[] [தெய்வீக சிந்தனைகள்] தெய்வீக சிந்தனைகள் ஆ.வேலு மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - தெய்வீக சிந்தனைகள் - அணிந்துரை - 1. இறை வணக்கம் - 2. நூல் செய்யக் காரணம் - 3. பகலவன் பெருமை - 4. இறைவன் - 5. ஊரு நல்ல ஊரா? - 6. திருநீற்றுப் பதிகம் - 7. சிவன் கோவில்கள் - 8. சாமிக்கு அபிசேகம் - 9. ஆறு படைவீடுகள் - 10. அம்மன் கோவில்கள் - 11. காரைக்குடி முத்து மாரியம்மன் கோவில் - 12. செளடாம்பிகை அம்மன் - 13. சக்தி நிறுத்துதல் - 14. திருத்தல உலா - 15. விநாயகர் துதி - 16. கும்மிப் பாடல்கள் - 17. வாழ்க்கை - 18. சித்தர்கள் - ஆசிரியர் பற்றி - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 தெய்வீக சிந்தனைகள் தெய்வீக சிந்தனைகள் ஆ.வேலு நிதிஷ் பிரபா பதிப்பகம் 66/1, ரயில்வே – காலேஜ் ரோடு, காரைக்குடி – 630 003, சிவகங்கை மாவட்டம் உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மூலங்கள் பெற்றது – மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com 2 அணிந்துரை அணிந்துரை முனைவர் க.மோகன், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி – 3 அலைபேசி: 9442189217 பயத்திற்காக வணங்கப்பட்ட கடவுளர்கள் இன்று பணத்திற்காக வணங்கப்படுகின்றனர். பகுத்தறிவு பாதையில் பக்தியைப் பரப்பும் பண்பாளராக அய்யா திரு. வேலு ஆசிரியர் திகழ்கிறார். தன் அனுபவத்தினால் கனிச்சுவையாய் பக்தியை முன்வைக்கிறார். பக்தி பகல் வேடம் போட்டுக் கொண்டிருப்பதைச் சாடுகிறார். அதே வேளை உண்மைத் தத்துவங்களை உலகிற்கு அளிக்கிறார். மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கவே தெய்வ வாழ்க்கையை முன்னோர்கள் தந்ததைக் குறிப்பிடுகிறார். முருகனுடைய இச்சா சக்தியே (விருப்பம்) வள்ளி என்றும், கிரியா சக்தியே செயல் தெய்வானை என்றும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். தெய்வீகச் சிந்தனைகள் என்ற இந்நூல் பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக்கொணருகிறது. கடவுளரை எண்ணித்தியானிக்கத் துணையாகச் சில சடங்குகள் அமைந்தன. காலப்போக்கில் சடங்குகளே விஞ்சிவிட்டன. இங்குத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பரப் பலகை மட்டும் கோயில்களில் காணப்படுகிறது. தென்னாடுடைய சிவனுக்குத் தமிழ் புரியவில்லை என்றால் விந்தையிலும், விந்தையாக இருக்கிறது. கோயில்களில் இனித்தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் செய்தி கேட்டவுடனே ஆனந்தம் அடையும் வேலு ஆசிரியரின் தமிழ்ப்பற்றை என்னவென்று சொல்வது கோயில் என்பது மக்களுடைய தெய்வ பக்தியையும் ஒழுக்கத்தையும் வளர்க்கவே ஏற்படுத்தப்பட்டது என்பதை உறுதிபடகூறுகிறார். அபிசேகம் செய்வதென்றால் சாமி தலையில் நீரை ஊற்றிவிடுவது. அதுபோல தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பன்னிர், நெய், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களை சாமி தலையில் இருந்து அதாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை மடமடவென்று ஊற்றிவிடுவது நல்ல செயலாக நல்ல பழக்கமாகத் தெரியவில்லை என்று கூறுகிறார். மேலும் ஒருவருக்கு உணவு கொடுத்தால் அவர் பசி நீங்கி மகிழ்ச்சி அடைவார். மாறாக, கூழைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினால் மகிழ்ச்சி அடைவாரா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்தப் பிரச்சினையை தான் பெரிதுபடுத்திச் சான்றோர் கவனத்திற்குக் கொண்டு சென்று விவாதம் செய்தால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காது என்று உலகியல் நடப்பை உணர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது. கோயில் பற்றியும், கோயில் வழிபாடு, விழாக்கள் பற்றியும் குறிப்பிடும் ஆசிரியர். இலக்கிய தாகம் அதிகம் கொண்டவராக அறியப்பெறுகிறார். திரு.வேலு ஆசிரியர் வெண்பா இயற்றுவதிலும் கைதேர்ந்தவராக உள்ளார். சில நூல்களை கைகழுவிப்படிக்கவேண்டும்; சில நூல்களைப்படித்தவுடன் கைகழுவிவிடவேண்டும். அந்நிலையில் தெய்வீகச்சிந்தனை என்ற இந்நூல் பக்தியின் உண்மை நிலையைப் பேசுகிறது. மனிதனின் விலங்குணர்வை அகற்றி. தெய்வ குணத்துக்கு உயர்த்துவது சமயத்தின் பணி என்ற கொள்கையிலிருந்து சிறிதும் மாறாதவராகவும்; தளர்ந்த வயதிலும் தளராத சிந்தனையுடன் எழுதியிருப்பது என்போன்றோர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கின்றன. இதுபோல் நல்ல தமிழ் நூல்கள் தமிழ்மொழியில் வர வேண்டும். என்றும் அன்புடன் முனைவர் க.மோகன் [pressbooks.com] 1 இறை வணக்கம் விநாயகர் துதி “சித்தி விநாயகனே சீர்பாதம் நான்தொட்டு பத்தி பெருகப் பணிந்திட்டேன் – வித்தகனே வில்லங்கம் இன்றி விரும்பினேன் நூல்எழுத நல்லறிவை எந்தனுக்கு நல்கு” – முருகன் துதி “முத்துக் குமரா முடிசாய்த்தேன் உன்பாதம் வித்தை எனக்கருள்வாய் விரைந்து” சரஸ்வதி துதி “செம்மை மனஞ்சேர்க்கும் தெய்வீக சிந்தனையை அம்மா எடுத்துரைக்க ஆசையுற்றேன்-நம்பினேன் தேமதுர நூல்எழுதத் தேவையாம் நல்லறிவை நாமகளே எந்தனுக்கு நல்கு” 2 நூல் செய்யக் காரணம் “தெய்வீக சிந்தனையைத் தேன்தமிழில் கவிசமைத்து அய்ந்தாறு சுவையோடு அசல்குழம்பு பொரியலுடன் நெய்யளைந்து உண்பிக்க நினைத்தபடி என்மனதில் செய்திட்டேன்தமிழ்விருந்துதிகட்டாது உண்பீரே” விளக்கம் மெய்யன்பர்களின் மனதில் தெய்வீக சிந்தனையை வளர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தால் இந் நன்னூல் செய்ய விரும்பினேன்; செய்தேன். நூற்பயன் ”நுண்ணிய அறிவு பொங்கும் துவல்தொறும் பனுவல் தன்னை திண்ணிய நெஞ்சந்தன்னில் திருவருள் வந்து சேரும் பண்ணிய பாவமெல்லாம் பனியது போல மாறும் எண்ணிய எண்ணம் போலே இகபர சுகமும் கூடும்” அதாவது “தெய்வீகச் சிந்தனை” என்ற இந்த நூலைப் படிக்கப் படிக்க அறிவும் ஒழுக்கமும், பக்தியும் ஏற்படுவதால் இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுலகப் பயனும் பெறுவர் என்பதாம். நூலாசிரியர் அறிமுகம் செஞ்சொற் புலவன், சிந்தனைச் சிற்பி, கந்தப் பெருமான் கடவுள் பக்தன், மெய்யே பேசும் விழுமிய நெஞ்சன், பொய்யா மையறம் புரிந்து வாழ்வோன், பழம் பதி சூராணம் என்னும் பேரூர் விளம்பரம் தேடா வேற்கவி ராயர். சூராணம், சிவகங்கை மாவட்டத் தில் உள்ள பெரிய ஊர். சாலைக் கிராமத்திற்கு வடக்கே பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நூல் காணிக்கை உள்ளம் குடிகொள் உமையம்மை பாலனவன்- வள்ளிக் கணவன் வடிவேலன்- தெள்ளமுதாம்- தெய்வீகச் சிந்தனை நூல் தேன் தமிழில் அவனுக்கே- வைத்தேன் மலர்ப்பாதம் வாழ்த்தி. சூரியன் இயற்கைப் பொருள் என்றாலும் அதனுடைய அருமை பெருமைகளை அறிந்துள்ள நம்முன்னோர் சூரியனை சூரிய பகவான் என்று பெயர் சூட்டி வணங்கி வந்துள்ளனர். அந்தப் பெருமைதான் என்ன? என்னோடு வாருங்கள்; உதயசூரியனைப் பாருங்கள். 3 பகலவன் பெருமை “புடமிட்ட பொன்போலும் அடடா சுடர்விட்டு எழுந்திட்டான் கீழ்வானில் செம்பரிதிச் செல்வன்பார் அந்தத்திருமேனி அழகைப் பார் செங்கதிர் வீச்சைப்பார்” ‘அடர்ந்திட்ட இருள் பறக்கும் தன்மை பார்! படர்ந்திட்ட பனிப்படலிம்மின்னல் பார்! அதைத் தொடர்ந்துண்னும் ஒளிக் கிரணம் பார் ஒளிபட்டுக்குளிர் ஒடும் ஒட்டம் பார்” “கடல்பட்ட நெடுநீரைச் சுடுகின்றான்.அடடே! அதன் ஆவிதான் பிரிகின்ற தன்மை பார்! அதைப் புயலாக்கி மழையாக்கி மண்ணுயிர்க்கு அமுதாக்கி அளிக்கின்றான் … . . . . விந்தை விந்தை” “அடல்பட்ட முகப்பொலிவின் கருணை என்னே! அழியாத அவன் செய்யும் பணியைப் பார் அவனியிலே அவனன்றி உயிரேது! பூவேது காயேது! கனியும் ஏது!” உலகம் இயங்குவது சூரியனால் தான். சூரியன் இல்லை யென்றால் உலகம் இயங்காது. சூரியனும் இறை சக்தியே என நினைந்து அதை வணங்குவோமாக! 4 இறைவன் “தொடக்கமும் முடிவுமில்லான் தொடர்துன்பம் ஏதுமில்லான் படைப்பதும் அழிப்பதுந்தான் பண்ணிடும் தொழில்களாகும் அடித்ததும் அனைத்துக் கொள்ளும் அன்னையும் அவனே யாவான் கொடுப்பவன்.அவனேயன்றி கொள்பவன் இறைவன் அல்லன்” இறைவி ”தாய்க் குலம் இல்லை என்னில் தரணியில் பிறப்பே இல்லை ஆய்ந்த அச்சிவனும் தன்னின் அங்கத்தில் சரிபாதியை ஈந்தனன் பெண்மைக் கென்றே இப்புவி அனைத்துயிர்க்கும் தாய்என ஆனாள் சக்தி தத்துவம் நிலைத்து நிற்க” அழைத்திட வருவான் ஆண்டவன் ‘கண்ணனே என்றழைத்தால் கண்ணனாய் வந்து நிற்பான் கணநாதா என்றழைத்தால் கணேசராய் வந்து நிற்பார் சிவசிவ என்றழைத்தால் சிவன் அங்கு வந்து நிற்பார் அவரவர் விருப்பம் போலே ஆண்டவன் காட்சி யாவார்” அழைத்ததும் வருவாள் அன்னை “மீனாட்சி என்றழைத்தால் மீனாட்சியாய் வருவாள் காமாட்சி என்றழைத்தால் காமாட்சியாய் வருவாள் லெட்சுமி என்றழைத்தால் லெட்சுமியும் வந்து நிற்பாள் சக்தியே என்றழைத்தால் சக்தியும் வந்து நிற்பாள் நாமகளே என்றழைத்தால் நாமகளும் வந்துநிற்பாள் பூமகளே என்றழைத்தால் பூமகளும் வந்துநிற்பாள் கங்கையம்மன் என்றழைத்தாலும் காளியம்மன் என்றழைத்தாலும் மந்தையம்மன் என்றழைத்தாலும் மாரியம்மன் என்றழைத்தாலும் எந்தவிதம் அழைத்தாலும் இறைவி அருள் செய்வாள் பந்தமிகு அன்னையாப் பரிவுமிகக் காட்டிடுவாள்” நவக்கிரக நாயகர்கள் ‘சூரியன்நிலைத்து நிற்க சுற்றிவரும் கோள்கள் எல்லாம் வீரியம் மிக்க குரு விழித்துமே பார்த்து விட்டால் பாரினில் மனுக்குலமும் பயன்பெற்று வாழ்ந்திடலாம் நேரிய சனிதான் என்பார் நீதியும் வழங்குவாரே. பகலவனும் சந்திரனும் பகலிரவு உண்டுபண்ணி செகமீதில் மன்னும் உயிர் சேமமுற வாழ்ந்திடவும் அகமீதில் இருவரையும் அமரவைத்துப் பொற்பாதம் புகழ்பாடிப் போற்றிடுவீர் புண்ணியத்தைப் பெற்றிடுவீர்” 5 ஊரு நல்ல ஊரா? இந்த ஊருப் பெண்ணு அந்த ஊரு மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு போனாள். சில நாட்கள் கழித்து பெற்றோரைப் பார்க்க ஆவல் கொண்டு பிறந்த ஊருக்கு வந்தாள். வந்தவளைக் கண்ட பெற்றோரும் மற்றோரும் பிரியமுடன் வரவேற்று “வாம்மா வா, நல்லா இருக்கிறாயா? போன ஊரு நல்ல ஊரா? மாப்பிள்ளை நல்லா வச்சுக்கிறாரா? மாமன் மாமியாரெல்லாம் எப்படி? மற்றவுங்க எல்லாம் எப்படி? என்று மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினார்கள்”. அந்த கேள்விகளுக்கெல்லாம் அவள் நிதானமாகப் பதில் சொன்னாள். ‘ஊரும் நல்ல ஊரு; உள்ளவர்கள் எல்லாரும் நல்லவர்கள். என் கணவரோ தங்கக்கம்பி, மாமனார் மாமியார் அவரைவிட நல்லவர்கள். ஆகவே, நான் மிக நன்றாகவே வாழ்கிறேன்” என்று பதில் கூறிய அவள், சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள் என்று, “நான் வாழ்க்கைப்பட்ட ஊரில் குளிக்கக் குளம் இருக்கிறது: கும்பிடக் கோயில் இருக்கிறது இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? சொல்லுங்கள் என்றாள்.” அதற்கு மேலே என்றால், எங்களுக்கு விளங்கும்படி நீதான் சொல்ல வேண்டும் என்றார்கள். அவள் பேசினாள்; “அன்பானவர்களே! என் அன்புக்குரியவர்களே உடலையும் உடையையும் சுத்தம் செய்வதற்குத் தண்ணீர் வேண்டும். அந்த நீருள்ள குளம் இங்கே இருக்கிறது. மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள தெய்வ பக்தி வேண்டும். அந்த பக்தியைப் பெறுவதற்கு கோவில் வேண்டும். தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதால் மனம் சுத்தமாகும். அதற்கு கோயில் இருக்கிறது. ஆகவே எனக்குக் குறையொன்றும் இல்லை என்றாள்”. மேலும் தொடர்ந்தாள், “அறம் செய்ய விரும்பு” என்றார் ஒளவையார், அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்றார் வள்ளுவர் பெருந்தகை. அந்த இல்வாழ்க்கையான அறந்தான் நல்லறமாக்கி எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லாருக்கும் பெருமை தேடித்தருவேன்” என்று தத்துவம் பேசினாள். அதை இங்கு நான் பாடலாகத் தருகிறேன். தத்துவம் பேசுகிறாள் சற்குணப் பெண்மணியும் (தத்துவம்) 1. வீட்டினில் கற்றதன்றி வெளியினில் போனதில்லை பாட்டிசொல் கேட்டதுண்டு பண்பினைக் கற்றதுண்டு (தத்துவம்) 2. கல்லூரி சென்றதில்லை கலைகளும் கற்றதில்லை நல்லவர் நடத்தையெல்லாம் நாள்தோறும் கற்றதுண்டு பிறவியில் இயல்பதாக பிறந்ததோபண்பதெல்லாம் அறவழிநடப்பதாலே அமைந்ததோ குணங்களெல்லாம் (தத்துவம்) அன்பானவர்களே, ஆண்மகனுக்குச் சொந்த வீடு ஒன்றுதான். பெண்ணுக்கோ இரண்டு வீடுகள் சொந்தம். பொறந்த வீடும் சொந்தம் புகுந்த விடும் சொந்தம் அறம் வளர்வது பெண்களால்தான். ஆகவே பெண்கள் பெருமைக்குரியவர்கள் ஆகிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள், மங்கையராகப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா – அவர் பங்கயக் கைநலம் பார்த்தலவோ பாரில் அறங்கள் வளர்ந்திடுமே” என்று பெண்களின் பெருமை பற்றி எடுத்துரைக்கிறார். அன்பானவர்களே உலகில் பெருமைக்குரிய பொருள் எது என்று கேட்டால் நான் சொல்லுவேன் அது பெண்தான் என்று. பெண், ஒரு பேசும் தெய்வம். குடும்பத்தின் சுமை தாங்கி, அறப்பயிர் விளைவிக்கும் பூதேவி மக்களைப் பிறப்பிக்கும் மாதேவி. சிவனுக்குக்கொரு சக்தி போன்ற இந்த மண்ணின் மாசக்திஇவளே பராசக்தி – பேசும் தெய்வம். மெய்யன்பர்களே! தெய்வத்தை மனதில் நிறுத்தி வணங்குவது தான் தெய்வீக சிந்தனை என்று கூறவந்தேன் ஈங்கு. ஒருவர் எந்தத் தெய்வத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளாரோ அந்தத் தெய்வத்தையே அவர் சிறப்பாக வழிபடுவர். நான் முருகப் பெருமான் மீது அதிக நம்பிக்கை கொண்டதனால் கீழ்க்கண்டவாறு வணங்குகிறேன். முருகா நான் வேண்டுதல் கேட்டு முன் வரவே வேண்டும் முழுவதுமாய் நான் கூறும் மொழி கேட்க வேண்டும் இருபாதம்தான் தொட்டு இறைஞ்சியிடல் வேண்டும் ஈடில்லாதின்புகழைப் பாடிடவும் வேண்டும் மருணாய செயல்களெல்லாம் மறைந்திடவே வேண்டும் மானிடரின் ஆன்மீகம் மலர்த்திடவே வேண்டும் பெருமானே தின்னருளைப் பெற்றிடவே வேண்டும் பிழையில்ல நன்னெறி பிடித்தொழுக வேண்டும் எனது இந்த வேண்டுதலில் முருகனின் அருளை வேண்டுவதோடு, உலகில் தீச்செயல்கள் மறைந்து நற்செயல்கள் மலர்ந்து ஆன்மீகம் வளர வேண்டுமென விரும்புகிறேன். இதே கருத்தில் தான் சைவப் பெரியார்கள் எல்லாருமே பாசுரங்கள் பாடியிருக் கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று கீழே காண்க. அருளாதாதன் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் அனுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் மருளாய செயல்க ளெல்லாம் மறைந்திடவே வேண்டும் இருளாமை உறல் வேண்டும் எனையடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் பொருளாம் ஒர்திருவடியில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்தொன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே. அன்பர்களே. தமிழ் நாட்டில் முருக பக்தர்கள் ஏராளம் ஏராளம். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் விரத மிருந்து பழனி ஆண்டவனைத் தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர் கூட்டத்தைப் பார்த்து நான் பரவசமடைவதுண்டு. அதை விட அந்த பாத யாத்திரை பக்தர்களுக்குப் பசியாற்றும் பணி செய்வாரைப் பார்க்கிறேன். அவர்களைப் பாராட்ட வார்த்தை தெரியவில்லை. ஆனால் தெய்வீக சிந்தனை என்பதை இந்தச் சூழ்நிலையில் கண்களால் காணமுடிகிறது. இங்கு நான்; உணர்த்துவது என்னவென்றால் தெய்வீக சிந்தனையின்; வெளிப்பாடே இப்படி அரிய செயலாக மாறுகின்றன என்பதே; அடுத்து முருகப் பெருமானின் ஆலயங்கள் எங்கெல்லாம் இருக் கின்றனவோ அங்கெல்லாம் அழைக்கிறேன், என் கூட வாருங்கள், ஆடலாம், பாடலாம் ஆனந்தம் கொள்ளலாம். 1. தந்தனத்தோம் என்று பாடுங்க – அந்த கந்தனைத்தான் வாழ்த்தி பாடுங்க செந்தூரில் கோயில் கொண்ட சிவசுப்பிர மன்யனுக்கு (தந்தனத்) 2. கோயிலைத்தான் வாழ்த்திப் பாடுங்க – அந்த குமரனைத்தான் வாழ்த்திப் பாடுங்க திருப்பரங்குன்றத்திலே தெய்வானை வள்ளியோடு சேர்ந்து நிற்கும் காட்சி பாருங்க (தந்தனத்) 3. முருகனைத்தான் போற்றிப்பாடுங்க முத்துக்குமரனைத்தான் போற்றிப் பாடுங்க அங்க மெல்லாம் நீறுபூசி ஆண்டிபோலநிற்குமந்த (குமரனை) 4. மலையனைத்தான் போற்றிப் பாடுங்க – மருத மலையனைத்தான் போற்றிப்பாடுங்க தீராத வினைக ளெல்லாம் தீர்த்து வைக்கும் மருத மலை (முருக) 5. சோலைத்தான் போற்றிப்பாடுங்க – பழமுதிர் சோலைத்தான் போற்றிப் பாடுங்க அழகர்மலை மேலே, அன்புடனே கோயில் கொண்ட (முருக) 6. வடபழனி வந்து பாருங்க – வடி வேலனைத்தான் போற்றிப் பாடுங்க கார்த்திகைப் பெண்கள்திருக் கரங்களிலே வளர்ந்து வரும் (கந்த) அன்பர்களே பழனிக்குப் பாதயாத்திரை போகும் பக்தர்கள் பாடுவதைக் காண்க. 1. பாலமுருகனைத்தான் பணிந்து தினம் போற்றி செய்ய பாமாலை நான் தொடுத்தேன் – ஞானத்தங்கமே பாலனவன் அணிந்திடுவான் ஞானத்தங்கமே (பால) 2. பாலாபிசேகம் செய்ய பாற்குடந்தான் கொண்டு வந்தேன் பாலையதில் காணவில்லை – ஞானத் தங்கமே பாலனவன் பருகினானோ ஞானத்தங்கமே (பால) 3. தோனபிசேகம் செய்ய தேன்குடத்தான் கொண்டுவந்தேன் தேனையதில் காணவில்லை ஞானத்தங்கமே தேனையவன் பருகினானோ ஞானத்தங்கமே 4. சந்தனத்தைஅரைத்து வைத்தேன்சாமியபிசேகம் செய்ய சந்தனத்தைக் காணவில்லை – ஞானத்தங்கமே ஓசாமியவன் பூசினானோ ஞானத் தங்கமே 5. பன்னிரும் வாங்கி வந்தேன் பாலனபிசேகம் செய்ய பன்னிரைக் காணவில்லை – ஞானத்தங்கமே பாலனவன் பூசினானோ – ஞானத்தங்கமே. 6. கண்கண்ட தெய்வமவன் கலியுக வரதனவன் கண்டு வணங்கப் போறேன் – ஞானத்தங்கமே காட்சிதருவான் எனக்கு (பால) பக்தனுடைய வேண்டுகோளுக்கு முருகப் பெருமானுடைய அருள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 6 திருநீற்றுப் பதிகம் 1. மந்திரமாவது நீறு மதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு தரிக்கப்படுவது நீறு கந்தமாவது நீறு துதிக்கப்படுவது நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 2. நெற்றியில் அணிவது நீறு – மனம் நெகிழவைப்பதுநீறு நற்பயன்தருவது நீறு நன்மையே செய்திடும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 3. கற்றவர் அணிந்திடும் நீறு கல்லாதவரும் அணிந்திடும் நீறு நற்றவர்அணிந்திடும் நீறு நலம்பெற அணிவது நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 4. சிவ சிவு எனவே சொல்லி சிந்திக்க வைப்பது நீறு தக தக எனவே மேனி மின்னிடச் செய்வது நீறு நக நக எனவே முகத்தை நகைத்திடச் செய்வதும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திரு நீறு 6. வேல் வேல் வேலா என்று விளம்பிடச் செய்யும் நீறு மாலவன் மருகா என்று வணங்கிடச் செய்யும் நீறு சங்கரன் மைந்தன் நீறு சங்கடம் தீர்க்கும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 7. கந்தனே கடம்பா என்று கரங்களை உயர்த்தச் செய்யும் செந்தமிழ்ச் செல்வா என்று சிரம்தாழ்த்தி வணங்கச் செய்யும் செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 8. பூசுதற் குகந்த நீறு புத்துணர்வு அளிக்கும் நீறு ஈசனுக்குக் குகந்த நீறு எல்லாரும் அணியும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 9. பரமனை வணங்கச் செய்யும் பாசத்தை அகற்றச் செய்யும் கந்தனை வணங்கச் செய்யும் கதிர்வேலையும் வணங்கச் செய்யும் செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 10. தவம் செய்யத் துண்டும் சங்கடம் போக்கும் நீறு பாவத்தை அழிக்கும் நீறு பரத்தினில் சேர்க்கும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 11. நோன்புகள் செய்யத் தூண்டும் நோய் நொடி அகலச் செய்யும் பேய்க்குணம் பித்தலாட்டம் பறந்திடச் செய்யும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு 12. நெற்றியில் அணியும் நீறு நெஞ்சினைச் சுத்தம் செய்யும் அஞ்சுதல் அகற்றும் நீறு ஆரோக்கியம் சேர்க்கும் நீறு செந்துவர் வாய் உமை பாலன் சிவசுப்பிரமணியன் திருநீறு அன்பர்களே இதுகாறும் திருநீற்றின் மகிமையைச் சிறப்பாக எடுத்துக் கூறினேன். அடுத்துப் தமிழ்ப் பாவலர் ஒருவர் பாடிய இசைப்பாடல் ஒன்று கீழே காண்க பல்லவி கந்தன்திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும் (கந்தன்) அநு பல்லவி சுந்தரவேல் அபிசேக சுத்ததிரு நீரணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து ஏகிடுவாள் அந்தநேரம் பார்த்திருந்து அன்னை செல்வம் ஓடிவந்து, சிந்தையைக் குளிரவைத்தே சொந்தம் கொண்டாடிவாள் (கந்தன்) சரணம் மணமிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சி பெருக்குமடா தினந்தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா-தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காக்குமடா (கந்தன்) முருகனுடைய கோவில் குன்றுகள் தோறும் காணப்படுகிறது. அது ஒரு காலக்காட்டத்தில் முருக பக்தர்களால் அவ்வாறு கோவில்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பிற்பட்ட காலங்களில் கிராமங்கள் தோறும் சுப்பிரமணியர் கோவில்கள் கட்டப்பட்டிருக் கின்றன. அதுபோல விநாயகர் கோவில்களும் கட்டப்பட்டிருக் கின்றன. தெய்வீகத்தை வளர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத் தில் தான் அந்தத் தெய்வத் திருப்பணியை திறம்படச் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் அருணகிரிநாதர் என்பவர், முருகனுடைய புகழைத் திருப்புகழ் எனும் தமது நூலில் விளக்கமாக கூறியிருக்கிறார். மிகக் கடினமான சொற்களைக் கொண்டு சில பாடல்களும், மிக எளிமையான சொற்களைக் கொண்டு சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். சில பாடல் களுக்குப் பொருள் எழுதியவர்கள் தவறாக உரை செய்திருக் கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றி.ண்டுக்கு விளக்கம் கூற விரும்புகிறேன். ஏறுமயில் ஏறி விளையாடும்முகம் ஒன்றே என்று தொடங்கி, ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே என முடியும் பாடலுக்கு, முருகனுக்கு ஆறு முகங்களும், பன்னிரண்டு கைளும் இருப்பதாகப் பொருள் கூறுகின்றார் ஒருவர். அதைப் பலரும் நம்புகிறார்கள். ஒருவர். முருகன் மயிலின் மீது அமர்ந்து உலகத்தை ஒரு நொடியில் சுற்றிவந்தார் என கூறுகிறார். மனிதன் என்றாலும் கடவுள் என்றாலும் ஒருவருக்கு ஒருதலை, ஒரு முகம் தான் இருக்க முடியும். அதுதான் இயற்கை ஒரு கவிஞன், தன் கவிதையை என்ன கருத்தில் எழுதி இருக்கிறான் என்று. பொருள் சொல்ல வேண்டும். அதை விடுத்து தன் விருப்பம் போல் பொருள் சொல்லக்கூடாது. இந்தப் பாடலிலே முருகனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக இடத்துக்கிடம் முகம் மாறு படுவதை, அருணகிரிநாதர் விளக்கியிருக்கிறார். ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே, என்பதன் பொருள் என்னவென்றால், மயில் தோகை விரித்தாடும் போது அந்தக் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மயில் தோகையே அழகாகத்தான் இருக்கும். முருகு என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். இங்கு மயில் தோகையில் ஏறியுள்ள அழகு போன்றதே முருகனுடைய முக அழகு என்பது பொருளாகும். இரண்டாவதாக ஞான மொழி பேசும் முகம் என்பது, மிக்க ஞானம் நிறைந்த குருவானவர் நிலையில், ஈசனுக்கு உபதேசம் செய்ததால் அறிவு ஒளி-ஞான ஒளி வீசும் முகமாக மாறியது முருகனுடைய முகம். அடியார் வினை தீக்க – துயர் போக்க வந்த போது கருணை முகமாகக் காட்சி தந்தார். சூரனை வதம் செய்ய வந்த போது கோபம் கொண்ட முகத்தோடு வந்தார். வள்ளியை மணம் செய்ய வந்தபோது, காம உணர்வும் மகிழ்ச்சி கொண்ட முகத்தோடு காணப்பட்டார். வேலாயுதத்தினால் |மலையைப் பிளக்கும் போது, முகத்தில் வீரம் வெளிப்பட்டது. இவ்வாறு ஒரே முகம் தான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் கொண்டது. இதற்கு உதாரணம், அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம் என்பது தான். ஆறுவிதமான முகங்களைக் கொண்ட முருகப் பெருமானே எனக்கு ‘ஆறுமுகமான ஒரு பொருளை மடடும் எனக்குக் கொடுப்பாயாக என இப்பாடலில் வேண்டுகிறார் அருணகிரியார். அதாவது அந்த அமைதியான நிம்மதியான ஒரு முகம் மட்டும் போதும், வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம் ஐயனே எனச் சொல்லி வணங்குகிறார் கவிஞர். முருகனுக்கு ஆறு தலை, பன்னிரண்டு கைகள் இருப்பதாக ஓவியம் வரைந்து மகிழ்கிறார்கள் அதற்குக் கண்ணாடி போட்டு சுவரில் மாட்டி வைக்கிறார்கள். ஒரு காலக் கட்டத்தில் பக்தியை வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு, தான் தோன்றித் தனமாகப் புலவர்கள் உளறிக் கொட்டியிருக்கிறார்கள். அவரவர் நினைத்த படியெல்லாம் கதை எழுதியிருக்கிறார்கள். புராணங்கள் எழுதியவர்கள் எல்லாருமே, எவ்வளவுக்குப் புழுக முடியுமோ அவ்வளவுக்குப் புழுகியிருக்கிறார்கள். திருவிளையாடல் புராணம் எழுதிய ஆசிரியர், ஒரு சமயம் கூலியான் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று, பாண்டிய மன்னன் தன் கைப் பிரம்பால் அவன் முதுகில் அடிக்க அந்த அடி அவன் முதுகில் மட்டுமின்றி உலகில் உள்ள அத்தனைப் பேர் முதுகிழும் விழுந்தது என்பதோடு நிறுத்தாமல் அந்த அடியினால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் முதுகின் நடுவில் தாவாக தாரையாக இருக்கிறது என்று எழுதியிருக் கிறார். இவர் மட்டுமல்ல, எல்லாப் புராண மேதாவிகளும் நல்ல செய்திகயைச் சொல்லும் போது இப்படிப் பொல்லாத செய்திகளையும் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு காலத்தில் இப்படிப்பட்ட புலவர்கள் தெய்வங்களைப் பற்றிப் பொய்யான தவறான செய்திகளைத் தான் தோன்றித் தனமாக அவரவர் விருப்பம்போல் எழுதிவைத்த கதையை ஏற்கவில்லை. ஏற்காத தோடு மட்டுமல்ல தெய்வக் கொள்கையை இழித்தும் பழித்தும் பேசியதோடல்லாமல் எழுதவும் செய்தார்கள். அவற்றுள் ஒன்று உதாரணத்திற்கு எடுத்துக்காட்டு மதம் என்பது ஒர் அழகிய பிணம் இது ஓர் அறிஞருடைய பொன்மொழி. மதத்தின் மேல் எத்தனை தாக்குதல்கள் விழுந்தாலும் அது அத்தனை தாக்கு தலையும் தாங்கிக் கொண்டு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழையடி வாழையாக மதாச்சாரியார்கள் தோன்றி உரமூட்டி வளர்க்கப்பட்டது மதம் இது என்றும் அழியாது. பிற்காலத்தில் குமரேச சதகம் பாடிய புலவர் ‘மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே. என்று பாடியிருக்கிறார். இவர் எந்த மயிலைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. தன்னுடைய பாடலுக்கு இவர் பொருள் எழுதவில்லை. மயில் மனிதனைச் சுமக்க முடியாது என்பது இவருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் முருகன் அசுரனைச் சம்காரம் செய்த போது, அவனுடைய வெட்டுண்ட உடல், ஒரு பாதி மயிலாகவும் மறுபாதி சேவலாகவும் உரு வெடுத்தது. மயிலை தன் கால்களுக்கு இடையிலும் சேவலைத் தன் கையிலும் பிடித்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அசுரனாகிய மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் முருகன். அசுரனாகிய மயிலுக்கு சக்தி உண்டு. ஆகவே அந்த மயில் மேல் ஏறி விளையாடியிருக்கலாம் முருகன் என நாம் நம்பலாம். விநாயகருக்கு வாகனம் பெருச்சாலி என்று சொல்லப்படுகிறது. அதன் விவரம் எனக்குத் தெரியவில்லை. இவருக்கு இரண்டு பெண்டாட்டி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவருக்கு கல் யாணமே ஆகவில்லை, அதனால் தான் இவர் குளத்தங்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறாரகள். இதனால் குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், இந்த இரண்டு பெண்டாட்டி யார் என்பதை என்னால் சொல்ல முடியும். ஒரு பெண் சித்தி, மற்றவள் புத்தி. இந்தப் பெயர்களைக் கவனித்தால், புத்தியும் ஞானமும் உடையவர் என்பது விளங்கும். இந்த இரு பெண்களைத்தான் விநாயகர் மணந்திருக்கிறாரேயன்றி மானிடப் பெண்களை அல்ல. விநாயகருக்கும் சிவனக்கும் மூன்று கண்கள் உண்டு. மூன்றாவது கண் நெற்றியில் உள்ளது. மனித மூளை மண்டை ஒட்டுக்குள் அமைந்திருக்கிறது. அறிவாகிய உணர்வு மூளையின் முன் பகுதியில் நெற்றியின் ஓரத்தில் அமைந்துள்ள அறிவாகிய கண்ணைத் தான் நெற்றிக் கண் என்று சொல்லப்படுகிறது. நெற்றியின் மேல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்தனுக்கு கண்கள் பார்வை இழந்துவிட்டன. அவன் ஆண்டவனை வேண்டும் போது, கடவுளே என் ஊனக் கண் இழந்ததால் உலகில் குறையும் உண்டோ? ஞானக் கண் ஒன்று இருந்திடில் போதும் என்று பாடுகிறான். இந்த ஞானக் கண்தான் நெற்றிக்கு உள்ளே இருப்பது. அப்படியானால் சிவன் நெற்றிக் கண்ணின் நெருப்பு சுவாலை நக்கீரரைச் சுட்டது எப்படி என வினவலாம். அது கவிஞனின் கற்பனையே. கோபத்தின் மிகுதி அவ்வாறு நெருப்புச் சுடராய்ப் பாய்ந்தது என்பதுதான் அதன் உண்மை. அர்ச்சுனன் வில்லில் விட்ட அம்பு, ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று விரிந்து சென்றது என்றால் அது கற்பனையே, கவிஞரின் சொல் ஆற்றலே. ஒரு அம்பு பல அம்புகளாகப் பெருக முடியாது. இது போலத்தான் நெற்றிக்கண் நெருப்பைக் கக்கியதும் சிந்திக்க வேண்டுகிறேன். ஒரு நாள் மாலை, நான் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றேன். அங்கு சாமிக்கு அர்ச்சனை செய்வதற்காகப் பெண்கள் அர்ச்சனைக் கூடைகளுடன் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொருக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண் தன்னுடைய அர்ச்சனைக் கூடையை நீட்ட, அய்யர் அன்த வாங்கி உள்ளே போனார். அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்த்தாள், மூலஸ்தானத்தில் முருகன், வள்ளி-தெய்வானை யோடு நிற்பதைக் கண்டாள், கண்டதும் ‘அய்யரே அந்த அர்ச்சனைக் கூடையைக் கொண்டாங்க’ என்றாள். அவர், அர்ச்சனைக் காசு வைக்க மறந்திட்டாள் போலும் என்று அர்ச்சனைக் கூடையை எடுத்து வந்தார். அவர் கொடுக்குமுன் இவள், கூடையை வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டு, இந்த ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கும் இந்த சாமியை கும்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினாள். இதைப் பார்த்த ஐயர், அடமுருகா, ஒரு ரூபாய் அர்ச்சனைக் காசு கிடைப்பதையும் கெடுத்து விட்டாயே என்று குறைபட்டுக் கொண்டார். நான், இவள் ஒரு புதுமைப் பெண் என்பேனா? அல்லது இவள் புரியாதவள் என்பேனா? யோசித் தேன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்ந்தவள், முருகன் இரண்டு பெண்களோடு நிற்கும் தத்துவத்தை அறிய வில்லையே’ என்று வருந்தினேன், விளக்கம் கூற விரும்பினேன். இரு மனைவியார்? முருகப் பெருமானுடைய இச்சா சக்தியே வள்ளி. தெய்வானை இந்திரனுடைய மகள் இந்திரன் மழைக்கு அதிபதி. மழைதான் இந்திரனுடைய மகள். மழை இங்கு பெண்ணாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியைக் கலைமகள் என்று பெண்ணாக உருவகப் படுத்தியிருக்கிறோம் அல்லவா? அது போலத்தான் மழைக்கும் பெண் உருவம் கொடுத்திருக்கிறார்கள். வள்ளி, திருமாலின் மகள். கந்தப் புராணத்தில் ஒரு மான், வயிற்றில் பிறந்து, வள்ளிக் கிழங்கு வெட்டி எடுத்த பள்ளத்தில் அந்தக் குழந்தை கிடந்தது. வேடர் குலத் தலைவனான நம்பிராசன் அந்தக் குழந்தையை எடுத்து வந்து வள்ளி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். அந்தக் மான் திருமாலேதான். பூலோக மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெண்கள் பிறந்ததும், இவர்களை முருகன் மணந்தான் என்பதும், மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கவே தெய்வ வாழ்க்கையாகக் கதை கட்டியிருக்கிறார்கள். இதிலிருந்து, முருகனுடைய இச்சா சக்தியே (விருப்பம்) வள்ளியென்றும், கிரியா சக்தியே (செயல் தெய்வானை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். கதை கட்டியவர்கள் மக்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தான் எழுதியிருக்கிறார்கள். எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. இந்தியா முழுவதும் ஏராளமான சிவன் கோவில்கள் இருக் கின்றன. அவற்றில் சோதிர்லிங்கம் உள்ள கோவில்கள் 108. இவை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். பெரும்பாலும் எல்லாக் கோவில்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வையே. தமிழ் நாட்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்களில் 14 முக்கியமானவையாகும். எல்லாக் கோவில்களிலும் மூலஸ்தானத்தில் லிங்கம் மட்டும் அமைக்கப் பட்டுள்ளது. சிலையில்லை. இது தவிர உற்சவ மூர்த்திகள் சிலை இருக்கின்றன. சிவலிங்கத்திற்குத்தான் தினசரி மூன்று. ஆறு காலம் என பூசைகள் நடைபெறுகின்றன. பாண்டி பதினான்கு ஸ்தலங்களை ஒரே வெண்பாவில் காண்க. கூடல் புனவாசல் குற்றாலம் ஆப்பனூர் ஏடகம் நெல்வேலி இராமேசம் – ஆடானை தென்பரங் குன்றஞ்சுழியில் தென்திருப்பத்தூர் காசி வன்கொடுக் குன்றம்பூ வனம். கூடல் என்பது மதுரை. இங்கு உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். எல்லாச் சிவன் கோயில்களிலும் வசந்த காலத்தில், முக்கிய தேர்திருவிழா நடக்கும். அடுத்து சாமிக்கு திருக்கல்யாணம் என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இது சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் நடக்கும் கல்யாணம்தான். ஆண்டுதோறும் இந்தக் கல்யாணம் நடக்கிறது. அது எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்றால் இல்லற தர்மத்தை நல்லறமாகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகத்தான். வேறு தத்துவம் ஒன்றும் பெரிதல்ல. அண்டசராசரங்கள் எல்லாம் ஆண்டவன் வரைந்த கோலங் களே. அவற்றில் ஆண் என்பதும் பெண் என்பதும் அழகான கோலங்கள். இன்பங்களும், துன்பங்களும் அதில் வைத்த வண்ணங்களே. ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் தத்துவம் விளக்கப்படுகிறது. திருமண வாழ்க்கை என்றெனறும் இன்பமயமாக இருக்க வேண்டுமென்பதே தெய்வத்திருக் கல்யாணத்தின் தத்துவமாகும். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் பிராமணர்களே பூசாரியாக/அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் மந்திரங்களெல்லாம் சமக்கிருத மொழியில் இருக்கிறது. அவர் நமக்காக அர்ச்சனை செய்யும் போது கரம் குவித்து சாமியைக் கும்பிடுகிறோம். அவர் ஏதோ கரகரத்த குரலில் சொல்லுகிறார். அதாவது மந்திரம் ஒதுகிறார். அது என்ன என்று தெரியாமலேயே நாம் சாமிகும்பிடுகிறோம். ஆனால் நம் மனதில், விநாயகர் பெருமானே ஞால முதல்வனே நல்ல கணபதியே என் பாவ மெல்லாம் எரித்துப் பொசுக்கி, உன்பாதம் சேர்ப்பாய் உன்னத கனநாதா என்று மனதுக்குள் சொல்லி சாமியைக் கும்பிடுகிறோம். இந்த நேரத்தில் தமிழில் மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தால் சாமியும் தமிழ் கேட்கும் நாமும் தமிழ் கேட்கலாம். சாமிக்கு சமக்கிருத மொழி மட்டுந்தான் தெரியுமா? தமிழ் தெரியாதா? இல்லை தமிழ் தாழ்த்தப்பட்ட மொழியா? தமிழ் நாட்டுச் சாமிக்குத் தமிழ் தெரியாதா? அர்ச்சகருக்கு தமிழ் மந்திரம் தெரியாமல் இருக்கலாம். புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியது தானே. தமிழ் அறிஞர்களிடம் கேட்கலாம். சமக்கிருதத்தில் உள்ள மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வைத்துக் கொள்ள லாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல்லாயிரக்கணக்கான பாசுரங்களைத் தமிழில் தானே பாடியிருக்கிறார்கள். இதை யாரும் மறுக்கமுடியுமா? அந்தணர்களே எந்தக் கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல முடிய்ாது. தமிழில் மந்திரம் சொல்ல மாட்டோம் – பூசை செய்ய மாட்டோம். அர்ச்சனை செய்ய மாட்டோம் என்று சொல்வீர்களேயானால், அது தமிழக்கும் தமிழ் மக்களுக்கும் செய்யும் பெரிய துரோகமாகும். ஒரு வகையில் நீங்களும் தமிழர் என்பதால் உங்களுக்கும் துரோகம் செய்தவர்களாவீர்கள். அன்பானவர்களே, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் அவர்கள், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொண்டார். அந்த வேளையில் இனி என்றென்றும் ஆலயங் களில் தமிழ் முழங்கும் என்றும், இறைவன் தமிழ் கேட்டு மகிழ் வார் என்றும் நான் நினைத்தேன். நினைத்ததும் ஆனந்தத்தில் பாடினேன் பனுவல். கீழே காண்க. கோவில் அருச்சனைக்குக் கொண்டுவந்தார் தீந்தமிழை நாவில் இனிக்குதடாநண்பா கேள்-பாவில் நிறைஞான அர்ச்சகர்கள் நேயமுடன் பாட இறையும் தமிழ்கேட்கும் சங்கு என்று அழகிய வெண்பா பாடி ஆனந்தம் அடைந்தேன். ஆனால், இன்று நாள்வரை அது நடக்கவில்லை. எனக்குத் துன்பம் என்றால் சாமியிடம் முறையிடலாம். சாமிக்கே துன்பம் வந்தால் யாரிடம் போய்ச் சொல்லுவது. சமக்கிருதத்தில் உள்ளது போல், தமிழில் முறையான மந்திரங்கள் இல்லை என்றால், தமிழறிஞர்களைக் கொண்டும் சமக்கிருத அறிஞர்களைக் கொண்டும் ஒரு குழு அமைத்து, சமக்கிருதத்தில் உள்ள மந்திரங்களை அப்படியே மொழி பெயர்க்கலாம். தமிழில் செம்மையாக ஆக்கப்பட்ட மந்திரங்களைக் கொண்டு பூசை செய்தால் எல்லாருக்கும் மனநிறை வளிக்கும். இந்த நல்ல செயலில் அந்தணர்களும் மற்றவர்களும் அக்கரை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என அர்ச்சகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ரோமன் கத்தோலிக்கக் குருமார்கள் ஆரம்பத்தில் லத்தீன் மொழியில் தான் ஆலயங்களில் மந்திரங்கள் சொன்னார்கள். பிற்காலத்தில் அதைத் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழக மக்களுக்குப் புரியும் படியாக போதனை செய்தார்கள்-செய்து கொண்டிருக்கிறார்கள். கிறித்து வேதப் புத்தகமாகிய பைபிளை தமிழில் எழுதிவைத்திருக்கிறார்கள். அதுபோல எல்லா பிராந்திய மொழிகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்து மதப் பெரியார்களும், அறிஞர்களும் இதைக் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும், செய்தார்களேயானால், எல்லாக் கோவில்களிலும் தமிழ் மணக்கும், இந்து தர்மம் தழைக் கும். பூனைக்கு மணி கட்டுவது யார்? என்று கேட்கக் கூடாது. கோவில் என்பது மக்களுடைய தெய்வ பக்தியையும் ஒழுக்கத்தையும் வளர்க்கவே ஏற்படுத்தப்பட்டது ஆகும். ஆகவே கோவில் எல்லா மக்களுக்கும் பொதுவானதாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வந்து சாமிகும்பிட பல இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது கொடுமையிலும் கொடுமையாகும். காந்தி அரிசன ஆலயப் பிரவேசம் என்பதைப் பல இடங்களில் வைபவும் போல் நடத்தினார். சபர்பதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து எல்லா மக்களையும் ஒன்றாக அமரவைத்துக் கூட்டுப் பிரார்த்தனை செய்ததின் மூலம் எல்லா மதத்தினரையும் ஒன்றுபடுத்தினார். மக்களிடையே மத நல்லிணக்கம் என்ற கொள்கை வலுப்பெற்றது தீண்டாமை என்ற கொள்கை வலுப்பெற்றிருந்தது. ஒரு காலம் மனிதரில் ஒரு பிரிவினர் நாகரீகமில்லாமல் இருந்த நிலையில் தீண்டாமை அனுசரிக்கப்பட்டது. இன்றைய நாகரீகம் வளர்ந்த நிலையில் தீண்டாமை மறைந்துவிட்டது. ஆகவே அரிசன மக்கள் என்ற பாகுபாடில்லாமல் ஆலயங்களில் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும். அதுவே இந்து தர்மம் ஆகும். மனித தர்மமும் ஆகும். ஆன்மீகவாதிகள் இந்த நற்செயலில் ஈடுபட வேண்டும். இந்த சமத்துவ வழிபாட்டை மறுப்பவர்கள் உண்மையிலே ஆன்மீகவாதிகள் அல்லர். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று பழைய சித்தர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அவரது கூற்று அவருக்குச் சரி. நம் போன்ற சாமான்ய அறிவு படைத்தவர் களுக்கு அது பொருந்தாது. இறைவன் உருவமற்றவர். அரூபியாய் இருக்கிறார். ஆகவே உருவம் தேவையில்லை என்று சொல்பவர்களும், அவ்வழியில் தொழுகை நடத்துகிற வர்களும் இருக்கிறார்கள். ஆனால் உருவ வழிபாடே சிறந்த முறை என்பது நமது கொள்கை. உருவ வழிபாட்டில் தான் மன நிறைவு ஏற்படும். இந்து மதத்தில் சைவ சித்தாந்தம், வைஷ்ணவ சித்தாந்தம் இரண்டும் தொன்று தொட்டு நிலைத்து வாழ்வன ஆகும். விநாயகரை, மூலப்பொருள், முதற் கடவுள் என்று போற்று கிறோம். விநாயகருக்கு உருவம் ஒன்றுதான். ஞானவிநாயகர் என்று சொல்லி வணங்கும் போது, அவர் நமக்கு ஞானத்தைக் கொடுப்பார் என நம்புகிறோம். முத்தி விநாயகர் என்றும் சித்தி விநாயகர் என்றும், பால கணபதியே என்றும், யோக கணபதியே என்றும், நர்த்தன விநாயகா, வித்தைக்குக் குருவே, வெற்றிக்கு அருளே, என்றும் பலவாறாகச் சொல்லி வணங்குகிறார்கள். ஒருவர், தனக்கு எது வேண்டும் என்று விரும்புகிறாறோ அதைத் தருபவராக விநாயகரை உருவகப்படுத்துகிறார். இதனால் ஒரே விநாயகருக்குப் பல பெயர்கள் சூட்டப்படுகின்றன. இதனால் விநாயகருக்குப் பெருமை கூடுகிறது. இதனால் பக்தர் வேண்டுவதை வேண்டியவாறே இறைவன் கொடுக்கிறார். என்பது நமக்கு விளங்குகிறது. ஒரு சமயம் ஒளவையார், விநாயகரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்பதைக் கீழே காண்க. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துணக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துதுரமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா. இதைக் கேட்ட இன்னொருத்தி, அப்பளம், பாயாசம், அஞ்சாறு கூட்டோடு தப்பா விருந்துனக்குத் தந்திடுவேன்-இப்புவியில் பத்தடுக்கு மாடிவிடும் பல்லா யிரங்கோடி சொத்தெனக்குத் தந்தருளச்சொல் இவ்வாறு வேண்டினாள். கணேசர் பார்தார், இப்படியெல்லாம் எனக்கு விருந்து வைத்து தொந்தரவு செய்தீர்கள். எனக்கு அருகம்புல் மாலை போட்டால் போதும், விருந்து வைக்க வேண்டாம் என்று கணேசர் கூறிவிட்டார். இதைக் கேட்ட இன்னொருத்தி, ரொம்ப நல்லதாப் போச்சு என்று அருகம்புல் கொணரச் சென்றாள், அருகம்புல் மாலை கட்டினாள். அப்பனே கணேசமூர்த்தி அருகம்புல் மாலையொன்று தப்பாமல் உன்கழுத்தில் சாற்றி வணங்கிடுவேன் இப்பாரில் என்றென்றும் இன்பமுடன் வாழ்ந்திடவே தப்பேதும் சாராத சன்மார்க்கம் தந்தருளே இவ்வாறு பாடி வணங்கினாள். இதைப் பார்த்த மற்றும் ஒரு நங்கை யோசித்தாள், கணேசரிடம் வந்தாள், வந்து ஞாலம் முதற்பொருளே நல்ல கணபதியே! ஆலம் விழுதறியேன் அருகம்புல் நானறியேன் கோலம் வரைந்திடுவேன் கும்பிடும் வகையறிவேன் வேலவன் அண்ணாவே வேண்டும்வரம் தந்தருளே! இவ்வாறு இவள் பாடிக்கும்பிட்டாள். இவர்கள் நால்வரில் யாரையும் நான் குறை கூற நினைக்கவில்லை. கோடிட்டுக் காட்டுகிறேன் அவ்வளவுதான். 7 சிவன் கோவில்கள் சிவன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயம்தான். இதில், மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வர சாமிக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. பாண்டிய மன்னர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த இடம் மதுரை. அதற்கடுத்ததாக சிதம்பரம் நடராசர் ஆலயத்தை சொல்லலாம். ஒரு காலத்தில், சிற்றம்பலம் என்றும், பொன்னம்பலம் என்றும் புகழப்பட்ட இடம் சிதம்பரமாகும். சிவபெருமான், இங்குள்ள பொன்னம்பலத்தில் நடனமாடினார். அது இருக்கும் இடந் தெரியாமல் மங்கிப் போய் இருக்கிறது. இராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் போவது போல் சிதம்பரத்திற்கு செல்வதில்லை. சிவாலயங்களில் எல்லாம் தினமும் ஆறு கால பூசை நடந்தது, இன்றும் நடக்கிறது. கோவில்களில் கலை நிகச்சிகளும் நடை பெற்றன. அவற்றில் பரதநாட்டியம் என்பது முக்கியமானது. அதில் இளம் மகளிர் பங்கு பெற்றனர். அவர்களுக்குத் தேவன் அடியார்கள் என்று பெயர். அவர்கள் கோவில்களில் பரதநாட்டியம் ஆடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். சில நேரங்களில் தனியார் திருமண நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடுவார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. தேவனடியார்கள் என்ற பெயர் தேவடியாள் என்று வழங்கப் பட்டது. அதற்கேற்ப அவர்கள் குடும்ப வாழ்க்கையில்லாமல் பொது மகளிர் ஆகிவிட்டார்கள். பிற்காலத்தில் அது தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்தல்ல என்று முடிவு செய்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கத்திற்குத் தடைவிதித்தது. அதிலிருந்து தேவடியாள் இல்லை. இன்றைய காலக் கட்டத்தில் கோவில் விழாக்களில், நாடகம், இசைக் கச்சேரி, கரகாட்டம், பொம்மலாட்டம், நடனம், ஆட்டம் பாட்டம் என்று அமர்க் களமாக நடைபெறுகிறது. மின்விளக்குகள் வந்ததால் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு ஒளி விளக்கு அலங்காரம் செய்கிறார்கள். ஒலிபெருக்கி என்ற சாதனம் வந்ததால் விழாக்கள் புதுப்பொலி வுடன் நடைபெறுகின்றன. தினமும் கோவில்களில் பக்திப் பாடல்கள், மங்கள இசை, இன்னிசை எல்லாம் ஒளி நாடாக்கள் மூலம் முழங்குகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் குட முழுக்கு நடைபெறுகிறது. கோவிலையும், சாமி சிலைகளையும் புனிதப்படுத்தவதேயாகும். யாகம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி புனிதப்படுத்தப்பட்ட நீரில் கலசங்களையும், சாமி சிலை களையும் நீராட்டி புனிதப்படுத்துகிறார்கள். மேலும் மந்திரிக்கப் பட்ட யந்திரத் தகடுகளை இணைத்து சாமி சிலைகளுக்கு உயிர் ஊட்டப்படுகிறது. அதனால் சாமிக்கு சக்தி ஏற்படுகிறது. ஒரு கோவிலைக் குறிப்பிட்டு அங்கு போய் வணங்குங்கள். அது சக்தியுள்ள தெய்வம். நீங்கள் நினைக்கும் காரியம் சித்தியாகும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அவர்கள் சொல்வது உண்மைதான். கோவில் என்பது வழிப்பாட்டுத்தலம். அது மிகவும் புனிதமான இடம். ஆகவே அதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். ஆனால் பல கோவில்களைப் பார்த்தால் சுத்தமாகவே இல்லை. திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் நடுமண்டபத்தில் நமது பாதம் பதியும் அளவுக்குச் சேறும் நீரும்: நிறைந்திருக்கிறது. அது எப்படியென்றால், தேங்காய் உடைக்கும் தேங்காய்த் தண்ணீர்தான் அதற்க்குக் காரணம். தினமும் அவ்வளவு தேங்காய் உடைபடுகிறது. தேங்காய்த் தண்ணீர் கீழே விழாமல் பாத்திரத்தில் விழும்படி தேங்காய் உடைத்தால் அசுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். அதைச் செய்வதில்லை பூசாரி. நிர்வாகமும் அதைக் கண்டு கொள்வதில்லை. சாமி கும்பிடும் பக்தர்களோ, தேங்காய் உடைத்தால் சரி – சூடம் கொழுத்தினால் போதும் எது எப்படிப் போனால் என்ன? எதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. தலை மொட்டை போட்ட ஒருவனிடம் எந்தச் சாமிக்கு மொட்டை என்று கேட்டேன், பாதம்பரியாளுக்கு என்றான். சாமி பெயர் தெரியவில்லை அவனுக்கு, ஆனால் முடிக்காணிக்கை ஒழுங்காக செலுத் திட்டான். சாமி பெயர் “பாகம் பிரியாள்” என்பதாகும். சிவபெருமானின் இடப்பாகத்தை விட்டுப் பிரியாமல் இருப்பவள் (பார்வதிதேவி) என்பதே சரியான பெயர் ஆகும். எப்படியோ சாமி கும்பிட்டால் சரி, சாமி வரம் கொடுத்தால் சரி. மதுரையைத் தவிர மற்ற எல்லாக் கோவில்களிலும் தினசரி கூட்டி சுத்தம் செய்வது இல்லை. குப்பையும் தூசியும் நிறைந்து அசுத்தமாக இருக்கிறது. சுத்தம் செய்வதற்கு தனியாக சம்பள ஆள் நியமிப்பதில்லை எனத் தெரிகிறது. கர்ப்ப கிரகத்துக்குள், அதாவது மூல ஸ்தானத்தில் அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. அதனால் அவர் தான் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அவர் அந்த வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை. மூலஸ்தானமே பரிசுத்தமின்றிக் காணப்படுகிறது. அப்படியிருந்தால் தெய்வீக சிந்தனை எப்படி மலரும். பரிசுத்தம் இல்லாமல் பாழ் மண்டபம் போல் கோவில்கள் இருப்பதால் வெளவால் என்ற பிராணிகள் கோவிலை ஆக்கிரமித்துக் கொள் கின்றன. வெளவால் புழுக்கைகள் தரையில் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. பெரும்பாலும் நாம், தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருள்களோடு, பூ பூமாலை எல்லாம் வாங்கிக்கொண்டு சாமி கும் பிடக் கோவிலுக்குச் செல்கிறோம். சாமிக்கு மலர்மாலை அணிவித்து பொங்கல் படையல் செய்து பூசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இது நல்ல பழக்கம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் சக்தியாகிய பார்வதி தேவியை சிவன் தன் இடப்பக்கத்தில் வைத்துள்ளார என்று சொல்லலாம். யார் எதைச் சொன்னாலும் காரணகாரியத்தோடு சொல்ல வேண்டும். அவரவர் நினைத்த படியெல்லாம் பேசக்கூடாது. ஒருவர், ‘அரோகரா’ என்ற சொல்லுக்கு சிவனே என்பது பொருள் என்கிறார். இவர்கள் எந்த நிகண்டைப் பார்த்து பொருள் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நமது பக்தர்கள், அண்ணாமலையானுக்கு அரோகரா, பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று ஆட்டம் பாட்டத் தோடு, ஊரெல்லாம் கேட்கும்படி உரத்த குரலில் சொல்லு கிறார்கள். அரோகரா போட்டவரிடம் கேட்டேன், அரோகரா என்றால் அர்த்தம் என்ன என்று. அதற்கு, யாருக்குத் தெரியும் அரோகரா என்றார். இவர் அர்த்தம் தெரியாவிட்டாலும், ஆண்ட வனைக் கைகூப்பி வணங்குகிறார் என்பது மட்டும் தெரிகிறது. வாழ்க அரோகரா இப்பொழுது யாருடைய விளக்கமும் தேவையில்லாமலே, அரோகராவுக்கு அர்த்தம் புரிந்துவிட்டது நமக்கு. அதாவது முருகனுக்கு அரோகரா’ என்றால், ‘முருகனுக்கு வணக்கம்’ என்பதுதான் அர்த்தம். எங்கள் வீட்டில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டிக்கு அன்னம் கொடுப்போம், அன்னம் பெற வீட்டுக்கு வருபவர் பிள்ளையார் கோவில் ஆண்டிதான். பண்டாரத்தார் என்ற இனத்தவரில் ஆண்டி என்பது உட்பிரவு. அவர் சேகண்டி (மணி) அடித்து, அரோகரா – அரோகரா, வேல் உடையார் கொடுக்கும் அன்னதானம், குன்றக்குடி மலை வளர்ந்தது போல் மேலும் வளர வேண்டும், ‘அரோகரா-அரோகரா’ என்று சேகண்டி ஒலியோடு அவரும் ஒலி எழுப்புவார். இப்பொழுது விளங்குகிறது. வணக்கம் என்ற பொருளோடு நன்றி’ என்பது சேர்ந்திருக்கிறது இந்த அரோகராவில். அரோகரா முருகனுக்கே. வாழ்க முருகன்! வாழ்க அரோகரா! ஒருவர், கோவிந்த நாமசங்கீர்த்தனம் என்று நீண்ட ஒலி எழுப்ப, அவரைத் தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்று ஒரு கூட்டம் முழங்கியது. மேலும் அரகர நாமப் பார்பதிபதே என்றதும், அரோகரா’ என்றது கூட்டம். நாம சங்கீர்த்தனம் என்றால், கோவிந்தனுடைய பெயரைச் சொல்லுங்கள் என்பது பொருள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, கோவிந்த நாம சங்கீர்த்னம் என்று சொன்னேன். அவர்களும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்றார்கள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்டேன். நீங்கள் சொன்னதைத் தானே சொன்னோம். என்றார்கள் அவர்கள். நான் யாரைக் குறை கூறுவது. நான், அரோகரா என்று கை கூப்பினேன், அவர்களும் அரோகரா என்று கை கூப்பி வணங்கினார்கள். இதனால் ‘அரோகரா என்ற சொல்லுக்கு வணக்கம் என்பது தான் பொருள் என்பது நன்கு விளங்குகிறது. தமிழ்நாட்டில் எல்லாக் கோவில்களுமே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையே. பல்லவர்கள் ஆண்ட காலத்தில்தான் கற்கோயில்கள் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடைச்சங்க காலம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். திருவள்ளுவர் ஆண்டு 2059 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சாமிக்கு சூடதீப ஆதாரனை செய்யும் போது அதைக் கண்ணாரக் கண்டு சாமி முகத்தையும் பார்த்து, மனதில் இறுத்தி இரு கைகளையும் சேர்த்து உயர்த்திக் கும்பிடவேண்டும். இதுவே சுவாமி தரிசனம் முறையாகும். ஆராதித்த சூட தீபத்தை, அர்ச்சகர் கொண்டு வந்து நம்முன் காட்டும் போது, அந்த சோதியைத் தொடுவது போல் கைகளை நீட்டிக் கைகுவித்து வணங்க வேண்டும். அதன் தத்துவம் என்னவென்றால், சுவாமி நமக்குச் சோதிவடிவமாய்க் காட்சி தருகிறார் என்பதே. ஆகையால், கற்பூர சோதியைக் கண்டதும், கற்பூர சோதியே போற்றி, பத்தியின் மணமே போற்றி, ராணியின் குணமே போற்றி, பூவின் மணமே போற்றி’ என்று மனதுக்குள் சொல்லிக் கும்பிட வேண்டும். அப்பொழுதுதான் நம் மனம் தெய்வத்தோடு ஒன்றும். நெற்றியில் திருநீறு அணிவதும் குங்கமப் பொட்டுவைப்பதும் மிக அவசியமாகும். சாமி கும்பிட்டதின் அடையாளம் அதுவே. மனதுக்கு நிம்மதி தருவது இந்த தெய்வ பக்தி ஒன்றுதான். ஆன்மீக சம்பந்தமாக கதை எழுதியவர்கள்-செய்தித் தாள்களில் பிரசுரம் செய்பவர்கள், பலரும் பலவிதமாகச் சொல்லு கிறார்கள். அதனால் தெய்வீக சிந்தனையாளர்கள் குழப்பத்திற் துள்ளாகிறார்கள். ஒருவர் சொல்கிறார், சிவன் பார்வதியை தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறார் என்று இன்னொருவர், வலப் பக்கத்தில் வைத்திருக்கிறார் என்று இதைப் பார்க்கும் போது, அவரவர் நினைத்தபடி சொல்கிறார்கள் என்பது விளங்குகிறது. மனிதருக்கு இதயம் இடப்பக்கத்தில்தான் இருக்கிறது. உடலில் உயிர் இயங்குவது, இதயம் செயல்படுவதால் தான். இதயம் இயங்கவில்லையென்றால் உயிர் இல்லை. திருவள்ளுவர் தான் எழுதிய திருக்குறள் என்னும் நூலில் ஆலய வழிபாடு பற்றி எழுதவில்லை. அவர் காலத்தில் கற்கோவில்கள் இல்லை எனத் தெரிகிறது. ஆனால் புராண வரலாறு, நக்கீர தேவருக்கு உபதேசம் செய்தது மதுரை சோமசுந்தரக் கடவுள் என்று கூறுகிறது. அதில் குறிப்பாக, சோம சுந்தரக் கடவுளின் நெற்றிக்கண் சுவாலை நக்கீரரைச் சுட, அவர் ஒடி கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்று கூறுகிறது. எது உண்மை என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் புராணத்தை நம்ப முடியாது. வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்து, பத்துப்பாடல்களில் பாடியிருக்கிறார். தெய்வக் கொள்கையுடையவர், கோவில் இருந்திருந்தால், ஆலய வழிபாட்டைக் குறிக்காமல் இருப்பாரா? யோசிக்குமிடத்து பெரிய கற்கோவில்கள் இல்லையென்றே தெரிகிறது. அறத்தைப் பற்றிச் சொல்லும் போது, அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும், தவத்தைப் பற்றிச் சொல்லும் போது, தவம் செய்வார் தங்கருமம் செய்வார் என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், கொழுநன் தொழதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்றும், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்றும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார், அறிவில்லாதார் என்றும் சந்தேகத்திற்கிடமின்றி, நறுக்-நறுக்கென்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஆலய வழிபாட்டைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இவர், சென்னை மைலாப்பூரில் வாழ்ந்தவர் என்றும், பாண்டிய மன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர் என்றும் வரலாறு கூறுகிறது. இவர் மதுரையில் இருந்த காலத்தில் அங்கு மீனாட்சி அம்மன் கோவில் இருந்ததா? இல்லையா? இல்லை என்றே தெரிகிறது. இருந்திருந்தால் அவர் காலத்தில் கற்கோவில் கட்டப்படவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தெய்வம் என்ற சொல் திருக் குறளில் காணப்படுகிறது. அதிலிருந்து தெய்வக் கொள்கை உடையவர் என்று தெரிகிறது. ஒளவையார், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறியிருக்கிறார். பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை எழுதிய வள்ளுவர். தெய்வ வழி பாட்டைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்பதுதான் எனது வருத்தம். இருந்தாலும் ஆதிபகவன் முதற்றே உலகு என்று அடித்துச் சொன்னதற்கு நன்றி. புராணங்கள் கூறும் செய்திகளுக்கும், வரலாறு கூறும் செய்தி களுக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று. பஞ்சபாண்டவர் கதையை வேதவியார் சொல்ல, விநாயகர் தன். தந்தத்தை எழுத்தானியாகக் கொண்டு மேருபிலையில் எழுதினார் என்று புராணம் கூறுகிறது. எதை நம்புவது என்று தெரியவில்லை. அதைப் பற்றிய கவலை நமக்குத் தேவை யில்லை. விநாயகர், முழுமுதற் கடவுள் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தபடி, விநாயகரை வணங்குவோம். வாதாபி என்ற வாரிலிருந்து கொண்டுவந்ததால் விநாயகருக்கு வரதாபி கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் சிவன் கோவில்கள்தான் முதன் முதலில் நிறுவப்பட்டன. அதன் பிறகுதான் மற்ற தெய்வங்களுக்கு கோவில்கள் உண்டாகி இருக்கின்றன. சிவனுடைய உருவம் கருங்கல்லில் லிங்கமாகவே அமைக்கப்பட்டன. பொதுவாக, எந்தத் திடப் பொருளும், சதுரம், உருளை, உருண்டை, முக்கோண வடிவத்தில் இருக்கும். லிங்க வடிவத்தில் எந்த பொருளும் இருக்காது. இயற்கையாக உள்ளது சிவலிங்கம் ஒன்று தான் என்கிறது புராணம். ஆனால் கோவில்களில் செயற்கை யாகச் செதுக்கப்பட்டவையே ஆகும். சிற்பக்கலையின் தொடக்க காலத்தில்தான் இந்த லிங்கம் செய்திருக்கலாம். சிற்பக்கலை வளர்ச்சியடைந்த காலத்தில் தான் கல்லில் அழகான சிற்பங் களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. கோவில்களில சாமிக்கு அபிசேக ஆராதனை என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். இது தினசரி செய்ய முடியாது. விசேச தினங்களில் மட்டும் செய்யமுடியும். பொங்கல் செய்து சாமிக்குப் படைத்து, சூடதீப ஆராதனை தினசரி செய்யக் கூடியது. இது எல்லாக் கோவில்களிலும் ஒரு காலம், இருகாலம் முதல் : ஆறுகாலப் பூசைகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன. அப்படிப் பூசை நடக்கின்ற நேரத்தில் நாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும். வெள்ளிக் கிழமைதான் நல்ல நாள், அன்றைக்கு மட்டும் போய் சாமி கும்பிட்டால் போதும் என்று நினைக்கக் கூடாது. அப்படியென்றால் வெள்ளிக்கிழமை மட்டும் சாப்பிட்டால் போதும் என்று இருக்க முடியுமா? தினசரி ஒரு நேரம் ஆலயம் சென்று தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 8 சாமிக்கு அபிசேகம் அபிசேகம் செய்வதென்றால் சாமி தலையில் ஊாற்றிவிடுவது. அதுபோல தயிர் இளநீர் சந்தனம், குங்குமம், பன்னீர், நெய், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களை சாமி தலையில் இருந்து அதாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை மடம்டவென்று ஊற்றி விடுவது. பிறகு சிலையில் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்வது. இது என்னைப் பொறுத்தமட்டில் நல்ல செயலாக நல்ல பழக்கமாகத் தெரியவில்லை. பிராமணர் அல்லாத ஒருவரிடம் இது பற்றிக் கருத்து கேட்டேன் அதற்கு அவர், பால் மற்றும் இளநீர் போன்ற பொருள்களை சாமி தலையில் ஊற்றி விடுவதால், சாமிக்கு உடம்பு குளிர்ந்து – மனம் குளிர்ந்து, பக்தர்களுக்கு வேண்டுவதை எல்லாம் வாரிவழங்குவார் என்று விளக்கமளித்தார். இவரே இப்படிச் சொல்லும் போது, அந்தணர் ஏது சொல்வரோ என்ற அச்சத்தில் வேறு யாரிடமும் இதைப் பற்றிக் கேட்க நான் விரும்பில்லை. ஒருவருக்கு உணவு கொடுத்தால் அவர் பசி நீங்கி மகிழ்ச்சி அடைவார். மாறாக கூழைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினால் அவரது பசி நீங்குமா? மகிழ்ச்சி அடைவாரா? பகுத்தறிவு உள்ளவர்களே சொல்லுங்கள். இந்தப் பிரச்சனையை நான் பெரிதுபடுத்தி சான்றோர் கவனத்திற்குக் கொண்டு சென்று விவாதம் செய்தால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. ஆகவே எனது கருத்தை வெளிப்படுத்தியதோடு இதை விட்டு விடுகிறேன். ஏனென்றால், எவ்வதுறைவது உலகம் யார்மாட்டும் அவ்வதுறைவது அறிவு என்பதால் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லாதார் அறிவில்லார். இது சான்றோர் அறிவுரை. ஆகவே கூட்டத்தோடு கோவிந்தா நானுந்தான். சிவபெருமானுக்கு ஆதி வாசஸ்தலம், இப்பொழுது மேருமலை என வழங்கப்படும் இமய மலையின் உச்சியேயாகும். அதற்கு கைலயங்கிரி என்ற பெயரும் உண்டு. அவருக்கு அதவியாக உள்ள ஏவலர்களுக்குப் பூதகணங்கள் என்று பெயர். அதாவது இடும்பன், கடம்பன், குன்டோதரன் என்று சொல்லக்கூடிய பல பேர்கள். அவர்கள்தான் சிவபெருமானின் பரிவாரங்கள். இது புராணங்கள் கூறும் செய்தி. இப்பொழுது நாம் உண்டாக்கி யிருக்கும் சிவன் கோவில்களுக்கும் கைலையங்கும் சம்மந்தமே இல்லை. அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு. இந்தக் காலக் கோயில்கள் எல்லாமே ஓர் ஆயிரம் ஆண்கள் வயதுடையவையே. நவக்கிரகங்கள் எல்லாம் தேவர்களே. நட்சத்திரங்களில் சிலர், தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் மேலும் தேவ கன்னியர்கள் ஆவார்கள். இவர்கள் எல்லாரும் நாம் வணங்கும் தெய்வங்கள் ஆவார்கள். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தவிர மற்றவையெல்லாம், எந்த மொழியில் முதல் தோன்றின என்பது தெரியவில்லை. அவை எல்லாவற்றையும் நம்மவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். திருவிளை யாடல் புராணம், மதுரையில் நடத்திய திருவிளையாடல்களை விளக்குகிறது. இந்த விளக்கம் எதற்கு என்றால், நம்முடைய தெய்வ வழிபாட்டு முறை, கலாச்சாரம் இவையெல்லாம் ஓர் ஆயிரம் ஆண்டு வயது உடையவையே தவிர புராண காலப் பழமை வாய்ந்தது அல்ல என்பதை உறுதிப்படுத்தவேயாகும். சில கிராமங்களில் தான் அய்யனார் கோவில்கள் காணப் படுகின்றன. அவை பெரும்பாலும் குளத்தங்கரையில்தான் கட்டப்பட்டுள்ளன. சிவாலயங்கள் நிறுவப்பட்ட காலத்திற்கு பிற்பட்ட காலத்தில் தான் அய்யனார் கோவில்கள் நிறுவப் பட்டிருக்கின்றன. அய்யனார், கிராம தேவதை-கிராமத்தை காக்கும் தெய்வம் என்கிறார்கள். இந்தச் சாமிக்குத் துணையாக, காளி, கருப்பன், முனியன் என்று சொல்லப்படும் பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. அய்யனாருக்கு வெள்ளைக் குதிரை வாகனம் இருக்கிறது. கோவிலுக்கு முன்னால், இரண்டு பெரிய வெள்ளைக் குதிரைகள் பாய்ந்து செல்லும் நிலையில் மிக அழகாகச் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது, அய்னார் வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து, ஊரைச் சுற்றி வந்து ஊர்க்காவல் செய்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்தக் கோவிலுக்குக் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்தான் பூசாரி. வேறு இனத்தைச் சேர்ந்தவர்தான் பூசாரி. வேறு இனத்தைச் சேர்ந்தவர் அய்யனாருக்குப் பூசை செய்ய முடியாது. அய்யனாருக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் விழா நடக்கும். அந்த விழாவிற்குப் புரவி எடுப்பு என்று பெயர். புரவி என்பது குதிரை. இந்த மண் குதிரை செய்பவர் குயவர். இவருக்கு வேலார் என்ற பெயரும் உண்டு. இவர்தான் வீடுகளுக்குத் தேவைப்படுடம் பாத்திரங்கள் அனைத்தும் செய்து கொடுப்பவர். மேலும் பொம்மைகள், சாமி சிலைகள் எல்லாம் செய்து கொடுப்பவர் இவர்தான். எல்லாமே சுடுமண்ணில் செய்யப் பட்டவையே ஆகும். கோவில் விழா நடக்கும் போது பார்த்தால், கோவிலுக்கு முன்பாக மண் குதிரைப்பட்டாளமாகத்தான் காட்சியளிக்கும், இந்தக் குதிரைப் பட்டாளம் கோவில் சார்பாகவும், காணிக்கை செலுத்துபவர்களும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவையாகும். விழாவின் முக்கிய அம்சம், குதிரை எடுத்து கூத்துப் பார்ப்பதோடு எருது கட்டு நிகழ்ச்சியும் நடக்கும். கொம்பு சீவிய முரட்டுக் காளையின் கழுத்தில் நீண்ட வடத்தைக் (கயிறு கட்டி அதைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கும்பல் முன்னால் ஒட பின்னால் சில வீரர்கள் காளை மீது பாய்ந்து பிடித்துக் காளையை மடக்குவார்கள். இது ஒரு வீர விளையாட்டு ஆகும். இவ்வாறு அய்யனார் கோவில் விழா முடிவடையும். அன்று தாரை, தப்பட்டை, கொம்பு, கிடுகட்டி, மேளதாளம் முழங்கக் கொண்டாடப்பட்ட அய்யனார் கோவில் விழா இன்று. கழுதை தேய்ந்து கட்டெறும்பாய்ப் போன கதையாக, வெறும் வள்ளி திருமண நாடகத்தோடு முடிவடைகிறது. அதைக் கூடப் பார்க்க வருபவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள். கோவிலில் தினமும் ஒருகாலப் பூசை நடைபெறுகிறது. அதுவும் அரசு அறநிலையத்துறை உதவியால்தான். தினமும் பூசை நடந்தாலும், சாமி கும்பிடவருவார் யாருமிலலை. இது யாருடைய குறையோ தெரியவில்லை. வீடுகளுக்கு வேண்டிய மிகத் தேவை யான பாத்திரங்களைச் செய்து கொடுத்த குயவனாரின் தொழில் உலக்கை தேய்ந்து உளிப்பிடியாய் ஆனது போல் தேய்ந்து விட்டது. உலோகத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் வளர்ந்து விட்டன. அய்யனார் சாமியைத் தேடி பக்தர்கள் வராமையால் அவர் நிம்மதியாக ஓய்வில் இருக்கிறார். நமது தெய்வீக சிந்தனையும் நிம்மதியாக இருக்கிறது. எல்லாம் காம் செய்த கோலந்தான். அய்யனார் சாமியைப் பற்றி மேலும் விபரம் தெரியாததால் அதை இத்துடன் நிறுத்திவிட்டு, மற்ற சாமிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். இன்றையக் காலக் கட்டத்தில், சிவபெருமான், விநாயகப் பெருமான் வழி பாட்டை விட முருகப் பெருமானுடைய வழிபாடே மேலோங்கி நிற்கிறது. அதைப் போல அம்மன் கோவில் விழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முதலில் முருகன் கோவில்களைப் பற்றிக் கூறுகிறேன். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் சொந்த வீடுகள், சமயசாத்திரம் தெரிந்த ஒருவர், படை வீடு என்பதற்கு முருகன் அசுரனைக் கொல்ல படையெடுத்துச் சென்றபோது அவரும், படைகளும் தங்கியிருந்த இடமே படைவீடுகள் எனப் பெயர் பெற்றன என்று சொல்கிறார். இவர் சொல்வது எனக்கு சரியாகத் தெரியவில்லை. முருகனுக்கு முதலில் கட்டப்பட்ட கோவில்கள் படைவீடு என்பன. இவை யாவும் மலைகளின் மேல் கட்டப்பட்டவையாகும். மலைக் குன்றுகள் தனிமையாக இருந்ததாலும், கோவில் கட்ட வேண்டிய கற்கள் சுலபமாகக் கிடைத்ததாலும், குன்றுகளின் மேல் கோவில் கட்டியிருக்கிறார்கள். பிற்காலத்தில் ஊர் தோறும் முருகன் கோவில்கள் நிறுவப்பட்டன. ஆதியில கட்டியதெல்லாம் குன்று களின் மேல். அவைகளுக்குத்தான் படைக்கப்பட்ட வீடுகள் என்பதுதான் அதற்குப் பொருள். அந்தக் காலக்கட்டத்தில் கோவில்’ என்ற சொல் வழக்கத்தில் இல்லாதிருந்திருக்கலாம். இன்றைக்குக் கூட, செப வீடு என்று கிறித்தவ ஆலயத்தில் எழுதிவைத்திருக்கிறார்கள். பழைய காலத்தில் ஒரு கிராமத்தில் கோயில் வீடு’ என்று எழுதியதை பார்த்திருக்கிறேன். இதை ஆராய்ந்து பார்க்கும் போது முருகன் கோவில்கள் தான் முதன் முதலில் நிறுவப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. 9 ஆறு படைவீடுகள் 1. திருப்பரங்குன்றம் 2. திருச்செந்தூர் 3. பழனி 4. பழமுதிர்சோலை (அழகர்மலை) 5. சுவாமிமலை 6. தணிகைமலை. முருக பக்தர்கள் இந்த ஆறு படைவீடுகளுக்கு யாத்திரை சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்தால் மோட்சம் கிடைக்குமென்று முருக பக்தர்கள் நம்புகிறார்கள். எல்லாரும் அப்படி செய்ய முடியுமா? வள்ளுவர் சொல்வது போல் முயற்சி உடையவருக்கு அது கிட்டும். சாமான்ய மக்களுக்கு ஒத்து வராது. காசி ரெண்டெழுத்தாயினும் காண்பது எந்தக்காலமோ? என்பர். காசி, நமக்கு, ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. இன்று போக்குவரத்து வசதி பெருகியிருந்தாலும் பணவசதி இருந்தால் தான் காசிக்குப் போய்வரமுடியும். திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டு, அப்படியே நேராக, இராமேஸ்வரம் சென்று, அங்கு அக்கினி தீர்த்தக் கடலில் குளித்துப் பின், இராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள இருபத்து இரண்டு தீர்த்தங்களிலும் நீராடிச் சுவாமி தெரிசனம் செய்து வந்தால், எல்லா புண்ணிய சேத்திரங் களுக்கும் சென்றது பேல் ஆகும். ஆகவே திருச்செந்தூர் செல்வோமாக முருகப் பெருமானை நெஞ்சில் வைப்போமாக. கந்தர் சஷ்டி விரதம் முருகன், ஐப்பசி மாதம் சஷ்டி திதி நாள் அன்று அசுரனுடன் போரிட்டு வெற்றி கண்டார். ஆறு நாட்கள் சூரனுடன் போர் செய்தார். அந்தச் சமயத்தில் பக்தர்கள், பசி, பட்டினி தாகத்தை எல்லாம் மறந்து மிகுந்த கவலையுடன் முருகப் பெருமானின் வெற்றிக்காகச் சிவ பெருமானை பிராத்தனை செய்தார்கள். ஐப்பசியில் வரும் அமாவாசைக்கு மறுநாள் விரதம் தொடங்கி ஆறாவது நாளான சஷ்டி திதிவரை, பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். இந்த ஆறு நாளும் தண்ணீர், இளநீர் தவிர எந்த உணவும் உட்கொள்ளமாட்டார்கள். இன்றைக்கும் முருக பக்தர்கள், கந்தர் சஷ்டி விரதம் இருக்கிறார்கள். இது மிகவும் கடினமான விரதமாகும். அன்றைக்கு முருகன் வெற்றிக்காக நோன்பிருந்தார்கள், இன்றைக்கு நீங்கள் ஏன் நோன்பிருக்க வேண்டும் என்று நான் வினவ, இந்த விரதம் பழைய சம்ப வத்தை நினைவு கூர்வதோடு, வயிற்றைப் பட்டினி போடுவதால் வயிற்றுக்கு ஒய்வு கிடைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதில் கூறினர். வயிற்றுக்கு ஒய்வு மிகவும் அவசியம், ஒய்வு கொடுப்பதால உடல் நலம் பெறும், ஆயுள் கூடும் என்று மேலும் விளக்கமளித்தனர். அதில் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் நோன்பிருக்காவிட்டாலும், சஷ்டி நோன்பிருப் போருக்கு ஆதரவு கொடுப்போமாக! அன்பர்களே! தைமாதம் பூசத்தன்றும், பங்குனி உத்திரத் தன்றும் முருகன் கோவில்களில் பொழுதெல்லாம் ஆட்டமும், பாட்டமுந்தான். நாக்கிலும், அலகிலும், நடுமுதுகிலும் வேல் ஆயுதம் குத்தி வீதி வழியே பக்தர்கள் ஆடிவருவதை நீங்கள் பார்த்தால் உங்கள் உடம்பும் நடுங்கும், ஆடும். உச்சக்கட்டமாக, மரக்கட்டைகளை எரித்து நெருப்பாக்கி தரையில் பரப்பி, அந்த தகதகக்கும் அக்கினியில், மல்லிகைப் பூவின் மேல் மெத்தென நடந்து வருவது போல் பக்தர் தங்கள் பாதங்களைப் பதித்து நடந்து வருவதைப் பார்த்தீர்களானால், உங்களை அறியாமலே நீங்களும் முருகா-முருகா என்று கூவி, உங்கள் கரங்களை உயர்த்திக் கும்பிடுவீர்கள். தெய்வீக சிந்தனையை உங்கள் மனதிலிருந்து பிரிக்க முடியாது. வாழ்க முருகக் கடவுள்! ஓங்குக அவன் புகழ்! அவனின் மலர்ப்பாதம் தொட்டு வணங்குவோமாக! மாலை சூடுவோம் (பாட்டு) 1. பூவாலே மாலை குடுவோம்-தமிழ்ப் பாவாலும் மாலை குடுவோம் குன்றெல்லாம் கேயில் கொண்ட குமார வடிவேலனுக்கு (பூவாலே) 2. வற்றாத கடலும் வாழ்த்துவதே முருகன் பொற்பாதம் போற்றிப்பாடுதே பொற்றாமரை மலரில் பொறந்து வந்த முருகனுக்கு (பூவாலே) 3. தன்னானே என்று கொட்டுவோம் -தமிழ்ப் பண்ணாலே பாடி ஆடுவோம் எந்நாளும் இப்புவியில் இன்பமுடன் வாழ்ந்திடவே (பூவாலே) 4. பாட்டாலே ஆடை கட்டுவோம்- பாலனுக்கு பாலும் பழமும் நல்குவோம் தெய்வானையை மணந்த சிவசுப்பிர மண்டயனுக்கு (பூவாலே) 5. திருநீறு பூசிப் போற்றுவோம் – மனதினிலே சிந்தித்து வணங்கிடுவோம் தேவர் குறைதீர்க்க திருவுள்ளம் கொண்டவர்க்கு (பூவாலே) 6. தன்னானே தான னன்னனே – தன தன்னானே தான னன்னனே – தன தன்னானே தானே னன்னே தன்னானே தானே னன்னே. (பூவாலே) 7. குறிப்பு 1. இது ஒரே சீர் 2. உயர்த்தி ஒலிக்க வழிநடைப் பாட்டு 1. வேல் வேல் வேலையா வெற்றி நடை போடய்யா (வேல் வேல்) 2. கால்நடையாய் நாமெல்லாம் கந்தன் கோவில் போறோமே பால் குடமும் எடுக்கத்தான பழனிமலை போறோமே (வேல் வேல்) 3. பாதயாத்திரை செய்துமே பழனிமலை போறோமே காலும் வெறும் காலதே கவனமது தேவையே (வேல் வேல்) 4. கந்தன்புகழ் பாடினால் கால்வலியும் தோணாதே எந்த ஒரு துன்பமும் எந்தனுக்கு நேராதே (வேல் வேல்) 5. சொன்னபடி நேர்த்திக்கடன் சுத்தமுடன் செய்வோமே அன்னதானம் ஆனமட்டும் அன்புகொண்டு செய்வோமே (வேல் வேல்) 6. கந்தனுக்குக் காவடி கலைகள் பொங்கும் காவடி மைந்தனுக்குக் காவடி மயில் தோகைக் காவடி (வேல் வேல்) 7. இளநீரும் காவடி இன்னும்பல காவடி பலவிதமாய்க் காவடி பாடி ஆடும் காவடி (வேல் வேல்) 8. ராமசாமி அண்ணாச்சி நல்லதம்பி அண்ணாச்சி கவனமாக ரோட்டிலே ஒரமாக நடக்கனும் (வேல் வேல் 9. கருப்பசாமி தம்பியே கண்ணுச்சாமி தம்பியே காருவண்டி பார்த்துமே கவனமாக நடக்கனும் (வேல் வேல்) 10. சுந்தரம்பாள் தங்கையே சோதிமணி நங்கையே கந்தசாமிநினைப்பிலே கவனமாக நடக்கனும் (வேல் வேல் 11. பழனிமலை ஆண்டவா பக்தர்களைப் பாரப்பா நடந்துவரும் எங்களுக்கு நல்லவழிகாட்டப்பா (வேல் வேல் 12. உடல்நலமும் ஆகனும் உள்ளம்சுத்தம ஆகனும் எனையடுத்தார் எல்லாரும் இன்பமோடு வாழணும் 13. கந்தனுக்கும் அரோகரா கடம்பனுக்கும் அரோகரா சுந்தரனுக்கும் அரோகரா சுப்பனுக்கும் அரோக்ரா (வேல் வேல்) 14. அரோஓகரா அரோகரா அரோஓகரா அரோகரா அரோஓகரா அரோகரா அரோஓகரா அரோகரா (வேல் வேல்) அரோகரா = வணக்கம், புகழ், பெருமை. 1. முருகனுக்கு அரோகரா – முருகனுக்கு வணக்கம். 2. முருகனுக்கு அரோகரா – முருகனுக்கு புகழ் 3. முருகனுக்கு அரோகரா – முருகனது பெருமையே பெருமை. இந்த ‘அரோகரா’ எந்த மொழிச் சொல் என்று தெரிய வில்லை. இதை நன்கு ஆராய்ந்து சரியாக அர்த்தம் கொடுத்திருக்கிறேன், ஆதரிப்பீர்களாக. முருகனுடைய ஆறுபடை வீடுகளுடைய பெருமையையும், அங்கு சென்று சாமி தெரிசனம் செய்வது பற்றியும் ஓர் அழகான கர்நாடக சங்கீதம் காண்க. 1. தென்பழனிமலையோரம் தெள்ளு தமிழ் இசைபாடும் செந்தூரின் கடலோரம் வேலோடு மயிலாடும் (தென்பழனி) 2. தணிகைமலை உச்சியிலே சேவலெனும் கொடியாடும் திருப்பரங் குன்றத்திலே தேவாஉன் தேரோடும் (தென் பழனி) 3. காவிரியில் நீராடி சுவாமிமலை படியேறி முருகாஉன் முகம்கான எவ்வினையும் தீர்ந்துவிடும் (தென் பழனி) 4. பழமுதிரும் சோலையிலே பழமாய்நீ கனிந்திருக்க பார்த்தவர்க்குப் பசிதீரும் பணிந்தவர்க்குப் புகழ்சேரும் (தென் பழனி) சிவாலயங்களைப் பற்றிய செய்தியை இத்துடன் நிறுத்தி விஷ்ணு ஆலயம் பற்றி விளம்பல் கேட்பீர். காவிரியாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் மத்தியில் உள்ள பூநீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் ஒன்றே வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் புகழ்பெற்றதும் ஆகும். மத்தியில் கோவிலும் அதைச் சுற்றி நாற்புறமும் சதுரம் சதுரமாக ஏழுசுத்துக் கோட்டையாக எழிலுடன் அமைந்திருக்கிறது சீரங்கம். கோவிலின் முக்கிய முன்வாசல் தெற்கு முகமாக இருக்கிறது. அந்த ஏழு வீதிகளுக் குள்ளேயே சீரங்கம் நகர் அடக்கம். தெற்கு வாசலில் தான் மிகப்பெரிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தின் உயரம் இருநூற்றுப் பதினாறு அடியாகும். (216 அடி) தமிழ் நாட்டிலேயே இதுதான் மிகப் பெரிய கோபுரமாகும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் ராசகோபுரம் நூற்று எழுபத்தாறு (176) அடி உயரம்தான். இந்தச் கோவிலின் தெற்கு வாசலில் நுழைந்தோமானால், அடுத்து எதிரில் ஒரு கோபுரம், அதற்கடுத்து எதிரில் ஒரு கோபுரம் இப்படியாக ஏழு வாசலைத்தாண்டி உள்ளே மூல ஸ்தானம் இருக்கிறது. மூலஸ்தானக் கருவறையில் ரெங்கநாதர் தங்கமரக்காலைக் கிரீடமாகத் தலையில் அணிந்து முகத்தைச் சற்று தெற்கு பக்கமாகச் சாய்த்து கால்களை நீட்டிப் படுத் திருக்கிறார். இந்தக் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்பவர்கள், ராமக்கட்டியோடு வாசனைப் பொருட்கள் மட்டும் வாங்கிப் போனால் போதும். ஆஞ்சநேயர் சிலை ஒன்று நின்ற கோலத்தில் ஒருபுறம் இருக்கிறது. நாம் விரும்பினால் அவருக்கு தேங்காய் உடைத்து சூடதீப ஆராதனை செய்யலாம். பொங்கல் சாதம், பஞ்சாமிர்தம், துளசி தீர்த்தம் இவைதான் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவில் மனிதரால் கட்டப்பட்டதா? இல்லை மயனால் (தேவதச்சன்) கட்டப் பட்டதோ? என நமக்கு ஐயம் எழுகிறது. இது தவிர சில கிராமங்களில் பெருமாள் கோவில் என்ற பெயரில் விஷ்ணு தலங்கள் இருக்கின்றன. பெரிதாக விளம்பரம் ஏதுமில்லை. சிவன் கோவிலுக்குப் பூசாரி ஐயர், விஷ்ணு கோவிலுக்குப் பூசாரி அய்யங்கார், இருவரும் பிராமணர்தான். அவர்கள் சொல்லும் மந்திரம் நமக்குப் புரியாது. அது ஏன் என்றால் அது சமக்கிருத மொழியில் உள்ளது. புரிந்து சாமி கும்பிடுவதைவிட, புரியாமலே சாமி கும்பிடுவது ஒருவகையில் நல்லதே. நமக்குத் தேவை தெய்வீக சிந்தனை மட்டுமே. 10 அம்மன் கோவில்கள் கங்கையம்மன், காளியம்மன், மந்தையம்மன், மாரியம்மன், கருமேனியம்மன், காமாட்சியம்மன், சமயபுரம் மாரி, செளடாம் பிகை அம்மன், வாழவந்த அம்மன், வாள்மேல் நடந்த அம்மன், துர்க்கை அம்மன், துரோபதை அம்மன், பச்சை அம்மன், பாளையத்து அம்மன் இன்னும் பல பெயர்களில் அங்கெங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. சிவகங்கை மாவட்டம் தாயமங்களம், சமயபுரம், சென்னை கங்கை அம்மன் ஆலயம், இருக்கன்குடி ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். தாயமங்களம் முத்துமரியம்மனைத் தரிசிக்க இராமநாதபுரம் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகிய எல்லாப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிகின்றனர். அம்மன் கோவில் விழா என்றால் பெண்கள் கூட்டம் பெருங் கூட்டமாகக் காட்சி தருவதைக் காணலாம். பழங்காலத்திலிருந்தே மாாரியைத் (மழை) தருபவள் மாரி என்றும், மக்களை வாழவைக்கும் தெய்வம் என்றும் பயபக்தி யோடு அம்மனை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அம்மன், தன்னை வணங்காதவர்களை, வைசூரி (அம்மை) என்னும் கொடிய நோயை ஏவி உயிர்களை வாட்டி வதைப்பாள் என்று எல்லாரும் நம்பினார்கள். அதனால் யாரு குறையிந்தாலும் மாரி குறை வைக்கக் கூடாது என நினைத்து, வைத்த நேர்த்திக் கடனை ஒழுங்காக நிறைவேற்றி, அம்மனின் அன்பையும், அருளையும் பெற்று மக்கள் உயர்ந்தனர். என்னைப் பொறுத்த வரை அந்த நம்பிக்கை சரியே என துணிந்து கூறுவேன். வேண்டுதல் வைப்போருக்கு வேண்டியபடியே வரம் கொடுத்து குறை தீர்ப்பவள் அம்மன். எல்லா அம்மனும் ஒரே தெய்வந்தான் என்பதை அறிவோமாக! பொதுவாக எல்லாக் கிராமங்களிலும் தெரு முச்சந்தியில் அம்மா மேடை இருக்கும். இதற்கு முளைக்கொட்டுத் திண்ணை என்று பெயர். இது மண்மேடையே. அவை, நாளடைவில் கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்டன. பிறகு ஓடுகளால் மேற்கூரையும் போடப்பட்டன. இன்று, கெட்டிக் கட்டிடமாகவும், கோபுரம் கொண்ட கோவிலாகவும் கட்டப்பட்டு வருகின்றன. அம்மா மேடைகளில் அம்மன் உருவச்சிலை கிடையாது. உருவம் இல்லாமலே, அம்மனை மனதில் உருவகம் செய்து வழிபடு கிறார்கள். ஆனால் பெரிய கோவில்களில் அம்மனுக்கு, கற் சிலையும் உலோகச் சிலையும் உண்டு. கிராமங்களில்தான் சிலை (விக்கிரகம்) இல்லை. முளைக்கொட்டு என்பது, பெண்கள் இரு கைகளாலும் உள்ளங்கை சேர்த்துத் தட்டி ஒலி எழுப்பி அந்த தாளத்திற்கு ஏற்ப பாடி ஆடும் ஒரு கலை நிகழ்ச்சியாகும். இது பெண்கள் மிகவும் விரும்பும் ஒரு விளையாட்டு நிகழ்சியாகும். அந்தப் பாட்டுக்குக் கும்மிபாட்டு என்று பெயர். முற்காலத்தில் பள்ளிக் கூடங்களில், சிறுவர் சிறுமியர்க்கு, கும்மி, கோலாட்டம் ஆகிய கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அவை மாணாக்களுக்கு அறிவு வளர்ச்சிக்கும், உடற்பயிற்சிக்கும் ஏற்றதாய் இருந்தன. கும்மியடிப்பதற்கென்றே ஏராளமான கும்மிப் பாடல்கள் அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டன. சுப்பரமணிய பாரதியார் கூட கும்மிப் பாடல்கள் எழுதியுள்ளார். ‘கும்மி கொட்டு’ என்பதற்கு முளைக் கொட்டு என்றும் அர்த்தம் உண்டு. தெரு முச்சந்தியில் அம்மா மேடைக்கு முன்பாக பெண்கள் ஓய்வு நேரங்களில் கும்மி கொட்டி விளையாடு வார்கள். அதனால்தான் அந்த அம்மா மேடைக்கு முளைக் கொட்டுத் திண்ணை என்று பெயர் வந்தது. அம்மனுக்கு முளைப் பாரி போடுவதும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். முளைப்பாரி மண் சட்டிகளில் மண்ணை நிரப்பி அதில் நவதானியங்களைத் தூவி, எருவிட்டு, நீர் ஊற்றி வெயில்படாத இடத்தில் வைத்துப் பயிர் வளர்க்கப்படும். இளம் நாற்று மஞ்சள் நிறமாக இருக்கும். சட்டியில் வளர்க்கப்படும் அந்த இளம்நாற்று, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாதாரணமாக வெளிநிலத்தில் முளைக்கும் மஞ்சள் முளை இரண்டு அங்குல உயரத்திற்கு மேல் இருக்காது. இங்கு நான் குறிப்பிடும் இந்த முளைப்பாரி இரண்டடி உயரம் வரை இருக்கும். அது எப்படி விதையின் முளை இவ்வளவு உயரம் வளர்ந்தது என நமக்கு ஆச்சரியமாக இருக்கும். என்ன பக்குவம் செய்து வளர்க்கப்பட்டது என்று அவர்களுக்குத்தான் தெரியும். அது எட்டு நாள் வளர்ப்பே. எட்டாவது நாள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான பெண்கள், தாங்கள் வளர்த்த முளைப் பாரிச் சட்டிகளைத் தலையில் சுமந்து கொண்டு மேளதாளம், ஆடல் பாடல் நிகழ்ச்சியோடு ஊர்வலம் வந்து, அம்மன் கோவி லுக்குக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். சாமி கும்பிட்டு முடிந்த பிறகு அந்த முளைப்பாரிகளைக் கொண்டு போய் குளத்து நீரில் கொட்டி விடுவார்கள். செம்புக் கரகம் – வெண்பா முன்னோர்கள் சொன்னபடி முச்சந்தி மேடையினில் செம்புக் கரகமதைச் செய்துவைத்து அம்மனுக்கு தங்கநிறப்பட்டுடுத்தி, சாந்துகளால் பொட்டுமிட்டு பொங்கலிட்டுச் செய்திடுவார் பூசை ஒரு பெரிய வெண்கலச் செம்பில், சிறு கொம்போடு கூடிய வேப்பிலையை நிறையச் செருகி, மத்தில் மடல் விரியாத தென்னம் பாளை ஒன்றைச் செருகி, அதன் மத்தியில் சிறு பிரம்பை செங்குத்தாக வைத்து, மல்லிகைப் பூமாலையால் அடி யிலிருந்து நுனிவரை கூம்பு வடிவம் அமையும்படி எகட்டியாக நிறையச் சுற்ற வேண்டும். இந்தக் கூம்பின் அடியில் ஒரு சிறு பட்டுத்துணியும் சுற்றுவார்கள். இந்தப் பட்டு அம்மனுக்குள்ள ஆடையாகும். இந்தக் கரகம் தான் அம்மனாக உருவகம் செய்யப்பட்டிருக்கிறது. கரகம் கட்டும் இடம் பிள்ளையார் கோவில் முன்பாகத்தான் இந்த கரகம் கட்டுவார்கள். இந்தக் கரகம் என்பது அம்மனது உருவம். இது மல்லிகை மற்றும் மலர்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்மனுக்கு கழுத்தில் ஆரமும் சூட்டி ஆகிவிட்டது. விநாயகருக்கு முதலில் பூசை நடக்கும், பிறகு அம்மனாகிய கரகத்திற்கும் நடக்கும். அதன் பிறகு பூசாரிக்கு அம்மன் அருள் வந்து கரகத்தைத் தூக்கி தலையில் சுமந்து ஊர்வலம் வருவார். ஊர்வலத்தில் மேளதாளம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், அக்கினிச்சட்டி ஆட்டம் என ஒரே ஆட்டமும் பாட்டமும் பெரிய அமர்க்களமாக இருக்கும். அதோடு வானவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஊர்வலம் முடிந்து கடைசியில் கரகம் கோவில் வந்து சேரும். உள்ளே உள்ள சிறிய மேடையில் கரகம் நிலை நிறுத்தப்படும். அதன் மேல் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் முடிந்ததும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு அம்மனுக்கு பொங்கல் சாதமும், மாவும் படையல் செய்து அம்மனை வழிபடுவார்கள். சில இடங்களில் ஆட்டுக்கடாய் வெட்டிப் பலிகொடுத்துச் சாமி கும்பிடுகிறார்கள். சில இடங்களில் பலிபூசை கிடையாது. இந்த அம்மன் வழிபாடு, செவ்வாய்க்கிழமை தொடங்கி மறு செல்வாய் எட்டாம் நாள் முடிவடையும். பெரும்பாலான இடங்களில், வருஷத்தில் ஆடி மாதத்திலும், சில இடங்களில் ஆவணி மாதத்திலும் அம்மன் விழாக் கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசிநாளில் ஏதாவது ஒரு மேடை நாடகம் அவசியம் வைப்பார்கள். வருஷத்தில் ஒரு நாள் நடக்கும் இந்த விழாவிற்கு வெளியூரிலிருந்து தங்கள் உற்றார்-உறவினர்களை வரவழைத்து, அன்பு கொண்டு உறவாடி விருந்துண்டு மகிழ்வார்கள் ஊர் மக்கள். அதுமட்டுமல்ல, யாதும் ஊரே யாவரும் கேளிர், வாரீர் ஒன்றாய் நன்றே வாழ்வோம் என்பதைப் பறைசாற்றுகிறது இந்த விழா. நகரங்களில், கோபுரம் கொண்ட கோவில்களாகவே அம்மன் கோவில்கள் காட்சியளிக்கின்றன. தினசரி காலை, மாலை நேரங் களில் நிரந்தரமாகவே ஒலிபெருக்கி சாதங்கனைக் கொண்டு பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. தினமும் மாலை நேரத்தில் பெண்கள் அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இது மிகவும் போற்றுதற்குரியதே. எந்தக் கோவிலானும், தினமும் காலை, மாலை வேளைகளில் ஆண், பெண் இருபாலாருமே ஆலயம் சென்று தெய்வ வழிபாடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது இந்த நூல் எழுதியதின் நோக்கமே அதுதான். கிராமியப் பாடல் வரிசையில் அம்மன் புகழ் 1. தந்தனத்தோம் என்று பாடுங்க – சிவ சங்கரியைப் போற்றிப் பாடுங்க 2. மாரியத்தான் போற்றிப் பாடுங்க – மந்தை அம்மனைத்தான் போற்றிப் பாடுங்க சூராணம் கோவிலிலே சோதிமய மாய் விளங்கும் (அம்மனை) 3. அம்பிகையைப் போற்றிப் பாடுங்க – மாரி ஆத்தாளைப் போற்றிப் பாடுங்க சீறிவரும் நாகம் கூட சின்னவிரல் மோதிரமாம் (தந்தனத்) 4. உமையவளைப் போற்றிப் பாடுங்க – உலகு நாயகியைப் போற்றிப் பாடுங்க கும்மிகொட்டி குரவையிட்டு கூடிவந்து பொங்கலிட்டு (தந்தனத்) 5. துர்க்கையைத்தான் போற்றிப் பாடுங்க – தூய சுந்தரியைப் போற்றிப் பாடுங்க குலமதைக் கையிலேந்தி துஷ்டர்களைச் சம்கரிக்கும் (மாரி) 6. மலைமகளைப் போற்றிப் பாடுங்க நல்ல மழைவேண்டிப் போற்றிப் பாடுங்க மண்ணுலகம் எங்கனுமே மன்னும் உயிர் வாழ்வதற்கு (மாரி) 7. தந்தனத்தோம் என்றுபாடுங்க – சிவ சக்தியத்தான் போற்றிடப்பாடுங்க கேட்டவர்க்கு கேட்டபடி கேட்டவரம் தந்தருளும் (மாரி) திருவிளக்குப் பூசை மந்திரம் ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்சக்தி! மங்கலப் பெண்ணே போற்றி! மாணிக்கச் சுடரே போற்றி! மந்தையில் அமர்ந்தாய் போற்றி! சிந்தையில் உறைந்தாய் போற்றி! திருவெல்லாம் தருவாய் போற்றி! சுந்தரித் தாயே போற்றி! சுடர்விளக் கொளியே போற்றி! கற்பகத் தருவே போற்றி! காமாட்சி அம்மா போற்றி! அற்புதம் செய்வாய் போற்றி! ஆருயிர் காப்பாய் போற்றி! பொற்பதம் பணிந்தோம் போற்றி! அற்புதம் செய்வாய் போற்றி! துர்க்கையே அம்மா போற்றி! நற்கதி தருவாய் போற்றி! ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்சக்தி! கற்பூர ஒளியே போற்றி! கல்விக்குத் தாயே போற்றி! பத்தியின் மணமே போற்றி! பக்தருக் கருள்வாய் போற்றி! ராணியின் குணமே போற்றி! நலமெல்லாம் தருவாய் போற்றி! பூவெல்லாம் மணப்பாய் போற்றி! புவனேஸ்வரித் தாயே போற்றி! ஓம்சக்தி! பராசக்தி! ஒம்சக்தி! பராசக்தி! கற்பகமே பொற்சரமே! கற்கண்டே நற்கனியே! கண்ணே மணியே! கண்ணுக்குள் ஒளியே! கதியே தாயே! காப்பதும் நீயே ஓம்சக்தி பராசகத்தி! ஒரு சங்கீதப் பாடல் பல்லவி அம்பாள் மனங்கனிந் துனது கடைக் கண்பார் – திருவடி இணை துணை என (அம்பாள்) அநூ பல்லவி வெம்பவ நோயற அன்னபர் தமக்கருள் கதம்ப வனக் குயிலே சங்கரி ஜெகதம்பாள் (மனங்) சரணம் பைந்தமிழ்ப் பாமாலை குடியுன் பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும் சிந்தையும் என்நாவுமென் நேரமும் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும் பந்த உலகில் மதியங்கி அருட் பகைவர் வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும் இந்த வரம் தருவாய் ஜெகதீஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி அம்பாள் (மனம்) இதுவு மது பல்லவி அம்பாள் நீயிரங்க காயெனில் புகலேது அம்பாள் நீஅகில ஜெகநாதன் மார்பில் உறை திரு (நீஇரங்) அநு பல்லவி தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உயிர்களுக்கும் தாயல்லவோ அம்பாள் (நீஇரங்) சரணம் பாற்கடலில் உதித்த திருமணியே செளபாக்ய பதி லட்சுமி கடைக் கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கம் புகழ் முனிவோர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பாள் ( நீயிர) அம்மனுக்கு நேர்த்திக் கடன் நேர்த்திக் கடன் என்பது யாரொருவர், தன் குறைகளைத் தீர்த்து வைக்கும்படி வேண்டி, சாமிக்கு இன்னின்ன பொருள் களைக் காணிக்கையாகச் செலுத்துகிறேன் அல்லது நோன்பு இருக்கிறேன் அல்லது தர்மம் செய்கிறேன் என்று வாக்குத் தத்தம் செய்வதாகும். வந்த துன்பங்கள் நிவர்த்தியாகனும் குறைகள் நீங்கனும் என்று வேண்டுதலை சாமி நிறைவேற்றிய பிறகோ அல்லது அதற்கு முன்போ தாங்கள் சொன்னபடி நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். ஒரு பெண் தனக்கு வந்த நோய் நீங்க வேண்டுமென்று வேண்டி, உன் சந்நிதிக்கு வந்து மாவிளக்கு எடுக்கிறேன் என்று நேர்த்திக் கடன் வைக்கிறாள். அவளுக்கு வயிற்று வலி நோய் இருக்கிறது. அது அம்மன் அருளால் குணமாகும் என்று நம்பி, வயிற்றில் மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபடுவது அவளது நேர்த்திக்கடன். வயிற்று வலி குணமானதும் அவளது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவாள். அதாவது கோவிலுக்குள் உள்ள முன் மண்டபத்தில் அந்தப் பெண் மல்லாந்து நீட்டிப்படுத்து தன் வயிற்றில், மாவிளக்கு தீபத்தை சிறிது நேரம் வைத்து பக்தியோடு அம்மனைக்கும்பிடுவது. மற்றும் முறைப்படி அம்மனுக்கு பூசைசெய்வார்கள். அங்கப் பிரதட்சணம் இது கோவில் குளத்தில் மூழ்கிக் குளித்து ஈர உடையோடு, கோவில் சுற்றுப் பிரகாரத்தில் கால்களை நீட்டிப்படுத்து, கைகளைக் கும்பிட்டபடி உருண்டு செல்வது. மூன்று முறை பிரகாரத்தை உருண்டபடியே சுற்றி தனது நேர்த்திக்கடனைச் செலுத்துவது ஆகும். இது தன் உடலை வருத்திக் கொள்ளும் ஒரு செயல் ஆகும். இதுவும் ஒரு வகை வேண்டுதலே. காரைக்கால் அம்மையார், கோவில் பிரகாரத்தில் தலையால் நடந்து சென்று தான் சாமி கும்பிவாராம். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராவர். இவர் ஒருவரே பெண் அடியார். இவருக்கு காரைக்காலில் பெரிய கோவில் கட்டி வழிபாடு நடைபெறுகிறது. வேறு எந்த நாயனாருக்கும் தனியாகக் கோவில் கிடையாது. தலை மொட்டை போடுதல் இதுவும் ஒரு நேர்த்திக் கடன். எல்லா நேர்த்திக் கடனையும் விட இது மிக அததிகமாக ஆண், பெண் இருபாலாரும் மேற். கொள்ளும் நேர்த்திக் கடன் ஆகும். பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு வயது, முடிவதற்குள் குலசாமிக்கு மொட்டை போடுவது தொன்று தொட்டு நடை முறைப் பழக்கமாக இருந்து வருகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டவர்களின் தலை முடி சென்ற ஆண்டு இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருக்கிறது. அடே அப்பா தலைமுடிக்கு இவ்வளவு மதிப்பா வீடுகளில் தேள், பூரான், பாம்பு போன்ற விஷப் பிராணிகளின் தொல்லை இருக்கக் கூடாதென்று ஒரு நேர்த்திக்கடன். இது எப்படிச் செலுத்தப்படுகிறதென்றால், வெள்ளியால் தேள், பூரான், பாம்பு உருவங்கள் செய்து உண்டியலில் செலுத்தப்படுகிறது. பாத யாத்திரை என்பது ஒரு நேர்த்திக் கடன்தான். இது அவரவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்க வேண்டிச் செய்வதாகும். இந்த பாத யாத்திரை சபரி மலை ஐய்யப்பனுக்குத் தான் அதிகம் பேர். வாழ்க ஐய்யப்பன் வாழ்க ஐய்யப்ப பக்தர்கள்! ஒருவர், நான் நினைத்த காரியம் நடந்திட்டால், பிள்ளை யாரப்பா உனக்கு நூத்தி எட்டுத் தேங்காய் சிதறுகாய் உடைக் கிறேன் என்று நேர்கிறார். இன்னொருவர், அய்யனாரப்பா எனக்கு அமோகமாக நெல் விளையனும், என்னுடைய பிள்ளைகளுக்கு கலியாணம் பண்ண வேண்டும், உனக்கு ரெட்டைக் கடாய் வெட்டி, சக்கரைப் பொங்கல் வைக்கிறேன் என நேர்த்திக்கடன் வைக்கிறார். இன்னுமொரு பெண் எனக்கு மஞ்சள் குங்குமம் நிலைக்கனும், மாங்கல்யபலம் கூடனும், வருஷா வருஷம் மறக்காமல் உன் சன்னதிக்கு வந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறேன் மாரியாத்தா தாயே என்று நேர்கிறாள். எல்லாமே தெய்வ நம்பிக்கையே. வயதான ஒரு அம்மையார், மாரியாத்தா தாயே நான் கண்ணோடு கருத்தோடு போய்ச்சேரனும், உபத்திரவப் படவிடக்கூடாது அம்மா என வேண்டுகிறார் மிக உருக்கத்துடன். இப்படிப் பலரும் பலவிதமாய் வேண்டுகிறார்கள். கேட்டவர்க்கு கேட்டபடி கேட்ட வரம் தந்திடுவாள் எங்கள் முத்துமாரி. எங்கள் இருக்கன்குடி மாரி என்று பாடுகிறார். ஒருவர் இருக்கன் குடிக்கு வாருங்கள் என்று நம்மை அன்போடு அழைக்கிறார். இருக்கன் குடி போவோமா? இருவினைகள் தீர்ப்போமா! இருவினை = முற்பிறவியில் செய்தவினை இப்பிறவியில் செய்தவினை இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு (திருவள்ளுவர்) விநாயகர் கோவில்களில் மிகப் பெரியதும் பிரசித்தி பெற்றதும் கோவை மாவட்டம் ஈச்சநாரி விநாயகர் கோவில் ஆகும். அடுத்து பிள்ளையார்பட்டி கற்ப விநாயகர் கோவிலும் புகழ் பெற்ற தலமாகும். பெரும்பாலும் எல்லா பிள்ளையார் கோவில்களும் கிழக்கு முகமாகத்தான் இருக்கும். பிள்ளையார் பட்டி கோவில் மட்டும் வடக்கு முகமாக அமைந்திருக்கிறது. ஈச்சநாரி விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் நூற்றுப் பத்து ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கோவில் செலவில் செய்து வைக்கப்படுகிறது. இது செயற்கரியதும் போற்றுதலுக்கு உரிய செயலும் ஆகும். விநாயகர், தனக்குக் கலியாணம் ஆகவில்லை என்றாலும், ஏராளமான ஏழைமக்களுக்கு தாரள மனதுடன் இலவசமாகத் திருமணம் செய்து வைக்கும் ஈச்சநாரி விநாயகரை வாழ்த்தி வணங்குவோமாக! 11 காரைக்குடி முத்து மாரியம்மன் கோவில் இந்தக் கோவில் நகரத்தில் மையப் பகுதியில் அமைந்திருக் கிறது. எந்தக் கோவிலிலும் இல்லாத அளவுக்குப் பால்குடம் எடுக்கும் மக்கள் அதிகம். ஆயிரக்கணக்கான மக்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள். அம்மன் கோவில் விழா இந்த விழாவானது ஆனி, ஆடி மாதங்களில் ஒரு செவ்வாய்க் கிழமை காப்புக் கட்டி மறு செவ்வாய்க் கிழமை கரகம் எடுத்து, அம்மனைக் கோவிலின் உள் மேடையில் நிறுத்தி வைப்பார்கள். கரகம் என்பது அம்மனது உருவமே என்று முன்பே குறிப்பிட் டிருக்கிறேன். அம்மனுக்கு பொங்கல் செய்து படைத்து வழிபடு வதோடு விழா முடிவடையும். நகரங்களில் அம்மன் சிலை இருக்கும் சிலையை நன்கு அலங்கரித்து வண்டியில் வைத்து ஊர்வலம் வருவதோடு விழா முடியும். கிராமக் கோவில்களில், காப்புக் கட்டுதல் என்றால் வைக்கோல் புரியில் வேப்பிலைக் கொம்பு, மாவிலைக் கொம்பு களைச் செருகிக்கட்டி ஒரு நீண்ட மாலை போல் ஆக்கி கோவில் கூரையைச் சுற்றிக் கட்டுவார்கள். வீதிகளிலும் குறுக்கே கட்டுவார்கள். சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும், கரகம் சுமப்பவர்களும் மஞ்சள் அல்லது காவி உடையணிந்து, கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு விரலி மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வார்கள். அன்று முதல் எட்டு நாளும் விரதமிருப்பார்கள். பெரிய கோவில்களில் கொடிமரம் இருக்கும். அதில் கொடியேற்றுவார்கள். அன்று மாலையில் நாதசுரம், மேளதாளம், தப்பு, பறை போன்ற இசைக் கருவிகள் முழங்க இந்தக் கொடியேற்று வைபவம் நடக்கும். பெரிய கோவில்களில் தினசரி நாடகம், இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். கிராமங்களில் அப்படி நடத்த வசதி போதாது. பெரும்பாலும் எட்டாம் நாள் சாமி கும்பிடுவது முடிவடையும். சில பெரிய கோவில்களில் தேர் இருந்தால் ஒன்பு தாம் நாள் தேரோட்டம் நடக்கும். அதோடு விழா முடிவடையும். பால் குடம் எடுத்தல் கையில் காப்புக் கட்டியவர்கள் எட்டுநாள் விரதம் இருப்பார்கள். இவர்களில் பால்குடம் எடுக்க நேர்த்திக்கடன் வைத்தவர்கள், அன்று பிள்ளையார் கோவில் அல்லது சிவன் கோவில் முன் உள்ள குளத்தில் அதிகாலையில் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து, அவரவருக்குரிய செம்பு, பால், மலர், மாலை, பூசைக்குரிய பொருள்களுடன் கோவில் முன் மண்டபத்தில் வரிசையாக அமர வேண்டும். கோவில் பூசாரி, ஒவ்வொரு வடைய செம்பிலும் பாலை ஊற்றி, வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மேல் பால் செம்புகளை அவரவர் முன்பாக வைப்பார். செம்புக்கு வாசனைத் திரவியங்கள் பூசி பொட்டு வைத்து, செம்பின் வாயை மஞ்சள் துணியால் கட்டுவார். மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குப் பூசை நடக்கும். பிறகு பால் செம்புக்கும் பூசை நடக்கும். பூசை முடிந்ததும் பால் குடம் எடுப்பவர்களுக்கு, கழுத்தில் மாலை அணிவித்து நெற்றியில் விபூதி பூசுவார் பூசாரி. விபூதி பூசியவுடன் சாமியின் அருள் வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள். பால்குடத்தைத் தூக்கிக் கொடுக்க, பக்தர்கள் வாங்கி தலையில் வைத்துக் கொள்வார்கள். எல்லாப் பக்தர்களும் பால் செம்பைப் பெற்றவுடன், மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் ஆட்டம் பாட்டத்துடன் பால்குட ஊர்வலம் அம்மன் கோவில் நோக்கி ஆவேசத்துடன் செல்லும். பால்குடம் கோவில் போய்ச் சேர்ந்ததும் அங்கே உள்ள நிர்வாகிகள் ஒவ்வொரு குடமாக வாங்கி அங்கு வைத்துள்ள பெரிய அண்டாவில் ஊற்றிவிட்டுப் பாதியை உடையவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அண்டாவில் நிரப்பிய பாலை அம்மனுக்கு அபிசேகம் செய்வார்கள். பால் குடத்தில் எஞ்சிய பாலை அவரவர் வீட்டுக்குக் கொண்டுவந்து வீட்டில் உள்ளவர்கள் பருகுவார்கள். எட்டு நாள் கோவில் உற்சவத்தில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடைசி நாளில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து வண்டியில் வைத்து வீதி உலா நடக்கும். வீடுகள் தோறும் அம்மன் காட்சி அளிக்க அன்பர்கள் அக மகிழ்ந்து அம்மனைத் தரிசிப்பார்கள். இந்த நிகழ்ச்சி அம்மன் வீடு தேடிவந்து அசீர்வதிப்பாள் என்பதை உணர்த்துவதாகும். 12 செளடாம்பிகை அம்மன் ‘தேவாங்கர் குல செட்டியார்’ என்ற ஓர் இனத்தாரின் குல தெய்வம் செளடாம்பிகை அம்மனாகும். இவர்களுடைய பூர்வீகம் கர்நாடகம் (கன்னடம்) மாநிலமாகும். இவர்கள், தமிழ் நாட்டில் பரவலாக வசிக்கிறார்கள். செளடாம்பிகைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சி கரகம் எடுத்தல், ஊருக்கு வெளியே கண்மாய்க் கரையோரம் ஊர் மக்கள் ஆண், பெண் எல்லாரும் கூடி பெரிய வட்டவடிவமாக அமர்கிறார்கள். குறிப்பிட்ட சில இளைஞர்கள் கையில் வாள் ஏந்தி சிலம்பம் போன்று வாள்வீசி சண்டை போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்கிறார்கள். இதற்கிடையில் கரகம் கட்டுகிறவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெறுகிறது. கூடியிருக்கும் அத்தனை பேரும் வடதிசை நோக்கிக் குரவையிட்டு (சத்தம்) கைகளை உயர்த்தி அம்மா என்று, அடிக்கடி சற்றுவிட்டு விட்டு சப்பத்தம் போட்டு கூப்பிடுகிறார்கள். இவர்களின் அழைப்பை ஏற்று செளடாம்பிகை அம்மன் கர்நாடகத்திலிருந்து கருட வாகனத்தில் வெகு வேகமாகப் பறந்து வருகிறாள். கருடன் வருவதைக் கண்டதும், பூசாரி கரகச் செம்பைத் தலையில் சுமக்க எல்லாரும் ஊர் வலமாக கோவிலை நோக்கிப் புறப்படுகிறார்கள். கருடனோ, ஊர்வலம் செல்லும் மக்கள் கூட்டத்திற்கு மேலே கோயில் வரை பறந்து வந்து பிறகு மறைந்து விடுகிறது. ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் இரண்டு கைகளிலும் பட்டாக் கத்திகளை வைத்துக் கொண்டு, மார்பிலும் தோளிலும் குத்திக் கொண்டும் வெட்டிக் கொண்டும் ஊர் வலத்தில் ஆட்டம் போட்டு நடந்து செல்கிறார்கள். சிலருக்கு உடம்பெல்லாம் இரத்தம் கசிகிறது. சிலருக்கு இரத்தம் கசிவதில்லை. ஒருவர் கூடையில் நிறைய விபூதியை வைத்துக் கொண்டு, கத்தி போடு கிறவர் உடம்பில் விபூதியை அள்ளி அள்ளி வீசிக் கொண்டே செல்கிறார். எல்லாரும் கோவிலை அடைந்ததும் கரகம், கோவில் மூல ஸ்தானத்தில் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடிவடைகிறது. மாவு பிசைதல் கரகம் கோவிலுக்குள் வைத்ததிலிருந்து இரவு பத்து மணி வரை எதோதோ பூசை நடத்துகிறார்கள். மாவு பிசைதல் என்பது ஒரு நிகழ்ச்சி. ஒரு அகலமான தட்டுப் போன்ற ஒரு பாத்திரத்தில் இடித்த பச்சரிசி மாவை வைத்து நிரப்பி அதன் மேல் கட்டி வெல்லத்தை வைக்கிறார்கள். வெல்லம் தானாக உருகி மாவின் மேல் பூராவும் ஒட வேண்டும். அது நடந்தால் மாவு பிசையப்படும். அது எப்படி முடியும் என்றால் அது அம்மனின் அருளால் தான் அப்படி நடக்கிறது. மேற்சொன்ன மாவு இடித்துத் தயார் செய்வது வயதுக்கு வராத சிறுமிகள். குடும்பப் பெண்கள் மாவு இடிக்கும் வேலை செய்யக் கூடாது. 13 சக்தி நிறுத்துதல் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய சட்டி அதில் வெண்ணையில் ஒரு திரி தீபம், சட்டியின் விளிம்பில் நான்கு அங்குல நீளமுள்ள ஒரு கத்தி சாத்தி வைக்கப்படுகிறது. அந்தக் கத்தியின் நுனி சட்டியின் விளிம்பின் மேல் பொருந்தி தலை கீழாகத் தானாக எழுந்து நிற்க வேண்டும். அப்படிக் கத்தி நின்றால்தான், உண்மையிலேயே அம்மன் கோவிலில் கொலுவிருக்கிறாள் என்பதை அவர்கள் நம்புவார்கள். அப்படியே அந்தக் கத்தி சட்டியின் விளிம்பில் தன் கூரிய முனையை நிறுத்தி எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் தலைகீழாக நிற்கிறது. அந்தக் காட்சியைக் கண்டு அந்த மக்கள் ஆனந்தக் கூத்தாடு கிறார்கள். நானும் நேரில் பார்த்தேன் அத்துடன் அம்மன் விழா முடிவடைகிறது. இந்தக் கோவிலுக்குப் பூசாரி தேவாங்கூர் இனத்தவர்தான், பிராமணர் கிடையாது. நான் பள்ளி ஆசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக ஏராளமான கும்மிப்பாடல் எழுதி இருக்கிறேன். சிறுமிகளுக்கு கும்மி கொட்டுவதில் பயிற்சி அளித்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒர் அடி கீழே. 1. கன்னியரே மீனின் கண்ணியரே – வந்து கைகளைச் சேர்த்துமே கும்மியடி கன்னித் தமிழினைக் கற்பதினால் வரும் நற்பயன் சொல்லியே கும்மியடி 2. அறிவை வளர்த்திடும் அறநெறி காட்டிடும் அன்பை வளர்த்திடும் நெஞ்சினிலே – பிறர் நேசமும் பாசமும் இணைந்து வளர்ந்திட நினைந்து பாடிக் கும்மியடி (கன்னி) சுப்பிரமணிய பாரதியாரும் கும்மிப் பாடல்கள் பாடியிருக் கிறார். உதாரணத்திற்கு ஒன்று. தாளம் – ஆதி மெட்டு – கும்மி 1. செந்தமிழ்நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே 2. கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மனம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்) இதற்கு இசை தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னானே. இத்துடன் விழாக்கள் பற்றிய விளக்கத்தை நிறுத்தி நான் எழுதிய கும்மிப் பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகிறேன் காண்க. மாரியம்மன் கும்மிப் பாட்டு – 1 இசை தன்னேனன்னே னானேனன்னே னானேனன்னே னானே தானானே னானேனன்னே னானேன்ன்னே னானே பாடல் – 1 1. அன்னை முத்து மாரிஉந்தன் அடிபணிந்தோம் அம்மா ஆதரிக்க வேணுமென்று அடிபணிந்தோம் அம்மா (தன்னே) 2. கும்மி கொட்டி குரவையிட்டு கூடி வந்தோம் அம்மா கும்பிடவே கோவிலுக்குக் கூடிவந்தோம் அம்மா (தன்னே) 3. தங்கநிற நெல்லெடுத்து பச்சரிசி குத்தி பொங்கலிட்டுப் பூசைசெய்ய பூவையர்கள் வந்தோம் 4. மக்களை நீ காத்திடுவாய் மாரியம்மா தாயே மாவிளக்கு ஏற்றிவைத்தோம் பாருமம்மா தாயே (தன்னே) 5. அன்புடனே எங்களை நீ ஆயி மகமாயி ஆதரிக்க வேனுமம்மா ஆயி மகமாயி 6. திங்களும் மும்மாரிபெய்து செழித்திடவே வேண்டும் எங்களது வாழ்வுமிங்கு செழித்திடவே வேண்டும் பாடல் – 2 இசை தன்ன னன்னே னானே னன்னே னன்னானே – னானே னானனன்னே னானனன்னே னன்னானே 1. கும்மி கொட்டிப் பாடவந்தோம் ஏலேலோ- அம்மா கும்பிடவேநாடிவந்தோம் எலேலோ (தன்ன) 2. வண்ண வண்ணப் பூக்கள் கொண்டு ஏலேலோ- அம்மா மாலை குடிப் பார்க்க வந்தோம் ஏலேலோ (தன்ன) 3. சின்னச் சின்ன ஆசைகொண்டு ஏலேலோ-அம்மா திருவிளக்கு ஏற்றிவைத்தோம் ஏலேலோ (தன்ன) 4. மற்றுமொரு ஆசைகொண்டு ஏலேலோ- அம்மா மாவிளக்கு ஏற்றிவைத்தோம் ஏலேலோ (தன்ன) 5. பொங்கல் வைத்துப் பூசைசெய்தோம் ஏலேலோ அம்மா பூவையர்கள்நாங்களுந்தான் ஏலேலோ (தன்ன) 6. மாதந்தோறும் மாரிபெய்து ஏலேலோ- அம்மா மக்கள் எல்லாம் வாழ வேண்டும் ஏலேலோ (தன்ன) 7. காலமெல்லாம் எங்களைத்தான் எலேலோ – அம்மா காப்பதுவும் உன்கடன்தான் ஏலேலோ பாடல் – 3 இசை – தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் -தன்னானே தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் தன்னன்ன னாதினம் -தன்னானே 1. கும்மியடிப்போமே கும்மியடிப்போமே கூடிக் கும்மியடிப் போமே கொம்பனையாள் மகமாயி மாரியைக் கும்பிட்டுக் கும்மியடிப்போமே (தன்னன்) 2. கதியவள் என நம்பிய பேருக்கு கருணை செய்துமே காத்திடுவாள் மதுரை மீனாட்சி மகிமை பாடியே வாழ்த்திக் கும்மி யடிப்போமே (தன்ன) 3. வாஞ்சை மிகக் கொண்டு வருகின்ற பேருக்கு மங்கள மானதோர் வாழ்வளிக்கும் காஞ்சிநகர் வாழும் காமாட்சி அம்மனை கருதிக் கும்மி யடிப்போமே (தன்னன்) 4. ஆயிரம் கண்களால் ஆதரித்து நம்மை அரவணைத்தே சுகம் அளித்திடுவாள் தாயமங்கலம் தாயான மாரியை தாழ்ந்து கும்.மியடிப்போமே (தன்னன்) 5. வசையது சொல்லும் மானிடர் யாரையும் வாட்டி வதைத்து மகிழ்ந்திடுவாள் இசை பெருகிய இருக்கன் குடியாளை ஏத்திக் கும்மியடிப்போமே (தன்ன) 6. நெருப்பினை நல்ல பூ எனச்சொல்லியே நேர்த்தியுடன் அதில் நடக்கச் சொல்வாள் பொறுப்பு மிகவுள்ள புண்ணிய மாரியை போற்றிக் கும்மியடிப்போமே (தன்ன) 7. ஆராதனை செய்வோர் ஆராயிருந்தாலும் அன்புடனே குடி காத்திடுவாள் சூராணம் வாழ்கின்ற சுந்தரி மாரியை தொழுதுகும்மியடிப்போமே (தன்ன) 8. நல்ல மழை பெய்து நாடு செழித்திட நாயகி மாரியைப் போற்றி செய்வோம் வெல்ல முடனேநல் மாவிளக் கேற்றியே வேண்டிக் கும்மி யடிப்போமே (தன்னன்) பாடல் – 4 இசை – தானனன்னேதானன்னே தன்னானே -தானே தானேனன்னே னான னன்னே தன்னானே 1. ஆதிசிவன் பார்வதியே கண்ணாத்தா-நீ ஆடுவதின் காரணந்தான் என்னாத்தா 2. சூலமதைக் கையிலேந்தும் கண்ணாத்தா – அந்த சூட்சமந்தான் என்னவென்று சொல்லாத்தா 3. நீலி என்று சொல்லுவதும் ஏனாத்தா? கொடுஞ் சூரி என்று சொல்லுவதும் ஏனாத்தா? 4. வேப்பிலையைத் தின்பதென்ன கண்ணாத்தா- அந்த வேடிக்கைதான் என்னவென்று சொல்லாத்தா 5. கண்கள் ஒருஆயிரமாம் கண்ணாத்தா – அந்த காரியத்தின் உண்மை என்ன சொல்லாத்தா 6. குங்குமந்தான் நெற்றியிலே கண்ணாத்தா – அந்தக் கோல விழிப்பார்வையிலே நல்லாத்தா 7. கும்மி கொட்டி வணங்குகிறோம் கண்ணாத்தா- எங்கள குறைகள் போக்கி அருள்புரிவாய் நல்லாத்தா (தானனன்ன) 14 திருத்தல உலா திருத்தல உலா என்பது, பேர் பெற்ற தேவாலயங்களுக்கு யாத்திரை போதல் என்ப்தாகும். இங்கே ஒவ்வொரு தேவா லயத்தின் பெருமைகளை விளக்கி அங்கு சென்று அருள் பெற்று உய்யும் படி அழகிய நேரிசை வெண்பாக்களில் மெய்யன்பர் களுக்கு வழிகாட்டுகின்றேன். செய்யும் பவ வினைகள் செந்தூர் கடல் போக்கி, அய்யன் தமிழிறையை அர்ச்சிப்போம்- செய்ய தமிழ், மாலை தனைச் சூட்ட மால்மருகன் நற்கருணை பாலைப் பொழிந்திடுவான் பார். திருச்செந்தூர் கடலில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவ மெல்லாம் தொலைந்து போகும். ஆகவே கடலில் நீராடிக் கந்தனை வழிபட வாருங்கள் என்று இந்தப்பாடல் அழைக்கிறது. மேலும் இன்பத் தமிழில் அவன் புகழ்பாடி பாமாலை சூட்டினால் தன்னுடைய கருணையாகிய அருட்பாலை நமக்கு வழங்குவான் என்பது விளங்கும். முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் தமிழ் பாமாலையை மிகவும் விரும்புவான். அதனால் பாமாலை அணிவிக்கும்படி உங்களுக்கு நான் யோசனை கூற வந்தேன் ஈங்கு, “கடல் அலை தாலாட்டும் கந்தன்திருச்செந்தூர் அடல்போற்றிப் போவோம் அங்கு – கடல் போல் பரந்த திருவுள்ளம் பார்வை அருட்கண வரமே வழங்கும் நமக்கு” கடல் ஓரத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று முருகனைப் போற்றி வணங்குங்கள். அவனது பரந்த உள்ளமும் பார்வையும் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கும் என்பது இதன் பொருள். கடல் அலை தாலாட்டும் என்பது தொட்டிலைத் தாயானவள் முன்னும் பின்னும் அசைத்து ஆட்டுவது போல், கடலானது அலை என்னும் கையால் திருச்செந்தூர்ப் பதியைத் தாலாட்டு கிறது என்பது இதன் விளக்கமாகும். கடல் பரப்பளவில் பெரியது. அதுபோல் முருகனுடைய உள்ளம் பெரியது. விசாலமானது. இங்கு முருகனுடைய உள்ளத்திற்கு கடல் உவமையானது. அடல் = வீரம், கடலின் சீற்றத்தை முருகன் தன் கை வேலால் ஒச்சி அடக்கினான் என்பது கூற்று, ”வலம்புரி விநாயகராம் வான்புகழ் கொண்டவராம் நலமெலாம் நல்கிடுவார்நாளும்-கலங்குவதேன்? பிள்ளையார் பட்டிக்கென் பின்னாலே வாருங்கள் வெள்ளிப்பணம்குவியும் வீட்டில்” பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டுள்ள வலம்புரி விநாயகரைத் தரிசித்தால் நம் வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று செல்வப் பெருக்கோடு நலமாக வாழலாம் என்பது இப் பனுவலின் பொருள். பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் பிள்ளையாருக்குத் துதிக்கை இடது பக்கம் வளைந்திருக்கும். பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருக்கிறது. அதனால் தான் இவரை வலம்புரி விநாயகர் என்றேன். ”இரு பெண்ணை நேசித்த இன்பப்புள்ளையார் இருக்கும் இடமீச்சநாரி – விருப்பமுடன் வாருங்கள் அங்கு வணங்கப் பெருமானை கோருங்கள் எல்லாம் கொடுப்பான்” இரண்டு பெண்களை மணந்து ஈச்சநாரி என்னும் திருத் தலத்தில் கோவில் கொண்டுள்ள விநாயகரை வணங்கினால் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது இப்பாடலின் பொருளாகும். விநாயகர் திருமணமே ஆகாதவர். அவர் இரண்டு பெண் களை மணந்துள்ளார் என்பது சித்தி-புத்தி இரண்டும் உடையவர் என்பது பொருளாகும். கல்வியை சரஸ்வதி என்று பெண்ணாக உருவகம் செய்திருப்பது போல், சித்தி, புத்தி இரண்டையும் பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார்கள். புத்தி என்பது அறிவு, சித்தி என்பது அறிவினால் செய்யும் அரிய செயல்கள் அற்புதம் என்பதாகும். “குன்னக்குடி மேவும் குமரப் பெருமானை உன்ன ஒளிவீசும் உள்ளம் -நன்னுதலாள் வள்ளி மணவாளன் மாண்பெல்லாம் பாடுங்கள் அள்ளி வழங்குவான் ஆசிர்” குன்னக்குடி குமரக்கடவுளை உள்ளன்போடு வணங்கினால், நமது உள்ளம் தெளிவு பெறும். குறைவில்லாத அருட்செல்வத்தை வழங்குவான் என்பது இதன் பொருளாகும். மாண்பு என்பது இச்சா சக்தியாகிய வள்ளியை மணந்த இல்லற மாண்பாகும். மாண்பு என்ற பதத்தில் அன்பு, அறிவு, ஒழுக்கம், நீதி நேர்மை, தெளிவு, அறம், மறம், பரிவு ஆகிய இத்தனை பண்புகளும் அடங்கியிருக்கின்றன. இதை விளக்கவே “மாண்பெல்லாம்” என்று கூறினேன். ”அன்பு மிகவைத்து ஆறெழுத்தை உச்சரித்தால் மன்னன் முருகன் வரமருள்வான் – வன்னமிகு வேலும் மயிலும் வினைதீர்க்க வந்துதவும் நாலும் கிடைக்கும் நமக்கு” ஆரெழுத்து மந்திரத்தை வாய்விட்டுச் சொன்னால் முருகன் நம்முன் தோன்றுவான். அவனிடம் உள்ள வேலும், மயிலும் நம் தீவினை அகற்றி நல்வழிப்படுத்தும், முருகன், முத்தியாகிய வீடு பேரின்பத்தை வழங்குவான் என்பது இதன் பொருள். ஆறெழுத்தென்பது – சரவணபவன் (ன்) நாலும் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்பதாகும். தவிர சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றும் கொள்ளலாம் இரண்டும் ஒன்றுதான். இரண்டாவதாகக் கூறியவற்றில் மூன்று நிலைகளும் செம்மையானால் நான்காவதாகிய ஞானம் பிறக்கும் ஞானத்தின் உச்சமே முக்தி – மோட்சம். “பாரெல்லாம் போற்றும் பழனிப்பதி வாழும் சீரார் முருகனைச் சேவிப்போம் – ஓர் குரலில் சொல்லுங்கள் அரோகரா தோன்றும் சுடர்வடிவேல் கொல்லும் வினையெல்லாம் கூர்” பாரெல்லாம் போற்றும் பழனி ஆண்டவனை வணங்குவோம். எல்லோரும் வாருங்கள், அவன் கையில் உள்ள வேலாயுதமே நம்முடைய பாவத்தையெல்லாம் சித்தைத்து நன்மையெல்லாம் நல்கும் என்பது இதன் பொருள். அரோகரா என்ற சொல்லுக்குப் பாவத்தை அழிப்பவன் என்றும் பொருள். ஆகவே பாவத்தால் வரும் துன்பத்தை போக்கி இன்பத்தை அளிப்பவன் பழனி முருகன். அவனைச் சேவிக்க அவனை முந்திக்கொண்டு அவன் கைவேல் அதன் கூர் முனை கொண்டு நம் தீவினைகளை சிதைத்து நன்மை செய்யும் என்பது விளக்கம். “மேற்குத் திசைநோக்கி மேலாம் தவக்கோலம் ஏற்று இருக்கும் இறையரசு – ஆற்றுக்குள் ஊற்றாய்க் கிளம்பி உதவிடுவான் பேரருளை போற்றும் பழனிக்குப் போ” முருகப் பெருமான் பழனி மலை உச்சியில் மேற்கு முகமாக நின்று தவம் செய்கிறான். அவனை வேண்டுங்கள், ஆற்றுக்குள் மணலில் ஊறும் நீர் குடிக்க உதவுவது போல் முருகன் நாம் கேட்பதெல்லாம் வழங்குவான் என்பதாம். இங்கு அமுதம் போன்ற நன்னீரை ஆறு தன் ஊற்றுப் பெருக்கால் மக்களுக்கு வழங்குவது போல், முருகன், தன் அருள் வெள்ளத்தைத் தாராளமாக வழங்குவான் என்பதாம். “பரன்குன்றம் பாலன் படைவீடு காண வரவேண்டும் பக்தர் வரிசை – முருகன் குணமான வள்ளி குலதெய்வ யானை மணக்கோலம் கண்டு மகிழ” முருகனுடைய ஆறு படைவீடுகளில் திருப்பரங்குன்றம் தான் முதல் வீடாகும். இந்த வீடாகிய ஆலயத்தில், முருகன் வள்ளிதெய்வானையாகிய இரு பெண்களோடு திருமணக் கோலத் தோடு காட்சி தருகிறார். பக்தர் எல்லாரும் வாருங்கள், கலி யாணத்தைப் பாருங்கள் என்று அழைக்கிறது இந்த வெண்பா. பக்தர் வரிசை = பக்தர் கூட்டம் குணமான வள்ளி = நாற் குணங்களும் நிறைந்த வள்ளி (அச்சம், மடம், நாணம், பயிற்பு) குல தெய்வானை = குடிப்பெருமை உடையவள். குடி = குடும்பம். தெய்வானை இந்திரன் மகள். இந்திரன் மழைக் கடவுள். மழை யின் பெருமைகளை விவரிக்க வேண்டியதில்லை. மழைதான் தெய்வானை. மழையின் பெருமை எதுவோ அதுவேதான் தெய்வானையின் குடிப் பெருமை. “பொன்னும் அணிமணியும் போகப் பெருவாழ்வும் குன்றாதளிப்பான் குமரேசன் – என்றென்றும் இல்வாழ்வின் மேன்மைக் கெடுத்துக்கடாய் விளங்கும் வல்லான் குருபரனை வாழ்த்து” திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும் முருகனை வாழ்த் துங்கள், திருமணத் தாம்பூலம் மட்டுமல்ல, ஆடை, அணி கலன்கள் தங்கத் தாம்பாலத்தோடு வரும் என்று கூறுகிறது. இந்த வெண்பா. மேலும் இல்லற வாழ்க் கைதான் சிறந்தது என்பதை மாந்தர்க்கு விளக்குகிறது. இந்தக் கலியாணக் காட்சி. முருகன் திருக்கல்யாணம் என்பது வாழ்க்கைத் தத்துவம்தான். “புயல்வண்ணன் புனல் வார்ப்பப் பூமிசையோன் தொழில் காட்டப் புவன வாழ்க்கை, செயல் வண்ணம் நிலை நிறுத்த மலைமகளை மணந்தவனைச் சிந்தை செய்வாம். இது புலவர் ஜெயங்கொண்டாரின் கூற்று” அதாவது திருமால், மலையரசன் மகளும், தன் தங்கையு மாகிய பார்வதி தேவியை சிவனுக்குத் தாரை வார்த்துக்கிறான், பிரமதேவன் மந்திரம் ஒத, சிவன் பார்வதிக்கு மாலை சூட்டி மணக்கிறான். எதற்காக என்றால் உலகில் இல்வாழ்க்கையே சிறந்தது என்னும் தத்துவத்தை நிலை நாட்டுவதற்கு இதே செய்தியைத்தான், முருகன் வள்ளி, தெய்வானை திருமணக் காட்சியும் விளக்கிச் சொல்கிறது. “அழகர் மலையேற அன்பர்களே வாருங்கள் பழமுதிர் சோலைதான் பார்க்கலாம் – பழமானான் ஞானக்கண் வள்ளியின் நாயகன் தாழ்பணிவோம் ஞானம் கிடைக்கும் நமக்கு” இதன் பொருள் பழமுதிர் சோலை என்பது அழகர்மலை மேல் உள்ள முருகன் திருத்தலமாகும். அருணகிரிநாதர், பழமுதிர்சோலை மலை கிழவோனே என்று இங்குள்ள முருகனைக் குறிப்பிடுகிறார். இது பசுமையான சோலைகள் நிறைந்த இடம். இந்தக் குளிர்ச்சியான இடம் பார்த்து முருகன் கோயில் கொண்டுள்ளார். ஞானப் பழமான வள்ளிக் கணவனை வணங்கினால் நாமும் ஞானம் பெற்று வாழலாம் என்பதாகும். மேலும் அதைத் தாண்டி மலை உச்சியில், கங்கை அம்மன் கோவில் இருக்கிறது. ஒரு தீர்த்தக் குளமும் இருக்கிறது. அதில் நீராடினால், புனித கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்குக் கிடைக்குமா என்று கேட்காதீர்கள். முழுமனதையும் முருகனிடம் கொடுங்கள் நிச்சயம் கிடைக்கும். “திருத்தணிகை காணலாம் சீலர் வருக வருத்தம் தனைவிடுங்கள், வள்ளல்-முருகன் இருக்கின்றான் வந்த இடர்போக்கி இன்பம் தருவான்தணிகை அரசு” வருத்தம் எதற்கு? வாருங்கள் தணிகை மலைக்கு. இருக்கவே இருக்கிறான் முருகன். குறையெல்லாம் சொல்லிக் கும்பிடுவோம், துன்பமெல்லாம் பஞ்சாய்ப் பறந்திடும் என்று இப்பாடல், அல்ல லுறும் மனதுக்கு ஆறுதல் கூறுகிறது. சீலர் = பக்தி மார்க்கத்தில் ஒழுகும் குணசீலர். வள்ளல் = வரையாது கொடுப்பவன். இல்லையென்று சொல்லாமல் வழங்குகிறவன் முருகன். வேண்டும் வரங்களையெல்லாம் வரையாது வழங்கும் வள்ளல் என்பது இதனால் விளங்கும். “சாமி மலைவாழும் சங்கரன் மைந்தனாம் பூமி புகழ்கின்ற புண்ணியனாம் -நாமிவனை கண்டு வணங்கிடக் காவிரியில் நீராடி பண்டு வினை போகும் பார்” சாமி மலைப் பக்கத்தில் உள்ள காவிரியாற்றில் நீராடி, சாமி மலை படியேறிச் சென்று மலைமேல் கோயில் கொண்டுள்ள முருகனை வணங்கிட நாம் முன் செய்த தீவினைகள் நீங்கும். முருகன் அருள் கிடைக்கும் என்பது இப்பாடலின் பொருள். சங்கரன் = சூரனை சங்காரம் செய்த சிவன். இவனுடைய மைந்தன் முருகன். தகப்பனைப் போலவே மகனும் தீமைகளைச் சங்காரம் செய்யக்கூடிய குணம் உடையவனாம் என்பது விளங்கும். புண்ணியன் என வரும் சொல், தருமவான், ஈகையுள்ளவன், இரக்கப்படுவன் என்பது பொருள்படும். பூமி=உலகில் உள்ள மக்கள். பண்டு=பழைய. அதாவது முற்பிறவியில் செய்த பாவம். இலங்கையில் சீதையைக் கண்டுவந்த அனுமன், பண்டுள்ள துயரெல்லாம் துரத்துங்கள் என்று இராமபிரானைப் பார்த்துக் கூறினான். “மாட மதில்சூழும் மாநகர் கூட வெனும் தேடற் கரியதாம் தென்மதுரை-நாடிமுன் ஆடல் பலபுரிந்த ஆண்டவன்தாள் வணங்க நாடி வருஞ்செல்வம் நம்மை” மதுரை மாநகரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கினால், விரும்பும் செல்வமெல்லாம் கிடைக்கும். ஆகவே, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு யாத்திரை செய்யுங்கள் என்று இப்பாடல் கூறுகிறது. தேடர்க்கரியதாம் பலவாறான பழம் பெருமை வாய்ந்தது. மாமன்னர் செங்கோல் ஒச்சிய பெருமை, தமிழ்ச் சங்கம் வளர்த்த பெருமை, சோமசுந்தரக் கடவுளாகிய சிவபெருமான் செய்த திருவிளையாடல் ஆகிய பெருமைகளையுடையது மதுரை. இன்னும் நாற்சதுரமான வீதியும் நான்மாடக் கூடல் ஆன பெருமையும, வைகை நதியின் இருபுறமும் நகர் அமைந்துள்ள பெருமையும், எல்லாவற்றுக்கும் மேலாக நகர் மத்தியில் கோவில் அமைந்துள்ள பெருமையும் வியந்து போற்றுதற்குரியதாகும். “மங்கை தடாதகையை மாலையிட்ட அந்நேரம் அங்கப் புதுமை அகன்றதுவே – பங்கமுள்ள மன்னன்துயர்துடைத்த மாமதுரைச் சொக்கனவன் கன்னன் நமக்குமவன் காண்” செளந்தர பாண்டிய மன்னன் மகள் தடாதகைப் பிராட்டியை, சிவபெருமான் கைலாயத்திலிருந்து வந்து மாலை சூட்டி மகிழ்ந்தார். அப்பொழுது அவள் உடலில் இருந்த ஒரு குறை மறைந்தது. அது கண்ட மன்னன் தான் கொண்டிருந்த துயர் நீங்கப் பெற்றான். அதுபோல நமது துன்பத்தையும் சொக்கநாதர் நீக்குவார் என்று இந்த வெண்பா கூறுகிறது. மதுரையை ஆண்ட செளந்தர பாண்டியன் என்பவனின் மகள், தடாதகை என்பவளுக்கு மார்பில் மூன்று தனங்கள் இருந்தன. அதைக் கண்ட மன்னன் மிகவும் கவலை கொண்டிருந்தான். ஆனால் அவள் பருவமடைந்ததும் சிவபெருமானே நேரில் வந்து அவளை மணந்தார். அப்பொழுது அவளது மூன்று தனங்களில் மத்தியில் இருந்த ஒன்று மறைந்தது. அது தெரிந்ததும் மன்னன் முன்பு கொண்டிருந்த கவலை ஒழிந்து மகிழ்ச்சியடைந்தான். அதுபோல் நாம் சொக்கநாதப் பெருமானை வணங்கினால் நமது கவலையெல்லாம் நீங்கும் என்பது விளங்கும். பங்கம்-இழிவு-குறை. புதுமை=விநோதமானது. சொக்கன்சோமசுந்தரக்கடவுள். கன்னன்=கொடை வள்ளல் கர்ணமாராசன். “சிவனார் நடஞ்செய்த தில்லைக்குப் போவோம் அவராலே எல்லாம் ஆகும் – புவனமதில் நல்லோர்கள் நட்பும் நலமான வாழ்வுகளும் எல்லாம் பெறலாகும் ஈங்கு” தில்லை என்னும் சிதம்பரத்தில் நடனமாடிய சிவபெருமானை வணங்கினால் நல்லவர் நட்பும், நல்வாழ்வும் பெறலாம் என்று இந்த வெண்பா கூறுகிறது. தில்லை என்பது சிதம்பரம். தேவாரம் பாடிய மூவராலும் சிறப்பித்துப் புகழ்பெற்றதாகும் இத்தலம். பராந்தக சோழன் ஆண்டகாலத்தில் கோபுரத்தின் மேற்பரப்பு முழுவதும் பொன் ஒடு வேயப்பட்டுள்ளது. அந்த காலத்தில் வேறு எந்தக் கோவி லுக்கும் பொன் ஒடு போடப்படவில்லை. இங்கு சிவபெருமான் சிலை, ஒரு காலைத் தூக்கி நடனம் ஆடுவதுபோல் செய்யப் பட்டுள்ளது. “அப்பனைமுன் கானா அகமுருகா மெய்விதிரா தொப்பென வீழ்ந்துதுதிசெய்தால் – எப்பவுமே இல்லையென மாட்டான் எருதுர் நடராசன் தில்லைப் பதிவாழும் தேவன்” பொருள்-தில்லை என்னும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ள நடராசப் பெருமானைக் கண்டு மனம் உருகி, அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கினால் அன்பருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதெல்லாம் கொடுப்பான். காணா-கண்டு. அகம் உருகா-மனம் உருகி. மெய்விதிரா= பக்தியில் உடல் நடுங்கி, எருதுர்-காளை வாகனத்தில் வரும் சிதம்பரம் கோவில் மூலவர் நடராசப் பெருமான். இவர் அங்குள்ள பொன்னம்பலத்தில் நடனம் ஆடியதால் நடராசன் என்ற பெயர் பெற்றார். இல்லையெனமாட்டான். சிவனை வேண்டித் தவம் செய்தவர் களுக்கெல்லாம் கேட்டபடி வரம் கொடுத்தார். ஒருவன், “யாரும் தன்னை வெல்ல முடியாத வரம் வேண்டுமென்று” கேட்க, அவ்வாறே அவனுக்கு வரம் கொடுத்தார். அதனால் வரும் நன்மை தீமையை நினைத்துப்பார்ப்பதில்லை மற்றும் ஓர் அரக்கன், யார் தலையில் நான் கை வைத்தாலும் அவன் உடனே எரிந்து போக வேண்டுமென்று வரம் கேட்க அப்படியே தந்தேன் என்றார். அவன் உடனே சோதித்து பார்க்கிறேன் என்று சொல்லி வரம் கொடுத்தவர் தலையில் கை வைக்க முயன்றான். அதைக் கண்ட சிவன் பயந்து ஒட, இதைக் கண்ட அரியாகிய மகா விஷ்ணு அந்த அரக்கனைக் காலால் உதைத்துக் கொன்றார், சிவன் தப்பித்தார். இப்படிப் புராணம் கூறுகிறது. சிதம்பர தரிசனம் என்பது அந்தக் காலத்தில் கிடைத்தற்கரிய தாகக் கருதப்பட்டது. தில்லையில் அக்காலத்தில் பெரும் பாலோர் அந்தணர்கள்தான். அவர்களைத் தில்லை மூவாயிரவர் என்று குறிப்பிட்டார்கள். இன்றும் இங்கு இவர்களுடைய ஆதிக்கம்தான் அதிகம். பெரிய கோவில்களையெல்லாம், தமிழக அரசு தன்மேற் பார்வையில் கொண்டு வந்துவிடடது. ஆனால் சிதம்பரம் கோவில் மட்டும் தமிழக அரசின் கண்காணிப்பில் கொண்டு வரமுடியவில்லை. சிதம்பரம் நடராசப் பெருமானுக்கு அன்று இருந்த பெருமை இன்று இல்லை. சிவனார் அன்று ஆடியது போல் இன்றும் அந்தப் பொன்னம் பலத்தில் நடனம் ஆடினால்தான் மக்கள் கூடுவார்கள் என நினைக்கிறேன். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டியில் “மானாட மயிலாட’ நடனம் பார்ப்பவர்கள் நடராசர் ஆட்டத்தைப் பார்க்கப் போவார்களா என்பது சந்தேகந்தான். இருந்தாலும் திருத்தல உலா என்ற முறையில் அன்பர்களைச் சிதம்பர தரிசனத்திற்கு அழைக்கிறேன், வருக. அடுத்து “திருவரங்கம் என்னும் திருத்தலம் போவோம் இருபெரும் ஆற்றுக் கிடையில் இருக்கும்மால் காக்கும் கடவுளாம் கார்முகில் போலன்பர்களை ஏக்கம் விடுபடும்பார் ஈங்கு” திருவரங்களம் கோவிலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை வணங்குவோம் வாருங்கள் என்று அழைக்கிறது இந்த வெண்பா. ஊரும் திருவரங்கம், பேரும் திருவரங்கன். இந்தத் திருத்தலம், காவிரி கொள்ளிடம் ஆகிய இரு ஆற்றுக்கிடையில் உள்ள சமவெளியில் அமைந்திருக்கிறது. இந்தப் பெரிய கோவிலில் இருக்கும் பெருமான் மக்களைக் காத்து இரட்சிப்பவன் ஆவான். கரிய மேகம் மழையைப் பொழிந்து மக்களைக் காப்பாற்றுவது போல, பெருமாள் தன் கருணை மழையால் மக்களைக் காப் பாற்றுகிறான் என்பது விளக்கம். இங்கு கார்முகில் பெருமாளுக்கு உவமையாக வந்தது. திருமால் கரிய மேனி கொண்டவன், வழங்குவதிலும் மழையைப் போன்றவன் என்பதால் இரு வழியும் உவமை பொருந்துவதாயிற்று. ஏக்கம்-எதிர்பார்ப்பு. அதாவது எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்குமா? கிடைக்காதோ என சந்தேகத்தில் மனதில் கவலை கொள்வது. திருவரங்கம் சென்று ரெங்கநாதனை வழிபட்டால் நாம் கோருவது கிடைக்கும். கவலை வேண்டாம் என்று இங்கு ஆறுதல் சொல்லப்படுகிறது. ஏக்கம் விடுபடும் என்று உறுதிபடக் கூறுகிறது இச்சொற்றொடர். “நாராயணனாயநமவென்னும் மந்திரத்தை கூறா இரணியனைக் கொன்றானை-வீரமிகு சிம்மமாய் நின்றானைச் சீரங்கம் கொண்டானை நம்பித் துதித்திடுவோம் நாம்” நாராயணன் என்ற திருமாலை வணங்க மறுத்தான் இரணிய மகாராசன். அவனைத் திருமால் நரசிம்ம உருவெடுத்துக் – கொன்றார். அவனேதான் திருவரங்கத்தில் பள்ளி கொண் டிருப்பவன். அவனை வணங்கினால் நலம் பெறலாம் என்பது – இந்தப் பாடலின் பொருளாகும். சீரங்கம் என்பதும் திருவரங்கம் என்பதும் ஒன்றுதான். இரணிய மகாராசனின் மகன் பிரகலாதன். இரணியனின் ஆட்சிக் காலத்தில் அவன், தான்தான் கடவுளென்றும், தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும் கடுமையான சட்டம் போட்டிருந்தான். பள்ளியில் படிக்கும் குழந்தை, முதலில் “இரணியனாய நம” என்று வணங்கித்தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும். பிரகலாதனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர், இரணியனாய நம என்று சொல்லச் சொன்னால் அவன், “நாராயணனாய நம” என்று சொல்லுவான். இரணியனை வணங்க மறுத்துவிட்டான். இந்தச் செய்தி அறிந்த இரணியன், மகனை i வன்மையாகக் கண்டித்தான்; தண்டித்தான். அதற்கெல்லாம் பிரகலாதன் பயப்படவில்லை. மகன் மீது கோபம் கொண்ட இரணியன், பிரகலாதனைப் பார்த்து, “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? காட்டடா என்று கோபாவேசமாகத் திட்டினான். அதற்கு பிரகலாதன், நாராயணன் எங்கும் இருக்கிறான், இங்கேயும் இருக்கிறான், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்று பதில் கூறினான். இந்தத் தூணில் இருக்கிறானா? என்று கேட்டு, எதிரில் இருந்த தூணில் ஓங்கி உதைத்தான். அப்பொழுதுதான் திருமால் நரசிங்க உருவெடுத்து இரணியன் மீது பாய்ந்து அவனைக் கொன்றார் பகவான். நரசிங்கம்=மனித உடலோடு சிங்கத்தின் தலையை” உடைய பயங்கர உருவம். மந்திரம் என்பது பக்திச் சொல். “நாராயணா’ என்ற திருமாலின் பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி நம் மனதுக்குள் பதிப்பது தான் மந்திரம். “திருப்பதி சென்றால்தான் சேமம் கிடைக்குமென்றால் பருப்பொருள் வேண்டுமே பையில் இருப்புள்ளோர்போகலாம் ஏழ்மலையும், புண்ணியமும் தேடலாம் ஆகனுமே எல்லார்க்கும் அது” அன்பர்களே காசி ரெண்டெழுத்தாயினும் காண்பது எந்தக் காலமோ என்று யாரோ எப்பவோ சொல்லிவைத்திருக்கிறாள் அது சரிதானே. போக்குவரத்து வசதி பெருகியுள்ள இந்தக் காலத்தில் கூட சாமான்ய மக்களுக்கு காசி என்பது எட்டாக் கணிதான். அது ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கப்பால் உள்ள தல்லவா. செலவுக்குப் பணம் நிறைய வேண்டும் பணம் இருந் தாலும் போக மனம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாத வர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், இறைவன் அங்கும் இருப்பான். இங்கும் இருப்பான் என்பதால், நெஞ்சில் நினைத்தால் வருவான் வேங்கடத்தான், நினைந்து வணங்குவோமாக! “இருக்கும் இடம்தேடி ஏழ்மலையும் தாண்டி வருவான் முகிலன் மகிழ்ந்து – உருக்கமுடன் வேண்டுங்கள் கைகுவித்து வேங்கடவன் கண்பார்ப்பான் வேண்டும் வரமருள்வான் விரைந்து” முகிலன்=மேகம் போன்ற கரிய மேனி உடையவன் திருப்பதி வேங்கடாசலபதி திருப்பதி செல்ல முடியாதவர்கள். வேங்கடாசலபதியை மனதில் நினைத்து வணங்கினால் போதும் உடனே வருவான், அருள் புரிவான் என்று இந்த வெண்பா கூறுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியை வணங்குவதற்கு பணம் படைத்தவர்கள்தான் அங்கு செல்ல முடியும். சென்றாலும் ஒருநாள் முழுவதும் வரிசையில் நின்றால்தான் சாமியை தரிசிக்க முடியும். எப்போதும் பக்தர் கூட்டம் இருந்து கொண்டே இருக்குமாம். நாம் அங்கு சென்று சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருப்பதி சீனிவாசப் பெருமாளை மனதில் நினைத்தால் போதும் அங்குள்ள பெருமாள் இங்கு வருவார். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே வணங்குங்கள் என வழிகாட்டுகிறேன். திருப்பதிக்கு சாமி கும்பிடப் போகிறவர்கள் லட்சக்கணக்கில் உண்டியலில் பணம் போடுகிறார்கள். தங்க நகைகளும், வைர நகைகளும் உண்டியலில் போடுகிறார்கள். ஒரு ஆள் தூக்க முடியாத கனமுள்ள தங்க கிரீடம் தானம் பண்ணுகிறார்கள். ஒருவர் எழுபது கிலோ எடையுள்ள வைரக்கிரீடம் சமீபத்தில் ஏழுமலையானுக்கு வழங்கியிருக்கிறார். நாலுபேர் கூடி இதைத் தூக்கி சாமி தலையில் வைக்கிறார்களாம். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால், தெய்வீக சிந்தனைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றே விளங்கவில்லை. ஆனால் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. முன்னாளில், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் என்பவர் ஏழையின் பண ஏக்கத்தை விளக்கும் விதத்தில் பாடுகிறார். பணத்தை எங்கே தேடுவேன் – பாழும் பணத்தை எங்கே தேடுவேன். திருச்சி மலைரயிலில் சென்றுவிட்டாயோ திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ எங்கே தேடுவேன் – பணத்தை எங்கே தேடுவேன். இதுதான் நினைவுக்கு வருகிறது. திருப்பதி வாழ்க! திருமாலும் வாழ்க! இருப்பு இல்லாதர் எல்லாரும் வாழ்க! “திருப்பதி வாழ்க!திருமாலும் வாழ்க! இருப்பில்லார் எல்லாரும் வாழ்க! – உருக்கமுடன் தெய்வந் தொழுவாரும், சீரங்கம் செல்வாரும் வையந் தனிலென்றும் வாழ்க!” மேலும் நம்மாழ்வார் பாசுரசம் ஒன்றும் காண்க! வந்தாய்! என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தா கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ சிந்தாமணியே திருவேங்கட மேய எந்தாய் இனியான் உன்னை விடேனே! (ஆறுபடை வீடுகள் வெண்பாவில்) “திருப்பரங் குன்றம், திருத்தணிகைக் குன்றம், திருச்செந்தூர், சோலை, பழனி – விருப்பமுடன் காவி உடையணிந்தான் கந்தன் படைவீடு சாமி மலை எனவும் சாற்று” சோலை = பழமுதிர் சோலை – அழகர் மலை தென் திருப்பதி எனப் போற்றப்படும் அரியக்குடி பெருமாள் திருத்தலம் காண்போம் வாரீர் அன்பர்களே! வெண்பா “தென்தேர்ப் பதினைவே சீரோங்கும் வானுலுகம் அன்ன, அரியக் குடிதனிலே – இந்நாள் திருவேங்கடமுடையான் செய்வான் நலந்தான் கருது அவனருளே கான்” இதன் பொருள் – அரியக்குடி, ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு சமமான பெருமாள் திருத்தலம் உள்ள ஊராகும். இந்தத் திருத்தலத்தில் உள்ள பெரிய கோவிலில் குடிகொண்டுள்ள பெருமாளின் பெயர், திருவேங்கடமுடையான் என்பதாகும். தாயார் அலர்மேலு மங்கையாகும். இந்தத் திருவேங்கடம் உடையானைத் தரிசித்தால் அன்பர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும் என்பதாகும். இத்தலம், காரைக் குடிக்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருப்பதி போன்று பிரசித்தி பெற்றது. பழம்பெருமையும் வாய்ந்தது. சென்னை மாநகரிலிருந்து இக்கோவில் வழி பாட்டுக்குப் பக்தர்கள் வருகிறார்கள் என்பதிலிருந்து இதன் பெருமை நன்கு விளங்கும். அன்பர்களே இக்கோவிலின் பெருமை பற்றிக் கூறிய நான், திருவேங்கடம் உடையானைத் தரிசிக்க வாருங்கள் என்று அழைக்கிறேன். வழிகாட்டுகிறேன். தெய்வ சிந்தனையை வளர்த்து வாழ்வாங்டகு வாழ்கவென, திருவேங்கடம் உடையானை வணங்கி வாழ்த்துகிறேன். வானுலம் அன்ன = தேவலோகம் போன்ற கருது = நெஞ்சில் நினைத்து வணங்கு கலிப்பா அரியக் குடிவாழும் அலர்மேலு மங்கை மணவாளன் பெரிய பெருமாளாம் பெயர் திருவேங் கடமுடையான் அரிய வரங்கள் அன்புடன் வழங்கிட அவனருள் புரிய வணங்கிடு புதுமலர்ப் பாதந்தான் போற்றியே. இதன் பொருள்: பெருமாள் என்று சொல்லப்படுபவர் மகாவிஷ்ணு. இவர்வதான் உயிர்கள் அனைத்தையும் காக்கும் கடவுள். ஒரே கடவுள் மூன்று திருநாமங்களைப் பெற்றுள்ளார். எதனால் என்றால் அவர் செய்யும் தொழில் சம்மந்தம் பற்றியதாக அமைகிறது. உயிர்களைப் படைக்கின்ற போது அவருக்குப் பிரமம் என்றும், காக்கும் தொழில் செய்கின்ற நேரத்தில் விஷ்ணு என்றும், அழிக்கும் தொழில் செய்யும் போது ருத்திரன் எனறும் ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். பரிசுத்த ஆவியே ஆன்மா கடவுள் என்று ஒரு சாராரும், பரமாத்மா (ஆன்மா-பரிசுத்த ஆவி தான் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்லுவதை ஒப்பு நோக்குங்கால் இருவர் கருத்தும் ஒன்றுபடுவது சிந்திக்க வேண்டிய விஷயம். பிதா, சுதன், பரிசுத்த அவி என்று கிறித்துவம் சொல்லுவதை நாம் ஆய்ந்து பார்க்க வேண்டும். மகாவிஷ்ணுவின் மறுபெயர் தான் பெருமாள். இவருக்கு திருப்பதியில் பெரிய கோவில் உள்ளது. திருப்பதிக்கு வேறு பெயர் திருவேங்கடம். ஊரின் பெயராலேயே, திருவேங்கடம் உடையான் என்று அழைக்கப்படுகிறார். அந்தத் திருவேங்கடம் உடையானை வழிபட்டு வீடுபேறு அடைவோமாக. பிள்ளையார்பட்டி விநாயகர் இலவசத் திருமணம் செய்து வைப்பதில்லை. காசு வாங்கிக் கொண்டுதான் கலியாணம் பண்ணி வைக்கிறார். இவருக்கு வரும் வருமானத்திற்கு, தாரளமாக இலவசத் திருமணங்கள் செய்து வைக்கலாம். ஒரு நூறு பேர் கையெழுத்துப் போட்டு, இலவசத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விண்ணப்பம் கொடுப்போமா? அரச மரத்து பிள்ளையாரைச் சுற்றி வந்து வணங்கப் பிள்ளை யில்லாத பெண்கள் பிள்ளை பாக்கியம் பெறுகிறார்கள். இன்றைக்க கும் பிள்ளையாரிடம், பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தனை செய்யும் பழக்கம் இருக்கிறது. பிள்ளையார் சுழி போட்டுச் செயலெதையும் தொடங்க வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்லி வைத்த மந்திரம். பிள்ளையார் சுழி என்பது தமிழில் உள்ள ‘உ’கரம் ஆகும். ஒரு செயலில் நாம் இறங்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்க ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் அந்த மந்திரம். எதை எழுத ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும். இது தொன்று தொட்டு உள்ள பழக்கம். அப்படிச் செய்தால் தான் நாம் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை. இந்தக் கருத்தில்தான் விநாயக ருக்குச் சித்தி விநாயகர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலை நாட்டுக் கல்வி முறையாலும் கலாச்சாரத்தாலும், நம்மில் பலருக்குத் தெய்வீக சிந்தனையே இல்லாமல் போய்விட்டது. அது வேண்டும் என்பதை வலியுறுத்தவே, அடியேன் இந்த நூலை எழுத முயன்றேன். ‘விநாயகர் தோர்த்திரம்’, ‘விநாயகர் அகவல் போன்ற சிறு . நூல்களை நம் முன்னோர் அருளிச் செய்துள்ளார். அந்த முறையில் அடியேனும் விநாயகர் துதி பாடுகிறேன். பக்தர்கள் படித்துப் பயனடைவர்களாக! 15 விநாயகர் துதி விநாயகப் பெருமானை வணங்கினால் 1. ஞானம் தரும் மோனம் தரும் நன்னெறியில் வாழ்வு தரும் வேதந்தரும் வித்தைதரும் விநாயகரின் ஒளிமுகமே 2. செல்வந்தரும் திருவும் தரும் செந்தமிழில் பாடல் தரும் காவல் தரும் கலைகள் தரும் கணேசரது கண்மலரே 3. பாசந்தரும் நேசந்தரும் பரமபத வாசந்தரும் கண்குளிரக் காட்சிதரும் கணேசரது கனைகழலே 4. பத்திதரும் புத்தி தரும் பாமரர்க்கும் முத்திதரும் நம்பிக்கை வைப்போர்க்கு தும்பிக்கை உதவிதரும் (கஜமா முகனே! அருள்வாய் பரனே!) 5. மணமேமிகு மலராலுனை தினமும்ஒரு கணமாகிலும் மறவாதுனை வணங்கும் மனம் அருள்வாய்குரு கஜமாமுகா 6. மனம் மேவிய மருள் நீங்கிட குணமாகிய நலம் வாய்திட-உன் நினைவாகிய மனம் வாய்ந்திட அருள்வாய்குரு கஜமாமுகா 7. பவமாகிய வினைநீங்கிட தவமாகிய செயல் ஓங்கிட அறமாகிய வினை ஆற்றிட அருள்வாய்குரு கஜமாமுகா. நம்பிக் கரம் சேர்த்துநாள் தோறும் சேவிக்க தும்பிக்கை தோன்றும் துணை. (குறள்) (விநாயகருக்கு அர்ச்சனை மந்திரம்) ஞால முதல்வனே நல்ல கணபதியே மூலப் பொருளே முத்திக்கு வித்தே வித்தைக்கு குருவே வெற்றிக்கு அருளே செந்தூர வண்ணா தந்தவாய் மன்னா நால்வேதக் கைய நவசக்தி ஐயா ஒளிவீசும் கண்ணாய் உன்பாதம் போற்றி அன்போடு வந்துநின் அர்ச்சனை செய்வார்க்கு பொன்னான வாழ்வும் புரைதீர்த்த செல்வமும் எந்நாளும் அருள்வாய் இன்பவிநாயகா! சித்தி விநாயகா போற்றி! செல்வ விநாயகா போற்றி! முத்தி விநாயகா போற்றி! முக்கண் விநாயகா போற்றி! சத்தியின் மகனே போற்றி! அத்தியின் முகனே போற்றி! தத்துவப் பொருளே போற்றி! சற்குரு ஐயா போற்றி! அப்பனேபோற்றி! அய்யனே போற்றி! வேதமே போற்றி! நாதமே போற்றி! போதமே போற்றி! புண்ணியா போற்றி! இன்பமே போற்றி! இறைவனே போற்றி! போற்றியோ போற்றி! பொற்பாதம் போற்றி! கிராமப் புறங்களில் தெருவின் முச்சந்தியில் அம்மாமேடை அமைத்திருக்கிறார்கள். அதற்கு முளைக் கொட்டுத்திண்ணை என்று பெயர். இதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன. முளைக்கொட்டு என்பது கும்மியடிப்பது தான். பகல் முழுவதும் வேலை செய்து களைப்படைந்த இளம் பெண்கள் முன்னிரவில் நிலாக் காலங்களில் கும்.மியடிப்பதை விளையாட்டாகச் செய்து வந்தார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. அதோடன்றி அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு வளர வாய்ப்பளித்தது. மேலும் ஒருவரை புரிந்து கொண்டு நட்பை வளர்க்கவும் உதவியது. இசை ஞானமும் கிடைத்தது. 16 கும்மிப் பாடல்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள், நல்லறிவாளர்கள், யோகிகள் ஆகியோர் கும்மிப்பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அது பெரும்பாலும் அம்மனைப் பற்றிய பாடல்களாகவே இருக்கும் பிற்காலத்தில் தேசப் பற்று சம்மந்தமாகவும், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் முறையிலும் கும்மிப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ‘அகவல்’ என்ற சொல்லுக்கு ஓசை என்பது பொருள். ஒசை பலவிதம். பூனை கத்தும் யானை பிளிரும், குயில் கூவும், மயில் அகவும் மயில் அகவுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அது பிசாசு கத்துவதைப் போல் இருக்கிறது. ஆனால் அந்த ஓசையைத்தான், அகவுதல்’ என்று பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. நான் வேறு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். கவனிக்கவும். ‘அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா இதில் வரும் ஓசை கெஞ்சுதல்’ ஒரு தாயானவள், வாங்க வாங்க என்னைப் பெத்தாஆறு வாங்க! இதில் வரும் ஓசை கொஞ்சுதல்’ அடுத்து அகவலுக்கு வாருங்கள், வருவாய் முருகா! மாலன் முருகா! அருள்வாய் குருவே! அடியேன் சரணம்! சரணம்! சரணம்! மலரடி சரணம்! மேற்கண்ட சொற்றொடர்களை சந்தத்தோடு சொல்லிப் பாருங்கள். இதில் வரும் ஓசை தான் அகவல். அகவல் (ஒசை) ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என பாக்கன் நான்கு வகைப்படும. இவற்றில் அகவல் பா என்பது ஆசிரியப் பாவைச் சேர்ந்ததாகும். ஒவ்வொரு பாவிற்கும் வெவ்வேறு ஒசை உண்டு. இனி நான் விநாயகர் அகவல் பாட நீங்கள் வாசித்து மகிழ லாம். ஏற்கெனவே ஒளவையார், விநாயகர் அகவல் பாடியிருக் கிறார். அவரைப் பின்பற்றி யானும் பாடுகிறேன். விநாயகர் அகவல் அத்தி முகனே! அமரா பரனே! சத்தி மகனே! தனயன் நானே, நித்தம் பணிவேன் நின்மலர்ப் பாதம், அத்தன் எனக்கு அன்புசெய் வாயே! வித்தை முதலாய் வேண்டும் செல்வம் அத்தனையும்நீ அள்ளித் தருக! அன்பும் அறனும் அருளும் பெற்று என்பும் பிறர்க்கென என்றும் வாழ பண்பும் பாங்கும் பணிவும் கற்று நன்றே வாழ ஞானம் தருவாய் கற்பகத் தருவே கனகாம் பரமே! அற்புத மறையின் உட்பொருள்ஆனோய்! பொற்பதம் பணிந்தேன் புண்ணியம் அருள்க! நற்பதம் பெற்று நானுமே உய்வேன். உற்றார் பெற்றார் உலகினில் உள்ளோர் பெற்றார்நலமென. பேசவைப் பாயே. குளத்தங் கரையில் கோபுரம் கோயில் உளதென உனக்கு ஊரே அறியும் குளத்தில் முழ்கி குளித்துத் தினமும் உளத்தில் நினைந்து உன்னைப் பரவுதும். தீராத் துன்பம் தீர்த்துவைப் பாயே வீராதீரா விநாயகத் தேவே! வருவாய்! வருவாய்! வான்புகழ் கணேசா! தருவாய்! எனக்குத் தங்கிட நிழலே, குருவே மறையே குணமுள இறையே! சரணம்! சரணம்! சந்ததம் சரணம்! 17 வாழ்க்கை வாழ்க்கை என்பது கடலில் பயணம் செய்ய உதவும் ஓடம் போன்றது. கடல் கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்காமல் ஓடத்தைக் கவனமாகச் செலுத்த வேண்டும். அதுபோல் வாழ்க்கையில் குறுக்கிடும் இன்னல்களில் சிக்காமல் வாழ்க்கை பயணத்தைத் தொடர வேண்டும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார். (திருவள்ளுவர்) ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. (ஒளவையார்) செம்மை மனம்சேர்க்கும் தெய்வீக சிந்தனையை எம்மாநிலத்தவரும் ஏற்றிடுவீர் – சும்மா எமக்கென்ன என்று இருந்திட்டால் கிட்டாது நமக்குப்பே ரின்பநாதம், (வேற்கவிராயர்) வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்க வொண்ணா வேதம் (சினிமாவில்) வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாரே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (திருவள்ளுவர்) ஆதிக் கடவுள் அருட்கொள்கை இல்லையெனில் மேதி இவருக்கு மேல். (வேற்கவிராயர்) மேதி = எருமை பிராணா யாமம் பிராணா யாமம் என்பது மூச்சுப் பயிற்சியாகும். அதாவது ஒரு நாசித்துவாரத்தின் வழியாக மூச்சை ஒரு சீராக இழுத்து மறு நாசி வழியாக மூச்சை ஒரே சீராக வெளிவிடுதல் ஆகும். இம்மாதிரி பல தடவை செய்யலாம். இதனால் நுரையீரல் கவாசப்பை விரிவடைந்து ஒழுங்காக இயங்கும். இந்தப் பயிற்சி நல்லதே. மூச்சை வெகுநேரம் அடக்குவது நல்லதல்ல. சித்தர்கள் எல்லாரும் மூச்சை அடக்குவதற்குத் தான் பயிற்சி செய்திருக்கிறார்கள். அது எதற்கு என்றால் சாகாமல் இருப்பதற்கு. பிறந்த மனிதன் ஒரு நாள் இறப்பது நிச்சயம் என்பது சாதாரண அறிவு படைத்த நமக்குத் தெரியும். ஆனால் சித்துக்கள் கற்ற சித்தர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? மனிதர், ஒருநாள்-இருபத்து நான்கு மணி நேரத்திற்கு, இருபத் தோராயிரத்து அறுநூறு (21600) முறை சுவாசிக்க வேண்டும். இது தான் இயற்கையின் நியதி. இது குறைந்தாலும் கூடினாலும், உடல் நலம் சரியில்லை என்பது அர்த்தம். எல்லாம் தெரிந்த சித்தர்கள், மூச்சை அடக்கினால் உயிர் போய்விடும் என்பதை அறியவில்லை. அவனை மூச்சை பிடுச்சு கொன்னுட்டான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். மூச்சு நின்று போனால் உயிர் போயிடும். இது வெட்ட வெளிச்சமான உண்மை. சித்தர் களுக்குக் குடும்பமும் இல்லை. கோத்திரமும் இல்லை. அப்படி யிருக்க இந்த அக்கிரமமான செயல்களையெல்லாம் ஏன் செய் தார்கள் என விளங்கவில்லை. இவர்கள், நமக்கு பயன்படும் படியான எதையும் செய்யவில்லை. போகர் என்ற சித்தர் மட்டும் மருத்துவம் பற்றிய நூல் எழுதி இருக்கிறார். அதுவும் இன்று பயன்படாமல் போய்விட்டது. யோகம் யோகம் என்பது ஓர் வகை உடற்பயிற்சியே ஆகும். இந்தப் பயிற்சி, நோய் நொடியின்றி உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ வழிவகுக்கும். இது கடினமான வேலை செய்வோருக்குத் தேவையில்லை. அவர்களுக்கு யோகா செய்வதற்கு நேரமும் கிடைக்காது. வேலை இல்லாமல் இருப்பவர்களும், மாணவர் களும் தான் யோகாசனப் பயிற்சி செய்ய முடியும். இது அவர் களுக்கு அவசியமும் கூட. எந்தக் கலையைச் கற்றாலும் தெய்வீக சிந்தனை இல்லை என்றால் மனிதப் பிறவி பயனற்றதாகி விடும். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (குறள்) புலன் அடக்கம் புலன் என்பது உடல் உறுப்பு. கண், காது, மூக்கு, வாய், மெய் (உடல்) இவை ஐம்புலன்கள் எனப்படுவன. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலைச் சொறிந்திடுமே. இது திருமூல நாயனாருடைய திருமந்திரம். இந்தப் பாடலை இருபொருள் படும்படி எழுதியிருக்கிறார். இதன் வெளிப்படை யான பொருள், புலன்களை அடக்க வேண்டுமென்பதல்ல; உட்பொருள்தான் புலன்களை அடக்க வேண்டும் என்பது. பார்ப்பான் என்பவன் பிராமணன். பிராமணனுக்குப் பசும்பால் முக்கிய உணவாகும். அதனால் பசுமாடு வீட்டில் வளர்ப்பான். அவன் மாடு மேய்க்கப் போகமாட்டான். மாடு மேய்க்க வேறு ஆள் வைத்திருப்பான். அவன், மாடுகளைப் புல்வெளியில் மேய்க்காமல் பொட்டலில் அடையப் போட்டுத் திருப்பி ஒட்டி வருவான். பசும் புல் நிறைய தின்றால்தான் பசு பால் கறக்கும். பட்டினி கிடக்கும் பசுவில் பால் கறக்க போனால் அது ஒரு செவைக்கு நிற்காமல் ஆட்டம் போடும். அதுமட்டுமல்ல உதையும் விடும். வயிறு நிறையப் புல்மேய்ந்து வந்தால் பசு, பால் அதிகம் கற்க்கும் என்பது தான் இந்தப் பாடலுக்குப் பொருள். ஆனால், திருமூலர் இந்த அர்த்தத்தில் பாடவில்லை. அவர் சொல்ல வந்த கருத்து வேறு. ‘பார்ப்பான் வீட்டில் பாற்பசு ஐந்து’ என்ற சொற்றொடர்தான் அவரது கருத்துக்கு வலுச் சேர்ப்பது. பார்ப்பான் ஒன்றிரண்டு பசுதான் பாலுக்காக வைத்திருப்பான். இவர் சொல்லும் ஐந்து பசு என்பது ஐந்து புலன்களையும் அடக்கியாள வேண்டும் என்பதே. புலன்களை அவை நோக்கத்திற்கு ஆட்டம் போட் விடாமல் நாம் சொல்கிறபடி அவை செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், புலன்களால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இந்த ஒரு செய்தியைச் சொல்வதற்குப் பார்ப்பானை வம்புக்கு இழுத்து இப்படி ஒரு பாடல் எழுதவேண்டுமா? எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. புத்தர் பெருமான், துன்பத்துக்கு காரணம் கண்டுபிடிக்க, காட்டில் உட்கார்ந்து தவம் செய்தாராம். கடைசியில், துன்பத்திற்குக் காரணம் ஆசையே’ என்று கண்டுபிடித்தாராம். இதைக் கண்டுபிடிக்க இப்படிக் கடும் தவம் செய்ய வேண்டுமா? பாவம் புத்தர் திருமூலருக்கு என்ன சொல்வது? திருமூலர் சொல்லும் அறிவுரைப்படிதான் நானும் புலன் களைக் கட்டுப்படுத்திப் பார்க்கிறேன், முடியவில்லை. அது நோக்கத்துக் ஆட ஆரம்பிக்கிறது. அந்த வருத்தத்தில் என் நாவில் உதித்திட்ட கவிதை காண்க. ஒர்நிலையில் நில்லாது ஊசல்போல் ஆடுகின்ற மார்க்கம் தெரியாத மந்தியே! கார்மாடே! இன்னலுக்குள்ளாக்கும் என்மனமே பேநாயே! என்னென்று செப்புவேன் இன்னும் மந்தி = குரங்கு, கார்மாடு = எருமை, செப்புதல் = திட்டுதல். 18 சித்தர்கள் அகப்பைச் சித்தர், அழுகினிச் சித்தர், குதம்பை சித்தர், குரங் காட்டிச் சித்தர், பசுமலைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் இப்படி பதினெட்டுச் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். சித்து – புதுமை சித்தர் = புதுமை செய்பவர் புதுமைகள் ,எட்டு. அவை 1. மகிமா = மலை போன்று தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளுதல் 2. அனிமா = உடம்பை அணுவினும் நுண்ணிய தாக்கிக் கொள்ளுதல் 3. கனிமா = இலேசான பஞ்சைப் போல் உடம்பை இலேசாக்கிக் கொள்ளுதல் 4. இலகிமா= எத்துணை கனமான பொருளையும் நொய்தாகச் நொய்தாகச் செய்யும் திறன் 5. பிராப்தி= வேண்டியதெல்லாம் விரும்பியவாறு அடையப் பெறுதல் 6. பிரகாமியம்= விரும்பிய நுகர் பொருள்களைப் படைத்து நுகர்தல் 7. ஈசாத்துவம் = தத்துவங்களில் நீங்காது நிற்றல் 8. வசித்துவம் = எல்லா உலகங்களையும் தன் வசப்படுத்துதல் மேலே கூறியுள்ள விளக்கங்கள் நமக்குச் சரியாகப் புரிய வில்லை. புரியும் படி சொன்னால், உருமாறுதல் – கிளியாகவோ, புலியாகவோ தான் நினைத்த உருவத்தை எடுத்துக் கொள்ளுதல். மேலும் கூடுவிட்டுக் கூடுபாய்தல் இது எப்படி என்றால், ஒரு கிளி திடீரென்று இறந்துவிட்டால், சித்தன் தன் உடலைப் போட்டுவிட்டு இறந்த கிளியின் உடலில் புகுந்து உயிர் பெற்று கிளியாக மாறுவது. தேவைப்பட்டால் மறுபடியும் கீழே விட்டு வைத்த தன் உடலில் புகுந்து உயிர் பெற்று எழுவது. இதற்குப் பெயர் தான் சித்து. இன்னும் நீர்மேல் நடப்பது, நெருப்பில் நடப்பது போன்ற, சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல் களாகிய புதுமைகளைச் செய்வதுதான் சித்து விளையாட்டு ஆகும். திருமூலர் என்பவர் ஒரு சித்தர். இவர் கதை வினோதமானது. அரசனை நம்பி புருஷனைக் கைகவிட்டகதை, ‘மூலன் என்பவன் மாடு மேய்ப்பவன். அவன் மேய்ச்சல் தவத்தில் திடீரென இறந்துவிட்டான். அதைக் கண்ட பசு மாடுகள் அவனது உடலைச் சுற்றி நின்று ஆறா துயரத்தில் கண்ணிர் வடித்துக் கதறின. அப்பொழுது அவ்வழியே சென்ற யோகியார் ஒருவர் அதைப் பார்த்து பசுக்களின் துயரத்தைப் போக்க நினைத்தார். நினைத்ததும், சட்டென தன் உடலை ஒரு மறைவிடத்தில் போட்டு விட்டு செத்துக் கிடந்த மூலனின் உடலில் புகுந்து எழுந்து நின்றார். பசுக்களின் துயரம் நீங்கிற்று. மூலனாகிவிட்ட யோகியார் மாடுகளை ஒட்டிச் சென்று ஊரில் விட்டு விட்டு, பாப்பாத்தி யம்மா மாடு வந்திருச்சு, கட்டுனா கட்டு, கட்டாட்டி போ’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு, சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்று நடையைக் கட்டிவிட்டார். மாடு மேய்க்கப் போன மூலன் வீட திரும்பவில்லை அவன் பெண்டாட்டி, ஊரெல்லாம் தேடி – காடெல்லாம் தேடியும் புருஷனைக் காணவில்லை, தேடுகிறாள் – தேடுகிறாள், தேடிக் கொண்டே இருக்கிறாள். சிவயோகியார், தன் உடலை மறைத்து வைத்த இடத்திற்குப் போனார், உடலைக் காணவில்லை. அதை நாய் தின்றதோ, பேய் தின்றதோ, தெரியவில்லை. அதனால், மூலனுடைய உடலை விட்டுவிட்டு அவருடைய உடலில் புக முடியவில்லை. பாவம் திருமூலர் மூலன் மனைவி புருஷனை இழந்தாள். யோகியார் தன்னையே இழந்தார். சித்து விளையாட்டு செத்து விடல் ஆச்சு. இப்பொழுது, வெறும் மூலர் திருமூலராகிவிட்டார். இந்தத் திருமூலர் எழுதிய தெய்வ நூலுக்குத்தான் திருமூலர் திருமந்திரம்’ என்று பெயர். மூவாயிரத்து நூற்று ஒன்பது (3109) பாடல்கள் எழுதியிருக்கிறார் இவர். அனைத்துப் பாடல்களும் சிவ வழிபாட்டையும், சிவனடியாருக்குத் தொண்டு செய்வது பற்றியும் மட்டுமே விளக்குகின்றன. மனித வாழ்க்கைக்கு வேண்டிய உபயோகமான கருத்துக்கள், அறிவுரைகள் ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்துச் சித்தர்கள் எல்லாரும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள், இந்தக் காலத்து சித்தர்கள் (விஞ்ஞானிகள் கிரகம் விட்டுக் கிரகம் பாய்கிறார்கள். அதாவது, சந்திரனுக்கு போகிறார்கள், அதைத்தாண்டி செவ்வாய்க் கிரகத்திற்கு தாவு கிறார்கள். அந்தக் காலத்துச் சித்தர்களில் அழுகினிச் சித்தர் என்பவர் ஒருவர். இவர், கொல்லனுலை போல் கொதிக்குதடி என் வயிறு நில்லென்று சொல்லி நிலை நிறுத்தக் கூடுதில்லை. இவ்வாறு சொல்லி அழு கிறார். இவருடைய வயிறு கொதிக்கக் காரணம் என்ன? இவரது சித்து விளையாட்டில் யோகா மேற்க் கொண்டதில் குடலுக்குப் புண் உண்டாகக் கூடிய ஏதோ தவறான உணவை அல்லது மருந்தைத் தின்றுவிட்டார். அதனால் குடல் வெந்து புண்ணாகி விட்டது. வயிற்று வலி தாங்க முடியவில்லை. அதனால் இப்படி ஒப்பாரி வைத்து அழுகிறார். கடைசியில் இவர் சித்து பலிக்க வில்லை, செத்தேபோனார். இன்னொருவர், குதம்பை சித்தர். இவர், வெட்ட வெளிதன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டய மேதுக்கடி? குதம்பாய் மேலும் மாங்காய்ப் பாலுண்டு மலை மேலிருப்போருக்குத் தேங்காய்பால் ஏதுக்கடி ? இவர், விஞ்ஞானி அணு குண்டைக் கண்டுபிடித்த மாதிரி பெரிய கண்டுபிடிப்பை கண்டுள்ளார். அதாவது மேற்கண்ட வரிகளில் கண்ட சொற்றொருடருக்கு உள்ளே, சுளிய உருண்டைக் குள் பாசிப் பருப்பை வச்ச மாதிரி பெரிய கண்டுபிடிப்பை நுழைத்து வைத்திருக்கிறார். அது என்ன என்றால், வெட்ட வெளி = விண்வெளி, ஆகாயம் = வான். வானாகி, மண்ணாகி, வளியாகி கடவுள் இப்படி எல்லாம் உள்ளவர். அந்தக் கடவுள்தான் உண்மைப் பொருள். அவனன்றி அணுவும் அசையாது. அந்தக் கடவுளை நம்பி இருப்போருக்கு வீடு வாசல் தேவையில்லை. பொண்டாட்டி புள்ளையெல்லாம் தேவையில்லை. இதுதான் அவர் பாட்டுக்குள் நுழைத்து வைத்திருக்கும் பொருள். மாங்காய்ப்பால் உண்டு – மாங்காயப் பால் வாயில் பட்டால்ே வாய் புண்ணாகிவிடும். இவர் சொல்லும் மாங்காய்ப் பால் காற்றில் உள்ள பிராண வாயு. மலை மேலிடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து மூச்சை அடக்கி, அந்தப் பிராண வாயுவையே உணவாக உட்கொண்டு யோக நிலையில் இருக்கும் யோக சித்தருக்குத் தேங்காய் பால் தேவையில்லை என்பது இந்தச் சொற்றொடரின் பொருள். இவர், மாங்காய் என்று குறிப்பிடுவது நுரையீரல். மாங்காய் வடிவத்தில் உள்ளது இருதயம். நுரையீரல் = சுவாசப்பையும் மாங்காய் போன்று இருக்கும் என்று இவர் தவறுதலாகச் சொல்லியிருக் கிறார். சுவாசப்பைதான் நுரையீரல்) மூச்சை (பிராணவாயு) உள்வாங்குவதும், வெளிவிடுவமான செயலைச் செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு சித்தர் இவர், ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க வகையெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க வகையெனக்குக் கிட்டுமெனில் ஊத்தைச்சடலம்விட்டு உன்பாதம் சேரேனோ உப்பு இருந்த மண்பானையை உவடு அரித்துவிடும். இவர், என்ன யோகத்தைச் செய்தாரோ? தெரியவில்லை, உடல் இளைத்து எலும்பும் தோலுமாகிவிட்டது. அதனால், தன் உடல் நிலையை நினைத்து நினைத்து அழுது, கடைசியில் செத்தே போனோர். சித்தர்கள் எல்லாரும் மூச்சை அடக்குகிற யோகம் ஏன் செய்தார்கள் என்றால், மனிதன் = சீவாத்மா – கடவுள் = பரமாத்மா. இந்த சீவாத்மா பரமாத்மாவோடு சேர்ந்து, பரமாத்மாக ஆகிவிட வேண்டும் என்ற தவறான எண்ணந்தான். பிறந்த மனிதன், இறந்துதான் ஆகவேண்டும், இது இயற்கையின் நியதி. இது, சித்தர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? தெரியவில்லை சாகாமல் இருக்க, வழி கண்டுபிடிக்கச் சித்தர்கள் செய்த மந்திரம் ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியில் எல்லாரும் செத்தே போனார்கள். தெய்வீக சிந்தனையைக் கூறவந்த நான், இதை ஏன் சொல்ல வேண்டுமென்றால், சித்தர்கள் போன வழியில் நாம் போகக் கூடாது – அவர்கள் சொன்ன அறிவுரைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே. தவம் செய்வார்தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவம் செய்வார் ஆசையுட் பட்டு இது திருவள்ளுவர் கூற்று. இவருக்குப் பின் தோன்றிய சித்தர்கள், திருக்குறளைப் படிக்கவில்லை. திருக்குறளில் இல்லாத மந்திரம் (வாழ்க்கை முறை பற்றிய விளக்கம்) எந்த உலக நூலிலும் இல்லை. தெய்வீக சிந்தனையால் மட்டுமே பிறவிப் பயனை முழுமையாக அடைய முடியும் என்ற உண்மை யைச் சொல்லி என் எண்ணத்தில் தோன்றிய எழுச்சியை நிறைவு செய்கிறேன். நூல் முடிவு சிந்தனையைச் சேறாக்கிச் செம்மனதைப் பாத்திகட்டி வந்தனை நாற்றை வளர்த்து விளைந்த கதிர் போரை அடித்தே நீ புண்ணியத்தைக் கோட்டைக்கட்டி பேரின்ப வாழ்வைப் பெறுக! சுபம்! 1 ஆசிரியர் பற்றி [velu] ”செஞ்சொற் புலவன் சிந்தனைச் சிற்பி கந்தப் பெருமான் கடவுள் பக்தன் மெய்யே பேசும் விழுமிய நெஞ்சன் பொய்யா மையறம் புரிந்து வாழ்வோன் பழம்பதி சூரா ணம்மெனும் பேரூர் விளம்பரம் தேடா வேற்கவி ராயர்” பெயர் : ஆ.வேலு ஊர் : சூராணம் பிறப்பு : 18.08.1927 பொதுக்கல்வி : SSLC தொழிற்கல்வி : இடைநிலை ஆசிரியர் பட்டயம் பணி : இடைநிலை ஆசிரியர் பணி பதவி : தலைமை ஆசிரியர் பள்ளி : உலகமாதா நடுநிலைப்பள்ளி, சாக்கூர் காளையார் கோவில் ஒன்றியம். பணி ஓய்வு : 18.08.1986 2 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !