[] 1. Cover 2. Table of contents திராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 திராவிட வாசிப்பு - அக்டோபர் 2019   திராவிட எழுத்தாளர்கள்   dravidavaasippu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CCO கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - -   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/dravida_vaasippu_oct_2019} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/dravida_vaasippu_oct_2019 This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை வணக்கம். திராவிட வாசிப்பு மின்னிதழின் இரண்டாம் மாத இதழ் இது. தமிழக/ இந்திய வரலாற்றை புரட்டிப்போடும் கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், “கீழடி காட்டும் பாதை” என்னும் கட்டுரை இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. குழந்தைகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர் இனியன் அவர்கள் எழுதும் “குழந்தைகளுடன் நான்” என்ற தொடர் இந்த இதழில் இருந்து தொடங்குகிறது. தொழில்நுட்ப பக்கத்தில், அசோக்குமார் அவர்கள் எழுதிய “முப்பரிணாம அச்சிடுதல்” குறித்த கட்டுரையும், மருத்துவர். நந்தினிஸ்ரீ எழுதிய, “விஞ்ஞானம் கட்டுடைக்கும் செவ்வாய் தோஷம் என்னும் புரட்டு” எனும் கட்டுரையும் வெளியாகி இருக்கிறது. கனிமொழி அவர்கள் எழுதிய “பெண்களின் தாய் - பெரியார்” என்ற கட்டுரையும், புத்தக அறிமுகங்களாக, பேரறிஞர் அண்ணாவின் “பொன்னொளி” யும், பேராசிரியர். சுப வீரபாண்டியன் அவர்களின் “திராவிடம் வளர்த்த தமிழ்” ஆகிய புத்தகங்களை குறித்த கட்டுரைகளும் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது. வாசகர்கள் தங்கள் மேலான கருத்துகளை கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  கட்டுரைகளை தந்த தோழர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்து தந்த தோழர். ஸ்ரீபாலாஜிக்கும் மனமார்ந்த நன்றிகள்.   - திராவிட வாசிப்பு குழுவினர் கீழடி காட்டும் பாதை கீழடி என்பது தமிழர்கள் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் ஒரு சொல்! தமிழர்களுக்கு தங்களது தொன்மை மீது ஒரு தேடல் இருந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நாம் தொன்மையானவர்கள் என்பது நம் ஜீன் குறிப்புகளில் இருப்பதை கூட நவீன அறிவியல் நமக்கு இன்று காட்டத்தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில், கீழடியின் நான்காம் ஆண்டு அகழ்வாராய்ச்சி வெளியாகி இருக்கிறது. அது, தமிழர்களின் தொன்மையை மட்டும் அல்ல, காலம் காலமாக இங்கே திணிக்கப்பட்டுவரும், “இந்தியா என்பது வேத நாகரீகம்” என்கிற கற்பிதத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. சிந்து வெளி நாகரீகத்தின் அகழ்வாராய்ச்சி முடிவுகள் முதன்முதலில் திராவிட நாகரீகம் என்ற ஒன்றை உலகிற்கு காட்டியது. சிந்துவெளி நாகரீகம் காட்டும் நகர் புற வாழ்விற்கு ஓப்பனா இலக்கிய சான்றுகள் கிடைப்பது நம் தமிழ் சங்க கால இலக்கியத்தில் தான். சங்ககால இலக்கியங்கள், நகர் புற வாழ்வை பேசியும், கொண்டாடியும் இருக்கிறது. ஆக, சிந்துவெளிக்கும் நமக்குமான தொடர்பை ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள் பேசினார்கள். சிந்துவெளியில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள், சிந்துவெளி விட்ட இடமும், சங்கத்தமிழ் தொட்ட இடமும் ஒன்று என சொல்கிறார். அதாவது, சங்க காலத்திற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் இருக்கும் தொடர்பு, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறார். இந்த சூழலில், கீழடி ஆய்வுகள் மிக முக்கியாக இருப்பதையும், சிந்து வெளி நாகரீகத்திடன் அது நெருங்கிய தொடர்பில் இருப்பதையும்புரிந்துக்கொள்ளலாம். சிந்துவெளி நாகரீகத்தில், நமக்கு தெரியாத ஒன்றாக இருப்பது, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி என்ன என்பது தான். ஆனால், இன்று கீழடியின் பானைகளில் இருக்கும் கீறல்கள் சிந்து வெளி எழுத்துக்களுடன் ஒத்துப் போவதை கண்டு பிடித்து இருக்கிறார்கள். கீழடி வெளிக்கொணர்ந்து இருக்கும், இன்னும் ஒரு முக்கியமான விசயம், தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்று இருந்தார்கள் என்பதை தான். கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் பொருட்களில் இருக்கும்எழுத்துகள் தமிழ் பிராமி எனச்சொல்லப்படும் தமிழியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கிமு. மூன்றாம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில்நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களைவைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச்சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53%) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்தசமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்." என்கிறது பிபிசி செய்திக்குறிப்பு. [] கீழடியில் பானைக்குவியல்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில்தொங்கவிடும் கருங்கல், பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள், பல்வேறு மதிப்புமிக்ககற்களால் ஆன வளையல்கள், பல விளையாட்டுப் பொருட்கள்குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதன் மூலம் கீழடி, ஒரு பண்பாட்டு முதிர்ச்சிப்பெற்ற மக்கள் வாழ்ந்த நகரப்பகுதியாக இருப்பதையும், சங்ககால பாடல்கள் காட்டும் வாழ்வியலை இவை பிரதிபலிப்பதையும் வரலாற்று ஆர்வலர்களும், தமிழறிஞர்களும்சுட்டிக்காட்டுகின்றனர். கீழடி, வைகை நதிக்கரையில் இருப்பதாலும், மதுரைக்கு அருகில் இருப்பதாலும் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. மதுரை சங்க இலக்கியத்தில் அதிகமாக வர்ணிக்கப்பட்ட ஒரு நகரம். இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இங்கு கிடைத்த பிராமி எழுத்துகளை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச்செல்லலாம் எனக் கருதப்படுகிறது.  [] சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது நகர நாகரீகம் கீழடி தான் என்பதால்அது மிக முக்கியமாக கருதப்படுகிறது. கீழடி மொத்தம் 100 ஏக்கர்களை கொண்ட அகழாய்வுப்பகுதி, அதில் வெறும் மூன்று ஏக்கர்களே இதுவரை அகழாய்வுசெய்யப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள பகுதிகள் அகழாய்வு செய்யப்படும் போது, நமக்கு வரலாறு இன்னும்நெருக்கப்படும். தமிழ்நாட்டில், கடந்த எழுபது ஆண்டுகளில் விரிவான அகழாய்வுகள் எதுவுமே நடைப்பெறவில்லை, ஆகவே கீழடியும் அதைத்தொடர்ந்து நடக்கும் அகழாய்வுகளும் தான் தொல்தமிழர் வாழ்ந்த காலத்தை சரியாககாட்டக்கூடியதாக இருக்கும் என்கிறார், கீழடியை முதலில் அகழாய்வு செய்த தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத்ராமகிருஷ்ணன். மத்திய தொல்லியல் துறை மொத்தம் 5 Zone களை வைத்திருக்கிறது. அதில் 4 Zone கள் வட இந்தியாவிலும், மொத்த தென்னிந்தியாவிற்கும் ஒரே ஒரு zone ஐயுமே வைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா மேல் அவர்களுக்கு இருக்கும்ஆர்வம் எத்தகையது என்பதையே இது காட்டுகிறது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். மேலும்தென்னிந்தியாவில், தமிழகத்தில் வெறும் 10 சதவிகிதத்திற்கு கீழான ஆய்வுகளே நடைப்பெற்று இருக்கிறது என்கிறார். கீழடியின் முக்கியத்துவத்தை இதன் மூலமே நாம் உணர்ந்துக்கொள்ளலாம்! [] கீழடி காட்டும் பாதை: இந்திய வரலாறை வேத நாகரீகத்தில் இருந்து தொடங்குபவர்கள் பலர். அதை முதன்முதலில் உடைத்தது சிந்துவெளிநாகரீகத்தின் கண்டுபிடிப்பு. இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்கு முன்னாலேயே ஒரு மிகப்பெரிய நாகரீகம்இருந்ததாக சிந்துசமவெளி ஆய்வுகள் காட்டியது. அதன் தொடர்ச்சியாக இப்போது கீழடியில் கிடைக்கும் ஆய்வுமுடிவுகள், சிந்துவெளி ஆய்வுடன் நெருங்கிப்போவது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் வரலாறை தெற்கில்இருந்து எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லுவார்கள். கீழடி இந்திய வரலாறை புரட்டிப்போட வந்திருக்கும்முக்கிய சான்றாக இருக்கப்போவது உறுதி. தமிழ்ச்சமூகம், வரலாற்று ஆய்வின் நோக்கிலும், அறிவியல் ஆய்வின்நோக்கிலும் தனது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையையும் கீழடி நமக்கு உணர்த்தி இருக்கிறது. பெண்களின் தாய் - பெரியார் !! – Kanimozhi M.V தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் குரல் பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒலிக்கும் புரட்சிக் குரல். 1920 களில் மிகத் தீவிரமாக பெண்ணிய விடுதலைக் குறித்து பேசிய தந்தை பெரியாரின் கருத்துகளை இன்றளவும் உள்வாங்கி நடைமுறைப்படுத்திடுவதில் பெரியாரிய தோழர்களுக்கே கூடி சங்கடங்கள் உண்டு.  வெறும் கல்வி அதைச்சார்ந்த வேலை என்ற மேலோட்டமான நிலையில் நின்று பெண் விடுதலை குறித்து பேசியவர் அல்ல பெரியார். பெண்ணாகவே தன்னை உணர்ந்து பெண் அடிமைக்கான காரணிகளை எந்த விருப்பு வெறுப்பும் இன்றி ஆராய்ந்தவர். வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் , ஆணைப் போலவே பெண்ணுக்கு வீரம் , வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும் என்று கூறியவர் . பெண் என்றாலே மென்மை - அழகு - மேன்மை - மலர் - நிலவு- என்று கூறிவந்த புலவர்கள் நடுவில் ; தாய்மையே பெண்ணின் முழுமையான பெண்மையை வெளிப்படுத்தும் என்ற சமூகத்தில் - பெண் கர்ப்பத்தடை பற்றி சிந்தித்தவர் பெரியார். பொதுவாக பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும் , நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பத் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும் குலைந்தும் போகாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் விடுதலைக்கும் , சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால் , சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளை பெறுவது என்பதை அடியோடு நிறுத்தவிட வேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்.  எப்படி பிள்ளைப்பேறு பெண்களின் விடுதலைக்கு தடை என்பதை விளக்கிடும் போது ; “ஒரு ஸ்திரி புருஷனாலோ வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும்போது,”நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின்மேல் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுவேன் ; அல்லது ஒரு ஆற்றிலாவது, குளத்திலாவது இறங்கிவிடுவேன்; இந்தக் கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு அரை நிமிஷம் இருக்க மாட்டேன். ஆனால் , இந்தக் குழந்தைகளையும், குஞ்சுகளையும் நான் எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்" என்றே சொல்லுகின்றாள். ஆகவே,  அவர்களது சுயேச்சையையும் , விடுதலையையும் கெடுப்பது இந்தக் குழந்தைகள் , குஞ்சுகள் என்பவைகளேயாகும் ." இந்த கூற்றை பெரியாரைத் தவிர்த்து சமகாலத்தில் யாரும் கூறியவர்கள் இல்லை.   வெறும் கருத்துகளை பகிர்வதோடு தந்தை பெரியார் பெண்ணிய விடுதலையின் செயற்பாட்டைக் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் நடத்திய மாநாடுகளில் பல்வேறு தீர்மானங்களை பெண் விடுதலைக்கு ஆதரவாக கொணர்கின்றார். முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானத்தில் ஒன்று தான் பெண்களுக்கான சொத்துரிமை . அந்த தீர்மானத்தை தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1989 அன்று சட்டமாக தமிழ்நாட்டில் கொண்டு வந்தார். பின் 2005 ஆம் ஆண்டு இந்திய முழுமைக்கும் பெண்களுக்கான சொத்துரிமை சட்டப்படி நிறைவேற்றப்பட்டது. அதே போன்று பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி ஒழித்துக் காட்டியவர் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள். அந்த துணிச்சலை அரசியல் ரீதியாக அவருக்கு கொடுத்தது தந்தை பெரியார் என்பதை வரலாறு அறிந்த அனைவருமே ஏற்றுக்கொள்ளவார்கள்.  “மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்தே அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப்பற்றி நான் கலவலைப்படப் போவதில்லை . தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும்” என்று கூறியவர் காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர். “அப்படியானால், இனி அந்தப் புனிதமான வேலையை உங்கள் சமூகப் பெண்களை வைத்துச் செய்து கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்த முத்துலட்சுமி அவர்களை இயக்கியது பெரியாரின் பெண் விடுதலை கோட்பாடும் அரசியலும். இன்றைக்கு இணையத்தில் பெரியாரிய பெண்கள் கடும் பாலியல் வசவுகளுக்கு உள்ளாக நேரும்போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ,கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்காமல் பயணிக்க கூடிய தெம்பும் தன்னம்பிக்கையும் கூட பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் உருவாக்கித் தந்தவை என்பதை மறுக்க இயலாது.  தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்களை சாடியிருப்பதாக இன்று பரப்பப்படும் கருத்து அவரின் அளவற்ற மனிதநேய சிந்தனையில் இருந்து எழுந்தவை தான். இரண்டு முக்கிய காரணங்களுக்காக தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்களின் சில பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துகின்றார். ஒன்று தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் பக்தியை பரப்ப -மூட நம்பிக்கைகளை பரப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்றும் இரண்டு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் விதத்தில் இருக்க கூடிய தன்மையையும் அவர் சாடுகின்றார்.  "நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனைகளை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளையும் ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டும் அல்லவா என்று கேள்வி எழுப்பியவர்.  ஏனெனில் இலக்கியங்கள் என்பன மக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் ஒரு முக்கிய கருவி. அந்த கருவியானது பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் போது அது பெண்களை நிரந்தர அடிமைகளாக கருதும் பாங்கை சமூகத்தில் விதைத்து விடுகின்றது. எந்த சமூகம் பெண் அடிமையை வலியுறுத்துகின்றதோ அங்கே சமூக அழிவு ஏற்படுகின்றது என்பதை "பெண் அடிமை என்பது சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் , நாள்தோறும் தேய்ந்துகொண்டே வருகிறது என்று 1935 இல் குடியரசில் எழுதியவர் அய்யா என்றால் அவரின் பெண் விடுதலை கருத்துகள் எந்த அளவிற்கு முற்போக்கானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.  பெரியாரின் கருத்துகளில் மிக முக்கியமானது திருமணத்தை கிரிமினல் குற்றம் என்று சொன்ன கருத்து தான். இன்றளவும் பெரியாரிய தோழர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக அது இருக்கிறது என்றாலும் காலம் பெரியாரிய பெண்களை அந்த கருத்தை உள்வாங்கி செயல்படுத்த தொடங்கி உள்ளது.  வைதீக முறை திருமணத்தில் பெண் ஆரிய முறைப்படி பொருளாக பார்க்கப்படுகின்றாள் என்ற காரணத்திற்காகவும் சுயமரியாதை திருமணத்தை தந்தை பெரியார் உருவாக்கினார்.பின் நாளில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்களும் அடிமைகளாக குழந்தை குடும்பம் என்ற வட்டத்தை தாண்டி வெளிவர இயலாமல் இருப்பதை பார்த்துதான் “திருமணம் தேவை இல்லை நண்பர்களாக இருக்கட்டும்”என்கிறார். மேம்போக்காக பார்த்தால் இது எப்படி சாத்தியப்படும் என்று தோன்றலாம். இது எப்படி சரி? என்று கூட தோன்றலாம் ; ஆனால் குடும்பங்கள் என்பது வன்முறை களங்களாக பெண்களை வாட்டி வதைப்பதை புரிந்து கொள்ளும்போது தந்தை பெரியாரின் கருத்துகளின் உண்மை புரியும்.  ஒரு காலத்தில் அடுப்புகள் வெடித்துக் கொண்டு பெண்களை கருக்கியது என்றால் இன்று வேறு விதமாக பெண்கள் குடும்பங்களில் வேதனைப்படுகின்றனர். வீட்டு வேலைகள், வீட்டின் உள் நடக்கும் அரசியல்கள் என இதை சமாளிப்பதில் பெண்களின் நேரமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரை பல பெண் தலைவர்கள் உருவாகி இருக்கின்றார்கள். வளர்ந்த நாடான  அமெரிக்காவில் கூட பெண் குடியரசு தலைவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. மறைந்த நோபல் பரிசு பெற்ற கென்யா நாட்டைச் சேர்ந்த வாங்கரி மாத்தை (Wangari Mathai) இதைக் கூறும்போது   “The Higher you go, fewer women there are”. என்பார் ; ஆனால் இதில் முக்கியமான ஒரு செய்தியை நாம் பார்க்க தவறக்கூடாது. இந்திய அரசியலில் சாதித்த பெண் தலைவர்களில் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் இல்லாதவர்கள், அல்லது குடும்ப அமைப்பில் இருந்து வெளிவந்தவர்கள். இது போகிற போக்கில் பதியப்படும் கருத்து அல்ல என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். இப்போது தந்தை பெரியாரின் திருமணம் கிரிமினல் குற்றம் என்ற கருத்தை பொறுத்திப் பார்த்தால் அதன்  நேர்மை விளங்கும். கற்பு என்று சொல்லும் போது கூட பெரியார் அந்த சொல்லையே பகுபதமாக - பகாபதமாக கொண்டு பொருள் விளக்க முற்படுகிறார். கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால் , கல் என்பதிலிருந்து வந்ததாகவும் , அதவாது படி- படிப்பு என்பதுபோல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும், “கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை!” என்கிற படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை ; அதாவது நாணயம் , சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் என்கின்றதான கருத்துகள் கொண்டதாக இருக்கிறது. அதைப் பகாப்பதமாக வைத்துப் பார்த்தால்,மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை . நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருளை பார்த்தால் அறிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன . கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பத்தப்பட்டது என்பதற்கு தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும், அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்களே காணக் கிடைக்கின்றன. அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு , கெடாதது, மாசற்றது என்பதாகக் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது. அதாவது சேஸ்டிடி (Chastity )என்கிற ஆங்கில வார்த்தைப்படி virginity என்பதே பொருள். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ , பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே  - எவ்வித ஆண் , பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகிப்படுத்தி இருக்கிறது என்பதைக் காணலாம். ஆனால் ஆரிய பாஷையில் மட்டுமே பெண் அடிமை என்ற கருத்தில் நுழைக்கப்பெற்று உள்ளது என்று கற்பு எனும் சொல் எப்படி கையாளப்படுகின்றது என்று மிக விரிவாக தந்தை பெரியார் விளக்கியிருகிப்பார்கள். அதனால் தான் “கற்பிற்காக மனதுள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டும், காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும்”என வலியுறுத்தினார். Betrand Rusell அவர்களின் “Marriages and Morals” என்ற நூல் எவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கியதா அதே போன்ற அதிர்வுகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பெண்ணிய சிந்தனையாளர் - சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள். அந்த அதிர்வுகளை சரியாக அடையாளம் கண்டுகொண்டு விடுதலை பெற்ற பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு 1938 ஆம் ஆண்டு பெரியார் என்ற பட்டம் கொடுத்து சிறப்பித்தனர் என்பது வரலாறு.  பெண்களின் விடுதலைக்கு சமையல் பொறுப்பு  எவ்வளவு தடையாக இருக்கின்றது என்பதை எடுத்துக்கூற வந்த பெரியார் பொது சமையற்கூடம் பற்றி பேசியுள்ளார். பொது சமையற்கூடம் என்பது பெண்களை சமையல் பொறுப்புகளில் இருந்தும் - சமூகத்தை ஜாதியப் பிடியில் இருந்தும் விடுக்கின்றது என்பதை மறுக்க இயலாது. அதனால் தான் வீடுகளில் சமையல் அறைகள் இல்லாது இரண்டு - மூன்று தெருக்களுக்கு ஒரு சமையற் கூடம் என்பதை வலியுறுத்தினார். பெரியாரின் Radical Feminism பற்றி புரிந்து கொள்ள என்னும் மனப் பக்குவம் நம்மில் பலருக்கு இல்லை . குறிப்பாக ஆண்களுக்கு குடும்ப அமைப்பு ஏற்படுத்தி தருகின்ற அதிகாரத்தை ஆண்கள் விட்டுவிட தயாராக இல்லை என்பதையும் காண்கின்றோம். அதனால் தான் பெண் விடுதலையில் ஆண்கள் கவலை உள்ளவர்கள் போல் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.  மேலும்  உண்மையான பெண் விடுதலை என்பது ஆண்மை என்ற தத்துவத்தின் அழிவிலேயே உள்ளது. அந்த ஆண்மை உலகில் உள்ளவரை பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றார். அன்னை கூட தன் மகளுக்கு குடும்ப அமைப்பின் வன்முறையை இவ்வளவு தெளிவாக எடுத்துக்கூறி - திருமணத்தை மறுக்க கூறி - குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் இருந்து விடுதலை பெறக்கூறி பேசுவது இல்லை. அவர்கள் அத்துணை இடர்களை குடும்பத்தில் சந்தித்திருந்தாலும் அதனை கேள்வி கேட்க துணியாது- குடும்ப அமைப்பில் இதை தாங்கிக்கொண்டே பயணிக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனர் . ஆனால் பெரியார் ஒருவர் மட்டும்தான் புரட்டிப்போடு உன்னை அடிமைப்படுத்தும் அமைப்புகளை என்று துணிச்சல் தருகின்றார். எனவே தான் பெரியார் பெண்களின் தாய் !! ஆண்மையை உடைத்து - குடும்ப அமைப்பை தகர்க்க வேண்டிய தேவை ; உடைத்து பேச வேண்டிய தேவை இன்று உள்ளது. அதை நோக்கி பயணிப்போம்.  குழந்தைகளுடன் நான் இனியன், குழந்தைகள் செயல்பாட்டாளர் விளையாட்டுக்களை தேடி துவங்கியப் பயணம். அவற்றை ஆவணப் படுத்தலாமே என்னும் புள்ளியில் வந்து சேர்ந்திருந்தாலும், எந்தெந்தப் புள்ளிகளையெல்லாம் இணைத்து செய்யலாம் என்கின்ற தெளிவு கிடைத்த போது விளையாட்டுகளை புரிந்துகொள்ள குழந்தைகளுடனான பயணங்கள் தேவைப்பட்டது. அப்படியான பயண அனுபங்களின் வாயிலாக கிடைத்த உணர்வுகளை பகிர்வதற்கான தளம் தான் “குழந்தைகளுடன் நான்” என்னும் தொடர் என நினைக்கிறன். இந்த தலைப்பு தான் இதை ஒப்புக் கொள்வதற்கான முதல் காரணமாக அமைந்தது. இரண்டாவதாக நண்பர் ராஜராஜன். பல புரிதல்கள் மற்றும் தெளிவான உரையாடல்களுக்கு பிறகு எழுதத் துவங்கியிருக்கிறேன். அனைத்து விதமான உணர்வுகளையும் உள்ளடக்கியே அமையும் என்ற நம்பிக்கையில். முதல் பயணம். நண்பன் குமார் ஷா மற்றும் நண்பர்கள் அவர்களது அறம் அமைப்பு மூலம் என்னும் ஒருங்கிணைத்த நிகழ்வுதான் அது. சென்னைக்கு அருகில் திருப்போரூர் கடந்து வள்ளுவர் காலனி என நினைக்கிறன் இடத்தின் பெயர். அங்கு சுமார் 7௦ க்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்பை கொண்ட சிறுகிராமம். 100 – 150 குழந்தைகள் இருந்தனர். முழுநாளும் அவர்களுடன் இருக்கும் சூழல். நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் அறிமுகமாகினர் அங்கு. காலை சென்றது முதல் குழந்தைகள் மட்டுமின்றி ஊர் மக்கள் அனைவரிடமும் தொடர்ந்து விளையாடிக் கொண்டும் ஆட்டம் பாட்டம் என குதூகலமான நிகழ்வுதான். ஆனால் நிகழ்வு முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆனப் பிறகும் நினைவுகளில் ஓடிகொண்டிருக்கும் விசையம் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது கல்வி பற்றியச் சிந்தனைகள் தான். அங்கு நண்பர்கள் சிலர் அப்போதைய காலத்தில் ஒருவருடத்திற்கும் மேலாக ஓர் குடிசை அமைத்து குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுத்துக் கொண்டிருகின்றனர். அப்படி வகுப்பு எடுத்த நண்பர் கூறியது “இங்கே குழந்தைகளுக்கு ஆறுமாதமாக முயற்சி செய்து தமிழ் உயிரெழுத்து கற்றுக் கொடுக்க முடியவில்லை. குடிலுக்கு தினமும் 6௦ குழந்தைகள் வரை வருகிறார்கள் அவர்களில் 2 பேருக்கு மட்டுமே இப்போது உயிரெழுத்து ஓரளவு அடையாளம் கண்டுள்ளனர். அவர்களும் ஆங்கில எழுத்து அடையாளம் சுத்தமாக வருவதில்லை. தற்போதுதான் நான்கு ஆங்கில எழுத்து பயிற்சி ஆகியிருக்கிறாரகள். முயற்சி செய்து கொண்டே இருந்தால் வந்துவிடலாம்” என்றார். “60 குழந்தைகள் வருகிறார்களே எப்படி சமாளிகிறீங்க? அவர்கள் எப்படி இங்கு வந்து அமர்ந்திருகிறார்கள்?” என்றேன். “தினமும் மாலை தீனியும் வாரத்தில் மூன்று நாட்கள் உணவும் தருகிறோம். அதனால் வருவார்வார்கள் நிறைய விளையாடுவார்கள், கதைகள் பேசுவார்கள். ஆனால் படிப்பு என்னும் வரும் போது ஒருங்கிணைப்பது மிகச் சிரமமான ஒன்றாகத்தான் இருக்கிறது” என்றார். இந்த உரையாடல் பலவிசயங்களை உணர்த்தியது பிந்தைய நாட்களின் பயணங்களில். இதே போன்ற சிலப் பகுதிகளில் இருளர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மற்றும் மாலைநேர வகுப்புகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அனைவரிடமும் கல்விப் போராட்டம் இருக்கிறது என உணர்ந்திருக்கிறேன். தமிழினத்தின் பூர்வக் குடிகளில் முதன்மையானவர்களில் ஒருவர்களான இருளர் குழந்தைகளின் கல்வி என்பது ஏன் இத்தனை சிரமமானதாக இருக்கிறது? இந்தக் குழந்தைகளின் கல்விப் போராட்டம் என்பது கற்பதையும் கற்பித்தலையும் ஒன்றிணைந்த ஒன்றாகவே இருக்கிறது அது ஏன்? அதில் இவர்களுக்கு முதன்மையான விசையமாக அமைந்திருப்பது இவர்களது சமூகப் படிநிலை, சமூக அங்கீகாரம் மற்றும் இவர்களது நிலையான நிரந்தமின்மை. அடுத்தபடியாக இருமாநில எல்லையில் இருக்கும் இதுபோன்ற மக்களுக்கு உண்டான மொழிக் குழப்பங்கள் (இப்பிரச்சனை இவர்களுக்கு மட்டுமானது அல்ல, இருமாநில எல்லைப் பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் உரித்தான ஒன்றுதான்). எவ்வித நிரந்தர வருமானமும், நிலையான இருப்பிடமும், சாதிச் சான்றிதழும் இல்லாத இவர்களது வீட்டு குழந்தைகள் பற்றிய பிம்பமும் சமூகப் புரிதல்களும் எப்படியானதாக இருக்கிறது என்பதற்கான சிறு உதராணமாக தாரா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் குழந்தைகளுக்கான இருளர் பற்றியப் புத்தகம். புத்தகம் முழுக்க படக் கதைகள் தான். அதில் பள்ளிக்கு சேரும் இருளர் குழந்தை ஒருவரை ஆசிரியர் முதல் சக மாணர்வர்கள் வரை குழந்தையின் தோற்றம் முதல் இயலாமை என அனைத்தையும் வைத்து வகுப்பு முழுக்க மட்டம்தட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒருநாள் வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட, அதை அந்தக் குழந்தை கையால் பிடித்து வெளியே கொண்டு போய் விட்டு வந்தப் பிறகு ஆசிரியர்கள் முதல் சகக் குழந்தைகள் வரை அனைவரும் அக்குழந்தையை ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டி தொடர்ந்து படிப்பது போல் செல்லும் அந்தப் படக் கதை புத்தகம். மேம்போக்காக பார்த்தால் இந்தக் கதை சரிதானே அதான் அனைவரும் ஏற்றுக் கொண்டார்களே என்பது போல் தோன்றும். ஆனால், அக்குழந்தை வகுப்பிற்குள் நுழைந்த உடன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகக் காரணிகள் என்ன? என்பதை ஆராயும் போதுதான் நமக்கு புலப்படும் என்னவாக இருக்கிறது இந்தச் சமூகம் என. மேலும் நிரந்தரக் குடியிருப்பு மற்றும் வருமானம், சாதிச் சான்றிதழ்கள் இல்லாததால் வருமானத்திற்கான பயணங்கள் மட்டுமே இவர்களது வாழ்வாக இருப்பதால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லும் இவர்களால் அவர்களுக்கான கல்வி என்பதை சிந்திக்கவே முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அவற்றையும் மீறி பள்ளிகளில் வந்தமரும் குழந்தைகளுக்கான கல்வியாக இந்த அமைப்பு இருக்கிறதா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறி மட்டுமே. இவற்றையெல்லாம் மீறி சில ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் அமைப்புகள் மூலமாக பல முன்னெடுப்புகள் நடந்த வண்ணமே இருந்துக் கொண்டிருந்தாலும் இந்தக் குழந்தைகளையும் கணக்கில் வைத்து இவர்களுக்குமான கல்வியாகதான் நமது கல்வியியல் அமைப்பு செயல்படுகிறதா? என்பதை சிந்திப்போம். பயணங்கள் தொடர்வோம்…. முப்பரிமாண அச்சிடுதல்- சாத்தியங்களும், ஆபத்துகளும் (3D Printing - possibilities and threats) - அசோக் குமார் ஜெயராமன் விபத்தில் கடுமையாக அடிபட்ட ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து உடைந்த எலும்புகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரின் உயிருக்கே ஆபத்தாக முடியும். உயிர் பிழைத்தாலும் அந்த எலும்புகள் இல்லாமல் அவரால் மீண்டும் எழுந்து நடக்கவே இயலாது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் சரியான சரியான அளவீடுகளில் வடிவமைக்கப்பட்ட டைட்டானிய உலோக எலும்புகளை முப்பரிமாண அச்சிடும் இயந்திரத்தில் அச்சிட்டு மருத்துவர்கள் அவருக்குப் பொருத்துகிறார்கள். அவர் விரைவாகக் குணமடைந்து மீண்டும் இயல்பான வாழ்வுக்குத் திரும்புகிறார். [] அதே போல ஒரு இளைஞர் இணையத்திலிருந்து சில முப்பரிமாண வடிவங்களின் கோப்புகளை (3D model files) தரவிறக்குகிறார். அவற்றை அச்சிட்டு ஒன்றாகப் பொருத்துகிறார். பார்த்தால் அது ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கி! அவர் கையில் உள்ள ஒற்றை தோட்டாவை அதில் பொருத்திச் சுடுகிறார். ‘படார்’ என்ற சத்தத்துடன் தோட்டா பாய்கிறது. இந்த செயலை ஒரு வீடியோ படமெடுத்து இணையத்தில் பதிவேற்றுகிறார். அதைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. பல நாடுகளும் முப்பரிமாண அச்சிடுதல் குறித்த சட்டதிட்டங்களை உருவாக்க அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.  இது குறித்த மேலதிக தகவல்களை இந்தச் சுட்டியில் காணலாம். (https://youtu.be/zaxy2w1HdsA) ஒருவர் இழந்த உறுப்பை தயாரித்து உயிர் காக்க உதவும் நுட்பம் ஒருவரின் உயிரை எடுக்கும் ஆயுதத்தையும் தயாரிக்க உதவும் என்பதுதான் இந்த புதுயுகத் தொழில்நுட்பத்தின் தன்மை. விரைவான மாதிரிகளைச் செய்தல் (Rapid Prototyping) என்ற நுட்பம் தொழில்துறை, தொழில்நுட்பத்துறை, கல்வி, சந்தைப்படுத்துதல் (Marketing) எனப் பல துறைகளுக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு முறையாகும். விரைவான மாதிரிகளைச் செய்ய உதவும் பல்வேறு வழிகளில் முப்பரிமாண அச்சிடுதல் என்பதும் ஒன்று. சமீபத்தில் வெளிவந்த ஆப்பிள் ஐஃபோன்11-ஐ உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஆப்பிள் நிறுவனம் இந்த ஃபோனை வடிவமைக்க ஆரம்பித்த பொழுது நிறுவன சிஇஓ, மார்கெட்டிங் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்குக் கையில் பிடித்துத் திருப்பிப் பார்க்கும்படியான ஒரு மாதிரி இருந்தால் வசதியாக இருக்கும். அதன் அளவு, நிறம், எடை போன்றவற்றை உணரவும் மதிப்பிடவும், கேமிரா எங்கு உள்ளது? வேறு என்ன என்ன பொத்தான்கள் உள்ளன என்பதை நேரடியாகப் பார்க்க ஒரு மாதிரி இருப்பது மிகத் தேவையான ஒன்றாகும். என்னதான் கம்ப்யூட்டர் 3D modelling பயன்படுத்தி இந்த ஃபோனை வடிவமைத்தாலும் கணிப்பொறி திரையிலோ அல்லது அச்சிடப்பட்ட காகிதமாகவோ அந்த வடிவமைப்பைப் பார்த்தால் அனைவருக்கும் அது முழுமையாகப் புரியாது.  [முப்பரிமாண அச்சிடுதல் மூலம் செய்த ஐஃபோன்11 பின்பக்கத்தின் மாதிரி] இந்தச் சூழ்நிலையில் உள்ளிருக்கும் சர்க்யூட் போர்டு, தொடுதிரை, மின்கலம் எனப் பல பாகங்கள் இன்னும் வடிவமைக்கப்பட்டே இருக்காது. வெறும் வெளிப்புறச் சுவர்கள், பொத்தான்கள், தொடுதிரைக்கான கண்ணாடி போன்றவற்றை எளிதாக வடிவமைக்கக்கூடிய பொருட்களை (காகிதம், அட்டை, மரம், களிமண், அலுமினியம், ப்ளாஸ்டிக்) பயன்படுத்தி இந்த வடிவத்தைச் செய்து வேண்டிய நிறம் பூசி விடுவார்கள். இதுவே ப்ரோட்டோடைப்(Prototype) என அழைக்கப்படும் முதல் மாதிரியாகும். இந்த முதல் மாதிரியை வைத்து வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களை எளிதில் விளக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும். இவ்வாறான முதல் மாதிரிகளை(Prototypes) ப்ளாஸ்டிக், காகிதம், உலோகம் என பல பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்க உதவும் நுட்பமாகவே 3D Printing இருந்தது. ஆனால் நாளடைவில் முப்பரிமாண அச்சிடுதலுக்கான செலவு குறைந்து, இத் தொழில்நுட்பம் சாமானியரும் பயன்படுத்தும் அளவுக்கு எளிமையாகவும், வாங்கும் அளவுக்கு விலை குறைவாகவும் கிடைக்கத் தொடங்கியது. தற்பொழுது ரூ. 25000-ற்கு ஒரு நல்ல முப்பரிமாண அச்சியந்திரத்தை வாங்க இயலும். எனவே இந்த மாதிரியான இயந்திரங்களை மாணவர்கள், பொழுதுபோக்குக்காக பயன்படுத்துபவர்கள் (hobby enthusiasts), சிறு/குறு நிறுவனங்கள் எனப் பலரும் வாங்குகின்றனர். வடிவமைப்பாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் தாங்கள் வடிவமைத்த பொருளின் மாதிரியை உடனடியாக முப்பரிமாண அச்சில் உருவாக்குவதன் மூலம் அவற்றில் உள்ள நிறை குறைகளை விரைவில் அறிந்து (early identification of problems) தங்கள் வடிவமைப்பை மேம்படுத்த ஏதுவாகிறது. இதன் மூலம் நேரமும் பணமும் விரயமாவது தவிர்க்கப்படுகிறது. உடனடியாக பொருளைச் செய்து பயன்படுத்திப் பார்க்க இயலுவதால் மிகவும் சவாலான வடிவமைப்புகளையும் துணிவுடன் செய்ய முயல்கின்றனர். இதன் மூலம் புத்தாக்கத்தில் முப்பரிமாண அச்சிடுதல் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி வயதுக் குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் கையடக்கமான முப்பரிமாண அச்சிடும் கருவிகள் வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்துவதும் மிக எளிதாகவே உள்ளது. எனவே குழந்தைகள் தங்களின் கற்பனைக்கு எந்த எல்லையும் இல்லாமல் காகிதத்தில் வரைவது போலக் காற்றில் வரைந்து வேண்டிய பொருட்களை உருவாக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் படைப்பு திறன் மேம்படுவதுடன் பல்வேறு பொருட்களின் தன்மை குறித்தும் அவர்களால் எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது.  இந்தச் சுட்டியில் அது போன்ற ஒரு கருவியைப் பார்க்கலாம். https://www.amazon.com/dp/B07G5KHRCL/ref=cm_sw_em_r_mt_dp_U_LC0NDb51B3VFK இதுவரை பல்வேறு வகையான ப்ளாஸ்டிக்குகளே முப்பரிமாண அச்சிடுவற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பர்கர் போன்ற உணவை அச்சிடுவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் வளர்ந்த பின்னால் உணவு தயாரிப்பதற்காக பலமணி நேரம் செலவிடுவது குறைந்து வேண்டிய உணவைக் குறைந்த நேரத்தில் அச்சிட்டுக்கொள்ளலாம். இந்த இயந்திரங்களைப் பல இடங்களில் நிறுவி வேண்டிய நேரத்தில் தேவையான உணவைக் கொடுப்பதன் மூலம் உணவை பொட்டலம் செய்யவும், எடுத்துச் செல்லவும் வேண்டிய தேவை இருக்காது. சுற்றுச்சூழல்   கேடுகள் குறையும். மேலும் மருத்துவத்துறையில் உடல் உறுப்புகளை அச்சிடுவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நுட்பம் மேம்பட்டால் உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்குத் தேவையான உறுப்புகளை முப்பரிமாண அச்சிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். மனிதனின் வாழ்நாள் கூட நீட்டிக்கப்படலாம்.  இத் தொழில்நுட்பத்தின் வழியாகச் ஆகக்கூடிய நல்லவைகள் பல இருந்தாலும் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை உருவாக்கும் சாத்தியம் இல்லாமலில்லை. அதனால் தான் பல நாட்டு அரசுகள் இந்தத் தொழில்நுட்பத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வுடனே அணுகுகின்றன. உதாரணமாக, உலோகம், ப்ளாஸ்டிக் என பல பொருட்களை பயன்படுத்தி மிகத் துல்லியமாக அச்சிடும் இயந்திரத்தைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதன் முப்பரிமாண அச்சிடும் இயந்திரங்களை வெளியாட்களுக்கு விற்க அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. எனவே அந்த நிறுவனம் அச்சிடும் இயந்திரங்களை கண்காணிப்பு அதிகமுள்ள தன்னுடைய வளாகத்திலேயே நிறுவியுள்ளது. தேவைப்படுபவர்கள் தங்கள் முப்பரிமாண அச்சிடவேண்டிய வடிவமைப்பின் கோப்பை (Design files) அந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தால் தீவிரச் சோதனைகளுக்குப் பின்னர் அதை அச்சிட்டு விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம் இத் தொழில்நுட்பம் தவறான வழிகளுக்கு பயன்படுவதை அரசு கட்டுப்பாட்டில் வைக்கிறது. வருங்காலத்தில் கண்காணிப்பு விதி முறைகள் எளிமை ஆகலாம் அல்லது இயந்திரம் இருக்குமிடத்திலேயே கண்காணிக்கும் வசதிகள் வரலாம். இவ்வாறு நடந்தால் இன்னும் வலிமையான, விரைவான, பல வகையான பொருட்களை (Plastic metal etc.,) கையாளும் முப்பரிமாண அச்சிடும் இயந்திரங்கள் நாம் பணிபுரியும் அலுவலகத்தில், கார் பணிமனைகளில், மருத்துவ மனைகளில் அல்லது பக்கத்திலுள்ள உணவகத்தில் நிறுவப்படும். சுருக்கமாக பெரியார் தன்னுடைய ‘இனிவரும் உலகம்’ நூலில் கூறியதில் சிலவற்றை இந்த முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் நாம் வாழும் காலத்திலேயே சாத்தியப்படுத்தும் எனலாம். விஞ்ஞானம் கட்டுடைக்கும் செவ்வாய் தோஷம் என்னும் புரட்டு! -மருத்துவர். நந்தினிஸ்ரீ   செவ்வாய்க்கே ஆளில்லா ஆய்வுக்கலங்களை அனுப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் செவ்வாய் தோஷத்தினை நம்பலாமா? காலம் காலமாக திருமணம் என்று வந்தாலே செவ்வாய் தோஷம் என்று ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து பாடாய்ப் படுத்துகிறார்கள். செவ்வாய் ரத்த காரகன். செவ்வாய் தோஷத்திற்குப் பின் குருதிவகை அடிப்படையிலான science இருப்பதாகவும், செவ்வாய் தோஷம் உள்ள பெண் செவ்வாய் தோஷம் உள்ள ஆணையே தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குழந்தை பாக்கியம் அமையாது என்றும் பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரி, செவ்வாய் தோஷத்திற்குப் பின் இருக்கும் அவர்கள் கூறும் science என்ன? ரத்தத்தை positive, negative என்று வகைப் படுத்துவது சிவப்பு அணுக்களில் உள்ள D antigen’ஐ (D பிறபொருளெதிரியாக்கி) பொறுத்தே. அதாவது D antigen ரத்தத்தில் இருந்தால் அவர்கள் positive ரத்தவகையினர் (Rh positive என்போம்). D antigen இல்லாதவர்கள் negative வகையினர்(Rh negative என்போம்). இது அடிப்படை. D antigen இல்லாத A, B, AB, O வகையினர் முறையே A -ve B -ve, AB -ve, O -ve ஆகிறார்கள். இந்த Rh negative வகையே செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. இது எப்படி குழந்தை பிறப்பைப் பாதிக்கிறது? Rh -ve பெண் Rh +ve ஆணைக் கூடி, உருவாகும் கரு Rh -ve ஆகவோ, Rh+ve ஆகவோ இருக்கலாம். கருவில் உள்ள குழந்தை Rh+ve ஆக இருக்கும் பட்சத்தில் தான் சிக்கல் துவங்குகிறது. அதாவது ‘Rh+ve குழந்தையை சுமக்கும் Rh-ve பெண்’. 1. குழந்தை பிறப்பு, கருச் சிதைவு போன்ற சமயங்களில் நஞ்சுக்கொடியின் வழி தாய்சேய் ரத்தக் கலப்பு நிகழ்வதைத் தொடர்ந்து, 2. கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்தில் உள்ள Rh antigen, தாயின் உடலில் anti-Rh antibody’ஐ (பிறபொருளெதிரி) தூண்டுகிறது. 3. இந்த Anti Rh antibody மீண்டும் குழந்தையின் உடலை அடைந்து, Rh antigen’ஐ தாக்குகிறது. 4)அதாவது Rh antigen’ஐ கொண்ட சிவப்பு அணுக்களைத் தாக்கி அழிக்கிறது. (கீழே எளிமைப்படுத்தப்பட்ட விளக்கப் படத்தைப் பார்த்து விட்டு தொடரவும்) இந்த phenomenon’ஐ Rh isoimmunization என்று மருத்துவத்தில் கூறுகிறோம். குழந்தை Hemolytic disease of the newborn அல்லது Erthroblastosis foetalis எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறது. இதில் முதலில் உருவாகும் Rh antibody வகை நஞ்சுக்கொடியை கடக்க இயலாதது, நாளடைவில் தான் நஞ்சுக்கொடியை கடக்க இயன்ற antibodies உருவாகின்றன. இதனாலே பெரும்பாலும் முதல் குழந்தை தப்பிவிடுகிறது, இரண்டாவது குழந்தையே தாக்கப் படுகிறது. [] அப்படியானால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்தவகை நெகடிவ் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளதா? இல்லை. ரத்தப் பரிசோதனை செய்யாமல் தோஷம் என்று கூறுவதே அடிப்படை முரண். மேலும், தோஷம் உள்ளவர்களுக்கெல்லாம் நெகட்டிவ் ரத்தவகை மட்டுமே இருப்பதாகவும் நிரூபிக்கப் படவில்லை. என்றாலும், செவ்வாய் தோஷம் குழந்தைப் பிறப்பை பாதிப்பதற்கு பின்னுள்ள science ஆக இவர்கள் கூறுவது இதைத்தான். இதற்காக இவர்கள் செய்யும் ஒரே வாதம் பிழைப்புவாதம் மட்டுமே. இப்போது Rh-ve பெண் Rh-ve ஆணையே கூடும்போது குழந்தை கண்டிப்பாக Rh-ve ஆகவே இருக்கும். ஒரே வகை தாய் சேய் ரத்தக் கலப்பு பாதிப்புகள் தருவதில்லை. இந்த அடிப்படையிலே செவ்வாய் தோஷம் உள்ள பெண் செவ்வாய் தோஷம் உள்ள ஆணையே திருமணம் செய்யவேண்டும் என்கிறார்கள். Rh+ve பெண் (செவ்வாய் தோஷம் இல்லாத பெண்) Rh-ve குழந்தையை சுமந்தாலும், antibody’ஐ தூண்டும் antigen’ஏ குழந்தையின் ரத்தத்தில் அடிப்படையில் இல்லாததால் தாக்குதல் நிகழ்வதில்லை. அறிவியல் அடிப்படையே இன்றி கிரகங்கள் பார்த்து இவர்கள் சொல்லும் செவ்வாய் தோஷத்தை, அதற்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத, அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்ட Rh factor determinationஓடு முடிச்சுகள் இட்டு வெகுகாலமாக குழப்பி வருகின்றனர். நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டாலே, செவ்வாய் தோஷ அறிவியல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதை என்பது விளங்கிவிடும். சரி, Rh isoimmunisationக்கு தீர்வு உள்ளதா? நவீன மருத்துவத்திலே உள்ளது. Rh-ve வகைப் பெண்களை கர்ப்பகால பரிசோதனைகளிலே அடையாளம் கண்டு வகைப்படுத்தி விடுகிறோம். அவர்களுக்கு Anti D Injection போடப் படுகிறது. இதன் அடிப்படை, anti Rh antibodies’ஐ செயற்கையாக உடலில் செலுத்துவதன் மூலம், தாயின் உடலில் இயற்கையாக தூண்டப் படும் anti Rh antibodies உருவாவதையே தடுக்கிறது. செலுத்தப் பட்ட anti Rh antibodies, தாயின் ரத்தத்தை அடைந்த குழந்தையின் Rh antigen’ஐ தாக்கி சமன் செய்து விடுகிறது. இந்த cycle இங்கேயே முடிவுறுகிறது. தற்போது, Routine Antenatal Anti D prophylaxisஇன் கீழ், கருவிலிருக்கும் குழந்தையின் ரத்தவகையை அறிய வேண்டியதின்றி, அனைத்து Rh-ve கர்ப்பிணிகளுக்கும் 28 மற்றும் 34 வாரங்களில், anti D injection போடப்படுகிறது. குழந்தை பிறந்ததும், அதன் ரத்த வகையைச் சோதித்து, Rh +ve ஆக இருப்பின், 72 மணி நேரத்திற்குள் ஒரு Anti D injection போடப்படுகிறது. இப்படியாக காலம்காலமாக படுத்தியெடுத்த செவ்வாய் தோஷ பர்னிச்சரை நவீன மருத்துவம் உடைக்கிறது! பொன்னொளி  - அண்ணா - ராஜராஜன் RJ  பௌத்தத்திற்கும் பிராமணீயத்திற்கும் நடத்த போர் தான் இந்திய வரலாறு என்பார் அண்ணல் அம்பேத்கர். பௌத்த மதத்தை பற்றியும், புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்தும் மிக ஆழமான, அதே நேரத்தில், மிக அழகான ஆய்வை மேற்கொண்டவர் அண்ணல் அம்பேத்கர். அழகு என்று குறிப்பிடுவதற்கு காரணம், பௌத்தம் குறித்து அவர் எழுதியதை வாசிக்கும் போது, அதுவரை நம் மனதில் இருக்கும் அம்பேத்கர், அதாவது சாதி, மத, இன வெறியர்களுக்கு எதிராக காத்திரமான, நெற்றிப்பொட்டில் அடிக்கும் விமர்சனங்களை வைத்த அம்பேத்கரின் பிம்பம் சற்று மறைந்து ஒரு மிகப்பெரிய தத்துவ ஆசிரியரை வாசிக்கும் உணர்வு நமக்கு ஏற்படும். பௌத்தத்தின் மேன்மையை நாம் அம்பேத்கர் வழியில் உணரும் போது, நமக்கு இந்திய அரசியல் விளங்கும். இந்திய தத்துவ மரபு விளங்கும். நாம் எதை நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும். அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். நான் ஒரு இந்துவாக பிறந்தேன், ஆனால், நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்து 1956 ம் வருடம் லட்சக்கணக்கான மக்களுடன் அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார். இந்திய வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய தருணம் என்றே சொல்லவேண்டும். பௌத்தத்தை பொறுத்தவரை அம்பேத்கர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது போலவே, மேலும் பலரும் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக தென்னகத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாடுபட்ட முன்னோடிகள் இருந்தார்கள். பண்டிதர் அயோத்திதாசர், சிந்தனை சிற்பி சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு போன்றவர்கள் மிகத்தீவிரமாக பௌத்தம் குறித்தான கருத்துகளை பேசியும், பரப்பியும், செயல்பட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் பௌத்தத்திற்குமான உறவு மிக நெடியது. எப்படி பௌத்தத்திற்கும், பிராமணீயத்திற்கும் இருக்கும் போர் இந்திய வரலாறு என்று சொல்கிறோமோ அதே போல தான் ஆரிய திராவிட யுத்தமும். திராவிடர்கள் இயல்பாகவே பௌத்தத்தின் பக்கம் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, வர்ணாஸ்ரம எதிர்ப்பு வேர்கள் ஆழமாக வேரூன்றிய தமிழகத்தில், பார்ப்பனீய எதிர்ப்பு போரின் நவீன கால தொடக்கமாய் உருவானது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் பார்பனீயத்தையும், மூட நம்பிக்கைகளையும், மத சடங்குகளையும், குறிப்பாக சாதியையும் கடுமையாக எதிர்த்து போரிட்டது. தந்தை பெரியார் ஆணிவேராக இருந்து பகுத்தறிவு பகவலனாய் திகழ்ந்தார். திராவிட இயக்கம் கடவுள் மறுப்பு கொள்கைகளை வலுவாக பேசியது. மதங்களை கடுமையாக விமர்சித்தது. ஆனால், பெரியாரின் அடிநாத கொள்கை சமத்துவம் என்பதாக இருந்ததால், சமத்துவ கொள்கைகளை, அதாவது மனிதர்களுக்காக பேசிய கொள்கைகளை வரவேற்றார். இந்த வகையில், திருவள்ளுவர், வள்ளலார், புத்தர் என பலரின் கருத்துகளை பெரியார் பேசியும், எழுதியும், பாராட்டியும், பரப்பியும் இருக்கிறார். அந்நாளில் புத்தர் விழா என தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்நிகழ்ச்சிக்கு பெரியார் தலைமை தாங்கியும், புத்தர் குறித்து பேசியதும் புத்தகங்களாக இருக்கிறது. புத்தரை பெரியார் ஒரு சிறந்த பகுத்தறிவாதியாக பார்த்தார். @நான் சொல்லும் எதையும் அப்படியே நம்பாதே உன் அறிவை கொண்டு சிந்தி. அது உன் அறிவுக்கு சரி என பட்டால் ஏற்றுக்கொள்" என்பது தான் பெரியாரின் கருத்து. இதுவே தான் புத்தரின் கருத்தும். பெரியார், நான்  சொல்வதை  தான் 2500 வருடங்களுக்கு முன்னால் புத்தர் சொன்னார் என்று சொல்லுவார். பெரியார், புத்தரை பகுத்தறிவாதியாக பார்த்தது போலவே, ஒரு இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக பௌத்த சங்கங்களை காட்டுகிறார். பௌத்தர்களின் வணக்க பாடலான, புத்தம் சரணம் கச்சாமி,  சங்கம் சரணம் கச்சாமி,  தம்மம் சரணம் கச்சாமி  என்ற வரிகளின் பொருளை பெரியார் மிக அழகாக விளக்குவார்.    ஒரு மனிதன், ஒரு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டால், அவன் தன் தலைவருக்கு கட்டுப்பட்டவனாக இருக்கவேண்டும். அது தான் புத்தம் சரணம் கச்சாமி. பிறகு, அவன் தனது இயக்கத்துக்கு கட்டுப்பட்டவனாக இருக்கவேண்டும். அது தான் சங்கம் சரணம் கச்சாமி. பிறகு, அவன் தனது கொள்கைக்கு கட்டுப்பட்டவனாக இருக்கவேண்டும். அது தான் தம்மம் சரணம் கச்சாமி. இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும், அவனுக்கும் பிரச்சனை. இயக்கத்திற்கும் பிரச்சனை என்பார் பெரியார். புத்தர் நவீன காலத்திற்கும் தேவையானவர் என்பதை நாம் பெரியார் மூலம் அறியலாம்!   பெரியாரை தொடர்ந்து திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்களும் பௌத்தம் குறித்தும், புத்தர் குறித்தும் பேசினார்கள்.  குறிப்பாக பேரறிஞர் அண்ணாவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் சொல்லவேண்டும்.  அண்ணா தன் எழுத்தின் மூலமாக ஒரு பெரிய பண்பாட்டு புரட்சியையே நிகழ்த்தி இருந்தார். பார்ப்பன புரட்டுகளை, ஆரிய மாயையை அடித்து நொறுக்கி, அதற்கு மாற்றான பண்பாட்டை, தமிழர் அரசியலை, சமத்துவ கோட்பாட்டை அண்ணா முன்வைத்தார். அண்ணாவின் எழுத்தில் அனல் பறக்கும், கருத்துகள் இனிக்கும். படிக்கும் எவரையும் ஈர்க்கும். நயமிகு நடை அவருடையது. எதிரியையும் ரசிக்க வைக்கும் உரைநடைக்கு சொந்தக்காரர் அண்ணா. அண்ணா, புத்தரை குறித்தும், பௌத்தத்தை குறித்தும் எழுதியும், பேசியும் இருக்கிறார். அப்படி, அண்ணா, எழுதிய ஒரு கட்டுரை தான் “பொன்னொளி” என்ற தலைப்பில் புத்தகமாக இருக்கிறது. புத்த மார்க்கம் மீண்டும் பொலிவு பெற்று வருகிறது என்று ஒரு பௌத்த கூட்டத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்னன் பேச, அதற்கு பதில் சொல்லும் வகையில் அண்ணா எழுதிய கட்டுரை தான் பொன்னொளி. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அந்த கூட்டத்தில் ஒரு சம்பிரதாயம் போல பௌத்தம் மீண்டும் பொலிவு பெறுகிறது என்று பேசி இருக்கிறார். ஆனால், அது உண்மையில் பொலிவு பெறுகிறதா? என்பதை அண்ணா விளக்குகிறார். அன்றைய  நாளின் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தை வைத்தே அண்ணா விளக்குகிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடிய இந்தியாவில், விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது என்று சொல்லப்படும் காலத்திலும் 20 பார்ப்பனர்களை அழைத்து அவர்கள் காலுக்கு பூஜை செய்கிறார் ராஜேந்திர பிரசாத். அவர் தான் இந்திய நாட்டின் முதல் குடிமகன். உலக நாடுகள் இதை எப்படி புரிந்துக்கொள்ளும் என்ற கேள்வியை எழுப்பி, இன்றும், இங்கே பார்ப்பன ஆதிக்கம் தான் இருக்கிறதே தவிர பௌத்தம் பொலிவு பெறவில்லை என்கிறார் அண்ணா. இந்த கட்டுரையில், அண்ணா, புத்தரின் வாழ்வையும், பௌத்தத்தின் மூலம் அவர் செய்த புரட்சியையும் மிக அழகாக விளக்குகிறார். வேதம், வர்ணாசிரமத்தின் மூலம், மக்களை பிரித்து, ஒடுக்கி வைத்திருந்த பார்ப்பனியத்திற்கு எதிராக புத்தர் தன் கொள்கையை பறை சாற்றினார் என அண்ணா எடுத்துரைக்கிறார். குறிப்பாக சாதியால், ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் நிலைக்கு, பூர்வ ஜென்மமும் தாங்கள் செய்த பாவமும் தான் காரணம் என நினைத்துக்கொண்டு இருக்கையில், புத்தர், நீங்களே உங்களுக்கு விளக்காக இருக்கலாம். மனிதனை விட பெரியது எதுவுமில்லை என்று மக்களை கவர்ந்துக்கொள்வதை அண்ணா விவரிக்கிறார்.  பார்ப்பனீயம் ஆரம்பத்தில் புத்தரை, பௌத்தத்தை பொருட்டாக எண்ணாமல் இருந்ததையும், அவரை உதாசீனப்படுத்தியும், கிண்டலும் கேலியும் செய்ததையும் பிறகு அவர்களே மக்களிடம் இருக்கும் புத்தரின் செல்வாக்கை கண்டு அஞ்சியதையும் சுட்டிக்காட்டுகிறார். மிக முக்கியமாக அன்றைய அரசர்களிடம் நிலவிய குழப்பத்தை அழகாக  விளக்குகிறார். அதாவது, அன்றைய அரசர்கள் பார்பனீயத்தின் மீது பயந்து, நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். பார்ப்பனர்களை பகைக்காமல், அவர்கள் சொல்லும் வேள்விகளை, யாகங்களையும் செய்து பாவத்தில் இருந்தும், அரச பதவியில் இருந்தும் காப்பாற்ற பட்டதாக நம்பினார்கள்.  அந்த நேரத்தில், புத்தரின் போதனைகள் இவை எல்லாவற்றையும் மறுப்பதாகவும், மூடத்தனமாக இருப்பதையும் சுட்டி காட்டியதை பார்த்து மன்னர்கள் சற்று குழப்பத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்களை பகைத்துக்கொள்வதா? அல்லது மக்களின் செல்வாக்கை பெற்ற பகுத்தறிவு கருத்துகளையும், சமத்துவத்தையும், அன்பையும் போதிக்கும் புத்தரை ஏற்றுக்கொள்வதா? என்ற குழப்பம் அரசர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது தான் பார்ப்பனர்கள் மிக தந்திரமாக ஒரு விஷயத்தை செய்கிறார்கள். அதுவரை, புத்தரை எதிர்த்து வந்தவர்கள். திடீரென்று, பாராட்டி பேச ஆரம்பிகிறார்கள். மகான் என்கிறார்கள். ஞானி என்கிறார்கள்.பார்ப்பனர்கள் சாரை சாரையாக பௌத்தத்திற்கு மாறுகிறார்கள். மன்னர்களுக்கு பெரு நிம்மதி. அவர்கள் புது மார்க்கத்தையும் ஏற்று புத்தர் சொன்னதை செய்கிறார்கள். அதே வேளையில், பார்ப்பனர்களையும் பகைத்துக்கொள்ளாமல், அவர்களையும் பார்த்துக்கொள்கிறார்கள். பௌத்தத்தின் எழுச்சியில், பார்ப்பனீயம் பதுங்கி கொள்கிறது. பௌத்தம் சமூகத்தில் ஆழமாக பரவுகிறது. பதுங்கிக்கொண்ட பார்ப்பனர்கள் காத்திருக்கிறார்கள். புத்தர் இருக்கும் போது சில கலகங்களை நடத்துகிறார்கள். ஆனால், புத்தர் இறந்த பிறகு, பதுங்கு குழியில் இருந்து வெளியே வருகிறார்கள். இரண்டு விதமான வேலைகளை செய்கிறார்கள். ஒன்று,கலையை பயன்படுத்தி, புத்தரை கடவுள் என்றும், அவதாரம் என்றும் சொல்கிறார்கள். புத்தர் கடவுள் கோட்பாட்டிற்குள்ளேயே போகாதவர். ஆனால், அவரை கடவுள் ஆக்கியும், மகா விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் ஆக்கினார்கள் பார்ப்பனர்கள். இதன் மூலம் பௌத்தத்தை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். இன்னொரு  பக்கம், மீண்டும் பார்ப்பனீயம் அரச மதமாக ஆக, பௌத்தமும் பௌத்தர்களும் இந்தியாவில் அழிக்கப்பட்டார்கள். பௌத்தம் தோன்றிய இடத்தில் இருந்து அழிக்கப்பட்டு, மீண்டும் பார்ப்பனீயம் தலைதூக்கியது என்பதையெல்லாம் அண்ணா விளக்குகிறார். ஆக, இன்று நடப்பது பிராமணீயத்தின் ஆட்சி தானே என்றும்.. பௌத்தம் பொலிவு பெறுகிறது என்று பேசுவது பார்ப்பன தந்திரம் என்றும் அண்ணா விளக்குகிறார்.  மீண்டும், இப்போது தான் பகுத்தறிவாதிகள் பௌத்தத்தை முன்னெடுகிறார்கள்  என்று தற்காலத்தையும் அண்ணா சுட்டி காட்டுகிறார். இங்கே பவுத்தத்தின் பொன்னொளி வீச பகுத்தறிவாதிகளின் கரம் வலுப்பெற வேண்டும் என்றும் அண்ணா சொல்கிறார். திராவிட நாட்காட்டி  1-அக்- 2000 - டெல்லியில் பெரியார் மையம் திறப்பு 2-அக்-1869 - காந்தியார் பிறப்பு, 1975 - காமராசர் மறைவு 3-அக்-2002 - அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு 4-அக்-1931 - மார்க்சு, எங்கல்சு அறிக்கை தமிழில் முதன் முதலில் “குடியரசு” இதழில் வெளியீடு 5-அக்-1823 - இராமலிங்க அடிகளார் பிறப்பு 7-அக்-1878 - சி.டி. நாயகம் பிறப்பு; 1892- சர்.ஆர்.கே.சண்முகம் பிறப்பு 9-அக்-1987 - இடஒதுக்கீட்டை பாதுக்காக்க 31 (சி) சட்டம் உருவாக்க புதுக்கோட்டையில் மத்திய நிர்வாகக் குழுவில் தீர்மானம் 10-அக்-1990 - மண்டல் குழு அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்ற ஆணை எரிப்பு 12-அக்-1946 - பழைய கோட்டை அர்ச்சுனன் மறைவு 13-அக்-1968 - லக்னோ தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் தந்தை பெரியார் முழக்கம் 14-அக்-1887 - ஆற்காட்டு இரட்டையர்கள் டாக்டர் ஏ. இராமசாமி – டாக்டர் ஏ. இலட்சுமனசாமி பிறப்பு 1956 - டாக்டர் அம்பேத்கர் புத்தமார்க்கத்தை தழுவினார் - நாக்பூரில் 15-அக் பார்வையற்றோருக்கான உலக வெண்கோல் தினம்; உலகக் கிராமப்புற மகளிர் நாள். 19-அக்-1978 - தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று தமிழக அரசு ஆணை 23-அக்-1948 - ஈரோட்டில் திராவிடர் கழகச் சிறப்பு மாநாடு (23,24 ஆகிய தேதிகளில்) 24-அக்-1945 - உலக நாடுகள் அவை தோற்றம் 27-அக்-1930 - நீதிக்கட்சி 4-ஆவது அமைச்சரவை பதவியேற்பு 30-அக்-1964 - சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம்; உலக சிக்கன நாள் 31-அக்-1965 - ‘விடுதலை’ பணிமனை (பெரியார் திடல்) திறப்பு; 1992 - விஞ்ஞானி கலிலியோவுக்குத் தண்டனை வழங்கியது தவறு என்று போப்பாண்டவர் உலகுக்கு அறிவித்தல் திராவிடம் வளர்த்த தமிழ் பேராசிரியர் . சுப.வீரபாண்டியன் [] பேராசிரியர். சுப.வீரபாண்டியன் அவர்களின் திராவிடம் வளர்த்த தமிழ் என்ற புத்தகத்தின் அறிமுகம் இது. திராவிடமும் தமிழும் வெவ்வேறானதா? இந்த விவாதமே தேவையற்றது. தமிழின்றி திராவிடம் இல்லை. திராவிடமின்றி தமிழ் இல்லை.இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய வரலாற்று தொடர்புடையது. திராவிட இயக்கத்தை பொறுத்தவரை “திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச்சொல்”. திராவிடத்திற்கும் தமிழுக்கும் உறவு உண்டே தீவிர பகையில்லை. என விளக்கிவிட்டு இங்கே தமிழுக்கு எதிராக திராவிடத்தை நிறுத்துவது திட்டமிட்டு நடைபெறும் மோதல் என்கிறார் பேராசிரியர் சுபவீ. தமிழ் தேசிய இயக்கம் தழைத்தோங்க வேண்டும் என்பது திராவிட இயக்கத்தினரின் நோக்கம். ஆனால், திராவிட இயக்கத்தை வேரறுக்க வேண்டும் என்பது தமிழ் தேசிய நண்பர்களின் நோக்கமாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர். திராவிடம் என்பதற்கு பொருள்: திராவிடம் என்பதற்கு அகராதியில் பொருள் தேடிவிட முடியாது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. தமிழக வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தே திராவிடத்தின் பொருளை நாம் அறிய முடியும். திராவிடத்தின் என்பது இனத்தின் பெயரா? ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரா? நிலத்தின் பெயரா? இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் திராவிடம். இவற்றோடு, பார்ப்பனிய எதிர்ப்பு + சமூகநீதி சிந்தனை + தமிழுணர்ச்சி + பகுத்தறிவை உள்ளடிக்கியது தான் திராவிட உணர்வு! தமிழ் அறிஞர்கள் பார்வையில் திராவிடம்: தமிழ்த்தென்றல் திரு.வி.க - திராவிட நாட்டு படத்தை திறந்து வைத்து பேசியது. நான் திராவிடர் கழக உறுப்பினன் கிடையாது. நான் திராவிட நாட்டு படத்தை திறந்துவைக்கலாமா என யோசித்தேன். பிறகு, இந்நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர்கள் தான். நானும் திராவிடன் தான். ஆகவே நான் இந்நாட்டுப்படத்தை தாராளமாக திறந்து வைக்கலாம். அயோத்தி தாச பண்டிதர்: திராவிடர் என்ற சொல்லை தமிழ் அரசியல் இயக்கத்திற்குரிய சொல்லாக ஆக்கியவர். 1892 ஆம் ஆண்டு “ஆதி திராவிட ஜனசபை” என்ற ஒன்றை ஆரம்பிக்கிறார். 1912 - ஒரு அறிக்கையில் "தமிழ் பாஷையில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்கு உரியோர்களாக விளங்குவது பூர்விக திராவிடகுடிகளே ஆவர். - அயோத்திதாசர் சிந்தனைகள் பக். 432 அயோத்திதாசர், திராவிடர் என்ற சொல்லை கைவிட்டார் என பெ. மணியரசன் சொல்வது புரட்டு. இறுதி வரையில் அவர் திராவிடர் என்னும் சொல்லையே பண்படுத்தினார். "இத்தேச பூர்வ சாத்திரங்களைக் கொண்டும், இத்தேச பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களை கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களின்றி பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும் படியான உத்தரவை வேண்டுகிறோம் " - டிசம்பர் 14, 1910 1913, 14 ஆண்டுகளில் அவரது இறுதி காலத்திலும் அயோத்திதாசர் திராவிடர் என்ற சொல்லையே பயன் படுத்தி உள்ளார். அவர் நடத்திய இதழின் பெயர் தமிழன். தமிழ் மக்களை அவர் திராவிட பூர்வகுடிகள் என்றே அழைத்தார். மறைமலை அடிகள்: “திராவிட நாகரீகம்” என்ற தலைப்பில் இரண்டு கூட்டங்களில் பேசி இருக்கிறார். திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப்பாவாணர்: அவர் எழுதிய நூலிற்கு பெயர் “திராவிடத்தாய்” தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி: திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்து நிலைப்போக்கில் ஒரு முக்கிய பெரும் பேறாக அமைந்தது தமிழ் பிரஞை, தமிழ் தேசிய உணர்வு ஆகும். எழுத்தாளர் பொன்னீலன்: தமிழ் உணர்ச்சியை தமிழ் மண்ணில் தட்டி எழுப்பியது திராவிட இயக்கம் தான் என்பதை கண்டறிய எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. ஆய்வாளர், முனைவர் அ. இரா. வெங்கடாசலபதி திராவிட இயக்கத்தின் முதன்மையான சாதனை, தமிழ் அடையாளம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டை மாரு வரையறை செய்ததே. தொ. பரமசிவன்: திராவிடம், தமிழ் ஆகியவற்றிற்கு இடையே உள்ள நெருக்கமான உறவை சொல்கிறார். திராவிடம் என்பதை அரசியலைத் தாண்டிய பண்பாட்டு அடையாள சொல் என்கிறார் தொ. பரமசிவன். திராவிடம் குறித்து பேசிய தமிழ் அறிஞர்களை குறித்து பேராசிரியர் சுபவீ அவர்கள் விரிவாக கொடுத்து இருக்கிறார். திராவிடம் என்ற சொல்லும் சுயமரியாதை என்ற சொல்லும் இந்த மண்ணில் ஏற்படுத்திய மாற்றங்களை உணர்ந்தாள் தான் திராவிடத்தின் உண்மை பொருள் புரியும் என்கிறார். The Word book of Encylopedia - மிகப்பெரும்பான்மையான தென்னிந்தியர்கள் திராவிட இனக்குழுவை சார்ந்தவர்கள் என்கிறது. தமிழுக்கு ஆற்றிய தொண்டு: ஒரு விஷயம் விளங்கவில்லை என்கிறார் பேராசிரியர் சுபவீ: "இன்றைய தமிழ் தேசியக் குழுவினர் முன்வைக்கும் எந்த கோரிக்கையைத் திராவிட இயக்கத்தினர் மறுக்கின்றனர். தந்தை பெரியார் அல்லது திராவிட இயக்கம் முன் வைக்காத எந்த கோட்பாட்டை இன்று தமிழ் தேசிய பேசுவோர் முன்வைக்கின்றனர்" என்று கேட்கிறார். 1938 ல் கட்டாய இந்தி வந்த போது அதை எதிர்த்து போர் செய்தது தந்தை பெரியார். 1965 ல் அண்ணாவும் திமுகவும் இந்தித்திணிப்பை எதிர்த்து போராடுகின்றனர். இருமொழிக்கொள்கையை அண்ணா வலியுறுத்தினார். தமிழையும் ஆங்கிலத்தையும் இருமொழிக்கொள்கையை முன்வைத்து, ஆங்கிலத்தை திணித்தது திமுக என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், அண்ணா, மிகத்தெளிவாக, 8 வது அட்டவணை மொழிகள் ஆட்சிமொழியாகும் வரை ஆங்கிலம். எட்டாவது அட்டவணை மொழிகள் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்பது தான் அண்ணா வைத்த கோரிக்கை. இதையே 1982 ல் முரசொலி மாறன் அவர்களும் 2012 ல் திருச்சி சிவா அவர்களும் ஆட்சி மொழி கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என இருமொழி கொள்கையை குறித்து பேராசிரியர் விளக்குகிறார். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே திராவிடம் தான் என்பதை விளக்குகிறார். தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காமராசர் ஆட்சியில் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். அதன் பிறகு, பேரறிஞர் அண்ணாவின் திமுக ஆட்சி அமைத்ததும் “மதராஸ் மாகாணத்தை”, “தமிழ் நாடு” என பெயரை மாற்றினார். இதில் இன்னொரு முக்கிய தகவலை சொல்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். சங்கரலிங்கனாருக்கு முன்னாடியே 1955 ல் பெரியார் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இருமொழிக்கொள்கை: 1968 ல் அண்ணா, இருமொழிக்கொள்கையில் இன்னொரு காரியம் செய்து இருக்கிறார். 1968ல், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ் மட்டுமே பயிற்று மொழி என அறிவிக்கிறார். 1969 ல் அண்ணா இறந்துவிடுகிறார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர், இந்த விஷயத்தை விடவில்லை.1970-நவம்பர்-30 ல் கலைஞர் தமிழ் பயிற்று மொழி தீர்மானம் கல்லூரி வரையில் கொண்டு வருகிறார். 1970 டிசம்பர் 1 ல் பெரியார் இதை வரவேற்றுக்கட்டுரை எழுதுகிறார். இந்த முடிவை காமராசர் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார் பெரியார். ஆனால், 1970ல் தமிழை எதிர்த்து தமிழ் நாட்டிலேயே போராடிய அவலம் நேர்ந்தது. 1965 ல் இந்தியை எதிர்த்து தமிழை காக்க போராடிய மாணவர்களை, தமிழ் பயிற்று மொழியாக வந்தால், உங்கள் வருங்காலம் பாழ்படும் என தூண்டிவிட்டு தமிழுக்கு எதிராகவே போராடவைத்தார்கள். இன்று, தமிழ்த்தேசிய வாதிகள் தூக்கிப்பிடிக்கும் ம.பொ. சியும், குன்றக்குடி அடிகளாரும் முதல்வர் கலைஞரை சந்தித்து, தமிழை பயிற்றுமொழியாக மாற்றும் சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இப்போது யார் தமிழை வளர்த்தார்கள்? யார் தடுத்தார்கள் என்ற கேள்வியை பேராசிரியர் சுபவீ அவர்கள் இதன் மூலம் வைக்கிறார். 1967 ல் தமிழ் வழியில் பயின்றவர்கள் 6300 பேர். 1975 ல் கலைஞரின் ஆட்சி முடிவில் தமிழ் வழியில் பயின்றவர்கள் 17900 பேர். கலைஞர் மீண்டும் 2006 ல் முதல்வராக இருக்கும் போது 5 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என அறிவிக்கிறார். கன்னியாகுமரி மலையாள சங்கம் என ஒன்று அதை எதிர்க்கிறது. இன்று தமிழ் தேசியம் பேசும் எந்த தலைவராகவது அன்று கலைஞரின் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்களா ? என்ற கேள்வியை பேராசிரியர் முன் வைக்கிறார். செம்மொழி—நூற்றாண்டு கால போராட்டம் 2004 ல் தமிழை செம்மொழி யாக்கும் முயற்சியை எடுக்கிறார் கலைஞர். தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது ஒரு நூற்றாண்டு கால போராட்டம் என்கிறார் பேராசிரியர் சுபவீ. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழவேள் உமாமகேசுவரனார், தொ.பொ. மீனாட்சி சுந்தரனார், தேவநேய பாவாணர் என பலர் இது குறித்து பேசி இருக்கிறார்கள். 2004 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காட்சிகள் சார்பில் கோரிக்கை வைத்து தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தார் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று சுபவீ செம்மொழியின் வரலாற்றை விவரிக்கிறார். ஆகவே, “எல்லா வகையிலும் தமிழ் அடையாளத்தை காக்கும் இயக்கமாகவே திராவிட இயக்கம் இருக்கிறது” என அழுத்தமாக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்த “திராவிடம் வளர்த்த தமிழ்” என்கிற புத்தகத்தின் மூலம் பதிவு செய்கிறார். திராவிட காணொளிகள்   இதுதான் திராவிடம்!!! விளக்குகிறார் வழக்கறிஞர் அருள்மொழி | Kaithadi TV: https://www.youtube.com/watch?v=Tr2Rz1tl34I   கீழடி: அவர்கள் ஏன் கதறுகிறார்கள்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | KEEZHADI https://www.youtube.com/watch?v=2ZsuuBHvufM&t=2350s   ஒரு பேரு வைக்கத் துப்பில்லை, மூளை பலமா இருக்காம்! ஸ்ரீவித்யா ஆவேசம் https://www.youtube.com/watch?v=BVJ1OUCyzWY   Kamaraj speech | கலை இலக்கியமும் பெரியாரும் | காமராஜ் | Periyar | Vasagasalai   https://www.youtube.com/watch?v=aSCsQsVbE94&t=7s   திராவிட வாசிப்பு மின்னிதழை குறித்து உங்கள் கருத்துக்களை/ விமர்சனங்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com   அடுத்தடுத்த இதழ்களை குறித்த தகவல்களை இந்த பேஸ்புக் பக்கத்தில் பெறலாம்: https://www.facebook.com/DravidaVaasippu2.0/   FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.