[] 1. Cover 2. Table of contents திருகோணமலையில் சோழர் திருகோணமலையில் சோழர்   தம்பலகாமம். த. ஜீவராஜ்   tjeevaraj78@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - தம்பலகாமம். த. ஜீவராஜ் - tjeevaraj78@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thirikonamalaiyil_chola மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: தம்பலகாமம். த. ஜீவராஜ் - tjeevaraj78@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: T. Jeevaraj - tjeevaraj78@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/thirikonamalaiyil_chola This Book was produced using LaTeX + Pandoc என்னுரை […] இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சிபற்றிய சில கட்டுரைகளைக்கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இதனைக் கொள்ளவேண்டும். வலைப்பதிவிலும், சமூக வலைப்பக்கங்களிலும், நேரிலும் தொடர்ந்து உற்சாகமூட்டிவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். நட்புடன் ஜீவன். Dr.த.ஜீவராஜ் ( MBBS, MCGP) http://www.geevanathy.com tjeevaraj78@gmail.com காப்புரிமைத் தகவல் [CC-NC-BY-SA] இந்த மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) என்ற பதிப்புரிமையின் (Copyright)  கீழ் பகிரப்படுகிறது. மூல உரிமங்கள் Attribution குறிப்பிடுதல் / Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும். Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது. Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும். சமர்ப்பணம் [தம்பலகாமம். க. வேலாயுதம்] தம்பலகாமம் மண்ணின் நுண் வரலாற்றினை பதிவு செய்வதை தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு செயற்பட்ட எனது அப்பப்பா அமரர் தம்பலகாமம். க.வேலாயுதம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் ஆகிறது. இலங்கையில் சோழர் முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று ‘’கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்…’’ என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது. இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயரால் ஆட்சியின் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவனது முப்பதாண்டு ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், வணிகம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது. [முதலாம் இராஜராஜ சோழன் சிலை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சாவூர்.] இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி.1012-1044). இராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே இராஜேந்திர சோழனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டித் தன் ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இராஜேந்திரன் இளவரசனாக இருந்தபொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்தவன். வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக நியமிக்கப்பட்டவன். ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற விருதுப்பெயர் கொண்ட இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு இலங்கை, மாலைதீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர், மலேசியா) சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது தலைநகரமாக இருந்த அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவையை ஜனநாதமங்கலம் எனப் பெயர்மாற்றி தலைநகரம் ஆக்கினான். இதன் பின்னர் கி.பி 1017-1018 ஆம் ஆண்டில்,முதலாம் இராஜேந்திர சோழன் பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறிய முடியாமல் போன பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியத்தை தன் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இதைத் தொடர்ந்து சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய இலங்கை ‘மும்முடிச் சோழ மண்டலம்’ எனப் பெயர் பெற்றது. ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழப்பேரரசின் பகுதிகள் கீழ்வருமாறு அமைந்திருந்தது. 1. சோழ மண்டலம் 2. இராசராசப் பாண்டி மண்டலம் 3. ஜெயங்கொண்ட சோழ மண்டலம் (தொண்டைநாடு) 4. மும்முடிச் சோழமண்டலம் (இலங்கை) 5. முடிகொண்ட மண்டலம் (கங்கபாடி நாடு) 6. நிகரிலிச் சோழமண்டலம் (நுளம்பாடி, பல்லாரிப்பகுதிகள்) 7. அதிராஜராஜ சோழமண்டலம் (கொங்கு) 8. மலைமண்டலம் (கேரளம்) 9. வேங்கை மண்டலம் (கீழைச் சாளுக்கியம்) ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வளநாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு பல கிராமங்களைக் கொண்டிருந்தது. சோழ அரசின் மிகச்சிறிய பிரிவு கிராமமாக இருந்தது. மண்டலங்கள் அரசகுமாரர்கள் அல்லது அரசனின் நெருங்கிய உறவினர்களின் பொறுப்பில் இருந்தன. இப்பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதுடன், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தனர். மேற்படி நிர்வாக முறைகள் சோழர்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சோழர்களின் இலங்கை மீதான படையெடுப்பு பொருளாதாரக் காரணங்களுக்காகவும், தமிழகத்தில் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. திருகோணமலையில் சோழர் இலங்கை முழுவதையும் ஆண்ட சோழர்களின் செல்வாக்குப்பெற்ற பிரதேசமாக திருகோணமலை இருந்ததை வரலாற்றாதாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் ஜனநாதமங்கலம் என்கின்ற பொலன்னறுவை தலைநகரமாக இருந்தபோதிலும் திருகோணமலை, கந்தளாய், பதவியா ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் முக்கோணப் பகுதியே அவர்களுடைய வணிக , பண்பாட்டு, கலாச்சார செயற்பாடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. [] திருகோணமலைத் துறைமுகம் பண்டைக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்ததோடு தமிழக வணிகர்களுக்கு பயனுள்ள துறைமுகமாகவும் விளங்கியது. அதேவேளை தென்கிழக்காசியப் பிரதேசத்தில் திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த சோழர்கள் தமது கடாரம், ஸ்ரீ விஜயம் நோக்கிய படையெடுப்புகளுக்கு ஒரு தளமாக இதனைப் பயன்படுதுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் தமது வணிக ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்தனர். மேற்கூறிய காரணங்களோடு திருகோணமலையில் இருந்த ஆதிக்குடிகளின் அரசுகள் சிற்றரசுகளாக் காணப்பட்டதே அன்றி ஒரு இராட்சியமாக உருவாகி இருக்காமையும், இந்து சமுத்திரத்தின் இரு பக்கங்களிலும் ஒரே பண்பாட்டுடைய மக்கள் வாழ்ந்தமையும் திருகோணமலையில் சோழர்கள் தங்களது பலமான நிர்வாக அலகுகளை நிறுவுவதற்குக் காரணங்களாக அமைந்தது எனலாம். எனைய மாவட்டங்களை விட அதிகளவில் கிடைத்த சோழர்கள் தொடர்பான தொல்லியல் சான்றுகளும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்றுத் தகவல்களும் இதையே நமக்கு உணர்த்தி நிற்கின்றன. இவற்றோடு ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தின் அதிகாரங்களைக் கவனிக்க அனுப்பப்பட்ட பிரதிநிதியான சோழ இலங்கேஸ்வரன் பற்றிய இரு கல்வெட்டுக்களின் ஆதாரங்களும் திருகோணமலையின் கந்தளாய், மானாங்கேணி ஆகிய இடங்களில் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. சோழர் ஆட்சியில் ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன எனப்பார்த்தோம். அதன் அடிப்படையில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இதுவரை ஆறு வளநாடுகளே அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் அருண்மொழித்தேவ வளநாடு (மாதோட்டமான இராஜராஜபுரம்), நிகரிலிச் சோழ வளநாடு என்பவை தவிர்த்து மிகுதி நான்கு வளநாடுகளும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவையாவன, 1. இராஜேந்திர சோழவளநாடு - திருகோணமலையும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதி. இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. 2. விக்கிரம சோழ வளநாடு என்னும் கணக்கன் கொட்டியாரம் (மூதூரின் ஒரு பகுதி) 3. இராஜராஜ வளநாடு என்னும் மாப்பிசும்பு கொட்டியாரம் (மூதூரின் மற்றொரு பகுதி) 4. இராஜேந்திர சிங்க வளநாடு - மானவத்துளா அல்லது வீரபரகேசரி வளநாடு என்றழைக்கப்பட்ட இப்பிரதேசமே பின்னாட்களில் கட்டுக்குளம் பற்று என வழங்கப்பட்டது. இங்குதான் இராஜராஜப் பெரும்பள்ளி இருக்கிறது. மானாங்கேணிச் சாசனம் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. மானாங்கேணி என்று அழைக்கப்பட்ட பிரதேசம் இன்று திருகோணமலை நகர மத்தியில் பரபரப்பு நிறைந்த மின்சார நிலைய வீதியில் கட்டடங்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயமாகும். [] பரம்பரை வழி வந்த கதைகளின் படி பண்டைய நாட்களில் திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவ முடிவில் கோணேசர் நகர்வலம் வரும்போது ஒருநாள் இவ்வாலயத்தில் தங்கிச் செல்வதாகவும், கோணேஸ்வர ஆலய தெப்பத்திருவிழா இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த குளமான மானாங்கேணியில் இடம்பெற்று வந்ததாகவும் கருதப்படுகிறது. குளக்கோட்டு மன்னன் திருக்கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்தபோது அமைக்கப்பட்ட இக்குளத்தின் பெயரான மானாங்கேணியே அதனைச் சூழ்ந்த பிரதேசத்திற்கும், ஆலயச் சூழலுக்கும் வழங்கி வந்ததை காணக்கூடியதாக உள்ளது. வெள்ளை வில்வமரங்களால் சூழப்பட்ட இவ்வாலயமும் அருகில் இருந்த மானாங்கேணி குளமும் 1624 ஆம் ஆண்டில் திருக்கோணேச்சரத்தை போர்த்துக்கேயர் இடித்தழித்ததைத் தொடர்ந்து பராமரிப்பற்றுக் கைவிடப்பட்ட நிலையில் சிதைந்து போனது. [] நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆலயச்சூழலை துப்பரவு செய்தபொழுது ஒரு கல்வெட்டும், மகாவிஷ்ணு, பார்வதி ஆகியோரின் கற்சிற்பங்களும், ஒரு நந்திதேவரும், ஆவுடையாரும் கண்டெடுக்கப்பட்டன. திருத்த வேலைகளுக்காக நிலத்தினை அகழ்ந்த பொழுது அங்கு ஒரு புராதன ஆலயமொன்று இருந்து அழிவடைந்தமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றது. மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து திருகோணமலை மானாங்கேணி என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டும், புராதன சின்னங்களும் இருப்பதாகவும் அவற்றில் இருக்கும் தகவல்களை வெளிப்படுத்த தொல்லியளாளர்கள் தேவையெனக் குறிப்பிட்டு 01-02-1972 இல் தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியது. இச்செய்தியினை வழங்கியவர் சாம்பல்தீவு பிரதேச சபைத்தலைவரான திரு.தம்பிராசா அவர்கள். இவரே திருகோணமலையில் காணப்பட்ட பல சோழர்கால தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுக்களையும் தேடி வெளி உலகிற்கு அறியத்தந்த பெருமைக்குரியவர். [] திரு.தம்பிராசா அவர்களின் அழைப்பு பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்விளைவாக 17-06-1972 இல் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான மானாங்கேணி கல்வெட்டு கட்டுரையாக வீரகேசரியிலும் சமகாலத்தில் ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட கல்வெட்டு துண்டமானது, அதன் இரு பக்கங்களும் வெட்டப்பட்டு இருந்ததினாலும், அதன் நடுவில் நீள்சதுரமான துவாரம் காணப்பட்டதாலும் அச்சாசனத்தின் சில சொற்களையும், எழுத்துக்களையும் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக இருந்ததாக செ.குணசிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். சிதைந்திருந்த நிலையில் கிடைத்தாலும் இச்சாசனம் ஒரு பொக்கிசமாகும். இலங்கையில் சோழ இலங்கேஸ்வரன் தொடர்பான தகவல்களைத்தரும் கல்வெட்டுக்களில் இச்சாசனமும் ஒன்றாகும் என்பதே அதன் முக்கியத்துவத்திற்குக் காரணமாகும். [] திரு செ.குணசிங்கம் அவர்களால் 1974 இல் வெளியிடப்பட்ட மானாங்கேணிச் சாசனத்தின் நிரப்பப்பட்ட முழுவடிவம் 1. ரான உடையார் ஸ்ரீ சோழ இல(ங்கேஸ்) 2. வரதேவற்கு யான் எ(ட்டாவது) 3. (மும்மு)டி சோழ மண்ட(லத்து) 4. (இராஜே)ந்த்ர சோழ வள நாட்(டு) 5. சோழ வளநாட்(டு) ….த் திருக்கோ 6. (ண) மலை ஸ்ரீ மத்ஸ்ய (கஸ்வ) 7. வரமுடையார் மூலஸ்தானமு(ம்) 8. ஸ்வரமுடையார் கோ(யிலும்) 9. (சோ)ழ மண்டலத்து (இராஜே) 10. (ந்த்ரசி)ங்க வளநாட்டு த்… 11. (—நா)ட்டு(க்) க(ஞ்)—ங் 12. வேளாண் கணபதி(எ) 13. (டு)த்த தளிக்—–கு(ம) 14. ------------------------------------------------------------------------ சாசனத்தின் முதல்வரி சோழ இலங்கேஸ்வரனைக் குறிக்கிறது. இரண்டாவது வரி இச்சாசனம் சோழ இலங்கேஸ்வரனின் ஏழாவது அல்லது எட்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்டது என்பதனை வரையறுக்கிறது. மூன்றாவது வரி முதல் ஐந்தாவது வரையுள்ள வரிகள் இலங்கையான மும்முடிச் சோழமண்டலத்தில் இருந்த வளநாடான இராஜேந்திர சோழவள நாட்டினைக் குறிப்பிடுவதுடன் அதன் மறுபெயராக ‘மும்முடிச் சோழவள நாடு’ என்னும் பெயரினையும் அறியத் தருகிறது. தொடர்ந்து வரும் ஆறு முதல் எட்டுவரையுள்ள வரிகள் திருகோணமலை ஸ்ரீ மத்ஸ்யகேஸ்வரத்தின் மூலஸ்தானம் பற்றியும் ஈஸ்வரமுடையார் கோயில் ஒன்றினைப் பற்றியும் சொல்கிறது. அதன் பின்வரும் பகுதி சோழமண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டு மூவேந்த வேளாண் கணபதி பற்றியதாக அமைந்திருக்கிறது. திருகோணமலையில் மத்ஸ்யகேஸ்வரம், சோழ இலங்கேஸ்வரன் என்பன பற்றிக் குறிப்பிடும் இச்சாசனம் மிக முக்கியமான வரலாற்றாவணமாகும். சோழ இலங்கேஸ்வரன் என்ற பட்டம் சோழர்கள் தாம் கைப்பற்றி ஆண்ட நாடுகளை எவ்வாறு ஆட்சிபுரிந்தார்களோ அதே முறையில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தையும் ஆண்டார்கள் என்பதனை ஆதாரப்படுத்திநிற்கிறது. சோழமண்டலங்களுக்கு அதிபர்களாக சோழ இளவரசர்களை நியமிக்கும் பழக்கம் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் ஆரம்பமாகியது. சோழராட்சியில் பாண்டிய நாட்டுக்குரிய அரச பிரதிநிதியாக சோழவம்சத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்து அவருக்கு சோழபாண்டியன் என்ற பட்டத்தினை வழங்கியதைப் போன்றே கங்கபாடி இராட்சியத்திற்கு சோழகங்கன் நியமிக்கப்பட்டதையும் குறிப்பிடலாம். இதுபோலவே இலங்கையை நிர்வகித்த சோழப்பிரதிநிதிக்கும் சோழ இலங்கேஸ்வரன் என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது என்பதனை ஆதாரப்படுத்தும் சாசனம் இதுவாகும். கி.பி. 1055 ஆண்டளவில் எழுதப்பட்ட இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியில் சோழபாண்டியன், சோழகங்கன், சோழகேரளன், சோழ அயோத்தியராசன், சோழ கனகராசன், சோழகன்னகுச்சியராசன் , சோழவல்லபன் என்னும் பட்டங்களைப் பெற்றிருந்த சோழர்களைப் பற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம். இலங்கை அரசனை இலங்கேஸ்வரன் என்று குறிப்பிடும் வழக்கம் தமிழர் வரலாற்றில் பண்டைக்காலம் முதல் வழக்கில் இருப்பதாகும். தேவாரப்பாடல்களில் இலங்கை மன்னன் இராவணன் இலங்கேஸ்வரன் என்றழைக்கப்படுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இலங்கேஸ்வரன் என்பது இலங்கைக்கான மும்முடிச் சோழ மண்டலத்தை நிர்வகித்த சோழப்பிரதிநிதியின் பட்டப் பெயர் என்பது உறுதியாகிறது. சோழ இலங்கேஸ்வரனின் ஏழாவது அல்லது எட்டாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட இச்சாசனம் குறிப்பிடும் இன்னொரு செய்தி அக்கால வழக்கில் கோணேஸ்வரம் மத்ஸ்யகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது தொடர்பானதாகும். மத்ஸ்யகேஸ்வரம் என்னும் மச்சகேஸ்வரம் மகாவிஷ்ணுவின் மச்ச அவதாரம் தொடர்பான ஒரு புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். "ஆயதென் கயிலாயத்தின் றென்புறமணுகி மாய மச்சமா முடலையக் கடல் வழி வைத்துத் தூய தன்னுருக் கொண்டரன் சந்நிதி துன்னிச் சேய கங்கணம் முன்வைத்து வணங்கினன் திருமால்" என்று தஷிணகைலாசப் புராணத்தின் மச்சாவதாரப் படலம் திருமால் மீனாக அவதாரமெடுத்து உலகினைக் காத்தபின் மீண்டும் திருமால் உருவெடுத்து தஷிணகைலாயம் எனப் போற்றப்படும் மத்ஸ்யகேஸ்வரத்தினை (திருக்கோணேஸ்வரம்) வணங்கிய செய்தியைச் சொல்கிறது. திருகோணமலை நிலாவெளித் தானசாசனம் ’’ ஸ்ரீ கோணபர்வதம் திருகோண மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தேவற்கு நிச்சலழிவு க்கு நிவந்தமாக…..’’ என்று மத்ஸ்யகேஸ்வரத்திற்கு வழங்கப்பட்ட தானம் தொடர்பான தகவல்களைத் தருவதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே மானாங்கேணி, நிலாவெளிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலப்பகுதிகளில் திருக்கோணேஸ்வரத்தின் மறுபெயர்களில் ஒன்றாக மத்ஸ்யகேஸ்வரம் என்ற பெயரே மிகுதியாக இப்பிரதேசத்தில் வழக்கில் இருந்திருக்கிறது எனலாம். இம்மானாங்கேணிச் சாசனம் சோழ உயர் அதிகாரிகளில் ஒருவனான மூவேந்த வேளாண் என்னும் பட்டம் பெற்ற இராஜேந்திரசிம்ம வளநாட்டு கணபதி என்பவனால் மத்ஸ்யகேஸ்வரத்து மூலஸ்தானம் தொடர்பாகவும் மற்றுமொரு ஈஸ்வரம் தொடர்பாகவும் செய்யப்பட்ட ஒரு ஏற்பாட்டினைப் பதிவு செய்துள்ளது. இங்கே முன்னே நாம் பார்த்த மானாங்கேணியில் கிடைத்த புராதானச் சின்னங்களான மகாவிஷ்ணு, பார்வதி, ஆவுடையார், நந்தி என்பன இச்சாசனத்தில் குறிப்பிடப்படும் ஈஸ்வரத்தின் பகுதிகளாகக் கருத இடமுண்டு. இத்தனை வரலாற்றாதாரங்களைக் கொண்ட மானாங்கேணிக் கல்வெட்டும், புராதானச் சின்னங்களும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிலாவெளி தான சாசனம் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம் கோணேசர் ஆலய கட்டடச் சிதைவுகளில் ஒன்றாகும். இது நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாசனம் திருகோணமலையின் வரலாற்று ஆர்வலராகிய திரு.நா.தம்பிராசா அவர்களினால் கண்டறியப்பட்டு திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம் என்போரால் வெளிப்படுத்தப்பட்டது. ஸ் (வஸ்தி ஸ்ரீ)… சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி) கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும் ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல் லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான் கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே ஸ்வரரஷை இது ஒரு தான சாசனமாகும். இக்கல்வெட்டு மத்ஸ்யகேஸ்வரம் என்னும் கோயிலுக்கு வழங்கப்பட்ட தேவதானம் பற்றிய விபரங்களை விரிவாகத் தருகிறது. கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் ,சந்திரனும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும் என்பதாக அமைந்திருக்கிறது இக்கல்வெட்டு. [] திருகோணமலையில் சோழர் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப காலகட்டத்திற்குரியதான இக்கல்வெட்டில் முதற்பகுதி அழிந்து விட்டதால் அது எழுதப்பட்ட காலத்தின் அரசனின் பெயரை அறிய முடியாமல் இருக்கிறது. இச்சாசனம் திருகோணமலை வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. முதலில் திருகோணமலை என்ற பெயரினைப் பதிவு செய்த முதலாவது வரலாற்று ஆவணம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் இப்பிரதேசத்தின் பெயரினை கோணமாமலை என்றும் இக்கல்வெட்டு அழைக்கிறது. ஏழாம் நூற்றாண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் திருக்கோணமலைப் பதிகத்தில் கோணமாமலை என்ற பெயர் வடிவம் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருகோணமலைக்கு புராண காலம் முதல் வழங்கப்பட்டு வந்த பெயர்களில் ஒன்றான மச்சகேஸ்வரம் இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திலும் வழக்கத்தில் இருந்ததை இக்கல்வெட்டு பதிவு செய்திருக்கிறது. அத்தோடு நிலாவெளிக்குள் அடங்கியிருந்து தற்போது வழக்கொழிந்து போய்விட்ட இரு இடப்பெயர்களான உரகிரிகாமம், கிரிகண்டகாமம் என்ற இடப்பெயர்களை இக்கல்வெட்டு ஆவணப்படுத்தியிருக்கிறது. இச்சாசனம் எழுதப்பட்ட காலத்தில் நில எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததை அதன் குறிப்புகள் உணர்த்துகிறது. திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சுமார் 250 வேலி (1700 ஏக்கர்)  நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலப்பகுதியில் மச்சகேஸ்வரத்தில் தினமும் ஆராதனைகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்துகிறது. இராஜராஜ சதுர்வேதி மங்கலம் (கந்தளாய்) [] உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பின் வரலாறும் அங்கு வலிமையுடன் நிலைபெறும் மக்கள் கூட்டத்தினரால் எழுதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பழமையில் வலிமையுடன் இருந்த மக்கள் கூட்டம் காலப்போக்கில் வலிமை குன்றிப்போவதும், சிலவேளைகளில் முற்றாக மறைந்து போவதும் உண்டு. அதுபோலவே புதிதாகக் குடியேறிய மக்கள் கூட்டம் வலிமை பெற்று நிலைபெறுவதோடு புதிய ஒழுங்குகளை அங்கு உருவாக்கி விடுவதும் உண்டு. இந்த மாற்றங்களை வரலாற்றுப்பக்கங்கள் நெடுகிலும் நாம் காணக்கூடியதாய் இருக்கும். இலங்கையில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய நிலையில் மிகச்சிறிய அளவில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கந்தளாய். இப்பிரதேசம் இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சுயாட்சியுடன் கூடிய நிர்வாகப் பலமுள்ள பாரிய பிராமணக் குடியிருப்பைக் கொண்டிருந்ததை மீட்டுப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கந்தளாயில் இருந்த பிராமணக் குடியிருப்பு சோழப்பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தபோது “ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதி மங்கலம்” என அழைக்கப்பட்டதை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. சோழப்பேரரசில் பிராமணர்கள் விஜயாலய சோழ மரபினர் ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசில் பிராமணர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர். சோழ நாட்டிலிருந்தவர்களுக்கு மேலதிகமாக வடநாட்டில் இருந்தும் பிராமணர்களை அரசர்கள் குடியேற்றினர். இக்காலப்பகுதியிலேயே தமிழகத்தில் இன்று காணப்படும் பல்வேறு சாதிப்பிரிவுகள் தோன்றி உயர்ந்த சாதியினர், தாழ்ந்த சாதியினர் என்ற வேற்றுமைகள் நன்றாக வேரூன்றத் தொடங்கின. வேத சாத்திரங்களிலும், புராணங்களிலும் தெளிந்த அறிவுடையவர்களாக இருந்த பிராமணர்கள் அம்பலங்களிலும், திருக்கோயில்களிலும் இரவில் மகாபாரதம், பதினெண்புராணம் என்பவற்றை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் படித்தனர். அரசர்களுக்குரிய ஆசாரியர்களாகவும், அரசனின் நல்வாழ்வு வேண்டி வேள்வி, கிரியைகள் செய்பவர்களாகவும் பணிபுரிந்தனர். மன்னனின் நம்பிக்கைக்கும், பெருமதிப்புக்கும் உகந்தவர்களாகச் செயற்பட்ட இவர்கள் சோழப் பேரரசில் அமைச்சர்களாகவும், படைத் தலைவர்களாகவும் சேவையாற்றினர். இவர்களது சேவைக்காக அகரப் பற்று, அக்கிரசாலைப்புரம், அக்கிரகாரவாடை, வேதவிருத்தி, பட்டவிருத்தி, அத்தியாயனவிருத்தி முதலான பலவகை மானியங்கள் மன்னனால் வழங்கப்பட்டன. இவர்களுக்குத் திருக்கோயிலில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது. பிராமணர்களுக்கு பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் எனும் பெயர்களால் கிராமங்களும், நிலங்களும் மன்னனால் வரியின்றி தானமளிக்கப்பட்டன. பல்வேறுபட்ட மக்கள் வாழும் ஊர்களில் பிராமணர்களுக்குத் தனியான தெருக்கள் ஒதுக்கப்பட்டன. பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பல பிரமதேயங்களும், சதுர்வேதிமங்கலங்களும் சோழப்பேரரசில் பரவலாக இருந்தன. அவனி நாராயண சதுர்வேதி மங்கலம், மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம், இராசராசச் சதுர்வேதி மங்கலம், உத்தரமேரு சதுர்வேதி மங்கலம், செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம், கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்பன அவற்றுள் சிலவாகும். சோழர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையைப் பெற்று பல சலுகைகளுடன் வாழ்ந்த பிராமணர்கள் செய்யும் குற்றங்களுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைவாக அறவிடப்பட்டது. வேதகாலத்திலிருந்து பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தாலும், சோழ காலத்தில்தான் இவ்வாதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது. சோழர் காலத்தில் சமூகம் சாதி அடிப்படையில் அமைந்திருந்தது. சாதிகளுக்குள் பல உட்பிரிவுகள் தோன்றி வேற்றுமைகளும் , ஏற்றத்தாழ்வுகளும் உருவாகின. சலுகைகளும், வசதியும் உள்ளவர்கள் உயர்ந்த நிலையிலும், வசதியற்றவர்கள் வரிச்சுமையையும், வேலைப்பளுவையும் தாங்கி தாழந்த நிலையிலும் இருந்தனர். சமூகத்தில் அடிமட்டத்தில் இருந்தவர்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கென தனியான சேரிகளும், சுடுகாடும் இருந்தது. உழைக்கும் மக்களுக்கும், நில உடமையாளர்களுக்கும் இடையிலான பூசல்கள் பெரிதாகி முதலாம் குலத்துங்கன் காலத்தில் (கி.பி. 1071) நடைபெற்ற கலகத்தில் இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் சுட்டெரிக்கப்பட்டதும் அங்கிருந்த ஆலயங்கள் சூறையாடப்பட்டு இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. [] [] [] [] [] [] [] [] [] இராஜராஜ சதுர்வேதி மங்கலம் சோழர்களின் ஆட்சியில் கந்தளாய் இராஜேந்திர சோழவளநாடு என்னும் பிரிவில் அடங்கியிருந்தது. இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. எனவே கந்தளாயிலிருந்த பிராமணக் குடியிருப்பு சோழர்களின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை. அதனால் இதற்கு “இராஜராஜ சதுர்வேதி மங்கலம்” எனப்பெயர் சூட்டி சோழர்கள் ஆதரித்தார்கள். ஐயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம், ஸ்ரீபதி கிராமம் போன்ற பொலன்னறுவைக் காலத்து பிரம்மதேயங்களில் (பிராமணக் குடியிருப்பு) கந்தளாய் பிரம்மதேயம் முதன்மை பெற்று விளங்கியது. சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு:- ஸ்வஸ்தி ஶ்ரீ கோ ஶ்ரீ சங்கவர்மரான உ டையார் ஶ்ரீ சோழ இலங்கேஸ்வர தேவற்கி யாண்ட்டு பத்தாவது ராஜேந்த்ர சோழ வளநாட்டு ராஜவிச்சாதிர வளநாட்டு ப்ரகமதே ஸம் ஶ்ரீ ராஜராஜச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி பெருமக்க ளோம் இய்யாட்டைக் கும்ப நாயற்று பூர்வ பகூத்து த் வாதஸியும் செவ்வாய்க் கிழ மையும் பெற்ற ஆயிலெயத்து நான்றிரவு நம்மூர் தண்டுகின்ற முத்தங்கை கோயில் மானி …………………………. நில….. வன் பணி….. வாந……….(த்)த பரிசா(வது) ண்……..(டு)……..வ் வூ(ர்) க்கு(டி)…. வை……ஒலோ(கவி) டங்க… ண்டாரத்து……… (க)ர சு மூன்று இக்(காசு) மூன்றில் இர(ட்டிப்பா) ன காசு ஆறுக்(கு) கல்லூர் நீர்நிலத்தில் வாசுதேவ…. ற்கு….. விக்கிரம சொழ வாய்க்கால்(இர) ண்டராங் கண்ணாற்று மூன்றாஞ் சது(ரத்து நீர் நிலம்) மூன்று மாவும் இங்கே நா…. இங்கே மூன்றாங் கண்… இச்சாசனம் “சங்கவர்மன்” எனும் பட்டப்பெயருடைய முதலாம் இராஜேந்திர சோழனின் மகன் சோழ இலங்கேஸ்வரனாக பதவி வகித்த காலத்துக்குரியது. இது கந்தளாய்ப் பிராமணக்குடியிருப்பினை “ஸ்ரீ இராஜராஜ சதுர்வேதி மங்கலம்” எனப்பெயரிட்டு அழைக்கின்றது. இக்கல்வெட்டின் காலம் சோழ இலங்கேஸ்வரனின் பத்தாவது ஆட்சியாண்டுக்குரியது என்பதனை இச்சாசனம் குறித்து நிற்கிறது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் இச்சாசனம் விபரிக்கின்ற நிகழ்ச்சி கி.பி.1033 இல் அல்லது கி.பி.1047 இல் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கின்றனர். எனினும் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் இச்சாசன காலத்திற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே வழக்கில் இருந்திருக்கவேண்டுமென கருதப்படுகிறது. திருகோணமலையில் சுவாமி மலையினை அடுத்துள்ள கடற்பகுதியில் சிவலிங்கத்துடன் மீட்கப்பட்ட இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி (குடமாலை) நாடுங் கொல்லமு(ம்) என்ற ஆரம்பப் பகுதியைக் கொண்டிருந்தது. இது கி.பி. 993க்கு முதல் எழுதப்பட்ட இராஜராஜனின் மெய்க்கீர்த்தி வடிவங்களை ஒத்தது என்பதனால் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் கருதப்படுகிறது. எனவே கி.பி. 993 க்கு முன்பாகவே திருகோணமலையில் சோழர்களின் செல்வாக்கு நிலவிவந்ததை ஊகிக்க முடிகிறது. இதனால் இராஜராஜ சோழன் காலம் முதலே இப்பிராமணக்குடியிருப்பு இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதே பொருத்தமானதாக இருக்கிறது. [] இராஜராஜ சதுர்வேதி மங்கலமான கந்தளாயில் வாழ்ந்த பெருங்குறிப் பெருமக்கள் கந்தளாய்க் குளத்துடன் தொடர்புடைய விக்கிரமசோழ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால் என்பன தொடர்பிலும், அவற்றின் மூலம் பாசனம் பெறும் வயல் நிலங்களுக்கான வரிதொடர்பாகவும் ஏதோ ஒரு தீர்மானம் நிறைவேற்றியதைச் சொல்கின்றது இக்கல்வெட்டு. கல்வெட்டு முழுமையாக கிடைக்காமையால் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிய முடியாமல் இருக்கின்றது. எனினும் இதையொத்ததாக பேரரசன் முதலாம் இராஜராஜனால் திருச்சியில் உருவாக்கப்பட்ட உய்யகொண்டான் ஆற்றுநீரை முறைப்படுத்தி பயன்படுத்த அமைக்கப்பட்ட ஏரிவாரியத்தைக் குறிப்பிடலாம். இவ்வேரிவாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் சபையோரால் நிர்வகிக்கப்பட்டது. இந்தத்தகவல்கள் மூலம் சோழ இலங்கேஸ்வரன் காலத்தில் கந்தளாய்க்குளத்தின் வாய்க்கால், கண்ணாறு என்பன தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை இராஜராஜ சதுர்வேதி மங்கலமாக இருந்த கந்தளாய் கொண்டிருந்தது என்பதை அறியலாம். இக்கூட்டத்தில் அக்காலத்தில் கந்தளாயில் இருந்த அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த ஒரு இளம் பிராமணன் வரிசேகரிப்பாளனாக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. சோழர்களின் மெய்க்கீர்த்திகள் திருகோணமலையில் காணப்படும் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் பற்றிப் பார்ப்போம். மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்த பேரரசன் முதலாம் இராசராசனே ஆவான். இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுக்கள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன. திருகோணமலையில் சோழராட்சியின் ஆதாரப்படுத்தல்களாக அவர்களது மெய்க்கீர்த்திகளைச் சொல்லும் மூன்று சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சுவாமி மலையினை அடுத்துள்ள கடற்பகுதியில் சிவலிங்கத்துடன் மீட்கப்பட்ட இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியாகும். இச்சாசனம் இயற்கையான கற்பாறைகளும் சைவக்கோயிலொன்றின் இடிபாடுகளும் குவிந்து கிடக்கும் கடற்பரப்பிலிருந்து சுழியோடிகளினால் மீட்கப்பட்டது. இங்கு மீட்கப்பட்ட சிவலிங்கம் முற்காலக் கோணேசர் கோயிலின் தொல்பொருள்ச் சின்னமாகக் கருதப்படுகிறது. 1961ஆம் ஆண்டு இவையிரண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போதும் 1972 ஆம் ஆண்டிலேயே இச்சாசனங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது. [] சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் படியெடுத்து வாசிக்கப்பட்ட இச்சாசனம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் ஆரம்பப் பகுதியைக் கொண்டிருந்தது. 1. (குடமாலை) நாடுங் கொல்லமு(ம்) 2. __________ பொழில்________ 3. __________எண்டிசை (புகழ்) 4. (நர ஈழமண்)டலந் நின் 5. (டிறல் வென்றித்த) ண்டாற கொண் (டதன்) 6. (னெழில் வள)டூழியுள் ளெ(ல்ல யான்) 7. (டுந்தெ)ழுநம விள(ங்கும் யான்) 8. (டெய் செ)ழியரைத் நே(சு கொண்) 9. (கோ)ராஜ கேசரி வ(ர் மரான) இச்சாசனம் துண்டமானது. இதனுடைய முதற்பகுதியும் இறுதிப் பகுதியும் உடைந்து விட நடுப்பகுதியே சுழியோடிகளால் மீட்கப்பட்டிருந்தது. [] [] பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களின் ஆய்வுக்கு உதவும் சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா இச்சாசனத்தில் அடங்கியிருப்பது இராஜராஜனின் மெய்க்கீர்த்தியின் சுருங்கிய வடிவமாகும். இது கி.பி .993க்கு முதல் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி வடிவங்களை ஒத்தது என்பதனால் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் கருதப்படுகிறது. இச்சாசனம் பண்டைய நாட்களில் கோகர்ணத்தில் இருந்த ஒரு சிவாலயம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தானமொன்றினைப் பதிவுசெய்யும் ஆவணமாக வரலாற்றாய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. அத்துடன் இராஜராஜனின் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அதாவது கி.பி.993க்கு முன்பாகவே ஈழமண்டலத்தைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்பதனை உறுதி செய்யும் ஆவணமாகவும் இச்சாசனம் கருதப்படுகிறது. இராஜராஜனின் மெய்க்கீர்த்தியைப் போன்றே முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பேசும் இரு மெய்க்கீர்த்திகள் திருகோணமலை நகரப் பகுதியில் கிடைக்கப்பெற்றன. இவ்விரு கல்வெட்டுகளும் திருகோணமலையில் புராதானமாக இருந்த கோயில் ஒன்றில் இருந்த தூண்கள் பின்னர் போர்த்துக்கீசரால் தகர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்ததாகக் கருதப்படுகிறது. இவற்றுள் ஒன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கட்டப்பட்ட போது அவ்வாலயத்தில் வைத்துக் கட்டப்பட்ட தூணாகும். இந்தத் தூணின் நான்கு பக்கங்களிலும் முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தூணின் ஒரு பகுதி பூச்சினால் மறைந்துவிட ஏனைய மூன்று பக்கங்களிலிருந்த வாசகங்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாசகங்களிலிருந்து வரலாற்றுரீதியான முக்கிய விடையங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஒரு ஆலயத்திற்கான நன்கொடைச் சாசனமாகக்கருதமுடியும். திரு.சோமாஸ்கந்த குருக்கள் உதவியுடன் திரு.நா.தம்பிராசா அவர்களின் முயற்சியினால் பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் செ.குணசிங்கம் ஆகியோரால் வாசிக்கப்பட்டு வீரகேசரி மூலம் 1972 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்ட இக்கல்வெட்டின் நான்காவது பக்கத்தை வாசிப்பதற்கான முயற்ச்சி 2004ஆம் ஆண்டில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. [] [] பேராசிரியர்களின் ஆய்வுக்கு உதவும் சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா மூன்றாவது சாசனம் ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியில் கோணேசர் கோவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தூண்கள் துறைமுக மேடை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டபோது 1836 ஆம் ஆண்டு பிரித்தானியக் கடற்படையில் பணியாற்றிய பிலண்ட் என்பவரால் கண்டறியப்பட்ட சாசனமாகும். இச்சாசனம் திருகோணமலை ஒஸ்ற்றென் வேர்க் கோட்டையில் உள்ள மூன்று தமிழ்ச் சாசனங்களில் ஒன்றாகும். துண்டமான இச்சாசனங்கள் கோட்டையிலுள்ள பீரங்கிகளின் அடித்தளமான மேடைகளில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் மூன்று சாசனங்களும் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட பொழுது பெறப்பட்டவையாகும். இச்சாசனங்களில் ஒன்று முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது. 1. பாக்கையும் நண்ணற் கரு முரண் மண்ணைக் கடக்கமும் 2. பொருகடல் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவர் 3. தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென் 4. னவர் வைத்த சுந்தர முடியும் இந்திர நாதமும் தென்டிரை 5. ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கெரளந் முறைமையிற் 6. சூடும் குலதநமாகிய பல புகழ் முடியும் செங்கதிர் மாலையும் 7. சங்கதிர் வெலைத் தொல் பெருங் காவல் பல பழந்தீவும 8. மாப் பொரு தண்டால் கொண்ட கொப்பரகெசரி மன்மான உடையார் 9. சிறி சோழ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு —-வது என்று வாசிக்கப்பட்ட சிதைந்த துண்டமான அச்சாசனம் திருகோணமலை வரலாற்றைக் குறித்து முக்கியமான தகவல்கள் எதனையும் வழங்காதபோதும் சோழர்களின் நிர்வாகத்தில் திருகோணமலை கொண்டிருந்த முக்கிய இடத்தினைத் தெரிவிப்பதாக உள்ளது. [] ஒஸ்றன்வேர்க் கல்வெட்டு என்று குறிப்பிடப்படும் இச்சாசனம் கங்கை, கடாரப் படையெடுப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிராதபடியால் இம் மெய்க்கீர்த்தி முதலாம் இராஜேந்திரனின் ஆரம்ப ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 1. இராஜராஜப் பெரும்பள்ளி திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் பெரியகுளம் பகுதி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும். இங்கு வெல்கம் விகாரை அமைந்திருக்கிறது. இன்றைய நாட்களில் வெல்கம் விகாரை ஒரு சிங்கள பௌத்தக் கோவிலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. எனினும் திருகோணமலைத் தமிழர் வரலாற்றில் அது ஒரு முக்கியத்துவம் பெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளி திராவிடக் கலைப்பாணியில் அமைந்த ஒரேயொரு ‘தமிழ் பௌத்த பள்ளியாகும்’. இதன் இன்னொரு பெயர் நாதனார் கோவில் என்பதாகும். சோழருடைய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராஜராஜப் பெரும் பள்ளி என சோழ ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இவ்விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்வகிக்கப்பட்டதோடு அதற்கு தானம் வழங்கியவர்களும் , அயலில் வாழ்ந்தவர்களும் பொலன்னறுவைக்கால தமிழ் பௌத்தர்கள் என்பதனை சாசன ஆதாரங்கள் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டு வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் எழுச்சியும், இலங்கையில் வீர சைவமத பிரிவினைச் சேர்ந்த மாகனின் ஆட்சியும் தமிழ் பௌத்தத்தின் சுவடுதெரியாமல் அழித்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் நாம் நிற்கிறோம். எனவே வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் நம் புருவத்தை உயர்த்தச் செய்பவையாக இருக்கின்றன. பௌத்தம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாகிப் போனதன் விளைவிது. எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் ‘தமிழ் பௌத்தம்’ பற்றிய ஆராய்வு அவசியமாகிறது. ‘தமிழ் பௌத்தம்’ பெளத்தம் (Buddhism, புத்த தருமம்) என்பது கிமு 566 - 486 இல் வட இந்தியாவில் தோன்றிய புத்தரின்  போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமய தத்துவமாகும். பெளத்தம் தற்போது உலகில் ஏறத்தாழ  350  மில்லியன்  மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய பெளத்தம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகிந்தர் (மகேந்திரரும்) மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளாலும் பௌத்தம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது.  பண்டைக்காலத்தில் பௌத்தமதம் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தபோது அது அரச ஆதரவைப் பெற்றிருந்ததோடு தமிழ் இலக்கியத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தி இருந்தது. அக்காலத்தில் தமிழ்பௌத்தர்களால் பல நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றில் மணிமேகலை   (மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார்),  வீரசோழியம் ( புத்தமித்திரனார்),  குண்டலகேசி ( நாதகுத்தனார் ),  சித்தாந்தத் தொகை , திருப்பதிகம்  , விம்பசார கதை என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.  தமிழ்நாட்டில் பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு மேற்குறித்த பௌத்த நூல்களில்  இலக்கியத்தில்  ஒன்றும் (மணிமேகலை), இலக்கணத்தில் ஒன்றும் (வீரசோழியம்) ஆக இரண்டு நூல்களே தற்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. தமிழ்நாட்டில் பௌத்த சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த கொள்கையைப் பரவச் செய்தனர். அவர்கள் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் ஆதரவுடன் விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும்(வழிபாட்டு இடம்)  நிறுவினர். இலவச மருத்துவம், இலவச கல்வி மற்றும் ஏழைகளுக்கு உணவு கொடுத்துதவுதல் ,அங்கவீனர்களுக்கு உதவுதல்  என்பவற்றுக்கூடாகவும் மக்களுக்கு மதபோதனைகளை எடுத்துச் சென்றனர். இதனால் சாதிப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களைப் பெருமளவில் கொண்டிருந்த தமிழ்நாட்டில் பௌத்தமதம் மிகவிரைவில் பிரபலமானது. இதன் செல்வாக்குப் பற்றிய விபரங்களை நாம் சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கூடியதாக இருக்கிறது. ‘தமிழ் பௌத்தம்’ எறக்குறைய கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. இதில் தமிழ் பௌத்த துறவி என்றவுடன் நம் கண்முன் வருபவர் கோவலன் மகள் மணிமேகலை. ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை காவியத்தின் தலைவி. கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். மணிமேகலை பூம்புகார்ப் பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய் கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலையின் 17ஆம் காதை சொல்கிறது. அத்துடன் சிறைக்கோட்டம் சென்று சோழ அரசன் ஆதரவுடன் அதனை அறக்கோட்டமாக மாற்றி சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்த செய்தியை மணிமேகலையின் 19ஆம் காதை உரைக்கிறது. இதுபோலவே தமிழ்த் தேரர்கள் நாட்டுமக்களுக்கு நன்மை புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால் ‘தமிழ் பௌத்தம்’ தமிழ்நாட்டில் நன்கு பரவியது. தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் ஆசீவகமதம் பின்னடைந்துவிட பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு இடையில் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்தது. இது கலகங்களாக மாறி அதனை அடக்க அரசன் தலையிட்ட செய்தியை மணிமேகலை இவ்வாறு பதிவு செய்கிறது. "ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்; பற்றா மாக்கள் தம்முட னாயினும், செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் " இதுபோலவே சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தரும், சிதம்பரத்தில் மாணிக்க வாசகரும் பௌத்தர்களுடன் வாதம் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கியதும், இலங்கைக்குத் துரத்தியதும் வரலாறு. கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரியரான அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். அதில் தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர். தமிழ் பௌத்த தேரர்கள் குறித்து நமக்குக் தற்போது கிடைக்கும் தகவல்கள் மிகச்சிறியளவிலேயே இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இளம் போதியார், அறவண அடிகள், மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், சங்கமித்திரர், நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த மகாதேரர், கணதாசர், வேணுதாசர், சுமதி ஜோதிபாலர், புத்தமித்திரர்,. போதி தருமர், ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்), தருமபால ஆசிரியர், ஆசாரிய தருமபாலர், மாக்கோதை தம்மபாலர், புத்தி நந்தி ,சாரி புத்தர், வச்சிரபோதி, பெருந்தேவனார், தீபங்கர தேரர், அநுருத்தர், மகாகாசபர், ஆனந்த தேரர், தம்மகீர்த்தீ, கவிராசராசர், காசப தேரர், புத்தாதித்தியர். இவர்களில் ஒருசிலரைத் தவிர்த்து பலருடைய வரலாறுகள் இன்று அறியக்கூடியதாக இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் பௌத்தத்தின் செல்வாக்கு குறைந்த பின்னால் தமிழ்த்தேரர்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம். ‘’ஆரம்ப நாட்களில் இலங்கையில் பௌத்தம் பரவ தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகளே குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அன்றைய நாட்களில் துறவு பூண்ட தமிழ் அறிஞர்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் இன்று சிங்கள பௌத்த சமயத்தை காண வாய்ப்பே இல்லாது போயிருக்கும்’’ என்ற சிங்கள வரலாற்றாய்வாளர் திரு.லயனல் சரத் அவர்களின் கூற்று தமிழர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. சங்கமித்திரர் மகாயான பௌத்த சமயக்கொள்கை கொண்ட இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது காலத்தில் இலங்கையில் கி.பி 302 முதல் கி.பி 315 வரை கோதாபயன் என்னும் அரசன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். இம்மன்னன் தேரவாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதனால் அதற்கு மாறான மகாயான பௌத்தமத பிக்குகளை சோழ நாட்டிற்கு துரத்திவிட்டான். இதையறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று தேரவாத பௌத்த மத பிக்குகளின் தலைவரான சங்கபாலன் என்பவருடன் அரசன் முன்னிலையில் வாதஞ் செய்து வெற்றி பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். இவ்விரு மாணாக்கரில் மகாசேனன் இவரிடத்தில் அன்பு கொண்டவனாகவும் , மூத்தவனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டியும் வந்தான். கோதாபயனின் மறைவின் பின் மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-333) அரசுகட்டில் ஏறினான். இவ்வாட்சி மாற்றத்தினால் உயிரச்சம் கொண்ட சங்கமித்திரர் சோழ நாட்டிற்கு திரும்பிச் சென்றார். ஜேட்டதிஸ்ஸன் மறைவின் பின்னர் அவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனுக்கு(கி.பி. 334-361) தமது கையினாலேயெ முடிசூட்டினார். அத்துடன் இலங்கையில் மீண்டும் தங்கி தமது மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார். இவர் மகாசேனன் மேல் கொண்டிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேரவாத பௌத்த மகாவிகாரையில் வாழ்ந்த பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிடவைத்தார். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த தேரவாத பிக்குகள் உணவு கிடைக்கப்பெறாமல் இலங்கையின் தென்பகுதிக்கு துரத்தப்ட்டனர். பின்னர் அந்த விகாரையை இடித்து தன் கொள்கையைச் சேர்ந்த பிக்குகள் வாழும் அபயகிரி விகாரையை புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருப்பதின்படி மேற்படி நிகழ்வுகளின் விளைவாக சங்கமித்திரரும், அவருக்குத் துணையாக இருந்தவர்களும் தேரவாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் ஒரு சூழ்ச்சி மூலம் கொல்லப்பட்டனர். இங்கு குறிப்பிடப்படும் மகாசேனனே இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்தவனாவான். இவன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவினான். ஆசாரிய புத்ததத்த மகாதேரர் சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகின்ற பௌத்த சமய ஆசாரியர் ஆவார். தாம் இயற்றிய நூல்களில் சோழ நாட்டையும் , காவிரிப்பூம்பட்டினத்தையும், பூதமங்கலத்தையும் இனிமையாக புகழ்ந்து பாடியிருக்கும் இவர் இயற்றிய நூல்கள். 1.மதுராத்தவிலாசினீ 2.அபிதம்மாவதாரம் 3.வினயவினிச்சயம் 4.உத்தரவினிச்சயம் 5.ரூபாரூபவிபாகம் 6.ஜினாலங்காரம் சிலகாலம் இலங்கையின் மகாவிகாரையில் தங்கி இருந்த மகாதேரர் இலங்கை அரசன் மகாநாமன் (கி.பி.409-431) காலத்தவர் என மகாவம்சம் பதிவு செய்கிறது. புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்தசங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆசாரிய தருமபாலர் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்த ஆசாரிய தருமபாலர் இலங்கை வந்து அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு உரை எழுதியிருக்கிறார். இவ்வுரை பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் , தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து எழுதப்பட்டதாகும். அநுருத்தர் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த தேரர். மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர். ‘அபிதம்மாத்த சங்கிரகம்’, ‘பரமார்த்த வினிச்சயம்’, ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்களை இயற்றியிருக்கின்றார். இவர் எழுதிய அபிதம்மாத்த சங்கிரகம் என்ற பாளி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும் படித்துப் பேணப்படும் பிரபலமான பௌத்த காவியமாகும். தம்மகீர்த்தீ இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்ட இரண்டாம் பராக்கிரமபாகு ஆதரித்த தம்மகீர்த்தீ ‘தம்பராட்டா’ என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். தாட்டா வம்சம் என்னும் நூலினை பாளி மொழியில் இயற்றிய இவர் காலத்தில் இரண்டாம் பராக்கிரமபாகு சோழநாட்டிலிருந்த பௌத்த பிக்குகளை இலங்கைக்கு வரவழைத்து ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இதுவரை நாம் பார்த்துவந்த வரலாற்று எடுத்துக்காட்டுகள் இலங்கையில் பௌத்தமத ஆரம்பகால வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது என்பதனை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை சோழர் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னரும் திருகோணமலையில் கணிசமான அளவில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில் மயிலன்குளம் என்னுமிடத்தில் அடையாளம் காணப்பட்ட தமிழ்ச் சாசனம் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இதுபோலவே பண்டைய நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சமூகப்பிரிவுகளைக் கொண்டிருந்த வளர்ச்சிடைந்த பட்டினங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்று ஐம்பொழில் பட்டினம். ஐம்பொழில் பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது. இந்த விகாரையை அமைப்பித்த (உ)லோகநாதன் என்னும் தண்டநாயகன்(சேனாதிபதி) அதன் காவலராகவும், அறங்காவலராகவும் வேளைக்காறரை நியமித்த தகவலை மேற்படிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. இராஜராஜப் பெரும் பள்ளி இந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளி தொடர்பில் ஆராயவேண்டும். இங்கு 11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. [] [] [] [] [] [] [] [] [] [] திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை சோழர் காலத்து(14) தானசாசனங்கள். இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர், அவரது ஊர்ப் பெயர் ,பதவி அல்லது விருதுப் பெயர் அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தானகாரர்களில் சிலர் சோழர்களின் நிர்வாக அதிகாரிகள். அவ்வாறு தானம் வழங்கியவர்களில் சிலர் 1. ஆதித்தப்பேரரையன் 2. தறியணன் பூவண தேவன் 3. அமுதன் சாத்தன் 4. கண்டன் யக்கன் ஐவரின் 5. பாத்தரவித ராமன் போன்றவை தானசாசனங்களில் தெளிவாகத் தெரியும் பெயர்களாகும். இவற்றுடன் இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்திகள் பலவும் இச்சாசனங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்தப்பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் , 8 பசுக்களையும் மற்றும் பல பொருட்களையும் (சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவு செய்கிறது. ஸ்ரீ பலவன் புதுக்கு டி யான் ஆதித்தப் பேரரையன் ஸ்தவ்யா றாமய னா மானாவதிளானா ட்டு வெல்க வேரான இ ராஜராஜ பெரும்ளிக்கு வைத்த னொந்தா வி ளக்கு 1 பசு 8 4 இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி. புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது. எனவே திருகோணமலையில் தமிழர்களின் வரலாறு தொடர்பான தேடல்களில் வெல்காமப்பள்ளி என்கின்ற வெல்கம் விகாரை தொடர்பான ஆதாரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பெரியகுளத்து இராஜராஜ பெரும்பள்ளி ஒரு பௌத்த கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் அது சோழர் ஆட்சிக்காலத்தில் புனர்நிர்மாணம் பெற்றது என்பதையும் அதன் கட்டுமானம் திராவிட கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இராஜராஜப் பெரும்பள்ளியில் கிடைக்கப்பெற்ற சாசனங்கள் அனைத்தும் தமிழ்ச் சாசனங்கள் என்பதோடு தமிழர்களே இவ்விகாரைக்கு தானங்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் சிலர் சோழர் நிர்வாகத்தில் பதவி பெற்றிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இராஜராஜப் பெரும்பள்ளிச் சாசனங்கள் தொடர்பில் இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளரும், கல்வெட்டியலாளருமான பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களின் கீழ்வரும் கருத்து அதிக கவனம்பெறுவதாக இருக்கிறது. இந்தத் தமிழ் விகாரையின் அடித்தளப் படைகளின் வேலைப்பாடுகள் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகியவற்றில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகும். அவை பொலன்னறுவையிற் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும். தென்னிந்தியாவிலே பல பௌத்தப் பள்ளிகள் இருந்தபோதும் இதுவரை தமிழ்நாட்டில் அவற்றைச் சேர்ந்த தொல்பொருட்கள் கிடைக்காத படியால் பெரியகுளத்திலே கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களின் கவனத்திற்கும் உரியதாகும். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.