[] 1. Cover 2. Table of contents நெருப்பாற்றினுள் ஓர் உள்நீச்சல் நெருப்பாற்றினுள் ஓர் உள்நீச்சல்   கவிஞர் அமுதாராம்   munaivarmaniganesan@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/neruppatrinul_oor_ullneechal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation நூல் விவரம் நூலின் பெயர் : நெருப்பாற்றினுள் ஓர் உள்நீச்சல் ஆசிரியர் பெயர் : அமுதாராம் வகைமை : கவிதைத் தொகுப்பு பக்கங்கள் : 82 வெளியீடு : தமிழருவி வெளியீடு, மன்னார்குடி, 614001 தொடர்புக்கு : 7010303298 விலை : ₹ 100/= முதல் பதிப்பு. : ஏப்ரல் 2024 உங்களுடன் கொஞ்சம்…. சகோதர சகோதரிகளே! வணங்கி மகிழ்கிறேன். மீண்டும் என் கவிதை முகத்துடன் உங்கள் முன் இப்போது நான். வாருங்கள்! சூடாக ஆவி பறக்கும் ஒரு கோப்பைத் தேநீரைப் பருகிக் கொண்டே நான் உங்களுக்காகப் படைத்து வைத்திருக்கும் கவிதைகளையும் கொஞ்சம் கொறித்துச் சுவையுங்கள்! தோழமையுடன்… அமுதாராம் நெருப்பாற்றை நீந்திக் கடப்போம்! குணமாக எடுத்துச் சொல்லுங்கள்! குற்றவாளிகள் போல் வையாதீர்கள்! எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்! கொடுங்சொல்லால் காயப்படுத்தாதீர்கள்! பக்குவமாகச் சொல்லித் தாருங்கள்! பழிச்சொல்லால் அடிக்காதீர்கள்! உரிமைக்கான குரலை ஆதரிக்க முன்வாருங்கள்! ஊதியத்திற்கான கூக்குரல் என அந்நியப்படுத்திப் பார்க்காதீர்கள்! நியாயத்தை உள்ளுணர்ந்து பேசுங்கள்! அநியாயம் என்று பிதற்றித் தூற்றாதீர்கள்! ஆகப் பெரியவன் ஆசிரியன் என்னும் சமூகம் முன்னோக்கிச் செல்கிறது… அற்பன் எனக் கூச்சலிடும் கூட்டம் பின்னோக்கி அல்லவா போகும்! தம் தவறுகளைக் கடந்து மீண்டு வரும் எம் ஆசிரியப் பேரினம்! மீண்டுமொரு உரிமைக்கான போராட்டத்தில் நிச்சயம் தோள்கொடுக்கும் இதே நம் பொதுஜனம்! துவண்டு கிடக்கும் எனதருமை தோழனே! இது - தோல்வியல்ல வெற்றிகரமான தற்காலிக பின்னடைவே! நீந்திக் கடப்போம் இந்த நெருப்பாற்றை! நீதி வெல்லும் தூரம் வெகுதொலைவிலில்லை! அதுநாள் வரை நெருப்பாற்றினுள் நாம் உள்நீச்சல் அடித்துக் கொண்டிருப்போம்! விழித்தெழு தமிழா! விழித்தெழு! கண்முன் காணும் அநியாயங்களை விழிகள் மூடிக் கடந்து போகாமல் உனக்குள் ரௌத்திரம் பழகி அகிம்சை ஆயுதம் தரி! உன்னைச் சுற்றிப் பற்றிப் படரும் நச்சு சாதி வேரில் அறிவுக் கோடரியை ஓங்கிப் போடு! சக மனிதரைக் கொல்லும் தீங்கு விளைவிக்கும் மதவெறியினை மானுட மண்வெட்டி கொண்டு ஆழப்புதை! சாமானியனை நசுக்கும் திறந்தவெளிச் சந்தைப் பொருளாதாரத்தை சுதேசியெனும் கூர்கடப்பாறையால் தகர்த்தெறி! நாட்டின் வளங்களையெல்லாம் பெருவணிக முதலாளிகளின் நல்வாழ்விற்காகவே சுரண்டிக் கொழுக்கும் சூழ்ச்சி அரசியலுக்குத் ஒருவிரல் புரட்சியால் தாமதிக்காமல் பழுக்க சூடு வை! இனி -வீட்டுக்கொரு மரம் மட்டுமல்ல… மனிதமும் வளர்ப்போமென நெஞ்சுறுதி கொள் எனதருமை தோழனே! உழைக்கும் மனுஷி அதிகாலையில் முதல் ஆளாக எழுந்து வாசல் பெருக்கிக் கோலம் வரைந்து அலைந்து திரிந்து தண்ணீர் சேகரித்து குவிந்த பாத்திரங்கள் அழுக்குப் போக்கி வேகும் உயிரை நீரில் அமிழ்த்தி அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டி அரக்கப்பரக்க ஓடியாடி சமையல் முடித்து அலும்புப் பிடித்த பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு கணவருக்கும் சேர்த்து சாப்பாடு கட்டி கன்னம் சிவக்க பரிமாறியதில் திட்டுவாங்கி பற்றியெரியும் வயிற்றில் பசியைக்கொட்டி விரைந்தோடும் நடையோட்டத்தில் நேரம் சுருக்கி அலுவலகக் கதவை அச்சத்துடன் திறந்து பூனையாய் உட்புகும் அதிகார அறையானது கழுத்தைநெரித்து மன்னித்து வெளியில் தள்ள தாகம் தீரத்தீர வழிந்தோடும் சுடுகண்ணீரை வாரிப் பருகும் காலம் கடிந்து வேர்வையுடன் வழியும் எச்சில்பார்வைகளைக் கழுவி படுக்கையில் களைத்து கண்கள் சொருகினால் குடலைக் குமட்டும் பிராந்தி நெடிகளோடு உடலை உணவாய் உயிருடன் குதறும் தாலி கட்டிய மிருகம் அவளை! குரு தட்சணை நான் யாருக்கு வாழ்த்துச் சொல்ல?… கடைநிலையில் தள்ளப்பட்ட இடைநிலை ஆசிரியச் சகோதரனுக்கா? உபரி என்று உதறி அங்கன்வாடிக்குப் பணியிறக்கம் செய்யப்பட்ட நடைபிண சகோதரிக்கா? நாள்தோறும் நிம்மதியிழக்கச் செய்து நித்தமும் புதுப்புது ஆணைகளிட்டுப் பதற்ற நோய்த்தொற்றிப் பீடித்தலையும் அபலைகளுக்கா? பள்ளிகள் இணைப்பால் தலைமையாசிரியர் தகுதிக் குறைப்பால் மன அழுத்தத்தில் புழுங்கிச் சாகும் அப்பாவி மூத்த ஆசிரியர்களுக்கா? உரிமைக்காகக் குரல் கொடுத்து வீதிக்கு வந்த காரணத்தால் சிறைக்குத் தள்ளப்பட்ட கடமைச் செயல்வீரர்களுக்கா? ஆயிரம் இன்னல்களை ஆட்சியாளர்கள் இழைத்து வரும்போதும் மாணவர் நலனே மகத்தான பணியென்று மாடாக உழைக்கும் அப்பிராணிகளுக்கா? தொண்டை கிழிய ஈட்டும் சொற்ப ஊதியத்தில் வீட்டுக்கடன் உள்ளிட்ட வட்டிக்குப் போக ஈரத்துணிக் கட்டிக்கொண்டு எஞ்சியதைப் பள்ளியில் கொட்டும் பிழைக்கத் தெரியாத ஏமாளிகளுக்கா? ஓய்வறியாமல் ஓடோடி ஓடோடி தேய்ந்து இறுதிக்காலத்தில் பெண்டாட்டிப் பிள்ளைகளுடன் பெருஞ்செலவு நோய்களுடன் உயிர்ப் பிழைக்க ஓய்வூதியமும் இன்றித் தவிக்கும் அப்பாவிகளுக்கா? யாருக்கு நான் வாழ்த்துச் சொல்ல?… எங்கே போனாய் எம் இறைவா? இறைவா! இறைவா! எங்கே சென்றாய்? இருகை கூப்பி கூவி அழைக்கிறோம்! வா. ஆட்கொல்லி நோய்க்கு அழிவதா மனித இனம்? கொரோனா கிருமிக்கு நாசமாகுவதா உயிர்க் கோளம்? ஊரடங்கி இருக்கிறோம் வீடடங்கித் தவிக்கிறோம் யாருமற்றுத் தனிமையில் நாதியற்று அழுகிறோம் இறைவா! எங்கள் இறைவா! நீ எங்கே சென்றாய்? தீட்டுப்பட்டு வாழும் கொடுமை இப்போது புரிய வைத்தாய்! பிளவுபட்டு சுகித்த இன்பம் இப்போது கசக்க செய்தாய்! மனிதம் புதையுண்ட மண்ணுலகில் மானுடத்தை மறுபடியும் முளைக்க வைப்பாயா? பேராசை ஒழிந்த பூவுலகில் புத்தம்புதியதொரு விடியலைப் பிறக்கச் செய்வாயா? இறைவா! எங்கள் இறைவா! நீ எங்கே போனாய்? கர்ப்பிணிப் பெண்களைக் காத்திட வேண்டும்! குழந்தைகள் முதியவர்கள் பாதுகாத்திட வேண்டும்! அப்பாவி ஏழை எளியோர் மகிழ்ந்திட வேண்டும்! அநாதைகள் யாருமில்லா நிலை உருவாகிட வேண்டும்! சாதிமத மொழிஇன பேதங்கள் ஒழிந்திட வேண்டும்! சுற்றுச்சூழல் மாசில்லாமல் இனிதாகிட வேண்டும்! தீங்கிழைக்கும் தீநுண்மிகள் அழிந்திட வேண்டும்! ஏங்கித்தவிக்கும் பூமியில் மனித உருவில் நீயே எம்மை ஆள வேண்டும்! இறைவா! எங்கள் இறைவா! நீ உடனே வருவாய்! மருத்துவராய் செவிலியராய் தூய்மைப் பணியாளராய் எம்மைக் கொடும் பேரிடரிலிருந்து மீட்பாய்! ஊரடங்கு வேளையிலே… ஊரடங்கு வேளையிலே நாங்கடங்கித் தவிக்கிறோமே கொரோனா கொள்ளைநோயிக் கொன்னுத் தொலைக்குதே! கொத்துக்கொத்தா மனுசக்கூட்டம் செத்து மடியுதே! கோவிலுல சாமியெலாம் ரொம்பநாளாக் காணலையே! வைத்தியரா தாதியரா தூய்மைப் பணியாளராச்சுதோ! (ஊரடங்கு வேளையிலே) பொழப்புக்கு வழியில்ல சோத்துக்கு வக்குல்ல எரியாத அடுப்புக்குள்ள பசிப்பூனைக் வசிக்குதே! எரியுற எங்கவயிறுகள பாத்துஅழுதுக் கெடக்குதே! ஊருசனம் அண்டாத சேரிக்குள்ள எம்மக்கா! கைக்கழுவிப் போகாதீங்க என்நாட்டுமக்கா! (ஊரடங்கு வேளையிலே) காளியாத்தா மாரியாத்தா மேரியம்மா ஆண்டவரே கூப்பாடு போட்டாலும் காத்தருள மாட்டீயளா? சும்மாடு கூடையிலே ஆக்கொல்லிக் கிருமிகளா? அழுதழுது மடிஞ்சாலும் நிமிந்து நாங்க எழுந்துருவோம்! வெள்ளாமை நித்தம்செஞ்சு குறுநோய்க்கும் பொங்கவைப்போம்! (ஊரடங்கு வேளையிலே) ஆவல் உன் வீட்டு வாசலில் மாக்கோலமாக வரவேற்பறையில் அணையா விளக்காக வசிப்பறை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்ட அலங்காரப் பொருட்களாக ஒப்பனை அறையில் சுருண்டு கிடக்கும் உதிர்ந்தவையாக நாளும் உலர்ந்து வாடிய நான் சூடியவையாக படுக்கையறையில் குரலற்றுக் களைந்து கிடக்கும் நிராசைகளாக அலமாரிகள் முழுக்க மூச்சு முட்டும் புடவைகளாக தங்கம் முதற்கொண்டு கண்ணாடி வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் இத்யாதிகளாக வழிபாட்டு அறையில் எல்லாவித கடவுள் படங்களுடன் புகையும் நறுமணமாக சாப்பிடும் மேசையின் மேல் ஆறிப்போன மிச்சம் மீதிகளாக ஓய்வறையில் ஒட்டிய சிறியதும் பெரியதுமான பலவண்ண பொட்டுகளாக சமையலறை எங்கும் அடுக்கியும் இறைந்தும் கிடக்கும் பாத்திரம் பண்டங்களாக கொல்லைப்புறத்தில் குட்டிக் குட்டித் தொட்டிப் பூச்செடிகளாக மொட்டை மாடியில் அடித்துத் துவைத்துக் காயும் அன்றாட துணிமணிகளாக கழுவும் தொட்டிக்குள் மலைபோல் குவிந்து கிடக்கும் எச்சில் பாத்திரங்களாக பளிங்கு போல் மின்னும் தரையெங்கும் படிந்து கிடக்கும் தூசுகளாக… வீடு முழுதும் நீக்கமற நிறைந்து கிடக்கும் நான்… உன் அழகான இதயத்தில் எவ்வாறு இருக்கின்றேன் என் பிரியத்திற்குரிய சிடுமூஞ்சிக் கணவா? உங்கள் தொடர்பெல்லைக்கு அப்பால் எங்கள் உலகம்! உங்களால் நாங்கள் கடவுளாகவும் துதிக்கப்படுகிறோம் பல சமயங்களில் அஃறிணைகளாகவும் மிதிக்கப்படுகிறோம் லாரிகள் ஏறி சாகும் ஆறுகளுக்கெல்லாம் கூட எங்கள் பெயர் தாம்! இந்த தேசம் கூட அழைக்கப்படுவது எம் பெயரே! சடங்குகள் பின்னிய வலைக்குள் மூச்சு முட்டும் எங்கள் பிஞ்சு உயிர்! எந்தவோர் அதிகாரமும் இல்லாத இல்லத்தின் பேரரசிகள் நாங்கள் குடும்ப விளக்கும் நாங்களே! குத்து விளக்கும் நாங்களே! குடியால் மூழ்கும் குடும்பத்தைக் கரை சேர்க்கும் துடுப்புகளும் நாங்களே! ஓய்வறியா உழைப்பாளிகளும் நாங்களே! ஆட்டுக்கறி என்றால் எலும்பு கோழிக்கறி என்றால் கழுத்து மீன்குழம்பு என்றால் வால் நண்டுக் குழம்பில் கால் இப்படி மிச்சம் மீதி தின்னும் பிழைப்பு துணிக்கடைகளில் நாங்கள் தொலைந்து போகவோ நகைத்தாங்கிகளாய் நாங்கள் நடமாடவோ துளியும் எங்களுக்கு விருப்பமில்லை! உங்கள் இரவல் மூளை இனி எமக்கு வேண்டவே வேண்டாம்! நீங்கள் சொல்வதைச் சொல்லும் கிளிப்பேச்சு நாங்கள் ஒப்பித்தது போதும்! உங்கள் விருப்ப அசைவுகளுக்கேற்ப நாங்கள் ஆடிக் களைத்து விட்டோம்! தங்கக் கூண்டில் அடைத்து வைத்து எங்கள் மகிழ்ச்சியைக் காண விழையாதீர்கள்! எங்களுக்கேயான எங்களின் விரிவானம் உங்கள் பூமிக்கு அப்பால் தான் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது!… அல்லாஹ் அக்பர் போட்ட பிள்ளையார் சுழி! மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தின் நடுவே ஹிஜாப் அணிந்து பீடு நடையுடன் கர்ஜித்த சிங்கப்பெண்! தாலிபான்களால் மலாலாக்களும் நூலிபான்களால் ஃபாத்திமா பீவிக்களும் புஸ்கான்களும் தாக்கப்படும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது நம்மில் யார்? மநுவின் கோரப்பசிக்கு இரையாகிறது இந்தியா! சனாதன அரக்கன் மானுடத்தை நன்கு புசித்துக் கொண்டிருக்கின்றான்!… கோட்சேக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறார்கள். ராம நாமம் உடன்பிறவா சகோதரர்களின் குருதியில் தீட்டப்படுகிறது… பிரமாண்ட சிலைகளின் கட்டுமானத்தில் வீணாகும் ஏழை மக்களுக்கான பல பருக்கைகளும் சில கனவுகளும். மனிதகுல விரோதி நாஜி ஹிட்லரின் வதை முகாம்களைப் போலிருக்கின்றன நம் எஞ்சிய வாழ்வு! வெறுப்பரசியலால் அமோகமாக அறுவடை செய்யப் பார்க்கிறார்கள் நாட்டைச் சூறையாடும் நாசகார கும்பல் கல்விக்கூடங்கள் காவிக்கூடங்களாகும் கொடூரம்! பிஞ்சு இதயங்களில் மதமெனும் கொடும்நஞ்சு. நீதிகூட நூலளவில் வேறுபடுகிறது… ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு விதமாக வெடிக்கின்றன மதவெடி குண்டுகள். மூடரின் சீடர்களால் மூர்க்கத்தனமாகக் கடைபிடிக்கப்படுகிறது அறிவுத் தீண்டாமை! இருண்ட காலத்தில் இந்தியா! இது களப்பிரர் காலமல்ல கலவரக்காரர்கள் காலம். அது நறுமண மலரே அல்ல; நச்சு முள்! முட்களுடன் மோதினால்தானே முடிவில் ரோஜா கிடைக்கும். அல்லாஹூ அக்பர் பிள்ளையார் சுழி போட்டு விட்டது பிறகென்ன உனக்கும் எனக்கும்! நரக வாழ்க்கை முடியுமா? விடியும் என்று நினைத்தவர்கள் வாயில் விழுந்தது ஒருபிடி கவளமண். கங்கையில் பிணம் மிதந்தாலென்ன? ஆக்ஸிஜன் கிடைக்காமல் செத்து மடிந்தாலென்ன? காவிப் பூஞ்சை மாட்டு மூத்திர நாக்கில் அல்ல மதவெறி செறிவூட்டப்பட்ட மூளையில் அல்லவா படர்ந்து விட்டது… நூலிபான்கள் இல்லாத இடமேது இங்கு! கட்டிக் காத்த பரம்பரை சொத்தை விற்று ஏப்பமிடும் ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளால் நாசமாகும் நாட்டில் நானும் நீயும் பிடி மண்ணிற்காகவும் சொட்டு தண்ணீருக்காகவும் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்… கார்ப்பரேட்டுகளின் கரத்தில் ஊனமான மானுட நலமற்ற காட்டாட்சி! சுற்றிலும் நாசகார கும்பல். எப்போது வேண்டுமானாலும் கொட்டிச் சாகடிக்கும் கதண்டுகளின் கெட்டியான வலையில் சபிக்கப்பட்ட மனிதர்கள். இலையுண்ணும் தாமரையை ஊரே வேடிக்கைப் பார்க்கிறது… கோமாளி பாதி கொடுங்கோலன் மீதியென கழியும் பொழுதில் நித்தமும் அழியும் மதிப்புமிகு பெருவாழ்வு! ஒரு நல்ல நீடித்த விடியலுக்காக நரக வாழ்க்கையில் கட்டுண்டுக் கிடக்கும் தோழனே நம்மிடம் இழப்பதற்கு இனி எதுவுமில்லை! அடைவதற்கு உன்னதமான ஓர் உலகம் இருக்கிறது. எழுந்து வா! வெல்ல முடியாதது ஒன்று உலகினில் உண்டோ? கடக்க முடியாத வான் எல்லை ஏது? நீந்த முடியாதப் பெருங்கடல் பரப்பு ஏது? அடைய முடியாத சிகரம் ஒன்று இங்குண்டோ? சுழன்றடிக்கும் சூறாவளியிலும் நெஞ்சுரத்துடன் தப்பிப் பிழைத்தவர் உண்டு! பெருக்கெடுக்கும் எரிமலைக் குழம்புகளால் கருகி மடிந்த காட்டிலும் துளிர்க்கும் மரங்கள். கொட்டித் தீர்க்கும் பெருமழையிலும் உயிர்த்திருக்கும் சிற்றெறும்பு ஆறுகள். பொசுக்கும் வெய்யிலில் வாடா இளந்தளிர். வெல்ல முடியாத படையுண்டோ? தீர்க்க முடியாத பகையுண்டோ? பொங்கி வரும் மக்கள் வெள்ளம் கொடுங்கோலுக்கா அஞ்சும்? தர்மத்தின் வாழ்வுதனை சூதும் சூழ்ச்சியும் இன்னும் எவ்வளவு நாட்கள்தான் கவ்விக் கொண்டிருக்கும்?! மானுட நீதியை இன்னும் எ த்தனைக் காலம்தான் மநுநீதி தின்று கொண்டிருக்கும்? கடிகாரத்தின் காலடிப் பயணத்தில் என்றேனும் ஒரு நாள் நிச்சயம் மிதிபடும் அதிகாரத்தின் திமிர்? விடியாத இரவென்று இங்கு இல்லவேயில்லை. அந்தோ! ஆடி வருகுது பார் நாட்டைச் சீரழித்த நாட்டுமக்கள் வாழ்வைச் சாகடித்த பொல்லாத மதம் பிடித்த யானை! அதோ! ஆர்ப்பரித்துத் துள்ளி வருகுது பார்! வாழ வக்கற்றுப்போன அணையா நெருப்புடன் அக்கினிக் குஞ்சுகளின் படையணி. வெறும் நான்கு மலைவிழுங்கிய களவாணிகள் நம் ஆதி நிலத்தையும் அனைவருக்குமான பொதுச் சொத்துக்களையும் மலிவு விலைக்கு விற்பதும் வாங்குவதும் ஏய்ப்பதும் ஏப்பம் விடுவதுமாக இருக்க… பொய்யான போலியான நாட்டுப்பற்றை அவர்களின் நாசகார கும்பலொன்று ஏவிவிடும் மலிவான வெறுப்பரசியலின் கொடும்சுழலில் அப்பாவிகள் உழல… பிளவுகளில் விழும் எழவுகள். ராமராஜ்ஜிய சிதையில் எரிவது சீதை மட்டுமல்ல… சாமானிய மக்களின் நல்வாழ்வும் நம்பிக்கைகளும்தான்! ஊதி ஊதி ஊதி ஊதி உப்பியிருப்பது உடைபடா பாறையென்று நீங்கள் இன்னும் எத்தனைக் காலம் நம்பி நடுங்கிக் கொண்டிருப்பீர்கள்? உறுதியாக உரத்துச் சொல்வேன்! அதுவோ வர்ணம் பூசப்பட்ட வெற்று பலூன் தான்! அதற்கு குத்தூசி எதற்கு? குண்டூசியே போதும்! எழு. வெல்ல முடியாததென்று உலகினில் ஒன்று இல்லவேயில்லை புரிந்து கொள் தோழனே! பல்லக்கிற்கு நீயே பாடை கட்டு! சாமியைச் சுமப்பதே பாவம் ஆசாமிகளைச் சுமத்தல் பெரும் பாவம் யாரோ ஒருவருக்கு எப்போதும் தேவையாய் இருக்கிறது பல்லக்கில் இருத்தலும் சுமத்தலும்! எல்லாமும் மாறிவிட்டது. அடியார் யாரும் பிச்சையெடுத்து உண்பதில்லை. நடந்து சென்ற காலடியில் மிதிபட்டு செத்துக் கிடந்தது பிற உயிரினங்களின் மீதான பேரன்பு! அரசியல் சாமியார்களைத் தேடுகிறது சாமியார்களோ அரசியலை ஆள்கிறார்கள். ஆன்மீகம் பெரு வணிகமயம் ஆகிவிட்டது. எல்லோரும் காசை கொட்டியழுது அமைதி தேடி அலைகிறார்கள். பல்லக்கிற்கு நான்கு கால்களில்லை ஆனால் நால் வர்ணமுண்டு. சத்திரியனை வைசியனை பஞ்சமனை சூத்திரனை ஒருபோதும் அது அமர அனுமதிப்பதேயில்லை. மனிதரை மனிதர் சுமப்பது இழிவல்லவா? அறம் போதிக்கும் ஆதீனம் கற்றுக் கொடுக்கிறது அடாவடித்தனம். மனிதத்தன்மை அற்ற செயலைச் சாட்டை சொடுக்கி அடிபணிய வைக்கிறது. அடேய்! ஆதிக்க வெறி பிடித்த அறிவீலிகளே! நான்கு பேர் தூக்குவதாலேயே அது பல்லக்கு ஆகிவிடாது. பாடையைத் தூக்கிச் சுமக்கவும் அதே நான்கு பேர் தான் தேவை. உயிருள்ள பிணம் பல்லக்கில் போனாலென்ன? பாடையில் போனாலென்ன? பொதி சுமக்கும் கழுதைகள் கூட அருகிப் போய் விட்டன. பல்லக்கு சுமத்தல் பெரும் குற்றம் அன்றோ? தூக்கச் சொல்பவனைத் தூக்கி எறி! பல்லக்கிற்கு நீயே பாடை கட்டு. நானும் நீயும்! நான் பூமி! நீயேன் நெகிழி? நான் தென்றல்! நீயேன் புழுக்கம்? நான் விடியல்! நீயேன் இருள்? நான் மரம்! நீயேன் கோடரி? நான் மொழி! நீயேன் மௌனம்? நான் இசை! நீயேன் இடி? நான் மழை! நீயேன் வறட்சி? நான் மலர்! நீயேன் சூறாவளி? நான் ஒளி! நீயேன் பயம்? நான் வழி! நீயேன் நெருஞ்சில்? நான் ஆழி! நீயேன் கழிவு? நான் ஆகாயம்! நீயேன் கருந்துளை? நான் விண்மீன்! நீயேன் எரிகல்? நான் அருவி! நீயேன் புழுதி? நான் வானம்பாடி! நீயேன் சுருக்குக்கயிறு நான் விளைச்சல்! நீயேன் காட்டுத்தீ? நான் பூமாலை! நீயேன் மூடமந்தி? நான் தளிர்! நீயேன் சுடுவெயில்? நான் பணம்! நீயேன் பதுக்கல்? நான் வெண்புறா! நீயேன் பீரங்கி? நான் படகு! நீயேன் புயல்? நான் ஏணி! நீயேன் கரையான்? நான் சிற்றுளி! நீயேன் சம்மட்டி? நான் தங்கம்! நீயேன் இராஜ திராவகம்? நான் மகிழ்ச்சி! நீயேன் கலவரம்? நான் திருத்தேர்! நீயேன் மதயானை? நான் முத்தமிழ்! நீயேன் புரியா மந்திரம்? நான் மெய்! நீயேன் புரட்டு? நான் முன்னத்தி ஏர்! நீயேன் முட்டுக்கட்டை? நான் கூடு! நீயேன் நாகம்? நான் விதை! நீயேன் பாறை? நான் மனிதன்! நீயேன் மிருகம்? கம்பத்தில் கதறும் கொடி! பற்றி எரியும் காடு வெந்து தணியா நாடு அன்று உப்பு வரிக்கு திமிறி எழுந்த கூட்டம் இன்று அரிசி வரிக்கு வாய் மூடி அழுகிறது நின்றால் வரி நடந்தால் வரி உண்டால் வரி உறங்கினாலும் வரி செத்தாலும் வரி மூச்சு விட்டாலும் வரி மணமானாலும் வரி பிணமானாலும் வரி வாழ வக்கற்றுப் போனாலும் வரி கொடுத்துவிட்டு செத்துத் தொலை என்கிறது… நாட்டை விற்றுத் தின்னும் நாசகார அரசு! பன்மை பூக்கும் மண்ணில் ஓர்மை அபத்தம் அல்லவா? சனாதனத்திற்கு சாமரம் வீசி மநுவாதத்திற்கு சேவகம் செய்து தீட்டு அரசியலைத் தோளில் சுமந்து வெறுப்பை விதைக்கும் ஒரே அக்கப்போர் செய்யும் வெறிபிடித்த மிருகங்களே! ஒரே நாடு ஒரே சாதி என்று ஓங்கி உரத்து கூவ முடியுமா? மாற்றானிடம் மண்டியிட்டு உயிர் பிச்சையுடன் பிழைப்பூதியம் பெறுவதல்ல… தூக்குக் கயிறானாலும் முத்தமிட்டு வீரமரணம் அடைவதே உண்மையான தேசபக்தி! மகாத்மாவைச் சுட்டுக் கொன்ற தோட்டாக்கள் இப்போது அரசியலமைப்பு சட்டத்தைச் சுட்டுக் கொண்டிருக்கின்றன… பிணங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வரும் அவலம் நீதி நூலளவில் என்றாவது வேறுபட்டால் பரவாயில்லை எப்போதுமா வேறுபடும்? நாடு முழுவதும் விதைத்து வளர்க்கப்படும் நாக்பூர் நச்சுவிதைகள் மணியடித்தல் விளக்குப் பிடித்தல் கைத்தட்டுதல் உருண்டு புரளுதல் மூக்குச் சிந்துதல் என பொய்யான போலியான தேசபக்தி வரிசையில் இந்த முறை கொடி நடுதல்! ஒருவழியாகக் கொடி போர்த்தி மறைக்கப்பட்டுவிட்டது… ஊழல்களும் ஊதாரித்தனங்களும்! சாமானியனுக்கு எப்போதும் விலையில்லாமல் கிடைக்கும் விடுதலை நன்னாளில் கொஞ்சம் தேசப்பற்றும் ஓரிரண்டு ஆரஞ்சு மிட்டாய்களும்! இப்போது வயிற்றில் ஈரத்துணிக் கட்டிக்கொண்டு வரி கட்டி எஞ்சியிருக்கும் பிடிச்சோற்றுக்கான காசு கொடுத்து வாங்கிய தேசபக்தி விடாப்பிடியாக இறுக்கிக் கட்டப்பட்ட கொடிக் கம்பத்தில் விட்டு விடுதலையாகிப் பறத்தல் வேண்டி கதறிக் கொண்டிருக்கிறது!… இரைகள் விஸ்வரூப பிள்ளையார் வாங்கி வைக்க விடலைப் பிள்ளைகள் வீடெங்கும்… வீதியெங்கும்… முச்சந்தியெங்கும்… நெடுஞ்சாலை வேகத்தடைகளெங்கும்… தடாலடித் தண்டல்காரன்களாக திடீர் உண்டியல் குலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்… வடக்குத் தெரு தெற்குத் தெரு மேலத்தெரு கேடு விளைவிக்கும் சீனா களிமண் பிள்ளையாரைவிட ஒரு விரற்கடையாவது விஞ்சி இருக்க வேண்டுமென்பது கீழத்தெரு பசங்களின் பேரவா. ஒரு ரசிக கொண்டாட்ட மனநிலையில் பிள்ளையாருடன் நாளும் மற்றுமொரு நாளாக ஊதுவத்தி சூடம் மணக்க ஊ சொல்றீயா ஊஹூ சொல்றீயா காதைப் பிளக்க முகம் சுளித்து ஏசும் அக்கா அம்மா ஆத்தா வயதொத்த பெண்களிடையே கிராமத்து நாயகர்களாகப் பிள்ளையார் குடிலுக்குள் பாண்டைகளாகக் கிடந்த சிறுசுகளில் சிலரிடமிருந்து வீசும் சரக்கும் சிகரெட்டும் கொஞ்சம் கஞ்சாவும்! கரைபுரண்டு ஓடும் ஆற்றில் கரைக்கும் நாளன்று ஆட்டம் பாட்டம் குதியாட்டத்துடன் பீர் பாட்டில் துணையோடு பீ மூத்திர நெடியோடு தெருவில் உறைந்து போய் உம்மணாம் மூஞ்சியுடன் பரிதாப பிள்ளையார்! கடைசியாக ஊரே ஏறி மிதித்ததில் மாசுடைத்த மாவுப் பிள்ளையார் ஓடும் தண்ணீரோடு ஆளவிடுங்கடா சாமியென்று கும்பியாகிப் போக… இன்னும் அடங்காத கூத்தாட்டு வெறியாட்டத்திற்கிடையில் அடையாளம் தெரியாத வாகனத்தின் வேகப்பசிக்கு இரையாகித் தெறித்தான் இரத்தமும் சதையுமாக ஐந்தாம் வகுப்பு அப்பாவி ஹரீஷ்! வானுயர்ந்த மண்ணில் புதையுண்டு கிடக்கும் பேரோலம்! அவன் ஓர் ஆரிய அடிமை ஏகாதிபத்திய ஈரமற்ற பேரரசன் உழுகுடிகளிடமிருந்து அபகரித்து சதுர்வேதி மங்கலம் பிரம்மதேயம் மஹாதானபுரம் உருவாக்கிய கயவன் சாமானியர்களை வரிமேல் வரி விதித்துச் சாகடித்தவன் ஆரியர்களுக்கு வாரிக் கொடுத்த தான நிலங்களுக்கு வரியே விதிக்காதவன் வரிகொடா உழுகுடிகளின் உணவுக் கலயங்களைப் படையணி கொண்டு உடைத்துப் பட்டினிப் போட்டவன் உதிரிகளை ஒற்றைக் கோவில் நிறுவி மதத்தை நிறுவனமாக்கியவன் உழுகுடிகளின் விளைச்சலில் ஒரு பங்கை வலிந்து பெற்ற ஶ்ரீபண்டார கருவூலன் ஐநூறுக்கும் மேற்பட்ட கோவில்களில் ஆரியப் பாம்பை நுழையவிட்டவன் முப்பது காசு கடனை அடைக்க வக்கற்ற தாய் அங்காடி மகள் பெரங்காடி போன்றோரின் பாதத்தில் திருசூலக் குறியிட்டு அடிமைப்படுத்தியவன் அடிமைப் பெண்டிரை தேவரடியாராக நேர்ந்து விட்டு சனாதனத்திற்கு விருந்து வைத்தவன் மநுவின் மறுஉருவான ஈசான சிவ பண்டிதனின் முழு அடிமை நால்வருணம் கற்பித்த வே(பே)தம் ஓதுவோருக்கு அள்ளியள்ளி மண் பொன் கொடையளித்தவன் குடவோலை முறை மூலம் ஆரியத்திடம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் அடகு வைத்தவன் நந்தா நெய்விளக்கு கோவில்களில் அணையாதிருக்கவும் பார்ப்பனீயத்தின் கொழுப்புத் தொப்பைப் பெருக்கவும் சாவா மூவா வாழ்மாடு வழங்கி இடையர்களின் இரத்தம் உறிஞ்சவன் ஊருக்கு வெளியே புலைச்சேரி உருவாக்கி தீட்டு அரசியலை முன்மொழிந்தவன் வலங்கை இடங்கை சாதிப் பிரிவினைகள் விதைத்துப் போற்றி வளர்த்தவன் வாழும் தமிழ்மொழி அநாதையாய் கிடக்க சவமொழிக்கு வேதபாடசாலை அமைத்தவன் மனித விரோத மநுநீதிப்படியே அநீதி இழைத்தவன் சொந்த தமையனைப் படுகொலை புரிந்த மாபாவிகளை சுகபோகமாக வாழ வெறுமனே நாடு கடத்தியவன் மாமன்னனுக்கென மாவிறை வரிவிதித்து பொதுமக்களைச் சுரண்டியவன் பலிசை வட்டி முறையால் வணிகர்களை வாட்டி வதைத்தவன் பல்லாயிரக்கணக்கான போர் வீர்களைக் காவு கொடுத்து சூறையாடி வந்த செல்வங்கள் அனைத்தையும் ஆரியக் கரையான்களுக்கு இரையாக்கியவன் இறுதியில் இரையாகிப் போனவன் இந்த ஆரிய பாத சேவகன். ஆறாம் விரல் ஆறாம் விரல் பீடத்தில் இன்று ஆள்காட்டிவிரல் மனிதம் தின்னும் இருளைக் கூராய் கிழிக்காமல் தொட்டுத் தடவிக் கொடுத்தபடி நகர்த்தும் பிழைப்பு மானுடம்பாடிகள் முழங்கும் பாடல்கள் பேரிரைச்சலில் மரிக்கின்றன பசுமை நிலமெங்கும் ஆட்கொல்லிக் காவிப் பூஞ்சைகள் வில்லென வளைக்கப்படும் நீதியிலிருந்து அநீதி அம்புகள் விளிம்புகளை வீழ்த்திய கொக்கரிப்பில் கூத்தாடும் அவலம் எல்லா வீடுகளிலும் பற்றியெரிகின்றன ஏமாந்த வயிறுகள் ஒற்றை அடையாளம் ஓங்கி ஓங்கி அறையப்பட்டாலும் சிலுவை மரத்திலிருந்து துளிர்க்கும் பன்மைத்துவ உயிர் துல்லிய தாக்குதல் இந்தமுறை அந்நியசக்திகள் மீதல்ல மீட்பரைத் தேடியலையும் அப்பாவிக் குடிமக்கள் மீது நாடே கனவு காண்கிறது பேரிடரிலிருந்து மீள நாசப்படுத்தப்பட்ட கந்தலான பூமியில் பொத்தலான மழைவானம் விசிலடித்தபடி கழியும் வெந்து தணியும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மதிப்புமிகு நாழிகையும் கசக்கி எறியப்படும் ஒன்றுமறியாப் பிஞ்சுப் பூக்கள் அணு அணுவாய் செத்து மடியும் காதல் தாமரையில் இரு ஒட்டாத நீர்த் துளிகள் விலைபோகாத சருகுகள் மருகியபடி நடைபிணங்களாய் ஒதுக்குப்புறங்களில் ஈரமற்ற உள்ளங்களால் இடம்பெயர்ந்து உயிர்த்திருக்கும் சாபக்கேடு இதுவும் கடந்து போகுமென உறவற்றுக் கிடந்தாலும் புவியீர்ப்பு விசைக்கெதிராய் எப்போதும் கூவியழைக்கும் என் ஆறாவிரல். தேடல் சாதித் திமிர் பிடித்தவனும் மதவெறி கொண்டவனும் இனம் தேடி அலைபவனும் மொழி வெறியோடு வாழ்பவனும் பழமைவாத கருத்தைத் திணிப்பவனும் திருட்டு பொய் களவு செய்பவனும் பெண்ணடிமைத்தனம் பேசுபவனும் கையூட்டு வாங்கி ஊழல் புரிபவனும் கொலை கொள்ளையில் ஈடுபடுபவனும் கொள்கை ஏதும் இல்லாதவனும் சோம்பேறியும் வெட்டியாய் இருப்பவனும் கூட இங்கு நன்றாகவே வாழ முடிகிறது… மனசாட்சி நிறைந்த மனிதனாகத்தான் இங்கு வாழ முடியவில்லை! அன்புள்ள அம்மாவுக்கு… ஓடி வரும் நிலவே எனக்காகக் கொஞ்சம் நிற்பாயா? ஒத்தையாக வாழும் அம்மாவை நான் கேட்டதாக நீ சொல்வாயா? பூனைக்குட்டி போல சுற்றிச்சுற்றி வந்து தாய்மடிச்சூட்டில் மகிழ்ந்து கிடந்த என்னை நாலுகாசு ஈட்டி பெரிய மனுஷனாக்க கடன்பட்டு போகச்சொன்னாளே அன்புஅன்னை அரைபட்டினியோடு வாழ்ந்தவள் இப்போது கொலைப்பட்டினியோடு கிடப்பாளோ? ஒண்டிக்கட்டையாக ஆண்டு பல வெந்தவள் இன்னும் ஒடிசலாகப் பாவப்பட்டு போயிருப்பாளோ? கலங்க வேண்டாமென்று கண்துடைத்துக் கூறு! சடுதியில் சில்லென்றாகுமே நாளும் அவள் கடக்கும் நெருப்பாறு! வற்றாத அவளது அன்போடையில் நித்தமும் தொடரும் மகிழ்வாய் என் பயணமே இதயத்தில் ஒளிரும் நிழலாடும் ஆடியில் ஆசைமுகம் வழிநடத்தும் கலங்கரை விளக்கமே பனைக் காத்தாடியில் அவள் ஈரத்தலை பிரித்துக் காய வைத்தேனே ஆக்கு வாங்காதப் பம்பரத்தைக் காட்டி சிரிக்க வைத்தேனே அஞ்சல் பெட்டியென கந்தலாகிக் கிழிந்த அரைக்கால் சட்டை கண்டு அழுவாளே அப்பா இல்லாத குறையே தெரியாமல் குட்டி இளவரசனாக என்னை வளர்த்தாளே கலங்க வேண்டாமென்று கண்துடைத்துக் கூறு! இளஞ்சூடு பொறுக்காத நான் இப்போது உச்சிவெய்யிலில் ஒட்டகம் மேய்க்கிறேன் சட்டென்று மீண்டு வரமுடியாத நரகத்தில் ஒட்டாத மணலாய் நித்தமும் உழன்று தவிக்கிறேன் வாரியள்ளித் திணித்த வாய்க் கவளச்சோறு ருசி இன்னும் மறக்கல நாக்கு செத்துப்போக பசியோ நச்சரிக்க நீயில்லாம சாப்பிட புடிக்கல நாதியத்து நான் இங்கே நீ அங்கேனு வாழுறோம் நம் தலையெழுத்தை தாறுமாறா கிறுக்கியவனை நாளும் வையிறோம் நான் ஆசையாசையாய் எ டுத்துவந்த சேலைமுழுசும் கமகமக்கும் உன் வாசம் ஆயிரமாயிரம் துன்பங்கள் வந்தாலும் அதுதானே ஆற்றுப்படுத்திடும் என் சுவாசம் ஏழை இராஜகுமாரானாய் நான் வந்தாலும் ஏற்றுக் கொள்வாய்தானே என் அம்மா! உன் காலடியிலேயே என்னுயிர் பிரியவே நாளும் தவமிருக்கிறேன் தாயே! மரணக்குழி 2.0 அந்த மரண ஓலம் என்னை உறங்க விடவே இல்லை கொசுவாய் மொய்த்து குருதி உறிஞ்சிக் கொண்டிருந்தது குழுமியிருந்த நாசகார கும்பல் அடைக்கப்பட்ட மூடியைத் திறக்க முயற்சிக்காமல் வெறுமனே ஊளையிட்டுக் கொண்டிருக்க ஏவல் ஓநாய்கள் யாரோ ஒருவனைத் துரத்தி வெறியுடன் ஓட சாணியை மிதித்தபடியே வேடிக்கைப் பார்த்து நடந்தது உணர்ச்சியற்ற மொழியில் கத்திக்கொண்டே ஒரு மந்தைக் கூட்டம் தீவு நோக்கி நடப்பவள் கடைசிவரை திரும்பிப் பார்க்கவேயில்லை எல்லோருக்கும் திறக்க ஒரே அச்சம்! அவளோ இப்போது யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் காணாமல் போயிருந்தாள்! அபயம் வேண்டி ஒருவரின் முனகல் மட்டும் உள்ளிருந்து சன்னமாய் கேட்டது. யாருமற்ற நடுநிசியில் எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த மரணக்குழி முன் இப்போது நான்… தொந்தரவு தாங்க மாட்டாமல் ஒருத்தனாக! உள்ளே ஒரே கும்மியிருட்டு. தொலைவில் கண்காணித்தபடி ஓர் ஒளி பீதி வியர்வையாய் பெருக்கெடுத்து வழிய… நன்கு அடைக்கப்பட்ட மூடியை மல்லுக்கட்டித் திறக்க அந்த மங்கலான வெளிச்சத்தில் மூர்ச்சையாகி துர்நாற்றம் வீச மாண்டுக் கிடந்தனர் கும்பிட்ட அவதாரங்களும் கூடவந்த பரிவாரங்களும்! தாயின்றி வேறுண்டோ?… அம்மா வெறும் சொல் அல்ல… ஆன்மாவை உயிர்ப்பிக்கும் பேரன்பு! அம்மா ஓடி வழிந்திடும் சிற்றோடை அல்ல… உலகை உய்விக்கும் வான்மழை! அம்மா வாடி உதிர்ந்திடும் தொட்டிச்செடி அல்ல… ஆண்டாண்டாய் அண்டி வருவோருக்கெல்லாம் அடைக்கலம் தரும் பெரு ஆலமரம்! அம்மா அலங்கரிக்கப்பட வேண்டிய கற்சிலை அல்ல… மதிக்கப்பட வேண்டிய மானுடம்! அம்மா நினைத்தாலே இனிக்கும் கற்கண்டு அல்ல… தாகம் தணிக்கும் தித்திக்கும் நீர்ச்சுனை! அம்மா உயிர்க்கோளத்தின் சார்பெழுத்து அல்ல… உயிரிகளின் தலையாய முதலெழுத்து! பூவுலகின் அனைத்திற்கும் தலையெழுத்து! தாயைக் கொண்டாடுவது மட்டும் போதாது தாயைப் போல் தாய்மையுடன் இருப்போம்! எல்லா புகழும் புளுகருக்கே! ஒரு பெரும் நோய்த்தொற்றில் உலகமே மருத்துவம் பற்றி கரம் பிசைந்து கொண்டு சிந்தித்து இருக்க… நாங்கள் இங்கே கும்பல் கும்பலாகப் பிச்சைத்தட்டுகளைக் கொண்டு மூளையின்றித் தட்டிக்கொண்டிருந்தோம்! ஏதாவதொரு புதிய விடியல் பிறக்காதோ என்று உலக மருத்துவ சமூகம் ஏங்கிக் கொண்டிருந்த போது இங்கே நாங்கள் கொரோனாவிற்கு விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தோம்! குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு கொத்துக் கொத்தாக மடியும் உயிர்களனைத்தையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க… நாங்கள் கும்பமேளாவில் கூத்தடித்து மாட்டு மூத்திரத்தையும் துர்நாற்றம் வீசும் சாணிக்குளியலையும் தேசிய தடுப்பாய் தீவிரப்படுத்தினோம்! உலக மக்கள் அனைவரும் நெருப்பாற்றைக் கடந்து நீந்திக் கொண்டிருக்க… நாங்கள் புண்ணிய நதியில் பிணங்களை மிதக்க விட்டு கங்கைக் கரை முழுவதும் திருட்டுத்தனமாக மனித உடல்களை மறைத்துக் கொண்டிருந்தோம்! ஒரு ரொட்டித் துண்டுக்காக உலக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்க… நாங்கள் தெரு நாய்களுக்கு மனித மாமிசத்தை உணவளித்துக் கொண்டிருந்தோம்! சொந்த மக்களைக் காக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்த போது நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குரிய உயிர் காக்கும் தடுப்பூசிகள் அனைத்தையும் கடத்திக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்! ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் என்ன? எங்களிடம் 8000 கோடி சிலையிருக்கே! படுக்கைகள் இல்லாவிட்டால் என்ன? 13000 கோடி மோடி மஹால் இருக்கே! நல்ல தரமான மருத்துவமனைகள் எதற்கு எங்களுக்கு? இதயத் துடிப்பு இல்லாத 56 இஞ்ச் விரிந்த மகான் இருக்கிறாரே! என் நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டவர்கள்! அவர்கள் அறிவுப் படைத்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்… பிறகு தான் தெரிந்தது அவர்களுக்கு மூளையே இல்லை என்பது! அவர்கள் கருணை மிக்கவர்கள் என்று நம்பியிருந்தேன்… பின்னர் தான் புரிந்தது அவர்களுக்கு இதயமே இல்லை என்பது! அவர்கள் தாவர உண்ணிகள் என்று பெருமிதம் கொண்டிருந்தேன்… பிறகு தான் உறைத்தது அவர்கள் மனித உண்ணிகள் என்பது! அவர்கள் உண்மையை மட்டும் உச்சாடனம் செய்பவர்கள் என நினைத்திருந்தேன்… பின்னர் தான் விளங்கியது அவர்கள் பொய்களைப் பிரசவிப்பவர்கள் என்பது! அவர்கள் நாட்டுக்காக உழைத்த நல்லோர் எனப் பெருமை பேசிக் கொண்டிருந்தேன்… சாயம் வெளுக்கத் தொடங்கியது அவர்கள் நாட்டைக் கூறு போடும் நல்ல வியாபாரிகள் என்பது! அவர்கள் அமைதியானவர்கள் என்று ஆனந்தம் கொண்டிருந்தேன்… தவறு மெல்ல புரிந்தது அவர்கள் அணுகுண்டு வைத்துப் பிளப்பவர்கள் என்பது! அவர்கள் யோக்கியமானவர்கள் என்று வாய் பிளந்திருந்தேன்… இடியே விழுந்தது அவர்கள் எந்த அயோக்கியத்தனத்தையும் செய்ய அஞ்சாதவர்கள் என்பது! அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று மதித்திருந்தேன்… ஏமாற்றமே மிஞ்சியது அவர்கள் மதவெறி பிடித்த கொடூர மிருகங்கள் என்பது! வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம்! அஃதொரு பயங்கரமான இயந்திரம் மசூதிகளை இடித்துத் தள்ளும்! மதரஸாக்களை நொறுக்கித் தள்ளும்! வெறுப்பு அரசியலை வீதியெங்கும் விதைத்துச் செல்லும்! டிரோன்கள் மூலம் பெல்லட் குண்டுகளால் விவசாயிகளின் உயிரைக் கொடூரமாகப் பறிக்கப் பார்க்கும்! கடவுளின் பிள்ளைகளிடம் கூட இரக்கமின்றி கடவுள் பெயரால் சூடு வைக்கும்! வழியெங்கும் கோர ஆணிகள் நட்டு சொந்த நாட்டு மக்களின் நம்பிக்கை கிழிக்கும்! இருப்பதை இடித்து இல்லாததை எழுப்பி மக்களைக் கூறு போடும்! சாமானியர்களை வரிகளால் கசக்கிப் பிழியும்! பெருவணிக முதலாளிகளிடம் பல்லை இளித்துக் கொண்டு நாட்டை வெட்கமே இல்லாமல் அடிமாட்டு விலைக்கு விற்கும்! தேசபக்தி அற்ற தேசிய புளுகர்கள் அள்ளி விடும் போதைவெறியூட்டும் பொய்களால் நாட்டை நாசமாக்கும்! அஃதொரு பயங்கரமான இயந்திரம் நாற்று நட வரவில்லை! நூல் நூற்க வரவில்லை! வீடு கட்ட வரவில்லை! அட! கழிவறை எழுப்ப கூட வரவில்லை! குப்பையை அள்ள வரவில்லை! கூளத்தை மறைக்க வரவில்லை! பள்ளத்தை நிரப்ப வரவில்லை! அட! குழிப் பறித்து விதைநட கூடவரவில்லை! மாநிலங்களை மண்டியிடச் செய்யவும் மானுடத்தை வேருடன் பிடுங்கிப் போடவும் பாரதத்தாய்க்கு நிரந்தர சமாதி கட்டவும் அந்தோ! ஆர்ப்பரித்துத் திமிருடன் படையெடுத்து நம்மை நோக்கி வருகின்றன… நாம் என்ன செய்யப் போகின்றோம்? எங்களிடம் இவை மட்டுமே இருக்கின்றன!… எங்களிடம் கரும்பலகை மட்டுமே இருக்கிறது அதில் இருளைப் போக்கிக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் சாக்கட்டி மட்டுமே இருக்கிறது அதில் சிறந்ததை எழுதிக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் அழிப்பான் மட்டுமே இருக்கிறது அதில் அறியாமையை ஒழித்துக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் பாடப் புத்தகம் மட்டுமே இருக்கிறது அதில் புரியாததைப் புரியவைத்துக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் குறிப்பேடு மட்டுமே இருக்கிறது அதில் குறித்து வைக்க அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் எழுதுகோல் மட்டுமே இருக்கிறது அதில் பலரது தலையெழுத்தைத் திருத்திக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் அளவுகோல் மட்டுமே இருக்கிறது அதில் கல்லாமையையின் அளவைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் வரைபடம் மட்டுமே இருக்கிறது அதில் புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் கணிதக் கருவிகள் மட்டுமே இருக்கிறது அதில் நல்ல மனிதனாக வடிவமைத்துக் கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் மடிக்கணினி மட்டுமே இருக்கிறது அதில் தொழில்நுட்ப அறிவைப் புகட்டிக் கொண்டிருக்கிறோம்! எங்களிடம் நீங்கள் நினைப்பது போல் ஊதுகுழலோ… சிங்கியோ… சேகண்டியோ… டொய்ங் டொய்ங் மணியோ… கைகால் அமுக்கித் தேய்த்துவிடும் உயவு எண்ணெயோ… வெறுமனே போற்றிப் புகழ்பாடும் விலைபோன கவிதைகளோ… பாடல்களோ… தலையாட்டிப் பொம்மைகளோ அல்லது உங்கள் முதுகு சொரிந்து விடும் சுரணையற்ற சீப்புகளோ… இவை எதுவும் எம்மிடம் இல்லவே இல்லை! நினைவில் கொள்ளுங்கள்! எனக்காக யாரும் பேசவில்லை! முதலில் அவர்கள் தொகுப்பூதியத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை தினக்கூலியாக நியமித்ததை எதிர்க்க அழைத்தார்கள். நான் தொகுப்பூதியவாதி அல்லன்; அதனால் நான் பேசவில்லை! பின்பு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிநியமனம் செய்ததைக் கண்டித்துக் கூப்பிட்டார்கள். நான் புதிய ஓய்வூதியவாதி அல்லன்; அதனால் நான் பேசவில்லை! பிறகு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் ஊதிய விகிதத்தைக் குறைத்து அநீதி இழைத்ததைத் தவறென்று முறையிட வா என்றார்கள். நான் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் அல்லன்; அதனால் நான் பேசவில்லை! அதன் பின் இடைநிலை ஆசிரியர் பணியைக் கடைநிலையில் வைத்து மிகக்குறைந்த ஊதியம் கொடுத்ததைப் பட்டினிப் போராட்டம் கிடந்தாவது சாதிக்க வீடு தேடி வந்தார்கள். நான் கடைநிலை ஊதியம் பெறுபவன் அல்லன்; அதனால் நான் பேசவில்லை! பின்னர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி பதவி உயர்வுக்கு முழுக்குப் போட்டதற்கு எதிராகக் குரல் எழுப்பவும் வருந்தி அழைத்தார்கள். நான் பதவி உயர்வில் செல்பவன் அல்லன்; அதனால் நான் பேசவில்லை! அதன்பிறகு மாநில முன்னுரிமை என்று ஏதேதோ கதை அளந்ததை ஏற்க மறுத்து ஆபத்து சூழ உள்ளதென்று அச்சுறுத்தினார்கள். நான் மாநில முன்னுரிமையால் பலனடைபவன் அல்லன்; அதனால் நான் பேசவில்லை! இறுதியாக அவர்கள் இரும்புக்கரம் கொண்டு இந்தமுறை என் குரல்வளை நெரிக்க பெரும் படையெடுத்து வந்தார்கள். இப்பொழுது எனக்காக யாருமே பேசவில்லை! களம் நோக்கி நாங்கள்! பேரன்புக்குரிய எமதருமை சகோதர சகோதரிகளே! நீங்கள் தைரியமாகப் பள்ளி செல்லுங்கள்! உங்களுக்காக உங்கள் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக உங்கள் நிகழ்கால எதிர்கால கண்ணியமிக்க வாழ்க்கைக்காக உங்கள் குடும்பத்தினர் நலனுக்காக நாங்கள் எப்போதும் இருப்போம்! வகுப்பறையில் நுழைந்ததும் நம் பள்ளிப் பிள்ளைகள் எங்களை எங்கே என்று கேட்டால் நெஞ்சுயர்த்தி தலைநிமிர்ந்து கூறுங்கள்! ஒரு குரலற்ற சமுதாயத்தின் நீண்ட நெடிய விடியலுக்காகப் போர்க்களம் சென்றுள்ளார்கள் என்று! வேறுவழியின்றி உங்கள் உடல் மட்டும் அங்கிருக்கும்! உயிரும் உணர்வும் நிச்சயம் எங்கள் மீதே இருக்கும்! அந்த ஆன்ம பலம் ஒருபோதும் எங்களைக் களத்தில் கட்டாயம் சோர்வடையாமல் வைக்கக்கூடும்! உயிருள்ள மரத்தை உயிரற்ற மரத்திலிருந்து உருவான கோடாரி வெட்டிச் சாய்ப்பது போல் உங்கள் போராட்ட உணர்வைக் வேண்டப்பட்ட கயவர்கள் சிலர் வீழ்த்தி விட்டனர். இஃது ஒரு தற்காலிக பின்னடைவே! ஆனாலும் நெஞ்சுரம் இழக்காதீர்கள்! மூடி அடைக்கப்பட்ட கொள்ளி மீண்டும் எரியாது என்று நினைப்பதற்கில்லை! முதுகில் பாய்ச்சும் துரோகமும் குழி பறிக்கும் குரோதமும் மண்டிய நஞ்சுக்காட்டைப் பிடிச் சாம்பலாக்க ஊசிமுனை கங்கு போதும்! நீங்கள் ஒவ்வொருவரும் அத்தகையோரே. எல்லோருக்குமான ஒரு விடியலைக் கொண்டு வர பாடுபட்டு எந்த மீட்பரும் இல்லாத தனிமை இருளுக்குள் அல்லவா நாம் அகப்பட்டுக் கொண்டோம்! மாதந்தோறும் சுரண்டி வழங்கப்படும் கௌரவக் கூலியைத் தவிர இனி நாம் இழப்பதற்கு என்று இங்கு எதுவுமில்லை! ஆனால் நாம் அடைவதற்கோ பழைய ஓய்வூதியம் முரண்பாடுகள் அற்ற நியாயமான ஊதியம் ஊதியத்தில் வளரும் ஊக்க ஊதியம் விடுப்பு எடுக்காது சேர்த்த ஒப்படைப்பு ஊதியம் என… உயரிய உன்னத இலட்சியம் பலவுண்டு! வாயார மட்டுமல்லாமல் மனதார வாழ்த்தி வழியனுப்பி வையுங்கள்! சென்று வென்று வருகிறோம். வறண்டு போனது என் வற்றாத நதி உலர்ந்து நிற்கிறது என் உதிராத பூமரம் இருண்டு கிடக்கிறது என் இறவாத வானம் யாருமற்று இருக்கிறது என் உயிர்ப்பான சாலை விக்கித்துப் போனது என் விடாமல் சுழலும் பூமி சொற்களற்று போனது என் பெய்யெனப் பெய்யும் கவிதை திசைகளற்று ஆனது என் எண்வழிப் பயணம் வெடித்துக் கிடக்கிறது என் பசுமை மாறா விளைநிலம் சிறகொடிந்து தவிக்கிறது என் ஓய்வறியா இதயப்பறவை பாதையின்றி நிற்கிறது என் விடாப்பிடியான தேடல் ஓசையின்றி ஏங்குகிறது என் முணுமுணுக்கும் பாடல் உறக்கமின்றி இருக்கிறது என் இமை திறக்கா விழிகள் பசியின்றிக் காய்கிறது என் பருக்கையற்ற இரைப்பை கவிதை எமக்கு… கவிதை என்பதும் பொன் முட்டையிடும் வாத்து போன்றதுதான்! சிலர் பொறுமையுடன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் காத்திருந்து பொன் முட்டைகளைப் பெறுகின்றனர். பலர் பதறி அவசர கதியில் தோண்டித் துருவி உயிரை வதைத்து அசிங்கங்களையே பெறுகின்றனர். கேள்விக்கு என்ன பதில்? இன்று அவர்களுக்காக மிகவும் சிரமப்பட்டு நாடு முழுவதும் குத்திக் கிழிக்கும் கோர ஆணிகளை விடாமல் பதித்துக் கொண்டிருக்கிறீர்களே! நாளை நீங்கள் எதில் நடந்து செல்வீர்கள்? கொண்டாட்ட கூச்சலில் காதுகளைத் தொலைத்துவிடாதீர்கள்! இடைவிடாமல் தாக்கும் விளம்பரக் கொண்டாட்டங்கள்… வேதனையில் திண்டாட்டத்தில் தினந்தோறும் ஆசிரியர்கள்! விடியலைத் தேடிப்போய் இருள் கவிந்த பாழுங்கிணற்றில் மாய்ந்து முனகும் சூரியக் குஞ்சுகள்! காவிக் கல்வியைக் களவாடி முழுப் பூசணியை சோற்றுக்குள் முழுதாய் மறைக்கப் பார்க்கிறது… கழகக் கல்வி! ஆசிரியர் மனசைக் கசக்கிப் பிழியும் அன்பில்லா அரசிடம் இறுதியாக இன்னும் எதைச் சொல்லிப் புலம்புவது? உறுதியாக நம்பினோம்! இப்போது மோசம் போய் நிற்கிறோம்! எதிர்கட்சியாக இருக்கும் போது எல்லோரும் அள்ளி அள்ளி வரம் கொடுக்கிறார்கள்! ஆளும் கட்சியாக ஆகிவிட்டால் அத்தனையும் மறந்துவிட்டு கொடிய சாபம் தரத் தொடங்கி விடுகிறார்கள்!… பசித்த மீன்களிடம் போலி கருணையின் உருவில் தூண்டில் முள்ளில் துடிக்கும் புழு! ஒன்றுபட்ட எருதுகளின் கூட்டத்திலிருந்து நோஞ்சான் ஒன்றைக் கையில் போட்டுக்கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தூபம் போடும் குள்ளநரித்தனம்! நித்தமும் உதிரும் சாக்கட்டிச் சாம்பலில் இருந்தும்கூட புதிய புதிய பீனிக்ஸ் பறவைகள் புறப்படக் கூடும்! நவீன மனுநீதிச் சோழனின் அழைப்பு மணியை எண்ணிலடங்கா கைகள் ஓயாமல் நீதி கேட்டு அடித்து அலறிக் கொண்டிருக்க… ஒரு வெற்றுக் கொண்டாட்ட கூச்சலில் உங்கள் காதுகளை தொலைத்து விடாதீர்கள்! நீங்களும் தொலைந்து போய் விடாதீர்கள்! ஏனெனில், உங்களை நோக்கி மதம் பிடித்த பீடையொன்று பிளிறிக்கொண்டு வருகிறது…! வேறுவழியின்றி எங்கள் கரங்களில் தவழும் உங்களுக்கான பூமாலையை எங்களிடமிருந்து வலிய பிடுங்கிப் போட்டுக்கொண்டால் நாங்கள் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை! நீங்கள் கற்றது இதுதானா? அடேய்! அன்புத்தம்பி! உன் புத்தகப் பைக்குள் பாடநூலாக எப்படி சனாதனம் உள்ளே நுழைந்தது? உன் எழுதுகோல்கள் எவ்வாறு மனிதம் பிளக்கும் வீச்சரிவாள்கள் ஆயின? உன் நீல மை குப்பிகளில் சக மனிதனின் குருதியை நிரப்பச் சொன்னவன் எவன்? உன் கூர்தீட்டியில் முனை மழுங்கிய மூளைக்குப் பதில் சாதியைத் தீட்டியது ஏன்? உன் குறிப்பேடுகளில் இத்தனை நாள்களாக மநுஸ்மிருதியையா மனனம் செய்து எழுதிக் கொண்டிருந்தாய்? உன் அழிப்பான் சாதியை அழிப்பதற்கு மாறாக சமூகநீதியை அல்லவா அழித்து விட்டது? உன் நேசக் கயிறுகள் சக வகுப்புத் தோழனின் குரல்வளையையா உயிர்போக நெரிக்கும்? உன் கணக்கு வாய்ப்பாட்டில் சமக்குறியைச் சாகடித்த அந்தக் கயவன் யார்? உன் சாப்பாட்டுத் தட்டில் அசிங்கத்தைக் கொட்டி ஊட்டியது எந்தக் கைகள்? உன் குடிநீர் புட்டிக்குள் சாதிவெறி போதையைக் கலந்தது யாரோ? உன் அளவுகோலில் ஏற்றமும் இறக்கமும் இருப்பது சரியா? உன் வரைபடத் தாளில் வன்மப் புள்ளிகளையா இப்போதுவரை இணைத்துக் கொண்டிருந்தாய்? உன்னை வானவில் வரையச் சொன்னதற்கு இப்படியா கருப்பு மை பூசுவது? உன் குறும்பு விளையாட்டில் சாதீய வினையையா விதைப்பாய்? நீயும் வரலாறு படைக்க வேண்டும் என்று நினைத்தற்கு தப்பித் தவறிக் கூட யாரும் தொட்டுப் பார்க்கக் கூடாத கொடூர பாடமாக உருமாறியது ஏனோ? உன் சக மனித வெறுப்புக் கற்றலில் வெந்து சாம்பலானதேடா ஒரு பிஞ்சு மானுடம்! பூட்டப்பட வேண்டியவை அன்று பூட்டிக் கிடந்தவற்றைத் திறந்து விட்டோம்! இன்று திறந்து கிடப்பவற்றைப் பூட்டிக் கொண்டிருக்கிறோம்…! சீல் வைக்கும் கரங்கள் சீழ் பிடிக்காதோ? சமாதான சமாதியில் கொட்டமடிக்கும் இடைச்சாதி சனாதனம் அம்மன் கோவில்களில் ஆண்டைகளுக்கு என்ன வேலை? கடவுள் பாத்திரம் அறிந்து ஒருபோதும் பிச்சை இடுவதில்லை அப்படிப் பார்த்தால் அது கடவுளே இல்லை! ஆலயம் தொழுவது ஒரு சாராருக்கு மட்டும் எப்படி சாலவும் நன்றாகும்? சாணி மூளையைக் கழற்றி எறி! சமத்துவ பயிரைத் தழைக்கச் செய்! பூட்டப்பட வேண்டியவை கோவில்கள் அல்ல. வெற்றுச் சாதித் திமிர்கள்! வளைந்த செங்கோல் எத்தனைக் கனவுகள் எத்தனை ஆசைகள் எத்தனை ஏக்கங்கள் எத்தனை உயிர்கள் எத்தனைப் பலிகள் எத்தனை வலிகள் எத்தனை இழப்புகள் ஈடாகுமோ? இத்தனைக் கூச்சல் இத்தனைக் குழப்பம் இத்தனை விளம்பரம் இத்தனைக் களேபரம் இத்தனைப் படாடோபம் இத்தனை ஆடம்பரம் இத்தனை அலட்சியம் தேரா மன்னா!… நீதி வழுவாச் செங்கோல் உனக்குக் கேடோ சொல்? அடி கள்ளி! எல்லாவற்றிற்கும் சிரித்துக் கொள்கிறாய் எப்போதும் என்னை மட்டும் ஏனடி சிரித்தே கொல்கிறாய்? கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account