[] []                                                                                                                 திருப்புமுனை                                                               மணவை முஸ்தபா, எம்.ஏ      நூல் : திருப்புமுனை நூல் ஆசிரியர் : மணவை முஸ்தபா, எம்.ஏ   மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.   நூல் மூலம – https://ta.wikisource.org/s/8uvo நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org  பொருளடக்கம் முன்னுரை 6  1. பாகம் 7  2. பாகம் 12  3. பாகம் 14  4. பாகம் 18  5. பாகம் 22  6. பாகம் 23  7. பாகம் 28  8. பாகம் 30  9. பாகம் 32  10. பாகம் 34  11. பாகம் 36  12. பாகம் 37  13. பாகம் 40      முன்னுரை   இன்றைய சிறுவர்கள் நாளைய நற்குடிமக்கள்: எதிர் காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமெனில் அவர்கள் இளம் வயது முதலே சிந்தனையிலும் செயலிலும் சிறந்தவர்களாக விளங்குவதற்கேற்ற பயிற்சி பெறுதல் அவசியம். அத்தகைய பயிற்சிக் களமாக அமைந்திருப்பதே பள்ளி வாழ்க்கை.  இனியனின் இனிய இயல்புகள் வழி தவறிய கண்ணாயிரம் போன்றவர்களைத் தடுத்து, நேர் வழிக்கு கொண்டு வரத் துணையாயமைகின்றன. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையே அவர்கட்கு வாழ வழிகாட்டுகிறது.  பத்தாண்டுகட்கு முன்பு அனைத்திந்திந்திய வானொலி சிறுவர் நாடக விழாவில் ‘எது அறிவு?’ என்ற பெயரில் ஒலிபரப்பப்பட்டு பல்லாயிரவர் பாராட்டைப் பெற்ற நாடகமே இன்று புதின உருவில் ‘திருப்புமுனை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதுவும் மாணவ, ஆசிரிய சமுதாயத்தின் பேராதரவைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.                                                                                                                                        அன்பன்   மணவை முஸ்தபா நூலாசிரியர்  1. பாகம்   காலம் கடந்துகொண்டே இருந்தது.  நேரம் செல்லச் செல்ல அருள் பொறுமை இழந்தான். இனியன் வரும் வழியை நூற்றி யொராவது முறையாக ஏறிட்டு நோக்கினான். யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தார்களே தவிர எதிர்பார்த்த இனியன் வருவதாகத் தெரியவில்லை. சலிப்போடு தன்னிடம் இருந்த இனியனின் புத்தகப் பையை அப்படியும் இப்படியுமாக நகர்த்தினான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் அன்று மாலை வகுப்பில் நடந்த சம்பவத்தை அசைபோடத் தொடங்கியது. அக்காட்சி அவன் மனத்திரையில் படமாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.  இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த மாணிக்கம் ஒவிய வகுப்பில் படம் வரைந்து கொண்டிருந்தான். கண்ணாயிரம் தனக்குப் படம் வரைந்து தருமாறு மாணிக்கத்தை உதவிக்கழைத்தான். அதற்கு மாணிக்கம் தனது படத்தை வரைந்துவிட்டு பிறகு உதவுவதாகக் கூறினான். பொறுமை இல்லாத கண்ணாயிரம் அவனைப் பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினான். அதைக் கேட்டு கோபத்தால் உணர்ச்சிவசப்பட்ட மாணிக்கம் வழக்கமாக வரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கைகால்களை இழுத்துக் கொண்டு பெஞ்சியிலிருந்து கீழே விழுந்தான். வாயில் நுரை நுரையாக வர, ஆசிரியரும் வகுப்புத் தலைவன் இனியனும் பதறிப் போய் அவனைத் துாக்கி ஆசுவாசப் படுத்தினார்கள். பிறகு பூரணமாக நினைவு திரும்பிய மாணிக்கத்தை இனியன் கைத்தாங்கலாக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அப்போது தன் புத்தகப்பையை பார்த்துக் கொள்ளும்படி தன்னிடம் இனியன் ஒப்படைத்துச்சென்றது ஆகிய அனைத்தும் அடுக்கடுக்காக அருளின் மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. காத்திருந்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து தன் புத்தகப்பையை ஒரு தோளிலும் இனியனின் புத்தகப் பையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தபடி நடையை ஒட்டினான்.  சிறிது தூரம்தான் போயிருப்பான். விளையாட்டு மைதானத்திலிருந்து விரைந்து வந்த மணி அவனோடு சேர்ந்து நடந்தான். இருவரும் மெளனமாக நடந்தார்கள். மணி ஒரு கனைப் புடன் அருளின் மவுனத்தைக் கலைத்தான்.  "அருள்! இன்னிக்கு மாணிக்கம் திடீர்'னு வகுப்பிலே காக்காய் வலிப்பு வந்து கீழே விழுந்ததை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா."  துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் தன் முகத்தைச் சற்றே வேகமாக வைந்துக்கொண்டு கேட்டான்.  இவர்கன் இருவருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த கண்ணாயிரம் இவர்கள் பேச்சின் இடையே புகுந்து பேசினான்.  "ஆமான்'டா, மயங்கி கீழே விழுந்து கை கால்களை இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ள அவன் பட்ட அவஸ்தையை நினைக்கும் போது எனக்குக்கூட ரொம்பக் கஷ்டமாக இருக்குடா."  கண்ணாயிரத்தின் பேச்சில் துக்கத்தைவிட, பாசாங்கு அதிகமாக இருப்பது அருளுக்குத் தெரியாமல் இல்லை.  “அனுதாபம்தான் பெரிசா இருக்கு. அவன் உன்னால்தானே வலிப்பால் மயங்கி விழுந்தான். நீ மோசமான வார்த்தையால் திட்டியதால் தானே அவன் உணர்ச்சி வசப்பட்டான். மாணிக்கம் உணர்ச்சி வசப்பட்டால் அவனுக்கு இப்படி ஏற்படும் என்பது உனக்கும் தெரிந்தது தானே. எல்லாத்துக்கும் நீயே காரணமாய் இருந்துட்டு இப்ப வந்து பெரிசா அனுதாபப்படறியோ!”  நேரடியாக நெத்தியடிபோல் பொரிந்து தள்ளினான் அருள். கனமாக இருந்த அவன் மனம் லேசானதுபோல் தோன்றியது.  மேலும் தொடர்ந்தான் அருள்:  “மாணிக்கம் மயக்கமா விழறப்போ நீ பக்கத்திலேதானே இருந்தே; அப்போ நீ பயந்து போய் விலகிப் போனியே தவிர ஓடிப்போய் உதவலையே. மூணாவது வரிசையிலே இருந்த இனியன் எவ்வளவு வேகமாக விரைந்துபோய் தூக்கினான்.”  அருள் கூறியதை ஆமோதிப்பவன் போல் மணியும் ஒத்துப் பேசினான்:  “அதோட மயக்கம் தெளிந்த மாணிக்கத்தை அவன்தானே வீட்டுக்கும் அழைச்சிட்டுப் போயிருக்கான்.”   கண்ணாயிரத்துக்குக் கைகொடுக்கும் முறையில் அவன் நண்பன் தங்கதுரையும் வந்து பேச்சில் கலந்து கொண்டான். கேலியும் கிண்டலும் கலந்த முறையில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி,  “ஒருவேளை இதுக்கும் ஏதாவது பரிசு தருவாங்க’ன்னு ஓடிப்போய் உதவியிருப்பான்!” என்று கூறிச் சிரித்தான் தங்கதுரை.  “சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?” என்று கூறிவிட்டு கண்ணாயிரமும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.  இவர்களின் ஏளனச் சிறிப்பைக் கண்ட அருளுக்கு இருவர் மீதும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படவே செய்தது.  "ஏன்'டா, இப்படி எப்பப் பார்த்தாலும் இனியன்மேலே பொறாமைப்படறீங்க. நம்ம கிட்ட இல்லாத எத்தனையோ நல்ல குணங்கள் அவன்கிட்ட இருக்கு. வேண்டிய அளவுக்குத் திறமையும் இருக்கு. அதனாலே அவனை எல்லாரும் பாராட்டறாங்க; பரிசு தந்து புகழ்றாங்க!!  இதைக் கேட்கப் பிடிக்காதவனாகத் தங்கதுறை எதிர்ப்புக் குரல் கொடுத்தான்:  “என்னடா, பெரிய திறமை? நம்மகிட்ட மட்டும் இல்லைய?”  தங்கதுரையின் பேச்சில் ஆணவம் தெரிந்தது.  “பள்ளிக்கூடத்தின் எல்லாப் பரிசுகளையும் இனியனே வாங்குறதுக்குக் காரணம் திறமையும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே. அதுக்கு ஒரு பெரிய ரகசியமே இருக்குடா!”  தங்கதுரையின் பேச்சை இடைமறித்து மர்மமாகப் புதிர் போட்டான் கண்ணாயிரம்.  பரிசு பெறும் மர்மத்தை அறிந்து கொள்ளத் துடித்தான் தங்கதுரை. பொறுமை இழந்தவனாக “அதென்ன அவ்வளவு பெரிய ரகசியம்?” என வினா தொடுத்து விடைக்காக கண்ணாயிரத்தின் முகத்தை நோக்கிக் காத்திருந்தான்.  “சொல்லுடா, நாமும் அதன்படி நடந்து பரிசும் பாராட்டும் வாங்கலாம்.” துரிதப்படுத்தினான் மணி.  மர்மத்தை நீடித்துத் தன் நண்பர்களைக் காக்க வைக்க விருமடாத கண்ணாயிரம் புதிரை அவிழ்க்கத் தொடங்கினான்:  “அவன் ஆசிரியர்கள்'ட்டே குழைஞ்சு குழைஞ்சு அவங்களையெல்லாம் நல்லா காக்கா பிடிச்சு வச்சிருக்கான்'டா!”  மலையைக் கெல்லி எலியைப் பிடித்தது போல் இருந்தது. கண்ணாயிரம் கூறிய காரணம் 'சப்'பென்று இருந்தாலும், அதிலும் உண்மை இருப்பதுபோல் மணியும் தங்கதுரையும் கருதி அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் போக்கைக் கண்டு அருளுக்குச் சிரிப்பு வந்தது.  “பசி எடுத்த பறவை பழ மரத்தை நாடிப் போறதிலே என்ன தப்பு? அறிவுப் பசி கொண்ட இனியன் ஆசிரியர்களைத் தேடிப் போறான் இது எப்படித் தவறாகும்? அதுவே ஒரு திறமை தானே!”  அருளின் காட்டமான பதில் அவர்கள் வாயை அடைத்தது; என்ன பேசுவது எனத் தெரியாது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  “அருள் எப்பவும் இனியனை ஒசத்தியே தான்'டா பேசுவான்”. மெதுவாக முணுமுணுத்தான் மணி.  “என்ன ஆனாலும் சரி. இந்த ஆண்டு பள்ளிப் போட்டி எல்லாத்திலேயும் நாமும் பங்கு  பெறணும். இனியனை எந்தப் பரிசும் வாங்க விடக்கூடாது, எல்லாம் நாமேதான் வாங்கணும்.” தன் ஆசையை வீராப்பாக வெளிப்படுத்தினான் தங்கதுரை. பெருமித உணர்வு பொங்க மற்றவர்களின் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.  தங்கதுரை கூறியதை ஆமோதிப்பவன் போல் மணி தலையை ஆட்டியபடி பேசினான்:  “நல்ல யோசனைதான். ஆனால், அதுக்கு ரொம்ப அறிவும் திறமையும் வேணுமே. அதுக்கு நாம எங்கேடா போறது!”  இவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அருளுக்கு இதைக் கேட்டபோது சிரிப்பு வந்துவிட்டது. கேலி செய்யும் பாவனையில்,  “அறிவும் திறமையும் எங்கேயாவது கடையில் விற்குமா என்று தேடிப் பார்த்து வாங்கினா போச்சு!” என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தான் அருள்.  இதைக் கேட்டபோது கண்ணாயிரத்துக்கு ‘சுரீர்’ என்றது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு வன்ம உணர்ச்சியோடு பேசினான்:  “நம்மாலே பரிசு வாங்க முடியாவிட்டாலும் அவனை வாங்கவிடாமல் தடுத்திட்டா அதுவே நமக்கு வெற்றிதாண்டா.”  கண்ணாயிரம் பேசியதன் உட்கருத்து மற்றவர்களுக்குத் தெளிவாகப் புலப்படவில்லை.  “அதெப்படிடா முடியும்?” கேள்விக் கனை தொடுத்தான் தங்கதுரை.  “தங்கதுரைக்கு எப்பவும் எதிலேயும் அவநம்பிக்கைதான். முயன்றால் முடியாதது உண்டா? பொறுத்துப் பார், எல்லாம் தெரியும்?”  கண்ணாயிரத்தின் பேச்சு ஏதோ விபரீதத்துக்கு வழி வகுப்பது போல் அருளுக்குத் தோன்றியது. தவறான நோக்கும் போக்கும் உள்ள அவர்களோடு தொடர்ந்து பேசவே அவனுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் செல்ல முனையும் பாதை மிகத் தவறானது எனச் சுட்டிக்காட்டும் வகையில் சரியான பாதையைக் காட்டிப் பேசலானான்:  “உங்க முயற்சியை படிப்பிலேயும் நல்ல செயல்கள்’லேயும் திருப்பினால் உங்களுக்கும் பரிசும் பாராட்டும் தானாக வரும். அடுத்த வனுக்குத் தீங்கு செய்யறதிலே சிந்தனையைச் செலுத்தினா பழியும் தண்டனையும்தான் மிஞ்சும். உங்க வழிக்கு நான் வரலேப்பா, நூலகத்துக்கு நான் போகனும் நேரமாச்சு.” எனக் கூறி நடக்கத் தொடங்கினான் அருள்.  அருளின் அறிவுரையைக் கேட்க பிடிக்காதவர்கள்போல ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர்களும் கலைந்து சென்றார்கள்.  2. பாகம்   இனியன் வீட்டிற்குச் செல்லும் சாலையில் அருள் திரும்புவதற்கும் இனியன் அங்கு வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அருள் சிறிது சலிப்புடன் பேசினான்:  “என்னடா, உனக்காக எவ்வளவு நேரம் காத்துக் கிடக்கிறது. நீ பாட்டுக்கு மாணிக்கத்தைக் கூட்டிக்கிட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டே. உன் புத்தகப் பையை நான் தூக்கிக்கிட்டு அலையறேன். நல்ல சுமைடா.”  “அருள்! முடிஞ்ச மட்டும் அறிவை நெறையச் சுமக்கனும்’டா.” தன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டே இனியன் பேசினான்.  “அது சரி! அதுக்காக உனக்கு நான் ஏடு தூக்கியாக இருக்க முடியாதப்பா ! இந்தக் கிழிஞ்ச பையிலே நீ திணிச்சு வச்சிருக்கிற உன் அறிவுச்செல்வம் இன்னும் கொஞ்ச நேரத்திலே பொத்துக்கிட்டு கீழே விழுந்தாலும் விழுந்திடும்!” சிரித்துக் கொண்டே கேலி பேசினான்.  “அறிவு பையைப் பொருத்தது இல்லை அருள். அதைப் பிடிக்கிற கையையும் படிக்கிற மனதையும் பொருத்தது.” வினயமாகக் கூறி முடித்தான் இனியன்.  “பேச்சுப் போட்டிலே முதற்பரிசு வாங்குறவனாச்சே அகப்பட்டா விடுவியா? அது சரி மயக்கம் போட்டு விழுந்த மாணிக்கம் இப்ப எப்படி இருக்கான்?”  பேச்சை மாற்றி ஆவலோடு கேட்டான் அருள்.  “பாவம்'டா. அவன் வலிப்புடன் மயக்கமா விழுந்த சேதியைக் கேட்டவுடனே நோயாளியாய் இருக்கிற அவன் அம்மா எப்படியெல்லாம் அழுது புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா? மாணிக்கத்துக்கிட்டே படிப்புத் திறமையும் இல்லே, அவன் வீட்டிலேயோ வேறு எந்த வசதியும் இல்லை. அவன் நிலைமை ரொம்பப் பரிதாபம்'டா,”  “உண்மைதான்'டா, நம்ப வகுப்பிலே கண்ணனும் மாணிக்கமும் தானே படு மட்டம்: மேலும், எப்பப் பார்த்தாலும் மாணிக்கம் சோர்ந்துபோய்த்தான்'டா இருக்கான். போதாக்குறைக்கு வலிப்பு நோய் வேறே" தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.  “அவன் சோர்வுக்குக் காரணம் சோம்பேறித் தனம் மட்டுமில்லே, அருள். அவன் வீட்டிலே சாப்பாட்டு வசதியோ, படிக்கிறதுக்கு ஏத்த எந்த ஒரு வசதியுமோ, இல்லை’டா. அவன் அம்மா தன் வறுமையைச் சொல்லி அழுதாங்கடா”.  “அப்படியா?”  ஆமா, அருள். மாணிக்கம் பிறக்கறதுக்கு கொஞ்ச நாள் முன்னதாகவே அவன் அப்பா இறந்துட்டாராம். அவன் அப்பா பட்டிருந்த கடனுக்கு வீடும் போய்விட்டதாம். சாப்பாட்டுக்கு வழியில்லாம அவன் தாயார் தையல் வேலை செய்து மாணிக்கத்தையும் மற்ற மூனு பெண் பிள்ளைகளையும் வளர்த்து வர்றாங்களாம். கடந்த மூணு மாசமா மாணிக்கத்தோட அம்மாவும் படுத்த படுக்கையாயிட்டாங்களாம். மாணிக்கத்துக்குப் படிப்பும் சரியா வரலையே’ன்னு ரொம்பக் கவலைப்படறாங்க அருள்.” மாணிக்கத்தின் குடும்பச் சூழ்நிலையை இனியன் விளாவாரியாக விளக்கிக் கூறினான்.  இனியன் கூறியதை ஆமோதிக்கும் வகையில் அருள் பேசலானான்.  “மாணிக்கம் நோஞ்சானா இருக்குறதுக்குக் காரணம் இப்பத்தான் புரியுது. உடல் வலுவோ, படிப்போ இல்லாத மாணிக்கக்தை நெனச்சு அவன் அம்மா வருந்துறது நியாயம்தானே? நம்ம வகுப்பிலே கண்ணனுக்கு அடுத்தபடியா மாணிக்கம்தானே மக்கு’ன்னு பேரு வாங்கி யிருக்கான்.”  “கண்ணனுக்குப் படிப்பில்லேன்னாலும் பயில்வான் மாதிரி உடம்பிருக்கே! அவன் எந்த வேலையும் செய்து பிழைச்சுக்குவான். மாணிக்கத்தால் அதுகூட முடியாதே அருள்.”  இனியன் தன் அச்சத்தை கவலை தோய்ந்த முகத்துடன் வெளிப்படுத்தினான். இதைக் கேட்ட அருள், மாணிக்கம் இவ்வாறு நோஞ்சானாக இருப்பதற்கான காரணத்தைப் பற்றி ஆராய முற்பட்டான்.  “இளம் வயதிலே நல்ல ஊட்டச்சத்து இல்லாது போனால் மூளை வளர்ச்சி ரொம்பவும் பாதிக்கப்படும்’னு எங்க டாக்டர் ஒருசமயம் அப்பாகிட்டே சொல்லிக் கொண்டிருந்ததை நான்கூடக் கேட்டிருக்கேன். சரி, நேரமாயிட்டுது. எங்கம்மா தேட ஆரம்பிச்சுருவாங்க. இந்தா உன் புத்தகப்பை. நான் போய் வரேன் ‘டா.” என்று கூறியபடி விரைந்து தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். மாணிக்கத்  தின் நினைவிலிருந்து முற்றிலும் விடுபடாதவனாக, ஏதேதோ சிந்தனையோடு நடந்தான் இனியன்.    3. பாகம்   பள்ளிக்கூடம் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் மணி அடித்து ஓய்ந்தது. அவிழ்க்கப் பட்ட மூட்டைக்குள்ளிருந்து நெல்லிக்காய்கள் சிதறி ஒடுவதைப்போல் வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் ஒட்டமும் நடையுமாக உற்சாகத் தோடு வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் ஆராவாரம் அடங்கி அமைதி குடிகொள்ளத் தொடங்கியது.  வகுப்பறையிலிருந்து வெளிவந்த கண்ணாயிரம் தன் நண்பர்களை எதிர்நோக்கியவனாக வழக்கமான மரத்தடி வேரின் மீது சென்று அமர்ந்தான். ஒருவர்பின் ஒருவராகத் தங்க துரையும் மணியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் கவனம் செல்கிறதோ இல்லையோ இந்த மரத்தடியில் கூடி ஊர் வம்பளப்பதில் கவனம் செலுத்தத் தவறுவதே இல்லை. கண்ணாயிரத்தின் நண்பர் குழாம் வகுப்புக்கு வராமல் போனாலும் இந்த மரத்தடி மாநாட்டில் கலந்துகொள்ளத் தவறுவதே இல்லை. பாடத்தைத் தவிர்த்து மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் இங்கே விரிவான விவாதம் நடைபெறும்.  வழக்கப்படி வம்பளப்பைத் தொடங்கி வைத்தான் கண்ணாயிரம்.  “எங்கடா நம்ம கண்ணனை ரெண்டுமூணு நாளா காணோம். லீவு லெட்டர்கூடவரலை’ன்னு வாத்தியார் சொன்னார்.” கண்ணன் வகுப்புக்கு வராத கரிசனத்தை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம.  கண்ணனின் இயல்பை நன்றாகவே புரிந்து வைத்திருந்த தங்கதுரை தன் கருத்தை வெளிப் படுத்தினான்:  “அவன் காடாறு மாசம் வீடாறு மாசம்’கிற கொள்கையைக் கண்டிப்பா கடைப்பிடிக்கிற வன்’டா. அவனுக்கு வெளியிலே பொழுது போக வழி இல்லை’ன்னாதான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்.”  பள்ளிக்கூடம் வருவதில் கண்ணனுக்கு நாட்டமில்லை என்பதைக் குறிப்பாக வெளிப் படுத்தினான் தங்கதுரை.  அதற்கு மேலும் விளக்கம்தர முன்வந்தான் மணி.  “அவன் என்ன'டா பண்ணுவான். தப்பித் தவறிப் பள்ளிக்கு வந்தாலும் இருக்கிற நேர மெல்லாம் பெஞ்சு மேலேயே நிற்கும்படியாயிடுது.”  நேரத்திற்கு வராததையும் படிப்பில் மோசமாக இருப்பதையும் நாசூக்காகச் சொன்னான் மணி. இதனை வலுப்படுத்தும் வகையில் மேலும் அடுக்கினான் கண்ணாயிரம்:  “படிக்கிறதுதான் பழக்கமில்லே. பள்ளிக்குப் புத்தகமோ நோட்டோ எடுத்து வர்றதுகூட அவனுக்குப் பழக்கமில்லாப் போயிடிச்சேடா!”  கண்ணாயிரம் கூறியதைக் கேட்ட மூவரும் சிரித்துக் கொண்டார்கள்.  “அவன் அப்பா வாங்கிக் கொடுக்கறதில்லையோ என்னவோ?”  தன் ஐயப்பாட்டை வெளிப்படுத்தினான் தங்கதுரை. அதை அடியோடு மறுக்க முனைந்தான் மணி.  “நல்லா இருக்குடா கதை? அவன் ரொம்ப நல்லா படிக்கனும்’னு அவன் அப்பா எவ்வளவு ஆசைப்படறார் தெரியுமா? பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், தின்பண்டம் அது இது’ன்னு அவன் எதைக் கேட்டாலும் மறக்காம வாங்கித் தர்றார்.”  அதை அப்படியே ஆமோதித்தான் கண்ணாயிரம். கண்ணனோடு மிகவும் நெருங்கிப் பழகியதால் அவன் நிலைமைகள் அனைத்தும் கண்ணாயிரத்துக்கு அத்துப்படி. அவன் கூறினான்.  “கண்ணன் வாய் எப்பவும் எதையாவது அரைச்சபடியேதான்’டா இருக்கும். அவன் இப்படி பள்ளிக்கூடம் வராம ஊர் சுத்தறதைக் கண்டிச்சு அவன் அப்பாவும் எவ்வளவோ திட்டிப் பார்க்கிறார்; அடித்துப் பார்க்கிறார்; அவன் திருந்தவே இல்லை. அவன் பாதை யிலேதான் அவன் போயிட்டிருக்கான்”.  இவர்கள் கண்ணனைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கும்போதே, கண்ணன் இவர்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். எப்போதும் குதூகலமாக வரும் அவன் இன்று கவலையே உருவானவனாக அங்கே வந்தான். அவன் தோற்றம் அவன் நண்பர்களைத் துணுக்குறச் செய்தது. ஏன் இந்தக் கோலத்துடன் வந்திருக்கான் எனப் புரியாது திகைத்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு நிமிடம் அவர் களுக்கிடையே மயான அமைதி நிலவியது அமைதியைக் கலைத்தான் கண்ணாயிரம்.  “என்னடா கண்ணா, கையிலேயும் முகத் திலேயும் பிளாஸ்திரி போட்டிருக்கே. உதடு வேறே வீங்கியிருக்கு. யார் கூடவாவது சண்டை போட்டியா?”  அக்கரையும் அனுதாபமும் பின்னிப் பிணைய கண்ணாயிரம் கேட்ட கேள்வி கண்ணன் மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. கண்ணாயிரத்தை ஒரு முறை வாஞ்சையோடு பார்த்தான். தான் சொல்லப் போகும் பதிலை ஆவல் பொங்க எதிர்நோக்கிக் காத்திருக்கும் தன் நண்பர்களை ஒருமுறை நோட்டமிட்டான். ஒரு கனைப்புக் கனைத்துத் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசினான்:  “என் கிட்ட யார்’டா சண்டைபோடமுடியும்? எங்கப்பா...... ” கண்ணன் முடிப்பதற்கு முன் தன் அனுமானத்தை வெளிப்படுத்த முனைந்தான் மணி. கண்ணாயிரத்தைப் போலவே அவனும் கண்ணனோடு நெருங்கிப் பழகியவன் ஆதலால் இடைமறித்துப் பேசினான்:  “அப்போ சரி, வழக்கமா நடக்கிற அப்பா பூஜை! இன்னிக்குக் கொஞ்சம் உக்கிரமா நடந்திருக்கும் போல இருக்கு இல்லேடா கண்ணா!”  மணியின் இடைமறிப்புக் கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் கண்ணனின் ஆத் திரத்தை மேலும் அதிகப்படுத்தியது அவன் ஒருவித வன்ம உணர்வுடன் பேசினான்.  “எல்லாம் அந்த இனியனாலேதான் எனக்கு இந்த நிலை.”  கண்ணன் அப்பாவிடம் அடிபட்டதற்கும் இனியனுக்கும் என்ன சம்பந்தம். நண்பர்கள் அவரவர்கள் போக்கில் அனுமானிக்கத் தொடங்கினார்கள்.  “உன்னைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உங்கப்பாகிட்டே சொல்லிட்டானா?” மணி தன் யூகத்தை வெளிப்படுத்தினான்.  “அவனுக்கு ஏதுடா அவ்வளவு தைரியம்? இனியன் ஏழைப் பையனாக இருந்தாலும் எவ்வளவு நல்லாப் படிக்கிறான். எல்லாருகிட்டேயும் நல்ல பையன்’னு பேரு வாங்குறான். போட்டி, பரிசு அது இது'ன்னு எவ்வளவு பெருமை'ன்னு அவனோடு ஒப்புக் காட்டியே என்னை அடிச்சு நொருக்கிட்டார்'டா.”  கண்ணனுக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் வகையில் அவனுக்கு உற்சாக வார்த்தைகள் கூற முனைந்தான் கண்ணாயிரம்.  “எல்லாத்துக்குமே அந்த இனியன் போக்குத் தான்’டா காரணம். அவன் கொட்டத்தை எப்படியும் அடக்கணும், அவன் பெருமையைத் தரை மட்டமாக்கனும். ஊரெல்லாம் அவனைப் பழிக்கும்படியாச் செய்யனும். இதுதான்’டா இனி நம்ம லட்சியம்”  கண்ணாயிரத்தின் பேச்சில் வன்ம உணர்ச்சி வலுவாக வெளிப்பட்டது. அவன் கூறிய பழிவாங்கும் போக்கை அவன் நண்பர்கள் மணியும் தங்கதுரையும் முழு மனதோடு ஏறகவில்லை என்றாலும் மறுப்பேதும் கூற முனையவில்லை. ஆனாலும் அவன் கருத்தை முழுமையாக ஏற்கும் பாவனையில், “உன் லட்சியம் தான் என் லட்சியம். இதுக்காக நான் எதையும் செய்யத் தயார்!’ எனத் தன் முழுமனதான ஆதரிப்பை உறுதியாக வெளிப்படுத்தினான் கண்ணன்    4. பாகம்   வகுப்புகள் தொடங்க இன்னும் சிறிது நேரம் இருந்தது. வகுப்புக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக தங்கதுரை இருந்த பெஞ்சியை நோக்கி விரைந்து சென்றான் கண்ணன். அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.  “தங்கதுரை நம்ம மணி பிறந்த நாள் விருந்து ரொம்ப ஜோர்டா! எத்தனை வகை யான ஸ்வீட், சாப்பாடு!!”  “விருந்து மட்டுமா? விதவிதமான அலங்காரம். பாட்டுக் கச்சேரி, எல்லாம் ஒரே அமர்க்களம்'டா”  தன் மகிழ்ச்சியைத் தங்கதுரையோடு பகிர்ந்து கொண்டான் கண்ணன்.  எதையோ நினைவுபடுத்தும் பாவனையில் ஆர்வத்தோடு கையை உயர்த்தியபடி பேசினான் கண்ணாயிரம்.  “கண்ணன் ஒன்றைக் கவனிச்சியா?” கேள்விக்குறி வடிவில் நெற்றியைச் சுழித்தபடி வினா எழுப்பினான் கண்ணாயிரம்.  “முந்திரிப் பருப்பும் திராட்சைப் பழமுமாக இருந்த பாயாசத்தைத்தானே சொல்றே.” அலட்சியமாக கண்ணாயிரத்தைப் பார்த்துக் கூறினான் கண்ணன்.  “நீ சாப்பாட்டு இலையோடவே இரு. சுத்த சமையல்கட்டுடா நீ.” நளினமாகக் கிண்டலடித் தான் கண்ணாயிரம்.  “நம்ம ஆசிரியர் புத்தகப் பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததை மணியோட அப்பா ரொம்பவும் அலட்சியமா வாங்கி அப்பாலே போட்டதையும், அதுக்காக நம்ம ஆசிரியர் வருத்தப்பட்டதையும் தானே சொல்றே?” தான் நினைத்ததை சரிபார்த்துக் கொள்ள முயன்றான் தங்க துரை.  “ஆமாடா, பிறந்த நாள் பரிசா பெரிய புத்தகப் பாக்கெட்டை, மணி கையிலே கொடுத்து. ‘நல்லா கஷ்டப்பட்டுப் படிச்சு வாழ்க்கையிலே முன்னேறனும்’னு வாழ்த்தினப்போ மணியோட அப்பா வழிமறிச்சு......” கண்ணாயிரம் முடிக்கவில்லை. அதற்குள் கண்ணன்,  “இடைமறிச்சு என்ன சொன்னார்?” என ஆர்வத் துடிப்புடன் கேட்டான்.  கண்ணாயிரம் தொடர்ந்தான்:  “என் மகன் அதிகமாப் படிக்கக் கூடாதுங்கறது என் கொள்கை. அவனுக்கு வேண்டிய அளவு சொத்து இருக்கு. அவன் வாழ்நாள் முழுக்க சுகமாகவே வாழ முடியும். அவன் ஒண்ணும் அதிகம் படிச்சு உத்தியோகம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் இல்லே, ஏதோ பாஸ் பண்ற அளவுக்கு படிச்சு முடிச்சா போதும்’னு சொல்லி அலட்சியமாக நம் ஆசிரியர் தந்த புத்தகப் பாக்கெட்டை வாங்கி அப்பாலே போட்டார்.”  “கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்ட அவன் நண்பர்களுக்கு மணியின் அப்பா போக்கு  பிடித்தமாக இல்லை என்பது அவர்களின் அமைதியே புலப்படுத்தியது. எனினும், அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய தங்கதுரை ஆர்வப்பட்டான்.  “அப்புறம்?' வினா தொடுத்தான் தங்கதுரை  “அப்புறம் என்ன? ஆசிரியர் கோபமா வெளியேறத் தொடங்கினார் உடனே மணி ஓடிவந்து, சமாதானம் சொல்லத் தொடங்கினான். அப்போது அவனுடைய அப்பா வந்து...”  “அப்பா வந்து என்ன சொன்னார்?” ஆர்வ மிகுதியால் கண்ணாயிரத்தை இடைமறித்துக் கேட்டான் கண்ணன்.  “சமாதானம் சொன்னார்.” கண்ணாயிரம் கூறினான்.  “என்ன சமாதானம் சொன்னார்?” ஆர்வப் பெருக்குடன் வினா எழுப்பி கண்ணாயிரத்தின் முகத்தை உற்று நோக்கினான் கண்ணன்.  கண்ணாயிரம் மணியின் அப்பா கூறியதை அப்படியே கூறத் தொடங்கினான்.  “மணியின் அண்ணன் செந்தில் படிப்பில் ரொம்பக் கவனம் செலுத்தி வந்தான். வகுப்பிலே எப்போதும் முதலாவதாக வருவான். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். இரவு பகலாகப் படிப்பான். அவன் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாக மூளையில் கட்டி வந்து இறந்துவிட்டான். இடைவிடாத படிப்பினால் தான் இந்த இறப்பு ஏற்பட்டதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகவும் மணிக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் அவனை அதிகமாகப் படிக்கவிடாமல் தான் தடுத்து வருவதாகவும் சொன்னார்.”  “இதுக்கு நம்ம ஆசிரியர் எதுவுமே சொல்லலையா? கண்ணாயிரத்தின் பதிலைத் தொடர்ந்து கேள்வி கேட்டான் தங்கதுரை.  “மணியோட அப்பாவின் முடிவு ஒருவித மூடநம்பிக்கை'ன்னும், மூளையிலே ஏற்பட்ட கட்டிக்கும் படிப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ன்னும் எடுத்துச் சொல்லி விளக்கினார். அதோட, பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலேயும் வீட்டில் நல்ல சூழ்நிலை இல்லாததுனாலேயும் மணி திறமைசாலியா வர முடியா மல் போச்சு’ன்னும் ஒரு குட்டி வகுப்பே நடத்தி முடிச்சிட்டார்.”  எதையோ நினைவுபடுத்திக் கொண்டவனாக கண்ணன் வேறொரு விஷயத்தைச் சொல்ல முனைந்தான்.  “இதையெல்லாம்விட சுவையான சம்பவம் ஒண்னு அங்கே நடந்தது உங்களுக்குத் தெரியுமா?” கண்ணன் கேள்வி அவன் நண்பர்களி டையே ஆர்வத்தைத் தூண்டியது. அவன் சொல்லப் போகும் விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். தங்கள் காது களைத் தீட்டிக் கொண்டு அவன் வாய் அசைவையே உற்று நோக்கினார்கள்.  “என்ன அது?” கண்ணாயிரம் முந்திக் கொண்டு கேட்டான்.  “நம்மைப் போல இனியன் விருந்துக்கு வந்தும் விருந்து சாப்பிடலேடா.” கண்ணன் பூடகமாகச் சொல்லி முடித்தான்.  “ஏன்’டா? ஒருவேளை ஆசிரியருக்குப் பரிஞ்சு கோவிச்சுக்கிட்டு போயிட்டானோ?” தன் அனுமானத்தை வெளிப்படுத்தினான் தங்கதுரை.  “அதெல்லாம் இல்லை.” தங்கதுரை அனுமானத்தை நிராகரித்தான் கண்ணன்.  “பின்னே? என்ன’ன்னு சொல்லு'டா” கண்ணாயிரம் பொறுமை இழந்தவனாகக் கண்ணனைத் துரிதப்படுத்தினான்.  மேலும் மர்மத்தை நீடிக்காமல் புதிரை விடுவிக்க முனைந்தான் கண்ணன்.  “தனக்குச் சாப்பிடத் தந்த சாப்பாட்டை யாருக்கும் தெரியாமல் ஒரு பொட்டலமாகக் கட்டி கையிலே எடுத்துக்கிட்டு போனான்’டா,” ஒரு வழியாகக் கண்ணன் சொல்லி முடித்தான்.  இதைக் கேட்டபோது கண்ணாயிரமும் தங்கதுரையும் முகத்தைச் சுழித்தார்கள் இனியனைப்பற்றி ஏளனமாக அவர்கள் உள்ளம் நினைப்பதை முகக்குறிப்பு வெளிக்காட்டத் தவறவில்லை.  இவர்கள் மூவரும் இனியனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை செவி மடுத்தவாறே அருள் கேட்டுககொண்டே அங்கே வந்து சேர்ந் தான். இனியனின் இணைபிரியாத் தோழன் ஆதலால் அவனைப்பற்றி ஏளனமாக எள்ளி நகையாடிப் பேசுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே வந்ததும் வராததுமாகப் பேசினான்:  “நீங்க நெனைக்கிற மாதிரி தன் வீட்டுக்கு அவன் அதை எடுத்துச் செல்லவில்லை. நானும் சந்தேகப்பட்டு அவன் பின்னாலேயே போ னேன். அவன் அதை நோயோடு பட்டினி கிடக்கிற மாணிக்கம் தாயாரிடம் கொண்டு போய்க் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான். நான் அதைக் கேட்டு நெஞ்சு நெகிழ்ந்திட்டேன். எனக்குக் கண்ணீரே வந்திருச்சு. இனியனின் அன்பையும் மனிதாபிமான உணர்ச்சியையும் இரக்க சிந்தையையும் கண்டு அந்த அம்மா கண்ணிர்விட்டு அழுதுட்டாங்க.”  அருள் தன் நண்பன் இனியனின் இனிய செயலை விளக்கும்போது அவன் கண்களில் உணர்ச்சி மேலீட்டால் நீர் சுரந்து நின்றது. இதைக் கண்ட தங்கதுரையும் கண் கலங்கினான். அவன் தன் உணர்ச்சியை அடக்க முடியாதவனாக வெளிப்படுத்தினான்.  “என்னடா, கண்ணாயிரம் நம்ம அருள் சொல்றது நெஞ்சை உருக்குற கதையாயிருக்கே?”  “அதான் நீயே சொல்லிட்டியே.”  “என்ன?ன்னு?”  “கதை’ன்னு!”  கண்ணாயிரத்தின் பேச்சு அருளுக்குப் பிடிக்காததால் அவன் சட்டென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான். அடுத்து அவர் களும் புறப்பட்டார்கள்    5. பாகம்   தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் இனியனை எட்டிப் பிடிக்கும் பாவனையில் துரித நடைபோட்டு வந்தான் அருள் இனியனை நெருங்கியதும் கேட்டான்:  “இனியா! பள்ளி ஆண்டுவிழாக் கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்துட்டியா?” ஆர்வத் துடிப்புடன் கேட்டுவிட்டு, இனியனின் முகத்தைப் பார்த்தான்.  “நான் மட்டுமா? நம்ம கண்ணாயிரம், கண்ணன், மணி, தங்கதுரை எல்லாருமே பெயர் கொடுத்திருக்காங்க.”  இனியன் தந்த பட்டியலைப் பார்த்தபோது அருளுக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை.  “அவங்கள்’லாம் பெயர் கொடுப்பாங்கன்னு எனக்கு முன்னாலேயே ரொம்ப நல்லாத் தெரியும்! இவங்களுக்கும் கட்டுரைப் போட்டிக்கும் என்னடா சம்பந்தம்? ஒழுங்கா பாடத்தைப் படிக்கிறதும் பள்ளிக்குவர்றதுமே தகராறு. இதிலே...” அருள் முடிக்கும் முன்பே இனியன் இடைமறித்துப் பேசினான்.  “அவங்களும் போட்டியிலே பங்கெடுக்கிறது நல்லதுதானே, அருள். போட்டி கடுமையா இருந்தாத்தானே திறமையான வங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பரிசு வாங்குறவங்க மதிப்பும் உயரும். போட்டியிலே கலந்து திறமையை காட்டறதுக்காகவாவது நிறையப் படிக்கனும் சிந்திக்கனும் இல்லையா, அருள்.”  இனியனின் கருத்தை முழுக்க ஏற்க இயலாது என்ற பாவனையில் தலையை மேலும் கீழுமாக ஆட்டி அழகு காட்டினான் அருள்.  “அவங்க சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா யாருக்கோ ஆபத்து’ன்னுதான் அர்த்தம்.” கடந்த கால அனுபவ அடிப்படையில் கருத்துரைத்தான் அருள்.  “நம்ப நண்பர்களைப்பத்தி நாமே தப்பாப் பேசக்கூடாது அருள். அவங்களும் நல்லவங்க. நாளடைவிலே திருந்துவாங்'கன்னே நம்புவோம்.”  “நீ நம்பிக்கிட்டே இரு நான் வர்றேன்.’ கூறிவிட்டு அருள் விரைந்து நடக்கலானான். நாளடைவிலே திருந்துவாங்’கன்னே நம்புவோம்”.  6. பாகம்   பள்ளிக்கூட விளையாட்டுத் திடலின் ஒரமாக உள்ள மரத்தடிதான் அவர்களின் அரட்டை மாநாடு நடைபெறும் வழக்கமான இடம். அன்றைக்கும் அவர்கள் அங்கே குழுமத் தவறவில்லை.  கண்ணாயிரமும் தங்கதுரையும் மணியும் முன்பே அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். கண்ணனை இன்னும் காணோம். அவன் வருகையை எதிர்நோக்கியபடி காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கண்ணனும் வந்து சேர்ந்தான். அவன் கையில் ஒரு ‘ஸ்வீட் பாக்கெட்’ இருந்தது. இதை முதலில் கண்ட கண்ணாயிரம் ஆவலோடு அதைப்பற்றி வினவினான்.  “என்னடா, கண்ணா கைநிறைய ஸ்வீட் பாக்கெட். இன்னிக்கு என்ன உனக்குப் பிறந்த நாளா? நீ எங்களுக்குச் சொல்லவே இல் லையே?” வியப்போடு வினவினான்.  “எனக்குப் பிறந்த நாளெல்லாம் ஒண்னு மில்லேடா. ஆனால், ‘இது கண்ணனின் வாழ்விலே ஒர் புதுமை நாள்’னு சொல்லி எங்கப்பா இன்னிக்கு எனக்கு 5 ரூபா கொடுத்தார்’டா. அப்படியே அதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு உங்களைப் பார்க்க வந்துட்டேன்.” மூச்சு விடாமல் கூறி முடித்தான் கண்ணன்.  “புதுமை நாளா! ஒண்ணும் புரியலையே?” வியப்புடன் கேட்டான் தங்கதுரை.  “ஒரு வேளை கண்ணன் பள்ளிக்கூடம் போகலே, படிக்கலே, நல்ல மார்க் எடுக்கலை’ன்னு எப்பவும் அடிக்கிற அவன் அப்பா, இன்னிக்கு அப்படி அடிக்காததை புதுமையா நெனச்சு புதுமை நாளா கொண்டாடறாரோ என்னவோ?” கிண்டலாகக் கேட்டான் மணி.  “அதெல்லாம் ஒண்ணுமில்லேடா. நீங்கள் "லாம் கட்டாயப்படுத்தினதாலே கட்டுரைப் பேட்டிக்குப் பெயர் கொடுத்தேனா, அதை நம்ம ஆசிரியர் எங்கப்பாகிட்டே நேற்று சொல்லியிருக்கிறார். எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் ஏற்பட்டிருச்சு. கண்ணா! நீ இப்படியெல்லாம் திறமையாளனா இருக்கனும்’னு தான் நான் கனவு காண்கிறேன்’னு சொல்லி தின்பண்டம் வாங்கிக்க 5 ரூபா கொடுத்தார்டா.”  ‘ஸ்வீட் பாக்கெட்’ வந்த வரலாறைச் சொல்லி முடித்தான் கண்ணன்.  “ஐயோ பாவம்'டா உங்கப்பா!” இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினான் மணி.  “தின்பண்டம் வாங்கித் தின்ன சதா காசு கொடுத்து, கண்ணன் தன் கவனத்தைப் படிப்புப் பக்கமே திரும்பவிடாம, தீனி மேலேயே இருக்  கும்படியா வச்சிருக்காரே அதுக்காக அனுதாபப் படறியா? இல்லே...” மணியின் அனுதாப வார்த்தைக்கு காரணம் கற்பிக்க முற்பட்டான் தங்கதுரை.  “இல்லைடா, கண்ணனைப்பற்றி அவன் அப்பா ரொம்ப நல்லா தப்புக்கணக்குப் போட்டதை நெனச்சுத்தான் அனுதாபப்படறேன்.” மணியின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.  'காப்பியடிச்சாக்கூட கணக்கிலே பத்து மார்க்குக்கு மேலே வாங்காத நீ எங்கப்பா கணக்கைப்பத்திப் பேசறையா?” சுடச்சுடப் பதில் தந்தான் கண்ணன்.  இவர்களின் வாய்ச்சண்டை கண்ணாயிரத் துக்கு என்னவோ போலிருந்தது. அவன் இடை மறித்துப் பேசலானான்.  “போதும்'டா. உங்களுக்குள்ளே சண்டை வேணாம். நம்ம காரியம் கெட்டுடும். போட்டியிலே எப்படியும் இனியன் தோல்வியடையணும்.” தங்களின் குறிக்கோளை நினைவுப்படுத்தி வாய்ச்சண்டை வளராமல் தடுத்தான் கண்ணாயிரம்.  “நாம வெற்றி பெறணும்னா அவன் மாதிரி எப்படி’டா கட்டுரை எழுதறது? எனக்கு நல்லா வருமாடா?” தன் மீதே தனக்குள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்தி அப்பாவித்தனமாகக் கேட்டான் கண்ணன்.  “உங்கப்பாகிட்டே இன்னும் அஞ்சு ரூபா வாங்கி நல்லா தீனி தின்னுடா, பிரமாதமா வரும்.” கேலி செய்தான் தங்கதுரை.  “என்னடா வரும்? தூக்கமா?” கிண்டல் செய்தான் மணி.  காரியத்திலேயே குறியா இருந்த கண்ணாயிரத்துக்கு இந்தக் கேலிப் பேச்சும் கிண்டல் வார்த்தைகளும் பிடிக்கவில்லை. நண்பர்களின் வேடிக்கைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தான்.  “போதும்’டா கேலி. நோட்டீஸ் போர்டிலே கட்டுரைத் தலைப்பு இன்னும் போடலியே.” ஆர்வத்தோடு கேட்டான் கண்ணாயிரம்.  “சரியாப் போச்சு! கட்டுரைத் தலைப்பை நோட்டீஸ் போர்டுலே எழுதிப் போட்டு ஒரு மணி நேரம் ஆவுது.” நினைவூட்டினான் தங்கதுரை.  “என்னடா தலைப்பு?” ஆர்வப் பெருக்கோடு கேட்டான் மணி.  “உழைப்பும் உயர்வும்” தலைப்பைக் கூறினான் தங்கதுரை.  தலைப்பைக் கேட்டபோதே கண்ணனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. எந்தக் காரியம் தங்களுக்குப் பிடிக்காதோ, ஆகாததோ அதையே தலைப்பாகக் கொடுத்திருப்பதைக் கண்டு ஒருகணம் மலைத்தான்.  “ஐயகோ! என்னடா இது! தலைப்பே தகராறா இருக்கே. நாம எப்படிடா இந்தத் தலைப்பிலே கட்டுரை எழுதறது?”  கண்ணன் கருத்தை எதிரொலித்தான் மணி.  “அதானே, நமக்குச் சம்பந்தமே இல்லாத விஷயத்தைப்பத்தி நாம எப்படி'டா கட்டுரை எழுதறது? பரிசு வாங்குகிறது?”  தலைப்பைக் கேட்டு மலைத்து நின்ற நண்பர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றான் கண்ணாயிரம்.  “நாம் பரிசு வாங்குறோமா இல்லையாங்குறது பிரச்சினை இல்லை. இனியன் எந்தப் பரிசும் வாங்கக் கூடாது. இதுதானேடா நம்ம நோக்கம்?”  “கரெக்டுடா கண்ணாயிரம்” முழுமையாக ஆமோதித்தான் தங்கதுரை.  “இனியன் கட்டுரை எழுதினாலும் எழுதாவிட்டாலும் நாம கட்டுரை எழுதித்தானடா ஆகணும். இல்லேன்னா, எப்படிடா நமக்குப் பரிசு கிடைக்கும்?”  நடைமுறைப் போக்கை நாசுக்காக உணர்த்தினான் கண்ணன்.  “பரிசு வாங்குறதா? இருந்தாலும் இவனுக்கு ரொம்பப் பேராசைடா.” கிண்டல் செய்தான் மணி.  “இந்தத் தலைப்புள்ள கட்டுரை வேறெ எந்தப் புத்தகத்திலேயாவது இருந்ததுன்னா அதைப் பார்த்துச் சுலபமா காப்பியடிச்சு கட்டுரை எழுதி பரிசு வாங்கிடலாம்'டா.” தனக்குத் தெரிந்த வழியைச் சுட்டிக் காட்டினான் தங்கதுரை.  “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'னு சொல்லுவாங்க. இந்த விஷயத்திலே நீ எப்பவும் மாஸ்டர்தான்’டா.”  தங்கதுரையைச் சீண்டினான் மணி.  தங்கதுரையின் யோசனை கண்ணாயிரத்துக்கு மிகவும் பிடித்தது. வெறுங்கையால் முழம் போட முடியுமா?  “அந்தத் தலைப்புள்ள கட்டுரை எந்தப் புத்தகத்திலே இருக்குங்றதை எப்படிடா கண்டு பிடிக்கிறது?”  கண்ணாயிரத்தின் சந்தேகத்தைப் போக்கி உதவ முன்வந்தான் தங்கதுரை.  “இதுக்காக அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நூலகத்திலே இருக்கிற புத்தகம் எல்லாத்தையும் ஒரு புரட்டு புரட்டினா எதிலே இருக்கு’ன்னு தெரிஞ்சிட்டுப் போவுது.”  தொடர்ந்து தன் யோசனைக்குச் செயல் வடிவம் தந்து சொல்லி முடித்தான் தங்கதுரை.  யோசனை நல்லதாக இருந்தாலும், செயல் படுத்த முடியாததாகத் தோன்றியது மணிக்கு. அதை அவன் சுட்டிக்காட்டிப் பேசினான்:  “இருக்கிற அஞ்சாறு பாட புத்தகங்களை ஒரு முறை புரட்டறதுக்கே ஒரு வருஷம் போதலே. இன்னொரு வருஷமும் அதே வகுப்பிலே இருந்து புறட்டும்படியா இருக்கு. நூலகத்திலே இருக்கிற எல்லாப் புத்தகங்களையும் புரட்டனும'னா இன்னும் ரெண்டு மூணு ஜென்மம் நமக்குத் தேவைப்படும்’டா.”  அனுபவப்பூர்வமாகப் பேசினான் மணி.  ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல பரப்பரப்புடன் பேசினான் கண்ணாயிரம்.  “எனக்கு சுருக்கான ஒரு குறுக்கு வழி தோணுதுடா. கண்ணாயிரம் பீடிகைபோட்டுப் பேசினான்.  “உனக்கு எப்பவுமே அந்த வழிதாண்டா தோணும்:” மணி கேலி செய்யத் தவறவில்லை.  “அது என்ன சுருக்கான குறுக்கு வழி?” கண்ணாயிரம் சொல்லப் போகும் வழியை அறிய அவசரப்பட்டான் தங்கதுரை.  “இனியன் இந்தக் கட்டுரையை எழுத என்னென்ன செய்யறான்? எதை எதைப் படிக்கிறா'ன்னு துப்பறியனும். நாமும் அதே மாதிரி செஞ்சுட்டா போட்டியிலே சுலபமா வெற்றி யடையலாம்.”  ஏதோ ஒரு நல்ல யோசனையைச் சொல்லிவிட்ட பெருமிதம் கண்ணாயிரம் முகத்தில் களை கட்டி நின்றது. வெற்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை மாறி மாறிப் பார்த்தான்.  “எப்படியோ, கடைசியிலே இனியன் வழிக்கே எல்லோரும் போய்க்கிட்டிருக்கோம், இல்லையா?”  மணி கூறுவது ஒரு வகையில் உண்மை யாயிருந்தாலும் காரியம் சாதிப்பதிலேயே கருத் தாக இருந்தான் தங்கதுரை.  “இனியனிடம் போய் அதை எப்படி’டா கண்டுபிடிக்கிறது?”  தங்கதுரையின் கேள்விக்கு மணி பதில் கூற முற்பட்டான்.  “இதுக்கு ஏன்டா மண்டையைப் போட்டு உடைச்சுக்கிறீங்க நீ என்ன புஸ்தகம் படிச்சு கட்டுரை தயாரிக்கப் போறே'ன்னு இனிய னையே கேட்டுட்டாப் போச்சு. சுருக்கமான குறுக்கு வழியிலே நம்ம காரியம் சுலபமா முடிஞ்சிடும்.”  மணி கூறியது கண்ணாயிரத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.  “நம்ம எதிராளிக்கிட்டேயே நம்மை சரணடையச் சொல்றான்'டா.”  தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம்.  “தகறாரை விடுங்கடா. இப்ப இனியன் எங்கே இருக்கிறான்? என்ன படிக்கிறான்? எப்படி கட்டுரை தயாரிக்கிறான்’ங்கிறதை எப் படியாவது துப்பறிஞ்சு கண்டுபிடிக்கணும். இல்லையா?  சமாதானப்படுத்தும் வகையில் நடுநிலைமையோடு பேசினான் தங்கதுரை.  “இப்ப அவன் எங்கேடா இருப்பான்?” கண்ணன் எழுப்பிய வினா மணிக்கு சிரிப்பை வரவழைத்தது.  “நிச்சயமா நம்ம மாதிரி எங்காவது மரத்தடியிலே உட்கார்ந்து சதித் திட்டம் போட்டுக்கிட்டிருக்க மாட்டான்.”  அவன் கேலி பேசியது கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை.  “சும்மா இருடா. இனியன் இப்ப எங்கே இருப்பான்னா...” கண்ணாயிரம் முடிக்குமுன் தங்கதுரை கூறினான்.  “கழுதை கெட்டா குட்டிச் சுவரும்பாங்க. இனியன் வீட்டிலே இருப்பான். இல்லேன்'னா நூலகத்திலே இருப்பான். அங்கேயும் இல் லேன்னா யாராவது ஒரு ஆசிரியர் வீட்டிலே சந்தேகமோ பாடமோ கேட்கப் போயிருப்பான்.”  “அவன் எங்கே இருந்தாலும் சரி. என்ன படிச்சு எப்படி எழுதறான்’னு நான் துப்பறிஞ்சு வந்து சொல்றேன்டா. இன்னிக்குச் சாயந்தரம் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே இருக்கிற மரத்தடியில் சந்திக்கலாம்'டா' கூறிக் கொண்டே விரைந்து நடந்தான், நண்பர்களும் நம்பிக்கை யோடு கலைந்து சென்றார்கள்.    7. பாகம்   இனியனைத் தேடிக்கொண்டு வந்த அருள் தெருமுனை திரும்பவும் இனியன் அங்கே வரவும் சரியாக இருந்தது.  “எங்கே இனியன் போயிருந்தே, உன்னை எங்கேயெல்லாம் தேடறது?”  சற்று சலிப்புடன் இனியனை நோக்கிக் கேட்டான் அருள். அவன் கேட்ட கேள்வியிலிருந்து நீண்ட நேரமாக அவனைத் தேடி அலைந்திருக்கிறான் என்பது இனியனுக்குப் புரிந்தது. அலைந்து வந்த அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் பதில் கூறினான் இனியன்.  “நம்ம மாணிக்கத்தோட அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமாயிடிச்சுடா. வேலைக்குப் போயிருந்த எங்கப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே சொன்னேன். அவர் உடனே  புறப்பட்டுப் போய் மாணிக்கத்தின் தாயாரை ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய் `பெட்’ல சேர்த்திட்டாரு. நான் மாணிக்கத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு இப்பத்தான் வர்றேன். மாணிக்கம் பாவம்’டா”.  “அது சரி’டா. போட்டிக்குக் கட்டுரை கொடுக்க இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு கட்டுரை எழுதியாச்சா?  அருளின் கேள்விக்கு இனியன் பதில் சொல்வதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் மணி. அருளின் கேள்விக்கு மணி பதில் கூற முனைந் தான்.  “அவனுக்கென்னடா அருள், ச்சூ! மந்திரக் காளி’ன்னு மந்திரவாதி மாங்காயை வரவழைக்கிற மாதிரி,எழுத உட்கார்ந்தா போதும்,கட்டுரையும் முடிஞ்சிடும்; பரிசும் வந்திடும். உ.ம்...”  எனக் கூறிய கையோடு பெரிதாக ஒரு பெருமூச்சுவிட்டான். தொடர்ந்து “நம்மைச் சொல்.” என்று அருளைப் பார்த்து வினா எழுப்பி தன் இயலாமையை வெளிப்படுத்தினான்.  மணி பேசிய தோரணை இனியனுக்கு மனக் கூச்சத்தைக் கொடுத்தது. நேருக்கு நேராக  மணி தன்னைப் புகழ்வது அவனுக்குஎன்னவோ போல் இருந்தது.  “அதெல்லாம் இல்லேடா, மனசிலே நினைக்கிறதை எழுதறேன். அருள்கூட ஒவ்வொரு போட்டிலேயும் ஏதாவது பரிசு வாங்காமல் விடறதில்லையே.”  இனியன் அடக்கமாகப் பதில் கூறினான்.  “இருந்தாலும் எப்பவும் முதற்பரிசு உனக்குத் தானடா கிடைக்குது.” தொடர்ந்து கூறினான் மணி.  “ஏதோ பூவோட சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்'பாங்க. அதுபோல இனியனோட சேர்ந்திருக்கேன்’ல அதனால ரெண்டாவதோ மூணாவதோ, இல்லாட்டி ஆறுதல் பரிசோ கிடைக்குது.”  இனியன் தன்னைப் பாராட்டும் வகையில் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில் தன்னடக்கமாகப் பதில் கூறினான் அருள்.  இனியன் பார்வை மணியை நோக்கிச் சென்றது.  “இந்த ஆண்டு மணிகூட போட்டியிலே கலந்துக்கப் போறான்'டா.”  அருளை நோக்கி வியப்பாகக் கூறினான் இனியன்.  “அதை ஏன்'டா கேக்கிறே தங்கதுரை, கண்ணன், கண்ணாயிரம் இவங்கள்'லாம் போட்டிக்குப் பேர் கொடுத்தாங்க. அவங்க வற் புறுத்தினாங்கன்’னு நானும் பேர் கொடுத்திட்டேன். இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலே. எனக்குக் கொஞ்சம் உதவுடா இனியன்!”  கெஞ்சும் பாவனையில் இனியனை நோக்கி வேண்டுகோள் விடுத்தான் மணி.  மணியின் அன்பு வேண்டுகோள் இனியன் மனதை நெகிழச் செய்தது. அவனுக்கு உதவ இனியன் உள்ளம் துடித்தது, 'என்னோடு என் வீட்டுக்கு வாடா கட்டுரை சம்பந்தமா ஏதாவது புத்தகம் தாறேன், உனக்குப் பயன்படும்,” எனக் கூறி அன்போடு அழைப்பு விடுத்தான்.  “கரும்பு தின்னக் கூலியா? . இப்பவே வர்றேன்'டா, வா போகலாம்.” எனக் கூறி வாய்ப்பை நழுவவிடாது இனியன் வீட்டை நோக்கி அவனோடு நடையைக் கட்டினான் மணி.  8. பாகம்   இனியன் தன் வகுப்புத் தோழனாயிருந்தும் மணி ஒருமுறைகூட அவன் வீட்டுக்கு வந்ததில்லை. வர விரும்பியதும் இல்லை. இன்று கட்டுரை ரகசியம் தெரிந்துவர தன் நண்பர்களுக்காக வலுக்கட்டாயமாக வரவேண்டியதாகி விட்டது. இனியனின் பேச்சும் செயலும் மணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் பேசிக் கொண்டே வீட்டை நெருங்கினார்கள். இனியன் வீடு கூரை வீடாக இருந்தாலும் விசாலமாக இருந்தது.  “இனியன்! உங்க வீடு கூரை வீடாக இருந்தாலும் ரொம்பச் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குடா. நீ படிக்கிற அறை எது'டா?”  “இதோ: இந்தச் சின்ன அறைதான்’டா நான் படிக்கிற அறை.”  மணியைத் தன் படிப்பறைக்குள் அழைத்துச் சென்று காட்டினான் இனியன். மணி அந்த அறை முழுதும் தன் பார்வையை ஓட்டினான்.  “சின்ன அறையாக இருந்தாலும் ஆடம்பரம் இல்லாம அமைதியான இடமா இருக்குடா. ஒரு சின்ன நூலகம்கூட வச்சிருக்கியே. எல்லாப் புத்தகமும் உங்கப்பா வாங்கிக் கொடுத்ததாடா?”  “எங்கப்பாவுக்கு அவ்வளவு பணவசதி ஏதுடா? எல்லாம் நான் பரிசா வாங்கின புத்தகங்கள்தான்!”  “இனியன்! நீ புத்தகங்களை அடுக்கி வச்சிருக்கிற அழகைப் பார்த்தாலே அவைகளை எடுத்துப் படிக்கனும், போலத் தோணுதுடா. அமைதியான சூழ்நிலையிலேதான் நிறையப் படிக்க முடியும்’னு நம்ம ஆசிரியர்கூட அடிக்கடி சொல்வார். படிக்குமிடம் தெய்வ சந்நிதிபோல இருக்கணும்னு நான் எங்கேயோ படிச்சுக்கூட இருக்கேன்’டா,”  “உண்மைதான்’டா” மணி கூறியதை இனியன் முழுமனதோடு அங்கீகரித்தான்.  இனியனின் அப்பாவைத் தன் அப்பாவோடு மணி ஒருகணம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது ஏக்க உணர்வாக வெளிப்பட்டது.  “இனியன்! உங்க அப்பா எவ்வளவோ தேவலை’டா. எங்கப்பா அதுக்கு நேர்மாற்றம்’டா. நிறைய படிக்காதே; படிச்சா மூளை குழம்பிடும்; உன் அண்ணன் மாதிரி மூளையிலே கட்டி வந்து செத்துப் போயிடுவே’ன்னு சொல்லி அடிக்கடி பயமுறுத்தறார். பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களை வீட்டிலே படிக்கவே விடமாட்டார்’டா. எங்க வீட்டிலே எங்கப்பா கணக் குப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைப் பார்க்கவே முடியாது. உனக்கு இருக்கிற படிக்கிற சூழ்நிலை எனக்கு இருந்தா நானும் எவ்வளவோ படிச்சு பரிசெல்லாம் வாங்குவேன்.  தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான் மணி.  “மணி! நீ கட்டுரைப் போட்டியிலே சேர்ந்திருக்கிறது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”  “தெரிஞ்சா திட்டுவார்'டா!”  “உண்மையிலேயே உங்கப்பா ஒரு அதிசய மனிதர்தான்’டா.”  பேச்சை மாற்ற முற்பட்டான் மணி.  “கட்டுரை எழுத உதவற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தால் கொடு'டா.” தான் வந்த நோக்கத்தை இனியனுக்கு நினைவுபடுத்தினான் மணி. தன் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து மணிக்கு நேராக நீட்டினான்.  “இதோ பார் மணி! அறிவுச் சுடர்'ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதியது. கட்டுரைத் தொகுப்பு நூல். இதிலே ‘உழைப்பே செல்வனும்’ ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு போட்டிக் கட்டுரையை நீ எழுதலாம்.  நூலை மணியின் கையில் கொடுத்தான். மணி தன் கையிலிருந்த நூலை புரட்டிக் கொண்டே இனியனை நோக்கி வியப்போடு கேட்டான்:  “இதை என்கிட்டே கொடுத்திட்டா நீ எப்படிடா போட்டிக் கட்டுரை எழுதுவே?”  “நான் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டேன். எழுதறபோது மனசிலே என்ன வருதோ அதை எழுதுவேன். இன்று இரவு போட்டிக் கட்டுரை எழுதலாம்’னு இருக்கேன். நீ இந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டுப் போ.”  இனியன் தன் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் மணியைச் சிறிது நேரம் திக்குமுக்காட வைத்தது. இனியனின் இனிய பண்பை நினைந்து நெகிழ்ந்தான்.  “ரொம்ப நன்றி இனியன். நான் வர்றேன்” என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.    9. பாகம்   வழக்கமாகக் கூடும் மரத்தடியில் தங்கதுரையும் கண்ணாயிரமும் கூடினர். மணியின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தான். சிறிது நேரத்தில் மணியும் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி யோடு அவனை வரைவேற்கத் தயாராயினர். வெற்றிப் புன்னகையோடு வந்து சேர்ந்தான்.  “என்னடா மணி போன காரியம் என்னாச்சு?”  கண்ணாயிரம் பரபரப்புடன் கேட்டான்.  “அவன் சிரிச்சுக்கிட்டு வர்றதிலே இருந்து தெரியலே, நூத்துக்கு நூறு வெற்றி"ன்னு.” தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினான் தங்கதுரை.  “இனியன் ரொம்ப நல்லவன்’டா. அவன் படிக்கிற அறையையே அறிவாலயமா வச்சிருக்கான்'டா. அவன்கூட கொஞ்ச நேரம் பேசினா நாமும் அவனைப் போல திறமையான மாணவனா மாறிடலாம்'டா.”  மணி இனியனைப் பற்றிப் புகழ்ந்து கூரிய வார்த்தைகள் கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாமல் சற்றே வெறுப்புடன்,  “போதும்'டா இனியன் துதி புராணம். புத்தகம் கிடைத்ததா? அவன் கட்டுரை எழுதிட்டானா? அதைச் சொல்லுடா முதல்லே.” துரிதப் படுத்தினான் கண்ணாயிரம்.  “இதோ பார்’டா, 'அறிவுச் சுடர்’ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதின இந்தப் புத்தகத்திலே ‘உழைப்பே செல்வம்’னு ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு உழைப்பும் உயர்வும்'ங்கிற தலைப்பிலே போட்டிக் கட்டுரை எழுது'ன்னு அவனே கொடுத்தான் ”டா.” எனக் கூறி மணி புத்தகத்தைத் தன் நண்பர்களை நோக்கி நீட்டினான்.  “உண்மையிலேயே இனியனுக்கு ரொம்ப நல்ல மனசுடா!” புத்தகத்தை வாங்கிக் கொண்டே பாராட்டினான் தங்கதுரை.  “ஏன்'டா, இனியன் கட்டுரை எழுதலையா?” அவசரப்பட்டான் கண்ணாயிரம்.  “அவன் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டானாம். இன்னிக்கு இரவு எழுதி நாளைக்குக் கொடுக்கப் போறதாச் சொன்னான்.” என்று மணி கூறி முடித்ததும் கண்ணாயிரம் மெல்லிய குரலில் தனக்குத் தானே “நீ எழுது, நான் கொடுக்கிறேன்னு முனுமுணுத்தான். இவன் முணுமுணுத்தது மற்றவர்கட்குச் சரிவர கேட்க வில்லை. என்ன முணுமுணுக்கிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டான் தங்கதுரை.  “கண்ணாயிரம்’ என்னடா முணுமுணுக்கிறே.” இக்கேள்விக்குக் கண்ணாயிரம் பதில் ஏதும் கூறவில்லை.  “இனியன் மேல் இருக்கும் பொறாமையை மென்று தின்கிறான்போல் இருக்கிறது.” என்று கூறி மணி கிண்டல் செய்தான். அதைக் கண்ணாயிரம் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை.  புத்தகத்தைப் பிரித்து உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துப் பார்த்தான் தங்கதுரை. அவன் முகம் மகிழ்ச்சியாலும் நம்பிக்கையாலும் மலர்ந்து கொண்டிருந்தது. ஆழ்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்குக் கரைசேர துடுப்புக் கிடைத்ததுபோல் அந்த நூலைக் கருதினான். அவனுள் நமபிக்கை பூத்து மணம் பரப்பத் தொடங்கியது.  “கட்டுரை ரொம்ப நல்லா இருக்குடா. இந்தப் புத்தகத்தை வச்சே முதற்பரிசு வாங்கிடலாம்’டா.” தன் நம்பிக்கையை வார்த்தைகளாக வெளிப்படுத்தினான் தங்கதுரை.  “காப்பியடிக்கிற கலைதான் உனக்குக் கை வந்த கலையாச்சே!” மணி கேலி செய்தான்.  இவர்களின் மனப்போக்கிலிருந்து வேறு பட்டவனாகக் கண்ணாயிரம் காணப்பட்டான். அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவை எடுத்து விட்டவனாக நம்பிக்கையோடு பேசினான்:  “நீங்க எதைப் பார்த்தாவது எழுதுங்க. நான் புதுக் கட்டுரையே எழுதிப் போட்டிக்குக் கொடுத்துப் பரிசு வாங்கறேன்.”  கண்ணாயிரம் இவ்வாறு கூறியதை அவன் நண்பர்களால் நம்பவே முடியவில்லை. மணி கேட்டே விட்டான்.  “அதெப்படி'டா முடியும்? வகுப்பில் பயிற்சிக் கட்டுரை எழுதுறதே உனக்குத் தகராறு. நீயாவது போட்டிக் கட்டுரை எழுதி பரிசு வாங்குற தாவது?”  பொறுத்திருந்து பாருடா. கண்ணாயிரம் திறமையை...” நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நடக்கலானான்.  “என்னமோ விபரீதம் நடக்கப் போவுதுடா. நமக்கேன்’டா வம்பு. வாங்கடா நாம போவோம். மணி அபாயச் சங்கு ஊதிக்கொண்டே நடந்தான்.    10. பாகம்   அன்றுதான் போட்டிக் கட்டுரைகளை ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் கடைசி நாள். இனியனைத் தவிர பெயர் கொடுத்திருந்தவர்கள் எல் லோரும் கட்டுரையைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்கள்.  எப்பவுமே எல்லோருக்கும் முன்னதாகப் போட்டிக் கட்டுரைக் கொடுப்பவனாயிற்றே இனியன்? இன்று ஏன் இன்னும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஆசிரியருக்கு இது வியப்பாக இருந்தது. எப்படியும் கட்டுரையோடு வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்.  அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. தளர்ந்த நடையோடும் சோர்ந்த மனதோடும் இனியன் ஆசிரியரிடம் வந்தான்.  “இனியன்! கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாயே. இன்னிக்குத்தானே கடைசி நாள். ஏன் இன்னும் கட்டுரை கொடுக்கலே? போட்டியிலே கலந்துக்கப் போறதில்லையா? கண்ணாயிரம்கூட போட்டிக்குக் கட்டுரை கொடுத்திட்டானே.” படபடவென கேள்விமேல் கேள்வியாகத் தொடுத்தார் ஆசிரியர்.  “போட்டிக் கட்டுரை எழுதி, திருத்தப்படியும் எடுத்து வச்சிருந்தேன் சார், ஆனால்,  இன்னிக்குத் திடீர்னு அது காணாமற் போயிடிச்சு. எங்கே தேடியும் கிடைக்கலே. எப்படி காணாமப் போச்சு"ன்னும் தெரியலே. அந்தக் கட்டுரையின் `ரஃப் காப்பி’ தான் சார் இப்போ என்கிட்டே இருக்கு. திருத்தப்படி எடுக்கவும் நேரமில்லே. சார்! நீங்க அனுமதிச்சா இந்த ரஃப் காப்பியையே போட்டிக்குத் தந்திடறேன்,சார்!”  “அப்படியா சங்கதி? அடித்தல் திருத்தல் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கட்டுரையைக் கொடு, போட்டியிலே சேர்த்திடறேன்.”  அன்போடு கேட்ட ஆசிரியரிடம், “இந்தாங்க, சார்,” என்று ரஃப் காப்பிக் கட்டுரையை நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த ஆசிரிய ருக்கு ஆச்சரியமாக இருந்தது.  “இதே மாதிரி தாள்'லே இதே மாதிரிக் கையெழுத்துள்ள கட்டுரையைப் போட்டிக்கு வந்த கட்டுரைகள்’லே பார்த்ததுபோல நினைவு இருக்கு. சரி, இருக்கட்டும். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், சென்று வா.” எனக் கூறி இனியனை அனுப்பி வைத்தார்.  ஆசிரியர் கூறியது எதுவும் இனியனுக்கு விளங்கவில்லை. ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.  தலையைச் சொரிந்தபடியே, எப்படியோ போட்டில் கலந்து கொண்டோமே என்ற திருப்தியுடன் இனியன் வெளியே வந்தான்.    11. பாகம்   தானும் போட்டியில் கலந்து கொண்டதை நினைக்க நினைக்க கண்ணாயிரத்துக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இலை. பெருமை யும் பூரிப்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. போட்டி முடிவைத் தெரிந்துகொள்ள துடிக்கலானான்.  “ஏன்'டா, மணி! எப்படா கட்டுரைப் போட்டி முடிவு தெரிவிப்பாங்க, முடிவு தெரிய ஒரே ஆவலா இருக்குடா.”  கண்ணாயிரம் துடிப்பதைப் பார்த்த மணிக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்துடன் அவனை நோக்கினான்.  “நீ ஏன்’டா இப்படி துடிக்கிறே! என்னமோ முதற் பரிசு வாங்கப் போறவனாட்டம்.”  மணியின் எகத்தாளமான பேச்சு கண்ணா யிரத்தைச் சீண்டுவது போலிருந்தது.  “வாங்கப் போறவனாட்டம் என்னடா? வாங்கத் தான்'டா போறேன்! வருஷம் தவறாமப் பரிசு வாங்கி வந்த இனியனின் பரிசு ஆதிக்கம் இந்த வருஷத்தோடு அம்பேல்’டா. போட்டி முடிவு தெரிஞ்சப்புறம் உனக்கே அது புரியும். முடிவுதான் எப்ப அறிவிப்பாங்களோ தெரி யலே.”  “நாளைக்கு நடக்கப் போற பள்ளி ஆண்டு விழாவிலே போட்டி முடிவை அறிவிச்சுப் பரிசும் கொடுக்கப் போறதா இப்பதான்'டா நம்ம ஆசிரி யர் சொன்னார்.” வந்து கொண்டிருந்த தங்கதுரை ஆசிரியரின் அறிவிப்பை ஒப்புவித்தான்.    12. பாகம்   பள்ளி ஆண்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது. மேடை வண்ண வண்ணத் தோரணங்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் அமர்ந்திருந்தனர். மேடையில் விழாத் தலைவரும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் அமர்ந்திருந்தனர். கடவுள் வாழ்த்துப் பாடி முடிந்தவுடன் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. கட்டுரைப் போட்டிப் பொறுப்பாளராக இருந்த ஆசிரியர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார். ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்:  “தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! நமது பள்ளி ஆண்டு விழாவிலே குழுமி யிருக்கும் நீங்களெல்லாம் கட்டுரைப் போட்டி முடிவை அறிந்துகொள்ள பேராவலோடு இருக்கிறீர்கள். இந்த ஆண்டுக் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுமையைக் காண்கிறேன்...”  ஆசிரியர் இவ்வாறு கூறத் தொடங்கிய போது கண்ணாயிரம் மிடுக்கோடு தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான். ஒரு விதப் பெருமிதப் பார்வை பார்த்தடி தன் நண்பன் தங்கதுரையைப் பார்த்துப் பேசினான்.  “டேய் தங்கதுரை! நல்லாக் காதைத் தீட்டிக் கொண்டு கேள்’டா, முதற்பரிசு யாருக்கு’ன்னு!!  ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.  “...போட்டிக்குக் கட்டுரை எழுதிய மாணவர்கள் எல்லோருமே நன்கு எழுத முயன்றிருக்கிறார்கள். சிலர் `அறிவுச் சுடர்' என்ற எனது புத்ககத்திலுள்ள உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை வரிக்கு வரி விடாமல் காப்பியடித்து எழுதி இருக்கிறார்கள்...”  ஆசிரியர் பேசிய தோரணையைக் கேட்ட மணிக்கு வியர்த்தே விட்டது. அவன் மெதுவாகத் தங்கதுரையின் காதில் கிசுகிசுத்தான்.  “என்ன’டா தங்கதுரை! நம்மையெல்லாம் ‘காப்பிக் கலைஞர்கள்’னு பட்டங் கொடுத்து வரிசையாகக் கூப்பிட்டு நிறுத்திடுவார் போலிருக்கு.”  மணி தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான். ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.  “...சிலர் மற்றவர் எழுதிய கட்டுரையைத் திருடி, எழுதியவர் பெயரை மட்டும் மாற்றி, அதில் தம் பெயரை எழுதியிருக்கிறார்கள். பாவம்! பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர கட்டுரையிலுள்ள கையெழுத்தை மாற்ற முடியவில்லை.  “ஏன்’டா தங்கதுரை! போட்டி இறுதி நாளன்று இனியன் தான் எழுதி வச்சிருந்த கட்டுரை காணாமப் போச்சு’ன்னு சொன்னானே, ஒருவேளை அதுவாக இருக்குமோ?” மணி தங்கதுரையின் காதைக் கடித்தான்.  “பொறுத்திருந்துபார்த்தா எல்லாமே புரிஞ்சு போயிடுது” தங்க துரை பதில் சொன்னான். ஆசிரியர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  “...முதற் பரிசுக்குரிய கட்டுரையை எழுதிய மானவன் உழைப்பை மன உழைப்பு-உடல் உழைப்பு என இரு வகையாகப் பிரித்துக் கொண்டு மிக அழகாக எழுதியுள்ளான்.  “மன உழைப்பு எத்தகையது என்பதையும், அதனால் இறவாப் புகழ்பெற்ற அறிஞர்களை  யும், உடல் உழைப்பின் தன்மைகளையும் மேன்மைகளையும் அதனால் நாம் பெறக் கூடிய பயன்களையும் பல்வேறு சான்றுகளுடன் அருமையாக விளக்கியுள்ளான். பல்வேறு மலர் களிலுள்ள தேனை ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் தேனி போன்று பல்வேறு நூல்களைப் படித்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து, தெளிவாக எழுதியுள்ளான். அவனுக்கு என் பாராட்டுக்கள்.  “‘இளமையில் கல்’ என்றபடி படிப்பில் பேரார்வம் கொண்டு, தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்ற பழமொழிக்கேற்ப, படிக்கும் காலத்தில் தம் சிந்தனையைக் கண்டபடி சிதறவிடாமல் நூல்களைக் கற்பதிலும் சிந்திப்பதிலுமே செலவிட்டால் அவர்கள் அறிவு வளர்ச்சியில் பெரு முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்கு இன்று முதற் பரிசு பெறும் மாணவனே தக்க சான்றாக உள்ளான் என்பேன். அறிவுத் திறம் என்பது பரம்பரையாக வருவது என்றாலும் இளமையில் நாம் பெறும் நல்ல ஊட்டச் சத்துதான் நம் மூளையைப் பலம் அடையச் செய்கிறது. நல்ல சூழல் நம் அறிவை வளமடையச் செய்கிறது. கடுமையான மன உழைப்பு நம் அறிவைக் கூர்மைப்படுத்துகிறது. அதோடு நம் எதிர்கால வாழ்வுக்கு அதுவே இணையற்ற ஏணியாக அமைகிறது. புகழையும் பொருளையும் வேண்டிய அளவுக்குத தேடித்  தருகிறது. இந்த உண்மைகளை மனதிற் கொண்டு பார்க்கும்போது போட்டியில் முதற் பரிசு பெறும் மாணவன் எல்லா வகையிலும் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக அமைந்துள்ளான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கும் அந்த மாணவன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவன்தான் இனியன்!  “இனியன் எழுதிய கட்டுரையைத் திருடி, பெயரை மட்டும் மாற்றி தன் பெயரைப் போட்டு கட்டுரைப் போட்டிக்கு அனுப்பிய கண்ணாயிரத்துக்கு, அவன் செய்த திருட்டுக் குற்றத்துக்காக ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.”  ஆசிரியர் கூறியதைக் கேட்டபோது கண்ணாயிரத்தின் நண்பர்கள் எல்லோரும் அவன் வெறுப்புக் கொண்டனர். “கண்ணாயிரத்தோடு சேர்ந்ததுக்கு நாமெல்லாம் வெட்கப்படனும்’டா” வேதனையோடு கூறினான் மணி.  “இனி, அவன் திருட்டு முகத்திலேயே விழிக்கக் கூடாதுடா” உறுதிபடக் கூறினான் தங்கதுரை.    13. பாகம்   பள்ளி ஆண்டுவிழாவில் தன் சாயம் வெளுத்ததால் தகர்ந்து போனான் கண்ணாயிரம். ஆசிரியர்களும் தன் நண்பர்களும் தன்னை மிகக் கேவலமாகக் கருத நேர்ந்ததை எண்ணி எண்ணி குமைந்தான். யார் முகத்திலும் விழிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்திக் கண்ணிர் விட்டான்.  தன் வீட்டாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என எண்ணி மருகிக் கொண்டிருக்கும்போது இனியன் கண்ணாயிரத்தைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். தான் கொஞ்சமும் எதிர்பாரா நிலையில் அங்கு வந்து சேர்ந்த இனியனைக் கண்டபோது கண்ணாயிரத்துக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே வெட்கப்பட்டான். எப்படியோ ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு இனியனிடம் மனம்விட்டுப் பேசினான்:  “இனியன்! உன் மீது நான் கொண்ட பொறாமைக்கும், உனக்குப் பரிசு கிடைக்கக் கூடாது, எனக்கே கிடைக்கணும்’கிற பேராசை யினாலே உன் கட்டுரையைத் திருடியதற்கும் சரியான தண்டனையும் அவமானமும் கிடைச்  சிருச்சு நீ என்னை மன்னிக்கணும். கொஞ்சமும் உழைக்காம பரிசுபெறப் பேராசைப்பட்ட எனக்கு இதுவும் வேணும்” இன்னமும் வேணும்.  கண்ணாயிரத்தின் வார்த்தைகள் இனிய னின் மனதைத் தொட்டன.  “வருந்தாதே கண்ணாயிரம். உன் விருப்பத்தை என்னிடம் சொல்லியிருந்தால் நானே உனக்கு நல்ல கட்டுரையா போட்டிக்கு எழுதிக் கொடுக்திருப்பேன்.”  இனியனின் பரந்த மனப்பான்மையும் உதவத் துடிக்கு உபகார உணர்வும் கண்ணாயிரத்தின் கண்களைக் குளமாக்கின. அவன் தழதழத்த குரலோடு பேசத் தொடங்கினான்.  “உன் உயர்ந்த குணத்தைச் சரியா புரிஞ்சுக்காம நான் பெரிய தவறு செஞ்சுட்டேன். இனி நான் குறுக்கு வழியிலே தவறான போக்குகளை கனவிலும் நினைக்க மாட்டேன். உன்னைப் போல் நானும் கடுமையாக உழைப்பேன். மனம் போன படி சிந்தனையைச் செலுத்தாம படிப்பிலேயே கவனத்தைச் செலுத்துவேன். உன்னைப் போல நிறைய அறிவு நூல்களைப் படிச்சு திறமையை வளர்த்துக் கொள்வேன். அதன் மூலம் அடுத்த ஆண்டுப் போட்டியிலே உன்னைப் போல் முதற்பரிசும் பாராட்டும் பெறுவேன். இது உறுதி.”  கண்ணாயிரத்தின் சொற்கள் இனியனுக்குத் தேனாக இனித்தன. அவன் மன உறுதி அளவிலா மகிழ்வூட்டின.  “கண்ணாயிரம்! உழைப்பில் வாரா உறுதிகளில் உளவோ?ன்னு அறிஞர் ஒருத்தர் சொன்னார். ‘உழைப்பும் உயர்வும்’ங்கிற கட்டுரைத் தலைப்பு உனக்குப் பரிசு வாங்கிக் கொடுக்காட்டாலும் சரியான பாதைக்கு உன்னைத் திருப்பிய திருப்புமுனையா அமைஞ்சிருச்சு. உன் அறிவும் சிந்தனையும் சரியான பாதையிலே துரித நடை போட ஆரம்பிச்சிருச்சு. இதுவே உன் வாழ்க்கையிலே நீ பெற்ற பெரும் பரிசு’ன்னு சொல்லலாம்.  இவ்வாறு இனியன் ஆலுதலும் தேறுதலுமாகக் கூறிய ஊக்க மொழிகள் கண்ணாயிரத்தை புதிய ராஜ பாட்டையில் நடக்கத் தூண்டின. இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.