[] 1. Title Page 2. Cover 3. Table of Contents தேடிப் போகவேண்டிய செல்வம் தேடிப் போகவேண்டிய செல்வம்   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thedi_pogavendiya_selvam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/belongs_to_me This Book was produced using LaTeX + Pandoc நன்றி இக்கட்டுரைகளைத் தொடராக வெளியிட்டு, வற்றாத ஊக்கம் அளித்த வல்லமை.காம் குழுவினருக்கு தேடிப் போகவேண்டிய செல்வம் அள்ள அள்ளக் குறையாதது அறிவு மட்டுமே. இது புரியாத சிலர், ‘எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுத்தால், பிறரும் புத்திசாலி ஆகிவிடுவார்களே! அப்புறம் என்னை யார் மதிப்பார்கள்?’ என்று கருமித்தனமாக யோசித்து, அதன்படி நடப்பார்கள். அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், தெளிந்த மனத்தையும் அன்பையும் வளர்க்காத அறிவால் யாருக்கு என்ன பயன்? பிறரது மதிப்புதான் கிடைக்குமா? தமிழில் கல்வி பயின்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்த மாதுரி, “நான் இப்போல்லாம் தமிழிலே எதுவும் படிக்கிறதில்லே. விட்டாச்சு!” என்று பெருமை பேசுவாள். தாய்மொழியான தமிழால் அவள் பெற்ற அறிவு அவளுக்கோ, பிறருக்கோ பயன்படவில்லை. அந்த அறிவைப் பெருக்கிக்கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தான் அறிந்தவற்றை தன் சொந்த வாழ்க்கைக்கும் பிறருக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று யோசித்து, பிறரையும் சிந்திக்க வைப்பவரே அறிவாளி. அறிவாளி அதிகமாகப் பேசமாட்டார். ஒருவர் தானே பேசிக்கொண்டிருந்தால், பிறரது கருத்தை அறியமுடியாதே! பணிவுடன் பிறர் சொல்வதைக் கேட்பதாலும் அறிவைப் பெருக்கமுடியும். அவசியம் என்று வரும்போது, சுருக்கமாகச் சொல்வார். Any fool can know. The point is to understand (ஐன்ஸ்டீன்). நிறையப் படித்தும், மனப்பாடம் செய்தும், பற்பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவர் அறிவாளி என்பதில்லை. தாம் அறிந்ததை – பிறர் கேளாமலேயே – சொல்லி, தமது விரிவான அறிவைப் பறைசாற்றிக் கொள்கிறவர் இவர். பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையைக் கேட்டுப்பாருங்கள், “இன்று என்ன படித்தாய்?” என்று. “எல்லாம்!” என்று கர்வத்துடன் பதில் வரும். ஆனால், வளர்ந்தபின்னரும், “எனக்கு எல்லாம் தெரியும்!” என்று முழங்குபவன் அறிவிலி. அவ்வாறு நம்புவதால், மேன்மேலும் அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இருப்பதில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதால் அறிவு பெருகிவிடாது. அதை நாம்தான் தேடிப் போகவேண்டும். காலம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாலும். எல்லாவற்றையும் அறியமுடியாது. ஒரு துணுக்கு: உனக்குத் தெரிந்ததைப் பற்றி எழுது. நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். அதாவது, ஒருவனுக்குத் தெரிந்ததைவிட, தெரியாதவைதான் அதிகம். தனக்கு எவ்வளவு தெரியாது என்று தெரிந்து வைத்திருப்பவனைத்தான் அறிவாளி என்கிறோம். அறிவைப் பெருக்கவேண்டுமா? எதையும் விரைவாகத் தெரிந்துகொள்ள ஒரே வழிதான். கேள்விகள் கேட்கவேண்டும். குழந்தைகள் மூன்று வயதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களது அறிவைப் பெருக்குவது வளர்ப்பவர்கள் கையில்தான் இருக்கிறது. ‘புத்திசாலி!’ என்று பிறரது பாராட்டைப் பெறும் குழந்தைகளை நிறைய கேள்விகள் கேட்கப் பழக்கியிருப்பார்கள் பெற்றோர். ‘ஏன்? ஏம்மா? சொல்லு!’ இரண்டு வயதில் நான் என் குழந்தைகளுக்குப் போதித்த மந்திரம். எதைப் பார்த்தாலும், அந்த வயதிலேயே என்னை அப்படிக் கேட்பார்கள். வயதாக ஆக, கேள்விகளும் தொடர்ந்தன. கதை என் வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவைப் பற்றி ஆவலுடன் விசாரித்தாள் எட்டு வயதான மகள். “அம்மா! இப்போ குழந்தை எத்தனை பெரிசா இருக்கும்?” “தெரியலியே!” என்று ஒப்புக்கொண்டேன். எப்படியும், நான் எதையாவது தேடிப் படித்து, சொல்லிவிடுவேன் என்று அவள் சமாதானம் அடைந்தாள். நான் என்ன பதில் அளித்திருந்தாலும் அவள் ஏற்றிருப்பாள். ஆனால், உண்மையை உள்ளபடிச் சொல்வதுதான் சரி என்று நம்புகிறவள் நான். அப்போது இணையம் கிடையாது. வாசகசாலைக்குப் போனேன். “ஒரு கட்டை விரல் நீளம்,” என்று நான் சொல்லக் கேட்டு, “எனக்கு அவ்வளவு குட்டி பேபியைத் தூக்கத்தெரியாதே!” என்று கவலை தெரிவித்தாள் மகள். “எனக்கும் தெரியாது. ஆனா, பெரிசாப் போயிடும்”. “நான் படுத்தாம சாப்பிட்டாதான், பெரியவளாப் போயிடுவேன்னு சொன்னியே! பேபி எப்படி சாப்பிடும்?” “அதுக்காக நான் சாப்பிடறேன்”. இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன. ‘அசடாப் போயிட்டே! இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது,’ என்று நான் கண்டிக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் எந்தவிதமான கேள்விகள் கேட்டாலும், அதற்கான பதிலை அவர்களால் ஏற்க முடியும். தர்மசங்கடமான சில கேள்விகளுக்குப் பதிலை ஒத்திப்போடலாம். “குழந்தை எப்படி ஒன் தொப்பைக்குள்ள போச்சு? ஏன் முழுங்கினே?” முதல்முறையாக நான் சிடுசிடுத்தேன். “நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாப்போனதும் சொல்றேன். இப்போ போய் விளையாடு”. கண்ணீருடன் அவள் முறைத்தாள். “என்னை அசடாக்கணும்னு பாக்கறே! அப்புறம் நான் எப்படி அம்மாவா ஆகமுடியும்?” சற்றுப் பொறுத்து, “ஏம்மா, நான் எது சொன்னாலும் நீ சிரிப்பே?” இவ்வாறு ஆரம்பிக்கும் அறிவுத் தாகத்திற்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவே கிடையாது. அறிவினால் ஏற்படும் சக்தியைத்தான் Knowledge is power என்கிறார்கள். எதற்கு அறிவைப் பெருக்குவது? புதிய சமாசாரங்களை ஆர்வத்துடன் கற்பதாலும், புதிய அனுபவங்களை நாடுவதாலும் அடையக்கூடிய நன்மைகள் பல. வீண் கவலை மறைந்துவிடும். எந்த வயதிலும் உற்சாகம் குன்றாது, மேலும் பலவற்றை எளிதாகக் கற்க முடியும். எல்லாச் சூழ்நிலைகளிலும், புதியவர்களுடன் பழகமுடிகிறது. தன்னம்பிக்கையுடன், பிறரது மதிப்பையும் பெறலாம். ஆனாலும், புதிதாக ஓர் அனுபவம் ஏற்படும்போது சற்று பயம் எழக்கூடும். இது இயற்கை. பயத்தைப் பொருட்படுத்தாது, துணிவுடன் இறங்கினால் அறிவு பெருகும். நாம் பெறும் அறிவை நன்மை, தீமை இரண்டிற்கும் உபயோகப்படுத்த முடியும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. நாம் பெற்ற அனுபவம் நம்மை நல்லவிதமாக மாற்றுவதாக இருக்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர், காதல், செக்ஸ் போன்ற வார்த்தைகள் நம்மிடையே சொல்லத்தகாதனவாக இருந்தன. இந்த ’கெட்ட வார்த்தைகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் ரகசியமாகப் படித்தார்கள், கண்ட கண்ட படம் பார்த்தார்கள். அவை சரியான விளக்கங்களை அளித்திருக்குமா என்பது சந்தேகம்தான். கதை நான் வானொலியில், ‘செக்ஸ்’ என்ற தலைப்பில் பேசினேன். உறவினர்கள் அதிர்ந்தார்கள், ‘வெளிப்படையாக எப்படித்தான் இதைப்பற்றியெல்லாம் பேசுகிறாயோ!’ என்று. அதன்பின், ஆங்கிலத்தில் நிறைய எழுதினேன். ‘கடவுளைப்போல் படைப்புத் தொழிலை மனிதனும் செய்யும் வழி இது. சொல்லக்கூடாத வார்த்தை என்று சொல்லிச் சொல்லியே, இதைக் கெட்ட வார்த்தையாக ஆக்கியிருக்கிறார்கள். அதனாலேயே இதை முறைகேடான வழிகளில் அறியும் ஆர்வம் தூண்டப்படுகிறது,’ என்ற ரீதியில் எழுதினேன். ஒரு திருமண வைபவத்தில் என்னைச் சந்தித்த இளைஞன் ஒருவன், “நீங்க ‘அதைப்பத்தி’ எழுதினது எல்லாத்தையும் நான் படிச்சிருக்கேன்,” என்றான், ரகசியக்குரலில். “அந்த வார்த்தை சொல்லக்கூடாதது இல்லேன்னு புரிய வைக்கிறதுக்காகத்தான் நான் எழுதறேன்,” என்றேன், சற்று அலுப்புடன். செல்வத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை: எவ்வளவுதான் அடைந்தாலும், திருப்தி என்னவோ கிடைக்காது. ஒருவர், ‘எதையாவது புதிதாகக் கற்றால், பணம் சம்பாதிக்க முடியுமா?’ என்று கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த இலக்கே தவறு. இப்படிப்பட்டவர்கள், தாம் நம்பியவை தவறு என்று ஒத்துக்கொள்ள பயந்து, புதிய விஷயங்களை அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள். அறிவு எப்படித்தான் வளரும்? முதிர்ச்சியும் குழந்தைத்தனமும் “இது என்னோட இடம்!” பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை. ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது? கதை எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, எனக்குப் பொறுக்கவில்லை. “குழந்தைபோல் பேசாதே,” என்றேன் கண்டிப்பான குரலில். அதை எதிர்பார்க்காத சாரதாவின் முகத்தில் அதிர்ச்சி. “நான்தான் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன்,” என்றாள் விடாப்பிடியாக. அவளால் தோல்வியை ஏற்க முடியவில்லை. வயதிற்கும், முதிர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது. எத்தனை வயதாகியும் குழந்தைத்தனமாக நடப்பவர்களுக்கு மனமுதிர்ச்சி குறைவு. இத்தகையவர்கள் ஒன்றுமில்லாத சமாசாரங்களைக் குறித்து விவாதம் செய்வார்கள். அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார்கள். எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டிருப்பதும் முதிர்ச்சி குறைவு என்பதைத்தான் காட்டுகிறது. (விமர்சகர்கள் இந்த விதிக்கு விலக்கு). கதை பள்ளிக்கூட வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று நடந்து முடிந்த குறைகளை அதற்கு மறுநாள் முழுவதும், பல ஆசிரியைகள் அதற்கு பொறுப்பு ஏற்றிருந்த மிஸஸ் சூவிடம் (Mrs. Choo) சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அவள்தான் காரணம் என்பதுபோல் அவளைத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள். அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேலை முடிந்து, வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, என் தோளில் கைபோட்டாள் மிஸஸ் சூ. நான் விழித்தேன். அவளுடன் அவ்வளவாகப் பேசியதில்லை. எதற்குத் தோழமை? “தாங்க்ஸ். நீ ஒருத்திதான் புகார் செய்யவில்லை,” என்று விளக்கினாள், நன்றியுடன். நான் லேசாகச் சிரித்து, “வருடத்தில் ஒரு நாள். அதுவும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி இனி என்ன ஆகப்போகிறது!” என்றேன். மருந்து மாத்திரைகளால் மட்டும்தான் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. வயதில் இளையவர்களுடன் ஒரு நாளின் நீண்ட பகுதியைக் கழிப்பதால், சில வருடங்களிலேயே ஆசிரியர்களும் அவர்களைப்போலவே நடக்கும் அபாயம் இருக்கிறது. ஒருவருக்கு முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று எப்படி அறிவது? (முதலில் அமையாவிட்டாலும், பழகிக்கொள்ளலாம்). 1. ஒரு காரியத்தில் இறங்குமுன், அதனால் விளையக்கூடும் வேண்டாத விளைவுகளைப்பற்றி நன்கு யோசிப்பார்கள். இதற்கு விலக்கு குழந்தைகள். மின்சார மின்தூக்கியில் உற்சாகமாகக் குதித்து ஏறுவார்கள், உடன் இருக்கும் தாய் வருகிறாளா என்றுகூடப் பார்க்கத் தோன்றாது. மேலை போனதும் தனியாக இருக்கிறோமே என்ற அச்சம் எழும். அதை அன்றுடன் மறந்து, மறுபடியும் அந்தத் தவற்றையே செய்வார்கள்! ஒரு சிறுவன் அப்படிச் செய்ததற்காக, பயந்துபோன அவன் அன்னை அவனை அடிக்க ஆரம்பித்தாள். நான், “விடுங்கள். என் பேரனும் இப்படித்தான் பண்ணுவான். நானும் அவன் அம்மாவும் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொள்வோம், ஒவ்வொரு முறையும்!” என்று சிரித்தேன். அவளுடைய மகன் கூடுதலாக அடி வாங்காமல் பிழைத்தான். 2. தம் பிழைகளுக்குப் பொறுப்பு ஏற்பார்கள். தாம் வாழ்வில் முன்னேறாததற்குக் காரணம் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் என்று பழியைப் பிறர்மீது போடுவோர் பலர். ‘என் தந்தை குடிகாரர். குடும்பத்தில் அக்கறையே செலுத்தவில்லை. அவர் தக்க வழி காட்டியிருந்தால், எங்கேயோ போயிருப்பேன்!’ ‘என் தாய் எனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டாள். நான் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் தானே முன்னின்று செய்வாள். நான் அவ்வளவு அருமையாம்! இப்போது சுய சிந்தனையே இல்லாது, பிறரை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது!’ ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று புரிந்தபின், தம் போக்கை மாற்றி அமைத்துக்கொள்வது தம் கையில்தான் இருக்கிறது என்கிற முதிர்ச்சி இவர்களிடம் கிடையாது. 3. உள்ளுக்குள் அச்சம், துக்கம் போன்ற தவிர்க்கமுடியாத உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அவைகளை அடக்கிவிடுவார்கள். வெளியில் கொட்டிவிடாது, அமைதியாகவே காணப்படுவார்கள். சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே இக்குணம் வெளிப்படும். சில குழந்தைகள் பசி எடுத்தால், பாலுக்காக அலறுவார்கள். (வளர்ந்தபின், அடக்கம் ஏற்படலாம்). சிலர் முனகலோடு நிறுத்திக்கொள்வார்கள். பெரியவர்களானதும், பணக்காரரோ, ஏழையோ, வாழ்வில் சுகம் மட்டுமே அனுபவிப்பவர்கள் எவருமில்லை. ஆனால், எதிர்ப்படும் இடர்களைச் சமாளிக்க முடியாது, குரலை உயர்த்தியோ, பிறரைத் தாக்கியோ பேசுவது முதிர்ச்சியா? 4. தமக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டிராது, பிறருடைய நலனிலும் அக்கறை செலுத்துவார்கள். இளவயதிலேயே இந்தக் குணத்தைப் பழக்கவேண்டும். கதை ஆறு வயதான அச்சிறுமி, “எனக்கு அந்த முழு சாக்லேட்டையும் குடுத்தாத்தான் வாங்கிப்பேன்,” என்று அடம் பிடித்தாள். தானே முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்ற சுயநலம் மிகுந்திருந்தது அவள் கோரிக்கையில். அவளைவிட சற்றே பெரியவளான அக்காள் கூசிப்போனாள். கண்டிப்பான குரலில், “அதெல்லாம் முடியாது. பிறருடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்,” என்று தாய் கூறியபோது, “அப்படியானால் எனக்கு வேண்டாம்!” என்றாள் சிறுமி, வீம்புடன். “உனக்கு வேண்டுமா?” என்று அக்காளிடம் கேட்க, அவள் குரலடைக்க, “வேண்டாம்!” என்று மறுத்தாள். தனக்கும் பகிர்ந்தளிக்க தங்கைக்கு மனம் வரவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு. “ஒருத்தருக்கும் வேண்டாமா? சரி,” என்று தாயே சாக்லேட்டைச் சாப்பிட்டாள். இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, “அறுபது காசு பெறாத அற்பப் பொருள்! இதைச் சின்னவளிடமே கொடுத்திருக்கலாமே!” என்றார். “இதன் விலை முக்கியமில்லை. பிறருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்று அவளுக்குப் புரியவேண்டாமா?” என்று விளக்கினாள் தாய். 5. புகழ், இகழ் இரண்டுமே தம்மை அதிகமாகப் பாதிக்க விடமாட்டார்கள். சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால் அவர்கள் அதை ஏற்று, நம்புவார்கள். தன்னம்பிக்கை வளர்வது இப்படித்தான். ஆனால், அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தாலோ, கர்வம்தான் ஏற்படும். பாராட்டுதற்குரிய தன்மைகள் பல இருந்தாலும், அதனால் கர்வப்பட்டு, சறுக்காமலிருக்க ஒரு வழி: “பிறர் புகழ்ந்தால், ‘நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. இல்லாவிட்டால், கர்வம் தலைக்கேறிவிடும்!” என்று சிறு வயதிலேயே ஒருவரை எச்சரிப்பதால் பலன் கிடைக்கும். இகழ்ச்சியை எப்படிச் சமாளிப்பது? நம்மை இகழ்பவர் தவறே புரியாது, குறைகளே இல்லாதவரா என்று யோசித்தாலே போதுமே! 6. தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத சமாசாரங்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளாதிருப்பார்கள். உலகை மாற்ற முடியாது. ஆனால், நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று புரிந்தவர்கள். இப்போக்கு கூட்டுக் குடும்பங்களில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். ‘இப்படிச் செய்யாதே!’ ‘உன் வயதில் நான்..,’ என்றெல்லாம் மறைமுகமாகக் கண்டனம் செய்தால், பிறர் கேட்கிறார்களோ, இல்லையோ, சொல்பவர்களைப் பிடிக்காமல் போகும். ஒரு குழுவில் இணைந்து வேலை செய்யும்போதும், தான் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தினால் போதாதா? பிறர் கேட்டால் மட்டுமே உதவி செய்வதைவிட்டு, ஓயாமல் ‘அறிவுரை’ என்ற பெயரில் வீண் அதிகாரம் எதற்கு? 7. செய்யும் தொழிலைக் கவனமாகச் செய்வார்கள். எவ்வளவு அதிருப்தி ஏற்பட்டாலும், பாதியில் விட்டுச் செல்வது இவர்கள் குணமல்ல. கதை சிபாரிசுடன் தன் மகனை அந்தத் தனியார் அலுவலகத்தில் சேர்த்திருந்தாள் பானு. ஒரு வருடத்திற்குள், அவனுக்குக் கொடுக்கப்பட்ட போனஸ் தொகையானது மேலதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்று ஆத்திரப்பட்டு, சண்டை பிடித்தாள். தனக்குச் சரியெனப் படாத எந்த ஒன்றையும் அவளால் பொறுத்துப்போக முடியவில்லை. “என் மகன் இனி இங்கு வேலை பார்க்கவேண்டாம்,” என்று அவனுடைய எதிர்காலத்தையும் பாழடித்தாள், நல்ல வேலை கிடைப்பது துர்லபம் என்று உணராது. தாயின் போக்கு புரியும்போது, மகன் அவளைக் குறை கூறுவான். முதிர்ச்சி உடையவர்களோ என்றாவது பாராட்டு பெறுவார்கள் – பெயர், புகழுக்காகச் சுயமாகப் பெருமுயற்சி எடுக்காவிட்டாலும் தனிமை விரும்பிகள் “ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால், ஆண்களுக்குப் பிடிக்காது”. சில குடும்பங்களில் மூத்தவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், தம் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்கிறார்கள் பல பெண்கள். அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தாள் ரேணு. ‘உன்னால் ஏன் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை?’ ‘பிறர் என்ன சொல்வார்கள் என்று யோசித்துத்தான் எதையும் செய்ய வேண்டும்’. சிறு வயதிலிருந்தே பலவாறாகக் கண்டிக்கப்பட்டிருந்தாள். தவறு அவள்மேல் இல்லை. சராசரி மனிதர்களைவிட அவளுக்குப் புத்திசாலித்தனம் மிக அதிகம் என்பதுதான் உண்மை. பிறர் ஏன் தன்னைப்பற்றி அப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து, தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வர் அவளைப் போன்ற சிலர். வேறு சிலரோ, நிறையக் கண்டனத்திற்கு ஆளாகித் தவிப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, என்றாவது தம்மைப்போன்ற ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால்தான் தெளிவு கிடைக்கும். மௌனம் ஏன்? மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்களோ, இல்லையோ, ‘எனக்கு நிறையத் தெரியும்!’ என்று காட்டிக்கொள்வதைப்போல் பேசும் வழக்கம் ரேணுவைப்போன்ற அதிபுத்திசாலிகளுக்குக் கிடையாது. அதனால், நிறைய பேர் இருக்கும் இடத்தில் அதிகம் பேசமாட்டார்கள். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தாலும், தனக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளியிடாது, பிறர் கேட்டால் மட்டும் பதிலளிப்பார்கள் இத்தகையவர்கள். இவர்கள் பெரும்பாலும் மௌனமாக, ஆனால் தம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம், கவனித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான போக்கு பிடிபடாது, ‘கர்வி,’ ‘முட்டாள்’ என்று பிறர் கருதக்கூடும். அது மட்டுமா! இவர்களது கருத்துக்களைப் பலராலும் ஏற்க முடியாது. மனம் வெதும்பி, ‘நீ பிறர் மனத்தை நோகடிக்கிறாய்!’ என்று வீண்விவாதம் செய்வார்கள். அலுப்பு எழ, இப்படிப்பட்டவர்களுடன் பேசுவானேன் என்று தோன்றிப்போகும். ‘என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்களேன்!’ என்ற எண்ணம் எழ, இவர்கள் தனிமையை நாடுவதில் என்ன ஆச்சரியம்! சுயமாகவே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவதால், பிறரது குறுக்கீடு இல்லாமல் விரைவில் ஒரு காரியத்தைச் செம்மையாகச் செய்து முடிப்பார்கள். தனிமையில் செயல்பட இதுவும் ஒரு காரணமாகிறது. என்றும் எதிர்நீச்சல்தான் பலரும் ஒரு திசையில் போக, தாம் மட்டும் எதிர்த்திசையில் பயணிக்கும் துணிச்சல் இருப்பதாலேயே இவர்கள் தனித்து நிற்கிறார்கள். யோசித்து, நிதானமாகப் பேசுவது இவர்களது குணம். இவ்வளவெல்லாம் இருந்தும், தன்னால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று (அனுமனைப்போல்) தெரிவதில்லை. ஊக்குவிக்க ஓரிரு உறவினரோ, நண்பர்களோ அவசியமாகிறது. முதலில் இவர்களைப் பழித்தவர்கள் இவர்கள் முன்னேறியதும் புகழ்வார்கள். இது புரிந்து, புகழ், இகழ் இரண்டும் தம்மை வெகுவாகப் பாதிக்க விடமாட்டார்கள். எதற்கு அநாவசியமான பயம்? தமக்குத் தெரியாததை ‘தெரியும்’ என்று சொல்லாமல், அவற்றைப் பிறரிடமிருந்து கற்பது புத்திசாலித்தனத்துக்குச் சான்று. பிறர் மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இல்லாவிட்டால் பலவற்றைக் கற்க முடியுமே! ‘எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புரிந்து வைத்திருப்பார்கள். ஆகையால், புதிய இடங்களுக்குப் போகையில், பலவற்றையும் அறியும் ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பார்கள். இத்தன்மையால், ‘இதென்ன தொந்தரவு!’ என்று பிறரை அலுக்கச் செய்வதும் உண்டு! உணர்ச்சிபூர்வமாகவும் புத்திசாலித்தனம் அமைந்திருக்க, புதிய மனிதர்களைக் கண்டு மிரளாமல், அவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள் இப்படிப்பட்டவர்கள். புத்திசாலிகள் தவறே செய்யமாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்யாதிருக்க அவர்கள் என்ன கடவுளா? ஆனால், தவற்றை ஒத்துக்கொள்ளும் நேர்மை உண்டு. யார் புத்திசாலி? ஒருவர் இரண்டு அல்லது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். அதனால் மட்டுமே அவர் புத்திசாலி என்பதில்லை. வெகு சிலரே பெரும்பான்மையானவர்களைவிட புத்திசாலியாக இருப்பார்கள். இது கல்வியால் வருவதல்ல. தகுதி இல்லாதவர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே புரிந்து வைத்திருப்பவரே புத்திசாலி. அறிவு மட்டும் இருந்தால் போதுமா? கருணையும் சேர்ந்திருந்தால்தான் அதற்கு மதிப்பு. கைமேல் பலன் கதை காவேரி ஒரு வீட்டில் வேலை செய்பவள். பதினைந்து வயதுதான். கிராமத்திலிருந்து அவளை அழைத்து வந்த அத்தை, தான் செய்யும் வேலைகளில் அவளையும் பழக்கினாள். உணவும், தங்க இருப்பிடமும் – அது குடிசையே ஆனாலும் – கிடைத்த திருப்தி காவேரிக்கு. அத்துடன், ஒவ்வொரு முறை சம்பளம் கிடைத்தபோதும் ஒரு திரைப்படம்! ஒரு வீட்டு அம்மாள், ‘இவ்வளவு சின்னப்பெண் இப்படித் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறாளே!’ என்ற கரிசனத்துடன், அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். மரியாதைக்காக ஓரிரு முறை பொறுத்துப்போன அச்சிறுமி, “வேணாம்மா. போரடிக்குது,” என்று மறுத்துவிட்டாள். எந்த ஒரு காரியம் செய்தாலும் உடனே பலனை எதிர்பார்ப்பவர்கள் வாழ்வில் கீழ்மட்டதிலேயேதான் இருக்க நேரிடும். காவேரியும் ரேணுவும் இரு வெவ்வேறு துருவங்கள். ரேணுவோ, ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னர் திட்டம் போடுவாள். இதை இப்படிச் செய்யலாமா, வேறு எப்படிச் செய்தால் கூடுதலான பலன் கிடைக்கும், இதனால் வேண்டாத விளைவுகள் என்னென்ன எழும் என்று பலவாறாக யோசித்தபின்னர், நிதானமாக செயல்படத் தொடங்குவாள். கதை ஒரு நாள் பெரிய மழை கொட்ட, வேலை செய்துகொண்டிருந்த காவேரி பெரிதாக அலறினாள். ஒரேயடியாகப் பயந்து, வீட்டு அம்மாள் ஓடி வந்தாள். பேச நாவெழாது, காவேரி மேலே சுட்டினாள். கூரையில் ஒரு சிறிய ஓட்டை. அதன்வழி மழை வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. “இவ்வளவுதானே! இப்போது பாத்திரங்களை அதனடியில் வை. நாளைக்கு ரிப்பேர் செய்யலாம்,” என்று வழி கூறிய அம்மாள் தன்னை அடக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனம் நிறைந்தவள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வாள். சூழ்நிலையையும் மாற்றுவாள். “நல்லாத்தான் அலறினே, போ! பாம்போ, தேளோ ஒன்னைக் கடிச்சிடுச்சாக்கும்னு பயந்தே போயிட்டேன்!” என்று அவள் சிரித்தபோது, காவேரியும் சேர்ந்து சிரித்தாள். நகைச்சுவை உணர்வு கதை புக்ககத்திலிருந்த சுசி, வெளியூரிலிருந்த தன் இளைய சகோதரியின் உடல்நிலை மிகுந்த சீர்கேடு அடைந்திருப்பதாக அறிந்தாள். அவள் மூச்சு இரு நிமிடங்கள் அடங்கிப்போக, ‘இறந்துவிட்டாள்!’ என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதன்பின், உயிர் பிழைத்தாள் என்ற தகவல் பின்னர் கிடைத்தது. சகோதரிக்குச் உடல்நிலை சற்றே சீரானதும், தங்கையை அழைத்தாள் சுசி. “என்ன நீ! செத்துச் செத்துப் பிழைக்கிறாயாமே!” என்று ஆரம்பித்தாள். ‘கொஞ்சங்கூட பச்சாதாபமே கிடையாதா இவளுக்கு!’ என்று முதலில் அதிர்ந்த தங்கை, கேலி புரிந்து, அவளுடைய சிரிப்பில் கலந்துகொண்டாள். ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, தேறியபின்னரும் கடந்ததைப் பற்றியே பேசுவது எதற்கு? அப்படிச் செய்வதுதான் முறை என்றால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்? தற்கொலை வேண்டாமே! தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள் முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!” பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்? தாற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாளமுடியாது, நிரந்தரமான தீர்வை நாடுகிறார்கள். கதை கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம் தாங்கமுடியாது தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டான். அவனுடைய செய்கையின் விளைவு பிறரை எப்படிப் பாதிக்கும் என்று அவன் யோசிக்கவில்லை. மனைவி, ஒரே வயதான குழந்தை, தாய் – எல்லாரையும் தவிக்கவிட்டு, தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த ஒருவனின் சுயநலமான காரியம் அது. தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக் கஷ்டப்படறதுக்கு ஒரு வழியா செத்துடலாம்னு இருக்கு!” என்று மரணத்தைப் பற்றியே பேசினான். அதுவே அபாயச் சங்கு. ஆனால், பிறர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறான்!’ என்று அலட்சியப்படுத்தினார்கள். இன்னொரு மலேசியக் கதை (படித்தது) பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டபின், அவர்களது ஐந்து வயது மகன் பாட்டியுடன் வளர்ந்தான். அவள் அன்புடன் ஊட்டி வளர்த்ததில் உடல் பருமனாகிக்கொண்டே போயிற்று. பெற்றோரின் உண்மை நிலை புரியாத சோகம் வேறு. இடைநிலைப் பள்ளியில் படிக்கையில், ‘குண்டு!’ என்ற கேலிக்கு ஆளானான். உணர்வு ரீதியில் பலவீனமான அவனைக் கொடுமைப்படுத்தியவர்களுடன் சேர விரும்பாது, பதினான்கு வயதிலேயே தனித்துப்போனான். பாட்டியின் மறைவுக்குப்பின், ‘யாருமே எனக்கு ஆதரவாக இல்லை!’ என்ற தன்னிரக்கம் எழுந்தது. பேச்சுத் துணைக்கும் எவருமில்லை, வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. இனி எதற்கு உயிர்வாழ வேண்டும் என்று தோன்றிப்போக, தற்கொலை செய்துகொள்ள என்னென்ன முறைகள் இருக்கின்றன என்று ஆராய ஆரம்பித்தான். “வாழ்க்கை வெறுத்துவிட்டது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்,” என்று பேச்சுவாக்கில் தாயிடம் கூறினான். “செய்துகொள்,” என்றுவிட்டாள் அவனைப் பெற்றவள். தற்கொலையைப் பற்றிய சிந்தனை அவளுக்கும் இருந்தது. அவனுக்கிருந்த ஒரே துணை தொலைக்காட்சிதான். தாய்மொழி அல்லாத ஒரு வேற்று மொழியில் அமைந்த படங்களைப் பார்த்தபோது, தானும் அந்த நாட்டுக்குப் போய் படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வயது ஏற ஏற, அது வெறியாகவே மாறியது. ஆனால், எப்படித் தன் கனவை நனவாக்குவது என்று புரியாது குழப்பம் ஏற்பட்டது. மொழியைக் கற்கத் தேவையான பெரிய தொகை எங்கிருந்து கிடைக்கும்? இயலாமையால் எழுந்த வருத்தத்தில், மீண்டும் தற்கொலையைப் இபற்றிய எண்ணம் எழுந்தது. அவன் ஏதோ சோகத்தில் ஆழ்ந்து, சரியாகச் சாப்பிடாது, எதிலும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்ட பள்ளி ஆசிரியை அங்கிருந்த கவுன்சிலரிடம் அனுப்பினாள். அவளிடமும் தனது தற்கொலை எண்ணத்தைப் பற்றிக் கூற, ‘உடனடியாக நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், உங்கள் மகன் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வான்!’ என்று அவனுடைய பெற்றோரை வரவழைத்துக் கூறினாள். முதலில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருந்துகள் சாப்பிட்டான். சிறுவர்களுக்கான உயவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. “உனக்கு ஜப்பான் நாட்டுக்குத்தானே போகவேண்டும்? முதலில் இங்கிருக்கும் அந்நாட்டு உணவகம் ஒன்றில் வேலை தேடிக்கொள். மொழியைக் கற்றுக்கொள்வது முதல் படி,” என்று ஊக்கினாள் சிகிச்சையாளர். சில வருடங்களிலேயே அம்மொழியில் அவனுக்கிருந்த தேர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, அங்கு போய் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஒருவர். உபகாரச் சம்பளமும் கிடைத்தது. “தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், பிறரது உதவியை நாடவேண்டும். அவர்களது வழிகாட்டலில் வாழ்வில் மீண்டும் பிடிப்பு ஏற்படும். முதலில் உங்கள் உணர்ச்சிகளையும், பிறகு மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! “யாரிடம்தான் குறைகளில்லை? நமக்கும் ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியாதா, என்ன! நம்மால் என்னவெல்லாம் முடியாது என்று எண்ணி, எண்ணி, குமைவதைவிட, நாம் இருக்கிறபடியே ஏற்பதுதான் புத்திசாலித்தனம்,” என்று பலவாறாகப் பிறருக்கு அறிவுரை வழங்குகிறான் இப்போது. இருக்கும் நிலை பிடிக்காவிட்டால், மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை எப்படி மாற்றிக்கொள்வது என்று புரியாதபோதுதான் தற்கொலை எண்ணமே வருகிறது. கதை பதினைந்து வயதுக்குள், ‘மென்ஸா’ (MENSA) என்ற அகில உலகச் சங்கத்தில் இணைய முடிந்தது சுனந்தாவால். ‘மகா புத்திசாலி’ என்று வீட்டிலும், பள்ளியிலும் கொண்டாடப்பட்டாள். எந்தக் காரியத்தைக் கொடுத்தாலும், கண்ணும் கருத்துமாகச் செய்வாள் என்பதால் ஆசிரியைகள் அனைவருக்கும் செல்லப்பெண். ஒவ்வொருவரும் தாம் செய்யவேண்டியவற்றிற்கு சுனந்தாவின் உதவியை நாடினார்கள். அவளுடைய செல்வாக்கு கூடியது. அதற்காக அவள் கர்வப்படவில்லை. எல்லாரிடமும் அன்பு செலுத்தினாள். ஈராண்டுகள் கழித்து, அரசாங்கப் பரீட்சை வந்தது. “உனக்கென்னம்மா! படிக்காமலேயே தேர்ச்சி பெற்றுவிடுவாய்!” என்று உடன் படித்த மாணவிகள் வயிற்றெரிச்சல் பட்டார்கள். முடிவு வந்தபோது, எல்லாரும் எதிர்பார்த்தபடி உயர்ந்ததாக இருக்கவில்லை. “எல்லாருடைய வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டாயே! இப்போது பார்!” என்று கண்டபடி திட்டினார் தந்தை. புகழ்ச்சியையும், பாராட்டையுமே அனுபவித்திருந்தவளுக்கு இகழ்ச்சியைப் பொறுக்கமுடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது. ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு, கழிப்பறைக்குப் போனவளின் மனம் மாறியது. வெளியில் வந்து கதறினாள். “இது உலகின் முடிவு இல்லை. இன்னும் சில வருடங்கள் போனால், இதற்கா அவ்வளவு வருத்தப்பட்டோம் என்று தோன்றிவிடும்,” என்று தாய் நம்பிக்கை அளித்தாள். மன உறுதி ஏற்பட, சுனந்தா சமாதானம் அடைந்தாள். ஒவ்வொரு நாளையும் சற்று நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் கழிக்கப் பழகிக்கொண்டாள். உயிர் வாழ்வதற்குத் துணிச்சல் வேண்டும் என்று புரிந்தது. சில வருடங்களிலேயே பெரும் புகழ் பெற்று, பிறரது மதிப்புக்கும் ஆளானாள். இப்போது, தந்தை அவளைப் பற்றிப் பெருமையாகப் நண்பர்களிடம் பேசிக்கொண்டார்! அவசரப்பட்டு, உயிரை மாய்த்துக்கொண்டிருந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக, பிறருக்கு உபயோகமாக அமைந்திருக்குமா? கதை சுப்புவுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவனுடைய தாயும், அவளுடைய குழந்தைகளும் நிராதரவாகப்போன துக்கம் பாட்டிக்கு. “எனக்கு இன்னொரு தோசை!” என்று விரும்பிக் கேட்ட சுப்புவைத் திட்டினாள் “அதான் அப்பாவை முழுங்கிட்டியே! தோசையை வேற முழுங்கணுமா?” அதன்பின், பையன் காணாமல் போனான். சில தினங்கள் கழித்து, அவனுடைய சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது. பதின்ம வயதில், எந்த நிகழ்வுக்கும் அளவுக்கு மீறிய எதிர்வினை உண்டாகும். இது புரிந்து, பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். கணவரை இழந்த சோகத்துடன், மகனையும் பறிகொடுத்த துக்கமும் சேர்ந்துகொண்டது, சுப்புவின் தாய்க்கு. சில வருடங்களுக்குமுன், மலேசிய தினசரியில் தன் பரீட்சை முடிவைப் பார்த்துவிட்டு, தான் தேறவில்லையே என்ற வருத்தத்துடன், செடிகளுக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து, தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாள் தோட்டக்காரர் ஒருவரின் மகள். இதில் சோகம் என்னவென்றால், அடுத்த நாளே, ‘பரீட்சை முடிவில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது’ என்ற அறிக்கையுடன், அப்பெண் தேர்ச்சி பெற்றிருந்த செய்தி வெளிவந்தது. ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இந்த உலகிற்கு வந்திருக்கிறோம். அது என்னவென்று புரியுமுன் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது கொடுமை. இளைஞன் (காதலியிடம்): நான் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன். காதலி புத்திசாலி. அவள் கூறியது: முட்டாள்! நீ செத்துவைத்து, என்னைக் குற்ற உணர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்த்தி என்ன பயன்? எனக்காக வாழ்வேன் என்று சொல்! துணிச்சலுடன் முயற்சி செய் அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடிகிறது? ஊக்கம் அவர்களுக்குள்ளிருந்தே எழுகிறது. ஒரு காரியமானது செய்கிறவருக்குப் பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை. அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத்துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த காரியமாக இருக்கும். அதனால், பிறரது உதவியை எதிர்பார்க்காது, தாமே செய்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் நேரத்தைச் செலவழிப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது. சவாலாக அமைவது. குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும்போது, மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்குக் குறி. பெரும்பாலான பெரியவர்களைப்போல், ‘இவனுடன் தொடர்பு கொண்டால் என்ன லாபம்?’ என்று கணக்குப் பார்க்கமாட்டார்கள். ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்துவிட்டு, முழுமனத்துடன் ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி. திறமை ஒருபுறமிருக்க, அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். துணிச்சல் எதற்கு? சட்டத்திற்குப் புறம்பாகவா நடக்கப்போகிறார்கள்? நாம் ஒரு காரியத்தில் இறங்கப்போகிறோம் என்று தெரிந்தால், அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பும். பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் ஒருவரை ஒரு முதியவள் கேட்டாளாம், “உருப்படியான வேலையை நீ என்று தேடிக்கொள்ளப் போகிறாய்?” தன் எழுத்தால் கோடி கோடியாகச் சம்பாதித்தவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி! அவருக்கு ஆர்வம் இருந்தது. தன் திறமையில் நம்பிக்கை இருந்தது. வெற்றிக்கொடி நாட்டியபின்னரும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால், ஆரம்ப காலத்தில் இன்னும் எவ்வளவு கேலியை, எதிர்ப்பைக் கண்டிருப்பார்! ஒருவருக்கு ஊக்கம் தனக்குள்ளிருந்து வந்தால், யார் என்ன சொன்னாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டார். எதிர்ப்போ, தோல்வியோ, தனது பலத்தைப் பரீட்சை செய்யத்தான் ஏற்படுகிறது என்று புரியும்போது, தன் பலம் என்னவென்று புரிந்துவிடும். அச்சம் விலகிவிடும். ஆனால், பலரும், தம் விருப்பு வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, பிறரது பாராட்டுக்காக, அல்லது ஆமோதிப்புக்காகவே எதையும் செய்கிறார்கள். எதிர்ப்புகள் வந்தால், பயந்து பின்வாங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குப் பெரும் வெற்றி கிடைப்பதில்லை. முயற்சியில் வெற்றி கனவிலேயே நிலைத்துவிடாது, அக்கனவை நனவாக்குவது எப்படி என்று ஆராய்வது முதல் படி. “நான் எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனாக இருக்கப்போகிறேன்!” என்று விரும்பினால் மட்டும் போதுமா? “புத்தகங்களைத் தொடவே பிடிக்காது. என் வீட்டில், ‘படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள்!” என்பவர்களுக்குப் படிப்பது கசப்பான வேலை. அதனாலேயே, அது கடினமானதாகத் தோன்றும். மாறாக, காலையில் எழுந்து படிக்க வேண்டும், தெரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்குத் தகுந்தவர்களை நாடவேண்டும், பொழுதுபோக்குகளிலும், நண்பர்களுடனும் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பல கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். ‘இவ்வளவு கடினமாக இருக்கிறதே! எப்படித்தான் செய்யப்போகிறேனோ!’ என்ற மலைப்பு எழும்போது அதை ஒதுக்கிவிட்டுச் செய்தால், நாமே பிரமிக்கும் அளவுக்குப் பலன் கிடைக்கும். உரிய காலத்தில் நாமே நம்மை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாவிட்டால், ‘அப்படிச் செய்திருக்கலாமே!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும். கண்ட கனவு மெய்யாகாதபோது, ‘நேரம் கிடைக்கவில்லை. யாருமே ஊக்குவிக்கவில்லை,’ என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு. “ஒரு மரத்தை நடுவதற்குச் சிறந்த வேளை இருபது வருடங்களுக்கு முன்னால். அடுத்தது, இப்போது!” (சீனப்பழமொழி) எப்போதோ செய்யாமல் விட்டதைப்பற்றியே நினைத்துக் குமுறிக்கொண்டிராது, இப்போது செய்யலாமே! வெற்றி-தோல்வி தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதமில்லை. இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. எந்த வெற்றி அடைவதற்கு முன்பும் தோல்வி தவிர்க்க முடியாதது. (ஆரம்பத்திலேயே வெற்றி கிடைத்துவிட்டால், கர்வம் தலைக்கேறி, மேலும் பல வெற்றிகளை அடைவது கடினம்). எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை. விடாமுயற்சி உள்ளவர்களை வீழ்த்துவது கடினம். ‘நீ செய்து கிழித்தாய்!’ ‘நினைத்ததை உடனே செய்து முடிக்கவேண்டும் உனக்கு!’ ‘ஆசைக்கும் எல்லை இருக்கவேண்டும்!’ ‘சரியான போர்! எப்போதும் என்ன செய்யப்போகிறேன் என்றே பேசிக்கொண்டிருப்பாய்!’ இப்படியெல்லாம் நாம் எடுத்த திசையை மறித்துப் பேசுகிறவர்களிடமிருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம். நெருங்கிய உறவினர்களே அப்படி இருந்தால், அவர்களது கூற்றை அலட்சியம் செய்தால் பிழைத்தோம். வளர்ப்புமுறை “கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்கு வெந்து, மென்மையாகிவிடுகிறது. ஆனால், முட்டை கெட்டியாகிவிடுகிறது”. (யாரோ) ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் வெற்றியாளர்களாகத் திகழ்வதில்லை. “எல்லாரையும் ஒரே மாதிரிதான் வளர்த்தோம்!” என்று புலம்பும் பெற்றோர் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. ஒரே விதமான வளர்ப்புமுறை வெவ்வேறு மாறுதல்களை ஏற்படுத்தக்கூடியது. இயற்கையில், முதல் குழந்தை நுண்ணிய உணர்வுகளைக் கொண்டிருக்கும். பொறுப்பும், பொறுமையும் அதிகமாக இருக்கும். அத்தன்மை புரிந்து, பெற்றோர் ஓயாது விரட்டாமல் இருந்தால் அவன் சிறந்த தலைவனாகும் வாய்ப்பு உண்டு. காலத்துக்கு ஒவ்வாத விதமாக நடக்கச் சொன்னாலும், பெற்றோருக்குப் பணிந்து நடப்பான் மூத்தவன். அவனுக்குப் பிடிக்காத துறையில் படிக்கச் சொன்னால், அப்படியே நடந்து, உற்சாகமின்றி காலம் தள்ளுவான். அதனாலேயே வெற்றி பெற முடியாது போய்விடும். இரண்டாவது குழந்தையோ நேர் எதிர். அவ்வளவாகப் பொறுமை இராது. ‘ஏன் இப்படி?’ என்று எதிர்த்துக் கேட்கும் குணம் இருக்கும். ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், அதிலிருந்து விலகி, தனக்குப் பிடித்த, சம்பந்தமே இல்லாத வேறொரு துறையில் நுழையும் துணிச்சல் உண்டு. அதில் தோல்வி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு, மீண்டும் முயல்வான். அவனுக்கு வயது ஒரு தடையே இல்லை. சவால்கள் நிறைந்த முயற்சியில் ஈடுபடுவான். இளையவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, மனமுடைந்து, புதிதாக எதையும் செய்யும் துணிவை இழந்துவிடுவான் மூத்தவன். எல்லாக் காரியமும் தன்னைச் சோதிப்பதுபோல் உணர்வான். தன்னைத்தானே நம்பாதவன்மேல் பிறருக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? ‘இதைச் செய்யமுடியுமா!’ என்ற மலைப்பு ஏற்படுவது நல்லது. இல்லாவிட்டால், எடுத்த காரியம் மிக எளிதானது என்று அர்த்தம். அதை முடித்தபின், பெருமகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. விதை நட்டவுடனேயே மரமாகிவிடுகிறதா? அதைப்போல்தான், எந்தத் துறையிலும் குறுகிய நேரத்தில் பலன் கிடைக்காது. சிறு, சிறு வெற்றிகள் கிடைக்க, மகிழ்ச்சி பெருகும். ஊக்கம் வரும். அதன்பின்தான் பெரும் வெற்றி கிடைக்கும். ஓயாமல் யோசிப்பவர்கள் சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள். ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும். எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்? இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள். கதை திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி. திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள். ‘இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். தாயைச் சமாதானப்படுத்த, “நான் மகிழ்ச்சியாகத்தானேம்மா இருக்கேன்,” என்றாள். “நீ ரெண்டு சின்னக் குழந்தைகளையும் வெச்சுண்டு, தனியா எப்படி கஷ்டப்படப்போறியோன்னு கவலையா இருக்கு”. கோமதி தன் குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படவில்லை. பல உறவினர்கள் உதவியாக இருந்தார்கள். அவளால், காலத்திற்கேற்ப மாற முடியவில்லை. மகள் தனியாக இருக்கிறாளே, தன்னால் அடிக்கடி வந்து உதவி செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டிருந்தது. நிகழ்காலத்தில் இருப்பவர்கள் இவ்வாறு வேண்டாத யோசனையில் ஆழ்ந்துவிடுவதில்லை. கவலைப்படுவதால், பிரச்னை தீர்ந்துவிடுமா? அப்படியே பிரச்னைகள் வந்தால்தான் என்ன? சமாளிக்கத் துணிச்சல் வேண்டாமா? கதை விமான ஓட்டியான விக்ரம் தன்னுடன் வேலைபார்த்த ரஞ்சிதாவைக் காதலித்து மணந்தார். திருமணத்திற்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்காது, தன் சிறு குழந்தைகள் இருவருடன் வீட்டிலேயே இருந்தாள். கணவரோ, இரவு பகல் பாராது உலகெங்கும் சுற்ற வேண்டிய நிலையில், ரஞ்சிதா பெரும்பொழுது தனியாகவே இருக்க நேரிட்டது. குருட்டு யோசனை கிளர்ந்தது: விமானத்தில் தன் கணவருடன் சேர்ந்து, இளம்பெண்களும் நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டிருப்பார்களே! தன்னிடம் செய்ததுபோலவே, அவர் அவர்களிடமும் தன் காதல் லீலையைத் தொடர்வாரோ? எப்போதாவது வீடு திரும்பும் கணவரிடம் இதைப் பற்றிப் பேச அஞ்சினாள் ரஞ்சிதா. மாறாக, தன் ஆண்குழந்தைகளை அளவுக்கு மீறி அடக்க ஆரம்பித்தாள். தப்பித் தவறி, அக்கம்பக்கத்தில் இருக்கும் எந்தப் பெண்ணுடனாவது கணவர் பேசுவதைப் பார்த்துவிட்டால், அந்தப் பெண்ணை இவளுக்குப் பிடிக்காது போய்விட்டது. அவள் பேச முயன்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாள். ஏன் அப்படி? ரஞ்சிதா கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே வாழ்ந்துகொண்டு இருந்தாள். கடந்த காலத்தின் அனுபவமும், எதிர்காலமும் அப்படி அமைந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளை ஓயாது அலைக்கழைத்தன. நிகழ்காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என்று புரியாது, தன்னையும் வருத்திக்கொண்டு, குழந்தைகளிடமும் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாள். கணவருக்கு அவள் போக்கிற்கான காரணம் புரியவில்லை. ஆயாசத்துடன், பிறரிடம் கூறி, ஆறுதல் தேடினார். ஒருவர் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், ‘வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடு முரடாக இருக்கிறது!’ என்றுதான் தோன்றிவிடுகிறது. கதை விமலாவின் கணவர் உத்தியோகம் எதுவும் பார்க்கவில்லை. பொழுது போக ஏதாவது வழி வேண்டாமா? பிறர் பேச்சைக் கேட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, சொத்தை அழிக்க ஆரம்பித்தார். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால், என்ன மிஞ்சும்?’ என்ற விமலாவின் கவலை நியாயம்தான். ஆனால், அது ஒன்றையே தன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு யோசித்தது மனச்சோர்வில் (depression) கொண்டுவிட்டது. தலைவலி, உடல் வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் என்று அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். கணவரைப் பார்த்தாலே பிடிக்காமல் போயிற்று. கத்தலே அவள் அவருடன் தொடர்புகொண்ட மொழியாகியது. பிரச்னை என்று வந்துவிட்டால், அதைப் பற்றி ஓயாமல் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியாது. அது மறைந்தும் விடாது. பின் எப்படி விடுபடுவது? ஓயாத சிந்தனை வேண்டாமே! உடற்பயிற்சி, தியானம் இரண்டும் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரும் வல்லமை கொண்டவை. ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம். கதைப்புத்தகம் படிப்பதும் நல்ல வழக்கம்தான். பிறருடைய வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களில் ஆழ்ந்து போகையில், நம்மையே மறந்துவிடுவோம். நம்மை வாட்டுவதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், சற்று நிம்மதி கிடைக்கும். ஆனால், ஓயாமல் தன் சோகக் கதையையே சொல்லிக்கொண்டிருப்போரைக் கண்டால் பிறர் அஞ்சி விலகும் அபாயம் உண்டு. ‘நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்!’ என்று சற்றே யோசித்தால், எதையும் ஏற்கும் நெஞ்சுரம் வரும். நானாக இருந்தால்! ஒரு காரியத்தை எவ்வாறு செம்மையாகச் செய்யலாம் என்று, ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டுவது அவசியம். நாம் ஒரு காரியத்தைச் செய்து முடித்தபின், அதைக் கேட்டு மற்றொருவர், ‘நானாக இருந்தால், இப்படிச் செய்திருப்பேன்,’ என்பார். அவர் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால், முனைந்து செய்பவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பார். அத்தகையவரை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். நாம் எப்படி யோசிக்கவேண்டும், அல்லது நடக்கவேண்டும் என்று பிறர் தீர்மானிப்பதை இம்மிபிசகாது ஏற்பது தோல்வியில்தான் முடியும். கனவில் சுகம் காண்கிறவர்கள் கதை பாலன் ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான். கண்டிப்பாக, முதல் பரிசு தனக்குத்தான் என்ற நம்பிக்கை ஏற்பட, பரிசுத்தொகையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியல் தயாரித்தான். அந்த இன்பக் கனவிலேயே ஓரிரு மாதங்கள் கழிந்தன. போட்டி முடிவு வந்தது – எதிர்பார்த்த பரிசுதான் வரவில்லை. முடிவு அவன் கையில் இல்லை என்று உணராததால் வந்த வினை! ஏமாற்றம் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல் ஆத்திரமாக மாறியது. நடப்பதற்குமுன் திட்டமிடுவானேன், ஏமாற்றத்தால் நொறுங்கிப்போவானேன்! ஓயாமல் சிந்திப்பவர்கள் ‘இப்படி நடந்துவிட்டால்,’ என்ற அச்சம் கொண்டவர்கள். ‘பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ!’ என்று குழம்புகிறவர்கள். அவமானகரமாக, அல்லது மரியாதைக்குறைவாக, எப்போதோ நடந்த ஒன்றைப்பற்றியே எண்ணி எண்ணி ஆத்திரப்படுகிறவர்கள். தான் செய்த தவற்றையே யோசித்து, ‘இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று நடந்து முடிந்ததை மாற்ற எண்ணுகிறவர்கள். எங்கே ஆரம்பிப்பது? ஒரு காரியத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, ‘முடியாது. எதற்கு வீண் வம்பு!’ என்று கைவிடுவதற்குள், அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெளிவந்து பயமுறுத்தும். ஒரு பெண் என்னிடம் கூறினாள், “ஆண்களும் தப்பு செய்வாங்கன்னு எழுதலாமான்னு தோணும். ஆனா, இதையெல்லாம் எழுதலாமா, கூடாதான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்!” என்று. நல்லவேளை, நான் அப்படி எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான யோசனையும் எழவில்லை. யோசித்துக் குழம்பியிருந்தால், நிம்மதியும் பறிபோயிருக்கும். எழுதியபின், பெண்களின் பாராட்டு கிடைத்தது. ஆண்கள்தான் சிறிது கோபப்பட்டார்கள். ஆனால், தங்களுக்குள், ‘அவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டதாகக் கேள்வி! ஒரு மூத்த பத்திரிகையாளர், “நீங்க எழுதும்போதெல்லாம், ’என்ன, இப்படி எழுதறாங்களே!’ன்னு இருக்கும். இப்போ, என் மகளுக்குக் கல்யாணமாகி, அவ புருஷன் அவளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தறதைப் பாக்கறப்போதான் உண்மை புரியுது,” என்று என்னிடம் தெரிவித்தார், வருத்தத்துடன். தன்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாது, பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம், அல்லது இருக்கவே கூடாது என்று எண்ணமிடும் ரகத்தைச் சேர்ந்தவர் அவர். ஆக்ககரமாக ஏதாவது செய்பவர்கள் சிந்தனையிலேயே ஆழ்ந்துவிடுவதில்லை. யோசிப்பார்கள், ஆனால், ஓர் அளவோடு. என்னைப் பார்த்துச் சிலர் அதிசயப்பட்டுக் கேட்டு இருக்கிறார்கள், “நீ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே! உன் வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்து இருக்கமாட்டாய். இல்லையா?” என்று. எனக்கு லேசான சிரிப்புதான் வரும். மனிதனாக அவதரிக்கும் கடவுளுக்குக்கூட கஷ்டம் உண்டே! நான் மட்டும் என்ன, விதிவிலக்கா? சிறுபிள்ளைத்தனம் எதுவரை? சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். கள்ளம் கபடமே காணப்படாது. கதை என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள். உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது. “அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. ‘இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல். “அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த வயதினராக இருந்தாலும், உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவள் போன்றவர்களுடைய நம்பிக்கை. ஒருவருக்குத் தான் செய்யும் காரியத்தின் விளைவு நன்மையா, தீமையா என்று புரியாத நிலையை அப்பாவித்தனம் (innocence) என்கிறோம். இது குழந்தைகளின் இயற்கையான தன்மை. இரண்டு வயதான குழந்தை கைதவறி தான் குடிக்க வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டு அழும். ‘போனால் போகட்டும்,’ என்று சமாதானப்படுத்தினால், அடுத்த முறை வேண்டுமென்றே தம்ளரைக் கவிழ்த்துவிட்டு, ‘போனால் போகட்டும்,’ என்று நமக்கே புத்தி சொல்லும்! “இன்னொரு தடவை இப்படிச் செய்தால் அடி!’ என்று மிரட்டுவோம். தாய் சொல்வதை உடனே கேட்டுவிட்டால், எப்படி! செய்த தவற்றையே மீண்டும் செய்யும். அப்போது தண்டிக்க வேண்டியதுதான். முதுகில் ஒரு தட்டு. இன்னொரு முறை அதே தவறு நிகழாது. இவ்வாறு, ‘கூடாது’ என்று தாய் கூறும் ஒவ்வொன்றையும் செய்துபார்த்துத்தான் தன் எல்லை எதுவரை என்று புரிந்துகொள்கிறார்கள் குழந்தைகள். அனுபவமின்மை வளர்ந்தபின்னரும் சிலர் குழந்தைத்தனமாக இருப்பார்கள். யார் எது சொன்னாலும் நம்பி, ஏமாந்துவிடுவார்கள். போதிய அனுபவம் இல்லாததால் வரும் விளைவு இது. சிலவற்றைப் பற்றி படித்திருந்தாலும், நடைமுறைக்கு உதவாது. கதை எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, என்னைவிட சற்றே மூத்தவளான ஒன்றுவிட்ட அக்காள் வேற்றூரிலிருந்து வந்திருந்தாள். அவள் இருந்த இடத்தில் கடல் கிடையாது. மெரீனா கடற்கரைப் பார்த்து, “எவ்வளவு தண்ணீர்!” என்று அவள் பிரமிக்க, “தித்திப்பா, ஜோரா இருக்கும். குடிச்சுப் பாரேன்!” என்று ஊக்கினேன். உடன் இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். அவள் நம்புவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தன் இரண்டு கைகளாலும் அள்ளிக் குடித்தவள், ‘தூ, தூ!’ என்று துப்பியது எங்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி. என்றென்றும் அப்பாவித்தனமா? குழந்தைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்காது. கடந்த காலத்தை அவர்கள் அதிகம் நினைத்துப் பார்ப்பதும் கிடையாது. ‘எதிர்காலத்தில் என்ன நடக்குமோ!’ என்ற கவலைக்குள்ளாகும்போதுதான் ஒருவர் தன் அப்பாவித்தனத்தை இழந்துவிடுகிறார். குழந்தைகளை அந்தந்த வயதுக்கேற்ப நடத்தாமல், ‘இன்னும் குழந்தையாவே இருக்கா!’ என்று பருவ வயதிலும் ஒரு பெண்ணைக் கொஞ்சி வளர்ப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால், வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியோ, அனுபவமோ அவர்களிடம் இருக்காது. பிறருக்கு இது சாதகமாக முடிந்துவிடும். கதை பத்து குழந்தைகளில் கடைசியான மாலதி, குடும்பத்தில் அனைவருக்கும் செல்லமாக வளர்ந்தாள். ‘நான் எப்பவுமே குழந்தைதான்!’ என்று மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க கூறிக்கொள்வாள். அளவுக்கு அதிகமான அன்பைக் குடும்பத்தினர் பொழிந்ததால், உலகில் எல்லாருமே அப்படித்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்தாள். தாய்மாமன், ‘குழந்தை!’ என்று அருமையாக அவளைக் குறிப்பிட்டு, முறை தவறி நடத்தியபோது, அதையும் ‘கொஞ்சல்’ என்றே எடுத்துக்கொண்டாள். சற்று பெரியவளானதும், தான் இழந்தது என்னவென்று புரிய, மாலதிக்குத் தன்மேலேயே ஆத்திரம் ஏற்பட்டது. ஒரே இடத்தில் படுத்து, சுவற்றையே வெறிச்சிடுவாள். பிறகு, தன் மன நிலையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பவளாக, நிறைய வீட்டுவேலை செய்வாள். ‘பைத்தியம்’ என்று முடிவுகட்டினார்கள். எங்கே தவறு நிகழ்ந்தது என்று யாருக்கும் புரியவில்லை. வாழ்வில் தீயவை, துன்பம் ஆகியவற்றைச் சந்திக்கும்போது, அப்பாவித்தனம் பறிபோய்விடும். அது சிலருக்கு மன அழுத்தத்தில் கொண்டுவிடும். ‘பைத்தியம் தெளிய ஒரே வழி கல்யாணம்தான்!’ என்று யாரோ சொல்ல, கல்யாணம் செய்துவைத்தார்கள். சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தவளிடம் அவ்வப்போது. குற்ற உணர்ச்சி தலைதூக்கும். கலக்கத்தை அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும், சிறு விஷயங்களுக்காகக் குழம்பாது, மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால், ஓரளவு நிம்மதி கிடைக்கிறது என்று புரிந்துகொண்டாள். தான் பெற்ற குழந்தைகளாலும் சற்றுத் தெளிவு ஏற்பட்டது. ‘தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலும், தன்னை அப்படி வளர்த்துவிட்ட குடும்பத்தினர்மீதும் கொண்ட ஆத்திரம் சிறிது சிறிதாகக் குறைந்தது. அருமை மகள் என்றும் சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குழந்தையாகவே அவளை நடத்தியது வினையாக முடிந்தது என்று புரிந்துகொண்டாள். “பெரியவர்கள் கதை. நீ இதையெல்லாம் படிக்கக்கூடாது,” என்று தாய் தடுத்திருந்தது ஏனென்று மாலதிக்குச் சிறுவயதில் புரியவில்லை. சிறுவர்களுக்கான கதைகளில் அவர்களை மிரளவைக்கும்படியான, அல்லது வயதுக்கு மீறிய காட்சிகள் இருக்காது. அப்படி இருந்தால், காரணமில்லாமல் மகிழ்ந்து சிரிக்கும் அப்பாவித்தனமான குணத்தை இழந்துவிடுவார்கள். (தற்காலத்தில், தொலைகாட்சி, இணையம் இரண்டுமே குழந்தைகள் குழந்தைகளாகவே வளர முடியாது செய்கின்றன). பிறர் வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ வேலைபார்க்க நேரிடும் சிறுவர்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். பலருடன் பழக வேண்டிய நிலை. ‘யாரையும் நம்ப முடியாது. எல்லாருமே சுயநலவாதிகள்தாம்!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. அதனால் மகிழ்ச்சி குன்றிவிடும். கற்பனைத்திறனோ – கேட்கவே வேண்டாம்! பள்ளிக்கூடத்திலும் சிலருக்கு இந்த நிலைதான். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், நொந்துபோய்விட மாட்டார்கள். அப்பாவித்தனத்தைப் பறிகொடுத்தவரின் கதை திருமணமானதும், தன்னைவிட அழகில் சிறந்தவளான மனைவியைப் பெற்றுவிட்டோமே என்று அகமகிழ்ந்தான் அப்பாவியான வேலப்பன். மனைவி ஒரு முறை அவனுக்குத் துரோகம் இழைத்தபோது உண்டான அதிர்ச்சியில், அவளை எப்படிப் பழி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். (விவாகரத்து அவமானகரமானது என்று எண்ணிய காலம் அது. அத்துடன், தன்னிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!). மனைவியைப்போல் இல்லாது, ஆண்-பெண் உறவைப் பற்றி அறிந்திராத பதின்ம வயதுப் பெண்களின் சகவாசத்தை நாடினான். ‘எப்படி, குழந்தையாகவே இருக்கிறாய்!’ என்று அவன் அடிக்கடி பாராட்டியது அவர்களுக்குப் புரியவில்லை. பெருமைதான் ஏற்பட்டது. அவனுடைய சாகசப் பேச்சில் மயங்கி, அப்பாவிப் பெண்கள் பலர் அவன் விரித்த வலையில் வீழ்ந்தார்கள். இழந்த பலத்தைப் பெற்றுவிட்டதுபோல் பெருமிதம் உண்டாக, வேலப்பனுடைய காம லீலை வியாதியாகவே தொடர்ந்தது. வயது முதிர்ந்த காலத்தில், யாருமே அவனைச் சந்திக்க விரும்பவில்லை. உறவினர் வீட்டுக்குப் போனாலும், எவரும் முகம்கொடுத்துப் பேசவில்லை. வருத்தம் ஏற்பட்டாலும், அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. குற்ற உணர்ச்சி யோசியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி குற்ற உணர்ச்சியோடு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள். கதை எனக்குத் தெரிந்த ஒருவர், “என்னை வைத்து ஒரு கதை எழுதுங்களேன்!” என்று கேட்க, “சரி. உங்கள் மனைவியிடம் நீங்கள் சொல்ல முடியாத ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்,” என்றேன். கோபத்துடன், “அதையெல்லாம் உங்களிடம் சொல்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று இரைந்தார். “உங்களைப் பற்றி எழுதச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு அதிகம் தெரியாதே! அதுதான்,” என்றேன், சமாதானமாக. மிகவும் தயங்கியபடி, தான் மனைவிக்குச் துரோகம் செய்துவிட்டதாகக் கூறினார் – ஒரே வரியில். நான் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். தவறிழைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் தன்னையே வருத்திக்கொள்கிறவர்கள் நம்பகமான ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொண்டால் அப்போது கிடைக்கும் புரிந்துணர்வு இழந்த நிம்மதியை மீட்டுக் கொடுக்கும். உலகில் எல்லாருமே தீயவர்கள் இல்லை, சிலரை நம்பலாம் என்ற உண்மை புரியும். சொல்லும் செயலும் நாம் சொல்வதை ஒருவர் ஏற்க வேண்டுமென்றால், அவருக்கு நம்மேல் நம்பிக்கை எழுவது முக்கியம். ஏதாவது ஒற்றுமை இருந்தால்தான் இது சாத்தியம். அது வயதாக இருக்கலாம். அல்லது உத்தியோக நிலையிலோ அல்லது பொருளாதாரத்திலோ இருக்கலாம். சொல்லும் விதம் நாம் சொல்லும் பாணி கேட்பவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அமைய வேண்டும். ‘ஏதோ, எனக்குத் தெரிந்ததை, என்னால் முடிந்த முறையில் சொல்லிவிட்டுப் போகிறேன்!’ என்ற அலட்சியத்துடன் ஒருவர் தன் கடமையை ஆற்றினால், யார் அவர் சொல்வதைப் பின்பற்றுவார்கள்? சிலருக்குப் பிறருடன் எப்படிப் பேசினால் பலன் கிடைக்கும் என்று இயல்பாகவே தெரியும். அப்படி அமையாவிட்டால், இதைக் கற்கவும் முடியும். தூண்டுதல் நாம் பிறருடன் பேசும்போது, நம்மையுமறியாது, அவரை நம் வழியைப் பின்பற்றச் சொல்லிவிடுகிறோம். ‘நீ என்னுடன் வா!’ என்பதற்கும், ‘நீயும் வருவாயா?’ என்று எதிர்பார்ப்புடன் கேட்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்! முதலாவதில், அதிகாரம். ‘வருவாயா?’ என்று கேட்கும்போது, முடிவை மற்றவருக்கு விட்டுவிடுகிறோம். அவருக்கு மரியாதை கொடுப்பதுபோலவும் ஆயிற்று. இன்னொரு உதாரணம்: ‘இன்று என்ன சமைக்கப்போகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, ‘முருங்கைக்காயை சாம்பாரில் போட்டால்தான் ருசி!’ என்று மெல்லக் கூறுவோம். ‘சாம்பாரில் போடேன்!’ என்பது சமைப்பவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது. ‘ருசி அதிகமாகும்,’ என்றால், நம் விருப்பத்திற்கு அவரை இணங்கச் செய்வது. தொனி பேசுகிறவர்களின் தொனி முக்கியம். இயந்திரத்தைப்போல் உணர்ச்சியற்ற குரலில் பேசாது, தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் பேசினால் பலன் கிடைக்கும். அதற்கேற்ற உடல் மொழியையும் சேர்த்து மேற்கோள் காட்டுவதுடன், நடு நடுவே கதை சொன்னால், கேட்பவர்களின் உற்சாகம் குன்றாது இருக்கும். தற்போது, கூந்தலை நீளமாக எப்படி வளர்ப்பது என்று பல வழிகளைப் பெண்கள் காட்டுகிறார்கள், இணையத்தில். எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை – முழங்காலுக்குக்கீழ் தொங்குகிறது அவர்கள் தலைமயிர். நம்பத்தான் தோன்றுகிறது. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி வளரும் என்றும் சிலர் அளக்கிறார்கள். இதனால்தான், சொல்கிறவருக்கு என்ன தகுதி, அவர் கூறுவதில் எத்தனை உண்மை என்று ஆரம்பத்திலேயே யோசிக்க வேண்டுவது அவசியம். குழந்தையே பெறாதவர் குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பேசினால், அது அனுபவத்தால் இருக்காது. படித்ததை வைத்துக்கொண்டு அவர் ஏதாவது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், நடைமுறைக்கு அது ஒத்துவராது. கதை ஏதோ ஒரு துறையில் பெரிய, பெரிய பட்டங்கள் பெற்றவள் சியாமளா. அதற்கேற்ற உத்தியோகத்திலும் இருந்தாள். அதனாலேயே, தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், பிறர் வீட்டுக்குப் போனால், அந்த வீட்டுக்கார அம்மாளிடம், ‘நீ சமைப்பது சரியாக இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டும்,’ என்று குற்றம் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க முடியாது என்பது அவளுக்குப் புரியவில்லை. ஒருவரது வீட்டுக்கு விருந்தினராகப் போகும்போது, அவர்கள் மனதை நோகடிக்கலாமா என்றும் அவள் யோசிக்கவில்லை. புத்தகப் படிப்பு மட்டும் குணத்தை வளர்க்காது. புத்திசாலித்தனம் இருந்தும் வெற்றி பெறாதவர் சிறு பிராயத்தில் புத்திசாலிகளாகத் திகழ்ந்த சிலர், ‘பெரிதாக எதுவும் சாதிக்காமல் போய்விட்டோமே!’ என்று வருந்துவது உண்டு. கதை காந்தனின் புத்திகூர்மையைப் பற்றி அவனுடைய பெற்றோருக்கு அளவுகடந்த பெருமை. ‘எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்!’ என்று பிறர் பாராட்ட, அவன் தவறே செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் பிறர் மதிக்க மாட்டார்கள் என்று எண்ணத் தலைப்பட்டார்கள். சிறுவனாக இருந்தபோது, பிறர் ஏற்கமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றிய எதையாவது அவன் செய்தால், பல பேர் முன்னிலையில் திட்டு விழும். “அது என்ன, மூக்கிற்குள் விரலை விடுவது? அசிங்கம்! குளிக்கும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்,” என்று அவன் தாய் கத்தியபோது, அந்த பத்துவயதுப் பையனைக் கவனிக்காதவர்கள்கூட இப்போது ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவனைத் திருத்துவதாக எண்ணி அவள் செய்த காரியத்தால் பையனின் முகம் அவமானத்தால் சுண்டிப்போயிற்று. அவளைப்போன்ற பெற்றோர் அறியவேண்டிய ஒன்று: பாராட்டும்போது பிறர் முன்னிலையில் செய்யலாம். அதுவும் அளவோடுதான். குறை கூறுவதோ, தனிமையில்தான் இருக்கவேண்டும். சிறு குறையைப் பெரிதுபடுத்தினால், குழந்தைகளுக்கு ஆத்திரம் வரும். ஆனால், திருந்தமாட்டார்கள். வேண்டுமென்றே அதிகமாகச் செய்வார்கள். புதிதாகக் கல்யாணமான டெய்ஸி அலுத்தபடி கூறினாள், “என் கணவர் சாப்பிடும்போது எல்லா விரல்களையும் வாய்க்குள் போட்டுக்கொள்வார். ‘என்னது இது!’ என்று நான் கண்டித்தபோது, நிலைமை இன்னும் மோசமாகிற்று. ஒரேயடியாக உறிஞ்சுவார். அதனால், நான் இப்போது எதுவும் சொல்வதில்லை!” அவளுடைய கணவனைச் சிறுவயதில் ஓயாது கண்டித்திருப்பார்கள். மனைவியும் தாயைப்போல நடக்க முற்பட்டபோது, அவனால் பொறுக்க முடியவில்லை. எட்டு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் தவறு செய்யும்போது ஓயாது கண்டிப்பது பெரியவர்களின் நிம்மதியைத்தான் கெடுக்கும். மாறாக, நகைச்சுவையாக ஏதாவது கூறினாலோ, அல்லது அவன் செய்வதுபோல் செய்து காட்டினாலோ, சிரித்துவிடுவான். பதின்ம வயதுச் சிறுவர்களிடம் மிரட்டலாகச் சொன்னால் மேலும் முரண்டு பண்ணுவார்கள். அவர்களுடைய செய்கைகளின் விளைவுகளை, அவற்றால் ஆபத்து இருந்தால், தகுந்த உதாரணங்களோடு விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். கெஞ்சலாகச் சொன்னால் இன்னும் பலனளிக்கும். கதை அவளுடைய சீனத்தோழிகள் அணிந்ததைப் பார்த்து, மேகலாவுக்கும் ஷார்ட்ஸ் அணியவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. அவளுடைய தாய், “அவர்களுடைய கால்கள் தந்தம் மாதிரி இருக்கின்றன. நாமோ, கறுப்பு. நன்றாகவா இருக்கும்?” என்றாள் நைச்சியமாக. இருந்தாலும், வாங்கிக் கொடுத்தாள். ஒரு சிறிய ஆசையைத் தீர்த்துவிட்டால், அது ஓயாது நம்மை அலைக்கழைக்காது என்று புரிந்திருந்தாள் அந்த தாய். அந்த ஒரே ஆடையில் மேகலாவின் ஆசை தணிந்துபோயிற்று. ‘கால்களை இறுக்க, எப்படித்தான் போட்டுக்கொள்கிறார்களோ!’ என்று தோன்றிப்போயிற்று. என் தோழிகள் கூறுவார்கள், “வேலை முடிந்து வீட்டுப் போனதும், நான் செய்யும் முதல் காரியம் ஷார்ட்ஸூக்கு மாறுவதுதான்!” (சில தலைமுறைகளுக்குமுன் மலேசியா வந்திருந்தாலும், சீனர்களுக்கு வெயில் தாங்காது. எந்த வயதுப் பெண்டிராக இருந்தாலும், வீட்டுக்கு அந்த ஆடைதான். அவர்கள் வெளியில் அப்படி வந்தாலும், யாரும் உற்றுப் பார்ப்பது கிடையாது). பள்ளியில் பண்பு மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அதைப் போதிக்கும் ஆசிரியரைப் பிடிக்கவேண்டும். தனது அதிகாரத்தைத் தவறான வகையில் பயன்படுத்தி, மட்டம் தட்டிப்பேசினால், யார்தான் அவரை மதிப்பார்கள்? கதை ‘முட்டாள்’ என்று அவர் கருதிய ஒரு மாணவியிடம் தன் முதல் கேள்வியைத் தொடுப்பார் எங்கள் பள்ளி விஞ்ஞான ஆசிரியை, மிஸஸ் ஜெயலட்சுமி. கேள்வி முடிவதற்குள், ‘ரமாமணி!’ என்று அதிகாரமாக அவளுடைய பெயர் ஒலிக்கும். அந்தப் பெண்ணோ, பதில் சொல்லத் தெரியாமல், ஆசிரியை வகுப்பைவிட்டு வெளியேறும்வரை, தண்டனையாக, கால்கடுக்க நின்றுகொண்டிருப்பாள். வருடம் முழுவதும் இதே கதைதான். மற்ற மாணவிகளுக்கு ஆசிரியையின் போக்கு வேடிக்கையாகப் போயிற்று. அந்த ஆசிரியைப்போலவே அவளை அழைத்துக் கேலி செய்தனர். ஒவ்வொரு முறையும், அவர்களைப்போன்ற ஒரு மாணவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரியவில்லை. கதை பல வருடங்களுக்குப்பின் நானே ஆசிரியையாக ஆனபோது, மாணவ மாணவிகள் ஒருவரையொருவர் இப்படி நடத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். ஒரு வகுப்பில், மலாய் மற்றும் சீன மாணவிகள் மட்டும் இருந்தார்கள். ஆரம்பப்பள்ளியில் சீனமொழி கற்றிருந்த சீனர்களுக்குக் கோபம், ஏன் இடைநிலைப்பள்ளியில் மலாய் மொழியில் விஞ்ஞானம் கற்க வேண்டும் என்று. அந்தக் கோபம், இயலாமை, தம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்த அப்பாவி மாணவிகள்மேல் திரும்பியது. அவர்களில் ஒருத்தி தவறான விடை அளித்தால், இளக்காரமாகச் சிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ‘உங்களில் ஒருவர் தவறாக விடையளித்தால், அதைக் கேலி செய்யக்கூடாது!’ என்று உத்தரவு பிறப்பித்தால் எந்தப் பலனும் இருக்காது என்று புரிந்தது. நான் கடினமான கேள்வி கேட்டால்தானே ஏளனச் சிரிப்பு? அதைத் தவிர்க்க எண்ணி, மலாய் மாணவிகளைக் கேள்வியே கேட்கமாட்டேன். அவர்களுக்கு என் திட்டம் புரிந்ததோ, என்னவோ, அவர்களுடைய நன்றியையும், மதிப்பையும் பெற்றேன். கொடுத்தால் திரும்பக் கிடைப்பது மனிதர்கள், ‘என் மதம், மொழி, இனம்! இதெல்லாம்தான் உயர்த்தி!’ என்று பலவாறாகப் பிறருடன் போட்டி போடும்போது, மனிதத்தன்மை குன்றி, சண்டை சச்சரவுகள் பெருகிவிடுகின்றன. நீடித்த மரியாதையின்மைதான் காரணம். ‘மரியாதை’ என்பது நம்மிடமிருந்து மாறுபட்டவர்களது உணர்வுகளை மதித்து, அவர்களது வித்தியாசத்தைப் பாராட்டாது, அப்படியே ஏற்பது. கொடுத்தால், தானே திரும்பக் கிடைப்பது. ஒருவர் தன்னைத்தானே உயர்வாக நினைக்கலாம். ஆனால், சந்திப்பவர்கள் அனைவரும் தன்னை மதித்தாகவேண்டும் என்று மிரட்டலும், அதிகாரமுமாக நடத்தினால், மரியாதை நிலைக்குமா? அது உண்மையாகத்தான் இருக்குமா? எது நற்பண்பு? “குப்பைக்காரனோ, பல்கலைக்கழகத்தின் தலைவரோ, எவராக இருந்தாலும், நான் ஒரேமாதிரிதான் பேசுவேன்” (ஐன்ஸ்டீன்). ‘எனக்கு இவனால் காரியம் ஆகவேண்டுமே!’ என்று எதிர்பார்த்து, போலி மரியாதையுடன் நடந்துகொள்கிறவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. காரியம் முடிந்ததும், இத்தகைய காரியவாதிகள் காணாமல் போய்விடுவார்கள். மரியாதை இல்லாத உறவு பிறர் சொல்வதும் செய்வதும் நாம் செய்வதுபோலவோ, அல்லது விரும்புவதுபோலவோ, இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவரைக் கேலி செய்வது நெருக்கத்தை எப்படி உண்டாக்கும்? தன் வீட்டுக்கு வரும் ஒருவரது உச்சரிப்பைக் கேலி செய்கிறவர் அவர்கள் வீட்டுக்குச் செல்கையில், கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. மாமியார் பதவி கிடைத்தவுடனேயே, புதிய மருமகள் மகனது அன்புக்குத் தனக்குப் போட்டியாக வந்துவிட்டாள் என்ற காழ்ப்புணர்ச்சியும் வந்துவிடும் சிலருக்கு. எல்லாக் குடும்பங்களிலும் ஒரேமாதிரியான சமையல் இருக்காது. இதை ஒத்துக்கொள்ள விரும்பாது, “உனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்று சொன்னார்களே! ஒன்றுமே தெரியலியே!” என்று மட்டம் தட்டும் மாமியார்மீது எந்த மருமகளுக்குத்தான் மரியாதை எழும்? அன்பு? கேட்கவே வேண்டாம். பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஆனால், அவமரியாதையை எதற்குத் தாங்கிக்கொள்வது? “எங்கள் வீட்டில் இப்படித்தான் சமைப்போம்,” என்று மருமகள் வாதாடினால், உறவு இன்னும் விரிசலாகும். ‘வீண் சண்டை எதற்கு?’ என்று எதுவும் பேசாமலிருந்தாலும், மனம் என்னவோ கசந்துதான் போய்விடும். குழந்தைகளுக்கு மரியாதை குழந்தைகளிடம், ‘நீங்கள், சொல்லுங்கள்’ என்று பேசுவதால் மரியாதை அளிப்பதாகிவிடாது. கடைத்தெருவில், பார்க்கும் பொருளையெல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி நச்சரிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது? ‘காசு இல்லே’. கடைத்தெருக்களில் பல தாய்மார்கள் சொல்லும் சாக்கு. ‘உனக்குத்தான் வீட்டிலே நிறைய இருக்கே!’ என்று சுட்டிக்காட்டலாம். அதைவிட்டு, பலர் முன்னிலையில் அடிப்பார்களா? அப்படிச் செய்த ஒருவர், “என் தந்தை எனக்கு பிடித்தது எதையும் செய்ய விடவில்லை. எனக்கு விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆசை. அப்பா விடவில்லை,” என்றார், உணர்ச்சியற்ற குரலில். அப்போது அனுபவித்த நிராசை குழந்தையின் ஆசையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, ஆத்திரத்தில் கொண்டுவிட்டது. கதை அமெரிக்காவில் வாழும் ஐந்து வயதுப் பாலகன் சத்யாவிற்கு அவனுடைய தாய் மரியாதை சொல்லிக்கொடுத்தாள்: “பெரியவர்களிடம் பேசும்போது, ‘வா’ என்று சொல்லக்கூடாது. ‘வாங்கோ,’ என்று மரியாதையாக் கூப்பிடணும்”. ஒரு நாள் காலையில் அவன் என்னுடன் தொலைப்பேசியில் வெகு நேரம் தொடர்பு கொண்டபோது, “ஏதாவது சாப்பிட்டியோப்பா?” என்று கரிசனத்துடன் விசாரித்தேன். அவனுடைய பதில்: இல்லேங்கோ, பாட்டிங்கோ!! பெண்களுக்கு மரியாதை ‘நீ அழகாக இருக்கிறாய்!’ என்று புகழ்ந்தால், உலகம் புரியாத சிறுமிகள் வேண்டுமானால் அகமகிழலாம். வளர்ந்தபின்னர், அவர்கள் எதிர்பார்ப்பது தன்னை மரியாதையுடன் நடத்தும் ஆண். முகத்துதி இல்லை. ஆணைச் சார்ந்து நிற்பவள்தான் நல்ல பெண் என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்பட்டு வளர்கிறார்கள் பெண்கள். ஆனால், படித்து, சொந்தக்காலில் நிற்பவர்கள் நினைப்பது: ஒருவரிடம் அன்பு செலுத்துகிறோம். அதை நம் பலகீனம் என்றெண்ணி, அவர் எவ்வளவு மோசமாக நடத்தினாலும், பொறுத்துப்போகலாமா? சுயமரியாதையை இழந்துவிடுவோமே! இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்தினால் பெண்ணியக் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன. விவாகரத்துக்கள் அதிகரிக்கின்றன. ஒரு துணுக்கு: “என் கணவர் நான் சொல்வது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கேட்பார் – பிறரிடம் பேசும்போது!” அவள் சொல்லாமல் விட்டது – நான் சொல்வது எதையும் கணவர் காதில் வாங்கிக்கொள்வது கிடையாது. ஒருவருக்கு நாம் தரும் மரியாதை அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதில் இருக்கிறது. எப்படி மரியாதை அளிப்பது? பெண்களுக்கு நன்றாகப் பேசும் திறமையும், ஆண்களுக்கு இயந்திரத் திறன்களும் (mechanical skills) இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. ஒரு பெண் காரோட்டிப் போகையில், அவளது ’திறனை’க் கேலி செய்பவன் மரியாதை அளிக்கத் தவறிவிடுகிறான். கதை ஒரு முறை, நான் காரை நிறுத்திய இடம் சறுக்கு மரம்போல் பயங்கர சாய்வாக இருந்தது. எப்படியோ கீழே நிறுத்திவிட்டேன். திரும்பப் போகும்போது, அதை எப்படி வெளியே கொண்டுவருவது என்று மலைத்து நின்றிருந்தேன். முன்பின் தெரியாத ஒருவர் என் குழப்பத்தைப் பார்த்து, “நான் உதவலாமா?” என்று பணிவாகக் கேட்டு, நான் சம்மதித்ததும், உதவினார். அவர் மரியாதைக்குரியவர். ஏனெனில், ‘உனக்கு இதுகூட முடியவில்லையே!’ என்று ஏளனமாக நினைக்கவில்லை. இவரைப் போன்றவர்கள், எல்லாருக்கும் எல்லாம் செம்மையாகச் செய்ய முடியாது என்று புரிந்தவர்கள். பெண்களுக்காக காரின் கதவைத் திறந்துவிடுபவர்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் ‘gentlemen’ என்று சிலாகிக்கிறோம். இவ்வாறு, பிற பெண்களை மரியாதையாக நடத்துபவர்களின் குழந்தைகளும் தந்தையைப் பின்பற்றுவார்கள். மகளாக இருந்தால், மரியாதைக்குறைவாக நடத்தும் பிற ஆண்களை எதிர்ப்பாள். ‘பிறர் ஏன் என்னை மதிப்பதில்லை?’ என்று குழம்பமாட்டாள். அப்படி ஒருவர் நடந்தால், அது நம் தவறில்லை. அவருக்குத் தன்னையே மதிக்கத் தெரியவில்லை, அதனால் பிறரையும் மரியாதையின்றி நடத்துகிறார் என்று புரிந்து, அலட்சியம் செய்வாள். குடும்பத்தில் மரியாதை ஒரு குடும்பத்தலைவன் சுயநலத்துடன், தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன ஆகும்? அவனுடைய தீய நடத்தையால் அவதிப்படும் மனைவிக்கு அவன்மீது அன்போ, மரியாதையோ இருக்காது. அவன் கொதித்துப்போய், ‘நான் உனக்கு வாழ்வு கொடுத்தேன், பிள்ளைகள் கொடுத்தேன்!’ என்று வசனம் பேசினால் மரியாதை கிட்டுமா? இருவரும் ஒருவர் மற்றவருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை மறந்து, ஓயாத வாக்குவாதத்தால் வாழ்வை நரகமாக்கிக்கொள்வார்கள். தான் ‘ஆண்’ என்ற ஒரே தகுதியால், மனைவி (மற்றும் பிற பெண்கள்) தனக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தோல்விதான் அடைகிறார்கள். பிராணிகளுக்கு மரியாதையா! “உன்னை எப்படிப் பிறர் நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ, அதேபோல் அவரையும் நடத்து”. இந்த உண்மை மனிதருக்கு மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளுக்கும் பொருந்தும். ஒரு நாயையோ, பூனையோ வளர்த்தால், ‘நாம்தான் அதற்கு ஆகாரமும் தங்க இடமும் கொடுத்திருக்கிறோமே!’ என்று அடித்து உதைப்பவர்களும் இருக்கிறார்கள் – எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மிஸ்டர் ஊ (WOO)மாதிரி. அவன் வளர்த்த நாய், ராஜர், நான் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது என் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். “சும்மா திட்டாறாளாப்பா?” என்று, நான் தடவிக்கொடுப்பேன். எங்கள் நெருக்கம் மிஸ்டர் ஊவின் ஆத்திரத்தை எழுப்பியது. ஒரு சிறு கூண்டுக்குள் அதை அடைத்துவைத்தான். தலையைச் சாய்த்து, பரிதாபமாக என்னைப் பார்க்கும். ஒரு முறை, எப்படியோ தப்பித்து, வெகு தூரம் சென்றுவிட்டது ராஜர். தூரத்தில் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடி வந்த அந்த அல்சேஷன் நாயைக் கண்டு, நடந்துகொண்டிருந்தவர்கள் அஞ்சி விலக, என்மேல் பாய்ந்து, முன் கால்கள் இரண்டையும் என் நெஞ்சில் பதித்துக்கொண்டது. “உங்கள் நாயா?” கேட்டவர்கள் முகத்தில் ஆத்திரம். “இல்லை. என் பக்கத்து வீட்டு நாய்!” என்று கூறி, அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கினேன். அதை அணைத்து, “திரும்பிப் போகத் தெரியலியா? என்கூட வா,” என்று தடவிக்கொடுத்தேன். அதற்கு ஆகாரம் அளித்தவன் அத்துடன் நின்றுவிடாது, உலவப் போகையில் தன்னுடன் அழைத்துப்போயிருந்தால், அந்தப் பெரிய நாய் வெகுவாக அஞ்சி, பிறரையும் அச்சுறுத்தி இருக்குமா? நாங்கள் குடியிருந்த இன்னொரு வீட்டிலும் இதே கதைதான். “உடனே வா. இல்லாட்டா, ஆகாரம் கிடையாது!” என்ற மிரட்டல் வரும் பக்கத்து வீட்டிலிருந்து. “சாப்பிடு, போ, டிக்ஸி. அப்புறமா வா,” என்று நான் அனுப்பும்வரை என்னைவிட்டுப் போகாது. கோலாலம்பூரில், தெருவுக்குத் தெரு, செல்லப் பிராணிகளுக்கு வேண்டிய ஆகாரம், விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைகள்! அதைக் கண்டு, “இங்கே எல்லாருக்கும் பூனை, நாய்கள்மேல் அன்பு வந்துவிட்டது போலிருக்கிறதே!” என்று என் மகள் மகிழ, வரண்ட சிரிப்பைத்தான் அவளுக்குப் பதிலாக என்னால் அளிக்க முடிந்தது. நம்மைப்போலவே, மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பது எத்தனைபேருக்குப் புரிகிறது? உடல்மொழியும் நம்பிக்கையும் மனிதன் தனி மரமல்ல. ஏதோ ஒரு விதத்தில் பிறருடன் தொடர்பு வைத்திருக்க நேர்கிறது. நாம் கூறுவது பிறருக்குப் போய்ச்சேர வேண்டுமானால், கேட்பவர்களுக்கு நம்மீது நம்பிக்கை எழச் செய்யவேண்டும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம். மிகக் குண்டாக இருந்த ஒரு மாது சிறப்புரை ஆற்ற ஒரு கல்லூரிக்கு வந்தாள். அதை ஒட்டி, ஆங்கில தினசரியில் வந்த ஒரு கண்டனக் கடிதம்: “தங்கள் உடலையே தகுந்தபடி பார்த்துக்கொள்ளத் தெரியாதவர்கள் பிறருக்கு அறிவுரை கூற வருகிறார்கள்! முதலில் அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளக் கற்கட்டும்”. ஆசிரியப் பயிற்சியின்போது எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது: “அழகாக உடுத்து வருகின்ற ஆசிரியை மாணவ மாணவிகளின் கவனத்தை ஈர்க்கிறாள்”. சூழ்நிலைக்குப் பொருத்தமான ஆடை அணிவது தன்னம்பிக்கைக்கான முதல் படி. சுருங்கச் சொன்னால், கல்யாணத்திற்கு அணிவதை துக்கம் விசாரிக்கப் போகும்போதோ, கடைகண்ணிகளுக்கோ அணிவது மடமை. நான் பள்ளியில் பயிலும்போது, ஆசிரியை ஒருவர் பக்கவாட்டில் அசைந்தபடியே பாடம் கற்பிப்பார். சற்றுப் பருமனான இருந்த இன்னொருவர் கரும்பலகைமீது சாய்ந்துதான் பேசுவார். எங்களுக்குள் பேசி, கேலி செய்வோம். குரல், தொனி “குரல் உரக்கவோ, அல்லது அதிகாரமாகவோ இருப்பதுதான் ஒரு தலைவருக்கு ஏற்றது”. பலரும் இப்படித்தான் எண்ணுகிறார்கள். கீழ்ப்படியாதவர்களை வேண்டுமானால் இவ்வாறு அச்சுறுத்தலாம். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் வசதிகுறைந்த இல்லங்களிலிருந்து வருபவர்கள். பாடம் நடக்கும்போதே உரக்கப் பேசுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாங்கும் சம்பளத்திற்கு ஆசிரியைகள் உயிரைக் கொடுக்கவேண்டும். முதல் வருடம், என்னால் மாணவர்களை அடக்க முடியவில்லை. “Your voice is not commanding, Teacher!” என்று விளக்கினான் ஒருவன். நான் வேண்டுமென்றே குரலைக் குறைத்து, “உங்களுக்காக நான் சாகப்போவதில்லை. அக்கறை இருந்தால், கவனியுங்கள்!” என்றேன். ‘நான் உங்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறேன்!’ என்பதுபோல் மாணவர்களை மிரட்டி, அதிகாரமாக நடத்தும் ஆசிரியர்கள் அவர்களிடம் தோழமையை எதிர்பார்க்க முடியாது. ஆசிரியையுடன் தோழமையா! நடக்கிற காரியமா? தம் வகுப்பிலிருந்த மாணவர்கள் பிற ஆசிரியைகளுக்கு வைத்திருந்த கேலிப்பெயர்களைக்கூட என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள் மாணவிகள். இது நம்பிக்கையுடன் நட்பையும் குறிக்கிறது. உருவத்துடன், நடை, உடை இதெல்லாம் சரியாக இருந்தால் போதுமா? முகபாவம், கையசைவு, கண்ணால் தொடர்பு கொள்வது ஆகியவையும் உடல் மொழிதான். ஒரு பேச்சுப்போட்டியில், மனப்பாடம் செய்துவைத்திருந்தது மறந்துவிடுமோ என்ற பதைப்புடன், தூரத்தில் ஒரே இடத்தில் பார்வையைப் பதித்து, சொல்லி முடித்தேன். நீதிபதி கூறிய அறிவுரை: “பிறருடன் பேசும்போது, அவரைப் பார்த்துத்தான் பேசுகிறோம். ஒரே நிலையில் பார்வை எங்கோ பதிந்திருந்தால், நீங்கள் கூறுவது நம்பும்படியாக இருக்காது”. தன்னம்பிக்கை உடையவர்களின் அடையாளம் தம் திறமை என்னவென்று புரிந்து, பழைய சாதனைகளை அலசுவது, ஏதாவதொரு இலக்கு மற்றும் அமைதியோடு பயனும் அளிக்கும் பொழுதுபோக்கு என்று நாட்களைக் கழிப்பார்கள். “தன்னைத்தானே அறிகிறவனே எதிலும் வெற்றி பெறுவான்” (தத்துவஞானி SUN TZU). மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும், நான் இருக்கிறபடியேதான் இருக்கமுடியும். எதற்கு மாற வேண்டும்? இவ்வாறு நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொண்டால், தன்னம்பிக்கை தானே வரும். இது கர்வமில்லை. பிறர் புகழும்போது ஏற்படுவதுதான் கர்வம். ஏன் பயம்? ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்குமுன், ‘பிறர் என்ன சொல்வார்கள்?’ ‘தோற்றுவிடுவோமோ?’ என்று பல எதிர்மறை எண்ணங்கள் எழுவதால்தான் அச்சம் எழுகிறது. பிறர் நினைப்பதைப் பற்றி என்ன யோசனை? அவர்களும் மற்றவர்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்! ’பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்?” என்று நமக்கு எழும் குழப்பத்தை ஆக்ககரமாக மாற்றிக்கொள்ளலாமே! நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்ல பயிற்சி. எனக்குள் ஒவ்வொரு உணர்வு எழும்போதும், ‘ஏன் இப்படி?’ என்று அலசுவேன், எட்டு வயதிலிருந்தே. ‘ஏன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்?’ ‘எப்போதும் திட்டும் ஆசிரியை இன்று புகழ்ந்தார்’. இவ்வாறு யோசிக்க யோசிக்க, என் உணர்ச்சிகள் பிறரைச் சார்ந்திருக்கிறதென்று புரிந்தது. நாளடைவில், ‘நான் என்ன, அவர்கள் கைப்பாவையா, அவர்களுக்கேற்ப ஆட?’ என்ற எரிச்சலெழ, மாறிப்போனேன். பிறரது கூற்று என்னை அதிகமாகப் பாதிக்கவிடாது பார்த்துக்கொண்டேன். அதன்பின், வெற்றியோ, தோல்வியோ, எது கிடைத்தாலும், வேடிக்கையாகத்தான் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ எழுவதில்லை. ஒருவர் தன்னம்பிக்கையோடு நடந்தால், பிறரும் வெற்றி பெறத் தூண்டுகோலாக அமைகிறார். கதை எங்கள் வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று மற்றொரு பள்ளி ஆசிரியைகளுடன் இழு-பறி (TUG OF WAR) போட்டி. “போட்டியில் பங்கு கொள்வது வெற்றி பெறத்தான். அதற்கேற்ப உடை அணிந்து வாருங்கள்,” என்று எங்கள் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வலியுறுத்தினேன். வேடிக்கையாகச் சொல்கிறேன் என்றெண்ணி முதலில் சிரித்தாலும், எல்லாரும் சம்பவத்தன்று விளையாட்டு வீராங்கனைகளாக வந்தார்கள். அடுத்த பள்ளி தலைமை ஆசிரியை கவலைதோய்ந்த முகத்துடன், எங்கள் உடைகளையும், காலணிகளையும் பார்த்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். அப்போதே எங்களது தைரியம் கூடியது. தங்கள் பள்ளி வெற்றி பெற்றதில் எங்கள் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை. பரிசாக, ஆளுக்கொரு ஒரு சிறு குடை கிடைத்தது. “நன்றாக இழுத்தீர்கள், டீச்சர்!” என்று என்னைத் தனியாகப் பாராட்டினான் ஒரு மாணவன். அதன்பின், இடுப்பு வலியால் துடிதுடித்து, மருத்துவ விடுப்பு எடுத்தது வேறு கதை! கலாசார வேறுபாடு ‘நிமிர்ந்து நில். நேராகப் பிறர் கண்களைப் பார்த்துப் பேசு! அப்போதுதான் நீ சொல்வதில் நம்பகத்தன்மை இருக்கும்’. எல்லா கலாசாரத்திற்கும் இந்த அறிவுரை பொருந்தாது. மாணவன் ஒருவன் மலாய் ஆசிரியரின் கண்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தால், அது மரியாதைக்குறைவு எனக் கருதப்படுகிறது. அவர் கூறுவது விளங்காமல் தமிழ் மாணவன் விழிப்பான். அவரோ, ‘என்ன முறைக்கிறே?’ என்று தண்டிப்பார். சில நாடுகளில், ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் கை குலுக்குவார்கள். முன்பு இந்த கலாசாரம் நம்மிடையே இருக்கவில்லை. இந்திய இளைஞன் ஒருவன் என்னிடம் கூறினான்: “சற்று வயது முதிர்ந்த பெண்களின் கையைக் குலுக்கலாமா, இல்லை, தவறாக எண்ணிவிடுவார்களோ என்று தயக்கமாக இருக்கிறது!” நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, என்னிடமிருந்து விடை பெறும்போது, “அணைத்து, முத்தம் கொடுக்கலாமா, இல்லை கைகுலுக்குவதா என்று எனக்குத் தெரிவதில்லை,” என்று என் மகளின் நண்பன் குழம்ப, “கை குலுக்கு. போதும்,” என்று அலறினேன். மேற்பயிற்சியின்போது ‘எங்கள் மதம்தான் மிக உயர்வானது!’ என்று பெருமையுடன் கூறினாள் விரிவுரையாளர், ரோஸ்னா. தொடர்ந்து, “நிர்மலா! கவலைப்படாதீர்கள்,” என்றும் குரலெழுப்பினாள், கேலியாக. அப்போதுதான் புரிந்தது, என் கையை மோவாய்க்குக் கீழே பதித்திருந்தேன் என்று. மற்றவர் சொல்வதை ஏற்கவில்லை என்றால், நம்மையுமறியாது அப்படிச் செய்துவிடுகிறோம். நிமிர்ந்த நடைகொண்ட பெண்களையே தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்கிறோம். ஆனால், தலையை அதிகமாக நிமிர்த்தினால், ‘உன்னை மீறுகிறேன். நீ சொல்வதைக் கேட்கமாட்டேன்,’ என்கிற எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்த உடல் மொழி இருபாலருக்கும் பொதுவானது. பெண்களின் உடல் மொழி எல்லாருடனும் இணக்கமாக நடக்கவேண்டும் என்று சிறுவயது முதலே பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. தொட்டுத் தொட்டுப் பேசுவார்கள். நிறையச் சிரிப்பார்கள், இல்லையேல் முறுவலிப்பார்கள். முகபாவம் அதிகம் காட்டுவார்கள். பெண்களின் குரல் உயரும், கோபத்தை வெளிப்படுத்த. (‘இதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறோம்!’ என்கிறீர்களா?) பெண்களின் மூளையில் 14-லிலிருந்து 16 பாகங்கள்வரை மற்றவர்களின் நடத்தையை அலசுகின்றனவாம். அதனால், பிறரது நடத்தை அவர்களுக்கு எளிதாகப் புரியும். ஆண்களோ! இயற்கையில், ஆண்களுக்குப் புன்சிரிப்பு, முகபாவம் இரண்டுமே குறைவு. மூன்று முறை தலையை மேலும் கீழும் அசைத்தால், ‘கவனித்துக் கேட்கிறேன். மேலே பேசு,’ என்று அர்த்தம். ஓர் ஆணின் பார்வை எதிரிலிருக்கும் பெண்ணின் கண்ணிலிருந்து வாய்வரை மட்டுமே இருந்தால், அவள் அவனை நம்பலாம். ஆண்குரல் அவ்வளவாக மாறுவதில்லை – அதிகாரம் தன் கையில்தானே என்ற மதர்ப்புடன். அடிக்கடி உயர்ந்தால், சுயக்கட்டுப்பாடு குறைவு. பிறரது நடத்தையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஆண்களின் மூளையில் நான்கிலிருந்து ஆறு பகுதிவரைதான் வேலை செய்கின்றன. இதனால்தான், ‘இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை!’ என்று அயர்கிறார்களோ? புரிந்துவிட்டால், அப்புறம் என்ன கவர்ச்சி! தனித்திருந்தால் தவறேதுமில்லை “ஏம்மா, யார் எது சொன்னாலும், எல்லாரும், ’ஆமா, ஆமான்னு சொல்வா, நீ மட்டும் அப்படிச் சொல்றதில்லையே!” கேட்டது என் மகள். அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயது. இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் – அது மனிதனோ, பிராணியோ – ஒன்றுபோல் இருப்பதில்லை. இது புரியாமலோ, அல்லது ஒத்துக்கொள்ள விரும்பாததாலோ, தன்னுள் அடங்கியிருக்கும் எல்லாரும் ஒரேமாதிரிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஒவ்வொரு சமூகமும். இவ்வகையான, எழுதப்படாத கட்டுப்பாடு குடும்பத்தில் ஆரம்பித்து, பள்ளிக்கூடத்திலும், அதற்குப் பின்பும் – ஆயுள் முழுவதும் – தொடர்கிறது. அநாவசியமான கட்டுப்பாட்டை எதிர்க்கத் துணிபவர்கள் பற்பல ஏச்சுப்பேச்சுக்கும் தண்டனைக்கும் தயாராக இருக்கவேண்டும். ‘இவர்கள் நம்மை மதிக்கவில்லை!’ என்ற ஆத்திரத்துடன், பிறர் அவர்களைத் தனிமைப்படுத்தக்கூடும். இதற்கெல்லாம் பயந்துதான், பெரும்பான்மையோர் பிறரைப் பின்பற்றி நடந்துவிடுகிறார்கள். அதனால் இயற்கையிலேயே தமக்கு அமைந்த கற்பனாசக்தி குன்றிவிடுகிறது என்பதை ஒரு சிலர் உணர்ந்தாலும், எதிர்த்து நடக்கும் துணிவு எல்லாருக்கும் இருப்பதில்லை. ‘பிறரைப்போல் இருக்கவேண்டும்!’ என்று, தம் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே போதித்துவிடுகிறார்கள் தாய்மார்கள். தாம் அருமையாக வளர்த்த செல்வங்கள் வித்தியாசமாக நடந்து, பிறரது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணமோ? கதை எங்கள் பள்ளி விழா ஒன்றிற்கு, ஆசிரியை, மிஸஸ்.ஸா (Saw), தன் ஐந்து வயது மகளைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். சிறுமியை, ‘புத்திசாலி!’ என்று நான் கணித்தேன். சில மாதங்களுக்குப்பின், ஓய்வு வேளையில் பேசிக்கொண்டிருந்தாள் அந்த ஆசிரியை, ‘கேட்பவர்கள் கேட்கட்டும்’ என்ற தன் வழக்கப்படி. “என் பெண்ணுக்குப் பிறருடன் பழக ரொம்பப் பிடித்திருக்கிறது,” என்று ஆற்றாமையுடன் ஆரம்பித்தாள், மகள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதுபோல். “எப்போதும் அண்டை அயலில் உள்ள தோழிகளுடன் விளையாடப்போகிறாள். என் நாத்தனார்கள்போல் இவளும் extrovert (கலகலப்பு)! இது என்ன கெட்ட வழக்கம்! பிரம்பால் விளாசினேன்!” அடுத்த முறை, அப்பெண் பயந்தவளாகக் காணப்பட்டாள். அம்மாவின் நிழல்போல் எங்கும் நடந்தாள். பேசும்போது, வாய் திக்கியது! பரிதாபமாக இருந்தது எனக்கு. இயல்பான குணத்தைத் தடைசெய்து, பிறர்போல், பெரியவர்கள் விரும்புவதுபோல், நடக்கும்படி செய்தால் குழப்பம்தான் விளையும். ‘ஒரு பெண் அழகாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கும். புத்திசாலியாக இருக்கக்கூடாது – பயந்து விடுவார்கள்,’ என்று மிஸஸ்.ஸாவின் பாட்டி ‘புத்திமதி’ கூறியிருந்தாளாம்! என்னிடம் விவாதித்தாள், பெண்களுடைய அறிவுத்தாகம் பெருத்த தவறு என்பதுபோல். அதன்படி, மகளுக்கு விதவிதமான ஆடை அணிகள் வாங்கிக்கொடுத்து, ‘அவள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள்!’ என்று முடிவு கட்டினாள். ங் (NG) என்ற ஒரு சீன இளைஞன் என்னிடம் கூறியது நினைவில் எழுந்தது. “உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. பிறர்போலவே இருக்கவேண்டும் என்ற கண்டிப்பும் கட்டுப்பாடும் எங்களுக்கு அதிகம். அதனால், எங்கள் கற்பனைத் திறன் காணாமல் போய்விடுகிறது!” எல்லாரும் அறிவாளிகளாகவோ, பிறர் மெச்சும்படியாகவோ இருக்க முடியாது. கதை ஆடிசம் (autism) என்ற நரம்பியல் கோளாறு உள்ளவன் ஜான். அவனால் பிறருடன் கலந்து பழக முடியாது. பேச்சும் குழறும். முதல் முறை, நீச்சல் குளத்தில், வாய் நிறைய இருந்த நீரை என்மேல் உமிழ்ந்தான் அந்த எட்டு வயதுப் பையன். பதறிய அன்னை க்ளோரியா, என்னிடம் வெகுவாக மன்னிப்புக் கேட்டாள். “இவனுக்கு மூளை சரியில்லை,” என்றாள் கெஞ்சலாக. “தெரியும் பரவாயில்லை,” என்றேன் சுருக்கமாக. அவள் சமாதானமாகாது, “ஆன்ட்டிக்கிட்ட ஸாரி சொல்லு!” என்று மகனைக் கண்டித்தாள். அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, “ஸாரி ஆன்ட்டி,” என்றான். “சரியாச் சொல்லு,” என்று அவன் முகவாயைப் பிடித்து, என் புறம் திருப்பினாள். ‘நெருப்பு சுடும்!’ என்று தாய் எத்தனை முறை எச்சரித்தாலும், புரியாதாம். வருத்தத்துடன் தெரிவித்தாள். கூடவே, “எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப்போலவே நடித்துக் காட்டுகிறான்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள் க்ளோரியா. அது மட்டுமா! அவடைய நீச்சல் திறமையைப் பார்த்தால், மீன் துள்ளி விளையாடுவதுபோல் இருக்கும். எல்லோராலும் அப்படிச் செய்ய முடியுமா? இருந்தாலும், ‘மகன் மற்றவர்களைப்போல் இல்லையே!’ என்ற வருத்தம் தாய்க்கு. அதன்பின், அங்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம், “குட்மார்னிங், ஜான்!” என்று முகமன் கூறுவேன். பார்வை எங்கோ பதிந்திருக்க, அவனும், “குட்மார்னிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று குரலில் ஏற்ற இறக்கம் இல்லாது பதில் கூறுவான். பல வருடங்களுக்குப் பின்னர் அவனை ஒரு கடையில் பார்த்தபோது, நான், “குட் ஈவினிங், ஜான்,” என, என்னைத் திரும்பிக்கூட பாராது, “குட் ஈவினிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று தன்போக்கில் சொல்லியபடி நடந்தான். அப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். என்னை மறக்கவில்லை. அத்துடன், என் குரலை வைத்தே என்னை அடையாளம் கண்டிருக்கிறான்! ‘இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்று இவனைப் போன்றவர்களைக் கண்டித்துக்கொண்டே இருந்தால், இன்னும் குழம்பிவிட மாட்டார்களோ? குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையே பெரிதுபண்ணாது, அவர்களால் இயன்றதைப் பாராட்டக்கூடாதா! கட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் ‘சரியாக உட்கார்!’ மிகச் சிறிய வயதிலேயே, பல முறை பெண்குழந்தைகள் கேட்கும் திட்டு இது. ‘உட்காரத் தெரியாமல் உட்காரும்’ அந்த வயதில், கிட்டத்தட்ட முழங்கால்வரை நீண்ட உள்ளாடையை எனக்கு அணிவித்திருந்தாள் என் தாய். அதனால், என்னை எவரும் கண்டிக்கவில்லை. பதின்ம வயதில், ‘என்ன இருந்தாலும், உன் அண்ணன் (அல்லது தம்பி) ஆண்பிள்ளை!’ என்று, பெண்ணாகப் பிறந்த ’குற்ற’த்திற்காக பெண்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்படலாம். ஒரு சில பெண்கள் வாய்திறவாமல் இதை ஏற்றாலும், வேறு சிலருக்கு இத்தகைய பாரபட்சம் ஆத்திரம் மூட்டும். கதை என் முன்னாள் மாணவி ஸ்யூ லின் (SIEW LIN) எங்கள் பள்ளிக்கூடத்திலேயே தாற்காலிக ஆசிரியையாகச் சேர்ந்தாள். “நீ நன்றாகப் படிப்பாயே! ஏன் பட்டப்படிப்பு படிக்கவில்லை?” என்று கேட்டேன். அவள் முகம் வாடியது. “என் பெற்றோர் என் அண்ணனைப் படிக்க வைக்கத்தான் பணம் இருக்கிறது என்றுவிட்டார்கள்! ‘அவன் என்ன உயர்த்தி?’ என்று நான் சண்டைபிடித்தேன். அவன் நன்றாகக்கூடப் படிக்கமாட்டான். அதற்கு என் அம்மா என்ன சொன்னார்கள், தெரியுமா?” என் பதிலுக்குக் காத்திராமல், அவளே தொடர்ந்தாள்: “அவன்தான் கடைசி காலத்தில் எங்களை வைத்துக் காப்பாற்றுவான். நீ, எப்படியும், கல்யாணமாகி, இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே!” எத்தனை பெண்கள் இப்படி ஒடுக்கப்பட்டிருப்பார்கள் என்று என் யோசனை போயிற்று. ஸ்யூ லினது மனக்குமுறல் மேலும் வெளிவந்தது. “‘அண்ணா உங்களைக் காப்பாற்றுவான் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?’ என்றுகூட வாதாடினேன். என் பெற்றோர் மசியவில்லை,” என்றவள், தன் எதிர்காலக் கனவைப் பற்றிப் பேசினாள். “மிஸஸ் ராகவன், எனக்குப் பெண்குழந்தைகள் பிறந்தால், அவர்களை நிறையப் படிக்கவைப்பேன். விரும்பும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சுதந்திரமாக நடக்கவிடுவேன்!’ அழுதுவிடுவாள் போலிருந்தது. என் தாயும் இதையே பிறரிடம் கூறக் கேட்டிருக்கிறேன் –வேறொரு தலைமுறையில். இக்காலத்திலும், ‘பெண் என்றால், அதிகப் பொறுப்பு. பிற பெண்களைப்போல் இருந்தால், பலரும் பாராட்டாவிட்டாலும், குறை கூறமாட்டார்கள்!’ என்று தாய்மார்கள் எண்ணுவதால், தம் பெண்குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி – அது நல்லவிதமாக இருந்தாலும் – விடுவதில்லை. அது எப்படி, ஒரு சில பெண்கள் மட்டும் சாதனைகள் புரிவதில் தனித்து நிற்கிறார்கள்? பதில்: அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஓர் ஆண்துணை இருக்கும்: பால்யப் பருவத்தில் தந்தை, அதன்பின் கணவர், மகன். இன்னும், மருமகன், பேரன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், ஆண் துணை. ஒரு பெண்ணின் திறமைகளைப் பாராட்டி, தகுந்த நேரத்தில் தைரியம் அளித்து, தன்னை நம்பியிருப்பவள் முன்னுக்கு வருவாள், வரவேண்டும், என்பதில் உறுதியாக நிற்பவர்கள் இத்தகைய ஆண்கள். சுயசிந்தனையும் நிந்தனையும் ‘என்னை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்!’ என்று கூறும் சிறுவர்கள் வெகு சிலரே. கதை பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட தற்காப்புக்கலை நிகழ்ச்சி அது. எனக்கு அறிமுகமில்லாத ஒரு சீனப் பெண்மணி, “என் மகளுக்கு பர்சனாலிடியே (ஆளுமை) கிடையாது,” என்று, பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடம் முறையிட்டாள். அந்த ஏழு வயதுச் சிறுமி பக்கத்திலேயே நின்றிருந்தாள். சோனியாக இருந்தாள். பாராட்ட வேண்டிய தாயே தன்னைப் பற்றிப் பிறரிடம் குறையாகக் கூறினால், பின் எப்படி இருப்பாள்? அந்த தாயைத்தான் குறை கூற வேண்டும். ஏனென்றால், பிற குழந்தைகளுடன் அவளை ஒப்பிட்டு, இல்லாதவற்றுக்காகப் பழிக்கலாமா? அச்சிறுமியிடம் நற்குணங்களே இருக்காதா, என்ன! ‘கூடாது என்பதைச் செய்தால் தவறா?’ என்று குழந்தைகள் ஆர்வத்துடன் செய்துபார்ப்பார்கள். சரி, தவறு புரியாத வயது அது. தவறு என்று தெரிந்தே, ‘அம்மா என்னதான் செய்துவிடுவாள்!’ என்று, தாயைப் பரிசோதனை செய்வதற்காகச் செய்தால், கண்டிக்கலாம். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடும் தைரியத்தையே இழக்கும் அளவுக்குக் குறைகளைப் பெரிது பண்ண வேண்டாமே! கதை என் மூன்று வயது மகன் சசி ‘வாஷிங் மெஷின்’ ஓடிக்கொண்டிருந்தபோதே, மிகுந்த பிரயாசையுடன் திறந்தான். ‘அம்மா செய்வதுபோல் தானும் செய்யலாமே!’ என்ற ஆர்வம்தான் காரணம். அப்புறம் என்ன! அதனுள்ளிருந்து தண்ணீர் வெள்ளமாகப் பெருக, அலறியபடி ஓடினான். “போனாப்போறது! இனிமே, நான் சொல்றபோது திற, என்ன!” என்றுவிட்டு, சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினேன். அவனே பயந்தபோது, நான் வேறு எதற்காகத் தண்டிப்பது! அடுத்த முறை, அதன் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். “இந்த விளக்கு அணைந்ததும்தான் திறக்கணும்,” என்று காட்டினேன். அதன்படி நடந்தபோது, அவனுக்குப் பெருமையாகிவிட்டது. இன்னொரு முறை, எதையோ அரைக்கப் போட்டிருந்தேன். ‘பிளெண்டரை’ மூடவில்லை. சசி அதை இயக்கிவிட்டான். அதனுள்ளிருந்த தேங்காய், மிளகாய் வற்றல் எல்லாம்…! அவன் பயந்து ஓடினான். நான் திட்டுவேன் என்று பயந்தல்ல. சூறாவளிபோல் பறந்தவைகளைக் கண்டு. அதிலிருந்து, நான் பக்கத்தில் இருக்க, சமையலறையில் எந்தவித மின்சார இயந்திரமானாலும், அதை இயக்குவது அவன் வேலையாகப் போயிற்று. வெற்றிகரமாக வேலையை முடித்ததும், அவன் முகத்தில் எழும் பூரிப்புக்காக நான் பொறுமையாகக் காத்திருப்பேன். வீட்டில் ஒவ்வொருவரிடமும் போய், பெருமையாகச் சொல்லிக்கொள்வான், “நான்தான் cabbage (முட்டை கோஸ்) நறுக்கினேன்!” என்று. “நீ ரொம்ப புத்திசாலி!” என்று அவர்களும் பாராட்டுவார்கள். குழந்தைகளுக்குத் தம்மையே பிடித்துப்போக பாராட்டுகள் அவசியம். ஏனெனில், பிறர் சொல்வதை அப்படியே நம்பும் வயது அவர்களுக்கு. சில தவறுகள் புரிந்தாலும் என்ன மோசம்! அதன்பின் செய்வது எல்லாமே தவறென்று ஆகிவிடுமா? கதை பாலர் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் பேரன், ‘இன்னிக்கு நிறைய வீட்டுப்பாடம் இருக்கு!’ என்று பெருமூச்செறிந்தான். தினமும் அப்படிச் சொல்லிக்கொண்டுதான் வீடு திரும்புவான்! அவன் செய்ய வேண்டிய வேலை: ஒரே எழுத்தை பத்து முறை எழுதவேண்டும். ‘வரிக்குமேல்’ என்று, ஆசிரியை ஒவ்வொருவரின் நோட்டுப்புத்தகத்திலும் உதாரணமாக ஒருமுறை எழுதியிருந்தாள். அந்த வயதில், ‘பள்ளிக்கூடத்தில்தான் படிப்பு என்றால், வீட்டிலுமா! எப்படித்தான் எழுதி முடிக்கப்போகிறேனோ!’ என்ற அயர்ச்சி எழுவது சகஜம். “எழுதி முடித்ததும், பூங்காவில் விளையாடப் போகலாம்,” என்பதுபோல், அவனுக்குப் பிடித்த எதையாவது சொல்லி, ஆசைகாட்டுவோம். நினைத்ததைவிட வேலை எளிதாக, விரைவாக, முடிந்துவிடும். அப்போது தன்னம்பிக்கை கூடும். அது மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும். என் நெருங்கிய தோழி, முதல் வகுப்பிற்கான பரீட்சைத்தாளைப் பார்த்து, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள். “அந்த வயதில், உனக்கும் இது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும், ஸ்டுபிட்!” என்று நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள். “அட, ஆமாம்!” என்று ஒத்துக்கொண்டாள். எந்த வயதிலும், ஒவ்வொரு படியாக ஏறினால்தானே மேலே போகமுடியும்! மலைத்துப்போய் கீழேயே நின்றுகொண்டிருக்கலாமா? சுயசிந்தனையா, நிந்தனையா? தாயின் அறிவுரைப்படி நடக்காது, சுயசிந்தனையோடு செயல்படுவார்கள் சிலர். அந்த நிலையில், தோல்வியையோ, பழியையோ ஏற்க நேரலாம். ‘நான் படித்துப் படித்துச் சொன்னேனே! கேட்டாயா? உனக்கு உலகத்தின் போக்கு புரியவில்லை,’ என்று தாய் குற்றம் சாட்டினால், மகளுக்குக் குற்ற உணர்ச்சிதான் ஏற்படும். அடங்கிப்போவதே சிறந்தது என்று தீர்மானித்துவிடுவாள் – அதனால் மனக்குறை ஏற்பட்டாலும். பெற்றோரால் புகழப்படாது, சிறு வயதிலிருந்தே அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்கும்படி வளர்க்கப்பட்டவர்கள், வளர்ந்தபின்னரும் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வார்கள். ‘என்னைப் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டால் தற்பெருமை என்பார்களே! அதற்கு மாறாக, ’நான் மட்டம்!’ என்பதுபோல் சொல்லிக்கொண்டால், அது அடக்கம் இல்லையா?’ என்று இவர்கள் யோசனை போகிறது. “எனக்குத் தைரியமே கிடையாது. நான் சரியான பயந்தாங்கொள்ளி!” எத்தனைபேர் இப்படிச் சொல்கிறார்கள்! ‘ஏன் பயம்? எங்கிருந்து ஆரம்பித்தது?’ என்று யோசிக்கலாமே! “எதையும் உரிய காலத்தில் செய்யும் நல்ல வழக்கம் எனக்குக் கிடையாது. தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பேன்!” இப்படிக் கூறிய ஆங்கில தினசரி ஆசிரியை ஒருத்தியிடம் நான் மறுத்துக் கூறியது: “உன் குறைகளைப் பிறர் கண்டுபிடிக்கட்டும் என்று விடு. நீயே ஏன் கூறிக்கொள்கிறாய்?” “நீங்கள் சொல்வதும் சரிதான்,” என்று ஏற்றுக்கொண்டாள். ‘கிடையாது,’ என்று நாம் உரக்கக் கூறும் ஒவ்வொரு நற்குணமும் நம்மிடமிருந்து சிறுகச் சிறுக விலகிவிடுகிறது. ஏனெனில், நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மூளையில் பதிந்துவிடுகிறது. எனக்கு என்னைப் பிடிக்கும்! தம் திறமைகளில் கொண்ட நம்பிக்கையுடன் புதிய காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், ‘எனக்கு என்னைப் பிடிக்கும்,’ என்ற திருப்தி உடையவர்கள். அதனாலேயே அமைதிகொண்டவர்கள். ஒருவர் தனக்கே நம்பிக்கை அளித்துக்கொள்ளும் வழி இது. (நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிறரிடம் எதற்காகப் பகிர்வது? ‘தற்பெருமை!’ என்று, பொறாமையுடன் பழிப்பார்கள்). ’என்னால் முடியும். செய்துகாட்டுவேன்!” என்று விடாமுயற்சியுடன் செய்கிறவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவார்கள். தவறோ, தோல்வியோ கிடைத்தாலும் தளர்ச்சி ஏற்படாது. வெற்றி அடைபவர்கள் தனித்துச் செயல்பட்டாலும், உதவி வேண்டும் என்று தோன்றும்போது, துணிந்து கேட்பார்கள். தம் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலுவதால், இவர்களுக்குப் பிறரைக் கண்டு பொறாமை எழுவதில்லை. பொதுவாக, ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், அவரைப்போல் நிறையபேர் இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால், வித்தியாசமாக இருக்கும் பிறரையும் அவரால் ஏற்கவும், மதிக்கவும் முடியும். எதுவும் அளவோடுதான் ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போவது விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் ஓரளவோடுதான் இருக்கவேண்டும். தன்னைத்தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குறைந்தவர்கள் என்று எண்ண ஆரம்பித்தால், யார் அவரை மதிப்பார்கள்! அப்படி எண்ணுவதே தன்னம்பிக்கை இல்லாததைத்தான் காட்டுகிறது. “தன்னம்பிக்கை குறைந்து வாழ்வது காரை ஓட்டிப் போகும்போது, ’ஹாண்ட் ப்ரேக்’கை (HAND BRAKE) கீழே இறக்காது போவதுபோல்,” என்கிறார் ஓர் அனுபவசாலி. பாதை கரடுமுரடாகத்தான் இருக்கும். குழந்தைகளும் கைத்தொலைபேசியும் பெண்களுக்கு இயற்கையாக, மூளையின் இரு பக்கங்களும் ஒரே சமயத்தில் மாறி, மாறி வேலை செய்யும். ஒரு பக்கம் குழந்தை அழ, சமையலையும் அதனுடன் கவனித்துக்கொண்டு, இன்னும் பிற வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடியும். Lateral thinking (பக்கவாட்டு சிந்தனை) என்னும் இத்திறனைப் பெற ஆண்களுக்குப் புத்தகங்கள் வழிகாட்டுகின்றன. தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்று, திரையையே உற்றுப் பார்க்க வைப்பவையோ, இரு பக்க மூளைக்கும் வேலை கொடுப்பதில்லை. அதன் நடுப்பாகத்தைத்தான் உபயோகிக்கின்றன. இதனால் ABSTRACT THINKING குறைந்துவிடுகிறது. அதாவது, எதிரில் இல்லாத பொருளைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடுகிறது. பாலர் பள்ளியில், இரண்டும் இரண்டும் என்பதுபோன்ற எளிதான கூட்டல் கணக்கு போட, கரும்பலகையில் இரு ஆப்பிள்களை வரைந்து காட்டும் நிலை இன்று. இதைத் தவிர்க்க, சிறுவயதில் இருபது நிமிடங்களுக்குமேல் இச்சாதனங்களைப் பயன்படுத்த விடுவது நல்லதல்ல. சிறுவயதிலிருந்தே, பக்கத்திலிருப்பவர்களுடன் பேசுவதைவிட, எங்கோ ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும், முகமறியாத ‘நண்பர்களுடன்’ பேசுவதுதான் பழக்கமாகிவிடுகிறது. அவர்களில் எத்தனைபேர் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்? தம் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா என்று கண்காணிப்பது அவசியமாக இருந்தாலும், கடினமாகிவிடுகிறது. தனித்திருந்தால் கற்பனை வளம் பெருகும். ஆனால், இவ்வாறெல்லாம் தனிமையையே நாடுகிற குழந்தைகளுக்குப் பிறருடன் பழகத் தெரிகிறதா என்பது சந்தேகம்தான். தூக்கமே வரதில்லே! படுத்துக்கொண்டு கைத்தொலைபேசியை உபயோகித்தால், களைப்பில்லாது பல மணி நேரத்தைச் செலவிடலாம். ஆனால், கண்கள் பழுதாகிவிடுவது என்னவோ உறுதி. இரவில் தூங்கப்போகுமுன், படுத்தபடி கைபேசியில் கவனம் செலுத்துகிறவர்கள் விரைவில் தூங்க முயற்சித்தாலும் அது இயலாத காரியமாகிவிடும். ஏதேதோ யோசனைகள் எழும். மிகுந்த ஒளியுடன் இருக்கும் திரை செய்யும் காரியம் அது. இதனால், அடுத்த நாள் பள்ளியில் தூங்கிவிழுவார்கள். அதன் விளைவு? பள்ளிக்கூட இடைவேளையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறவர்களின் கற்கும் திறன் குன்றுவதோடு, மன நிலையையும் பாதிக்கப்படுகிறது. நட்பு இருக்கவேண்டிய இடத்தில் முரட்டுத்தனம், இல்லை, அதிகாரம். இச்சாதனத்தைப் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்று சில பள்ளிகள் விதித்திருப்பதன் காரணம் இதுதான். ‘குழந்தைகளின் நச்சரிப்பிலிருந்து தப்பலாம்’ என்று, இரண்டுவயதுக் குழந்தைகளைக்கூட இச்சாதனங்களை உபயோகிக்கப் பழக்கும் பெற்றோர், பதின்ம வயதில் அவர்கள் தம்முடன் அதிகம் பேசுவதில்லையே என்று குறைப்படுவது என்ன நியாயம்! மூளையில் பாதிப்பு இரு நிமிடங்கள் உபயோகித்தபின், கைத்தொலைபேசியிலிருந்து எழும் வானொலி அலைகள் குழந்தைகளின் மூளையில் ஒரு மணி நேரம்வரை தங்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை பெரியவர்களைவிட 60% அதிகமாகக் கதிர்வீச்சை உள்வாங்கிக்கொள்கிறதாம். அதனால் மூளையிலும் காதிலும் கட்டிகள் வரக்கூடும். ஐபேட் (I pad) போன்றவற்றைச் சிறுவயதிலேயே உபயோகிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ரோபாட்போன்று இயந்திரகதியில் பேசுகிறார்கள். கணினி, கைத்தொலைப்பேசி போன்றவை இன்று அவசியமானதாக இருந்தாலும், செய்யவேண்டிய வேலைகளை ஒத்திப்போட வைக்கின்றன என்பதுதான் உண்மை. ‘இவற்றை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,’ என்ற நல்லெண்ணத்துடன் சிறுவர்களைத் தடுத்தால், அழுது, முரட்டுத்தனம் செய்கிறார்களா? அப்படியானால், அவர்களுக்கு இப்பழக்கம் போதை அளிக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே தவிர்க்கவேண்டும். இப்படிப் பல வேண்டாத விளைவுகளை எப்படித் தவிர்ப்பது? நான் பெரியவனாப் பிறந்திருக்கணும் எங்கள் குடும்பத்தில், ‘பத்து வயதுப் பையனுக்கு அரைமணி, ஏழு வயதிற்கு கால்மணி’ என்று நான் பேரன்களுக்கு உத்தரவு போட, “நான் ஏன் மொதல்லே அம்மா வயத்திலிருந்து வரலே?” என்று சின்னவன் சண்டை பிடித்தான்! அத்துடன், ‘புத்தகங்களும் படித்தாக வேண்டும்,’ என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கினோம். சிந்தனைவளம் வேறு எப்படித்தான் பெருகும்! முந்தைய தலைமுறைகளில், குடும்பத்திலுள்ள பெரியவர்கள் கதை சொன்னார்கள், குரலில் ஏற்ற இறக்கத்துடன். இரவு வேளைகளில், அல்லது உணவருந்தும்போது, பயனுள்ள கதைகள் சொல்வது நன்மையை விளைவிக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என்ன நன்மை? படிக்கத் தெரியாத வயதில் கதை கேட்பதாலோ, பிறகு சுயமாகப் படிப்பதாலோ, கற்பனாசக்தி வளரும். தம் நலனில் அக்கறைகொண்டு, நேரத்தைச் செலவிடும் பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிலைக்கும். தம் அன்றாட வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். வித்தியாசமான பிறரைப் புரிந்துகொள்ளவும் முடியும். குழந்தைகளை விடுங்கள்! அலுவலகத்தில் வேலை செய்யும்போதே கைத்தொலைபேசியில், ‘புதிதாக என்ன வந்திருக்கிறது?’ என்று இடையிடையே பார்ப்பவர்களின் I.Q (நுண்ணறிவு) பத்து எண்கள் குறைந்துவிடுகிறதாம். மரியுவானா என்று போதைப்பொருளால் விளையும் தீங்கைப்போல் இருமடங்கு!      இரு காரியங்களை ஒரே சமயத்தில் செய்வது புத்தகம் படிக்கும்போதோ, காரோட்டிப் போகையிலோ, கைத்தொலைபேசியில் கண்ணைப் பதித்தால் சக்தி விரயமாவதுடன், கவனமும் குறைந்துவிடும். தெரு விபத்துகள் அதிகரிக்காமல் என்ன ஆகும்? எல்லாவற்றிற்கும் ஒரே கருவி கைத்தொலைபேசி உபயோகத்தில் வந்ததிலிருந்து, புகைப்படக் கருவிகளுக்கு அவசியம் இல்லாது போயிற்று. மணிக்கட்டில் கட்டிய கைக்கடிகாரத்தைவிட தம் விரல்களுடன் சொந்தம் கொண்டாடும் தொலைபேசியைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், நேரத்தைத் தெரிந்துகொள்ள. தேதி பார்க்க இனி எதற்கு காலண்டர்? ‘என்ன சாப்பிடுகிறோம்?’ என்றே புரியாது, கண் கைத்தொலைபேசியில் நிலைக்கிறது பலருக்கும். “கைத்தொலைபேசி இளைத்துக்கொண்டே வருகிறது. மனிதர்களோ, அதற்கு நேர் எதிரிடை!” என்று புலம்புகிறார் ஒருவர். முகமறியாதவர்களுடன் ஓயாமல் பேசிக்கொண்டும், திரையை வெறித்துக்கொண்டும் இருந்தால், உடற்பயிற்சிக்கு ஏது நேரம்? ‘அதுதான், சாயங்கால வேளைகளில் உலவப்போகிறேனே!’ என்கிறீர்களா? அப்போதுகூட, கைத்தொலைபேசி, அதன் பெயருக்கேற்ப, கையைவிட்டு இறங்குவதில்லையே!   பெண்களின் குற்ற உணர்ச்சி மூன்றுவயதுக் குழந்தைகளாக இருக்கும்போதே, குற்ற உணர்ச்சி நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது. ‘கூடாது’ என்று அம்மா கண்டித்திருந்த காரியத்தைச் செய்துவிட்டு, பிடிப்பட்ட குழந்தை திருதிருவென்று விழிக்கும். கதை: வதையும் குற்ற உணர்வும் தான் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்திருப்பதால்தான் தந்தை வதைக்கிறார் என்று தோன்றிப்போக, சிறு வயதிலேயே தாழ்மை உணர்ச்சிக்கு ஆளானாள் சியாமளா. காரணம் அவரது குடிபோதை என்று அப்போது புரியவில்லை. பிறரால் பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானபோது, தன்மேல்தான் ஏதோ தவறு என்று நினைத்தாள். பிறருடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தெரியாமல் போக, குற்ற உணர்வு மிகுந்தது. அவள் செய்த எந்தக் காரியத்திலும் ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவனை மணந்ததும், குழப்பம் எழுந்தது. இனம்புரியாத பயம். அவனுடன் தனிமையில் கழிப்பதைத் தவிர்த்தாள். மனைவியின் மன உளைச்சல் புரியாது, “நீ எட்டு மணிக்கே தூங்கப்போகிறாயே! அப்புறம் ‘ஏதாவது’ நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!” என்று கணவன் மிரட்டுவானாம். எனக்கு சியாமளாவைச் சிறுவயதிலிருந்தே தெரியும். அவள் தன் மணவாழ்க்கையின் அவலத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதும், சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளால் அவளுடைய உணர்வுகள் இப்படி ஆட்டுவிக்கின்றன என்று விளக்கினேன். சிலவற்றை அவளே மறந்திருந்தாலும், அவற்றின் பாதிப்புகள் தங்கிவிட்டிருந்தன. குற்ற உணர்ச்சி தன்னைத்தானே தாழ்மையாக ஒருவர் நினைக்க வழிவகுக்கும். இப்படிப்பட்டவரைப் பிறர் மிரட்டுவார்கள், எதிர்ப்பே இல்லாததால். “எந்தவித வதையானாலும், உடனே எதிர்க்கவேண்டும். பொறுமையுடன் சகித்துக்கொண்டால், அதிகரிக்கும்,” என்று நான் தூபம் போட்டேன். அதற்கு உடனே பலன் கிடைத்தது. அடுத்த முறை, ‘ஏதாவது நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்ற வசனத்தையே கணவன் திரும்பச் சொல்ல, அதற்குமேலும் பொறுக்க முடியாது, “நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறீர்கள். தப்பித் தவறி, கால் உங்கள்மேல் பட்டால், அதற்கு வேறு திட்டு வாங்கவேண்டும்!” என்று படபடத்தாள் சியாமளா. நம்பமுடியாது அவளைப் பார்த்தான் அவன். “விளையாடுகிறாயா? அதற்கெல்லாமா திட்டுவார்கள்!” நிறைய அழுகை, சண்டை எல்லாம் தொடர்ந்தன. உள்ளுக்குள்ளேயே வைத்துப் புழுங்கினால் நிலைமை எப்படி மாறும்? ஒதுக்கிவிடு! என்றோ நடந்தது – அது எவருடைய தவறாக இருந்தாலும் – அதையே நினைத்து, மறுகிக்கொண்டிருந்தாற்போல் அது மாறிவிடப்போகிறதா? நிலைமை இன்னும் மோசமாக, ‘செய்யக்கூடாததைச் செய்துவிடுவோமோ!’ என்ற அச்சம்தான் அலைக்கழைக்கும். எதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வது? இவ்வாறு மகிழ்ச்சியை இழப்பதைவிட, ‘திரும்பவும் அதே தவற்றைச் செய்யமாட்டேன்!’ என்ற உறுதிபூண்டு, பழைய நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளவேண்டியதுதான். பிள்ளைகளின் கடமை? தம்பிக்கு மூளையில் குறைபாடு இருந்ததால் பெற்றோர் மனம் வாடுகிறார்கள் என்பது அருணாவுக்குச் சிறு வயதிலேயே புரிந்தது. ‘நான் மட்டும் புத்திசாலியாக இருக்கலாமா?’ என்ற குற்ற உணர்ச்சி எழ, பெற்றோருக்கு மிக மிக நல்ல மகளாக, எல்லா விதத்திலும் அவர்களுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் நடக்கத் தீர்மானித்தாள். அந்த சிறுபிள்ளைத்தனமான முடிவால், மன அழுத்தம் அதிகரித்தது. தன் இயலாமையை நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துகொண்டாள். அருணாவின் தாய், “என் மகள் எங்கள் மனம் சிறிதும் கோணாது நடப்பாள். இப்படி ஒரு மகளைப் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று என்னிடம் கூறினாள், பூரிப்புடன். எப்போதும் ஒரு சிறு தவறுகூடச் செய்யாது இருக்க யாரால்தான் முடியும்? “தம்பியின் குறையை ஈடு செய்வதற்காக, அரும்பாடுபட்டு முயல்கிறாள்,” என்று விளக்கினேன். “அவள் மிகுந்த பிரயாசைப்பட்டு நல்லவிதமாக நடந்துகொள்வது உங்களுக்காக!” “இது அவள் குற்றம் இல்லையே!” என்று தழுதழுத்தாள் தாய். “நான் கவனிக்கிறேன்”. “வெளிப்படையாகக் கேட்டுவிடு,” என்று அழுத்திக் கூறினேன். எதற்குத்தான் குற்ற உணர்ச்சி என்று பல பெண்களுக்குப் புரிவதில்லை. கதை இடைநிலைப் பள்ளியில் என் மகள் படித்தபோது, அவளுடைய வகுப்புத் தோழிகள், ‘படித்தால் பெரிய வேலை கிடைக்கும். உத்தியோகம் ஆண்களுக்கு அழகு என்றுதானே சொல்லிவைத்திருக்கிறார்கள்? நாம் அவர்களுடன் போட்டி போடலாமா? ஏதோ தப்பு செய்வதுபோல் இருக்கிறது,’ என்பார்களாம். “எங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இல்லையே! ஏன்?” என்று மகள் கேட்டாள். எங்கள் குடும்பத்தில், இப்போது சுமார் நூறு வயதாகி இருக்கக்கூடிய இரு பெண்மணிகள் பெரிய படிப்பு படித்து, அதற்கேற்ற உத்தியோகமும் வகித்திருந்தனர். அந்தக் காலத்தில் படித்து, வேலைக்குப் போய், சுயசம்பாத்தியம், அதனால் கிடைத்த சுதந்திரம் இதற்கெல்லாம் கிடைத்த அவதூறை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதற்குப்பின் வந்த என்னைப்போன்ற பெண்களுக்கு நல்லதொரு பாதை வகுத்திருந்தார்கள். சாவினால் குற்ற உணர்வா? நமக்கு நெருங்கிய ஒருவர் இறந்தால், முதலில் எழுவது குற்ற உணர்வு. ‘அவருடன் இன்னும் அதிக நேரத்தைக் கழித்திருக்கலாமோ!’ என்று நம்மையே வருத்திக்கொள்வோம். கதை மாமியார் இருந்தவரை, அவளுடைய அன்பு புரியவில்லை சங்கரிக்கு. அவள் மறைவுக்குப் பின்னர், ‘அம்மா,’ என்று யாராவது ஆரம்பித்தாலே, கண்களில் நீர்ப்பெருக்கெடுக்கும். நான் அதிசயப்பட்டு, விசாரித்தேன். “‘இன்னும் அன்பாக நடத்தியிருக்கலாமோ?’ என்று வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் நல்ல மனம் அப்போது புரியவில்லை!” என்று விம்மினாள். குற்ற உணர்வு குழப்பத்தை மட்டுமின்றி, ஏமாற்றத்தையும் அச்சத்தையும் விளைவிக்கிறது. தன்னம்பிக்கை குன்றிவிடுகிறது. நல்ல மனைவியாக இருப்பது எப்படி? இந்தக் கேள்விக்குப் பதிலை தமிழ் திரைப்படங்களிலிருந்து கற்காதீர்கள், பெண்களே! அது ஆண்களுக்குச் சாதகமாக இருக்கும். கணவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்து, ஏதோ கைக்குழந்தைபோல் அவனைப் பாவித்து நடத்தினால்தான் நல்ல மனைவியா? கொண்டவன் மனம் கோணக்கூடாது, அவன் என்ன சொன்னாலும் ஏற்றால்தான் பிறரது பாராட்டுக்கு உரியவர்களாகலாம் என்று நினைத்து, அதன்படி நடப்பார்கள் பலர். அப்படி இல்லாதவளை, “மோசமான மனைவி” என்று பிறர் கருதலாம். அவர்களை நம்பினால், குற்ற உணர்வுதான் மிகும். விடியற்காலையில் எழுந்து, சமையலறையில் உழன்று, அவன் அலுவலகத்திற்குப் புறப்படும்வரை, ‘தனக்கும் தேவைகள் இருக்கலாம்’ என்பதையே மறந்த நிலையில் இருக்கும் பெண், ‘நான் ஆதர்சமான மனைவி!’ என்று பெருமை கொள்ளலாம். ஆனால், ஓயாமல் உழைப்பதால் எழும் எரிச்சல், அவளையுமறியாது சிடுசிடுப்பாக மாறும். அவள் வெகுவாகக் களைத்திருக்கும்போது, அன்பு செலுத்துவதாக நினைத்து, கணவன் அவள் கையைப் பிடித்தால் அவளால் ரசிக்க முடியுமா? நான் நல்ல தாய் இல்லை உத்தியோகத்திற்குப் போகும் பெண்களில் சிலர் தாம் சிறுவயதில் அனுபவித்ததுபோல் தாயின் கவனிப்பு ஒவ்வொரு நிமிடமும் தம் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லையே என்று வருந்துவார்கள். அப்படிப்பட்ட இளம்தாய் ஒருத்தி, “என் மகளுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு நல்ல அம்மா இல்லை,” என்று, அழமாட்டாக்குறையாக என்னிடம் முறையிட்டாள். பெரிய உத்தியோகம் வகித்த அப்பெண் ஓய்வு தினங்களில் மகளுக்குப் பிடித்ததைச் சமைத்துப்போடுவாள். அன்புடன் அவளை நடத்துவாள். குழந்தைக்கு அந்த அன்பு புரிந்தது. “அம்மாவை ரொம்பப் பிடிக்கும்,” என்று தானே என்னிடம் கூறினாள். காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டியிருக்கிறது. இது புரிந்தால், மனைவியோ, தாயோ, தன்னையே வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. பெண்களுக்குள் இந்த குற்ற உணர்வை வலியப் புகுத்த முயல்கிறவர்களும் உண்டு. கதை “என் மகள், கணவர் இருவரும், ‘உனக்கு எங்கள்மேல் அக்கறையே கிடையாது. அதுதான் எங்களுடன் போதிய நேரத்தைக் கழிக்காது, வேலைக்குப் போகிறாய்,’ என்று தினமும் குற்றம் சாட்டுகிறார்கள்,” என்று வருத்தத்துடன் முறையிட்டாள் என் தோழி மாலினி. “வேலையை விட்டுவிடுகிறேன் என்று மிரட்டு!” “சொல்லிப்பார்த்தேனே! அதற்கும் இணங்கவில்லை!” போதிய அனுபவம் இல்லாத மகளுக்குத்தான் புரியவில்லை. தந்தையாவது, “அம்மாவும் சம்பாதிப்பதால்தான் நாம் தாராளமாகச் செலவு செய்ய முடிகிறது!” என்று புத்தி சொல்லி இருக்கவேண்டாமோ? மனைவியைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி வருத்துவதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அனுபவித்தால் புரியும் சிந்திப்பது நல்ல குணம்தான். அதற்காக, சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் நன்மை விளைந்துவிடுமா? புதிய அனுபவங்களை நாடப் பலருக்கும் பயம். ‘பிறர் என்ன சொல்வார்களோ!’ ‘எதற்காக புதிதாக எதையாவது செய்து, அதற்கான வேண்டாத விளைவுகளை அனுபவிக்கவேண்டும்? இப்போதே வாழ்க்கை சௌகரியமாகத்தானே இருக்கிறது!’ இப்படியெல்லாம் தமக்குத் தாமே தடை விதித்துக்கொண்டால், வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்? கனவிலேயே சிலர் சுகம் கண்டுவிடுகிறர்களே, ஏன்? கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிடுவோமோ என்ற பயம்தான் காரணம். அனுபவம் என்றால், நன்மைகளும் இருக்கும், வேண்டாதவைகளும் எதிர்ப்படும். நாம் எண்ணியதுபோல் நடக்காவிட்டால், அதை அனுபவம் என்று கொள்ளவேண்டியதுதான். சரியாகத் திட்டமிட்டு இருக்கமாட்டோம் என்று, அடுத்த முறை கவனமாகச் செயல்படலாமே! ஒரு காரியத்தைப் பலமுறை செய்தாலும், திருப்தி ஏற்படவில்லையா? அப்படியானால், ’இதில் நமக்குத் திறமை போதாது,” என்று தெளிந்து, வேறொரு காரியத்தில் ஈடுபட வேண்டியதுதான். தோல்விகளும், ஏமாற்றமும்தான் நல்ல அனுபவம். வெற்றி கிடைத்து, அதிலேயே மகிழ்ந்திருந்தால், ஒரே நிலையில்தான் இருக்க நேரிடும். முன்னேற இயலாது. புத்தகப் படிப்பால் அனுபவம்? சமையல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தாலும், அக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒருவரைக் கவனித்தாலும் போதுமா? அதன்படி தானும் செய்ய முயன்றால்தான் சுமாராகவாவது சமைக்க வரும். அனுபவமின்மையால், முதலில் சிறு சிறு விபத்துகள் நிகழும். கையில் சூடுபட்டுக்கொண்டு, கூரான கத்தியால் கீறிக்கொண்டு, மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டு, அதிகச் சூட்டில், போதிய நீர் இல்லாது பாத்திரத்தின் அடி பிடித்துக்கொண்டு – இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றால் மனம் தளராது தொடர்ந்தால், பல வருடங்களுக்குப்பின், பிறருக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு உயரமுடியும். குற்றம் கண்டுபிடிக்காதே! தற்காப்புக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒரு சிறுமியின் நடை ‘அழகை’க் கண்டு, சற்றே பெரிய அவள் தோழிகள் செய்த விமரிசனம்: ’ஆம்பளைமாதிரி நடக்குது!’ கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நடப்பது பெண்மைக்கு அழகில்லை என்று சிறுவயதிலேயே கண்டிக்கப்பட்டு, அதன்படி ஒயிலாக நடந்த பெருமை அவர்களுக்கு. கேலி செய்தால், அவள் நடை மாறிவிடுமா? ‘ஒவ்வொரு காலையும் இன்னொரு காலுக்கு முன்னால் வைத்து நட! பக்கவாட்டில் இல்லை!’ என்ற அறிவுரை வழங்கப்பட்டபோது, முயன்று, சிறிது நாட்களில் தானே மாறினாள். குழந்தைகளிடம் போதனை தாம் பெற்ற குழந்தைகளிடம், “தைரியமாக இரு!” என்று சொல்லி வளர்ப்பார்கள் பலரும். அப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? அச்சம் தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தைரியத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டுவதும் அவசியம். அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைத்த பாத்திரத்தைத் தொட ஆர்வம் காட்டுவார்கள் ஒரு வயதே ஆகிய குழந்தைகள். “சுடும்!” என்று எச்சரித்தால் புரியாது. ஏனெனில், அந்த வார்த்தை அவர்களுக்குப் பழக்கமில்லை. இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். சற்றே ஆறிய பாத்திரத்தின் வெளியே குழந்தையின் கையை வைப்பேன். பயத்தில் அதன் விழிகள் விரியும். “ஊ..!” என்று அதை விளக்குவேன். அடுத்த முறை, கத்தியைத் தொட முழலும்போது, “ஊ..!” என்று நான் எச்சரிக்கை விடுக்கையில், கை தானே பின்னால் போகும். நான் ஏதோ தைக்கும்போது, என் மகள் மிக அருகில் வந்து உட்கார்ந்து, எட்டிப்பார்த்தாள். குழந்தையை நகர்த்தி உட்கார வைத்தும் பயனில்லாது போயிற்று. மீண்டும், மீண்டும் அருகில் வந்தாள். நான் சற்று யோசித்து, அவள் விரலை என் கையால் பிடித்துக்கொண்டு, ஊசி முனையால் லேசாகச் சுரண்டினேன். “ஊ..!” என்றாள், பயத்தால் கண்கள் விரிய. தானே பின்னால் நகர்ந்தாள். இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் தாய், “இப்போ மட்டும் எப்படிப் புரிஞ்சுது?” என்று கேட்டாள். சைகையால் விளக்கினேன், பெருமையாக. அம்மா ஒரேயடியாக அதிர்ந்து, “ஒன்றரை வயசுக் குழந்தை கையைக் குத்தினியா? என்ன அம்மா நீ!” என்று வைதாள். “பின்னே எப்படிப் புரியவைக்கறது!” என்று அலுத்தேன். சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதானே பலனளிக்கும்! வயதானதால் அனுபவம் அதிகமா? காலத்தின் மாறுதல்களை மனதில் கொண்டுதான் அறிவுரை வழங்கவேண்டும். ‘எனக்கு உன்னைவிட வயது அதிகம். நான் சொல்வதைக் கேள்!’ வயதானால் மட்டும் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என்று அர்த்தமில்லை. அந்தந்த வயதில், துணிச்சலுடன் அவர்கள் எத்தனை புதிய காரியங்களில் இறங்கி வெற்றியோ, தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். அத்துடன், ‘நான் உன் வயதில்..,’ என்று ஆரம்பித்தாலும் குழந்தைகளின் மரியாதை கிட்டாது. குழந்தைகளுக்கு நாம் எத்தனைதான் அறிவுரை கூறினாலும், அதை அவர்களே அனுபவிப்பதுபோல் ஆகாது. கதை பதின்ம வயதான ரூபாவிற்கு அவள் தாய் புத்திமதி கூறினாள்: “உன்னைவிட இரண்டு வயது பெரிய பையன்களால் தொந்தரவு அவ்வளவாகக் கிடையாது. ஆனால், உன்னைவிட மிகப் பெரிய ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும்”. காரணத்தை மகள் கேட்டபோது, “விவரம் புரியாத பெண்களைப் பேசிப் பேசி மயக்குவது அவர்களுக்கு எளிது. உன் அழகை, புத்திசாலித்தனத்தை வானளாவப் புகழ்வார்கள். ‘உன் வயதுக்கு நீ எவ்வளவு அறிவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய்! உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை, இல்லையா?’ என்று பலவாறாகப் புகழ்ந்து, மனதைக் கலைப்பார்கள்”. ரூபாவிற்குச் சந்தேகம் எழுந்தது. “என் வயதுப் பையன்கள்?” “அவர்கள் ஆத்திரத்தில் தவறு செய்யலாம். ஆனால், முதலிலேயே யோசித்து வைத்திருக்கமாட்டார்கள்”. பல வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மகள், “வயதில் மூத்த ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று நீ கூறியிருக்கிறாய். ஆனால், அப்போது அது விளங்கவில்லை. இப்போது அனுபவித்துவிட்டேன்,” என்று தாயிடம் கூறினாள். அடுத்த முறை கவனமாக இருப்பாள். சொல்லிக்கொடுத்த வார்த்தை எத்தனை நாட்களுக்கு வரும்! புதிய அனுபவங்களைப் பெற பயணங்கள் மேற்கொண்டால் அனுபவங்கள் பெருகும். எதிர்பாராத, அல்லது பழக்கமில்லாதவை நடந்தால், அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் அனுபவம் பெருகுகிறது. கதை இருபது ஆண்டுகளுக்குமுன், கானடா நாட்டிலிருந்த விக்டோரியா தீவிற்குச் சென்றிருந்தேன். மலேசியாவில் சந்தித்த என் கானடா நாட்டுத் தோழி இசை, நாட்டியம் இரண்டிலும் வல்லவள். பொது இடங்களில் இருவரும் அவரவர் பாணியில் ஆட, உல்லாசமாக மூன்று வாரங்கள் கழிந்தன. திரும்பும் நாள் வந்தது. மூன்றுமணி ferry படகில் தீவைக் கடந்து, வான்கூவர் (Vancouver) சென்றதும், அங்கிருந்து, விமானப்பயணம் – நியூயார்க் செல்ல. என்னுடைய டிக்கட்டில் விமானம் புறப்படும் நேரம் 2.00 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் விடியற்காலை இரண்டு மணி என்றெண்ணி, நள்ளிரவில் விமானதளத்தை அடைந்தேன். “மத்தியானமே அந்த விமானம் போய்விட்டதே!” என்று கேட்டு, அதிர்ச்சிதான் ஏற்பட்டது. அடுத்த விமானம் மறுநாள் இரண்டு மணிக்குத்தான் என்று கேட்டதும், தண்டம் அழுது, புதிய டிக்கட் வாங்கிவிட்டு, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன். பெரிய சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு, காலம் கடத்த முடியாது. அதனால், முதல் வேலையாக, அதை பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தேன். நியூயார்க்கிலிருந்த என் மகளுக்குத் தகவல் கூறியதும், “நாளைக்கு அதே நேரமா? சரி,” என்றாள், எதுவுமே நடக்காததுபோல். என்னைவிட அவளுக்கு அனுபவங்கள் அதிகம். இரவு அங்கேயிருந்த பெஞ்சில் படுத்தேன். ஆனால், தூங்கப் பயம். கைப்பையில் கடப்பிதழ், பணம்! நான் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு! பொழுது விடிந்ததும், களைப்பைப் போக்க, நின்ற இடத்திலேயே யோகப்பயிற்சி செய்தேன். சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர், என் அருகில் வந்து, உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்! “மலேசியாவில், பகல் பன்னிரண்டுக்குப் பிறகு மத்தியானம் இரண்டு மணியை 14.00 என்றுதானே குறிப்பிடுவார்கள்! அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது,” என்றாள் மகள் அலட்சியமாக. என் தோழியை தொலைபேசியில் தொடர்புகொண்டதும், “எதிர்பாராதது நடந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற பதற்றமில்லாமல், பெட்டியை லக்கேஜில் வைத்தாயே! சமயோஜிதமாக நடந்ததற்கு உனக்கு 80% மதிப்பெண்கள் கொடுக்கிறேன்,” என்று பாராட்டினாள். அந்த அனுபவத்தால் இன்னொருமுறை ரயிலையோ, விமானத்தையோ தவற விடமாட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மிகாது. மறக்காவிட்டாலும், மன்னித்துவிடு! “எனக்கு அவளை/அவனைப் பிடிக்கவே பிடிக்காது!” “அந்த இனத்தைக் கண்டாலே எனக்கு வெறுப்பு!” ஏதோ ஒரு தருணத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் பலரும். கதை ஏதோ கட்டாயத்தின்பேரில், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவனை மணந்தாள் குமுதா. கணவனிடம் வெகுவாக வதைப்பட்டபின், அவனை விவாகரத்து செய்தாள். “ஈன ஜாதி இப்படித்தான் நடக்கும், நிர்மலா!” என்று குமைந்தாள், தான் மேல்சாதி என்ற பெருமையுடன். கணவன்மேல் கொண்ட ஆத்திரத்தில், அவனது துணிகளை எரித்து, அவன் நட்டுவைத்த மரத்தை எரித்து, என்று என்னென்னவோ செய்துபார்த்திருக்கிறாள். பழிக்குப் பழி என்று நடந்தால், அதற்கு ஏது முடிவு! பல வருடங்களுக்குப் பின்னரும் குமுதா தன் கணவனை மறக்கவுமில்லை, அவன்பால் கொண்ட வெறுப்பும் தணியவில்லை என்றவரை எனக்குப் புரிந்தது. ஆனால், என்னைவிடப் பெரியவளான அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நிறையக் கேள்விகள் கேட்டு, அவள் மனப்பாரத்தைச் சிறிதாவது இறக்கிவிட முயற்சி செய்தேன். ‘நம்மை ஏன் ஒருவர் அவ்வாறு வருத்தினார்?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. நாம் ஒருவரை எண்ணி ஆத்திரப்படுவதால், மன அமைதியை இழந்து, தன்னிரக்கத்துடன் வாடுவது நாமாகத்தான் இருக்கும். நம் வெறுப்புக்கு ஆளானவருக்கு என்னவோ, அது தெரியப்போவதில்லை. அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது. யாரை மறக்கவேண்டும் என்று எண்ணுகிறோமோ, அவரைப்பற்றி ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவரிடமிருந்து விலகமாட்டோம் – எத்தனை தொலைவில் இருந்தாலும். உணர்ச்சிபூர்வமாக தொடர்புகொண்டு, அவர் நம்மை வதைத்துக்கொண்டேதான் இருப்பார். ‘மெல்ல மெல்ல விஷம் அருந்துவதுபோல்’ என்று இப்போக்கைக் குறிப்பிடுகிறார்கள். ‘மறதிதான் மகிழ்ச்சிக்கு இன்றியமையாத மருந்து!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! இதைத் தடுத்து, நிம்மதியும், மகிழ்ச்சியுமான எதிர்காலத்திற்கு வழிசெய்ய ஒரே வழி: மன்னிப்பு! கதை இரவில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, அடிக்கடி வெளியில் போய்விடுவான் சாமா. ‘நண்பர்கள்’ என்று கணவன் குறிப்பிட்டது தன் காதலியைத்தான் என்றறிந்து, தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தன்மேலேயே வெறுப்பு எழுந்தது சாவித்திரிக்கு. கொதித்தெழுந்தாள். எதையும் மறைக்காது, உண்மையை ஒத்துக்கொண்டான் சாமா. வழக்கம்போல், சண்டை, அழுகை. “விவாகரத்து வேண்டாம். இனி உன்னை ஏமாற்றவே மாட்டேன்!” என்று கணவன் கெஞ்சியபோது, அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. “எப்படி அவன் உனக்குச் செய்த துரோகத்தைப் பொறுத்துக்கொள்கிறாய்!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்ட தோழியிடம், “நான் மட்டும் தப்பே செய்திருக்க மாட்டேனா! குழந்தைகளிடமும், என்னிடமும் அன்பாகத்தானே நடந்துகொள்கிறார்!” என்று பதிலளித்தாள் சாவித்திரி. “கடந்துபோனதை நான் நினைவுபடுத்துவதில்லை. அதற்காக, அதை மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை”. மன்னிக்கலாம். ஆனால், எதற்காக மறப்பது? ஒரு முறை அவதிப்பட்டால், அதன்பின் கவனமாக இருக்கவேண்டாமா? மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வருந்துவதோ, வதைப்படுவதோ என்ன புத்திசாலித்தனம்? மன்னித்தபின், பாதித்தவரிடம் கடந்தவைகளைப் பற்றி நினைவுபடுத்துவதும் வேண்டாத வேலை. ‘குப்பை!’ என்று ஒதுக்கவேண்டியதுதான். இல்லாவிட்டால், நிம்மதி பறிபோய்விடும். நீண்ட காலம் இணைந்து வாழும் தம்பதிகளின் ரகசியம் புரிந்ததா? பல முறை மன்னித்து, ஒருவரையொருவர் ஏற்றிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஒருவரே மன்னிப்பு கேட்பார் என்பதில்லை. விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கமுடியுமா? அவர்கள் சண்டையே போட்டிருக்க மாட்டார்களா, என்ன! அவர்களில் ஒருவர் சில நாட்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயிருக்கலாம். அதன் முடிவில், தம்பதியரில் ஒருவர், ‘ஸாரி,’ என்றுவிடுவார், யார்மேல் தவறு என்று அலசிப் பார்க்காது. இல்லையேல், சமாசாரத்தை அடியோடு மறந்துவிட்டதுபோல் நடந்துகொள்வார். மன்னிப்பு கேட்பதற்குக்கூட மனோபலம் வேண்டும். மன்னித்தபின் சக்தி கூடியதுபோல உணர முடியும். வெறுத்துக்கொண்டே இருந்தாலோ, அவர் நம்மீது செலுத்தும் ஆக்கிரமிப்பு குறையாதிருக்கும். யாரை மன்னிக்கவேண்டும்? தவறு என்று புரிந்தே, நமக்குக் கெடுதல் செய்தவர்களை. அவமதிப்பவர்களை. இப்படிச் செய்பவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம். அவர்களை மன்னிப்பது நாம் அவர்களுக்குச் செய்யும் நற்காரியமல்ல. நமக்கே செய்துகொள்வது. எத்தனை காலம்தான் கடந்தவைகளிலேயே நிலைத்து நின்று, வருந்துவது! அதனால் நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடாதா! பிறரை வருத்திக்கொண்டே இருப்பவர்கள் கதை அண்ணாசாமிக்கு யாரும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொடுக்கவில்லையோ என்பதுபோல்தான் நினைக்கத் தோன்றும், அவன் வாயைத் திறந்தால். எல்லாரிடமும் சண்டை. தான் செய்த தவறு பிறரால் வந்தது என்று விதண்டாவாதம் புரிவான். அவன் குணம் புரியாதவர்கள் தம்மிடம்தான் தவறு என்று முதலில் நினைப்பார்கள். பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையானதால், இளம்பிராயத்தில் அவனை யாரும் சரிவரக் கவனிக்காததாலோ, சிறு தவறு செய்தாலும், அதற்காகத் தண்டனை பெற்றதாலோ அவன் வயதுக்கேற்ற முதிர்ச்சி அடையவில்லை. அந்த வருத்தம் அவனையும் அறியாது, பிறரும் தன்னைப்போல் வருந்தி, குழம்பவேண்டும் என்பதுபோல் வெளிப்பட்டது. இது புரிந்து, அவன் மனைவி மக்கள் அவனை எதிர்த்து வாயாடாது, அடங்கிப்போனார்கள். எப்போதோ ஒருமுறை மன்னித்து, மறந்தால் போதாது; அதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொண்டால்தான் நிம்மதி கிடைக்கும் என்று புரிந்தவர்கள் அவனுடைய குடும்பத்தினர். அதனால், அவர்கள் பலகீனமானவர்கள் என்றாகாது. சுயநலக்காரர்கள் ஒரு பொருட்டல்ல இப்போதெல்லாம், பலரும் சுயநலமிகளாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களின் மனப்போக்கை அறிய அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை. ஒருவர் வெற்றி பெற்றால், அவரது நட்பைப் பெற பலர் விரும்புவார்கள். ஒரு முறை தோல்வியடைந்தாலும், விலகிவிடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்களா என்பது யோசிக்கவேண்டிய சமாசாரம். முன்பு நண்பர்களாக இருந்தவர்களும், வெற்றி பெற்றவரிடம் குறை கண்டுபிடிப்பார்கள். விலகுவார்கள். கதை சிறந்த அறிவாளியும், உழைப்பாளியுமான ரகுவிற்கு உத்தியோகத்தில் பெரிய பதவி அளிக்கப்பட்டது. அவன் கல்வித்திறனுக்குக் கூடுதலான அந்த உயர்வு பழைய நண்பர்களின் பொறாமையைத் தூண்டப் போதுமாக இருந்தது. “நீ படித்த படிப்புக்கு..! எந்த அதிகாரியை, எப்படியெல்லாம் காக்காய் பிடித்தாயோ!” என்று பலவாறாகக் கேலி செய்தனர். அவனுடன் முன்போல் பேசப் பிடிக்காது ஒதுங்கினர். நண்பர்களின் பராமுகத்தால் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்பட்டாலும், அப்படிப்பட்டவர்களின் ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்யப் பழகிக்கொண்டான் ரகு. ‘இவர்களுக்கெல்லாம் பயந்து, வெற்றி பெறத் தயங்கலாமா?’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டதில், முன்பு அவனுடைய மேலதிகாரியாக இருந்தவரைவிட அதிகமான பரிசுகளும் விருதுகளும் பெற்றான். ‘இதுதான் உலகம்!’ என்ற விரக்தி ஏற்பட்டு, அதிலேயே உழன்றிருந்தால், வாழ்வில் முன்னேற முடியாது என்று தெளிவுபெற்றான். முக்கியமான வேறுபாடு! பிறர் தமக்குச் செய்த தீங்கை ஆண்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால், மன்னிக்கமாட்டார்கள். பெண்களோ, மன்னித்துவிடுவார்கள். ஆனால், மறக்கமாட்டார்கள்! எப்போதோ நடந்ததைக் கிளறும் குணம் பெண்களுக்குத்தான். சும்மாவா, பெண்களை கணினிக்கு ஒப்பிடுகிறார்கள்! கஷ்டப்படு, வலிமை பெருகும் “கொடுத்துவைத்தவன்! பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை! கேட்டதெல்லாம் கிடைக்கிறது!” இவ்வாறு பிறரது பொறாமைக்கு ஆளாகும் ஒருவன் எந்தவித கஷ்டத்தையோ, துயரத்தையோ அனுபவித்திருக்கமாட்டான். அவன் அதிர்ஷ்டசாலிதானா? இல்லை. வாழ்வில் இடர்களைச் சந்தித்து, அவைகளிலிருந்து விடுபடும் முயற்சிகளால்தான் ஒருவன் வலிமை பெறுகிறான். மாணவர்களிடமிருந்து நான் கேட்டறிந்த கதை காவல்துறையில் பெரிய பதவி வகித்திருந்தவரின் மகன் என் மாணவன் ரசாலி. அதனாலேயே, அவன் வயதுப் பையன்கள் செய்ய அஞ்சிய காரியங்களைத் துணிந்து செய்தான். பதினான்கு வயதில், தான் எவ்வாறு நீலப்பட வீடியோக்களைக் கடையிலிருந்து வாங்குகிறோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்தபோது, எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது கேட்டுக்கொண்டேன். தன் வகுப்பு நண்பர்களிடமிருந்து காசு வசூலித்து, யார் வீட்டிலேயாவது அவற்றைப் போட்டுக்காட்டுவான். (உடன் வரும் பெண்களுக்கு இலவசம்). அச்சமயத்தில் அவர்கள் ’glue sniffing” என்ற முறையில் போதை அடைந்திருப்பார்களாம். “அப்படியென்றால் என்ன?” என்று நான் அசட்டுத்தனமாகக் கேட்க, ஆசிரியைக்கே போதிக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியுடன், என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, போட்டி போட்டுக்கொண்டு விளக்கினார்கள் பல மாணவர்கள். அந்த வகுப்பின் மாணவத் தலைவன் ஒருவன் மட்டும் தங்களிடமிருந்து விலகியிருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவனை அழைத்து விசாரிக்க, “பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன இப்படங்கள்! எனக்குப் பிடிக்கவில்லை,” என்றான். போதை மற்றும் படங்கள் அளித்த பாதிப்பால், கைரி என்ற பையன் தன்னுடன் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தான். ‘வேடிக்கை,’ என்றெண்ணி, அவனது நண்பர்கள் அவளது திமிறலை அடக்கி, உடலுறவுக்கு உள்ளாக்கினார்கள். அவள் கருவுற்றதும்தான் பெற்றோருக்குத் தெரிந்தது. போலீஸ் விவகாரமாகி, பள்ளிக்கூடத்தில் பலரும் வேடிக்கை பார்க்க, கைரியை விலங்கிட்டு அழைத்துப்போனார்கள். ரசாலியோ, “என் தந்தை எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்ன பயம்!” என்று திமிராக என்னிடம் கூறினான். மனம்போனபடி நடக்கலாம், தான் மாட்டிக்கொள்ளாமல் எவராவது பார்த்துக்கொள்வார் என்று, ரசாலியைப்போல் நடப்பவர்களுக்கு மனோபலம் கிடையாது. எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும்! நான் இச்சம்பவத்தைச் சிறுகதையாக ஒரு பத்திரிகையில் எழுதினேன். ஓராண்டுக்குப்பின், வேற்றூரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். “என் நண்பனும் அந்த வயசிலே இதே காரியம் செய்து, சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இப்போ, நல்லாயிருக்கான். சொந்தமா மினிமார்க்கெட் வெச்சிருக்கான்!” என்று கூறினார். “அவன் நல்லாயிருக்கான்,” என்று, அழுத்தமாகப் பலமுறை கூறினார். ‘இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளலாமா?’ என்று நீண்ட காலம் யோசித்துவிட்டு, என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்! ‘நண்பன் செய்தான்’ என்று, தான் செய்ததை வேறு ஒருவரின் தலையில் கட்டப்பார்க்கிறாரோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. யாராக இருந்தால் என்ன! தவறு செய்து தண்டனை அனுபவித்ததால், நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கிறது. இனியும் தவறு செய்யக்கூடாது, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது அவருக்கு. இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை ஒத்துக்கொள்ளும் துணிவும், கடின உழைப்பும் இருக்கும். பழக்கமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அவற்றில் தேர்ந்த பிறரது ஆலோசனையை நாடலாம். அதனால் வலிமை குன்றிவிடாது. எவருக்கும் தனக்குள் இருக்கும் திறமை தெரிவதில்லை. எதையாவது இழந்தபின்னரோ, அல்லது ஏமாற்றம் ஏற்பட்டாலோ, ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் வெளிப்படும். மாறவே மாட்டோம்! “என்ன, இப்படி மாறிவிட்டீங்களே!” என்று பிறரைப் பார்த்து அதிசயப்படுகிறவர், ‘நாங்க மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுவார். மாற அஞ்சி, ஒரே நிலையில் இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? புதிய அனுபவங்களை நாடினால், ‘பிறரது கேலிக்கோ, ஏச்சுப்பேச்சுக்கோ ஆளாகிவிடுவோமோ!’ என்ற அச்சமே பலரை ஒரே நிலையில் இருக்கச்செய்கிறது. அதிகம் யோசிக்காது, பிறரது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுவர். மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர். ஆனாலும், தலைமைப் பதவியை நாடுபவர். இந்த உண்மை புரிந்து, இத்தகையவர்களை அலட்சியம் செய்தால், முன்னேறலாம். கதை தான் மணக்கப்போகிறவர் எப்படி எப்படியோ இருக்கவேண்டும் என்று, (எல்லாப் பெண்களையும்போல்) கனவு கண்டிருந்தாள் சுகன்யா. இறுதியில், அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருவன் வாய்க்க, ‘நினைத்ததெல்லாம் நடக்குமா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். அந்த அனுபவத்தால், ஒரு கணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று புரிந்தது. பிற இளம்பெண்களுக்கு ஆலோசனை கூறினாள். அவர்களில் எத்தனைபேருக்கு அது புரிந்ததோ! ஊருக்கு உபதேசம் பிறருக்கு அறிவுரை கூறினால், தம் வலிமை பெருகுகிறதென்று பலரும் நம்பி நடக்கிறார்கள். என் சக ஆசிரியை மூன்றாவது முறையாகக் கருவுற்றிருந்தபோது, அவள் உடலில் ஏதோ பாதிப்பு. சும்மா விடுவார்களா பிற பெண்கள்? அவரவருக்குத் தோன்றியபடி அறிவுரை கூற ஆரம்பித்தார்கள். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். “ஏதாவது சொல்லுங்களேன்!” என்று என்னை ஒருத்தி வற்புறுத்த, “நான் டாக்டரில்லை. கர்ப்பம் தரித்தவளின் உடலுடன் விளையாடக்கூடாது!” என்றேன் கடுமையாக. காற்று போன பலூனைப்போல அவர்கள் சுருங்கிப்போய், கலைந்தார்கள். யாருடன் பழகுவது? சிலர் அயல்நாட்டிற்குப் போய் தங்க நேரிட்டாலும், தம் நாட்டவர்களுடன்தாம் பழகுவார்கள். இவ்வாறு செய்வதில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாலும், புதிய அனுபவங்கள் கிடைக்குமா? பிறருடன் பழக நேரிடும்போது, நாம் கேலிக்கு உள்ளாகலாம். அது புரிந்தால், பெரிதாக பாதிப்பு அடையமாட்டோம். நான் புலால் உண்ணமாட்டேன் என்று சொல்லக்கேட்டு, “அப்படிக்கூட உயிர் வாழ முடியுமா?” என்றாள் ஒருத்தி, கேலியாக. அவள் உணவில் மாட்டிறைச்சி உண்டு. “என்னைப் பார்த்தால், சாகப்போகிறவள் மாதிரியா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டு, அவள் வாயை அடைத்தேன். பிழைகளை எப்படித் தவிர்க்கலாம்? பள்ளிப் பரீட்சை முடிந்து, வினாத்தாளை மாணவிகளுக்குக் கொடுத்தபின், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையை கரும்பலகையில் எழுதுவார்கள் சில ஆசிரியைகள். தாம் எங்கு தவறு செய்தோம் என்று சிலருக்குப் புரியும். அடுத்தமுறை, கவனமாக இருப்பார்கள். ஆனால், எல்லாரும் இவ்வகையில் கற்பார்கள் என்பதில்லை. வாழ்க்கையிலும் இப்படித்தான். தவறு செய்பவர்களுக்கெல்லாம் அனுபவம் கிடைக்கும் என்பதில்லை. செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வதில்லையா! சுயதணிக்கை ஏன்? எழுத்தாளர்களாக விரும்புகிறவர்களுக்கு என்ன எழுதலாம், எத்தனை நீளம் எழுதலாம், இப்படியெல்லாம் எழுதினால் பெயர் கெடுமோ என்றெல்லாம் ஐயம் பிறக்கும். தவறு செய்யப் பயந்து, யோசித்தபடியே இருப்பதால், எழுதவே மாட்டார்கள். என் அனுபவம்: தோன்றுவதையெல்லாம், சுயதணிக்கை செய்துகொள்ளாது, எழுதவேண்டும். எழுதி முடித்ததும், அதை அப்படியே வைத்துவிட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு, ஒரு வாரம் கழிந்தபின்னர் அந்த எழுத்துப்படிவத்தைப் படித்துப்பார்த்தால், சம்பந்தம் இல்லாதவை, வேண்டாதவை என்று சில தட்டுப்படும். ‘கஷ்டப்பட்டு எழுதினேனே!’ என்ற தன்னிரக்கத்திற்கு இடங்கொடாது, அவற்றை வெட்டிவிட வேண்டியதுதான். “முக்கியமான எதுவுமே சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை” என்கிறார் அயர்லாந்து நாட்டவரும், பிரபல நாடகாசிரியருமான ஆஸ்கர் ஒயில்ட். வாழ்வில் சிறக்க, நாமே கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். யாரும் சொல்லிக்கொடுக்கப் போவதில்லை. எதிர்நீச்சல் போடு! ஆசிய எழுத்தாளர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் என் பெயரும் இருந்தது. ‘அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபது எழுத்தாளர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை’ என்று நீதிபதிகள் எதைக் குறிப்பிட்டிருந்தார்கள், தெரியுமா? அவர்கள் அனைவரும் இரு நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். புதிய நாட்டின் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றில் பற்பல வித்தியாசங்களைக் கண்டு, தான் எவ்விதத்திலோ தாழ்ந்துவிட்டோம் என்று அஞ்சி, சுருங்கிவிடாது, தைரியமாக எதிர்நீச்சல் போட்ட அனுபவம் பிறவற்றிலும் கைகொடுத்திருக்கவேண்டும். தவறுகள் பலவிதம் எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம். ஒருசிலருக்குத்தான் அவற்றிலிருந்து கற்கும் துணிச்சல் உண்டு. பிறரோ, தவறு செய்வது தம் தோல்வியைக் குறிக்கும் என்று நாணுவார்கள். அதனாலேயே வெற்றி அவர்களைவிட்டு விலகிப் போய்விடும். கதை ஆங்கிலத்தில் சிறுகதைப்போட்டி ஒன்று நடந்தது. “நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டாள் என் சக ஆசிரியை. (அதற்குமுன், அதேபோன்ற வேறொரு போட்டியில் நான் பரிசு வாங்கி, எல்லா மொழி பத்திரிகைகளிலும் என் பெயர் வெளியானது என் அந்தஸ்தை உயர்த்தியிருந்தது). என் பதில் அலட்சியமாக வந்தது: “கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை”. பக்கத்தில் அமர்ந்திருந்தவள் விழிகள் விரிய, சற்று அதிர்ச்சி அடைந்தாற்போல் இருந்தது, ‘இதையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா!’ என்பதுபோல். வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் அமைதி நிலைக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும். தவறு செய்யலாமா? பள்ளியில் படிக்கையில், தவறான விடைக்கு, ‘பிழைதிருத்தம்’ என்று மூன்று முறை சரியான பதிலை எழுத வைப்பார்கள். அதிலும் தவறா? ஐந்து முறை! செய்த தப்பையே திரும்பத் திரும்பச் செய்வது அறிவீனம் என்று மறைமுகமாக உணர்த்தும் வழி இது. தவறே செய்யாமல் இருக்கத்தான் யாரால் முடியும்? தவறு செய்ய அஞ்சுவதுதான் தவறு. நமக்கு எல்லாமே தெரிந்திருந்தால், அதன்பின், கற்க என்ன இருக்கிறது! கதை நான்கு வயதுச் சிறுவனான குகனுக்குத் தாய் பாடம் சொல்லிக்கொடுக்க, அவன் பென்சிலால் எழுத ஆரம்பித்தான். “இது இப்படி இருக்கவேண்டும். ரப்பரால் அழித்துவிட்டுத் திரும்பவும் எழுது!” என்று அம்மா சொல்ல, அழ ஆரம்பித்தான். தான் ஒரு தப்பு செய்வதா! ‘புத்திசாலி!’ என்று குடும்பத்தில் எல்லாரும் புகழ்ந்ததைக் கேட்டு வளர்ந்த பிள்ளை ஆயிற்றே! அறியாமையால் பிழை செய்ய நேர்ந்தால், அதற்காக வருத்தமோ, வெட்கமோ அநாவசியம் என்று புரிந்தவள் அத்தாய். ஆகவே, மகன் ஏற்கும் விதத்தில் கூறினாள்: “பென்சிலையும் ரப்பரையும் காசு கொடுத்து, கடையில்தானே வாங்குகிறோம்? அந்தக் கடைக்காரர் அப்பாமாதிரி ஆபீஸ் போகமாட்டார். நாம்ப வாங்கினாதான் அவருக்குக் காசு கிடைக்கும். அவருடைய குழந்தைகள் சாப்பிட முடியும்”. அவனைப்போன்ற குழந்தைகளின் நலனுக்காக என்று அவள் ஒப்பிட்டது குகனுக்குப் புரிந்தது. அதன்பின்னரும் தப்புத் தப்பாக எழுதி, அழிக்க நேர்ந்தது. அதற்காக அவன் வருந்தவில்லை. கவனமாக இருக்கப் பழகிக்கொண்டான். வளர்ந்தபின்னர், நல்ல காரியங்களில் சிறக்க இக்குணம் உதவியது. எப்போதாவது தவறு செய்தாலும், அளவுக்கு அதிகமாக அவன் வருந்தவோ, வெட்கவோ இல்லை. உடனுக்குடன் திருத்திக்கொண்டான். இக்குணத்தால் வாழ்க்கையில் உபயோகமானவற்றை அவனிடமிருந்து பிறர் கற்க முடிந்தது. தவறு செய்வது மனிதனின் இயற்கை! இந்தத் தாரக மந்திரத்தை சிலர் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் கணக்குப் பரீட்சையில் நிறைய பிழைகள் செய்துவிட்டு, “அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!” என்று, மிதப்புடன் தோள்களைக் குலுக்கிக்கொள்வார்கள் என் மாணவிகளில் சிலர். ஒவ்வொரு முறையும் செய்த தப்பையே செய்துகொண்டிருந்தால், அது கவனக்குறைவு, அலட்சியம். இப்படிச் செய்தால் என்ன? செய்வது ‘தவறு’ என்று தெரிந்தே செய்பவர்கள் பலர். ‘கலிகாலம்!’ என்றோ, அவர்களால் நமக்கும் ஏதோ ஆதாயம் கிடைக்கிறதே என்றோ, பிறர் ஏற்றாலும், விளைவு வினையாகத்தான் முடியும். கதை (அண்மையில் படித்தது) லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த இளைஞன் அவன். சிங்கப்பூரில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் காமெரா வைத்து, இளம்பெண்களைப் படமெடுத்தான். ஓரிரு முறை அப்படிச் செய்தும், மாட்டிக்கொள்ளாது போனதில் துணிச்சல் அதிகரித்தது. ஏழாவது முறை பிடிபட, குற்றத்தை ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம். சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வது அறிவீனம் – அது எவ்வளவுதான் கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தாலும். அறிவாளியான அவன் இதை ஏனோ உணராமல் போனான்! புத்தி தீய வழியில் போனதால், அவனுடைய கல்வி, எதிர்காலம் இரண்டுமே பாழ். பழிக்குப் பழி! வீம்புடன், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தமது வாழ்க்கையுடன், பிறருடையதையும் வீணாக்கிவிடுவார்கள். கதை இளம் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை மாதுவால். தன்னைப்போலவே அவளும் நோகவேண்டும், அதுதான் அவளுக்குப் பாடம் கற்பிக்கும் வழி என்று கருதி, அவளுக்குத் தெரிந்தே பிற பெண்களுடன் உறவுபூண்டான். எத்தனை வயதாகியும், அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை. மனைவிபோல் இல்லாத, உலகம் தெரியாத பெண்களை மயக்குவதைக் கலையாகக் கற்றான். அந்த நடத்தையால் சமூகத்தில் அவனுக்கு இருந்த மதிப்பு அறவே குலைந்தது. உறவினர்கள் அவனைத் தவிர்த்தார்கள். தன் தீய நடத்தைக்கு ஒரு காரணம் கற்பித்தான்: ‘எனக்கு மனைவி சரியில்லை!’ ஒரு பிழையை இன்னொன்றால் சரிசெய்ய முடியுமா? தெரியாமல் பிழை தெரியாமல் செய்த தவற்றுக்காக, தன்னையே வருத்திக்கொள்வதால் என்ன பயன்? கதை அந்த வீட்டுக்கூரைமேல் இருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது ஒரு குருவிக்குஞ்சு. அதை மிதித்துவிட்ட சிறுமி லதா, தன் அஜாக்கிரதையால் ஓர் உயிர் போய்விட்டதே என்று அழ ஆரம்பித்தாள். ‘நடந்தது உன் தப்பு இல்லை,’ என்று தாய் எத்தனைதான் சமாதானப்படுத்தியும், அவள் மனம் அடங்கவில்லை. அதன்பின், இறந்த எந்த பிராணியைக் கண்டாலும், தான் செய்த ‘குற்றம்’ நினைவில் எழ, பயம், அழுகை. பெரியவளாகி, நன்கு படித்து, வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தபோதும், ‘தாய்க்குருவி என்னைச் சபித்துவிட்டது!’ என்பாள். என்றோ எழுந்த சோகமும், குற்ற உணர்வும் மறையவேயில்லை. அவற்றைப் போக்க என்னென்னவோ மருந்துகள்! தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றுக்காக நம்மையே தண்டித்துக்கொள்ளாது, மன்னிக்க வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி பறிபோய்விடும். ஆண்-பெண் உறவில் வெற்றி, தோல்வி கதை ஏழையாக இருந்தாலும், சந்திரன் அறிவாளி. பணக்காரர் ஒருவர் தன் மகளை அவனுக்கு மணமுடித்து, மேற்படிப்புக்கும் உதவினார். கணவனை விலைக்கு வாங்கிவிட்ட பெருமிதம் அவன் மனைவி தாராவிற்கு. பலர் முன்னிலையில் அவனை அவமதிப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள். ‘மாறுவாள்,’ என்ற நம்பிக்கையுடன், முதலில் பொறுத்துப்போன சந்திரன் சில வருடங்கள் கழிந்ததும் அவளை விவாகரத்து செய்தான். அழகிலும், பொருளாதாரத்திலும் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருந்த பெண்ணை மணந்தது தான் செய்த தவறு என்று தோன்றிப்போக, தாராவைப்போல் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தான். “குண்டாக இருக்கிறாளே!” என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டு, முகத்தைச் சுளித்தார்கள். சந்திரன் சிரித்துக்கொண்டான். தான் தேடி, மணந்த பெண் குண்டுதான். ஆனால், அன்பானவள். எல்லாவிதத்திலும் அவனுக்குப் பக்கபலமாக இருந்தாள். பெண்கள் காதல் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. கதை முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருந்தாள் என் சக ஆசிரியை வித்யா. ‘இவ்வளவு அழகான பெண்ணை ஆண்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள்!’ என்ற ஆச்சரியம் எனக்குள் எழ, அவளிடமே கேட்டேன். “ஆண்களை நம்பவே பயமாக இருக்கிறது,” என்றாள் வித்யா. ஒருவனைக் காதலித்து, அவன் ஏமாற்றிவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தாள், தான்தான் குற்றம் புரிந்ததுபோல். “அவனைப்போல் பகட்டாகவோ, கலகலப்பாக இல்லாது, அமைதியாக, ஆழமாக இருக்கும் ஒருவர் உனக்கு வாய்ப்பார். அந்த வாழ்க்கையிலேயே நிறைவு கிடைத்துவிடும், பார்!” என்றேன், ஆறுதலாக. தவறு செய்தால் என்ன? அதையே திரும்பத் திரும்பச் செய்யாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்! யார் விவேகி? “எனக்கு நிறைய நண்பர்கள்!” என்று சிலர் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கக் கூறுவார்கள். ‘நண்பர்கள்’ என்று நாம் நினைப்பவர்களில் எத்தனைபேருக்கு நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது? ஒன்றாக வாழும் தம்பதியருக்கே அத்தகைய புரிந்துணர்வு பெற இருபது ஆண்டுகள்கூடப் பிடிக்கலாம். ஏனெனில், தான் நினைப்பதுபோல் மற்றொருவரும் நினைக்கவேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்யவேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ என்பது கைகூடாத ஆசையாக முடிந்துவிடும். பாட்டில் கேட்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? ஒரே குடும்பத்தினர் ஆனாலும், சகோதர சகோதரியர்கூட குணத்தால், அனுபவத்தால் ஒன்றுபட்டிருப்பார்களா? கதை மூத்த மகளை அவளுடைய தாய் ஓயாமல் திட்டுவாள். தந்தை அவளிடம் பாசமாக இருந்தது அவள் பொறாமையைத் தூண்டிவிட்டதோ, இல்லை, எல்லாவற்றிற்கும் மகள் தன்னை நாடவில்லையே என்ற ஆற்றாமையோ! தாயின் வசவுக்குப் பயந்த இளையவள் சாரதாவோ, அம்மாவின் நிழலாக நடந்தாள். தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள். பெரியவளாகப் போனதும், தன்னைச் சுந்திரமாக நடக்கவிடாமல் செய்துவிட்ட தாயின்மேல் வெறுப்பு எழுந்தது. தாய் இறந்தபின், அக்காளைப் பார்த்து சாரதாவுக்கு ஆச்சரியம். “நீ எப்படி அம்மாமேல் ஆத்திரப்படாமல் இருக்கிறாய்? நீ திட்டு வாங்கும்போதெல்லாம், மாற்றாந்தாய் குழந்தையோ என்றுகூட நினைப்பேன்!” “அப்பா நிறைய செல்லம் கொடுத்தார். அம்மாவும் அப்படி இருந்திருந்தால், நான் கெட்டுப்போயிருப்பேனோ, என்னவோ! இப்போது, யார் என்னைத் திட்டினாலும், அவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று என் யோசனை போகிறது”. ஒரே அனுபவம்தான். ஆனால், சகோதரியர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது. பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஆராய்வதுதான் விவேகம். அப்போதுதான் நாமும் அதேபோல் நடந்து, அவர்களைத் துன்புறுத்தமாட்டோம். அவர்கள் நம்மிடம் காட்டாத பொறுமையையும் மென்மையையும் பதிலாக அளிக்கமுடியும். எச்சரிக்கை: கணவன்மாரிடம் வதைபடும் பெண்கள் பொறுமையாக நடந்தால், வதை அதிகரிக்கும். சிறுவயதில் ஒருவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனைவியையும் அதேபோல் பாடுபடுத்த வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. இருந்தாலும், தவறுதான். ஒரு பெண் எவ்வளவுதான் உறுதுணையாக இருந்தாலும், அவள் உதவியை நாடும் சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பது வீண். கதை கணவரிடம் உடல்ரீதியாக வதைபட்ட பெண்கள் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட இல்லம் அது. கோலாலம்பூரில் உள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை, அவரவர் மத வழிபாடு எல்லா வசதிகளும் உண்டு. கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு வந்தவர்கள் சிலர் மீண்டும் கணவருடன் போய்விடுவார்கள். “அழுவறாருங்க. பாவமா இருக்கு!” இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்ட பெண்மணி என்னிடம் கூறியது. அவள் பக்கத்தில் இருந்தவள் லேசாகச் சிரித்தபடி, முட்டியை இறுக்கி, அவள் முகத்தில் குத்துவதுபோல் பாவனை செய்தாள். இவ்வாறு, மூன்று முறை தம் வீட்டுக்கே சென்றுவிட்டபின், திரும்பவும் பாதுகாப்பான அந்த இல்லத்திற்கு வர அனுமதி கிடையாது. பெண்களுக்கு இரக்க சுபாவம் இருக்கலாம். ஆனால், சற்று விவேகம் வேண்டாமா? நான்தான் விவேகமானவன் என்னைப்போல் இல்லாதவர்கள் முட்டாள்கள்! கதை ஒரு விமரிசகர் இசைத்துறையில் முன்னணியில் இருந்த பாடகியை விமரினம் செய்தார்: ’தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு, அதிலிருந்து சற்றும் விலகமாட்டார்!” என்று, அது ஒரு பெரிய குறைபாடு என்பதுபோல் எழுதியிருந்தார். பாடகியின் முழுத்திறனையும் புரிந்துகொள்ளும் இசைஞானம் அவருக்கு இருக்கவில்லை. குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிறரைக் குறைகூறினார். இன்னொருவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதால் தான் மிகப் புத்திசாலி என்று நினைப்பவர்கள் பிறரிடமிருந்து விலகிவிடுகிறார்கள். இவர்களது குணம் புரிந்து, ’திருத்தி’க்கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் விவேகம். “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு. தன்னையே புரிந்துகொள்வது விவேகம்” (சீனத் தத்துவஞானி, லாவோஜி, LAOZI). எனக்குப் புரிகிறது இந்த இரு வார்த்தைகளுக்கும் நல்ல சக்தி உண்டு. ஒருவர் நம்மைத் தாக்கும்போது, “உங்கள் உணர்ச்சி எனக்குப் புரிகிறது,” என்று சொல்லிவைத்தால், அவர் அடங்கிவிடுவார். உண்மையில் அது நமக்குப் புரிகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். உற்றவரை இழந்து தவிப்பவர்களிடம் ஆறுதலாக எல்லாரும் சொல்வார்கள்: “உங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது”. இந்தப் போலித்தன்மையால் துக்கப்பட்டிருப்பவர்களின் மனதை ஆற்ற இயலுமா? ஒருவர் தானே அனுபவித்தால்தான் துன்பமோ, துயரமோ புரியும். பிறரும் அதே நிலையில் இருக்கும்போது, உண்மையாக ஆறுதல் கூறமுடியும். “இறைவன் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பது நாம் பிறரது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்குத்தான்!” (மகாத்மா காந்தி). இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு. ஒரு கவுன்சிலர் பிறரது மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொண்டு, அவர்கள் மனம்விட்டுச் சொல்வதை உள்ளபடி புரிந்துகொள்கிறார். அதாவது, அவரது எதிர்பார்ப்போ, பின்னணியோ குறுக்கிடுவதில்லை. அவருக்கு அதே அனுபவம் கிடைத்திருக்காவிட்டாலும், பிறருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெகு சிலரால்தான் இப்படி நடக்கமுடியும். அவரிடம் தம் குறைகளைச் சொல்ல வருகிறவர்கள் அவரது புரிந்துணர்வால் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். ‘காதல்’ என்று அதை எண்ணிவிடுவார்கள்! அறிவான பிராணிகள் பேசத் தெரியாவிட்டாலும், தன்னை வளர்ப்பவர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்கின்றன இல்லத்தில் வளையவரும் பிராணிகள். எங்கள் வீட்டுப் பூனை, நாள் முழுவதும், என் காலைத் தடுக்காத குறையாக என்கூடவே நடக்கும். சிறு வயதிலேயே தாயிடமிருந்து பிரிந்துவிட்டதால், நான்தான் அதன் அம்மா. ஒரு காலைப்பொழுதில், “குறுக்கே, குறுக்கே நடக்காதே! தூக்கக்கலக்கத்தில் நான் விழுந்து வைக்கப்போறேன். ஒரு ஓரமா ஒக்காரு!” என்று கண்டித்தேன். உடனே புரிந்துகொண்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டது. எனக்கே பரிதாபமாகிவிட்டது. மறுநாள் சொல்லிவைத்தாற்போல், தானே அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டது, நான் அங்கும் இங்கும் நடக்க சௌகரியமாக. எத்தனை மனிதர்களுக்குப் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும் திறமை இருக்கிறது? அடுக்கடுக்காகக் கேள்வி கேட்பது சிலர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எதிராளியின் பதிலைக் காதில் வாங்கிக்கொள்ளுமுன், அடுத்த கேள்வி வந்துவிடும். கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைத்திருப்பார்கள்! ஒருவர் கேட்கும் கேள்விகளாலேயே அவரது அறிவுகூர்மை வெளிப்பட்டுவிடும். எத்தகைய கேள்விகள் கேட்கிறோம், அதனால் யாருக்காவது பயன் இருக்கிறதா என்பது முக்கியம். நிதானம் தவறாதே! “உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது உறுதியானதும், என்ன செய்தீர்கள்?” என்று என் நெருங்கிய தோழி ஒரு கேள்வி கேட்டாள். “‘அவன் கண்களைத் தானம் கொடுத்துவிடலாமா?’ என்று என் கணவரைக் கேட்டேன்,” என்று நான் பதிலளித்ததும், “ஐயோ!” என்று அதிர்ந்தாள். எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது இருப்பவர்கள் பிறரது அச்சத்திற்கு – பாராட்டுக்கல்ல – ஆளாகிறார்கள். அதற்காக நிதானம் இழக்கலாமா? வெற்றி கிடைக்க ‘எனக்கு வெற்றி கிட்டுவதேயில்லை. யாரும் ஊக்குவிப்பதில்லை’. பலரின் புலம்பல் இது. வெற்றியும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்? பிறரது பாராட்டையோ, புகழையோ எதிர்பார்த்து ஒரு காரியம் செய்து அடையும் மகிழ்ச்சி நீடிக்காது. நாம் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதை நோக்கிப் பயணிப்போம், நம்மையும் அறியாமல். ஆனால், அது நம் திறமைக்குட்பட்டதாக, நியாயமான வழிகளில் இருக்கவேண்டும். கதை பதின்ம வயதினனான அவன் ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்தவன். மிகுந்த பிரயாசைக்குப்பிறகு நான் அவனைப் பேட்டி கண்டேன். சிரித்தபடி, இக்கருத்தை என்னிடம் வெளியிட்டான் மூன்று கொலைகள் புரிந்திருந்த அப்பையன்: “சாகப்போகிறோம் என்று புரிந்ததும், ஒருவர் கண்ணில் தோன்றும் பயம் இருக்கிறதே, அப்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது!” சொல்லும்போதே அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நான் அதிர்ந்தே போனேன். மகிழ்ச்சி தரும் காரியமெல்லாம் வெற்றி என்பதல்ல, தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று உணர்ந்தபின், அதிலிருந்து விலகும் விவேகம் அவனுக்கு இருந்தது. அவனுக்குள் இருந்த முரட்டுத்தனத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியிடக் கற்றான். பிறரைப் பயமுறுத்துகிறவர்கள் பயந்தவர்கள் என்று புரிந்தால், பலரும் அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை. மகிழ்ச்சியுடன் வளரவிடுங்கள்! அநேகமாக எல்லாருமே ஏதாவதொரு சமயம் குழந்தைகளை வளர்க்கிறோம். பெற்றோராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கோ, மூத்த குழந்தைகளுக்கோகூட இப்பொறுப்பு ஏற்படக்கூடும். ‘இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்ற பொதுவான நியதியோ, பாடமோ இதற்குக் கிடையாது. ஏனெனில், குழந்தைக்குக் குழந்தை வளர்ப்புமுறை மாறுபடும். கதை ஒரே வயது நிரம்பிய என் முதல் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது என் வழக்கம். ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த இளம்பெண், “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டுமே!” என்ற பீடிகையுடன், “நீங்கள் இல்லாதபோது, குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,” என்று தெரிவித்தாள். ‘இன்னொருவர் குடும்ப நிர்வாகத்தில் தலையிடலாமா?’ என்று தயங்கியிருப்பாள். நான் அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். எனக்கு ஒரே அதிர்ச்சி. எனக்குக் குழந்தைகளை வளர்த்த பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு குழந்தை சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தால், வளர்ப்புமுறை சரியெனக் கொள்ளலாம் என்றவரை தெரியும். “வீட்டு வேலை முன்னேபின்னே இருக்கலாம். ஆனால், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியவுடன், என் எதிர்பார்ப்பைக் கூறுவேன். யாருக்குமே அது புரிந்ததாகத் தெரியவில்லை. “நீங்க புத்தகத்திலே போட்டிருக்கிறமாதிரி வளர்க்கணும்னு சொல்றீங்க. அது எப்படி முடியும்? நல்லா அடிச்சு வளர்க்கணும்,” என்று என்னிடம் தப்பு கண்டுபிடித்தாள் ஒருத்தி! அவள் வளர்ந்த சூழ்நிலையில், விவரம் தெரியாத பெற்றோர் அப்படிச் செய்ததை, ‘நாங்க எல்லாம் வளர்ந்து ஆளாகலியா?’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், என்னால் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “நாங்க அடிக்கறதில்லே. நீயும் சும்மாச் சும்மா திட்டக்கூடாது,” என்றேன். என்னுடைய இந்த கண்டிப்பால், பணிப்பெண்களை அடிக்கடி மாற்றும்படி நேர்ந்தது. அதனால் எனக்கும் கெட்ட பெயர்! பெண்களின் பொறுப்பா? பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை சற்று அதிகம். அதனால், குழந்தை வளர்ப்பு அவர்களுடைய வேலை என்றாகிவிட்டது. வெளிவேலைக்குப் போகாத நாட்களில், அவர்கள்தாம் அதிக நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிட வேண்டியிருந்தது மற்றொரு காரணம். பொறுப்பிலிருந்து தப்பிக்கவோ, மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்துக்கொண்டோ, இன்றும் பல ஆண்கள் இந்தக் கடமையை அவளிடம் விட்டுவிடுகிறார்கள். தந்தை அதிகம் படித்தவராகவும், தாய் படிக்காதவளாக, காலத்துடன் ஒன்றிப்போகத் தெரியாதவளாகவும் இருந்தால்? கதை அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருந்தார் ரம்லான். அவர் மணக்கச் சரியானவள் என்று அவருடைய தாய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தாள். அவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இருக்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குப் பின்னர், “என் குழந்தைகள் ரொம்ப வீக்!” என்று அங்கலாய்ப்பார், என்னிடம். ரம்லான் செய்த தவறு, குழந்தைகளை வளர்ப்பதை முழுமையாக மனைவி அயினியிடம் ஒப்படைத்ததுதான். குழந்தைகள் விஷயத்தில் அவள் என்ன செய்தாலும், அதில் தான் தலையிட்டால், அவளை அவமரியாதையாக நடத்துவதுபோல் ஆகிவிடும் என்றெண்ணி நடந்திருக்கிறார். அவளோ, அதிகம் படிக்காத பட்டிக்காட்டுப் பெண். அன்புக்குப் பதில் அதிகாரம் செலுத்துவாள். “பண்டிகைக்கு என் மகளுக்கு பத்து உடைகள் தைத்தேன்!” என்று அயினி அலுத்துக்கொண்டபோது பிரமித்தேன். ஒன்றோ, இரண்டோதான் வாங்குவார்கள். எதற்காக அத்தனை? “என் மகள், ‘ஒனக்கு நான் ஒரே பொண்ணுதானேம்மா? இவ்வளவு கருமியா இருக்கியே!’ என்று சொல்லிச் சொல்லி வாங்கவைத்தாள்!” பதினைந்து வயது மகள் தாயை மரியாதை இல்லாது பேசியபோது அவளைக் கண்டிக்கத் தெரியவில்லை தாய்க்கு. ஒரு முறை, அயினி சில நாட்கள் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது. மூத்த மகனிடம், “தங்கை, தம்பிகள் வீட்டுப்பாடம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள். தெரியாவிட்டால், சொல்லிக்கொடு,” என்று சொல்லிவிட்டுப் போனாளாம். திரும்பி வந்தபோது, அவள் கூறியது எதையுமே செய்திருக்கவில்லை அவன். “எல்லாரும் கூட்டு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்!” என்று என்னிடம் பிரலாபித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள் அயினி. சிறிது காலமாவது, அம்மாவின் கண்டிப்பும் அதிகாரமும் இல்லாமல் இருக்கலாமே என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டிருக்கிறான் அண்ணன். நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “விடு! எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று சொல்லிவைத்தேன். ஒத்த மனம் தாய், தந்தை இருவரும் வளர்ப்புமுறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம். எந்தக் குழந்தை புத்திசாலி? இப்போதெல்லாம், சினிமாத்தனமாக, வயதுக்குமீறி பேசும் குழந்தைகளை ’smart” என்று கொண்டாடுகிறார்கள். அவர்கள் வளர்ந்தபின், ‘மரியாதை இல்லாமல் நடக்கிறாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, வருந்துவது என்னவோ பெற்றோர்தாம். ஏன் மரியாதை இல்லை? கதை சாதாரணமாக, நல்ல குடும்பத்திலிருந்து வந்த மலாய் மாணவிகள் மிகவும் பணிவாக இருப்பார்கள். ஆசிரியை திட்டினால், அழுகை வரும் – அவ்வளவு மென்மையானவர்கள். ஆனால், கமாரியா எப்போதுமே என்னிடம் மரியாதையின்றி பேசுவாள். எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிபவள்தான் அவளுடைய தாய் என்று அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது. “உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று எங்களில் பலரும் அவளைச் சாட, “என் காலத்தில் மிக அடக்கி வளர்க்கப்பட்டோம். மூத்தவர்களுடன் பேசவே பயமாக இருக்கும். மகளும் அப்படி பயந்து வளரக்கூடாது என்று அவள் போக்கில் விட்டேன்,” என்றாள், வருத்தத்துடன். பதினைந்து வயதில் எந்தப் பெண்ணும் சற்றுத் திமிறுவாள். இப்படிப்பட்ட மகளை இனி எப்படி அடக்குவது! ஓயாது சண்டைபோடும் பெற்றோர் கதை தாய் தந்தையருக்குள் எப்போதுமே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், மெல்வின் தனித்து உணர்ந்தான். புத்தகங்களில் ஆழ்ந்து, நிகழ்காலத்தை மறக்க எண்ணினான். ஆனாலும், அவனுடைய உடல்நிலை கெட்டது. படிப்பிலும் சோடை. “உங்களால்தான் அவனைத் திருத்தமுடியும்!” என்று, என்னிடம் படிக்க அனுப்பினார்கள். நான் எவ்வளவோ முனைந்தும், மெல்வின் படிப்பில் முன்னேறவில்லை. அவன் வந்துவிட்டுப் போகும்போதெல்லாம் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பேன். “குழந்தைக்கு உங்களிடம் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு வருகிறான்!” என்று தந்தை தெரிவித்தபோது, வியப்பாகத்தான் இருந்தது. அவன் நல்லபடியாகத் தேறியது எனக்கே ஆச்சரியம் அளித்தது. அவனுடைய தங்கையோ, மரியாதையில்லாமல், ஆசிரியைகளையும் எதிர்த்துப் பேசுவாள். இன்னொருவருடன் ஒத்து வாழமுடியாது, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கினர். பெற்றோருக்குக் காலம் கடந்தபின்தான் புரிந்தது தாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்று. (நான் குழந்தை வளர்ப்பைப்பற்றித் தொடராக எழுதியதைப் படித்துவிட்டு, அவர்கள் கூறியது). கொடுமை செய்யும் பெற்றோரை உடைய குடும்பங்களிலோ, மகள் தந்தையைப் போன்றவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள் மகன் தந்தையை முன்னுதாரணமாக நினைத்து நடப்பான். பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் கதை சாயங்கால வேளைகளில், பெற்றோர், பாட்டிகள் சகிதம் குழந்தைகள் எங்கள் வீட்டருகே இருந்த மைதானத்தில் விளையாட வருவார்கள். ஆனால், நோர்மாவின் பெற்றோரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அவளை எந்நேரமும் பார்த்துக்கொண்ட பணிப்பெண் மஸ்னாவிடம் (MAZNAH) அடியும், திட்டும் வாங்கினாள் நோர்மா. ‘அடி’ என்றால், பெயருக்கு முதுகில் ஒரு தட்டு இல்லை. “ஒருவயதுக் குழந்தையை எதற்கு இப்படி அடிக்கிறாய்?” என்று, நானே மஸ்னாவைக் கண்டித்திருக்கிறேன். “உங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவள் ரொம்ப நாட்டி!” என்பாள். நோர்மாவுக்குப் பத்து வயதானபோது, எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க, “வீட்டுக்குப் போகலாம்,” என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள் பணிப்பெண் மஸ்னா. அவள் மறுக்க, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள். சிறுமி கதற, அதைப் பார்த்த ஒரு சிறுவன் பெரிதாக அழ ஆரம்பித்தான். தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னால் பொறுக்க முடியவில்லை. அங்கு விரைந்து, “விடு அவளை!” என்று இரைந்தேன். அவளுடைய வீட்டிற்குச் சென்று, நோர்மாவின் தாயிடம் வருடக்கணக்கான வதையை விரிவாகக் கூற, அவள் அதிர்ந்தாள். சற்று வளர்ந்தபின்னரும், நோர்மா பலியாடுபோல் இன்னொரு பணிப்பெண்ணைத் தொடர்வதைப் பார்த்தேன். ‘இவளுக்குக் குழந்தைகள் பிறந்தால், அவர்களிடம் இவளால் அன்பு செலுத்த முடியுமா?’ என்று என் யோசனை போயிற்று. என்னதான் தத்து எடுத்த பெண்ணானாலும், நிலைமை அவ்வளவு மோசமாகும்வரை வளர்ப்புப்பெற்றோர் விட்டிருக்கலாமா? நிர்மலா ராகவன் [] இந்தியாவில் பிறந்து வளர்ந்த இருமொழி எழுத்தாளர்.  ஓய்வு பெற்ற பௌதிக ஆசிரியை. 1967 தொடக்கம் மலேசியாவில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், கலை விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் ஸ்வீடனிலும் மலேசியாவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கையாளப்பட்டிருக்கின்றன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகளை அலசி, தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு: ஏணி. (தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டது). நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கர்னாடக இசைப்பாணியில் எழுதி, பாடிப் பதிவு செய்துள்ளார். நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A பரிசில்களும், விருதுகளும் - “சிறுகதைச் செம்மல்” விருது (1991) - “சிறந்த பெண் எழுத்தாளர்” விருது (1993) - சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006) - ஆஸ்ட்ரோ, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிகளில் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறார். - மின்னூல்கள்: தமிழ் – 28, ஆங்கிலம் – 7 (Amazon Kindle, Amazon paperback) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.