சுவர் மிதிபட்டு எஃகுவாகிறது. தலைவிரித்த காட்டேரியும் இரண்டு கோரப்பல் துருத்திய அசுரப்பேயும் ஆரத்தழுவும். இலைகள் உருவப்படும் பூக்கள் உதிர்ந்து போகும். ஒவ்வொறு பலகையாய் சரியாய் பொருத்தி இணைக்கப்படும் சட்டென ஒரு கணம் சாலைகள் அடைபடும் நிலவை மேகம் மறைக்கும் நஷத்திரங்கள் கூடி ஒன்றாகும். இருட்டு அறையில் தோன்றிய ஆனந்த பரவசம் ஏவுகணை வேகத்தில் ஒரு பெருவெளியில் பரவிப் பாயும். ஒரு பெட்டி உருவாகிவிட்டது. வாய் மூடப்படாமல். இருவழி பயம் வலியும் பயமுமின்றி தற்கொலை செய்துகொள்வது எப்படியென்று முதலில் ஒரு புத்தகம் எழுத வேண்டும். ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று மற்றொரு புத்தகம் எழுத வேண்டும். தற்கொலையை தடுப்பது எப்படி என்று இறுதியாய் எழுதவேண்டும். இனிக்கும் தேன் ததும்பும் கோப்பையை வைத்துக்கொண்டு சிந்தாமல் சிதராமல் நளினமாக நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கிறது மரணம். ஆண்டான்டு காலமாய் அதைத்தான் செய்கிறது. அதன் சாகசத்திற்கு சாம்ராஜ்யம்,  கோட்டை, கொத்தளம் நீதி பரிபாலனம் ஏதுமில்லை. நுகரும் திறனென்று அதற்கேதும் இல்லை. சாக்காடென்ற ஒன்றும் அதற்கில்லை. நம்மைப்போல பிறப்பும் இல்லை. தேனை அருந்தி மகிழவும் கொடுக்காது தானும் அருந்தி முதலாய் சாகாது. சந்தேகக்குறியீடுகள் ஒரு கவிதை எழுத வேண்டி காகிதத்தை எடுத்து பிள்ளையார் சுழி போட்டேன். காகிதத்தின் மீது கண் ஓடியது. எந்த மரத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த மரத்தை வெட்டியது யார். எத்தனை பறவைகள் அதில் கூடு கட்டி இருக்கும். தண்ணீர் ஊற்றி இருப்பார்களா தானே வளர்ந்திருக்குமா மர வெட்டியின்  முப்பாட்டன் அதன் நிழலில் இளைப்பாறி இருப்பானா. மர கூழ் தயாரிப்பில் எத்தனை சீறார் பணிபுரிவர். கேள்விகள் விடையின்றி சந்தேகங்களாய் மாறியபோதுதான் கலீல் ஜிப்ரானின் தாவரங்கள் விண்ணைநேக்கிய கவிதைகள் என கூறியது என்னை தொட்டது. ஒரு கவிதையை சிதைத்து காகிதமாக்கி அதில் மனுஷி ஒருத்தியை மயிலே, மானே, தேனே என பொய்யாக்க வேண்டுமா என்ற வெறுப்பில் காகிதத்தை புரட்ட அதில் மௌனம் என்றொரு கவிதையை கண்டேன். காகிதம் காற்றில் பறந்து கீழே விழ மேசையின் மேல் வெறுமையாய் இருந்த கவிதைக்குள் மௌனம் கரைந்தது. மின்சாரம் அணைந்து மின் விசிறி  இளைப்பாற கடிகாரச் சத்தம் கேட்கத் தொடங்கியது. கடிகாரத்தில் நான் நுழைய காலத்துக்குள் வெறுமை வீழ்ந்தது. காலம் பற்றி சிந்தித்தபோது மின்விசிறி ஓய்வை நிறுத்தியது. இருக்கையில் அமர்ந்து பூஜ்ஜியமாக்கினேன். நல்ல, மிக நல்ல பாம்புகள் இப்பொழுது நான் ஒரு காட்டில் இருக்கிறேன். இலைகளும் கிளைகளும் தவிர பிறயாவும் ஒழுங்கற்ற ஒரு காட்டில். மரங்கள் அங்கும் இங்கும் நகர்ந்த வண்ணம் உள்ளன. எண்ணிக்கை மெல்ல மெல்ல ஏற்றம் கொள்கிறது. ஒரு பாம்பு வேகமாய் வந்து ஊர்ந்து பின் படுக்கையில் கிடக்கிறது. குட்டையான நெட்டையான நீண்ட மிக நீண்ட எலும்புகளின் மேல். அதன் வயிறு கிழிக்கப்படுகிறது உள்ளிருந்து மரங்கள் சில இறங்குகின்றன. செடிகள் சில குதிக்கின்றன. சில செடிகளும் மரங்களும் வயிற்றுக்குள் புகுந்து கொள்கின்றன. கிழிந்த வயிறு ஒட்டப்படுகிறது. பாம்பு பறக்கத் தொடங்குகிறது. இப்பொழுது மரங்களின் எண்ணிக்கை குறைந்து போகிறது. அடுத்த பாம்பின் வயிற்றை கிழிக்க மரங்கள் சேருக்கின்றன. பாம்புகள்  கடிப்பதில்லை தானாக கையை வாயில் விடவேண்டும் இல்லையேல் வேறொரு மரம் தள்ளி விடவேண்டும். அடுத்த நூற்றாண்டில் பாம்பின் பன்புகள் கூடிப்போயிருக்கும். மரங்களின் மனம் மட்டும் எப்போழுதும்போல் குரங்கு விட்டு குரங்கு தாவி குதித்துக்கொண்டே இருக்கும். ஏன் இந்த மரங்கள்? என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களில் பத்து பதினைந்து  மைனாக்கள் காலை ஆறு மணிமுதல் பத்து மணிவரை வந்து கொஞ்சி குலாவும். கிளைவிட்டு கிளைதாவும் பூமியில் கிடக்கும் புழுக்களை பொறுக்கி விழுங்கும். கிச் கிச்சென செவிப்பறையை மத்தளமாக்கும். இடையில் ஒற்றை மைனா தனியே வந்தமர்ந்து மற்ற மைனாக்களின் வாழ்க்கை அசைவை தனிமையோடு உற்று நோக்கும். கால் இல்லாதவன் கால்பந்து விளையாட்டை பார்ப்பதுபோல. அது சொட்டு விடும் சோகம் என் இதயத்தை நனைக்கும். எப்போதேனும் அலகால் இறகை நீவி விடுவதோடு சரி. அதன் கண்களில் கண்ணீர் வருமா என சோதிக்க அருகில் சென்றால் ஓடிவிடும் என்ற அச்சத்தில் இருந்து விடுவேன். அதற்கு எப்படி சோகம் வந்தது என்பதைவிட ஏதோ ஒரு சேகம் உள்ளது என்பதோடு முடித்துக்கொள்ளலாம். இன்னொன்று- சிலநேரங்களில் அதை சாகடித்து விடலாம் எனத் தோன்றும். கடின மாஜிக்கல் ரியலிசம் ஆலிஸி’ன் வொண்டர்லேண்டுக்குள் நான் நுழைகிறேன். அற்புதங்களை அச்சுறுத்தி வந்த ஒரு கரப்பான்பூச்சியும் ஒரு கம்பளிப்பூச்சியும் என்னைக் கண்டு ஓடுகின்றன கண்களை இறுக்கி மேலும் மூடிக்கொள்கிறேன். திரும்ப முடியாத அளவுக்கு பார்வைப் படாத தூரத்தில் அவைகள் உலாவட்டுமே. நீங்கள் அங்கிருந்தால் விழிப்பை மறந்துவிடுகிறேன். இல்லையானால். . . நீங்களும் கனவு காணுங்கள் ஆனால் அந்த பூச்சிகளை இங்கே விரட்டியடிக்காதீர்கள். பூச்சிகள் மோசமானவை எல்லா இடங்களிலும் எல்லா மூளைகளிலும் இருக்கின்றன. அவ்வப்போது அவைகள் சமநிலை திரவத்தில் நீச்சலடித்து இயல்பை நிலைகுலையச் செய்கின்றன. படைப்பு விசித்திரமானது முருங்கை மரம் நட்டவன் கை நிரம்ப கம்பளிப்பூச்சிகளை கொண்டுவந்து கொட்டுகிறான். கைகள் கூசுவதில்லை அவனுக்கு. பரவாயில்லை நீங்கள்தான் தீவைக்கக் கற்றுத் தருகிறீர்களே பிறகென்ன. பிரச்சனை என்பது எத்தனை சுவர்களை எழுப்புவது என்பதே. கடைசியாய் ஒரு சந்தேகம் கனவு கண்டது நானா? கம்பளிப்பூச்சியும் கரப்பான்பூச்சியுமா ? ஞான மாயை புற்கள் குத்தி புண்ணாகிப் போன கால்கள் மிதிபட்டு மிதிபட்டு புற்களும் கற்களும் பூவாகிப் போயின. என் தடத்தில் கண்ணாடி சில்களும் கூரிய ஆணிகளும் நிரம்பி கிடக்கின்றன. நானும் நீங்களும் தனித்தனி மாயைகள் சூனியங்கள் ஒன்றுபோல் தெரிந்தாலும் அதில் சுற்றும் வெறுமைகள் வெவ்வோறானவை. நன்றாக யோசித்து பாருங்கள் நீங்கள் யார்? உங்கள் கொள்ளுத் தாத்தாவின் எந்த எலும்பையாவது உங்களால் கண்டெடுக்க முடியுமா! எப்போதும் நான் என்னை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டுள்ளேன். இல்லாத மையப்புள்ளியை விட்டு விலகி எங்கோ. அநேகமாக மரணத்துக்குப் பின்னும் அது சாத்தியப்படாது. நீங்கள் உங்களுக்குத் தெரியாமலே உங்களை தேடிக்கொண்டிருப்பது மூங்கில் காட்டில் காதுக்குள் நுழையும் ஏதோ ஒர் இரைச்சலை. அதில் உருகி வழியும் ராகம் ஆலாபனையென ஏமாற்றும் வெறும் சுரங்கள். சிவப்பி இசைக்கு நடை கற்பிக்க தொடங்கிவிட்டாள் சிவப்பி பறையிசைக்குள்ளே பாலினத்தை தேடுகிறாள். அவள் தொன்மம் மாறாத தொல்காப்பியம். சிவப்பியின் கைத்தட்டலுக்குள் காமத்தின் ரேகைகள் அழிகின்றன. பள்ளியில் பயின்ற காலத்தில் வெற்றி முரசடித்த சிவப்பியின் கைகள் சிவந்து போகும் வண்ணம் சாப்பறை அடிக்கிறது. உவகை பறை அடிக்கச் சொன்னால் உள்ளம் குளிர்வாள். உளவியல் சிக்கலில் தனக்குத்தானே சாக்காட்டு பறை இசைக்கிறாள். டன்டனக்கு  டனக்குனக்கு டன் டன் டன்  டன்னக்கு.      தனிமை நான் தனிமையில் இருப்பதாய் தப்புக் கணக்க போடாதீர்கள். தனிமையோடு இருக்கிறேன்.  நூலாசிரியரின் பிற படைப்புகள்: பாதியும் மீதியும் (சிறுகதைத் தொகுப்பு விலை ரூ. 120/- வெளியீடு :படைப்பு பதிப்பகம், மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம்,   கடலூர் - 607 002 தமிழ்நாடு 94893 75575 எட்டி மரக்காடு ( சிறுகதைத் தொகுப்பு) வெளியீடு : Free Tamil Ebook பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com அறைக்குள் அகப்பட்ட வானம் (குறு நாவல்கள்) வெளியீடு : Free Tamil Ebook பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account