[] []     தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் ( தமிழாக்கம் : நலங்கிள்ளி )      அட்டைப்படம் : அருண்குமார் -  visualsarun@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution-International License  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் பொது முன்னுரை 4  நூல் அறிமுகம் 6  1. தோற்றுவாய் 7  2. அன்பு 11  3. திருமணம் 13  4. குழந்தைச் செல்வம் 14  5. ஈகைத்திறன் 15  6. உண்ணும் சோறும் பருகும் நீரும் 17  7. பணி 18  8. இன்பமும் துன்பமும் 20  9. இல்லங்கள் 21  10. உடைகள் 23  11. கொடுத்தலும் கொள்ளலும் 24  12. குற்றமும் தண்டனையும் 25  13. சட்டங்கள் 28  14. சுதந்தரம் 30  15. பகுத்தறிவும் மனவெழுச்சியும் 32  16. துயரம் 33  17. தன்னையறிதல் 34  18. உபதேசம் 35  19. நட்பு 36  20. உரையாடல் 37  21. காலம் 38  22. நல்லனவும் தீயனவும் 39  23. பிரார்த்தனை 41  24. மகிழ்ச்சி 43  25. அழகு 45  26. சமயம் 47  27. மரணம் 49  28. இறுதி 50              பொது முன்னுரை    யாம் அறிந்தவரையிலே, வேறு எந்த அரசும் மேற்கொள்ளாத ஓர் அரிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தானே முன்னின்று நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. தமிழில் உள்ள பேரிலக்கியங்களை உலக மொழிகளிலே மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுடைய பண்பாட்டையும் இலக்கியப் பங்குகளையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் நோக்கத்தோடும், உலக மொழிகளிலே உள்ள பேரிலக்கியங்களைத் தமிழாக்கம் செய்து, தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதோடு, இத் தமிழாக்கங்கள் தமிழிற்கே புத்துயிரும், புதிய வளமும் நல்க வேண்டுமென்னும் நோக்கத்தோடும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் இந்தத் தனிப் பெருந் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் அவர்கள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு எவ்வளவு தொகை செலவானாலும் அவ்வளவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறது என்று பன்முறை அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 8-5-78 இல் டாக்டர் திரு. ஜஸ்டிஸ் எஸ் . மகராஜன் தலைமையில் கீழ்க்காணும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது. 1. தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் இயக்குநர் திரு. கொண்டல் சு. மகாதேவன் அவர்கள் -- செயலுறுப்பினர், இவர் இரண்டாண்டுகள் செயலுறுப்பினராக இருந்து, அவருக்குப்பின் தற்பொழுது தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருக்கும் திரு. டாக்டர் மா. நன்னன் அவர்கள் செயலுறுப்பினராக இருந்து வருகிறார். 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் - உறுப்பினர். 3. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறைத் தலைவர் திரு. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் - உறுப்பினர். 4. சென்னை சாகித்ய அகாதமியின் தென் மண்டலச் செயலர் திரு. டாக்டர் சி.ஆர்.சர்மா அவர்கள் - உறுப்பினர். மேற்கண்ட வல்லுநர் குழு உலகத்திலுள்ள பல பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொண்டு உலக மொழிகளிலே தமிழாக்கத்திற்குத் தகுதியான பேரிலக்கியங்கள் எவை என்று பரிசீலனை செய்து வருகிறது; தமிழ் இலக்கியங்களில் எவற்றை அயல் மொழிகளில் மொழிபெயர்க்கலாம் என்பதையும் பரிசீலனை செய்து, இரு மொழிப் புலமையும், எழுத்தாற்றலும் பெற்றுள்ள அறிஞர் களைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்த பேரிலக்கியங்களை மொழி யாக்கம் செய்யும் பொறுப்பை வல்லுநர் குழு அவர்களிடம் ஒப்படைத்து வருகிறது. ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்று. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்து வல்லமை பெற்றவர் பலர் இருந்தபோதிலும், பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு, இத்தாலியன், பெர்சியன், ஸ்பானிஷ், ரஷ்யன் முதலிய மொழிகளில் உள்ள பேரிலக்கியங்களைக் கற்று, அவற்றைத் தமிழாக்கம் செய்வதற்கோ, தமிழ்ப் பேரிலக்கியங்களை மேற்சொன்ன மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கோ வல்லமை பெற்ற அறிஞர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அத்தகைய அறிஞர்கள் வல்லுநர் குழுவுடன் தொடர்பு கொண்டு, மொழியாக்கம் செய்ய முன்வருவார்களேயானால், அவர்களுக்கு ஆர்வம் ஊட்டி, அவர்களோடு ஒத்துழைக்க இந்த வல்லுநர் குழு தயாராக இருக்கிறது. பத்தாவது நூற்றாண்டு முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டு வரையில் பிரெஞ்சு நாட்டிலே அயல் மொழிகளில் உள்ள நூல்களையெல்லாம் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துவந்தார்கள். அதன் பயனாக, பிரெஞ்சு இலக்கியம் வலுவும், நுட்பமும், மென்மையும் பெற்று உலக இலக்கியங்களிலேயே முதலிடம் பெற்று நிற்கிறது. வின்சுலோ கூறியபடி, தமிழ்க் கவிதை கிரேக்கக் கவிதையைக் காட்டிலும் மிக்க துல்லியத்தையும் மெருகையும் பெற்றிருந்தபோதிலும், தமிழ் உரைநடை வேண்டிய அளவு முன்னேறவில்லை. தமிழ்நாடு அரசு தீட்டியுள்ள இந்தத் திட்டத்தின் விளைவாக வெளிவரப்போகின்ற இதைப்போன்ற நூல்கள் தமிழ் மொழியின் மேனியிலே புதிய ரத்த ஓட்டத்தையும், தமிழ் விந்துவுக்குப் புதுத் தென்பையும் ஊட்டி, எதிர்கால இலக்கியப் படைப்புகளுக்குப் புத்துயிரும் புத்தார்வமும் நல்கும் என்று நம்பலாம். எஸ், மகராஜன் தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு                           நூல் அறிமுகம்   கலீல் கிப்ரான் என்ற ஞானி லெபனான் நாட்டவர். இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர். இவருடைய தாய்மொழி அரபி. ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர், ''THE PROPHET'' என்னும் மிகச் சிறந்த நூலை இவர் ஆங்கிலத்தில் இயற்றினார். இதை நலங்கிள்ளி என்னும் புனைபெயருடைய திரு. வி. சாரங்கபாணி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மூலநூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம். இந்த நூலை அழகாக அச்சிட்டு, விரைவாக வெளிக்கொணர்ந்த தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ரா. குழந்தைவேல் அவர்களுக்கும், அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைவருக்கும், எங்கள் வல்லுநர் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எஸ். மகராஜன் தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு                                           1. தோற்றுவாய்   அன்பால் மக்கள் உள்ளங்களிலே குடி கொண்டவரும், அவர்களால் மதிக்கப்பட்டு அவர் காலத்தின் விடிவெள்ளியாகக் கருதப்பட்டவருமான ஆல் முஸ்தபா என்பவர், ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுக் காலம் ஆர்பலீஸ் என்னும் நகரத்திலே தங்கித் தம் தாய்நாட்டுக்குத் திரும்பத் தகுந்த கப்பலுக்காக எதிர்நோக்கி இருந்தார். பன்னிரண்டாவது ஆண்டிலே அறுவடைத் திங்களிலே, ஏழாம் நாளன்று, நகரின் புறமதில்களைக் கடந்து அவர் ஒரு குன்றின் மீதேறிக் காண, ஒரு கப்பல் மூடுபனியூடே வருவதைக் கண்டார். அவருடைய இதயக் கதவுகள் விரிந்து, மகிழ்ச்சிப் பெருக்குக் கடல் கடந்து ஓடியது. தம் கண்களை மூடி அவர், தம் இதயத்தின் அமைதியிலே தியானம் செய்தார். ஆனால், குன்றிலிருந்து அவர் கீழ் இறங்கிய போழ்து, அவர் மனத்துள் கவலை புகவே, நினைக்கலுற்றார் : நான் எவ்வண்ணம் அமைதியோடும் வேதனை இன்றியும் இங்கிருந்து போவேன்? இல்லை இல்லை, மனப்புண் சிறிதுமின்றி நான் இந்நகரத்தை விட்டுப் போகவே முடியாது. இந்நகரத்தின் மதில்களிடையே நான் வேதனையோடு கழித்த மிக நீண்ட நாள்கள் பலப்பல. தனிமையிலே கழிக்கப்பட்ட மிக நீண்ட இரவுகளோ மிகப் பல. தன்னுடைய வேதனையினின்றும் தனிமையினின்றும் எவனால் தான் வருத்தமின்றி விடுதலையுற முடியும்? இந்த நகரத்தின் விதிகளிலே நான் சிந்திய ஆத்ம சிந்தனைத் துகள்கள் மிகப் பல. என் ஏக்கத்தினின்றும் உருவாகித் தம் பிறந்த மேனியோடு இக்குன்றுகளிடையே உலவும் குழவிகளும் மிகப் பலவே. அவற்றிடையே இருந்து மனச்சுமையும் இதய வேதனையும் இன்றி நான் விலகிப் போதல் கடினமே. இவற்றை விட்டு நான் நீங்குவது, உடலை மூடியுள்ள சட்டையைக் கழற்றி வீசுவது போல் அன்று. மாறாக உடலைப் போர்த்துள்ள புறத்தோலை என் கைகளாலேயே கிழித்து உதறுவது போல் அன்றோ ? நான் இங்குப் புறம்விட்டுப் போவது வெறும் நினைவலைகளை மட்டுமே அல்ல. பசியும் தாகமும் கொண்ட இனிமை நிறைந்த ஓர் இதயத்தையன்றோ நான் இங்கு விட்டுச் செல்ல வேண்டியுள்ளது. ஆயினும் இனியும் நான் ஈண்டுத் தங்கலாகாது. எல்லாப் பொருள்களையும் தன்னிடம் வரும்படி அழைக்கும் கடல் என்னையும் அழைக்கிறது. எனவே, நான் கப்பலில் புறப்பட்டாக வேண்டும். இரவுக் காலத்தில் எரிக்கப்படுகிற நாழிகையூடே, நான் இங்குத் தங்கினால் நான் உருகி உருகித் துகளாகி வார்ப்படத்தில் வார்த்தெடுக்கப்பட்டு விடலாம். இங்குள்ளயாவற்றையும் நான் என்னுடன் எடுத்துச் செல்வதே எனக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அது எப்படி இயலும்? தனக்குச் சிறகுகளைத் தந்த நாவையும் உதடுகளையும் 'பேச்சு' தன்னோடு எடுத்துச் செல்ல இயலுகிறதா? தனியாகத்தானே அது வானில் பறந்து செல்கிறது. தனியாகவே, தம்முடைய குடம்பை தனித்தொழியவே, கழுகுகள் வெய்யவன் கீழ் பறக்கின்றன. இவ்வண்ணம் சிந்தித்தபடி, அவர் அந்தக் குன்றின் அடிவாரத்தை அடைந்த பின்னர்த் திரும்பிக் கடலை நோக்க, அங்கே, தம்மை ஏற்றிச் செல்ல வந்த கலம், துறைமுகத்தை அடைவதையும் கப்பல் மேல் தளத்திலே மீகாமனும் தம்முடைய நாட்டு மக்களும் காணப்படுவதையும் கண்டார். அவருடைய இதயம் அவர்களை நோக்கிக் கூவ, அவர் சொல்லத் தொடங்கினார் : என் முன்னைப் பழம் அன்னையின் மக்களே, அலைகடலை ஆள்பவர்களே! எத்தனை முறை நீங்கள் எனது கனவுலகத்திலே கலஞ்செலுத்தி வந்தீர்கள். இன்று நீங்கள் உண்மையாகவே என் ஆழ்ந்த கனவாகிய விழிப்பிலே கலஞ்செலுத்தி வந்துள்ளீர்கள். இதோ நான் புறப்பட்டுவிட்டேன். கலத்தூடே பயணம் செய்யும் என் முழு அவாவும் காற்றை அவாவி நிற்கிறது. இங்கு வீசும் இந்த அமைதியான காற்றை இன்னும் ஒரே முறை நான் உயிர்க்கட்டும். ஒரே ஒரு தடவை அன்புப் பார்வையோடு என் கண்கள் உப்பக்கம் நோக்கட்டும். பிறகு நான் உங்களுள் ஒருவனாக, கலத்திலே செல்லும் மாந்தருள் ஒருவனாக ஒன்றிவிடுவேன். ஓ ஆழ்ந்த கடலே , துயிலும் தாயே! ஆற்றுக்கும் ஓடைக்கும் அமைதியையும் விடுதலையையும் தருவது உன்னைத் தவிர வேறு யார் ? இந்த ஓடையாகிய எனக்கும் இன்னும் ஒரே ஒரு சுழற்சி தான். இவ்வோடை இத்தோப்பில் ஓடுவது இன்னும் ஒரே ஒரு சலசலப்போடுதான். பின்னர் யான் கரையற்ற கடலிலே கரையற்ற நீர்த்துளியாகி உன்னிடம் வந்து கலந்துவிடுவேன். இவ்வண்ணங் கூறியபடி அவர் நடந்து கொண்டிருக்கும் போது, சேய்மையிலுள்ள மாதர்களும் மாந்தர்களும், தங்கள் தங்கள் வயலை விட்டும் கொடிமுந்திரித் தோட்டத்தை விட்டும் நகர வாயிற்புறத்தை நோக்கி விரைந்து வருவதைக் கண்டார். மற்றும் அவர் தம்முடைய பெயரைச் சொல்லி அவர்கள் தம்மைப் பற்றிப் பேசிக் கொள்வதையும், தங்களுடன் ஒருவருக்கொருவர், தம்மை ஏற்றிச் செல்லும் கப்பல் வந்துள்ளதைப் பற்றி உரையாடுவதையும் கேட்டார். தமக்குள்ளே அவர் பேசிக் கொண்டார். பிரிகின்ற நாளே ஒரு வேளை சேகரிக்கின்ற நாளாக இருத்தல் கூடுமோ? ஒருகால் என் இறுதி நாளே, என் விடியலாக இருக்கும் எனக் கூறத் தகுமோ? கலப்பையைக் கனியின் சாலடியில் விட்டு வந்திருக்கும் உழவனுக்கும், கொடிமுந்திரிச் சாற்றைப் பிழியும் ஆலைச் சக்கரத்தை இடையிலே விட்டு வந்திருக்கும் தொழிலாளிக்கும் நான் எதைக் கொடுப்பேன்? பயன் மரம், உள்ளூர் பழுத்துக் குலுங்கியதொப்ப, என் இதயமாற அப் பழங்களை எல்லாம் திரட்டி இவர்களுக்குத் தரவல்லவனோ யான்? தொடுமணற் கேணியில் சுரந்து நீர் பாய்வதை ஒப்ப, என் ஆர்வம் சுரத்தலைச் செய்ய, இவர்களது குவளைகளை எல்லாம் நான் வழியச் செய்வேனோ? இசை வல்லுநனின் விரல்களால் தீண்டப்பெறும் யாழாகவும் அவன் மூச்சுப் புகுந்து இசை எழுப்பும் குழலாகவும் இருப்பவனோ யான்? அமைதியைத் தேடுபவனன்றோ நான். அமைதியிலே நான் என்ன புதையலைக் கண்டெடுத்தேன்? இவர்கட்கு அதை நான் நம்பிக்கையோடு பங்கிட்டுத்தர. இது என்னுடைய அறுவடை நாளாக இருந்தால், எந்த நிலத்திலே, மறத்தற்கியலாத எந்தப் பருவத்திலே நான் விதைகளைத் தூவினேன்? என் கைகளின் மூலமாகத்தான் ஒளிவீசி விளக்கஞ் செய்ய வேண்டுமானால், விளங்க வைக்கும் நேரமும் இந்த நேரமானால், அவ்விளக்கு நல்கும் ஒளிச்சுடர் என்னுடைய சுடராக இராது. இருளிடையே, வெறுமையாய் விளக்கினை நான் ஏந்தி நிற்பேன். இரவின் பாதுகாவலன். விளக்கிற்குத் தேவைப்படும் நெய்யைப் பெய்து, சுடர் கொளுவி அதை விளக்கஞ் செய்வான். இவற்றையே அவர் வார்த்தைகளாகக் கூறினார். ஆனால், அவர் இதயத்துள்ளே பலப்பல செய்திகள் கூறப்படாமல் மண்டிக் கிடந்தன. ஏனெனில், அவராலேயே அவர் உள்ளத்துள்ள அரிய மறைகளைக் கூற இயலவில்லை. அவர் அந்நகர வாயிலுள் புகுந்த போது, அவ்வூர் மக்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு, அவரைக் காண எதிர்கொண்டதோடு ஒரே குரல் ஒலித்தாலென மகிழ்ச்சியால் கூவினர். நகரத்தின் முதியவர்களோ அவர்முன் வந்து நின்று அவரை நோக்கிக் கூறலுற்றனர்: எங்களை விட்டு நீர் பிரிந்து போக வேண்டா. மங்கிய காலை நேரத்திலே நீர் எங்களிடையே இளஞாயிற்றைப் போல் ஒளி நல்கினீர். உம்முடைய இளமையோ எமக்குள்ளே, கனவினைக் காணக் கனவைத் தந்தது. எங்களிடையே நீர் அன்னியரோ, விருந்தினரோ அல்லர். எம் புதல்வரும் கெழுதகை மிக்க அன்பருமே ஆவீர். உமது முகத்தைத் திரும்பவும் எப்போது காண்போம் என்னும் (உளப்) பசிக் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதீர். பின்னர் அந்நகரத்துப் பாதிரிகள் அவரிடம் கூறலுற்றனர் : கடலலைகள் நமக்கிடையே பிரிவை உண்டாக்க, நீர் எங்களிடையே கழித்த ஆண்டுகளை வெறும் நினைவுச் சின்னமாக ஆக்கிவிட வேண்டா. எங்களிடையே நீர் ஒரு தேவனைப் போல் உலாவினீர். உமது நிழலே எங்கள் முகங்களிலே ஒளியாக நிலவிற்று. நாங்கள் உம்மை மிகமிக அதிகமாக நேசித்தோம். ஆனால், எங்கள் அன்பு திரையால் மூடப்பட்டிருந்ததால், எங்கள் பேச்சு அந்த அன்போடு கலந்து ஒன்றியதாக இல்லை. இப்போதோ அது (அவ்வன்பு) உமது முன்னால் கதறி நின்று தன்னை வெளிக்காட்டிவிட்டது. எக்காலத்திலுமே காதல் தன்னுடைய ஆழத்தை உணர்வதில்லை. பிரிவுக் காலத்திலேதான் அது தன் ஆழத்தை உணர்கிறது என்றனர். மற்றும் சிலர் அங்கு வந்து அவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்தனர். அவரோ யாரிடமும் பேசாமல் தம் தலையைத் தாழ்த்தியபடி இருந்தார். சூழ்ந்து இருந்தவர்களோ அவருடைய கண்களில் கண்ணீர் துளித்து வழிந்து மார்பின் மீது வீழ்வதைக் கண்டனர். பிறகு அவரும் பிற மக்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கோயில் லின் முன்புறத்திலே திரளாக வந்து குழுமினர். அந்தக் கோயிலின் உட்புறத்திலிருந்து ஆல் மித்ரா' என்னும் பெயருள்ள ஒரு நங்கை அவர் முன் வந்து நின்றாள். அவளோ ஒரு தீர்க்கதரிசினி.   ஆல் முஸ்தபா அந்நங்கையைக் கனிவோடு நோக்கினார். ஏனெனில், அந்த நகரத்திற்குள் அவர் அடி வைத்த அந்த முதல் நாளிலே, அவள் ஒருத்தி தான் அவரைக் கண்டு, நம்பிக்கையுடன்  ஆதரித்தவள். அவள் அவரை நோக்கி வணங்கிப் பின் சொல்லத் தொடங்கினாள்: கடவுளின் தீர்க்கதரிசியே, தாங்கள் பரிபூரணத்தைத் தேடுவதுடன் தாங்கள் ஏறிச் செல்ல வேண்டிய கப்பலுக்காகவும் பல நீண்ட தூரம் தேடினீர்கள். இப்போது தங்களுக்காகக் கப்பல் இங்கு வந்துள்ளது. தாங்கள் போகத் தான் வேண்டும். தங்களுடைய நினைவுகளிலே உள்ள அந்த நகரத்தைக் காணவும் தங்களது பேரார்வம் பதிந்துள்ள இல்லத்துக்கு ஏகவும் தங்களது உள்ளத்திலே தேங்கியுள்ள அவா மிகமிக ஆழமானது. எனவே, தங்களை அங்குச் செல்லவொட்டாமல் எங்கள் அன்பு தங்களுக்குத் தளை பூட்டாது. எங்களது தேவைகளோ தங்களைக் குறுக்கீடு செய்யா. ஆயினும் தாங்கள் எங்களை விட்டுப் பிரிந்து செல்லுமுன்னர், நாங்கள் தங்களைக் கேட்பதொன்று உண்டு. தங்களது உள்ளத்திலே உதித்த உண்மையான தத்துவங்களை எங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்பதே அது. அவற்றை, அத் தத்துவங்களைத் தாங்கள் எங்களிடம் தாருங்கள். நாங்கள் அவற்றை எங்கள் குழந்தைகளுக்கு நல்குவோம். அவர்களோ அவற்றைத் தங்கள் சந்ததிகளுக்குத் தருவார்கள். இங்ஙனம் வழிவழியாக அத் தத்துவங்கள் அழியாமல் நிலவி நிற்கும். தாங்கள் தனித்து நின்று எங்களது நாள்களை நுனித்து நோக்கினீர்கள். நாங்கள் தூக்கத்திலே அழுததையும் சிரித்ததையும் தாங்கள் விழிப்புணர்வோடு கேட்டுணர்ந்தீர்கள் . எனவே, இப்போது எங்களையே எங்களுக்கு வெளிப்படுத்துங்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதாகிய, தங்களுக்குப் புலப்பட்ட அரிய உண்மைகளை எங்களுக்குக் கூறுங்கள் என்றாள். அவர் அவர்களை நோக்கி, ஆர்பலீஸ் நகர மக்களே, இப்போது உங்களுடைய இதயத்திலே உலாவுகின்ற ஒன்றைப் பற்றி அல்லாமல் வேறு எதைப்பற்றி நான் உங்களிடம் பேச முடியும்? என்று சொல்ல, ஆல்மித்ரா அவரை நோக்கி, 'தாங்கள் எங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்லுங்கள் என்று வேண்டினாள். அவர் உடனே தம் தலையை உயர்த்தி, அங்குள்ள மக்களை நோக்கினார். அவர்களிடையே அமைதி நிலவி இருந்தது. பின்னர்க் கணீரென்ற குரலிலே அவர், அவர்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.                                     2. அன்பு   அன்பினது வழி கரடுமுரடாகவும் பள்ளத்தாக்குகள் நிறைந்ததாகவும் இருப்பினும், அன்பு உங்களை அழைக்கும்போது அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த அன்பு தன்னுடைய சிறகுகளால் மூடி உங்களைப் பாதுகாக்கும்போது, அதனிடையே நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதன் சிறகுகளின் இடையிலே மறைந்துள்ள குத்துவாள் உங்களை ஊறு செய்தாலும் அதனால் பாதகமில்லை. அன்பு உங்களுடன் உரையாடும்போது அதன் குரலொலி உங்கள் கனவுகள் அனைத்தையும் வாடைக்காற்று பூங்காவை அழித்து விடுவதைப் போலச் சிதறச் செய்வது போல் இருப்பினும் நீங்கள் அதன் வார்த்தையை நம்புங்கள். ஏனெனில், அன்பு எப்படி உங்களுக்கு முடி சூட்டுகிறதோ அப்படியே உங்களை அழிக்கிறது. அது எவ்வண்ணம் உங்களை வளர்க்கிறதோ அவ்வண்ணமே உங்களைத் தேய்க்கிறது. உங்களின் உச்சிக்கு அது உயர்ந்து சூரியன் முன் அசைந்தாடும் பசிய இளந்தளிர்களை எல்லாம் எங்ஙனம் அது தடவிக் கொடுத்துத் தழுவி நிற்கிறதோ, அங்ஙனமே அது நிலத்தில் ஊன்றியுள்ள உங்கள் ஆணிவேர் வரையிலும் கீழிறங்கி அசைத்து ஆட்டவும் வல்லது. தானியக் கதிர்களைக் கட்டுக்கட்டிப் பிணிப்பதைப்போல அன்பு உங்களை ஒன்று சேர்க்கிறது. தானியப் போர்க்களத்திலே போர் அடித்தலைப் போன்று அது உங்களை மோதி அடிக்கின்றது. பதர்களிலிருந்து, உங்களை வேறுபடுத்திப் பிரித்தெடுக்க அது உங்களைக் கொழித்தெடுக்கிறது. உங்களை வெளுக்கும்படி செய்ய, அஃது உங்களை மாவாக அரைத்துவிடுகிறது.   அன்பு,  நீங்கள் இளகத் தக்கவாறு அது உங்களைப் பிசைந்து வைக்கிறது. பின்னர் அவ்வன்பு உங்களைத் தன்னுடைய தூய்மையான நெருப்பிலே இட்டு இறைவனின் தூய்மையான விருந்துக்கு ஏற்றதோர் உணவாகச் சமைத்து வைக்கிறது. அன்பு தான் உங்களை இப்பாடுபடுத்துகிறது. ஏனெனில், இவற்றாலேயே நீங்கள் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிந்துணர்ந்து அவ்வறிவின் மூலமாக வாழ்வினது இதயத்தின் ஓர் அணுவாக மாற முடியும். ஆனால், உங்களது அச்சத்தினால் அன்பினது அமைதியையும் அன்பால் வரும் இன்பத்தையுமே நீங்கள் தேடுவீர்களானால், அக்காலத்திலே நீங்கள் உங்கள் உண்மை உருவத்தைப் போர்வையிட்டு மூடி, அன்பினது கடின பாதையை விட்டு விலகிச் செல்வதே நலம். அங்கே அந்தப் பருவ மாறுதலற்ற உலகத்திலே நீங்கள் சிரிக்கலாம். முழுச் சிரிப்பாக அன்று. அழலாம், மனங் கசிந்து, அனைத்துக் கண்ணீரையும் சிந்தி அன்று. அன்பு தன்னைத் தவிர, வேறொன்றையும் தருவதில்லை. அதைப் போலவே அது தன்னைத் தவிர்த்து வேறொன்றையும் உங்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுவதுமில்லை. அன்பு எதையும் வைத்துக்கொள்வதுமில்லை. வைத்துக் கொள்ளப்படுவதுமில்லை. ஏனெனில், அன்புக்கு அன்பு மட்டுமே போதுமானது. நீங்கள் அன்பு கொண்டால் 'கடவுள் எம் உள்ளத்திலே இருக்கிறார்' என்று கூறாதீர்கள். மாறாக, 'இறைவன் உள்ளத்திலே நாங்கள் உள்ளோம்' என்று கூறுங்கள். அன்பின் பாதையை வகுக்க நீங்கள் முயல வேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக அவ்வன்பு கருதுமானால் அதுவே உங்கள் பாதையை வகுக்க வழிகாட்டும். அன்புக்குத் தன்னை முழுமையுடையதாக்கிக் கொள்வதைத் தவிர வேறு பிற ஆசை கிடையாது. ஆனால், நீங்கள் அன்பு கொண்ட பின்னரும் ஆசை உங்களிடம் முகிழ்க்குமானால் இவையே உங்கள் ஆசையாக இருக்கட்டும். இரவின் தனிமைக்குப் பண்பாட உருகி ஓடும் அருவியைப் போல உள்ளம் அமையும்படியும், அளவுக்கு மீறிய கருணையினால் எழும் நெஞ்சத்தின் துன்பத்தை அறியவும், அன்பை நீங்கள் நன்காராய்ந்து அறிவதால், நீங்கள் புண்ணெய்தவும், முழுமனத்தோடும் மகிழ்வோடும் நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவும், பறந்து செல்லும் இறக்கைகளையுடைய இதயத்தோடு, ஒவ்வொரு நாள் விடியலிலும் எழுந்து, நாம் அன்பு செலுத்துவதற்காக மற்றொரு நாளை அளித்தமைக்கு இறைவனுக்கு வணக்கஞ் செலுத்தவும், நடுப்பகல் நேரத்திலே ஓய்வெடுத்து, அன்பின் பரவசத்தை ஆழ்ந்து சிந்திக்கவும், நன்றியுணர்வுடன் மாலைக் காலத்திலே இல்லம் திரும்பவும், பின்னர் உங்களது உள்ளங்களிலே உள்ள அன்பின் வடிவங்களுக்கு வாழ்த்துக் கூறி, புகழ் பாடவுமான இவையே உங்கள் ஆசைகளாக விளங்கட்டும் என்றார்.                                       3. திருமணம்   பின்னர் ஆல் மித்ரா அவரை நோக்கித் தலைவ! திருமணத்தைப் பற்றிச் சிறிது எங்களுக்குக் கூறுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார் : நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள். இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள். உங்களுடைய வாழ்நாள்களை மரனம் தன் வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும் இணைந்தே இருப்பீர்கள். ஆம். இறைவனுக்கான அமைதி மிக்க தியான நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே சிறிது இடைவெளி இருக்கட்டும். அந்த இடைவெளியிலே வானுலகத்தின் காற்று நடனம் புரியட்டும். ஒருவரை ஒருவர் காதலியுங்கள். ஆனால், அக் காதலினால் பிணிப்பான தளையை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள். அக் காதல் உங்கள் உயிராற்றலின் கரைகளிலே அலை மோதும் கடலாக விளங்கட்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய குவளையை நிரப்புங்கள். ஆனால், ஒரே குவளையிலுள்ள பானத்தை இருவரும் பருகாதீர்கள். அதைப்போலவே, தனக்குரியதான உணவையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே அப்பத் துண்டினை இருவரும் உண்ணாதீர்கள். இருவரும் இணைந்து பாடி ஆடிக் களித்திருங்கள். ஆயினும் இருவரும் தனிப்பட்டே இருங்கள் . ஒரே பாடலின் இனிய இசையை யாழின் நரம்புகள் ஒன்று சேர்ந்து நல்க வல்லதாயினும், அந் நரம்புகள் தனித்தனியே உள்ளதைப் போலவே, தனித்து இணைந்து நில்லுங்கள். உங்கள் இதயத்தைக் கொடுங்கள். ஆனால், கொடுத்ததை அப்படியே பற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், வாழ்க்கையின் கரங்களே உங்கள் இதயத்தைப் பற்றிக் கொள்ளவல்லன. நீங்கள் இணைந்தே நில்லுங்கள். ஆனால், நெருங்கியன்று. ஏனெனில், கோயிலின் தூண்கள் கூட விலகி நின்றே தான் கோயிலைத் தாங்குகின்றன. மற்றும் மரங்கள் கூடத் தனித்து நின்று தான் வளர்ச்சியடையுமேயன்றி, ஒன்றன் நிழலிலே மற்றொன்று வளர முடியாது.                       4. குழந்தைச் செல்வம்   தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை நோக்கி, 'ஐயா, எங்களுக்குக் குழந்தைகளைப்பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார் : உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர். அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும் புதல்வியருமே ஆவர். அவர்கள் உங்கள் மூலமாக வந்தார்களே அல்லாமல் உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும் உங்களுடைய உடைமைகள் அல்லர். நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களையல்ல. ஏனெனில், அவர்களுக்கென வேறு எண்ணங்கள் உள்ளன. அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம். ஏனெனில், அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும் வீட்டிலே தான் உள்ளது. நீங்களோ உங்கள் கனவிலுங்கூட அங்குச் செல்லுதற்கியலாது. நீங்கள் அவர்களைப்போல் இருக்கப் போராடலாம். ஆனால், உங்களைப்போல் அவர்களை ஆக்க முயலாதீர்கள். ஏனெனில், வாழ்க்கை பின்னோக்கிப் போவதுமில்லை; நேற்றோடு தங்கிவிடத் தாமதிப்பதுமில்லை. உங்கள் குழந்தைகளாகிய அம்புகளை எய்யும் வில்லாகவே நீங்கள் இருக்கின்றீர்கள். வேடனோ முடிவற்ற நெறியிலுள்ள குறியை இலக்கு வைத்துத் தன் அம்பு வேகமாகவும் தூரமாகவும் செல்லத் தக்கவாறு  உங்களைத் (வில்லை) தன் பலங்கொண்ட மட்டும் வளைத்து அம்பெய்கிறான். வேடன் கையிலுள்ள வில்லாகிய உங்களது வளைவு கூட மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும். அவ்வேடன் பறந்து தூரத்திலே செல்லும் அம்பை எப்படி நேசிக்கிறானோ அப்படியே தன் கையிலுள்ள வில்லையுமன்றோ நேசிக்கிறான்?                             5. ஈகைத்திறன்   அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி, 'ஐயா! ஈகையைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லலுற்றார் : உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது நீங்கள் மிகக் குறைவாகத் தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள். ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக் கொடுத்துவிடும் போது தான் நீங்கள் உண்மையான கொடை வள்ளல்கள். உங்கள் உடைமை என்பது என்ன? நாளைக்கு உங்களுக்கு இவை இவை தேவைப்படும் என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது . நாளை, இந்த நாளை என்பது என்ன? யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக் கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத் துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால் அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த விழிப்பான நாய்க்கு உதவுமா? இது போன்றதன்றோ நாளை என்பதும் உங்களுக்கு? தேவை என்பதைத் தவிர்த்துத் தேவைக்கான அச்சம் என்பது தான் என்ன? நம்முடைய கேணி நிறைந்திருக்கும் காலத்திலும் தீர்க்க முடியாத நீர்வேட்கை நமக்கு ஏற்படுவது பயங்கரமானதன்றோ? தங்களிடமுள்ள பெருஞ்செல்வத்தில் சிறிது கொடுக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அதைத் தம் சுய விளம்பரத்துக்கெனக் கொடுக்கின்றனர். அவர்களிடையே மறைந்துள்ள அந்த அவா, அவர் தம் கொடையைத் தூய்மையற்றதாக்கி விடுகின்றது. தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயாயினும் உள்ள யாவற்றையும் கொடுத்துவிடும் சிலர் உள்ளனர். அவர்களே, வாழ்க்கையிலும் கொடையிலும் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களின் செல்வம் எக்காலும் வற்றுவதே இல்லை. மகிழ்ச்சியோடு கொடுப்பவர்கள் சிலர் உள்ளனர். அந்த மகிழ்ச்சியே அவர்கள் பெறும் பரிசாகும். துன்பத்தோடு தருபவர்கள் பலர். அவர்கள் தம் துன்பமே அவர்களின் மனந்திரும்புதல் ஆகும். மற்றும் சிலர் தாம் கொடுக்கும் போது, துன்பத்தையும் காணாமல் இன்பத்தையும் தேடாமல் அறத்தைப் பற்றிக் கூடச் (ஈதல் அறம் என்பதைப் பற்றியும் ) சிந்திக்காமல் கொடுக்கிறார்கள். அவர்களே, பரந்த வெளியில் வீசும் தென்றலுக்கு, மல்லிகை தன் முகை அவிழ்ந்து தன் நறுமணத்தைத் தந்து பரவச் செய்வதைப் போலத் தரும் கொடையாளிகளாவார்கள். இப்படிப்பட்டவர்களின் கைவண்ணம் மூலமாகவே இறைவன் பேசுகிறான். அவர்களுடைய கண்களின் மூலமாகக் கண்டு, உலகைப் பார்த்து முறுவல் பூக்கிறான். கேட்கும் போது கொடுப்பது நல்லது. ஆனால், பிறர் கேளா முன்னரே, குறிப்பறிந்து ஈதலே அதைவிட நல்லது. கொடையாளிக்குத் தான் தரும் ஈகையை ஏற்றுக் கொள்வனைத் தேடுவது ஈதலைக் காட்டிலும் இன்பத்தைத் தரத்தக்கதாகும். கொடுப்பதற்கு இல்லை என மறுக்கத்தக்கது ஏதாவது உண்டா? உங்களிடம் உள்ளவெல்லாம் ஏதாவது ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே. எனவே, இன்றே கொடுத்துவிடுங்கள். இந்த ஈகை உங்களுடைய சந்ததியார் காலத்துக்கென நீங்கள் தள்ளிப் போடாமல் உங்கள் காலத்திலேயே நிகழ்ந்ததாக இருக்கட்டும். நாங்கள் கொடுப்போம். ஆனால், தக்கவர்களுக்கே கொடுப்போம் என நீங்கள் அடிக்கடி சொல்கின்றீர்கள். உங்கள் தோட்டத்திலே உள்ள பழமரங்கள் இப்படிச் சொல்லவில்லையே! வயல் வெளியிலே மேயும் பசுமந்தைகள் இப்படிக் கூறவில்லையே! அவையாவும் தாம் வாழவே கொடுக்கின்றன. ஏனெனில், கொடுக்க மறுப்பவையாவும் அழிந்தே விடும். தன்னுடைய தேவைக்கெனப் பகலையும் இரவையும் அனுபவிக்கப் பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களிடமிருந்து எல்லாவற்றையுமே பெறத் தகுதியுண்டு. வாழ்க்கை எனும் பெருங்கடலையே பருகத் தகுதி பெற்றிருக்கும் ஒருவனுக்கு உங்களுடைய சிறு வாய்க்கால் நீரில் தன் குவளையை நிரப்பிக்கொள்ள நிச்சயமாகத் தகுதியுண்டு. நம்பிக்கையிலேயும், தைரியத்திலேயும், ஈகையிலேயும், பெறுவதிலேயும் பொதிந்து கிடக்கும் மனப் பரப்புக்கு மிக்கதொரு நிலப்பரப்பு எங்கேனும் உண்டோ ? பிற மக்களுடைய ஆசைகளைப் போர்வையின்றியும் பெருமையைக் குழப்பமின்றியும் நீங்கள் காணவேண்டும் என்பதற்காக, உங்களிடம் கை நீட்டிப் பெறுபவர்கள் தங்கள் நெஞ்சத்தையே உங்களுக்குக் கொடுத்துவிடவும் தம் பெருமையைக் கூடத் திறந்து காட்டவும் விழைகின்றீர்கள் என்றால், அதற்கு நீங்கள் யார்? முதலில் நீங்கள் கொடுக்கத் தகுதி உடையவர்களாக , - பிறருக்குக் கொடுப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் உண்மையிலேயே, வாழ்க்கை தான் வாழ்க்கைக்குத் தருகின்றது (நீங்கள் பிறருக்குத் தருவதன்று). அக்காலத்தில் நீங்கள் அதற்கு ஒரு சான்றாக இருப்பதை விடுத்து, 'நாங்களே , கொடுப்பவர்கள் கொடைவள்ளல்கள்!' எனக் கருதுகின்றீர்கள். மற்றும்,  நீங்கள் கொடுக்கப்படும் கொடையைப் பெறுகின்ற நீங்கள் யாவரும் பெறுபவர்களே -நன்றியின் சுமையைச் சிறிதும் கருதாதீர்கள். அது உங்களுக்கும், கொடுக்கும் வள்ளலுக்கும் இடையே நுகத்தடியைப் போலக் கொடிய பாரத்தைத் தரும் ஆதலின். வள்ளல்களோடு நீங்களும் அவர்கள் தரும் ஈகையின் மேலமர்ந்து சிறகடித்து மேன்மேலும் உயர்ந்து செல்லுங்கள். ஏனெனில், உங்கள் நன்றிக் கடனையே நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உளமுவந்து நல்கும் நிலநல்லாளைத் தாயாகவும் இறைவனையே தந்தையாகவும் பெற்ற வள்ளலின் வண்மையின் மேலே உங்களுக்குள்ள நம்பிக்கையின்மையையே அது காட்டுவ தாகும்.               6. உண்ணும் சோறும் பருகும் நீரும்   ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப்பற்றியும் பருகுவதைப்பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார் : நிலத்தின் புழுதியிலே வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ? நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக் கொல்கின்றீர்கள். உங்கள் நீர்வேட்கையைத் தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும், பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும் கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும் வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும். உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும். அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங் கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின் உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும் கபடமற்றதுமான ஆத்மாவுக்குப் பலியிடப்படுவதாகட்டும். நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே இவ்வண்ணம் நினைவுகூருங்கள்: எந்தச் சக்தி உங்களைக் கொல்கிறதோ அதே சக்தியால் நாங்களும் அழிக்கப்படுவோம். நாங்களும் உங்களைப் போலவே சீரணிக்கப்படுவோம். ஏனெனில், எந்த நியதி உங்களை எங்கள் கரங்களில் சிக்க வைத்ததோ, அதே நியதியால் நாங்களும் எங்களிலும் வலிய கரங்களால் சிக்கித் தவிக்கத் தள்ளப்படுவோம். உங்களது குருதியும் எங்களது குருதியும் வானுலகத்துத் தாவரத்துக்குப் பெய்யும் நீரேயன்றிப் பிறிதில்லை. மற்றும் நீங்கள் ஓர் ஆப்பிள் பழத்தை உங்கள் பற்களால் கடித்து மெல்லும்போது உங்கள் உள்ளத்திலே இவ்வண்ணமாகச் சிந்தியுங்கள்: உனது விதை என் உடலிலே வசிக்கட்டும். உன்னுடைய நாளைய அரும்புகள் என் இதயத்தில் மலர்ச்சியடையட்டும். உன்னுடைய நறுமணமே என் உயிர்ப்பாக இருக்கட்டும். இவ்வண்ணமாக நாம் இருவரும் எல்லாப் பருவங்களிலும் மகிழ்ந்து நினைவு கூர்வோம். கார் காலத்திலே கொடிமுந்திரிச் சாற்றைப் பிழிந்தெடுக்கப் பழங்களைத் திரட்டும் காலத்திலே உங்கள் உள்ளத்திலே இங்ஙனம் நினைவு கொள்ளுங்கள் : நானும் ஒரு கொடிமுந்திரித் தோட்டமே. என் பழங்களும் கொடிமுந்திரி ஆலைக்காகத் திரட்டப்படும். புத்தம் புதிய கொடிமுந்திரிச் சாற்றைப் போலவே நானும் பரலோகப் பாண்டங்களிலே சேமித்து வைக்கப்படுவேன். மற்றும் நீங்கள் மழைக்காலத்திலே அச் சாற்றைப் பயன்படுத்த எடுக்கும்போது, அதனுடைய ஒவ்வொரு குவளைக்கும் உங்கள் உள்ளம் இன்னிசை இசைக்கட்டும். கார்காலம், கொடிமுந்திரித் தோட்டம், கொடிமுந்திரி ஆலை இவற்றின் இனிய நினைவுகளால் நிறைந்ததாக உங்கள் இன்னிசை அமையட்டும்.         7. பணி   பின்னர் ஒரு உழவன், பணியை பற்றி பேசுங்கள் என்றார். அவர் கூறிய வார்த்தைகள். நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும் பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க முடிகிறது. முடங்கி கிடப்பது நடக்கும் பருவ காலங்களுக்கு அந்நியமாவதாகும். எல்லையில்லாத ஒன்றுக்கு பெருமையோடு கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து விலகுவதாகும்.   நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு புல்லாங்குழல் ஆகிறீர்கள், உங்கள் இதயத்தின் வாயிலாக காலத்தின் முனுமுனுப்புக்கள் இசையாக மாறுகிறது. உங்களில் யார் துளைகள் அற்ற மூங்கிலாகவே, அமைதியாக, பேச முடியாமல் இருக்க விரும்புகிறீர்கள், மற்றவை எல்லாமே இசைந்து பாடும் போது. உங்களுக்கு எப்போதுமே கூறப்பட்டு இருக்கிறது, பணி என்பது ஒரு சாபம் என்றும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருப்பது ஒரு துரதிட்டம் என்றும். ஆனால், நான் சொல்கிறேன் நீங்கள் பணியில் ஈடுபடும்போது தொலைவில் இருக்கும் பூமியின் கனவை நிறைவேற்றுகிறீர்கள், அந்த கனவு பிறந்த போதே உங்களுக்கு என அது வழங்கப்பட்டது. நீங்கள் பணியில் ஈடுபடுவதால் வாழ்வை உண்மையாகவே நீங்கள் நேசிக்கிறீர்கள். பணியின் வாயிலாக வாழ்வை நேசிப்பது என்பது வாழ்வின் உள்மைய்ய இரகசியங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகும். ஆனால், உங்கள் வேதனையின் காரணமாக பிறப்பை துன்பம் என்று கூறுகிறீர்கள். வயிற்றுக்கான உங்கள் பிழைப்பை நெற்றியின் மீது எழுதப்பட்ட சாபமாக கருதுகிறீர்கள். அதற்கு என் பதில், உங்கள் நெற்றி வேர்வையை தவிர வேறு எவற்றாலும் அந்த சாபத்தை அழிக்க முடியாது. வாழ்வு என்பது ஒரு இருள் என்று உங்களுக்கு கூறப்பட்டு இருக்கிறது. நீங்கள் சோர்ந்து போயிருக்கும் போது, சோர்ந்து போனவர்களால் கூறப்பட்ட அந்த வார்த்தையை எதிரொலிக்கிறீர்கள். நான் சொல்கிறேன், வாழ்வு என்பது இருள் தான், ஒரு உயர்நோக்கம் இல்லை என்றால். எல்லா உயர்நோக்கமும் கண்மூடித்தனமானவை தான், மெய்யறிவு இல்லை என்றால். எல்லா மெய்யறிவும் வீணானவை தான், பணியில் ஈடுபடவில்லை என்றால். எல்லா பணியும் வெற்றுத்தன்மை கொண்டவை தான், அன்பில்லை என்றால். நீங்கள் அன்போடு பணியில் ஈடுபடும் போது, உங்களோடு ஒன்று கலந்து இருக்குறீர்கள், ஒருவரோடு ஒருவர் , மற்றும் இறைவனோடு இணைகிறீர்கள். அன்போடு பணியில் ஈடுபடுவது என்றால் என்ன?   உங்கள் இதயத்திலிருந்து திரித்து எடுக்கப்பட்ட நூலில் ஆடை நெய்வதாகும், உங்கள் உள்ளன்பானவர் உடுத்திக்கொள்ளப்போகிறார் என்ற எண்ணத்தில். நேசத்தோடு ஒரு வீட்டை கட்டுவதாகும், உங்கள் உள்ளன்பானவர் அதில் வாசம் செய்யப் போகிறார் என்ற எண்ணத்தில். விதைகளை கனிவோடு விதைப்பதாகும்,  அறுவடையை மகிழ்ச்சியை கொண்டாடுவதாகும்,  உங்கள் உள்ளன்பானவர் அதை உண்பார் என்ற எண்ணத்தோடு. உங்கள் உள்மனத்துடிப்பால் எல்லாவற்றுக்கும் ஒரு காந்த சக்தியை கொடுப்பதாகும். எல்லா இறந்த அருளாசி பெற்றவர்களும் உங்கள் அருகே நின்று பணியில் ஈடுபடுவதை கவனிக்கிறார்கள் என அறிந்திருப்பதாகும்.. அடிக்கடி நீங்கள் இப்படி சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், தூக்கத்தில் பேசுவதைப் போல, பளிங்கு கல் கொண்டு பணி செய்பவன், தன் ஆன்மாவின் வடிவை அந்த கல்லில் காண்கிறான் என்றால், அவன் நிலத்தை உழுபவனை விட சிறந்தவன் என்று. வானவில்லை பிடித்து இழுத்து அதன் வண்ணங்களை ஒரு துணியில் மனிதனுக்காக இடுபவன், கால்களுக்கு செருப்பு தயார் செய்பவனை விட மேலானவன் என்று. ஆனால், நான் சொல்கிறேன், தூக்கத்தில் அல்ல, பகல் பொழுதின் விழிப்புடன், காற்றானது ஓங்கி வளர்ந்த ஓக் மரத்தோடு கூடுதல் இனிமையோடு பேசுவது இல்லை, மிகத் தாழ்ந்து இருக்கும் புல்லின் இதழோடு பேசுவதை விட. யார் காற்றின் குரலை தன் வாழ்வின் முயற்சியால் இனிய பாடலாக மாற்றுபவன் எவனோ அவனே உயர்ந்தவன். பணியில் ஈடுபடுவது என்பது கண்களால் காணப்படும் அன்பு. உங்களால் விருப்புடன் பணி செய்ய முடியவில்ல, ஆனால் வெறுப்புடனே தான் பணி செய்ய முடிகிறது என்றால், அந்த பணியை நீங்கள் விட்டு விலகி கோயில் வாசலில் அமர்ந்து விருப்பமுடன் பணி செய்பவர்களிடமிருந்து பிச்சை எடுங்கள். காரணம், நீங்கள் ஈடுபாடின்றி ரொட்டியை தனலில் இட்டால், அது மனிதனின் பாதி பசியை தான் போக்கும். நிங்கள் திராட்ச்சையை மனக்கசப்போடு பிழிந்தால், அந்த மனக்கசப்பு அதன் சாறில் விஷமாக கலந்து விடும். நீங்கள் விருப்பமின்றி தேவதையை போல பாடினாலும் அது நாளின், இரவின் இரைச்சலாகவே மனிதனின் காதில் விழும்.                     8. இன்பமும் துன்பமும்   அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா! இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார் : உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை களையப்பட்ட துன்பங்களே. உங்களது இதயத்தின் நிறைவினின்று எது உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக் கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம். மற்று வேறெப்படி இருக்க முடியும்? துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி ஆழத்தில் உளைகின்றதோ அவ்வளவுக்கதிகமான இன்பத்தை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக் குவளை, குயவனால் சூளையிலே வேகவைத்து எடுக்கப்பட்டது அன்றோ? உங்கள் இதயத்தை இன்னிசையால் பரவசப்படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால் வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ் செய்யப்பட்டது தானே? நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள் உள்ளத்தையே உள்முகமாக நோக்க அங்கே, எது உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்ததோ, அதுவே உங்களுக்கு முன்னர் இன்பத்தை நல்கியதாக இருக்கக் காண்பீர்கள். அதைப் போலவே நீங்கள் துன்பத்திலே உழன்றிருக்கும் போதும், உங்கள் நெஞ்சத்தை நோக்குவீர்களானால் எது உங்களுக்கு முன்னர் இன்பமாகக் காணப்பட்டதோ, அதுவே, உங்கள் இப்போதைய அழுகைக்கும் காரணம் என்பதைக் காண்பீர்கள். சிலர் இன்பமே துன்பத்தைக் காட்டிலும் சிறந்ததென்றும், மற்றும் சிலர் இல்லை இல்லை துன்பமே இன்பத்தைக் காட்டி லும் சிறந்ததென்றும் கூறுகின்றீர்கள். நான் கூறுகிறேன் அவை பிரிக்க முடியாதவை. அவை இரண்டும் இணைந்தே வந்தன. உங்கள் இருக்கையில் ஒன்று உங்களுடன் அமர்ந்திருந்தால் மற்றொன்று உங்கள் படுக்கையில் உறங்குகின்றதென உணர்வீர்களாக. இன்பமும் துன்பமும் இரண்டு புறமும் தொங்கும் துலாத் தட்டாக நீங்கள் இருக்கின்றீர்கள். துலாக்கோல் காலியாக இருக்கும் போது நீங்கள் ஒருபுறமும் சாயாமல் நிலைத்துச் சமனாக நிற்கின்றீர்கள். ஆனால், கருவூலத்து முதல்வன் உங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் சீர்தூக்கிப் பார்க்கும்போது தான் உங்கள் இன்பத்தட்டோ துன்பத்தட்டோ தாழ்கின்றது அல்லது உயர்கின்றது.                 9. இல்லங்கள் ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா! எங்களுக்கு இல்லங்களைப்பற்றிக் கூறுங்கள்,' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார் : நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள் கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக் கானிலே கட்டுங்கள். மாலைக் காலத்தின் மங்கிய ஒளியிலே நீங்கள் எவ்வண்ணம் வீடு திரும்புவீர்களோ, அவ்வண்ணமே சேய்மைக் கண்ணே தனித்துள்ள உங்கள் உள்ளமெனும் வழிப்போக்கனும், தன் வீட்டை நோக்கியே திரும்புவான். உங்கள் பரு உடலே உங்கள் இல்லம். அந்த இல்லம் கதிரவனின் கதிரொளியிலே வளர்ந்து இரவின் அமைதியிலே உறங்குகின்றது. உங்கள் குடிசை கனவு காண்பதில்லையா? கனவோடே இந்த நகரத்தைவிட்டு நீங்கி, பூங்காவுக்கோ, குன்றின் உச்சிக்கோ போவதில்லையா? உங்கள் இல்லங்களை எல்லாம் நான் என் கைகளில் ஏந்தி, விதைப்பவன் விதை தூவுவதைப் போலக் காட்டிடையேயும் வயற்புறத்தேயும் தூவுதற்கியலுமா? மலையிடையே உள்ள பள்ளத்தாக்குகளே உங்கள் வீதிகளாகவும், பச்சைப் புல்வெளி ஒற்றையடிப் பாதையே உங்கள் வீதிச் சந்துகளாகவும் அமைய, நீங்கள் ஒருவரை ஒருவர் கொடிமுந்திரித் தோட்டங்களிலே சந்தித்து உங்கள் உடைகளிலே நில நல்லாளின் தூசுபடிய வருதல் கூடுமா? இவை இப்போதைக்கு இயலாதன. உங்கள் முன்னோர்கள் தங்களது அச்சத்தினால் உங்கள் யாவரையும் மிக அணுக்கமாக ஒருங்கு சேர்த்தார்கள். அந்த அச்சம் இன்னும் சில காலம் நீடிக்கலாம். இன்னும் சில காலமே, உங்கள் நகரத்தின் மதிற்சுவர்கள் உங்களுடைய வயற்புறத்தை உங்கள் அடுப்பங்கரையிலிருந்து வேறுபடுத்தி நிற்கும். ஆர்பலீஸ் நாட்டு மக்களே! உங்கள் இல்லங்களிலே என்ன வைத்திருக்கின்றீர்கள்? மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் எதைக் காப்பாற்றுகிறீர்கள் என எனக்குக் கூறுவீர்களா? ஆங்கே உங்கள் வல்லமையை வெளிப்படுத்திக் காட்டும் சாந்த சக்தியாம் அமைதியுண்டா? நினைவுச் சின்னங்களோ, ஒளிவீசும் வளைவுகளோ , மாட கூடங்களோ உங்கள் உள்ளத்தினைத் தம் உயர்ந்த உச்சியளவுக்கு உயர்த்துவன ஆங்கு உண்டா ? கற்களாலும் மரத்தாலும் பொலிவூட்டப்பட்டுள்ள அந்த இல்லங்களிலே உங்கள் இதயத்தைத் தூய மலை உச்சிக்கு உயர்த்தத் தக்கதாய அழகு தான் உண்டா? இவை உங்கள் இல்லங்களிலே உள்ளனவா? என்று எனக்குக் கூறுங்கள். அல்லது உங்கள் வீட்டிலே வெறும் சுகமும் சுகத்திற்குக் காரணமானதும் திருடனைப் போல உள்ளே விருந்தினன் என நுழைந்து, விருந்திடுபவனாகப் பின் மாறி, இறுதியில் தானே தலைவன் என நிமிர்ந்து நிற்கும் மன ஆசையும் தான் உள்ளனவா? ஆம். அந்த ஆசை தான் உங்களுக்குத் தலைவனாகி விடுவது மட்டுமல்லாமல், உங்களை ஆட்டுவிப்போனுமாகிச் சாட்டையாலும் தாற்றுக்கோலாலும் அடித்துச் சொடுக்கிக் குத்தி உங்களுடைய பேராசைகளைப் பொம்மலாட்டமென ஆட்டியன்றோ வைக்கின்றது. அதனுடைய கரங்கள் பட்டைப் போல் மிருதுவாக இருந்தாலும் அதன் இதயம் இரும்பைக் காட்டிலும் கடினமானது. நீங்கள் உறங்கும்படியாக அது தாலாட்டுப் பாடுவது, உங்கள் படுக்கையின் பக்கலிலே அது நின்று, உங்கள் உடலின் பெருமிதத்தைக் கேலி செய்வதற்கே.   அந்த ஆசை தான் உங்களுடைய கூர்மையான புலன் உணர்ச்சி களைப்பார்த்துக் கேலியோடு சிரித்து அவற்றை உடைந்து போகும் மட்பாண்டங்களைப் போல் முட்புதர்களிலே வீசிவிடும். உண்மையிலேயே இன்பத்துக்கான பேராசை தான். தன் உயிரின் வேட்கையைக் கொன்றுவிட்டுப் பிறகு, தானும் அந்த மரண ஊர்வலத்திலே கேலிச் சிரிப்போடு கலந்து கொள்ளும். ஆனால், நீங்கள் பரவெளியின் குழந்தைகள். அமைதியில் அமைதியற்றிருப்பவர்கள். நீங்கள் வலைக்குட்படவோ ஆட்டி வைக்கப்படவோ கூடாது. உங்கள் இல்லம் ஒரு நங்கூரமாக இல்லாமல் பாய்மரமாக இருக்கவேண்டும். அது புண்ணை மறைக்கும் சல்லாத் துணியாக இல்லாமல் கண்ணைக் காக்கும் இமையாக விளங்கட்டும். நீங்கள் வாயில் வழியிலே நுழைவதற்காக, உங்கள் சிறகுகளை மடக்கவேண்டாம். வாயில் நிலை முட்டும் என்பதற்காகத் தலையை வணங்கத் தேவையுமில்லை. மூச்சுவிட்டால் சுவர்கள் எங்கே ஓட்டை விட்டு விடுமோ என்று அஞ்சவும் வேண்டா . இறந்து போனவர்கள் இருப்பவர்களுக்காகக் கட்டிய கல்லறையிலே நீங்கள் வசிக்கவும் வேண்டா . எழிலும் பொலிவும் மிகப் பெற்றிருப்பினும், உங்கள் இல்லம் உங்கள் உள்ளக் கிடக்கையை மறைத்துக் காப்பாற்றவோ உங்கள் ஏக்கங்களை மூடி மறைக்கவோ முடியாது. ஏன் எனில், உங்களுக்குள்ளே வரம்பற்றுக் கிடக்கும் ஒன்று (ஆத்மா) விண்வெளியாகிய பெரிய மாளிகையிலே குடி இருக்கிறது ; அம் மாளிகையின் கதவுகளோ, மலர்ந்தும் மலராத விடியலின் தண்பனியே! அம் மாளிகையின் பலகணியோ, இரவுக் காலத்தின் அமைதியும் ஒலிக்கும் இன்னிசையுமே ஆம்.                                     10. உடைகள்   அடுத்து ஒரு நெசவாளி அவரை நோக்கி, 'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார் : உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன. ஆனால், உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை. உங்கள் உடைகளிலே, தனிமையிலிருந்து விடுதலையை நீங்கள் தேடிய போதிலும் அவற்றிடையே ஒரு கடிவாளமும் ஒரு கால் விலங்கும் உள்ளதைக் காண்பீர்கள். நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும் காண - சந்திக்க - இயலாதா? ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு,  ஞாயிற்றின் ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும் அல்லவோ உள்ளன. உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை வாடைக் காற்று தான் நெய்தது என்று சொல்கிறீர்கள். நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது. ஆனால், வெட்கமே அதன் தறியாகவும் மிருதுவாக்கப்பட்ட தசைநார்களே அதன் இழையாகவும் இருந்தன. நெசவாளியாகிய அவ் வாடைக்காற்று, தன் நெசவுத் தொழில் முடிந்த பின்னர்க் கானகத்திலே நின்று உரக்கச் சிரித்தது. நாணுடைமை என்பது தூய்மையற்ற பார்வைக்கு எதிரான கேடயம் தான் என்பதை மறவாதீர்கள். தூய்மையற்ற தன்மையே இல்லாமல் போகுமானால், நாணுடைமை என்பது உள்ளத்தின் தளையும் சாக்கடையும் அல்லாமல் வேறென்ன? இந்த மண் உங்கள் வெறுங்கால்களைத் தீண்டுதலாலே மகிழ்ச்சியுறுகின்றதென்பதையும், காற்று உங்கள் தலைமுடியோடு விளையாடுவதற்கே ஏங்குகின்றதென்பதையும் நீங்கள் மறவாதீர்கள்.                           11. கொடுத்தலும் கொள்ளலும்   பின்னர் ஒரு வணிகன், 'கொடுத்தலைப் பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும் எங்களுக்குக் கூறுங்கள்' என, அவர் கூறத் தொடங்கினார். உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத் தருகிறாள். நீங்கள் உங்கள் கைகளை எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென அறிந்தால்போதும். நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள். மண்தந்த வளத்தைப் பரிமாறிக் கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக் கண்டு திருப்தியுறுவீர்கள். ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும் கருணை வாய்ந்த நீதியின் மூலமும் நடைபெறவில்லை எனின், அது சிலரைப் பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கிவிடும். அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும், திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும் உழைப்பாளிகளாகிய நீங்கள் , நெசவாளர்களையும், குயவர்களையும், வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும் காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள் மத்தியிலே வந்து உங்கள் துலாக்கோலைத் தூயதாக்கிப் பின் மதிப்புக்கு மதிப்பு எவ்வண்ணம் சீர்தூக்குவதென விளக்குமாறு உலகமகா சக்தியை வேண்டிக் கொள்ளுங்கள். வெறுங்கையோடு வந்து தங்கள் வெற்று வார்த்தைகளையே 'உங்கள் உழைப்புக்கு ஈடாகப் பேரம் பேசுபவர்களை உங்கள் வியாபாரத்தில் பங்கு கொள்ளும்படி வற்புறுத்தாதீர்கள். அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள் : எங்களுடன் வயல்வெளிக்கு வாருங்கள். அல்லது எங்கள் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்று உங்கள் வலைகளை வீசுங்கள். ஏனெனில் நிலமும் கடலும் எப்படி எங்களுக்குத் தாராளமாகத் தருகின்றனவோ அப்படியே உங்களுக்கும் தரும். மற்றும் பாடகர்களும், நாட்டியக் கலைஞர்களும், குழலிசை வாணர்களும் அங்கு வந்தால் அவர்களுடைய கலைப்பரிசையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களும் உங்களைப் போலவே பழங்களையும் வற்றல்களையும் சேகரிப்பவர்களே. அவர்கள் கொண்டுவந்துள்ளவை, கனவுத் தன்மையே பொருந்தியனவாயினும் உங்கள் ஆத்மாவுக்கு அவை உணவும் உடையுமாக அமையும். நீங்கள் அங்காடி வீதியை விட்டு நீங்குமுன்னர் ஒருவரும் தாங்கள் வந்த வழியே வெறுங்கையோடு திரும்பிப் போகா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள் . ஏனெனில், உங்களிடையே உள்ள மிகக் கடைப்பட்ட கடைசி மனிதனுடைய தேவையும் நிறைவேற்றப்பட்டுவிட்டதென அறிந்தபின் அல்லாமல் உலக மகாசக்தி மன நிம்மதியோடு காற்றின் மீது கண்ணுறங்காள்,           12. குற்றமும் தண்டனையும்   பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன் வந்து, 'குற்றத்தைப் பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார் : உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும் போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக்குத் தவறிழைத்து அதன் மூலம் உங்களுக்கு நீங்களே ' தவறிழைத்துக் கொள்கின்றீர்கள். அத்தகைய உங்கள் தவறுகளுக்காக, நீங்கள் பரலோகத்தின் கதவைத் தட்டும் போது, ஆங்குப் பதிலளிப்போர் இல்லாமையால், சிறிது காலம் பரலோகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டியதே. உங்கள் அரிய உயிர் ஒரு கடலைப் போன்றது. எக்காலத்திலும் அது வற்றாது. வேறு நீரைப் பெய்து அதை நிரப்ப வேண்டியும் இராது. காற்றைப் போல இலேசான சிறகுடையவற்றை மட்டுமே அது மேலெழுப்பவல்லது. மற்றும் உங்கள் தூய ஆத்மா கதிரவனைப் போன்றதுமாகும். அந்த ஆத்மாவோ கறையானின் வழிகளையும் அறியாது; பாம்பின் வளைகளையும் தேடாது. உங்கள் தூய உயிர் உங்களுள்ளே தான் மட்டும் தனித்து வசிக்கவில்லை . உங்களுள்ளே ஒரு பகுதி மனிதன் இருக்கிறான். ஆனால், பெரும்பகுதி மனிதன் அல்லாத ஒன்றும் இருக்கிறது. மனிதத் தன்மையற்ற அதுவோ , ஓர் உருவமற்ற குறளன் மூடுபனியிலே தூக்கக் கலக்கத்தோடு நடந்து தன் விழிப்புணர்வைத் தானே தேடுவதைப் போன்றது. நானோ இப்போது உங்களுள் இருக்கின்ற மனிதனைப் பற்றியே சொல்லப் போகிறேன். ஏனெனில், தூய ஆத்மாவோ, மனிதன் அல்லாத உருவமற்ற குறளனோ அன்று. உங்களுள் உள்ள மனிதனே, குற்றங்களைப்பற்றியும் தண்டனைகளைப் பற்றியும் அறிய முடியும். பல தடவைகளில், குற்றவாளிகளைப்பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் யாரோ அன்னியரைப் போலவும் உங்களுக்குள் ஒருவரே அவர் அல்லர் எனவும் காரணமின்றியே உங்கள் உலகில் அவர் தலையிட்டு விட்டதைப் போலவும் பேசுகின்றீர்கள். ஆனால், நான் கூறுகிறேன் உங்கள் அனைவருடைய மன உயர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக உங்களிலே மிகச் சிறந்த அறநெறிச் செல்வரும் பரிசுத்தவான்களும் கூட உயரமுடியாது. அதைப்போலவே உங்களுள் மண்டிக் கிடக்கும் கீழ்மையைக் காட்டிலும் தாழ்வாக, எப்படிப்பட்ட கொடியவனும் கயவனும் தாழ்ந்து வீழ்ந்து விடமாட்டான். மரத்தினது மோன அறிவாற்றலின்றி எந்தப் பசுமையான இலையும் பழுப்படைதலில்லை. அதைப் போலவே, உங்கள் எல்லாருடைய , உள்ளத்திலேயும் மறைந்துள்ள தீய சக்தியின் ஆற்றலின்றி. எந்தத் தீயவனும், தவறிழைப்பவனும், தவறு செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் சுத்த ஆத்மாவை நோக்கி ஊர்வலம் செல்வதைப் போல நடந்து செல்கின்றீர்கள். நீங்களே வழியும் வழிப்போக்கர்களும் ஆவீர்கள். உங்களுள் யாராவது ஒருவர் தடுக்கி வீழ்ந்தால் அவர் தம் பின்னால் நடந்து வருபவர்களுக்கு, இடறுங் கல்லுக்கான எச்சரிக்கையாக வீழ்ந்தவர் ஆவார். தமக்கு முன்னால் சென்றவர்கள் வேகமாகவும் நடையில் தன்னம்பிக்கை மிகுந்தும் சென்றவர்களாயினும் வழியிலே உள்ள இடறி விழுங்கல்லை முன் சென்றவர்கள் அப்புறப்படுத்தாத காரணத்தினால், அவர்களுக்காகவும் இவர் இடறி விழுந்தவர் ஆவார்.   ஒருவேளை இச் சொற்களும் உங்கள் இதயத்தின் மீது  சுமை என அழுத்தலாம். கொலை செய்யப்பட்டவன் தன் மரணத்திற்குத் தானே காரணமாகாமல் இருந்ததில்லை. திருடப்பட்டவனோ தான் திருடப்பட்டதற்கான குற்றத்திலிருந்து விடுபட்டவனல்லன். சன்மார்க்கர்களும், துன்மார்க்கர்களின் செயல்களை அறியாத களங்கமற்றவர்கள் அல்லர். கறையற்ற கைகளையுடையவர்களும் குற்றவாளிகளின் குற்றங்களிலிருந்து விடுபட்டுத் தூயவர்களாகிவிட முடியாது. ஆம். தீங்கு செய்தவனும் தீங்கு செய்யப்பட்டவனின் கோரப் பிடிப்பிலே பல தடவைகள் சிக்கினவனே. பல சமயங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களே குற்றஞ் சாட்டப்படாத சன்மார்க்கர்களின் பழிபாவங்களைச் சுமக்கும் சுமைதாங்கிகளாக உள்ளனர். நீங்கள் நீதியை அநீதியிலிருந்தும், நன்மையைத் தீமையிலிருந்தும் வேறுபடுத்தி அறிய முடியாது. ஏனெனில், அவர்களும் (தீயவர்களும்) உங்களுடன் கதிரவன் எதிரிலே, வெள்ளை நூலோடு கறுப்பு நூல் கலந்து பின்னியுள்ளதைப் போலக் கலந்து நிற்கின்றனர். கறுப்பு நூல் அறுந்துவிடுமானால் நெசவாளி பாவை முற்றிலும் பார்வை இடுவதோடு, தறியையும் பரிசோதிக்கிறான். உங்களுள் யாராவது துரோகமிழைத்த ஒரு மனைவியின் மேல் நீதி வழங்க விண்ணப்பிப்பீர்களானால், அத்தகையவர் அவள் கணவனுடைய இதயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து அவனுடைய ஆத்மாவையும் அளந்தறியட்டும். தவறிழைத்தவனுக்குக் கசையடி தரும் ஒருவன் தவறிழைக்கப்பட்டவருடைய ஆவியையும் கூர்ந்து ஆராயக் கடவன். உங்களுள் யாராவதொருவர் சன்மார்க்கத்தின் பேரால் பிறரைத் தண்டித்து, தீய நச்சு மரத்தினை வீழ்த்தக் கோடரியை ஓங்குவீர்களானால், அவர்கள், அம்மரத்தினுடைய வேர்களின் அடி ஆழம் வரையிலும், கூர்ந்து ஆராய்ந்து காணட்டும். உண்மையாகவே, அவர்கள் அக்காலத்திலே தான், அமைதியான நிலத்தின் இதயத்திலே , நல்லனவற்றின் வேர்களும், தீயனவற்றின் வேர்களும், பலன் தருவனவற்றின் வேர்களும், பயனற்றவற்றின் வேர்களும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கக் காண்பார்கள். நீதியை அவாவுகின்ற நீதிபதிகளே, பருஉடலிலே அறம் வழுவாமல் நடந்தும் தன் நுண்ணுடலிலே தீய உள்ளம் கொண்டுள்ளவனுக்கு என்ன நீதி வழங்குவீர்கள்? பிறர் தம் பரு உடல்களை மாய்த்து அதனால் தான் தன் நுண்ணுடலையே மாய்த்துக் கொண்டவனுக்கு என்ன தண்டனை தருவீர்கள்? ஏமாற்றுவதையும் துன்புறுத்துவதையும் தன் தொழிலாகக் கொண்டவனான ஒருவன், அதே நேரத்தில் தானும் ஏமாற்றப்பட்டுக் கொடுமைக்குள்ளாகிறான் எனில் அவனை எவ்வண்ணம் தண்டிப்பீர்கள்? நீங்கள் மகிழ்வோடு கடமையாற்றுகின்ற சட்டங்களால் நிருவகிக்கும் நீதி நியாயம் என்பது, மனந்திரும்புதலேயன்றோ ? ஆயினும் உங்களால் களங்கமற்றவர்கள் மீது மனந்திரும்புதலைச் சுமத்தவோ, குற்றவாளிகளின் இதயத்தில் இருந்து அந்த மனந்திரும்புதலை விலக்கிவிடவோ இயலாது.   உறக்கத்திலிருந்து மாந்தர்கள் விழித்துத் தங்களைத் தாங்களே உய்த்துணர்ந்து ஆராயும்படி இரவிலே அது (மனந்திரும்புதல்) அழைக்காமலேயே வரும். ஆனால், நீதியை நன்கு அறிந்தவர்களான நீங்கள் எல்லாச் செயல்களையும் பகலின் முழு ஒளியிலே காணவில்லையானால் எப்படி அதை இரவிலே அறிவீர்கள்? அக்காலத்திலேதான் நீங்கள், நிமிர்ந்து நிற்பவர்களும் சரி, தடுக்கி வீழ்ந்தவர்களும் சரி, - குன்றிய மனிதத் தன்மையின் இரவும், தூய ஆத்மாவின் பகலும் கலந்துள்ள மங்கிய மாலைக் காலத்திலே நிற்கும் ஒரே வகை மனிதன் தான் என்பதை உணர்வீர்கள். மற்றும் கோயிலின் தலைக்கல் அதனுடைய அடிப்படைக் கல்லைக் காட்டிலும் உயர்ந்ததன்று என்பதையும் அறிவீர்கள்.                                                     13. சட்டங்கள்   பின்னர் ஒரு வழக்கறிஞர், 'ஐயா! அப்படியாயின் நம் சட்டங் களைப்பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் சொல்லத் தொடங்கினார் : நீங்கள் சட்டங்களை இயற்றுவதிலே இன்பங் காண்கின்றீர்கள். ஆனால், அவற்றைச் சிதைப்பதிலே தான் அதைவிட இன்பத்தைக் காண்கின்றீர்கள். உங்கள் செயலோ, கடற்கரையிலே குழந்தைகள் உறுதியுடன் மணல் வீடுகளைக் கட்டிப் பின் சிரிப்பலையுடனே, அவற்றை அழித்தலைப் போன்றதே ஆகும். ஆனால், நீங்கள் மணல் வீடுகளைக் கட்டும்போது கடல் மேலும் மேலும் மணலைக் கொணர்ந்து குவிக்க, நீங்கள் அவற்றை அழிக்கும் போது கடலும் உங்களுடனே சேர்ந்து சிரிக்கின்றது. உண்மையாகவே கடல் களங்கமற்றவர்களுடனே கூடிச் சிரிக்கின்றது. எவருக்கு வாழ்க்கை ஒரு கடல் அல்லாமலும், மனிதனால் செய்யப்பட்ட சட்டங்கள் மணல் வீடுகளைப்போல் அல்லாமலும் உள்ளதோ? எவருக்குப் பாறையே தம் வாழ்க்கையாகவும், அப்பாறை மீது தாம் விரும்பியபடி செதுக்கிக் கொள்ளத்தக்க சிற்றுளியே சட்டமாகவும் உள்ளதோ அவர்கள் எத்தகையவர்கள்? நடனக் கலையை வெறுக்கும் முடவன் எத்தன்மையானவன்? காட்டிடையே சுதந்தரமாக ஓடுகின்ற மானையும் கடமையையும் பார்த்து. இவை நாடோடி என்றும் நெறி தவறியன என்றும் சொல்லுகின்ற , தன் நுகத்தடியையே காதலிக்கின்ற வண்டி மாடு எப்படிப்பட்டது? தன் சட்டையை உரித்துக்கொள்ள முடியாததால் பிற பாம்புகளைப் பார்த்து, அவை சட்டை உரித்துக் கொள்வதால் நிர்வாணமானவை, வெட்கங் கெட்டவை என்று கூறும் கிழப்பாம்பு எப்படிப்பட்டது? திருமண விழாவுக்கு முன்னதாகவே வந்திருந்து, விருந்தை மிகுதியாக உண்ட பின்னர்க் களைத்துத் திரும்பித் தம் இல்லம் செல்லும்போது எல்லா விருந்தாட்டும் சட்டத்தை மீறியனவே என்றும், விருந்து தருபவர்கள் அனைவரும் சட்டத்தை மீறினவர்களே என்று கூறும் ஒருவனைப்பற்றி என்ன வென்று கருதுவது? இவர்களும் கதிரவன் ஒளியிலேதான் நிற்கிறார்கள். ஆனால், தங்கள் முதுகைக் கதிரவனுக்குக் காட்டி நிற்கிறார்கள் என்பதைத் தவிர, வேறு என்ன நான் இவர்களைப் பற்றிச் சொல்ல முடியும்? இவர்கள் தங்கள் நிழலையே காண்கின்றனர். இவர்கள் நிழலே இவர்களுக்குச் சட்டங்கள். இவர்களுக்கோ, கதிரவன் என்பது நிழலை உருவாக்கும் ஒரு கருவியேயன்றி வேறில்லை. சட்டத்தினை ஒப்புக்கொள்ளுதல் என்பது இவர்கள் வரையிலும், தலை தாழ்ந்து தங்களது நிழலைத் தாங்களே நிலத்தின் மீது தேடுவது என்பது அல்லாமல் வேறென்ன? ஆனால், நீங்கள் ஞாயிற்றை நோக்கிச் சென்றீர்களானால், தரையின் மீது படியும் வேறு எந்த நிழல் தான் உங்களைச் சிறைப்படுத்த முடியும்? காற்றூடே பயணம் செய்யும் உங்களை எந்தக் காற்றாடி தான் திசைமாற்றித் திருப்ப முடியும்? மற்றொரு மனிதனின் சிறைக் கதவின் மீதன்றி நீங்கள் உங்கள் நுகத்தடியை வேறெங்காவது உடைத்துக்கொள்ள முடியுமானால், மனிதனின் எந்தச் சட்டம் உங்களைக் கட்டுப்படுத்த முடியும்? பிற எந்த மனிதனுடைய இரும்புத் தளையின் (விலங்கு) மீதும் தடுக்கி விழாமல் நீங்களே களித்தாடக் கூடுமானால், எந்தச் சட்டங்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டும்?   யாருடைய நெறியிலும் இடையூறுண்டாக்காமல் நீங்களே உங்கள் உடையைக் கிழித்துக் கழித்துப் போடக் கூடுமானால், யார் உங்களை நீதி விசாரணைக்கு அழைக்க முடியும்? ஆர்பலீஸ் நகர மக்களே, நீங்கள் முரசத்தை மூடிப் போர்த்து வைக்கலாம்; யாழின் நரம்புகளைத் தளர்த்திவிடலாம். ஆனால், வானம்பாடியைப் பண்ணிசைக்காதே என உங்களிலே யாராவது உத்தரவிட முடியுமா?                                                           14. சுதந்தரம்   பிறகு ஒரு பேச்சாளர், 'சுதந்தரத்தைப்பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார். நகர வாயிற்புறத்திலேயும், உங்களது குளிர்காயும் கணப் பருகிலேயும், நீங்கள் உங்கள் சொந்த விடுதலையினையே (சுதந்தரத்தையே) சாஷ்டாங்கமாக வீழ்ந்து தண்டனிட்டு வணங்குகின்றீர்கள். கொடுங்கோல் மன்னன் முன்னர், ஓர் அடிமை தலைதாழ்ந்து நிற்பதைப் போலவும் அம் மன்னன் தன் கழுத்தை வெட்டுங்காலத்திலும் அவ்வடிமை அவனைத் துதி செய்வதைப் போலவுமே சுதந்தரத்தை நீங்கள் வணங்குகின்றீர்கள். கோயிலைச் சுற்றியுள்ள பூங்காவிலும் கோட்டையின் நிழலிலும் உங்களுள்ளே உரிமை வேட்கை மிகுந்தவர்கள், தங்கள் சுதந்தரத்தையே தமக்கு நுகத்தடியாகவும் கைவிலங்காகவும் பிணிக்க அணிந்துள்ளமையைக் கண்டிருக்கிறேன். என் இதயம் என்னுள்ளே குருதி சிந்துகிறது. ஏனெனில், விடுதலையைத் தேடும் வேட்கையே உங்களுக்குக் கடிவாளம் போல அமையும் போது, அத்தகைய சுதந்தரத்தையே எல்லை என்றும் பூரணமானது என்றும் பேசுவதை நீங்கள் எக்காலத்தில் நிறுத்துவீர்களோ, அக்காலத்திலே தான் நீங்கள் உண்மையிலேயே சுதந்தரமானவர்கள் ஆவீர்கள். உங்களுடைய நாள்கள் எவ்விதக் கவலையும் இல்லாமல் இருந்தால், உங்களுடைய இரவுகள் தேவைகளும் துயரங்களும் சூழாமல் இருந்தால் மட்டுமே நீங்கள் சுதந்தரமானவர்கள். அந்தக் கவலையும் தேவையும் துயரமும் ஒருவேளை உங்கள் வாழ்வைப் பின்னிப் பிணித்திருப்பினும், அவற்றுக்கு மேலாக, நீங்கள் தளையற்றும் கவசமற்றும் உயர்ந்து நிற்கும் போது தான் நீங்கள் விடுதலையுற்றவர்களாவீர்கள். அறிவு விளக்கத் தெளிவு என்னும் காலையிலே பின்னிய சங்கிலியே, நடுப்பகலில் உங்களைச் சுற்றிப் பிணித்துவிடுமானால், நீங்கள் எங்ஙனம் பகலையும் இரவையும் கடந்து மேலே உயர முடியும்? உண்மையிலேயே நீங்கள் எதைச் சுதந்தரம் என்று கூறுகின்றீர்களோ, அது நம் கண்களைக் கதிரவன் வெளிச்சத்தால் கூசவைக்கும் மின்னுகின்ற வலிமிக்க கரணைகளால் ஆன ஓர் சங்கிலியேயல்லாமல் வேறென்ன? நீங்கள் விடுதலையடைவதற்காக, உங்கள் ஆத்மாவின் உடைந்த துண்டுகளை வீசி எறியும் செயலன்றிச் சுதந்தரம் என்பது வேறென்ன? இந்தச் சுதந்தரம் என்பது ஒரு நீதியற்ற சட்டமாக இருந்தாலோ இதை நீங்கள் அழித்துவிடலாம். ஆனால், இந்தச் சட்டமோ நீங்களே உங்கள் கைகளாலேயே உங்கள் நெற்றி மீது எழுதிக்கொண்ட தலைஎழுத்தாகும் அன்றோ? இச்சுதந்தரத்தை, உங்கள் சட்டப்புத்தகங்களை எல்லாம் கொளுத்திவிடுவதன் மூலமோ, நீதிபதிகளின் நெற்றிகளைக் கடல் நீர் முழுமையும் கொண்டு கழுவுவதன் மூலமோ நீங்கள் அழித்துவிட முடியாது. இஃது ஒரு கொடுங்கோலனானால் நீங்கள் இதை அரியணையிலிருந்து தூக்கி எறிந்துவிடலாம். ஆனால், அதற்கு முன்னதாக நீங்கள் உங்கள் உள்ளத்திலே இருந்து, இஃது ஆள்வதற்காக எழுப்பப்பட்டுள்ள இதன் அரியணையை அழித்துவிடுங்கள். கொடுங்கோன்மை எப்படிச் சுதந்தரத்தையும் இறுமாப்பையும் ஆள் இயலும்? தங்கள் சொந்தச் சுதந்தரத்திலேயே கொடுங்கோன்மையும், தங்களது இறுமாப்பிலேயே இழிதன்மையும் அல்லவா பொருந்தி இருக்கின்றன.   இந்தச் சுதந்தரம் ஒரு கவலையாக இருந்தால் நீங்கள் உதறித் தள்ளிவிடுவீர்கள். ஆனால், இந்தச் சுதந்தரம் என்னும் கவலையோ உங்கள் மீது பிறரால் சுமத்தப்பட்டதன்று. மாறாக நீங்களே வலியத் தேடிக்கொண்ட ஒரு சுமையாகும். இஃது ஓர் அச்சமாக இருந்தாலோ நீங்கள் விரட்டிவிடுவீர்கள். அச்சப்படும் உங்கள் கைகளிலே அன்று உங்கள் இதயத்தை அன்றோ இஃது இருக்கையாகக் கொண்டுள்ளது. அன்பு மிகுந்ததும், அச்சமடைந்ததும், துயரமுள்ளதும், மகிழ்வு மிக்கதும், தேடப்படுவதும், தப்பி ஓடிவிடுவதுமான எல்லாப் பொருள்களும் நிச்சயமாகவே உங்கள் உள்ளத்துள்ளேயே நிலையாகத் தொடர்ந்து பாதிபாதியாக உலாவுகின்றன. இவை அனைத்தும் உங்கள் ஆத்மாவினுள்ளே ஒளியும் நிழலும் ஒன்றாக இணைந்துள்ளதைப் போல, இணைந்து உலாவுகின்றன. நிழல் தன் உருவத்தைத் தேய்ந்து இழந்துவிட்ட பிறகு, தனித்து நிற்கும் ஒளிகூட, தன்னைவிடப் பேரொளிக்குத்தான் ஒரு நிழலாகவே மாறும். இங்ஙனமே உங்கள் சுதந்தரமும், தன்னுடைய தளைகள் அனைத்தும் அறுந்துவிட்ட பிறகும், தன்னைக் காட்டிலும் பெரிய தொரு சுதந்தரத்திற்குத் தானே ஒரு தளையாக மாறிவிடும்.                                               15. பகுத்தறிவும் மனவெழுச்சியும்   அதன்பின் கோயில் அர்ச்சகரின் மனைவி அவரைப் பார்த்து, எங்களுக்கு விவேகத்தைப் பற்றியும் மன எழுச்சியைப்பற்றியும் சொல்ல வேண்டும்' என, அவர் சொல்வார் : பல நேரங்களில் உங்கள் ஆத்மா ஒரு போர்க்களமாக மாறி நிற்க, அங்கே உங்கள் விவேகமும் தீர்ப்பும் உங்கள் மன எழுச்சி, அவா எனும் இவற்றோடு போர் செய்கின்றது. உங்கள் ஆத்மாவுக்கு நான் ஒரு சமாதானத் தூதுவனாகி, விலக்கப்பட்ட, போட்டி இடுகின்ற உங்களது புலன் உணர்ச்சிகள் யாவும் ஒருங்கிணைந்து பண்ணிசைக்கும்படி என்னால் மாற்ற இயலுமா? உங்களுள் நீங்களே அமைதியை விரும்புபவர்களாக விளங்கா முன், இல்லை -- புலன் உணர்வினைக் காதலிப்பவர்களாக அமையாத காலத்து, என்னால் இஃது எப்படிச் செய்வதற்கு இயலும்? கடற்பயணம் செய்யும் உங்கள் ஆத்மாவுக்கு உங்கள் பகுத்தறிவும் மனவெழுச்சியும் சுக்கானும் பாய்மரமுமாய் விளங்கும். அந்தச் சுக்கான் உடைந்துவிட்டாலும், பாய்மரம் முறிந்து விட்டாலும் நீங்கள் தட்டுத் தடுமாறித் திகைக்க அலைத்து இழுத்துச் செல்லப்பட்டோ, நடுக்கடலில் அசைவற்றோ நின்றுவிடுவீர்கள். ஏனெனில், தனித்து ஆளுகின்ற பகுத்தறிவோ மூடி அடைத்து வைக்கப்பட்ட சக்தியாகும். கவனிக்கப்படாத மனவெழுச்சியோ தன்னைத் தானே எரித்து அழித்துக்கொள்ளும் சுடராகும். எனவே, உங்கள் ஆத்மா தன் பகுத்தறிவை மனவெழுச்சியின் உயரத்திற்கு, அந்த மனவெழுச்சி தான் இனிய பண்பாடும்படியாக உயர்த்தட்டும். உங்கள் ஆத்மா உங்கள் மனவெழுச்சியைப் பகுத்தறிவோடு இணைத்துச் செலுத்த, அதனால் உங்கள் அவாவும் மனவெழுச்சியும் நாள்தோறும் உயிர்த்தெழுந்து வாழ்வதோடு, தன்னுடைய (ஆத்மாவின்) சிதையின் சாம்பலில் இருந்தும் அம் மனவெழுச்சி உயிர்பெற்றெழுந்து சிரஞ்சீவியைப் போல் நீடூழி வாழச் செய்யட்டும். உங்களுடைய பகுத்தறிவின் தீர்ப்பையும், உங்கள் உளப் பசியையும் உங்கள் இல்லத்திலே தங்கும் இருவிருந்தினர்கள் எனக் கருதுங்கள் என நான் கூறுகிறேன். நிச்சயமாக நீங்கள் ஒரு விருந்தினரைக் காட்டிலும் மற்றொரு விருந்தினரை அதிகமாகக் கெளரவிக்கமாட்டீர்கள். ஏனெனில், யார் ஒருவர் ஒரு விருந்தினரைப் பிறனிலும் அதிகமாகக் கவனிக்கிறாரோ, அவர் இருவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இழந்துவிடுபவர் ஆவார். குன்றின் மீது குளிர்ந்த புங்கமரத்தின் நிழலிலே அமர்ந்து சேய்மையிலேயுள்ள நிலத்தின் பள்ளத்தாக்குகளிலே, அமைதியும் சலனமற்ற தன்மையும் பங்கேற்றிருப்பதை நீங்கள் காணும்போது, உங்கள் உள்ளம் தன்னுள்ளே , 'இறைவன் பகுத்தறிவிலே வசிக்கிறான்' என்பதாகச் சொல்லட்டும். புயற்காற்று சுழன்றுவீச, அவ்வலிய காற்றால், காடுகள் நடுநடுங்க , இடியும் மின்னலும் விண்ணின் காம்பீர்யத்தை நிலை நிறுத்தும் போது, உங்கள் இதயம் பயபக்தியோடு, இறைவன் மன வெழுச்சியிலே நடனமாடுகின்றான்' எனக் கூறுங்கள். நீங்களோ இறைவனின் வெட்டவெளியிலே காற்றாகவும், பராசக்தியின் கானகத்திலே ஓர் இலையாகவும் இருப்பதால் பகுத்தறிவிலே அமைதி அடைந்து மனவெழுச்சியிலே நடமாடுங்கள்.           16. துயரம்   பின்னர் ஒரு நங்கை, 'எங்களுக்குத் துன்பத்தைப்பற்றிச் சொல்லுங்கள்' என்று கேட்க, அவர் சொல்லத் தொடங்கினார்: உங்கள் துயரம் என்பது உங்களது பகுத்தறிவை மூடி மறைத்துள்ள புற ஓட்டினை உடைத்தலே ஆகும். பழத்தின் உட்சுளையாகிய இதயம், சூரிய ஒளிச் சந்நிதியிலே நிற்பதற்கென, அப் பழத்தின் ஓட்டை உடைக்கும் கல்லைப் போலவே, துயரத்தை நீங்கள் அறிதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையிலே ஏற்படும் அன்றாட அதிசயங்கள் உங்கள் இதயத்தை வியப்பிலே நிலைக்கச் செய்ய முடியுமானால், உங்கள் துன்பம் உங்கள் இன்பத்தைவிடக் குறைந்த அளவு அதிசயமானதாக இராது. உங்கள் வயல்கள் மீது கடந்து செல்லும் பருவ காலங்களைப் போலவே, உங்கள் இதயத்தின் பருவகாலங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதே. பின்னரே நீங்கள் உங்கள் துயரமாம் குளிர்காலத்தையும் அமைதியோடு கண்காணிப்பீர்கள். உங்கள் துயரத்தின் பெரும்பகுதி நீங்களாகத் தேர்ந்தெடுத்ததே. உங்கள் துயரமோ உங்களுள்ளே உள்ள மருத்துவன், பிணி வாய்ப்பட்ட உங்கள் ஆத்மா குணமடைவதற்குத் தரும் ஒரு கசப்பான மருந்தாகும். எனவே, அந்த மருத்துவனை நம்பி அவன் தரும் மருந்தை மௌனத்தோடும் அமைதியோடும் நீங்கள் அருந்த வேண்டியதே. ஏனெனில், அம் மருத்துவனின் கரங்கள் கடினமாயும் வலிவு மிகுந்தும் இருப்பினும் அவைதாம் பிறரால் காணமுடியாத மிருதுவான கரங்களால் உய்க்கப்பட்டவையாகும். மற்றும் அம் மருத்துவன் கொணர்ந்து தரும் மருந்து நிறைந்த அம் மருந்துக்கிண்ணம் உங்கள் உதடுகளைத் தீய்க்குமாயினும், அக் கிண்ணம், அப் பரம்பொருளின் தூய கண்ணீரால் நனைக்கப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்டதே ஆகும்.                           17. தன்னையறிதல்   அதன் பின் ஒருவர், 'எங்களுக்குத் தன்னையறிதலைப் பற்றிச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார் : உங்கள் இதயம் தன் அமைதியினால், பகல் இரவு ஆகியவற்றின் மறைபொருளை அறியவல்லது. ஆனால் உங்கள் காதுகளோ, அறிவின் இதய ஓலத்தைக் கேட்கத் தாகங்கொண்டனவாக இருக்கின்றன. நீங்கள் எவற்றை உங்கள் நினைவாற்றலால் அறிந்துள்ளீர்களோ, அவற்றைச் சொற்களால் நீங்கள் அறியமுடியும். உங்கள் கனவின் (ஆடை) போர்வையற்ற உடல்களை உங்கள் விரல்களால் நீங்கள் தொடமுடியும். உங்களால் இப்படி இயல்வது நல்லதே! உங்கள் ஆத்மாவினுள் மறைந்துள்ள நீர் ஊற்று, மேலே பொங்கி வழிந்து, கடலை நோக்கி இன்னிசையோடு ஓட வேண்டும். அப்போதே உங்களுடைய, எல்லையற்ற ஆழ்ந்த கருத்தின் பெருநிதியம் உங்கள் கண்களுக்கு விளக்கமுறும். ஆனால், உங்களுக்குப் புலப்படாத அப் பெருநிதியத்தைச் சீர்தூக்க எந்தத் துலாக்கோலையும் நீங்கள் தேடவேண்டா. உங்கள் அறிவாற்றலின் ஆழத்தை அளந்தறியத்தக்க கைத்தடியையோ, ஆழம் பார்க்கும் கருவியையோ நீங்கள் தேட வேண்டா. ஏனெனில், ஆத்மா அளக்கமுடியாத வரம்பற்ற ஓர் ஆழமான கடல். உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று நீங்கள் கூறாதீர்கள். ஓர் உண்மையை மட்டும் கண்டேன் என்று சொல்லுங்கள். ஆத்மா செல்லத்தக்க நெறியினைக் கண்டேன் என்று கூறாதீர்கள். மாறாக, நான் நடந்து போகின்ற வழியிலே, ஆத்மாவைச் சந்தித்தேன் என்று சொல்லுங்கள். ஏனெனில், ஆத்மா எல்லா நெறிகளிலும் நடக்கின்றது. ஆத்மா ஒரு கோட்டின் மீது நடப்பதும் இல்லை; நாணலைப் போல் நீளமாக வளர்வதுமில்லை. அது எண்ணற்ற இதழ்களை உடைய, தாமரை மலர்வதைப் போல மலர்கின்றது.                     18. உபதேசம்   அங்கு ஆசிரியர் ஒருவர் பின்னர் அவரை நோக்கி, 'ஐயா! எங்களுக்குப் போதித்தலைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லுவார் : உங்கள் உள்ளத்திலே, ஏற்கெனவே பாதி உறக்கத்திலே கிடக்கும் அறிவின் உதயத்தையல்லாமல், வேறெதையும் எந்த மனிதனாலும் உங்களுக்குப் போதிக்க முடியாது. கோயிலின் நிழலிலே தன் மாணவர் குழுவுடன் அமர்ந்துள்ள ஆசிரியர், தம்முடைய ஞானத்தை அவர்களுக்குத் தருவதில்லை. மாறாகத் தம்முடைய நம்பிக்கையையும் விருப்பத்தையுமே தருகிறார். அவர் உண்மையாகவே ஞானமிக்கவரானால், தம் அறிவகத்தின் வாயிலுக்கு உங்களை அழைக்கமாட்டார். மாறாக உங்கள் உள்ளத்தினுடைய , அறிவின் நுழைவாயிலுக்கே வழிகாட்டுவார். வான்வெளியைக் கணிப்பவர், உங்களிடம் தம் வான சாஸ்திர ஞானத்தை எல்லாம் போதிக்கலாம். ஆனால், அவர் உங்களுக்குத் தம்முடைய சாத்திர ஞான அறிவைப் பங்கிட்டுத் தர முடியாது. பரந்த வெளியனைத்திலும் பரவிக் கிடக்கும் இசை ஞானத்தை எல்லாம் திரட்டி, ஒரு பாடகன் உங்களுக்கு இன்னிசை வழங்கலாம். ஆனால், அப் பாடகன் அவ்விசையைச் சிறை செய்யத்தக்க காதுகளையோ, பண்ணிசைக்கின்ற அவன் குரலையோ உங்களுக்குத் தர இயலாது. கணிதத்திலே மேதையான ஒருவர் உங்களுக்கு எடைகளையும், அளவைகளையும், அவை சார்ந்த கணித உலகத்தைப்பற்றிய அனைத்தையும் கற்றுத் தரமுடியும். ஆனால், உங்களை அவர் அக்கணித உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. ஏனெனில், ஒரு மனிதனின் பார்வை மற்றொரு மனிதனுக்குத் தன் சிறகுகளைத் தந்துதவாது. கடவுளின் உணர்விலே நீங்கள் ஒவ்வொருவரும் தனித்து நிற்பதைப் போலவே, நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய அறிவிலும் உலகத்தைப்பற்றிய அறிவிலும் தனித்து நின்றே உணர வேண்டும்.                                 19. நட்பு   அங்கிருந்த ஓர் இளைஞன், 'எமக்கு நட்பைப்பற்றிச் சொல்லவேண்டும்' என, அவர் கூறுவார் : உங்களது நிறைவேற்றப்பட்ட தேவைகளே உங்கள் நண்பன் ஆகும். நீங்கள் அன்போடு விதை தூவி, நன்றியோடு அறுவடை செய்யும் வயலும் அவனே. உங்கள் உணவும் உங்களது குளிர்காயும் கணப்பும் அவனே . ஏனெனில், அவனிடம் நீங்கள் பசியுடனே வருகின்றீர்கள்; உங்கள் அமைதிக்காகவே அவனைத் தேடுகின்றீர்கள். உங்கள் நண்பன், தன் உள்ளத்தைத் திறந்து உங்களிடம் பேசும் போது, உங்கள் உள்ளத்திலே உதிக்கும் மாறான கருத்துக்கான அச்சமும் நீங்கள் கொள்வதில்லை. உடன்பாட்டுக் கருத்தையும் நீங்கள் மறைப்பதில்லை. அவன் பேசாமல் மெளனமுற்றிருக்கும் போதும் உங்கள் நெஞ்சம் அவன் இதய ஒலியைக் கேட்பதைத் தடுப்பதும் இல்லை. ஏனெனில், நட்பின் இடையே சொற்களின்றி எல்லா நினைவுகளும், எல்லா அவாக்களும், விருப்பு வெறுப்புகளும், எல்லா எதிர்பார்த்தாலும் உதித்து இருவரிடையேயும் மகிழ்வோடு, ஆனால் ஆரவாரமின்றிப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. உங்கள் நண்பனிடமிருந்து, நீங்கள் பிரியும் காலத்திலே நீங்கள் வருந்த வேண்டா . ஏனெனில், சமவெளியில் இருந்து காணுவதைக் காட்டிலும் மலைமேல் ஏறி உச்சியை அடைந்தவனுக்கு மலை எப்படி விளக்கமாகத் தெரியுமோ, அதைப்போல், உங்கள் நண்பனிடமிருந்து எதை நீங்கள் அதிகமாக விரும்பி அன்பு கொண்டீர்களோ, அஃது அவன் பிரிவுக் காலத்திலே மிக விளக்கமாகத் தென்படும். உங்களது உயிராற்றலை ஆழச் செய்வதன்றி வேறு எப்படிப்பட்ட பிரதிபலனும் நட்பிடையே நிலவாமல் இருக்கட்டும். ஏனெனில், அன்பென்பது தன்னுடைய மறைபொருளை வெளிப்படுத்துவதன்றிப் பிறவற்றைத் தேடுவது அன்று. ஆனால், அன்பற்ற ஒன்றோ வீசப்பட்ட வலையை ஒப்பானதே ஆகும். அந்த வலையில் இலாபமற்றவையே அகப்படும். உங்களுடைய மிகச் சிறந்தவையாவும் உங்கள் நண்பனுடையவை ஆகட்டும். அவன் உங்கள் உள்ளக் கடல் அலைகளின் தணிவை அறிவதைப் போலவே, அவ்வலைகள் பொங்கிவரும் பெருக்கத்தையும் அறியட்டும். நாழிகைகளைக் கொலை செய்ய உங்கள் நண்பனை நீங்கள் தேடுவதானால் அந்த நண்பன் எத்தகையவன்? எப்போதும் வாழும் நாழிகைக்காக அவனைத் தேடுங்கள். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது தான் அவன் கடமையேயன்றி உங்கள் வெறுமையைப் பூரணமாக்குவதன்று. நட்பின் இனிமையிலே , நகையும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளுதலும் நிலவட்டும். ஏனெனில், சிறிய பொருள்களின் பனித்துளியிலே தான் இதயம் தன் வைகறையைக் கண்டு புத்துணர்வைப் பெறுகிறது.     20. உரையாடல்   பின்னர் ஒரு புலவர், 'சொற்பொழிவைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார்: உங்கள் எண்ணங்களோடுற்ற அமைதி முடிவடைந்த பின்னரே நீங்கள் பேசுகின்றீர்கள். உங்கள் இதயத்தின் தனிமையிலே வசிக்க முடியாத நேரத்திலெல்லாம் உங்கள் உதட்டினாலே வாழ்கின்றீர்கள். பேச்சொலி உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் பொழுதுபோக்காகவுமே உள்ளது. அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது. ஏனெனில், சிந்தனை என்பது பரந்த வெளியிலே பறக்கும் பறவையாகும். வார்த்தைகளாம் கூட்டிலே உண்மையாகவே அது தன் சிறகுகளை விரிக்க இயலுமாயினும் அதனால் பறக்க முடியாது. உங்களிலே பலர் தனித்திருத்தலுக்கு அஞ்சிப் பேசுபவர்களைத் தேடிப் போகின்றீர்கள். தனிமையின் அமைதி அப்படிப்பட்டவர்கள் கண்களுக்குத் தங்கள் ஆத்மாவின் உண்மை உருவை வெளிப்படுத்துகிறது. எனவே, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். இன்னும் பலர் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது சிந்தனையோ முன்யோசனையோ இன்றி, தாமே அறிந்து கொள்ள இயலாத சில உண்மைகளை எப்படியோ வெளிப்படுத்தி விடுவார்கள். மற்றும் சிலர் பல உண்மைகளைத் தங்கள் உள்ளத்திலே புதைத்து வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அவ்வுண்மைகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. இப்படிப்பட்டவர்களின் இதயத்திலே தான் உயிராற்றல் சாந்தமியைந்த கவிதையின் அமைதியிலே தங்கி இருக்கிறது.   உங்களுடைய நண்பரை நெடுஞ்சாலையிலோ அங்காடித் தெருவிலோ நீங்கள் காண நேர்ந்தால், உங்களின் உள்ளே வசிக்கும் உயிராற்றல், உங்கள் உதடுகளை அசைத்து நாக்கை நெறியுய்க்கும். உங்கள் குரலுக்குள்ளே உள்ள குரல் அவர்கள் புறச்செவிகளைத் துளைத்து, அகச் செவிக்குச் செல்லட்டும். ஏனெனில், அவர்களுடைய ஆத்மா உங்கள் இதயத்தின் உண்மைகளை அவர் தம் நினைவில் வைக்கத்தக்க திராட்சை ரசத்தின் இனிப்பைப் போல நினைவில் வைத்திருக்கும். திராட்சை ரசம் வைத்திருந்த ஜாடி மறைந்து போகலாம். அதன் மேற்பூச்சு வண்ணம் ஒளி இழந்துவிடலாம். ஆனால், பானத்தின் இனிப்பு மட்டும் நினைவில் இருந்து மாறாது.                       21. காலம்   பின்னர் ஒரு வான்வெளிக் கலைஞர் அவரை நோக்கி, 'காலத்தைப்பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் விளக்கலுற்றார்: அளத்தற்கரியதும், அளவிட முடியாததுமான காலத்தையும் உங்களால் அளந்திட முடியும். உங்களுடைய ஒழுக்கத்தையும், ஏன் உங்கள் உயிராற்றலின் இயக்கத்தையும், நாழிகைகள், பருவ காலங்கள் இவற்றுக்கேற்ப நேராக்கி நெறியுய்க்கலாம். காலத்தையே ஓர் அருவியாக்கி அவ்வருவிக் கரையோரம் நீங்கள் அமர்ந்து அதன் நீரோட்டத்தைக் காணலாம். உங்களுள் வசிக்கும் காலங்கடந்த ஒன்று. வாழ்க்கையின் காலங்கடந்த தன்மையை உணர்ந்துள்ளது. நேற்றென்பது இன்றைய நினைவே என்பதும், நாளை என்பது இன்றைய நாளின் கனவே என்பதும் அஃது அறிந்த ஒன்றேயாகும். உங்களுள்ளே எந்த ஒன்று இசைபாடிச் சிந்திக்கின்றதோ, அஃது அப் பரந்த வெளியிலே விண்மீன்களைச் சிதறிய அம் முதல் விநாடியின் வரம்பிடையேதான் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அன்பின் வலிமைக்கு எல்லையே கிடையாது என்றுணராத மனிதன் உங்களிலே யார்? மற்றும் அந்த அன்பு தான் எல்லையற்றதாயினும், தன் ஆத்மாவை அது சூழ்ந்திருப்பதாயினும், அஃது ஓர் அன்புணர்விலிருந்து, மற்றோர் அன்புணர்வுக்குத் தாவாமல், ஓர் அன்புச் செயலில் இருந்து மற்றோர் அன்புச் செயலுக்கு விரையாமல் இருப்பதை உணராதார் யார்? காலமும் அன்பினைப் போலவே பகுக்க முடியாததும் வரம்பற்றதும் அன்றோ ? உங்கள் எண்ணத்திலே காலத்தைப் பருவத்தினால் அளக்கும் எழுச்சி உண்டாகுமானால் அப்போது ஒவ்வொரு பருவமும் மற்ற எல்லாப் பருவங்களையும் சூழ்ந்து நிற்கட்டும். மற்றும் இன்றைய நாள், கடந்த காலத்தை நினைவினாலும் எதிர்காலத்தை விருப்பத்தினாலும் தழுவி நிற்கட்டும்.                     22. நல்லனவும் தீயனவும்   அதன்பின், அந் நகரத்தின் முதியவர்களுள் ஒருவர், 'நல்லன, தீயனவற்றைப்பற்றி எங்களுக்கு விளக்குங்கள்' என, அவர் கூறுவார்: உங்களுள் உள்ள நல்லதைப்பற்றி மட்டுமே நான் கூறமுடியும். ஆனால் தீமையைப் பற்றியல்ல. ஏனெனில், தன்னுடைய பசியாலும் தாகத்தாலும் சித்திரவதை செய்யப்பட்ட, நன்மையின் வேறுருவமே தீமை என்பதால்லாமல், தீமை என்பது வேறென்ன? உண்மையாகவே, நன்மையானது தான் பசியோடிருக்கும் போது, தன் உணவை இருண்ட குகைகளிலும் கூடத் தேடுகின்றது; தண்ணீரில்லாமல் நா வறண்டு தாகம் எடுக்கும் போது, நச்சு நீரைக் கூடப் பருகுகின்றது. நீங்கள் உங்களுள் ஒன்றி நிற்கும் நல்லவர்கள். ஆனால், உங்களோடு நீங்கள் ஒன்றி நிற்காமலிருக்கும் போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர். ஏனெனில், பகுக்கப்பட்ட வீடு திருடர்களின் குகையன்று. அஃது இரண்டாக்கப்பட்ட ஒரு வீடு தான். சுக்கான் இல்லாத கப்பல் இலக்கில்லாமல் ஆபத்து நிறைந்த பல தீவுகளுக்கிடையே திரிந்தாலும் கடலின் அடித்தளத்திற்கு மூழ்கிப் போகாது. உங்களையே தியாகம் செய்ய நீங்கள் போராடும் போது நீங்கள் நல்லவர்கள். அப்படியன்றி, உங்கள் இலாபத்தை மட்டுமே கருதி நிற்கும் போதுகூட, நீங்கள் கெட்டவர்கள் அல்லர். ஏனெனில், நன்னலத்திற்காக நீங்கள் போராடும் போது, நிலத்திலே ஊன்றி, நிலத்தின் பாலை உறிஞ்சும் மரத்தின் வேரை ஒப்பானவர்கள் விர்கள். மரத்தின் உச்சியிலே உள்ள பழம் கீழே உள்ள வேரைப் பார்த்து, 'உண்மையாகவே நீ என்னைப் போலப் பழுத்து முழுமை அடைந்து தன்னையே முழுமையும் கொடுத்துவிடும் தியாகியாக இரு,' என்று சொல்லாது. ஏனெனில், பழத்துக்குத் தன்னை முழுமையாகக் கொடுத்துத் தியாகம் செய்வது தான் அதன் இயல்பும் தேவையும் ஆகும். ஆனால், வேருக்கோ நிலத்தின் பயனை உறிஞ்சுவது மட்டுமே அதன் இயல்பும் தேவையுமாகும். நீங்கள் உங்கள் உரையாடலிலே விழிப்போடிருக்கும்போது நல்லவர்களே . ஆனால், தூக்கத்திலே உங்கள் நாக்குத் தடுமாறிக் கருத்தின்றி உளறும்போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர். ஏனெனில், தடுமாறி உளறுதலும் வலியற்ற நாவைப் பலப்படுத்தும். உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் உறுதியான பெருமிதம் நடையோடு நடந்து போகும்போது நல்லவர்கள். ஆயினும் அவ்விலக்கை நோக்கியே நீங்கள் தட்டுத்தடுமாறி நொண்டிச் சென்றாலும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர். நொண்டிகளும் பின்னோக்கிச் செல்வதில்லையே.   வலிவும் விரைவும் மிக்க நீங்கள், முடவர்கள் முன்னிலையில், அவர்களிடம் அன்பு காட்டுகிறோம் என்னும் நோக்கத்தோடு நொண்டி நடக்க வேண்டா. நீங்கள் எண்ணற்ற நெறிகளிலே நல்லவர்கள். ஆனால், நல்லவர்களாத இல்லாத போது கெட்டவர்களாக இல்லை. அக்காலத்திலே நீங்கள் மந்தமாகவும் சோம்பியும் நடக்கின்றீர்கள் என்பதன்றி வேறில்லை. அந்தோ! மான்கள் தங்கள் வேகத்தை ஆமைகளுக்குக் கற்றுத்தர இயலாதே. உங்களது பேருருவமான, தனக்கெனக் கொள்ளும் தன்னலமான அவாவிலே நன்மை நிலவுகின்றது. அந்த அவாவோ , உங்கள் யாவரிடத்திலும் உண்டு. ஆனால், சிலரிடத்திலே அந்த அவாவானது, மலையடுக்கத்திலே உள்ள பொருள்களையும், காட்டினது இனிய இசையையும் நல்லனவும் தீயனவும் சுமந்து கடலிலே கலக்கச் செல்லும் பெருவெள்ளத்தைப்போல அமைந்திருக்கும். மற்றும் சிலருக்கோ அந்த அவா, ஊர்ந்து சென்று பல வளைவுகளையும் திருப்பங்களையும் பெற்றுக் கடலைச் சென்று அடையுமுன் மிக மந்தகதியிற் செல்லும் ஆற்றைப் போல அமைந்திருக்கும். பேராசைக்காரன் குறைவாக விரும்புகின்றவனை நோக்கி, 'நீ ஏன் நின்று நின்று வருகிறாய், விரைந்து வரவில்லை ?' எனக் கூறாதிருக்கட்டும். ஏனெனில், உண்மையிலேயே நல்லவன் ஆடையற்ற மற்றவனை நோக்கி உன் உடை எங்கே என்றோ, வீடு இல்லாதவனைப் பார்த்து உன் வீடு என்னவாயிற்று என்றோ கேட்பதில்லை.                                     23. பிரார்த்தனை   ஆங்கிருந்த கோயில் அர்ச்சகரின் மனைவி அவரை நோக்கி, 'ஐய! பிரார்த்தனையைப் பற்றிச் சற்று விளக்குங்கள்' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார். நீங்கள் உங்கள் துயரத்திலும் தேவையிலும் பிரார்த்தனை செய்கின்றீர்கள். உங்கள் மகிழ்ச்சியின் முழுமையிலும் வாழ்நாள்களின் நிறைவிலும் கூட நீங்கள் பிரார்த்திக்க வேண்டுமன்றோ? ஏனெனில், நிலைத்து வாழ்கின்ற பரவெளியிலே உங்கள் உள்ளம் கலக்க வியாபித்தலே பிரார்த்தனை என்பதல்லாமல் வேறென்ன? உங்களுடைய இருளை மட்டும் பரவெளியிலே சொரிந்துவிடுவது உங்களுக்குச் சாந்தியைத் தருமானால், உங்கள் இதயத்தின் வைகறையைக்கூட அந்தப் பரவெளியிலே பெய்துவிடுவதும் உங்கள் மகிழ்ச்சிக்காகவே பிரார்த்தனைக்காக, உங்கள் ஆத்மா உங்களை அழைக்கும் போது, நீங்கள் அழுவதைத் தவிர்த்து வேறொன்றும் உங்களால் செய்ய முடியாதாயின், நீங்கள் அழ அழ  அந்த ஆத்மா, உங்களை நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கும் வரை, உங்களை மேலும் மேலும் கிசுகிசுத்துத் தூண்டிவிடும். நீங்கள் தியானிக்கும் அந்த நேரத்திலே தியானிக்கும் காலம் தவிர, பிற நேரங்களில் உங்களால் சந்திக்க இயலாதவர்களான பிரார்த்தனை செய்யும் பல்லோரையும், பரவெளியிலே சந்திக்க நீங்கள் மேன்மேல் உயர்கின்றீர்கள். எனவே, கண்ணுக்குப் புலப்படாத அந்தப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது, பெருமகிழ்ச்சிக்கும், இனிய ஒருமைப்பாட்டுணர்வுக்குமன்றி, மற்றொன்றுக்கு அன்று என இருக்கட்டும். ஆனால், அப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது வரம் கேட்டு இருப்பதற்காக அன்றி வேறெதற்கும் அன்று எனில் நீங்ககள் எதையும் அங்குப் பெறமுடியாது. அதனுள் நீங்கள் நுழைவது உங்களைத் தாழ்மைப்படுத்திக் கொள்ளவே எனில், நீங்கள் மேலுயர்த்தப்படமாட்டீர்கள். மற்றவர்களின் நன்மைக்காகவேனும் நீங்கள் வரம் கேட்டு இரப்பதற்கு அங்குச் செல்வீர்களாயின், உங்கள் பிரார்த்தனை கேட்கப்படமாட்டாது. பிறரால் காணப்படாமல் அக் கோயிலுக்குள் நீங்கள் நுழைவதே நல்லது. வார்த்தைகளால் நீங்கள் எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று நான் கூறமுடியாது. உங்கள் உதடுகள் மூலமாக இறைவனே, வார்த்தைகளை முணுமுணுக்க வைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இறைவன் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை. கடல், காடு, மலை இவற்றின் பிரார்த்தனைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தர இயலாது. மலை, காடு, கடல் இவற்றிடையே பிறந்த நீங்கள் உங்கள் இதயத்திலே அவற்றின் பிரார்த்தனையைக் காண இயலும். நீங்கள் இரவின் அமைதியிலே கூர்ந்து கவனிப்பீர்களானால், அவை மெளனத்தோடு இவ்வண்ணம் கூறுவதைக் கேட்பீர்கள். 'எங்கள் இறைவனே, எமது சிறகுள்ள ஆத்மாவே , எங்களுள் எழும் உணர்வு உமது உணர்வே. எங்களுள் எழும் விருப்பங்கள் உமது விருப்பமே. 'உம்முடைய தாய் எங்கள் இரவுகளை, உம்முடையதான பகலாக மாற்றுவதும் எங்களுள் எழும் உமது தூண்டுதலே. 'நாங்கள் எதையும் உம்மிடம் கேட்க வேண்டியதே இல்லை. ஏனெனில், எங்களுக்கு எது தேவை என்பதை, அவை எங்கள் உள்ளத்தில் தோன்றுவதற்கு முன்னரே நீர் அறிவீர். 'எங்களது தேவை பரம்பொருளாகிய நீரே. உம்மை மட்டுமே, அதிகமாக எங்களுக்குக் கொடுப்பதன் மூலம் நீர் அனைத்தையும் எங்களுக்குத் தருகிறீர்                                                       24. மகிழ்ச்சி   ஆண்டுக்கு ஒருமுறை அந்நகரத்திற்கு வருகின்ற ஒரு துறவி, அவர் முன் வந்து, 'எமக்கு மகிழ்ச்சியைப்பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்: மகிழ்ச்சி என்பது விடுதலை கீதம். ஆனால், அது விடுதலையன்று. அது உங்கள் ஆசையின் மலர்ச்சி. ஆனால், அது உங்கள் ஆசையின் பலன் அன்று. அது உயர்ச்சி என்று கூறப்படும் பெரும்பள்ளம். ஆனால், அது பள்ளமுமன்று உயர்ச்சியுமன்று. அது சிறைப்படுத்தப்பட்ட சிறகுடைய ஒரு பறவை. ஆனால், அது அப் பறவையைச் சூழ்ந்துள்ள வெளியன்று. ஆம்! உண்மையில் மகிழ்ச்சி ஒரு விடுதலை கீதமே! நீங்கள் உங்கள் இதயத்தின் முழுமையோடு மகிழ்ச்சி எனும் அந்த இசையைப் பாட நான் மகிழ்வேன். ஆனால், நீங்கள் அவ்வின்னிசையிலே உங்கள் இதயத்தை எல்லாம் இழந்துவிட ஒப்புக் கொள்ள மாட்டேன். உங்களிலே சில இளைஞர்கள், யாவும் மகிழ்ச்சியிலே தான் உள்ளதென்னும் நோக்கத்தோடு அதனையே அடைய முயல்கின்றனர். நீங்களோ அவர்களைச் சீர்தூக்கி நியாயம் கூறிக் கண்டிக்கின்றீர்கள். நான் அவர்களைப்பற்றித் தீர்ப்பளிக்கமாட்டேன்; கண்டிக்கவும் மாட்டேன்; மாறாக, அவர்கள் மகிழ்ச்சியைத் தேட அனுமதிப்பேன். அவர்களும் மகிழ்ச்சியைத் தேடிக் காணுவார்கள். ஆனால், அதை மட்டும் தனித்தன்று. மகிழ்ச்சியின் உடன்பிறந்த சகோதரிகள் எழுவர் ஆவர். அவர்களுக்குள்ளே கடைக்குட்டித் தங்கை கூட மகிழ்ச்சியைக் காட்டிலும் அழகு மிகுந்தவள். கிழங்கைத் தோண்டி எடுக்க முயலும் மனிதனுக்குப் புதையல் கிடைத்திருக்கிற செய்தி நீங்கள் கேள்விப்படாததா? உங்களிலே சில முதியவர்கள், ஏதோ குடிபோதையில் தாங்கள் செய்த தவற்றுக்காக வருத்தப்படுவதைப் போலத் தமது மகிழ்ச்சியை நினைவுகூர்கின்றனர். வருந்துதலோ, உள்ளத்தினை மூடியுள்ள மேக மூட்டத்தினை ஒத்ததே அல்லாமல் அதனுடைய தூய தன்மையன்று. அவர்கள் தாங்கள் அடைந்த மகிழ்ச்சியை நன்றியுணர்வோடு வேனிற்காலத்திலே செய்த அறுவடையை நினைப்பதைப் போல நினைக்க வேண்டும். ஆயினும் அவர்கள் தாமடைந்த மகிழ்ச்சிக்காக இரங்குவதால், உளத்துக்கு ஆறுதல் கிடைக்குமானால் அங்ஙனமே ஆறுதல் அடையட்டும். உங்களிலே சிலர் மகிழ்ச்சியைத் தேடுவதற்குரிய இளமையையும், நினைவு கூர்தற்குரிய முதுமையையும் வாய்த்தவர்கள் அல்லர். தேடுதலும் நினைவுகூர்தலும் ஆகிய தம் அச்சத்தினாலேயே, அவர்கள் எல்லா மகிழ்ச்சிகளையும் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். இல்லையேல் அவர்கள் தங்களது உயிராற்றலை (ஆத்மசக்தி) அலட்சியப்படுத்தியோ, அதற்கு ஊறு செய்தோ - விடுவார்கள். ஆனால், அவர்களின் அப்படிப்பட்ட ஒதுக்கிவிடும் தன்மையும் அவர்களது மகிழ்வேயாம். இதைப் போலவே தங்கள் நடுங்குங்கைகளால் கிழங்கைத் தோண்டி எடுக்க முயலும் நேரத்திலும், அவர்கள் புதையலைக் கண்டெடுக்கின்றனர். உயிராற்றலை ஊறு செய்ய யாரால் முடியும்? இரவிலே இன்னிசை பாடும் பறவையால் இரவின் அமைதியைக் கெடுக்கவோ, மின்மினியால் விண்மீன்களை ஊறு செய்யவே முடியுமா? உங்கள் தீச்சட்டியின் புகையும் தீயும் காற்றைக் கனமாக்கி விட முடியுமா? உங்களது கைத்தடியால் கலக்கிவிடத்தக்க, அமைதியான சிறிய குளம் போன்றது தான் உயிராற்றலென நீங்கள் நினைக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைப் பல நேரங்களில் தியாகம் செய்வதன் மூலமாக, அந்த மகிழ்வுக்கான விருப்பத்தை உங்கள் ஓய்வு நேரத்துக்கெனச் சேமித்து வைக்கின்றீர்கள். இன்றைக்கு விலக்கிய அல்லது விலகிய ஒன்று நாளைக்கு நமக்காகக் காத்திருக்கின்றதென்பதை அறியாதவர் யார்? தன்னுடைய வாரிசையும் தனக்குரிய தேவையையும் உங்களுடைய உடல் உணர்ந்தே உள்ளது. அஃது ஏமாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் உடலே உங்கள் ஆத்மாவின் வீணை . அந்த வீணையிலிருந்து இனிய இசையையோ அபஸ்வரங்களையோ மீட்டுவது உங்களிடத்திலே தான் உள்ளது. இப்போது உங்கள் இதயத்தை நீங்கள் பார்த்து, நாம் எப்படித் தான் மகிழ்விலே நன்மையையும் தீமையையும் வேறுபடுத்திக் காணமுடியும் எனக் கேட்கின்றீர்கள். வயற்புறத்திற்கும் பூங்காவுக்கும் செல்லுங்கள். அங்கே மலர்ந்துள்ள மலர்களிலிருந்து தேனைச் சேகரிப்பதால் தேனீ மகிழ்ச்சியடைகின்றதென்பதை அறிவீர்கள். ஆனால், அந்தத் தேனீக்குத் தன் தேனைத் தருவது கூட, மலருக்கு மகிழ்ச்சியே ஆகும். ஏனெனில், தேனீக்கு மலர் என்பது வாழ்க்கையின் ஊற்று. மலருக்கோ தேனீ ஒரு காதல் தூதுவன். மலர், தேனீ இரண்டுக்குமே, கொடுப்பதும் பெறுவதும் இன்றியமையாத தேவையும் இன்பத்தின் உச்ச நிலையும் ஆகும். ஆர்பலீஸ் நாட்டு மக்களே, உங்கள் இன்ப நிலையிலே - மகிழ்ச்சியிலே, மலரைப் போலவும் தேனீயைப் போலவும் திகழ்ந்து வாழுங்கள்.                           25. அழகு   அதன்பின் ஒரு கவிஞன் அவரைப் பார்த்து, 'ஐய! அழகைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்' என்றான். அவர் சொல்லத் தொடங்கினார்: அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா? அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்? வருத்தப்படுவோரும் துன்பப்படுவோரும், அழகு என்னும் நங்கை, பரிவும் கனிவும் உடையவள்; தனக்கே உரிய பெருமிதத்தினால் நாணத்தோடு நடைபயிலும் கன்னித் தாயைப் போல், அந்த அழகு நம்மிடையே நடை பயில்கிறாள் என்கின்றனர். ஆர்வம் மிக்கவர்களோ அப்படியன்று. அழகென்பது வன்மையும் அச்சமும் நிறைந்தது. புயலைப் போல, அது நம் காலடியில் உள்ள பூமியையும் மேலுள்ள விண்ணையும் அசைத்து ஆட்டிவிடுகின்றது என்கின்றனர். களைப்புற்றவர்களும் சலிப்படைந்தவர்களும், அழகென்பது நம் காதின் அருகிலே கிசுகிசுக்கும், மென்மையாக ரகசியமாகப் பேசும் தன்மை வாய்ந்தது. நம்முடைய ஆத்மாவிலேதான் அது உரையாகும் என்றும், சிறிய சுடர் இருளுக்கஞ்சி நடுங்குவதைப்போல, நம்முடைய அமைதியிலே அதனுடைய குரல் வளைந்து கொடுக்கின்றது என்றும் கூறுகின்றனர். ஆனால், அமைதியற்றவர்கள் அந்த அழகு மலையினிடையே உறுமுவதை நாம் கேட்டிருக்கிறோம் என்றும், அவ்வழகினது ஒலியிலிருந்தே விலங்கினத்தின் குளம் பொலியும், பறவைச் சிறகின் படபடப்பும், சிங்கத்தின் முழக்கமும் உண்டாகின்றன என்றும் உணர்கின்றனர், நகரத்தை இரவிலே காவல் காக்கும் காவலன் , அழகு என்பது கீழ்த்திசையிலே வைகறையோடு தான் தோன்றுகிறது என்கிறான். உச்சி வேளையிலே உழவர்களும் வழிப்போக்கர்களும், நாங்கள், அவ்வழகு மாலை நேரத்தின் பலகணியிலே சாய்ந்து, நிலத்தை நோக்குவதைக் கண்டிருக்கிறோம் என்கின்றனர். வீதியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டியைக் கூட்டித் தள்ளும் பணியாளனோ அழகென்பது. மலைமுகட்டின் மீதிருந்து தாவிக் குதித்து வசந்தத்தோடு தான் வரும் என்கிறான். கோடையிலே அறுவடை செய்யும் உழவர்கள் அழகென்னும் நங்கை, சரத்காலத்திலே, தன் கூந்தலில் பனித்துளிகள் சொட்டச் சொட்ட இலைகளுடே நடனமாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம் என்கின்றனர். அழகைப் பற்றி நீங்கள் இப்படி எல்லாம் பேசி இருக்கிறீர்கள். ஆனால், உண்மையிலே நீங்கள் அழகைப் பற்றிப் பேசவே இல்லை. உங்களுடைய நிறைவேற்றப்படாத தேவைகளைப் பற்றியே தான் நீங்கள் பேசியுள்ளீர்கள். அழகென்பது ஒரு தேவையன்று; மகிழ்ச்சியின் உச்சம். அஃது ஒரு நீர்வேட்கை கொண்ட வறண்ட நாவோ, இரப்பதற்கென நீட்டும் வெறுங்கையோ அன்று. உண்மையிலேயே அது ஒரு கொழுந்து விட்டெரியும் இதயமும், மந்திரத்தால் கட்டுண்ட உயிராற்றலுமாம். அது நீங்கள் பார்க்கின்ற உருவமுமன்று; கேட்கின்ற இன்னிசையுமன்று. ஆனால், அழகென்பது நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டிருப்பினும் காணும் உருவமாகவும், உங்கள் காதுகளை அடைத்துக் கொண்டிருப்பினும் கேட்கின்ற இன்னிசையாகவும் விளங்குவதாகும். அது பிழியப்பட்ட மரப்பட்டையின் சாற்றிலே வடித்தெடுக்கும் பானமன்று; அதல்லாமல் கூர் அலகோடு இணைக்கப்பட்டுள்ள சிறகுகளுமன்று. உண்மையிலேயே அஃது எக்காலமும் மலர்ந்துள்ள பூங்காவும் எக்காலமும் பறந்து திரிகின்ற தேவதூதர்களின் கூட்டமும் ஆகும். ஆர்பலீஸ் நகர மக்களே, வாழ்க்கை தனது புனிதமான முகத்திரையை விலக்கும் போது, வாழ்க்கையே அழகு வாய்ந்தது. ஆனால் நீங்களே வாழ்க்கை. நீங்களே அதன் முகத்திரை . அழகோ தோற்றமும் முடிவுமற்றது. அது தன்னைத் தானே ஒரு கண்ணாடியில் காண வல்லது. ஆனால், நீங்களே தோற்றமும் இறுதியும் அற்றவர்களாயும் நீங்களே கண்ணாடியாகவும் இருக்கின்றீர்கள்.                                           26. சமயம்   பின்னர் ஒரு வயது முதிர்ந்த பூசாரி அவரை நோக்கி, 'எங்களுக்குச் சமயத்தைப்பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் கூறினார்: நான் உங்களிடையே இன்று, வேறு எதைப்பற்றியாவது பேசினேனா? சமயம் என்பது எல்லாச் செயல்களும் எல்லாச் சிந்தனைகளுமேயன்றோ? அதுதான் செயல்களும் சிந்தனைகளும் இல்லையாயினும், கைகள் கல்லைச் செதுக்கும் போதோ, தறியைச் செப்பனிடும் போதோ, மக்கள் ஆத்மாவிலிருந்து திடீரென உதயமாகும் வியப்பும் உணர்வுமே அன்றோ? யாரால் தன்னுடைய செயல்களில் இருந்து தன் விசுவாசத்தைத் துண்டித்துக் கொள்ள முடியும்? அல்லது தன் தொழிலில் இருந்து தன் நம்பிக்கையைப் பிரிக்க முடியும்? யார் தன்னுடைய காலத்தைத் தனக்கு முன்னால் பரப்பி, இது கடவுளுக்காக, இஃது எனக்காக என்றும், இஃது என் ஆத்மாவுக்கு, இஃது என் உடலுக்கு என்றும் கூற முடியும்? எல்லா நாழிகைகளும் ஓர் ஆத்மாவிலிருந்து மற்றோர் ஆத்மாவுக்குச் சிறகடித்துப் பறப்பனவே. யார் தம்முடைய ஒழுக்கமே, தனக்குச் சிறந்த ஆடை எனக் கொள்கின்றனரோ அவருக்கு வேறு ஆடையே தேவை இல்லை . புயலும் ஞாயிற்றின் வெப்பமும் அவர் உடலைத் துளைத் தெடுக்க முடியாது. எவன் தன்னுடைய நடத்தைகளுக்கு நீதி நூல்களை ஆதாரம் காட்டுகிறானோ, அவன் தன்னுடைய பண்ணிசைக்கும் குயிலைக் கூட்டில் அடைத்தவன் ஆவான். சுதந்தரமான கீதம் இரும்புக் கதவுகளுக்குள்ளிருந்து கிளம்புவதில்லை . யாருக்கு வழிபாடு என்பது திறந்து மூடக்கூடிய ஒரு பலகணியாக விளங்குகின்றதோ, அவர் விடியற்காலம் முதல் அடுத்த விடியற்காலம் வரையிலும் உள்ள காலமெல்லாம், வழிபாடு செய்யும் பலகணியாக விளங்கும் தன் ஆத்மாவின் வீட்டைக் கண்டவர் அல்லர். உங்களுடயை அன்றாட வாழ்வே உங்கள் கோயிலும் சமயமுமாகும். நீங்கள் அதில் நுழையும்போதெல்லாம் உங்களிடமுள்ள அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள். கலப்பை, உலைக்களம், சம்மட்டி, வீணை முதலிய யாவற்றையும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், இவையெல்லாம் உங்கள் தேவைக்கும் மகிழ்ச்சிக்குமாக நீங்கள் அமைத்துக் கொண்டவையே. ஏனெனில், உங்கள் கற்பனையினால், நீங்கள் உங்கள் சாதனைகளைக் காட்டிலும் உயரவோ, உங்கள் தோல்விகளைக் காட்டிலும் கீழாகத் தாழவோ மாட்டீர்கள். மற்றும் நீங்கள் எல்லாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில், வெறும் வழிபாட்டின் மூலமாக, அவர்களது நம்பிக்கையைக் காட்டிலும் நீங்கள் உயரப் பறக்கவோ, அவர்கள் தம் நம்பிக்கை இழந்த பரிதாப நிலையைக் காட்டிலும் உங்கள் பணிவினால் நீங்கள் தாழவோ முடியாது. நீங்கள் இறைவனை அறியக் கூடுமானால், வாழ்க்கைச் சூத்திரங்களுக்குப் பேருரை செய்யாதீர்கள். அதைவிட உங்களைச் சுற்றி நோக்குங்கள். இறைவன் உங்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். வெட்டவெளியைக் காணுங்கள். இறைவன் முகில் மீது நடந்து சென்று, மின்னலெனத் தன் கைகளை நீட்டி மழையூடே கீழிறங்குவதைக் காண்பீர்கள். அவன் மலர்களிலே முறுவலித்தது. பின் மேலுறு மரக்கிளைகளிலே தன் கைகளை நீட்டி உங்களை அழைப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.                                                             27. மரணம்   ஆல்மித்ரா பின்னர் அவரை நோக்கி, 'நாங்கள் இப்போது மரணத்தைப்பற்றி விளக்கங் கேட்கிறோம்' என, அவர் சொல்வார்: மரணத்தின் இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும். ஆனால், வாழ்க்கையின் இதயத்திலே தேடினால் அன்றி, நீங்கள் அதை எவ்வண்ணம் காண இயலும்? இரவில் மட்டுமே காணக் கண் படைத்திட்ட ஆந்தை, பகலில் காண இயலாததால் ஒளியின் தத்துவத்தை அஃது அறிய முடியாது. உண்மையாகவே மரணத்தின் ஆற்றலை நீங்கள் காண விரும்பினால் உங்கள் வாழ்வின் பரு உடலைக் காண, இதயத்தை நன்கு திறந்து விடுங்கள். ஏனெனில், வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போல் ஒன்றேயாகும். உங்கள் நம்பிக்கை, ஆசை இவற்றின் ஆழத்திலே எட்டாத் தொலைவின் மெளன அறிவு தங்கியுள்ளது. பனிப்படலத்தின் கீழே நிலத்தின் அடியில் புதைந்துள்ள ஒரு விதை கனவு காண்பதைப் போல, உங்கள் இதயம் வசந்தத்தைப் பற்றிக் கனவு காண்கிறது. கனவுகளை நம்புங்கள். ஏனெனில், அவற்றிலே தான் மோட்சத்தின் வாயில் அமைந்திருக்கிறது. மரணத்துக்கு நீங்கள் அஞ்சி நடுங்குதல் கெளரவத்தின் அடையாளமாகத் தன் தலைமீது கைவைக்கக் கையை நீட்டும் அரசன் முன்னர் நிற்கும் ஓர் ஆட்டிடையன் நடுங்குகின்ற நடுக்கத்தைப் போன்றதே ஆகும். ஆட்டிடையனுக்குத் தன் நடுக்கத்தின் அடித்தளத்திலே தான் அரசனின் கௌரவத்தைப் பெறப் போகிறோம் எனும் மகிழ்ச்சியும் உள்ளதன்றோ ? மாறாக, அதைக் காட்டிலும் அவன் தன்னுடைய நடுக்கத்தைப்பற்றிய உணர்வும் அதிகமாகப் பெற்றிருக்கிறான் அல்லனோ? இறந்து விடுதல் என்பது என்ன? பனிக்கட்டியைப் போலப் புயலிலே நின்று, கதிரவனால் உருகிப் போவதைப் போலன்றி மற்றென்ன? மூச்சுவிடுவதை (உயிர்ப்பை ) அதனுடைய ஓய்வற்ற அலைகளில் இருந்து விடுதலையளித்து, அதன் மூலமாக, அந்த மூச்சு உயர்ந்து வியாபித்துத் தளையற்ற கடவுளைத் தேடுவதைத் தவிர, மூச்சு நின்றுவிட்டது என்பதற்குப் பொருள் என்ன? அமைதி என்னும் ஆற்று நீரைப் பருகினால் தான் உங்களால் நிச்சயமாகப் பாடமுடியும். மலை உச்சியை நீங்கள் அடைந்த பின்னர் தான் உங்களால் இன்னும் மேலே உயர முடியும். நிலம் எப்போது உங்கள் உறுப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறதோ அப்போது தான் உங்களால் உண்மையில் களிக்கூத்தாட முடியும்.             28. இறுதி   அப்போது மாலைக்காலம் ஆயிற்று. ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள். அதற்கு அவர் பேசியவன் நானா? கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார். பின்னர் அவர் கோயிலின் படிக்கட்டுகளை விட்டுக் கீழிறங்கிச் சென்றார். எல்லா மக்களும் அவரைப் பின்தொடர, அவர் கப்பலைச் சென்று அடைந்து, அதன் மேல் தட்டில் ஏறி நின்றார். ஆங்கு நின்று அவர் மக்களை நோக்கித் தம் குரலை உயர்த்திக் கூறத் தொடங்கினார். ஆர்பலீஸ் நகர மக்களே, உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் காற்று என்னைப் பணிக்கிறது. காற்றைக் காட்டிலும் நான் விரைவு குறைந்தவனே. ஆயினும் நான் போகத் தான் வேண்டும். நாங்கள் துறவிகள், நாடோடிகள்; எப்போதும் தனித்த நெறியைத் தேடுபவர்கள்; எங்கும் ஒரு நாளைக் கழித்த இடத்திலே மறுநாளைத் தொடங்காதவர்கள். மற்றும் உதிக்கின்ற ஞாயிறு. மறைந்த மாலைக் கால ஞாயிறு விட்ட இடத்திலே எங்களைக் காண்பதில்லை. நிலம் உறக்கத்தில் உள்ள நேரத்திலும் நாங்கள் சஞ்சரிக்கிறோம். நாங்கள் பிடுங்கிப் போடுதற்கியலாத உறுதியான செடிகளின் விதையை ஒத்தவர்கள். எங்களுடைய இதயத்தின் முழுமையான பழுத்த நிலையிலே தான், நாங்கள் புயலால் உந்தப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறோம். உங்களுடன் கழித்த என் நாள்களோ, மிகச் சில. மற்றும் என் மொழிகளோ அவற்றினும் மிகச் சுருக்கமானவை. ஆனால், என் மொழிகள் உங்கள் காதுகளில் இருந்து தேய்ந்து மறைந்தாலோ, என்னுடைய அன்பு உங்கள் நினைவில் இருந்து நீங்கிவிட்டாலோ நான் திரும்பவும் வருவேன். நன்கு செழித்த இதயத்தோடும், உங்கள் ஆத்மாவுக்கு மிக்க பயன் விளைவிக்கும் உதடுகளோடும் நான் மீண்டும் வந்து உரையாடுவேன். ஆம்! நான் பருவத்தோடே வருவேன். என்னை மரணம் மறைத்து விடினும், மகத்தான மோனம் என்னை ஆட்கொண்ட போதிலும் நான் உங்களது அறிவாற்றலைத் தேடிடுவேன் . ஆனால், நான் ஒரு பயனுமில்லாமல் உங்களைத் தேடமாட்டேன். நான் பேசியதில் ஏதாவது உண்மை உள்ளதானால், என் சொற்கள் உங்கள் சிந்தனையோடு உறவாடியதைக் காட்டிலும், நான் கூறியதில் உள்ள அந்த உண்மையே தன்னைத் தானே தெளிந்த குரலால் வெளிப்படுத்தும். ஆர்பலீஸ் நாட்டு மக்களே, நான் காற்றோடே பயணம் செய்கிறேன். ஆனால், வெறும் சூனியத்துக்குள் அல்லேன். இன்றைய நாள், உங்களுடைய தேவைகளையும் என்னுடைய அன்பையும் நிறைவு செய்யும் நாளாக அமையாமல் போகுமானால், அடுத்த நாளுக்குரிய வாக்குறுதியாகவாவது இஃது இருக்கட்டும்.   மனிதனின் தேவைகள் மாறுதல் அடைவன. ஆனால் அவனுடைய அன்பும், அவ்வன்பு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையும் மாற்றம் அடையாதவையே. ஆகையால், மிகப் பெரிய மோன சாம்ராஜ்யத்தினின்று நான் திரும்பி வருவேன் என்பதை உணர்வீர்களாக! அதிகாலையில் வயல்வெளியிலே பனிநீரைப் புல் நுனிமேல் எச்சமாக்கி மறைந்துவிடும் மூடுபனி மேல் எழும்பிக் கார்முகிலோடு கலந்து பின்னிப் பின்னர் மழையாகத் திரும்பி வரும். நான் அந்த மூடுபனியைப் போல இல்லாமலில்லை. இரவின் அமைதியிலே நான் உங்கள் வீதிகளிலே உலாவினேன். என்னுடைய ஆத்மாவோ (உயிராற்றலோ) உங்கள் இல்லங்களின் உள்ளே நுழைந்திருக்கின்றது. உங்கள் இதயத்துடிப்போ என் இதயத்திலே இருந்தது. உங்கள் மூச்சுக் காற்று. என் முகத்திலே வீசிற்று. உங்கள் அனைவரையும் நான் அறிவேன். ஆம். உங்கள் இன்பங்கள் துன்பங்கள் அனைத்தையும் நான் அறிவேன். உறக்கத்திலே நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் என் கனவுகளே. பல நேரங்களில், உங்களிடையே நான் குன்றுகளிடையே அமைந்த ஏரியைப் போல இருந்திருக்கிறேன். உங்கள் உள்ளத்தினது உயர்ச்சியையும், வளைந்த சரிவுகளையும், எண்ணத் திரள்களின் ஓட்டத்தையும், உங்கள் அவாக்களையும் கூட நான் பிரதிபலித்திருக்கிறேன். என்னுடைய அமைதியிலே உங்கள் குழந்தைகளின் சிரிப்பொலி அருவியாகவும், உங்கள் இளைஞர்களின் ஏக்கங்கள் ஆறாகவும் வந்தன. அவை என்னுள்ளே ஆழ்ந்து சென்ற பின்னரும் கூட, அந்த அருவிகளும் ஆறுகளும் தம் பண்ணிசைத்தலை இன்னும் நிறுத்தவில்லை . ஆனால், சிரிப்பைக் காட்டிலும் இனிமையானதும், ஏக்கத்தைக் காட்டிலும் மகத்தானதுமான ஒன்று என்னிடம் வந்தடைந்துள்ளது. உங்களிடையே வரம்பு அற்றிருக்கும் ஒன்றே அது. பரம்பொருளாகிய பேருருவத்தின் பரமாணுவும் தசைநார்களுமன்றி நீங்கள் வேறல்லர். நீங்கள் பாடுகின்ற இசைகள் யாவும் யாருடைய நாத வெள்ளத்திலே வெறும் ஒலியற்ற துடிப்பாக இருக்கின்றதோ? அந்த அகண்டாகார உருவிலே நீங்கள் வியாபித்துள்ளீர்கள். அவனைக் காண்பதன் மூலம் உங்களை நான் கண்டேன்; அன்புகூர்ந்தேன். அந்தப் பரந்த வெளியிலே இல்லாத எந்தத் தூரத்தைத் தான் அன்பு சென்று அடைய முடியும்? எந்தத் தோற்றமும் எந்த எதிர்பார்த்தாலும் எந்த அனுமானமும் அந்த அன்பின் வேகத்தைத் தாண்டிப் போக இயலாது. பருத்த மரத்திலே ஆப்பிள் பழங்கள் பழுத்துக் குலுங்கியதைப் போலவே, உங்கள் உள்ளேயே அந்த விசுவரூப மானுடம் உள்ளது. அவனுடைய வல்லமை உங்களை நிலத்திலே பிணிக்க, அவனுடைய மணம் உங்களைப் பரவெளியிலே உயர்த்த, அவன் தன் சிரஞ்சீவித் தன்மையினால் நீங்கள் இறவாமையை அடைந்துள்ளீர்கள். சங்கிலியிலே உள்ள மிகப் பலவீனமான கரணையைப் போல நீங்கள் பலவீனமானவர்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதிலே பாதி தான் உண்மை . சங்கிலியிலே உள்ள மிக வலிவான கரணையைப் போலவும் நீங்கள் வலிவு மிக்கவர்களே. உங்களது அற்பச் செயல்களை மட்டுமே கொண்டு உங்களை அளந்தறிவது, பெரிய கடலின் சக்தியை அதன் நுரையின் நோய்மையால் அளந்தறிவதைப் போலவே ஆகும். உங்களது தோல்விகளைக் கொண்டு உங்களை அளந்தறிவது, பருவகாலங்களை அதன் நிலையற்ற தன்மையைக் கொண்டு குற்றஞ்சாட்டுவதையே நிகர்க்கும். ஆம்! நீங்கள் ஒரு பெரிய கடலைப் போன்றவர்களே . உங்களது கரை ஓரங்களிலே பெரிய கப்பல்கள் அலைகளை எதிர்நோக்கி நிற்கின்றன. நீங்களோ அந்தக் கடலைப் போலவே உங்கள் அலைகளை விரைவுபடுத்த இயலாது. பருவகாலங்களைப் போன்றவர்களே நீங்களும். உங்களது மாரிக்காலப் பருவம் உங்களுக்கு வசந்த காலத்தை மறுதலித்தாலும், உங்களுள்ளே ஓய்வு கொண்டுள்ள வசந்தம் தன் தூக்கக் கலக்கத்திலே புன்னகை பூக்குமே அல்லாமல் அதனால் துன்பம் அடையாது. இவற்றை நான், நீங்கள் ஒருவருக்கொருவர், 'இவர் நம்மைப்பற்றிப் புகழ்ந்து பேசினார். நம்மிடையே உள்ள நல்லனவற்றையே இவர் கண்டார் எனப் பேசிக் கொள்வதற்காகக் கூறினேன்' என நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் எண்ணத்திலே நன்கு அறிந்தவற்றையே நான் உங்களுக்கு வார்த்தைகளால் உரைத்தேன். சொல்லறிவு என்பது வார்த்தைகளற்ற எண்ணத்தின் அறிவுச் சாயலன்றி வேறென்ன? உங்கள் நினைவும் என் சொல்லும், நம்முடைய நேற்றைய தினத்தின் ஏடுகளில் இருந்தும், இந்த நிலம் நம்மையோ தன்னையோ அறியாத பண்டைக் கால நாள்களிலிருந்தும், குழப்பத்துடனே இந்தப் பூமி தன்னை மேலுயர்த்தப் பணியாற்றிய இரவுகளில் இருந்தும், மூடி வைக்கப்பட்ட நினைவலைகள் அல்லவோ? ஞானிகள் உங்களிடம் தங்களுடைய ஞானத்தை நல்குவதற்கு வருவார்கள். ஆனால், நானோ அதை நீக்குவதற்கு வந்தேன் . ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எஃது என்பதை நான் அறிந்துள்ளேன் என்பதைக் காணுங்கள். அதுதான் உங்களுள்ளே, தன்னைக் காட்டிலும் அதிகமாகச் சுரந்து சேகரிக்கின்ற உயிராற்றலின் ஒளிப்பிழம்பு ஆகும். அக்காலத்தில் அதனுடைய விரிவைப் பற்றிய சிந்தனை யற்றவர்களாய், நீங்கள் உங்கள் நாள்கள் கழிவதைப்பற்றித் துக்கப்பட்டிருந்தீர்கள். இது சவக்குழிக்கு அஞ்சும் உடல் வாழ்க்கையைத் தேடும் உயிர் வாழ்வாகும். இங்குச் சவக்குழிகள் இல்லை. இந்தக் குன்றுகளும் சமவெளிகளும் நமக்குத் தொட்டிலும் படிக்கட்டுகளுமாகும். உங்களுடைய முன்னோர்களைப் புதைத்த சமாதியின் பக்கத்திலே உள்ள வயற்புறத்தே நீங்கள் போக நேர்ந்தால், அவ்விடத்தை நீங்கள் உற்றுநோக்குவீர்களானால் அந்த இடத்திலே நீங்களும் உங்கள் சந்ததியினரும் கைகோத்து நடனமாடுவதைக் காண்பீர்கள். உண்மையாகவே அடிக்கடி நீங்கள் தன்னுணர்வின்றியே ஆனந்தப்படுகின்றீர்கள்.   மற்றும் சிலர் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள், உங்கள் மதத்தின் பேரால் செய்த பொன்னான வாக்குறுதிகளுக்காக அவர்களுக்குப் பொன்னும் அதிகாரமும் அந்தஸ்தும் அளித்தீர்கள். வாக்குறுதியைக் காட்டிலும் குறைந்த ஒன்றே நான் உங்களுக்குக் கொடுத்தேன். ஆனால், நீங்கள் என்னிடம் அதிகத் தாராள மனப்பாங்கோடு நடந்து கொண்டீர்கள். வாழ்வைப் பற்றிய என் ஆழ்ந்த நீர் வேட்கையை நீங்கள் எனக்கு அளித்தீர்கள் . என்னுடைய எல்லாக் குறிக்கோளும் நீர் வேட்கையால் உலர்ந்த உதடுகளாகவும், வாழ்க்கை முழுமையுமே வற்றாத நீர் ஊற்றாகவும் மாறி வடிவம் அடைந்த இதனைக் காட்டிலும் நான் பெறத்தக்க பெரிய பரிசு வேறொன்றும் நிச்சயமாக இல்லை. இதிலே தான் என்னுடைய மேன்மையும் வெகுமதியும் மண்டிக் கிடக்கின்றன. நான் எப்பொழுதெல்லாம் நீர் ஊற்றுக்குத் தாகத்துடன் நீர் அருந்த வருகின்றேனோ, அப்போதெல்லாம் அந்த உயிர்ப்புள்ள (ஜீவனுள்ள) தண்ணீர் கூட, தாகம் மிகுந்துள்ளதாகவே இருக்கக் காண்கிறேன். நான் அதைக் குடிக்கும்போது அந்தத் தண்ணீரும் என்னையே குடிக்கின்றது. நான் உங்களிடம் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதிலே நாணம் அடைந்தோ, பெருமை மிகுந்தோ இருந்ததாக உங்களில் சிலர் கருதினீர்கள். என் ஊதியத்தைப் பெறுவதில் மட்டுமே நான் மிகவும் வெட்கப்பட்டிருக்கிறேன்; ஆனால், வெகுமதியைப் பெறுவதில் அன்று. நீங்கள் என்னை உங்கள் பந்தி போஜனத்தின் இடையில் அமர்த்தச் சித்தமாய் இருந்த காலத்தில் எல்லாம் நான் குன்று களிடையே பழங்களைத் தின்று கொண்டிருந்தேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியோடு தங்க இடம் அளிக்கக் காத்திருந்த காலத்தெல்லாம் நான் கோயில் பிராகாரத்திலே தூங்கினேன். ஆனபோதிலும், என்னுடைய பகல்களையும் இரவுகளையும் பற்றி நீங்கள் அன்போடு நினைவு கூராதிருந்ததால் தான். பகலிலே நான் உண்ட அவ்வுணவு இனித்தது. இரவு நேரத்திலே, என் தூக்கம் இனிய கனவுகளால் சூழப்பட்டிருந்த்து. இதற்காக நான் உங்களை மிகவும் வாழ்த்துகிறேன். நீங்கள் அதிகமாகவே கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எதையும் கொடுத்ததாகவே அறியவில்லை. உண்மையாகவே, கண்ணாடியில் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கும் கருணையும் கல்லாக மாறிவிடுகிறது. தன்னை மிக்க அன்போடு பலசொல்லிப் புகழும் நற்செயலும், சாபத்தின் தாயாக மாறிவிடுகிறது. என்னைத் தனித்தவன் என்றும், தன் தனிமையிலே மூழ்கிக் கிடப்பவன் என்றும் உங்களில் சிலர் கூறினீர்கள். நீங்களோ, அவர் கானகத்தின் மரங்களிடையேயன்றி, மனிதரிடையே தம் ஆலோசனை மன்றத்தினை நடத்தமாட்டார் எனக் குறிப்பிட்டீர்கள். மற்றும், குன்றின் உச்சியிலே தனித்தமர்ந்து அவர் நமது நகரத்தைக் கீழ்நோக்கிக் காணுகிறார் என்றீர்கள். உண்மை. நான் குன்றின் உச்சிக்கும் போனேன். மனித நட மாட்டமில்லாத இடங்களிலெல்லாம் நடந்து சென்றேன். மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் மிகமிகத் தொலைவில் இருந்துமல்லாமல் எப்படி உங்களை நான் காண முடியும்? சேய்மைக்கண்ணி இருந்தாலல்லாமல் எப்படி ஒருவன் அண்மையில் இருக்க முடியும். மற்றும் உங்களுள் சிலர் என்னை நோக்கிக் கூறாமல் கூறினார்கள். புதியவரே, அன்னியரே, எட்டமுடியாத உயரத்தை விரும்புகின்றவரே, நீங்கள் ஏன் கழுகுகள் கூடு கட்டுகின்ற மலைமுகட்டை இருப்பிடமாகக் கொண்டீர்கள்? பெற முடியாததை நீங்கள் ஏன் தேடுகின்றீர்கள்? உங்கள் வலையிலே எப்படிப்பட்ட புயலை நீங்கள் சிறைப் படுத்துவீர்கள்? விண்வெளியிலே எந்த நுண்ணிய புள்ளினத்தை நீங்கள் வேட்டையாடுவீர்கள்? இவ்விடம் வந்து எங்களிலே ஒருவராகக் கலந்திருங்கள். கீழ் இறங்கி வந்து எங்கள் உணவினால் உங்கள் பசியையும், எங்கள் கொடிமுந்திரிச் சாற்றால் உங்கள் தாகத்தையும் தணித்துக் கொள்ளுங்கள். இவ்வண்ணமாகத் தத்தம் ஆத்மாவின் ஏகாந்தத்திலே சிலர் கூறினார்கள். அவர்களது அந்தத் தனிமை மிகவும் ஆழமாகச் சென்றிருந்தால், நான் உங்களுடைய இன்ப துன்பத்துக்கான காரணத்தையே தேடினேன் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். விண்ணிலே உலாவுகின்ற உங்கள் மகத்தான ஆத்மாவையே நான் வேட்டையாடினேன். ஆனால், வேட்டையாடுபவனே வேட்டையாடப்படுகிறான். ஏனெனில், என் வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்புகளில் பல, திரும்பவும் என் நெஞ்சத்தை ஊடுருவித் தேடவே என் வில்லில் இருந்து வெளிப்போந்தன. பறப்பனவே ஊர்வனவாகவும் உள்ளன. ஏனெனில், மேலே பறக்கும் போது கதிரவன் ஒளியால் கீழ் விழுகின்ற என் சிறகுகளின் நிழலே ஊர்ந்து செல்லும் ஆமையாகவும் உள்ளது. நம்புகின்ற நானே சந்தேகப்படுபவனாகவும் இருக்கிறேன். ஏனெனில், பல நேரங்களில் உங்களிடத்தில் அதிக நம்பிக்கை நான் கொள்ளவும், உங்களைப்பற்றிய முழு அறிவையும் நான் அறியவும் என்னுடைய இதயப் புண்ணிலேயே நான் விரலிட்டுக் கிண்டி என் இதயப் புண்ணை மேலும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நம்பிக்கையோடும் இந்த அறிவோடும் நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இந்த உடலால் மூடப்பட்டவர்களோ, வீடுகள் வயல்கள் ஆகிய எல்லைக்கோட்டுக்கு உட்பட்டவர்களோ அல்லர். நீங்கள் என்கின்ற அப்பொருள், மலைமேல் வசித்துக் காற்றிநூடே திரியும். அது கதகதப்புக்காகக் கதிரவன் ஒளியிலே ஊர்கின்ற ஒன்றோ, தற்காப்புக்காக இருளிலே குழிபறிக்கும் ஒன்றோ அன்று. அது. சுதந்தரமான ஓர் ஆற்றல். நில உலகையே தன் கூட்டுக்குள் அடக்கி வெட்ட வெளியிலே சஞ்சரிப்பதாகும் அது. இவை தெளிவற்ற சந்தேகத்துக்கு இடனான சொற்களாக இருப்பின், நீங்கள் இவற்றை விளங்கிக் கொள்ள முயல வேண்டா. சந்தேகமும் குழப்பமும் எல்லாப் பொருள்களுக்கும் தொடக்கமே. ஆனால் அவையே முடிவல்ல. நீங்கள் என்னைத் தொடக்கம் என்றே நினைவுகூர்வீர்கள் என மகிழ்கிறேன். இந்த வாழ்வும் எல்லா உயிர்களும், மூடுபனியால் சூழப்பட்டுள்ளனவேயன்றி, பளிங்குக் கற்களால் மூடப்பட்டன அல்ல. ஆயினும் பளிங்குக் கற்களும், தேய்மானத்தினால் மூடு பனியே என்பதை யார் அறிவார்?   என்னை நீங்கள் நினைவுகூர்தலினல் நான் உங்களை நினைக்க இது உதவும். உங்களுள் மிக்க பலவீனத்தோடும் குழப்பத்தோடும் காணப்படும் ஒன்றே வன்மை மிக்கதும் திடசித்தமுடையதும் ஆகும். உங்களுடைய மூச்சன்றோ உங்கள் எலும்புகளையும் யாக்கையையும் நேர் செய்து உறுதிப்படுத்தியது. உங்களுள் ஒருவரும் கண்டதாக, உங்கள் நினைவில் நிலைத்திராத ஒரு கனவன்றோ , உங்கள் நகரத்தை நிர்மாணித்து, அதில் உள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்தியது. நீங்கள் உங்கள் மூச்சின் அலைகளைக் காணக் கூடுமானால், வேறு எதையும் காணுவதற்கு நீங்கள் இணங்கமாட்டீர்கள். அதைப்போலவே, நீங்கள் கனவின் இரகசிய ஒலியையும் கேட்கக் கூடுமானால், மற்றெந்த ஒலியையும் கேட்க விரும்பமாட்டீர்கள். ஆனால், நீங்கள் அவற்றைக் காண்பதுமில்லை; கேட்பதுமில்லை . அதுவும் நல்லதே! உங்கள் கண்களை மூடிய மேக படலமாகிய திரை, அதைப் பின்னிய கைகளாலேயே விலக்கப்படும். மற்றும் உங்கள் காதுகளை அடைத்துக் கொண்டுள்ள களி மண்ணும் எந்த விரல்களால் அங்கு அடைக்கப்பட்டதோ, அதே விரல்களால் துளைத்தெடுக்கப்படும். அதன் பின்னர் தான் நீங்கள் பார்ப்பீர்கள். பின்னரே நீங்கள் கேட்க முடியும். ஆயினும், நீங்கள் முன்னர்க் குருடாக இருந்ததற்காக வேதனையோ. செவிடாக இருந்தமைக்காக வருத்தமோ பின்னர் அடையமாட்டீர்கள். ஏனெனில் அந்தப் பிற்றை நாளில் தான். நீங்கள் எல்லாப் பொருள்களிலும் பொதிந்துள்ள இரகசியத்தின் காரணத்தை நன்கு அறிவீர்கள். எனவே, அக்காலத்திலே ஒளியை வாழ்த்துவதைப் போலவே இருளையும் வாழ்த்துவீர்கள். இவற்றைக் கூறிய பிறகு அவர் தம்மைச் சுற்றி நோக்கினார். கப்பல் தலைவன் சுக்கான் பக்கத்திலே நின்றபடி பாய் விரிக்கப்பட்ட பாய்மரத்தையும் நெடுந்தொலைவையும் மாறி மாறிப் பார்ப்பதைக் கண்டார். என்னுடைய கப்பல் தலைவர் அமைதிக்கு மேல் அமைதியானவர். காற்றோ வீசுகின்றது. விரிக்கப்பட்ட பாயோ அமைதியற்றதாய்ப் படபடக்கின்றது. மாலுமியோ உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். ஆனால், என் கப்பல் தலைவரோ, என் அமைதிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். பரந்த கடலின் கூட்டு இன்னிசையைக் கேட்ட என் கப்பல் பிரயாணிகளும், என் சொற்களையும் அமைதியோடு கேட்டனர். இனி அவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கமாட்டார்கள். நான் சித்தமாக இருக்கிறேன். வாய்க்கால் கடலை வந்தடைந்துவிட்டது. மற்றும் ஒரு முறை அன்னை பராசக்தி தன் மகனைத் தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள். ஆர்பலீஸ் நாட்டு மக்களே! உங்களுக்கு என் இறுதி வணக்கம். இந்த நாள் முடிவுற்றது.   தண்ணீரில் மலர்ந்துள்ள தாமரை தன்னுடைய மறுநாளைத் தன்னுள் கொண்டு கூம்புவதைப் போல் இந்த நாளும் முடிவடைந்தது. இங்கு நமக்குக் கொடுக்கப்பட்டது எதுவோ, அதை நாம் காப்போம். இது நமக்குப் போதுமானதன்று. குறைவானது என்றால் நாம் மறுபடியும் ஒருங்கே இணைந்து இங்கு வந்து ஒருசேர நம் கைகளைக் கொடுப்போன் முன் நீட்டுவோம். நான் திரும்பவும் உங்கள் முன் வருவேன் என்பதை மறவாதீர்கள். இன்னும் சிறிது நேரமே, என்னுடைய ஏக்கமுற்ற ஆசைகள் புழுதியையும் நுரையையும் மற்றோர் உடலுக்காகச் சேகரித்து விடும். இன்னும் சிறிது காலமே - காற்றின் மீது ஒரு விநாடி ஓய்வே - பின்னர் மற்றொரு தாய் என்னைச் சுமந்து ஈன்றெடுப்பாள். உங்களுக்கும் உங்களோடு கழித்த என் இளமைக்கும் என் இறுதி வணக்கம். போய் வருகிறேன். நேற்றுத் தான் நாம் ஒரு கனவில் சந்தித்தோம். என்னுடைய தனிமையிலே நீங்கள் பண் இசைத்தீர்கள். நானோ உங்கள் ஆசைகளினால் ஆகாயத்தில் கோட்டை கட்டினேன். ஆனால், இப்போது நம்முடைய உறக்கம் மறைந்தோட, கனவு முடிவெய்த, பொழுது விடிந்து வெகு நேரமாகிவிட்டது. உச்சிப் பொழுதின் நெருக்கம் நம்மீது விழ, நம்முடைய பாதி உறக்கம் முழுநாளாக மாறிவிட்டது. நாம் பிரிய வேண்டியதே! நினைவினது விடியற் காலத்திலே, மற்றுமொரு முறை நாம் சந்திக்க நேர்ந்தால், மறுபடியும் நாம் கூடிப் பேசுவோம். நீங்களோ எனக்காக, மிக ஆழ்ந்த பண் இசைப்பீர்கள். நம்முடைய கைகள் மற்றொரு முறை வேறொரு கனவில் சந்திக்குமானால் நாம் இன்னுமொரு கோட்டையை ஆகாயத்தில் கட்டுவோம். இப்படிக் கூறியபடியே, அவர் கப்பல் தலைவனுக்குக் குறிப்புணர்த்த, கப்பல் செலுத்துவோர் நங்கூரத்தைத் தூக்கிக் கப்பல் தளையை நீக்கிச் செலுத்த அவர்கள் அனைவரும் கப்பலூடே கிழக்கே பிரயாணம் செய்தனர். கரையிலிருந்த ஆர்ப்பலிஸ் நகர மக்கள் இடையிலே இருந்து, ஒரே இதயத்தில் இருந்து எழுப்பிய குரலொத்து, ஒரு சோகக் குரல் மேல் எழும்பி, வான் அந்தகாரத்துள் கலந்து, ஒரு பெரிய எக்காள ஒலிபோல் கடல் மீது மிதந்து சென்றது. ஆல்மித்ரா மட்டுமே, கப்பல் மூடுபனியூடே சென்று மறையும் மட்டும் அதைப் பார்த்தபடி மெளனமாக நின்றிருந்தாள். எல்லா மனிதர்களும், அங்கிருந்து நீங்கிச் சென்ற பின்னர் அவள் கடற்கேணியின் சுவர் மீது, அத் தீர்க்கதரிசி கூறியதை தன் உள்ளத்தே ஆழ்ந்து சிந்தித்தபடி நின்றிருந்தாள். இன்னும் சிறிது காலமே, -- காற்றின் மீது  ஒரு விநாடி ஓய்வே --- பின்னர் மற்றொரு தாய் என்னைக் கலந்து பெற்றெடுப்பாள்.       தமிழ்நாட்டு அரசின் சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்பு வெளியீடு : 3 1. சோவியத்துக் கவிஞர் நூற்றுவர் 2. சிவானந்த நடனம் 3. தீர்க்கதரிசி 4. The squirrel in the Court- Yard 5. The Ten Decads (Patirruppattu) 6. Jnanaratham   தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 6 2, ஸ்பர்டாங்க் சாலை சென்னை - 600 031