[] [நம்ப முடியாத அதிசயங்கள்] நம்ப முடியாத அதிசயங்கள் அரவிந்த் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com இந்த நூலின் படைப்புகள் அனைத்தும் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் (Creative Commons Attribution-Noncommercial-No Derivative License)வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், இந்த நூலை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அனுமதி இல்லாமல் அச்சாக்கவோ,  பிரதி எடுக்கவோ, காபி-பேஸ்ட் செய்து நூலாக வெளியிடுவதோ கூடாது. [Creative Commons License] நம்ப முடியாத அதிசயங்கள் by Aravind is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - நம்ப முடியாத அதிசயங்கள் - முன்னுரை நம்ப முடியாத அதிசயங்கள் அரவிந்த் all-rights-reserved - 1. வானத்தில் பறந்த பெண் சித்தர் - 2. காட்சி தந்த மீனாட்சி அன்னை - 3. மாயம், மர்மம், மாந்திரீகம் - 4. விரல் ரேகை அதிசயங்கள் - 5. செத்துப் பிழைத்த சீதாப் பாட்டி - 6. பிரமிடு மர்மங்கள் - 7. சீடனைக் காத்த குரு - 8. மரணத்தின் பின்.... - 9. ஆவிகள் உண்மையா, பொய்யா? - 10. லூயி - vs லூயி - 11. மாயமாய் மறைந்த மகான் - 12. கடவுளைக் கண்டவர் - 13. முற்பிறவி, மறுபிறவி உண்மைகள் - 14. லிங்கனும் கென்னடியும் - 15. ஈசான்ய ஞான தேசிகர் - 16. அதிசய மனித நாஸ்ட்ரடாமஸ் - 17. நாடி ஜோதிட ரகசியங்கள் - 18. குடிசை திவால் - 19. சொர்க்கமும், நரகமும் - 20. மகான் புகட்டிய பாடம் - 21. மரணத் தூதுவன் - 22. மரணம் - ஆவி - மறுபிறவி - 23. அதிசயப் பூனை - 24. வேற்றுக் கிரக மனிதர்கள்?! - 25. மகான்களும் ஆவிகளும் - 26. அன்னையின் ஆவியுலக அனுபவங்கள் - 27. ஈ.எஸ்.பி. உண்மையா, பொய்யா? - 28. ஈ.எஸ்.பி. அதிசயங்கள் - 29. ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரின் ஆவி உலக அனுபவம் - 30. நம்ப முடியாத சில அதிசயங்கள் - பின்னுரை - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 நம்ப முடியாத அதிசயங்கள் [18349826481_f1b30ed53e_z]   ஆசிரியர் – அரவிந்த் aravindsham@gmail.com மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்   மின்னூலாக்கம் – அரவிந்த் மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com   2 முன்னுரை நம்ப முடியாத அதிசயங்கள் நம்ப முடியாத அதிசயங்கள் அரவிந்த் இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. அது ஆன்மீகம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், உளவியல் துறை ஆகட்டும், ஏன் அறிவியல் துறையே கூட ஆகட்டும்; நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத, நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன; உலகெங்கும் அப்படி நடந்த, நடக்கின்ற அதிசயச் செய்திகளை, சம்பவங்களைத் தான் “நம்ப முடியாத அதிசயங்கள்” என்ற இந்த நூலில் பார்க்கப் போகிறோம். இதில் ஆன்மீகம், சித்தர்களின் சித்தாற்றல்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், ஜோதிடம், ஈ.எஸ்.பி, டெலிபதி, தேவதைகள், முற்பிறவி, மறுபிறவிகள், ஆவியுடல் பயணங்கள், மரணத்தின் பின் நடப்பது என்ன என பல்வேறு துறைகள் பற்றிய அதிசயச் செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். ஏன், எதற்கு, எப்படி என்று படிப்பவர்களது சிந்தனையைத் தூண்டுவதுதான் இந்த இந்த நூலின் முக்கிய நோக்கம். நாம் கற்றது கைமண் அளவுதான். இன்றைக்கு அறிய இயலாத, அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக நாம் நினைப்பது நாளையே நிரூபிக்கப்பட்டு அறிவியல் எல்லைக்குள் வரலாம். இன்றைக்கு பல விஷயங்கள் அப்படி நிரூபிக்கப்பட்டவைதான். அதுபோன்ற ஒரு சிந்தனையை இதில் உள்ள கட்டுரைகள் தூண்டும் என்று நம்புகிறேன் https://ramanans.wordpress.com/ என்ற எனது வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகளே தற்போது மின்னூல் வடிவம் பெறுகின்றன. படித்து விட்டு உங்கள் கருத்தை aravindsham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தயங்காமல் எழுதவும். நன்றி அன்புடன் அரவிந்த் [pressbooks.com] 1 நம்ப முடியாத பல அதிசயங்கள் நிகழும் இடம் நம் பாரத பூமி. அதிலும் மகான்களாகவும், சித்த புருஷர்களாகவும் விளங்குபவர்கள் செய்திருக்கும் அதிசயங்கள் எண்ணிடலங்காதவை. அந்த சித்த புருஷர்களின் நோக்கம் மற்றவர்கள் பார்த்து வியக்க வேண்டும் என்பதல்ல. அது அவர்களுக்கு இயல்பான ஒன்று. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குத்தான் அவை அதிசயம், அற்புதம். சித்த புருஷர்களுக்கு அவையெல்லாம் வெகு சாதாரணமான ஒன்றுதான். கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சித்தர் ஒருவர் வானத்தில் பறந்து சென்றதாக தொலைக்காட்சியில் வீடியோ ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். அதை நம்பியவர்களும் உண்டு. “சும்மா கேமரா ட்ரிக்” என்று சொன்னவர்களும் உண்டு. உண்மையிலேயே மனிதர்களால் அவ்வாறு பறக்க முடியும் என்றால் ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் போன்றவை எல்லாம் எதற்கு என்று எழும் கேள்விகளிலும் தவறில்லை. அதுசரி, மனிதர்களால் அவ்வாறு பறக்க முடியுமா? அது சாத்தியமா? ஆம் முடியும். அப்படி வானத்தில் பறந்த ஒருவரைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம். உடனே, “மனிதனாவது பறப்பதாவது! எல்லாம் சுத்த பேத்தல். ஏமாற்றுவேலை!” என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கள், அவசரப்படாதீர்கள். கீழ்கண்ட பத்தியை முதலில் படியுங்கள். “சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வகித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்.” இதைச் சொன்னது யார் தெரியுமா? பொய்யாமையை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த, சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளாரகவும் திகழ்ந்த, தொழிலாளர் நலனுக்காக உழைத்த, முதன் முதலில் தொழிலாளர்களுக்காக என்று சங்கம் கண்ட, இலக்கியவாதி, ஆன்மிகவாதி என்று பன்முகங்கள் கொண்ட, தந்தை பெரியாரின் உற்ற நண்பராகத் திகழ்ந்த ”தமிழ்த் தென்றல்” திரு.வி.க. அவர்கள்தான். திரு.வி.க. அவர்கள் அம்மையார் பறப்பதைக் கண்ணால் கண்டு, உறுதிப்படுத்தி தனது ‘உள்ளொளி’ என்ற நூலில் அது பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். (பக்கம் 57, மணிவாசகர் பதிப்பகம். தமிழ் மண் பதிப்பகமும் அவரது நூல் தொகுப்பை வெளியிட்டுள்ளது) [sarkarai 1] ஸ்ரீ சக்கர அம்மாள் சரி, இவ்வாறு வானத்தில் பறந்த அந்த அற்புதத்தை நிகழ்த்திய அவர் யார் தெரியுமா? அவர் தான் ஸ்ரீ சக்கர அம்மாள். அவர் ஒரு சித்த யோகினி. வட ஆர்க்காடு மாவட்டத்தில் பிறந்த அவரது இயற்பெயர் அனந்தாம்பாள். குடும்ப வாழ்வில் பல்வேற் சிக்கல்களைச் சந்தித்து, ஆனாலும் மனம் சோராது, தனது கடமை வழுவாது இல்லறப் பணியாற்றி, இறுதியில் வைராக்கிய நிலை பெற்று, தவத்தில் ஆழ்ந்து ஆன்ம அனுபூதி பெற்று உயர்நிலைக்குச் சென்றவர். ஆன்மீக வாழ்வில் உயர்வடைய பெண்களாலும் முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர். ஸ்ரீ சக்ரத்தை வைத்து அவர் ஆரம்ப காலத்தில் பூஜித்ததால் ஸ்ரீ சக்கர அம்மாள் என்று பக்தர்களால் போற்றப்பட்டார். பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ”பாப்பாத்தி அம்மாள்” என்றும் அழைத்தனர். இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் நடப்பதை உணரும் ஆற்றலான ஞான திருஷ்டியை அவர் பெற்றிருந்தார். அது மட்டுமல்ல; அஷ்டமாசித்திகளும் கைவரப் பெற்ற்றிருந்தார். காற்றின் எடையை விடத் தன் உடலின் எடை அடர்த்தியைக் குறைத்து அதன் மூலம் வானத்தில் பறக்கக் கூடிய அந்த ஆற்றலுக்கு ”லகிமா” என்று பெயர். அதன் மூலமே அம்மையார் வானத்தில் பறந்தார். அம்மாவினது தலையாய சீடராக டாக்டர் நஞ்சுண்ட ராவ் இருந்தார்.. அவர் அக்காலத்தின் புகழ் பெற்ற மருத்துவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர். பாரதிக்குப் பலவிதங்களில் உறுதுணையாக இருந்தவர். அவர், ஸ்ரீ சக்கர அம்மாவின் மஹா சமாதிக்குப் பிறகு எழுப்பிய ஆலயம், ’ஸ்ரீ சக்கரத்தம்மன் திருக்கோவில்’ என்ற பெயரில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயத்திற்குச் செல்லும் வழியில், கலாஷேத்ரா செல்லும் பாதையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தம் வாழ்வில் பல்வேறு அற்புதங்கள் புரிந்தவர் இன்றும் சூட்சுமமாக பக்தர்களுக்கு உதவி வருவதாக பக்தர்கள் நம்பித் தொழுகின்றனர். *** 2 காட்சி தந்த மீனாட்சி அன்னை இறைவன் மனிதனுக்குக் காட்சி தருவது என்பதை புராணங்களில் நாம் கேள்விப்பட்டுள்ளோம். கதைகளில் படித்துள்ளோம். ஆனால் உண்மையாகவே அதுபோன்று நடந்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நடந்தது மட்டுமல்ல; அதையெல்லாம் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலம். ரஸ் பீட்டர் என்பவர் மதுரையின் கவர்னர் பொறுப்பில் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். நேர்மையாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் கொலை, கொள்ளை, திருட்டு, பயம் போன்ற அச்சங்கள் நீங்கி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அக்கால மன்னர்கள் நகர் உலா செல்வது போல தினந்தோறும் இரவில் தன்னந்தனியராக நகர் உலா செல்வதை தனது வழக்கமாக வைத்திருந்தார் ரஸ் பீட்டர். வழியில் திருடர்கள் எதிர் வந்தாலோ, அடாத செயல்களை எதுவும் காண நேர்ந்தாலோ அவ்வளவுதான் அப்படிப்பட்டவர்களை தனது சவுக்கால் அங்கேயே விளாசுவதுடன், உடனடி தண்டனையும் அளிப்பார். அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர் மீது கொண்ட அன்பால் அவரை “பீட்டர் பாண்டியன்” என்று போற்றியவர்கள், அவர் மீது உலா, அம்மானை, கோவை போன்ற சிற்றிலக்கியங்களையும் பாடிப் பெருமைப்படுத்தினர். ஒருநாள்… இரவு நேரம்…. இடி, மின்னலுடன் பெரு மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழையில் எப்படி வெளியே நகர் உலா செல்வது என்று தனது பங்களாவில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தார் ரஸ் பீட்டர். அப்போது மழையில் தொப்பலாக நனைந்தபடியே ஓட்டமும், நடையுமாக ஒரு சிறுமி அவரது பங்களாவுக்கு நுழைந்தாள். அவள் முகம் பளபளத்தது. கண்கள் சுடர் விட்டது. மூக்கில் அழகான ஒரு சிறு மூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது. ரஸ் பீட்டருக்கு ஒரே ஆச்சரியம். இவளுக்கு ஏதோ பிரச்சனை போலும். அதனால் தான் இந்த இரவில் நம்மை நாடி வந்திருக்கிறாள் என்று நினைத்தவர், என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். ஆனால் அந்தச் சிறுமியோ பதில் ஏதும் பேசவில்லை. அவரது கையைப் பிடித்து வெளியே இழுத்து வர ஆரம்பித்தாள். சரிதான். ஏதோ பிரச்சனை. அது நடக்கும் இடத்துக்குத்தான் நம்மைக் கூட்டிச் செல்கிறாள் என்று நினைத்த ரஸ் பீட்டர் அவள் பின்னாடியே சென்றார். சிறிது தூரம் சென்றதும், மிகப் பெரும் ஒளியுடன் ஒரு பெரிய மின்னல் வெட்டியது. தொடர்ந்து ”டமார்” என்ற பெரிய சத்தம் கேட்டது. அதிர்ச்சியுடன் சத்தம் வந்த திசையைப் பார்த்த ரஸ் பீட்டர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார். காரணம், பெரும் மின்னலும் இடியும் தாக்கி அவர் இருந்த பங்களா தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பின் அப்படியே இடிந்து விழுந்தது. ரஸ் பீட்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரம் அப்படியே எரியும் பங்களாவை பார்த்துக் கொண்டிருந்தவர், சுய உணர்வு பெற்று திரும்பிப் பார்த்த போது அந்தச் சிறுமியைக் காணவில்லை. அவர் தேடிப் பார்த்தபோது அவள் வெகு தொலைவில் முன்னால் சென்று கொண்டிருந்தாள். பீட்டரும் துரத்திக் கொண்டே ஓடினார். ஆனால் அச்சிறுமியோ அவர் எவ்வளவு விரைவாக ஓடினாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு முன்னாலேயே சென்றுகொண்டு இருந்தாள். பீட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் வேக வேகமாக அவளைத் துரத்திச் சென்றார். வேகமாகச் சென்ற அந்தச் சிறுமி மீனாட்சியம்மன் ஆலய வாசலை அடைந்தாள். அங்கிருந்து ரஸ் பீட்டரை சற்றே திரும்பிப் பார்த்தாள். புன்னகைத்தாள். பின் கோயிலுக்குள் நுழைந்தாள். தானும் வேக வேகமாகக் கோயிலுக்குள் நுழைந்து அங்கும் இங்கும் தேடினார் ரஸ் பீட்டர். அந்தச் சிறுமியை எங்குமே காணவில்லை. அவள் எங்கோ மாயமாய் மறைந்து விட்டிருந்தாள். பின்னர்தான் ரஸ் பீட்டர் உணர்ந்தார், சிறுமியாக வந்து தன்னைக் காப்பாற்றியது மீனாட்சியம்மைதான் என்பதை. அந்த நன்றி உணர்வால் மீனாட்சி அம்மனுக்கு பல ஆபரணங்களைக் காணிக்கையாக்கினார். நகைகள் பூட்டி அழகு பார்த்தார். இன்றளவும் அந்த நகைகள் பயன்பாட்டில் உள்ளன என்பது அதன் சிறப்பு. தகுதி உடையவருக்கு நிச்சயம் இறைவன் அருள் கிட்டும் என்பது உண்மைதான் இல்லையா? *** 3 மாயம், மர்மம், மாந்திரீகம் மாந்திரீகம், மந்திரத்தால் சில செயல்களைச் செய்வது என்பது நமது நாட்டில் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளதுதான். குறிப்பாக கேரளாவில் இவற்றின் பயன்பாடு மிக அதிகம். இந்தியாவில்தான் என்றில்லை; உலகின் பல நாடுகளிலும் இவ்வகைப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அதிகம். குறிப்பாக தென் ஆப்ரிக்காவில் “ஊடு” என்ற வகை மாந்த்ரீகம் மிகப் பிரபலமானது. பொதுவாக இவ்வகை மாந்த்ரீகம் ப்ளாக் மேஜிக், ஒயிட் மேஜிக் என இரு வகைப்படும். தீமைகள் செய்யப் பயன்படுத்துவது ப்ளாக் மேஜிக். நன்மைகளைச் செய்ய உதவுவது ஒயிட் மேஜிக். இந்த மந்திர, தந்திரங்கள் பற்றி அவற்றின் பிரயோக முறைகள் பற்றி அதர்வண வேதத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோக மாந்திரீக காவியம், மாந்திரீக வேதம், மாந்திரீக ப்ரசன்னம் என பல நூல்கள் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. மேலும் பல மாந்திரீக ஓலைச்சுவடிகளில் இதுபற்றி பல செய்திகள் உள்ளன. “சுவடிகள் ஆய்வு மையம்”, “சுவடியியல் நிறுவனம்” போன்றவற்றில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை இதுவரை பதிப்பிக்க விடவில்லை. அதற்கான தேவைகள் எதுவும் எழவில்லை. அப்படிப்பட்ட மாந்திரீகச் சுவடியிலிருந்து ஒரு சில நம்ப முடியாத செய்திகளைப் பார்ப்போமா? வசியம் செய்ய வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி –, — என 108 தரம் ஜெபித்து, அவர் முகத்தின் முன் கைச் சொடக்கிட அவர் வசியமாய் சொன்ன சொல் கேட்பார். நாய் வாய் கட்ட குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி, –,–,–,– கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால்நாய் குரைக்க இயலாது. குரைக்க முயன்றாலும் சப்தம் செய்யாது. இரையும் எடுக்காது. ஆனாலும் இதனை ஆபத்துக் காலத்திலே அல்லாமல் அகாலமாய் உபயோகம் செய்பவன் நபும்சகனாய் வாரிசற்று வீழ்வான். அவன் குலம் பாழாகும். மிருகங்கள் வசியம் ஆ, ஔ என்கிட நாய் உறுமும். எ, யா என்கிட விலகும். ஐயா என அழைக்கக் கூத்தாடும். பிறர் மனதை அறிய குப்பைமேனி வேர், வெள்ளெருக்கு வேர், வரட்டைச் செடி வேர் இவற்றை எரித்து, புனுகு, கோரோசனை, –,–,– மற்றும் — கலந்து, ஒரு மெழுகு போல் அரைத்து, அதனைத் திலமாக்கி இட்டுக் கொள்ளப் பிறர் மனதில் இருப்பதை, அவர்கள் நிழல் விழும் வட்டத்தில் வரும் பொழுது அறிந்து கொள்ளலாம். பால் நீராக.. “தேத்தான் கொட்டையை வெள்ளெருக்கம் பாலில் விட்டு அரைத்து, அதில் — கலந்து, தண்ணீரில் கலந்து விட பால் நீராகும்.” இனி கள்ளைப் பாலாக்குவோமா? கள் பாலாக கோழிமுட்டையின் மஞ்சள் கருவோடு, ஒரு மரத்துக் கள்ளைக் கலந்து அதனை — செய்ய கள் பாலாகும். கை தட்டித் தேங்காய் விழவைக்க கருங்குருவி என்னும் நெடிய வால்குருவியைக் கொன்று, சுட்டு, அதன் சாம்பலை, தலைப் பிள்ளை பெற்ற — இல் கலந்து, நன்றாகக் குழப்பி, உள்ளங்கையில் தடவி, தென்னை மரத்தைத் தொட்டுத் தடவிக் கைதட்ட, மரத்திலிருந்து தேங்காய் ஒன்றன் பின் ஒன்றாய் விழும்” இரகசியங்கள் இரகசியங்கள் ஆகவேஇருப்பது தான் மனிதனுக்கு நல்லது. அந்த இரகசியத்திற்கும் நல்லது. ஆகவேதான் சில முக்கியமான இடங்களில் — , —- விட்டுவிட்டேன். சரிதானே!… *** 4 விரல் ரேகை அதிசயங்கள் நம்பால் நம்ப முடியாத எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவற்றுள் இந்த கை ரேகை ஜோதிடமும், அதை அடிப்படையாகக் கொண்ட நாடி ஜோதிடமும் ஒன்று. சங்கு, சக்கரம், சுழி, வட்டம், கோணம் என்றெல்லாம் ஜோதிடர்கள் இந்த ரேகைகளை வகைப்படுத்துவார்கள். சரி, இதெல்லாம் உண்மையா அல்லது பொய்யா? கீழ்கண்ட புகைப்படத்தை கவனியுங்கள்… [VIRAL REKAI] மேற்கண்ட படத்தில் சங்கு, சக்கரம் மட்டுமல்ல, திரு நீறு, திருநாமம், ஓம், பிறை, சிலுவை என பல சின்னங்கள் காணக் கிடைக்கிறதல்லவா? இச்சின்னங்கள் மட்டுமல்ல. இன்னும் ஏ, பி, சி, டி போன்ற எழுத்துக்களும், பறவைகளின் முகங்களும் கூடக் காணக் கிடைப்பதாகச் சொல்கிறார் திரு ஏம். எம். பத்மநாபன். இவர் தமிழகக் காவல்துறையின் தடயவியல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தேழாண்டு காலக் காவல்துறை அனுபவத்தைக் கொண்டவர். பல்வேறு சிக்கலான வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவர். பல்வேறு அமைப்புகளால் பாராட்டி கௌரவிக்கப் பெற்றவர். தடயவியல் துறையிலும் கைரேகை இயலிலும் பல ஆய்வுகளைச் செய்த மிகச் சிறந்த சாதனையாளர். அவர் ”FINGER PRINT IS A REPLICA OF    RELIGION AND GOD ” என்ற அற்புதமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதிதான் மேற்கண்ட படம். (அவருக்கு என் நன்றிகள்) அந்நூலில் மேலும் பல சுவையான தகவல்களை திரு பத்மநாபன் அவர்கள் தெரிவித்துள்ளார். உதாரணமாக, 1. விரல்ரேகையில் மொத்தம் 10 வகையான உட்பிரிவுகள் வரை இருக்கின்றன. 2. இரண்டு விரல்ரேகைகள் ஒரேமாதிரி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. 3. விரல்ரேகையில், சுழி, வளைந்த சுழி, நீள்வட்டம், இரட்டை நீள்வட்டம், குறுக்கு வட்டம் எனப் பற்பல வகைகள் உள்ளன. 4. விரல் ரேகை அமைப்பில் திருநீறு, திருமண், சக்கரம், ஓம், சிலுவை, பிறைச்சந்திரன் போன்ற இறைச்சின்னங்கள் மட்டுமல்ல; மனித முகம், பறவைகள், போன்ற சின்னங்களும் சில ஆங்கில எழுத்துகளும் கூடக் காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் கூறியிருக்கும் விஷயம்தான், நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்க்கே அழைத்துச் செல்லக் கூடியது. அது…. பல ஆயிரக்கணக்காண குற்றவாளிகளின் ரேகைகளை ஆராய்ந்து பார்த்ததில், எல்லோரது ரேகைகளிலும் ஒரே ஒரு அம்சம் மட்டும் பொதுவாக இருந்ததாக அவர் குறிப்பிடுவதுதான். இதன்படிப் பார்த்தால் குற்றவாளிகள் உருவாக்கப்படுவதில்லை, பிறப்பிலேயே அவர்கள் குற்றவாளிகளாகத் தான் பிறக்கிறார்கள், சமயம் வரும் போது அக்குற்றச் செயல்களைச் செய்து குற்றவாளிகள் ஆகிறார்கள் என்றாகிறது. அப்படியானால் இந்து மதத் தத்துவங்கள் கூறும் ஒருவனது வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டபடிதான் (விதிப்படி) நடக்கிறது என்னும் ’கர்மா தியரி’ உண்மையாகிறது அல்லவா?. சிந்தியுங்கள். *** 5 இது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம். சீதாலெஷ்மி என்ற வயதான பெண்மணி தஞ்சையில் வசித்து வந்தார். வயதானாலும் கூட தனது வேலைகளைத் தானே செய்ய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வு உடையவர் அவர். அப்படித்தான் அன்றும் சமையலுக்காக கிணற்றில் நீர் இறைந்த்துக் கொண்டிருந்தார். தண்ணீரைக் குடத்தில் ஊற்றி, அதை எடுத்துக் கொண்டு வரும் போது கால் வழுக்கிக் கீழே விழுந்து விட்டார். அவ்வளவுதான் அங்கேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே அலுவலகம் சென்றிருந்த அவரது மகனுக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவரும் அன்னையின் உடல் கண்டு கலங்கினார். கண்ணீர் விட்டு அழுதார். அந்தத் தாய்க்கு மிளகு ரசம் என்றால் மிகவும் பிடிக்கும். மகனாகிய அவரும் அதை விரும்பிச் சாப்பிடுவாராம். சமையல் அறையில் மிளகு ரசத்தை வைத்து விட்டு சோறு வைக்க தண்ணீர் எடுத்து வரும் நேரத்திற்குள் அந்தத் தாய் இறந்து விட்டார். இதை அறிந்த மகன் சமையல் உள்ளுக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் அந்த ரசத்தை எடுத்து வந்தார். அழுது கொண்டே அன்னையின் வாயைத் திறந்து மிளகு ரசத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாயிலே ஊற்றினார். அழுகையிலும் அரற்றிலிலும் சில நிமிடங்கள் சென்றன. திடீரென்று அந்தப் பெண்மணி ”கர், புர்” என்று பயங்கர சத்தத்துடன் இருமி வாயைத் திறந்து ஏதோ சத்தமிட்டுக் கொண்டே கண்விழித்தார். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி + ஆச்சரியம். ஏதேனும் பேய்தான் உடலில் புகுந்து கொண்டு விட்டதோ என்று அஞ்சி சிலர் அங்கிருந்து எழுந்து ஓடினர். சில மணி நேரங்கள் அந்தப் பெண்மணி அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தாராம். பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார். மகன் அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, அந்த அம்மாள் அதற்கு, “நான் கிணற்றடியில் வழுக்கி விழுந்து விட்டேன். உடனே எனக்கு உயிர் போய்விட்டது என்னை யாரோ இருவர் எங்கேயோ அழைத்துக் கொண்டு போனார்கள். ஒளி மாதிரி ஒன்று பெரிதாகத் தெரிந்தது. அங்கு ஏதேதோ பேச்சுக் குரல்கள் கேட்டது. ஒரு குரல் ”அதற்குள் இவளை ஏன் அழைத்துக் கொண்டு வந்தாய்! உடனே அனுப்பிவிடு” என்று சொன்னது. உடனே அங்கு எனக்கு அரிசி சாதம் இரு பருக்கையும், – ஒவ்வொரு அரிசியும் மிகவும் நீளம், அது போன்ற அரிசியை பார்த்ததே இல்லை – கொஞ்சம் கீரையும் கொடுத்து உண்ணச் சொன்னார்கள். நான் உண்ட பின் உடனே மலை மாதிருந்த ஒரு இடத்தின் மீதிருந்து என்னை எங்கேயோ உருட்டி விட்டார்கள். கண் விழித்துப் பார்த்த போது நான் நம் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் இறந்து போய் மீண்டும் உயிர் பெற்று வந்திருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்” என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் பல வருடங்கள் உயிர் வாந்த அந்த முதிய பெண்மணி, மீண்டும் ஒரு நாள் ஒரு நாள் கிணற்றடியில் வழுக்கி விழுந்துதான் இறந்தார் என்பதுதான் அதிசயத்திலும் அதிசயம். த்ரை லிங்க சுவாமிகள் மகான்கள் பலரும் இது போன்று இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனர். ஞான சம்பந்தப் பெருமான் பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையை உயிர்ப்பித்துத் தந்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இதே போன்று பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதுபோல காசியில் வாழ்ந்த ஸ்ரீ த்ரை லிங்க சுவாமிகளும். மதுரையில் வாழ்ந்த குழந்தையானந்த சுவாமிகளும் பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியுள்ளனர். [Trilingar 3] த்ரை லிங்க சுவாமிகள் ஒருமுறை காசியில் பாம்புக் கடி பட்ட ஒருவன் இறந்து போனான். அவனை எரிப்பதற்காக கங்கைக் கரைக்கு அவன் உறவினர்கள் வந்திருந்தனர். த்ரை லிங்க சுவாமிகள் அங்கே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். திடீரென எழுந்தவர் இறந்தவனின் காயத்தில் கையை வைத்துத் தடவினார். அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் குதித்தார். காணாமல் போனார். அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே, இறந்தவனின் உடலில் லேசாக அசைவு ஏற்பட்டது. திடீரென அவன் எழுந்து நின்றான். அனைவரும் திகைத்தனர். பின்னர் இது மகானின் திருவருள் என்று எண்ணி வியந்து அவரைத் தொழுதனர். மதுரையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் தன் குரு கணபதி பாபாவுடன் காசி சென்றார். அங்கு சில காலம் தவ வாழ்க்கை வாந்த அவர் பின்னர் நேபாள் சென்றார். நேபாள் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளைய குமாரர் ஒருவர் அங்கு திடீரென இறந்து விட்டார். அதனால் மன்னன் முதலானோர் அப்போது மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர். சுவாமிகளின் மகிமையைப் பற்றி முன்பே அறிந்திருந்த அவர்கள் சுவாமிகளின் பாதம் பணிந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று கூறிக் கதறினர். சுவாமிகளும் உடனே இறந்த ராஜகுமாரன் உடல் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்றார். உள்ளே சென்றவர் உடன் கதவைத் தாளிட்டுக் கொண்டு விட்டார். அனைவரும் சுவாமிகள் செய்வது நல்லதுக்குத் தான் என்று பொறுமையாகக் கதவுக்கு வெளியே காத்திருந்தனர். மூன்று நாட்கள் கழித்து சுவாமிகள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். சற்று நேரத்தில் இறந்து கிடந்த ராஜகுமாரனும் தூக்கத்திலிருந்து விழித்து எழுவது போல எழுந்து கொண்டு வெளியே வந்தான். மன்னர் உட்பட அனைவரும் அளவற்ற வியப்புற்றனர். நன்றிகள் கூறி சுவாமிகளின் பாதம் பணிந்து வணங்கினர். மகான்களின் பெருமை பேசவும் இனிதே! *** 6 பிரமிடு மர்மங்கள் உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்த வித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் தான் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இதன் மர்மங்கள். நாமும் அந்த மர்மத்தின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போமா? “பிரமிடு” என்றால் பலரும் சொல்வது, “அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். “மம்மி” என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான். ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்பது போன்ற கேள்விகள் சிந்தனைக்குரியன. புகழ் பெற்ற ரோமானியர்களின் கட்டிடத் திறமைக்குச் சான்றாக விளங்கும் இவ்வகைப் பிரமிடுகள் எகிப்து நாட்டில் காணக்கிடைக்கின்றன. நூற்றிற்கும் மேற்பட்ட பிரமிடுகள் இங்கே உள்ளன. இதுவரை சுமார் 80 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அது தவிர மேலும் இங்கே ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளது கைஜா பிரமிடு. இதை ஒரு அதிசயப் பிரமிடாகக் கருதுகின்றனர். மற்றொரு புகழ் பெற்ற குகுல் குன் பிரமிடு. இது அடுக்கு பிரமிடு வகையைச் சேர்ந்தது. படிப்படியாக உயர்ந்து மேலே உச்சிக்குச் செல்லக் கூடிய இதை ‘ட்ஜோசெர் பிரமிடு’ என்றும் அழைக்கின்றனர். இவ்வகைப் பிரமிடுகள் அனைத்தும் 25 லட்சத்திற்கு மேலான கற்களை – கிட்டத்தட்ட 30 டன் எடை உடைய கற்களைக் – கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. [pyramid] இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமியில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இவை நானுறு ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டு இருக்கலாம்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார். பால் ப்ரண்டன் இந்தப் பிரமிடுகள் குறித்து ஆராய்ந்து “A search in secret egypt” என்ற தலைப்பில் சுவையானதொரு நூலை எழுதியுள்ளார். ஆவிகள், இன்னதென்று விவரிக்க இயலாத தோற்றம் கொண்ட மர்ம உருவங்கள், வித்தியாசமான செயல்பாடுகளை உடைய மதகுருக்கள், அமானுஷ்யங்கள், மாந்திரீக வழிபாடுகள் பற்றியெல்லாம் அந்த நூலில் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. அந்த நூலில் உள்ள விஷயங்கள் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லக் கூடியவையாகும். பிரமிடின் வெவ்வேறு அளவு விகிதாசாரங்கள் ‘பை‘ எனப்படும் 3.142 என்ற அளவை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன என்பது மற்றொரு அதிசயமாக உள்ளது. கணிதம், வானியல், விஞ்ஞானம், பௌதிகம் போன்றவை எதுவும் வளராத காலத்தில் துல்லியமாக எப்படி இவற்றைக் கணக்கிட்டார்கள் என்பது விஞ்ஞானிகளால் நம்ப முடியாத அதிசயமாக உள்ளது. பண்டைக் காலத்தில் வாழ்ந்த ட்ஜோசர் என்ற மன்னர் எதிரிகளுடன் பெரும் போர் நிகழ்த்தியதாகவும், அந்தப் போர் வெற்றியின் நினைவாக ஒரு பிரமிடை உருவாக்கினார் என்றும் ஒரு கருத்துள்ளது. அவர் இறந்த பின் அவரது உடலைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர் மீண்டும் சில காலம் கழித்து திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலும் அதே போன்று ஒரு பிரமிடைக் கட்டி அதில் சமாதி வைத்தனர். இறந்த மன்னனின் ஆவி சொர்க்கம் சென்று திரும்பி வரும்போது முன்பு குடியிருந்த தன் பழைய உடலிலேயே மறுபடியும் புகுந்துக்கொள்ளும். எனவே, அந்தகாலம் வரும் வரை இறந்த உடலைக் கெடாமல் பாதுகாப்பது அவசியம் என்று கருதியே எகிப்தியர்கள் இவ்வகைப் பிரமிடுகளைக் கட்டியுள்ளனர். தொடர்ந்து பின் வந்த பலரும் அதே முறையைப் பின்பற்றியுள்ளனர். அவ்வாறு பதனப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தான் “மம்மிகள்” என்று அழைக்கப்படுகின்றன. எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் புகழ்பெற்ற கைஜா பிரமிடு சியோப்ஸ் மன்னனின் பிரமிடு ஆகும். பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட ’ஸ்பிங்க்ஸ்’ பிரமிடு உலகப் புகழ் பெற்றது. இது கி. மு. 26 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ எதுவுமே வளராத அந்தக் காலத்தில் எப்படி இதில் இருக்கும் அதிக எடை கொண்ட கற்களை ஒன்றன் மீது ஒன்று ஏற்றிக் கட்டியிருப்பார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. கைஜா பிரமிடில் கிடைத்த ’டியூட்மஹ்மும’ என்ற இளவரசனின் உடல்தான் உலகின் முதல் மம்மியாகக் கருதப்படுகிறது. கைஜா பிரமிடு அடங்கிய இந்த நெக்ரொப்போலிஷ் நகரம் மேலும் பல அதிசய பிரமிடுகளை தன்னுள் உள்ளடக்கியுள்ளது. இங்கே பல புதையல்கள், தங்கச் சுரங்கங்கள் இருப்பதாகவும், அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவே இறந்தவர்களின் உடலைப் புதைத்து கூடவே அவற்றையும் புதைத்து வைத்துள்ளனர் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. இன்றும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்தப் புதையல்களை அங்கு தேடி வருகின்றனர். இந்த வகைப் பிரமிடுகள் சிலவற்றில் பிரமாண்டமான பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை எகிப்திய மன்னர்களான பாரோக்களின் உருவங்கள் என்றும், அல்ல, வேற்றுக் கிரக மனிதர்களின் உருவங்கள் இவை என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர். அப்படியானால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த வேற்றுக் கிரகவாசிகள்தான் இந்தப் பிரமிடுகளை உருவாக்கினார்களா? அவர்கள் தங்களது வானியல் தொடர்புக்காகத் தான் ஒரு குறிப்பிட்ட பௌதிகக் கணக்கு அளவீடு உடைய இப் பிரமிடுகளை பூமியில் உருவாக்கியுள்ளார்களா? அப்படியானால் அவர்கள் இப்போது எங்கே? செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வசிப்பதாகச் சொல்லப்படுவது உண்மைதானா? இல்லை, இவையெல்லாம் வெறும் கற்பனைகள் தானா? ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காலம் தான் இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். *** 7 சீடனைக் காத்த குரு நம்ப முடியாத அதிசயங்களால் நிரம்பியதுதான் வாழ்க்கை. சிலவற்றிற்கு ஏன், எப்படி, எதனால் என்று நம்மால் காரணம் சொல்ல முடியாது. ஏதாவது சாக்கு, போக்கு அல்லது உருக்கமாக ‘மேஜிக்’ என்றெல்லாம் சொல்லித் தப்பித்து விடுவோம். நம்மால் அவற்றைச் செய்யவும் இயலாது. கற்பித மனம் அதை நம்பவும் நம்பாது. இப்படித்தான் இங்கே பலரது வாழ்க்கை இங்கேயுமில்லாமல், அங்கேயுமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சில விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார் சாராதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்வாமி திரிகுணாதீதானந்தர். அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களுள் ஒருவர். விவேகானந்தரின் அன்புக்கு உகந்தவர். [triguna] திரிகுணாதீதானந்தருக்கு இறை நம்பிக்கை அதிகம். ஆனால் பேய் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும். அப்போதுதான் நம்ப முடியும் என்பது அவரது திடமான எண்ணமாக இருந்தது. அதற்காக அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பல புத்தகங்களை வாங்கிப் படித்தார். பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் தங்கினார். ஆனால் இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை. அதனால் அவருக்கு அந்த விஷயங்களில் நம்பிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. எல்லாம் மனித மனத்தின் வீணான கற்பனைதான் என்று எண்ண ஆரம்பித்தார் ஒரு நாள்…. வராகநகர் மடத்துக்கு அருகிலான ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேயிருப்பதாகவும் இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர். திரிகுணாதீதானந்தரும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டில் போய்த் தங்கினார். நள்ளிரவு நெருங்கியது. அவர் பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார். சற்று நேரம் சென்றது. அப்போது அவர் அமர்ந்திருந்த அதே அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றியது. அது மிகுந்த கோபத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது. சுவாமிகளின் இரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது. அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார். உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, “மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும். வீண் விஷயங்களில் உன் கவனத்தைச் சிதற விடாதே” என்று கூறிவிட்டு மறைந்தது. உடனே அந்த மாயக்கண்களும் மறைந்து விட்டன. தான் மறைந்தாலும் தனது அன்புச் சீடனுக்காக ஆவி உருவில் தோன்றி நல் வழிகாட்டினார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். குருவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று அல்லவா? சுவாமி விவேகானந்தரின் ஆணையை ஏற்று அமெரிக்காவிற்கு வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பச் சென்ற ஸ்வாமி திரிகுணாதீதானந்தர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வேதாந்த சங்கத்தின் தலைவராக தம் வாழ்நாள் இறுதி வரை பணியாற்றினார். முதன் முதலில் மேற்குலகில் இந்துக்களுக்கு என்று ஒரு ஆலயத்தை நிர்மாணித்த பெருமை ஸ்வாமி திரிகுணாதீதானந்தரையே சேரும். ஒரு பைத்தியக்காரன் தவறுதலாக எறிந்த கைக் குண்டினால் காயம் பட்டு 1915ம் ஆண்டில் சான்பிரான்ஸிஸ்கோவில் உயிர் துறந்தார் ஸ்வாமி திரிகுணாதீதானந்தர். *** 8 மரணத்தின் பின்.... மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். சரி அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்றெல்லாம் சொல்லப்படுவதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். மனிதன் இறந்த பிறகு அவனது ஆன்மா மேலுலகம் செல்கிறது. அங்கு அது செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், ஆன்மாவின் பக்குவநிலைக்கேற்பவும் சூட்சும உலகங்களில் வசிக்கிறது. மறுபிறவி எடுத்து தங்கள் கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆன்மாக்கள், அதற்கான காலம் வரும் வரை காத்திருக்கின்றன. ஆன்மாவின் தகுதிக்கேற்ப பல்வேறு வளர்ச்சிகளையும் அவை பெறுகின்றன. இயல்பிலேயே நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள், மீண்டும் மறுபிறவி எடுத்து தங்கள் கர்மக் கணக்கைக் கழிக்க வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மேலும் நல்லவர்களாக அங்கு ஆகிறார்கள். அதுபோன்று தாங்கள் செய்த தீவினைகளுக்கு உண்மையாகவே அஞ்சி மனம் வருந்தும் ஆன்மாக்கள் நல்ல பக்குவத்தை அடைகின்றன. இந்தப் பக்குவமானது அவர்களது மறுபிறவிகளின் போதும் தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறது. அதாவது மறுபிறவியில் இவ்வகை ஆன்மாக்கள் நற்சிந்தனையுடன், நேர்மையான வாழ்க்கை வாழ முனைகிறது. இவர்களின் வாழ்வில் சஞ்சித கர்மாவும், பிராரப்த கர்மாவும் செயலாற்றுகின்றன. இவர்கள் நல்ல மனப் பக்குவம் பெற்று தீவழிகளில் செல்லாததால் ஆகாம்ய கர்மாவினது பாதிப்புகள் அதிகம் நேர்வதில்லை. விளக்கமாகச் சொன்னால் இவர்கள் மனிதர்களின் முற்பிறவி-மறுபிறவிச் சுழற்சியில் அதன் அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சியுறுகிறார்கள் என்று சொல்லலாம். ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம். பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவைன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. – இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்துதான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்தந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது. உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. *** 9 ஆவிகள் உண்மையா, பொய்யா? ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். ஒரு சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னோர்களைக் குல தெய்வமாக வணங்குவர். அவர்களுடைய நினைவு நாட்களில் விளக்கேற்றிப் படையல் இடுவர். அன்னதானங்கள் செய்வர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. நினைவு நாள் கொண்டாடுவதும், இறந்தவர்களின் நினைவாக அவர்களது உருவச் சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். சரி, அவ்வாறு இறப்பவர்கள் என்ன ஆகின்றனர் என்பது குறித்துச் சொல்லப்படும் விஷயங்களை இனி பார்ப்போம். மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தவும் முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது. ஆவிகள் உலகம் கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான் என்பது நம்பிக்கை. தீய எண்ணங்களுடன் வாழ்ந்தவர்கள் இறந்த பின்னும் அமைதியிழந்து தவிப்பர். அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதுவே பேய் பிடித்தல் எனப்படுகின்றது. ஆவி உலக ஆராய்ச்சிகள் ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறிய தகவல்கள்: “ஆவியுலகத்தில் (ஏ, பி, சி, டி) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவிகள் உலகத்தைப் பொறுப்பேற்று நடத்துகின்றன.” ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்நூலில் அவர், “இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார். ஆவிகள் எல்லாம் மூட நம்பிக்கை, மனப் பிராந்தி என்பது சிலரது கருத்து. ஆனால் கண்ணதாசன் போன்றவர்கள் இதில் ஆராய்ந்து உண்மை உள்ளது என ஒப்புக் கொண்டுள்ளனர். அவற்றை தனது நூல்களிலும் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இத்துறை குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர். மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டு பல உண்மைகளை நிரூபித்துள்ளார். இந்தியாவிலும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நம் முன்னோர்களின் ஆவி நம்மோடு உட்கார்ந்து தனக்குப் பிடித்த இட்லி, வடையைச் சாப்பிடும் நாள் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் வரவும் கூடும்! *** 10 லூயி - vs லூயி நம்மால் நம்ப முடியாத பல விஷயங்களைக் கொண்டதுதான் மானுட வாழ்க்கை. சில விஷயங்கள் நமது அறிவிற்கு அப்பாற்பட்டவையாக, ஏன், எதற்கு என்று  பகுத்தாய்ந்து சொல்ல இயலாததாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் இது. பிரான்ஸ் மன்னர் 16ம் லூயியின் வாழ்க்கைக்கும், அவருக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு தோன்றிய லூயி முனிவரது வாழ்க்கைகும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அது என்ன என்பதைக் கீழே பார்க்கலாம். லூயி முனிவர்                                                                                                         16ம் லூயி பிறப்பு ஆகஸ்ட் 23, 1215                                                                     பிறப்பு ஏப்ரல் 23, 1754 சகோதரி எலிசபெத் பிறப்பு : 1225                                                 சகோதரி இஸபெல் பிறப்பு : 1764 தந்தை மரணம் : 1226                                                                          தந்தை மரணம் : 1765 திருமணம் : 1231                                                                                    திருமணம் : 1770 பிரான்ஸின் மன்னராதல் : 1235                                                     பிரான்ஸின் மன்னராதல் : 1774 3ம் ஜார்ஜூடன் உடன்படிக்கை : 1243                                        ஹென்றியோடு உடன்படிக்கை : 1782 கீழ்நாட்டு இளவரசர் தூதுவரை அனுப்பியது : 1249           தூதுவர் வந்தது : 1788 அதிகாரங்கள் பறிமுதலானது : 1250                                           பறிமுதலாகி சிறைக்குச் சென்றது : 1789 மன்னர் ஒதுக்கப்பட்டது : 1250                                                        மன்னர் புறக்கணிக்கப்பட்டது : 1789 புரட்சி ஆரம்பம் : 1250                                                                          துயரம் ஆரம்பம் : 1789 இஸபெல் இறப்பு : 1250                                                                      இஸபெல் டி. அங்கோலிமே மரணம் : 1789 ஒயிட் லில்லியின் மரணம் : 1253                                                 க்வீன் பிளாஞ்சே மரணம் : 1792 மரணமடைந்தது : 1254                                                                      ஜோகோபின் ஆக விரும்பியது : 1793 மன்னர் புதைக்கப்படுதல் : 1254                       மன்னர் கில்லட்டின் கருவி மூலம் கொல்லப்படுதல் : 1793 இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? ஒவ்வொரு சம்பவத்திற்கும் இடையே இருக்கும் 539 ஆண்டுகள் வித்தியாசம்தான். அதுமட்டுமல்ல; ப்ராண்ட் என்னும்  இளைஞன் மன்னர் 16ம் லூயின் மீது அன்பு கொண்டிருந்தான். 1774ல் அவரது முடிசூட்டு விழாவைக் காண தொலைதூரத்திலிருந்து நடந்தே வந்து கலந்து கொண்டான். ஆனால் அதே இளைஞன்தான் அவரை ’கில்லட்டின்’ என்ற எந்திரத்தில் வைத்து தலையைத் துண்டிக்கும் பணியை நிறைவேற்றினான். வாழ்க்கை ஒரு புரியாத புதிர்தான் இல்லையா? *** 11 மாயமாய் மறைந்த மகான் மகான்களாலும் சிததர்களாலும் சிறப்பு பெற்ற பூமி நமது பாரத பூமி. தான், தனது என்ற நினைவொழித்து வாழ்ந்தவர்கள் அப்புனிதர்கள். அவர்களில் யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அவதூதர்கள் என்று பல பிரிவினர் உண்டு. அது பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி தனது குதிரையில் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். அது மனித நடமாட்டம் இல்லாத காடு. வழியில் ஒரு பாறை மீது மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார் அந்த ஆங்கிலேயர். அந்த மனிதர் நிர்வாணியாக அமர்ந்திருந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குதிரை செல்வதையோ, அதன் மீது வேகமாக ஒரு மனிதன் செல்வதையோ அவர் கவனிக்கவில்லை. அதைக் கண்ட அந்த அதிகாரி ’யாரோ பாவம் மன நோயாளி போலிருக்கிறது. இந்தியாவில் இது போன்று நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்று நினைத்து, வேகமாக குதிரையைச் செலுத்தினார். சில மைல் தூரம் போயிருப்பார். அதே மனிதர் எதிர்ப்புறம் ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சி. ஆச்சரியம். ’எப்படி இந்த மனிதர் தனக்கு முன்னால் இங்கே வந்தார்’ என்று. ஒரு வேளை இந்த மனிதன் அந்த மனிதரின் சகோதரராக இருக்கலாம் அல்லது பித்தர்கள் என்பதால் ஒரே தோற்றம் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார். சில மணி நேரம் சென்றது. அந்த அதிகாரிக்குத் திடீரென தண்ணீர் தாகம் எடுத்தது. அருகில் எங்காவது குடிநீர் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார். ஒரே செடியும், கொடியும், மரமுமாக இருந்ததே அன்றி கிணறோ, குளமோ, ஆறோ எதுவும் தட்டுப்படவில்லை. தாகத்துடனே பயணம் செய்தவர், சற்றுத் தொலைவில் ஒரு மனிதர் நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்தார். அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று அந்த மனிதரிடம் கேட்கலாம் என நினைத்து வேகமாக குதிரையைச் செலுத்தினார். அந்த மனிதர் அருகே சென்று குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், வழியில் அவர் இரண்டு முறை சந்தித்த அதே மனிதர் தான் இவர். தான் இவ்வளவு விரைவாக குதிரையில் வந்து கொண்டிக்கும் போது, தன்னைக் கடந்து செல்லாமல் எப்படி அந்த மனிதர் தனக்கு முன்னால் செல்ல முடிந்தது என்று யோசித்தார் அந்த ஆங்கிலேயர். இவர் ஒரு மிகப் பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும். அவர்களால் தான் இவையெல்லாம் சாத்தியம் என நினைத்தவர், அந்த மனிதர் முன் போய் நின்று தங்கள் வழக்கப்படி ஒரு ’சல்யூட்’ வைத்தார். அதுவரை பிரம்மத்தில் லயித்திருந்த அந்த மனிதர் அக உணர்வு பெற்றார். ஆங்கிலேயரை கருணையுடன் நோக்கினார். அந்த விழியின் தீக்ஷண்யத்தில் அந்த ஆங்கிலேய அதிகாரி திளைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர் மெல்ல நடந்து முன்னே சென்று திடீரெனக் காணாமல் போனார். அதிகாரி திகைத்தார். அங்கும் இங்கும் ஓடினார். தேடினார். கத்தி, கூப்பிட்டுப் பார்த்தார். அந்த மனிதர் கண்ணில் படவே இல்லை. அது மட்டுமில்ல; அவருக்கு அதுவரை இருந்த தாகமும் தீர்ந்ததுடன், உடலும் களைப்பு நீங்கி முழுமையான புத்துணர்ச்சி பெற்றிருந்தது. தலைமையகத்துக்குச் சென்று இந்த விஷயங்களை சக ஆங்கிலேய நண்பர்களிடம் தெரிவித்தவர், தனது நாட்குறிப்பிலும் இதனைப் பதிவு செய்தார். அந்த அதி அற்புத மகான் வேறு யாருமல்ல மௌன குருவாய், அவதூதராய் விளங்கி, இருநூறாண்டுகளுக்கும் மேல் இவ்வுலகில் வாழ்ந்து பலரது வாழ்க்கை சிறக்கக் காரணமான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் தான். [sada] அவரது ஜீவ சமாதி ஆலயம் கரூரை அடுத்துள்ள நெரூரில் உள்ளது. ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் சமாதி கொண்டவர் என்ற பெருமையும் இம்மகானுக்கு உண்டு. நெரூரில் மட்டுமல்லாமல் மானாமதுரையிலும் இவரது சமாதி ஆலயம் உள்ளது. காஷ்மீரிலும் இவரது சமாதி இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. *** 12 கடவுளைக் கண்டவர் கடவுளைக் காண முடியுமா? கண்டவர்கள் யாரேனும் உள்ளாரா? – இது பலருக்குத் தோன்றும் கேள்வி. அக்காலத்தில் முனிவர்கள் கடும் தவம் செய்து கடவுளைக் கண்டதாக நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். கடவுளின் குரல் “அசரீரி”யாக ஒலித்து பல விஷயங்களைத் தெரிவித்ததாகவும் புராணங்கள் கூறியிருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனை; கடவுள் என்ற ஒருவரே இல்லை – என்ற குரலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. கடவுளைத் தேடிய சுவாமி விவேகானந்தர் நாடியது குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரை. குருதேவரின் அருளால் அவர் கடவுளை உணர்ந்தார். அந்தக் கடவுளின் பரிபூரண ஆசியோடு, கடவுளின் பிரதிநிதியாக மக்கள் தொண்டாற்றினார். உலகெங்கும் பயணம் செய்து, பாரதத்தின் பெருமையை அனைத்து மக்களும் அறியச் செய்ததுடன், பாரதத்தில் மிகப் பெரிய ஆன்மீக விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினர். அது சரி, உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது. Colonel Lionel Blaze என்பவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி. இவர் 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்கள் என்றாலே முட்டாள்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், படிக்காதவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம். ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலையில் இருந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையுடன் அவர் அந்த ஏரியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரிடம் வந்து ஏதாவது உதவி செய்யும் படி வேண்டிக் கொண்டனர். அவர்தான் கிண்டல் பேர்வழியாயிற்றே! உடனே அந்த மக்களிடம், “நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?‘ என்று கேட்டார். உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும் ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன். “ம், அப்படியா? ராமர் என்று ஒருவர் இருந்தால் அதைச் செய்யட்டுமே, பார்ப்போம்” என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார். மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர். நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார். வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அந்த ஆங்கிலேயர் அந்த அற்புதக் காட்சியைக்கண்டார். ஏரியின் கரை மீது உயரமான இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் மிக அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம், ஒரே கணம் தான் அந்தக் காட்சியைக் கண்டார். அடுத்த கணம் அவர்கள் மறைந்து விட்டார்கள். [erikatha ramar] அவ்வளவுதான். அந்த அதிகாரியின் உடல் நடுங்கியது. உள்ளம் கலங்கியது. அப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார். தான் கிண்டலாகச் சொன்னது நிஜமாகிப் போனதே என்ற வியப்பு ஒருபுறம். இந்துக்கள் மடையர்கள் இல்லை; அவர்கள் தெய்வமும் வெறும் கல் இல்லை என்று உணர்ந்து கொண்ட பெருமிதம் ஒருபுறம். அவர்கள் வணங்கும் அந்த தெய்வத்தின் காட்சி தனக்குக் கிட்டியதே என்ற ஆனந்தம் மறுபுறம். அவர்கள் மத வழக்கப்படி அப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தவர், அப்படியே பித்துப் பிடித்தவரைப் போல் கோயிலை நோக்கி ஓடினார். மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியை புதிதாகக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வேட்டிலும் பதிப்பித்தார். “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவத்தினால் தான் மதுராந்தகம் ராமர் “ஏரி காத்த ராமர்” என்று அழைக்கப்படுகிறார். *** 13 முற்பிறவி, மறுபிறவி உண்மைகள் இந்துமதம் கூறும் மிக முக்கிய தத்துவம் – ஒருவர் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு மிக நிச்சயமாய்ப் பலனுண்டு. அவற்றை ஒருவர் முழுமையாக அனுபவிக்க ஒரு பிறவியில் முடியவில்லை என்றால் மறுபிறவி எடுத்தாவது நிச்சயம் அனுபவிக்க வேண்டி வரும் – என்பது. அதுசரி இந்த முற்பிறவி, மறுபிறவிகள் எல்லாம் உண்மைதானா? அப்படி உண்மை என்றால் ஏன் எல்லோருக்கும் அந்த நினைவுகள் தோன்றுவதில்லை? ஒரு சிலருக்கு மட்டுமே அந்த நினைவுகள் தோன்றுவது ஏன்? ஒருவரது முற்பிறவி தான் மற்றவர் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? -இவையெல்லாம் சிந்திக்கும் போது எழும் கேள்விகள். ஆராய்ச்சிக்குரிய விவாதங்கள். ஆனால் முற்பிறவி-மறுபிறவிகள் என்பது உண்மைதான். ஒருவரது ஆசைகளும், எண்ணங்களும் அவர்கள் மறுபிறவி எடுத்த பின்னரும் தொடர்கின்றன – என அதை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மற்ற விஞ்ஞானிகளோ ஆந்தக் கூற்றை மறுக்கின்றனர். கீழ்கண்ட சம்பவம் முற்பிறவி-மறுபிறவி என்பது உண்மைதான் என்பதற்கு ஒரு சான்று. மகளாய்ப் பிறந்த தாய் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவள் சாக்ஷி எனும் சிறுமி. அவள் ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று கூறினாள். தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தனக்கு மகனாக இருந்தார் என்றும் தெரிவித்தாள். தனக்கு ஐந்து மகன்கள் என்றும் அதில் ஒரு மகனான ஷ்யாம் மீது தான் மிகவும் பாசம் கொண்டிருந்ததாகவும் அந்த பாசத்தினாலாயே தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் அவள் தெரிவித்தாள். மேலும் முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர்கள் மட்டுமே அறிந்த செய்திகளையும் அவள் தெரிவித்திருந்தாள். அச்செய்தி 01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் படத்துடன் வெளியானது. அவள் கூற்றை ஆராய்ந்து பார்த்த அவளது முற்பிறவி உறவினர்கள் அவள் கூறுவது அனைத்தும் உண்மைதான் என்று கூறி, அவளோடு நட்பு பாராட்டினர். அந்த அளவிற்கு மகன், மருமகள், கணவர், குடும்ப விஷயங்கள், வெளியூரில் நடந்தது என பல விஷயங்களை சாக்ஷியால் தெளிவாக நினைவு கூர முடிந்தது. தனது முந்தைய பிறவியை மட்டுமல்ல; மற்றொரு பிறவியையும் அவளால் நினைவு கூர முடிந்தது மற்றொரு அதிசயம். போலிபாயாகத் தான் இறந்த பின்பு மீண்டும் ஒரு பிறவி எடுத்ததாகவும். அப்பிறவியில் தான் ஒரு சிறு பெண் குழந்தையாக இருந்ததாகவும், ஒரு நாள் அவளது தாயார் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, இவள் தவறி தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தாள் சாக்ஷி. அப்பிறவியின் தாய், தந்தை போன்ற நினைவுகள் தனக்கு முழுமையாக இல்லை என்று கூறியவள், போலிபாயாகத் தான் வாழ்ந்த காலத்தின் பல நினைவுகள் மிகத் தெளிவாக ஞாபகத்தில் இருப்பதாகவும் கூறினாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகக் கூறினாள். அவள் பொய் கூறவில்லை என்றும், அவள் கூறுவது அனைத்துமே உண்மை என்றும் அவள் கணவர் முரளிதரின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் போலிபாயான தனது முற்பிறவியில் தனக்கு ஒரு சகோதரி இருந்ததாகவும், அவள் பெயர் சன்னிபாய் என்றும் தெரிவித்தாள். [reincarn 1] தனது முற்பிறவிக் கணவர் புகைப்படம் முன் சிறுமி சாக்ஷி [reincarn 2] முற்பிறவி மகன் (இப்பிறவியில் தந்தை) ஷ்யாமுடன் சாக்ஷி *** 14 லிங்கனும் கென்னடியும் அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத அதிசயங்களாக உள்ள அவற்றைப் பற்றிப் பார்ப்போமா? ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846. ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946. லிங்கன் துணைத் தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856. ஜான் எஃப் கென்னடி துணைத் தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றுப் போனது 1956. லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860 ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960 லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813 கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913 லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர். இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர். இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில். இருவருக்குமே காயம் பட்டது தலைப்பகுதியில் லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன் இருவரும் தோற்கடிக்கப்பட்டது தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால். கொல்லப்பட்டதும் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்தான். இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் தான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808. கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908. லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல். கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல். கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார். இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன. லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ’ஃபோர்ட்’ கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில். லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான். கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான். பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர். மேற்கண்ட தகவல்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதுதானே! இல்லை.. இல்லை.. எல்லாமே தற்செயல் என்கிறீர்களா? அதுசரி, ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். எல்லா விஷயங்களுமே இப்படித் தற்செயலாக அமையுமா, அது சாத்தியம்தானா? சிந்தியுங்கள்… *** 15 ஈசான்ய ஞான தேசிகர் திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காக்க, தவம் செய்த பெருமைக்குரியவர் இம்மகான். இவரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை என்னும் ஆங்கிலேயர். பிறப்பால் அவர் ஆங்கிலேயராக இருந்தாலும் கொள்கை அளவில் ஓர் இந்துவாகவே வாழ்ந்தார். இந்து மதத்தின் மீது கொண்டிருந்த பற்றால் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் திருவிழாக்களும், உற்சவங்களும் தடையறாது நடக்க பண உதவி செய்தார். தனது சொந்தச் செலவில் பல திருப்பணிகளை மேற்கொண்டார். தனது நிலங்களையும், சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு அளித்தார். திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவில் தவறாமல் ஒவ்வொரு வருடமும் அவர் கலந்து கொள்வார். [esanya gnana desikar] ஈசான்ய ஞான தேசிகர் அவ்வாறு ஒருமுறை அண்ணாமலை தீபத்தைக் காண ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. அப்போது பலத்த மழை பெய்திருந்ததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதது. அந்த ஆற்றைக் கடந்துதான் அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த ஐடன் துரை, ‘சத்குரு நாதா, உன்னைக் காணவும் அருணாசலேஸ்வரரை தரிசிக்கவும் நான் வந்து கொண்டிருக்கிறேன். சத்குருவே நீயே உற்ற துணை! நீயே சரணம்’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கியதோடு, ‘இது என்ன முட்டாள்தனம்! வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்குள் இறங்குவதாது, அதுவும் குதிரையுடன்? துரை அவ்வளவுதான், இனிப் பிழைக்க மாட்டார்’ எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதே சமயம், அண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்கள் வியப்புற்றனர். சிலர் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்க, ஸ்ரீ தேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று கூறிவிட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். சிறிது நேரத்தில் ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரை ஏறினர். உடனே திருவண்ணாமலைக்கு வந்து குருநாதரான ஈசான்ய ஞான தேசிகரை தரிசித்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் ஐடன் துரை. குருவும் ஆசிர்வதித்தார். ஐடன் துரையின் குரு பக்தியையும் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய ஆற்றலையும் கண்டு பக்தர்கள் வியந்தனர். ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் ஜீவ சமாதி ஆலயம் திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையின் முடிவில் ஈசான லிங்கம் தாண்டி, வலப்புறத்தில் ஈசானக் குளக்கரையை ஒட்டி அமைந்துள்ளது. *** 16 அதிசய மனித நாஸ்ட்ரடாமஸ் நாஸ்ட்ரடாமஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இவர். பாரம்பரியமாகவே இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய சோதிடத்தை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தனது தியான ஆற்றலாலும், சில இரகசிய முறைப் பயிற்சிகளாலும், மருத்துவத் திறமையாலும் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து புகழ் பெற்றார். மெல்ல மெல்ல அவரது புகழ் நகரெங்கும் பரவலாயிற்று. தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதே சமயம் ஒரு சிலர் அவரது தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் பார்த்து அஞ்சினர். அதுபோல அவரும் தனித்திருந்து வாழவே விரும்பினார். அங்கும் இங்கும் நாட்டின் பல பகுதிகளில் நாடோடியாகச் சுற்றிக் கொண்டிருப்பதே அவர் வழக்கமாக இருந்தது. பல சமய நூல்களப் படித்தார். பல ரகசிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார். ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். அதன் மூலம் அவர் மக்களிடையே பெயரும் புகழும் அடைவதை பழமைவாதிகளான அந்நாட்டு கத்தோலிக்க சமயத்தினர் விரும்பவில்லை. அதனால் அவரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்குச் சென்றால் மரணம் நிச்சயம் என்பதை முன்னரே உணர்ந்த நாஸ்ட்ரடாமஸ், அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்தார். சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர், பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். ஆனால் அவரைப் பீடித்திருந்த ஆற்றல்கள் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவரைக் கருவியாகக் கொண்டு தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்தன. ஒருமுறை நாஸ்ட்ரடாமஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது கத்தோலிக்க இளம் துறவி ஒருவர் எதிரே வருவதைக் கண்டார். அவரை உடனே உற்றுப் பார்த்தவர், மண்டியிட்டு வணங்கி, நெஞ்சில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டார். அந்த நபர் ஆச்சரியத்துடன் செய்கைக்குக் காரணம் வினவ, தான் வருங்கால போப்பிற்கு தன் வணக்கத்தைத் தெரிவித்ததாகச் சொன்னார் நாஸ்ட்ரடாமஸ். அதை அந்த இளம் துறவி நம்பவில்லை. அதைப் பார்த்த பார்வையாளர்களும் நம்பவில்லை. (ஆனால் பிற்காலத்தில் அது உண்மையாயிற்று. அந்த இளம் துறவி போப் ஆனார்) மெல்ல மெல்ல வருங்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார் நாஸ்ட்ரடாமஸ். அடுத்த ஆண்டு இன்னின்ன சமயத்தில் இன்னின்ன நடக்கும் என்று குறிப்புகளைச் சொல்லவும்,. அதுபற்றி பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்தார். அவையெல்லாம் அவர் குறித்தபடியே மிகச் சரியாக நடக்கத் துவங்கின. அதற்குக் கிடைத்த வரவேற்பினால் மெல்ல மெல்ல பிற்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார். இரண்டாம் ஹென்றி மன்னர் எப்போது, எப்படி இறப்பார் என்பதை அவர் தெரிவித்திருந்தார். ஒரு விளையாட்டின் போது மூளையில் ஈட்டி பாய்ந்து மன்னர் இறப்பார் என நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்டிருக்க, அதன்படியே நடந்தது. அதன் பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். பிரபலங்கள் பலரும் அவரைத் தேடி வந்தனர். தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி அழைத்தனர். அதேசமயம் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது. சாத்தானின் சீடராக அவரைக் கருதிய சிலர் ஆங்காங்கே கூட்டம் போட்டு அவரை எதிர்க்கவும் செய்தனர்,. ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ். அச்செல்வந்தரின் மாளிகையின் பின்புறம் இரண்டு பன்றிகள் கட்டப்பட்டு இருந்தன. ஒன்று கறுப்பு; மற்றொன்று வெள்ளை. அந்தச் செல்வந்தர் அவற்றைக் காட்டி, “இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம் என்று உங்களால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியுமா?”, என்று கேட்டார். “சந்தேகமென்ன? கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் உண்டு விடும்,” என்றார் நாஸ்ட்ரடாமஸ். “இந்த மாளிகைக்குள் ஓநாயா?” என்று கிண்டலாகச் சிரித்த பிரபு அங்கிருந்து அகன்றார். பின் நாஸ்ட்ரடாமஸுக்குத் தெரியாமல் ரகசியமாக சமையற்காரரை அழைத்தவர், அந்த வெள்ளைப் பன்றியைத்தான் கொன்று சமைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே சமையற்காரனும் அவர் கண் முன்னாலேயே அந்த வெண்ணிறப் பன்றியைக் கொன்று சமைக்க உள்ளே எடுத்துச் சென்றான். விருந்தும் முடிந்தது. அனைவரும் உண்டு முடித்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸிடம், “நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?” என்று கேட்டார். உடனே நாஸ்ட்ரடாமஸ், “அதுதான் முன்பே சொன்னேனே, கறுப்புப் பன்றியைத்தான் சாப்பிட்டோம்” என்றார். கிண்டலாகச் சிரித்த அப்பிரபு, உடனே சமையற்காரரை அழைத்தார். “எந்தப் பன்றியைச் சமைத்தாய் என்பதை இங்கு எல்லாரிடமும் சொல்” என்றார். சமையற்காரர், “கறுப்புப்பன்றி” என்றார். பிரபுவுக்கு ஒரே அதிர்ச்சி. “ஆனால் நான் உன்னை வெள்ளைப் பன்றியைத்தானே சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதனை நீ கொன்றாய்?” என்றார். “ஆம்! பிரபுவே! ஆனால் அடுப்பில் வேக வைக்க வைத்திருந்த பன்றி இறைச்சியை உங்கள் வேட்டை நாய் கௌவி இழுத்துச்சென்று விட்டது. அதனால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்” என்றார். அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு ஓநாய்க்குப் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் முதலில் பிரான்ஸ் நாடு பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் உலகமெங்கும் என்னென்ன நடக்கும் என்பதை எழுத ஆரம்பித்தார். மிகவும் முயன்று கி.பி.1553 முதல் கி.பி. 3797 வரை என்னென்ன நடைபெறும் என்பதை பாடல் வடிவில் எழுதி வைத்தார். கி.பி.1566-ஆம் ஆண்டில் நாஸ்ட்ரடாமஸ் காலமானார். அவர் இறந்த பின்பு அவர் உடலைப் புதைத்தனர். நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும்; ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்று அக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து 225 வருடங்கள் கழித்து, அந்த நம்பிக்கை உண்மையா என்று பார்க்க விரும்பினர் சிலர். 1791ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவு வேளை. மிதமிஞ்சிக் குடித்திருந்த மூன்று பிரெஞ்சுப் போர் வீரர்கள், நாஸ்ட்ரடாமஸின் புதைகுழியைத் தேடிக் கண்டுபிடித்தனர். அதைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் ’மே, 1791’ என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப் பட்டயம் ஒன்று இருந்தது. ஒருவன் நாஸ்ட்ரடாமஸின் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. அவன் நாஸ்ட்ரடாமஸின் புதைகுழிக்குள்ளேயே விழுந்து இறந்தான். பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட, அந்தக் குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்து அவன் இறக்க நேர்ந்தது. அது கண்டு பயந்து போன மற்ற இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, அவர்கள் கலவரக்காரர்கள் என்று கருதப்பட்டு அடையாளம் தெரியாத சிலரால் சுடப்பட்டு இறந்து போனார்கள். “என் புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு பெரும் ஆபத்து விளையும்” என்று தன்னுடைய தீர்க்கதரிசனங்களில் நாஸ்ட்ரடாமஸ் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல; மே 1791ல் அந்தச் சம்பவம் நடக்கும் என்பதை 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே அவரால் கணித்துக் கூற முடிந்திருக்கிறது. அதைக் குறிக்கத்தான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு அவர் இறந்திருக்கிறார் என்ற உண்மையையும் மக்கள் பின்னர் அறிந்து கொண்டனர். மகத்தான் ஆற்றல் கொண்ட தீர்க்கதரிசி தான் நாஸ்ட்ரடாமஸ், இல்லையா? *** 17 நாடி ஜோதிட ரகசியங்கள் ஜோதிடம் குறித்து நாம் அறிவோம். ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் அமைப்பைக் கொண்டு ஒருவருடைய எதிர்காலப் பலன்களைக் கணித்துக் கூறுவதுதான் ஜோதிடம். ஆனால், “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பல பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்கக முடிகிறது. இவையெல்லாம் உண்மைதானா? அது என்ன நாடி ஜோதிடம்? [olaichuvadi] ஓலைச்சுவடிகள் நாடி ஜோதிட நிலையத்திற்கு நாடி வருபவர்களுடைய ஒலையினைத் தேடி எடுத்து, அவரவர்களுக்குரிய பலாபலன்களைக் கூறுவதுதான் நாடி ஜோதிடம் என்கிறார்கள் நாடி ஜோதிடர்கள். அதாவது நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, அவருக்கான சுவடியைத் தேடி எடுத்து அதன்மூலம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிக் கூறுவதே ‘நாடி ஜோதிடம்’ எனப்படுகிறது . ஒரு மனிதனின் விரல் ரேகையினைக் கொண்டு பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடிஜோதிடர்கள் பலன்களைக் கூறி வருகின்றனர். இந்த நாடியில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கௌசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி, திருமூலர் நாடி, சுகர் மார்க்கேண்டயர் நாடி, அத்திரி நாடி, சப்த ரிஷி நாடி என்று பலவகை நாடிகள் காணக் கிடைக்கின்றன. உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்கிறார்கள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமது எதிர்காலப் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும் என்றும், அதில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒருவரது பெயர், தொழில், மற்றும் குடும்ப விபரங்கள் போன்ற பொதுவான விஷயங்கள் பொதுக் காண்டத்தில் காணப்படும். திருமணம், குழந்தைகள், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வழிபாடு போன்ற விரிவான பலன்களை அறிய அததற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒரு மனிதனின் பிறப்பு முதல் ஆயுள் வரையிலான பொதுவான பலன்களை பொதுக் காண்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதுதவிர சாந்தி காண்டம், தீட்சை காண்டம், ஔஷத காண்டம், எல்லைக் காண்டம், அரசியல் காண்டம், பிரச்சன்ன காண்டம், மந்திர காண்டம், துல்லிய காண்டம், தசாபுக்தி காண்டம் என பல காண்டங்கள் உள்ளதாகவும் நாடி ஜோதிடர்கள் கூறுகின்றனர். சரி, எப்படி நாடி ஜோதிடம் பார்க்கிறார்கள்? நாடி ஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை. பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கின்றனர்றார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்கின்றனர். ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் ஆகலாம். சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்து தான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம் என்கின்றனர். சுவடி கிடைத்ததும் அது அந்நபருக்குரிய ஓலை தானா என்பதனை அறிய நாடிஜோதிடர் வந்திருப்பவரிடம் பல கேள்விகளைக் கேட்பார். அதற்கு ஜோதிடம் பார்ப்பவர் ’ஆம்’, அல்லது ’இல்லை’ என்று மட்டும் பதில் கூறினால் போதுமாம். பொதுவாக கீழ்கண்டது போன்று கேள்விகள் அமைகின்றன. உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? உங்களுக்குக் காதல் திருமணமா? முதல் குழந்தை பெண்தானா? தந்தையின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா? மனைவி/ கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா? – இது போன்ற பல கேள்விகளைக் கேட்கின்றனர். ஆனால் இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், ஓலைக்கு ஓலை இவ்வகைக் கேள்விகள் மாறுபடலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான பலன்களைத் தங்களால் கூற முடிவதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கிறார்கள். மேலும் பழங்கால வரி வடிவில் உள்ள அந்த எழுத்துக்களை முறையாகப் பயிற்சி பெற்ற தங்களைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். சரி, இவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா, இவையெல்லாம் பழங்கால ஓலைச்சுவடிகள்தானா என சுவடியியல் அறிஞர்களிடம் கேட்டால் ”இல்லவே இல்லை. இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர். நாடிஜோதிடர்களோ, அகத்தியர் போன்றவர்களால் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்கின்றனர். ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்கின்றனர் இலக்கிய ஆய்வாளர்கள். மேலும் அவர்கள், ”இந்தப் பாடல்கள் எல்லாம் தப்பும் தவறுமாக இருக்கின்றன. முறையான இலக்கணப்படி வெண்பாவாகவோ அந்தாதியாகவோ இல்லை. எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் கொண்டவையாக இருக்கின்றன. ’அகத்தியம்’ என்னும் மாபெரும் இலக்கண நூலைப் படைத்த ’அகத்தியர்’ இவ்வாறு தப்பும் தவறாக எழுதுவாரா என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர். நாடிஜோதிடர்களோ, ஓலையைப் பெயர்த்து எழுதும்போது சில சமயங்களில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கிறது என்கிறனர். ஒருசிலரோ, தங்களுக்கு அதுபற்றி ஏதும் தெரியாது என்றும், சுவடியில் என்ன இருக்கிறதோ அதையே தாங்கள் எழுதித் தருவதாகவும் கூறுகின்றனர். மேலும் அவர்கள் சித்தர்கள், முனிவர்கள் சிலவற்றை நுணுக்கமாக, ரகசியமாக, பரிபாஷையில் எழுதியிருப்பார்கள். நாம் அவற்றிற்கு நேரடியாக்கப் பொருள் கொள்ள முடியாது என்கின்றனர். ஆக உண்மை என்னவென்று அறிய நாம் Carbon Dating செய்தால் போதும். ஆனால் நாடிஜோதிடர்கள் அதற்குச் சம்மதிப்பதில்லை. அவர்கள் சுவடிக்கட்டிலிருந்து எடுத்துப் படிக்கும் நமக்கே நமக்கான ஓலைகளை நம்மிடம் தருவதுமில்லை. அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது நாடி ஜோதிடம் உண்மையானதாகத் தோன்றினாலும், நாடி ஜோதிடர்களில் எவ்வளவு பேர் நம்பிக்கைக்குரியவர்கள் என்பது ஆய்வுக்குரியது. ஏனென்றால் ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருப்பது போல இப்போது நாடி ஜோதிட நிலையங்கள் இருக்கின்றன. வெறும் பெயரை, குடும்ப விவரங்களை, தொழில், மனைவி, குழந்தைகள், வேலை போன்றவற்றைச் சரியாகச் சொல்லுவதால் மட்டும் நாடி ஜோதிடத்தை முழுக்க முழுக்க உண்மை என்று ஏற்க முடியாது. Mind Reading, Thought’s Reading போன்ற பயிற்சிகளால் இவை சாத்தியமே. மேலும் ”கர்ண யக்ஷிணி ” என்னும் தேவதையை உபாசித்துப் பலன் சொல்லுவதன் மூலமும் இந்த விவரங்களை, நடந்த சம்பவங்களை மிகத் துல்லியமாகக் கூற முடியும் என்கிறார் ஜோதிட மேதை அமரர் பி.வி.ராமன். ஜோதிடம் போன்ற துறைகள் மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டவை. பரிகாரம், ஹோமம் என்றெல்லாம் வருபவர்களை பயமுறுத்தி பணம் பறிப்பது, ஏமாற்றுவது தவறானது. ஜோதி + இடம் தான் ஜோதிடம். அது நாடி வரும் மக்களின் வாழ்வில் நல்ல வழிகாட்டியாக அமைந்து, அவர்களது வாழ்க்கையில் ஒளியாகிய ஜோதியை ஏற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, பயம் கூட்டி, மனம் குழப்பி இருள் உண்டாக்குவதாய் இருக்கக் கூடாது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தரிது – என்ற வள்ளுவன் வாக்கை மறக்கக் கூடாது. மக்கள் எதையும் ஆராயாமல் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு நாடி ஜோதிடமும் விதிவிலக்கல்ல. *** 18 குடிசை திவால் அடிக்கடி நம்மால் நம்ப முடியாத அதிசயமாக நாம் கேள்விப்படும் ஒரு செய்தி, கிராமப் புறங்களில் குடிசைகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிகின்றன, கற்கள் மேலிருந்து விழுகின்றன. ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பதுதான். அடிக்கடி இதுபற்றி நாளிதழ்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகின்றன. இதற்குக் காரணம் சாமியாரின் சாபமா? தெய்வத்தின் கோபமா? இல்லை, ஏவல், செய்வினை, மாந்திரீகமா? ஒருவேளை விபரீதப் புத்தி படைத்தவர்களின் சதியாக இருக்குமா? ஒன்றுமே புரியாமல் மக்களும் அதிகாரிகளும் குழம்பி நிற்பதுதான் எப்போதுமே வாடிக்கையாக இருக்கின்றது. என்ன காரணமாக இருக்கும்? விஞ்ஞானப்படி சாத்தியமில்லாததை எப்படி நிரூபிப்பது?. யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கின்றார்களா?. இல்லை இயற்கைக்கு மாறான சக்தி ஏதேனும் இவ்வாறு ஆட்டி வைக்கின்றதா? இவற்றிற்கெல்லாம் அவ்வளவு எளிதில் விடை காண முடிவதில்லை. இதுவரை இவ்வாறு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சரியான காரண காரியங்கள் கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை. அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன்? இந்தக் கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. கிராமத்து மக்களோ “ஒரு சாமியார் வந்தார். யாரும் அவரை மதிக்கலை. திட்டித் துரத்திட்டாங்க. அதான் அவரு ‘என் வயிறு எரியுற மாதிரி இந்த ஊரு எரியும்டான்னு சாபம் இட்டுட்டாரு’ ” என நம்ப முடியாத பல தகவல்களைக் கூறுவர். சரி, இவையெல்லாம் எப்படித்தான் நடக்கிறது? என்ன தான் நடந்திருக்கும்? நிச்சயமாக நம்மால் உறுதியாக பதில் கூற முடியாது. ஆனால் அக்காலத்தில் மாந்திரீகத்தில் எதிரிகளை அழிக்க இது போன்றவற்றைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்றால், உங்கள் நம்ப முடிகிறதா? ஆனால், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வாறு எதிரிகளை அழிப்பதற்கான குறிப்புகளை எல்லாம் அவர்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைத்துள்ளனர். அந்தச் சுவடியின் பெயரே, “குடிசை திவால்” என்பதுதான். இன்னமும் பதிப்பிக்கப்படாத அந்த ஏட்டுக்கட்டில் இது போன்ற பல இரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வது, இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருந்திருக்கின்றனரே என வியப்புறவோ அல்லது வெறுப்புறவோ அன்றி, வேறெதற்கும் அல்ல. அந்தச் சுவடியிலிருந்து…. ( (முக்கியமான இடங்களில் ————– விட்டு விட்டிருக்கிறேன்) “ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே — பெண்ணிண் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே — பிணம் வேகுற போது அதிலே வைத்து, வெந்து நீரான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே — செய்தால் அந்த வீடு திவால்.” “அந்த நீரில கொஞ்சம் போல ஊதிப் போட்டு, “சாம்பவி, உமா தேவி, –, –, –, வாமா, தூமா ஓடிவா திவால் என 108 தரம் ஜெபித்து — செய்ய அந்த வீடு திவால்” படிக்கும் போதே சிரிப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கிறதல்லவா! என்ன செய்ய? அந்தக் காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோல பல வழிகளை வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் தேவையில்லை. இதைவிடப் பிரமாதமாக வைரஸ் கிருமிகளை உருவாக்கியும், இரசாயன, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அப்பாவிகளை, எதிரிகளை அழிக்கும் அளவிற்கு நாம் தாம் முன்னேறி விட்டோமே!. *** 19 சொர்க்கமும், நரகமும் சொர்க்கம், நரகம் இவை இருப்பதெல்லாம் உண்மையா, இல்லை வெறுமனே கற்பனையாக எழுதி வைத்திருக்கிறார்களா? இந்துமதம் தான் என்றில்லை பல பழமையான மதங்களிலும் இந்த நம்பிக்கை உண்டு. இறந்தபின் புண்ணியம் செய்த உயிர்கள் புண்ணிய லோகத்தில் வசிப்பதாகவும், பாவம் செய்த உயிர்கள் இருளில் வீழ்ந்து துன்புறுவதாகவும் குறிப்புகள் உள்ளன. பொதுவாக சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் வெறும் கற்பனை என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற உண்மையில் நடந்ததாக நம்பப்படும் இலக்கியங்களில் அவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சொர்க்கம், நரகம் மட்டுமல்ல, அதல, சுதல, விதல, பாதாள லோகங்கள் பற்றியும், பூவுலகம் போலவே கோவுலகம், சத்யலோகம், தேவலோகம் என பல உலகங்கள் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சரி, சொர்க்கம், நரகம் இருக்கிறதா, இல்லையா? நிச்சயமாக நம்மால் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அதற்கு நாம் இறந்து சொர்க்கமோ, நரகமோ சென்று விட்டு மீண்டும் உயிருடன் திரும்ப வந்தால் தான் சாத்தியம். அது போன்ற சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்றால் அவ்வபோது அது போன்ற அனுபவத்தைச் சிலர் பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் அது முழுக்க முழுக்க உண்மை என அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம். பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த சம்பவம் இது. இந்த அனுபவத்தை தனது “குமாரசுவாமீயம்” என் தன் வரலாற்று நூலில் சுவாமிகள் குறித்துள்ளார். சுவாமிகள் முருக பக்தர். அவர் தம் கனவில் ஆவியுலக வாசிகளையும், சொர்க்கம் மற்றும் நரக மக்களையும் கண்டதாக அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகள் கண்ட சொர்க்கம் ஒருநாள் நடுநிசியில் சுவாமிகள் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவர் ஒரு காட்டுப் பாதை வழியே நடந்து கொண்டிருந்தார். சுற்றிலும் கற்றாழை, கள்ளிச் செடிகள். வறண்ட மணற்பாங்கான அந்தப் பாதையின் ஓரத்திலே கரிய நிறமுடைய சிலர் கூச்சலிட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். சுவாமிகளைப் பார்த்ததும், கீழே இருந்த கல்லையும், மணற் துகளையும் அள்ளி வீசி எறிந்தனர். இதைக் கண்டு திகைத்துப் போய் அவர் நின்று கொண்டிருந்த பொழுது, ஒளியுடைய தேகமுடைய மூவர் சுவாமிகள் அருகே வந்தனர். தங்களுடன் வருமாறு கூறி உடன் அழைத்துச் சென்றனர். அந்தப் பாதை நீண்டு கொண்டே சென்றது. இறுதியில் பல வண்ண நிறமுடைய மலர்களும், செடி, கொடிகளும் இருந்த பகுதிக்கு சுவாமிகள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மக்களும் ஒருவர் மீது ஒருவர் அன்புடையவராய் காணப்பட்டனர். அது சொர்க்கம், நரகம் பற்றிய கனவு என்றும், அதை உணர்த்துவதற்காகவே அக்கனவு வந்தது என்றும் சுவாமிகள் பின்னர் உணர்ந்து கொண்டா சொர்க்கத்தைக் கண்ட சிறுவன் இச்சம்பவம் வெளி நாட்டில் 2009ம் வருடத்தில் நிகழ்ந்த ஒன்று. ஜெர்மனியில் இருக்கும் அழகிய நகரம் பெர்லின். அங்கே லைசென் என்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தவன் தான் பால் எல்க் என்ற சிறுவன். சுமார் ஐந்து வயதான அந்தச் சிறுவன் தனது தாத்தாவின் வீட்டிற்கு அருகே இருந்த ஒரு நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் அவனைக் காணவில்லை. கவலைப்பட்ட அவன் தாத்தா அங்கும் இங்கும் தேடினார். சந்தேகப்பட்டு குளத்திற்குள் தேடிப் பார்த்தபோது, அவன் தண்ணீருக்குள் மூழ்கிப் போன விஷயம் தெரிய வந்தது. அவருக்கு ஒரே அதிர்ச்சி. உடன் அவனது தந்தைக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தார். தந்தை வந்து அவனை எப்படியாவது பிழைக்க வைக்க எண்ணி முதலுதவிகள் பல செய்தார். பயனில்லை. அவனைக் காப்பற்ற ஹெலியாஸ் என்ற புகழ்பெற்ற மருத்துவமனையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விரைந்து வந்தது. உடன் அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முற்பட்டனர். ஆனால் அதற்குள் அந்தச் சிறுவன் இறந்து விட்டான். [paul] பால் எல்க் மருத்துவர்களும் எதையாவது செய்து அவன் இதயத்தைத் துடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் பயனில்லை. ஆகவே அவர்கள் முறையாக ஆய்வுகள் செய்து அவன் இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர். பெற்றோர்களும், மற்றவர்களும் கலங்கி நின்று கொண்டிருந்தனர். சிறுவன் உடலை திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். அவன் மருத்துவரீதியாக இறந்து விட்டான் என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பதினெட்டு நிமிடங்கள் கழிந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிறுவனின் விரல்கள் மெல்ல அசைந்தன. உடன் இருந்த பணியாளர் அவனது இருதயத் துடிப்பைச் சரி பார்த்தபோது அது மெல்ல துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது மட்டுமல்ல; அதுவரை ஜில்லிட்டுப் போயிருந்த சிறுவனின் உடல், மெல்ல மெல்ல சூடு ஏறிக் கொண்டிருந்தது. உடன் டாக்டரும் வந்து பார்த்து அதிசயப்பட்டார். அனைவரும் அவன் கண் விழுக்கும் பொழுதிற்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் அந்தச் சிறுவன் கண் விழித்தான். அனைவரும் அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டனர். சிறுவன் தனது அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ”நான் இறந்து போன பின்பு, என்னை யாரோ எங்கேயோ தூக்கிச் சென்றனர். பின்னர் தான் அது சொர்க்கம் என்று தெரிந்தது. அங்கே பாட்டி ஒமா எம்மியைப் பார்த்தேன். என்னை முத்தமிட்ட பாட்டி, உடனடியாக, வேகமாகத் திரும்பிப் போ என்று சொன்னார். நானும் திரும்பினேன். நான் கண் விழித்துப் பார்த்த போது மருத்துவமனையில் இருந்தேன்” என்றான். அவனை ஆராய்ந்த பேராசிரியர் டாக்டர் லோதார் சேவிழ்க்யர், ”உண்மையிலேயே விஞ்ஞானப்படி அவன் இறந்துதான் போய் விட்டான். அவன் இதயம், மூளை என்று எல்லாமே செயலிழந்து விட்டிருந்தது. அவன் மீண்டும் எப்படி உயிர் பிழைத்தான் என்பது தெரியவில்லை. எனது 30 வருட மருத்துவ அனுபவத்தில் உண்மையிலேயே இது ஒரு அதிசயம் தான் என்று, அந்த நாட்டின் பிரபல ஸ்கை டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அந்நாட்டின் பிரபல பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நம்மால் என்ன விளக்கம் அளிய முடியும்? இப்படி நம்மால் நம்ப முடியாத, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, இல்லையா? *** 20 மகான் புகட்டிய பாடம் தான், தனது போன்ற எண்ணங்களை நீக்கியவர்கள் மகான்கள். சதா பிரம்மத்தில் திளைத்திருக்கும் அவர்களது ஆற்றல்களை சாதாரண மானுடர்கள் அளவிட முடியாது. அப்படிப்பட்ட மகான்களுள் ஒருவர் ஸ்ரீ த்ரை லிங்க சுவாமிகள். மகா அவதார் பாபாஜியின் வழி வந்த பூஜ்ய ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் அவர்கள் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்திருக்கிறார். அது கழிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சீடர் சுவாமி விவேகானந்தர் சந்தித்திருக்கிறார். பரமஹம்ச யோகானந்தரின் பரமகுருவான சுவாமி லாஹரி மஹா சாயர் த்ரைலிங்கர் காலத்தில் உடன் வாழ்ந்தவர். த்ரைலிங்கரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். லாஹரி மஹா சாயரின் காலம் 1828-1895. ராமகிருஷ்ண பரமஹம்சரின் காலம் 1836-1886. விவேகானந்தரின் காலம் 1863-1902. இவர்கள் மட்டுமல்ல; மகேந்திரநாத் குப்தா, சுவாமி அபேதானந்தா, சுவாமி பாஸ்கரானந்தா, விஜய் கிருஷ்ண கோஸ்வாமி, விசுத்தானந்த சரஸ்வதி உட்பட பலர் இவரது பெருமைகளை தங்கள் நூல் குறிப்புகளில் தெரிவித்துள்ளனர். ராமகிருஷ்ணர் இவரை ’காசியில் நடமாடிக் கொண்டிருக்கும் சிவன்’ என்று வர்ணித்துள்ளார். அவதூதராக விளங்கிய மகான் தன்னுணர்வற்று தெருக்களில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் கடும் வெயிலில் கங்கைக் கரையில் கொதிக்கும் பாறைகளின் மீது அமர்ந்து கொண்டிருப்பார். சமயத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டும் இருப்பார். பெரும்பாலும் மகா மௌனியாகவே மகான் விளங்கி வந்தார். சதா பிரம்மத்தில் லயித்த நிலையிலேயே இருப்பார். காற்றையே உணவாக உண்ணும் மிகச் சிறந்த தவயோகியாக அவர் விளங்கியதால், மற்ற மானிடர்களுக்கான உணவுத் தேவைகள் என்று எதுவும் அவருக்கு இருக்கவில்லை. ஒரு சமயம் நீண்ட நாட்களாக அவர் உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்தார். வழக்கம் போல தயிரை உண்டு உண்ணா விரதத்தை முடிக்க நினைத்திருந்தார். அப்போது ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்தான் போக்கிரி ஒருவன். தயிரோடு தயிராய் சுண்ணாம்பையும் அதில் கலந்து விட்டிருந்தான். மகானை ஒரு போலி மனிதராகவும், சோம்பேறியாகவும், ஏமாற்றுக்காரராகவும் நினைத்த அவனுக்கு, மகான் செய்யும் அற்புதங்கள் எல்லாம் கண்கட்டு வித்தை, ஏமாற்று வேலை என்பது எண்ணம். சுவாமிகளை ஒரு போலி என்று அனைவருக்கும் நிரூபிப்பதற்காக தயிர்ப்பானைகளோடு சுண்ணாம்புக் கலவை கொண்ட பானையையும் கலந்து வைத்திருந்தான். வழக்கம் போல தயிர்ப்பானைகளில் இருந்து தயிரைக் குடித்துக் கொண்டிருந்த சுவாமிகள் முன் சென்று நின்றவன், தான் கொண்டு வந்திருந்த தயிரையும் குடிக்குமாறு வேண்டிக் கொண்டான். சுவாமிகளும் மறு பேச்சு பேசாது அவனிடமிருந்த பானையை வாங்கிக் கடகடவென்று குடித்தார். சிறிது நேரத்தில் வயிற்று வலி தாளாமல் அவர் அலறப் போகிறார், அதன் மூலம் அவர் ஒரு போலி என்பதை நிரூபித்து விடலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான் அந்த மனிதன். முழுவதையும் குடித்து விட்டு காலிப்பானையை கீழே வைத்தார் மகான். சற்று நேரம் சென்றது. திடீரென்று அந்த மனிதன் கீழே விழுந்து புரள ஆரம்பித்தான். ’அய்யோ, அம்மா’ என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறினான். ’சுவாமி, உங்களைச் சோதித்துப் பார்க்க நினைத்த என்னை மன்னித்து விடுங்கள்! என் உடல் முழுவதும் எரிகிறது, வயிறு எரிகிறது! என்னால் தாங்க முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கண்ணீர் விட்டுக் கதறினான். எப்போதும் மௌனத்தில் இருக்கும் மகான் மௌனம் கலைந்தார். ’முட்டாளே! நீ எனக்கு விஷத்தைக் கொடுத்ததன் மூலம் உனக்கு நீயே விஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். தன்வினை தன்னைச் சுடும் என்பது போல அது உன்னை வாட்டுகிறது. இறைவன் எங்கும் நிறைந்திருப்பது போல என் உயிர் என்பது என் உடலில் மட்டுமல்ல; அது உன் உடலிலும் கூட இருக்கிறது. எல்லா அணுவிலும் இருக்கிறது. இதை மறவாதே! இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்யாமல் வாழ்க்கை நடத்து’ என்று கூறி அவனை மன்னித்தார். அவனும் தன் உடல் வேதனை நீங்கி சுவாமிகளைத் தொழுதவாறே அவ்விடம் விட்டு ஓடினான். இதைத் தான் “பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது” என்று சொல்கிறது பிரம்ம சூத்திரம். *** 21 மரணத் தூதுவன் மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். முக்காலத்தையும் சொல்வோம் என்று அறைகூவல் விடும் ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’ அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். [poonai oscar] அமானுஷ்யப் பூனை ஆஸ்கர் இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது. அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம். ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார். ”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை. நம்ப முடியாத அதிச்யமாக ஆஸ்கரின் செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. *** 22 மரணம் - ஆவி - மறுபிறவி இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அது புல், பூண்டு, புழு பூச்சியாக இருந்தாலும் சரி. மனிதனாக இருந்தாலும் சரி. ஆனால் ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவரது நுண்ணுடல் அல்லது ஆவி என்னும் ஆன்மா மரணமடைவது இல்லை. அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக RETURN FROM HEAVEN என்னும் நூலிலும், CONVERSATIONS WITH A SPIRIT என்ற நூலிலும் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வின் படி, முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன என்பதுதான். அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது. அதனால் தான் கீதை, ’பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்; பற்றற்று வாழ்க்கை நடத்து’ என்கிறது. பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளும் புதிதாக வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனர். ஆகவே ஒருவனின் மறுபிறவி என்பதில் அவனுடைய முந்தைய பிறவிகளின் நடத்தைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவன் செய்யும் செயல்களின் விளைவுகள் இப்பிறவி தப்பினும் எப்படியாவது அவனை வந்தடையவே செய்கின்றன. டாக்டர் எடித் ஃபையர் குறிப்பிட்டிருக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். துரத்தும் பாம்புகள் பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி மறுபிறவி ஆய்வாளர், உளவியலறிஞர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார். முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது. முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதையும் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த மனோசிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார். அதன்பின்பு அந்தப் பெண்ணுக்கு அந்தப் பாதிப்புகள் தொடரவில்லை. தண்ணீரைக் கண்டால்… ஒரு பெண்ணுக்கு எப்போதும் தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டார். நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவார். படகு போன்றவற்றில் பிரயாணம் செய்ய வேண்டி வந்தால் மறுத்து விடுவார். இந்த நிலை சிறுவயது முதல் அவர் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பது தெரிய வந்தது. ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்து சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார். மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார். இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார். மேற்கண்ட அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் ஒவ்வொரு முறை மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார். அதன் பிறகு அந்தப் பெண்மணிக்குத் தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படவில்லை. மிகுந்த உற்சாகத்துடன் நண்பர்களுடன், சக உறவினர்களும் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது போன்ற முற்பிறவி-மறுபிறவிச் செய்திகளை மிக விரிவாக உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். *** 23 அதிசயப் பூனை சென்ற கட்டுரை ஒன்றில் இறப்பைக் கணித்துக் கூறும் அமானுஷ்யப் பூனை ஒன்றைப் பற்றிப் பார்த்தோம். இதுவும் அதே போன்ற ஒரு பூனையைப் பற்றியதுதான். லியோனிட் இலைச் பிரஷ்னேவ் இவர் ரஷ்ய நாட்டின் பிரதமராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். 1906ல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், அரசியலில் நுழைந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி ஸ்டாலினை அடுத்து மிக வலிமையான தலைவராகப் போற்றப்பட்டார். மிகுந்த மக்கள் செல்வாக்குடன் விளங்கினார். ரஷ்யாவை ஒரு வலிமையான நாடாக முன்னெடுத்துச் செல்வதில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். இவர் 1969ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது திபெத் மதத் தலைவரான தலாய் லாமாவைச் சந்தித்து உரையாடினார். தனது சந்திப்பின் நினைவாக தலாய் லாமா ஒரு கறுப்புப் பூனை ஒன்றை நினைவுப் பரிசாக ப்ரஷ்னேவிற்கு அளித்தார். அவ்வாறு பூனையைக் கொடுக்கும் போது, அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும்படியும், அதற்கு ஏதாவது துன்பம் நேரிட்டால் அது அதை வளர்ப்பவரையும் அவ்வாறே பாதிக்கும் என்றும் கூறி எச்சரித்து அனுப்பினார். பூனைக்கு அதை அளித்த தலாய் லாமாவின் நினைவாக ‘லாமா’ என்றே பெயர் சூட்டிய பிரஷ்னேவ் அதை அன்போடு வளர்த்து வந்தார். அந்தப் பூனை அமானுஷ்ய ஆற்றல் மிக்கதாக இருந்தது. பிரஷ்னேவிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து அவரை பல சமயங்களில் எச்சரித்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. ஒருமுறை பிரஷ்னேவ், விண்வெளிப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய வெற்றி வீரர்களை வரவேற்கக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிர்ப்பட்ட பூனை அவரைத் தடுத்ததுடன், வழியிலேயே படுத்துக் கொண்டும் விட்டது. இதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட பிரஷ்னேவ், தான் அப்போது பயணப்பட வேண்டியிருந்த காரை அனுப்பி விட்டு, சிறிது நேரம் பூனையைக் கொஞ்சி சமாதானம் செய்து விட்டுப் புறப்பட்டார். அவர் உண்மையிலேயே செல்ல வேண்டிய கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. மற்ற பாதுகாப்பு வீரர்களின் கார்கள் அதனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. பின்னால் வெகு தொலைவில் தனி கார் ஒன்றில் பிரஷ்னேவ் வந்து கொண்டிருந்தார். அவர், முதலில் செல்லும் அவருக்குச் சொந்தமான காரில் தான் வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்த எதிரிகள் அந்தக் காரைச் சரமாரியாகச் சுட்டனர். அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஓட்டுநரும், உதவியாளரும் அதே இடத்தில் பலியாகினர். பூனை தடுத்ததால் அந்தக் காரில் பயணம் செய்யாமல் தவிர்த்த பிரஷ்னேவ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அது முதல் பூனை லாமாவின் மீது அவரது அன்பு அதிகமானது. மற்றொருமுறை முக்கியமான ஒரு சந்திப்புக்காக வேக வேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார் பிரஷ்னேவ். எங்கிருந்தோ வேகமாக வந்த பூனை ’லாமா’ அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. வித்தியாசமான குரலில் கத்தியது. ஏதோ ஒரு ஆபத்தையே ’லாமா’ முன்னறிவிக்கிறது என்று உணர்ந்த பிரஷ்னேவ், தனது உதவியாளரை முன்னால் அதே காரில் அனுப்பி விட்டு, தான் தாமதமாக வேறொரு காரில் சென்றார். அவர் சென்று கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சேதி வந்தது. அவர் முன்பு செல்லவிருந்த கார் ஒரு லாரியில் மோதி, பிரஷ்னேவ் அமர்ந்திருக்கக் கூடிய இருக்கையில் இருந்தவர் மாண்டு விட்டார் என்று. அதுமுதல் பூனை லாமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்தார் பிரஷ்னேவ். தன்னுள் ஒரு பாதியாகவே அதைக் கருத ஆரம்பித்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சுற்றிக் கொண்டிருந்த லாமா 1982ம் ஆண்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்தது. அதே ஆண்டில் பிரஷ்னேவும் காலமானார் என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான் இல்லையா? *** 24 வேற்றுக் கிரக மனிதர்கள்?! பூமியைத் தவிர வேறு பல கிரகங்களில் உயிரினங்கள் உள்ளதா? வேற்றுக் கிரக மனிதர்களைக் கண்டேன் என்று ஒரு சிலரால் கூறப்படும் தகவல்கள் உண்மைதானா? இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு அண்டங்களில், அதைச் சார்ந்த பூமி போன்ற கிரகங்களில் மனிதரைப் போலவே பிற உயிரினங்களும் வாழ வாய்ப்பு உள்ளதா? – இது பலரது சிந்தனைகளில் எழும் கேள்வி. ஒரு சிலர் இதற்கு சாத்தியம் என்றும் சிலர் சாத்தியமே இல்லை என்றும் கூறுகின்றனர். ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு விஞ்ஞானிகள் கூறும் காரணத்தை முதலில் பார்ப்போம். நிலம், நீர், நெருப்பு, காற்று என்பன சூழ்ந்து அமைந்து இந்தப் பூமியானது மனித உயிர்கள் தோன்றவும், அவை பல்கிப் பெருகி வளரவும் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் இதே போன்ற சூழல்கள் பிற கிரகங்களில் இல்லை. செவ்வாய் கிரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கே ஒருபுறம் எரிமலைக் குழம்புகளும், பனிப்பாறைகளும் சூழ்ந்துள்ளன. மனிதன் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் என்பது அங்கே அறவே இல்லை. அப்படியிருக்க அங்கு உயிர்கள் தோன்றி வளருதல் சாத்தியமே இல்லை. மேலும் ஒரு புறம் கடுங்குளிர், மறு புறம் கடும் வெப்பம் என்பன போன்ற இயற்கைச் சூழல்களில் உயிர்கள் இயங்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் Aliens எனப்படும் வேற்றுக் கிரக உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்பது மற்றொரு பிரிவு விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. அவர்கள், “ நாம் பூமியில் வாழ்வதால் இங்கு கிடைக்கும் ஆக்சிஜனைச் சுவாசிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் வேற்றுக் கிரகங்களிலும் இதே சூழல் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கு வசிப்பவர்கள் கார்பன் டை ஆக்சைடையோ, நைட்ரஜனையோ, ஏன் மீத்தேனையோ கூட சுவாசித்து உயிர் வாழ்பவர்களாக இருக்கலாம். அவர்கள் நம்மைப் போன்ற உருவத்துடன் தான் இருப்பார்கள் அல்லது இருக்க வேண்டும் என்று நம்புவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. நம்மைப் போன்றும் இருக்கலாம் அல்லது அவர்கள் வாழும் கிரகத்தின் தன்மைக்கேற்ப வித்தியாசமான தோற்றத்துடனும் இருக்கலாம். அறிவில் நம்மை விட மேம்பட்டவர்களாகவும் இருக்கலாம். ஒருவேளை குறைவான அறிவு கொண்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் “வேற்றுக் கிரக உயிர்கள்” வாழ்வதற்குச் சாத்தியம் உண்டு. குறிப்பாக செவ்வாய், சனி போன்ற கிரகங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன” என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மை என்பதற்கேற்ப சமீபத்தில் விண்ணில் இருந்து விழுந்த ’எரிகல்’ ஒன்றை ஆய்வு செய்த போது அதில் சில பாக்டீரியாக்களின் எச்சங்கள் காணப்பட்டன. அந்த பாக்டீரியாக்களுக்கும், இந்த பூமியில் வாழும் பாக்டிரீயாக்களுக்கும் அமைப்பு மற்றும் தன்மையில் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆக, வேற்றுக் கிரக உயிரினங்கள் இருப்பது சாத்தியம் என்றே நம்பப்படுகிறது. என்றாலும் அவர்களோடு நாம் தொடர்பு கொள்வதோ நம்முடன் அவர்கள் தொடர்பு கொள்வதோ இயலாத காரியமாகவே உள்ளது. காரணம், நமக்கு அது போன்றவர்கள் வசிக்கும் கிரகங்கள் இருப்பதாக நம்பப்படும் பகுதிக்கும் பல கோடி மைல் ஒளி ஆண்டுகள் தூரம் இருப்பதுதான். எரிக் வான் டானிக்கிள் என்ற ஆராய்ச்சியாளர் இது பற்றியெல்லாம் ஆய்வுகள் செய்திருக்கிறார். அவர் தனது “The Chariot of the Gods” என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பிரமிடு போன்றவையெல்லாம் வேற்றுக்கிரக மனிதர்கள் தங்களது பயன்பாட்டிற்காகவும், தொடர்பிற்காகவும் உருவாக்கியவையே என்று கூறும் அவர், வேற்றுக்கிரக மனிதர்களைக் கண்ட அக்கால மனிதர்கள் அவர்களைக் கண்டு அஞ்சினர். பின்னர் அவர்களிடமிருந்து நாகரிகம், ஒழுக்கம் போன்ற பல்துறை ஆற்றல்களைக் கற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களையே தங்கள் வழிகாட்டிகளாகக் கொண்டனர். பிற்காலத்தில் இம்மனிதர்கள் வழி வந்தவர்கள் அந்த வேற்றுக்கிரக மனிதர்களையே கடவுளாக வழிபட ஆரம்பித்தனர். அவ்வாறு தாம் கண்ட உருவங்களையே சுவற்றில் ஓவியங்களாகவும், கற்கள் கொண்டு சிற்பங்களாகவும் செதுக்கி வைக்க ஆரம்பித்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். வேற்றுக்கிரக மனிதர்கள் உள்ளனர், இல்லை என்ற விவாதம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் சிறு கிராமம் ஒன்றில் வேற்றுக் கிரக உயிரினம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு உடல் கிடைத்துள்ளது. பசுவினைப் போன்ற கால்கள் மற்றும் வால், காது; மனிதனைப் போன்ற கை, மற்றும் முகம் அமைப்பு கொண்ட அது ஒரு கிராமத்துப் புல்வெளியில் சடலமாகக் கிடந்துள்ளது. அது வேற்றுக் கிரக உயிரிதான் என்றும், அல்ல, மரபணு மாற்றத்தால் ஒரு பசுவுக்குப் பிறந்த கன்றுதான் அது என்றும், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கீழே அதன் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. [] [] []   இது ஏலியன்ஸ் அல்ல; ஆனால் மக்களின் நம்பிக்கை அப்படி இருக்கிறது. எல்லா இடத்திலும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் இல்லையா? *** 25 மகான்களும் ஆவிகளும் நம்மால் அவ்வளவு எளிதில் நம்ப முடியாத விஷயம் ’ஆவிகள்’ உள்ளன என்பதும், அவை மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க அளவில் நல்ல அல்லது தீய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதும்தான். ஆனால் ஆவிகள் உள்ளன, நாம் மன வலிமை குறைந்தவர்களாக இருந்தால் அவற்றால் நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ அன்னை சூட்சுமவாசிகள் எனப்படும் ’ஆவியுலவாசிகள்’ பற்றி நிறைய அனுபவங்கள் உடையவர். அன்னை மட்டுமல்ல; ஸ்ரீ அரவிந்தருக்கு அந்த அனுபவம் உண்டு. அரவிந்தர் பரோடாவில் பேராசிரியராகப் பணியாற்றிய சமயம். தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எப்போதும் தனிமையிலேயே இருப்பது அரவிந்தரின் வழக்கம். நிறைய புத்தகங்களைப் படிப்பதும், தியானம் செய்வதும் அவரது முக்கிய வேலையாக இருந்தது. இலக்கியப் புத்தகங்கள், கீதை போன்ற தத்துவப் புத்தகங்கள் மட்டுமல்லாது, இறப்பு, இறப்பின் பின்னான மனிதர் நிலை, சூட்சும உலகங்கள் பற்றிய புத்தகங்களையும் அவர் படிப்பார். அவ்வாறு படித்த ஆர்வத்தினால் அவர் ஒருமுறை ஆட்டோ ரைடிங் முறையில் ஆவிகளுடன் பேச முயற்சி செய்தார். அப்போது அவருக்குத் துணையாக அவரது தம்பி பரீந்திரன் உதவி செய்தார். அவ்வாறு ஒருமுறை ஆவியை வரவழைத்த போது, அரவிந்தரின் தந்தையின் ஆவி அங்கே வந்தது. தான் முன்பு பரீந்திரனுக்குக் கொடுத்திருந்த தங்கக் கைக் கடிகாரத்தை அடையாளம் காட்டிய அந்த ஆவி, சுவற்றில் சுண்ணாம்புப் பூச்சிற்குள் மறைந்திருந்த ஒருவரது படத்தையும் அடையாளம் காட்டியது. அதன் மூலம் வந்திருப்பது தங்கள் தந்தையின் ஆவிதான் என்பதை அரவிந்தர் உட்பட அனைவரும் உணர்ந்து கொண்டனர். மற்றுமொருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆவி வரவழைக்கப்பட்டது. அது அரவிந்தர் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் எதுவும் கூறாமல் “கோவில் கட்டுங்கள்”, “கோவில் கட்டுங்கள்” என்று சிலமுறை கூறி விட்டு மறைந்து விட்டது. அரவிந்தரின் ஆவியுலக உரையாடல் பரோடாவில் மட்டுமல்ல; அவர் பாண்டிச்சேரியை வந்தடைந்த போதும் தொடர்ந்தது. அரவிந்தர் அப்போது தியான நிலையின் உச்சத்தில் இருந்தார். அதனால் அவருக்கு இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட ஆர்வம் குறைந்து விட்டது. இருந்தாலும் நண்பர்களின் வலியுறுத்தலினால் அதற்கு இணங்குவார். அடிக்கடி வ.ரா, பாரதியார், அரங்கசுவாமி அய்யங்கார் ஆகியோர் ஸ்ரீ அரவிந்தரை மாலையில் சந்தித்துப் பேசுவர். அப்பேச்சுக்கள் வெறும் அரசியல் மட்டும் இல்லாமல் ஆன்ம சாதனை, தெய்வ உபாசனை, வழிபாடு, தரிசனம், சூட்சும வாசிகளின் தன்மை எனப் பலதரப்பட்டதாய் இருக்கும். சில சமயம் ஆவிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் உலகம் பற்றியும் பேச்சு திரும்பும். அரவிந்தருக்கு அதில் பெரிதாய் ஆர்வம் இல்லாவிட்டாலும் நண்பர்களுக்காக அவ்வப்போது அவ்வாய்வில் ஈடுபடுவார். அவ்வாறு செய்த முயற்சிகளின் படி, ஆவிகளின் வழிகாட்டுதல்மூலம் ‘ஆட்டோமேடிக் ரைட்டிங்’ முறையில் ‘யோக சாதனை’ என்ற நூலை எழுதினார் அரவிந்தர். பின்னர் அந்த நூலை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். இது போன்ற ஆய்வுகள் மூலம் சாதகர்களுக்கு எந்தப் பயனும் விளையாது என்று கருதிய அவர், இவற்றை ஊக்குவிக்கவில்லை. மேலும் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் சதி வழக்கில் கைதாகிச் சிறையில் வசித்த போது அவர் முன் விவேகானந்தரின் ஆவி தோன்றி, அவரது பணி நாட்டு விடுதலையை விட ஆன்ம விடுதலையே என்று வலியுறுத்தியதாக அவரது வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. *** 26 அன்னையின் ஆவியுலக அனுபவங்கள் ஸ்ரீ அன்னையின் ஆவியுலக அனுபவங்கள் வித்தியாசமானவை. ஒரு முறை அன்னை ஜப்பானில் தங்கியிருந்த சமயம். திடீரென கொடிய நோயால் பாதிக்கப்பெற்றார் அவர். மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. மருத்துவர் வந்தார். பல மருந்து, மாத்திரைகளைத் தந்தார். பலனில்லை. நோய் குணமாகவில்லை. அன்று இரவு அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு கரிய உருவம் ஒன்று, தலையில்லாத முண்டமாய் அன்னை அருகே வந்தது. அவர் மேல் அமர்ந்து அவரை மூச்சு விட முடியாமல் அமுக்கியது. அன்னை கொஞ்சமும் அஞ்சாமல் தனது ஆன்ம சக்திகளை ஒன்று திரட்டினார். அந்த தீய சக்தியுடன் போராடி அதனை விரட்டி அடித்தார். மற்றொருமுறை அன்னை தனது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது புகை மூட்டம் போன்ற உருவம் அவர் வீட்டை நோக்கி வந்தது. அது தன்னைத் தாக்கவும், தனது வீட்டைத் தீயிட்டு அழிக்கவுமே வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, தனது அதீத சக்தியைப் பயன்படுத்தி, அது தன்னைத் தாக்காமல் இருக்குமாறும், வீட்டைத் தீயிட்டு அழிக்காமல் இருக்குமாறும் செய்து தடுத்தார். அதனால் சீற்றம் கொண்ட அந்த ஆவி, சற்று தொலைவில் வசித்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அவர்கள் வீடுகளைத் தீப்பற்றச் செய்யவும் செய்து விட்டு மறைந்து விட்டது. இதனால் அன்னை மிகவும் மனம் வருந்தினார். இது போன்ற துன்பங்கள் நிகழ்வதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதல் உலகப் போரினால், எதிர்பாராமல் மரணமடைந்தவர்கள், தலை வெட்டப்பட்டு உயிரிழந்த பல அப்பாவி இளைஞர்களின் ஆவியே இவற்றிற்கெல்லாம் காரணம் என்றும், அமைதியடையாமல் அலைந்து திரிந்த அந்த ஆவிகளே பலரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தன என்பதையும் அன்னை கண்டறிந்தார். தனது ஆன்ம பலத்தின் மூலம் அன்னை அந்த ஆன்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்தினார். அதன் பின் அந்த நோய் வேறு யாரையும் தாக்கவில்லை. ஜப்பானை விட்டு மறைந்தது. மற்றொரு முறை அன்னை கப்பலில் பிரான்ஸூக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது படு பயங்கரமான சூறைக்காற்று அன்னையின் கப்பலைத் தாக்கியது. பயணிகள் மிகவும் அச்சப்பட்டனர். கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது. அன்னையின் ஆசானான தியோன் என்பவர் சூறைக்காற்றை அடக்கி, பயணிகளுக்கு உதவுமாறு அன்னையிடம் வேண்டிக் கொண்டார். உடனே அன்னை அன்னை தனது தூல உடலைக் கீழே கிடத்தி விட்டு, சூட்சும உடலில் வெளியே வந்தார். அங்கே சில உருவமற்ற ஆவிகள் அங்கும் இங்குமாய் கப்பலைச் சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். அவை தாங்க இயலாத வெறியுடனும் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் எப்படியும் கப்பலைக் கவிழ்த்து விடுவது என்ற உறுதியில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த உருவங்களுக்கு ஆதரவாய் மேலும் பல கரிய உருவ ஆவிகள் உதவிக்கு வந்த வண்ணம் இருந்தன. அன்னை அந்த அருவங்கள் அருகே சென்றார். “இதோ பாருங்கள்! இந்தப் பயணிகள் மிகவும் அப்பாவிகள். இவர்களை நீங்கள் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், இவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?. இந்தக் கப்பலை அழித்தொழிக்க உங்களுக்கு அனுமதி அளித்தது யார்?, இந்தக் காரியத்திற்காக நீங்கள் இறைவனின் கருணைக்குப் பதிலாக சாபத்தைத் தான் பெறப் போகிறீர்கள். உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள், கப்பல் செல்ல வழி விடுங்கள். இல்லாவிட்டால்…” என்று சீறினார். அன்னையின் உறுதியான குரலைக் கண்டு அஞ்சிய அந்த ஆவிகள், உடனடியாக அவ்விடம் விட்டு அகன்றன. ஆக, மகான்களின் வாழ்விலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் மூலமாக “ஆவிகள்” இருக்கின்றன என்ற உண்மையை, அது பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக, விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாததாக இருந்தாலும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது இல்லையா? *** 27 ஈ.எஸ்.பி. உண்மையா, பொய்யா? அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P என்னும் விஷயம் உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி, E.S.P (Extra Sensory Perception என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா? அது பற்றிய செய்திகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போமா? நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். பகுத்தறிவு எனப்படும் அந்த ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ஈ.எஸ்.பி. உலகெங்கிலும் பல்வேறு ஈ.எஸ்.பி. சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஈ.எஸ்.பி. மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியுள்ளனர். சரி, ஈ.எஸ்.பி என்றால் என்ன? பொதுவாக பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறதுதான். ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன. வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition என்று பெயர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர். இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான். ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சங்கரரும் அதற்குச் சம்மதித்தார். பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைத்தார். உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த சங்கரர் அன்னையின் அந்திமக் காலம் பற்றி அறிந்து அருகில் இருப்பதற்காக விரைந்து வந்தார் என்கிறது ஸ்ரீ சங்கரரின் வரலாறு. இந்த வகைத் தகவல் பரிமாற்றமே ’டெலிபதி.’ நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான். ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ங்கனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர். இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.பியைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன. உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர். தமிழகத்திலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உள்ள பலர் இருந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர். 2010ல் மறைந்த பிரபல ஜோதிடர் நம்புங்கள் நாராயணனும் அவ்வகை ஆற்றல் பெற்றிருந்தவர். ஜோதிடம் மற்றும் ஈ.எஸ்.பி. ஆற்றல் இரண்டிலும் வல்லவராக இருந்த அவர், அதன் மூலம் கணித்துக் கூறிய பலன்கள் மிகச் சரியாக நடந்திருக்கின்றன. இவருக்கு அந்த ஆற்றல் எப்படி வந்தது? ஒருமுறை இவர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் தங்களுக்குச் சொந்தமான ரைஸ் மில்லில் பழுதடைந்த ஒரு இயந்திரத்தை ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, பெல்ட் ஒன்று சுழன்று, இயந்திரம் இயங்கி, சுவற்றில் இவர் தலை மோதி பலத்த அடிபட்டது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நினைவின்றி மருத்துவமனையில் இருந்தார். ஒருநாள் இரவு டாக்டர், நாளைக்கு இவருக்கு தலையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று அருகிலிருந்த உதவியாளரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது நாராயணனுக்கு திடீரென விழிப்பு வந்தது, ‘நாளைக்கு எனக்கு ஆபரேஷன் நடக்காது…’ என்றார் உடனடியாக. இவர் பேசியதும் டாக்டருக்கு திகைப்பு. ‘ஏன்?’ என்று அவர் கேட்க, ‘இன்று இரவு இரண்டு மணிக்கு நீங்கள் இறந்து விடுவீர்கள்!’ என்றார் நாராயணன். மூளையில் அடிபட்டதால் ஏதோ உளறுகிறார். நாளை காலை பார்க்கலாம் என நினைத்து டாக்டர் சென்று விட்டார். ஆனால் அன்று இரவே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அந்த டாக்டர் இறந்து விட்டார். தலையில் அடிப்பட்டதன் மூலம், ஈ.எஸ்.பி. எனும் அதீதப் புலனுணர்வு ஆற்றல் கை வந்தது நாராயணனுக்கு. நாராயணன், அதன் பின்னர் தனது ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டு பலருக்கும் ஜோதிட பலன்கள் கூற ஆரம்பித்தார். அது அப்படியே பலிக்க அரசியல்வாதிகள் பலரும் இவரது நண்பர் ஆனார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் கூட இவர் பாராட்டப் பெற்றார். இவரது கணிப்புகள் அப்படியே பலித்தன. பிரபல தொழிலதிபர்கள் இவரைச் சந்தித்து, இவர் ஆலோசனைப் படி நடந்து தொழிலில் வெற்றி பெற்றனர். இவரை நம்பிய பலரும் உயர்வடைந்ததனால் இவர் ’நம்புங்கள் நாராயணன்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். ஆக, இதன் மூலம் ஈ.எஸ்.பி. என்பது ஏதோ அமானுஷ்ய ஆற்றல் அல்ல என்பதும், மூளையின் ஒரு பகுதி விழிப்படைவதால் அல்லது தூண்டப்படுவதால் மனத்திற்குக் கிடைக்கும் அதீத சக்திதான் என்பதும் தெரிய வருகிறதல்லவா? அது சரி, உங்களுக்கு ஈ.எஸ்.பி. ஆற்றல் இருக்கிறதா? *** 28 ஈ.எஸ்.பி. அதிசயங்கள் சென்ற கட்டுரையில் ஈ.எஸ்.பி பற்றிய அடிப்படை விளக்கங்களைக் கண்டோம். இந்தக் கட்டுரையில் ஈ.எஸ்.பி. பற்றிய சில அதிசய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இங்கிலாந்து நகரத்தில் உள்ளது லங்காஷயர் விகான் என்ற பகுதி. இங்குள்ள சிறப்பு பொருந்திய நகரம் ஆதர்டன். இங்கு ஜெம்மா – லியேனே ஹூட்டன் என்ற இரட்டைச் சகோதரிகள் வசித்து வந்தனர். இருவரும் ஒருவர் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள், வருவார்கள். அந்த அளவுக்கு நெருக்கம் உடையவர்கள். அது மார்ச் மாதம், 2009ம் ஆண்டின் ஒருநாள்… மாடியறையில் குளித்துக் கொண்டிருந்தாள் லியானே. வீட்டின் கீழ்ப்பகுதியில் ஏதோ வேலையாக இருந்தாள் ஜெம்மா. அப்போது ஜெம்மாவுக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது – “லியானே ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறாள். உடனடியாகச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டும்” என்ற குரல் தன் மனதுக்குள் ஒலிப்பதாகத் தோன்றியது. பதட்டத்துடன் மாடியை நோக்கி ஓடினாள் ஜெம்மா. உள்ளே லியானே நீர்த் தொட்டிக்குள் விழுந்து, தன்ணீரில் மூழ்கியபடி மயக்கமாகக் கிடந்தாள். அவள் உடல் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. லியானேவுக்கு வலிப்பு நோய் உண்டு. அது அவ்வப்போது தலை காட்டும். அதனால்தான் இப்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஜெம்மா, உடனடியாக அவளை நீரிலிருந்து எடுத்து, தனக்குத் தெரிந்த ஆரம்ப கட்ட முதலுதவிகளைச் செய்து பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கண் விழித்தாள் லியானே. [twin sisters jemma- liyene] ஜெம்மா மட்டும் சரியான சமயத்திற்கு அவளுக்கு முதலுதவி அளித்து இங்கே அழைத்து வராவிட்டால் லியானேவைக் காப்பாற்றியிருக்க முடியாது என்கிறார் சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்டீவ் பியர்சன். “ஆம். எனக்குள் ஏதோ ஓர் குரல் ஒலித்தது. ’லியானேவுக்கு ஆபத்து. அவள் உன் உதவியை எதிர்பார்க்கிறாள்’ என்று. சந்தேகப்பட்டு நான் சென்று பார்த்தபோது தொட்டியில் தண்ணீருக்குள் மூழ்கியபடி அவள் இருந்தாள். முதலில் அவள் தலையை அலசிக் கொண்டிருக்கிறாள் அல்லது ஏதேனும் விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கிறாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் உடலில் எந்த அசைவுமில்லை. மெல்ல மெல்ல உடலும் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. மிக மிக ஆபத்தான நிலையில் அவள் இருந்தாள் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. எப்படியோ விரைந்து செயல்பட்டு இறைவன் அருளால் அவளைக் காப்பாற்ற முடிந்தது” என்கிறாள் ஜெம்மா. இது போன்ற சம்பவங்களை ஆராய்ந்து வரும் டாக்டர் லின்னே செர்காஸ் கூறுகிறார். “டெலிபதி எனப்படும் இவ்வித உள்ளுணர்வு இரட்டைப் பிறவிகளிடம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இவர்களில் பல பேருக்கு உள்ளுணர்வுகள் ஒத்துப் போகின்றன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க முடியாமல் எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் இந்த டெலிபதி உள்ளுணர்வு மிக தீவிரமாகச் செயல்படுகிறது. அதில் எந்தத் தடையும் இருப்பதில்லை” என்கிறார். இரட்டைப் பிறவிகளில் ஒருவர் நோயுற்றால் மற்றவருக்கும் நோய் வருவதும், ஒருவர் உள்ளம் சோர்ந்தால் மற்றவரும் அது போன்று சோர்வடைவதும் இது போன்ற காரணங்களினால் தான் இருக்கும் என்கின்றனர், ஒரு சில ஆராய்ச்சியாளர்கள். Lyon Playfair என்ற ஆராய்ச்சியாளர் இது பற்றி ஆய்வு செய்து, Twin Telepathy: The Psychic Connection என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இது பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். உதாரணமாக ஒரு இரட்டைப் பிறவி ஆண்களில் மூத்தவர் கிதார் வாசிப்பதில் வல்லவராகவும் இளையவர் கால்பந்து விளையாடுவதும் வல்லவராக இருந்தார். சில மாதங்களுக்குப் பின் இளையவர் மூத்த சகோதரரிடமிருந்து எதுவும் கற்றுக் கொள்ளாமலேயே, வெளியில் எங்கும் சென்று பயிலாமலேயே மிக அழகாக கிதார் வாசிக்க ஆரம்பித்தார். இளையவரை ஆராய்ச்சி செய்த போது மூத்தவரது ஆர்வமும், திறனும் தானாகவே இவருக்கு வந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் இது எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்கவில்லை. சில விஷயங்களில் மட்டும் அவருக்கு மூத்தவரின் திறன் வந்திருந்தது. இதை லியான் ப்ளைஃபையர் limited interaction என்கிறார். அமெரிக்காவின் டெக்ஸாஸில் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்த இரட்டைப் பிறவிகளில் ஒருவர், திடீரென நெஞ்சு வலிப்பது போல் தோன்றியததால் கடை வாசலில் அமர்ந்து விட்டார். பின் வெகு நேரம் கழித்து அவர் வீடு திரும்பிய போது நியூயார்க்கில் இருக்கும் அவரது சகோதரருக்கு அந்தச் சமயத்தில் நிஜமாகவே நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிய வந்தது. வீதிகளில் சைக்கிள் ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஒரு சிறு பெண் கீழே விழுந்து வலது காலில் அடிபட்டுக் கொண்டாள். அவள் மருத்துவமனைக்குச் சென்று பின் தன் வீட்டுக்குச் சென்ற போது, அவளுக்கு அடிபட்டிருந்த அதே இடத்தில் இரட்டைப் பிறவிகளுள் ஒருவரான அவளது இளைய சகோதரிக்கு கால் வீங்கியிருந்தது. “இதெல்லாம் ’டெலிபதி’ எனப்படும் உள்ளுணர்வால் தான் சாத்தியம்” என்று கூறும் லியான் ப்ளைஃபையர், மற்றவர்களை விட இரட்டைப் பிறவிகளிடம் இந்தத் தாக்கம் மிக அதிகமாக இருக்கக் காரணம், அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் இருக்கும் ஒரு வித ’மனப் பரிமாற்றம்’ தான் என்கிறார். ஆச்சரியமாகத் தான் உள்ளது, இல்லையா? *** 29 ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரின் ஆவி உலக அனுபவம் நூற்றாண்டு கண்ட சட்ட, அரசியல் மாமேதை வி. கிருஷ்ணய்யர். ’சிறியன சிந்தியாதான்’ என்று பலரும் மெச்சும் வகையில் வாழ்ந்த அவர் 04/12/2014 அன்று அமரரானார். அவர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும் தனது வாழ்க்கை அனுபவங்களை, தனக்கு நிகழ்ந்த அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதியிருக்கும் “Death and After” என்ற நூல் மிகவும் முக்கியமானது. அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போமா? கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ணய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது. அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல; ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே நடந்த சம்பவத்தைப் பார்போம். “அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன். மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன். சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். “என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ‘நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது. நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர். இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார். கிருஷ்ணய்யரின் இந்த வாழ்க்கை அனுபவம் நம்ப முடியாத அதிசயமாகத்தான் உள்ளது இல்லையா? *** 30 நம்ப முடியாத சில அதிசயங்கள் இதுவரை ஆவிகள் உலகம், முற்பிறவி, மறுபிறவிகள், ஈ.எஸ்.பி., மகான்களின் சித்தாற்றல்கள் என பல அதிசயச் செய்திகளைப் பார்த்தோம். இந்த இந்த இறுதி அத்தியாயத்தில் மேலும் சில அதிசயச் செய்திகள் பற்றிப் பார்ப்போம். நீர் மேல் நடக்க முடியுமா? நீர்மேல் நடக்க முடியுமா? இது சிலர் எழுப்பும் கேள்வி. இயேசுநாதர் நீர் மேல் நடந்து சென்றதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். த்ரைலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் காசியில், கங்கை நதியில் மிதந்தவாறே பல மைல்கள் தூரம் மிதந்து சென்றுள்ளதாக அவரது வரலாறு சொல்கிறது. அது போல பல மகான்களின் வாழ்க்கையிலும் இது போன்ற அதிசயச் செயல்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாத்தியம் தானா? “யோக முறையில் சில பயிற்சிகளை மேற் கொண்டால் நிச்சயம் சாத்தியமே” என்பது யோகிகளின் கருத்தாக உள்ளது. தண்ணீரில் ஒரு கட்டையைப் போட்டால் அது மிதக்கிறது. காரணம் நீரின் அடர்த்தியை விட அதன் எடை குறைவு. பலூன் மிதக்கிறது. காரணம் அதில் காற்று இருக்கிறது. அது போல நமது உடலை யோகாப்யாச முறையில் எடையற்றதாக்கி காற்றினால் நிரப்பினால் நீரின் மேல் மிதக்க முடியும் என்பது யோகிகளின் கருத்தாக உள்ளது.. நெருப்பில் பாய்தல் ஒரு சிறு பொறி நம் மீது பட்டாலே உடல் வெந்து விடும். ஆனால் ஒருவர் நெருப்பின் மேல் அமர்கிறார், படுக்கிறார். யோக முறையினால் இது சாத்தியமே என்கிறார், தஞ்சாவூரில் இருக்கும் இந்த யோகி. இவர் பக்தர்களால் Fire Yogi என்று அழைக்கப்படுகிறார். இவரது இந்த சாதனை பற்றி ஒரு சில ஆவணப் படங்களும் வெளியாகியுள்ளன. குருமூலம் இதனைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் இந்த யோகி. இது எப்படிச் சாத்தியம் என்பதை அவ்வளவு எளிதில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது. காரணம், சிலவகை அதிசயங்கள் நம் சாதாரண புலனறிவிற்கு அப்பாற்பட்டவை. ரகசியமானவை. அதனால்தான் அந்த ரகசியங்களை அறியும் பொருட்டு பல்வகை ஆய்வுகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நெருப்பில் பாயும் யோகியின் படங்கள் கீழே. [fire swami 2] [fire swami 3] [fire-swami-1] [fire swami 4] *** 1 இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரை பொறுமையாகப் படித்து வந்த நண்பர்களுக்கு நன்றி. விரைவில் மீண்டும் மற்றொரு சுவாரஸ்யமான நூல் மூலம் உங்களைச் சந்திக்கிறேன். நன்றி, வணக்கம். அன்புடன் அரவிந்த் நூலாசிரியர் அறிமுகம் : இந்நூலை எழுதியிருக்கும் அரவிந்த் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். பல ஆன்மீக நூல்களையும், ஜோதிடம், அமானுஷ்யம், இலக்கியம் போன்ற பிரிவுகளில் பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சென்னையில் வசிக்கிறார். தொடர்புக்கு : aravindsham@gmail.com 2 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !