[] துப்பறியலாம் வாங்க!!! ராம்குமார் freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 துப்பறியலாம் வாங்க!!! 1. துப்பறியலாம் வாங்க!!! 1. ஆசிரியர் பற்றி 2. 1. ஒரு அறிமுகம். 1. தொடர் பற்றி 3. 2. ரத்தத்துளிகள் 4. 3. பச்சை நிற விஷம் 5. 4. தீப்பிழம்பு 6. 5. துடிக்கும் இதயம் 7. 6. தொடராதே 8. 7. நிஜமான கதை 9. 8. மலை உச்சியில் 10. 9. அப்’பாவி’ப் பெண் 11. 10. தனி வீட்டில் 12. 11. சோதனை மேல் சோதனை 13. 12. இல்லை, ஆமாம், இல்லை 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks துப்பறியலாம் வாங்க!!! துப்பறியலாம் வாங்க!!!   ராம்குமார்   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் & அட்டைபடம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   ஆசிரியர் பற்றி வலைப்பதிவு : http://pinnokki.blogspot.in/ மின்னஞ்சல் : ramg75@gmail.com 1. ஒரு அறிமுகம். மனிதனுக்கு சஸ்பென்ஸ் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் தான் ஜோதிடம் பக்கம் இழுத்துச் செல்கிறது. 2000-வது வருடம் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” தொடர், மிகவும் பயனுள்ள, ஆர்வத்தை தூண்டக்கூடிய நிகழ்ச்சி.  தொடர் பற்றி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு குற்றம் (கொலை, கொள்ளை, நோய்) பற்றி முதல் 10 நிமிடங்களுக்கு, ஒரு நாடக பாணியில் நடிகர்கள் நடிப்பதின் மூலம் காண்பிப்பார்கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு, அந்த குற்றத்தை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எப்படி துப்பறிந்து, குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றி விவரிப்பார்கள். கடைசி 5 நிமிடங்கள், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான தோற்றத்தை போட்டோவில் காண்பிப்பார்கள். இத்தொடர், மிகவும் பயங்கரமான, சிக்கலான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் எப்படிப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றார்கள்?, அதை மருத்துவ பூர்வமாக எப்படி கண்டுபிடித்து, கோர்ட்டில் நிரூபித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை மிகவும் அருமையாக விளக்கியது.  இந்த மாதிரி வழக்குகளை நிரூபிக்க அமெரிக்க சட்டங்கள் சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகிறது (இந்திய சட்டங்களும் இப்படித்தான் என நினைக்கிறேன்). அந்த சட்டங்கள் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை முக்கியமாக கருதுகிறது. எடுத்துக்காட்டாக, போலீசார் பின்வருபவற்றை சந்தேகத்துகிடமில்லா வகையில் கோர்ட்டில் எடுத்துரைக்க வேண்டும். கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவரின் உடல் மற்றும் கொலைக்கு உதவிய ஆயுதம் கொலை நடந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்தில் இருந்தார் அல்லது அவர்தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம். மேல் கூறியவற்றில் எதையாவது ஒன்றை நிரூபிக்க தவறினால், குற்றவாளி தப்பித்துவிடுவான். இந்த விஷயங்களை தெரிந்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்தவர்கள் பலர், ஆனால், அனைவரும் மாட்டிக் கொண்டது வேறு கதை. சில குற்றங்கள் 20 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை அடைந்ததும் உண்டு. மரணமடைந்தவர்களை எரிக்காமல், புதைக்கும் பழக்கம் பெரும்பாலும் அங்கு பின்பற்ற படுவது போலீசாருக்கு, போஸ்ட்மார்டம் செய்து, குற்றத்தை நிரூபிக்க உதவியாக இருக்கிறது. இத்தொடரில் ஒளிபரப்பான சில சிக்கலான வழக்குகளைப் பற்றி, எழுதலாம் என நினைக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததால், எனக்கு பெயர்கள் மறந்துவிட்டது. அதனால் எனக்கு நியாபகம் இருக்கும் அனைத்து தகவல்களையும், வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். துப்பறியலாம். வாங்க!!! 2. ரத்தத்துளிகள் பிரிட்டனில் உள்ள ஒரு  கிராமத்தில் இருந்தவர்கள் ஜான், மேரி. ஜானுக்கு தொழில் விவசாயம். அமைதியான வாழ்க்கை. [] ஒரு நாள் மேரி பக்கத்து நகரத்துக்கு போவதற்காக, காரில் ஏறி, இஞ்சினை ஸ்டார்ட் செய்ததும் …பூம்!!!…கார் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான், மேரி பலத்த தீக்காயங்களுடன் தரையில் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் சேர்த்த பின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் யார் இந்த பாம் வைத்தது?. யார் அவருக்கு எதிரி? போலீஸ் விசாரணையில் அந்த பாம் துப்பாக்கித் தோட்டாக்களில் இருந்த வெடி மருந்துப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சீட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்ததால், கொலையாளியின் நோக்கம், காரை ஒட்டுபவரைக் கொல்வது. போலீஸ் விசாரணையில் ஜான் கையைக் காட்டியது, பக்கத்து வீட்டுக்காரரான டேவிட்டை. ஜானுக்கும் டேவிட்டுக்கும் இடையில் வேலி பிரச்சினை இருந்தது, அதன் பொருட்டு சில நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் டேவிட் இந்த குற்றத்தை செய்யவில்லையென நிரூபணமாகியது. இந்நிலையில் ஒரு நாள் விடியற்காலையில், வீட்டுக் கதவை திறந்த ஜானுக்கு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில், வெட்டப்பட்ட ஒரு ஆட்டின் தலை மாட்டியிருந்தது. கூடவே “அடுத்தது நீ தான்” என்ற எச்சரிக்கை கடிதம். இதனைத் தொடர்ந்து மேலும் மிரட்டல் கடிதங்கள் வரவே, ஜானுடைய பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, 1984ஆம் வருடம், போலீசுக்கு போன் வந்தது. பேசியது ஜான். “என்னை பக்கத்து வீட்டு டேவிட் கத்தியால் கொல்ல வந்தான். வேறு வழியில்லாமல், தற்காப்புக்காக, டேவிட்டை சுட்டுக் கொன்றுவிட்டேன்.”   வீட்டுக்கு வந்து சேர்ந்த போலீஸார், வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் சொட்டு சொட்டாக ரத்தம். முன்னறையில் டேவிட், தோட்டா காயத்துடன் செத்துக்கிடந்தார். கையில் கத்தியிருந்தது. ஒரு பெரிய சண்டை நடந்த தடயங்களாக, அங்கு இருந்த சேர், டேபிள் முதலானவை கவிழ்ந்து கிடந்தது. ஜான், வீட்டு சமையலறையின் பக்கத்தில் இருந்த வாஷ்பேசினில் தலையை சாய்த்தவாறு கிடந்தார். பக்கத்தில் அவரின் துப்பாக்கியிருந்தது. உடல் முழுவதும் ரத்தம். கைகளில் காயம் எதுவும் இல்லை, ஆனால் இடுப்பின் இடது முனையில் இருந்து குறுக்கே வலது தோள்பட்டை வரை ஒரு பெரிய கத்தி வெட்டு, முகத்தில் வாயில் இருந்து காது வரை வெட்டப்பட்டு, பார்க்கவே கொடூரமாக இருந்தது. பிறகு மருத்துவமனையில் 80 தையல் போடப்பட்டது என்றால் எந்த அளவுக்கு பெரிய காயமாக இருக்கவேண்டும் என கற்பனை செய்துகொள்ளுங்கள் (இப்பொழுது ஜானின் புகைப்படத்தை மறுபடியும் பாருங்கள், குறிப்பாக அவரது வலது காதிலிருந்து வாய் வரை உள்ள தழும்பு). “என்ன நடந்தது?” “அன்று இரவு, என் மனைவி வெளியே போயிருந்தாள். அப்பொழுது பக்கத்து வீட்டு டேவிட் என்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்தார். நான் போலீஸ்கிட்ட அவரைப் பற்றி ஏன் புகார் குடுத்தேன்னு கேட்டு சண்டை போட்டார். ஒரு கட்டத்துல அவர் கத்திய எடுத்து என்னை தாக்க ஆரம்பிச்சுட்டார்” ”அவர் உங்களை தாக்கும் போது நீங்க தடுக்க முயற்சி பண்ணுனீங்களா?” ஆமாம், அவர்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா அது முடியாம, என்னோட உடம்புல இவ்வளவு நீளத்துக்கு கீறிட்டார், என் முகத்துலயும் குத்திட்டார். அப்போ நான் தட்டு தடுமாறி பக்கத்து ரூம்க்கு ஓடிப்போய் என் துப்பாக்கிய எடுத்து சுட்டேன்” போலீஸ் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து பல தடயங்களை சேகரித்தார்கள். ஜான் சொன்னது மாதிரியே வீடு முழுவதும் ரத்த காயங்களுடன் ஒடியதில், ரத்தம் பல இடங்களில் தெறித்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னது “ஜானை அரெஸ்ட் பண்ணுங்க.” [] என்னென்ன தடயங்களை வைத்து ஜானை குற்றவாளி என சொன்னார்கள்? முதலாவதாக, சம்பவ இடத்தை பார்வையிட்ட, ரத்தங்கள் உண்டாக்கும் வடிவங்களை பற்றி படித்த நிபுணர்கள், வீட்டிலிருந்த ரத்த துளிகள் மேலே படத்தில் உள்ள சாம்பிள் A மாதிரி உருண்டை வடிவில் இருந்தது என்பதை பார்த்தார்கள். இந்த மாதிரி வடிவம் இருந்தால், ரத்தம் உடலிலிருந்து வரும்போது அந்த நபர் ஓரிடத்திலேயே நின்றிருக்கிறார் என்பது உறுதி. அப்படி இல்லாமல் சாம்பிள் B மாதிரி இருந்தால், அந்த நபர் ரத்தம் வடியும் போது நடந்து/ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது உறுதி. சாம்பிள் B-ல் உள்ள ரத்தம் உண்டாக்கிய வால் போன்ற வடிவம் முக்கியமானது. அதை வைத்து, அந்த நபர் எந்த வேகத்தில் நகர்ந்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கலாம். இதன் மூலம், ஜான் சொன்னது போல, அவன் டேவிட்டிடம் இருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கவில்லை என்று முடிவு செய்தனர். ஜான், தன்னை தானே அறுத்துக்கொண்டிருக்கிறான். இரண்டாவதாக, டேவிட்டின் கையிலிருந்த ஜான் ஜோடனை செய்த கத்தியில், டேவிட்டின் ரத்தம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால், அவரில் கை முழுவதும் அவர் ரத்தம் இருந்தது.இதை வைத்து, ஜானை டேவிட் தாக்கவில்லை என முடிவு செய்தனர்.கத்தியை ஜான், டேவிட் இறந்தபிறகு வைத்திருக்கிறான். மூன்றாவதாக, ஜானின் கையில் கத்தியினால் ஏற்பட்ட எந்த காயமும் இல்லை. ஒருவன் நம்மை தாக்க வரும் போது, நம்மையறியாமல், நம் கைகள் தடுக்க முயற்சிக்கும். அப்படி ஜான் செய்திருந்தால், கண்டிப்பாக அவன் கைகளில் காயம் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜான் சொன்னது பொய் என நிரூபித்தனர். நான்காவதாக, ஜானின் உடலிலிருந்த காயத்தை பார்த்த டாக்டர்கள் “அவன் உடலில் இருந்த காயம் ஒரு நேர் கோட்டை, இடது இடுப்பிலிருந்து வலது தோள் பட்டை வரை வரைந்த மாதிரி இருக்கிறது. ஒருவனை கத்தியால் காயப்படுத்தும் போது, அவன் கண்டிப்பாக அசைவான். அப்படி அசைந்திருந்தால், இந்த மாதிரி நேர் கோடு போட்டது போல காயம் இருக்காது. அதனால், ஜானே, தன்னை கத்தியால் கிழித்திருக்கிறான்.” மேலும், வீட்டின் வாஷ் பேஷினிடம் தேங்கியிருந்த ரத்தத்தின் அளவை வைத்து, ஜான், அதன் அருகில் நின்று தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் எனக் கண்டுபிடித்தனர். ஐந்தாவதாக, தரையில் கவிழ்ந்துகிடந்த டேபிளுக்கு கீழே ரத்த துளிகள், சம்பவம் நடந்தபிறகு டேபிளை, ஜான் கவிழ்த்திருக்கிறான் என உணர்ந்தனர். ஆறாவதாக, டேபிளில் ரத்தக்கறையை பார்த்தார்கள். அது ஜானுடையது. ஆனால், அவன் டேவிட்டை சுட்ட துப்பாக்கியில், ரத்தக்கறை எதுவும் இல்லை. இந்த ஆதாரம், டேவிட், ஜானை தாக்குவதற்கு முன்பே, ஜான், டேவிட்டை சுட்டிருக்கிறான் என்பதை உறுதி செய்தது. நடந்தது என்னவென்றால், ஜான், டேவிட்டை, பேசவேண்டுமென வீட்டுக்கு கூட்டி வந்து, எதிர்பாராத தருணத்தில், சுட்டுக் கொன்றிருக்கிறான். ஜட்ஜ்க்கு இத்தனை ஆதாரம் போதுமானதாக இருந்தது. இரண்டு ஆயுள் தண்டனை, அவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், ஜெயிலில் கழிக்கப் போவதை உறுதி செய்தது. நீங்கள் இதை படிக்கும் போது, அவன் பிரிட்டனில் உள்ள ஒரு ஜெயிலில், தான் தப்பு தப்பாக செய்த தப்பை எண்ணி வருந்திக்கொண்டிருப்பான். இவ்வளவும் எதற்காக செய்தான்? பணம்! அவன் பெரிய பணப்பிரச்சினையிலிருந்தான். அதிலிருந்து தப்பிக்க, தன் மனைவியைக் கொல்வதன் மூலம் கிடைக்கும் இன்ஸீரன்ஸ் பணத்தை உபயோகிக்க நினைத்திருந்தான். ஆனால், பாம் வெடித்ததில், தன் மனைவி தப்பியது பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனால், மிரட்டல் கடிதங்களை தனக்கு தானே அனுப்பி, பக்கத்து வீட்டுக்கார டேவிட்தான் மேரியைக் கொல்ல திட்டம் போட்டார் எனப் பொய்யாக நிரூபித்து, டேவிட்டை தீர்த்துக் கட்டுவதன் மூலம், டேவிட்டை குற்றவாளியாக ஆக்கிவிடலாம் என நினைத்ததின் விளைவு, இந்த கொலை, மற்றும் அதனைத் தொடர்ந்த நாடகம். ஒரு குற்றத்தை மறைக்க அவன் இன்னொரு குற்றத்தை உபயோகிக்க நினைத்தது தவறாக போய்விட்டது. இந்த கேஸில், ரத்தத்தை ஆராயும் நிபுணர்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் நிபுணர்கள் பெரும் பங்குவகித்தனர். 3. பச்சை நிற விஷம் ஜூன் 1986 ஆம் வருடம், வீட்டில் உட்கார்ந்திருந்த புரூஸ், மயங்கி கீழே விழுந்தார். மனைவி ஸ்டெல்லா, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் இறந்துபோனார்.  [] போலீசிடம்,  புரூஸ் இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் எனப்படும் வலி முறிவு மருந்து எடுத்துக் கொண்டதாக, ஸ்டெல்லா கூறினார். போஸ்ட்மார்டத்தின் முடிவில், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என முடிவானது. இது நடந்து 6 நாட்கள் கழித்து, ஸ்னோ என்ற 40 வயது பெண்மணி, தன் குளியலறையில் மயங்கி விழுந்து இறந்தார்.போஸ்ட்மார்டத்தில் சயனைட் என்ற விஷம் தான் இறப்புக்கு காரணமென கண்டுபிடித்தனர். ஆனால், அவர் எப்படி உட்கொண்டார் ?. விசாரணையில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம் !! ஸ்னோ, இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் மாத்திரை எடுத்துக் கொண்டார் எனத் தெரிந்தது. அந்த மருந்தை சோதித்துப் பார்த்த போது, அதில், சயனைட் சேர்க்கப்பட்டிருந்தது தெரிந்தது. எப்படி இது சாத்தியம் ?. எக்ஸ்டிரின் மாத்திரை தயாரிப்பிலேயே தவறு இருக்கிறதா ?. அமெரிக்கா முழுவதும் இருந்த லட்சக்கணக்கான மாத்திரைகள் திருப்பி அழைக்கப்பட்டது. அந்த மாத்திரை தயாரித்த நிறுவனம் உடனடியாக தயாரிப்பை நிறுத்தியது. இந்த செய்தியை படித்த ஸ்டெல்லாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை, புரூஸ் இறந்ததும் சயனைடால் தானா?. உடனடியாக, தன் வீட்டில் இருந்த 2 பாட்டில்களை எடுத்துக் கொண்டு, போலீசிடம் போனார். பரிசோதனையில், ஸ்டெல்லாவின் சந்தேகம் உறுதியானது. ஆமாம்!! அந்த 2 பாட்டிலிலும் சயனைட் இருந்தது. எக்ஸ்டிரின் என்ற மருந்து குரோசின் போல, மருத்துவர் அனுமதியில்லாமல், எளிதாக, கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி. உடனடியாக, சுமார் 15,000 பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் 5 பாட்டில்களில் சயனைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2 பாட்டில் ஸ்டெல்லாவிடம், 1 பாட்டில் இறந்து போன ஸ்னோவிடம், 1 பாட்டில் இன்னொரு கடையில் இருந்தது. மக்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு F.B.I  யிடம் ஒப்படைக்கப்பட்டது. மருந்து தயாரிப்பில் இந்த சயனைட் சேர்க்கப்படவில்லை. இறந்த புரூஸ்க்கும் ஸ்னோக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட கிடையாது.பொது எதிரி யாரும் இல்லை. ஸ்டெல்லாவிடம் விசாரித்ததில் அந்த 2 பாட்டில்களையும் வெவ்வேறு கடைகளில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதாக கூறினார். முதல் சந்தேகம், ஸ்னோவின் கணவர் மேல் திரும்பியது. அவர் விசாரணை செய்யப்பட்டார். உண்மையறியும் சோதனை (lie detector) யின் முடிவில் அவர் குற்றமற்றவர் என முடிவானது. வேறு யாரை சந்தேகப்படுவது?. ஸ்டெல்லா?. புரூஸ் பெயரில் 1 லட்சம் டாலருக்கு இன்ஸீரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது அந்த பணம் ஸ்டெல்லாவுக்கு கிடைக்கும். புரூஸ் இன்ஸீரன்ஸை சோதித்ததில், இறப்பு ஒரு விபத்து எனில் இன்னும் ஒரு லட்சம் டாலர் கூடுதலாக கிடைக்கும் என்பது போன்ற ஷரத்துகள் காணப்பட்டது. ஸ்டெல்லாவின் வீடு சோதனை செய்யப்பட்டது. ஸ்டெல்லா, மீன் வளர்ப்பு தொழில் செய்துவந்தார். அவருக்கு 20 வயது மகள். விசாரணையில் வேறென்றும் தெரியவில்லை/கிடைக்கவில்லை. மருந்து கம்பெனிகள் சங்கம், இந்த வழக்கில் துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் டாலர்களை பரிசுத்தொகையாக அறிவித்தது. (பின்னே என்ன! இந்த பிரச்சினையினால் மக்கள் மாத்திரைகளை சாப்பிடுவதற்கே பயப்படும் நிலை ஏற்பட்டது. அவர்கள் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியும், உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக அளவு மருந்துகள் விற்பனையாகிறது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ளது அங்குள்ள மருந்து கம்பெனிகள்)  [] இதற்கிடையில், மாத்திரைகளை பரிசோதனை செய்த ஆய்வுக்கூடம் ஒன்றை கண்டுபிடித்தது. அது! மாத்திரைகளில் தடவப்பட்டிருந்த சயனைடில், பச்சை நிற சிறு சிறு துகள்கள் இருந்தன. சயனைட் பச்சை நிறத்திலிருக்காது. அப்படியென்றால் என்ன அது? பரிசோதனையில், அது, பாசிகளை நீக்கும் ஒரு பொருள் என்றார்கள். இத்தகவலைக் கேள்விப்பட்ட F.B.I, நேராக ஸ்டெல்லா வீட்டுக்குச் சென்றார்கள். முன்பு விசாரணையின் போது, அந்த பச்சை நிற, பாசி நீக்கும் ஒரு பொருளை, ஸ்டெல்லா, மீன் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்காக வைத்திருந்ததை பார்த்திருந்தார்கள். வீட்டில், அந்த பொருள் மற்றும், அதை அரைக்க வைத்திருந்த சின்ன கிண்ணம் போன்ற பொருளையும் கைப்பற்றினார்கள். ஸ்டெல்லாவை, உண்மையறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். முடிவு? ஆமாம்!! ஸ்டெல்லா அந்த சோதனையில் தோல்வியடைந்தார். இத்தகவலைக் கேள்விப்பட்ட ஸ்டெல்லாவின் மகள், தன் அம்மாவைப் பற்றி போலீசிடம் சொன்னது. “என் அம்மா, பல வருடங்களாக கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக, விஷங்கள் பற்றி நிறைய புத்தகம் படித்தார்”. இந்த வாக்குமூலம், ஸ்டெல்லாவைக் கைது செய்ய உதவியாக இருந்தது. கோர்ட்டில், ஸ்டெல்லாவின் வழக்கு இவ்வாறாக விவரிக்கப்பட்டது. “ஸ்டெல்லா, தன் கணவரைக் கொல்ல சயனைட் என்ற விஷத்தை உபயோகித்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது, கணவர் இறந்தபின் அதன் மூலம் கிடைக்கும் 2 லட்சம் டாலர் கொண்டு தன் தொழிலை விரிவுபடுத்தலாம் என்பதாகும். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக, புரூஸ் இறந்தது இயற்கை காரணங்களால் என முடிவானதால், 2 லட்சத்திற்கு பதிலாக, 1 லட்சம் டாலர் தான் கிடைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த ஸ்டெல்லா, புரூஸ் இறந்தது விபத்து தான் என நிரூபிக்கும் பொருட்டு சயனைட் கலந்த மாத்திரைகளை கடைகளில் வைத்துவிட்டார். அவர் எதிர்பார்த்த மாதிரி ஸ்னோ இறந்த பிறகு, போலீசை அணுகி, தன் கணவரும் இந்த மாதிரி விஷத்தினால் இறந்ததாக மாற்ற நினைத்தார். அதன் மூலம் மேலும் 1 லட்சம் டாலர் கிடைக்கும் என நம்பினார். அவர் செய்த தவறு, பாசி நீக்கும் பொருளை அரைத்த அதே கிண்ணத்தில், சயனைடையும் அரைத்தது தான்”. 1. முன்பே சொன்ன மாதிரி பச்சை நிற சிறு சிறு துகள்கள். (இதை ஸ்டெல்லா கடையில் வாங்கியதை, கடைக்காரர் உறுதிசெய்தார்). 2. ஸ்டெல்லா, நூலகத்தில் விஷங்கள் பற்றி படித்தது. அந்த புத்தகங்களில் இருந்த ஸ்டெல்லாவின் கைரேகை.(”புரூஸ் விஷத்தால் இறந்ததால், விஷத்தைப் பற்றிய புத்தகங்களைப் படித்தேன்” - ஸ்டெல்லா) 3. 15000 பாட்டில்களை சோதித்ததில் 5 பாட்டிலில் விஷம் இருந்தது. அதில் 2 பாட்டில்கள், ஸ்டெல்லாவிடம் இருந்தது நம்பும்படி இல்லை. மேலும் அவர் அந்த மருந்துகளை 2 வார இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வாங்கியிருக்கிறார். இந்த அளவுக்கு தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை. 4. உண்மையறியும் பரிசோதனையில் ஸ்டெல்லாவின் தோல்வி. 5. மகளின் வாக்குமூலம். (”அவள் மருந்து கம்பெனிகள் அறிவித்திருந்த பரிசுப் பணத்திற்காக பொய் சொல்கிறாள்” - ஸ்டெல்லா) 6. இன்ஸீரன்ஸ் பாலிசியில் புரூஸின் கையெழுத்துக்கும் அவரின் மற்ற கையெழுத்துக்கும் இருந்த வித்தியாசம். கோர்ட்டில் ஸ்டெல்லா குற்றத்தை ஒப்புக்கொள்ளவேயில்லை.  90 வருடம் ஜெயில் தண்டனை. 2017 ஆம் வருடம், ஸ்டெல்லா பரோல் என்ற முறைப்படி சிறையிலிருந்து வெளியே வரலாம். ஸ்டெல்லாவின் பேராசை பெரும் நஷ்டமானது. இந்த வழக்குக்குப் பிறகு, மருந்து பாட்டில்கள் பேக் பண்ணப்படும் விதங்களை கம்பெனிகள் மாற்றியது. ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். இவ்வளவு ஆதாரங்கள் கோர்ட்டில் தரப்பட்டும், ஸ்டெல்லா, இப்பொழுது ஜெயிலில் இருப்பது, கொலைக் குற்றத்திற்காக இல்லை. பிறகு என்ன குற்றத்திற்காக??? 1983 ஆம் வருடம் FDA நிறைவேற்றிய “Anti-Tampering Law” வின் படி, ஸ்டெல்லா, மருந்து பொருட்களில் மாற்றங்கள் (சயனைட் கலந்தது) செய்த குற்றத்திற்காக 90 வருட தண்டனை. 2017 ஆம் வருடம் ஸ்டெல்லா பரோலில் வந்தால், அவர் மேல் கொலை வழக்கு தொடரப்படலாம். இந்த பதிவை எழுதும் முன்பு, இணைய தளங்களில் தகவல் தேடிய போது சில வித்தியாசமான விஷயங்கள் கிடைத்தது. 2001 ஆம் வருடம், இரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், இந்த வழக்கில் சில தவறுகள் இருக்கிறது எனக் கண்டுபிடித்தனர். 1. ஸ்டெல்லா விஷம் வைத்திருந்தால், எதற்காக, 2 பாட்டிலை வீட்டில் வைத்திருக்க வேண்டும்? எதற்காக 2 பாட்டிலையும் போலீசாரிடம் தரவேண்டும்? 2. F.B.I யின் 1000 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கைப் பற்றிய ஆவணங்களில், ஸ்னோ வாங்கிய பாட்டிலில் இருந்த சில சந்தேகப்படக் கூடிய கைரேகைகள் இருந்ததை கண்டுகொள்ளவில்லை. அந்த கைரேகைகள் யாருடையது என்று போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. 3. ஸ்டெல்லாவின் நண்பர் ரைடர் என்பவள், ஸ்டெல்லா இந்த மருந்துகளை கடையில் வாங்கும் போது கூடவே இருந்திருக்கிறார். ஆனால், அவரது வாக்குமூலத்தை, இந்த வழக்கில் சேர்க்கவில்லை. 4. ஸ்டெல்லா, அந்த 2 பாட்டில்களை எப்பொழுது வாங்கியது என்று நியாபகம் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால், போலீசார், அதை சில கால இடைவெளிகளில், வெவ்வேறு கடைகளில் வாங்கியதாக பதிவு செய்திருக்கிறார்கள். இது தவறு.ரைடர் வாக்குமூலம், அந்த 2 பாட்டில்களையும், ஒரே கடையிலிருந்து ஒரே நேரத்தில் வாங்கியதை நிரூபித்திருக்கும். இது நடந்திருந்தால், 15000 பாட்டில்களில், எப்படி 2 பாட்டில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதில் விஷமிருந்திருக்கிறது என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைத்திருக்கும். 5. ஸ்டெல்லா, பாசி நீக்கும் பொருளை வாங்கியதாக சொன்ன கடைக்காரர், இந்த வழக்கின் மூலம், 15000 டாலர் பரிசு பணம் பெற்றிருக்கிறார்.இதனால், அவர் பொய் சொல்ல வாய்ப்பிருந்திருக்கிறது. மேலும், ஸ்டெல்லா, அந்த பொருள்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் போலீசிடம் இல்லை. 6. இந்த வழக்கு விரைவில் முடிய வேண்டுமென மிகப் பெரிய மருந்து கம்பெனிகள் முயன்றிருக்கின்றன. அதிக அளவு பணம் இந்த வழக்கில் நடமாடியிருக்கிறது. 7. ஸ்டெல்லா விஷச்செடிகளைப் பற்றி நூலகத்தில் படித்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும், தன் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகளினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா, எனத் தெரிந்து கொள்ளவே அந்த புத்தகங்களைப் படித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.  சட்டத்தில் உண்மையறியும், தப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் அமைப்பு, இந்த வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டுமெனெ நடவடிக்கை எடுத்துவருகிறது. உண்மை ஸ்டெல்லாவும் கடவுளும் மட்டுமே அறிந்தது. 4. தீப்பிழம்பு உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களை போலீசார் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், குற்றவாளி, போலீசாருக்கு மறைமுகமாக விடுக்கும் சவால். எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும், சிறிய தவறுகள் இருக்கும். அதனை கண்டுபிடிக்க பல துறையை சேர்ந்த வல்லுனர்களின் உதவி தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் இது. ------------------------------------------------------------------------ 1996 வருடம், அமெரிக்காவிலுள்ள போர்ட்லேண்ட். இது ஒரு மரங்களடர்ந்த அமைதியான பிரதேசம். ஒரு நாள் மதியம் 2 மணியளவில், வீடு ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த மக்கள், திகைத்து போனார்கள். தீயணைப்புப் படையினர் வந்து சேரும் போது, தீ வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது. தீயை அணைக்க முயற்சி செய்தபோது, ஜான் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்தார். அப்பொழுதுதான் அந்த வீட்டினுள் யாரோ மாட்டிக் கொண்டுள்ளார்கள் எனப் புரிந்தது. ஆனால் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. ஜான் பயந்தபடியே, வீட்டினுள், கருகிய நிலையில், மேரி பிணமாக இருந்தார். உடல் முற்றிலுமாக கருகியதால் அது, மேரிதான் என உறுதி செய்ய முடியவில்லை. உடலுக்கு அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது. ஜான், மேரி இருவரும் கம்பியூட்டர் வல்லுனர்கள். வேலை பளு காரணமாக, அவர்கள் வாழ அமைதியான இடம் தேவைப்பட்டது. அதனால் போர்ட்லாண்டிற்கு இடம் பெயர்ந்தனர். மேரி, பொழுதுபோக்குக்காக குதிரை வளர்த்தார். அவர்கள் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். 90 சதவிகித வீடு கட்டிமுடியும் தருவாயில் இந்த கோர தீ விபத்து. ஜானிடம் போலீஸ் விசாரணை செய்தபோது   ”நான் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக 2 மணி நேரத்திற்கு முன் கடைக்கு போயிருந்தேன். கிளம்பும் முன், துணிகளை காயவைக்க பயன்படும் டிரையர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிரையர், ப்ரோபனால் (Propanol) எனப்படும் இரசாயனப் பொருளால் இயங்கும். ஒரு வேளை தீ அதன் மூலம் ஏற்பட்டிருக்கலாம்”. “உங்கள் முகத்தில் என்ன காயம்?” “இன்று காலை, வீட்டிற்கு அருகில் இருந்த முட்புதர்களை அகற்றும் போது இந்த காயம் ஏற்பட்டது” “நீங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறது”. (இப்படி வாங்குவது  விசாரணையின் வழக்கமான ஒரு அம்சம்) போலீசார், ஜான் வாங்கிய பொருட்களின் பில்களை பார்த்து, தீ விபத்து நடந்த நேரம், அவர், கடையினில் இருந்ததை உறுதி செய்தனர். மேரியின் எலும்பை உபயோகித்து டி.என்.ஏ பரிசோதனை செய்ததில், இறந்தது மேரி தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? தீ விபத்தினாலா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எப்படி கண்டுபிடிப்பது?.  போஸ்ட்மார்டம் அறிக்கையில் இருந்த விபரங்கள் இவை மேரியின் ரத்தத்தில் கார்பன் மோனாக்ஸைடு காணப்படவில்லை (அவர் மூச்சுவிடுவதை நிறுத்திய பிறகு அதாவது இறந்தபிறகு தான் வீடு தீப்பிடித்திருக்கிறது). மேரியின் உடல் முற்றிலும் எரிந்து போனதால் உடலில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்ததா என கண்டுபிடிக்கமுடியவில்லை. மேரியின் மூச்சு குழாயில் ரத்தம் இருந்தது. (மேரி கடைசி முறையாக மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றோடு ரத்தமும் இருந்திருக்கிறது. அதற்கு ஒரே வாய்ப்பு, பலமாக தாக்கப்பட்டதால், உடலின் உள் உறுப்புகளிலிருந்து வந்த ரத்தம்) இந்த காரணங்களை வைத்து மேரி இறந்தது தற்கொலையில்லை, கொலை என ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டது.  தீ விபத்துக்களில் முக்கியமாக தெரியவேண்டியது, எந்த இடத்திலிருந்து தீ உருவானது? தீ ஆரம்பிக்க உதவிய பொருள் எது? விபத்தா அல்லது மனிதனால் எழுப்பப்பட்ட தீயா? போலீசார் இதைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ஜான் சொன்னபடி, ப்ரோபனால் வாயுவால் இயங்கும் துணி டிரையர் அல்லது மேரியின் காரில் இருந்த பேட்டரி இதில் ஏதோ ஒன்று தான் தீக்கு காரணம். ஆனால், பேட்டரியின் வயர்கள் இணைக்கப்படவில்லை. அதனால் தீ அங்கிருந்து உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்து டிரையர். அதை ஆராய்ந்த போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆமாம்! ஜான் சொன்னது போல டிரையர் ஓடிக்கொண்டிருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ப்ரோபனால் வாயுக்குழாய், டிரையருடன் இணைந்திருக்கவில்லை.   ஜான் சொன்னது பொய்? ம்ம்.ம்ம்..அப்படியும் சொல்ல முடியாது. தீயணைப்பு படையினர் ஒருவேளை குழாயை எடுத்துவிட்டிருக்கலாமில்லையா? இருக்கலாம்! ஏனென்றால், அவர்களது ஒரே நோக்கம், தீயை அணைப்பது மற்றும் யாராவது சிக்கியிருந்தால் அவர்களை மீட்பது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் எதையும் மாற்ற/தொடக்கூடாது என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஜான் சொன்னது நிஜமா? அல்லது தீயணைப்பு படையினர் அதை கழட்டிவிட்டார்களா?. அந்த குழாய் தடயவியல் நிபுணரிடம் அளிக்கப்பட்டது. ஆராய்ந்த போது 2 விஷயங்களை கண்டுபிடித்தார். [] குழாய், டிரையரோடு இணையும் இடத்தில் ஆக்ஸிடேஷன் எனப்படுகிற ரசாயன மாற்றம் நிகழ்ந்திருந்தது. அதாவது, தீ எரியும் போது, குழாய் டிரையரோடு இணைந்திருக்கவில்லை.(மேலே உள்ள படத்தில் கருப்பாக இருக்கும் குழாய் ஆக்ஸிடேஷன் ஆனது. அருகிலிருக்கும் மற்றொன்று, தீ ஏற்படும்போது குழாய் இணைக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி, தீயால் பாதிக்கப்படாமல் வெள்ளையாக இருந்திருக்கும்) [] குழாய் இணையும் இடத்தில் ஒரு துளி உலோகம் ஒட்டியிருந்தது. அந்த உலோகம், குழாயோடதில்லை. அது குழாய்க்கு மேலே இருந்த ப்ரோப்பனாலின் அளவை ஒழுங்குபடுத்தும் குமிழின் ஒரு பகுதி. இதன் மூலம் தீ அந்த இடத்தில் ஆரம்பித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால், அந்த குமிழ் உருகி, கீழேயிருந்த குழாயின் மேலே விழுந்திருக்கிறது (படத்தில் வட்டமிடப்பட்ட இடத்திலுள்ள மஞ்சள் நிற சிறு துளியை பாருங்கள்). இந்த 2 ஆதாரங்களை வைத்து ஜான் சொன்னது பொய் என்பதை நிரூபித்தார்கள். மேலும், ஜானின் ஜீன்ஸில் இருந்த சின்ன கறை, ரத்தக் கறை, அதுவும் மேரியின் ரத்தமென்பதை டி.என்.ஏ சோதனை உறுதி செய்தது.  ஜான், இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனது வேலை, போர்ட்லேண்டிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்றப்பட்டது. மேரியும் தன்னுடன் வரவேண்டுமென நினைத்தான். ஆனால் மேரிக்கு போர்ட்லேண்டை விட்டு வர மனமில்லை. மேலும், மேரி, குதிரை வளர்ப்புக்காக அதிக செலவு செய்திருக்கிறார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்த நாளில், வாக்கு வாதம் முற்றி, மேரியை ஜான் தாக்க, அப்பொழுது ஏற்பட்ட சண்டையில் ஜானின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது, அந்த சண்டையின் முடிவில் மேரி இறந்துபோயிருக்கிறார். இதனை விபத்தாக மாற்ற முடிவு செய்த ஜான், வீட்டிற்கு வெளியே இருந்த ப்ரோபனால் சிலிண்டரை மூடிவிட்டு, வீட்டுக்குள் வந்து வாயுக்குழாய் இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை மூட்டிவிட்டு, பிறகு வீட்டுக்கு வெளியே வந்து ப்ரோபனால் சிலிண்டரை திறந்து விட்டிருக்கிறான். அப்பொழுது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உலோகம் உருகி, குழாயின் மேல் பட்டிருக்கிறது. [] ஜூரிகள், ஜான் குற்றவாளி என முடிவு செய்தனர். மனைவியைத் தாக்கியது (கொலை செய்தான் என ஜூரிகள் நம்ப மறுத்துவிட்டனர்) மற்றும் தீ மூட்டியது, இந்த 2 குற்றங்களுக்காக தண்டனை பெற்றான். ஜான் எவ்வளவோ திட்டமிட்டு, செய்த குற்றத்தை மறைக்க நினைத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் உதவியால், அவன் குற்றம் நிரூபிக்கப்பட்டது. 5. துடிக்கும் இதயம் குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தும் போது, போலீசார், குற்றம் நடந்த நேரத்தில், குற்றவாளி அந்த இடத்திலிருந்தான் என நிரூபிக்க வேண்டும். குற்றவாளிகள் இதை சாதகமாக பயன்படுத்தி, குற்றம் நடக்கும் போது, தான் பிறிதோர் இடத்திலிருந்த மாதிரி (alibi) நிரூபிக்க முயல்வார்கள். அறிவியல் துணையுடன் குற்றவாளி அந்த இடத்திலிருந்தான் என நிரூபித்த ஒரு கொலை வழக்கு இது. இதில் ஒரு வித்தியாசமான கருவியும் போலீசாருக்கு உதவி செய்தது. என்ன அந்த கருவி? வாருங்கள்! பார்ப்போம். ------------------------------------------------------------------------ ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகான இடம். அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் முதுமைக் காலத்தை அமைதியாக கழிப்பவர்கள். டாஸ்மேனியாவிலுள்ள ஒரு சிறு நகரத்தில் சுமார் 40 முதல் 50 பேர் இருந்தார்கள். ஒரு நாள் காலை சுமார் 7 மணியளவில், ஜான், பீட்டரின் வீட்டிற்கு வந்து, தன் பெற்றோரை பார்பதற்காக, பீட்டர் தன்னை பக்கத்து ஊருக்கு அவன் காரில் அழைத்து செல்ல முடியுமா? எனக் கேட்டான். பீட்டர் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது, ஜான், பீட்டரின் நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு அவன் கண்ட காட்சி நெஞ்சை உறைய வைத்தது. வயதான ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில் விழுந்து கிடந்தார். போலீசார் வந்து சேர்ந்த போது, 72 வயதான, தனியாக வசித்துக் கொண்டிருந்த கிறிஸ், இறந்து போனது முடிவானது. [] போஸ்ட்மார்டத்தில், கிறிஸ் ஒரு பெரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அதிக ரத்த இழப்பு காரணமாக அவர் இறந்திருக்கிறார். இறந்தது சுமார் விடியற்காலை 3 மணியிலிருந்து 7.30 மணிக்குள் என முடிவானது. எப்படி டாக்டர்கள் ஒருவர் இறந்த நேரத்தை கண்டுபிடிப்பார்கள்? ஒருவர் இறந்த உடன் ரத்தம் ஓட்டம் நிற்பதால், உடலின் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். அப்படி குறையக்கூடிய வேகம் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு கட்டத்தில், உடலின் வெப்பம், வெளிப்புற வெப்பத்திற்கு சமமாக மாறும். இப்படி வெப்பம் குறையக்கூடிய வேகத்தை வைத்து, இறந்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த முறை அவ்வளவு துல்லியமானது கிடையாது. [] வீட்டு தோட்டத்தை ஆராய்ந்த போது, ரத்தக் கறை ஒரு இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் லூமினால் (luminol) திரவம் தெளிக்கப்பட்டது. (இந்த லூமினால் என்ற ரசாயன பொருள், மனித ரத்ததுடன் கலக்கும் போது ஒளிரும் தன்மை கொண்டது. ரத்தத்தை நன்றாக துடைத்திருந்தாலும் அல்லது பல நாட்களாகியிருந்தாலும் கூட, மிகச்சிறிய அளவில் ரத்தம் இருந்தால் கூட கண்டுபிடிக்கக்கூடியது லூமினால். அருகிலுள்ள படத்தில், சாதாரணமாக தோற்றமளிக்க கூடிய ஒரு இடம் லூமினால் தெளிக்கப்பட்டவுடன் அங்குள்ள ரத்தத்தை எப்படி எடுத்து காட்டுகிறது பாருங்கள்). இரவில் வெளிச்சமில்லாத நேரத்தில் ஆராய்ந்த போது, அந்த ரத்தக் கறை ஒரு சிறிய கோடாலி வடிவிலிருந்தது. போலீசார், கிறிஸ தாக்கப்பட்டது கோடாலியால் என உறுதி செய்தனர்.  அந்த பகுதியில் வாழ்ந்த வயதானவர்கள், நிறைய பணத்தை வீட்டில் வைத்திருக்கும் பழக்கமுடையவர்கள். கிறிஸ் வீட்டிலிருந்த பணம் காணாமல் போயிருந்தது. ஆனால் வீட்டினுள் எந்த விதமான சண்டை நடந்த அறிகுறியில்லை. அதனால், கிறிஸ் தாக்கப்பட்டதற்கு பிறகு கொலையாளி பணத்தை திருடியிருக்கலாம். இவ்வளவு நடந்த போது அருகிலுள்ள வீட்டிலிருப்பவர்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லையா? கேட்டிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சுமார் 4 மணியளவில், நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டதாகவும், ஆனால் அந்த பகுதியில் கங்காருக்கள் நடமாடுவதால், நாய்கள் குரைத்ததை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லையென்றார்கள். அடுத்து போஸ்ட்மார்டம் செய்த டாக்டர், கிறிஸ், இதய நோய் உள்ளவர் என்றும், அதற்காக “பேஸ் மேக்கர்” என்ற இதயத்துடிப்பை சீராக்கக் கூடிய கருவி பொருத்தியிருந்தார் எனச் சொன்னார். பேஸ் மேக்கர் என்பது ஒரு 2 இன்ச் அகலமுள்ள மிகச்சிறிய எலக்ட்ரானிக் கருவி. இதை உடலின் உள்ளே, தோள்பட்டைக்கு அருகில் வைத்து தைத்துவிடுவார்கள். இது, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், சுமார் 2 முதல் 5 வோல்ட் மின்சாரத்தை இதயத்தில் செலுத்தும். இதன் மூலம் இதயம் சீராக துடிப்பதை உறுதி செய்யும். அதே நேரம், அது இதயத்துடிப்பை பற்றிய தகவல்களையும் சேமித்து வைக்கும். இத்தகவல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படும். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது, கிறிஸ் இறந்து சுமார் 30 மணி நேரம் கழித்து. அதனால் உடனடியாக அக் கருவியில் இருந்த தகவல்களை, கம்பியூட்டர் உதவியுடன் சேகரித்தனர். இன்னும் 2 மணி நேரம் தாமதித்திருந்தால் அனைத்து தகவல்களும் அழிந்து போயிருக்கும். [] இரவு - 10.05 - கிறிஸ் தூங்கியிருக்கிறார் அதிகாலை - 4.46 - தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார் அதிகாலை-4.54-இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100க்கு மேல் போனது. இது கிறிஸ் எழுந்து வேகமாக நடந்த்திருக்கிறார் என்பதைக்காட்டுகிறது. அதிகாலை- 5.34-இதயத் துடிப்பு நின்றது. கிறிஸ் இறந்தது அதிகாலை 5.34 நிமிடங்கள்.  போலீசார் காலை மணி 5-6 யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை கண்டறிய முற்பட்டனர். முதலில் பீட்டர் (கிறிஸ் வீட்டுக்கு அருகில் வசித்தவன்) காலை 5 முதல் 6 மணி வரை எங்கு இருந்தீர்கள்? இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அதற்கு ஆதாரம் இருக்கிறதா? நான் தனியாக வசிப்பவன் எந்த ஆதாரமும் இல்லை. உங்களிடம் கோடாலி இருக்கிறதா? இருக்கிறது. ஆனால் அதை இரண்டு நாட்களாக காணவில்லை. வேறு யார் மீதாவது சந்தேகமிருக்கிறதா? எனக்கு ஜான் மீது சிறிது சந்தேகமாக இருக்கிறது. ஏன்? அன்று காலை சுமார் 7 மணியளவில் என் வீட்டிற்கு வந்து, அவனை காரில், அடுத்த ஊருக்கு கூட்டிபோக முடியுமா எனக் கேட்டான். அது மாதிரி அவன் கேட்டது இல்லை. மேலும், அவ்வளவு காலை என் வீட்டிற்கு இது வரை அவன் வந்தது இல்லை. மேரி (ஜானின் சகோதரி, கிறிஸ் வீட்டிலிருந்து 10 வீடு தள்ளி வசித்தவள்) காலை 5 முதல் 6 மணி ஜான் எங்கிருந்தான்?  இரவு 11 மணியிலிருந்து அவன் வீட்டிலிருந்தான். அதிகாலை சுமார் 3 மணியளவில் என்னிடம் சிகரெட் கேட்டான். சுமார் 6 மணியளவில் அவன் குளிக்கும் சத்தம் கேட்டது. ஜானின் வீட்டை ஆராய்ந்தபோது கருப்பு நிற டார்ச் லைட் கிடைத்தது. அது ஜான், மேரி, பீட்டருடையது இல்லை. எந்த வித கைரேகையும் அதிலில்லை. பரிசோதனையில், டார்ச் லைட்டை ஆன்/ஆஃப் ஸ்விட்ச்சில் சில இறந்த தோல் செல்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள். டி.என்.ஏ பரிசோதனையில் அது கிறிஸ்சினுடையது எனத் தெரிந்தது. ஜான் கைது செய்யப்பட்டான். கிறிஸ் வீட்டிற்கு எதிரிலிருந்த, நண்பர் வெளியூர் செல்லும் போது வீடடை பார்த்துக் கொள்ளும் படி கிறிஸ்ஸிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த ஜான், கொள்ளையடிக்கும் நோக்கில், பீட்டரின் வீட்டிலிருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு, வீட்டினுள் செல்ல முயன்றிருக்கிறான். அந்த நேரம் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த கிறிஸ், டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, ஜான், தனது நண்பர் வீட்டினருகில் நின்றிருப்பதை பார்த்து கிறிஸ் சந்தேகம் கொண்டு விசாரிக்க, பயந்து போன ஜான், கிறிஸ்ஸை கோடாலியால் தாக்கியிருக்கிறான். பிறகு, கிறிஸ் வீட்டினுள் புகுந்து அவரது பர்ஸ், டார்ச்லைட் மற்றும் கோடாலியை எடுத்துச் சென்று, பர்ஸ் மற்றும் கோடாலியை யாரும் பார்க்காத இடத்தில் மறைத்திருக்கிறான். ஆனால் என்ன காரணத்தினாலோ டார்ச் லைட்டை வீட்டிற்கு எடுத்துச்சென்றிருக்கிறான். காலை 6 மணியளவில் தான் வீட்டிலிருந்தது போல காண்பிப்பதற்காக, மேரி கேட்குமாறு குளித்திருக்கிறான். பிறகு 7 மணியளவில் பீட்டரின் வீட்டிற்கு வந்து, கிறிஸ் பிணத்தை தான் முதலில் பார்ப்பது போல நடித்திருக்கிறான். இதன் மூலம் போலீசார் தன்னை சந்தேகப்படமாட்டார்கள் என நினைத்திருக்கிறான். இந்த கொலை வழக்கில், பேஸ் மேக்கர் உதவிகொண்டு கிறிஸ் இறந்த நேரத்தை துல்லியமாக கண்டுபிடித்ததால், ஜானை குற்றவாளி என போலீசார் கோர்ட்டில் நிரூபிக்க முடிந்தது. இல்லையேல், அதை சாதகமாக பயன்படுத்தி ஜான் தப்பித்திருப்பான். மேலும் அவன் செய்த இரண்டு தவறுகள் 1. டார்ச் லைட்டை வீட்டுக்கு எடுத்துச்சென்றது. 2. 7.15 ம்ணியளவில் கிறிஸ் இறந்து கிடந்ததை பார்த்தது போல நடித்தது. இன்னும் 2 மணி நேரம் அவன் தாமதித்திருந்தால், பேஸ்மேக்கர் தகவல்கள் அழிந்து போயிருக்கும். வாழும் போது கிறிஸ்சுக்கு உதவிய பேஸ்மேக்கர், இறப்புக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்த உதவியாயிருந்தது. 6. தொடராதே துப்பறிதல் என்பது பெரிய புதிர் கட்டத்தைப் போன்றது. சின்ன சின்ன க்ளூக்களை சேகரித்து, அதனதன் இடத்தில் சரியாக பொருத்தினால் புதிரை விடுவிக்கலாம். அந்த மாதிரி சின்ன சின்ன தடயங்களை அதனதன் இடத்தில் பொருத்தி குற்றவாளியைக் கண்டுபிடித்த ஒரு வழக்கு தான் இது. ------------------------------------------------------------------------ 48 வயதான மேரிக்கு ஒரு நாள் வந்த கடிதத்தில், அவரின் புகைப்படம் மற்றும் மிரட்டல் கடிதம் வந்தது.இந்த வயதில் அப்படி ஒரு புகைப்படம் யாருக்கு எப்படி கிடைத்தது என்று அதிர்ச்சி. “உன்னால் என் மனைவிக்கும் எனக்கும் பிரச்சினை. அதற்கு காரணமானவள் நீ. உயிருடன் இருக்கத் தகுதியில்லாதவள்” பயந்து போன மேரி, கணவர் ஜானுடன், போலீசுக்கு சென்று, தனக்கு பாதுகாப்புக் கோரினார். பாதுகாப்பு கொடுத்த காலத்தில் எந்த மிரட்டல் கடிதமும் வரவில்லை.  மேரியும், தனக்கு ஏன் அந்த மாதிரி கடிதம் வந்தது என்று தெரியவில்லை என ஜானிடம் கூறினார். இந்நிலையில் வந்த இன்னொரு கடிதத்தில் “போலீசால் உனக்கு பிரயோஜனம் இல்லை. உன் வீட்டு பாதுகாப்பு அலாரத்தின் சீக்ரெட் கோட் 7805. உனது பிள்ளைகளின் நடவடிக்கை கூட எனக்குத் தெரியும்.” இவ்வளவு தகவல் ஒருவனுக்கு தெரிந்திருக்கிறது என்றதும், ஜானுக்கும் மேரிக்கும் இடையில் சிறிய பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய மேரி, பிறகு வீடு திரும்பவே இல்லை. ஒரு நாள் கழித்து மேரியின் கார், சூப்பர் மார்கெட் பார்க்கிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் மட்டுமல்ல, உயிரற்ற மேரியும். போஸ்மார்டத்தில் தெரிந்த தகவல்கள். - கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம். - மேரியின் பேண்ட் முன் பக்கம் பின் பக்கமாக தவறாக போடப்பட்டுள்ளது. - மேரியின் பேண்ட்டில் இருந்த ஈரம், காரில் இல்லை. அதனால் காரில் அவர் கொல்லப்படவில்லை - மேரி, மரணமடைந்த பிறகு, உடல் நகர்த்தப்பட்டிருக்கிறது. உடலில் இருந்த சிராய்ப்பின் தன்மை இதனை உறுதி செய்தது.  மேரியின் காரை சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தியது கொலையாளிதான். சூப்பர் மார்கெட்டில் காரை நிறுத்தி விட்டு அப்படியே கொலையாளி சென்றிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் அப்படி சென்றிருந்தால் அது பார்ப்பவர்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால், கொலையாளி, சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. கடையிலிருந்த வீடியோ காமிராவை ஆராய்ந்ததில், தொப்பி, கருப்பு நிற ஜெர்க்கின் அணிந்த ஒருவன் மேல் சந்தேகம் வந்தது. காலை 6 மணிக்கு வந்த அவன் வாங்கியது நாய் பிஸ்கெட் மட்டுமே. மேலும், காமிராவில் தன் உருவம் விழக்கூடாது என்பதற்காக பதுங்கி பதுங்கி நடந்திருப்பது தெரிந்தது.  அந்த உருவத்தை அடையாளம் காண மேற்கண்ட முயற்சி வெற்றியடையவில்லை. காரணம், வீடியோ குவாலிட்டி நன்றாக இல்லை. முகமும் தெளிவாக பதிவாக வில்லை. போட்டோகிராமெட்ரி எனப்படுகிற 2D போட்டாவை வைத்து 3Dயாக மாற்றக்கூடிய நிபுணர்கள், வீடியோவை ஆராய்ந்தார்கள். \begin{center} \includegraphics[width=1.0]{/run/media/sun/MANDRIVA/guru-2/freetamil-ebooks/detective/pic/11.png) வீடியோ காமிராவை நிலையான இடத்தில் பொருத்தியிருந்ததால் அவர்களின் வேலை எளிதானது. முதல் படத்தில் தெரிபவன் தான் கொலையாளி (இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனினும் இப்போதைக்கு இவனை நாம் சந்தேகப்படுவோம்). அவன் பின் புறம் இருக்கும் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்சின் அளவுகளை கண்டறிந்தனர். அதே இடத்தில் உயரத்தை அளக்கும் கருவி ஒன்றை நிறுவி அதைப் புகைப்படம் எடுத்து ஆராய்ந்ததில் அவனது உயரம் 5 அடி 6 அங்குலம் என முடிவானது. மேரியின் பேண்டில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஆராய்ந்ததில், கார்பரண்டம், மேக்னடைட் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் காணப்பட்டது. மேரியின் வீடு மற்றும் 5 இடங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில், மேரியின் வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட மண், பேண்டிலிருந்த மண்ணுடன் ஒத்துப்போனது. இப்பொழுது போலீசுக்குத் தெரிந்த இரண்டு தகவல்கள் 1. மேரி கொல்லப்பட்டது அவரின் வீட்டு வாசலில் 2. கொலையாளி 5 அடி 6 அங்குல உயரமானவன். மேரியின் வீட்டை ஆராய சர்ச் வாரண்ட் வாங்கப்பட்டது. வீட்டை ஆராய்ந்த போது, நாயைக் கட்டிப் போடும், நைலான் கயிற்றில் காணப்பட்ட குமிழ் போன்ற அமைப்பு, மேரியின் கழுத்தில் காணப்பட்ட காயத்தின் அடையாளத்துடன் ஒத்துப் போனது. ஜானை விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதை போலீசார் உணர்ந்தனர். போலீஸ்: கடைசியாக உங்கள் மனைவியை எப்பொழுது பார்த்தீர்கள்? ஜான்: இரவு 10 மணி, பிள்ளைகள் வெளியே போயிருந்தனர். எனக்கும் மேரிக்கும் சிறிய வாக்குவாதம். அதில் கோபமடைந்து மேரி வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள். போலீஸ்: உங்கள் மனைவி கொல்லப்பட்டது, நாயைக் கட்டி போடும் நைலான் கயிற்றினால் எனக் கண்டுபிடித்திருக்கிறோம். இதற்கு என்ன சொல்கிறீர்கள். ஜான்: உண்மையை சொல்லி விடுகிறேன். மேரியைக் கொன்றது நான் இல்லை. எனது மூத்த மகன் டேவிட். மேரியுடன் சண்டையிடும் போது, கொன்று விட்டான். போலீஸ் இதனை நம்பத் தயாராகயில்லை. விசாரித்த வரை, மேரியின் மூன்று பிள்ளைகளும் அவருடன் மிகவும் பாசமாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். இந்நிலையில் போலீசுக்கு இன்னொரு கடிதம் வந்தது. அதில் “பாவம் ஜானை சந்தேகப்படுகிறீர்கள். மேரியைக் கொன்றது நான் தான். அவள் எனது உறவை முறிக்க விரும்பினாள், நான் அவளது கழுத்தை முறித்துவிட்டேன். இவளோடு சேர்த்து 5 பெண்களைக் கொன்றிருக்கிறேன். கொலை செய்வதில் நல்லத் தேர்ச்சி வந்துவிட்டது எனக்கு” இக்கடிதத்தை ஆராய லிங்குவிஸ்ட்டிக் நிபுணரிடம் கொடுத்தனர். அவர் இதுவரை வந்த மூன்று கடிதங்களையும் ஆராய்ந்து முடிவில் தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார். “ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வேவ்வேறு பொருள் படும் படி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக “she BREAK my relationship, i BROKE her neck”. இது கடைசிக் கடிதத்தில் காணப்பட்டது. இதே போல மற்ற இரண்டு கடிதங்களிலும் இருக்கிறது” “நேர்மறை வார்த்தைகளையும் எதிர் மறை வார்த்தைகளையும் வித்தியாசமாக எழுதும் பழக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக”she is there. i have been following her" போன்ற நேர்மறைக் கருத்துக்களை எழுதியவன் எதிர் மறைக்கருத்துக்களை ”she isn’t there. I don’t know“ போன்று சுருக்கி எழுதி இருக்கிறான்” ஜான் எழுதிய சில கடிதங்களை ஆராய்ந்த போது இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை கண்டுபிடித்தனர். ஜானின் உயரம் 5 அடி 6 அங்குலம். அவன் வீட்டில் கருப்பு நிற ஜெர்க்கின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நாய் பிஸ்கெட் வாங்கியதற்கான ரசீது இருந்தது. இந்த ஆதாரங்களை வைத்து ஜானைக் குற்றவாளி எனக் கோர்ட்டில் நிறுத்தினார்கள். ஜானுக்கும் மேரிக்கும் திருமண வாழ்வில் பிரச்சினை. மேரி, ஜானை விட்டு பிரிய தயாராக இருந்தார். அந்த நிலையில் மிரட்டல் கடிதம் வந்தால், மேரியைக் காப்பாற்றும் ஹீரோ போல செயல்பட்டு, அவரிடம் நல்ல பெயர் வாங்கலாம். அதன் மூலம் மண வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்கும் என ஜான் நினைத்தான். அதனால் தான் அந்த மிரட்டல் கடிதங்களை எழுதினான். அன்று இரவு ஏற்பட்ட சண்டையில், ஜான் ஆத்திரமடைந்து, அருகில் இருந்த நாயைக் கட்டிப்போடும் நைலான் கயிற்றை வைத்து மேரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். மேரிக்கு பேண்ட் அணிவிக்கும் போது தவறுதலாக முன், பின் பக்கங்களை மாற்றி அணிவித்து, உடலை வீட்டு வாசலில் இழுத்து வந்து காரில் ஏற்றி, வீட்டுக்கு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் காரை நிறுத்தி விட்டு, சந்தேகத்தை தடுக்க, சூப்பர் மார்க்கெட் உள் சென்று வந்திருக்கிறான். இந்த வழக்கில் மூன்று விதமான தடய நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஜானுக்கு ஆயுள் தண்டணை கிடைக்க உதவியாக இருந்தார்கள். 7. நிஜமான கதை 1981 வருடம், ப்ளோரிடா மாகாணம். ஜான், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு, தன் காரை நெருங்கும் போது, ”சார்.. நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகணும், லிப்ட் தருவீங்களா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். 25 வயது மதிக்கத்தக்க கருப்பு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ”நான் அவ்வளவு தூரம் போக மாட்டேன். ஆனால் வழியிலே உங்களை இறக்கி விடுகிறேன்” என்றார் ஜான். “சரி சார். தேங்க்ஸ்”என்றான் அவன். 3 கிலோ மீட்டர் வந்தவுடன், ஜான், அவனை அங்கே இறங்கச் சொன்னார். தன் வீடு வரை வெளியாள் ஒருவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்ற பாதுகாப்புணர்ச்சியினால், மெயின் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தினார்.  அது வரை அமைதியாக வந்தவன் ஜானுடன் சண்டை போட ஆரம்பித்தான். சண்டை வலுக்கவே, வண்டியிலிருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து ஜானை தாக்க ஆரம்பித்தான்.அவனிடமிருந்து தப்பிக்க வண்டியை விட்டு கீழே இறங்கிய ஜான், ஓட எத்தனிக்கும் பொழுது, அவன் எட்டிப் பிடித்தான். இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ஜான், அவனை வண்டியில் ஏற சொன்னார். அவன் ஏறுவதற்கு முன், வண்டியை ஸ்டார்ட் செய்து, மிக வேகமாக ஓட்டினார். அவன் பார்வையிலிருந்து மறைந்த பிறகும் பயம் குறையவில்லை. அந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு உடனே சென்றால், அவன் வீட்டைக் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில், 20 நிமிடம் வண்டியை வெவ்வேறு திசையில் செலுத்திவிட்டு பிறகு வீட்டை நோக்கி வந்தார். வீட்டுக்கு சற்று தொலைவில் வரும் பொழுது, வீட்டு ஜன்னலருகில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் வேறு யாருமில்லை, சற்று முன் ஜானைத் தாக்கியவன். எப்படி அவன் வீட்டைக் கண்டுபிடித்தான் என்று ஜானுக்கு புரியவில்லை. உடனே போலீசுக்கு போன் செய்தார். போலீஸ் வந்து பார்க்கும் போது, வீட்டின் அருகில் யாருமில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது, ஜானின் 70 வயதான அம்மா,மேரி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிந்தது. போஸ்ட்மார்ட அறிக்கையில், மேரி, 28 முறை ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஒரு பொருளினால் தாக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில், ஜான் சொன்னதை போலீசார் நம்ப மறுத்துவிட்டனர். 1 கி.மீக்கு முன் இறக்கிவிடப்பட்டவன், எப்படி மிகச்சரியாக ஜான் வீட்டைக் கண்டுபிடித்திருக்க முடியும்?. ஜான் உண்மையறியும் சோதனைக்கு (lie detector test) ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விசாரணையில், ஜானுக்கு பண நெருக்கடி இருப்பதையும், மேரி இறப்பதற்கு முன், அவர் பேரில் இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இது ஜானின் மேல் சந்தேகத்தை அதிகரித்தது. [] கொலை செய்தவன், மேரியின் வயதைக் கூட பொருட்படுத்தாமல், மிக அதிகமான வன்முறையைக் கையாண்டிருக்கிறான். இதன் மூலம், இது முன் விரோதத்தினால் நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். போலீசாருக்கு கிடைத்த இரண்டு தடயங்களில் ஒன்று, மாடிப் படிக்கட்டின் கைப்பிடியில் இருந்த, கொலையாளியின் ரத்தம் படிந்த, உள்ளங்கை பதிவு. இன்னொன்று, ஸ்விட்ச் போர்டில் இருந்த கொலையாளியின் ரத்தக் கறை. ஜானின் கைரேகை ஒத்துப் போகவில்லை.ஸ்விட்ச் போர்டில் இருந்தது, ஜானின் ரத்தமில்லை. ஜான், ஆள் வைத்துக் கொலை செய்திருப்பானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஒரு வேளை ஜான் சொன்ன கதை உண்மையா? ஜான் சொன்ன அடையாளங்களை வைத்து கொலையாளியின் உருவம் வரையப்பட்டது. சில குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டிய போது, ஜான் ஒருவனை அடையாளம் காட்டினான்.சூப்பர் மார்க்கெட்டில் அந்த நேரத்திலிருந்தவர்களிடம் விசாரித்த போது, அன்று ஒருவன் லிப்ட் கேட்டது உண்மைதான் என்றும் மேலும், அவர்கள் ஜான் அடையாளம் காட்டிய ஒருவனின் புகைப்படத்தைதான் அவர்களும் காட்டினார்கள். அவனை விசாரணை செய்த போது, கொலை நடந்த நேரத்தில் அவன் அந்த ஊரிலேயே இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.     கொலை செய்தவன் யார்? அவன் எப்படி ஜானின் வீட்டைக் கண்டுபிடித்தான்?        1981 வருடம் டி.என்.ஏ டெஸ்டிங் வசதியில்லை. 1984-1987ஆம் வருடங்களில் டி.என்.ஏ பரிசோதனையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, குற்றவாளிகளை கண்டறிவதற்கு இந்த பரிசோதனையை போலீசார் பயன்படுத்த தொடங்கினர். 1990ஆம் வருடம், அமெரிக்க அரசாங்கம் CODIS (COmbined DNA Index System) எனப்படுகிற, குற்றவாளிகளின் டி.என்.ஏ விபரங்களை சேமித்துவைக்கும் திட்டத்தை தொடங்கினர்.  [] மேரியின் கொலை வழக்கில், ஸ்விட்ச் போர்டில் எடுக்கப்பட்ட குற்றவாளியின் ரத்தத்திலிருந்து டி.என்.ஏவை எடுத்து, அதை CODIS உதவியுடன், ஏதாவது குற்றவாளியின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறதா எனப் பார்த்தார்கள். 2 நாட்களுக்கு பிறகு, பீட்டர் என்ற ஒருவனின் டி.என்.ஏவுடன் பொருந்தியது. விசாரணையில், 10 வருடங்களுக்கு முன் பீட்டர், ஜான் வசித்த அதே ஊரில் இருந்ததையும் மேரியைக் கொன்றதையும் ஒத்துக்கொண்டான். பீட்டருக்கு போதை பழக்கம் இருந்தது. அன்று ஜானிடம் லிப்ட் கேட்டு, பாதி வழியில் ஜானை தாக்கி, பிறகு ஜான், அவனை விட்டு சென்றவுடன், போதை மயக்கத்தில், அன்று இரவு எதாவது பூட்டியிருக்கும் வீட்டினுள் நுழைந்து ஓய்வு எடுப்பதற்காக வீடு எதாவது இருக்கிறதா என்று தேடியிருக்கிறான். சில வீடுகளில் விளக்கு வெளிச்சம் இருந்ததால், வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்த மேரியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். யாரும் இல்லை என நினைத்தவன், சத்தம் கேட்டு எழுந்த மேரியை பார்த்து பயந்து போய், ஜானின் வண்டியிலிருந்து எடுத்த ஸ்க்ரூ டிரைவரால் மேரியை தாக்கி கொன்று விட்டு தப்பியிருக்கிறான். ஜான், பீட்டரை பார்த்த உடன் பயந்து போய் போலீசைக் கூப்பிடாமல், வீட்டிற்கு சென்றிருந்தால், மேரியைக் காப்பாற்றியிருக்கலாம். மேலும் விசாரணையில், ஜானுக்கும், பீட்டருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முடிவானது. யாரும் நம்ப முடியாத அளவுக்கு தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை, CODIS என்கிற மென்பொருளின் உதவியினால் போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர். 8. மலை உச்சியில் []  கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் பிக் சர் - பசிபிக் கடலோரம் இருக்கும் அழகிய மலைப்பிரதேசம். விடுமுறை நாட்களில் அங்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர், மலையின் விளிம்பிற்குச் சென்று கடல் அழகை ரசிக்கப் போய், தவறி விழுந்து இறந்து போவது அடிக்கடி நடக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். மேரி மற்றும் ஜான் தம்பதியினருடன், பிக் சர்க்கு விடுமுறைக்கு வந்தவர் 21 வயது லிசா. சிறுவயதில் மணமாகி, கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர். அதிக படிப்பறிவும் உலக அறிவும் இல்லாத ஒரு அப்பாவி. தனியே இருந்த லிசா, மேரி மற்றும் ஜானுடைய நண்பரானார். மேரியும் ஜானும், மலை உச்சியைப் பார்த்துவிட்டு, காருக்கு திரும்பும் போது, லிசா மட்டும் அங்கேயே நின்றிருந்தார். சில விநாடிகள் கடந்து இருவரும் திரும்பி பார்க்கும் போது, லிசா அங்கு இல்லை. பதறிக் கொண்டு, விளிம்பிற்குச் சென்று பார்த்தபோது, 500 அடி பள்ளத்தில் லிசா விழுந்து கிடந்தது தெரிந்தது. உதவி தேடி தகவல் அனுப்பி, ஆம்புலன்ஸ் வந்து சேரும் போது லிசா இறந்துபோயிருந்தார். அதிக உயரத்திலிருந்து விழந்த போது, தலையில் அடிபட்டு உடனடி மரணம். இந்த மாதிரி இறப்புக்கள் அந்த இடத்தில் அதிசயமான ஒன்று இல்லை. ஆகவே, கடமைக்காக போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு, விபத்து என முடிவு செய்யப்பட்டது.  விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக, லிசா அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பு கூறப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் போட்டோ எதுவும் எடுக்கவில்லை. மேரி, தன் காமிராவில், விபத்து நடப்பதற்கு முன் நிறைய போட்டா எடுத்திருப்பதாகவும், அதை போலீசாருக்குத் தருவதாகவும் சொன்னார். மகளின் மரணம், வறுமையில் வாடிய லிசாவின் அம்மா, கேத்திக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியது. 2500 டாலர் இன்ஸீரன்ஸ் தொகையையும், இன்ஸீரன்ஸ் கம்பெனி தராமல் இழுத்தடித்தார்கள். 2 வருடங்கள் கழித்து, மேரி, கேத்திக்கு, அவர் மகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார். உடைந்து போன நகங்கள் மற்றும் உள்ளங்கையில் இருந்த காயங்கள், கேத்திக்கு சந்தேகத்தை கிளப்பியது. போலீசிடம் புகார் தந்தார். கீழே இருக்கும் போட்டாவைப் பார்த்த போலீசாருக்கும் சந்தேகம் அதிகமானது.  நீங்களும் பாருங்கள். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது? [] (முதல் போட்டோ - லிசா தனியே. ஹை ஹீல்ஸ் செருப்பை பாருங்கள்) [] (2வது போட்டோ - ஜான் மற்றும் லிசா) முதல் போட்டோவில் சுறுசுறுப்பாக இருக்கும் லிசா, இரண்டாம் போட்டோவில் சோர்ந்து போய், ஒரு வித தூக்கக் கலக்கத்திலிருப்பது போல இருப்பதைப் பாருங்கள். போஸ்ட்மார்டத்தில் சொதப்பிய உள்ளூர் போலீசார் செய்த ஒரே நல்ல விஷயம், லிசாவின் ரத்தத்தை சேகரித்து வைத்தது தான். இரண்டு வருடங்களாக பிரிட்ஜில் இருந்த ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ரத்ததில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரப்படும் ஒரு மருந்து இருந்தது. லிசாவுக்கு அப்படி எந்த மருந்தையும் டாக்டர்கள் தரவில்லை. ஆனால், ஜான், அந்த மருந்தை எடுத்துக்கொள்பவர். மன அழுத்தம் இல்லாதவர்கள் அந்த மருந்தை சாப்பிட்டால், குழப்பம், சோர்வு மற்றும் தூக்கம் வருவது இயல்பு. இரண்டாம் போட்டோவில் இருக்கும் லிசா அந்த நிலையில் இருந்தார். இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குளிர்பானம் குடித்தார். அதில் இந்த மருந்து கலக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு யூகமே. நிரூபிக்க முடியவில்லை. அடுத்த போட்டோவைப் பாருங்கள். இது தான் லிசா உயிருடன் இருந்த கடைசி தருணங்கள். [] (தள்ளுவதற்கு முன் நோட்டமிடுதல்)  ஜானின் கைகள், லிசாவின் தோளைப் பிடித்தவாறு இருக்க, ஜான், பள்ளத்தைப் பார்க்காமல், யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிடுவது போல சுற்றும் முற்றும் பார்ப்பதைப் பாருங்கள். லிசாவின் கால்கள் மடங்கிய நிலையில் இருப்பது; இரண்டு கால்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது (பள்ளத்தை எட்டிப் பார்க்கும் ஒருவர், ஒரு காலை முன்னும் , மற்றொரு காலை பின்னும் வைத்தவாரு எட்டிப் பார்ப்பார்கள். ஜானின் முன்னங்காலைப் பாருங்கள்) மற்றும் குனிந்த முகபாவனை, அவர், சுயநினைவில் இல்லை என்பதை உணர்த்துகிறது. இந்த போட்டோவிற்கு அடுத்து எடுத்தப் படங்களைப் பாருங்கள். [] மேரி எடுத்த அடுத்த நான்கு போட்டோக்களில் இருப்பது, சம்பவம் நடந்த இடத்தின் 360 டிகிரி கோணத்தில் இருந்த பகுதிகளைத்தான். வெறுமனே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்ப்பதை விட, காமிரா வழியே போட்டோ எடுப்பதைப் போல, யாராவது இருக்கிறார்களா என மேரி பார்த்த போது இந்தப் போட்டோக்களை எடுத்திருக்கிறார். விசாரணையின் போது, மேரி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அது “போட்டோ எடுத்தது நான் இல்லை. சம்பவம் நடந்த போது நான் அந்த இடத்திலேயே இல்லை. எந்த போட்டோவிலாவது நான் இருக்கிறேனா பாருங்கள்?” ஒரு போட்டோவைப் பார்த்த போலீசாருக்கு, அதில் தெரிந்த, போட்டோ எடுப்பவரின் நிழல் தெரிந்தது. தடயவியல் நிபுணர்களின் முடிவின் படி, அந்தப் போட்டோவை எடுத்தவர் 5 அடி 4 அங்குல உயரம் இருப்பவர் என முடிவு செய்தனர். மேரியின் உயரமும் அதுவே. உயரத்தை எப்படி பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் கண்டறிந்தனர் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள். [] மேரியின் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்டறியப்பட்டவை லிசா இறப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் 35000 டாலருக்கு இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸீரன்ஸ் ஏஜண்டிடம் விசாரித்த போது, மேரி, இந்தப் பாலிசிதாரர், விபத்தில் இறந்தாலும் இந்தப் பாலிசி செல்லுபடியாகுமா? என்று கேட்டதாக கூறினார். [] - பாலிசியின் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தவர், மேரியின் பக்கத்து வீட்டுக்காரர். ஆராய்ந்ததில் அது போலியாகப் போடப்பட்ட கையெழுத்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காரணம் கையெழுத்தில் இருந்த எழுத்துப்பிழை. - லிசா இறந்த இரண்டாம் நாள், மேரி, 35000 டாலர் கேட்டு இன்ஸீரன்ஸ் கம்பெனிக்கு லெட்டர் அனுப்பினாள். - கடந்த காலங்களில், மேரியின் முதல் கணவர் மற்றும் மேரியின் சிறு குழந்தை விபத்தில் இறந்தது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் இன்ஸூரன்ஸ் செய்யப்பட்ட தொகையும், அதே 35000 டாலர்கள் தான். - மூன்று முறை, மேரி இருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அதற்காக இன்ஸீரன்ஸ் பணமும் அளிக்கப்பட்டிருந்தது. மேரி இதை ஒரு தொழில் மாதிரியே செய்து வந்திருக்கிறாள். - ஏன் 35000 டாலர்?. இன்ஸூரன்ஸ் கம்பெனி, இந்த மாதிரி சிறிய தொகை என்றால் பெரிய விசாரணை நடத்தாமல் பணத்தை தந்துவிடுவார்கள். அதனாலேயே, மேரி அனைத்திற்கும் 35000 டாலர் பாலிசி எடுத்திருந்தாள். கடைசியாக மாட்டிய அப்பாவி லிசா. [] இந்த வழக்குக்கு முக்கிய தடயம் மேரி எடுத்த போட்டோக்கள். எல்லாம் சரி! தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொள்வது போல, மேரி எதற்காக அந்த போட்டோக்களை எடுத்தாள்? விளையாட்டில் ஜெயித்த பரிசுக்கோப்பையை வைத்து அழகு பார்ப்பது போல, தான் புத்திசாலித்தனமாக செய்த கொலைக்கு அடையாளமாக வைத்துக்கொள்ள எடுத்த போட்டோக்கள் அவை. மேரிக்கு ஆயுள் தண்டனைக் கிடைத்தது. ஜான், சிறைச்சாலையில் இறந்து போனான். இன்ஸீரன்ஸ் கம்பெனிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் 9. அப்’பாவி’ப் பெண் டெக்சாஸ் - தீயணைப்புப் பிரிவில் வேலை பார்த்த தாம்சனுக்கு, 2000ஆம வருடம் மிக மோசமாக இருந்தது. முதலில் தீயணைப்பு வண்டியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். பிறகு நடந்த அறுவை சிகிச்சையில் தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தார்.  [] ஒரு நாள் காலை, தாம்சனுக்கு வயிற்றில் நெருப்பு எரிவது போல் இருந்தது. திடகாத்திரமான 32 வயது இளைஞன், இவ்வளவு நோய்வாய்ப்பட்டு யாரும் பார்த்ததில்லை. வயிற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் நோய்க்கு மருந்து சாப்பிட்டதில் உடல் நிலை தேறினார். இரண்டு நாள் கழித்து, மனைவி, லின் செய்து தந்த ஸ்வீட் டீ மற்றும் சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு, ஓய்வு எடுக்கப்போனவர், கொஞ்ச நேரத்தில் போய் சேர்ந்துவிட்டார். தாம்சனின் அகால மரணம் அனைவரையும் உலுக்கிவிட்டது. என்ன ஆயிற்று அவருக்கு? மருத்துவ ரிப்போர்ட்டில், இருதயக்கோளாறு தான் மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக இருதயம் வீங்கியிருந்தது. தாம்சனின் அம்மாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தாம்சனுக்கு இருதயக்கோளாறு எதுவும் இல்லை. மாண்டவர் மீண்டுவருவதில்லையே!. அழுது அரற்றிய லின்னுக்கு கிடைத்த, தாம்சனின் இன்சூரன்ஸ் தொகையான 35,000 டாலர், இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு போதுமா? அதிலும் ஒரு பெரிய சோகம். 2 லட்சம் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த தாம்சன், 15 நாட்களுக்கு முன், தவணையைக் கட்ட மறந்ததால், பாலிசி காலாவதியாகிவிட்டது. இறந்தும் தாம்சனுக்கு அதிர்ஷ்டமில்லை; முக்கியமாக லின்னுக்கும். 2 வாரம் கழித்து, தாம்சனின் அம்மாவிற்கு, அடுத்த ஊரிலிருந்து ஒரு கடிதம் வந்தது. [] 6 வருடங்களுக்கு முன் ஜான் முதலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு, பின் சரியாகி, அடுத்த 2ஆம் நாள் மரணமடைந்தார். போஸ்ட்மார்டத்தில், தாறுமாறான இருதயத்துடிப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஜானின் அம்மாவுக்கு சந்தேகம் இருந்தாலும், போலீசார், மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை. [] சரி ! ஜானுக்கும், 2 வாரத்திற்கு முன் இறந்துபோன தாம்சனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா ?. இருவரும் அரசாங்கப் பணியில் இருந்தவர்கள். இந்த ஒற்றுமையைத் தவிர இன்னொன்றும் இருக்கிறது. அது! லின். 6 வருடங்களுக்கு முன் ஜானின் மனைவியாக இருந்தவள், லின். லின்னின் இரண்டு கணவர்களின் திடீர் மரணம் தற்செயலான ஒன்று என நம்பமுடியவில்லை. சிறு பொறியாக இருந்த சந்தேகம் லின்னைப் பற்றித் தெரிந்ததும், பற்றி எரியத்தொடங்கியது. தாம்சன் மற்றும் ஜானின் போஸ்ட்மார்டத்தில் கண்டறியப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்;  இருவரது கிட்னியிலும் இருந்த “கால்சியம் ஆக்ஸலேட்” என்று வஸ்து. ஆனால், இருவரது உடலிலும் எந்த ஒரு விஷமும் கண்டறியப்படவில்லை. [] கால்சியம் ஆக்ஸலேட் உடலில் வருவதற்கு, எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol) என்ற ரசாயனப் பொருள் காரணம். தாம்சனின் பரிசோதனையில், எத்திலின் க்ளைக்காலின் அளவைப் பரிசோதிக்கையில் கணக்கில் சிறிய தவறு நேர்ந்திருந்தது. அதனை சரிசெய்தபின், தாம்சனின் உடலில் இருந்த 10 மடங்கு அதிக எத்திலின் க்ளைக்கால்தான், மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்ய்யப்பட்டது. எத்திலின் கிளைக்கால் என்பது, குளிரினால் வாகன எரிபொருள் உறையாமல் தடுக்க கலக்கப்படும் ஆண்டி ஃப்ரீஸ் என்ற ஒரு பொருள். புதைக்கப்பட்ட ஜானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு செய்யப்பட்ட பரிசோதனையில், உடலில், எத்திலின் க்ளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லின்னைப் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிந்த உண்மைகள்: தாம்சன் புதைக்கப்படும் நேரத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, தன் செல்போன் மூலம் மூன்று முறை தொடர்புகொண்டு, பாலிசி பணம் விரைவில் கிடைக்குமாறு லின் கேட்டிருக்கிறாள். தாம்சன் இறப்பதற்கு சில நாள் முன், பிராணிகள் காப்பகத்திற்குச் சென்று, பூனைகளைச் சாகடிக்க எந்த விஷத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று லின் கேட்டிருக்கிறாள். சந்தேகம் கொண்டு, அந்தக் காப்பகத்தின் உரிமையாளர், விஷத்தின் பெயரைக் கூற மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லின்னுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஜானை சாகடிக்க பயன்படுத்திய அதே “ஆண்டி ஃப்ரீஸ்”சையே உபயோக்கிக்க முடிவு செய்தாள். லின்னின் பேங்க் மேனேஜர், லின் கிட்டத்தட்ட 35,000 டாலர் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்ததைத் தெரிவித்தார். தாம்சன் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன், லின் பேங்க்கிற்கு வந்து, கடனை 2 வாரங்களின் அடைப்பதாக உறுதியளித்திருந்தாள். லின்னின் கடன் வாங்கும் மற்றும் பணம் செலவழிக்கும் வேகம், இந்தியா, உலகவங்கியின் கடன் வாங்கும் வேகத்தைக் காட்டிலும் அதிகமானது. ஜான் இறப்பதற்கு முன், தன் நண்பர்களிடம், லின் செலவழிக்கும் வேகத்தைப் பற்றி புலம்பியிருக்கிறார். ஜான் இறந்ததும், இன்சூரன்ஸ் பணம் 1,50,000 டாலர் + மாதாந்திர பென்ஷன் தொகை 750 டாலர், லின்னுக்குக் கிடைத்திருக்கிறது. தாம்சன் இறப்பதற்கு முன் லின் மேல் சந்தேகமடைந்ததாலேயே, தன் 2 லட்சம் டாலர் பாலிசிக்கு தவணைக்கட்டாமல் இருந்திருக்கிறார். இது லின்னுக்குத் தெரியாமல் போனது, லின்னின் துரதிருஷ்டமே. விசாரணையில் தெரியவந்த இன்னொன்று, தாம்சனை, லின் திருமணம் செய்யாமலே சேர்ந்துவாழ்ந்தது. அதற்குக் காரணம், தாம்சனை திருமணம் செய்துகொண்டால், ஜானின் பென்ஷன் தொகைக் கிடைக்காது என்பது. எத்திலின் க்ளைகால் போன்ற ஒரு ரசாயனம் உணவில் கலந்திருந்தால், உண்பவருக்கு சுவை தெரியாமல் இருந்திருக்குமா? எத்திலின் க்ளைகாலை, எதாவது இனிப்பு உணவுடன் சேர்க்கும்போது, அதன் ரசாயன நாற்றம் தெரியாமல் போய்விடும். இந்த வழக்கு முடிந்த உடன், அரசாங்கம், எத்திலின் க்ளைகாலில் கசப்புச் சுவையை சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டது. (நம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும்  மண்ணென்ணையில், நீல நிறம் கலப்பது போல). [] லின் - இவ்வளவு சின்ன பெயரை வைத்துக்கொண்டு செய்த குற்றமோ மிகப்பெரியது. அதற்குப் பரிசு, இரண்டு ஆயுள் தண்டனை. லின்னின் பெயர் உலகத்தின் மிகப்பெரிய வில்லிகளின் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்தது. 10. தனி வீட்டில் சிறிது நேரத்திற்கு முன் பெய்த மழை வீட்டைச் சுற்றிலும் இருந்த மண்ணைச் சேறாக்கியிருந்தது. வீட்டின் உள் அறையில் டேவிட் உறங்கிக்கொண்டிருக்கும் போது, டேவிட்டின் மகன் ஜான், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த சோபாவில் ஜானின் தம்பி மேத்யூஸ் தூங்கிக்கொண்டிருந்தான். பின்னிரவு நேரத்தில், இடி இடிக்கும் ஓசைக்கு நடுவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் ஜான் அதிர்ந்து போனான். அப்பா உறங்கும் அறையிலிருந்து அந்த சத்தம் வந்தது. என்ன செய்வது?. அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா? ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது?. அறைக்கதவைத் திறக்கப் பார்த்தபோது, உள்ளே தாழ்பாள் போட்டிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லை போலீசுக்கு போன் செய்யவேண்டியதுதான். அதற்கு முன், மேத்யூஸை பக்கத்து வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். அனுப்பினான். அதற்குப் பின் போலீசுக்கு போன் செய்தான்.  “ஹலோ! என் பெயர் ஜான். என் அப்பா தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், துப்பாக்கி சத்தம் கேட்டது” “பதப்படாதீர்கள்! உங்களையும், உங்கள் அப்பாவையும் தவிர வேறு யார் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள்?” “என் தம்பி இருக்கிறான். அவனைத் துப்பாக்கி சத்தம் கேட்டதும், பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்” “வீட்டினுள் நுழைந்தவன், இப்பொழுது அந்த அறையினுள் இருக்கிறானா ? “ “ அது தெரியவில்லை. சீக்கிரம் போலீசை அனுப்புங்கள்.” போலீஸ் வந்த போது எல்லாம் முடிந்திருந்தது. எதிர்பார்த்தது போல டேவிட், தலையில் சுடப்பட்டு, கட்டிலில் சரிந்திருந்தார். வீட்டை முழுவதுமாக ஆராய்ந்ததில், கொலைகாரன், டேவிட் படுத்திருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை, பெரிய கல் ஒன்றினால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்திருப்பது தெரிந்தது. கல் அறையின் உள்ளே கிடந்தது. விசாரணைக்காக, ஜானின் உடைகள் சேகரிக்கப்பட்டது. டேவிட்டின் எதிரி யாராவது இருக்கிறார்களா?. அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு?!’ மட்டுமே ஆஜராகக் கூடியவராக இருந்ததால், யார் வேண்டுமானாலும் இந்தக் கொலையை செய்திருக்கலாம். [] அடுத்தது, ஜன்னலை உடைக்க உதவிய கல். முதல் மாடியில் இருந்த ஜன்னலை உடைக்க, தரையிலிருந்து அதை எறிந்திருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். கல்லின் எடையைப் பரிசோதித்ததில், அவ்வளவு உயரத்திற்கு எறிவதற்கு ஒருவனால் முடியாது என்பதை உணர்ந்தார்கள். கல்லின் எடையையும், தரையிலிருந்து ஜன்னல் இருந்த தூரத்தையும் கணக்கில் கொண்டால், ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியின் ஜெயித்தவர்கள் எறிந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், வீட்டின் அருகில் எந்த மரமும், முதல் மாடிவரை ஏறுவதற்கு வசதியாக இல்லை. வீட்டின் வெளிப்புறத்திலிருந்து, மாடிக்கு ஏறியதற்கான தடையம் எதுவும் இல்லை. அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. உடைந்திருந்த கண்ணாடியின் சில்லுகள் அறையின் வெளிப்புறத்திலும் கிடந்தது. தடயவியல் வல்லுனர்கள் உடைந்த கண்ணாடியின் வடிவமைப்பை நுண்ணோக்கி வழியே பார்த்த போது, கண்ணாடி, அறையின் உள்ளிருந்து உடைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்தார்கள். இப்பொழுது சந்தேகம் அந்த நேரம் வீட்டில் இருந்த ஜானின் மேல் திரும்பியது. பக்கத்து வீட்டில் விசாரித்ததில், இரவு 11 மணியளவில் அவன் தம்பியை கொண்டு வந்துவிட்டது உண்மை என்றார்கள். போலீசுக்கு போன் செய்த நேரம் 11.20. ஆக, சத்தம் கேட்டப் பிறகு, பாதுகாப்புக்காக தம்பியை பக்கத்து வீட்டிற்கு அனுப்பியது பொய். மேலும், மனவியல் நிபுணர்களிடம் ஜானின் பேச்சை தந்து பரிசோதித்ததில், குரலில் உண்மையான பதட்டம் இல்லை என்று உறுதிசெய்தனர். உடையைப் பரிசோதித்ததில், துப்பாக்கி சுடும் போது வெளியான, மிக நுண்ணிய வெடிமருந்து ஒட்டியிருந்தது. துப்பாக்கி சுடும் போது, அவன் மிக அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் ஜான், டேவிட்டைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். என்ன நடந்தது? டேவிட் தூங்கியதும், இடிச்சத்தத்தை வீட்டினுள் கேட்ட சத்தம் என தம்பியை நம்ப வைத்து, அவனை பக்கத்து வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டு வந்தான். அறையினுள் புகுந்து, துப்பாக்கியால் கொன்று விட்டு, கல்லால் ஜன்னலை உடைத்திருக்கிறான். அறையின் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே வெளியே சென்றுவிட்டான். பிறகு போலீசுக்கு போன் செய்திருக்கிறான். [] காரணம் என்ன? நெடுநாட்களாக தான் கேட்டுக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வாங்க அப்பா பணம் தராததால், அவருடன் சண்டை. சம்பவம் நடந்த இரவு, சண்டை தொடர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கோபம் இச்செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. வளர்த்த கடா மார்பில் … இல்லை இல்லை, தலையில் பாய்ந்தது. 11. சோதனை மேல் சோதனை நியூயார்க், 1991ஆம் வருடத்தில் ஒரு நாள்; எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டை, தீயணைப்பு படையினர் வந்து அணைத்த போது, வீடே சாம்பலாக மாறியிருந்தது. வீட்டில் யாரும் இல்லையா? இருந்தார்கள். ஆனால் வீட்டை விட்டு 100 அடி தள்ளி, சடலமாக.  49 வயதான மேரி, உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்திருந்தார். உயிருடன் இருக்கும் போதே, அவரின் வீடு எரிக்கப்பட்டிருக்கிறது. அவரின் நுரையீரலை ஆரய்ந்த போது இது தெரிந்தது. தீயினால் வீட்டை விட்டு வெளியே வந்த அவரை கொன்றிருக்கிறார்கள். சந்தேகம் 2 பேரின் மீது. மேரி விவாகரத்து செய்த அவரின் முன்னாள் கணவர் பீட்டர். சம்பவம் நடந்த அன்று வெளியூரில் இருந்தது நிரூபிக்கப்பட்டது. அடுத்த சந்தேகம், ஜானின் மீது. யார் அந்த ஜான்? மேரிக்கு, குழந்தைகளின் உரிமையைக் காக்கும், அரசாங்க பணியில் வேலை. ஜான், தன் மகளை, தன்னிடம் தராத இந்த அலுவலகத்தின் மேல் ஆத்திரம் கொண்டு, அந்த அலுவலகத்திலுள்ளவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்திருந்தான். இந்த மிரட்டலுக்காக 6 மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு 3 நாட்களுக்கு முன் தான் விடுதலையாகிருந்தான். சம்பவம் நடந்த அன்று இரவு, தன் தோழியுடன் தங்கியிருந்தேன் என்றான். விசாரணையில், அவனின் தோழி, சிறையில் இருப்பது தெரிந்தது. சிம்பிள்! வீட்டை எரித்த மற்றும் மேரியைக் கொன்ற குற்றத்திற்காக ஜான் கைது செய்யப்பட்டான். கோர்ட்டில், அவனின் முன்னாள் மனைவியும், இன்னாள் காதலியும், ஜானுக்கு கோபம் வந்தால் மிகவும் மூர்க்கமாக மாறிவிடுவான்; அந்த நேரத்தில் கடிக்கவும் செய்வான் என்றார்கள். மேரியின் உடலிலும் கடிக்கப்பட்டதற்கான அடையாளம் இருக்கவே, தடயவியல் நிபுணர்கள் ஜானின் பல் மாதிரியை எடுத்து, மேரியின் கடித் தடத்துடன் ஒப்பிட்டார்கள். ஏமாற்றம். ஜானுக்கு முன் பல் இரண்டு கிடையாது. ஆனால், மேரியின் உடலில் இருந்த கடித் தடம் முன் பல் அனைத்தும் இருக்கும் ஒருவனால் ஏற்பட்டது. இருப்பினும், ஜட்ஜ், ஜானை நம்பவில்லை.  மேரியின் துணியில் இருந்த எச்சிலில் DNA இருக்கும். அதை ஜானுடன் ஒப்பிட்டுப் பார்க்க, ஜான் கேட்டுக்கொண்டான். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து ஜானுக்கு 25 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில், ஜான், தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் படுக்கவில்லை. கேட்ட போது, அந்த படுக்கை உண்மையான குற்றவாளியினுடையது என்றும், தான் ஏன் அதில் படுக்க வேண்டும்? என்று கேட்டான். அப்பீல் மேல் அப்பீல் செய்தான். அவனுடைய வழக்கு மறுவிசாரணைக்கு ஏற்கப்படவேயில்லை. ஜான் படிக்காத சட்டபுத்தகங்கள் இல்லை. ஒரு கட்டத்தில், அவன் வக்கீலாகவே மாறி இருந்தான். 12 வருடங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி, அவனின் சிறை வாழ்க்கையை மாற்றியது. என்ன அது? ஜானின் பெற்றோர்கள் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து. அதில், ஜானின் வழக்கு சம்மந்தப்பட்ட 570 பக்க விசாரணைக் குறிப்பு அழிந்து போனது.12 வருடங்களாக சிறையில் வேலை செய்து சிறிது பணம் சேர்த்திருந்தான். அதில் 87 டாலர் செலவு செய்து, மீண்டும் தன் விசாரணைக் குறிப்புகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றான். அதை படிக்கும் போது, 4 சாட்சிகளின் வாக்குமூலம் இருந்தது. வழக்கு நடக்கும் போது ஜான் இதனைப் பார்க்கவில்லை. அதில் ஒரு சாட்சி, மேரியின் வீட்டின் உரிமையாளர்களான ஜிம்-பிரௌன்.  ஜிம், சம்பவம் நடந்த இரவு, பிரௌன், எரிந்து கொண்டிருந்த வீட்டை அடைந்த பிறகு காரை விட்டு இறங்கி, வீட்டின் எதிர் புறத்தில் 100 அடி தள்ளி எதையோ தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அது வித்தியாசமாகப் பட்டது. என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, எதாவது விட்டுவிட்டேனா என்று பார்த்தேன் என்று கூறினார். இதையடுத்து பிரௌனை விசாரித்த போது, தான் நள்ளிரவு 1.30 மணி வரை, பாரில் இருந்ததாக சொன்னார். ஆனால், பாரில் அவர் 12.00 மணிக்கு கிளம்பி விட்டதாகக் கூறியிருந்தார்கள். இந்த விபரங்கள் எல்லாம் அந்த குறிப்பில் இருந்தது. இதனைப் படித்த ஜான், போலீஸ் எவ்வளவு கவனக்குறைவாக தன் வழக்கை நடத்தியிருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டான். அவனால் முடிந்தது, பிரௌனைத் திட்டி கீழ் கண்ட கடிதத்தை எழுதுவதே, “டேய் பிரௌன். நீ சிறையில் இருக்க வேண்டியவன். கடந்த 12 வருடங்களாக நீ செய்த குற்றத்திற்காக நான் சிறையில் இருக்கிறேன். நீ வெளியே இருக்கிறாய். கூடிய விரைவில், இங்கு நீ வரப் போகிறாய். உனக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று எழுதி அனுப்பினான். ஜானின் திட்டம், இந்த கடிதத்திற்கு, பிரௌன் பதில் கடிதம் எழுதும் போது, அவன் எச்சில் தொட்டு, அந்த கடிதத்தை ஒட்டி அனுப்புவான். அந்த எச்சிலில் இருந்து DNAவை எடுத்து, மேரியின் துணியில் இருந்த எச்சிலின் DNAவுடன் சரிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நினைத்தான். ஆனால் நடந்தது? கடிதத்தைப் படித்தவுடன், பிரௌன், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.  ஜானின் சிறையிலிருந்து வெளி வரும் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து, “நிரபராதிகளுக்கு உதவும்” ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் முறையிட்டான். அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, DNA பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஜானின் DNAவும், மேரியின் துணியிலிருந்ததும் ஒத்துப் போகவில்லை. தெரிந்ததுதான் இது. சரி! இப்பொழுது, பிரௌனின் DNAவை சோதிக்கவேண்டும். அவன் தான் போய் சேர்ந்துவிட்டானே! என்ன செய்வது?. அந்த நேரத்தில், பிரௌனின், மகள் உதவிக்கு வந்தாள். அவளது DNA எடுக்கப்பட்டது. சோதனையில், கொலை செய்தது பிரௌன் என்று முடிவானது. இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முறையிட்டனர். நீதிபதி மறுத்துவிட்டார். என்ன காரணம்? பிரௌனின் மகள் தான் அவள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அதனால் DNA பரிசோதனை முடிவுகள் செல்லாது என்று நவீன நாட்டாமையாக மாறி மறுத்து விட்டார்.  சோதனை! சோதனை மேல் சோதனை! கடைசியாக, புதைக்கப்பட்ட பிரௌன் தோண்டி எடுக்கப்பட்டு, DNAவை பரிசோதித்ததில், குற்றவாளி ஜான் இல்லை, பிரௌன் தான் என்று உறுதி செய்யப்பட்டது. 15 வருடம், செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருந்த ஜான் விடுதலை செய்யப்பட்டான். பிரௌன் எதற்காக மேரியைக் கொன்றான் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.  இந்த வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டியது; 15 வருடங்களாக மேரியின் துணி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது; அறிவியல் வளர்ச்சியினால் சாத்தியப்பட்ட DNA பரிசோதனை மற்றும் ஜானின் இடைவிடாத போராட்டம். 12. இல்லை, ஆமாம், இல்லை ஜீலை, 2000 வது வருடம், ஜான் மற்றும் ரெட் மீன் பிடிப்பதற்காக, லூசியானவில் உள்ள கடலுக்கு சென்றார்கள். ஜான், ரெட்டிடம் வேலை பார்த்து வந்தான்.அன்று வீசிய புயலில் சிக்கி, அவர்கள் பயணம் செய்த போட் கவிழ்ந்ததில் ரெட் இறந்து போனார். போட் கவிழ்ந்து 15 மணி நேரம் கழித்து, ஜானை, ஒரு கப்பல் காப்பாற்றியது. கடந்த 15 மணி நேரங்களாக, மூழ்கிய படகின், மிச்சங்களை பிடித்தபடி மிதந்ததால் மிகவும் சோர்வுற்றிருந்தான். பிறகு போலீஸ் என்ன நடந்தது எனக் கேட்டபோது, “நானும், ரெட்டும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் படகு, சூறாவளியில் மாட்டிக் கொண்டது. ரெட்டின் கால்களில், நாங்கள் வீசிய வலை மாட்டிக்கொண்டது. நான், அவரது கால்களை விடுவிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.ஆனால், ரெட்டால் தப்பிக்க முடியவில்லை. படகு மூழ்கிவிட்டது. நான் படகின் பாகத்தைப் பிடித்தவாறு தப்பித்தேன்”. போலீசார் உடனே ரெட்டை கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று நாட்கள் கழித்து, ரெட்டின் உடல் நீரில் மிதந்தது. அதனை போஸ்மார்டம் செய்த டாக்டர், “ரெட்டின் கையில் 5 இடங்களில் சிராய்ப்பு இருக்கிறது. அது கத்தியினால் தாக்கப்பட்ட போது, தற்காத்துக் கொள்ளும் போது ஏற்பட்ட காயம் போல இருக்கிறது. மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரெட் இறந்தது, இயற்கையான மரணம் கிடையாது”. இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், ஜான், மேலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டான். அவன் மேல் அனைவருக்கும் சந்தேகம் வழுத்தது. ஒரு வேளை, ஜான் கொலை செய்திருப்பானோ?. ஜானை முதல் நாள் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை செய்தார்கள். அவன் சொன்னதையே திருப்பி, திருப்பி சொன்னான். நடந்தது ஒரு விபத்து. நான் கொல்லவில்லை. அடுத்த நாள் 3 மணி நேரம் தொடர்ந்த விசாரணையின் முடிவில், ஜான், ரெட்டை கொன்றதாக ஒத்துக்கொண்டான். அந்த சிறு நகரத்தில் இருந்த அனைவரும் கொண்ட சந்தேகம் சரி என முடிவானது. ஆனால், என்ன நடந்தது ? எதற்காக கொன்றான்?. “படகு, புயலில் மாட்டி, மூழ்கும் நிலையில் இருந்தது. ஒரே ஒரு லைப்சேவிங் டியூப் தான் படகில் இருந்தது. நான் முதலில் அதை எடுக்க முயற்சித்தேன். அப்போது, ரெட்டும், தனக்கு வேண்டும் என்று சொல்லி என்னருகில் வந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் என்னிடம் இருந்த கத்தியால் அவரை தாக்கினேன். அப்படியும், தொடர்ந்து சண்டை போட்டதால் பக்கத்தில் இருந்த இரும்பு கழியால், அவரை தலையில் தாக்கினேன்” என போலீஸ் விசாரணையில் சொன்னான். ஜான் கைது செய்யப்பட்டான். அவன் சார்பில் வாதாட வந்த வக்கீல், ஒரு சந்தேகம் கொண்டார். லைப்சேவிங் டியூப் க்காக, அவன் கொலை செய்தான் என வைத்துக் கொண்டால், அவனைக் காப்பாற்றும் போது, அவன் லைப்சேவிங் டியூப் அணியவில்லை என்பது தெரிந்தது.அவனிடம் உண்மையைக் கூறுமாறு கேட்ட போது, அவன் “நான்  கொலை செய்யவில்லை” என்றான். என்ன இவன் போலீசிடம் ஒத்துக் கொண்டான், இப்பொழுது இல்லை என்கிறான். இதில் எதோ பெரிய குழப்பம் இருக்கிறது. 8 மணி நேரம் போலீஸ் அவனை விசாரணை செய்த வீடியோ டேப், மன நல மருந்துவரிடம் அனுப்பப்பட்டது. ஏன் இவன் மாற்றி, மாற்றி சொல்கிறான்?. டேப்பை பார்த்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். முதல் 5 மணி நேர விசாரணையில் அவன், தான் ரெட்டை கொல்லவில்லை என்று கூறினான். அதற்குள் போலீசார், போஸ்மார்டம் அறிக்கையை நம்பி, அவனை குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டினார்கள். அவன் மிகவும் பயந்து போனது டேப்பில் தெரிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என போலீசார் சொன்னதும், அடுத்த 3 மணி நேரத்தில், அவன் போலீஸ் என்ன சொன்னாலும் அதனை ஒத்துக்கொள்ளும் மன நிலை அடைந்தான்.  போலீஸ்: “போஸ்மார்டத்தில் ரெட் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்ததாக இருக்கு. உண்மையை சொல்லிவிடு” ஜான்   : “ஆமாம் நான் தான் கொன்றேன்” போலீஸ்: “தலையில் பெரிய காயம் இருக்கிறது. நீ தானே அடித்தாய்?” ஜான்   : “ஆமாம், அங்கு இருந்த இரும்புக்குழாயால் அடித்தேன்” (படகில் அவன் கூறிய மாதிரி இரும்புக் குழாயே இருக்கவில்லை என பிறகு விசாரணையில் தெரிந்தது) மேலும் மனநல மருத்துவர், ஜானைப் பற்றி பார்க்கையில், அவனது I.Q 70, அதாவது சராசரிக்கும் குறைவானது. அவனது நியாபகம் வைத்திருக்கும் திறன் குறைவு என கண்டறிந்தனர். போலீஸ், விசாரணை என்ற பெயரில் கொடுத்த டார்ச்சரில் இருந்து தப்பிக்க அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இந்த மாதிரி விசாரணைக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வது நடக்க கூடியது என இன்னொரு கேஸில் இருந்து அறிந்து கொண்டார்கள். மேலும், அமெரிக்க குற்றவியல் சட்டப்படி, பாதி விசாரணை நடக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையில் இருந்து வெளி நடப்பு செய்யலாம். ஆனால், ஜானுக்கு இந்த மாதிரி இருக்கும் சட்டம் பற்றி தெரியவிலலை. டாக்டர், ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையே தவறு என தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டார். ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை, என்ன நடந்தது என அறியும் வகையில் போலீஸ் விசாரணை நடக்க வேண்டும். ஆனால், போலீஸ், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே விசாரணை செய்தது தவறு. (They expected a confession from him and not what happened there). நீதிபதி மற்றும் ஜுரிகள், ஜானை நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர். எல்லாம் சரி, ஆனால் அந்த போஸ்மார்டம் ரிப்போர்ட். அதை என்ன செய்வது? ரெட்டின் உடல் தண்ணீரில் மிதக்கும் போது, அதை கவனிக்காத சிறிய படகு, உடல் மேல் மோதியிருக்கலாம். கையில் இருந்த சிராய்ப்பு, உடலை தண்ணீரில் இருந்து மீட்கும் குழுவினரால் ஏற்பட்டிருக்கலாம். உடலை தண்ணீரில் இருந்து எடுத்த மீட்பு படகினர் இதை உறுதி செய்தனர். மேலும், ரெட்டின் உடலில் இருந்த காயங்கள், கடலில் விபத்தினால் உயிரிழப்பவர்களின், உடலில் ஏற்பட கூடிய பொதுவான காயங்கள் என கண்டுபிடித்தார்கள். மேலும் போஸ்மார்டம் செய்த டாக்டர், தடயவியலில், பயிற்சி பெற்றவர் இல்லை. அவர், கத்தியினால் உடலில் ஏற்பட்ட காயம்தானா என உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் மேலோட்டமாக ரிப்போர்ட் கொடுத்திருப்பது அறியப்பட்டது. ஒரு நிரபராதி தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டான். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது, தடயவியல் பயிற்சி பெற்ற மன நல மருத்துவர்கள். எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !