[] [cover image] 1. Cover 2. Table of contents பணத்தோட்டம் பணத்தோட்டம்   பேரறிஞர் அண்ணா     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - பழூரான் விக்னேஷ் ஆனந்த் - –   மின்னூலாக்கம் - யூசுப் பாசித் - ravishankar.ayyakkannu@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/panaththottam}   கணியம் அறக்கட்டளை (kaniyam.com/foundation) மின்னூல் வெளியீடு இது ஒரு திராவிட வாசகர் வட்டம் வெளியீடு. திராவிட வாசகர் வட்டம் முகநூல் முகவரி - https://www.facebook.com/groups/381671996011227/ பதிப்புரிமை: அறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவரின் ஆக்கங்களை யாருக்கும் பகிரலாம், அச்சடித்து விற்கலாம், ஒலி/ஒளி, நாடகம் என்று வேண்டியவாறு வடிவம் மாற்றலாம். எனவே, Creative Commons Zero 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication என்னும் உரிமையின் கீழ் இந்நூல் வெளியிடப்படுகிறது. அச்சு நூல் பிரதிக்கு நன்றி - http://www.annavinpadaippugal.info, ஆழி பதிப்பகம். மெய்ப்பு உதவி மற்றும் மின்னூல் வடிவமைப்பு: யூசுப் பாசித் அட்டைப்படம் வடிவமைப்பு: பழூரான் விக்னேஷ் ஆனந்த் மின்னூல் பதிவேற்றம்: இரவிசங்கர் அய்யாக்கண்ணு [] பணத் தோட்டம் (13-1-1946) “ஒரு ஆயிரம் ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தால்…?” “இருந்தால்…” “ஒன்பது ஆயிரமாகும் ஒரு மாதத்தில்!” “பணத்தை முளைக்க வைக்கிறாயா?” “பைத்தியக்காரா! பணம் முளைப்பது கிடையாதா? உனக்குத் தெரியாது! மற்ற எல்லாத் தோட்டங்களையும் விட, அதிக பலன் தருவது பணத்தோட்டம். ஒரு போகம் இரு போகமல்ல; பலமுறை உண்டு விளைவு! விதை தூவிவிட்டு, காலம் என்ற நீரைப் பாய்ச்சி, சட்டம் என்ற வேலியை அமைத்து, அஜாக்கிரதை என்ற களையைப் பறித்துவிட்டுப் பார்! அந்தத் தோட்டத்தின், விளைவு போல, வேறு எந்தத் தோட்டத்திலும் கிடையாது; ஆயிரம் ஆறு ஆயிரமாகும், பிறகு அதுவே பத்துமாகும்.” “எப்படி?” “எப்படி என்று எனக்குத் தெரியும்; என்னிடமோ பணம் இல்லை – உனக்குத் தெரியாது, ஆனால் உன்னிடம் பணம் இருக்கிறது!” ஊரிலே பொருள் கிடைக்காது, பலவிதமான திட்டங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ளவர்களுக்கும், பணம் படைத்தோருக்கும் இடையே இதுபோல் உரையாடல் நடக்கும். இதிலே தொக்கி நிற்கும் ஓர் உண்மை என்னவென்றால், பணம், தொழில் நடத்தத் தேவை. ஆனால் கிடைக்கவில்லை என்பது. பணம் தேவை தொழில் நடத்த இலாபகரமான தொழில் நடத்த முதலாகப் போடும் தொகையைப் பன்மடங்காக்கும் அளவு இலாபம் வரக்கூடிய தொழில் நடத்த என்று கூறுபவர் ஒருபுறம் உள்ளனர். மற்றோர்புறமோ பணம் இருக்கிறது. தொழில் ஒன்றும் இல்லை, எதைத் தொடங்கினால் என்ன நேருமோ என்ற பயம் இருப்பதால், உள்ளது போகாமல் இருந்தால் போதும் என்று இருந்துவிடுகிறேன். பாதுகாப்போடு கூடிய தொழிலாக இருந்தால், பணம் போடலாம், எவ்வளவு வேண்டுமானாலும் என்று கூறுபவர் – தவறு. அவர்கள் கூறுவதுமில்லை – கருதுபவர் உண்டு – இந்த இரு சாராருக்கும், சந்திக்கும் இடம் வேண்டும் – ஒரு நாட்டின் பாங்குகள் (Banks) இதற்கான இடங்கள். பாங்க் வளர்ச்சி, நாட்டிலே பணமும் மிகுதி, தொழிலும் வளர்கிறது என்பதற்கு அறிகுறி. பாடுபட்டுத் தேடிப் பணத்தை புதைத்து வைக்கிறவர்களின் தொகையைக் குறைக்கவும், பாடுபட முடியும் பலனும் காணமுடியும், பணம்தானே இல்லை என்று கூறும் ஆட்களின் பசியை அடக்கவும் பணிபுரிகின்றன பாங்குகள். “இருபது ஆயிரத்துக்குச் சரக்கு அனுப்புகிறேன்” என்ற தந்தி கிடைத்ததும் இரும்புப் பெட்டியைத் திறந்து எண்ணிக் கொண்டிருப்பதில்லை பணத்தை. இண்டோ கமர்ஷியலுக்குப் “போன்” செய், இம்பீரியலுக்குப் போய் வா – என்று தொழிலின் முதலாளி கூறும் காலம் இது. எனவே பாங்குகள், பணத்தைப் பயிர் செய்யும் வணிகருக்கு இன்றியமையாத துணையாகின்றன. பாங்க் இல்லாப் பட்டணம் இல்லை என்பது புதுமொழியாகிவிட்டது. ஒரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சி, இந்த பாங்க் வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது. வட்டிக்கடை’ நடத்திய நாட்டுக்கோட்டை செட்டியார் பர்மா போய்விட்டனர். தங்க நகைமீது மட்டும் கடன் தருவோம் என்று கூறிக்கொண்டு காப்பும் கொலுசும் போட்டுக் கடை நடத்திய வைசியச் செட்டிமார் இருந்ததும் குறைந்து விட்டது. இப்போது வட்டிக்கடைகள் “பூட்ஸ் அணிந்த” அதிகாரிகள் தங்கி வேலை செய்யும் பெரிய ஆபீஸ்களாகிவிட்டன. நாட்டின் பொருள்நிலை உயர்ந்துவிட்டதற்கு இது அறிகுறி. பொன்னைக் கொடுத்துவிட்டு (கடனாகப் பணம் கொடுத்துவிட்டு) மண்ணை (நிலத்தை) வாங்கினேன் என்று புலம்பும் நிலையிலேயும், கடனுக்காக நடந்து நடந்து கால் செருப்புத்தான் தேய்ந்தது என்று கதறும் நிலையும் மாறிவிட்டது. முழுதுமல்ல – ஓரளவுக்கு பாங்குகள் வளர்ந்ததும், பாதுகாப்புடன் பணத்தைச் சேமித்து வைக்கவும், இடம் கிடைத்தது. கேட்ட நேரத்தில் அதிகத் தொல்லையின்றி வியாபாரம் செய்ய தொழில் நடத்தப் பணம் தரும் இடமும் ஏற்பட்டது. எனவே பணத்தோட்டங்கள் ஏற்பட்டன. மகசூலும் அதிகம், வயலுக்கு விதை அல்லது ‘நாற்று’ இருக்கும் இடம்போல, பாங்குகள் உள்ளன. வயலின் நிலை விதை வைத்திருக்கும் இடத்தானின் தயவைப் பொறுத்திருக்கிறது. தொழிலின் நிலை பாங்கியின் தயவைப் பொறுத்திருக்கிறது. கந்தன், நல்ல உழவன்! மழையும் பெய்திருக்கிறது! உழவும் ஆகிவிட்டது. விதை கேட்க ஓடுகிறான் வீரனிடம். வீரனோ, கந்தனுக்கு வேண்டியவனல்ல; சோமனுக்கு நண்பன். ஆகவே, கந்தனுக்கு விதை இல்லை என்று கூறிவிட்டான்; உழுத இடம் உலர்ந்தது. சோமன் வயலில் பயிர் வளர்ந்தது. இதுவேதான் தொழில் விஷயத்திலும். அதிலும் தற்காலத்திலே, தொழில்கள் நடத்தப் பெரும் பொருளும் தேவை. முட்டின்றிப் பொருள் கிடைக்கவேண்டும். தேவைப்படுகிற நேரத்தில், அதாவது தொழிலின் வளர்ச்சியோ, அழிவோ, பாங்க் பூசாரியின் வரத்தைப் பொறுத்து இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்து, பயன் பெற்றவர் வடநாட்டார் பனியாகக் கூட்டம், இந்த பரந்த உபகண்ட மெங்கும் பரவி “பணத்தைக்” கொண்டு தமது அரசை அமைத்துக்கொண்டனர். பாங்குகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து கொண்டனர். இது போது, வடநாட்டிலும் இங்கும் பெரிய பெரிய பாங்குகளைத் துவக்கி நடத்துகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு, “ஜீவநாடி” அவர்களிடம் இருக்கிறது. அந்த “ஜீவநாடிகள்” மேலும் மேலும் அவர்களிடமே போய் சிக்குகின்றன. இனி அவர்கள் வைத்ததுதான் சட்டம், இட்டது பிச்சை என்று கூறவேண்டிய நிலைக்கு இந்த வளர்ச்சி இருக்கிறது. திராவிட நாட்டிலே “தொழில் வளர்ச்சி” இல்லை என்று சென்ற திங்கள் இறுதியிலே சென்னையில் கூடிய தொழில் வளர்ச்சி மாநாட்டார் பேசினர். புதிய தொழிற்சாலைகள் ஏற்படவேண்டும். வளம் இருக்கிறது, கொண்டு செலுத்துபவர் முன்வரக் காணோம் என்று மாநாட்டிலே எடுத்துக்கூறப்பட்டது. உண்மை! ஆனால், முழு உண்மையல்ல! தொழிற்சாலைகள் ஏற்பட வேண்டுமானால் எந்த பணபலம் அதற்கு அவசியமோ, அதனைத் திராவிடம் பெறமுடியவில்லை. அந்தப்பலம், வடநாட்டினரால் பண்படுத்தப்பட்டு பக்குவமாக இருக்கிறது. எனவே, அவர்களுடன் போட்டியிடத் தென்னாட்டினரால் முடியவில்லை. துணிந்து துவக்கினாலும் வடநாட்டுப் போட்டி ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும், அந்த போட்டி ஏற்பட்டால், வீண் நஷ்டம் அடைய நேரிடும் என்ற திகிலும் இருக்கிறது. அந்த அச்சம் அர்த்தமற்றது என்று கூறமுடியாது. கப்பலோட்டிய “சிதம்பரம் பிள்ளையை” ஈன்றெடுத்த தமிழகம் தொழில் திறமையை இழந்துவிட முடியாது ஆனால் அழகான, சுற்றுச் சார்பு, சூழ்நிலை கெட்டுக்கிடக்கிறது. எனவே தான் இங்கு பட்டமரம் அதிகமாகவும் ஒரு சில துளிர்கள் மட்டுமே தொழிலுலகிலும் உள்ளன. எதிர்காலத்தில் புதிய தொழிற்சாலைகள் வளர வேண்டுமானால், பணம் ஏராளமாகவும் தாராளமாகவும் கடனாகத் தேவை. வட நாட்டினரிடம் பெரிய பாங்குகளின் சூத்திரக்கயிறு இருப்பதால் அவர்களால்தான் அந்த இயந்திரத்தை ஆட்டி வைக்க முடியும். அவர்கள் விரும்பினால் எத்தனை தொழிற்சாலைகளையும் துவக்க உதவி செய்யமுடியும். விரும்பாவிட்டால் தடுக்க முடியும். ஆகவே புதிய தொழிற்சாலைகள் அமைக்க விரும்புவோர் வடநாட்டினர் நிறுவி நடத்திவரும் பாங்குகளின் தயவை நாடித் தீரவேண்டும். அந்தத் தயவு இந்நாட்டவருக்குக் கிடைக்குமா என்று வாதிக்கத் தேவையில்லை. இனம் இனத்தோடுதான் சேரும். எனவே, இங்கு புதிய தொழில் நடத்த ஒரு கரம் சந்துக்கு இருக்கிற அளவு வசதி ஒரு கருப்பண்ணன் செட்டியாருக்குக் கிடையாது. இந்தியா ஒரு நாடு என்ற கொள்கையின்படி ஆட்சிமுறை நடப்பதால், கருப்பண்ணன் செட்டியார் நாட்டிலே கரம் சந்த் தொழில் நடத்த வருவதைத் தடுக்க முடியாது. சொந்த நாட்டிலேயே கரம்சந்துக்கு இடமளித்து விட்ட இளித்தவாயர் வடநாட்டிலேயா போய் தொழில் நடத்துவர்? அவருடைய வாழ்வும், அவர் வாழும் நாட்டின் வாழ்வும் வறண்டு கிடக்கும்; மார்வார், குஜராத் மாளிகைகளிலே மாடிகள் மேலும் மேலும் உயரமாகும்! இப்படி ஆகலாமா பொருளாதார வளர்ச்சியிலே சம எடை இல்லாது போகுமே, தென்னாடு வெறும் மார்க்கெட்டாகவும், வடநாடு மான்செஸ்டர், ஷெப்பீல்டு, லங்காஷயர் போன்ற தொழிற்சாலைகள் நிரம்பிச் செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்தால், சீமையிடம் இந்தியா அடிமைப்பட்டது போலத்தான், வடநாட்டினிடம் தென்னாடு அடிமைப்படும் என்று கேட்டாலோ, ‘யாரைய்யா தென்னாட்டிலே தொழிற்சாலைகளை விருத்தி செய்து கொள்ளக்கூடாது என்று தடுத்தார்கள்?’ என்று கேட்கின்றனர். கேட்கின்றனரே தவிர, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட முடியாதபடி வடநாட்டினரிடம் பண பலமும் பணத்தைப் பரப்பும் பலமும் சிக்கி இருக்கிறது என்ற சூக்ஷ்மத்தை யார் உணருகிறார்கள்? இன்னும் கொஞ்ச நாட்களிலே இது விளங்கிவிடும். புத்தம் புதிய தொழிற்சாலைகள் வடநாட்டவரால் திராவிடத்திலே துவக்கப்படும்போது வடநாட்டவரை அலட்சியம் செய்து இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டாலும், விரைவிலே அவை வடநாட்டவரிடம் சிக்கிவிடப் போவதும் உண்மை… இன்று வடநாட்டார் பாங்க் துறையை ஆட்சி செய்கின்றனர். இந்த ஆட்சியின் கீழ் எந்தத் தொழிற்சாலையும் சரண் புகுந்தாக வேண்டும். சாதாரணமாகப் பேசிக்கொள்வதில்லையா? “அவனுடன் போட்டியிட முடியுமா? அவனோ சீமான் அவனுடன் போட்டி போட்டால் அவன் நம்மைப் பணத்தால் அடித்தே கொன்று விடுவான்” என்று. அதே நிலை தென்னாடு, வடநாடு தொடர்பு விஷயத்திலும் இருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பவர் உணருவார். பணத்துக்கு இருக்கும் காந்த சக்தி, விசித்திரமானது அந்த சக்தியால் இழுக்கப்படாத பொருளே இல்லை. அரசு புகழ் எதுவும் அந்தக் காந்த சக்திக்குக் கட்டுப்பட்டுவிடுகிறது. அதுமட்டுமா? பணத்தைப் பணம் இழுக்கிறது அந்தக் காந்த சக்தியால். பணம் இருக்கிற இடத்திலேதான் பணம் சேர்கிறது என்று மக்கள் பேசுவதிலே இந்த உண்மை தொக்கியிருக்கிறது. பணபலத்தை கொண்டு, மேலும் பண பலத்தை அதிகரிக்கச் செய்யும் ‘சக்தி’ வட நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு பாங்குகள் ஏற்படுத்தி நடத்தி வருகின்றனர் என்றால், மொத்தப் பணமும், வடநாட்டிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தது என்றல்ல பொருள். ஒரு பாங்க் அமைத்து, அதனுடைய வளத்தை விளம்பரப்படுத்திவிட்டால், பணம் இருக்கும் இடம் தேடிப் பணம் மேலும் உருண்டோடி வருகிறது. ஆகவே, வடநாட்டவர் இங்கு பாங்குகளை அமைப்பது என்றால், அதிலே நம் நாட்டுப் பணம் குவிகிறது என்றுதான் பொருள். தொழில் வளரப் பணம் தேவை என்று ஒரு புறம் இங்கு மக்களைக் கூவ, மற்றோர் புறத்திலே, நமது, நாட்டுப் பணத்தையே பாங்க் வைத்து இழுத்துக்கொண்டு, அதைக் கொண்டு இங்கு தொழில் வளருவதை ஆதரிக்கவோ தடுக்கவோ தங்களுக்கே சக்தி வளரும்படியான சூக்ஷ்ம வேலைகளைச் செய்கின்றனர். வடநாட்டுப் பொருளாதாரச் செப்படி வித்தைக்காரர்கள் இதுபற்றி யோசிக்கிறதே பாரதமாதாவுக்குக் கோபமூட்டும் என்று இங்குள்ள பரமபக்தனான தேசியத் தோழன் எண்ணுகிறான். அவனுக்குப் பாவம் தொழில் வளர்ச்சி ஏன் காந்தியார்தான் குடிசைத் தொழிலை கவனிக்கச் சொல்லி விட்டார். தக்ளியையும் கைராட்டையும் தந்துவிட்டார். “ஆடு ராட்டே! சுழன்று ஆடு ராட்டே!” என்று ஆனந்தமாகப் பாடுகிறான். பண மூட்டைகள் அங்கே – வட நாட்டிலே – குவிந்து விடுகின்றன. போரின் காரணமாக, இங்கு பணப்பெருக்கம் ஏராளம், ஒன்றுக்குப் பத்தாக விலை கொடுத்து வாங்குபவர்களைக் காண்கிறோம். இந்த சமயத்திலே, பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலிருக்கும், “ஆசாமிகளை” வடநாடு, மோப்பம் பிடித்துவிட்டது. ஏற்கனவே இருக்கும் நிலையை மேலும் உயர்த்திக்கொள்ள கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக முயற்சியைப் பலப்படுத்திக்கொண்ட வண்ணம் இருக்கிறது. இங்கே யார் அதைக் கவனிக்க முடிந்தது! நாட்டிலே உணர்ச்சி மிக்கவரெல்லாம்’ “வெள்ளையனே! வெளியே போ!” என்று முழக்கமிடும் “தேசிய”க் காரியத்திலே ஈடுபட்டிருந்தனர். எனவே சந்தடியைச் சாக்காகக் கொண்டு சத்தமின்றி உள்ளே நுழைந்த வட நாட்டவரைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. வடநாட்டார், பண நடமாட்டம் ஏராளமாக இருப்பது கண்டு, இந்தப் பெருக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, அந்தச் சக்தியைக் கட்டுப்படுத்தித் தங்கள் கரத்திலே வைத்துக்கொள்ள வேண்டுமென்று திட்டம் தயாரித்து, பல புதிய பாங்குகளை ஏற்படுத்தி விட்டனர். அதாவது பொருளாதாரப் போருக்குப் புதிய பாசறைகள் ஏற்படுத்திக் கொண்டனர். இந்தப் போர் ஆரம்பிப்பதற்கு முன்புவரை, ஜப்பானுக்குப் பழைய இரும்பு விற்று வந்தோம். பிறகு நமது இரும்பு நமக்கே குண்டாகி, நம்மவரை நாசம் செய்தது. இப்போது, வடநாட்டார் அமைக்கும் பொருளாதாரப் பாசறைக்கும் நாமே பொருளும் தருகிறோம். டிபாசிட்டுகள், சேமிப்புகள், என்ற பெயரால் எவ்வளவோ பணம் பாங்குகளிலே சென்று தங்குகின்றன. இந்தப் பணமே பிறகு இந்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கோ ஊறு தேட உதவக்கூடும். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வடநாட்டவர் நடத்தத் தொடங்கிய பாங்குகள், ஏற்கனவே நடத்தி வரும் பாங்குகளுக்குக் கிளைகளை இங்கு ஏற்படுத்திவரும் முறை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்குவோர் பணபலத்தைக் கொண்டு வடநாட்டவர் என்னென்ன காரியத்தைச் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை நன்கு உணரக்கூடும். போர் நெருக்கடி பற்றிய நினைப்பிலே மற்றவர்கள் இருந்தபோது, வட நாட்டவர் எதிர்காலத்தை மனதிலே படம் போட்டுப் பார்த்து, வேலை செய்தனர். 1941-44ல் பணம் மலிவாகிய காலம். அந்தச் சமயமாகப் பார்த்து, பாங்குகளைத் துவக்கினர். அதாவது மழை பெய்து ஆறு நிரம்பும் நாட்களை அறிந்து, அணைக்கட்டித் தண்ணீர் தேக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இனி அந்தத் தேக்கங்களின் மூலம் வறண்ட பூமியையும் வளமாக்க முடியும். மேட்டூர் தண்ணீர் தேக்கம், ஒரு தனி ஆளின் சொத்தாக இருந்தால், அந்த நீரைப் பாய்ச்சலுக்கு எதிர்பார்த்துள்ள நிலத்துச் சொந்தக்காரரின் நிலைமை என்ன ஆகும்! மேட்டூர் மிட்டாதாரர், வைத்ததுதானே சட்டம். 1941-44ல் பணவெள்ளம் இதனைச் சரியானபடி “தேக்கி” வைத்துக்கொண்டனர் பனியாக்கள். நாட்டு நிலையை நிர்ணயிக்கக்கூடிய பெரிய பாங்குகள் இந்தப் பணப் பெருக்கத்தின்போது வடநாட்டில் வடநாட்டவரால் 14க்கு மேல் துவக்கப்பட்டன. இங்கு ‘பணம்’ பாழாக்கப்பட்டது வடநாட்டிலே பாங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்திலே மட்டும் துவக்கப்பட்டிருக்கும் வடநாட்டுப் பேங்குகளில் அதிகாரம் பெற்ற மூலதனம் 43 கோடி ரூபாய்க்கு மேலாகவே இருக்கிறது என்றால், பொருளாதாரப்படி, வடநாட்டிடம் எவ்வளவு பலமாகச் சிக்கி இருக்கிறது என்பதை விவரிக்கத் தேவை இல்லை பணமுடை உள்ள நாட்களிலே, பெரும் தொகைகளைப் பாங்குகளிலே கொண்டு வந்து சேர்ப்பது கடினமான காரியம். பணப்பெருக்கமான நாட்களிலே மேற்படி பேங்குகள் ஆரம்பிக்கப்பட்டதால், பெரிய தொகைகளை எளிதிலே திரட்ட முடிந்தது. இனி இந்தச் “சக்தி” வடநாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாகும் என்பதை விளக்கவும் வேண்டுமா? பாங்குகளுக்கான மூலதனம், பங்குதாரர்கள் செலுத்தியது இதற்கு அவர்களுக்கு இலாபத்துண்டு உண்டு. இந்தப் பெரிய மூலதனம் மட்டுமின்றி இந்தப் பாங்குகளிலே, பொருள் உடையோர் டிபாசிட்டாக (சேமிப்பு)ப் பெரும் பொருள் போடுகின்றனர். இதற்குக் குறைந்த பாங்குகள், அந்தப் பணத்தைக் கொண்டு தமது இலேவாதேவி வேலையைச் செய்து, அதிக வட்டி விகிதத்துக்குப் பணம் கடன் கொடுத்து, இலாபம் பெறுகின்றன. இந்த வகையிலே 1941-44க்குள் துவக்கப்பட்ட 14 வட இந்திய பாங்குகளிலே எவ்வளவு டிபாசிட்டாகச் சேர்ந்திருந்தது? 1943ம் ஆண்டுக்கு மட்டும் உள்ள கணக்கின்படி, டிபாசிட்டாகக் குவிந்த தொகை : 42,10,64,328 ரூபாய். இந்தப் பெரிய சக்தியின் முன்பு திராவிட நாட்டிலே உள்ள கனதனவான்கள் அவ்வளவு பேரும், தங்கள் பொருளையும், அதிலே ஒரு பகுதியைத் திருவிழா தானம் ஆகியவற்றுக்காகச் செலவிட்டதால் கிடைத்ததாகக் கருதிக்கொண்டுள்ள அருளையும் திரட்டி நிறுத்தினாலும், எடை சரியாக இருக்க முடியுமா? பண பலம் எங்கே இருக்கிறது? ஏகாதிபத்ய பீடம் எவ்விடம் இருக்கிறது? என்பதைக் காட்டிவிட்டோம். கருத்துள்ளோரெல்லாம் காணலாம்! இனி இந்தப் புதிய பாங்குகளைப் பற்றிய புள்ளி விவரங்களைத் தருகிறோம்! விவரம் கண்டேனும் விளக்கம் பெறட்டும். தேசியத்தில் மட்டும் வட நாட்டாருக்கு இளைக்காத இந்நாட்டுத் தோழர்கள். 1941-44-ல் புதிதாகத் துவக்கப்பட்ட பாங்குகள் [] திரட்ட முடிந்த வரையிலே தகவல் தரப்பட்டிருக்கிறது. பணம் பெருக்கம் நாட்டிலே மிகுந்திருந்தால், பாங்குகளின் இலாபம் குறைவாக இருக்கிறது. இனி இப்பெரும் பணம் பரவி, தன் சர்வ ஆதிபத்யத்தின் கீழ் சகல தொழிலையும் கொண்டு வரும். நேரடியாகப் பாங்குகளிலே கிடைக்கக்கூடிய இலாபத்தை விட, அந்த பாங்குகள் பரவச் செய்யும் பணத்தைக்கொண்டு நடத்தப்படும் தொழில்கள் மூலம் கிடைக்கக்கூடிய இலாபமே, அளவிலும் சரி, முக்கியத்துவத்திலும் சரி, பெரிது. ஒரு நாட்டின் பொது நிலையைப் பாதிக்கக்கூடியது. அந்தச் சக்தியைப் பெறவே, வட நாட்டிலே, புத்தம் புதிய பாங்குகள் இத்தனை துவக்கப்பட்டன. இங்கு பணம் கிடைத்தது. பழனிமலை அப்பனுக்கு படிகட்டுக் கைங்கரியம் செய்து கொண்டிருந்தனர் இவ்வளவு பாங்குகள், வட நாட்டிலே ஏற்பட்டன. இங்கும் ஒரு பாங்க் துவக்கப்பட்டது. 1942ல் அதிகாரம் பெற்ற மூலதனம் 5,00,000 செலுத்தப்பட்ட தொகை 2,00,000 டிபாசிட் தொகை 11,94,063 இலாபம் 32,734, பாங்க்கின் பெயர் தாமஸ் பாங்க், இடம் திருவாங்கூர்! இந்தப் பட்டியிலே, பெரியபாங்க்குகளை மட்டுமே குறிப்பிட்டோம். சில்லரைத் தேவதைகள் ஏராளம்! பணப் பெருக்கம் மிகுந்த இந்நாளிலே, 1941-லிருந்து புதிதாகத் துவக்கப்பட்ட பாங்க்குகளையே குறிப்பிட்டோம். இவை அன்றிப் ‘பழைய பெருச்சாளிகள்’ வேறு பல உள்ளன. இவ்வளவு கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி வைத்துக்கொண்டு, பண அரசு கோட்டை கட்டி, அதன் மீது வெற்றிக் கொடியைப் பறக்க விட்டுக்கொண்டு வட நாடு வாழ்கிறது. அதன் வல்லமை வளருகிறது. இங்கே தாயின் மணிக்கொடி பாரீர்! என்ற கீதத்தோடு திருப்தி அடைந்துவிடுகிறோம். இது சரியா முறையா? தேசியம் பேசுபவர் அங்கு பணம் அரசு அமைக்கிறார்கள். இங்கு இன அரசு கேட்கும் நம்மை ஏளனம் செய்கிறார்கள், நமது தேசியத் தோழர்கள். நியாயமா? இந்த வட நாட்டு பாங்க்குகள் சென்னை மாகாணமெங்கும் செல்வாக்கு தேட ஆங்காங்கு கிளைகளை ஆரம்பித்தபடி உள்ளன பாரத் பாங்குகள் மட்டும் 216 கிளை ஸ்தாபனங்கள் உள்ளன. ஆலப் புகழை, பெங்களூர் கண்டோன்மென்ட், பெங்களூர் சிடி, பெல்லாரி, பெஜவாடா, கொச்சி, கோவை, கூனூர், சென்னை மவுண்ட்ரோடு, மதுரை, மங்களூர், சேலம், செகந்திராபாத், திருச்சி, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய ஊரிலே பாரத் பாங்க் பரிபாலனம் செய்கிறது. இதன் பொருள் என்ன? இவ்வளவு இடங்களிலும், எந்த சமயத்திலே எந்த தொழில் நடத்தவும் தாராளமான வசதியைக் கரம்சந்த் பெறமுடியும். கருப்பண்ணன் செட்டியாரால் முடியாது. அவர் கையிலுள்ள பணத்தைச் செலவிட்டு காலட்சேபம் வைத்து, ‘பணம் ஓர் பைசாசம்! பிரபஞ்சம் ஒரு மாயை!’ என்று காலட்சேபக்காரர் பாடும் பாடலைக் கேட்டுப் பரவசமாக வேண்டியதுதான். வேறேஎன்ன செய்ய முடியும்? பணத்தோட்டமோ பனியாக்களிடம் சிக்கிக்கொண்டது. பாதையிலே கிடப்பவர் பஜனை பாடாது வேறே என்ன செய்வது! இந்த வடநாட்டுப் பொருளாதார ஏகாதிபத்தியத்தை ஒழிக்கத்தான் திராவிட நாடு தனி அரசாக வேண்டும் என்று கூறுகிறோம். துருக்கியை முஸ்தபா கமால் பாட்சா தனி அரசாக்கியதும் செய்த முதல் வேலை அதுவரைத் துருக்கியைத் தங்கள் பொருளாதாரப் பிடியிலே வைத்துக்கொண்டிருந்த அர்மீனியர்கள் என்ற வகுப்பினரின் ஆதிக்கத்தைச் சட்டம் மூலம் ஒழித்ததுதான். பிறகுதான் துருக்கி மூச்சுவிட முடிந்தது. அதற்கு முன் வரை துருக்கி ஐரோப்பாவின் நோயாளி என்று கேலி செய்யப்பட்டு வந்தது. திராவிடம் தனி அரசு ஆனால் இங்கு தொழில் துறையிலும் பொருளாதாரத்துறையிலும் வடநாட்டார் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடியும். இந்நாட்டுப் பணத்தைப் பர்மாவுக்குக் கொண்டு போகாமல் இருக்கச் செய்யவும் முடியும். வட நாட்டு முதலாளிகள் மோப்பம் பிடித்துக்கொண்டு இங்கு வருவதையும் தடுக்கமுடியும்! இந்நாட்டவரை வெளிநாட்டுக்குக் கூலிகளாக அனுப்பிவைக்கும் மானக்கேடான காரியத்தைத் தடுத்து அவர்களை இங்கே வாழவைக்க முடியும், இவ்வளவு இன்பம் தரும் மார்க்கம், திராவிடம் தனி அரசு ஆகவேண்டுமென்ற இலட்சியத்தில் இருக்கிறது. இதனை எங்கே உணருகிறார்கள்! காசியைத் தங்களுக்கு புண்ய க்ஷேத்திரமாகவும், டில்லியை அரசியல் தலைமை ஸ்தலமாகவும், வார்தாவை தேசிய பீடமாகவும், பம்பாயை இலட்சுமி கோயிலாகவும் ஏற்படுத்தி விட்டு இங்கு, “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!” என்று பாடுகிறார்கள். இன்பத்தேனா பாய்கிறது? உண்மையா! பம்பாய் பண குண்டு [] வேடிக்கைப்படம் அல்ல; நிலைமையைப் படமாக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. விளக்கத்துக்காக அதோகுன்றென உயர்ந்துள்ளவன், கையில் பணகுண்டு வைத்துக்கொண்டு நிற்கிறான். கீழே கையில் கோலும், தலையில் முண்டாசும் கொண்டுள்ள உருவம், தெரிகிறதல்லவா. அது சென்னை! பண குண்டுடைய உருவம், பம்பாய்! சின்ன உருவுக்கும் பெரிய உருவுக்கும் இடையே உள்ள மகத்தான பேதம் நம்மை மருட்டுகிறதல்லவா? அவ்வளவு பெரிய உருவினிடம் சிறிய உருவம், என்ன செய்ய முடியும்? ஏவல் வேலை தவிர! இது பெரும் கற்பனையுமல்ல ஆதாரமற்றதுமல்ல புள்ளி விவரந்தான் படி.வடிவில். பெரிய உருவம் – சின்ன உருவைப்போல, பத்து மடங்கு பெரிது. சின்ன உருவம் சென்னை, பெரிய உருவம் பம்பாய் வட நாடு முழுதுங்கூட – அல்ல! சென்னை என்றால், சென்னை மட்டுமல்ல, சென்னை, கொச்சி, திருவாங்கூர், மைசூர் சேர்ந்தது. ஏன், சென்னையின் அளவுபோல பம்பாயை 10 மடங்கு பெரியதாக அளவிடவேண்டும்? என்று கேட்கிறீர்களா? சென்னை, பம்பாய் ஆகிய இரு மாகாணங்களின், மில் துணி அளவைக் காட்டவே இந்தப் படம். சென்னை, கொச்சி, திருவாங்கூர், மைசூர் உட்பட, ஆண்டுக்கு 30 கோடி சதுரகஜம் துணி மில்லில் தயாராகிறது. பம்பாயில் ஆண்டு தோறும் 330 கோடி சதுர கெஜம் துணி தயாரிக்கப்படுகிறது மில்லில். சென்னை உற்பத்தியை விட 10 மடங்கு அதிகம். இதைத்தான் படமாக்கினோம் – சென்னை எந்த அளவுள்ள மனித வடிவில் காட்டப்படுகிறதோ அதைவிட 10 மடங்கு அதிகமான அளவுள்ளதாக பம்பாயை மனித உருவாகப் பொறித்திருக்கிறோம். 1க்கு பதினொன்று. 30 இங்கே! 330 அங்கே! ஆனால் இங்கு நமது மாஜி முதலமைச்சர், “மூடு மில்லை!” என்றார். அங்குள்ள அமைச்சர்கள் “ஓடு சீமைக்கு” என்று உத்தரவிட்டு, நிபுணர்களை அனுப்பினார்கள். புதிய புதிய மில்யந்திரங்கள் வாங்கி வர பண குண்டு தயாரிக்காமல் எப்படிப் பம்பாயால் இருக்க முடியும். நம்மைப்போல 1க்கு 11ஆக ஓங்கி வளர்ந்திருக்கும்போது, இன்னும் வளர்ந்து கொண்டே போகும் போது, பம்பாய், சென்னையைச் சட்டை செய்யுமென்று எதிர்பார்க்க முடியுமா? சேட்ஜீக்கு இங்குள்ளவர்களைக் கண்டால், படத்தில் உள்ளதுபோல, சிறு உருவமாகத்தானே தோன்றும். ஆலையில் தயாரிக்கப்படும், துணி சம்பந்தமாக மட்டிலுமே சென்னைக்கும் பம்பாய்க்கும், 1–11 என்ற முறை. பொதுவாக உள்ள மற்ற விஞ்ஞான ரசாயன யந்திர சாதனத் தொழில் வளர்ச்சி வியாபார வளர்ச்சி, பணபல வளர்ச்சி ஆகியவற்றை கவனித்து கணக்கிட்டால் சென்னையைப் போலப் பம்பாய், 11 மடங்கல்ல பலப்பல மடங்கு அதிகமுள்ள வடிவெடுக்கும் இந்நிலையைத்தான், பொருளாதார ஏகாதிபத்யம், புதிய வல்லரசு, பொன்விலங்கு, பண அரசு, பிர்லாஸ்தான் என்று பல கூறி இதுவரை விளக்கி வந்தோம். சீமைக்கும் இந்தியாவுக்கும் இதுபோல நிலைமை இருந்ததைக் கூறித்தான், சுயராஜ்யப் போர் துவங்கப்பட்டது. சென்னை குப்பமாகி வருகிறது. அந்த வீழ்ச்சியைத் துரிதப்படுத்த முதல் அமைச்சர் முனைந்திருக்கிறார். கதர் மீது ஆணையிட்டு, காந்தியார் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சென்னை மாகாணப் பொருளாதாரத்தின் மீது கல்லைப் போட்டார். வர்த்தக சங்கம் தடுத்த – பத்திரிக்கைகள் கண்டித்த – பொருளாதார நிபுணர்கள் கண்டித்த – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டித்த – கைத்தறி நெசவாளர் சங்கம் கண்டித்த எங்கும் கண்டனம். ஆனால், பிரகாசம்காருவோ எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்றார். “ஐயா! உம்முடைய நோக்கம் கூட நல்லதாக இருக்கக்கூடும். ஆனால், எமது பேச்சைக் கேளுங்கள், இதன் விளைவு கேடாகத்தான் இருக்கும்” என்று இதமாகக்கூடப் பலர் சொன்னார்கள். அவர்கள் யாவரும் முதலமைச்சரின் தேசியத் திருவிழிகளுக்கு, சர்க்காரின் எதிரிகளாகத் தெரிந்தார்கள். “சென்னை சர்க்காரால் நிராகரிக்கப்படும் நூற்புக் கதிர்களைத் தனக்குக் கொடுத்து விடும்படி கொச்சி சர்க்கார் கேட்டதாக ஒரு செய்தி படித்தேன். சென்னை சர்க்காரின் கொள்கை மாறாவிடில், நாம் மான்செஸ்டருக்குப் பதிலாக நமது அக்கம் பக்கத்துக்காரர்களால் சுறண்டப்படுவோம்” என்று டாக்டர் சுப்பராயன் பேசியிருக்கிறார். சுறண்டப்படுவோம்! இதைக் கூறும் டாக்டர், காந்தியாரிடம் பலமுறை கதரைப் பற்றிப் பேசிப் பேசிப் பார்த்து விட்டுப் பிறகு கூறும் கருத்து இது. பல நூறு மேடைகளிலே, திராவிடர் கழகத்தார் கூறினார், இது போல முன்பு. “சுதந்திரா” பத்திரிகையின் ஆசிரியர், காசா சுப்பாராவ். காங்கிரசார், பார்ப்பனர், அறிஞர் அவர் கூறினார் கதர் நிலைத்திருக்கவே முடியாது என்று. “நான் திருப்பதியிலும் சித்தூர் ஜில்லாவில் வேறு சில இடங்களிலும், கையினால் நூற்கும் திட்டத்துக்குக் கழகம் அமைத்து, வேலை செய்து, அந்தத் திட்டத்தைப் பரப்ப முயற்சித்தேன்; ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தது. ஆனால் அந்த ஆர்வம் படிப்படியாக மங்கி மடிந்துவிட்டது. நான் எதிர் நீச்சு நடத்தினேன்; அது இயற்கையாகவே வெற்றி பெற முடியாமற் போய்விட்டது. இப்போது முன்பு இருந்ததைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். மத்திய சர்க்கார், யந்திர சாதனங்கள் கொண்ட தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்திலேயே ‘மோசு’ கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாரும், காந்தி பக்தியிலே, பிரகாசம் அவர்களுக்குக் குறைந்தவரல்ல – அவர்களும் காந்தி சீடர்களே. இப்படி மக்களிடம் இருவிதமான முரண்பட்ட கருத்து பரப்பப்படுகிறது. இதன் விளைவு என்னவாகும் என்பது பற்றிக் கூறத் தேவையில்லை” என்று மற்றோர் காங்கிரஸ்காரர் சித்தூர் கே. ராஜகோபாலாச்சாரி என்பவர் கூறினார். “தர்ம சங்கடமாக இருக்கிறதே நிலைமை” என்று கூறித் தத்தளித்த ‘கல்கி’ மாஜி முதலமைச்சர் அசைந்து கொடுக்க மறுத்தார். இப்போதுள்ள நிலையிலேயே சென்னைக்கும் பம்பாய்க்கும் உள்ள பேதம், பீதி கொள்ள வேண்டிய அளவு இருக்கிறது. இனி, மேற்கொண்டு இங்கு மில் கிடையாது. கதிர்களையும் அதிகப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் கூறினார். அதே சமயத்திலே, நெசவாலைக்கான புதிய மெஷின்கள் வாங்க ஒரு கோடி பத்துக்கோடி அல்ல 100 கோடி ரூபாய்களுக்குத் திட்டமிட்டிருக்கிறது மத்திய சர்க்கார். இங்கு ராட்டையும் அங்கு புதிய மில்களும்! இப்போது அங்கு 330 கோடி சதுரகெஜம் மில் துணி தயாராகிறது; புதிய திட்டத்தின்படி அது இன்னும் வளரும். சித்திரம் மேலும் கொஞ்சம் பெரிதாகும். அது போது, இங்கு இப்போது உற்பத்தியாகும் 33 கோடி சதுர கெஜம் மில் துணி குறையும், உருவம் மேலும் சின்னதாக வேண்டும்! எண்ணிப்பாருங்கள், ஏற்கனவே கேலிசெய்வது போலவும் கிலியூட்டுகிற முறையிலும் ஓங்கி வளர்ந்துள்ள பம்பாய் ஆலைத் தொழில் இன்னமும் வளர்ந்தால், என்ன ஆகும் என்பதை. நெசவாலைத் தொழிலை வளர்க்க, இதுவரை எடுத்துக்கொண்ட முயற்சியும், செலவிடப்பட்ட பணமும், பொது மக்கள் பட்ட கஷ்ட நஷ்டமும் அளவிடக்கூடியதல்ல, உண்மையிலேயே கதர் மட்டுந்தான் வளர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், 417 ஆலைகள் தோன்றுகிற வரையில் சும்மா இருந்திருக்கலாமா? அந்த ஆலை அரசர்களின் நேசத்தையும் பாசத்தையும் வளர்த்திருக்கலாமா? அவர்களைக் கொண்டு தேசியக் காரியங்களைச் சாதித்துக் கொள்வதாகப் பேசி இருக்கலாமா? நெசவாலைத் தொழில் ஓங்கி வளர்ந்தான பிறகு மேனாட்டுடன் போட்டியிடக்கூடிய உன்னதமான அளவுக்கு முன்னேற்றமடைந்த பிறகு, கோடிக்கணக்கான பணம் முதலாகக் கொட்டி ஆனபிறகு, புதிய புதிய யந்திரங்களை அமைத்தானபிறகு மில் ஒழிப்பு வேலையைத் துவக்குவது என்றால் அதிலே பொருத்தமிருக்கிறதா? முடியுமா? அவசியமா? 1945 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதக் கணக்குப்படி மில்கள் 417 மூலதனம் சுமார் 54 ½ கோடி கதிர்கள் :– ஒரு கோடிக்கு மேல் உள்ளன. ஆண்டொன்றுக்கு, 24 இலட்சம் கண்டி பருத்தி செலவாகிறது மில்களில், (கண்டி ஒன்றுக்கு 784 பவுண்டு பருத்தி.) இவ்வளவு பெரிய முறையிலே, வளர்ந்து விட்ட தொழிலை, கதர்த் திட்டத்துக்காகப் பலியிடுவதா? தேவையா? முடியுமா? தேவை – முடியும் என்றே வைத்துக்கொண்டாலும், இதனை இந்தியா பூராவுக்கும் திட்டமாகக் கொள்ளாமல் சென்னையில் மட்டும் நடத்த முயல்வானேன்? வடநாடு என்று பொதுவாகக் கூறினாலும் பொருந்தாது – காங்கிரசை ஆதரிக்கும் மாகாணங்களிலே மட்டுமே இதைப்பற்றிப் பேசவாவது முடியும் – வங்கம் – சிந்து – பஞ்சாப் எல்லை – அசாம் போன்ற இடங்களிலும் வடக்கே உள்ள சுதேச சமஸ்தானங்களிலும் இது பற்றிப் பேசமுடியாது – அங்கெல்லாம் காந்தீயக் கதர்த் திட்டத்தைப் புகழக்கூட மாட்டார்கள். காங்கிரஸ் மாகாணங்களிலே மட்டுமே காந்தியாருடைய தாட்சண்யத்துக்காக பேசலாம். இது பற்றி – அப்படியும் செய்யவில்லை. பம்பாய், ஐக்கிய மாகாணம் ஆகிய இடங்களிலுள்ள முதலமைச்சர்களை அழைத்து, அவர்களையும் மில் ஒழிப்புக்கு ஒப்புக்கொள்ளச் செய்யும்படி செய்திருந்தால், ஏதோ வருகிற கஷ்டம் எல்லோருக்குந்தான், நமக்கு மட்டுமல்ல என்ற அளவாவது ஆறுதல் இருக்கும். இங்குள்ள காங்கிரஸ் நண்பர்களுக்கு. இப்போது அதுவும் இல்லையே! அங்கே எல்லாம் புதிய மில்களை அமைக்கிறார்கள் – புதிய மெஷின்கள் 100 கோடி ரூபாய் செலவில் தருவிக்கத் திட்டமிடுகிறார்கள் – நிபுணர்கள் மேனாடுகளில் புகுந்து விஞ்ஞான வசதிகளைத் தேடுகிறார்கள் – வெளிநாடுகளிலே வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் காணும் சென்னைக்குப் பம்பாயின் மில் துணி உற்பத்தியிலே பத்தில் ஒரு பாகம் மட்டுமே உற்பத்தி செய்யும் சென்னைக்கு, மில் ஒழிப்புத் திட்டமா? எந்த வகையான நியாயம் இது? எதிர்கால இந்தியாவின் திட்டம் A, B, C என்ற மூன்று தொகுதி வட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதிலே நாம் பம்பாயுடன் சேர்க்கப்பட்டிருக்கிறோம். பம்பாய் ஏற்கனவே மில் துணி உற்பத்தியில் 10 மடங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது. அந்தத் தொகுதியில் உள்ள மற்ற மாகாணங்களும் வளர்ந்துள்ளன – மேலும் வளர வழி வகுத்துக் கொண்டன. அதே தொகுதியிலே இணைக்கப்பட்டுள்ள சென்னையில் மில் கூடாது என்றால் விளைவு என்ன ஆகும்? இப்போது ஒரு முறை மீண்டும் அந்தப் பணகுண்டு வீசும் உருவைப் பாருங்கள்! அந்தப் பம்பாயுடன் சென்னை இணைக்கப்பட்டால் என்ன கதியாகும். இந்நாட்டுப் பொருளாதார வாழ்வு! அங்கு மில்கள் வளர்ந்துவிட்டன. வளருகின்றன – மில்கள் மட்டுமல்ல – தொழிலில், சகலத்தையும், ஒன்றுக்கு பத்து, இருபது என்ற அளவில் வளர்ந்து விட்டிருக்கிறது பம்பாய். அந்த மாகாணத்துடன் இணைக்கப்பட்டுக் கிடக்க வேண்டுமாம் சென்னை! என்ன விளைவு காண்போம்? நினைத்தாலே நடுக்கம் பிறக்கும் சம எடை இருக்குமா? வாழ்க்கைத் தரத்திலே எவ்வளவு பேதம் ஏற்பட்டுவிடும். இதன் பயனாக, எதிர்காலம் எவ்வளவு இடருள்ளதாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். இங்கே கைராட்டை – அங்கே – அங்கு 100-ம் நெம்பர் நூல் – அதனாலான ஆடைகள் விதவிதமாக! இங்கு வீட்டுக்கொரு ராட்டை – அங்கு ஆண்டுக்கொரு புதிய மில்! இவ்வளவு மில்களும், மில் நூலைக்கொண்டு தயாரிக்கப்படும் கைநெசவுத் துணியும், கையினாலேயே நூற்றுக் கையினாலேயே நெய்து தயாராகும் கதரும் சேர்ந்தே சென்னைக்குத் தேவையான அளவு ஆடை கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறோம். இனி நாளாவட்டத்திலே, ஆலைகளே இராது என்ற நிலையில், கதரைக் கொண்டு, சென்னைக்குத் தேவையான அளவு துணி முழுதும் தயாரிக்க முடியுமா? எந்த நிபுணரும் இது ஆகாத காரியம் என்பதைக் கூறுகின்றனர். தோழர் T.R. வெங்கட்ராம சாஸ்திரியார், காங்கிரசுக்கு விரோதியல்ல. அவர் கூறுகிறார், “கதர் கவைக்கு உதவாத திட்டம் என்று. கட்டாயக் கதர்த் திட்டம் என்று துவக்கினாலே கதருக்குள்ள மகிமை போய்விடும்” என்று இந்து இதழ் ஒன்று எழுதுகிறது. கதர் மூலமாகவோ, போதுமான அளவு ஆடை தயாரிக்க முடியாது; மற்ற மாகாணங்களிலேயோ மில் தொழில் ஓங்கி வளர்ந்தபடி இருக்கும்; அந்த மாகாணங்களுடன், குறிப்பாகப் பம்பாயுடன் இணைக்கப்பட்ட நிலையிலேயே சென்னை இருக்குமாம். ஆகவே, அந்தச் சரக்குகள் இங்கே குவியும்; அதன் மூலமாகப் பணம் இங்கிருந்து அங்கு போகும் – இதனைத்தான் ஏகாதிபத்தியம் இதுவரை செய்துவந்தது – இன்று அதன் கிளை ஸ்தாபனம் பம்பாயில் இருக்கிறது – சென்னை சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படும் கைதி போலச் சென்னை, பரங்கி ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குகிறது – இதற்காக, சிதம்பரம் பிள்ளையின் வாழ்வு சிதைந்தது – குமரனின் ஆவி பிரிந்தது – காசிராஜனும், ராஜகோபாலனும் தூக்குமேடை அருகே சென்று திரும்பினர். பல்லாயிரக்கணக்கில் வாலிபர்கள் தியாகத் தீயில் குளித்தனர். இந்த நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ற அளவு ஆடை கதர்த்திட்டத்தினால் கிடைக்காது என்பது மட்டுமல்ல. கிடைக்கக் கூடிய அளவும், எந்த ரகமாக இருக்கும்! 14-ம் நெம்பர் நூல்!! அதிலும் கதர் நூற்பிலே கை தேர்ந்தவர்கள். 14-ம் நெம்பர் நூல் தயாரிக்க முடியும் – வீட்டுக்கொரு ராட்டை வைத்து விட்டால், 14-ம் நெம்பருடன் நின்றுவிடாது. நூல் பத்துமாகும் – எட்டுமாகும் – இதிலே ஆடை நெய்தாக வேண்டும் – அதுதான் நமக்கு ஆடை – இந்த ஆடையுடன் ஆமதாபாத் போட்டிக்கு வரும் – வந்தால், கதர், கதறியாக வேண்டும்; வேறு வழியில்லை , ஆமதாபாத்தின் 60 – 60 ஒரு கடையில், பக்கத்து கடையிலே, ஆலையூரார் உபதேசப்படி நமது நாட்டவர் தயாரிக்கும் 14-ம் நெம்பர் நூல் வேஷ்டி! இரண்டில் எது செலவாகும், எது உறுதிப்பாடு – வேலைப்பாடு உடையது – ஆழ்ந்த காங்கிரஸ் பற்றுள்ள தோழர்களைக் கேட்கிறேன், சிந்தித்துப் பார்க்கும்படி: இங்கு செலவாவது மட்டுமல்ல; இப்போது நெசவாகும் துணிகள், வெளிநாடுகளுக்கும் ஏராளமாகச் செல்கின்றன. சீமையிலிருந்து நமக்கு முன்பு துணி வந்தது – தடுத்தாகிவிட்டது – ஜப்பான் சரக்கு வந்தது மட்டுமல்ல, இன்றைய நிலையில் அங்கு தொழில் நொறுங்கிவிட்டது – இப்போது நிலைமை அடியோடு மாறி இருக்கிறது. பண்டித ஜவஹர்லால் சொன்னதுபோல, இப்போது உலகில் நாலு பெரிய நாடுகளில் இந்தியா ஒன்று என்று மதிப்பிடமுடியும். அந்த ’உயர்வு’ கிடைத்திருக்கிறது. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா என்று அவர் குறிப்பிட்டது பொருத்தமான பேச்சு! ஏனெனில், சீமைத் துணியை நம்பியிருந்த நாடு இன்று, கீழ்க்கண்ட நாடுகளுக்குத் துணி அனுப்பும் நிலை பெற்றிருக்கிறது; மால்ட்டா 2,95,930; சைப்ரஸ் 13,61,600; பலஸ்தீன் 13,61,600; ஏடன் 28,01,949; பாரீன் தீவு 32,97,916; சிலோன் 2,79,15,688; பர்மா 9,40,06,946; மலாய் 2,43,77,817; ஹாங்காங் 37,73,625; காம்பியா 5,15,567; சயிராலியோன் 1,44,862; கோல்ட்கோஸ்ட் 8,55,124; நைஜீரியா 12,60,261; தென் ஆப்பிரிக்கா 2,98,781; ரொடீசியா 1,11,775; ஜான்சிபார் 4,71,567; கெனியா 25,14,361; டாங்கனியிகா 50,92,542; சூடான் 19,65,730; மொரீஷஸ் 44,73,544; கனடா 2,04,609; பிரிட்டிஷ் கினி 1,68,120; ஆஸ்ட்ரேலியா 6,98,177; பிரான்ஸ் 12,500; இராக் 46,96,740; ஈரான் 68,54,011; சுமத்ரா 2,95,220; ஜாவா 14,86,037; போர்னியோ 2,02,488; தாய்லாந்து 8,54,750; இந்தோசீனா 32,640; சீனா 32,248; ஈஜிப்ட் 2,34,67,395; மொராக்கோ 3,42,525; கௌதமேலா 6,28,800 (கெஜங்கள்), 1937-38-ம் ஆண்டுக் கணக்குப்படி, மேற்கண்ட இடங்களிலேயும், இன்னும் பல்வேறு இடங்களிலேயும், இந்தியா, வியாபாரம் செய்வதற்கான வசதிகளைச் சர்க்கார் செய்துள்ளனர். உலகிலே, பருத்தி உற்பத்தியில், உயர் ஸ்தானம் வகித்துள்ள நாடுகளில் இந்தியா ஒன்று – எனவே நெசவுத் தொழிலில் தலைசிறந்து விளங்கி, வெளிநாடுகளுக்கு ஆடை அனுப்பும் வசதி இருக்கிறது. ஆனால், இந்த நாடுகள் 14-ம் நெம்பர் கதர் நூல் ஆடையல்ல விரும்புவது! சென்னை கதர்த்திட்டத்தோடு நின்றுவிட்டால், இந்த நாடுகளில் வடநாட்டு ஜவுளி தான் செல்லும்; வியாபாரத்துறை வடநாட்டுக்குத்தான் இருக்கும். சென்னையில், பூகோள அமைப்பைக் கவனிப்பவர்கள், தென்கிழக்கு ஆசியாப் பகுதியிலுள்ள நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்குச் சென்னையிலே சிலாக்கியமான இட அமைப்புப் பெற்றிருப்பதை அறியலாம். ஆனால், சென்னை வீட்டுக்கொரு ராட்டையை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமாம்! எவ்வளவு கடின சித்தமிருக்க வேண்டும் இந்தத் திட்டத்தை நமக்குச் சுமத்த! உள் நாட்டுத் தேவைக்குப் போதாது வெளிநாட்டு வியாபாரம் இராது – பம்பாய்ச் சரக்குக்கு காத்திருக்க வேண்டும். முரட்டு ரகம் மட்டுமே நெய்ய முடியும் என்பதோடு முடியவில்லை தொல்லையின் எண்ணிக்கை, 20-ம் நம்பர் மில் நூலைக்கொண்டு கைத்தறியில் தயாரிக்கப்படும் ஆடை, கெஜம் ஒன்று 0-5-6 அணாவுக்குக் கிடைக்குமானால், அதே மில் நூலைக்கொண்டு கைத்தறியில் தயாரிக்கும் ஆடை 0-9-6 அணாவாகுமாம். அதே 20ம் நம்பர் நூலையே, கையினாலேயே நெய்து கதராக்கினால் கெஜம் 1-6-0 ஆகிறதாம் – இது நிபுணர்கள் கணக்கு – இன்று பிரகாசம் அவர் களை எதிர்க்கத் தயாரித்ததல்ல. ஐந்தரை அணாவுக்குக் கிடைக்கக்கூடியதை ஒரு ரூபா ஆறணாவுக்கு வாங்கவேண்டும் கதர் ஆடையின் பாரம் இது, விலையைப் பொறுத்தமட்டில்! ஏன் பொதுமக்கள் இந்த வீண் பளுவைச் சுமக்கவேண்டும்? எப்படிச் சுமக்க முடியும்? எவ்வளவு காலத்துக்குச் சுமக்க சம்மதிப்பர்? என்பன போன்றவைகள், சிந்தனைக்குரிய விஷயங்கள். இவ்வளவோடு முடிகிறதா? இல்லை? மில்லில் நூற்ற நூலைக்கொண்டு ஒரு பவுண்டு நூலில் எத்தனை கெஜம் ஆடை தயாரிக்க முடிகிறதோ, அதிலே பாதி அளவுக்குத்தான் கதர் நூலைக்கொண்டு கதராடை தயாரிக்க முடியும் – அதாவது பஞ்சும் வீணாக்கப்படுகிறது. அது மட்டுமல்ல! எட்டு மணி நேரம் கைராட்டையில் நூற்றால், 20-ம் நம்பர் 2½ சிட்டம் வருகிறது என்றால், அதே 20-ம் நம்பர் நூலை, மில்லில், அதே 8 மணி நேரத்தில் 343 சிட்டம் அளவு தயாரிக்க முடியும்! ஆக பணக்கேடு, பஞ்சுக் கேடு மட்டுமல்ல, நேரக்கேடும் இருக்கிறது – நூற்பதில் இருப்பது போலவே நெய்வதிலும் நேரக்கேடு நேரிடுகிறது. அதுமட்டுமல்ல, பல காலமாக வளர்ந்துவந்த தொழில்திறன், நசிந்துவிடும் கேடு வேறு இருக்கிறது. மில்லிலேகூடத் தயாரிக்க முடியாத வகையான மேன்மையான முறையுள்ள, அழகிய பார்டரும், உள்கோடு கொட்டடிகளும் உள்ள, மிக உயர்ந்த ரகத் துணிகளை நமது மாகாணக் கைத்தறிக்காரர்கள் தயாரிப்பதில் கீர்த்தி வாய்ந்தவர்கள். சேலம், மதுரை சரிகைத் துப்பட்டாக்களை, மில்லில் தயாரிக்க முடியாது! இந்த ரகங்களை நெய்யும் கைத்தறிக்காரர்களின் திறமை நசித்துப் போவதுடன் வாழ்க்கைத் தரமும் பாழ்படும். இவ்வளவு நஷ்டங்கள் உள்ளன. பிரதம மந்திரி கொண்டு வரும் திட்டம் பிடிவாதமாக அமுலுக்குக் கொண்டுவரப் பட்டால்! எனவேதான், பல்வேறு கட்சியினரும், பொருளாதார நிபுணர்களும், இந்தத் திட்டம் கூடாது என்று கூறுகின்றனர். முத்து உதிர்த்திடுவது போல், முதியவர் மந்திரி பாஷ்யம் கூறுகிறார், “இதெல்லாம் முதலாளிகள் கிளப்பிவிடும் எதிர்ப்பு” என்று. இந்தப் பழி சுமத்திப் பிழையை மறைக்கப் பார்ப்பது நடக்கிற காரியமல்ல. முதலாளிகள் பிடியிலே இருக்கும் ஆலைகளையும், இனித் துவக்கவேண்டிய புதிய ஆலைகளையும் சர்க்காரே ஏற்று நடத்தவேண்டும் என்று கூறுகிறோம். கதருக்காகச் செலவிடும் மூன்று கோடி ரூபாயில், புது மில் துவக்கலாம் சர்க்கார் – மூடிக்கிடக்கும் சூளை மில்லை ஏற்று நடத்தலாம் – மில்கள் வேண்டும் என்று கூறினால், மில்கள் முதலாளிகளிடம் இருக்க வேண்டும் என்று கூறுவதாக, சாதாரண மந்திரி அல்ல, சட்ட மந்திரி தவறான அர்த்தம் செய்து கொள்வது அழகா! டாக்டர் C.R. ரெட்டியும், T.R வெங்கடராம சாஸ்திரியாரும், சுதேசமித்திரனும், இந்துவும், தினசரியும், பிறவும் முதலாளிகளின் விசைக்கு ஆடும் கருவிகளா? நாமறியோம்! ஆனால் ஒன்று நாம் படித்திருக்கிறோம், மறக்கவில்லை. 1946 மார்ச்சு மாதம், ஆமதாபாத் நெசவாலை முதலாளிகள் 5,00,001 ரூபாய் கொண்ட பணமுடிப்பைச் சர்தார் படேலுக்குத் தந்தனர். நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்கு மெச்சி அந்தச் செக் தருவதாக, முதலாளிகள் சங்கத் தலைவர் சேட் சாகர்லால் பாலாபாய் பேசினார். பொது மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுகிறதே என்ற கவலை கொண்டு, மில் ஒழிப்புத் திட்டத்தைக் கண்டிக்கிறோம். இதற்குத் தக்க சமாதானம் கூறமுடியாத நிலையிலே, இது முதலாளிகள் கிளப்பிவிடும் எதிர்ப்பு என்று பச்சைப் புளுகு பேசுவதன்றி வேறு வழியில்லை. ஆனால் திட்டமாகவும் தெளிவாகவும் கூறுகிறோம், முதலாளித்துவத்தை ஒழிக்க வழி இருக்கிறது – மில்களைச் சர்க்கார் நடத்துவதே தக்க வழி. அதற்கான தைரியத்தை மந்திரிசபை பெற்றால், நாம் மிக மகிழ்ச்சி பெறுவோம். முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும் – மில் அல்ல! அதோ பண அரசு போர்க்காலத்தில் பணப்பெருக்கம் அமோகமாக ஏற்பட்டது கண்ணை மூடிக்கொண்டு கண்டவைகளில் செலவழித்தும், ஒன்றுக்குப் பத்தாக விலைகொடுத்துப் பண்டங்களை வாங்கியும். போட்டியிட்டுக்கொண்டு வீடு, நிலம் ஆகியவற்றின் விலையை ஏற்றி வாங்கியும், இருக்கும் இடத்தை இடித்துக் கட்டியும், போன போன கோயிலுக்கு மீண்டும் போய்வந்தும், குடும்பங் குடும்பமாக ஸ்தலயாத்திரை செய்தும், விசேஷ உற்சவாதிகள் முதலிய காரியங்களைச் செய்து பணத்தைச் செலவிட்டான். பிறகு இப்படிப் பணத்தைப் பாழாக்குவதைவிட ஏதாவது தொழிலிலே போட்டால் வளருமே என்ற எண்ணம் உண்டாயிற்று பலருக்கும் தாமாகத் தொழில் நடத்துவதைவிட வேறு யாரேனும் திறமையும் தகுதியும் படைத்தவர்கள் துவக்கினால், நாமும் அதிலே கொஞ்சம் பணம் போடலாம் என்ற நினைப்பு பிறந்தது. இந்த நினைப்பைக் கண்டறிந்த உடனே, செப்படி வித்தைக்காரர்கள் நுழைந்தனர் மார்க்கட்டில். ஒன்றுக்குப் பத்தாக இலாபம் வரும் போட்டியே இல்லாத தொழில் – புதுமுறை – யாருக்கும் தெரியாது – கஷ்டமற்றது என்று விளம்பர வார்த்தைகளை வீசினார்; பணத்தைக் குவித்தனர். புதிய புதிய தொழில்களை ஆரம்பித்தனர் பங்கு வசூல் செய்து. இங்கிலாந்திலே முன்பொரு காலத்தில் இப்படிப்பட்ட பணப்பெருக்கம் ஏற்பட்டபோது, காளான்கள் போலக் கம்பெனிகள் கிளம்பி பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்று பிறகு இலாபம் வராததால் கடையை மூடி மக்களின் ஆசையிலே மண்விழச் செய்தனர். விசித்திரமான கம்பெனிகளெல்லாம் துவக்கினார்கள் – எந்தவிதமான ஆசை காட்டினாலும் நம்ப மக்கள் இருந்தனர் – பணம் – பெருகி இருந்த நேரம். ஒரு ஆசாமி, கடல் நீரை சுத்த ஜலமாக்கக் கம்பெனி துவக்கினான். பணம் குவிந்தது. இன்னொரு தைரியசாமி, இன்னவிதமான தொழில் என்று கூடச் சொல்லவில்லை. ஏராளமான இலாபம் வரக்கூடிய தொழில் ரகசியத்தை இப்போது கூறமுடியாது. பங்குகளை விரைவிலே வாங்குங்கள் – ஆரம்ப தினத்தன்று கூறுகிறேன். கம்பெனியின் ரகசியத்தை – என்று சொன்னானாம்; அதற்கும் பணம் குவிந்தது. அப்படிப்பட்ட காளான்கள் பூக்கக் கூடாது என்ற காரணம் காட்டி சர்க்கார் பங்குகளை வசூலிக்கும் நோக்கைக் கட்டுப்படுத்தி, பழைய கம்பெனிகளுக்கு மேற்கொண்டு பங்குப் பணம் சேர்ப்பதானாலும், புதிய கம்பெனிகள் ஆரம்பிப்ப தானாலும், சர்க்காரிடம் முன்கூட்டி அனுமதி பெற்றாக வேண்டும் என்று கட்டுப்படுத்திவிட்டனர். இந்தச் சட்டம், நடைமுறையில் என்ன பயனை விளைவித்தது என்றால், ஏற்கனவே தொழில் துறையிலே வளர்ந்திருந்த வடநாட்டுக்கு மேலும் ஒரு ‘சான்ஸ்’ அடித்த கதையாயிற்று. கட்டுப்பாடு செய்தது சர்க்கார் – சர்க்கார் இருப்பது டில்லியில் – டில்லிக்கும் நமக்கும் வெகுதூரம் – மைல் கணக்கு மட்டுமல்ல குறிப்பிடுவது – மனப்போக்கு விஷயத்தையுந்தான். எனவே, தென்னாட்டவரால், பணப் பெருக்கம் மிகுந்திருந்த அந்தச் சமயத்திலே தாராளமாகப் புதிய கம்பெனிகளைத் துவக்க முடியவில்லை . மேலும், ஏற்கனவே, முன்னேற்றமடைந்திருந்த வட நாட்டு முதலாளிகளுக்குத்தான் என்னென்ன புத்தம் புதிய தொழில்களை அமைக்கலாம் என்ற யோசனை இருந்ததேயொழிய, ஜவுளிக் கடையும் பலசரக்கு மண்டியுந் தவிர வேறு தொழில் என்ன இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் நாட்டுச் செல்வர்களுக்கு உருவான புதிய யோசனைகள் தோன்றவில்லை. தொழில் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மேனாட்டுத் தொடர்பு இவை இங்கு குறைவு; அங்கு அதிகம். எனவே, பணம் வெள்ளமாகப் புரண்டபோது அவர்களால் அதன் பயனை நன்கு பெறமுடிந்தது. அந்தக் காலத்துப் பத்திரிகைகளைப் பார்த்தால், (குறிப்பாக இந்துவில்) தெரியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய கம்பெனி வடநாட்டில் துவக்கப்பட்டு, அதற்குப் பங்கு கோரி இங்கு விளம்பரம் செய்யப்பட்டது. இப்படிச் சமயமறிந்து சர்க்கார் தங்களுக்கு அருகில் இருப்பதால் ஏற்படும் வசதிகளைத் துணைகொண்டு, ஏராளமான புதிய தொழில்களை வடநாட்டில் துவக்கியுள்ளனர். பணம் தாராளமாகக் கிடைத்துவிட்டது! உள்நாட்டுத் தொழிலுடன் வெளிநாட்டுத் தொழில் போட்டியிடாதபடி பாதுகாப்பு. சர்க்கார் மூலம், பல தொழில்களுக்கும் கிடைக்கிறது – மேலும் கிடைக்கப் போகிறது – ஆகையால் இலாபத்தைப் பற்றிய பயம் இல்லை – அவைகள் தயாரிக்கும் சரக்குகளுக்கு, நாம் இருக்கிறோம் மார்க்கட்டு ஏற்படுத்திக் கொடுக்க! இன்னும் என்ன வேண்டும்!! இதைத்தான் பணத்திலே ‘செப்படி’ வித்தை என்பது. போர்க்காலத்தில், அதிலும் 1943லிருந்து 1945 வரையில், புதிய கம்பெனிகள் ஆரம்பிக்க வேண்டுமென்று, சர்க்காரிடம் வந்த மனுக்கள், சர்க்கார் கணக்குப்படி 4,660. இவைகளில் 4371 மனுக்கள் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தும் 289 மனுக்கள் சுதேச சமஸ்தானங்களிலிருந்தும் வந்தன. பிரிட்டிஷ் இந்தியாவில் 3575 மனுக்கள் அங்கீகரிக்கப் பட்டன. இந்த அனுமதியின் பயனாக 228 கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து ‘பங்கு’ வசூலிக்க உரிமை கிடைத்தது. இதன்றி சுதேச சமஸ்தானங்களில் 209 கம்பெனிகளுக்கு அனுமதி தரப்பட்டு அதன் மூலம் 33 கோடி வசூலிக்க வழி பிறந்தது. ஆக மொத்தம் 1943-லிருந்து 1945-க்குள் 260 கோடி ரூபாய் மூலதனம் உள்ள, ஸ்தாபனங்கள் அமைய வழி பிறந்தது. இவைகளில் மிக மிகப் பெரும்பான்மையான ஸ்தாபனங்கள் எங்கே துவங்கப்பட்டன என்பதைக் கூற வேண்டியதில்லை. இதில் 260 கோடி ரூபாய் யந்திரச் சாதனமுள்ள தொழிற்சாலைகள் சம்பந்தமாகவும், 101 கோடி ரூபாய், தோட்டம் போக்குவரத்து, வியாபாரம் இன்ஷூரன்ஸ் போன்ற கம்பெனிகளுக்காகவும் அனுமதிக்கப்பட்டவை. என்னனென்ன வகையான கம்பெனிகள் துவக்கப்பட்டன என்பதை விளக்கக் கொஞ்சம் புள்ளி விவரம் தருகிறோம் – முழுவதுமல்ல – சில மட்டும். [] இப்படிப் பலவகை யோசித்துப் பாருங்கள்! இவ்விதமாக நமது நாட்டில் – நாடு என்பது பிடிக்காவிட்டால் நமது மாகாணத்தில் புதிய புதிய ஸ்தாபனங்கள் எவ்வளவு இருக்கும்? ஏன் அதிகமாக நமது ஜனத்தொகைக்கோ ஏற்ற அளவில் இல்லை என்பதை எண்ணிப் பாருங்கள். பணம் தாராளமாக நடமாடிய காலத்திலே, நம்மால் புதிய தொழில் அமைப்புக்களைப் போதுமான அளவில் உண்டாக்க முடியவில்லை என்பதை, மறந்துவிடாதீர்கள். இனி வரும் காலம், பணம் கொண்டுவரும் ஆட்கள் – கவனப் படுத்துகிறேன். ஏற்கனவே வளர்ந்து வளமாகி உள்ள வடநாடு, இச்சமயத்தைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மையை, வெறும் வார்த்தை போதாது, உங்கட்குச் சந்தேகத்தைத்தானே ஊட்டும்! ஆகவே சில தகவல்கள் தருகின்றேன். பாருங்கள், வட நாட்டவர் எவ்வளவு அருமையாகச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும், இனி அவர்களின் புதிய தொழில்களின் பிடியிலிருந்து வேறு தேய்ந்து வரும் தமிழகம் விடுபட வேண்டும் என்னும் உண்மையையும். 1945-46 ஆகிய ஆண்டுகளிலே மட்டும் துவக்கப்பட்டு, ‘இந்து’ பத்திரிகையிலே விளம்பரம் செய்யப்பட்ட சில புதிய கம்பெனிகளின் தகவலை மட்டுமே தருகிறேன். யார் வேண்டுமானாலும், அதேபோது, நம் நாட்டில் அதே வகையோ, அளவோ உள்ள கம்பெனிகளைத் துவக்கவில்லை என்பதை அதே இந்துவைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். [] [] [] [] இப்படிப் பலப்பல! எல்லாவிதமான தொழில்களும், பால் பண்ணையிலிருந்து படம் பிடிக்கும் தொழில்வரையிலே. பம்பாய்ப் பகுதி ஏற்கனவே முன்னேறிவிட்டது. அதாவது மார்வார் குஜராத் பிடியில் சிக்கிவிட்டது. இப்போது ‘படை எடுப்பு’ வங்காளத்திலே! இங்கு துவக்கப்பட்டுள்ள ஏராளமான கம்பெனிகளில் நூற்றுக்கு 98 முஸ்லீம் அல்லாதாரே! ஒன்றிரண்டு கம்பெனிகளில், டைரக்டராக கனாப் பஸ்லுஸ் ஹாக்கின் பெயர் இருந்தது; மற்றதெல்லாம் ‘ஜீ’க்கள்தான்! இவ்வளவு புதிய தொழில்களுக்கும், பொதுமக்களின் பணம், வட நாட்டிலிருந்து மட்டுமல்ல, நம் நாட்டிலிருந்தும், ஏராளமாக ‘பங்கு’ என்ற முறையிலே சேர்ந்திருக்கிறது. நிர்வாகம், அவர்களிடம். இந்த நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஒரு கம்பெனி இரண்டு கம்பெனிகளில் அல்ல. பல கம்பெனிகளிலே டைரக்டர்களாகவும், சில இடங்களில் பாகஸ்தராகவும், சிலவற்றிலே முதலாளிகளாகவும் சிலவற்றுக்குப் பாங்கர்களாகவும் உள்ளனர். இப்படி வளருகிறது வடநாட்டு முதலாளித்தனம்!! தென்னாட்டு நிலைமை இன்னம் கொஞ்சகாலத்தில், தேயிலைக் காட்டுக்கு ஓடுவதாக இருக்குமேயன்றி வேறென்னவாகும்! இதனை உத்தேசித்துத்தான் நமக்குத் தனித்தனியாக உரிமை, தனி அரசு வேண்டுமென்கிறோம். தவறா? சொல்ல வேண்டாம்! யோசியுங்கள்! அதோ பண அரசு! அதன் ஆட்சியிலே தமிழர்! உமது நிலை என்ன என்று கேட்கிறேன். நானும் ஒரு தமிழனாதலால்! வனஸ்பதி உலகை மிரட்டிய மாவீரன் ஜூலியஸ் சீஸரை ஒரு நொடியில் மயக்கிய உல்லாசி, கிளியோபாட்ரா எகிப்திய நாட்டு அரசி, அழகி, என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் அவள் அழகை அதிகப்படுத்திய அற்புதமான ‘முத்துக்’ காதணி இருந்ததும், அந்த ‘முத்துக்கள்’ தமிழ் நாட்டவரிடம் எகிப்து விலை கொடுத்து வாங்கினவை என்பதும் பலருக்குத் தெரியாது. இன்று, தமிழன் கரும்பு, ரப்பர் தேயிலைத் தோட்டக் காடுகளுக்குக் கூலி வேலை செய்வதற்குப் புறப்பட மட்டுமே கப்பலேறுகிறான். ஓர் காலம் இருந்தது. அவன் வீரனாய், விவேகியாய் வணிகனாய், மரக்கலம் செலுத்தி ரோம்வரை, தமிழகத்தின் கீர்த்தியைப் பரப்பிய பண்பு மிகுந்திருந்த சிறப்பு. அவை, இலக்கிய வகுப்புக்கு மட்டுமே இன்று பயன்படுகிற நிலை இருக்கிறது; மக்கள் மன்றத்திலேகூட இந்நிலை பற்றிக் கூறுவார் இல்லை. வரலாற்றிலும், (ஷேக்ஸ்பியரின்) இலக்கியத்திலும் இடம் பெற்ற இலாவண்ய கிளியோபாட்ராவின் காதணி மட்டுமல்ல, ரோம் நாட்டரசி லோலா என்பவளும், வேறு வேந்தர் பலரும் அவர்தம் வேல்விழி மாதரும் விரும்பி கேட்ட விலை கொடுத்துப் பெற்றனர் தமிழகம் அனுப்பிய முத்துக்களை. எகிப்து நாட்டுக்கு மட்டும் ஆண்டுதோறும், 120 கப்பல்கள் செல்லுமாம் தமிழ்நாட்டுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு. கடல் வாணிபம் அவ்வளவு ஓங்கி வளர்ந்தது. ரோம் நாடு பத்து லக்ஷம் பவுன் பெறுமானமுள்ள தங்க நாணயங்களை இந்திய உபகண்டத்துக்கு அனுப்பி வந்தது. வியாபாரத் தொடர்பின் காரணமாக, இதிலே மிகப் பெரும் பகுதி, தமிழ்நாட்டுக்கு வந்தது! இவை மச்சபுராணமோ, மகாலிங்க புராணமோ அல்ல, வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று, வடநாட்டுக்கு மார்க்கட்டாகி விட்டது. வறண்டு வருகிறது. வகையற்றோரின் இடமாகிவிட்டது. மார்வாரி, குஜராத் முதலாளிமார்களின் வேட்டைக் காடாகி விட்டது. இவ்வளவு ’தேசீயத் திரை’யினால் மறைக்கப்படுகிறது. நமது நாட்டுத் தொழில் வளத்தைப் பெருக்காமல் வெளியாருக்கு விருந்திடும் போக்கிலே, இப்போது பிர்லா கம்பெனியாருக்கு வனஸ்பதி தொழிற்சாலை துவக்க வழி செய்து தந்துவிட்டனர். இதுகண்டு பலரும் துடித்தனர். முதலமைச்சர் பிரகாசத்தைக் கேள்விகள் கேட்டனர். தொழில் மந்திரி தோழர் கிரியைக் கேட்டனர். விசித்திரமான பதில் கிடைத்தது. பிர்லா கம்பெனியார் வரி கட்டுவார்களாம்! அதனால் சர்க்காருக்கு பணம் கிடைக்குமாம்! இதுவே பதில், இங்கே, பலர் அதே தொழில் நடத்த அனுமதி கோரினர்! டில்லி நோக்கிச் சென்ற கோரிக்கைகள் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையிலே பிர்லாவின் படையெடுப்பு தங்கு தடையின்றி நடைபெறுகிறது. டில்லியின் அனுமதி கிடைத்துவிட்டது. நமது மந்திரிமார்கள் கூறுகிறார்கள், “பிர்லா கம்பெனிக்கு லைசென்சு நாங்கள் தரவில்லை; டில்லி தந்துவிட்டது” என்று. ஏன் இவர்கள் டில்லி சர்க்காருக்குத் தங்கள் கண்டனத்தை அழுத்தத் திருத்தமாகத் தெரிவிக்கக் கூடாது என்று கேட்கிறோம்; தமது நாட்டு வளத்தையும் தொழில் திறனையும் சுரண்டிச் சுகபோகிகளாவதற்காக, வடநாட்டிலே ஏற்கனவே நூற்றுக்கணக்கான தொழிற் சாலைகளை, பல்வேறு வகையான தொழில்களை நடத்தி, பலகோடி ரூபாயை லாபமாகக் குவித்துக்கொண்டு, சிற்றரசர்கள் கண்டு மயங்கும் விதமான சிங்கார மாளிகைகளைக் கட்டிக்கொண்டு அரசியலையே நமது “கட்டியக்காரன்” ஆக்கிக் கொள்ளும் அளவுக்குப் பிரம்மாண்டமான உருவெடுத்துள்ள பிர்லாக்கள் இங்கே நுழைவதுகண்டு, இந்த மந்திரிமார்களின் மனம் பதறவேண்டாமா! வட நாட்டவருக்கு இங்கு செல்வத்தைச் சுரண்ட இடங்கொடுத்துவிட்டு, இந்த மந்திரிமார்கள், எப்படி எதைக்கொண்டு, இங்குள்ள ஏழை எளியவர்களைக் காப்பாற்றப் போகிறார்கள்? நாளைக்கொரு ஆலை அங்கே, இங்கே வீட்டுக்கொரு ராட்டை! இதுவா வாழவைக்கும் முறை! நமது மந்திரிமார்களும், அவர்களின் ஆதீனத்தவர்களும், இந்த பிர்லா படையெடுப்பைக் கண்டிக்க முன்வந்தால், டில்லி, இவர்களையும் மீறி நடக்குமா? நடக்குமெனில், நமக்கு டில்லி ஏன்? டில்லிப் பட்டணத்திலே பெரிய பெரிய சாம்ராஜ்யாதிபதிகள் கொலுவீற்றிருந்த போதெல்லாம் நருமதை நதிக்கு இக்கரை நாட்டவராகிய நாம் வளத்தோடு வாழ்ந்து வந்தோமே இனியும் அப்படி இருக்க முடியாதா! மந்திரிகள் பேச்சிலே குறை கூறுபவர்களின் வாதத்தை உடைக்கும் தந்திரம் இருக்குமளவு, நாட்டுப்பற்று இல்லையே. தொழில் மந்திரி கனம் கிரி அவர்கள் எதிரிலேயே ஒரு சொற்பொழிவின்போது, தோழர் திருமால் ராவ் என்பவர் : “தென்னாட்டை வடநாட்டவர் சுரண்டுவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என்று கூறினார். மந்திரி கிரி வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினாரே தவிர, இந்தச் சுரண்டலை நாங்கள் தடுப்போம் என்று உறுதி கூறவில்லை. வடநாட்டவர், தமது பணம், இங்கு கிடைக்கும் பணம் இவ்வளவும் திரட்டி. இங்கு தொழில் நடத்தி, இலாபத்தை வட நாட்டுக்குக் கொண்டு செல்கின்றனர். பழைய நாட்களிலே, ஏதேனும் ஓர் படையெடுப்பின் மூலமாக, ஒரு நாட்டுச் செல்வத்தை மற்றோர் நாடு கவர்ந்து செல்ல முடிந்தது; இப்போது அந்தச் சிரமம் இன்றி வியாபாரக் கோமான், தமது டெலிபோன், தந்தி சம்பாஷணைகள் மூலமாகவே கோடி கோடியாக ஒரு நாட்டுப் பொருளை எடுத்துச் செல்ல வழி கிடைத்துவிட்டது. வடநாட்டார் இத்துடன் திருப்தி அடையவில்லை அங்குள்ள மார்வார் குஜராத் முதலாளிகள் கண்ணோட்டம் இன்று தென் கிழக்கு ஆசிய நாடுகள் பூராவிலும் பரவி இருக்கிறது. ஜாவா, சுமத்ரா, போர்னியோ, மலாய், இந்தோ-சீனா, அன்னாம் என்னும் பல்வேறு இடங்களிலேயும் தமது வியாபார வலையை வீசுகிறார்கள். பாகிஸ்தான் கிளம்பியிராவிட்டால் மத்தியக் கிழக்கிலும் கண் பாய்ந்திருக்கும். ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான் ஆகிய பகுதிகளிலும், வியாபாரத்தைப் பரப்பிவிடத் திட்டம் தயாரிப்பர்; வெற்றியும் பெறுவர். வடநாட்டு முதலாளிகள், இத்தகைய ‘வெற்றி’ பெறுவதற்கான சகல வழிகளையும் அமைத்துக் கொண்டனர். அவர்கள் ‘முறை’ ‘திறமை’ ‘போக்கு’ மேனாட்டவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். அரசியல் துறையிலே செல்வாக்கு தேடிக்கொள்ளும் விஷயத்திலே வடநாட்டு வணிக வேந்தர்கள் மேனாட்டவரையும் தோற்கடித்து விட்டனர் என்று கூறலாம். நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். காங்கிரசின் துவக்க கால முதலாகவே, ‘தலைமை நிலையம்’ – திட்டம் தயாராகும் இடம் – வடநாடாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு, விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டது, வடநாட்டுக்கு இலாபமாகிவிட்டது. சீமைச்சாமான் பகிஷ்காரம், சுதேசி இயக்கம், வடநாட்டுக்குச் சாதகமான நிலைமையை ஏற்படுத்திவிட்டது. அசோகனின் கரம் தட்டிய காலத்திலும், திறக்கப்படாத திராவிடநாட்டுக் கதவு திறக்கப்பட்டு, வடநாட்டுப் பாகை அணிந்தோர் நுழைந்தனர். வாகை சூடிக்கொண்டனர். இங்கு நாம் இளித்தவாயரானோம். காந்தீயம், எளிய வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தது. கிராமீய சேவையை வற்புறுத்தி, குடிசைத் தொழில் ஆர்வமும் கற்றுக்கொடுத்தது. எனவே இங்கு, ராட்டை. சுழன்றது. குத்துவிளக்கு எரிந்தது. கைக்குத்து அரிசி மிகுந்தது; ஆனால் அதே காந்தீய போதனையிருந்தும் காந்தியார் வாழும் வடநாட்டிலேயோ, வியாபாரிகள் விமானங்களில் ஏறி வெளிநாடு சென்றனர்; மின்சார சக்தியை வேலைக்கு அமர்த்திக்கொண்டனர். ராஜதனப் பாலைவனங்களை எல்லாம், பாரீஸ் இலண்டனாக்கினர். இந்தச் சூஷமத்தை இங்குள்ள தேசியவாதிகள் உணரவில்லை. இன்றும் அநேகர் உணர மறுக்கின்றனர். காந்தியாரைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடும் வடநாட்டிலே, “மெஷினே மனிதனைக் கெடுத்தது” என்ற தத்துவத்தையும், “கதரே தாரகம்” என்ற சித்தாந்தத்தையும் போதிக்கும் காந்தியாரைக் கடவுளாகக் கொண்டாடும் வடநாட்டிலே, எப்படி டாட்டாவும், பிர்லாவும், பஜாஜும், தலாலும் ஆலைகளையும் பெருத்த தொழிற்சாலைகளையும் வைக்க முடிந்தது? எப்படி இவர்கள், காந்தியாரின் சீடர்களாக இன்றும் வாழ முடிகிறது? இதனை எடுத்துக்காட்டுபவர் திராவிடர் கழகத்தார், என்று கோபப் பார்வையுடன் நோக்காமல் ஆர அமர யோசிக்கும், எந்த நேர்மையான காங்கிரஸ்வாதியும் இந்நிலையைக் கண்டு, மனம் பதறாமல் இருக்க முடியாது. காந்தீயப் போதனையை ‘அபின்’ ஆக்கித் தமிழகத்திலே கொடுத்துவிட்டு, தமிழரைச் செயலற்றவர்களாக்கி, அந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு வடநாட்டார் மேனாட்டவர் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு, ‘பங்காளிகள்’ ஆகும் அளவுக்கு, தொழில் துறையில் வேக வேகமாக முன்னேறி விட்டனர். இங்கே நமது நாட்டவர் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டுள்ளனர்; நமது முதலமைச்சரோ வீட்டுக்கொரு ராட்டையைத் தந்துவிடுகிறேன் என்றார். இதேபோல் வடநாட்டவர் இங்கே வனஸ்பதி துவக்குகிறார்கள். அவர்கள் வரி செலுத்துவார்களல்லவா என்று ஆசைமொழி கூறுகிறார் மந்திரியார். வெளிநாட்டுச் சரக்கினிடம் இங்குள்ள மக்களுக்கு வெறுப்பு ஏற்படச் செய்தாகிவிட்டது. வெளிநாட்டுச் சரக்கை உபயோகிப்பதே தேச பக்திக்கு இழிவு என்ற நிலை உண்டாகி விட்டது. வடநாடு, தென்னாடு என்ற பேதம் கூடாது, நாமெல்லாம் ஒரே நாட்டு மக்கள், பாரததேசம் என்று சொந்தம் பாராட்டியாகிவிட்டது. இந்தச் ‘சொந்தம்’ காரணமாகக் கொண்டு மலை மலையாகப் பொருளை வட நாட்டிலே உற்பத்தி செய்து, இங்கே அனுப்பியாகிவிட்டது. இங்கே இயற்கைச் செல்வம் மங்க, உள் நாட்டு “முதல்” தூங்க, மீறி பர்மா போனால் அங்கு சுத்தி சுத்தி மிரட்டுவது கண்டு ஏங்க, தொழிலில்லாததால் மக்களிடை துயரம் தேங்க, அதனைத் தீர்த்துக்கொள்ள தேயிலைக் காட்டுக்கு ஓடி உடல் கெட்டுக் காலும் வயிறும் வீங்க, அதனைச் சிந்து ஆக்கி நமது நடிகர்கள் இசை முழங்கக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடிக்கவிடலாமா! திராவிட கழகத்தாரை அல்ல, நாம் கேட்பது, காங்கிரசாரைக் கேட்கிறோம் – நேர்மையாளர்கள் அனைவரையும் கேட்கிறோம். நீதியின் பெயரால் கேட்கிறோம் – ஏழை எளியவர்களின் சார்பிலே நின்று கேட்கிறோம் – இனியும் பிறக்க இருக்கும் நமது பின் சந்ததியாரின் பெயர் கூறிக் கேட்கிறோம். காவிரியும் பெண்ணையும் கேலிச் சிரிப்புடன்தான் பாய்ந்தோடுகிறது. நமது சுரங்கங்கள், நம்மைக் கையாலாகாதவர்கள் என்று கடுமொழி கூறுகிறது, நமது பின் சந்ததி நம்மை, வடநாட்டுக்கு அடிமைகள், வளம் இருந்தும் பயன்படுத்தும் வகையற்றவர்கள், என்று கண்டிக்குமே! இதற்காகவேனும், யோசித்து ஆவன செய்ய வேண்டாமா காங்கிரஸ் தமிழர்கள் என்று கேட்கிறோம். மேனாட்டவரின் நிலையை அடைந்ததோடு இல்லை; வடநாட்டு வணிகர்கள், இன்று பிரிட்டிஷ் அமெரிக்கக் கோடீஸ்வரர்களுடன் ‘கூட்டு’ சேர்ந்து பல தொழில்களைத் துவக்கி உள்ளனர். நிலை அவ்வளவு உயர்ந்துவிட்டது. உயர்ந்த நிலையுடன் அவர்கள் திருப்தி அடையவில்லை. நம் நாட்டு வணிக வேந்தர்கள், வியாபாரக் கோமான்கள் திருமலை திருப்பதி, பூரிஜெகன்னாத் காசி, கயா, கண்டி, கதிர்காமம் சென்று, வரம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையிலே வடநாட்டு முதலாளிமார் இலண்டன், வாஷிங்டன், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் ஆகிய “க்ஷேத்திரங்களுக்கு போய்” முருகன், முக்கண்ணன், காந்திமதி ஆகிய தேவதேவியரை அல்ல, மோட்டார், விமானம், இரும்பு, எஃகு, ரசாயனம், கண்ணாடி ஆகிய பலவிதமான தொழிலிலே உள்ள நிபுணர்களைக் கண்டு பேசித் தொழில்முறை நுண்ணறிவு மெஷின் வகை அமைப்பு முறை ஆகியவை பற்றித் தெரிந்துகொண்டு வருகின்றனர். தாளச் சத்தமும், மேளச் சத்தமும் கேட்டு ரசிக்கும் நமது நாட்டுத் தொழிலில்லா இரும்புப் பெட்டிக்காரர்கள்’ அறிவார்களா, இந்த வடநாட்டு வணிகர்கள் அங்கே இருந்து பெற்றுவரும் ‘வரம்’. இந்த உபகண்டத்துச் சூத்திரக்கயிறை அவர்களிடம் சேர்த்து வைக்கும். பிறகு அந்தக் கயிற்றுக்கு ஏற்றபடி. இங்குள்ளவர்கள் ஆடும் பொம்மைகளாகிவிட நேரிடும் என்ற சூக்ஷமத்தை. தம் நாட்டு மக்களை உதாசீனம் செய்வதும் வட நாட்டாரை அளவுக்கு மீறி தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுவதும் தமிழ்நாட்டாருக்கேயுள்ள ஒரு பிரத்யேகமான குணம். கல்கத்தாவிற்குச் சென்றால் “சித்தரஞ்சன் அவென்யூ” “பெபின் பால் ரோட்” என்று பார்க்கிறோம். நம் சென்னையிலோ ‘ரானடெ ஹால்’, ‘கோகலே ஹால்’, ‘நேரு கபே’, ‘திலகர் வாசக சாலை’ என்று காண்கிறோம். அம்மட்டுமல்ல, ‘பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே’ என்று ரிக்கார்டு எடுத்துக் கலியாண வீடு உள்பட எல்லா இடங்களிலும் அனவரதம் ஒப்பாரி வைக்கத் தயாராயிருக்கிறோம்! நமது சென்னைப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் பாருங்கள், அத்துடன் வடநாட்டுப் பேப்பர் எதையாவது எடுத்துப் பாருங்கள். வட நாட்டைப் பற்றிய செய்திகளும், வடநாட்டார் விட்ட அறிக்கைகளும் பஞ்சமில்லாமல் சென்னைப் பத்திரிகையில் இடம் பெறும். வடநாட்டுப் பத்திரிகைகளில் தென்னாட்டு சமாசாரம் அநேகமாக இராது. “இந்த மாதிரி நான் எழுதிக் கொண்டே போவேன். ஆனால் உங்கள் பத்திரிகையில் இடம் இருக்க வேண்டும்; இடம் இருந்து நீங்கள் பிரசுரித்தாலும் ஆமாம்! என்ன தர்புகழ்ச்சி வேண்டியிருக்கு, “சார்? வடக்கத்தியான் எங்கே, நாம் எங்கே? அவங்க சமாசாரமே தனிதான் சார்! சும்மா பேசிவிட்டால் போச்சா?” என்று சொல்வதற்கு வேண்டிய சிகாமணிகள் தமிழ்நாட்டில் இருப்பார்கள். “கல்கி”யில் ஒரு தோழர் வடக்கத்தியர் விஷயம் என்று தலைப்பிட்டு தீட்டிய திருமுகத்திலே சில பகுதிகளை மேலே வெளியிட்டிருக்கிறோம். திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும் என்பதற்கு நாம் காட்டும் பல காரணங்களிலே ஒன்று. இந்தியா எனும் ஒரு அமைப்பிலே நாம் இணைந்திருக்கும் வரையில், சகல துறைகளிலும், வடநாட்டார் ஆதிக்கம் செலுத்துவார்களேயொழிய திராவிடத்துக்கு உரிய நிலை கிடைக்காது என்பதாகும். வடநாட்டார் சரித காலத்திற்கு முன்பிருந்தேயுங்கூட, தென்னாட்ட.வரைத் தாழ்த்தி வைப்பதையே நோக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. முடியுடை மூவேந்தர்கள் காலத்திற்குப் பிறகு திராவிடத்தின் பிடி தளர்ந்துவிட்டது, நடை. குன்றிவிட்டது, கலையும் வாழ்வும் கருகின, செல்வம் தேய்ந்தது, சீர் அழிந்தது, இம்மட்டோ! திராவிடத்திலே தன்னம்பிக்கையும் தோய்ந்தது. பண்டு வாழ்ந்ததும் மறந்தனர். இந்நிலையில் துவக்கினார் வனஸ்பதியை பிர்லா, இதற்குச் சமாதானம் கூறுகிறார் பிரதமர் பிரகாசம். இந்த நாட்டிலே நாம் வாழ்கிறோம், இதனை எடுத்துக்கூறினாலோ, தேசத் துரோகிப் பட்டம்! எதிர்க்கத் துணிந்தாலோ, 144, 151, எனும் தாக்குதல்கள். ஆனால் நமக்கு இருக்கும் நம்பிக்கை நசித்துவிடவில்லை? – மாறாக வளர்கிறது, காரிருள் கப்பிய இடத்திலே, கீழ்கோடியில் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. காங்கிரசுக்குள்ளே இருக்கும் சிலருக்கே, இன்று இந்நிலை பிடிக்கவில்லை – நெஞ்சு குமுறுகிறது. ‘கல்கி’யின் கட்டுரை இதற்கோர் சான்று. தொழில் மந்திரி கிரியின் முன்பாகவே “வடநாட்டார் தென்னாட்டாரைச் சுரண்டுகிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும்” என்று தோழர் திருமால்ராவ் பேசியது மற்றோர் சான்று. வனஸ்பதியை, பிர்லா துவக்க இடமளித்ததைக் கண்டித்துச் சில எம். எல். ஏக்களே கையொப்பமிட்டு, முதலமைச்சரிடம் ’மகஜர்’ கொடுத்தது மேலும் ஓர் சான்று. விளக்கத்தோடு கூடிய வேறோர் சான்றும் தருகிறோம், காண்க. “வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய் துறைமுகத்தோடு நின்றுவிட்டன. தமிழர்க்கே உரியதாயிருந்தது கடல்தாவும் கலை. ஆங்கிலேய அதிகாரத்தார் அதைப் பறித்து நம்மைப் பாழ்பத்தினர். இழந்த அதிகாரத்தைப் பெற்றே தீருவேன் என்று வீறுகொண்டேழுந்து சுதேசி கப்பல் கம்பெனியைத் தோற்றுவித்தார் வ.உ. சிதம்பரம் பிள்ளை. ஆங்கில வர்த்தக கூட்டத்தார் அடக்குமுறை கொண்டு அவரை அழிக்க முயன்றனர். முன் ஜென்மம் பாபத்தைக் கழிக்க மற்றோர் ஜென்மம் வாய்க்கும் என்பர் சமயவாதிகள்? ஆனால் இந்த ஜென்மத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாபத்திற்காக இரு ஜென்ம தண்டனை அடைந்தார் சிதம்பரம்பிள்ளை. கப்பற் தொழிலை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்ற அன்று போராடித் துன்பமுற்றவர் தமிழர். அன்று சிதம்பரனார் போராடிய நாளில் உறங்கிக் கிடந்த வால்சந்த் ஹீராசந்துக்கள் இப்போது கப்பற் தொழிலில் பணத்தை வாரிக் குவிக்கின்றனர்.” இந்த விளக்கம் – வேதனை விருத்தம் – தேசிய நாதத்தோடு கூடியது, தோழர் சிவஞானகிராமணியார் தீட்டும் ‘தமிழ் முரசு’ இதழில் இருப்பது. இத்தகைய ‘குமுறல்கள்’ காங்கிரசுக்குள்ளே தோன்றி விட்டது மட்டுமல்ல – வளருகிறது. இந்த நிலையையும் மறந்து, முதலமைச்சர் அச்சமும் கூச்சமுமின்றி, பிர்லா கம்பெனி வைத்தால் என்ன? வரி கட்டுவார்கள். அது நமக்கு இலாபந்தானே, என்று சொத்தை வாதம் செய்கிறார். இந்த வடநாட்டுப் படை எடுப்பைத் தடுக்கும் தீரர்கள் இல்லையா? இதன் விளைவுகளைத் தெரிந்துகொள்ளும் விவேகிகள் இல்லையா? ஏன் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, இந்தப் படை எடுப்புக் கூடாது, இதனைத் தடுத்தாக வேண்டும் என்று கூறக்கூடாது? நாட்டைச் சுரண்ட ஒரு கூட்டம் இருப்பது, அக்கூட்டம் கதர் அணிகிறது என்ற காரணத்திற்காக அதனை அனுமதிப்பதா? ஆள்வது யார்? நாட்டை மீட்டிட நானாவிதமான கஷ்ட நஷ்டப்பட்ட தோழர்களா, அல்லது பிர்லா கூட்டமா? பிர்லாக் கூட்டத்துக்கு, வேட்டைக்காடு தயாரித்து, அதற்குத் தேசிய வேலி அமைத்துத் தரவா, இத்தனைப் பாடும் பயன்பட வேண்டும்? “பயங்கரமான பாம்பு ஒரு மனிதனின் உடலைச் சுற்றிக்கொண்டால் அவன் எப்படித் திகைப்பான். அவன் முகத்திலே பாவம் (பா.டி.கே.சி. முறை) எப்படி இருக்கும் என்பதைக் கண்டுகொள்ள அருமையான சந்தர்ப்பம் வாருங்கள்! வாருங்கள்! இந்தக் காட்சி, அபூர்வமானது” என்று அழைக்கிறார் காட்சிச் சாலை விளம்பர அதிகாரி. காட்சி மேடையிலேயே காணச் சகியாத காட்சி. பாம்பு ஒருவன் உடலைச் சுற்றிக்கொண்டு, வதைக்கிறது. இந்த வதைப்படும் காட்சியைக் காணக் கட்டண செலுத்தினார்களல்லவா சிலர், அந்தப் பணத்தைக் காட்டி காட்சிச் சாலை விளம்பரகர்த்தா களிப்புடன் கூறுகிறார். “மனிதன் பாம்பிடம் சிக்கி வதைகிறானே? மகா பாபமல்லவா? எப்படி ஐயா, மனம் வந்து இந்தக் காட்சிக்கு இடமளித்தீர்கள். தகுதியா, முறையா? என்று கேட்கிறீர்களே! நான் இப்படி, ஒரு காட்சியை ஏற்பாடு செய்ததால்தானே ‘பணம்’ கிடைத்தது” என்று கூறிப் பூரிக்கிறார். காட்சிச் சாலையின் பெயர் வனஸ்பதி! விளம்பர கர்த்தா வேறு யாரும் அல்ல. நமது மாகாண முதலமைச்சர் ஆந்திர கேசரி, பிரகாசம்காருதான்! இந்த நாடு – திராவிட நாடு – சென்னை மாகாணம் – தொழில் துறையிலே, மிகமிகப் பின்னணியில் இருக்கிறது என்பதை யாரும் மறக்க முடியாது – மறுக்கவில்லை. வட நாட்டு வாணிபவேந்தர்கள், இங்கு தமது திறமை, வசதி ஆகியவற்றை உபயோகித்து பெரியதோர் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டனர். பெரிதும் நம்மவர்களே காணப்பட்ட, வியாபார இடங்களெல்லாம் இன்று வடநாட்டவரிடம் சிக்கிக் கொண்டன. சென்னையிலே வியாபாரம் மிகுந்த பகுதியின் பெயரே இப்போது, சௌகார் பேட்டை – அல்லது குஜராத்திப் பேட்டை என்றாகி விட்டது. வைரம் முதற்கொண்டு இனிப்புப் பண்டம் வரையிலே, வடநாட்டவர் விற்கத் தொடங்கி, இங்கே, தொழில் வளம் வறண்டு விடும் நிலையை உண்டாக்கி விட்டனர். வெள்ளை ஏகாதிபத்யமே கூட இங்கு வியாபாரக் கோலத்திலேதான் நுழைந்தது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கடை முதலில், கொடி. பிறகு! அங்காடி வைத்தனர் ஆரம்பத்தில், பிறகோ ஆட்சி ஏற்படுத்தினர் ஆங்கிலேயர். அந்த ‘ஆதிபத்யத்தை’ ஒழிக்கவே குமரனின் மண்டை உடைந்தது, வீரத்தமிழன் சிதம்பரம் பிள்ளையின் சொத்து ஒழிந்தது. காசி ராஜனும் ராஜகோபாலனும், தூக்குமரத்தருகே போய்த் திரும்ப வேண்டி நேரிட்டது. ஆயிரக்கணக்கிலே வாலிபர்கள் சிறைபுக வேண்டிவந்தது. மான்செஸ்டர், லங்காஷயர், ஷெப்பீல்டு போன்ற பிரிட்டிஷ் நகரங்களின் ஆதிக்கம் ஒழிந்தது. அதனை ஒழிக்கும் நேரத்தில் அந்த ஒழிப்பு வேளையில் மும்முரமாக நம்மவர் ஈடுபட்டிருந்த சந்தடியைச் சாக்காக வைத்துக் கொண்டு, வட நாட்டவர் நுழைந்தனர். தேசிய உடையில் காந்தியத்திரைக்குப் பின்புறமிருந்து இன்று பம்பாய், ஆமதாபாத், ஜாம்ஷெட்பூர், ஷோலாப்பூர் போன்ற வட நாட்டு நகர்களுக்கு, “மார்க்கெட்” சென்னை மாகாணம், இதனை விளக்க வேண்டிய சிரமம் இன்றி, இன்று எங்கும் வடநாட்டு விலாசம் பளிச்சென மின்னியபடி இருக்கிறது. சுராஜ்மல் பாபாலால் டாட்டா – குப்தா – செல்லாராம் – டால்மியா – கோயங்கா – பிர்லா – பஜாஜ் – ஜெய்ன் என்று பல விலாசங்கள், இன்று நமது பாமர மக்களுக்கும் தெரியக்கூடிய அளவுக்கு ஏற்பட்டுவிட்டன. இவ்வளவு ‘செல்வாக்கு’ இங்கு, வடநாட்டாருக்கு இருக்கிறது. வடநாட்டிலே, இதுபோல; தமிழரின் விலாசங்கள் உண்டா? இல்லை! ஏன்? தமிழனுக்குத்தான் விரிந்த உள்ளமாமே! அவன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிவிடுகிறான். கூற மறந்தாலும், தமிழ்த் தேனில் இழைத்து இதனைத் தந்துவிடத் திரு.வி.க. இருக்கிறார். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று பாடல் படிக்கிறான் தமிழன்; பிறகு தேடி ஓடுகிறான், ‘சேட்டின்’ கடைக்கு, எந்தச் சாமானுக்கும். வியாபாரத்தோடு இந்த ஆதிக்கம் நின்றுவிடவில்லை. உற்பத்தித் தொழிலிலே, ஒரு நாட்டின் உயிர்நாடி; அது இன்று பெரிதும் வடநாட்டவரிடம். பணத்தைத் தேங்கி இருக்குமிடத்திலிருந்து பெற்று, தேவையான இடத்திலே செலுத்தும் தொழில். ஒரு உடலில் இரத்த ஓட்டத்துக்குச் சமானம்; அது பெரிதும் வடநாட்டவரிடம்தான். தமிழன். உயிர்நாடி, இரத்தக் குழாய் இரண்டையும் வடநாட்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘வாழ்வாவது மாயம்’ என்று வானை நோக்கிப் பாடியபடி இருக்கிறான். இதன் விளைவுகளை அனுபவிக்கவேண்டிய காலம் வந்து கொண்டே இருக்கிறது – எட்டிப் பார்க்கிறது. பணப் பெருக்கத்தின் வேகம் குறைந்துவருகிறது. கள்ள மார்க்கட்டின் வாடிக்கைக்காரர்கள்கூட, காசை முன்புபோல அள்ளிக் கொடுக்காமல், எண்ணிக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இன்னமும் இலாபம் வறண்டுவிடவில்லை என்ற போதிலும், இலாபத்தின் வேகமும் அளவும் குறைகிறது; ஆண்டுகளிலே, பணப்பெருக்கம் என்பது பழங்கதையாகிவிடும். இலாபம், தேட வேண்டிய பொருளாகிவிடும். அப்போது, வடநாட்டு ஆதிக்கத்தால் ஏற்படும் வழி நன்றாகத் தெரியும். நாம் முன் கூட்டிச் சொல்கிறோம்; அதனைப் பிறகு, நம்நாட்டுக் கடைவீதியினர் கூறத்தான் போகிறார்கள். ஒரு நாட்டின் வாழ்வு, மற்றோர் நாட்டின் பொருளாதாரச் சக்கரத்திலே பிணைக்கப்பட்டுவிடுவது சாதாரண விஷயமல்ல! கைதியின் நிலை!! அந்த நிலை, திராவிடத்துக்கு ஏற்பட்ட டிருக்கிறது. வறண்ட நாடாகவும், தொழில் திறமற்ற நாடாகவும், தொழிலுக்கு ‘முதல்’ போட ‘ஆசாமிகள்’ இல்லாத நாடாகவும் தொழிலுக்குப் பட்டாளிகள் கிடைக்காத இடமாகவும் இந்நாடு இருந்தது. இதுபோல வேறு இடத்து ஆதிக்கம் ஏற்பட்டிருந்தால் கூட நாம் வருத்தப்படக் காரணம் இராது. காவேரி, தென்பெண்ணை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஜீவநதிகள், இங்கு ஜீவநதிகள் என்றால் அவை வெறும் பாவத்தைப் போக்கும் விசேஷ தீர்த்தம் என்றா பொருள்? விவசாயத்துக்கு வள்ளல்! அது மட்டுமல்லவே, எந்த மின்சார சக்தி தற்கால விஞ்ஞானத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற கருவியோ அந்த மின்சாரத்தை வாரி அளிக்கும் வல்லமை இந்த ஆறுகளிடம் இருக்கிறது. இன்று நாம், அந்த வல்லவமைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. நமது காடுகள் இயற்கையின் எழிலுக்கும் அதைக் காணும் கவிகள், ஓவியர் ஆகியோருக்குக் கற்பனைத் திறனைக் கிளறிவிடும் இடம் மட்டுமல்ல; அவை நமது தொழில் துறைக்குத் தேவையான பொருளைத் தரும் களஞ்சியம், இன்று வரை நாம் அதனைப் பயன்படுத்தவில்லை, நமக்குச் சுரங்கங்கள் உள்ளன. புதை பொருட் செல்வத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஏறக்குறைய நாலு கோடி மக்கள் உள்ளனர், அவர்களில் பலப்பல இலட்ச மக்களை, பர்மா காட்டுக்கும் மலேயா மண்ணுக்கும் பலி கொடுத்து வருகிறோம். இவ்வளவு இருப்பதுடன், வெளி உலகுடன் தொடர்புகொள்ள, கடலோரம் மூன்று பக்கம்; இவைகளிலே மறைந்தவையும், மயங்கியவையும் போக மீதமுள்ள துறைமுகங்கள் அநேகம். இவ்வளவு இருந்தும் நாம் காண்பதென்ன? ராஜபுதனப் பாலைவனத்துத் தந்திரக்காரகளும், வறட்சிமிக்க வடநாட்டவரும் இங்கு முதலாளிகள்’ ஆகிவிட்டதையும் பிர்லாக்களின் படை எடுப்பையும்தான் காண்கிறோம். பனியா பணம்பெறும் வித்தை பெருமழை பெய்தது. வழிந்தோடிய புது வெள்ளம் வயல்களில் நிரம்பியது. பழனி சோம்பேறியல்ல! பாடுபடக் கூடியவனே, தன் வயலை நன்றாக உழுதான். விதை தூவ வேண்டியதுதான் பாக்கி; விளைச்சலைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் பழனியிடம் நெல்விதை கிடையாது. விதைக்கென்று நெற்கோட்டைகளைக் கட்டிவைத்திருப்பவனிடம் பழனி கைகட்டி நின்று பார்த்தான். அந்த முதலாளி நெற்கோட்டைக்கு மட்டுமல்ல, பழனியின் வயலுக்கு வடக்கிலுள்ள வயலுக்கும் சொந்தக்காரன். பக்கத்து வயல்காரர்களிடையே பச்சாதாபம் என்பது துளிக்கூட இருப்பதில்லை. பஞ்சையான பழனியின் உதவிக்குப் பஞ்சணையில் புரளும் பக்கத்து வயல்காரனா முன் வருவான்? பழனிக்கு நெல்விதை கிடைக்கவில்லை. வரப்பின் வடபக்கத்தில் பசுமை தவழ்கிறது, தென் பகுதியிலுள்ள பழனியின் வயலில் பாசி படர்ந்திருக்கிறது. ஒருபுறம் பஞ்சத்தின் கோலமாக, விளங்கும் பரிதாபத்துக்குரிய பழனி. மறுபுறம் பழனியின் நிலம், மாடு, கன்று, வீடு, இவைகளை மட்டுமல்ல, கழனியையே விலைக்கு வாங்கி பழனியின் பழைய நிலத்திலேயே; அவனை ஏரில் பூட்டி உழவு நடத்தி ஊதியம் அடையத்தக்க பலம் படைத்துள்ள பக்கத்து நிலத்துக்காரன் வடக்கிலுள்ளவன். போர்க்காலத்தில் அரசியலாரால் அதிகப்படியான பணம் வெளியிடப்பட்டது. அதனால் நாட்டில் பணம் பெருக்கம் ஏற்பட்டது, பணம் பெருகியதேயொழிய, மக்களுக்கு அவசியமானதும் பயன்படுவதுமான சாமான்கள் அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக, தேவைச் சாமான்கள் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்தன. ஒருபுறம் பணப்பெருக்கமும், மறுபக்கத்தில் தேவைச் சாமான்கள் குறைவும் நாட்டின் அடிப்படையான பொருள் நிலையை வேறு திக்குகளில் இழுத்தன. பணத்தின் மிகுதி, பணத்தின் மதிப்பைக் குறைத்தது. தேவைச் சாமான்கள் குறைவு பட்ட காரணத்தால், சாமான்கள் எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும், அளவுக்கு மீறிய விலையேற்றத்தில்தான் அடைய முடிகிறது. பண்டங்கள் கிடைக்காத தரமுடியாத நிலையில் பணமலிவு பொய்யான பொருளாதாரச் சூழ்நிலையை உண்டாக்குகிறது. பணமலிவு, எப்படியிருந்தபோதிலும் கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட பணப்பெருக்கம் இன்னும் குறையவில்லை. பொங்கியெழுந்துள்ள இப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சேமிப்பு முதலிய பல வழிகள் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன. பணப் பெருக்கம் பாங்குத் தொழிலுக்கு ஏற்ற காலமாகும். இந்த நிலையில் பாங்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த வடநாட்டார்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய பெரிய பாங்குகளைத் துவக்கினர். பனியாக்கூட்டம் இப்பரந்த உபகண்டம் முழுவதும் பரவி “பணத்தைக்” கொண்டு தமது அரசை அமைத்தனர். “பணத் தோட்டம்” என்ற முன் கட்டுரையில் குறிப்பிட்டபடி பணப் பெருக்கத்தின் பொழுது துவக்கப்பட்ட புதுப் பாங்குகள் சிறு பாங்க் ஒன்றைத் தவிர வடநாட்டாரால் ஏற்படுத்தப்பட்டவை. பணப் பெருக்கத்தில் பாங்குகள் மட்டும் உண்டாக்கப்படவில்லை; இன்சூரன்ஸ் கம்பெனிகளும் உடனடியாக நிறுவப்பட்டன. பண அரசுக்கு பக்கபலமாக விளங்கும் பாங்கு, இன்சூரன்ஸ். ஒருவன் 1000 ரூபாய்க்கு பாலிசி ஒன்றை இருபது ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் கம்பெனியில் எடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒப்பந்தத்தின்படி பாலிசி எடுப்பவர் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (பிரிமியம்) 20 ஆண்டுகளுக்கு செலுத்தவேண்டும். செலுத்துபவர் உயிருடன் இருந்தால் 20 ஆண்டுகளுக்கப்புறம் கம்பெனி அவருக்கு 1000 ரூபாய் கொடுக்கும். அல்லது குறிப்பிட்ட 20 ஆண்டு கால வரையறைக்குள் பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டால் அவரது வாரிசு அல்லது விருப்பமானவர்களுக்கு கம்பெனி ஆயிரம் ரூபாய் கொடுக்கும். இது ஆயுள் இன்சூரன்சைச் சேர்ந்தது. இதைப் போலவே எதிர்பாராத விபத்துக்களைத் தடுக்க தீ, கப்பல் இதர இன்சூரன்ஸ் வகைகளும் உண்டு. கட்டடம் எதிர்பாராமல் தீப்பிடித்துக் கொண்டாலும், போக்குவரத்தில் சாமான்கள் சேதமடைந்தாலும், திடீரென்று ஏற்படும் விபத்துகளுக்கும் பாதுகாப்பாக இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றன. அவைகட்குத் தனிக் கட்டணங்கள் இருக்கின்றன. பல லட்சம் பாலிசிதாரர் ஆண்டுதோறும் செலுத்தும் கட்டணம் கோடிக்கணக்கில் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் விரிகிறது. நிர்வாகச் செலவு, இன்சூரன்ஸ் ஏஜண்டுகளுக்குக் கமிஷன், பாலிசி காலம் முடிந்தவர்களுக்கும் இறந்தவர்களுக்காகவும் கம்பெனி திருப்பிக் கொடுக்கும் பணம், மற்றும் உடனடியாக ஏற்படும் செலவுகள் போக மிகுதியிருக்கும் பணம் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் இரும்புப் பெட்டியில் உறங்குவதில்லை. இரும்புத் தொழிற்சாலைகளையும், இயந்திர ஆலைகளையும் ஆட்டிப் படைப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. பணப்பெருக்கம் ஏற்பட்ட காலத்தில் வடநாட்டில் துவக்கப்பட்ட பெரும் பாங்குகள் பலவற்றின் எண்ணிக்கையும் பண பலமும் “பணத் தோட்டம்” என்ற கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது. அதே முறையில் பணப்பெருக்கமான 1940 லிருந்து 1945 வரை புதிதாகத் துவக்கப்பட்ட இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள் 53 ஆகும். அவற்றில் 46 கம்பெனிகள் வடநாட்டில் உண்டானவை; மிகுதியான 7 சென்னை மாகாணத்தில் பனியாவின் பட்டாபிஷேக மண்டபமாக விளங்கும் பம்பாயை எடுத்துக் கொண்டால் 1940-லிருந்து 45 வரை பம்பாய் நகரில் நிறுவப்பட்ட புது இன்சூரன்ஸ் கம்பெனிகள் 24 ஆகும். மற்றும் இருப்பவைகளில் 11 கல்கத்தாவிலும், மிகுதி பூனா, லாகூர், பெல்காம், டெல்லி போன்ற இடங்களிலும் முளைத்தவை. இந்தியாவில் உள்ள எல்லாவிதமான இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மொத்த எண்ணிக்கை 234. இவற்றில் சென்னை மாகாணத்தில் இருப்பவை 37; வடநாட்டில் 187. சென்னை மாகாணத்தில் மைசூர் உட்படவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பம்பாய் மாகாணத்திலேயே 89 கம்பெனிகள் இருக்கின்றன. இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வருமானம் வரும் வகைகள், பாலிசி எடுத்தவர்கள் செலுத்துகிற ஆண்டுக் கட்டணம் (பிரிமியம்) கம்பெனி வாங்கியுள்ள கடன், பத்திரங்களுக்கு வரும் வட்டித் தொகை, கம்பெனி பிற தொழில்களில் போட்ட முதலின் பகுதிக்கு வரும் இலாபப் பங்கீடு, அதன் கட்டிடங்கள் முதலியவற்றிலிருந்து வரும் இதர வருமானம் இவைகள்தாம். செலவுப் பகுதியில் பாலிசிதாரர்களுக்கு ஒப்பந்த காலம் முடிந்தவுடனும், அல்லது திடீரென்று இறந்தவர்களுக்காகவும் கம்பெனி தரும் இதர செலவு இவைகள் தான். செலவுப் பகுதியில் பாலிசிதாரர்களுக்கு ஒப்பந்த காலம் முடிந்தவுடனும், அல்லது திடீரென்று இறந்தவர்களுக்காகவும் கம்பெனி தரும் பணம், நிர்வாகச் செலவு, இன்னும் கொடுக்கப்பட வேண்டிய சில்லறைத் தொகைகள் செலவழிக்கப்படும். கொடுக்கப்பட்டது போக பாக்கியிருக்கும் வருமானம் மிகுதியாகும். இதில் முதல் போட்டவர்களின் லாபத்திற்கு, சிறிது பங்கு கொடுக்கப்பட்டவுடன், மிகுதி கம்பெனியின் பெருமானம் என்று சேர்ந்து விடுகிறது. இந்தப் பெருமானந்தான் (ஆளக்கூடிய சொத்து) கம்பெனியின் பலத்தைக் குறிப்பிடுவது. இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளனைத்திலும் சேர்க்கப்பட்டுள்ள மொத்தப் பெறுமானத்தின் அளவு 122 கோடி 21 லட்சம் ரூபாய்களாகும். இந்தப் பிரம்மாண்டமான செல்வம் சர்க்கார் கடன் பத்திரம், சொத்து, அடமானக் கடன், ஆலைப் பங்குகள், நில கட்டிட சொத்துக்கள், இப்படிப்பட்ட பல துறைகளிலும் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஒப்பந்தத்தின்படி காலம் முடிந்ததாலோ, பாலிசி எடுத்தவர் இறந்ததாலோ கம்பெனி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு இன்னும் கொடுக்காமல் கம்பெனி வசம் இருக்கும் தொகை, மற்றும் கம்பெனி கொடுக்க வேண்டிய சில்லறைத் தொகைகள் இவைகள் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகைகளாகும். இந்தியக் கம்பெனிகளனைத்தும் உடனடியாகக் கொடுக்க வேண்டிய தொகை 10 கோடி 98 லட்சமாகும். இதை மொத்தப் பெறுமானமான 122 கோடி 21 லட்சத்திலிருந்து நீக்கிப் பார்த்தால் நிகர இருப்பு அல்லது நிகரப் பெருமானம் 111 கோடி 23 லட்சமாகும். உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகையை நீக்கிவிட்டதால் நிகர இருப்பு, அல்லது நிகர பெருமானம் கம்பெனி எத்தகைய கவலையுமின்றி பங்குகளில் போடக்கூடிய தொகையாகும். இந்தத் தொகையே 111 கோடி 23 லட்சமாகும். கம்பெனி பங்குகளில் 100க்கு 55 குறையாமல் சர்க்கார் கடன் பத்திரங்களில் போடப்பட்டிருக்கிறது மிகுதி கட்டிடங்களாகவும், ஆலைக் கட்டிடங்களாகவும் மாறுகின்றன. வடநாட்டில் மலைபோலக் குவிக்கப்பட்டுள்ள பண வசதி இருக்கிற காரணத்தால்தான் தொழிற்சாலைகள் அதிகமாக உண்டாக்க முடிகிறது. பணப் பெருக்கமும், பண்டங்களின் குறைவும் பொருள் துறையில் நிலவுகின்றன, இதில் பணம் சேகரித்து தொழிற்சாலைகளாக உருவங்கொடுத்தால், அதிலிருந்து புறப்படும் சாமான்களுக்கு மார்க்கட்டில் இடம் இருக்கிறது. எனவே, வடநாட்டார்கள் பாங்கு இன்சூரன்ஸ் மூலம் நல்ல பண வசதியை அடைந்துள்ளனர். தனிப்பட்ட முதலாளிகளின் கையில்தான் இந்தக் கம்பெனிகளின் சூத்திரக் கயிறுகள் இருக்கின்றன. எனவே அவர்கள் வைத்தது சட்டம். பெரும் முதலாளியின் கண்ணோட்டம் விழுந்தால் போதும்! அங்கே, ஒரு தொழிற்சாலை எழும்! கோபத்துடன் பார்த்தால் அது சுடுகாடாகிவிடும். நாம் குறிப்பிடுவது வேடிக்கைக்கல்ல. வடநாட்டுப் பெரும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் சிலவற்றைக் கவனித்தால், தனிப்பட்ட கம்பெனியின் பண பலமும் அதன் நிர்வாக முதலாளியின் அளவிட முடியாத பணவசதியும் கண்டுகொள்ளலாம். முன் பக்க அட்டவணையில் முதல் தரமான பத்து வடநாட்டுக் கம்பெனிகளும், அவைகளின் இடம், நிர்வாக முதலாளி, நிகர நிதி அல்லது சொத்து, வருமானம், மிகுதி இவைகள் காட்டப்பட்டிருக்கின்றன. [] சென்னை மாகாணம் மைசூர் உள்பட உள்ளே 37 இன்சூரன்ஸ் கம்பெனிகளையும் ஒன்றாகத் திரட்டி வைத்தால்கூட கிடைக்கும் நிகர நிதி 5 கோடி. 86 லட்ச ரூபாய்களாகும். ஆனால் பம்பாய் கம்பெனி ஓரியண்டல் ஒன்றில் மட்டும் 36 கோடி. 83 லட்ச ரூபாய்கள் இருக்கிறது. 37 சென்னை கம்பெனிகள் ஒரே ஒரு பம்பாய்க் கம்பெனி! போட்டியிட முடியுமா? 37 சென்னைக் கம்பெனிகளை விட ஒரு பங்கு இரண்டு பங்கல்ல. 6 பங்குக்கு மேல் செல்வம் படைத்தது ஓரியண்டல். அதன் நிர்வாக முதலாளியைக் கவனியுங்கள். சர் புருஷோத்தமதாஸ் தாகூர்தாஸ், யார் அவர்? பம்பாய்த் திட்டத்தை பிர்லாவுடன் தயாரித்த மும்மூர்த்திகளில் ஒருவர். இந்தியா முழுமைக்கும் தொழில் வளர்ச்சி கொண்டு வர கோடிக்கணக்கான ரூபாயில் திட்டம் தயாரிக்க முன் வருகிறார்கள். பம்பாயிலிருக்கும் தாகூர் தாஸ்கள் அவர்களிடம் பாங்கு, இன்சூரன்ஸ் பணவசதிகள் ததும்பிக் கிடக்கிறது. இரண்டாவதாக உள்ள இந்துஸ்தானில் 6 கோடி 46 லட்சம். இந்தக் கம்பெனியும் சென்னை மாகாண 37 கம்பெனிகளின் கூட்டுத் தொகையை விட அதிகம். அடுத்து வருகிற எம்பயர், நியூ இந்தியா இவைகளும் அப்படியே. சென்னை மாகான 37 கம்பெனிகளனைத்தையும் விட அந்தக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் அதிக சக்தியுடையன. மேற்குறிப்பிட்ட பத்து கம்பெனிகள் மட்டும் 76 கோடி ரூபாய் நிகர நிதி உடையன. சர்க்கார் கடன் பத்திரங்களில் நூற்றுக்கு 55 போட்டது போக மிகுதியிருக்கும் தொகையை தொழில் வளர்ச்சிக்கு அவர்களால் செலவிட முடியும், அந்தப் பண அரசு, தாகூர்தாஸ், மல்லிக் சர்க்கார், காஷ்வாலா, மேத்தா, ஹரிஷங்கர், தேசாய், டால்மியா, ஈஷ்வர்தாஸ், பிரேம்சந்த், செதல்வாட் இவர்கள் கையில் இருக்கிறது. அவர்களுடைய நாட்டில் தொழிற்சாலைகள் தங்குதடையின்றி துவகப்படுகின்றன. அவைகளைப் பாதுகாக்கவும், சாமான்களுக்குச் சந்தை தேடிக் கொடுக்கும் பண பீரங்கி தயாராக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட 10 முதல் தரக் கம்பெனிகளில் பம்பாயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வட நாட்டில் முதல்தரமான பத்துக் கம்பெனிகளைப் பார்த்தோம். சென்னை மாகாணத்திலும் அதைப்போலப் பொறுக்கிப் பார்க்கலாம். வடநாட்டுக் கம்பெனிகளில் சில சென்னை மாகாணத்து கம்பெனிகளனைத்தையும் விழுங்கக் கூடிய அளவுக்கு பெருத்து இருப்பதைக் கண்டோம். அதே மாதிரி இங்கு இருக்கமுடியாது. இருந்தாலும் வடநாட்டுக் கம்பெனிகளின் விளம்பரப் பலகையினருகே சென்னைக் கம்பெனிகளின் பலகை வைக்குமளவாவது யோக்யதை பெற்றிருக்கிறதா என்று பார்க்கலாம். சென்னை (மைசூர் உள்பட) கம்பெனிகள் [] முதல் தரமான வட நாட்டுக் கம்பெனிகள் பத்தையும் முதல் தரமான தென்னாட்டுக் கம்பெனிகள் பத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள். வடநாட்டு முதல் கம்பெனியில் 35 கோடி 83 லட்சம் ரூபாய்கள் நிதி இருக்கிறது. அடுத்தடுத்து 6 கோடி 5 கோடி 4 கோடி என்று இறங்கி 10-வது கம்பெனிக்கு 2 கோடி. 42 லட்சம் ரூபாய்கள் நிகர நிதி இருக்கிறது. சென்னை மாகாணக் கம்பெனிகளை ஒத்திட்டுப் பாருங்கள். முதல் தரமான கம்பெனியே 2 கோடி 18 லட்சம் ரூபாய்கள் என்று ஆரம்பிக்கிறது. பம்பாய் கடைசி கம்பெனியில் இருக்கும் நிதி 2 கோடி 42 லட்சம், நம் மாகாணத்து பெரிய கம்பெனி வடநாட்டுக் கம்பெனிகளில் பத்தாவதுக்கும் தாழ்ந்தது. ஆரம்பமே கோணல் என்றால் அடுத்த தென்னாட்டுக் கம்பெனிகளைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. இந்திய உணவுச் சத்துக்களை ஆராய்ந்த ஒருவர் ஒவ்வொரு பகுதியில் மக்கள் எடுத்துக்கொள்ளுகிற உணவை எலிகளுக்கு ஊட்டி வளர்த்துப்பார்த்தார் பஞ்சாப் உணவு, காஷ்மீர் எல்லைப்புறம், பீஹார், வங்காளம், ராஜபுதனம், பம்பாய், சென்னை இப்படிப்பட்ட பல மாகாணங்களின் உணவுகளையும் ஊட்டி வளர்த்தார். இரண்டு மூன்று மாதங் கழித்து நிறுத்துப் பார்த்தார். மற்றெல்லாவற்றையும் விட பலக் குறைவாகவும், பளுவுக்குறைவாகவும் சென்னை எலி இருந்தது. இந்தப் பிற்போக்கு உணவில், வாழ்க்கைத் தரத்தில் மட்டுமல்ல, தொழில் முறையிலும் அப்படித்தான். எலியிலிருந்து இன்சூரன்ஸ் கம்பெனிவரை சென்னை மாகாணம் பலமற்றுத்தான் உழல்கிறது. ஆனால் பதுங்கியிருந்து பண்டங்களைப் பறித்துச் செல்கிற பெருச்சாலிகள் பருத்துத்தான் இருக்கின்றன. அவைகளின் வளை வடநாட்டில் இருக்கிற காரணத்தால். பொருளாதாரத் துறையில் சென்னை மாகாணமும் நாட்டைவிட அதிகமில்லாவிட்டாலும் சுரண்டப்படுமளவுக்கு தாழ்ந்து போகாமல் நிமிர்ந்து நிற்கவேண்டுமென்பதுதான் நமது அவா. பாங்கு இன்சூரன்ஸ் இவைகளின் மூலம் சிதறிக் கிடக்கும் பணம் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகள் துவக்கவேண்டும். அப்பொழுது பண்டங்கள் பெருகி, பணத்துக்கு மதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் பசுமை வாழ்வு துலங்கும். இதைக் கூறும்பொழுது தனிப்பட்டவர்களின் ஆதிக்கத்துக்கு மக்களைப் பலியிடும் வகையில் தொழில் வளர்ச்சியை விட்டு விடக்கூடாது. ராஜா சர்ரோ, அழகப்பாவோ, சிதம்பரமோ வளமான பாங்கு இன்சூரன்ஸ் நடத்த விட்டுவிடாமல் சர்க்காரே ஏற்று நடத்தவேண்டும். வீணாக்கப்படும் பணத்துக்கு வழி வேலையற்றோருக்கு வேலை; பஞ்சத்தைப் போக்க பண்டங்கள் இவைகளனைத்தையும் உண்டாக்கலாம். பண வசதியும், தேவையும் பெருகியுள்ளது. அவை பயன்படுத்தப்படவில்லை. தொழிலாளர் நிரம்பிய நாடு! தொழிற்சாலைகள் கிடையாது. சென்னை மாகாணத்தில் இயற்கை வளங்கள் மிகுதியாக இருக்கின்றன. அவைகளைப் பயன் படுத்தும் வழிகள் தடுக்கப்பட்டன. வரப்பின் தென்புறத்திலுள்ள பழனியின் வயல் வளமுள்ளதெனினும் வறண்ட நிலமாக இருக்கிறது. வடக்கிலுள்ள பனியாவின் பகுதி செழித்தோங்கி வளர்கிறது. வெகு நாளைக்கு நீடிக்கமுடியாது. ஒன்று நிலத்தைக் குத்தகைக்கு கொடுப்பது போல பண வசதி பெற்ற பனியாவிடம் தென்னாட்டுப் பொருளாதாரம் அடகு வைக்கப்பட்டு, அட்டைகளின் உறிஞ்சலுக்கு ஆளாக வேண்டும் இல்லையேல் நிலத்தையே விற்று விடுவதைப் போல நாட்டின் பொருளாதாரத்தை பனியாவிடம் ஒப்படைத்துவிட்டு இந்நாட்டு மக்கள் வெளிநாட்டுக் கரும்புத் தோட்டத்து அடிமைகளாகவும், இரப்பர் தோட்டத்துக் கூலிகளாகவும், தேயிலைத் தோட்டத்து வேலையாட்களாகவும், சுரங்க வேலைப் புழுக்களாகவும் உழைத்து ஒழியவேண்டும். பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை. வளமையின் மத்தியில் வறுமைத் துன்பம்! நிலைமை நீடிக்க முடியாது, பிணிக்கும் சாவுக்குமிடையே யுள்ள சங்கடமான நிலை. வானவீதியில்! சிவில் விமானப் போக்குவரத்துக்காக 19 கம்பெனிகள் உள்ளன – தனிப்பட்ட முதலாளிகளுடைய கம்பெனிகள் இவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மூலதனம் 40 கோடி ரூபாய் டாட்டா கம்பெனியாரும், டால்மியா கம்பெனியாரும், சிவில் விமானக் கம்பெனிகளை நடத்துகிறார்கள். கம்பெனிகளின் வருமானம் பெருகிக்கொண்டு வருகிறது – வளர்ச்சி மேலும் மேலும் உண்டு. ஏன் இந்தக் கம்பெனிகள் தனி முதலாளிகளிடம் இருக்க வேண்டும்? சர்க்காரே ஏற்று நடத்துவதுதானே நல்லது; இலாபகரமானது. விமானப் போக்குவரத்துக்கும் வியாபார உலகுக்கும், சூட்சமமான தொடர்பு உண்டல்லவா? இன்று மாலைக்குள் கொழும்பு போயாகவேண்டும், ஒரு வியாபார சம்பந்தமாக. போகாவிட்டால், பல இலட்சம் நஷ்டம். இப்படி ஒரு நிலைமை ஒரு வியாபாரிக்கு ஏற்படலாம். வான வீதியில் சென்றாக வேண்டும், இந்த விமானத் தொழிலை வேறு வியாபாரிகளிடம் தந்திருக்கிறார்கள் – அவர்களில் யாருக்கேனும், அவசரமாக கொழும்பு போயாக வேண்டிய வியாபாரத்திலே “தொடர்பு” என்று வைத்துக்கொள்வோம்; இடம் இல்லை விமானத்தில் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன கதி? இந்தத் தொழிலை சர்க்காரே நடத்தினால், சகலருக்கும் வசதி சமமாகக் கிடைக்கும்; தொழிலில் வருகிற இலாபமும் தனிப்பட்ட முதலாளிக்குப் போகாமல் சர்க்காருக்குப் போகும். விமானத் தொழிலுக்காக, வெளியிலிருந்து யந்திரமோ, நிபுணர்களோ கொண்டுவரும் வசதி, தனிப்பட்ட ஆட்களுக்கு இருப்பதைவிட, சர்க்காருக்குத்தான் அதிகமாக இருக்க முடியும். இந்நிலையில், சர்க்காரல்லவா விமானப் போக்குவரத்துத் தொழிலை நடத்தவேண்டும்? ஆனால் சர்க்கார் நடத்தவில்லை. 40 கோடி ரூபாய் மூலதனம் போட்டு, தனிப்பட்ட முதலாளிகள் 19 கம்பெனிகளை நடத்துகிறார்கள்! “அக்ரமம் சார்? சர்க்கார் என்ன சொல்கிறது? ஏன் விமானத் தொழிலை ஏற்று நடத்தவில்லையாம்” என்று கேட்கிறீர்களா? சர்க்கார் “தற்போது இது சாத்தியமில்லை” என்கிறது. புதிய ஏகாதிபத்தியம் மற்ற நாடுகள், கடல் கடக்க அஞ்சிய நாட்களிலே மறத் தமிழர், கடல் கடந்து சென்று வாணிபம் செய்தனர். யவனம் முதலிய தொலைதேசங்களுடன் என்று இலக்கியம் கூறுகிறது. இன்றைய புள்ளி விவரம் கூறுவது என்ன? கடல்கடந்த, காகுந்தன் தூதனின் கதை படித்து, தமிழர் கைகூப்பி நிற்க, வடநாட்டு வாணிபர்கள் வலையை எங்கும் வீசி இலாபத்தைக் குவிக்கின்றனர் என்ற செய்திதான். திராவிடத்தின் செல்வத்தைச் சுரண்டும், வடநாட்டு வணிக வேந்தர்களின் பணப்பலம், தொழில் பலம் இவற்றினுக்கு அரணாக அவர்களுக்கு அமைந்துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாக புதியதோர் பொருளாதார ஏகாதிபத்தியம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பது விளங்கும். வடநாட்டவர் இங்கு ஆலை அரசர்களாய் பணத்தோட்டக் காவலராய் இருப்பதுடன் கடல் வியாபாரத்திலும் அவர்களே இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளனர். கப்பலோட்டிய தமிழனின் நாட்டிலிருந்து இன்று தோட்டத் தொழிலாளி செல்கிறான். மண்டபத்திலிருந்து கிளம்பி, மாரிஸ் தீவுக்கு, இந்நாட்டுப் பொருளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும், வெளிநாட்டுப் பொருளை இறக்குமதி செய்யவும் ஏற்பட்டுள்ள கடல் வியாபாரிகள், யார்? பெரும்பாலும், வட நாட்டவர்களே! வடநாட்டு வணிக வேந்தர்கள் முகாம் அமைத்துக்கொண்டு, இங்குள்ள ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டுள்ளனர். செல்வாக்குள்ளதும், வெளி உலகத் தொடர்புக்கு ஏற்றதுமான, இந்தக் கடல் வியாபாரத் துறையிலே தமிழர்களிலே, குறிப்பிடத்தக்க அளவினர் இல்லை; வடநாட்டினரே பெரும் அளவினர். அவர்களிலே சிலருடைய பெயர்களை மட்டும் இங்கு தந்திருக்கிறோம். நம் நாட்டு வளம் எங்கு ’அடகு’ வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிக்கும் நோக்கத்துடன், இங்கு வடநாட்டவர் பெற்றுள்ள இத்தகைய ஆதிக்கம், அந்த ஆதிக்கத்திலே ஆயிரத்திலோர்பாகம். இங்குள்ள திராவிட வாணிபர்களால், வடநாட்டிலே பெற முடிகிறதா, பெற்று இருக்கிறார்களா என்பதைக் காங்கிரஸ் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். ரூப்சந்துகளும், ஜீவன்லால்களும், ஷிவ்நாராயண்களும், மூல் சந்துகளும், சென்னையில் முகாம் அமைத்துக் கொண்டு நிலக்கடலை முதற்கொண்டு வைரம் வரை, சகல விதமான பொருள்களையும், ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யும் வசதி பெற்றிருப்பது போல, இங்குள்ள தனபாலர், அண்ணாமலை, ஆறுமுகம் முதலியோருக்கேனும், வடநாட்டிலே, இடம் இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள். பொருளாதாரப் பிடி எவ்வளவு பலமுள்ளதாக இருக்கிறது என்பதை விளக்க, கோடிக் கணக்கிலே வியாபாரம் செய்யும் – திராவிடத்தில் இருந்து கொண்டு செய்யும், வடநாட்டு வணிகர்களின் குறிப்பிடத்தக்கவர்களின் பெயர் வரிசையைத் தந்துள்ளோம் – கருத்தூன்றிப் படித்துவிட்டுப் பிறகு – கூறக்கூட வேண்டாம் – திராவிட நாடு திராவிடருக்கே என்ற திட்டம் தேவையா அல்லவா என்பது பற்றிச் சிந்தியுங்கள். தேயிலைத் தோட்டத்திலே உடல் தேயப் பாடுபடும் தமிழனையும் மனக்கண்முன் நிறுத்தி, பக்கத்திலே வடநாட்டிலிருந்து இங்கு வந்து வாழும் மார்வாரி, குஜராத்தி, மூல்டானின் வணிகர்களின் உருவங்களையும் நிறுத்திப் பார்த்து, யோசியுங்கள். திராவிடநாடு திராவிடருக்கே என்ற திட்டம் தேவையா அல்லவா என்பதை. திராவிட நாட்டிலே உள்ள வடநாட்டு கடல் வியாபாரிகள் 1. கிஷின்சந்த் செல்லாராம் 2. ரிஷபதாஸ் அமிர்தலால் 3. J.குஷால்தாஸ் 4. அரிபிரசாத் 5. ஷாரிக்பதாஸ் சக்னராஜ் 6. மோகன்லால் ருப்ஸீ ஷா 7. ஷா திலக்சந்த்பூசாஜி 8. செல்லாராம் கியான் சந்த் 9. ஷா ஓபாஜி ஹேம்சந்த் 10. ஜெத்மத் ஸ்ரி குஷ்ராஜ் 11. ஷாரிக்பதாஸ் ஹால்சந்த் 12. ஜக்ருப்ஜீ சங்கர்லால் 13. சோபாஜி ஸ்டேசிமல் 14. ஷா பான்மல் சோவான்மல் 15. ஷா ஜக்ருப்ஜீ சுப்ராஜ் 16. பாட்லிபாய் 17. சகன்லால் பாக்டி 18. ஷா நிர்பாயிலால் பகதூர்மல் 19. குஜராத் காமர்ஸ் 20. சோஹாஜி சேஷ்மல் 21. ஜீவன்லால் 22. பூன்ஜா தாக்கர்சி 23. பரேக் 24. அமர்சந்த் சோபாசந்த் 25. ஹஜாரிமல் ஜெவ்ராஜ் 26. சப்லானி 27. ஷா தன்ராஜ் காந்திலால் 28. ஹஜான்மல் பூக்ராஜ் 29. கிருஷ்ராஜ் Co., 30. வானிசந்த் பெயுஸ்மால் 31. ஷா தெராஜி ராம்லால் 32. சேட் சிவநாராயண் 33. ஜாபே Co., 34. மூல்சந்த் ஜெய்கிருஷ்ணதாஸ் 35. ஹஜாரிமல் பூக்ராஜ் 36. ஷா ஹஜாரிமல் ஜினராஜ் 37. கேவல்ராம் செல்லாராம் 38. காலி கொத்வாலா 39. ஷா பாஸ்மல் மூல்சந்த் 40. ஷா பூடாஜீ பாபுத்மூல் 41. ஷா ஜகன்ராஜ் சாமர்மல் 42. ஷா பாலிசந்த்மூல்சந்த் 43. ஷா ஹீராஜி வாணிசந்த் 44. ஷா மூல்சந்த் மித்தாலால் 45. ஷா மகாஜி சாவிமல் 46. ஷா குலாப்சந்த் மோகன்லால் 47. ஷிவசந் ஜடன்லால் 48. ரூப்சந்த் 49. மிஸ்ரிமல் S.V. 50. சாம்பாராஜ் R. 51. H. மிஸ்ரிமல் 52. சாரிமல் 53. காஸ்கார்ஜீ 54. கானிசந்த் 55. கணேஷ்மல் 56. ஜிலானி 57. ஷா இந்துமல் தாலிசந் 58. அத்வானி 59. ஜெவாவ்கர் 60. ஜூலாசிதாஸ் 61. பன்னாலால் ராம்குமார் 62. சன்ராய் உத்தம்சந்த் 63. ராஜ்மல் 64. ஷங்கர்லால் 65. ஜெய்பால் 66. ரசிக்லால் & Co., 67. ஹிந்தர்மல் 68. மங்கிலால் 69. கோம்ராஜ் 70. பீக்கம்சந்த் 71. ஹஸ்த்திமல் 72. கேம்சந்த் 73. மிஸ்ரிமல் ப்ளுராஜீ 74. ஜீவராஜ் 75. மகன்லால் S.B. 76. V. பான்ஸ்ம ல் 77. இந்தர்மல் 78. ஆதிதன்மல் S.R. 79. சம்மர்மல் V. 80. கின்சந்த் 81. மான்ச்லால் 82. பாவார்லால் 83. பூர்மால் 84. ரூப்சந்த் 85. சந்தான்மல் 86. ஹஸ்த்திமல் 87. தாலாக்சந்த் 88. தாக்ஜி 89. பான்மல் 90. ஷாமூல்சந்த் ஆசுரரம். (ஆ) பத்து கோடி! நேஷனல் ரேயான் (இமிடேஷன் சில்க்) கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயருடன், பம்பாயில் புதியதோர் கம்பெனி ஆரம்பமாகியது. பலவகையான ஆடைகளைத் தயாரிக்கும் பெரிய ஆலைத் தொழில் இது. வீட்டுக்கொரு ராட்டைத் திட்டமல்ல; செயற்கைப் பட்டுநூல் தயாரித்து அதைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கும் முறை. இந்தக் கம்பெனிக்கு மூலதனம் எவ்வளவு? பத்து கோடி ரூபாய்! ரேயான் தயாரிப்புக்காகத் தேவைப்படும் சகல பொருள்களும் இந்தியாவிலேயே கிடைக்கின்றன. ஆகையால் மூலப்பொருளுக்காக வெளிநாட்டுத் தயவு தேவையில்லை, யந்திர சாதன யோசனைகள், கட்டட சம்பந்தமான யோசனைகள் கூறுவதற்கு, இரண்டு அமெரிக்கக் கம்பெனிகளின் உதவியைப் பெற ஏற்பாடாகி இருக்கிறது. பத்து வருஷ காலத்துக்கு அந்தக் கம்பெனிகளின் நிபுணர்கள், இந்தக் கம்பெனிக்கு யோசனைகள் கூறுவர். அதற்காக அந்த அமெரிக்கக் கம்பெனிக்குப் பணம் தரப்படும். அதாவது நாம் ஏற்கனவே கூறியபடி அமெரிக்க, வட நாட்டு முதலாளிகளின் கூட்டு ஆதிக்கம்! இந்தப் புதிய பம்பாய் கம்பெனிக்கு, யாரார் டைரக்டர்கள்? 1. சர். புருஷோத்தம தாஸ் தாகூர்தாஸ் 2. சர் ஆர்தீசர்லால் 3. வால்சந்த் ஹீராசந்த் 2. சர் மணிலால் நானாவதி 5. நவீன் சந்திர மாமதலால் 6. கஸ்தூரிபாய் லால்பாய் 7. ஏ.டி. ஷ்ராப் 8. ஜீவன்லால் சுனிலால் சினாய் 9. ரசிக்லால் ஜீவன்லால் சினாய். ஒன்பது டைரக்டர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவரனைவரும், பம்பாய் முதலாளிகள். கஸ்தூரிபாய் லால்பாய் மட்டும் ஆமதாபாத், சகலரும் வடநாடு. கம்பெனிக்குத் தலைமைக் காரியாலயம் பம்பாய். ஆலை துவக்கப்படும் இடம் பம்பாய்க்கு அடுத்துள்ள கல்யாண். இந்தியாவில் எங்கும், இவர்கள் தொழில் நடத்தலாம்; சட்டப்படி அந்த உரிமை இருக்கிறது. மானேஜிங் ஏஜண்டுகள் சினாய் கம்பெனியார், பம்பாய். பாங்கர்கள், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யுனைடெட் கமர்ஷியல் பாங்க், நேஷனல் சிடி பாங்க் ஆப் நியூயார்க் – சகலரும் பம்பாய்தான்! சட்ட சம்பந்தமான யோசனை கூற, பாயன் கம்பெனி லாக்கியா கம்பெனி, இரண்டும் பம்பாய்தான்! ஆடிட்டர்கள் தலால் அன் ஷாம் கம்பெனி – பம்பாய் க்ஷேத்திரந்தான்: பத்து கோடி! பட்டுக்குக்கூட அல்ல, செயற்கைப் பட்டுக்கு. ஆரம்பத்திலேயே, நாளொன்றுக்கு பத்து டன் செயற்கைப் பட்டு நூல் தயாரிக்கப்படுமாம். அங்கே அப்படி, இங்கே என்ன காண்கிறோம்? ஆடு ராட்டே சுழன்றாடு ராட்டே! இப்படி அங்கு கோடி கோடியாகப் பணம் போட்டு ஆலைகள் அமைக்கிறார்கள் – இந்த ஆலைகள் வளர வளர அங்கு கதர்த் திட்டம் இருக்க முடியாது என்பது வெளிப்படை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் மந்திரிமார்கள் புதிய ஆலை கூடாது என்று கூறவில்லை. இப்படிக் கோடி கோடியாக மூலதனம் வைத்துத் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொண்டு பம்பாய், வளர வளர, அதேபோல் சென்னை, குடிசைத் தொழில், ராட்டைத் திட்டம், வெல்லப் பாகு காய்ச்சும் வித்தை என்பன போன்ற முறையிலே கிராமீயக் கோலம் கொள்கிறது. பம்பாயும், சென்னையும் சேர்ந்து ஒரு தொகுதியாக இருக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபை திட்டமிடப்பட்டும் வருகிற போக்கைக் கவனித்துப் பாருங்கள். பம்பாய்க்கு சென்னை மார்க்கட்டாவதன்று வேறென்ன வழி ஏற்பட முடியும்! புரட்சியை அடக்க முதலாளி உற்பத்தி செய்யும் பண்டம் தொழிலாளியின் உழைப்பினால் ஆக்கப்படுகிறது. அந்தப் பண்டத்தை வாங்கி உபயோகிப்போர், அந்தத் தொழிலிலேயே முதலாளியாகவோ – தொழிலாளியாகவோ இருப்பதில்லை. இருந்தே ஆகவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஆகவே அந்தத் தொழிலிலே நேரடியாகச் சம்பந்தப்படாத, ஆனால், அந்தத் தொழிலால் உண்டாக்கப் படும் பண்டத்தை வாங்கி உபயோகிக்கும் பொதுமக்கள் தொகை ஒன்று இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் ‘விலை’ தான், உழைக்கிற தொழிலாளிக்கும் தொழிலை ஆளும் முதலாளிக்கும், முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. இந்த ‘விலை’யை, கூலி என்றும் இலாபம் என்றும் பிரிக்கும் முறை சரியானபடி இருப்பதைப் பொறுத்தே தொழில் வளம் இருக்க முடியும். இந்த ‘முறை’யைப் பற்றி, எடுத்துக்கூற திருத்தி அமைக்க முதலாளிகட்கோ, தொழிலாளர்கட்கோ இருக்கும் உரிமை போல ‘விலை’ கொடுத்து வாங்கும் பொது மக்களுக்கும் உண்டு. எனவே அவர்களின் கருத்து இத்தகைய சமயங்களிலே தெளிவாகத் தெரிவது, அவசியமாகிறது. முக்கியமாகிறது. எங்கோ, யாராருக்குள்ளாகவோ, எதற்கோ நடக்கிற போராட்டம் இது, நமக்குச் சம்பந்தமில்லாதது என்ற எண்ணம், பொது மக்கள் மனதிலே பல காலமாக இருந்து வருகிறது அதனாலேதான், “ரயில்வேக்காரன் ஸ்ட்ரைக்” – “மில்காரன் ஸ்ட்ரைக்” – என்று தமக்குத் துளியும் சம்பந்தமேயில்லாத பிரச்னை என்ற மனப்போக்கில் மக்கள் பேசுகின்றனர். இது தவறு. மக்கள் தங்கள் உபயோகத்துக்காக விலை கொடுத்து வாங்கும் பண்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதிலே, இரு சாராருக்கும் இடையில், அதாவது முதலாளி, தொழிலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையிலே ஏற்படும் சச்சரவு இது – நமது பணம் – நாம் கொடுத்த தொகை – ஆகவே, அது பற்றிய பிரிவினைத் தகராறு வருகிறபோது நமக்கும் அந்தப் பிரச்னையிலே சம்பந்தம் கொள்ள, அபிப்பிராயம் கூற சிக்கலைப் போக்க, முழு உரிமை இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் பொதுமக்கள் மனதிலே. இரு சாரார் கூறும் வாதங்களிலே யார் கூறுவது நியாயம் என்பதைச் சீர் தூக்கிப் பார்க்கவேண்டும். சீர் தூக்கிப் பார்த்து, நியாயமென்று மனதிலே படுவதைத் தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். “பண்டம் வாங்குபவன் நான், பணம் கொடுப்பவன் நான், நான் கொடுத்த பணத்தை, யாரார் எந்தெந்த அளவு எடுத்துக்கொள்வது என்ற நியாயம் கூற நான் வருவேன். எனக்கு அந்த உரிமை உண்டு. ஏனெனில் எந்தப் பணத்தின் பங்கு விகிதத்துக்காகச் சச்சரவு வந்ததோ, அந்தப் பணத்தைத் தந்தவனே நான்!” என்று கூறும் உரிமையைப் பொதுமக்கள் மறக்கக்கூடாது. இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும், தகராறுகளை தீர்க்கவும் முன் வருமாறு, பொதுமக்களை அழைக்கும் பணியினைத் திராவிடர் கழகம் செய்து வருகிறது. தொழிலாளருக்கும் பொது மக்களுக்குமிடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் அரிய காரியம் அது. அந்தக் காரியத்தை செய்ய வேறு கட்சிகளுமில்லை. தொழிலாளர் கட்சி – முதலாளி கட்சி என்று இரண்டு கிளம்பி மோதிக்கொள்வதும், மோதலின் போது, சட்டத்தையும் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவது எங்கள் கட்சி என்று கூறிக் கொண்டு சர்க்கார் கிளம்புவதும்தான் காண்கிறோம்; பொது மக்கள் முன்பு கொண்டுவரப்பட வேண்டிய பிரச்னை இது என்பதும் கவனிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் மன்றத்தின் முன்பு, வழக்குரைத்து நீதி வழங்கும்படி கேட்கும் காரியத்தைத் திராவிடக் கழகம் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கும் தொழிலாளருக்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்தச் செயலைப் புரியும் திராவிடக் கழகத்தாரிடம் பிறர் நன்றி காட்டினாலும் காட்டாவிட்டாலும் களிப்புடன் அக்கழகம் கடமையைச் செய்துகொண்டிருக்கும். அத்தகைய கடமையில் ஈடுபட்டுள்ள திராவிடக் கழகத் தோழர்களே! கோவையில் நடைபெறும் வேலை நிறுத்தத்தின் காரணத்தை விளக்கிடுங்கள். பொதுமக்களிடம் தொழிலாளர்களின் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதையும் எடுத்துக்காட்டுங்கள். பொது மக்களின் அன்பும், ஆதரவும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்யுங்கள் உணர்ந்தாலும், உணர மறுத்தாலும், ஆலையிலே அகப்பட்டுத் தவிக்கும் தோழர்கள் நமது இனத்தவர், திரு இடத்தவர் திராவிடர். அவர்கள் படும் துயரத்தைப் பொது மக்கட்கு எடுத்துக் கூறும் பணி நம்முடையது. இந்த ஒரு வேலை நிறுத்தத்தின் போது மட்டுமல்ல. இதுபோன்ற சமயத்திலெல்லாம், திராவிடர் கழகம் இந்த முக்கியமான பணியினை மேற்கொள்ள வேண்டும் – மேலும் மேலும் தெளிவாக – சற்றே இன்னும் பற்றுகொண்டு, வயலோரத்திலுள்ளவனுக்குத் தான் திராவிடன் என்பது தெரியாது – தான் ஓர் ஏழை என்பது தெரியும். நமக்கோ இரண்டு தெரியும். ஆலையிலே உள்ளவனுக்கு ஆரிய திராவிடப் பிரச்சனை அர்த்தமற்ற கூச்சலாகவே தோன்றும் – அவனுக்குத் தனக்குள்ள அன்றாடக் கஷ்டம் தான் தெரியும். நமக்கோ அந்த இரண்டும் தெரியும். அவர்கள் நம்மை மறப்பதிலே ஆச்சரியமில்லை. நாம் அவர்களை மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். நம்மை அவர்கள் அறியார்கள்! நாம் அவர்களை அறிவோம்! அறிவதால், அவர்களுக்குப் பணிபுரிவோம். நாம் அறிவோம் ஆலைத் தோழனும் கழனி உழுபவனும் காளிமகமாயியை நம்பும் அளவுக்குக் ’காந்தி மகாத்மா’வைக் கூட நம்பாதவன். நாம் கூறும் கருத்தை நம்பப் போவதில்லை! நம் கருத்தோ அவனுக்கு வேம்பு! அவன் தன் அன்றாட வாழ்க்கை சுகப்படும் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டால் மேலும் இரண்டோர் தேங்காய்களை இன்னும் சிலபல கோயிலுக்கு உடைத்துப் பக்தியை காட்டவே பயன்படுத்துவான்! இதுபோலவே நாம் அறிய வேண்டுவது வேறொன்றும் உளது. ஏழையின் வயிற்றிலடித்துத் திரட்டிய பணத்தை உருட்டி. வைத்துக்கொண்டிருக்கும் செல்வந்தர்கள் பழனிப் படிக்கட்டிலே பவுனை இழைக்கிறார்கள். கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பாழாக்குகிறார்கள். மடாதிபதிகட்கும் குருமார்கட்கும் காணிக்கை தருகிறார்களே என்பதே. அவர்கள் பணத்தைப் பகுத்தறிவுக்கோ பயன்தரும் பணிக்கோ செலவிடும் திருந்திய மனமுடையவர்கள் அல்ல. போக போக்கியத்துக்கும் போகிற கதி நல்லதாக இருக்க வேண்டுமே என்பதற்குமே பணத்தைச் செலவிடுபவர். எனவே ஏழையின் பங்கு ஏழைக்குப் போய்ச் சேரவேண்டிப் பணிபுரியும்போது ஏழை அதனைப் பெற்று ஏதோ பயனற்ற காரியத்துக்குத்தானே செலவழிக்கிறான் என்ற பேச்சை முற்றத்திலே நிறுத்தி செல்பவனின் செயலுக்கு மூடிபோடுவது ஆகாது. பொருள் பாடுபடுபவனுக்குப் போய்ச் சேர வேண்டும். போய்ச் சேரும் பொருளும் பயனுடைய காரியத்துக்குச் செலவிடப்பட வேண்டும். இரண்டும் நமது கொள்கை – இரு விதிகள் ஒன்றுக்காக மற்றொன்றைப் பாழாக்குதல் கூடாது. ஒரு கண்ணை மூடி. மற்றோர் கண்ணை மட்டும் திறந்து கொண்டே பார்த்தால் உருவம் சரியாகத் தெரியாது. இந்த மூலம் உணர்ந்து திராவிடர் கழகம் சமூகக் கோளாறு, பொருளாதாரக் கோளாறு எனும் இரண்டினையும் தாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு வளரவேண்டும்; மேலும் மேலும் விரைவாக தெளிவாக, காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள தொடர்பை போட்டியிட்டோ பிரசார மூலமோ அடக்குவதன் மூலமோ துண்டித்து விடக்கூடும் – துண்டிக்கப்படுவதத்தனையும் அழிவதில்லை – துளிர்ப்பதுண்டு வெட்ட வெட்டச் சுரப்பதும், அரைக்க அரைக்க மணப்பதும் – துண்டிக்கத் துண்டிக்கத் துளிர் அதிகம் விடுவதுமாகப் பல இயற்கை நிகழ்ச்சிகள் உண்டு. துண்டிக்கவே முடிகிறது என்று கொண்டாலும், தொடர்பைப் போக்கிவிடுவதால் பிரச்னையைப் போக்கிவிட முடியாது. அவசரச் சட்டம் வருவதற்குப் பலப்பல நாட்களுக்கு முன்பே, நாம் எழுதினோம், கம்யூனிஸ்டுகளைத் தொழிலாளர்களிடமிருந்து நீக்கி விட்டு, அவர்களுக்குப் பதிலாகக் காங்கிரஸ்காரர்களையே கொண்டு தொழிலாளர் இயக்கத்தை நடத்தச் சொன்னாலும், மூலம் கெட்டுவிடப் போவதில்லை. காங்கிரஸ்காரர் அந்த முனையில் வேலை செய்ய ஆரம்பித்த சில காலத்துக்குப் பிறகு, தொழிலாளர் பிரச்னையை நேரடியாகக் கவனிக்கத் தொடங்கியதும், தனது வெள்ளைச் சட்டை, காவிஏறி சிகப்பாகி விடுவதைக் காண்பர். அதாவது அவரும் கம்யூனிஸ்டு ஆகிவிடுவார் என்று கூறினோம். தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் நண்பர் நாராயணசாமி அவர்களின் ‘சிறைவாசம்’ நமது முன்னால் வாதத்தை ஆதரிக்கும் சம்பவமாயிற்று. கம்யூனிஸ்டுகளைப் பிடித்தனர் –காங்கிரசாரையும் பிடித்தனர் – ஏன்! – அவர் கம்யூனிஸ்ட் சாயலாகக் காணப்பட்டார் – கம்யூனிஸ்டுகள் என்ன காரியம் செய்து வந்தனரோ அதே காரியம் செய்தவர் என்று கருதப்பட்டார். இதுதான் நடக்கும் – நாளாகவாக இது அதிகப்படும். கோவை வேலை நிறுத்தத் துவக்கத்தின் போதே ஆலைக்காரர்கள் தமது அறிக்கையிலே என்ன கூறுகின்றனர்? கம்யூனிஸ்டுகள் மீது என்ன கூறுவார்களோ வழக்கமாக அதே குற்றச்சாட்டுதான். “தகராறு கிளப்புகிறார்கள்; தூண்டிவிடுகிறார்கள்; பலாத்காரச் செயலில் ஈடுபடுகிறார்கள்; உருட்டல் மிரட்டல் செய்கிறார்கள்.” இவைகளை எல்லாம் செய்வதாகத்தான் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டினர். கோவையிலே ‘ஸ்ட்ரைக்’ நடத்தும், தொழிற் சங்கத்தாருக்கும், இதேதான் முதலாளிமார் அறிக்கை மூலம், அர்ச்சனை நடக்கிறது. அது மட்டுமா! இல்லை; கம்யூனிஸ்டுகளைவிட இவர்கள் மிக மோசமான முறைகளில் நடந்துகொள்கிறார்கள் என்று குறை கூறுகிறார்கள் முதலாளிமார்கள். “It is most unfortunate that the Union leaders instead of creating a congental atmosphere conducive to a settlement should be resorting to intimidation Violence and other tactics which are worse than those adopted by the Communists.” (இந்து, 13-12-47, 4ம் பக்கம்) இப்படித்தான் நிலைமை எழும்! வேலை நிறுத்தத்தை யார் நடத்தினாலும் குற்றச்சாட்டு இதுவாகத்தான் கூறப்படும்! பிள்ளையார் சுழி போட்டுப் புதுக்கணக்கு துவக்கும்போதே, ஆலை அரசர்கள், இந்த வாசகத்தை, கொட்டை எழுத்திலே எழுதி வைத்துவிடுவர்; ஏட்டிலே யார் தொழிலாளர் பிரச்னைக்காக வேலை செய்தாலும் இந்த ஏட்டை எதிரிலே நீட்டுவர், ஏன்? இதிலே குறிப்பிடப்படும், Intimidation, Violence, ஆகியவைகளுக்கெல்லாம், சட்டத்திலே, கடுமையான தண்டனை குறிப்பிடப்பட்டிருப்பதும், ஆள்பவர்கள், இத்தகைய குற்றங்கள் நேரிடாதபடி தடுத்து, சட்டத்தை நிலை நாட்ட வேண்டியவர்கள் என்பதும் முதலாளிமார்களுக்குத் தெரியும் எனவே தான் இந்த இரு வாசகங்களை அழியாத முறையிலே எழுதிவைத்துள்ளனர். ஆகவே, இன்ன கட்சியினர் வேலை செய்வதால் மட்டுமே தொழிலாளர் பிரச்சினையிலே சிக்கல் அதிகரிக்கிறது என்று அறுதியிட்டுக் கூறுவது அர்த்தமற்றதாகும். யார், பணிபுரியினும் இதேதான் குற்றச்சாட்டாகக் காட்டப்படும் – அதற்குத் தக்க நடவடிக்கைகள் நடமாடும். கம்யூனிஸ்டுகள் போல, காங்கிரஸ் சோஷியலிஸ்டுகள் ஆகஸ்ட்டுத் துரோகிகளுமல்ல, மாஸ்கோ பக்தர்களுமல்ல! ஸ்டாலின் செய்யும் தவறுகளைக் கூடக் கண்டுபிடிக்கும் அளவு, சர்வ தேசீய கண்ணோட்டம் இருப்பினும், காந்தீயத்தைக் கைவிடோம் என்று கூறும் போக்கினர்! அவர்கள் கம்யூனிஸ்டுகள் கொள்ளும் போக்கு சரியல்ல என்றும் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்கள், தொழிலாளரிடையே வேலை செய்து என்ன பலன் காண்கிறார்கள்? அவர்கள் மீதாவது சந்தேகப் பார்வை விழாமல் இருக்கிறதா என்று பார்த்தால், வேதனையின் உருவம் நன்கு விளங்கும். பீகாரிலே பல காங்கிரஸ், சோஷியலிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறிக்கை விட்டிருந்தார், இரண்டு வாரங்களுக்கு முன்பு. ஆகவே, தொழிலாளரிடையே வேலை செய்பவர்கள் எந்தக் கட்சியாக இருப்பினும் காங்கிரஸ், காங்கிரஸ் சோஷியலிஸ்டு தொழிற்சங்கம் என்று சின்னத்தை ஏதுவாகக் கொண்டிருப்பினும் அவர்கள் மீது குற்றம் சாட்டவோ தண்டிக்கவோ முதலாளித்துவம் தயங்கவில்லை. எனவே கம்யூனிஸ்டுகளை அடக்குவதுதான் சரி! பிறகு தொழிலாளர் கொந்தளிப்பே இராது என்று எண்ணுவதும் சரியல்ல. கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு தொழிலாளரிடையே வேலை செய்தால்தான் தொல்லை வருகிறது; காங்கிரஸ் சோஷியலிஸ்டு என்றோ, அசல் காங்கிரஸ் என்றோ கூறிக்கொண்டு தொழிலாளரிடம் வேலை செய்தால் தொல்லை வராது என்று கருதுவதும் சரியல்ல. போலித் தலைவர்களாக இருந்துகொண்டு தொழிலாளர் இயக்கத்தைத் தயவு கேட்டு பெறும் ‘பல்லைக் காட்டும்’ அமைப்பாக மனம் இடம் கொடுத்தால், நான் நோகாமல் அடிக்கிறேன், நீ ஓயாமல் அழு! என்ற போக்கிலே ஒப்புக்கு வேலை செய்தால் மட்டுமே தப்பமுடியும். உண்மையுடன் உழைக்க முன்வந்தால் அவ்வளவுதான், கம்யூனிஸ்டு அல்ல என்ற காரணத்துக்காகக் கட்டி முத்தமிட மாட்டார்கள் ஆளவந்தார்கள். காங்கிரஸ் ஆளவந்தார் ஆனதே முதலாளிமார்கள் தயவினாலே என்று முதலாளிமார்களே வெகுதாராளமாகப் பேசிடக் கேட்கிறோம். எனவே அவர்கள் காங்கிரசினால் அமைக்கப்பட்டுள்ள மந்திரி சபைகள் தங்களுக்கு ஆதிக்கம் வாங்கி தருவதற்கேயொழிய, தொழிலரசுக்கு வழிசெய்ய அல்ல என்று தீர்மானமாக எண்ணுகிறார்கள். இந்த ஆட்சியின் போது கம்யூனிஸ்டுகள் என்ன விதமாக நடத்தப்படுகிறார்களோ, இதே விதமாகவே சென்ற முறை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது காங்கிரஸ் சோஷியலிஸ்டுகள் நடத்தப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். ஆச்சாரியார் அதுசமயம், சென்னை வந்திருந்த காங்கிரஸ் சோஷியலிஸ்டு பாட்லிவாலாவைத் தடை உத்திரவு போட்டுத் துரத்தியதுடன் இந்த ஆட்கள் சோற்றுக்கில்லாதவர்கள் சுற்றித் திரிகிறார்கள் என்று பேசியதை நண்பர்கள் மறந்துவிட்டனர். பாட்லிவாலா இந்த இடிபட்டபோது ஆகஸ்டு இல்லை அதற்கு துரோகம் செய்தார்; ஆகவே அவர்மீது கோபம் என்று வாதிடக் காரணமில்லை. அவர் அன்று செய்த தவறு. காங்கிரஸ் என்ற அளவோடு நிற்காமல், கூட ஒரு வார்த்தை சேர்த்துக் கொண்டார், சோஷியலிஸ்டு என்று. அந்தச் சமதர்மவாடை அவர் மீது பாயச் செய்தது, அந்த நாள் ஆளவந்தார்களை. ஏன்? காங்கிரஸ் மூலம் இங்கு சுயாட்சியை ஏற்படுத்தும் வரையில்தான், முதலாளித்துவமும் சனாதனமும் அனுமதிக்குமேயொழிய காங்கிரஸ் நாட்டிலே உண்டாக்கும் எதிர்ப்புணர்ச்சியைக் கொண்டு பழமையை வீழ்த்த சமதர்மத்தைப் புகுத்த நினைத்தால், உடனே பழமை சீறும்; முதலாளித்துவமும் சீறும். தாமாக எதிர்ப்பதற்குப் பதில், தமக்கு வாழ்க்கைப் பட்ட காங்கிரசை ஏவிவிடும்! அதுதான் இப்போது நடப்பது!! ஆகவேதான் தாக்குதல், எல்லாச் சட்டைகள் மீதும் உள்ளன. இந்த நிலைமை நாளாகவாக வளருமே ஒழியக் குறையாது. சுயாட்சியில் பலனை அனுபவிக்க, நாட்டிலே பல சக்திகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு நிற்கின்றன இந்த மகத்தான நேரத்தில், சமூக சமய பொருளாதார துறைகளில் தீவிரமான, சமதர்ம மணம் கமழும் கொள்கை கொண்டவர்கள் யாராக இருப்பினும் எங்கே இருப்பினும் என்ன பெயர் கூறிக் கொண்டாலும் கண்டுபிடிக்கப்பட்டு, தாக்கப்படுவர். தாக்குதல் பலிக்குமா என்பது வேறு விஷயம். இத்தகைய தாக்குதல்கள் தாக்கினவர்களைத் தகர்த்துவிட்டதாகவே வரலாறு கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடக்கிறது. இப்போது மோப்பம் பிடித்தபடி. பழமையும், முதலாளித்துவமும் உலாவுகின்றன; ஊரெல்லாம் தேடுகின்றன. தீவிரவாதி எங்கே? புதுமுறை கேட்பவன் யாவன்? என்று கேட்ட வண்ணம் புது எழுச்சியைத் தடுக்கக் கிளம்பும் இந்தப் பொல்லாத சக்தியின் போக்கு ஜுர வேகத்தில் வளர்ந்து, அந்த வளர்ச்சியாலேயே வீழ்ச்சியுமடையும். தீவிரவாதிகட்குத் தேவை எல்லாம் இப்போது ஒன்றேதான். தாக்குதலைத் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். அந்த சக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இந்தத் தலைமுறையில் தீவிரவாதி தொலைக்கப்பட்டும் போனால் பிறகு நினைத்தாலே நடுக்கம் பிறக்கும். பழமையின் பயங்கரப் பிடியிலே நாடு போய்ச் சேரும். பண்டித நேருவின் கண்முன் இந்த நாட்டில் ஏழையின் சராசரி வருமானம் இரண்டே அணாதான். இந்நிலையில் அவன் எப்படி சுகவாழ்வு பெறுவது? அவனுடைய வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்திக் கொள்வது? அரை வயிறு கஞ்சிக்கும்! அவன் அவதி பல பட வேண்டியதாகத்தானே இருக்கிறது. ஏகாதிபத்தியப் பிடியினால் வந்த அவல வாழ்வல்லவா இது! பிடி அகன்று, நாட்டுத் தலைவர்கள் கைக்கு ஆட்சியுரிமை கிட்டுமாயின், மக்கள் வாழ்வு வளப்படுமே – அப்போது எவர் குறுக்கீடுமின்றி, தலைவர்கள்! நினைத்ததைச் செய்து முடிக்கலாமே என்றெல்லாம் பேசினர்; இன்றும் பேசுகின்றனர். மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்பது இயற்கையாகும். குற்றம் மக்களுடையதல்ல. மக்களை இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு பலமான பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று செய்யப்பட்டு வருகிறது. வெள்ளையன் ஆட்சியால் இங்கு தேவையான அளவிற்குத் தொழில் உருவாகவில்லை. சொந்த நாட்டின், நன்மையை உத்தேசித்து, இந்த நாட்டில் புதுத் தொழில் பலவும் காண வெள்ளையன் முற்படவில்லை. கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தை தன்னாட்டின் பொருள் செழுமைக்கே, இந்நாட்டில், நாட்டு மக்களின் மூலதனம் கொண்டு புதுத்தொழில் பெருக முடியாமல், கட்டுப்படுத்தி விடுகிறான். எனவே இங்கு செல்வம் பெருக வழியில்லை; மக்கள் தொகைக்கேற்ப, இங்கு பொருள் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆதலால் மக்கள் பசியாலும், பஞ்சத்தாலும் மடிகிறார்கள். வெள்ளையன் வெளியேறி விட்டால், இந்த இல்லாமைத் தொல்லை எவ்வளவோ தொலைவில் நின்றுவிடும். மக்களின் வறுமை தொலைந்த, தேவை நிறைந்த மகோன்னதபுரியாக, இந்தப் ‘புண்ய’ பூமியை ஒரு நொடியில் மாற்றி அமைத்து விடுவார்கள் என்றெல்லாம் முன்னர் தலைவர்கள் கூறிய வாயுரையை, மக்கள் நூற்றுக்கு நூறு உண்மையெனக் கொண்டனர். தலைவர்களின் நம்பிக்கையூட்டும் திறமையான பேச்சே இதற்குப் பொறுப்பு. தொழில்வளம் பெருகாமல் போகவே, இங்கு வேலையற்றோர் தொகை நாளுக்கு நாள் கூடியது. பிறந்த நாட்டில் பட்டினி கிடப்பதைக் காட்டிலும், கடல் கடந்து சென்றாவது, எடுபிடி. ஆட்களாக இருந்தாவது, வயிற்றை நிரப்புவோம், மரணத்தைத் தவிர்ப்போம் – என மக்கள் தேயிலைத் தோட்டத்தையும் ரப்பர் காட்டையும் தேடிச் சென்றனர். வெய்யிலிலிருந்து வந்தவனுக்கு நிழலின் அருமை அதிகமாகத் தெரிவது போல், பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தவனுக்குப் பசியாற உணவு கிடைத்ததும் நெஞ்சம் திருப்தி ஏற்படுவது இயல்பேயாகும். இந்த நிலை நீடித்து நிற்கவில்லை. மீண்டும் மனச் சாந்தி மறைந்தது. பிறந்த நாட்டைப் பிரிந்திருக்கும் மன வேதனை, எதிர்காலத்தைப் பற்றின அச்சம், வாழ்வு சரிவது கண்டு கவலை, மறுபடியும் பிறந்த நாட்டில் பெருவாழ்வு வாழ மாட்டோமா எனும் ஆசை, இத்தன்மையில், இந்நாட்டு மக்கள் வேற்று நாட்டில் மானம் மரியாதை இழந்து, இருந்து வருகின்றனர். ஏகாதிபத்தியப் பிடியால் ஏற்பட்ட அனர்த்தம் இது. இப்படி தகர்த்தெறியப்பட்டு, தரணியாளும் பொறுப்புத் தியாகிகளின் கைமாறுமானால்; வேற்று நாட்டில் வேதனைப்படும் மக்கள் அனைவரும், பிறந்த நாட்டிற்குத் திரும்பி, நாட்டைப் பொன்னாக்கிப் புகழ் வாழ்வு வாழலாம் எனப் பறைசாற்றப்பட்டது. இப்பறைசாற்றலில் மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் எவ்வாறு இருப்பர்? பிடி தளர்ந்துவிட்டது. புகழ்மிக்க தியாகிகள் பலரும், ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளனர். வெள்ளையன் வெறும் ஏவலாளியாகவும், கட்டளைப்படி காக்கும் காவலாளியாகவும் காலங்கழித்து வருகிறான். இதுவும் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. தலைவர்கள் பேசினது, மக்கள் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்தது இன்று நடக்கிறதா? அதற்கான போக்கிலே, எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், அமைந்திருக்கின்றனவா? முன்னர் தலைவர்கள் சொல்லியவண்ணம் அந்த இலட்சிய பூமியை இங்கு காண அதற்கேற்ற முறையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றனவா? இவ்வளவு வினாக்களுக்கும் ‘இல்லை’ எனும் ஒரே பதில்தான் கூறவேண்டியதாக இருக்கிறது. பசித்த மக்களுக்கு உணவளிக்கும் முறையிலேயோ வேலையற்றுக் கிடப்போர்களுக்கு வேலைதரும் வகையிலேயோ, ஆளவந்தார்களின் போக்கு இருக்கவில்லை. முதலாளிகளின் மிடுக்கு தளராமல் எப்படிப் பார்த்துக்கொள்வது – அவர்களுடைய இலாப் பெருக்கத்திற்கு எவ்வாறு ஆக்கந்தேடுவது – மத்திய கிழக்கிலும், கீழ்க் கோடியிலும் உள்ள சிறு சிறு நாடுகளின் சந்தையை எவ்வாறு பிடிப்பது – அங்கு இத்துறையில் ஏற்படும் போட்டியை எவ்வாறு சமாளிப்பது – ஆசியா கண்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும் – அதற்கான முறையில் இராணுவம் அமைக்க வேண்டும் – தேசகவுரவம் காக்கப்பட வேண்டும் என்பன போன்ற பிரச்னைகளில்தான் ஆளவந்தார்களின் செயலும் கருத்தும் செல்கிறது. முன்னாள் வெள்ளை முதலாளிகளின் வெறியாட்டத்தில், இங்குள்ள ஏழை மக்களின் வாழ்வு இருண்டு கிடந்தது. ஆனால் இன்று, வடநாட்டு முதலாளிகளின் பேயாட்டத்தால், ஏழை மக்களின் வறண்ட வாழ்வு வளமாவதற்குப் பதிலாக, மேலும் கருகிப்போவதற்கே வழிவகை செய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அதிகாரபீடம் மாறி, அந்த அதிகார பீடத்தில் தியாகிகள் அமர்ந்த பின்னரும், ஏழைக்கு இன்பமளிக்கும் முறையில் மாற்றங்கள் காணப்படவில்லை. மாறாக முதலாளிகள் விருப்பத்தை இலாப ஆசையைத் தங்கள் தியாகமெனும் திரையிட்டு மறைத்து, நல்லதோர் நோக்காகப் – போக்காகக் காட்டப்படுகிறது. நாம் மட்டும் அல்ல. இன்னும் நல்லறிஞர் பலரும். இந்நிலை ஏற்படும் என்பதைச் சுட்டிக் காட்டினர். மக்களுக்கு இருந்த மயக்கத்தில் நமது வாயுரை, அவர்கள் செவியில் புகவில்லை. இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. ஆளவந்தார்களின் இந்த ஆபத்தான போக்கைத் தடுத்து, தக்க வழியில் அனைவருக்கும் பயனளிக்கும் முறையில், திட்டம் தீட்ட நிர்ப்பந்திக்கலாம். விழிப்படைந்தவர்கள், அந்த நாள் விருப்பு வெறுப்புகளை மறந்து ஒன்றுபடுவதின் மூலந்தான், இந்த நற்காரியம் வெற்றி பெறவும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பணி பல புரியவும் முடியும். கடினமானது, ஆனாலும் சாத்தியமாகக் கூடியது. ஆளவந்தார்கள் மீது ஏதாவது குறைகூற வேண்டும் என்பதற்காக எதனையும் நாம் கூறவில்லை. போதிய ஆதாரத்துடன், அவர்கள் போக்கு, நாட்டு மக்களுக்கு மேலும் நலிவைத் தரக்கூடியது என்று கூறுகிறோம். சில நாளைக்கு முன் இந்தியப் பார்லிமெண்டில் நிதி அமைச்சர் ஒரு மசோதா கொண்டு வந்தார். மூல தொழிற்சாலைகளுக்குப் பண உதவி செய்வதற்காக, இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பொரேஷன் எனும் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இந்த நிதி அமைப்பின் தன்மை என்ன? இதன் போக்கு எவ்வாறு இருக்கும்? இதனால் இலாபம் பெறுகிறவர்கள் முதலாளிகளா அல்லது மக்களா? இதற்கு அவசியமென்ன? என்பன போன்ற விஷயங்களை நாம் அலசிப் பார்க்க வேண்டும். இதன் மொத்த மூலதனம் ஐந்து கோடி ரூபாய் 25,000 வீதம் 2,000 பங்குகளாகப் பிரிக்கப்படும். இதில், இந்திய அரசாங்கத்திற்கு 400 பங்குகள் – இந்திய ரிஸர்வ் பாங்குக்கு 400 பங்குகள் – மீதமுள்ள 1,200 பங்குகள் முதலாளிகளுக்கும் அவர்கள் ஆதிக்கத்திலுள்ள பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற நிதி ஸ்தாபனங்களுக்கும் ஆகும். மற்றவர்களுடைய மூலதனத்தை திருப்பிக் கொடுக்கவும் 2½ சதவிகிதம் இலாபத்தில் பங்களிக்கவும் இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. 20 கோடி ரூபாய்க்குக் குறையாமல் கடன் பத்திரங்கள் வெளியிடவும், இந்த தொகையை திரும்பக் கொடுக்கவும், அதற்கான வட்டி தரவும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் இருக்கிறது. மேலும் 10 கோடி ரூபாய் வரையில், நீண்ட காலச் சேமிப்பாகப் பெறவும் அனுமதிக்கப்படுகிறது. எந்த நாட்டவராயினும், இதில் பணத்தைச் சேமிக்கலாம். இதுமட்டுமல்ல, மத்திய அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் வெளிநாடுகளில் கடன் வாங்க உரிமை இருக்கிறது. இந்தக் கார்ப்பரேஷனை நிர்வகிக்கிறவர்கள் 11 பேர்கள், இந்திய அரசாங்கத்தின் சார்பில் இருவரும், தொழில் அரசர்களையே நிர்வாகிகளாகக் கொண்ட ரிசர்வ் பாங்கியின் சார்பில் மூவரும், முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள பாங்குகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் சார்பில் ஐவரும், நிர்வாக அங்கத்தவர்கள் ஆவர். இதன் மானேஜிங் டைரக்டர், இந்திய அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட போதிலும், ரிஸர்வ் பாங்கு நிர்வாகிகளைக் கலந்துகொண்ட பின்னர்தான் நியமிக்கப் பெறுவார். மூலதனம் வரும் வகையையும், நிர்வாகிகள் நியமிக்கப்படும் முறையையும் பார்க்கும் பொழுது, இந்த இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு முதல் தரமான முதலாளிகள் ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாகத்தான் இருக்க முடியும் என்பது விளங்கவில்லையா? இந்திய அரசாங்கத்தின் மேற்பார்வை, கட்டுப்பாடு என்பனவெல்லாம் வெறும் அலங்காரச் சொற்களேயன்றி வேறன்று. இது குறித்த மசோதாவை முன்னிலைப்படுத்திய நிதி அமைச்சர் ஷண்முகம்: “தனி நபர்களால் தொடங்கப்பெறும் தொழில்களுக்கு உதவி செய்வதையே குறியாகக்கொண்டு இக்கார்ப்பரேஷன் ஆரம்பிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் முதலாளித்துவ முறைக்கே, இன்று பெரியதோர் நெருக்கடி காத்துக்கொண்டிருக்கிறது. இதனை முதலாளித்துவ நாடுகள் நன்கு தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நாட்டு முதலாளிகளும் இதனை உணராமல் இல்லை, முதலாளிகளில் ஒருவரான நிதி அமைச்சர் ஷண்முகமும், வர விருக்கும் ஆபத்தை அறிந்துள்ளதின் விளைவாகத்தான், தன் வர்க்கத்தைக் காக்கும் பெரும் பணியில் முனைந்துள்ளார். இதனை நாம் இட்டுக்கட்டிக்கூறவில்லை. நிதிமந்திரியாரின் வாயுரையே இதனை மெய்ப்பிக்கிறது. இதோ “தனி நபர் தொழில் ஸ்தாபனத்தின் பணபலம் எவ்வாறு இருந்த போதிலும், குறிப்பிடத் தகுந்த அளவு உதவத் தேவைப்படும் நிலை ஏற்பட்டே தீரும். அந்நிலையில் வேண்டும் தொகையைப் பொதுமக்களிடமிருந்து சாதாரணமாகப் பெற முடியாது. குறித்த தொழிலின் அழிவும், வளர்ச்சியும், அவ்வாறு பெறப்படும் உதவியைப் பொறுத்த விஷயமாகும். இதுபோன்ற நெருக்கடியான நிலைமையிலிருந்து சம்பந்தப்பட்ட தொழில்களைக் காப்பாற்றவே, இக்கார்ப்பரேஷன் துவக்கப்படுகிறது. முதலாளித்துவ முறைக்கு எதிர்காலம் இல்லை என்பதையும், நெருக்கடி விரைவில் வரவிருக்கிறது என்பதையும், தனிமுதலாளிகளால் சுயேட்சையாகத் தீர்த்துக்கொள்ள முடியாதென்பதையும், அரசாங்கமே அச்சமயத்தில் துணை செய்ய வேண்டும். தீர்க்கமாகத் தெரிந்துள்ள ஷண்முகம், தனது பங்காளிகளைக் காப்பாற்ற இந்தப் புனிதப் பணியில் இறங்கியுள்ளார். நாம் இது கண்டு ஆச்சரியப்படவில்லை, எட்டி இனிக்காது என்று தெரிந்துள்ள காரணத்தால்! முதலாளித்துவ முறை பயனற்றது என்று கண்டபின்னரும், அதனைத் தொலைத்துத் தலைமுழுக முதலாளிகள் தாமாக முன்வரமாட்டார்கள். அதன் அழிவைத் துரிதப்படுத்த, அது அழிந்த இடத்தில் வேறோர் நல்ல முறையை நிர்மாணிக்க, சமதர்மமே பிணி தீர்க்கும் மருந்து – அதுவே தமது வாழ்வின் இலட்சியம் – எனப் பேசி வந்தவர்கள், இலட்சியப் பாதையைக் காணவும், அதன் வழி மக்களை இட்டுச் செல்லவும் கடமைப் பட்டவர்கள், கண்மூடி மெளனியாகி, நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை வளரவிட்டுத் ததாஸ்து கூறிக்கொண்டு இருப்பது, இன்று இந்தப் ‘புண்ணிய பூமி’ ஒன்றில்தான் நடக்கக்கூடிய காரியமாகும். நமது காது செவிடுபடும்படி சமதர்மம் பேசிப்பேசி தமது இலட்சியம் இதுதான் எனச் சுட்டிக்காட்டிய, பதவியிலுள்ள பண்டித நேருவின் முன்னிலையில்தான், முதலாளித்துவத்தை உயிர்ப்பிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. சமதர்மப் பண்டிதரோ சல்லடம் கட்டுவதற்கு பதில், ஷண்முகத்தின் போக்கிற்கு ‘ததாஸ்து’ கூறுகிறார். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account