[] 1. Cover 2. Table of contents நேருவின் மரபு நேருவின் மரபு   ஆர். பட்டாபிராமன்   pattabieight@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/the_legacy_of_nehru மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/the_legacy_of_nehru This Book was produced using LaTeX + Pandoc [nehru image 1.jpg] “The real joy of life is to work for a great purpose, to understand it and put all the strength and energy of the integrated personality into it. If there be delay in the realisation of our goal, what does it matter? Let our steps be in the right direction” முன்னீடு நேருஜி அவர்களை என் குழந்தைப்பருவத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் காட்டியதாக என் பெற்றோர்கள் கூறியுள்ளனர். நேரு குறித்து மிகக் குறைவான புரிதலே என்னிடம் இருந்து வந்தது. எனது தாய்வழி பாட்டனார் நேரு குறித்து அவ்வப்போது ஏதேனும் பெருமையாக சொல்லிக்கொண்டிருப்பார். பள்ளிக்கூட நாட்களில் நேரு தன் மகளான இந்திராவிற்கு எழுதிய கடிதங்களை படித்ததாக நினைவு. ஓ வி அளகேசன் மொழிபெயர்ப்பு புத்தகம் உலக சரித்திரம் ஒன்றையும் படித்த நினைவு. எதுவும் உள்போகவில்லை. புரிந்துகொள்ளும் ஆற்றலோ பொறுமையோ பொறுப்போ அவ்வயதில் இருக்கவில்லை. நேரு மறைந்தார் என்கிற செய்தி வானொலியில் மதியம் கேட்டவுடன் என் பாட்டனார் மூர்ச்சையானதும் குடும்பத்தார் கவலையடைந்ததும் நினைவில் நிற்கிறது. அப்போது எனக்கு 8 வயதிருக்கலாம். காங்கிரசை கொண்டாடிய அதற்கு தேர்தலில் வேலை செய்த, கக்கன் போன்றவர்கள் வீட்டிற்கு வந்த குடும்ப சூழல் இருந்தாலும் என்னிடம் பள்ளி கல்லூரி நாட்களில் நேரு உள் நுழையவில்லை. சிறு வயதில் அமெரிக்கன் ரிபோர்ட்டர், சுதேசமித்திரன் வந்தன. பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துவில் ஜி கே ரெட்டி என வாசிப்பு இருந்தது. மிரர் கிடைத்தது. சலபதிராவின் நேரு கூட பெரிதாக உள்நுழையவில்லை. வேலைக்கு வந்தவுடன் தோழர் கே எஸ் கே (கே எஸ் கிருஷ்ணமூர்த்தி) மார்க்சிய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். 40 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்ஸ் உடன்தான் புரிதலுடனும்- புரிதல் அற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொன்னவை எழுதியவைகளுடனும் அதற்கு அப்பாற்பட்டும் நீண்ட பயணம். தோழர் ஜெகன் அவ்வப்போது பாரதியுடன் நேரு- காந்தி பற்றி உரையில் தொட்டுச் செல்வார். ஒலிக்கதிரில் எழுதுவார். அப்போதும் நேரு பெரிதாக வரவில்லை. திரு வி க கல்லூரி நூலகத்தை பேராசிரியர் ராமசாமி எனக்கு திறந்துவிடச் செய்தார். ஏராள ஆக்ஸ்போர்ட் வெளியீடுகள், கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று ஆவண தொகுப்புகள் கிடைக்கப்பெற்றன. திருவாரூர் வ சோ ஆண்கள் பள்ளி நூலகத்தை புலவர் அ பா பாலையன் திறந்து விட்டார். திருவாரூர் மாவட்ட நூலகத்தின் முதல் 7 patronsகளில் பேராசிரியர் பிறையுடன் நானும் இருந்தேன். ரூ 1000 செலுத்தியதால் இந்த மரியாதை. அங்கு ரெபரன்ஸ் நூல்களையும் தந்து உதவினர். சி பி எம் மாவட்ட அலுவலக நூலகம் எனக்கு எப்போதும் திறந்தே இருந்தது. தஞ்சையில் சி பி அய் நூலகத்தில் ஏராள நூல்கள் – ஆனால் பராமரிப்பின்றி இருந்தன. அங்கும் எனக்கு சில வாரங்கள் வந்து நூல்களை எடுத்துச் செல்ல அனுமதி இருந்தது. பக்கத்தில் இருந்த வங்கித்தலைவர் ரகுபதியால் இலக்கிய வாசனை கிடைத்தது. நேரு அப்போதும் வரவில்லை. திராவிட கழக வெளியீடுகள், அம்பேத்கார் எழுத்துக்கள் பழக்கமாயின. இந்திய வரலாறு குறித்து சோவியத் அறிஞர்கள் , நேருவிற்கு யூடின் பதில் ஆகியவை மூலம் நேருவின் சோசலிசம் அசலல்ல என்கிற புரிதலே இருந்து வந்தது. சோசலிஸ்ட்கள், எம் என் ராய் எழுத்துக்கள் சென்ற அளவு கூட நேரு வரவில்லை. 40 ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ந்தும் அவ்வப்போதும் வாங்கிய ஏராள பத்திரிகைகள் வழியே கூட நேரு பெரிதாக என்னிடம் வரவில்லை. பா ஜ கவின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அதிக தொழிற்சங்கப் பணிகளால் புத்தகப்படிப்பே கூட நிறைவாக இருக்கவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் காந்தி- நேரு- தாகூர்- சோசலிஸ்ட்கள், எனது மார்க்சிய பழக்கத்துடன் கூடுதலாக தேவைப்படுவதை உணரமுடிந்தது. நேரமும் அதற்கான வகையில் கிடைக்கப்பெற்றது. இந்துத்துவாவிலிருந்து மாறுபட்ட இந்து அரசியல் தலைவர்கள் பலரை படிக்க முடிந்தது. இந்துத்துவா எழுத்துக்களையும் படிக்க நேர்ந்தது. சில தலைவர்கள் குறித்து நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் என்பதில் எழுதிப் பார்க்கவும் முடிந்தது. காந்தி முழுநேர வாசிப்புக்குரியவரானார். அவர் குறித்தும் காந்தியைக் கண்டுணர்தல் என்பதில் எழுதிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- எம் என் ராய் உட்பட சிலர் குறித்து எழுத முடிந்தது. பகத்சிங்- ராஜ்குரு குறித்தும் சிறுவெளியீடுகள் வெளியிட நேரம் உதவியது. ஹெகல், பகுனின், மார்க்ஸ், எங்கெல்ஸ் குறித்து தமிழ்வாசகர்களுக்கு சில தகவல்களை கொண்டு சேர்க்க முடிந்தது. நேரு மட்டும் என்னுடன் மெதுவாகவே உரையாடிக்கொண்டிருக்கிறார். இ எம் எஸ் மற்றும் ஹிரன்முகர்ஜி எழுதிய நேரு கூட எனக்கு மெதுவாகவே நகர்ந்தது . நேரு புறக்கணிப்பு அரசியலை இந்துத்துவா அரசியல் பெரிதாகிக் கொண்டிருக்கும் சூழலில் நேரு குறித்த கற்றல்கள் மெதுவாகவே எனக்கு இருந்து வருவது குற்றவுணர்வுக்குரிய ஒன்றே. அறிந்தவற்றை கொஞ்சமாவது எழுதி வைக்கவேண்டும் என்கிற வகையிலேயே எனது எழுத்துக்கள் எனலாம். படித்தவுடன் அவை பரவசப்படுத்தாது. தகவல்கள் கிடைக்கும். வாயடித்தல்- ஜம்ப பேச்சுக்களில் நம்பிக்கையில்லை. ஒரே புனிதர் – அவரே இவர் என எவரையும் சுட்டுவதாக எனது எழுத்துக்களை அமைத்துக்கொள்வதில்லை. இருக்கிற புரிதலை மேம்படுத்த உதவுகிறதா- உண்மைக்கு அருகாமையில் மனநேர்மைக்கு உதவுகிறதா என்ற வகையில் அமைவதாக சொல்லலாம். இங்கு நேருவின் மரபு அய்ந்து கட்டுரைகளில் சொல்லப்படுகிறது. நேருவின் நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகள்- முன்மாதிரிகள் பேசப்படுகின்றன. அடுத்து நேருவின் நிர்வாக முறையில் எதையெல்லாம் நடைமுறையாக்க விழைந்தார்- யாருக்கான நிர்வாகம் என்பதில் அழுத்தம் தந்தார் என்பதை பார்க்க முடியும். நேருவின் சோசலிசம் குறித்த கட்டுரையில் விடுதலைக்கு முன்னரான அவரது பேச்சு, விடுதலை இந்தியாவில் பிரதமரான பின்னர் அவரின் பொருளாதார நடைமுறைகள் பேசப்படுகிறது. அடுத்து இன்று இந்தியாவின் அரசியல் கருப்பொருள்- நடைமுறை கலவர பிரச்சனையாகியுள்ள மதம் குறித்த- செக்யூலரிசம் குறித்த நேருவின் அணுகுமுறை பேசப்பட்டுள்ளது. நேருவின் மொழிக்கொள்கை கட்டுரை இன்றுவரை இந்தி பேசாத மாநிலங்களுக்கு அரணாக உள்ளதைப் பேசுகிறது. நேருவின் நூல்தொகைகள் காந்தியைபோன்றோ, அம்பேத்கார் போன்றோ பெரிதாக விவாதவெளியில் அலசப்படவில்லை என்கிற குறையிருக்கிறது. ஆங்கில நூல்களை அதிகம் படிக்க வாய்ப்பில்லாத தமிழ் வாசகர்களுக்கு எளிய இக்கட்டுரைகள் இந்தியாவின் நேர்மையான அரசியல் ஆட்சியாளர் தலைமை என்ற வகையில் நேரு குறித்து அறிமுகம் செய்யலாம். 29-2-2020 ஆர்.பட்டாபிராமன் பின்னீடு: மேற்கூறிய அய்ந்து கட்டுரைகளை எழுதிய பின்னர் நேருவின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை சிறிய அளவாவது சொல்லவேண்டும் என்ற விழைவில் முதல்கட்டுரை after thought ல் எழுதப்பட்டது. அதில் நேருவின் சிறை வாழ்க்கையும் தனியே தொகுத்து சொல்லப்பட்டுள்ளது. நேருவின் விடுதலைக்கால வாழ்க்கையை பேசும்போது காந்தியுடன் அவருக்கிருந்த விவாத உறவுகளையும் சற்றாவது சொல்லவேண்டும் என்கிற விழைவில் இரண்டாவது கட்டுரை எழுதப்பட்டது. நேரு குறித்த முழு மதிப்பீடல்ல இப்புத்தகம். ஏழு கட்டுரைகளின் ஊடாக நேருவின் மரபு இப்புத்தகத்தில் ஓரளவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சொல்லலாம். 18-5-2020 ஆர்.பட்டாபிராமன் விடுதலைப் போராட்டத்தில் நேரு அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும். சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார். சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும். 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம். போயர் யுத்தம், ருஷ்யா-ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும், ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது. ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார். தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார். கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார். தனது 15 வயதில் 1905ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார். லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி. லண்டன் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக அன்சாரி இருந்தார். அன்சாரி தனிமையை உணர்ந்ததாக நேரு சொல்கிறார். அவரின் அறிவுத்திறன் அபாரமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். நேரு ஹாரோ பல்கலையில் சேர்ந்தார். அவர் அங்கு படித்த புத்தகங்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவையாகவே இருந்தன. நேருவுடன் கபூர்த்தலா சமஸ்தான ராஜாவின் மகன் பரம்ஜித் சிங் ஹாரோவில் இருந்தார். ஆனால் சமஸ்தானத்து மன்னர் பாரம்பரியத்தை கடைப்பிடித்து அவர் தனித்தே இருந்ததாகவும் , அவ்வாறு இருப்பது ராஜ்ய உறவுகளுக்கு உகந்ததாக இருக்காது என இளம் நேரு சொல்லிவந்தார். அவ்வப்போது பத்திரிகைகள் தரும் செய்திகள் மூலம் இந்தியாவில் நடப்பதை நேரு அறிந்தார். திலகர் - லாலாஜி கைது, சர்தார் அஜித்சிங் செய்திகள் அறிய அறிய அவரிடம் கிளர்ச்சி உணர்வுகள் எழத்துவங்கின. எவரிடம் அங்கு விவாதிப்பது? அடுத்து அவர் டிரினிட்டி கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கு இயற்கை அறிவியலை - கெமிஸ்ட்ரி- ஜியாலஜி- பாட்டனி தேர்ந்தெடுத்தார். அங்கு சூழலோ அரசியல் வரலாறு சார்ந்து இயங்கியது. நேருவிற்கு ஆரம்பத்தில் குழப்பமே மிஞ்சியது. கேம்பிரிட்ஜில் அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பை Meredith Townsend எழுதிய Asia and Europe தந்தது. திலரின் ஆவேசம் அவரை ஈர்த்தது. சுற்றியிருப்பவர்களிடம் நேரு வெளிப்படையாக எதையும் விவாதிப்பவராக இருக்கவில்லை. கல்லூரி விவாத கிளப்பில் கூட பேசாமல் அவர் தண்டத்தொகை கட்டுபவராக இருந்துள்ளார். பிற்காலத்தில் நேரு வேடிக்கையான முரண்பாட்டை சுட்டிக்காட்டிய பதிவு ஒன்றை தந்தார். கல்லூரி காலத்தில் பெரும் அனல்கக்கும் பேச்சுக்களை தந்த பலர் இந்தியாவிற்கு வந்து ICS, வக்கீல்- நீதிமான்களாக மாறினார்களே தவிர, விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்ததாக தெரியவில்லை. சென்குப்தா, கிச்சலு போன்ற சிலர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றனர். கல்லூரிக்கு பிபின் சந்திரபால், லாலாஜி, கோகலே போன்றவர் வந்தனர். பிபினுக்கு லாலாஜி பரவாயில்லை என நேருவிடம் எண்ணம் ஏற்பட்டது. நேரு லண்டனில் ஹர்தயாளை சந்தித்தார். Indian Sociologist பத்திரிகையின் ஆசிரியர் சியாமாஜி கிருஷ்ணவர்மாவை அவர் ஜெனிவாவில் சந்தித்தார். அவரின் இந்திய இல்லம் மாணவர்களை ஈர்க்கும் கூடமாக இருந்தது. நேருவிற்கு சட்டப்படிப்பா- அய் சி எஸ் நிர்வாகத்துறையா என்ற கேள்வி வந்து அப்பாவின் சட்டப்பகுதிக்கே செல்வது என முடிவானது. அவர் பார் அட் லா பெற இன்னர் டெம்பிளில் சேர்ந்தார். 1910 அயர்லாந்து சென்ற நேருவிற்கு சின்பீன் இயக்கம் அறிமுகமானது. லண்டனில் பாபியன் சோசலிஸ்ட்களிடம் ஈர்ப்பு இருந்தது. 1907 சூரத் காங்கிரஸ் பிளவை சந்தித்தது. அதில் மோதிலால் பங்கேற்றார். பொதுவாக மாடரேட் என அவர் பார்க்கப்பட்டார். நேரு 1912ல் இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் அரசியல் வேறுபட்டுக்கிடந்தது. திலகர் சிறையில் இருந்தார். மிதவாதிகள் மிண்டோ- மார்லி சீர்திருத்தம் என அதைச்சுற்றி இருந்தனர். 1912 கிறிஸ்துமஸ் காலத்தில் பங்கிபூர் காங்கிரசிற்கு நேரு சார்பாளராக சென்றார். பெரும்பாலும் உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடந்தன. மேல்தட்டுக்காரர்களின் அமைப்பாக நேரு அதனை உணர்ந்தார். கோகலே சற்று உயர்ந்து அவருக்கு தென்பட்டார். காங்கிரசில் இணைந்த நேரு உடனடியாக பெரும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. கோகலேவின் ‘சர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி’ மீது மரியாதை இருந்தது. ஆனால் அவர்களிடம் அரசியல் தீவிரம் இல்லை என்பதும் அவர் உணர்வாக இருந்தது. சட்டப்படியான விதிகளை மாணவர்கள் மதித்து முறையாக நடந்து கொள்ளவேண்டும் என சீனிவாச சாஸ்திரி பேசியது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி நல்வகைப்பட்ட பேச்சு விடுதலையை தருமா என்கிற கேள்வியும் அவரிடம் எழுந்தது. முதல் உலகப்போர் காலத்தில் இந்திய பாதுகாப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் எழுச்சிகள் ஏதுமில்லை. இங்கிருந்த தலைவர்களுக்கு பிரிட்டிஷ் மீது பரிவில்லை. ஜெர்மனி மீது பரிவு இருந்தது. நேருவிற்கு பிரான்ஸ் மீது இருந்தது. அரசியல் உணர்வுகள் மீண்டும் துளிர்விட திலகரின் விடுதலை உதவியது. திலகர், அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கங்கள் எழுந்தன. நேரு இரண்டிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். சீனிவாச சாஸ்திரியிடம் எதிர்பார்ப்புகளை கொண்ட நேருவிற்கு ஏமாற்றம் மிஞ்சியது. அவர் நெருக்கடிகளில் கூட ஏன் செயல்படவில்லை என்கிற கேள்வி ஏற்பட்டது. இந்தியா பாதுகாப்பு படை என்கிற சிவில் காவலர் பிரிவு ஒன்றை பிரிட்டிஷ் அறிவித்தது. அங்கு இந்தியர்களுக்கு மரியாதை இல்லை என்ற விமர்சனம் இருந்தது. பின்னர் சேரலாம் என நிலை எடுக்கப்பட்டபோது நேருவும் விண்ணப்பித்தார். ஆனால் அன்னிபெசண்ட் சிறைத்தள்ளப்பட்டார் என்கிற செய்தி நேருவிற்கு கோபத்தை உருவாக்கியது. அலகாபாதில் மோதிலால், தேஜ்பகதூர் சாப்ரு, சிந்தாமணி , நேரு கூடி ’ Defence Force’ உடன் ஒத்துழைப்பதில்லை என முடிவெடுத்தனர். நேருவிற்கு மேடைபேச்சு குறித்து அய்யம் இருந்தது. இந்துஸ்தானி வருமா என சந்தேகம் இருந்தது. மேடை வாய்ப்பு அலகாபதில் 1915ல் அவரைத்தேடிவந்தது. பேசி முடித்தவுடன் மேடையிலேயே சாப்ரூ முத்தமிட்டார். நேருவிற்கு பொதுச்சேவைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்ட உணர்வு உருவானது. அன்றாட நடைமுறை அரசியலில் ஈடுபட இயலும் என்கிற நம்பிக்கை பிறந்தது. மகனின் வளர்ச்சியால் மோதிலால் முகம் பிரகாசமானது. அதேநேரத்தில் வங்கத்தின் தீவிர சிந்தனைகள் வழியே நேரு செல்கிறாரே என்கிற கவலையும் மோதிலாலுக்கு ஏற்பட்டது. மோசமான நிலைமைகளை பார்த்து அதற்கு பணிந்துபோகக்கூடாது என்பதை எடுத்துக்கொள்வதில் எத்தவறும் இல்லை என நேரு பேசலானார். அந்நிய ஆட்சி எதிர்த்த தீவிர போராட்டங்கள் கட்டப்படவேண்டும் என்றார். காந்தியுடன் நேருவிற்கான சந்திப்பு 1916 கிறிஸ்துமஸ் காலத்தில் லக்னோ மாநாட்டில் நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டங்களை நேரு அறிந்தவராக இருந்தார். காந்தி வித்தியாசமாக சற்றுத்தள்ளி நிற்பவராக நேருவிற்கு தோன்றியது. ஆனால் இந்தியாவிற்காக காந்தி நிற்கிறார்- வெற்றிப்பாதையை அவர் சொல்கிறார் என முதலில் உணர்ந்த சில இளைஞர்களில் நேருவும் ஒருவராக இருந்தார். சரோஜினி நாயுடு அவர்களும் நேருவை ஈர்த்தார். 1916ல் நேருவிற்கு கமலாவுடன் திருமணம் டெல்லியில் நடந்தது. அவர்கள் காஷ்மீர், லடாக் பகுதியில் மகிழ்ந்து இருந்தனர். ரெளலட் சட்டக்காலத்தில் காந்தியின் ஒவ்வொரு அசைவும் நேருவிற்கு பெரும் வியப்பையும் நம்பிக்கையும் உருவாக்கின. அவர் பிறரை எப்படி ஏற்கவைக்கிறார் என்பதை அருகில் கண்டதால் தனக்கு கூடுதல் நம்பிக்கை உருவானதாக நேரு சொல்கிறார். அமிர்தசரஸ் காங்கிரசிற்கு மோதிலால் தலைமை ஏற்றார். திலகரும் இருந்தார். காங்கிரஸ் காந்தியிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தது. காந்திக்கு ஜே- மகாத்மாவிற்கு ஜே முழக்கங்கள் அதிகம் இருந்தன. 1920ல் சற்று கடினமான பணிகளில் நேரு இறங்கினார். உத்தரபிரதேச கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தார். குறைகளை நேரில் கேட்டு அறிந்துகொண்டார். தனது கூச்ச சுபாவத்தை விவசாயிகள்தான் போக்கியதாக நேரு சொல்கிறார். தனது இந்துஸ்தானியை வைத்துக்கொண்டு அவர்களிடம் செல்லமுடியுமா என்ற தயக்கமும் அவருக்கு உடையத்துவங்கியது. அவருக்கு பேச்சுக்கலை வசப்படவில்லை.. ஆனால் ஒவ்வொரு தனிமனிதரிடமும் நேர்த்தியான உரையாடல் செய்யும் கலையில் அவர் தேர்ந்தார். காந்தியின் சீடன் எனும் தகுதி அவரிடம் நிறையத்துவங்கியது. அவரது உடையில்கூட மேற்கிலிருந்து மாற்றம் வந்தது. கார் தவிர்த்து பல கிராமங்களுக்கு நடந்தே சென்றார். சில விவசாயிகளின் வீடுகளில் அவர்கள் தரும் உணவையும் அவர் எடுத்துக்கொண்டார். மண்குடிசைவீடுகளில் தங்கினார். காந்தி ஒத்துழையாமை என 1920ல் சொன்னபோது ஓராண்டில் சுத்ந்திரம் என நம்பிக்கையூட்டினார். அகிம்சைவழிப்பட்ட ஒத்துழையாமை இந்திய நிலைமைகளுக்கு மிகப்பொருத்தமானதாக நேருவும் கருதினார். அதன் நன்னெறி சார்ந்த பக்கத்தை அவர் வியந்து சொன்னார். அதே நேரத்தில் எப்போதும் அகிம்சை என கோட்பாடாக அதை தான் ஏற்கவில்லை- அகிம்சை நமக்கு சரியான கொள்கை என தன்நிலையை நேரு தெளிவுபடுத்தினார். " What I admired was moral and ethical side of our movement and of satyagraha. I did not give an absolute allegiance to the doctrine of non violence or accept it for ever, but it attaracted me more and more, and the belief grow upon me…it was the right policy for us." ‘Spiritualisation of politics’ என்பதில் கூட மதச்சார்பு அடிப்படையில் பார்க்காமால் இருந்தால் மிக உயர்ந்த ஒன்றாகவே நேரு உணர்ந்தார். சரியான முடிவுகள் போலவே சரியான உகந்த வழிகள் என்பதும் ஏற்புடைய ஒன்றே என நேருவும் கருதினார். காந்தியை நேரு கண்மூடித்தனமாக பின்பற்றினார் என எவராவது கருதினால் அது தவறு என்பதை நேருவின் இச்சிந்தனை நமக்கு உணர்த்தும். அதேபோல் காந்தியும் எவரும் தன்னை கண்மூடி பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லாமல்தான் உறவுகளை கொண்டிருந்தார். வெகுஜனங்களுடன் வாழ்வது என்கிற உளவியல்- அவர்களின் இயல்பு நேருவிற்கு புலப்படத்துவங்கியது. சிலநேரங்களில் கூட்டங்களில் அவர் நுழையும்போது ஏற்படும் தள்ளுமுள்ளுகள்- ஒழுங்கு மீறல்கள் அவருக்கு எரிச்சலைத்தரும். காந்திக்கு ‘நெறி ஒழுங்கு’ மட்டுமே முக்கியம். நேருவோ மனநெறி- உடல்நெறி இரு ஒழுங்குகளும் அவசியம் எனக் கருதினார். நேருவால் வெகுஜனத்திரளுடன் இருக்கவும் முடிந்தது. விமர்சன பார்வையுடன் சில நேரம் விலகி நிற்கவும் முடிந்தது. கடுமையாக பேசியிருந்த நேரங்களிலும், பழக்க வழக்கங்களை தாக்கிப்பேசியபோதும் கூட அவர்கள் தங்கள் அன்பை குறையாமலே தந்தார்கள் என்பதை நேரு சொல்கிறார். மேடை கிடைத்தால் எப்படி பல தலைவர்கள் சம்பந்தமில்லாமல் விஷயமேயில்லாமல் பேசுகிறார்கள் என்பதை நேரு கவனிப்பார். ஒத்த கருத்துக்கொண்டவர்களுடன் நகைச்சுவையாக அதுபற்றி விவாதம் இருக்கும். அதே நேரத்தில் தான் பேசுவது குறித்தும் இப்படிப்பட்ட கமெண்ட்களை எவராவது சொல்லிக்கொண்டிருக்கலாம் என்கிற விழிப்புணர்வும் அவரிடம் இருந்தது. 1921ல் வேல்ஸ் இளவரசர் வருகையை புறக்கணிப்பது என்ற முடிவை இரு நேருக்களும் அமுல்படுத்தினர். இருவரும் கைதாகினர். இவ்வியக்கத்தில் 30 ஆயிரம் இந்தியர்கள் சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். 1922 பிப்ரவரியில் சிவில் ஒத்துழையாமையை காந்தி செளரி செளராவால் விலக்கிக்கொண்டதாக அறிவித்தார். இளம் நேருவிற்கு இதில் வருத்தம் ஏற்பட்டது. எங்களுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. சிறையில் இருக்கும் எங்களால் ஏதும் செய்யவில்லை என நேருவின் பதிவு சொல்கிறது. இயக்கம் வலுப்பெற்றுவரும்போது திரும்பப்பெற்றதை அவரால் ஏற்கமுடியவில்லை. காந்தியடிகளும் கைதானார். சிறிய தூரகிராமம் ஒன்றில் சிலர் உணர்ச்சிவயப்பட்டு திசைமாறி சென்றால் அதற்கு தேசவிடுதலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டுமா என நேரு கேள்வி எழுப்பினார். இப்படித்தான் என்றால் நமது அகிம்சை போராட்ட முறையிலேயே ஏதோ குறை இருக்கிறது. முப்பது கோடி மக்களையும் அகிம்சை கொள்கை நடைமுறை பயிற்சி கொடுத்தப் பின்னர்தான் முன்னேறி செல்லவேண்டுமா போன்ற கடுமையான கேள்விகளை அவர் எழுப்பினார். சத்தியாகிரகம் என்ற போராட்ட முறையை தனிநபர்கள் வேண்டுமானால் மாற்றவே முடியாத கொள்கையாக வைத்திருக்கலாம். ஆனால் அரசியல் இயக்கம் அப்படி ஒரு creed வைத்துக்கொள்ளமுடியாது எனக் கருத்து தெரிவித்தார். அடுத்த அவரது சிறைவாசம் அந்நியத்துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கத்தால் நேர்ந்தது. நேரு வெளியில் வந்தநேரம் காந்தி சிறையில் இருந்தார். வெளி அரசியல் வைஸ்ராய் கவுன்சில் நுழைவு எனும் ‘Changers’ மாற்றம் விரும்பிகள் - கூடாது எனும் ‘No Changers’ வேறுபாடுகளுடன் நகர்ந்துகொண்டிருந்தது. இரண்டாவது பகுதியினர் காந்தியின் ஆதரவாளர்கள். மோதிலால் சுயராஜ்ய கட்சியில் இருந்தார். மோதிலால் தன் மகன் ஜவஹர் அவரது விருப்பப்படி இயங்கலாம் என தெரிவித்துவிட்டார். மோதிலால், தாஸ், ஜின்னா போன்றவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகள் மட்டுமே வாய்ப்பு எனும் சூழலை புரிந்துகொள்ளவேண்டும் என்றனர். ஆனால் ராஜாஜி, பிரசாத், படேல் ஆகியோர் கயா மாநாட்டில் இவர்களை தோற்கடித்தனர். மோதிலால், சி ஆர் தாஸ் சுயராஜ்ய கட்சி துவங்கினர். 1923 தேர்தலில் மத்திய சட்டமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று பெரும்கட்சியாக வந்தது. புதிய சுயராஜ்ய கட்சி வேட்பாளர்களால் பெருந்தலையான சுரேந்திரநாத் பானர்ஜி உட்பட பலர் தோற்கடிக்கப்பட்டனர். ஜின்னா உட்பட சில சுயேட்சைகள் சுயராஜ்ய கட்சியினருடன் அணிசேர்ந்தனர். சட்டமன்றம் உதவாது என உள்ளிருந்து நிரூபிப்பது அவர்கள் தங்களுக்கு வகுத்துக்கொண்ட வேலை. சுயேட்சைகள் அவசியமான அம்சங்களை மட்டும்தான் எதிர்ப்போம் என்ற நிலைக்கு வந்தனர். சி ஆர் தாஸ் 1925 பரித்பூர் மாநாட்டில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பு என பேசத்துவங்கினார். நேரு இரு பக்கமும் சாராமல் தனித்திருந்தார். காங்கிரஸ் மே 25, 1923 அமர்வில் புருஷோத்தம்தாஸ் டாண்டன் தேர்தலுக்கு எதிரான பிரச்சாரம் கூடாது என நேரு ஆதரவுடன் தீர்மானம் கொணர்ந்தார். No-Changers பிரிவினர் இதை எதிர்த்தனர். முகமது அலியும் ஆசாத்தும் சமரசம் ஏற்படுத்தினர். 1923ல் நேரு அலகாபாத் முனிசிபல் சேர்மனாகிறார். அவருக்கு அங்கு மோசமான அனுபவங்கள் கிடைத்தாலும் நிர்வாகம் என்பதின் ‘அ ஆ’ கிடைத்தது எனலாம். அலகாபாத் முனிசபல் சேர்மன் ஆக நேரு இருந்தபோது அரசு எவ்வளவு மெத்தனமாக காரியம் ஆற்றிவருகிறது. அரசியல் ஒடுக்குமுறை என்றால் தாவிப்பாயும் அரசாங்கம் தலமட்ட நிர்வாகத்தில் தூங்கிவழிகிறது என்பதை நேரு கண்டார். ஆங்கிலேயர் வாழும்பகுதிக்கு அதிகமான நிதிச்செலவு ஆவதையும் கண்டறிந்தார். நேருவின் மொழியில் கேட்டால் : “Local bodies are just inefficient. Their weak point is nepotism- perspectives are all wrong- no sense of responsibility- all pervading authoritarianism” 1924ல் காங்கிரசில் முழுநேர ஊழியர்க்கு குறிப்பாக செயலர்களாக இருப்பவர்களுக்கு இயக்கம் அலவன்ஸ் தரவேண்டும் என்பது விவாதமானது. நேருவும் செயலர்களில் ஒருவர். அவர் தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். மோதிலால் தன் மகன் இவ்வாறு பொதுநிதியிலிருந்து அலவன்ஸ் பெறுவதை விரும்பவில்லை. வேறு சில செயலர்களும் பணத்தின் தேவை இருந்தும் வாங்குவது தனிமனித மாண்பிற்கு இழுக்கு என நினைத்தனர். “எனக்கு இதில் மாண்பு இழுக்கு என்பதெல்லாம் இல்லை- ஊதியம் பெறலாம் அது இல்லாமலும் இயங்கலாம்” என நேரு தன் நிலையை தெளிவுபடுத்தினார். கட்சி முழுநேரப்பணியை எவரிடமாவது நாம் எதிர்பார்த்தால் அவருக்கு நிதி பாதுகாப்பை தரவேண்டியது அவசியம் என நேரு கருதினார். அடுத்து அவரது கைது சீக்கியர் ஒத்துழையாமை ஒன்றை பார்வையிட சென்றபோது நிகழ்ந்தது. நேரு கையில் விலங்கிடப்பட்டு தெருக்களில் அழைத்து செல்லப்பட்டார். நாயை இழுத்து செல்வது போலத்தான் இருந்தது என நேரு சொல்கிறார். அப்பகுதி மாஜிஸ்ட்ரேட் அரைகுறை விவரம் கொண்டவர். அவர்களை கிரிமினல் போல் நடத்தி சுகாதாரமற்ற செல் ஒன்றில் அடைத்தனர் . மெளலானா முகமது அலி 1923ல்தலைவராக இருந்தபோது நேரு செயலராக அமர்த்தப்பட்டார். இருவருக்கும் கடவுள் குறித்த சர்ச்சை அடிக்கடி நடைபெறும். அலி தீர்மான வாசகங்களில் கூட இறை வாசகங்களை கொணர முயற்சிப்பார். இறைவனுக்கு நன்றி தெரிவித்து பேசுவார். நேரு எதிர்ப்பார். அலி கடுமையாக நேருவை கடிந்துகொள்வார். பின்னர் சிறுதுநேரம் கழித்து நேருவிடம் நீங்கள் அடிப்படையில் மனிதாபிமானி என சரிகட்டுவார். நேருவிற்கு இறை நம்பிக்கை இல்லாவிடினும் அவரால் காந்தியுடன் செல்ல முடிந்தது. தெளிவு, ஒற்றுமைப்பாதை, தீர்க்கதரிசனம் போன்றவைதான் ராஜ்ய நிர்வாகத்திற்கு உகந்த மதம் என்கிற பார்வை சரி எனில் அவை நேருவிற்கு பொருத்தமானதாக இருக்கும். அலி அவர்களுடன் நேருவிற்கு வேறு பிரச்சனை ஒன்றும் எழுந்தது. காங்கிரசில் தலைவர்களை விளிப்பதில் மகாத்மா, மெளலானா, முன்ஷி, பண்டிட் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று செயல்பட்டார் நேரு. அலி அவ்வாறு செய்யக்கூடாது- மகாத்மாவை அவ்வாறே அழைக்கவேண்டும் என நேருவிற்கு தந்தி அனுப்பினார். 1924ல் ஜுஹூ கடற்கரை பகுதியில் காந்தி இருந்தபோது, இரு நேருக்களும் அவரை சந்தித்தனர். காந்தியை சந்தித்து திரும்பிய நேருவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அவர் ஏன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச மறுக்கிறார்- நீண்டகால நடவடிக்கை இல்லை என்கிறார் என கேள்விகள் பிறந்தன. காந்தியோ மக்கள் சேவை என்பது பொறுமையாக செய்யப்படவேண்டிய ஒன்று என்றார். காங்கிரசின் சமூக திட்டங்களிலும் நேருவை கவனம் செலுத்த அறிவுறுத்தினார். அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர் எனில் தக்களி நூல்நூற்பு அவசியம் என காந்தி கூறியதையும் நேருவால் ஏற்கமுடியவில்லை. நூல்நூற்பு எனும் உழைப்பை தகுதியாக வைக்கவேண்டும் எனில் அதை மட்டும் ஏன் வைக்கவேண்டும் என்பது அவரது கேள்வியாக இருந்தது. 1926ல் கமலா உடல்நிலை பாதிப்பை அடுத்து நேரு அய்ரோப்பா செல்ல நேர்ந்தது. பிரஸ்ஸல்ஸ் பகுதியில் நடந்த ஒடுக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு ஒன்றில் அவர் பிப்ரவரி 1927ல் கலந்துகொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக் அமைக்கப்பட்டது. சன்யாட் சென், ரொமெயின் ரோலந்த் உடன் நேருவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். மேற்கு நாடுகளின் தொழிலாளர் இயக்கம் பற்றி பிரஸ்ஸல்ஸ் எனக்கு புரிதலை தந்தது. என்னை கம்யூனிசம் நோக்கி நகர்த்தியது. அதன் குறைகள் எப்படியிருந்தாலும் அது ஏகாதிபத்தியமாக இருக்காது என நேரு தான் உணர்ந்தவைப் பற்றி எழுதினார். நேரு குடும்பத்தார் நவம்பர் 1927ல் மாஸ்கோ சென்று அக்டோபர் புரட்சியின் 10 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் விருந்தினர்களாக பங்கேற்றனர். சோவியத் மற்றும் சோசலிசம் குறித்து ஏப்ரல்- ஜூலை 1928 மாதங்களில் இந்து, யங் இந்தியாவில் நேரு கட்டுரைகள் எழுதினார். பின்னர் சோவியத் ரஷ்யா என்ற பெயரில் அவை வெளியிடப்பட்டன. டிசம்பர் 1927ல் இந்தியா திரும்பிய நேரு மதராஸ் காங்கிரஸ் அமர்வில் பங்கேற்றார். விடுதலை தீர்மானம் புரிந்துகொள்ளப்பட்டது குறித்து நேரு சொல்கிறார். அதை காந்தி எவ்வாறு பார்த்தார் என்பது பற்றியும் அவர் சொல்கிறார். அவற்றை காந்தி விரும்பவில்லை என்கிறார். இந்திய சமூகம் பணக்காரர்கள்- படித்த வர்க்கத்தினர் இல்லாத சமூகமாக மாறுவதற்கான தருணம் இன்னும் வரவில்லை என காந்தி கருதினார். நேருவோ விடுதலை இயக்கம் முழுவிடுதலை மற்றும் சோசலிச நோக்கங்களுக்காக நிற்கவேண்டும் என நினைத்தார். 1928 நேரு ஜாரியாவின் AITUC மாநாட்டில் முதல் இருநாட்கள் பங்கேற்றார். அவர் இல்லாத நிலையில் அமைப்பின் தலைவராக அம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1919 சட்டப்படி 10 ஆண்டுகள் கழித்து 1929ல் அமையவேண்டிய ராயல் கமிஷன் 1927ல் ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்டது. சைமன் கமிஷனில் இந்தியர் எவரும் இல்லாமையால் எதிர்ப்பு கிளம்பியது. பகிஷ்கரிப்பு இயக்கம் தீவிரமானது. சட்டமன்றத்திலும் எதிர்ப்பு தீர்மானம் கொடுத்தனர். லாலாஜி கொணர்ந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு பிப்ரவரி 16 1928ல் ஏற்கப்பட்டது. “The Assembly recommends to the Governor-General-in-Council to inform His Majesty’s Government that the present constitution and scheme of the Statutory Commission are wholly unacceptable to this House and that this House will therefore have nothing to do with the Commission at any stage and in any form.” மே 17, 1927ல்பம்பாய் காங்கிரஸ் அமர்வில் சுயராஜ்ய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை எழுத மோதிலால் தீர்மானம் கொணர்ந்தார். இதை நேரு மதராஸ் அமர்வில் வலியுறுத்தி மே 1928ல் இதற்காக அனைத்துகட்சி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். அரசியல் அமைப்பு சட்ட அடிப்படைகளை எழுத மோதிலால் தலைமையில் கமிட்டி அமைத்தனர். இக்கமிட்டியும் நேரு கமிட்டி என அழைக்கப்படலானது. அக்கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்ட் 10, 1928ல் கொடுத்தது. இந்தியர்கள் தங்களுக்கு தாங்களே அரசியல் அமைப்பு சட்டம் எழுதிக்கொள்ளமுடியும் என முதலில் நிரூபித்த கமிட்டியாக இது பார்க்கப்பட்டது. டிசம்பர் 1928 கல்கத்தா காங்கிரஸ் அமர்வில் டொமீனியன் அந்தஸ்து- பரிபூர்ண விடுதலை விவாதம் சூடாக நடந்தது. தேஜ்பகதூர், மோதிலால், மங்கல் சிங், பிரதான் போன்ற மூத்தவர்கள் டொமீனியன் அந்தஸ்திற்காக நின்றனர். நேரு, சுபாஷ் போன்ற இளம் தலைவர்கள் முழுவிடுதலை என்றனர். 1929 லாகூர் மாநாட்டில் காந்தி தலைவராக இருக்க வற்புறுத்தப்பட்டது. ஆனால் நேரு இருக்கலாம் என காந்தி தெரிவித்தார். மோதிலால் தனது மகன் நேரு தலைவராக இருக்கட்டும் என மகாத்மாவிடம் தெரிவித்த தகவலும் இருக்கிறது. நேரு இது குறித்த பதிவில் தனது வருத்தத்தை தெரிவித்தார். சாதாரணமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்றார். ஜவஹர் அப்பொறுப்பை ஏற்க முழுமையான தகுதி பெற்றவர். அவரது திறமை, உழைப்பு ஆகியவற்றை அறிவோம். அவர் தொழிலாளர், விவசாயிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்- அய்ரோப்பாவின் அரசியல் அறிந்தவர் என்கிற வகையிலும் அவர் நமக்கு சொத்து என காந்தி நேருவின் தேர்வை பாராட்டியிருந்தார். அவர் நிதானமாகவும் நடைமுறை சார்ந்தும் செயல்படுவார். அவரின் கரங்களில் நாடு பாதுகாப்பாக இருக்கும் எனவும் காந்தி எழுதினார். 1929 லாகூர் காங்கிரஸ் வரிகொடா இயக்கம் மற்றும் ஒத்துழையாமை என்பதை ஏற்றது. காந்தி தனது உப்புவரி நீக்கம் உள்ளிட்ட 11 அம்சங்களை வெளியிட்டார். அவர் தனது தண்டி யாத்திரையை மார்ச் 12, 1930ல் துவங்கினார். 79 பேர்களுடன் 241 மைல்கள், 24 நாட்கள் யாத்திரையது. சாதாரண மக்களை தட்டி எழுப்பி விடுதலை உத்வேகத்தை மூட்டிய பயணமது. “இந்நாட்டு மக்கள் மீதுகொண்டுள்ள அன்பாலும் தீர்விற்கான தணலும் கொண்டு இந்த யாத்திரை புறப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் பெரிதும் காந்தியால் ஈர்க்கப்பட்டுள்ளனர்” என நேரு வர்ணித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் என்கிற வகையில் நேரு பல்வேறு பகுதிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்தார். உப்பு சட்டப்படி நேரு கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை பெறுகிறார்.. ஒராண்டில் 60000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தள்ளப்பட்டனர். 29 இடங்களில் துப்பாக்கி சூட்டால் 103 உயிர்கள் பலியாகின. 1931ல் காந்தி இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் காரணமாக போராட்டம் நிறுத்தப்பட்டது. நேரு உடன்பாட்டில் திருப்தி கொள்ளவில்லை. இந்திய விடுதலை எனும் நோக்கத்தை அது கலங்கவைத்துவிட்டதாக நேரு கருதினார். கராச்சி காங்கிரஸ் அமர்வில், பகத்சிங் தூக்கு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது . நேரு பகத்சிங்கிற்கு புகழஞ்சலி செய்தார். ‘The corpse of Bhagat Singh shall stand between us and England.’ என்ற கருத்தையும் வெளியிட்டார். எம் என் ராய் உடன் நேரு சந்தித்துபேசிய பின்னர் மத சுதந்திரம், பேச்சு மற்றும் எழுத்துரிமை, சாதி, பாலினம், கொள்கை எதனையும் தாண்டி சட்டத்தின் முன் அனைவரும் சமம், மாநில மொழிகளுக்கு பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், மூப்பு கால உதவி, வேலையின்மைக்கு எதிராக பாதுகாப்பு அம்சங்கள் போன்ற கருத்துக்களுக்கு நேரு காங்கிரஸ் தீர்மானங்களில் அழுத்தம் கொடுத்தார் என்கிற பார்வையும் இருக்கிறது. வட்டமேஜை முதல் மாநாட்டில் நவம்பர் 1930ல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. அடுத்த மாநாட்டின் முடிவில் தனி வாக்காளர் தொகுதி அவார்ட் எதிர்த்து எரவாடாவில் காந்தியடிகள் உண்ணாநோன்பு, அம்பேத்கருடன் உடன்பாடு போன்ற நிகழ்வுகள் நடந்தேறின. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பாக 1933ல் வெள்ளையறிக்கை ஒன்றை கொடுத்தது. முதல்முறையாக idea of a federation சொல்லப்பட்டது. ஜவஹர் முதலில் அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளி- அங்கு விவாதித்து சட்டம் எனச் சொன்னார். இக்கருத்திலும் அவருக்கு எம் என் ராய் செல்வாக்கு இருந்ததாக கருதுபவர்கள் உண்டு. அவர் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, பிரஞ்சு புரட்சியின் தாக்கத்தில் இதை தெரிவித்ததாக சொல்பவர்களும் உண்டு. நேரு 1946 டிசம்பர் 13 அன்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் நோக்கத்தீர்மானம் பற்றி பேசியபோது அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டம் பற்றி கூறினார் என மேற்கோள் காட்டுபவர்களும் உண்டு. பிர்ட்டிஷ் 1935 இந்திய அரசாங்க சட்டம் கொணர்ந்தது. இதை காங்கிரசின் பல தலைவர்களும் விமர்சித்தனர். மிக முக்கிய அதிகாரங்களான இராணுவம், நிதி, வெளிநாட்டு உறவு ஆகியவை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலேயே என்று 1935 சட்டம் பேசியதை நேரு விமர்சித்தார். இச்சட்டப்படி மாநில அரசுகள் கவர்னர் விரும்புகிறவரைதான் இருக்கமுடியும் என ஆசாத் விமர்சித்தார். இச்சட்ட ஷரத்துக்கள் ஜனநாயக எல்லையை விரிவடைய செய்கிறோம் என்கிற பெயரில் பிரிட்டிஷ் அதிகாரம் குவிக்கப்படவே உதவுவதாக பொது விமர்சனம் எழுந்தது. சர்ச்சில் இச்சட்டம் இந்திய வைஸ்ராய்க்கு இத்தாலி முசோலினி பெற்ற அதிகாரத்தையும் விஞ்சும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியல் சட்ட வல்லுனர் காஷ்யப் “The Federal part of the 1935 Act, however, never came into operation” என எழுதியுள்ளார். மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் என்பதில் தான் இச்சட்டம் 1919 சட்டத்திலிருந்து வேறுபடுகிறது என்கிற விமர்சனமும் வந்தது. நேரு பிற்போக்கு அம்சங்கள் கொண்ட சட்டம் என்றே காங்கிரஸ் அமர்வில் தெரிவித்தார். சமரமின்றி எதிர்க்கவேண்டிய ஒன்று- தேசத்தின் விருப்பத்தை இச்சட்டம் பிரதிபலிக்கவில்லை என்றே உரையாற்றினார். இந்திய பிரதிநிதிகள் கூடி அரசியல் சட்ட அசெம்பிளியில் உருவாக்கும் ‘constitution’ அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் 1937ல் மாநில தேர்தலுக்கான அறிவிப்பைக் கொடுத்தது. மாநில அரசாங்க நுழைவு ஏகாதிபத்திய போராட்டத்தை வலுவிழக்க செய்துவிடும் என நேரு அஞ்சினார் (acceptance would mean in practice, ‘a surrender’ before imperialism). காந்தி இம்மாதிரியான அரசாங்க அதிகாரத்தை முள்கிரீடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இப்பொறுப்புக்கள் மூலம் இலக்கு நோக்கி நகர முயற்சிக்கவேண்டும் என ஹரிஜன் இதழ் ஆகஸ்ட் 7 1937ல் எழுதினார். பிரசாத் போன்றவர்களும் சோதிப்பதில் தவறில்லை என்ற நிலைப்பட்டை எடுக்கத்துவங்கினர். நேரு தலைமையிலான லக்னோ மற்றும் பைஸ்பூர் அமர்வுகளில் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவிற்கு வந்தது. அமர்வில் கீழ்கண்ட தீர்மானம் ஏற்கப்பட்டது. அசெம்பிளியை பயன்படுத்திக்கொண்டு வயதுவந்தோர் வாக்குரிமை- சுயநிர்ணய உரிமை போன்றவற்றை நாம் வற்புறுத்துவோம் என்றனர். இதில் காணப்படும் சில சொற்றொடர்களில் நேருவின் தாக்கத்தை நம்மால் உணரமுடியும். நேரு பரபரப்பான தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அய்ந்து மாதங்களில் அவர் 80 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்தார். ஒருகோடி இந்திய மக்களை சந்தித்திருப்பார். காங்கிரஸ் பெரும் வெற்றியை மாநிலங்களில் பெற்றது. காங்கிரஸ் அமைச்சரவைகளின் செயல்பாட்டில் காந்தி, நேருவிற்கும் விமர்சனம் இருந்தது. காந்திக்கு ஏப்ரல் 28 1938ல் நேரு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் செய்திடும் தவறுகளை, லஞ்ச ஊழல் அமசங்களை, திறமையற்ற நிர்வாகம் குறித்த கவலையை பகிர்ந்துகொண்டார். பல ஆண்டுகளின் உழைப்பிற்கு பலனில்லாமல் போய்விடுமா என நேரு அஞ்சினார். மிக உயர்ந்த குறிக்கோளுக்காக நிற்பவர்கள் என்பதிலிருந்து மிக சராசரியான அரசியல்வாதிகளாக நம்மவர்கள் மாறிக்கொண்டிருப்பது வேதனையானது என அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் அரசாங்கங்களின் செயல்பாட்டில் அதிருப்தி கொண்ட நேரு நேதாஜியுடன் திட்டக்குழு ஒன்றை அமைத்து அதில் கவனம் செலுத்தலானார். போஸ் அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது (1938ல்) தேசிய தொழில்மய வளர்ச்சிக்கு திட்டமிடுதல் என்பதற்காக கமிட்டியை அமைத்தார். காந்தியின் ஆதரவாளர்கள் இதில் மாறுபட்டு நின்றனர். அவர்கள் கிராம மேம்பாட்டு திட்டம் மூலம் அனைவருக்கும் வேலை உத்தரவாதம், குடிசைத்தொழில்கள் மேம்பாடு குறித்து பேசினர். நேரு தலைமையிலான அக்கமிட்டிக்கு கீழ்கண்ட நோக்கங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அ. விவசாய உற்பத்தியை பெருக்குதல் ஆ. தொழில் உற்பத்தி பெருக்கம் இ. வேலையின்மையை போக்குதல் ஈ. தனிநபர் வருவாயை உயர்த்துதல் உ. கல்வியறிவின்மையை நீக்குதல் ஊ. பொது மக்கள் பயன்பாட்டிற்கான சேவைகளை அதிகரித்தல் எ. மக்களின் வாழும் ஆண்டுகளை அதிகரித்தல் ஏ. குறைந்தபட்சம் 1000 மக்கள்தொகைக்குரிய மருத்துவ வசதிகளை உருவாக்கி மேம்படுத்தல் இரண்டாம் உலகப்போரில் இந்தியா சுயேட்சையான முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் மாற்றப்படவேண்டும் என காங்கிரஸ் கோரியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய தலைவர்களின் கருத்துக்களை புறக்கணித்து இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து முடிவெடுத்தது. 1939 அக்டோபரில் கூடிய காங்கிரஸ் வைஸ்ராயின் முடிவை எதிர்த்து தீர்மானம் இயற்றியது. வைஸ்ராய் நிலவும் சூழல்களைக் கணக்கில் கொண்டு அனைத்து கட்சியினரையும் கொண்ட consultative group அமைப்பதாக அறிவித்தார். வார்தாவில் கூடிய காங்கிரஸ் அக்டோபர் 22, 1939ல் வைஸ்ராயின் பிரித்தாளும் சூழ்ச்சியை கண்டித்தது. காங்கிரஸ் அமைச்சரவைகள் அக்டோபர்- நவம்பரில் ராஜினாமா செய்தன. அபுல்கலாம் ஆசாத் தலைவராக இருந்த காங்கிரஸ் அமர்வு 1940ல் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதியாக அரசிற்கு தெரிவித்தது.. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய நலன்களை ஒட்டியே போரை நடத்திவருகிறது. காங்கிரசால் ஒத்துழைக்க இயலாது என்பது தீர்மானமானது. வைஸ்ராய் லின்லித்கவ் தனது கவுன்சிலில் இந்தியர்களை வைத்துக்கொள்ள இயலுமே தவிர அதிகார மாற்றம் இல்லை என உறுதியாக அறிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவும் இந்தியாவில் வரவேற்பை பெறமுடியவில்லை. கிரிப்ஸ் குழு மார்ச் 1942ல் வந்தது. டொமீனியன் அந்தஸ்து, மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோரைகொண்ட அரசியல் நிர்ணய சபை, விரும்பாத பகுதிகளுக்கு தனி அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபையுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் விவாதித்து பின் அதிகார மாற்றம்- ‘மைனாரிட்டிகள்’ பாதுகாப்பு ஏற்பாடுகள் என அக்குழு சில ஆலோசனைககளை தந்தது. நேரு தனது விமர்சனத்தை வைத்தார். இந்தியாவை உடைக்கும் ஆலோசனைகள் என்பது அவரது விமர்சனமாக இருந்தது. பம்பாயில் 1942 ஆகஸ்ட் 8ல் கூடிய காங்கிரஸ் பிரிட்டிஷ் வெளியேறு- “Quit India” தீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தியும் ‘செய் அல்லது செத்துமடி’ என அழுத்தமான உரையை தந்தார். சற்று இளகலான விவாதத்திற்கு காந்தி ஏன் தயாராகவில்லை என்கிற கருத்து நேருவிடம் இருந்தது. ஆனால் எதற்கும் நேரமில்லாமல் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். புனே ஆகாகான் இல்லத்தில் காந்தி காவலில் வைக்கப்படுகிறார். நேரு அகமது நகரில் சிறை வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகபோர் முடிவடையக்கூடிய தருணத்தில் பிரிட்டனில் தேர்தல் நடந்து ஜூலை 26, 1945ல் அட்லி தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வருகிறது. இந்தியாவில் வைஸ்ராயாக அப்போதிருந்த வேவல் சிம்லா மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கிறார். வைஸ்ராய் கவுன்சிலை விரிவுபடுத்துவது- இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு சம வாய்ப்புக்களை தருவது என அவர் முன்மொழிந்தார். முஸ்லீம்லீக் மட்டுமே முஸ்லீம் பிரதிநிதிகள் எவர் என்பதை முடிவு செய்யும் என்பதில் ஜின்னா பிடிவாதமாக இருந்தார். இதனால் சிம்லா அமர்வில் தீர்வு எட்டப்படமுடியாமல் போனது. வைஸ்ராய் முதலில் மாநில, மத்திய சட்டமன்றத்தேர்தல் என வற்புறுத்தினார். வாக்குரிமையில் உடனடியாக மாற்றம் சாத்தியமில்லை என தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 19 1945ல் அரசியல் அமைப்பு சட்ட அவை ஒன்றை அமைக்க தேர்தல்- அதன் மூலம் இந்திய மக்களின் விருப்பத்தை அரசாங்கம் உணரமுடியும் என வேவல் அறிவித்தார். முஸ்லீம் லீக் தேர்தல் பாகிஸ்தான் கோரிக்கைக்கான வாக்கெடுப்பே என அறிவித்தது. முஸ்லீம் லீக் தனது வலுவான பகுதிகளில் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்வாக்கை நிரூபித்தது. காங்கிரஸ் கணிசமான வெற்றியைப்பெற்று செல்வாக்கை நிரூபித்தது. அஸ்ஸாம் மற்றும் வடமேற்கு எல்லைபுற மாகாணத்திலும் காங்கிரஸ் செல்வாக்கை காட்டியது. ஜின்னா உரிமைபாராட்டியதை நிருபிக்க முடியாமல் போனது. நேரு வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை என தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அன்றிருந்த நிலையில் இந்திய மக்களில் 12 சத பகுதியினருக்குக்கூட வாக்குரிமை இல்லை. 25 கோடி மக்களில் 3 கோடிபேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் காபினட் தூதுக்குழு ஒன்றை பிப்ரவரி 1946ல் அறிவித்தது. இதில் பெதிக் லாரன்ஸ், கிரிப்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இருந்தனர். இந்தியாவிற்கு அதிகார மாற்றம் எப்படி என்பதற்கான ஆலோசனைகளை தூதுக்குழு தெரிவித்தது. மே 16, 1946 அன்று வைஸ்ராயும் தூதுக்குழுவும் தங்களது திட்டத்தை வெளியிட்டனர். ஒன்பது பக்கங்களில் 24 அம்சங்களை கொண்ட திட்டமாக வந்தது. அதன் முக்கிய நோக்கங்கள் என கீழ்கண்டவற்றை சொல்லலாம் அ. இந்திய தலைவர்கள் ஒப்புதலுடன் இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் வரைதல் ஆ. அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவை இ. இந்திய அரசியல் கட்சிகளின் உதவியுடன் வைஸ்ராய் கவுன்சில் ஈ. provinces, provincial groupings and the centre என்கிற மூன்று அடுக்குமுறை அரசாங்கதரப்பில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பை தரவேண்டும்- அதேநேரத்தில் இரத்து அதிகாரம் இருக்கமுடியாது என்கிற கருத்தும் சொல்லப்பட்டது. காங்கிரஸ் செயற்குழு ஜூன் 25, 1946ல் கூடி காபினட் தூதுக்குழுவை ஏற்பது என்ற முடிவிற்கு வந்தது. முஸ்லீல் லீக் ஜூலை 27ல் கூடி காபினட் தூதுக்குழு முடிவுகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 16 அன்று நேரடி நடவடிக்கை தினம் என்கிற அறிவிப்பையும் செய்தது. வகுப்புக்கலவரம் கல்கத்தாவில் வெடித்தது. பின்னர் நவகாளி, பீகாரில் கலவரம் வெடித்து பரவியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டார். அப்பகுதியில் வகுப்பு நல்லிணக்கத்திற்காக அவர் மேற்கொண்ட அன்றாட நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் ஏராளம் வந்துள்ளன. வைஸ்ராய் ஜூலை 31, 1946ல் காங்கிரசை இடைக்கால அரசாங்கம் அமைக்க அழைப்பது நல்லது. மோசமான சக்திகளை ஒடுக்கவும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரசின் இடது சக்திகளை சரிப்படுத்தவும் இந்நடவடிக்கை அவசியமாகிறது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதினார். "If Congress will take the responsibility, they will realize that firm control of unruly elements is necessary and they may put down the Communists and try to curb their own Left Wing. Also I should hope to keep them so busy with administration that they would have much less time for politics." ஆகஸ்ட் 12, 1946 அன்று இடைக்கால அரசாங்கம் அமைக்க அழைப்பும் கொடுக்கப்பட்டது. ஜின்னாவை கலந்து பேசி அமைக்கலாம் என்கிற ஆலோசனையும் தரப்பட்டது. நேரு ஜின்னாவை ஏற்கவைக்க முயற்சித்தார். முயற்சியில் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. அமைச்சரவையில் 6 காங்கிரஸ், 5 முஸ்லீம்கள், சீக்கியர், பார்சி, கிறிஸ்துவர் தலா ஒன்று என்கிற அடிப்படை பேசப்பட்டது. அரசாங்கம் கீழ்கண்ட அறிவிப்பை ஆகஸ்ட் 24 1946ல் வெளியிட்டது. மாட்சிமைதாங்கிய மன்னர் கவர்னர் ஜெனரலின் கவுன்சில் உறுப்பினர்களின் ராஜினாமை ஏற்கிறது. பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஆசப் அலி, ராஜகோபாலாச்சாரி, சரத் சந்திர போஸ், டாக்டர் ஜான் மதாய், சர்தார் பல்தேவ் சிங், சபாத் அகமது கான், ஜெகஜீவன்ராம், சையத் அலி ஜாகீர், சி எ ச் பாபாஆகியோரைக்கொண்ட இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கிறது. இவர்கள் செப்டம்பர் 2, 1946ல் பதவி ஏற்பர். படேலுக்கு கட்சியில் பெரும் செல்வாக்கு இருந்தது. பிரதமர் ஆகமுடியும் என்கிற வாய்ப்பும் இருந்ததாகவே கருதப்பட்டது. பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்த கேம்பிரிட்ஜ் நேருவே சரியாக இருப்பார்- அவர் தனது கொள்கைகளை அமுல்படுத்தக்கூடும் என்கிற நம்பிக்கையை காந்தி வெளிப்படுத்தினார். காந்தியின் தலையீட்டால் நேரு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று அதன் வகையில் பிரதமராக பதவியேற்கவும் வழிவகையானது. அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய சபைக்கு பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்களும் செல்லவேண்டும். ஒத்துழைப்புடன் ஒருங்கிணந்து செயல்பட வாரீர் என நேரு அழைப்புவிடுத்தார். வேறுபடுபவர்களும் வாருங்கள்- ஒத்துழைப்புடன் செயல்படவோம். அரசியல் சட்ட அசெம்பிளியில் சம மரியாதையுடன் விவாதிக்கலாம் என அழைப்பு விடப்பட்டது. முஸ்லீம் லீகின் பிடிவாதத்தை தளர்த்தி அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் வைஸ்ராய். லீகின் சார்பில் லியாகத் அலி கான், அப்துல் ரப் நிஷ்தார், இப்ரகிம் இஸ்மாயில் சுந்திரிகர் மற்றும் எஸ்சி எஸ் டிகளின் பிரதிநிதி என ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் இடம் பெற்றனர். பங்கேற்ற அமைச்சர்கள் அனைத்து விஷயங்களிலும் நேருவிற்கு எதிராகவே பேசிவந்தனர். ஜின்னாவை பொறுத்தவரை நேருவின் தலைமையிலான அரசாங்கம் இந்து அரசாங்கமே என சொல்லிவந்தார். பொறுமையிழந்த காங்கிரஸ் தலைமை லீக் அமைச்சர்கள் பதவி விலக வற்புறுத்தியது. பிரதமர் அட்லி இந்தியத்தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். லண்டனில் டிசம்பர் 2 1946ல் பேச்சுவார்த்தை துவங்கியது. முன்னேற்றம் ஏதும் வரவில்லை. லீக் தனி பாகிஸ்தான் கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்பதில் உறுதியாக இருந்தது. அரசியல் நிர்ணய அவையின் முதல் அமர்வு டிசம்பர் 9 1946 என முடிவெடுக்கப்பட்டது. லீக் பங்கேற்க இயலாது என நிலை எடுத்தது. அரசியல் நிர்ணய சபையில் நோக்கத்தீர்மானத்தை டிசம்பர் 13, 1946ல் நேரு முன்மொழிந்தார். அதன் சாரம்சம் பொதுவாக ஏற்கப்பட்டு அரசியல் அமைப்பு சட்டம் உருப்பெற்றது. நேரு பல முக்கிய கமிட்டிகளில் செயல்பட்டுவந்தார். எந்த ஒரு குழுவிற்காகவும் இல்லாமல் அனைவருக்காகவும் இங்கு நாம் விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை அவர் உருவாக்க விழைந்தார். இந்தியாவை முழுமையாக 40 கோடி ஜனங்களின் நன்மைக்கான செயல்பாட்டை உருவாக்குவோம் என்றும் சொல்லப்பட்டது. முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரசால் ஏற்புடைய கருத்தொற்றுமையை உருவாக்க முடியாத சூழல் நீடித்தது. அட்லி அரசாங்கம் பிப்ரவரி 20 1947ல் அறிவிப்பு ஒன்றை செய்தது. மாட்சிமைதாங்கிய மன்னர் அரசாங்கம் ஜூன் 1948க்குள் அதிகார மாற்றம் செய்ய சித்தமாகவுள்ளது என்பது அறிவிப்பாக இருந்தது. " His Majesty’s Government wish to make it clear that it is their definite intention to take necessary steps to effect the transference of power to responsible Indian hands by a date not later than June 1948" இந்தியத்தலைவர்களால் ஒன்றுபட்டு ஒரே அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆட்சி அதிகாரத்தை எப்படி எவரிடம் முடிவெடுப்பது என்பதை பிரிட்டனே இறுதி செய்யும் என்கிற அதிரடி அறிவிப்பும் கூடவே வந்தது. His Majesty’s Government will have to consider to whom the powers of the Central Government in British India should be handed over, on the due date, whether as a whole to some form of Central Government for British India, or in some areas to the existing Provincial Governments, or in such other way as may seem most reasonable and in the best interests of the Indian people." அதிகார மாற்றத்தை விரைவில் முடித்திடும் வகையில் வேவல் திரும்ப அழைக்கப்பட்டு வைஸ்ராயாக மெளண்ட்பேட்டன் நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 1947ல் பொறுப்பேற்றுக்கொண்டார். ஏப்ரல் 1947ல் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற நேரு லீகிற்கு மீண்டும் அழைப்பு ஒன்றை தந்தார். லீக் ஒத்துழைக்காமல் போனாலும் அரசியல் அமைப்பு நிர்ணயசபை நடவடிக்கைகள் தொடரும் என அவர் அறிவித்தது மேலும் சிக்கலை அதிகமாக்கியது. பிரிவினைத்தவிர வேறு வழியில்லை என்ற சிந்தனை காங்கிரஸ் தலைமையிடத்தும் வந்தது. காந்தி பிரிவினை வேண்டாம் என தொடர்ந்து சொல்லிவந்தார். ஜின்னாவை பிரதமராக்கி அவர் ஒன்றுபட்ட இந்தியாவிற்கு அமைச்சரவை அமைக்கட்டும் எனக்கூட மெளண்ட்பாட்டனிடம் விவாதித்தார். அனைத்துக் கட்சியினருடனும் விவாதித்த மெளண்ட்பேட்டன் தனது ‘ஜூன் 3 முன்மொழிவுகளை’ வைக்கிறார். முஸ்லீம்கள் அதிகமான பகுதி பாகிஸ்தான் என பிரிக்கப்படும். நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு பகுதிகளாக பிரிக்கப்படும். உடனடியாக டொமீனியன் அந்தஸ்து. இரு நாடுகளும் தங்களுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றி இறையாண்மை நாடுகளாகலாம். சமஸ்தானங்கள் எங்கு சேர விழைகிறார்களோ அங்கு சேரலாம் என்பது ஜூன் 3 திட்டத்தின் சாரம். சுதந்திரத்திற்கான விலை பிரிவினை என்றால் ஏற்பதைத்தவிர வழியில்லை என காங்கிரஸ் ஜூன் 3 திட்டத்தை ஏற்றது. மனதில் வேதனை இருந்தாலும் இதுதான் வழி என மக்களிடம் நேரு உரையாற்றினார். எவரையும் கட்டாயப்படுத்திவைப்பது சாத்தியமாக இருக்காது என அவர் கருதினார். சுதந்திர போராட்டத்தின் கடும்உழைப்பு என்பது விரும்பாத பகுதி ஒன்றை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதாக இருக்கவேண்டியதில்லை எனவும் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். பிரிவினையை ஏற்ற காங்கிரஸ் மீது விமர்சனமே வரவில்லை என சொல்லமுடியாது. படேல் கூட நேரு யாரையாவது சார்ந்துதான் செயல்படும் பழக்கம் உடையவர்- இம்முறை அவர் மெளண்ட்பாட்டன் சார்ந்து செயல்படுகிறார் என்கிற கருத்தை வைத்திருந்தார். பஞ்சாப் பற்றி எரிகிறது. தினம் கொலைகளின் சத்தம் கேட்கிறது. இந்நிலையில் பிரிவினை வழி ஒன்றை தருவதால் அதை தவிர்க்கமுடியாமல் ஏற்கவேண்டியதானது என்று நேரு தனது விளக்கத்தை தந்தார். காங்கிரசில் கோவிந்த வல்லப் பந்த் தீர்மானமும் இதைத்தவிர வேறுவழியில்லை என்பதை சுட்டிக்காட்டியது. ஜூன் 3 ஏற்பதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என பந்த் கேட்டார். ‘இந்திய விடுதலை சட்டம் 1947’ அறிவிக்கப்பட்டு இரு நாடுகள் இந்தியா பாகிஸ்தான் உருவாயின. சிந்தி, மேற்கு பஞ்சாப், வடமேற்கு மாநிலம், கிழக்கு வங்கம், பலுசிஸ்தான் பகுதிகள் பாகிஸ்தானாக உருமாறின. ஆகஸ்ட் 7ல் ஜின்னா கராச்சி சென்றார். ஆகஸ்ட் 15ல் அவர் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். லியாகத் அலிகான் பிரதமரானார். இந்தியாவில் மெளண்ட்பாட்டன் கவர்னல் ஜெனரலாக இருக்க வேண்டப்பட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். நேரு பிரதமராக பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 14 இரவில் அனைவரும் கூடி நேருவின் புகழ்வாய்ந்த Tryst with Destiny உரையை கேட்டனர். உலகம் உறங்கும்போது இந்தியா உயிர்ப்புடன் விடுதலைப் பெறுகிறது என்கிற அவரது உரை அனைவரையும் ஈர்ப்பதாக அமைந்தது. காந்தியர்கள் கிராம பஞ்சாயத்துகள் முன்னேற்றம்- அதிகார பரவலாக்கம் பற்றி ஏதுமில்லை என வருத்தப்பட்டனர். காந்தி ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் வகுப்பு கலவர பகுதிகளில் அமைதி ஏற்படுத்தி ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். நமது மகத்தான மனிதரின் கனவான எந்த ஒரு மனிதரின் கண்களிலிருந்து வழியும் சொட்டு நீரையும் துடைப்பது எனும் மகத்தான கடமைக்கு- அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் அக்கடமைக்கு நம்மை வருத்திக்கொள்வோம் என காந்தியை நினைவுப்படுத்தி நேரு பேசினார். அடிப்படை உரிமைகள், சொத்துரிமை, மத சுதந்திரம்- செக்யூலரிசம், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், அமைச்சரவை உறவுகள், தேசியக்கொடி என முக்கிய அனைத்து விவாதங்களிலும் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய அவையில் நேரு தனது பங்களிப்பை செய்தார். ஜனவரி 24 1950 அன்று ராஜேந்திர பிரசாத் தேசியகீதம் குறித்த முடிவை வெளியிட்டார் அரசியல் அமைப்பு சட்டம் நவம்பர் 26 1949ல் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள், 11மாதங்கள், 17 நாட்கள் அதன் பணி நடந்து முடிந்தது. 1949 நவம்பரில் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் கையெழுத்து பிரதியாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஜனவரி 24 1950ல் வைக்கப்பட்டு அவை உறுப்பினர் அனைவரின் கையொப்பம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பிரிண்ட் ஆன நகல் ஒன்றும் கொணரப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்த இந்தியா ஜனவரி 26, 1950 முதல் தனது குடியரசு பயணத்தை மேற்கொண்டது. நேருவின் சிறை வாழ்க்கை விடுதலை போராட்டக்காலத்தில் நேருவின் சிறைவாழ்க்கை பற்றிய அனுபவங்கள் சிறு குறிப்பளவிலாவது இளம் தலைமுறையினருக்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் இங்கு தரப்படுகிறது. நேரு ஒன்பதுமுறை சிறை சென்றவர். அவரின் சிறைவாசம் 9 ஆண்டுகள் (3259 நாட்கள்) என நேரு மெமோரியல் மியூசியம் தகவல் தருகிறது. நேருவின் முதல் அனுபவம் லக்னோ மாவட்ட சிறையில் துவங்கியது. 88 நாட்கள் டிசம்பர் 6, 1921 முதல் மார்ச் 3 1922 அங்கு சிறைவாழ்க்கை அமைந்தது. இளவரசர் வேல்ஸ் நவம்பர் 1921 வருகை புறக்கணிப்பு என்பதை வைஸ்ராய் லார்டு ரீடிங் கடுமையாக பார்த்தார். நடவடிக்கைகளில் இறங்கினார். கிலாபத்- காங்கிரஸ் தொண்டர்கள் கைதாகினர். டிசம்பர் 6 1921 ஆனந்தபவனை வட்டமடித்த போலீசார் நேரு, மோதிலாலை கைது செய்தனர். ‘மகாத்மா உத்தரவு’ என்கிற வெளியீட்டை விநியோகித்தார் நேரு என்பது குற்றச்சாட்டு. அவர் அன்று இரவே லக்னோ அழைத்து செல்லப்பட்டார். வழக்கு டிசம்பர் 15ல் ஆரம்பித்து டிசம்பர் 17ல் 6 மாத சிறை என தீர்ப்பிட்டனர். அப்போது ரூ 100 அபராதம் என்பது அதிகத்தொகைதான். அபராதம் கட்ட மறுத்துவிட்டார் நேரு. அலகாபாத் மக்களுக்கு கீழ்கண்ட செய்தியை நேரு விடுத்தார். சிறைக்கு மிக்க மகிழ்ச்சியுடனேயே செல்கிறேன். உறுதிப்பாட்டுடன் செல்கிறேன். போராட்டக்காலத்தில் அமைதியையும் அகிம்சையையும் கடைபிடியுங்கள். அலகாபாதின் கெளரவம் உங்கள் கரங்களில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்- போராட்ட முனையில் நின்று வரலாற்றின் பக்கங்களில் நமது நகரின் பெயரை பொறியுங்கள் என்பது அவரால் விடுக்கப்பட்ட செய்தி. நேரு முன்கூட்டியே மார்ச் 3 1922ல் விடுதலை செய்யப்பட்டார்- 87 நாட்கள். ஏன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டேன் எனத் தெரியவில்லை. எனது தந்தை ஆஸ்த்மா தொல்லையுடன் சிறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான என் தோழர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். தொடர்ந்து போராடுவொம் என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது என நேருவின் பதிவு செல்கிறது. விடுதலைக்குப் பின்னர் நேரு அந்நிய துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் கவனம் செலுத்தினார். இதற்காக அலகபாத் மக்களை திரட்டினார். நேரு ரகுநாத் பிரசாத் மற்றும் பிஷம்பர் நாத் ஆகியோருடன் இணைந்து சிறு பிரசுரம் ஒன்றைக்கொணர்ந்தார். இதை போலீசார் மே 2 1922ல் பறிமுதல் செய்தனர்.. லக்னோ மாவட்ட சிறையிலிருந்த தந்தை மோதிலாலை ஜவஹர்லால் மே 11 1922ல் பார்க்கச் செல்கிறார். அங்கேயே அவர் ஐ பி சி செக்‌ஷன்கள் படி கைது செய்யப்படுகிறார். துணி வியாபாரிகளை மிரட்டியதாக வழக்கு போடப்பட்டது. மாவட்ட நீதிபதியிடம் தன் தரப்பை நேரு முன்வைத்தார். “அமைதிவழியில் போராடியது குற்றம் எனில் நான் குற்றவாளிதான். எங்களை இப்படி குற்றவாளி என முத்திரைகுத்தி ஒடுக்குவதன் மூலம் எவராவது வெற்றிபெறமுடியுமா? எங்களின் சக்திக்கு மக்கள் பின்புலமே காரணம் என்பதை உலகமே அறியும். நாங்கள் கடந்தகால ஆயுதங்களை பயன்படுத்தவில்லையே- எங்கள் தலைவரின் அன்பு, சுயத்தியாகம் என்கிற கருவிகளை அல்லவா பயன்படுத்துகிறோம். சுயவதைகளின் வழியே எதிரிக்கும் மனமாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.” மே 19 அன்று தீர்ப்பு சொல்லப்படுகிறது. அவருக்கு 18 மாத கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இம்முறை அவர் 260 நாட்கள் சிறையிலிருக்கிறார். ஜனவரி 31 1923ல் விடுதலை செய்யப்படுகிறார். பஞ்சாபில் நபா பகுதியில் சமஸ்தான மன்னரை நீக்கி பிரிட்டிஷ் நிர்வாகம் பொறுப்பேற்றது பிரச்சனையானது. நேரு தனது காங்கிரஸ் தோழர்கள் சந்தானம், ஜித்வானி ஆகியோருடன் செப்டம்பர் 19 1923 நபா செல்கிறார். செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். உடனடியாக வெளியேறவேண்டும் என போலீஸ் அதிகாரி சொன்னதை அவர்களால் ஏற்கமுடியவில்லை. நேருவின் வலது கரமும் சந்தானத்தின் இடதுகரமும் சேர்த்து பிணைக்கப்பட்டு விலங்கிட்டு அழைத்து செல்லப்படுகின்றனர். தொடர்ந்து 20 மணிநேரம் இருவரும் விலங்கிடப்படிருந்தனர். விசாரணையில் நேரு முன்வைத்த வாதம்: “சீக்கியர்களுடன் நின்ற காரணத்திற்காக கைதானது குறித்து மகிழ்ச்சியே. அகாலிகளின் வீரம் வியக்கவைத்துள்ளது. அவர்களின் உயர் மரபில் நானும் நின்றேன் என்கிற வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர்கள் சேவையில் நின்றேன் என்பது மதிப்புக்குரியதே” நபாவிற்கு வெளியே இருந்து வக்கீல் அழைத்துவர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்து வெளியேற சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெறுவதாக சூப்பிரடெண்டட் சொன்னார். மூவரும் வருத்தம் தெரிவிக்க இயலாது என மறுத்துவிட்டனர். “There was nothing to express regret about, so far as we were concerned; it was for the administrator to apologies to us.” என பதில் தந்தனர். அவர்களுக்கு 24 மாத தண்டனை தரப்பட்டாலும் 12 நாட்களில் அக்டோபர் 4 1923ல் விடுவிக்கப்பட்டனர். இனி வருவதாக இருந்தால் அனுமதி பெற்றே வரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் வழக்கு முடிந்தது. கல்கத்தா காங்கிரஸ் அமர்வு (டிசம்பர் 1928) ஓராண்டில் விடுதலை- இல்லையெனில் அகிம்சைவழி ஒத்துழையாமை என தீர்மானித்தது. லாகூர் டிசம்பர் 1929 அமர்வு சட்டமன்றங்களை- பிரிட்டிஷ் கமிட்டிகளை புறக்கணிப்போம் என்றது. போராட்ட திட்டம் பற்றி காந்தி அறிவிக்கலாம் என அனுமதித்தது. பிப்ரவரி 1930ல் வரிகொடா இயக்கம் துவங்கியது. மார்ச் 12 1930ல் புகழ்வாய்ந்த தண்டியாத்திரையை காந்தி துவங்கினார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவு தந்தனர். நேரு இந்தி மாநாடு ஒன்றிற்காக ராய்ப்பூர் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு நைனி அலகாபாத் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இரண்டேமணிநேரத்தில் உடனடி விசாரணை நடந்தது. 1882 சால்ட் சட்டப்படி அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார். ஆறுமாதம் தண்டனை தரப்பட்டது. காந்திக்கு நேரு செய்தி அனுப்பினார். “I have stolen a march over you”. இம்முறை அவர் 175 நாட்கள் சிறை வாழ்க்கையை முடித்து அக்டோபர் 11 1930ல் வெளிவருகிறார். சிறையிலிருந்து வந்த மறுநாளே அலகாபாதில் வரிகொடா இயக்க கூட்டம் ஒன்றில் நேரு உரையாற்றுகிறார். அகிம்சைவழியில் நம்பிகை இருப்பதால்தான் இப்போராட்டமுறையை நாம் மேற்கொள்கிறோம் என்பதை அழுத்தமாக அவரது உரையில் பதிவு செய்கிறார். விவசாயிகளிடம் வரிகொடா இயக்கத்தை துண்டிவிடுகிறார் என மீண்டும் அவர் அக்டோபர் 19 1930ல் கைது செய்யப்படுகிறார். அக்டோபர் 24 1930ல் விசாரணை வருகிறது. நேரு தன் உருக்கமான வாதத்தை முன்வைத்தார் “அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையே எந்தவித சமரசமும் இருக்கமுடியாது. சுதந்திரத்தின் விலை எங்கள் நாட்டவரின் இரத்தம்- வதை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதை முழுமையாக நாங்கள் தருவோம்” இம்முறை அவருக்கு இரு சட்டங்களின் படி ( Salt act, Ordinance 1930) இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ 600 அபராதமும் விதிக்கப்படுகிறது. நைனி சிறையில் அவர் 97 நாட்கள் இருந்தார். ஜனவரி 26 1931ல் விடுவிக்கப்படுகிறார். அங்கிருந்து இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள் பின்னர் 1934ல் Glimpses of world History என வெளியானது. அலகாபாதில் குத்தகைதாரர்கள் கூட்டம் ஒன்றில் அக்டோபர் 23 1931ல் நேரு உரை ஆற்றுகிறார். உ பி அரசாங்கம் அவசர சட்டம் ஒன்றைப் போடுகிறது. நேரு டிசம்பர் 26 1931ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்காக பம்பாய் கிளம்புகிறார். அலகாபாத் முனிசிபல் எல்லை தாண்டக்கூடாது என அவர் கைது செய்யப்படுகிறார். இம்முறை இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது மோட்டார் கார் ஏலம் விடப்பட்டு அபராதத்தொகை எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதலில் அவர் நைனி சிறையில் பிப்ரவரி 5 1932 வரை வைக்கப்படுகிறார். பின்னர் பரேலி, டேராடூன் சிறைக்கு ஆகஸ்ட் 23, 1933 வரை மாற்றப்படுகிறார். மறுபடியும் நைனி சிறைக்குள் வைக்கப்பட்ட நேரு 610 நாட்கள் சிறைத்தண்டனை முடிந்து ஆகஸ்ட் 30 1933ல் வெளியே விடப்படுகிறார். ஜனவரி 1934ல் அவர் கல்கத்தாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்தும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை சாடியும் அவரது உரை அமைந்தது. அரசாங்கத்தை விமர்சித்து பேசியதால் ராஜத்துரோக வழக்கு போடப்பட்டது. அவர் பிப்ரவரி 12, 1934ல் கைது செய்யப்படுகிறார். பிப்ரவரி 15 விசாரணை செய்யப்படுகிறது. விசாரணையின்போது விடுதலைக்காகப் போராடுவது ராஜத்துரோகம் எனில் அதை முன்பும் செய்துள்ளேன் - இனியும் செய்வேன். அந்நிய ஆட்சி சுவடுகள் இருக்கும்வரை போராடுவேன் என தன் தரப்பை முன்வைத்தார் . எம்மக்களை சுரண்டுகிற, எங்கள் வளங்களை எடுத்துச் செல்கிற ஆட்சியை முற்றிலுமாக துடைத்தெறிய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை அழுத்தமாக நேரு தன் வாதத்தில் மிகத்தைரியமாக முன்வைத்தார். அவர் அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. அங்கிருந்து டேராடூன் சிறைக்கு மாற்றப்படுகிறார். கமலா உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரோலில் ஆகஸ்ட் 12-23 1934ல் விடப்படுகிறார். நைனி சிறைக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து அல்மோரா சிறையில் அடைக்கப்படுகிறார். இம்முறை அவர் 565 நாட்கள் தண்டனையுடன் செப்டம்பர் 3, 1935ல் விடுவிக்கப்படுகிறார். கமலா உடல்நில கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஜெர்மனி செல்வதற்கு ஏதுவாக நேரு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். கமலா அவர்கள் பிப்ரவரி 28, 1936ல் மறைகிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டி இந்தியா சுதந்திரமாக போர் குறித்த தன்நிலையை முடிவெடுக்கவேண்டும் என்பதை சாரப்படுத்தும் தீர்மானத்தை காங்கிரஸ் வார்தாவில் செப்டம்பர்- அக்டோபர் 1939ல் நிறைவேற்றியது. நேரு, படேல், ஆசாத் யுத்தக்கமிட்டி ஒன்றும் நிலைமைகளை கண்காணித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டது. வைஸ்ராய் லின்லித்கோ உடன் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் தனிநபர் சத்தியாகிரகம் துவங்கப்படுகிறது. முதலில் வினோபாபாவே அக்டோபர் 21 1940ல் கைதாகிறார். நேரு நவம்பர் 7 1940ல் - சோவியத் புரட்சி தினத்தன்று- சத்தியாகிரகம் என அறிவிக்கிறார். ஆனால் அக்டோபர் 31, 1940ல் முன்கூட்டியே அவர் கைது செய்யப்படுகிறார். இம்முறை அவர் கோரக்பூர் மாவட்ட கூட்டங்களில் அக்டோபர் 6,7 நாட்களில் பேசிய உரைகளுக்காக கைது செய்யப்பட்டதாக அறிவிக்கின்றனர். கோரக்பூர் சிறைச்சாலையில் அவர் நவம்பர் 3, 1940ல் விசாரிக்கப்படுகிறார். தனது தரப்பாக நேரு முன்வைத்த வாதம்: இந்தியாவில் கடந்த ஓராண்டாக யுத்த அரசாங்கம் நடந்துவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கம் இல்லை. அவர்களின் விருப்பங்கள் அலட்சியப்படுத்தப்டுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் இருவித தேர்வுகள் உள்ளன. ஏகாதிபத்திய அரசாக தொடர்வது- அல்லது சுதந்திர வேட்கைக்கு மதிப்பளித்து அம்மக்களின் தலைவனாக உலக அரங்கில் நிற்பது- உலகின் புரட்சிகர மாற்றங்களுக்கு துணையாக நிற்பது என்பதை நேரு சுட்டிக்காட்டினார். இம்முறை கோரக்பூர், டேராடூன், லக்னோ என அவர் 397 நாட்கள் சிறையில் வாழவேண்டியிருந்தது. டிசம்பர் 3 1941ல் அவர் வெளியே வந்தார். இது அவரது எட்டாவது சிறைவாசமாக அமைந்தது. 1942 ஆகஸ்டில் கூடிய காங்கிரஸ் புகழ்வாய்ந்த பிரிட்டிஷ் வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றினர். நேரு தனது விளக்கமாக தீர்மானம் எவரையும் பயமுறுத்த அல்ல - நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே என்றார். சுதந்திர இந்தியாவாக பிரிட்டனுடன் ஒத்துழைப்பதற்கான எண்ணமது என விளக்கம் தந்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் அறிவிக்கப்படாத இடங்களில் சிறைவைக்கப்பட்டனர். நேரு ஆகஸ்ட் 9, 1942ல் அகமதுநகர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அகமதுநகர், பரேலி, அல்மோரா என அவர் மாற்றப்பட்டு 1030 நாட்களை கடந்து ஜூன் 15, 1945ல் விடுதலையாகிறார். அகமதுநகர் சிறைக்காலத்தில் The Discovery of India எழுதினார். அவ்வாக்கம் 1946ல் வெளியிடப்பட்டது. நேருவின் 9 ஆண்டுகள் ஒன்பது முறை சிறைவாசம் அவருக்கு மட்டுமல்லாது வரலாற்று செய்திகளையும், அவரது அழியா படைப்புக்களையும் சேர்த்தே கொடுத்துள்ளது . காந்தி நேரு விவாதம் காந்தியின் சீடர்கள் என அழைத்துக்கொள்வோரில் நேரு தனித்துவம் மிக்கவராக இருந்தவர் . தன்னளவில் சரி என அறிந்தவற்றை முகம் பார்க்காமல் பேசக்கூடியவராக இருந்தார். அவர் காந்தி சகாப்தத்தின் விளைபொருள் என்றாலும் மேற்கு ஜனநாயகம், ருஷ்யபுரட்சி, மார்க்சிய தாக்கம், சோசலிச சிந்தனைகளின் கூட்டுவிளைபொருளாகவும் இருந்தார். காந்தி நேரு உறவுகள் விடுதலைக்கால சிந்தனைகள் போராட்டங்களின் ஊடாக வளர்ந்த ஒன்றாக, தனிப்பட்ட உறவுகளை எப்போதும் மேம்படுத்திக்கொண்ட ஒன்றாக இருப்பதை காணமுடியும். காந்தியின் வாழ்வியல் சிந்தானாமுறைகளில் நேரு பெருமளவு வேறுபட்டு நின்றார். அதேநேரத்தில் காந்தியின் செயல்பாட்டிற்கு தலைவணங்கி உடன் நின்றார். காலப்போக்கில் நேருவின் அறிவாற்றல்திறன் காந்தியால் கொண்டாடப்பட்டது. தனக்குப்பின் நேரு என்றும் அறிவித்தார். நேரு தன் மொழியைப் பேசுவார் என்கிற நம்பிக்கை காந்தியிடம் இருந்தது. இந்தியாவிற்கு திரும்பிய சில ஆண்டுகளிலேயே காந்தியின் செல்வாக்கில் காங்கிரஸ் கட்டுண்டது. ஏறக்குறைய அதே காலத்தில் இளம் நேரு தனது பொதுவாழ்க்கையை இந்தியாவில் துவங்கினார். அய்ரோப்பிய பயணம், சோவியத் சென்றுவந்த காலத்திற்கு பின்னர் நேருவின் செல்வாக்கு கூடத்தொடங்கியது. காங்கிரஸ் அமர்வுகளில் சோசலிசம் குறித்த சொல்லாடல்கள் பெருகின. முழு சுதந்திரம், அகிம்சைகோட்பாடு, மதம், சோசலிசம், அமைப்புக் கட்டுப்பாடு, இரண்டாம் உலகப்போர் பார்வை போன்ற அம்சங்களில் அவர்களிடம் விவாதங்கள் இருந்தன. காந்தி - நேரு இருவரும் தொடர்ந்து வேறுபாடுகளை மூடாமல் விவாதம் நடத்தி வந்தனர். தனது வளையத்திற்குள் தன்னை வருத்திக்கொண்டு ஜவஹர் நிற்கவேண்டிய அவசியமில்லை. கலகம் கூட செய்யலாம் என்றவர் காந்தி. இருவரும் கடும் விவாதங்கள் நடத்திய காலங்களில் ஒருவர் தேவையை மற்றவர் உணர்ந்தவராகவே இருந்தனர். கடுமையான கருத்துவேறுபாடுகள் கொண்டவராக நேரு இருந்தாலும் காந்தியின் எல்லைக்குள் நின்று அவர் பேசிக்கொண்டிருந்தார். காந்தியும் நேருவை காங்கிரஸ் தலைவராக கொணர்வதில் செல்வாக்கு செலுத்தினார். படேலா- நேருவா என வந்தபோது கூட நேரு என நின்றார் காந்தி. அன்பை காட்டுவதிலும் வேறுபாடுகளை வெளிப்படையாக இறக்கி வைப்பதிலும் எந்த பாசாங்கும் அவர்களிடத்தில் இல்லை என்பதை நாம் அவர்களின் விவாதங்கள் வழியே கற்கமுடியும். இந்த விவாதங்கள் கவனப்படுத்தப்படவேண்டியனவாக உள்ளன. சுதந்திர போராட்டக் காலத்தில் நடந்த முக்கிய விவாதங்களில் ஒன்றாக அவ்வப்போது காந்தி- நேரு மத்தியில் நடந்த விவாத கடிதங்களும் கருதப்படவேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் குறித்த- இந்தியாவின் கட்டுமானம் குறித்த விவாதமாக அவற்றை கொள்ளமுடியும். சோவியத் மற்றும் அய்ரோப்பா பயணத்திற்கு பின்னர் சோசலிச தாக்கம் கூடுதலாக நேருவிடம் வெளிப்பட்டது. கூட்டங்களிலும் அவர் அதை அவர் வெளிப்படுத்த தயங்கவில்லை. நேரு மதராஸ் காங்கிரஸ் அமர்வில் (1927) சோசலிச சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நிலபிரபுத்துவத்தை தாக்கினார். தொழிலாளர், விவசாயி, மாணவர்களை திரட்டுவோம்- முழு சுதந்திரம் பெற போராடுவோம் என பேசினார். காங்கிரசில் பலருக்கும் புதிய மொழியை கேட்டதுபோல் இருந்தது. காந்திக்கு நேரு அவசரப்படுவது போல் தெரிந்தது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து காந்தி “hastily conceived and thoughtlessly passed.” என கருத்து சொன்னார். கால அவகாசம் தேவைப்படுகின்ற தீர்மானங்களாக அவர் பார்த்தார். .நேருவிற்கு காந்தி எழுதிய கடிதத்தில் அவர் வெளிப்படையாக தன் கருத்தை தெரிவித்திருந்தார். குறும்புக்காரகளை உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது. தாங்கள் கட்டுப்பாடுள்ள கட்சிக்கூட ஆரம்பிக்கலாம் என தெரிவித்திருந்தார். “Most of the resolutions you prepared and got carried could have been delayed for one year. Your plunging …was a hasty step. But I do not mind these acts of yours so much as I mind your encouraging mischief-mongers and hooligans ….If careful observation of the country in the light of your European experiences convinces you of the errors of the current ways and means, by all means enforce your own views, but do please form a disciplined party.” நேருவும் சற்று கோபமாக தனது பதிலை தந்தார். காந்தியின் செல்வாக்கால்தான் காங்கிரஸ் முழுசுதந்திரம் தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருக்கிறது என நேரு கருதினார். தீர்மானங்கள் குறித்த காந்தியின் கருத்துக்களில் நியாயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். “I hope you will agree with me that it is not healthy politics for any organisation to subordinate its own definite opinion on a public issue out of personal regard only.” மாணவர்களை பள்ளிவாத்தியார் நடத்துவதுபோல் எங்களை நடத்துகிறீர்கள். வழிகாட்டாமலும்- பாடம் எடுக்காமலும் தவறை மட்டும் சுட்டிக்காட்டும் வாத்தியாராக ஏன் இருக்கிறீர்கள் என நேரு கேட்டிருந்தார். 1909 காந்தியின் இந்திய சுயராஜ்யம் குறித்தும் தனக்கு நிலவும் வேறுபாடுகளை நேரு தெரிவித்திருந்தார். காந்தி அமைதியாக தன் பதிலை எழுதினார். தன் கருத்துகளுக்கு எதிரான போராட்டத்தை நேரு துவங்கி நடத்தலாம். வேறுபாடுகள் அடிப்படையாக இருப்பதால் சந்திப்பு புள்ளிகள் இல்லாமல் போயுள்ளது. நான் செய்வது தவறு என்றால் என்னை எதிர்த்து கலகம் செய்யவேண்டியது நேருவின் கடமை என அவர் சுட்டிக்காட்டினார். அருமையான, நேர்மையான, நம்பிக்கையான, தைரியமிக்க தோழனை இழப்பது என்கிற துக்கம் எனக்கு நேரலாம். ஆனால் சரியான செயலுக்காக தோழர்களை இழப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும் என்பது காந்தியின் பதிலில் காணப்பட்டது. முன்பாக 1920களின் துவக்கத்தில் சிறு வேறுபாடுகளை இருவரும் சுட்டிக்காட்டி விளக்கமளித்துக்கொண்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் விரட்டப்படவேண்டும் என நேரு கடுமையாக பேசினார் என அறிந்து அது குறித்து காந்தி வினவியிருந்தார். அதற்கு நேரு பெரிய விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆங்கிலேயர்கள் மீது எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை . ஆங்கில மொழி குறித்து தனக்கு பெருமிதம் இருக்கிறது. ஆங்கிலேயர் இந்தியரை விட என்னை சரியாக புரிந்துகொள்ள முடியும் எனக் கருதுவதாக நேரு தெரிவித்திருந்தார். நேருவின் விளக்கத்தை காந்தி யங் இந்தியா 8-12-1921ல் வெளியிட்டிருந்தார். அதில் வன்முறையை தாம் ஏற்கவில்லை என்கிற நேருவின் விளக்கமும் இருந்தது. செளரி செளரா குறித்து பர்தோலியிலிருந்து காந்தி பிப்ரவரி 19, 1922ல்நேருவிற்கு எழுதுகிறார். செளரி செளராவிற்கு பின் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காந்தி தெளிவுபடுத்துகிறார். நாட்டின் பல்வேறு இடங்களில் வந்த தகவல்களை சுட்டிக்காட்டுகிறார். அகிம்சை போராட்டம் என நடத்திய நாம் அதை வாபஸ் பெறாமல் போய் இருந்தால் வன்முறை போராட்டமாக மாறியிருக்கும் என தான் அஞ்சியதை காந்தி சொல்கிறார். இயக்கத்தின் பாதை சரியான திசையிலிருந்து மாறிவிட்டதையும், தென்னாப்பிரிக்கா அனுபவம் பற்றியும் எழுதுகிறார். செப்டம்பர் 15, 1924ல் நேருவிற்கு செலவிற்கு பணம் தேவையா- அனுப்பட்டுமா- ஏதாவது வேலைக்கு சேருகிறீர்களா எனக்கேட்டு காந்தி கடிதம் எழுதினார். அதேபோல் நேருவும் கமலாவும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை கவலையுடன் விசாரித்து மீளவேண்டும்- மனநிம்மதியும் ஓய்வும் எடுக்க அறிவுறுத்தி கடிதம் ஒன்றை செப்டம்பர் 30 1925ல் எழுதினார். மோதிலாலுக்கு காந்தி ஜூன் 19 1927ல் எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் நிலைமை மோசமாக ரவுடித்தனமும் அராஜகமும் நிறைந்ததாகவுள்ளது. சுமையை நேரு மேல் ஏற்ற காங்கிரசில் சற்று ஒழுங்கு கூடுதலாக ஏற்படட்டும் என்றார். நேரு மீதான தன் எதிர்பார்ப்பற்ற கரிசனத்தை அவர் இவ்வாறு அவசியமான தருணங்களில் வெளிப்படுத்தியிருப்பதை நாம் காணமுடியும். ஜனவரி 4 1928ல் காந்தி சபர்மதி ஆசிரமத்திலிருந்து நேருவிற்கு கடிதம் எழுதினார். நீங்கள் வேகமாக போகிறீர்கள். நிறைவேற்றிய தீர்மானங்களுக்கான சூழல் வரவே ஓராண்டு ஆகலாம். கலப்படமற்ற அகிம்சையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? தங்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் வன்முறையால் ஏதும் ஆகாது. நமது கருவிகள் குறித்து கவனமில்லாமல் இருக்கக்கூடாது. எல்லாப் போராட்டங்களிலும் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மனிதர்கள் தேவை. காங்கிரசின் செயலர் என்கிற வகையில் அமைப்பிற்குள் ஒற்றுமை என்பது தங்களின் தலையாய வேலை. சைமன் பகிஷ்கரிப்பு முக்கியமானது ஆனால் அது ஒற்றுமைக்கு அடுத்ததுதான் என அறிவுரை அக்கடிதத்தில் இருந்தது. காங்கிரஸ் தீர்மானங்களை காந்தி விமர்சிக்கிறார் என அறிந்து நேரு ஜனவரி 11, 1928ல் அலகாபாதிலிருந்து காந்திக்கு கடிதம் எழுதுகிறார். தங்களின் காங்கிரஸ் தீர்மானங்கள் பற்றிய விமர்சனத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே தங்களுக்கு எழுதுவது என முடிவெடுத்து இக்கடிதம் அனுப்புகிறேன். காதில்பட்டதை மட்டும் வைத்துக்கொண்டு மதிப்பிடுப்பது பாதுகாப்பாக இருக்காது. ஒழுங்கு குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன் தாங்களும் செயற்குழு உறுப்பினர். அப்படி இருந்துகொண்டு முடிவுகளை விமர்சிப்பதும் காங்கிரசை கீழே தள்ளுவதும் அசாதாரணமானது. பொதுவாக தீர்மானங்கள் குறித்து பாராட்டுக்களே வந்தன. உங்கள் விமர்சனத்தால் அவர்களின் இந்த உற்சாகம் மட்டுப்படும்- தவறாக புரிந்துகொள்ளப்படும். அவசரகோலத்தில் திர்மானம் இயற்றியதாக சொல்கிறீர்கள். நிகழ்ச்சிநிரல் விவாதிக்கப்பட்டு 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் பேசி பின்னர் ஒருமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிந்தனையில்லாம்ல் என தாங்கள் சொல்வது ஊகம்தான். எந்த அமைப்பிலும் தனிப்பட்டவர் கருத்திற்கு கீழானதாக அமைப்பின் உறுதியான முடிவுகளை மாற்றுவது ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன். அந்நியதுணி பகிஷ்காரம்- கதர் முயற்சி வெற்றியா பெற்றுவிட்டது. ஆனாலும் செய்கிறோம் அல்லவா. நாட்டிற்கு நல்லது என தொடர்கிறோம். காதி சர்வமயமானால் விடுதலை என தாங்கள் கருதுகிறீர்கள். என்னைப்போன்ற மத நம்பிக்கையில்லாதவர்க்கு பல ஆண்டுகள் ஆனாலும் அதனால் மட்டும் விடுதலை வராது எனத் தோன்றுகிறது. இதைத்தொடர்ந்துதான் நேரு அந்த பள்ளிவாத்தியார் வாதத்தை வைக்கிறார். தங்களின் சுயசரிதை , யங் இந்தியா கட்டுரைகளை படிக்கும்போது எனது இலட்சியங்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ராம்ராஜ்யம் என சொல்லப்படுவது கடந்த காலத்தில் நல்லதாக இருக்கவில்லை. அதை மீண்டும் நான் விரும்பவும் இல்லை. மேற்கின் தொழில்மய நாகரீகம் சிற்சில மாற்றங்களுடன் இந்தியாவை வெற்றிக்கொள்ளும். முதலாளித்துவமுறையில் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் மோதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். நேருவின் இக்கடிதத்திற்கு காந்தி ஜனவரி 17 1928ல் பதில் கடிதம் எழுதுகிறார். தங்களை முடக்கிக்கொண்டு சுய அமுக்கத்துடன் என்னுடன் வந்துகொண்டிருக்கிறீர்கள். நாட்டின் தேவைக்காக இதை தாங்கள் செய்வதுபோல் எனக்கு தெரிகிறது. என்னிடமிருந்து தங்களுக்கு விடுதலை அவசியமெனில், நான் தருகிறேன். எனது கருத்துக்களிலிருந்து மாறுபடும்போது தாங்கள் வெளிப்படையாக யுத்தம் செய்யவேண்டும். ஏனெனில் நான் தவறாக செயல்படுவேன் என்றால் அது தேசத்திற்கு சரிசெய்ய இயலாத தீங்காகிவிடும். எனவே என்னை எதிர்த்த கலகம் என்பது அப்போது தங்களின் கடமையாகிறது. தங்கள் நிலைப்பாடு குறித்து சந்தேகம் இருந்தால் முழுமையாக நான் தனிப்பட்டு விவாதிக்க விழைகிறேன். நமது வேறுபாடுகள் பெருமளவாகவும் தீவிரமானதாகவும் உள்ளன. சந்திப்பு புள்ளிகள் இல்லாமல் இருக்கின்றன. எனது துக்கத்தை நான் மறைக்கவில்லை. மிகச்சிறந்த, ஆளுமையான, நேர்மையான தோழமையை நான் தியாகம் செய்யவேண்டியிருக்கும். ஆனால் நாம் ஆற்றும் காரியத்தின் காரணமாக தோழமை இழப்புகள் நேரிடலாம். அந்த செயல்கள்தான் அனைத்தையும்விட மேலானவை. அதேநேரத்தில் நமது இருவரின் தனிப்பட்ட உறவுகளின் நெருக்கம் பாதிக்காது. நாம் நெடுங்காலமாக ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்துவருகிறோம். கடுமையான அரசியல் வேறுபாடுகளின் இடையேயும் அப்படியே இருப்போம். கருத்துவேறுபாடுகளை குறித்து எழுதுங்கள். அதை பிரசுரிக்கிறேன். எனது விளக்கத்தையும் தருகிறேன். மேற்கண்ட காந்தியின் கடிதம் நேரு ஜனவரி 11, 1928ல் காந்திக்கு எழுதியதற்கு பதிலாக எழுதப்பட்டிருந்தது காந்தி ஏப்ரல் 1 1928ல் நேருவிற்கு எழுதினார். பணக்காரர்கள் இல்லாத, வாய்பேச்சு மட்டும் கொண்ட படித்த வர்க்கமில்லாத ஓர் இயக்கத்தை நாம் இருவரும் ஆரம்பிக்கவேண்டும் என்பதில் தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் அதற்கு காலம் கனியவில்லை . ஜூலை 29 1929ல் காந்தி எழுதிய கடிதத்தில் நேரு இந்திராவிற்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களை பாராட்டுகிறார். மனிதனின் ஆரம்பம், மதம் குறித்தவைகள் விவாதத்திற்குரியவை என்றாலும் கடிதங்கள் நன்றாகவுள்ளன என எழுதினார். இந்தியிலும் அவை வந்தால் நல்லது என்றார். அடுத்த காங்கிரஸ் தலைமை என்பது குறித்து காந்தி எழுதியிருந்தார். அதில் தன்னால் அச்சுமையை ஏற்கமுடியாது என்பதை விளக்கியிருந்தார். நேரு எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தார். நேருவிற்கு இருக்கும் அய்ரோப்பிய அரசியல் தொடர்புகள் சொத்துபோன்றது- அவருக்கு உழைப்பாளர், விவசாயிகளுடனும் தொடர்புள்ளது என அவர் யங் இந்தியாவிலும் குறிப்பிட்டிருந்தார். நேரு தனது சூழலை தாண்டி தீவிர சிந்தனை உள்ளவர். ஆனால் உடைவை உருவாக்கும் அளவிற்கு அவர் அதை திணிக்க விரும்பமாட்டார். அவரின் கரங்களில் காங்கிரஸ் பாதுகாப்பாக இருக்கும் என காந்தி யங் இந்தியா ஆகஸ்ட் 1, 1929ல் எழுதினார். பொங்கி ஆற்றலுடன் செயல்படும் இளைஞர்களின் ஆற்றலை கட்டுக்குள் வைத்து பயன்மிகுந்ததாக மாற்றவேண்டும் என்ற கருத்தை யங் இந்தியா அக்டோபர் 10ல் எழுதியிருந்தார்.. காந்தி நவம்பர் 4 1929ல் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் தங்கள் மூளைக்கும் இதயத்திற்கும் ஏற்கமுடியாத ஒன்றை நான் சொன்னால் தாங்கள் அதை எதிர்க்கவேண்டும் என எழுதினார். அப்படி எதிர்ப்பதால் எனது அன்பு குறைந்துவிடாது. தாங்கள் சோர்ந்து ஏமாற்றம் அடையவேண்டாம். நமது நாட்டின் சுதந்திரம் என்பது ஆக உயர்ந்த விடுதலை என்பதுடன் முரண்படவேண்டாம். அடுத்த ஆண்டில் தலைமை ஏற்கப்போகும் தாங்கள் முழுமையாக பிறருடன் இணைந்து செயலாற்றவேண்டிய கடமையிலிருந்து வெளியேறமுடியாது. பொதுவெளியில் தரப்படும் கருத்துக்களை கண்டு தங்களுக்கு பயமில்லை என நான் நம்புகிறேன். நேரு அலகாபதிலிருந்து 1929 நவம்பரில் காந்திக்கு எழுதினார். இன்று பொதுச்செயலர் என்கிற வகையில் நான் அமைப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்பது சரியானதுதான். ஆனால் எனக்கு வேறு கடப்பாடுகளும் இருக்கின்றன. AITUC தொழிற்சங்க தலைவராகவும், இண்டிபெண்டண்ட் லீக் செயலராகவும். இளைஞர் இயக்க அமைப்பு வழிகாட்டியாகவும் கடப்பாடுகள் இருக்கின்றன. பல்வேறு குதிரைகளில் சவாரி சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. இப்படி மோதல்கள் நிறைந்த கடப்பாடுகளில் எனது மனசாட்சி சொல்வதுபடித்தான் செயல்படவேண்டியுள்ளது. காங்கிரஸ் செயலர் பதவியிலிருந்து நான் விலகியாகவேண்டும். அப்பாவிற்கு அனுப்பிவிட்டேன். அதன் நகலை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். காங்கிரஸ் தலைவர் பதவி கடினமானது. நான் சரியான தேர்வு அல்ல. தாங்கள்தான் சரியாக இருப்பீர்கள். மாளவியாஜி போன்றவர்கள் சொல்வதுதான் காங்கிரஸ் கொள்கையாகும் எனில் நான் பொருத்தமானவன் அல்ல என்று நேரு எழுதியிருந்தார். நவ்ம்பர் 8 1929ல் காந்தி எழுதினார். தாங்கள் சூடப்போகும் கிரிடம் மலர்கிரீடமல்ல- முட்கிரீடம்தான். அதை தங்களைத்தவிர யாரும் எடுக்கப்போவதில்லை. நான் எடுப்பதாக இருந்தால் முன்னரே எடுத்திருந்திருப்பேன். . காங்கிரஸ் லாகூர் அமர்வில் (டிசம்பர் 31 1929) ஜவஹருக்கு வாய்ப்பளிப்போம். இளைஞர்கள் எடுத்துக்கொள்ளாமல் வாய்ப்பளிக்கவில்லை என சொல்லக்கூடாது எனப் பேசினார் காந்தி. ஏப்ரல் 17, 1930ல் காந்தி பெண்களுக்கும் அறைகூவல் ஒன்றை விடுத்தார். ஜவஹர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதாவது இந்தியாவை பிரிட்டிஷ் சிறைவைத்துள்ளது. எனவே கடமை உணர்வீர் - போராடுவோம் என்பது செய்தி. 1933 பூனா அறிக்கைகள் என்ற பெயரில் காந்தி - நேரு அறிக்கை கடிதங்களை நேரு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றுள்ள விவாத சாரம் இங்கு தரப்படுகிறது. செப்டம்பர் 14 1933 மகாத்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தண்டணைக்காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்பட்டதை தெரிவிக்கிறார். உடல்நிலை பலவீனமாகி தெம்பு வருவதற்கு சில வாரங்கள் பிடிக்கலாம். எனது தண்டனைக்காலமான ஆகஸ்ட் 1934 முடியும்வரை சிவில் மறுப்பு இயக்கம் நடத்தி கைதாகக்கூடாது. எனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன். எனது விடுதலை எனக்கு சங்கடத்தை தந்துள்ளது. விடுதலை இயக்கம் தவறான வழியில் செல்லக்கூடாது என என்னிடம்கேட்டு வருபவர்களுக்கு எனது அறிவுரை ஆலோசனைகளை நல்குவேன். வன்முறையை ஆள்பவரோ அல்லது பாதிக்கபடுபவரோ எவர் செய்தாலும் அதற்கு பதில் அகிம்சை வழியான சட்டமறுப்பு போராட்டம்தான். இந்தக் காலத்தை ஹரிஜன மேம்பாட்டிற்காக செலவிடுவேன் என்பது அறிக்கையின் சாரம். செப்டம்பர் 14 1933 நேரு அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். விடுதலையானவுடன் என் தாயாரின் உடல்நிலைமோசமானதால் அவருடன் இருக்கவேண்டியதானது. 20 மாதங்களாக எவ்வித தொடர்பும் இல்லை. இரண்டுவருடமாக காந்தியை பார்க்க முடியாமல்போனது. சிலநாட்கள் தாயாருடன் இருந்துவிட்டு பூனாவில் காந்தியைப்பார்த்து நெடுநேரம் விவாதித்தேன். பூனாவிற்கு காந்தியை பார்க்கவந்ததே பல விஷயங்களை தெளிவுபடுத்திகொள்ளத்தான். இந்தியாவில் எண்ணற்றவர்களைப்போலவே நானும் காந்தியின் தலைமையில் கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். மதரீதியாக பார்க்காமல் அரசியல் பொருளாதார பார்வையுடனே, சத்தியாகிரகத்தில் அதன் நெறிசார்ந்த அம்சங்களுக்காக உடன்பட்டுநின்றுள்ளேன். ஆனால் காந்திக்கோ சமயம் அடிப்படையானது. இந்த வேறுபாட்டைதாண்டி என் போன்ற பலர் அவரின் தலைமையின்கீழ் செயல்படுகிறோம். இந்தியாவும், உலகமும் செயல்மிகு தலைவர் அவர் என்பதை அறியும். நமது வாழ்விற்கும் நாம் மேற்கொள்ளும் துன்பத்திற்கும் அழகான அர்த்தம் கொடுத்தவர் காந்தி. அவருடைய முறைகள் சரியானவை- அதை நாம் பின்பற்றிவருகிறோம். இந்நாட்டின் சுரண்டப்படுபவர்க்கு சுதந்திரம் என்பது இல்லையெனில் அது சுதந்திரமாக இருக்காது. எனவே நமது நோக்கத்தை நாம் தெளிவுபடுத்தவேண்டும். பொருளாதார நெருக்கடி முற்றியுள்ள இக்காலத்தில் தேசிய இயக்கம் தனது பொருளாதார கொள்கைகளில் தெளிவாக இருக்கவேண்டும். எனக்கு காங்கிஸ் கமிட்டியை கூட்டச்சொல்லி நண்பர் சொல்கின்றனர் . நிலவும் சூழலில் அது கடினம். நேரு அவர்கள் காந்திக்கு செப்டம்பர் 13, 1933 ல் கடிதம் எழுதுகிறார். முழுவிடுதலை மற்றும் கராச்சி வழிகாட்டலான அடிப்படை உரிமைகள் பொருளாதார மாற்றங்கள் தீர்மானத்தில் தெளிவுடன் இருப்பது அவசியம் என அதில் வற்புறுத்தியிருந்தார். இந்தியாவின் வெகுஜன மக்களை முன்னேற்ற வேண்டுமெனில் சுயநலமிக்க பகுதி தனது சிறப்பு சலுகைகளை கைவிடவேண்டும். இல்லையெனில் மக்கள் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகும் எனக்கேள்வி எழுப்பியிருந்தார். வட்டமேஜை மாநாடு இந்தியாவின் சுயநல சக்திகளை வலுப்படுத்துவதாகவே முடிகிறது. இந்தியாவின் பல்வேறு பிரச்ச்னைகளை தீர்க்க பயன்படவில்லை. இந்திய விடுதலை என்பது உலகபிரச்சனைகளுடன் சேர்ந்தே இருக்கின்றது. இதில் நாம் அமைதி காக்கமுடியாது. காங்கிரஸ் கமிட்டிகளை அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில் செயல்படுவது கடினமாகியுள்ளது. நம்பிக்கைக்கு பாத்திரமில்லாத மனிதர்கள் தலமட்டங்களில் காங்கிரஸ் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு விரும்பாத செயல்களில் காங்கிரசை அழைத்து செல்கின்றனர். அவர்கள் தடுக்கப்பட்டாகவேண்டும்.. சிவில் ஒத்துழையாமை குறித்தும் கடுமையான குழப்பங்கள் நிலவுகிறது. நீங்களோ அமைப்புகள் வலுவாக இருப்பதாக கருதினால் சிவில் ஒத்துழையாமையை நடத்திக்கொள்ளட்டும் என்கிறீர்கள். இரகசியம் என்பதை ஏற்பதற்கில்லை எனவும் சொல்கிறீர்கள். நமது இயக்கம் அடிப்படையில் திறந்த இயக்கம். அங்கு இரகசிய செயல்பாடுகளுக்கு இடமில்லை. ஆனால் அதை மூடநம்பிக்கையாகவோ மீமதிப்புடனோ பார்க்கமுடியாது. சிலதகவல்களை அனுப்புவதில் தலமட்டத்தில் இந்த இரகசியமுறைகள் தேவைப்படலாம். நாம் அதற்கு ஊக்கம் கொடுக்கவேண்டாம். தவிர்க்கமுடியாத நேரங்களில் அதை அனுமதிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தகவலைத் தந்துவிட்டு போராடவேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு எரிச்சலைத்தருகிறது. சத்தியாகிரகத்திற்கு செல்லப்போகிறவர் அதற்கு பின் கைது செய்யப்படலாம். தண்டனைக்கு உள்ளாகலாம். முன்கூட்டியே அறிவிப்பு அபத்தமாகப்படுகிறது. நேருவிற்கு செம்படம்பர் 14 அன்று காந்தி பதில் கடிதம் எழுதினார். வெளிபடையாக பல அம்சங்கள் குறித்து எழுதியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நமது குறிக்கோள் முழுவிடுதலை என்பதில் சந்தேகமில்லை. சுயநலக்காரர்களை சரிப்படுத்தாமல் வெகுமக்களின் வாழ்க்கை முன்னேற்றம் இராது என்பதையும் ஏற்பதாக கூறினார். வட்டமேஜை மாநாடு குறித்த அனுபவம் பற்றியும், உலகத்தொடர்புகள் இல்லாமல் முற்போக்கான தேசியம் இருக்கமுடியாது என்பதிலும் உடன்படுவதாக சொன்னார். இலக்கு குறித்து திரும்பத் திரும்ப தான் பேசுவதில்லை. வழிமுறைகள் சரியானதாக வேண்டும் - அப்படியிருக்கும்போது இலக்கு நோக்கி செல்ல இயலும் என்பது தலையானவை என அக்கடிதத்தில் தெளிவுபடுத்தினார். எவரையும் கொடுமைக்கு வற்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் மனமாற்றத்திற்கு முயற்சிக்கவேண்டும். இதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் எனத்தோன்றலாம். என்னைப்பொறுத்தவரை அதுதான் குறுகிய தூரம். சட்டவிரோத அமைப்பு என்பதால் demoralisation என்கிறீர்கள். சத்தியாகிரகம் சரியான முறையில் தொடர்ந்தால் மனச்சோர்வு ஏற்படாது. சிவில் ஒத்துழையாமைக்கு தனிநபர் தயாராக இருக்கும்வரை இயக்கம் வீழாது. திரள் சத்தியாகிரகம் எனில் அதற்கு தலைமை வேண்டும். அதில் தவறு ஏற்படக்கூடும். இன்றுள்ள சூழலில் எந்த அமைப்பும் சுமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை அறிவேன். அடுத்து இரகசிய முறைகள் குறித்தது. அதனை உறுதியாக கட்டுப்படுத்தவில்லையெனில் குறும்புகள் உருவாக்கும். தவிர்க்கமுடியாத நிலைகளில் அது அவசியமாகலாம். ஆனால் வெகுமக்கள் இயக்கத்தில் அவர்களை அச்சமின்றி பங்கேற்க வைக்கவேண்டும் என்பதால் அதனை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. சிவில் ஒத்துழையாமை வளர்ச்சிக்கு இரகசிய முறைகள் எதிரானது. தனிநபர்கள் சத்தியாகிரகம் எனசொல்லி நோட்டிஸ் கொடுப்பது என்பது கேலிக்குரியது என்பதை ஏற்கிறேன். காங்கிரசின் ஆக்கபூர்வதிட்டங்கள் பற்றி தாங்கள் குறிப்பிடாத இடைவெளியை தங்கள் கடிதம் தருகிறது. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பு ஒற்றுமை, கதர் காதி போன்ற ஆக்கபூர்வதிட்டங்கள் நடந்துவருகின்றன. இப்படி பல இயக்கங்களில் பங்கேற்று சிவில் ஒத்துழையாமையில் பங்கேற்க இயலாது என வெளிப்படையாக பேசுபவர்களும் நாட்டின் விடுதலைக்கு பணியாற்றுபவர்களே. விடுதலை எனும் வீட்டை கட்டும் கலையை காங்கிரஸ்காரர்கள் கற்கட்டும். முன்பே நான் சொன்னபடி எரவாடாவிலிருந்து முன்கூட்டியே வந்ததால் சிறைத்தண்டனைக்காலம் வரை தனிபட்ட வகையில் நான் போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன் அது கடமை என உணரப்பட்டால் எவரையும் புண்படுத்தாது. மேற்கூறிய கருத்து பரிமாற்றத்தை பூனா 1933 அறிக்கை தொகுப்பில் காணமுடியும். காந்தி டிசம்பர் 22 1933 அன்று மதராஸ் மெயிலுக்கு பேட்டி அளித்தார். அதில்நேரு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. நேருவிற்கு கம்யூனிஸ்ட் கொள்கை சார்பு இருப்பதால் காங்கிரஸ் அக்கொள்கையை அவரது வழிகாட்டலில் பெறுமா என்பது கேள்வி. அப்படி நான் கருதவில்லை என காந்தி பதில் அளித்தார். ஜவஹர் மிக நேர்மையான மனிதர். சக தோழர்களுக்கு உரிய அறிவிப்பை தராமல் அவர் காங்கிரசின் கொள்கைகளை மாற்றமாட்டார். மேலும் ஜவஹருக்கு அவரது சொந்தக் கருத்துக்கள் போதுமான அளவு உருப்பெறாத நிலையில் (Not sufficiently crystalised) அவர் காங்கிரஸ் அடிப்படைகளிலிருந்து விலகமாட்டார். அவர் சோசலிசத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர். ஆனால் இந்தியாவில் அதை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது அவரிடம் இன்னும் கெட்டிப்படாத உருகு நிலையில்தான் (still in melting pot ) இருக்கிறது. எனவே அவரது கம்யூனிச கருத்துக்கள் எவரையும் பயமுறுத்தவில்லை. ஜனவரி 21 1934ல் அவர் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் இதை காந்தி அவரிடமே தெரிவித்திருந்தார். You have no uncertainty about the science of socialism but you do not know in full how you will apply it when you have the power. காந்தி கொடுத்த வேறு ஒரு பேட்டி சோசலிஸ்ட் அணி தொடர்பானது. இந்துஸ்தான் டைம்ஸ் மே 21, 1934 பத்திரிகைக்கானது. காந்தி தனது பதிலில் சோசலிஸ்ட் குரூப் உருவானதை வரவேற்பதாக சொன்னார். இந்தியாவின் சிறப்பான நிலைமைகளை கணக்கில்கொண்டு அவர்கள் செயல்படவேண்டும். அவர்களும் வன்முறையற்ற பாதை என சொல்லியிருப்பதை நான் வரவேற்கிறேன் என்பது அப்பேட்டியின் சாரம். 1934 ஆகஸ்ட் 13ல் ஜவஹர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஒத்துழையாமையை முடித்துகொண்டதற்கு அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதற்கு தாங்கள் கூறிய காரணங்களை பத்திரிகைகளில் பார்த்தப்பின் அதிர்ச்சியடைந்தேன். இப்பெரும் உலகில் தனித்து இருப்பதுபோல் உணர்கிறேன். சிறுவயது முதல் இவ்வுணர்விற்கு நான் பழக்கமாகியுள்ளேன். ஆனால் இப்போது பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டதுபோல் உள்ளது. காங்கிரசில் சமூக பொருளாதார அம்சங்களில் பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் செயற்குழுவில் பலருக்கு இவ்வாறு எவராவது பயிற்சி பெற்றவர் இருந்தாலே அவர்களை வெளியேற்றவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. பிரச்சனைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமில்லை. இஞ்சின் டிரைவர் என அழைக்கப்படுபவர் மரவண்டியை மாடுபூட்டி இழுப்பேன் என சொன்னால் அவர் ‘இஞ்சின் டிரைவர்’ என்பதை தவறாக பயன்படுத்துகிறார் என்றே பொருள்கொள்ள முடியும். எனது வரிகள் சில தங்களுக்கு வலியைத் தரலாம். ஆனால் தங்களிடமிருந்து என் இதயத்தை மறைத்துக்கொள்வதை தாங்கள் விரும்பமாட்டீர்கள். இக்கடிதத்திற்கு காந்தி பதில் எழுதினார். நேருவிற்கு ஆகஸ்ட் 17 1934ல் காந்தி எழுதிய கடிதத்தில் முழுவிடுதலை என்பதற்கான முழு அர்த்தத்தில் தானும் அவ்விடுதலையே விரும்புவதாக எழுதினார். ஆனால் தீர்மானங்கள் உருவாவதற்கான உரியகாலம் வேண்டும் என நினைக்கிறேன். இலக்கைப்போலவே வழியும் முறைகளும் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். சோசலிசம் குறித்து அகராதிகளைப் பார்த்தேன். படித்தபின்னர் எனக்கு எதுவும் புதிதாக புலப்படவில்லை. மசானி புத்தகத்தையும் படித்தேன். நரேந்திர தேவா குறிப்பிடும் புத்தகங்களை நேரம் வாய்க்கும் போதெல்லாம் படித்துவருகிறேன். செயற்குழுவில் நீங்கள் கடினமாக இருக்கிறீர்கள். இருப்பவர்கள் நமது தோழர்களே. இயக்கம் சுதந்திரமானது. நம்பிக்கைக்கு பாத்திரமில்லாதவர்கள் என்றால் அவர்களை மாற்றிவிடலாம். அவர்களின் இயலாமையை குறைசொல்லி பயனில்லை என்கிற அறிவுரையுடன் அக்கடிதம் சென்றது. வல்லபாய் படேலுக்கு காந்தி செப்டம்பர் 5 1934ல் எழுதிய கடிதத்தில் காங்கிரசிலிருந்து விலகுவதாக தெரிவிக்கிறார். காங்கிரஸ் மற்றும் நாட்டின் நலன்களுக்காக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதே சரி என தெரிவித்தார். 1920 முதல் மிக நெருக்கமாக இருந்த அமைப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கமாட்டேன். கடினமான இதயத்துடனேயே இம்முடிவை எடுத்ததாகவும் காந்தி சொல்கிறார். வருகின்ற எதிர்காலத்திற்கு ஜவஹரே சரியான தலைமையாக இருக்கமுடியும். அவரின் தொடர்பு மற்றும் அறிவுரையை நான் இழக்கநேரிடுகிறது. (I miss at this juncture the association and advice of Jawaharlal). சோசலிச அணி ஒன்று வளர்ந்துவருகிறது. ஜவஹர் அவர்களின் தலைவர். அவர் என்ன விழைகிறார் என்பதை நான் அறிவேன். அறிவியல் உணர்வு அடிப்படையில் அவர் அணுக விழைகிறார். அவர் மிகத் தைரியமானவர். அவருக்கு சேவை செய்ய வயது நிறைய இருக்கிறது. அவரது இலக்கில் அவருக்கு பெரும் நம்பிக்கையும் இருக்கிறது. சோசலிச குரூப் பொதுவாக அவரது கருத்துடன் இருக்கிறது. முறைகள் சில மாறலாம். சோசலிச குருப் வளர்வதை நான் வரவேற்கிறேன். அவர்கள் தியாக சித்தம் கொண்டவர்கள். வளர்ந்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களுடன் எனக்கு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. என் காங்கிரஸ் இருப்பு அவர்களின் சோசலிச கருத்தியல்கள் பரப்பப்படுவதற்கு நெருக்கடி எதையும் தந்துவிடக்கூடாது. இருந்தால் ஒருவகை moral pressure தருவதற்கு ஒப்பாகிவிடும். இவ்வாறு காந்தி தனது விலகல் கடிதத்தில் காரணங்களை குறிப்பிடுகிறார். வல்லபாய் பட்டேலுக்கு ஏப்ரல் 5 1935ல் எழுதிய கடிதத்தில் தங்களுக்கு உண்மையான தலைவர் ஜவஹர்தான் என எழுதினார். மற்ற நாங்கள் அனைவரும் அவருக்கான டிரஸ்டிகள் போலத்தான். ஜவஹர் முழுமையாக நிர்பந்தமற்ற சுதந்திரத்துடன் பணியாற்றவேண்டும் என்கிற விழைவை காந்தி தெரிவித்திருந்தார் என கருத முடியும். அகதா ஹாரிசன் அவர்களுக்கு காந்தி ஏப்ரல் 30 1936ல் எழுதிய கடிதத்தில் நேரு குறித்து சொல்கிறார். நேரு தனது கருத்துக்களை தீவிரமாகத் தருபவர். நான் அறிந்தவரை அதை மோதல் அளவிற்கு அவர் எடுத்து செல்வதில்லை. வந்தால் அவர் விடுவதில்லை. காங்கிரஸ் ஒரே வகைப்பட்ட இயக்கமல்ல. பெரும்பான்மை முடிவுகளை ஜவஹர் ஏற்பவர். அவரைப் போன்ற இயல்புடைய ஒருவருக்கு இது மிகக் கடினமான ஒன்று. வாழ்க்கை குறித்த பார்வைகளில் மிகப்பெரும் வேறுபாடுகள் எங்களிடம் இருந்தாலும் இதயத்தால் மிக அருகாமையில்தான் இருக்கிறோம் என அக்கடிதத்தில் காந்தி தெரிவித்திருந்தார். நேருவிற்கு காந்தி ஜூலை 15, 1936ல் கடிதம் எழுதினார். உங்கள் கடிதம் என்னை தொட்டுவிட்டது. உங்கள் சக தோழர்கள் பலருக்கு உங்களைப்போல் நெஞ்சுரமோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை. இதனால் விபரீதமாகிறது. உங்களிடம் பயமில்லாமலும் சுதந்திரமாகவும் விவாதியுங்கள் என அவர்களிடம் சொல்லிவருகிறேன். அவர்கள் பேச்சில் நீங்கள் அடையும் எரிச்சல்- பொறுமையின்மை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். சோசலிஸ்ட்கள் செய்திடும் கேலிகளிருந்து அவர்களை காக்காமலும் அவர்கள் மீது எந்தவித மரியாதை காட்டாமலும் தாங்கள் நடந்துகொள்கிறீர்கள். அவர்களின் பெரும்பான்மை கண்டு தாங்கள் விசனப்படுகிறீர்கள். அவர்களின் ஒருமித்த கருத்தால்தான் பொறுப்பிற்கு தாங்கள் வந்துள்ளீர்கள். அதிகாரம் இன்னும் உங்களுக்கு வரவில்லை. உங்களை பொறுப்பில் அமர்த்தியது அதிகாரம் பெறவைக்கவும்தான். கமிட்டி கூட்டங்களில் சற்று நகைச்சுவையை கூட்டுங்கள். அது தங்களின் இயல்புதான் என சொல்கிறது அக்கடிதம். காந்தியிடம் சென் மற்றும் பெளலா என்பவர்கள் பேட்டி ஒன்றை ஆகஸ்ட் 8 1936ல் எடுத்தனர். நேரு குறித்த உணர்வென்ன என்பது கேள்வி. அன்பும் பாராட்டும்தான் என்பது காந்தியின் பதில். வாரத்திற்கு இருமுறை பேசிக்கொள்கிறோம். அவர் பேசுவது போல் நான் பேசாமல் இருக்கலாம். என்ன தோன்றுகிறதோ அதை அவர் என்னிடம் சொல்லாமல் இருப்பதில்லை. ஜவஹரின் கொள்கையால் எனக்கு எந்த வேலையிலும் பாதிப்பில்லை. அவரின் திட்டம் குறித்த பரிவு என்னிடம் இல்லை. அவர் என்ன செய்து அதற்கு நான் பரிவுகாட்டாமல் இருந்துள்ளேன். அவரின் விஞ்ஞான சோசலிசத்திற்கு என்னிடம் ஜாடி இல்லை. அவர் ருஷ்யா கம்யூனிசத்திற்காக நிற்கிறார் எனச் சொல்வதில் உண்மையில்லை. அது ருஷ்யாவிற்கு உகந்தது என்கிற கருத்து அவரிடம் இருக்கிறது. அதில் கூட அய்யமற்ற சான்றிதழை அவர் தருவதில்லை. இந்தியத் தேவைகளுக்கேற்ப நமது முறைகள் இருக்கவேண்டும் என நேரு வெளிப்படையாக சொல்கிறார். வர்க்கப்போர் என அவர் பேசவில்லை. அது தவிர்க்கமுடியாதது என்கிற கருத்து அவரிடம் இருக்கிறது. சமீபத்தில் ஈடு கொடுக்கப்படாமல் பறிமுதல் இருக்காது என்றும் பேசியுள்ளார். இதில் எதிர்ப்புகாட்ட என்ன இருக்கிறது. வேறுபாடுகள் இருப்பதால் எதிரிகள் என எங்களை சித்தரிப்பது கேலிக்குரியது என காந்தியின் பேட்டி சென்றது. ARE WE RIVALS ? நாங்கள் எதிரிகளா? எனத் தலைப்பிட்டு ஹரிஜன் ஜூலை 25 1936ல் விளக்கமளித்தார் காந்தி. எனது வாழ்நாள் வேலைகள் ஜவஹர் திட்டத்தால் பாழாய்போய்விட்டது என நான் சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு சொல்லவில்லை. நான் அறிந்தவரை இந்தியாவின் சுதந்திரம் வன்முறையில்லாத வழிகள் மூலமே என்றுதான் ஜவஹர் முடிவுடன் இருக்கிறார். கருத்துவேறுபாடுகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட உறவுகளை அவை பாதித்ததில்லை. எனது வாழ்நாள் வேலை ஜவஹரின் திட்டத்தால் பாதிக்கப்படமுடியாது. பிரிட்டிஷ் அடக்குமுறைகளால் கூட அவை பாதிக்கப்படவில்லை. I cannot think of myself as a rival to Jawaharlal or him to me . காந்தி ஏப்ரல் 20 1937ல் காந்தி சேவா சங்கத்தில் நேருவிற்கும் தனக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி பேசுகிறார். 1935 சட்டப்படி நடக்கும் தேர்தலில் ஆட்சிபொறுப்பு ஏற்பது குறித்தும் அகிம்சை குறித்தும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறார். ஒரு தீர்மானத்தை ஜவஹர் அர்த்தப்படுத்துவதற்கும் நான் அர்த்தப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கலாம். அகிம்சைவழியில் அரசாங்க பொறுப்புகளில் உள்ளே சென்று பிரிட்டிஷ் தந்த சட்டத்தை உடைக்கலாம் என நான் நம்புகிறேன். ஜவஹருக்கும் அப்படி நடந்தால் மகிழ்ச்சி என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் சாத்தியம் இல்லை என நினைக்கிறார். மனித ஜாதி மீது சற்று சந்தேகம் ஜவஹருக்கு இருக்கிறது. அவர் வர்க்கப்போராட்டத்தில் நம்பிக்கை வைக்கிறார். இது அடிப்படையான வேறுபாடு. மூலதனம் உயிரற்றது- ஆனால் முதலாளிகள் அப்படியல்ல- அவர்கள் இதயத்தை மாற்றலாம் எனக் கருதுகிறேன். அவ்வாறு இதுவரை நடந்ததில்லை என்கிறார் ஜவஹர். வரலாற்று உதாரணங்களைத் தருகிறார். வன்முறையற்ற அகிம்சைவழியில் அது சாத்தியம் என நான் நம்புகிறேன். அகிம்சை வெல்லும் என்பது என் நிலைப்பாடு. அரசாங்க அதிகாரத்திற்கு போய் மாற்றுவது என முடிவெடுத்தாலும், போகவேண்டாம் என முடிவெடுத்தாலும் தனிப்பட்ட வகையில் எனக்கு நட்டம் ஏதுமில்லை. நமது சொந்த இலட்சியங்களுக்காக நாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டால், பயமின்றி, சுயநலமின்றி பணியாற்றினால் சுயராஜ்ய போராட்டத்தில் வெற்றிபெறலாம். ஜவஹருக்கு மாற்று கருத்து இருப்பதை மறைக்கவேண்டியதில்லை. ஜவஹர் சிலநேரம் கடுமையாக பேசிவிடுவார். அவருக்கு தன் தோழர்களின் மதிப்பும் தெரியும். அவர்களை தன் கருத்திற்கு கொணரமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர் வேலை செய்துவருகிறார். பிரிட்டிஷ் எதிர்த்து ஒத்துழையாமை நடத்தலாம் என்பது அவர் கருத்து. அவருக்கு அகிம்சை என்பது ஆக உயர்ந்த தர்மம் அல்ல எனவும் சொல்கிறார். விடுதலைக்காக பிரிட்டிஷ்காரர் தொண்டையை அறுக்கவேண்டும் எனில் அதை செய்யலாம் என கருதுவார். ஆனால் அதை இரகசியமாக அல்லாமல் வெளிப்படையாக செய்ய நினைப்பார். எனது கொள்கையில் அகிம்சைதான் தலையாயது. வன்முறை வழியாக வரும் விடுதலை விடுதலையல்ல. ஜவஹருக்கு அகிம்சை வழியில் சுதந்திரம் எனில் மகிழ்ச்சிதான். ஆனால் வன்முறை அறவே இல்லை என்கிற கருத்து அவரிடமில்லை. ஏப்ரல் 25, 1938ல் காந்தி நேருவிற்கு எழுதிய கடிதத்தில் நாம் நமது வேறுபாடுகளால் பலவீனமாகி வருகிறோம். மிக முக்கிய வரலாற்று கட்டத்தில் எதிலும் நம்மிடம் உடன்பாடில்லாமல் இருந்துவருகிறது. தங்களை என்னுடன் அழைத்துச் செல்லமுடியவில்லை. நானும் தனியாக இருப்பதாக உணர்கிறேன். எனது அன்பிற்காக நீங்கள் நிறைய செய்கிறீர்கள் என்பதை அறிவேன். நமது அறிவு கலகம் செய்யும்போது அன்பிற்காக நாம் விட்டுக்கொடுப்புகளை செய்துவிடமுடியாது.. தங்களின் கூடுதல் கிளர்ச்சிக்கு எனது வாழ்த்துகள். அது எனது தனிமையை மேலும் அதிகரிக்கும். நான் நிறுத்தியாகவேண்டும். காந்தி சேவா சங்கத்தில் காந்தி மே 5 1939ல் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். ஜவஹர் சோசலிசத்தில் நம்பிக்கையுள்ளவர். சோசலிஸ்ட்களுடன் கலந்து பேசுவார். ஆனால் எந்த சோசலிஸ்ட் குரூப் உடனும் அவர் இணையவில்லை. அவர்கள் வேலைப்பாங்கிலும் வேறுபாடுகள் உள்ளன. எனக்கும் சோசலிஸ்ட்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் இராட்டை சுற்றுவதை வேடிக்கையானது என விமர்சிப்பர். மனமாற்றத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. அவர்களுக்கு அது இல்லை. அவர்களும் தினம் என்னிடம் வருபவர்கள்தான். அல்லது நான் அவர்களிடம் நெருங்குவதாகவும் கொள்ளலாம். இது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் எனத்தெரியாது. எனக்கும் ஜவஹருக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அவை அவ்வளவு முக்கியமானவையல்ல. அவர் இல்லாமல் நான் முடமானது போல் இருக்கும். அவருக்கும் அப்படிப்பட்ட உணர்வு இருக்கிறது. எங்கள் இதயங்கள் ஒன்றாக இருக்கின்றன. பயணம் வெறும் அரசியலில் துவங்கவில்லை. அதற்கும் முன்பேயானது. டாக்டர் பி சி ராய்க்கு அக்டோபர் 12, 1939ல் காந்தி எழுதிய கடிதத்தில் என்னால் தோளில் சுமையை தொடர்ந்து தாங்க முடியவில்லை. ஜவஹரால்தான் என் இடத்திற்கு வந்து ஓட முடியும். அவரின் மாறுபட்ட பார்வைகளை சரிசெய்யலாம். அப்படியே இல்லாவிடினும் அவரது கருத்து நோக்கி அனைவரையும் அவர் அழைத்து சென்றாலும் என்ன இருக்கிறது? ஜவஹர் போல் வெளிப்படையான, நேர்மையானவர் வேறு எவரும் இல்லை. இதுவரை கமிட்டிமூலம் நாட்டில் செல்வாக்கு செலுத்திவந்தேன். இனி ஜவஹர் மூலம் அதை செய்யவேண்டும் என்பதை ஏற்பீர்கள் என கருதுகிறேன் என மனம் திறந்திருந்தார். பம்பாய் காங்கிரஸ் அமர்வில் செப்டம்பர் 16, 1940ல் காந்தி உரையாற்றினார். சுயராஜ்யம் குறித்து நானோ, ஜவஹரோ சரியான விளக்கம் தரமுடியாது. எவராவது சொன்னால் அவரின் மாணவனாக நான் இருப்பேன். அது வரையறுக்கமுடியாத ஒன்று. சில விஷயங்களை மட்டும் என்னால் சொல்லமுடியும். பேச்சுரிமை, சிவில் சுதந்திரம் என்பன அதன் வேர்கள் என சொல்லலாம். இவையின்றி சுயராஜ்ய அடிப்படைகள் இருக்கமுடியாது. ஜனவரி 15, 1942 காங்கிரஸ் அமர்வில் காந்தி உரையாற்றினார். ஜவஹரும் நானும் பிரிந்துவிட்டோம் என்பது அபத்தமானது. தடியால் அடித்து நீரை பிரிக்கமுடியாது. நேருதான் எனக்கு பின்பானவர் ராஜாஜியோ, வல்லபாயோ அல்ல. (I have always said that not Rajaji, nor Sardar Vallabhbhai, but Jawaharlal will be my successor.) நேரு மனதில் உள்ளதை சொல்வார். ஆனால் நான் எண்ணியதை அவர் செய்வார். நான் போனபிறகு நான் செய்ததை அவர் செய்வார். எனது மொழியைக்கூட அவர் பேசுவார். நான் இருக்கிறேன். என்னிடம் அவர் சண்டையிடுகிறார்.போனபின்? என் மொழியை அவர் பேசுவார் என்பது நடக்காமல் போனாலும் அந்த நம்பிக்கையுடன் நான் மரணிப்பேன்.( I would atleast die with this faith) காந்தி தொடர்ந்த மாதங்களில் வெளிநாட்டு உறவுகளில் ஜவஹர் சொல்வதே தன் கருத்து என சொல்லும் அளவு சென்றார். அவரை தன் வாரிசு என பலமுறை பேச்சுக்களில் வெளிப்படுத்தினார். ஏப்ரல்1, 1947 பிரார்த்தனை கூட்டத்தில் கூட ஜவஹர் நம்மிடையே ஆகசிறந்த மனிதர் என குறிப்பிட்டார். ஏப்ரல் 4 அன்று அவர் சந்தித்த எகிப்திய பிரதிநிதிகளிடம் நேருவின் திறமையை வியந்து பேசினார். நான் இல்லாமல் போகலாம். ஆனால் இந்தியா உலக சமாதானத்தின் ஒளியாக இருக்கும். ஜவஹர் இருப்பார் என்றார். நேருவும் தனது சுயசரிதையில் காந்தி குறித்த விமர்சனப்பார்வையுடன் வியந்து நோக்கும் அம்சங்களையும் முன்வைத்திருக்கிறார். கோகலே குறிப்பிட்ட ஒன்றை நேரு மேற்கோள் காட்டியிருப்பார். எப்படி களிமண்ணிலிருந்தும் காவியமனிதர்களை காந்தி உருவாக்கிவிடுகிறார் என்பது அம்மேற்கோள். மனிதர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து இயக்கம் கட்டும் பெருந்தலைவர் காந்தி என நேரு குறிப்பிட்டு இருப்பார். தங்களைப்போன்ற அனைவருக்கும் காந்தியுடனான பிணைப்பு எவ்வாறானது என நேரு குறிப்பிடுவார். காந்தியுடன் இருந்து தோல்வி அடைவதுகூட ஒன்றுமில்லாததே- அவர் இல்லாமல் நாம் பெறும் தற்காலிக முன்னேற்றங்களை விட.. சித்தாந்தரீதியாக சிலநேரம் அவர் பிற்போக்கு போல் தெரிவார். ஆனால் செயலில் அவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய புரட்சிகரவாதி எனவும் நேரு குறிப்பிட்டுள்ளார். காந்தி ஒத்துப்போகிறவர்களுக்கு மட்டுமல்ல விமர்சிப்பவர்களுக்கும் அவசியமானவர். போராட்டம் என அவர் அறிவித்துவிட்டால் அனைவரும் அதில் வந்து சேர்வதை பார்ப்பதாகவும் நேரு இந்தியாவை கண்டுணர்ந்தேன் புத்தகத்தில் சொல்கிறார். Mahatma Gandhi taught us to place politics on an ethical level என்று ஏப்ரல் 3, 1948ல் நேரு அரசியல் அமைப்பு சட்ட அவையில் பேசினார். வாஷிங்டனில் டிசம்பர் 18, 1956ல் நேரு தொலைகாட்சி, வானொலி உரை தந்தார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் நல்லவையும் அல்லவையும் நடந்தேறியுள்ளன. வரலாறு தன் நீள்பாதையில் அமைதி சமாதானம் சகிப்புத்தன்மையை சுமந்துகொண்டே வந்துள்ளது. நமது காலத்தில் இச்செய்தியை காந்தி பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் அமைதியான அகிம்சைவழியில் விடுதலை நோக்கி பெருமக்களை செயல்படவைத்தார் . சீனா யுத்தம் தாக்குதல் தொடர்பாக நேரு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கீழ்கண்டவாறு தெரிவித்தார். காந்தி கொடுமையானவர் என எவரும் சொல்லமுடியாது. அவர் பலவீனமானவர் என சொல்லவே முடியாது. No man can say that Gandhiji was brutal. He was the essence of humility and of peace. No man can say that Gandhiji was weak. He was the strongest man that India or any country has produced வளரும் பொருளாதாரம் எனும் கருத்தரங்கில் நேரு செப்டம்பர் 22 1963ல் உரையாற்றினார். எந்திரங்கள் குறித்து காந்தியின் அணுகுமுறையை அவர் விளக்கினார். மக்களுக்கு உதவாத மக்களை பயன்படுத்தாத எந்திரமுறையை அவர் ஏற்காமல் இருந்தார் என்பது நேரு விளக்கமாக அமைந்தது. அக்டோபர் 19, 1963ல் நேரு தன் வாழ்க்கையில் தான் பார்த்த மகத்தான தைரியசாலி மகாத்மாவே என்றார். அவரின் ஆன்மாவை எவரும் விலைபேசிட வாங்கிவிட அவர் அனுமதித்ததே இல்லை. காந்தி மறைந்தபோது நேரு ஆற்றிய உரை உலகோரை உலுக்கியது. The light has gone out of our lives and there is darkness everywhere.. The light has gone out, I said, and yet I was wrong.. For that light represented something more than the immediate past, it represented the living, the eternal truths, reminding us of the right path, drawing us from error, taking this ancient country to freedom. மகாத்மா என்கிற ஒளிவிளக்கு அணைந்துவிட்டது. தவறு, அந்த தீபம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தன் ஒளியை நல்கும்.. உண்மையை, சரியான பாதையை பிரதிநிதித்துவப்படுத்தும். நேருவும் நாடாளுமன்றமும் இந்தியாவின் எதிர்காலம் அய்ந்து அடிப்படைகளைக் கொண்டது எனக் கருதி அதற்காக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு. நாடாளுமன்ற ஜனநாயகம், திட்டமிட்ட வளர்ச்சி, மதசார்பின்மை, அறிவியல் மனோபாவம், சோசலிசம் என்பனவே அவை. பாராளுமன்றத்தின் அணிகலன் என்கிற போற்றுதலுக்குரியவராக நேரு திகழ்ந்தார். நாடாளுமன்ற அமைப்பும் மற்றும் இருக்கிற பிற நிறுவனங்களும் நமது மக்களின் சிந்தனை - குறிக்கோள் நடத்தைகளை பிரதிபலிப்பவையாகவே இருக்கும். அவைகளின் வலிமையும் நீடித்த தன்மையும் மக்களின் நடத்தை மற்றும் சிந்தனையை பொறுத்தே அமையும் என்று கருதியவர் நேரு. வாக்கு போடுவது என்பதுடன் மக்களை நிறுத்தாது அவர்களுடன் ஜனநாயகத்தை நெருக்கமாக்க சிந்தித்தவர்- செயலாற்றியவர் நேரு. ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியுடன் கூடவே வளர்வது- இரண்டறக் கலந்தது என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. வறுமையும் கல்வியறிவின்மையும் நிறைந்த நாட்டில் வாக்களிக்க வரும் மக்கள் புரிந்து வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு கற்றுத்தருவது தன் கடமை என செயலாற்றியவர் நேரு. அரசின் திட்டங்கள் அவர்களிடம் எடுத்து செல்லப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதில் தயக்கமின்றி செயல்பட்டவர். பெரும்பான்மை மக்கள் பின்னடைந்த நிலையில் இருக்கும் இந்தியாவிற்கு ‘வாக்குரிமை அரசியல்’ ஜனநாயகம் மட்டுமே போதுமானதாக இராது என்பதை உணர்ந்தவராக நேரு இருந்தார். பொருளாதார ஜனநாயகம் நோக்கி நாடு செல்லவேண்டும் எனக் கருதினார். நல அரசு என்கிற அடிப்படையில் பொருளாதார அம்சங்களில் சம வாய்ப்பு நோக்கி நகர்வதற்காக செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து வற்புறுத்தினார். பாராளுமன்ற ஜனநாயகம் பொருளாதார ஜனநாயகம் நோக்கி பயணிக்கவேண்டும். பொருளாதார பிரச்சனைகளின் தீர்வில் அடையும் வெற்றியைப் பொறுத்தே பொருளாதார ஜனநாயகம் நோக்கிய நகர்வுகள் இருக்கும் என்றார் நேரு. நமது விருப்பங்களுக்கும் நிறைவேற்றங்களுக்கும் இடைவெளி இருக்கவே செய்யும். நாடாளுமன்ற ஜனநாயகம் இடைவெளியை குறைப்பதற்கான கருவியாக செயல்படவேண்டும் என அவர் விழைந்தார். நாடாளுமன்ற ஜனநாயகம் தனிநபருக்கு முன்னுரிமை தருவதாக இருந்தாலும் தனிநபர்- சமூகத்தின் ஒத்திசைவை அவசியமாகவும் கருதுகிறது. மானுட வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் அது பிரதானமாக கொள்கிறது. அவனது படைப்பூக்க செயல்பாட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. ஜனநாயகத்திற்கு இறுதி இலக்கு என ஏதாவது இருக்குமெனில் தனிநபர்களின் நல்வாழ்வு என்பதாகவே இருக்கும் என்றார் நேரு. நாடாளுமன்ற செயல் அதன் மேம்பாடு என்பது மந்திரக்கோலால் நடைபெற்றுவிடாது. அது முகிழ்த்து வளரவேண்டிய ஒன்று- உட்கிரகிக்க வேண்டிய ஒன்று ( It had to evolve and grow- imbibed ) என்று சொல்லித்தந்தவர் நேரு.. ஜனநாயக முறை எனப்படுவது பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்விற்கு கொண்டுவருவதுதான். அமைதிவழி இல்லையெனில் ஜனநாயகமில்லை. எந்த சமூக அமைப்பும் ஜனநாயகத்தில் சுயகட்டுப்பாட்டை வரித்துக் கொள்ளவேண்டும். கட்டுப்பாடு குலையும் எனில் அங்கும் ஜனநாயகம் இருக்காது என ஜனநாயகத்தின் அடிப்படைகளை உரக்கச் சொல்லி கற்றுத்தந்தவர் நேரு. " Democracy means to me an attempt at the solution of problems by peaceful methods. If it is not peaceful, then to my mind, it is not democracy. ..A social organisation must have some discipline to hold it together… In a proper democracy, discipline is self imposed. There is no democracy if there is no discipline" எதேச்சதிகாரிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் எளிய வழி என்பது எதையும உடன் தீர்த்துவிடுவதாகவே இருக்கும்- சரி தவறு என்பதெல்லாம் அங்கு பார்க்கப்படுவதில்லை. தொடர்ச்சியும் மாறுதலும் என்பதே நாடாளுமன்ற முறையின் சிறப்பு. அதே நேரத்தில் இளம் தளிராக இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒடிந்துபோக செய்துவிடக்கூடாது , அது பிரச்சனைக்குரியதாகிவிடும் என்கிற விழிப்போடும் எச்சரிக்கையுடனும் இந்திய விடுதலைக்கு பின்னரான ஜனநாயக முறையை நகர்த்தி சென்றவர் நேரு. நாடாளுமன்றத்தில் மாறுதல்கள் நிதானகதியில் நடந்தாகவேண்டும். ‘வேருடன் பிடுங்குதல்’ போன்ற மாற்றங்கள் அங்கு எடுபடுவதில்லை. அங்கு தொடர்ச்சியும் மாற்றமும் இருக்கவேண்டும். தொடர்ச்சியே இல்லை எனில் அங்கு வேர் இருக்காது. இற்று வீழும் சூழல் உருவாகும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் மாற்றம் குறித்த பிரச்சனைகளை நேரு கையாண்டார். நேரு பிரதமர் என்ற பொறுப்பிலும் அவையின் தலைமை உறுப்பினர் என்ற வகையிலும் சிறந்த ஆரோக்கியமான நடைமுறைகளை முன்னுதாரணங்களை படைத்தார். நியாயமான தேர்தல், வயது வந்தோர் வாக்குரிமை எனும் நம்பிக்கைகளை அவர் ஆழமாக பதித்தார். சக அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தோழமையும் கண்ணியமான உறவையையும் அவர் பேணினார். உறுப்பினர்களிடமிருந்து வரும் கேள்விகளை கவனத்துடன் உள்வாங்கி பதில் அளிப்பதாக இருந்தாலும் அவர்களின் கடிதங்களுக்கு தவறாமல் பதில் அளிக்கும் பக்குவத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சில தருணங்களில் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவாக அமைச்சர்கள் பதில் இருக்குமானால் உரிய தகவல்களை அவையில் வைப்பதற்கு அவரே முன்கை எடுப்பார். அறிவியல் கொள்கை, தொழில்கொள்கை போன்றவற்றில் அவர் இந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். வெளியுறவுத்துறை சார்ந்த விவகாரங்களில் அவரின் விவாதத்திற்கு உலக நாடுகளே காத்துக்கொண்டிருக்கும். நாடாளுமன்ற காலரி முழுமையாக நிரம்பி நிற்கும். விடுதலைக்கு முன்னர் அவர் பாசிசம் குறித்து தெளிவாக அறிந்திருந்தார். முசோலினியை சந்திக்க மறுத்தார். நாஜிகள் அழைப்பை ஏற்று அவர் ஜெர்மனி செல்ல இசையவில்லை. சோவியத் புரட்சியும் அரசாங்கமும் அவரை ஈர்த்தன. மனிதகுல முன்னேற்றத்திற்கு துணைநின்ற புரட்சி என அதனை அவர் ஏற்றார். அதன் ‘ரெஜிமெண்டேஷன்’ என்பதை அவர் ஏற்கவில்லை. தனிநபர் சுதந்திரம் என்பதை இழக்கமுடியாது என அவர் கருதினார். சமூக பொறுப்புடன் தனிநபர் சுதந்திரம் என்பதற்காக அவர் நின்றார். மத்தியத்துவ ஆட்சி என்ற இறுக்கத்தில் தனிநபர் நசுங்கிவிடக்க்கூடாது என நினைத்தவர் நேரு. அரசியல் அமைப்புசட்ட நிர்ணய அவையில் நேரு மிக முக்கியமான பங்களிப்பை செய்தார். அவரின் கருத்துக்கள் அவையால் எடுத்துக்கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயகம் மூலமாக நேரு நம்மை தேசமாக்க பெருமுயற்சி எடுத்தார். நம்மை சுயசார்பு சிந்தனைப்போக்கில் வழிநடத்தினார் என சரியாகவே கே கே ஷா மதிப்பிட்டிருந்தார் . ஷா காட்டிய நேருவின் உரையில் : “Whatever system of government we may establish here must fit in with the temper of our people and be acceptable to them. We are going to make a Constitution for India, and it is obvious that what we are going to do in India is going to have a powerful effect on the rest of the world, not only because a new free and independent nation comes out into the arena of the world, but because of the very fact that India is such a country that by virtue, not only of her large size and population, but of her enormous resources. and her ability to exploit those resources, she can Immediately play an imporatant and a vital part in world affairs. Therefore, it is right that the framers of our Constitution should always bear this larger international aspect in mind.” அரசியல் அமைப்பு சட்ட அமர்வில் பல்வேறு தரப்பு வாதங்கள் எதிரும் புதிருமாக வரும்போது அமைதியாக கண்மூடிக்கொண்டும், சில நேரங்களில் தன் வழுக்கைதலையை தடவிக்கொண்டும் நேரு இருப்பார். விவாதங்களின் ஊடே கருத்தொற்றுமையை உருவாக்கும் அல்லது இதுதான் தீர்வாக அமையும் என அவருக்கு உதித்த தருணம் கண்ணை திறந்து பேசத்துவங்குவார் என்கிற பதிவை என் ஜி ரங்கா தனது கட்டுரையான ஜனநாயக சிந்தனையாளர் நேரு என்பதில் தந்துள்ளார். சிம்மம் போல் உறுமுவதை பார்த்து ரசித்துள்ளதாக அவர் பதிவு செல்கிறது. அரசியல் அமைப்பு நிர்ணயசபையில் டிசம்பர் 13, 1946ல் ‘குறிக்கோள்- நோக்கம்’ பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து நேரு பேசினார். ஆகஸ்ட் 14 1947 அரசியல்சட்ட நிர்ணயசபையில் நேரு முன்மொழிந்த தீர்மானத்தில் இறையான்மைகொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்பதை வலியுறுத்தி இருந்தார். மக்களுக்கு சமூக, பொருளாதார அரசியல் நீதி உறுதி செய்யப்படும்-அனைவரின் வழிபாட்டு சுதந்திரம் பொதுநெறி மற்றும் சட்டத்தின்பாற்பட்டு காக்கப்படும் என்பதையும் உறுதியளித்தார். சிறுபான்மை- பிற்பட்ட- மலைவாழ்பகுதியினரின் வாழிடபாதுகாப்பும் அதில் பேசப்பட்டிருந்தது. நாட்டின் எல்லைகளை காத்து நிற்பதும், உலக அமைதிக்காக நிற்பதற்கும் அத்தீர்மானம் வழியே உறுதி ஏற்கப்பட்டிருந்தது. அரசியல் நிர்ணயசபை அரசியல் அமைப்பு சட்டத்தை இறுதிப்படுத்த 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களை எடுத்துக்கொண்டது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்த், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா அரசியல் அமைப்பு சட்டங்களின் ஷரத்துக்களிலிருந்தும் இந்திய அரசாங்க சட்டம் 1935லிருந்தும் எடுத்தாளப்பட்டன. ‘டைரக்டிவ் பிரின்ஸ்பிள்ஸ்’ என்பதில் நேரு மிகுந்த கவனம் செலுத்தினார். அமெரிக்க புரட்சி, பிரஞ்சுபுரட்சி, சோவியத் புரட்சியின் சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களின் தோல்விகளை நாம் தவிர்க்கவேண்டும் என நேரு பேசிவந்தார். ஜனவரி 26 1950ல் அரசியல் அமைப்பு சட்டத்துடன் இந்தியா குடியரசானது. அதை உருவாக்கியவர்கள் மத்தியிலேயே கருத்துவேறுபாடு வராமல் இல்லை. குடியரசு தலைவர் அதிகாரம் என்ன என்பதறிய சட்ட வல்லுனர்களை ராஜேந்திரபிரசாத் நாடினார். ஜவஹருக்கு இதில் வருத்தமிருந்தது. அதேபோல் பிரதமரின் அதிகாரம் குறித்து படேலுடன் வேறுபாடு உருவானது. பிரதமர் என்ற வகையில் கூடுதல் பொறுப்புண்டு. இறுதி முடிவை அமைச்சரவை எடுக்கலாம் என்பது நேருவின் பார்வை. படேலோ பிரதமர் முடிவு எடுத்து அமைச்சர் சகாக்கள் ஏற்பது எனும் நடைமுறை சர்வாதிகாரமாகவே இருக்கும் என நினைத்தார். இந்தியாவில் சில காலத்திற்கு Restricted Franchise நீடிக்கலாமா என்ற கேள்வி வந்தபோது அதை காந்திஜி நிராகரித்தார். வயதுவந்தோர் வாக்குரிமை என நேரு உறுதியாக நின்றார். வளர்ந்த நாடுகளே வயதுவந்தோர் வாக்குரிமை நோக்கி மிக மெதுவாக நகர்ந்தபோது இந்தியாவில் துணிச்சலான முயற்சியை அன்றைய விடுதலைக்கால தலைவர்கள் மேற்கொண்டனர். இந்தியாவில் கூட்டுக்குடும்ப முறை சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயக உணர்வுகளுக்குமான சிஸ்டம் என காந்தி கருதினார். இந்தியா சுயராஜயத்திற்கு தயாராகவில்லை என பேசியவர்களுக்கு இதை 1920களில் பதிலாக காந்தி தந்தார். நவம்பர் 1951ல் முதல் தேர்தலின் போது கீழ்கண்ட வேண்டுகோளை மக்களுக்கு நேரு விடுத்தார். கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களது எதிர்காலத்தை முடிவெடுக்க இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாக்குப்பெட்டிகளில் தங்களின் பிரதிநிதி யார் என சொல்லப்போகிறார்கள். மிக அமைதியாக அவர்கள் இதை செய்யவேண்டும். மக்கள் தரும் முடிவை எவ்வித கேள்வியுமின்றி அனைவரும் ஏற்க இருக்கிறோம். ஜனநாயகத்தின் சாரமிது. வெற்றிபெறுகிறவர்கள் தலைக்கு ஏற்றிக்கொள்ளக்கூடாது. தோற்றவர்கள் துவண்டுவிடக்கூடாது - வெற்றியும் தோல்வியும் பெரிய மனதுடன் ஏற்கும் பக்குவம் வாய்க்கப் பெறவேண்டும். தேர்தல் என்பதன் அனுபவத்தை இளம்விடுதலை நாட்டவர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதற்கு நேரு தந்த இலக்கணமாக அவ்வுரை அமைந்தது. விடுதலைக்குப்பின் தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ள தலைவர்களைக்கொண்ட அரசாங்கம் என்ற விவாதம் வந்தது. நேருவும் அதை நேர்மறையாகவே பார்த்தார். தனது அமைச்சரவை சகாக்களாக காங்கிரசில் அல்லாத சண்முகம் செட்டி, அம்பேத்கார், ஜான் மத்தாய், ஷியாமாபிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் உள்ளடக்கினார். விடுதலைக்கு முன்பாக புனைப்பெயரில் நேரு தன்னைப்பற்றி இப்படி ஒரு மதிப்பீட்டை தந்திருந்தார். ஆனால் விடுதலை போராட்டங்களும், ஆட்சிபொறுப்பும் அவரை பெரிய அளவில் மாற்றின. தன் முகம் பார்த்து தன்னை சரி செய்துகொள்ளும் விமர்சனமுறையாக அதை நாம் பார்க்கலாம். “Man like JawaharlaJ, with all their capacity for great and good works, are unsafe in a democracy. He calls himself a socialist and a democrat…. but every psychologist know that the mind is ultimately a slave to the heart and logic can always be made to fit in with the desires and irrepressible urges of a person. A little twist and JawaharIal might turn a dictator sweeping aside the paraphernalia of a slow moving democracy!” The Modern Review about himself anonymously) விடுதலையடைந்த ஆசிய நாடு ஒன்றில் வயதுவந்தோருக்கு வாக்குரிமை அடிப்படையில் நடந்த முதல் தேர்தல் 1951-52 தேர்தல். உலகமே அதை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. 17.3 கோடி வாக்காளர்கள் என்பதை உலக நாடுகள் எதுவும் அதுவரை பார்த்ததில்லை. இதில் 80 சத கல்வியறிவற்றவர்கள். 17000 பேர்கள் தேர்தலில் 59 கட்சிகள் சார்பில் நின்றனர். பலர் சுயேட்சைகளாகவும் நின்றனர். 25 லட்சம் வாக்குப் பெட்டிகள், 60 கோடி வாக்கு சீட்டுகள், 1.33 லட்சம் வாக்கு மய்யங்கள் என மத்திய மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பயன்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தில் நேரு தனித்து நின்றார். இதை நேருவின் அரசியல் சரிதை எழுதிய மிஷேல் பிரெக்சர் இவ்வாறு பதிவு செய்துள்ளார். The congress campaign was a one man affair- Nehru, Nehru and more Nehru. He was the chief of staff, field commander, spokesman and foot soldier at one and at the same time. It was he who drafted the party’s election manifesto. It was he who set the tone of the partys appeal- selfless service, devotion to basic principles and faith in the indian people. Nehru the incorruptible, Nehru the favourite son of Mahatma, had taken charge of the congress." (page 168 Nehru A political Biography Michael Brecher) நேரு 43 நாட்களில் 30 ஆயிரம் மைல்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். முப்பது லட்சம் மக்களாவது அவரது பொதுக்கூட்ட உரைகளை கேட்டிருப்பர். தினம் குறைந்தது 9 கூட்டங்கள். இதுதவிர சாலை ஒர சந்திப்பு சிறு கூட்டங்கள். தினம் 5 மணிநேர ஓய்வுக்கூட அவர் எடுக்கவில்லை என்பது மிஷல் பிரெக்சரின் பதிவு. மத்தியில் காங்கிரஸ் 45 சத வாக்குகளை பெற்றது கம்யூனிஸ்ட்களைவிட சோசலிஸ்ட்கள் அதிக சதம் பெற்றிருந்தாலும் குறைவான இடங்களையே பெற்றனர். சோசலிஸ்ட்கள் 10 சதம், கம்யூனிஸ்ட்கள் 4.4 சதத்தில் 16 தொகுதிகளைப்பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். ஜனசங்கம் 3 சதம்- 3 இடங்களை பெற்றது. நேருவின் கடுமையான விமர்சனதாக்குதல் வலதுசாரியினர் மீதே அதிகம் இருந்தது. நேரு அவர்கள் தலைமையில் 1952 தேர்தலில் காங்கிரஸ் 489 இடங்களில் 362யைப் பிடித்தது. நாடாளுமன்றத்தில் 3/4 பகுதி காங்கிரஸ் என்ற நிலை. 1957 தேர்தலில் 371 இடங்களையும், 1962 தேர்தலில் 361 இடங்களையும் காங்கிரசால் பிடிக்க முடிந்தது. பெரும்பான்மை என்பதால் சிறு கட்சிகளை அவர் ஒடுக்கி ஒழிக்க விழைந்ததில்லை. அவர்கள் சிதறிய சிறு கட்சிகளாக இருந்தாலும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை துடைத்தேறிய அவர் விரும்பியதில்லை. The Parliamnetary sytem of work requires not only a stout opposition, not only forcible expression of opinions and views, but an essential basis of cooperation between opposition and the Government; not in regard to any particular matter, but the whole basis of approach is after all a cooperative basis. In so far as we succeed in doing that, we succeed in laying the foundations of parliamentary work firmly" ( J Nehru as quoted by A N Das in his article Nehru’s Vision of Parliamentary democracy ) எதிர்கட்சி உறுப்பினர்கள் பலவீனமானவர்கள் என்பதால் எந்த மரியாதை குறைவும் கூடாது என நினைத்தவர் நேரு. அவர்களில் எவர் சிறப்பாக பேசினாலும் அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவராக நேரு விளங்கினார். அவை உறுப்பினர்களின் அதிகாரவரம்பு வெட்டப்படுவதை அவர் ஏற்காதவராக இருந்தார். இந்த அவையின் அதிகார வரம்புகளை பார்த்து பொறாமை கொள்ளவேண்டும். எவரும் அதை குறைத்துவிடக்கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை குறித்த பெருமிதம் அவரிடம் இருந்தது நேரு அவையின் மரபுகளில் முன்னுதாரணமாக திகழ்ந்தார். மாவ்லங்கர் சபாநாயகராக இருந்தபோது நேருவை பார்க்க வரட்டுமா எனக் கேட்டார். தங்கள் அலுவலகத்தில் சந்திப்பதுதான் முறையாகும் என நேரு வந்து விவாதித்து சென்றார். சபாநாயகர் என்ற பதவி குறித்த நேருவின் மதிப்பீடு மிக உயர்வானதாக இருந்தது. நீண்டதொரு மேற்கோளாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு தரப்படுகிறது. " The position of the speaker is not an individual’s position or an honour done to an individual. The Speaker represents the House. He represents the dignity of the House, the freedom of the House and because the House represents the nation, in a peculiar way, the Speaker becomes the symbol of the nation’s freedom and liberty. Therefore , it is right that that should be an honoured positon, a free position and should be occupied always men of outstanding ability and impartiality (march 8 1948) The speaker has to abstain from active participation in all controversial topics in politics. The essence of that a Speaker has to place himself in the position of Judge. He is not to become a partisan so as to avoid unconscious bias for or against a particular view and thus inspire confidence in all sections of the House about his integrity and impartiality." சபாநாயகர் அவையின் சரியான பிரதிநிதி. அவையின் கண்ணியத்திற்கான- சுதந்திர செயல்பாட்டிற்கான வெளிப்பாடு அவர். அவை நாட்டையே பிரதிபலிக்கிறது. கருத்துமாச்சரியங்கள் நிரம்பிய அன்றாட அரசியலிருந்து சபாநாயகர் தள்ளியே நிற்கவேண்டியவராகிறார். சுருங்க சொன்னால் அவர் நீதிமான் போன்ற சமநிலை பிறழாதவராக செயல்படுபவர் என்கிற அற்புத வரையறையை மேற்கூறிய பகுதியில் நம்மால் பார்க்கமுடிகிறது. பாராளுமன்ற ஜனநாயகம் வேர்பிடிக்க நேரு தன் செல்வாக்கை முழுமையாக பிரயோகித்தார் என்கிற மதிப்பீட்டை அவரது வாழ்க்கை வரலாற்றை தந்த கோபால் தருகிறார். அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்தபோது அதன் அவசியத்தை அது தொடர்பான விவாதத்தை அவையில் வரவேற்றவர் நேரு. மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதே அரசாங்கமாக இருக்கவேண்டும் என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார். A Government in a democratic society is a reflection of the will of the people and it should continue to be a reflection of this will all the time மேற்கோளாக காட்டப்பட்டுள்ள இந்த சுருக்க விளக்கம் என்றென்றும் தேவைப்படுகிற ஒன்றாகவே நீடிக்கிறது. அவை உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். குடியரசுத்தலைவர் 1963 பிப்ரவரியில் உரையாற்றும்போது கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட உறுப்பினர்கள் மீதான பிரச்சனை கமிட்டியின் பார்வைக்கு விடப்பட்டது. கமிட்டி அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு நேரு உரைநிகழ்த்தினார். கண்ணிய குறைவான நடவடிக்கைகளை அவை கறாராக கண்டிக்கவேண்டும்- ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொன்னார். “This parliament is supposed not only to act correctly but lay down certain principles and conventions of decorous behavior” நாடாளுமன்றம் என்பது மக்களின் விருப்பார்வங்களை நிறைவேற்றும் சாதனமாக திகழவேண்டும் என்பதை அவர் உளமாற விழைந்தார். நேரு தனது வாழ்நாட்களின் இறுதிகட்டத்தில்கூட நாடாளுமன்றம் வருவதை கடமையாக கொண்டிருந்தார். தன்னால் ஒவ்வொருமுறையும் எழுந்து பதில் சொல்வது கூட கடினமாக உண்ர்ந்தபோதும்- சபாநாயகரே அமர்ந்து பதில் தரலாம் என்கிற அன்பு அனுமதியை தந்தபோதும் அவர் மரபின் மரியாதையை உயர்த்திப்பிடித்தார். சுயவிமர்சனத்தின் மீது நம்பிக்கை மட்டுமல்ல அதை செய்துகொள்ளவும் தயங்காதவராக நேரு இருந்தார். காரணகாரியத்திற்கு உட்படாத எதன் மீதும் அவருக்கு விமர்சனம் இருந்தது. பிறரின் கண்கொண்டும் விஷயங்களை பார்க்க பழகவேண்டும் என்று கற்றுத்தந்தவர் நேரு. விடுதலைக்கு முன்னர் நேருவும் சட்டமன்ற நுழைவு என்பதில் நம்பிக்கை கொண்டவராக இல்லை. parliament of People என மக்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார். நேருவிற்கு மக்களை தான் வழிநடத்துபவன் மட்டுமல்ல அவர்களால் வழிநடத்தப்படுபவனும் கூட என்ற கருத்து இருந்தது. நமது நாடு விவாதங்கள் நிரம்பி வழிந்த நாடு. பிரபஞ்சம் கடவுள் மனித உறவுகள், மன்னன் பிரஜா உறவுகள் என விவாதங்கள் நடந்த நாடு. இதை நன்கு அறிந்தவராக நேரு விளங்கியதால் விவாதங்கள் மூலம் தீர்வை எட்டுவதற்கு அவரால் முடிந்தது. விடுதலைக்குப் பின்னர் உருவாகப்போகும் நாடாளுமன்றம் ஆக்கபூர்வ விவாதங்களுக்கு உதவும் கருவியாக்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மக்களுக்கான நலத்திட்டங்களில் உண்மையை உணர்த்தும் இடமாக இருக்கவேண்டும் என நேரு உழைத்தார். நாடாளுமன்றத்தில் எவ்வளவு பேசுகிறோம் என்ன கேள்விகள் கேட்டோம் என்பனவெல்லாம் லட்சக்கணக்கான பக்கங்களில் ஆவணங்களாக இருக்கலாம். அவற்றின் மூலம் என்ன செய்துள்ளோம்- எவ்வளவு ஆழமாக தேச கட்டுமானத்திற்கு துணை நின்றோம் என்பதன் மூலம்தான் எதிர்காலம் பார்த்து நம்மை மதிப்பிடும் என்றார் நேரு. நாடாளுமன்ற ஜனநாயகம் பல நன்னடத்தைகளை எதிர்பார்க்கிறது. திறமையைக் கோருகிறது. வேலைமீதான ஈர்ப்பை கோருகிறது. ஒத்துழைப்பும், சுயகட்டுப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் நெறியில் எவருக்கும் சிறப்பு விலக்கு இருக்கமுடியாது. இனி அவரின் வார்த்தைகள் . Parliamentary democracy demands many virtues. It demands, of course , ability. It demands a certain devotion to work. But it demands also a large measure of cooperation, of self discipline,of restriant…. No one was beyond Parliament’s Preorogative" கட்சிக்கூட்டங்களில் கூட பேசவிருப்பம் தெரிவிப்பவர்கள் பேசட்டும் என ஊக்குவிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. நேரு அரசாங்கத்தை எதிர்த்து முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. விடுதலை போராட்டக்காலத்தில் அவரின் தோழர்களில் ஒருவராக இருந்தவரும், பின்னர் வேறுபாடு காரணமாக வெளியேறியவருமான ஆச்சார்ய கிருபளானி அத்தீர்மானத்தைக் கொணர்ந்தார். எண்ணிக்கை அடிப்படையில் அது தோற்கும் எனத் தெரிந்தாலும் விவாதம் நடைபெறவேண்டுமென நேரு கருதினார். பொறுமையாக தாக்குதல்களை செவிமடுத்தார். மிருக பலம் என்பதும் முக்கிய தாக்குதலாக இருந்தது. மெஜாரிட்டி என்பதற்காக நேரு எப்போதும் சமநிலை இழந்தவராக செயல்படவில்லை. தோழர் ஹிரன்முகர்ஜி நேருவை Gentle Colossus- மென்மையான பெருபிம்பம் என்றே வர்ணித்ததை நாம் பார்க்க முடியும்.. பலதரப்பட்ட உறுப்பினர்களின் வித்தியாசமான பார்வைகளின் ஊடே நாம் பெறும் கடினமான உடன்பாடே (Hard core Agreement) நாடாளுமன்ற ஜனநாயகம் என ஒருமுறை நேரு விளக்கம் தந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மணிநேரம் பிரதமர் ஒருவர் அவையில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே என பல்ராம் ஜாக்கர் தன் நினைவாக தெரிவித்தார். ராஜ்யசபாவில் ஒருமுறை டாக்டர் ராதாகிருஷ்ணன் சேர்மனாக இருந்தபோது நடந்த நிகழ்வொன்று இன்றும் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இரு பெரும் ஆளுமைகளின் பெருந்தன்மையை ஜனநாயக மாண்பை அந்த நிகழ்வு சித்தரிக்கிறது. கேள்வியை உறுப்பினர் எழுப்பிக்கொண்டிருக்கிறார். அமைச்சர் பதில் சொல்ல வருகிறார். நேரு அவர்கள் தன் ஆசனம்விட்டு எழுந்து வேறு அமைச்சர் அருகே சென்று பேசத்துவங்குகிறார். அவைத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் Mr Prime Minister , what is that you are doing ? என கடிந்தார். உடனே நேரு அவர்கள் தன் ஆசனம் திரும்பி Mr Chairman, I am sorry, I shall not do it again" என்கிற பணிவான பதிலை தந்தார். இரு அவைகளுக்குமான மரியாதை என்பதில் நேரு கவனமாக இருந்தார். சில நிதி அதிகாரங்கள் மக்கள் அவைக்கு இருக்கலாம்- இருஅவைகளும் அரசியல் அமைப்பு சட்டவிதிகளின்பாற்பட்டே இயங்குகின்றன என்கிற தெளிவு அவரிடம் இருந்தது. தினேஷ் சிங் நேருவை நினைவுக்கூறும்போது அவரின் அனுபவத்தை எடுத்துச்சொல்கிறார். வெளியுறவுத்துறை சார்ந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் நேரு உணவு எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் தினேஷ் சிங்கை அழைத்து நான் போய் வர 20 நிமிடங்கள் ஆகலாம். குறிப்பை எடுத்து வை- நான் வந்து பார்க்கிறேன் என பொறுப்புடன் சொல்லி அவையை விட்டு உணவிற்காக செல்கிறார் . ஒருமுறை அட்டார்னி ஜெனரலை நாடாளுமன்றத்திற்கு அழைக்கவேண்டும் என்ற குரல் வலுத்தது. மொரார்ஜி முடியாது என பிடிவாதமாக இருந்தார். நேரு அவர்கள் தலையிட்டு நாடாளுமன்ற விருப்பத்திற்கு செவி சாய்ப்பது நல்லது என அறிவுறுத்தி அழைத்துவிடுங்கள் என்றார். சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என குற்றம் சாட்டி மாவ்லங்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் டிசம்பர் 18 1954ல் வந்தது. நேரு இம்மாதிரியான ஒன்று வக்கிரத்தனமானது என்று கருதியிருந்தாலும் வாக்கெடுப்பு வரட்டும் என விழைந்தார். கட்சி கட்டளை என ஏதும் காங்கிரஸ் தரப்போவதில்லை. இது அவையின் பிரச்சனை. கட்சிப்பிரச்சனையல்ல. சபாநாயகர் பற்றி இன்று விருப்பப்படி பேசிவிடலாம்- ஆனால் அது நம் ஒவ்வொருவருவருக்கும் திரும்பும். நாட்டை பாதிக்கும் என்ற கருத்தை நேரு வெளியிட்டார். தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. சபாநாயகர் எனும் இடத்தின் கண்ணியத்தை நேரு தானே முன்நின்று காக்கவிரும்பியதற்கான சாட்சியாக இந்நிகழ்வு அமைந்தது. அமைச்சரவை கூட்டங்களில் துணை அமைச்சர்கள் இடம்பெறாமல் இருந்தனர். காபினட் முடிவுகளை பத்திரிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது என்கிற குறையை நேருவிடம் கொண்டுசென்றனர். அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பேப்பர்களை தரலாமே என அறிவுரை நல்கி துணை அமைச்சர்களும் தங்கள் முக்கியத்துவத்தை உணர்வதற்கு துணைநின்றார் நேரு. நேரு சில முக்கிய மசோதாக்களை கட்சி உறுப்பினர்கள் எப்படி புரிந்து விவாதிக்கிறார்கள் என பார்க்க விரும்புவார். அவர்கள் அதில் சரியான புரிதலுடன் இருக்க விரும்புவார். இந்து கோடு பில், அலிகார் பல்கலைகழக மசோதா, விஸ்வ பாரதி மசோதா, பனாரஸ் பல்கலைகழக மசோதா போன்றவற்றில் கட்சி உறுப்பினர்களும் முழு சுதந்திரத்துடன் கருத்தை வெளியிடவேண்டும் என அவர் வற்புறுத்தினார். அதேபோல் கமிட்டிகளுக்கு விடப்படவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை வருவதற்கு முன்னரே அவர் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கமிட்டியின் தேவை குறித்து விவாதித்துவிடுவார். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதன் உள்ளார்ந்து நிற்கும் ஜனநாயகம் அதன் அரசாங்க நிர்வாகத்தில் வெளித்தெரியும்.. இதை உறுதிப்படுத்த நினைத்தவர் நேரு. சோசலிசம் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சோதிக்கமுடியும் என கருதி நேரு செயல்பட்டார். மக்களை கலக்காமல் சோசலிச திட்டம் என சிலர் எழுதிவைத்துக்கொண்டு அதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமுல்படுத்துவது என்கிற முறையை ஏற்காமல் இருக்கலாம். மக்களின் உடன்பாட்டுடன் சோசலிசம் என்பதை அவர் சிந்தித்தார். . நேரு ஒருமுறை அவை உறுப்பினர்களிடம் மிக முக்கிய ஆத்ம பரிசோதனைக்குரிய கேள்வியை எழுப்பினார். நாடாளுமன்றத்திற்கு வந்த நாம் பெரும் விஷயங்களை பேசுகிறோம். என்ன செய்தோம் எனக்கேட்டுக்கொள்ள வேண்டாமா? குறைந்தபட்சம் நமது பகுதி கிராமங்களுக்கு குடிநீர்வசதியாவது செய்திருக்கிறோமா என சுயவிமர்சனத்தை துவங்கி வைத்தார். நாடாளுமன்றத்தில் 80 சத உறுப்பினர்கள் கிராம மக்களின் பிரதிநிதியாகத்தான் வந்துள்ளோம். அதனை பிரதிபலிக்கவேண்டும் என்றார். கல்வி அறிவும் ஒழுக்க சீலர்களாகவும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் மேலும் சிறப்பாகும் என அவர் நம்பினார். பெருந்திரளான மக்களிடத்து கல்வியறிவு மேம்படாமல் அரசியல் ஜனநாயகம் என்பதை சரியாக உணரமுடியாது என்பதை அழுத்தமாக நேரு முன்வைத்தார். இளைஞர்கள் அடிமட்டத்திலிருந்து சற்று அனுபவப்பட்டு நாடாளுமன்றத்திற்கு வருவது கூடுதல் பயிற்சி நிறைந்ததாக இருக்கும். நாடாளுமன்ற நெறிகள்- நன்னடைத்தைகள் என இருக்கின்றன. கூடுதல் வேலையில் சிரத்தை என்பது அங்கு தேவைப்படும். சட்டமன்ற அனுபவம் பெற்று நாடாளுமன்ற நுழைவு இருந்தால் அவர்களின் தேர்ச்சித்திறன் அவைக்கு பயனைக்கூட்டும் என்ற கருத்து நேருவிடம் இருந்தது. குறைந்தபட்ச பயிற்சி மற்றும் பொறுப்புடன் நாடாளுமன்ற நுழைவு என்பதை அரசியல் கட்சிகள் தங்களின் பாடமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவை நாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கண்ணுறுகிறோம். நாடாளுமன்றத்தில் பிரச்சனைகள் வந்தால் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு அருமையான வழிகாட்டலை நேரு தந்தார் பிரச்சனைகளே இல்லையெனில் சமூகம் சவமாகும். சில நேரங்களில் பிரச்சனைகள் உருவாகும். வேறு சிலநேரங்களில் உருவாக்கப்படும். அதை தீர்ப்பதற்குத்தான் நமது திறமையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமைதிவழிப்பட்ட முடிவுகள் செயல்பாடுகள் வேண்டும். அங்கு மாறுதலைக்கூட அமைதி வழியிலேயே செய்தாக வேண்டும். எவ்வளவு பேசுகிறோம் என்பதல்ல, நாம் பேசுவதால் எப்பகுதி மக்கள் நன்மையடைய வாய்ப்பு என்பதே நாடாளுமன்ற விவாதத்தில் பொருட்படுத்தப்படவேண்டிய ஒன்று . பிரச்சனைகள் இயல்பானது- அதை அமைதிவழியில் உரியவர்களுக்கான வகையில் தீர்க்கும் திறனே வளர்த்துக்கொள்ளவேண்டியது என்கிற அருமையான பாடம் நேருவிடமிருந்து கிடைக்கிறது. மக்களின் கருத்துக்களை செவிமடுக்கவேண்டிய பொறுமை மிக அவசியம். விமர்சிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது - அது பெரும்பான்மை முடிவுகளை ஏற்று நடத்தல் என்பதானதே. அதேபோல் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அலட்சியம் செய்து பொருட்படுத்தாமல் இருந்தால் அங்கு நாடாளுமன்ற ஜனநாயக உணர்வு மங்கிவிடும் என்கிற அவசியம் தேவைப்படுகிற பாடத்தையும் நேரு தருகிறார். " If you don’t tolerate people’s views, if you do not tolerate criticisms, then parliamentary system cannot function..Those criticise must also remember that they must follow ultimately the majority opinion. A majority which ignores the minority is not working in true spirit of parliamentary democracy" ஜனநாயக அரசாங்கம் என்ற ஆட்சிமுறையில் இரகசியங்கள் இருக்கமுடியாது. இரகசிய நடைமுறைகள் பலவீனத்தைக்கூட ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றமாக இருந்தாலும், சமூகமானாலும் வெளிப்படையான அமைதிவழிப்பட்ட விவாதங்களின் வழியே கூட்டுஞானம் மூலம் பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை நேருவிடம் இருந்தது. இங்கு அவர் காந்தியின் மொழியை பேசினார். தனிநபர் தாக்குதல் மற்றும் எதிர்ப்புக்கான இடமல்ல நாடாளுமன்றம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்ப்புக்கூட நிறுவனமான ஒன்றாக இருக்கவேண்டும். Institutional opposition not personal opposition என நேரு இதை விளக்கினார். பலகட்சிகள், பலமொழிகள், பல்வேறு பழக்க வழக்கம் கொண்டவர்கள் பிரதிநிதிகளாக வரும் இடம் நாடாளுமன்றம். அங்கு பெரும்பான்மை உறுப்பினர்களை பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடிகிறது. எனவே இந்த பன்முகத்தன்மையை அக்கட்சி புரிந்துகொண்டால் அன்றி மற்றவர் எனக்கருதப்படுபவரை செவிமடுக்கமுடியாது. கருத்தொற்றுமைக்கொணர முயற்சிக்கவும் முடியாது. செவிமடுக்காவிடில் நாடாளுமன்றத்தின் அரிய நேரம் வீணாகிப்போவதே நமது அனுபவமாக இருக்கிறது. ஜனநாயகம் நான்கு அடிப்படைகளில்தான் நிலைக்கமுடியும்- தனிநபர் சுதந்திரம், பிரதிநிதித்துவ அரசாங்கம், பொருளாதார சமூக சமத்துவம், சுயகட்டுப்பாடு (Individual freedom, Representative government, economic and social equality, self discipline) என அவற்றை வகைப்படுத்தலாம். இதற்கு கட்சிகள் பொறுப்பாக துணைநிற்கவேண்டும். மாற்றுக்கருத்துக்களை பொருட்படுத்தி அமைதிவழியில் விவாதம் மூலம் தீர்வு என்பதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. Executive எனப்படும் அமைச்சரவை அல்லது பிரதமர் ‘அதிகார போதை’ தலைக்கு ஏறி செயல்பட்டால் நாடாளுமன்றமுறையில் பலவீனம் ஏற்படும். இந்திய அனுபவங்கள் இதை நன்கு நமக்கு உணர்த்திவருகின்றன. சகிப்புத்தன்மை என்பது தன்னுடன் உடன்படாதவர்களும் தங்கள் கருத்துக்களை உரியவகையில் அமைதிவழியில் பலமாக சொல்வதை தாங்கிக்கொள்ளும் மனப்பாங்கு என்கிற புரிதல் சமூக அமைதிக்கு அவசியமாகிறது. நேரு 1962 பிப்ரவரி மாதம் பெங்களூரில் நிகழ்த்திய உரை ஒன்றில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பது சிறந்ததுதான், ஆனால் பசியும் பட்டினியும் கூட இருந்தால் அது என்ன உரிமை என சுயவிமர்சனமாக கேட்டுக்கொண்டார். அரசியல் விடுதலை போதாது- அது பொருளாதார விடுதலை நோக்கி பயணிக்கவேண்டும். ஏதோ ஒருவகைப்பட்ட சோசலிச சாலையில் நாடு பயணிக்கவேண்டும் என அவர் தன் பெரும் விருப்பத்தை பகிர்ந்துகொண்டார். ஜனநாயகத்தை வெறும் தேர்தல் என குறுக்கிவிடக்கூடாது. பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கத்தை, நாட்டை தாங்கள்தான் நடத்துகிறோம் என்கிற பாத்தியதை உணர்வை உருவாக்குவதுதான் ஜனநாயகத்தின் சாரமாக இருக்கும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியவர் நேரு. நேரு ஒருமுறை தான் இப்படிக்கூட எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சிலநேரங்களில் ஜனநாயக அரசாங்கம் தவறான மனிதனைக்கூட உட்காரவைத்து ரிஸ்க் எடுக்கும். ஆனால் அதை சரியான நடைமுறையில் செய்யும் ( the democratic state must take the risk of even choosing wrong people by the right method and hope for the best). அவரின் தீர்க்கதரிசனத்தை நாடு இன்றுள்ள அரசியல் சூழலில் நன்றாக உணர்கிறது. அதேபோல் தனிநபர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதே நேரத்தில் ஒழுங்குடன் திரட்டப்பட்ட கட்சி தனது செயல்பாட்டால் மக்களுடன் உள்ள தொடர்பால், அவர்களுக்கான விருப்பங்களை அறிவதால் பிரதிநிதியாக இருக்கமுடியும் என்றார் நேரு. மக்களின் அடிமட்ட வேர்ப்பகுதியிலிருந்து பொருளாதார திட்டங்கள் குறித்த விவாதங்கள் தேவை என அவர் நினைத்தார். நேரு காலத்தில் இன்னொரு தனி சிறப்புஎன்னெவெனில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரே எதிர்கட்சி போன்று அரசாங்கம் குறித்து விமர்சனம் வைக்கும் உரிமைகிடைக்கப்பெற்றவராக இருந்ததாகும். நேருவிற்கு இடைக்கால அரசை தலைமைதாங்கி நடத்தும்போதே சகிப்புத்தன்மையும் பொறுமையும் பழக்கமானது. பிரிட்டிஷ் வைஸ்ராய், மற்றும் பல்வேறு முகத்துடன் அமைந்த அமைச்சரவை என்பதை அவர் முதலில் எதிர்கொண்டு அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது. ஒருமுறை லோக்சபாவில் நேருவின் உரையை காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பண்டிட் லஷ்மிகாந்த மைத்ரா விமர்சனம் செய்தார். கிழக்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட நிலைமை குறித்த உரையது. யார் பேசுகிறார்கள் நேருவா - லியாகத்தா என புரிந்துகொள்ள முடியவில்லை (As I was listening to the PM I was wondering whether it was the voice of Pandit Nehru or of Liaquat Ali Khan, the PM of Pakistan) என்பது லஷ்மிகாந்த் அவர்களின் விமர்சனம். இதையும் புன்முறுவலுடன் நேரு ஏற்றார். ஹிரன்முகர்ஜி மே 1952ல் நேரு குறித்த விமர்சனத்தை வைத்தார். ராயலசீமா பகுதியில் விவசாயிகளின் துயரை காணாமல் இருக்கிறார் நேரு. விடுதலை போராட்டக்காலத்தில் விவசாயிகளுக்காக நின்ற நேரு எங்கே என்பது ஹிரன் விமர்சன சாரம். இப்படி அவர் நடந்தது தனிமனித துயரல்ல- தேசத்துயர் என்ற கடுமையான பதங்களையும் அவர் பயன்படுத்தி இருந்தார். இதற்காக பதில் தாக்குதலை தராமல் வரலாற்றில் தனக்கு என்ன நேரப்போகிறது என்பது முக்கியமான ஒன்றே அல்ல. இந்தியாவிற்கும் அதன் லட்சக்கணக்கானவர்க்கும் என்ன என்பதே மிக முக்கியமானது- அதற்கு உழைப்போம் என்று நேரு தன் நிலையை விளக்கினார். பண்டிட் நேரு அவர்களுக்கும் ஷியாமாபிரசாத் முகர்ஜிக்கும் ஒருமுறை தொடர்ந்து பத்துநிமிடங்கள் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அவை விவாதங்களை அமைதியாக கவனித்தது. சபாநாயகர் மாவ்லங்கரும் அமைதியாக இருந்தார். காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்த் மாளவியா சபாநாயகரிடம் எவ்வளவு நேரம் இந்த வார்த்தைபோர் என வினவினார். உடன் நேரு புரிந்துகொண்டு எவ்வளவு பொறுமை முகர்ஜிக்கு இருக்கிறது என சோதித்தேன் என நிலைமையை இலகுவாக்கினார். அதேபோல் வாஜ்பாய் கடுமையான தாக்குதலை நேரு அரசாங்கம் மீது தொடுத்தார். அன்று அவை நிகழ்வுகள் முடிந்தவுடன் வாஜ்பாயை பார்க்கநேர்ந்த நேரு மலர்ந்த முகத்துடன் இன்று கடுமையாக தாக்கி பேசினீர்கள் என்று சொல்லி சென்றார். தன்னை விமர்சனம் செய்தவர்களையும் அவர்கள் இளையவர்களாக இருந்தாலும் அவரை அங்கீகரித்து பாராட்டி சொல்லவேண்டும் என்ற பக்குவம் நேருவிடம் இருந்ததை நம்மால் உணரமுடிகிறது. மகாராணி காயத்ரி தேவியுடன் நடந்த விவாதமானாலும் சுசேதா கிருபளானியுடன் நடந்த விவாதமானாலும் அவர் பெண் உறுப்பினர்கள் என்ற வகையில் தன்மீதான தாக்குதலுக்கான பதிலை மிதமாக தந்து பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் சேர்த்து காப்பாற்றும் பொறுப்புடன் நடந்திருக்கிறார். Nehru Ideology and Practice என்ற ஆக்கத்தில் EMS நம்பூதிரிபாட் கீழ்கண்ட விமர்சனத்தை முன்வைக்கிறார். 1957ல் அமையப்பெற்ற முதல் கம்யூனிஸ்ட் கேரளா அரசாங்கத்தை கலைத்தது குறித்த விமர்சனமது. அரசியல் தார்மீக நெறி வீழ்ச்சி என அவரது விமர்சனம் சென்றது. The dismissal of an elected ministry was clearly beyond the code of political ethics in which Nehru had been trained…It was necessary in the interest of the party’s survival that a liberal democrat like Nehru should come out in his true colours as a bourgeois leader. And so he did" 1962 சீன யுத்தத்தின் போது கிருஷ்ணமேனன் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்திலும் நேரு மீது முழு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டாலும் மேனன் போகவேண்டும் என்கிற குரல் வலுவாக இருந்தது. இராணுவ ஜெனரல் திம்மையாவுடன் பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடும் திம்மையா ராஜினாமா செய்வேன் என சொன்னதும் வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் முடிவுகள் இராணுவ தளபதிகளின் கட்டளைகளாகவோ நிர்பந்தங்களாகவோ இருந்துவிடக்கூடாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். திம்மையாவின் ராஜினாமை திரும்ப பெறவைத்தார். கிருஷ்ணமேனன் ராஜினாமா செய்துவிட்டார் என்பதை தெரிவித்து நிலைமைகளை சீர்படுத்த முயற்சித்தார். சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக நேரு நாடாளுமன்றத்தில் போதுமான தகவல்களை தரவில்லை என்ற விமர்சனம் வலுத்து வந்தது. திபேத் பிரச்சனை உடன்பாடு தொடர்ந்து 1954க்குப் பின்னர் சீன உறவுகள் மேம்படும் என கருதப்பட்டது. சூ என் லாய் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உறவுகளை மேம்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் நேரு செயல்பட்டு வந்தார் . ராஜ்ய சபாவில் இந்திய எல்லைகளை சீன உரிமை கொண்டாடி வருவது குறித்து 1959ல் கேள்விகள் எழுந்தன. இந்தி சினி பாய் பாய் முழக்கங்கள் வலுப்பட்டு உதவும் என்கிற நேருவின் நம்பிக்கை பொய்க்கத் துவங்கியது. நேரு செப்டம்பர் 26, 1959ல் சூ என் லாய் அவர்களுக்கு எல்லை தாக்குதல்களை விளக்கி கடிதம் எழுதினார். அக்சாய் குன்றுகள் பகுதி நிலைமையையும் அதில் அவர் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவ நடவடிக்கை என ஏதுமின்றி அமைதியான முறையில் எல்லை தகராறுகள் தீர்க்கப்படவேண்டும் என்கிற விழைவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. அனைத்து விவரங்களும் ஒளிவு மறைவின்றி நாடாளுமன்றத்தில் சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்திற்கு மிக முக்கிய சென்சிடிவ் விஷயங்கள் கூட தெரிவிக்கப்படாமல் போவதால் வரும் குற்றவுணர்விற்குரிய சுயவிமர்சனம் இக்கடிதத்தில் நமக்கு புலப்படும். கர்நாடகாவை சார்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சீனா படையெடுப்பு குறித்த விவாதத்தின்போது நேருவை அளவுக்குமீறி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். ராஜ்யசபா சேர்மனாக இருந்த ஜாகீர் ஹுசைனிடம் நேரு “அய்யா விவாதம் என்னைப்பற்றியோ என் குடும்பம் பற்றியோ அல்ல, சீனா படையெடுப்பு குறித்து- அவரை நிறுத்த சொல்லுங்கள்” என எழுந்து சொன்னார். அவசியம் இல்லாமல், பிரச்சனையின் தன்மை அறியாமல் பேசுபவர் தனக்கு நெருக்கமானவர் என்றாலும் அவர் அதை விரும்பாமல் இருந்தார். மாஸ்டர் தாரா சிங் விடுதலை போராட்ட தலைவர்களில் ஒருவர். அவர் நேரு அரசாங்கம் எதிர்த்து பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அப்படி ஒரு போராட்டத்தின்போது 1959ல் அவர் சிறையில் வைக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருந்தது குறித்து ஜெயபிரகாஷ் நாராயணனிடம் சொல்லப்பட்டது. ஜே பியும் நேருவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் எப்படி இதில் உதவமுடியும் என சிலர் நினைத்தனர். ஜேபி நேருவிடம் பேசினார். உங்களை எதிர்க்கும் விடுதலை போராட்டக்காரர்களில் மாஸ்டரும் ஒருவர். அவரை நீண்டநாட்கள் உயிர் வாழவைப்பது நமது கடமை என்கிற செய்தியை நேருவிற்கு தந்தார் ஜேபி. மறுநாள் மாஸ்டர் தாரா சிங் விடுதலையாகியிருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதுதான் நேருவின் ஜனநாயகபண்பு. அதேபோல் மாஸ்டர் தாராசிங் உண்ணாநோன்பு போராட்டம் அறிவித்தபோது, அவருக்கு வேண்டுகோள் விடச்சொல்லி இருவரையும் அறிந்த கோபால்சிங் கோரினார். நேரு மிக கோபமாக இந்த மனிதரிடம் உறவாடுவது கஷ்டம் - அவர் ஒத்துக்கொள்வதைக்கூட மாற்றிப் பேசுவார். தேசியப்பார்வை கொண்ட ஒரு கம்யூனிட்டியை அவர் வகுப்புவாத பார்வைக்கு மாற்ற முயற்சிக்கிறார் என தன் விமர்சனத்தை வைத்தார். ஆனாலும் ஏற்றுக்கொண்டு அப்பீல் செய்தார். தாராசிங் அவர்களும் தனக்கு நேருவிடமிருந்து வந்த கடித சாரத்தை வெளிப்படுத்தாமல் போராட்டத்தை தள்ளிவைத்தார். நேருவின் கடிதத்தில் மாஸ்டருக்கு தரப்படவேண்டிய விளக்கத்திற்கு பின்னர் தங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் என்ற வரி இருந்தது- (“If, however, you still feel I have hurt your feelings by any chance, I ask your forgiveness.”.) . அதைப்படித்தவுடன் தாராசிங் கண்ணீர்விட்டார். இந்த ஒருவரி தன்னை உலுக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். 1950-56 ஆண்டுகளில் நிதிஅமைச்சராக இருந்த சி டி தேஷ்முக் நேரு மீது கடுமையான விமர்சனங்கள் வைப்பவராக இருந்தார். ஆந்திராவை பிரித்து தருவது என்கிற முடிவை தனியே அவர் மட்டும் எடுத்துவிட்டார். முறையாக காபினட் முடிவுகள் கூடி எடுக்கப்படுவதிலை என்பதில் அவர் அதிருப்தியுற்றார். நேருவும் அவரது விமர்சனத்தை ஓரளவு பொறுத்துக்கொண்டாலும் பிரதமர் பதவி- அதன் பொறுப்பென்ன என்பதை தான் அறியாதவன் அல்ல என்கிற பதிலை அவருக்கு சற்று காட்டமாகவே தந்தார். 1957 முந்திரா ஊழல் எனும் எல் ஐ சி சார்ந்த பிரச்சனையை மருமகன் நாடாளுமன்ற உறுப்பினர் பெரோஸ்காந்தி எழுப்பினார். சாக்ளா கமிஷன் போடப்பட்டு கிருஷ்ணமேனன் மீது தலையீடற்ற விசாரணை நடத்தப்பட்டது. நேருவின் உயில் ஜூன் 21, 1954ல் பதிவுசெய்யப்பட்டது. இந்திய மக்களின் பேரன்பிற்கு தன்னிடம் செய்வதற்கு கைம்மாறு ஏதுமில்லை. இனிவாழப்போகும் காலமுழுதும் மக்களின் அன்பிற்கு மாறான நம்பிக்கைக்கு மாறான எந்த ஒன்றையும் செய்யாமல் இருப்பேன் என்கிற விழைவை அதில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். “I have received so much love and affection from the Indian people that nothing that I can do can repay even a small fraction of it, and indeed there can be no repayment of so precious a thing as affection. Many have been admired, some have been revered, but the affection of all classes of people has come to me in such abundant measures that I have been overwhelmed by it. I can only express the hope that in the remaining years I may live, I shall not be unworthy of my people and their affection.” நேரு தான் ஒரே நேரத்தில் சோசலிஸ்ட்டாகவும் ஜனநாயகவாதியாகவும் இருப்பதில் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. அப்படி இருப்பதே சரி எனக் கருதி செயல்பட்டார். அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களுமே எந்த நாட்டையும் உயர்வானதாக ஆக்கிவிடுவதில்லை. அந்நாட்டு மக்களின் ஆர்வங்களும், அவர்களின் உயரிய வெளிப்பாட்டு சக்தியும்தான் நாட்டை உயர்த்தும். வரலாறு எப்போதும் மிக உயரிய மனங்களால், விசாலமான இதயங்களால், அன்பினால் இறுகப்பிடிக்கும் கரங்களால் உருவாக்கப்படுகிறது. மக்களின் பெரும் வியர்வை சிந்தும் உழைப்பால் தேசம் கட்டப்படுகிறது என 1949 விடுதலைதின உரையில் நேரு குறிப்பிட்டார். பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் என நம்பி செயல்பட்ட தலைவர்களுள் நேருவும் ஒருவர். ஆட்சிஅதிகாரத்தின் மூலம் பெண்களுக்கு சில சாதக வாய்ப்புக்களை உருவாக்க முடிந்ததை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். மரபுரீதியான சிந்தனையும் செயல்களும் நிறைந்த பழமையான நாட்டில், ஆணாதிக்கம் நிறைந்த நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு பெறும் உரிமை, பொதுவேலைக்கு செல்ல வாய்ப்புகள் ஆகியவற்றை பிரதமராக இருந்து செய்யமுடிந்ததற்காக அவர் நிறைவடைந்தார். ஆங்கிலோ இந்தியர்கள் சார்பிலான நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த பிராங்க் அந்தோணி நேருவின் சிறப்பை குறித்து கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட எட்டாவது அட்டவணைப்பட்டியலில் இடம்பெறவேண்டும் என்பது பிராங்கின் கோரிக்கை. நேருவிற்கு அதில் உடன்பாடு இருந்தாலும் இந்திமொழி ஆர்வலர் மற்றும் வெறியர்கள் அதை உறுதியாக எதிர்த்ததையும், அதேபோல் தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களையும் கணக்கில் கொண்டு அவர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை செய்தார். ஆகஸ்ட் 7 1959ல் கொடுக்கப்பட்ட அவ்வறிக்கையால் இன்றும் மொழிபோராட்டங்களை மட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீட்டிப்பு (Making English the alternate/ associate language for as long as non Hindi speaking people so desire) என்பது தொடர்புமொழி பிரச்சனையில் இன்றளவும் பேருதவியாக இருந்துவருகிறது. நேரு 1907ல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டியில் சேரும்போது அவர் கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, பாட்டனி எடுத்தார். தேர்ச்சி எனப் பார்த்தால் இரண்டாம் வகுப்பில்தான். பிரிட்டிஷ் அறிவுச் சூழல் அறிவியல் கண்ணோட்டம் நிறைந்து இருந்தது. நேருவும் ஈர்க்கப்பட்டார். பாபியன் சிந்தையாளர்களுடனும் பேராசிரியர் லாஸ்கியாலும் அவர் ஈர்க்கப்பட்டார். மார்க்சியத்தின்பாற் வந்த அவர் மேற்கின் வளர்ச்சியை மார்க்சியவகைப்பட்டே சரியாக விளக்கமுடியும் என நம்பவும் செய்தார். ருஷ்ய புரட்சியும் அதன்சாதனைகளும் நேருக்கு ஈர்ப்பை உருவாக்கின. அதே நேரத்தில் கம்யூனிசம் என்பதில் கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையை அவர் வைக்கவில்லை. ருஷ்யா போல் இந்தியாவிற்கு ஒற்றை கட்சி ஆட்சிமுறை பொருந்தாது என அவர் நினைத்தார். விஞ்ஞான சோசலிசம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. மகாத்மாகாந்தியின் ஈர்ப்பு அவருடனான கருத்துவேறுபாடுகளையும் தாண்டி இருந்தது. ஜனநாயகம், செக்யூலரிசம், சோசலிசம், கூட்டுசேரா இயக்கம், போரற்ற அமைதி ஆகிய 5 அம்சங்களை அவர் வலியுறுத்திவந்தார். இந்தியாவில் செய்யவேண்டியது சொத்து ஒழிப்பல்ல- வறுமை ஒழிப்புதான் என அவர் சோசலிசம் பற்றி பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டார். இந்தியர்களாகிய நாம் வேறு எந்த நாட்டினரிடமிருந்தும் மதசகிப்புத்தன்மையை கற்கவேண்டியதில்லை. நமது மண்ணில் அது நிறைந்தே இருக்கிறது. ஆனால் அரசியல் உரிமைகள் என்பதில் பிரஞ்சு, அமெரிக்க புரட்சிகளிடமிருந்து செல்வாக்கு நம்மிடம் ஏற்படாமல் இல்லை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நீண்ட வரலாறும் நம்மிடம் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. பின்னர் ஏற்பட்ட ருஷ்யபுரட்சியின் தாக்கம் பொருளாதார சமத்துவம் குறித்த சிந்தனைகளை நம்மிடம் உருவாக்கின. உலகின் பல நாடுகளின் அனுபவத்தில் ஒப்பீட்டளவில் பார்த்தால் காங்கிரஸ் நல்ல ஜனநாயக அமைப்பாகவே இருக்கிறது என நேரு தனது அனுபவ மதிப்பீட்டை தந்தார். திரு ஆர். வெங்கட்ராமன் குடியரசுத்தலைவராக இருந்தநேரத்தில் நேருவின் பாராளுமன்ற கண்ணியம் பற்றி எடுத்துரைத்தார். நேருவை பாராளுமன்றத்தின் அணிகலன் என அவர் விவரித்தார். நேருவை self apprisal- self assessment நிறைந்த தலைவர் என்றார் ஆர். வெங்கட்ராமன். கேள்வி நேரங்களுக்கு நேரு கொடுத்த முக்கியத்துவத்தை அனைவரும் போற்றாமல் இல்லை. நேருவின் விவாதத்திறன் பொறுப்பற்ற குற்றசாட்டுக்களை அவர் எதிர்கொண்டவிதம் குறித்து உமா சங்கர் தீட்சித் தனது பார்வையாக முன்வைக்கிறார். இப்படிப்பட்ட தருணங்களில் நேருவின் அறிவாளுமை கொப்பளிப்பதை தீட்சித் வியந்து பேசுகிறார் " Not unoften, he would effectively intervene to silence an irresponsible speaker or angirily repudiate an ill founded allegation or demolish a virulent pesrsonal attack. During such exchanges he shone out in his intellectual brilliance" . நேரு நாடாளுமன்றத்தை ‘காம்ரேட்’ போல் கருதி தோழமை பூண்டவர் என்கிறார் என் ஜி ரங்கா. அளவிற்கு மீறி புகழாரம் செய்யும்போது அவர் நாடாளுமன்ற அவையில் நெளிவதை கண்டுள்ளோம் என்பது என் ஜி ரங்கா நமக்கு தரும் சித்திரம். என் ஜி ரங்கா நேரு குறித்த நினைவுகளை கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் நேரு குறித்து கடுமையான சுடுசொற்களை வீசியிருப்போம். அவை அனைத்தும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் பெரும்பான்மையின் முடிவுகளை எதிர்கட்சி ஏற்கும்படியான சூழலை அவர் உருவாக்குவார். பெரும்பான்மைக்கு கட்டுப்படுதல் என்பதை கற்கவேண்டியிருக்கும். உலகில் பலநாடுகளில் காணப்படாத அம்சமிது. நேருவிற்கு இதற்காக நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் அரசியல் அமைப்பு சட்ட நடைமுறைகளையும் நன்கு அறிந்த அறிஞர் சுபாஷ் காஸ்யப் நாடாளுமன்ற அவையின் மாண்பு என்றால் அதற்கு தேற்றம் என நிற்பவர் நேருதான் எனக் குறிப்பிட்டார். Nehru was not an individual. He was a norm என அவர் குறித்து கச்சிதமாக பேசியவர் ரசீதீன்கான். நேருவின் வாழ்க்கை மக்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த வாழ்க்கையாக இருந்தது. அவர் இந்தியாவின் பன்முகத்தன்மைகளை உட்கிரகித்துக்கொண்ட முழு இந்தியன் என உணரப்பட்டவர். அவர் கருத்தொற்றுமை உருவாக்கத்தெரிந்தவராக இருந்ததால் நவீன இந்தியாவின் பெரும் கட்டுமானக்காரராக இருக்க முடிந்தது. ரசீதீன் மேலும் குறிப்பிடும்போது அவர் இந்திய விடுதலை இயக்கத்தின் சிறந்த புதல்வர்கள் பலர் உருவாக்கிய அம்சங்களை உள்வாங்கியவராக இருந்தார் எனவும் குறிப்பிட்டார். பெண்கள் சொத்துரிமை, அவர்களின் சம உரிமை- கண்ணியம் பிரச்சனைகளில் துரிதமாக செயல்பட நேரு விரும்பினார். எதிர்ப்புகள் வந்தன. முந்தரா ஊழல் எனும் பிரச்சனையில் பெரோஸ்காந்தி கடுமையாக தாக்கிப்பேசினார். பொறுமையாக கேட்ட நேரு அவரை பாராட்டி இப்படி விவரங்கள் கொண்டதாகத்தான் உரைகள் அமையவேண்டும் என்றார். விடுதலை அடைந்த இந்தியா தனது மக்களுக்கு வயதுவந்தோர் வாக்குரிமை என்கிற மிகப்பெரிய சமத்துவ ஜனநாயக உரிமையை சோதிக்க நேரு மிகப்பெரும் துவக்க நாயகராகவும் கட்டுமானக்காரராகவும் இருந்தார். அவர் சோசலிச கட்டுமானமாக இருந்தாலும், திட்டமிடுதல் ஆக இருந்தாலும் அதில் ஜனநாயக பண்புகள் என்பதை இணைக்கவேண்டும் என செயல்பட்டார். ஒருவகை கலப்புபொருளாதார சோதனையை அவர் நடத்தினார். மேற்குநாடுகள் தொழிற்மயமான பின்னர் அரசியல் ஜனநாயகம் நோக்கி நகர்ந்தன. இந்தியாவோ அரசியல் ஜனநாயகம் பெற்றபின்னர் தொழிற்மயமாகவேண்டியிருக்கிறது என்கிற முக்கிய வேறுபாட்டை நேரு சுட்டிக்காட்டிவந்தார். அந்த தொழிற்மயமாதல் கூட ஜனநாயக வழிமுறைகளை அடைத்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதில் அவர் விழிப்புடன் செயல்பட்டார். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரு குறித்து சொல்லும்போது நம்மை போன்ற குழந்தைப்பருவ ஜனநாயகத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். தோழர் ஏ கே கோபாலன் தனது நேரு குறித்த நினைவில் அவரின் நாடாளுமன்ற நடைமுறைகளின் முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டியிருந்தார். சபாநாயகர் ஆசனத்தில் எவர் இருந்தாலும் உரிய மரியாதை, புன்முறுவலுடன் அவைக்கு வருதல், பார்ப்பவர்களுடன் பரிமாற்றம், கோரம் மணி அழைப்பைக் கேட்டால் அவைக்கு ஓடோடி வருதல், கேள்விக்கு பதில் தரும்போது முழுவிவரங்களை அளித்தல், நிர்வாக விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்தல் போன்ற மிகப்பேரும் மாதிரிகளை நேரு உருவாக்கினார். அவர் அவையில் இருந்தாலே பெரும் ஈர்ப்புதான் என தோழரின் பதிவு செல்கிறது. தோழர் ஹிரன் முகர்ஜியும் நேரு குறித்து மிக உயர்ந்த மதிப்பீடுகளை கொண்டிருந்தார். அவர் நேரு குறித்து தனியாக புத்தகம் ஒன்றையே தந்துள்ளார். திவான் சமன்லால் மோதிலால் அவர்களுடன் பழக்கத்தில் இருந்தவர். AITUC துவக்க காலத்தில் மானிபெஸ்டோ வெளியிட்ட சிறப்புக்குரியவர். அவர் மோதிலாலை சிறப்பான பார்லிமெண்டேரியன் என்றார். பின்னர் நேருவின் ஆற்றலை வியந்து மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன் என தந்தையைவிட மேம்பட்ட இடத்தை சமன்லால் தந்தார். அவரின் அரசியல் அமைப்பு சட்ட அவையில் objective Resoultion உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக இருந்தது. அதேபோல் மகாத்மாவின் படுகொலைக்கு பின்னர் அவர் ஆற்றிய வானொலி உரையும் உலகோரை கவனிக்கவைத்த நெகிழவைத்த உரையாக அமைந்தது. வழக்கமாக பட்ஜெட் அமர்வு முடிந்தால் நாடாளுமன்றம் கூட்டப்படுவதில்லை. மே 27 1964ல் கூட்டப்பட்டிருந்தது. நேரு அவர்கள் முக்கியமான திருத்தம் ஒன்றைக் கொணரவேண்டும் என விரும்பியதால்தான் அந்த அமர்விற்காக அறிவிக்கை தரப்பட்டிருந்தது. ஆனால் அன்றுதான் தனது இறுதிநாளின் போராட்டத்தை அவர் நடத்தி மரணித்தார். நேரு மூன்று அம்சங்களில் தீரா தாகத்துடன் செயல்பட்டார். சுதந்திர வேட்கை, ஜனநாயக வேட்கை, நவீனமய வேட்கை என்ற மூன்றிலும் அவர் உறுதியாக நின்றார். எந்தவித வறட்டுத்தனங்களுக்கும் இடம்தராத மானுட மதம் என்பதை அவர் பற்றி நின்றார். நேரு நூற்றாண்டு நாடாளுமன்ற தொகுப்பு சிவசங்கர் (P. Shiv Shanker ) கட்டுரையில் நேருவின் மிக முக்கிய கவலையை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் தலையாய பிரச்சனை ஏழ்மை பட்டினிநிலையிலிருக்கும் மக்களை விடுவிப்பதாகவே இருக்கும். இதை செய்யத்தவறுவோமானால் நமது அரசியல் அமைப்பு சட்டம் அர்த்தமற்ற வெறும் காகிகதமாகவே விளங்கும். “At present the greatest and most important question in India is how to solve the problem of the poor and the starving. Wherever we tum, we are confronted with this problem. If we cannot solve this problem soon, all our paper Constitution will become useless and purposeless.” நேருவின் இவ்வாசகங்கள் இன்றும் பொருள் பொதிந்ததாகவே செயலுக்கான நிகழ்ச்சிநிரலாகவே இருந்துவருகிறது. நேருவின் நிர்வாகம் நேரு உலக அரசியல் நிகழ்வுகள்- போக்குகள், இந்திய விடுதலைப்போராட்டம் குறித்த ஞானம் மிகுந்தவராக இருந்தார். அலகாபாத முனிசிபல் நிர்வாகம் என்கிற நிர்வாக அனுபவம் மட்டுமே கொண்ட நேரு 1946ல் இடைக்கால சர்க்காரின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். பிரிட்டிஷ் வைத்துவிட்டுப் போகும் நிர்வாக எந்திரத்தை மக்களுக்கு நெருக்கமாக ஜனநாயகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைக்குப் பின்னர் காத்திருந்தது. நாடு பிரிவினையின் துயர்களை அனுபவித்துக்கொண்டிருந்தது. அகதிகள் பிரச்சனை, சமஸ்தானங்களின் பிரச்சனைகள், மகாத்மா படுகொலை என தொடர் துயரங்களின் ஊடே விடுதலை அரசாங்கம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு நேரு தலைமையில் அன்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் இருந்தது. பல்வேறு சிந்தனை ஓட்டங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை கொண்டு உடனடியாக தீவிரமான மாற்றங்களை செய்ய இயலாது என்கிற எதார்த்த நிலையும் நேருவால் உணரப்பட்டிருந்தது. மய்யம்- பரவலான அதிகாரமுறை (Centralisation- Decentralisation) என்கிற பிரச்சனையை நேரு நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்டு தீர்க்க நினைத்தார். முற்றிலுமாக பரவலாக்கப்பட்ட அதிகார முறைக்காக (Decentralisation) காந்தியடிகள் நின்றவர் என்பதை மற்ற அனைவரையும்விட நேரு நன்கறிந்தவர். அதேநேரத்தில் ஆட்சியாளர் என்ற வகையில் அதிகாரவர்க்கம் எனும் பயிற்சியாளர்கள் மூலம் நிர்வாகம் என்கிற நடைமுறையையும் அவர் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் அதிகாரவர்க்கம் வளர்வது தவிர்க்கமுடியாததாக இருப்பதை நடைமுறையில்அவர் உணர்ந்தார். அடிமட்ட மக்களுக்கான வேர்க்கால் உணர்ந்த நிர்வாகம் அமைக்கப்படவேண்டுமே என்கிற தவிப்பு நேருவிடம் இருந்தது. பஞ்சாயத்து நிர்வாகம் அவசியம்- அடிமட்ட நிர்வாகத்தில் அவர்கள் தவறு கூட இழைக்கட்டும். அனுபவம் வழியே கற்றுக்கொள்ளட்டும் என்பதை நேரு சொல்லிவந்தார். பஞ்சாயத்துக்கள் செய்யும் தவறுகளால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதும் ஆபத்து வந்துவிடப்போவதில்லை என அதில் நம்பிக்கையில்லாதவர் மத்தியில் அவர் தெரிவிக்கலானார். அதன் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதை எதிர்பார்த்தார். மலைவாழ் மக்கள்- பழங்குடிகளின் மேம்பாட்டில் நமது கவனம் செல்லவேண்டும் எனவும் அவர் வற்புறுத்தினார். பிரதமர் என்கிற வகையில் அவர் அரசியலையும் நிர்வாகத்தையும் சரியான குழைவில் கையாளவேண்டிய வித்தையை பயின்றார். அமைச்சரவை அமைப்பது என்பதானாலும், பொறுப்பளிப்பதாக இருந்தாலும், ஒருவரை கவர்னராக அனுப்புவது என்றாலும் அதில் வெறும் அரசியல் மட்டுமில்லாமல் சரியான நிர்வாகத்தேர்வு என்பதும் தேவைப்பட்டது. தீர்வுகளை வந்தடைய விவாதம் அவசியமானால் நிர்வாக வசதி என்பதையும் கணக்கில்கொண்டுதான் அரசியல் முடிவானாலும் எடுக்கப்படவேண்டும் என்பதில் நேரு உறுதிகாட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகத் தூண் என அறியப்பட்டவராக இருந்த சர் பாஜ்பாயை நேரு தன் நேரடி கண்காணிப்பில் இருந்த வெளியுறவுத்துறை செக்ரடரி ஜெனரல் ஆக வைத்துக்கொண்டார் அவ்வாறு ஏன் செய்தார் என்கிற விவாதம் உயர் நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் இருந்தது. நேருவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. நேரு அவர்கள் " ஆமாம். ஆனால் நான் வார்த்தைகளை சொல்லும்போதே வாக்கியங்களை மிகச்சரியாக எழுதி , ஒரு கமா கூட மாற்றத்தேவையில்லாத அளவிற்கு எழுதும் ஆற்றல் உள்ளவர் பாஜ்பாய் என பதில் தந்தார். திறமையானவர்கள் எவராக இருந்தாலும் அவரின் பழைய பின்னணி என்ன என்பதைப் பார்க்காமல் பயன்படுத்தப்படவேண்டிய ஆற்றல் உள்ளவராக இருந்தால், நிர்வாகத்திற்கு அவசியமெனில் பயன்படுத்தவேண்டும் என நேரு எண்ணி செயல்பட்டார். நிர்வாகத்தில் நேருவின் தாக்கம் என்பதை எப்படி வகைப்படுத்துவது. சரியான கொள்கைகளை வகுத்தல், அமுலாக்கத்திற்கான முறைகள்- ஏற்பாடுகள், பொருத்தமான திறமையாளர்களிடம் அமுலாக்க பணிகளை ஓப்படைத்தல், தொடர்ந்து தாமே நின்று எந்த அளவு எப்படி செல்கிறது என்பதை கவனித்தல் போன்றவற்றால் அவரது தாக்கத்தை நாம் பட்டியலிட்டுக்கொள்ளமுடியும். நேரு விஞ்ஞான வகைப்பட்ட நிர்வாகமுறை- நிர்வாகமுறையின் விஞ்ஞானம் என்பதை அறிந்தவராக இருந்தார் என்கிற அனுபவ மதிப்பீட்டைத்தான் அவர் தலைமையில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் பதிவாக இருப்பதை பார்க்கமுடிகிறது. Indian Statistical Institute தலைமையில் பொறுப்பில் பேராசிரியர் மகலானோபிஸ் இருந்தபோது சாம்பிள் சர்வே ஒன்றிற்கு துணை ஆட்சியர் ஒருவரை மகலானோபிஸ் தெரிவு செய்தார். இது விவாதப்பொருளானது. பிரச்சனை காபினட் செயலர்வரை சென்றது. நேரு தயங்காமல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். பேராசிரியரிடம் அமர்ந்து பேசுங்கள்- tailor your rules என்றார். எவர் திறமைசாலியோ அவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டால் நம்பி செயல்படவேண்டும் என்பதை நேரு இதன்மூலம் உணர்த்தினார் என புரிந்துகொள்ள முடிகிறது. நிதி அமைச்சகத்திற்கு வெளியே சுதந்திரமான திட்டக் கமிஷன் என்ற கருத்தை நேரு கொண்டிருந்தார். உச்ச மட்டத்தில் உட்கார்ந்த சில பொருளாதார அறிஞர்கள் எழுதிக் கொடுப்பதை அமைச்சர்கள் அமுல்படுத்த வேண்டுமா என்கிற விவாதம் எழுந்தது. அது அகாடமிக் குழுவா- இல்லை பொதுவெளியில் பிரசித்தி பெற்ற ஆனால் திட்டமிடல் குறித்த சிறப்பு பொருளாதார விதிகளை அறியாதவர்களின் குழுவா என்பதும் எழுப்பப்பட்டது. நேரு பிரதமர் என்ற வகையிலும், நிதி அமைச்சர் உறுப்பினர் என்ற வகையிலும் கலந்ததொரு குழு என நேரு இதற்கு விடை கண்டார். நேருவிற்கு திட்டமிடுதல் என்பதில் எந்த ஒரு கோட்பாட்டு உண்மையையும் நிரூபிக்கவேண்டும் என்கிற அவசியம் இருந்ததில்லை. அவரின் நோக்கம் அதை வைத்துக்கொண்ட செயல் என்பதில் இருந்தது. செயல் என்பதோ உடனடி தேவைகளுக்கானது மட்டுமல்ல - எதிர்கால தேவைகளையும் கணக்கில் கொண்டதாக இருந்தது. தோல்வியே ஏற்படவில்லையா என்றால் நிச்சயமாக தோல்விகள் இருந்தன என்பதாகவே பதில் இருக்கும். ஆனால் சுயசார்பு பொருளாதார திட்டமிடல் என்பதை நோக்கிய நகர்வாக அவை அமைந்தன. பரஞ்சபே ஏகபோக கட்டுப்பாட்டு கமிஷன் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது நேருவின் இப்பார்வையை சரியாகவே மதிப்பிட்டிருந்தார். For Nehru, planning was more than a method, more than an exercise in administration. Planning meant rebuilding the economic and social fabric of India, breaking the barrier of poverty, modernising the institutions, and the apparatus of production.." . நேருவிற்கு விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்துறை நாகரீகம் முக்கியமானதாக இருந்தது. பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்மயமாதல் அவசியம் என கருதியதுடன் அதற்கான செயல்வடிவமும் தந்தார். மாற்றத்திற்கு தொழில்நுட்பம் அவசியமானது. வெறும் கோட்பாடுகளால் வாழ்க்கை மாற்றங்களை உருவாக்கிவிடமுடியாது. பொருளாதார திட்டமிடுதல் தனிநபர் வளர்ச்சியிலும் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கும் துணையாக நிற்கவேண்டும் என்கிற புரிதலும் அவரிடம் திடமாகவே இருந்தது. சோசலிஸ்ட் மாதிரி சமூதாயம் என்பதை அவசியமாக நேரு உணர்ந்தார். எனவே பொதுத்துறை கட்டுமானம் வலுவடைந்தது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பி உழைக்கும் விவசாய மேம்பாடு என்பதையும் அடிப்படையாக கொள்ளாமல் இருக்க இயலாது என்ற புரிதலும் அவரின் அனுபவத்தில் உறைந்து இருந்தது. விவசாயம், கூட்டுறவு, கம்யூனிட்டி டெவலப்மெண்ட் என்கிற ஒருங்கிணைந்த திட்டங்கள் உருவாயின. இவைகள் அய்ந்தாண்டு திட்டங்கள் மூலம் செயல்வடிவத்திற்கு வந்தன. திட்டமிடுதலில் அவர் உணர்ந்த நடைமுறை பிரச்சனைகள் குறித்தும் எச்சரிக்கைகளை நேரு செய்தே வந்தார். சோசலிச சமூகமானாலும், முதலாளித்துவ சமூகமானாலும் அதில் நிலவும் சில ஆபத்துக்களை புரிந்துகொண்டுதான் நமக்கானவற்றை நாம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் கருதினார். இது குறித்து நேரு பேசுகையில் கம்யூனிஸ்ட்களை அவர் விமர்சித்தார். உழைக்கும் மக்கள் என நிரம்ப பேசும் அவர்கள் அதை ஸ்தூலமாக பார்க்கத் தவறுகிறார்கள். தூய கோட்பாடாகவே அது அவர்களிடம் வெளிப்படுகிறது. இதனால் சிலநேரம் உழைக்கும் மக்களுக்கு துன்பம்கூட நேர்கிறது என்பது அவரின் விமர்சனமாக இருந்தது. அதே போல் நிர்வாகத்தில் இருப்பவர் மனிதாபிமான பக்கங்களை காணாமல் விடுவதும் முதலாளித்துவ முறையிலான செயல்பாடாகிவிடும். நாம் செயல்படும் ஒவ்வொரு அம்சத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணம் அவசியம் என அவர்கள் பற்றிய விமர்சனத்தையும் சேர்த்தே வைத்தார் நேரு. " The Communist talks a tremendous deal about the masses, the toiling masses. The toiling masses become some abstract apart from human beings in them. He may decide something on pure theory, which may lead to tremendous suffering to those toiling masses. So also the other administrator functions in a different - capitalist society. The adminstrator may think in abstract of the people he deals with, come to conclusions which are justifiable apparently, but which miss the human element. After all, whatever department of Govt you deal with, it is ultimately a problem of human beings, and the moement we forget them, we are driven away from reality" சோசலிச அமைப்பு என நாம் பேசுகிறோம். சோசலிசம் என நாம் சட்டம் போட்டுவிட்டதாலேயே அதற்கான வாழ்வியல் வடிவம் வந்துவிடாது. சட்டம் உதவாது என சொல்லவில்லை. மனித உறவுகள்- உற்பத்தி- விநியோகம் போன்ற பல அம்சங்கள் அதில் இருக்கின்றன. வெறும் தீர்மானங்களும், உத்தரவுகளும் மட்டும் போதாது. புரட்சி என்பதே கட்டுமானமல்ல. புதியவகைப்பட்ட கட்டுமானங்களுக்கான தடைகளை களைவதது என்கிற விளக்கம் நேருவிடம் கிடைக்கிறது. நேரு ருஷ்யாவிலிருந்து வரும் விருந்தாளிகளிடம் அவர்களின் அனுபவத்திலிருந்து எடுத்துக்கொள்வதை குறிப்பிடுவார். “எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உங்களின் புரட்சிகரபயணம் துவங்கியது. புரட்சிக்கு பின்னர் 15 ஆண்டுகள் கழித்தே அய்ந்தாண்டு திட்டங்கள் உருவாயின. நாங்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னர் என்றாலும் உங்களை எங்களது வழிமுறைகள் மூலம் எட்டிப்பிடிக்க விழைகிறோம்”. நிர்வாகம் என்பது மக்களின் தேவைகளை அறிந்து தீர்ப்பதற்கான ஏற்பாடே தவிர, யாரோ சிலர் உயரே உட்காருவதற்கான ஏற்பாடல்ல என்றவர் நேரு. நேரு டிசம்பர் 9 1955ல் பொது சேவை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். சேவை என்றால் என்ன என விளக்கி தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். சேவை யாருக்கு- சமூகத்திற்கு- பரந்து பட்ட நோக்கங்களைகொண்டு அது நடைபெறவேண்டும் . அரசாங்க அமைப்புமுறை மேலிருந்து கீழ் என்ற வகையிலேயே செயல்பட்டு வருகிறது. நாம் விடுதலை அடைந்துவிட்டோம். ஜனநாயக முறையிலான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். ஜனநாயகத்தில் இறுதி அதிகாரம் மக்களிடம்தான் என்ற உணர்வு அரசாங்க சேவை செய்வோரிடம் ஏற்படவேண்டும். அரசு என்பது நிலைத்த அரசல்ல- ‘டைனமிக் அரசு’ என்ற உணர்வு வேண்டும். எனவே நமது பார்வையில் அரசியல் என்பது மேலோங்கி இல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சி என்பது மேலோங்கவேண்டும். நமது வேலைப்பாங்கே மாறியுள்ளது. முன்பு இருந்ததைவிட 100 மடங்கு வேலைமுறைகள் கூடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் வேலைத்தன்மை பிரிட்டிஷ் காலம் போன்ற ஒன்றல்ல என்பது உணரப்படவேண்டும். நிர்வாகத்தில் இருப்பவர்கள் மக்களுடன் அவர்களின் தேவைகளுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்கிற நேருவின் எதிர்பார்ப்பை இவ்வுரை நமக்கு புலப்படுத்தும். தனித்தனி அமைச்சர்கள்- துறைகள் அவற்றின் தனித்த வேலைமுறைகள் போன்றவற்றால் விடுதலை அடைந்த ஒரு நாட்டின் நிர்வாகம் மக்களுக்கு பொறுப்பாக்கப்படவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை நேரு அமைத்தார் என்றால் அது மிகையாகாது. தன்நேரடி கண்காணிப்பில் உள்ள வெளியுறவுத்துறையில் காலை 9 மணிக்கு துவங்கும் வேலைகள் இரவு 8 மணிக்கு கூட முடியாமல் தொடர்ந்து பொறுப்புடன் பணியாற்றிவந்தவதை அவர் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டினார். நேரம் பார்க்காது செய்வதே சேவை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கலாம். வேலை - சேவை என்றாலே பொறுப்பு எடுத்துக்கொள்வது என்கிற புரிதலும் அவசியம். எந்திரத்தனமாக ஏதோ மேலிருந்து வரும் உத்தரவுகளை அமுல்படுத்துவது வேலையல்ல. வேலை சமூக கடமையுடன் கூடியது என்பதை அவரது உரை உணர்த்துவதாக இருந்தது. போலீஸ்- பொதுமக்கள் உறவு விடுதலை அடைந்த நாட்டில் பெருமளவு மாறவேண்டும். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன், வெறுப்புகொண்டு- பயந்துகொண்டு பார்க்கும் பார்வை அகற்றப்படவேண்டும். போலீஸ் என்றாலே கெட்ட சக்தி என்ற உணர்வு மக்களிடமிருந்து அகற்றப்பட்டு அவர்கள் சமூக பாதுகாப்பிற்கு அவசியமானவர்கள் என்ற உணர்வு பெருகவேண்டும் என நேரு விழைந்தார். மக்களுக்கு அவர்கள் ஒத்துழைப்புடன் சேவை செய்யவே போலீஸ் என்ற பொறுப்பு போலீசாரிடமும் வளர்ந்தெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினர். Official non official எறெல்லாம் பேசுவதை அவர் அவசியமா எனக்கேட்டர். தான் இதில் யார் என வினவினார். சிவில், மிலிட்டரி, போலீஸ் என எந்த சேவையானாலும் மக்களின் ஒத்துழைப்புடன், மக்களுக்காக என்கிற புரிதலையே அவர் நிர்வாக இலட்சணமாக வலியுறுத்திவந்தார். எங்கு அலுவலர் ஒருவர் பணிபுரிகிறாரோ அங்குமக்களின் ஒத்துழைப்பை பெறுகிறாரா என்பதுதான் அவரின் திறமைக்கான சான்றாக இருக்கும் - வேறுவகை Efficiency எல்லாம் என்னவகை பயனைத்தரும் என பொதுச்சேவை நிர்வாகிகளிடம் நேரு கேள்வியாக முன்வைத்தார். அரசாங்க சேவை என்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டுமே சேவைகளை நாம் உருவாக்கவில்லை. மக்களுக்கு பணியாற்றத்தான் சேவைகள். ஏதும் நடைபெறவில்லையெனில் சம்பளம் வாங்கிக்கொண்டு சும்மா இருக்கிறோம் எனபதே பொருள். எனவே வேலையை எவ்வாறு மக்களுக்காக செய்வது என்பது எண்ணமாக இருக்கவேண்டும். ஒரு பக்கத்தில் வேலையின்மை இருந்துகொண்டிருக்கிறது. வேறு பகுதியில் குறிப்பாக சில அலுவலகங்களில் ஏராள பணியாளர்கள் இருக்கின்றனர்- அதுவே சில நேரங்களில்’ நியுசன்ஸ்’ ஆக இருக்கிறது. அவர் பேசியதை அவரது மொழியிலேயே தரவேண்டியுள்ளது Such numbers bring down efficiency. It is probably better for us to pension them off and let others do the work. பலவித வேலைமுறைகள் நிலவுகின்றன. மனிதர்களில் எவரும் ஒருவருக்கு மற்றவர் மேலானவர் அல்ல. ஆனால் வேலையைப் பொறுத்தவரை அவரவர் திறமைக்கேற்ப அமர்த்தப்படவேண்டும். இது சாதி போன்ற ஒன்றல்ல. சர்வீஸ்சாதி என நேரு அக்கூட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். எல்லா இடங்களைப்போலத்தான் அரசாங்க பொதுச் சேவையிலும் நேர்மையான- நேர்மைகுறைவானவர்கள் இருக்கிறார்கள். அப்படி திறமையற்றவரை- நேர்மைகுறைந்தவரை தனியாக கவனித்து உரிய நடவடிக்கை வேண்டுமே ஒழிய ஒட்டுமொத்த சேவையே பாழ் என விமர்சிக்கக்கூடாது. “Men with greater experience and intelligence may be placed in the higher grade. But do not convert that higher grade into a higher caste.. we in India, who are confirmed practitioners of the caste system, bring in this caste system wherever there is loophole for it. You must change it” நமது சேவை வருங்காலங்களில் மேலும் மேலும் டெக்னிகல் சார்ந்தவையாக மாறும். நிர்வாகம் கூட டெக்னிகல் பயிற்சியாளர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். வேலையில் இருவகை மனிதர்கள் தேவை. இருப்பதை தொடர்வது ஒருவகை- மாற்றங்களை கொணர்வது மற்றொரு வகை. நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களாக continuity என்பது இருந்து வருகிறது. ஆனால் மாற்றங்களே இல்லை என சொல்லமுடியாது மாற்றம் இல்லையெனில் மரணம்தான். ‘மாற்றம்’ முறித்துக்கொண்டு படுவேகமாகவா அல்லது நிதானகதியிலா என்பதில் நாட்டிற்கு நாடு வேறுபடலாம். பொதுத்துறையை நிர்வகிக்க ஒருவரை நாம் போடுகிறோம். அவரோ எனக்கு இந்தவகை பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லை என அவ்வேலையை எடுத்துக்கொண்டால் சரியாக இருக்குமா என மிக முக்கிய உளவியல் கேள்வியை நேரு எழுப்பினார். தனியார்துறையிலிருந்து கூட நாம் ஒருவரை போடலாம்- ஆனால் அவருக்கு public Conscience இருக்கவேண்டும்- Private Conscience அல்ல என அவர் தனது பதிலையும் தந்தார். சிவில் சர்வீஸ் விதிகளை தான் பார்த்ததாகவும் சில பண்டிட்களால் மட்டுமே விளக்கம் தரத்தக்க வால்யூம்களாக அவை இருப்பதாகவும் அவர் ஒருமுறை குறிப்பிட்டார். விடுதலை இந்தியாவிற்கு உகந்தவகையில் அவை மாற்றம் பெறவேண்டும். சில விதிகள் பொருத்தமாக இருக்கலாம். அனைத்தையும் விட அதை அமுலாக்குபவர்களின் மனநிலைதான் முக்கியமானது. உங்களுக்கு சோசலிசம் வேண்டுமென்றால் நிர்வாக நடவடிகைகள் அதற்கேற்ப இருக்க வேண்டாமா என அவர் உயர் அதிகாரிகளை அறிவுறுத்துவார். இல்லையெனில் முரண்பாடுகள் மலிந்து பெருகும் என எச்சரிப்பார். இதை எந்த தனிநபருக்கும் உரியதாக எடுக்காதீர்- இது ஒரு pattern என சிஸ்டம் குறித்து அதன் மாற்றம் குறித்து அவர்களிடம் நேரு உரையாடுவார். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ருஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த புத்தகங்கள் நமக்கு பயன்படலாம். ஆனால் முற்றிலும் அப்படியே பொருந்திவிடாது. நமது பிரச்சனைகள் என்ன- தீர்வு என்ன என்பதை நாம்தான் நம்முடைய சொந்த வழிகளில் காணவேண்டும் என உயர் அதிகாரிகளுடன் நேரு உரையாடுவார். நமக்கு நேரம் மிக முக்கியமாக இருக்கலாம். எவராவது நம்மை பார்க்க வந்தால் முடியாது என சொல்லக்கூடாது. வருபவரை தனிநபராக பார்க்கக்கூடாது. அவரைப்போன்ற குறையுள்ளவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இருக்கலாம். வந்தவரை அவர்களின் பிரதிநிதி என எடுத்துக்கொண்டு குறையை கேட்கவேண்டும். இந்தியா என்பது எனக்கும் அதிகாரிகள்- ஊழியர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து மக்களுக்குரியது என புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்பது நேருவின் அறிவுரை. காந்தி எவரையும் திருப்பி அனுப்பியதில்லை என்பது நமக்கு பாடமாகட்டும் என்றார் நேரு. சுயாட்சி அரசாங்கம் என்றால் என்ன எனக்கேட்டு அதற்கு தனது விளக்கத்தை தந்தார் நேரு. நாடாளுமன்றம்- அதற்கான தேர்தல்கள்- ஆட்சி என்பது நடைமுறையாக இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டோம் என்பதற்காக ஒரு திசையில் வேகமாக பயணிக்கத்துவங்கி மக்கள் கருத்திற்கு எதிராக போனால் அவர்களுக்கு அவ்வரசாங்கத்தை தூக்கி எறியும் அதிகாரம் இருக்கிறது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும். சரியான அரசாங்க நடத்தை என்பது மிக அவசியமானது என்றார் நேரு. பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டிமோதும் சூழலில் ஒவ்வொருவருக்கும் இணக்கமாக நிர்வாகி ஒருவரால் முடிவு எடுக்கமுடியாது. ஆனால் அவர் பொறுப்புடன் நடந்துகொள்கிறார் என்ற உணர்வு உருவாக்கப்படவேண்டும். ஒருவரது கருத்தை ஏற்கமுடியாமல் போனாலும் அதை பொறுப்புடன் கவனத்துடன் கேட்கிறார் என்ற உணர்வை உருவாக்கவேண்டும். இப்படிப்பட்ட நடத்தை முறைகளால் பிரச்சனையின் சூட்டை தணிக்க முடியும் என்றார் நேரு. In administration, as in most things in life, it is not only what one does, but the manner of doing it, that is exceedingly important, especially in dealings with large masses of human beings, as in a democracy.. If People get the impression that things are being imposed upon them, then friction arises. In a way all public administration is bureaucracy. The growth of socialism is the growth of bureaucracy. Bureaucracy will grow. நமது பஞ்சாயத்துகள் மோசமாக இருக்கின்றன என அடிக்கடி நமக்கு ‘ரிபோர்ட்’ வருகிறது. உண்மைதான். ஆனால் ஜனநாயகம் என்பது மேல்மட்டத்தில் இருக்கின்ற ஒன்றல்ல. அது அடிமட்டத்தில் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. பஞ்சாயத்துகள்தான் நமது ஜனநாயகத்தின் அடிப்படைகள். அதை நாம் மேம்படசெய்யவேண்டுமே தவிர இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது. அடுத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை பாரபட்சத்துடனான லஞ்ச நிர்வாகம். எல்லோரும் நேர்மையானதற்கு பின்னர்தான் செயல்பாடு என்றால் அது சாத்தியமானதல்ல. வெளிப்படையாக எதையும் செய்யத்துவங்கினால லஞ்சம் குறையலாம் என நேரு நம்பினார். கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று விவாதித்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் நிலைமைகள் மேம்படாதா ? அங்கு போய் அரசாங்கம் உங்கள் கிராமத்திற்கு இவ்வளவு இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு வேலை செய்யப்பட இருக்கிறது என்று அம்மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால் சந்தேகம் இருக்காதல்லவா என நடைமுறை சார்ந்த பிரச்சனைகளில் கூட நேரு கவனம் செலுத்தினார். காலதாமதம்தான் ஊழலுக்கு பாதை போடுகிறது. காலத்தில் பணிகளை செய்துமுடிப்பது என்பது பண்பாடாக மாறவேண்டும் என அவர் விழைந்தார். எனவே தான் இவை அனைத்தையும் அடிமட்டத்திலிருந்தே பழகவேண்டும் என்றார். கட்சிகளிடம் பாரபட்சம் காட்டாமல் நியூட்ரலாக இருப்பது சிவில் சர்வீஸ் ஊழியனின் கடமை. ஆனால் மக்கள் பிரச்சனையில் அவர் எப்படி நியூட்ரல் ஆக இருக்கமுடியும். ஐ ஏ எஸ் பயிற்சியாளர்களுக்கு நமது விடுதலை போராட்டத்தின் தன்மை சமூக பிரச்சனைகளின் தன்மை தெரியவேண்டும். A mistake is far better than not doing a thing. you can rectify the error but you can never catch back the time you have lost by not doing something பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மாற்றங்களை நேரு செய்யவில்லை என்ற விமர்சனம் இருந்தது. தேச கட்டுமானம் என்பதை அவர் நிர்வாக பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறார் என்கிற விமர்சனமும் இருந்தது. 1949-50ல் காங்கிரஸ் அரசாங்கம் தெலங்கானா கிளர்ச்சியை 12000 ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கொண்டு முறியடித்ததை பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி என்றே விமர்சகர்கள் பார்த்தனர். போலீஸ் துறை செலவு ஆண்டுதோறும் பலமடங்கு கூடிவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டிவந்தனர். கலப்பு பொருளாதாரகொள்கையில் பொதுத்துறைக்கு நேரு முக்கியத்துவம் தந்திருந்தாலும் 1960ன் துவக்கத்தில் பொதுத்துறைகளின் தேச வருமான பங்களிப்பு 10 சதமாக இருந்தது போதாது என விமர்சனம் எழுந்தது. இவையெல்லாம் இடதுசாரி விமர்சனங்களாக அமைந்தன. நேரு அமைச்சரவையில் இருந்த குல்சாரிலால் அக்டோபர் 12, 1953ல் முக்கிய அறிக்கையை தந்தார். On the one hand, there was the complaint that the country did not produce enough consumption goods. But when they increased production and took credit for it, they were suddenly faced with accumulation of stocks. நேருவின் சரிதையை எழுதிய சர்வபள்ளி கோபால் திட்டமிடுதலின் சாலை சோசலிசத்திற்கு அழைத்து செல்லவில்லை- விவசாயத்திலும் தொழிலும் முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை ஏற்கிறார். the planned development under Nehru’s regime did not pave the way for socialism but promoted capitalist enterprise in both industry and agriculture. டாடா உட்பட பெருமுதலாளிகள் காங்கிரசின் தேர்தல் செலவுகளுக்கு நிதியை அள்ளித்தருகின்றனர் என்ற விமர்சனம் பெரிதாக மறுக்கப்படாமல் இருந்தது. அப்போது டாட்டா, பிர்லாக்கள் 10 லட்சம் நன்கொடை கொடுத்தாலே அவை பெருந்தொகையாக பார்க்கப்பட்டது. கட்சி மற்றும் அரசாங்க உறவுகள் குறித்த விவாதம் காங்கிரசில் ஏற்பட்டது. விடுதலை காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் முன்னர் காங்கிரசிடம் கலந்து பேசி முடிவெடுக்க வற்புறுத்தினார். நேருவிற்கு கட்சியின் தலையீடு அதீதமாக இருக்கக்கூடாது என்ற கருத்து இருந்தது. அரசாங்க முடிவுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவராக கிருபளானி இருந்தார். இதனால் அவர் காங்கிரசைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பாளர்கள் மத்தியில் கிருபளானி மனம் திறந்தார். கட்சியைவிட அரசாங்கம் பெரிது என காட்டுவதை ஏற்கமுடியவில்லை என்றார். இரண்டிற்கும் இடையே ஒத்துழைப்பில்லை எனில் குழப்பமே மிஞ்சும் என்பது அவரின் கருத்தாக இருந்தது. “If there is no free and full co-operation between the Governments and the Congress organisation the result is misunderstanding and confusion, such is prevalent to-day in the ranks of the Congress and in the minds of the people.” Nor can the Congress serve as a living and effective link between the Government and the people unless the leadership in the Government and in the Congress work in closest harmony. It is the party which is in constant touch with the people in villages and in towns and reflects changes in their will and temper. It is the party from which the Government of the day derives its power. Any action which weakens the organisation of the party or lowers its prestige in the eyes of the people must sooner or later undermine the position of the Government …. பின்னர் பொறுப்பிற்கு வந்த பட்டாபிசீதாராமையா வரையறைக்கு உட்பட்ட கட்சியின் பாத்திரம் என்பதில் நின்றார். அவரது உரையில் நமக்கு கீழ்கண்ட விளக்கம் கிடைக்கிறது. A Government must govern and is therefore concerned with the problems of the day, and with the passions of the hour. Its work is concrete, its solutions must be immediate… The Congress is really the Philosopher while the Government is the Politician… That is why the Government of the day requires the aid of unencumbered thinking. காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் (1950ல்) டாண்டன் வெற்றிபெற்ற பின்னர் கட்சிதான் உயரியது என நிரூபிக்கும் முயற்சி நடந்தது. நேரு தனது நேர்த்தியான எதிர்ப்பால் டாண்டனையும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறவைத்தார். பின்னர் நேருவே காங்கிரஸ் தலைமை பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். இக்கட்டம் துவங்கி அரசாங்க அதிகாரமிக்க பிரதமருக்கு மட்டுமே கட்சித் தலைமையைவிட செல்வாக்கு அதிகாரம் என்பது இந்திய அரசியலில் நிறுவப்பட்ட ஒன்றாக மாறியது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தகாலத்தில் காங்கிரஸ் தலைமை சற்று அதிகாரம் கூடியதாக வெளித்தெரிந்தது. 1954-59ல் தலைமைக்கு வந்த U.N. Dhebar நேரு ஒருவரே தலைவர் என உரக்கப்பேசலானார். It is a mistake to consider that there is a dual leadership in the country. India, for the last forty years, has been accustomed to think in terms of a single leadership and by the grace of God, we have been endowed with men who had borne the brunt out of consideration or service to the country singularly well. There is only one leader in India today and that is Pandit Jawaharlal Nehru. Whether he carries the mantle of Congress Presidentship on his shoulders or not, ultimately, the whole country looks to him for support and guidance நாட்டின் ஒரே தலைமை நேருவின் தலைமை என்ற அளவிற்கு சொல்லத்துவங்கினார். அனைத்து சுமைகளும் அவர் தோளின் மேல்- அனைத்து தீர்வுகளும் அவரிடத்திலேயே என்ற அளவிற்கு அவரது புகழ் கானங்கள் வரத்துவங்கின. காங்கிரசின் பிற்போக்குசக்திகளை முறியடிக்க தனது வலுவை கூட்டிக்கொள்ளும் வகையில் நேருவும் இத்தகைய போக்கிற்கு இடமளித்திருக்கக்கூடும். இந்திரா அவர்கள் 1959ல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு வந்தார். முன்னதாக நேரு பிப்ரவரி 8 1959ல் தான் பிரதமர் பொறுப்பில் இருக்கும்போது தனது மகள் காங்கிரஸ் தலைமைக்கு வருவது நல்ல விஷயமல்ல என்றே கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்திரா என சொல்லப்பட்டபோது அவர் வீட்டோ செய்யவில்லை என்கிற விமர்சனம் எழத்துவங்கியது. அங்கிருந்துதான் dynastic democracy முளைவிடத்துவங்கியதோ என்கிற கருத்தை நேரு குறித்த ஆய்வாளர்களிடம் நாம் காணமுடியும். தேபராகவிருந்தாலும், சஞ்சீவரெட்டியாக இருந்தாலும் கட்சியை அரசாங்க அதிகாரத்தில் இருபவர்கள் மதிப்பதில்லை- அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடவிரும்புகிறார்கள் என்கிற கருத்தை வெளியிடவே செய்தனர். நேருவின் ஆட்சிக்காலத்தில் கேரளா கம்யூனிஸ்ட் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவராட்சி பிரகடமானதும் விமர்சனத்துக்குரியதானது. நேருவின் சோசலிசம் சோசலிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் இன்றைய உலகில் ( 1934) செல்வாக்கு பெற்றுவருவதற்கு காரணம் அவர்கள் விஞ்ஞானத்தின் பக்கமும், தர்க்க நியாயத்தின் பக்கமும் நிற்பதுதான் என நேரு எழுதியிருந்தார். மார்க்சை அவர் தீர்க்கதரிசி என்றே மதிப்பிட்டார். 1931 கராச்சி காங்கிரசில் நேருவும், பின்னர் ஹரிபுராவில் சுபாஷ் போஸ் அவர்களும் சோசலிசம் என்பதை காங்கிரஸ் தீர்மானங்களாக்கி விழிப்புணர்வை கூட்டினர். அறிவியல் தொழில்நுட்ப உதவியால் உற்பத்தியை பெருக்கி மனிதர்கள் தங்கள் நுகர்வுத்தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்றால் என்ன அதில் தவறு இருக்கமுடியும் என்பது நேருவின் வாதமாக இருந்தது. மார்க்சியத்தின்பாற் ஈர்ப்பு கொண்டவராகவும், 1929 ரஷ்ய பயணத்திற்கு பின்னர் அந்நாட்டின் முன்னேற்றத்தை வியந்து பேசுபவராகவும் அவர் இருந்தார். அதேநேரத்தில் அனுபவம் கூடக்கூட மார்க்சியம் பேசுபவர்களின் வறட்டுத்தனத்தை அவர் விமர்சிக்கத்துவங்கினார். பொருளாதாரமல்லாத பல்வேறு காரணிகளில் நிலவும் குறையை அறியத்துவங்கி விமர்சிக்கலானார். காந்திஜி ஒருமுறை காங்கிரஸ் செயற்குழுவிற்காக தீர்மானம் ஒன்றை எழுதியிருந்தார். காங்கிரசின் பொருளாதார சமுக நோக்கங்களை வெளிப்படுத்தவே அத்தீர்மானம். அதில் சோசலிசம் என்கிற வார்த்தை இல்லாமை கண்டு நேரு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். என்ஜின் டிரைவர் என அழைத்துக்கொண்டால் மாடுகளால் இழுக்கப்படும் மரத்தால் ஆன வண்டி என தன் என்ஜினைப்பற்றி சொல்வது சரியா என்பது நேருவின் விமர்சனமாக இருந்தது. காந்தியோ சோசலிசம் குறித்து அய்யத்திற்கு அப்பாற்பட்ட ஒரே வகையிலான விளக்கத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என அதற்கு பதிலளித்தார். விடுதலைக்குப் பின்னர் இதே போன்றதோர் விவாதத்தில் நேரு போல் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களும், காந்தி போல் நேருவும் பதிலளித்துக்கொண்டனர். நேருவை பொறுத்தவரை தேங்கிய சிந்தனை என்பதை அவர் ஏற்றதில்லை. அவர் தனது சோசலிசம் குறித்த சிந்தனை முற்ற நிலையான ஒன்றாக இருக்கவேண்டியதில்லை எனக் கருதினார். வறட்டு பிடிவாத கோட்பாடாக இருக்கவேண்டியதில்லை-அது வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும் என விழைந்தார். மாறும் வாதத்தை முன்வைப்பதால்தான் புத்தர் அவரிடம் வந்தார். வாழ்க்கையை துறத்தல்- துறவு என்பது மனித வாழ்க்கையின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல எனக்கூட நேரு நினைத்தார். அதே நேரத்தில் மனிதனை தாழ்த்தும் எதையும் அவர் ஏற்கமுடியாது என செயல்பட்டார். மனிதனின் மாண்பிற்கு கேடு விளவிக்கும் , அநீதிக்கு இடமளிக்கும் எந்த வகைப்பட்ட நிறுவனமும் அகற்றப்படவேண்டியவையே என்பதில் அவர் உறுதி காட்டினார். மனிதனைவிட உயர்ந்தது என எதையும் ஏற்கவேண்டியதில்லை என அவர் மனம் பேசியது. மனிதனை மனிதன் வேறுபடுத்தும் சாதி, கம்யூனல் அம்சங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது. வெறுப்பால் வெறுப்பு மட்டுமே பரவும். பல்வேறு கலாச்சாரங்கள் ஊடும்பாவுமாக ஒன்றை ஒன்று உள்வாங்கி இந்தியாவில் Composite Culture ஏற்பட்டுள்ளது - அதை காத்திடவேண்டும் என அவர் போராடிவந்தார். அவரவர் கலாச்சாரத்தில் வேரோடியிருக்கும் பழக்கங்களை போக்கமுடியாமல் இருக்கலாம். அதே நேரத்தில் பல் கலாச்சாரங்களின் உறைவிடமாக நாடு இருக்கிறது என்பதையும் அனைவரும் சரியாக உள்வாங்கவேண்டும் என நேரு நினைத்தார். காலத்தின் வளர்ச்சியில் அறிவியல் தொழிநுட்ப பார்வையுடன் கூடிய வளர்ச்சியே நவீனத்துவம் என நேரு கருதினார். மார்க்சியம் என்பது நடைமுறை செயல்பாட்டின் வழியே கொணரப்படும் புதிய வாழ்க்கை முறைக்கான கோட்பாடுகள். துன்பக் கடலில் தத்தளிக்கும் உலகை மீட்க ஒரு தீர்க்கதரிசி போல் மார்க்ஸ் கருத்துக்களை தந்துள்ளார் என நேரு பேசினார். சோசலிசத்தை அந்த நாட்டின் தனித்தன்மைகள் கொண்ட சூழலில் கொணர்வதெப்படி என்பதில் நமக்கான நடைமுறைகள் அவசியம் எனக் கருதி நேரு செயல்பட்டார். Recent Essays and writings என்கிற அவரது கட்டுரை தொகுப்பு ஒன்று 1934ல் வெளியானது. அதில் Whither India என்கிற கட்டுரையில் மிக அற்புதமான வரிகளை நேரு தந்து இருந்தார் . முதலாளிகளை சபிப்பதல்ல நோக்கம். முதலாளித்துவம் ஏராள சாதனைகளை படைத்திருக்கலாம். ஆனால் அதன் காலம் முடிவடைந்து அதைவிட சிறப்பான மனிதகுல நடவடிக்கைகளுக்கு மனித அறிவு நகரவேண்டாமா என்பது அவரது கேள்வியாக இருந்தது. வளரும் அறிவியல் அறிவுடன் அவ்வளர்ச்சி சாத்தியமானதே எனவும் அவர் எழுதினார். பாசிசம் கண்டிப்பாக முதலாளித்துவத்திற்கு மாற்றல்ல எனவும் அதில் தெளிவுபடுத்தியிருந்தார். செல்வம்- சொத்து- நியாய பகிர்வு என்பதை தீர்க்காத எந்த அரசாங்கத்தையும் முதலாளித்துவத்திற்கு மாற்றாக கருத இயலாது என்பது இளம் நேருவின் சிந்தனையாக இருந்தது. மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சோசலிசம்தான் தீர்வு என்பதை அவர் அழுத்தமாக தெரிவித்திருந்தார். நேருவின் அக்கட்டுரைக்கு பல எதிர்வினைகள் வந்தன. அதையும் அவர் பொருட்படுத்தி தனது நிலைப்பாட்டை விளக்கி மற்றொரு கட்டுரை எழுதியிருந்தார். பெரும் தொழில், அறிவியல் எனப் பேசும் நேரு கதரை, சர்க்கா சுற்றுவதை ஏன் ஆதரிக்கிறார் என்கிற கேள்விக்கு மிக அற்புதமான பதிலை நேரு அதில் தந்திருந்தார். இரண்டிற்குமான முரண் ஏதுமில்லை என்பதை அதில் விளக்கியிருந்தார். நம்நாட்டின் கிராமப்புற விவசாயிகளுக்கும் கதர் எப்படி மிகப்பெரிய அரசியல் கருவியானது என்கிற புரிதலை அவரால் சொல்லமுடிந்தது. கோட்பாடுகள் மற்றும் நடைமுறை செயல்பாட்டு பொருத்தப்பாடுகளை அவர் அழகாக மற்றொரு கட்டுரையில் விளக்கியிருந்தார். மக்களை செயலுக்கு இட்டு செல்லும் கோட்பாடு காலத்தின் நிலைமைகளையும் நிலவும் உண்மைகளையும் கனக்கில் கொள்ள வேண்டும் என்பது அவர் தந்த விளக்கம். An ideology is presumed to lead action on a mass scale. If such action is meant for the whole of India, the ideology cannot ignore present day objective facts and conditions all over the country. சமூகம் வறுமையை கொண்டாடக்கூடாது என அவர் அறிவுறுத்தினார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருக்கும் அதல பாதாள வேறுபாடுகளை சகித்துக்கொள்ளும் சமூகத்தால் எவருக்கும் நன்மையுண்டாகாது. அது பணக்காரர்களுக்கும் கெளரவ வீழ்ச்சியாகவே இருக்கும் என அவர் பேசிவந்தார். விடுதலைக்குப் பின்னர் திட்டமிட்ட பொருளாதாரத்திற்காக திட்டக்குழு அமைக்கப்பட்டாலும் அதற்கு முழுமையான சோசலிச திசைவழியை கொடுப்பது சவாலாகவே உணரப்பட்டது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுதந்திரமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். அப்போதுதான் சோசலிசம் வசப்படும் என்கிற கருத்தில் அவர் வலுவாக நின்றார். ஜனநாயகத்தின் தவிர்க்கமுடியாத விளைவாக சோசலிசம் இருக்கும். பொருளாதார ஜனநாயகம்தான் சோசலிசம் எனும் விளக்கம் அவரிடம் கிடைக்கும். சோசலிச இலக்கிலிருந்து நாம் விலகி செல்கிறோம். ஏகபோகம் என்பது சோசலிசத்திற்கு விரோதமானது. இதை காங்கிரசார் தீவிரமாக யோசிக்கவேண்டும் என அவர் கட்சி முழுதும் ஒத்த வகையில் சிந்தனையை கொணர போராடினார். அதே நேரத்தில் ஜனநாயகமும்- சிவில் உரிமைகளும் இல்லையெனில் அங்கு சோசலிசம் இராது என்பதிலும் அவர் உறுதியாக நின்றார். “.. democracy and civil liberties had to be basic constituents of socialism and were inseparable from it.” என அவர் எழுதினார். சோசலிசம் என்பது பொருளாதார தத்துவ வாழ்க்கைமுறை என்ற வகையில் அதில் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நிலம், தொழில் இரண்டிலும் தீவிரமான மாற்றங்கள் செய்யப்படாமல்- ஏற்படாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. பொருளாதார சமூக சமத்துவம் நோக்கி இந்தியா தன்னை தகவமைத்துக்கொள்ளவேண்டும் என அவர் விழைந்தார். விடுதலை அடையும் இந்தியாவால் முற்றிலுமாக தனியார் சொத்துரிமையை தகர்த்துவிடமுடியாது என்கிற எதார்த்தமும் அவரிடம் இருந்தது. நேரு இதனை அவரது 1936 காங்கிரஸ் தலைமையுரையில் வெளிப்படுத்தினார். ருஷ்ய மாதிரியை அப்படியே இந்தியாவில் நகலெடுத்து வைக்கமுடியாது என்ற பார்வையும் அவரிடமிருந்தது. நேருவின் சோசலிசத்தை empirical collectivism- தாராளவாதம், தீவிரமாற்றங்கள், பாபுலிசம், முற்போக்குவாதம் ஆகியவற்றின் கூட்டிணைவு என்று வரையறுப்பவர்களும் உள்ளனர். மார்க்சியர்கள் முற்றுமுதல் நிர்ணயவாதம் பேசுவதை ஏற்கமுடியவில்லை என்றார் நேரு. கலெக்டிவிசம் என்பதை பொதுத்துறை- தொழிலாளர் நல சட்டங்கள், விலைகளை ஒழுங்குக்குள் வைத்தல், நிலம் மற்றும் வரிக்கொள்கைகளில் மாற்றங்கள் என நடைமுறை சார்ந்து புரிந்துகொள்ளலாம். தனி சொத்துடைமையில் தொழில் இருந்தாலும் அவை தொழிலாளர் சட்டங்களை அனுசரித்து ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதில் கலெக்டிவிசம் முன்நிற்கும். இலாபமும் சொத்து சேகரிப்பு என்பதை முதன்மை நோக்கமாக கொண்ட சமூகம் குறித்து அவருக்கு எதிர்மறை கருத்து இருந்தது. வன்முறை வழியல்லாத சோசலிசம் என்பது மாற்றாக வரவேண்டும் சோசலிசம் வன்முறையிலிருந்து விலக்கிக்கொள்ளும்போது தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டதாக இருக்கும் என அவர் வற்புறுத்தினார். விடுதலைக்கு முன்னரான காங்கிரஸ் இயக்கம் தன்னை சோசலிஸ்ட் அமைப்பு என பிரகடனப்படுத்திக்கொள்ளவேண்டும்- உலக முற்போக்கு இயக்கங்களுடன் அது சேர்ந்து செயல்படவேண்டும் என அவர் விரும்பியிருந்தாலும் அதன் சாத்தியக்குறைவை வரம்புக்குரிய செயல்பாட்டை அவர் உணர்ந்தே இருந்தார். சுயராஜ்யம் என்பதற்குத்தான் காங்கிரஸ் முன்னுரிமையுடன் செயல்படமுடியும் என்பதை அவர் மிகச்சரியாக உணர்ந்தவராகவும் இருந்தார். இல்லையெனில் இயக்க ஒற்றுமை பெருமளவு பாதிக்கப்பட்டு அதன் முதன்மை நோக்கம் கூட நிறைவேறாமல் போய்விடும். விடுதலை என்பதில் முழு ஒற்றுமையுடன் செயல்பட்டுவரும் நாம் சமூக பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுகள் கொண்டவர்களாகவே பயணிக்கிறோம் என்கிற உண்மையை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். சிலநேரங்களில் அவரின் இப்பார்வையால் எம் என் ராய், சுபாஷ், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்களால் கூட விமர்சிக்கப்பட்டார். சுபாஷின் விமர்சனம் இவ்வாறு சென்றது. நேரு தீவிர சிந்தனை கொண்டவர் ஆனாலும் மகாத்மாவின் சீடராகவே இருப்பார். அவரின் மூளை இடதுசாரிகளுடன் இயங்கும்- இதயமோ காந்தியுடன் இருக்கும். The position of Pandit is an interesting one. His ideas and views are of a radical nature and he calls himself a full blooded socialist, but in practice he is a loyal follower of Mahatama. It would probably correct to say that while his brain is with the Left wingers, his heart is with Mahatma Gandhi" சுபாஷ் அவர்களும் ஹரிபுரா காங்கிரசில் தன் தலைமையுரையில் நமது உடனடி நோக்கம் சோசலிசமல்ல- சுயராஜ்யம் என்றே பேசினார். அதே நேரத்தில் சோசலிசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யவேண்டும் என்றார். 1929 லாகூர் காங்கிரசில் நேரு தன்னை சோசலிஸ்ட் மற்றும் ரிபப்ளிகன் என அழைத்துக்கொண்டார். ஜனநாயகம் தன்னை விடுதலையில் துவக்கிக்கொண்டாலும் சமத்துவத்தில்தான் நிறைவைப் பெறமுடியும் என நேரு உறுதியாக நம்பினார். International Journal of Advanced Research and development ஜனவரி 2018 இதழில் டாக்டர் ஷபாலி ஜெயின் நேருவின் சோசலிச கருத்தாக்கம் என்பது பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மிக சுருக்கமான அக்கட்டுரையில் சாரமாக விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. “Nehru’s socialism was a brood tendency and not a precise body of rigid beliefs”. இறுக்கமான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளில் அல்லாது சோசலிச அணுகுமுறை மாதிரியிலான வளர்ச்சிப்போக்கு என்ற புரிதல் நேருவிடம் இருந்தது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு, வேலையின்மை, அவர்களின் மீட்பு என்பது சோசலிச பாதையில்லாமல் சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்தவர். நியாய பகிர்வின் மூலம் அநியாய நிலைகள் நீக்கப்படுதல் என்கிற அணுகுமுறையை அவர் மேற்கொண்டார்.. இதற்காக ஜனநாயக சோசலிச வழிகளை கையாள்வது அவசியம். தனது சோசலிச கட்டுமானம் என்பதை அவர் கீழ்கண்ட மொழியில் புரியவைத்தார். இறுகி நிற்காமல் மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை பொருத்திகொண்டு இயங்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கவேண்டும் என நினைத்தார். ஏன் என்னை இதுதான் சோசலிசம் என துல்லியமாக வரையறுக்க சொல்கிறீர்கள் எனவும் அவர் கேட்டுள்ளார். அவரவர் திறனுக்கு உரிய வகையில் சம்தையான வாய்ப்புகளை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதே தேவை என தன் அனுபவ புரிதலை அவர் வெளிப்படுத்தினார். " I look upon it as a growing, dynamic conception, as something which is not rigid, as something which must be fit in with the changing conditions of human life and activity in every country. I do not know why I should be asked to define socialism in precise, rigid terms. What I want is that all individuals in India should have equal opportunities of growth, from birth upwards and equal opportunities for work according to their capacity" சுரண்டலிருந்து உழைப்பவர்களை விடுவித்து கண்ணியமான வாழ்க்கைமுறைக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என அவர் எண்ணினார். ஒருவரின் பொருளாயத முன்னேற்றம்- வாழ்க்கைதரத்தை உயர்த்துவதில்தான் கலாச்சார, அறிவார்ந்த வாழ்வியலும் சாத்தியமாகும் என அவர் நம்பினார்.. நல்ல உற்பத்தி, செல்வ வளம் பெருக்குதல், வாழ்க்கைதரம் உயர்தல் ஆகியவற்றை முரண்பட்டவைகளாக இல்லாமல் செய்துவிட்டால் நாம் விரும்பும் நல்வாழ்க்கைக்குரிய சமூகம் உருவாகும் எனவும் அவர் சொல்லிவந்தார். எனவே சோசலிசம் என்று பேசுவது பொருளாதார முறைகள் வழிப்பட்டே எனவும் அவர் தெளிவுபடுத்தினார். சுபாஷ் அவர்களுக்கு ஏப்ரல் 3 1939ல் எழுதிய கடிதத்தில் தனது சோசலிச பார்வை தனிநபர் சுதந்திரமான வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாக இருக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார் “I hope that socialism does not kill or suppress individuality; indeed, I am attracted to it because it will release innumerable individuals from economic and cultural bondage” விடுதலை என்பது மானுட மேம்பாட்டிற்கு சாதனமே அன்றி அது இறுதியல்ல. மானுட நலன் என்பதுதான் இலக்காகவேண்டும். ஓவ்வொருவரின் உடல்- மனம் ஆகியவற்றின் ஆரோக்கியம் என்பதாக இருக்கவேண்டும் என்பதை நேருவின் உரைகளில் காணமுடியும். ஜனநாயகம் என்பது வெறும் அரசியல், பொருளாதாரம் மட்டுமல்ல- மனதுடன் நெருக்கமாக வேண்டிய ஒன்றுமாகும் என்றவர் நேரு. அரசியல், பொருளாதார சமவாய்ப்புகளை உருவாக்கவும், தனிநபரின் சர்வாம்ச வளர்ச்சிக்குரிய சூழலை உருவாக்குவதாகவும் ஜனநாயகம் அமைய நேரு விழைந்தார். “Democracy is not only political, not only economic, but something of the mind. It involves equality of opportunity to all people, as far as possible, in the political and economic domain. It involves the freedom of the individual to grow and to make the best of his capacities and ability. It involves a certain tolerance of others and even of other’s opinions, when they differ from yours” வாய்ப்புகளை பாரபட்சமின்றி உருவாக்கித் தருதல் எனபதில் அவரின் சமத்துவ புரிதல் தங்கியிருந்தது. அனைவரும் சமம் என்பதை யாந்திரீகமாக புரிந்துகொள்ள முடியாது. கற்றல் திறன், உடல் பலம், திறமை வெளிப்பாடு, புரிந்துகொள்ளும் ஆற்றல் என்பதில் மனிதர்கள் வேறுபட்டே இருப்பார்கள். ஆனால் வாய்ப்புகளை மறுத்தல் என்பதை ஜனநாயக சமூகம் ஏற்க முடியாது என அவர் சமத்துவம் பற்றிய தன் பார்வையை விளக்கிவந்தார். அவர் தனது சோசலிச மாதிரி சமுதாயம் என்பதை இப்படித்தான் விளக்கினார். சாதியற்ற வர்க்கமற்ற சமூகமாக இருக்கும் என்றார். “By a socialistic pattern of society,”We mean a society in which there is equality of opportunity and the possibility for everyone to live a good life. We have; therefore, to lay great stress on equality, on the removal of disparities and it has to be remembered always that socialism is not the spreading out of poverty. Socialist pattern of society was to be classless and casteless." சோசலிச சமூகம் என்பது அனைவரின் நலன்- பாதுகாப்பு- நலிந்தவர்களை உயர்த்துவது என்பதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக இருக்கும். மக்களின் பொருளாதார, கலாச்சார மட்டத்தை உயர்த்துவதன் மூலம் சாதியற்ற, வர்க்கமற்ற சமூகத்தை அது உருவாக்கும் என்பதும் அவரது புரிதலாக இருந்தது. 1929 லாகூர் காங்கிரஸ் அமர்விலும், 1931 கராச்சி மற்றும் 1936 லக்னோ அமர்வுகளிலும் அவர் கம்யூனிசம் என்பதை பேசிவந்தார். விடுதலைக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தனது சில அமர்வுகளில் ( 1955, 1964) Vote based Communism/ Socialism என்பதற்காக தாங்கள் நிற்பதாக தெரிவித்தது. நேருவை standard Marxist என எவரும் வரையறுக்கவில்லை. அவர் மார்க்சியம் அறிந்தவராக இருந்தார். ஹரால்ட் லாஸ்கி மற்றும் பாபியன் சோசலிஸ்ட்களின் எண்ணங்களை எடுத்துக்கொண்டார். சோவியத் புரட்சியின் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அதன் சாதனைகளை இந்திய மக்களுக்கு எடுத்துரைத்துவந்தார். திட்டமிட்ட பொருளாதாரம்- 5 ஆண்டு திட்டங்கள், அரசு பொதுத்துறை என்பதற்கு முன்னுரிமை கொடுத்தார். சமூக பொருளாதார முற்போக்கான முன்னெடுப்புகளுக்கு அரசியல் ஸ்திரத்தனமை அவசியம் எனபதில் அவர் உறுதியாக இருந்தார். பெரும்பான்மையினர் ஆதரவுடன் அரசாட்சி என்பதுடன் சோசலிசத்தை ஒருங்கிணைக்க முடியும் என அவர் என நம்பினார். சோசலிஸ்ட்டாகவும் டெமாக்ரட்டாகவும் இருக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் 1938ல் தேசிய திட்டக்குழு ஒன்றை நேருவின் தலைமையில் அமைத்தார். நேரு சிறைக்கு செல்லும்வரை ஏறத்தாழ 15 மாதங்கள் அக்குழு செயல்பட்டது. பின்னர் 1945ல் திரும்ப செயல்படலானது. டிசம்பர் 1938 முதல் செப்டம்பர் 1940 வரையிலான காலத்தில் நடந்த 72 கூட்டங்களில் 71ல் நேரு பங்கேற்று கருத்துக்களை செவிமடுத்தார். சரி செய்தார் என ஹிரன் முகர்ஜி சொல்கிறார். 1944ல் இந்திய தொழிலதிபர்களின் கமிட்டி தங்கள் Bombay Plan எனும் திட்டத்தை தந்தது. 1946ல் இடைக்கால அரசிற்கு நேரு பொறுப்பேற்றவுடன் திட்ட ஆலோசனை குழு ஒன்றை அமைத்தார். அதேபோல் நவம்பர் 1947ல் காங்கிரஸ் சார்பில் பொருளாதார திட்டக்குழு ஒன்றை தன் தலைமையில் ஏற்படுத்தினார்.. அதன் அறிக்கை அடிப்படையில்தான் நிரந்தர planning Commission என்கிற திட்டக்குழு 1950ல் உருவாக்கப்பட்டது. 1948ல் தொழில்கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு நேரு சுவையான பதில்களை தந்துகொண்டிருந்தார். “Individuals and nations who do not know how to die do not know also how to live. Only where there are graves are there resurrections” என்பது போன்ற பதில்களாக அவை இருந்தன. நேரு தனது நோக்கதீர்மானத்தை டிசம்பர் 13, 1946ல் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணயசபையில் முன்வைத்தார். நாம் ஜனநாயகம் என்கிற முறையை மட்டுமல்ல, அதன் சாரத்தையும் முன்வைக்கிறோம்- அதாவது பொருளாதார ஜனநாயகம் என்கிற பொருளில் வைக்கிறோம். இதை சிலர் ஆட்சேபிக்கலாம். நாம் சோசலிச அரசாங்கம் என சொல்லாதபோது ஏன் இவ்வாறு முன்வைக்கவேண்டும் என வினவலாம். தனிப்பட்ட என் கருத்து என்றால் சோசலிச அரசாங்கம் என சொல்லமுடியும். அனைவரின் ஏற்புடன் செல்லவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதால் சர்ச்சைக்கு இடம்தராத வகையில் நோக்கத்தீர்மானத்தை முனவைக்கவேண்டியுள்ளது என நேரு தெளிவுபடுத்தினார். இதை குறிப்பிட்டுவிட்டு நேரு கட்சிகளைத் தாண்டி தேசம் கட்டமைத்தல், ஏன் உலக நோக்குடன் செயல்படுதல் என்ற வகையில் நாம் சிந்திக்கவேண்டும் என்றார் நேரு. தனியார் முதலாளிகள் தயங்கிய அல்லது போதுமான மூலதனமிட வழியில்லாத தொழில்களை பொதுத்துறையில் துவங்கி கலப்பு பொருளாதார மாதிரி ஒன்றை நேரு நிறுவியது விமர்சனத்திற்கும் உள்ளானது. Socialization of the Vacuum என விமர்சித்தவர்களும் உண்டு. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அன்று நிலவிய குறைகளை ஹிரன் முகர்ஜியும் சுட்டிக்காட்டுகிறார். அதனால் இலாப மய்ய பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஹிரனின் விமர்சனமாக இருந்தது. அரசியல் அமைப்பு சட்டத்தில் directive principles இணைக்கப்பட்டது. சோசலிச திசையின்றி திட்டமிடல் தன் வலுவை பெறாது என தனது விமர்சகர்களுக்கான பதிலை நேரு தந்தார். 1959ல் அய்ந்தாண்டு திட்டங்களின் நோக்கங்களை பற்றி வால்டர் லிப்மான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதை ஹிரன் முகர்ஜி தனது நேரு குறித்த புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதன் புரட்சிகர நோக்கங்கள் நிறைவேற மக்கள் இயக்கத்தின் அழுத்தம் தேவைப்படும். கம்யூனிஸ்ட் சீனாவில் நிர்ப்பந்தங்களால் மக்கள் செய்திடும் வேலைகளை சுயவிருப்பத்துடன் மக்கள் இங்கு செய்திடும் வகையில் அரசாங்கம் இயங்கவேண்டும். The revoultionary objectives of the Third Five year plan would require the organised pressures of a popular movement under the Govt leadership so dynamic and so purposeful that it can inspire people to do voluntarily the kinds of things that in Communist China are done by Compulsion" சீனா குறித்து ஒப்பீட்டளவில் குறையாக பேசுவதை ஹிரன் ஏற்கவில்லை. நேருவே சீனாவின் வளர்ச்சியை பார்த்து பிரமித்துள்ளார் என ஹிரன் முகர்ஜி எழுதுகிறார். நேருவிற்கு சட்டத்தை மீறக்கூடியவர் எவரானாலும் சோசலிஸ்ட் ஆனாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கம்யூனிசம்- கம்யூனிஸ்ட்கள், சோவியத் ஏஜெண்டுகளாக இருந்து கலகம் செய்வபவர்கள் ஆகவே ஒடுக்கப்படவேண்டும் என விடுதலைக் காலத்தில் காங்கிரசில் வந்த குரலை அவர் ஏற்கமறுத்தார். மற்ற எல்லா கோட்பாடுகளையும் போல அமைதியான முறையில் கம்யூனிச கோட்பாடும் மக்களிடம் செல்வதில் அவருக்கு தயக்கமில்லாமல் இருந்தது என ஜகாரியா பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் premature Leftism குறித்து அவர் ஜேபி யிடம் எச்சரிக்கை செய்யாமல் இல்லை. ஜெயபிரகாஷோ முதலாளிகளின் உதவியுடன் நேரு எப்படி சோசலிசம் கட்டுவார் எனக் கேட்டுவந்தார். சோசலிஸ்ட்கள் வெளியேறியபின்னர் படேல் தன் கை ஓங்கியதாக நினைத்தார். 1950 காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருபளானி, புருஷோத்தம் டாண்டன், சங்கர் ராவ் தவிர விண்ணப்பித்த பிற 4 பேர் விலகிக்கொண்டனர். அதில் நேருவும் ஒருவர். கிருபளானிக்கு 1026 வாக்குகளும் படேலின் ஆதரவாளரான டாண்டனுக்கு 1306 வாக்குகளும் கிடைத்தன. நேரு செயற்குழுவில் சேர மறுத்தார். 1950 அக்டோபரில்தான் சேர ஏற்பை தெரிவித்தார். டிசம்பரில் படேல் மறைந்தார். ஆனாலும் காங்கிரசின் வலதுபிரிவின் பலம் முற்றிலுமாக குறைந்துவிடவில்லை. ராஜேந்திரபிரசாத் மூலம் அது வெளிப்பட்டது. காங்கிரசில் இணைந்து பணிபுரிய அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. “காங்கிரசே ஜவஹர் அல்ல. அல்லது ஜவஹரே காங்கிரசும் அல்ல. பலநேரங்களில் அதன் முடிவுகளை என்னால் மாற்றமுடியாமல் போயுள்ளது. என் கருத்திற்கு நேர் மாறாக கூட சில முடிவுகள் வந்திருக்கலாம். ஆனால் நாட்டின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்கான கருவியாக இருந்த அமைப்பில் பணியாற்றி வருகிறேன் என்பது நிறைவானது” என நேரு குறிப்பிட்டார். படேல் மறைவிற்கு பின்னரும் நேருவிற்கு முற்றிலுமாக செயல்படும் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. ராஜேந்திரபிரசாத் இந்து சட்டத்தில் குடியரசுத்தலைவர் என்ற வகையில் தனது சொந்த கருத்துக்களை சொல்லிவந்தார். நேரு தான் பதவி விலக வேண்டியிருக்கும் என்று தெரிவித்துதான் பிரசாத்தை நிறுத்த முடிந்தது. இதை ஜகாரியா கீழ்கண்டவாறு சித்தரிக்கிறார். “With Patel’s death, the balance of power shifted slightly. But the ascendancy of the Congress right was still underpinned by the president of India, Rajendra Prasad, who had attempted to block land reform legislation relating to his home state, Bihar, in 1950, and had opposed his prime minister by presenting his personal views on the Hindu Code Bill to Parliament in 1951, causing a minor constitutional crisis. On both occasions Nehru had threatened to resign as prime minister, and Prasad had retreated.” நேருவின் வசம் காங்கிரசின் தலைவர் பொறுப்பும் வந்தது. செப்டம்பர் 1951 முதல்- நவம்பர் 1954வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் யு என் தபர் வந்தார். திட்டக்குழுவை கம்யூனிஸ்ட் முறை- தீவிர சோசலிச முறை என்று வலது பிரிவினர் விமர்சித்தனர். ஆனால் அது பாபியன் சோசலிச தாக்கம் கொண்டது என்று அறியப்பட்டாலும், சிறப்பு வல்லுனர்களின் ஆலோசனையுடன், பலவித சமரசங்களுடன் சிறுக சிறுக முன்னேறும் வகைப்பட்ட பொருளாதார முறையே என ஜகாரியா தன் நேரு புத்தகத்தில் சொல்லிச்செல்கிறார். The Planning Commission was far from the ultra-socialist or quasi-communist body that it was depicted as in the propaganda of the emergent Indian right. And if Nehru’s governments acquired a reputation for Fabian socialism, the Planning Commission was to a large extent responsible for the impression. ‘Fabianism’ was less a philosophical choice than a tendency retrospectively named: here was a system that worked by gradualism, by permeation, by compromise, and by advice from think tanks, academics and technocrats. இதைத்தொடர்ந்து நேருவியன்கள் என்ற வட்டம் ஏற்பட்டது. சிலர் அவரின் சோசலிச பார்வையாலும் அவரின் நவீனம் குறித்த பார்வையாலும் இவ்வட்டத்தில் சேர்ந்தனர். கருத்தொற்றுமை- மற்றவர்க்கும் இடமளித்தல் அரசியலை (consensus and politics of accomomodation ) அவர் கையாண்டார். என் எம் எம் எல் ஆய்வுத்தாள் ஒன்றில் அஜாய் குதவர்த்தி Nehruvian centrism குறித்து விவாதிக்கிறார். இந்தியாவில் வட்டார கட்சிகளின் ஆட்சி அனுபவம் ஆனாலும் பி ஜே பியின் அனுபவம் ஆனாலும் left leaning centrism- right leaning centrism என்பதாகவே இருந்துவருகின்றன. நேருவின் செண்டரிசம்- மிடில் வே என்பதாக இருந்தது. மத்திய வழி என்பதில் இடது அல்லது வலது விலகலோ ஏற்படலாம். ஆனாலும் முற்றிலுமாக மய்யமுறிவு என்பதை அவை ஏற்படுத்தவில்லை. இதற்கு நேருவின் அடிப்படைகளே காரணமாக இருந்துவருகின்றன என அஜாய் வாதிடுகிறார். தேச ஒருங்கிணைப்பிற்கும் ஒற்றுமைக்கும் மதம் மற்றும் மொழி பிரச்சனைகளை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வதன் அவசியத்தை உணர்ந்த தேசத்தலைவராகவே நேரு இருந்தார். சமூக நீதி கோட்பாட்டின்படி ஒடுக்கபட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட விளக்கமாகும். அதே நேரத்தில் உரிமைகளை மட்டும் வலியுறுத்தி கடமைகளை புறக்கணிப்பது சமூக அநீதியாகவும் முடியும் என்கிற பொறுப்புணர்த்தும் எச்சரிக்கை அவரிடமிருந்து வெளிப்பட்டது. சமத்துவம் மற்றும் கடமை உணர்வுகளை அவரின் வாசகங்கள் வெளிப்படுத்துவதை நாம் காணமுடியும் " No person should be specially privileged, none amongst us an honourable exception; no job should be considered as below dignity, no duty should be shunned or shirked, no privilege can be claimed without any sufficient sacrifice or without fulfilling any obligation, because human life is all inter- related and interdependent, and hence, nobody can run away from his duties or obligations either to the family or to the society or to the state or to the world at large" . மூலதனம் சுரண்டிக்கொழுப்பதற்காக மட்டுமே என்றால், அதிகாரம் கொடுமைப்படுத்துவதற்கே என்றால் அவை இல்லாதொழியட்டும் என்றவர் நேரு. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பட்டதாரிகள்கூட ரயில்வே போர்ட்டர்களாக சிலகாலம் பணியாற்றுவதை பார்த்த நேரு, இந்தியாவில் மட்டும் இன்ன ஜாதிக்கு இன்ன தொழில் என வரையறை இருப்பதேன் என வினவினார். ஏன் பிராமணர்களும், சத்திரியர்களும் தெருக்கூட்டவோ, மலம் சுத்தம் செய்யும் கடமையோ பரிமாறிக்கொள்ளக்கூடாது -இங்கிலாந்தின் பிரதமர் கிளாட்ஸ்டோன் செருப்புதைக்கும் தொழிலை செய்யவில்லையா என வினவினார். Dignity of Labour என்பதை சமூகம் உணரவேண்டும் என்பதை காந்தியைபோல் நேருவும் வற்புறுத்தியவர்தான். கடைக்கு போகும்போது கூலியை அமர்த்திக்கொள்வதை பெருமிதமாக நினைக்கும் சமூகம் குறித்து விமர்சனப்பார்வையே நேருவிடம் இருந்தது. ஆண் பெண் சமத்துவம் என்பதையும் அவர் வற்புறுத்தும் தலைவராகவே இருந்தார். உடல்ரீதியாக வேறுபாடு இருப்பதால் பெண் இளைத்தவரல்ல. விரைவில் இந்தியா அனைத்து துறைகளிலும் பெண் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நாடாக வளரும் என்கிற நம்பிக்கை அவரிடமிருந்தது. சோசலிசம் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சோதிக்கமுடியும் என கருதி நேரு செயல்பட்டார். மக்களை கலக்காமல் சோசலிச திட்டம் என சிலர் எழுதிவைத்துக்கொண்டு அதை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அமுல்படுத்துவது என்கிற முறையை ஏற்காமல் இருக்கலாம். மக்களின் உடன்பாட்டுடன் சோசலிசம் என்பதை அவர் சிந்தித்தார். ஒருமுறை காங்கிரஸ் கட்சியினரை சோசலிசப்பாதை எனக் கட்டுப்படுத்துவதற்கு அதன் அமைப்புவிதிகளில் திருத்தம் வேண்டுமா இல்லையா என்கிற விவாதம் வந்தது. பிரிட்டிஷ் லேபர் கட்சிக்கூட அப்படி ஒன்றை வைத்துள்ளது. அதை பின்பற்றலாமே என்கிற ஆலோசனையும் வந்தது. உறுப்பினராவதற்கு வருவாய் உச்சவரம்பு பற்றிக்கூட பேச்சுவந்தது. அன்றிருந்த நிலையில் ரூ 5000க்குள் வருவாய் இருப்பவரே காங்கிரசில் உறுப்பினராகலாம் என சொல்ல முடியுமா என்ற வினாவும் எழுந்தது. சரியான ஆலோசனைதான், கொஞ்சம் பொறுப்போம் என நிதானப்படுத்தினார் நேரு. காங்கிரஸ் அனுபவத்தில் அதை அவரால் அமைப்புவிதியில் திருத்தமாக கொணரமுடியவில்லை . தன்னால் முடியவில்லை என்பதை வெளிப்படையாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் செய்யவேண்டியது சொத்து ஒழிப்பல்ல- வறுமை ஒழிப்புதான் என அவர் சோசலிசம் பற்றி பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டார். மத, கலாச்சார சகிப்புத்தன்மையை நாம் எவரையும் தேடிப்போய் கற்கவேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் அரசியல், சிவில் உரிமைகளை பிரஞ்சு புரட்சி, அமெரிக்க புரட்சிகளிடமிருந்து நாம் கற்றாகவேண்டும். அதேபோல் பொருளாதார சமத்துவம் பற்றி ருஷ்யபுரட்சியிடமிருந்து நமக்கேற்ற வகையில் கற்கவேண்டும் என்பதை நேரு மக்களுக்கு எடுத்து சொல்லிவந்தார். உலக அனுபவங்களை பார்க்குமிடத்து காங்கிரஸ் இயக்கம் மிகுந்த ஜனநாயகபூர்வ இயக்கம்தான். பரந்துவிரிந்த கிளைகளை கொண்டிருந்தாலும் அதன் ஊழியர்கள் பரவலாக ஜனநாயக பழக்கம் உள்ளவர்கள் என்ற உணர்வையே நேரு வெளிப்படுத்தினார். சோவியத்தில் அய்ந்தாண்டு திட்டங்கள் ஸ்டாலின் காலத்தில் உருவாக்கப்பட்டன- பியட்டிலெட்காஸ் Piatiletkas என அழைக்கப்பட்ட இத்திட்டங்கள் 1928-1991 வரையிலான ஆண்டுகளில் 13 அய்ந்தாண்டு திட்டங்களாக அங்கு நிறைவேற்றப்பட்டன. சீனாவும் கூட இதை பின்பற்ற துவங்கியது. சோவியத்தால் ஈர்க்கப்பட்ட ஜவஹர் ‘பான்ச் வருஷ் பிரனலிகா’ என்கிற அய்ந்தாண்டுதிட்டமுறையை இந்தியாவிலும் அமுல்படுத்தினார். அவர் காலத்தின் வளர்ச்சி இன்று Hindu Rate of Growth இந்து வீத வளர்ச்சி என அழைக்கப்படுகிறது. அவ்வளர்ச்சி 3.5 சதமாக இருந்தது. இன்று அவ்வளர்ச்சி விமர்சனப்பார்வையுடன் பார்க்கப்படுகிறது. The cake is distributed even before it was baked என குருசரண் தாஸ் போன்ற உலகமயமாதல் ஆதரவாளர்கள் நேருவின் அன்றைய பொருளாதார கொள்கைகளை விமர்சித்துவருகின்றனர். விடுதலை இந்தியாவில் நேரு பொறுப்பேற்ற பின்னர் பொருளாதார சவால்கள் ஏராளம் இருந்தன. 1956ல் மக்கள் பெற்ற சராசரி கலோரி அளவு 1700 ஆக இருந்தது. சராசரி தனிநபர் வருமானம் 1951ல் ஆண்டிற்கு ரூ 250 கூட இல்லை. விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்க்கு ரூ 100 கூட இல்லை. ‘இரவு இந்தியா’ மின்வசதியில்லாமல் இருட்டாகவே இருந்தது. கிராமங்கள் 10 சதம் கூட மின்வசதி பெறவில்லை. 80 சத மக்கள் கல்வியறிவற்றவர்கள். இப்படிப்பட்ட இந்தியாதான் நேருவிற்கு கிடைத்தது. முதல் 5 ஆண்டுதிட்டம் பெயரளவிற்குத்தான் திட்டம். ஆனாலும் சில மாற்றங்கள் உருவாயின. உணவு உற்பத்தி பெருகியது. பஞ்சம் இனி இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது. தனிநபர் வருவாயும் அன்றுள்ள டாலர் கணக்கில் உயர்ந்தது. ஆவடி சோசலிச மாதிரி சமூகம் தீர்மானத்திற்குப் பின்னர் போடப்பட்ட 1955 பட்ஜெட்டை சிலர் ஆர்வ மிகுதியால் இந்தியாவின் முதல் சோசலிஸ்ட் பட்ஜெட் என வர்ணித்ததாக மைக்கெல் சொல்கிறார். 1958 மே மாதம் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தனது அரசாங்கம் செய்துவரும் திட்டங்களை உறுப்பினர்கள் அறிய சொல்கிறார். அரசாங்கம் அரசியல்ரீதியாக வலுவானது. எனவே பொருளாதரா பரவலாக்கம் அவசியம் என்றார். சில தொழில்கள் மய்யப்படுத்தப்பட்டவைகளாக இருக்கவேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தினார். எதிலும் வறட்டுத்தனம் தேவையில்லை. நடைமுறை அனுபவத்தின் வழியே முன்னேறவேண்டியதின் அவசியத்தை அவரது உரை உணர்த்தியது. தனது சோசலிசத்தில் தனிநபர் சம வாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமையிருக்கவேண்டும். I do not want State socialism of that extreme kind in which the state is all powerful and governs practically all activities.The state is very powerful politically…I should, therefore, like decentralisation of economic power. We cannot, of course, decentralise iron and steel and locomotives and such other big industries, but you can have small units of industries as far as possible on a cooperative basis with State contorl in a general way. I am not at all dogmatic about it. We have to learn from practical experience and proceed in our own way.. My idea of socialism is that every individual in the State should have equal opportunity for progress" இரண்டாவது திட்டத்தில் பொதுநிதி ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டது. குழந்தைகளுக்கான பள்ளி மேம்பாடு 23 சதம் கூடியது. ஊரக கிளினிக்குகளை பெருக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து சோவியத்துடன் நல்லுறவு ஏற்பட்டு தொழிற்பெருக்கத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. சோசலிசமுறை எனப்பேசிவருகிறோம். அதற்கான சட்டம் அவசியம் என்றாலும் அதை வெறும் சட்டம் இயற்றி மட்டும் கொணர்ந்துவிடமுடியாது. சமூகம் சிக்கலானது- பலதரப்பட்ட இயக்கம் உடையது. சோசலிசம் என்பது சட்டம் அல்ல. உற்பத்தி- விநியோகம்- பரஸ்பர மனித உறவுகள் சார்ந்த அமைப்புமுறையது. இந்த நடவடிக்கைகளை நாம் விரைவுபடுத்தலாம். அதிலும் முறிவு ஏற்பட்டு எதிர்மறை விளவுகளை உருவாக்காமல் கவனமாகவும் செயல்படுதல் வேண்டும் என்பது நேருவின் சோசலிச கட்டுமானம் குறித்த எச்சரிக்கை, கவனமாக இருந்தது. We talk socialistic structure of society.. that structure cannot take place, develop just by some legislation, although legislation helps. But it really means building up a complex society. Society is complicated with innumerable relations. Socialism is not a law. It is a structure governing production, distribution, mutual relationships everything- that takes time. It just cannot be done by a resolution or by a decree. If we are going in right direction it is all well. We can speed up process. Speeding it too much sometimes really results in delay- structure may crack- cracking means delay- you have to mend. புரட்சி என்பதே கட்டுமானத்தை செய்துவிடாது. கட்டுமானத்திற்கு தடையாக இருப்பவற்றை அகற்றுவதைத்தான் புரட்சி செய்கிறது. புதிய சமூக கட்டுமானம் என்பது நிதானமான கடுமையான உழைப்பின் மூலம்தான் உருவாகும் என சொல்லிக்கொடுத்தவர் நேரு. The (so called) revolution did not build up. The revolution only removed obstacles to building up. That is the most it could do. Having done that, then comes the slow laborious process of building up a new society நாடாளுமன்ற பிரசுரக்குழு நேருவின் நூற்றாண்டுன்போது பல்வேறு ஆளுமைகளிடமிருந்து அவரது நினைவுகளை பெற்று நேரு வாழ்வும்- பணியும் பற்றிய தொகுப்பை 1990ல் கொணர்ந்தது. அதில் நேருவின் சோசலிசம் என்பது குறித்து பி வி நரசிம்மராவ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் நரசிம்மராவ் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது: நேரு சோவியத்தின் புரட்சியால் ஈர்க்கப்பட்டவர். மார்க்ஸ்- லெனின் கொள்கைகளால் அவர் உத்வேகம் அடைந்தார். அதே நேர்ந்த்தில் இந்தியாவிற்கான சோசலிச மார்க்கம் இந்திய வரலாற்றுத் தன்மைகளை , தனித்தன்மைகளை கணக்கில்கொண்டுதான் இருக்கவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் தொடர்ந்து சோசலிச கொள்கைகளை ஏற்றுக்கொள்ள செய்தது நேருவின் வெற்றி எனக் கொள்ளலாம். He was certainly inspired by the ideas of Marx and Lenin and his writings showed that he was profoundly moved by the revolution in Russia. However, he clearly recognised that India must find for itself its own road to socialism, which would be influenced by the peculiarities of its own historical experiences and the genius of its race. It would be no exaggeration to say that the adoption of socialism as a coherent objective of the Indian National Congress was Panditji’s achievement. நேரு இயன்றவரை சுயராஜ்யமும் சோசலிசம் தோழமையாக செல்லவிழைந்தார். அந்நிய ஆதிக்கம் நிலவும்வரை விடுதலை போராட்டம் முன்னுரிமைப்பெறும் என்பதை அவர் உணராமல் இல்லை. சோசலிசத்தை ஏதோ கட்சிசார்ந்த விஷயமாக சுருக்கிவிடாமல் அதை basic tenet of the nation என எடுத்து சென்றதில் நேருவிற்கு முக்கிய பங்குண்டு. அதேபோல் இன்னொரு முக்கிய அம்சம் காங்கிரஸ் சோசலிசம் என அதிகாரபூர்வ அமைப்புவிதியை எழுதிக்கொள்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 1954ல் country’s economic policy should be socialistic pattern of society என தீர்மானம் நிறைவேற நின்றவர் நேரு. இதற்கு பின்னர் 1955 ஆவடி காங்கிரஸ் இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. தேசிய வளர்ச்சி கவுன்சில் நவம்பர் 1954 கூட்டத்தில் அவர் தன் அணுகுமுறை குறித்து பேசினார். சோசலிச மாதிரி சமுகம் என சொல்லும்போது எந்த வறட்டுத்தனத்திற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாக்கப்பட்டு சமூக நலன்களுக்கு உதவும் வகையில் கட்டுக்குள் இருக்கவேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதற்காக விவசாய- தொழிலாளர் புரட்சி என்பதையோ- வர்க்கமற்ற சமுதாயம் என கற்பனையூர் ஒன்றையோ தான் பரிந்துரைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஒருமுறை முஸ்லீம்லீக் தலைவர் ஒருவர் நேருவை மாஸ்கோவிற்கும் பனாரஸிற்கும் இடையில் ஊசலாடுபவர் எனக்கூட கேலி பேசியுள்ளார். நேரு இந்தியாவின் தொன்மை குறித்தோ அதன் மரபு குறித்தோ அறியாதவரல்ல. ஏறத்தாழ 5000 ஆண்டுகள் வரலாற்றுப்பின்னணி கொண்ட ஒருநாட்டில் சோசலிசம் என்பதை அவர் புரிந்துகொண்டு செயல்பட்டவர். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை வைத்துக்கொண்டு அவர் சோசலிசம் பேசாமல் இருந்திருக்கலாம். ஜனநாயகமும் சோசலிசமும் நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை என ஜனநாயக சோசலிசம் குறித்து விளக்கியவர் நேரு. எங்களைப் போன்று அவரின் உரைகளை நேரிடையாக கேட்டு வளர்ந்தவர்கள் இதை மறக்கமுடியாது. நரசிம்மராவ் இவ்வாறு அக்கட்டுரையை முடிக்கிறார். மிகச்சிறந்த காந்தியர் என்றால் நேருவை சொல்லமுடியும்- மிகச்சிறந்த நேருவியன் என்றால்… Today the greatest Gandhian I can think of is Nehru. Now, who can be called the greatest Nehruite is still to be decided…But, in the context of our march towards the 21st century or on the eve of the 21st century, how Panditji is to be interpreted is something which is a challenge to the younger generation. நேரு ஒருமுறை தன் சிந்தனையை வெளிப்படுத்தும்போது ஆரூடங்கள் எதையும் வெளிப்படுத்தாத உரையை தந்தார். இந்தியாவிலும் சோசலிசம் வரலாம். எப்போது வரும் எனத்தெரியாது. என் போன்ற சிலர் விழைவதால் அது வராது. அது நம் நெறிமுறைகளுக்கு உகந்ததாக உள்ளது. அது யுகதர்மம் என நம் மொழியால் அறியப்படக்கூடியதாக உள்ளது என்றார். “I do not know when it is going to come, but I am sure, it is going to come because as it has become part of our ethos and what we have called in our language Yuga Dharma”. இ எம் எஸ் நம்பூதிரிபாட் நான் அறிந்த ஜவஹர்லால் என்கிற கட்டுரை ஒன்றை நேரு நூற்றாண்டு நாடாளுமன்ற தொகுப்புக்குழுவிற்கு வழங்கியிருந்தார். நேருவின் நூற்றாண்டை ஒட்டி அவரின் நிறைகுறைகளை மதிப்பிட்டு Nehru Ideology and Practice என்ற புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார். கட்டுரையில் இ எம் எஸ் தரும் சொற்சித்திரம்: பாசிச சக்திகளை எதிர்த்து நேரு உறுதியாக நின்றபோது அவர் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தால் fellow traveler ஆக பார்க்கப்பட்டார் . இரண்டு முக்கிய இடதுசாரி சக்திகளான கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட்களுக்கு அவர் அனுசரணையாக இருந்தார். ஆனால் இது சிலகாலம் மட்டுமே நீடித்தது. பின்னர் தொடர்ந்த 1942, 1946, 1952, 1957, 1962 என நிகழ்வுகளில் நேருவை நாங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானவராகவே பார்க்கமுடிந்தது. விடுதலை இந்தியாவில் கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நீக்குவதில் நடந்த பிரச்சாரங்களில் அவர் கம்யூனிச விரோத படையின் தளகர்த்தராகவே இருந்தார். " ..the hysterical campaign against the Communist Party in 1959-62 showed that the “fellow traveller” of the Communist Party had transformed himself into the general officer commanding the anti-Communist army in the country." நம்பூதிரி தன் மதிப்பீட்டில் நேரு இந்திய முதலாளிகளின் typical representative என்றார். அவர்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற முகமும் கம்யூனிச எதிர்ப்பு என்கிற முகமும் ஆக இரட்டை முகம் இருக்கும். முதலாளித்துவ வர்க்கம் சார்ந்த முற்போக்கு தீவிர தலைவர் நேரு- அறிவார்ந்தவகைப்பட்டு மகாத்மா காந்தி கொள்கைகளை அவர் பாராட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் வகைப்பட்டு முதலாளிகள் வர்க்கத்திற்கு தலைமை ஏற்று விடுதலைப்போராட்டம் நடத்திவந்த காந்தியை அவர் பின்தொடர்ந்தார். அவர் மார்க்ஸ் எங்கெல்சின் விஞ்ஞான சோசலிசத்தை பின்பற்றவில்லை என நம்பூதிரி எழுதுகிறார். A radical leader belonging to the bourgeoisie, he could not intellectually understand and appreciate the philosophy of Mahatma Gandhi; but, as the political leader of the class, he had to follow the most acute leader under whose leadership the class was fighting for freedom. As a radical leader of the class again, he had his sympathy for the labour and socialist movements in the world as well as for the new socialist system that was developing in Soviet Russia. But he was no follower of scientific socialism as expouhded by Marx, Engels and Lenin. அவரின் சோசலிசத்தை இடதுபக்க சாய்வுடைய பூர்ஷ்வா தாராள ஜனநாயகம் என நம்பூதிரி வரையறுத்தார். அவரின் சோசலிச நாடுகளின் தொடர்பைக்கூட உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பிற்கு பயன்படுத்தினார் என்பது நம்பூதிரி தரும் மதிப்பீடு. நேருவின் இரகசியம் அவரின் பெரும் மனிதாபிமானத்தில் இருந்தது. மானுட விதியுடனான சந்திப்பை அவர் பெருங்கருணையுடன் அணுகினார். He was, in short, the sublime epitome of the Manifesto of Man. சுருக்கமாக சொன்னால் ‘மனிதனின் மானிபெஸ்டொ நேரு’ என்று வி ஆர் கிருஷ்ணய்யர் The Patriot, New Delhi, 3 September, 1989 ல் எழுதியிருந்தார். ஜவஹர்லாலின் பொதுவுடைமை என்கிற விமர்சன தலையங்கத்தை பெரியார் குடியரசு 21-6-1936ல் வெளியிட்டிருந்தார். நேரு பேசிவரும் அபேதவாதம் குறித்த முரண்பாடுகளையும், காங்கிரசில் வலது தலைவர்களுடன் அவர் ஒத்துப்போவதையும் அதில் பெரியார் சுட்டிக்காட்டுகிறார். பூரண சுயராஜ்யம்- பின்னர் அபேதவாதம் எனும் பேசிவரும் நேரு தனது கவுன்சிலுக்கு முக்கால்வாசிப்பேர்களை அபேதவத எதிரிகளாகவே பார்த்து நியமித்துக்கொண்டிருக்கிறார். படேல், பிரசாத், மாளவியா, விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி எனும் பெயர்களை பெரியார் பட்டியலிடுகிறார். “இந்தியாவுக்கு சுதந்திரமில்லாமல் எப்படிப் பொதுவுடைமை வராதோ, அதுபோலவே இந்தியாவில் பார்ப்பானும், பறையனும், மேல்ஜாதியும், கீழ்ஜாதியும் ஒழியாமல், அழியாமல் சுதந்திரம் வரமுடியுமோ என்று கேட்கின்றோம்” அபேதவாதம் பேச்சுக்கு சிங்காரம்தான். ஜவஹர்லாலே எப்படி வரும், அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்கிறாரே என பெரியாரின் விமர்சனம் செல்கிறது. The Gentle Colossus A study of Jawaharlal Nehru என்ற புத்தகத்தை Hiren Mukherjee எழுதியிருக்கிறார். கம்யூனிசமா- கம்யூனிலசமா எது ஆபத்து என்றால் ‘கம்யூனிலசம்’ என்கிற மதவெறியே ஆபத்தானது என நேரு கருதியதை ஹிரன் குறிப்பிடுகிறார். நேரு தன்னைப்பற்றி எப்படிப்பட்ட நினைவு நிலைக்கவேண்டும் என விரும்பினார் என்பதை ஹிரன் மேற்கோள் காட்டுகிறார். " If any people choose to think of me, then I should like them to say- this was the man who, with all his mind and heart, loved India and Indian people. and they in turn were indulgent to him and gave him of their love most abundantly and extravagantly" சோசலிசத்திற்கான வன்முறை குறித்த நியாயங்களை புகழுரைகளை ஒருவர் சொல்லலாம். முதலாளித்துவ பாசிச வன்முறைகளை ஒப்பிடும்போது சோசலிசத்திற்கான வன்முறை சாதாரணமானது என்று கூட சொல்லலாம். ஆனால் நாட்டின் பிரிவினை கால வன்முறைகளை, மகாத்மாவின் படுகொலைகளை பார்த்த பின்னர் வன்முறைக்கு முகம் கொடுக்கமுடியாது என்றே நேரு உணர்ந்ததாக ஹிரன் பதிவு சொல்கிறது. ஆவடி தீர்மானமானாலும் பின்னர் 1963ல் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் கூட்டமானாலும் அவர் சோசலிச மாதிரியை உயர்த்திப்பிடித்தார். சோசலிச திட்டத்தில் நாம் உண்மையாக நிற்கவில்லையெனில் அடுத்த 10-15 ஆண்டுகளில் மக்கள் நம் மீது நம்பிக்கையற்று போய்விடுவார்கள் என்கிற எச்சரிக்கையை நேரு கொடுத்ததாக ஹிரன் எழுதுகிறார். நேரு theorist அல்லர் ஆனால் சிந்தனையாளர் இந்த பெரிய மனிதர் உறுதியாக சோசலிசம் நோக்கி வழிகாட்ட இயலாதவர் ஆனாலும் அவரை மன்னித்துவிடலாம் என ஹிரன் தரும் செய்தி முக்கியமான ஒன்றே. நேருவின் மதசார்பின்மை இந்தியாவில் மேற்குவகைப்பட்ட புரிதலான செக்யூலரிசம் என்பது பெரும் மக்களை கவ்விப்பிடிக்கவில்லை. இங்கு மேற்கு கல்விகற்ற ராஜாரம் மோகன் ராய், தயானந்தர், அரவிந்தர், திலகர் எல்லோருமே இந்து மறுமலர்ச்சி கருத்துக்களை விதைத்தவர்கள். காந்தியிடம் எந்த வறட்டுத்தன மதப்பார்வையில்லாவிடினும் மதம் என்பதிலிருந்து விலகிய பார்வையை அவர் வைக்கவில்லை. அனைத்து மதங்களுக்குமான மரியாதை என்பதில் உடன்பட்டு நின்றார். இந்துமுஸ்லீம் ஒற்றுமை என்பது அவரது மிக முக்கிய நிகழ்ச்சிநிரல். நேரு தான் வறட்டுக்கோட்பாடுகளின் பிடியில் சிக்கிவிடக்கூடாது எனக் கருதியவர். தன் மனதில் பல குரூப்ஸ் உண்டு என்றவர். மிக முக்கியமாக காந்தி ஒரு குரூப்- மார்க்சியம், லிபரலிசம் போன்றவை மற்ற குரூப்கள் என்றவர் நேரு. நேருவிற்கு பழமையை முழுமையாக முறித்துக்கொள்ள முடியாது என்பது தெரியும். ஆனால் அதற்காக அதன்மீது கண்மூடிய பக்தி தேவையில்லை என நேரு கருதினார். அதே நேரத்தில் Nationalism is essentially a group memory of past achievements, traditions and experience என்பதை அவர் ஏற்றிருந்தார். தாகூரின் synthetic universalism என்பதில் ஏற்பு இருந்தது. கலாச்சார பன்மைத்துவம்- அவைகளின் கூட்டிணைவு என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்திய வரலாறை “the gradual growth of a composite culture of the Indian culture” என்ற வகையிலேயே அவர் புரிந்துகொண்டார். அவரை மதவிரோதி என அழைக்கமுடியாது. அவரிடத்தில் தனிக் கடவுள் பக்தி என ஏதுமில்லை. சடங்குகளும் கோட்பாடுகளும் நிறைந்த, அமைப்பாக்கப்பட்ட மதம் குறித்த அச்சம் அவரிடமிருந்தது. மானுட வளர்ச்சிக்கு அவை தடைகளாக நிற்கும் என அவர் அஞ்சினார். ஒழுக்கத்தையும் நன்னெறிகளையும் போதிப்பதால் மதம் என்பதை மனித வாழ்விலிருந்து அகற்றுவது கடினமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார். மனிதனை நல்வழிப்படுத்தும் திசையில் தனிமனித தேவைக்கான ஒன்றாக மதத்தை அவர் கருதினார். If religion deals not with dogmas and ceremonials but with the higher things of life, there should be no conflict with science or inter se between religions. It must be the high privilege of India to help in bringing about this synthesis என அவர் தெரிவித்தார்.. இந்தியாவில் வகுப்புமோதல் நமது கொள்கைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பேராபத்தானது. அதை நாம் முறியடித்தே ஆகவேண்டும். பல்வேறு பிரிவினர் வாழ்கிற நாட்டில் ஒவ்வொருவரும் மற்றவரின் நம்பிக்கைகளை, பழக்கங்களை மதித்து நடந்தால்தான் நல்லிணக்கம் நிலவும். நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியும் நல்லிணக்கமும் அவசியத் தேவைகளாகின்றன என அவர் உறுதியாக நம்பி செயல்பட்டார். இந்தியாவில் வகுப்புவாதம் என்பது மத சம்பந்தமான பிரச்சனையல்ல. அது அதிகாரம், பொருளாயத பலன்களை உயர் மத்திய தட்டு பெறுவதற்கான முயற்சி என்றே தனது அனுபவ வாயிலாக அவர் வந்தடைந்தார். The so-called communal question was not a religious question, but a political question of upper middle class and their demand for additional jobs and seats in legislature. நேருவிற்கு மதவிவகாரங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது மிக முக்கியமாக இருந்தது (neutrality of the state in religious matters). எந்த ஒரு நாடும் அதிகாரபூர்வ மத அரசாக Theocratic state இருப்பதின் ஆபத்துக்களை நன்கு உணர்ந்தவராக நேரு இருந்தார். இந்திய மக்கள் தொகையில் 10 சதமாக இஸ்லாமியர் இருக்கையில், பெரும்பான்மை பெயரில் மத அடிப்படை அரசை நிறுவுவது பெரும் குழப்பத்தையும் தீமையையுமே விளவிக்கும். நிர்வாகம் பெரிதும் பாழ்படும் என்ற பார்வை அவரிடம் தொழிற்பட்டது. நேரு பொதுவாக மதவிவகாரங்களில் தலையிடாமையே சரியானது எனக் கருதி செயல்பட்டவர். அவரிடம் கல்வி நிறுவனங்களில் மதபோதனைகள் அவசியம் என இந்துக்கள் சிலர் வலியுறுத்தியபோது, கிறிஸ்துவர், முஸ்லீம் அல்லாத பகுதிகளில் கூட பைபிள், குரான் படிப்பது அவசியம் என்று சட்டம்போடக்கூடத் தயார்- அது ஏற்புக்குரியதா என அவர்களிடத்தில் யதார்த்த நிலைமைதனை புரியவைத்தார். மதசார்பின்மையின் முக்கிய பண்பே வகுப்புவாத தனிச்சலுகை காட்டாமல் இருப்பதே (secularism demands that there should be no favouritism on communal, sectarian or class basis) என்கிற ஆழமான விளக்கம் அவரிடம் கிடைக்கும் . பல்வேறு வழிபாட்டுமுறைகள், ஆலயங்கள், மசூதிகள், மாதாகோயில்கள் இருக்கிற நாட்டில் சகிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. அவரின் மதம் குறித்த இந்த சகிப்புத்தனமை ஆள்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. அவர் சகிப்புத்தன்மை என்பதில் காந்தியைப் போன்றே பேசினார் என சொல்லலாம். பிறமத தூஷணை- புண்படுத்தல் கூடாது என்றே நேருவும் சொல்லிக்கொடுத்தார். “We can find the image of God in everyman, in every idol, in every temple, every Mosque and in every church and so, nobody should dare insult that image of God whether in a Muslim or Christian or in a Hindu” நாட்டின் பிரிவினை சூழலில் செக்யூலர் ஸ்டேட் அமைவது என்பதில் நேரு காட்டிய உறுதிப்பாடு மெச்சத்தகுந்தது. நம்மால் இறையியல் மற்றும் ஏதேனும் ஒரு மதம் சார்ந்த அரசாங்கத்தை உருவாக்க முடியாது. வகுப்புவாதமற்ற, செக்யூலர் ஜனநாயக அரசாங்கத்தையே நம்மால் நினைத்துப்பார்க்க முடியும் என அவர் வெளிப்படையாக பேசினார். We cannot think of any state which might be called a communal or religious state. We can only think of a secular, non-communal, democratic state in which every individual to whatever religion he may belong, has equal rights and opportunities. இதை அக்டோபர் 1947 பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்தினார். செக்யூலரிசம் எனும் மதசார்பின்மையுடன் தனிநபர் சுதந்திரம் என்பதை அவர் பொருத்தவேண்டியவராகவும் அவர் இருந்தார். இந்தியாவில் தனிநபர் என்கிற வகையில் மக்கள் பெற்றுள்ள மத சுதந்திரம் எந்த ஒரு மதத்தின் மீதான விசேஷ கரிசனம் பாற்பட்டதல்ல. தனிநபரின் சுதந்திரம் என்கிற கரிசனம்பாற்பட்டது என்கிற புரிதல் அவசியமாகிறது. நேருவிற்கு மத சுதந்திரம் என்பதுடன் மதமே வேண்டாம் என்பவர்களின் சுதந்திரமும் சேர்த்துதான் செக்யூலரிசமாகிறது. அரசியல் அமைப்பு சட்ட விதிகள் 25 மற்றும் 26 குறித்து நீதிமன்ற விளக்கங்கள் ஏராளம் வந்துள்ளன. தேசியக்கொடி வணக்கம் கூட வழக்கானது- தீர்ப்பானது. மதம் என்பது அவை சொல்லும் சடங்கு உட்பட நடைமுறை செயல்களும் சார்ந்தவைதான் என்பது போன்ற தீர்ப்புகளும் வந்தன. பசு கொலை பிரச்சனையானது. முழுமையாக பசுவதை தடை நம்மை ஒருமத அரசாக மாற்றிவிடும் என நீதிபதி கஜேந்திரகட்கரே சொல்லவேண்டியிருந்தது. “…the claim of the majority community for total ban on cow-slaughter”amounts to converting the secular democracy of India into a theocratic state; and that is a position which no secularist in the country will accept." காந்தியிடம் இதற்கு மிக அறிவார்ந்த பக்குவமான விளக்கம் கிடைக்கிறது. மதம் சொல்லும் தடைகள் அந்த மதம் சம்பந்தப்பட்டவர்க்கு மட்டுமே- அது உலகத்திற்கல்ல. இந்தியா இந்துக்களுக்கான நிலம் மட்டுமல்ல- இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சிக்கள் என பலர் வாழும் பூமி. இங்கு பசுவதை தடை என்றால் பாகிஸ்தான் உருவ வழிபாட்டு தடை என்பர். The Hindu religion prohibits cow slaughter for the Hindus, not for the world. The religious prohibition comes from within. Any imposition from without means compulsion. Such compulsion is repugnant to religion. India is the land not only of the Hindus, but also of the Musalmans, the Sikhs, tbe Parsis, the Christians and the Jews and all who claim to be Indian and are loyal to the Indian Union. If they can prohibit cow slaughter in India on the religious grounds, why cannot the Pakistan Government prohibit, say, idol worship in Pakistan on similar grounds." பொருளாதார காரணிகள் சார்ந்து என பிரச்சனை ஒன்றை பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கும் அதையே மதக்காரணியாக குறுக்கி நடவடிக்கை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ளவேண்டும் என நேரு கேட்டுக்கொண்டார். இதை தெளிவுபடுத்தி ஆகஸ்ட் 7 1947ல் ராஜேந்திரபிரசாத்திற்கு நேரு எழுதினார். மதப்பிரச்சாரம் என்பதை ஏற்ற நீதிமன்றம் ‘மதமாற்றம்’ செய்துவைப்பது ஒருவருக்கு அடிப்படை உரிமையல்ல என்றது. புத்தரின் 2500 ஆண்டுகள், துளசிதாசரின் 400வது ஆண்டு, ஹிஜ்ரி சகாப்தத்தின் 1400 ஆண்டுகளுக்கு பொதுநிதியை செலவு செய்தது கூட 1975ல் வழக்கானது. விமர்சனமானது. அது தேசத்தின் மரபுகளை இளம் தலைமுறையினர் அறிய செய்தல் என்பதற்கான ஏற்பாடு என பதில் தரப்பட்டது. ஹிரன் முகர்ஜி 1960ல் நேரு குறித்த புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் நேருவின் செக்யூலர் டெமாக்ரசி குறித்து விவாதித்திருக்கிறார். குறுகிய வகுப்புவாத எண்ணங்களை நாம் வளர்த்துவிடக்கூடாது. எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள். மக்களிடம் குறுகிய எண்ணங்கள் நிறைந்துவிட்டால் ‘சிறந்த இந்தியா’ என உலகால் கொண்டாடப்படமுடியாத ஒன்றாக நாடு ஆகிவிடும் என மிக முக்கிய எச்சரிக்கையை ஆகஸ்ட் 15 1947ல் நேரு விடுத்தார். ‘நான் பொறுப்பில் இருக்கும்வரை’ இந்தநாடு இந்துநாடு என ஆகிவிடாது என்கிற உறுதிமொழியை அவர் நாட்டுமக்களனைவருக்கும் ஒரு சேர தந்தார். பிப்ரவரி 18 1953ல் மிக முக்கியமான கருத்தை அவர் அனுபவரீதியாக உணர்ந்து வெளியிட்டார். ஜனநாயகத்தை மிகவும் நேசித்தாலும், எப்போதுமே பெரும்பான்மையினர்தான் சரி என்பதை தன்னால் ஏற்கமுடியாது என தெரிவித்தார். “I am not prepared to accept the statement that the largest number of people are always right” இதை அவர் மக்கள் அவையில் தைரியமாக வெளிப்படுத்தினார். கம்யூனல் பிரச்சனை ஒன்றிற்கான பதிலாகவே இக்கருத்தை அவர் வெளிப்படுத்தினார். வகுப்புவாதத்துடன் ஜனநாயகம் ஒத்துப்போகவே முடியாது என்பதை நன்கு அறிந்தவராக நேரு இருந்தார். அம்பேத்கரையும் காந்தியையும் அரவணைத்துக்கொள்ளும் வலது வகுப்புவாத சக்திகள் நேரு மீது தொடர்ந்து விமர்சனம் செய்வதை நாம் காணமுடியும். வகுப்புவாத படுகொலைகள் அனுபவங்களுக்கு பின்னால் வகுப்புவாதிகள் பழமையிலும் இல்லை- நிகழ்காலத்திலும் இருக்கமாட்டார்கள். அவர்கள் அந்தரத்தில் தொங்கக்கூடியவர்கள் என நேரு விமர்சித்தார். 1959ல் கேரளாவில் இ எம் எஸ் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகலைப்பில் உடன்பட்டவராக நேரு இருந்ததை ஹிரன்முகர்ஜி உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் விமர்சனபார்வையுடனேயே பார்த்தனர். பல்வேறு தலைவர்களை ஒப்பிடுகையில் சிறந்தவராக விளங்கிய நேரு சில தருணங்களில் புதிராக விளங்கினார் என்கிற மதிப்பீட்டை ஹிரன் தருகிறார். நேரு அவர்கள் கட்சித்தலைமையைதாண்டிவந்து தேசியத்தலைமை ஏற்று நல்லெண்ணம் கொண்டவர்களை எல்லாம் உள்ளடக்கிய அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் கோரினார். அனைத்து அம்சங்களிலும் வேறுபடுகிற நாம் எவ்வாறு பொதுப்பாதை ஒன்றை காண இயலும் என நேரு பதில் அளித்தார். As Jayaprakash, for whom I have always had a good deal of affection, is entirely opposed to both my domestic and foreign policies, I do not quite know how both of us together will chalk out a common path. If this so between us two, what of a larger crowd? We are all, I suppose rather lonely persons, sometimes doubting what we ourselves say or do..என நேருவின் பதிலை ஹிரன் மேற்கோள் காட்டுகிறார். வகுப்புவாத பைத்தியக்காரர்களையும் வைத்துக்கொண்டுதான் நாம் நகர்ந்து முன்னேறவேண்டும். அவர்களின் பாதை ஆபத்தானது. வெறுப்பின்பாதையது. அது இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன், சீக்கியர் என எந்த பெயரில் வந்தாலும் ஆபத்தானது என்றார் நேரு. மதசார்பின்மை குறித்த அம்சத்தில் நேருவின் பாத்திரத்தை பாராட்டியே சொல்கிறார் ஹிரன். மதசார்பின்மையில் பலகுறைகளை நாம் காண்கிறோம் எனில் அதற்கு நிலவும் சூழலைத்தான் குறை சொல்லவேண்டும். அதை சரியாக உணர்ந்து தீர்க்கவே ஜவஹர் விழைந்தார். If there are lacunae in India’s secularism and many defects still in its working, the blame devolves on our conditions and our own faults which were felt and sought to be rectified by none more genuinely and staunchly than by Jawaharlal Nehru என ஹிரன் முகர்ஜி எழுதியுள்ளார். நாடுபிரிவினை ஆன வலிமிகுந்த தருணத்தில் நேரு நேரில் சென்று நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துகொண்டிருந்தார். சமாதானத்தையும் காரணகாரிய சிந்தனையையும் சுமந்து அவர் சென்றார் (Played the role of Cociliator and the voice of reason) என ஜக்ரியா சொல்கிறார். இருபக்கத்திலிருந்தும் மக்களின் பெரும் இடப்பெயர்வு நடந்தேறியது. 90 லட்சம் சீக்கியர்களும், இந்துக்களும் பாகிஸ்தான் (மேற்கு மற்றும் கிழக்கு) பகுதிகளிலிருந்து இந்தியா வந்தனர். இந்தியப் பகுதியிலிருந்து 60 லட்சம் முஸ்லீம்கள் பாகிஸ்தான் சென்றனர். பிரிவினை காலத்தில் பலியானவர்கள் மதிப்பீடு 8 லட்சம் வரை சென்றது. இந்தியாவில் திட்டமிட்ட கலவரங்களில் அகலிகள், ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் முன்நின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை- சாவின் நெடி, இரத்த வாடை இன்னும் வீசுகிறது என நேரு மவுண்ட்பாட்டனுக்கு எழுதினார் (There was still an odour of death, a smell of blood and burning human flesh). நேரு லியாகத் உடன் சேர்ந்து பார்வையிட சென்றபோது I am sick with horror என்றார். எட்வினா மவுண்ட்பாட்டன் உட்பட நிவாரணப் பணிகளில் இறங்க வேண்டியிருந்தது. நேரு படேலிடம் we cannot encourage this business of Muslims leaving India என்றார். இந்தியாவின் அனைத்து முஸ்லீம்களையும் பாகிஸ்தானால் தாங்கமுடியாது என எடுத்துரைத்தார். டில்லியில் மட்டும் அகதிகள் முகாமில் 1.2 லட்சம் இஸ்லாமியர்கள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை ஆங்காங்கே குடியேற்றினால் ஏற்படும் விளவுகள் பற்றியும் ghettos ஆக வைப்பது குறித்தும் படேலுடன் தொடர்ந்து நேரு விவாதிக்கவேண்டியிருந்தது. அவர்கள் டில்லியிலேயே மறுகுடியமர்வு செய்யப்படவேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். காந்தியின் படுகொலையை தொடர்ந்து இந்துமகாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. பிப்ரவரி 1948ல் சாவர்க்கரும் கைது செய்யப்பட்டார். அமைச்சராக இருந்த ஷியாமா பிரசாத்திடம் கலவரங்கள் தனியும்வரையாவது இந்து மகாசாபாவின் காவிக்கொடியை அமைச்சர் வீட்டில் இறக்கிவையுங்கள் என்பதை ஷியாமா ஏற்கவில்லை. When communal violence broke out in East and West Bengal in the winter of 1949, Patel’s preferred solution was once again large-scale population exchanges. Instead, in April 1950, Nehru was able to persuade the Pakistan Prime Minister Liaquat Ali Khan to sign the ‘Delhi Pact’ with him, which asserted the right of minority communities in both India and Pakistan to equality of citizenship irrespective of religion – an underlining of Nehru’s victory over Patel on the issue of nationality for Muslims in India. என சொல்கிறது ஜகாரியாவின் பதிவு. இந்து மகாசாபவும் வகுப்புவாதமும் என்கிற கட்டுரை ஒன்றும் நேருவின் Recent Essays புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. நேரு பனாரஸ் பல்கலையில் நவம்பர் 12, 1933 ஆற்றிய உரைதான் அது. இந்து மகாசபாவின் பிரிவான ஆர்யகுமார் சபா இந்திய நாட்டில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை ஒழித்து இந்து ராஜ்யத்தை உருவாக்கவேண்டும் என பேசி வருகிறது. மகாசபாவின் தேசியம் என்னெவென்று நமக்கு புரிகிறது. தேசியம் என்கிற உருவில் குறுகிய வகுப்புவாதமே தவிர வேறல்ல. அந்நிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும். சோசலிசத்தை எதிர்த்தும் இந்து மகாசபா தலைவர்கள் பேசிவருகிறார்கள். அவர்களின் சந்தர்ப்பவாத முட்டாள்தனத்தை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியமுள்ளது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது. அவரது உரைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இப்பொழுதெல்லாம் தினசரி பத்திரிகைகள் என்னை விமர்சித்து எனக்கு டானிக் தந்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் எனது நன்றி மட்டுமே எனச்சொல்லி அதனை நேரு எதிர்கொண்டார். வருகிற விமர்சனங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல நேரு விரும்பவில்லை. தனிநபர் தாக்குதலில் இறங்காமல் பொறுப்புடன் பதில் தர அவர் நேரம் எடுத்துக்கொண்டார். ஆர்யகுமார் சபா அப்படி ஒரு தீர்மானத்தை இயற்றவில்லை என்கிறார்கள். அப்படி இயற்றாமல் வந்த தகவல் அடிப்படையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க நேரு தயங்கவில்லை. அதே நேரத்தில் இந்து மகாசபா வகுப்புவாத அமைப்பு என்று சொன்னது சரியே என்றார். முஸ்லீம் வகுப்புவாதம் பற்றி ஏன் பேசவில்லை என விமர்சித்தவர்களுக்கு, தான் இந்து பார்வையாளர்கள் மத்தியில் பேசும்போது அவர்களின் பெயரால் நடத்தபடும் அமைப்பின் பிற்போக்குத்தனத்தை சுட்டிக்காட்டவேண்டியது கடமை என உணர்ந்ததாக தெளிவுபடுத்தினார். ஆகா கான் போன்ற தலைவர்களையும் அவர் விமர்சிக்காமல் இல்லை. வட்டமேஜைக்கு சென்ற முஸ்லீம் தலைவர்களின் நடவடிக்கைகளையும் பிற்போக்கானது என்ற விமர்சனத்தை நேரு முன்வைத்தார். அரசியல்வகைப்பட்டு ஏற்க தகுந்த பொதுப்புள்ளிகள் இருந்தால் வகுப்புவாதிகளுடன் கூட வேலை செய்யமுடியும். ஆனால் முற்றிலும் எதிர்மறைத்தனமை என்றால் அது சாத்தியமாகாது- போராடவேண்டியும் இருக்கும் என்கிற பதிலையே நேருவிடம் நாம் பெறுகிறோம். “..personally I think that it is generally possible to cooperate with communalists provided the political objective is the same. But between progress and reaction, between those who struggle for freedom and those who are content with servitide, and even wish to prolong it, there is no meeting ground.. Honest communalism is fear ; false communalism is political reaction” இரண்டுவகை வகுப்புவாதத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. காங்கிரஸ் நடவடிக்கையில் சற்று தொய்வு ஏற்படும்போதெல்லாம் இந்து மகாசபா விமர்சனம் என்ற பெயரில் தனது பிற்போக்கு கொள்கைகளை முன் நிறுத்தும். It must be remembered that the communalism of a majority must of necessity bear a closer resemblance to nationalism than the communalism of a minority group. One of the best test of its true nature is whole relation it bears to the national struggle. என நேரு எழுதியிருந்தார். பெரும்பான்மை வகுப்புவாதம் தேசிய சாயலை கொள்ளும். ஆனால் தேசியப்போராட்டம் என வரும்போது அதன் முகம் வெளிப்படும் என்றார் நேரு. பாய் பரமானந்தஜி அவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பால் இந்துகளுக்கு நட்டம் எனப்பேசுவது தேசவிரோதமில்லையா என கேள்வி எழுப்பினார் நேரு. அவர் இந்து தேசியவாதம் எனப் பேசிவிட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பு என நடைமுறையில் இருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை நேரு முன்வைத்தார். நேரு இந்து மாநாடு ஒன்றில் மூஞ்சே பேசியதையும் (மே 17, 1933) சுட்டிக்காட்டினார். அவர்கள் மகாத்மாவுடன் ஒத்துழைப்பு என்பது இல்லை என்கின்றனர். சட்டரீதியானது எதுவோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பது என அறிவித்து ஒத்துழையாமைக்கு எதிராக நிற்கின்றனர் என்பது நேரு முன்வைத்த விமர்சனம். “The Mahasabha never had any faith in the kind of non coopeartion which Mahatma Gandhi has been preaching and Practising. It believes in the eteral Sanatan Law of stimulus and response, namely responsive cooperation. The Mahasabha holds that whatever may be the Constitution of the legislatures, they should never be boycotted” வகுப்புவாதிகள் எவ்வாறு பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதிலும் விடுதலை போராட்ட இயக்கத்திற்கு ஒத்துழைக்காமலும் இருந்தனர் என்பதை மற்ற தேசியத்தலைவர்களைவிட நேருவே அதிகமாக வெளிக்கொணர்பவராக இருந்தார். மக்களின் துன்பங்களை போக்கும் அவர்களின் ஆவல்களுக்கான போராட்டங்களில் இந்து மகாசபா நிற்காமல் தனக்கான உலகம் என ஒன்றில் நின்றுகொண்டிருக்கிறது. இன்று வகுப்புவாத அமைப்புகள் பின்னால் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் வகுப்புவாத மோதல் என்றால் ஏராளமானவர் இரையாகிவிடுவர். இவர்கள் மக்கள் கோரிக்கைக்காக நிற்கிறார்களா என்ற கேள்வியையும் நேரு எழுப்பினார். இந்து முஸ்லீம் சீக்கியர்கள் என பல்வேறு பகுதியினரின் இணைவில்தான் தேசியம் உருவாகிறது. இதன்பொருள் அவரவர் கலாச்சார தன்மைகள் ஒழியவேண்டும் என்பதல்ல என நேரு அக்கட்டுரையில் விளக்கி செல்கிறார். உயர்ந்த சிந்தனையாளர்கள் பலர் மதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதை தாம் அறிந்தாலும் தன்னை இந்து- இஸ்லாம்- கிறிஸ்துவம் என எம்மதமும் ஈர்க்கவில்லை என அவர் இந்தியாவை கண்டுணர்தலில் எழுதியிருந்தார். அவை மூடநம்பிக்கைகளையே, வறட்டுக்கோட்பாடுகளையே சார்ந்து இயங்குகின்றன. அறிவியல் வெளிச்சம் அங்குபடுவதில்லை. “Religion, as I saw it practised, and accepted even by thinking minds, whether it was Hinduism or Islam or Buddhism or Christianity, did not attract me,” … seemed to be closely associated with superstitious practices and dogmatic beliefs, and behind it lay a method of approach to life’s problems which was certainly not that of science." ஒழுங்கமைக்கப்படும் மதம் என்பது தன்னை பயமுறுத்துவதாக நேரு குறிப்பிடுவார். அதை பலநேரங்களில் கண்டித்தே அவர் பேசிவந்துள்ளார். வறட்டுத்தனம், மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் சுரண்டலுக்கு துணைப்போவதாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து அவர் தன் அறிவியல் பார்வையை முன்வைத்துக்கொண்டிருந்தார். நேருவும் மொழிபிரச்சனையும் இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்கவேண்டும் என பலரும் பிரிட்டிஷார் காலத்திலேயே முயற்சித்து வந்தனர்.. கிராமத்தினருக்கும் எளிமையாக புரியும், ஆகவே இந்துஸ்தானி என்றார் காந்தி. அதை உருது மற்றும் இந்தியின் கலவை என அவர் விளக்கிவந்தார். இரு எழுத்துமுறைகளில் மொழியா என்பதில் நேருவிற்கு சந்தேகம் இருந்தது. இந்தி மற்றும் உருது ஈர்ப்பு நேருவிடம் இல்லாமல் இல்லை - நன்றாகவே இருந்தது. 1915லேயே பொதுக்கூட்டங்களில் நமது உரைகள் ஆங்கிலத்தில் வேண்டாமே என்கிற நிலைக்கு நேரு வந்தார். 1923ல் காக்கிநாடா காங்கிரஸ் அமர்வில் அவர் இந்துஸ்தானியில் உரையாற்றினார். நேரு தனது தங்கை கிருஷ்ணாவின் திருமண அழைப்பிதழை இந்துஸ்தானியில் (ரோமன் வரிவடிவம்) அடித்திருந்தார். அவர் காக்கிநாடா உரையும் தடைபட்டது. அழைப்பிதழ் கூட பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்துஸ்தானிக்கு முதன்முதலாக ரோமன் வரிவடிவை பயன்படுத்திய தேசத்தலைவர் நேரு. காந்தியிடமிருந்து கூட அவருக்கு இவ்வரிவடிவம் பற்றிஏற்பு வரவில்லை. இந்துஸ்தானி பரவலான மக்களால் புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும் என நேரு தனது சுயசரிதையில் எழுதினார். சமஸ்கிருதம், பெர்சியன், ஆங்கிலத்திடமிருந்து கூட அதனால் பல வார்த்தைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் பன்மொழிகள் இருப்பதை எதிர்மறையாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. பொதுமொழியாக இந்துஸ்தானியிருக்கலாம். அதன் எளிமை, கலாச்சார பின்புலம், கூடுதலான மக்கள் பேசக்கூடியது என்கிற காரணங்களால் இந்துஸ்தானி இருக்கலாம் என்கிற கருத்தை நேரு முன்வைத்தார். இந்தி- உருது மோதல் என்பது இருந்துவருகிறது. அவற்றிற்கிடையில் இந்துஸ்தானி golden mean ஆக இருக்கலாம். வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் பலரும் பேசக்கூடியதாகவும் இந்துஸ்தானி இருக்கிறது. சுத்த இந்தியோ- உருதுவோ நவீன உலகின் தேவைக்குரிய மொழியாக இருக்கமுடியாது. ஏராள அந்நிய மொழிகளின் வார்த்தைகளை அவை எடுத்து வளரவேண்டும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இந்துஸ்தானியாக அவை வலுப்பெற்றால் நல்லது என நேரு கருதினார். 1937ல் காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு the question of National Language என்கிற கட்டுரையை எழுதியிருந்தார். மனிதர்கள் மொழியால் ஒன்றுபட்டால் தேச ஒற்றுமை வலுப்படும் . அதற்கு ஒரு பொதுமொழி தேவை. ஆங்கிலேயர்கள் சொல்வது போல் அது ‘இங்கிலீஷ்’ ஆக இருக்கவேண்டியதில்லை என்றே நேரு அதில் தெரிவித்திருந்தார். அந்த இந்துஸ்தானியும் வெறும் இருமொழி கலவை என்றில்லாமல் உருவாக்கப்படவேண்டும். அப்படி உருவாகும்போது மாநிலங்களில் அது விரைவாகப் பரவி நாட்டில் ஒற்றுமையும் வலுப்பெறும். இந்தியும் உருதும் நெருங்கிடவும் உதவும். தென் இந்தியாவில் அவசியமெனில் அவர்களின் வரிவடிவைக்கூட பயன்படுத்திக்கொள்ளலாம் என தென்னிந்தியா குறித்த விழிப்புடன் கருத்து தெரிவித்த தேசியத்தலைவராக நேரு இருந்தார். நேருவின் கட்டுரை காங்கிரஸ் கமிட்டியால் சிறுவெளியீடாக வந்தபோது காந்தியடிகள் அதற்கு முன்னுரை தந்ததுடன் ஹரிஜன் பத்திரிகையில் சில முக்கிய பத்திகளை வெளியிடவும் செய்தார். டாண்டன் தலைமையில் இந்தி என வழியுறுத்திவந்த குழுக்கள் இந்துஸ்தானி என்பதை நிராகரித்தன. அவர்களையும் மொழி பிரச்சனையில் அழைத்து செல்லவேண்டும் என காந்தி கருதினார். இந்தி சாகித்ய சம்மேளனத்தில் காந்தியும் உறுப்பினரானார். 1945ல் அவர்களை இணங்கவைக்க முடியவில்லை என்கிற அனுபவத்தையடுத்து காந்தி சம்மேளனத்திலிருந்து வெளியேறினார். நாடு பிரிவினைக்குள்ளான மனநிலையில் இந்துஸ்தானிக்கான குரல் வலுவிழந்து ‘இந்தி லாபி’ வலுப்பெற்றது. அப்போதும் கூட காந்தி ஆகஸ்ட் 10, 1947 ஹரிஜனில் எழுதினார். பெர்சியமயமாக்கப்படும் உருதுவிற்கோ, சமஸ்கிருதமயமாக்கப்படும் இந்திக்கோ இடம் கொடுக்கவேண்டாம் என காந்தி அறிவுரை வழங்கினார். காங்கிரஸ் இதில் உறுதியாக செயல்பட அறிவுறுத்தினார். காந்தியின் படுகொலைக்குப் பின்னர் இந்துஸ்தானி குரல் மேலும் பலவீனமானது. காங்கிரசிலேயே பலர் இந்தி என்றனர். மாவ்லாங்கர் போன்றவர் வகுப்பு ஒற்றுமை என்பது வெறிகொண்ட சிறுபான்மைக்கு பணிந்துபோவதால் வராது. சமஸ்கிருத இந்தியால்தான் இந்திய ஒற்றுமை வலுப்படும். ஆங்கிலம், அரபி, பெர்ஷியன் முற்றிலுமாக கைவிடப்படவேண்டும் என பேசினர். விடுதலை அடைந்தவுடன் 1948ல் பீகார் அரசாங்கம் மாநில மொழி இந்தி என்றது. பீகார் வங்காளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 1931 சென்சஸ் அடிப்படையைக் காட்டி பீகார் அரசாங்கம் இந்திதான் என்றது. ஒரு மாநிலத்தில் மாநில பெருவாரியான மக்கள் தவிர வேறு பெருவாரியாக பேசக்கூடிய மொழி இருந்தால் சற்று தாராள மனப்பான்மையுடன் அரசாங்கம் நடந்துகொள்ளவேண்டும் என நேரு அறிவுறுத்தினார். பள்ளிகளிலும் வங்கமொழிக்கு பதில் இந்தி என பீகார் அரசாங்கம் சென்றது. இதை எதிர்த்து புருலியா பகுதியில் 5000 மாணவர்கள் பள்ளிப்போவதை நிறுத்தினர். இச்செய்தியும் ஜவஹருக்கு சென்றது. பீகார் முதல்வர் கிருஷ்ண சின்ஹாவிற்கு நேரு தந்தி அனுப்பினார். எப்பகுதியில் எத்தாய்மொழி சார்ந்தவர் அதிகமோ அங்கு பள்ளிகளில் தாய்மொழிகல்வி தருவதே நலம் என நேருவின் அறிவுரை சென்றது. அபுல் கலாமும் உ பி யில் உருது மாணவர்கள் இந்தி நோக்கி தள்ளப்படுகிறார்களென்ற குறையை தெரிவித்தார். அபுல் கலாம் ஆசாத் நேருவிடம் கலந்துபேசி மாநிலங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் ஆறாம்வகுப்புவரை தாய்மொழி கல்வி இருக்கவேண்டும்- 7வது துவங்கி இந்தி இருக்கலாம் என்றனர். தென்னிந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை தட்சிணபாரத் ஹிந்திசபாவில் உரையாற்றிய நேரு மாநில மொழிகளின் முக்கியத்துவம் குறையாதென்றார். அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய சபையில் விரிவாக பேச இயலும் எனவும் உறுதியளித்தார். மொழி பிரச்சனையை வகுப்புவாத அரசியல் பிரச்சனையாக மாற்றுவது நல்லதல்ல என நேரு கருதினார். இந்தி ஆதரவாளர்களுக்கு அவர் வேண்டுகோளும் கொடுத்தார். ஆங்காங்கே பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிக்கு முக்கியத்துவம் என்பதே நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக இருக்கும் என எடுத்து சொல்லலானார். ஆங்கிலத்திடமிருந்தோ, பெர்ஷியமொழியிடமிருந்தோ எடுத்துக்கொள்ள தவறும் இந்தி வளராது எனவும் அவர் அறிவுறுத்திவந்தார். மொழி பிரச்சனையில் புரிதலை மேம்படுத்த அவர் பிப்ரவரி 13, 1949 நேஷனல் ஹெரால்டில் எழுதினார். பிரதமர் என்ற வகையில் அல்லாது மொழிபிரச்சனையில் ஆர்வமுள்ளவன் என்ற வகையிலும், இதில் அரசியல் மற்றும் வகுப்புவாத அம்சங்களும் வந்துவிடுவதால் எழுத ஆர்வமானேன் என்றார். நாகரி வடிவம், தேவைப்படும் இடங்களில் உருதுவரி வடிவத்தையும் பயன்படுத்தலாம். இரண்டையும் கற்கவேண்டும் என வற்புறுத்தவேண்டியதில்லை என நேரு சமாதானப்படுத்த முயன்றார். ஒவ்வொரு குழந்தையும் ஆரம்ப பள்ளி அளவில் தாய்மொழிக்கல்வி பெறுவது அவசியம் என்றார். மொழி பிரச்சனையில் குறுகிய மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்றே நேரு அறிவுறுத்திவந்தார். தாராசிங் போன்றவர்கள் குர்மிகி வடிவில் பஞ்சாபிய மொழி என்றனர். கருத்தொற்றுமையுடன் பஞ்சாபியர் சொன்னால் ஏற்கலாம் என்றார் நேரு. காங்கிரசின் செயற்குழு ஆகஸ்ட் 5, 1949ல் கூடி கீழ்கண்ட தீர்மானம் இயற்றியது . சிறுபான்மை மொழி மக்கள் 20 சதம் அளவிற்கு எங்கு இருக்கிறார்களோ அங்கு இரு மொழியிலும் ஆவணங்கள் கிடைக்கச்செய்வது அவசியம். அனைத்திந்திய அளவிற்கு State language ( தேசிய மொழி என பயன்படுத்தவில்லை) இருக்கலாம்- குறைந்தது 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் தொடரலாம் என அத்தீர்மானம் இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணயசபையில் செப்டம்பர் 1949ல் மொழி முன்மொழிவுகள் குறித்த விவாதம் வந்தது. டாண்டன் தனது இந்தி ஆதரவாளர்களுடன் இந்திக்காக கையெழுத்து இயக்கம் நடத்தினார். சேத் கோவிந்த தாஸ் தேசியமொழியை இந்தி/ இந்துஸ்தானி என சொல்லாமல் பாரதி என பெயரிட்டு அழைக்கவேண்டும்- இந்திக்கு புதிய வார்த்தைகள் எனில் அது சமஸ்கிருதத்திலிருந்து பெறமுடியும் என்றார். இந்தக் குழாம் தேசிய மொழி மாநாடு என ஒன்றை ஆகஸ்ட் 6-7 1949ல் டெல்லியில் கூட்டின. தேவநாகரியில் சமஸ்கிருத சாயல்கொண்ட இந்தி என தீர்மானம் இயற்றினர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் தொடரலாம். ஆங்கிலத்தை சிறிது சிறிதாக இந்தி மூலம் வெளியேற்றிடவேண்டும் என மாநாட்டில் பேசிக்கொண்டனர். இந்துஸ்தானியை ஏற்பதில்லை என்றனர். ஆகஸ்ட் 11 1949ல் நேரு அமிரித் கவுருக்கு எழுதிய கடிதத்தில் தேவநாகரி வடிவில் இந்தியை ஏற்பதுதான் மொழிப்பிரச்சனை வேறுபாடுகளை குறைக்கும் போல் உள்ளது என தெரிவித்தார். இந்திக்கு பெருகும் ஆதரவை இந்துஸ்தானிக்கு காணமுடியவில்லை என எழுதினார். இந்துஸ்தானி, உருது ஆகியவற்றை துணைகொண்ட இந்தி என்பது நலம். உருது என பேச ஆரம்பித்தால் சிலர் எதிர்க்க துவங்கிவிடுகின்றனர் என ஆட்சியாளராக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனையை விளக்கியிருந்தார். மதராஸ் பகுதியிலிருந்து வந்த கோரிக்கையான அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் என்பதை நேரு ஏற்றுக்கொண்டார். ராஜாஜியிடம் இது குறித்து அமிரித் பேசுவது அவசியம் என நேரு அறிவுறுத்தியிருந்தார். அரசியல் அமைப்பு வரைவுகுழுவில் விவாதிக்க ராஜாஜி, அமிரித் கவுர், அம்பேத்கார், டாண்டன், கே எம் முன்ஷி, என் ஜி அய்யங்கார், அபுல் கலாம் ஆசாத் இருந்தனர். இந்தியின் தாராள வரையறைக்கோ, இந்துஸ்தானி குறித்தோ கமிட்டி ஏற்க முன்வராததால் ஆசாத் வெளியேறினார். சென்னை சந்தானம் அரபி எண் முறை என்றார். இந்தி ஆதரவு குழு நாகரி எண்முறை என்றது. என் ஜி அய்யங்காருக்கு நேரு கடிதம் எழுதினார். சிறப்புக்குழுவில் எண் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் நடப்பதை கவலையுடன் பார்ப்பதாகவும் சர்வதேச வடிவான இந்திய எண்முறை என அழைப்பதில் எந்த பலவீனமும் வேண்டியதில்லை என நேரு அறிவுறுத்தினார். (it was right to use the phrase “the international form of Indian numerals”.) மொழி குறித்த சர்ச்சைகளில் உடன்பாடு உருவாக்க முன்ஷி அய்யங்கார் பார்முலா என்ற வகையில் செப்டம்பர் 12 1949ல் மொழிக்கொள்கை முன்மொழிவுகளை வைத்தனர். நியாயமான கருத்தொற்றுமையை எட்டியதாக அய்யங்கார் தெரிவித்திருந்தார். பல சமரசங்களுடன் முன்மொழிவுகள் எட்டப்பட்டன. சர்வதேச எண்முறையுடன் நாகரி எண்முறை, தென் இந்தியாவிற்காக அவசியமென்றால் 15 வருடங்கள் கடந்து ஆங்கிலம் என்பதை நாடாளுமன்றம் முடிவெடுக்கலாம், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொழி கமிஷன், அதன் பரிந்துரைகள் நாடாளுமன்ற ஒப்புதலுடன் நிறைவேற்றம் போன்ற பல முன்மொழிவுகள் தரப்பட்டன. இந்தியை அலுவல் மொழி என்றனர். தேசிய மொழி என்கிற பதமில்லை. உச்சநீதிமன்ற, நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் என்றனர். இந்திக்காக உரத்துக் குரல்கொடுத்தோர் இதை பெரிதாக்க முடியவில்லை. எ ஸ் வி கிருஷ்ணமூர்த்தி ராவ் என்பார் ’இந்தி வட்டாரமொழிதான் - தமிழ், தெலுங்கு, கனடா, மலையாளம், பெங்காலி, குஜராத்தி போன்றவற்றையும் தேசியமொழி என சொல்லவேண்டும் என்றார். பண்டிட் லஷ்மிகாந்த் மைத்ரா இந்திக்கு பதிலாக சமஸ்கிருதமே தேசிய மொழியாக்கப்படலாம் . இந்தி கற்பது எளிமை என்றால் சமஸ்கிருதமும் எளிமைதான். அதையும் Schedule of Indian languagesல் கொண்டுவரக்கோரினார். உருதுவிற்கு போட்டி என்றில்லாமல் அது இந்தி லாபியை விமர்சித்தே அதை அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. அபுல்கலாம் இந்துஸ்தானியே சரியானது. வடஇந்தியாவின் மொழிகளை தழுவியத்தன்மை அதற்கு இருக்கிறது. அதில் இந்தியும் உருதும் இருக்கின்றன. அனைத்தையும் உள்வாங்கும் இந்துஸ்தானியே சிறந்தது என்றார். பிராங்க் அந்தோணி ஆங்கிலம் செட்யூலில் சேர்க்கப்படாதது வெறுப்புணர்வால்தான் என்றார். அவர் ரோமன் வரிவடிவத்தில் புதிய இந்தி அமையட்டும் என்றார். மதராஸ் சுப்பராயனும் ஆங்கிலமும் செட்யூலில் இடம்பெறவேண்டும் என்றார். டாண்டன் இந்தியில் எண்முறை, அதற்கு ரெஃபரண்டம் என்றதை ஷியாமாபிரசாத் கூட ஏற்கவில்லை. லஷ்மிகாந்த் மைத்ரா, தாஸ், என் வி காட்கில், கிருஷ்ணசாமி பாரதி, துர்காபாய், சுப்பராயன் ஆகியோர் இந்துஸ்தானியே மேலானது என்றனர். அம்பேதகார் மொழிவாரி மாகாணக் கோட்பாட்டை அங்கீகரிக்கும் அதேவேளையில், இந்தியாவின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார். “மொழி அடிப்படையில் மாகாணங்களை மாற்றியமைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் அதே சமயம், ஒவ்வொரு மாகாணத்தின் அதிகாரபூர்வ மொழியும், மத்திய சர்க்காரின் அதிகாரபூர்வ மொழியும் ஒரே மாதிரி இருப்பதற்கு அரசியல் சட்டப்படி ஏற்பாடு செய்யவேண்டும். மொழிவாரி மாகாணங்களுக்கான கோரிக்கையை இந்த அடிப்படையில் மட்டுமே நான் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்” " ஒரு மாகாணத்தின் மொழி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மொழியிலிருந்து மாறுபட்டிருக்கும் சமயத்தில் அந்த மொழியைக் குறிப்பிட்ட மாகாணத்தின் அதிகாரபூர்வ மொழியாக ஆக்குவதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்" " மொழிவாரி மாகாணத்துக்கும், ஒரு மாகாணத்தின் மொழிக்கும் எத்தகைய சம்ப்ந்தமும் இல்லை என்பதே என் கருத்து. மொழிவாரி மாகாணங்கள் என்ற ஏற்பாட்டில், தவிர்க்கமுடியாதபடி மொழிக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் மாகாணத்தை அமைப்பதுடன் எல்லைகளை வரையறுப்பதுடன், அதன் பங்கு தீர்ந்துவிடுகிறது.." “… மாகாணத்தில் பண்பாட்டு ஒற்றுமை ஏற்கனவே நிலவி வருகிறது; பொதுவான வரலாற்று மரபு, சமூகப் பழக்க வழக்கங்களின் பொது உணர்வு போன்ற மொழி அல்லாத இதர பல அம்சங்களாலும் அதற்கு உயிரூட்டம் அளிக்க முடியும். ஒரு மாகாணத்தில் ஏற்கனவே நிலவியிருக்கக்கூடிய பண்பாட்டு ஒற்றுமையைக் காத்துப் பேணுவதற்கு, அதிகார செயல்பாடுகளில் மாகாண மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்ற தேவையில்லை. ஒரு மகாராஷ்ட்ரன் வேறு மொழி பேசினால் அவர் மகாராஷ்டிரியனாக இருக்கமாட்டார் என்ற அச்சம் மாகாணவாசிகளுக்கு இல்லை.” அதேபோல் தமிழன், ஆந்திரன், வங்காளிக்கும்.. என அதை அம்பேதகார் நீட்டித்து சொல்கிறார். மொழிவாரி மாகாணம் ஆபத்தில்லை- ஆனால் அதிகாரபூர்வ மொழியுடன் என்பது ஆபத்தானது என அம்பேத்கர் எச்சரித்தார். " அதிகாரபூர்வமற்ற மொழியை அதிகாரபூர்வ மொழி கலாச்சாரத்துறையிலிருந்து அகற்றுவதில் வெற்றிபெறுவது மிக நன்மையே ஆகும். அந்த முயற்சியில் அது தோற்றுப்போனாலும் பெரும் தீங்கு நேர்ந்துவிடாது…. இப்போது ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாகவும், மாகாணமொழியை அதிகாரபூர்வமற்ற மொழியாகவும் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையைக் காட்டிலும் அது சகிக்கவொண்ணாததல்ல. ஒரேயொரு வித்தியாசம் யாதெனில், அதிகாரபூர்வ மொழி ஆங்கிலமாக இருக்காது, வேறொரு மொழியாக இருக்கும். ( 1948 மொழிவாரி மாகாணப் பொறுப்பாண்மைக் குழுவிற்கு அளித்த அம்பேதகர் அறிக்கை) அரசியை நிர்ணயசபையில் மொழி பிரச்சனைக்குத்தான் 300 திருத்தங்கள் என்கிற அதிக அளவு திருத்தங்கள் கொடுக்கப்பட்டன. நேருவின் பன்முகப் பார்வை என்பதாலே உருதுவும் செட்யூல்டில் இடம் பெறமுடிந்தது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. மொழி எந்த அளவிற்கு ஒற்றுமைக்கான காரணியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது வேற்றுமை உருவாக்கும் காரணியாகவும் இருக்கிறது என்பதை கவனமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றார் நேரு. இந்தி அதிகாரபூர்வ அலுவல் மொழி என்பதை அரசியல் சட்டம் ஏற்றது. இந்தியல்லாத பகுதிக்கு 15 ஆண்டுகள் “grace period” உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசுடன் ஆங்கிலம் வழியே தொடர்புகொள்ள வழிவகை செய்யப்பட்டது.. இந்தி- தேவநாகரி வரிவடிவம்- சர்வதேச முறையில் எண் முறை என்பதை ஏற்றனர். " 343 1. தேவநாகரி வரிவடிவிலுள்ள இந்தி, ஒன்றியத்து அரசு அலுவல் மொழியாக இருக்கும். ஒன்றியத்து அரசு அலுவல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவேண்டிய எண்களின் வடிவம், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவமாக இருக்கும். 2. எது எவ்வாறு இருப்பினும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பதினைந்து ஆண்டுக் காலஅளவிற்கு ஆங்கில மொழியே, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு பயன்படுத்தப்பட்டவாறு ஒன்றியத்து அரசு அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும். வரம்புரையாக: மேற்சொன்ன கால அளவின்போது, ஒன்றியத்து அரசுஅலுவல் நோக்கங்களில் எதற்கும் ஆங்கில மொழியோடும்கூட இந்தி மொழியையும், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவத்தோடுங்கூட, அந்த எண்களின் தேவநாகரி வடிவத்தையும் பயன்படுத்துவதற்கு, குடியரசுத்தலைவர் ஆணையின்வழி அதிகாரமளிக்கலாம். 3. இந்த உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன பதினைந்து ஆண்டுக் காலஅளவிற்குப் பின்பும், நாடாளுமன்றம் சட்டத்தினால் அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படும் நோக்கங்களுக்காக அ. ஆங்கில மொழியினை அல்லது ஆ. எண்களின் தேவநாகரி வடிவத்தினைப் பயன்படுத்துவதற்கு வகை செய்யலாம் மொழிவழி மாநில கருத்தை காங்கிரஸ் 1928லேயே தெளிவுபடுத்தியிருந்தது. ’If a province has to educate itself and do its daily work through the medium of its own language, it must necessarily be a linguistic area." 1952ல் பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு மக்களுக்கான ஆந்திரா கேட்டு உண்ணாநோன்பிருந்து அக்டோபர் 20, 1952ல் தியாக மரணமுற்றார். டிசம்பர் 18, 1952ல் நேருவின் காபினட் கூடி மொழிவாரி மாநில ஒப்புதலை தந்தது. இந்தியாவின் பெடரல் தன்மைக்கு பாதிப்பில்லாத மொழிவாரி மாநிலங்கள் அமைவதில் தவறில்லை என்ற கருத்து வலுப்பெற்றது. இதற்காக சையது பாசல் அலி, எச் என் குன்ஸ்ரூ, கே எம் பணிக்கர் கமிட்டியை அரசு அமைத்தது. கமிட்டியும் தனது அறிக்கையை செப்டம்பர் 30, 1955ல் தந்தது. நேரு மொழிவழி மகாராஷ்ட்ரா அமைவதில் உடன்பட்டார். தமிழகம் சார்பில் 1956ல் "English should continue to be the official language of the Union and the language for communication between the Union and the State Governments and between one State Government and another’. எனக்கோரி ராஜாஜி, பெரியார், அண்ணா உள்ளிட்டு கையெழுத்திட்டு அனுப்பினர். டாக்டர் ஜாகிர் ஹூசைன் தலைமையில் குடியரசுத்தலைவரிடம் பிப்ரவரி 15, 1954ல் மெமோரண்டம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் 27 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டிருந்தது. அரசியல் சட்டப்பிரிவு 347ன் படி “a substantial proportion” மக்கள் தொகை மாநிலம் ஒன்றில் கோரினால் அம்மொழியையும் அலுவல்மொழியாக்க அவர்கள் கோரினர். அபுல்கலாமும் இதன்மீது நேருவின் நடவடிக்கையை வற்புறுத்தினார். மார்ச் 12, 1954ல் இதற்கு பதில் அளித்த நேரு அரசியல் மற்றும் அரசியல் சட்ட நெருக்கடிகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தார். மாநிலங்கள் புறக்கணித்தால் பிரச்சனைகள் எழலாம் என அவர் எண்ணினார். இஸ்லாமியர்கள் தங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க எவரும் இல்லை என வருத்தத்தில் இருப்பதை நாம் உணரவேண்டும் என நேரு லால்பகதூருக்கு ஜனவரி 7, 1957ல் கடிதமாக எழுதினார். இதற்கு பல உளவியல் நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். முக்கிய காரணியாக உருது பிரச்சனை இருக்கிறது என நேரு தன் மனம் திறந்து அதில் குறிப்பிட்டிருந்தார். பீகார், உத்தரபிரதேச நிலைமைகள் அவரை இவ்வாறு எழுத செய்தன. காங்கிரசிலிருந்து தள்ளிப்போய் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றை நாடும் சூழலையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அடுத்து நடந்த உருது மாநாட்டில் (பிப்ரவரி 1958) கலந்துகொண்டு நேரு உரையாற்றினார். மொழிவளம் கொண்ட மக்கள் வாழ்வுடன் இரண்டற கலந்த மொழி வீழாது. ஒரு மொழியை வெறுத்து ஒடுக்கித்தான் இன்னொரு மொழி வளரவேண்டும் என்கிற பார்வை தவறானது. அரசே ஒரு மொழியை வளர்ப்பது- ஒடுக்குவது என்பதை எண்ணக்கூடாது. அரசியல் சட்டம் 14 மொழிகளில் உருதுவும் ஒன்று என்பதை ஏற்றுள்ளது. எனவே இம்மொழிகளை ஒடுக்குவது என்பது எழவில்லை என்ற வகையில் அவரது உரை அமைந்தது. நேரு அவர்கள் 1963 முதலே அலுவல்மொழி சட்டம் குறித்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். THE OFFICIAL LANGUAGES ACT, 1963 Section 3. Continuance of English language for official purposes of the Union and for use in Parliament. 1[3. Continuance of English language for official purposes of the Union and for use in Parliament.— (1) Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,— 1. for all the official purposes of the Union for which it was being used immediately before that day; and 2. for the transaction of business in Parliament: ஆங்கிலம் தொடரும் என்பது இச்சட்டப்படி மீண்டும் உறுதியானது. ஆங்கிலத்திற்கு 15 ஆண்டுகள் என்பது ஜனவரி 26, 1965ல் முடிகிறது என்பதை அறிந்து "இந்திலாபி’ இந்திக்கு முக்கியத்துவம் என வற்புறுத்த துவங்கியது. மொரார்ஜி, நந்தா போன்றவர்களுடன் பிரதமராக இருந்த லால்பகதூரும் இந்தியின் அவசியத்தை உணரவேண்டும் என்றார். இந்த வெம்மையை உணர்ந்த அண்ணா அவர்கள் லால்பகதூருக்கு கடிதம் எழுதினார். குடியரசு தினவிழாவை தி மு க கட்சியும் சிறப்பாக கொண்டாட விழைகிறது. தேவையில்லாத அறிவிப்புகளால் நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்பது அண்ணாவின் வேண்டுகோள். இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களுடன் “Hindi never, English ever!”, மாணவர்கள் போராட்டம் எழுந்தது. தீக்குளித்தல் உட்பட போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. எதிர்வினையாக இங்கிலீஸ் ஏகாதிபத்தியம் என இந்திலாபி போராட்டங்களை உருவாக்கியது. பிரதமர் நேருவின் உறுதிமொழி தொடரும் என லால்பகதூர் அறிவிப்புகளை வெளியிட்டார். மாநிலங்கள் தங்கள் மொழியை பயன்படுத்துதல், மாநிலங்கள் மத்தியில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருத்தல், இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆங்கில வழியில் தொடர்பு, ஐ ஏ எஸ் தேர்வுகள் ஆங்கில வழியில் ந்டக்கும் போன்றவை அறிவிப்பின் சாரமாக இருந்தது. `First, every State will have complete and unfettered freedom to continue to transact its own business in the language of its own choice, which may be the regional language or English. Second, communications from one State to another will either be in English or will be accompanied by an authentic English translation. Third, the non-Hindi States will be free to correspond with the Central Government in English and no change will be made in this arrangement without the consent of the non-Hindi States. Fourth, in the transaction of business at the Central level English will continue to be used’. Fifth assurance — that the All India Civil Services Examination would continue to be conducted in English rather than in the medium of Hindi alone. இந்திமொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிராக காவலனாக இன்றுவரை நேருவின் உறுதிமொழியே நிற்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவ முடியாது. ஜனசங்கின் இன்றைய முகமான பா ஜ க கூட இந்த ‘லட்சுமணன் கோட்டை’ இதுவரை தாண்டிவிட முடியவில்லை. நேருவின் இந்த பங்களிப்பிற்கு இந்தி திணிப்பை எதிர்ப்போர் நன்றி பாராட்டவேண்டும். உதவிய நூல்கள் - Nehru by Jagat s Bright - Nehru and parliament – Edited by Subash Kasyap - Public Administration and Nehru - Institution of Public Administration - Nehru and Secularism – R K Misra - Nehru A Political Biography – Michel Brecher - Nehru’s conception of Socialism by Savya Sachi EPW Article - Nehru, ideology and practice -E. M. S. Namboodiripad - The Gentle Colossus by Hiren Mukherji - Nehru by Benjamin Zachariah - Jawaharlal Nehru and the Politics of National Language (1937- 50) - Iliyas Husain - The Nehru Years in Indian Politics- Edinburgh Papers by Suranjan Das - The Charka and the Rose Edited by Naveen Joshi - Gandhi and Nehru - Chalapathi Rau - 1933 Poona Statement published by Nehru - Shodh Ganga papers ஆசிரியரின் பிற நூல்கள் [rpr1.jpg] 1. மார்க்சியத் தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ideas of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 10. காந்தியைக் கண்டுணர்தல் சிறு வெளியீடுகள் 1. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 2. சிகாகோ மேதின தியாகிகள் 3. பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிசமும் 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 5. பிரடரிக் எங்கெல்ஸ் நட்பின் சிகரம் 6. நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் www.pattabiwrites.in FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.