[] [தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா?] தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? ஸ்ரீ ஸம்பத் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. விற்பனை நோக்கம் தவிர்த்து எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். This book was produced using Pressbooks.com. Contents - எழுத்தால் விரிவடைந்த நட்பு எல்லை... - 1. பொருளடக்கம் ஸ்ரீ ஸம்பத் - 2.  மோடி அரசின் பட்ஜெட் – முதல் மரியாதை யாருக்கு - 3.  தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா - 4. அந்நிய முதலீட்டுக்காக! - 5. கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை - 6.  கொள்ளை போகும் இந்திய வளங்கள் - 7.  ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை - 8.  குஜராத்தின் வளர்ச்சிக்காக.. - 9.  இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை - 10. வைப்ரன்ட் குஜராத்! - 11. மாருதி முதல் ஹூண்டாய் வரை… - 12. சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் - 13. இந்தியாவை ஆள்வது யார்? - 14. கசந்து போன பாதாம் பருப்பு! - 15. இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்! - 16. இந்தக் கதை இதோடு முடியவில்லை….. - 17. உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்! - 18. உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா? - 19. பருத்தி மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத் - 20. ஒரு பெருச்சாளியின் வளைக்குள்ளே… - 21. ரூ 3,74,937 கோடி ஊழல்! - ஆசிரியரைப் பற்றி.. - FREE TAMIL E BOOKS - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1 எழுத்தால் விரிவடைந்த நட்பு எல்லை... பள்ளி, கல்லூரி கால பாடங்கள் தவிர பிற வாசிப்புகள் புரிதலை விசாலமாக்குகிறது.  பல நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வைக்கிறது.  பிற வற்றின் மீது கேள்வி கேட்க தூண்டுகிறது.  வாசித்தலோடு நின்றுவிடாமல் நமக்கு தோன்றியதை பிறருக்கு சொல்ல எழுதுவது என்பது நம்மை பிறருக்கு அறிமுகப்படுத்தும் வழியாக அமைகிறது. பொதுவாக இன்றைக்கு எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏராளமான வசதிகள் உள்ளது.  யாரும் பிரசுரிக்க வேண்டும் என காத்திருக்க வேண்டியதில்லை.  நமக்குத் தோன்றிய கதையோ, கட்டுரையோ, கவிதையோ எழுதி நமக்கு நாமே ஒரு வலைப்பதிவு கணக்கு துவக்கி அதில் பதிவு செய்துவிட்டு குறைந்தபட்சம் நமது நட்புகளிடம் பகிர்ந்தால் அந்த எழுத்துக்கள் பலரை சென்றடைகிறது.  ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையோடு வாசகர்கள் எண்ணிக்கை என்பது நின்றுவிடும்.  ஒவ்வொரு எழுத்தாளனின் கனவும் தன் எழுத்தை அச்சு வடிவில் பார்க்கவேண்டும், பத்திரிக்கை ஊடகம் வாயிலாக பலரை சென்றடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.  வலைப்பதிவில் சில காலம் எழுதியபின் அதிகமான நபர்களின் ஈர்ப்பு என்ற நிலை எழுமானால் அத்தகைய நபர்களுக்கு ஒன்றிரண்டு பத்திரிக்கைகளிலும் வாய்ப்பு என்பது கிடைக்கும். ஆனால் என்னுடைய எழுத்தைப் பொறுத்தவரை துவக்க நிலையிலேயே “தினமணி” நாளேட்டில் நடுப்பக்க கட்டுரை என்ற வாய்ப்பு கிட்டியது.  அதனை தொடர்ந்து மறுக்கப்படும் நீதி> மலிவாகிப் போன மனித உயர்கள், ஊடகங்களுக்கு தேவை ஒழுக்கம் என எனது ஆறேழு கட்டுரைகள் வரை அவ்வப்போது தினமணியில் பிரசுரமாகியது. இந்த நிலையில்தான் வலைப்பதிவுகளில் நுனிப்புல் மேய்வது மற்றும் இரண்டு வலைப்பூ (ondrusear.blogspot.com, sathikkalaam.blogspot.com) கணக்குகளை துவக்கி சில பத்திரிக்கை பதிவுகளை மீள் பதிவு செய்வது என்றிருந்தது எனது எழுத்துப்பயணம். அதோடு வினவு தளத்தின் தோழர் ஒருவரின் தொலைபேசி நட்பு கிடைத்தது. தி இந்து மற்றும் பிரண்ட்லயன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து “சித்ரகுப்தன்” என்ற புனைப் பெயரில் அனுப்ப ஆரம்பித்தேன்.  குறிப்பாக தி இந்துவின் பி.சாய்நாத் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாளர். அவரின் சில கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன்.  எனது மொழிபெயர்ப்பு கட்டுரைகள் உடனுக்குடன் வினவு தளத்தில் வெளியிட்டதில் எனது ஆர்வம் அதிகரித்தது. இந்த சூழலில் திருப்பூர் “தேவியர் இல்லம்” என்கிற வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவந்த திரு ஜோதிஜி என்கிற ஜோதி கணேசன் அவர்களின் நட்பு கிடைத்தது. பிறரின் எழுத்துக்களை பாராட்டி ஊக்கப்படுத்துவதில் அற்புதமான நண்பர் அவர்.  அவர் மூலமாக கிழக்கு பதிப்பகத்தின் திரு ஜி.மருதன் என்கிற தோழரின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது. துவக்கத்தில் எனது எழுத்தின் எல்லை என்பது புதிய பொருளாதாரம்> தொழிலாளர் வேலை இழப்பு, தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் தனியார் மய தாக்குதல்கள் என்பது சார்ந்த ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்து அது பலரை சென்றடைய வேண்டும் என்பதும், மற்றபடி நான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியிலிருப்பதால் எனக்கு தெரிந்த பயணிகள் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த கட்டுரைகளை எழுதுவது என்பதற்குள் பயணித்துக் கொண்டிருந்தேன்.  அந்த வகையில் படிக்கட்டு பயண அபாயம் குறித்தும், டீசல் விலை உயர்வு குறித்தும் எழுதிய கட்டுரைகள் 2013 துவக்கத்தில் திரு மருதன் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்த ஆழம் எனும் மாதப்பத்திரிக்கையில் பிரசுரமாகியது. அதே சமயம் வலைப்பதிவுகளில்> இணையங்களில் தனியார்மயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து  குரல் கொடுத்து வரும் திரு அதியமான் என்பவர் ஆழத்தில் “ஜனநாயகமா, சர்வாதிகாரமா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அதில் அவர் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால்தான் அடிப்படை ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்ட முடியும் என தெரிவித்திருந்தார்.  அந்த கட்டுரையை படித்த மறு நிமிடமே, திரு மருதன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் முற்றிலுமாக நான் மாறுபடுகிறேன் என்கிற வகையில் எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதினால் பிரசுரிப்பீர்களா என கேட்டேன்.  அவரும் உடனே அனுப்பச் சொன்னார். அடுத்த இதழிலேயே எனது கட்டுரை “சுதந்திர சந்தைப் பொருளாதாரம் – வளர்ச்சியா, வீழ்ச்சியா” பிரசுரமாகி பலத்த வரவேற்பை பெற்றது.  அது ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். ஏனென்றால் அதனை தொடர்ந்து திரு மருதன் அவர்கள் எனது பார்வையை போக்குவரத்து தொழிலாளர் என்கிற எல்லையோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள், முக்கியங்கள்> போராட்டங்கள் என சமூக அடிப்படையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினார்.  சில மாதம் தலைப்பு அவர் சொல்வார்> சில மாதம் நான் சொல்லும் தலைப்பை அப்படியே ஏற்று பச்சைக் கொடி காட்டுவார்.  அந்த வகையில் பல்வேறு தலைப்புகளில் இரண்டரை ஆண்டுகளில் ஏறக்குறைய 20 கட்டுரைகள் ஆழத்தில் பிரசுரமாகியது. பொறுப்பாசிரியர் திரு மருதன் என்றாலும், ஆழம் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் திரு பத்ரிசேஷாத்ரியும் எனது எழுத்துக்களில் பெரிய அளவில் திருத்தங்கள் ஏதும் சொல்லாமல் மாதந்தோறும் அங்கீகரித்து வந்தார். வெளியிடுவதற்கு அனுமதியளித்து வந்துள்ளார்.  அது என்னைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன். அவரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  மேலும் இந்த எழுத்துக்கள் எனது நட்பு எல்லையை மிக அதிகமாக விரிவாக்கியது.  மும்பை பகுதியில் ரூரல் எடிட்டராக பல காலம் பணியாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிண்டு நிறுவனத்திலிருந்து வெளிவந்துவிட்ட திரு பி.சாய்நாத் அவர்களின் தொலைபேசி தொடர்பு கிடைத்தது. அவர் கடந்த ஆண்டு சென்னையில் தனது இணையதளம் பற்றிய பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தப்போகும் தகவல் அறிந்து ஆழம் பத்திரிக்கைக்காக நேர்காணல் மேற்கொள்ள வேண்டும் என கேட்ட போது பிரியமுடன் அனுமதி நல்கினார். அவரின் அந்த நிகழ்ச்சியில் சொல்லிய தகவல்களோடு எனது சில கேள்விகளுக்கும் நட்புடன் பதில் அளித்தார்.  அந்த வகையில் ஆழம் தொடர்பில் பல கட்டுரைகளோடு நேர்காணல் என்கிற வகையில் திரு பி.சாய்நாத் மற்றும்  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மதுரையைச் சேர்ந்த திரு கதிர் (எவிடென்ஸ் கதிர்) ஆகிய இருவரிடம் நான் மேற்கொண்ட நோ்காணல் வாயிலாக பல அரிய செய்திகளை வெளிக்கொணர முடிந்தது.  ஆழம் பத்திரிக்கை வருவது தற்போது நின்று விட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மேற்சொன்ன எழுத்துப் பயணத்தோடு இணையாக சட்டக்கதிர் எனும் சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழில் தொடா்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் தமிழாக்கம், நீதிபதிகள், சட்ட வல்லுனர்களின் கட்டுரைகள் தமிழாக்கம் பிரசுரமாவது என்கிற அங்கீகாரமும் கிடைத்தது. நடுவில் தி இந்து தமிழ் நாளிதழில் தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா என ஒரு நடுப்பக்க கட்டுரை பிரசுரமாகியது. மற்றும் கடந்த ஆண்டில் தினமலர் நாளிதழில் “பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்ற தலைப்பில் தகவல் அறியும் சட்டம் வெளிவந்து 10 வது ஆண்டு துவக்கத்தில் ஒரு கட்டுரை,  “நீதியரசர் வி.ஆா்.கிருஷ்ணய்யரின்” நினைவஞ்சலி கட்டுரை>  பெரிய சாலை விபத்தினை தொடர்ந்து “ஓய்வின்றி ஓட்டாதே வாகனத்தை” என்ற ஒரு கட்டுரை வெளியானது.  நாளிதழ் என்பது சென்றடையும் வீச்சு என்பது மிகப் பெரியது.  அதன் வழி கிடைக்கும் அங்கீகாரம்> பாராட்டு என்பதும் நிச்சயமாக அதிகமானதே. இது வரையிலான எனது எழுத்துப்பயணத்தில் திருப்பூர் திரு ஜோதிஜி, கிழக்கு பதிப்பகம் திரு பத்ரி சேஷாத்ரி, திரு மருதன், சட்டக்கதிர் ஆசிரியர் திரு விஆர்எஸ் சம்பத், தி இந்து திரு ரெங்காச்சாரி, திரு சமஸ், தினமணியில் முன்பு பணியாற்றிய திரு எம்.சந்திரசேகர், தி இந்து (ஆங்கிலம்) முதன்மை செய்தியாளர்கள் திரு எஸ்.விஜய்குமார்,           திரு ஸ்ரீகிருஷ்ணா, தினமலர் மூத்த செய்தியாளர்கள் திரு தனசேகர்,  திரு சுப்பிரமணியன், செய்தி ஆசிரியர் திரு ரமேஷ் குமார் என பலரும் நன்றிபாராட்டுதலுக்குரியவர்கள். குறிப்பிட்டு சொல்லும் அளவிலான கட்டுரைகள்தான் என்ற போதிலும் இவற்றை மின்நூல்களாக ஆவணப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.  அந்த எண்ணத்தை பகிர்ந்தவுடன் ஊக்கப்படுத்தியவர்கள் திரு ஜோதி கணேசனும், திரு மருதனும் ஆவார்கள்.  பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள், இணையத்தில் வெளியிட்ட மொழி பெயர்ப்பு கட்டுரைகள், சட்டம் சார்ந்த கட்டுரைகள் என 3 தொகுதிகளாக மின்நூல்களாக வெளியிட வேண்டும் என்ற ஆவலின் முதல் பகுதி இது.  இலவச மின்நூல் பதிப்பிற்கு ஊக்கம் அளித்த திரு டி.ஸ்ரீனிவாசன், திரு அன்வர், திரு சிவமுருகன் மற்றும் அட்டைப்பட வடிவமைத்த எனது மகள் ஸ்ரீஜா ஸம்பத்        ஆகியோருக்கும் எனது அன்பான நன்றிகள்.   பதிவிறக்குங்கள், படியுங்கள், ஊக்கமளியுங்கள்   நட்புடன் ஸ்ரீ(னிவாசன்) ஸம்பத்   [pressbooks.com] 1 பொருளடக்கம் ஸ்ரீ ஸம்பத் - மோடி அரசின் பட்ஜெட் – - முதல் மரியாதை யாருக்கு - தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா - அந்நிய முதலீட்டுக்காக - கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை -  கொள்ளை போகும் இந்திய வளங்கள் - ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை - குஜராத்தின் வளர்ச்சிக்காக.. - இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை - வைப்ரன்ட் குஜராத் - மாருதி முதல் ஹூண்டாய் வரை - சொகுசான கார்களுக்கு மத்தியில் - இந்தியாவை ஆள்வது யார் - கசந்துபோன பாதாம் பருப்பு - இன்றைய இந்தியாவின் தொழிலாளர்கள் - இந்த கதை இதோடு முடியவில்லை - ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக - உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா - பருத்தி மூலம் தங்கம் குவிப்பு 98 - ஒரு பெருச்சாளியின் வளைக்குள்ளே - ரூ 3>74>937 கோடி ஊழல்   2  மோடி அரசின் பட்ஜெட் – முதல் மரியாதை யாருக்கு மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத் “ சிலரின் வருமானம் 2022- ல் நிச்சயமாக இரட்டிப்பாகும். ஆனால் , இரட்டிப்பாகப் போவது கோமாளித்தனமாக அவர்கள் சொல்லிக் கொள்வது போல் அது விவசாயியின் வருமானமாக இருக்காது , மாறாக இந்தியாவின் புதிய டாலர் கோடீஸ்வரர்களின் வருமானமாக இருக்கும் ” இது விவசாயிகளுக்கு ஆதரவானது என்றால் ….? பி.சாய்நாத்   ஆம், இனிமேல் அப்படித்தான். இந்த வருடத்திலிருந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் பட்டியல்” என்பதே இருக்காது. சொல்லப் போனால் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என்ற வகையில் ரூ. 5,51,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல பணக்காரர்களுக்கு பலனளிக்கும் முதல் மரியாதை இது. கடந்த ஆண்டு விட்டுக் கொடுத்த தொகையான ரூ. 5,00,823 கோடியை விட இது அதிகம். ஆனால் இனிமேல் அவற்றை ” விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்று சொல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அவ்வாறு சொன்னால் நீங்கள் “தேச விரோதி” என்ற வளையத்திற்குள் கொண்டுவரப்படுவீர். “விட்டுக்கொடுக்கப்பட்ட” என்ற சொல் ஆளும் வர்க்கத்திற்கு சேதம் இழைப்பதாக இந்த ஆட்சியின் விளம்பர தூதர்களால் இனம் காணப்பட்டது. அது கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் அளவிலான இலவசங்கள் கொடுக்கப்படுவதை மக்களிடம் வெளிப்படுத்தி வித்தையை அம்பலப்படுத்தியது. எனவே இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்பது ஒரே அடியாக கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக நமக்குக் கிடைத்திருப்பது”மத்திய வரி விதிப்பு அமைப்பில் வரிச்சலுகைகள் வருவாயில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிக்கை’ என்பதுதான். [Chap1A] எந்தக் கவலையும் இல்லை (பெரியஅளவிலான தொழிற்சாலை முதலாளிகளின் கூட்டமைப்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி) ஆகா! இது இன்னும் மிடுக்காக உள்ளது. ஆனால் விஷயம் அதேதான். பெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி தொடர்கிறது. தொகை இன்னும் அதிகம். 2005-06 முதல் இன்று வரை அதை கணக்கிட்டால் மொத்த தொகை 42 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். துர்நாற்றத்துக்கு எந்த பெயரிட்டாலும் அதன் வாடை குறைந்து விடப் போவதில்லை! [Chap1B] எடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் வருமான வரிகளை தள்ளுபடி செய்ததன் வாயிலாக வருவாயில் “தாக்கம்” என்பது ரூ. 68,711 கோடி. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 3,644 கோடி அதிகம். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ‘மகத்தான அதிகரிப்பு’ என்று சொல்லப்பட்ட ரூ 3,801 கோடியை விட பெரிய அளவில் குறைவு ஒன்றுமில்லை. பின்னால் சொல்லப்பட்டது கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது, முன்னால் சொல்லப்பட்டது மிகச் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் தொடர்புடையது. இந்த நேரடி கார்ப்பரேட் வருமான வரி தள்ளுபடி என்பது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 35,984 கோடியைவிட 91 சதவீதம் அதிகம். மேலும் அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிமொழித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ 38,500 கோடி இதுவரையில்லாத அளவுக்கு அதிகம் என்று பொய்யாக சொல்லப்படுகிறது. உண்மை யாதெனில் 2006-ல் இந்தத் திட்டம் மிகச் சிறியதாக துவக்கப்பட்டபோது இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 40,000 கோடி. திரு ப.சிதம்பரம் அதை பலவீனப்படுத்துவதற்காக கடும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தது வரை அது அந்த அளவிலேயே இருந்து வந்தது. இந்தத் திட்டத்திற்கான தொகை அதிகரிக்கப்பட்டதை பார்த்தால் பணவீக்கத்திற்கு தக்கவாறு அது சுருங்கிக் கொண்டே வந்துள்ளதை கவனிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது என அரசே கூறும் இந்த ஆண்டில் இந்த ஒதுக்கீடு இயல்பாகவே அதிகரித்திருக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் படு மோசமாக செயல்படுத்தப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் கூட மேலும் மேலும் அதிகமான வறியவர்கள் அதில் வேலை கோருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்த பதிவுகளில் சொல்லப்படும் தொகைகளில் சுமார் ரூ 6,000 கோடி முந்தைய பாக்கிகளை தீர்க்கவே சரியாக இருக்கும். இந்த நிலையில்தான் இவற்றால் விவசாயிகளின் வருவாய் 2022-ல் இரட்டிப்பாக மாறும் என்ற கோமாளித்தனமான உரிமை கோரலும் முன்வைக்கப்படுகிறது. ஏறிவரும் விலைவாசியை சரிக்கட்டியபின் கிடைக்கும் உண்மையான வருவாயைச் சொல்கிறாரா நமது நிதியமைச்சர்? எவ்வாறு? விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனை என்பது அரசின் கொள்கைகளால் விவசாயம் எப்படி சாத்தியமற்றதாக்கப்பட்டு விட்டது என்பதாகும். நிதியமைச்சர் அவரது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் படி விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிப்பாரா? அல்லது இந்த உயர்ந்து வரும் செலவிலான பொருளாதார சூழலில் விவசாயிகளின் சுமையை குறைப்பதற்காக, சிறப்பான கடனுதவிகள், மலிவு விலை விதைகள், உரங்கள் போன்றவை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதைப் பற்றி தெரிவிக்கிறாரோ? இல்லை இவை தொடர்பான ஒரு சிறு குறிப்பு கூட நிதிநிலை அறிக்கையில் இல்லை. ‘விவசாயக் கடன்’ என்பதில் (சிங்கத்தின் பங்கு) பெரும் பகுதி நகர்ப்புற மற்றும் பெரு நகரம் சார்ந்த தொழில்களுக்கு செல்கிறது. மேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பாசன வசதி என்பது – நீர்நிலைகளை தூர்வாருதல் போன்றவற்றால் (அதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்) செய்யப்படுமா அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் லாபத்தையும், பாசன வசதியில் சிறிதளவு தாக்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நதிகள் இணைப்பு போன்ற கனவுகளாலா என்பது தெரியவில்லை. இருப்பினும், பல தொலைக்காட்சி விவாத தொகுப்பாளர்கள், பல பத்திரிகை தலையங்கங்கள் இந்த நிதிநிலை அறிக்கையை “விவசாயிகளுக்கு ஆதரவானது”, “கிராமப்புறங்களுக்கு ஆதரவானது” என பறைசாற்றி வருகின்றனர். கடந்த 24 வருடங்களில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போலத்தான் அவர்கள் பறைசாற்றியிருக்கின்றனர். ஆனால், ‘விவசாயிகளுக்கு ஆதரவான’ பட்ஜெட் என்கிற வார்த்தை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும். வழக்கமாக அதைத் தொடர்ந்து விவசாயத்தை மேலும் வணிகமயமாக்கும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கடுமையான சிரமங்கள் நிரம்பிய காலம் வரும். சிலரின் வருமானம் உண்மையில் 2022-ல் இரட்டிப்பாகும், ஆனால் நிச்சயமாக அது 2014 தேர்தலின் போது பா.ஜ.க அவர்களுக்கு வாக்களித்தது போல குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு தொடர்பாக ஏமாற்றப்பட்டு வரும் விவசாயிகள் அல்ல. சமீபத்திய ஹருண் அறிக்கையில் இந்தியாவில் 111 பெரும் பணக்காரர்கள் (டாலர் கோடீஸ்வரர்கள்) இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர்களின் சொத்து ஒரே வருடத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடத்திலிருந்து புதிய பெரும் பணக்காரர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 99 நபர்களில் 27 பேர் அதாவது கிட்டத்தட்ட 3ல் 1 பங்கு இந்தியர்கள் என்கிறது அந்த புள்ளி விபரம். இந்த 111 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் கடந்த 12 மாதத்தில் ஏறக்குறைய $6,200 கோடி (சுமார் ரூ 4 லட்சம் கோடி) உயர்ந்து $30,800 கோடியை (சுமார் ரூ ரூ 20 லட்சம் கோடி) எட்டியது என ஹாருண் அறிக்கை கணக்கிடுகிறது. இந்த உயர்வு வருவாய்க்கு மட்டும் தற்போதுள்ள ஐரோப்பிய வரி விதிப்பு முறையில் 30 சதவீத வரி என கணக்கிட்டால் கூட வரி $1,800 கோடி அதாவது ரூ 1,22,774 கோடி ஆகும். வருவாயில் “தாக்கம் (Impact)” என்று சொல்லப்படுகிற தள்ளுபடியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரானதுதான் இது. இந்தத் தொகையானது பெருமளவு அவலம் நிலவும் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 3 மடங்கு அதிகரிக்க போதுமானது. தங்கம், வைரம் மற்றும் நகை வியாபாரிகளுக்கான தள்ளுபடி ரூ 61,126 கோடி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ‘முன் எப்போதும்’ இல்லாத வகையில் ஒதுக்கீடு என பெருமைப்பட்டுக் கொள்கிற தொகையை விட 58 சதவீதம் அதிகம் இந்த தள்ளுபடி தொகை. மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைக் காட்டிலும் 70 சதவீதம் அதிகம் இது. 2005-06 லிருந்து தங்கம், வைரம், மற்றும் நகைகள் வகையில் தள்ளுபடி என்பது மட்டும் ரூ 4.6 லட்சம் கோடியை தாண்டுகிறது. இந்த வருடம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல் 13 மடங்கு அதிகம் இது. இது விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்றால் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் ஆட்சியாளர்கள் “மானியங்கள்” என வகைப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் அவை மானியங்கள்தான். ஆட்சியாளர்கள் மானியங்களை தாக்கும் போது, அவர்கள் உண்மையில் ஏழைகள், வறியவர்களுக்கு செல்லும் மானியங்களை, குறிப்பாக உணவு, வேலைவாய்ப்பு, உடல்நலம் சார்ந்த மானியங்களைத் தான் தாக்குகின்றனர்.  இருதயமேயில்லாத இத்தகைய தாக்குதலை தூக்கிப் பிடிப்பவர்கள் அவற்றுக்கு “வீணாகும் மானியங்கள்” என பெயரிடுகிறார்கள். ‘வருவாயில் தாக்கம்’ என்ற குப்பையை அவர்கள் ‘ஊக்கத்தொகை’ என்று அழைக்கிறார்கள். மானியம் என்பது பொதுவாக ஏழைகளுக்காக கொடுக்கப்படுவது. மானியங்களை அனைவருக்கும் வினியோகிக்கும் முறையை ‘இலக்கிலானது’ என்று மாற்றி கோடிக்கணக்கானவர்களை அதிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள். மறுபுறம் கோடீஸ்வரர்களுக்கான ‘தாக்கம்’ தள்ளுபடி (காட்ஸில்லா தள்ளுபடி என்று அறியப்படுவது) என்பது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. வருவாய் “தாக்கம்” என்ற பெயரிலான தள்ளுபடி இது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் 2005-06ம் வருட தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு 140 மடங்கு அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட் வருமான வரியில், கலால் வரி, சுங்க வரி என்கிற இனங்களில் 2005-06 லிருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட தள்ளுபடியை மட்டும் வைத்திருந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) இன்றைய அடிப்படையில் 109 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும். கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்க முடியும். “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு, முதலாளிகளுக்கான மானியத்தை சாதுர்யமாக “வருவாயில் தாக்கம்” என்கிற கோவணத்தால் மறைத்துக் கொள்வது மக்களின் வேதனையில் உப்பு தடவுவது போல உள்ளது. (குறிப்பாக சொல்லப் போனால் அது ‘விட்டுக் கொடுக்கப்பட்டது (foregone)’ அல்ல, ‘கண்டுகொள்ளாமல் விட்டது (forgone)” அது வேறு கதை). இத்தகைய வார்த்தை மாற்றம் நடைமுறையில் குழப்பமூட்டும் முட்டாள்தனத்தை அறிமுகப்படுத்துகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க இராணுவம் அதன் பல போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, சேதங்களைப் பார்த்து பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படாமலிருக்க “தொடர்புடைய சேதம் (collateral damage)” என்ற வார்த்தையை பயன்படுத்தியது. அமெரிக்கா நடத்தும் போர்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை குறிப்பதற்கான இடக்கரடக்கல் அது. படுகொலைகள் தொடர்ந்தன, ஆனால் அவை இப்படி வலிக்காமல் இலகுவாக குறிப்பிடப்படுகின்றன. நிதிநிலையறிக்கையின் இந்த மலிவு மொழி ஆசிரியர்கள் தமது வார்த்தை விளையாட்டில் அது போன்ற ஒன்றை செய்கிறார்கள். பொதுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது, அது போகும் இடம், வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் கடும் துயரம் இவை அனைத்தும் இணை சொற்களில் மூழ்கடிக்கப்படுகிறது. நன்றி – திரு பி.சாய்நாத் அவர்களின் இணையதளம் (www.psainath.org) (இக்கட்டுரை முன்னதாக அவுட்லுக் பத்திரிக்கையிலும் வெளியாகியுள்ளது) தமிழில் – சித்ரகுப்தன் 3  தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா ஒப்பந்தத் தொழிலாளர் முறை , நலச் சட்டங்களில் திருத்தம் – யாருக்கான அரசு இது ? மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொழில்துறை சார்ந்த திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை மோடி அரசு ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போதெல்லாம் தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. [மாருதி-மனேசர்-6] இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகத் தோன்றியவைதான் கீழ்க்கண்ட சட்டங்கள்: தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்-1923, இந்தியத் தொழிற்சங்கச் சட்டம்-1926, சம்பளப் பட்டுவாடாச் சட்டம்-1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு மற்றும் நிலையாணைச் சட்டம்-1946, தொழிற்தாவாச் சட்டம்-1947, தொழிற்சாலைச் சட்டம்-1948, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம்-1961, பணிக்கொடைச் சட்டம்-1972. இது தவிர, போனஸ் பட்டுவாடாச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் அமல்படுத்தாதபோது, அவற்றைக் களஆய்வு செய்து, தட்டிக்கேட்கத் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. விரைவான தொழில் வளர்ச்சிக்கு அது இடையூறாக இருக்கிறது என்ற பெயரில், அத்தகைய ஆய்வுகள்குறித்த பிரிவுகளைத் தற்போது மத்திய அரசு நீக்கியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது … 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாகப் பொருள் உற்பத்தி பன்மடங்கானது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டதால் உற்பத்தி வேகம் கூடி, உற்பத்தியின் அளவும் கூடியது. உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், உற்பத்தி அளவுக்கேற்ப ஊதியம் உயர வேண்டும் என்று குரல்கொடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் ஊதிய உயர்வு கோரிக் குரல் எழுப்ப ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலாளர்கள் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. 1823-ல் பல்லக்கு தூக்குவோர் வேலைநிறுத்தம், 1862-ல் கல்கத்தா மாட்டு வண்டி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், 1866-ல் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷ‌ன் இறைச்சி விற்பவர் வேலைநிறுத்தம், 1891-ல் கோவை நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1895-ல் வங்கத்தில் பட்ஜ்-பட்ஜ் சணல் ஆலையில் வேலைநிறுத்தம் (மிகப் பெரிய கலவரத்தில் முடிந்தது), 1907-ல் கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், 1921-ல் நவம்பர் 17 முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை இந்தியா கண்டிருக்கிறது. சம்பளப் பட்டுவாடாச் சட்டம் இத்தகைய பல எழுச்சி மிக்க போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு, வேலைக்கேற்ற ஊதியமும், முறைப்படி குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் வழங்கப்படாத முறைகேட்டைப் பற்றியும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்க  1929-ல் ராயல் கமிஷ‌ன் ஒன்றை அமைத்தது. அந்த கமிஷ‌ன் தனது அறிக்கையை 1933-ல் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து 1936-ல் சம்பளப் பட்டுவாடாச் சட்டம் இயற்றப்பட்டது. இன்றளவும் மாவட்டந்தோறும் சம்பளப் பட்டுவாடாச் சட்டப்படி நிர்வாகம் செயல்பட வில்லை என்கிற தாவாக்கள் தொழிலாளர் துறை அலுவலர்களிடம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து, இயற்றப்பட்ட 1947-ம் வருடத்திய தொழில் தாவாச் சட்டம்தான் இன்றளவும் நிரந்தரப் பணிநீக்கத்திலிருந்து சிறிதள வாவது தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவிக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இத்தகைய தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்கள் நலனும், முதலாளிகள் நலனும் சம அளவில் கருத்தில் கொள்ளப்பட்டு ஷ‌ரத்துக்கள் அமைந்திருந்தன. ஆனால், சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்திய முதலாளிகள் வர்க்கம் இத்தகைய சட்டங்களைப் பின்பற்றாத நிலை தொடர்வதும், சட்டங்களையே ஒட்டு மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என வேண்டுகோள் வைப்பதும் வேதனைக்குரியது. இரண்டு கோரிக்கைகள் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 15 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இடதுசாரிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி சார்ந்து செயல்பட்டுவரும் ஐ.என்.டி.யு.சி., பாஜக சார்ந்து செயல்பட்டுவரும் பி.எம்.எஸ். உள்ளிட்டவையும் பங்கெடுத்திருக்கின்றன. ஏறக்குறைய 15 வேலை நிறுத்தங்களின் போதும் முன்வைக்கப்பட்ட முக்கிய மான இரண்டு கோரிக்கைகள் இவைதான்: (1) தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது. (2) தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது. 2001-ல் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து, ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம்கூடத் தலையிட்டுப் பணிநீக்கத்தை விலக்கிக்கொள்ள வலி யுறுத்தியது. ஆனால், தொழில் தாவாச் சட்டத்தின் கீழ் முன்னறிவிப்பு கொடுத்து மேற்கொள்ளும் சட்டபூர்வ வேலைநிறுத்தம் என்கிற உரிமை அரசு ஊழியர்களுக்கு இல்லை என்று சொல்லப்பட்டு, இன்றளவும் சீராய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பாக அது உள்ளது. பணிநிரந்தரம் எனும் எட்டாக்கனி தொழிற்சாலைகள் பலவற்றில் ஒப்பந்த முறை என்பது அதிகரித்து, தொழிலாளர்கள் பணிநிரந்தரம் என்பதே எட்டாக் கனியாக மாறியிருக்கிறது. பலமுறை நீதிமன்றங்கள் தலையிட்ட பின்னரும், நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவசாயத்தற்கொலை, வறட்சி, வறுமை காரணமாகப் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் நலம் பேணுவதற்காகத் தனியாகச் சட்டம் இருந்தபோதிலும் அதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு யாரென்று அறியாமல் இவர்களின் உழைப்பு சுரண்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. இயந்திரமயமாக்கல் ஒருபுறம் இயந்திரமயமாக்கல் என்ற வகையில் தொழிலாளர் எண்ணிக்கையைத் தொழில் நிறு வனங்கள் குறைத்திருக்கின்றன. இன்னொரு புறம் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துப் பல்வேறு பணிகளைச் செய்துகொண்டு, சட்ட வரம்பிலிருந்து எளிதாகப் பல நிறுவனங்கள் வெளியில் வந்துவிடுகின்றன. தொழிலாளர் தரப்புப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நலச் சட்டங்களில் தேவையான திருத்தங்களுக்கான பரிந்துரைகள் செய்வதற்காக 1966-ல் பி.பி. கஜேந்திர கட்கர் தலைமையிலும், 2002-ல் ரவீந்திர வர்மா தலை மையிலும் தொழிலாளர் ஆணையங்கள் நிறுவப்பட்டன. இதில் 2-வது தொழிலாளர் ஆணையம் முன் கருத்து சொல்லும் கூட்டத்தில் கலந்துகொண்டபோது பெரும் பான்மையான தாவாக்களை ‘சமரச முறிவு’ என்ற பெயரில் தொழிலாளர் நீதிமன்றத்துக்குத் தள்ளாமல், சட்டமீறல் செய்யும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையே நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொழிற்சங்கங்கள் தரப்பில் முன்வைத்தோம். அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. சட்டங்களின்படி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு இல்லா விட்டால், முதலாளிகள் வர்க்கம் சர்வாதிகாரம் பெற்றவையாகி, தொழிலாளர் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகிவிடும். – ஸ்ரீ ஸம்பத் நன்றி – தி இந்து (தமிழ்) ( இது தமிழ் இந்து நாளிதழில் வெளியான எனது நேரடி கட்டுரை. தொழிலாளர்கள் சார்ந்திருப்பதால் இந்த மொழிபெயர்ப்பு தொகுப்பில் சேர்த்துள்ளேன்) 4 அந்நிய முதலீட்டுக்காக! எந்த விலை கொடுத்தாவது அந்நிய மூலதனத்தின் “விசித்திரமான” நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியே தற்போது மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது. அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழப்பதின் மூலம் அந்நிய முதலீடுகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பது போல் மன்மோகன் சிங்கின் அரசு பாசாங்கு செய்கிறது.  அத்தகைய பயத்தை உறுதி செய்யும் வகையில் “பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டவிதி (GAAR)”யை அமுல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது அவரின் அசாதாரணமான நடவடிக்கையை காட்டியது.  சட்டத்தில் உள்ள சில விதிகளை தவறாக பயன் படுத்தியும், வரி விதிப்பிலிருந்து “சட்டப்படி”யாக தப்பித்து சட்டம் இயற்றியதன் நோக்கத்தையும், தேச நலனையும் பாதிக்கும் தனியாரின் லாப நோக்க முயற்சியை தடுப்பதே (கர்) பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டத்தின் நோக்கமாகும். விதிகள் சட்டப்படியாகவும் நேர்மையானதாகவும் இருப்பதால், சர்வதேச அளவில் சரியான நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அவைகள் சட்டத்தில் உள்ள பிரிவுகளை தெளிவுபடுத்துவதுடன், அவைகளை அமுல்படுத்து வதற்கான நிர்வாக முறையையும் விளக்குகிறது.  கனடா போன்ற பல வளர்ந்த நாடுகள், இந்த “கர்(GAAR)” போன்ற விதிகளை பயன்படுத்தி வருகின்றன.  வரி ஏய்ப்பிற்கு எதிரான இந்த விதிகளை அங்கீகரித்து, “நேரடி வரி விதிப்பு சட்டதொகுப்பு” (வரிவிதிப்பை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்துவதுமான நோக்கத்தில்) மற்றும் 2012-13 வரவு செலவு அறிக்கை இந்த கர் விதிகளை அமுல்படுத்திட முனைந்தன.  குறிப்பிட்ட பிரிவுகள் மீது விவாதம் இருப்பினும், இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியவையே. ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சில உள்நாட்டு, வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் (கார்ப்பரேட்) எதிர்மறையான விமர்சனங்களாலும், அதை மிகைப்படுத்திய கார்ப்பரேட் ஊடகங்களாலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் அதிகார மையத்தில் உள்ள சிலரின் அறிவுறுத்தலால் இந்த சட்டம் அமுல்படுத்துவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.  தற்போது 2013 வரை அமுல்படுத்துவது தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், பார்த்தசாரதி ஷோம் குழுவின் பரிந்துரையின்படி சிறப்பு குழு ஆலோசனை ஒரு ஏற்புடை நடைமுறை என்றால்,இந்த “கர்” சட்ட அமுல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தள்ளிவைக்கப் படும். அதன் பின், எந்த வகையில் பார்த்தாலும், இந்த சட்டம் அமுல் படுத்தப் படாமலேயே போய்விடும்.  அறிவிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக போடப்பட்ட ஒரு குழு மிகக் குறுகிய காலத்தில் தனது முடிவை அறிவித்து வரலாற்றில் இதுதான் முதல் முறை. “கர்” விதிக்கு கல்லறை கட்டுவது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக கர் விதிகளை சுற்றி கற்சுவர் எழுப்பி கல்லரையில் போட உடன்படுவதன் மூலம் பிரதம மந்திரியும், அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரும், தங்களை “சீர்திருத்தர்களாக”,  எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டே, அந்த வெளிப்படை தன்மையை மீறுகின்றனர். மாற்றியமைத்தல் என்ற பெயரில்  முந்தைய நிதி அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி, இந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமுல்படுத்துவதன் மூலம், வோடபோன், எஸ்ஸார் நிறுவனத்தை கையகப்படுத்திய போது, மூலதன சேர்ப்பு வரியிலிருந்து தப்பித்துக் கோள்ளும் முயற்சிகள் போன்றவற்றிற்கு தண்டம் விதித்து தேச நிதி நலன் காக்கும் அவரது திட்டத்தையே மாற்றிவிடும் ஒரு முயற்சியாகும்.  தற்போது இவை இரண்டுமே அமுல்படுத்தப்படுவது நிச்சயமற்றது.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்பதே, இந்த முற்றிலும், அறிவு பூர்வமான கொள்கைகளை விலக்கிக் கொள்வதற்கான காரணமாக காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் இது எந்த விலை கொடுத்தாவது அந்நிய முதலீட்டாளர்களின் “விசித்திரமான நம்பிக்கையை”, பெறுவதற்கும், உறுதி செய்து கொள்வதற்குமான, ஒரு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.  இது இந்திய திருநாட்டில் தற்போது புதிய உருவெடுத்துள்ள “பொருளாதார கொள்கை”யாகும்.  இந்த “கர்”(GAAR) உதாரணம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அதன் வெளிநாட்டு மூலதனத்துடனான உறவுகள் மீது ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.  1950 களில் அந்நிய மூலதனத்திலிருந்து எந்த அளவிலாவது சுதந்திரம் பெறுவதே இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்கான அளவுகோலாக கருதப்பட்டது. ஆனால், இன்றோ அந்நிய மூலதனத்திற்கு அங்கீகரிப்பதே இந்திய பொருளாதார வெற்றிக்கான ஒரு சிறந்த முதலீட்டு மையம் என்ற எண்ணம் வளர்ந்துவிட்டது. இந்தியா தற்போது ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடாகிவிட்டதால், இதன் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சிலர் வாதாடுகிறார்கள்.  எனவே அந்நிய மூலதனத்தைப் பற்றிய அச்சம் தேவையற்றது என்றும், அதை “அங்கீகரிப்பதே” நமது பொருளாதார சிறப்பு பற்றிய ஒரு அளவு கோலாக இருக்கும் எனவும் கூறிவருகின்றனர்.  எனினும், தாராளமயம் அமுல்படுத்தப்பட்ட காலம் துவங்கி, இந்த அந்நிய முதலீட்டில் குறிப்பாக நிதி மூலதனத்தால் நமது இறையாண்மை பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் நிறையவே உள்ளன.  சுதந்திர இந்தியா அந்நிய மூலதனத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமானதாக இருந்தால்தான்- அது தனது உள்நாட்டு மூலதனத்திற்கான ஒரு பகுதியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே அதன் காரணமாகும்.  மேலும் அத்தகைய சுதந்திரமான உள்நாட்டு மூலதன கொள்கை மட்டுமே, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன், மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முடியும். சுதந்திரத்திற்கு பிந்திய நான்கு சகாப்தத்தில், இத்தகைய மூலதன கொள்கையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், அந்நிய மூலதனத்தின் அளவையும், வழிமுறைகளையும் நாட்டில் முறைப்படுத்த முடிந்தது.  அதன் விளைவாக, முற்றிலும் நிதி மூலதனம் தடுக்கப்பட்டது, சில துறைகளில் அந்நிய முதலீடுகள் தடை செய்யப்பட்டது.  சிலவற்றில் அந்நிய முதலீட்டின் அளவு கட்டுப்படுத்தப்பட்டது,  அந்த இடத்தில் உள்நாட்டு மூலதனம் பராமரிக்கப்பட்டது, உற்பத்தி உபகரணங்கள் மாறுதல்கள் கூட முறைப்படுத்தப்பட்டது.  இந்த வகையில், இந்த துறையில், அந்நிய மூலதனத்தினோடான உள்நாட்டு மூலதனத்தின் உறவுகளை, தேச நலனை பிரதானமாகக் கொண்டு மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ள வழிவகுக்கப்பட்டது.  இப்படியாக, உள்நாட்டு மூலதனத்திற்கு வேலி அமைத்து, ஒரு சில அந்நிய முதலீடுகளுக்கு மட்டும் கதவை திறந்துவிடும் முறை கடைபிடிக்கப்பட்டது. 1991 ன் துயரம் ஆனால் துரதிருஷ்டவசமாக, உள்நாட்டு நில உடமையாளர்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்தை குறைப்பதில் ஏற்பட்ட தோல்வி, உள்நாட்டு முதலீட்டுக்காக பாதுகாக்கப்பட்ட இடத்தை முற்றாக பயன்படுத்த இயலாமல் போயிற்று.  இந்த சூழலில், புதிய முதலீட்டு இடங்களை தேடிக் கொண்டிருந்த அந்நிய முதலீட்டாளர்கள், அந்த மூலதனத்தை வெகுவாக எதிர்நோக்கியிருந்த சில தனியாரின் திட்டத்தால், உள்ளே நுழைந்து அந்த இடங்களை கைப்பற்றிக் கொண்டனர்.  1980 களிலிருந்து ஒரு எதிர்பாராத வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டது.அரசு தனது உள்நாட்டு செலவினத்தை சந்திக்க (மூலதன செலவின்றி) உள்நாட்டு கடனை அதிகமாக வழங்கியது. ஏற்கனவே, உற்பத்தி குறிப்பாக விவசாயம் சார் உற்பத்தி தேக்க நிலையில் உள்ள காலத்தில், இத்தகைய கடன் உயர்வு பணவீக்கத்தை உயர்த்தியது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், உற்பத்தி குறைவை சரிக்கட்டவும் பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய கடனை கோர வேண்டியதாயிற்று.  அவ்வாறு மிகவும் கடினமாக சேர்த்த அந்நிய செலாவணியை, மேல்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்குவதற்கு திருப்பிவிடப்பட்டது.  விளைவு,இந்தியாவின் அந்நிய கடன் விகிதம் அதனது உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகமானது. இந்த அந்நிய கடன் உயர்வுடன், குறைந்துவரும் செலவின வகையிலான அந்நிய செலவாணி இருப்பு, உலகளவில் கடன் பெறும் தகுதயில் சரிவு, தனது கையிருப்பிலிருந்து கொஞ்ச நஞ்ச அந்நிய செலாவணியையும் செலவழிக்க வேண்டிய கட்டாயம் 1991 ன் துயரத்திற்கு இட்டுச் சென்றது.  இத்தகைய கொள்கை, அந்நிய மூலதனத்தின் மீது தான் சார்ந்திருப்பதற்கான விளைவு பற்றிய எச்சரிக்கையை பதிவு செய்தது. விசித்திரமாக, இத்தகைய ஒரு துயர காலத்தில் அமுல்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, அந்நிய கடன்கள் மீதான சார்பை, கடனற்ற மூலதனமின்றி அந்நிய ஸ்தாபன முதலீடு (FII) மேலான சார்பாக மாறிவிட்டது. தாராளமயக் கொள்கை அமுலாக்கப்பட்டது தொடங்கி அந்நிய முதலீட்டாளர்கள் மீதான கட்டுப்பாடு, முறைப்படுத்துதல் கொள்கை ரீதியாகவே மறையத் தொடங்கியது.  இத்தகைய அந்நிய மூலதனத்தின் பாய்ச்சல், குறிப்பாகஇந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், தறிகெட்ட அந்நிய மூலதனத்தின் விகிதாச்சாரம் அதிகமாக குவியத் துவங்கியது.  நாட்டின் சுதந்திரமடைந்தத முதல் ஆண்டுகளில் எதிர்பார்த்தது போல், இந்த அந்நிய மூலதனத்தின் வரத்து, உள்நாட்டு மூலதனத்திற்கான இடத்தை ஆக்கிரமித்துவிட்டது. தற்போதைய எந்த ஒரு கொள்கை முடிவுகளும், அது அந்நிய மூலதனம் சார்ந்தோ (மூலதன சந்தை மாற்றங்கள் மீதான வரி) இல்லையோ (உணவு பாதுகாப்பு சட்டம்),இறுதி ஆய்வில், அவையெல்லாம், அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிக்கான அளவு கோலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.  மேலும் மக்களில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய கொள்கை முடிவுகள் மீதான மாற்றுக் கருத்துக்களால் (தற்போது சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகள்) அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்ற நிலைக்கே தள்ளிவிடும் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுநிலைமை பகுத்தறிவை தாண்டி சென்றுவிட்டது.  உதாரணமாக மேலே சொன்ன “பொது எதிர்ப்பு தவிர்ப்பு விதி” (கர்) யையே எடுத்துக் கொள்ளலாம்.  ஊடகங்களில் ஒரு பகுதியினரே, அவர்கள் சீர்திருத்தத்தை, அது சம்பந்தமாக வெளிப்படைத் தன்மையை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், மற்றொரு புறம்,  இந்த விதியைத் திரும்ப பெற்றதால்தான் பங்கு சந்தையிலும், நிதித்துறையிலும் முதலீடு செய்து அதிர்ச்சியில் உள்ள முதலீட்டாளர்களை காப்பாற்ற முடியும் என்ற அரசின் முடிவை நியாயப் படுத்துகின்றனர்.  இந்த கருத்தின் மூடத்தனத்தை  பார்க்க வேண்டியுள்ளது. தேசிய நலனுக்காக, மூலதனக் கொள்கைகள் நியாயமானதாக, நேர்மையானதாக இருக்கும் காலத்தில், சந்தையில் முதலீடு செய்ய முன்வராததோடு, அத்தகைய முதலீட்டாளர்கள் இருப்பதைக் காட்டிலும், இல்லாமலிருப்பதே மேல்.  இரண்டாவதாக அனைத்து அந்நிய முதலீட்டாளர்களும், வரியை தவிர்க்க அனுமதிக்கவில்லை என்பதற்காக லாபம் தரும் துறையில் முதலீடு செய்ய தயங்குவதில்லை. மொரீஷியசிற்கு உள்ள வரிவிதிப்பற்ற சலுகை தவறாக பயன்படுத்தப்பட்டு, அதிகப்படியான அந்நிய முதலீடுகள் அந்த நாட்டின் மூலம் இந்தியாவிற்குள் வரத்தொடங்கிய காலம் தொட்டே “கர்(GAAR)” விதிகள் விவாதத்தில் இருந்து வந்தது.  மேலும் நேரடி வரி விதிப்பு சட்ட குழு மையத்தின் விவாதத்திலும் கர் விதிகள் விவாதப்பொருளாக இருந்திருக்கிறது. எனவே,தற்போது “கர்”ஐ ஒரு இடையூறாக நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவிற்குள் வருவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம், இங்குள்ள மூலதனத்தை திரும்ப பெற்றிருக்கலாம்.  ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலீட்டாளர்கள் ஓட்டமில்லை இறுதியில், சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பேசப்பட்டாலும், அதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், இதுவரை இருந்துவந்த அந்நிய முதலீட்டின் பொருண்மை மட்டும் மாறியுள்ளது.  2011-12-ம் ஆண்டிற்கான மொத்த அந்நிய முதலீட்டை ஆய்வோமானால், வெவ்வேறு துறையில் போடப்பட்ட அந்நிய முதலீடு என்பது நேரடி அந்நிய முதலீடாக மாறியருப்பதை காண முடியும்.  11.9ஒட்டுமொத்த தனியார் மூலதனம் பங்குச் சந்தை மூலதனமாக மாறியதுடனான விகிதாச்சாரம் 39 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் 2010-11 மற்றும் 2011-12 காலத்தில் இருந்துள்ளது.  வெவ்வேறு துறை முதலீடு என்பதற்கும், நேரடி அந்நிய முதலீட்டிற்குமான மாற்றம் என்பது பெயரளவில் உள்ள வித்தியாசமே. ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஒரு அந்நிய முதலீட்டாளர் 10 சதவீதத்திற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பங்காக வாங்குகிறார் என்றால், அந்த முதலீட்டை அந்நிய முதலீடு என்கிறோம்.  அப்படியில்லையென்றால், அதை அந்தந்த துறை முதலீட்டு பெட்டியில் வைக்க வேண்டியதுதான்.  ஆகவே, துறை முதலீட்டாளர்கள் போல், இந்த நேரடி முதலீட்டாளர்களாக சொல்லப்படுபவர்களும், நீண்ட கால நிகர வரத்துக்காக இல்லாமல், மூலதன லாபத்தையே எதிர் நோக்கியுள்ளனர் என்பதோடு அவர்களும் எந்த நேரமும் வெளியேறும் நிலையில்தான் உள்ளனர்.  மேலும், பங்குச்சந்தை பலவீனமாகவும் ஸ்திரமின்றி இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்திய வர்த்தக கூட்டமைப்பின் முறையை,தங்களது முதலீட்டிற்கு அனுசரிக்க மாட்டார்கள்.  இதுவும் கூட துறைவாரியான முதலீட்டை குறைக்கும்.  துறை முதலீட்டிலிருந்து, நேரடி முதலீட்டிற்கான மாற்றம், முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறித்து அநேகமாக எதுவும் குறிப்பிடவில்லை.  ஏனென்றால் அந்த நம்பிக்கை அந்நிய நாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பானது 2010-11ல் 3.2 பில்லியன் டாலரிலிருந்து 2011-12 காலத்தில் 11.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதிலிருந்து தெளிவாகிறது. சுருக்கமாக சொன்னால், அந்நிய முதலீட்டாளர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்ற காரணம் காட்டி, இந்திய அரசு உடனடியாக அதிர்ச்சியடையத் தேவையில்லை.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த பொது வரி தளர்ப்பு எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் காட்டிய தயக்கத்தைப்போல் இன்றும் அரசு பின் வாங்கினால், அது இரண்டு நீண்ட கால காரணத்திற்காக மட்டுமே இருக்கும். முதலாவதாக அந்நிய முதலீட்டின் அதிகப்படியான வரத்து பற்றிய திட்டம், அந்நிய முதலீட்டாளர்களை தொடர்ந்து திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும்.  ஆனால் இன்று போல் நிகழ்கால நிதிப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திட்டம் குறிப்பாக வலுவற்றதாகிவிடும்.  இரண்டாவதாக, அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் குறைந்து தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றால் அந்நிய முதலீடுகளின் சேமிப்பை சார்ந்துள்ள அந்நிய செலாவணி மற்றும் பணப்புழக்கத்தில் குழப்பம் ஏற்படும். “கர்(GAAR)” உதாரணம் மற்றொரு காரணத்திற்காக சொல்லப்படுகிறது.  இந்த சட்டம் அரசின் வருவாயை கவர்ந்திட வழிவகுக்கும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், (இதை தொடர்ந்த, மூலதன லாபத்தில் வரிவிதிப்பை முன் தேதியிட்டு அமுல்படுத்தியது) இதன் மூலம் அரசு பெரிய அளவில் இந்த வரிவிதிப்பின் மூலம் அதிகப்படியான வருமானத்தை பெற்றிடும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.  இந்தியாவின் பெரும்பான்மையானவர்களான எளியவர்களை காக்க வேறு திட்டங்கள் உள்ளது. அவை, விரிவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தில் துவங்கி, பொது விநியோகத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டம், குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், மருத்துவ வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மற்றும் சுகாதாரம்.  இவைகளுக்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகிறது. நிதி பற்றாக்குறை என்ற ஒரே காரணம் காட்டி இந்த திட்டங்களில் முதலீடுகள் செய்வது முற்றிலும் இல்லை, அல்லது போதுமானதாக இல்லை.  மேலும், நிதி பற்றாக்குறை காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்பது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துவிடும்.  இவ்வாறாக, அந்நிய முதலீட்டார்களை திருப்திப்படுத்தும் இத்தகைய முயற்சியில், கொள்கை முடிவுகளுக்கான இடத்தை குறைப்பது என்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கான அதிகபட்ச சலுகைகளுக்கும், லாபங்களுக்கும், இத்தகைய உதவிகள் பெரிதும் தேவைப்படும்.  பெரும்பாலான மக்களுக்கு, கிடைப்பதில்லை என்பதும், நேரடி எதிர்மறையானது என்பதுடன், நாட்டின் வளர்ச்சியில் எந்த பங்கும் நீண்ட காலத்திற்கு இவர்களுக்கு கிடைக்காமலேயே போகிறது. சுருங்க சொன்னால், அந்நிய முதலீடுகளை தொடர்ந்து அனுமதித்து அதனால் வரும் என்று எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான திட்டம் என்பது, ஏற்கனவே வசதியாக உள்ளோரை மேலும் வசதி உள்ளவர்களுக்கும் என்பதோடு எளியவர்களுக்கு எதுவுமே கிடைக்காது ஏமாற்றப்படுவர்.  தனியார் முதலீட்டாளர்கள் தாங்கள் சரியாகவோ, தவறாகவோ ஏற்கனவே கைப்பற்றியுள்ளவற்றால், ஏற்பட்டுள்ள சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை இத்திட்டம் மேலும் மோசமாக்கும்.  இது இன்றும் எந்த பகுதிகளில் அவர்கள் லாபம் அடைய முடியுமோ அந்த பகுதிகளை விரிவாக்கும்.  புதிய வரிவிதிப்பு மூலம் வெவ்வேறு வகையிலான நில விற்பனை மேலும் அரிதான சொத்துக்களை தனியார் துறைக்கு மிகக் குறைந்த விலையில் கொடுப்பது போன்றவற்றால், அரசு லாபத்தில் பணவீக்கத்தை உண்டாக்கும். வரியில்லாத கோட்டைகள் கடந்த காலங்களில் மூலதன வரத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்க பல்வேறு வகையில் அரசின் நடவடிக்கை இருந்தது.  நாடுகளுக்கிடையே நிதி மூலதன வரத்து அதிகரித்து வரும் இன்றைய உலக பொருளாதாரச் சூழலில், இந்திய அரசு தனது நடவடிக்கையில் விரும்பத்தக்க நாடு என்ற பலனை பெற்றுள்ளது.  இந்த அந்நிய ஸ்தாபன முதலீட்டின் வரத்து அதிகரிப்பதற்கு முன்பு, ஒரு வேளை 2002-03 காலத்தில் இந்த முதலீட்டின் வரத்து வெகுவாக குறைந்திருந்ததால் எச்சரிக்கப்பட்டோ என்னவோ, அன்றிருந்த நிதிச்சுமைகள் 2002-03 நிதி நிலை அறிக்கை உரையில்- “மூலதன சந்தையை ஊக்குவிக்கும் முகமாக 2003 மார்ச் 1ம் நாள் அல்லது அதற்கு பின்போ வெற்ற மற்றும் ஓராண்டு அதற்குமேல் காலந்தாழ்த்தி விற்கப்பட்ட அனைத்து சமமான ஈட்டுப் பங்கிற்கும் மூலதன லாப வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார் அன்றைய நிதியமைச்சர். நீண்ட கால மூலதன லாப வரி விதிப்பு அந்த நேரத்தில் 10 சதவீதம் என்ற வகையில் சலுகை காட்டப்பட்டது.  இத்தகைய மேலதிக சலுகைகளால் அந்நிய மூலதன வரத்தை அதிகமாக்கியதுடன், இந்தியாவின் பங்கு சந்தையை வரியில்லா கோட்டையாக்கியது.  இந்த அதிதீவிர சூழலில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மெதுவாகிவிட்டதால், அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துவிட்டது என்ற பேரில், தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கும் தாரளமயத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் அரசின் நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது. இத்தகைய புதிய தாராளமயக் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் பகுதியினர், பலவகை சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, அல்லது பொதுத்துறை நிறுவனவங்கிகளின் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்பது போன்ற பெரிய அளவிலான அறிவிப்பை அரசு அறிவித்ததால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வளரும் என்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மீறும்.  இதன் அர்த்தம் என்னவென்றால் சமீபத்தில் வோடபோன் நிறுவனம் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்திய மண்ணில் வாங்கிய செல்போன் பங்குகளுக்கு வரி ஏய்ப்பு செய்தது போல், அந்நிய முதலீட்டாளர்கள் செய்வதை அரசு தடுக்கக் கூடாது என்பதுதான். எது மறைக்கப்பட்டது என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு இன்றும் ஓடவுமில்லை, இந்த “பெரிய அளவிலான சலுகைகள்” கொடுக்கும் போதுதான் வந்தவர்களுமில்லை.  எனவே இத்தகைய வாதங்கால் ஒட்டுண்ணிகள் போல் தொடர்ந்து சலுகைகளை பெற்று வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்படும் என்று கூறி அரசுக்கு வலைவீசும் அந்நிய முதலீடுகள் மற்றும் அதன் மீது அரசின நிலைப்பாட்டை, தாராளமய ஆதரவாளர்கள் வெளிக்கொணர்கிறார்கள்.  முடிவில் அந்நிய மூலதனத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவு ஒரு மோசமான நிலைக்கு மாறிவிட்டது என்பதுதான் உண்மை. குறிப்பு: 1947 போலி சுதந்திரம் அல்லது அதிகார மாற்றத்தின் போது உள்நாட்டு மூலதனத்திற்கு பாதுகாப்பும், அந்நிய முதலீட்டிற்கு கட்டுப்பாடும் இருந்ததாக கட்டுரையாளர் கூறுகிறார். இது முதலாளிகள் விரும்பி செய்தவை அல்ல. அன்று இலாபமில்லாத அடிக்கட்டுமான துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலாளிகள் விரும்பவில்லை. அவர்களது மூலதனமெல்லாம் உடனடி இலாபம் கொண்ட துறைகளில் மட்டும் என்பதாக இருந்தன. இன்று அந்த அடிக்கட்டுமானங்களின் வளர்ச்சியில் முதலாளிகள் அனைத்திலும் முதலீடு செய்து இலாபம் பெறுவதற்கு முயல்கின்றனர். அதனாலேயே இன்று அன்னிய முதலீடு அளவு கடந்து வருகிறது. ஏகாதிபத்திய மூலதனம் செல்லுமிடமெல்லாம் பேரழிவையும், நாடுகளை சூறையாடுவதையும் செய்யும் போது அவற்றுக்கு சில கட்டுப்பாடுகள், வரம்புகள் மட்டும் இருந்தால் உள்நாட்டு தொழிலும், மூலதனமும் பாதுகாக்கப்படும் என்று பார்ப்பது சரியாக இருக்காது. For the Sake of Foreign Investments – C.P. Chandrasekhar- Frontline -:: Sep. 22-Oct. 05, 2012.  தமிழில் சித்ரகுப்தன் 5 கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் 2009 தேர்தலின் போது நமது மத்திய அமைச்சர்கள் அளித்த சொத்துக் கணக்கு இரண்டே ஆண்டில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட ‘ வளர்ச்சி ’ குறித்து கேள்வி எழுப்புகிறார் சாய்நாத் தி இந்து நாளிதழின் ஊரகப் பிரிவு ஆசிரியராக பணியாற்றும் திரு பி சாய்நாத், மக்களின் வாழ்விலுள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் மிகச் சிறந்த படைப்பாளர்.  இன்று (21/09/11) நாடெங்கிலுமுள்ள ஊடகங்களில் இந்திய திட்டக் குழு ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ 32 சம்பாதிப்பார் எனில் அவரை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர் என கூற முடியாது என்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்த அதே வேளையில், இந்திய அரசியல் என்பது எவ்வாறு வளம் கொழிக்கும் தளமாக மாறியிருக்கிறது என்பதை அற்புதமான தனது நக்கலும், நையாண்டியும் கலந்த நடையில் மக்களின் வயிற்றெரிச்சலை வெளிக்கொணரும் விதமாக  இந்து நாளிதழில் வந்த கட்டுரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழாக்கம் செய்து இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. [Chap4A] தில்லி திட்டக் கமிஷன் அலுவலக வளாக வாயிலில் வேலைக்கு காத்திருக்கும் தினக்கூலிகள். படம் www.thehindu.com ஏர்இந்தியா நிறுவனம் நாம் விரும்பியது போல் நல்ல விதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் திட நெஞ்சோடு பயமின்றி அதை அடர்த்தியான கடன் மேகத்திற்குள் பறக்கவிட்டவர்கள் நன்றாக உள்ளனர். பிரபுல் படேல் (குறுகிய காலம் மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்) மே2009 முதல் ஆகஸ்ட் 2011 வரையிலான 28 மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூபாய் அரை கோடி வீதம் தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  இதுவும் அவரது வார்த்தைப்படியான கணக்கு என்பதால், குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்காகவே இருக்கலாம்.  இது போன்றவற்றில் அமைச்சர்கள் தற்பெருமை பேசாதவர்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  ஆனால் அலுவலக ரீதியான புள்ளி விபரங்கள் கொடுக்கும் போது, கணக்கில் தப்பிக்க வழியில்லை. திரு படேல் 2009-ம் ஆண்டு தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்தாக ரூ 79 கோடி காண்பித்துள்ளார்.  மே மாதம் அந்த வருடம் தேர்தல் நடைபெற்றது என்பதால், அந்த கணக்கு ஏப்ரல் 2009 வரை என கணக்கில் கொள்வோம்.  இந்த மாதம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் (படேல்) பெயருக்கெதிரே ரூ 122 கோடி (சொத்து மதிப்பு) என குறிப்பிட்டிருப்பதோடு ஒப்பிடுவோம்.  இந்த உயர்வு என்பது 28 மாதங்களில் ஏற்பட்டது என்பதால் எனது கணக்குப்படி ஒரு நாளைக்கு சராசரி ரூ 5 லட்சம் சேர்ந்துள்ளது.  என்னால் கூட்ட முடியும் என்றாலும், நான் திரு பிரபுல் படேல் அளவிற்கு விரைவாக கணக்கு கூட்ட முடியாது என எண்ணுகிறேன். இதன் நடுவில் ஏர் இந்தியா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவே போராடி திணறியிருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத  பணியாளர்களும் ஒவ்வொருவரும் ஒரு நாளில் சம்பாதிப்பதை விட மிகுதியாக, திரு படேல் தினசரி தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  அதாவது ஏர் இந்தியா விமானங்கள் தரை தட்டிக்கொண்டிருக்கையில், அவர் உயர உயர பறந்திருக்கிறார்.  தொழிற்சாலைகள் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்பின் முன்னாள் இயக்குனர் குழும தலைவர் என்ற முறையில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வாறு தெரிவித்தார்.  சிரமப்படும் தனியார் நிறுவனங்கள் பற்றி தெரிவிக்கையில், நலிவடைந்தவை என்ற எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்கையில், அதன் சொந்தக்காரர்கள் வளமாகிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.  இந்திய ஏழைகளும் அவர்கள் சார்ந்திருக்கிற அரசோடு ஒப்பிடுகையில் இது சரியாக பொருந்தி வருகிறது.  ஏழைகள் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர், மத்திய அமைச்சரவை வளமாகிக் கொண்டிருக்கிறது. (கார்ப்பரேட் முதலாளிகளை இந்த சமன்படுத்துதலில் இழுத்துப் பார்த்தால் அது மிக வியக்கத்தக்க வகையில் இருக்கும், ஆனால் அது வேறு கதை) திரு படேல் அவர் மேற்கொண்ட பணிக்காக உயர்வளிக்கப்பட்டுள்ளார்.  அவர் மத்திய அமைச்சர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறைகள் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் விவரங்களை, எப்போதும் போல் மக்களாட்சி சீரமைப்பிற்கான குழுமம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (நியூ) ஆகிய அமைப்புக்கள் விரிவாக மேற்கொண்ட ஆய்வுகளை படிக்கும் போது ருசிகரமாக இருக்கும்.  அது அலுவலக ரீதியானது.  சொட்டு சொட்டுகளாக விழுவதென்பது முடிந்து போன மாதிரி.  பாசனத்தை உயர்த்தும், வெள்ளம் உயரத்தை உடைத்துக் கொண்டு பாயும். ஒரு மத்திய அமைச்சரின் சராசரி சொத்து என்பது 7.3 கோடியிலிருந்து 28 மாதங்களில் 10.6 கோடியாக உயர்ந்துள்ளது.  28 மாதங்களிலும், சராசரி மாதத்திற்கு 10 லட்சங்களுக்கு குறைவில்லாத சேர்க்கை. திரு படேல்தான் மத்திய அமைச்சர்களில் மிக உயர்ந்த பணக்காரர் என்பது பழைய கதை. ஆனால் திமுக வின் முனைவர் எஸ்.ஜகத்ரட்சகன் அதை தைரியமாக மோதி சிதறடிக்கச் செய்துவிட்டார்.  மாநில அந்தஸ்திலான அந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரின் சொத்து 1092 சதவீதம் வளர்ந்துள்ளது, ஆனால் படேலின் வளர்ச்சி 53 சதம்தான்.  ஆய்வின்படி அவரின் சொத்து மதிப்பு 2009ம் வருடம் 5.9 கோடி என்றிருந்தது இந்த வருடம் 70 கோடியாக உயர்ந்துள்ளது.  ஆனால் 122 (கோடி) என்ற எண்ணில் நின்று மட்டையடித்துக் கொண்டிருக்கிற படேல் இன்னமும் அமைச்சரவை பிரிமியர் லீகில் இன்னும் உயர்வான நிலையில்தான் உள்ளார். திமுக மனிதரின் செயல்பாடு விரைவான எண்ணிக்கை சேர்க்கைக்கு உதவியிருக்கலாம்.  ஆனாலும் நின்று நிதானமாக சேர்க்கும் படேலின் ஆட்டம் தான் நீண்ட விளையாட்டிற்கு நல்லது. இதன் நடுவில் சுறுசுறுப்பான இளவயது அமைச்சர்கள் யாரும் மோசமென சொல்லிவிட முடியாது.  இளைஞர் மிலண்ட் தியோரா, மாநிலங்களுக்கான செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர 2009 லிருந்து 2011ற்குள் தனது சொத்துக்களை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியுள்ளார்.  அவரது சொத்து 17 கோடியிலிருந்து 33 கோடிக்கு மேல் சென்றுள்ளது. அவர் 2004ல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது ரூ 8.8 கோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தினசரி சராசரியாக ஒரு லட்சம் ஒரு நாளைக்கு என சேர்த்து 7 வருடங்களில் சொத்தை 3 மடங்காக்கியிருப்பது ஒன்றும் மோசமாக சொல்ல முடியாது. மேலோட்டமாக பார்க்கின்ற போது தியோரா, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.  நெடிய ஓட்டத்தில் பின்னுக்கு வரும் அவரைவிட, இளையவர் தியோரா இரண்டரை பங்கு கூடுதல் பணக்காரராக உள்ளார்.  அவர் முன்னதாக 2009-லும் பவாரை விட பணக்காரராகத்தான் இருந்திருக்கிறார்.  ஆனால் இந்த 28 மாதத்தில் 90 சதவீதம் அதிகரித்திருக்கிறார்.  பவார் இதே காலத்தில் சொற்பமாக ஒரு நான்கு கோடி கூட சேர்க்கவில்லை.  அதற்கு அர்த்தம் என்னவென்றால், எல்லோரும் சொல்வது போல் அவரது சொத்தை காண்பிக்கும் கடிகார முள் 12.5 கோடியிலேயே நிற்கிறது. அவருடைய சொந்த மாநிலத்திலுள்ள சொத்துக்களை யெல்லாம் கணக்கிட்டு பார்க்கும் போது பவாருக்கு பிரமாணப்பத்திரத்தில் தனது மொத்த சொத்தை தெரிவிக்க் வேண்டுமா?  அல்லது மாத வருமானத்தை தெரிவிக்க வேண்டுமா என்ற குழப்பம் நேரிட்டது போல் தோன்றுகிறது. அடுத்து தற்பெருமை பேசாத மற்றொரு அமைச்சர யாரென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்.  அவர் தனது பங்கிற்கு 2009ற்கு பின்னர் ரூ 1.73 கோடி சேர்த்துள்ளார்.  திரு தேஷ்முக் நில அறிவியலுக்கான அமைச்சரும் ஆவார். (மகாராஷ்டிராவில் அவருக்கு குறிப்பிட்டுள்ள தலைப்பை பார்த்தால் ரியல் எஸ்டேட் விற்பன்னர் என்றும் தெரிகிறது).  மற்றபடி முனைவர் மன்மோகன்சிங் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர்.  பாராளுமன்ற நடவடிக்கைத்துறை அமைச்சர மற்றும் ஐபிஎல் புதிய தலைவர் திரு ராஜிவ் சுக்லா சொல்லப்பட்ட 28 மாதங்களில் ரூ 22 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார்.  அதாவது 2009ல் 7 கோடியாக இருந்த சொத்து தற்போது 30 கோடிக்கும் அதிகம். பணியிலுள்ள அமைச்சர்கள் மட்டும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை.  அல்லது மைய அரசை மட்டும் வரம்பாக வைத்துக் கொண்டு மேல்நோக்கி நகருவதில்லை.  எப்போதும் போல் கின்னஸ் சாதனைக்கான பொருள் என்பது எனது இரு மாநிலங்களான  மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்துதான் வருகிறது. (எனக்கு இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டுடனும் சொந்தம் உண்டு.  அதாவது ஜகத்ரட்சகன் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்துடன் – எனவே சொந்த இடம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு சற்று அதிகம்தான்). ஆனால் தற்போது நாம் ஆந்திரப்பிரதேசம் பக்கம் திரும்புவோம்.  ஓ.எஸ்.ஜெகன் மோகன்ரெட்டி என்பவர் ஆளும் பொறுப்பில் இல்லை.  ஆனால் அது அவரது தொழில் முனைவை நோக்கிய பயணத்தை எந்த வகையிலும் தடை செய்யவில்லை.  அவரிடம் 2009-ல் இருந்த வெறும் ரூ 72 கோடி என்ற எண்ணிக்கையை 24 மாதங்களில் நடப்பு ஏப்ரல் வரை ரூ 357 கோடி சொத்து மட்டும்தான் சேர்த்துள்ளார்.  அதாவது இந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 50 லட்சம் வீதம் மட்டுமே சேர்த்துள்ளார்.  எல்லாவற்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், இது ஒன்றும் சிறிய சாதனையல்ல.  சாமியார்கள் அரசியலில் ஆற்றல் என்றும் அடுத்த சந்ததி எனவும் பேசுவது எதைப்பற்றி என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கலாம். அந்தோ, சந்திரபாபுநாயுடு மட்டும் ஏழையாக வளர்ந்துள்ளார்.  அன்னா ஹ‌சாரேயால் உருவாகியுள்ள காலச் சூழல் காரணமாக இந்த ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் தனது சொத்து மதிப்பை எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ளார்.  திரு நாயுடுவின் சொத்து ரூ 40 லட்சம் அளவில் கூட இல்லை.  அதன் காரணமாக அவரின் வாழும் சூழலுக்கு உடனடியாக பங்கம் வந்துவிட்டதாக எண்ண வேண்டியதில்லை.  அவரின் மனைவி வசமுள்ள சொத்து ரூ 40 கோடி மட்டுமே. ஆந்திர அரசியலில் இந்த தொடர்புடைய படங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஜகன் வளர்ச்சியில் இருப்பதும், நாயுடு சரிவில் இருப்பதும் புலப்படும்.  அவருடைய கணக்காளர்கள் அவரை விட பெருந்தன்மையுடையவர்களாக இருப்பதால் எதிர்காலம் என்பது திரு நாயுடுவிற்கு சாதகமாக இல்லை.  அவரின் ஜூப்ளி மலை சொத்து என்பது 10000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தோடு, 1125 சதுர அடியில் நடைபாதைகளும் கட்டப்பட்டுள்ளதன் மதிப்பு ரூ 23.20 லட்சத்திற்கும் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.  இப்போது அந்த இடம்தான் ஆந்திரப்பிரதேசத்திலேயே மிக உயர்வாக மதிப்பிடப் படும் இடமாகும்.  எனவே அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள 10000 சதுர அடி கட்டிடம் என்பது, அந்த தொகை மதிப்பீட்டில் பார்க்கும் போது, மிக எளிமையான சாதாரண சொத்து என்றே வாதிட தோன்றுகிறது. ஆனால் 2009 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அதன் மதிப்பு ரூ 9 கோடி என காண்பிக்கப் பட்டது போல் மதிப்பில்லாத ஒன்றா?  இதைப்பார்க்கிற போது திரு நாயுடு தற்போதைய சந்தை மதிப்பை குறிப்பிடாமல் அந்த இடத்தை கையகப் படுத்த செலவழித்ததை மட்டும் குறிப்பிட்டிருப்பார் போலும், ஏனெனில் சந்தை மதிப்பு என்பது நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதாலா? இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் யாதெனில் எல்லாவற்றிற்கும் பின்புலமாக புத்தி கூர்மையுள்ள கணக்காளர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணம் படைத்த மற்றும் வளமான இந்த மடத்தனமான வளர்ச்சி என்பது அமைச்சர்கள் அளவில் மட்டுமல்ல, பாராளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அளவிலும்தான்.  எல்லா அரசியல் சக்தி சார்ந்த தலைவர்கள்  குறிப்பாக காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய மாநிலங்களில் ஆளும் அந்தஸ்திலுள்ள கட்சி தலைவர்களும் இதில் அடக்கம். ஒவ்வொரு பாராளுமன்ற, மற்றும் சட்டமன்ற தேர்தல் காலத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.  மகாராஷ்டிராவில் 2004-ல் 108 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009ல் 189 ஆக உயர்ந்துள்ளது.  நான்கில் மூன்று பங்கு மத்திய அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அவர்களின் புதிய சொத்துக்கள் பதவியில் உள்ளபோது சம்பாதித்தவை. பொது மக்களின் கோபத்திற்கு நன்றி.  அதன் காரணமாகத்தான் ‘ஏடிஆர்’ மற்றும் ‘நியூ’ போன்ற ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக பலருக்கும் தெரிய வந்துள்ளது.  இது மிகவும் சிறப்பானது. ஆனால் இத்தகைய அறிவிக்கப் பட்டவை அனைத்தும் அவர்களின் வரி செலுத்தும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.  அதுதான் பொதுமக்கள் இந்த எண்ணிக்கைகளில் சிறப்பான கூடுதல் கவனம் செலுத்த அனுமதிப்பதாக இருக்கும்.  பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் வரி செலுத்துதல் போன்ற சமர்ப்பித்தல்களும் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  நமக்கு மிக தேவையாக உள்ள மறுசீரமைப்பிற்கு அதுதான் பெருமளவில் உதவியாக இருக்கும்.  மற்றொன்று ஏமாற்றுதல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களாகும். ஆய்வறிக்கை காண்பிப்பதை பார்க்கும் போது அமைச்சர்கள் அவர்களுக்கு சொந்தமான 12 குடியிருப்பு கட்டிடங்கைள காண்பிக்கவில்லை என தெரிகிறது. நமக்கு கடுமையான தணிக்கை என்பது தேவை.  அதுவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் சொத்துக்களிலிருந்து அந்த தணிக்கை துவங்க வேண்டும்.  எப்படி மக்கள் அலுவலில் இருக்கும் போது ஒரு நாளைக்கு அரை கோடி சம்பாதிக்க இயலும்.  நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் அனைவரும் இந்த மிகப்பெரும் சொத்துக்குவிப்பு என்பதை ‘மக்கள் சேவை’யில்தான் சேர்த்துள்ளனர். நிச்சயமாக நாமும் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.  சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது என்பது மட்டும் போதாது.  அது விசித்திரமாக மிகப் பெரியதாக இருப்பின் எவ்வாறு அது வந்தது என்பதை அறிவதும் நமக்கு அவசியமாகும். ஏப்ரல் கடைசியில் இந்தியாவின் திட்டக்குழு உச்சநீதிமன்றம் முன்பாக ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அதில் ஊரக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர் என்பதை தீர்மானிக்க ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 20 செலவழிக்கும் நபர் என்பதை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டால் போதுமானது என்றது.  கிராமப்புற இந்தியாவிற்கு அது வெறும் ரூ 15 மட்டுமே.  மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த ரூ 20 என்பதை வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ரூ 25 என உயர்த்திக்கொள்ளலாம் என்பதாகும். சிறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவினருக்கான முனைவர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான தேசிய ஆணையத்தின் அறிக்கையை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அந்த அறிக்கையில் 83.6 கோடி இந்தியர்கள் ரூ 20 மற்றும் அதற்கு கீழான வருமானத்தில் வாழ்கிறார்கள் என பதிவு செய்திருந்தது.  கோடீஸ்வரர்களாக சேர்ந்த குழுக்கள் எவ்வாறு இந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும்?  இந்த நிலை தொடருமானால் நங்கூரமிட்டு வைத்துள்ள பிடிமானம் மிக சீக்கிரம் விடுபட்டுவிடும்?  இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம்.  இதைப்பற்றி சிறிதளவாவது சிந்திக்க வேண்டும். எனவே கடந்த 20 ஆண்டுகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் என்பது எதனையும் சிரமத்திற்குரியதாக ஆக்கவில்லை, ஆனால் மாறாக கோடீஸ்வரர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்பதையும், அவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்பதையும் குறிப்பாக காட்டுவதாக உள்ளது.   நன்றி தி இந்து    தமிழாக்கம்:   சித்ரகுப்தன் 6  கொள்ளை போகும் இந்திய வளங்கள் “ வேதாந்தா ” முறைகேடு: கொள்ளை போகும் இந்திய வளங்கள் ? பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருவது இந்த தளத்தின் வாசகர்களுக்கு நன்கு தெரியும். இந்த மாநிலங்களிலெல்லாம் வேதாந்தா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. சில ஆங்கில நாளிதழ்கள் வேதாந்தாவிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் உள்ள உறவுகளையும், மாவோயிஸ்ட் அழிப்பு என்ற பெயரில் மனித வேட்டை நடைபெற்றுவருவதையும் சுட்டிக் காண்பித்திருந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர் திரு என்.சி.சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு வேதாந்தாவின் சுரங்க திட்டங்களின் மீதான விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டது. 17-08-2010 காலை ஆங்கில செய்தித்தாள்களில் “வேதாந்தா சுரங்க திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு” திரு சாக்சேனா தலைமையிலான குழு அறிக்கை மூலம் தெரிய வந்தது என செய்தி.  ஆனால் இந்த செய்தி எந்த தமிழ் செய்தியிலும் வெளிவரவில்லை.  மாறாக முப்பதாயிரம் கோடி ஊழல் என சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் ஒரு புறம் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி சிரித்துக் கொண்டு மறுபுறம் இந்த விளையாட்டிற்கான கொள்கை பாடலை இசைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு என்ற அவர் பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டு புகைப்படத்துடன் செய்தி, இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபத்துச் செய்திகள், மனித உறவு முறைகேடுகளைச் சொல்லும் செய்திகள், வழக்கம் போல் உயர்நீதிமன்றம் 40 வருடமாக போராடிக் கொண்டிருந்த ஒரு பென்சன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த தீர்வு, இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தமிழக அரசு வழங்கியதில் தவறொன்றுமில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு, தஞ்சை ராஜராஜன் விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் இன்னபிற சினிமா செய்திகளோடு அப்பாவி தமிழர்களின் வாழ்வு துவங்கியது. வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்க திட்டத்தில் பின்பற்றவில்லை என்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது.  இது குறித்து செய்தியாளர்கள் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்ட போது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மேற்படி நிபுணர் குழு அறிக்கை எனக்கு வந்தது.  இந்த நாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு முறை உள்ளது.  அதாவது ஏதேனும் ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் “அபராதம் செலுத்து – செல்” என்கிற வகையில் திறந்திருக்கிறது என்றார்.  மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.  இதோடு இந்த நாடகத்தின் காட்சிகள் முடிவுற்றுவிடும்.  மக்களும் நாளை காலை இதை மறந்திருப்பார்கள்.  இந்த நிபுணர் குழு விசாரணை, அவர்கள் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பதெல்லாமே வேதாந்தா நிறுவனத்தின் மீது பெரிய அளவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நடத்தும் நாடகமே. இப்படி ஒரு புறம் செய்தியிருக்க அதே செய்தித்தாளில் கைரன் இந்திய என்கிற பெரிய பன்னாட்டு எண்ணை வள நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 960 கோடி லாடருக்கு வாங்குவதாக வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றொரு செய்தி.  அதைப்பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணை வளத்தின் பெரும் பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது என்பது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்கிறது. ஆனால் இதைப்பற்றியோ அல்லது, சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் நாங்களும் மற்றொரு பன்னாட்டு அமைப்பான சீசா கோவா என்ற நிறுவனமும் சேர்ந்து 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என தைரியமாக அறிக்கை விடுகிறது.  இந்த வரத்தக பரிமாற்றமெல்லாம் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட வேண்டும். இருக்கவே இருக்கிறார்கள் உலக வங்கி நாயகர்கள் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை சிதம்பரம் போன்றவர்கள் என்கிற நம்பிக்கையில் இத்தகைய திமிரான அறிக்கையை வேதாந்தா வெளியிட்டிருக்கிறது. சரி இந்த கைரன் இந்தியா என்ற நிறுவனம் யார் என பார்ப்போமானால்- அதுவும் இந்த நாட்டின் எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனமே.  இதன் தலைவர் சர் பில் கேம்மல் என்கிற அயல்நாட்டவர் என்பதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தில் (போர்டு டைரக்டர்கள்) உள்ள பெரும்பான்மையினரும் அந்நிய நாட்டவரே. இந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்குமுள்ள உள்ள மகிழ்ச்சியான உறவுகளை மேற்கண்ட புகைப்படங்கள் பறைசாற்றும்.  ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய கடற்பகுதிகளில் 30 சதவீத எண்ணை பேசின்களையும் இந்த கைரன் இந்தியா என்கிற பன்னாட்டு நிறுவனம் 70 சதவீத எண்ணை பேசின்களையும் கைவசம் கொண்டிருக்கிறது என்றால் இதன் செல்வாக்கை புரிந்திருப்பீர்கள்.  குஜராத் கடற்பகுதியில் இந்த கைரன் இந்தியா 150 எண்ணை கிணறுகளையும், 3111 சதுர கிலோமீட்டர் அளவிலான எண்ணை பேசினையும் தன்னகத்தே கொண்டது. அதே போல் மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ, பரப்பளவிலான எண்ணை பேசினை தன்வசம் கொள்ள ராஜபக்ஷேயுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது. காடுகளை அழித்து இந்தியாவின் பாக்சைட், இரும்பு தாது, அலுமினியம் போன்ற கனிம வளங்களை கொள்ளை கொண்டுபோகிறது வேதாந்தா நிறுவனம் என்கிற விமர்சனங்கள் பலமாக எழுந்து அதில் தற்போது தற்காலிகமாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், நாட்டின் கனிமவள சுரண்டலை தற்காலிகமாக நிறுத்திவைத்து எண்ணை வளங்களை சுரண்ட முனைந்துள்ளது வேதாந்தா.  இது குறித்து இரண்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு வரட்டும் நாங்கள் கவனமாக இருப்போம் என இன்று இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அமைச்சர்களும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் அறிக்கைகளை நம்ப முடியாது.  இப்படி ஒரு அறிக்கை என்றால் எங்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே கருத வேண்டும். இத்தகைய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கிற, நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிற வேதாந்தா, கைரன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து மக்கள் ஒன்றிணைந்து போராடி நாட்டை மீட்க வேண்டிய தருணமிது.                                                                                     -சித்திரகுப்தன்- 7  ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற மத்திய அமைச்சரவை முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 4 அன்று மத்திய அமைச்சரவை ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அதிகார (PFRDA) மசோதா 2011ல் அலுவலக ரீதியான திருத்தங்கள் உருவாக்குவதற்கான ஒப்புதல் அளித்தது,  அந்த முடிவென்பது, நிதித்துறை நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அதன் துவக்கத்திலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது.  அத்தகைய நடவடிக்கைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பவர் நலனுக்கு உகந்தது போல் தெரிந்தாலும், தொழிலாளர்களுக்கான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை வேறுவிதமாக புரிந்தறிந்தன/ அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் டிசம்பர் 12ல் இத்தகைய சீரமைப்பு என்ற பெயரிலான நடவடிக்கைகளை எதிர்த்து தேசிய அளவிலான ஒரு வேலை நிறுத்தத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். மத்திய அரசு, மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டத்தில் “சீர்திருத்தம்” கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் விரைவு படுத்தப்பட்டிருக்கும் அந்த நிலையில்தான் இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவின் தோற்றமே உருவெடுத்தது.  அதைத் தொடர்ந்து இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  இராணுவ சேவையில் உள்ளவர்களை தவிர்த்து, 2004ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பணியிலமரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் முன்பிருந்த “வரையறுக்கப்பட்ட பயனுள்ள திட்டம்” என்ற நிலையிலிருந்து “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டமாக” சாராம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2005 மார்ச்-ல் மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் முக்கியமான பிரிவு, 2003ல் உருவாக்கப்பட்ட இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவிற்கு” சட்ட பூர்வ அந்தஸ்து வழங்கியது.  ஆனால் 14வது மக்களவை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த மசோதாவும் காலாவதியானது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் மட்டும், எந்த வித ஒழுங்குபடுத்தும் அமைப்பு இல்லா நிலையிலும், தொடர்ந்து இருந்து வந்தது. கிட்டத்தட்ட 27 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.  விதிவிலக்காக, இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கம், திரிபுரா, மற்றும் கேரளா மாநில அரசுகள் மட்டும் இந்த திட்டத்தை ஏற்காமல், ஏற்கனவே இருந்துவந்த “வரையறுக்கப்பட்ட பலன்களுடைய திட்டத்தையே” தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றனர். 2009 ம் ஆண்டு சூலை துவங்கி, மத்திய அரசில் 2ம் முறை ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி இந்த திட்டத்தை சுய தொழில் செய்பவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நீடித்தது.  2010 மத்திய நிதி நிலை அறிக்கையில் சுவாவாலம்பன் திட்டம் என்ற இந்த கூட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் மத்திய அரசு இந்த ஓய்வூதிய மசோதாவை மறுபடியும் மக்களவையில் அறிமுகப்படுத்தியது.  அது பின்னர் நிதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களிலேயே அந்த குழு தனது அறிக்கைகளை சமர்ப்பித்தது.  அந்நிய நேரடி முதலீடு 49 சதத்தை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் அக்டோபர் 4ம் தேதிய திட்டத்தையே இந்த குழுவின் சிபாரிசும் எதிரொலித்தது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திய பெருமையை பெற்றிருந்தாலும் உண்மையில் 2003-ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் ஆகஸ்ட் 2003-ல் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு பணியில் சேரும் புதிய நியமனதாரர்களுக்கு அமுல்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 37.45 லட்சம் சந்தாதார்களும், ரூ 20-535 கோடி சந்தாவையும் அடிப்படை நிதியாகவும் கொண்டுள்ளது.  ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக இந்த ஓய்வூதியம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதமானவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது.  நாட்டில் எல்லோருக்கும் இந்த திட்டத்தை விரிவாக்குவது என்பது மிகப்பெரிய யோசனைதான்.  ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் இன்றுவரை எதிர்த்து வருகின்றனர்.  “நாங்கள் ஓய்வூதிய திட்டத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக எதிர்க்கிறோம்.  இப்போது இந்த அந்நிய முதலீட்டை அனுமதித்தோமானால், இந்த நிதியை கையாளுகிறவர்கள் அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்வார்கள்.  இவ்வாறு இந்த நேரடி அந்நிய முதலீடு எதிர்மறையாகிவிடும்.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டபோது, ஓய்வூதியத்திற்கான நிதி தேவை அதிகமாகிக் கொண்டுவரும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அவசியம் என்று மத்திய அரசால் கூறப்பட்டது- என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கே.கே.என்.குட்டி தெரிவித்தார்”.  ஓய்வூதியத்திற்கான நிதியை இவ்வாறு புதிய பணியாளர்கள் வழங்குகிறார்கள்.  2001 – 2009ம் ஆண்டிற்குமிடையே மத்திய அரசில் பணிக்கு எடுக்கப்படும் அளவு குறைந்து விட்டதால், இந்த திட்டத்திற்கான நிதி வரத்தும் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் எதிர்ப்பு இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஓய்வூதியத்திற்கான நிதி நெருக்கடி அதிகமாகி வருவதுதான் என்று சொல்லப்பட்டது.  “ஓய்வூதிய நிதியின் பெரும் பகுதி பங்கு ராணுவ சேவையில் உள்ளவர்களைத்தான் சென்றடைகிறது. ஆனால் அவர்களுக்குத்தான் இந்த திட்டத்திலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது” என்றார் கே.கே.என்.குட்டி. வரும் 34 ஆண்டுகளில் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் நிதி தற்போதைய ரூ 14,284 கோடியிலிருந்து ரூ 57,088 கோடி ரூபாயாக இருக்கும் என்று பெங்களுரை சேர்ந்த பொருளாதார மாற்றத்திற்கான கொள்கை மையத்திலுள்ள கே.காயத்திரியின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி அவர் கூறுகிறார்.  2004-05ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஓய்வூதிய செலவினம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதமானமே.  அதில் 0.26 சதமானம் ராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு செல்கிறது. தற்போதுள்ள பணியாளர்கள் இந்த திட்டத்தில் இல்லாவிட்டாலும், அரசு எந்த நேரத்திலும் ஒரு ஒப்பந்தம் மூலமாக அனைவரையும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவர சுதந்திரமுள்ளது என்கிறார் திரு குட்டி.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக திட்ட மசோதா, இந்த திட்டம் மூலம், சந்தை சார்ந்த நன்மையே கிடைக்கும் என்பதுடன், வேறு எந்த விதமான நேரடியான, மறைமுகமாக எந்த பலன் குறித்தும் உறுதி சொல்லவில்லை.  இது சந்தை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் சந்தாதாரர்களை அதிர்ச்சிக்கு  தள்ளிவிடுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 25ல், அரசு ஊழியர் கூட்டமைப்பானது, இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதா” முற்றாக விலக்கிக் கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதியது.  சந்தை முதலீட்டில் ஏதாவது அதிர்ச்சி ஏற்படும் பட்சத்தில், சந்தாவை வாங்குவதற்கான சக்தி இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள அவரது சந்தாவிற்கான உண்மை விலை குறிப்பிடப்படாததால், அதன் மதிப்பு தற்போதுள்ள பண வீக்கத்தால், மிகவும் குறைந்துவிடும் என்கிறார்.  மேலும் கூறுகையில், இந்த சந்தாதாரர் மத்திய அரசு ஊழியர் என்பதால், இந்ததிட்டத்தின்படியே தனது முதலீட்டை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், ஒரு தவறான தேர்வில் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். இந்தியா மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களின் நியாயமற்ற அப்பட்டமான, தனியார் லாபத்திற்கு பொது மக்கள் பணத்தை திருப்பிவிடும் பங்குச் சந்தையில், இந்த ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்படுகிறது என்கிறது அந்த கடிதம்.  இந்த ஓய்வூதிய திட்டத்தை திணிப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடையே இரண்டு பிரிவினரை உருவாக்குகிறது அரசு.  அதில் ஒரு பிரிவினரை நிச்சயமாக உறுதி செய்யப்படாத சந்தை சார்ந்த விளைவுகளுக்குள் தள்ளிவிடுகிறது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்று உறுதிசெய்யப்படவில்லை.  ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஒரு பகுதியினரான ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப் படுவதுடன், அவர் மறைவுக்கு பிறகு அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு அந்த ஓய்வூதியம் கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வு காலத்தில் அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரமான பணவீக்கத்தை ஈடுகட்டிவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிடும் என்று அவர்கள் மத்திய நிலைக் குழுவிடம் முறையிட்டனர். தொழில்துறையிலிருந்து நெருக்கடி ஆனால் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தை உருவாக்கவும் ஓய்வூதிய சீர்திருத்திவரும் தொழில்துறை நிபுணர்களும், வர்த்தக கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  அரசும், தொழில்துறையினரும் முன்வைக்கும் ஒரே வாதம், தற்போதைய வரைமுறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் அரசின் நிதியில் பெரும்பங்கு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்பதுடன், இது நீடித்திருக்க சாத்தியமில்லை என்பதுடன், அதன் காரணமாக சமூக நலத்திட்டங்களை நாட்டின் எளியவர்களுக்கு கொண்டு செல்ல இயலவில்லை என்பதுதானாம். 2006ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட 6வது ஊதியக் குழு, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி நிலையை ஆய்வு செய்து மாற்று வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூறியுள்ளது.  “இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தியதால் ஏற்கனவே உள்ள திட்டம் சிக்கலுக்குள்ளாகிறது என்பதுடன், ஓய்வூதிய திட்டத்தில் மேலும் சீரமைப்பு என்பது மேலும் பல சிக்கலை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது”. ஆனால், அமைச்சரவை, நிலைக் குழுவின் யோசனையை / எச்சரிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு புதிய ஓய்வூதிய திட்ட அறிமுகத்தை நியாயப் படுத்துகிறது.  மற்றொருபுறம் புதிய ஓய்வூதியதாரர்கள், இந்த நிதியை எங்கு முதலீடு செய்வது என்பதை தீர்மானிக்கும் நிலையில் இல்லாததால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் அது எப்போது கிடைக்கும் என்றே தெரியாத நிலையில் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  இந்த நிதி முதலீடு எங்கு முதலீடு செய்யப்படும் என்பது, புதிய ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், விதிகளுக்குட்பட்டே  முடிவெடுக்கப்பட்டு முதலீடு செய்யப்படும். உதாரணமாக, அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த குழுவின் முதல் ஆலோசனை, அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சந்தாதாரர் எங்கு தனக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறதோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து திட்டங்களும், இந்த ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது,  அவை அனைத்தும் உறுதி சொல்லப்படும் வரவை கொடுக்குமா அல்லது விலைவாசி உயர்வை சமன் செய்யுமா என்பதற்கு உறுதியில்லை. மேலும் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம், சந்தாதாரர் எத்தனை முறை, பணம் எடுப்பது, நோக்கம் மற்றும் எடுக்கும் அளவு குறித்து தீர்மானிக்கும் உரிமையை தன்னிடம் வைத்துள்ளது.  இந்த மசோதாவில் உள்ள ஒரு திருத்தம், ஒரு சந்தாதாரர், அல்லது மொத்த வைப்பிலிருந்து 25 சதமானத்திற்கு மேல் தனது கணக்கிலிருந்து ஓய்வூதியம் எடுத்துக் கொள்ள முடியாது.  எதிர்பாராத அவசர காலத் தேவைக்காக சந்தாதாரர்கள் தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் சில சலுகைகளை நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.  மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கான சந்தாவை, அரசின் பங்கில் 100 சதம் முதலீடு செய்ய உரிமை வழங்கி ஒரு திருத்தம் கொடுத்துள்ளது.  ஆனால், குழுவின் இந்த இரண்டு ஆலோசனைகளையும் அமைச்சரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  ஓய்வூதிய திட்டத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலே தற்போதுள்ள மற்றொரு கவலை.  அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கீழ், “ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு” நெறிமுறைகளை வகுக்க ஆலோசனை கூற, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளவர்களின் பிரதிநிதிகளை கொண்ட, “துடிப்புள்ள ஓய்வூதிய ஆலோசனை குழு” ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. “உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசின் செலவினங்கள் குறைக்கப்படுவதில், ஓய்வூதியமும் அடங்கும்” தொழிலாளர்கள் இந்த பிரச்சனைகள் மீது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்தால், இந்தியாவின் எளியவர்கள் பயனடைவார்கள் என்பது நகைப்புக் குரியதாக உள்ளது.  நிதி நாட்டுக்குள் வரும் என்றில்லாமல், நாட்டை விட்டு பணம் அதிகமாக வெளியே போவதுதான் சாத்தியம்” என்கிறார் ராஜ்ய சபை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியை சேர்ந்த திரு டாபன் சென்.  இவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.  குறிப்பாகச் சொல்லப்போனால், நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு ஆலோசனைகள் மந்திரிசபை ஏற்கவில்லை.  இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுத்துறை நிறுவனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற இந்த குழுவின் யோசனை கூட ஏற்கப்படவில்லை.  இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு தற்போதைய அடிப்படை நிலையிலிருந்த ஆய்வில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே இந்த அமைப்பில் நிதி மேலாளராக வைத்துக் கொள்ளலாம் என்றும், அது காலப்போக்கில் நடைமுறையின் அடிப்படையில் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று விதி வகுத்துள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனையை அமைச்சரவை நிராகரித்துவிட்டது. அமைப்புசாரா தொழிலில் உள்ள மக்களுக்கான சமூக பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படவேண்டும் என இந்த குழு பரிந்துரைத்தது.  இந்த நிலைக்குழு அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பதாக இருந்தாலும், ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை, முதலீடு என்பது நாட்டிற்கு அப்பால் செல்லாத வகையில், தற்போதைய காப்பீட்டுத் துறை முதலீடுகள் போல இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  இந்த ஓய்வூதிய அமைப்பில் தொழிலாளர்கள் சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சந்தாதாரர்களும், சிறப்பு குழுவில் கூட்டு பிரதிநிதிகளாக ஏற்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.  அந்நிய நேரடி முதலீட்டை ஓய்வூதிய திட்டத்தில் 28 சதமானம் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தக் குழு அறிவுறுத்தியது.  ஏனென்றால், நிதித்துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் / தொழில்மைய அமைப்புகள் போன்றவற்றோடு, இந்த முதுமைக்கால ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதை ஒப்பிட முடியாது”. நேரடி அந்நிய முதலீட்டை ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிப்பது என்பதை, தற்போதைய சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் கொண்டுவந்த பின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும் குழு தங்களது பரிந்துரையில் சிபாரிசு செய்துள்ளது. இந்த திருத்தங்கள் மக்களவையின் ஒப்புதல் பெற வேண்டும்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பில் உள்ள சில உறுப்பினர்களே இந்த நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  எனவே, குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை ஏற்க மாட்டார்கள்.  பாரதீய ஜனதா கட்சியோ, நேரடி அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும், ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதரவாக உள்ளது.  இடது சாரிகள் மட்டுமே இந்த ஓய்வூதிய நெறி மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஓய்வூதியத்தில் நேரடி அந்நிய முதலீட்டையும் எதிர்த்து நிற்பர் என்று தெரிகிறது. _____________________________________________________________ நன்றி   :   டி . கே . ராஜலட்சுமி , ஃபிரண்ட்லைன்   ,  தமிழில்   –   சித்ரகுப்தன்   8  குஜராத்தின் வளர்ச்சிக்காக.. குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்! மோடியின் குஜராத் பெருமையுடன் அளிக்கும் சாதனை! சிலிக்கன் பாறையை உடைக்க வரும் ஏழை தொழிலாளர்கள் கொடூரமான நோயினால் கொலை!! “ ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து , வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘ கூலி ’ தொழிலாளிகள் ‘ சிலிக்கோசிஸ் ’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே , தடுக்க இயலாமல் “ சாவை ” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது ” [Chap7A] இடது) சிலிக்கோசிஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி புத்தா மற்றும் அவரது 16 வயது மகள் காம்மா   ( மற்றும்) சிலிக்கான் துகள்கள்    ( வலது) குஜராத் பலசினோர் மாவட்ட சிலிக்கான் பாறை நொறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி நோய் தாக்கிய ஒரே வருடத்தில் எலும்புக்கூடாக காட்சி தரும் 20 வயது சனோ. மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது. குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது. தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது. குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்? பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது. உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங். அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார். சர்தார் சரோவர் அணை கட்டியதால் வாழ்விழந்து, குஜராத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ம.பி. விவசாயிகள். விவாசாய வேலை இல்லாத போது இவர்கள் பிழைப்புக்கு குவார்ட்சு குவாரிகளே ஒரே வழி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார். கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா. _________________________________________________________ நன்றி- தி இந்து நாளிதழ் (16-04-11) மற்றும்  செய்தியாளர் திரு மஹிம் பிரதாப் சிங் தமிழில் – சித்ரகுப்தன்   9  இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத் கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது “விவசாய தற்கொலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், நாட்டை ஆள்பவர்களும் இதன் மீது சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  இது தொடர்பாக பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் அடிக்கடி எழுதி வருகிறார்.  சமீபத்திய புள்ளி விபரங்களின்படி விவசாயத்துறைக்கு  அமைச்சராக இருந்தவரின் மகாராஷ்டிரா மாநிலம் வெட்கி தலைகுனியும் நிலையில் உள்ளது என்ற வகையில் தொகுப்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். [Chap18B] கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமாக, இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஷ்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. [Chap8B] மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி – படம் நன்றி thehindu.com 2010-ம் ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை  மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய வருட விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கிறது.  2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்: மகாராஷ்டிரா(+ 269),  கர்நாடகா (+ 303), ஆந்திரப் பிரதேசம் (+ 111). தேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்கைள பார்க்கையில் கடந்த 8 வருடங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 2008-ல் 14 மாநிலங்களில் 2010-ல் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 மாநிலங்களில் 5 அல்லது சில எண்ணிக்கையில் குறைந்துள்ளது.  அதே சமயம் 2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது.  சதீஷ்கர் (-676), தமிழ்நாடு (-519), ராஜஸ்தான் (-461), மற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (-158), புதுச்சேரி (-150), உத்திரப்பிரதேசம் (-108), மேற்கு வங்கம் (-61), மற்றும் குஜராத் (-65).  ஆனால் ஒட்டுமொத்த நிலவரம் என்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. 1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது.  இந்த விபரங்களில் மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.  2010-ல் 66.49 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவின் கதை என்பது எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது.  அந்த மாநிலத்தில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை30,415 என உயர்ந்துள்ளது.  பின்னால் உள்ள காலத்தை பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் இந்த மாநிலத்தில் மட்டும் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த காலத்தில்தான் பிரதம மந்திரி நிவாரண உதவிகள், முதலமைச்சர் நிவாரண உதவிகள் மற்றும் 2008-ம் ஆண்டு கடன் தள்ளுபடிகள் என்ற நடவடிக்கைகளுக்கு தொகைகள் அதிகம் ஒதுக்கப்பட்டது. இந்த 14 ஆண்டுகாலத்தில் இடைவெளியே இல்லாது தொடர்ந்து விவசாயிகள் வாழ வழியில்லாமல் போன இதே மகாராஷ்டிரா மாநிலம் தனிநபர் வருவாய் கணக்கீட்டில் முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.  ஒட்டுமொத்தமாக ரூ 74,027 என பார்க்கும் போது மிகச் சிறிய மாநிலங்களான ஹரியானா மற்றும் கோவாவிற்கு பின்னர் இடம் வகிக்கிறது இந்த மாநிலம். மத்திய விவசாய அமைச்சர் இந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு,  சொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் 6 முறை இந்த பதவி இந்த மாநிலத்தவருக்கு கிடைத்துள்ளது.  __________________________________________________   நன்றி – திரு பி.சாய்நாத் , தி இந்து நாளிதழ்   தமிழில் – சித்ரகுப்தன்   10 வைப்ரன்ட் குஜராத்! தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் ‘வைப்ரன்ட் குஜராத்’தினுடைய யோக்கியதை என்ன? Ø  கூடுதலாக்கப்பட்டுள்ள கடுமையான வேலைப்பளு மற்றும் , தொழிற்சாலையின் பணிச்சூழல் காரணமாக சமீப நாட்களில் பலர் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். Ø  சில வாரத்திற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட தொழிற்சாலை ஆய்வாளர் தனது ஆய்வின் போது 7 தொழிலாளா்கள் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து பதிவு செய்துள்ளார். Ø  பணிச்சுமையை கண்டித்து , கட்டாயப்படுத்திய பணி நேர நீடிப்பை கண்டித்து 30 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Ø  சமரச நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்துவதற்கு பதிலாக “ என்ன அங்கே நடக்கிறது என கடுமையோடு வினவும் மாநில முதல்வர் ” Ø  உடல்நலமில்லை , பணியில் சிரமம் இருக்கிறது என தெரிவித்த தொழிலாளர்கள் பலர் அந்த தொழிற்சாலையின் அடுத்தடுத்த மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு அதிரடி ஊர் மாற்றம். Ø  நிர்வாகத்தின் சார்பில் மாநில முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களில் 250 பேரை டிஸ்மிஸ் செய்யப் போகிறோம் என பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கும் நிர்வாகத்தின் துணைத் தலைவர்   பி.பாலேந்திரன். Ø  இவையெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா ?  வருடத்தில் ஒரு நாள் கூட இம்மாநிலத்தில் தொழிலாளாளர்கள் அமைதியின்மை ( labour unrest) என்பதை பார்க்க முடியாது என பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்ம மாண்புமிகு பாசிச நாயகனான மோடியின் குஜராத்தில்தான் !! குஜராத்தின் ஹலோல் எனுமிடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் அமைந்துள்ளது.  இதில் செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த தொழிற்சாலையில் ஐஎன்டியுசி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக டிசம்பரில் 3 வருடம் அமுலில் இருக்குமாறு பணிச்சுமை விபரங்களுடன் இணைந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது. [vibrant-gujarat] இருப்பினும் பணிச்சுமை மிகுதியின் காரணமாக, கட்டாயப்படுத்தி தொடர்ச்சியாக கூடுதல் நேரம் பணிபார்க்க கட்டாயப்படுத்தலின் காரணமாக பலர் தீராத முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கிறார் மஹிர் தேசாய், பொதுச் செயலாளா், குஜராத் காம்டர் மண்டல் எனும் ஐஎன்டியுசி சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர். குஜராத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையின் விளைவுகளை 2010-11- ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஆண்டில் அதிகமான தொழிற்சாலை கதவடைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஹலோல் ஆலைப்பிரிவில் சுமார் 900 பணியாளர்கள் வருடத்திற்கு 85,000 கார்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தினால் சுமார் 1500 கார்கள் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதி பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவோடு “தர்ணா”ப்போராக தொடங்கியது, தொடர்ந்து வேலை நிறுத்தமாக மாறியது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு புறம் சட்ட விரோத வேலைநிறுத்தம் என்று வைத்துக் கொண்டாலும் அதிகமான அளவில் தொழிலாளர்கள் பங்கு பெறும் போது மாநிலத்தின் தொழிலாளர் துறை தலையிட்டு சமரச முயற்சிக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.  ஆனால் அது போன்ற முயற்சி எதுவும் துவக்கப்படவில்லை. ஐஎன்டியுசி சங்கத்தின் தலைவர்  நிஹின் மித்ரா தெரிவிக்கையில்  தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது ஒவ்வொருவருக்கும் சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் பலர் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.  உடல் நலமில்லை என புகார் தெரிவிப்பவர்களில் பலா் இந்த ஆலையின் விற்பனை பிரிவுகளான டில்லி, குர்கான், சென்னை மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  மறுபுறம் 4 தொழிலாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தலையிட்டு தனது அடக்குமுறையை உபயோகித்து பல தொழிலாளர்களை வெளியேற்றியுள்ளது.  இது போன்ற வேலை நிறுத்தங்களுக்கான தொழிலாளர்களின் ஆதரவு பெருகும் சூழல் ஏற்பட்டால் அருகிலுள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியிலிருக்கும் தொழிலாளர்களின் பணி பறிபோய்விடும் என மிரட்டும் போக்கை கடைப்பிடிப்பது இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழக்கமாக உள்ள ஒன்று என்கின்றனர் இங்கு வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கொடுத்தாலே இந்தியாவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு தொழில் துவங்க வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கு இதன் தொழிலாளர்களால் புகார் அனுப்பப்பட்டு தொழிலாளர் நலன் காக்கும் பணி இவரது பணியில் ஒரு பகுதி என்று கருதக் கூடிய மாவட்ட ஆட்சித்தலைவரை இது குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது. ரூ 7000 மட்டுமே சம்பளமாக பெறும் தொழிலாளியை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றினால் எவ்வாறு அவரது குடும்பத்தை பராமரிக்க இயலும் என்கின்றனர் இங்குள்ள தொழிற்சங்க தலைவர்கள். இந்த நிறுவனத்தின் உதவி தலைவர் பி. பாலேந்திரன் தெரிவிக்கையில் கடந்த ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு தொழிலாளர்கள் நல்ல முறையில் சம்பளம் பெற்று வருகின்றனர்.  இவர்களது வேலை நிறுத்தம் என்பது தேவையற்றது.  இந்த வேலை நிறுத்தத்தை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் இது சட்ட விரோத வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.  எனவே தொழிலாளர்கள் உடனடியாக வேலை நீக்கத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கிறார். இதன் நடுவில் பி.பாலேந்திரன் மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து கேட்ட போது சட்ட விரோத வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது எனவே 250 பணியாளர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யப் போகிறோம் என அனுமதி கேட்கப்பட்டது என்ற செய்தியை மறுக்கவில்லை. மற்றொரு புறம் இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்திரவு பிறப்பிக்கப்பட்டு 4 பேர்கள் சேர்ந்து நின்றால் கூட காவல் துறையினரால் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை என்கின்றனர் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக, மாநிலத்தின் எல்லைக்கருகிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுமாக அமைந்துள்ள தலேகான் தொழிற்சாலைக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது. இணைய தளங்களில் வெளியான இந்த வேலை நிறுத்தம் பற்றிய செய்திகள், மற்றும் வட மாநில ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த அளவிற்கு மட்டுமே விவரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் விளைவுகளினால் இந்தியாவில் தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ள “சிறப்பு பொருளாதார மண்டலங்களின்” கீழ் வரும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களை கையாள்வது, அவர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விடுவது, மிரட்டுவது, ஊர்மாற்றம் செய்வது, வேலைநீக்கம் செய்வது, என்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் என்பது மிகுதியாகவே இருந்து வருகிறது.  கையாலாகாத தொழிலாளர் துறை என்பது தலையிடுவதோ, தனது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதோ சுத்தமாக இல்லை என்பதே எதார்த்தம். “தொழில்துறையில் புரட்சி, வளர்ச்சியில் மின்னும் எங்கள் தேசத்தை பாருங்கள்” என்கிற மோடியின் குஜராத் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.  ஓட்டுக்கட்சி சங்க தலைமைகளை புறந்தள்ளி தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகவும் புரட்சிகர அரசியலின் கீழ் ஒன்றிணைந்து போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிகரமாக இருக்கும். முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தாலாட்டும் மோடியின் குஜராத், தொழிலாளிகளின் உரிமையை எப்படி காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு இந்த செய்தியே போதுமானது. ________________________________________________ –   சித்ரகுப்தன் 11 மாருதி முதல் ஹூண்டாய் வரை… மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்! மானேசர் விதிவிலக்கான ஒன்றல்ல. ஆனால் குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று “தென்னக டெட்ராய்டில்” உரிமைகள் மீதான தடைக்கற்கள்! ஹரியானா, மானசரிலுள்ள மாருதி சுசுகி ஆலையில் தொடர்ந்த நிகழ்வுகளால் தொழிலாளர்களின் 13 நாட்கள் வேலை நிறுத்தத்தின் முடிவில் கடந்த ஆண்டு ஆலை மூடல் அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் கடந்து விட்டது என்றாலும் அந்த வேலை நிறுத்தத்தின் முடிவில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பெற்ற வாக்குறுதிகள், குறிப்பாக நிரந்தர தொழிலாளிக்கு ஈடான சம்பள விகிதங்கள் ஒப்பந்த தொழிலாளிக்கும் அமுல் படுத்துவது, தொழிலாளர்களுக்கான குறை தீர்ப்பதற்கான குழு ஒன்றை நிறுவுவது ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதே போன்ற ஒரு பாவப்பட்ட, கொந்தளிப்பான சூழ்நிலையில் மேற்பார்வையாளர் ஒருவர் தொழிலாளி ஒருவரை சாதிப்பெயர் சொல்லி திட்டியது, உடனடியாக தொழிலாளர்கள் ஒன்றுபடவும், அந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவும் வழிவகுத்தது. அதனால் ஏற்பட்டவன்முறை மீது நடுநிலை பார்வையாளர்கள் மூலம் விசாரணை துவங்கியுள்ளது. [மாருதி-மனேசர்-1] இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஐந்து வெவ்வேறு தரப்பிலிருந்து அறிக்கைகள் பெற்றுள்ளோம். நிர்வாகத்தரப்பில் வன்முறை நடந்த சில மணித்துளிகளிலேயே தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்- அதன் காரணமாக ஒரு மேலாளர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இந்த கூற்றை மறுத்தனர். குறிப்பாக அவர்கள் தெரிவிப்பது யாதெனில், தொழிலாளர் தரப்பில் வன்முறையின்றி அமைதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தரப்பில் ஆலைக்குள் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினர்தான் தொழிலாளர்களை தாக்கத் துவங்கினர் என்றனர்.  அதன் காரணமாக நேர்ந்த குழப்பத்தில் ஏற்பட்ட வன்முறை என்பது ஒருவர் மரணத்தில் சென்று முடிந்தது. தொழிலாளியிடம் கேட்டறிந்ததும், சில ஊடகங்கள் வெளிச்சொன்னதும், தொழிற்சங்கத்தினர் சொல்வதிலிருந்தும், அதாவது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறை என்ற கருத்துடன் ஏறக்குறைய ஒத்துப் போகிறது. மூன்றாவது பார்வையாக புலனாய்வு துறை வாயிலாக அரசிற்கு கிடைத்த தகவலின் பேரில் அரசு அதிகாரிகள் தரப்பு யாதெனில் மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களிடையே ஊடுறுவி தொழிற்சங்கங்களில் கலந்ததால் அமைதியின்மை என்பது உருவானது என்கின்றனர். நான்காவது கருத்தாக ‘நடுநிலை பார்வையாளர்கள்’ மாருதியோடு வணிக தொடர்புகள் வைத்திருக்காதவர்கள் தரப்பிலிருந்து இத்தகைய அமைதியின்மை என்பது உற்பத்தியை பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டது.  அது குறிப்பிட்டு சொன்னது போல அத்தகைய அமைதியின்மை சூழல் இரக்கமற்ற முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றது. ஐந்தாவது கருத்து மானேசர் கிராமத்தில் மாருதி உற்பத்திக்கு ஆதரவாகவும், தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டுவந்த மகாபஞ்சாயத்து என்ற அமைப்பிலிருந்து வெளிப்பட்டது.அந்த மகா பஞ்சாயத்து என்ற அமைப்பில் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும், அந்த ஆலை அமைவதற்கு நிலங்கள் கொடுத்து அதனால் பயன் பெற்றவர்கள் மற்றும் அந்த தொழிலாளர் களுக்கு தொடர்புடைய விதத்தில் தொழில்கள் செய்து லாபம் பார்ப்பவர்களாக இருந்தனர். இந்த வகையான பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த நிலையிலும், பெரும்பான்மை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் மீது சினத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த செய்தியை சொல்லின.  ஒரு பிரபல தமிழ் செய்தித்தாள் கூட “மத்தியஸ்தர்கள்” (அரசியல் படுத்தப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள்) என்ற தலைப்பிலான தனது தலையங்கத்தில் அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, கள யதார்த்தத்தை திசை திருப்பும் வண்ணம் செயல்பட்டனர் என விவரித்திருந்தது.  நிர்வாகத் தரப்பு கூற்றை மட்டும் வைத்து வெளியிடப்பட்ட இத்தகைய செய்திகள் தொழிலாளர்கள் கோபத்தை தூண்டவும், வன்முறை ஏற்படவும் காரணமானது. ஆனால் விஷ‌யங்கள் அவ்வாறாக இல்லை.   தொழிலாளர்கள்  தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதாவதுஅவர்களை தாக்க கூலிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுடன், அதன் மீது ஆய்வும் மேற்கொள்ளப்படவுமில்லை. இல்லையென்றாலும், பல அறிக்கைகள் ஆலையில் தொழிலாளர்களின் நிலைகளை படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது.  கடந்த வருடம் தி இந்து நாளிதழில் வெளிவந்த (மாருதி சுசுகியில் தொழிலாளர்கள் போராட்டம் – 28 செப் 2011) செய்தி தொகுப்பில், எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உண்மையான ஊதியம் அவர்கள் பணி புரியும் நேரம் மற்றும் வாழ்நிலைக்கு போதுமானதாக உயர்த்தப்படவில்லை என்பதையும் நிர்வாகத்தின் வருவாய் உயர்விற்கேற்ப தொழிலாளர்கள் ஊதிய நிலை மாற்றியமைக்கப்படவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தது.  எனவேதான் நிர்வாகத்தரப்பில் தொழிலாளர்களையே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்ற நிலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. மிக சாதாரணமாக தொழிற்சங்க தலைவர்களை ‘வில்லன்களாக’ சித்தரித்து அதன் மூலம் அவர்கள் ஆலையின் தளத்தில் தொழிலாளர்களிடையே தோன்றும் பிரச்சனைகளின் மீது தலையிடவிடாமல் பிரித்து வைக்கப்பட்டனர்.  இது மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.  தொழிலாளர்கள் ஒரு பிரச்சனையின் மீது ஒன்றுபட்டு கருத்து செலுத்தாமலிருக்க தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும் பிரித்தாளும் நடைமுறை கையாளப்பட்டது.  தொழிற்சங்கங்களின் விஷ‌யங்களை மேலும் நலிவடையச் செய்யும் வண்ணம் அவர்கள் “சுயநலவாதிகள்” மற்றும் “கள்ளத்தனமானவர்கள்” என முத்திரை குத்தப்பட்டனர் (இவற்றை கையாள எளிதாக மாவோயிஸ்ட் என்ற அடையாளமும் குத்தப்பட்டது). பிரபலமான தமிழ் தினசரி ஒன்று இந்த விஷ‌யத்தில் நீண்ட தலையங்கம் ஒன்றை எழுதியது – அதில் போருக்கு தயார் நிலையில் இருப்பதான தொழிலாளி பக்கத்தை எடுத்துக் கொண்டு அவன் தொல்லையளிக்கும் தொழிற்சங்க தரப்பிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியது. ஹரியானாவோ, தமிழ்நாடோ எதுவாக இருப்பினும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக தொழிற்சங்கங்களை பூதாகரமாக காட்டுவதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை.  ஊடகங்களே அந்த பணியை செய்கின்றன.  வடக்கே விந்திய சாரத்தில் மானேசரில் நடந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் தொழிலில் கோலோச்சிவரும் முதலாளிகள் கவனத்தை ஈர்த்ததுடன், கவலையுறச் செய்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போர்க்குணம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு அனுபவம் உண்டு.  தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மேற்பார்வையாளர் உயிரிழப்பில் முடிந்த கோவை பிரிகால் ஆலையின் நிகழ்வுகள் 2009-ல் பெரிய அளவில் செய்தியானது.  சென்னையில் ஹூண்டாய் தொழிலாளர்கள் ஒன்றிணைந்ததற்காகவும், மே தினம் கொண்டாடியதற்காகவும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  தொழிற்சங்கம் துவங்கி இணையவேண்டும் என்கிற அவர்களின் ஆசை கொடுஞ்செயாக பார்க்கப்படுகிறது.  அதை முறியடித்ததற்கு நன்றி கடனாக மாணவர்களை ஈடுபடுத்தி போக்குவரத்து சரிசெய்ய என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறைக்கு 100 கார்கள் ஹூண்டாய் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இதன் நடுவில் உற்பத்தி நிபந்தனைகள் என்பது தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒவ்வொரு 48 வினாடிக்கும் ஒரு கார் வெளியேற்றப்பட வேண்டும்.  அதாவது தொழிலாளர்கள் கழிவறைக்குச் செல்ல, ஒரு கப் தேநீர் அருந்த சில நிமிடங்கள் செலவழிப்பது கூட அரிதாக இருந்தது.  பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்த பின்னர்தான் ஆலையை அடைய முடிவதுடன், அதற்கு பின்னர் 8 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது.  சென்னையில் வட-மேற்கில் தொழிற்சாலை பகுதியில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் பணி நிலை என்பது இவ்வாறாகத்தான் இருக்கிறது. பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பாலும் இளைஞர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக ரூ 3500 முதல் 4000 வரையில் ஒரு மாதத்திற்கு என்ற குறைந்த சம்பள விகிதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இங்கே நாம் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வந்து இதைவிட மோசமான பணிநிலைகளில் ஒரு நாளைக்கு ரூ 140 என்பதை விட குறைவான கூலியில் பணிபுரிவதைப்பற்றி குறிப்பிடவில்லை.  அதுவும் மிகத் திறமையாக லாபம் கொழிக்கும் ஆட்டோமொபைல் தொழிலில் இவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் பல வருடங்களுக்கு முன்பாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சி என்று பேசப்பட்ட 1970களை திருப்பிப்பார்த்தால், அன்றும் இதே போல் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டிவிஎஸ், எம்ஆா்எப் போன்றவர்கள் செயல்பட்டு வந்ததும், தொழிற்சங்கங்களை பிரித்தாள்வதில் சாதனைகள் புரிந்தனர் என்பதும் அதற்கு அவர்களுக்கு முனைப்பாக திமுக மற்றும் அதிமுக தலைமையிலான அரசாங்கங்கள் உதவிகள் புரிந்துள்ளனர் என்பதும் தெரியவரும். தொழிலாளர்கள் மீது தடியடி தாக்குதல்கள் மேற்கொள்வதற்கும், தொழிற்சங்க தலைவர்கைள தங்கள் விருப்பத்திற்கேற்ப பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கங்கள் சிறிதும் யோசிக்காமல் செயல்பட்டு வந்துள்ளன.  இன்று ஹூண்டாய் மற்றும் கொரியன் நிறுவனங்களின் சங்கிலிதொடரில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல சிறிய நிறுவனங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆளும் கட்சி அரசியல் வாதிகளை கைக்குள் வைத்திருப்பதோடு, பல தாராள செய்தி ஊடகங்களையும் தமிழர்களில் பல நடுத்தர வர்க்கத்தினரையும் கையில் வைத்துள்ளன. இந்த வகையில் பார்க்கப்போனால் மானேசர் நிகழ்வு என்பது விதிவிலக்கான ஒன்றல்ல.  ஆனால் இந்த சூழலில் மூலதனம் இட்டு குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், ஆளுமையை நிறுவ முற்படுதலில் தொடர்ந்து முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது வித்தியாசமாய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “சிவப்பி”ற்கெதிராக அமைக்கப்பட்ட மகாபஞ்சாயத்து என்ற அமைப்பினரோ, இதற்கெல்லாம் காரணம் “மாவோயிஸ்ட்கள்” என கூறும் அரசாங்கமோ உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றன _________________________________________________________ வ.கீதா, மற்றும் மதுமிதா தத்தா – நன்றி – தி இந்து தமிழில் – சித்ரகுப்தன்   12 சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத் பென்ஸ் கார்களின் வரவால் “ஊரக மறு மீட்சி ” என ஊடகங்கள் கொண்டாடும் நேரத்தில் ” மறு மீட்சி ” ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது   மெர்சிடீஸ் பென்ஸ் என்ற சொகுசு கார்களின் வரவால் மராத்வாடா மாநிலத்தில் “ஊரக மறுமீட்சி ” என ஊடகங்கள் கொண்டாடும் அதே நேரத்தில் “ மறுமீட்சி ” ஆண்டில் விவசாயிகள்17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என  ஆய்வறிக்கை தெரிவிக்கிறது [2010 S400 HYBRID] 2010 S400 HYBRID பிற்படுத்தப்பட்ட மராத்வாடா மண்டலத்திலுள்ள அவுரங்காபாத்தில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 150 மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் ரூ 65 கோடி அளவிற்கு வாங்கப்பட்டதால் ஊடகங்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.  பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 40 கோடி அளவிற்கு கார் வாங்குவதற்கு கடனுதவி செய்துள்ளது.  அவுரங்காபாத்  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் திரு டேவிதாஸ் துல்சாபுர்கர் இதை தெரிவித்ததோடு வட்டி விகிதம் 7 சதவீதம் என்றார். பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில் “இந்த வியாபாரத்தில் பங்கு வகித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இனிவரும் நாட்களிலும் இதுபோன்றவற்றிற்கு சேவை செய்ய காத்திருக்கிறோம் “என்றார். விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில், பென்சு காருக்கு கடன் வழங்க போட்டி! இந்த மெர்சிடீஸ் சொகுசு கார் பரிவர்த்தனை என்பது ஏறக்குறைய மராத்வாடா மாவட்டத்திலுள்ள பத்தாயிரக்கணக்கிலான வீடுகளின் வருட வருவாய்க்கு ஈடானது.  எண்ணிலடங்காத பல விவசாயிகள் தங்கள் விவசாயத் தொழிலுக்கு கடன் பெற இயலாமல் போராடி வருகின்றனர். இந்திய விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெறுவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதுடன், பத்தாயிரக் கணக்கில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது.  பெரும்பாலும் விவசாயிகளுக்கு கடன் என்பது எழுத்தில் மட்டுமே உள்ளது. 2005க்கு முன்பாக யார் வங்கிக் கடன் பெற்றாலும் வட்டி விகிதம் என்பது 9 முதல் 12 சதவீதமாக இருந்தது.  பெரும்பாலானவர்கள் விவசாயம் சாராத கடனாக கூடுதல் வட்டியில் பெற நிர்பந்திக்கப்பட்டனர்.  ஒரு சொகுசுக் காரை வாங்க 7 சதவீத வட்டியும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை வாங்கு 12 சதவீத வட்டியும் என்பது அங்கே யதாரத்தமாக இருந்தது.  இதனால் புற்றீசல் போல் தோன்றிய சிறு சிறு நிதி நிறுவனங்கள் 24 முதல் 36 சதவீத வட்டி மற்றும் அதற்கும் கூடுதலாக வட்டி பெற்றுக் கொண்டு கடன்கள் வழங்கின. கடன் தொல்லையினால் பட்டினிக்கு ஆளான விவசாயிகள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.  1991இலிருந்து 10 ஆண்டு காலத்தில் இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை, பண்ணைகளை அடகு வைப்பது என்பது 26 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாகி 48.6 சதவீதமாகியது.  இது கூட குறைத்து மதிப்பிடப்பட்ட அலுவல் ரீதியான எண்ணிக்கைதான்.  அதே நேரத்தில் அரசின் கொள்கை சார்ந்த பயங்கர தாக்குதல்களையும் விவசாயிகள் சந்திக்க நேர்ந்தது. ஒரு புறம் விவசாய விளைபொருளுக்கான உற்பத்தி செலவு என்பது சந்தை சார்ந்த விலை என அதிகமாகவும், மறுபுறம் விளைந்தவற்றை விற்க செல்லும் போது வணிக ரீதியாக விலைகுறைந்தும், வலிமைமிக்க தரகு முதலாளிகளால் குறைக்கப்பட்டும் விலைபோயின.  எனவே விவசாயத்தில் முதலீடு என்பது முற்றிலும் சரிந்தது.  வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தருவதிலிருந்து மாறி நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்வதற்கு கடன் வழங்க துவங்கியதால், விவசாயிகள் கடன் தொல்லையால் பிழிந்தெடுக்கப்பட்டனர்.  கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் கடன் தொல்லையினால் இறந்தவர்களே மிக அதிகம் (அத்தகைய நசுக்கும் நடவடிக்கையில் சிறு சிறு நிதி நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன) விவசாயக் கடன்கள் பல கடத்தப்பட்டுவிட்டன.  ஆகஸ்ட்டு 13 இந்து நாளிதழில் வெளியான விபரம் அந்த அதிர்ச்சி தரும் தகவலை நமக்கு காண்பிக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 2008இல் வழங்கப்பட்ட விவசாயக் கடனில் பாதி ஊரக வங்கியினால் வழங்கப்படாமல் நகர மற்றும் மாநகரக் கிளைகளினால் வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 42 சதவீதக் கடன் மும்பையில் வழங்கப்பட்டுள்ளது.  அதுவும் சிறு விவசாயிகளுக்கு கிடைக்காமல், வலிமையின் அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தேசிய குற்றப் பதிவு குழுமத்தின் பதிவுகள் பல ஊடகங்களுக்கு வந்த போதிலும் சொகுசுக் கார் விற்பனையை மிகவும் பெரியதாகவும் ஊரக மறு மீட்சி போலவும் ஊடகங்களினால் கொண்டாடப்பட்டது. ஊரக மறுமீட்சி என்று சொல்லப்பட்ட 2009இல் அதீதமாக அதிகரித்து ஏறக்குறைய 17,368 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.  அவை 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் என்பதுடன், 2004இலிருந்து பார்க்கையில் மிகவும் மோசமானதாகவும், உள்ளது.  இவற்றோடு சேர்த்தால் 1997 முதல் 2009 வரை விவசாய தற்கொலை சாவுகள் 2,16,500 ஆகிறது.  இந்த தற்கொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், விளை பொருளுக்கு விலைகிடைக்காமல் கடனில் வாழ்வை முடித்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எச்சரிக்கத்தக்க வகையில் மிக அதிகமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசிய குற்றப் பதிவு குழுமம் விவசாயிகள் தற்கொலை சம்பந்தமான பதிவுகளை 1995 முதல் சேகரித்துள்ளது.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் 1997 முதல் உள்ள பதிவுகளையே கவனத்தில் கொள்கின்றனர்.  ஏனெனில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு பதிவுகள் முற்றுப் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றனவாம். 1995இல் இந்த கணக்கெடுப்பு எடுக்கும் முறை புதியது என்பதால் இரண்டு பெரிய மாநிலங்களில் அதாவது தமிழ்நாடும், ராஜஸ்தானும் அந்த வருடத்தில் தங்கள் மாநிலத்தில் தற்கொலையே இல்லை என தெரிவித்திருந்தன.  ஆனால் 2009ல் பார்க்கும் போது அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 1900 விவசாய தற்கொலைகள் பதிவாகியுள்ளது.  1997 லிருந்து எல்லா மாநிலங்களும் பதிவுகளை முழுமையாக கொடுத்துள்ளன. தேசிய குற்றவியல் பதிவு குழுமத்தின் 2009ஆம் ஆண்டு பதிவுகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளது.  ஆனால் 2010ல் 16,000 விவசாயிகள் தற்கொலை இருக்கலாம் என நாம் அனுமானிக்க முடிகிறது. கடந்த 6 ஆண்டு சராசரியைப் பார்க்கிற போது ஆண்டிற்கு 17,104 உயிரிழப்புக்கள் நேரிடுகிறது.  இந்த 16,000 ஐயும் 2,16,500 உடன் சேர்த்துக் கொண்டு, 1995/96ஆம் ஆண்டுகளுக்கு நிறைவடையாத பதிவுகளாக உள்ள 24,449 தற்கொலைகளையும் சேர்த்தால் 1995 முதல் 2010ற்குள் 2,56,949 உயிரிழப்புக்கள் வருகின்றது.  ஒரு கணம் இந்த எண்ணிக்கையை நினைத்துப் பார்ப்போம். அதாவது 1995இலிருந்து கால் கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அதாவது இந்த நாட்டில் கடந்த 16 ஆண்டு கால மனிதகுல வரலாற்றில் மிக அதிகமான தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது இந்த தற்கொலைகளினால் ஏறக்குறைய ஒன்றரை கோடி குடும்ப உறுப்பினர்கள் மன வேதனைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.  கோடிக்கும் அதிகமானோர் தற்கொலையை நோக்கி துரத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அருகிலேயே இத்தகைய சோகமான முடிவுக்கு தள்ளப்படுவதை அன்றாடம் கண்ணுறுகின்றனர்.  அரசின் கொள்கைகள் மாறாததால் இத்தகைய முடிவைத் தேடிக் கொள்வது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  முதன்மையானதாக கருதப்படும் இந்தியர்களில் எங்களை தனித்து விடுவித்து விடுங்கள் என்ற இந்த இதயமற்ற போக்கினை கற்பனை செய்து பார்க்க இயலாததாக உள்ளது. சொல்லப்போனால் இந்த பதிவுகளும் குறைத்து மதிப்பிடப்பட்டவைகளின் துவக்கம்தான்.  பல பெரிய விவசாய குழுக்களெல்லாம் இந்த உள்ளூர் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை.  குறிப்பாக சமூகத்தில் ஒரு பெண் விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது சாதாரண தற்கொலையாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.  ஏனெனில் நிலங்கள் பெண்கள் பெயரில் இருப்பது மிகக் குறைவே. இந்த வஞ்சனையான, பொய்யான கணக்கை பல அரசுகள் மேற்கொள்கின்றது.  மகாராஷ்டிரா அதற்கு குறிப்பிடத்த்க உதாரணம்.  ஒரே வாரத்திற்குள் மூன்று முறை வெவ்வேறான பொய்யான எண்ணிக்கையை சொல்லியுள்ளது.  இந்த ஆண்டு மே மாதத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விதர்பா மாவட்டத்தில் விவசாயத் தற்கொலை 5500 சதவீதம் மாறுபட்டது.  நான்கு மாதத்தில் மிகக் குறைவான 6 என சொல்லப்பட்டது.  (பார்க்க தற்கொலக்கு தகுதியாவது எப்படி? தி இந்து 13 மே 2010 நாளிதழ்) தேசிய குற்றவியல் பதிவு குழுமம் பதிவுகளின்படி மகாராஷ்டிராவில் 2009இல் 2872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாண்டுகளில் இதுதான் விவசாய தற்கொலையின் மிக மோசமான எண்ணிக்கை.  அது தற்போது 930இற்கு குறைந்துள்ளது உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதே.  ஆனால் உண்மை நிலையை பொய்யாக்க எந்த மாநிலமும் கடுமையாக முயற்சித்ததாக தெரியவில்லை. ஆனால் 13 வருடங்களில் மகாராஷ்டிர மாநிலம் நம்பமுடியாத தற்கொலை எண்ணிக்கை உயர்வையே கண்டிருக்கிறது.  திடீரென 2008இல் 430ம்- 2009இல் 930ம் குறைந்ததாக பதிவு செய்துள்ளது எவ்வாறு?  கடந்த 4 ஆண்டுகளில் சிரமம் அதிகமுள்ள விதர்பா மாவட்டத்தில் செயல்பட்ட அரசு அதிகாரி குழுக்கள் பல தற்கொலைகளை விவசாயம் சார்ந்த காரணமல்ல என தள்ளுபடி செயவதிலேயே கவனம் செலுத்தின. மகாராஷ்டிர அரசு இறப்பு எண்ணிக்கையை கணக்கெடுப்பதை விட பிரச்சனைகளை கணக்கெடுப்பதில் கவனம் செலுத்தியது. இன்னும் பிரச்சனைகள்தான் அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தை ஒப்பிடலாம்.  சில கோடி மக்கள் குறைவாக இருப்பினும் அங்கு விவசாயிகள் எண்ணிக்கை அதிகம். இரண்டு மாநிலங்களும் 1995இலிருந்து 15 ஆண்டுகளுக்கான பதிவுகள் வைத்துள்ளன.  அந்த மாநிலத்தின் விவசாய தற்கொலைகள் 3 ஐந்தாண்டுகளாக பிரித்துப் பார்த்தால் வர,வர கணிசமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 1999 உடன் முடிவடைந்த ஐந்தாண்டில் 1963 என்ற எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் (2004) 3647 எனவும், பின்னர் 2009இல் 3858 எனவும் உயர்ந்துள்ளது.  மேற்கு வங்கத்தின் ஆண்டு தற்கொலை இறப்பு சதவீதத்தில் கணிசமான குறைவு உள்ளது.  1999இல் 1454, 2004இல் 1200 எனவும், 2009இல் 1014 எனவும் குறைந்துள்ளது.  அங்கு விவசாயிகள் அதிகம் பேர் இருந்த போதிலும் மகாராஷ்டிரா மாநில இறப்பு எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குதான் இங்கு நிகழ்ந்துள்ளது.  பிந்தைய மாநிலத்தின் எண்ணிக்கை 1999 லிருந்து தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. தற்கொலை நிகழும் 5 முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா- மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கரில் 3இல் 2 பங்கு தற்கொலைகள் விவசாயி தற்கொலையாகவே உள்ளது.  28 மாநிலங்களில் ஏறக்குறைய 18இல் 2009ல் விவசாய தற்கொலை அதிகரித்துள்ளது.  சிலவற்றில் எண்ணிக்கை உயர்வு புறந்தள்ளும் வகையிலும், மற்றவற்றில் அவ்வாறில்லாமலும் உள்ளது.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 2008இல் 512 ஆக இருந்தது, 2009ல் 1060 என மிக அதிகமாக உயா்ந்துள்ளது.  மேலும் எண்ணிக்கை உயர்வில் 3ஆவதுபெரிய மாநிலமாக ஆந்திரா 309 அதிகரித்து 2009ல் பதிவு செய்துள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இத்தகைய உயிரிழப்பு எண்ணிக்கை சராசரி கடந்த 6 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.  2004 முதல் 2009 வரை பார்க்கையில் கடந்த 7 ஆண்டுகளை விட சராசரியாக 350 குறைந்துள்ளது. தற்போதுள்ள விவசாயக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும்.  சொல்லப் போனால் கடந்த 13 ஆண்டுகளில் தற்கொலை எண்ணிக்கையை குறைத்த மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொண்டால் ஆண்டு சராசரி விவசாய தற்கொலை 1371 இறப்புகள் என 1997 முதல் 2003 வரை இருந்தது.  2004 முதல் 2009 ல் சராசரி 1016 என 355 குறையத் துவங்கியது.  இருப்பினும் கேரளா வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.   உலகமயமாக்கலினால்  அனைத்து மாநிலத்திற்குமானபொருளாதார பாதிப்பு இது. இங்கு பெரும்பாலான பயிர்கள் பணப்பயிர்கள் ஆகும். காப்பி, ஏலம், தேயிலை, வெனிலா, மிளகு, அல்லது ரப்பர் போன்றவற்றின் உலக அளவிலான விலை மாற்றங்கள் இந்த மாநிலத்தையும் பாதிக்கும்.  சில பெருமுதலாளி கார்ப்பரேட் நிறுவனங்களால் உலக அளவில் இவற்றின் விலைகள் கையாளப்படுகின்றது.  தெற்கு ஆசிய சுலப வணிக உடன்பாட்டினால் ஏற்கனவே கடுமையான தாக்குதலுக்குள்ளான கேரளா தற்போது நாம் பாதிக்கப்பட்டுள்ள ஏசியன் என்பதாலும் பாதிக்கப்படப் போகிறது.  ஐரோப்பிய நாடுகளுடனான சுலப வணிக ஒப்பந்தமொன்றும் காத்திருக்கிறது.  கேரளா அதற்கான விலை கொடுக்கப் போகிறது.  2004க்கு முன்பாக இலங்கை மிளகை வாங்கிக் குவித்ததினால்(பெரும்பாலும் பல நாடுகளிலிருந்து மிளகு இலங்கை வழியாகவே வந்தது) கேரள மாநிலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது. தற்போது அத்தகைய குவிப்பிற்கு வரையரைகளை நாம் வகுத்துள்ளோம்.  இந்தியாவில் விவசாய தற்கொலைகள் என்ற ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளரான பொருளாதார பேராசிரியர் திரு கே.நாகராஜ் இவ்வாறு கூறுகிறார்.  “சமீபத்திய விவரங்களிலிருந்து விவசாய இன்னல் என்பது குறைந்தபாடில்லை, முடிவுக்கும் வரவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் அவற்றை துரத்துவதும் குறையவில்லை, முடிவிற்கும் வரவில்லை என்கிறார்.  மேலும் அவரது ஆய்வில் ஒருபுறம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகையில் அவர்களின் தற்கொலை இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்து விவசாயம் சார் இன்னல் இன்னும் எரிந்து கொண்டுதான் உள்ளது” என்கிறார். ________________________________________________________________________ – திரு பி.சாய்நாத் , நன்றி – தி இந்து 28/12/2010 தமிழில் – சித்ரகுப்தன் 13 இந்தியாவை ஆள்வது யார்? இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது வெளிநாட்டு தலையீடு என்ற பயம்  ஏன் உண்மை?  “ இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது ” பிரணாப் முகர்ஜி இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது.  அவருக்கு சாதகமான சூழல் ஏற்படும் வரை, ஒரே கண்ணாமூச்சி ஆட்டம்தான்.  அவர் சிறந்த அரசியல்வாதி என்பதற்காக அல்ல, எப்படியும் அவரை நிதித்துறையிலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்பதற்காக இந்திய கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கினார்கள் என்பது பரவலான கருத்து.  ஏனென்றால், கறுப்புப்பண புழக்கத்தை சமாளிக்கும் முயற்சியில், சமீபத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) முன்தேதியிட்டு வரிவிதிப்பதும், பொது ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (GAAR – GENERAL AGREEMENT ON ARMS REDUCTION) கட்டுப்படுத்துவதிலும், இவர் மிகவும் கறாராக இருந்தார். (இவரும் அம்பானி முதல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுகாக செயல்படுபவர்தான். காங்கிரசுக் கட்சியும் இத்தகைய வர்க்கங்களின் பிரதிநிதிதான். ஆகவே இவர் கறாராக இருந்தார் என்று கட்டுரையாளர் சொல்வது பொருத்தமாக இல்லை, அதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் – வினவு). ஆனால் உண்மையான நிர்ப்பந்தம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் அதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.  இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மேல்நாட்டு எசமானர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் மிகவும் விழிப்புடன் அறிந்து கொள்கின்றனர்.  நம் நாட்டு அரசியல் தலைவர்களும் கூட அதேபோல் மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர்.  பிரிட்டனும், நெதர்லாந்தும்  வோடபோன் விஷ‌யத்தில் அதிகமான செல்வாக்கை பயன்படுத்தினர்.  நமது அரசியலை இந்த வெளிநாட்டு சக்திகள் எவ்வளவு தீர்மானிக்கிறது பாருங்கள்? ஆட்சி அமைப்பு முறையில் தலையீடு! நமது அரசியலமைப்பு முறையில் மிகுந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய சில நிகழ்வுகள் சாட்சியமாக உள்ளது.  சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன்தனது இந்திய பயணத்தின் போது ஈரானுடனான நமது வர்த்தகம் சம்பந்தமாக விதித்த நிபந்தனைகள்,சில்லரை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி அழுத்தம் தருவதாக அமைந்தது, தரம் மற்றும் ஏழ்மை அமைப்பு இந்தியாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு, ஏர்செல்-மாக்சிஸ் உடனான வர்த்தக உறவு போன்றவற்றிலும் அந்நிய நிர்ப்பந்தம் சான்றாக நிற்கிறது.  மிகவும் வெளிப்படையாக தெரியாத பலவற்றில், இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவது, (பிரிட்டனின் ஈரோ பைட்டரை இந்தியா நிராகரித்ததில் பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி அடைந்தது) எண்ணை, எரிவாயு, அணுசக்தி போன்றவற்றில் அதிக முதலீடு, புதிய சந்தைகளை திறப்பது போன்றவற்றிலும் அந்நிய ஆதிக்கம் நிறையவே உள்ளது. 1987 லிருந்து போபர்ஸ் ஊழல் தொடர்ந்து இன்றுவரை நமது அரசியல் நிர்வாகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.  போபர்ஸ்-இந்தியா பீரங்கி ஊழலை விசாரித்து வந்த சுவீடனின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்டென் லிண்ட் ஸ்டார்ம், நேரு-காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பரான ஒட்டாவியோகுவாட்ரோச்சி, இந்த பீரங்கி பேரத்தில் கையூட்டு பெற்றவர்களில் ஒருவர் என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.  கடைசி நேரத்தில் இந்த பேரத்தை மாற்றியதில் அவரது பங்கு தெளிவானது.  கையூட்டு பெற்றதிலோ அல்லது அந்த பீரங்கிகள் நல்லவை என்பதிலோ எந்த அயயமும் இல்லை.  ஆனால் தெளிவுபடாத விபரம் என்னவெனில், யார் அந்த பணத்தை பெற்றது என்பதுதான். திரு குவாட்ரோச்சி காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை விட்டு தப்பி செல்ல அனுமதித்ததிலிருந்தே அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த நண்பர்கள் இங்கு உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.  மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட, பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டே இந்த விசாரணையை சீரழித்ததால், இது சம்பந்தமாக வழக்கு மலேசியா, பிரிட்டன், அர்ஜென்டினா, நீதிமன்றங்களில் தோல்வியடைந்தது.  அவர் மீது பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு அறிக்கையை நமது காவல்துறை அமுல்படுத்த முடியவில்லை.  ஏனென்றால், அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலும், நமது காவல்துறைக்கு மட்டும் “அகப்படவில்லை”. மிகப்பெரிய இடத்திலிருந்தே இதை மூடி மறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதை சாட்சியங்கள் கூறுகிறது.  அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த திரு எம்.எஸ்.சோலங்கி ஒரு கூட்டத்தில் தான் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகத்திடம் கொடுத்த ரகசிய குறிப்பிலிருந்ததை வெளியே சொல்வதைக் காட்டிலும், தனது அமைச்சரவை பதவியை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  அந்த நேரத்தில்தான் போபர்ஸ் பேர ஊழலை இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர்.  ஒரு சாதாரண தலைவருக்கு இத்தகைய ஒரு அரசியல் தியாகமா? ராஜிவ் காந்தி அந்த பணத்தை பெறவில்லை என்றால் வேறு யாருக்காக இந்த புலனாய்வை சீரழிக்க வேண்டும்?  இந்த கேள்விக்கான பதிலை அறிய வேண்டு மென்றால் புலனாய்வு அவசியம்.  இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு முறை பிரதமர் அலுவலகத்திலுள்ள ஒரு அமைச்சரை கறுப்புப்பணம் பற்றி பேட்டி கண்டபோது, அவர் இந்த போபர்ஸ் சம்பந்தமான கோப்புக்களை அன்றைய பிரதம மந்திரியிடம் கொண்டு சென்றதும், அந்த கோப்பை முடித்து விடாவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதாக தெரிவித்தார்.  காங்கிரஸ் அல்லாத பிரதம மந்திரிகளும் போபர்ஸ் புலனாய்வை சரியான திசையில் கொண்டு செல்லவில்லை.  காங்கிரசை சார்ந்த பிரதமர்களோ உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். கையூட்டு என்பது உலகளவில் சாதாரணமாகிவிட்டது.  ஸ்வீடன் உலகளவில் மிகக் குறைந்த அளவிலேயே ஊழல் உள்ள நாடாக அறியப்படுகிறது.  ஆனால் அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு கையூட்டு கொடுத்து வருவது இந்த போபர்ஸ் விஷ‌யத்தில் வெளிவந்துவிட்டது.  அவர்களது நாட்டின் சட்டங்களின்படி கையூட்டு கொடுப்பது சட்ட விரோதமானது என்றாலும், அமெரிக்காவிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கையூட்டு கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டனர். சமீபத்தில் மெக்சிகோவில் காலூன்ற வால்மார்ட் கையூட்டு கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளது.  இதையறிந்த மேல்மட்ட நிர்வாகமோ, இதை பகிரங்கப்படுத்துவதில், உள்துறை விசாரணைக்கு மூடுவிழா செய்துவிட்டது.  இந்த வால்மார்ட்தான் இப்போது இந்தியாவில் நுழைய முயற்சிக்கிறது.  திருமதி கிளிண்டன் தனது சமீபத்திய இந்திய பயணத்தின் போது சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டுக்கு கதவை திறந்து விட வற்புறுத்தியுள்ளார்.  தனது விஜயத்தின் போது அவர் சந்தித்த ஒரே முதலமைச்சர் மேற்கு வங்காள செல்வி மம்தா பானர்ஜியை மட்டுமே.  ஏனென்றால் ஆளும் ஜனநாயக கூட்டணியில் அவர் ஒருவர் மட்டுமே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருபவர்.  இது 1990களில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஹென்றி கிளிங்கர் மற்றும் பாதுகாப்பு, எரிபொருள்துறை செயலர்களும் என்ரான் நிறுவனம் இந்தியாவில் காலூன்ற மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டதை நினைவு கூறுகிறது.  இந்திய திட்டம் தீட்டுபவர்களுக்கு “கற்பிக்க” சுமார் 60 மில்லியன் டாலர் வரை செலவு செய்ய வேண்டியதாயிற்று என என்ரான் நிறுவனமே ஒத்துக்கொண்டதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. இது ஏதோ ஒரு சில (பன்னாட்டு நிறுவனங்கள்) கார்ப்பரேட்டுகள் மட்டுமே இவ்வாறு பல்வேறு வகையில் கையூட்டு கொடுப்பதற்கும், தங்களது அரசுகளை வைத்து கொள்கை முடிவுகள் மீது தங்களது நோக்கத்தை திணிப்பதுமான செயலில் ஈடுபடவில்லை.  பன்னாட்டு வங்கிகள் கூட இந்தியாவிலிருந்து இந்திய மூலதனத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையில் உதவுகின்றன.  அமெரிக்க மக்கள் ரகசிய வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள உதவிய மத்திய ஸ்விட்ஜர்லாந்து வங்கிக்கு அமெரிக்கா சுமார் 750 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் இதை நன்கறிந்தும் ஸ்விஸ் யுபிஎஸ் வங்கி இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு வேளை இங்குள்ள மிகவும்முக்கியமானவர்களுக்கு அது உதவியதற்கான பரிசோ என்னவோ? பன்னாட்டு நிறுவனங்களிலேயே ஓரளவிற்கு நியாயமானது என்றும், இந்தியாவில் முக்கியமானது என்றும் கருதப்பட்ட சீமென்ஸ்-ன் அதிகாரிகளும் அர்ஜென்டினாவில் கையூட்டு கொடுத்ததற்காக அமெரிக்காவில் 2011 டிசம்பரில் தண்டிக்கப்பட்டனர்.  பின்னர் நடந்த புலனாய்வில் இந்த நிறுவனம், 2001 முதல் 2007 வரையிலான காலத்தில் வங்காளத்திலும், சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் 1.4 பில்லியன் டாலர் வரையில் சட்ட விரோதமாக கையூட்டு கொடுத்து வந்துள்ளது அம்பலமானது.  இது எப்போதும் தரகர்கள் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிறுவனம் உலகளவில் இவ்வாறு நிகழ்த்திய சட்டவிரோத கையூட்டுகளுக்காக அமெரிக்கா, ஜெர்மனி அரசுகளுக்கு 1.6 மில்லியன் டாலர்களை தண்டமாக மட்டுமே கட்டியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரே இந்த சீமென்ஸ் மார்ஷ‌ல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கே முழுமையாக போகும் ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்த கையூட்டு யுக்தியை கடைபிடிக்க ஆரம்பித்தது.  இவ்வாறு தண்டிக்கப்பட்ட பின்னரே, இத்தகைய கையூட்டு நிகழ்வுகளை தடுத்திட (கம்ப்ளயன்ஸ் ஆபீசர்கள்) இணக்கமான அதிகாரிகளை நியமித்தது.  ஆனால் உலகில் கையூட்டு பெருமளவில் பெருகிவரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டுமே நேர்மையாக இருந்திட முடியுமா? ஒப்பந்தத்தை கொடுப்பவர்களே கையூட்டை எதிர்பார்த்திருக்கும் போது கையூட்டின்றி எவ்வாறு ஒப்பந்தங்கள் பெற முடியும்? ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படையான தன்மையில்லாத நிலையில் போபர்ஸ், 2ஜி அலைக்கற்றை போன்ற ஊழல் விவகாரத்தில் தீர்மானிக்க வெளியிலிருந்து ஊடுறுவல் இருக்கத்தான் செய்யும். வோடபோன் விஷ‌யம் முக்கியமானது.  பன்னாட்டு நிறுவனங்கள் (அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு) வரியில்லா சொர்க்கங்களை (நாடுகளை) வைத்து வரிவிதிப்பு கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்பித்து வருகின்றன.  ஒரு நிறுவனம் யாருடையது என்பதையோ, அல்லது அது யாருக்கு பங்குகளை மாற்றுகிறது என்பதையோ அறிய முடியாத வகையில் புதிய வகை இணைய வலைகளை உண்டாக்கிக் கொண்டுள்ளார்கள்.  1985ல் மக்டோவல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு பகிர்ந்தது.  “வரிவிதிப்பு  திட்டங்களில்  வெவ்வேறான  வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது.  எந்தவகையிலாவது வரியை தவிர்க்க முடியும் என்ற எண்ணத்தை உற்சாகப்படுத்தவோ, அதைவரவேற்கவோ கூடாது“.  ஆனால் இந்த தீர்ப்பை 2003ல் மத்திய அரசு -எதிர்- ஆசாடி பச்சோ அந்தோலன் என்ற வழக்கு மொரிஷியஸ் வழியாக வர்த்தகம் செய்வதன் மூலம் வரியை தவிர்க்கலாம் என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் முற்றாக திருப்பிப்போட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வோடபோன் இந்தியாவிற்கு சொந்தமான மூலதன சொத்தை வரிவிதிப்பில்லாத மொரிஷியஸ் போன்ற நாட்டிற்கு மாற்றி- அதன் மூலம் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய மூலதன சொத்தின் மீதான வரிவிதிப்பிற்கு எதிராக வாதாட முடிந்தது.  திருவாளர் முகர்ஜி தற்போது இழந்ததை மீட்க முயற்சிக்கின்றார். ஆதிக்க நலன்கள் 1950 களிலான பனிப்போர் காலம் தொட்டே இந்திய கொள்கை முடிவுகள் மீது அந்நிய ஆதிக்கம் இருந்து வருகிறது.  ஆனால் 1980 கள் வரை இத்தகைய போக்கு, இந்தியாவின் “நீண்டகால நலனுக்கு” உகந்தது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.  ஜாகுவார் விமானங்கள் வாங்கும் போது ஒரு சலசலப்பு ஏற்பட்டது.  ஆனால் அது போபர்ஸ் ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.  1980களுக்குப் பின்னர் 1991 களில் அமுலுக்கு வந்த புதிய பொருளாதார கொள்கையோ, இந்திய-அமெரிக்க அணு கொள்கையோ, ஒரு புதிய பரிமாணத்தில் பகுதி நலன் அல்லது தனி நபர் நலன் அதி முக்கியத்துவம் பெறத் துவங்கியது.  இந்த போக்கு தேசிய அரசியலில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.  நெருக்கடி எதிர் நெருக்கடி என அரசியல் கட்சிகள் மூலமும், அவர்களது தரகர்கள் மூலமும், கார்ப்பரேட் முதலாளிகள் மூலமும், தாக்கம் அதிகமானது. இதிலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், இத்தகைய தாக்கங்கள் ஏற்படுத்தும் சேதாரங்களை தேசிய அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்ய இயலாது என்பதுதான்.  இந்த நிகழ்வுகளைப் பார்த்து பொதுமக்களோ, தற்போதைய  குடியரசுத்தலைவரை (ஜனாதிபதியை) தேர்ந்தெடுக்கும் வழிமுறையைப் பார்த்து அதிர்ச்சியில் விழித்திருப்பதைப் போல் விழித்திருப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்? _________________________________________________________________________________ (கட்டுரையாளர் திரு அருண் குமார்  பொருளாதார கல்வி மற்றும் திட்டமிடுதல் மையம், சமூக அறிவியல் பயிற்றகம், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்) நன்றி –    தி   ஹிந்து     நா ளிதழ்   – தமிழில்   –   சித்ரகுப்தன்   14 கசந்து போன பாதாம் பருப்பு! பணக்காரர்கள் உண்டு மகிழும் “பாதாம் பருப்பிற்கு” பின்னால் திரைமறைவில் உள்ள குழந்தைகள் உழைப்பு சுரண்டலை விவரிக்கும் கட்டுரை “வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம்  “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு“, “இளம் குருத்துக்களைபடிக்கச் செய்வோம்” என்பது போன்ற படாடோபமான விளம்பரங்கள்.  குழந்தை தொழிலாளர்முறை அறவே ஒழிக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றம்ஆனால் எதார்த்ததத்தில் அமைப்புசார்ந்த தொழில்களில், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில், தனியார் பெருமுதலாளிகளிடம்நெருங்க மறுக்கும் தொழிலாளர் துறை.   அதிகாரம் மிகக் குறைவாக உள்ள அத்தகையதொழிலாளர் நலச்சட்டங்களைக் கூட  திருத்த துடிக்கும்  அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள்என்ற பெயரில் உள்ள  பெரு  முதலாளிகள்.  மறுபுறம்  உலக மயமாக்கலின் கோரவிளைவுகளினால்,  இந்த  சட்டங்கள்  எதற்குள்ளும் எங்கள் தொழில் வராது என ஏமாற்றும்அமைப்பு  சாரா  தொழிலின் தரகு முதலாளிகள்.  இவற்றை அம்பலப்படுத்தும் விதத்தில்பணக்காரர்கள் உண்டு மகிழும் “பாதாம் பருப்பிற்கு” பின்னால் திரைமறைவில் உள்ள உழைப்புசுரண்டலை விவரிக்கும் கட்டுரை இதன் கீழே விரிகிறது…“ ஏழுவயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பாதாம் கொட்டைகளின் மேல் குதித்தாள்.  முதல் பார்வையில் அவளது சிறு வயதோடு ஒப்பிடுகையில் அது அவளுக்கு ஒரு விளையாட்டு என உங்களுக்கு தோன்றலாம்.  ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் கீதாவின் உடற்பயிற்சி போன்றதான நடவடிக்கை சிறுவயது விளையாட்டல்ல என்பது தெரியவரும்.  அவள் வாழ்வதற்காக சம்பாதிப்பதற்காக பார்க்கும் வேலை அது. [Chap13A] அங்கு பணிபுரியும் பல குழந்தைகளைப் போல, தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் பாதாம் கொட்டை உடைக்கும் பணியில் வேலைபார்க்கும் கீதாவும் ஒரு தொழிலாளி.  அவளின் மென்மையான பாதங்கள் ஏறக்குறைய ஒரு இயந்திரம் போல செயல்பட்டு கலிபோர்னியாவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் கொட்டைகளை உடைக்க பயன்படுகிறது. தூசிகள் நிரம்பிய அறைகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் இந்த சட்ட விரோத குழந்தை தொழிலாளர்கள் மூலம் மில்லியன்-டாலர் தொழிற்சாலை நடைபெறுகிறது.  குழந்தைகள் தரையில் அமர்ந்து அமைதியாக சாக்குகளில் உள்ள பாதாம் கொட்டைகளை தங்களது செயல்திறன் மிக்க விரல்களாலும், மலைபோல் உள்ள குவியல்களில் குதித்தும் உடைத்து குவிக்கின்றனர். வடகிழக்கு டெல்லி பகுதியான காரவால்நகர் காலனியில் பாதாம் கொட்டைகள் உடைப்பு என்பது பெரிய வணிகம் ஆகும்.  ஏறக்குறைய 45 முதல் 50 பாதாம் பருப்புகளை பிரித்து பொட்டலமிடும் பிரிவுகள் அந்த பகுதியில் வருடம் முழுவதும் நடைபெறுகிறது.  அவ்வாறு உடைக்கப்படும் பருப்புகள் மாநகரின் காரிபாவோலி பகுதியிலுள்ள மொத்த சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் முழுமையும் இயந்திரங்களால் நடைபெறும் இந்த தொழில் இங்கு மனித தொழிற்சாலையாக, கொட்டைகளை உடைத்து ஓடுபிரித்து, பருப்பை தரம் பிரித்து சந்தைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் இங்கு மனிதர்கள் செய்கிறார்கள். உயரிய ஏற்றுமதி : அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் விவசாய விளைபொருளில் பாதாம் முன்னணியில் உள்ளது.  தகவல்களின்படி பார்த்தால் 95% பாதாம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  1970 களில் மிகச்சிறியதாக துவங்கிய இந்த தொழிலில் தற்போது 100 மில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் கலிபோர்னியா பாதாம் இறக்குமதி செய்யப் படுகிறது. ஒருபுறம் பாதாம் பருப்பின் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ 360 முதல் 400 வரை என்றிருக்கையில், மறுபுறம் இதில் பணிபுரியும் குழந்தைகளுக்கு ஒரு கிலோ பருப்பு உடைத்து எடுத்தால் ரூ 2 கூலியாக வழங்கப்படுகிறது. வினய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புலம்பெயர்ந்து (இடம் மாறி) டெல்லிக்கு வந்த சிறுவன் தனது 11 வயதில் இந்த தொழிலில் பணிபுரிய துவங்கினான்.  10 வருடம் கழித்து தற்போது காரவால் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில் தற்போது அவர் சுமை ஏற்றுபவராக இருக்கிறார்.  அவர் சுமை ஏற்றும் பணிக்கு சம்பளமாக பணம் எதையும் பெறுவதில்லை.  பணத்திற்கு பதிலாக இரண்டு சாக்குகள் பாதாம் கொட்டை உடைக்க அவருக்கு கொடுக்கப்படும்.  அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமாக ஒரு சாக்கிற்கு ரூ 60 கூலி என்ற அடிப்படையில், ஓடு பிரித்து பருப்பு எடுப்பார்கள்.  அதாவது 6 பேர் கொண்ட அந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு நாளைய கூலி ரூ 20/-. பாதாம் கொட்டை உடைத்து பருப்பு வியாபராம் என்பது வருடம் முழுவதும் நடைபெறும் என்றாலும், வழங்கல் மற்றும் தேவை என்பது தீபாவளி மற்றும் கிறித்துமஸ் பண்டிகைகளின் போது மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை இருக்கும்.  ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பணிகள் என்பது பல தொழிலாளர்களிடம் பிரிந்து இருக்கும்.  குழந்தைகள் குறிப்பாக பாதாம் கொட்டைகளை உடைக்கும் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.  அரை குறையாக உடைந்த கொட்டைகள் குப்பையிலிருந்து கவனமாக பிரித்தெடுக்கப்படுகிறது.  இந்த நிலையில் குறிப்பாக பெண்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு ஓடு, முழுப்பருப்பு, அரை பருப்பு என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஓடு பிரிக்கப்படாத பாதாம் ஒரு சாக்கு என்பது சராசரி 22 கிலோ இருக்கும்.  அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பருப்பு 16 முதல் 17 கிலோ தேறும்.  பிரித்தெடுக்கப்படும் ஓட்டு துகள்கள் சமைப்பதற்கான எரிபொருளாக தொழிலாளிகளுக்கே சாக்கு ஒன்று ரூ 30 முதல் 35 வரை என்றி வீதத்தில் முதலாளிகளால் விற்கப்படும். பின்னர் சில பிரிவுகளில் மிகவும் தேவையான காலங்களில் கொட்டைகள் உடைத்து பிரித்தெடுக்க தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரம் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்தில் 20 சாக்குகள் ஓடுபிரிக்க முடிந்தது.  விழாக்காலங்களில் ஒரு நாளைக்கு 350 முதல் 400 சாக்குகளும், தேவை குறைவான காலங்களில் 80 முதல் 100 சாக்குகள் அளவிலும் உடைக்கும் பணி மேற்கொள்ளப்படும். டிசம்பர் 2009-ல், கடுமையான குளிர் காலத்தில் காரவால் நகரில் பாதாம் மஸ்தூர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.  சம்பள உயர்வு, பணி நிரந்தரப்படுத்துவது, மற்றும் பாதாம் தொழிலி்ல் தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றக் கோருவது ஆகியவை அவர்களது கோரிக்கைகளாக இருந்தது.  அந்த போராட்டத்தின் காரணமாக ஒரு நாளைய கூலி என்பது ரூ 45 லிருந்து 60 ஆக உயர்ந்தது.  இருந்த போதிலும் டெல்லி நகரின் செயல்திறனுடைய தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச கூலி ரூ 247/- என தொழிலாளர் துறையினால் நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய கூலிதான் அது. ஒழுங்கு முறை ஏதுமில்லை: சொல்லப்போனால் தற்போது இந்த தொழிலில் ஒழுங்குமுறை எதுவுமில்லை.  பாதாம் கொட்டை உடைக்கும் தொழில் என்பது தெளிவான விளக்கமின்றி ‘வீட்டு உற்பத்தி’ தொழிலாக சொல்லப்படுகிறது.  அதன் காரணமாக இந்த தொழில் தொழிலாளர் நலச்சட்ட வரம்பிலிருந்து வெளியில் இருப்பதாக கருதப்படுகிறது. டெல்லி தொழிலாளர் துறையின் பதிவுகளின்படி இந்த தொழில் பிரிவுகள் ‘முறைப்படுத்தப்பட்ட பிரிவுகளில்’ சேர்க்கப்படாமல் சிறு பிரிவுகளாக ’10 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள், இயந்திர சக்தியுடன்’, அல்லது ’20ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இயந்திர சக்தியின்றி’ என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களினால் (இந்த குறிப்பிட்ட விஷ‌யங்களை மாற்றியமைக்க எந்த ஒரு மாற்று யோசனையும் சொல்லப்படாத நிலையில்) இந்தியாவில், ஏறக்குறைய மொத்த உழைப்பாளிகளில் 94 சதவீத தொழிலாளர்களைக் கொண்டுள்ள, வளர்ந்து வரும் பல தொழில்கள் தொழிலாளர்நலச் சட்ட வரம்புகளுக்கு வெளியில் அதன் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்படாத நிலையில் உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் தொழிலாளர்களை முறை சாராப் பிரிவில் வகைப்படுத்துவது என்பது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக அதிகரித்து வருகிறது.  முறை சாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் (2008) சமர்ப்பித்த ஒரு அறிக்கையின்படி இந்திய உழைப்பாளிகளின் எண்ணிக்கையில் 77 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ரூ 20/-ற்கும் குறைவாக கூலி பெறுகின்றனர். பைனா மோஸ்லி என்பவர் தமது ‘தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் பன்னாட்டு உற்பத்தி’ என்ற (2011) தலைப்பிலான ஆய்வில் தொழிலாளர்கள் உரிமைகளுக்கும், உலகளாவிய உற்பத்தியில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகளுக்குமான தொடர்புகளை விவரித்துள்ளார்.  உற்பத்தி சார்ந்த பல பணிகளை வெளியில் கொடுப்பதன் மூலம் தொலைவிலுள்ள நாடுகளிலுள்ள சிறிய தொழில் மையங்களின் சாதக சூழல்களை பன்னாட்டு முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  அதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்துக் கொள்வதோடு நேரடி முதலாளித்துவத்தினால் விளையும் இடர்களை தவிர்த்தும் கொள்கின்றனர் என குறிப்பாக அவர் சுட்டிக் காண்பிக்கின்றார். சட்ட விரோதமாக குழந்தை தொழிலாளர்களிடம் பணிவாங்குதல், குறைந்த கூலிக்கான வயது வந்த தொழிலாளர்கள் பணி ஆகியவை டெல்லி காரவால் நகரில் நடைபெறுவது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  வளர்ந்து வரும் உலகமயமாக்கல்  சூழலில், பெரும்பாலான மாநகரங்களில் முறை சாரா மற்றும் கணக்கிடலங்காத இது போன்ற உற்பத்தி பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  டெல்லியில் மட்டுமே தொழில் வாரியாக பிரிக்கப்பட்ட சிறப்பு மையங்களில் எண்ணிக்கைக்கேற்ற தொகை பெற்று (பீஸ் ரேட்) பணிமுடித்துக் கொடுக்கும் பிரிவுகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது.  பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் மிகத்தெரிந்த பன்னாட்டு நிறுவனங்களும் இத்தகைய பணிகளை செய்கின்றன. கடைசி புகலிடம்: பெரும்பாலான மக்கள் முறைசாரா தொழில்களை விரும்பி ஏற்பதில்லை.  மாறாக அவர்கள் பசிக் கொடுமையிலிருந்து தப்பித்து வாழ்க்கைக்கான வழிமுறைக்கு கடைசி புகலிடமாக இவற்றை தேர்வு செய்கின்றனர்.  பெரும்பாலான முறைசாரா பிரிவு தொழிலாளர்கள் சொந்தமாக நிலமில்லாமல், புலம்பெயர்ந்து வந்தவர்களே. அவர்களின் சொந்த கிராமங்களில் வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளினால் வேலைக்கு வழியின்றி இவ்வாறு இடம் மாறி வருகின்றனர்.  பல முறைசாரா தொழில் நிறுவனங்களில் நிலவி வரும் புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஏழைகள் தங்கள் வருவாயை மேலும் குறைத்துக் கொண்டு வேலை கேட்கும் சூழலை உருவாக்குகிறது.  முறைசாரா தொழில் வணிக நடவடிக்கைகளை தொழிலாளர் நலச்சட்ட வரம்பிற்குள் கொண்டு வர விடா வண்ணம் எதிர்ப்புகள், தவறிழைக்கும் ஆலை முதலாளிகளின் மீதான புகார்களை வாங்க மறுக்கும் உள்ளூர் காவல்துறை, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த அக்கறையின்மை இவையெல்லாம் சேர்ந்து வெட்கப்படும் விதத்திலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.  தலைநகரின் இதயப்பகுதியில் செயல்பட்டு வரும் பாதாம் பருப்பு எடுக்கும் தொழிலளர்களின் கதையிலிருந்து முறைசாராத் தொழிலின் மீது உள்ள நாட்டின் அக்கறையின்மை விளங்குவதோடு, இத்தகைய தொழிலாளர்களை காக்கும் விதத்தில் தொழிலாளர் சட்ட நடைமுறைகளை இந்த பிரிவிற்கு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. _______________________________________________________ நன்றி – தி இந்து , 15 அக் 2011 – திரு. மவுஷ்மிபாசு , பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம். தமிழில் – சித்ரகுப்தன்.   15 இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்! 1973-74-ல் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன. ஏன்? இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் அதீத பாதுகாப்புள்ளவையா? இந்தியாவின் உற்பத்தி தளங்களின் வீழ்ச்சியும் , அழிவும் !! “ இந்தியாவின் உற்பத்தி துறைகள் நிரந்தரப் பணியை துறந்துவிட்டு , தினக்கூலிகளை , தற்காலிக பணியாளர்களை வைத்து லாபம் ஈட்டுகிறது.   இது தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுடன் , தொழில்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய மானேசர் வன்முறை , நிலைமை மோசமாகி வருவதற்கான அறிகுறியாகும். ” [Chap14A] மனேசர் மாருதி தொழிலாளி – முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர்களை விட ஊதியம் குறைந்த – சட்டப் பாதுகாப்பற்ற தற்காலிக – ஒப்பந்த தொழிலாளர்களையே பணியில் அமர்த்துகின்றனர் படம் நன்றி – http://www.thehindu.com/ ஒவ்வொரு காலையும் இந்தியாவின் 50 மில்லியன் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் சங்கு அலறலில் பணியிடத்திற்கு சென்று, அங்கு அவர்களது  ஒரே மாதிரி பணியை பிசகில்லாமல் செய்துவிட்டு, பின் அதே சங்கின் அலறல் சத்தம் கேட்டவுடன் அன்றைய ஷிப்ட் பணியை முடித்துவிட்டு,  அடுத்த ஷிப்ட் பணி துவங்க பார்க்கின்றனர். இந்தியாவின் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மொத்தத்தில் 11 சதமானமே என்றாலும், அவர்களும், இந்த துறையும்தான் இந்தியாவின் பொருளாதார பெருக்கத்திற்கு அடித்தளமாக உள்ளனர். சமீபத்தில் மாருதி சுசுகியின் மானேசர் தொழிற்பிரிவில் தொழிலாளர்கள், நிர்வாகத்தினரிடையே நடந்த மோதலில் ஒரு மூத்த பொது மேலாளா் கொல்லப்பட்டு,பலர் காயமடைந்த வன்முறை சம்பவம், கடந்த கால தொழிற்சங்க மூர்க்கத்தனத்தை நினைவூட்டுவதாக உள்ளது என பத்திரிகைகள் எழுதுகின்றன.  ஆனால் தொழில்துறை வேலைநிறுத்தம், மற்றும் மனித வேலை நேர இழப்பு என்பது வரலாற்று ரீதியாக பார்க்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 1973-74-ல் அவசர கால பிரகடனத்திற்கு முந்தைய காலத்தில் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது.  ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன என வி.வி.கிரி தேசிய தொழில் மையம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த நிலைக்கு எதை காரணம் காட்டுவது?  இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் ஒரு அதீத பாதுகாப்புள்ள தொழிற்கூடம்தானா? புள்ளி விபரங்கள் வேறுமாதிரி சொல்கிறது.  இன்று தொழிலாளர்கள், நிஜ ஊதியம் என்ற அளவில் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும், மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர், வேலை பாதுகாப்பில்லை.  இருப்பினும் அவர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. 20 ஆண்டுகள் பரிதாபாத்தில் கருவி (உதிரிபாகம்) உற்பத்தித் தொழிலில் இருந்த திரு பூபன் சிங் கூறுகிறார்- தொழிற்கூடங்கள் தற்போது வேலை பார்ப்பவர்கள், வேலை பார்ப்பவர்களை மேற்பார்வையிடுபவர்கள் என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது என்றார். இயற்கையாகவே தொழிலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்குமிடையே ஒரு பகையுணர்வு இருந்தே வருகிறது.  அவரது காலத்தில் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் இணைந்து இந்த இடைவெளியை இணைத்து வந்தனர்.  தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் முன் வைத்ததுடன் பணியிடத்திலும் ஒழுக்கத்தை முறைப்படுத்தினர். 1970களின் வேலை நிறுத்தங்களை தொடர்ந்து திரு சி.பி.சந்திரசேகர் என்ற பொருளாதார நிபுணரால் தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையில், 1981-82லிருந்து 1994-95 வரையிலான 15 ஆண்டுகளில், பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் கொடுக்கப்பட்ட ஊதியஉயர்வு 40 சதமானமாக இருந்தது.  அதைத் தொடர்ந்த 15 ஆண்டுகளில் 15 சதம் குறைந்துவிட்டது என்கிறார். குறைந்து வரும் ஊதியங்கள் தொழிற்சாலைகளில் வருவாய் நிகர மதிப்பிற்கு இணையான ஊதிய விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதத்திலிருந்து 11.6 ஆக குறைந்துள்ளது.  அதே நேரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளிகளின் லாபம் 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயா்ந்துள்ளதிலிருந்து, ஒன்று தெளிவாகிறது.  தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கூடிய அந்த விகிதத்தில்- முதலாளிகளின் லாபம் உயர்ந்த அந்த விகிதத்தில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் உயர வில்லை என்பதே. தற்காலிக பணியாளர்கள் பெருகிவருவது, மருத்துவ பலன்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இல்லாதது, இன்றைய நிலையை தெளிவாக்குகிறது. 19 வயது தற்காலிக பணியாளர் பாபு கூறினார். “தற்காலிக பணியாளர்களிடையே பல்வேறு வகை உள்ளது”  நிர்வாகத்தால் நியமனம் செய்யப்படும் தற்காலிக பணியளர்கள், தற்காலிக பணியாளர்கள் வருகைப் பட்டியலில் காட்டப்படும் தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் ஊதிய பட்டியலில் ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த காரர்கள் வருகைப்பட்டியலில் உள்ளவர்கள், ஆனால் ஊதிய பட்டியலில் வராதவர்கள் என பல்வேறு வகைகள் உள்ளது என்று கூறுகிறார். பாபு குட்டையாகவும், மெலிந்தும் ஐ ஐ டி படிக்க துடிக்கும் மாணவர் போல் அவ்வப்போது சீப்பினால் தலையை சீவி விட்டுக் கொள்வார்.  தேசிய பகுதி கணிப்பின் பிரகாரம் 2000-ல் இத்தகைய தொழிலாளர்கள் அமைப்பு சார் தொழிற்சாலையிலும், உற்பத்தி துறையிலும், கட்டுமான தொழிலிலும் பணிபுரிந்த தொழிலாளர்கள் 38 சதமானமாக இருந்தது, 2010-ல் அவர்களின் விகிதாச்சாரம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தற்போதைய வீழ்ந்து வரும் சூழலில், உற்பத்தி தொழிலில் மட்டும் 5 மில்லியன் தற்காலிக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்த தலைசுற்றுகிற சிப்ட் முறையால், ஒரு நிலையான தொழிற்சங்க நடவடிக்கை சாத்தியமற்றதாகிறது. மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஊசி முதல், மாத்திரை வரை செய்யும் ஒரு மருந்து உற்பத்தி கம்பெனியில்தான் பாபு தனது முதல் வேலையை துவக்கினார். அவருக்கு அப்போது வயது 16 என்பதால், அந்த நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தது.  ஆனால் ஒப்பந்தகாரர், அவரை ஓராண்டிற்கு வருகைப்பதிவில் இல்லாத பட்டியலில் வைத்து, குறைந்த பட்ச ஊதியத்திற்கு குறைவாக மாதம்  ரூ 2400க்கு வேலை கொடுத்து, தூய்மையாக்கப்பட்ட பாட்டில்களை மெஷினில் ஏற்றி, இறக்கும் பணியை 8 மணி நேரம் பார்க்க வைத்துள்ளார். அதன்பின் 300 நிரந்தரத் தொழிலாளர்களையும், 1200 தற்காலிக பணியாளர்களையும் பணிக்கமர்த்தியுள்ள ஒரு எலக்டிரிக்கல் கம்பெனியில் வருகைப்பதிவில் உள்ள தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். அவர் அங்கே ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரு மெஷினில் உள்ள திருகியை இறக்கிக்கொண்டு எட்டு மணி நேரம் வேலை பார்த்து மாதம் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 4847 பெற்றார். இத்தகைய ஒப்பந்த தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும். நிரந்தர தொழிலாளி மட்டுமே உட்கார முடியும்? என்கிறார் அவர்.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சங்கம் இருக்கிறது.  ஆனால் அவர்கள் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராட மாட்டார்கள்.  “நாங்கள் ஏதாவது ஒரு சிறு நாற்காலியில் உட்கார்ந்தால், இந்த நிரந்தர தொழிலாளர்கள் எங்களை எழுப்பி விட்டு விடுவார்கள்” என்கிறார் பாபு.  இத்தகைய சூழலில் கழிப்பிடம் செல்வது போல் சென்று தனது கால்களுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வதும், மேற்பார்வையாளர் கண்டுகொள்ளாத வரையில்தான். பின்னர் அந்த பணியையும் விட்டுவிட்டு பூமா போன்ற  பல்வேறு நிறுவன பெயர்களில் காலணிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை தேடிக்கொண்டார். அந்த கம்பெனிக்கு அவர் ஒரு “கம்பெனி தற்காலிக ஊழியராக” எடுத்துக் கொள்ளப்பட்டார்.  ஆனால் அந்த கம்பெனியோ அதனது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்து வந்தது.  எங்களது நிலுவை ஊதியத்தை கொடுங்கள், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்றோம்.  ஆனால் அந்த கம்பெனியிடமோ எங்களது ஊதியத்தை தீா்வுசெய்ய பணமில்லை என்கிறது. சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊதியத்திற்காக போராடுகிறார்கள்.  ஒப்பந்த தொழிலாளர்களோ ஊதியம் பெறாமலேயே அதற்காக போராட வருகிறோம் என்கிறார்கள். ஊதியம் பெறாத தொழிலாளர்கள் மக்களவை சமர்ப்பித்த புள்ளி விபரப்படியே “இந்தியா இங்க்” என்ற நிறுவனம் 2011-12-ல் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையோ ரூ 711 கோடி.  இதில் சம்பளப்பட்டியலில் வராதவர்கள் ஊதியமோ, தொழில் நீதிமன்றங்களின் தாவாவுக்காக செல்லாத பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள தொகையோ சேராது.  அவர்கள் எப்போதுமே தொழில் நீதிமன்றங்களை அணுகியதில்லை. ஏனென்றால் அங்கு நியாயம் கிடைக்காது என்பதால்.  பூபன்சிங் என்ற ஓய்வுபெற்ற கருவிகளை செய்பவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை பெறுவதற்காக 1997 லிருந்து போராடி வருகிறார்.  கடந்த ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் 13,527 அது தற்போது 13,642ஆக இந்த ஆண்டு உயர்ந்துவிட்டது. இந்த நீதிமன்ற தலையீடோ, சங்கங்களோ இல்லாமல் பாபு போன்ற தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப, ஒரு புதுவகை சீர்குலைவு வழியில் நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாலை, தீயிலிருந்து பாதுகாப்பு குறித்த ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு வர அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டனர்.  கடந்த 2009 மே மாதம் லகனியில் 10 தொழிலாளர்கள் தீ விபத்தில் மாண்டனர். பலர் தீக்காயமுற்றனர். “எப்போதெல்லாம் ஆலையின் சங்கு ஒலிக்கப்படுகிறதோ, அப்போது உடன் அனைவரும் திறந்த வெளிக்கு வந்து விட வேண்டும்” என்று மேலாளர் சொன்னார்.  தொழிலாளர்கள் தங்களது தலைகளை அசைத்து, சம்மதத்தை தெரிவித்தனர். மறுநாள் காலை 10 மணிக்கு ஆலையின் சங்கு ஒலித்தது, அனைத்து தொழிலாளர்களும் சொன்னது போல் ஆலையின் திறந்த வெளிக்கு வந்து திரணடனர்.  ஆனால் அங்கு எந்தவித தீ விபத்து ஏதும் நடைபெறவில்லை.  மேற்பார்வையாளர் விரைந்து திறந்த வெளிக்கு வந்தார். அங்கு அனைத்து தொழிலாளர்களும் “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிட்டனர். இது பல மாதங்களாக தொடர்ந்தது.  “யாராவது ஒருவர் அந்த ஆலையின் சங்கை ஒலிக்கச் செய்வோம், எல்லோரும் திறந்த வெளிக்கு ஓடி வந்து விடுவோம்”, பாபு சொன்னார். நிர்வாகத்தினர் வெளியே வந்து எங்களை பார்க்கும் போது, “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிடுவோம். அந்த மேற்பார்வையாளரும் ஒன்றும் சொல்லமாட்டார்.  ஏனெனில் அவருக்கே நான்கு மாத ஊதியம் நிலுவையாக உள்ளது. மேலும் தொழிலாளர்கள் உதிரிபாகங்களை இணைக்கும் பிரிவில் பணியை மெதுவாக செய்யத் தொடங்கி, முற்றாக நிறுத்திவிட்டனர்.  அதன் பின்னரே அவர்களது ஊதியத்தின் ஒரு பகுதி மட்டுமாவது, அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பாபு போன்ற தொழிலாளர்களுக்கு இன்னும் நிர்வாகம் கொடுக்க வேண்டியது நிறையவே உள்ளது. லக்னியில் நடந்த இந்த நிகழ்வுகள் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வல்ல. மஸ்தூர் சமாச்சார் போன்ற பிரசுரங்கள், தொழிலாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக, சிறந்த பணி நிலையை பெற தலைமையில்லா பல போராட்டங்களை நடத்தியுள்ளதை பட்டியலிட்டுள்ளது.  இத்தகைய போராட்டங்களை கலைத்திட முடியாது, ஏனென்றால், இவைகள் அனைத்தும் “தொழிற்தாவா”, “அமைதியின்மை”, “வேலைநிறுத்தம்”, “கதவடைப்பு” போன்ற எந்த வகையிலும் சேராதது.  மாருதி நிறுவனம் போல சில நேரங்களில், இத்தகைய போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதோ, வழிகாட்டுவதோ அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால், அங்கெல்லாம் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களின் கட்டுப்பாட்டிலில்லை.  காரணம், அங்கு தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.  திரு ராம்குமார், ஐசிஐசிஐ வங்கி குழுமத்தில் ஒரு இயக்குனர்.  அவரது நண்பர்தான் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் நடந்த வன்முறையில் இறந்து போன திரு அவானிஷ் தேவ்.  மானேசரில் நடந்தது ஒரு கொலை, இது ஒரு குற்றம் என்கிறார் திரு ராம்குமார்.  எந்தவித சமத்துவமின்மையும் ஒருவரை கொல்வதற்கு உரிமம் கொடுத்ததாக கொள்ள முடியாது என்கிறார் அவர். “இதுவரை நிர்வாகமும், தொழிற்சங்கமும் இணைந்து இருந்து வந்த இந்த தொழிற்சாலை என்ற பெரியவீட்டில் ஒரு சாரளம் உடைந்து விட்டது.  மேலும் பல கற்கள் வந்து உள்ளே விழுவதற்கு முன்பு இந்த உடைந்த சாளரம் உடன் செப்பனிடப்பட வேண்டும்” என்கிறார் தனியாக கூறும் போது. “தொழிலதிபர்கள் தொழிற்சாலையை நடத்த தங்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரமுடியாது.  அது தங்களது தொழிலாளர்களது உரிமைமற்றும் நலத்தினை குறைத்திட முயலுமானால், அதை ஏற்க முடியாது”  என்கிறார் திரு ராம்குமார். ஆனால் அதே நேரத்தில், தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தினர் மீது கொண்டுள்ள சந்தேகத்தை விலக்கிக்கொண்டு, ஒரு பன்முறையற்ற தொழிற்கூடத்திற்கு உறுதி அளிக்கும் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திரு ராம்குமார். அத்தகைய ஒரு திட்டம் நிரந்தர தொழிலாளர்களும், தற்காலிக தொழிலாளர்களுக்கு மிடையேயான ஊதிய வேறுபாடுகள் களைவதற்கும், மற்றொருபுறம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையேயான வேறுபாடுகளை களையும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார் திரு ராம்குமார். கடந்த ஆண்டு மாருதியில் நடந்த தொடர் வேலை நிறுத்தங்களை ஒட்டி மானேசர் தொழிற் கூடத்தில் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது போராட்டங்களை முன்நடத்த வந்த தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளி, வருங்கால திட்டம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை போல செய்தியை, அந்த பகுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.  கனவானே இன்றைய நிலைமை ஒன்றும் புரியவில்லை அல்லவா.  கடந்த சில மாதங்களாகவே, தொழிலாளர்களில் சிலர் மற்ற தொழிலாளர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்து வந்தனர். அத்தகையோரை பணி நீக்கம் செய்ததன் மூலம் நிர்வாகம், ஒரு மதிப்பிடமுடியாத கருவியை தூக்கியெறிந்துவிட்டது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) _________________________________________________________ நன்றி- தி இந்து – திரு அமன்சேத்தி தமிழில் –சித்ரகுப்தன் 16 இந்தக் கதை இதோடு முடியவில்லை….. ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக்ஸ் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது. இந்த கதை இதோடு முடியவில்லை….. டெள கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் முன்பாக கீழ்கண்ட இரண்டு கேள்விகள் வைக்கப்பட்டது. [Chap15A] (1) 2008 செப்டம்பரில் திரு சிட்காரா என்பவர் அமெரிக்க தூதரக அதிகாரியை மும்பையில் சந்தித்த போது மகாராஷ்டிர மாநிலம் புனேயில் டெள கெமிக்கல் நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்திற்கு அங்குள்ள வர்க்காரி இன மக்கள் மிகுதியான எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருவதால், அவற்றை சமாளிக்க சிவசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அந்தலரோ பாட்டிலால் தெரிவிக்கப்பட்ட மக்கள் தொடர்பு நிபுணர் ஒருவரை மாதம் 20,000 டாலர் சம்பளத்திற்கு நியமித்ததாக‌ தெரிவிக்கப்பட்டதே, அவர் எவ்வளவு காலம் பணியிலிருந்தார் ?  அவரின் சேவையை டெள கெமிக்கல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளதா? (2) அதே சிட்காரா தெரிவித்த மற்றொரு தகவலின்படி டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடமிருந்து அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததாக சொல்லப்பட்ட பிரச்சினை எப்போது சரி செய்யப்பட்டது? அங்கே அரசின் அனுமதி பெறப்பட்டதா? அதற்கு டெள அளித்த எழுத்து பூர்வ பதிலில், ஒரு படத்தில் கவுண்டமணி சொல்கிற “அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா” என்பது போல் எல்லா பன்னாட்டு நிறுவனங்களையும் போல் நாங்கள் எங்கெல்லாம் (பிஸினஸ்) வணிகம் செய்கிறோமோ, எங்கெல்லாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கெல்லாம் அரசியல் வாதிகளை, அதிகாரிகளை சந்திப்பதும், நாங்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள நடைமுறைத் தந்திரங்களைக் கையாள்வதும் இயல்புதான். இது இந்த நாட்டில் எங்கும் வியாபாரிகள் கையாள்கிற விஷ‌யம்தான் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி நீங்கள் கேட்கும் விவ‌ரமெல்லாம் அமெரிக்க அரசின் உள்நாட்டு கடித போக்குவரத்து விபரமாகும், எனவே அவற்றை அரசிடம்தான் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது டௌ கெமிக்கல்ஸ். இனி இந்தக் கட்டுரையின் விவ‌ரத்திற்கு வருவோம்.  கடந்த 20 தினங்களுக்கும் மேலாக இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் அமெரிக்காவின் தலையீடு இருப்பதைப் பற்றியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் சாக்கடை நடவடிக்கைகள் பற்றியும் விக்கிலீக் இணையதளத்தின் மூலம் கசிந்த அசிங்கங்கள் ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளிவந்து கொண்டிருப்பதும், அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் அரசு நீடித்திருக்க வாக்களிப்ப‌தற்காகப் பணம் வாங்கிய விவ‌ரத்தினை மட்டும் (ஏதோ தங்கள் சம்பந்தப்பட்ட நாற்றமாக இருக்கிறதே என்பதற்காக) 2, 3 நாட்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டுவிட்டு அதோடு தம் கடமை முடிந்துவிட்டதாக கருதி பாராளுமன்ற கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு, அவரவர் சார்ந்த மாநிலத்தின் தேர்தலைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  ஆனால் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது. 1984ல் மத்தியப்பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த விஷ‌வாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான‌ குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்ததையும், இன்று வரை அந்த மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ‌வாயுக் கசிவினால் கண்ணிழந்து, உறுப்புகள் இழந்து நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு வருவதையும், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் சொற்ப நஷ்ட ஈட்டுத் தொகையே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதையும் அந்த மக்கள் இன்னும் பெறவில்லை என்கிற விபரமெல்லாம் வினவு வாசகர்கள் அறிந்த ஒன்றே. அதே போல் அமெரிக்காவின் மற்றொரு பன்னாட்டு நிறுவனமான டெள கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதும், ஏற்கெனவே அந்த பூமியில் இருக்கிற யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ரசாயானக் கழிவுகளை அகற்றிட‌ மறுக்கிறது என்பதும், இந்திய ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அதற்கு துணை போவதுடன், அந்தக் கழிவுகளை நாங்கள் அகற்றிக் கொள்கிறோம் எனச் சொல்வதும் அனைவரும் அறிந்த தகவலே. அதனால்தான் “நாசகார டெள வே  நாட்டை விட்டு வெளியேறு” என கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது கசிந்த நாற்றத்தைப் பார்ப்போம். டெள கெமிக்கல் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் தனது தொழில் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால் அதைச் சமாளிக்க சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அடல்ரோ பாட்டிலை தொடர்பு கொண்டபோது, மக்கள் போராட்டங்களை சமாளிக்க நான் ஒரு சிறந்த மக்கள் தொடர்பு அலுவலரைச் சொல்கிறேன், அவரை நியமித்துக் கொள்ளுங்கள் எனப் பரிந்துரைத்ததின் பேரில் அவர் மாதம் 20000 டாலர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  மற்றபடி அரசின் அனுமதிகள் பெறுவதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நேரத்தில் மத்திய இரசாயனத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் “மிக அதிகமான தொகை லஞ்சமாக கேட்கிறார்” என்கிறது அந்த தகவல் பரிமாற்றம். இது பற்றி இந்து பத்திரிக்கை ராம்விலாஸ் பாஸ்வானிடம் கேட்டதற்கு, டெள எங்கள் அந்தஸ்தை கீழிறக்க வைப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கத் தூதரக அலுவலர் அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கும் தகவலில், போபால் இழப்புகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருப்பதால் சற்று சிரமமாக இருக்கிறது.  மேலும், 2009 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தமது ஓட்டுக்கள் பாதிக்கும் என்பதால் இதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என இந்திய அரசியல்வாதிகள் கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெள கெமிக்கல்ஸின் புனே திட்டம் என்பது சாகான் மற்றும் சிண்டே கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களை வளைத்துப் போட்டு அமையவிருக்கிறது.  இங்குள்ள வர்க்காரி இன மக்கள் இது போன்ற ரசாயன கம்பெனி வந்தால் தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிற தங்களின் ஆறு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியன கடுமையாகப் பாதிக்கும் என்பதால் தீவிரமாக‌ எதிர்க்கின்றனர். தேர்தலை ஒட்டி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக மகாராஷ்டிர அரசு தற்காலிகமாக கெமிக்கல் கம்பெனிக்கான அனுமதியை நிறுத்தி வைத்ததுடன்,  விசாரிக்க ஒரு விசாரணை கமிசனை நிறுவுகிறது. இதன் நடுவில் (சிவசேனா) பாட்டீலையும், பாஸ்வானையும் பலமுறை டெள கெமிக்கல்ஸ் நிர்வாகிகள் தொடர்பு கொள்கின்றனர்.  அதற்கு பாட்டீல், இருய்யா! மக்களுக்கு உங்கள் கெமிக்கலால் இழப்புக்கள் வரும் என்பதும், நீங்கள்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியவர்கள் என்பதும் தெரிந்து விட்டது, அதனால் சற்றுப் பொறுத்து நெளிவு, சுளிவாகத்தான் இதைக் கையாள வேண்டும் அவசரப் படாதீர்கள் எனத் தெரிவித்ததாகவும் விக்கி லீக் செய்திக்கசிவு தெரிவிக்கிறது.  இதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் சற்று செலவாகும், எங்களுக்கு பல   கோடி டாலர்கள் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.  அதே அரசியல்வாதிகள், இந்த போபால் மக்களுக்கான நஷ்ட ஈட்டு எலும்புத் துண்டுகள் சிலவற்றை டெள கெமிக்கல் வீசியெறிந்து விட்டால், வேலை சற்று சுலபமாகி விடும்  என டெள க்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு நடுவில் டெள நிர்வாகிகளைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஏன் மகாராஷ்டிரத்தில பிரச்சனைன்னா அதை சற்று நிறுத்தி வைத்து விட்டு எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் எனச் சிவப்புக் கம்பளம் விரித்ததையும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்கெனவே உள்ள ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனமான அல்கலீஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. டெள கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்திய திட்டக் கமிசன் துணைத் தலைவர் (உலக வங்கி கைக்கூலி) மான்டேக் சிங் அலுவாலியாவைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதற்கு “உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை அதிகமாக இருப்பதால் சற்றுப் பொறுங்கள்’ எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.  அமெரிக்கத் தூதர் தன் நாட்டிற்குத் தெரிவித்த செய்தியின் முடிவுரையாக “டெள கெமிக்கல்ஸ் நிர்வாகம் அரசின் அனுமதி பெறுவது சுலபம் என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.  ஆனால் போபால் நிகழ்வுகளை மக்கள் இன்னும் மறக்காத நிலையில் அனுமதி பெறுவதென்பது டெள நிர்வாகம் மதிப்பிடுவதை விடச் சற்று சிரமமானது” என்று தெரிவித்துள்ளது. இந்தக் கதை இதோடு முடியவில்லை… என்ற இக்கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள். போபால் சம்பவ நஷ்டங்களுக்கு, இழப்புகளுக்கு டெள கெமிக்கல்ஸை பொறுப்பாக்காமல் விடுவியுங்கள் என அமெரிக்கத் தூதரக அதிகாரி முல்போர்டு மற்றும் கருவூலச் செயலாளர் பால்சன் ஆகியோர் இந்திய அரசியல்வாதிகளிடம் தரகு பேசிய விபரங்கள் 2ம் தேதி தி இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் ஒரு மாநில முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தவறுகளுக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என ஒப்புக் கொண்டதாக ஜூலை யிலிருந்து நவம்பர் 2007 வரை தூதரகத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய தகவல்களின் வழியே தெரிய வருகிறது. இந்தியா வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் வணிகத்துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா டெள இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கிற முதலீட்டை வரவேற்பதாகவும், யூனியன் கார்பைடு நிகழ்விற்கும் அந்தப் பேரழிவு நடந்த இடத்தில் உள்ள இரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கும் டெள-தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  (அந்த இடத்திலுள்ள இரசாயனக் கழிவுகளை அகற்ற மறுக்கும் டெள நிர்வாகத்தை எதிர்த்துதான் மக்கள் போராட்டம் என்பது ஒரு புறமிருக்க, கழிவுகளை அகற்றவும், நட்டஈடு தரவும் டெள பொறுப்பேற்க முடியாது என நமது அரசியல் சிகாமணிகளே ஒப்புதல் வாக்குமூலம் தருவது என்ன விதமான கொடுமை) அந்த ரகசிய கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ள விவ‌ரங்கள் யாதெனில், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரி டேவிட் சி முல்போர்டு, துணைத் தலைவர் ஸ்டீபன் ஜே ஒயிட், கல்கத்தா பிரிவு தூதரக அலுவலர் ஹென்றி வி ஜார்டைன், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருக்கிடையே இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேம்பட வேண்டுமானால் இந்த விஷ‌யத்தில் விரைவாக ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள் என அமெரிக்கா இந்தியாவை நெருக்கடி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், நஷ்ட ஈடு போன்ற வழக்குகள் இருந்தால் எப்படி முதலீடு செய்ய முடியும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து டெள நிறுவனத்தைக் கழற்றி விடுங்கள் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது.  இந்த விஷயத்தில் அலுவாலியா தனது திருவாய் மலர்ந்து, மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  டெள போன்ற மற்றொரு நிறுவனத்தைப் பின்னாளில் எடுத்துக் கொண்ட நிறுவனம், முதன்மை நிறுவனத்தின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்படி சொல்ல முடியாது, இருந்தாலும் எங்கள் பெரிய வக்கீல் ப.சிதம்பரத்துடன் தாங்கள் தொடர்பு கொண்டால் அவர் தங்களுக்கு நல்ல சட்டப்பூர்வ ஆலோசனைகள் அளிப்பார் (என மற்றொரு அமெரிக்க உலக வங்கிக் கைக்கூலியின் முகவரியைக் கொடுத்துள்ளார்) என்றாராம். அமெரிக்கக் கருவூலச் செயலாளர் பால்சன் அக்டோபர் 28ம் தேதி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை சந்தித்த பின், தனது நாட்டுக்குத் தெரிவித்த தகவலில் ஒரளவுக்குப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, சில சட்டப்பூர்வ வழக்குகள் தவிர.  மேற்கு வங்க முதல்வர் தனது மாநிலத்தில் டெள நிறுவனம் தொழில் துவங்க வர வேண்டுமென ஆர்வமாக உள்ளார்.  மேலும் சிபிஎம் முதல்வர் தெரிவிக்கையில் உங்களுக்கு எந்தத் தடங்கல் வந்தாலும் அவற்றை நீக்க நான் உறுதுணையாக இருப்பேன்,  இருந்தாலும் நீங்கள் ஒருமுறை எங்கள் நாட்டின் பிரதம மந்திரியையும், நிதி அமைச்சரையும் சந்தித்து விடுங்கள் என அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். டெள நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரு லிவரிஸ், ரோனன் சென் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் போபால் நிகழ்விற்கு டெள நிறுவனம் பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். போபால் நிகழ்வு என்பது ஒரு சிறு தடங்கல்தான்,  மற்றபடி இந்திய நாட்டில் மான்டேக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற நல்லவர்களெல்லாம் இருப்பதால், இங்கு தொழில் துவங்குவதோ முதலீடு செய்வதோ பெரிய சிரமம் இல்லை.  மக்கள் போராட்டம் என்ற சிறிய தடங்கலை எல்லாம் அரசியல்வாதிகளைக் காசால் அடித்துச் சரிசெய்து விடலாம் – எனவே அந்நிய முதலீடுகள் தாராளமாக இந்தியாவிற்குள் வரலாம் என்பதுதான் ஒட்டுமொத்த செய்திக்கசிவின் சாராம்சம். இனி மீண்டும் இந்தக் கதை இதோடு முடிவதில்லை.. என்ற முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்வோம். _____________________________________________ இந்திய வளங்களைச் சுரண்டுவது, மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிப்பிட்டு அபாயகரமான ரசாயன நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவது போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து அவ்வப்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள் என ஊடகங்களைப் பார்த்து மக்களாகிய நாம் நம்பினால் நிச்சயமாக மோசம் போவோம் என்பது மேற்கண்ட தூதரக செய்திக் கசிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.  எனவே மக்களை அரசியல்படுத்தி போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும். நாசகார டெள-வே இந்தியாவை விட்டு வெளியேறு ! என்ற போராட்டத்தை மீண்டும் கையிலெடுத்து, தீவிரப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகும். சித்ரகுப்தன் நன்றி- தி இந்து மற்றும் அதன் செய்தியாளர்கள்     17 உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்! தலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது. ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக – ஜெயதி கோஷ் [CAPTION : FOR DAILY : TIRUNELVELI : DECEMBER : 30/12/2009 : Conservancy workers of Tirunelveli Corporation cleaning a drainage channel at Melappalayam on Wednesday as part of the mass cleaning programme. Photo: A_Shaikmohideen - CAPTION : FOR DAILY : TIRUNELVELI : DECEMBER : 30/12/2009 : Conservancy workers of Tirunelveli Corporation cleaning a drainage channel at Melappalayam on Wednesday as part of the mass cleaning programme. Photo: A_Shaikmohideen] திருநெல்வேலி நகர சுத்தி தொழிலாளர்கள் படம்-பிரன்டலைன் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.  அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும். துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.  தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது. இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது. மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது.  இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை.  இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும்.  இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும். கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர். பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது.  தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது.  இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது. அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது.  உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர்.  உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள்.  தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது.  இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர். அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது. இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது.  70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது.  64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது.  ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது.  இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான்.  மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய  சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை.  மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது. இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று.  பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது.  கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும்.   வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும். ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது.  உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம்  அதிகரித்திருக்கிறது. ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.  இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது.  ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்),  உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது. பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது.  மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது.  அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது. இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்)  அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது.  சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது.  வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது. அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும். மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது. – நன்றி: ஃபிரண்ட்லைன் , கட்டுரையாளர் – ஜெயதி கோஷ் – தமிழில் – சித்ரகுப்தன் 18 உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா? அடுத்த பொருளாதார ‘சூப்பர் பவர்’ என்று புகழப்படும் இந்தியாவில்தான் சராசரியாக ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஆம், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “உலகக் கோப்பை” தொலையட்டும், அதற்கான விழாக்கள் தொலையட்டும், அரசுகளால் அந்த வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் இலவச நிலங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும் தொலையட்டும், ஏன்? இந்த “விழாக்கள்” நடக்கிற இடத்திலிருந்து சில கி.மீ தூரங்களில் எனது உணவுக்கு வழிவகுக்கும் உழவர்கள் மாண்டு கொண்டிருக்கும் போது, நான் எப்படி காலன் கணக்கில் பீரும், மதுவும் அருந்திக் கொண்டு குதியாட்டம் போட முடியும். உங்களுக்குத் தெரியுமா, 9 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த பொருளாதார வளர்ந்த நாடு என்று புகழப்படும், இந்த மிளிரும் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக  47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது. [farmer-suicide] கடந்த மாதம், மார்ச் 5-ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவின் நீர் நிரம்ப வேண்டிய இடங்களிலெல்லாம் வழிந்து கொண்டிருக்கும் போது, காதைச் செவிடாக்கும் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வானை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, ஆடம்பர விடுதிகளில், பாரிஸ்டாசில் உட்கார்ந்து கொண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் சந்தர்ப்பத்தை பற்றி சுவாரசியமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அதே பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சுவாமிகவுடா, வசந்தம்மா என்ற விவசாய ஜோடிகள் அவர்களது இரண்டு குழந்தைகளை நிற்கதியாய் விட்டுவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?  அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களா? இல்லை. அவர்கள் குடிகாரர்களா? இல்லை. அவர்களுக்கு தீராத வியாதியா? இல்லை. பிறகு ஏன்? ரூ  80 ஆயிரம் கடன் வாங்கியது சிறிது சிறிதாக கூடி ஒரு லட்சத்தி இருபதாயிரம் வரை உயர்ந்த கடனாகக் கட்ட இயலாமல் போனதே காரணம் (இது கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஜோடியின் ஒரு மாத ஊதியம், அவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் கடனுக்கு கட்டும் மாத தவணை) ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் அந்தக் கடனை தங்களால் எப்போதும் திரும்பக் கட்ட இயலாது என்று, அவர்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.  அரசாங்கத்தாலும் பாதிப்படையச் செய்யப்பட்டார்கள்.  30 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு (பட்டு) சில்க்-ற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்தது இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்.  அவர்கள் ஏற்கனவே நலிந்து போன பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள்.  இந்த இறக்குமதி வரிச் சலுகையால் சீனாவிலிருந்து மலிந்த விலைக்கு பட்டு முதலான பொருட்கள் நமது நாட்டின் சந்தையில் வந்து குவியும், நமது விவசாயிகள் நிற்கதியாய் நிற்பார்கள். கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்களால் நம்ப முடிகிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த உண்மை தெரியாது. ஏன்? உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் என்று போற்றப்படும், இந்தியாவின் ஊடகங்கள் இத்தகைய தகவல்களை கொடுப்பதில், சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் கேளிக்கை விடுதிகளிலும், அரங்குகளிலும், ஆடம்பர அரங்கேற்றங்களிலும், கேளிக்கை களிலும்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.  பாகிஸ்தான் அணி விளையாட்டு தொடர் ஆரம்பிக்க உள்ள நாளுக்கு முதல்நாள் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யும் போது, ஏன் நமது நாட்டு வீரர்கள் அவ்வாறு பயிற்சி செய்யவில்லை என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் “பூனம் பாண்டே” (விளம்பர மாடல்) மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஊடகங்கள் சனநாயகத்தின் மூன்றாவது கண் என்பார்கள்.  சனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள்? ஆனால், இங்கோ ஊடகங்கள் “தரகர்களாக” மாறிவிட்டன, சுத்தமான வியாபாரம். எனவே ஊடகங்கள்  மூலம் இத்தகைய சாவுகளை தெரிந்து கொள்வது சாத்தியமற்றது.  பிறகு யார் இருக்கிறார்கள்?  அரசாங்கம் செய்யுமா?  ஆனால் நமக்கெல்லாம் தெரியும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறதென்று. பிறிதொருநாள் நான் பெங்களூருவின் விஞ்ஞான் சபா (சட்டசபை) பக்கம் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கே நான் வாசித்த ஒரு வார்த்தை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.  அங்கே ஓரிடத்தில் “அரசாங்கத்தின் வேலை ஆண்டவன் வேலை” என்று எழுதப்பட்டிருந்தது.  அப்போதுதான் புரிந்தது அரசாங்கம் தங்களது எல்லாப் பணிகளையும் ஆண்டவனிடத்தில் விட்டு விட்டார்கள் என்பது. கர்நாடக முதல்வர் திருவாளர் எடியூரப்பா அனைத்து வீரர்களுக்கும் நிலம் பரிசாக வழங்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் நிலம் எங்கே?  பெங்களூரிலேயேவா? திருவாளர் முதலமைச்சரை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள்.  உடனே திருவாளர் முதலமைச்சர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பணமாக கொடுக்க தீர்மானிக்கிறார்.  ஆனால், அதுவும் எங்கிருந்து வரும்?  உங்களது, எனது வரிதான் உள்ளதே.  ஏற்கனவே கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் அந்த கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், அதிகம் பணத் தேவையில் பாடுபடுபவர்கள் இந்த ஏழை விவசாயிகள் இல்லையா? அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி நீங்கள் ஒரு “மெர்சிடீஸ் பென்ஸ்” கார் வாங்க கடன் கேட்டால் 6 சதவீத வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.  ஆனால் அதே வங்கியில் ஒரு விவசாயி டிராக்டர் வாங்க கடன் கேட்டால் வங்கி எவ்வளவு வட்டி கேட்கும் தெரியுமா? 15 சதவீதம்.  ஏற்றத் தாழ்வின் ஆழத்தைப் பாருங்கள்.  தண்ணீர் பாட்டில் ரூ15-க்கு விற்கப்படும் போது, செல்போனின் சிம் கார்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது.  இனி எவ்வளவு காலத்திற்குத்தான் நமக்கு உணவளிக்கும் உழவர்களின் கையைக் கடிக்கப் போகிறோம்.  சமீபத்தில் வெங்காய விலை ஒரு உதாரணம். 2008ல் லக்மே இந்தியா ஒரு அலங்கார காட்சி ஒன்றை மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தியது.  அதில் 500 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.  அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பொருள் “பருத்தி”.  இந்த ஆடம்பர ஹோட்டலிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லிருந்து 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  எத்தனை தொலைக்காட்சி நிருபர்கள் இதைப் படம் பிடித்திருப்பார்கள்?  ஒருவருமில்லை. 60 சதவீததத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ 20-ல் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர்.  டயட் என்ற நாம் அருந்தும் ஒரு கோக் பானத்தின் விலை அவர்களது ஒரு நாளைய வாழ்க்கை.  ஒரு நாள் இரவு-பகல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு செலவிடப்படும் மின்சாரம், விவசாயி பல வாரங்களுக்கு பயன்படுத்த போதுமானது.  உங்களுக்கு ஒன்று தெரியுமா?  மின்சார நிறுத்தம் கூட வர்க்க நலன் சார்ந்ததாக உள்ளது. பெரும் நகரங்களுக்கு 2 மணிநேரம், சிறு நகரங்களுக்கு 4 மணிநேரம், கிராமங்களுக்கோ 8 மணி நேரம், இப்போது யாருக்கு அதிக மின்சாரம் தேவைப் படுகிறது.  இரவு பகலாக தனது மோட்டாரை இயக்கி, நீர் பாய்ச்சி பயிர் வளர்க்கும் விவசாயிக்கா, இலகுவாக கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து கணினியில் இந்திய லீக் கிரிக்கெட் பார்க்கும் சில மேற்குடி அலுவலர்களுக்கா? நமது பிறந்த நாள் விழாக்களில் எத்தனை ஆயிரம் ரூபாய்களை வாரி இறைக்கிறோம்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கார்களில் அங்கும் இங்கும் பறக்கிறோம்.  வார இறுதியில் கூர்க்கு (மலைவாழ் சுற்றுலாத்தலம்) செல்ல நமது குளிரூட்டப்பட்ட அறைகளில் மெத்தை போன்ற சோபாக்களில் அமர்ந்து கொண்டே திட்டமிடும் போது, அந்த வழியாக போகும் போது, அதற்கு மிக அருகில் உள்ள கிராமங்களில் ரூ 10 ஆயிரம் கடனுக்காக விவசாயிகள் பூச்சி மருந்து குடித்தோ, தூக்கில் தொங்கியோ தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே அது குறித்து நாம் எண்ணியதுண்டா? பன்றிக் காய்ச்சல் வந்த போது ஒரே அமளி, ஆர்ப்பாட்டம்.  ஒவ்வொரு இறப்பும், ஒவ்வொரு நிமிடமும், ஊடகங்களில் காட்டப்பட்டது, ஏன்?  ஏனென்றால் இந்த நோய் அபரிமித மாத வருமானம் வாங்கும் கணணி பொறியாளர்களை, மத்திய தர வர்க்கத்தினரை நேரடியாகத் தாக்கியதே காரணம். அங்கே உடனே முக்கியத்துவம் வந்தது.  நிவாரண முகாம்கள் தோன்றியது.  அரசாஙகத்தாலேயே விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டது இந்த வர்க்கத்தினரை திருப்திப் படுத்துவதற்காக. ஆனால் மறுபுறம், ஒவ்வொரு நாளும் 47 பேர் கடந்த 15 ஆண்டுகளாக மடிந்து வருகிறார்கள்.  யாராவது இதைத் தடுக்கவோ, அதைப்பற்றி கவலைப்படுவதோ இல்லை ஏன்? ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்திற்குள் அவனது மனைவி தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்து மடிவது அல்லது குழந்தைகளை அநாதையாக விட்டு விட்டு தான் மட்டும் மடிவது என்ற நிலைதான் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூரில் ஒரு துயருற்ற விவசாய பெண்மணி அரசு நடத்தும் விதைக் கடையில் கடனுக்கு பூச்சி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டு உயிரை விட்டார்.  வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்தவள், இறந்த பின்னும் கடனை விட்டுச் செல்ல வேண்டிய பரிதாப நிலை. பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோம் சாம்ராஜ்யத்திற்க நீரோ என்ற பேரரசன் இருந்தான்.  அவன் பலமான அரசனாக இருந்தான்.  ஆனால் அதே நேரத்தில் கலை, கவிதை, குடி என்று வாழ்க்கை முழுவதும் கேளிக்கையாகவே வாழ்க்கையை நடத்தினான்.  ஒரு முறை அவன் மிகப் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதற்கு சமுதாயத்திலுள்ள கவிஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான்.  ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் குடிக்கவும், உண்ணவும், சிரித்தும் மகிழ்ந்திருந்தார்கள்.  நேரம் ஆக ஆக கேளிக்கை அதன் உச்சத்தை அடைந்தது.  இரவும் வந்தது.  அதை அப்படியே தொடர வேண்டும் என்றான் நீரோ மன்னன்.  இந்த நேரத்தில் அந்த மன்னன் அவனது நாட்டு சிறையிலிருந்த அனைத்து குற்றவாளிகளையும் அவன் தோட்டத்தை சுற்றி நிற்க வைத்து அனைவரையும் தீயிலிட்டான்.  அது அவனது விருந்தினர்களுக்கு, கேளிக்கை தொடர்வதற்கு தேவையான வெளிச்சத்தை கொடுத்ததாம்.  அந்த விருந்தினர்களுக்க மகிழ்ச்சியான நேரம்தான்.  ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை குறித்து அவர்களுக்கு தெரியுமா?  அந்த விருந்தினர்களுக்கு என்ன நிலையான மனசாட்சி இருந்திருக்கும். நீரோவின் விருந்தினர்கள் அன்று நீரோ மன்னனின் விருந்தில் என்ன நடந்ததோ அதற்கும் இன்று நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த, கைநிறைய சம்பாதித்து, கடைவீதிகளைச் சுற்றி வரும், கிரிக்கெட் மோகத்திலிருக்கும், விருந்து பிரியர்களான நாம்தான் நீரோவின் விருந்தாளிகள். மடிந்து போகும் நம் விவசாயிகளின் உயிரில் அந்த கேளிக்கைகளை நாம் அனுபவிக்கிறோம்.  ஒவ்வொரு ஆண்டின் அரசின் பட்ஜெட்டும் வசதியானவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது.  அவர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு நமது விவசாயிகளிடமிருந்து நிலங்களை புடு்ங்கி கொடுப்பதுடன், புதிய தாராளமயக் கொள்கையென்ற பெயரில் அவர்களுக்குத்தான் அதிகமான வரிச்சலுகை, இறக்குமதி வரிகுறைப்பு.  லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு தகுதியற்ற தயாரிப்பாக இருந்தாலும், அவர்களின் கடன்களுக்கு அதிகமான வட்டிச் சலுகைகள் என்று அபரிமிதமாக கொடுக்கப்படுகிறது.  ஏனென்றால் நாமெல்லாம் நீரோவின் விருந்தினர்கள் இல்லையா? நான் இந்த விழாக்களுக்கெல்லாம் எதிரியல்ல.  நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு கூட எதிரியல்ல.  உலகக் கோப்பைக்கு எதிரானவனல்ல.  எனது நாட்டு மக்கள், விவசாயிகள், கிராமத்து மக்கள் எல்லோரும் இணைந்து குதூகலிக்கும் போது, எனது விவசாயிகள் கொடூரமாக தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளாத போது, மெர்சிடீஸ் பென்சுக்கும், டிராக்டருக்கும் கடனுக்கு ஒரே மாதிரி வட்டி விகிதம் வசூலிக்கப்படும் போது, இந்தியா உலக அளவில் ஒன்றை சாதிக்கிறதென்றால், முதலில் குதூகலிப்பவன், கூச்சலிடுபவன் நானாகத்தான் இருக்கும். அந்த நாளில்தான் கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு பாரத் மாதாவிற்கு ஜே என்று கோஷமிட்டுக் கொண்டு மோட்டார் பைக்கில் வலம் வருவேன்.  ஆனால் இல்லை.  இன்றில்லை.  எனக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள் துயரத்திலில்லை என்பது வரை நான் இதைத்தான் சொல்வேன்.  உங்களது ஆடம்பர கடை வீதிகளும் நாசமாய் போகட்டும்மென்று.  உங்களது இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாசமாய் போகட்டுமென்று. உலகக் கோப்பை நாசமாய் போகட்டுமென்று.  உங்களது அனைத்து கொண்டாட்டங்களும் நாசமாய் போகட்டுமென்று. _______________________________________________ உழவர்கள் மடியும் போது ” உலகக் கோப்பை ,” ஒரு கேடா ? – நரேந்திர ஷெகாவத் ,   நன்றி – தி ஹிந்து 24.04.11 தமிழில் – சித்ரகுப்தன் ___________________________________ 19 பருத்தி மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத் பருத்தி மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத் மான்சான்டோவுக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியா பொய் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலகமயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், இந்த விதைகள் நமது நிலங்களை மலடாக்கிவிடும், எல்லா தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிவதுடன், ஒவ்வொரு முறை விதைகள் தேவைப்படும் போதும் நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்து சொல்லின.  புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் இவை குறித்து பல கட்டுரைகள் வந்தன.  ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பன்னாட்டு நிறுவனமான மஹிகோ மான்சான்டோ பயோடெக் இந்தியா என்ற பெயரில் உருவான பன்னாட்டு நிறுவனம் பி.டி.பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டியது.  அதற்கு எந்த அளவுக்கு ஊடகங்கள் பொய் விளம்பரங்கள் செய்து ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத். “இந்த 2 கிராமங்களிலிருந்து ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை” [ChapBT] செய்தியா – விளம்பரமா – டைம்ஸ் ஆப் இந்தியா மோசடி மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சை பொங்கி எழுந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு செய்தித்தாள் அதையே தொழில்நுட்ப வெற்றி என ஆதாரப்பூர்வமான புகைப்படங்களுடன் கட்டுரை எழுதியிருந்தது. இங்கு தற்கொலைகள் என்பதே இல்லை.  மக்கள் விவசாயத்தால் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வழக்கமாகப் பயிரிடப்படும் பருத்தியிலிருந்து மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி விதை முறைக்கு மாறியதால் இந்த இரண்டு (பாம்பிரஜா, அன்டார்காவூன்) கிராமங்களில் கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாக சமூக, பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது” இதை உறுதிப்படுத்தி நம்பிக்கையூட்டும் விதத்தில் அதே செய்தித்தாளில், அதே செய்திக்கட்டுரை வரிக்கு வரி மாறாமல் (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக 28, 2011) வெளியிடப்பட்டது.  அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமான கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தக் கவலையுமின்றி மேற்படி செய்தி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பாம்பிரஜா வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், “எங்கள் கிராமத்தில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” எனப் போராடும் விவசாயிகள் கூட்டம் தெரிவித்த போது வந்தவர்கள் அதிர்ந்து போயினர். “இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான்  பெரும்பான்மையான தற்கொலைகள்  நிகழ்ந்துள்ளன” என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.  தி இந்து நாளிதழ் தரப்பில் சரிபார்த்ததில் 2003 முதல் 2009 வரை 9 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இப்பிரச்சினை தொடர்பான ஆர்வலர் குழுக்கள் அதன் பின் இன்னும் 5 தற்கொலைகள் நடந்துள்ளன என்கின்றனர்.  எல்லாமே 2002 க்கு பின்னர், அதாவது டைம்ஸ் ஆப் இந்தியா விவசாயிகள் பி.டி. விதை விவசாயத்திற்கு மாறிவிட்டனர் எனத் தெரிவித்த பிறகு இவை நடைபெற்றுள்ளன. விவசாயத்தில் மறுமலர்ச்சியா? அதிர்ச்சியில் உறைந்து கவனித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கோபத்துடன் விவசாயிகள் ‘அய்யா, இங்கு பல விளைநிலங்கள் தரிசாகி விட்டன, பலர் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர், நஷ்டம் சற்று குறைவாக இருக்கட்டுமே என பலர் மாற்றுப்பயிராக சோயா பீன்ஸ் விதைத்துள்ளனர்’ என்று தெரிவித்தனர். மஹிகோ மான்சான்டோ மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியை காரணம் காட்டி இந்த கிராமங்களிலிருந்து நில உரிமையாளராக இருந்த விவசாயிகள் உட்பட பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். நாங்கள் பாம்பிரஜா கிராமத்திற்கு கடந்த செப்டம்பரில் சென்றிருந்த போது சுரேஷ் ராம்தாஸ் பாண்ட்ரே என்பவர் “விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதால் பலர் வெளியேறி விட்டனர்” எனத் தனது கணிப்பை தெரிவித்தார்.  அரசாங்கம் ஆகஸ்ட் 2011 இல் நாடாளுமன்றத்தில் இந்திய உயிர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (பிஆர்ஏஐ) அறிமுகப்படுத்திய மசோதா தோல்வியடைந்தவுடன், பிணம் உயிர்பெற்று எழுவது போல பி.டி. விவசாய முறையைப் பாராட்டி, புகழந்து பேசும் 2008 ஆம் ஆண்டின் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி பிரசுரமானது.  மசோதாவை பட்டியலிடுவதில் ஏற்பட்ட தோல்வி என்பது விவசாய-உயிரியியல் தொழிலின் எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் அம்சமாகும்.  அதன் காரணமாக விரைவில் மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான தரகுப் பணி துவங்கியது. “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்கிற தலைப்பிட்டு ஆகஸ்டு 2008 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் முழுப்பக்க செய்திவெளியானதைத் தொடர்ந்து, அடுத்த நாளிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் சில செய்தித்தாள்களில் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிட் நிறுவனத்திலிருந்து தொடர்ச்சியாக விளம்பரம் வரத் துவங்கியது. இந்த விளம்பரங்கள் ஆகஸ்டு 29, 30, 31, செப் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிரசுரமானது. அதற்கான மசோதா  இறுதியாக மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டிலும் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அறிமுகப்படுத்தவோ, நிறைவேற்றப்படவோ இல்லை. நாடாளுமன்றம் பி.டி. பருத்தியை தவிர்த்த வேறு பிரச்சினைகளில் சிக்குண்டதால், செய்தித்தாளை வைத்து சிலருக்கு தங்க அறுவடை நடந்தது. இத்தகைய தொடர் விளம்பரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின்  முடிவை மாற்றவில்லை என்பதுடன், மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட உணவுப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது.  பல்வேறு கட்சிகளிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் விதர்பா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான துன்பம், விவசாய தற்கொலைகள் போன்ற தகவல்களால் அதிர்ச்சியடைந்து அந்தப் பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்தனர். அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாபுதேப் ஆச்சார்யா தலைமையிலான குழுவின் தெளிவான இலக்கு என்பது மஹிகோ-மான்சான்டோவின் அதிசய மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா என்பதாக இருந்தது. மற்றொன்று மாரேகான்-சோனாபுர்டி ஆகும்.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கிராமத்திலும் தங்கத்தைப் பார்க்கவில்லை. விவசாயப் புரட்சி – அதிசயம் என்று சொல்லப்பட்டது தகர்ந்து, மேலும் அரசின் தோல்வியாக போனதாலேயே துன்பம் நேரிட்டது. இந்தியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவான 2012 இல் மீண்டும் இந்தப் பிரச்சினை (டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருப்பது போல்) பொறி பறக்கும் விவாதப் பொருளாகியது.  கடந்த ஆண்டு ஆக 28 செய்தித்தாளில் தோன்றிய “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்பது “ஒரு நுகர்வோர் தொடர்பிற்கான முன்முயற்சி” எனத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால் விளம்பரத்திற்காகப் பணம் கொடுத்து செய்தியாக்கப்பட்டது எனலாம். எனினும் அந்தச் செய்தியில் உள்ள விபரங்கள் எல்லாம் டைம்ஸ் ஆப் இந்தியாவின் தொழில்முறை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் தயாரிக்கப்பட்டதே.  இன்னும் குறிப்பாக விளம்பரமாக மாறிய அந்தக் கதை ஏற்கெனவே வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் 31 ஆக 2008 இல் வெளியான ஒன்றாகும்.  பிரசுரமானதே மீண்டும் பிரசுரமானது கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது.  ஆக 28, 2011 இல் வெளியான செய்தியிலேயே அது சரிபார்க்கப்படாத செய்தியின் மறுபதிப்பு என்பது லேசாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.  இருப்பினும் 2008 இல் வெளியான செய்தியில் விளம்பரம் எனச் சொல்லப்படவில்லை.  ஆனால் இருமுறை பிரசுரமானதிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு விச‌யம் யாதெனில், யாவாட்மால் கிராமத்தைப் பார்வையிடுவதற்கான பயண ஏற்பாடுகள் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது என்பதாகும்.  அந்த நிறுவனம் ‘2008 இல் வெளியானது டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தித் தொகுப்பாகும்’ என்றது.  2008 இல் வெளியான செய்தித் தொகுப்பு என்பது ஆசிரியர் குழும அதிகார வரம்பிற்குட்பட்டு செய்தியாளர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் சென்று சேகரித்த அறிக்கைகள் ஆகும்.  நாங்கள் செய்தியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளை மட்டும் செய்தோம் என்கிறார், கடந்த வாரம் தி இந்து நாளிதழிடம் பேசிய மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தித் தொடர்பாளர்.  2011 செய்தி என்பது, வணிக நோக்கத்தில் 2008 இல் வெளியான செய்தியையே திருத்தங்கள் மேற்கொள்ளாமல் வெளியிட்டதே ஆகும். 2008 முழுப்பக்கச் செய்தி நாக்பூர் பதிப்பில் வெளியானது.  2011 இல் “சந்தைப்படுத்தும் சிறப்பிதழாக” வெளியான செய்தி அந்தச் செய்தித்தாளின் பல மாவட்ட வெளியீடுகளில் (அதன் இணைய தளத்தில் சிறப்புச் செய்திப் பகுதியில் சொடுக்கினால் பார்வையிடலாம்)  வெளியானது.  ஆனால் நாக்பூர் பதிப்பில் மட்டும் வெளியாகவில்லை.  நாக்பூர் பதிப்பில் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக அது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும். ஒரே முழுப்பக்கச் செய்தி மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பிரசுரமாகியுள்ளது.  முதல் முறை செய்தியாக, 2 வது முறை விளம்பரமாக. முதல் முறை வெளியானது அந்தச் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் வெளியிடப்பட்டது.  2 வது முறை புதையுண்ட பிணத்தைத் தோண்டியெடுத்து, பிரேதப் பரிசோதனை செய்வது போல் அதன் விளம்பரப் பிரிவால் வெளியிடப்பட்டது.  முதல் முறை செய்தி சேகரிப்பிற்கான பயணம் மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2 வது முறை மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது.  முதல் முறை வெளியானது அவலம்.  2 வது முறை வெளியானது கேலிக்கூத்து. மஹிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நாங்கள் 2 வது முறை வெளியிடச் சொல்லும் போது தெளிவாக “இது அக் 31, 2008 நாக்பூர் பதிப்பில் வெளியான செய்தியின் மறுபதிப்பு” என மூலச் செய்தி மற்றும் தேதிக்கான பகுதியில் குறிப்பிட வலியுறுத்தினோம் என்கிறார்.  ஆனால் அவரின் மின்னஞ்சல் வழியாக எழுதிய பதிலில் அந்த விளம்பரப்படுத்தும் செய்தி வெளியான சூழ்நிலைமை பற்றி எழுப்பிய தி இந்து வின் கேள்விக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை.  விவசாயத்தில் பருத்தி விதைகள் மற்றும்  தாவர உயிர்தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 இல் குறுகிய கால தகவல் தொடர்பு முன்முயற்சியாக இது செய்யப்பட்டது என அவர் சொல்கிறார்.  ஆனால் இந்திய உயிர்தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையத்தின் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இதை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்ற தி இந்துவின் கேள்விக்கு விடையளிக்கப்படவில்லை. ஆனால் நடைபெற்றது அதைவிட அதீதமானது. டைம்ஸ் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்த விவசாய அதிசயம் குறித்த புகைப்படங்கள் அந்த பி.டி.பருத்தி விதைக்கப்பட்ட பாம்பிரஜா மற்றும் அன்டார்காவுன் கிராமங்களில் எடுக்கப்படவில்லை.  அதில் தோன்றுபவர்கள் பாம்பிரஜா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அந்தப் படங்கள் பாம்பிரஜாவில் எடுக்கப்பட்டதல்ல என்கிறார் அந்தக் கிராமத்தை சேர்ந்த பாபன்ராவ் காபந்தே. போலித் தோற்ற அதிசயம் டைம்ஸ் ஆப் இந்தியா கதையில் சிறப்பான கல்வியறிவு பெற்றிருந்த விவசாயியாகக் குறிப்பிடப்படும் நந்து ரவுத் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவரும் ஆவார்.  அவருடைய வருவாய் பி.டி.பருத்தி விதை காரணமாக எதிர்பாரா விதத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்பட்டது.  “நான் கடந்த ஆண்டு ரூ. 2 லட்சம் சம்பாதித்தேன்”  கடந்த செப்டம்பரில் அவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.  “ஏறக்குறைய ரூ. 1.6 லட்சம் நான் விற்ற எல்ஐசி பாலிசிகளால் கிடைத்தது” என்றார்.  அதாவது சுருக்கமாகச் சொன்னால் அவர் விவசாயத்தில் சம்பாதித்ததைப் போல் நான்கு பங்கு ஆயுள் காப்பீடு முகவர் பணியில் சம்பாதித்துள்ளார்.  அவரின் 4 பேர்கள் அடங்கிய குடும்பத்திடம் 7 1/2 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா விவரித்த கதையில் “பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிக்காமல் இருந்ததன் வழியாக அந்த விவசாயி ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை அதிகமாக சேமித்ததாக (அழுத்தம் கட்டுரையாளரால் சேர்க்கப்பட்டது) விவரிக்கிறது”.  அவர் 4 ஏக்கரில் பருத்தி பயிர் செய்திருந்ததால் அவரது சேமிப்பு “பூச்சி மருந்தில்”  ரூ. 80,000 என்கிறது கணக்கு.  ஆனால் பாம்பிரஜாவிலுள்ள விவசாயிகள் மிகுந்த கோபத்துடன், ஏக்கருக்கு ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் சம்பாதித்த யாரேனும் ஒருவரை இங்கே சுட்டிக் காண்பியுங்கள் பார்ப்போம் என்கின்றனர்.  கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது திரு. ரவுத் ஒப்பமிட்டுக் கொடுத்த புள்ளி விபரம் (தி இந்துவின் வசமுள்ளது) அவரின் வருவாய் குறித்து வேறு வித்தியாசமான கதையை தெரிவிக்கிறது.   படம் நன்றி thehindu.com மத்திய அரசின் விவசாய அமைச்சர் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் ‘பி.டி. அதிசயம்’ என்பதற்குப் பதிலாக அதன் மீது ஏளனத்தை உமிழ்கின்றனர் பாம்பிரஜா மற்றும் மாரேகவுன் விவசாயிகள்.  இந்திய நாடாளுமன்றத்தில் 2011 டிசம்பர் 19 அன்று அமைச்சர் சரத்பவார், விதர்பாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1.2 குவிண்டால் பஞ்சு கிடைக்கிறது என்றார்.  அதிர்ச்சியுறும் வகையில் அது மிகக்குறைந்த அளவே. அதை இரண்டு பங்காகக் கணக்கிட்டால் கூட குறைவுதான்.  விவசாயிகள் சுத்தம் செய்யப்படாத நிலையில்தான் பருத்தியை விற்கின்றனர்.  நூறு கிலோ அறுவடை என்றால் அதில் 35 கிலோ பஞ்சும் 65 கிலோ பருத்தி விதையும் கிடைக்கும். (அதிலும் கூட இழையாடும் போது மேலும் 2 கிலோ இழப்பு ஏற்படும்).  மேலும் திரு. பவார் தெரிவிக்கும் விபரத்தின்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 3.5 குவிண்டால் விதையுடன் கூடிய பஞ்சா?  அல்லது வெறும் 1.4 குவிண்டால்தானா?.  திரு. பவார் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4200 வீதத்தில் அதிகமான விலையையே பெறுகின்றனர் என்கிறார்.  அவருக்கு ஏற்புடையதல்ல என்ற போதிலும், விவசாயம் செய்ய ஆகும் செலவினத்திற்கு அருகாமையில் அவர் சொல்லும் தொகை இருப்பதால்தான் அங்கு மோசமான சூழல் வளர்ந்துள்ளதாகக் கருதுகிறேன்.  திரு. பவார் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் சரியென்றால் நந்து ரவுத்தின் மொத்த வருவாய் ஒரு ஏக்கருக்கு ரூ. 5900 ஐத் தாண்டியிருக்க வேண்டும்.  ஆனால் 1 1/2 பாக்கெட் விதை மட்டும் ரூ. 1400 என்பதைக் கழித்துப் பார்த்தால், ஏறக்குறைய அவருக்கு மீதம் ஏதுவுமேயில்லை.  ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த விவசாயியின் வருவாய் ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்கிறது. மேற்சொன்ன செய்தியில் உள்ள மிகைப்படுத்தலைப் பற்றி கேட்டபோது மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தி தொடர்பாளர்- “எங்கள் நிறுவனத்தின் ஊழியர் சொன்னதாக பத்திரிகையில் செய்தியாக வந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்” என்றார்.   முழுப்பக்க விளம்பரமாக மாறிய அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்ட ஒரு சிறு பத்தியில் எங்குமே ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்றோ, வேறு தொகை குறிப்பிட்டோ புள்ளி விபரம் ஏதுமில்லை.  வெறும் “பி.டி.பருத்தியால் விவசாயிக்கு வருவாய் உயர்வு” என்றும், பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில் அந்த பருத்தி பயிரிடப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே பேசும் விதத்தில் அது இருந்தது.  ஆனால் ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.  மேலும் அந்த இரு கிராமங்களிலும் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற வகையில் எதுவும் அவர் குறிப்பிடும் செய்திக் குறிப்பில் இல்லை.  எனவே மான்சான்டோ நிறுவனம் மிகக் கவனமாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் நழுவியதோடு, அவர்களின் சந்தைப்படுத்தும் முக்கியக் குறிப்புகளில் மட்டுமே கவனமாக இருந்துள்ளனர். இந்தச் செய்தியைப் பற்றி மஹிகோ-மான்சான்டோ உயிர்தொழில்நுட்ப இந்தியா நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “செய்தியாளர்கள் மேற்கண்ட கிராம விவசாயிகளிடம் நேரடியாக பேட்டிகள் எடுத்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, விவசாயிகள் குறிப்பிட்டு சொன்னவற்றையே செய்தியாக்கியுள்ளனர்” என்றார். ‘           விளம்பரமாக மாறிய கதை’ மீண்டும் தோன்றிய போதும் நந்து ரவுத், போல்கார்டு II விதையின் மூலம் ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் பெற்றுள்ளார் என்கிறது.  அதாவது விவசாய அமைச்சர் தெரிவிக்கும் 1.4 குவிண்டால் என்பதைப் போல் 14 பங்கு அதிகம்.  அதாவது பருத்திக்கு 2 முதல் 3 முறை நீா்ப்பாய்ச்சுவது தேவைப்படும் நிலையில், மழை குறைந்த மாவட்டமான விதர்பாவில் மகசூல் குறைந்து விட்டது என வருத்தப்படுகிறார் திரு. பவார்.  ஆனால் அதே சமயம், தேசியவாத காங்கிரசு – காங்கிரசு கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஏறக்குறைய பெரும்பாலான மழைக் குறைவுப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் இந்த பி.டி.பருத்தி விதையை ஊக்குவித்தது எவ்வாறு என்ற கேள்வி எழும் போது திரு பவார் அமைதி காக்கின்றார்.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மழை குறைந்த பகுதிக்கு பொருந்தி வராத இந்த பி.டி. விதைகளை மகாராஷ்டிரா அரசு விதைக் கழகம் அதன் மாநில விவசாய ஆணையர் மூலமாக விநியோகித்தது.  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பார்த்தால், நந்து ரவுத் பணத்தில் உருளுகின்றார்.  அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் அந்த விவசாயி தண்ணீருக்குள் விழுந்த போதிலும், மூழ்காமல் மிதக்கிறார். 2011 இல் ஒரே வாரத்தில் சரமாரியாக வெளியான மஹிகோ-மான்சான்டோ பயோடெக் விளம்பரங்கள் வேறு தீயை பற்ற வைத்தது.  இந்திய விவசாயிகள் மிகுந்த பணப்பலன்கள் பெறுகிறார்கள் என்ற வகையில் தோன்றிய ஒரு விளம்பரத்தின் (டெல்லியிலிருந்து வெளியாகும் வேறு ஒரு செய்தித்தாளிலும் வந்திருந்தது) மீது இந்திய விளம்பரத் தரக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டுக் குழுமம்  “புகாருக்குள்ளான விளம்பரத்தில் வைக்கப்பட்ட வாதம் மெய்ப்பிக்கப்படவில்லை” என்ற முடிவிற்கே வந்தது.  மான்சான்டோ நிறுவனச் செய்தி தொடர்பாளர், விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் முன் வைக்கப்பட்ட குறிப்புகளை தொடர்ந்து விளம்பரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்றார்.  மஹிகோ-மான்சான்டோ நிறுவனம் விளம்பரத்தை திருத்தியமைத்ததை விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் ஒப்புக்கொண்டது. மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பின் நாங்கள் மீண்டும் திரு. நந்துவை சந்தித்த போது, “இன்று என்னைக் கேட்டால், நீர்வளம் குறைந்த இந்த கிராமங்களில் மரபணு மாற்ற (பி.டி) விதைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பேன், நிலைமை தற்போது மிக மோசம்” என்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் அவர் (நந்து) ஏன் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லையென்றால், தாம் மிகவும் தாமதமாக வந்ததாகத் தெரிவித்தார். “நாங்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒதுக்கி விட்டோம், இனி எங்கள் எவருக்கும் அவர்கள் தேவையில்லை” டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பரமாக மாறிய செய்தியில் மாங்கூ சவான் என்ற விவசாயி இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.  அதாவது பி.டி. விதையினால் அன்டார்காவுன் கிராமத்தில் ஏற்பட்ட செழிப்பினால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பாம்பிரஜாவில் உள்ள 365 விவசாய வீடுகள் மற்றும் அன்டார்காவுனில் உள்ள ஏறக்குறைய 150 வீடுகளில் ‘விதர்பா ஜன் அந்தோலன் சமிதி’ (விஜாஸ்) மேற்கொண்ட ஆய்வுக் கணக்கெடுப்பில் ஏறக்குறைய வங்கிக் கணக்குள்ள அனைத்து விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் போவதாகவும், ஏறக்குறைய 60 சதவீத விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் தனியாரிடம் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது என்கிறார் விஜாஸ்-ன் தலைவர் கிஷோர் திவாரி. மகாராஷ்டிரா அரசு நிலைக்குழு (பாராளுமன்ற) உறுப்பினர்களை மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா கிராமத்திற்குள் வர விடாமல் திசைதிருப்ப மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.  இருப்பினும் குழுவின் தலைமை உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா மற்றும் அவரின் சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட கிராமத்தை பார்வையிட வேண்டும் என்ற தமது நிலையில் உறுதியாக இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பனர்கள் வருகையால் ஊக்கம் பெற்ற மக்கள் அந்த இரு கிராமங்களிலும் தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக இதயத்திலிருந்து வெளிப்படையாக தெரிவித்தனர்.  தேசிய குற்றப்பதிவு ஆணையப் பதிவுகள் தெரிவிக்கின்றபடி, மகாராஷ்டிராவின் பதிவுகளில் மிக மோசமாக 1995  இல் இருந்து 2010 வரை 50000 விவசாய தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.  அதிலும் அந்த மாநிலத்தில் விதர்பா மாவட்டம் அத்தகைய இறப்புகளில் முன்னிலை வகிக்கிறது. இன்னமும் மிகப்பெரிய, அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள். பி.டி.பருத்தியின் வரவால் விவசாய தற்கொலை பிரச்சினை குறைந்தது என எந்த விவசாயியும் தெரிவிக்கவில்லை.  அதே சமயம் அவர்கள் அதிசயம், செலவு குறைப்பு, சேமிப்பு என்பனவற்றில் உள்ள போலித் தோற்றங்களை கருத்துக்களாக வெளிப்படுத்தினர்.  அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் மேற்கொள்ள செய்தியானது.  ஆனால் பணம் கொடுத்து போடப்பட்ட செய்தி பற்றியோ, சந்தைப்படுத்தும் வியாபார தந்திரம் என்பது பற்றியோ எந்தப் பேச்சும் இதுவரை இல்லை. ________________________________________________ நன்றி- தி இந்து ( 10 மே 2012) தமிழில்- சித்ரகுப்தன். ________________________________   20 ஒரு பெருச்சாளியின் வளைக்குள்ளே… ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை. [Chap19A] நீங்கள் எதை பெயரிட்டுச் சொன்னாலும் அது அவரிடம் இருந்தது. 44 வயதான ரெட்டி தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார்.  ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை.  மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை. ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார்.  அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும்.  விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி. சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி. ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது.  1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு.  பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம். அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா.  அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும். ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும். பணங்களின் சுரங்கம் தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள் மலை போல் நகைகள் 2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்) 2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள் 13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட் 20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள் இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.     வருமானமும் முதலீடுகளும்- கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி பணம் ரொக்க கையிருப்பு 1.11 லட்சம் கார் – லேன்சர் ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி வியாபார வருவாய் – 18 கோடி வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி பத்திரங்கள் – 14.4 கோடி பங்கு முதலீடுகள் – 47.31 கோடி மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி வங்கி முதலீடுகள் – 14.51 கோடி வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள் அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்   பண்ணை வீட்டு சொத்துக்கள்- பண்ணை வீடு 19.71 ஏக்கர் 4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம் ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள் பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம் பொறுப்புகள் – 16.82 கோடி   குடும்ப வருவாய்- மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும் ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி வியாபார வருவாய் 22.69 கோடி நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும் இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின்  வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி __________________________________________________________ நன்றி –   டைம்ஸ்   ஆப்   இந்தியா ,   தமிழில் –   சித்ரகுப்தன்   21 ரூ 3,74,937 கோடி ஊழல்! ரூ 3,74,937 கோடி ஊழல்! கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலை விட 2 மடங்கு அதிகம். - ஆண்டுதோறும் (இந்திய) மத்திய அரசின் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை – அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசின் பட்ஜெட். அதற்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே சம்பளப்பிரிவினர் என்று சொல்லப்படுகின்ற 2 சதவீதமாகவுள்ள நடுத்தர வர்க்கம், அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கிற திருவாளர் பொதுஜனம் ஆகிய அனைவரும் பரபரப்பாக இதில் அளிக்கப்படவுள்ள‌ சலுகைகளில் பெருமளவு தனக்குத்தான் கிடைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு இருப்பார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் செய்தித்தாள்களில் நிதியமைச்சர் பெரிய பெட்டியுடன் வரும் படம், பாராளுமன்ற உறுப்பினராயிருக்கின்ற தனது அபிமான நடிக, நடிகையரில் எவ‌ரேனும் இருவரது புகைப்படங்களுடன் செய்திகள் வந்தவுடன் மேலோட்டமாக சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரிக்கு என்ன சலுகை என்பதைப் பார்த்து விட்டு முனகி க்கொண்டே சம்பளப் பிரிவினர் ஒதுங்கி விடுவர்.  திருவாளர் அன்றாடங் காய்ச்சியோ சிகரெட், பீடி விலை உயர்ந்திருக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதோடு அவரது கடமை முடிந்தது. ஆளும் ஓட்டுக் கட்சியினர் எதையும் படித்துப் பார்க்காமல் எளியோருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் என்ற பேட்டியையும், எதிர் கட்சியானால் வருகின்ற தேர்தலைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிற ஆசை வார்த்தை பட்ஜெட், மற்றபடி ஏழை எளியோருக்கு எதுவும் சொல்லப்படவில்லை.  இதில்லை – அதில்லை என்று அறிக்கையோடு அவர் பணியும் முடிந்து விடும்.  மாவட்டந்தோறும் இருக்கிற சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற முதலாளிகளின் சங்கத்தில் யார் தலைவராக இருக்கிறாரோ அவர் சார்ந்த வணிகத்திற்கு சலுகை இருந்தால் அதைச் சிறந்த பட்ஜெட் என்றும், அவருக்கு சலுகை இல்லையெனில் அந்த வியாபாரத்தைக் குறிப்பிட்டு அதற்கு சலுகை வழங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களது பணி முடிந்து விடும். - சம்பளப் பிரிவினரிடமும், அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாங்கும் உணவு உள்ளிட்ட பொருட்களிலும் கராராக வரி வசூல் செய்யும் அரசு, வரிச்சலுகை, வரி வசூலாகா விட்டால் தள்ளுபடி என்பதெல்லாம் அனைத்து பட்ஜெட்களிலும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக பி.சாய்நாத், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எழுதியிருக்கிற கட்டுரையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். - - படம் – http://www.thehindu.com ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் ! - – பி.சாய்நாத் - இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது. - 2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது.  இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது. - ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை மட்டுமே.  இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை.  இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல.  கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும். - பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது.  விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது.  அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.  உண்மையில்  பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது. - இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது.  இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது.  தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது.  உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம்.  வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம்.  இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது.  கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும். - இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே  கேள்விப்பட்டிருக்கலாம்.  மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை.  சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.  தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது.  மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன. ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர். - பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம். ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.  இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வ‌தில்லை.  மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே.  சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை). - இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.  பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக  மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது).  ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும்.  மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல.   இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது.  தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி). - இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக  எவ்வளவு தொகை என்று பார்க்கலாம்.  தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி.  நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி.  கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை.  இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்).  இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.  நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்). - கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல.  மாறாக, அரசின் கொள்கை முடிவு.  இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட்.  இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.  சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை.  கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது.  மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.  சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. - ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது.  கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது.  ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘.  ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை. - அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது.  அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான். - ___________________________________ நன்றி – தி இந்து 07/03/11) – தமிழாக்கம் : சித்ரகுப்தன் – 1 ஆசிரியரைப் பற்றி.. [appa_edit_photo1] தமிழகத்தில் மதுரையில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் ஸம்பத், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அலுவலகப் பிரிவில் பணியாற்றி வருபவர்.  சித்ரகுப்தன் என்கிற புனைப்பெயரில் ஆங்கில நாளிதழ், மாத இதழ்களில் வரும் அரிய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து, வினவு தளம் வழியாக வெளியிட்டிருக்கிறார்.  இயற்பெயரில் தினமணி, தி இந்து (தமிழ்), தினமலர் போன்ற நாளிதழ்கள் மற்றும் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்த ஆழம் எனும் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  போக்குவரத்து அரங்கில் மாநில அளவிலான தொழிற்சங்க (கட்சிசார்பற்ற) நிர்வாகி.  இவரது கல்வித் தகுதி முதுகலை-பொது நிர்வாகம், முதுகலை-மனித உரிமைகள், நிா்வாகம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த முதுகலை பட்டயத் தேர்ச்சி ஆகியவை.  சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் சட்டக்கதிர் எனும் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த மாத இதழில் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார். 2 FREE TAMIL E BOOKS - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email :  freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி ! 4 கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம். பதிப்புரிமையின் சாதக பாதகங்கள் பதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடினும் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. சமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது. அறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை. தற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது? படைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும். அதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது. 2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது. http://creativecommons.org இது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார். இந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. மூல உரிமங்கள்     Attribution குறிப்பிடுதல் / Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.     Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது.     Non-derivative வழிப்பொருளற்ற / NoDerivatives (nd) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.     Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும். ஆறு முதன்மை உரிமங்கள் ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. Creative Commons Attribution BY – குறிப்பிடுதல் (CC-BY) [] படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும் என்றில்லை. மாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம். 2.Creative Commons Attribution-ShareAlike குறிப்பிடுதல் – அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA) [] இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும். 3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல் – வழிப்பொருளற்ற (CC-BY-ND) [] உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற (CC-BY-NC) [] இந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 5. Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) [] இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். 6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) [] இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன. உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம். இந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம். http://creativecommons.org/choose/ உங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது. எழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது. இந்த அனுமதியின் நன்மைகள் படைப்பாளர்களுக்கு படைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார். வாசகருக்கு வாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். சமுக வலைத்தளங்களில் பகிரலாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம். மாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம். பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை. புகைப்படங்கள் Flickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ. http://search.creativecommons.org/ அடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள். கல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார். http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable மின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம் பல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை. இணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது. சில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான். அதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது. இதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல. இவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை. இப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன. வலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்களை எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது. ஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம். இதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன. இது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. ஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள். வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும். மேலும் படிக்க. https://creativecommons.org/licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 http://creativecommons.org/videos/get-creative http://www.slideshare.net/DonnaGaudet/creative-commons-32865734 http://www.assortedstuff.com/stuff/?p=413 http://thepowerofopen.org/ நன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’ உரிமை – Creative Commons Attribution/Share-Alike License http://creativecommons.org/licenses/by-sa/3.0/