[] 1. Cover 2. Table of contents பறவையால் அழகாகிறது வானம் பறவையால் அழகாகிறது வானம்   வின்சென்ட் காபோ     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - ஆரா பிரஸ், சென்னை - arapress@protonmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/corona_warrior மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: ஆரா பிரஸ், சென்னை - arapress@protonmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Arapress, Chennai - arapress@protonmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/corona_warrior This Book was produced using LaTeX + Pandoc பறவையால் அழகாகிறது வானம்!   வின்சென்ட் காபோ!     தொகுப்பு அன்பரசு சண்முகம்   வடிவமைப்பு ஆரா பிரஸ், சென்னை   வெளியீட்டு அனுசரணை Komalimedai.blogspot.com   தொடர்புகொள்ள Arapress@protonmail.com   அட்டைப்படம், வடிவமைப்பு உதவி Pixabay.com,canva.com   தலைப்பு நா.கதிர்வேலன், பத்திரிகையாளர்   நன்றி கே.என்.சிவராமன் கணியம் சீனிவாசன் நெல்லை கதிரவன் அ.சபாபதி இரா.முருகானந்தம் பாலபாரதி அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம். இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இவர்களைப் பற்றி எழுதக்காரணம், இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான். தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன. அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல. நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான். இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன். சொந்த அனுபவமாக கூறுவது என்றால், கொரோனா பொதுமுடக்க காலத்தில் எனக்கும் உணவுப்பொட்டலங்கள் இருமாதங்களாக கிடைத்தன. நமக்குள் எழும் பசிகளில் வயிற்றுப்பசியை வெளியிலுள்ள உணவுப்பொருட்கள் மூலம் தீர்த்துக்கொள்ளமுடியும். பிறவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தானே முயன்றுதான் தீர்க்க முடியும். அந்தவகையில் அக்காலகட்டத்தில் கிடைத்த உணவு எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு உணவு அளித்த நண்பர்களுக்கு ஐந்து கிலோ அரிசி மட்டுமே வாங்கிக் கொடுக்க முடிந்தது. பல்வேறு நண்பர்கள் கூட்டாக சேர்ந்து உணவுப்பொருட்களை சமைத்து பொட்டலமிட்டு வழங்கி வந்தனர். பிறர் அவர்களுக்கு இருக்கிறது செய்கிறார்கள் என்று சொல்லலாம். பணமிருக்கும் அனைவருக்கும் பிறருக்கு கொடுக்கும் மனமிருப்பதில்லை. அதில் கவனிக்க வேண்டியது, அனைவரது கரங்களையும் ஒன்று கோத்து உணவு தயாரிப்பில் ஈடுபடுத்தி பிறரை வழங்கும் தன்மையைத்தான். நூலை வாசியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இந்த நூல் பலருக்கும் உதவவேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் உருவாக்கும் என்று கருதுகிறேன். நன்றி! வின்சென்ட் காபோ பிப்ரவரி 2021 மக்களுக்கானதே வாழ்க்கை! ** காயத்ரிதேவி** ** பாகீரதி** [] சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது. தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம். அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும். ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி, லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார். கடன், காப்பீடு, வங்கிக்கணக்கு புத்தக பதிவு, ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் விருப்பத்துடன் செய்கிறார். இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. இப்பணிகளை இவர் அக்டோபர் 2016ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு, கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர். வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை. இப்போது சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பு பற்றிய டேட்டாவைப் பார்த்துவிடலாம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 68 மில்லியன் (ஒரு மில்லியன் - பத்து லட்சம்) பெண்கள் சுய உதவிக்குழுக்களில் பங்கு வகிக்கிறார்கள். இந்த பெண்கள் சிக்கலான காலகட்டத்திற்காக 16 கோடி மாஸ்குகளையும். 53 லட்சம் பிளாஸ்டிக் உடைகளையும், 51 லட்சம் சானிடைசர்களையும் தயாரித்து வழங்கியுள்ளனர். கிராமத்தில் உள்ள வணிக பிரதிநிதியாக சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 9,400 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களே வங்கிக்கிளைகள் இல்லாத கிராமத்தினருக்காக பணத்தை மக்களுக்கு வழங்குபவர்கள். ‘கொரோனா காலத்தில் நான் ஆயிரம் பேர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க உதவியுள்ளேன். இவர்கள் எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 350 பேர் பெண்கள் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். காரிப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.500 கூட வங்கிக்கணக்குகள் மூலமாகத்தான் மக்களுக்குக் கிடைத்தன. ரூ.60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலுமான பரிவர்த்தனைகளை நாங்கள் செய்துள்ளோம்’’ என்றார் காயத்ரி. இவரது சரஸ்வதி சுய உதவிக்குழுவில் பதினொரு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தினசரி கூலியாக கிடைக்கும் பணம் இருபது ரூபாய் என்றாலும் அதனை சேமிக்கத் தவறுவதில்லை. வணிகப்பிரதிதியாக இவர் மாநில அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது மக்களிடையே தங்கள் சேமிப்பு மீது பயம் ஏற்பட்டது. அதுபோலவே பொதுமுடக்க காலத்திலும் மக்களுக்கு தங்கள் சேமிப்பு என்னாகுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. அத்தனையையும் காயத்ரி சமாளித்து பயம் போக்கியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளையும் வங்கி மூலமாக பெற்றுத் தந்திருக்கிறார். அதோடு பிற மாநிலங்களிலிருந்து வரத்தொடங்கிய ஏழு லட்சம் பேர்களைப் பற்றிய தகவல்களையும் தனது குழுவினரின் உதவி மூலம் பெற்று மாநில அரசுக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு, சானிடைசர், மாஸ்க் என பல்வேறு உதவிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். தொலைதூரக்கல்வி மூலம் சமூகவியல் படித்துள்ள காயத்ரிதேவிக்கு கொரோனா பற்றி பயம் இல்லையா? பயம் இருந்தாலும் மற்றவர்கள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக நாம் செய்யும் வேலை என்று நினைத்துக்கொண்டு இந்த வேலைகளை செய்தேன் என்கிறார். கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த பாகீரதி இதேபோலான வேலையைத் தான் செய்திருக்கிறார். நியூட்ரிமிக்ஸ் என்ற சப்ளிமெண்டை அங்கன்வாடி குழந்தைகள் முதல் மூன்று வயது சிறுவர்கள் வரை கொடுத்திருக்கிறார். நோய்த்தொற்று பிரச்னையால் அங்கன்வாடிகள் மூடியிருக்குமே? என்றதற்கு, அதற்காக குழந்தைகளின் வளர்ச்சியை பலிகொடுக்க முடியாது என பளிச் பதில் தந்து வியக்க வைக்கிறார். குடும்பஸ்த்ரீ என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுவில் 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். இவரது குழு, நியூட்ரிமிக்ஸ் என்ற உணவுப்பொருளை தயாரித்து வருகிறது. மொத்தம் 149 பெண்கள் பத்தொன்பது யூனிட்டுகளாக பிரிந்து 135 மெட்ரிக் டன் உணவுப்பொருளை தயாரித்து வருகிறார்கள். 242 குடும்பஸ்த்ரீ யூனிட்டுகளுக்கு 2 ஆயிரம் பெண்கள் உழைத்து வருகின்றனர். இவர்கள் வழியாக 33 ஆயிரம் டன் நியூட்ரிமிக்ஸ் உணவு அங்கன்வாடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருமாதமாக இவர்கள் தயாரித்த உணவுப்பொருட்களுக்கான தொகை கிடைக்காத நிலையிலும் குழந்தைகள் பசியால் வாடக்கூடாது என்று நினைத்த உயர்ந்த உள்ளத்தை கௌரவிக்க என்ன விருதுகளைக் கொடுப்பது? திவ்யா ஜே சேகர் போர்ப்ஸ் இதழ் சிகிச்சை அளிப்பதுதான் சந்தோஷம்! ** சந்தோஷ்குமார்** ** மருத்துவர்** [] நோயாளியைத் தேடித்தான் மருத்துவர்கள் முன்னர் சென்று வந்தார்கள். ஏன் தெரியுமா? மருத்துவரை தேடி நோயாளிகள் அலைந்தால் அவர்களின் நோய் இன்னும் கூடுதலாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால்தான். மருத்துவர் சந்தோஷ்குமார் தொற்றுநோ்ய் பாதிப்புள்ள சியரா லியோன், போர் ஆபத்துள்ள சிரியா என எந்த இடத்திலும் தயக்கமே இல்லாமல் சென்று தனது மருத்துவச்சேவையை அளித்துள்ளார். இருபது ஆண்டுகாலத்தில் நாற்பது நாடுகளுக்கு சென்று மருத்துவச் சேவையை அளித்துள்ளார். கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக்கல்லூரியில் அவசரகால சிகிச்சைத் துறையின் டெபுடி சூப்பிரடெண்டாக பணியாற்றிவருகிறார். இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது இவர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு எப்படி செயல்படுவது என்ற எந்த நூலும் பின்பற்றுவதற்கு கிடையாது. அனைத்துமே அனுபவ பாடங்களாக கற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சை முறையை உயர்த்தியுள்ளனர். மாநிலத்தின் முக்கியமான மருத்துவமனை, பல்வேறு அதிகாரிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும் உள்ளது. ஜனவரியில் முதல் கொரோனா வழக்கு கண்டறியப்பட்டவுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக தனிமைப்படுத்தும் வார்டை உருவாக்கியுள்ளார் சந்தோஷ். இவர் முன்னரே எபோலா, நிபா வைரஸ்களை எதிர்கொண்ட திறமை கொண்டவர். இதனால் தனிமைப்படுத்தும் பகுதி, சோதிக்கும் பகுதி, சிறப்பு ஐசியு ஆகியவற்றை எளிதாக உருவாக்க முடிந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலால் கோழிக்கோட்டில் 17பேர் பரலோக ப்ராப்தி அடைந்தனர். இரண்டாயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஐந்தாவது இடம் கேரளத்துக்கு. ஆனாலும் கூட இறப்பு சதவீதம் இங்கு பிற மாநிலங்களை விட குறைவுதான். மூவாயிரம் பேர்களுக்கு குறைவாகவே கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். முதலில் சரியான பொருட்கள், உடைகள் கிடைக்காமல் சிகிச்சை செய்துவந்தனர். மேலும் வீட்டுக்கு கூட போக முடியாதபடி நோயாளிகளின் வருகை இருந்துள்ளது. நோயாளியில் ஒருவர் இறந்துவிட நிலைமை மோசமாகியது. அவரை முறையாக அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதுவிட்டு காசர்கோடு சென்று அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் கொரோனாவுக்கான மருத்துவமனையை தொடங்கினார் சந்தோஷ். அங்கு கூட பணிபுரிவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் நிலையை சமாளித்து இருநூறு படுக்கைகளை ஏற்பாடு செய்தனர். அங்கு ஏழு நோயாளிகள் வந்து சேர்ந்துவிட்டனர். மகாராஷ்டிரத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க, அங்குள்ள அரசு சந்தோஷின் உதவியை நாடியுள்ளது. அங்கும் சென்று உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் செப்டம்பரில் கேரளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. அதற்கு முக்கியமான காரணம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறைதான். இடையறாத பணி காரணமாக சந்தோஷிற்கு மாரடைப்பு வந்திருக்கிறது. இப்போதும் கூட ‘’நான் உயிரோடு இருப்பது சமூகத்திற்கு சேவை செய்வதற்குத்தான். சிரியா, இரான், ஈராக் ஆகிய நாடுகளில் பயின்ற மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு பயன்படுத்துவேன்’’ என உறுதியாக பேசுகிறார். டேட்டா கார்னர் செப்.30, 2019படி இந்தியாவில் பதிவு செய்த அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. கொரோனா காலத்தில் 80 சதவீத மருத்துவர்கள் பணியில் இருந்தனர். தோராயமாக 9.6 லட்சம் பேர் என இதைக் கூறலாம். 1,404 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற ரீதியில் மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக இதுவரை 500 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். போர்ப்ஸ் மனு பாலச்சந்திரன் அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு! [] சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு, தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது. இக்குழுவினர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர். இதனை செய்யும் குழுவின் தலைவர், எம்.பக்ருதீன். சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம். அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன். ‘’இங்கு யாரும் அனாதைகள் இல்லை. நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை. உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம்’’ என்றார் பக்ருதீன். பொதுமுடக்க காலத்திலும் கூட நூறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு. கோவில்பட்டியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன். 2015ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனந்தி அம்மாள், அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார். அதோடு குடிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவி வந்தார். இச்செயல்களே பக்ருதீனுக்கு சென்னை வர முக்கியமான காரணமாக இருந்துள்ளது. ’’நான் திண்ணை நிலாவாசிகள் குழுவைத் தொடங்கியபோது சமூக செயல்பாடுகளை நடிப்பு பயிற்சியாகவே கருதினோம். கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் நாங்கள் பயிற்சிகொடுத்து நாடகங்களில் பங்கேற்க வைக்கிறோம். பல்வேறு சமூக வர்க்கங்களைக்கொண்டவர்களாக நாடக குழுவினர் உள்ளனர். அனாதைப் பிணங்களை இவர்கள் பெறுவது அழுகிய நிலையில்தான் என்பதை பலரும் உணருவதில்லை. அதனை எடுத்து அடக்கம் செய்வது எளிதானது அல்ல. நாடக ஒத்திகளை அரசு மைதானங்களில் செய்கின்றனர். நான் சொல்லுவது நமது கலைச்செயல்பாடு மனிதநேயத்தை ஒட்டி அமையவேண்டும் என்பதுதான்’’ என்கிறார் பக்ருதீன். ஒலிப்பெருக்கி வழியே கல்வி! ** ஷைலேஷ் ராவல்** ** ஆசிரியர், குஜராத்** [] இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது. இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம். இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா. இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும். இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி. ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது, ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன், டேப்லெட், மடிக்கணினி, ஏன் டிவி கூட கிடையாது. அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில், 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இன்று கொரோனா காலத்தில் மாணவர்கள் கற்பதற்கு அவசியமான பொருள் ஸ்மார்ட்போன் மட்டுமே என்ற சூழலில் மேற்சொன்ன உண்மை வேதனையானது. வறுமை நிலையிலுள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் பள்ளியிலிருந்து இடைநிற்றலாகி வேலைக்குச் செல்லு்ம் நிலையில் உள்ளனர். பார்படா கிராமத்து தலைவர், அக்கிராமத்து மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கில் இருபது ஒலிப்பெருக்கிகளை ஏற்பாடு செய்து தந்திருக்கிறார். ஷைலேஷ் கிராமத்திலுள்ள மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களை ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி கற்க அழைத்திருக்கிறார். பலரிடமும் கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கிறார். இவர் இருபத்தேழு ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளார். துணை முதல்வராக வேலை செய்யும் பள்ளியில் இருநூறு மாணவர்கள் கல்வி கற்று வருகி்ன்றனர். கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஏழுபேர் ஒன்றாக கூடுகின்றனர். ஒருவர் பின் ஒருவராக மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பாடங்களை கற்பிக்கின்றனர். தினசரி ஆறு வகுப்புகளை எடுக்கின்றனர். ஒரு வகுப்பு அரைமணிநேரம் நீள்கிறது. இப்பாடங்களை ஒலிப்பெருக்கி வழியாக கேட்கும் மாணவர்கள் வீடு அல்லது பொது இடங்களில் அமர்ந்து கற்கின்றனர். தங்களது உத்தரவுகளை மூன்றுமுறை சொல்லி மாணவர்களை பணிக்கின்றனர். மாணவர்களைப் பார்க்காமல் பாடம் நடத்துவது கடினமாகவே உள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பார்கள் கவனிப்பார்கள் என்று பாடங்களை மைக்கில் பேசி ஒலிப்பெருக்கி வாயிலாக நடத்துகிறார்கள். ஷைலேஷ் கணிதப்பாடத்தை ஒலிப்பெருக்கி வழியில நடத்துவது கடினமானதுதான். ஆனால் வேறுவழியில்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். பாடங்களை கவனிக்கும் மாணவர்கள் அந்த நேரம் முடிந்தாலும் ஷைலேஷிடம் வந்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்று வருகின்றனர். அதில்தான் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களை இவர் புரிந்துகொள்கிறார். அதற்கேற்ப கணிதப்பாடத்தை வெவ்வேறு முறையில் சொல்லிக்கொடுக்க முயல்கிறார். இதில் மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை அறிய அவர்களை ஒலிப்பெருக்கி வழியாக பெயர் சொல்லி அழைப்பதும் உண்டு. இன்னொருபுறம் இணையம் வழியாக கற்பதிலும் பல்வேறு தடைகள் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பத்திற்கு உடனடியாக பழக முடியாத மாணவர்கள் தடுமாறிவருகிறார்கள். பழமையான வகுப்பறை பாடங்களை ஆன்லைனுக்கு ஏற்றபடி மாற்றுவது பெரும் சவாலாக உள்ளது. டேட்டா கார்னர் மே மாதம் 2020 யுனெஸ்கோ அறிக்கைப்படி 2.7 மில்லியன் ஆசிரியர்கள் மாறிய சூழலுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரத் தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் வெளியாகும் கல்வி அறிக்கையில் 20 சதவீத கிராமப்பகுதி மாணவர்கள் பாடநூல்கள் இல்லாம் உள்ளனர் என்றும், 36 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து நூல்களைப் பெற்று படித்து வருகின்றனர் என்றும் கூறியது. நாந்திகா திரிபாதி போர்ப்ஸ் இதழ் அஞ்சல் வழியாக நம்பிக்கை! ** பிரதீப் சாகு** ** அஞ்சல்துறை ஊழியர், மும்பை** [] அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர். 54 வயதாகும் சாகு, இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். திலக் நகர், செம்பூர், கோவண்டி, கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார். அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு. ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார். அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல். இந்தியா போஸ்ட் நிறுவனம், கிராமப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு. மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன. அரசின் நிதியுதவி, பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் பணியை சாகுவும் அவரது சக நண்பர்களும் செய்து வந்துள்ளனர். அவசரம் இல்லாத கடிதம், பார்சல்களை அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து வாங்கிச்செல்ல கூறியுள்ளனர். இதற்கு கடித உறைகளில் உள்ள தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இப்படி தினசரி 40 கடிதங்கள் வந்துள்ளன. அவருடன் வேலைசெய்த சக நண்பர் கொரோனா காரணமாக இறந்துவிட, திலக் நகர் அஞ்சல் அலுவலகம் இவருக்கு 15 நாட்கள் மருத்துவ விடுப்பு கொடுத்துள்ளது. இதில் இவர் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும். பாதுகாப்பு வசதிகளுடன் ஜூன் மாதம் முதலே அனைத்து ஊழியர்களும் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். பதினொரு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் அனைத்து வேலைச்சுமைகளையும் சாகு மற்றும் அவரது சகாக்களின் தலையில் விடிந்தன. இதனால் அங்குள்ள இளைஞர்களை தினசரி கூலி 400 என்று பேசிக்கொண்டு வேலை பார்த்துள்ளனர். சாகு மட்டுமல்ல ஹே தீதி எனும் சேவை அமைப்பும் கூட வீடுகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. காவல்துறையினர் இந்த அமைப்பினரைப் பார்த்து முதலில் கேள்வி கேட்டாலும் பின்னர் இவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு பாராட்டியுள்ளனர். இந்த அமைப்பை திரிப்தி சந்தோஷ் என்ற பெண்மணி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பெண்களை மட்டும் பணியமர்த்தி பல்வேறு பொருட்களை வீடுகளிலுள்ள மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. பதினேழு பெண்கள் இருசக்கர வாகனங்கள், வேன்களிலும் இப்படி பணியாற்றியுள்ளனர். தினசரி 150 பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் அளவுக்கு பரபரப்பாக சுற்றி சுழன்றிருக்கிறது இக்குழு. நெருக்கடியான காலத்தில் விதிமுறைகள் காரணமாக ஒரேயொரு பெண் என வேன்களில், இருசக்கர வாகனங்களிலும் பயணிக்க வேண்டியிருந்திருக்கிறது. அதனையும் வெற்றிகரமாக சமாளித்துவிட்டனர். இதுவரை இக்குழுவினர் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலிருக்கிறது. இயல்புநிலை திரும்பியபிறகுதான் இவர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. திவ்யா ஜே சேகர் போர்ப்ஸ் இதழ் குறைந்த சம்பளத்தில் விலைமதிப்பற்ற சேவை! ** வினிமோல், இந்து** ஆஷா பணியாளர்கள் [] இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் பொது சுகாதாரத்துறை சார்ந்த தொடக்கநிலை பணியாளர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிக குறைவு. வினிமோலுக்கு இப்படி மாதம் கிடைக்கும் தொகை ரூ.7 ஆயிரம் மட்டுமே. பின் எப்படி அதில் மனநிறைவு கொள்கிறார்? ‘’கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் இவரை வாழ்த்தியதை மறக்கமுடியாது’’ என்பவர், கூடுதலாக சம்பளம் பெற்றாலும் நோயாளிகள் குணம்பெற்று மகிழ்ச்சியில் வாழ்த்தியதை நினைவுகூர்கிறார். கொரோனா காலகட்டம் முழுவதும் ஓய்வெடுக்க நேரமின்றி பணியாற்றியுள்ளார். சில நாட்களில் வேலைக்கு செல்லமுடியாதபடி உடல்நலம் சிக்கலாக இருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியுள்ளார். உண்மையில் சம்பளம் குறைவாக  உள்ள வேலைகளுக்கு மக்களிடையே எந்த மரியாதையும் இருக்காது. ஆஷா பணியாளர்களுக்கும் அதேநிலைதான். மக்களுக்காக பணியாற்றியதன் காரணமாக அந்நிலை தற்போது சிறிது மாறியிருக்கிறது. நோய்த்தொற்று பயம் காரணமாக அரசு பணியாளர்களான ஆஷா குழுவினரையும் கூட மக்கள் சந்திக்க விரும்பவில்லை. வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் சென்று வந்துள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திவிடுவார்கள் என பயந்து வீட்டுக்குள் முடங்கிவிட்டனர். பல வீடுகளில் ஆஷா பணியாளர்கள் உள்ளே வரக்கூட அனுமதி அளிக்கவில்லை. இவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவும் என்று கூட சிலர் நம்பிக்கொண்டிருந்ததுதான் வேடிக்கை. பின்னர் மக்களே ஆஷா பணியாளர்களை போனில் அழைத்து உதவிகளை கோரத் தொடங்கியிருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட பல நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை சொந்த பணத்தில் வாங்கித்தந்துவிட்டு பின்னர் அதற்கான தொகையை பெற்றிருக்கிறார் வினுமோல். குளித்துவிட்டு துணிகளை துவைத்துவிட்டு வேகமாக பணிக்கு திரும்பும் நிர்ப்பந்தம். கூடவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடுவோம் என்று கூட பீதிக்கு ஆளாகியிருக்கிறார். கொரோனா கால நோய்களோடு கர்ப்பிணிகள், சத்துணவு பணியாளர்களுக்கான உணவு, மருத்துவர், நர்ஸ்களுக்கான உதவி, பேலியேட்டிவ் நோயாளிகளுக்கான உதவி என காலில் சக்கரம் கட்டியது போல அலைந்து திரிந்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது பணிக்காக ரூ. 23 ஆயிரம் வழங்கிய அரசு, ஆஷா பணியாளர்களுக்கு இருமாத ஊதியத்தை வழங்கவில்லை. இவரைப் போலவே இந்து என்ற ஆஷா பணியாளரும் 800 வீடுகளுக்கு மேல் சென்று மக்களுக்கான தேவைகளை அறிந்திருக்கிறார். அலைந்துகொண்டிருப்பதாலும் மருந்துகடைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலும் மதிய உணவைக் கூட சாப்பிட முடியாத நிலை. இவர்களது பகுதிக்கான வீடுகளோடு வேறுபகுதி வீடுகளையும் கவனிக்கவேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் சம்பள உயர்வு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அரசு இதற்கான பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருப்பார்கள் என்பதால், அவர்களை சந்தித்து தேவையான உதவிகளை ஆஷா பணியாளர்களே வழங்கினர். சம்பளம் குறைவாக இருந்தாலும் அந்த பணியே மக்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனை ஆஷா பணியாளர்கள் மதிப்பிற்குரியதாக நினைக்கிறார்கள். மனு பாலச்சந்திரன் போர்ப்ஸ் இதழ் காவல்துறை உங்கள் நண்பன்! ** நிஷா சாவன்** ** காவல்துறை துணை ஆய்வாளர், மும்பை** புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான். இவர், வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார். புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை. அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது. அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை. பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார். நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா, காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம், ராஜஸ்தானுக்கு ரயில், பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக பிரித்து அவர்களின் பெயர், செல்போன் எண் ஆகியவை பெறப்பட்டன. இதற்காகவே கேர்வாடி காவல்நிலையத்தில் 12 பேர் என ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இப்பணிகளோடு பொதுமுடக்க காலகட்டத்தில் விதிகளை பிரசாரம் செய்வது, மக்களை கண்காணிப்பது ஆகிய பணிகளையும் நிஷா தனது குழுவினரோடு செய்துவந்தார். கொரோனா பரவிய வேகத்திற்கு காவல்துறையினரும் தப்பவிலை. நிஷாவின் குழுவினரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் மீண்டு வந்துள்ளனர். போர்ப்ஸ் இதழ் இறுதி மரியாதை! ** ஜிதேந்தர் சிங் சுண்டி** ** ஷாகீத் பகத் சிங் சேவாதள்** கொரோனா நோய்த்தொற்று வந்து இறந்தவர்களை மக்களே அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்த அவலம் நாடெங்கும் நடைபெற்றது. அந்தளவு இந்த நோய்த்தொற்று மக்களின் பயத்தை தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காக நோயால் இறந்தவரின் உடலை தெருவில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிடமுடியுமா? ஜிதேந்தர் சிங், டில்லியைச் சேர்ந்தவர். தனது சேவாதள் நிறுவனம் மூலம் நோய்த்தொற்றால் இறந்தவர்களை முறைப்படி எடுத்து அடக்கம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களில் ஜிதேந்தர் சிங் குழுவினர் 200க்க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். இதயத்திலிருந்து செய்வது அனைத்துமே சேவைதான். ‘’நோய்த்தொற்று ஏற்படுத்திய பீதியால் பலரும் தங்கள் அன்புக்குரியவர்கள் முறைப்படி அடக்கம் செய்யமுடியவில்லை. இதன் காரணமாக, நாங்கள் சிதைவடைந்த உடல்களைக் கூட எடுத்து அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. நாங்கள் முறைப்படியான பாதுகாப்பு நடைமுறைகளை செய்துவிட்டே அவர்களை அடக்கம் செய்தோம். உடலை கொண்டு சென்ற வாகனங்களையும் முறைப்படி சுத்தம் செய்துள்ளோம்’’ என்றார் ஜிதேந்தர். அப்படியிருந்தும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து மீண்டும் தனது சேவைகளை தொடர்ந்துள்ள ஜிதேந்தரின் பணி, மறக்கமுடியாதது. போர்ப்ஸ் இதழ் பஸிரா போபுல் போலியோ விழிப்புணர்வாளர் [] ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஸிரா போபுல், கடந்த நான்கு ஆண்டுகளாக போலியோ தொடர்பாக வீடுதோறும் சென்று விழிப்புணர்வு செய்து வருகிறார். போலியோ விழிப்புணர்வாளராக பணிசெய்துவந்த பஸிரா கோவிட் -19 காலத்தில் அந்நோய்த்தொற்று தொடர்பான பணியையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். போலியோ தடுப்பூசி தொடர்பான பணிகளை நிறுத்திவைக்க அரசு உத்தரவிட்டதால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வழிகளாக சோப்புகளை வீடுதோறும் விநியோகம் செய்து வருகிறார். இவரைப் போல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இப்பணியை நாடு முழுக்க செய்து வருகின்றனர். https://www.gatesnotes.com/Health/7-unsung-heroes-of-the-pandemic ஷில்பாஶ்ரீ ** கோவிட் -19 சோதனையாளர்** [] பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷில்பாஶ்ரீ. இவர் கோவிட் -19 சோதனையாளராக பணியாற்றி வந்தார். பிபிஇ உடை, கண்ணாடிகள், கையுறைகள், மருத்துவக்கருவிகள் என சோதனை செய்யும் பூத்தில் அமர்ந்து மக்களிடம் மாதிரிகளை சேகரித்தார். இரண்டு முழங்கைகளை நீட்டி அனைத்து மக்களிடமும் சளி மாதிரிகளை பெற்று வந்தார். நோய்த்தொற்று அதிகமாக பரவி வந்ததால் அரசு, இவரை குடும்பத்தினரை சந்திக்கச்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஐந்து மாதங்களாக தனது குடும்பத்தினரை ஷில்பாஶ்ரீ சந்திக்கவில்லை. சந்திக்கவில்லை என்றால் நேரடியாகத்தான். வீடியோ அழைப்பு வழியாக குடும்பத்தினரை சந்தித்து முகம் பார்த்து மறக்காமலிருக்க பேசிக்கொண்டனர். குழந்தைகளைப் பார்த்தும் பிரியமாக கட்டிக்கொள்ள முடியவில்லை என்பது அவரது குறை. பணி பற்றி குறைபட்டுக்கொள்கிறீர்களா? என்று கேட்டபோது, ‘’இல்லை மக்களை ஆபத்திலிருந்து காக்கிறோம் என்ற பெருமையை மறக்க முடியாது. நான் விரும்பித்தான் இந்த வேலையை செய்கிறேன்’’ என்றார் ஷில்பாஶ்ரீ https://www.gatesnotes.com/Health/7-unsung-heroes-of-the-pandemic பசிப்பிணிக்கு உணவு! [] சென்னையைச் சேர்ந்தவர் திரிலோக் பாபு. இவர் தோசா கார்னர் எனும் உணவகத்தை நடத்தி வருகிறார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ரசம், சாப்பாடு, ரசம், மோர், ஊறுகாய் ஆகியவற்றை பாக்கெட்டில் அடைத்து கேட்டவர்களுக்கு எல்லாம் முடிந்தவரை வழங்கி வந்திருக்கிறார். உணவு தேவைப்படும் மக்களை எப்படி அடையாளம் கண்டீர்கள்? என்றபோது, “பசிக்கு கைநீட்டியவர்களுக்கு கேள்வியே கேட்காமல் உணவு வழங்கினோம்” என்றார். இதேபோல மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர், கையுறைகள், மாஸ்க் ஆகியவற்றை உணவு வங்கி எனும் தன்னார்வ தொண்டு அமைப்பு வழங்கியது. இதனை ஒருங்கிணைத்தவர் ஸ்னேகா மோகன்தாஸ். ‘’அதிக மக்கள் தெருக்களில் நடமாடக்கூடாது என்று அரசு தடை விதித்திருந்தது. எனவே, நாங்கள் எங்கள் நிறுவனம் சார்ந்து சிறு குழுவே அனைத்து பணிகளையும் செய்தோம். மக்களிடம் பொருட்களைப் பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கினோம்’’ என்றார் ஸ்னேகா. https://www.indiatoday.in/india/story/corona-warriors-chennai-lockdown-covid-19-1662871-2020-04-03 இந்துவை தகனம் செய்த முஸ்லீம்! [] மக்களை விட அரசியலில் பிரிவினைகள் அதிகம். வரலாற்றை பள்ளிபாடங்களில் அகற்றி தூய்மைபடுத்தலாம். நகரங்களின் பெயர்களிலிருந்து நீக்கலாம். ஆனால் மக்களின் மனங்களில் இருந்து நீக்க முடியாது. நெருக்கடியான நிலைகளில் மக்களின் மனிதநேயம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்படுவதை நாம் செய்திகளில் படித்திருப்போம். இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். மங்களூருவைச் சேர்ந்தவர் ஆசிப் அமீர். இவரது வேலை ஆம்புலன்ஸை இயக்குவதுதான். அப்படி தனது பணியைச் செய்துகொண்டிருந்தபோதுதான், முதியவர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்படாமல் அப்படியே கிடப்பது தெரிய வந்தது. முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவரின் பெயர் வேணுகோபால் ராவ். 62 வயதான அவருக்கு கோவிட் -19 நோய் தொற்றி சிகிச்சை பயன் அளிக்காமல் இறந்துவிட்டார். அவரது உறவினர்கள், அவரது உடலைப் பெற்று வந்தால் நமக்கும் நோய்த்தொற்று ஏற்படும் என நினைத்து பயந்து உடலைப் பெற மறுத்துவிட்டனர். இதனால் அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இத்தகவலை தெரிந்தகொண்ட அமீர், காவல்துறையிடம் அனுமதி பெற்று வேணுகோபால் ராவின் உடலை தக்க மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து இந்து முறைப்படி சடங்குகளை செய்து அவரை நல்லடக்கம் செய்துள்ளார். வாழும்போது கிடைக்கும் மரியாதையை மனம் நினைத்து மகிழ்கிறது. ஆனால் இறந்தபிறகு ஒருவரின் உடல் பெறும் மரியாதையே உண்மையானது. கோவிட் காலம் பலருக்கும் அவலமான மரணத்தையே கொடுத்துள்ளது.  அந்தவகையில் நோய்த்தொற்று பற்றி கவலைப்படாமல் உடலை அடக்கம் செய்த அமீரின் தைரியம் பாராட்டுக்குரியது. https://www.indiatoday.in/india/story/muslim-ambulance-driver-cremates-hindu-senior-citizen-with-no-family-1704036-2020-07-24   மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் [] கொல்கத்தாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் உமா சட்டர்ஜி. இவர் சஞ்சோக் என்ற தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் ஜூம் வழியே பல்வேறு வகுப்புகளை நடத்தி வருகிறார். 2012ஆம் ஆண்டு தொடங்கி வீடுகளில் நடைபெறும் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஆலோசனைகளை மாதம்தோறும் வழங்கிவருகிறார் உமா. இப்படி மாதம்தோறும் எட்டு சந்திப்புகளை நடத்துகிறார். விர்ச்சுவல் முறையோடு ‘’நேரடியாக களத்திலும் சென்றுபார்த்த விஷயங்கள், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் பேசும் வலி நிரம்பிய குரல்களை மறக்கவே முடியாது. அவை எனது தலைக்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன’’ என்றார். கோவிட் -19க்கு முன்னர் நிலைமை வேறுவிதமாக இருந்த்து. பின்னர் நேரடியாக சந்திப்பது கடினமாகிவிட்ட சூழலில் வாட்ஸ்அப் குழுவில் பாதிக்கப்பட்டவர்களை இணைத்துள்ளார். இப்படி 200க்கும் மேற்பட்டவர்களை இணைத்து அவர்களுக்கு ஆலோசனைகளை வாட்ஸ்அப் செயலி வழியாக வழங்கத் தொடங்கியுள்ளார் உமா சட்டர்ஜி. மார்ச்சுக்குப் பிறகு வீட்டில் பொதுமுடக்கத்தால் முடங்கிய அனைவருமே பதற்றம், கோபத்திற்கு உள்ளானார்கள். ஏனெனில் இச்சமயத்தில் பலரும் நண்பர்களை சந்திக்க முடியவில்லை. பொதுஇடங்களுக்கு சுதந்திரமாக செல்ல முடியவில்லை. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ பதிவுகளையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். இதில் உளவியல் மருத்துவர் உமாவும் கூட தனது வயதான பெற்றோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதையும், நண்பர்களை சந்திக்க முடியாத தனது மகள் எப்போது கோபமாக நடந்துகொண்டாள் என்று பகிர்ந்துகொண்டார். ‘’இதில் குளம் அருகில் ஒரு பெண் எடுத்த புகைப்படம் முக்கியமானது’’ என்றார் உமா. காரணம், அங்குதான் அப்பெண் வல்லுறவு செய்யப்பட்டார். இன்று அதே இடம் அவருக்கு ஏதோ ஒருவித அமைதியைத் தருகிறது எ்ன்று கூறியிருந்தார். ஆம்பன் புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டது. இதனால் சஞ்சோக் குழுவின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்த நேரத்திலும் ஆலோசனைகளை வழங்கும் பணியை தொய்வுறாமல் பார்த்துக்கொண்டது உமா சட்டர்ஜியின் குழு. இதன் காரணமாக, ‘’ஆலோசனைகளை வழங்கும் பணி வேகம் குறைந்துவிட்டது. நான் வீட்டிலேயே தனி இடத்தை அமைத்துக்கொண்டு அமைதியாக பணியாற்றி வந்தேன். இதுவேதான் என்னைக் காத்துக்கொள்ளும் வழியாக இருந்தது’’ என்றார். இப்பணிகளை செய்யும்போது, இவர் வாழ்ந்த நகர்ப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. https://www.forbesindia.com/article/covid19-frontline-warriors/covid19-warriors-a-social-activist-and-psychologist-helping-victims-of-trafficking-even-in-lockdown/60159/1 பணிதான் முக்கியம்! [] டில்லியிலுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் அஜித் ஜெயின். மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு செல்ல அரைமணி நேரம் செலவாகும். 13 கி.மீ. தூரம்தான் அவரது வீட்டுக்குச்செல்ல ஆகும் தூரம். ஆனால் மருத்துவப்பணிகள் காரணமாக அவரது வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. வீடியோ அழைப்பு வழியாக அவரது மகள்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். இப்படியே ஐந்து மாதங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் பணியாற்றிக்கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்தவரை அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவரது மகன் அப்பாவின் வருகையை கேமராவில் வீடியோ எடுக்க அந்த இடம் சில வினாடிகளில் உணர்ச்சிமயமாகியது. பின்னே 170 நாட்களுக்குப் பிறகுதானே வீட்டுக்கு வருகிறார் அஜித் சிங். நோய்த்தொற்று வேகமாக பரவி வந்தது. இதனால் குடும்பத்தை விட நோயாளிகளை காப்ப்பாற்றுவதே முக்கியம் என மருத்துவர் அஜித் சிங் சொன்னார். அதோடு முக்கியமான விஷயம், அவரது பெற்றோருக்கு வயது 75 ஆகிவிட்டதால், வீட்டுக்கு வந்தால் நோய்த்தொற்று பரவிவிடும் ஆபத்து வேறு இருந்தது. எனவே அதனைத் தவிர்க்க வேலைகளை முடித்துவிட்டு அதிகாலையில் ஒருமணி அல்லது இரண்டுமணிக்கு மனைவியோடும், மகள்களோடும் பேசி வந்தார். லீலா எனும் மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவருக்கு இடையறாது அழைப்புகள் பணிக்கு அழைத்துக்கொண்டே இருந்தன. இதனால், அவர் கடந்த மூன்று மாதங்களில் தினசரி 15 நிமிடங்கள் மட்டும்தான் தூங்க முடிந்துள்ளது. தனி அறையில் நோயாளிகள் அடைத்துவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் அடிக்கடி மருத்துவர்களை அழைத்துக்கொண்டிருந்த பிரச்னையையும் மருத்துவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. சிகிச்சை பெற்ற 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் பற்றி அறிய தனது மொபைல்போன் எண்ணையும் அவர்களுக்கு மருத்துவர் அஜித் சிங் வழங்கியிருந்தார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றாலும் அவர்களின் உடல்நலன் எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய வாட்ஸ் அப் செயலியில் குழு ஒன்றைத் தொடங்கியிருந்தார். இதன் வழியே அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து மனப்பதற்றத்தைக் குறைத்துக்கொண்டிருந்தார். அஜித்சிங். https://www.indiatimes.com/news/india/duty-first-delhi-doctor-met-family-5-months-after**eing-on-covid-duty-just-kms-away-from-home-522144.html டெலிவரி வேலைக்கு இறங்கிய தொழிலதிபர்! [] ‘’கொரோனா காலத்தில் நான் நிறைய வீடுகளுக்கு மருந்துகளைக் கொண்டு சென்று கொடுத்தேன். அதனால் இன்று நிறைய குடும்பங்கள் எனக்கு நட்பாகி உள்ளன. இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது?’’ என்று கேட்கிறார் ஹிதேஷ் குங்கன். கொரோனா காலத்தில் டெலிவரி ஆட்களில் ஒருவராக இறங்கி வேலை பார்த்த இவர், புட் பிராண்டு நிறுவனத்தின் தலைவர் ஆவார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவருக்கு திருமணமாகி ஏழு வயதில் மகன் உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர், கொரோனா காலத்தில் குறிப்பிட்ட சேவைக் கட்டணத்துடன்  மருந்துகள், அவசியமான பொருட்களை வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார். மார்ச் 28 அன்று ஹிதேஷ் மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை டெலிவரி செய்தார். அன்று அச்சேவையை முழுக்க இலவசமாகவே செய்திருக்கிறார். அப்போதுதான் பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வீடுகளுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சென்று தருவதற்கான தேவை அதிகரித்துள்ளதை உணர்ந்தார். இதனால் டெலிவரி சேவையில் தானும் இறங்க முடிவெடுத்தார். வாட்ஸ்அப்பில் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து செய்தி அனுப்பினால், அதனை அவர்களின் வீட்டுக்கு சென்று தந்தார். முதலில் இவருக்கு கிடைத்த 53 ஆர்டர்களை 3 நாட்களில் கொடுத்து நிறைவு செய்து உதவியுள்ளார். ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெருந்தொற்று காலகட்டத்தில் தனது காரின் கொடுத்து உதவியுள்ளார். மருந்துகள், அவசியமான பொருட்கள் குழந்தைகளுக்கான பிறந்தநாள் ஐஸ்க்ரீம் ஆர்டர்களைக் கூட கொண்டு சென்று கொடுத்துள்ளார். ‘’ஐஸ்க்ரீம் இச்சூழ்நிலையில் முக்கியமா என்று கூட நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கமுடியுமா என்று அக்குடும்பத்தினர் கேட்டுவிட்டனர்.என்னைப் பொறுத்தவரை முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்வதுதான் நோக்கம்’’ என்று அந்த ஆர்டரை நிறைவேற்றியுள்ளார். நோய்த்தொற்று காரணமாக காரை 500 மீட்டர் தூரத்தில் நிறுத்திவிட்டு தனது விநியோகத்தை செய்துள்ளார். https://www.indiatimes.com இட்லியை ஒரு ரூபாய்க்கு கொடுத்த அம்மா! [] கொரோனா காலத்தைப் பயன்படுத்தி அரிசி, பருப்பு, பொரி, கடலை என அனைத்தையும் விலையேற்றி விற்றுக்கொண்டிருந்த அவலமும் நடந்தது. அதேசமயம் விலையை கூட்டமாட்டேன் என்று சொல்லி மக்களுக்கு உணவை விநியோகித்த நிறுவனங்களும், மனிதர்களும் குறைவில்லாமல் உலகில் உண்டு. கோவையைச் சேர்ந்த கே.கமலாத்தாள் ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்றுவருகிறார். தினசரி இவரது கடையில் சாப்பிட்டு செல்பவர்கள் பலர் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள்தான். ஐந்து ரூபாயாக இருந்த இட்லி இன்று பத்து ரூபாய்க்கு சாதாரண மெஸ்களில் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் கமலாத்தாள் கடந்த முப்பது ஆண்டுகளாக இட்லியை ஒரு ரூபாய்க்குத்தான் விற்று வருகிறார். என்ன காரணம்? தேவைப்படுபவர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இன்று அரிசி, உளுந்து, வெந்தயம் என அனைத்து பொருட்களின் விலை அதிகமாகி விட்டாலும் கூட கமலாத்தாள் இட்லியின் விலையைக் கூட்டவில்லை. தற்போது எண்பது வயதாகும் இவர், தனக்கு முடிந்தவரை ஏழைகளுக்கு இட்லியை குறைவான விலையில் அளிப்பதுதான் நோக்கம் என்று கூறி செயல்பட்டுவருகிறார். கொரோனா காலத்தையும் கூட தனது வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவில்லை. கமலாத்தாள் தனது தினசரி வேலைகளை எப்போதும் போலவே செய்துவருகிறார். https://www.indiatimes.com/trending/human-interest/despite-lockdown-80-year-old-woman-idli-re-1-512804.html பிணங்களை எரியூட்டிய பெண்மணி! [] பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை. துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது. இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர். அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா. இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு. மகள்கள் உண்டு. நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார். லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா, திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார். இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார். வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் நோய்த்தொற்றால் இறந்தவர்களின் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது. அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால் சிகிச்சையின் போது ரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியவில்லை. இறந்துபோன அவரது உடலை யாருமே உரிமை கோரி பெறவில்லை. அவரது உடலை வர்ஷா மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பெற்றார். அப்போதே அழுகத்தொடங்கிவிட்ட உடலை பெற்று நல்லடக்கம் செய்துள்ளார். இப்படி பொதுமுடக்க காலத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பிணங்களை நல்லடக்கம் செய்துள்ளார். இந்த உடல்கள் பலவும் தெருக்களில் யாரும்  அடக்கம் செய்யாமல் கைவிட்டவைதான். இதேகாலத்தில் உணவு தேவைப்படுபவர்களுக்கும், வயதான பெண்களுக்கு குளித்துவிடுவதையும் வர்ஷா செய்து வந்துள்ளார். இதனை வர்ஷா, தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் செய்து வந்துள்ளார். தன்னார்வமாக இப்படி செய்பவர்களால் பொதுமுடக்க காலத்தில் பலருக்கும் உதவி கிடைத்தன. https://www.indiatimes.com/trending/human-interest/varsha-varma-cremated-unclaimed-dead**odies-532423.html ஆதரவற்றோருக்கு உணவு! [] ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள், ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர். இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர். பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள், வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள். ரபகா கிரண், பன்னி, தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர். மண்டசா, சோம்பேட்டா, ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்கள் வழங்கும் நிதியை உணவு தயாரித்து வழங்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் மருத்துவசிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் நிதி சேகரித்து வழங்கியுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர். சேவா சமிதி உறுப்பினர்கள், ரத்த தானம் வழங்குதலையும் இடையறாது செய்து வருகின்றனர். இந்த அமைப்பினால் பயன் பெற்றோரும் கூட பின்னாளில் இதில் இணைந்து சமூகத்திற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்துவருகி்ன்றனர். https://www.newindianexpress.com/good-news/2021/jan/28/three-jawans-set-up-food**ank-to-feed-the-hungry-in-andhra-pradesh-2256059.html மனநலன் காத்த மருத்துவர்! [] கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ.எஃப். நிதின். இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய மருத்துவர் ஆவார். நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர், கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார். கொரோனா பரவத்தொடங்கிய போது, இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது. இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும். இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார். பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன. காரணம், நோய் பற்றிய தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன. நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன. இதனால் நோயுற்றவர்களாக கருதப்பட்டவர்களின் குடும்பம் பெரும் பீதியில் ஆழ்ந்தன. குடிமைப்பணி எழுத முயன்று பிறகு மருத்துவராக வேலை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவரானவர் நிதின். அதிக சம்பளம் கிடைக்கும் வேலை என்பதைப் பற்றி கோவிட் -19 சமயத்தில் இவர் நினைக்கவில்லை. ‘’மக்களின் மன அழுத்தத்தை தீர்த்து வைத்து அவர்கள் நிம்மதியாக தூங்க உதவினேன்’’ என்ற மகிழ்ச்சியே மிகப்பெரியது என்று பேசியவர் பொதுமுடக்க காலத்தில் மனவலிமையோடு பணியாற்றியுள்ளார். https://www.newindianexpress.com/good-news/2021/jan/23/meet-nithin-a-kerala-psychologist-making-covid-less-pain-demic-for-patients-2253764.html ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்! [] கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று, சிவ்பால் சிங், தனது இரண்டரை வயது மகனை விபத்தில் பறிகொடுத்தார். விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால், மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது. இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங், ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார். மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார். இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும், இவர் மட்டுமே தனியாக 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர். ‘’ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும். ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம்’’ என்றார் சிவ்பால் சிங். இவர் உருவாக்கிய தொழில்நுட்பம் மூலம் ஆம்புலன்ஸ் சேவையின் வேகம் 55 நிமிடங்களிலிருந்து முன்னேறி 18 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இதனால் 160 ஆக இருந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 600ஆக உயர்த்துவதற்கான அனுமதியை டில்லி அரசு வழங்கியுள்ளது. https://www.newindianexpress.com/good-news/2021/jan/18/moved**y-sons-death-delhi-road-safety-trainer-works-to-reduce-ambulance-response-time-2251565.html அப்பாவி உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி! [] அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா. இவர் 2010ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார். ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன. ‘’இப்போது, அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது. என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது. நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான். அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்றார் ராபா. கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா. இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார். அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை. ‘’எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான். ஆனால் இதுபற்றி ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் சக மனிதர்களுக்கு மனிதர்களே உதவ தடையாக இருப்பதுதான் இந்த பிரச்னையில் விநோதமாக இருக்கிறது’’ என்றார். ராபா உயிரை தானாக விடும் நேரத்திலும் கூட துணிந்து பிழைத்துக்கொண்டவர், பிறருக்காக தன்னையும் கூட அர்ப்பணிக்காக தயாராக இருந்தார். இதனால்தான் இரவில் கூட மேகாலயாவிலுள்ள கிராமங்களிலிருந்து பெண்களிடமிருந்து அழைப்பு வந்தால் அவர்களைக் காக்க பயப்படாமல் செல்ல முடிகிறது. அங்கு ஊர் மக்கள் ஒரு பெண்ணை சூனியக்காரி என்று சொல்லி கொல்வதற்கு வாள்களோடும், தடிகளோடும் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பொதுவாக பேசி சூனியக்காரி என்பதும், சூனியம் என்பது கிடையாது என்று சொல்லி அவர்களின் மனதை மாற்றி பெண்ணை காப்பாற்றியிருக்கிறார். அடுத்தநாள் ராபாவுக்கு இனிமையாக விடியவில்லை. ஊர் மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு விட்டனர். ராபா கிராமத்து பெண்ணை சூனியக்காரி இல்லை என்று சொன்னது தவறு என்று எழுதி தருமாறு கிராமத்தினர் நெருக்கடி தந்தனர். ஆனால் ராபா அதற்கெல்லாம் மசியவில்லை. இதனால் அவரையும் சூனியக்காரி என கிராம மக்கள் முத்திரை குத்தி விட்டனர். ஆனாலும் கூட மகிளா சமிதியில் வேலை பார்த்தபடி சூனியக்காரி என்று குற்றம்சாட்டுபவர்களை இவரும் இவரது குழுவினரும் காப்பாற்றத் தவறவில்லை. ராபாவின் ஈடுபாட்டிற்கு சொந்த காரணங்களும் இல்லாமல் இல்லை. அவரது மகன் மனநல பிரச்னையால் 1985ஆம்ஆண்டு பாதிக்கப்பட்டார். இதற்கு உள்ளூர் பூசாரிகள் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பூஜை செய்தனர். ஆனால் ராபாவின் மகன் மூன்று நாட்களிலேயே இறந்துபோய்விட்டார். அப்போது ராபாவுக்கு பேய், பிசாசு மீது நம்பிக்கை இருந்தது. பின்னர், அந்த நம்பிக்கையை பிறரிடமிருந்து ஒழிக்க பாடுபடத் தொடங்கி நூற்றுக்கணக்கான பெண்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த காலத்திலும் சூனியக்காரி என்று சொல்லி பெண்களை கொல்லுவார்களா என்று இதைப்படிக்கும்போது நினைப்பீர்கள். உண்மையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், ஆண்களைக் கூட இப்படி குற்றம் சாட்டி கொலை செய்துவிடும் வழக்கம் இயல்பாக உள்ளது. பின்னணியை ஆராய்ந்தால் பொறாமை, சொத்துக்களை அபகரிப்பது, குடும்ப பெருமை ஆகியவை இதன் காரணமாக உள்ளது. 2015இல் இதுபோன்ற குற்றங்களை தடுக்க அசாம் அரசு சட்டத்தை உருவாக்கியது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம் செயலுக்கு வந்தது 2018இல்தான். பிருபாலா ராபாவின் பெயரில் மிஷன் பிருபாலா என்ற அமைப்பு தொடங்கப்பட்டபிறகுதான் சூனியக்காரி எனும் பெயரில் நடைபெறும் சமூக அநீதி கட்டுப்படுத்தப்பட்டது. ஜார்க்கண்ட், ஒடிஷா, பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த மாநிலங்களில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுவதற்கு காரணம் கல்வியில் போதாமை, மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவைதான். இவருடன் பல்வேறு பெண்களும் சேர்ந்து ஆற்றில் குதித்து நீந்தி ஓடி சுடுகாட்டில் காத்திருந்து பெண்களை மீட்டு வந்து உள்ளனர். இத்தனைக்கும் ராபா பேசி சம்மதிக்க வைக்கும் மக்கள் அனைவருமே அவரைக் கொல்வதற்கான முனைப்பில் கத்தி, தடிகளை தயாராக வைத்துக்கொண்டு இருப்பவர்கள்தான். இந்த சமூகப்பணிகளுக்கு இடையில் ஸ்கார்பை பின்னுகிறார். கோழிகளுக்கு தீவனம் வைக்கிறார். வீட்டுக்கு நீர் பிடித்து வைக்கும் வேலைகளையும் செய்கிறார். அனைத்துக்கும் திடீரென இடைவெளி விடுவது அவரது போன்களுக்கு வரும் பெண்களின் அழைப்புகள்தான். வந்ததும் அவரது சிறிய உடலில் மின்சாரம் பாய்ந்தது போல பரபரப்பு எழ வேகமாக எழுந்து ஓடுகிறார். உண்மையிலேயே மேகங்களால் அல்ல பறவைகளால்தான் அழகாகிறது வானம் அல்லவா? இந்தியன் எக்ஸ்பிரஸ் டோரா அகர்வாலா   சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி! [] கடந்த ஆண்டு மார்ச் 24இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம், வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே. இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார். ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர். அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர். கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது. பல்வேறு சிறு, குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது. நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது. இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா, முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை, பருப்பு, மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர். கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து அங்கு வரும் மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். அப்படி வரமுடியாதவர்களின் முகவரிகளைப் பெற்று வீடுகளுக்கும் மளிகைப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த உதவிகளை வழங்கிய பாபுராம், முன்னிதேவி ஆகிய தனது பெற்றோர் பற்றி எழுதுவது தனக்கு முதலில் விருப்பமில்லை. என்ற பாகிரத் பின்னர் பொதுநன்மை கருதி அதனை ஏற்றிருக்கிறார். ‘’நான் இப்படி என் பெற்றோர் செய்த உதவிகளை சொல்லும்போது, பிறருக்கும் அது ஊக்கம் தரும். அவர்களும் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.   https://www.thebetterindia.com/223445/delhi-irs-officer-farmer-couple-spend-life-savings-feed-poor-covid19-families-coronavirus-lockdown-say143/ டாக்டர் விஜய் கார்த்திகேயன் ** திருப்பூர்** [] ஏராளமான வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நகரமாக திருப்பூர் மாறியுள்ளது. இதனால் அங்கு பொதுமுடக்கத்தின்போது தேவையான உதவிகளை கவனமாக வழங்கும் தேவை இருந்தது. இதனை கச்சிதமாக நிறைவேற்றினார் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன். விஜய் கார்த்திகேயன் மருத்துவராக இருந்து குடிமைப்பணித்தேர்வு எழுதி ஆட்சியரானரர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து பல்வேறு உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். இவர் மட்டுமே 62,744 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்றைத் தொடங்கி அதில் பல்வேறு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதன்மூலம் தேவைப்படும் உதவிகளை களத்தில் வழங்க மட்டுமே நகரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தயாராக இருந்தனர் என்பது விஜய்யின் திட்டமிடலுக்கு சரியான உதாரணமாக இருக்கும். திருப்பூர் கொரோனா போராளிகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிப்புற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி உதவியுள்ளனர். விஜய் 755 ரூபாய் மதிப்புள்ள ரேஷன் கிட் ஒன்றை பிறரிடமிருந்து பெற்று தேவைப்படும் மக்களுக்கு வழங்கினார். இது தவிர மாநில அரசும் மானிய உதவிகளை மக்களுக்கு வழங்கியது. https://www.thebetterindia.com/223262/covid19-fundraiser-civil-servants-ias-irs-officers-migrant-workers-lockdown-say143/ கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை! [] லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை. இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள். இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்றை சமாளிக்க முடியாத நிலை. உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர். அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார். ‘’இங்குள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை போதாது. கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள்’’ என்றார். முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர். நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர். இங்கு அதிக அறைகள் இல்லாத காரணத்தால் நோயுற்றவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வசதியை மட்டும் செய்து வந்தனர். இதில் அதிகளவு குழந்தைகள் இருந்தது துறவி லாமாவை வருந்தவைத்துள்ளது. இவர் தென்கொரியா சென்று கொரிய மொழியையும் ஜென் மதம் தொடர்பாகவும் கற்று வந்துள்ளார். லெவிலுள்ள ஸ்பைடுக் எனும் கிராமத்தில் பிறந்த துறவி இவர். 1999இல் லடாக் ஹார்ட் பௌண்டேஷனைத் தொடங்கியுள்ளார். இங்கு அதிகளவு இதயநோய்கள் அதிகரித்து வந்தன. இதற்கான சிகிச்சைக்கு மக்கள் டில்லிக்கு செல்லவேண்டியிருந்தது. முதலில் இதற்கான மருந்துகளை நன்கொடை பெற்று வாங்கிக்கொடுத்த லாமா சோக்யால் பின்னரே மருத்துவமனையைக் கட்டிவிடலாமே என்ற ஐடியாவிற்கு வந்தார். இதற்கு முக்கியமான காரணம் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளூரில் வழங்கினால் மக்களுக்கு அலைச்சல் குறையும் என்ற நல்ல நோக்கம்தான். 2002இல் தொடங்கிய மருத்துவமனை கட்டுமானப் பணி 2007இல் நிறைவு பெற்றது. பெரும்பாலும் மருத்துவ வசதி கிடைக்காத மக்கள்தான் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். லடாக்கின் புகழ்பெற்ற மருத்துவர்கள் இங்கு தன்னார்வலர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது நான்கு மருத்துவர்கள் ஹார்ட் பௌண்டேஷனில் பணியாற்றி வருகி்ன்றனர். இம்மருத்துவமனையில் மாதம் 700 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து சேர்கின்றனர். இதுவரை 300க்கும் அதிகமான இதய அறுவைசிகிச்சைகள் செய்துள்ளனர். https://www.thebetterindia.com/221431/leh-coronavirus-covid19-ladakh-heart-foundation-lama-thupstan-chogyal-india-inspiring-nor41/ காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர்! [] கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி, அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். இந்த நிலைமையில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு, தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார். அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார். இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர், இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அம்மாகுரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார். இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். இவரது தோட்டத்தில் மிளகு, பீன்ஸ், ஏலக்காய், பாகல், கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார். பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்மாகுரும்மா ஊழியர்கள், பாபுவின் வீட்டுக்கு வந்து காய்கறிகளை தனியாக பிரித்து பாக்கெட்டில் அடைத்தனர். பிறகு அவற்றை தினசரி நூறு வீடுகளுக்கு என தேவைக்கேற்ப விநியோகித்துள்ளனர். கடல்சூழல் அறிவியல் படிப்பை படித்துள்ள பாபு, தனது தந்தை வழியில் விவசாயத்தை தொழி்ல் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்துள்ளார். பணி வாய்ப்புகள் இவரது கதவைத் தட்டியபோதும் அதனை உறுதியாக ஏற்க மறுத்துள்ளார். இயற்கையான முறையில் பயிரிடும் காய்கறிகளை வியாபாரிகள் இருமடங்கு விலை கொடுத்து வாங்க முன்வந்தும் பசியால் மக்கள் செத்து்க்கொண்டிருக்க எதற்கு விலை கொடுத்து காய்கறிகளை விற்பது? என்று யோசித்தவர் அதனை இலவசமாக மக்களுக்கு வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இவர் எடுத்த முடிவு தனிப்பட்ட அளவில் பொருளாதார இழப்பைத் தந்தாலும் மனதில் நிம்மதி உள்ளது என புன்னகைக்கிறார். https://www.thebetterindia.com/222724/slug-coronavirus-lockdown-kerala-farmer-donates-full-harvest-daily-wage-labourers-hero-covid19-ser106/ வாடகை வேண்டாம்! [] இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றிய செய்திதான். கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு. அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள். சிஇ சக்குண்ணி என்றால் முன்னர் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது. நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர். பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார். இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை, அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது. ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார். 1968ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்தையில் செய்யாத வேலைகளே கிடையாது. பாலக்காட்டிலுள்ள சாலிசேரியில் பத்தாவது படித்து முடித்தவர், கோழிக்கோட்டிலுள்ள விஜயா டிரேடர்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்தார். பிறகுதான் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். பொதுமுடக்கத்தின் போது, இவரது வாடகை கட்டிடத்தில் வாடகை மெல்ல குறையத்தொடங்கியது. முதலில் மாத இறுதியில் பணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள் தினசரி தொகையை கட்டுவதாக சக்குண்ணியிடம் கூறினார்கள். சரி என்று அதனை ஏற்றார். பிறகு, வாடகையை வசூலிக்க இவரது மகன் சென்றபோது, பல கடைக்காரர்கள் வாடகையை கட்டவில்லை என்று தெரிந்தபிறகு சக்குண்ணி அவர்களை சந்தித்து என்ன காரணம் என்று கேட்டபோதுதான் கடைக்காரர்கள் தங்கள் வேலையாட்களுக்கே6 சம்பளம் தர முடியாத நிலையில் உள்ளதை அறிந்திருக்கிறார். பின்னர்தான் நிலைமை சீராகும் வரை வசூலிக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். எப்படி உங்களால் இதனை தீர்மானிக்க முடிந்தது என்றால், புன்னகைத்தபடி பேசுகிறார். ‘’இந்த நிலையில் நான் வருமானத்தை நினைத்துப் பார்க்கமுடியாது. இங்கு நான் 57 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். மக்களின் கஷ்டமான நிலையில் லாபத்தை விட மனிதநேயத்தை முக்கியமாக நினைக்கிறேன்’’ என்றார். https://www.thebetterindia.com/221590/coronavirus-covid19-hero-kozhikode-kerala-rent-shopowners-loss-inspiration-ser106/ தொழிலாளர்களுக்கு பணம் பெற்றுக் கொடுத்தவர்! [] மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ளது வாசி. இங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், பொதுமுடக்கம் அமலானதால் எங்கும் செல்லமுடியாமல் அங்கேயே நிற்கவேண்டியுள்ளதாகிவிட்டது. தினக்கூலி தொழிலாளர்களான அவர்களுக்கு அன்றன்று உழைத்துவரும் காசை உணவிற்கும் நீருக்கும் செலவழித்து வந்தார்கள். திடீரென அனைத்து வேலைவாய்ப்புகளும் நின்றுவிட அடுத்தவேளை உணவுக்கு பிறரது கருணையை எதிர்பார்க்கு்ம் நிலை. இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மூலம் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்கு அல்லது காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வங்கிக்கணக்கு இருந்தது. இதிலுள்ள பணத்தை எப்படி எடுத்து பயன்படுத்துவது என்ற விவரம் இம்மக்களுக்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் இவர்களுக்கு உதவினார் ஜான் பெரிரா. 45 வயதான இவர் பணப்பரிமாற்ற சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கடையை நடத்தி வருகிறார். திடீரென எங்கும் செல்லமுடியாத சூழலில் மக்களுக்கு அவர்களின் பணம் உணவிற்கு தேவைப்பட்டது. இதனால் ஆதார் கார்டு மூலம் பணத்தைப் பெற்று தரும் மத்திய அரசின் சேவையை பெரிரா பயன்படுத்தினார். பெரும்பாலான மக்களுக்கு இந்த சேவையை பயன்படுத்த உதவியவர், இதற்காக அவருக்கு கிடைக்கவேண்டிய கமிஷன் தொகையைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டார். இவரது குடும்பத்தினர் நோய்த்தொற்று பரவும் என நினைத்து இவரை கடையை திறக்கவேண்டாம் என்று வற்புறுத்தினர். ஆனால் பெரிரா மக்களின் கஷ்டத்தைப் பார்த்து கடையை திறந்து அவர்களுக்காக உழைத்தார். காலை 4 மணிநேரமும், மாலை 5 மணிநேரமும் கடையைத் திறந்து வைத்து பணத்தைப் பெற்றுமக்களுக்கு வழங்கியுள்ளார். இதில் வங்கி இவருக்கு வழங்கும் கமிஷன் ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.4.50 ஆகும். இதில் பணியாற்றும் 15 பணியாளர்கள், மின்சாரம் ஆகியவற்றைச் சமாளிப்பதே கடினம். ஆனாலும் அதைப் பற்றி பெரிதாக பெரிரா கவலைப்படவில்லை. ’’ மக்கள் கஷ்டப்படும் இந்த  நிலையில் அதனை பயன்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. எனது தொழில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட இதனை மக்களுக்கு விரும்பிசெய்கிறேன்’’ என்றார் ஜான் பெரிரா. https://www.thebetterindia.com/224845/maharashtra-man-provides-free**anking-to-migrant-workers-stuck-without-cash/ மக்களின் பசியாற்றிய காவல்துறை அதிகாரி! [] அரசு திடீரென அறிவித்த பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டது தினக்கூலி தொழிலாளர்கள்தான். இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோக, அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என பரிதவித்தனர். இந்த நேரத்தில் காவல்துறை இவர்களுக்கு உதவும் என நம்பியிருப்பார்களா? காவலர்கள், விதிமீறல்களை சகித்துக்கொள்ளாமல் மக்களுக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கிக்கொண்டிருந்தனர் என்று நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில் புதுடில்லியில் உள்ள டிபென்ஸ் காலனி காவல்நிலையத்தை சேர்ந்தவரான அரவிந்த் குமார், குடிசைப்பகுதி மக்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்கியுள்ளார். இவர் உணவு வழங்கிய குடிசைப்பகுதி தொழிலாளர்கள் பலரும் தினக்கூலி தொழிலாளர்கள், சாக்கடைகளை தூய்மை செய்யும் பணியாளர்கள் ஆவர். காவல்நிலையத்திலுள்ள பலரும் தங்கள் கையிலுள்ள பணத்தைப் போட்டு அரிசி, கோதுமை, எண்ணெய் ஆகியவற்றை வாங்கி குடிசைப் பகுதிவாசிகளுக்கு கொடுத்துள்ளார். பிறகு செய்தி பரவவே மக்கள் கூட்டம் காவல்நிலையத்திற்கு குவிந்துள்ளது. அவர்களுக்கும் முடிந்தவரை உணவுப்பொருட்களை அடங்கிய பொட்டலங்களை வழங்கியுள்ளார். மேலும் இவர்கள் செய்யும் உதவிகளைப் பார்த்து பல்வேறு குடியிருப்பு வாசிகள் சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். அதைப்பெற்ற அரவிந்த் தன்னார்வலர்கள் மற்றும் தனது குழுவினர் மூலம் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம் என அவற்றை தேவைப்படும் மக்களுக்கு விநியோகித்துள்ளார். இதுதவிர சானிடைசர், கையுறை, முக கவசங்கள் ஆகியவற்றையும் மக்களுக்கு வழங்கினர். தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சொந்த கிராமங்களிலிருந்து பணம் வரவேண்டிய தேவை என்றால் அதற்கான முயற்சிகளையும் அரவிந்த் குமார் செய்து கொடுத்துள்ளார். இதற்கான வேலைகளை இவரது குழுவினர் செய்துகொடுத்துள்ளனர். https://www.thebetterindia.com/222521/coronavirus-lockdown-delhi-police-sho-arvind-kumar-migrant-labourers-food-essentials-india-nor41/ நிறைவு பெற்றது. உதவியவை லிப்ரே ஆபீஸ் ஐபஸ் மென்பொருள் நன்றி தேசிய ஆங்கில நாளிதழ்கள் பெட்டர் இந்தியா வலைத்தளம் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.