[] 1. Cover 2. Table of contents தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல் தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்   ஆர். பட்டாபிராமன்   pattabieight@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thozhar_gandhi மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/thozhar_gandhi This Book was produced using LaTeX + Pandoc முன்னீடு காந்தியடிகள் அவரது வாழ்நாட்களிலேயே மகாத்மாவாக பார்க்கப்பட்டவர். எந்த அளவிற்கு அவர் கொண்டாடப்பட்டாரோ-கொண்டாடப்படுகிறாரோ அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வந்தவர் - வருபவர். அனைத்து தரப்பினரின் விமர்சன பகுப்பாய்விற்கு அவர் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக நிற்கிறார் என உணரப்பட்டு அவர்மீது வந்த விமர்சனங்கள் ஏராளம். தாங்கள் விரும்பியதை அவர் செய்யவேண்டும் என விமர்சித்தவர்கள் விழைந்தனர். இந்த வழிப்பட்ட விமர்சனத்தை இடதுசாரிகளும் பெருமளவில் செய்துள்ளனர். காந்தியை முதலாளித்துவ பிரதிநிதி- ரீஆக்‌ஷனரி , எதிர்புரட்சிவாதி, சனாதனம் பேசுபவர், உழைக்கும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தியவர்- வர்க்க சமரசவாதி போன்ற விமர்சனங்களுக்கு அவர்கள் உள்ளாக்கினர். இதில் சோவியத் - பிரிட்டிஷ் கட்சிகளின் பங்கும் இருந்தது. விடுதலைக்கு பின்னர் காந்தியை இடதுசாரிகள் மிக நிதானமாக பார்க்கத்துவங்கினர். நேருவை தொட்டுக்கொள்ளலாம் என நினைத்த அவர்கள் அதே நேரத்தில் காந்தியை எடுத்துக்கொள்ளவில்லை. சற்று மரியாதை கூடிய விமர்சனங்களை வைக்கத்துவங்கினர். காந்தியடிகள் குறித்து அதிகாரபூர்வ ‘பார்ட்டி லைன்’ ஏதுமில்லை என ஹிரன்முகர்ஜி தனது காந்தி குறித்த புத்தகத்தில் தெரிவித்திருந்தார். சோசலிஸ்ட்களில் பலர் சற்று நெருக்கமாக காந்தியை வைத்துக்கொண்டனர். இந்திய இடதுசாரிகள் காந்தியை முழுமையாக துணைக்கு வைத்திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் காந்தியை உள்வாங்க துவங்கிய பின்னர் என்னுள் தலைப்பட்டது. அதன் உந்துதலாய் காந்தியின் சோசலிச உரையாடல் குறித்த கருத்துக்களை எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற அவா மேலிட்டது. இந்த உழைப்பின் வெளிப்பாடாக ‘தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்’ உருவாகியுள்ளது. காந்தியின் சோசலிச சிந்தனைகள் முன்னரே ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது பொருளாதார கருத்துக்கள் அடங்கிய தனி தமிழ் வால்யூமே வந்துள்ளது. ஆனாலும் வெவ்வேறு ஆக்கங்களை படிக்கும் போது கிடைத்த கருத்து தெறிப்புகளையும் என்னிடம் அவை ஏற்படுத்திய எதிர்வினைகளையும் சேர்த்துத்தர முயற்சித்துள்ளேன். காந்தியின் சோசலிசத்தை மார்க்சிய வகைப்பட்டு அளந்தால் அதை ஏற்பிற்கு உகந்ததாக சொல்லமுடியாமல் போகலாம். ஆனால் காந்தியின் மொழியில் அவரது நடைமுறை வாழ்வின் அடியொற்றிப் பார்த்தால் அதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் அது சோசலிசம் பேசக்கூடியவர் செய்யவேண்டிய நடைமுறையிலிருந்து - தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்வதிலிருந்து (transform) துவங்குகிறது. எனவே அந்த வகையில் அது கடினமான பயிற்சியாக இருக்கும். காந்தியின் பொருளாதார சிந்தனைகள், தர்மகர்த்தாமுறை, அகிம்சை, சர்வோதயா, ஆஸ்ரம வாழ்க்கைமுறை குறித்தெல்லாம் தனித்தனியாக ஏராள ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இந்த கருத்தாக்கங்கள் இங்கே விரிவாக பேசப்படாமல் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவிற்கு வந்து முழுநேர சேவையாளராக தன்னை மாற்றிக்கொண்ட காலம் என்பது சோவியத்தில் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆண்டுகள். புதுவகைப்பட்ட கட்சியின் வழிகாட்டலில் சோவியத் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி ஏற்பட்டது. ‘புரட்சிகர ஆட்சியியல்’ - உழைப்பவர்களின் ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சி’ என்ற முழக்கத்துடன் லெனின் தலைமையிலான ஆட்சி துவங்கியது . சோவியத் புரட்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ருஷ்யாவின் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டு கடிதப்போக்குவரத்துவரை நடத்திய காந்தியிடம் இந்த ‘புதுவகை ஆட்சி’ ஏன் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு விடை காணவேண்டியுள்ளது. சோவியத் புரட்சியை ஆட்சியை அவர் ஏன் ‘மாதிரி’ என்று ஏற்கவில்லை ? மார்க்சியம் அவரிடம் எந்த அளவிற்கு சென்றது ? சமத்துவ எண்ணமும் சுரண்டலுக்கு எதிராகவும் உழைப்பின் மேன்மையையும் பேசிய காந்தியால் சோவியத் ஈர்ப்பு சுற்றுக்குள் ஏன் போகமுடியவில்லை என்பன குறித்து ஓரளவிற்கு ஆங்காங்கே இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. ‘காந்தியைக் கண்டுணர்தல்’ என்கிற எனது கட்டுரைத்தொகுப்பில் மார்க்சியர் குறித்து சில காந்தியர்களின் கருத்துக்களையும், காந்தி- காந்தியம் குறித்த சில முக்கிய மார்க்சியர் கருத்துக்களையும் தனிக் கட்டுரைகளில் தந்திருக்கிறேன். அக்கட்டுரைகளின் தாக்கத்தாலும் இந்த புத்தகம் உருவானதை சேர்த்தே பதிவிடவேண்டும். இவ்வாக்கத்தில் காந்தி- லெனின் மற்றும் காந்தி- மாவோ என இரு பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயம் அறிமுகப்பகுதியாக பொதுவாக பேசுகிறது. பின்னூட்டம் என்கிற இறுதிப்பகுதி தொகுப்பு என்ற அளவிலும், பிற்சேர்க்கை என்ற அளவிலும் அமைந்துள்ளதை படிக்கும்போது உணரலாம். இடையில் உள்ள அத்தியாயங்கள் காந்தியின் அரசு குறித்த பார்வை, சோசலிச உரையாடல்களை பதிவிடுகின்றன. காந்தி தொழிலாளர்களின் பாத்திரமாக எதை விரும்பினார் என்பது தனி அத்தியாயமாக வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் முன்னோடிகள் அம்பேத்கர், பெரியாருடன் கூட முரண்பட்டனர். விமர்சித்தே வந்தனர். தற்போது கம்யூனிஸ்ட்கள் உடன்பாட்டு முறையில் செயல்பட்டுவருவதைப் பார்க்கிறோம். அதேபோல் காந்தியை கைக்கொள்வதிலும் கவனம் செலுத்தியிருக்கமுடியும். காந்தி வாக்கு அரசியலுக்கு உதவி செய்யாமல் போகலாம். அறம் சார்ந்த அரசியலுக்கு அவரைவிட நெருக்கமானவர்களை மார்க்சியர்கள் உணரமுடியாது. இந்த புத்தகம் அந்த திசைவழிக்கு சற்று உதவினாலும் மகிழ்ச்சியே. இவ்வாக்கத்தின் மய்ய சரடு சோசலிசம் என்பது உரையாடல்களால் கோட்பாடுகளின் மேற்கோள்களால் மட்டும் உருப்பெறுவதில்லை. சோசலிச உணர்வை தனிநபர் வாழ்ந்து காட்டலில்தான் துவங்குகிறது என்பதாக இருக்கிறது. Turn Searchlight Inward என்பது சோசலிசம் பேசுபவர்களின் பயிற்சியாகவேண்டும் என்பதில் இருக்கிறது. புரட்சிகளின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியில் இருக்கிறது. 29-4-2021 ஆர். பட்டாபிராமன் காந்தியின் நடைமுறை சோசலிசம் பேசக்கூடிய எவரும் அதற்கான கூறுகளை நடைமுறையில் தன்னிடமிருந்து துவங்கவேண்டும் என தனித்தக் குரல் ஒன்று இந்திய அரசியல் வானில் ஒலித்தது. அப்படியே அது தன் வாழ்வில் நடந்தும் காட்டியது. அக்குரலின் சொந்தக்காரர் மகாத்மா காந்தியடிகள். சத்யா- அகிம்சா- சத்யாகிரகம்- சர்வோதயம் இவையாவும் இந்திய மக்கள் பயன்படுத்திய பதங்கள். காந்தியடிகள் சொந்த சொத்து ஏதுமற்றவராக, சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு என்பதை அனுசரித்தவராக இருந்தார். சோசலிச நடைமுறைகளை அனுசரித்து வாழ்பவர் என தன்னைப்பற்றி அவர் தெரிவிக்கவும் செய்தார். தன்னை வன்முறையை போதிக்காத கம்யூனிஸ்ட் என அழைத்துக்கொள்ளமுடியும் என்றார். 1930 களிலேயே அவரால் இப்படி உரிமைபாராட்டி சொல்லமுடிந்தது. “I may tell you that I am trying my best to live up to the ideals of communism in the best sense of the term” அதே நேரத்தில் அவர் போனிக்ஸ் ஆஸ்ரம டால்ஸ்டாய் பண்ணை வாழ்க்கை குறித்து சோசலிஸ்ட்- கம்யூனிஸ்ட் வாழ்க்கை என்றெல்லாம் அழைத்துக்கொள்ளவில்லை. தனிநபர்- சமூக உறவுகள் குறித்து அவர் மிக நன்றாக அறிந்தவராக இருந்தார். அதே நேரத்தில் தனிநபரை அரசாங்கம் ஒடுக்கமுடியும் - அதை ஏற்கமுடியாது என்கிற உணர்வுகொண்டவராகவும் இருந்தார். சமூக பொருளாதார நீதி கடையவனுக்கும் கிடைப்பதற்குரிய சமூக கட்டுமானத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மகாத்மா காந்தியடிகள். கடவுளின் படைப்பு அனைத்தும் சமமாக பாவிக்கப்படவேண்டும். தனிநபரின் நன்மை சமூக நன்மையாகவும் இருக்கவேண்டும் என அவர் உழைத்தார். மற்றவர்களிடத்திலிருந்து அவரை மகாத்மா வெளிச்சத்திற்கு உயர்த்தியது எதுவென்றால் அவருடைய moral ethical means என்பதே ஆகும். அரசதிகாரம் என்பதன் மீது அவருக்கு சந்தேகம் இருந்தது. அது எதன் பெயரில் எந்த இசத்தின் பெயரால் அமைந்தாலும் இந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக அவர் அரசதிகாரத்தை பார்க்க மறுத்தார். எனவே தான் அவர் அரசியல் பொருளாதார அதிகார பரவலாக்கம் என சொல்லிவந்தார். மானுட வாழ்க்கை என்பது பிளவுபடாதது என்கிற நம்பிக்கை அவரிடம் இருந்தது. மார்க்சிற்கும் சுதந்திரம் பிளவுபடாத ஒன்றுதான். காந்திக்கு பொருளாதார என்கிற ஒற்றை மதிப்பீட்டு மனிதன் சிறந்த மனிதன் அல்லன். அதில் மட்டும் மனித முழுமையை தேடமுடியாது என நம்பினார். அன்பு, கருணை, நெறி- ஒழுக்கம் இவைகள் இணையும்போதுதான் மனித வாழ்வு சிறக்கும். காந்தி பேசியதையும் எழுதியதையும் கணக்கிட்டால் 50 ஆயிரம் பக்கங்களாவது இருக்கும்.. அவர்மீது revivalist, reactionary, bourgeois philosopher, statusquoist, arch enemy of progressivism , புரட்சியை தடுத்தவர் என ஏராள வசைகள் வீசப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் சோசலிசம் என்பதை தான் உணர்ந்தவகையில் அந்த இலட்சியத்திற்குரிய நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார். தொழில்புரட்சியின் கேடுகளை சீர்செய்திட சமூகத்தில் புரட்சிகர மாற்றம் என்கிற ‘பானர்’ உடன்தான் சோசலிச சித்தாந்தம் பிறந்தது எனலாம், கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை தந்த மார்க்ஸ்_ எங்கெல்ஸ் முதலாளித்துவ தொழில்புரட்சி சமூகத்தில் நிலவும் வர்க்கமோதல்களை- வேறுபட்ட வர்க்க நலன்களை- வர்க்கப்போராட்டத்தின் மூலம் தொழிலாளிகளுக்கு சாதகமாக தீர்க்க முயற்சித்தனர். முரண்பாடு தீர்க்கப்பட்டு இழப்பதற்கு ஏதுமற்றவர்களால் அமைக்கப்படும் சோசலிச சமூகம் தவிர்க்க முடியாதென பேசினர். தொழில் சமூகம்- வர்க்கமோதல்கள்- புரட்சிகர வன்முறை ஆயுதப்போராட்டம் மூலம் மாற்றம் என்பது பொதுவான மார்சிய அணுகுமுறையாக சொல்லித்தரப்பட்டது. மார்க்சியம் பொருளாயத நலன்கள் குறித்து உரத்து பேசியது. இந்த அளவுகோலை வைத்து காந்தி மதிப்பிடப்படும்போது அவர் ‘ரிவைவலிஸ்ட்’ ஆக பார்க்கப்படுவார். காந்தியோ தொழில் சமூகம் மீது சந்தேகப்பார்வையை எழுப்பியவர். காதி கிராமத்தொழில் எனப் பேசிவந்தவர். அவரால் வர்க்கமோதல் – வர்க்கப்போராட்டம் - வன்முறை ஆயுதம் தாங்கிய புரட்சி எனப்பேசமுடியாது. ‘முதலாளிகளின் மனமாற்றம்’ என்கிற நம்பிக்கை வரலாற்றில் நடக்காத ஒன்று என்பதால் நடக்கவே முடியாத ஒன்று என அவர் ஏற்கவில்லை. முதலாளிகளுக்கு பேராசை கூடாது என அவர் சொல்லியே வந்தவர். அவர்கள் சுரண்டித்தான் சொத்து பணம் சேர்த்துக்கொண்டவர்கள் என்பதை காந்தி அறிந்தே இருந்தார். புரட்சிகர சோவியத்துகள் என அவர் பேசவில்லை. சுயநிறைவுகொண்ட கிராமக்குடியரசுகள் என்று பேசினார். தர்மகர்த்தாமுறை எனும் சுயஉணர்வுடன் முதலாளிகளும், நிலச்சுவான்தார்களும், அறிஞர்களும், உடல் பலவான்களும், வேறு எவ்வகை சிறப்புகொண்டவர்களும் செயல்பட வேண்டும் என அவர் விவாதித்து வந்தார். காந்தியடிகள் சாதாரண ஏழை குடும்ப பின்னணிகொண்டவர் அல்ல. சமஸ்தான திவான்கள்- பிரதமர் அல்லது துணைப்பிரதம அமைச்சர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் தாத்தாவிற்கு மாதம் ரூ 700 ராஜாங்க ஊதியம் கிடைத்தது. இன்று ஒப்பிட்டால் குடியரசுத்தலைவருக்கு இணையான சம்பளம் எனலாம். காந்தியின் தாத்தா உத்தம் சந்த் வீட்டுத்திருமணங்கள் எல்லாமே ‘ராயல் வெட்டிங்’ அரண்மணையின் சாயல்கொண்ட பெரும் வைபமாகவே நடந்தன. காந்தியின் தந்தை கரம்சந்த் போர்பந்தர் ராஜ்கோட் இல்லங்கள் பெரும் செல்வந்தர்களின் வீடாகவே காட்சியில் இருந்தன. காந்தியின் அண்ணன் லஷ்மிதாஸ் வீட்டு கல்யாணங்களும் அரண்மனை குடும்ப நிகழ்வுகள் போலவே செலவைக்கண்டன. வீட்டு பொருளாதார சூழல் சோசலிச சித்தாந்தத்தை அவருக்கு கொண்டுவந்து சேர்ப்பனவாக இருந்திருக்கமுடியாது. ரொமெயின் ரோலந்த் எழுதும்பொது காந்தியின் தந்தை சொத்து பற்றி அலட்டிக்கொள்ளதவராக இருந்தவர்- வீட்டிற்கென பெரிதாக அவர் விட்டுச் செல்லவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார். தர்மகாரியங்களுக்கு செலவிட்டதாகவும் சொல்கிறார். வாங்கனீர் சமஸ்தானத்தில் ராஜாவுடன் மனக்கசப்பு காந்தியின் தந்தை பதவி விலக காரணமாக அமைந்தது. கசப்பை நீக்க வேண்டும் - ஈடாக ரூ 10 ஆயிரம் தர சம்மதம் என ஆட்சியாளர் சொன்னதை அவர் ஏற்கவில்லை. நாவல்ராம் எனும் நண்பர் மூலம்தான் பிரதமர் பதவிக்கு அவர் வந்தார். நாவல்ராம் மூலம் கரம்சந்தை ஏற்றி செல்லும் வண்டி காரேஜில் பணப்பை வைக்கப்பட்டது. காபா காந்தி அதை எடுத்து கொடுத்துவிட்டுத்தான் பயணமே மேற்கொண்டார். அதே போல் ஆட்சியாளர் வீட்டுமனையாக எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றபோது 400 சதுர கஜம் கொண்ட நிலமே போதும்- அதைவிட பெரிதாக காட்டப்பட்ட எதையும் வேண்டாம் என கரம்சந்த் மறுத்துவிட்டார். தனது இறுதி நாட்களில் சமஸ்தான அரசாங்கம் கொடுத்த ரூ 50 பென்ஷனில் வாழ்ந்தார். எனவே சிறு வயதிலேயே காந்திக்கு கையகப்படுத்தல் அவசியமில்லை (non acquisitiveness) என்ற பாடம் நன்றாகவே குடும்பத்தில் கிடைத்தது. இதை அவரின் சோசலிச திசைவழிக்கு கிடைத்த நல்ல பாடமாக கருத முடியும். கரம்சந்த் உடன் குறைந்தது 20 பேர்களாவது உணவு உட்கொள்வர். அவ்வளவு உறவினர்க்கும் குடும்பத்தார்க்கும் சமைத்து பரிமாறி மீதமாவதை உண்ணும் பழக்கத்தில் இருந்தவர் புத்லிபாய். அலுப்பில்லாமல் குடும்பத்தை கவனித்தவர். காந்திக்கு சிறுவயதிலேயே ஒருவகையில் அனைவருடனும் சேர்ந்து வாழ்கிற ஆஸ்ரம வாழ்க்கை போன்ற சாயல் கிடைத்தது. பியாரிலால் இதைச் சரியாக சுட்டிக்காட்டினார். இந்த கம்யூனிட்டி வாழ்க்கை மனநிலை என்பதற்கான விதை அவருக்கு கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்தது. வைணவம் சார்ந்த ‘இறைவசம் சரணாகதி’ என்கிற தத்துவமும், ஜைனர்களின் ‘அகிம்சையும்’ காந்திக்கு சமூக நலன்கள் என்பதும் தனிநபர் நலன்கள் என்பதும் பொருந்திப்போக வேண்டியவையே என்கிற எண்ணத்தை வடிவமைத்ததாக சொல்லலாம். இந்திய கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு குறித்த தேர்ந்த பார்வை காந்தியிடம் இருந்ததை தென்னாப்பிரிக்காவில் அவருடன் வாழ்ந்து பணியாற்றிய போலக் குறிப்பிட்டார். உயர்ந்த சாதி என்கிற மனப்பாங்கு இல்லாத இன்னொரு இயல்பும் சிறுவயதிலேயே அவரிடம் பார்க்க முடிந்தது. உகா எனும் கழிப்பறை சுத்தம் செய்பவரை தொடக்கூடாது - அப்படியே தொட்டுவிட்டால் குளிக்கவேண்டும் என்பதை தாயார் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அப்படி செய்வது தவறில்லையா என தாயிடம் வினவிய 12 வயது சிறுவனாக காந்தி இருந்தார். பிரதமர் வீட்டுப் பையன் என்பதில்லாமல் சாதாரண பள்ளியில் சராசரி மாணவன் என்பதாகவே அவர் பள்ளிக்கூட வாழ்க்கை அமைந்தது. தொழில்புரட்சியின் ஏகாதிபத்திய இங்கிலாந்திலும் கூட தனது சொந்த அனுபவத்தில் எளிய வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அவர் தொடங்கிவிட்டார். அங்கு விஜிடேரியன் இயக்கம், சோசலிஸ்ட் இயக்கம் போன்ற புதிய வாழ்வை கட்டவிரும்பிய சோதனைகள் நடந்தவண்ணம் இருந்தன. இச்சூழலில்தான் காந்தியின் லண்டன் படிப்புக் காலம் அமைந்தது. அமைதியான வழியில் சோசலிச மாற்றம் பேசிய பாபியன் சோசலிஸ்ட்களும், லேபர் கட்சியும் இருந்தனர். காந்தியுடன் பின்னாட்களில் உரையாடிய பெர்னாட் ஷா 1889ல் பாபியன் கட்டுரைகளை எழுதியிருந்தார். குரோபோட்கின் ‘மியூட்சுவல் எயிட்’ சிந்தனைகளும் பரவின. இச்சூழல் அங்கு நிலவினாலும் காந்தி அங்கு விஜிடேரியன் இயக்கத்துடன்தான் தொடர்பில் இருந்தார். ஆனால் ஹென்றி சால்ட் போன்றவர்களின் மனிதாபிமான இயக்கம் சோசலிஸ்ட்களுடனும் சோசலிஸ்ட்கள் ‘விஜிடேரியன்’ இயக்கங்களிலும் இருந்தனர். சால்ட் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பில் காந்தி லண்டன் விஜிடேரியன் சொசைட்டியின் செயற்குழுவில் இடம் பெற்றார். காந்தி 1891ல் எழுதிய விஜிடேரியன் பத்திரிகை கட்டுரையில் கூட இந்தியாவில் பலர் ஏழைகளாக இருப்பதால் அவர்களால் இறைச்சி வாங்கி உண்ணாமுடியாமையும் இருக்கிறது. பலர் ஒரு பைசாவில் வாழக்கூடியவர்கள் என்கிற வெகுஜன நிலைகுறித்து பேசினார். சிலருக்கு மத அனுஷ்டானமாக தாவர உணவு இருந்தால் , ஏழைகளுக்கு இறைச்சி உணவை வாங்க முடியாத பொருளாதார சூழல் இருந்ததை காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். லண்டன் வாழ்க்கையில் அவரிடம் ஏற்பட்ட முக்கிய மாற்றம் இனி ஆடம்பரவாழ்க்கையில் செல்லக்கூடாது என்பதே. தன் செலவுகளை குறைக்க கற்றுக்கொண்டார். சில மாணவர்கள் சேரிப்பகுதியிலிருந்து வந்தார்கள்- அவர்களின் வாழ்க்கை எளிமையைத் தவிர ஏதுமற்றதாக இருந்தது. அப்படிப்பட்டவர்கள் என் முன்னுதாரணம் ஆனார்கள் என காந்தி குறிப்பிடுகிறார். அவர் ஒற்றை அறை குடியிருப்பையும், தானே சமைத்து சாப்பிடுதல் என்பதற்கும் நகர்ந்தார். உண்மை, எளியவாழ்க்கை, முதலாளித்துவ உலக டாம்பீகங்களிலிருந்து விடுபடுதல் நோக்கி நகர்ந்தார். லண்டன் கப்பல்தள தொழிலாளர் போராட்டத்தில் 1889ல் கார்டினல் மான்னிங் உதவியதை அறிந்து அவரை பாராட்ட காந்தி சென்றார். தொழிலாளர் போராட்டம் குறித்து அறிதல் என்கிற உணர்வு அவரிடம் அரும்பியதாக இதைக்கொள்ளலாம். பின்னாட்களில் தென்னாப்பிரிக்கா சுரங்கத்தொழிலாளர் போராட்டம், இந்தியாவில் அகமதாபாத் மில்தொழிலாளர் போராட்டம் என்கிற விரிவை நாம் பார்க்க முடிந்தது. 1889ல் இந்திய தேசிய காங்கிரசில் பங்கேற்க வந்த சார்லஸ் பிராட்லா பம்பாயில் மக்களிடம் பிறந்து மக்களால் நம்பப்படும் நான் மக்களுக்காக உயிர் நீப்பேன். இதில் இனம், எல்லை என்கிற வரையறை ஏதும் என்னிடம் இல்லை எனப் பேசியிருந்தார். லண்டனில் அவர் மறைந்தபோது காந்தி அவரின் இறுதிசடங்கில் பங்கேற்றார். தென்னாப்பிரிக்கா 1893-1914 அவரின் அனுபவங்கள் அவரை மகாத்மா நிலைக்கு உயர்த்தியது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று. எனது அதிருஷ்டம் எப்படியிருக்கிறது என பார்க்க தென்னாப்பிரிக்காவிற்கு சென்றதாகவே காந்தி குறிப்பிட்டிருந்தார். பணத்தேவதையின் அருளாசிகிட்டும் என்கிற நம்பிக்கையில் ஓராண்டிற்கெனச் சென்றவர் இருபது ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. இந்தியாவிற்கு நிரந்தரமாக திரும்புகையில் எந்தவித உடைமை பாத்தியதையும் இல்லாமல் அவர் வந்திறங்கினார். தென்னாப்பிரிக்காவில்தான் மகாத்மா எனும் நிலைக்கான வேர்கள் பிடித்தன. சமூகத்தை வஞ்சித்துவிட்டு சொத்துக்குவிப்பது என்பது சோசலிசத்திற்கு உகந்த வழியாக ஒருநாளும் ஏற்கப்படாது. சமத்துவ சமூகம் அமைவதற்கு முதலில் எவர் ஒருவரும் தனது தேவைகளை குறைத்துக்கொள்ள தெரிந்துகொள்ளவேண்டும். சலுகைகளை கோராததுடன் அனுபவிக்க விழையாத மனம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும். காந்தியிடம் கையகப்படுத்தாமை என்கிற குணம் ஆழத்தோய்ந்திருந்தது. “I have to reduce myself to the level of poorest of poor- non acquisitiveness or renunciation of privileges if possesed are the essence of a socialist system”என்கிற மேம்பட்ட புரிதல் காந்தியிடம் செயல்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உண்மைக்கான சோதனைகள், சத்தியாகிரகம், அகிம்சைவழி சோதனைகள் அவரின் வாழ்வில் நடைமுறை அர்த்தம் அடைந்தன. கம்யூனிட்டி வாழ்க்கை சோதனையும் நடந்தேறியது. தனக்கென ஏதும் வைத்துக்கொள்ளாமை, தர்மகர்த்தா முறை, உழைத்து உண்ணவேண்டும் போன்ற அனைத்தும் நடைமுறையில் அனுசரித்து பார்க்கப்பட்டன. காந்திய சோசலிச ‘சிந்தனை- செயல் அரும்புகள்’ மொட்டவிழ் காலமாக இதைப் பாவிக்கலாம். 1890ல் 40000 ‘indentured labour’ கூலிஅடிமைத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்தனர். இந்தியர்கள் எனப்பார்த்தால் 1.5 லட்சம் இருப்பர். அவர்கள் அரைகாட்டுமிராண்டிகள் என்றே அங்கே குறிக்கப்பட்டிருந்தனர். ஆரஞ்சு ஃப்ரி பகுதியில் 1888 சட்டப்படி எவ்வித உரிமையுமற்றவராக இந்தியர் இருந்தனர். டிரான்ஸ்வாலில் ‘தலைவரி’ எனும் கொடுமை பதிவுமுறை இருந்தது. பொது நடைபாதைகளில் வருவதற்கோ, இரவு 9 மணிக்கு பின்னர் வெளிவரவோ அனுமதியில்லை. பாரிஸ்டர் ஆனாலும் இந்தியர் எனில் பொதுப்பெயர் ‘கூலி’ தான். டர்பனில் நீதிமன்றத்தில் காந்தி தலைப்பாகையை கழட்ட வற்புறுத்தபட்டார். இரயில் பயணத்தில் முதல்வகுப்பு பயணசீட்டு இருந்தும் மரிட்ஸ்பர்கில் அவர் நடுக்கும் குளிரில் இறக்கிவிடப்பட்டார். இந்த அவமானங்களை உள்வாங்கி அங்குள்ள இந்திய மக்களுக்கான உரிமைப்போராட்டங்களில் மனம் ஒன்றலானார் காந்தி. கடமை குறித்து எண்ணலானார். நின்று போராடுவதா- விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிடுவதா என்ற மனப்போராட்டம் இல்லாமல் இல்லை. ஆனால் கடமையை செய்யாமல் ஓடும் கோழையாக இருக்கக்கூடாது என முடிவெடுத்தார் காந்தி. இந்த அவமானங்களை சுமரியாதை இழப்புகளை வேருடன் களைய முயற்சி எடுத்தாக வேண்டும் என்கிற தகிப்பு அவரை இயக்கத் துவங்கியது. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கண்ணியமான வாழ்விற்கு செய்யவேண்டியவை குறித்த செயலில் இறங்கினார் காந்தி. லூயி பிஷர் எழுதினார் ‘That bitter night at Maritzburg the germ of social protest was born in Gandhi’. ஆமாம் அது இருபது ஆண்டுகள் நீடித்தது. அவரின் போராட்டம் ‘சமத்துவம், சகோதரத்துவம், ஃபெலோசிப்’ என்பதற்கான அடையாளங்களை கொண்டிருந்தது. தோழர் டாங்கேவும் எழுதினார் “There he learnt the first lessons of struggle for equality, of human dignity and opposition to radicalism” வாழ்க்கை பெரும் புதிர்களை சுமந்துகொண்டேயிருக்கிறது. பெருந்தனவந்தர்களுக்காக வேலை செய்ய தென்னாப்பிரிக்கா வந்த காந்தி அங்கு மிகச்சாதாரண ஏழை எளிய தொழிலாளர்களின் கண்ணியம் காக்க தன்னையும் தன் சம்பாத்தியங்களையும் ஒப்புக்கொடுத்தார். பாலசுந்தரம் எனும் ஒப்பந்த உழைப்பாளருக்காக அவர் நின்றதை சுயசரிதையில் நாம் பார்க்கமுடியும். அவரின் இத்தலையீட்டால் பல தொழிலாளர் அவரைக் காணவந்ததும் அவர்களின் வாழ்வியல் சுகதுக்கங்களையும் அவரால் அறியமுடிந்தது. அவரின் சத்தியாக்கிரக போராட்டம் ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியாக மாறியது. நியுகாசில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் நியாயத்தை அவர் உணர்ந்திருந்தார். அவர்களின் சுயமரியாதை உணர்வை பாராட்டி அவர்களிடத்தில் உரையாற்றினார். பகவத்கீதா, ஆசியாவின் ஒளி, புதிய ஏற்பாடு ஆகியவற்றின் தாக்கம் துறத்தல் எனும் மனப்பாங்கை அவரிடத்தில் உறுதிப்படுத்தின என சொல்லலாம். ‘கிறிஸ்துவம்’ தவறேதும் இல்லாத புனித மதம் என்று அவர் நண்பர்கள் தென்னாப்பிரிக்காவில் வாதித்ததை அவர் ஏற்காவிடினும், மதம் குறித்த தேடல்களுக்கு அந்நண்பர்கள் பெரிதும் உதவியதாகவே அவர் நன்றிபாராட்டினார். அவர் இந்து, கிறிஸ்து, இஸ்லாம், பார்சி என அனைத்து மதசாரங்களிலிருந்து ஒன்றை கற்றார். கடவுளை மானுட சேவை மூலம்தான் உணரமுடியும் என்பதே அது. கீதை அன்றாட வழிகாட்டும் அகராதியானது. அபரிகிரஹா- சமபாவ எனும் எதையும் சொத்தாக வைத்துக்கொள்ளாமையும் , மனிதர்கள் சமதையாக உணரப்படவேண்டியவர்கள் என்பதும் அவர் வசமாயின. தென்னாப்பிரிக்காவில்தான் அவரின் தர்மகர்த்தா கொள்கை மேலோங்கியது. ‘ஏதும் வைத்துக்கொள்ளாமை’ என்பதை கீதை கற்றுக்கொடுத்தது. அப்படியே சொத்திருந்தாலும் அது சமூகத்திற்குரியது- அதன் டிரஸ்டிதான் நாம் என்கிற மனோபாவம் வளர்ந்தால் ஆரோக்கியமான சமதையான மனிதர்களின் சமூக உருவாக்கம் ஏற்படும் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் திடமாகத் துவங்கியது. வாழ்வின் ஆரம்பகாலத்தில் மூன்று அம்சங்களால் காந்தி ஆகர்சிக்கப்பட்டார். பெரும் வியாபாரி ராய்சந்த்பாய் அவர்களின் வாழ்ந்துகாட்டும் முறை, டால்ஸ்டாயின் The Kingsom of God is within you, ரஸ்கினின் Unto This last சிந்தனைகள் என அவற்றை சொல்லலாம். வெளிப்பகட்டு ஆரவாரங்களால் கடவுளின் ராஜ்யம் வந்துவிடாது. அது உன்னுள் இருக்கிறது. வாழும் உயிர்கள் அனைத்துடனும் சிநேகபூர்வ உறவு கொள்வதாலும் , உளத்தூய்மையாலும்தான் கடவுளின் ராஜ்யம் எழும்பும். ஒருவரின் வாழ்க்கையில் பெறும் நிறைவு அடுத்தவரைவிட அதிகம் பெற்றிருக்கிறோம் வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை. தன்னை ஒப்படைத்தல் எனும் உயர் நெறியை பழகுவதில்தான் சமூக முன்னேற்றம் தன் நிறைவைக் காண்கிறது என்பதை டால்ஸ்டாய் உணர்த்தினார். காந்திக்கு உடனடியான மாற்றத்தை ரஸ்கின் புத்தகம் ஏற்படுத்தியது. ரஸ்கினும் பூர்வீக சொத்துக்களைத் துறந்தவர். சுரண்டலுக்கு எதிராக சமூக காருண்யம், அன்பு என்பதை முன்வைத்தவர். சமூக நலன்களுக்காக அர்ப்பணிப்பு என்பதையும் பேசியவர். நேசிப்பில் பெற்றோர் மனப்பாங்கு அமையவேண்டும் என்றவர். பணக்காரர்கள் கேளிக்கை விருந்தை குறைத்து உழைப்பிலும், ஏழைகள் சற்று உழைப்பைக் குறைத்து நல்விருந்தும் கொடுக்க வாய்ப்புள்ள சமூகம் பலப்படும் என்றுதெரிவித்தவர். ரஸ்கினை ’கிறிஸ்துவ சோசலிஸ்ட்"என அழைக்கலாம். காந்தி ரஸ்கினிடம் இருந்து கீழ்கண்ட அம்சங்களை எடுத்துக்கொண்டார். - தனிநபரின் நன்மை சமூக நன்மையில் இருக்கிறது- - வக்கீல் வேலைக்கான மதிப்பும் முடிதிருத்துவோர் வேலைக்கான மதிப்பும் ஒன்றே. உழைப்பவர் வாழ்க்கை அதாவது உழவர் வாழ்க்கையும் கைத்தொழிலும் உன்னதமானது. - அறிவார்ந்த உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் நிலவும் வேறுபாடுகள் அவசியமில்லாதது- தேவையற்றது. காந்தியின் சர்வோதயாவிற்கான இரு அடிப்படைகளை இங்கு நாமும் உணர முடியும். ஒன்று அனைவரின் உதயம்- மேம்பாடு, மற்றொன்று உடல் உழைப்பின் மேன்மை. காந்தியிடம் idea of cooperative labour என்ற தாக்கத்தை இப்புத்தகம் உருவாக்கியது என்பதை வின்சென்ட் ஷீன் கூற்றில் நாம் பார்க்கலாம். ஒருவகை ‘அக்ரேரியன் கம்யூனிசம்’- விவசாய கம்யூனிசம் என்றார் ஜாப்ரே ஆஷ். காந்திக்கு இக்கருத்துக்கள் முன்பே தெரிந்தவையாக இருந்தன. ரஸ்கின் அதை திடப்படுத்தினார் என எடுத்துக்கொள்ளமுடியும். நடைமுறை சோதனைகள் இல்லையெனில் அங்கு காந்தி இருப்பதில்லை. உண்மையை எவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் நடைமுறையில் அன்றாட அனுசரிப்பிற்குரியதாக்குவது என்பதே அவரின் சோதனைகளின் மையமாக இருந்தது. சுயசரிதையை சத்திய சோதனை என்றே அவர் தந்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் தொழிலில் சம்பாதித்தவற்றை சமூக வளர்ச்சிக்கு – ‘கம்யூனிட்டி டெவலப்மெண்டிற்கு’ பயன்படுத்தினார். தனது சொந்த வங்கிக்கணக்கில் செலுத்திக்கொள்ளவில்லை. தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் என்னிடம் பணத்தை இனி எதிர்பார்க்கவேண்டாம்- எனது குடும்பம் பெரிதாகிவிட்டது என அங்கு வாழ்ந்த ‘கம்யூனிட்டி’ சார்ந்த வாழ்வை பெரும் குடும்பமாக குறிப்பிட்டிருந்தார். கோகலே அவர்களுக்கு ஏப்ரல் 25 1910ல் எழுதிய கடிதத்தில் 5000 பவுண்ட் பணத்தை இந்தியன் ஒபீனியன் மற்றும் போனிக்ஸ் ஆஸ்ரமத்திற்கு செலவு செய்துள்ளதாக காந்தி தெரிவித்திருந்தார். இன்றுள்ள மதிப்பில் 5 லட்சம் ரூபாய் எனலாம். அவர் 1896 மற்றும் 1901ல் இந்தியா திரும்பும்போது தென்னாப்பிரிக்கா நண்பர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை சொந்தத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கஸ்தூர்பாய் வருத்தப்பட்டபோதும் உறுதியாக இருந்து காட்டினார். ‘Non possession and Trusteeship’ என்பதை கடைபிடிக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக நின்றார். சொந்தபந்தம் - வெளியார், சொந்த நாட்டவர்- வெளிநாட்டவர், கருப்பு - சிகப்பு, இந்து- முஸ்லீம்- வேறு மதத்தவர் என்கிற வேறுபாடுகளை தன்னால் கடக்கமுடியும் என வாழ்ந்து காட்டினார். I may say that my heart has been incapable of making any distinction என நடந்துகாட்டும் அளவிற்கான மனப்பக்குவம் அவரிடம் வாய்த்தது. ஜோகன்ஸ்பர்கில் அவரின் 4 எழுத்தர்களும் மகன்களைப்போலவே நடத்தப்பட்டனர். ஸ்காட்டிஷ் சார்ந்த டிக் என்ற பெண் மகளாகவே நடத்தப்பட்டார். டிக்கிற்கு பிறகு வந்த ஷெல்சின் ஆனாலும் போலக் ஆனாலும் அவரின் குடும்ப உறுப்பினர்களாக இருந்தனர். போலக்கின் திருமணத்தில் காந்திக்கு முக்கிய பங்கிருந்தது. அத்தம்பதியினருக்கு பிறந்த குழந்தையை சீராட்டுவதிலும் காந்தி கவனம் செலுத்தினார். காந்தி மேம்பட்ட புரிதல் பாசம் கொண்ட சகோதரர் என திருமதி போலக் எழுதினார். பெருமளவு சமூகத்தொண்டாற்றவேண்டுமெனில் வீட்டுக் கவலைகளிலிருந்தும் அதன் கவனத்திலிருந்தும் ஒருவர் வெளிவரவேண்டும். காந்தி அதை மிகச்சிறப்பாக செய்து பொது ஊழியன் என்பதற்கான தலைசிறந்த உதாரணமாக திகழ்ந்தார். போனிக்ஸ் குடியேற்றம் டர்பனுக்கருகில் 100 ஏக்கர் நிலத்தில் சோசலிஸ்ட் காமென்வெல்த் போலவே உருவாக்கப்பட்டது. 3 ஏக்கர் நிலம் பிரித்து வழங்கப்பட்டு அதில் உழைப்பை நல்கி வாழப்பழகுதல் என்பது நடைமுறைக்கு கொணரப்பட்டது. இந்தியன் ஒபீனியன் பிரஸ் வேலையும் அங்கு இருந்தவர்கள் பார்க்கவேண்டும். எந்த உழைப்பை எவர் நல்கினாலும் அனைவருக்கும் சமமான 3 பவுண்டு ஊதியம் தான் வழங்கப்பட்டது. அது விவசாய குடியேற்றமாகவும் இருந்தது. திருவாளர் ஆல்பர்ட் வெஸ்ட் குடும்பத்துடன் அங்கேயே காந்தியப்போல் தங்கி பிரஸ் வேலைகளைப் பார்த்தார். டால்ஸ்டாய் பண்ணை என்கிற சிந்தனை காந்திக்கு தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகக் காலத்தில் உருவானது. சத்தியாகிரகிகளையும் அவர்களின் குடும்பத்தையும் தங்கவைக்க ஏற்படுத்தப்பட்டது. ‘கோஆப்ரேடிவ் காமென்வெல்த்’ அனைவரும் ஓரிடத்தில் வசிப்பது என்கிற நடைமுறை சோதிக்கப்பட்டது. ஊழலோ அநீதியோ அங்கு இருக்கமுடியாது.. குஜராத்தியர், தமிழர், ஆந்திரர், வடஇந்தியர் என பல்வேறு மக்கள் சேர்ந்து இருந்தனர். உடல் உழைப்புதான் அடிப்படை . சிறையைவிட அப்பண்ணையில் அதிக உழைப்பை நல்கவேண்டியிருக்கும் என அறிந்தவர்களே அங்கு கூடி வாழ்ந்தனர். நாம் அனைவரும் உழைப்பாளர்கள்- எனவே எளிய ஆடைகளை அணிவோம் என்பதையும் காந்தி நடைமுறையாக்கினார். டால்ஸ்டாய் பண்ணையை 1100 ஏக்கர் நிலம் அமைய காரணமாக இருந்த ஹெர்மன் கால்லன்பாக் அவர்களும் அங்கு உடல் உழைப்பை தந்தார். டால்ஸ்டாய் ஆஸ்ரமத்தில் செருப்பிலிருந்து துணிவரை தைத்துக்கொள்ள அவர்களே பழகிக்கொண்டனர். காந்தியும் பெண்களுக்கான சட்டை தைப்பதில் பழகியிருந்தார். உழைப்பு அங்கு எங்களுக்கு டானிக்- புத்துணர்ச்சி என்று நினவு கூர்ந்தார் காந்தி. ஒரே சமையலில் ஒரே வகைப்பட்ட உணவை பரிமாறும் கூடமாகவும் டால்ஸ்டாய் பண்ணை விளங்கியது. எளிய ஏழை மக்கள் வாழ்வைப்போல் வாழப்பழகுதல் என்பது பயிற்சியானது. ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமிய சகோதரர்களைப்போல் ஒருவேளை உணவை இந்துக்கள் அனுசரித்தனர். இந்துக்கள் ஏற்காத மாட்டுக்கறி உணவை இஸ்லாமியர் எடுத்துக்கொள்ளாமல் இருந்தனர். அங்கு ஒருவகை ‘சோசலிச சிற்றூர்’ சோதனை செய்யப்பட்டது. எம்மொழி, எவ்வினம், எவ்வூர் என்பதெல்லாம் பார்க்காத சமத்துவம் சகோதரத்துவம் பயிற்சிக்கப்பட்டது. சோசலிச வாழ்க்கை முறைக்கான சோதனக்கூடமாக டால்ஸ்டாய் பண்ணை விளங்கியது. தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தி தனது இந்திய சோதனைகளை உடனடியாக துவக்கினார். மிதவாதிகள் - தீவிரவாதிகள் என வரலாற்றில் அழைக்கப்படுவோர் மத்தியில் சூரத்தில் ஏற்பட்ட பிளவால் காங்கிரஸ் இயக்கம் சோபை இழந்திருந்தது. இந்தியாவிற்கு 1915ல் திரும்பிய காந்தி இந்தியாவிலிருந்து தாய்நாட்டு சேவையில் எஞ்சிய நாட்களை கழிப்பேன் என்கிற உணர்வை வெளிப்படுத்தினார். ‘சர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி’ அவரை சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டியது. ஓராண்டாவாது இந்தியா முழுவதும் அவர் போய்வரட்டும். அதற்குப்பின்னர் அவரை சேர்த்துக்கொள்ளும் பிரச்னையை பார்த்துக்கொள்ளலாம் என்கிற அறிவுரை கோகலேயிடமிருந்து கிடைத்தது. வேட்டி சட்டையுடன் எளிய மனிதராக மக்களுடன் மூன்றாம் வகுப்பில் பயணித்து இந்தியாவை கண்டுணர புறப்பட்டார் காந்தி. காந்தியின் மக்களுடன் மக்களுக்கான செயலாற்றும் திறனை இ எம் எஸ் அவரது மகாத்மா இசத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். காந்தியின் வாழ்வு திரளான மக்களுடன் அய்க்கியப்பட்ட வாழ்வு. அவருக்கு அரசியல் என்பது புலமைசார்ந்த விவாதமல்ல. தன்னலமற்ற சேவை. இ எம் எஸ் எழுதிய வரிகள்.. “The one point of departure between Gandhiji on the one hand and all other politicians of those days on the other, was that, unlike the latter, Gandhiji associated himself with the masses of the People, their lives, problems, sentiments and aspirations. Politics for him was not a matter of high level debate among erudite politicians; it was a matter of self less service in defence of people’s interests and identifying oneself with everything that is of the people” கோகலே அறிவுறுத்திய இக்காலத்தை காந்தி இந்திய பொதுவாழ்க்கைக்கான தனது பயிற்சி பழகுநர் நாட்களாக மாற்றிக்கொண்டார். போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை போன்று இந்தியாவில் சோசலிஸ்ட் குடியேற்ற காலனி ஒன்றை சோதிக்க முயற்சிகள் எடுத்தார். சபர்மதி ஆசிரமம் உருவாக்கப்பட்டது. இங்கும் பொது சமையலில் சேர்ந்து வாழ்தல் பயிற்றுவிக்கப்பட்டது. அங்கு தனியாக வேலைக்காரரகள் என எவரும் இல்லை. இன்ன வேலை என ஒதுக்கப்படும் தீண்டாமை அறவே இல்லை. இந்து- முஸ்லீம்- பார்சி, கிறிஸ்துவர் என அனைவருக்குமானது ஆஸ்ரமம். சிறு குழந்தையுடன் தீண்டப்படாதவர் என பார்க்கப்பட்ட குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது. பிரச்னை எழாமல் இல்லை. பணம் தருபவர்கள் நிறுத்திக்கொண்டனர். தண்ணீர் ‘சப்ளை’ கூட பிரச்னையானது. சொத்தின்மை, திருடாமை, உண்மை, அகிம்சை, பிரம்மசர்யம், சுயகட்டுப்பாடு அன்றாட அனுசரிப்பிற்குரியனதாக ஆஸ்ரமத்தில் ஆக்கப்பட்டன. பிப்ரவரி 1916ல் நடந்த பனாரஸ் இந்து பல்கலை துவக்க விழாவில் கவர்னர் ஜெனரல் ஹார்டிங்கே உட்பட சமஸ்தானாதிபதிகள் எல்லோரும் பங்கேற்றிருந்தனர். காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார். உரையும் ஆற்றினார். மகாராஜா ஒருவர் வறுமை குறித்து உரையாற்றியதை குறிப்பிட்ட காந்தி இந்த விழாவில் வைஸ்ராய் பங்கேற்றுள்ளார். மாலை மாலையாய் நகைகள் அணிந்த ராஜாக்களைப் பார்க்கிறேன். இந்த அலங்கார ஆபரணங்களை நீங்கள் விட்டொழிக்காமல் இந்தியாவிற்கு விடிவு ஏது. அவைகளை நாட்டுமக்களுக்கான டிரஸ்ட் ஆக மாற்றுங்கள் என பேசினார். அவரது உரைகேட்டு அவை அதிர்ந்தது. அய்யாமார்களே உங்கள் பகுதியில் நகரம் ஒன்று பெரும் கட்டடங்களுடன் எழுகிறது என்றால் அவை விவசாயிகளிடமிருந்து நீங்கள் பெற்ற பணமாகவே இருக்கும். நமது முன்னேற்றம் விவசாயம் சார்ந்தே இருக்கும். இங்கு வக்கீலோ டாக்டர்களோ, நிலச்சுவான்தாரர்களோ அதைக்கொணரமுடியாது. மேற்கண்ட அவரது உரையின் சாரம் ஒன்றை நமக்கு புலப்படுத்தும். ஏழை எளிய உழைப்பாளர்களை உணர்ந்து அதைப்போல் வாழ முயற்சித்த ஒருவரின் உள்ளத்திலிருந்துதான் இவ்வுரை வரமுடியும். ஆனால் அவர் பாதியில் நிறுத்தப்பட்டார். அவரது உரை பலருக்கு அசெளகரியங்களை உருவாக்கியது. உயர் அதிகாரதட்டும் பெரும் சமஸ்தான பணக்காரர்களும் இருந்த அவையில் எழுந்த சோசலிசக் குரல் என இதை நாம் புரிந்துகொள்ளலாம். சென்னையில் மிஷினரிகளின் மாநாடு ஒன்றில் அவர் உரையாற்றும்போது அந்நிய மொழி மூலம் படித்துவிட்டு வந்துள்ள மத்தியதரவர்க்கத்தின் அலட்சிய மனப்பான்மையை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மக்களிடம் செல்லமுடியாதவர்களுக்கான தடையை எடுத்துச் சொன்னார்.. ஆங்கில அதிகாரிகளைப்போலவே இந்திய படித்ததட்டினரும் மக்களால் பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டால். அவர்களை நாம் சென்றடையமுடியாது. அவர்களது விருப்பங்கள் நம்மை எட்டாது என்பதை உணர்த்தினார். 1917ல் ராஜ்குமார் சுக்லா எனும் பீகார் விவசாயியின் வற்புறுத்தலால்தான் சம்பரான் அவுரி சாகுபடி எதிர்த்த போராட்டத்தில் தன்னை காந்தி ஒப்புக்கொடுத்தார். ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டவர்களின் துணையுடன் அவர் அக்குடிசைவாழ் மக்களை சந்தித்தும், தோட்ட அதிபர்களை சந்தித்தும் உண்மைநிலையை அறிகிறார். வெளியே கோடையின் சுட்டெரிக்கும் சூரியனை விட அவ்விவசாயிகளின் துன்பத்தை துடைத்தெறியவேண்டும் என்கிற கடமைத்தீ அவரிடம் அதிகமாக இருந்தது என பிரசாத் இப்போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். பொது அமைதியை காரணமாகக் காட்டி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் வெளியேறவேண்டிய தடை உத்தரவை காந்திக்கு பிறப்பித்தார். மனிதாபிமான சேவைக்கே 144 தடையை மீறி தான் வந்திருப்பதாக காந்தியின் மறுமொழி அமைந்தது. “காந்தி கிராமங்களுக்கு செல்கிறார். அம்மக்களின் குறைகளை தன் முன்வைக்க வேண்டுகிறார். சோர்ந்து அறியாமையில் உழழும் மக்களிடம் புதிய நம்பிக்கையை அவர் விதைத்து வருகிறார்”என ஏப்ரல் 29 1917ல் மாஜிஸ்ட்ரேட்டிற்கு பெட்டையா எனும் அப்பகுதியின் அரசாங்க அதிகாரி லூயிஸ் எழுதினார். வெளிப்படையாக இரகசியம் ஏதுமின்றி காந்தி மக்கள் குறைகளை தீர்த்திட எடுத்துவந்த நடவடிக்கைக்கு பலன் கிட்டாமல் போகவில்லை. அரசாங்கம் இறுதியில் கோரிக்கையை ஏற்று அவுரி சாகுபடி எனும் துயரிலிருந்து விவசாயிகளை விடுவிக்கவேண்டியதாயிற்று. பீகாரில் அவர் பார்த்த கிராமங்கள் புழுதிபடிந்து அழுக்காக இருந்தன. கிணற்றை சுற்றி சேறும் சகதியும் இருந்தது. தோல் வியாதியால் பலர் பீடிக்கப்பட்டிருந்தனர். கஸ்தூர்பாய் துணையுடன் அங்குள்ள பெண்கள் நிலையையும் காந்தி அறிந்தார். ஒற்றை சேலையுடன் இரு தமக்கைகள் இருக்கும் நிலைக்கூட உணரப்பட்டது. மாற்று சேலை இருந்தால் குளித்து சுத்தமாக இருக்கலாம் என காந்தியிடம் சொல்லுங்கள் எனக்கூட பதில் கிடைத்தது. ஆலைப்பாட்டாளிகள் புரட்சியின் ‘வான்கார்ட்’ என புரட்சிகரவாதிகள் பேசிக்கொண்டிருந்தபோது 7 லட்சம் கிராமங்களின் விடுதலையில் புரட்சி அமர்ந்திருப்பதாக காந்தியின் எண்ண ஓட்டம் இருந்தது. அவரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட அகமாதாபாத் மில் வேலைநிறுத்தமானாலும் கேதா விவசாயிகள் போராட்டமானாலும் அழைக்கப்பட்டே பின்னரே அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மில்தொழிலாளர் பிரச்னையை அனுசுயாபென் காந்தியிடம் கொணர்ந்தார். அனுசுயாபென் சகோதரர் அம்பாலால் சாரபாய் மில் அதிபர்களிடம் செல்வாக்கு நிரம்பியவர். அவரும் காந்தியை தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டினார். பம்பாய் மாவட்ட ஆட்சியரும் காந்தியின் வாயால் பிரச்னையை அறிந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார்.. காந்தி முழுமையாக பிரச்னையை புரிந்துகொள்வதற்காக தொழிலாளர்களிடமும் முதலாளிகளிடமும் விவாதித்து தகவல்களைப் பெற்றார். தொழிலாளர் வேலையை நிறுத்திவிட்டால் உலகம் நின்றுபோகும் - தொழிலாளர் ஒற்றுமையுடன் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். தொழிலாளர் விரும்பும் 35 சத உயர்வை பெறும்வரை உண்ணாநோன்பு என காந்தி அறிவித்தார். இனி நீங்கள் தலையிடமாட்டீர்கள் என்றால் இப்போது 35 சதம் தரத்தயார் என்கிற செய்திகூட காந்திக்கு தரப்பட்டது. ஆனால் காந்தி அதை ஏற்க மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்து நடுவர் தீர்ப்பு ஒன்றின் மூலம் தீர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1961ல் மிஸ்டர் காந்தி என்கிற புத்தகம் எழுதிய ரஞ்சி சஹானி “காந்தி மறையவில்லை - நமது யுகத்தின் ஆன்மீக சூழலில் அவர் நிறைந்து நிற்கிறார்”என எழுதினார். மார்க்சிய வகைப்பட்டு காந்தி வர்க்கப்போராளியல்ல. ஆனால் பாட்டாளிவர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர் காந்தி என ராஞ்சி பதிவிட்டுள்ளார். 1917ல் நடந்த சோவியத் அக்டோபர் புரட்சி இந்தியாவிலும் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. AITUC பிறப்பதற்கு முன்பாக மதராசில் பெரம்பூர் தொழிலாளர் மத்தியில் பேசிய திலகர் டிசம்பர் 23, 1919 இனி வரும்காலத்தில் தொழிலாளர் அமைப்புகள் வளரும்- ஆட்சிக்கு கூட தொழிலாளர் வருவர் எனப் பேசி சென்றார். நேரு உட்பட பலர் சோவியத் பெருமிதங்களில் சிந்தையை மனதை செலுத்தினர். இங்கிருந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் மற்றும் புரட்சிகர சக்திகள் மீது ருஷ்ய புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர்களுக்கு பிரிட்டிஷை தூக்கியெறிவது என்பதுடன் மட்டுமில்லாமல் இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டலையும் ஒழிக்கவேண்டும் என்கிற கடமையை அப்புரட்சி கொடுத்துள்ளதாக கருதி இங்கு கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்துவங்கியது. தொழிற்சங்கம் அமைத்தல், வேலைநிறுத்தம் என்கிற பணிகளில் கம்யூனிஸ்ட்கள் தீவிரம் காட்டினர். காந்தியைப்பொறுத்தவரை அவர் மார்க்சியவகைப்பட்ட சோசலிச கருத்தாக்கப்படி அப்போது தன் அனுபவங்களை அமைத்துக்கொள்ளவில்லை. அவருடைய தென்னாப்பிரிக்கா அனுபவமானாலும், இந்தியா வந்தபின்னர் அவர் மேற்கொண்ட சம்பரான் போராட்டம், கேதா சத்தியாகிரகம், அகமதாபாத் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் எதுவும் சோவியத் புரட்சியின் தாக்கத்தாலோ அல்லது மார்க்சிய கருதுகோள்களின் தாக்கத்தாலோ நடத்தப்பட்டவையல்ல. பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்த பல இந்தியர்கள் கிராமப்புற விவசாயம் சார்ந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை காந்தியும் அறிந்தே இருந்தார். லெனினைப்பொறுத்தவரை முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்கிற ‘மார்க்சிய வரையறை’ இருந்தது. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருதுகோளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்நிய மேலாதிக்கத்திலிருந்து தேசவிடுதலை, தேசங்களின் சுயநிர்ணய உரிமை போன்ற கருத்தாக்கங்களும் லெனினிசம் பெயரில் வலுவாக சொல்லப்பட்டன. நீதிமன்றவாதத்தில் கூட மார்ச் 18 1922ல் காந்தி பிரிட்டிஷ் ஆட்சி ஒழிப்பு என்பது நோக்கமில்லை என்றார். ஆட்சியாளர் செய்கின்ற தவறுகளை எதிர்த்தே நிற்பதாக சொன்னார். தென்னாப்பிரிக்காவிலும் ஆட்சியாளர் எதிர்த்த போராட்டங்களை அவர் நடத்தியிருந்தாலும் ஆட்சிக் கவிழ்ப்பு என்கிற திசையில் பயணப்பட்டதில்லை. பலநேரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டதையே பார்க்கமுடியும். பிரிட்டிஷ் ஒத்துழைப்பு என்பதிலிருந்து கடுமையான விமர்சகராக காந்தியும் செயல்படலானார். ரெளலட் சட்டம்- ஜாலியன்வாலாபாக் படுகொலை, கிலாபத் நேரத்தில் காந்தி இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்தார். சாத்தான் ஆட்சிமுறை என்கிற விமர்சனம் அவரிடமிருந்தது. ஆகஸ்ட் 1 1920ல் அவர் வைஸ்ராய் செம்ஸ்போர்டிற்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்து ‘cruelty and inhumanity almost unparelled in modern times’ என்ற தன் பார்வையை வெளிப்படுத்தினார். கிலாபத் பற்றி பேசும்போது நியாயமற்ற, தவறுக்கு மேல் தவறு செய்யும் மனசாட்சியற்ற அரசாங்கம்- இப்படிப்பட்ட அரசாங்கத்தின் மீது மரியாதையோ பற்றோ எப்படி வைக்கமுடியும் என வினவினார். அதேபோல் நீதிவிசாரணயிலும் “இங்கு நீதி சட்டம் என்பதெல்லாம் சுரண்டல்காரர்களுக்கு சேவகம் செய்யத்தான் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சேவையை செய்வதால் சட்ட நிர்வாகம் தெரிந்தோ தெரியாமலோ வேசித்தனமாகிவிடுகிறது”என்கிற சுடும் சொற்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகள் எந்த புரட்சிகரவாதிகளின் நெஞ்சுரத்திற்கு சற்றும் இளைத்தவையல்ல என்பதை கூர்ந்து அவதானித்தால் ஏற்கமுடியும். அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தில் கல்விக்கூடங்கள், சட்டமன்ற கவுன்சில்கள், நீதிமன்றங்கள் என்கிற மூன்று பகிஷ்கரிப்புகள் முன்மொழியப்பட்டு நடந்தேறின. இந்த புறக்கணிப்புகள் பிரிட்டிஷ் நிர்வாக முறையின் செயல்பாட்டிற்கான சவால்களாக அமைந்தன. தீமையுடன் ஒத்துழைப்பின்மை என்பது அவரால் கடமை என போதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்நியத்துணி பகிஷ்காரம் என்றால் பிரிட்டிஷை புறக்கணித்து ஜப்பான் துணி அணிவதாகாது என்கிற விளக்கமும் அவரால் கொடுக்கப்பட்டது. “விடுதலைக்கும் அப்பால் என்பது எனது தாகம்- இலக்கு. இந்தியா மூலம் பூமிப்பந்தில் பிரிட்டிஷ் போன்ற சுரண்டல்காரர்களிடம் மிதிப்பட்டுக் கிடக்கும் நலிந்தவர்களின் துயர்போக்கமுடியும் என்கிற நம்பிக்கையை தருவதே என் இலக்கு”என காந்தி உணர்த்த முயன்றார். லெனின் போல அவர் ஏகாதிபத்தியம் என்பது குறித்து கோட்பாட்டுருவம் ஏதும் தராமல் இருந்திருக்கலாம். இந்த வரிகளில் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நாம் உள்வாங்கிக்கொள்ள இயலும். . அமிர்தசரஸ் காங்கிரஸ் (1919) திலகர் போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதும் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ போன்ற முழக்கங்களை காணத்துவங்கியது. அவர் மக்களுடன் - அவர்களின் ஒருவராக கரையத்துவங்கியதை காட்சிகள் காட்டின. தாகூர் மனதின் சித்திரமாக ரொமெயின் ரோலந்த் இதை சரியாகத் தருகிறார். “இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார். அவர்களைப் போல் உடையணிந்தார். அவர்களின் மொழியில் உரையாடினார். அவர் உண்மையாக இருந்தார். மக்கள் அளித்த மகாத்மா என்பது அவரின் உண்மைப் பெயர் ஆயிற்று. இப்படி மக்களுடன் இரண்டறக் கலந்தவர் வேறு எவர்? இந்த மக்கள்தாம் தனது தசை- இரத்த நாளங்கள் என அவரைவிட உணர்ந்தவர் வேறு எவர்”என தாகூர் மொழிந்ததை ரொமெயின் ரோலந்த் தருகிறார். பலவீனமானவர்களையும் ஆதரவற்றவர்களையும் பாதுகாக்காமல் சுயராஜ்யம் என பேசுவது கவைக்கு உதவாது என்றார் காந்தி (ஏப்ரல் 14, 1921). எனது சுயராஜ்யம் ‘பங்கிகள்’ போன்ற பலவீனமான பகுதியினரிடம் கவனம் கொள்வது என்றார் (ஜனவரி 8 1925). ஆரம்ப ஆண்டுகளிலேயே அவரால் பொருளாதார சமூகநீதியை நீக்கி சுயராஜ்யம் என்பதை பார்க்கமுடியவில்லை என்பது இக்கூற்றுகள் தரும் எளிய உண்மையாகும். தாகூர், ஆண்ட்ரூஸ் ஆகியவர்களுக்கு காந்தி வலியுறுத்திய காதி, ராட்டை என்பதில் முழு ஏற்பு இல்லை. காந்தியோ இந்த நாட்டின் வறுமை பீடித்த மக்களுக்கு பொருளாதார விடிவாக அதைக் கண்டார். தாகூரின் call of Truth க்கு மறுமொழி எழுதிய காந்தி பசிதான் ராட்டை நோக்கிய இயக்கத்திற்கான காரணம். இலட்சக்கணக்கான மக்களை வேலையில் ஈடுபடுத்துவதில் , சோம்பலிருந்து விடுவிப்பதில்தான் சுயராஜ்யம் தன் அர்த்தத்தைப் பெறும் என்றார். காந்தி உடல் உழைப்பு என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்தார் என்பதை அறிவோம். கோடிக்கணக்கான வறுமையின் பிடியில் இருக்கும் மக்களை உழைப்புத்தான் விடுவிக்கும். வழியின்றி சோம்பிக்கிடப்பதிலிருந்து விடுபடுதல், வழிகண்டு உழைத்தல் என்பதை பேசாத ஒன்றை அவர் சுயராஜ்யம் என ஏற்கவில்லை. சுயராஜ்யம் என்பதை சோம்பி சும்மா கிடத்தலிருந்து உழைப்பு என்கிற புரிதலை நோக்கி அழைத்து சென்றார். காங்கிரசை மக்கள்மயப்படுத்துவது - அமைப்பிற்கும் மக்களுக்கும் நெருக்கத்தை உருவாக்குவது என்பதை அவர் கடமையாக்கிக்கொண்டார்- காங்கிரஸ் அமைப்பை ‘class organ to mass organ’ என்றாக்கியதில் அவருக்கு அளப்பரிய பங்கிருந்தது. காந்தியின் பிரிட்டிஷ் நண்பர் ஹொரேஸ் அலெக்சாண்டர் தனது பதிவில் இதை சரியாகச் சொல்கிறார். He had constantly in mind the economic needs of the half starved Indian Villagers ; he cared far more about them than about any political issue, even the issue of independence. கோடிக்கணக்கான அரைப்பட்டினி மக்களின் பொருளாதார தேவைகள் குறித்து அவரது மனதில் இடைவிடாத எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அரசியல் பிரச்னை- விடுதலை என்கிற அம்சங்களையெல்லாம்விட இவ்வெண்ணத்தில் அவர் அழுந்தியிருந்தார். சாந்திநிகேதன் சார்ந்த மாணவர் ராமச்சந்திரனிடம் (அக்டோபர் 21 1924ல்) காந்தி தன்னை I am a socilaist என அழைத்துக்கொண்டதை பார்க்கிறோம். முன்னதாக செப்டம்பரில் ‘சோவியத் அரசியல் அமைப்பு கான்ஸ்டியூசன்’ பற்றி நேர்மறையாகவே அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தசட்டங்களின் சாரம் பணம் சம்பாதிப்பதை மய்யமாக வைத்துக்கொள்ளவில்லை. நிலவுடைமை இல்லை, கல்விகூட அடுத்துதான். ஆனால் அங்கு உழைப்பு என்பதுதான் முதல் தகுதிப்பாடாக இருக்கிறது. சரியான உழைப்பை ஒவ்வொருவரும் நல்கவேண்டும் என்பதில்தான் அமைப்புச் சட்டத்தின் தகுதிப்பாடு இருக்கிறது என காந்தியார் தனது புரிதலை எடுத்துச் சொன்னார். எந்த அம்சத்தில் சோவியத் சட்டத்தால் அவர் ஈர்க்கப்பட்டார் என்பது நமக்கு விளங்கிவிடுகிறது- அது உடல் உழைப்பு. சோசலிச சிந்தனைகள் பரவத்துவங்கிய பத்தாண்டாக 1929-38யை சொல்லலாம். இந்திய தேசிய காங்கிரசிற்கு இரு இடதுசாரி அடையாளங்களாக பார்க்கப்பட்ட நேருவும் நேதாஜியும் தலைமைபொறுப்பை எடுத்தக்காலமும் இந்த பத்தாண்டில்தான். காங்கிரஸ் கராச்சியில் கூடி அடிப்படை உரிமைகள், பொருளாதாரகொள்கைகள் பற்றி தீர்மானங்களை இயற்றிய காலம். காங்கிரசிற்குள் மார்க்சிய தாக்கம்கொண்ட ஆச்சார்யா நரேந்திரதேவ், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் சோசலிச கட்சியை துவங்கிய காலம். காந்தியும் இப்படிப்பட்ட சோசலிஸ்ட்களுடன் தன் விவாதங்களை அவ்வப்போது மேற்கொண்டார். வன்முறையற்ற வழி என்பதை வலியுறுத்தி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்களுள் நேரு, நேதாஜி ஆகியவர்களை நீக்கிப்பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார் என்பதை பார்க்கமுடியும். மீரத் சதி வழக்கு, லாகூர் சதிவழக்கு என்பதில் எல்லாம் கூட குண்டுவீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத்தோழர்கள்பாற் கரிசனத்தைக் காட்டியவராகவே காந்தி இருந்தார். இந்த அம்சத்தை நாம் புரிந்துகொள்ளாமல் ‘miss’ செய்துவிடக்கூடாது. நேருவை அவர் விமர்சித்திருந்தாலும் இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என தலைவர் பதவிக்கு அவரை கொணர்ந்தார். காந்தி மிக எளிமையான 11 அம்சங்களை சுட்டிக்காட்டி போராடுவதாக அறிவித்தார். நிலவருவாய் பெறுவதை 50 சதம் குறைத்தல், உப்புவரி நீக்குதல், இராணுவசெலவை 50 சதம் குறைத்தல், சிவில் சர்வீஸ் ஊதியத்தை 50 சதம் குறைத்தல் போன்றவற்றை அவர் பட்டியலிட்டார். பிப்ரவரி 6 1930ல் காந்தி யங் இந்தியாவில் எழுதினார். “இந்திய போராட்டவடிவமாக நாம் அகிம்சையை கொண்டுபோவதில் பெருந்தடையாக இருப்பது பணம்படைத்த வர்க்கத்தினர் - நிலப்பிரபுக்கள், ஆலைமுதலாளிகள் ஆகியவர்களின் சொந்தநலன்களுக்கான செயல்பாடுதான். பலநேரங்களில் பிரிட்டிஷ் ஏஜெண்ட்களாக தாங்கள் செயல்படுகிறோம்- சொந்த மக்களின் இரத்தம் குடித்து வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.” மேற்கண்ட வாக்கியங்கள் எந்த இடதுசாரித்தலைமையின் வார்த்தைகளுக்கும் குறைவான ஒன்றல்ல. அவர்கள் பேசுவதைவிட வீச்சும் வலிமையும் கொண்ட எழுத்தாகவே அந்த நேரத்தில் காந்தியின் எழுத்து இருந்திருக்கும் - பணம்படைத்தவர்களால் உணரப்பட்டிருக்கும். வைஸ்ராய்க்கு மார்ச் 2 1930ல் எழுதிய கடிதத்தில் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் பயன்படுத்தும் ‘உப்புக்கும் வரி’ போட்டு சுரண்டுவதை விமர்சித்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி கோடிக்கணக்கான மக்களை வறுமைக்குள்ளாக்கிவிட்டது. தங்களது செலவு மிகுந்த ராணுவ மற்றும் நிர்வாக ஏற்பாடுகளால் இந்த சுரண்டலை அதிகப்படுத்திவருகிறது. இதை இந்த நாடு தாங்காது என எழுதியிருந்தார். அவரின் அஞ்சாமை பிரமிக்கதகுந்தது. “உங்கள் ஊதியம் மாதம் ரூ 21000. தவிரவும் இதர படிகள் வேறு. தினம் ரூ 700 பெறுகிறீர்கள். இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ 180 வீதம் மாதம் ரூ 5400 பெறுகிறார்.. இவ்வளவு சம்பளம் தங்களுக்கு தேவைப்படாது. ஆனால் இந்த ‘சிஸ்டம்’ அப்படித்தருகிறது. இதை ஒழிக்கவேண்டும்”என்று அவர் வைஸ்ராய்க்கு எழுதினார். காந்தி ஏன் உப்பு என்பதை இவ்வளவு பெரிய விஷயமாக பேசுகிறார் என்பது புதிராக பலருக்கு தெரிந்தது. அவர் புத்தியுடன் இயங்குகிறாரா என்கிற பேச்சும் அடிபட்டது. எதையும் பொருட்படுத்தாமல் உப்பு சத்தியாகிரக யாத்திரை ஏப்ரல் 6 1930 ல் துவக்கப்பட்டது. இது சம்பந்தமான ராஜேந்திர பிரசாத் அவர்களின் பதிவு இப்படித்தான் இருந்தது. “காந்தி எங்கள் முன்னால் செயற்குழுவில் இந்த ஆலோசனையை வைத்தபோது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடற்புரம் தாண்டி வாழக்கூடிய மக்களை இப்போராட்டம் ஈர்க்காது என நம்பினோம். அவர்கள் அனைவரும் வர்த்தகர்களிடமிருந்து உப்பை வாங்கக்கூடியவர்கள். ஆனால் தன் செயல் திட்டத்தில் காந்தி உறுதியாக நின்றார். தடையை மீறுவோம் என்றார். அப்போராட்டம் மக்களை எப்படி கவ்விப் பிடித்து பெரும் வெற்றியைக் கண்டது என வரலாற்றில் காண்கிறோம்.” இதை நேரு வியந்து எழுதினார். அந்த மனிதர்க்குத்தான் எவ்வளவு அபூர்வ ஆற்றல் என்றார். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் காந்தி அப்போராட்டம் நடத்தியதைத்தான் நேரு புகழ்ந்தார். கராச்சியில் காந்தி நேரு கலந்துபேசி வெளியிடப்பட்ட தீர்மானத்தில் கீழ்கண்ட வாசகம் இடம் பெற்றது. “Inorder to end the exploitation of the masses, political freedom must include real economic freedom of the starving millions” சுரண்டலை முடிவிற்கு கொணர அரசியல் சுதந்திரம் தன்னகத்தே பொருளாதார சுதந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் அந்த இரு தலைவர்களும் சேர்ந்து உணர்ந்து பிறருக்கும் உணர்த்தினர். தொழிலாளர்க்கு வாழ்க்கை ஊதியம் ‘living wage’ , ஆரோக்கிய பணியிட சூழல், முதிய காலத்தில் பாதுகாப்பு, அடிமை உழைப்பு ஒழித்தல், பெண் தொழிலாளர் பாதுகாப்பு, தொழிற்சங்கம் அமைக்க உரிமை என்பனவெல்லாம் கராச்சியில் பேசப்பட்டது. நிலவரி குறைப்பு உள்ளிட்ட விவசாயிகளுக்கு துணையான தீர்மானமும் வந்தது. வரிவிதிப்பில் பெறும் வருவாய்க்கு ஏற்ப, அரசாங்க ஊழியர்களின் வருவாயை குறைத்தல் உள்ளிட்டவையும் பேசப்பட்டிருந்தது. காந்தியடிகள் பேசும்போது சுயராஜ்யம் பெற்றபின் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை உலகோர் இத்தீர்மானங்கள் மூலம் அறியமுடியும் என்றார். கராச்சி தீர்மானங்கள் அசமத்துவம் நீக்கும் நோக்கோடு உழைப்பவர்க்கான நியாயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் பேசியதை நாம் பார்க்கமுடிகிறது. அது உலகோர் கவனத்திற்கும் சொல்லப்பட்ட ஒன்று என்பதையும் பார்க்கிறோம். இவற்றில் பெரும்பான்மையான அம்சங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் வழிகாட்டும் கோட்பாடுகள் பகுதியில் சேர்க்கப்பட்டதை நம்மால் பார்க்க முடியும். கராச்சியில் நேருவும் காந்தியும் ஒன்றுபட்டு கொணர்ந்த தீர்மானம் உருவெடுத்ததைப் பற்றி நேரு பதிவு செய்துள்ளார். கராச்சிக்கு பொருளாதார கொள்கை பற்றிய வரைவுடன் காந்தி வரச்சொன்னார். அவர் பல திருத்தங்கள் தந்து பின்னர் இறுதிவடிவத்திற்கு ஒப்புதல் தந்தார் என்பது நேருவின் பதிவாக இருக்கிறது. மக்களின் ஆவேசத்தை மாற்றி கவனத்தை திருப்ப செய்திட்ட ஏமாற்று என இத்தீர்மானங்கள் குறித்து விமர்சனங்கள் வராமல் இல்லை. காந்தியை கவனிப்பவர் எவருக்கும் அப்படிப்பட்ட ஏமாற்று எதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்- பிறரையும் ஏமாற்ற விழையார் என்பது தெரியும். ராய்ட்டர் நிருபர் வட்டமேஜை மாநாட்டு தருணத்தில் அவரிடம் பேட்டிக்கு வந்தபோது காந்தி இந்தியாவின் ஏழைகள் தங்கள் குரலை உயர்த்தி சொல்ல முடியும் என்கிற இந்தியாதான் தனது விழைவு - அதற்காகவே பாடுபடுவதாக குறிப்பிட்டார். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு அனுசரிக்காத சகல வகுப்பாரும் இணக்கமாக வாழத்தகுந்த இந்தியாவிற்கு தன் முயற்சிகள் அனைத்தும் இருக்கும் என்றார். அமையப்போகும் தேசிய அரசாங்கத்திற்கு நீண்ட கால கடமைகள் இருக்கும் என்பதைப் பற்றி காந்தியடிகள் நவம்பர் 19 1931 ல் பேசினார். இந்தியாவில் முதலாளிகள் நிலபிரபுக்கள் பின்னர் விஞ்ஞானரீதியாக பிரிட்டிஷார் ஆகியோரால் ஒடுக்கப்பட்டு அமிழ்ந்துபோய் கிடக்கும் அடித்தட்டு மக்களை உய்விக்கும் சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டார். வேறு கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு அவர் பதிலளித்திருந்தார். இந்த நாட்டில் ஏற்கனவே பணம்படைத்தவர், நிலப்பிரபுக்கள், ஜமீன்கள் வாழ்க்கையின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவருகிறார்கள். இதுகாறும் ஒடுக்கப்பட்டுள்ள, புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேசிய அரசாங்கம் செயல்படவேண்டும். இதற்கு மேற்சொன்னவர்களின் உதவியும் தேவைப்படும். பிரிட்டிஷாருக்கும் அரசு வேலைகளுக்கும் சேவகம் செய்து சிலர் நிலங்களை, உடைமை பெற்று சலுகை பெற்றவர்களாக மாறியிருக்கலாம். அவர்கள் உடைமையிழப்பிற்கு உள்ளாக செய்வதே என்னிடம் அரசாங்க அதிகாரம் வந்தால் செய்யக்கூடியதாக இருக்கும் என்பது அவரது பதிலாக இருந்தது. தேச நலன்கள் கருதி சில தனியார் உடைமைகள் பொதுவாக மாற்றப்பட்டால் அது அவசியம் என்றே கருதப்பட வேண்டும். டெல்லியில் இருந்த பல பெரும் பங்களாக்களை லட்சக்கணக்கானவர்க்கு பயன்படுத்ததக்க மருத்துவமனைகளாக மாற்றலாம் என்றார் காந்தி. அப்படி செய்யும்போது இழப்பீட்டுத்தொகை கொடுக்கவேண்டியதும் இல்லை என்றார். இவைபோன்ற கருத்துக்களை அவர் உதிர்க்கும்போது சோவியத்தின் சில நடைமுறைகளை அவர் தன் வழியில் அமுலாக்க நினைத்துள்ளார் என கருத இடமுண்டு. லண்டனில் இருந்தபோது லங்காஷயர் மில் தொழிலாளர்களை அவர் சந்தித்தார். காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பொதுபுத்தியில் இருந்தது. அனைத்தையும் மீறி அவர்களுடன் காந்தியால் உரையாட முடிந்தது. நீங்கள் 30 லட்சம்பேர் வேலையில்லாமல் இருக்கின்ற நிலைமையை சொல்கிறீர்கள்- எங்கள் நாட்டில் 30 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். வேலையில்லாவிட்டாலும் உங்களுக்கு 70 ஷில்லிங் வருவாய் கொடுக்கிறார்கள். இந்தியாவில் 7 ஷில்லிங் கூட கிடைப்பதில்லை. உங்கள் துயரிலும் எங்களை ஒப்பிடும்போது நீங்கள் சற்று மேம்பட்டு இருப்பதை உணர்வீர்கள் என அவர்களிடம் பக்குவமாக காந்தி விளக்கினார். இப்படி தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கருதிய தொழிலாளிகளை நேரில் பார்த்து அவர்கள் ஏற்கும் வண்ணம் உரையாடும் உண்மை உள்ளம், தெளிந்த பார்வை கற்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில் பொதுவாக பொருளாதார மேம்பட்ட நிலை ஒன்றே அவர்களின் சமூக அந்தஸ்தை குறிப்பதாக இருந்தது. அங்கு நம்மைப் போன்ற சாதி சமூக வேறுபாடுகள் இல்லை. பொருளாதார சமத்துவம் ஏற்படுத்திவிட்டால் அது சோசலிச திசைவழி எனவும் பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. இங்கோ சமத்துவ சமுதாயம் என்பது பொருளாதாரக் காரணியை மட்டும் கொண்டில்லாமல் ஏற்றத்தாழ்வு படிநிலை தன்மைகொண்ட சாதி முறையிலிருந்து அடிநிலையில் இருப்போரை சமூகரீதியாக உயர்த்தும் பெரும் பிரச்னையாகவும் இருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசத்தில் அடிமையானவன் சரியானவற்றைக் கூட செயலாற்ற இயலாதவனாக இருக்கிறான். பஞ்சமர் பிரச்னை மிக முக்கியமானதென்றாலும் பெரும் போராட்டத்தில் அதுவும் உள்ளடக்கம் என்கிற பொதுக்கருத்தையும் காந்தி ’யங் இந்தியா’வில் குறிப்பிட்டார் . தீண்டாமை என்பதை அனுமதித்த வகையில் இந்துமதம் பெரும் பாவத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதை அவர் பலமுறை எடுத்து சொன்னார். ‘vicious excrescence upon Hinduism’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து மதத்திற்கு மாபெரும் வெட்கக்கேடு என வருத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் வட்டமேஜையில் தனி வாக்காளர் தொகுதி என்பதை அவர் நிராகரித்தார். இந்தியாவில் இந்து சமூகம் மத்தியில் ஏற்படவேண்டிய ‘ஒருங்கிணைப்பு ஒற்றுமை உள்ளிழுத்துக் கொள்தல்’ என்பதற்கு அது தடையாக இருக்கும் எனக் கருதினார். “I would not sell the vital interests of the untouchables for the sake of winning freedom of India”என்று மாநாட்டில் தன் நிலைப்பாட்டை வைத்தார். இந்தியாவின் தீண்டப்படாதவர்களின் நலன்களை காவுகொடுத்து சுதந்திரம் என்பதில் ஏற்பில்லை என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. இங்கிலாந்தின் பிரதமர் காந்தியின் கருத்துக்களை ஏற்காமல் கொடுத்த அவார்ட் எதிர்த்து காந்தி தன் உண்ணாநோன்பை செப்டம்பர் 20 1932ல் துவங்கினார். அப்போது அவர் தான் எதற்கு நிற்கிறேன் என்பதை சில வரிகள் மூலம் தெளிவுபடுத்தினார். “நான் விரும்புவது, எதற்கு வாழ்கிறனோ அது, எதற்காக உவப்புடன் என் உயிரைவிடவும் தயாராக இருப்பேனோ அது வேரடி மண்ணுடன் தீண்டாமை ஒழிப்பு என்பதுதான்.” இந்து தலைவர்கள் என அறியப்பட்டவர்களும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும் தொடர்ந்து விவாதித்து, இறுதியில் அம்பேத்கர் சம்மதத்துடன் புனே எரவாடா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதை பிரிட்டிஷ் அரசும் ஏற்றபின்னர் காந்தி தன் உண்ணாநோன்பை செப்டம்பர் 26 1932 அன்று கைவிட்டார். எரவாடா சிறையிலிருந்து ஹரிஜன மேம்பாட்டு வேலைகளை செய்யத் தடையேதும் இருக்கக்கூடாது என்பதையும் சிறை அதிகாரிகளிடம் உறுதிமொழியாகப் பெற்றார். இந்து தலைவர்கள் பம்பாய் மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றியதையும் நாம் பார்க்கமுடிகிறது. “This conference resolves that henceforth amongst Hindus, no one shall be regarded as an untouchable by reason of his birth, and those who have been so regarded hitherto will have the same rights as other Hindus, in regard to the use of public wells, schools, roads and other public institutions. This right will have statutory recognition at the first opportunity and shall be one of the earliest acts of the swaraj parliament..”. பிப்ரவரி 1936ல் அவர் எரவாடாவிலிருந்தே ஹரிஜன சேவா சங்கத்தையும் ஹரிஜன் என்கிற வாரந்தரியையும் துவக்கினார். மே 8 1933லிருந்து 21 நாட்கள் உண்ணாநோன்பு என காந்தி அறிவிக்கிறார். இந்த உண்ணாநோன்பு முற்றிலும் தாழ்த்தப்பட்டவர் பிரச்னை சார்ந்தது . கசப்பை நீக்கவும் மனங்களை தூய்மைபடுத்தவும் என்ற அறிவிப்பை செய்தார். நேரு போன்றவர்கள் சிவில் ஒத்துழையாமையை நிறுத்திவிட்டதை அதிருப்தியுடனேயே பார்த்தனர். காந்தி சொன்ன காரணங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கின்றன என்றார் நேரு. சிறையிலிருந்து வந்த காந்தி ஹரிஜன மேம்பாட்டு யாத்திரையை துவக்கினார். காங்கிரஸ் சோசலிச கட்சி உருவானபோது காந்தி வரவேற்றார். அந்த குழு வளரட்டும், செல்வாக்கு செலுத்தட்டும் என்றார். செப்டம்பர் 17, 1934ல் அவர்கள் குறித்த தனது பார்வையை தெளிவாக முன்வைத்தார். “சோசலிச குரூப் உருவானதை நான் வரவேற்கிறேன். உடன் பணியாற்றும் அவர்களில் பலர் மரியாதைக்குரிய தியாகங்கள் செய்திட்ட தோழர்கள். அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட திட்டம் குறித்த வெளியீட்டில் எனக்கு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. நான் எவ்வகையிலும் செல்வாக்கு செலுத்தி அவர்தம் கருத்துக்கள் பரவாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கமாட்டேன். எனக்கு எவ்வளவுதான் உவப்பில்லாத கருத்தாக இருந்தாலும் அவர்களின் கருத்து சுதந்திர உரிமையில் எனது தலையீடு இருக்காது” இங்கு சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் உரிமை என்பதில் வால்டேர் போல் காந்தியடிகள் பேசுவதை நாம் காண்கிறோம். எனக்கு உவப்பானதாக இல்லாவிட்டாலும், அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும், சோசலிஸ்ட்களின் கருத்துக்களை ஒடுக்கவேண்டும் என கருதமாட்டேன் என்கிற அவரது அறிவிப்பை இதில் நாம் பார்க்கமுடிகிறது. அதேநேரத்தில் அவர்களின் வர்க்கப்போராட்டம், தனியார் சொத்தை பறித்தல் போன்றவை காங்கிரஸ் இயக்கத்தில் வலுப்பெற்றால் தன்னால் காங்கிரசில் தொடரமுடியாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் சோசலிஸ்ட்களிடம் விவாதித்தபோது இந்தியத் தன்மைக்கேற்ற நடைமுறை சாத்தியம்கொண்ட திட்டம் கொண்டுவாருங்கள் என ஆலோசனை நல்கினார். “I suggest your presenting the country with practical socialism in keeping with Indian conditions, instead of scientific socialism, as your programme has been called” நேரு பேசிவரும் Scientific socialism என்பதில் உடன்பாடு இல்லை என்பதையும் காந்தி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஏழு லட்சம் கிராமங்களின் முன்னேற்றம் என்பதை மய்யமாக கொண்ட சோசலிசம் என்பதையே அவர் விரும்பினார் என கிருபளானி எழுதினார். இந்தியத் தன்மையில் ஒளிரும் சமத்துவ கருத்துக்களை அவர் சோசலிசம் குறித்த மதிப்பிற்குரியவையாக பார்த்தார். சோசலிசம் என்பதை வன்முறை கலந்தோ- மார்க்சியத்திற்குமட்டுமே உரித்தான ஒன்றாக பார்க்கவேண்டியதில்லை என்பதே காந்தியின் கருத்தாக இருந்தது. அது ஈசோ உபநிடத்திலேயே தனக்கு கிடைத்தது எனவும் அவர் சொல்லிவந்தார். “Socialism was not born with the discovery of the misuse of capital by capitalists. As I have contended, socialism, even communism is explicit in the first verse of Ishopanishad” அவரின் இந்தப் பார்வையை எந்த மார்க்சியரும் எற்கமாட்டார்கள். அதேபோல் காந்தியும் மேற்குவகைப்பட்ட சோசலிச சிந்தனையை ஏன் ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். “மேற்குலகம் பேசும் சோசலிசம் மற்றும் கம்யூனிசம் நமது கருத்துருவத்திலிருந்து அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கின்றது. அவர்களது நம்பிக்கை மனிதன் அடிப்படையில் சுயநலமிக்கவன் என்பதாக இருக்கிறது. ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை. மனிதனுக்கும் கொடும் விலங்குகளுக்கும் இயல்பில் வித்தியாசம் இருக்கிறது. மனிதனால் தன் உணர்வுகளில் மேம்பட்டு உயரமுடியும். அவனால் விலங்கு இயல்பிலிருந்து விடுபட்டு சுயநலம், வன்முறை இல்லாமல் இயங்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” “என்னை நான் சோசலிஸ்ட் என்றே அழைத்துக்கொள்கிறேன். அந்தப்பதம் மிகவும் அழகானது- பிடித்தமானது. ஆனால் பல சோசலிஸ்ட்கள் உபதேசிப்பதைப் போன்ற ஒன்றை நான் சொல்லிக்கொடுக்கமாட்டேன்” அவர் சோசலிஸ்ட் என்றே அழைத்துக்கொள்வதையும் அந்த வார்த்தை மீது ஈர்ப்பு இருப்பதையும் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆனால் சோசலிஸ்ட்கள் பேசுகின்ற முறையில் அதை பரப்புரை செய்வதில்லை என அவர் சொல்வதை மேற்கண்ட பத்தி நமக்கு விளங்கச் செய்யும். ஒருமுறை பம்பாயில் தொழிலாளர் கூட்டம் பேசும்போது கம்யூனிசம் பற்றிப் பலர் பேசுகின்றனர். ஆனால் நானோ கம்யூனிச வாழ்வை நடத்துகின்றவன் என தன்னைப்பற்றி காந்திஜி குறிப்பிட்டார். “கம்யூனிசம் பேசுகிறவர்கள் அப்படி தன் வாழ்வில் நடந்து கொள்வதுபோல் எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்த இலட்சியத்திற்குரிய நடைமுறை வாழ்வை அனுசரிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன்”என்பது அவரது உரையில் தெரித்தது. கம்யூனிசம் என்பது என்ன என்கிற கேள்வியை எழுப்பி வர்க்கபேதமற்ற- வர்க்கமில்லாத சமுதாயம் அமைப்பது என்பது தானே என்கிற பதிலையும் காந்தி தருகிறார். இந்த உன்னத இலட்சியத்தில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் அதை வன்முறை வழியில் அடைவது எனப் பேசும்போது நான் அவர்களிடமிருந்து விலகிவிடுகிறேன் என தன் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். இதிலிருந்து பார்க்கும்போது சோசலிசம் - கம்யூனிசம் என்பதை வர்க்கமோதல் தத்துவம் - சிவில் யுத்தம் மூலம் அமுலாகவேண்டிய ஒன்று என்ற பொருளில் அவர் ஏற்கவில்லை என்பதை அறியமுடியும். முதலாளி- தொழிலாளி இணக்கம் என்பதையும், முதலாளிகள் மனமாற்றம்- தர்மகர்த்தாமுறை என்பதையும் அவர் பேசிவந்தார். இதை மார்க்சியவாதிகளால் ஏற்கமுடியவில்லை. காந்தியோ கீழ்கண்ட உரையாடலுக்குத்தான் அழுத்தம் தந்தார். நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் வன்முறை மூலம் மாற்றமுடியாது. அவர்களிடம் நியாய உணர்வை உருவாக்கித்தான் மாற்றம் காணவேண்டும். உங்களிடம் செல்வம் இருக்கலாம்- ஆனால் அதை உங்கள் விருப்பம் போல் உங்களது நலன் சார்ந்த செயல்களுக்காகவே செலவிடமுடியாது. அதை தர்மகர்த்தா போல் இருந்து பாவிக்க கற்கவேண்டும் என்பதுதான் அவர் தந்த அழுத்தம். இப்பார்வையை அவரின் பெரும் செல்வாக்கிற்கு இலக்காகியிருந்த சோசலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியா கூட ஏற்கவில்லை. முதலாளிகளும் சொத்து படைத்தவர்களும் அப்படியெல்லாம் மனம்மாறி திருந்த மாட்டார்கள் என சொல்லப்பட்டபோது காந்தியடிகள் தனது நம்பிக்கையை முன்வைத்தார். ஜமீன்தார்கள் செய்திடும் தீங்கை விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று சரி செய்யமுடியும். வேலை செய்ய அனைவரும் மறுத்துவிட்டால் ஜமீன்தார் என்ன செய்யமுடியும். உழைப்பாளரின் ஒற்றுமையால் முதலாளிகளிடமும்- ஜமின்களிடமும் மனமாற்றத்தைக் கொணரமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் எதன் பொருட்டும் கைவிடாமல் இருந்தார். “If the toilers intelligently combine, they will become an irresistable power. That is how I do not see the necessity of class conflict”என்ற சமாதானத்தை அவர் சொல்லிவந்தார். உற்பத்தி சாதனங்கள் தனியாரிடமா அரசிடமா என்கிற கேள்விக்கும் அவர் விடை பகர்ந்தார். அவர் தந்த பதிலில் அனைத்திலும் தேசியமயம் என்கிற சோவியத் மாதிரியை அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காணமுடியும். “I believe in the nationalisation of key and prinicipal industries as is laid down in the resoultion of Karachi congress. More than that I can not at present visualise. Nor do I want all the means of production to be nationalised.” போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் போன்ற காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை முறை ஒருவகைப்பட்ட சோசலிச சிறு சமூக குடியேற்றமாக பார்க்கப்படுகிறது. 1941ல் வெளியான நிர்மாணதிட்டத்தில் சமத்துவம் பற்றி பேசுகிறார். அகிம்சைவழிப்பட்ட சுதந்திரத்தில் சமத்துவம் என்பது அடிப்படையான திறவுகோலாக இருக்கவேண்டும். இதற்கு மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான மோதல் முடிவுறவேண்டும். செல்வம் குவிந்து கிடக்கும் சிலரை மட்டுப்படுத்தி, கோடிக்கணக்கான அரைப்பட்டினி மக்களை மேலுயர்த்தி விடவேண்டும். பணக்காரர்- ஏழை என்கிற அதல பாதாள வேறுபாடு நிலவும்வரை அகிம்சைவழி அரசாங்கம் என்பது எட்டாக்கனியாக இருக்கும். இந்த நாட்டில் பணக்காரர் அனுபவிக்கும் சலுகைகளை ஏழைகளும் அனுபவிக்கும் நாள் வரவேண்டும் என குறிப்பிட்டிருப்பதை நாம் காணமுடியும். பணக்காரர்கள் மனமுவந்து மாறாவிட்டால் நாட்டில் இரத்தக்களறி ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகலாம் என்கிற எச்சரிக்கையை அவர் விட்டுக்கொண்டிருந்தார். காந்தியடிகள் ஆகாகான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த நாட்களில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துகளுடன் லெனின் ஸ்டாலின் எழுத்துக்களையும் காந்தி படித்தார் என்கிற பதிவை ஒரிஸ்ஸா உட்கல் பல்கலை பேராசிரியர் பேணுதார் பிரதான் தருகிறார். மார்க்சின் காபிடல் நூலை வாசித்துவிட்டு என்னை வசிகரிக்கவில்லை என்ற கருத்தை மட்டுமில்லாது I would have written it better என்றும் சொல்கிறார். அப்போது அவருக்கு வயது 74 என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும். எதையும் எழுச்சிகர மனநிலையிலிருந்து அணுகாமல் தேவையை புரிந்து சாத்திய எல்லைக்குள் நின்று செயல்படும் பக்குவம் நிறைந்த வயதது. மக்களை வெகுவாக திரட்டிப் போராடிய அனுபவத்துடன் பேசுகிற வயது என நாம் பார்த்தால் காந்திக்கு எவ்வளவு திமிர் இப்படி பேசுகிறார் என நினைக்காமல் இருக்கமுடியும். மார்க்சிய எழுத்துக்களும், சோவியத் பற்றிய சில வாசிப்புகளும் அவருக்கு சோவியத் நாட்டின் மீதான கவன ஈர்ப்பை சற்று அதிகப்படுத்திய பத்தாண்டுகளாக 1938-48யை கொள்ளலாம். இரண்டாவது உலகப்போர் சமயத்தில் 1942ல் செஞ்சேனை குறித்து வந்த தகவல் ஒன்றைக் கேட்டுவிட்டு ‘ருஷ்யா போரில் தோற்றுவிட்டால்’ உலகில் ஏழைகள் வேறு எவரை நோக்கமுடியும் என்ற தன் கவலையை காந்தி பகிர்ந்துகொண்ட செய்தி நமக்கு கிடைக்கிறது. அவர் ஆகாகான் சிறைவாசக் காலத்தில் (1942-44) இவ்வாறு சொன்னார். I do not care whether Marxism is right or wrong. All I know is that poor are being crushed. Something has got to be done for them. To me this is axiomatic. மார்க்சியம் சரியா தவறா என்பதல்ல அவரது முக்கிய பிரச்னை. ஏழைகள் ஒடுக்கப்பட்டு அமுக்கப்படுவதை விடுவிப்பது என்பதே அவர் முதல் பிரச்னை. அதற்கு என்ன செய்யவேண்டும்- ஏதாவது செய்யவேண்டும் என்பது தான் அவரின் இயங்கு அச்சு. சமத்துவம் சரியானதே - அதை எவ்வாறு அளவிடுவது என்பது எப்போதும் மிக முக்கிய கேள்வியாக நிற்கும். உருவ அமைப்பில் மனிதர்கள் வேறுபட்டே இருக்கிறோம். பிறப்பொக்கும் என்பது மிகச் சரி. அதே நேரத்தில் திறன், உடல்வலிமை, புத்திக்கூர்மையில் வேறுபாடுகள் நிலவும். இது குறித்து பேசும்போது காந்தி கீழ்கண்ட புரிதலை தருகிறார் . “அனைத்திலும் சமத்துவம் என இருக்கமுடியாது. சோசலிசத்தின் அடிப்படை பொருளாதார சமத்துவத்தில் இருக்கிறது. சிலர் செல்வத்தில் புரள்வதும் கோடிக்கணக்கானவர் உணவிற்கு ஏங்குவதுமான சமூகத்தில் ராமராஜ்யம் எழாது. அவரவர் ஜீரண சக்திக்கு உணவு என்பது போல் தேவைக்கேற்றவை கிடைக்க செய்தல் என்பதான சமத்துவ விநியோகம்”இது ஏறக்குறைய மார்க்சிய புரிதலான To each according to his need என்பதுடன் ஒத்துப்போவதைப் பார்க்கலாம். எவருக்கும் சரிவிகித உணவு, உகந்த வாழிட வசதி, குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகள், போதுமான மருத்துவ வசதி என்பவைதான் எனது பார்வையில் பொருளாதார சமத்துவத்தின் அடிப்படைகள். இந்த அடிப்படை வசதிகளை அனைவருக்கும் உறுதி செய்த பின்னர் நமது உயர்ந்த வளர்ச்சிக் கனவுகள் வரட்டுமே என அவர் சொல்லிவந்தார். சமத்துவம் எனில் எவற்றில் அவசியமாக அது அமையவேண்டும் என்பதை அவரின் மேற்கூறிய கூற்று வெளிப்படுத்திவிடுகிறது. காந்தியார் உடல் உழைப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தவர் என்பதை அறிவோம். மூளை உழைப்பாக ஆனாலும் உடல் உழைப்பாக ஆனாலும் சம மரியாதையை பெறவேண்டும் என வலியுறுத்தியவர். உடல் உழைப்பில்லாதவர் உண்ண உரிமையற்றவர் என்ற கருத்தை வெளிப்படுத்தியவர். நாள் ஒன்றின் நேர்மையான உழைப்பிற்கு அது ’பங்கி’யானாலும், டாக்டர் ஆனாலும், வக்கீல் ஆனாலும், டீச்சர் ஆனாலும் சம ஊதியம் பெறும் இந்தியா வேண்டும் என்று அவர் பேசியதை பார்க்கிறோம். இந்த முறை உருவாக்கப்பட்டுவிட்டால் உலகம் நம்மைப் பார்த்து வியப்பதுடன் பொறாமையும் கொள்ளும் என்றார். 1946ல் லூயி பிஷருடன் உரையாடியபோது தன்னை கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக்கொண்டார். தனக்கு கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் நண்பர்கள் இருப்பதை குறிப்பிடும் போது அவர்களில் பலர் எனக்கு மகன்கள் போலத்தான். ஆனால் சரி தவறான முறைகளை அவர்கள் வித்தியாசப்படுத்திக் கொள்வதில்லை (fair and foul distinction). அவர்கள் ருஷ்யாவிலிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். இந்தியாவைவிட தங்கள் ஆன்மாவிற்கு நெருக்கமாக அவர்கள் சோவியத்தை பார்க்கிறார்கள் என்கிற தனது விமர்சன பார்வையை காந்தியடிகள் வைத்தார். சோசலிசம் என்பது தூய்மையான படிகம். எனவே அதனை அடைவதற்கும் தூய்மையான வழிகளே வேண்டும். தூய்மையற்ற வழிகள் எனில் விளைவும் அவ்வாறே அமையும். இளவரசர் தலையை துண்டித்து எறிந்துவிடுவதாலேயே லட்சக்கணக்கானவர் அவருக்கு இணையான வாழ்க்கையை பெற்றுவிடமுடியாது. உண்மையான நடத்தைகள் மூலம் தான் உண்மையை அடையமுடியும். அகிம்சை வழியை மேற்கொள்ளும் தூய்மையான இதயம் கொண்ட சோசலிஸ்ட்களால் மட்டுமே இந்தியாவிலும் ஏன் உலகத்திலும் கூட சோசலிச ராஜ்யத்தை கொணரமுடியும் என்கிற தன் நம்பிக்கையை கனவை காந்தி வெளியிட்டார். ஹரிஜன் பத்திரிகையில் தன் வேறுபட்ட பார்வையை அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “சோசலிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் வெறுப்பை விதைத்து அதை அதிகப்படுத்துகிறார்கள். வெறுப்பிற்கு பதில் அன்பின் வழிப்பட்டு அகிம்சை முறையில் விவாதம் வழியே நல்வழிப்படுத்தி உணரச் செய்து பொருளாதார சமத்துவம் ஏற்படுத்துவேன்” காந்தியடிகளின் இந்த வழி நல்லெண்ணமாக இருக்கலாமே ஒழிய நடைமுறை சாத்தியமில்லாதது என கம்யூனிஸ்ட்கள் கருதினர். இந்திய முதலாளிகள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி சொத்துக்களை பெருக்கலாம். ஆனால் அவர்கள் அதன் தர்மகர்த்தாக்கள் என்றே கருதி செயல்படவேண்டும். இந்த சொத்துப் பெருக்கம் முழுமையாக சுயநலம் சார்ந்தோ சுய தேவைக்கானதாகவோ இல்லாமல் சமூக நலன் சார்ந்தது. இந்தப் பணிக்காக அவர்களுக்கு அரசாங்கம் ‘rate of Commission’ என்பதை நிர்ணயித்து முறைப்படுத்தும். அவர்கள் வாரிசுகளும் அந்த சொத்தை சுவீகரித்து அதே போல் தர்மகர்த்தா முறையில் பரிபாலனம் செய்தல் வேண்டும் என்கிற அவரது கருத்தை உடோபியன் சிந்தனையாகவே நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனையாகவே மார்க்சியர் கருத இயலும். இதுவரை ஒன்று நடவாமல் இருக்கிறது, நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது என்பதாலேயே அது எப்போதும் நடைமுறைக்கு வரவே வராது என்று சொல்வதை ஏற்கவேண்டியதில்லை என காந்தி கருதினார். மாற்றம் வரும் என நேர்பட நம்பி செயல்பட்டார். அரசு என்பதைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்கள் போலவே காந்தியும் அதை அடக்குமுறைக் கருவியாகவே பார்த்தார். அரசு குறித்து முழு நம்பிக்கை அவரிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சந்தேகப் பார்வையே இருந்தது. கம்யூனிஸ்ட்கள் சோசலிச அரசின் மூலம் சாதிக்க இயலும் என நம்பி செயல்பட்டு வருபவர்கள். ஆனால் சோசலிச அரசே ஆனாலும் மத்தியப்படுத்தப்பட்ட அதிகார குவிப்பு நிறைந்த அரசாங்கம் என்பது அகிம்சை சார்ந்த சமுக முறைமைக்கு ஏற்றதாக இருக்கமுடியாது என காந்தி நினைத்தார். பேணுதார் பிரதான் தன் ஆய்வில் காந்தியை அவர் அகிம்சை சார் புரட்சியாளர் என்பதற்கு மேலாக அவரை அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட் என்றே புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார். காந்தியின் சோசலிசம் - தோற்றுவாய் மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வழிப்பட்ட சோசலிசம் பொதுவாக விஞ்ஞான சோசலிசம் என்று ஏற்கப்படுகிறது. அதற்கு முன்னதாகப் பேசப்பட்டவைகளை கற்பனாவாத சோசலிசம் என்றும் மார்க்சியர்கள் வகைப்படுத்துவர். இது குறித்து எங்கெல்சின் ஆக்கங்களை மார்க்சியர் சுட்டிக்காட்டுவர். எதுவாக இருந்தாலும் பிறரின் துயர் துடைப்பது என்கிற சிந்தனையின் செயல்பாட்டில் நன்னெறி என்பதும் இணைந்தே செல்லவேண்டும். இந்த நன்னெறிகளை முற்றிலுமாக புறக்கணித்த சிந்தனையாளர் அரிது. அவரவர் தேவை என்பதை தாண்டி எதையும் வைத்துக்கொள்ளாமல் இருப்போம் என்றால், தேவைப்படுகிறவர் என்ற நிலை இல்லாமல், அனைவரும் சுய நிறைவுடன் வாழும் வாழ்க்கை வசப்படும் என்றே காந்தி சொல்லிவந்தார். மார்க்சிசம் என நாம் பேசுவது மார்க்சை முன்வைத்து என்றாலும் எம் என் ராய் குறிப்பிட்டது போல் அச்சிந்தனை தனி ஒருவருடைய சிந்தனையாக இல்லாமல் மார்க்சிற்கு முற்பட்ட சிந்தனையாளர்களுடன் கூடிய உரையாடல் மற்றும் விமர்சனத் தொகுப்பாகவும் இருக்கிறது. விஞ்ஞான சோசலிசம் என்கிற பதம் பொதுவாக மார்க்ஸ் எங்கெல்ஸ் உடன் தொடர்புபடுத்தப்பட்டாலும் அவர்களுக்கு முன்பாகவும் செயிண்ட் சைமன் தனது சோசலிசத்தை science of Universal gravitation என்றே உரிமைகொண்டாடினார். அதேபோல் புருதான் அவர்களும் தனது கோட்பாட்டை விஞ்ஞான சோசலிசம் என்றே அழைத்துக்கொண்டார். காந்தியோ 1934ல் ‘விஞ்ஞான சோசலிசம்’ என்னவெனத் தெரியாது என்றார். அப்போது அவருக்கு வயது 65. ஆகாகான் மாளிகை சிறைவாசத்தில்தான் (1942-44) மார்க்ஸ்- லெனின்- ஸ்டாலின் எழுத்துக்களை அவர் வாசித்ததாக அறிகிறோம். உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த விஞ்ஞான சோசலிசம் என்பது அவரை கவ்விப்பிடிக்கவில்லை. மார்க்ஸ் , லெனின் ஆகியவர்களின் ‘சமத்துவ சமுதாயம்’ என்பதில் அவர் நல்ல மதிப்பீடுகளையே வைத்திருந்தாலும் விஞ்ஞான சோசலிசம் மட்டுமே பாதை என்கிற பார்வை அவரிடம் தொற்றவில்லை. மத அடிப்படையிலான நன்னெறிகள் என்பதை அடித்தளமாக கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்கும் அரசியல் சமூக செயல்பாடுகள் என்பதை காந்தி அமைத்துக்கொண்டார். வைஷ்ணவ சிந்தனைகள், ஜைன புத்தமத சிந்தனைகள், பகவத்கீதை, உபநிடதங்கள், மலைப்பிரசங்கம், டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ ஆகியவர்களின் சிந்தனைகளே அவரை ஆட்கொண்டன. தனது செயல்களை இவற்றின் துணையோடுதான் அவர் சரிபார்த்துக்கொண்டு பயணித்தார். குஜராத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக ஈர்ப்பை உருவாக்கி வரும் நரசிம்ஹ மேத்தாவின் புகழ்வாய்ந்த வைஷ்ணவ ஜனதோ அவரை கவ்விப்பிடித்தது. நாமக்கல் கவிஞர் அப்பாடலை அழகாக மொழிபெயர்த்து தந்திருக்கிறார். வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின் வகுப்பேன் அதனை கேளுங்கள்… பிறருடையத் துன்பம் தனதென எண்ணும் பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்; உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான் உண்மை வைஷ்ணவன் அவனாகும்; உறவென மனிதர்கள் உலகுள யாரையும் வணங்குபவன் உடல்மனம் சொல் இவற்றில் அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்; அவனை பெற்றவள் அருந்தவத்தாள். விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை விளங்கி ஆசைகள் விட்டவனாய் ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால் உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும்அவன் ஊரார் உடைமையைத் தொடமாட்டான்; வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ அவனே உண்மை வைஷ்ணவனாம். மாயையும் மோகமும் அணுகா தவனாய் மனத்தினில் திடமுள வைராக்கியன்; நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப் பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள் ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம் ஆகும்; அவனே வைஷ்ணவனாம். கபடமும் லோபமும் இல்லா தவனாய்க் காம க்ரோதம் களைந்தவனாய், தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத் தரிசிப் பவரின் சந்ததிகள் சுபமடைவார்கள்; எழுபத் தோராம் தலைமுறை வரையில் சுகமுறுவர்; அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும் அலைகடல் நீந்திக் கரைசேர்வார். இதற்கு தனியாக பொருளுரைக்க தேவையில்லை. அதில் பேசப்பட்டுள்ள உயர் குணங்களை அடைய காந்தியடிகள் முயற்சித்தார் என்பதை எவரும் ஏற்கமுடியும். அனைத்து உயிர்கள்பாலும் காருண்யம் - வன்முறையற்ற அகிம்சை என்ற வாழ்க்கைமுறையை அவர் ஜைன சிந்தனைகளில் பெற்றார். உடல் சார்ந்த காயங்கள் என்பதல்லாமல் சமூக, பொருளாதாரவகைப்பட்ட மானுடத்துயர் நீக்கமென்பதற்கும் இச்சிந்தனையை அவர் நீட்டித்தார். ஜைனத்தின் முக்கிய 5 விரதங்களாக அகிம்சை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், அவாவுறுத்தல் ( Ahimsa, satya, Asteya, Brahmacharya, aparigraha) என்பதை அவர் தன் ஆசிரம விதிகளின் பகுதியாக இணைத்து அனுசரிக்க வற்புறுத்தியதை நாம் பார்க்கமுடியும். உண்மையைத்தேட எனக்கு மிக அணுக்கமாக இருப்பது பகவத்கீதை என்றே அவர் தெரிவித்துவந்தார். தாய், காமதேனு என்றெல்லாம் கீதையை வர்ணித்துள்ளார். எனக்கு கதவுகளை எப்போதும் திறக்கும் சாவி- எனது வழிகாட்டி- என்னை ஒருபோதும் தாழ்த்திவிடாமல் அழைத்து செல்வது என்ற நம்பிக்கையை காந்தி வெளிப்படுத்தியுள்ளார். Self realisation is the subject of the Gita as it is of all scriptures"சுயம் உணர்தல் என்பதுதான் மனித வாழ்விற்கான பெரும் முயற்சி. காந்தியடிகளின் சுயம் உணர்தல் என்பதற்கான கீதை சார்ந்த விளக்கத்தை பார்க்கிறோம். சுயம் உணர்தலுக்கான வழி பயன்கருதா செயல் என அவர் சொல்வதைப் பார்க்கிறோம். செயலின் பலனைத் துறத்தல் என்பது தான் சூரியன் போன்றது. அதை சுற்றும் கிரகங்களாக கடமைப்பாடு, அறிவு, ஓய்வு எல்லாம் அமையலாம். இந்த உன்னத வழியை கீதைத்தான் தனக்கு காட்டுவதாக காந்தி கருதிவந்தார். பலன்கள் மீது பற்று நீங்கிடின் வன்முறை நாட்டம் இராது. அகிம்சையும் உண்மையும் தொழிற்படும் என அவர் கருதினார். உண்மையை நெருங்குவதற்கான சிறந்த வழி அன்புதான் என்றார். உண்மை எனும் கடலில் நீந்தவேண்டும் என்றால் ஒருவர் தன்னை பூஜ்யமாக்கிக்கொள்ளவேண்டும். அன்பும் அகிம்சையும் வேறானவையல்ல - ஒன்றேதான் . அகிம்சையின்பாற்பட்ட சமுதாயத்தின் செல்திசை சமத்துவ சமுதாயமாகவே இருக்கமுடியும் என அவர் நம்பி செயல்பட்டார். ஈசா உபநிடதத்தின் இந்த வாக்கியங்களில் சோசலிசம் பேசப்படுவதாக காந்தி உணர்ந்தார். "ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸ்ரவம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் தேன த்யக்தேன புஞ்ஜிதா மா க்ருத கஸ்யஸ்வித் தனம் " இவ்வுலகு மாறுகின்ற இயல்புடையது. அனைத்தும் இறைவனால் எனப் புரிந்து உலகை அனுபவிக்கவேண்டும். பணம் யாருடையது? அதற்காக ஆசைப்படாதே என்பதை இதன் பொருளாக கொள்ளலாம். பொருள்நாட்டத்திலிருந்து விலகியிருத்தல் எனும் ஒருவகை துறவு குறித்து அவர் எப்போதும் சொல்லிவந்தார். தேவையான அளவு சரியாக சாப்பிடுதல், உடை, உறைவிடம் என்பதைத்தாண்டி அனுபவிப்பு வேறில்லை என்ற மனநிலைக்கு பழகுவது- துறவுடன் பற்றின்மைபூண்ட வாழ்க்கையை அனுபவிப்பது என்பது குறித்து அவர் பேசினார். பிறர் பொருள்மீது ஆசை எதற்கு எனவும் அவர் வினவினார். அன்பின்மை மறையட்டும்- வாழும் உயிர்களிடத்தெல்லாம் அன்பும் காருண்யமும் பெருகட்டும் என்பதே புத்தர் சொல்லித்தந்தது. தாராளமாக கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பொறாமைகொண்டு எவரிடமிருந்தும் கட்டாயப்படுத்தியோ வன்முறை மூலமோ, ஏமாற்றியோ எதையும் பெறாதீர்கள் என்பதையும் புத்தரிடம் கற்கிறோம். எட்வின் ஆர்னால்ட் வழியே கீதையை மட்டுமில்லாமல் புத்தரையும் காந்தி கற்றார். கொழும்புவில் நவம்பர் 15, 1927ல் காந்தி ஆற்றிய உரையில் உலகின் ஆசைகளை பற்றை புத்தர் கைவிட்டது உலக மக்களின் சந்தோஷத்திற்காகத்தான் என்பதை எடுத்துரைத்தார். உலகின் சந்தோஷத்திற்காக உண்மையின் தேடலுக்காக பல மனிதர்கள் ஏராள அவதிகளை அனுபவித்து தியாகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். எவ்வளவு கீழான மனிதர் என்று பார்க்கப்படுபவருக்கும் வாழ்வுண்டு என்பதை உணர்த்தியவர் புத்தர். விதைப்பது எதுவோ அதையே அறுவடை செய்வோம் என புத்தர் சொல்லியதை அழகாக காந்தி எடுத்துச் சொன்னார். . காந்தியின் சர்வோதாய சிந்தனையில் அகிம்சை அனுசரிப்பில் புத்த சிந்தனையின் தாக்கத்திற்கு இடமுண்டு. ஏசுவின் மலைபிரசங்கம் அவரின் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது. ஸ்டான்லி ஜோன்ஸ் காந்தியை குறிப்பிட்டபோது கிறிஸ்துவர்களைவிட சிறந்த கிறிஸ்துவர் என்றும் கிறிஸ்துமயமான இந்து என்றும் சொன்னார். அவருடன் பழகிய கிறிஸ்துவ பாதிரிமார்கள் அவர் ஏசு சொன்னபடி வாழ்ந்தவர் என்கிற மதிப்பீட்டைக் கொண்டிருந்தனர். கிறிஸ்துவம் அன்பை போதித்தது. பொறாமைத்தீ பற்றாமல் தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தியது. ஏழைகளுக்கு இரங்கி உதவுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாகவும் அது மொழிந்தது. காந்தி கிறிஸ்துவம் குறித்து செறிவான உரையாடல்களை மேற்கொண்டவர். அவர் ஏசு குறித்து இப்படி குறிப்பிடுகிறார். “He was certainly the highest example of one who wished to give everything asking nothing in return”- “the virtue of loving one’e neighbour as oneself and of doing good” ஜோசப் டோக் காந்திஜியின் முதல் வாழ்க்கை வரலாற்றை தந்தவர் என அறியப்படுபவர். காந்தி மலைப்பிரசங்கத்தின் முழுமையான தாக்கம் நிறைந்தவராக இருந்ததை டோக் சொல்கிறார். இந்திய தத்துவங்களிலிருந்து மட்டுமல்லாமல் டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்ப்பட்டதாக காந்தியே தெரிவித்துள்ளதை அறிவோம். மார்ச் 20 1910ல் அவர் இந்திய சுயராஜ்யம்- இந்திய ஹோம் ரூல் புத்தகத்திற்கு தந்த முன்வாசகத்தில் இதைக் குறிப்பிட்டு சொல்கிறார். “.. while the views expressed in Hind Swaraj are held by me, I have endeavoured humbly to follow Tolstoy, Ruskin, thoreau and other writers besides the masters of indian Philosophy.” இந்த மூவருமே உழைப்பின் மேன்மையை, பணக்காரர்கள் கைக்கொள்ளவேண்டிய தர்மகர்த்தா முறையை பெரிதும் பேசியவர்கள். டால்ஸ்டாயின் Kingdom of God is within you , The Gospel in Brief, what to do போன்ற ஆக்கங்கள் காந்தியிடம் பெரும் செல்வாக்கை செலுத்தியதை நாம் அறிவோம். டால்ஸ்டாயும் காந்தியின் இந்திய சுயராஜ்யம் படித்துவிட்டு பதில் எழுதினார் என்பதை பேணு குறிப்பிடுகிறார். I have read your book with great interest because I think the question you have been therein dealt with is important not only for Indians but for the whole mankind. சிலர் மட்டுமே சுகமாக சலுகைகளுடன் வாழ்கிறார்கள் என்றிருந்தால் அங்கே பலர் கடுமையாக துன்பப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிலை. இதை டால்ஸ்டாய் தன் ஆக்கங்களில் உணர்த்துபவராக இருந்தார். I must not live the life of a parasite, but must live a real life என்பது அவரது confession ஆக இருந்தது. Kingdom of God ல் டால்ஸ்டாய் ‘வாழ்வின் அர்த்தம்’ கடவுளின் ராஜாங்கம் அமைப்பதே என தெரிவித்தார். அதை அன்பின் வழிப்பட்டே கட்டமுடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. குதிரையின் மீது சவாரி செய்துகொண்டே அதன் மீது பரிதாபப்படுவது குறித்து அவர் பேசினார். பரிதாபப்பட்டால் உடன் அதிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே வழி என்றார். இதை சுரண்டல் என்பதற்கான அருமையான குறியீட்டு மொழியாக புரிந்துகொள்ளவேண்டும். செப்டம்பர் 7 1910ல் டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “Socialism, Communism, Anarchism, Salvation Army, the growing criminalities, unemployment and absurd luxuries of the rich, augmented without limit, and the awful misery of the poor, the terribly increasing number of suicides-all these are the signs of that inner contradiction which must be there and which cannot be resolved; and without doubt, can only be resolved by acceptation of the law of love and by the rejection of all sorts of violence.”என எழுதியிருந்ததை காணலாம். சோசலிசம், கம்யூனிசம், அனார்க்கிசம், பெருகும் குற்றங்கள், வேலையின்மை, பணக்காரர்களின் பயனற்ற ஆடம்பரங்கள், பெருகிவரும் ஏழ்மை- தற்கொலைகள் போன்றவையெல்லாம் முரண்பாடுகளின் அறிகுறிகளே. இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கான வழி வன்முறையை கைவிட்டு அன்பின் வழி நிற்பதுதான் என்று டால்ஸ்டாய் குறிப்பிட்டிருந்ததைப் பார்க்கிறோம். ரஸ்கினின் ‘Unto This last’ ஆக்கத்தை காந்திக்கு 1904ல் வாசிக்க வாய்ப்பு கிட்டியது. அவர் படித்த முதல் ரஸ்கின் புத்தகம் அது. இரயில் பயணத்தில் கீழே வைக்காது ஒரே மூச்சில் அப்புத்தகத்தை அவர் படித்தார். அப்புத்தகம் தன் வாழ்வில் உடனடி மாற்றத்தை உருவாக்கியதை காந்தி உணர்ந்தார். ரஸ்கின் ‘கிறிஸ்டியன் சோசலிசம்’ என கனவு கண்டவர். தனது பூர்வீக சொத்தாக கிடைக்கப்பெற்ற 2 லட்சம் பவுண்டை சமூக நல நடவடிக்கைகளுக்காக செலவிட்டவர். தொழிலாளர் கல்லூரி அமைக்க துணை நின்றவர். Unto this Last தவிர Time and tide, Munera Pulvaris ஆகியவற்றிலும் அவரது சோசலிச கனவுகளை அவர் வெளிப்படுத்தியிருந்ததாக பேராசிரியர் பிரதான் தெரிவிக்கிறார். முதலாளித்துவம், பணவேட்கை குறித்து விமர்சனங்களை வைத்தவர் ரஸ்கின் . நீங்கள் பணக்காரர் ஆகும் கலையை கற்றுள்ளீர்கள் எனில் உங்கள் அருகாமையில் மற்றவரை ஏழ்மையில் வைத்திருக்கும் கலையையும் சேர்த்தே கற்றுள்ளீர்கள் என எழுதியவர். காந்தி அவரது ஆக்கத்தை உள்வாங்கி சர்வோதயா என்கிற ஆக்கமாகக் கொணர்ந்தார். சீனாவின் கன்பூசியஸ், இந்திய வேத உபநிடத புத்த இலக்கியங்களைப் படித்தவராக தோரோ இருந்தார். கீதையின்பாற் ஆர்வத்தைக் காட்டியவராகவும் தோரோ இருந்தார். தோரோவின் Civil Disobedience யைப் (1907ல்) படிப்பதற்கு முன்பாகவே போராட்ட சோதனையில் காந்தி ஈடுபட்டிருந்தாலும் அந்த ஆக்கம் காந்தியிடம் தாக்கத்தை உருவாக்கியது. சில பகுதிகளை அவர் இந்தியன் ஒப்பீனியனில் வெளியிடவும் செய்தார். தனிமனிதன் தன் ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள தடையாக இருப்பனவற்றை எதிர்த்து நிற்றல்- தனிமனித கெளரவம்- சுதந்திரம் என்பதை காத்தல் போன்ற சிந்தனைகளுக்கு தோரோ முக்கியத்துவம் தந்தார். அடிமைத்தனம் நீங்கிய சுரண்டலற்ற நீதிமிகுந்த நியாயமான சமூகமுறையை அவர் விழைந்தார். இவ்வுலகில் திரளான மனிதர்கள் கடுமையாக உழைத்துவிட்டு ஏக்கத்துடனான வாழ்வையே அனுபவிக்கிறார்கள். ஒருவகை விலகலாகவே அவர்களின் வாழ்க்கைமுறை அமைந்துள்ளது என்ற உண்மையை உணர்ந்தவராகவும் எடுத்து உரைப்பவராகவும் தோரோ இருந்தார். மகாத்வாவின் சோசலிச உணர்வுகள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் என்பதால் மட்டுமில்லாமல் நன்னெறிகொண்ட சமூக மனிதர்கள் உருவாக்கம் என்பதிலும் முனைப்புக் கொண்டிருந்தது. உழைப்பின் உன்னதம் என்பதை டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ போன்றவர்களிடம் காந்தி ஆழக்கற்றார். வில்பெரட் வெல்லாக் காந்தியின் தத்துவம் எனப்பேசும்போது மலைப்பிரசங்கம்- டால்ஸ்டாய், ரஸ்கின் வழியாகவும், இந்திய புனித நூல்களான உபநிடதம், கீதை மூலமும் காந்தி கற்றதை பதிவிடுகிறார். மார்க்சியர்களைப் பொறுத்தவரை காந்தியிடம் செல்வாக்கு செலுத்திய ஆக்கங்கள் மானுட விடுதலைக்கான pious wish- ஒருவகை idealism என்றே பார்க்கப்படும். இதில் வரலாற்று பொருள்முதல்வாத சிந்தனைகளை பார்க்கமுடியாது என்றே கருதுவர். பலவகை சோசலிசம் சோசலிசம் குறித்த பலவகை உரையாடல்கள் இன்றும் நிலவிவருகின்றன. கற்பனாவாத சோசலிசம் என வகைப்படுத்தப்பட்ட ராபர்ட் ஓவன், சார்லஸ் ஃபூரியர், செயிண்ட் சைமன், மார்க்சியர்களான லெனின்வகை சோவியத், மாவோவகை சீனம் , யூகோஸ்லாவிய டிட்டோ, வியத்நாம் ஹோசிமின், பிடலின் கியூபா என கட்டுமான மாதிரிகள் குறித்து பேசப்பட்டுவருகின்றன. மார்க்சிய கொள்கை எனப்பார்த்தாலும் பலவகை சிந்தனைப்பள்ளிகள் உரையாடுவதை நாம் பார்க்க முடியும். காந்தியின் சோசலிச உரையாடல் இவ்வகை மாதிரி எதையும் சார்ந்த உரையாடலாக இல்லாமல் அது தனித்துவ உரையாடலாக இருக்கிறது. இப்படி வேறுபட்ட பார்வை விளக்கங்களைக் கொண்ட சோசலிசம் பற்றி நகைச்சுவை உணர்வுடன் அதே நேரத்தில் சரியான பார்வையையும் சி இ எம் ஜோட் வைத்ததை நாம் பார்க்கலாம்- Socialism is like a hat that has lost its shape because everybody wears it. சோசலிச தொப்பியை ஒவ்வொருவரும் அணிவதால் தொப்பி தன் வடிவம் இழந்துவிடுகிறது. முழுமையான அரசு வியாபிப்பு என்பதுதான் சோசலிசமா? பொருளாதார முறைகள், தனிநபர் என அனைத்திலும் முழுமையான அரசு கட்டுப்பாடு என்பதுதான் சோசலிசத்தின் அடையாளமாக இருக்கவேண்டுமா என்பது சோவியத் அனுபவத்திற்கு பின்னால் பெரும் விவாதப்பொருள் ஆகியுள்ளது . சோசலிச அல்லது சமத்துவ சிந்தனை மரபு என்பது மேற்கில் பெரும் தொடர்ச்சியைக்கண்டது. பிளாட்டோவின் குடியரசு, தாமஸ் மோரின் உடோபியா, பாவோஃபின் சமத்துவத்திற்கான சாசனம், காபேயின் இகாரியா, சைமனின் தொழிலக முறை, ஃபூரியரின் பலன்ஸ்டெரி, ஓவனின் புதிய நன்னெறி உலகு என்ற நீண்ட மரபைக்கொண்டது. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பேசிய விஞ்ஞான சோசலிசம் உள்ளிட்டு பலவகைப்பட்டு விவாதங்கள் இருப்பதைக் காண்கிறோம். அடிநாதமாக இவற்றில் காணத்தகுந்தது மனிதன் சமதையானவன் அசமத்துவம் ஏன் - எப்படி நீக்குவது என்பதாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் ‘Just equal society’ எனப் புரிந்து கொள்ளமுடியும். அசமத்துவம் நீக்கிய நியாயமான நீதி நிறைந்த சமூகம் என்பது அனைவரின் உயர் கனவாக பேசப்பட்டது. இந்த இலட்சிய சமுதாய கட்டுமானத்திற்கு எதிராக நிற்கும் சக்திகள் அதை எதிர்த்த போராட்டங்கள் பொதுவாக பேசப்பட்டது. பல்வேறு வரையறைகளைக் கண்ணுற்ற பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சோசலிசம் என்பதை tendency rather a strictly definable body of doctrine என புரிந்துகொள்ள வேண்டினார். காந்தியும் ஹரிஜனில் அழகாக தன் புரிதலை குறிப்பிட்டார். Socialism is a beautiful word and so far as I am aware, in socialism all the members of society are equal, none low none high. In it the prince and the peasant, the wealthy and the poor, the employer and the employee are all on the same level" சோசலிசத்தின் மய்யம் சமத்துவம் என்பதை காந்தி இதில் விளக்கியுள்ளதைப் பார்க்கிறோம். Equalisation of status என்பதற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளதைப் பார்க்கமுடியும்.. உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியிருந்த சமூக மதிப்பிடுகளை நேராக்குவதில் அவர் செலுத்திய ஊக்கத்தை காணும்போது இந்த ‘equalisation of status’ என்ற கருத்தாக்கம் நன்றாக வெளிப்படும். காந்தி எழுதினார் : நமது உடலில் தலை மேலே இருப்பதால் அது உயர்ந்ததாகிவிடாது. அதேபோல் பாதங்கள் கீழேயிருந்து பூமியைத் தொடுவதால் அவை கீழாகிவிடுவதில்லை. எப்படி தனிமனித உடலின் பாகங்கள் அனைத்தும் சமமோ அப்படித்தான் சமூகத்தில் அனைத்து உறுப்பினர்களும் சமம் என புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் சோசலிசம். “In the individual body the head is not high because it is the top 0f the body nor are the soles of the feet low because they touch the earth. Even as members of the individual body are equal so are the mebers of society. This is socialism” இதை தன் ஆய்வில் பேணு பிரதான் இவ்வாறு குறிப்பிடுகிறார். காந்தியின் சோசலிசம் வேற்றுமையில் ஒற்றுமையை பேசுவது- பலதரப்பட்ட சமூக பிரிவுகள் மத்தியில் சமத்துவம் ஒற்றுமை எனப்பேசுவது- equal relevance to different jobs as is the case with different organs of the body என்கிற புரிதலை அது ஏற்படுத்துகிறது. காந்தியடிகள் உலகை உற்றுப்பார்க்க வேண்டினார். ஏதும் ஒன்றுபோல் இராது- பன்முகத்தன்மை கொண்டது உலகு. ஆனால் அதற்குள் லயம் ஒற்றுமை ஒன்று இயங்குவதைக் காணமுடியும்- There is perfect unity in the plurality of designs என அவர் இதைக் குறிப்பிட்டார். காந்திஜி பொருளாதார சமத்துவம் பற்றியும் தன் உரையாடலை நடத்தியுள்ளார். அசமத்துவம் மலிந்த சமூகத்தால் ராமராஜ்யம் கட்டமுடியாதென்றார். சோசலிசம் என்பதற்கு பொருளாதார சமத்துவமே அடிப்படை. பெரும்பான்மை மக்களுக்கு உணவிற்கு உத்தரவாதமில்லாமல் சிலர் மட்டும் சுகபோகங்களில் இருக்கும் நிலையில் ராமராஜ்யம் எழாது என்றார். அகிம்சை வழிப்பட்ட சுயராஜ்யத்தின் திறவுகோல் பொருளாதார சமத்துவமாகவே இருக்கும் என்றும் அவர் உரையாடி வந்தார். இதற்கு levelling down rich என்பது அவசியமாக தேவைப்படும் எனவும் வரையறுத்தார். அவரின் இந்த உரையாடலில் இக்காட்சி மேலும் தெளிவாக கிட்டும். “A non violent system of govt is clearly impossibility as long as the wide gulf between the rich and the hungry millions persists. The contrast between the palaces of Newdelhi and the miserable hovels of the poor labouring class nearby cannot last one day in a free India” அவரின் நம்பிக்கையை இவ்வுரையாடல் நமக்கு வெளிப்படுத்தும். அதே நேரத்தில் அவர் முதலும் முடிவுமாக நடைமுறை செயற்பாட்டாளராக இருந்தவர். தனிமனிதர் என்கிற வகையில் தேவையும் அவசியமும் விருப்பார்வங்களும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம் என்பதையும் சேர்த்துப் பார்த்து ‘சமத்துவ விநியோகம்’ என்பதை அவர் பேசினார். அவரவர் ஜீரணசக்திக்கேற்ப உணவு என்பது போல் , அவசியமான தேவைகள் நிறைவேற்றம் என அவர் குறிப்பிட்டார். To each according to his need என்கிற மார்க்சிய உரையாடலுக்கு அவர் நெருங்கி நின்றார். Everyone must have a balanced diet, a decent house to live in, facilities for the education one’s children and adequate medical relief என இதை அவர் விரித்துரைப்பதைக் காணலாம். ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் கூடுதல் திறமையால் கூடுதலாக சம்பாதிக்க வாய்ப்பு இருக்கலாம். ஒரு குடும்பத்தில் எப்படி அனைவரின் வருவாயும் குடும்பத்திற்கு எனக் கருதப்படுமோ அது போல் சமூகத்தில் கூடுதலாக சம்பாதிப்பவர்கள் அரசாங்கம் நல்வழியில் செலவிட உதவக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என காந்தி கருதினார். சமதையான சமூக மதிப்பை தருவதற்கு வாய்ப்புகளில் சமதையான முறைகள் அவசியம் என்பதை அவர் அறிவுறுத்தினார். அவரவர் திறமைக்கும் சாத்தியத்திற்கும் உரிய உழைப்பு, தேவைக்கேற்ப நிறைவேற்றம் என்கிற கம்யூனிச மொழிதலை காந்தி நெருக்கமாகவே உணர்ந்தார். மனிதர்கள் எப்படிப்பட்ட திறமைகளுடன் இருக்கவேண்டும் என்பதை சமூகத்தால் துல்லியமாக வரையறுக்கமுடியாமல் போகலாம். ஆனால் வாய்ப்புகளில் சமத்துவம் என்பதை அதனால் அனுசரிக்கமுடியும் என அவர் உறுதியாக நம்பினார். தன்னை நடைமுறை இலட்சியவாதி என அழைத்துக்கொண்ட காந்தி இவ்வாறு சொன்னதை பார்க்கமுடியும். “I want to allow no differentiation between the son of a weaver, of an agriculturalist and of a school teacher.” உடல் உழைப்பில் வேறுபட்ட உழைப்புகளுக்கு இடையிலோ அல்லது உடல் மற்றும் மூளை உழைப்பிற்கு மத்தியிலோ உயர்வு தாழ்வு எண்ணம் அறவே கூடாது என்பதை திரும்பத் திரும்ப அவர் சொல்லிவந்தார். ‘பங்கி’ என இன்று தாழ்மையாக பார்க்கப்படும் எவரும் ஏன் உயர்ந்த இடங்கள் எனக் கருதப்படும் நிலைக்கு உயரக்கூடாது- ஏன் முடியாது என வினவியவர் அவர். சமூக உறவுகளில் பிராமணருக்கும் பங்கிக்கும் சமதையான மதிப்புத்தான் இருக்கவேண்டும் என்றார். இன்று அபுல்கலாம் ஆசாத் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். அவ்விடத்திற்கு ‘பங்கி’ ஒருவர் வரும் நாள் மகிழ்ச்சியான நாளாகும் எனவும் அவர் தன் விழைவை வெளிப்படுத்தினார். இன்று ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும் எனவும் அவர் பேசினார். பலதரப்பட்ட மக்களிடம் செல்வாக்கு நிரம்பிய ஒருவர் இப்படிப் பேசுவதற்கு அசாத்திய துணிச்சலும் நம்பிக்கையும் வேண்டும். “All the neglected classes such as Scheduled Classes and the so called aborginal classes should receive special treatment in the matter of education, housing etc.”என அவர் வற்புறுத்தியதை காண்கிறோம். பலவகைப்பட்ட சோசலிச உரையாடல்கள் கட்டுமான சோதனைகள் உலகில் தவிர்க்கமுடியாதது என நாம் உணரும்போதுதான் காந்தியின் உரையாடலை சோதனைகளை சரியாக நாம் உள்வாங்கமுடியும். காங்கிரஸ் சோசலிஸ்ட் என அறியப்பட்ட அசோகா மேத்தா ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். “பலவேறு சந்தர்ப்ப நிலைகளுக்கேற்ப பல்வேறு வகைப்பட்ட சோசலிச சிந்தனைகள் பொருத்தமாக இருக்கலாம். இருக்கும் நிலைகளுக்கு நெருக்கமாக சிந்தனைகள் உளனவா என்பதும் சிந்தனையாளர்கள் அப்படி பொருத்தமானவற்றை வெளியிடுகிறார்களா- அப்படி குணத்தை நடத்தையைக் கைக்கொள்கிறார்களா என்பதும் பார்க்கப்படவேண்டும்.” மேற்குலகின் சோசலிச சிந்தனைகளில் பொருளாயத நலன்கள் எனும் பெரும் கடவுள் மட்டுமே ஆட்டிப்படைப்பதாகவே காந்தி எண்ணினார்- western nations groaning under the heels of the monster God of Materialism என எழுதினார். வளர்ச்சி என்பதை நன்னெறிகளில் அல்லாமல் டாலர்களில் மட்டுமே பார்ப்பதை, சுயநல பெருக்கத்தை பெரும் வீழ்ச்சி என அவர் பார்த்தார். வாழ்க்கை என்பது தர்மஷேத்திரம் என்கிற விளக்கத்தை டாக்டர் இராதாகிருஷ்ணன் தருவார்- moral law - moral choice என அவர் பேசுவார். இந்திய தத்துவ மரபுகளை காந்தி உள்வாங்கியவர் என்ற வகையில் அவருக்கு அவற்றில் உயர்வாகப்பட்டவை நன்னெறி- உண்மையுடன் நெருக்கம் என்பனவாகவே இருந்தன. காந்தியடிகளுக்கு மேற்குவகைப்பட்ட சோசலிச உரையாடல் என்பது இறுதியான வாசகங்கள் அல்ல. அவர் கீழைத்தேய சமூகங்களை உன்னிப்பாக கவனித்து இங்கு சோசலிச உரையாடலை- அதற்கான சமூக கட்டுமானத்தை செய்யவேண்டும் என விழைந்தார். Let us study our Eastern institutions in that spirit of scientific enquiry and we shall evolve a truer socialism and a truer communism that the world has yet dreamt of. it is surely wrong to presume that western socialism or communism is the last word on the question of mass poverty"இப்படி அவர் பேசுவதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. மார்க்சின் அனைத்து எழுத்துகளுமே விமர்சன ஆய்வுரைகள்தான். மார்க்ஸ் தனக்கு முன்னால் வைக்கப்பட்ட எந்த உரையாடலையும் இறுதியானது - முடிந்த முடிவானது என எடுத்துக்கொள்ளவே இல்லை. காந்தியும் இங்கு விஞ்ஞான விமர்சன வழிப்பட்டு கீழைத்தேய புரிதல் என்றே பேசுகிறார். அது பேசப்பட்ட உரையாடலாகவே, உள்ளதை அப்படியே நகல் எடுப்பதாக இருக்கவேண்டியதில்லை எனவும் சொல்கிறார். சோவியத் வகைப்பட்ட விளக்கத்தில் சோசலிசம் என்பது கம்யூனிசத்திற்கு மாறிச்செல்வதற்கு முன் உள்ள கட்டம். சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் என்றே பெயர் அங்கு சூட்டப்பட்டது. ‘கம்யூனிஸ்ட் ரிபப்ளிக்’ என்று அழைக்கப்படவில்லை. பொது புரிதலுக்காக கம்யூனிஸ்ட் நாடுகள் என சொல்லப்பட்டதே தவிர அவை சோசலிச கட்டுமான முயற்சி என்றே கருதப்பட்டன. ஆனால் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் சோசலிச திட்டம் என்கிற கட்டுமானத்திற்குரிய அம்சங்களை வைத்துப்பேசினாலும் தங்கள் அறிக்கையை ‘கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ’ என அழைத்தனர். சோவியத் சிந்தனையாளர்கள் சோசலிச சமுதாயத்தில் (stratified) வேறுபாடுகள் நிலவும் என்பதை சுட்டிக்காட்டினர். ஆனால் கம்யூனிச சமூகத்தில் வர்க்கங்கள் ஒழிந்து படிநிலைகள் (strata) என்பது இல்லாமல் நீங்கும் என சொல்லி வந்தனர். அரசும் உதிரும் என்றனர். சோசலிச முறையில் From each according to his ability, to each according to his work என்பது நிலவும் என்றும் , ஆனால் கம்யூனிச சமூகத்தில் தேவைகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு from each according to his ability to each according to his need என்றும் சொல்லப்பட்டுவருகிறது. சோசலிச கட்டுமானத்தை வலுவுள்ளதாக வைத்துக்கொள்ளும் அடிப்படையில் கம்யூனிச சமுதாயம் கட்டி எழுப்பப்படும் என்கிற புரிதல் சொல்லப்படுகிறது. கம்யூனிசம் என்கிற இலக்கிற்கான வழியாக சோசலிசம் சொல்லப்படுவதைக் காண்கிறோம். காந்தியடிகள் புரிதலில் இரண்டும் வெவ்வேறானதாக பார்க்கப்படவில்லை. My communism is not very different from socialism. It is harmonious blending of two எனச் சொல்கிறார். ஆனால் அவர் சோசலிசம், கம்யூனிசம் என்பவற்றிற்கான தனித்த குணங்களாக எவற்றைப் பார்த்தார்- இரண்டின் இணைக்கமாக எவற்றை முன்வைக்கிறார் என்பதை விரிவாக நம்மால் பார்க்கமுடியவில்லை. காந்தியைப் பொறுத்தவரை சொல்லவேண்டும் என்பதற்காக எதையும் சொல்லக்கூடாது என நினைப்பவர். ஆழமில்லாமல் போகிற போக்கில் கருத்துக்களை பிறர் மகிழ்ச்சிக்காக, அல்லது பெருமிதத்திற்காக சொல்லிச் செல்பவரும் அல்லர் என்பதையும் சேர்த்துக் காணவேண்டியுள்ளது. திறமைக்கேற்ற உழைப்பைத் தருவது, தேவைக்கேற்ப பெறுவது குறித்து காந்தி சொல்லிவிடுகிறார். இது கம்யூனிச சமுதாய புரிதல் என்பதை மேலே பார்த்தோம். ஆனால் காந்தி அவசியமான தேவைகள் என்பதை வரையறுத்து சொல்லிவிடுகிறார். உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவம் என்பதாக அவை செல்கின்றன. பொருளாதார சமத்துவத்தின் அடிப்படையை காந்தியடிகள் ஏற்றாலும் அத்துடன் சமூக சமத்துவம் என்பதை வலியுறுத்துபவராகவும் இருக்கிறார். வாழ்க்கை பிளவுபடாதது (Integrated and Indivisibility of Life) என்கிற புரிதலே மேலானது என காந்தியடிகள் எழுதினார். பொருளாதார மாற்றம் என்பதாலேயே தீண்டாமை குறித்த சமூக பிரச்னை முற்றிலும் அகன்றுவிடும் என ஏற்பதற்கில்லை. டாக்டர் கே என் ராஜ் நமது சமூகம் பற்றி விவாதிக்கும்போது இது பலபடித்தான சமூகம் என எழுதினார். எளிய மார்க்சிய இனங்களையும் தாண்டிய முதலாளித்துவத்திற்கு முந்திய- இன்னும் இனக்குழு எச்சங்கள் கொண்ட சமூகம் என்றார். சாதி ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்ட நேரு அவர்கள் இங்கு சமூக மதிப்பில், வாய்ப்பில் சமத்துவம் நிலவவில்லை. சாதிய சட்டகத்துள் நின்று அரசியல் ஜனநாயகம் குறித்து பேசுவதே கடினம். இதில் பொருளாதார ஜனநாயகம் எங்கே பேசுவது என தன் ஆதங்கத்தை தெரிவித்தார். காந்தியடிகள் வர்ணம் என பேசியிருந்தாலும் அதை சமூக கடமைக்குரியனவாகவே பார்த்தார். உயர்வு தாழ்விற்கானவையாக தனது புரிதலை அவர் எங்கும் வெளிப்படுத்தவில்லை. எதுவும் ஒன்றைவிட ஒன்று தாழ்ந்ததல்ல என்கிற பார்வையுடன்தான் பேசிவந்தார். நமது அரசியலில், நமது மானுடத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற கருத்தும் நடைமுறையும் தொடர்ந்தால் நாம் சுக்குநூறாக உடைவோம் என்பதை அவர் எச்சரிக்கவே செய்தார். Untouchability is an excrescence upon varnashram - அதை களையெடுக்கவேண்டும் என்றே செயல்பட்டுவந்தார். இந்திய சமூகம் பணக்காரர்- ஏழை என்பதுடன் சாதியில் உயர்ந்தோர்- தாழ்ந்தோர் என்கிற பிரச்னையையும் கொண்டிருப்பதை மற்ற எவரையும் விட அவர் நன்றாக அறிந்தவராக இருந்தார். தனி வாக்காளர் எனும் பிரிட்டிஷ் அவார்ட் வந்தபோது அவர் வேருடனும் வேரடி மண்ணுடனும் தீண்டாமை என்பதை அழித்திட என் வாழ்நாள் முழுதும் போராடுவேன். மகிழ்ச்சியுடன் அதற்காக உயிரையும் விடுவேன் என எழுதினார். தீண்டாமை இருக்கிறது என்பதைவிட இந்து இசம் வீழ்ந்தது என்பது உகந்த ஒன்று என அவர் கருதினார். இந்து மதம் தீண்டாமையை விடுவதில்தான் தனது பெருமிதத்தை பெறமுடியும் என அறிவுறுத்திவந்தார். உலகின் இராஜ்யமே கிடைத்தாலும் தீண்டப்படாதவர் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாதென்றவர் காந்தியடிகள். The Bhangi is or should be on a par with Brahmin in all social relations என்று உரக்க பேசிய அஞ்சாமைமிக்க மனிதராக வலம் வந்தார் காந்தி. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சுரண்டலிருந்து விடுதலைப் பெறும் சோசலிச முறையை மார்க்சியர் பொதுவாக முன்வைத்தனர். பாட்டாளிவர்க்க புரட்சி என்கிற வர்ணனையாக அதைப்பேசினர். காந்தி ‘doctrine of greatest good of all’ என சர்வோதயாவை முன்வைத்தார். காந்தியின் சர்வோதயா அனைவரின் நலன் என்பதை முன் நிறுத்தியது. பெரும்பான்மை மக்களுக்கு அதிகப் பலன்கள் என்கிற பயன்பாட்டுவாதத்தை அகிம்சாவாதிகள் ஏற்று நிற்கமுடியாதென்றவர் காந்தி. A votary of Ahimsa cannot subscribe to the utilitarian formula- of the greatest good of the greatest number. He will strive for the greatest good of all and die in the attempt to realise the ideal அனைவரும் ஏதோவகைப்பட்ட வீழ்ச்சியில் இருப்பதை உணர்ந்த அவர் ‘welfare of all’ என்பதை முன்வைத்தார். பணக்காரர்கள் எப்போதோ வீழ்ந்துவிட்டனர். ஏழைகள் எழுந்திருக்கவேயில்லை என இதை வினோபா பாவே விளக்குவார். ஏழைகளுக்கு பொருளாதார உயர்வு அவசியம் - பணக்காரர்களுக்கோ moral- ethical உயர்வு அவசியம் என்கிற ஒருங்கிணைந்த பார்வையை அவர் தருவார். எனவே எந்தவொரு பகுதியையும் ‘அழித்தொழிப்பது’, ‘இல்லாது ஒழிப்பது’ சர்வோதயாவில் இருக்காது.. காந்தியடிகளுக்கு சோசலிசம் என்பது இருசாராரின் மீட்பாக - redemption of both poor and rich இருந்தது. பொதுவாக மார்க்சிய விளக்கத்தில் அவசியமெனில் ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் முதலாளித்துவ முறையை தூக்கி எறிதல் என்பது சொல்லித்தரப்படும். வன்முறை எனில் அதையும் எதிரிதான் முடிவு செய்கிறார். பாட்டாளி அதை எதிர்கொள்கிறார் என்பது பாடமாக இருக்கும். மார்க்சியப் பாடங்களை கற்றவர்களாக இருந்தாலும் திருத்தல்வாதிகள் என முத்திரையிடப்பட்ட பெர்ன்ஸ்டைன், மற்றும் இங்கிலாந்தின் பாபியன்கள் வன்முறையற்ற பாதையில் சோசலிசம் சாத்தியமே எனப்பேசியுள்ளனர். நேரு அவர்களும் காந்தியைப் பற்றி சொல்லும்போது இறுதி இலக்கும் அதை அடைவதற்கான மார்க்கமும் தூய்மையாக இருக்கவேண்டும் என வலியுறுத்துவதை குறிப்பிடுவார்- Ends were shaped by the means that led to them and therefore the means had to be good, pure and truthful- both ends and means should be noble என்பதே காந்தி கற்றுத்தந்த பாடம். தீமைகளை துப்பாக்கி முனையில் அகற்றிவிடமுடியும் என்பதில் நம்பிக்கையில்லை என பலமுறை காந்திஜி எடுத்துச் சொல்லியிருக்கிறார். முதலாளிகள், நிலப்பிரபுக்கள் பணக்காரர்கள் என எப்பெயரில் சொத்தும் வசதியும் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் code of conduct என்பதை அனுசரித்தால் நிலைமைகள் சீர்படலாம் என அவர் கருதினார். உழைப்பு அனைவருக்குமான கடமை (Obligation of Bread Labour) . இதில் ரேங்க் வித்தியாசம் என்பது இருக்கக்கூடாது. If all worked for their bread, distinctions of rank would be obliterated என்றார் காந்தி. உணவிற்கான வேலை என்பதை அவர் மேலும் அழகாக விளக்கினார். உடம்பின் தேவையை உடல் உழைப்பால் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் . உடல் உழைப்பு என்பதற்கு முற்றிலுமாக தலைவணங்கி செயல்படும் சமூகத்தில் அமைதியான புரட்சி ஏற்பட்டுவிடும் என்று அவர் தூய்மையாக நம்பினார். தர்மகர்த்தா முறையை சோசலிசதிசை நோக்கிய மாற்றாக அவர் முன்வைத்தார். தங்களுக்கு அவசியமான தேவை என்பதைத்தவிர அதிகப்படியான செல்வத்தை சமூகத்திற்குரியது- அதற்கு டிரஸ்டி என்கிற நினைவுடன் சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்க்கை முறைக்கு பணம்படைத்தவர்கள் தங்களை கீழ் இறக்கிக்கொள்ளவேண்டும் என அவர் விரும்பினார். இக்கொள்கை குறித்து பலரும் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றனர். மார்க்சியர் இதை ஏற்பதில்லை என்பதை அறிவோம். பொருளாதார அறிஞர் வி கே ஆர் வி ராவ் தர்மகர்த்தாமுறையில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பதை ஏற்கமுடியவில்லை என்றார். ஆனால் காந்தியிடமோ ‘மனிதன் மாறுவான்’ என்பது (faith of reformability of man) அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. கீழிலிருந்து கட்டுமானம் எனச் சொல்லி காந்தி இதை விளக்கினார். மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து இதை அமுல்படுத்த துவங்கினால் சாத்தியமானதாகும். ‘Stautory Trusteeship’ அரசாங்க ஒழுங்குமுறையுடன் கூடிய சட்டப்படியான தர்மகர்த்தாமுறை என்பதை அவர் முன்மொழிந்தார். இங்கும் வாரிசு உரிமை என்பது கடமை சார்ந்து வருவதே தவிர பிறப்பால் மட்டுமே பெறும் உரிமையாகாது . வன்முறை மூலம் சொத்து பறிமுதல் சமூகத்திற்கு பயனளிக்காது என்பது அவரது திடமான கருத்தாக இருந்தது. அரசு என்பதை மார்க்சியர்கள் உதிரவேண்டிய ஒன்று என சொன்னாலும் சோசலிச காலத்தில் முழுமையான அதிகாரமிக்க நிறுவனமாக வைக்க விரும்பினர். முதலாளித்துவ ஜனநாயகம் போலியானது என்றும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே அசலான ஜனநாயகம் என்கிற உரையாடலை மார்க்சியர் தந்தனர். ஜனநாயக சோசலிசம் எனும் ஆக்கத்தை எழுதிய இவான் டர்பின் போன்றவர்கள் இதை விமர்சனக் கண்கொண்டு பார்த்தனர். எனக்கு சுதந்திரம் என்பது எப்போதும் நாளைக்கு என ஒத்திப்போடப்படுகிறது. இன்று எதுவும் கிடையாது. அங்கு senseless cruelty என்பதற்கு வரையறை ஏதும் இல்லை என்கிற கடும் விமர்சனத்தை டர்பினிடம் பார்க்கிறோம். இதையே மிலோவன் டிஜிலாஸ் Tyranny over the mind என விமர்சித்தார். இந்த ‘வகைமாதிரி’ புதிய அரசியலதிகாரவர்க்கம் என்பதை உருவாக்கிவிட்டது என அவர் எழுதினார். காந்தியடிகள் லூயி பிஷர் இடையில் சோவியத்தில் நடப்பது குறித்த விவாதம் நடந்தது. காந்திக்கு அரசின் முற்றதிகாரம் என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்தது. சோவியத்தில் இரக்கமற்ற கடுமை காட்டப்படுவதாகவும் , அப்படி செய்வது தொழிலாளர் நலனுக்காகவே என்று சொல்லப்படுகிறது. என்னைப்பொருத்தவரை அதனால் நன்மை சிறிதளவே இருக்கலாம். நாளடைவில் இந்தக் கடுமை முன்பிருந்த அராஜகத்தைவிட அதிகமாகிவிட வாய்ப்பு உருவாகும் என காந்தியடிகள் தன் வாதமாக முன்வைத்தார். தனது சுதந்திர இந்தியாவில் மய்யம் அதிகாரகுவிப்பு கொண்டதாக இராது என்பது முக்கியமானதாக இருக்கும் என பிஷரிடம் கூறினார். the centre of power is now in NewDelhi or in Calcutta and Bombay, in big cities. I would have it distributed among the seven hundred thousand villages in India- that will mean that there is no power. இப்படிப்பட்ட உரையாடல்களை மார்க்சியர்களால் கற்பனாவாதமாக பார்க்கமுடியும். சாத்தியவகைப்பட்டதாக காணமுடியாது. வேர்மட்ட ஜனநாயகம் என்பதையே அவர் வலியுறுத்திவந்தார். சுதந்திரம் என்பது அடிமட்டத்திலிருந்து துவங்கவேண்டும். எந்தவொரு கிராமமும் சுயநிறைவுகொண்ட முழு ஆளுமை நிறைந்த குடியரசாக இருக்கவேண்டும். தன் சொந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறன்கொண்டதாக இருக்கவேண்டும் என அவர் நினைத்தார். “Life will not be a pyramid with apex sustained by the bottom. But it will be an oceanic circle whose centre will be individual always ready to perish for the village, the latter ready for the circle of villages, till at last the whole becomes one life composed of individuals never aggressive, in their arrogance, but ever humble, sharing the majesty of the oceanic circle of which they are integral units.” அந்தோணி பரேல் majesty of the oceanic circle குறித்து அற்புதமான விளக்கங்களை காந்தி குறித்த தன் ஆக்கங்களில் தருவதை பார்க்கமுடியும். சிறிய அளவிலான கம்யூனிட்டி கிராம சமூகம்- அதற்கான சந்தை வியாபாரம்- அரசியல் கூட தலமட்டம் சார்ந்து இயங்கும் வாழ்வில் உண்மையும் நெருக்கமும் இசைவும் இருக்கும் என காந்தி கருதினார். எது பாதை பொதுவாக கற்பனாவாத சோசலிசம் பேசியவர்கள் புரட்சிகர நடவடிக்கை எனப் பேசவில்லை. இதை எங்கெல்ஸ் விமர்சிப்பார்- They dream of experimental realisation of utopias. அவர்கள் வர்க்கப்போராட்ட சமரசத்தை செய்யவிழைகிறார்கள் என விமர்சனம் வைக்கப்பட்டது. பாட்டாளிவர்க்க ஆட்சி தனது முற்றதிகாரத்திற்காக வன்முறை மூலம் பூர்ஷ்வா ஆட்சியை தூக்கி எறியவேண்டும் என மார்க்ஸ் - எங்கெல்ஸ் எழுதினர். மானிபெஸ்டோவில் Let the ruling class tremble at a communist revoultion என்று எழுதியதைக் காண்கிறோம். இங்கு ஜெயபிரகாஷ்நாரயண் அவர்களின் ஆரம்பக்கால கருத்து மனங்கொள்ளத்தக்கது. மார்க்சியத்திற்கு சோசலிச புரட்சி என்பதைக் கொணரும் எவ்வழியும் ஏற்புடைய வழிதான். செயல்முறை தத்துவம் என்பதில் அது நெறியுள்ளது. பூர்ஷ்வா அரசை வன்முறையில்லாமல் வீழ்த்த முடியாது என்ற பொருள் தரும் லெனினது வாசகம் The suppression of the bourgeoisis state by the proletarian state is impossible without violent revolution என்றமைந்தது. . கம்யூனிஸ்ட் புரட்சி என்பதில் சதி- இரகசிய ஆலோசனை என்பதெல்லாம் ஏற்கப்பட்ட வழிமுறைகளாகவே இருந்தன. இரகசியம்- துரோகம், திடீர் கொரில்லா தாக்குதல் என்பதெல்லாம் புரட்சிகரப் போரில் (படிஸ்ட்டா ஆட்சி எதிர்த்த போரில்) தவிர்க்கமுடியாதவை என கியூபாவின் அனுபவம் பற்றிப் பேசிய செகுவாரா தெரிவித்தார். ஏற்றத்தாழ்வுடன் கொடுங்கோன்மை ஆட்சி புரியும் முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறிந்து தாங்கள் காட்டும் சோசலிச பொற்காலத்தை அமைத்திட வழிமுறைகள் பற்றி எவ்வித குற்றவுணர்வும் கொள்ளவேண்டாத மனநிலையிலேயே புரட்சியாளர்கள் - மார்க்சிய அடிப்படையான புரட்சியாளர்களும் இருந்தனர். செகுவாரா போன்றவர்கள் இப்படிப்பட்ட கொரில்லா தாக்குதல் முறைகளை ‘nobility’ என்று சொல்லிக்கொடுத்தனர். End justifies the means என்பதில் உறுதியைக் காட்டினர். வர்க்க முரண்பாடுகள் conflict மூலம்தான் தீரக்கூடியவை என மார்க்சியர் உறுதியாக நம்புகின்றனர். புரட்சிக்காரர்களான தங்களை சதிகாரர்கள் என விமர்சிப்பவருக்கு கீழ்கண்ட பதிலை லெனின் தந்தார். தங்கள் ஸ்தாபனங்களுக்கு ரகசியமுறை அவசியமானது, சதிகாரர்கள் என வரும் குற்றசாட்டுகளை பொருட்படுத்தி அஞ்சவேண்டாம் என்றார். Secrecy is a necessary condition for this kind of organisation- other conditions must be made to conform to it. It would be extremly naive indeed, therefore to fear the charge that we social democrats desire to create a conspiratorial organisation. பேணு பிரசாத் இதை சுருக்கமாக இவ்வாறு விவரிக்கிறார். marx’s theory of conflict is grounded on two pillars- Materialism and Anatagonism. மார்க்ஸ் சொல்வதை நாம் அறிவோம். இதுவரை எந்த சமூகமானாலும் ஒடுக்கப்படும் வர்க்கம்- ஒடுக்கும் வர்க்கம் என்ற எதிர்மையில் தான் செயல்படுகிறது. எனவே தான் மார்க்சின் கருதுகோள்களை விமர்சிக்கும் எவரும் பொருளாயத நிர்ணயவாதம், முரண்பாடு- மோதல் மூலம் தீர்வு- புரட்சிக்கான முன்படை என சுருக்கி மார்க்சியத்தைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. Hit and run, wait, lie in the ambush, again hit and run- repeat without giving rest to the enemy- adjusting of guerrilla action to the action of the enemy என கொரில்லா தந்திரத்தை செகுவாரா சொல்லித்தருகிறார். காந்தியின் நடைமுறை இவ்வாறு மார்க்ஸ்- லெனின் -செகுவாரா சொல்லித்தருவதற்கு நேர் எதிராக இருப்பதைக் காணமுடியும் காந்திக்கு மதமும் நெறிப்பண்புகளும் பிரிக்கமுடியாதவை. நம்மிடம் பண்புகள் வீழும் எனில் மதமும் தாழும் என்றவர் காந்தி. காந்திக்கு வழிமுறைக்கும் இறுதி இலக்கு இலட்சியத்திற்கும் பிரிக்கும் சுவர் ஏதுமில்லை. வழிமுறைகள் எப்படியிருந்தால் என்ன இலட்சிய ஈடேற்றமானால் சரி என்பதை அவர் ஏற்கமாட்டார். வழிமுறை அவருக்கு அனைத்துமாக இருக்கும். இலட்சியத்தை அடைவதில் உள்ள அதே உறுதியை வழிமுறைகளுக்கும் நீட்டிக்க விழைந்தவர் காந்தி. இலட்சியம் தான் இறுதி இலக்கு எனச் சொல்லி வழிமுறையில் எந்த விலக்கும் தரமுடியாது என்றவர். விதையும் மரமும் போல அவற்றை பார்க்க விழைந்தார். இதை ஜெனி ஷார்ப் இவ்வாறு விளக்குவார். In gandhi’s thinking, means and ends should be equally pure. The end growing out of the means is just as logical as the tree growing from the seed. சிந்தனை மற்றும் செயலில் உண்மைக்கு நெருக்கமாக இருத்தல் என்பதை சோதித்தவர் காந்தி. மரம் ஒன்றின் எண்ணற்ற இலைகள் போல் உண்மை தோற்றம் பெறலாம். அவரவர் பெறும் வெளிச்சத்தில் உண்மையுடன் பயணித்தல் என்பதே நேர்மையாகும் என அவர் பன்முக சிந்தனையை வரவேற்றார். இதை எரிக் எரிக்சன் அழகாக புரிந்து விளக்கினார். நம்மால் இதுதான் இறுதியான உண்மை என அறுதியிட்டு சொல்லமுடிவதில்லை. எனவே ஒருவரை எப்படி நாம் தண்டிக்க இயலும் என்கிற கேள்வி காந்தியிடம் இருந்தது. அகிம்சையும் அன்பும் வேறல்ல . கடவுளை உணர்தல் என்பது உண்மையைக் காணல் என்பதில் இருக்கிறது. அன்புதான் உண்மையைக் காண உதவும் வழி. அகிம்சை வழியின்றி உண்மைக்கான கதவுகள் திறவா எனபதே அவரின் செய்தியாக நமக்கு கிடைக்கிறது. அவர் காட்டிய போராட்ட வழி சத்தியாகிரகம். அரசியல் சமூக பதட்டங்களை அகிம்சை சத்தியாகிரக வழியாக தீர்த்துக்கொள்ளமுடியும் என்பது அவர் உலகிற்கு கொடுத்த பெருங்கொடை. ஜெனி ஷார்ப் இதைச் சொல்லும்போது ‘Gandhi’s philosophy of life and his method of opposing evil are both called satyagraha’ என்றார். இப்போராட்ட முறையில் வெறுப்பிற்கு இடமில்லை. ‘சுயம்’ வதைக்குள்ளாகும் என்பதை புரிந்த போராட்டம். இந்தியாவிற்கு வந்தபிறகு பிரிட்டிஷ் எதிர்த்து காந்தி நடத்திய மூன்று பெரும் இயக்கங்களும்- 1921 ஒத்துழையாமை, 1930 சிவில் மறுப்பு, 1942 பிரிட்டிஷே வெளியேறு- அகிம்சை வழிப்பட்டு அடி உதைகளை தாங்கி பெருமக்கள் பங்கேற்றவை. ஆயுதம் தாங்கிய எழுச்சியில் அவருக்கு நம்பிக்கை கிஞ்சிற்றும் இல்லை. அவை சிகிட்சை என்ற பெயரில் நோயை விடக் கொடுமையானது என்றே கருதினார். தீங்குடன் ஒத்துழைப்பதில்லை என்பதில் உறுதியாக நின்ற அவர் தான் காட்டும் கட்டுகிற இயக்கமுறைதான் பெரும்பான்மை மக்களை பங்கேற்க வைக்க மிகப் பொருத்தமானது எனக் கருதி செயல்பட்டார். டாக்டர் இராதாகிருஷ்ணன் இதை தெளிவுபடுத்துவார். பகைவரை அச்சுறுத்துவது, வேரறுப்பது என்பது காந்தி காட்டிய பாதையல்ல. பிறரது நெருக்கடிகளை சரியான தருணம் எனப் பயன்படுத்திக்கொள்ளும் பாதையுமல்ல. எதிரி எனக் கருதப்படவேண்டிய ஒருவரின் நெருக்கடியில் அவர் உதவிக்கு போய் நிற்பவராக காந்தி இருந்தார். காந்திக்கு எதிரியின் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரம் ஏதும் இருந்ததில்லை. மனசாட்சிக்கு விரோதமாக எதிரிக்கு கேடுவிளவிக்கும் காரியங்களில் ஒப்பு இல்லை. மார்க்சியர் இவைகளை நெறி சார்ந்த அம்சங்களாக பார்ப்பதில்லை. ‘இலக்கு அதுவே குறி’ என செயல்படுதல் அங்கு பாடமாக்கப்பட்டுள்ளது. காந்தியைப் பொருத்தவரை தான் நடத்தும் எந்த போராட்டத்தையும் முன்கூட்டியே தெரியப்படுத்திவிடுவார். எவரை எதிர்த்து போராடப்போகிறோமோ அவரும் முழு ஆயத்தத்துடன் இருப்பதையே காந்தி விழைந்தார். இதை காந்தியின் வாக்கியங்களில் காணமுடியும். சத்தியாகிரகத்தில் ஏமாற்று, மோசடி என ஏதும் இருக்கமுடியாது. காந்தியடிகளுக்கு அரசியல் என்பது சாதுர்யமான பேரம் பேசும் விஷயமல்ல- அது உயர்ந்த நெறியாண்மைக்கானது- கடமை , சுயத்தியாகம் நிறைந்தது- எதிரி மீதும் அன்புபூண்டு ஒழுகுவதாக இருப்பது. ஆர்னால்ட் டாயின்பீ காந்தி குறித்து சொல்லும்போது வெறுப்பின்றி, இரத்தக்களறியின்றி இலட்சக்கணக்கான மக்களை போராட்டப்பாதைக்கு அழைத்து செல்லமுடியும் எனக் காட்டியவர். இதையும் அணுகுண்டு காலத்தில் நடத்திக்காட்டியவர் என எழுதியிருந்தார். ஆல்பிரட் அயின்ஸ்டின் காந்தி கண்ட மனித டெக்னிக் குறித்து பேசும்போது He has invented an entirely new and humane technique for the liberation struggle for an oppressed people and carried it out with greatest energy and devotion என எழுதினார். சோசலிசம் என்பது உன்னதமான நெறிமிகுந்த சமுதாயம் என்றால் அதை அடைவதற்கான வழிமுறைகளும் நெறி மிகுந்தவையாகவே இருக்கவேண்டும். உண்மைக்கு புறம்பான வழிகளில் உண்மையை நெருங்கிவிடமுடியாது. அடிமைகளால் எப்படி சுதந்திர சமுதாயம் கட்டுவது கடினமானதோ, அதேபோல் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளால் இலட்சிய சமூகத்தை கட்டிவிடமுடியாதென்றார் காந்தி. அகிம்சாமூர்த்திகளுக்கு பலவகை குணங்களை காந்தி ஏற்றுவார். இவ்வுலகில் மிகவும் கடைநிலையில் உள்ளவர்களிடம் இல்லாத ஒன்றை அகிம்சாவாதி விரும்பக்கூடாது என்பது அதில் ஒரு குணம். இது மிகவும் கடினமான பயிற்சிதான். The principles of non violence necessitates complete abstention from exploitation in any form என்பது அவர் உருக்கித்தரும் வாக்கியம். நேர்வழிகளில் வராத சம்பாதியத்திற்கு துணைநிற்பதல்ல அகிம்சை என்கிற விளக்கமும் அவரிடம் கிடைக்கும். தங்களின் சுயமரியாதை- கெளரவம் தவிர அனைத்தையும் சத்தியாகிரகி தியாகம் செய்ய சித்தமாயிருக்கவேண்டும் என்கிற ஆயத்தப்படுத்தலை அவர் செய்தார். தன்னை நீண்டநாள் சோசலிஸ்ட் என அழைத்துக்கொண்ட காந்தி ‘சமூக அநீதிக்கு’ எதிராக எழாதவர் அகிம்சாமூர்த்தியல்ல - எனது சோசலிசம் புத்தகவழியிலானதல்ல- அகிம்சாவழியிலானது என்றார். போல்ஷ்விக்குகள் பற்றி அவ்வப்போது தனக்கு தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியவர் காந்தி. அவர்களின் வன்முறை, கடவுள் மறுப்பை ஏற்கமுடியவில்லை என்றார். “எனக்கு போல்ஷ்விசம் குறித்து முழுமையாக தெரியவில்லை. என்னைப்பற்றி கருத்துக்களை உதிர்க்கும் போல்ஷ்விக் நண்பர்களுக்கு நான் சொல்ல விழைவதெல்லாம் உங்களது உயர்ந்த இலட்சியத்தை நான் ஏற்கவே செய்கிறேன். ஆனால் உங்களது வன்முறை பாதையை ஏற்க என்னால் இயலாது. இதில் என்னிடம் சமரசம் ஏதுமில்லை. வன்முறைகளால் உயர் இலட்சியங்களை எட்டவே முடியாது. வன்முறையுடன் எனக்கான சந்திப்பு புள்ளிகள் இல்லை” காந்தி மேற்கூறிய பாராவில் தன்நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்துவிடுகிறார். மார்க்சியர்களும் காந்தி குறித்த விமர்சனங்களை வெளிப்படையாக வைத்துள்ளனர். தனக்கு போல்ஷ்விசம் பற்றி தெரியாது எனச் சொன்னாலும் உயர் இலட்சியங்களை வன்முறை சார்ந்து எட்டுவது என்பதை ஏற்பதிற்கில்லை என்கிற தெளிவு அவரிடம் இருந்தது. தனியார் சொத்து என்கிற முறையை போல்ஷ்விக்குகள் ஒழிக்க விரும்புகின்றனர். சொத்தின்மை- சொத்தில் பற்றின்மை என்பது அருமையான பொருளாதார நெறிதான். ஆனால் ஒவ்வொருவரும் அதை தாமே உணர்ந்து கைக்கொள்தல் நலமானது. போல்ஷ்விசத்தில் இந்த நடைமுறை அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தும் வழியில் செய்யப்படுகிறது. கட்டாய அரசு சொத்துரிமை கொண்டுவரப்படுகிறது என்று போல்ஷ்விக் பற்றிய புரிதலையும் , விமர்சனத்தையும் அவரிடம் பார்க்கமுடிகிறது. கம்யூனிசம் என்பது இறுதியில் என்ன- வர்க்கபேதமில்லாத சமூதாயம்- வர்க்கமில்லாத சமுதாயம். அது நல்ல இலட்சியமே ஆகும். ஆனால் அதை அடைவதற்கு force என்று சொல்லும்போது நான் அவர்களிடமிருந்து பிரிந்து செல்லவேண்டியுள்ளது எனவும் காந்தி குறிப்பிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் தான் துவக்கப்படுகிறது. ஆனால் 1924 லேயே காந்தி தன் பாதை என்ன என்று தெளிவுபடுத்தினார். எனது பாதை தெளிவானது. உண்மையைத் தவிர ராஜதந்திரம் என ஏதுமில்லை. அகிம்சையை தவிர வேறு கருவி என்னிடம் இல்லை. ’ My path is clear. Any attempt to use me for violent purpose is bound to fail. I have no secret methods. I know no diplomacy save that of truth. I have no weapon but non violence. " ஜூலை 1946ல் லூயி பிஷர் உரையாடலில் இதை மீண்டும் அவர் தெளிவாக்குகிறார். எனது பல சோசலிச நண்பர்களின் தியாக உணர்வு, சுயம் மறுத்தல் போன்ற பல குணங்களை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் எனக்குள்ள வேறுபாடுகளை மறைக்காமல் சொல்லிவிடுகிறேன். அவர்கள் வெளிப்படையாக வன்முறை என்பதை பேசுகிறார்கள். நானோ முழுக்க முழுமையாக அகிம்சையின் வழி நிற்பவன். இவ்வளவு அருமையான உரையாடலை காந்தியடிகள் சோசலிசம் எனும் மிக உயர் இலட்சியம் குறித்தும் அதை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் செய்துள்ளதை பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. முழுமுதலான அகிம்சை என்பது சாத்தியமல்ல என அவர் ஏற்கிறார். அது only a theory like Euclid’s point or straight line என அவர் சொல்வதைக் காண்கிறோம். வாழ்வில் அனைத்து தருணங்களிலும் வன்முறையை கைவிட்டுவிட்டோம் என்பது இருக்கமுடியாது என்பதையும் அவர் ஏற்றே இருந்தார். காந்தியிடம் உங்களைப்போலவே உண்மையின்பாற்பட்டு லெனின் சமரசங்கள் செய்வதில்லை என ரொமெயின் ரோலந்த் தெரிவித்தார் என்பதை அறிகிறோம். அதே போல் காந்தி கூட ஸ்டாலின் குறித்து ஒருமுறை I may not pass judgment on a great people and a great man like Stalin என்று சொன்னதைக் காணமுடிகிறது. லெனின் போன்றவர்கள் மானுட முன்னேற்றத்திற்கு செய்த தியாகங்கள் வீண்போகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இப்படி வன்முறை மூலம் கட்டப்பட்டு வருகிற போல்ஷ்விக் இராஜ்யம் நீடித்து நிற்க முடியாது என்றும் சொல்லியுள்ளார். அரசும் புரட்சியும் என்பதில் லெனின் இவ்வாறு எழுதியுள்ளதை காந்தி நேரிடையாக படித்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் போல்ஷ்விக் அரசு என்பது குறித்து அவருக்கு பலர் எடுத்து சொல்லியிருக்கக்கூடும். “The proletariat needs state power, the centralised organisation of force, the organisation of violence, both to crush the resistance of the exploiters and to lead the enormous mass of the population, the pesanatry, the petty bourgeosie, and the semi proletarians in the work of organising socialist economy” பாட்டாளிகளின் புரட்சிகர சர்வாதிகாரம் பற்றிப் பேசிய லெனின் புரட்சிகர பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வன்முறையால் பெறப்பட்ட அதிகாரம். அது சட்டங்களுக்குள் அடங்காது என குறிப்பிட்டதையும் காண்கிறோம். லெனின் ஸ்டாலின் காலம் குறித்த மிலோவன் டிஜிலாஸ் கீழ்கண்ட பதிவைத் தந்தார். லெனின் கடுமையாக நடந்து கொண்டார். ஸ்டாலினோ சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். கட்சியில் கொள்கைப் போராட்டம் இல்லாமல் ஆக்கப்பட்ட நிலை- சமூகத்தில் சுதந்திரம் என்பதில்லை. “Lenin’s dictatorship was strict, but Stalin’s dictatorship became totalitarian. The abolition of all ideological struggle in the party meant the termination of all freedom in society.” இந்தியாவில் இவ்வாறு நேரிடையாக வன்முறைவழிப்பட்டு புரட்சி என ‘மெயின்ஸ்ட்ரீம் இடதுசாரிகள்’ சொல்லாவிடினும் ஆயுதம் ஏந்துவதை எதிரிகளே தீர்மானிப்பார்கள் என சொல்வதை பார்க்கமுடியும். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என இந்திய ‘மெயின்ஸ்ட்ரீம்’ கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுவதில்லை. சோசலிச சமூகம் கட்டுவதன் பெயரால் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்தமுடியுமா என்கிற கேள்வியை டிஜிலாஸ் எழுப்பினார். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என சொல்லப்பட்ட காலத்தில் வர்க்கங்கள் மறைந்துவிட்டனவா- அல்லது அந்த அதிகாரம் wither away ஆவதற்கான அறிகுறிகள் தென்பட்டனவா எனவும் அவர் கேள்விகளை முன்வைத்தார். இந்திய மார்க்சியர்களும் காந்தியத்திடம் தங்கள் கேள்விகளை முன்வைக்கமுடியும். அவரின் தர்மகர்த்தா முறையை ஏற்றுக்கொண்டு முதலாளித்துவ- நிலபிரபுத்துவ வர்க்கங்கள் நடந்துகொள்கின்றனவா- திருந்திவிட்டனரா எனக் கேட்டு எதிர்மறையான எதார்த்தம் நிலவுவதைக் காட்டமுடியும். ஹரிஜன் பத்திரிகையில் 1938லேயே காந்தி உலகிற்கான மாதிரியாக ருஷ்ய சர்வாதிகாரத்தை எடுத்துக்கொள்ளமுடியாது என எழுதினார். சர்வாதிகாரம் மூலம் ருஷ்ய ஆட்சியாளர் அமைதிக்கான கனவைக்காண்கிறார்கள். இரத்தவெள்ளத்தில் அக்கனவை நிறைவேற்றமுடியாது. அசமத்துவத்தை ஒழிக்க வன்முறையா அல்லது அகிம்சையா எது வழி என்பதை காங்கிரஸ் முடிவெடுக்கவேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்தார். சிலர் ருஷ்யாவின் சாதனைகள் எனப் பேசிவந்தபோது இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தினார். எதன் பெயரில் ‘ruthlessness’ என்றாலும் அது ஒருவகை அராஜகமாகவே முடியும். முன்பு நிலவியதை விட கூடுதலாகக் கூட முடியலாம் என அவர் தெரிவித்து வந்தார். விடுதலை என்பது கட்டற்ற சுதந்திரமல்ல- அது சுயக்கட்டுப்பாடுகொண்ட ஒன்றே என காந்தி கருதினார். ஹிட்லரிசம் பிற நாடுகளின் சுதந்திரத்தை அழிக்க விழைகிறது என்ற கருத்தும் அவரிடம் இருந்தது. இந்தியாவில் சோசலிசத்தை யாரால் கட்டமுடியும் என்பதற்கு காந்தி தந்த பதிலில் தூய இதயம் கொண்டோரின் வன்முறையற்ற பாதையால் உண்மைக்கு மிக நெருக்கமானவர்களால் சாத்தியமாகும் என்பதைக் காண்கிறோம். “Only truthful, non violent and pure hearted socialist will be able to establish a socialistic society in India and the world.. without the means described above the existence of such society is impossible.” இந்தப் பதில் மார்க்சியர்கள் பேசுகின்ற வர்க்கப்போராட்டம்- அதன் இலக்கு என்ற வகையில் அமையவில்லை. சோசலிஸ்ட்களின் வழிமுறையையும் நெறிமுறையையும் பிரதானமாக்கும் பதிலை காந்தி தருகிறார். வர்க்கமோதல்- வர்க்கப்போராட்டம்- அதன் மூலம் முரண்கள் தீர்ந்து எழும் புது சோசலிச சமூகம் என்கிற மார்க்சிய வகைப்பட்டு காந்தி யோசிக்கவில்லை. அனைத்து நாடுகளும் சோசலிசம் நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாதது என்று லெனின் சொன்னாரே தவிர அப்பாதை ஒரேவகைப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற அவசியத்தை சொல்லவில்லை . சோசலிசத்திற்கு செல்லும் ஒவ்வொரு சமூகமும் அதன் பங்களிப்பை நல்கவே செய்யும் என்கிற கருத்தை லெனின் வெளிப்படுத்தாமல் இல்லை. நடைமுறையிலும் சோவியத் வகைப்பட்டதும் சீனா வகைப்பட்டதும் வெவ்வேறாக இருந்ததைக் காண்கிறோம். காந்தி இங்கு அகிம்சைவகைப்பட்ட புதிய சமுதாயம் எனக் கனவுகொண்டிருந்தார். கத்தியை உருவிக்கொண்டு இந்தியா நிற்குமெனில் அது தற்காலிக வெற்றியை தரலாம். ஆனால் என் இதயம் இந்திய பெருமிதம் என்பதை உதறிவிடும் எனக் காந்தி பேசினார். ருஷ்ய அனுபவமோ, சீன அனுபவமோ அல்லது மனிதத்தன்மையை மறுத்து வன்முறைவழிப்பட்ட வேறு அனுபவமோ எனக்கு ஏற்பாக இல்லை. அதைப் பின்பற்ற என்னால் முடியாதென்றார். ‘மக்கள் மீது திணிப்பு’ என்கிற வகையில் கம்யூனிசம் கட்டமுடியுமா என்கிற கேள்வி அவரிடம் இருந்தது. ருஷ்ய ஸ்டாலின் வகைப்பட்ட கம்யூனிசம் இந்தியாவில் நிற்காது எனவும் அவர் பிஷரிடம் கருத்து தெரிவித்தார். காந்தி- ஜோஷி கடிதப்போக்குவரத்தும் சில விவாதங்களை கூர்மைப்படுத்தியதைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சோவியத் பங்கேற்பு என வந்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட்கள் மக்கள் யுத்தம் என்ற கருதுகோளை முன்வைத்து செயல்பட்டதை காந்தி கேள்விக்கு உள்ளாக்கினார். தோழர் பி சி ஜோஷி காந்தியடிகளுக்கு விரிவான பதிலை அனுப்பினார். வரவு- செலவு நேர்மை, கம்யூனிஸ்ட்கள் சோவியத் சொற்படி வெளிக்கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா போன்றவை குறித்து அவர்கள் விவாதம் சென்றதைக் காணலாம். ஜூன் 8 1947ல் தன்னை சந்திக்க வந்த கம்யூனிஸ்ட்கள் சிலருடன் உரையாடிய காந்தி அப்போதும் தன் மனம் திறந்தார். பெரும் இலட்சியங்களை பேசும் நீங்கள் நியாயம் அநியாயம் – உண்மை, பொய் என்பதை வேறுபடுத்தி பார்க்காமல் இருக்கிறீர்கள். இந்திய கலாச்சாரத்தை விமர்சித்துவிட்டு, ருஷ்யாவை உங்களின் ஆன்மாவில் இருத்திக்கொண்டுள்ளீர்கள். மற்றவர் சாப்பிடுவதைக்கொண்டு நான் உயிர் தரிக்கமுடியாது. என் இருப்பிற்கானதை நான் எடுத்துக்கொண்டாகவேண்டும் என்கிற விளக்கம் அவ்வுரையாடலில் கிடைக்கிறது “You profess lofty principles but your conduct belies them, because you seem to make no distiction between truth and falsehood, justice and injustice. What to me even pathetic is that you regard Russia as your spiritual home. Despising indian culture, you dream of planting the Russian system here. Food however rich that another person eats cannot sustain me. I can be sustained only by what I eat. In the same way what an outside doer does, gives me no satisfaction as it seems to give you.” பட்டினியால் மெலிந்து கிடப்போருக்கு நியாயம் கிட்டவேண்டும் என காங்கிரஸ் நினைத்தால் அவர்கள் முதலாளிகளுக்கு சலுகை என்ற எண்ணத்தைக் கைவிடவேண்டும் என காந்தி ஹரிஜனில் ஆகஸ்ட் 13, 1938ல் எழுதினார். பொருளாதார சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் முதலாளிகளிடமிருந்து மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்தும் கூடத்தான் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் பொருள் அவர் முதலாளி- தொழிலாளி வர்க்க மோதல் மூலம் தீர்வு என்பதை ஏற்றார் என்பதில்லை. முதலாளித்துவ வெறுப்பு என்பது அவர் திட்டத்தில் இல்லை. காந்திய அகிம்சை ‘விதிவிட்ட வழி’ எனப் பேசுவதில்லை. தீங்குடன் ஒத்துழையாமை- அதை மறுத்து நிற்பது என்பதையே அது பேசுகிறது. இதை பேணுதர் பிரதான் ‘resistance is inherent in the Gandhian concept of Non Violence’ என மதிப்பிடுவார். காந்தியின் அகிம்சையில் பழிவாங்குதலுக்கு இடமில்லை. ஆனால் அதற்கு போராடும் திறன் என்பது அவசியம். காந்தி தன் மொழியில் இவ்வாறு விளக்கம் தந்தார்- Non Violence and cowardice go ill together. ஆபத்தில் இருப்பவர்களை காக்காமல் ஓடுவதல்ல எனது அகிம்சை. கோழைத்தனமா வன்முறையா எது என நிலை வந்தால் வன்முறைதான் என முடிவெடுப்பேன் என்றார் காந்தி. அவரைப்பொருத்தவரை அகிம்சை என்பது வீரத்தின் உச்சியாகும் (summit of bravery). சமூகத்தில் நிலவும் அனைத்துவகை அரசியல், பொருளாதார சமூக தீங்குகளை சத்தியாகிரகம் மூலம் களையமுடியும்- it is highest and infallible means- சோசலிசத்தை வேறுவழியில் அடையமுடியும் என தான் கருதவில்லை என உறுதிபட நம்பினார் காந்தி. பிறரிடம் திருடுபவனால் தான் உண்மையானவன், அன்பானவன் என எப்படி சொல்லிக்கொள்ளமுடியும். தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாத ஒன்றையோ வைத்துக்கொள்வது திருட்டு என்றே அவர் கருதினார். இந்த எண்ணத்தை அனார்க்கிச சிந்தனையாளர் புருதான் எழுதியதுடன் ஒப்பிட்டு பேணுதர் பிரதான் இவ்வாறு எழுதினார் Thus like Proudhan who considered all property as theft Gandhi considered acquisition of all surplus beyond one’s basic minimum and absolute necessity as act of theft. திருடாமை என்ற கொள்கையை கைவிட்டதால்தான் உலகில் வறுமை இருப்பதாக காந்தி எழுதினார். Non possession is allied to Non stealing என்றவர் காந்தி. சத்தியாகிரகி இதை நடைமுறையாக கைக்கொள்ளவேண்டும் என எதிர்பார்த்தார். உடைமையாக வைத்திருப்பதற்கான அளவுகோலையும் அவர் வெளிப்படுத்தினார். தேவைக்கதிகமாக வைத்திருப்பது குற்றம் என்றார். காந்தியின் non possession என்பது சமத்துவ கருதுகோளை தாங்கியதாக வெளிப்படுவதைக் காணமுடியும் . இந்த உடலை உடைமையாக நாம் பெற்றுள்ளது என்பதை சேவைக்காக எனப் புரிந்து கொள்ளவேண்டும். உடல் குறித்த பெருமிதம் அல்லது அதிக நுகர்வு என்பது நோக்கமல்ல என அவர் சொல்லித்தந்தார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கான இரகசியம் உடைமை துறத்தலில்தான் என்பதை வாழ்ந்து உணர்த்தியவர் காந்தி. சத்தியாகிரகியின் நோக்கம் எதிரியை சங்கடப்படுத்துவதல்ல- அவரின் மனமாற்றத்தை நோக்கியது. அதற்கு அசாதாரண உறுதிப்பாடு தேவையாகிறது. எப்போதும் தீங்குடன் ஒத்துழைக்கமுடியாத உள்ளமது. தங்களின் ஒத்துழைப்பு இருக்கும்வரை தான் சுரண்டல்காரர்கள் அதனை செய்ய இயலும் என்பதை பாதிக்கப்படுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டினார். மூலதனத்திற்கு ஓர் அதிகாரம் இருந்தால் உழைப்பிற்கும் அதனை எதிர்கொள்ளும் சக்தியுண்டு என்ற நம்பிக்கையை அவர் தந்துகொண்டே இருந்தார். சர்வோதயா காந்தி சர்வோதயா என்கிற பதத்தை 1904லிருந்தே பயன்படுத்த துவங்கினார். ரஸ்கினின் கடையனுக்கு மோட்சம் அவரிடத்தில் உடனடி மாற்றத்தை உருவாக்கியது. அதை அவர் உள்வாங்கி குஜராத்தியில் மொழிமாற்றம் செய்தபோது சர்வோதயா என பெயரிட்டார். ரஸ்கினின் Unto the Last யை காந்தி மந்திரசக்திகொண்ட நூல் எனக் குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்து அவர் மூன்று முக்கிய பாடங்கள் அல்லது கருத்தாக்கங்களை எடுத்துக்கொண்டார். - The Good of the individual is contained in the good of all. - That a lawyers work has the same value as the barbers’ in as much as all have the same right of earning their livelihood from their work - That a life of labour is the life worth living. முதல்கோட்பாடு அனைவரின் நலன் என பேசினால் அடுத்த இரண்டும் அதற்கு துணைநிற்கவேண்டியனவாக இருப்பதைக் காணலாம். ரஸ்கின் ஆக்கத்தில் இப்படி நேரிடையாக கருத்துக்கள் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் அதிலிருந்து பெறப்பட்ட அம்சங்களாக சர்வோதயா முன்மொழிதல்களைக் கொள்ளமுடியும். வினோபா விளக்கத்தில் Antyodaya- uplift of last இருந்தாலும் காந்தி அனைவரின் நலன் என்பதையே பயன்படுத்தினார். இந்திய ஞானிகளிடம் integrated view of Universe- இருந்தது எனப் பேசப்படுவதைக் கேட்கிறோம். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும் மானுட வாழ்வின் ஒற்றுமைக்கான அன்பை நமது சமய வாழ்வு வெளிப்படுத்தட்டும் எனப் பேசினார். வாசுதேவ குடும்பகம் என்பது அடிக்கடி காட்டப்படும் மேற்கோளாக இருக்கிறது. ‘பிறப்பொக்கும்’ என்பதையும் ‘எல்லோரும் இன்புற்று இருக்க’ என்பதையும் தமிழ் சொல்லிக்கொடுத்துள்ளது. புத்தரின் சுட்ட நிபடாவும் அனைத்து உயிர்களும்- வலிமையானதோ, மெலிந்ததோ அமைதியாக வாழ ஆசிர்வதிக்கப்படட்டும் எனப் பேசுகிறது. ஜைன நல்லாசான் சமந்தபத்ர என்பார் சர்வோதயம் என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது. காந்தியின் சர்வோதயா உருவாக்கம் பற்றிப் பேசும்போது ‘combined effect of Common humanity as preached by all religions’ என பேணுபிரதான் வந்தடைகிறார். திரு தர்மாதிகாரி அவர்கள் இதை விவரிக்கும்போது அனைவரின் வளர்ச்சி- ஒருசேர வளர்ச்சி என்பதே சர்வோதயா என்றார். It connotes simultaneous blossoming of the life of all individuals. Life itself signifies growth awkening and upliftment. Hence simultaneous growth of all is the very essence of Sarvodaya. ஜெயபிரகாஷ் போன்றவர்களே அனைவருக்கும் நன்மை எப்படி சாத்தியம் என்கிற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினர். திருடனுக்கும் கள்ள மார்க்கெட்காரனுக்கும், சுரண்டல்காரனுக்கும் இதை எப்படிசொல்வது. இவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் நன்மையை ஒருவர் செய்ய முடியுமா?. கண்ணாடி டம்பளர் ஒன்றில் மண் தூசி ஒட்டினால் அதை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் பேராசை தூசு படிந்து மனிதன் அழுக்காகியுள்ளான். சுத்தப்படுத்தவேண்டும். இதற்கு தொடர்ச்சியான முயற்சி தேவை என்கிற பார்வையை ஜே பி வைத்தார். வினோபாபாவே வேறு ஒருவகை பதிலைத்தந்தார். அனைவரும் வீழ்ந்து கிடக்கிறோம். பணக்காரர்கள் எப்போதோ வீழ்ந்துவிட்டனர். ஏழைகளால் இன்னும் எழவே முடியவில்லை. எனவே அனைவரும் எழவேண்டிய நிலையில் இருக்கிறோம். அனைவரும் உயர்த்தப்படவேண்டியவர்களே. “We are all fallen, and everyone needs to rise. The rich are fallen long since and the poor have not risen at all. The result is that both need to be uplifted” தேசபக்தி என்பதையும் நெறிமுறையையும் வேறுபடுத்தி காந்தி பார்க்கவில்லை. மானுட சேவை மனிதாபிமானம் என்பதில்தான் என் தேசபக்தி இருக்கிறது என்றவர் காந்தி. பொருளாயத நலன்கள் மேற்கு நாடுகளின் ஆன்மாவின் சாரத்தைக் கொன்றுள்ளன என்பதை இந்திய முன்னேற்றம் எடுத்துக்கொள்ளவேண்டும் என நேருவும் ஏற்றுகொண்டார். போல்ஷ்விக்குகளின் இராஜ்யத்தில் மனிதன் அரசால் உருவாகிறான். அவனது சுதந்திரம், தேர்வு சுதந்திரம் எல்லாம் நிபந்தனைக்குட்பட்டவை என ரெனேமில்லர் (Rene Fulop Miller) விவரித்தார். “In The Bolsheviks Raj mass- man was produced by the State and came equipped with a synthetic outlook on life. He was conditioned to accept freedom from thought, freedom from choice and freedom from personal decison and in return he received the emotional security of a robot” நாகரீகம் என்பது ‘சுதந்திரமனிதன்’ என்பதை முன்தேவையாகக் கொண்டுள்ளது என்று ஆல்பர்ட் சுவிட்சர் எழுதினார். காந்தி மனிதனின் சர்வாம்ச வளர்ச்சி குறித்து சிந்தித்தவராக இருந்தார். அதில் பொருளாதார வளர்ச்சியே அருமருந்து என்கிற பார்வை இருக்காது. பொருளாயத தேவைகள், நெறிசாந்த தேவைகள், ஆன்மீகத் தேவைகள், ஒழுக்க நெறிகள் என பன்முக தேவைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்கும். வேலை என்பது சேவைதான்- கடமைதான். அனைத்து கடமைகளும் சமூக மேம்பாட்டிற்கே என்பது சர்வோதயா தரும் செய்தி. சர்வோதயாவும் சாதிபேதமற்ற வர்க்கபேதமற்ற சுரண்டலில்லாத சமூகம் என்பதையே கனவாக முன்வைக்கிறது. கம்யூனிசமும் காந்தியமும் ஒரே அடிப்படைமேல்தான் கட்டப்பட்டுள்ளன. அந்த அடிப்படை ‘இல்லாதவரை முன்னேற்றுவது’ என்பதாகும் என வினோபாபாவே கூறினார் . இதையே மஷ்ருவாலா காந்திக்கும் மார்க்சிற்கும் ஒரேவகை இலட்சியம் ‘ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றம்’ என்பதுதான் என்றார். . சர்வோதயா ‘emancipation of all’ எனப் பேசுவதால் அது ‘supreme revoultionary idea’ என வினோபாபாவே வாதாடினார். பொருளாயத நலன்கள் என்பதை மட்டும் முன்வைத்து சமூக புனர் நிர்மாணம் செய்யமுடியாது. அதற்கு மனித கட்டுமானமும் அவசியம். அதை சர்வோதயா சொல்கிறது என ஜெயபிரகாஷ் பேசினார். உண்மையான சோசலிஸ்ட்களுக்கு சர்வோதயாவை பின்தொடர்வதில் தயக்கம் இராது என்கிற நிலைப்பாட்டிற்கு ஜெயப்பிரகாஷ் வந்து சேர்ந்தார். ராஜாஜி சொல்லும்போது காந்திக்கு மிகப்பெரிய பேராசையுடனான இலட்சியம் இருந்தது. அனைவரின் நலன் எனப்படும் அதனை அவர் சர்வோதயா எனத்தந்தார் என்கிறார். சட்டம் தவறான செயல்களை தடுக்க நினைக்கலாம்- ஆனால் சரியான செயல்களை சட்டம் போட்டு செய்யயவைக்க முடியாது. அரசு சோசலிசம் கூட அடக்குமுறை கொண்டதாகவே இருக்கும்- எனவே மக்கள் சோசலிசம் என ஜெயபிரகாஷ் பேசத்துவங்கினார். காந்தி இதையே ‘Voluntary socialism’ என்கிற பொருளில் விளக்கினார். வினோபாபாவே மார்க்சியம் கூட நாளடைவில் சர்வோதயத்துடன் இணைந்துவிடும் என்கிற தன் விழைவை தெரிவித்தார். முதலாளி- தொழிலாளி முரண் இருப்பது உண்மைதான். பரஸ்பர நன்மைக்கு வேலை செய்யமுடியாது என நினைப்பது சரியல்ல. தொழிலாளரின் உரிமையை மட்டும் பேசி கடமைகளை குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல. முடிவே முக்கியம் என வழிமுறைகள் பற்றி கவலையில்லாமல் இருப்பதும் சரியல்ல இந்த தலைவர்கள் கருதினர். எல்லோரிடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது. தங்கள் உழைப்பால் ஜீவன வழிகளை தேடிக்கொள்ள ஒரே மாதிரியான உரிமை அனைவருக்கும் இருப்பதால், சவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வக்கீலின் வேலைக்கும் உண்டு. நிலத்தில் உழுது பாடுபடும் உழவர், கைத்தொழில் செய்து உழைக்கும் உழைப்பாளி வாழ்க்கை மேன்மையான வாழ்க்கை. அறிவு உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் முரண் இல்லை. புத்தி உழைப்பு என்பது உடல் உழைப்பிற்கு சமானமானதல்ல. மூளை உழைப்பு உள்ளத்தின் திருப்திக்காக என்கிற புரிதல் காந்தியிடம் இருந்தது. அறிவு வளர்ச்சிக்குக்கூட பிரயோசனமாகிட உடல் உழைப்பில் நாம் ஈடுபடவேண்டும் என்று உழைப்பின் மேன்மையை அவர் வற்புறுத்திவந்தார். மனிதனுக்கு உடல்தான் உண்டேயன்றி ஆன்மா இல்லை என்று ‘ராஜ்ய பொருளாதாரம்’ எண்ணிக்கொண்டு சட்டங்களை செய்துவிடுகிறது. மனித நலன்கள் மாறுபட்டு இருக்கும் என்பதால் விரோதம் பாராட்டி பலாத்காரம் தந்திரத்தை பயன்படுத்துவது சரியல்ல. சுயநல இலாபத்திலிருந்து செயல்முறைகளை வகுப்பது வீணான முயற்சி. செயல்கள் நீதியின் பலன்களை அனுசரித்து இருக்கவேண்டும். சிறப்பானது எது என அறியமுடியாமல் போகலாம். நியாயமான - அநியாயமான காரியம் பற்றி அறியமுடியும். நீதி என்பதில் அன்பு கலந்திருந்தல் வேண்டும். மனிதனை எந்திரம் போல் பாவிக்கக்கூடாது. அவனுக்கு ஆன்மா இருக்கிறது. அது அவனுடன் உரையாடிக்கொண்டிருக்கும். எஜமானனுக்கும் தொழிலாளிக்கும் குறிப்பிட்ட அளவு சக்தியும் புத்திசாலித்தனமும் இருந்து , பலன் ஒருவொருக்கொருவர் அன்பினால் ஏற்படுவதாக இருக்கவேண்டும். விரோதத்தால் கூடாது. தாராளமாக நடந்துகொண்டால், அன்புகாட்டினால் தவறாக உபயோகித்துக் கொள்ளப்பட்டுவிடும் என்பது இவ்விஷயத்தில் உண்மையல்ல. தொழிலாளியை உங்களின் பொருளாதார நோக்கமில்லாமல் அன்பாக நடத்துங்கள். படையின் தளபதி- சிப்பாய் உறவாக அவ்வுறவு இருக்கிறது. குறைந்த ஊதியத்திற்கு யார் கிடைப்பார் என பார்க்கக்கூடாது. பிரதமரை, டாக்டரை, வக்கீலையெல்லாம் குறைந்த ஊதியத்திற்கு எனப் பார்த்தா தேடுகிறோம். அதேபோல் சிறந்த தொழிலாளிக்கும் ஊதியம் கொடுப்பதை பார்க்கவேண்டும். மதப்பிரச்சாரகர் நல்ல அல்லது மோசமான பிரச்சாரகரா- வைத்தியர் நல்ல அல்ல மோசமான வைத்தியரா எனப் பார்த்தா கட்டணம் செலுத்தமுடிகிறது. அதேபோல்தான் தொழிலாளரையும் நடத்தவேண்டும். ‘நிரந்தரமற்ற வேலை’ எனில் அதற்கு நிரந்தரமாக வேலை பார்ப்பவர்களைவிட அதிக கூலி கொடுக்கவேண்டும். நிரந்தரவேலை எனில் நிர்ணயமான சம்பளம் பாதுகாப்பு இருப்பதால் சற்று ஊதியம் குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் வேலை போய்விடும் என்ற நிலையிலிருப்பவர்க்கு கூடுதல் ஊதியம் தரும் முறை வேண்டும் என்றார் காந்தி. ஆனால் விடுதலை இந்தியா இந்த ஆலோசனையை எடுத்துக்கொள்ளவேயில்லை என்பதைக் காண்கிறோம். வர்த்தகம் என்றாலே ஏமாற்று என்பது மாறவேண்டும். உண்மையான வர்த்தகத்தில் சில நேரம் நட்டம் வரலாம். சிப்பாயின் தொழில் நாட்டைக்காப்பது- மதப்பிரச்சாரகர் எனில் உபதேசிப்பது, வைத்தியரின் தொழில் மக்கள் ஆரோக்கியம், வக்கீலின் தொழில் நீதியை வற்புறுத்தல் என்றால் வர்த்தகர் தொழில் மக்களுக்கு வேண்டிய பொருட்களை கிடைக்கச் செய்தல். அவசியமெனில் சாகவும் தயாரான கடமை இவற்றில் இருக்கிறது. எப்பொழுது தன் உயிரைக்கொடுக்கவேண்டும் என அறியாதவன் எப்படி வாழவேண்டும் என்பதையும் அறியாமல் இருக்கிறான் என காந்தி கூறினார். செல்வம் என இருந்தால் ஏழ்மை என்ற சொல்லும் இருக்கிறது. செல்வம் மின்சக்தி போன்றது. சமத்துவமின்மை மூலம் அது இயங்கிவருகிறது. உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் பக்கத்துவீட்டுக்காரருக்கு தேவையில்லை என்ற நிலையில் அது பயனற்றது. உங்கள் சக்தி பக்கத்து வீட்டுக்காரருக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. வர்த்தகத்தில் நீங்கள் பணக்காரர் ஆவது என்பது பக்கத்தில் இருப்பவர்களை ஏழையாக வைத்திருப்பதையே அவசியமாக கொள்கிறது. வர்த்தகப் பொருளாதாரம் என்பது தனிப்பட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதை முக்கியமாகக் கொண்டது. மற்றவர்களின் உழைப்பின்மீது அந்த தனிப்பட்டவர்களுக்கு இருக்கும் சக்தி பாத்தியதையும் முக்கியமாகக் கொண்டது. இப்படி உரிமைகொண்டாடப்படும் ‘பாத்தியதை’ செல்வத்தை ஓரிடத்தில் குவிக்கும்போதே இன்னொரு பக்கத்தில் ஏழ்மையை சேர்க்கிறது. இதைத்தான் நாகரீக நாடுகளிலுள்ள சுறுசுறுப்பானவர்கள் செல்வம் என்கின்றனர். மேற்கூறிய கருத்துக்களை அவரின் செல்வத்தின் இரத்தக்குழாய் எனும் கட்டுரையில் பார்க்கலாம். செல்வம் என்ற பெயரில் உண்மையில் விரும்பப்படுவெதெல்லாம் முக்கியமாக ஆட்கள் மீது அதிகாரத்தைத்தான்- எளிதாக சொன்னால் வேலைக்காரரகளின் உழைப்பை நமது சொந்த செளகரியத்திற்கு அடையவேண்டும் என்பதுதான். மலிவான இடங்களில் வாங்கி கிராக்கியான இடங்களில் விற்கவேண்டும் என்பது ஏற்கப்பட்டதாக இருக்கிறது. இக்கருத்தைப் போல மனிதனின் அறிவுக்கு மானக்கேடானது வேறு ஏதுமில்லை. மலிவாக செய்தது எது. கிராக்கியாக்குவது எது. செல்வத்தின் இரத்தக்குழாய்கள் சிகப்பாகவே இருக்கின்றன. அவை சதையில்தான் இருக்கின்றனவேயன்றிப் பாறையில் இல்லை. சாதாரண வழிப்பறிக் கொள்ளைக்காரன் பணக்காரர்களிடம் திருடுகிறான் , வியாபாரியோ ஏழைகளிடம் திருடிவிடுகிறான். உழைப்பை வாங்குகிறவர் அதை அக்கிரமமாக மலிவாக வாங்குவதற்குத்தான் போட்டி உதவி செய்கிறது. இதன் பலனாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். இது நாசத்தில் கொண்டுபோய்விடும். நீதியின் பொரூளாதாரமே உண்மையான பொருளாதாரம், நீதியையும் நியாயமானதையும் செய்ய மக்கள் கற்றுக்கொண்டவரையில் அவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். எந்தவிதமாவது பணக்காரர் ஆகவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பது அதிகமான அக்கிரமத்தை செய்வதாகும். மனிதனுடைய நடத்தை முக்கியமானது என்பதைப் பொருளாதார பண்டிதர்கள் கவனிப்பதே இல்லை. தொழில் என்பது பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதாக இருக்கவேண்டும். பணத்திற்காக தொழிற்சாலை என்பது பாவமானது. குவித்த பணம் நாட்டு மக்களை அழிவிற்குத்தான் கொண்டு போகிறது எனில் அதனால் என்ன பயன்? தனிப்பட்டவர்களைக் கொண்டதுதான் தேச சமூகம். தனிப்பட்டவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பணம் ஒரு கருவிதான். உயர்வான சந்தோஷமான மனிதரை எவ்வளவுக்கு அதிகமாக ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்குத்தான் அந்த நாடு அதிக செல்வம் கொண்டதாகும். நாம் சோம்பேறியாக இருந்தால் மற்றொருவர் இருமடங்கு வேலை செய்யவேண்டிவரும். சுயராஜ்யம் என்பது தன்னைத்தானே கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்திக்கொள்ளுவது என்பதுதான். திருடர் கூட்டத்துக்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்னவாகும்? பிரம்மாண்ட யந்திரத்தொழில்கள், தங்கம் வெள்ளியைக் குவிப்பதால் சுயராஜ்யம் அமைந்துவிடாது. தத்துவஞானிகளின் மந்திரக்கல் ‘சத்தியம்’ என்கிற சிறிய சொல்தான். ஒவ்வொரு இந்தியரும் சத்தியத்தைக் கண்டிப்பாகக் கடைபிடித்து வந்தால் சுயராஜ்யம் கிடைத்துவிடும் என சர்வோதயத்தில் காந்தி ரஸ்கினை தழுவி எழுதியதைக் காண்கிறோம். காந்தியும் அரசும் அரசியல் அதிகாரம் என்பதை முடிந்த முடிவாக காந்தியடிகள் ஏற்கவில்லை. மக்கள் தங்களை உயர்த்திக்கொள்ள உதவும் கருவிதான் அரசாங்கம் என்பது. தேசிய வாழ்வு என்பது சீராக நடக்கமுடியும் என்றால் நமக்கு பிரதிநிதிகூட தேவைப்படாது. அதிக அதிகாரமில்லா அரசே சிறந்த அரசாங்கம் என்பது தோரோவின் கூற்று. அரசாங்கத்தின் தலையீடு அதிகமில்லாமல் தங்கள் விவகாரங்களை திறம்பட மக்களால் நடத்திக்கொள்ள முடிந்த வாழ்வே ஜனநாயக வாழ்வு என காந்தி கருதினார். இப்படிப்பட்ட நிலையில்லையெனில் அங்கு பெயரளவே ஜனநாயகம் இருக்கும். தலைமறைவாகயிருந்து செய்யும் நடவடிக்கைகளை அவர் ஏற்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் தலைவராக இருந்தால் எப்படி தலைமறைவாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அப்படிப் போகவேண்டிய அவ்சியம் இல்லை. இரகசிய நடவடிக்கைகளால் சுயராஜ்யம் கட்டமுடியாது. நமது காரியங்கள் யாவும் பகிரங்க அழைப்புடன் பகிரங்கமாகவே நடைபெறவேண்டும் என அவர் நடத்திக்காட்டினார். வழிமுறைகள் இலட்சியம் போலவே மிக முக்கியமானது. கூடுதல் முக்கியமானதும் ஆகும். ஏனெனில் வழிமுறை நம் சக்திக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. பொதுமக்களுக்கு பயமற்று இருக்க கற்றுத்தரவேண்டும் எனில் அதற்கு இரகசிய வழிகள் உதவாது. யாரிடம் முதலில் மனமாற்றம் ஏற்படுகிறதோ அவருடன் சோசலிசம் ஆரம்பிக்கிறது. ஒன்று பத்தாகி பல்கி பெருகட்டும். ஆனால் வேட்டை நம் பக்கம் வரும்போது பருந்தைப்போல் பாய்ந்து அதைப் பற்றிக்கொள்ளலாம் என நினைத்தல் கூடாது. பிரசங்கம் செய்யலாம்- கட்சிகள் அமைக்கலாம். நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால் வேதாந்தம் போல் பேசிக்கொண்டிருக்கலாம். இலக்கு நம்மைவிட்டு தள்ளிப் போய்க்கொண்டுதான் இருக்கும். சோசலிசம் விரும்புவோர் மாற்றத்தை தன்னிடமிருந்து தொடங்கவேண்டும் என காந்தி அறிவுறுத்துவதைக் காணமுடியும். சோசலிஸ்ட் கொள்கைகளை அமுலாக்க பலாத்காரவழியை மேலைநாட்டு சோசலிஸ்ட்கள் மேற்கொள்கிறார்கள். பலாத்காரம் மூலம் சமூக நீதி சாத்தியமில்லை என்பதை அவர் தெரிவிக்காத இடமில்லை. பலாத்கார வழியில் முதலாளித்துவத்தை ஒழித்தால் அந்த அரசாங்கமே பலாத்காரத்தின் தீமைகளில் சிக்கிக்கொள்ளும். அரசாங்கம் உள்ளம் என ஏதுமில்லா எந்திரம். எனது மாற்று தர்மகர்த்தா முறை என்றார். 1946 ஜூலை 28 ஹரிஜனில் சுதந்திரம் என்பது அடியிலிருந்து துவங்கவேண்டும் என்று எழுதினார் காந்தி. ஒவ்வொரு கிராமமும் குடியரசாகவும் பஞ்சாயத்தாகவும் பூரண அதிகாரமுள்ளதாகவும் இருக்கவேண்டும். சுயராஜ்யம் என்பது உண்மையில் தன்னடக்கம்தான். ஆங்கிலேயரை குண்டு வீசி கொல்வதாலோ, பெரும் தொழிற்சாலைகளை நிறுவுவதாலோ சுயராஜ்யம் வந்துவிடாது. நமது சுயராஜ்யத்தில் பணக்காரர்கள், படித்தவர்கள் இருவரும் தமது நலன்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திற்கும் மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் சுயராஜ்யம் பரிதாபப்படத்தக்கதாயிருக்கும். ‘ராஜ்யஅதிகாரம்’ பெறுவது முடிவல்ல. மக்கள் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள பயன்படும் கருவிகளில் ஒன்றது. உற்பத்திஉறவுகளில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தாமல் சோசலிசம் சாத்தியமில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் முழு ஆளுமையில் உற்பத்தி- பொருளாதாரமுறைமை என்பதுதான் சுரண்டலுக்கான பெரும் ஏற்றத்தாழ்விற்கான அடிப்படை- எனவே அவர்களின் ஏகபோக உற்பத்தி பொருளாதாரமுறையை ஒழித்து அவ்விடத்தில் சமூக உடைமை முறையை உருவாக்குதல் என்பது பொதுவாக சோசலிஸ்ட்கள் வைக்கும் தீர்வாக இருக்கிறது- from Private ownership to common ownership or public ownership என்பர். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூட ‘I think we shall come nearest to the essence of Socialism, by defining it as the advocay of communal ownership of land and capital’ என எழுதினார். பெர்னார்ட் ஷா குறிப்பிடும் போது private ownership the very definition of unsocialism என்றார். எனவே கிடைக்கக்கூடிய பொதுவான விளக்கம் உடைமை பொதுவாதல்- சமூகமயமாதல் என்பது சோசலிசமாக விளக்கப்படுவதைப் பார்க்கிறோம். பொதுவுடைமை என்பதிலும் எவரிடம்- அரசிடமா என்கிற கேள்வியும் விவாதமும் எழுந்தது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனப் பேசிய மார்க்சியம் அரசுடைமை சார்ந்த உற்பத்தி பொருளாதாரம் என்பதை முன்வைக்கிறது. இந்த பாட்டாளி அரசும் தன் சர்வாதிகாரத்தை எடுத்துக்கொண்டு அமுல்படுத்தி பின்னொரு காலத்தில் உதிர்ந்துவிடும் என அங்கு சொல்லித்தரப்படுகிறது. கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவில் “The proletariat will use its political supremacy to wrest by degrees, all capital from the bourgeosie to centralise all instruments of production in the hands of the State- the proletariat orgainsed as ruling class, and to increase the total productive forces, as rapidly as possible State ownership”என்பது பிரதானப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இந்த பாட்டாளி தலைமையிலான மாறுபட்ட அரசு சோசலிச பொருளாதாரமுறையைக் கொண்டிருக்கும் என்பதே லெனின் தந்த விளக்கமாக இருந்தது . லெனின் அரசின் தேவையை சொல்லும்போது எழுதினார் “there still remains the need for a state, which while safeguarding equality in labour and equality in the distribution of products”ஸ்டாலினும் 16 வது காங்கிரசில் 1930ல் அரசு அதிகாரத்தை நாம் வளர்த்துக்கொண்டு செல்வதே கூட இந்த அரசதிகாரம் என்பது உதிர்ந்து விழச் செய்திடதான் என்கிற விளக்கத்தைத் தந்தார். சோசலிச கட்டுமானம் என்பதில் அரசு என்பது மைய அம்சமாக இருக்கும் என்கிற விளக்கத்தையே நாம் மார்க்சியவகைப்பட்டு பார்க்கிறோம். பேணு போன்றவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பினர். தனியார் கைகளிலிருந்து அரசாங்க கைகளுக்கு உடைமையும் உரிமையும் மாறுவதால் சோசலிச மதிப்புகளை உருவாக்க முடியுமா ? Does mere transfer of ownership of economic enterprises from private hands to the state, really promote the socialist values? என்பது பேணு பிரதான் எழுப்பும் கேள்வி. அங்கு ஒரு எஜமானர்தான் உண்டு. தொழிலாளர்க்கு வேறு எந்த தேர்வும் கிடையாது. அரசின் கட்டளைகள்- அறிவுறுத்தல்கள் இறுதியானது என மிலோவன் டிஜிலாஸ் எழுதினார். “There is only one Employer that is the State- no choice except to accept the employer’s terms.. Individual tastes and preferences are made to conform to the dictates of the bureaucracy” பிரிட்டனின் லேபர் கட்சி தங்களின் சோசலிச முறைமை என்பதை பேசியது- சோதித்து வருவதாக சொல்லியது. அக்கட்சியின் தலைவராக இருந்த ஹரால்ட் வில்சன் தெளிவு படுத்திய ஒரு முக்கிய அம்சம் “தொழில்கள் என்பதில் நாங்கள் கோட்பாடுகளுக்குள் சிக்க விரும்பவில்லை. சில தனியார் நிறுவனங்கள், சில அரசாங்க நிறுவனங்கள்- சில இணைந்த கம்பெனிகள்”என்பதாகும். “The party is an advocate of municipal socialism and cooperative socialism. It advocates diverse forms of social ownership”என்று அவர் தெரிவித்தார். ஆஸ்கர் லாங்கே போன்றவர்கள் தொழிலாளர் நிர்வாகத்தில் பங்குபெறுவதுதான் சோசலிசத்திற்கான பாதை என்றனர். உற்பத்தி சாதனங்கள் சமுகமயமானது என்பதற்கான அளவுகோல் இதில்தான் இருக்கிறது என்றார் லாங்கே. காந்தி உழைத்து உண் என்பதில் உறுதியாக நின்றவர். எவருக்கும் உணவு, உடையில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என கருதி செயல்பட்டவர். உற்பத்தி சாதனங்கள் சுரண்டல் கருவியாக இருந்துவிடக்கூடாது என பேசியவர். ஒருவர் தனக்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகளை உழைத்து பெறமுடிந்த சமூக அமைப்பை சமத்துவமான அமைப்பை அவர் விழைந்தார். உற்பத்தி சாதனங்கள் பரந்துவிரிந்த மக்கள் கையில் இருப்பதே மேலானது என எழுதியவர். “The means of production can be utilised for universal good if there is Universal ownership of the instruments of production”என அவரால் எழுதமுடிந்தது. மார்க்சியர்கள் சொல்வதுபோல் அல்லாமல் முழுமையாக பொருளாதார உற்பத்திமுறையை அரசிடம் ஒப்படைத்துவிட காந்தி தயாராக இல்லை. அவரின் எழுத்தில் சொன்னால் “I do not share, the socialist belief that centralisation of the necessities of life will conduce to the commonwelfare when the centralised industires are planned and owned by the state” பொதுவாக அரசு என்பதை அவர் தயக்கத்துடன் பார்த்தார். வன்முறையின் கருவி என மார்க்சியர்கள் சொன்னதைப் போல்தான் அவரும் வர்ணித்தார். What I disapprove of is an organisation based on force which a state is". பேணுபிரதான் தன் ஆய்வில் காந்தியின் அரசு குறித்த பார்வை பகுனின் விளக்கத்துடன் உடன்பட்டதாக இருக்கிறது என்று எழுதுகிறார். தனிமனிதருக்கு ஆன்மா இருக்கும்- அரசுக்கு அப்படி ஒன்று இல்லை என்றார் காந்தி. அரசு பெருக்கிக்கொள்ளும் அதிகாரம் குறித்து அச்சப்படுவதாகவே காந்தி எழுதினார். அரசற்ற நிலை எனும் இலட்சியம் முழுமையாக சாத்தியப்படுமா என்கிற சந்தேகமும் அவரிடம் எழுந்தபோது தோரோவை அவர் குறிப்பிட்டு சொல்கிறார் “That state will be best which is governed the least”. அரசு என்பது ஒரு வர்க்கத்தின் கருவி என்பதிலிருந்து மற்றொரு வர்க்கத்தின் கருவியாக மாற்றப்பட்டுவிடுவதால் அதன் வன்முறை கருவி எனும் விளக்கத்தை இழந்துவிடுகிறதா என்ற கேள்வியை பேணுதர் வைக்கிறார். காந்தி இதையே வேறுவிதத்தில் சந்தேகமாக முன்வைக்கிறார். அரசால் எப்போதும் தான் சுற்றிக்கொண்ட வன்முறை என்பதிலிருந்து வெளியே வரமுடியாது என்பது அவரது சந்தேகமாக இருந்தது. சோவியத்தில் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்காகத்தான் சற்று உக்கிரமாக ( ruthlessness) நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது என சொன்னதை அவர் ஏற்கவில்லை. அதில் ஒரு நன்மையும் இருக்காது. என்றோ ஒருநாள் முன்பிருந்ததைவிட மோசமான அராஜகம் அங்கு உருவாகிவிடும் என தன் கருத்தை காந்தி வெளிப்படுத்தினார். சமத்துவம் எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்பிக்கொண்டு அதற்கும் அவர் பதில் தருகிறார். சம்பாத்தியம் என்பது நேர்மையாக இருக்கட்டும். அவசிய குறைந்தபட்ச தேவைகளை மட்டும் அனுசரிப்பவராக ஒவ்வொருவரும் தங்களை முதலில் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு சொந்த வாழ்வில் ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் மாற்றத்திலிருந்து சமத்துவம் பிறக்கத்துவங்கும் என அவர் உறுதிபட நம்பினார். அரசு அல்லாத முறை என காந்தி பேசுகையில் கிராமப்புற பொருளாதார வகைப்பட்டு சோசலிச கட்டுமானம் எனப் பேசுவதை அவதானிக்கமுடியும். மார்க்சியம் காந்திய சோசலிச கட்டுமானத்தின் மிக முக்கிய வேறுபாடு உடனடியாக அரசை உதிரச் செய்யத்துவங்குவதில் இருக்கிறது என நிர்மல்குமார் போஸ் கூறினார். மார்க்சியம் அரசை பலப்படுத்தி பின்னர் அதை உதிரச் செய்வதற்கான காலத்தை ஒத்திப்போடுகிறது எனில் காந்திய சோசலிச சிந்தனை அதை துவக்கத்திலேயே பலமிழக்க செய்வது எனப் பேசுகிறது என்கிற விளக்கம் நிர்மல் போஸிடம் கிடைக்கிறது. “Gandhi and the state”என்கிற கட்டுரையை காந்திய ஆய்வாளர் Anthony Parel எழுதியுள்ளார். காந்தி லெனின் எழுதிய அரசும் புரட்சியும் போல தனி ஆக்கம் ஏதும் அரசு என்பது குறித்து எழுதவில்லை. ஆனால் அவரது Hind Swaraj ல் 1909லேயே அரசு என்பது குறித்து அவர் விவாதித்து இருந்தார். அதே போல் அவரது Constructive Program என்பதும் அவரது பார்வையை அறிய உதவும் ஆக்கம் என அந்தோணி பரேல் சொல்கிறார். ‘இந்திய சுயராஜ்யம்’ என்பதில் அரசியல் சுய ஆட்சி என்பதை பேசும் காந்தி சுயராஜ்யம் என்பதை அத்துடன் நிறுத்திவிடவில்லை. அதை Home rule என்கிற அரசியல் ஆட்சியிலிருந்து ஒவ்வொருவரின் self rule என்கிற சுயகட்டுப்பாடு- நெறி சார்ந்த அம்சத்திற்கு உயர்த்துகிறார். காந்தியின் பார்வையில் அரசு குறித்து விவாதித்த பரேல் நமக்கு சில முக்கிய அம்சங்களை தொகுத்து தந்துள்ளார். - 1909ல் காந்தி ஹோம்ரூல் என்றார். - 1920ல் நிதி, போலீஸ், இராணுவங்களை கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஆட்சி என்றார். இதில் அவர் அடக்குமுறை கருவியின் அமசங்களை உள்ளடக்கிய ஆட்சிமுறையைக் காட்டுகிறார். - 1931ல் முழு சுதந்திரம் எனப் பொருள்தரும் பூர்ண சுயராஜ்யம் எனப் பேசுவதை ஏற்கிறார். - 1947ல் ‘surajya’ என்கிற நல்ல அரசாக இந்தியா மலரவேண்டும் என்கிற விழைவை சொல்கிறார். இந்தியாவில் அமைக்கப்படும் அரசு- அரசாங்கம் வெற்றிகரமாக இருந்திடவேண்டும் என்கிற விருப்பம் அவரிடம் இருந்தது. எனவே அவர் விழைந்தது ‘Not a spiritual swaraj by itself without the active presence of the Good state’. காந்தி அரசு என்பதில் எவற்றை விரும்பவில்லை என்பதையும் பரேல் விவாதிக்கிறார். முதலில் ‘aggressive state’ என்கிற மேலாண்மை- நாட்டாண்மை அரசை அவர் ஏற்கவில்லை எனலாம். அவரது ‘இந்திய சுயராஜ்யம்’ என்ற ஆக்கத்தில் ஆங்கிலேயர் இல்லா ஆங்கிலேயர் ஆட்சி முறை, புலி இல்லாத புலியின் குணங்கள் என்பதை சுட்டிக்காட்டி அத்தகைய அரசு வேண்டாம் என்கிறார். அடுத்து பரேல் சிவிக் நேஷனலிசம் என்பதை சுட்டிக்காட்டுகிறார். தனிநபரின் கடமைகள் உணரப்பட்டு அவர்களின் உரிமைகளை பெற வழிவகுக்கும் அனைவருக்கும் பேதமின்றி இடம் நல்கும் தேசியம் என இதை பரேல் விளக்குகிறார். காந்தி இதை விரும்பியதாகவும் அவர் சொல்கிறார். மனிதர்களின் தனித்துவத்தை அரசு அழித்துவிடக்கூடாது என காந்தி கருதினார். மதம் என்ற பெயரில் ஒடுக்கினாலும் பொருளாதாரமுறை என்கிற ஒடுக்குமுறையானாலும் அது அரசின் பெயரில் என்பதை அவர் ஏற்கவில்லை. அதே போல் அரசு என்பது soul force அல்ல body - brute force என்பதில் அவருக்கு தெளிவு இருந்தது. “the state represents violence in a concentrated and organised farm. The individual has a soul, but as the state is a soulless machine, it can never be weaned from violence to which it owes its very existence”என்று காந்தி எழுதினார். தனிநபர்களின் சில பிரத்யேக இடங்களில் அரசு தன் கட்டுப்பாட்டை திணிக்கக் கூடாது. மக்கள் அரசிற்கு தங்கள் ஒப்பைத்தருவது என்பதற்கு பொருள் அனைத்திலும் அரசு என்பதாக இருக்கக்கூடாது . தன்னளவில் சமயப் பற்றுக் கொண்ட மனிதர் என்றாலும் காந்திக்கு மதம் என்பது அரசிற்கு அடிப்படை என்ற கருத்தில் முற்றிலுமாக ஏற்பு இருந்ததில்லை. இதில் அவர் ஜின்னா அவர்களையும் சாவர்க்கரையும் எதிர்கொள்ளவேண்டியதானது. ஜின்னா இஸ்லாமிய அரசு எனப்பேசினால் சாவர்க்கர் இந்துத்துவா எனப் பேசினார். அரசிற்கும் மதத்திற்கும் நோக்கங்களிலேயே மாறுபாடு இருக்கிறது. அரசு Artha என்பதில் கவனம் கொண்டால், மதமோ Moksha என்பதை சொல்லித்தருவதாக இருக்கிறது. இரண்டிற்கும் வழிவகைகள் வெவ்வேறானவை. மதம் பேசும் ஆன்மாவின் விடுதலைக்கு, அடக்குமுறை கருவியாக நிற்கும் அரசின் வழிமுறைகள் எப்படி பொருந்தும். எனவே அரசின் திறன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மதம் அதன் உண்மைப்பொருளில் இருக்க முடியும். பல மதங்களின் சகவாழ்வு என்பதை அனுசரிக்க வேண்டிய சமூகமும், மதங்களின்பாற் சார்பற்றநிலை எனப்படும் அரசும்தான் ஒன்றாக இணைந்து பயணிக்கமுடியும். ’ Indian nation was religiously pluralistic’ என்றே காந்தி கருதினார். வருகின்றவற்றை உள்வாங்கி கிரகித்துக்கொள்ளும் நாடாகவே இந்தியா இருந்துள்ளது. அப்படி இருக்கவும் வேண்டும். எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு வழிபாட்டுமுறைகள்- மதங்கள் கூட இருக்கலாம். ஒருவர் மற்றவரின் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். காந்தி இவ்வாறு மிக வெளிப்படையாக எழுதினார். “If the Hindus believe that India should be peopled only by Hindus, they are living in dreamland. The Mohamedans also live in a dreamland if they believe that there should be only Mohamedans…Hindus, Mohamedans, Parsees and the Christians who have made India their country are fellow country men, they will have to live in unity if only for their own interest. In no part of the world are one nationality and one religion synonymous terms, not has it ever been so in India.” காந்தியின் புருஷார்த்தம் என்பது குறித்து தொடர்ந்து பரேல் எழுதிவருகிறார். தர்மா, அர்த்தா, காம மற்றும் மோட்சம்- ஒவ்வொன்றிற்கும் உரிய கடமைகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டுவார். பொருளாயத நலன்களை தேடுதலென்பதும் ஆன்மீகத்தேடலும் கலந்த மனநிலை ஆரோக்கிய வாழ்வை நல்கும் என்பது காந்தியின் நிலைப்பாடு. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அரசின் தேவையை காந்தி உணரவே செய்தார்.. அவர் 1931ல் கராச்சி தீர்மானத்தை resoultion On Fundamental Rights and economic changes என்பதை நேருவுடன் இணைந்து வடித்தெடுத்தார். பூர்ண சுயராஜ் என்பதை அவர் 1930ல் எழுதியிருந்தார். அதில் இடம் பெற்ற சாரம்சமான வாக்கியங்கள் “இந்திய மக்களுக்கு சுதந்திரம் மற்றும் அவர்களின் உழைப்பால் பெறும் பலன்களை அனுபவிப்பது - வளர்வது என்பது பிரிக்கமுடியாத உரிமையாகும். இந்த அவர்களின் உரிமையை எந்த அரசாங்கமாவது ஒடுக்கும் என்றால் அதை மாற்றுவதற்கும்- ஒழிப்பதற்கும் அவர்கள் உரிமை பெற்றவர்கள்.” அதேபோல் நேருவும் காந்தியும் இணைந்து உருவாக்கிய அடிப்படை உரிமைகள் தீர்மானம் கீழ்கண்ட உரிமைகள் பற்றிய உறுதிமொழியைத் தந்தது. கூட்டம்கூடும் உரிமை, பேச்சுரிமை, மத வழிபாட்டுரிமை, சொத்துரிமை, சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள், சாதி மதம் மொழி இனம் அப்பாற்பட்டு சமத்துவ உரிமைகள். அதேபோல் religious neutrality on the part of the state என்பதையும் பேசியது. வயதுவந்தோர் வாக்குரிமை, ஆரம்பக் கல்வி, வாழ்க்கை ஊதியம், பேறுகால விடுப்பு என்பனவற்றையும் அத்தீர்மானம் உறுதி செய்தது. இந்தியாவின் புதிய அரசு எந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் தனித்த கருவியாகிவிடக்கூடாது என காந்தி எண்ணினார். அனைத்து தரப்பினருக்குமான கருவியாக இருக்கவேண்டும் என நினைத்தார். காந்தி ஹிந்த் சுயராஜ்யம் எழுதுவதற்கு துணைநூல்கள் பட்டியலில் 10 நூல்கள் 19 ஆம் நுற்றாண்டின் முதலாளித்துவம் குறித்த நூல்கள் என பரேல் சொல்கிறார். அவர் முதலாளித்துவம் அதன் சுரண்டல் குறித்து விமர்சனப் பார்வையே வைத்திருந்தார். வர்க்க மோதல், அழித்தொழித்தல் என்கிற முறையை அவர் ஏற்கவில்லை. அரசு என்பது சொத்துவளத்தை உருவாக்க துணைநிற்பது என்பதைவிட நியாயவழிகளில் சொத்துருவாக்கத்திற்கு நிற்கவேண்டும் என்றே அவர் பேசினார். ஆயுதங்களை எவ்வாறு திறமையாக கையாளவேண்டும் என்று கற்றுத்தேற பிரிட்டிஷ் இராணுவத்தில் சேரவேண்டும் என்று 1918ல் பேசியவர் காந்தி. அவருக்கு body force என்பது soul force இல்லாமல் வளர்ந்து நிற்கக்கூடாது என்பதுதான் பிரச்னை. ஒரு நாடு தனது இராணுவ வலிமை மூலம் தன்னை தற்காத்துக் கொள்ளும் அவசியத்தை மிக நன்றாக உணர்ந்தவராக காந்தி இருந்தார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் இதை தெளிவும் படுத்தினார். இந்திய சுய ஆட்சி எனில் இராணுவ, வெளிநாட்டு உறவு உட்பட கட்டுப்படுத்தும் அதிகாரம்பற்றி பேசியபோது இதை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். அவர் அம்மாநாட்டில் இந்த வரிகளைப் பயன்படுத்தினார். “I refuse to deceive myself that I am going to embark upon responsible government although I cannot control my defence” அவரது நிர்மாணதிட்டம் என்பது அரசின் பங்களிப்பு என்பதுடன் நில்லாது சிவில் சமூக ஸ்தாபனங்களின் பங்களிப்பையும் கோரியது. அவற்றின் உதவியுடன் ஆக்கபூர்வ சமூக கட்டுமானம் எனப் பேசியது. அரசும் அரசல்லாத நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும் ‘ஏரியாக்களை’ அத்திட்டம் அடையாளப்படுத்தியது. ஒத்துழையாமை என்பதற்கும் நிர்மாணத்திட்டத்திற்குமான உறவை காந்தி பேசினார். ஆக்கபூர்வ நிர்மாணத்திட்டங்களில் ஈடுபடாமல் ஒத்துழையாமை என வெற்று வீரம் காட்டிக்கொண்டிருக்கக்கூடாதென்றார். நிர்மாணத்திட்டங்களின் வழியாக நல்லாட்சி நல் அரசு நோக்கி இந்தியா பயணிக்கவேண்டும் என்கிற பெரு முயற்சி அவரிடம் இருந்தது. காந்தியின் அரசியல் தத்துவம் குறித்த விமர்சன ஆய்வு (Gandhi’s Political Philosophy A critical examination by Bikhu parekh) என்கிற ஆக்கத்தை பிக்கு பரேக் எழுதியிருக்கிறார். அதில் Theory of state என்கிற பகுதியில் காந்தியின் அரசு குறித்த புரிதல்கள் ஒருபடித்தானதாக அமையவில்லை என்கிறார் பிக்குபரேக். சிலநேரங்களில் வரலாற்றுத் தன்மையற்றதாக, அனுபவின்மையின் வெளிப்பாடாக, சில பகுதிகளில் மிக ஆழமானதாக அவரின் கருத்துக்கள் இருக்கின்றன. “Gandhi’s theory of state was uneven, in parts refreshingly original and profound, in others ahistorical and naive.” காந்தியின் அரசு குறித்த விமர்சனம் அவரின் நவீன அறிவியல் குறித்த விமர்சனத்தின் பகுதியாகவும் இருக்கிறது. அரசு என்பது மக்களை தன் அதிகாரவர்க்கத்தின் மூலம் விதிகளுக்கு கட்டுப்பட்டு மக்களை நடக்கச் செய்திடும் ஏற்பாடாக இருக்கிறது. சமூகத்தை தனக்கு ஒப்புக்கொடுக்கும் விஷயமாக மாற்றவே அது விழைகிறது. அதற்கு மாற்றான குரல் கொடுக்கும் குழுக்களையோ தனிநபர்களையோ அது சந்தேகத்துடனே பார்க்கிறது என்பதையும் நிராகரிக்கமுடியாது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியமாகி நிற்கும் மேற்குகல்வி பின்புலம் சார்ந்த நகர்ப்புற மனிதர்களால் ஆளப்படும் அரசாக இந்தியா அமையலாம் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். எனவே அதே பிரிட்டிஷ் குணத்துடன் அவ்வரசு தொழிற்படக்கூடும் எனவும் அஞ்சினார். மிகக் குறைந்த அரசின் தலையீடு கொண்ட அரசியல் சமூகம் பற்றி அவர் பேசினார். நேர்மையும் மக்களின் மீது கடப்பாடும் கொண்ட ஒழுக்கம் நிறைந்த ஆண்/ பெண்களால் சமூகம் அமையும் என்றால் அரசின் தேவை குறையும் எனக் கருதினார். Ideally he preferred ‘enlightened anarchy’ என பரேக் எழுதுகிறார் காந்தி தனது கட்டுமானத்தை கீழ்கண்டவாறு விளக்கினார். இதை அந்தோணி பரேல் அவர்களும் எடுத்துக்காட்டியுள்ளார் “In this structure composed of innumerable villages, there will be every-widening, never-ascending circles. Life will not be a pyramid with the apex sustained by the bottom. But it will be an oceanic circle whose centre will be the individuals … Therefore the outermost circumference will not wield power to crush the inner circle, but will give strength to all within and derive its own strength from it” பிரமிட் மாதிரியான அடிபெருத்தும் முனை கூம்பாகவும் உள்ள சமூகத்தை காந்தி கட்டுமான மாதிரியாக ஏற்கவில்லை. தனிமனித மாண்புகளை காக்கும் வட்டவடிவ வாழ்க்கை மாதிரியை அவர் காட்டினார். உள்வட்டத்தை நசுக்காத வெளிவட்ட வாழ்க்கை என அவர் படம்பிடித்தார். அரசின் தேவை என்பதை முற்றிலுமாக மறுப்பது சாத்தியமல்ல என்கிற எதார்த்தம் உணர்ந்தவராகவும் காந்தி இருந்தார். சமூக பொருளாதார நீதியைக் கட்டுவதில் அரசிற்கு பங்கு இருப்பதை அவர் ஏற்றார். 1931ல் வட்டமேசை மாநாட்டில் அவர் உரையில் இந்த ஏற்பை நாம் காணமுடியும். அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் காந்தி தனது தலையீட்டை செய்யவில்லை. இதை பரேக் குறிப்பிடுகிறார். “When the Constituent Assembly met to determine the profile of the new polity, Gandhi did not press his views on it. When it opted for the modern state, he did not take a public stand against it either.” அவரிடம் பல்வேறு கருத்துக்கள் சென்றபோது, அதற்காக உழைத்துவருபவர்களை வேலை செய்ய அனுமதிப்போம் என்ற அறிவுரையையே அவர் தந்தார். இந்திய அரசு என ஒன்று அமையப்போகிறது என்பது உறுதியான நிலையில் அதை முறைப்படுத்துவது எப்படி என்பதில்தான் அவர் கவனம் சென்றதே தவிர அரசே கூடாது என செல்லவில்லை. காங்கிரஸ் தனது அரசியல் கடமையை நிறைவேற்றிவிட்ட நிலையில் அது Loka Sevak Sangh என்கிற சேவை இயக்கமாக மாறவேண்டும் என அவர் சொன்னதைப் பார்க்கிறோம். பிறவியிலேயே மோசமான ஆட்சியாளர் என எவரும் இருப்பதில்லை. சூழல்தான் அப்படிப்பட்ட மனிதர்கள் உருவாக இடமளிக்கிறது என்பதை காந்தி அறிந்தேயிருந்தார். The People who make the rulers what they are..If we will reform ourselves, the rulers will authomatically do so என்பது காந்திய வாக்கியம். ஆட்சியாளர்களின் பொம்மலாட்ட கருவிகளாக நாம் இருந்துவிட்டு அவர்களை குறை சொல்வதால் என்ன பயன் என்ற கேள்வி காந்தியிடமிருந்து வந்தது. அவர்களின் ஆட்டத்திற்கு சம்மதியோம் எனச் சொல்லவேண்டியவர்கள் நாம்தான். காந்தியின் கருத்தை பரேக் மேற்கோளாக காட்டுகிறார். “Gandhi observed: Most men do not understand the complicated machinery of the government. They do not realise that every citizen silently but nevertheless surely sustains the government of the day in ways of which he has no knowledge. Every citizen therefore renders himself responsible for every act of his government. And it is quite proper to support it so long as the actions of the government are bearable. But when they hurt him or his nation, it becomes his duty to withdraw his support.” “பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கம் என்கிற சிக்கலான எந்திரம் குறித்து புரிதல் இல்லை. அப்படி அவருக்கு தெரியாத அந்த அரசாங்கத்தை அமைதியாக அவர்கள்தான் தாங்கி வருகிறார்கள் என்ற உணர்தலும் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலுக்கும் குடிமக்களும் பொறுப்பாகிறார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளும் அளவில் அதற்கு ஆதரவு கொடுக்கலாம் என்பது சரிதான். ஆனால் குடிமகனை தாக்குகிறது, நாட்டிற்கு கேடு விளவிக்கிறது என்றால் தன் ஆதரவை விலக்கிக் கொள்வது அவனது கடமையாகும்.” மனிதர்கள் அரசின் செயல்பாடுகளை இனியும் தாங்கமுடியாது என்கிற நிலையை உணர்ந்தால் தங்களது ஒத்துழைப்பை உடன் நிறுத்தவேண்டும் என்பதை அவர் அசராமல் சொல்லிக்கொடுத்தார். காட்டுமிராண்டித்தனத்தை அனுசரித்து மனிதாபிமானமற்ற நிலையில் நடக்கும் அரசு தொடரக்கூடாதென்பதில் அவர் உறுதியாக நின்றவர். பிறரை தாழ்த்தவேண்டும் என செயல்படும் எவரும் தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் அதை செய்யமுடியாது. சுற்றிலும் வறுமைக்கொடுமையும், பாதுகாப்பின்மையும் இருக்கும்போது சிலர் மட்டும் செளகரியமாக வாழ்ந்துவிடமுடியாது என்பதை உணரும்படி காந்தி வேண்டிக்கொண்டார். கம்யூனிச அரசு வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை காந்தி உணர்ந்தார் என குறிப்பிடும் பரேக் கீழ்கண்ட கருத்தையும் முன்வைக்கிறார். “Gandhi acknowledged that communism eliminated poverty, discouraged greed and ensured every citizen a right to work, but he was convinced that its moral deficiencies far outweighed its strengths.” கம்யூனிசம் வறுமையை ஒழித்துள்ளது. பேராசையை மட்டுப்படுத்தியுள்ளது. வேலை என்பதை உரிமையாக்கியுள்ளது என்பதை பார்த்த காந்தி அதை அங்கீகரித்தார். ஆனால் அதன் நெறி சார்ந்த அம்சங்களின் குறைகள் அதன் பலத்தைவிட கூடுதலாக இருக்கிறது என்பதையும் அவர் பார்த்தார்- அதை ஏற்காமல் விமர்சித்தார். காந்தி மாற்றாக முன்வைத்தது அவரின் தர்மகர்த்தாகொள்கையை என பரேக் விவாதிக்கிறார். காந்தி சோசலிசவாதியில்லை என்றாலும் முதலாளித்துவத்தை ஏற்றவரும் இல்லை என்கிறார் பரேக். Gandhi’s world of thought was radically different என்கிறார் பரேக். காந்தியின் தொழிலாளி தொழிலாளர்கள் விஷயத்தில் முதலாளிகள் தங்கள் கடமையை நிறைவேற்றி வருவதைவிடத் தொழிலாளர்கள் தங்கள் கடமைகளை அதிக நன்றாகவும் அதிக மனசாட்சியுடனும் நிறைவேற்றி வருகின்றனர். இதுதான் எங்கும் தனக்கு ஏற்பட்ட அனுபவம் என்று காந்தி பொதுவெளியில் 1929 டிசம்பரில் பதிவு செய்தார். தொழிலாளிக்கு அவர் உழைப்பிற்கான கூலி வேண்டும். மலைகள் எவ்வளவு புராதனமானவையோ அவ்வளவு புராதனமானது இந்த நியதியும் என்பதும் அவரின் பதிலாக அமைந்தது. கிராம உற்பத்தி பொருட்கள் விலை அதிகம்- வாங்கமாட்டார்கள் என்கிற விவாதம் வந்தபோது அதை எவ்வாறு புரியவைக்கவேண்டும் என காந்தியடிகள் விளக்கினார். பாடுபட்டு உழைத்துவரும் கோடிக்கணக்கான மக்களுக்கு நாம் நியாயத்தைச் செய்யவேண்டுமானால் அவர்கள் உயிர்வாழும்படி செய்வதற்கு வேண்டிய ஊதியத்தை கொடுக்கவேண்டும். அவர்களின் ஏழ்மையை சாதகமாக்கிக்கொள்ளக்கூடாது. இந்தப்புரிதல் நடைமுறையாக மாறியிருந்தால் நகரவாசிகள் ஒத்துழைத்திருந்தால் கிராமங்களின் நிலை சற்றாவது மேம்பட்டிருக்கக்கூடும். முதலாளிகளுக்கு இருக்கமுடியாத சக்தி தொழிலாளர்களுக்கு இருக்கிறது. இதை தொழிலாளர்களை வழிநடத்தி செல்பவர்களே தெரிந்துகொள்ளவில்லை. தொழிலாளர் இல்லாமல் போனால் மூலதனம் கதியற்றதாகிவிடும் என்பதை தொழிலாளர் அறிந்தால் தங்கள் நிலையை அவர்கள் உணர்வார்கள். காந்தியடிகள் நாட்டிற்கு தேவை என முன்வைத்த நிர்மாண வேலைத்திட்டத்தை தொழிலாளர்களும் பொறுப்பாக்கிக் கொள்ளவேண்டும் என விழைந்தார். அவ்வேலைத்திட்டத்தில் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. சமூக ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர், கிராமக் கைத்தொழில்கள், கிராம சுகாதாரம், அடிப்படைக் கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுகாதார போதனைகள், தேசிய பாஷை, சுயபாஷை, பொருளாதார சமத்துவம். இவைகளை கைக்கொள்வதுடன் தொழிலாளர் வகுப்புவாதத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றார். இந்து என்றோ முஸ்லீம் என்றோ தொழிலாளர் பிரிந்து நின்றால் அவர்கள் பலவீனமடைவதுடன் நாட்டின் பலவீனமும் சேர்ந்தே நடந்துவிடும். எல்லாப்பாகுபாடுகளையும் சமப்படுத்திவிடுவதுதான் உழைப்பு. விலைமதிப்பற்றது உழைப்பு. மூலதனத்திற்கும் அதற்கும் விவாகம் இருக்கவேண்டும் என அவர் விழைந்தார். கோலார் சுரங்கத் தொழிலாளர் நிலையைப் பார்த்துவிட்டுப் பேசிய காந்தி அவர்கள் வாழ்க்கையை அறிய ஒரு பரீட்சை அவசியம் என்றார். நம் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் இடத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதுதான் அப்பரீட்சை என்றார். 1927ல் காந்தி இலங்கை சென்றபோது தொழிலாளர் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றிலும் உரையாற்றினார். அவ்வுரையில் முக்கிய அறிவுரைகள் இருந்தன. சங்கம் அமைப்பது அவசியம்- அதே போல் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கம், குடியிலிருந்து விடுதலை, சூதட்டம் தவிர்த்தல் ஆகியவையும் அவசியம் என அவர் குறிப்பிட்டு சொன்னார். இந்த உள் சீர்திருத்தங்கள் வெளித்தாக்குதலை சமாளிக்க உதவும். நமது உரிமைகளுக்கு போராடும் அதே நேரத்தில் நமக்கான கடமைகளை உணர்ந்திருக்கவேண்டும் என்றார் காந்திஜி. அதே ஆண்டில் பெங்களூர் தொழிலாளர்களிடம் உங்களின் உள் சண்டைகளை நிறுத்த முயற்சியுங்கள் என்றார். உங்களை நீங்கள் புனிதப்படுத்திக்கொள்ளுதல், துன்பங்களை அனுபவிக்க கற்றல் என்பதைவிட உரிமைகளை அடைய சிறந்த வழிகள் ஏதுமில்லை என்றார். ‘தோட்டிகள்’ உட்பட பலரை திரட்டி கம்யூனிஸ்ட்கள் போராட்டங்கள் மூலம் உரிமைகளைப் பெற உதவி செய்கிறார்களே- ஹரிஜன சேவா சங்கம் கம்யூனிஸ்ட்களுடன் போட்டிபோடமுடியுமா என்கிற கேள்வி காந்தியிடம் முன்வைக்கப்பட்டது. எது சரி என்பதில் நமக்குள்ள அறிவுதான் நமது கொள்கையில் நமக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். ஹரிஜன சங்கம் சரியாக வேலை செய்வதாக கருதினால் அது தன் வழியில் செயல்படும். அரசியல் நோக்கம் இல்லாமல் சமூக பொருளாதார நிலைமைகளை மாற்ற அத்தொழிலாளர்க்கு சங்கம் அமைக்கலாம். போராட்டமும் நடத்தலாம் என்ற காந்தி அவர்களின் பதிலை நாம் ஹரிஜன் ஜூலை 21 1946 இதழில் பார்க்கமுடியும். 1918 அகமதாபாத் மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை அவரே பொறுப்பேற்று நடத்தினார் என்பதை அனைவரும் அறியலாம். வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்தப்பட நான்கு நிபந்தனைகள் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். பலாத்காரத்தில் இறங்கவே கூடாது. கட்டுப்பாட்டை மீறி வேலைக்கு போக விரும்புவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. பிறரிடம் பிச்சை எதிர்பார்க்க கூடாது. வேலைநிறுத்தம் முடிவிற்கு வரும்வரையில் உறுதியுடன் நிற்கவேண்டும். இப்படி நிற்கையில் ஜீவனத்திற்கு பிரச்னை எனில் உடல் உழைப்பில் வேறு வகையில் ஈடுபட்டு நிறைவு செய்துகொள்ளவேண்டும். அதை யோக்கியமாக செய்யவேண்டும். கடுமையான பயிற்சிதான். ஆனால் அனுசரிக்க முடிந்துவிட்டால் அவர் கூறியபடி இழக்க ஏதுமில்லை- வெற்றி உறுதிதான் என சொல்லத் தோன்றுகிறது. அகமதாபத் மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர் என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்றும் காந்தி சொல்லிக்கொடுத்தார். சூதாட்டங்களில் பொழுதை கழிக்கக்கூடாது. தூங்கி பொழுதை கழிக்கக்கூடாது. அடிக்கடி டீக்கடை சென்று வீண் அரட்டை கூடாது. மில் பக்கம் செல்லக்கூடாது. வேலைநிறுத்தக் காலத்தைப் ஆக்கபூர்வமான வழிகளில் செயல்பட்டு கழிக்கவேண்டும். படிக்கலாம்- பிறருக்கு படிப்பு சொல்லித்தரலாம். வீட்டை சுத்தப்படுத்தி வைக்கலாம். தையல், தச்சு வேலைகளை கற்கலாம். ஜீவனத் தொழிலைத் தவிர வேறு எளிதாக கற்கும் தொழில் ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கலாம். தொழில்களில் எதுவும் உயர்ந்தவை- தாழ்ந்தவையல்ல- கேவலமானதல்ல. சும்மா இருந்து நேரத்தைக் கடத்துவதை தவிர்த்து ஏதோ ஒருவேலையில் ஈடுபடுதல் வேண்டும். அதே போல் தொழிலாளர்களுக்கு உதவ வருபவர்கள் எதையெல்லாம் செய்ய்யக்கூடாது என்பதையும் அவர் சொல்லத்தவறவில்லை. தொழிலாளர் தவறாக எதையும் செய்வதற்கு உதவி செய்யக்கூடாது. தொழிலாளர் தவறான காரியங்களை செய்தால் மிகைப்பட்ட கோரிக்கைகளைக்கூறினால், பலாத்கார வழிகளை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவுவதை நிறுத்திவிடவேண்டும். முதலாளிகளுக்கு தீமை உண்டாக்க வேண்டும் எனக் கருதக்கூடாது. தொழிலாளர் நன்மையுடன் அவர்கள் நன்மையும் சேர்ந்தே இருக்கிறது. அதே போல் தொழிலாளர்களுக்காக நிற்பவர்கள் செய்யமுடிந்தவை எவை என்பதையும் காந்திஜி சொல்கிறார். தொழிலாளர் நல்லொழுக்கத்துடன் நடந்துகொண்டிருக்கும்வரை அவர்களை கைவிடக்கூடாது. அனைவராலும் ஏற்றுக்கொண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்காக நிற்கவேண்டும். அவர்கள் உரிமைகளை பெறும்வரை ஓயக்கூடாது. அவர்களின் பொருளாதார மேம்பாடு என்பதுடன், ஒழுக்கம், கல்வி சார்ந்த பிரச்னைகளிலும் கவனம் செலுத்தவேண்டும். பட்டினி கிடக்கும் நிலையில் எந்த தொழிலாளியாவது இருந்தால் அவருக்கு உதவி செய்தபிறகே நாம் உட்கொள்ளவேண்டும். நோயுற்ற தொழிலாளி எனில் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். சுத்தமாக இருப்பதன் அவசியத்தை சொல்லவேண்டும். எஜமானர் தம் வேலைக்காரனுக்கு என்ன கொடுக்கிறாரோ அது, அவருக்கு செளகரியமானதாக இருப்பதால் நியாயம் என்று கருதப்படுகிறது. வேலைக்காரரின் தேவை என்ன என்பதை யோசிக்கவேண்டியது அவசியமாகவே அங்கு கருதப்படுவதில்லை. அப்படியேதான் முதலாளியின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தாலும் அதைக் கவனிக்காமல் தனக்கு இன்னது வேண்டும் என்று தொழிலாளி கேட்கலாம். இதுவும் நியாயம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றியே நினைக்கிறார்கள்- மற்றவரை எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஒரு தகராறில் எந்தத் தரப்பாரையும் பாதிக்காததாக இருக்கும் நடவடிக்கைமுறை மாத்திரமே நீதியாகும். சத்தியத்தை பின்பற்றும் போராட்டத்தில் ஒரு தரப்பினர் சத்தியத்தைக் கடைப்பிடித்தாலும் அப்போராட்டம் வெற்றி பெறும். தொழிலாளர் வேலைநிறுத்தம் நடத்தும்போது முதலாளிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் காந்தி பேசினார். அடக்கி ஒடுக்குவது குண்டர்களை ஏவுவது தவறானது- நாசகரமானது. நியாயமான கெளரவமான வழி என்பது வேலைநிறுத்தத்தைக் கவனித்து தொழிலாளருக்குரியதை தரவேண்டும். உரியது எனச் சொல்லும்போது முதலாளிகள் கருதுவதையல்ல- தொழிலாளர் கருதுவதையோ புத்திசாலித்தனமான பொதுஜன அபிப்ராயம் ‘நியாயம் என’ எதைக் கருதுகிறதோ அதையோ கொடுத்துவிட வேண்டும். தொழிலாளர் பிரிந்து கிடப்பதைப் பற்றியும் காந்தியடிகள் பேசினார். முதலாளிகள் ஓரளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். தொழிலாளர் ஒன்றுபடாத நிலையில் இருக்கிறார்கள். புத்திசாலித்தனமும் போதவில்லை. தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆலோசகர்கள் வழிகாட்டிகள் என கிளம்பியிருப்பவர்களின் தயவிலேயே, மற்ற இடங்களில் இருப்பதைப் போன்றே இந்தியாவின் தொழிலாளர் உலகம் இருக்கிறது. இவர்கள் யோக்கியமானவர்களாக இருப்பதில்லை. அப்படியிருந்தாலும் புத்திசாலிகளாக இருப்பதில்லை. முதலாளிகள் பணக்காரர்களாக இருப்பதற்கு தொழிலாளர்தான் காரணம் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டு அவர்களும் அதை சரியென கருதிகொள்கின்றனர். எனவே வேலைநிறுத்தம் என்பதற்கான நியாயம் உருவாகிவிடுகிறது. ராஜீய (அரசியல்) நோக்கங்களுக்காக வேலைநிறுத்தத்தை தூண்டிவிடலாம் எனக் கருதும் தலைவர்களுக்கும் குறைவில்லை. தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் தங்களின் நிலையை மேன்மைப் படுத்திக்கொள்வதற்காக மாத்திரமே இருக்கவேண்டும். தொழிலாளர் வேலைநிறுத்தம் தோல்வி அடைகிறதெனில் அதற்கான காரணங்கள் சில இருப்பதையும் காந்திஜி சுட்டிக்காட்டினார். வேலைநிறுத்தம் துவங்கிவிட்டால் நீடிக்கலாம் என்ற நிலை வரும்போது சொந்த ஜீவனத்திற்கு தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். சங்கப் பண உதவியை எதிர்பார்க்கக்கூடாது. வேலைநிறுத்தக்காலத்தில் சும்மா இருந்து வெற்றிபெறலாம் என்கிற எண்ணம் கூடாது. கருங்காலிகள் என எவர் மீதும் நிர்ப்பந்தம் கூடாது. சகோதரத் தொழிலாளர்மீது பலவந்தம் கூடாது. அதேபோல் தூண்டிவிடப்படும் அனுதாப வேலைநிறுத்தங்களும் தீமையானது என்றே காந்தி நினைத்தார். எல்லா வேலைநிறுத்தத் தலைவர்களுக்கும் அவரவர்களுக்கான முறைகள் இருக்கின்றன. எல்லோருமே அகிம்சையை அனுசரிப்பவர்கள் அல்ல. சுயநலனுக்காக வேலைநிறுத்தத்தை உண்டாக்குபவர்கள் சிலர். மற்றும் சிலரோ யோக்கியப் பொறுப்பில்லாதவர்கள். இந்தியாவிலிருக்கும் எல்லாத் தொழிலாளரிடத்திலும் காங்கிரஸ் இயக்கத்தால் அகிம்சை முறையை ஏற்கச் செய்யமுடியும் என்றால் காங்கிரஸ் இன்னும் அதிக பலமுள்ளதாக இருக்கும். தொழிலாளர் விஷயத்தில் காங்கிரசுக்கு ஒரே கொள்கை இருந்து, அதை நிறைவேற்றி வைப்பதற்குப் போதுமான ஊழியர்களும் இருப்பார்களாயின் செல்வாக்கு காங்கிரசுக்கு வரும் என அவர் ஹரிஜன் ஏப்ரல் 20 1940ல் எழுதியிருந்தார். ஆக்கவேலைகளிலும் இராணுவம் என்கிற கருத்தை அவர் வெளிப்படுத்தினார். இராணுவம் தயவுதாட்சண்யமின்றி சுடமட்டும் என்றில்லாமல் அவசியமெனில் வயல்களில் உழ, கிணறுகள் வெட்ட, கக்கூசுகளை சுத்தம் செய்ய என்று ஆக்க வேலைகளையும் செய்து மக்களின் அன்பை பெறவேண்டும் . தெருக்கூட்டுவோர் வேலைநிறுத்தம் ஒன்றின்போது அது கூடாது எனக் கருத்து தெரிவித்த காந்தி மேற்கூறிய கருத்தையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சாதாரணமக்களும் தீண்டாமை என்கிற எண்ணம் விடுத்து இவ்வேலைநிறுத்தம் போன்ற காலங்களில் திகைத்து நிற்காமல் சாக்கடையையும் சுத்தம் செய்வதை கற்கலாம் என்றார். துப்புரவுத்தொழிலாளர்களிடம் சகோதரத்துவம் காட்டவேண்டியது கடமை என்றார். நல்லவீட்டுவசதி, விரும்பும் இடங்களில் வசிக்க அனுமதிப்பது, நியாயமான சம்பளம் என்பதை நிலைநிறுத்தி சுயராஜ்யம் பெற தகுதியுள்ளவர்கள் என நம்மை நிரூபிப்போம் என்றார் (ஏப்ரல் 1945ல்) காந்தி. தபால் இலாகா வேலைநிறுத்தம் பற்றி தபால்காரர் ஆசிவேண்டியபோது வேலைநிறுத்தம் நியாயமானதாக இருந்தால் அமைதியுடன் நடந்துகொண்டால் வெற்றியை அடைவீர்கள் என காந்தி பதில் தந்தார். குறிப்பிட்ட வேலைநிறுத்ததிற்கு தான் கொடுத்த அங்கீகாரம் என்று இதை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்றார். வேலைநிறுத்தம் வெற்றிகரமாக முடிந்திடவேண்டுமெனில் அதற்கான நிபந்தனைகள் எவை என்பதை காந்தி அப்போதும் நினைவுபடுத்தினார். நியாயமில்லாத வேலைநிறுத்தம் வெற்றிபெறாது. பொதுமக்கள் அதற்கு அனுதாபம் காட்டவேண்டியதில்லை. பொதுஜன நம்பிக்கைக்கு பாத்திரமான பாரபட்சமற்றவர்களின் ஆதரவு ஒரு வேலை நிறுத்தத்திற்கு இருந்தாலன்றி அது நியாயமானதா என்பதை அறிவதற்கு பொதுஜனங்களுக்கு எந்த மார்க்கமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் நியாயத்தைத் தாங்களே முடிவு செய்து கொண்டுவிடமுடியாது. மத்தியஸ்த முடிவிற்கோ, நீதிமன்ற தீர்ப்பிற்கோ உடன்படவேண்டும். பொருளாதார நன்மையை அடைவதற்காக நடக்கும் வேலை நிறுத்தங்களில் ராஜீய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவது என்பது அந்தரங்கமாகக் கூட நோக்கமே இருக்கக்கூடாது. அத்தகைய கலப்பு நோக்கம் ராஜீய நோக்கத்தையும் நிறைவேற்றுவதில்லை. மேற்கூறிய அவரின் கருத்தை ஹரிஜன் 11-8-1946ல் காணலாம். ஜனநாயகத்தில் வேலைநிறுத்தங்களை சமாளிப்பது குறித்து காங்கிரஸ் பிரதமர் ஒருவர் காந்தியை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். மக்கள் மீது காங்கிரஸ் கொண்டிருந்த பிடிப்பை காங்கிரஸ் இழந்து விட்டதா எனக் காந்தி கேட்டார். “வேலை நிறுத்தக்காரர்களிடம் நீங்கள் நியாயத்தை எடுத்துக் கூறவேண்டும். ஆபத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவேண்டும். அவர்களோ, பொதுவாக மக்களோ நீங்கள் சொல்லுவதைக் கேட்கவில்லை என்றால் நீங்கள் ராஜினாமா செய்துவிடவேண்டும்.. காங்கிரஸ் பலாத்காரத்தைக் கொண்டு தனது ஆட்சியை நடத்திக்கொண்டுபோகாது என்பதை மக்கள் அறிந்துகொண்டுவிடுவர்களாயின், யோசிக்காமல் காரியங்களை செய்வதையோ, பொறுப்பற்று நடந்துகொள்ளுவதையோ அவர்கள் விட்டுவிடுவார்கள். விஷமத்தனமான நோக்கமுள்ளவர்களும் செயலற்றுப் போவார்கள்”என காந்தி பதில் சொன்னார். இந்த செய்தி ஹரிஜன் 18-8-1946ல் இடம் பெற்றுள்ளது. ‘எங் இந்தியாவில்’ மே 28 1931ல் காந்தி எழுதினார் "பிறர் துன்பம் இழைப்பதை எதிர்ப்பதற்கு சரியான வழி, துன்பம் இழைப்பவருக்குத் துன்பம் இழைப்பது அல்லவே அல்ல- துன்பம் இழைப்பதற்கு மறுத்துவிடுவதுதான் வழி. செய்வது தவறு என்பதை நாம் அறியும்போது, அப்படி மறுப்பதனால் என்ன கஷ்டம் வந்தாலும் மறுத்துவிடவே வேண்டும். சத்தியாக்கிரகம் வெற்றிபெற அவசிய நிபந்தனைகளாக காந்தியடிகள் திரும்பத் திரும்ப வற்புறுத்திய மூன்று அம்சங்கள் 1.சத்தியாக்கிரகிக்கு எதிராளியிடம் எந்த துவேஷமும் இருக்கக்கூடாது 2.மேற்கொள்ளும் விஷயம் உண்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கவேண்டும். 3.தனது இலட்சியத்திற்காகத் துன்பங்களைக் கடைசிவரையில் அனுபவிப்பதற்கு சத்தியாக்கிரகி தயாராக இருக்கவேண்டும். தொழிலாளர் முதலாளி உறவின் சகோதரத்துவம் குறித்து காந்தி எப்போதும் வலியுறுத்திவந்தார். ஜீவனத்திற்குப் போதுமான ஊதியத்தை நிர்ணயிப்பதில் எதைச் சேர்க்கவேண்டும் என்பது குறித்து இருதரப்பாரும் முடிவிற்கு வரவேண்டும். மில்களின் பங்குதாரர்களுக்கு சமமானவர்களே தொழிலாளர் என்று கருதுவது அத்தொழிலின் நன்மைக்கு அவசியமானதாகும் என்றும் அவர் அறிவுரை தந்தார். ஜவுளித்தொழில் எனில் அதன் தொழிலாளர் சங்கம் மூலமல்லாமல் வேறு அமைப்புகளைக் கொண்டு தொழிலாளரை அமர்த்தும் பழக்கம் கைவிடப்படவேண்டும். உயிருள்ள தொழிலாளரை உயிரற்ற எந்திரத்தைவிடக் குறைவாக பார்த்தல் சரியான அணுகுமுறையல்ல. குறைந்தபட்ச இலாபம் கண்டிப்பாகவேண்டும் என்பதால் கூலியை குறைத்தே தீருவேன் என்பது சரியான முறையாகாது. தகராறை தவிர்ப்பதற்கு உகந்த வழி முதலாளிக்கு உள்ள அந்தஸ்து தொழிலாளர்களுக்கும் அங்கு இருக்கிறதா என்பதில் இருக்கிறது. மேற்கூறிய அவரது அனுபவம் செறிந்த கருத்துக்களை ஹரிஜன் பிப்ரவரி 13 1937ல் காணமுடியும். அகமதாபாத் மில் தொழிலாளர் வேலைநிறுத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும்போதெல்லாம் வேலைநிறுத்த உரிமையை அவர் பரிந்தே பேசினார். ஆனால் சமரசத்திற்கு மத்தியஸ்தம் ஒன்றிற்கு தயார் என எதிர்தரப்பு கூறினால் அதை ஏற்பது சரியானதென்றார். அதன் பின்னரும் வேலைநிறுத்தம் செய்வது குற்றம் எனக் கருதினார். ஊதிய முன்னேற்றமும், வேலைநேரகுறைப்பும் நல்ல வழிகளுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும் என அவர் விழைந்தார். அதிகப்படியாக கிடைப்பதை மதுக்கடையிலும், வேலையில்லா மிச்ச நேரத்தை சூதாட்டத்தில் கழிப்பதையும் அவர் ஏற்கவில்லை. கொடுமையானது என்றே கருதினார். நல்ல ஆரோக்கியமான சூழல் உருவாக்கத்திற்கு கூடுதலாக கிடைக்கும் பணமும், நேரமும் உதவ வேண்டும் என அவர் விழைந்தார். சுத்தமான மனது, வீடு, உடல், சுத்தமான ஆன்மாவிற்கு அவை துணையாகட்டும் என ஏப்ரல் 1920லேயே காந்திஜி சொல்லிக்கொடுத்தார். ஹரிஜன் டிசம்பர் 8 1933 மிக முக்கிய பதிவை வெளியிட்டிருந்தது. தொழிலாளர் உழைத்து சாப்ப்பிடுபவர்கள். அவர்கள் தீண்டாமையை அனுசரிக்கக்கூடாது. அவர்களிடம் விரிவான சகோதரத்துவம் இருக்கவேண்டும். வகுப்பு வித்தியாசங்கள் இருப்பது அவமானமான ஒன்று. தீண்டாமையை அடியோடு ஒழிப்பது என்பதை தொழிலாளர்கள் ஆரம்பிக்கட்டும். தொழிலாளர்கள் சமூகத்தை சமப்படுத்தும் அரிய சக்தியாக காந்தி உணர்ந்ததை இப்பதிவில் காணமுடியும். இந்தியாவில் சோம்பேறித்தனம் இல்லை. எட்டுமணி நேரம் உழைக்க அனைவரும் தயாராக இருக்கிறார்கள். உழைப்பினால் கிராமவாசி மாதம் ரூ 20 (1935ல் பேசியது) சம்பாதிக்கிறார் என உலகம் தெரிந்துகொள்வதில் எனக்கு திருப்தி ஏற்படும். அதற்கு மேலும் புத்தியை உபயோகிக்கும் வேலைகளுக்கும் அவருக்கு நேரம் கிடைக்கும் என காந்தி முக்கிய கேள்வி ஒன்றிற்கு பதிலாக தந்தார். ஓய்வே இல்லாமல் உழைக்க சொல்கிறீர்களே நியாயமா என்பதுதான் அக்கேள்வி. வர்க்கப் போராட்டமும் வர்க்க உணர்ச்சியும் வேண்டும் என்று சொல்லித்தருபவரகள் தாங்கள் சொல்லிக்கொடுத்தபடி போராடினால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள். மில்முதலாளிகளுடன் போராடலாம். ஆனால் உடன்பிறந்த சகோதரர்- உறவினருடன் எப்படிப் போராடுகிறோமோ அதே அன்புடன், மதிப்புடன், தயக்கத்துடன் போராடுவது நலம். கருங்காலிகள் என நாம் பொதுவாக அழைப்பவர்கள் எல்லாப் போராட்டங்களின்போதும் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களுடன் போராடக்கூடாது. அவர்கள் நம்மை ஏற்காமல் மறுக்கக் கூடும். அதை சகித்துக்கொள்ளவேண்டும். நாணயமாக சம்பாதிப்பதற்கு எந்த வேலையும் கெளரவக் குறைவானதல்ல. கடவுள் கொடுத்திருக்கிற கைகளையும், கால்களையும் உபயோகிப்பதுதான் முக்கியம் . சமூகம் தன்னைத்தானே திருத்திக்கொள்ளாவிடில் அழிவுதான் மிஞ்சும் என எச்சரித்துக்கொண்டே வந்தவர் காந்தி. சாவு பேதம் பார்ப்பதில்லை என்ற உண்மையை அகந்தையால் இழந்துவிடுகிறோம். உழைத்து சாப்பிடுவதை ‘உழைப்பின் சோறு’ என ரஷ்யத் தலைவர்கள் சொன்னார்கள் என்பதையும் அவர் சேர்த்தே சொன்னார். எங்கெல்லாம் தீமையும் கொடுமையும் அநீதியும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒத்துழையாமை வந்தே தீரும். சட்டம் இயற்றுவதனாலேயே, சட்டசபை விவாதிப்பதனால் மட்டுமே அதிக நன்மை எதுவும் ஏற்பட்டுவிடும் என்று நான் நம்பவில்லை. தொழிலாளரைத் தங்கள் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக முதலாளிகள் நினைக்க ஆரம்பிக்கும்வரையில், தொழிலாளர்கள் தங்கள் சொந்த உரிமைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் கல்வியைப் பெற்று, அந்த உரிமைகளைப் பெறுவதற்கான முறைகளையும் தெரிந்துகொள்ளும் வரையில் தங்கள் நிலைமையைப் சீர்படுத்திக்கொண்டுவிடமுடியாது. பொதுஜன அபிப்பிராயம் ஏற்படும்படிச் செய்வதற்கு முன்னால் சட்டத்தைச் செய்துவிடுவதால் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. பொதுஜன அபிப்பிராயம் ஏற்படுவதற்கு- நடத்தையில் மாறுதல் மனமாற்றம் உண்டாகும்படி செய்வதற்கு மிகத் துரிதமான முறை ஒத்துழையாமையே. (எங் இந்தியா 29-6-1921) தொழிலாளர் நிலைமையில் சற்று திருப்திகர சூழலுக்கு சில நிபந்தனைகள் அவசியம். - வேலைநேரத்தில் சிலமணிநேரம் ஓய்வு அவசியம். - குழந்தைகளுக்குப் பால் துணி கல்வி கிடைப்பதற்கு ஏற்பாடுகள் வேண்டும். - சுகாதாரத்துடன் கூடிய வீட்டு வசதிகள் வேண்டும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட எஜமானர்களுக்கு பொறுப்புண்டு. குறைந்தபட்ச ஊதியத்தைக் கொடுத்துவிட்டு அதிகபட்ச சேவையைப் பெறுவது என்பதில்தான் அவர்களின் தந்திரங்கள் இருக்கிறது. தொழிலாளரும் தங்களுக்கு கிடைக்கும் சம்பள உயர்வை சரியான வழிகளில் பயன்படுத்த கற்கவில்லை. தர்மகர்த்தாமுறை உயர்வு தாழ்வைக் கற்பிக்காது. முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தர்மகர்த்தாவாகி, இவர்கள் தயார் செய்யும் சாமான்களை வாங்குவோரின் தருமகர்த்தாக்களாகவும் இருவரும் இருப்பார்கள். பிரபஞ்சத்தில் தெய்வங்கள் என்ற தனி இனம் எதுவும் இல்லை. உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகள்- முதலாளிகள் தான் தெய்வங்கள் என ஹரிஜன் ஜூன் 25ல் 1938ல் எழுதினார். நாம் பலவீனமாக இருப்பதால், இன்னொருவர் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள பிரதிக்ஞை கொள்ளுவதில் பயனில்லை. நாம் பலமடையவேண்டும். திடமான உள்ளமும், விஷயமறியும் மூளையும், விரும்பி உழைக்கும் கரங்களும் உடையவராக தொழிலாளர் இருந்தால் தடைகளை சமாளித்துவிடமுடியும். அயலாரையும் நேசி என்கிறோம். முதலாளி தொழிலாளர்களுக்கு அண்டையிலிருப்பவர்- அதேபோல் முதலாளிக்கும் தொழிலாளர் அண்டையிலிருப்பவர்கள்- ஒருவர் மற்றவர்க்கு விரும்பியளிக்கும் ஒத்துழைப்பை நாடிப்பெறவேண்டும். இதன் பொருள் பணிந்து சுரண்டலை ஏற்பது என்பதல்ல என்பதை தன் ஹரிஜன் மார்ச் 1, 1935 எழுத்துக்களின் மூலம் காந்தி உணரத்தந்தார். காந்தி - லெனின் காந்தியடிகள் தான் வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்தும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் – ஆளுமைகளுடன் ஒப்பிடப்படுவதை பார்க்கமுடியும். மார்க்ஸ் உடன் காந்தியை ஒப்பிட்டு மஷ்ருவாலா எழுதினார். விநோபாபாவே அவர்கள் அதில் முன்னுரை தந்திருப்பார். காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை காந்தியைக் கண்டுணர்தல் என்கிற எனது முந்திய ஆக்கத்தில் பல்வேறு கட்டுரைகளில் இடம் பெற செய்துள்ளேன். மார்க்சியம் - லெனினியம் என்கிற அளவிற்கு மார்க்ஸ் உடன் இணைப்பைப் பெற்ற லெனினுடன் காந்தியை ஒப்பிடுதல் என்பது இங்கே முயற்சிக்கப்பட்டுள்ளது. காந்தியையும் லெனினையும் ஒப்பிட்டு 1920களில் இரு புத்தகங்கள் வந்தன. ஒன்று மார்க்சிய – சோசலிச சிந்தனைகொண்ட இந்திய இளைஞர் தோழர் டாங்கே (1899-1991) எழுதி 1921ல் வெளியான புத்தகம் Gandhi VS Lenin . இப்புத்தகம் அளவில் சிறியது. இந்த 2021 ஏப்ரலில் அப்புத்தகம் நூற்றாண்டைக் கண்டது. அடுத்த புத்தகம் ரெனி ஃபுலோப் மில்லர் எழுதி 1927ல் வெளிவந்த லெனினும் காந்தியும் (Lenin and Gandhi) என்பதாகும். அளவில் பெரிய புத்தகம். ரெனி ஃபுலோப் மில்லர்(1891-1963) வியன்னாவில் செயல்பட்ட கலாச்சார வரலாற்றாசிரியர். மில்லர் எழுதியதை இந்திய வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா நல்லவகையில் மதிப்பிட்டுள்ளார். இரு ஆளுமைகளையும் உச்சங்களாக மில்லர் மதிப்பிட்டதை குஹா தெரிவிக்கிறார். Gandhi VS Lenin புத்தகத்தை 1921ல் தோழர் டாங்கே எழுதியபோது அவருக்கு வயது 21 . இளம் தேசபக்தரின் துணிவான செயலாக இவ்வாக்கத்தைப் பார்க்கலாம். காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தை’ கொண்டாடியவர்கள் ருஷ்ய போல்ஷ்விக்குகளுக்கு இணையான போராட்டம் என்று வர்ணித்ததை ஏற்கமுடியாமல் இரண்டிற்குமான வேறுபாடுகளை இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற அவாவில் டாங்கே அதை எழுதினார். டாங்கே ஒத்துழையாமையில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பைவிட்டு வெளியேறியவர். இந்த புத்தகம் லெனின் பார்வைக்கு சென்றதாகவும் , இந்தியர்களிடம் ‘மார்க்சிய உணர்வு’ பெருகி வருவதாக லெனின் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உள்ளன. திலகரின் தொண்டனாகவும் சோவியத் புரட்சி குறித்து அறிந்தவராகவும் இருந்த டாங்கேவிற்கு மாறுபட்ட காந்தியின் போராட்டம்- சிந்தனைமுறை விமர்சனம் செய்யப்படவேண்டிய ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில் அதன் வன்முறைக்கு எதிரான உறுதிப்பாட்டை, முதலாளித்துவம் சுரண்டலுக்குரிய முறை என்கிற காந்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்கமுடியாத நிலையும் இளம் டாங்கேவால் உணரப்பட்டிருந்தது மார்க்சிய கருதுகோள்களான உற்பத்தி உடைமை, உபரிமதிப்பு ஆகியவற்றை டாங்கே விளக்குகிறார். சோசலிச சமுக மாற்றத்திற்கு ஆயுதம் தாங்கிய புரட்சி தவிர சமாதான வழிகளை பேசுவது அறிவீனம் என்பதை ஆரம்ப பக்கங்களில் சொல்கிறார். இந்திய முதலாளிகள் மூன்றுவகை பாவங்களை செய்கின்றனர். அந்நிய கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கின்றனர். இந்திய விவசாயிகளையும், கூலிக்காரர்களையும் சுரண்டுகின்றனர். அய்ரோப்பியர்களுக்கு ஆதரவாக நின்று நமது நாட்டின் வறுமை பெருக்கத்திற்கு துணை நிற்கின்றனர். எனவே இரு கடமைகளாக அந்நிய நுகத்தடியிலிருந்து விடுதலை, முதலாளித்துவத்தை அப்புறப்படுத்தல் ஆகியவை எழுகின்றன. இதற்கு வழி முறை தான் என்ன? என்கிற கேள்விக்கு டாங்கே விடைதேட முயற்சித்தார். நவீன தொழில்மய சமூகத்தின், நாகரீகத்தின் கேடுகளை காந்தியும் விமர்சிக்கிறார். ருஷ்யாவின் போல்ஷ்விக்குகளுக்கும் இந்த பார்வை இருக்கிறது. இந்துக்களுக்கு கீதை, கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல போல்ஷ்விக்குகளுக்கு மார்க்சின் மூலதனம் இருக்கிறது. பொருளாதார பொருண்மைவாதம், உபரிமதிப்பு, வர்க்கப்போராட்டம் மூன்றும் போல்ஷ்விக்குகளின் கருத்தில் கவனம் கொண்டு நிற்பவை. சோசலிச புரட்சி என்றால் தொழிலாளர்- விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய வர்க்க புரட்சியைத்தான் சொல்கிறோம். முதலாளித்துவத்தின் கோரமான மூர்க்கத்தை சமாளிக்க இது அவசியம் என அவரது தேடல் சென்றது. டாங்கேவின் எழுத்தில் இது இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “.. an armed revolution of the workers and peasants, with all the fanaticism of a religious belief is the only remedy.” முதலாளித்துவம் அப்புறப்படுத்தப்பட்டபின் இந்த வெறி தணியும் (when they have been dispossed, fanaticism will fade). “காந்தி அனைவரும் உழைக்கவேண்டும் எனச் சொல்கிறார். சோம்பிக்கிடப்பவன் திருடன் என்கிறார். ராட்டை நூற்பு என்பதை முன்வைக்கிறார் . ஆனால் உலகின் பேரளவு உற்பத்திக்கு முன்னர் கைத்தறி நெசவால் ஏதும் செய்யமுடியாது. காந்தியம் தொழிலாளர் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. பிரிட்டிஷ் போன்ற கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுபட காந்தியம் போல்ஷ்விசத்திற்கு நேர் எதிரானவற்றை முன்வைக்கிறது. போல்ஷ்விக்குகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் மனிதமனத்தை மாற்றுதல் என முன்வைத்தால், காந்தி ‘மனித மனதின் மாற்றம்’ என்பதை முன்வைக்கிறார் . அவரைப் பொறுத்தவரை வன்முறை வன்முறைக்குத்தான் வித்திடும்.”என டாங்கே எழுதியுள்ளதை பார்க்கிறோம். காந்தியம் என்பது இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது என டாங்கே மேலும் விளக்குகிறார். ஒன்று உலகளாவிய மானுடத்திற்கு பொதுமையானது- உலகளாவிய தீங்குகள் அதன் சமூக பாதிப்புகள் பற்றியது. அடுத்தது இந்தியாவில் நிலவும் கொடுங்கோல் ஆட்சியை அப்புறப்படுத்த அது முன்வைக்கும் வழிமுறைகள். “One relates to general evils, common to all human society and treats of the solution of problems affecting all. Another aspect treats of the special evil of despotism and proposes means to do away with it.” ‘Non Violent Non cooperation’ என்கிற வழியை காந்தி முன்மொழிகிறார். டால்ஸ்டாய் சொல்வதை ருஷ்யாவே கைவிட்டுவிட்டது. காந்தி எடுத்துக்கொண்டுள்ளார்- ’ Gandhism relies on individual purification, individual consciousness , conviction and individual action’. மனசாட்சியின்படி செயலாற்று என அது பேசுகிறது இது நல்ல இலட்சிய கனவாக இருக்கலாம் என்பது அன்றைய டாங்கேவின் விமர்சனம். போல்ஷ்விசம் ‘inherent goodness’ என்ற நம்பிக்கையைக் கொள்ளவில்லை. லெனின் காந்தி இருவருக்கும் இன்று நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்பது என்கிற பொதுவான இலட்சியம் இருக்கிறது. ஆனால் இதற்கு காரணங்கள் என்பதில் நவீன நாகரீகம்- தொழில்புரட்சி மனிதனிடம் காணப்படும் தீங்கான செயல்கள் என்பதுடன் காந்தி நிற்கிறார். லெனின் உற்பத்திமுறை- நிலம் - முதலாளி- அசமத்துவம் என்பதைக் காண்கிறார். தீர்வுதான் என்ன என்பதிலும் இருவரும் மாறுபடுகின்றனர். நவீன நாகரீகத்திலிருந்து காத்துக்கொள்ளுதல் என காந்தி மொழிந்தால், லெனின் இந்த வளர்ச்சியை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்பதைப் பேசுகிறார். வழிமுறைகள் என பார்த்தால் கொடுங்கோன்மை அகல அதனுடன் அனைவரும் ஒத்துழையாமை அனுசரிப்பது என்கிறார் காந்தி. லெனினோ புரட்சிகர சிறுபான்மையால் அவர்களை வீழத்தமுடியும் என்பதுடன் பெரும்பான்மை அவர்களின் சொந்த நலனை உணர்ந்து பின்தொடர்வர் என்கிறார். அதுதான் சாத்தியமான வழி என்கிறார். காந்திக்கோ மத நம்பிக்கையும் அகிம்சையும்தான் சிறந்த வழியாக இருக்கிறது. வன்முறை வன்முறையைத்தான் பெருக்கும் என காந்தி பேசினால், லெனின் வன்முறை தற்காலிகமானதே- குழப்பங்கள் முற்றிலுமாக நீங்கி மக்களின் நல்வாழ்வு திடமாகும் என்கிறார். போல்ஷ்விக்குகளால் அவர்கள் முழங்கிய ‘land Bread and peace’ என்பதை தரமுடிந்துள்ளது. லெனின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் மாஸ்கோ சென்ற பத்திரிகையாளர் லெனின் அலுவலகத்தில், அவரின் எளிமையை பார்த்துவிட்டு வியந்து பேசினார். இந்த விஷயத்தில் அவர் காந்தி போல இருக்கிறார் என டாங்கே வியக்கிறார். ருஷ்ய புரட்சி என்பது முதலாளித்துவ காலத்தை முடிவிற்கு கொணர்ந்து உழைப்பவர்க்கான காலத்தை திறந்துவிட்டுள்ளது. சோவியத் ஆட்சியின் மேன்மைகளை பேசிய டாங்கே இந்தியாவில் புரட்சி குறித்தும் தனது எண்ணத்தை தந்துள்ளார். Indian Revoultion என்கிற பகுதியில் இந்தியாவிற்கு என்ன வழி எனக்கேட்டு டாங்கே விவாதித்துள்ளார். நமது ‘கான்ஸ்டிடூஷன் முறை’ வெற்றியைத்தராது. நாம் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் என போகவேண்டியதில்லை. அதேநேரத்தில் தீவிர மாற்றங்களை அடியோடு உருவாக்கும் புரட்சி தேவை என்பதை டாங்கே சொல்கிறார் . இந்தியாவில் 64 சத சொத்தை 2 சத பெரும்பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள். சாதாரண 88 சத மக்களிடம் 12 சதம் சொத்து இருக்கிறது. நம்முடைய போராட்டத்தில் வன்முறைதான் வழி என இல்லாவிடினும் வன்முறை ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்வது தவிர்க்கமுடியாததாகலாம். கம்யூனிஸ்ட் திட்டம் என்பதை நாம் முழுமையாக ஏற்கவேண்டாம். தேசியமயம்- அரசாங்கத்துறை என்றளவு அத்திட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மூலதன குவிப்பை தடுத்தாக வேண்டும். செல்வம் - சொத்து என்றால் இவ்வளவுதான் அதிகபட்சம் என்கிற உச்சவரம்பு வேண்டும். இன்றுள்ள நிலையில் 4 பேர் உள்ள குடும்பம் எனில் ரு 150 போதும். எனவே very luxurious life அனுபவிப்பவர் யார் யார் என்பதை அரசாங்கம் கவனிக்கவேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் என உச்சவரம்பு விதிக்கவேண்டும். அதற்கு மேல் அவர் சம்பாதித்தால் உபரியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது ஆலோசனை மட்டுமே என டாங்கே முன்மொழிந்தார். காந்தியின் தர்மகர்த்தாமுறையில் முதலாளிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் என முன்மொழியப்பட்டதை நாம் அறிவோம். அதேபோல் விவசாயிகளுக்கு நிலப்பகிர்வு மற்றும் கிராமப்புற கடன் வசதி மேம்பாடு பற்றி டாங்கே முன்மொழிவுகளை செய்தார். இப்படி சில சீர்திருத்தங்கள் மூலம் முதலாளி- நிலப்பிரபுக்களை கட்டுக்குள் வைக்கலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரலாம். இறுதியில் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையை இந்த ஆக்கத்தில் டாங்கே தந்திருந்தார். சோவியத் குறித்து பெருமிதங்களை பேசினாலும், திலகரை கொண்டாடுபவராக இருந்தாலும் காந்தியின் தாக்கத்தை நிராகரிக்க முடியாமல் நூறாண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் டாங்கே இருந்துள்ளமையை நாம் உணரமுடியும். போல்ஷ்விக்குகளின் பாதையை அப்படியே ஏற்பது அவசியமில்லை என்கிற பார்வையையும் டாங்கேயிடம் அப்போது இருந்ததை உணரலாம். தேசபக்த தேசியவாதத்திலிருந்து மார்க்சியராக கம்யூனிஸ்டாக பரிமாணம் பெறும் இளைஞரின் பார்வையாக இவ்வாக்கம் பொதுவாக கருதப்படுகிறது. அடுத்த மிக முக்கியமான புத்தகம் ரெனி மில்லர் எழுதிய ‘லெனினும் காந்தியும்’ ஆக்கமாகும். புத்தகத்திற்கான முன்னுரையில் மில்லர் ( 1927 மார்ச்) இவ்வாறு வரையறுத்திருந்தார். “லெனின் காந்தி இருவருமே வெவ்வேறு வழிகளில் தங்களின் துணிச்சல்மிக்க சோதனைகளை மானுட மேம்பாட்டிற்காக செய்தவர்கள். இருவரும் ருஷ்யா, இந்தியா என தங்கள் எல்லைக்குள் நின்று தங்கள் நாட்டின் எதிர்கால திசைக்கான போராட்டத்தை நடத்தினர். சொந்த நாட்டில் நின்று காலூன்றி மக்களின் விருப்பங்களை கனவுகளை உணர்ந்து செயலாற்றினர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள்- அரசியல் திசைவழி நாடு கடந்து உலகில் பரவியது. உலக மக்களின் பரந்த அனுபவத்திற்காக ருஷ்யா லெனினாலும், இந்தியா காந்தியாலும் ‘subject’ ஆக இருந்தன என புரிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நின்ற இரு தீர்க்கதரிசிகளாக லெனினும் காந்தியும் தெரிகின்றனர். அவர்களை கூர்ந்து கேட்போமானால் சகாப்தங்களை தொடங்கி வைத்தவர்கள் என்ற உணர்வை பெறுவோம்.” லெனின் காந்தி இருவருமே அய்ரோப்பிய கலாச்சாரம் மீதான விமர்சன பார்வையைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் வழிமுறைகள் வேறாக இருந்தன. லெனின் கொடும் ஜார் அரசை அப்புறப்படுத்தி தனது மார்க்சிய இலட்சிய அரசை உருவாக்க வன்முறை எனும் வழியை தேர்ந்தெடுத்தார். காந்தி ‘evil empire’ என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் எதிர்த்து அகிம்சை வழி ஒத்துழையாமையை தேர்ந்தெடுத்தார். லெனின் ‘சோவியத் நாட்டை மின்சாரமயமாக்குதல்- தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குதல்’ சோசலிச பாதை என்றார். காந்தி தொழில்புரட்சி என்ற பெயரால் கோடானுகோடி கைகளுக்கு வேலைகொடுக்கமுடியாத எந்திரமயத்தை எதிர்த்தார். எந்திரத்திற்கு மனிதன் அடிமையாகிவிடக்கூடாது என எச்சரித்தார். ரெனி மில்லர் லெனின் வெற்றியின் இரகசியம் என பேசும்போது கோட்பாட்டு செல்வாக்கை நடைமுறையில் கொடுத்ததிலும், நடைமுறை அனுபவங்களின் பாற்பட்டு அவற்றை தனது கோட்பாட்டு அம்சங்களில் குழைத்துக் கொள்வதிலும் இருந்தது என்கிறார். லெனின் தான்பெற்ற கோட்பாட்டறிவை மாற்றிக்கொள்வதிலும் தயங்காமல் இருந்தார். காந்தியும் தனது ‘inconsistency’ குறித்து வந்த விமர்சனங்களில் வீழாமல் உண்மைக்கு அந்த அந்த தருணங்களில் நெருக்கமாக இருப்பது என்கிற வழியில் வாழ்ந்தார். டால்ஸ்டாய் குறித்த சில விமர்சனங்கள் லெனினிடம் இருந்தாலும் கார்க்கியிடம் பலமுறை மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தினார் லெனின். "Tolstoi what a mass ! What a wealth of material.. What has Europe to compare with Tolstoi.. Nothing என கார்க்கியிடம் அவர் மகிழ்ந்து வெளிப்படுத்திய தருணத்தை மில்லர் தருகிறார். காந்தியும் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டவர் என நாம் அறிவோம்.. ஒருமுறை துணைவியார் கிருப்ஸ்காயாவுடன் நாட்டில் உள்ள கல்வியறிவின்மை பற்றி லெனின் உரையாடியபோது, புரட்சிக்கு அந்த கல்வியறிவற்றவர்கள்தானே உடன் நின்றனர் என கிருப்ஸ்காயா தெரிவித்தார். ஜாரின் வீழ்ச்சி என்கிற அழித்தலுக்கு அந்த சூழல் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்பது வெறும் அழிவுவேலையல்ல. இடிப்பதற்காக மட்டுமே நாம் இடிக்கவில்லையே. புது கட்டுமானத்திற்கு கல்வியறிவின் மேம்பாடு மிக அவசியம் என்றார் லெனின். காந்தியும் ‘நயி தாலிம்’ என்கிற அடிப்படைக் கல்விக்காக நின்றதை நாம் அறிவோம். . லெனினும் சோசலிச கட்டுமானத்திற்கு ‘liquidate illiteracy’ என்றார். லெனினை பொருத்தவரை போல்ஷ்விசத்தின் அரசியல் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை தந்தார். ஒழுக்க நெறிகள், சீலம் என்பதெல்லாம் அதற்கு துணைநிற்கும் அளவிற்குத்தான் அவரிடம் கவனம் பெற்றன. சுதந்திரம் என்பதைக்கூட பூர்ஷ்வா சொல்லாடலாக அவர் பார்த்தார். மரணதண்டனை ஒழிப்பு என மக்கள் கமிசார் கூட்டத்தில் பேச்சு வந்தபோது அதனை ஒழிப்பது பைத்தியக்காரத்தனம் என்றார். எதிரிகளை சிறையில் போடுவதால் மட்டும் வெற்றி கிட்டிவிடும் என இருந்துவிடக்கூடாது என எச்சரித்தார். ஓடுகாலிகளுக்கு புரட்சியின் துரோகிகளுக்கு மட்டும் தண்டனை என சொல்லலாமா என காம்னேவ் கேட்டபோது அந்த நல்ல எண்ணம் மாயைதான் என்றார் லெனின். புரட்சிக்கு எதிராக பயங்கரவாதம் இருக்கும்போது புரட்சியின் வெற்றிக்காக நமது பயங்கரவாதம் தேவை என்கிற கருத்து அவரிடம் இருந்தது. ’ Friendly kindly fashion ’ மூலம் அவற்றை செய்ய முடியாது. தூங்குமூஞ்சி சர்வாதிகாரம் என ஏதும் இருக்க முடியாதென்றார். நமது சூழல்கள் நம்மை கடுமையாக கொடுமையாக நடக்க வைத்துள்ளன. நமது குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்தை பெறுவர் என லெனின் பேசும்போது அவரின் உள்மனம் எதற்காக நின்றது என்பதையும் சேர்த்தே உணரலாம். காந்தியோ வன்முறைதான் வழி எனில் அத்துடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என்பதில் தெளிவாக நின்றவர். தூய்மையற்ற வழிகளால் எவ்வளவு உயர்வாக பேசப்படும் ஒன்றை அடைந்தாலும் , விரைவில் அடைவதற்கான வழியாக இருக்குமே தவிர நீடித்து நிற்காது என அவர் உறுதியாக நம்பினார். இலக்கு இலட்சியம் என்பதைவிட வழிமுறைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். லெனின் தன்னைப்பற்றி சக தோழர்கள் அவ்வப்போது செய்த விமர்சனங்களையெல்லாம் ஒருமுறை தொகுத்து சொன்னார். “…autocratic, bureaucratic, centralist, one sided, pig headed, narrow, suspicious and unsociable” புரட்சிக்கு பின்னர் ஜெர்மன் தாக்குதல் என அறிந்தபோது டிராட்ஸ்கி லெனினுடன் உரையாடுகிறார். நாம் இருவரும் கொல்லப்பட்டால் புகாரின் சமாளிப்பாரா? அவர்கள் நம்மை கொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன் என டிராட்ஸ்கி கூற லெனின் பதில் தருகிறார். யார் அறிவர்- கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லி லெனின் சிரித்தார். நாம் புரட்சிக்குப்பின் நன்றாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம். இப்போது பிடரிமயிரை பிடித்துக்கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம். நிலைமைகளை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என துரிதமாக லெனின் செயல்பட்டதால் பிரஸ்ட் லிட்டொவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை வந்ததை நாம் அறிவோம். காந்தி அனைத்து நேரங்களிலும் கடவுள் வழிகாட்டுகிறார்- உள் குரல் என செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார் என்பதை அனைவரும் அறிவர். லெனின் அப்படி உள்குரல் என எதையும் சொல்லிக்கொண்டதில்லை. லெனின் தனது கருத்துக்களில் உறுதியாக நிற்பார். தான் பலநேரங்களில் தனித்து விடப்படுகிறோம் என்பதை அறிந்தாலும் no fear of isolation என்பது அவரிடம் இருந்தது. காந்தியும் இதே குணம் கொண்டவராக செயல்பட்டார். நாடு பிரிவினையின் போது அவர் எவ்வாறு தனிமையானார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த செய்தி. அதேநேரத்தில் அஞ்சாமல் உறுதியாக வகுப்புக்கலவரப் பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் இருந்து கடமையை செய்து அமைதிப்படுத்தினார். காந்தியை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றிய ரொமெய்ன் ரோலந்த் லெனின் குறித்து இவ்வாறு எழுதினார். Lenin the greatest man of action in our century and at the same time the most selfless. ரஸ்ஸல் இருபதாம் நூற்றாண்டில் லெனினும், அய்ன்ஸ்டினும் வரலாற்றின் புருஷர்களாக இருப்பர் என்றார். . காந்திக்கு தனது கருத்து சரியாக இருக்கிறது என்கிற நம்பிக்கை பலமாக ஏற்பட்டால்தான் அதை நோக்கி மற்றவரை அழைக்க அவர் முற்படுவார். ரோலந்த் அவரது மனநிலையை அழகாக தருவார் His forehead remains calm and clear, his heart devoid of vanity. He is a man like all other men. கோடானுகோடி இந்தியர்களுக்கு தொண்டன் என்பதைத்தவிர என்னை அழைத்துக்கொள்ள வேறு ஏதுமில்லை என்பார் காந்தி. காந்தி தன்னைப்பற்றி தருகின்ற சொற்சித்திரம் அவரைப்போல உண்மையானதாக எளிமையானதாக இருப்பதைப் பார்க்கலாம். “எனக்கு எந்த பிரிவையும் (செக்ட்) உருவாக்கும் நோக்கமில்லை. கடவுளின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏகபோக உரிமை கோரல்களும் என்னிடம் இல்லை. உண்மை என அறிந்தவற்றிற்காக நிற்பது செயல்படுவது என இருப்பவன். என்னிடம் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. நான் தவறுகள் இழைப்பவன்தான். எனது சேவைகளுக்கு வரம்பு இருக்கிறது.” லெனின் படுகொலை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றாலும் அவர் மீது கொலை முயற்சிகள் நடந்தது. ஆகஸ்ட் 30 1918 அன்று மாஸ்கோவில் ஆலைத்தொழிலாளர் கூட்டம் ஒன்றில் லெனின் பேசிவிட்டு வரும்போது ‘புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்’ இளம் பெண் கப்ளான் என்பவர் லெனினை சுட்டார். லெனின் உயிர்பிழைத்தாலும் அவரால் தொடர்ந்து ஆரோக்கியமாக சக்தியுடன் பணியாற்ற முடியாமல் போனது. புரட்சி நடத்திய லெனினை புரட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என விதைக்கப்பட்ட எண்ணத்தால் கப்ளான் சுட்டார். லெனின் ஜனவரி 21, 1924 மாலை மறைந்தார். அவரின் டாக்டர்கள் அவர் எப்படி தனது will power மூலம் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தார் என ஆச்சரியமடைந்த செய்தியை நாம் அறிகிறோம். லெனின் மறைவை அந்நாட்டு மக்கள் பலராலும் ஏற்கமுடியவில்லை. அவர் ‘glass case’ ல் இருந்துகொண்டு கவனித்து வருகிறார் எனக் கூட நம்பினர். காந்தி மீது கொலைமுயற்சி அவ்வப்போது நடந்திருந்தாலும் ஜனவரி 30, 1948 அன்று மாலை அவர் படுகொலை செய்யப்பட்டார். எந்த மதத்தின் மீதும் துவேஷமே பாராட்டாத காந்தியை- தன்னை இந்து சனாதனவாதி என அழைத்துக்கொண்ட காந்தியை இந்துத்துவ அரசியல் பின்புலத்திலிருந்து வெறியூட்டபட்ட கோட்சே கொன்றார். பல்வேறு இணை நிகழ்வுகள் கொண்ட இருவரும் தங்கள் வழிகளில் மானுட மேம்பாட்டை மட்டுமே தாகமாக கொண்டு செயல்பட்டனர். தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். காந்தியை லெனினுடன் ஒப்பிட்ட ஆக்கங்கள்போல் ஸ்டாலினுடன் ஒப்பிட்ட ஆக்கம் ஒன்றை லூயி பிஷர் எழுதினார். லூயி பிஷர் எழுதிய காந்தியின் வாழ்வு குறித்த ஆக்கம் மிக மேம்பட்ட நூலாக இன்றும் கருதப்படுகிறது என அறிவோம். Gandhi and Stalin எனத் தலைப்பிடப்பட்ட பிஷரின் அப்புத்தகம் கட்டுரைகளின் தொகுப்பாகும். அதில் ஒரு முக்கிய அத்தியாயமாக காந்தி ஸ்டாலின் ஒப்பீட்டை பிஷர் தந்துள்ளார். காந்திக்கு ‘அரசியல் என்றால் மிகப்பெரிய விஷயம்- வேறொன்று சிறிய விஷயம்’ என்பதெல்லாம் கிடையாது. அவர் பொது இடத்தில் பலர் மத்தியில் 24 மணிநேரமும் இருப்பவராக இருந்தார். பெரும்பாலும் சிறிய குடிசைகளில் இருந்தார். அதுவும் ஒடுக்கப்பட்டவர்- தீண்டப்படாதவர் என சொல்லப்பட்டவர்கள் மத்தியில் வாழ்ந்தார். இந்துக்களால் கண்டால் தீட்டு- பட்டால் பாவம் என நினைக்கப்பட்டவர்களுக்காக நின்றவர் காந்தி. தீண்டாமை என்கிற கொடுமையை இந்துக்கள் அறவே கைவிடவேண்டும் என்பதற்காக விடாது முயற்சித்தார். காந்தி பணம் ஏதுமில்லாத தனிநபர்தான். ஆனால் அவருக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அமைந்தனர். இதை பிஷர் கூறும்போது “His individualism does not give him the right to take everything he can get within the law. His individualism is not based on property. It is based on personality. It means that when he feels his cause is just he can stand alone against the world. With Gandhi, individualism is maximum freedom from outward circumstances and maximum development of inner qualities. Gandhi is the free man from the inside out.” என தெரிவிப்பதைப் பார்க்கிறோம். தனித்த பாதையில் எப்போதும் மக்களுடன் அவரால் இருக்கமுடிந்தது. அடிமை இந்தியாவில் முழுமையான சுதந்திர புருஷனாகவே அவர் நடமாடினார். திருடர் குறித்த உரையாடல் காந்தியுடன் நடைபெற்றபோது அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்கிற பார்வை அவசியம் என்றார். அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் உள்நோக்கி சிந்தித்தால் இது புலப்படும். அவசியமான அளவிற்கு மேல் செல்வத்தை சேர்த்துகொள்வதும் பதுக்குவதும் திருட்டுதான் . நீதி நிறைந்த சமூகமாக இருந்தால் திருட்டு இல்லாமல் போகலாம். திருடர்களை போலீசில் ஒப்படைப்பதா என்கிற கேள்வியின்போது அவர் பெரும் உண்மை ஒன்றை நமக்கு தந்தார். A reformer cannot afford to be informer என்பதுதான் அவரின் செய்தி. நிர்ப்பந்த வசத்தால் நல்லவனாக இருப்பது நீடிக்காது என்பதை அவர் உணர்த்திவந்தார். சர்வாதிகாரத்தில் நிர்ப்பந்தம் இருக்கும். ஆனால் அதன் குறைகள் ஒருநாள் வெடிக்கும். மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்வது மூலம் மாற்றம் என்பதற்காக காந்தி பெரிதும் பாடுபட்டார். தானே வாழ்ந்துகாட்டியதன் மூலம் எந்தவித அரசாங்கத்தையும் துணைக்கு கொள்ளாமல் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கண்ணியம் என்பதின்- கூட்டு முயற்சி என்பதின் புதிய அர்த்தத்தை காந்தி கற்றுக்கொடுத்தார் என என பிஷர் எழுதினார். காந்தியின் வாழ்வு எப்போதும் திறந்த புத்தகமாக இருந்தால் (Gandhis life is an open book. Stalin lives behind a thick curtain) ஸ்டாலின் வாழ்வு திரை கொண்டது என்கிற தன் ஒப்பீட்டை ஃபிஷர் தருகிறார். இந்திய கம்யூனிஸ்ட்கள் மற்றும் சோசலிஸ்ட் தலைவர்களில் பலர் எளிய திறந்த புத்தகமாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டதையும் நாம் சேர்த்து இங்கு பார்க்கவேண்டும். ஸ்டாலின் எங்கு செல்கிறார்- எப்படி செல்கிறார்- அவர் வீடு எங்கு இருக்கிறது- எங்கே தங்குகிறார் என்பதெல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக ஃபிஷர் தெரிவிக்கிறார். மாஸ்கோவில் (நவம்பர் 1932) அவரது துணைவியார் சவப்பெட்டியுடன் ஸ்டாலின் வருவதற்காக முழுமையாக தெருக்கள் கண்காணிப்பிற்கு வந்துவிட்டதாகவும் அவர் எழுதினார். ஜன்னல்கள் வழியாகக் கூட பார்க்க பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. லெனின் ஸ்டாலினை பொதுச் செயலராக்கினார் என்பது உண்மை. அதேபோல் அவரை நீக்கிவிடுங்கள் என அவர் எழுதியதும் உண்மை. ஆனால் ஸ்டாலின் ஜினோவீவ், காம்னேவ் உதவியுடன் தன் பொறுப்பை தொடர்ந்தார் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். பிஷர் ஸ்டாலின் அதிகாரம் செயல்பட்டமுறையை இவ்வாறு சுருங்கத் தருகிறார். “Stalin keeps authority and initiative at the peak of the pyramid. Nothing works automatically in Soviet Russia. everything is a campaign, If a govt believes that political parties, trade unions, and city and village self rule are no longer necessary now that it is in power, then it is autocracy no matter what it has done about the nationalisation of factories and farms.The character of a government is determined not by its treatment of inanimate property but by its treatment of living people.” ஸ்டாலின் கால சோவியத் ஆட்சியை ‘political economic autocracy’ என்று ஃபிஷர் வர்ணித்தார். சோவியத்முறை ‘the boss is always right’ என்ற உரிமை பாராட்டியது. காந்தியோ ‘I am never sure I am right’ என்பார். காந்தி தன் குறைகளை பார்க்கத்தெரிந்தவராக இருந்தார். ஸ்டாலின் பிறரது குறைகளை பட்டியலிட்டு தண்டனைகள் தருபவராக இருந்தார். காந்தியடிகள் மீதான விமர்சனங்களை அவர் முன்பாகவே வெளிப்படையாக வைக்கமுடிந்தது. ஸ்டாலினை விமர்சித்தால் என்னவாகும் என்பதை வரலாறு காண்பித்துள்ளது. ‘Dictatorship’ என்கிற ஆட்சியாளர்களின் தவறே செய்யாத தலைவரின் குணங்களாக 32 அம்சங்களை ஃபிஷர் அந்நூலில் பட்டியலிட்டுள்ளார். ஜனநாயகத்திலும் பெருங்குறைகள் நீடிக்காமல் இல்லை. ஜனநாயகம் நீடிப்பதற்கேகூட தன் குறைகளை பொருட்படுத்தி சரிசெய்திட அது கற்கவேண்டும். அதற்கு காந்தி செய்துகாட்டிய கருதுகோளான ‘Turn the Searchlight Inward’ என்பது பெரும்பான்மையினருக்கு அன்றாட பயிற்சியாக மாறவேண்டும். பிஷர் இது பற்றி குறிப்பிடுகிறார். அன்பு காட்ட, தர்மவான் ஆக வாழ்ந்திட, பொறுமை சகிப்புத்தன்மையுடன் நடக்க சட்டம் போடமுடியாது. காந்திக்கு வெறுப்போ, விஷம் உமிழும் மனதோ இருந்ததில்லை என பிஷர் எழுதினார். பிஷரின் பார்வையில் ஸ்டாலினுக்கு மாற்று மருந்து காந்திதான் “Gandhi is the antidote to stalin because the Mahatma is the symbol of the individual against the strong government”. வலிமைவாய்ந்த அரசாங்கத்தை தனிநபர் எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை காந்தி தருகிறார். மக்களின் நல்வாழ்வு என்பதில் காந்தி அக்கறை கொண்டவராகத்தான் இருந்தார். பேராசை- சொத்தாசை- சுயநலம் வேண்டாம் என்றார். எவர் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுள்ளாரோ அவருடன் அவராக அவர் மேம்பாட்டிற்கு நேர்மையாக நிற்க காந்தி சொல்லிக்கொடுத்தார். வெறும் உபதேசமாக அல்ல. செயல்முறையாக தானே முன்நின்று களமாடியவராக அவர் இருந்தார். பிஷர் தன் மொழியில் இவ்வாறு எழுதினார். “Gandhism asks people to live better. It asks them to be less selfish, less greedy, less money mad, less self centred. It asks them to be more kind, more honest, more friendly, more brotherly. ..Turn the searchlight inward.” மக்கள் சுயநலமின்றி, பேராசை இல்லாமல், பணப்பேய் பிடிக்காமல், தன்னலப்பேணியாக இல்லாமல் வாழவே காந்தியம் வேண்டுகிறது. அன்பானவர்களாக, நேர்மையானவர்களாக, நட்பும் சகோதரத்துவமும் பாராட்டுபவர்களாக மக்கள் நல்வாழ்வை நடத்தமுடியும் என அது சொல்லிக்கொடுக்கிறது. சமூகமாற்றத்தில் நம்பிக்கைவைத்து செயலாற்றும் ஒவ்வொருவருக்கும் காந்தி தந்த செய்தி ‘Turn the searchlight inward’. காந்தி - மாவோ காந்தியடிகளை மார்க்ஸ் லெனினுடன் ஒப்பிட்டதுபோல் மாவோவுடனும் ஒப்பீடு செய்யலாம். இந்தப்பணியை Mao Tes Tung and Gandhi என்கிற ஆக்கத்தின் மூலம் Jayantanuja Bandyopadhyaya செய்துள்ளார். இந்த ஆக்கத்தில் ஜெயந்தனுஜா காந்தியின் சத்தியாகிரகம் மாவோவின் மக்கள் யுத்தம் குறித்தும், மாஸ்லைன் மற்றும் நிர்மாணத்திட்டம் குறித்தும் ஆய்விட்டுள்ளார். இரு பெரும் ஆசிய ஆளுமைகளான மாவோ மற்றும் காந்தி ஆகியவர்களின் செல்வாக்கு எப்படி பலரிடம் சென்றடைந்தது என்பதை குறித்தும் ஆசிரியர் விவாதிக்கிறார். சமூக மாற்றத்திற்கு இந்தியாவில்- சீனாவில் குறிப்பிட்ட சூழலில் இருவரின் பங்களிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது. காந்தி மாவோவைவிட 24 ஆண்டுகள் வயதில் மூத்தவர். ஆனால் சொந்த நாட்டின் அரசியல் மற்றும் நிகழ்வுகளில் அவர்கள் சமகால நுழைவை பார்க்கமுடிகிறது. விடுதலைக்குப் பின்னர் 5 மாதங்களில் காந்தி படுகொலை நிகழ்ந்துவிடுகிறது. மாவோ சீனப்புரட்சியின் நாயகனாக எழுந்து 1976ல் மறையும்வரை அந்நாட்டின் உயர்பீடத் தலைவராக- ஆட்சிபுரிந்தவராக இருந்து மறைந்தார். இரு நாடுகளிலும் 80 சத மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள் . சீனாவில் ஜப்பான்- கோமிண்டாங் வீழ்ச்சியில் மார்க்சிய- லெனினிய வகைப்பட்ட சீனக் கட்டுமானம் என மாவோ செயல்பட்டால், பிரிட்டிஷாரை வெளியேற்றி தன் இந்திய நிர்மாணத்திற்காக காந்தி செயல்பட்டார். இருவருக்குமே கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை, கிராமப்புற விவசாயிகளை திரட்டுவது என்பது இயக்க ஆதாரமாக இருந்தது. சீன கம்யூனிச இயக்கத்தில் மத்தியதர வர்க்க அறிவுத்தலைமையும் வளர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவிலும் மேற்கத்திய கல்வி பின்புலம் கொண்ட மத்தியதர வர்க்கத்தலைமையின் வளர்ச்சி இருந்தது. இந்த அறிவுத்தலைமையை மக்கள் நல செயல்பாட்டில் முழுவீச்சாக இறங்கவைத்த வரலாற்றுக் கடமையை காந்தியும் மாவோவும் ஆற்றினர். சர்வதேசியம்- மானிட சகோதரத்துவம் என்ற விரிந்த பார்வையில் சீனத்தேசியம்- இந்திய தேசியம் என்கிற எல்லையில் நின்று இருவரும் செயலாற்றினர். அனைத்து சூழலும் இருவருக்குமே ஒரே மாதிரி ஒன்றுபோலவே அமையவில்லை. மார்க்சியர்கள் மாவோவின் வழியை வர்க்கப்போராட்டவழி என ஏற்றால் காந்தியின் வழியை வர்க்க சமரசவழி என்றே சொல்வர். விவசாய எழுச்சிகள் அதிகம் நடந்த பூமியாக சீனா இருந்தது. விவசாயிகள் விழிப்புணர்வும் மேம்பட்டதாக இருந்தது. உற்பத்தி திறன், வாழ்க்கைத்தரம் இந்திய விவசாயிகளை ஒப்பிடுகையில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்திய அம்சங்கள் காந்தியின் அகிம்சைவழி போராட்ட சூழலுக்கு களம் அமைக்க அவருக்கு உதவின. மாவோவிற்கு அமைந்த சூழலைவிட சற்று கடினமான சூழலே மக்களை திரட்டுவதில் காந்திக்கு அமைந்தன என்பது ஜெயந்தனுஜா அவர்களின் மதிப்பீடாக இருக்கிறது. இந்தியாவின் கிராமங்களுக்கு ஆட்சியாளர் எவரே ஆனாலும் தங்களின் தேவைகளை ஓரளவிற்கு சுயமாக நிறைவேற்றிகொள்ளும் நீண்ட கால வரலாறிருந்தது. புறச் சூழல் என்பதில் பலவகை இணை அம்சங்கள் இருந்தால் கூட அதனை கருவியாகக்கொண்டு செயல்படும் தனிநபர் பாத்திரம் அவரது மனோபாவம் என்பதும் ஓரளவிற்கு தனித்துவ அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். மாவோவின் குடும்ப பின்னணி, கல்விச் சூழல், புரட்சிகர இயக்கத்தில் கற்ற பாடங்கள் என்பதும், காந்தியின் குடும்பப் பின்னணி. கல்விச் சூழல், தென்னாப்பிரிக்க அனுபவங்கள், இந்திய விடுதலை இயக்க சூழல் என்பதும் ஒருபடித்தானவையல்ல. இருவரும் மக்களை அணுகினர். அவர்களை அச்சத்திலிருந்து விடுவித்தனர். ஒருவர் ஆயுத வழி என்றால் மற்றவர் அகிம்சை வழி என்றார். இருவராலும் தங்கள் வழியின் மேன்மை சிறப்பு குறித்து தங்கள் மக்களிடம் உரையாட முடிந்தது. சீனாவில் மாவோவின் உரையாடலை செவிமடுத்ததால் சீனப்புரட்சி 1949ல் எழுந்தது. காந்தியின் உரையாடல் இந்திய மக்களை கவ்விப்பிடித்தது. இந்திய விடுதலை 1947ல் அறிவிக்கப்பட்டது. மாவோ தனது இளம் வயதிலேயே மார்க்சிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காந்தியோ டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ, பகவத்கீதை , குரான், மலைப்பிரசங்கம் போன்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காந்தி தனது முதுமைக்காலத்தில் மார்க்சிய எழுத்துக்களை படித்தாலும் அவற்றால் ஈர்ப்பிற்கு உள்ளாகவில்லை. மார்க்சிய கருதுகோளில் socialised production- socialised humanity என்பது மிக முக்கியமானது. civil society என்பதோ பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களோ சுரண்டல் வர்க்கத்திற்கே சாதகமாக இருந்த அனுபவத்தை மார்க்சியம் எடுத்துக்கொண்டது. திறமைக்கேற்ற திறனுக்கேற்ற உழைப்பை பெற்றுக்கொண்டு ஓவ்வொருவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் கம்யூனிச அமைப்பை மார்க்சியம் முன்மொழிந்தது. தனிநபர்கள் நெறிகளுடன் அகிம்சவழியில் உண்மைக்கும் நீதிக்குமாக நடைமுறையில் நின்று செயல்படும் வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கும் சமத்துவம்’ என்கிற இலட்சிய சமுதாயம் பற்றி காந்தி பேசினார். அவரது சுயராஜ்யம் அரசாங்கம் சார்ந்த விஷயமட்டுமல்ல- சமூகத்திற்கும் தனிநபருக்குமான சுயராஜ்யம் என்பதாகும். மாவோ தனது அனுபவத்தில் சோசலிச புரட்சியின் பொருளாதார கட்டுமானத்திலும் வர்க்கப் போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டங்களாக அவை எழும் என்றார். நிலைமறுப்பின் நிலைமறுப்பு என முரண்பாடு குறித்து மாவோ பேசியது போல் காந்தியின் இயக்கவியலிலும் ‘negation of negation’ இருந்தது என ஜெயந்தனுஜா சொல்கிறார். காந்தி முரண்பாடு- நிலைமறுப்பு என்றெல்லாம் சொல்லாடல் செய்திருக்கமாட்டார். ஆனால் ’ Rejection of untruth is necessary for the vindication of truth’ என அவர் பேசுவதைப் பார்க்கலாம். பெரும் முதலாளிகளும் ஏழை உழைப்பாளர்களும் உள்ள சமூகம் நீடிக்கப்பட்டால் அங்கு அகிம்சை சாத்தியமில்லாமல் போய்விடும் எனவும் அவர் பேசினார். மாற்றாக தர்மகர்த்தாகொள்கையை முன்வைத்தார். மாவோ பகை முரண்பாடு- பகையற்ற முரண்பாடு என விளக்குவார். சமூகத்தில் சுரண்டல் ஒடுக்குமுறை வழிப்பட்டோ அல்லது எதிரிகளை அழித்தொழிக்கும் வழியிலோ தனது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது எனக் காந்தி கருதினார். மக்களுக்கு சுயராஜ்யம் வன்முறை வழிப்பட்டு வரவே வராது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ‘A non violent revoultion is not a programme of seizure of power but it is a programme of transformation of relationships’ என காந்தி பேசினார். முதலாளிகளியோ நிலப்பிரபுக்களையோ அழித்து ஒழிப்பதல்ல பிரச்னை. அவர்களுக்கும் வெகுஜனங்களுக்குமான உறவை எவ்வளவு ஆரோக்கியமானதாக, தூய்மை நிறைந்ததாக மாற்றமுடியும் என்பதுதான் பிரச்னை என்பது காந்தியின் உரையாடல். இதை மார்க்சியர்கள் பொதுவாக சந்தேகத்துடன்தான் பார்த்தனர். வாய்ப்பில்லை என நிராகரிக்கவும் செய்தனர். காந்தியோ போல்ஷ்விசம் மற்றும் மேற்கு ஜனநாயகத்தை விமர்சனக் கண்கொண்டே பார்த்தார். ஃபாசிஸ்ட்களையும், நாஜிகளையும் அவர் 1942ல் லூயி பிஷருடன் பேசிக்கொண்டிருந்தபோது விமர்சித்தார். ’ peoples’war- Mass Line’ என்பதில் நம்பிக்கை வைத்து மார்க்சியர்கள்- மாவோ செயல்பட்டிருந்தால் , காந்தி மாற்றாக தனது சத்தியாகிரகம்- ஆக்கபூர்வ நிர்மாணத் திட்டம் முன்வைத்து மக்களை திரட்டினார். ‘Socialistic consciousness of the individual would follow from the socialization of the means of production’ என்பது மார்க்சியர்களின் கருதுகோள். மாவோவும் உற்பத்தியில் ஈடுபடும்போது புரட்சிகர உணர்வைப் பெறமுடியும் என்பார். ஆனால் கலாச்சார புரட்சியின் தருணத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் உற்பத்தி என்பதுடன் நில்லாமல் ’ personal moral effort ’ குறித்துப் பேசத்துவங்கினார். அவரது மேற்கோள்கள் தனிநபர்களின் புரட்சிகர உணர்வு மட்டத்தை உயர்த்தும் எனவும் சொல்லப்பட்டது. காந்தி புரட்சியின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியை கொண்டாடினார் என்பதை அறிவோம். உணவையும் அவசியமான தேவைகளையும் அவரவர் தங்கள் உழைப்பின் மூலம் பெறவேண்டும் என்றவர் காந்தி (Bread labour divine law). தான் திரட்டும் மக்களிடம் சுயக்கட்டுபாட்டையும் நேர்மையையும், உண்மைக்கும் கடவுளுக்கும் நெருக்கமாக இருப்பதையும் காந்தி எதிர்பார்த்தால், மாவோ அம்மக்களின் இராணுவக் கட்டுப்பாடு, அரசியல் மற்றும் சோசலிச உணர்வுகள் என்பதை எதிர்பார்த்தார். மாவோ கூட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற நேரிடை சொல்லாடலுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்பதை முன்வைத்தார். காந்தியின் சத்யாகிரகிகள் போராட்டம் மற்றும் நிர்மாண திட்டத்திலும் ஈடுபடுபவர்களாக இருந்தனர். இரண்டிற்குமான இணைப்பு அங்கு முக்கியமானது. மாவோ எட்கர் ஸ்னோவிடம் உரையாடும்போது 1965ல் ஒடுக்கப்பட்டோரின் புரட்சிகர இயக்கத்தினர்தான் மக்கள் யுத்த பாதையை மேற்கொள்ளமுடியும். அது ‘would not work in reverse’ என விளக்கினார்.. காந்தியின் சத்தியாகிரக பாதையும் ஒடுக்கப்பட்டோருக்கான ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது. இராணுவமோதல்களில் அழித்தொழிப்பு என்பது அடிப்படையானது என லின் பியோ விளக்கினார். ஆனால் காந்தி non violent non coopeartion என்பதை முன்வைத்தார். மக்கள் ஒத்துழைப்பு இருக்கிறவரைதான் அரசாங்கம் ஆளமுடியும் என்பதை மக்களுக்கு புரியவைப்பதில் காந்தி கவனம் செலுத்தினார். ‘Disobedience of the laws of an evil state is therefore duty’ என அவர் சொல்லித் தந்தார். உப்பு சத்தியாகிரக வேள்வியை நடத்தியும் காட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 78 சத்தியாகிரகிகளுடன் 241 மைல் உப்பு யாத்திரையது. மாவோ தனது Long March எனப்படும் நீண்ட பயணத்தை காந்தியின் உப்பு யாத்திரைக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 1934ல் 2000மைல்கள் நடத்திக் காட்டினார். இருவரின் அணுகுமுறையை விவாதித்த ஜெயந்தனுஜா கீழ்கண்ட ஒப்பீட்டை சுருக்கமாக தருகிறார். “While People’s war is essentially the art of the organised destruction of other human beings representing the enemy, through relatively inferior weapons, satyagraha is that of confronting the opponent with a moral challenge and psychological situation. ..People’s war is the function of an essentially military machine” எதிராளிகளின் பலம் வாய்ந்த ஆயுதங்களை தனது துன்பங்களை தாங்கிக்கொள்ளும் ஆன்ம பலத்தால் செயலிழக்க வைப்பது என்பது சத்தியாகிரகப்பாதை . மக்கள் யுத்தம் சுரண்டுகிற கொடூர முதலாளித்துவ நிலபிரபுத்துவ சமூக முறையை தூக்கி எறிய பயன்படுத்தப்படும் போராட்டவகையாக இருக்கலாம். புதியவகையிலான பாட்டாளிவர்க்க அல்லது மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அதைப் பயன்படுத்த அங்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவசியம் இருக்காது என்கிற நம்பிக்கை அங்கே புரிதலாக வைக்கப்படும். சத்தியாகிரகம் சுயராஜ்ய சர்க்கார் அமைந்தாலும்- விடுதலைக்குப் பின்னரான அரசுடன் அவசியமானால் ‘ஒத்துழையாமை’ என்பதற்கு இடம் கொடுக்கும் முன்மொழிவாக இருந்தது. 1943ல் மாஸ் லைன் (Mass Line) பற்றி மாவோ கீழ்கண்டவாறு விளக்கினார். “கட்சியின் நடைமுறை வேலைகளுக்கு ‘வெகுஜனங்களிடமிருந்து வெகுஜனங்களிடம் பணியாற்ற’ தலைமை வரவேண்டும். மக்களிடமிருந்து சிந்தனைகளை உள்வாங்கி செரித்து அவற்றை திடப்படுத்தி சித்தாந்தமாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தல் வேண்டும். அவர்களை கவ்விப்பிடிக்கும் சிந்தனைகளாக அவற்றை முன்வைக்கவேண்டும். இந்த நிகழ்வு தொடர் நிகழ்வாக மீண்டும் மீண்டும் நடைபெறவேண்டும். இதைத்தான் மார்க்சிய அறிவுகோட்பாடாக சொல்கிறோம்.” நிர்மாணத்திட்டம் என்பது ‘செயல்படுவதில்தான்’ முகம் கொள்ளும். அதை கட்டவிரும்பும் நாம் அது சொர்க்கத்திலிருந்து வந்துவிடும் என எண்ணலாகாது. அவசரமும் ஆகாது. செங்கல் செங்கல்லாக வைக்கப்பட்டு எழும்பும் கட்டிடம் போல செயலாக்கம் தேவை என்கிற அறிவுரை காந்தியிடமிருந்து வந்தது. மாஸ்லைன் என்பது மார்க்சிய லெனினிய வகைப்பட்டு என்ற பொதுவான அம்சத்தில் திரட்சியைக் கோரினால், காந்தியின் நிர்மாணத்திட்டம் தீண்டாமை, மதுவிலக்கு, காதி, அடிப்படை கல்வி, கிராம சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், தாய்மொழிக் கல்வி போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டமாக அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மூலம் கிராமப்புற மக்களை திரட்டி பொருளாதாரகட்டுமானம் என மாஸ்லைன் செயல்பட்டால், சத்தியாகிரகிகளை முழுமையாக இறக்கி மக்களுடன் அவர்களின் தேவை மற்றும் மாற்றங்களுக்கு நிற்கச் செய்வதாக நிர்மாணத்திட்டம் இருந்தது எனலாம். சீனாவில் நிலச்சீர்திருத்தம் மய்யம் கொண்டது. வெகுஜன வழி என்பதற்கு 90 சத விவசாயிகளை இணைக்கவேண்டும் என மாவோ கட்சி ஊழியர்களிடம் எடுத்துரைத்தார். 1957ல் பெரும் பாய்ச்சல் மூலம் 15 ஆண்டுகளில் ‘வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு’ இணையான பொருளாதார கட்டுமானம் முன்மொழியப்பட்டது. 10 கோடி விவசாயிகள் மாபெரும் உழைப்பை நல்கி பெரும் சாதனைகளை செய்தனர். காட்டப்பட்ட அதிஅவசர நடவடிக்கைகளால் நடந்த தவறுகளை சில ஆண்டுகளிலேயே சரி செய்துகொண்டு மாஸ்லைன் கொள்கையை அவர்கள் தொடர்ந்து அனுசரித்தனர். கிராமங்களின் சுயதேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும் வறுமை- வேலையின்மையை போக்கும் வகையிலுமான திட்டமாக நிர்மாணத்திட்டத்தை காந்தி பார்த்தார். பெருந்தொழிற்சாலைகள், விவசாயத்திலும் எந்திரமயம் என்பது சீனாவில் ஏற்கப்பட்டு அமுலானது. நேருவின் ஆட்சியில் தொழில்மயம், பொதுத்துறை வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டன. காந்திய மாதிரி என்பது நடைமுறையில் வராத நிலையை விடுதலை இந்தியா கண்டது. காந்திக்கு மார்க்சிய கோட்பாடுகள் குறித்து அதே அளவிலான புரிதல்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழைப்பில் ஈடுபடுவதன் மூலமே அறிவும் கல்வியும் பலனளிக்கும் என அவர் மாவோ பேசியது போலவே பேசியதை காணலாம். மனிதன் சக மனிதர்களுடன் சேர்ந்து செய்திடும் கூட்டுழைப்பின் மூலம் கற்றல் என்கிற ஏற்பு இரு தலைவர்களுக்கும் இருந்தது என்பதை ஜெயந்தனுஜா தெரிவிக்கிறார். இரு தலைவர்களும் உற்பத்திக்கு துணைநிற்கும் கல்விமுறைக்காக நின்றதையும் பார்க்கிறோம். சீனாவில் ஏற்றத்தாழ்வு என்கிற பிரச்னையானாலும் மதம் குறித்த பிரச்னையானாலும் மாவோ திறம்பட தீர்த்தார் என்பதை ஜெயந்தனுஜா சொல்கிறார். காந்தி வாழ்நாள் முழுதும் தீண்டாமைக்கொடுமையை எதிர்த்து பேசினாலும் சாதி பிரச்னை என்பது இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மதமோதலுக்கு எதிராக இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்தி தன்னை அர்ப்பணித்தாலும் இந்தியாவில் இந்த பிரச்னை அவ்வப்போது கொதிநிலையை எட்டுவதையும் பார்க்கிறோம். மாவோவை ஒப்பிடுகையில் ஏற்றத்தாழ்வு- வகுப்புவாதம் பிரச்னைகளில் காந்தி வெற்றி பெறவில்லை என்பது ஜெயந்தனுஜா மதிப்பீடாக இருக்கிறது. மாவோ துவக்கத்திலிருந்தே செஞ்சேனையின் கடமைகளை வரையறுத்து வந்தார். மக்களை திரட்டுவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது, அவர்களுக்கான புரட்சிகர அரசியல் பயிற்சியை கொடுப்பது- கட்சி அமைப்புகளை கட்டுவதற்கு கூட துணை நிற்கவேண்டிய கடமைகள் உணர்த்தப்பட்டன. 1938ல் அதன் எல்லையையும் மாவோ தெளிவுபடுத்தினார். ‘Our principle is that the party commands the Gun, and the gun must never be allowed to command the party’. ஆயுதம் ஏந்திய சேனையின் எல்லையை வரையறுக்கும் துல்லிய வார்த்தைகளாக மாவோ வெளியிட்டதைப் பார்க்கிறோம். சீனா மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் பொதுவாக விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதற்குப் பொருள் அவர்களுக்கு சுதந்திர உணர்வு இருக்கிறது என்பதல்ல. “If masses have any freedom, it is only the freedom to coopearte with the party leadership and to implement the government policies decided by it”என ஜெயந்தனுஜா எழுதுகிறார். முடிந்தவரை காந்தி அதிகார வெளியிலிருந்து தூரமாக தன்னை வைத்துக்கொண்டார். காந்தியின் நிர்மாணத்திட்டத்தில் மக்கள் சுயவிருப்பத்துடன் செயல்படுதல்- எந்தவித முற்றதிகார மய்யத்தின் கட்டுப்பாட்டையோ அதிகார குரலுக்கு செவிமடுக்காமலோ செயல்பட வழி இருந்தது. ருஷ்யா- சீனா அனுபவங்களில் புரட்சிக்கு விரோதமானவர்கள் என்கிற பெயரில் ஒழிப்பு - மனித உயிர்கள் பறிப்பு என்பது நடந்தேறியது. லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு குறித்து யுனஸ்கோ 1955ல் தகவல் வெளியிட்டது. மில்லியன் கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக அவதிக்கு உள்ளான செய்திகள் வெளியாயின. பெரும்பான்மை மக்களின் நலன்காக்க சர்வாதிகாரம் என்றாலும் இவை குறித்த பெரும் விமர்சனங்கள் எழத்துவங்கின. அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் அடிமையாக மனிதன் சிக்கிவிடகூடாது என்பதை காந்தி அழுத்தமாக சொல்லிவந்தார். சீனா தொழில்நுட்பம்மிகுந்த பெரும் பொருளாதார நாடாக நிற்கிறது. இந்தியாவும் பொருளாதார வல்லரசு கனவுகளில் பேரளவு உற்பத்திமுறையை பெரும் தொழில்நுட்பத்தை நம்பி வளர்ந்து வருகிறது. மானுட பொருளாயத தேவைகள் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் காந்தியின் அவசியம் உலகினரால் உணரப்பட்டு வருகிறது . சோசலிச உரையாடல் சோசலிசம் என்றால் அதில் சத்தியமும் அகிம்சையும் நிறைந்திருக்கவேண்டும் என்பதை மகாத்மா காந்தி விடாமல் வலியுறுத்தி சொல்லிவந்தார். பிஷர் காந்தியிடம் உங்கள் சோசலிசத்தின் அர்த்தம் யாது என வினவியபோது ‘கடையனுக்கும் கதி மோட்சம்’ என்பதே என பதில் அளித்தார் காந்தி. அமெரிக்காவில் ஒவ்வோருவரும் வாகனம் வேண்டும் என ஆசைப்படலாம். என்னைப்பொறுத்தவரை ஒருவரின் தனித்தன்மை முழுமையாக செயல்பட சுதந்திரம் வேண்டும். மற்ற சோசலிசத்தில் இதற்கு இடமில்லையே என பதில் கேள்வி காந்தியிடமிருந்து வெளிப்பட்டது. பிஷர் காந்தியிடம் ரஷ்யாவில் யாவும் அரசிற்கு சொந்தம். உங்கள் உடல் கூட அப்படித்தான். எப்போது வேண்டுமானாலும் ஒருவர் கைது செய்யப்படலாம் என்றார். காந்தி நான் கம்யூனிஸ்ட் என்றே என்னை சொல்லிக்கொள்கிறேன் என்று சொன்னவுடன் பிஷர் ‘வேண்டாம் அது அநியாயம்’ என்றார். சுதந்திரமான உலகத்தை கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை. அப்போது ஸ்டாலின்ரக கம்யூனிசம் வேண்டாம் என்கிறீர்களா என்பது பிஷர் வைத்த கேள்வி. இந்த உரையாடல் ஹரிஜன் ஆகஸ்ட் 4, 1946ல் இடம் பெற்றுள்ளது. சுதந்திர இந்தியாவின் பாதை குறித்து எழுதிய ஜெயப்பிரகாஷ் அதை ராம்கர் காங்கிரஸ் அமர்வில் வைக்கவேண்டியிருந்தார். காந்தி அதனை பொதுவாக ஏற்றுக்கொண்டாலும் அதை கமிட்டியில் வைக்க காங்கிரஸ் முன்வரவில்லை. ஜெயப்பிரகாஷ் தான் விரும்பும் சமூகம் காண அகிம்சையை ஏற்றிருப்பது மகிழ்ச்சியானதென்றார் காந்தி அகிம்சை முறையில் சாதிக்க நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள், ஏழைகள் என அனைவருக்கும் பயிற்சி தேவை. அதற்கு பரஸ்பர மரியாதை நம்பிக்கையுள்ள சூழ்நிலையை ஏற்படுத்துவது முதல்படியாகும். அப்படி அமைந்தால் பலாத்கார வன்முறை ஏதும் இல்லாமல் போகலாம். இந்த விவாதம் ஹரிஜன் 20-4-1940ல் வெளியாகியிருந்தது. தர்மகர்த்தாமுறைப் பற்றி நான் சொல்வதை நடக்காது வெறும் கனவு என விமர்சிக்கிறார்கள். அது நடவாமல் போகலாம். ஆனால் சோசலிஸ்ட்கள் கனவு மாத்திரம் நிச்சயம் பலிக்கும் என எப்படி உத்தரவாதம் சொல்லமுடியும். முதலாளிகள் சுரண்டுகிறார்கள் என பல்லாண்டுகளாக பிரச்சாரம் செய்தும் சோசலிசம் வந்துவிடவில்லை. மனிதர் மனத்தை மாற்றமுடியும் என்கிற நம்பிக்கை போனதால் தான் மேற்கித்திய சோசலிசக் கொள்கை தோன்றியுள்ளது. எனது சோதனைகளும் விஞ்ஞானரீதியானவைதான். எல்லா செயல்களிலும் அகிம்சை புலப்பட செய்வதே எனது வேலை. அகிம்சை தோட்டத்தில் பலவித செடிகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் ஏதோ ஒரு செடியைப் பயன்படுத்துவதால் மற்றதை விட்டுவிட்டோம் என்ற பொருளல்ல. அகிம்சையில் தோல்வி என்பதில்லை என ஹரிஜன் பிப்ரவரி 20 1937ல் காந்தி எழுதினார். வர்க்கப்போராட்டம் தவிர்க்கவே முடியாத ஒன்றல்ல என பொதுவாக அவர் கருதினார். அப்படி தவிர்க்க முடியாது என கருதிவிட்டால் அதை போதிக்க எனக்கு தயக்கமில்லை என்பதை அவர் 1936லேயே சுட்டிக்காட்டியுள்ளார். ஏழைகளுக்கு சுயமுயற்சியை கற்றுத்தருவது என்பதில் செயல் ஊக்கப்பங்கை செய்தவர் காந்தி. வர்க்கம் என்கிற வகையில் கருணையுள்ள சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் அதை தீங்கெனவே அவர் பார்த்தார். இக்கருத்தை கருணையுள்ள சர்வாதிகாரம் என்ற தலைப்பில் ஹரிஜன் ஜூன் 8, 1940ல் வெளியிட்டிருந்தது. ஒருமுறை களைப்பு மிகுந்த இரயில் பயணம் ஒன்றில் எகிப்திலிருந்து வருவதாக சொல்லிய ஒருவர் காந்தியுடன் உரையாட விரும்பினார். உரையாடல் சோசலிசம், நேருவுடன் வேறுபாடு பற்றி சென்றது. பலாத்காரமில்லாமல் கம்யூனிசம் வந்தால் தாரளமாக வரட்டுமே என்றார் காந்தி. நேரு பலனை மட்டும் பார்க்கிறார். நான் வழிமுறைகளையும் வற்புறுத்துகிறேன். அதை அளவுக்குமீறி வற்புறுத்துவதாக் நேரு கருதுகிறார். இச்செய்தி எகிப்தியருக்கு பேட்டி என்ற பெயரில் 1937ல் வந்தது. சரோஜினிநாயுடுவின் மகன் பாபா உட்பட இளம் கம்யூனிச பற்றாளர்கள் காந்தியிடம் பலகேள்விகளை எழுப்பினர். சமஸ்தானாபதி, நிலப்பிரபு, முதலாளிகள் எப்படி சம்பாதிக்கிறார்கள்/ பாமர மக்களைச் சுரண்டியே என காந்தி பதில் அளித்தார். சுரண்டாமல் பணம் திரட்டமுடியுமா? ஓரளவிற்கு முடியும். அவர்கள் மட்டும் உழைக்காமல் சௌக்கியமாக வாழ என்ன நியாயம் இருக்கிறது? ஒரு நியாயமும் இல்லை. பிறவியில் அனைவரும் சமமானவர்தான். ஆனால் திறமைகள் மாறுபடுகின்றன. சம்பாதிக்கச் சாமர்த்தியம் உள்ளவர் தருமகர்த்தாபோல் வாழக் கற்க வேண்டும். வர்க்க போராட்டம் நியாயமானதில்லையா? உழைப்பவர் ஏழைகளுக்கான சாத்வீக போராட்டத்தையே தாம் நடத்துவதாகக் காந்தி இதற்குப் பதில் தந்தார். தருமகர்த்தாமுறையில் கமிஷன் எனப் பேசுகிறீர்களே? ஆமாம். அது நான் தரும் கமிஷன் அல்ல. அவர்களே எடுத்துக்கொள்வது. எனது உடைமை எனப்பேசிக்கொண்டிருக்கும் அவர்களிடம் நீங்கள் தர்மகர்த்தாதான் எனப் புரிந்துகொள்ள வைக்கிறேன். ரூ 100 வைத்திருந்தால் ரூ 50யை உங்களுக்கானது என உபயோகிக்க சொல்லலாம். ஆனால் கோடி வைத்திருந்தால் ஒரு சதம்தான் உபயோகிக்க எனச் சொல்லவேண்டும். ‘விகிதாச்சாரம்’ என சொல்லமுடியவில்லை. அதனால் அநீதிதான் நிலைக்கும். விவசாயி தொழிலாளர் தாமே எதிர்காலத்தை நிர்ணயத்துக்கொள்ள என்ன திட்டம்? “அவர்களுக்கான வாழ்க்கை வசதிகளை பற்றி நான் குறிப்பிடவில்லை. அவர்களிடத்து ஏற்பட்டுள்ள மகத்தான விழிப்பை, அதனால் அநீதி சுரண்டல் எதிர்க்க ஏற்பட்டுள்ள சக்தியை நான் குறிப்பிடுகிறேன். உணவிற்காக உழைக்க வேண்டும் என்ற விதியைப் பின்பற்றினால் சமூகம் அமைதியான புரட்சியைக் காணும். பரஸ்பர சேவைக்காக போராடுவதுதான் மனிதனின் வெற்றி. அப்போது மிருக ஆட்சி இல்லாது மானுட ஆட்சி தோன்றிவிடும்.”என்று காந்தியின் பதில் இருந்தது. உடல் உழைப்பை நிறுத்திவிட்டால் மனதிற்கும் உடலுக்கும் பெரும் கெடுதல் நேரும் என உடலுழைப்பின் அவசியத்தை காந்தி வலியுறுத்திவந்தார். கீதையும் உழைக்காமல் உண்பவனைத் திருடன் என்கிறது. அறிவு உழைப்பு அவசியமானதுதான் என ஏற்றாலும் அது உடல் உழைப்பைவிட கொண்டாடப்படவேண்டியது என்பதை அவர் ஏற்கவே இல்லை. பூமியில் உற்பத்தியாகும் பொருள்கள் இல்லாமல் அறிவு வளர்ச்சி சாத்தியமா என்கிற கேள்வியை அவர் 1925 அக்டோபரிலேயே எழுப்பியிருந்தார். அகதிகளாக இருந்தாலும் கூட ஒருமாதகால அவகாசத்திற்குப் பின்னர் உடலில் சக்தி இருப்பவர்கள் வேலையில் ஈடுபடவேண்டும் என நாம் சொல்லவேண்டும் . சூதாட்டம் மூலம் சம்பாதிப்பதெல்லாம் வேலையல்ல. எந்த மனிதனும் உழைக்காமல் உண்பதற்கு தகுதியானவர் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லிவந்தவர் காந்தி. இருப்பது என்பது செய்வதேயாகும் எனச் சொல்வார். உடல் உழைப்பு புத்திசாலித்தனத்துடன் செய்யப்பட்டால், அதுவே மிகவும் உயர்தர சேவையாகும். ஆசிரம வாழ்க்கையில் உழைப்பு என்பதற்கு மிக முக்கியத்துவம் தரப்பட்டது. எந்த அமைப்பிலும் சோம்பேறித்தனத்திற்கோ, கடமையை செய்யாமல் தப்புவதற்கோ இடமிருக்கக்கூடதென்றார் காந்தி. ஆசிரமத்தில் நாம் அனைவரும் பாட்டாளிகள்தான் ஆனால் கூலி அடிமையல்ல என்ற பதத்தை காந்தி பயன்படுத்தியிருந்தார். ஹரிஜன் நவம்பர் 14, 1948ல் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. கூலி அடிமை ஒழிப்பு என்பது மார்க்சியத்தில் மிக முக்கிய கருதுகோள்- திட்டமும் ஆகும். நமது மூதாதையர் அனுசரித்த சத்தியம், அகிம்சை, பிரம்மசரியம், சொத்தில்லாமை, கவராமை எனும் அய்ந்து மகாவிரதங்களை அவர் ஆசிரம அனுசரிப்புகளாக வைத்திருந்தார். இருப்பது குறைவாக இருந்தால் தேவையும் குறைவாக இருக்கும்- திருப்தி அதிகமாக இருக்கும் என்றார் காந்தி. ‘பற்றற்று’ இருப்பதால் மக்களிடம் பெறுவதற்கு உரிமையுண்டு என்கிற மனோபாவம் வந்தால் அங்கு ஊழியர் எனும் தன்மை போய்விடும். சேவை செய்பவர்க்கு சொந்த நலன் குறித்து ஆர்வம் அக்கறை இருக்கக் கூடாது. அசெளகரியம் ஏற்பட்டாலும் அதை கோபமின்றி அமைதியாக சஞ்சலமற்று ஏற்க பழகவேண்டும் எனக் கற்றுத் தந்தவர் காந்தி. பொதுவாழ்வில் இருப்பவர் பலரிடம் காணக்கிடைக்காத பண்பு இது. தங்களின் தியாகம் கூடக் கூட, தலைவர்கள் அந்த அமைப்பிடம் எதிர்பார்க்கும் மரியாதையும் கூடிக்கொண்டே போவதை பார்க்கமுடிகிறது. சங்கடமான தருணங்களை கோபத்தைக் காட்டி உதாசீனப்படுத்தி தலைவர்கள் சமாளிப்பதை இன்றைய இயக்கங்களில் காணமுடியும். புத்தரைப் பார்க்க வாய்ப்புகிடைத்தால் தியாகத்தைவிட உழைப்பின் தத்துவத்தை நீங்கள் ஏன் போதிக்கவில்லை என அவரைக் கேட்கத் தயங்க மாட்டேன் . துக்காராம், ஞானதேவர் போன்ற மகான்களைப் பார்த்தாலும் அதையேதான் சொல்லுவேன் என்றார் காந்தி. இக்கருத்து ஹரிஜன் நவம்பர் 2 1925ல் வெளியானது. படிப்பு- உழைப்பு குறித்த அருமையான தன் சொந்த அனுபவத்தை காந்தி தந்தார். “நாள் பூராவும் எழுதிக்கொண்டு அல்லது படித்துக்கொண்டு அல்லது பிரசங்கம் செய்து கொண்டிருப்பதால் மட்டும் மனிதனின் மனம் வளர்ச்சி பெற்றுவிட முடியாது. என்னுடைய படிப்பெல்லாம் சிறையில் இருக்கும்போது கிடைத்த அவகாசத்தில் படித்ததுதான். ஏதோ படிக்கிறோம் என்று இல்லாமல், ஒரு நோக்கத்துடன் படித்ததால் நான் பயன் பெற்றேன். தினம் எட்டு மணி நேரம் நான் மாதக் கணக்க்கில் தொடர்ந்து வேலை செய்துமிருக்கிறேன். அதனால் எனது சிந்தனைத் திறன் பாதிக்கப்படவில்லை. பல சமயங்களில் நான் ஒரு நாளைக்கு 40 மைல் தூரம் நடந்திருக்கிறேன். அலுப்புத் தட்டியதே இல்லை…”(ஹரிஜன் ஆகஸ்ட் 1, 1936) கடந்த சில ஆண்டுகளாக படிப்பது எழுதுவது மட்டுமே செய்யும் என் போன்றவர்கள் மீதான சரியான விமர்சனம் என இவ்வரிகளைப் பார்த்தவுடன் உணர்வேற்பட்டது. கடக்கும்போது ஏற்பட்ட குற்றவுணர்ச்சியால் ஆகப் போவது என்ன? பொருளாதார சமத்துவம் உருவாக்குவதில் சோசலிஸ்ட்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறீர்கள் என அவரிடம் கேள்வி வைக்கப்பட்டது. சோசலிஸ்ட்கள் வெறுப்புணர்ச்சியை வளர்த்து சமத்துவத்திற்கான பிரச்சாரத்தை செய்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கிடைத்தப் பின்னர் சமத்துவம் உருவாக்குவோம் என சொல்கிறார்கள். மக்களை தங்கள் இஷ்டப்படி நடத்தவா அதிகாரம்? மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம். சாத்வீக முறைகளில் துவேஷம் இல்லாமல் அன்பு உணர்ச்சிகளால் மக்களை திரள செய்வதன் வழியே பொருளாதார சமத்துவம் உருவாக்க நினைக்கிறேன் என்பது காந்தி தந்த பதில். உடைமை உணர்ச்சியை தொலைத்தால்தான் களங்கமற்ற அன்பை கொடுக்க இயலும். உடல்தான் கடைசி உடைமை. சமூகத்திற்காக அதையும் தியாகம் செய்ய சித்தமாயிருக்க வேண்டும். காந்தியின் தருமகர்த்தா கொள்கை குறித்து பியாரிலால் குறிப்பிடும்போது காந்திய பொருளாதாரக் கொள்கையில் தேவைக்கேற்ற உற்பத்திதான் நிர்ணயிக்கப்படும். தனிப்பட்டவர்களின் பேராசை சார்ந்த முறையில் உற்பத்திக்கான திட்டம் இராது எனக் குறிப்பிட்டு இருந்தார். மனமறிந்து தவறு செய்யாமல் பணம் சேர்க்கமுடியும். செல்வத்தை விரும்பாமல் இருப்பது நல்லதுதான். ஏற்கனவே இருப்பவர்கள் தர்மகர்த்தா முறைக்கு மாறுவது குறித்து பேசிவருகிறேன் என்று காந்தி விளக்கம் செல்கிறது. உங்கள் வியாபாரம் லட்சக்கணக்கான மக்களின் நலனையும் மனதில் வைத்து நடைபெறவேண்டும் என்கிற அறிவுரையை அவர் முதலாளிகளுக்கு கொடுத்தார். எந்தச் சொத்து நியாயமாக அல்லது அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது என்பதை எவர் தீர்ப்பிடுவது? இந்தக் கேள்வியை அவர் 1936 ஆகஸ்ட் 1 ஹரிஜனில் எழுப்பியிருந்தார். உடைமை சொத்தெல்லாம் திருட்டு என்றால் அனைவரும் அதை கைவிடவேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டோமா? தன்னிடம் இருப்பது அநியாய சொத்து என நம்புவர்கள் அதை விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு என்ன வழி என காந்தி சொல்வதைப் பார்க்கிறோம்.. முதலாளித்துவ தீமையுடன் ஒத்துழைக்க மறுத்தால் அதை சாகடிக்கலாம் என அவர் கருதினார். எல்லா எந்திரங்களையும் எதிர்ப்பது ஏன் என அவரிடம் கேள்வி வந்தபோது தான் அப்படி செய்யவில்லை என்றார் காந்தி. இந்த உடலே எந்திரம்தான். ராட்டை எந்திரம்தான். எந்திரங்களை எதிர்க்கவில்லை- அதில் மோகம் என்பதை எதிர்ப்பதாக அவர் பதில் இருந்தது. பொருளாயத முன்னேற்றம் வந்தால் தார்மீக முன்னேற்றமும் வந்துவிடும் என்பதை காந்தி ஏற்க மறுத்தார். மனிதனுக்கு வாழ உரிமையுண்டு- சாப்பிட, உடுக்க, வசிக்க இடம் தேடிக்கொள்ள உரிமை உண்டு. இதற்கு பொருளாதார பண்டிதர்களின் கோட்பாடுகள் தேவையில்லை. நாட்டின் ஒழுங்கை ‘பட்டினியின்மை’ பறைசாற்றுமே தவிர ‘இலட்சாதிபதிகளின்’ எண்ணிக்கையல்ல. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கக்கேடுகள் அதிகரிப்பதை நாம் பார்க்கவில்லையா என்கிற கேள்வி அவரிடம் வெளிப்பட்டது. ஏசு, முகம்மது, புத்தர், நானக், கபீர், சைதன்யர், சங்கரர், தயானந்தர், ராமகிருஷ்ணர் என அனைவரும் செல்வாக்கு செலுத்தி மக்களிடம் ஒழுக்கத்தை உருவாக்கியவர்கள். அவர்கள் வாழ்வால் உலகம் சிறப்படைந்தது. அவர்கள் வறுமையை விரும்பி ஏற்றவர்கள் என தார்மீக வழிகாட்டிகளை காந்தி சுட்டிக்காட்டினார். அதே போல் நாட்டின் தலைவர்கள் தார்மீக உச்சம் உருவாக்கிட கற்பிக்கவேண்டும்- செயல்படவேண்டும் என அவர் விழைந்தார். தங்கத்தைவிட அதிக உண்மையையும் - அதிகார ஐஸ்வர்ய ஆடம்பரத்தைவிட அதிக பயமின்மையையும், சுயநல ஆசையைவிட அதிக உதாரத்தையும் காட்டும்போதுதான் நம் நாடு உண்மையிலேயே ஆன்ம சக்தி வாய்ந்த நாடாக இருக்கும். நம் வீடுகளையும், அரண்மனைகளையும், கோவில்களையும் செல்வத்தினால் தோன்றிய விளவுகளிலிருந்து தூய்மையாக்கி, அவற்றுள் தார்மீகத்திற்குரிய தன்மைகளை காட்டவேண்டும் என அவர் விழைந்தார். தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என்ற இலட்சியம் எந்திரத்தொழில் மயமாக்குதலுடன் ஒத்துப்போகாதா- சமரசம் எதுவும் இல்லையா என்கிற உரையாடல் ஒன்றில் காந்தி தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார். இரயில்களை தவிர்க்கவில்லை. மோட்டார் வாகனம் பிடிக்கவில்லையென்றாலும் பயன்படுத்துகிறேன். பவுண்டன் பேனா உறுத்துகிறது. மனம் பேனா கட்டையை விரும்புகிறது. ஆனாலும் பயன்படுத்தாமல் இல்லை. எனவே ஒத்துப்போதல் என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் இலட்சியத்தை மனக்கண் நிறுத்தி அதற்காக செயல்படுதலும் அவசியமாக இருக்கிறது. சில அடிப்படையானவற்றில் எந்திரத்தொழில் அவசியம் என ஏற்ற காந்தியடிகள் ‘திண்ணைப்பேச்சு’ சோசலிசத்திலும், ‘ஆயுதபல’ சோசலிசத்திலும் நம்பிக்கையில்லை என்றார். இந்தியா தேக்கத்தில் இருக்கிறது எனக் கூறியவர்களிடத்தில் இந்தியக் கிராமவாசியிடம் பழமை வாய்ந்த பண்பாடானது புதைந்து கிடக்கிறது. அவனின் வறுமை எழுத்தறிவின்மையை அப்புறப்படுத்திவிட்டால் அறிவு விளக்கமும் பண்பாடும் கொண்ட சுதந்திரப் பிரஜை என்பதற்கான உதாரண புருஷனைக் காண்பீர் என்பது அவரின் பதிலாக இருந்தது. இச்செய்தி ஹரிஜன் ஜனவரி 28, 1939ல் நமக்கு கிடைக்கிறது. எளிய வாழ்க்கையை வாழ்வது சாத்தியமுள்ளதுதான் என வாழ்ந்து காட்டினார் காந்தி. எளிதானது வாழத்தகுந்தது என்றார். நாடோ, குழுவோ, தனிமனிதனோ எந்த அளவில் எளிய வாழ்வு என்றாலும் அது முயற்சிக்க தகுந்த ஒன்றே என அவர் கருதி செயல்பட்டார். அய்ரோப்பிய மக்களுக்கும் பிற சுரண்டப்படுகிற இந்தியா போன்ற காலனிய மக்களுக்கும் உள்ள பிரச்னைப் பற்றி பேச்சு வந்தபோது காந்தி கூறியதானது: "அய்ரோப்பிய மக்களுக்கு ராஜீய அதிகாரம் இருக்கிறது. ஆனால் சுயராஜ்யம் இல்லை. ஆசிய ஆப்ரிக்க மக்கள் அய்ரோப்பிய மக்களின் நன்மைக்காகவும் சுரண்டப்படுகிறார்கள். அய்ரோப்பிய மக்களும் ஜனநாயகம் என்கிற புனிதப் பெயரில் ஆளும் வர்க்கத்தால் சுரண்டவே படுகிறார்கள். அந்த நோய் இந்தியாவைப் போல் அங்கேயும் இருக்கிறது. அய்ரோப்பிய மக்கள் பலாத்காரத்தினாலேயே சுரண்டப்படுகிறார்கள். எனவே ஒரே பரிகாரம் செய்யலாம் எனத்தோன்றுகிறது. இந்தியாவை இங்கிலாந்து அமெரிக்காவைப் போல் ஆக்குவதற்கான வழிகளையே பலரும் சொல்கிறார்கள். இதன் பொருள் உலகில் வேறு சுரண்டும் இடங்களை இந்தியா கண்டுபிடிக்கவேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். எந்திரத்தொழில் நாகரீகம் ஒருவகை நோய். சாதுர்யமான பேச்சுக்களில் ஏமாறாமல் இருப்போம்" எந்திரமயமாக்குதல் என்கிற பெயரில் நாம் நாசத்தை தருவித்துக்கொள்ளக்கூடாது. அண்டை அயலாரிடம் அன்பில்லாமல் சிரத்தையில்லாமல் எந்த மாறுதலும் அது எவ்வித புரட்சிகரமாக இருந்தாலும் நன்மை கிட்டாது என காந்தி தனது கருத்துக்களை விமர்சித்து பேசியவர்களுக்கான பதிலைத்தந்தார். எந்த மனிதனும் மற்ற ஒருவரைவிட பணக்காரனாக இல்லாத காலம் ஒன்றை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஆனால் பணக்காரர்கள் ஏழைகளுக்கு பாதகம் செய்யவிரும்பாத காலத்தை கற்பனை செய்கிறேன். பணக்காரர்களும் ஏழைகளும் நட்புடன் இருக்கக்கூடிய சமூகத்தை விழைகிறேன். மேலை நாடுகளின் இரத்தம் தோய்ந்த பாதை வேண்டாம் என அவர் யங் இந்தியா அக்டோபர் 7, 1926ல் எழுதினார். ஜப்பானியர் ஒருவரின் விமர்சனத்திற்கு காந்தி விளக்கம் தந்தபோது என கருத்துக்களை கோணலாக சித்தரிக்கவேண்டாம் எனக் கேட்டுகொண்டார். எந்திரங்கள் என்பதாலேயே அவற்றை எதிர்ப்பதில்லை. அவை எஜமானன் ஆவதால் எதிர்க்கிறேன். எங் இந்தியா பிப்ரவரி 27, 1937ல் கீழ்கண்ட அவரின் வாசகங்களைப் பார்க்கிறோம். “என் கருத்துப்படி நான் உண்மையில் இந்தியாவைத் தொழில்மயமாக்குவேன். கிராம சமுதாயங்கள் புனருத்தாரணம் செய்யப்படவேண்டும்.” பெரிய அளவில் உற்பத்தி செய்வதை எதிர்க்கிறீர்களா என்கிற கேள்வி அவரிடம் வைக்கப்பட்டபோது ஒருபோதும் அப்படி கூறியதில்லை என்ற பதில் காந்தியிடமிருந்து வெளிப்பட்டது. என்னைப்பற்றிய பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்றார் காந்தி. கிராமவாசிகள் உற்பத்தி செய்யமுடிந்தவற்றில் பேரளவு உற்பத்தி எனச் செய்வதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். குடிசைத்தொழில்களுக்கும் பெரிய தொழில்களுக்கும் இடையில் ஒற்றுமை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையயும் அவர் தெரிவித்தார். நகரங்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கிராமங்களை பாதுகாப்பது முக்கியம் என்பதில் உறுதியாக நின்றார். திட்டக்கமிஷன் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்ற பதிலைத்தான் அவரிடம் பார்க்கிறோம். இந்த உரையாடலை ஹரிஜன் ஜனவரி 28, 1939ல் காணலாம். காங்கிரசின் தலைவராக வந்த போஸ் அவர்கள் திட்டக்கமிட்டி ஒன்றை அப்போது அமைத்திருந்தார் என்பது இங்கு நினைவுகொள்ளவேண்டிய விடயம். கூட்டுறவின் தார்மீக அடிப்படை என ஒன்றை காந்தி பேசினார். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவோர் ஒழுக்கம் குறித்து கவலைப்படுவதில்லை. பெற்ற பணம் கள்ளுக்கடைக்கோ அல்லது சூதாட்டத்திற்கோ போகாமல் இருந்தால் மகிழ்ச்சி . தார்மீகமாக கூட்டுறவு இயக்கம் இருக்குமெனில் சாராம்சத்தில் அது வெற்றிபெறலாம். கூட்டுறவு முற்றிலும் அகிம்சையை கொண்டிருக்கவேண்டும். பலாத்கார கூட்டுறவு வெற்றிபெறாது. விலைவாசி குறைப்பு என்கிற பெயரில் விவசாய உற்பத்திக்கு நட்டம் ஏற்படுத்தும் கொள்கையை அரசாங்கம் கைக்கொள்ளக்கூடாதென்றார். ‘குடியானவனுடைய’ பிரச்னை அவனுக்கும் சாப்பிடுகிறவனுக்கும் நடுவே உள்ள பிரச்னைதான். நடுவில் இருப்பவனை ஒழித்துக்கட்டவே விரும்புகிறேன். அதே சமயத்தில் கொள்ளை இலாபம் அடிக்கிற, கள்ள மார்க்கெட்டை பயன்படுத்துகிற ஒரு ‘குடியானவன்’ தன் தொழிலுக்கு ஏற்காத காரியத்தைச் செய்தவனாகிறான். சுரண்டுவதில் அவன் ஜமீன்தாரைவிட எந்த வகையிலும் குறைந்தவனல்ல என ஹரிஜன் அக்டோபர் 6 1946 இதழில் காந்தி குறிப்பிட்டிருந்தார். நமது 35 கோடி மக்களுக்கு உணவளிப்பதற்குப் போதிய நிலம் இல்லாமல் இல்லை. உள்ள நிலம் முழுவதையும் தக்க முறையில் பயன்படுத்தி , அது தன்னால் முடிந்த அளவுக்குப் பலன் கொடுக்கும்படி செய்தால், ஜனத்தொகை முழுமையையும் அது காப்பாற்றும். அதற்கு பாடுபட்டு ஒரு பயிர் முளைக்கும் இடத்தில் இரண்டு பயிர்கள் முளைக்கும்படி செய்யவேண்டும். கிராமவாசி உற்பத்தி செய்வதை நுகர்ந்து அவன் வாழ்வது போல் நாமும் வாழவேண்டும். பூரண சத்துள்ள உணவே நல்ல உணவு. நாம் சத்துக் குறைந்தவைகளை காசுகொடுத்து வாங்கி கெடுத்துக்கொண்டுள்ளோம். கழிவுப் பொருட்களை லாபகரமாக பயன்படுத்த தெரியாமல் ஆரோக்கியமான திறந்தவெளிகளை நோய் உற்பத்தி ஸ்தலங்களாக்கிவிட்டோம்.. சரீர உழைப்பை கைவிட்டு அதன் மூலம் மூளைக்கு கேட்டை உண்டுபண்ணியிருக்கிறோம் என 1935லேயே அவர் அறிவுறுத்தியிருந்தார். கிராமங்களின் இரத்தத்தையே சிமிண்டாகக் கொண்டு நகரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இன்று நகரங்களின் ஓடும் ரத்தம் மீண்டும் கிராமங்களின் ரத்தக் குழாய்களில் ஓடவேண்டுமென்று நான் விரும்புகிறேன் என காந்தி தன் விருப்பத்தை தெரிவித்தார். ஆண்டிற்கு பாதி நாட்கள் வேலையின்றி இருந்தால் என்னவாகும்? நம்மை பீடித்திருக்கும் நோய் வறுமையல்ல- சோம்பேறித்தனம்- அசிரத்தை- செயலின்மை. எனவே நம் மக்களின் ஆக்கத்திறன் தட்டி எழுப்பப்படவேண்டும். நூற்பது என்பது சூரியன் போன்றது- மற்றக் கிராமக் கைத்தொழில்கள் சூரிய மண்டலத்தில் உள்ள வெவ்வேறு கிரகங்கள் என்றார் காந்தி. நமது உழைப்பு அறிவினால் இயக்கப்படவேண்டும். சமாதியில் நிலவும் அமைதி எனில் அது மரணவீடாகும் என அதை அவர் நிராகரித்தார். விஞ்ஞானபூர்வ விஷயங்களை வெறும் நம்பிக்கையின் பேரில் வைத்துக்கொள்ளுவது, விஞ்ஞான உள்ளத்துக்கு திருப்தி அளிக்காது. பகுத்தறிவில் அடிப்படையைக் காணவேண்டுமென்று பிடிவாதமாக அவர் நிற்பார். பகுத்தறிவு முடிவுகள் உயர்ந்த தர்க்க ஞானத்தின் முன் தோற்றுக்கூடப் போகும். ‘பகுத்தறிவுத்துறை’ முடியும் இடத்தில்தான் ‘நம்பிக்கைத் துறை’ தொடங்குகிறது. நமக்கு இரண்டும் இல்லாமல் முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் உரிய இடமுண்டு என அவர் கருதுவார். ஒவ்வொரு இந்தியனையும்- அவன் இந்துவாக முஸ்லீமாக வேறு யாராக இருந்தாலும் ஏன் ஆங்கிலேயர்களையும் கூட, முடிவில் உலகத்தையும் அகிம்சைக்குத் திருப்புவதே எனது நோக்கம் என்றார் காந்தி. மானுட இயல்பின் மீதான அவரின் பெரும் நம்பிக்கையை இது காட்டுகிறது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது எந்த பரஸ்பர உறவானாலும் அவற்றை ஒழுங்குபடுத்து அகிம்சையாகவே இருக்கவேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. அது சாத்தியப்படும் கனவே என்றும் அவர் உறுதியாக நம்பினார். பலாத்காரத்தை பலாத்காரத்தால் எதிர்க்கவேண்டும் என கருதும் சமூகம் அபாயகரமான வாழ்வை நடத்தும். அவை பெரிய நகரங்களை வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும். கிராமக்குடியரசு என்பதில் அகிம்சைக்கான கரு இருக்கிறது. ராட்டையிலிருந்து வரும் பலவீனமான நூல் இழை, கோடிக்கணக்கானவர்களைக் கத்தரிக்க முடியாத ஒரு கயிற்றால் ஒன்றாக இணைக்கிறது என தன் நம்பிக்கையை காந்தி தந்தார். இந்த உலகத்தில் எல்லாச்செயல்களிலுமே குறைபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அக்குறைபாடுகளைக் குறைப்பதுதான் மனிதனுடைய கடமையும் உரிமையுமாகும். குறைகளின் மத்தியில் வாழ்ந்தாலும், இயன்றவரை அவைகளினால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். மனிதனே தன்னளவில் ஓர் அற்புதமான ஸ்தாபனமாகும். அவனுக்கு எது பொருந்துகிறதோ அதுவே அவனை உறுப்பினனாகக் கொண்ட சமூக, ராஜீய ஸ்தாபனத்திற்கும் பொருந்தும். உடம்பின் உறுப்புக்கள் எதுவும் இன்னொன்றைவிட தாழ்வானதாகாது. உடல் நல்ல நிலையில் இருக்கும்போது இந்த உறுப்புக்கள் மனத்தின் கட்டளைக்கு வலியக் கட்டுப்பட்டிருக்கின்றன. அதேபோன்று ஸ்தாபனத்திலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. ஸ்தாபனத்தின் தலையான மனத்திற்கு அவர்கள் வலியக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். வழிகாட்டி அழைத்துச் செல்லும் மனமே இல்லாத அல்லது மனத்துடன் ஒத்துழைக்கும் உறுப்பினர்கள் இல்லாத ஒரு ஸ்தாபனம், முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டுவிடுகிறது - சாகும் நிலையிலும் இருக்கிறது. தனக்கு சலுகை காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ளும் போர்வீரர், போர்வீரரே அல்ல. உயர்வு என்ற அகந்தை அழிவில்தான் கொண்டுபோய்விடும் என்கிற எச்சரிக்கை ஒலியை அவர் எழுப்பினார். பெரும்பாலான மக்களின் விருப்பத்தை ஆயுத பலங்கொண்டு நிராகரித்துவிடுவதற்கு வேண்டிய பயம் என்றும் தராத- அரசாங்கமாக இருப்பதே ‘நமது சொந்த அரசாங்கம்’ என்பதற்குப் பொருளாகும். அதாவது பொதுஜன அபிப்ராயத்திற்கு பொறுப்பு வாய்ந்ததாக அரசாங்கம் இருக்கும். அந்நிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, தேசிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் ஆதிக்கமில்லாமல் சுயேட்சையாக இருப்பதற்குத் தொடர்ந்து முயற்சித்துவருவதுதான் சுயாட்சி என்பதன் பொருள் என்று காந்திஜி ஆகஸ்ட் 1925ல் தன் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தியாவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு அரண்மனையும் இந்நாட்டின் செல்வத்தை எடுத்துக்காட்டவில்லை. சிலர் பெற்றுள்ள செல்வசக்தி செய்து காட்டும் அவமதிப்பையே இது உணர்த்துகிறது என தனது பதிலை காந்தி ஏப்ரல் 28, 1927ல் தந்திருந்தார். இதைவிட மனதை தைக்கும் வலிமையான சொற்கள் இருக்கமுடியாது. கிராம மக்களின் விடுதலையே சுயராஜ்யம் என அவர் பேசியதை அனைவரும் அறிவோம். சுயராஜ்யத்தின் திறவுகோல் அங்குதான் இருக்கிறது. கிராமங்களின் அபிவிருத்திக்கான பள்ளிக்கூடம், மருத்துவமனை உட்பட- திறவுகோலைக் கண்டுகொண்டால் சுயராஜ்யத்தின் திறவுகோல் கிடைக்கும். அவர்களின் விடுதலைதான் அனைவரின் விடுதலையாகவும் இருக்கும். உரிமைகளா கடமைகளா என்கிற விவாதம் ஒன்றில் காந்தி குறிப்பிட்டார். ஜமீன்கள் - விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், சமஸ்தான மன்னர்கள் என அனைவரும் உரிமைகளை மட்டுமே பேசுவதைப் பார்க்கிறோம். ஆள்வது என்பதற்கான தெய்வீக உரிமை என ஏதுமோ, அடங்கி பணிந்து நடப்பதுதான் கடமை என எதுவுமோ இல்லை. அவரவர் கடமையை செய்தல் என்பது தேவைப்படுகிறது. அடங்கி கிடந்தவர்கள் எழுந்து தீவிர உரிமைப்போர் நடத்துவதிலும் தீமைகள் விளையாமல் இல்லை. வர்க்கப்போராட்டத்திற்கு எதிரான வாசகமாக இதை புரிந்துகொள்ளக்கூடும். உரிமைகளுக்கும் கடமைகளுக்குமான தொடர்பை புரிந்து கொள்ளுதல் என்பதற்கு பயிற்றுவிப்பு அவசியம். குழந்தைகளுக்கான கடமைகளை செய்யாமல் தங்களுக்கு பணிந்து குழந்தைகள் நடக்கவேண்டும் என்பது வெறுக்கத்தக்கதேயாகும். அதே போல் தங்கள் கடமையை செய்யும் பெற்றோரை மதிக்காத குழந்தைகளும் தங்களுக்கே தீங்கை தேடிக்கொள்கிறார்கள். இவ்விதி அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். கடமைகளை செய்து அதன்மூலம் உரிமைகளை பெறுவதே சிறந்தவழி - சத்தியாக்கிரக நியதி என வாழ்ந்து காட்டிய எம்மான் காந்தி சொல்கிறார். ஒருமுறை அவர் மெளன விரதம் அனுஷ்டித்த நேரத்தில் மாணவர் குழாமாக அவரிடம் வந்தனர். சோசலிஸ்ட்கள் என அவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்டனர். கேள்விகள் கேட்டனர். காந்திஜி துண்டு சீட்டு ஒன்றில் சோசலிசம் வேண்டுமெனில் செய்யக்கூடிய முதல் காரியம் உடல் உழைப்பில் ஈடுபட்டு வேலை செய்வதில் இருக்கும் சோம்பலையும், வெறுப்பையும் விடுவதுதான் என எழுதிக்காட்டினார். வீட்டில் வேலைக்காரர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அடிமைகளாக நடத்தி வருபவர்களும் தங்களை சோசலிஸ்ட்கள் என அழைத்துக்கொள்ளும் விசித்திர சோசலிசம் எனக்கு புரியவில்லை என்றார் காந்தி. மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வோரு இசம் குறித்தும் அறிந்துகொள்ளுங்கள். எது பிடிக்கிறதோ அதை நடைமுறையில் அனுசரியுங்கள். சோசலிசம் வரவேண்டுமெனில் உங்கள் கைகளும் கால்களையும் உபயோகிக்கப் பாருங்கள்- சமூகத்தில் சுரண்டலை ஒழிக்க நிச்சயமான வழி ஒவ்வொருவரும் உடல் உழைப்பில் ஈடுபடுவதுதான். சில எளிய நடைமுறைகளை மாணவர்கள் பின்பற்ற காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். - காலையில் எழுந்தவுடன் படுக்கையை சுற்றி வைத்தல் - காலை ஆகாரம் தயாராக உதவுதல் - துணிகளை தோய்த்துக்கொள்தல் - பாத்திரங்களை சுத்தம் செய்ய வீட்டுப் பெண்களுக்கு உதவுதல் - உடைக்காக நூல்நூற்றல் - புத்தகங்கள், காகிதங்களை சுத்தமாக பராமரித்து ஒழுங்காக வைத்தல் - பவுண்டன் பேனாதான் என்று நில்லாமல் பேனாக் கட்டையை பயன்படுத்தல் - பேசிக்கொண்டிருப்பதற்கும் பிறருக்கு உபதேசிப்பதற்கும் மட்டும் ஆர்வப்படாமல் அன்றாட வேலைகளில் சோசலிசமுறைகளை அனுசரிக்கப் பார்த்தல் - அன்றாட அனுசரிப்புகள் மூலம் ‘தன்னை மாற்றிக்கொள்ளல்’ என்பதை அடைதல். இவ்வாறெல்லாம் நாம் ஒவ்வொரு செயலிலும் நடந்துகாட்ட ஆரம்பிக்கும்போது சோசலிசத்திற்கு யாரையும் மாற்றவேண்டிய பணி என தனியாக ஒன்றில்லாமல் போகும். நடந்து காட்டுதலே பணியாக இருக்கும் என்கிற நீண்ட விளக்கத்தை அந்த இளைஞர்கள் பெற்றனர். காங்கிரஸ் சோசலிஸ்ட்களிடம் அன்பான முறையில் காந்தி விவாதித்து வந்தார். சுதந்திரம் என்பதே இந்தியாவில் சொர்க்கத்தைக் கொண்டுவந்துவிடாதென்றார். ஆக்கபூர்வ வேலைகளுக்கு இனி தடையில்லை என்பதை வேண்டுமானால் அது ஏற்படுத்தித் தரலாம். எனவே சோசலிஸ்ட்கள் கிராமமக்களிடம் சென்று அங்கேயே குடியிருந்து அவர்கள் வாழ்வது போன்று வாழ்ந்து, அவர்களைப் போலவே பலமணிநேரம் உழைத்து, அங்கு உற்பத்தியானவைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தீண்டாமை- அறியாமையை போக்குவிப்பதற்கு செயல்படவேண்டும் என அறிவுறுத்தினார். விவாகம் ஆகவில்லை எனில் கிராமத்து பெண் ஒருவரை மணந்துகொள்ளுங்கள் என்றார். இதையெல்லாம் மனப்பூர்வமாக விருப்பப்பட்டு செய்ய சித்தமாகுங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். அதிகாரத்திலிருப்பவர்களுடன் அதிகாரத்திற்காக போட்டி போடுவதாயின், அதிகாரத்திலிருப்பவர்களைவிட ஆற்றலில் தாங்கள் மேலானவர்கள், தியாகத்தில் உயர்வானவர்கள், அதிகமான சேவை செய்பவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்கவேண்டும். பரபரப்புகளை அதிகரிப்பதோ, புதிதாக உருவாக்குவதோ உதவாது என்கிற அறிவுரை அவரிடமிருந்து வந்தது. காந்தியடிகள் சோசலிஸ்ட்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் செய்தார். கிராமத்திற்கு சென்று பணிபுரியுங்கள் என நான் சொல்வதை நீங்கள் இன்று கேட்கத் தயார் இல்லாமல் போனால் ஒருநாள் உங்கள் பிரசங்கங்களை கேட்க யாருமே இல்லாத சமயம் வந்துவிடும். வெற்று வெளியில் அதை செய்துகொண்டிருப்பீர்கள் என்றார். இது சற்றுக் கடுமையான விமர்சனமாக தோன்றலாம். ஆனால் ‘பளிச்சென’ சொல்லப்பட்ட ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டும். சமூகம் வெறும் தாராள உபதேசங்களில் வாழ்வதில்லை- தேவையெல்லாம் செயலேயன்றிப் பேச்சல்ல என்று திரும்பத் திரும்ப சொல்லிவந்தவர் காந்தி மகாத்மா. காந்தியடிகளின் ஆக்கபூர்வ வேலைத்திட்டம் மக்கள் வாழ்க்கைதரத்தை உயர்த்தாது என சோசலிஸ்ட்கள் விமர்சித்து ஆட்சேபித்தனர். சோசலிஸ்ட்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது லூயி பிஷர் காந்தியடிகளிடம் உங்களைப் போல அவர்களும் சோசலிஸ்ட்கள்தான் என்றார். இதை காந்தி மறுத்தார். நான் சோசலிஸ்ட் அவர்கள் அல்ல என்றார். அவர்கள் சொல்லும் சோசலிசத்தில் உடலோ, தனிப்பட்ட இஷ்டமோ அவர்களுக்கு சொந்தமில்லை. எல்லாவற்றையும் தனக்கே சொந்தமாக அரசாங்கம் கொண்டிருக்காது என்கிற திருந்திய சோசலிசம் குறித்து நான் பேசுகிறேன் என்பது காந்தியளித்த பதில். சோசலிசம் குறித்து மகாத்மாவின் கருத்துக்களை பியாரிலால் வெளிப்படுத்தியதை சுருக்கமாக பார்க்கலாம். - சமூகத்திற்கு பயனளிக்கும் உடலுழைப்பை செய்யும் கடமையிலிருந்து எவருக்கும் விலக்கல்ல- உடல் உழைப்பில்லாதவர் சாப்பிடவேண்டாம் . - உடல் உழைப்பானாலும்- மூளை உழைப்பானாலும் ஊதிய சமத்துவம் வேண்டும். - சோசலிசம் குறித்து பேசி கனவு மட்டும் காண்போர்க்கு தான் சோசலிஸ்ட்டாக தெரியாமல் இருக்கலாம். திக்கற்றவர்களுடன் வாழ்வது, தாழ்ந்த நிலையிலிருப்பவர்களுடன் தம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அவர்களது கஷ்டங்களை தாமும் பகிர்ந்து கொள்ளத்தெரிந்த தன்னை சோசலிஸ்ட் என்றே அழைக்கவேண்டும் என காந்தி கருதினார். - எல்லோரும் மாறுகிறவரை- எல்லாவற்றையும் மாற்றுகிறவரை என சொல்லிக்கொண்டு சுலப வாழ்க்கை வாழ்வதை அவர் ஏற்கவில்லை. - ஒருவரின் சொத்தானாலும் ஆற்றலானாலும் தான் தர்மகர்த்தா என்ற புரிதல்தான் சோசலிசத்திற்கு அமைதியாக இட்டுச் செல்லும்பாதை என்றார். பிறர் சொத்தை பலவந்தமாக பிடுங்கிக்கொள்வது சோசலிசம் என்று விளக்கப்படுவதை அவர் ஏற்கவில்லை. புனாவில் மார்க்ஸ் எழுத்துக்களைப் படித்த பின்னர் அவர் கூறியதாக பியாரிலால் பதிவிட்டுள்ள செய்தி “மார்க்சிற்கு இருந்த கல்வித் திறமை எனக்கு இல்லை. அது எனக்கு இருந்திருக்குமானால் , மார்க்ஸ் தத்துவத்தைத் மார்க்ஸைவிட இன்னும் நன்றாக எழுதியிருப்பேன்… மார்க்சின் முறையைத்தவிர வேறு முறை இல்லை - அது மட்டுமே சிற்ந்தமுறை என்பதை நான் ஏற்கவில்லை”. மார்க்சியத்தின் பொருளாதார சிறப்பு குறித்து பியாரிலால் அவரிடம் குறிப்பிட்டபோது ‘சிறப்பு என்ன’ எனக் கேட்டார் காந்தி. பியாரிலால் பதிலாக “நமது கொள்கைகள், அமைப்புகள், ஒழுக்கம்பற்றிய மதிப்பீடுகள், இலக்கியம், கலை, மதம் கூட நமது பொருளாதாரச் சூழ்நிலையிலிருந்து வந்தவை என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்”என்றார். காந்தி தன்பதிலைத் தந்தார் “நமது சூழ்நிலை எப்படி ஆகிறதோ அதன்படி நாம் இருக்கிறோம். காரியத்துடன் கூடிய கையின் நடவடிக்கை நமது எண்ணத்தை உருவாக்குவதோடு நமது முழுத் தன்மையையுமே உருவாக்குகிறது என்ற அடிப்படையுடன் வார்தா கல்வித்திட்டம் உருவாக்கியுள்ளோம். இது மார்க்சின் லோகாயத தத்துவத்திற்கு ஒத்து இருக்கிறதல்லவா?” உழைக்கும் கரத்தை அடியுடன் போக்கிவிட்டு எந்திரம் என மார்க்சியம் விரும்புகிறது. ஆனால் எந்திரம் தொழிலாளியை அடிமைப்படுத்துகிறது. கையை புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தும்போதுதான் அவன் சுதந்திரம் அடைவதுடன் மகிழ்ச்சியும் பெறமுடியும். பியாரிலால் இடையில் வேறு ஒரு கேள்வியை வைத்தார். “தனிப்பட்ட ஒருவர் லோகாயதச் சூழ்நிலைக்கு அப்பாற்பட்டவராக இருக்கலாம். ஆனால் வர்க்க நடத்தைதான் நிர்ணயம் என்பதை மார்க்சியவாதிகள் ஒப்புக்கொள்கிறார்கள். முதலாளியை மாற்றுவதற்கு முதலாளித்துவமுறையை அழித்தாக வேண்டும்” காந்திஜி இதற்கு பதில் அளித்தார். “தனிப்பட்டவர் செய்ய முடிந்ததையே ஒருவகுப்பு மக்கள் செய்யும்படி தூண்டமுடியும். வர்க்கப் போராட்ட பிரச்னைக்கு எனது பதில் தர்மகர்த்தாமுறை” காந்திக்கு ‘கடவுள் சக்தி’ என்பதில் பெரும் நம்பிக்கை இருந்தது. இந்த உரையாடலிலும் அவர் அதை வெளிப்படுத்தாமல் இல்லை. பூகம்பம் ஏற்பட்டு முதலாளிகள் அழிந்து போய்விடுகிறார்கள் என்றால் சரித்திரத்திற்கு பொருளாதார விளக்கம் கூறுகிறவர்கள் கனவில்கூட கண்டறியாத வகையில் ‘வர்க்கப் போராட்டத்தின் சரித்திரமே’ மாறுதல் அடைந்துவிடும் என காந்தி பியாரிலாலிடம் தெரிவித்தார். யுத்தமில்லாமல் போக தனிச்சொத்துமுறை ஒழியவேண்டும் என மார்க்சியர்கள் சொல்கிறார்கள் என பியாரிலால் உரையாடலை நீட்டித்தார். இது ஒரளவிற்கு உண்மை என்றார் காந்தி. சமூகத்திலிருந்து யுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் நம்முள்ளேயே போரை நடத்தவேண்டும். தொடர்ந்து பியாரிலால் மார்க்சிடம் எடுத்துக்கொள்ள இருப்பன குறித்து விவாதித்துவந்தார். காந்தி தன் பதிலாக “மார்க்ஸ் மனித வர்க்கம் முழுவதையும் ஒன்றாக கருதியிருக்கிறார். ஒடுக்கப்பட்டு கிடக்கும் ஏழைகளான உலகப் பாட்டாளிகளின் கட்சியில் தம்மை ஒருமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் மார்க்சின் உபதேசங்களை ஜீவனுள்ளவையாக்கியிருக்கிறது. ஆனால் இப்படி செய்திருப்பது அவர் மாத்திரமல்ல. மார்க்ஸைக் குறித்து நாம் குறை கூறலாம். ஆனால் அவர் மிகப் பெரியவர் என்பதை யார் மறுக்கமுடியும்?. அவருடைய பொருளாதார தத்துவங்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. ஆனாலும் ஏழைகள் நசுக்கப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். இதை மார்க்ஸ் அவர் வழியில் செய்ய முற்பட்டிருக்கிறார். அவருக்கு ஆற்றலும், படிப்பும், அறிவும் இருந்தன.” நேருவிற்கு காந்தியடிகள் செப்டம்பர் 13, 1933ல் எழுதிய கடிதத்தில் கராச்சி காங்கிரஸ் பொருளாதாரத் திட்டம் , பூரண சுதந்திரம் பற்றி குறிப்பிடுகிறார். பாமர மக்களின் வளர்ச்சி என்பது பணமும் சலுகையும் கொண்டவர்கள் விஷயத்தில் செய்யப்படும் உருப்படியான மாறுதலைப் பொறுத்து அமையும் என்பதையும் சொல்கிறார். சர்வதேச உணர்ச்சிக்குப் பொருத்தமில்லாத தேசிய உணர்ச்சிகூடாது என நேரு பேசிவந்ததையும் ஏற்றார். உலகத்தின் முற்போக்கான சக்திகளுடன் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் ஏற்றார். இலட்சியத்தை அறிந்து அதை அடைவதற்கான உபாயத்தை அறிந்து உபயோகித்தாலன்றி, இலட்சியம் குறித்து தெளிவாக விளக்கம் கூறி பாராட்டிக்கொண்டிருப்பது அதனிடம் நம்மைக் கொண்டுபோய் சேர்க்கத் தவறிவிடும். உபாயங்கள் எந்த அளவு புனிதமானவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு இலட்சியம் நோக்கி நாம் முன்னேறுவதும் இருக்கும். நம்முடைய முறைகள் ஒரு பாவமும் இல்லாதவை என்பதை உறுதிப்படுத்திவிட நம்மால் முடிந்துவிட்டால், சுதேச மன்னர்களும், ஜமீன்தார்களும், பாமர மக்களைச் சுரண்டி வாழ்ந்துவருபவர்களும் நம்மைக் கண்டு பயப்படுவதையும், நம்மீது அவநம்பிக்கை கொள்ளுவதையும் விட்டுவிடுவார்கள். யாரையும் நிர்ப்பந்தப்படுத்த நாம் முற்படவில்லை. அவர்கள் மனமாற்றம் அடையும்படி முயற்சிக்கிறோம். இம்முறை வெகுகாலம் பிடிக்கக்கூடியது என்று தோன்றலாம். ஆனால், இதுதான் குறுகிய காலத்திற்குரியது என்று உறுதியான தன் நம்பிக்கையை அக்கடிதத்தில் வெளிப்படுத்தினார் காந்தி. காந்தியைப் பொறுத்தவரை இரகசியமுறைகள் கூடாது. அதை ஒழிக்காவிட்டால் இயக்கத்தையே அம்முறை நாசமாக்கிவிடும். பாமரமக்களுக்கு பயமின்றியிருக்க நாம் போதிக்கும்போது, இரகசிய முறைகளை சிலநேரத்தில் மேற்கொள்ளலாம் என குழப்பக்கூடாது என்பதையும் அக்கடிதத்தில் பார்க்கலாம். நேரு காந்திக்கு ஆகஸ்ட் 13 1934ல் கடிதம் எழுதியிருந்தார். தன் பாதிக்கப்பட்ட மனநிலையை நேரு அதில் படம்பிடித்திருந்தார். பழகிய தோழர்களுடன்கூட அன்னியனாகி ஆன்மீகத் தனிமையை உணர்வதாக நேரு குறிப்பிட்டிருந்தார். காங்கிரசில் போராட்டத்தில் பங்கேற்காதவரெல்லாம் முக்கியத்துவம் பெற்று கஷ்டபாரத்தை சுமந்தவர்கள் ஒதுக்கப்படுதலை நேரு சுட்டிக்காட்டியிருந்தார். சோசலிசம் என்ற சொல்லுக்கு ஆங்கில மொழியில் திட்டமான பொருள் இருந்தும் அதை மாறான வகையில் கூறுவது ஒருவகை சமாளிப்பாகும். தனிப்பட்டவர்கள், தனியான கருத்தில் சொற்களை உபயோகிப்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவாது. இன்ஜின் டிரைவர் என சொல்லிகொண்டு தன் இன்ஜின் மரத்தால் ஆனது- மாட்டினால் இழுக்கப்படுவது என்று ஒருவர் சொன்னால் அவர் அச்சொல்லை தவறாக உபயோகிப்பவர் ஆவார் என்பது அக்கடிதத்தில் காந்தியின் மீதான விமர்சனமாக நேருவால் முன்வைக்கப்பட்டிருந்தது. காந்தி நேருவிற்கு ஆகஸ்ட் 17 1934ல் பதில் எழுதினார். நேருவின் வருத்தத்தை புரிந்துகொள்வதாகவும் அதேநேரத்தில் வருத்தம் ஏமாற்றத்திற்கு போதுமான காரணம் இல்லை என உணர்வதையும் காந்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சோசலிஸ்ட்கள் தியாகம் தனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் அவசரப்படுகிறார்கள். அவ்வளவு வேகத்தில் வரமுடியாத என்னை சேர்த்து அழைத்துப் போவதற்கு நிற்கும்படி சொல்கிறேன். சோசலிசத்தின் பொருளை அகராதியில் பார்த்தேன். முழுப்பொருளையும் அறிய நான் எதைப் படிக்கவேண்டும். மினு மசானி கொடுத்தைப் படித்தேன். ஆச்சார்யா நரேந்திரதேவா சிபாரிசு செய்தவற்றை முடிந்த நேரங்களில் படித்து வருகிறேன் என சோசலிசம் குறித்து சோசலிஸ்ட்கள் குறிப்பிடுவதையெல்லாம் கற்க சித்தமாக இருப்பதை காந்தியடிகள் இக்கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார். செப்டம்பர் 1934ல் காந்தியடிகள் காங்கிரஸ் அங்கத்தினர் என்பதிலிருந்து தான் வெளியேறிவிடுவது என்கிற முடிவை படேலுக்கு தெரிவித்து கடிதம் எழுதினார். காங்கிரஸ் இயக்கத்தின் ஆற்றலை பாராட்டியும் இருந்தார். நான் சந்தோஷத்துடன் விலகவில்லை- தொடர்ந்து இருந்தால் நன்மையைவிட தீமையே அதிகமாகும் என உணர்வதை காந்தி குறிப்பிட்டிருந்தார். பெரிய அமைப்பு பகுத்தறிவின் மீது நடக்கவேண்டும். பிரியத்தைக்கொண்டு நடக்கக்கூடாது. நான் அதில் இருந்துகொண்டு தடைப்படுத்துவதாக இருக்கும்போது விலகிவிடுவது நல்லது. ஜவஹரை போல் அல்லாமல் ராஜேந்திர பிரசாத் எனது கருத்துக்களை ஏற்பவர். அவர் தலைவராக வருகின்ற நேரத்தில் விலகுவது அவரிடம் நான் உண்மையில்லாமல் இருப்பதாகாது. நன்றாகப் பழுத்த பழம் உதிர்ந்துவிடுவதால் மரம் பாதகமடைந்து விடுவதில்லை. பழுத்த பிறகும் உதிர்ந்துவிடாமலிருந்தால் அப்பழம் மரத்திற்கு உண்மையில் வீண் சுமைதான். அதுபோல் காங்கிரசிற்கு நான் வீண் சுமையே என்று உணருவதாக அக்கடிதத்தில் காந்தி தன் நிலையை வெளிப்படுத்தியிருந்தார். தன் மேல் பக்தி விசுவாசம் வைத்து சிலர் என்னை எதிர்த்து நின்று தோற்கடிக்க செய்யாமல் இருப்பதை காந்தி இக்கடிதத்தில் ஒருவகையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விசுவாசத்திற்கு நான் செய்வதற்குள்ள ஒரே வழி, நானே விலகிக்கொண்டுவிடுவதுதான். காங்கிரசில் படித்தவர்களாக இருப்பவர்களுக்கும் எனக்குமிடையே அடிப்படையான அபிப்பிராய பேதங்கள் இருக்கும்போது, எதிர்த்து நான் வேலை செய்யமுடியாது. சோசலிஸ்ட் குழுவினரும் வளர்ந்துவருகின்றனர். அவர்களுக்கு ஜவஹர்லால் ஆட்சேபனையற்ற தலைவர். அவர்களை நான் வரவேற்கிறேன். பலர் மதிப்பிற்குரிய தியாகிகள். ஆனால் அவர்களின் வேலைத்திட்டத்திற்கும் எனக்கும் அடிப்படையான வித்தியாசம் இருந்து வருகிறது. அவர்கள் கருத்துக்கள் பரவுவதை நான் தடுக்கமாட்டேன். எனக்கு சில கருத்துக்கள் பிடிக்காமல் இருந்தாலும் அவர்கள் கூறிவருவதில் குறுக்கிடமாட்டேன். காங்கிரசில் நான் ஆதிக்கம் வகிப்பது ஒருவகை பலாத்காரத் தன்மையேயாகும். அவர்களின் பகுத்தறிவிற்கு அவர்களை சுயேட்சையாக விடவேண்டும். எனது விலகல் மூலம் எவரும் விலகும்படி நான் அழைக்கவில்லை . இந்த உரையாடல் மூலம் காந்தி தன் மனதை அக்கடிதத்தில் திறந்து காட்டினார். காங்கிரசில் சோசலிச கருத்துக்கள் வளர்வதற்கு குறுக்கே தான் நிற்கபோவதில்லை என்கிற பகிரங்க விளக்கத்தை காந்தியடிகள் தந்ததைப் பார்க்கிறோம். பின்னூட்டம் சோசலிசம் சுருக்க அறிமுகம் என்கிற புத்தகத்தை மிஷேல் நியுமென் என்பார் எழுதியிருக்கிறார். (Socialism Very short Introduction Michael Newman). லண்டன் கோஆப்ரேடிவ் இதழ்தான் 1827ல் சோசலிசம் என்கிற சொல்லாடலை முதலில் பயன்படுத்தியதாக மிஷேல் நியுமேன் சொல்கிறார். சொத்து தனியார் வசமா, பொதுவாக இருப்பதா எது சமூகத்திற்கு நலமளிக்கும் என அவ்விதழ் கேள்வி எழுப்பியது. சோசலிச வழிமுறைகள் குறித்து வேறுபடுபவர்களும் மனிதர்கள் மத்தியில் அதிகாரம் மற்றும் சொத்து என்கிற பெயரில் நிலவும் பேதங்களை அகற்றுதல் என்பதில் உடன்பட்டு நிற்பர். இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் என்பதும் பேதம் அகற்றுதல் என்பதில் இடம்பெறவேண்டியுள்ளது. மனிதர்கள் மத்தியில் சமதையான மதிப்புக்களை வாய்ப்புக்களை உருவாக்கும் மாற்று சமூகம் ஒன்றை கட்டமுடியும் என்பதிலும் சோசலிஸ்ட் எனச் சொல்லிக்கொள்ளும் எவரும் உடன்படமுடியும். Changes can be thro human agency- மனித முயற்சியால் இதை சாத்தியப்படுத்தலாம் என்பதிலும் சோசலிஸ்ட்கள் உடன்படமுடியும். ராபர்ட் ஓவன், ஃபூரியர், சைமன் போன்றவர்கள் இருக்கின்ற சமூகத்தை விமர்சித்து அடுத்து வருகின்றவர்கள் சோசலிச கருத்தாக்கங்களை செழுமைப்படுத்திட உதவினர் என நியூமேன் சொல்கிறார். பிரான்சின் அனார்க்கிச சிந்தனையாளர் புருதான் ‘What is property’ என்கிற கேள்வியை எழுப்பி ‘Property is theft’ என பதிலைத் தந்தார். மனிதனால் மனிதனுக்காக என எந்த பெயரில் அரசாங்கம் என அமைந்தாலும் அது ஒடுக்குமுறைதான் என அவர் அரசாங்கம் பற்றிய விளக்கத்தை தந்தார். புருதான் தனது the Philosophy of Poverty நூலில் “If people worked just for themselves and their families, there would be no exploitation because nothing is produced for employers and who had no real function”என்று எழுதினார். மார்க்ஸ் புருதானின் மேற்கூறிய புத்தகத்தை விமர்சித்து The Poverty of Philosophy எழுதினார் என அறிவோம். மார்க்சை நேராக அமைப்பில் எதிர்கொண்ட அனார்க்கிசவாதியாக பகுனின் வந்தார். மார்க்சிடம் முரண்பட்ட அவர் 1868ல் இவ்வாறு எழுதினார் “I am not a communist because communism concentrates all the powers of society into the state and because it necessarily ends in the centralisation of property in the hands of the state, while I want abolition of state..”எதன் பெயரில் உருவாகும் அரசாக இருந்தாலும் மனிதனை ஒடுக்கும், அடிமைப்படுத்தும் என பகுனின் கருதினார். அகிலத்தில் மார்க்ஸ்- பகுனின் கருத்துக்கள் மோதலை உருவாக்கின. வெளியேற்றப்பட்ட பகுனின் மற்றும் ஆதரவாளர்கள் கீழ்கண்ட கேள்வியை எழுப்பினர். “How can you expect an egalitarian and free society to emerge from an authoritarian organisation? It is impossible.. principle leading to authority and dictatorship”என்பதை ஏற்பதற்கில்லை என்றனர். 1859ல் அரசியல் பொருளாதாரத்திற்கு விமர்சனவுரை எழுதிய மார்க்ஸ் வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது- சிந்தனை வாழ்நிலையையல்ல என்கிற கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார். பொருளாதாரம் என்பது உண்மையான அடித்தளம் என்றார். உற்பத்திமுறைதான் சமூக, அரசியல், ஆன்மீக வாழ்வின் அம்சங்களை காட்டுகிறது. உற்பத்தி சக்திகள் வளரமுடியாத சூழலை உருவாக்கும் நிலையில் நிலவும் சொத்துறவுகள் உடையவேண்டிய சமூக புரட்சி நடைபெறும் என மார்க்ஸ் எழுதியதைக் கொள்ளலாம். மார்க்சியத்தின் மய்யமான அம்சம் முதலாளித்துவ சமூகத்தின் மீதான விமர்சனமும் அதனை அப்புறப்படுத்தி சோசலிச சமூகம் அமைப்பதற்கான புரட்சிகர நடவடிக்கையும்தான். இந்த விழைவை எவரும் ஏற்கமுடியும். மார்க்ஸ் இதன் பொருட்டு தன் நியாயத்தை labour theory of value- labour power- surplus value மூலம் முன்வைத்தார். புரட்சிகர மாற்றம் என்பதால் வன்முறை எழுவது தவிர்க்க முடியாததாகலாம் எனவும் அவர் கருதினார். காந்தி சர்வோதயா என பேசும்போது அனைவரின் நலன், சமச்சீரான வளர்ச்சி, ஒவ்வொருவரின் சீலம், அறிவார்ந்த குணவளர்ச்சியுடன் பொருளாதார வாய்ப்பு என பேசினார். அவரின் சோசலிசம் என்பது தனிநபர் ஒவ்வொருவரின் சர்வாம்ச வளர்ச்சி என்பதை மையமாக கொண்டிருந்தது. பொருளாதார ஏற்பாடு என்பது தனிநபர்களின் நெறிவீழ்ச்சிக்கு வழியாகும் எனில் அதை ஒழுக்கமில்லாத பாவகரமான ஒன்றாகவே அவர் சித்தரித்தார். எந்திரங்களுக்கு எதிரானவர் என்கிற சித்தரிப்பு அதிகமானபோது அவர் தன்னிலை விளக்கம் தந்தார். “I am not against machinery as such but I am totally opposed to it when it masters us”. எந்திரங்கள் மனிதனுக்கு எஜமானனாகிவிடக்கூடாது என்கிற கவலை அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தது. காந்திக்கு தனிநபர் விடுதலை- சுதந்திரம் என்பது முக்கியமானது. எந்திரமயமாக்கல் என்ற பெயரில் ஒருவரை எந்திரத்தின் பகுதியாக்குவதைத் தான் அவர் எதிர்த்தார். அதேபோல் மத்தியப்படுத்தப்பட்ட எந்த முறையும் அகிம்சைக்கு ஒத்துப்போகாது. கிராமப்புற பொருளாதாரம் என்பதில் சுரண்டல் மட்டுப்பட்டதாக இருக்கும். சுரண்டல்தான் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது என அவர் பேசினார். அரசியல் அதிகாரத்துடன் பொருளாதார முற்றதிகாரமும் கொண்ட அரசைக் கண்டு அவர் அஞ்சினார். தனிநபருக்கு அது பெரும் பிரச்னைதான் என்றார். அரசு உற்பத்திமுறை மட்டும்தான் என்றால் அது அறிவார்ந்த மற்றும் ஒழுக்க நெறி அம்சங்களுக்கு வறுமையாகவே இருக்கும் என்று கூட அவரின் கருத்தைப் பார்க்கமுடிகிறது. உண்மையான சுயராஜ்யம் என்பது சிலரிடம் அதிகாரத்தை குவித்துக்கொள்வதில் இருக்கமுடியாது. அதிகாரத்தை எதிர்ப்பதில் பரவலான மக்கள் பெறும் திறனில்தான் அது சிறந்து விளங்கும் என அவர் அதிகாரமில்லா பெரும்பான்மையினருக்கான குரலை எதிரொலித்துவந்தார். நுகர்வோரின் தேவைகள் முழுமையும் உற்பத்தியாகும் இடமாக கிராமங்கள் அமையவேண்டும் என அவர் திட்டமிட்டு சோதித்தார். இன்று குப்பைமேடாக கிராமங்கள் இருக்கலாம். நாளை அவை ஈடன் தோட்டங்களாக மாறும் என அவரின் கனவு சென்றது. நகரங்கள் கிராமங்களின் உற்பத்தி பொருட்களுக்கு ‘clearing houses’ ஆக இருக்கவேண்டும் என அவர் விழைந்தார். கிராமங்களுக்கு மின்வசதி வரலாம். அதைக் கொண்டு அவர்களின் தொழில்வசதியும் பெருகட்டும். மேய்ச்சல் நிலம் போல ‘பவர்ஹவுஸ்’ கொண்ட கிராமங்கள் இருக்கலாமே என்றார். வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்கான உற்பத்தியை கிராமங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாதவரை அவைகளுக்கு சுதந்திரம் இருக்காது. முடிந்தவரை அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் கூட்டுறவு முறையில் இருக்கவேண்டும். விவசாய உற்பத்தியிலும் கூட்டு விவசாயமுறை மேலானது . கூட்டாக விவசாயம் பார்த்து வருவாயை பிரித்துக்கொள்வது என்பது நிலத்தை பலநூறாக பிரித்துக்கொண்டு தனித்தனியாக பார்க்கும் விவசாயத்தைவிட மேலானது என தெரிவித்தார். கிராமத்தில் பொது மேய்ச்சல் நிலம், பால்பண்னை, கால்நடை மருத்துவமனை என்பது இருக்கவேண்டும் என்பது அவரது அவா. காந்தியடிகள் பார்வையில் சொத்துரிமை மட்டுப்படும்போது செல்வம்/ சொத்து சேர்தலும் மட்டுப்படும். உற்பத்தியுடன் விநியோகமும் உடனடியாக எனும் முறை வலுப்படும் . உற்பத்தி விநியோகம் என்பது உடனுக்குடன் இணையாக நடைபெற தலமட்ட உற்பத்திமுறை தேவைப்படும். அப்படி தலமட்ட உற்பத்திமுறை வலுப்பட்டால் சமத்துவ விநியோகமுறையும் வலுப்படும் என அவர் நம்பினார். பரதன் குமரப்பா ‘வில்லேஜிசம்’ என்பதைப் பற்றி சொல்லும்போது அதுதான் சோசலிசம் என பேசுகிறார். அது ‘socialism decentralised and freed from violence’ என்கிறார். காந்தி பரவலாக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் உற்பத்தியில் உழைப்பவராக உரிமையாளராக உடைய கூட்டுறவுமுறை குறித்து அவர் பேசினார். இவ்வகையில் உழைப்பிற்கு, கைவினைஞர்களுக்கு மதிப்பளிக்கும் சோசலிச பொருளாதார கட்டுமானத்தை முன்மொழிந்தார். ஏற்கனவே வளர்ந்து நிற்கும் பெரிய தொழில்களை- அவசியப்படும் பெருந்தொழில்கள் குறித்து அவர் என்ன கருதினார் என்பதும் முக்கியமானதாகிறது. அவைகளை பறிக்கச் சொல்கிறாரா என்றால் அவரது அகிம்சையில் அதற்கு இடமில்லை. அவரைப் பொறுத்தவரை சொத்து செல்வம் சேர்க்கத் தெரிந்தவர்களின் திறமையும் சோசலிச கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதாக அமையவேண்டும். எனவே அழித்தொழிப்பு என்பதை அவர் ஏற்கவில்லை. அவர்களை சோசலிச பொருளாதார முறையில் ‘டிரஸ்டிகள்’ என்கிற வகைப்பட்டு நடத்தவேண்டும். அவர்களும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். மாறவும் முடியும் என்கிற நம்பிக்கை அவரிடம் அபாரமாக தொழிற்பட்டது. அரசாங்க தொழில் என்பது தனியார் தொழில்களைவிட மேலானது என ஏற்க காந்தி தயங்கவில்லை. ஆனால் அதனிடத்தும் வன்முறை உள்ளார்ந்து குவிந்துள்ளதே என்கிற தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார். இப்படி பேசும்போதுதான் அரசிற்கு ஆன்மா என்பது கிடையாது என்றார். அதிகார குவியலும் வன்முறைக்கான வெளிப்பாடும் நேர்விகிதத்தில் இருப்பதை அவர் உணர்ந்தார். டிரஸ்டிகள் நம்பிக்கை தவறினால் குறைந்தபட்ச வன்முறையுடன் அரசாங்க பறிமுதல் இருக்கும் என்பதையும் ‘டிரஸ்டிகள்’ அறியச் செய்யவேண்டும் என்பதை காந்தி ஏற்கவே செய்தார். அரசின் குறைந்தபட்ச வன்முறைக்கு அவர்கள் இலக்காக நேரிடும் என்பது அவர் பார்வையில் இருந்தது. அனைத்துமே அரசுத்துறை என இல்லாமல், பரவலான மக்களின் கூட்டுழைப்பு கூட்டுறவுமுறை உற்பத்தி என்பதில் அவரது அழுத்தம் இருந்தது. கிராமச் சூழலில் செய்யமுடிந்த எதையும் கேந்திர தொழில்கள் என வகைப்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. கேந்திர தொழில்களை அரசாங்கம் மத்தியப்படுத்தி வைத்துக்கொள்வதை அவர் ஏற்றார். 1934ல் காங்கிரஸ் சோசலிச கட்சி உதயத்தின்போது கராச்சி காங்கிரசில் நாம் ஏற்றுக்கொண்ட தொழில்களை தவிர பிற கேந்திர தொழில்கள் என தற்போது என்னால் கருதமுடியவில்லை என கருத்து தெரிவித்ததை பார்க்கிறோம். ஜே சி குமரப்பா ‘இந்தியப் பொருளாக்கமும் காந்திய நோக்கமும்’ என்கிற ஆக்கத்தில் காந்தியப் பொருளாதாரம் குறித்து எளிமையாக விளக்குவார் - இயற்கை சாதனங்களை செலவழிப்பதென்பது நாட்டு மக்கள் நிரந்தரமாக வேலைபெறக்கூடிய வழியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அச்சாதனங்களின் விரயத்தைத் தடுத்து பின் சந்ததியர்களுக்காக அவைகளை பாதுகாத்துக்கொண்டும் வரவேண்டும். - எந்திர சாதன உற்பத்திமுறைகளை இலாபத்தைக் கருதாமல் வேலைகொடுக்கும் சாதனமாக செய்யவேண்டும். - மக்களைப் பிறர் உழைப்பை நாடாது சுயதேவையைப் பூர்த்திசெய்து கொள்ளக் கூடிய வேலையில் அமர்த்தவேண்டும்.. அவர்களின் உற்பத்திக்கு ஏற்ப வாழ்க்கை நிலை இருக்கவேண்டும். - போட்டியின்றி கூட்டுறவு மூலம் தொழில்கள் இருந்தால் சமநிலையாக இருக்கும். - நிரந்தரக் கொள்கைகளைக் கொண்டு திட்டம் போட நுண்ணிய அறிவுடன் முன்னேற்றமான குணமும் வேண்டும். - ருஷ்யத் திட்டம் சுத்தமான பொருளாதாரத் திட்டமாக இருக்கிறது. நாம் போடும் திட்டம் அரசியல், சமூகம், மதம், பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் கொண்டிருக்கிறது. - ருஷ்யாவில் ஜார்கொடுமையிலிருந்து வறுமையிலிருந்து மக்களை மீட்பது என்பதே ஒரே நோக்கமாக இருந்தது. மற்ற விஷயங்கள் கவனம் பெறாமல் போயின. - நம்மை பொறுத்தவரை உரிமைகள் பிறருக்குச் செய்யவேண்டிய கடமைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. சுதந்திரம் என்பது விருப்பம் போல் செய்வதல்ல. கடமைகள், உரிமைகள், எல்லைகளைக் குறிக்கிறது. - பயமும் வெறுப்பும் புகை சூழ்ந்த வானத்தில் உண்மை சுதந்திரத்தால் வாழ முடியாது. எந்த அமைப்பு மக்களைப் பட்டாளம்போல் பணியும் கூட்டமாகச் செய்கிறதோ அது அவர்கள் வளர்ச்சியைத் தடுப்பதுடன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது. பலாத்காரமுறைகள் துரித பலனைக் கொடுக்கலாம் , ஆனால் நீடித்து நிற்காது. - காந்தியடிகள் பொதுவாழ்வில் இறங்கியது அரசியலில் பொதுமக்களுக்கு நன்றாக உழைக்க வழியிருக்கிறது என்பதற்காகத்தான். உயர்ந்த அந்தஸ்து பெறவோ அதிகாரம் சலுகைகளைப் பெறவோ அல்ல. காந்தியடிகள் அலங்கார கண்ணியவான்களின் முறைக்கு எதிரான வழியில் அரசியலின் ஆணிவேர்களை கிராமங்களுக்குள் புகுத்தி வெகுமக்களை விழிப்படைய வைத்தார். பாவையர்களும் பொதுநலத்தொண்டில் இணைந்து சிறை புகுந்தனர். துன்பமே இன்பம் என அறிந்தப் படை உருவானது. - உரிமைகளை வற்புறுத்துவது உலகாயதத்தின் ஆரம்பநிலையாகும். அதிக புத்தி நுட்பமுள்ள மனிதன் கடமைகளில் அதிக கவனம் செலுத்துவான். கடமைகளைச் செய்வதற்கு அதிக சுய ஒழுங்கும், தன்னடக்கமும் வேண்டும். - சத்தியாக்கிரகத்தினால் மாசு நிறைந்த அரசியல் புத்துயிர் பெறுகிறது. இவ்வாயுதத்தால் எதிரியை வசப்படுத்தி வெற்றி பெறமுடியும். துன்பத்தை நாம் ஏற்பதால் எதிரி தோல்வியடைகிறார். கோபம், வெறுப்பு, பொறாமை, கொலை ஆகியவற்றிற்கு இடம் இல்லை. - வரிப்பணம் கிராமத்தில் வசூலித்துவிட்டு நகரத்தில் கட்டுமானங்களை அரசாங்கம் எழுப்பிக்கொண்டிருக்கலாமா? வசூலிக்கும் இடத்திற்கு அருகிலேயே செலவையும் திட்டமிடுதல் வேண்டும். சர்க்கார் வரிப்பணத்தைக்கொண்டு அந்நியபொருட்களில் செலவிடக்கூடாது. சுதேசி பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் தேசமக்களின் நலன் கருதி அதிகவிலை கொடுக்கத் தயங்கக் கூடாது. - இன்று உலகின் முன் உள்ள கஷ்டம் உற்பத்தி குறைவினால் ஏற்படுவதல்ல. ஒழுங்காகப் பங்கிடுவதற்கு வசதி செய்யாமல் இருப்பதால் ஏற்படுவது. நமது திட்டத்தில் முறையாக பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படியானதாக இருக்கவேண்டும். - நமது அகிம்சா சமுதாயம் உழைப்பையும் வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்கவேண்டுமே தவிர மூலதனத்தைக்கொண்டல்ல. முதலீடு அதிகம் தேவையில்லா, விற்க இலகுவான சந்தைகள் கொண்ட தொழில் முறைகளை நாம் சிந்திக்கவேண்டும். சிறு தொழில்கள் பிரதானமாக இருக்கவேண்டும். காந்தியின் திட்டங்கள் மனிதனுக்கு மனிதன் இருக்கும் தொடர்பை பாதுகாக்கக்கூடிய அநேக விஷயங்களைக் கொண்டதாயிருக்கிறது. ஆலைதொழில் ஆனாலும், குடிசைத்தொழில் ஆனாலும் மனிதனுக்கு மனிதன் அன்பில்லாவிட்டால் ஆகப்போவதென்ன? நம்மிலும் தாழ்நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையை நசுக்காமல் செளகரியங்களை, மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரிந்த வாழ்கைமுறை ஒன்றிற்காக காந்தியடிகள் நின்றார். குமரப்பா தான் விளக்கிய காந்திய பொருளாக்கமுறையை நிரந்தரப் பொருளாதாரம் என அழைத்தார். அம்முறையில் பேதமின்மை, தன்னலமறுப்பு, சேவை, கடமையில் கருத்து, தியாகம், மானுட உயர்வு ஆகியவற்றின் குணங்கள் பிரதானப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். ராம்ஸ்வரூப் இந்து மறுமலர்ச்சி சிந்தனையாளர். இஸ்லாம், கிறிஸ்துவம், சோவியத், சீனா குறித்து விமர்சன பார்வைகளை வெளிப்படுத்தியவர். ராம்ஸ்வரூப் ‘காந்தியம் – கம்யூனிசம்’ (Gandhism and Communism by Ramswarup) என்ற ஆக்கத்தை எழுதியுள்ளார். காந்திய பொருளாதாரக் கோட்பாடு ‘strong subjective element’ (not so objective) கொண்டது என எழுதினார். சிறு உற்பத்திமுறை, எளிய வாழ்க்கை, முதலாளி- தொழிலாளி இருவருக்குமான பொறுப்புகள்- உழைப்பே உன்னதமானது என காந்தியம் பேசியது. சமூக சேவை என்பது ஃபாஷன் என்பதாக மரியாதை பெறகூடிய ஒன்றாக பாவிக்கப்பட்டு நடைபெறுவதை பார்க்கமுடிகிறது. எளிய வாழ்க்கை எனப் பேசிவிட்டு, உயர் தியாகங்களை எடுத்துக்காட்டிவிட்டு சொந்த வாழ்வில் எதையும் கடைபிடிக்காமலே சமூக சேவை செய்ய முடியும் என்கிற உலகை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். காந்தி இப்படிப்பட்டவர்களின் உதட்டளவு சேவைகளை பொருட்படுத்தமாட்டார். ராம்ஸ்வரூப் இரு முக்கிய கேள்விகளை முன்வைத்தார். காந்தியம் என்பது உலகளாவியதா? காந்தி இல்லாமல் காந்தியம் வென்றுள்ளதா? என்பன சாரம்சமாக ராம்ஸ்வரூப் வைத்த கேள்விகள். Is Gandhism a universal principle, or has it but a limited application? Can Gandhism succeed without a Gandhi? Is Gandhism the name of a set formulas, or is it the name of a technique which can be applied by anyone who may happen to show a preference for it? காந்தியின் அகிம்சை வழி போராட்டம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவிலும் செல்வாக்கு செலுத்தியது. நமது விடுதலை இயக்கத்தின் பிரதான பாத்திரத்துடன் இப்படி நாட்டிற்கு வெளியேயான சில ஜனநாயக சக்திகளின் துணையும் நமது விடுதலைக்கு காரணிகளாக விளங்கின. காந்தியைப் போல நடந்துகொள்ளாமல் காந்தியம் என்பதன் பார்முலா எதையும் எவராவது வைத்துக்கொள்வதால் காந்தியம் முழக்கமாக தொடருமே தவிர நடைமுறைக்கு உதவுமா என்கிற கேள்வியையும் ராம்ஸ்வருப் வைப்பதை பார்க்கலாம். காந்தியத்தையும் கம்யூனிசத்தையும் மைனஸ், பிளஸ் சமப்படுத்தல்கள் மூலம் இணைப்பதை ராம்ஸ்வரூப் விமர்சனமாகவே பார்க்கிறார். வன்முறையுடன் கூடிய காந்தியம் ‘கம்யூனிசம்’ என்பதையோ, வன்முறை நீங்கிய கம்யூனிசம் ‘காந்தியம்’ என்பதையோ ராம்ஸ்வரூப் ஏற்கவில்லை. அவை இருவேறுபட்ட பார்வைகள்- ஒன்றுக்கு ஒன்று பொருந்தாதவை - அடிப்படைகளில் மாறுபட்டவை என்பார் ராம்ஸ்வரூப். காந்தி குறித்து சித்திரம் ஒன்றை ராம்ஸ்வரூப் தருகிறார். காந்தி அகிம்சவாதியே தவிர நடுநிலைவாதியல்ல (neutral). காந்திக்கு உண்மை நியாயம், சுதந்திரம் என்பதெல்லாம் அவை எவ்வளவு வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் முக்கியமானவை. காந்தி detached ஆக இருந்தாலும் aloof ஆக இருப்பவர் அல்லர். அவர் கடுமையான தீர்ப்பிடல்களை தரமாட்டார். தாராள மனமும் உயர் சிந்தனையும் கொண்டவராக செயல்பட்டவர் காந்தி. H T மஜூம்தார் மார்க்சிய பொருள் சார்ந்த விளக்கத்தில் காந்தி சோசலிஸ்ட்டாக கருதப்படமாட்டார் எனச் சொன்னதை பார்க்கலாம். தனியார் சொத்துரிமை அழிப்பு என்கிற பொருளில் பார்த்தால் அவரை சோசலிஸ்ட் என ஏற்கமுடியாமல் போகலாம் என்பதையும் மஜூம்தார் முன்வைத்தார். ஜெயபிரகாஷ் பின்னொரு காலத்தில் நினைவு கூறும்போது தனது சோசலிச சித்தாந்த காலத்தில் காந்தி குறித்த கடும் விமர்சகராக இருந்ததை சொல்கிறார். காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், மற்றும் நேரு போன்றவர்கள் பேசிவந்ததை காந்தி ஏற்கவில்லை. தனியார் சொத்து குறித்தும் வர்க்கப்போராட்டம் குறித்தும் வந்த பேச்சுக்களை ‘loose talks’ என்றே காந்தி விமர்சித்தார். பிர்லாபவனில் தங்கிய காலத்தில் அவர் படுகொலை நிகழ்ந்தாலும், பிர்லா மாளிகைவாசி- முதலாளிகளின் ஏஜெண்ட் என்கிற விமர்சனக் கணைகள் காந்தி மீது வீசப்பட்டன. அவர் சோசலிசம் பேசியதே சோசலிஸ்ட்களை, கம்யூனிஸ்ட்டுகளை கட்டுக்குள் வைக்கவே என்ற விமர்சனமும் அவர் மீது எழாமல் இல்லை. மார்க்சியன் சோசலிசம் பேசியவர்களிடம் பொருளாதார மேம்பாடு என்பது பெரும் பேசுபொருளாக இருந்தது. காந்தியோ வழிமுறையின் தூய்மை, எளிமை சிக்கன வாழ்வியல் ஆகியவற்றை அவசியமாக்கினார். எவரே ஆனாலும் அவரின் உடலுழைப்பை வற்புறுத்தும் மேன்மை அவரிடம் தொழிற்பட்டது. மனிதன் பெறும் திறன்கள் செல்வமோ, உடல்வலிமையோ, அறிவுத்திறனோ எதுவே ஆனாலும் - அதில் தர்மகர்த்தா மனப்பாங்குடன் சமூக பொறுப்பை உணர்தல் வலியுறுத்தப்பட்டது. ராம் மனோகர் லோகியா அவர்களும் கம்யூனிசம் முதலாளியத்திலிருந்து சற்றுதான் வேறுபடுகிறது. “Bread and culture are inseparable. If one is asked to wait, the other must wait as well. The taste and quality of bread depends upon the quality of culture and vice versa”என அவர் குறிப்பிடும்போது மனிதனின் ஆன்மீக தார்மீக அறிவு வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார கட்டுமானம் பற்றிப் பேசினார். லோகியாவைப் பொறுத்தவரை சோசலிசம் என்பது ஒருவகை மேம்பட்ட நாகரீக கட்டுமானமாக இருந்தது. சோசலிச இயக்கம் என்பதை பொருளாதார ஒற்றைப் பரிமாணம் கொண்ட இயக்கமாக பார்க்காமல் அதை கலாச்சார இயக்கமாகவும் அவர் பார்த்தார். இங்கு கலாச்சாரம் என்பது மன நேர்மை -நெறி- சீலம் சார்ந்த அம்சங்களுடன் விளக்கப்படுகிறது. நேரு நேரிடையாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ இல்லாவிடினும் மார்க்சிய வகைப்பட்ட விஞ்ஞான சோசலிசம் என்றே பேசினார். பெரும் உற்பத்திக்கு அவர் முக்கியத்துவம் தந்தார். ஆனால் அவரும் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்ததை வெளிப்படுத்தவே செய்தார். சோசலிசம் என்பது வெறும் ‘பணக்காரத்தன்மை’ கொண்டுவருவதல்ல. சமதையான விநியோகம் என்றாலும் கூட மானுட மதிப்புகள் உயர்கிறதா என்பதை நாம் பார்க்காமல் இருந்துவிடமுடியாது என நேரு பேசியதைக் காண்கிறோம். காந்தியுடன் அன்றாட தொடர்புகளில் இருந்த மேற்சொல்லப்பட்ட இடதுசாரிகள் காந்திய சோசலிச கருத்தாக்கங்களை கணக்கில் கொள்ளத்துவங்கினர் என்பதைப் பார்க்கிறோம்.. சோசலிச இலட்சியம் என்பது காந்தியத்தை விட்டுவிட்டால் அது தனக்கான தீங்கை தானே தேடிக்கொள்வதாக அமையும் என ஜெயபிரகாஷ் நாரயண் தனது அனுபவ வாயிலான அறிவிப்பைத் தந்தார் . கம்யூனிஸ்ட்கள் முன்வைப்பதுபோல் வர்க்கப்போராட்ட வழியில் மட்டுமே சோசலிசம் என்பதை ஏற்கவேண்டியதில்லை என்கிற நிலைப்பாட்டிற்கும் அவர் வந்தார். இந்தியாவில் ஆயுதம் தாங்கிய போராட்ட வழியில் புரட்சி என இறங்குவது அறிவிற்குரிய ஒன்றானதல்ல. அப்படி எளிய குறுக்குவழி ஆயுதபுரட்சி மட்டுமே என ஏற்பதற்கும் இல்லை என்று ஆச்சார்யா நரேந்திர தேவா பேசினார். கயா சோசலிச மாநாட்டில் ‘வன்முறை முற்றிலும் இல்லாமல்’ என்பது சாத்தியமா என்கிற சந்தேகப்பார்வையை லோகியா வைத்தார். வர்க்கப் போராட்டத்தை தவிர்த்துவிட்டு மனம் மாறி எந்த நாட்டிலும் சொத்துபடைத்த வர்க்கம் எதையும் விட்டுக்கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்திய முதலாளித்துவம் உலக முதலாளித்துவத்தைவிட காருண்யம் மிக்கது என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியாது என லோகியா பேசினார். இப்படிப்பட்ட சில சந்தேக பார்வைகளையும் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் கைவிடவில்லை என்பதை இக்கருத்துக்கள் ருசுப்பிக்கின்றன. விடுதலைக்கு முன்னர் காந்திய சிந்தனைகள் மீது பெரும் சந்தேகங்களையே எழுப்பி முழுமையாக விமர்சிப்பவராகத்தான் நேரு இருந்தார். விடுதலைக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பு அனுபவங்கள் பெருகிய நிலையில் நமது பின்னணி காந்தியம் சார்ந்த ஒன்று- எனவே அமைதி வழியில் மட்டும்தான் மாற்றங்கள் என உறுதிபட பேசத்துவங்கினார். லோகியா அரசே நடத்தும் பெருந்தொழில் குறித்து சந்தேகம் எழுப்பினார். மத்தியப்படுத்தப்பட்ட முறையால் அந்நியமாதல் நிகழும்- முழுமுதல் முற்றதிகாரம் ஏற்பட்டு அதிகாரவர்க்கம் வலிமைபெறும் என்கிற எச்சரிக்கையை தந்தார். ‘Princilple of immediacy’ என்பதை லோகியா மாற்றாக முன்நிறுத்தினார். அம்முறை சமத்துவம், சோசலிச சிந்தனைகளுக்கு அணுக்கமாக அமையும் என்றார். திட்டமிட்ட பொருளாதார ஏற்பாட்டில் சிறு தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற லோகியா சமூக சொத்தாக்க சிந்தனையில் கூட்டுறவுத்துறை என்பதற்கும் முக்கிய பங்கு இருக்கவேண்டும் என்றார் . பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் அவர் முன்வைத்த விளக்கம் “The Govt of the people, by the people, for the people, will be achieved through the govt of the commune, by the commune for the commune on the one hand and the govt of mankind by mankind for mankind on the other” நேரு அவர்கள் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியின் இலக்கு மனிதனின் வளர்ச்சி- அவரது ஆளுமையின் உயர்வாகத்தான் இருக்கும் என்றார். ஆச்சார்யா நரேந்திர தேவாவும் சோசலிஸ்ட்களாகிய நாங்கள் காந்தியின் செல்வாக்கில் வழிமுறையின் தூய்மை, அகிம்சை, பரவலாக்கப்பட்ட ஜனநாயகம்- பொருளாதார ஏற்பாடு என்பதை உணர்ந்துகொண்டோம் என மனம் திறந்து பேசினார். காந்திய சகாப்தத்தில் காந்தியக் கொள்கைகளை அமுல்படுத்தக் கூடிய நேர்மையான கடமை நம்முன் இருக்கிறது என நேரு தெரிவித்ததையும் நாம் காணமுடியும். மகாத்மா காந்தி உழைக்கும் மக்களின் நலன்கள் மீது கவனம் செலுத்தினார். அவர்களின் மேம்பாட்டை விழைந்தார். முதலாளித்துவ சுரண்டலை அவர் கண்டனம் செய்பவராக இருந்தார் என சோவியத் அறிஞர்களும் எழுதத்துவங்கினர். காந்தி தன் வாழ்நாட்களிலேயே சனாதனவாதி, பழமைவாதி, எதிர்புரட்சி சக்தி, முதலாளித்துவ ஊதுகுழல் என ஏளனங்களுக்கு உள்ளானவர். காந்தியை உலகம் மறுவாசிப்பிற்கு உட்படுத்திக்கொண்டிருக்கும்போது அவரை சமூக புரட்சிகரவாதி, புரட்சிகர ஆளுமை , மென்மையான ‘அ-அரசுவாதி’ என குறிப்பிடுவதையும் காண்கிறோம். காந்தியின் சோசலிசம் விஸ்தரிக்கப்பட்ட குடும்பம் என்கிற சாயல் கொண்டதாக இருந்தது. அரசின் தலையீட்டை மட்டுப்படுத்தும் சிந்தனையுடையதாக இருந்தது. சார்லஸ் ஃபூரியர், ராபர்ட் ஓவன், புருதான் ஆகியவர்களுக்கு சற்று நெருக்கமான சிந்தனையுடையதாக காந்திய சோசலிசம் இருக்கிறது என்பது பேணு பிரதான் ஆய்வில் கிடைக்கும் செய்தியாக இருக்கிறது. ஆனால் மார்க்சிய அளவுகோல்களின்படி பார்த்தால் இவர்கள் பேசியவை கற்பனாவாத சோசலிசம். என்ற வகையில் அடக்கப்படுகிறது. காந்தியின் Bread labour கொள்கை மார்க்சியத்தின் Labour Theory of Value என்பதற்கு நெருக்கமாக வருவதாக பேணு சொல்கிறார். முக்கிய பிரிட்டிஷ் இடதுசாரி சிந்தனையாளரான ஜி டி எச் கோல் விவசாயிகளை மனதில் கொண்டு சிறு உற்பத்தி முறைகளுக்காக புருதான் நின்றார் எனத் தெரிவிக்கிறார். மனிதனின் அடிப்படை கடமை என்பது அவனின் உழைப்பில்தான் இருக்கிறது என செயிண்ட் சைமன் பேசினார். அகிம்சை என்பது தனது வேர்களாக மானுட தாகத்தைக் கொண்டது- பேராசையையும் வெறுப்பையும் துரத்தும் தாகமது. உண்மை எனும் தெய்விகத்தை நோக்கிய அன்பின் வழிப்பட்ட பயணமது. அதன் முயற்சிக்கு எல்லைகள் இல்லை. அதனால்தான் காந்தி தனித்த ஆக உயர்ந்த புரட்சியாளராக மிளிர்கிறார். முடிவற்ற மாற்றத்திற்கான தூதராக விளங்குகிறார் என்கிற கருத்தை ஜாஃப்ரே ஆஷ் நமக்குத் தருகிறார். வில்பெரட் வெல்லாக் நம் காலத்தின் முழுமையான ஆழமான புரட்சியாளர் காந்தி என எழுதினார். காந்தி கலகத்தை எதிர்ப்பை சொல்லிவிட்டு சென்றவர் அல்ல. அவரே முன்நின்று லட்சக்கணக்கான மக்களை திரட்டி அவர்களுக்கு அச்சம் என்பதை அறியாமல் செய்தவர். கம்யூனிசத்திற்கு அப்பால் என பிற்காலத்தில் என் என் ராய் பேசலானார். மார்க்சியத்தின் முரண் என ஒன்றை அவர் சுட்டிக்காட்டினார். முதலாளித்துவம் அழுகி அழியப்போகிறதெனில்- அது தவிர்க்கமுடியாத நிகழ்வெனில் அதை வன்முறை மூலம் தூக்கி எறிய வேண்டும் என்கிற கட்டாயம் எதற்கு?. மாறுதல் கட்டாய வன்முறை மூலம் தான் வரும் என்றால் அது தவிர்க்கமுடியாத நிகழ்வு என எப்படி சொல்லமுடியும்?. அதைவிட வலிமையான சக்தி வந்துவிட்டால் அதை தடுத்துவிடமுடியாதா? போன்றவை எம் என் ராய் எழுப்பிய கேள்விகள். பொருளாயதம் என்பதின் உரத்தக் குரலை காந்தி தனது சிந்தனைகள் மூலம் சற்று மட்டுப்படுத்தினார் ஒரு நாட்டின் ஒழுங்கு லயம் என்பதெல்லாம் அங்கு எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்பதில் இருக்கவே முடியாது. அங்கு பட்டினியே இல்லை என்பதில் தான் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிதான் நெறிகளை மேம்படுத்த வழி என எங்காவது சர்வாம்ச விதி இருக்கிறதா என காந்தி கேள்வி எழுப்பினார். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மட்டுமே சமூகநீதிக்கான ஒரே சிறந்த மற்றும் விரைவான வழி என ஏற்கவேண்டியதில்லை என இ எஃப் எம் டர்பின் விவாதித்தார். முற்றதிகார நிர்வாக முறையை ஒப்பிடும்போது பலதரப்பு பன்முக நிர்வாக முறை மேலானது. சட்டத்திற்கு மேலான ஆட்சி, சட்டமே இல்லாத ஆட்சி என்பதைவிட சட்டப்படி ஆட்சி மேலானது என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் சொல்வதைப் பார்க்கிறோம். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஏற்பட்ட ருஷ்யப் புரட்சி அரசியல் மேலாண்மையை ஏற்படுத்திக்கொண்டது. பொருளாதார விடுதலைக்குப் பதிலாக சேவகத்தன்மையில் கொண்டுபோய் விட்டது என எம் என் ராய் எழுதினார். பாட்டாளி புரட்சியின் சகாப்தம் தோற்றம் கொள்வது போல் துவங்கிய ஒன்று எதிர்புரட்சியாக மாறிப்போனது எப்படி என்று எம் என் ராய் எழுதினார். சொத்துரிமை மற்றும் உடைமைகள் பூர்ஷ்வா வர்க்கத்திலிருந்து தொழிலாளிவர்க்கத்திற்கு மாற்றப்பட்டதாக பேசப்பட்டாலும் நடைமுறையில் கட்சியின் உயர் மட்டக் குழுவிற்குத்தான் அது மாற்றப்பட்டிருந்தது. In reality the ownership, still remains Private because it is vested in one class, not the entire society என்றுஅப்போது நிலவிய தன்மை குறித்து எழுதினார் ராய். தனி மனிதர் எவரும் சுதந்திரமான சாலையில் செல்ல நாகரீகமான சமூகம் இடமளிக்கவேண்டும். அவர்களின் திறன் உருவாக்கம் அங்கு மேம்படவேண்டும். சமூக முன்னேற்றத்தின் அடிப்படை உந்துதல் மனித விடுதலையின் தாகம் என்பதாகவே இருக்கவேண்டும். சுதந்திரத்தை மறுத்து எவரும் சுதந்திரத்திற்கான பாதையை உருவாக்கமுடியாது. பொருளாதார முறை என்பதால் மட்டுமே அதன் தொடர் விளைவாக தானாக சுதந்திரம் வந்துவிடாது. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களை , பாட்டாளிகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என ஒரு அரசியல் கட்சி உரிமைப் பாராட்டுவதால் மட்டுமே சுதந்திரம் அதன் தொடர் விளைவாக வந்துவிடுவதில்லை எனவும் தனது அனுபவ மொழியை ராய் எழுதினார். New Humanism என்பதில் ராய் காந்திய சோசலிச சிந்தனைக்கு அருகில் வருவதாக ஆய்வாளர் பேணு குறிப்பிடுகிறார். நேருவும் scientific Humanism எனப் பேசினார். மனிதாபிமான சோசலிசத்தில் மானுடம்தான் கடவுள், சமூக சேவைதான் மதம் என்றார் நேரு. ‘The better type of Modern mind is pragmatic, ethical and social, altruistic and humanitarian. It is governed by a practical idealism of social betterment.’ நம்மால் விஞ்ஞானம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மனம் ஆன்மாவின் வளர்ச்சியையும் இணைக்க முடியுமா என்பது மிக முக்கியமான பிரச்னைதான் என நேரு கருதினார். அயின்ஸ்டின் அவர்களும் சமூக நெறி எனும் முடிவை நோக்கித்தான் சோசலிச திசை அமைக்கப்படவேண்டும் என எழுதினார். மனித குலத்தின் விதி என்பது அதன் ஒழுக்க நெறிகளை நம்பித்தான் இருக்கிறது என்றார். ஹெர்பர்ட் மார்க்யூஸ், சார்த்தர், ஃபானன் போன்ற நவீன இடதுகளின் பார்வையுடன் காந்திய சோசலிசத்தை ஒப்பிட்டு பேணு தன் ஆய்வுகளை செய்துள்ளார் . மார்க்யூஸ் அவர்களும் பொருளாதார தொழிநுட்ப மேம்பாடு மட்டுமே தனிமனிதனின் தொடர்ந்த சுதந்திர வளர்ச்சிக்கு உத்தரவாதமாகாது. அவர்களின் ஆன்மீக நெறிசார்ந்த வளர்ச்சியும் அவசியம் என்றார். ‘The individual would be his own’ எனும் இலக்கு நோக்கிய நகர்வை அவர் பேசுகிறார். நுகர்வு கலாச்சாரத்தின் தீங்குகளை அவர் விளக்குவார். பெரும் நுகர்விற்கான உற்பத்தி என்ற பெயரில் இயற்கையையும் மனிதனையும் வெல்ல முயற்சிக்கும் விஞ்ஞானம் பற்றி கவலையுடன் பேசியவர் மார்க்யூஸ். ‘Pattern of one dimensional thought and behavior’ குறித்து பேசியவர். தொழில்நுட்ப நாகரீகம் என்பதில் ‘productive apparatus tends to become totalitarian’ என தொழில்நுட்ப சமுதாயத்தின் மேலாண்மை குறித்தும் மார்க்யூஸ் பேசினார். காந்தியிடமும் இப்படிப்பட்ட எண்ணவோட்டம் இருந்தது என்பதைப் பார்க்கிறோம். தொழில்வளர்ச்சி சமுதாயம் என்று சொல்லி- உழைப்பு மற்றும் முதலாளித்துவ மேலாண்மையிலிருந்து விடுதலை என அறைகூவி ‘a whole system of domination’ ல் வீழ்வது பற்றி அவர் அய்யமுற்றார். சமூகத்திற்கு நன்மை உருவாக்குவது என்கிற பெயரில் செய்யப்படுவதெல்லாம் கண்டிப்பாக தனிநபர்களுக்கு நன்மை உண்டாக்கத்தான் என ஏற்பதற்கில்லை என்றார் மார்க்யூஸ். சமூகரீதியாக தேவைப்படும் உழைப்பு என்பது அழகியல் உணர்விற்கு இடமளிப்பதாக அதன் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையட்டும் என்றார். மார்க்சிய கொள்கைகளை பின்பற்றுகிறோம் என்று சொல்லி மதிப்புகளையும் மெய்மைகளையும் விஞ்ஞானக் கண்கொண்டு இணைப்பதாகவும், தனிநபர் தேவைகளையும் சமூகத் தேவைகளையும் இணைப்பதாகவும் சோவியத் உரிமைப் பாராட்டிக்கொண்டது என்பதை மார்க்யூஸ் இவ்வாறு குறிப்பிட்டார். “Working with marxist theory, soviet ethics claims to unite on a scientific basis, values and facts, ideal and reality, the particular interest of the invidual and the general interest of society, even mankind as whole. Moreover soviet ethical philosophy claims to be capable of demonstrating the attitude, behaviour, and practice, which alone will bring about freedom and a human existence for all” சோசலிச பொருளாதார கொள்கைகள் ‘instrument of domination’ ஆவது பற்றிய விமர்சன பார்வை மார்க்யூசிடம் இருந்தது. சோசலிச கட்டுமானத்தில் அதிகாரவர்க்க முற்றதிகார நிர்வாகம் என்பதையும் அவர் விமர்சனக் கண்கொண்டு பார்த்தார். சிறு சிறு குழுக்களிடம் சுயேட்சையாக சிந்தித்து செயல்படுவதற்குரிய இலகுத்தன்மை அங்கு இல்லை என்றார். சார்த்தர் அவர்களும் வாழ்க்கை மேம்பாட்டிற்காக திரும்ப திரும்ப செய்யும் உழைப்பில் மனிதன் ஈடுபடுத்தப்படுவதை விமர்சனமாகவே பார்த்தார். பொருளாயத மேம்பாடு என்பதற்காக மனிதனை ‘a mere mechanism’ ஆக மாற்றுவதை கண்டனம் செய்தார். மனிதனின் உள்ளார்ந்த ஜீவனை வற்றச் செய்யும் ஏற்பாட்டை சார்த்தர் ஏற்கவில்லை. ‘Monsterisation of Mass production’ எனவும் அவர் சொன்னதைக் காண்கிறோம். பாட்டாளிகள் விடுதலையை அவர்களே எழுதிக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு வெளியே ஏதுமில்லை என உணரவேண்டும்- ’ alone it can write its own history.. In short the working class has nothing outside it ’ என அவர் அறிவுறுத்தியதைப் பார்க்கிறோம். பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்று பாத்திரம் என்பதை கட்டாயமாக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று பாத்திரம் என்பதுடன் முடிச்சிடுவதை சார்த்தர் ஏற்கவில்லை. முற்றதிகாரம் விழையும் அமைப்பு என்கிற வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலாண்மையை ஏற்கவேண்டாம் என அவர் வேண்டிக்கொண்டார். “All authority exerted by a working class minority on the working class in the name of that class itself must necessarily transform itself into a bureaucracy of exploitation”என்பது அவரது வரையறையாக இருந்தது. கட்சியில் தோன்றும் அதிகாரவர்க்கம் என்பது குறித்து பேசிய சார்த்தர் அது புரட்சிக்கு மட்டுமல்ல பாட்டாளிக்கும் எதிரானது என்கிற கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். மோசமான மேய்ப்பவர்களால் பாட்டாளிவர்க்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார். பாட்டாளிவர்க்கத்திற்கு சவக்குழி தோண்டுவதாக ஸ்டாலினிசத்தை சார்த்தர் விமர்சித்தார். பெரும்பான்மை மக்களை passive ஆக வைத்துக்கொண்டு சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி புரட்சி நடத்தி ஆட்சிக்கு வருவது ‘monologues of militants’ என்பதாகவே அமையும் என்ற கருத்து சார்த்தரிடம் இருந்தது. வன்முறைவழிதான் மனிதனை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. அவனுக்கு சுயமரியாதையை உருவாக்குகிறது என்றார் ஃபானன். அதே நேரத்தில் கட்சி ஒன்றிடமோ அல்லது தனிநபரிடமோ அதிகாரம் குவிவதை அவர் ஏற்கமுடியாதென்றார். பெருந்தொழில் தேசியமயம் என ஃபானன் பேசினாலும் பரவலான தீவிரப்படுத்தப்பட்ட கூட்டுறவு முறை அவசியம் என்றார். அவர் விவசாயிகளை மையப்படுத்திய புரட்சிகரமாற்றங்கள் பற்றிப் பேசினார். அவர்களைக்கொண்ட புரட்சிகர கட்சி எனவும் வாதாடினார். ‘collective ownership of governmental authority- decentralisation of power.’ போன்ற கருத்துக்களில் காந்தி பேசுவதைப் போல் ஃபானன் பேசியிருப்பதைக் காணமுடிகிறது. வர்க்க வேறுபாடுகள் நிறைந்து சமூகம் இருக்கும்போது மோதலும் அதன் முரணால் சமூக மாற்றமும் உருவாகும். முதலாளித்துவ சமூகத்திற்கு சவக்குழி தோண்டுபவராக தொழிலாளிவர்க்கம் எழும்பும். அதன் புரட்சி சோசலிச சமுதாயத்திற்கும்- சோசலிச சமுதாய வளர்ச்சி கம்யூனிச சமூகத்திற்கும் இட்டு செல்லும் என்பது மார்க்சியர்கள் சொல்லித்தரும் அரிச்சுவடி. இந்த Revoultion/ evolution தாண்டி சமூக வளர்ச்சி பற்றி ஏதும் மார்க்சியத்தில் சொல்லப்படவில்லை. ஏனெனில் வர்க்கமோதல் இல்லாத அரசு இற்றுப்போகும் என அது இறுதி இலக்கை நிர்ணயித்துள்ளது. ரஸ்ஸல் போன்றவர்களுக்கு ருஷ்யவகைப்பட்ட கம்யூனிச கட்டுமானம் தோற்றாலும் சோசலிச சித்தாந்தம் இருக்கும் என்ற எண்ணம் 1920லேயே இருந்தது. சோசலிசம் என்பது தொழிலாளிவர்க்கம் என்கிற ஒற்றை வர்க்கத்திற்கான ஏகபோக சித்தாந்தமா என்கிற விவாதங்களும் நடக்காமல் இல்லை. இப்படிப்பட்டவர்களின் வாதம் சோசலிசம் என்பது அனைத்துப்பகுதி மக்களையும் அரவணைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டை தொடர்ந்து வளர்த்து செல்லும் சித்தாந்தமாக இருந்தால்தான் வெற்றிபெறும் என்பதாக இருந்தது. எனவே சோசலிசம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கம், இனம், நாடு என செக்டேரியனாக இருக்கமுடியாது எனவும் விவாதம் இருந்தது. டாக்டர் இராதாகிருஷ்ணன் the future civilisation will have to rise to a universal vision of man and human life என எழுதினார். டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசம் என்பதை குறித்து சந்தேகங்களை எழுப்பினார். அவர் socialism for entire planet என பேசிவந்தார். வில்பெரட் வெல்லாக் பொருளாயத ஆன்மீக வாழ்வின் சமநிலை உருவாக்கம் பற்றி பேசிவந்தார். காந்தி சர்வோதயா என்றார். மனிதனை அவனிடம் உள்ள சொத்துமதிப்பு என்பது சரியாக படம்பிடிக்காது, அவனின் குணங்கள்தான் என வழிவழியாக நம் சமூகம் பேசி வந்துள்ளதாக காந்தி கருதினார். பண்புள்ள, திறன் வாய்ந்த, நிம்மதி நிறைந்த சமூகத்தை காந்திய கருத்துக்களான கிராமக்குடியரசு முறை உருவாக்கும் என வில்பெரட் வெல்லாக் தனது நம்பிக்கையை தெரிவித்தார். காந்தியின் உழைத்து உண் concept of Bread Labour என்பதை நடைமுறைப்படுத்தும் சமுதாயம் சிறந்த ஒன்றாக இருக்கும் என ஆய்வாளர் பேணு எழுதினார். நேரு காந்தி படுகொலையை ஒட்டி பேசிய வானொலி உரையில் ஒளி அணைந்தது என்பதை மட்டும் குறிப்பிடவில்லை. அது எப்படிப்பட்ட ஒளி என்பதைப் பேசினார். வாழும் உண்மையை காட்டிய ஒளி ’ It represented the living truth’ என்றார். எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெறவேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார். பொருளாசை, சொத்து பேராசை, குறுகிய மனோபாவம், மிருகத்தனம், சுயநலம் என அனைத்தையும் அகற்ற காந்தியம் மிக முக்கிய வழியாகவே தெரிகிறது. மார்க்சியர்கள் தங்களுக்கு மிக நெருக்கமாக கைக்கொள்ளவேண்டிய ஒன்றாகவே காந்தியின் சோசலிச உரையாடல்கள் தொடர்கின்றன. WHO’s WHO Anthony Parel (born 1926) is a Canadian historian, author and academic. Parel was born in present-day Kerala, India in 1926 and is a naturalized Canadian citizen. Gandhi’s philosophy and the quest for Harmony, Gandhi Hind swaraj and other writings, Pax Gandhiyana are some of his works Bhikhu Parekh is a British political theorist and Labour Party MP. Gandhi A very Short Introduction, Gandhi’s political Philosophy A critical Examination, Marx’s Theory of Ideology, Rethinking Multiculturalism are some of his books. Dr. Benudhar Pradhan, formerly Professor and head of Department of Political Science of Utkal University, was the first Dean of Studies and Research of the Institute viz The Institute of Gandhian Studies or Gandhi Vichar Parishad. He served as the Dean from August 1991 to July 1998. ‘Socialist thought of Mahatma’ in two volumes was his major work. Cyril Edwin Mitchinson Joad (12 August 1891 – 9 April 1953) was an English philosopher . He was famous for his connection with BBC. He authored and edited more than 100 books. Guide to Philosophy of Morals and politics, Common sense Ethics, Robert Owen, The Present and future of Religion are some of his books. Charless Bradlaugh ( 1833-1891) was a MP of England during 1880s. He was known for his athesim and secularist ideas. Once Annie Besant was his associate. Bradlaugh died on Jan 30 1891. Gandhi attended his funeral. Is there A God?, who was Jesus? Labour and Law, political essays are some of his books. Erik Homburger Erikson ( 15 June 1902 – 12 May 1994) was a German-American developmental psychologist and psychoanalyst known for his theory on psychological development of human beings. Some of his famous books are Childhood and society, Identity Youth Crisis, Gandhi’s Truth On the Origins of Militant Non Violence Evan Frank Mottram Durbin (1 March 1906 – 3 September 1948) was a British economist and Labour Party politician. Author of books like The Politics of Democratic Socilaism, Socialist Credit policy, Problems of economic Planning etc. Frantz Omar Fanon (20 July 1925 – 6 December 1961), also known as Ibrahim Frantz Fanon, was a French West Indian psychiatrist and political philosopher . Fanon supported Algeria’s War of independence from France and was a member of the Algerian National Liberation Front. His famous books are The Wretched of the Earth, Black Skin- White Masks, Toward African Revolution etc Geoffrey Thomas Ashe - A famous British Historian and Culturalist. He has written a book about Gandhi namely Gandhi A study in revoultion. He has authored books on Kings of Britain. Gene Sharp (January 21, 1928 – January 28, 2018) was an American political scientist. He was the founder of the Albert Einstein Institution, a non-profit organization dedicated to advancing the study of nonviolent action. Some of his books are Gandhi Wields the weapon of Moral power, Gandhi as a political strategist, How Non violent Struggle works etc. Herbert Marcuse ( July 19, 1898 – July 29, 1979) was a German-American philosopher, sociologist, and political theorist, associated with the Frankfurt School of critical theory. His famous books are Soviet Marxism A critical study, One Dimensional Man etc. Joseph John Doke was an English Baptist Minister, artist and author who arrived in South Africa with his family and met Gandhi. “An Indian patriot in South Africa”was writen by him. The first Indian edition was published in April 1919 by the Madras**ased publisher GA Natesan. Doke collected material for the book from his meetings with Gandhiji and others who were close to him.. It was the first biography ever written of the great man Gandhi. Jean-Paul Charles Aymard Sartre ( 21 June 1905 – 15 April 1980) was a French philosopher, playwright, novelist, screenwriter, political activist, biographer, and literary critic. He was one of the key figures in the philosophy of existentialism and phenomenology, and one of the leading figures in 20th-century French philosophy and Marxism. Some of his best works are Being and Nothingness, Existentialism is Humanism, Critique of Dialectical reason etc. J. C. Kumarappa (4 January 1892 – 30 January 1960) was an Indian economist and a close associate of Mahatma Gandhi. A pioneer of rural economic development theories, Kumarappa is credited for developing economic theories based on Gandhism, Gandhian economics thought, Economy of Permanence, Village industries, Clive to Keynes, Practice and percepts of Jesus, A peep into the Iron curtain are some of his works Kakkadan Nandanath Raj (13 May 1924 – 10 February 2010) was an Indian economist. He is popularly known as K. N. Raj. He was greatly linked with our Planning Commission documents. Raj set up the Centre for Development Studies at Thiruvananthapuram. Louis Fischer (29 February 1896 – 15 January 1970) was an American journalist. Life of Mahatma Gandhi, Gandhi and Stalin, A week with Gandhi, The Soviets in the world affairs, Men and Politics are some of his works. Milovan Đijlas (12 June 1911 – 20 April 1995) was a Yugoslav communist politician, theorist . He was also President of Yogoslavia for very short days in 1953. He was considered as Dissident. His famous book is ‘The New Class An analysis of the Communist system’. Ram Swarup ( 12 October 1920 – 26 December 1998), was an Indian author and one of the most important thought leaders of the Hindu revivalist movement. His works took a critical stance against Christianity, Islam and Communism. Some of his books are Hinduism Reviews and Reflections, Gandhian economics, Russian Imperialism etc René Fülöp-Miller (17 February 1891 – 17 May 1963) was an Austrian cultural historian and writer. He authored books in German. The popular books of him are The Mind and Face of Bolshevism, Lenin and Gandhi, Rasputin, Tolstoy Literary Fragments etc E Stanley Jones ( 1884-1973) was an American Theologian and famous for his interreligious lectures. He authored many books including Mahatma Gandhi An Interpretation. Wilfred Wellock (2 January 1879 – 22 July 1972) was a socialist Gandhian and sometime Labour politician and MP. Gandhi as Social revolutionary, India’s Awakening, the spiritual basis of Democracy are some of his works. ஆதார நூல்கள் 1. பொருளாதார உறவு மகாத்மா காந்தி நூல்வரிசை 7 2. இந்தியப் பொருளாக்கமும் காந்திய நோக்கமும் ஜே சி குமரப்பா 3. The Socialist Thought of Mahatma Gandhi vol 1 and Vol 2 by Benudhar Pradhan 4. Cambridge companion Anthony Parel’s Essay ‘Gandhi and the state’ 5. Gandhism and Communism by Ramswarup 6. Socialism Very short Introduction by Michael Newman 7. Gandhi VS Lenin by S A Dange 8. Lenin and Gandhi by Rene Fulop Miller 9. Gandhi and Stalin by Louis Fisher 10. Mao Tes Tung and Gandhi by Jayantanuja Bandyopadhyaya 11. Gandhi’s Political Philosophy A critical examination by Bikhu parekh ஆசிரியரின் பிற நூல்கள் [] 1. மார்க்சியத் தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ideas of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 10. காந்தியைக் கண்டுணர்தல் 11. நேருவின் மரபு 12. பெரியாரின் பொதுவுடைமை புரிதல் 13. அம்பேத்கரும் கம்யூனிசமும் சிறு வெளியீடுகள் 1. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 2. சிகாகோ மேதின தியாகிகள் 3. பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிசமும் 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 5. பிரடரிக் எங்கெல்ஸ் நட்பின் சிகரம் 6. நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் அலைபேசி : 9443865366 www.pattabiwrites.in FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.