திருமந்திரம் விளக்க உரையுடன் பாயிரமும் முதல் தந்திரமும் 336 பாடல்கள் விளக்கவுரை Rie வெளியீடு - Freetamilebooks.com Table of Contents - உரிமை - அறிமுகம் - கடவுள் வாழ்த்து - வேதச் சிறப்பு - ஆகமச் சிறப்பு - குரு பாரம்பரியம் - திருமூலர் வரலாறு - அவையடக்கம் - திருமந்திரத் தொகைச் சிறப்பு - குருமட வரலாறு - திருமூர்த்திகள் - உபதேசம் - யாக்கை நிலையாமை - செல்வம் நிலையாமை - இளமை நிலையாமை - உயிர் நிலையாமை - கொல்லாமை - புலால் மறுத்தல் - பிறன்மனை நயவாமை - மகளிர் இழிவு - நல்குரவு - அக்கினி காரியம் - அந்தணர் ஒழுக்கம் - அரசாட்சி முறை - வானச் சிறப்பு - தானச் சிறப்பு - அறஞ்செய்வான் திறம் - அறஞ்செயான் திறம் - அன்புடைமை - அன்பு செய்வாரை அறியும் சிவன் - கல்வி - கேள்வி கேட்டமைதல் - கல்லாமை - நடுவு நிலைமை - மது விலக்கு உரிமை இந்த கையேடு Creative Commons License வழங்கப்பட்டதாகும். அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம். திருமந்திரம் பாடல்கள் பாயிரமும் முதல் தந்திரமும் is licensed under a Creative Commons Attribution 4.0 International License You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - Adapt — remix, transform, and build upon the material - for any purpose, even commercially. - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - No additional restrictions — You may not apply legal terms ortechnological measures that legally restrict others from doing anything the license permits. முதல் மின்பதிப்பு ஜூலை - 2016 அட்டைப்பட வடிவமைப்பு - ரய் மின்னூல் ஆக்கம் - நரேன் First electronic edition - July 2016 Cover design - Rie ebook compiled by - Naren About Rie Basically a graphic designer and web programmer. Writing a blog blog.scribblers.in at free time. email - durai.kb@gmail.com அறிமுகம் திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. வேதம் என்பது கடவுள் துதிகளின் தொகுப்பாக இல்லாமல், உண்மையான ஞானம் பெற உதவும் விஷயங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் வேதம் என்றால் அது திருமந்திரம் தான். திருமந்திரம் உணர்வுகளைத் தூண்டுவதை விட அறிவைத் தூண்டி விடுவதிலேயே குறியாக இருக்கிறது. இந்த நவீன யுகத்தின் விஞ்ஞானிகள் உலகின் மொத்த உயிரின வகைகள் (ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து) 8.7 மில்லியன் (1.3 மில்லியன் கூடுதல் அல்லது குறைவு) என்று கண்டு அறிந்திருக்கிறார்கள். நமது திருமூலர் உலகின் உயிரின வகைகள் 8.4 மில்லியன் என்று அப்போதே எழுதி வைத்திருக்கிறார். அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே - திருமந்திரம். இதை திருமூலர் தான் கண்டுபிடித்தார் என்று நான் சொல்லவில்லை. இது பற்றிய விஷயங்கள் அன்றைய கல்விமுறையில் இருந்திருக்கிறது என்பது நாம் யோசிக்க வேண்டிய விஷயமாகும். இந்தத் தொகுதியில் திருமந்திரத்தின் பாயிரமும், முதல் தந்திரப் பாடல்களும் விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சிறிய வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும். உதாரணத்திற்கு இந்தப் பாடலைப் பாருங்கள். யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே. இந்தப் பாடலில் உள்ள அழகையும், சரளத்தையும், அது தரும் நேரடி உணர்வையும் உரையால் எழுத முடியாது. முடிந்தவரை பாடல்களை பாடலாகவே அனுபவியுங்கள். பாயிரம் கடவுள் வாழ்த்து 1 திருமந்திரம் - கடவுள் வாழ்த்து ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன்னருள் மூன்றினுள் நின்றான் நான்கு உணர்ந்தான் ஐந்து வென்றான் ஆறில் விரிந்தான் ஏழு உம்பர்ச் சென்றான் எட்டில் உணர்ந்திருந்தான். விளக்கம்: இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே! அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான். நாம் அவன், அவள், அது என எவையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன். எழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன். அந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன். 2 இன்னுயிர் மன்னும் புனிதன் போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. விளக்கம்: நம் உயிரில் இனிமையாய் நிலைத்து நிற்கும் புனிதனை, நான்கு திசைகளுக்கும் தலைவனை, பராசக்தியின் நாதனை, தென் திசையில் உள்ள இயமனை உதைத்தவனும் ஆன சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து நான் பாடுகின்றேனே! 3 பரமனை அணுகி நிற்போம் ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. விளக்கம்: உலகின் உயிர்கள் அனைத்திலும் உடனாய் நின்று பரவி இருப்பவனை, அழிவற்ற தேவர்களால் ‘முற்றும் துறந்தவன்’ என வாழ்த்தப்படும் அந்த இறைவனை, நாள்தோறும் பக்கத்தில் இருப்பவர் கூட உணர முடியாத சிவபெருமானை அணுகி நின்று நான் தினமும் வழிபடுவேனே! 4 உயிரின் உயிரே! அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. விளக்கம்: உலகின் அனைத்து உயிர்களுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவனை, இந்த உலகின் படைப்பிற்கு வித்தாக இருப்பவனை, தன்னிடம் அடைக்கலமாய் சேர என்னை அனுமதித்தவனை, பகலும் இரவும் பணிந்து வணங்கி என் அறியாமை நீங்கப் பெற்றேனே. 5 தனக்கு ஒரு உவமை இல்லாதவன் சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. விளக்கம்: சிவபெருமானைப் போல் ஒரு தெய்வத்தை உலகமெங்கும் தேடினாலும் பார்க்க முடியாது. அப்பெருமானுக்கு உவமையாய் மனிதர்கள் யாரையும் ஒப்பிட முடியாது. அந்தச் சிவபெருமான் இந்த உலகத்தையும் கடந்து நின்று பொன்னொளியாய் மின்னுகிறான். செந்நிறமான சடை முடி கொண்ட தாமரையான் அவன். 6 அவனன்றி எதுவுமில்லை! அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. விளக்கம்: சிவனை விட மேன்மையான தேவர் யாரும் இல்லை. சிவனை நோக்கிச் செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவனருள் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் இல்லை. சிவன் இல்லாமல் முக்தி அடையும் வழியை நான் அறியேனே! 7 ஒப்பிட முடியாத கடவுள் சிவன்! முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. விளக்கம்: படைப்பெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன் சிவபெருமான். அவன் அயன், அரி, அரன் ஆகிய மூவர்க்கும் மூத்தவன். தன்னை எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க தலைமகன் அவன். தன்னை அப்பா என்று அழைப்பார்க்கு அப்பனுமாய் உள்ளவன். அவன் பொன்னைப் போன்ற ஒளிமயமான உபதேசங்களைத் தருபவன். 8 சேயினும் நல்லன் தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. விளக்கம்: தாழ்ந்த சடை கொண்ட சிவபெருமான் தீயை விட வெப்பமானவன், தண்ணீரை விட குளிர்ந்தவன். ஆனாலும் ஈசனின் அருளை அறிந்து கொள்பவர் இங்கு யாரும் இல்லை. அந்த சிவன் குழந்தையை விட நல்லவன், தாயை விட அன்பானவன். அவன் அடியவரின் பக்கத்தில் எப்போதும் துணையாக இருப்பான். 9 தனக்கோர் தலைவன் இல்லாதவன் பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே. விளக்கம்: என்னால் வணங்கப்படும் இறைவனின் பேர் நந்தி. அவ்விறைவன் பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடையவன். நாம் வணங்கும் அந்த சிவனால் வணங்கப்படக்கூடிய தெய்வம் என்று உலகில் எதுவும் கிடையாது. 10 எல்லாம் சிவனே! தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கட லாமே. விளக்கம்: இந்த பெரிய நிலப்பரப்பாகிய உலகை தாங்கியவாறு வானமாக நிற்பது சிவபெருமானே! சுடும் தீயாக இருப்பவன் அவனே! சூரியனும் அவனே! சந்திரனும் அவனே! மழையை பொழியும் தாயும் அவனே! பெரிய மலையும் அவனே! குளிர்ந்த கடலும் அவனே! 11 முயற்சியும் பலனும் அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. விளக்கம்: இந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும் பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும். 12 நெற்றிக்கண்ணை திறந்தது குற்றமா? கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. விளக்கம்: நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் அருள் பாவித்து நின்ற போது, எண்ணில்லாத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வு பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானை அண்ணல் இவன் என்று தெரிந்துகொள்ளாமல் நெற்றிகண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக சொல்கிறார்கள். அவர்கள் அறியாமையை என்ன சொல்வது? சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததால் நிறைய தேவர்கள் இறந்து விட்டதாக நினைக்கிறோம். அவர்கள் இறக்கவில்லை, அழிவில்லாத அமர வாழ்வே பெற்றார்கள். 13 விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. விளக்கம்: மண்ணளந்த திருமால், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் முதலான தேவர்களும் இன்னும் ஈசனின் பரந்து விரிந்திருக்கும் தன்மையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சிவபெருமான் விண்ணளவிலும் விரிந்திருக்கிறான், அவனுக்கு மேலானவர் யாரும் கிடையாது. அவன் நம் கண்ணால் பார்க்க முடிந்த இடமெல்லாம் உள்ளான், நம் பார்வைக்கு அப்பாலும் இருக்கிறான். ஈசன் இல்லாத இடம் என்று உலகில் எதுவுமே இல்லை. 14 சிரசில் நிற்கிறான் ஈசன் கடந்துநின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன் கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. விளக்கம்: சிவபெருமான் சுவாதிட்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகிறான். மணிப்பூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்துள்ளான். அவர்க்கு அப்புறம் அநாகதச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனைக் கடந்துள்ளான். இவை எல்லாவற்றையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கவனித்தவாறு உள்ளான். 15 ஆதியும் அவனே! முடிவும் அவனே! ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே. விளக்கம்: இந்த உலகை படைத்தவன் அவனே! அழிப்பவனும் அவனே! அந்த சிவபெருமான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இந்த உடலை இயக்கும் வேதியாய் விரிந்து பரவி உள்ளான். குறையாத தன்மையுடைய அருள்சோதியாய் இருப்பவனும் அவனே. அவன் என்றும் அழியாத தன்மையுடன் நின்று நீதி வழங்குகிறான். ஆதியும் அவனே! முடிவும் அவனே! இரண்டுக்கும் இடையே இயக்கமும் அவனே! 16 வாள்நுதல் பாகன் கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாள்நுதல் பாகனை யாது குலாவி அமரரும் தேவரும் கோது குலாவிக் குணம்பயில் வாரே. விளக்கம்: நன்கு திருத்தப்பட்ட சுருண்ட முடியில் கொன்றை மலரை அணிந்திருப்பவன் சிவபெருமான். அவன் ஒளி விளங்கும் நெற்றியுடைய உமையம்மையைத் தன் பாதியாகக் கொண்டவன். அமரரும் தேவர்களும் தாம் விரும்பியதை அடைய, தம் குற்றங்களைக் களைந்து, நற்குணங்களைப் பயின்று சிவபெருமானை நாடி இருப்பார்கள். 17 ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை! காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. விளக்கம்: நாமெல்லாம் பருவுடல், நுண்ணுடல் ஆகிய இரண்டு கூறுகளால் ஆனவர்கள். மாயையின் தொடர்புடைய நுண்ணுடலில் வாசனை மிகுந்திருக்கும். அந்த நுண்ணுடலில் மனத்தை செலுத்தி நம்முடைய ஒரே தெய்வமான ஈசனுடன் தொடர்பு கொள்வோம். ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. 18 நாமும் குபேரன் ஆகலாம்! அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின் இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. விளக்கம்: அளகாபுரி வேந்தனான குபேரன் வட திசைக்குத் தலைவனாகவும், செல்வத்துக்கு அதிபதியாகவும் காரணம், அவன் சிவபெருமானை நோக்கிச் செய்த நிறைந்த தவம். அந்த தவத்தை நாமும் வடதிசை நோக்கி செய்வோம். அப்படிச் செய்வோரை ‘குபேரன் போல் நீயும் தலைவன் ஆவாய்’ என்ற சொன்ன என் சிவபெருமானை வணங்குகிறேன். 19 மெய்த்தவம் செய்பவரிடம் வந்து அமர்வான் சிவன் இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் றானே. விளக்கம்: சிவபெருமான் ஏலம் போன்ற வாசனை கமழும் எழு உலகங்களைப் படைத்தவன். அவற்றை அழிப்பவனும் அவனே! பிறைச்சந்திரனை அணிந்திருக்கும் அவன், அனைத்தும் அறிந்த மூதறிவாளன். அவன் தன்னை நோக்கி மெய்த்தவம் செய்பவரின் மனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அருள்பவன். 20 இடியும் முழக்கமும் ஈசன் உருவம் முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்ற மலையது தானே. விளக்கம்: நாம் கருவில் உதிப்பதற்கு முன்பே, நம் பிறப்பையும் இறப்பையும் வரையறை செய்தவன் சிவபெருமான். அப்பெருமான் வசிக்கும் அறநெறியை நாடி இருப்போம். அவ்வழியை நாடி இருப்போர்க்கு இடியும் முழக்கமும் கூட ஈசனின் உருவமாகவே தோன்றும். தொடர்ந்து அவ்வழியை நாடி இருந்தால் வாசனை மலர்கள் நிறைந்த மலைதனில் வசிக்கும் ஈசனைக் காணலாம். 21 கானக் களிறு கதறப் பிளந்தவன் வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் கானக் களிறு கதறப் பிளந்தனம் கோனைப் புகழுமின் கூடலு மாமே. விளக்கம்: வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன் மற்றும் தேவர்களின் இழிந்த பிறவியை நீக்கியவன் சிவபெருமான். அப்பெருமான் காட்டுயானை போன்ற நம் ஆணவத்தைக் கதறும்படி பிளந்தவன். அத்தலைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்தால், அவனுடன் இரண்டறக் கலந்திருந்து பேரின்பம் பெறலாம். 22 நினையாதவர்க்கும் அருள்பவன்! மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன் நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர் எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. விளக்கம்: மனத்தில் தோன்றும் மாய நாடனான சிவபெருமான் நாம் மனத்தில் நினைப்பதை அறிவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சிலர் இறைவன் தன்னிடம் அன்பாய் இல்லை என்று சொல்லுவார், ஆனால் இறைவன் தன் ஆளுமையிலிருந்து தப்ப நினைப்பவருக்கும் அருள் செய்கிறான். இறைவன் தன்னை நினையாதவரையும் காத்து நிற்கின்றான். 23 அல்லும் பகலும் அருளுகின்றான் வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம் நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை இல்லென வேண்டா இறையவர் தம்முதல் அல்லும் பகலும் அருளுகின் றானே. விளக்கம்: எல்லாம் வல்ல ஆற்றல் உடையவன் நம் சிவபெருமான். கடலின் நடுவே அக்கினியை நிறுத்தி, கடல் நீரை எல்லை மீறாமல் நிறுத்தி வைப்பவன் அவன். அப்படிப்பட்ட நம் இறைவனை இல்லை என்று சொல்லி மறுக்காதீர்கள், அவன் இரவும் பகலும் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தவாறு இருக்கிறான். 24 நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே! போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம் ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. விளக்கம்: புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படித் தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான். 25 பிஞ்ஞகன்! பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. விளக்கம்: பேரருள் தரும் சிவபெருமான் பிறப்பு, இறப்பு இல்லாதவன். பிஞ்ஞகன் என்று அழைக்கப்படுபவன். தொடர்ந்து யாவர்க்கும் இன்பம் அருளும் அவனைத் தொழுவோம். தொழுதால் அந்த சிவன் நம்மை மறவாமல் நினைந்து நம்முடய மன மயக்கத்தை அகற்றுவான். வள்ளலார் இராமலிங்க அடிகள் பிஞ்ஞகன் என்னும் பெயர் பற்றி இப்படிச் சொல்கிறார் - “பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல்லிசை” என்றும், அந்த பெயர் ஒலியாத நாசியை “நல்லிசை தோயாத நாசித்துளை” என்று கூறுகின்றார். 26 படர்ந்து நின்றான் பாரகம் எங்கும் தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால் படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும் கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. விளக்கம்: நம்மைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை வணங்குவோம். அவன் உலகின் அனைத்திலும் பரவி உள்ளான். இந்த உலகைக் கடந்தும் அவன் இருக்கிறான். நமது சகசிரதள ஆயிரம் இதழ் தாமரை மலரிலே வாசம் செய்கிறான். அந்த சிவபெருமானை வணங்கி இருந்தால், அவனது திருவடியை அடையும் பேறு பெறலாம். 27 தாமரை முகத்தான் சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. விளக்கம்: 'என்னை நேராகப் பார்' என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே. 28 வணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும் பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் உணங்கிநின் றான்அம ராபதி நாதன் வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே. தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான். 29 நாண மாட்டேன் தழுவிக்கொள்ள! காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர் நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக் கோணநில் லாத குணத்தடி யார்மனத்து ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. விளக்கம்: சிவபெருமானே! நீ நாங்கள் கண்களால் பார்க்கும்படி  நிற்பது இல்லை. எனக்கு உன்னையன்றி வேறு உறவு யாரும் இல்லை. நான் உன்னை தழுவிக் கொள்ள வெட்கப்பட மாட்டேன். மாறுபாடு இல்லாத மனம் உடைய அடியவர் மனத்தில் ஆழப் பதிந்தவனாய் அமர்ந்திருக்கிறாய். 30 பசுவை அழைக்கும் கன்று வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும் தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார் ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. விளக்கம்: வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே. 31 கண்ணகத்தே நின்று காதலித்தேனே! மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே. விளக்கம்: சிவபெருமான் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு அருள்வான். மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனித வடிவிலும், வானுலகில் உள்ள தேவர்களுக்கு தேவ வடிவிலும், முக்தி அடைந்தவர்களுக்கு வீடு பேறு தருபவனாகவும், சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் விளங்குகிறான். அவன் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்குகிறான். அப்பெருமானின் அருள் பெற்று அன்பினில் நின்றேனே! 32 நம் தலைவன் தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருல கேழையும் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான்அருட் பாடலு மாமே. விளக்கம்: தேவர்களின் தலைவனான அவன், நமக்கும் தலைவன் ஆனவன். அவன் பத்து திசைகளிலும் நிரவி இருப்பான். விரிவான நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் அந்த தலைவனின் தன்மையை நாம் அறிந்து கொள்ளவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் தலைவனான அந்த சிவபெருமானின் அருட் தன்மையை பாடலாக பாடி வணங்குவோம். 33 விதிகளினால் மட்டும் ஆகாது! பதிபல வாயது பண்டுஇவ் வுலகம் விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. விளக்கம்: இந்த பண்டைய உலகில், இதுவரை பல கடவுள்களின் பெயரில் பல வித விதிகளை ஏற்படுத்தியும் யாரும் உண்மை ஞானத்தை அறியவில்லை. கடவுளை  துதித்துப் பல பாடல்கள் பாட வல்லவர்கள் கூட உண்மையான ஞானம் இல்லாதவராய், உள்ளத்தில் அமைதி இல்லாமல் வாடுகின்றார்கள். 34 ஆயிர நாமங்கள் வாழ்க சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல் வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. விளக்கம்: வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம்.  நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம். 35 என் வழி - தனி வழி ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. விளக்கம்: சிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம். 36 முதல்வன் அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே. விளக்கம்: என் அப்பனை, நந்தியை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, ஒப்பு இல்லாத வள்ளலை, இந்த உலகின் முதல்வனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபடுவோம். அப்படி வணங்கினால் அந்த ஈசனின் அருளை பரிசாகப் பெறலாம். 37 வானில் நிற்கும் திங்கள் நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன் வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. விளக்கம்: நாள்தோறும் நிலையாய் நின்று வழிபடுவேன் என் இறைவனை. அந்த இறைவன் எரியும் நெருப்பைப் போன்ற வெளிச்சமுடையவன். வானில் நிற்கும் நிலவினைப் போல என் உடலினுள் வந்து பொருந்தி நிற்கின்றான், நான் உயிர்த்திருக்குமாறு. 38 பிதற்றுவதை விட மாட்டேன் பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. விளக்கம்: பெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன். பிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன். புகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன். என்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன். 39 சிவன் நமக்கு நண்பன் வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும் ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. விளக்கம்: சிவபெருமான் தன்னை வணங்கி வாழ்த்த வல்லவரின் மனத்தில் அறிவுப் பேரொளியாய் தோன்றுவான். புனித தீர்த்தமானவனை, அந்த தீர்த்தங்களிலே திளைக்கின்ற ஈசனை துதித்தும் எம்பெருமானே என்று வணங்கியும் நட்பு கொண்டு அந்த ஈசனின் அருளப் பெறலாம்! 40 சிவன் பார்வையிலிருந்து ஓடி ஒளிய வேண்டாம் குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடம் செய்யான் புகுந்துநின் றானே. விளக்கம்: சிவபெருமானைத் தாழ்மையுடன் வணங்கி அவன் திருவடியை நாடி இருப்போம். சிவன் திருவடி செம்பொன்னின் ஒளியைப் போன்று பிரகாசமாய் இருக்கும். நாம் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைக்காமல் வணங்கியிருந்தால், அந்த ஈசன் புறக்கணிக்காமல் நம்முள் புகுந்து நிற்பான். 41 நஞ்சு உண்ட சிவபெருமான் சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக் கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. விளக்கம்: திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனத்தைத் திருத்தி, பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளிமிகுந்த நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய்க் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே! 42 வேயன தோளிக்கு வேந்தன் போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னான்முடி செய்தது வேநல்கும் மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. விளக்கம்: சிவபெருமானை விரும்பிச் சென்று புகழ்வார் பெறுவது, நான் என்னும் அகங்காரம் அழிந்து சிவபோதம் அடையும் வரமாகும். மாயைகளில் சிக்கி தன்னிடம் வராதவர்களுக்கும், மூங்கில் போன்ற தோள் உடைய உமையின் கணவனான சிவபெருமான் வந்து அருள்வான். 43 திருவடி சரணம் அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. விளக்கம்: சிவன் அடியைப் போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன்  அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான். 44 சிவனடி போற்றி! போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. விளக்கம்: தேவர்கள் சிவபெருமான் திருவடியைப் போற்றி வணங்குகிறார்கள். அசுரர்களும், மனிதர்களும் அவ்வாறே வணங்குறார்கள். நானும் அப்பெருமானைப் போற்றி என் அன்பினுள் ஒளிரச் செய்தேனே. 45 எல்லாம் விதிப்படியே! விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலும் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே. விளக்கம்: கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் இறைவன் விதித்தபடி அல்லாமல் வேறு எப்படி இயங்க முடியும்? விதியின் வழியில் வந்த இன்பம் குற்றமில்லாதது. நாள்தோறும் அந்த சோதி வடிவான சிவனை துதிப்போம். அவன் வீடு பேறு அடையும் வழி காட்டும் சூரியன் ஆவான். 46 வண்ண வண்ணமாய் சிவபெருமான் அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. விளக்கம்: “அந்தி நேர  வானத்தைப்  போன்ற சிவந்த மேனியை உடையவனே, அரனே, சிவனே” என்று பண்பட்ட அடியார்கள் சிந்தனை செய்து தொழுவார்கள். நாம் அந்த சிவபெருமானை “பழமையானவனே, எங்கும் நிறைந்திருக்கும் முதல்வனே” என்று தொழுவோம். ஞான வடிவான அவன் நம் மனம் புகுவான். 47 பனை மரத்தின் மேல் ஒரு பருந்து மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. விளக்கம்: இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். அப்பெருமான் தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்திருப்பவர் அன்புடையவராய் இருப்பர். பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து, அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப் பற்றி நினையாமல் உணவுக்காக கீழிறங்கி வரும். அது போலவே சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனைப் பற்றிய நினைவில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது. 48 அணையா விளக்கு அவன் அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கென்று மேவிநின் றேனே. விளக்கம்: அடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தவர்க்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து, அவனுடன் பொருந்தி நின்றேனே! 49 தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம் நரைபசு பாசத்து நாதனை உள்ளி உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத் திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரைபசு பாசம் கடந்து எய்த லாமே. விளக்கம்: நம்முடைய ஆன்மா மற்றும் ஆன்மாவை கட்டியிருக்கும் தளை ஆகியவற்றின் தலைவனான சிவபெருமானை நினைத்திருப்போம். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கே இருக்கச் செய்யும் வல்லவர்கள், அலைகள் நிறைந்த பாவக்கடலை நீந்தி முக்தி எனும் கரையை அடையலாம். 50 ஆடுவேன் பாடுவேன் சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று நாடுவன் நான்இன் றறிவது தானே. விளக்கம்: சிவபெருமானின் திருவருள் பெற்ற மாலையை சூடிக் கொள்வேன். அவன் நினைவை நெஞ்சிடையே வைத்துக் கொள்வேன். பெருமானே என்று போற்றிப் பாடல்கள் பாடுவேன். பல வகையான மலர்களால் அர்ச்சித்து வணங்கி ஆனந்தத்தில் ஆடுவேன். ஆடியபடி அந்த பெருமானையே நாடுவேன். நான் இன்று அறிவது இதுதானே! வேதச் சிறப்பு 51 வேதத்தின் சிறப்பு வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. விளக்கம்: வேதத்தில் கூறப்படாமல் விடுபட்ட அறம் எதுவும் இல்லை. படித்து உணர வேண்டிய அறம் எல்லாமே வேதத்தில் உள்ளன. அறிஞர்கள் வீண் வாக்குவாதத்தை விட்டுவிட்டு பொருள் வளம் மிகுந்த வேதத்தை ஓதி முக்தி பெற்றார்கள். 52 பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்! வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. விளக்கம்: வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். நமெக்கெல்லாம் இறைவன் வேதம் தரக் காரணம் பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் அருளப்பட்டது! 53 உருக்கும் உணர்வு அவனே இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும் கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. விளக்கம்: கம்பீர ஒலியுடன் வேதியர் சொல்லும் அழகிய வேதத்தில் மந்திர வடிவமாகவும், மனதை உருக்கும் உணர்வாகவும், அந்த வேதத்தின் நுண்ணிய கருப்பொருளாகவும் இருப்பவன் முக்கண்களை உடைய சிவனே ஆவான். 54 திருநெறி என்பது சிவனை மட்டுமே நினைத்திருப்பது! திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. விளக்கம்: திருநெறி என்று சொல்லப்படும் தெய்விக நெறி என்பது அறிவு, அறியாமை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. அப் பெருநெறியில் செல்ல சிவபெருமான் ஒருவனை மட்டும் நினைத்திருந்தால் போதுமானது. குருவினால் உணர்த்தப்படுவது, சிவனோடு பொருந்தியிருக்கும் அந்நிலை பற்றியதே ஆகும். வேதம் சொல்லும் வழியும் அதுவே! 55 வேதத்தின் ஆறு அங்கங்கள் ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. விளக்கம்: ஆறு அங்கங்கள் உடைய வேதத்தை அருளியவன் சிவபெருமான். அப்பெருமானை நம்முள் ஒரு அங்கமாக உணர்ந்து நாம் வழிபடவில்லை. அவனை நம்மில் வேறாகவே நினைத்து இந்தப் பிறவிப் பயனை அடைய மறுக்கிறோம், வரும் பிறவிகளின் எண்ணிக்கையை பெருக்குகிறோம். 56 விரதம் அவசியம் பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. விளக்கம்: பாட்டும், இசையும், பரந்து ஆடும் மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில்  மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் அற்பப் பயன்களான கேளிக்கைகளை அனுபவிக்கும் இடம் தேடிச் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே. ஆகமச் சிறப்பு 57 ஆகமங்கள் இருபத்தெட்டு அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. விளக்கம்: கருமை நிறம் கொண்ட உமையம்மையை தன்னுடைய ஒரு பாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அந்த சிவபெருமான் அருள் செய்த ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. ஈசனுக்கு மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்தாவது முகம், ஈசான முகம் என்று சொல்லப்படும். இருபத்து எட்டு ஆகமங்களையும் அருள் செய்தது, உச்சி நோக்கி இருக்கும் அந்த ஐந்தாவது முகம் ஆகும். அந்த ஆகமங்களை நேரடியாகக் கேட்கப் பெற்றவர்கள் அறுபத்து ஆறு பேர். இருபத்தெட்டு ஆகமங்கள் - காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம். 58 அண்ணல் அருளிய சிவாகமங்கள் அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. விளக்கம்: சிவபெருமான் அருளிய ஆகமங்கள் எண்ணிக்கையில் இருபத்தெட்டு ஆகும். ஆனால் அதில் உள்ள பொருள்கள் இருபத்தெண் கோடி நூறாயிரம், அதாவது அந்த ஆகமங்கள் அளவில்லாத பொருள் உடையவையாகும். தேவர்களால் பெருமையாக சொல்லப்பட்ட அந்த ஆகமங்களின் பொருள் உணர்ந்து நம் சிவபெருமானை வணங்குவோம். 59 பதினெட்டு மொழிகள் அறிந்த பண்டிதர் பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. விளக்கம்: பண்டிதர் என்பவர் பதினெட்டு மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஆகமங்களின் பொருள் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதினெட்டு மொழிகளிலும் பண்டிதர்கள் எழுதிய பொருள், அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமானால் என்ன பொருளில் உபதேசிக்கப் பட்டதோ அவ்வாறே இருக்க வேண்டும். 60 அனுபவம் அவசியம்! அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. விளக்கம்: சிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும். 61 ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன் பரனாய் பராபரம் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. விளக்கம்: சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளைக் காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்களால் வணங்கி வழிபடப்படும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான். 62 ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. விளக்கம்: இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று, நமக்கு உரைத்தான். 63 நந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள் பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந் துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. விளக்கம்: இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6. யாமளம், 7. காலோத்தரம், 8. சுப்பிரம், 9 மகுடம். 64 செய்வதைப் புரிந்து செய்க அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும் அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. விளக்கம்: சிவபெருமானின் அருளால் சொல்லப்பட்ட ஆகமங்கள் எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த இறைவன் அருளிய உண்மைப் பொருளை புரிந்து கொள்ளாவிட்டால் அந்த எண்ணிலடங்கா கோடி ஆகமங்களும் நீர் மேல் எழுதியது போலாகும். 65 ஊழிக்காலம் மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. விளக்கம்: ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாமே நின்று போய், எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  அருளினான். 66 பந்தங்களிலிருந்து விடுபடும் முறை அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே. விளக்கம்: சிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம். குரு பாரம்பரியம் 67 நந்தி அருள் பெற்ற எட்டு பேர் நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே. விளக்கம்: நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும். 68 பிரதோஷ நாயகன்! நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  விளக்கம்: நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன். 69 திருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர் மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே.  விளக்கம்: திருமூலரிடம் திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்றவர்கள் ஏழு பேர். 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன். 70 மேன்மை பெற்ற குருநாதர்கள் நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள் நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.  விளக்கம்: நந்தி பெருமானின் அருள் பெற்ற குருநாதர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு திசைகளுக்கு ஒருவராகச் சென்று தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தம்முடைய ஆன்மிக அனுபவங்களை பிறர்க்கு பகிர்ந்ததால் மேன்மையானவர் ஆனார்கள். 71 சிவபெருமானிடன் உபதேசம் பெற்றவர்கள் மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்டகி லானே.  விளக்கம்: பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டுமே இல்லாத பெருமை உடையவன் சிவபெருமான். அவன் தனது கடந்த காலப் பெருமையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று வடிவாகவும் உள்ள சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்கும், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் உபதேசம் அருளினான். 72 மழை பெய்தாலும் கடமை தவறக்கூடாது எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.  விளக்கம்: தன் குளிர்ந்த சடையில் பவளம் சூடியுள்ள சிவபெருமான், நிறைந்த அருள் தருபவன். அந்த சிவபெருமான் தன்னிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் செய்த உபதேசம் என்னவென்றால் எட்டுத் திசையிலும் பெரிய மழை பெய்தாலும் நியமங்களைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதே! திருமூலர் வரலாறு 73 திருமந்திரம் என்னும் ஆகமம் நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.  விளக்கம்: என் குருநாதரான நந்தி பெருமானின் திருவடிகளை என் தலை மேற்கொண்டு புத்தியில் நிறுத்தி வணங்குகிறேன். மாலைச் சந்திரனை தன் தலையில் சூடியுள்ள சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் நினைத்து தியானம் செய்து இந்தத் திருமந்திரம் என்னும் ஆகமத்தை சொல்லத் தொடங்குகிறேன் என திருமூலர் சொல்கிறார். 74 தனிக்கூத்து கண்ட திருமூலர் செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே.  விளக்கம்: திருமூலர் சொல்கிறார் - "நான் சொல்லும் இந்த திருமந்திரம், சிவாகமம் என்னும் பேர் பெற்றது. இந்த ஆகமத்தை எனக்கு அருளிய நந்தி பெருமானின் திருவடியை நான் அடையப் பெற்றேன். தில்லையம்பலத்தில் அந்த சிவபெருமானின் ஒப்பற்ற நடனத்தை கண்டபின் ஒப்பளவில் ஏழு கோடி யுகம் வாழ்ந்திருந்தேன்". 75 அருந்தவச் செல்வி இருந்தவக் காரணம் கேளிந் திரனே பொருந்திய செல்வப் புவனா பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.  விளக்கம்: ஏழு ஆதாரங்களிலும் நான் பொருந்தியிருந்து தவம் செய்யக் காரணமாக இருந்தது என்ன தெரியுமா இந்திரனே? எல்லா உலகங்களுக்கும் தலைவியான அருந்தவச் செல்வியை அன்புடன் சேவித்து வந்தேன் பக்தியினாலே! 76 கற்கும் காலத்தில் அளவான உணவு நல்லது சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேனின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.  விளக்கம்: சதாசிவம் அருளிய தத்துவம், முத்தமிழ் மொழிகள், வேதங்கள் ஆகியவற்றைக் கற்கும் காலத்தில் அளவுடன் உணவு கொண்டிருந்தேன். சுகாசனத்தில் இருந்து மனம் தெளிவு பெற்றேன். அதனால் என் மனம் அந்த தத்துவங்களைப் புறக்கணிக்கவில்லை, அவற்றை நன்கு கற்று நான் பொருள் உணர்ந்தேன். 77 திருமூலர் தென்னகத்துக்குக் வந்த காரணம் மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  விளக்கம்: திருமூலர் தன் மாணவர்களில் ஒருவரான மாலங்கனைப் பார்த்து சொல்கிறார் - “மாலாங்கனே! நான் இந்த தென்திசைக்கு வந்த காரணம் என்ன தெரியுமா? நீல நிற மேனியும் சிறந்த அணிகளையும் உடைய உமையம்மைக்கு சிவபெருமான் முதன்முதலாக சொன்ன அந்த ஒழுக்கத்தைப் போதிக்கும் சிவாகமத்தை எடுத்து சொல்ல வந்தேன்”. 78 சிவானந்தவல்லி! நேரிழை யாவாள் நிரதிச யானந்தப் பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள் சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.    விளக்கம்: சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பைக் கொண்ட அவள் என் பிறப்பைப் போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே! 79 திருவாவடுதுறை சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.    விளக்கம்: சக்தியை தனதொரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமானை நான் சேர்ந்த இடம் திருவாவடுதுறை. அங்கே சிவ அறிவு எனும் நிழலில் தங்கியிருந்தேன், சிவ நாமங்கள் ஓதியபடியே! 80 நந்தியின் திருவடி நிழல் இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.     விளக்கம்: திருமூலர் சொல்கிறார் “நான் இந்த யோக  நிலையில் எண்ணில்லாத கோடி வருடங்கள் இருக்கிறேன். இரவும் பகலும் இல்லாத பிரகாச வெளியிலே இருக்கிறேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருக்கிறேன். என் நந்தியம்பெருமானின் திருவடி நிழலில் எப்போதும் இருக்கிறேன்.” 81 என்னை நன்றாக இறைவன் படைத்தனன் பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.     விளக்கம்: திருமூலர் நம்மைக் கேட்கிறார் “முந்தைய பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்திருந்தால் இப்படி பிறவிகள் எடுத்திருக்க வேண்டியதில்லையே?” தன்னுடைய பிறவி பற்றிச் சொல்கிறார் “என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், தான் அருளிய ஆகமங்களை தமிழில் திருமந்திரமாகத் தரும் அளவில். என் பிறவி வீண் போகவில்லை”. 82 ஞானத் தலைவி ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.     விளக்கம்: ஞானத் தலைவியாம் சக்தியுடன் சிவபெருமான் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். அங்கே ஒன்பது கோடி யுகங்கள் தீமை எதுவும் ஏற்படாத நிலையில் இருந்தேன். ஞானப் பாலூட்டும் அந்த சிவபெருமானை வணங்கி அந்த அறிவு நிழலில் நான் தங்கி இருந்தேன். இவ்வாறாக திருமூலர் தன்னைப் பற்றிச் சொல்கிறார். 83 சிவமுனி! செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால் ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.     விளக்கம்: சிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது -  மிகுதியான எண்ணிக்கையில்  தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். இவ்வாறு திருமூலர் சொல்கிறார். 84 வேதத்தின் சொல்லும் பொருளும் சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.     விளக்கம்: திருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”. 85 யான் பெற்ற இன்பம்! யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.     விளக்கம்: திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பத்தை எல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”. விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான். 86 மந்திரமாலை! பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.     விளக்கம்: இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும், பிறப்பு இருப்பது போல், இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள். 87 தமிழ்ச் சாத்திரம் அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.     விளக்கம்: இறைவன் இந்த உடலில் அக்னியை அளவோடு வைத்தான். கடலினுள் அக்னியை வைத்து, கடல் நீர் பொங்கி உலகை அழித்து விடாமல் காத்தான். மூவாயிரம் பாடல்களுக்குள் இந்த திருமந்திரம் என்னும் தமிழ்ச் சாத்திரத்தை வைத்தான். எல்லாப் பொருளும் இந்த சாத்திரத்தில் அடங்கும்படிச் செய்தான். 88 பொய் சொன்ன பிரமன் அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.     விளக்கம்: பிரமனும் திருமாலும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்றனர். சிவனின் தன்மையை அவர்களால் அறிய முடியவில்லை. வானுலகில் இருவரும் மீண்டும் சந்தித்தனர், திருமால் ‘என்னால் சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை’ என்று உண்மையைச் சொன்னார்.  பிரமன் ‘நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார். 89 தற்பரனின் கற்பனை இந்த உலகம் பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.    விளக்கம்: காளை, மான், மழு ஆகியவற்றைத் தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான். 90 திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள் ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.    விளக்கம்: திருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை - அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு, மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும். 91 திருமந்திரம் - சிவபெருமானின் உபதேசம் விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.  விளக்கம்: இதற்கு முந்தைய பாடலில் திருமூலர், திருமந்திரத்தில் விளக்கப்பட்ட பொருட்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். இந்தப் பாடலில் அவர் சொல்வது “இந்தத் திருமந்திர நூலில் உள்ள பொருளெல்லாம் மேலான மெய்ஞ்ஞானச் சோதியாகிய சிவபெருமானின் உபதேசங்களாகும். அந்த ஆனந்த நந்தி பெருமான், அளவில்லாத பெருமைகளை உடையவன். தன் நிலையில் அசையாதிருக்கும் அந்த ஆனந்தக் கூத்தனின் ஆணையின்படி, அந்தச் சிறந்த திருக்கயிலாய மலையில் இருந்து நான் இங்கு வந்தேன்”. 92 எல்லாம் நந்தி அருளாலே! நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே.   விளக்கம்: நந்தி அருளாலே மூலனின் உடலைப் பற்றி நின்றேன். நந்தி அருளாலே ஆகமத்தை பாடும் நிலையை அடைந்தேன். நந்தி அருளாலே மெய்ஞ்ஞானம் கிடைக்கப் பெற்றேன். நந்தி அருளாலே மெஞ்ஞானத்தில் நிலையாக இருந்தேனே. 93 சூரியகலை மற்றும் சந்திரகலை இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.    விளக்கம்: வேதத்தில் எண்ணில்லாத மந்திரங்கள் உள்ளன.  சூரியகலை மற்றும் சந்திரகலை ஆகியவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தி பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி என்னும் அரிய நெருப்பு மூண்டு வளரும். அப்போது வேதத்தில் உள்ள அந்த எண்ணில்லாத மந்திரங்கள் வெளிப்படும். அந்நிலையில் உச்சியில் பொன்னொளி போன்ற கிரணங்கள் ஒளி வீசுவதை உணரலாம். 94 இயல்பான சோதி வடிவம் பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.    விளக்கம்: நான் தினமும் நந்தி என்னும் பெயருடைய இறைவனின் புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் அப்பெருமானை என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன். உயர்ந்த ஒளி வடிவமான அந்த இறைவனை அடைய தொடர்ந்து முயல்கிறேன். சிவபெருமானின் அந்த சோதி வடிவம் இயல்பாகவே திகழ்வதாகும். அவையடக்கம் 95 அண்ணலின் பெருமை! ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை யாரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.   விளக்கம்: யாருக்குத் தெரியும் எங்கள் சிவபெருமானின் பெருமை முழுவதும்? அந்தப் பெருமானின் பரப்பை அறிந்தவர் இங்கு யாரும் இல்லை! தனக்கென பெயரும் உருவமும் இல்லாத பெருஞ்சுடர் எங்கள் சிவபெருமான். அந்தப் பெருஞ்சுடரின் வேர் யாராலும் அறிய முடியாதது. 96 திருமூலரின் அவையடக்கம் பாடவல் லார்நெறி பாட அறிகிலேன் ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன் நாடவல் லார்நெறி நாட அறிகிலேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே.  விளக்கம்: சிவபெருமானின் புகழைப் பாடுபவர் வழியிலே சென்று, அவர்களைப் போல் பாடும் வழியை அறியாமல் உள்ளேன். பக்தியினாலே அவர்கள் ஆடுவதைப் போல நான் ஆடவில்லை. யோகத்தினால் இறைவனை நாடுபவர் வழியில் சென்று நாடும் வழியை அறியாமல் உள்ளேன். ஞானம் தேடுபவர் வழியில் சென்று ஞானம் அடையும் வழியும் அறியாமல் உள்ளேன். 97 திருமந்திரம் பாடுவதால் ஈசனை உணரலாம் மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலு மாமே. விளக்கம்: தன்னையே நினைத்து பாடுபவரின் இன்னிசையின் உள்ளே ஈசன் எழுந்தருள்வான். பின்னால் மீண்டும் உலகைப் படைத்த பிரமனும், சிவபெருமானின் திருவடியைப் பெறவே தியானித்து முயல்கிறான். இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தைப் பாடுவதால் அந்த ஈசனை உணரலாம். 98 திருமந்திரம் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் இத்துடன் வேறா இருந்து துதிசெயும் பத்திமை யால்இப் பயனறி யாரே. விளக்கம்: இந்த திருமந்திரத்தில் உள்ள தத்துவ ஞானங்கள் எல்லாம் சிவபெருமானால் கயிலாய மலையடிவாரத்தில் உபதேசிக்கப்பட்டவை. இதை உணர்ந்து கொள்ளாமல், இந்த திருமந்திரத்தை ஓதுபவர்கள்  (அவர்கள் முக்தி வேண்டி தவம் செய்யும் முனிவரானாலும், தேவரானாலும்)  இந்த நூலைப் படிப்பதனால் கிடைக்கக் கூடிய முழுப் பலனைப் பெறமாட்டார்கள். திருமந்திரத் தொகைச் சிறப்பு 99 தினமும் காலையில் திருமந்திரம் படிப்போம் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. விளக்கம்: இந்த உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்வதற்காக, நந்தி பெருமானின் அருளினால் பாடப்பட்டது, திருமூலரின் மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம். இந்தத் திருமந்திரத்தை தினமும் காலை நேரத்தில், அர்த்தம் புரிந்து படித்து வந்தால், உலகத்தலைவனான சிவபெருமானை அடையலாம். 100 திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே. விளக்கம்: ஒன்பது தந்திரங்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் நன்னூலின் பரிசு என்னவென்றால், இந்த நூலில் உள்ள மூவாயிரம் பாடல்களைப் படிப்பதன் மூலம் முத்தி நிலையை அடையலாம். அறிவுபூர்வமாகச் சொல்லப்பட்ட இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானதாகும், படிப்பவர்க்கு நன்மை தருவதுமாகும். குருமட வரலாறு 101 சன்மார்க்கம் போதித்த முதன்மையான மடம் வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. விளக்கம்: உலகில் சன்மார்க்கம் நிலைபெறும் பொருட்டு வந்த மடங்களின் எண்ணிக்கை ஏழு ஆகும். அவற்றில் முதன்மையான மடத்தை தோற்றுவித்தவர் திருமூலர். அவரால் உரைக்கப்பட்டது தான் ஒன்பது தந்திரங்களில் மூவாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் அழகிய ஆகமம் ஆகும். 102 பிறவிப் பிணி இல்லாத சித்தர்கள் கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே. விளக்கம்: சிவ அருளில் கலந்திருக்கும் காலாங்கர், அகோரர், நன்மை தரும் மாளிகைத் தேவர், நாதாந்தர், அறிவார்ந்த பரமானந்தர், போக தேவர், நிலைத்த புகழ் உடைய திருமூலர் - இந்த எழுவரும் பிறவிப்பிணி இல்லாத சித்தர்கள். திருமூர்த்திகள் 103 தளர்விலன் சங்கரன்! அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரியயற் காமே. விளக்கம்: சிவபெருமானால் படைக்கப்பட்ட இந்த உலகம் எப்போதும் இளமையானது, அழகுள்ளது, ஒரு எல்லைக்குள் இருக்கிறது. இந்த உலகின் மொத்த காலத்தைக் கணக்கிட முடியாதது. இதையெல்லாம் உணர்ந்தால் அந்த சங்கரன் சோர்வே இல்லாதவன் என்பது புரியும். அடியார்கள் சொல் அளவில்  பிரமனையும் திருமாலையும் சேர்த்தே புகழ்கிறார்கள், ஆனால் எல்லாப் பெருமையும் சிவபெருமானையே சேர வேண்டும். 104 மூவரும் ஒருவரே! ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. விளக்கம்: ஆதிப்பிரானான சிவன், அழகிய மணிவண்ணனாகிய திருமால், தாமரை மலரில் எழுந்தருளும் பிரமன் - இவர்கள் மூவரும் அழித்தல், காத்தல், படைத்தல்  ஆகிய தமது தொழில்களினால் வேறுபட்டுத் தோன்றுகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் ஒருவரே என்பது புரியும். இந்த உலகத்தார் உண்மை புரியாமல், இவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நினைத்து தமக்குள் பிணங்கி நிற்கிறார்களே! 105 தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது நீசர் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. விளக்கம்: ஈசன் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளுக்கு அப்பாற்பட்டவன். தாமரை மொக்கு போன்ற அந்த சிவபெருமான்  உலகின் பெருந்தெய்வம் ஆவான். தெய்வ நினைப்பில்லாத நீசர்கள் அது இது என்று பிதற்றுவார்கள். மனத் தூய்மை உடையவர்கள் இறைவனின் வேரை அறிந்தார்களே! 106 சங்கரன் என்றால் சுகம் தருபவன் சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. விளக்கம்: சிவன், சதாசிவன், மகேசுரன் என மூன்று பேராகச் சொன்னாலும், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், பிரமன் என்று ஐந்து பேராகச் சொன்னாலும் எல்லாம் ஒருவரே. சங்கரன் என்னும் ஒரே கடவுள் தான் மூன்றாகவும், ஐந்தாகவும் வகுத்துச் சொல்லப்பட்டு திருச்சிற்றம்பலச் சபையில் விளங்குகிறான். சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகளை ஒன்பதாகச் சொல்வதும் உண்டு. 107 சிவனின் உறவினர் பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே. விளக்கம்: பக்தர்கள் அடையும் பயனை எண்ணிப் பார்க்கும் போது, பிரமனும் திருமாலும் சிவபெருமானுக்கு வேறானவர்கள் இல்லை. அவர்கள் மூன்று கண்களை உடைய சிவனது உறவினர்களே ஆவர். அதனால் அவர்களையும் வணங்கி நாம் பயன் பெறலாம். 108 திருமூலருக்கு சிவபெருமானின் கட்டளை ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. விளக்கம்: அழிவில்லாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த திருச்சபையில், பால் போன்ற மேனி கொண்ட அந்த சிவபெருமானைப் பணிந்து வணங்கினேன். அந்த சிவபெருமான் “நீ திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒப்பாவாய்! மண்ணுலகில் உள்ள மக்களுக்கெல்லாம் எம் திருவடியின் சிறப்பை எடுத்துச் சொல்!” என்றான். 109 வாசம் செய்கிறான்... வாசனை பரப்புகிறான்... வானவர் என்றும் மனிதர்இவர் என்றும் தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்ந் தோரை உணர்வது தானே. விளக்கம்: மனிதர்களாகிய நம் அனைவரின் உடலிலும், தேன் நிறைந்த கொன்றை மலர் அணிந்த சிவபெருமான் அமர்ந்திருக்கிறான். வானுலகில் உள்ள தேவர்களின் உடலிலும் அந்த சிவபெருமான் வாசம் செய்கிறார். நம்முடைய பிறவிப் பயன் எதுவென்றால்,  நம் உடலில் மணம் பரப்பி வாசம் செய்யும் அந்த சிவபெருமானை உணர்வது தான். 110 சோதிக்கும் கடவுள் சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. விளக்கம்: பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவராகவும், பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவராகவும் விளங்குவது ஆதிக்கடவுளான சிவபெருமானே ஆகும். அவன் ஒளி வீசும் பேரொளிச் சுடராக உள்ளான். மூடர்கள் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரை வெவ்வேறானவராக எண்ணி பேதித்துப் பிதற்றுகிறார்கள். இங்கே ‘சோதித்த’ என்பது ‘ஒளி வீசுகின்ற’ என்கிற பொருளில் வருகிறது.. 111 அவரவர் தன்மைக்கு ஏற்பக் காட்சி தருவான் பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. விளக்கம்: சிவபெருமான் நம்முடைய உடலாகவும், உயிராகவும் விளங்குகிறான்.  நம்மிலே கலந்திருக்கும் மேலானவன் அவன். அந்த சிவனே, வரம் தரும் திருமாலாகவும், பிரமனாகவும் விளங்குகிறான். பக்தர்கள் ஒவ்வொருவரின் தரத்திற்கேற்ப பல தன்மைகளில் காட்சி தருகிறான். யாருக்கும் விளங்காதவாறு மறைந்து நின்று அழித்தல் தொழில் செய்யும் உருத்திரனும் அவனே! 112 என் ஒவ்வொரு அசைவிலும் சிவன் இருக்கிறான் தானொரு கூறு சதாசிவன் எம்மிறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே. விளக்கம்: எம் இறைவனான சதாசிவன் உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் தான் ஒரு அங்கமாக விளங்குகிறான். வானுலகிலும் தான் ஒரு அங்கமாக எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான். எம் தலைவனான அவன் என் உடலில் உயிராக கலந்திருந்து என் ஒவ்வொரு அசைவிலும் அவன் விளங்கிறான். முதல் தந்திரம் உபதேசம் 113 சிவபெருமான் நம் குற்றங்களை நீக்குகிறார் விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. விளக்கம்: சிவபெருமான் தன்னுடைய மேலான நிலையில் இருந்து இறங்கி வந்து, நம்முடைய வினைகளை எல்லாம் தீர்க்கும் விதமாக குளிர்ச்சியான தன் திருவடிகளை நமக்குச் சிறந்த பாதுகாவலாகத் தருகிறான். அவன் நம் உடலின் உள்ளேயும், உயிரின் உள்ளேயும் நின்று ஒப்பற்ற ஆனந்தத்தை நமக்குக் காட்டி, நம் குற்றங்களை எல்லாம் நீக்கி அருள் செய்தான். 114 பளிங்கிலே பவளம் பதித்தான் களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. விளக்கம்: நெற்றிக்கண்ணை உடைய எங்கள் நந்தி பெருமான், எம்முடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய குற்றங்களை நீக்கி அருளினான். மேலும் மாசு வந்து படியா வண்ணம் எம்முள்ளே அருள் கண்ணை விழிக்கச் செய்து, மாசில்லாத ஆன்ம ஒளியைக் காட்டி அருளினான். எம் சிவபெருமானின் இந்தச் செயல், பளிங்கிலே பவளம் பதித்தது போன்றது ஆகும். 115 பதி, பசு, பாசம் பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. விளக்கம்: சிவன், சீவன், தளை எனக் கூறப்படும் மூன்றில் சிவனைப் போலவே சீவனாகிய உயிரும், தளையாகிய பற்றும் மிகவும் தொன்மையானவை. சீவனும் தளையும் சிவனை அணுகாது. சிவன் நம் சீவனை அணுகி வரும் போது, பற்று எனப்படும் தளை நம்மை விட்டு நீங்கி விடும். 116 கடலில் இருந்து எழும் சூரியன் வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. விளக்கம்: மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி பெருமான் நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் அழுக்கு தீர குளிக்க வைப்பதைப் போல, அந்த சிவபெருமான்  நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி அருளுகிறான்.  அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான். 117 சிவன் பார்வை பட்டால் போதும் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. விளக்கம்: நம்முடைய சீவனும், அதைச் சூழ்ந்துள்ள மும்மலமாகிய பற்றும், சூரிய காந்தக் கல்லும், அதைச் சுற்றியுள்ள பஞ்சும் போன்றவை ஆகும். சூரிய காந்தக் கல் தன்னை சூழ்ந்துள்ள பஞ்சைச் சுடாது. ஆனால் சூரிய ஒளி அந்தக் கல்லின் மேல் படும் போது, அந்தக் கல் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சைச் சுட்டு எரித்து விடும். அது போல சிவபெருமான் நம்முடைய குருவாகக்  காட்சி தரும் போது, நம்முடைய பற்று நம்மை விட்டு நீங்கி விடும். 118 நம் பக்குவம் அறிந்து அருள்வான் மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித் தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. விளக்கம்: ஐந்து தலங்களைக் கொண்ட நம் சதாசிவன், நம்முடைய ஐந்து விதமான அழுக்குகளையும் நீக்கி அருள்கிறான். சிற்றம்பலத்தில் ஆடும் அந்த நந்தி பெருமான், நம் மனம் வெளியே வேண்டாவதற்றை நோக்கிச் செல்லாதவாறு காக்கிறான். நம் உள்ளே உயிரின் உயிராய் எழுந்தருளி, நம் பக்குவம் அறிந்து அருள் செய்கிறான். 119 குருபரன் நல்வழி காட்டுவான்! அறிவுஐம் புலனுட னேநான் றதாகி நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக் குறியறி விப்பான் குருபர னாமே. விளக்கம்: ஒருவன் ஆழம் தெரியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் போல, நம்முடைய அறிவு ஐம்புலன்களில் சிக்கிக் கொண்டு மயங்கி நிற்கிறது. நம்முடைய குருநாதனான சிவபெருமான் நமக்குத் தெளிவான வழி காட்டுவான். அப்போது நம்முடைய சிற்றறிவு பேரறிவுடன் சென்று கலந்தது போல் ஆகும். 120 வறுக்கப்படும் தீவினைகள் ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. விளக்கம்: நம்முடைய செயல்களில் தீவினைகள் நிறைய கலந்துள்ளன. பசும்பாலில் கலந்துள்ள நீரைப் பிரிக்கும் அன்னப் பறவையைப் போல, நம் சிவபெருமான் சிதம்பரத்தில் உள்ள கனகசபையில் தன்னுடைய ஒப்பில்லாத நடனத்தினால் நம்முடைய தீய வினைகளைப் பிரித்து விடுகிறான். நம்முடைய பிறப்புகளுக்குக் காரணமான தீய வினைகள், தீயில் வறுக்கப்பட்ட வித்துக்களாகி விடுகின்றன. வறுக்கப்பட்ட வித்துக்கள் முளைக்காது, அது போல நமக்கு மறுபிறவி என்பது இராது. 121 சிவயோகியர்! வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. விளக்கம்: முந்தைய பாடலில் சொல்லப்பட்டது போல, பிறவிகளுக்குக் காரணமான தீவினைகள் அழியப் பெற்றவர்கள் மேலான நிலையை அடைந்து சுத்தமான ஆன்மா ஆவார்கள். அந்த சிவயோகியர்கள், புலன்களும் உயிரும் ஒன்றாக உள்ள உடல் கொண்டிருந்தாலும், புலன்களின் வழியில் மனம் செல்லாது இருப்பார்கள். அதாவது உடலுடன் இருக்கும் போதே செத்தவரைப் போல இருப்பார்கள். 122 சிவயோகம்! சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாராது அவன்பதி போக நவயோகம் நந்தி நமக்களித் தானே. விளக்கம்: சிவயோகத்தை விரும்புவோர் இறைவன் அறிவுப் பொருள் என்பதையும், இந்த உலகம் அறிவற்ற பொருள் என்பதையும் விவேகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்.  தீமை அளிக்கும் வழிகளில் செல்லாமல், தவயோகம் செய்து வந்தால் சிவ ஒளியை உள்ளே உணரலாம். அந்த நந்தி பெருமான், தன்னுடைய வீட்டை நாம் அடையும்படியாக, புதுமையான யோகத்தை நமக்கு அளித்தான். அந்த யோக வழியில் சென்று நாம் வீடு பேறு அடையலாம். 123 தேவர்களும் அறியாத இன்ப உலகம் அளித்தான் உலகெங்கும் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே. விளக்கம்: சிவபெருமான் இந்த உலகம் முழுவதும் தானே நிறைந்துள்ள உண்மையை நமக்கு உணர்த்தி அருளினான். தேவர்களும் அறியாத இன்ப உலகை நமக்குத் தந்தான். சிதம்பரம் கனக சபையில் நடனம் செய்யும் தன்  திருவடியை நாம் வணங்க அளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்பமயமான அருள்வெளி ஒன்று நமக்கெல்லாம் தந்தானே! 124 சிவசித்தர் ஆகலாம்! வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. விளக்கம்: சிவபெருமானின் திருவடியை வணங்கப் பெற்றவர்களின் மனவெளி அந்த சிவனின் அருள் வெளியில் கலந்து விடும். அந்த சிவனடியாரின் அன்பு சிவபெருமானின் பேரன்பிலே கட்டுண்டு நிற்கும். சிற்றொளியாகிய அடியாரின் அறிவு பேரொளியாகிய சிவஅறிவினில் ஒடுங்கி விடும். இதையெல்லாம் உணர்ந்து தெளிந்தவர்கள் சிவசித்தர் ஆவார்கள். 125 சித்தர்கள் சிவலோகத்தை இங்கேயே காண்பார்கள்! சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. விளக்கம்: உடல் இருக்கும் போதே சிவலோகத்தை இங்கே கண்டவர்கள் சித்தர் ஆவார்கள். அவர்கள் சத்தங்களையும், சத்தங்களின் முடிவையும் தம்முள்ளே காண்பார்கள், அதாவது சத்தங்களைக் கடந்து அமைதியான நிலையை அடைவார்கள். அவர்கள் என்றும் அழிவில்லாதவராக, குற்றமில்லாத தூயவராக, நோய் ஏதும் இல்லாதவராக, தொடர்ந்து நீளும் முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் முத்திக்கு வழியாக உள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் ஆகும். 126 சிவன் தரும் பரிசு - தெளிவு! முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே. விளக்கம்: சித்தர்கள் ஆகமங்களால் கூறப்படும் முப்பத்தாறு தத்துவங்களை ஏணியாகக் கொண்டு, ஒப்பில்லாத சிவானந்தத்தைத் தரும் ஒளியில் புகுவார்கள். அங்கே வார்த்தைகளால் சொல்ல முடியாத பெருமையுடைய சிவத்தை தரிசித்து, தன்னுடைய உண்மை நிலையை தெளிந்து உணர்வார்கள். அந்தத் தெளிவு தான் அவர்கள் பெறும் பரிசு ஆகும். 127 எல்லாவற்றிலும் சிவனின் செயலைக் காணலாம்! இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. விளக்கம்: சித்தர்கள் சிவனின் தன்மை பெற்று தாமே சிவமாகி இருந்தார்கள். அவர்கள் தாம் எங்கிருந்தாலும் அந்த சிவனின் தன்மை மாறாமல் இருந்தார்கள். அவர்கள் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்து விஷயங்களிலும் சிவனின் செயலைக் கண்டு வியப்பார்கள். அவர்கள் முக்காலத்தின் இயல்பை உணர்ந்து, கடந்த காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் ‘எல்லாம் சிவன் செயல்’ என்று இருப்பார்கள். 128 வேதத்தினாலும் எட்ட முடியாத நிலை சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. விளக்கம்: தனக்கென்று எந்தச் செயலும் இல்லாமல் இருக்கும் சித்தர்களைச் சோம்பர் என்கிறார் திருமூலர்.  அவர்கள் சுத்தமான வெளியிலே பேரின்பத்தை அனுபவித்து, தன்னிலை மறந்து அங்கேயே கிடப்பார்கள். அந்த பேரின்ப நிலை, வேதத்தினாலும் எட்ட முடியாதது. அந்த பேரின்ப நிலையில், அவர்கள் வேதங்களைக் கூட மறந்து விடுவார்கள். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் சிவமாகிய பேரின்பம் மட்டுமே. 129 அந்த பேரின்ப நிலையை விளக்க முடியாது தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. விளக்கம்: யோக நிலையில் உள்ள சித்தர்கள் சிவலோகத்தை தம்முள்ளே காண்கிறார்கள். அங்கே அவர்கள் தாம் சிவனோடு பொருந்தி இருப்பதை உணர்கிறார்கள். சிவத்தோடு பொருந்தி இருந்து, பேரின்பன்மான சிவபோகத்தை அனுபவிக்கிறார்கள். அந்த இன்ப நிலை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதைச் சொல்லினாலோ எழுத்தினாலே விளக்க முடியாது. 130 சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை! எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. விளக்கம்: பக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி அணுகுகிறார்களோ, அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான். சிவனை அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து, சிவன் அதற்கேற்றபடி தன்னைக் காட்டிக் கொள்வான். 131 மாணிக்கத்துள்ளே மரகதச் சோதி மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. விளக்கம்: சுத்தமான தங்கத்தினால் ஆன அம்பலத்தில் உமையம்மையுடன் சிவபெருமான் ஆடுகிற கூத்து, மாணிக்கம் போன்ற சிவந்த ஒளியினுள் மரகதம் போன்ற பச்சை ஒளி கலந்தது போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகத மாடம் காணப்படுவது போலவும் இருக்கிறது. அப்படிப்பட்ட திருக்கூத்தைக் கண்டு வணங்கும் வரத்தை  பெற்றவர்கள் சிவ யோகியர். சிவனின் நிறம் செம்மையானதாகவும், சக்தியின் நிறம் பசுமையாகவும் இருப்பதால், மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் என திருமூலர் பாடியுள்ளார். 132 சிவயோகியர் அடையும் பேறு பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. விளக்கம்: சிவயோகியர் சிவ உலகை விட்டு நீங்காத மன நிலையை அடைவார்கள். அதனால் அவர்களுக்கு பிறவாமை என்கிற பெரும் பயன் வந்து சேரும். அந்த யோகியர் சிவபெருமான் திருக்கூத்தாடும் அம்பலத்தை விட்டுப் பிரியாத பெரும்பேறு அடைவார்கள். சிவ உலகில் திளைத்திருக்கும் அவர்கள் உலக விஷயங்களைப் பற்றி பேச மாட்டார்கள். 133 ஒருமையுள் ஆமை போல! பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வார்ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. விளக்கம்: சிவபெருமான் பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும் அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார். உடல் உறுப்புக்களை  தனது ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் ஆமை போல, ஐந்து புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக இருப்பார்கள். 134 உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம் புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால் கரையற்ற சோதி கலந்தசத் தாமே. விளக்கம்: குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல, அலையற்ற மனத்தில், குருவாகிய ஆசிரியர் சொல்லும் உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம். உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து விடலாம். குழப்பம் இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள் தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள். 135 நமக்கு வேறு போக்கிடம் கிடையாது சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. விளக்கம்: பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச்  சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம். நம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது. 136 நாமெல்லாம் உப்பு பொம்மைகள் அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. விளக்கம்: கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம். 137 திருவடியை உறுதியாகப் பற்றுவோம் அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே. விளக்கம்: சிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது?   தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை  உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள். 138 சிவலோகம் அவன் திருவடியில் திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. விளக்கம்: ஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும். 139 குருவே சரணம் தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. விளக்கம்: குருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும். 140 புலன்கள் எல்லாம் நம் வசமாகும் தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. விளக்கம்: நம் தலைவனான சிவபெருமானை விருப்பத்தோடு சந்தித்தால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்து புலன்கள் விடுபட்டு உள்முகமாகத் திரும்பும். புலன்களை அடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. சிவபெருமானின் தரிசனம் கிடைத்தால் அதெல்லாம் தானே நடக்கும். 141 திருவடி ஞானம் சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே. விளக்கம்: நான் எப்போதும் சேர்ந்திருப்பது நந்தியம்பெருமானின் திருவடியை. என் நினைவில் எப்போதும் இருப்பது அப்பெருமானின் திருமேனி. நான் வணங்குவதும், பெயர் சொல்லித் துதிப்பதும் நந்தியின் திருநாமத்தை. என் அறிவில் நிலைத்து நிற்பது நந்தியின் திருவடி பற்றிய ஞானமே! 142 ஞானம் தரும் நந்தி! போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. விளக்கம்: ஞானத்தை தரும் புண்ணிய வடிவான எங்கள் நந்தியம் பெருமானை புத்தியில் வைத்து வழிபடுவர் புண்ணியர் ஆயினர். அவர் தம் வாழ்நாள் முடிந்த பின்னர் விண்ணை அடைந்து நாதனான சிவபெருமானின் நடனத்தை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து, அப் பெருமானை நோக்கி வேதம் துதித்திடுவார். யாக்கை நிலையாமை 143 சுட்ட மண்பாத்திரமாக இருப்போம்! மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே. விளக்கம்: ஒரே மண்ணினால் செய்யப்பட்ட இரு வகைப் பாத்திரங்களை நாம் பார்க்கலாம். ஒன்று தீயினால் நன்கு சுடப்பட்டு வலிமையாக இருக்கும். இன்னொன்று சுடப்படாத பாத்திரம், இது மழை பெய்யும் போது கரைந்து மீண்டும் மண்ணாகி விடும். இப்படித்தான் எண்ணில்லாத மக்கள் பக்குவப்படாமல் இறக்கின்றார்கள். சுடப்பட்ட மண் பாத்திரம் மழையில் கரைந்து விடாமல் வலிமையாய் இருப்பது போல் ஆன்மிகத்தில் பக்குவப்பட்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. பச்சை மண்ணாய் பக்குவமில்லாதவர்கள் மீண்டும் பிறப்பிற்கு ஆளாவார்கள். 144 தவமும் ஞானமும் துணை வரும் பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே. விளக்கம்: ஒரு குடும்பத்தலைவன் தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தந்து, தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அன்போடு இருக்கிறான். ஆயுள் முடிந்து அவன் இறந்து போகும் போது, அவன் யாருக்காக உழைத்தானோ, அந்த மனைவியும் பிள்ளைகளும் அவனுடன் செல்லமுடியாது. வாழ்நாளில் அவன் செய்த தவமும், பெற்ற ஞானமும் மட்டுமே அவனுக்குத் துணையாக வரும். வேறு எதுவும் அவனுடன் செல்ல முடியாது. 145 இறந்தால் மறந்து விடுவார்கள் ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. விளக்கம்: ஒருவர் தன் வாழ்நாள் முடிந்து இறந்தவுடன் அவரின் உற்றாரும் உறவினரும் கூடி ஓலமிட்டு அழுவார்கள். இறந்தவரின் பெயர் நீங்கி பிணம் என்று ஆகிவிடும். இறந்த அவர் உடலை முட்செடியான தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு, நீரினில் மூழ்கிக் குளிப்பார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரை மறந்து விடுவார்கள். இது மனிதரின் சுபாவம். 146 பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் போலுயிர் மீளப் புக அறி யாதே. விளக்கம்: இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது. 147 இறுதிக் கடனில் காக்கைக்கு உணவு சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக் குப்பலி காட்டிய வாறே. விளக்கம்: நம்முடைய வினைகளுக்குக் காரணமான இந்த உடல், கபம் முதலான நோய்களைக் கொண்டது.  இந்த உடல் நம் உயிரை விட்டுப் பிரிந்த பின், எலும்புகள் எல்லாம் வலுவிழந்து அழியும் தன்மை பெற்றுவிடும். இறந்தவரின் மூக்கில் கை வைத்துப் பார்த்து  இறப்பை உறுதி செய்வார்கள். பிறகு உடலை துணியால் மூடி சுடுகாட்டுக்குக் கொண்டு போய், காக்கைக்கு உணவு வைத்து விட்டு,  இறுதிக்கடன் செய்வார்கள். 148 உல்லாச வாழ்வு நிலைக்காது அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. விளக்கம்: நல்ல ருசியாக உணவினை சமைத்து உண்டார். கொடி போன்ற அழகான பெண்களுடன் உறவு கொண்டார். இடப்பக்கம் வலிக்கிறது என்று சொல்லியவாரே படுத்தார். அப்படியே இறந்து விட்டார். சுகவாசியான அவர் நல்ல வகை வகையான சாப்பாடு, அழகான பெண்கள் என்று வாழ்க்கையை அதிலேயே செலவு செய்தார். திடீர் என்று ஒருநாள் நெஞ்சு வலி என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான், அப்படியே செத்து போனார். வாழ்வின் நிலையின்மையை புரிந்து கொண்டு இளமையிலேயே இறைவனை நாடுவோம். 149 செல்வாக்கெல்லாம் செல்லுபடி ஆகாது மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே. விளக்கம்: ஒரு சிறந்த ஆண்மகனை நம்பி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நம்பி ஒருவன் ஊரில் நல்ல வசதியான மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான். அவன் ஊரே பார்த்து வியக்கும்படி பல்லக்கில் ஏறிச் சென்றான். ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் புத்தாடைகளைத் தானமாக வழங்கினான். அவ்வளவு செல்வாக்காக இருந்த அந்த நம்பி ஒருநாள் திடீரென இறந்து போனான். அவனுடைய பிள்ளைகளெல்லாம் அப்பா எனக் கூவி அழைத்தனர், ஆனால் அவன் திரும்பி வரவில்லை. 150 சுடுகாட்டில் பாசத்தையும் சேர்த்து எரிப்பார்கள் வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. விளக்கம்: ஒரு தலைவனும் தலைவியும், மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடியின் கீழ் அமர்ந்து பேசிப் பழகினார்கள். பிறகு ஒருநாள் திருமணம் செய்து கொண்டார்கள். வருடங்கள் செல்லச் செல்ல, அவர்களுக்கு இடையே இருந்த உறவு தெவிட்ட ஆரம்பித்தது. வயதான காலத்தில் ஒருநாள் அந்தத் தலைவன் இறந்து போனான். அவனை பாடையில் வைக்கும் போது அவன் மனைவியும் உறவுகளும் அழுது புலம்பினார்கள். ஆனால் சுடுகாட்டில் வைத்து அவனை எரிக்கும் போது, அவன் மேல் இருந்த பாசத்தையும் சேர்த்து எரித்து விட்டார்கள். பிறகு அவனை தெய்வமாக நினைத்து படையல் இட்டார்கள். 151 விடைபெறும் நேரம் விடை பெறுவான் கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.  விளக்கம்: நாடி பிடித்துப் பார்க்கும் மருத்துவரும், இனிமேல் இவரைக் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டார்கள். எதையும் யோசித்துப் பார்க்கும் திறன் அழிந்தது, உயிர் அறுந்தது. நெய்விட்டுச் சுவையாக சோறு உண்ட உடல் என்னும் ஐம்பூதக் கூறுகளும் அழிந்தன. மை தீட்டிய கண்கள் கொண்ட தன் மனைவியும், தான் வாழ்நாளில் சம்பாதித்த செல்வங்களும் இங்கேயே இருக்க, அவன் உயிர் உடலை விட்டு விடைபெற்றது. 152 இந்த உடல் வெறும் பந்தல் தான்! பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுவர மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. விளக்கம்: நம் உயிர் தங்கியிருக்கும் இந்த உடல் ஒன்றும் உறுதியான கட்டடம் அல்ல, இது ஒரு தற்காலிகப் பந்தல், அவ்வளவு தான் என்கிறார் திருமூலர். இந்த உடல் என்னும் பந்தல் பிரிந்தது. உள்ளிருந்த உயிர் தன் கட்டு நீங்கப் பெற்றது. இந்த உடலின் ஒன்பது வாசல்களும் ஒரே நேரத்தில் அடைக்கப் பெற்றன. காலனும் அங்கே விரைந்து வந்தான். அந்த துன்பமான நேரத்தில் அன்பு கொண்டவர்கள் எல்லாம் வந்து அழுது விட்டுச் சென்றார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? 153 நாடாண்ட நம்பியும் ஒரு நாள் காட்டுப் பல்லக்கில் ஏற வேண்டும்! நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. விளக்கம்: நாடாளும் மன்னன் அவன், நம் ஊருக்கும் அவன் தான் தலைவனாக இருக்கிறான். அவன் தன் விதி முடிந்து இறந்த போது, அவன் ஏறும் பல்லக்கு என்பது, சுடுகாட்டுக்குக் கொண்டு போகும் பாடையாகும். அவன் இறுதி ஊர்வலத்தில் நாட்டு மக்களெல்லாம் பின்னே இறுதி அஞ்சலிக்காக தொடர்ந்து வர, முன்னால் பறை கொட்டிப் போனார்கள். எந்த நாடாண்ட நம்பிக்கும், அவன் வாழ்நாள் இறுதியில் இப்படித்தான் நடக்கும். நாட்டுக்குத் தலைவன் ஆனாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குச் செல்லும் பல்லக்கில் ஏறித்தான் ஆக வேண்டும். 154 உடல் என்னும் கோயில் முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. விளக்கம்: நம்முடைய இந்த உடல் செம்மையான கோட்டைச் சுவர் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலுக்குள் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. இந்தக் கோயில் சிதைவடையும் போது, அதாவது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் போது, அந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஓட்டம் எடுத்து விடும். 155 யாரால் என்ன செய்ய முடியும்? மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம் தேறிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. விளக்கம்: தேன் நிறைந்த பூக்களைத் தலையில் சூடிக்கொள்ளும் மனைவி, பாடுபட்டு சம்பாதித்த செல்வங்கள், வெகு நாட்களாக வசித்து வரும் வீடு, இவை அனைத்தையும்  விட்டு ஒரு நாள் நீங்க வேண்டியிருக்கும். நம் உயிர் பிரியும் நாள் தான் அது. உயிர் நம் உடலை விட்டு பிரிந்தவுடன், இந்த உடலை ஊருக்குப் பொதுவாக உள்ள சுடுகாட்டுக்குப் பாடையில் வைத்து எடுத்துப் போவார்கள். அங்கே உறவினர் எல்லாம் தம் உள்ளத்தில் அன்பு பெருக, உடலை மயானத்தில் வைத்து விட்டுச் செல்வார்கள். 156 மரணத்தை பார்த்தும் நாம் கற்பதில்லை வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர் எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே. விளக்கம்: முந்தைய பாடலில் சொன்னது போல, இறந்து போன ஒருவனைச் சுடுகாட்டில் கொண்டு போய் வைப்பதைப் பார்த்த பிறகும், நாம் நம் உயிரும் ஒருநாள் இப்படி அகன்று விடும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் விரும்புகின்ற பொருளையே அரிய பொருளாக நினைத்து, அதன் பின்னாலேயே மயக்கத்தோடு திரிகிறோம். இப்படியே நிலையில்லாத பொருட்களின் பின்னால் அலைந்து திரிந்து, நம் மேன்மையை இழந்து சோர்வு அடைகின்றோம். 157 நிலையில்லாதது இந்த வாழ்க்கை ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. விளக்கம்: வாழ்க்கை சொல்லும் நீதி புரியாதவர்களே! இதைக் கேளுங்கள். ஒருவன் தன் விதி முடிந்து இறந்தவுடன், அவனுடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் அழுது புலம்புவார்கள். பிறகு அவர்கள் ஊருக்கு வெளியே உள்ளே நீர்த்துறைக்கு வந்து திரும்புவார்கள். இறந்தவனுடைய உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மரத்தின் வேரும் நுனியும் நீக்கப்பட்ட விறகினை அடுக்கித் தீ மூட்டுவார்கள். தகனம் முடிந்தவுடன் நீரில் மூழ்கி எழுவார்கள். 158 குடம் உடைந்தாலும் பயன்படும் ஆனால் இந்த உடல்? வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. விளக்கம்: வளம் மிகுந்த முற்றம் போன்றது இந்த உலகம். பிரமன் என்னும் ஒரு குயவன் தன் குளத்தின் மண்ணைக் கொண்டு வந்து இந்த முற்றம் முழுவதும் உயிர்களைப் படைக்கிறான். மனிதன் செய்யும் குடம் உடைந்தால் அதன் ஓடு வேறு எதற்காவது பயன்படும் என்று பாதுகாத்து வைப்போம். ஆனால் பிரமன் செய்யும் இந்த உடல் என்னும் குடம் உடைந்தால் அதை கொஞ்ச நேரம் கூட வைத்திருக்க மாட்டோம். சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து எரித்து விடுவோம். 159 உடல் வெந்த பிறகு உயிரின் நிலை என்ன? ஐந்து தலைப்பறி ஆறு சடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே. விளக்கம்: நம் உடலில் மிகவும் முக்கியமானவை ஐம்பொறிகள். அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவை ஆறு ஆதார மையங்களாக உள்ளன. எலும்பின் இணைப்புகள் முப்பது, நுண்ணுடம்பு எட்டு, வாயுக்கள் பத்து, தசை நார்கள் ஒன்பது, எலும்புகளின் வரிசை பதினைந்து. இவை அனைத்தும் ஒரு நாள் சுடுகாட்டில் வெந்து சாம்பலாகும். அதற்குப் பிறகு இந்த உயிரின் நிலை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 160 அத்திப்பழமும் அறைக்கீரை விதையும் அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. விளக்கம்: இந்தப் பாடலில் நம் உடலை அத்திப்பழத்துடனும், நம் உயிரை அறைக்கீரை விதையுடனும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் திருமூலர். அத்திப்பழமாகிய உடலையும், அறைக்கீரை விதையான உயிரையும் அந்த இறைவன் சமைத்து, நம்மை இந்த உலகில் பிறக்கச் செய்தான். நாம் உயிர் விடும்போது,  நம்முடைய உடல் தன்னுடைய வினைப்பயனை எல்லாம் உயிரிடம் கொடுத்து விடுகிறது. (இதைத்தான் அத்திப்பழத்தை அறைக்கீரை வித்து உண்டது என்கிறார்.) பிறகு இறந்த உடலை அழுகை ஒலியுடன் உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். இறப்பு நம் உடலுக்குத் தான். நம்முடைய பாவ, புண்ணியங்கள் நம்மை விட்டு விலகாது. 161 சிவபெருமான் கட்டித் தரும் வெள்ளிக் கோயில் மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே. விளக்கம்: பிரமனால் கட்டப்பட்ட நம்முடைய இந்த உடல் என்னும் வீடு, சரியான கட்டுமானம் இல்லாதது. இந்த வீட்டிற்கு மேலே கூரை இல்லை. கீழே கூரை தாங்கும் விளிம்பும் இல்லை. ஒப்புக்கு இரண்டு கால்களும், ஒரு முதுகுத்தண்டும் இருக்கின்றன. அவைதான் நம்மை நடமாட வைக்கின்றன. ஆனால் சிவபெருமான் ஒரு சிறந்த வேலையான். அவன் நமக்காக ஒரு வெள்ளிக் கோயிலையே கட்டித்தருகிறான். நாம் இந்த உடலின் மீது பற்று வைக்காமல், அவன் திருவடியையே நாடி இருந்தால், அழிவில்லாத அந்த வெள்ளிக் கோயிலில் குடியிருக்கலாம். 162 தேடிய தீயினில் தீய வைத்தார்கள் கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே. விளக்கம்: விதி முடிந்து இறந்து போனவனுடைய உடல், பொலிவை இழந்த கூடம் போலக் கிடந்தது. அவன் இருதயத்தின் சீரான லயம் நின்று துடிப்பும் அடங்கியது. அங்கே சிவனடியார்கள் திருமுறைகளைப் பாடுகிறார்கள். உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். பிறகு அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனத்துக்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து தீய வைத்தார்கள். 163 உலக வாசனை தெரியும் வயது! முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறி யீரே. விளக்கம்: நாம் நமது தாயின் வயிற்றில் கருவாக இருந்து, முந்நூறு நாட்களுக்குப் பிறகு பிறக்கிறோம். இதை நம் வாழ்வின் தொடக்கம் என்று நினைக்கிறீர்களா? அது அறியாமை ஆகும். பன்னிரெண்டு வயதில் நமக்கு உலக விஷயங்களின் வாசனை தோன்றுகிறது. பிறகு எழுபது வயதில் நாம் சாகும் வரை அழிவை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோம். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். 164 விளக்கு இங்கே! ஒளி எங்கே? இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. விளக்கம்: விளக்கில் எண்ணெய் விடும் பகுதி இடிஞ்சில் எனப்படும். இந்த உடல் என்னும் விளக்கை இங்கேயே விட்டு விட்டு உயிர் என்னும் தீபஒளியை அந்த இயமன் எடுத்துச் செல்கிறான். விளக்கின் எண்ணெய் தீர்ந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அழுது புலம்புகிறார்கள். காலையில் விடியும் ஒரு நாள் பொழுதில் மாலை இருள் வந்தே தீரும். நம் வாழ்நாளும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம் உடலை நிலையானதாக நினைத்து அதையே பற்றிக் கொள்கிறோம். ஒருநாள் உயிர் உடலை விட்டுப் பிரியும் நிலை வரும்போது பதறுகிறோம். 165 ஏழு நரகங்கள்! மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவந் தொழாமல் இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர் குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே. விளக்கம்: மடல் விரிந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமான், தன்னை வெளிப்படுத்தாமல் நம்மிடம் ஒளிந்து விளையாடுகிறான். நம்முடைய உடலும், உயிரும் ஒன்றாக இருக்கும் காலத்தில், அதாவது நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அந்த சிவபெருமானை வணங்கி இருப்போம். பிற உலக விஷயங்களிலேயே தனது வாழ்நாளைச் செலவிடுபவர்கள், யமதூதர் வரும் நேரம், குடல் நடுங்குவார்கள், ஏழு வகையான நரகங்களையும் அனுபவித்து வருந்துவார்கள். அள்ளல், ரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி ஆகியவை ஏழு வகையான நரகங்கள் ஆகும். 166 சுற்றி எத்தனை படை இருந்தாலும், போகும் உயிரை தடுக்க முடியாது குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு இடையும்அக் காலம் இருந்தது நடுவே புடையு மனிதனார் போக்கும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே. விளக்கம்: நாடாளும் மன்னர்கள் வெண்கொற்றக் குடையும், வெற்றி தரும் வாளும் கொண்டு குதிரையில் வலம் வரும் காலஅளவு மிகச் சொற்பமானதாகும். அவரைச் சுற்றி அவருடைய படைகளும், மக்களும் சூழ்ந்து இருந்தாலும், அந்த மன்னரின் பிராணன் இட வலம் மாறி உயிர் பிரிந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. 167 இறந்த பிறகு உடலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை! காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. விளக்கம்: உயிர் இல்லாத நிலையில், நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள் நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு, அதாவது நாம் செத்துப் போன பிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தி தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன? பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இந்த வெறும் கூட்டைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தொழில் அறச் செய்து - இந்த உடல் நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாக இயங்குகிறது. செல்வம் நிலையாமை 168 செல்வம் வேண்டாம், செல்வன் போதும். அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவ மன்றே. விளக்கம்: மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும். பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான். தெருள் - தெளிவான அறிவு 169 செல்வ மழையில் நனையலாம்! இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. விளக்கம்: வானத்தில் அவ்வளவு பிரகாசமாக உலவும் நிலவு கூட மாதத்தில் ஒரு நாள் தன் ஒளி இழந்து இருளாகிறது. அப்படி இருக்கும் போது துக்கத்தையே தரும் செல்வத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இன்றிருக்கும் செல்வம் நாளை இல்லாமல் போகலாம். நாம் நம் மனமயக்கம் நீங்கி வானவர் தலைவனான சிவபெருமானை நாடி நிற்போம். அவன் திருவருளாகிய செல்வமழையில் நனையலாம். சிவபெருமானின் அருளே பெருஞ்செல்வமாகும். 170 நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. விளக்கம்: நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி இருக்கும் போது, நம்மிடம் இருக்கும் செல்வமெல்லாம் நமக்குச் சொந்தமானது என்று நினைப்பது அறியாமை ஆகும். உடலும் உயிரும் ஒன்றாகப்  பிறந்தாலும் உயிர் போகும் போது உடல் அழிந்து விடும். அதனால் உயிர் உள்ள போதே அகக்கண்ணில் உள்ள பேரொளியை கண்டு உணர்வோம். சாயை - நிழல், மாடு - செல்வம், ஏழை - அறியாமையில் இருப்பவர்கள் 171 அதிக செல்வம் ஆபத்தானது ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. விளக்கம்: தேன் இருக்கும் மலரை அதன் வாசனையைக் கொண்டு அறிந்து கொள்ளும் வண்டு. அப்படி வாசனை பிடித்து மலர்களில் உள்ள தேனைக் கொண்டு வந்து மரக்கிளையில் சேர்த்து வைக்கும். அந்தத் தேனின் அளவு மிகும்போது அது வலிமையுடைய வேடர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்கள் தேனை எடுத்துச் செல்ல முயலும் போது, வண்டுகள் வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது. நாம் தேடி வைக்கும் செல்வத்தின் நிலையும் அதுதான். ஒருவனிடம் அதிகமான செல்வம் இருந்தால், பகைவர்கள் தங்கள் சூழ்ச்சியாலும், வலிமையாலும் அதை அபகரிக்க நினைப்பார்கள். இரதம் - இரசம், தேன் கொம்பு - மரக்கிளை 172 தெளியுங்கள்! தெளிந்த பின் கலங்காதீர்கள்! தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. விளக்கம்: செல்வம் நிலையானதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தெளிந்த பின் மீண்டும் மனக்குழப்பம் அடையாதீர்கள். ஆற்று வெள்ளம் போல செல்வம் வந்து சேர்ந்தாலும் மனம் மயங்கி விடாதீர்கள். பணத்தினால் ஏற்படக் கூடிய மனமாற்றத்தை மறுத்தால் மனம் தெளியும். மேலும் நம் வாழ்நாளின் இறுதியில், எமன் வந்து கூப்பிடும் போது செல்வத்தின் மேல் உள்ள பற்றை கடந்து செல்ல முடியும். பணத்து மேல ரொம்ப ஆசை வச்சுட்டா, கடைசியில சாவு ரொம்ப துன்பமானதா இருக்கும். கலங்கன்மின் - மனக்குழப்பம் அடையாதீர். கலக்கி மலக்காதே - குழம்பி மயங்காதே. குதித்தல் - கடந்து விடுதல். 173 அவிழ்கின்ற ஆக்கை இது! மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. விளக்கம்: அளவில்லாத பொன்னையும், செல்வத்தையும் கண்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவையெல்லாம் வெள்ளம் வந்தால் கவிழ்கின்ற படகைப் போல அழியக்கூடியவை. நம் உடலையும், உயிரையும் பிணைத்துள்ள கட்டு ஒருநாள் அவிழ்ந்து விடும். மனத்தில் தெளிவில்லாதவர்கள், அழியப்போகிற இந்த உடலுக்கு செல்வம் சேர்த்து வைப்பதையே வீடு பேறாக நினைக்கிறார்கள். கலம் - படகு, ஆக்கை - உடல் 174 போதாது போதாது என்பார் வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள் மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக் கூவுந் துணையொன்று கூடலு மாமே. விளக்கம்: இல்லற வாழ்வில் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தோர் ஆகியோருக்குத் தேவையான பொருளுக்கு அளவு என்பதே கிடையாது. அவர்களுக்காக மிகுதியான பொருள் சேர்த்து அதை பெருக்கிக் கொள்வதிலேயே வாழ்நாளை செலவிடுபவர் இந்த உலகை விட்டு போகும் போது யாரையும் துணைக்கு கூப்பிட முடியாது. 175 உயிர் வெளியேற ஒன்பது வழி வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. விளக்கம்: அர்த்தம் இல்லாத இந்த உலக வாழ்க்கையின் மீது நமக்கு ஆசை பெருகி விட்டது. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வது இல்லை. நமது உடலையும் உயிரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் தறி ஒன்று உள்ளது. அந்தத் தறியின் கட்டு அவிழும்போது உயிர் வெளியேற ஒன்பது வழியிருக்கிறது. நாம் இறந்த பிறகு நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்த தாய் மற்றும் உறவினர்கள் எல்லாம் வணங்கிச் சுடுகாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 176 இறந்த பின் எடுத்துச் செல்லக்கூடிய பரிசு உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே. விளக்கம்: நம்முடைய உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்தான் நமக்கு ஒரு விஷயம் புரியும்.  இந்த வாழ்க்கையில் நாம் எந்தப் பரிசையும் வென்றிருக்கவில்லை என்பது தான் அது. நாம் சம்பாதித்திருப்பது எல்லாம் உண்மையான பரிசு இல்லை. நம் உயிர் இந்த உடலை விட்டு பிரியும் போது நாம் எடுத்துச் செல்லக் கூடிய செல்வம் தான் உண்மையான பரிசு. அண்ணல் சிவபெருமானை நினைத்திருக்கும் மனநிலை தான் உண்மையில் நாம் எடுத்துச் செல்லக்கூடிய பரிசாகும். சுடுகாட்டில் எரியும் நெருப்பு கூட நம் உடலைத் தான் எரிக்கும், நம் சிவநினைவை அந்த நெருப்பு எரிக்காது. இளமை நிலையாமை 177 தினமும் ஏறுகிறது நம் வயசு! கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. விளக்கம்: இந்த உலகம் மிகவும் வியப்பானது. கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் மாலையில் மேற்கே மறையும் போது, நமக்கு ஒருநாள் வயசு அதிகமாகி விட்டது என்பதை நாம் உணர்வதில்லை. இதை உணராத நாம் கண்ணிருந்தும் குருடராக இருக்கிறோம். இளங்கன்று ஒன்று வெகு சீக்கிரம் வளர்ந்து எருதாகி பிறகு தளர்ந்து விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை நாம் உணர்வதில்லை. 178 எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடரறி யாரே. விளக்கம்: நம் வாழ்நாளில் பல ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆயினும் அப்பனாகிய ஈசனை நம் மனம் இன்னும் நாடவில்லை. சிவ போதத்தில் புகுந்து அவனை அறியவும் இல்லை. நமக்கு நீண்ட ஆயுள் கிடைத்தும், அது நீட்டிக்கப் பெற்றும் தூண்டு விளக்கின் சுடராய் விளங்கும் ஈசனை அறியாமல் இருக்கின்றோமே! 179 இளமை அது போனா திரும்பாது தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. விளக்கம்: நம்முடைய இளமை நாள்தோறும் தேய்ந்து அழியும் தன்மை கொண்டதாகும். இளமை குறுகி ஒழிந்தபின் முதுமையில் செயற்கரிய செயல்கள் செய்வது கடினமானது. தன்னுடைய சடையில் பாயும் தன்மை கொண்ட கங்கையை படர விட்டிருக்கும் சிவபெருமானை கூர்ந்து நினைத்து, அவன் நினைவில் பொருந்திக் கொள்வோம், உயிர் உள்ள போதே. ஆன்மிக விஷயங்களில் அடியெடுத்து வைக்க இளமைப் பருவமே பொருத்தமானது. கடைமுறை – முடிவில்,  ஆய்ந்து - குறுகி, உற்று - கூர்ந்து, ஓர்ந்து - நினைத்து 180 இளமையில் கரும்பு, முதுமையில் எட்டிக்காய் விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும் கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. விளக்கம்: அது ஒரு காலம். அப்போதுநான் இளமையாக இருந்தேன். மெல்லிய இயல்பு கொண்ட பெண்கள் என்னை இனிதாக விரும்புவார்கள். எந்த அளவு இனிமையாக என்றால், கரும்பைப் பிழிந்து அதன் கடைசிச் சாறையும் பிழிந்து எடுத்தால் எவ்வளவு இனிமை இருக்குமோ அவ்வளவு இனிமை. மெல்லிய அரும்பு போன்ற முலைகளைக் கொண்ட அந்தப் பெண்களுக்கு அப்போது கரும்பாக இனித்தேன். இப்போது என் இளமை போன பிறகு அவர்களுக்கு நான் எட்டிக்காயாக கசக்கிறேன். 181 திருவடியிலே விழுந்து கிடக்க விரும்புகிறேன் பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே. விளக்கம்: நம் வாழ்நாளில் மூன்று பருவங்களைக் கடக்கிறோம். பாலன், இளைவன், முதியவன் ஆகிய இந்தப் பருவ மாற்றம் சொல்லும் சேதியை நாம் உணர்வதில்லை. எந்தப் பருவத்திலும் நாம் நின்று விட முடியாது, நம்மை அறியாமலே அடுத்தப் பருவத்திற்கு சென்று விடுகிறோம். இதை உணர்ந்த நான், இந்த பூமி மட்டுமில்லாமல் எல்லா உலகத்திலும் ஊடிப் பரவியிருக்கும் அந்த ஈசனின் திருவடியிலேயே மேலும் மேலும் விழுந்து கிடக்க விரும்புகிறேன். 182 வாழ்நாளை வீணாக்க வேண்டாமே! காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாணாள் கழிவதும் சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே. விளக்கம்: தினமும் காலையில் எழுகிறோம். மாலையில் உறங்கச் செல்லும்போது, ஒருநாள் நிறைவடைந்து, நமது வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது. இதை உணர்ந்து, நாம் நமது வாழ்நாளை வீணாக்காமல், அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம். அந்த ஈசன் கோபம் கொண்டவன் என்றாலும், தன்னை உணர்வுபூர்வமாக நினைப்பவர்களுக்கு இன்பம் அளிக்கிறான். 183 ஐந்து பறக்கும் மிருகங்கள் பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. விளக்கம்: ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகியவற்றை ஐந்து பருத்த ஊசிகள் என்று சொல்கிறார் திருமூலர். இந்த ஐந்து ஊசிகளும் நம் உடல் என்னும் தோல்ப் பைக்குள் வாழ்கின்றன. இந்த ஐந்து ஊசிகளும் பறக்கும் தன்மை கொண்ட மிருகங்களாகும். ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை தளர்ச்சி அடையும் போது, அந்த ஐந்து பரு ஊசிகளும் வெளியே பறந்து சென்று விடும். இந்தத் தோல்ப் பையும் கூடவே பறந்து விடும். அதனால் ஐம்பொறிகள் ஆரோக்கியமாக இருக்கும் இளமைக் காலத்திலேயே அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம். 184 முப்பது வயது முக்கியமானது கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. விளக்கம்: நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும் கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள். 185 தேயும் நிலா சொல்லும் பாடம் ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. விளக்கம்: பதினாறு கலைகளும் நிரம்பப்பெற்ற பூரணச்சந்திரன், மறுநாளே தேய்ந்து குறைந்து போவதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை உணர மறுப்பவர்கள் நீசர்கள். அவர்களை சினம் கொண்ட காலன் மறுபடியும் ஒரு கருப்பையில் வைப்பான். மனமயக்கம் நீங்காத அவர்கள் வேறு வழியில்லாமல் அந்தக் குழியில் போய் விழுவார்கள். 186 மரண நேரத்தில் பயமில்லாமல் இருக்கலாம் எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளில் இருந்துகண் டேனே. விளக்கம்: நம்முடைய இறுதி நாள் என்பது நம் முதுமைக் காலத்தில் தான் வரும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அப்போது நம் இளமை இன்னும் மிச்சம் இருக்கலாம். அதனால் நாம் நம் இளமைக் காலத்தில் இருந்தே அந்த ஈசனைப் புகழ்ந்து பாடி வணங்குவோம். அந்நேரத்தில் மரணம் வந்தால் கூட, நம்மை இந்த உலகத்தில் இருந்து யாரோ தூக்கி எறிவது போன்ற உணர்வு தோன்றாது. மரண நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பயமில்லாமல் பார்க்கலாம். உயிர் நிலையாமை 187 திருவடியிலே வாடாத பூக்களாய் இருக்கலாம் தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே. விளக்கம்: குளிர்ச்சியான மலர்கள் பூத்துக் குலுங்கும் தளிரான கிளையைப் பார்க்கும் போது நமக்கு மகிழ்வாக இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அந்தக் கிளையில் உள்ள இலைகளும் மலர்களும் சருகாகி விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்க்கும் போது எந்த உயிரும் நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வதில்லை. இதை உணர்ந்து நாம் உலகியல் விஷயங்களைத் தவிர்த்து அந்த ஈசனின் திருவடியைத் துதித்து இருப்போம். ஈசனின் திருவடியை நாடாதவர்கள், அந்த ஈசன் தன்னை விரும்பி அழைப்பதை உணர மாட்டார்கள். 188 ஐம்புலன்களுக்கு வரும் ஓலை ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. விளக்கம்: நம் உடலை ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு புலன்களுக்கும் ஒரு வேலைப்பொறுப்பு இருக்கிறது. ஐம்புலன்களுக்கும் நாயகனாகிய உருத்திரனிடம் இருந்து ஓலை வரும் நேரம், ஐம்புலன்களும் தமது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும். அதனால் புலன்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே அந்த ஈசனின் திருவடியை நாடி இருப்போம். 189 இரு வகையான தாளங்கள் மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. விளக்கம்: மண்ணால் ஆகிய கோயில் நம்முடைய உடல். இதன் உள்ளே நாம் இழுக்கும் மூச்சுக்காற்றை பூரகம் எனவும், வெளியே விடும் மூச்சை இரேசகம் எனவும் சொல்கிறோம். இந்தப் பூரகம், இரேசகம் ஆகியவை இரண்டு தாளங்களாக உள்ளன. நம்முடைய உயிர் என்னும் அரசனும் இந்த மண்ணால் ஆகிய கோயிலுக்குள் வாழ்கிறான். அந்த அரசன் ஒருநாள் வெளியே கிளம்பி விட்டால், இந்த உடல் வெறும் மண்ணாகி விடும். 190 வெந்து அழியக்கூடியது இந்த உடல் வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடும் நந்தியை வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. விளக்கம்: உடல்கள் வேகின்ற சுடுகாட்டில் ஆடும் அந்த ஈசனை, வேதங்களை நமக்களித்த அந்தக் கூத்தனை நாம் அறிந்து கொள்ளவில்லை. வெந்து அழியக்கூடிய இந்த உடலுக்குள்ளே நின்று விளையாடும் நந்திபெருமானையும் நாம் அறியவில்லை. இந்த உடல் வெந்து அழியக்கூடியது என்பதை அறியாதவர்களால், இந்த உடலை தாங்கி நிற்கும் அந்த ஆருயிரான ஈசனையும் தெரிந்து கொள்ள முடியாது. வேங்கடநாதன் - வேம் + கடம் + நாதன் - வேகின்ற சுடுகாட்டுக்கு நாதன் வேங்கடத்துள்ளே - வேம் + கடம் + உள்ளே - வேகக்கூடிய உடலின் உள்ளே 191 எங்கும் எதிலும் பரவி இருக்கிறான் சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. விளக்கம்: சூரியன் தனது ஒளியை பத்து திசைகளிலும் பரவவிட்டு, இந்த உலகில் உள்ள அனைத்தையும் உணர்கிறான். ஆனால் நம் தலைவனான சிவபெருமான், இந்த உலகில் சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன்னுடைய உணர்வாலே அளக்கிறான். அவன் உணராத பொருள் இல்லை இவ்வுலகத்தில். இந்த உலகின் மனிதர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்வதில்லை. இந்த உடல் அழியக்கூடியது, நம்முடைய உயிர் நிலையானது இல்லை என்பதைப் புரிந்தவர்கள், அந்த ஈசனை உணர்ந்து, அந்த உணர்விலே கலந்திருப்பார்கள். பத்து திசைகள் - எட்டு திசைகள் + மேலே + கீழே பொன்று - இறத்தல், நிலையாமை 192 எல்லாமே கொஞ்ச நேரம்தான் மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவது ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. விளக்கம்: சிக்கல் நீக்கி பார்த்து பார்த்து நெய்யப்பட்ட பட்டாடை ஒரு நாள் கிழிந்து போகும். இந்த அழியும் தன்மையை நாம் அறிந்து கொள்வதில்லை. அதே போல் நாம் பெருமை பட்டுக் கொள்ளும் நம்முடைய கருமயிர் வெண்மயிராக மாறும் கால அளவும், நம்முடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள கால அளவும் மிகவும் குறைவானதே. இதை நாம் உணர்வோம். நம் வாழ் நாள் மிகவும் குறைவானதே. அதனால் காலத்தை வீணாக்காமல் நாம் அந்த இறைவனின் திருவடியை நாடி இருப்போம். (பட்டிகை - பட்டாடை, பீறும் - கிழிந்து விடும், ஈறு - இறப்பு) 193 உடலுக்குள்ளே ஒரு சமையல் நடக்குது துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே. விளக்கம்: நாம் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் - அரிசி, பானை, அகப்பை மற்றும் நெருப்பு. அது போலவே நம் உடல் இயக்கத்திலும் ஒரு சமையலே நடக்கிறது. நம் உயிரே அரிசி, உடல் பானை, நாம் விடும் மூச்சுக்காற்றே அகப்பை ஆகும். உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்து நெருப்புகள் உள்ளன. இவ்வாறு தொடர்ந்து நடக்கும் சமையலே நாம் உயிர் வாழ்வதாகும். நம்முடைய வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கின்றன. சுடுகாட்டில் நம் உடல் எரிவதற்கு முன்பாக, நம் உயிர் என்னும் அரிசியை சமைக்கும் பொறுப்பை அந்த ஈசனிடம் ஒப்படைப்போம். அதாவது நாம் உயிருள்ள போதே அந்த ஈசனை சரணடைந்திருந்தால், நமக்கு மறுபிறவி என்பது கிடையாது. துடுப்பு - அகப்பை 194 தேனைத் தேடும் வண்டு இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி கண்புற நின்ற கருத்துள்நில் லானே. விளக்கம்: இன்பத்தை தேடும் வண்டு, தேன் மிகுந்த மலர்களைத் தேடிப்போய் வாசம் மிகுந்த தேனை உண்டு களிக்கும். அது போல உண்மையான இன்பத்தைத் தேடும் நாம் சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றில் காணக்கூடிய சிவனை நாடி வழிபட்டால், நாம் தேடும் இன்பம் கிடைக்கும். தன்னை நினைக்காத மனத்தில் அந்த சிவன் நிற்க மாட்டான். 195 முக்திக்கு மானிடப் பிறவியை விட சிறந்த வழி ஏது? ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. விளக்கம்: இந்த உலக வாழ்வில் நாம் நலம் பெற புண்ணிய காரியங்களைச் செய்வோம். நம்முடைய இறப்பிற்குப் பிறகு முக்தி நிலையை அடைய, புனிதனான அந்த சிவபெருமானை நாடி வணங்குவோம். முக்தி அடைய நாம் ஒரு வழிமுறையைத் தேடினால், அதற்கு இந்த மானிடப் பிறவியை விட ஒரு சிறந்த வழி கிடையாது. மானிடராய் பிறப்பது எவ்வளவு அருமையான விஷயம் தெரியுமா? இதை உணர்ந்து நாம் அந்த சிவனை நாடி இருந்து, நம் வாழ்நாள் முடிந்தவுடன் முக்தி நிலையை அடைவோம். 196 சிறிது உணவு தானம் செய்வோம் அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே. விளக்கம்: நாம் வஞ்சனை பேசி தீயவழியில் செல்ல வேண்டாம். பேராசை கொண்டு அடுத்தவர் பொருளைக் கவர வேண்டாம். எல்லா வகையிலும் நல்ல பண்புகளைக் கொண்டவராக இருப்போம். சாப்பிடும்போது சிறிது உணவாவது பிறருக்கு கொடுத்து விட்டு சாப்பிடுவோம். கொல்லாமை 197 இறைவனுக்கேற்ற சிறந்த மலர் பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. விளக்கம்: பற்றுக்களில் இருந்து நாம் விடுபட நம் குருநாதனாகிய சிவபெருமானுக்குப் பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறோம். ஆனால் நம் சிவனுக்கு பிடித்த மலர், பிற உயிர்களைக் கொல்லாமை என்கிற மனமாகும். நம்முடைய நடுங்காத திட மனமே, நாம் அவனுக்கு ஏற்றும் சிறந்த தீபமாகும். நம் குருநாதனை வைத்து வழிபடச் சிறந்த இடம் நம்முடைய இருதயமே! 198 கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்! கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. விளக்கம்: எப்போது பார்த்தாலும் கொல்லு, குத்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் கொலைத் தொழில் புரிபவர்களுக்கு ஒருநாள் துர்மரணம் தான் ஏற்படும். அவர்களை யமதூதர்கள் வலிய கயிற்றால் கட்டி தீயினால் ஆன நரகத்திற்கு இழுத்துச் சென்று “இங்கேயே இரு” என்பார்கள். அங்கே அவர்களை நெடுங்காலம் வைத்திருந்து நட என்றும் நில் என்றும் ஆணையிட்டு வதைப்பார்கள். வல்லடி - துர்மரணம் புலால் மறுத்தல் 199 நீங்கள் அசைவமா? இதைப் படியுங்கள் பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. விளக்கம்: தீய உணவான மாமிசம் உண்பவர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். அவர்களை எமதூதர்கள் எல்லாரும் காணும்படியாக கறையானை அகற்றுவது போல பறித்து எடுத்துப் போய் தீ நிறைந்த நரகத்தில் மல்லாக்கத் தள்ளி கிடத்தி வைப்பார்கள். புலையர் - கீழ் மக்கள்,    இயமன் - எமன், செல் - கறையான் 200 இவை ஐந்தும் பெரும் பாவங்கள் கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. விளக்கம்: கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகியவை பெரும் பாவங்களாகும். அவற்றை விலக்கி விட்டு நம்முடைய மேலான தெய்வமாம் சிவபெருமானின் திருவடியைப் பற்றி இன்பத்தை உணர்வோம். அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால் பிறகு பாவங்கள் செய்ய மாட்டோம். எப்போதும் பேரின்பத்தில் திளைத்திருப்போம். பிறன்மனை நயவாமை 201 அடுத்தவர் மனைவியை பாக்காதீங்க! ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. விளக்கம்: அன்புடைய மனைவி ஒருத்தி வீட்டில் இருக்கும் போது, பிறரின் மனைவி மேல் தகாத ஆசை கொள்ளும் ஆண்களின் செயல் எப்படி இருக்கிறது என்றால், நன்கு காய்த்து பழுத்த பலாப்பழம் ஒன்று வீட்டில் இருக்கும் போது, அதைச் சாப்பிடாமல் காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பப்படுவது போல் இருக்கிறது. 202 பிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும் திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே. விளக்கம்: ஒருவன் தன்னிடம் உள்ள கனிந்த மாம்பழத்தை, இதை வைத்திருந்து பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். பக்கத்தில் இருந்த ஒரு புளியமரத்துக் கிளையில் ஏறி புளியம்பழத்தை பறித்து சாப்பிட்டான். புளிப்புச் சுவை அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, வைத்திருந்த மாம்பழமும் கெட்டு விட்டது. அது போலவே சிலர், தன் மனைவி எங்கே போய் விடப் போகிறாள் என்று நினைத்து பிறர் வீட்டுப் பெண்ணைத் தேடிப் போகிறார்கள். எங்கே போனாலும் அவர்கள் சுகப்பட மாட்டார்கள், வம்சம் இல்லாதவர்களாகவும் ஆவார்கள். 203 நம்முடைய அறிவின் அளவு என்ன? பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும் இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் மருள்கொணட மாதர் மயலுறு வார்கள் மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. விளக்கம்: நம்முடைய அறிவின் அளவு என்பது, இருட்டுக்குள்ளே ஒரு மின்னலின் போது தெரியும் காட்சி போன்றது தான். சிலர் இது புரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் பணவசதியும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படிப்பட்ட அவர்கள் மருட்சியான பார்வை கொண்ட பெண்களின் மீது மயக்கம் கொள்கிறார்களே தவிர, தங்கள் அறியாமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை. மகளிர் இழிவு 204 பொதுமகளிர் சகவாசம் வேண்டாம் இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. விளக்கம்: மரத்தின் இலைகளின் ஊடே காய்த்து தொங்கும் எட்டிப்பழம் பார்க்க அழகாகவே இருக்கும். பார்க்க அழகாக இருக்கிறதே என்பதற்காக அதை உண்ண முடியாது. அது விஷத்தன்மை உடையதாகும். பொதுமகளிர் சகவாசமும் எட்டிப்பழம் உண்பது போன்ற விஷயம் தான். அந்தப் பெண்கள் தங்கள் முலை அழகைக் காட்டி சிரித்து மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து விலகி நிற்கின்றவாறு நம் மனத்தை அறிவுறுத்தி வைக்க வேண்டும். 205 உண்மையான இன்பம் வீட்டில் இருக்கிறது மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே. விளக்கம்: இல்லற வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மனைவியிடம் இன்பத்தை நாடும்போது, அங்கே அவர்கள் இருவரும் சுனைநீரின் நீர்ச்சுழியில் மூழ்குவது போல இன்பத்தில் மூழ்குவார்கள். இதுவே உண்மையான இன்பமாகும். பொதுமகளிரிடம் காணும் இன்பம் என்பது கனவில் தோன்றும் சிறுஇன்பம் போன்றதாகும். அதை உண்மை என்று நம்பி நாட வேண்டாம். 206 பொதுமகளிரிடம் ஏமாறாதீர்கள் இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும் மயலுறும் வானவர் சாரஇரும் என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. விளக்கம்: ஒருவனது வாழ்க்கை நிலை நன்றாக இருக்கும் போது, பெண் யானையைப் போன்ற அழகிய இளம் பெண்கள் மழையில் புல் நனைந்திருப்பதைப் போல் வந்து கலந்திருப்பார்கள். அந்தப் பெண்கள் அவனை விட வசதியான இன்னொருவனைப் பார்த்து மயங்கி விட்டால், முதலாமவனை காத்திருக்கச் சொல்லித் தவிர்ப்பார்கள். மேலும் அவனை தனியாக அழைத்து ஏதாவது பேசி வழி அனுப்பி வைக்கப் பார்ப்பார்கள். பொதுமகளிரின் தன்மை அறியாமல், அவர்களைத் தேடி வாழ்நாளை வீணாக்க வேண்டாம். அவர்கள் இன்னும் தகுதியான ஒருவன் கிடைத்து விட்டால், அவனோடு ஒட்டிக் கொள்வார்கள். பிடி என்னும் சொல்லுக்கு பேய் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. அந்த அர்த்தமும் இங்கே பொருத்தமாகவே உள்ளது. இயல் - தகுதி, பெருமை, பிடி - பெண் யானை, மயல் - மயக்கம், அயல் - அருகிடம் 207 பார்த்தால் கரும்புச்சாறு ஆனால் உண்மையில் வேப்பஞ்சாறு வையகத் தேமட வாரொடும் கூடியென் மெய்யகத் தோடும் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெரு வேம்பது வாமே. விளக்கம்: இந்த உலகத்தில் பொது மகளிரோடு கூடுவதில் அப்படி என்ன பெரிய இன்பம் இருக்கிறது? மெய்ப்பொருளை உணர்ந்த பெரியவர்களைக் கேளுங்கள், அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொல்வார்கள் இவ்வாறு - “பொதுமகளிரிடம் இன்பம் என்பது அனுபவிக்கும் போது கரும்புச்சாறு போல இனிக்கும், ஆனால் மனத்தில் வேம்பு போன்ற ஒரு கசப்பினை உண்டாக்கும்”. 208 பொதுமகளிரிடம் செல்லும் நண்பரை தடுத்து நிறுத்துங்கள் கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. விளக்கம்: மனஉறுதி இல்லாத கோழைகள் தான் பொதுமகளிரைத் தேடிப் போவார்கள். அவர்களின் இந்தச் செயல் பாசி படர்ந்த குளத்தினில் மூழ்குவது போன்றதாகும். விவேகம் உள்ள அவரது நண்பர்கள் அவரை அந்தப் பாதைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோழைகள் மீள முடியாத படுகுழியில் விழுந்து விடுவார்கள். நல்குரவு 209 வறுமை வந்தால் வாழ்வு இல்லை புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ராயினார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. விளக்கம்: வறுமை வந்தால் வாழ்க்கை கிழிந்த புடைவை போல் பயனில்லாமல் போய்விடும். மனைவியும், பிள்ளைகளுமே அன்பில்லாதவராய் ஆவார்கள். உறவினர்களும் விட்டு விலகுவார்கள், அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் எதுவும் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இராது. நாட்டு நடப்பு எதிலும் அவருக்கு பங்கில்லை. ஏதோ இயங்குகிறார் இந்த உலகத்தில், அவ்வளவுதான். 210 வறுமையிலும் இறைவனைத் துதிப்போம் பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. விளக்கம்: தினமும் நாம் பொய்க்குழியாகிய வயிற்றை நிரப்ப வேண்டியவராய் உள்ளோம். பொழுது விடியவும் உணவுத் தேவைக்காக வேலை செய்து உழைக்க கிளம்புகிறோம். வயிற்றுத் தேவைக்காக நாம் அலைந்து திரிந்தாலும் மறக்காமல் ஈசனை துதிப்போம். ஈசனை துதித்தால் வினை தீரும், வினை தீர்ந்தால் வறுமை அகலும். குற்றமில்லாத வாழ்வு நடத்தி இறைவனை வணங்கி வந்தால் வயிற்றுப்பாடு தானே தீரும். புலரி - சூரியன், தூர் - நிரப்பு,  ஏத்துமின் - வணங்குங்கள். 211 வயிற்றை நிரப்பியே வைத்திருக்க முடியாது கற்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. விளக்கம்: கற்குழியாகிய வயிற்றை நிரப்ப பொன்னும் பொருளும் தேடி சேர்த்து வைப்பார். ஆனால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும்படி செய்வது முடியாத செயல் என்பதை நாம் உணர்வதேயில்லை. இதை உணர்ந்து தேவையான நேரத்தை பொருள் தேடுவதிலும், மற்ற நேரத்தை சிவனின் திருவடியை நாடுவதிலும் கழித்தால் குற்றம் இல்லாதவராய் ஆவோம். கற்குழி - நிரப்ப முடியாத வயிறு, கனகம் - பொன் 212 உறவுகள் வினையை விடக் கொடியது தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே. விளக்கம்: பெருகி வரும் உறவுகள் நம்முடைய வினையை விட கொடிய விஷயமாகும். அவர்களால் நமது வினை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்பிறவியில் நமது வாழ்நாள் முடிவதற்கு முன்பே ஒருநாள் நம்முடைய மெய்யுணர்வு என்னும் விளக்கை ஏற்றி, தொடர்ந்து அந்த விளக்கை அணையாமல் காக்க வேண்டும். மெய்யுணர்வு பெற்றால் உண்மைப் பொருளை அறியலாம், திரும்பத் திரும்ப நாம் சென்று விழும் அந்தப் பிறவிக்குழியையும் மூடலாம். 213 ருசிக்காக இல்லாமல் பசிக்காகச் சாப்பிடுவோம் அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே. விளக்கம்: உணவில் அறுசுவையையும் விரும்பி வேண்டுபவர்கள், பசுக்கள் முதலான விலங்கினத்தைப் போன்றவர்கள். ஏற்கனவே நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு எண்ணில்லாத துன்பங்களைத் தந்துள்ளன. வாழ்வில் நம்மை வருத்தும் வினைகள் ஒன்றிரண்டு அல்ல, அவை ஏராளம். நாம் அறுசுவை போன்ற விஷயங்களை வெறுத்து ஈசனை வேண்டி நின்றால் நம்முடைய வறுமை நீங்கப் பெறலாம். அக்கினி காரியம் 214 வேள்வியின் பயன்கள் வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. விளக்கம்: வெற்றி தரும் வேதத்தை தன்னுடைய முதல் பொருளாகக் கொண்டுள்ள அந்தணர்கள் தொடர்ந்து செய்யும் அக்னி வேள்வியினாலே வானம் தவறாமல் மழை பொழிகிறது. இந்த நிலம் நல்ல விளைச்சலைத் தருகிறது. எட்டுத்திசையில் உள்ள மக்களும், எட்டுத்திசைகளைக் காக்கும் திக்குப்பாலகர்களும் நன்மை பெறுகிறார்கள். 215 நம் விதியை நாமே முடிவு செய்யலாம் ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே. விளக்கம்: அரிய வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தவறாமல் யாகங்களைச் செய்வார்கள். மோட்சத்தை அடையும் பொருட்டு, தாங்கள் உண்ணும் முன் பிறருக்குத் தானம் செய்வார்கள். தம் விதியை தானே முடிவு செய்யும் திறன் வேண்டி மெய்நெறியை நாடுவார்கள். அந்த உண்மை நெறியிலே தங்கள் அறிவாலே அந்தத் திறனைப் பெறுவார்கள். 216 தூய்மையான நெறி அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. விளக்கம்: நமக்கெல்லாம் நெருங்கிய துணையாக இருப்பது, அந்தணர்கள் வளர்க்கும் அக்னிக்குள் அக்னியாக இருக்கும் இறைவனே. அந்தணர்கள் இல்லறத்தில் இருந்தாலும், அக்னிக்குள் உட்பொருளாய் விளங்கும் அந்த இறைபொருளைப் புரிந்து கொள்வார்கள். தமது மனைவியுடன் சேர்ந்து அக்னிக் காரியங்களை மெய்ப்பொருள் உணர்ந்து செய்வார்கள். இது தூய்மையான வாழ்க்கை நெறியாகும். 217 ஆகமங்களை விரும்பிக் கற்போம் போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. விளக்கம்: ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது. 218 புருவ மத்தியின் சுடர் நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும் செய்நின்ற செல்வம் தீயது வாமே. விளக்கம்: நெய் நின்று எரியும் வேள்வித்தீயை வளர்ப்பதுடன், புருவ மத்தியில் விளங்கும் சுடரின் இயல்பையும் அறிந்து கொள்வோம். புருவ மத்தியின் சுடரை நாம் உணரும் நாள், நம்முடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் நல்ல நாளாகும். தொடர்ந்து புருவ மத்தியின் சுடரை நின்று எரியச் செய்வதே இன்பம் தரும் சிறந்த வேள்வியாகும். தீயதுவாமே - தீ (வேள்வி) + அதுவாமே 219 வேள்வித்தீ வினைகளைப் பொசுக்கும் பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. விளக்கம்: ஆழ்ந்த அகலில் நின்று எரியும் திரி, விளக்கில் உள்ள எண்ணெய் எல்லாவற்றையும் காலி செய்கிறது. அது போல நாம் செய்யும் வேள்விகளின் தீ நமது ஊழ்வினைகளை அகற்றும். நமது வினைகளால் ஏற்பட்ட நோய்களும், துன்பங்களும் தீரும். இறைவனைப் போற்றி நாம் செய்யும் வேள்விகள் வினைகளைச் சுட்டுப் பொசுக்கும். 220 வேள்விகளால் அருஞ்செல்வம் கிடைக்கும் பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றீரே. விளக்கம்: நாம் தேடும் பொன்னும் பொருளும் துன்பத்தைத் தரக்கூடியவை என்பதால் தான், நம் தலைவனாம் சிவபெருமான் அருமையான ஞானச்செல்வங்களை முன்பே நமக்குத் தந்துள்ளான். அப்பெருமானை நினைத்து நாம் செய்யும் வேள்விகளால் கிடைக்கக் கூடிய உண்மையான இன்பத்தை நினைத்துப் பார்ப்போம். அந்த இன்பத்தைப் பெற சிறந்த வேள்விகளைச் செய்வோம். 221 குளிர்ச்சியான ஒளி! ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. விளக்கம்: நாம் செய்யும் வேள்விகளின் தலைவன் யார் தெரியுமா? அவன் எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாக இருப்பவன், இறப்பு என்பதே இல்லாதவன். நம் உள்ளத்திலும் அவன் மூன்று கண்களுடன் ஒளி வீசி வசிக்கிறான். ஏழு உலகங்களிலும் பரவி இருக்கின்ற அவனுடைய ஒளி குளிர்ச்சியானது, அருள் நிறைந்தது. நாம் செய்யும் வேள்விகள் அந்த சிவபெருமானை நினைந்து இருக்க வேண்டும். 222 சுடுகாட்டுத்தீயில் நின்று நம் ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான் ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே. விளக்கம்: நாம் செய்யும் வேள்விகளின் தீயின் உள்ளே நம் இறைவனாம் சிவபெருமான் வசிக்கிறான். அவன் சுடுகாட்டுத் தீயிலும் உள்நின்று ஆடி, நமது சாரமான ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான். வேள்வித்தீயும் சுடுகாட்டுத்தீயும் தவிர மற்ற அக்னிகள் எல்லாம் வினைகளைத் தரக்கூடியவை. அந்த வினைகளின் அளவு பெரிய மத்தால் கடையப்படுவது போல் ஒலி எழுப்பும் கடலின் அளவு ஆகும். 223 வேள்விகளால் உலகில் துன்பங்கள் நீங்கும் அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத் தங்கி இருக்கும் வகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே. விளக்கம்: வேள்விகளைத் தவறாது செய்து வரும் அந்தணர்கள், இந்த உலகில் வேதங்கள் நிலைத்து நிற்க வகை செய்தவர் ஆவார்கள். அவர்கள் பெருந்தவம் செய்தவர்கள். உலகெங்கும் அவர்கள் வேள்வித்தீயை நிலை நிறுத்துவதால், துன்பங்கள் எல்லாம் சோர்ந்து தொலைந்து போகும். இதனால் வேதங்களின் புகழ் உலகில் என்றும் நிலைத்து நிற்கும். அந்தணர் ஒழுக்கம் 224 அந்தணரின் கடமைகள் அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. விளக்கம்: அந்தணர் என்போர் ஆறு தொழில்களைக் கடமையாகக் கொண்டவர் ஆவார். அந்த ஆறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல் ஆகியவை ஆகும். அவர்கள் நியமத்தில் நின்று, மூன்று பொழுதும் அக்னிக் காரியங்களைச் செய்கிறார்கள். இந்த வேள்விகளைக் கடமையாக இல்லாமல், ஒரு தவம் போலக் கருத்துடன் செய்கிறார்கள். மேலும் அவர்கள் மாலை நேரத்திலும் வேதங்கள் ஓதித் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கிறார்கள். 225 தத்துவமசி வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே. விளக்கம்: அந்தணர் என்பவர்கள் வேதத்தின் நிறைவுப் பகுதியாகிய உபநிடத்தின் உண்மைப் பொருளை அறியும் விருப்பத்துடன் இருப்பார்கள். தத்துவமசி என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின் எல்லையில் நின்று பிரணவத்தில் பொருந்தி நிற்பார்கள். நாதம், வேதம், அறிவு ஆகிய அனைத்தின் முடிவிலும் இருப்பது சிவபெருமானே என்பதைப் புரிந்து கொள்வார்கள். தமது ஆன்மிகப் பாதையில் இதுதான் முடிவு என்று எதையும் எண்ணாமல், தொடர்ந்து பயணம் செய்து இன்புறுவார்கள். தத்துவமசி - தத் + த்வம் + அசி. இதன் பொருள் நீ அதுவாகிறாய், அதாவது சீவனும் பரமனும் வேறு வேறானவை இல்லை. இதைப் புரிந்து கொள்வதே அறிவின் எல்லையாகும். 226 அன்பெனும் தேரில் ஏறி காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. விளக்கம்: அந்தணர்கள் காயத்திரி, சாவித்திரி ஆகிய ஞான சக்திகளை ஆய்வு செய்ய விரும்புவார்கள். அதற்காக அவர்கள் மந்திரங்களை எல்லாம் மனனம் செய்கிறார்கள். அன்பெனும் தேரில் ஏறி தம்முடைய கடமைகளை நினைவில் கொண்டு, மாயத்தில் சிக்காமல் இருப்பவர்கள் சிறந்த பிராமணர் ஆவார்கள். 227 குற்றமில்லாத அந்தணர் யார்? பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை யிருந்து சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே. விளக்கம்: குற்றமில்லாத அந்தணர் யார் தெரியமா? அவர்கள் தலை சிறந்த நெறியான பிரணவத்தை ஆராய்ந்து அறிந்து, தம் குருவிடமிருந்து நான்கு வேதங்களுக்கும் பொருள் அறிந்து கொள்வார்கள். அந்த வேதங்களில் சொல்லப்பட்ட திருநெறிப்படி நடந்து, சிவத்தின் உண்மை சொரூபத்தை சிறிய துகளில் கூட பார்ப்பார்கள். 228 பிரம்ம ஞானம் சத்திய மும்தவம் தானவன் ஆதலும் எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. விளக்கம்: சத்திய வழியில் நின்று, தவத்தினால் தான் சிவம் ஆகி, மனத்தை ஐம்பொறிகளின் வழியே செல்ல விடாமல் தடுத்து, உயிரும் உணர்வும் ஒருமித்து நிற்கும் யோகப்பயிற்சிகளைச் செய்து பந்தங்களை அறுத்து பிரம்ம ஞானத்தை அடைபவர்களே அந்தணர் ஆவார்கள். 229 வேதங்களைப் புரிந்து கொள்ளும் ஆசை வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. விளக்கம்: வேதங்களின் நோக்கம் நமது ஆசைகளை ஒழிப்பதாகும். பொதுவாக வேதாந்தம் கேட்பவர்கள் தமது ஆசைகளை விட்டு விடுவார்கள். ஆனால் அந்தணர்கள் விருப்பத்தோடு வேதாந்தம் கேட்பது, வேதங்களை ஆராய்ந்து அவற்றின் பொருள் புரிந்து கொள்வதற்காக! வேதங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் ஆசையை அவர்கள் விடுவதில்லை. 230 உண்மையான பூணூல் எது? நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. விளக்கம்: அந்தணர்கள் அணிகின்ற நூலும் குடுமியுமே பிரம்மம் ஆகிவிடுமா? அவர்கள் அணியும் பூணூல் என்பது வெறும் பருத்திப்பஞ்சாகும். குடுமி என்பது கொஞ்சம் தலைமுடி, அவ்வளவுதான். ஆனால் உண்மையான பூணூல் என்பது வேதாந்தத்தின் நுண்மையான நெருப்பாகிய ஞானமாகும். அந்த உண்மையான பூணூலை அணிந்திருக்கும் அந்தணர்கள் பிரம்மத்தைக் காண்பது வேதங்களின் சொற்களிலே! நுவல் - சொல், கார்ப்பாசம் - பருத்திப்பஞ்சு, நூல் - பூணூல் 231 அவர் பிராமணர் இல்லை சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே. விளக்கம்: சத்தியத்தைக் கடைபிடிக்காமல், தனக்கென்று எந்த ஞானமும் இல்லாமல், மனத்தில் பதிந்து விட்ட ஆசைகளை விட்டு உண்மைப் பொருளை ஆராயும் உணர்வு இல்லாமல், பக்தியும் இல்லாமல், பரம்பொருளைப் பற்றிய உண்மையும் புரியாமல் இருப்பவர் பிராமணர் ஆக மாட்டார். அவர் பித்து பிடித்த மூடராவார். விட்டோரும் - விட்டு + ஓரும் 232 தூய்மையான அந்தணர்கள் திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதம் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணும் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. விளக்கம்: அறிவு, அறியாமை - இவை இரண்டுமே தேவை இல்லாத வழி சிறந்த வழியாகும். தூய்மையான அந்தணர்கள் அந்தச் சிறந்த வழியிலே சென்று குருவின் உபதேசத்தினால் சிவனின் திருவடியை அடைவார்கள். தம்முடைய விதி, வினைப்பயன் ஆகியவற்றிற்குக் காரணமான புறக்காரியங்களை விட்டு விட்டு யோக வழியிலே சென்று சமாதி நிலையை அடைவார்கள். 233 வேதம் தெரிந்த அந்தணர் மறையோர் அவரே மறையவர் ஆனால் மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே. விளக்கம்: பிறப்பினால் அந்தணராக இருப்பது முக்கியமில்லை. உண்மையான அந்தணர்கள் தமக்குரிய வேதங்களைப் படித்து உண்மையை அறிவார்கள். அதனால் தூய்மையான பாதை எது, குறை உள்ள பாதை எது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். மற்றபடி பூணூல், குடுமி போன்றவை எல்லாம் வெறும் கோலாகலம் தான் என்பதை உணர்வார்கள். எல்லாவற்றிலும் நன்மை தீமைகளைப் பார்க்கத் தெரிந்தவர்களே வேதம் தெரிந்த அந்தணர் ஆவார்கள். 234 அந்தணர்கள் வாழும் நாடு அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே. விளக்கம்: அழகிய அருள் வடிவான வேதங்களைப் படித்து, அவற்றின் மெய்ப்பொருளைச்  சிந்தை செய்யும் அந்தணர்கள் வாழும் நாடு வளம் மிகுந்த பூமியாக விளங்கும். அந்த வளம் என்றும் குறைவுபடாது. அந்த நிலத்தின் மன்னன் நல்ல ஆட்சியைத் தருவான். அந்த நாட்டில் காலையும் மாலையும் வேள்விகள் குறைவின்றி நடக்கும். அந்தண்மை - அழகிய அருள் தன்மை, நந்துதல் - குறைதல், நரபதி - மன்னன் 235 நாதாந்த சித்தியும் முத்தியும் வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய போக்கது போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. விளக்கம்: வேதாந்த நெறியில் நின்று ஞானம் பெறுவதற்கு உரிய ஊழ் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அந்த வாய்ப்பில்லாதவர்கள் நாத வடிவில் சிவனை நாடுவார்கள். ஞானத்தின் முடிவாய் விளங்கும் அந்தச் சிவனின் பக்கம் தம் சிந்தையை வைத்திருக்கும் அந்தணர்க்கு நாதாந்த சித்தியும் முத்தியும் கிடைக்கும். 236 சிறப்புடைய அந்தணர்கள் ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நன்றும் இருந்தும் நலம்பல பேசினும் வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர் சென்று வணங்குந் திருவுடை யோரே. விளக்கம்: நம்முடைய பிராணன் உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றுடன் ஒருங்கே இயங்கும் காலத்தில் நாம் நலமுடன் இருப்போம். மகிழ்ச்சியாக நல்லதையே பேசுவோம். அப்படி நலமுடன் இருக்கும் காலத்திலேயே அந்தணர்கள் வெற்றி தரும் சிவபெருமானை நாடி இருப்பார்கள். அவனைத் தேடிச்சென்று வணங்குவார்கள். 237 புண்ணிய போகன் தானே விடும்பற்று இரண்டும் தரித்திட நானே விடப்படும் ஏதொன்றை நாடாது பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. விளக்கம்: அந்தணர்களின் சிவ சிந்தனையால் அவர்களின் அகப்பற்று, புறப்பற்று இரண்டும் அகலும். அகங்காரம் நீங்கும். சிவனைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்தை நாடாது. பிரணவத்தில் ஓர்ந்து அவர்கள் செய்யும் ஆகுதியை உண்ண தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த புண்ணிய போகன் பிரமன் வருவான். அரசாட்சி முறை 238 கல்லாத அரசனை விட காலன் நல்லவன் கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே. விளக்கம்: கல்வி இல்லாத அரசனும், உயிரைப் பறிக்கும் யமனும் ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றே ஆவர். சொல்லப்போனால் கல்லாத அரசனை விட அந்த யமன் மிகவும் நல்லவன். கல்வி இல்லாத அரசன் இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று ஆராய்ந்து பார்க்க மாட்டான். அறவழி விசாரணை ஏதும் இன்றி கொல் என்று ஆனையிடுவான். ஆனால் அற வழியில் நிற்கும் நல்லவர்களை, யமன் அவ்வளவு லேசில் அணுக மாட்டான். (ஓரான் - ஆராய மாட்டான்) 239 ஆட்சி செய்யும் முறை நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல் நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால் நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. விளக்கம்: ஒரு நாட்டின் மன்னன் தினமும் தன்னுடைய ஆட்சி நன்னெறிப்படி நடக்கிறதா என்பதை ஆராய்ந்து, தினமும் நீதிமுறைகளின் படி தவறுகளைச் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாள்தோறும் நாட்டின் வளம் குன்றும், மக்களிடையே அறியாமை வளரும். மன்னனின் செல்வம் நாள்தோறும் குறைந்து அவன் புகழும் மங்கி விடும். 240 மன்னனின் கடமை வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேட நெறிசெய்தால் வீடது வாமே. விளக்கம்: இந்த உலகில் நம் அனைவருக்குமே ஆளுக்கொரு வேடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கொண்ட வேடத்திற்கு என்று சில கடமைகள் உண்டு. கடமையைச் செய்யாமல் வெறும் வேடம் மட்டும் போட்டுக்கொள்வதால் என்ன பயன்? தமது கடமைகளைச் செய்யாதவர்களை, அந்நாட்டின் வலிமை மிகுந்த மன்னன் நெறிப்படுத்த வேண்டும். அது மன்னனின் கடமை. மன்னன் தனது இந்தக் கடமையைச் சரிவரச் செய்தால், அவனுக்கு வீடுபேறு கிடைக்கும். 241 பேர்த்துணர்! மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. விளக்கம்: தன்னுடைய அறியாமை நீங்கப் பெறாமல் குடுமி, பூணூல் முதலியவற்றைக் கொண்டவர்கள் வாழும் நாட்டில் வளமெல்லாம் குறைந்து போகும். பெருவாழ்வு கொண்ட மன்னனும் ஒன்றும் இல்லாமல் போவான். அதனால் பூணூலையும் குடுமியையும் வெறும் ஆடம்பரத்துக்காக அணிபவர்கள் அந்தக் கோலத்தை நீக்குவது நல்லது. 242 நரபதியின் கடமை ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. விளக்கம்: ஞானமில்லாதவர்கள் சடை, குடுமி, பூணூல் போன்ற அலங்காரங்களைச் செய்து கொண்டு ஞானிகளைப் போல நடிக்கிறார்கள். அப்படி நடிப்பவர்களை அந்நாட்டின் மன்னன் உண்மையான ஞானிகளைக் கொண்டு சோதித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டில் உண்மையான ஞானம் விளங்கும். நரபதி - மன்னன் 243 ஆவையும் பாவையும் மன்னன் காக்க வேண்டும் ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும் தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே. விளக்கம்: ஒரு மன்னன் தன் நாட்டில் உள்ள பசுக்கள், பெண்கள், அற வழியில் நிற்கும் நல்லவர்கள், தேவர்களாலும் போற்றப்படும் உண்மையான துறவிகள் ஆகியவர்களைக் காக்க வேண்டும். காக்கவில்லை என்றால் அந்த மன்னன் மறுமையில் மீள முடியாத நரகத்தை அடைவான். 244 மன்னனுக்குச் சேர வேண்டிய வரியின் அளவு திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே. விளக்கம்: ஒரு நாட்டின் மன்னன் முத்தியும் செல்வமும் பெற வேண்டினால், மறந்தும் அறநெறியை விட்டு விலகாது தனது கடமைகளைச் செய்ய வேண்டும். சிறந்த கடலால் சூழப்பட்ட அவனுடைய நாட்டில் உள்ள செய்தொழில் அனைத்திலும் அரசனுக்கு சேர வேன்டிய வரியின் அளவு, வருவாயில் ஆறில் ஒரு பங்கு ஆகும். 245 பகைவனிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் பேர்ந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. விளக்கம்: மன்னனால் நல்லமுறையில் காக்கப்படும் நாட்டின் மக்கள் அறவழியிலே நிற்பார்கள். பகை நாட்டு மன்னன் தன் நாட்டைக் கைப்பற்ற வந்தால், தன் மக்களை அவர்களிடம் இருந்து காக்க வேண்டியது அந்நாட்டு மன்னனின் கடமையாகும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னை மட்டும் காத்துக்கொள்ள நினைக்கும் மன்னன், தன் பசிக்காக பிற உயிர்களைக் கொல்லும் புலியைப் போல தீங்கு நிறைந்தவன் ஆவான். 246 மதுவிலக்கு பற்றி திருமந்திரம் கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. விளக்கம்: நமது மூச்சுக்காற்றைக் கட்டி சுழுமுனை வழியாக ஏறச்செய்து, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி எனும் கனலை மேலே ஏற்றி, நமது நெற்றியில் உள்ள சந்திர மண்டலத்தில் தோன்றும் பால் போன்ற அமிர்தத்தைப் பருகினால் கிடைக்கும் போதையே மேலானது. அதை விட்டு மன மயக்கத்தினால் போதைக்காக மது அருந்தும் உன்மத்தருக்கு தண்டனை அளித்து திருத்த வேண்டியது அந்நாட்டின் மன்னனின் கடமையாகும். 247 அவரவர் சமயத்தில் நிற்க வேண்டும் தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே. விளக்கம்: ஒவ்வொருவரும் அவரவர் சமயத்தின் நெறியிலே நிற்க வேண்டும். அப்படி நில்லாதவர்க்கு சிவ ஆகமத்தில் சொல்லி உள்ளபடி, அவர்களுடைய மறுபிறவியில் என்ன தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் இந்த பிறவியிலேயே தண்டனை கொடுத்து அவர்களைத் திருத்த வேண்டியது மன்னனின் கடமையாகும். வானச் சிறப்பு 248 மழையே வருக! வளமெல்லாம் தருக! அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. விளக்கம்: மாமழை நீரினாலே உணவுப் பொருட்கள் பெருகும். உலகமெங்கும் இனிமையான பல மரங்கள் உண்டாகும். பாக்கு, தென்னை, கரும்பு மற்றும் வாழை மரங்கள் செழிக்கும். இவற்றோடு மருத்துவ குணம் கொண்ட எட்டி மரங்களும் அங்கே உருவாகும். அமுது என்னும் சொல்லுக்கு முதல் வரியில் உணவு என்னும் பொருளும், அடுத்த வரியில் இனிமை என்னும் பொருளும், கடைசி வரியில் மருந்து என்னும் பொருளும் பொருத்தமாய் அமைகிறது. வானச் சிறப்பு சொல்லும் இப்பாடலைப் பாடி மழை வேண்டுவோம். (கமுகு - பாக்கு,  தெங்கு - தென்னை,  காஞ்சிரை - எட்டி) 249 நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் கரையில்லை எந்தை கழுமணி யாறே. விளக்கம்: மலைப்பகுதிகளில் நின்று பெய்யும் அருவி போன்ற மழையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மழையைப் பார்த்தால் உள்ளத்திலும் உற்சாக மழை ஊறும். மழை நீரில் நுரையில்லை, அழுக்கு இல்லை. அது தெளிவான நீர் ஆகும். மழைக்கு கரை கிடையாது, அது பெய்யும் பரப்பு அவ்வளவு அகன்றதாகும். மழை என்பது நம் தலைவனாம் சிவபெருமான் நமக்குத் தரும் சுத்தமான இரத்தினம் ஆகும். தானச் சிறப்பு 250 உணவைப் பகிர்வோம் ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. விளக்கம்: யாவர்க்கும் அன்னம் இடுங்கள். அவருக்கா, இவருக்கா என்று பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் இடுங்கள். சாப்பிடும் முன் மற்றவர்க்கு பரிமாறியாயிற்றா என பார்த்து விட்டு சாப்பிடுங்கள். பழைய பொருள்களை சேர்த்து வைக்காமல், பிறருக்கு தானமாக கொடுங்கள். பிடித்த உணவானாலும் வேகமாக உண்ணாதீர்கள். காகங்கள் உண்ணும் காலம் அறிந்து, அவற்றிற்கும் உணவு இடுங்கள். அறஞ்செய்வான் திறம் 251 என்னை அறிந்தால்! தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர் தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர் தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள் தாமறி வார்க்குத் தமர்பர னாமே. விளக்கம்: தன் இயல்பை அறிந்தவர் சிவபெருமானின் திருவடியை வணங்குபவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர் அற வாழ்க்கை மேற்கொள்வார். தன் இயல்பை அறிந்தவர் சில தத்துவங்களை உணர்ந்தவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர்க்கு சிவனே நெருங்கிய உறவினன் ஆவான். தன்னை அறிந்து கொள்வதே ஆன்மிகத்தில் முக்கியமானதாகும். 252 யாவர்க்கும் எளியது யாவர்க்கு மாமிறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. விளக்கம்: யாவர்க்கும் எளியது இறைவனுக்கு கொஞ்சம் பச்சிலை சாத்தி வணங்குதல். யாவர்க்கும் எளியது பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தல். யாவர்க்கும் எளியது உணவுக்கு முன் ஒரு கையளவு தர்மம் செய்தல். யாவர்க்கும் எளியது பிறரிடம் இனிமையாய் பேசுதல். 253 சிவஞானியர்க்கு உணவு அளிக்க வேண்டும் அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில் பற்றிவந் துண்ணும் பயனறி யாரே. விளக்கம்: பற்றுக்களை நீக்கிய சிவஞானியர்க்கு உணவு அளிப்பதே அறம் ஆகும் என்னும் உண்மையை மனிதர்கள் படித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கிணற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ அமர்ந்திருக்கும் சிவஞானியரைத் தேடிப் போய் அழைத்து வந்து உணவு உண்ணச் செய்வதில்லை. அதன் பயனை இன்னும் அவர்கள் அறியவில்லை. 254 அழுக்கினை ஓட்டி அறிவை நிறைப்பீர் அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர் விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே. விளக்கம்: நம் வாழ்நாளில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மன அழுக்குகளை போக்கி அறிவைப் பெருக்கிக் கொள்ளாமல் இருக்கிறோம். செழிப்பாய் இருக்கும் காலத்தில் தருமமும் செய்வதில்லை. அறம் செய்யாமல் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இந்த உடல் எரிந்து அழியும் நேரத்தில் நமக்கென ஒரு புண்ணியமில்லாமல் என்ன செய்யப்போகிறோம்? தருமம் செய்யாதவரை ஏழை நெஞ்சீர் என சொல்கிறார் திருமூலர். (தழுக்கிய - செழிப்பாய் இருந்த,  வெம்மை - தீ) 255 யமனுக்கு கண்மண் தெரியாது தன்னை அறியாது தான்நலர் என்னாதுஇங்கு இன்மை அறியாது இளையர்என்று ஓராது வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம் தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே. விளக்கம்: வலிமை மிகுந்த யமன் நம்மைக் கவர வரும்போது, நம்மை யாரென்று பார்க்க மாட்டான். நாம் நல்லவனா கெட்டவனா என்பது பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது. நம்முடைய வறுமை பற்றி அவனுக்குத் தெரியாது. நம்முடைய வயதும் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வலிமையைக் காட்டுவான். அந்த யமன் வருவதற்கு முன்பே நாம் ஆற்றலுடன் நல்ல தவத்தை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வோம். 256 தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் அருள்வான் துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே. விளக்கம்: முற்றும் துறந்தவர்க்கு தனியாக சுற்றம் என்று யாரும் இல்லை. உலகம் முழுவதும் அவர்களுக்கு சுற்றம் தான். இறந்தார் போல் வாழும் ஞானியர்க்கு இந்த உலக இன்பங்களில் நாட்டம் இராது. தன்னை மறந்தவர்க்கு ஈசன் துணையாக வர மாட்டான். செய்யும் தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் வெளிப்பட்டு அருள்வான். 257 அறிவுடையவர்கள் தவத்தின் வழியே செல்கிறார்கள் தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான்தெய்வம் என்று நமன்வரு வானே. விளக்கம்: அறிவை தெய்வமாக மதிக்கும் மனிதர்கள், தவத்தின் வழியிலே செல்கிறார்கள். நாமும் அவ்வழியிலேயே செல்வோம். நம்மில் பலர் நமது உடலையே தெய்வமாக, அதாவது முக்கியமாக நினைக்கிறோம். அப்படி நினைப்பவர்களுக்கு யமன் வந்து நான் தான் தெய்வம் என்று உணர்த்துவான். மான் - அறிவினால் பெரியவன்,    ஊன் - உடல் 258 இல்லறமும் கரையேறும் வழிதான் திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன் விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. விளக்கம்: நிறைந்திருக்கும் வினைக் கடலில் இருந்து கரையேறி சோர்வு நீங்கப்பெற இரண்டு வழிகள் உண்டு. அழியாப் புகழுடைய அந்த சிவபெருமான், நமக்கும் நம்மை சேர்ந்தோர்க்கும் காண்பிக்கும் ஒரு வழி தவம், இன்னொரு வழி இல்லறம் ஆகும். இவை இரண்டுமே சிறப்புற நல்வழி நடந்தால் மறுமைக்கு பயன் தருவதாகும். (இளைப்பு - சோர்வு.  கிளை - உறவினர், தன்னை சார்ந்தவர்.  கேடில் புகழோன் - அழியாப் புகழ் உடையவன்) 259 தானம் செய்பவர்க்கே மெய்ப்பொருள் விளங்கும் பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே. விளக்கம்: இந்த உலகில் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் அந்த மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையை சிவபெருமான் அனைவருக்கும் உணர்த்துவதில்லை. அறநெறியில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவன் உணர்த்துவான். நம்மால் முடிந்தவரை பிறருக்கு தானம் செய்து உதவுவோம். அந்த தர்மம் தான் நமக்குத் துணை. அறநெறியில் நிற்கும் நமக்கு நம் அண்ணல் சிவபெருமான் சிறந்த வழியைக் காட்டுவான். அறஞ்செயான் திறம் 260 வட்டியினால் சேரும் செல்வம் யாருக்கும் பயன்படாது எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம் வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே. விளக்கம்: எட்டிப் பழம் பெரிதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் அது கசப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் யாருக்கும் பயன்படாது. அதுபோல தனக்குரிய அறத்தினை செய்யாதவர்களின் செல்வம் யாருக்கும் பயன் தராமல் வீணாகி விடும். வட்டி வாங்கி செல்வம் சேர்க்கும் பாதகர்கள், அறத்தின் பயனை அறியாதவர்கள். அவர்கள் சேர்த்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் மண்ணில் புதையும். 261 சாறு பிழிந்த சக்கை ஆனோம்! ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. விளக்கம்: காலங்கள் பல கழிந்தன. பல யுகங்களும் போயின. நம்முடைய கற்பனைகள் எல்லாம் வெறும் கற்பனைகளாகவே போனது. நம் வாழ்நாளும் குறுகிக்கொண்டே போகிறது. சாறு பிழியப்பட்ட சக்கை போல ஆனது நம்முடைய உடல். அதுவும் அழியத்தான் போகிறது. இத்தனை பார்த்தும் இன்னும் நாம் அறத்தின் பயனை அறிந்து கொள்ளவில்லையே! 262 தமக்குத் தாமே பகைவர் ஆகிறார்கள் அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. விளக்கம்: இந்த உலகில் பலர் அறம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அண்ணல் சிவபெருமானின் திருவடியைப் பற்றி நினைப்பதில்லை. சிவலோக நகர்க்குச் செல்லும் திசையை அறிந்து கொள்வதில்லை. பொய்யான வார்த்தைகளை மட்டுமே நம்பும் அவர்கள் பாவத்தை மட்டுமே அறிவார்கள். அவர்கள் தமக்குத் தாமே பகைவர் ஆகிறார்கள். 263 நோயின்றி வாழலாம் இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாகம் உரோணி கழலை தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. விளக்கம்: தருமம் செய்யாதவரை இருமல், சோகை, ஆஸ்துமா, தொழு நோய் ஆகியவை உரிமை கொண்டாடும். அச்சம் தரும் இடி, பாம்பு, தொண்டைப் புண், வயிற்றுக் கட்டி ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் நெருங்காது. (தருமம் - நற்செயல்,   ஈளை - ஆஸ்துமா,  வெப்பு - தொழு நோய், உரோணி - தொண்டைப் புண்,  கழலை - வயிற்றுப் புண்) 264 நல்ல மனம் கொண்டவர்களே! பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே. விளக்கம்: நல்ல மனம் கொண்டவர்களே! மிகுந்த புகழை உடைய சிவபெருமானை நீங்கள் வணங்குவதில்லை. உங்களிடம் உதவி தேடி வருபவர்களுக்கு உதவுவதில்லை. குடம் சுமந்து நீர் உற்றி மரங்கள் கொண்ட சோலைகளை வளர்க்கவும் மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நரகத்தில் நிலை கொண்டு நிற்க விரும்புகிறீர்களா? (பரவப்படுவான் - புகழப்படுவான்,    கரகம் - குடம்,   கா - சோலை) 265 கர்ம வினைகளைக் கடக்கலாம் வழிநடப் பாரின்றி வானோர் உலகம் கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும் மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. விளக்கம்: அறவழியில் நடப்பவர்கள் தம் வாழ்நாள் முடிந்ததும், தேவர்கள் வாழும் உலகத்தை அடைவார்கள். தீய வழியில் நடப்பவர்கள் நரகத்தை அடைவார்கள். நாம் தீய செயல்களை அறவே நீக்கி விட்டு, அவற்றை இனியும் செய்யாமல் தவிர்த்து நல்ல வழியில் நடந்தால், கர்ம வினைகளைக் கடந்து வாழலாம். 266 மெலிந்த சினம்! கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. விளக்கம்: மனம் பக்குவம் அடைந்தவர்கள் ஈசனின் திருவடியைக் காண்பார்கள். துணிவுடன் உலகப் பற்றை விட்டு தவம் செய்பவர்கள் ஈசனின் சொர்க்கத்தை ஆள்வார்கள். மலிவான வாழ்க்கை வாழ்பவர்கள் இறைவனின் துணை கிடைக்காமல் அழிவார்கள். அவர்கள் தளர்ச்சி தரும் மனப் போராட்டத்திற்கு ஆளாகி நரகத்தில் வீழ்வார்கள். (துறக்கம் - சொர்க்கம்,  மெலிந்த - தளர்ந்த,  சினம் - போர்). 267 அன்பிலார் அறம் அறியார் இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னாலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறமறி யாரே. விளக்கம்: இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் கலந்திருக்கின்றன. அவை எல்லாம் நாம் நமது முற்பிறவிகளில் செய்த செயல்களுக்கு ஏற்ப அமைகின்றன. ஆனால்  அறச்செயல்கள் செய்வதால் இந்தப் பிறவியிலேயே இன்பம் கிடைப்பதைப் பார்க்கிறோம். அதையெல்லாம் பார்த்தும் தொடர்ந்து அறத்தைப் பற்றிய எண்ணம் கொள்ளாத அன்பில்லாதவர்களாய் இருக்கிறோம். 268 நேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன் நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யின் பசுவது வாமே. விளக்கம்: நேர்மை இல்லாத செயல்களைச் செய்து நம்மால் இன்பம் அடைய முடியாது. அழிவில்லாத புகழை உடைய நம் இறைவன் நேர்மை இல்லாதவர்க்கு இன்பத்தை அனுமதிக்க மாட்டான். நாம் நல்ல நிலையை அடைவதும், நிலைபெற முடியாமல் கெடுவதும் நம் வினைகளினாலே! அதனால் இல்லாதவர்க்கு அன்னம் இடுவது பற்றியும், உதவி செய்வது பற்றியும் எண்ணுவோம். அவ்வாறு இல்லாமல் பிறருக்கு கெடுதல் செய்ய நினைப்பது விலங்குத்தன்மை ஆகும். 269 அற்பர்களைப் போற்ற வேண்டாம் செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. விளக்கம்: ஒரு வில் வீரனுடைய குறி இலக்கை நோக்கியே இருப்பது போல, நமது நோக்கம் வீடுபேறு அடைவதாக இருக்க வேண்டும். வீடுபேறு அடைவதற்காக நாம் இறைவனைத் துதிப்போம். தர்ம சிந்தனை இல்லாத செல்வந்தர்கள் அற்பர்கள். பணத்துக்காக அவர்களைப் போற்றிப் புகழ்ந்து, பிறகு வருத்தத்தில் வாட வேண்டாம். அன்புடைமை 270 அன்பே சிவம் அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. விளக்கம்: அன்பும் சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால், அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார். அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்தபின், அவர் அன்பானவராய் இருப்பார், சிவத்தன்மை அடைவார். 271 பின்னிக் கிடப்பேன் பேரன்பிலே பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. விளக்கம்: பொன்னை விடப் பிரகாசிக்கும் புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். அவன் மின்னி மிளிரும் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பவன். நெற்றியில் எப்போதும் திருநீறுடன் இருப்பவன், கூத்தாடுபவன். பேரன்பினாலே அவன் நினைவில் பின்னிக் கிடந்தேனே! (துன்னி - பொருந்தியிருக்கின்ற,  சுடுபொடி - திருநீறு). 272 துன்பத்திலும் அன்பு மாறாதிருக்க வேண்டும் என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே. விளக்கம்: இந்த வாழ்க்கையில் நாம் படுகின்ற துன்பத்தால் நம்முடைய எலும்புகள் எல்லாம் விறகாக எரிவது போல் இருக்கிறது. அந்த வெப்பத்தில் தசைகளெல்லாம் அறுபட்டு கனலில் வறுபடுவது போல தோன்றுகிறது. அப்படிப்பட்ட கடுமையான துன்பத்திலும் இறைவனை நினைத்து அன்போடு மனம் உருகி நெகிழ்பவர்களாலேயே அவனை அடைய முடியும். சிறு துன்பத்துக்கே மனம் துவண்டு விடும் என்னால் அவனை அடைய முடியாது. 273 அன்பினால் திருவடியைக் காணலாம் ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே. விளக்கம்: உண்மையான ஆர்வம் உடையவர்கள் நிச்சயம் ஈசனைக் காண்பார்கள். மனத்தில் அன்பெனும் ஈரம் உடையவர்கள் ஈசனின் திருவடியை அடைவார்கள். அன்பு இல்லாமல் பாவத்தைச் சுமப்பவர்கள் வீடுபேற்றை அடைய மாட்டார்கள். அவர்கள் மறுபடியும் பிறவிக்கடலில் விழுந்து துன்பம் மிகுந்த வழியிலேயே செல்வார்கள். 274 திருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும் என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. விளக்கம்: திருமூலர் தன்னைப் போலவே உள்ளம் உருக இறைவனை வழிபடச் சொல்லி நமக்கு உபதேசிக்கிறார். முதலில் நாம் அன்பு உருக அந்த முதல்வனை நாடுவோம். பிறகு அந்த பெருமைக்குரிய நந்தி பெருமான் தன் அன்பால் உருகி நமக்குத் தோன்றுவான். அவன் திருமூலருக்கு அருளியது போலவே நமக்கும் அருள் செய்வான். 275 ஒரு முறை வணங்கினாலும் என்றும் துணையாய் வருவான் தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. விளக்கம்: சிவபெருமானை சுயம்பு என்று உணர்ந்து அவனைச் சில காலமே நாம் வழிபட்டாலும், அவன் வானம் உள்ள காலம் வரைக்கும் நமக்கு வழித்துணையாய் நிற்பான். தேன் போன்ற மொழி பேசும் உமையை தன்னொரு பாகத்தில் கொண்டவனும், கொன்றைப்பூவை அணிந்திருப்பவனுமாகிய சிவபெருமான் என் அன்பில் அழகுற நின்றானே! 276 உலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான் முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. விளக்கம்: நமக்கெல்லாம் மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது இந்த வாழ்வினை நடத்துவதற்கு. இந்த உலகத்தைப் படைத்த இறைவன் இன்பங்களையும் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறியவில்லை. அந்த இறைவனிடம் அன்பு கொள்ளவும் நமக்குத் தெரியவில்லை. அகண்ட உலகமாய் உள்ள இறைவன் அன்பையும் படைத்திருக்கிறான். அன்பினாலே நம் துயரமெல்லாம் நீங்கும். 277 அன்பினால் விருத்தி கிடைக்கும் கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. விளக்கம்: உருக்கும் போது ஒளிரும் செம்பொன் போன்ற ஒளி வடிவானவன் இறைவன். அவனை நம் நினைவில் இருத்தி எப்போதும் வணங்கி இருப்போம். அன்பு கொண்டு சிவனருளை யார் வேண்டினாலும், அவன் விருத்தி கொடுப்பான். 278 எல்லாம் தெரிஞ்சவங்க இப்படி பண்ணலாமா? நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று நச்சியே அண்ணலை நாடுகி லாரே. விளக்கம்: இறைவன் நமது வினைகளுக்கு ஏற்ப பிறப்பையும் இறப்பையும் வைத்ததன் காரணத்தைப் புரியாதவர்களை விடுங்கள். அதைப் புரிந்தவர்களும் உலக போதத்திலே தான் ஆசை கொள்கிறார்கள். நம் இறைவனான சிவபெருமானை ஆசையுடன் நாடிச்சென்று வணங்குவதில்லை. 279 அன்பிருக்கும் இடத்தில் சிவன் இருப்பான் அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான் முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. விளக்கம்: இறைவன் நமக்கு உள்ளேயும் இருக்கிறான், வெளியேயும் இருக்கிறான். நமக்குள்ளே அன்பே வடிவாய் இருக்கிறான். அவன் நமது உடலாகவும் இருக்கிறான். இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே அவன் இருக்கிறான். அவன் முனிவர்களுக்கெல்லாம் தலைவன். அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் அவன் இருப்பான். அன்பிருப்பவர்களுக்கு அவன் என்றும் துணையாக இருக்கிறான். அன்பு செய்வாரை அறியும் சிவன் 280 கொழுந்து விடும் அன்பு இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. விளக்கம்: நமக்கெல்லாம் மகிழ்ந்து அருள் செய்திடுவான் உத்தமநாதனான சிவபெருமான். நாம் அவனிடம் வைத்திருக்கும் அன்பின் அளவையும் தன்மையையும் தெரிந்தே இருக்கிறான். அவன் தன்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்க்கு விரும்பி அருள் செய்வான். அந்த சிவபெருமான் அருளே வடிவானவன். (கொழுந்து அன்பு செய்து - சுவாலிக்கும் அளவு மிகுதியான அன்பு செய்து) 281 இன்பப்பிறவி இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே. விளக்கம்: இன்பப்பிறவி அடைவதற்கு வேண்டிய வழிகளை இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். துன்பம் மிகுந்த இப்பிறவியைப் பல கடமைகளைச் செய்துதான் கடக்க வேண்டியிருக்கிறது. நாம் அன்பினால் சிவபெருமானோடு கலந்திருந்தால், அவன் திருவருள் தரும் வலிமையால் இந்தப் பிறவியை இன்பமாய்க் கடக்கலாம். (முன்பு - வலிமை) 282 சிந்தையில் அன்பு இருந்தால் போதும் அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. விளக்கம்: நம் சிந்தையில் அன்பிருந்தால் அங்கே ஒளி வடிவான சிவபெருமான், இன்பம் தரும் அருட்கண்களை உடைய சக்தியுடன் சேர்ந்து அருள் புரிவான். துன்பம் தரும் ஐம்பொறிகளின் பிடியில் அகப்படாமல் நன்மை தரும் சிந்தையை நாடுவோம். (துடக்கற்று - அகப்படாமல்) 283 பேரின்பம் பெறும் வழி புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு உணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. விளக்கம்: சிவபோதத்தில் லயிக்கும் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்றால், கூடலின் போது ஆடவர் தனது பெண் துணையின் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவில் இருக்க வேண்டும். பிற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், சிவபெருமானை நினைத்து போதத்தில் சஞ்சரித்து மகிழ்வது பேரின்பமாகும். அப்போது அது என்று சொல்லப்படும் சிவத்தினுள் இது என்று சொல்லப்படும் நம் ஆன்மா கலந்து ஒன்றாய் நிற்கும். (ஆயிழை - பெண்,  ஒடுங்குதல் - லயிப்பு,  குலாவி - மகிழ்ந்து,  உலாவி - சஞ்சரித்து) 284 ஈசனை அன்பால் வசப்படுத்தலாம் உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. விளக்கம்: பக்தியுடன் பணிந்து தொழும் அடியார்களுக்கு சிவபெருமான் முக்தி கொடுத்து காட்சியும் தருகிறான். தன்னையே சார்ந்திருக்கும் அடியார்களிடம் வசிக்கும் அந்த ஈசனின் அன்பிற்கு உருகும் தன்மையைப் பற்றி சித்தர்களும் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. 285 திருவடியைக் கண்டேன் அன்பினாலே கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. விளக்கம்: நறுமணம் தரும் கொன்றை மலரை அணிந்துள்ள சிவபெருமானின் திருவடியைக் கண்டேன். ஆணவம் எனும் யானையைக் கிழித்த ஈசனின் திருவடியைக் கண்டேன். என் இதயத் தாமரையில் எப்போதும் வீற்றிருக்கும் அவன் திருவடியைக் கண்டேன். அப்பெருமானின் திருவடியை நான் கண்டு கொண்டது என் அன்பினாலேயே! (கமழ் - மணம்,  கரி - யானை,  கழல் - பாதம்) 286 இன்பத்தின் தித்திப்பு அவன் நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே. விளக்கம்: சிவபெருமான் அனைவராலும் நம்பப்படுபவன். அவன் எல்லாவிதப் பொருளாகவும் இருக்கிறான். தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள். நமக்கெல்லாம் இன்பம் தருபவன் அந்த இறைவனே! நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே! அந்த அன்பு வடிவான சிவனை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. (இரதிக்கும் - தித்திக்கும்) 287 அன்பினால் இறைவனை அறிவோம் முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி அன்பில் அவனை அறியகி லாரே. விளக்கம்: இந்தப் பிறவிக்கு முன்பு நாம் கொண்ட பிறப்பும் இறப்பும் பற்றி நம்மால் அறிய முடியாது. ஆனால் மனத்தில் அன்பு இருந்தால் நாம் இறைவனை அறிந்து கொள்ளலாம். அந்த நந்தியம்பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். அன்பு கொண்டு அவனை உணரும் எண்ணம் இல்லாதவராய் இருக்கிறோமே! நம்முடைய பிறப்பையும் இறப்பையும் ஆராய்வதை விட்டு, பிறப்பும் இறப்பும் இல்லாத நந்தியை அன்பினால் அறிந்து கொள்வோம். 288 நம் அன்பை ஈசன் அறிவான் ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. விளக்கம்: இரவும் பகலும் தன் மேல் அன்பு கொண்டு பக்தி செய்பவர்களை அந்த சிவபெருமான் நன்றாக அறிவான். நாம் ஞானம் பெற்று நமக்கென ஒரு செயல் இல்லாமல் இருந்தால், அந்த ஈசன் வந்து நம் மனத்தில் எழுந்தருளி நிற்பான். (பரிவு - பக்தி,  தேசு - ஞானம்) 289 தொட்டுத் தொடர்வோம் ஈசனை விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. விளக்கம்: மேலான சோதி வடிவாய் இருக்கும் சிவபெருமானை நாம் ஏன் நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கிறோம்? அவன் நினைவை உறுதியாகத் தொட்டுத் தொடர்ந்து அவனது முடிவில்லாத பெருமையை உணர்வோம். நம் ஆருயிராய் நிற்கும் அந்த ஈசனின் நினைவில் எப்போதும் கலந்திருப்பதே நாம் அவனுக்குச் செய்யும் திருமஞ்சனமாகும். ஈசனின் நினைவை பற்றுவதும் விடுவதுமாய் இல்லாமல், தொடர்ந்து அவனை நினைத்திருப்போம். (மேதகு - மேலான,  மஞ்சனம் - நீராடல்) கல்வி 290 கற்க வேண்டிய உண்மையான கல்வி! குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. விளக்கம்: மனம் ஒருமைப் படும் விதம் அறிந்தேன். இணைந்திருக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவை அறிந்தேன். உள்ளத்தினுள் புகுந்த தேவர்பிரான் சிவபெருமானை மறுக்காமல் ஏற்கும் வகை கற்றேன். உவர்ப்பு ஏற்படுத்தாத இந்த வகையான கல்வியை நிறைய கற்றேன். மனத்தை ஒருமைப் படுத்தலும்  உடல், உயிருக்கு இடையேயான உறவை அறிந்து கொள்ளுதலும், கற்க வேண்டிய முக்கிய கல்வியாகும். (குறிப்பு - மன ஒருமை, செறிப்பு - உறவு, கறிப்பு - உவர்ப்பு) 291 கற்றறிவாளர் சொல்வதைக் கேட்போம் கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. விளக்கம்: உண்மையான கல்வி கற்ற அறிவாளர்கள் சொல்லும் கருத்தை நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் கருத்தினில் ஞானம் இருக்கும். கற்றறிந்த அறிவாளர்கள் நமக்காகத் தரும் உரைகளை நாம் கற்று அறிவோம். அந்த உரைகள் நம் அறிவுக் கண்ணைத் திறக்கும். 292 கல்வியால் பாவம் தொலையும் நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன்று இலாத மணிவிளக் காமே. விளக்கம்: நிலைத்து நிற்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருவடிச் சிறப்பைச் சொல்லும் கல்வியை இளமையிலேயே கற்போம். அக்கல்வியால் நம் பாவங்கள் தொலைந்து போகும். சொல் குற்றம் இல்லாது அந்த இறைவனை தொழுவோம், ஒப்பீடு செய்ய முடியாத மணிவிளக்காய் அந்த இறைவன் தோன்றி அருள்வான். (செய்மின் - செய்யுங்கள், கழிந்தறும் - கழிந்து போகும்) 293 கல்வியின் வேரைக் காண்போம் கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார் எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. விளக்கம்: கல்வி கற்றவர்கள் கூட எல்லாருமே இறை வழிபாட்டில் ஆர்வம் கொள்வதில்லை. கல்வியின் வேரைக் கண்டவர்கள் தான் இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்கிறார்கள். அவர்கள் பாம்பு போல நீளும் குண்டலினியைப் பற்றி, அதன் ஆற்றலை மேம்படுத்துகிறார்கள். நாம் இரவும் பகலும் நம் இறைவனை நினைத்து வழிபடுவோம். அவ்வாறு வழிபட்டால் அந்த இறைவனின் சக்தி வலிமையாக உள்நின்று நம் உடலினைக் காக்கும். (பல்லி - வேர்,  எல்லி - இரவு,  வல்லி - வலிமை,  காயம் - உடல்) 294 நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. விளக்கம்: நல்வாழ்விற்கு வழித் துணையாய் வரும் விஷயங்கள் இவை. தூய நற்சோதி (சோதி வடிவான சிவபெருமான்). தூய நல் சொற்கள் (இனிய சொற்களை மட்டும் பேசுதல்). தூய நல் சுக்கிலம் (சுக்கிலம் கெடாமல் காத்தல்). தூய நல் கல்வியினால் மேல் சொன்ன மூன்று துணைகளையும் பெறலாம். (கந்தம் – சுக்கிலம்) 295 கல்வியினால் மயக்கம் தெளியும் நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. விளக்கம்: சாஸ்திரங்களைக் கற்று அறிவு நுண்மை அடையப் பெறாதவர்கள், காமத்தைப் பற்றிக் கொண்டு, தம்மிடம் உள்ள மற்ற நல்ல பண்பினால் கிடைக்கக் கூடிய பயன்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கம்பு ஒன்றைக் கையில் எடுத்தாலே கூடியிருக்கும் பறவைகள் தன்னாலே ஓடி விடுவதை போல, சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து ஞானம் அடைந்தால் காமம் போன்ற மயக்கங்கள் தன்னாலே ஓடி விடும். ஆனாலும் மக்கள் ஆசையை பற்றிக் கொண்டு மனம் மயங்குகிறார்களே! 296 நூல் ஏணி ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. விளக்கம்: சூரியனின் ஒளி எல்லாப் பக்கங்களிலும் பரவி இருந்தாலும், சூரியகாந்தக் கல்லால் மட்டுமே சூரிய ஒளியை உள்வாங்கி நெருப்பை வெளியே சிதற விட முடியும். அது போல இறைவன் எங்கும் பரவி இருக்கிறான் என்றாலும், கல்வி கற்றவர்களாலேயே அந்த இறைவனை உணர முடியும். இளஞ்சந்திரனை தன் நெற்றியில் அணிந்துள்ள சிவபெருமானை அடைய வல்லவர்களுக்கு சிறந்த நூல்களை ஏணியாகப் பற்றிக்கொள்ளக் கூடிய மனம் வாய்க்கும். 297 வழித்துணையாய் வரும் கல்வி வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. விளக்கம்: கல்வி கற்றவர்களின் சிந்தனை நமக்கெல்லாம் வழித்துணையாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி அறியாமையை விளைவிக்கும். அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். கல்வி கற்றவர்களுக்கு, அந்த தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் விளங்கும் அந்த சிவபெருமான்  பெருந்தன்மையுடன் அருள் புரிவான். 298 தேவர்களை விட மிகுந்த பேரின்பம் பெறலாம் பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. விளக்கம்: ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்த பரமனைப் பற்றிக்கொள்வோம். அந்தப் பற்று முழுமையாக இருந்தால் முதல்வனாம் சிவமெருமானின் அருளைப் பெறலாம். சாமர்த்தியம் மிகுந்த தேவர்களை விட கல்வியின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள். 299 உள்ளத்தில் இடம் கொடுப்போம்! கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து உடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. விளக்கம்: கயிலாய மலையில் வசிக்கும் சிவபெருமான், இந்த உலகில் பரந்திருக்கும் கடல் அனைத்தையும் தன்னுடையதாகக் கொண்டவன். ஐந்து பூதங்களையும் உடலாகக் கொண்டவன். வெற்றியுடைய காளையில் அமர்ந்திருக்கும், தேவர்களின் தலைவனான அவன், பல யுகங்களாக, தன் உள்ளத்தில் இடம் கொடுத்தவர்களின் மனத்தில் ஒளியாய் விளங்குகிறான். (ஐம்பூதங்கள் - மண், விண், நீர், தீ, காற்று. அடல் விடை - வெற்றியுடைய காளை) கேள்வி கேட்டமைதல் 300 சிவகதி பெறும் வழி! அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே. விளக்கம்: சிவகதி பெற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை - அறங்களைப் பற்றிய விஷயங்கள். அந்தணர்களின் அறிவுரைகள். வலிமையாக இருப்பதற்கான வழிகள். தேவர்களின் வழிபாட்டு மந்திரங்கள். பிற சமயங்களில் சொல்லப்படும் கருத்துக்கள். பொன் போன்ற மேனி கொண்ட நம் சிவபெருமானின் திறம். இவற்றை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டு சிவகதி பெறுவோம். 301 திவ்விய மூர்த்தியை அறிவோம்! தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. விளக்கம்: சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் ஆவான். அந்த திவ்விய மூர்த்தியின் பெருமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவில்லை. அவனது பெருமையை நாம் அறிந்து கொண்டு, அவனைப் பற்றிய நூல்களைப் படிப்போம், அவனைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். கற்றும் கேட்டும் அவனை உணர்வோம். உணர்ந்த பின் அவனது புகழைப் பாடி உயர்வு பெறுவோம். 302 சிவனை வேண்டினால் மற்ற தெய்வங்களும் அருள்வார்கள் மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்பது அரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே. விளக்கம்: நந்தியம் பெருமானை வேண்டினால் திருமாலின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். சிவத்தொண்டு செய்தால் பிரமனின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். எல்லாமே சிவன் செயல் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் வானுலகின் தேவர்கள் ஆவார்கள். உலகப்பற்று உடையவர்கள், இவற்றை எல்லாம் விட்டு, செய்யும் செயலுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று  யோசித்துத் தங்கள் காலத்தை வீணே கழிப்பார்கள். 303 ஆதிப்பிரான் அவன்! பெருமான் இவனென்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. விளக்கம்: சிவனே இந்த உலகில் மூத்தவன் என்பதை உணர்ந்து அவனைப் போற்றிப் புகழ்பவர்கள் சிறப்புடையவர்கள். அவர்கள் தம் வாழ்நாள் முடிந்த பிறகு வானுலகில் தேவர் ஆவார்கள். அரிய தவங்களைச் செய்யும் அந்த ஆதிப்பிரான் தன்னை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு மகிழ்ந்து அருள் செய்வான். 304 மலரின் வாசனை போல் விளங்குவான் ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே. விளக்கம்: ஈசன் பிறப்பையும் இறப்பையும் அருளும் விதத்தைப் பற்றி நாம் பேசியும் பிதற்றியும் மகிழ்வோம். நாம் அப்படி ஈசனின் நினைவிலேயே இருந்தால், அந்தப் பெருமானும் நம்மிடையே நேசமுடன் சிவசோதியாய் விளங்குவான். மலரில் வாசம் நீங்காது இருப்பது போல் அவனும் நம்மை விட்டு நீங்காதிருப்பான். மலரின் இயல்பாய் அதன் வாசனை இருப்பது போல் சிவனும் நம்முடைய இயல்பாய் விளங்குவான். (பிதற்றி - உரை தடுமாறி (உணர்ச்சி வசப்பட்ட நிலை),   நிகழொளி - சிவசோதி,  கந்தம் - வாசனை) 305 அளவில்லாத காலத்திற்கு அருள் பெறலாம் விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. விளக்கம்: சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம். அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால், வானவர் தலைவனான சிவபெருமான் தவறாமல் அருள்வான், அளவில்லாத காலத்திற்கு. 306 சுட்டிக்காட்ட முடியாத அவன் - இறைவன்! சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவராவார் அன்றே. விளக்கம்: சிறுவர்கள் விளையாடும்போது மணல் சோறு சமைத்து அதில் நிறைவு பெறுவது போல், உலக விஷயங்களின் போகத்தினால் இன்பம் உண்டு என நினைப்பவர் பலர் உண்டு. அவர்கள் ‘இது தான் இறை என்று சுட்டி அறிய முடியாத’ அந்த இறைவனைக் குறித்துத் துதிக்காதவர். அவர் உண்மையான ஆனந்தத்தை அறியவில்லை, தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறிந்திருக்கவில்லை. குறியாதது ஒன்று - சுட்டி அறிய முடியாத ஒன்று. இரண்டு வார்த்தைகளில் கடவுளைப் பற்றிய ஒரு நுண்மையான விளக்கம். 307 சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும் உறுதுணை யாவது உயிரும் உடம்பும் உறுதுணை யாவது உலகுறு கேள்வி செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. விளக்கம்: நம்முடைய உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கின்றன. அப்படி இரண்டும் இணைந்து நாம் வாழ்வதற்குத் துணையாய் இருப்பது, உலகியல் வாழ்க்கை பற்றிய நம்முடைய கேள்வி ஞானம். அதற்கு மேலும் சிறந்த துணையாய் இருப்பது சிவனடி குறித்த நமது சிந்தனை. பெறுவதற்கு அரிய அந்த சிவனடியை அடையும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டால், நாம் அடுத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம். 308 தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான் புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. விளக்கம்: இந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான். கல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான். (இடும்பை - துன்பம், கழிய நின்றார் - விலகி நின்றார்) 309 உணர்ந்தால் வருவான் வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. விளக்கம்: சிவபெருமானை நாம் மனத்தில் வைத்து உணர வேண்டும். வாயினால் அவன் புகழ் பேசி அவனுடன் ஒன்ற வேண்டும். அந்தப் பெருமான் பல வேறுபட்ட உருவங்களில் இருக்கிறான். நம் உயிர் என்னும் அச்சாணி, உலக வாழ்க்கையில் சிக்கி எவ்வளவு கலங்கினாலும், அந்த ஆதிப்பிரானை விரும்பி உணர்வோம். அவன் நம்மிடம் நெருக்கமாக இருப்பான். கல்லாமை 310 கல்வி மட்டும் போதாது! கல்லா தவரும் கருத்தறி காட்சியை வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகி லாரே. விளக்கம்: கல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை. 311 எங்கும் பரவி இருக்கிறான் அவன் வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே. விளக்கம்: கல்வி கற்ற வல்லவர்கள் எப்போதும் இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் ஒன்றி வாழ்கின்றார். மற்றவர்கள் பல வழி உண்டு என நினைத்து மயங்குவார். எல்லா இடத்திலும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கல்லாதவர்கள் அந்த கலந்திருக்கும் தன்மை அறியமாட்டார்கள். 312 நிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம் நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. விளக்கம்: நமது மனம் நிலை இல்லாதவற்றை எல்லாம் நிலையானதாக நினைத்தே பழகி விட்டது. அதனால் தான் மனம் இந்த உடலையும் நிலையானதாக உணர்கிறது. ஈசன் எல்லா உயிருக்கும் இறைவன் தான், ஆனாலும் கல்வி இல்லாத நெஞ்சத்தால் அவனை உணர முடியாது. நிலையாமையைப் பற்றிய தெளிவு தரும் கல்வி நமக்கு அவசியம். (குரம்பை - உடல்) 313 எனக்குத் தெரிந்த கல்வி கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. விளக்கம்: சிவநெறியைக் கல்லாதவர்களுக்கு என்னைப் பார்த்தால் கல்வி கற்காதவனாகத் தோன்றுகிறது. என்னை அயலானாகப் பார்க்கிறார்கள். அவர்கள் துயர் தரும் உலக விஷயங்களையே செய்ய வேண்டியக் கடமைகளாக நினைக்கிறார்கள். அவற்றை செய்யும் ஆற்றல் இல்லாதவனாக இருந்து விட்டுப் போகிறேன். உலகாய வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிறருக்கு வழங்கும் வல்லமை எனக்கு இல்லை. காரணம் அவற்றைச் சம்பாதிக்கும் கல்வியைப் பற்றி என் மனம் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்த கல்வி எல்லாம் எதிலும் பற்றில்லாமல், விலகி நின்று ஆனந்தம் கொள்வதே! 314 கல்வி கற்ற வல்லவர்கள்! நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. விளக்கம்: கற்று அறிந்த வல்லவர்கள், இந்த உடலில் உயிர் நிலையாக நில்லாது என்பதைப் புரிந்து கொள்வார்கள். நிலையாமையைப் பற்றிப் புரிந்திருப்பதால் அவர்கள் தான தர்மத்திலும், தவத்திலும் தங்கள் காலத்தைக் கழிப்பார்கள். இறை பற்றிய கல்வி இல்லாதவர்கள் கீழானவர் ஆவார்கள். அவர்கள் இந்த உலகத்தில் கொடிய வினைகளால் விளையும் துயரங்களை அனுபவிப்பார்கள். 315 நோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும் விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. விளக்கம்: வானளவு உயர்ந்திருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் விளாம்பழத்தை உண்ண விரும்பினால், நம்முடைய கண் பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். அப்போது தான் உயர்ந்த கிளைகளில் இருக்கும் விளாம்பழம், பறிப்பதற்கு வசதியாக, நம் கண்களுக்குத் தெரியும். அதை விட்டு விட்டு நாம் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்ற பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொண்டு, அதையே கிடைப்பதற்கு அரிய விஷயமாக நினைக்கக் கூடாது. சிலர் அப்படித்தான். உலக விஷயங்களைப் பெரிதாக நினைத்து அவற்றைப் பற்றி எழுதி வீணாகப் போகிறார்கள். கல்வியினால் நமது நோக்கங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களில் மனம் மயங்கக் கூடாது. 316 கணக்கு அறிந்தவர்! கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. விளக்கம்: நன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள். 317 மூடரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே. விளக்கம்: கல்லாத மூடரைப் பார்ப்பதே துன்பம். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கல்லாத மூடர்களுக்கு, தன்னைப் போன்ற கல்லாதவர் எல்லாம் நல்லவராகவே தெரிவார்கள். கல்லாத மூடர்க்கு எந்த விஷயத்திலும் உள்ள கருத்தை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. 318 கல்வி என்பது வீண் வாதத்திற்காக அல்ல! கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. விளக்கம்: சிலர் ஞானம் பெறுவதற்கல்லாமல், தர்க்கம் செய்வதற்காகவே ஆன்மிக நூல்களைக் கற்பார்கள். அவர்கள் தீய குணம் உடையவர்கள், தங்கள் சுற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடமாட்டார்கள். தன் குற்றங்களை நீக்கிக் கொள்ளாத அந்த மூடர்கள் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். ஞானக் கல்வி பெற்று அன்பில் நிற்பவர்கள், வாழும் முறை அறிந்தவர் ஆவார்கள். கல்லாதவர்களை விட வீண் தர்க்கத்திற்காகவே கற்பவர்களால் ஏற்படும் தீமை அதிகம். (கலதி - தீயவர்,  வீடார் - விட மாட்டார்,   துரிசு - குற்றம்) 319 நம்முள்ளே சுடர் விடும் சோதி ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற சோதி நடத்தும் தொடர்வறி யாரே. விளக்கம்: ஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்தச் சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள். நடுவு நிலைமை 320 நடுவு நிலையில் நிற்போம் நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. விளக்கம்: நடுவு நிலையில் நிற்பவர்க்கே ஞானம் கிடைக்கும். நடுவு நிலையில் நிற்பவர்க்கு நரகம் கிடையாது. நடுவு நிலையில் நிற்பவர் சொர்க்கத்தை அடைந்து அங்கே தேவர் ஆவார். “நானும் அவ்வழி நின்றேனே!” என்கிறார் திருமூலர். 321 சிவத்தன்மை பெறலாம் நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே. விளக்கம்: கரிய நிறம் கொண்ட அந்தத் திருமாலும் நடுவு நிலையில் நிற்கிறான். நான்கு வேதங்களை ஓதும் அந்த பிரமனும் நடுவு நிலையில் நிற்கிறான். நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானிகள் ஆவர். நாமும் நடுவு நிலையில் நின்றால், சிவத்தன்மை பெறலாம். 322 நடுவுநிலையில் நின்று சிவன் ஆவோம் நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே. விளக்கம்: நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானி ஆவார்கள். சிலர் சிவலோகத்தில் தேவர் ஆவார்கள். சிலர் சிவத்தன்மை அடைந்து சிவனாகவே ஆவார்கள். “அப்படிப்பட்ட நடுவு நிலை நிற்கும் அடியார்களில் ஒருவனாக நானும் நடுவு நிலையில் நின்றேனே” என்கிறார் திருமூலர். 323 தோன்றிய துயரெல்லாம் துடைப்பான் தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. விளக்கம்: நம் மனத்தில் தோன்றும் மாயைகளை எல்லாம் துடைப்பவன் சிவபெருமானே அன்றி வேறு யார்? அந்த ஈசனின் திருவடியை எந்நாளும் ஏற்று நிற்போம். முதல்வனான அவன் திருநாமத்தை இடைவிடாமல் பற்றி நிற்க முயற்சி செய்வோம். அப்படிப் பற்றி நின்றால் நடுநிலையாகிய யோகநிலையில் நின்றவர் ஆவோம். ஏன்று - ஏற்று, மூன்று - முயன்று என்பதன் திரிபு, நான்று - பற்றி மது விலக்கு 324 மது விலக்கு கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. விளக்கம்: அரிசி வடித்த நீரான கழுநீரை விரும்பிக் குடிக்கும் பசுக்கள், குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. நல்ல நீரைப் பருகாமல் கழுநீரை மட்டுமே பருகுவதால், அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றன. சில மனிதர்களும் அது போலத்தான். மதுவில் தனக்கு தேவையான எல்லாமே இருப்பதாக நினைத்துப் பருகுகிறார்கள். அப்படி மது அருந்துபவர்கள் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகுகிறார்கள். அவர்கள் உயர்வு தரும், உண்மையான இன்பம் மிகுந்த சிவானந்தத் தேனை அறியாதவர்கள். 325 உண்மையான இன்பம் தரும் மது சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில் ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச் சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. விளக்கம்: மனம் உருக அந்தச் சிவபெருமானை நினைத்து சமாதி நிலையில் இருக்கும் போது, சிவானந்தம் என்னும் மது தொடர்ந்து ஊறும். அதுவே உண்மையான இன்பம் தரும் சுத்தமான மதுவாகும். நம் உள்ளே ஊறும் அந்த சிவானந்த மதுவை நாம் விட்டு விடக்கூடாது. வெளியே கிடைக்கும் மற்ற மதுக்கள் எல்லாம் கீழானவை ஆகும். அவை நம்மை செயலற்றவராய் கிடக்கச் செய்து விடும். 326 சிவானந்தத் தேனை உணர்வோம் காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும் மாமல மும்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. விளக்கம்: காமமும் மதுவும் கீழ்மக்களுக்கே உரியதாகும். மதுவினால் நம்முடைய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால், நம் சமயத்தில் உள்ளவற்றை உணர முடியாத அளவுக்கு அறிவு மயக்கம் உண்டாகும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். புனிதனான அந்தச் சிவபெருமானின் திருவடியில் பிரணவமயமான ஆனந்தத் தேன் ஊறல் உண்டு. நாம் உணர்ந்து பருக வேண்டிய மது அதுவே ஆகும். 327 நம் உள்ளே ஊறும் மது வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. விளக்கம்: தீயவர்கள் தான் மது அருந்துகிறார்கள், அதனாலேயே சீக்கிரம் சாகிறார்கள். காமத்தை மதுவாக நினைத்துக் கொண்டாடுபவர்கள், வாழ்க்கையில் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார்கள். வெளியே கிடைக்கும் மதுவால் தான் இத்தனை துன்பம் எல்லாம். வேள்வியினால் நமக்குள்ளே தோன்றும் உள்ளொளியில் ஒரு மது ஊறும். சிவ நாமத்தை ஓதுபவர்கள் அதை உணர்வார்கள். உள்ளூறும் அந்த மதுவை ருசிக்கும் சிவனடியார்கள் அன்றே சிவனை சமீபத்தில் காணும் இன்பம் பெறுவார்கள். 328 மது உண்மையை மறைக்கும் உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார் தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார் கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. விளக்கம்: மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. அருளை வாரி வழங்கும் வள்ளலான சிவபெருமானிடம் அருள் பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழ மது அருந்துபவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தெளிந்த ஞானம் பெற்ற சிவயோகியரோடும் சேர மாட்டார்கள். 329 மது மயக்கம் வேண்டாமே! மயக்கும் சமய மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார் மயக்குறு மாமாயை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. விளக்கம்: சமயத்தின் பெயரால் மது அருந்துபவர்கள் மூடர்கள். மயக்கம் தரும் மதுவை அருந்தும் மூடர்கள் எதையும் ஆராய்ந்து அறியும் திறன் இல்லாதவர்கள். உலகப்பற்று என்பது பெரும் மயக்கம். மது என்னும் மயக்கத்தினால் உலகப்பற்று என்னும் மயக்கத்தை தெளிவிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு மயக்கத்தினால் இன்னொரு மயக்கம் தெளியாது. இன்னும் மயக்கம் அதிகமாகவே ஆகும். 330 மதுவினால் மனச்சஞ்சலம் உண்டாகும் மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. விளக்கம்: மது தடுமாற்றத்தையும், மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். வாய்மை முதலிய நல்ல குணங்களை அழிக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காக பொதுமகளிரை நாடி அவர்களிடமே முயங்குவார்கள். இல்லாளிடம் கிடைக்கும் இன்பமே இனிமை என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கு இடையறாத ஆனந்தம் கிட்டுமோ? தியங்கு - மனச்சஞ்சலம் 331 இரட்டை நிலைகளைக் கடக்கலாம் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே. விளக்கம்: பிற எண்ணங்களைத் தவிர்த்து, நினைப்பும் இல்லாத, மறப்பும் இல்லாத நிலையில் அமர்ந்திருந்தால் உள்ளே சிவானந்தத் தேன் ஊறும். நிறைய பேர் இதைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. இரவு, பகல் என்னும் இரட்டை நிலைகளைக் கடந்தவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடி இன்பத்தில் திளைத்து, இரவு, பகல் என்னும் மாயைகளை அகற்றி நின்றேன். 332 மது நம் ஆற்றலை அழிக்கும் சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. விளக்கம்: சக்தியின் அருளை வேண்டிச் சிலர் மது அருந்துகிறார்கள். இது அறியாமை ஆகும். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்தால் அவர்களுடைய ஆற்றல் அழியும். உண்மையில் சக்தி என்பது சிவஞானத்தினால் கிடைப்பது. நாம் சிவஞானம் பெற முயற்சி செய்வோம். அந்தச் சத்திய ஞானத்தைப் பெறுவதே ஆனந்தமாகும். 333 சிவசக்தியை வழிபட்டால் எண்சித்திகள் கிடைக்கும் சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம் சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம் சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. விளக்கம்: சக்தியை உடையவன் நம் சிவபெருமான். நம் சிவபெருமானின் அருள் நமக்குக் கிடைத்தால், சக்தியின் அருளும் கிடைத்த மாதிரிதான். அதே போல சக்தி நமக்கு அருள் செய்தால், சிவன் அருளும் சேர்ந்தே கிடைக்கும். சிவன், சக்தி இருவரையும் நம் மனத்தில் வைத்து வழிபட்டால் எட்டுப் பெருஞ்சித்திகளும் நம்மை வந்தடையும். எண்சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்வம் 334 சிவானந்தமே பரமானந்தம்! தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே. விளக்கம்: நம்முள்ளே ஊறும் சிவானந்தத் தேறலே நமக்கு உண்மையான இன்பம் தரும் மதுவாகும். அந்தச் சிவானந்தத் தேறல் நம்முடைய அறிவு மயக்கத்தைப் போக்கும். பொய்யான தத்துவங்களை நீக்கும். நாமே சிவம் ஆவோம். பொய்யான தவமுறைகளை நீக்கி உண்மையான போகத்துள் போகச் செய்யும். நாம் உண்மை என்று நம்பும் இந்த உலக இன்பத்தை மறந்து, பரமானந்தம் பெறுவோம். 335 மது அறிவை அழிக்கும்! யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே. விளக்கம்: சிவயோகியர் தங்கள் பிராணனை வசப்படுத்தி, புருவ மத்தியில் ஊறும் அமிர்தத்தை உணர்ந்து அனுபவிக்கிறார்கள். மற்ற சிலர் மதுவினால் எண்சித்திகளைப் பெறலாம் என்னும் பொய்யான உபதேசத்தை நம்பி மதுவை நாடுகிறார்கள். அவர்கள் மது மயக்கத்தினால் தங்கள் அறிவை இழக்கிறார்கள். 336 உள்ளே ஊறும் அமுதத்தை நாடுவோம்! உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து எண்ணீர் குரவன் இணையடித் தாமரை நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம் கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. விளக்கம்: நம்முள்ளேயே அமுதம் ஊறும் ஒரு ஊறல் உள்ளது. அந்த ஊறலைத் திறந்து நாம் அமுதம் பருகுவதில்லை. நம் சிவபெருமானின் திருவடியையும் நாம் எண்ணுவதில்லை. சமாதி நிலையை நாடி அதில் பொருந்தி இருப்பதுமில்லை. சமாதியில் இருந்தால் அருள் நீரால் நலம் பெறலாம். சமாதி நிலையில் நின்று தொடர்ந்து கவனித்துப் பார்த்தால் பிராணன் செயல்படும் முறையைத் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலுடன் திருமந்திரத்தின் முதல் தந்திரம் நிறைவு பெறுகிறது. நன்றி சிவமயம்