[] நூற்குறிப்பு தீராக் கனா - நெடுங்கதை தமிழ்     அட்டை  வடிவமைப்பு: Mairiyam, அருண்குமார்  மின்னூல் வடிவமைப்பு: SV அரவிந்தம் மின் பதிப்பு : பிப்ரவரி 2018    இம்மின்னூல்  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.  படிக்கலாம் – பகிரலாம் – அச்செடுக்க, வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதியில்லை      Theera Kana (Long Story)  Thamizh     Cover Design: Mairiyam, Arun Kumar Design: SV Aravindam Electronic Edition: February 2018     This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.   முதலில் சொல்வது... தீராக் கனா கதையை எழுத எனக்கு அடிப்படையான ஒரே விஷயம் பெங்களூரு. பெங்களூருவில் இருந்தபடி பெங்களூருவை மையமாக வைத்து ஒரு கதை எழுத விருப்பம் இருந்தது. அந்த காலகட்டத்தில் எனக்கு கிடைத்த நேரங்களிலெல்லாம் சில சிறுகதைகளையும் வாசிக்கத் துவங்கியிருந்தேன். ஏராளமான சாதாரண சிறுகதைகளையும் சும்மாவேனும் வாசித்து வைத்திருந்தேன்.  முதலில் என் பார்வையிலிருந்து பெங்களூரை எழுதலாம் என்ற எண்ணம். அதில் நானொரு கதாபாத்திரமாய் இருப்பது என முடிவெடுத்தேன். Narration பாணியில் எழுதுவதுதான் அப்போதெல்லாம் எனக்கு விருப்பம். அதில் நானே பாத்திரமாகிக் கொள்வது எளிது! நிறைய கதைகள் யோசித்து, பின் இதை எழுதலாம் என்று எட்டு பக்க அளவில் ஒரு கதை மாதிரி ஒன்றை எழுதி தோழர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் படித்துவிட்டு இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் கூட இப்படி எழுதிவிடுகிறார்கள். நீ இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதிப்பார் என்றார். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது. ஏனென்றால் நான் அதற்கு முன் அம்மாதிரி நிறைய  உண்மை நிகழ்வுகளையே பக்கம் பக்கமாக நிரப்பி எழுதி வைத்திருந்தேன். எவ்வளவு உண்மை எழுதினாலும், கதாபாத்திரப் பெயர்கள் தாண்டி இடங்களின் பெயர்களை முடிந்தமட்டும் மறைத்தே வைத்தேன். அது ஒரு மகிழ்ச்சி. இக்கதையிலும் இடங்களின் பெயர்கள் எதையும் நான் குறிப்பிடவே இல்லை. இக்கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் போலவே எனக்கும் உறக்கமும், தேநீரும் பிடிக்கும் என்பதைத் தாண்டி இக்கதையில் நானறிய உண்மை ஏதுமில்லை. இதே கதையை வேறொரு களத்திலும் எழுதலாம். எனக்கு இதை பெங்களூருவை மையமாக வைத்து எழுதுவதில் ஒரு நிம்மதி. சென்னையிலோ, டெல்லியிலோ, மும்பையிலோ, கொல்கத்தாவிலோ இதே கதையோ, இது போன்றதொரு கதையோ நடப்பது போலவும் யாரேனும் எழுதிப்பார்க்கலாம். அப்படி எழுதி அது நன்றாக அமைந்தால் எனக்கொரு பிரதி அனுப்புங்கள். இக்கதையை எழுதி முடித்த சமயத்தில் இதன் முடிவு இல்லாத பகுதியை முழுமையாகப் படித்து எனக்கு தேவையான திருத்தங்கள் தந்த, தலைப்பு தீரா கனா-வா? தீராக் கனா-வா? என்றதும் அதற்காக இலக்கணக்குறிப்பெல்லாம் புரட்டி ’க்’ வரும் என உறுதியாய் சொன்ன, இப்போது இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துபோய் என் போல சிலரின் நினைவில் வாழும் தோழன் அர்ஜூனை இப்போதும் மனம் கனக்க நினைத்துக் கொள்கிறேன்.    முதலில் நான் யோசித்த கதை வேறொரு கதை. அதை எழுதினால் கண்டிப்பாக இப்படி மின்னூலாக்கும் எண்ணமே வந்திருக்காது. இப்போது யோசித்தால் அப்போது யோசித்ததெல்லாம் கதையே இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் சில காலம் தள்ளி யோசித்தால் இக்கதையைக்  கூட ஒரு நல்ல கதையென்றே எண்ண மாட்டேன் என நம்புகிறேன். அப்படியொரு பக்குவமும், வளர்ச்சியும், அறிவும் எனக்கு வளரும் என்று எப்போதும் நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறேன். நன்றியுடன் தமிழ் https://thamizhg.wordpress.com   அட்டைப்பட மூலம் : மைரியம் எனும் ஜெர்மானிய புகைப்படக்காரர். இந்த அட்டைப்பட மூல உரிமையை அனைவருக்குமான பயன்பாடிற்காக பொதுவில் வைத்திருக்கிறார் நான் முகமறியா, என் பெயரறியா அவருக்கு என் நன்றியும், அன்பும். இப்படத்தை நான் சொன்னதும், சொன்னபடியே உருமாற்றி, கூடுதல் வண்ணங்கள் சேர்த்து எனக்களித்த தோழன் அருண் குமார் -க்கு என் அன்பு. ஒரு நாள் ஒரு கனவு நேற்றைக்கு முடியாத கனவைத் துரத்திக்கொண்டு ஓடினேன். விழிக்கையில்தான் தெரிந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.  தீராக் கனா | நெடுங்கதை #001 அவரை எதற்காக சந்திக்க வந்தேன் என்பதை யோசித்தபடியே வராந்தாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வராந்தாவிற்கு வெளிப்புறம் சிறிய தோட்டம் இருந்தது. பூச்செடிகளும், வெளிர் பச்சை, அடர் பச்சை வண்ண இலைகளும், என்ன நிறமென உறுதியாகத் தோன்றாத நிறத்தில் ஒரு சில பூக்களும், நான் பெயர் அறியாத ஏதோ சில பறக்கும் பூச்சிகளும் அங்கு காணக் கிடைத்தன. நான் ஏன் இங்கு வந்து இப்படி அமர்ந்திருக்கிறேன் என்பதையெல்லாம் அந்த சில நிமிடங்களில் நான் மறந்தே விட்டேன். முதலில் மனதை திடப்படுத்தி, நிலைப்படுத்தி யோசிக்க வேண்டும். எதிலிருந்து துவங்குவது என ஏதாவது பிடிமானம் கிடைக்க வேண்டும்.   அவரிடம் சொன்னால் எனக்கு தீர்வு கிட்டுமா? இல்லையா? என்பதையெல்லாம் இப்போது வரை யோசிக்கவில்லை. அவர் ஒரு மருத்துவர். ஒருவேளை அவரால் எனக்கு தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமல் போகவும் ஒரு வாய்ப்பு உண்டு. எனக்கு உடலில் பிரச்சினை இல்லை. ஒருவேளை மனதில் இருக்கலாம் என்றொரு ஐயம். அதுவும் அத்தனை உறுதியில்லை.  உறுதியே இல்லாமல்தான் அவருடைய வீட்டில், அவருடைய அறையில் காத்திருந்தேன். அவர் வந்து என் முன் அமர்ந்தார். அவருக்கு முகமன் சொன்ன பின், ஒரு விடுமுறை நாளின் காலை நேரத்து தேநீர் கோப்பை ஒன்று ஆவி பறந்தபடி எனக்கு முன் இருந்தது. கொஞ்சம் உறிஞ்சிவிட்டு கீழே வைத்தேன். முழுதும் குடித்துவிட்டு சொல் என கட்டளை வந்தது. நிதானமாக நேரமெடுத்துக் குடித்ததும் பேசத் தொடங்கினேன். டாக்டர்! அதிகபட்சம் கால்மணிநேரம் எடுத்துக்குவேன். நான் கடகடனு எனக்கு மனசில பட்டத இங்க சொல்லிடறேன். அது பிரச்சினைனா அதுக்கு தீர்வு சொல்லுங்க.  அவர் நிதானமாக தலையசைத்தார். நான் அவரிடம் முழுமையாகச் சொல்லிவிட வேண்டுமென விரும்பினேன். ஆகவே மனதில் தோன்றிய ஒரு வார்த்தையையும் விட்டுவிடாமல் விவரித்து சொல்லத் துவங்கினேன். #01 அது ஒரு பெரிய வரவேற்பறை. அதாவது ஒரு பெரிய வரவேற்பறை போல காட்சி தந்தது. அந்த அறை முழுக்க குளுமை நிரம்பியிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று சிறிய அறைகள். மூன்று அறைகளிலும் ஒரே நேரத்தில் மூவருக்கு நேர்காணல்கள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் நேர்காணல் முடிந்து ஒரு அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தார். எனக்கு முன்னிருந்த வரிசையில் அவரின்  எனக்கு முன்னிருக்கும் ஒருவர், அவரிடம் கேட்டார்.  ’உள்ள என்ன கேள்வி கேட்டாங்க?’  ‘ஜேஎஸ்பி சர்வ்லெட் பத்தி கேட்டாங்க.. அப்புறம் ப்ராஜெக்ட்..’ வேறென்னமோ உரையாடல் அவர்களிருவருக்கும் இடையே நடந்தது. ஆனால் எனக்கு அது ஏதும் செவியில் விழவே இல்லை. சட்டென அவர் வெளியேறிவிட்டார். சர்வ்லெட் குறித்து என் நினைவில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என யோசிக்கத் துவங்கினேன். முன்னவர் வெளியேறும் அறைக்குள் நான் நுழையக் கூடாது என்றொரு பயம். அந்த அறைக்குள் இருந்த நேர்காணல் செய்யும் அதிகாரியை நோக்கினேன். வயதானவர். தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். கண்ணாடிக் கதவு. வெளியே ஒலி கேட்கவில்லை. எந்த அறைக்கதவு எப்போது திறக்குமென ஒவ்வொரு நொடியும் வெப்பம் கூட்டியது. யாருடைய பெயரை எப்போது அழைப்பார்கள் என்கிற அச்சம் உள்ளுக்குள் இருந்தது. அங்கு காத்திருந்த ஒவ்வொருவருமே அந்த எண்ணத்தில் இருந்திருக்கலாம். நிலைமை அப்படித்தான் இருந்தது. ’செழியன்…’ என் பெயரேதான். நான் உடனே எழ வேண்டும். எழ வேண்டும் என நினைக்கிறேனே தவிர என்னால் எழ முடியவில்லை.  அதற்குள் என் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்கள். சுற்றி அமர்ந்த பிறரும் என்னையே பார்க்கிறார்கள். என்னால் எழவே முடியவில்லை. கால்கள் இறுகிக்கொள்கின்றன. கண்கள் திறக்க முடியவில்லை. ‘எழுந்திருடா…’ இம்முறை என்னால் தாங்கமுடியாமல் எழுந்தே விட்டேன். அறை குளுமையாகவே இருந்தாலும் இருள் கவிந்து கிடந்தது. உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். அடச்சே.. இது கனவா? அம்மாதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். ‘எழுந்திரிடா செழியா.. எவ்ளோ நேரம் தூங்குவ?’ இன்னொரு முறை கண்களை மூடி சற்று நேரம் கழித்து திறந்தேன். கனவின் எச்சங்கள் கண்களுக்குள் மாறி மாறி எழுந்தன. சட்டென்று அழிந்து விட்டன. நேர்காணல் மட்டும் நினைவிற்குள் நின்றது. ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். கொஞ்சம் தடுமாற்றத்துடன் வீட்டின் வெளிப்புறத்தை வந்தடைந்தேன். நிகழ்காலம் புரிய எப்போதும் கொஞ்சம் நேரமெடுக்கிறது. கனவில் எதிர்காலம் என்பது அற்ப சந்தோஷமாகவே நிகழ்கிறது. கண் விழித்த சில நொடிக்குள் காற்றுடைத்த சோப்புக் குமிழாகி விடுகிறது கனவின் எதிர்காலம். முகம் கழுவி விட்டு, அன்றைய நாளிதழைப் புரட்டினேன். அம்மா தேநீர் கொண்டு வந்து வைத்தார். வீட்டில் எனக்கு மட்டுமே தேநீர் என்பதால் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி அம்மா தினமும் எழுப்புகிறார். எந்தவொரு நாளிலும் உறக்கத்தில் இருப்பவனை அதனின்று எழுப்பி விடுவது ஒரு கஷ்டமான விஷயம்தான். அப்படி ஒருவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவமென்றும் கூட கருத்து உண்டு. ஆனால் அம்மாக்கள் மட்டும் அதில் விதிவிலக்கு. மகனை எப்படி எழுப்புவது என்பதை எல்லா அம்மாக்களும் அறிவர். என்ன ஒன்று, எல்லா அம்மாக்களின் வியூகங்கள்தான் வேறு வேறாக இருக்கும். ஆனால் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ரொம்ப நாள் தள்ளி இன்னைக்கு ஒரு கனவும்மா.. இண்டர்வியூக்கு வெயிட் பண்ணும்போது நீ எழுப்பிட்டம்மா… பகல் கனவு பலிக்கும்ல.. அம்மா சிரித்துக் கொண்டார். என் நிலைமை அப்படியாகி விட்டது.  #02 நான்காண்டுகள் பொறியியல் படித்து முடித்தாயிற்று. படிப்பு முடிந்து விட்டது. இனி வேலைதான். ஆனால் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்லாமல் சில நாட்கள் (உண்மையில் அது சில மாதங்கள்) கழிந்து விட்டபடியால், எப்படியாவது வேலையில் அமர வேண்டும். இல்லையேல் மேற்கொண்டு மேற்படிப்பு ஏதாவது படிக்க வேண்டும் என்கிற பிரயத்தனங்களில் நானும் இறங்கவே செய்தேன். கல்லூரிப் படிப்பையே உள்ளூரில் படிக்காமல் வெளியூரில்தான் படித்தவன் என்பதால், மேற்படிப்பையும் வெளியூரில் படிக்கலாம் என உறுதியாக முடிவெடுத்த தருணத்தில் பெங்களூரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிடித்துக் கொண்டாயிற்று. அதையும் படித்து முடித்தாயிற்று. மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நின்றேன். படிப்பு முடிந்து விட்டது. இனி வேலைதான். அதற்கு பின்னும் கூட வேறேதும் கூடுதலாக, சிறப்புப் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இது போதுமெனப் பட்டது. அவ்வளவுதான். இப்போது ஒரே குறிக்கோள். வேலை. பெங்களூருவில் அமைந்து விடாதா என்ன? மாக்ஸிம் கார்க்கி எழுதிய ’தாய்’ நாவலில் ஒரு வாக்கியம் இப்படி வரும். “பாசிமணிகள் பல சேர்ந்து மாலையாவது போல, நாட்கள் இணைந்து இணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக் கொண்டிருந்தன”. அதேதான்! சில மாதங்கள் அங்குமிங்கும் அலைந்த பின் வீட்டில் வந்தடைந்து கிடந்த சில நாட்களில் ஒரு எண்ணம். பெங்களூர் என்ன பெரிய பெங்களூர். முயற்சித்தால் சென்னையில் வேலை அமைந்து விடாதா என்ன? முயற்சிக்க வேண்டும். அவ்வளவுதானே. ஆம் அவ்வளவே தான்.  இதுதான் முன் கதை. அப்போதைக்கு வரைக்கும் இதுதான் கதை. அன்றைக்கு காலை உணவு முடித்தவுடன், மின்னஞ்சல்கள் பார்க்க அமர்ந்தேன். முன்னெல்லாம் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தேன். சகட்டுமேனிக்கு பல தளங்களில் முகவரியைக் கொடுத்து மின்னஞ்சல் சேவையை திடக்கழிவு மேலாண்மை சேவையைப் போல மாற்றி விட்டேன். ஆயிரக்கணக்கில் குப்பைத் தொட்டிக்கு மெயில்களைத் தேர்ந்தெடுத்து தள்ளி, அதையெல்லாம் ஒரு வழியாக சரிகட்டி, இப்போது சில மின்னஞ்சல் முகவரிகளில் வந்து நிற்கிறேன். முழுப் பெயரில் ஒன்று, முன்னெழுத்தோடு ஒன்று, அண்டர்_ஸ்கோர் வைத்து என விதவிதமாக கணக்கு ஏற்படுத்திக் கொண்டாயிற்று. எண்கணிதத்தில் ஆர்வமில்லாதபடியால் எண்கள் சேர்த்து ஒன்று மட்டும் ஏற்படுத்திக் கொள்ள எண்ணமில்லை. இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் அல்லவா! வேலை தேடுகிற ஒருவன் எந்தெந்த இணையதளங்களில் எல்லாம் பதிந்து வைப்பானோ, அநேகமாக அவை அத்தனையிலும் பதிந்தாயிற்று. அவ்வகையில்  தினமும் காலையில் மின்னஞ்சல்கள் படிப்பதென்பது ஒரு கட்டாயமான பொழுதுபோக்காகவே மாறி விட்டதெனக்கு!    எதிர்பாராத விதமாகவோ அல்லது எதிர்பார்த்த விதமாகவோ ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சில தினங்கள் முன்பு எழுதியிருந்த ஒரு ஆன்லைன் தேர்வில் தேறியிருந்தேன். எதிர்பார்த்தபடியே நேர்காணலுக்கு அழைத்து விட்டார்கள்.  எதிர்பார்த்தபடியே அதுவொரு பெங்களூர் கிளைதான். எதிர்பாராத ஒன்று அதன் நேர்காணல் தேதியும், தொடர்பு கொள்ளும் நபரும்தான். தேதி ஒரு விஷயமே இல்லை என்று ஒதுக்கினாலும், காண்டாக்ட் பெர்சன் ரொம்பவே துரத்துகிறார். விஷயம் இதுதான். ஏற்கனவே அந்த நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்று வெற்றி இல்லாமல் திரும்பியாயிற்று. அதே காண்டாக்ட் பெர்சன் என்பதால் ஒரு பயம். அதையெல்லாம் ’சட்டப்படி’ உடைக்கத்தான் வேறொரு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்திருந்தேன். வீட்டில் தெரியப்படுத்தினேன். நான் பெங்களூர் செல்ல வேண்டும். மறுமொழியாக அம்மாவும், அப்பாவும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெளிவாகச் சொன்னார்கள். ஒன்று உடனடியாக ஊருக்குத் திரும்ப டிக்கெட் போட வேண்டாம். கொஞ்ச நாட்கள் கூடுதலாக தங்கியிருந்து வா. ஒன்றும் பாதகமில்லை. ரெண்டாவது? அதுதான் எனக்கே தெரியுமே. எப்பவுமே தூங்கிட்டே இருக்காதே! முக்கியமா பயணம் செய்யும் போது. இரவுநேரப் பயணங்களில் தூங்கித்தான் ஆக வேண்டும். ஆனாலும் விழிப்போடு இரு என அறிவுறுத்தினார்கள். இப்போதெல்லாம் அதிகமாக அவர்கள் அறிவுரை சொல்வதே இல்லை. தேவையான அளவு ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். அதை எந்நாளும் மதித்து நடப்பதே பெரும்பாடு. * பேருந்து நிறுத்தம் மாதிரியே தெரியவில்லை. இருளும், பகலும் இணைந்தாற்போல வெளிச்சம் குறைவாக இருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு பெண் சற்று தள்ளி நின்றிருந்தார். வயது என்னைக் காட்டிலும் அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற, அருகில் போய் ‘ஹலோ’ என்று சொல்லப் போக, அவளே திரும்பி ‘எக்ஸ்யூஸ் மீ’ என்றாள். கண் விழித்துவிட்டேன். மீண்டும் ஒரு கனவு. ச்சை. பேருந்தில் பெங்களூரு செல்கிறேன். யாரோ என்னை எழுப்புகிறார்கள். கண் விழித்தேன். பேருந்தின் உள்ளிருந்த விளக்கொளிகள் முகத்தில் அடித்தன. தம்பி கொஞ்சம் எழுந்திரிங்க.. வேற சீட் தரேன். லேடீஸ் தனியா இருக்காங்க… அவரே வேறொரு இருக்கை மாற்றித் தந்தார்.  படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இந்த பிரச்சினையே வராது. செமி ஸ்லீப்பரில் எப்போதாவது இப்படி இடமாற்றங்கள் அமைந்து விடுகின்றன. சமயங்களில் எரிச்சல்கள் ஏற்படத்தான் செய்யும்.  உறங்குகிறவனை எழுப்புவது பாவமய்யா! என்னால் உனக்கு புதிதாய் ஒரு பாவம் எதற்கு?  ஒரே நல்ல விஷயம். இனி நிம்மதியாக தூங்கிவிட வேண்டும். இல்லையேல் தூங்காமலே வர வேண்டும். இரண்டாவது அத்தனை சாத்தியமில்லைதான். #03 வழக்கம்போலவே விடியலுக்கு முன்னரே பெங்களூருவுக்குள் வண்டி நுழைந்து விட்டது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று ஊர்ந்தது. எங்கெங்கோ நின்று நின்று வந்தாலும், பின்னர் வேகம் கூட்டி புலியின் பாய்ச்சலில் ஓசூர் வரைக்கும் விரையும் வண்டிகள் அதற்குப் பிறகு அவ்வப்போது உறுமிக் கொண்டு நகரும். பெங்களூருவிற்குள் அப்படித்தான்.  விடிகாலையில் பெங்களூருவிற்குள் நுழைகையில் வீசுகிற குளிர்காற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. எல்லோரும் அதை அனுபவிக்கத் தயாரில்லை அல்லது அவரவர் அதனை அனுபவிக்கும் முறை வித்தியாசமானது. எனக்கும் கூட இன்றைக்கு அப்படியில்லை. குளிர்காற்று பற்றிய நினைப்புகளைப் புறந்தள்ளியாயிற்று. எங்கே இறங்க வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்?  எல்லாம் தயார்தான். இறங்கிய பின் இன்னொரு பேருந்து பிடித்து, வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி, சில தொலைவு நடந்து செல்கையில் விடியல் முடிந்து வெளிச்சம் பரப்பியது சூரியன். நேராக நானியின் அறைக்கதவைத் தட்டினேன். முன்னமே பதிந்து வைத்த அறை. ஏற்கனவே நான் தங்கி, இப்போது மீண்டும் தங்குவதற்கு அதே அறைக்கு வந்துள்ளேன்.    எப்புடு இண்டர்வ்யூ? வெட்னஸ்டே. இன்றைக்கு தேதி வெள்ளிதான். ஆகவே அவன் அதிர்ச்சியாகி, ’ஏன் இவ்ளோ சீக்கிரம்?’ தெலுங்கில் கேட்டான்.  நேர்காணலுக்கு தயார் ஆக. ஆங்கிலத்தில் நான் சொன்னேன். தூக்கக் கலக்கத்திலும் கொஞ்சமாய் சிரித்து விட்டான். ‘தூங்குறியா?’ ‘இல்லடா’ அவன் மீண்டுமொருமுறை தூங்கப் போனான். நான் என் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைத்தேன். பிறகு கொஞ்சம் நிதானித்துக் கொண்டேன். பல நூறு கி.மீகள் பயணம் செய்து இவ்விடம் வந்துள்ளேன். களைப்பு என்பதைத் தாண்டி, அடுத்து என்ன என்கிற கேள்வியும் உள்ளுக்குள் நின்றது. மூச்சினை ஒருமுறை நிறுத்தி வைத்து, சற்று நேரம் தள்ளி வெளியேற்றினேன். குளித்து முடித்து, காலை உணவு முடிந்தபின் கொண்டு வந்திருந்த பைக்குள்ளிருந்த ஜாவா புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஏதோ நினைவு தாக்க ஸர்வ்லெட் பற்றி படிக்க ஆரம்பித்தேன். நானி என்னமோ கிண்டலாகச் சொன்னான்.  இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன அல்லவா! பெரும்பாலும் தேர்வுக்கு முதல்நாள் படிக்கிறவன்தான் தேர்வுகளை சுலவில் எதிர்கொண்டு அதை வென்றும் விடுகிறான். நமக்குக் கிடைக்கிற பெரும்பாலான புள்ளி விபரங்களும் அதையேதான் சொல்கின்றன. கூகுள் உதவியால் சில பல பக்கங்களுக்கு நேர்காணலுக்குத் தேவையான தகவல்களை திரட்டிக் கொண்டேன். இன்னுமின்னும் சில முறைகள் அவற்றை வாசித்து வைத்துக்கொண்டேன். நேர்காணலுக்கு முந்தைய நாள் விரைவாக அவற்றையெல்லாம் ஒருமுறை புரட்டினாலும் தகும் எனத் தோன்றியது.  நாட்கள் ஓடியதே தெரியவில்லை என்று யாரேனும் என்னிடம் சொன்னால் உனக்கென்ன பார்வைக் கோளாறா? என்று கேட்டு விடுவேன். என்னைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கிறது. நமக்கு முக்கியமானது மட்டும் நினைவில் நிற்கிறது அவ்வளவே. ஒரு நாள் மாலையில் செடி, கொடிகளை, பூக்களை, கிளைகளை, இலைகளைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னதுதான் என விளக்க முடியாத என்னமோ ஒரு நினைப்பு. பச்சை வண்ணம் அத்தனை ஈர்க்கிறது. சிவப்பு வண்ண பூ ஒன்று யாரும் சீண்டாமல் தரையில் வீழ்ந்தது. கையில் எடுத்து அதன் உட்புறம், வெளிப்புறம் என உற்று நோக்கினேன். ஒன்றும் பிடிபடவில்லை. தாவரவியல் படித்திருக்கலாம் என்று தோன்றியது.. பள்ளிப்படிப்பு படிக்கிற காலத்தில் தாவரவியல் படிக்க வாய்ப்பிருந்தும் வீணாக்கியவன் அதையெல்லாம் எண்ணலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. தாவரவியல் படித்தவனெல்லாம் பூக்களில் என்ன இருக்கிறது என எப்போதேனும் உற்று நோக்குகிறானா? கண்டிப்பாக கிடையாது என ஒரு எதிர் எண்ணம். இலைகளோடு விளையாடியதால், விரலெல்லாம் பச்சை வாசம். வாசம் போக்க சோப்பு கொண்டு கழுவி மீண்டும் முகர்ந்தேன். கை முழுக்க சோப்பு வாசம். ஒரு வாசம் இன்னொன்றின் மேல் அமர்கிறது. அதை மறைக்கிறது. ஆகப்பெரிய மாற்றமில்லை. ஒன்றுக்கு பதில் இன்னொன்று. ஆனால் சோப்பு வாசம் ஒரு திருப்தி தருகிறது. அது செயற்கையானதாக இருந்த போதிலும். அது தற்காலிகமாகவே இருந்த போதிலும். இனி எப்போது பசுமையை நோக்கினாலும், சோப்பு வாசமும் எனக்குத் தோன்றிவிடும். பச்சை வாசமும் மூக்கிலேறும். நினைவு அத்தனை நேர்த்தியாக பின்னே சென்று வரும்.  ஒவ்வொரு நாளுக்கும் நமக்கு ஏதேனும் ஒரு நினைவு அமைந்து விடுவதே ஒரு இலக்காக மாறினால் என்ன? கடினம்தான். ஆனால் அப்படி மாறிவிட்டால் வாழ்வு இனிக்குமே! வேறென்ன வாழ்வின் பலன்?  செவ்வாய்க்கிழமை இரவில் மறுநாள் செல்ல வேண்டிய பயணம் குறித்த தகவல்களை நண்பர்கள் மூலம் பெற்றேன். அந்த நிறுவனத்தில் எத்தனையோ நண்பர்கள் வேலை செய்கிறார்கள். ஒருவர் கூட அந்தக் கிளையில் அந்நேரம் பணியில் இல்லை. சின்ன துரதிருஷ்டம்தான். பரவாயில்லை. கூகுளே! வழி காட்டு எனக்கு. கூகுளை மட்டும் நம்பாமல், வழியில் சந்தித்த பலரிடமும் வழி கேட்டு கேட்டு கேட்டு ஒரு வழியாக நேர்காணல் நடக்கவிருக்கும் அலுவலகம் சென்றுவிட்டேன்.  நிறுவனத்தின் வெளித் தோற்றம்  முதல் பார்வையில் அசரடித்தது. சுற்றிலும் கண்ணாடியால் எதிரொலிக்கப்பட்ட காட்சிகள் கண்களை என்னமோ செய்தன. விந்தையான அல்லது வித்தியாசமான வடிவமைப்பில் அங்கே எக்கச்சக்கமான நிறுவனங்கள் இருந்தன. இரு வழிச்சாலைகள், பூங்கா மாதிரியான அமைப்பு, எதையும் கண்டுகொள்ளாதபடிக்கு தங்களுக்குள் பேசிக் கொண்டோ, அமைதியாக நடந்து சென்ற பிற மனிதர்கள் என  தனி உலகமே வடிவமைக்கப்பட்டது போலான பிரம்மையே தோன்றியது. நண்பர்களோடு ஒருமுறை ஒரு மாலுக்குச் சென்றிருக்கையில் அதன் உள் தோற்றம் பற்றி நண்பரொருவர் சொன்னார். ’ஏதோ புது வீதிக்கு வந்தது போலிருக்கே!’   நேர்த்தியான நகர அமைப்புகளைப் போலவே இப்போதெல்லாம் ஒவ்வொரு கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சி என்று ஒற்றை பதிலில் திருப்தி கொள்ளவோ, இதையெல்லாம் கண்டவுடன் மெய் மறக்கவோ நான் ஆளில்லை. இப்போது அதை சிந்திக்க நேரமும் இல்லை. நிறுவனத்தில் சில சோதனைகளைச் செய்தார்கள்.  நான்தான் நானா? வேறொருவனா? என சோதித்தார்கள். தத்துவார்த்தமாக அல்ல தர்க்கமாக. மகிழ்ச்சி.  அடுத்து என்ன?  இத்தனை சோதனைகளுக்கும் ஊடே, கண்கள் அந்த கான்டாக்ட் பெர்சனைத் தேடின. காணவே இல்லை. அவர் பெயரைக் கூட யாரும் உச்சரிக்கவில்லை. நல்லது.  பலகட்ட அடையாளப் பரிசோதனைகளுக்குப் பிறகு வரவேற்பறையை அடைந்தேன். ப்ளீஸ் வெயிட் இன் தட் ரூம் சார்.  எனக்கு அதிர்ச்சி பலமாக இருந்தது. என்னைக் காட்டிலும் வயதில் பல ஆண்டுகள் மூத்தவர் என்னை சார் என்று சொன்னதற்கல்ல. என் கனவில் வந்த மாதிரியே சுற்றிலும் அறைகள். ஒரே ஒரு மாற்றம் இங்கே நான்கு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு மேசையும், இரு நாற்காலிகளுமாய் இருந்தன. தவிர்த்து இதர பொருட்களும் உள்ளிருந்தன. நான் அமர்ந்திருந்த இடமும் குளுமையாக இருந்தது. ஏசி எங்கிருக்கிறது என கண்கள் சில நொடிகளில் தேடிக் கண்டன. முதல் மூன்று வரிசைகளில் இடமே இல்லை. நான்காவது வரிசைதான் கிடைத்தது. இருக்கையில் சரியாக அமர்ந்த பின் கொஞ்சம் நிதானித்தேன். தூரத்தில் என் வயதுக்காரர்கள் சிலர் கலகலப்பாக என்னமோ உரையாடிக் கொண்டிருந்தார்கள். என் கணிப்பு சரியாக இருக்குமானால் அவர்கள் இந்நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். அடையாள அட்டையை கவனித்ததும் கணிப்பு உறுதியானது. எனக்கான அழைப்பிற்காக நான் காத்திருந்தேன். அதே போல் அழைப்பு வந்தது. ‘செழியன்.’ இம்முறை தாமதிக்காமல் எழுந்து அறைக்குள் நுழைந்துவிட்டேன். ’ட்டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்’. பழக்கப்பட்ட கேள்வி. முன் தயாரிப்பில் இருந்த பதிலை அட்சரம் பிசகாமல் சொன்னேன். ப்ராஜெக்ட் குறித்து கேட்டார். அதுவும் அப்படியே. அடுத்து ஸர்வ்லெட். அதுவும் நல்லபடியாக. ஒவ்வொரு கணமும் கவனமாக கடந்தது. ஒவ்வொரு கேள்வியும் நிதானித்து வந்தது. என்னளவில் எதிர்பார்த்தபடியே நல்லபடியாக நேர்காணல் முடிந்தது. மதிய வேளை நிதானமாக கடந்துகொண்டிருந்தது. இனி நடக்க வேண்டியதுதான். நடப்பதற்கு மனம் அஞ்சியதே இல்லை. மூன்று கி.மீகள் நடந்தாயிற்று. காலையிலிருந்து உண்ணவில்லை. வெறும் தண்ணீர்தான் உள்ளே இருந்தது. அதுவும் வேர்வையாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஏதாவது சாப்பிட்டால் தகும்.  ஆனாலும் ஏதோ ஒரு எண்ணம் உள்ளுக்குள் நடக்கச் சொல்லி வற்புறுத்தியது. கால்கள் இரண்டும் எங்கேனும் கொஞ்ச நேரம் அமர்ந்தால் போதும் என்று கெஞ்சினாலும், கணுக்காலுக்கும், முழங்காலுக்கும் இடையே ஓர் வலி மெல்ல உருவெடுத்து அச்சுறுத்திய போதும் நான் நடந்து கொண்டே இருந்தேன். சற்று நேரம் கழித்து, வீட்டிற்கு அழைத்து தகவல் சொன்னேன்.  ’நேர்காணல் நல்லபடியாக முடிந்துவிட்டது’. முடிவு என்னவாக இருக்கும். வீட்டில் கேட்டார்கள். நேர்காணல் முடிவு உடனடியாக வரவில்லை. விரைவில் மெயில் அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிதானமாக அனுப்பட்டுமே! என்ன கெட்டு விட்டது? என்றுதான் எனக்குத் தோன்றியது. என்னளவில் நிதானம் சரி. வீட்டில் பொருத்தமான பதில் சொல்ல வேண்டுமல்லவா. சொன்னேன். நல்ல முடிவாக இருந்தால் எப்படியும் மின்னஞ்சல் செய்வார்கள். அப்போது சொல்கிறேன் என்றேன். சரியென போன் அணைக்கப்பட்டது.  சுற்றிலும் கட்டிடங்கள் நிறைந்த, இருபுறமும் ஆளில்லாத சாலையில், வெயிலோடு முறைக்காமல் ஒதுங்கி நடக்கத் துவங்கினேன்.  நான் எப்படி பதிலளித்தேன் என்பதை இதற்கு முன் பங்கேற்ற எத்தனையோ நேர்காணல்களின் முடிவில் யோசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் மற்றவர்கள் எப்படி பதிலளித்திருப்பார்கள் என யோசித்தேன். வயிறு பசித்தும் கூட உண்ண மனமே வரவில்லை.  இது விடை தெரியாத கேள்வி ஆயிற்றே.       #04 நிதானமாக நடந்து வந்து ஒரு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். வெயில் உச்சியில் நின்ற மாதிரி இருந்தது. மணி இரண்டைக் கடந்திருக்கலாம். கடிகாரத்தை அப்போதும் பார்க்கத் தோன்றவில்லை. ஒரு பேருந்து வந்தால் தேவலாம் எனத் தோன்றியது. ரொம்ப சொற்பமானவர்களே அங்கு நின்றிருந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். காற்று அவ்வப்போது வந்து தழுவியது. வியர்வை மேல் பட்ட காற்று கொஞ்சம் குளிர்ச்சி தந்தது. ஆனாலும் நா வறண்டதை உணர்ந்தேன். கைவசம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.  ஒன்றிரண்டு சிவப்பு நிற ஏசி பேருந்துகள் வந்தன. அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்தான். ஆனால் டிக்கெட் விலை அசரடிக்குமே! நான் இன்னும் கொஞ்ச நேரம்.காத்திருந்தேன்.  முழுவதும் காலியாக ஒரு பேருந்து வந்தது. மெஜெஸ்டிக் போகுமென்றார். ஐயா! எனக்கு நான் இறங்க வேண்டிய இடம் வரை வண்டி போனால் போதுமே.  அமர இடம் வாய்த்தது. கால்கள் கொஞ்சம் இளைப்பாறின. ஒற்றை ஆங்கிலச் சொற்களை வைத்தே பேருந்துகளில் பயணிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நடத்துநர் கேட்கையில், பேருந்து நிறுத்தத்தின் பெயரை மட்டும் சொல்லினால் டிக்கெட் கிடைக்கும். எப்போதாவது நடத்துநரிடம் வழி கேட்கையில்தான் சிக்கல் வரக்கூடும். அதிலும் கூட  அரிதாக ஏதேனும் ஒரு நடத்துநர் க்யா பாஷ மாத்தாட? என்பார். தமிழ் என்று சொல்லி மொழிபெயர்ப்பு கேட்கும் வாய்ப்பு பெறுவேன். மனம் முழுக்க விடை தெரியாத ஒற்றைக் கேள்விகளாலும், வயிறு முழுக்க பசியும், முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் ஊடாக பெரும் வலியும் நிரம்பிக் கிடந்தது. ஆனாலும் பசிதான் எல்லாவற்றுக்கும் முன் நின்றுகொண்டது. அறைக்கு வந்து சேர்ந்த பின் உண்ணத் தோன்றியது. மணி மூன்றானாலும், நான்கு ஆனாலும் சாப்பாடு சில வேளைகளில் மிச்சமிருக்கும். இல்லையென்றால் வெளியே சென்று வேறு கடைகளில் சாப்பிட்டாலும் தேவலாம் என்கிற அளவில் கொடூரமாக வயிறு கத்தியிருந்தது. காலையிலும் சாப்பிடவில்லை. உடல் சோர்வாக இருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தின்ன வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி என் வாழ்நாளில் ஒருபோதும் உண்டதாக எனக்கு நினைவே இல்லை.  எதிர்பார்த்தபடியே உணவு இருந்தது. தொட்டுக்கொள்ளத்தான் ஏதுமில்லை. ஆனாலும் தேவையான அளவை எடுத்து உண்டு முடித்தவுடன் சற்று நேரத்தில் உறங்க முடிவெடுத்தேன்.  கொஞ்சமாய் உடலை அழுத்திய சோர்வின் தீர்வு மதிய உறக்கம். உறங்க எத்தனிக்கையில் நானி கேட்டான்.  ‘ஏமாயிந்தி?’ ‘வெயிட்டிங் ஃபார் தி ரிசல்ட்.’ போர்வையைக் கொண்டு மூடிக்கொண்டேன். கொஞ்சமாய் இருள் சூழ்ந்த மாதிரி தோற்றம். தூங்குவதற்கு அதுதான் கொஞ்சம் வசதி.   அசதியாகவே எழுந்தாலும் களைப்பை மீறி ஒரு உற்சாகம் எனக்குள் தெரிந்தது. கனவே வரவில்லை. ஆம். முழுமையாக உறங்கியது போலவே தோன்றியது.   இப்போதைய மனநிலைக்கு ஒரு தேநீர் போதுமானதாக இருக்கும். மாலையில் ஒரு தேநீர். அதுவும் மதிய உறக்கம் கழிந்த பின் என்றால் அது ஒரு சுகம். கானல் நீர் போல ஒரு புத்துணர்ச்சி. அவ்வளவுதான்.   மனதுக்குள் சின்னதாக உற்சாகம் வந்தவுடன், கால் போன போக்கில் நடந்தேன். அப்படி நடப்பதென்பது என்னளவில் வழக்கமான ஒன்றுதான். அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் வரை சென்றதும் திடீரென ஒரு எண்ணம். பேருந்துக்காக நானும் காத்திருந்தேன். எதுவரை போகப் போகிறேன் என்று யோசனையே இல்லை. நான் எங்காவது போக வேண்டும். எப்படியும் அறையில் தேமே என்று அமர்ந்திருப்பதற்கு பதில் இப்படிப் போனால் ஏதேனும் தேறும். குறைந்தபட்சம் உற்சாகம் குன்றாமல் இருக்கும். நாலு கன்னட வார்த்தைகள் கற்கலாம். இது போதாதா? சில பேருந்துகளில் ஒலி வசதி உண்டு. ‘முந்தின நில்தானா இந்திரா நகரா’ என்று ஆண்/பெண் குரலில் ஒலிக்கும். அடுத்த நிறுத்தம் இந்திரா நகர் என்பதை கன்னடத்தில் அப்படிச் சொல்வார்கள். தமிழில் ’முந்தின’ என்பதன் பொருள் வேறல்லவா!   ஒரு பேருந்து வந்தது. ஏறிக்கொண்டு எங்கோ சுற்றினேன். திரும்பி வருகையில் நானி சொன்னான். ஒரு மணி நேரமாய் பவர் கட். கொஞ்சம் முன்னர்தான் பவர் வந்தது. மனதுக்குள் சிறிய மகிழ்ச்சி. மின் தடை நேரத்தில் எங்கோ ஒரு உலா சென்ற திருப்தி. இரவு உணவு உண்டு முடித்து உறங்க முயற்சித்தேன். உறக்கம் வர நேரமெடுக்கும் போல. மதியம் உறங்கியதன் பலன். டிவியில் ஏதோ ஒரு தெலுங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தான் நானி. நானும் அவனுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.   மணி பன்னிரண்டை நெருங்கியது. நானி அறையை இருட்டாக்கிவிட்டு உறங்கத் துவங்கினான். எனக்கு உறக்கம் வரவில்லை. உறங்க வேண்டுமென்கிற நினைப்பு ஏதோ ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். மடிகணினியை எடுத்தேன். அதனுள் பார்க்காமலே சேகரித்து வைத்த திரைப்படங்கள் நிறைய கிடந்தன. ஏதோ ஒன்றைத் தொட்டு எண்டர் பட்டனை அழுத்தினேன். #05 இரவாகி நடுநிசி கடந்து வெகுநேரம் ஆகிவிட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. உறக்கம் வந்த மாதிரியே உணர்வில்லை. அறையை விட்டு வெளியேறி நடந்தேன். அந்த நிசப்தம் ஒரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் என் பாத ஒலிகள் எனக்கே சங்கடமாய் இருந்தன. அந்த நிசப்தத்தில் என் காரணமாய் ஏற்பட்ட அதிர்வுகள் தனியே ஒலித்தன. என்னால் மற்றவர்கள் உறக்கம் பாதிக்கப்படக் கூடாதென மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். அலைபேசியில் பாட்டு கேட்க முடிவெடுத்து இசை என் காதுக்குள் மட்டும் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியது. மணி மூன்று-நான்கு என ஓடத் தொடங்கியது. வானம் எவ்வித மாறுதலும் இன்றி கருமை பூசிக் கிடந்தது. எங்கோ இருந்து சோடியம் விளக்குகளின் ஒளிவெள்ளம். சன்னல் வழியே மெலிதாக உணர முடிந்தது. புரண்டு புரண்டு படுத்தும் ஒரு மணி நேரம் கூட முழுமையாக உறங்கியதாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவ்வப்போது விழி உறங்கியது. ஆனாலும் விழிப்பு மிச்சமிருந்தது. ஏதாவதொரு கணம் சட்டென்று எழுந்து கொள்வது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. போர்வையால் உடலைச் சுற்றிக்கொண்டு எழுந்து சன்னலைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தேன். அமர்ந்தபடியே சன்னல் வழி நோக்கினால் மேகத்தை காற்று நகர்த்துவது ஸ்லோ மோஷன் GIF காட்சி போல கண்களில் விழுகிறது. மணி ஐந்தைக் கடந்ததும், சாலைக்கு வந்துவிட்டேன். மெல்லிதாக வானத்து நிறம் மாறத் தொடங்கியது. அருகிலிருந்த சிமெண்டு திட்டு மேல் அமர்ந்து வேறு வேலையே தோன்றாமல், வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தேன்.  வானத்தின் நிறமாற்றத்தில் சிந்தனை லயித்திருந்தது. மனம் கொஞ்சம் ஆறுதலானது. மீண்டும் ஒருமுறை உள்ளுக்குள் புத்துணர்ச்சி பரவியது. ஆனாலும் உடல் கொஞ்சம் வலியெடுப்பது போல இருந்தது. விடியலில் அறையிலிருந்து வெளியே சென்று வர எண்ணம் வந்தது. சாலை பரபரப்பு ஏதுமின்றிக் காணப்பட்டது. குளிர்காற்று அவ்வப்போது தொட்டுச் சென்றது. அத்தனை குளிரில்லை என்றாலும் அந்த நேரம் அங்கனம் நடப்பது பரம சுகமாய் இருந்தது. விடியலில் எழுவதே ஒரு சுகானுபவம். அனுபவிக்கையில் அது போலொரு இன்பம் வேறேதும் அமையாது. சோம்பலும், அலட்சியமும்தான் அந்த அனுபவத்தைப் பெற முடியாமல் எத்தனையோ நாட்களைக் கழித்து விடுகிறது. சாலையின் பரபரப்பின்மை ஒரு விதத்தில் ஆறுதல் என்றாலும் இன்னொரு பக்கம் புன்னகைத்துக் கொண்டேன்.  ஒரு நாள் விடியலில் எழுந்தால், உலகமே சோம்பேறியாகி விட்டதாகப் படுவதேன்? வீதி மிகவும் அமைதியாக இருந்தது. ஆங்காங்கே சின்னச் சின்னதாய் சப்தங்கள். அதெல்லாம் பெரிதாகப் படவே இல்லை. தெருநாய்கள் கூட சுருண்டு படுத்திருந்தன. வீதியின் அமைதிக்கு நிகராக அழுக்கும் இருந்தது. கண்களை எல்லாப் பக்கங்களிலும் சுழல விட்டேன். யாரோ ஒரு முகம் காட்டாத மாடி வீட்டுப் பெண், மாடியிலிருந்தபடியே படிக்கட்டுகளில் நீரூற்றிக் கொண்டிருந்தாள். அது வழிந்து வழிந்து மாடிப்படிகளையெல்லாம் நனைத்தபின் மீதம் வாசலுக்கும், அதையும் மிஞ்சியது சாலையிலும் வழிந்தோடத் தொடங்கியது.  வாசல் தெளிக்கும் கலாச்சாரம் எங்கிருந்து தொடங்கியது? அதெல்லாம் தமிழ்நாட்டுக்கே மாத்திரம் உரிய ஒன்று என்றல்லவா நினைத்திருந்தேன். ஒரு சிற்றங்காடிக்குப் போனேன். அந்த நேரத்திலும் வியாபாரம் சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. தேநீர் கேட்டேன். ஒற்றை ப்ளாஸ்க்கில் ஏற்கனவே ஊற்றி வைத்த தேநீர். அதிகாலை என்பதால் சூடு குறையாமல் இருந்தது.  அந்த நேரத்தில் வீசிய கூதிர் காற்றுக்கு இதமாக ஒவ்வொரு தேநீர் துளியும் தொண்டைக்குள் இறங்கும் வரை சூடேற்றிக் கொண்டே இருந்தது. அத்தனை காலையிலும் கொஞ்சமும் குறைவின்றி புகையிலைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. எனக்கு நேரம் மெல்ல ஊர்வது போலிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க எண்ணம் வந்தது. உடல் மொத்தமும் இல்லாவிட்டாலும், முகம் முழுக்க குளிர்ச்சி ஏறியிருந்தது. கையால் தொட்டு உணர்கையில் அத்தனை ஜில்லிப்பு. இன்னும் சாலை தூய்மை செய்யப்படவில்லை. இரவின் அழுக்கு மிச்சமிருந்தது. அப்படியே இன்னும் கொஞ்சம் தொலைவு நடந்ததும், இன்னொரு சிற்றங்காடி வந்தது. நாளிதழ் வாங்க விரும்பிப் போனேன்.  குறிப்பிட்ட நாளிதழ் வர நேரமாகும் என்றார். நான் அமைதியாக நின்றிருந்தேன். யாரோ ஒரு அம்மணி வந்து விஜயவாணி நாளிதழ் வாங்கினார். ஆமாம். கன்னட நாளிதழ்களெல்லாம் எத்தனை பிரதிகள் தினசரி விற்கிறது? காத்திருந்து நாளிதழை வாங்கி வந்தேன். நிதானமாக அறைக்கு வந்து படித்து முடிக்கையில் மணி ஏழு. யாருமே நம்ப மாட்டார்கள். ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான். சடாரென தூங்க முனைந்தேன். நானி இன்னும் விழிக்கவே இல்லை. அடுத்து என்ன என்கிற நினைப்பே இல்லை. இப்போதைக்கு உறக்கம். அவ்வளவுதான். இரவெல்லாம் உறங்காமல் இருந்ததன் பொருட்டு உறக்கம் வருகிறது என்று சொன்னால் ஒரு நம்பகத்தன்மை வரும். ஆனால் அதிகாலையில் நான் குடித்த தேநீருக்கு என்ன மாதிரியான எதிர்வினை இது? நன்றாக தூங்க வாய்ப்பது ஒருவனுக்கு கிடைப்பதற்கரிய வரமாம். எனக்கு இங்கே சாபமாகிறது #06 நடக்க ஆரம்பித்து ரொம்ப தொலைவெல்லாம் இல்லை. ஒரு பேருந்து நிறுத்தத்திலிருந்து இன்னொரு பேருந்து நிறுத்தம் வரை நடக்க விருப்பம் கொண்டு நடந்தே போனேன். மரத்தினின்று பூக்கள் சிதறிக்கிடந்தன. இன்னுமா சாலையை சுத்தம் செய்யவில்லை என்று தோன்றவிடாதபடிக்கு ஒரு அழகுணர்ச்சி அவ்விடத்தே இருந்தது. வண்டிகள் அவ்வப்போதே வந்து சென்றன. இன்னும் நெரிசலுக்கு நேரமுண்டு.  யாரோ ஒரு பெண்மணி கையில் புத்தகத்தோடு நின்றிருந்தாள். சத்தியமாக அது பாட நூல் அல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அவள் முகம் மங்கலான நினைவுதான். ஏற்கனவே கனவில் வந்த முகம் போல இருந்தபடியால் பேசியே ஆக வேண்டுமென அருகில் போனேன். எக்ஸ்கியூஸ் மீ. திரும்பிவிட்டாள். ’கேன் ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்? ஐ திங்க், ஆல்ரெடி வீ மெட்.’ தமிழா? என்றாள். எனக்கு ஒருபக்கம் ஆச்சர்யம் இருப்பினும் இன்னொரு பக்கம் பழக்கமான ஒன்றாகிவிட்டது. எளிதில் அவதானிக்கிறார்களே என்கிற ஆச்சர்யம் எனக்கு இங்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. ஆமாங்க. நான் தமிழ்தான். பேர் செழியன். உங்களுக்கு தமிழ் தெரியுமா? என்னமோ பேசிவிட்டேன். அவளும் தொடர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆக்சுவலா நான் தெலுங்கு என்றாள். எனக்கும் கூட தெலுங்கு புரியுமென்றேன். அவள் அதை பொருட்படுத்தவில்லை. கையிலென்ன புத்தகமென்றேன். ஹிப்போகிராட்டிஸ் பற்றிய புத்தகம் என்றாள். எங்கோ கேள்விப்பட்ட பெயர். அவளிடம் கேட்கத் தோன்றவில்லை. என்னிடம் கூட ஆனக்ஸாகரஸ் பத்தி ஒரு புத்தகம் இருக்கிறது என்றேன். அடுத்த கேள்வி யார் ஆனக்ஸாகரஸ் என்று கேட்பாள் என அவதானித்தேன். அவள் அதையும் பொருட்படுத்தவில்லை. விடியலின் இலகுவான சப்தங்களையும், குளிர்ந்த காற்றினையும் கிழித்தபடி ஒரு பேருந்து வந்தது.  நான் ஏற வேண்டிய பஸ் வந்திடுச்சு. நீ எங்க போற? நீயும் கூட வர்றியா? என்றாள். என்ன சொன்னீங்க? என்றேன். ‘கூட வர்றியா இல்லியா?.. நூவு ஒஸ்தாவா ராவா?’ கண்களை ஒருமுறை திறந்துவிட்டு மூடியதாக நினைவு. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த மாதிரி எழுந்து அமர்ந்தேன். நானிதான் கேட்டிருக்கிறான். ஒஸ்தாவா ராவா?(வர்றியா இல்லியா?)  என்னய்யா சொல்ற என்றேன்.  மறந்துட்டியா? இன்னைக்கு இன்ஸ்டிட்யூட் போகணுமே என்றான். நினைவிற்குள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. நான் விடியலுக்குப் பிறகு எதேச்சையாக தூங்கியிருக்கிறேன். இன்றைக்கு சான்றிதழ் வாங்க இன்ஸ்டிட்யூட் போக வேண்டும்.  மறுபடியும் ஒரு பகல் கனவா? அதென்ன தூங்கிய உடனேயே கனவு வருகிறது. எப்போதுமில்லாமல் இப்போதெல்லாம் பெண்கள் வருகிறார்கள். அதிலும் முக்கியமான கட்டத்தில் கனவைக் கலைக்கிற விதமாக யாரேனும் ஒருவர் எழுப்புகிறார்கள். எல்லாமே எங்கோ சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது. நேர்காணல் அறையைப் பார்த்த சமயத்திலேயே உள்ளுக்குள் என்னமோ கேட்டுக்கொண்டே இருந்தது. நடப்பதெல்லாம் மெய்தானா என்கிற சிந்தனை.  கனவா? நனவா? எதில் நான் இருக்கிறேன்? ஏனிந்த மயக்க நிலை? உடலில் ஏதும் கோளாறு உண்டா? கனவின் காரணம் என்னவாக இருக்கும்? அதன் பலன் என்ன? அதுதான் தீர்க்கதரிசனமா? பின்னால் நடக்கப் போவது கனவாய் காட்சி தருகிறதா? எப்போதும் எனக்கு கனவு கைகொடுக்குமா? மொத்தமாக இதையெல்லாம் மறந்து புறந்தள்ள ஏதும் பயிற்சிகள் எடுக்க வேண்டுமா? எந்த தெரிவை நான் தேர்ந்தெடுக்க? வீட்டிலிருந்த போது முதல் கனவு நேர்காணல் அறை போல் தோன்றியது. காத்திருக்கையிலேயே கனவு கலைந்து விட்டது. இத்தனை தொலைவு கடந்து வந்த பிறகு அக்கனவு இங்கே அதுவும் பெங்களூருவில் தோற்றம் பெறுகிறது. எனக்குள் என்ன நடக்கிறது? அடுத்தது பேருந்தில் ஒரு கனவு  அதுவும் அக்கனவு தொடங்கும் முன்னரே கலைகிறது. முகம் தெரியாத ஏதோ ஒரு பெண்ணை, முகம் தெரியாத நான் ஏன் சந்திக்க நினைக்கிறேன். அதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதா?  இப்போது சற்று முன் கூட ஒரு கனவு. அதிலும் பெண் வருகிறாள். அவள்தான் முன்னர் வரப் பார்த்தவளோ? அதிலும் நேரில் உரையாடியதைப் போலான ஒரு தோற்றம். முக்கியமான நேரத்தில் நானி எழுப்பி விட்டான். எவ்வளவு யோசித்தாலும் முகம் நினைவில் தோன்றவே இல்லை.  பாதாதி கேசம் வரை அவளைக் கொண்டு வரும் கற்பனை முகத்தை மறக்கிறது. என் நினைவில் அவள் முகத்தை மட்டும் என் கற்பனையே மறைக்கிறது. ஒரு ஆணின் கனவில் பெண் வருவதில் என்ன தவறு இருக்கப் போகிறது? ஏதோ ஒரு பெண்ணின் கனவில்.. அட! ஒவ்வொரு பெண்ணின் கனவிலும் கூட யாரோ ஒருவர் வரத்தானே செய்வார். இதில் எந்தப் பக்கத்திலும் தவறேதும் இருப்பதாக புலப்படவில்லை. எனக்கு இப்போதைக்கு சின்னதாக ஒரு சஞ்சலம். அதுவும் குளித்தால் தீரப்போகிறது.  இதையெல்லாம் மனதிற்குள் ஓட்டிக்கொண்டே, குளித்து முடித்து தயாராகி விட்டேன்.     அப்புறம்.. கிளம்பலாமா? என்றான் நானி. #07 கிளம்பியாயிற்று. நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும். நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா வேளைகளிலும் நடப்பதில்லை. ஒரு வேளை கனவுகளின் அடிப்படை இதுதானோ? நிறைவேறாத நினைவுகள் கற்பனை வேடம் கட்டி இரவில் வருவதுதான் கனவா? பேருந்து எங்களுக்கான நிறுத்தத்தில் நின்றது. இறங்கிய பின் சில தொலைவு நடக்க வேண்டும். கதை பேசி சிரித்தபடியே, நடக்க ஆரம்பித்தோம். இம்மாதிரியான தருணங்களில்தான் ”சுகமான மலரும் நினைவுகள்” ஒருமுறை மனதில் நிழலாடிச் செல்கின்றன. எதற்காக இங்கே வந்தோம்? இவ்வளவு நாள் என்ன கற்றோம்? இப்போது எந்த நிலையில் நிற்கிறோம்? எல்லாவற்றையும் அந்நினைவுகள் பறவை பார்வையில் கோடிட்டு உணர்த்தி விடுகின்றன. வாழ்க்கையில் இழப்பதென்றால் இனிமேல்தான் இழக்க வேண்டும். இதுவரையான வாழ்க்கை எனக்கு சேர்ப்புதான். இலாபம்தான். ஒரு வேளை நான் இதுவரை எதை இழந்திருந்தாலும் அதெல்லாம் இழப்பின் கணக்கில் சேராது என அக்கணம் தோன்றியது. அடுத்தது என்ன என்பதில் மட்டும் நான் உறுதியாக நின்று கொள்ள வேண்டியிருக்கும். சிந்தனை வேகம் திடீரென தடைபட்டது. சாலையோரத்தில் பெரிய வண்ணக் குடை ஒன்றினைப் பார்த்தேன். இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகிற வழியில், அதே போலான மரங்கள் நிறைந்த சாலையோரத்தில் நின்றிருந்தாள் ஒரு பெண். கையில் சில புத்தகங்களும், தோளில் ஒரு கைப்பையும் இருந்தன. வண்ணக்குடையின் நிழலில் அவள் நின்றிருந்தாள். மனதுள் என்னமோ தோன்ற நிதானமாக அருகில் போனேன். எக்ஸ்யூஸ் மீ.. திரும்பினாள். முகம் நினைவில் வந்து மறைகிறது. எனக்கு பேசியாக வேண்டுமென்று ஒரு உந்துதல். நான் பேச நினைக்கும் முன் அவள் பேசத் தொடங்கினாள். உங்க பேர் ம்ம்ம்… செஜியனா? இல்ல… ஐ காண்ட் ப்ரொனௌன்ஸ் கரெக்ட்லி.. ஸாரி என்றாள். எனக்கு என்ன பதில் சொல்வதென உடனடியாகத் தோன்றவில்லை. ”ஓ! இல்லை… என் பேர் செழியன். இஸட்ஹெச்- ழ உச்சரிப்பில் வரும்”. ஓ! சாரி அகெய்ன்.. ஹாங்…உங்க பேரு? ”என் பேரு பாகிரதி. உங்களை எங்கயோ பார்த்த ஞாபகம் இருக்கு… நாம எங்க மீட் பண்ணினோம்னு ஞாபகம் இருக்கா?” எனக்கு வெகுநேரம் அங்கு நிற்கத் தோன்றவில்லை. இல்லீங்க.. என்று சொல்லிவிட்டு, சட்டென்று நானியோடு இன்ஸ்டிட்யூட்டிற்குள் நுழைந்தேன். என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் அடக்கிக் கொண்டேன். அவளைப் பற்றி வேறேதேனும் கேட்டிருக்க வேண்டும். அவளோடு சில வார்த்தைகளைப் பேசியிருக்க வேண்டுமெனத் தோன்றியது. இனி அது நடக்கிற காரியமில்லை. ஒருவழியாக இன்ஸ்டிட்யூட்டில் எல்லா விதமான பணிகளையும் முடித்து, கையோடு சான்றிதழ் வாங்கியாயிற்று. மீண்டும் ஒருமுறை பெங்களூர் வந்ததற்கு ஒரு உருப்படியான வேலை முடிந்தது. சான்றிதழோடு வெளியே வந்து மீண்டும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். வண்ணக்குடையருகே அப்போது நின்றிருந்த பெண்ணைக் காணவில்லை. போயிருப்பாள். அவள் பெயர் நினைவிலிருந்தே அகன்றது போல் இருந்தது. கொஞ்சம் யோசித்தால் அவள் பெயரை நினைவில் கொண்டு வந்துவிடலாம். சரியாக நிதானித்தால் அவள் முகத்தை மனத்தில் கொண்டு வரலாம். சரி. இப்போது ஏன் கொண்டுவர வேண்டும்? அப்படி கொண்டுவந்து ஒரு பைசா பயனில்லை. இதிலிருந்து வெளியே வர ஏதேனும் செய்ய வேண்டும். தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. உற்சாகமோ, குழப்பமோ, அச்சமோ எது என்னை சூழ்ந்த போதிலும் அதிலிருந்து நிதானித்துக் கொள்ள, தப்பித்துக் கொள்ள எனக்கு கொஞ்சம் தேநீர் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிகால்கள். எனக்கு அப்படியொரு வடிகால்தான் தேநீர். எந்த நேரத்திலும் அடிமையாகி விடக்கூடாது என்றொரு உள்ளுணர்வு எப்போதும் என்னுள் இருக்கும். அருகிலிருந்த கடைக்காரர் ’நந்தினி’ பால் பாக்கெட் ஒன்றைப் பிரித்தார். நானியைக் கேட்டேன். ’டீ?’ அவன் மறுக்கவே, நான் கடைக்கு முன் சென்று தேநீர் கேட்டேன். யாரோ இருவர் பைக்கில் வந்தனர். ஒந்து டீ, ஒந்து காஃபி என்றான் அவர்களில் ஒருவன். நானி கேட்டான். அப்புறம் எப்போ ஊருக்கு? யோசிக்கணும் என்றேன். தேநீரின் சூடு உடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சிந்தனை இன்னொரு திசையில் ஓடிக் கொண்டிருந்தது. * அறையில் வந்து இளைப்பாறிய தருணத்தில் அந்தப் பெண் குறித்த நினைவு வந்தது. முகம் சரியாக நினைவில் இல்லை. இன்னும் சரியாக கவனித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. சட்டென்று நானியிடம் கனவைப் பற்றி சொன்னேன். பதிலேதும் கூறாமல் இயல்பாக புன்னகைத்தான். கண்டிப்பாக அவனுக்கு முழுதாகப் புரிந்திருக்காது என எண்ணினேன். அவனுக்கு தமிழ் தெரியாது. ஆனால் கொஞ்சமாய் புரியும். கொஞ்சம் ஆங்கிலம் - கொஞ்சம் தமிழெனப் பேசி அவனுக்கு என்ன புரியும்? மதியம் உணவை முடித்துக் கொண்டு தோன்றியதெல்லாம் பேசத் தொடங்கினோம். அடுத்து என்ன செய்வது? என்னென்ன திட்டங்கள். ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று. அது இல்லாவிட்டால் வேறொன்று. கண்டிப்பாக புதுப்புது வழிகள் நமக்கு அவசியம். பேச்சு சுவாரசியத்தில் அவன் திடீரெனக் கேட்டான். செழியா! காலைல கனவைப் பத்தி சொன்னீல. ஆமா.. ஐ திங் உனக்கு முழுசாப் புரியல.. விட்டுடு. ஓகே. அந்த டாபிக்ல நான் வரல. எனக்கு ஒரு சந்தேகம். ம்ம்.. கேளு. இந்த மாதிரி கனவு பத்தி யோசிக்கும்போது தோணுது. நீ என்னைக்காவது தூக்கத்துல எழுந்திருச்சிருக்கியா? இதென்ன கேள்விடா? சத்தியமா புரியல. ஐ மீன் ஸ்லீப்வாக்கிங். தூக்கத்துல எழுந்து நடந்துருக்கியா? ஹ்ம்ம்ம்.. கண்டிப்பா இல்லை. இத்தனை நாள்ல என்னை நீ கவனிச்சதே இல்லையா? சரி. நீ யாரையாவது பார்த்திருக்கியா? கவனிச்சிருக்கியா? இல்ல.... இல்லவே இல்ல. இதெல்லாம் எதுக்கு கேட்கிற? ஜஸ்ட் டவுட். அவ்ளோதான். நீ கனவைப் பத்தி சொன்னதும் எனக்கு இதுதான் தோணுச்சு. நீ ஒரு டாக்டரைப் பாத்து பேசுனா இல்லைனா இது பத்தி யாருக்கிட்ட பேசுனா நல்லா இருக்கும்னு நீ நினைக்கிறியோ அவங்கள்ட பேசிப் பாரேன். இதைத் தாண்டி நான் சொல்ல ஏதுமில்ல. சரிதான். இதுக்கு மேல இதை யார்ட்டயும் சொல்லணும்னு தோணல. பார்க்கலாம். * ஒரு நாள் கழிந்தது. அன்றிரவு ஒரு கனவும் வரவே இல்லை. அடித்துப் போட்டது போல் உறங்கி எழுந்திருந்தேன். வழக்கமான பணிகள் ஓய்ந்ததும் புதிய மின்னஞ்சல்களைக் காண எண்ணி மடிகணினியைத் திறந்தேன். எதிர்பாராத விதமாகவோ அல்லது எதிர்பார்த்த விதமாகவோ ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சில தினங்கள் முந்தி சென்றிருந்த அந்த நேர்காணல் தேர்வில் தேறியிருந்தேன். எதிர்பார்த்தபடியே அழைத்து விட்டார்கள். எதிர்பார்த்தபடியே பெங்களூர் கிளைதான். எதிர்பாராத ஒன்று அவர்கள் சொன்ன தேதிதான். வேலையில் சேர இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன. ஊருக்குச் சென்று திரும்புவது ஒரு நல்ல முடிவாகப் பட்டது. கிளம்பி விட்டேன். வீட்டிலிருந்த ஒரு நாளில் இந்த கனவுகளைப் பற்றி நினைவு வந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒரே மருத்துவரை கலந்தாலோசிப்பது சரியென எண்ணி உங்களைச் சந்தித்து நடந்ததை எல்லாம் சொல்லியும் முடித்து விட்டேன். இனி நீங்கள்தான் எனக்கு ஏதேனும் சொல்ல வேண்டும். மருத்துவர் புன்னகை மாறாமல் என்னைப் பார்த்தார். #08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். அதற்காகவே இன்னொரு கனவு வர வேண்டுமெனத் தோன்றியது. பகல்ல நிறைய வேலை பார்த்துட்டு இராத்திரி தூங்கினா பெரும்பாலும் படுத்த உடனே தூக்கம் வந்திடும். தூக்கம் வந்தே ஆகணும்னு கட்டாயமில்லை. அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கத்திலயும் கனவு வரும். நிறைய சொல்லலாம். நீ குழப்பிக்க அவசியம் இல்ல. இது மாதிரி இன்னொரு முறை கனவு ஏதும் வந்து ரொம்ப தொந்தரவா நினைச்சினா என்னை வந்து பாரு. இப்படி வீட்டுக்கெல்லாம் வராத. நேரா ஹாஸ்பிடல் வந்து பாரு என்றார். கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். மருத்துவரின் மனைவி அப்போதுதான் நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார். நான் அவருக்கும் நன்றி சொல்லி வெளியேறினேன். மருத்துவரின் மனைவி அவரிடம் என்னைப் பற்றிக் கேட்டார். ‘என்னவாம்?’ மீண்டுமொருமுறை கதையைச் சுருக்கமாக சொன்ன மருத்துவரிடம் அவர் கேட்டார். மறுபடியும் அவன் உங்களப் பார்க்க வருவானா? எனக்கு அப்படித் தோணல.. அவன் மறுபடியும் வரமாட்டான்னு நினைக்கிறேன். * ஒரு வாரம் முழுதாக கழிந்திருந்தது. கனவே இல்லாத ஒரு வாரம். தொடர்ச்சியாக நன்றாக உறங்கிய ஒரு வாரம். ஆச்சர்யம்தான். ஆனாலும் அதுதான் உண்மையும் கூட. கனவு எதையும் கண்டுவிடக்கூடாது என்கிற பிடிவாதம் கொண்டு உறங்கிய நாட்கள் அவை. அதே வேளையில், எனக்கான அடுத்த பயணத்திற்கான எல்லா முன் தயாரிப்புகளும் வீட்டில் நடந்துகொண்டே இருந்தன. பைகள் நிரம்பிக் கொண்டிருந்தன. தேவையற்றதை வீட்டிலேயே ஒதுக்கவும் நேரம் வேண்டியிருந்தது. ஆனால் நேரம் அப்படியொன்றும் அதிகமில்லை. இன்னும் ஒரு இரவு மீதமிருக்கிறது. நாளை இரவு பெங்களூரு செல்லும் இரயிலைப் பிடிக்க வேண்டும். இன்றிரவு உறங்குவதுதான் வீட்டில் கடைசி என்பது போலொரு உணர்வு அழுத்த, போர்வையை இழுத்துப் பிடித்து உறங்கிக் கொண்டிருந்தேன். நாளை இரவு எப்படியிருக்கும் என்று சிந்தனை நகர்ந்தது. உறுதியான முடிவுகள் எடுக்க நினைக்கையில்தான் எத்தனை எத்தனை குழப்பங்கள். இருக்கிற குழப்பங்களையெல்லாம் தீர்ப்பதிலேயே மனமும், வலுவும், நேரமும் செலவானால், வாழ்க்கையை வாழ்வது எப்படி? இன்னொரு பயணம் எனக்கு முன் நின்றது. அதற்கு முன் நான் நிதானித்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவரின் கனவிற்குள் நானிருப்பேன். அதிலிருந்து வெளியேறியாக வேண்டும். அது எப்படி சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. கனவுகள் எங்கேயோ எப்போதோ கேட்ட பாடலின் ஓசை போல, ஒலியாக காதுக்குள் ஒலிக்கின்றன. நிகழ்காலத்தின் ஏதோ ஒரு கணத்தில் அவை காட்சிகளாக விரிகின்றன. அக்காட்சிகள் யாவும் முழுமையானதாகவோ, முழுமையற்றதாகவோ. அர்த்தமுள்ளதாகவோ, அர்த்தமற்றதாகவோ அமைகின்றன. கனவுகள் காட்சிகளாய் விரிகையில் அதில் ஏதோ ஒரு கணம் அர்த்தம் இழக்கிறது. கனவில் அந்த பிரச்சினையே இல்லை. கனவென்பதில் பொருளுக்கு இடமில்லை. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. நான் எனக்கான கனவுகளை பின் தொடர்வதா? இல்லை ஒரேயடியாக மறந்து, வேறு வேலைகளில் நாட்டம் கொண்டு அதைப் புறந்தள்ளி விடுவதா? இப்போது யோசித்தாலும் இரண்டாவது அத்தனை சாத்தியமில்லைதான். * நல்ல விடியல் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும். வானத்தை நோக்கினால் அப்படித்தான் தெரிகிறது. அதற்குள் நான் இலக்கை எட்டியாக வேண்டும் என்று விரைந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் பிரம்மாண்டமான கரைகள் என் கண்ணில் பட்டன. எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறேன் என்று யோசனை இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறேன். முகத்தை ஏதோ அழுத்திக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அது முகக்கவசம் போல பட்டது. என் முகம் மேல் அது பட்டும் படாமலும் பொருந்தியிருந்தது. எனது கை முகத்தின் மேல் பட்டதும் கவசம் காணாமல் போனது. என்னைச் சுற்றிலும் விரவியிருந்த நீரின் வண்ணத்தை உறுதி செய்ய இயலவில்லை. இப்போது நான் ஒரு பிரம்மாண்டமான படகில் சென்றுகொண்டிருக்கிறேன். படகா? கப்பலா? அது என்ன? சரியாக அவதானிக்க முடியவில்லை. நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உணர இயன்றது. காற்று நன்றாக வீசுகிறது. அந்த மெல்லிய ஒலி செவியினுள் ஒலித்துக் கொண்டே இருந்தது. எனக்குப் பின்புறத்தில் நடப்பனவற்றை நான் காண வேண்டுமென ஒரு உந்துதல். பின்னால் தலையை மட்டும் திரும்பி உயரே பார்த்தேன். என் தலைக்குப் பின்னிருந்த உயரமான கம்பத்தில் ஏதோ ஒரு கொடி தெரிந்தது. காற்றின் போக்கில் அது நன்றாக அசைந்து கொண்டிருந்தது. அதிலிருக்கும் சின்னத்தைப் பார்க்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. ‘செழியா!’ நான் இப்போதுதான் விழிக்கிறேன். அம்மா அழைத்துவிட்டார். சட்டென படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். ஒரு காட்சியும் நினைவில் நிற்காமல் நழுவி மறைந்தது. முகம் முழுக்க உறக்கம் அப்பியிருந்தது. என்ன இன்னைக்கும் பகல் கனவா? என்றார். நான் மெல்லிதாக புன்னகைத்தேன். போன முறை இண்டர்வியூ. இந்தமுறை என்ன இன்க்ரிமெண்டா? ஆமாம்மா! இந்த முறை இன்க்ரிமெண்ட் ஆகியிருக்கு.. என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு எழுந்தேன். அம்மா தேநீர் கொண்டு வந்து வைத்தார். எனக்காக இன்னொரு கோப்பையிலிருந்த தேநீர் ஆவி பறக்க காத்திருந்தது.