[] [cover image] தமிழ்மொழியின் வரலாறு பரிதிமாற்கலைஞர் FreeTamilEbooks.com CC0 தமிழ்மொழியின் வரலாறு 1. தமிழ்மொழியின் வரலாறு 1. Acknowledgements: 2. 2. தமிழ்மொழியின் வரலாறு. 3. உரிமையுரை 4. INTRODUCTION 5. முகவுரை 6. I. EARLY HISTORY 7. I. ஆதி வரலாறு. 8. II THE INFLUENCE OF SANSKRIT. 9. II. வடமொழிக்கலப்பு. 10. III THE THREEFOLD CLASSIFICATION. 11. III. மூவகைப் பாகு பாடு. 12. IV THE FIVE PARTS OF GRAMMAR 13. IV. ஐவகை யிலக்கணம். 14. V. THE ORIGIN AND THE ANTIQUITY OF THE LANGUAGE. 15. V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும். 16. VI. THE INDIVIDUALITY OF THE LANGUAGE. 17. VI. பாஷையின் சிறப்பியல்பு. 18. VII. CHANGES IN THE LANGUAGE. 19. VII.பாஷை வேறுபடுமாறு. 20. VIII. THE RANGE OF THE LITERATURE 21. VII. நூற்பரப்பு. 22. IX THE REFORM OF LANGUAGE. 23. IX. பாஷையின் சீர்திருத்தம். 24. X. CONCLUSION. 25. X.முடிவுரை. 2. I. ஆதி வரலாறு 3. II. வடமொழிக் கலப்பு 4. III. மூவகைப் பாகுபாடு 5. IV. ஐவகை யிலக்கணம் 6. V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும். 7. VI. பாஷையின் சிறப்பியல்பு. 8. VII. பாஷை வேறுபடுமாறு 9. VIII. நூற்பரப்பு. 1. II. இடைக்காலம் (1) முற்பகுதி. 2. III. பிற்காலம்: கி.பி. 1400க்கும் பிற்பட்ட காலம். 10. IX. பாஷையின் சீர்திருத்தம். 11. X. முடிவுரை. தமிழ்மொழியின் வரலாறு தமிழ்மொழியின் வரலாறு   பரிதிமாற்கலைஞர்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Tamil_Mozhiyin_Varalaru} Acknowledgements: Our Sincere thanks go to the Chennailibrary.com for providing an electronic version of this work for the etext preparation. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998~2015. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact தமிழ்மொழியின் வரலாறு (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் இயற்றிய நூற்றொகுதி ) 2. தமிழ்மொழியின் வரலாறு. To My Beloved and Revered Master Rev. WILLIAM MILLER, M.A., LL.D., D.D., C.I.E., Principal of the Madras Christian College and ViceChancellor of the University of Madras THIS WORK IS DEDICATED AS A HUMBLE TOKEN OF LOVE BY One of his “Boys” THE AUTHOR. உரிமையுரை கமழினிய வாங்கிலநற் கலைக ளென்னுங் கடாம்பொழிந்திட் டஞ்ஞான மரத்தைச்சாடி யமைதிகொளு மில்லர்தம தரிய வுள்ள மாங்கனி*று கிரிசரமா யமர்ந்த தேனு மமிழ்துநிகர் பாஷைகளி னலகில் பாண்பை யகங்கொணர்ந்து நறும்பொருள்க ளார்ந்து செல்லுந் தமிழ்மொழியின் வரலாற்றங் கரையின் மாட்டுத் தனிமகிழ்ந்து விளையாடி யுலவு மன்றே. INTRODUCTION THOUGH my knowledge of the Tamil Language is so scanty that at first I held myself absolutely disqualified from complying with Mr. Suryanarayana Sastri’s request that I would write an introduction to this book, yet on his pressing it I could not deny myself the pleasure of complying with his desire and showing my interest in the excellent work which he has here done for his native tongue. It has been a privilege to talk with him over his book and to see how he has assimilated the methods of Western philologists and has applied them to the study of the Dravidian languages. While however he has found his models in the west, no one can fail to see that his inspiration comes from his love of Tamil and that he has put himself into the book, with the result that it is fresh and original. That the book meets a need is certain. As a study of the growth of language in general from Dravidian point of view it is a contribution to Philology of notable value; while as a history of the Tamil Language in particular it stands alone. And Tamil is a language which well deserves such study. It belongs to a group which has a strongly marked family type, and which, while it has features that seem to connect it, on this side and on that, with widely differing groups, is also distinguished from all other groups by features all its own. Its origin still remains to be discovered a secret to reward some scholar patiently treading in the path along which this book points the way. Its grammar is full of interest and its literature is one which any nation might be proud. It still has a vigorous life as spoken tongue, and when its emancipation from the tyranny of the conventions of a dead past is complete it will regain its literary productiveness. For a long time at any rate it will be the medium in which the movements and the emotions of the Tamilians will find their real and natural expression. It must continue the language of the genuine literature of the people. In English their thought and feeling will move as it were in shackles; in Tamil they will have the spontaneity and ease and vigour of free movement. I am not competent to pronounce upon all the details of Mr Suryanarayana Sastriar’s work, but I am convinved that the main lines on which it is constructed are right. The patient work which I know that he has devoted to the subject for years and his mastery of the language both as scholar and as poet are a sufficient guarantee that his illustration of the principles is wide and sufficently correct. In the study of Tamil in our Collleges the book will mark an epoch. For it puts that study upon a better basis, and will begin to do for it what such writers as Trench and Morris and Skeat did for English a generation or more ago. The author has by it gained for himself the distinction of being the pioneer in a field into which many will doubtless follow him. But none of his successors are likely to excel him in the real usefulness of their work or in their love of the language whose past he here illumines. F. W. KELLETT. முகவுரை “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற திருவள்ளுவனார் திருவாக்கின்படி, இந்நூலை அறிவிடையோர் காணலுற்றால் அவர் இதன்கட் பொதிந்துள விஷயங்களின் செவ்வியை உள்ளவாறு அறிந்து தக மதிப்பர் என்னுந் துணிவு கொண்டெழுந்தே யாம் இச்சிறுநூல் வகுக்கப் புகுந்தனம். ஒருபாஷையின் வரலாறு என்றாலென்னை? இதன் பொருள் யாது? இது மேற்பார்வைக்குத் தெளிவான பொருள் கொண்டதுபோல் தோன்றாமலிருந்த போதிலும், உய்த்துணருமிடத்து இதற்கு இது தான்பொருளென்று வரைந்து சுட்டலாகும் படியிருக்கின்றது. தேசசரித்திரம் போலப் பாஷைவரலாறு கூறல் இயலாது. இன்னவிஷயம் இக்காலத்தில் நிகழ்ந்ததென்றும் அதன்பயன் இன்னதென்றும் நிச்சயமாகத் தேசசரித்திரங்கூறும். பாஷைவரலாற்றிற் காலவரையதை கூறுவதெல்லாம் உத்தேசமுறை பற்றியேயாம். மற்று, நிகழ்ச்சிவரலாறும் பயனும் சிறிதளவு தெளிவாகக்கூறலாம். நூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றொடு நேரே சம்பந்தப் பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்கவேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும் அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இவைகளே இந்நூலின்கண் ஆங்காங்கு விரித்துக் கூறப் படுகின்றன. இந்நூலின் பொருளடக்கத்தை ஒருமுறை உற்றுநோக்கின் இந்நூலினியல்பு இன்னதென விளங்கும் இத்தன்மையான நூல்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் பல விருக்கின்றன. மற்றுத் தமிழ்மொழிக்கோ ஒன்றேனுமில்லை. ஆங்காங்கு வந்தவரும் போனவரும் தமிழைப் பற்றித் தத்தமக்குத் தோன்றியவைகளை வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஆங்கிலத்தில் மூலைக்குமூலை பல புத்தகங்களுள் எழுதி வைத்தவைகளே நிலதலாய்க் கிடந்தன. அவற்றைஆராய்ந்து பதர்களைந்து பணிகொள்வார் அரியராயினர். ‘தமிழ்ப் பாஷைச் சரித்திரம்’ என்பது தமிழிற் கலாகாயகப் பட்டப் பரீஷைப் பாடங்களு ளொன்று. இதற்குத் தக்க நூல்கள் அகப்படாது மாணாக்கர்கள் தவிப்பது கண்டிருக்கின்றோம். காலஞ்சென்ற தீ. மீ. சேஷகிரி சாஸ்திரியாரவர்களது ‘திரவிட சப்ததத்துவம்’ என்ற நூல் முன்னரே யேற்பட்டுள தமிழிலக்கணங்களைப் பாஷைநூ லமைதிகட்குத் தக்கபடி மாற்றிப் புத்திலக்கணமாக வகுத்ததொன்றாம். அது பொதுநோக்கமாய்ச் செல்லுதலின்றிச் சிறப்பு நோக்காய்ச் சொன்மரம்புஞ் சொல்லிலக்கணமுமே கூறிச்சென்றது. ஆகவே யாம் மேற்கூறியவாறு ஒரு நூல் செய்ய விரும்பித் ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்னும் இந்நூலைப் புனைந்து வெளியிடுகின்றேம். இதன்கண்ணே, மேற்புல விஞ்ஞானிகள் கண்ட பாஷை நுன்முறைகளின்படி தமிழ் மொழியின் தன்மை இஃதென வகுத்துக் கூறப்படுகின்றது. யாம் எமது ஆங்கிலக் கல்வியின் பயனாகப் பழைய தமிழ் நூற்கருத்துகள் சிலவற்றொடு மூரணிப் புதுக்கருத்துகள் சில ஆங்காங்குக் காட்டியிருத்தல் பற்றிப் பேரறிவாளர் எம்மை யிகழாது நூன்முழுவதும் உற்றுநோக்கி இஃது அமையும் அமையாதென இறுதியிற் கூறுக. தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவை குறையுமென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டொருகாரணமே காடடியிருக்கின்றேம். இன்னும் இந்நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம். இஃது எழுதுமிடத்து எமது ‘இயற்றமிழ் மாணவர்’ செய்தவுதவி யொருபொழுதும் மறக்கற்பாலதன்று. “அறிவெனப்படுவது மேதையார் சொன்னோன்*நல்" என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னுந் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகின்றேம். வி.கோ.சூ. I. EARLY HISTORY Ancient India: aborigines during the stone age and the subsequent age: the Dravidian inroad: the Nagas: the Tamils: the ancient state of the Tamils: the Tamils settle themselves in India: the coming of the Turanians (Mongolians, the yellow men of India): the intermixer of Turanians and Tamil elements; the Tamil language: its dialects: the relation of Tamil to the Turanian family of languages: the state of civilisation of the Tamils: the migration of the Tamils: the coming of the Aryans; the origin of the Tamil Alphabet; Tamil and Sanskrit; Sanskrit influence over the Tamil dialects. I. ஆதி வரலாறு. பண்டை இந்தியா; கற்கால மனிதர்; உலோககாலமனிதர்கள்; பிறர்வருகை; நாகர்கள்; தமிழர்; தமிழரது பண்டை நிலைமை; தமிழர் குடியேற்றம்; துரானியர் வருகை; துரானியர் கலப்பு; தமிழ்மொழி; தமிழின் வழிமொழிகள்; தமிழ் துரானிய பாஷையன்று; தமிழரின் நாகரிக நிலை; தமிழர் பரவுதல்; ஆரியர் வருகை; தமிழ் நெடுங்கணக்கு உற்பத்தி; வடமொழி தென்மொழி; தமிழின் வழிமொழிகள் திருந்தினமை. II THE INFLUENCE OF SANSKRIT. The nature of the Aryans: Sanskrit only a dead language; accession of Sanskrit words in TAmil; Sanskrit borrowed hardly any Tamil words; Sanskrit words adapted in Tamil; the rise of Buddhism; Tamil high and low; the rise of Jainism; Bilingualism; the prepon derance of the Sanskrit element; Doublets; Tamil grammar modified; Sanskrit and Tamil grammars organically different; the independence of the Tamil language; the defects of Sanskrit; Tamil Prosody: how far Tamil is indebted to Sanskrit; the opinion of the authour of the Prayoga Viveka. II. வடமொழிக்கலப்பு. ஆரியரியல்பு; வடமொழியின் எட்டு வழக்குநிலை; வட சொற்கள் தமிழிற் புகவும் தமிழ்சொற்கள் வடமொழியிற் புகாமை; வடசொற்கள் திரிந்து வழங்கப் பட்டமை; பௌத்தரெழுகை; செந்தமிழ் கொடுந்தமிழ்; சைனரெழுகை; மணிப் பிரவாள நடை; வடசொன் மிகுதல்; இரட்டைப்பதம்; தமிழிலக்கணந்திரிதல்; வடமொழி யிலக்கணமுந் தமிழ்மொழி யிலக்கணமும் வேறாமாறு; தமிழ்மொழியின் தனிநிலை; வடமொழியின் குறைவு; தமிழ் யாப்பு; வடமொழிக்குத் தமிழின் கடைமைப் பாடு; பிரயோக விவேகமுடையார் கூற்று. III THE THREEFOLD CLASSIFICATION. The nature of Iyal Tamil; the region where high Tamil prevailed; where low Tamil prevailed; works in Iyal Tamil; the relation of Iyal Tamil and Natakam; the nature of Isai Tamil; works in Isai Tamil; the relation of Isai to Natakam; the origin of Nataka Tamil; Sanskrit influence in Isai Tamil; the scarcity of works in Isai Tamil; the nature of Nataka Tamil; the importance of Nataka Tamil; the paucity of Nataka Tamil; the extinction of works in Nataka Tamil; Nataka Tamil produces good effects; the revival of Nataka Tamil; the existence of Nataka Tamil anterior to the Aryan influence. III. மூவகைப் பாகு பாடு. இயற்றமிழினியல்பு; செந்தமிழ்நாடு; கொடுந்தமிழ்நாடு; இயற்றமிழ் நூல்கள்; இயற்றமிழ்க்கும் மற்றைத் தமிழ்கட்கு முள்ள இயைபு; இசைத்தமிழி னியல்பு; இசைத் தமிழ்நூல்கள்; இசைத்தமிழ்க்கும் நாடகத் தமிழுக்கு முள்ள யியைபு; நாடகத்தமிழின் தோற்றம்; நாடகவியலுடையார் கூற்று; இசைத் தமிழில் ஆரியக் கலப்பு; இசைத்தமிழ்நூல்கள் அருகினமை; நாடகத்தமிழினியல்பு; நாடகத்தமிழின் சிறப்பு; நாடகத்தமிழின் வீழ்நிலை; நாடகத்தமிழ்நூல்கள் இறந்து பட்டமை; நாடகத்தமிழால் நன்மைமிகுமென்பது; நாடகத்தமிழ் மீட்டுந்தலையெடுத்தல்; நாடகத்தமிழ் ஆரியர் கலக்குமுன்னரே தமிழரிடத் துண்டென்பது. IV THE FIVE PARTS OF GRAMMAR How language is formed; the constant change of language; the origin of grammar as a check to the variability of language; Agastyam; Tolkapyam; the three divisions of Tamil Grammar; Porul Ilakkanam included Prosody and Rhetoric; Prosody separated itself from Porul thence the fourfold divisions of Tamil Grammar; works of Prosody; want of study of Porul; Tamil Rheotirc improved by Sanskrit;works on Tamil Rheotoric; the fivefold division of Tamil Grammar completed; works treating of the fivefold division of Tamil Grammar; Pattiyal; metrical Smoersaults; the general decay of Pattiayl and metrical Somesaults. IV. ஐவகை யிலக்கணம். பாஷையாக்கம்; பாஷையடிக்கடி மாறுபடுதல்; இலக்கணவரம்பு வகுத்தல்; அகத்தியம்; தொல்காப்பியம்; மூவகை யிலக்கணம்; பொருளிலக்கணத்தில் யாப்பணிகளடங்குமாறு; யாப்புத் தனிப்படப் பிரிந்து நால்வகையிலக்கணமாயினமை; யாப்பிலக்கண நூல்கள்; பொருளிலக்கண விலக்கியநூல்கள்; அணியிலக்கணம் ஆரிய மொழியால் விருத்தியாதல்; அணியிலக்கண நூல்கள்; சித்திர மீமாஞ்சையுடையார் கூற்று; ஐவகையிலக்கணமும் முற்ற அமைந்தமை; ஐவகையிலக்கணமுங் கூறும் நூல்கள்; பாட்டியல்; மிறைக் கவிகள்; பாட்டியலும் மிறைக்கவிகளும் பெரும்பாலும் அறிவுடையோராற் பாராட்டப்படாமை. V. THE ORIGIN AND THE ANTIQUITY OF THE LANGUAGE. Natural language; sound as an instrument; the various ways in which words are formed; imitative, emotional, and symbolic; the tonguehelp to gesture language; the decay of gesture language at the increase of tonguehelp; pronominal roots; language a human product; the opinion of the ancient Tamils on the origin of Tamil language; how intelligibility was possible; what are ancient languages?; Tamil one of them; the opinion of Valmiki and Vyasa; when language originated; classical writers on antiquity of Tamil; Kumariland submerged; Haeckel’s view. V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும். இயற்கைப்பாஷை; ஒலிக்கருவி; மொழித்தோற்றவகைகள்; போறல்வகை; கலைவகை; அறிகுறிவகை; நாவின்சைகை கைச்சைகைகட்கு உதவியாயெழுந்தமை; நாவின் சைகை மேற்படக் கைச்சைகை வீழ்ந்துபடுதல்; தன்மை முன்னிலைப் பகுதி கள்; பாஷை மக்காளாக்கப் பொருளென்பது; தமிழ்ப்பாஷையின் தோற்றத்தைப் பற்றி முந்தையோர்கூற்று; பாஷை யாவருக்கும் ஒருங்கே விளங்கியவாறு; தொன்மொழிகள்; பிறர் தமிழின் தொன்மை மாட்சிகொண்டமை, வால்மீகி வியாச* முனிவர்கள் கூற்று; பாஷை தோன்றிய காலம்; பண்டைத் தமிழ்நூலாசிரியர்கள் கூற்று; கடல் கொள்ளப்பட்ட குமரிநாடு; மேற்புலவிஞ்ஞானி யொருவர் கூற்று. VI. THE INDIVIDUALITY OF THE LANGUAGE. Each language has an independent charecter; the offshoots of a language vary in charecter; Malayalam is a dialect of Tamil became independent; the tamil Alphabet and its defects; the short உ; the different ways of Tamil pronunciation; word formation; the parts of speech; the classification of gender and its defects; classifiaction of tense; the present tense; particles; tense classification to suit modern Tamil; a dialogue;studyof words; the Tamil’s knowledge of mathematics; the richness of Tamil. VI. பாஷையின் சிறப்பியல்பு. ஒவ்வொரு பாஷையுந் தனித்தியங்கு மென்பது; தாய்மொழியும் வழிமொழியுந் தனிப்படு பெற்றியுடையன; தமிழும் மலையாளமும் வேறாமாறு; தமிழின் நெடுங்கணக்கு; அதன் குறைபாடு; குற்றியலுகரம்; உச்சாரணபேதங்கள்; பகுப்பிலக்கணம்; சொற்பாகுபாடு; பால்வகுப்பும் அதன் குறைவும்; காலப் பகுப்பு; நிகழ்கால விடைநிலை; பாஷை நடைக்கேற்ற காலப்பகுப்பு; எல்லாவற்றிற்குஞ் சொற்களுடைமை; ஒருசல்லாபம்; சொற்பொருளாராய்ச்சி; தமிழர் கணக்கறிவு; தமிழ்மொழியின் வாய்ப்புடைமை. VII. CHANGES IN THE LANGUAGE. The linguistic ‘natuaral selection’; change of form in words due to negligencd, laziness and economy of time and effort; illaustrations; change of word forms due to distinctions and ease of pronunciation; illustations; change due to false analogy and desire for symmetry; decency and euphemism; chane due to political fluctuations; accession of Hindustani words in Tamil classics; diphthongal changes; change in long vowels; change due to commercial activities; the differentiation of ர and ற; the differentiation of ழ and ள; Virasoliyam and Kandapuranam on ழ and ள; the stages of language; Tamil in the agglutinativeinflectional stage; the rapidity of change; Generalisation; Specialisation; Amelioration; Deterioration; Suggestion Freemasonry in words; chane due to Rhetoric; the development of Grammar; change due to mistakes in metrical dictionaries; the impossibility of correcting them; the relation between grammar and literature. VII.பாஷை வேறுபடுமாறு. பேச்சுவழக்குள்ள பாஷைகள் சதா வேறுபடுமென்பது; ‘இயற்கைப்பிரிநிலை’ பாஷைநூலினுள் கொள்ளப்படுதல்; சொல் லுருவஞ் சிதைதல்; பொச்சாப்பு, சோம்பல், காலச்சுருக்கம், முயற்சிச்சுருக்கம் முதலிய காரணங்கள்; மரூஉ, உச்சரிப்புரலம் முதலிய காரணங்கள்; மொழியிறுதிப்போலி; போலியொப்புமை, அழகு விருப்பம் முதலிய காரணங்கள்; இலக்கணப்போலி; இடக்கரடக்கல்; மங்கலம்; இராஜ்ய மாறுபாட்டுக் காரணம்; இந்துஸ்தானிச் சொற்கள் இலக்கியங்களி லேறினமை; சந்தியக்கரங்கள்; நெட்டுயிர்களின் நிலைப்பேற்றுக்குறைவு; வாணிகக்காரணம்; ரகர றகரவேறுபாடு; ழகரளகரவேறுபாடு; வீரசோழியமுங் கந்தபுராணமும்; ழகர ளகரங்களை ஒருவகைப்படுத்திச் செய்கைசெய்தல்; பாஷைநிலைகள்; தமிழ் தொடர்நிலையினின்று உருபுநிலைக்கேகும் நிலையிலிருத்தல்; வேறுபாட்டின்விரைவு; ஏட்டுவழக்கும் பேச்சுவழக்கும் வேறுபடுதல்; பொதுப்படை நியமம்; சிறப்புப்படை நியமம்; பொருள் முற்றினும் வேறுபடுதல்; உயர்பொருட்பேறு; இழிபொருட்பேறு; குறிப்புச்சொற்கள்; குழூஉக்குறி; அணிவகையான் வேறுபடுதல்; இலக்கணத்தினியக்கம்; நிகண்டு செய்பிழை இலக்கிய மேறுதல்; அவற்றைத் திருத்தலாகாமை; இலக்கிய விலக்கணவியைபு. VIII. THE RANGE OF THE LITERATURE Civilisation enriches literaure; the dignity of laguage; periods of literature; Early period; befoe 100 A.D; mediaeval mperiod; I.A.D. 100 to A.D.600. II A.D.600 to A.D. 1400; modern period; 1400 A.D. upwards; a bird’s eye view of the literature of the three periods. VII. நூற்பரப்பு. பாஷையின் நூற்பரப்பு நாகரிகவிருத்திக்குத் தக்கபடி வேறுபடுமென்பது; பாஷையின் கௌரவம்; காலப்பிரிவு; ஆதிகாலம் கி.பி. 100 க்கு முற்பட்ட காலம்; இடைக்கால முற்பகுதி கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம். இடைக்காலப் பிற்பகுதி கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்; பிற்காலம் கி.பி. 1400 முதல் இற்றைநாள் வரையிலுள்ள காலம்; இம்முக்காலத்து நூல்களின் இயல்பு. IX THE REFORM OF LANGUAGE. The slow adaptation of language to the growth of civilisation; the indispensability of reform; perspecuity of style; limitation of Sandhi; the adoption of punctuation; the introduction of foreign words. IX. பாஷையின் சீர்திருத்தம். தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக அமையாமை; சீர்திருத்தம் இன்றியமையாமை; ஏட்டுவழக்குநடை தெளிவுபெற அமைதல்; சந்திபிரித்தெழுதுதல்; குறியீட்டிலக்கணம் மேற்கொள்ளல்; ஆங்கிலச் சொற்களை யமைத்துக் கொள்ளுமாறு; புதியன புகுமாறு. X. CONCLUSION. The study of Tamil necessary; the excellence of Tamil; is Tamil a classical language?; the schoolBook Society and its work; the Madras DravidaBhasha Sangam; the Madurs New Tamil Academy and its work; The Tamil Societies adjoining English Colleges; the growth of a language is natural and unconscious; hence reforms not to be forced. X.முடிவுரை. தமிழ்ப்பயிற்சி அவசியமென்பது; தமிழ்ப்பாஷையின் ஏற்றம்; தமிழ் ‘உயர் தனிச்செம்மொழி’ யா வென்பது; பள்ளிக்கூட பாட நூற்சபையும் அதன் தொழிலும்; சென்னைத் திராவிட பாஷா சங்கம்; மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கமும் அது செய்தொழிலும்; ஆங்கிலக் கலாசாலைத் தமிழ்ச் சங்கங்கள்; பாஷை வேறுபடுவது தன்னியல்பாகவே யென்பது; புதியன புகுத்தல் இயலாதென்பது. I. ஆதி வரலாறு தமிழ்மொழியின் வரலாற்றைக் குறித்து யாம் ஏதேனுஞ்சொல்லப் புகுமுன்னர், அஃது ஆதிகாலத்தில் வழங்கிக் கொண்டிருந்த நாட்டின் இயல்பினைப்பற்றிக் கூறுதல் இன்றியமையாத தாகின்றது. ஆகவே பண்டைக்காலத்து இந்தியாவின் நிலைமையைப்பற்றிச் சிறிது கூறுவோம். பல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது. அக்காடுகளில் தீயவிலங்குகள் திரிந்து கொண்டிருந்தன. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்தகாலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்க ணிருந்தனரெனத் ‘தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை’யிற் கூறாநின்றனர். மரங்களினடியிற் புற்றுக்களிற் பெரும்பாம்புகள் மண்டலமிட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் நகராதல், ஊராதல், வழியாதல், வீடாதல் காண்டலரிது. இங்குமங்குங் காட்டுமனிதர் சிலர் கரடிகளெனக் குகைகளில் வசித்தனர். வேறு சிலர் குரங்குகளென மரங்களிற் படுத்துத் தூங்கினர். அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறிய வுடலினர். அவர்கள் காய்கனிவேர் கிழங்குகளையும் மான்பன்றி முதலிய மிருகங்களின் இறைச்சிகளையும் தின்று பிழைத்து வந்தனர். அன்னார் காலத்தில் வாள் முதலிய கருவிகளில்லை. ஆயினும் கூரிய சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு அறுத்தல் வெட்டுதல் முதலிய தொழில்கள் செய்தனர். ஆதலின் அவர்கள் ’கற்கால மனிதர்’ என்னப்படுவர். அவர்களுக்குக் கற்களைத் தேய்த்துத் தீயுண்டாக்கவும் தெரியும். இவ்வாறு வெகுகாலம் வாழ்ந்துவந்த பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிறிது நாகரிகமடைந்து சீராய்ப் பிழைக்கக் கற்றுக்கொண்டனர். காடுகளில் தாங்கள் உறைவதற்குச் சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டனர். இலைகளையும் விலங்குகளின் தோலையும் ஆடையென வுடுத்தனர். அவர்கள் வழங்கிய படைகள் வில்லும் அம்பும் கூரிய முனையுள்ள ஈட்டிகளுமாம். தம் முன்னோரிலும் உயரிய உணவு உண்டு வந்ததனால் அவர்கள் மிகப் பருத்தவர்களாயும் மிக்க பலமுள்ளவர்களாயு மிருந்தனர். மண்ணெடுத்துச் சட்டிகள் செய்யவும் அவற்றில் உணவாக்கவும் அவர்கட்குத் தெரியும். அதன்மேல் இரும்பு முதலிய உலோகங்களின் வேலை செய்யக் கற்றுக் கொண்டனர். அவற்றாற் கோடரி ஈட்டி முனை முதலியன செய்து கொண்டனர். இக்காலத்து மனிதர்களை ‘உலோககாலமனிதர்’ என்பர் பௌமிய நூலோர். கொஞ்ச காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக் கப்பாலிருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சம பூமிகளிற் கண்ட இக்காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேககாலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் ‘நாகர்கள்’ என்னப்படுவோர். இவர்களிற் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர். இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவார். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். அங்கே பொறுக்க முடியாக் குளிரினாலும், மழையின்மையாலும், நிலம் கற்றரையா யிருந்ததனாலும், ஆறுகளும் அதிகமில்லாமையாலும், தானியம் முதலியன விளையாமையாலும் இவர்கள் சீவனஞ் செய்வதற்கே மிகவுங் கஷ்டப்படுவார்கள்; தங்கள் ஆடுமாடுகளுக்காகப் புல்லைத் தேடிக்கொண்டு ஊரூராய்த் திரிவார்கள்; இத்தகையோர் இமயமலைக்குத் தெற்கே வெப்பமும் வெயிலு முடையனவாய்ப் பெரிதுஞ் செழிப்பாக வளர்ந்த புல்வெளிகள் நூற்றுக் காவதத்திற்குமேற் பரந்திருத்தலையும், அவ்வெளிகள் வழியாய்ப் பெரிய ஆறுகள் ஓடுதலையும், அங்கே பலவகைத் தானியங்களும் நன்றாய் விளைதலையும் கண்டாற்கைப் பற்றிக் கொள்ளாது எளிதின் விடுவார்களோ? ஆதலால் அவர்கள் இந்தியாவிற் புகுந்து முன்னிருந்தாரைத் துரத்தி விட்டு மேற்கூறிய புல்வெளிகளையே தமது சொந்த தேசமாக்கிக்கொண்டனர். இவர்கள் வடமேற்குக் கணவாய்களின் வழியாகவந்து சிந்துநதிச் சமவெளியிற்றங்கியிருந்து இடம் போதாமையாற் பிறகு கங்கைநதிச் சமவெளியிலும் குடியேறினாரகள். தமிழர்கள் எத்துணைக்காலம் இங்கே தங்கியிருந்தனரென்பது தெரியவில்லை. அதன்மேற் சிலகாலஞ் சென்றபின்னர், வடகிழக்குக் கணவாய்களின் வழியாகத் ‘துரானியர்’ என்னும் வேறொரு முரட்டுச் சாதியார் இந்தியாவுட் புகுந்து தமிழர்களை வென்று துரத்திவிட்டனர். அவர்கள் மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர்; ‘மஞ்சணிற மாக்கள்’ என்ற பெயரும் அவர்கட்குண்டு. அங்ஙனந் துரத்தப்படவே, தமிழர்கள் விந்தியமலையின் கிழக்குமுனையைச் சுற்றியும், கடற்கரையோரமாகவுள்ள நெருக்கமான சமவெளியினூடும் மேலும் மேலும் சென்றனர். சிலர் தம்மை வென்ற துரானியரோடு கூடிக் கொண்டு முன்னிருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். சிலர் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய்களின் வழியாகப் போய்த் தக்ஷிண பீடபூமியில் வந்து தங்கினர். இறுதியாக அநேக ஆண்டுகள் திரிந்து பலர் தென்னிந்தியாவிலுள்ள பெரிய சமவெளிகளில் வந்து தங்கிவிட்டனர். தமிழர்கள் தெற்கு முகமாக நோக்கி வரும்பொழுது பன்னெடுநாட் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தமையின் அவர்களுட் சிலர் இளைப்படைந்து இனிமேற் போதல் இயலாதென்று எண்ணி அங்கங்கே தங்கி விட்டனர். இப்படி அங்கங்கே நின்றுவிட்டோர் தமிழ்மொழியின் பாகதங்களை இன்னும் பேசிக்கொண்டு வாரா நிற்கின்றனர். வடமேற்குச் சிந்துநதிச் சமவெளியில் ஒருசாதியாரும் விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் மற்றொரு சாதியாரும் தமிழின் பாகதங்கள் இன்னும் பேசுகின்றனர். இனி இவ்வாறின்றித் தமிழர் இந்திய சுதேசிகளே யென்று கொள்வாருமுளர். வேறு சிலர் கடல் கொள்ளப்பட்ட ‘இலெமுரியா’ வென்னும் நாட்டினின்றும் தமிழர் பரவி இந்தியாவிலுட் புகுந்தனரென்பர். முதன் முதலில் தமிழர்கள் எல்லோரும் ‘தமிழ்’ என்ற ஒரே பாஷையைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்த பின்னர் அவர்கள் பேசிய பாஷை சிறிது சிறிதாக மாறுதலடைந்தது. ஒரே தமிழ்ப் பாஷையைப் பலவேறு விதங்களாகப் பேசத் தொடங்கினர். இவ்வாறு தமிழ்ப்பாஷையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலை நின்றனவாம். இக்கருத்தினையே காலஞ் சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள் தமது ‘மனோன்மணீய’ நாடக நூலில் தமிழ்தெய்வ வணக்கங்கூறுமிடத்து, “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற் கன்னடமுங் களிதெலுங்குன் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுழகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே” என்ற இனிய பாஷைகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க. மொழி நூற்புலமையும் வடநூற்புலமையும் ஒருங்கே நடாத்திக் காலஞ்சென்ற சேஷகிரி சாஸ்திரியவர்களும் தாமெழுதிய ‘ஆந்திர சப்ததத்துவம்’ என்ற நூலின் கண்ணே தெலுங்கிற்குத் தாய் தமிழென்றே கூறி அமைக்குமாற்றையுங் காண்க. தமிழர்கள் துரானியர்களால் வென் றடக்கப்பட்ட போது அத்துரானிய பாஷைச் சொற்களிற் சில தமிழ்ப் பாஷையின் கண்ணே புகுந்திருத்தலு மியல்பே. இனித் துரானியரை வடக்கிருந்து போந்த ஆரியர் வென்று துரத்தலும், அவர்கள் தெற்கே வந்து தமிழர்களுடன் கலப்பாராயினார். அப்பொழுதுஞ் சில துரானியபாஷைச் சொற்கள் தமிழ் மொழியின் கண்ணே இடம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே தமிழ்ப் பாஷையின்கண் முதன்முதற் கலக்கப் புகுந்தது துரானிய பாஷையே. சரித்திரவுண்மை யிவ்வாறா யிருந்தலின், தமிழ்ப்பாஷையைத் துரானிய பாஷையொடு சேர்த்து ஓரினமாக்கிப் பாகுபாடு செய்தல் அசம்பாவிதமாம். இதுநிற்க, அக்காலத்திருந்த தமிழரின் நாகரிகநிலை மிகவும் வியக்கத் தக்கதா யிருந்தது. அவர்கள் உழவுத் தொழிலில் மிகக் கைதேர்ந்தவர். அதிகாரஞ் செலுத்து முறையும் நன்கறிந்தவர். ஆகவே அவர்கள் தமக்குள்ளே தலைவர்களை யேற்படுத்திக்கொண்டு அமைதியுடன் அரசாட்சி செய்யத் தொடங்கினர். இவ்வாறு அமைதியுற்ற காலங்களே தேசாபி விருத்திக்கும், பாஷாபிவிருத்திக்கும் ஏற்றனவாம்; ஆதலின் தமிழ்நாடும் ஓங்கி வளர்வதாயிற்று; அதனோடு அருமையான சிற்சில தமிழ் நூல்களுஞ் செய்யுளுருவத்தில் ஏற்படுவனவாயின. தமிழர்கள் படைக்கலப் பயிற்சிசெய்து தெற்கே படையெடுத்துச் சென்று பல நூற்றுக்காவத நிலங்களைத் தமவாக்கிக்கொண்டு தமிழ்மொழியை ஆங்கெல்லாம் பரப்பினர். இவ்வாறு தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெருநிலப் பரப்புமாயிருந்தது. இதற்குக் ‘குமரிநாடு’ என்பது பெயர். தமிழர்களை வென்ற துரானியர் தொகை வரவரச் சுருங்கப் புகுந்தமையின், தமிழரே தலையெடுத்துத் தமிழ் மொழியையே யாண்டும் பரப்பி ஆளுவாராயினர். இப்படி யிருந்துவருஞ் சயமயத்தில், வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ளதும், ஐரோப்பாக் கண்டத்தி னொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்திநேவியம்’ என்ற இடத்தினின்றும் ‘ஆரியர்’ என்ற சாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்’ என்ற இடத்திற்றங்கினர். இவ்விடந்தங்கிய ஆரியர்களே ‘கைபர்கணவாய்’ வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமஇ தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள். இவ்வாறு ஆரியர்கள் பெரும் பிரயாணஞ்செய்து பற்பல விடங்கட்கும் பிரிந்துபோனமையால் அவர்களது பாஷையாகிய ‘ஆரிய’ மும் பல்வேறு வகையினவாயின. அவை ‘இலத்தீன்’, ‘கிரீக்கு’, ‘சமஸ்கிருதம்’, ‘எபிரேயம்’ என்பனவாம். இவற்றுள் ‘சமஸ்கிருதம்’ பேசும் ஆரியரே இந்தியாவிற்கு வந்தனர். வந்து இந்துஸ்தானத்திருந்த தமிழர்களையுந் துரானியர்களையும் வென்று துரத்திவிட்டனர். இவ்வாரியர் இந்தியாவிற் புகுமுன்னரே, தென்மேற்றிசையிலுள்ள அரபிக்கடல் வழியாகத் தமிழர்கள் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். மயிலினைக் குறிக்குந் ‘தோகை’ என்னுஞ் செந்தமிழ்ச்சொல் எபிரேய பாஷையில் ‘துகி’ என வழங்குதலுங்காண்க. வடமேற்றிசை வாணிகராகிய பின்ஷியர்கள் பலமயில்களைத் தம்மரசன் சாலமோனுக்காகக் கொண்டு சென்றுழி இத்தமிழ்ச் சொல்லையுங் கொண்டு சென்றனர். எகிப்தியருந் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களுடன் கி.மு. 500க்கு முன்னரே வாணிகஞ்செய்து வந்தனரென்பது மலையிலக்கே. அங்ஙனம் அவர்கள் வடமேற்றிசை யாரியர்களோடு வாணிகஞ் செய்யப்புகுந்தபோது கணக்கு முதலியன குறித்தற்கும் சிறு விஷயங்க ளெழுதுவதற்கும் எழுத்துஞ் சுவடியும் அவர்களுக்கு இன்றியமை யாதனவாயின. ஆகவே அவர்களே நெடுங்கணக்கு வகுத்தனர். அந்நெடுங்கணக்குத் தமிழ்நாடெங்கும் பரவிற்று. அதுமுதற் பேச்சுவடிவின் மட்டிலிருந்த தமிழ்ப்பாஷை ஏட்டுவடிவு மடைவதாயிற்று. பேச்சு வழக்குத் தழிழ் ஏட்டுவழக்கும் அடையும்போது சிறிதளவு வேறுபட்டே யிருத்தல் வேண்டும். அஃதாவது பேச்சுத் தமிழ் எழுதப்படும்போது திருத்தியே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஏட்டுவழக்குத் தமிழும் பேச்சுவழக்குத் தமிழும் என்றும் ஒன்றாயிருந்ததில்லை. எனவே ஏட்டுத்தமிழ்தான் இருந்தவாறே என்றும் பேசப்படவில்லை. இப்பொழுது பண்டை நூல்களிற் காணப்படுகின்றபடியே அக்காலத்துச் சாமானிய சனங்களும் பேசினார்களென்பது பொருந்தாது. முற்காலத்தில் சுவடியை ‘நெடுங்கணக்கு’ என்று கூறுதலும் எழுத்தறிவிற்கும் ஆசிரியனைக் ‘கணக்காயன்’ என்று கூறுதலுங் காண்க. “கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திர மற்றதனை நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன் புல்லறிவு காட்டி விடும்.” என்ற ‘நாலடியா’ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு, ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப்படிக்கத்தெரியும். ’எழுத்து’ ‘சுவடி’ யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டன ரென்பதும் பொருந்தாமையறிக. இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும், தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை ‘வடமொழி’ யென்று உரைப்பாராயினர். அது வடமொழி யென்னப் பட்டவுடனே தமிழ் மொழி ‘தென்மொழி’ யெனப்படுவதாயிற்று. தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமையற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமிழொடு மருவுமுன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலேதான் தமிழ்மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன. இவ் வழிமொழிகளிலே தெலுங்குதான் வடபொழியோடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப்பா டடைந்தது; தனாது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதைவிடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம். இவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமை யான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ ‘பழங்கன்னடம்’ என்றும் ‘புதுக்கன்னடம்’ என்றும் அஃது இரு வேறு பிரிவினதாகி யியங்குகின்றது. மழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர். இனி மலையாளமோ வெகுநாள்காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏற்குகறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் ‘எழுத்தச்சன்’ என்பானொருவனால் மிக்கத் திருத்தப்பாடு அடைந்த்து; உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது. மேற்கூறிய தெலுங்கு கன்னடம் மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையு முடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன. இனித் தமிழ்மொழியும் கலந்தியங்கு மாற்றைப் பற்றிச் சிறிது விரித்துரைப்பாம். ஆதிவரலாறு முற்றிற்று. II. வடமொழிக் கலப்பு வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர். “முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல் நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்” என்று ஆரியரை நோக்கி முழங்கும் ’கபிலரகவ’லையுங் காண்க. இன்னும அவர்தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும்அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ’கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார். இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழிழைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம். வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடி யியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகள்ளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரதிற் கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது. இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சம்ஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின. அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்திலும் வட சொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். ‘தொல்காப்பியம்’ என்னும் இலக்கணத்தினுள்ளும் ‘எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு’ என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை. பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டிலும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்க முற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப்புலவர்கள் தங்களாற் கூடிய மட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்க வொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றிவிட்ட, வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய்விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிது காலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிது காலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலே தான் ‘செந்தமிழ்’ ‘கொடுந்தமிழ்’ எனத் தமிழ் இரு பிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம். இனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத்தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பௌத்தரது முயற்சியா லேற்பட்ட கரைகள் ஆரியபாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்தசமய முந்தலை தாழ்ந்தது. இந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண்டனர்; அஃதன்றியும் வடமொழியின் கண் விசேஷ கௌரவ முடையராய் அதனைப் பெரிதும் பயில்வாராயினர். வடமொழியின் பாகதங்களையும் அவற்றி னிலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டனர்; இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ் மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களை யேற்றினர். அத்துணையோடமையாது ‘மணிப்பிரவாளம்’ என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்தபாஷையாம். மணியும் பவளமுங் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக் கின்பம் பயத்தல் போலத் தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த பாஷை கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. ‘ஶ்ரீபுராணம்’ என்னும் சைன நூல் முழுவதும் மணிப்பிரவாள மென்னும் இவ்வாபாச நடையின் இயன்ற தாமாறு காண்க. இவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்துகொண்டு செல்லாநிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப்புலவர் சிலர் தமிழ்மொழியை யப்பியசித்துக்கொண்டு நீதிமார்க்கத்தையும் சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்பேமெனப் புகுந்து, தமது கருத்துக்களை யெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப்படுத் துரைப்பாராயினர். ‘நாலாயிரப்பிரபந்தம்’ என்ற தமிழ்நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப்பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பலதிறத்தாலும் வடசொற்கள் வந்து தமிழின்கண் அளவின்றி யேறின. தமிழின்கணுள்ள ‘இரட்டைக்கிளவி’ யென்பது ஒருபுறமிருக்க, ‘இரட்டைப்பதம்’ என்பதொரு வகையும் மற்றொருபுறத்தி லேற்படா நின்றது. ஒரே சொல் நேரே வடமொழியினின்றும் தமிழிற்போந்து, வழங்குவதன்றியும், வட மொழியின் பாகத வழியாகவும் வந்து தமிழில் வழங்குகின்றது. உதாரணமாக, ‘விஞ்ஞாபனம்’ என்பது நேரே வடமொழியினின்றும் போந்தசொல்; ‘விண்ணப்பம்’ என்பது வடமொழியின் பாகத வழியாக வந்த சொல். இவ்விரண்டிற்கும் பொருளொன்றே. இவ்வாறு வேண்டாச் சொற்களும் தமிழின் கணேறின, ஏறுகின்றன, ஏறும்! தமிழ் மொழியின் நிலைமை யிவ்வாறாதலும், வடமொழி யிலக்கணத்தைக் கலந்து தமிழிலக்கணமும் வகுக்கப் புகுந்து விட்டனர் சிலர். ‘தொல்காப்பிய’த்திற்கு உரைவகுத்த ஐவருள் முதனால்வரும் ஏறக்குறையத் தமிழ்ப் போக்கையே பற்றி யுரைவகுத்துச் சென்றனராகச் சேனாவரைய ரொருவர்மட்டில் வடமொழிப்போக்கைச் சிறிதளவு கலந்து சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தனர். தனித்தமிழ்நூலாகிய ’திருக்குற’ ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே யுரைவகுத்தேகினர். ‘நன்னூல்’ செய்த பவணந்தியாரும், ‘கின்னூல்’ செய்த குணவீரபண்டிதரும் வடநூலிலக்கணப் போக்கைத் தழுவுவா ராயினர். ‘வீரசோழிய’மும் அதன் உரையுமோ சொல்ல வேண்டுவனவல்ல. இவை விசேஷமாய் வடமொழி யிலக்கணங்களைத் தமிழின்கட் புகுத்துவனவாயின. அதன் மேற் ’பிரயோகவிவேகம்’ என்னும் இலக்கண நூல்வகுத்த சுப்பிரமணிய தீக்ஷிதர் வடமொழிச் சத்தசாத்திரத்தைத் தமிழின்கட்கூறித் தமிழ்மொழியோ டொப்பிட்டுச் சீர்தூக்கி யாராய்வாராயினர். பின்னர் ‘இலக்கணக்கொத்துரை’ செய்த ஈசானதேசிகர் வடமொழி யிலக்கணத்தைத் தமிழொடு கலந்தனர்; கலந்தமட்டில் நில்லாது தமது நூற்பாயிரத்தின்கட் கூறிய சில கூற்றுக்கள் அறிவுடையோர் ஒதுக்கற்பாலன வாகின்றன. “அன்றியுந் தமிழ் நூற் களவிலை, யவற்றுள் ளொன்றே யாயினு தனித்தமி ழுண்டோ? அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் றறையவு நாணுவ ரறிவுடை யோரே;  ஆகையால் யானு மதுவே யறிக; வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும் இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக” என்ற விவையனைத்தும் ‘பாஷை நூல்’ என்னும் அரிய சாஸ்திரத்தில் பயிற்சியும் சரித்திரக்கண்ணும் இல்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களா மென்பது திண்ணம். இவை கேட்டுப் பேரறிவாளராயினார் நகைத்து விடுப்பரென்பது நிச்சயம். இவர் தேற்றேகார மிரட்டித்துக் கூறியதற்கு மாறாக, ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமது ’தொல்காப்பியப் பாயிரவிருத்தி’யிலே “தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளுங் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறமெனும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்டு முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று கூறுவராயினர். இது யாவரும் நன்குணர்ந்தது; தமிழ்மொழியும் வேறே; வடமொழியும் வேறே; இதன்கண் ஐயப்பாடு எள்ளளவு மில்லை. நன்னூலார் தமது பதவியலினிற்றிலும் மெய்யீற்றுப் புணரியலினீற்றிலும் வடசொல்லாக்கமும் வடசொற் சந்தியும் முறையே கூறுவாராயினர். இனிச் சம்ஸ்கிருத மொழியின் கண்ணே பால்வகுப்புச் சொன்னோக்கத் தாலேற்பட்டுளதேயன்றிப் பொருணோக்கத்தா லேற்பட்டிலது. உதாரணமாகக், கையெனப் பொருள்படும் ‘கரம்’ என்றசொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே, ‘தாரம்’ என்பது ஆண்பால், ‘களத்திரம்’ என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஓராற்றானமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொரு ணோக்கத்தாலேற் பட்டுளவே யன்றிச் சொன்னோக்கத்தா லெற்படவேயில்லை. இது தமிழ்மொழியின் சிறப்புக்களுள் ஒன்று. வடநூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோ டியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடையனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிக ளெல்லாம் பொருணோக்கப் பால்வகுப்புச் சிறப்புடையன. இவ்வுண்மை யொன்றே தமிழ் மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்க சான்று பகரும். அன்றியும், “கேட்கு போலவுங் கிளக்கு போலவும் இயங்கு போலவு மியற்று போலவும் அஃறிணை மருங்கினு மறையப் படுமே” என்ற நன்னூற் சூத்திரவிதியிற் கூறப்பட்டுள அணி நலன் ஆரியபாஷைச் சொற்களுக்குப் பெரும்பாலும் இல்லாது போதல் காண்க. அணி நூற் புலவர் முன்னர் ஆரியபாஷைக்கு அஃதோ ரிழுக்காமுமன்றே? அகப்பொருளும் அதன் றுறைகளும், புறப்பொருளும் அதன் றுறைகளும், இவ்விருவகைப் பொருள்களினியைபுகளும் வடமொழியினின்றும் என்றென்றும் கிடைத்தலியலாத அரிய தனித் தமிழ் விஷயங்களாம். இவற்றினின்றும் ஆதியிலிருந்த தமிழர்களது ஒழுக்க நிலை இத்தன்மைத் தென்பதும், அவர்களது நாகரிக நிலை இத்தன்மைத் தென்பதும் நன்கு விளங்குகின்றன. வடமொழியின் ‘இலகு குரு கணயதி விருத்தம்’ என்ற பாகுபாடுகட்குத் தமிழிலிடமேயில்லை. தமிழின் நால்வகைப் பாக்களும் மூவகைப் பாலினமும், அவற்றின் பாகுபாடுகளும், எதுகை மோனை நியமங்களும், அசை, சீர், தளை ஆகியவற்றினியல்புகளும் தமிழ்மொழிக்கே யுரியன. இவை வடமொழிக்கட் காணப்படுவனவல்ல. தமிழிற் ‘பா’ என்றத னிலக்கணமே மிகவும் இனிமை பெற வமைந்துளது. ’பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும், ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை" என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இது வடமொழியாளர்க்குப் புதுமையாம். தொல்காப்பியனார் யாப்பணிகளைப் பொருளதிகாரத்திலேயே அடக்கிச் சூத்திரஞ் செய்து சென்றனர். அதன்கண் ‘அணியியல்’ என்ற பெயரே காணப்படாது, ‘உவமவியல்’ என்ற தொன்று அதற்குப் பிரதியாகக் காணப்படுகின்றது. அவ்வுவமவியல் தானும் இக்காலத்தி லுலவுகின்ற அணிநூல்கள் போலாது மிகச் சுருங்கியதாய்ச் சிற்சில பொது தருமங்களை மட்டில் விரித்துக் கூறி, உவமவுருபுகளும் அவை வழங்குமாறும் இவையெனச் சுட்டிச் செல்லா நின்றது. இவ்விஷயத்தை இக்காலத் தியங்குறும் அணி நூல்களொடு ஒத்து நோக்குமிடத்துத் தமிழ் மொழி வடமொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள தென்பது தேற்றம். தமிழ்ப் பாடினியைச் சம்ஸ்கிருதப் பாணன் அணிந்து புனைந்தமை வெளிப்படை. வடமொழி யிலக்கணத்தொடு தமிழிலக்கணத்தைச் சீர் தூக்கி யாராய்வான் புகுந்த ‘பிரயோக விவேக’ நூலுடையார் அந்நூலினிறுதியிற் “சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும் வேற்றுமை கூறிற் றிணைபா லுணர்த்தும் வினைவிகுதி மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருயுந் தேற்றிய *விங்க மொருமூன்று மில்லை செழுந்தமிழ்க்கே." என்ற காரிகையில் இரு மொழிக்கும் வேறுபாடு கூறினார். ஆயினும் தமிழ்க்கும் வடமொழிக்கும் வேறுபாடு இவ்வளவுதான், இதற்குமேலில்லை யென்பது அவர் கருத்தன்று; " இது வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது" என்று அவர் தாமே அக்காரிகை யுரை முகத்து உரைத்தன னென்க. இதுகாறும் தமிழ்மொழியின் கண்ணே வடமொழிக் கலப்பைப்பற்றி ஓராற்றான் விரித்துரைத்தோம். இனித் தமிழ் மொழியின், மூவகைப் பாகுபாட்டினைப்பற்றி யெடுத்துரைப்பாம். வடமொழிக் கலப்பு முற்றிற்று. III. மூவகைப் பாகுபாடு தொன்று தொட்டுத், தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளுடையதென்று பலருங் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகுபாடுகளின் இயல்புகளைக் குறித்துச் சிறிது ஆராய்வாம். இயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண் இலக்கியங்களும் இலக்கணங்களுமாகிய யாவுமடங்குமென்க, எனவே இயற்றமிழ் ‘செந்தமிழ், கொடுந்தமிழ்’ என்ற வகையிலும் படுதலுமொக்கும். ஒப்பவே," செந்தமிழ் வசனநூல்களும் செந்தமிழ்ச் செய்யுணூல்களும், கொடுந்தமிழ் வசன நூல்களும், கொடுந்தமிழ் செய்யுணூல்களும் இவ்வியற்றமிழின்கண் அடங்குமென்பது தானே விளங்கும். தமிழிற் புலவரும், அல்லாரும் ஒத்தியங்காமையான், இப்பிரிவுக்கு இடமுண்டாயிற்று தமிழ் வழங்கும் நாட்டிற்குளளும் இப்பிரிவு ஏற்படுவதாயிற்று. " செந்தமிழ் நாடே, சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ் சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ் சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப" என்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு குறுநிலங்களுங் கொடுநதமிழ் நாட்டின்பாற்பட்டன. “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு ஈன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்” என்ற பழைய வெண்பாவினாற் கொடுந்தமிழ்நாடு இன்னதென்பது அறிக. இனிச் செந்தமிழ் நாட்டைச் சோணாட்டின்கண் வைத்துச் சூத்திரஞ் செய்தாருமுளர். “செந்தமிழ் நாடே, மன்ற வாணன் மலர்திரு வருளால் தென்றமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமு மாதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பரவுறு சோழனும் சைவமா தவருந் தழைத்தினி திருக்கும் மையறு சோழ வளநா டென்ப” என்பதுங் காண்க. இது தமிழர்கண்மீது சைனர்க்குண்டாகிய பொறாமை காரணமாக யெழுந்ததேயாம். முற்காலத்துச் சங்கச் செய்யுட்களும் அவற்றினுரைகளும், இடைக் காலத்துக் ‘கம்பராமாயண’ மாதிய நூல்களும்அவற்றி னுரைகளும், இக் காலத்து வெளிப்படுஞ் செய்யுணூல்களுமாகிய யாவையும் இயற்றமிழாம். இவ்வியற்றமிழ் இசைத் தமிழ்க்கும் நாடகத் தமிழ்க்கும் முன்னர்த் தோன்றியமை பற்றி அஃது இவ்விரண்டற்கும் முன்வைக்கப் படுவதாயிற்று.அன்றியும் இயற்றமிழே இவ்விரண்டற்கும் உயிரென விளங்குவது. இயற்றமிழின்றி இவ்விரண்டுந் தனித்தியங்குவனவல்ல. இசைத்தமிழென்பது, பண்ணொடு கலந்துந் தாளத்தொடு கூடியுமியங்குஞ் செந்தமிழ்ப் பாட்டுக்களானுங் கொடுந்தமிழ்ப் பாட்டுக்களானு மியன்ற இலக்கியங்களும் அவற்றினிலக் கணங்களுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண், கீர்த்தனங்களும், வரிப்பாட்டுக்களும், சிந்து ஆனந்தக்களிப்பு கும்மி தெம்பாங்கு முதலியனவும் அடங்குமென்க. இயற்றமிழின்கண் வழங்குஞ் சொற்களுஞ் சொற்றொடர்களுமின்றி இசைத் தமிழெங்ஙனம் இயங்க முடியுமோ? அன்றியும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் இசையெடுத்துத் தாளமறுத்துப் பாடப்படின், அவை இசைத்தமிழின் பாற்படும். இராகத்தோடு மட்டில் இயைத்துப் பாடப்படும் பாடல்கள் இயற்றமிழின்பாற் பட்டனவாக மதிக்கப் படுமேயன்றிப் பிறிதில்லை. தாளமும் உடன் கூடிய வழியே இசைத் தமிழின்பாற் படுமென்க. முக்காலத்து வழங்கிய ‘பெருநாரை’, ‘பெருங்குருகு’ ‘இசைநுணுக்கம்’, ‘தாளவகையோத்து’ முதலியனவும், இடைக்காலத்துத் தோன்றிய ‘தேவாரம்’ முதலியனவும், இக்காலத்து வெளிப்பட்டுலவுகிற ‘கந்த புராண கீர்த்தனை’ , ‘பெரிய புராண கீர்த்தனை’, ‘சங்கீத சந்திரிகை’ முதலியனவுமாகிய யாவையும் இசைத்தமிழாம். இவ்விசைத்தமிழ், நாடகத் தமிழ்க்கு முன்னர் தோன்றியமைபற்றி் முன் வைக்கப்படுவதாயிற்று. அன்றியும் இவ்விசைத் தமிழே நாடகத்தமிழிற்குச் சிறப்பும் விளக்கமும் தந்து நிற்பதாம். இசைத்தமி ழில்வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை; ஆடையற்ற நங்கை வெளிப்படாதவாறுபோல, இசையற்ற நாடகத்தமிழும் வெளிப்படுதலின்றி உள்ளடங்கியேயிருத்தல் வேண்டும். எனவே நாடகத் தமிழிற்கு இயற்றமிழும் இசைத் தமிழும் இன்றியமையாச் சிறப்பினவாம். ஏன்? இயற்றமிழும் இசைத் தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறக்குமென்று கூறுதலே அமைவுடைத்தாம். அன்றியும் நாமுணர்ந்த பிறபாஷைச் சரித்திரங்களிலும் உற்று நோக்குழி, இயற்றொடர் நிலைச் செய்யுட்களும் இசைத்தொடர் நிலைச்செய்யுட்களுமாகிய பாமுறைகளின் தொடக்கங்கள் ஒருங்கேனும் தனித்தேனும் நாடகக் கலையின் தொடக்கங்களுக்கு முன்னரே யிருந்துளவென்பது மலையிலக்கே. இவ்விரண்டுஞ் சேர்ந்துழியே நாடகமானது நாகரிகமுள்ள நாடுகளத்தினுங் கலைகளுளொன்றெனக் கருதத்தக்கவாறு தோன்றி வளர்கின்றது. இம்முறைக் கிணங்கியே நந்தம் தமிழ்மொழியின் கண்ணும் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழிற்கு முற்படுவன வாயின. அன்றியும் மேர் கூறியவாற்றான் இயற்றமிழும் இசைத்தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறந்ததென்பதும் பெற்றாம். இதுபற்றியன்றே தமிழ்மொழியை இயலிசை நாடகமென முப்பகுதியாக்கி முறைப்படுத் தோதியதுமென்க" என்ற நாடக வியலுடையவர் கூற்றையயும் உற்று நோக்குக. இனி இடைக்காலத் தொடக்கத்தில் தோன்றிய, இசைத் தமிழிலக்கிய நூலாகிய மூவர் ‘தேவார’ங்களும் தமிழிற்கேயுரிய பண்ணுந்திறமும் பயின்றனவாகி யொளிர்கின்றன. அத்தேவாரங்களுக்குப் பின்னரேற்பட்ட இசைத் தமிழிலக்கிய நூல்களில் வடமொழிபிராகவமைப்புந் தாளவமைப்புங் காணப் படுகின்றன அதன் மேல் இற்றை நாள்களிலுலவுறும் இலக்கியமும், இலக்கணமுமாகிய இசைத்தமிழ் நூல்களெல்லாம்’ மேளகர்த்தா’ என்னும வட நூலைத் தழுவியே அமைக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில நூல்கள் நாட்டியத்திற்குரிய வடமொழிப் பரத தாளங்களிலும் ஏற்பட்டிருக்கின்றன. இசைத் தமிழின்கண் ஏற்பட்ட வடமொழிக்கலப்பு இவ்வளவுதான். பழைய இசைத்தமிழ் நூல்களுட் பெரும்பாலன இறந்துவிட்டன. இரண்டொன்று மட்டில் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவைதாமுஞ் சின்னாட்களில் வெளியிடப் படாவிடின் அழிந்துபடினும் படும். இவ்வாறு இசைத்தமிழ் நூல்கட்குக் குறைவு நேரக் காரணம் யாது? இடைக் காலத்திலிருந்த மக்களுக்குள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப் புகுந்த போலியா* சில்லோரால் விளைந்த கேடாமிது. இவ்வுலக வாழ்க்கைக்கு அற‌ம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது’ என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடிய வேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து இசைத் தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்குமென் றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்] அம்முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ! அழிந்துபோயின. இப்போழ்து எஞ்சியிருப்பன மிகச்சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத்த‌ருள்க. மேற்கூறிய மருட்கையுணர்ச்சி இக்காலத்திலும் பலரிடங் குடி கொண்டிருக்கின்றது. இஃதென்னே! நாடகத் தமிழென்பது, கையில் நூலெடுத்துப் படித்தற்குரிய அவகாச மில்லாத வேலைக்காரர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும், நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டது; அது கேட்போர்க்குங் காண்போர்க்கும் இன்பம் பயவாவிடின், சாமானிய சனங்கள் அதை விரும்பிச் செல்லாராதலின் அஃது இன்பச் சுவையோ டியல்வதாயிற்று. உலகத்தினியல்பினை உள்ளதை யுள்ளவாறே புனைந்து காட்டுவது நாடகத் தமிழேயன்றி வேறில்லை. இயற்றமிழும் இசைத் தமிழுஞ் சேர்ந்தவழியே நாடகத் தமிழ் பிறந்ததெனிலும் நாடகத் தமிழிற்கு வேறு தனிப் பெருஞ் சிறப்புளது. முன்னையன இரண்டும் கேள்வி யின்பம் மட்டிலே பயப்பனவாய் நிற்கின்றன. இவ்விரண்ட னடியாகப் பிறந்த நாடகத் த‌மிழோ கேள்வி யின்பம் பயப்பதேய‌ன்றிக் காட்சியின்பமும் உடன்பயக்கின்றது. இச்சிறப்புப் பற்றியே பிற நாடுகளிலுள்ள பிற பாஷைப் புலவர்கள் நாடகங்களை மிக்க மேன்மை யுடையனவாக மதிக்கின்றனர். இத்துணைப் பெருமை வாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை? “தமிழ் நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவே யென்பது துணியப்படும்.அது கடவுளர் திருவிழாக் காலங்களில் ஆடல்பாடல்க ளிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதனின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர் கதை நடையான மனப்பாடங்களும் உடன்கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள‌ சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் ‘வேத்தியல், பொதுவியல்’ என்ற இருபிரிவினதாகி அரசர்களாலும் ஏனையோராலும் ஆதரித்து வளர்க்கப் பட்டது. கி.மு. மூன்றா நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனிலுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத்தமிழ் உயர்நிலை யுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்டானதொரு தொழிலென்றே ஆதியின் மதிக்கப்பட்டது” என்று ’நாடகவிய’லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க. இவ்வாறு தோன்றிவளர்ந்த நாடகத் தமிழ் வீழ் நிலையடையப் புகுந்தது. அதற்குற்ற காரணம் யாது? ஒழுக்கநிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ்சைனரும் நாடகக்காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்ற‌ போலிக் கொள்கையுடைய‌ராய்த் தமது நூல்களிற் கடியப்படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழவொட்டாது அடக்கிவந்தனர்.ஔவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினையச் சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழைக் கடிந்தது ஓராச்சரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத் த‌மிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது? ஆதலின் நாளாவட்டத்தில் அது சிறிது சிறிதாக வீழ்ந்துகொண்டே வாராநின்றது. அதன்மேல் இயற்றமிழ் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத்தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின. இவ்வாறு நாடகத்திற்கு நாற்புறமும் தடைகள் அமைக்கப்பட்டமையின் அஃது அழிநிலையடையத் தலைப்பட்டது. பண்டிதராயினார் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே, அது பாமரர் கையக‌ப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது. அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த ‘பரதம்’ ‘அகத்தியம்’ ‘முறுவல்’ ‘சயந்தம்’ ‘குணநூல்’ ‘செயிற்றியம்’ ‘மதிவாணர் நாடகத்தமிழ்நூல்’‘கூத்த நூல்’ ‘நூல்’ என்ற நாடகத்தமிழ் நூல்களெல்லாம் யாண்டுப்போயொளித்தன? ‘சிலப்பதிகாரம்’ என்னும் நாடகக் காப்பியமட்டிலே தப்பித் தவறி வெளியேறிவிட்டது. அதனை வெளிப்படுத்திய பண்டித சிகாமணி சாமிநாதையர்க்குத் தமிழுலகஞ் செய்யக்கடவ கைம்மாறென்னே! இனிப் பரத சாஸ்திரமும் காமக்கணிகையர் வயப்பட்டுத் தாழ்வடைந்து நிற்கின்றது. அதனையும் அறவொழிக்கப் புகுந்து முழங்குகின்றனர் சிலர்.எனினும் கி.பி. பதினேழா நூற்றாண்டினிறுதிதொட்டுக் கூத்து நூல்கள் சில,வேர‌ற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்றுமேவி, இழிசினர் நடக்கு மியல்பினவாகிக், கூத்தும் பாட்டுங்கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் செய்த ’இராமநாடக’மும் குமரகுருபரசுவாமிகள் செய்த ’மீ*னாஷியம்மை குற’மும், திரிகூடராசப்பகவிராயர் செய்த ‘குற்றாலக் குறவஞ்சி’யும், இக்கூத்து நூலின் பாற் படுவனவாம். ’முக்கூடற்பள்ளு’ ‘பறாளை விநாயகர் பள்ளு’ முதலியனவுங் கூத்து நூல்களேயாம்.இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலைமை சான்ற பாவல‌ர் இயற்றியனவாம். ‘சுத்தாநந்த‌ப் பிரகாசம்’ என்றதோர் பரதநூல் இடைக்காலத்தின் தொடக்கத்தி லேற்பட்டுள்ளது வெளிப்படாமலிருக்கின்றது. பின்னர் கி.பி பதினெட்டாநூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்தநாவலர் என்பார் ‘பரதசாஸ்திரம்’ என்றதோர் நூல் செய்தனர். நாடகசாலையை உலகத்தின் பிரதிவிம்ப மென்றெண்ணி ஆங்கு நடித்துக் காட்டப் படுவவற்றுள் தமக்குவேண்டிய நற்பகுதிகளைமட்டி வேற்றுப் போவதே நன்மக்க ளியல்பு. உழைத்த உள்ளத்திற்கு இன்பந் தந்து ஊக்கம் விளைவிப்பன நாடகங்களே. சிற்சிலர் அறிவுதிரிந்து வேறுபட்டாராயின் அஃது அவரது இயற்கைத் தன்மைகளு ளொன்றாமே யன்றி நாடகத்தால் விளைந்த செயற்கைத் தன்மையன்றாம். தவறுள்ள விடத்திலன்றே திருத்தம் வேண்டும்? புண்ணுள்ள விடத்திலன்றே சிகிச்சை செய்யப்படும்? மக்கள் சிலர் தமது தீக்குணத்தால், நாடகசாலை சென்றும் நாடகங்கள் படித்தும் கெட்டாராக அதனைக் காகதாலியமாய் நாடகத்தில் தலையிலேற்றி, நாடகத்தமிழே தீதென்று கடிதல் எவ்வாறு ஏற்புடையதையாகும்? காரணமொரு புறத்திலிருப்ப, அதனைக்கண்டு பரிகரிக்கமாட்டாது மயங்கிக் காரணமல்லாதவற்றைக் காரணமென்று கூறுதல் தருக்க நூற் குற்றமன்றோ? “நீயுந் தவறில்லை நின்னைப் புறக்கடைப் போதர விட்ட *துமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறைபறைந் தல்லது செல்லற்க வென்னா விறையே தவறுடை யான்" என்று ‘குறிஞ்சிக்கவி’ யிற் கூறினதை யொக்கும் இவர் செயல். இது நிற்க, சென்ற சில்லாண்டுகளாக, நாடகத்தமிழ் அறிவுடையோர் சிலரது உதவிகொண்டு தலையெடுத்து வளரா நின்றது. இதற்கு வடமொழி நாடகப்பயிற்சியும் ஆங்கிலநாடகப் பயிற்சியும் மிகப் பயன்படுவனவாயின. இவ்வாறு புதுவழியிற் புனையப்பட்டு வெளிப்படும் நாடகங்கள் இன்னும் அதிகரித்தல் வேண்டும். இவற்றை யொழுங்கு படுத்துதல் கருதி, யாம் ‘நாடகவியல்’ என்றோர் இலக்கண நூல் செய்திருக்கின்றனம். இனிச்சிலர், ‘நாடகம்’ என்ற சொல் வடசொல்லாதல் கண்டு, ஆரியரொடு கலந்த பின்னரே தமிழர்களிடத்திற் நாடகத்தமிழ் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்கின்றனர். இக்கூற்று வடமொழியில் ‘வாய்’ என்பதற்குத் தக்க சொல்லில்லாமையால் வடமொழியாளர்க்கு வாயில்லை யென்பது போலும். அஃதன்றியும் ‘கூத்து’ என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது; கூத்தென்பது பொது; நாடகமென்பது சிறப்பு. கூத்துப் பலவற்றுள், நாடகமென்பது கதை தழுவிவரும் கூத்து, எனவே நாடகமென்ற சொல்வழக்கின் முன்னரே, நாடகத் தொழில் வழக்கும், நாடக நூல் வழக்குந் தமிழர்மாட்டுண்டென்பது பெற்றாம். மூவகைப் பாகுபாடு முற்றிற்று IV. ஐவகை யிலக்கணம் பாஷையாவது, மக்களது இயற்கை வேட்கையில் தோன்றி, அவரது நாகரிக விருத்தி முறைக்கேற்ப் வளர்ந்து வருவதோர் மக்களாக்கப் பொருளாம். அது சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்களாலாயது; இவ் வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களாயின; இச்சொற்கள் தாமும் பகுதி விகுதி இடைநிலை முதலிய பல வுறுப்புக்களாலாயின. இவ்வுறுப்புக்களுள்ளும் பகுதிகளெல்லாம், பெரும்- பான்மையும் ஆதியிலிருந்த தமிழ்மக்கள் சொற்சொல்லத் தொடங்கிய காலத்துப் பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற்களாம்; சிறுபான்மை ஒலிக்குறிப்பு வியப்புக் குறிப்பு முதலியகாரணங்கள் பற்றி வந்த சொற்களாம். இனி விகுதி முதலாயின வெல்லாம் ஒரு காலத்தில் முழுமுதற் சொற்களாய்ப் பொருளறிவுறுத்தி நின்று, பின்னொரு காலத்து மக்கள், குறிப்பின்மை, சோம்பல், பொச்சாப்பு, முயற்சிச் சுருக்கம் ஆகிய காரணங்களாற் சொற் சோர்வுபட மொழிதலாற் பலவாறு திரிந்து மருவி இடைச் சொற்களென்று வழங்கப் படுவனவாயின. நாகரிகம் முதிருந்தோறும் முதிருந்தோறும் பாஷை மாறுபட்டுச் சொற்களைச் சிதைத்து வழங்கும் வழக்கம் மக்களுக்குப் பல அசௌகரியங்கள் விளைவித்தன. தமிழ்ச்சொற்களை மாந்தர் மேலும் மேலுஞ் சிதைத்து வழங்காதவாறு, ஆசிரியர் அகத்தியனார் தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி, ஆச்சொற்களை மேல்வழக்கு முறைகாட்டி வரம்பறுத்து இலக்கண நூல்கள் வகுத்துத் தமிழ்ப் பாஷையை யொழுங்குபடுத்தி நிறுத்துவாராயினர். இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாத பாஷைகளெல்லாஞ் சில சிதைந்து வழங்கி இறுதியில் உருக்குலைந்து வழக்கமற்று ஒழிந்துபோம். மேற்கூறியவாறு தமிழ்மொழிக்கு முதன்முதல் இலக்கண நூல் வகுத்தவர் அகத்தியனார். அவர் இயலிசை நாடகமென்ற முத்தமி ழிலக்கணமும் முறைப்பட வகுத் தோதினார். இசைநாடகத் தமிழிலக்கணங்களை யெடுத்துக் கூறாது இயற்றமிழிலக்கணத்தை- மட்டில் வகுத் தோதினார் தொல்காப்பியனார். இப்பொழுது ‘அகத்தியத்’தின் சூத்திரங்கள் சிற்சிலமட்டில் ஆங்காங்குத் தொல்லை தூதுரைகளிற் காணப்படுகின்றனவேயன்றி நூன் முழுதுங் காணப்படவில்லை; ஆகவே ’தொல்காப்பிய’ மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது; இனியும் இலங்கா நிற்கும். இவ்வியற்றமி ழிலக்கணநூல் ‘எழுத்து’, ‘சொல்’, ‘பொருள்’ என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது. எழுத்ததிகாரத்தில் எழுத்தினியல்புகளும், எழுத்தானாகிய மொழிகளும் அவற்றின் புணர்ச்சிகளும் முதலாயின விரித்துக் கூறப்பட்டன. சொல்லதிகாரத்திற் சொல்லின் பாகுபாடுகளும், அவற்றினியல்புகளும் முதலாயின விரித்துரைக்கப்பட்டுள. மற்றுப் பொருளதிகாரத்திலோ களவியலுங் கற்பியலுமாகிய அகப்பொருளும் அவற்றின் துறைகளும், புறப்பொருளும் அவற்றின் துறைகளும், மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியலகளும் கூறப்பட்டிருக்கின்றன. இனி ஐவகையிலக்கணங்களாவன ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ யென்பன. இவ்வைந்தனுள்ளே ’தொல்காப்பிய’த்தில் முதல் மூன்றை மட்டிலே விரித்துக் கூறுவார், செய்யுளிய லென்றதன் கண்ணே யாப்பை விரித்தோதியும், உவமவியலென்றதன் கண்ணே அணியை யெடுத்தோதியும் ஓராற்றான் ஐவகை யிலக்கணமுங் கூறினாராயினார். அன்றியுந் தொல்காப்பியனார் காலத்தே ஐவகை யிலக்கணமென்ற பாகுபாடின்றி யிருந்திருத்தலு மியல்பே; அல்லது யாப்பணிகள் பொருளதிகாரத்தின் பகுதிகளெனவே கருதப் பட்டிருந்தன வென்றலும் அமையும். கடைச்சங்கத்தார் காலத்தி லேற்பட்ட ‘இறையனாரகப் பொருளுரை’யிற் " பெய்தபின் அரசன் நாடு நாடாயிற் றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மெனவந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, ’என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே? பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெர்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப" என்ற கூற்றினை உய்த்து நோக்கி யுணரும்போது, அக்காலத்தில் ‘எழுத்து, சொல், பொருள்,யாப்பு’ என நால்வகையே வழங்கின வென்பது துணியப்படும். அஃதாவது தொல்காப்பியனார் காலத்திற் பொருளதிகாரத்திலுள்ளடங்கிய யாப்பு, கடைச் சங்கத்தார் காலத்தில் அதனின்றும் பிரிந்து தனித்து ஓரதிகாரமாயிற்று என்பதாம். அதன்பின் யாப்பதிகாரம் மிக்க சிறப்படைந்து பல்லோராலும் பாராட்டப் பட்டது. அக்காலத்திருந்த புலவர் பலரும் யாப்பு நூல்கள் பல இயற்றினர். காக்கைபாடினியர், அவிநயனார், மயேச்சுரனார் முதலாயினார் தத்தம் பெயரால் யாப்பிலங்கணங்கள் வகுத்தனர். பின்னர் ‘யாப்பருங்கலம்,’ ‘யாப்பருங்கலக் காரிகை’ என்ற நூல்கள் வகுக்கப்பட்டு வழங்குவன வாயின. இடையிற் பொருளதிகாரப் பயிற்சி குன்றியபோது ‘இறையனாரகப் பொருள்’ என்ற சிறிய இலக்கண நூலும், மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய ‘திருக்கோவையார்’ என்ற இலக்கண நூலும் ஏற்பட்டன. அதன் மேற் சில புதிய கருத்துக்களை யுடன்கூட்டி நாற்கலிராஜ நம்பி யென்பவர் ‘அகப்பொருள் விளக்கம்’ என்ற இலக்கண நூலியற்றினர். பின்னர்க் ‘கல்லாடம்’, நம்மாழ்வார் செய்தருளிய ‘திருவிருத்தம்’ என்ற அகப்பொருளிலக்கிய நூல்கள் வெளிப்போந்தன. ஐயனாரிதனார் என்பவர் ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்ற நூல் வகுத்தனர். இவ்வாறு நால்வகை யிலக்கணமே சிலகாலம் வழங்கி வந்தன. அதன்மேல் வடநூல்வாணரோடு ஊடாடி ஐந்தாவது வகை யிலக்கணமாகிய அணியதிகாரத்தையுந் தமிழ்ப் புலவர்கள் விருத்தி செய்து கொள்ளப் புகுந்தனர். ‘அணிநூல்’, ‘தண்டியலங்காரம்’ முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுட் பின்னதே தமிழ் மக்களுட் பயிற்சிமிக்குடையதாய் விளங்குகின்றது. இந்நூலாசிரியர் பொது வணியியல், பொருளனியியல் சொல்லணியியல் என்ற மூன்று பிரிவினில் தம்நூலை முடித்திருக்கின்றனர். பொதுவணியியலிற் பொதுவாகப் பலவகை கலப்பாடுகளும் புனைவு முறைகளுங் கூறப்பட்டுள. பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந்தணிகள் கூறப்பட்டுள. இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல், “உவமை யென்னுந் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய வாங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவ ரிதய நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே” என்ற அவரது ‘சித்திரமீமாஞ்சைக்’ கூற்றினான் விளங்கும். இனிச் சொல்லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள. மற்று, ஐந்திலக்கணங்களையும் முற்றத் தனித்தனி கூறும் நூல்கள் மிகச் சிலவே. அவைதாம் ‘வீரசோழியம்’, ‘இலக்கண விளக்கம்’, ‘தொன்னூல் விளக்கம்’ என்பனவாம். வீரசோழியம் பெரும்பாலும் வடநூல் முறையையே தழுவிச் செல்வது. இலக்கண விளக்கமுடையார் யாப்பணிகளைப் பின்னூல்கள்போல விரித்துக் கூறினும் அவற்றைப் பொருளதிகாரத்தின் கண்ணேயே யடக்கிக் கூறினர். தொன்னூல் விளக்கமுடையோர் பொருளதிகாரத்தைச் சுருகிக் கூறிலும் யாப்பணிகளை விளங்கக் கூறினர். தண்டியலங்காரம்போலத் தனியே அணியிலக்கணங் கூறுவதாய், ஆனால் அதனினும் விரிந்ததாய், ‘மாறனலங்காரம்’ என்றதோர் நூல் ஏற்படுவதாயிற்று. இது மிகச் சிறந்ததோர் நூல். அதன் மேற் ‘குவலயாநந்தம்’ என்ற வடமொழி யலங்காரசாஸ்திரம் தமிழின்கண் மொழிபெயர்க்கப் படுவதாயிற்று. இது புதுமை வழியிலியன்றதோ ரினியநூல். இதன்கண்ணே உவமையணி முதல் எதுவணியீறாக நூறணிகள் கூறப்பட்டுள. இவ்வாறு தமிழ்மொழி ஐவகை யிலக்கணமு முடையதாய நிலைமை யெய்தி விளங்கா நின்றது. பவணந்தி முனிவர்செய்த ‘நன்னூல்’ எழுத்துஞ் சொல்லுந் தெளிவாகவும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறுகிறது. ‘நேமிநாதம்’ என்றதும் அப்படியே. இனிப் ‘பாட்டியல்’ என்னுமோ ரிலக்கணப் பகுதியுளது. அதனியல்பு சற்றே விரித்துரைக்கற் பாலது. அது தமிழிற் கூறப்படும் தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களி னிலக்கணங்களும், பாடுவோனுக்கும் பாடப்படுவோ னுக்கு முள்ள எழுத்துப் பொருத்தம் மங்கலப்பொருத்தம், முதலியனவும், ஈச்செழுத்து அமுதவெழுத்தென்ற பாகுபாடும், ஆனந்தம் முதலிய குற்றங் களும் இவை போல்வன பிறவும் விரித்துக் கூறுவதாகும். ‘வெண்பாப்பாட்டியல்,’ ‘வரையறுத்தபாட்டியல்’ என்ற நூல்களெல்லாம் பாட்டியல் கூறுவனவே. இலக்கண விளக்கத்தி னிறுதியிற் ‘பாட்டியல்’ என்றதோரியலும் யாத்துக் கோக்கப்பட்டுளது. அணிகளுட் சொல்லணிகளே விசேடமாய் நல்லிசைப் புலவர்களான் மதிக்கப்படுவனவல்ல. முற்காலத்துச் சங்கச் செய்யுட்களிலெல்லாம் சொல்லணிகள் காண்டலரிது. இச்சொல்லணிகளிலும் சித்திரகவிகள் மிகவு மொதுக்கப் படுவனவாயின. ‘காஞ்சிப்புராண’ மாதிய சிலநூல்களே யிவற்றுட் சில கொண்டியங்குகின்றன. மடக்குகளெல்லாம் விசேடமாய் நூல்களிற் பயின்று வராமல் அவற்றுள் ஆங்காங்கு வரும். இடைக்காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் நாடுபவராய்ச் சொல்லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள் யமகம், திரிபு முதலிய செய்யுட்கள் பல வியற்றினர். பின்னர்த் திரிபந்தாதிகளும் யமக வந்தாதிகளும் சிலேடை வெண்பாக்களும் அளவிறந்தன வெழும்பின. இவையனைத்தும் பெரும்பாலும் பொருட்செறிவிலவாய் வீண் சப்தஜாலங்களாய்மட்டில் முடிந்தன. இக்காலத்தினும் தென்னாட்டிற் புலவர் பலர் யமகந்திரிபு பாடுதலையே பெரிதாகவெண்ணிவாணாளை வீணான் கழிப்பர். சொன்னலத்திலும் பொருணலமே சிறந்ததெனப் பேரறிவாளர் யாவருங் கூறுவர். யமகந்திரிபுள்ள பாடல்களை ‘உயிரில்லாப் பாட்டுக்கள்’ என்றும் கருத்துநலம் வாய்ந்த கற்பனையுள்ள பாடல்களை ’உயிருள்ள பாட்டுக்கள் என்றும் அறிவுடையோர் பலர் கூறக்கேட்டிருக்கினறனம். இஃதுண்மையே யென்பது திண்ணம். இவ்வாறவர்கள் கூறுதற்குற்ற காரணங்கள் யாவென்று ஆராய்வோம். முதலாவது: மிறைக்கவிகள் பாடுமிடத்து மிக்க காலஞ் செல்லும்; அப்படிக் காலஞ் சென்றும் சிற்சில வேளைகளில் அவைகள் பாடுவோரிஷ்டப்படி யமையாமற் போவதுமுண்டு. இவ்வாறு முற்கிமோதி முனைந்தடித்து மிறைக் கவிகளைச் சொல்லளவால் ஒருவாறமைத்து முடித்த பின்னரும் அவை சிறந்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றின்கட் பொருணலமில்லை. இரண்டாவது: கவிகளியற்றுவது யாவர்க்கும் பயன்படல் வேண்டுமென்பது கருதி. அக்கவிகளினும் சில, திரிசொற்களா லமைத்து விட்டாற் படிப்பவருட் பலர் திகைப்பர். இவ்வாறிருக்கச் செயல்படுங் கவிகளோ மிறைக்கவிகள்; அம்மிறைத் தன்மையோடு இலக்கணச்சந்திகளுஞ் செறிந்தன. எதிர்பாராதபடி சொற்கள் பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக் கிடந்தன. இப்படியென்றால் இம்மிறைக் கவிகள் யாருக்கபயோகம்? மிறைக் கவிஞன்தானே மகிழ்ந்து கொள்ளதற்கு அவை ஒரு வேளை பயன்படலாம். ‘வகையுளி’ என்றதற்கு வேண்டிய உதாரணங்கள் இம்மிறைக் கவிகளிற் காணலாம். மூன்றாவது: இத்தகைய மிறைக்கவிகள் படிப்போனது காலத்தையும் வீணாக்கிப் பலவிடங்களினும் அவனை மயங்க வைக்கின்றன. இத்தன்மையான இடர்ப்பாடுகள் நிரம்பிய மிறைக்கவிகள் நந்தமிழ்ப் புலவர்கள் மனங்களைக் கவராதொழிவனவாக. இவ்வாறே முற்கூறிய பாட்டியலுட் கூறப்பட்டுள பொருத்தங்கள் முதலியனவும், ஆனந்தக் குற்றம் முதலியனவும் நாளாவட்டத்திற் பயனிலவாய்க் கழிந்துபடுமென்பது தோன்றுகிறது. அநேகர் இக்காலத்தில் அவற்றைக் கவனிப்பதில்லை. கருநாடகப் புலவர்களு இரண்டொருவர் மட்டில் அவற்றைப் பிடித்துக்கொண்டு அவஸ்தைப்படுகின்றனர். அவர்களும் அவற்றை விரைவிற் கைவிடுவார்களென்பது சொல்லமலே யமையும். இனிப் ’பத்துப்பாட்டுரை’யில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் “நூற்குற்றங்கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே ‘தன்னானொரு பொருள் கருதிக்கூறல்’ என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினுங் கொள்ளா ரெனமறுக்க” என்றுரைத்த வுரை யாவருங் கவனிக்கத்தக்கது. இதுகாறும் தமிழ் மொழியின் ஐவகை யில்கணங்களையும் குறித்துக் கூறினோம். இனித் தமிழ்மொழியின் தோற்றமும் தொன்மையும் பற்றி விரித்துரைப்பாம். ஐவகை இலக்கணம் முற்றிற்று. V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும். உலகின்கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள் அடிக்கடி தங்கள் கருத்துக்களை யொருவரைகொருவர் வெளியிட்டுக் பொள்வது அவசியமாயிற்று. ஆகவே அவர்கள் கைவாய் முதலிய உறுப்புக்களாற் பலவிதச் சைகைகள் செய்து காட்டித் தங்கள் கருத்துக்களை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை ‘இயற்கைப் பாஷை’ யென்பர் சிலர். இவ்வியற்கைப் பாஷை முதலிற் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வியளவினும் பரவிற்று; அஃதாவது, சில ஒலிகளும் ஒலிக் கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாக அச்சைகைகளுடன் கூடின. அவ்வெளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவை தாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறி வகையானும் எழுதப்படும். பேச்சு நிலைக்கு வாராது சைகை நிலையில் நின்ற காலத்திலெல்லாம் தமிழ் மக்கள் புலி முதலியவற்றைக் கொன்று வேட்டைத்தொழில் செய்து வந்தனர். இவ்வேட்டைத் தொழிலைச் செவ்விபெற நடாத்துவதற்கு மிருகங்களின் ஒலிகளை யுற்றுக் கேட்டு நன்குணர்ந்து அவை போலத் தாமுங் கத்தி அவற்றை ஏமாற்றித் தம்வலைப் படுத்தினர். வேட்டையாடுதலைப் பயன் கருதியதோர் தொழிலாகவே முற்றும் மதித்தல் நேரிதன்று. இஃது ஆதிமக்களால் விளையாட்டுத் தொழிலாகவும் கருதப்பட்டு வந்தது. இக்காலத்தினும் வேட்டையாடுதல் பலர்க்குப் பிரீதியானதோர் விளையாட்டாம். இவ்வாறு ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதாற் பலவகைப்பட்ட மிருகங்களினொலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே யவற்றை யறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றுங் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோற்கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் ‘போறல் வகை’ யானெழுந்தன வென்க. மக்கள் சுவையுடையாராதலின், அவற்றிற்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவாயின், சில குறிப்புச் சொற்கள் தாமாகக் கூறுவரன்றே? வெறுப்புச் சுவையிற் ‘சீ’ யென்றும், வெகுளிச் சுவையிற் ‘போ’ வென்றும், உவகைச் சுவையில் ‘வா’ வென்றும் கூறப்படுஞ் சொற்களைக் காண்க. ‘ஐ’ யென்பது வியப்பினாலும், ‘ஓ’ வென்பது அவலத்தினாலும் ‘ஐயோ’ வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க. இவைகளெல்லாஞ் ‘சுவை வகை’ யானுண்டாகிய சொற்களாம். ‘அறிகுறி வகை’ யானெழுந்த பகுதிகள் மிகச் சிறப்புடையனவாம். இவைகள் ‘நாவின் சைகை’ என்பதனடியாக முதலிற் பிறந்தன. இஃது அடிக்கடி, பல், உதடு முதலிய வாயின் பகுதிகளைச் சுட்டுதற்குரிய ‘கைச்சைகை’களைக் கவனிக்குமாறு கூவுங் கூச்சலோடு தொடங்கும். வேண்டு மென்றெழாது அநுதாபத்தினா லுதவிசெய்ய வெழுந்த நாவின் சைகை இயற்கையாகவே கைச்சைகையைப் பின்பற்றிவரும். அதன்மேற் கைச்சைகை மிகையென்று சிறிது சிறிதாகக் கைவிடப்படும். உதாரணமாக, கவனிக்குமாறு கூவிய கூச்சல் ’ஆ’ வென்ற உருவங்கொண்டதாக வைத்துக் கொள்வோம். அப்படியானாற் ‘பல்’லைக் குறிக்கும் நாவின் சைகை ’அடா’ என்ற உருவங்கொள்ளும். இவ்வாறே தன்னைக் கவனிக்குமாறு பிறரை விளித்த ‘ஏ’ என்றிருந்ததாயின் பல்லைக்குறிக்கும் நாவின் சைகை ‘ஏட’ வென்றிருக்கும். ஈண்டுக் கூறியதற்கிணங்கவே, தமிழ்மொழியின் கண்ணே, ‘அடா’ ‘ஏட’ என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன. “ஏட வென்பது தோழன் முன்னிலை” என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க. வல்லாள னொருவன் எளியவனுக்கு உதவி செய்யப்புகுந்து சின்னாள் அவனைப் பாதுகாத்துப் பின்னர் அவன் மேற்கொண்ட தொழிலை நன்றாக நடத்தாமை கண்டு அவனைத் தள்ளிவிட்டுத் தான் அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தாற்போல, நாவின் சைகையும் கைச் சைகையி னுதவிக்காக வந்து அதனைச் சின்னாள் பாதுகாத்துப் பார்த்தும் அதுகருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால் அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. புகுந்து தான் நடாத்தினதிற் சொற்கள் பலவுண்டாயின. சில தன்மை, முன்னிலைப் பகுதிகள் அறிகுறிவகையா லெழுந்திருக்கலா மென்றெண்ணுதற் கிடனுண்டு. அதுதானும் உச்சரிக்கச் சுலபமாகவும் எழுத்துக்களிற் பிரதானமாகவுமுள்ள ‘ம’, ‘ப’ என்ற எழுத்துக்களின் சம்பந்தமுடையதாம். இவ்விரண்டெழுத்துக்களும் குழந்தைகளான் முதன்முதல் உச்சரிக்கப் படுவனவாம். இவ்விரண்டும் குழந்தைகட்கு அருகிருந்து உதவி செய்யுந் தாய் தந்தையரைக் குறிப்பிக்குஞ்சொற்களாகிய ‘அம்மா’ ‘அப்பா’ என்றன பிறப்பதற்கு முதற் கருவியாய் நிற்பன. மேலும் மகாரம் பல பாஷைகளிலுந் தன்மைச் சொற்களை ஒருமையிற் குறித்தறக ணுபகாரப்படா நிற்ப, தமிழ்மொழியின் கண்ணே அவற்றைப் பனமையிற் குறித்தற்கணு பகாரப்படா நின்றது. ‘மாம்’ (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. ‘யாம்’ ‘எம்மை’ யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை. எவ்வாறாயினும் மகாரந் தன்மைக்கண் உபகாரப் படுகின்றதென்பது மலையிலக்கே. இனி இதனொடு தாயைக் குறிக்கும் ‘அம்மா’ என்ற சொல்லின் கண்ணும் மகாரம் உபகாரப்படுதலை உற்று நோக்கின் தாய் குழந்தைக்குத் தன்னவளாயினள். இதைக் கவனிக்குமிடத்துத் தந்தை சிறிது தன்னினின்றும் விலகினவனாக மதிக்கப்படுவதற்கு அறிகுறியாகக் பகார சப்தத்தினால் ’அப்பா’என்றழைக்கப் படுகின்றனன். தமிழப் பாஷையின்தோற்ற விஷயமாக, யாம் மேற்கூறிய போந்தன வனைத்தும் எவ்வாறு கருதப்படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சி யானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகள் உண்டாத லியலுமென்பது யாவரும் மறுக்க முடியாத்தோர் பாஷை நூலுண்மை. இவ்வுண்மையை யொட்டியே தமிழ்ப் பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர். “ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்” எனவும், “தழற்புரை நிழற்குவு டந்தமிழ்” எனவும், “வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற் கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற், குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” எனவும், " இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்" எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க. யாம் மேற்கூறிப் போந்தவாறு மக்களாக்கப் பொருளாய்விளைந்த தமிழ்ப் பாஷையானது தமிழ்மக்கள் யாவருக்கும் ஒருங்கே விளங்குவதாயிற்று, என்றதோர் ஆசங்கை இடையிலெழுதல் இயல்பே. இது வெகு சுலபமாக விடுக்கப்படும். யாவருக்கும் விளங்கத்தக்க சைகைகள் இடைநின்று சொற்களை ஐயமுண்டான காலங்களின் விளக்கினமையின் தமிழ்ப்பாஷையின் சொற்பொரு ளுணர்ச்சி தமிழ் மக்கள் யாவருக்கும் உண்டாகித் தமக்குள்ளே யறிந்து கொண்டனர். இதுகாறும் தமிழ்மொழியின் தோற்றத்தைப்பற்றிப் பேசினோம். இனித் தமிழ்மொழியின் தொன்மையைப் பற்றிக் கூறப்புகுவாம். இவ்வுலகத்தின் கண்ணே பேசப்படுவன ஏறக்குறைய தொள்ளாயிரம் மொழிகளாம். அவற்றுள்ளே நாலைந்துபாஷைகள் தாம் ‘தொன்மொழிகள்’; என்னும் பெயர்க்குரியனவாய்க் கருதப்படுகின்றன. அந்நாலைந்துள்ளும், தமிழ் மொழியும் ஒன்றுகொல்? இதுவே யாம் இப்பொழுது ஆராய வேண்டுவது. பரவை வழக்கற்று ஏட்டுவழக்காய்மட்டில் நிற்பனவே தொன்மொழிகள்; மற்று இக்காலத்திற் பரவை வழக்காய் விளங்குவன வெல்லாந் தொன் மழிகளாகாவென்பது சிலர் துணிபு. இகத்துணிபு தருக்கநூற் குற்றமே. பாஷைகள் பரவை வழக்கற்றுப் போதற்குக் காரணம் இலிபிக ளேற்படாமையும், பாஷை பேசுவோர் பல்வேறிடங்கட்குப் பிரிந்து செல்லலும், இடங்கட்குத் தக்கபடி புது இலிபிகள் வகுத்துக்கோடலும் பிறவுமாம். ஏட்டு வழக்குப் பாஷைப் பேச்சு வழக்குபாஷைக்கிணங்கி வாராவிடில் முன்னது பரவை வழக்கற்றுத் தன்னிலை வேறுபடாது ஒருநிலைப்பாடடைந்து நிற்கும். பின்னது விரிந்து கொண்டேபோய் முன்னதினின்று மிகவும் வேறுபட்டு அதன் வழிமொழியாகக் கருதப்படும். ஆகவேபேச்சு வழக்கோ டிணங்கி வராதன வெல்லாந் தொன்மொழிகளோ? அல்ல. தமிழ் மொழியில், ‘ட்,ண்,ர், ல்,ள், ழ்,ற், ன்,’ என்ற எட்டு மெய்யெழுத்துக்களையுங் கொண்டு சொற்கள் தொடங்குகின்றில: அஃதாவது, இவ்வெட்டும் மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களாம். இவைகளேன் மொழிக்கு முதலில் வரவில்லை? இவ்வெட்டும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி மிகுதியா யிருத்தலின் அவ்வெட்டு மெய்களும் மொழிக்கு முதலில் வாராவாயின. இவ்வுண்மை கொண்டு, பண்டைக்காலத்தே, வழங்கிய மக்களுக்கு உறுப்புக்கள் உரமேறி அரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே முற்பட்டுத் தோற்ற முற்றெழுந்த மொழி தமிழேயா மென்று கூறி, அதன் தொன்மை மாட்சி நிறுத்தி விட்டேமென மகிழ்வாருமுளர். “பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள்! போய்க் காண்பீர்” என வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும் வியாத முனிவரும் ‘மகாபாரதத்’ தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும்பற்றிக் கூறுகின்றமையானும்,பாண்டியர் ஆண்டநாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க. இற்றைக்குச் சற்றேறக் குறையப் பதினாயிரம் வருஷங்கட்கு முற்பட்ட பழமையான எழுத்துச் சாதனங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் கி.மு. எண்ணாயிர வருஷங்களுக்கு முன்னரே மக்களுக்குள் நாகரிகம் தொடங்கியிருக்க வேண்டும். இவ்வளவுகாலம் முன்னரென்பது வரையறுத்துரைக்க முடியாதாயினும் எழுத்து வழக்கு இதற்கும் முன்னரே யேற்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறாயின் பாஷைத் தோற்றத்தின் காலம் இத்துணையாயிரம் ஆண்டுகட்கு முன்னரென்பது யாவரான் வரையறுத்துக் கூறவியலுமோ? அறியேம். பாஷை முலம் நதிமூல ருஷி மூலங்கள் போலும்.! இனித்தமிழ் நூல்களிற் பல இடைச்சங்கமிருந்த கபாடபுரங் கடல் கொள்ளப்பட்ட காலத்தில் அழிந்துபட்டனவெனக் கூறக் கண்டுனேம். அஃதன்றியும் தமிழில் மிகப்பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த ’சிலப்பதிகார’த்திற் காடுகாண் காதையில் ஆசிரியர் இளங்கோ வடிகள் “வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்றார்; இனி, வேனிற்காதையில், “நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும்” என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும, நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்” என்று கூறினார். இன்னும் “புறநானூற்றிற்” பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் “பஃறுளியாறு” வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப் பட்டுள்ளது. சின்னாண் முன்னர் வெளிப்பட்ட ‘செங்கோன்றரைச் செலவு என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடி யார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ்தெங்கநாடு முதலிய நாடுகளைச் சார்ந்து ’பெருவள நாடு’ முதலிய பிறநாடுகளும், ‘மணிமலை’ முதலிய சிலமலைகளும், ‘முத்தூர்’ முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், ‘பெரு நூல்’, ‘இயனூல்’ எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் கலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது, “செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான் துங்கள் றமிழ்ந்தாப் புலித்தொடரா லங்கிசைத்தான் சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி யக்கரக்கோ நாமஞ்சு வாம்” என்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றது. இவையனைத்தும் உற்று நோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நeடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழ்நூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையனவாம். ‘இந்துமகா சமுத்திரம்’ இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி, ‘மோரீசத்தீவு’க்கும் ’பம்பாய்’ நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள ‘கெர்கியூலன்’ என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை’யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் மடகாசிகர்தீவு’ முதற் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய சந்தாத்தீவுகள்’ அளவும் விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும். இக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் ‘இலெமுரியா’ என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழாங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும், பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர். இது கேட்பதற்கு இனிதாகவும் விஞோதமாகவு மிருக்கின்றது. அதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க. தோற்றமும் தொன்மையும் முற்றிற்று. VI. பாஷையின் சிறப்பியல்பு. இவ்வுலகின்கணுள்ள பாஷைகளுள் எவையேனும் இரண்டு பாஷைகளாயினும் தம்முள் முற்றும் ஒத்திருப்பதில்லை. வழிமொழிகளும் நாய் மொழியினின்று வேறுபடுகின்றன். சொல்லமைப்பும் கருத்தின் பரப்பும் இல்கணவமைதியும் பாஷை தோறும் வேறுபடுகின்றன. பல பாஷைகளிற் பயின்று அவற்றின்கண் ஒருமைப்பாடு காணப் புகுவார்க்குப் பாஷைகளின் சிற்பியல்புகள் பெரும்பாலுந் தோன்றுவதில்லை; அகஸ்மாத்தாய் ஏற்பட்ட இரண்டோ ரொற்றுமைப் பண்புகள் அவர்களுடைய கண்களை மறைக்கின்றன. அதுபற்றி அவர்கள் மயங்குகின்றனர். தமிழும் மலையாளமும் தாய் மொழியும் வழிமொழியுமா யொற்றுமைப் பட்டனவே யாயினும், ‘செய்யும்’ என்னும் வினைமுற்றைத் தமிழ்ப் படர்க்கையிற் பலர்பாலொழிந்த மற்றை நான்கு பாலினும் வழங்குவதாக, மலையாளமோ அதனை இருதிணை யைம்பான் மூவிடத்திலும் வழங்கா நின்றது.இஃதுணர்ந்த வீரமாமுனிவர் தமிழின்கண் மலையாள வழக்கத்தைக் கொணர்ந்து புகுத்துவார் தமது ‘தேம்பாவணி’ யென்ற நூலின்கண் மேற்கொண்டு செய்யுட் செய்துளர். இன்னும் மலையாளம் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகளை யொழித்து விட்டதாகத் தமிழ் அவையனைத்தையும் ஒழித்து விடாது போற்றிக் கொண்டுளது. இவ்வாறு மிகநெருங்கிய மொழிகளே வேறுபடும்போது மற்றையவற்றின் வேறுபாட்டினைக் குறித்து எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. பிறப்பு முறையானும் வரலாற்று முறையானும் ஏற்பட்டமொழிப் பாகுபாடுகளில் நிகழக்கூடிய பிழைகளைப் போக்குவதற்குப் பாஷைகளின் அமைப்புமுறை யொருபெருங்கருவி யாகுமாறு அறிக. இனித் தமிழின் செடுங்கணக்கு மிகவும் விநோதமானது; பன்னீருயிரும் பதினெண் மெய்யும் ஓராய்தமுமாக முப்பத்தோ ரெழுத்துகளுடையது. இவையே தமிழின் முதலெழுத்துக்களாம்; இவற்றுள்: ‘ற, ழ, ன’ என்ற மூன்றெழுத்துக்களும் தமிழ்ப் பாஷையின் சிறப்பெழுத்துக்களாம். தமிழின் வழிமொழிகளல்லாத பிறபாஷைகளின் கண்ணே இவ்வெழுத் தொலிகளில்லை. உயிர்மெய்யெழுத்துக்கள், பன்னீருயிரும் பதினெண்மெய்யும் உறழப் பிறக்கும் இருநூற்றுப் பதினா றெழுத்துக்களுமாம். ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் போலாது தமிழில் உயிரெழுத்துக்களின் வைப்பு முறையும்,மெய்யெழுத்துக்களின் வைப்பு முறையும் ஆகிய இவ்விரண்டும் மிக நேர்த்தியான ஒழுங்குடையனவாய், ஓசை நூன்முறை அணுகளவும் பிறழாமல் ஏற்பட்டிருக்கின்ற தன்மை யாவரும் வியக்கத்தக்கதே. தமிழ்மொழியிற் கூட்டெழுத்துக்களே யில்லை. கூட்டொலி யுண்டெனினும் வரிவடிவின் அவை தனித்தனி யெழுத்துக்களா லெழுதப்படுவனவாம். தமிழில் எல்லா வெழுத்துக்களும் மொழிக்கு முதலிலே வாரா; பற்பலவரும். எல்லாவெழுத்துக்களும் மொழிக்கிறுதியிலும் வாரா; பற்பல வரும். இனி மொழிக் கிடையிலே எல்லா வெழுத்துக்களும் ஒன்றி யுடனியங்கா. பற்பல தம்மு ளொத்தியங்குவனவாகும். நன்னூலார் இவை யனைத்தையுந் தெளிவுபெற எழுத்தியலில் கூறியிருத்தல் காண்க. தமிழெழுத்துக்கள் முப்பத்தொன்றே யாகத், தமிழொலிகள் அவற்றினும் மிகுகின்றன. மெல்லெழுத்துக்களுக்குப் பின்னே யடுத்து வருகின்ற வல்லெழுத்துக்க ளெல்லாம் தம் வல்லோசை யிழந்து தாமும் மெல்லோசை யுடையனவாகின்றன. உதாரணமாக, ‘அங்கு’, ‘பஞ்சு’, ‘வண்டு’, ‘வந்தாள்’, ‘பம்பி’, ‘அன்று’ என்ற சொற்களை யுச்சரித்துக் காண்க. மெல்லெழுத்துக்களை மகளிராகவும் வல்லெழுத்துக்களை ஆடவராகவுங்கொண்டு, இல்லற வாழ்க்கையுற்ற ஆடவர் இளகிய சிந்தையராதல் போல, மெல்லெழுத்துக்களை யடுத்துவரும் வல்லெழுத்துக்களும் இளகி மென்மைத்தன்மை மேவினவென்று உவமை கூறுதலு மேற்புடைத்தாம். எனவே வல்லெழுத்தாலும் தம்மோசை யாறும் பிறவோசை யாறுமுடையனவாம். ‘உகுதல்’, ‘பசித்தான்’, ‘படர்ந்தது’, ‘பதிவு’, ‘செய்பவன்’ என்ற சொற்களில் முறையே க, ச, ட, த, பக்கள் தம் மோதையின் வேறுபட்டுப்போயின. இவ்வைந்து சொற்களில் மூன்றாவதிலும் நான்காவதிலுமுள்ள ட, த வோசைகள் முற்கூறிய மெல்லோசைகளேயாக, எஞ்சிய மூன்று சொற்களிலுமுள்ள க, ச, ப வோசைகள் வேறு புத்தொலிகளாமாறு உச்சரித்தறிக. எனவே முன்னர்க் கூறிய ஆறு ஓசைகளோடு இந்த மூன்று புதிய வோசைகளையுங் கூட்டவெழும் ஒன்ப தோசைகளும் தமிழெழுத்துக்களின் மிக்க தமிழோசைகள். ஒவ்வோரெலிக்கும் ஒவ்வோ ரெழுத்திருத்தலே நியமம். அவ்வாறன்றி ஓரெழுத்தால் இரண்டு மூன் றொலிகளைக் குறித்தல் நேரிதன்று. அது பாஷையின் குறைவே. தமிழின்கண் நாற்பதொலிகளிருப்பவும், அவற்றை வரிவடிவிற் குறித்தற்கு முப்பதோ ரெழுத்துக்களேயுள. முப்பத்தோ ரெழுத்துக்களுக்கும் முப்பதேதோரொலிகள் போக மிகுதியான ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனிவே றெழுத்துக்களின்மை தமிழ்ப் பாஷைக்குக்; குறைவாமாறு காண்க. ஆதியில் தமிழ் மொழியில் முப்பானோ ரொலிகளேயிருந்தன. வரவர நாளாவட்டத்தில் மக்களது உச்சாரண பேதத்தில் ஒன்பானொலிகள் மிகுவனவாயினவென்று அமைவு கூறித் தமக்குள்ளே மகிழ்வாரு முளர் அன்னார்மகிழ்ச்சியும், உற்று நோக்குமிடத்து, ஓராற்றா னேற்புடைத்தேயாம். இனித் தமிழ் நெடுங்கணக்கின்கண் இன்னொரு விசேஷ முளது. அது குற்றுகர முற்றுகரப் பாகுபாடாம். குற்றுகரமாவது குறுகிய ஓசையுடை யது; அரை மாத்திரை யளவிற்று. முற்றுகரமோ குறுகாது. ஒருமாத்திரையுடையதாவது. நன்னூலார் குற்றுகரத்திற்குக் கூறிய விதியும், குற்றுகரப் புணர்ச்சிக்குக் கூறியவிதிகளும் மிகச் சிறப்புடையனவாம்.தனித் தமிழ்ச் சொற்களுள் உகரவீற்றன வெல்லாம், இக்காலத்திலுள்ள தமிழ்மக்களாற் குற்றுகரவீற்றுச் சொற்களாகவே யுச்சரிக்கப்பட்டு வருகின்றன. முற்றுகரமென்றதோர் பாகுபாடு அத்துணை வேண்டுவதன்று. தமிழர்கள் முற்று கரத்தையுங் குற்றுகரமாகவே யுச்சரிக்கின்றனர். தமிழ்மக்கள் தமிழ்ச்சொற்களாகிய ‘கதவு’, ‘பசு’, முதலிய முற்றுகரமொழிகளை உச்சரிக்கு மாற்றையும், வடசொற்களாகிய ‘இந்து’, ‘சம்பு’ முதலிய குற்றுகர மொழிகளை உச்சரிக்கு மாற்றையும் உற்றுநோக்குக. நோக்கின் முற்றுகரங்கள் குற்றுகரங்களாகவும் குற்றுகரங்கள் முற்றுகரங்களாகவும் உச்சரிக்கப்படுகின்றன வென்பது புலனாம். இதுகண்டு இவ்வுகரப் பாகுபாடு தமிழ்ச் சொற்களுக்கேயன்றி வட சொற்களுக்கில்லை யென்று கொள்வாராயினர் பலரும். தெலுங்கிற் குற்றுகர மின்மையைக் கவனிக்குமிடத்து அது தமிழினின்று பிரிந்தபின்னரே தமிழின் கண் இக்குற்றுகர வுச்சாரணம் புகுந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இவ்வுகரப் பாகுபாட்டின் இன்றியமையாமை தமிழ்ச் சொற்கள் புணருமிடத்து வெளிப்படும். இசை நலமும் ஓதை நலமுஞ் சான்ற பாஷைகள் விசேஷமாக உயிர் வருக்கத்தில் நன்கு வேறுபட்ட ஒலிகள் சிலவே யுடையனவாமெனவும் உயிர் வருக்கத்தில் விசேஷமாக மிக்க ஒலிகளுள்ள பாஷைகள் இசைகலம் வேறுபட்டுத் தெளிவின்றி ஏகரீதியின் இயங்குவனவாமெனவும் பாஷைநூல் வல்ல பண்டிதர் கூறுகின்றனர். இவரது கூற்றை யொட்டித் தமிழ்ப் பாஷையை ஆராயுமிடத்துத் தமிழ் முதற்கட்கூறிய பாஷைகளின் வருக்கத் திற் சேருமேயன்றிப் பின்னர்க் கூறிய வருக்கத்திற் சேராது. தமிழ் உச்சாரண பேதங்கள் மூன்றாம். அவைதாம் எடுத்தல், படுத்தல், நலிதல் என்பனவாம். தமிழ்ச்சொற்களை யுச்சரிக்கும்போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தி னெழுத்துக்களை யெடுத்தும் அயலெழுத்தைப் படுத்தும் மற்றையவற்றை நலிந்தும் உச்சரிக்க வென்பதே முறை. தமிழர்களது உச் சாரணமுறை நாளுக்குயாள் சிறிதுசிறிதாக வேறுபட்டுக்கொண்டே வருகின்றது.இவ்வாறு தமிழுச்சாரணம் வேறுபட்டுக்கொண்டே செல்லுமானால் தமிழெழு த்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபடுதல் வேண்டுவது இன்றியமையாத தாகும். ஆனாற் பாஷைகளினொலிகளினும், அவற்றின் பிறப்பிடம்களும் உச்சாரண பேதங்களும் மிகவும் நிலை பேறுடையனவாம். இவ்விஷயம் பாஷை நூல்களிற் பெரிதும் முழங்குவதாகும். தமிழ்ப் பாஷையின் கண்ணேயுள்ள மொழிகளைப் பகுபதம் பாகாப்பதமென விருகூறாக்கி, அவற்றுட் பகுபதங்களைப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களு ளடங்குமாறு பகுத்து முறைப்படுத்திருக்கும் நன்னூலாரது செயல், பாஷை நூலிற் கூறப்படும் மொழியாக்க முறையைப் பெரிதும் ஒட்டிச் செல்லுகின்றதெனினும் அவர் கூறிய பகாப்பத விலக்கணத்திலும் இடுகுறிப் பெயரிலக்கணத்திலும் ஆக்ஷேபிக்கத் தக்க அமிசங்களிருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளும் அவற்றினின்று சொல்லாகுமாறும் மிகவும் நேரிய ஒழுங்குள்ளனவாம். தமிழ்ப்பகுதிகளின் ஒழுங்கைக் குறித்துப் பிறிதோரிடத்திற் பேசுதல் கருதி, இப்போது அதை விடுத்து மேற்செல்லுகின்றோம். இனித் தமிழ்ச் சொற்களெல்லாம் வாக்கியத்தின் பகுதிகளாம். அவை நால்வகைய, பெயர் வினை இடை உரியென. பிறபாஷைகளிலுள்ள சொற்பாகுபாடுகளெல்லாம் இந்நான்கனு ளடங்குமென்க. இடைச் சொற்களும் உரிச்சொற்களும் முன்னொரு காலத்திற் பெயர் வினைகளா யிருந்தன. அவைகளனைத்துங் காலக்கிரமத்தில் அத்தன்மைக ளிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின. பெயரும் வினையும் முதனிலைகளாகிய தனிப் பகுதிகளினடியாகப் பிறந்தன. அம் மூலப் பகுதிகள் தாமுந் தனித்தனி வாக்கியங்களின் மரூஉக்களாம். எனவே வாக்கியங்கள் பகுதிகளாய்க் குறுகி முதனிலைத் தன்மைப்பட்டுத் தம்மினின்றும் பல சொற்களாக்கி அவற்றை மீட்டும் வாக்கியங்களின் தொடர்பு படுத்தனவென்பது கேட்போருக்கு நகை விளைப்பதோர் கூற்றேயாமாயினும் அது பாஷைநூல்வல்ல பண்டிதராயினார் யாவர்க்கும் ஒப்ப முடிந்ததோர் கோட்பாடேயாம். தமிழிலக்கண முடையார், பாலையும் எண்ணையும் வேறு வேறு கூறாது, இரண்டையும் ‘பால்’ என்ற ஒன்றிலே போற்றி, ‘ஆண், பெண், பலர், ஒன்று, பல’ என ஐம்பால் வகுத்தார். அவ் வகுப்பிலும் ஆண் பன்மைக்கும் பெண் பன்மைக்கும் வேறுபாடு காட்டாது ‘பலர்பால்’ என்றதன்கண் அடக்கினார். உயர்திணையிலாவது ஆணொருமை பெண்ணொருமை கொண்டார்; அஃறிணை யில் அதுவுமில்லை. அஃறிணைப்பாற் பகுப்பெல்லாம் ஒருமைப் பன்மைகளேயாம், அஃறிணைச் சொற்களில் ஆண் பெண் பாகுபாடு பாஷை நடையிலிருக்கவும் அதனை யிலக்கண நூலுடையார் கவனியாது பராமுகமாய் சென்றது யாது காரணம் பற்றியோ? " ஆண் பெண் பலரென முப்பாற் றுயர்திணை" " ஒன்றே பலவென் றுருபாற் றஃறிணை" என்ற பெயரியலிற் சூத்திரங்கள் வகுத்த நன்னூலார் தம்மையும் மறந்து. “நூலுரை போதகா சிரியர் மூவரும் முக்குண வசத்தான் முறைமறைந் தறைவரே” என்ற கூற்றிற்கு இலக்கியமாய்ப் பொது வியலின் தொடக்கத்தே, “இருதிணை யாண்பெணூ ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே” என்ற சூத்திரத்தில் அஃறிணைக் கண்ணும் ஆண்பெண் பாகுபாடுண்மை கூறி விட்டனர். என் செய்வார்? அவரால் அதனை அறவே யொதுக்க முடியவில்லை. தமிழில் வினைச்சொற்களுட் சில, பகுதி யொற்றிரட்டியும்; பல, இடை நிலைகளானும்; வேறுசில, விகுதிகளாலும் காலங்காட்டுகின்றன. இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலங்கள் மூன்றாக வழங்குகின்றன வெனினும், ஆதி காலத்தில் நிகழ்காலமென்றதொன்று ஏற்படவேயில்லை. ஒரு நிமிஷம் முந்தினால் இறந்தகாலமும் ஒரு நிமிஷம் பிந்தினால் எதிர்காலமுமாய்ப் போதலின் நிகழ்காலத்திற்கு இயக்கமின்றி யொழிதல் காண்க. இதுபற்றியன்றே தொல்காப்பியனாரும் நிகழ்காலத்திற் கெனத் தனிவேறிடை நிலைகள் கூறாது சென்றனர். பாஷையோ நாடோறும் முதிர்ந்து முக்காலமும் அவற்றிற் சில பாகுபாடுகளும் வேண்டி நிற்பதாயிற்று. இது கண்ட நன்னூலார், பாஷை நடையை முற்றிலும் உற்றுநோக்காது ஒருபுடைநோக்கமாய் ’ஆநின்று, கின்று, கிறு’என்று மூன்று நிகழ்கால விடைநிலைகள் வகுத்து, அவ்வளவில் அமைவாராயினார். தமிழ்ப் பாஷையின் போக்கோ, பின்வருமாறு காலப் பாகுபாடுகள் வேண்டா நின்றது: \noindent { i இறப்பிலிறப்பு; (உம்) செய்திருந்தான். I. இறந்தகாலம் { ii இறப்பில்நிகழ்வு; (உம்) செய்திருக்கிறான். { iii இறப்பிலெதிர்வு; (உம்) செய்திருப்பான். { i நிகழ்விலிறப்பு; (உம்) செய்யாநின்றான். II. நிகழ்காலம் { ii நிகழ்வில்நிகழ்வு; (உம்) செய்யாநிற்கிறான். { iii நிகழ்விலெதிர்வு; (உம்) செய்யாநிற்பான். III. எதிர்காலம்: ஒன்றே; (உம்) செய்வான் இப் பாகுபாட்டினாற் பெருநலம் வினைதலின் இலக்கண நூலுடையார் இதனைக் கடிதின் மேற்கொள்வாரென்பது திண்ணம். ஒவ்வொரு பாஷையிலும், அஃதுடையார் முன்பின் பயின்றறியாத பொருள்களுக்குங் கருத்துக்களூக்கும் உற்ற தகுசொற்கள் நாடுதல் நேரிதன்றாம். யாவருக்குந் தெரிந்திருக்க வேண்டிய கருத்துக்களிலுமே சிற்சில வேறுபாடுகள் உண்டாகுமானால் மற்றைய விஷயங்களைக் குறித்துப் பேசவும் வேண்டுமோ? பாஷையியல்பு இவ்வாறாயிருக்கத் தமிழின்கண்ணே இதற்குத் தக்க சொல்லில்லை; அதற்குத் தக்க சொல்லில்லை யென்று பலவாறாக வீண்மொழி பிதற்றி வாய்ப்பறை யறைவதனால் யாது பயன்? ஒரு சொல்லுக் கொரே சொல்லாய்த்தா னிருத்தல் வேண்டுமென்பது என்ன நியாயமோ? ஒரு சொற் பொருளைப், பல சொற்களாற் கூறின் அது குற்றமாதலெப்படி? ‘சுருங்கச் சொல்லல்’ என்ற அழகில்லையென்று கூறிக் கூறலாம். அன்றியும் இவ் விஷயத்தில் ஒருவரும் துணிந்து கூறுதலியலாது; நூற்பரப்பினுள் யாங்கேனும் தக்க சொற்கள் கிடைப்பினுங் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த தனித்தமிழ்ச் சொற்களும் பலவுள. ஒருகாலத்தில் யாம் வடமொழிப் புலவரொருவரொடு சல்லாபஞ்செய்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று “மெய், வாய், கண், மூக்கு, செவியென்ற வைம்பொறியாலும் சிறந்துவிளங்கி யாக்கை நலம் வாய்ந்த தமிழ்மகள், தான் சம்ஸ்கிருத நாயகனை யெதிர்ப்பட்டு மணக்குங்காறும், முகங் காட்டாது தலைகவிழ்ந்து நின்றனள்! இஃதென்னே!” என்று கூறிப் புன்னகை செய்தனர். அஃதுணர்ந்த யாமுங் காலந் தாழ்த்தலின்றி, அவர் எதிர்பாராத வண்ணமாய், “எல்லாவாற்றானும் யாக்கை நலன் வாய்ந்தொளிருந் தமிழ்மகள் தன்னை மணக்குமாறு போந்த வடமொழிநாயகன் மூங்கையாய் வாய் திறத்தலின்றி முகத்தினாற் பல சைகைகள் செய்து நின்றமைகண்டு, முகஞ்செய்து புறக்கணித்து நின்றனள்! இஃதென்கொலோ!” என்று கூறி இளநகை யரும்பினம். இச்சம்பாஷணையின் பொருளாவது, அவர் தமிழில் முகத்திற்குத் தக்க சொல்லில்லையென்றார். யாம், ‘முகம்’ தமிழ்ச்சொல்லே என்பாரோடிணங்கி அதனை வலியுறுத்திச் சொல்லு முகத்தால், வடமொழியில் முகத்தின் சொற்களைத் தவிர்த்து வாய்க்குத்தக்க சொல்லின்மை காட்டி, அது பேச்சு வழக்கற்ற பாஷையென்று குறித்தனம். இச்சல்லாபத்தை அறிவுடையோர் விநோதார்த்தமாகக் கொண்டு எம்மைக் கடைக்கணிப்பாராக. தமிழ்ச்சொற் பரப்போ ஒரு பெருங்கடல் போன்று விளங்குகின்றது. தமிழ்ச்சொற்க ளனைத்தையுங் கோவைசெய்து வகுத்த நிகண்டுகளும் அகராதிகளும் குறைபாடுடையனவாய் நிற்கின்றன. ஒரு நூலேனும் சொற்பொருளாராய்ச்சிசெய்து கூறவில்லை. யாவும் சொற்பொருள் மட்டிற் கூறுகின்றன; சொல்லின் பகுதிகளாவன இவை யென்றுஞ் சுட்டிற்றில. ஆதித் தமிழர்க்கு ஒன்று முதல் நூறாயிரங்காறும் எண்ணத் தெரிந்திருந்தது; ஏனெனில் இவற்றைக் குறிக்குஞ் சொற்களெல்லாந் தனித்தமிழ்ச் சொற்களாம். ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்ற முகத்தலளவைக் கணக்கும், சாண், அடி, முழம் என்ற நீட்டலளவைக்கணக்கும், பலம், வீசை, மணங்கு, என்ற எடுத்தலளவைக்கணக்கும் , கால், அரைக்கால், மாகாணி, மா, அரைமா,காணி, முந்திரி, இம்மி என்ற கீழ்வாய்க் கணக்கும் அவற்றின் குறியீடுகளும் தமிழரது கணக்கறிவின் உயர்வை விளக்குகின்றன. ‘தொண்ணூறு’, ‘தொள்ளாயிரம்’ என்ற சொற்களைக் குறித்துப் பலப்பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள. எனினும் அவற்று ளொன்றேனும் எமக்கு மன அமைதி தரவில்லை. ‘தொண்டு’ என்பது ஒன்பதிற்குப் பெயராய் நிகண்டிலும், இலக்கியங்களிலும் பயின்று வருவதனால், அச்சொல்லை ‘ஒன்பது’ என்ற விடத்தில் நிறுத்தித், ‘தொண்டு+நூறு=தொண்ணூறு’ எனவும், ‘தொண்டு+ ஆயிரம்=தொள்ளாயிரம்’ எனவுஞ் செய்கை செய்து முடித் தமைக்கலாமென்பது எமது துணிவு. தமிழ்ப் பாஷையில் நாட்பெயர், கோட்பெயர், மதிப்பெயர் என்பவற்றுட் பெரும்பாலன தமிழ்ச் சொற்களேயாம். சிறுபாலன சந்தேகத்தெற்கு இடந்தருகின்றன. அவை, ’புதன், சனி என்பனவும், பிறவும் போல்வன. இத்தகையன வடசொற்க ளென்று கூறினும் படுவதோ ரிழுக்கில்லை யென்னலாம். ‘கடவுள்’ என்ற சொல்லுண்மையானால், தமிழர் ‘கடவுளுண்டு’ என்ற கொள்கை யுடையாரென்க. தமிழில் முருகக் கடவுளைக் குறிப்பதற்குப் பல சொற்களிருப்பவும், ஏனைய கடவுள்களைக் குறிப்பதற்குத் தக்க சொல் ஒன்றேனு மின்மையால் முருகக் கடவுளொருவரே தமிழ்க்கடவுள், மற்றைக் கடவுள்கள் தமிழ்க்கடவுளரல்லரென்று வாதிப்பார் பலருளர். சிலர் சிவபிரானையுந் தமிழ்க் கடவுளென்பர். அவரது கொள்கைப்படி ‘சாஸ்தா’ சைவக் கடவுளுந் ‘திருமால்’ ஆரியக்கடவுளுமாவர். சில்லோர் தமிழ்ப் பாஷைக்குள்ளே ‘விக்கிரகம்’ என்றதைக் குறிப்பதற்குத் தக்க தனித்தமிழ்ச் சொல்லில்லை யெனவும், அதனால் தமிழர்கள் விக்கிரகாராதனம் செய்பவர்களல்ல ரெனவும் துணிந்து கூறுவாராயினர். அவர் கூற்றுப் ‘படிவம், வடிவம்’ என்ற தனித்தமிழ்ச் சொற்களாற் போலியென்று ஒதுக்கப்படுவதாயிற்று. அன்றியுந் தமிழர் முதுமரங்களிற் கடவுளை ஆரோபித்துத் தொழுதனரென்பது பண்டைத்தமிழ் நூல்களான் ஏற்படுகின்றது. “கட்புல ளில்லாக் கடவுளைக் காட்டுஞ் சட்டகம் போலச் செவிப்புல வொலியை உட்கொளற் கிடுமுரு வாம்வடி வெழுத்தே” என்ற இலக்கண நூலார் கூற்றையும் உய்த்துணர்க. பாஷையின் சிறப்பியல்பு முற்றிற்று. VII. பாஷை வேறுபடுமாறு பேச்சு வழக்குள்ள பாஷைகளெல்லாம் எப்பொழுதும் பலவகையிலும் வேறுபட்டுக் கொண்டே யிருக்கின்றன. வேறுபடுதலின்றி யொரு நிலைப்பாடு அடைந்துள பாஷைகளுக்கு அழிவு வெகுதூரத்தில் இல்லை. ஆகவே பேச்சு வழக்குள்ள பாஷைகள் அழியாது நீடித்தகாலம் இயங்க வேண்டுமாயின், அவற்றிற்கு வேறுபாடு இன்றியமையாதது. தமிழும் பேச்சு வழக்குள்ளதோர் சிறப்புடைப் பாஷையாமாதலின் இஃதும் வேறுபட்டியங்குவது நியாயமே. அவ்வாறே யாரென்ன தடுத்தபோதிலும் தமிழ்ப் பேராறு தனக்கெதிருள்ள தடைகளனைத்தையும் உந்தியெறிந்து சுழிகொண்டு விளையாடிச் செல்லா நின்றது. உயிர் நூலோர் ‘இயற்கைப் பிரிநிலை’ யென்று கூறும் சுபாவ நியமம், பாஷை வளர்ச்சியிலுங் கொள்ளப்படும். பாஷைவளர்ச்சிக்குத் தடைபயப்பனவும் பயனற்றனவு மாகியவைகளனைத்தும் பயிற்சிக் குறைவான் வழக்காறற்றுப்போக, மற்று அதன் வளர்ச்சிக்குத்தடை பயவாதனவும் பயனுள்ளுனவுமாகிய யாவையும் பயிற்சி மிகுதியான் வழக்காற்றில் நிலைபெறுகின்றன. இது பாஷை நூலிற் கொள்ளப்படும் ‘இயற்கைப் பிரிநிலை’. இனிப் பொச்சாப்புக் காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்கபடி யுச்சரிக்காமையால் அவை தம்முடைய முன்னை யுருவங் குலைந்து சிதைகினறன. மிகவும் நீளமான சொற்களை மக்கள், காலச் சுருக்கமும் முயற்சிச் சுருக்கமும் கருதிக் குறுக்கியும் மாற்றியும் வழங்குதலால், அவை தம் முன் னுருவத்தினின்றும் வேறுபடுவன வாகின்றன. இவ்வாறு தொன்றுதொட்டு வருதலின்றி, அவ்வக் காலங்களில் இடையிலே சிலவெழுத்துக் கெட்டும் சில வெழுத்துத் திரிந்தும் சில வெழுத்துத் தோன்றியும் இலக்கணத்திற் சிதைந்து முன்னுருவம் மாறித் தாமே மருவி வழங்குவனவற்றை யெல்லாம் ‘மரூஉ’ என்பர் இலக்கண நூலார். ‘அருமந்தபிள்ளை’, ‘ஆச்சு’, ‘இருக்குது’ என்பன முதலாயின இதற்கு உதாரணமாம். ‘கற்று’ ‘சுற்று’ ‘நேற்று’ என்பன போன்ற றகர வொற்றிடையிலுள்ள சொற்கள், தகர வொற்றிடையிலுள்ள சொற்களாக உச்சரிக்கப்படுகின்றன; ‘வைத்து’ ‘தைத்து’ ‘பாய்த்து’ என்பன போன்ற சொற்களின் தகரங்கள் சகரங்களாகின்றன. இனிச் சாமானியத் தமிழ் மக்களிடை வழங்கும் மரூஉ மொழிகளி னியல்புகளை முற்ற வெடுத்துக் காட்டுதலரிதாம். எனினும் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதலென்னும் ஐந்துவகைகளாக மரூஉவைப் பிரித்துத் தக்க வுதாரணங்கள் கண்டு கொள்க. ‘யாவது’, ‘மாசி’ ‘ஆனை’ ‘பேர்’ ‘விசிறி’ என்பன முறையே அம்மரூஉவமைகட்கு உதாரணங்களாமாறு அறிக. “அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்” “ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்பரு முளரே” என்ற நன்னூலார் கூறிய மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும் வகுத்துரைக்குஞ் சூத்திரவிதிகள் யாம் மேற்கூறிய முயற்சிச் சுருக்கவியல் பினையன்றே வலியுறுத்திக் காட்டுகின்றன. ‘ஐந்து’ ‘உய்ந்தனன்’ என்ற சொற்களை யுச்சரித்தலிற் சிறிதளவு கஷ்ட மிருத்தலாற் சுகபுருஷராகிய தமிழ் மக்கள் அவற்றை ‘அஞ்சு’ ‘உஞ்சனன்’ என்று வழங்குவாராயினர். தெளிவு கருதியும் உச்சரிப்பு நலங்கருதியும், தமிழ்மக்கள் சில சொற்களை மாற்றி வழங்குகின்றனர். உதாரணமாகப் ‘பெண்’ என்ற சொல்லைப் ‘பெண்டு’ என்றும் ‘நிலம்’ ‘கலம்’ என்பவற்றை ‘நிலன்’ ‘கலன்’ என்றும் முறையே எழுத்துக் கூட்டியும் ஓரெழுத்தைப் பிறிதோ ரெழுத்தாக மாற்றியும் உபயோகிக்கின்றனர். குறிவினை மொழியிறுதியில் மகரம் தெளிவாகச் செவிப் புலனுறாமையின் இவ்வேறுபாடு வேண்டப் படுவதாயிற்று. இதைத்தான் மொழியிறுதிப் போலியென நன்னூலார், “மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே” என்ற சூத்திர விதியின்கட் கூறுவா ராயினார். சில குற்றுகரவீற்று அஃறிணை மொழிகளுந் தெளிவு கருதி, இறுதி யுகரங்கெடுத்து ‘அர்’ ஏற்றி யுச்சரிக்கப் படுகின்றன. ‘வண்டர்’ ‘சுரும்பர்’ என்ற மென்றொடர்க் குற்றுகர மொழியினும், ‘சிறகர்’ என்ற வுயிர்த்தொடர்க் குற்றுகர மொழியிலும், ‘இடக்கர்’ என்ற வன்றொடர்க் குற்றுகர மொழியினும் இவ்வுண்மை காண்க. ‘பூ’ வைப்’பூவர்’ என்றாரு முளர். ஒன்றைப் பிறிதொன்று போலு மெனப் பிழைபடக் கருதலானும், இஃது இவ்வாறிருந்தால் அழகுடைத்தாமெனக் கருதலானும், தமிழ்மக்கள் சொற்களை மாற்றி வழங்குவர். இலக்கணமில்லையாயினும், இலக்கண முடையதுபோல் அப்படிப்பட்ட சான்றோராலே தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகின்ற ‘இலக்கணப் போலியும் இக்கருத்துகள் பற்றியே யுண்டாயிற்றுப் போலும். ’இல் முன்’ என்பதை ‘முன்றில்’ என்பதும், ‘மரநுனி’ என்பதை ‘நுனிமரம்’ என்பதும் இவற்றிற்கு முறையே உதாரணமாம். ‘முற்றம்’ என்ற சொல்லொடு போலி யொப்புமை கொண்டு ‘இல்முன்’ ‘முன்றில்’ எனத் திரிக்கப்பட்டது. ‘நுனிமரம்’ என்று கூறுதற்கண் உச்சாரண சுகமுண்மை காண்க. தமிழ்மக்களது நாகரிகநிலை முதிர்ச்சிக்கேற்றபடி, தமிழ்ப்பாஷையும் முதிர்ச்சி யடைதல்வேண்டும். நன் மக்களிடத்தே சொல்லத்தகாத சொல்லை, அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்ப்பாட்டாற் சொல்லும் ‘இடக்கரடக்கல் வழக்கு’ம், மங்கலமில்லாததை யொழித்து மங்கலமாகக்கூறும் ’மங்கலவழக்கு’ம்’ நாகரிக நிலை முதிர்ச்சியா னேற்பட்டனவாம். ‘ஆப்பி’ என்றசொல் நாகரிக நிலை நன்கு முதிராத காலத்திலெழுந்து பின்னர் நன்மக்களா னிறுதி குறக்கப் பட்டது. இராஜ்யங்களின் மாறுபாட்டாற் பாஷைகளும் வேறு படுதலுண்டு. உதாரணமாகத் தமிழ்மொழியின் கண்ணே மகம்மதிய அரசு ஓங்கியதனால் எத்துணையோ ‘இந்துஸ்தானி பாஷைச்சொற்கள் இடம் பெறுவனவாயின. உதாரணமாகச் ’சலாம், சபாசு’ என்ற சொற்கள் தமிழிலக்கியங்களிலு மேறி விட்டன. “சுராதிபமா திமாலய னுலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே” என்று அருணகிரி நாதர் தமது ‘திருப்புகழ்’ நூலின்கட் கூறியதும் “குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்” என்று குமரகுருபர சுவாமிகள் தமது ‘மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்’ நூலின்கட் கூறியதுங் காண்க. “கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென சுட்ட வெங்கொடு சூர்கிளை வோற விடும்வேலா.” என்றார் அருணகிரிநாதரும். இன்னும் இதனைக் குறித்துப் பிறிதோரமயத்திற் பேசுதற் கிடலுண்டாதலின் இதைவிடுத்து மேற்செல்வா்ம். நெட்டுயிருங் குற்றுயிரும் வெவ்வேறு விதிகள் பற்றி வேறுபடுகின்றன. ’சந்தியக்கரங்க’ளாகிய ஐகார ஔகாரங்கள் விசேஷமாக நிலைபேறுடையனவல்ல. ஆதலா னன்றே அவைகளிரண்டும் தம்மாத்திரையிற் குறுகி யொலிப் பனவாயின. ஐகார ஔகாரக் குறுக்கங்கள் தமிழிலக்கணங்களிற் பெரிதும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டுக் கண்டுகொள்க. தனிக் குற்றெழுத்திற்குப் பின்னேயடுத்து வரும் நேரசைகளெல்லாம் தம்மளவிற் சிறிது குறுகி, நிரையசையாகின்றன. குற்றெழுத்துகள் வீழ்ந்துபடி மியல்பின; எனினும் அவை நெட்டெழுத்துக்களினும் மிக்க நிலைபேறுடையன. இரண்டு மாத்திரை யளவுகாலம் வரையில் நாவை ஒருநிலைக் கண்ணே நிறுத்தி வைத்தல் மிகவும் அரியதோர் செயலாதலின் நெட்டுயிர்கள் அத்துணை நிலை பேறுடையன வல்லவாயின. இனித் தமிழ்மக்கள் வேற்றுமக்களொடு வாணிக நிமித்தமாக ஊடாடுங் காலத்தும் அவர்கள் இவர்களொடு வந்து கலக்குங் காலத்தும் புறத்தடைகள் எவையு மில்லாமையாற் பிற பாஷைகளினொலிகள் தமிழின்கட் புகுவனவாயின. இத்தகைய கலப்பினால் தமிழ்ப்பாஷையின் கண்ணே ரகர, றகர வேறுபாடு காண்டலும் ழகர, ளகர வேறுபாடு காண்டலும் அரியவாயின. ஆரியர் கலப்பினால் ரகர றகரங்கள் எல்லாம் ஒரே ரகரமாகவும், ழகர ளகரங்களெல்லாம் ஒரே ளகாரமாகவும் உச்சரிக்கப்படுவனவாயின. தமிழ்ப்பண்டிதராயினார் இவ்வுச்சாரண விஷயமாக மாணாக்கர்களை எவ்வளவு திருத்தியும் அவர்கள் திருந்துதல் அரிதாயிருக்கின்றது. ழகர ளகர வேறு பாட்டை அறவே யொழிக்கக் கருதி வீரசோழியமுடையார் ஈரெழுத்துக்களையும் ஒன்றுபோல் வைத்துக் காரிகை செய்தனர்.. அவர் விதியின்படி ’புகழ்+தீபம்=புகடீபம் எனவும் ’பாழ்+நரகு=பாணரகு எனவும் வரும். “திகட சக்கரச் செம்முக மைந்துளான்” என்று காப்பிலுரைத்தார் கந்தபுராணம் செய்த கச்சியப்ப சிவாசாரியரும். வளர்மொழிகளெல்லாம் தனித்தனி நால்வேறு நிலைகளுடையனவாம். அவைதாம் ‘தனிநிலை’ ‘தொடர்நிலை’ ‘உருபு நிலை’ ‘பிரிவுநிலை’ யென்பனவாம். தனிநிலைப் பாஷைகளெல்லாம் சில நூற்றாண்டுகளில் தொடர்நிலைப் பாஷைகளாக மாறிவிடும்.தொடர்நிலையன உருபுநிலை யுற்றன. இறுதியிற் பிரிவுநிலை யனவாய் விளங்கும். தமிழ்மொழியோ தனிநிலை கடந்து தொடர்நிலையில் இருக்கின்றதென்று பலருங் கூறுவர். ஆனால்தமிழ் மகள் தொடர்நிலையில் ஒருதாளையூன்றியும் மற்றைத்தாளை உருபு நிலையில் வைக்குமாறு எடுத்தும் நிற்கின்றனள் என்று கூறுதலே யேற்புடைத்தாம். பாஷை வேறுபடுமாற்றில் யாவரும் கருதத்தக்கதோ ருண்மையுண்டு. அஃதாவது பாஷைகளெல்லாம் சில சமயங்களில் மிகவும் விரைந்து வேறுபட்டும்,வேறு சிலசமயங்களில் மிகவுந் தாமதமாக வேறுபட்டுஞ் செல்லும் இயல்புடையன. இவ்வுண்மைக் கிணங்கியே தமிழ்ப்பாஷையும் பரந்த கொள்கைகள் மேவி விரிந்து வேறுபடுகின்றது.சிலகாலம் மிக விரைந்தும் சிலகாலம் வேறுபாடுதோன்றாமல் அமைந்தும் சிலகாலம் மந்தமாக மெல்லென நின்று நின்றும் வேறுபட்டுச் செல்லாநின்ற தமிழ்மகளின் செலவு ஒரு பேராற்றின் இனியவொழுக்கம் போலும்.எப்பொழுதும் ஏட்டு வழக்குத் தமிழும்,பேச்சு வழக்குத் தமிழும் வேறுபட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. ஆதியில் இவ்விரண்டும் அதிக வேறுபாடின்றி ஒத்தன வெனினும் ஏட்டுவழக்குத் தமிழ் வேறுபாடுறுவதுமிகமந்தமான நடையிலேதான்.மற்றுப் பேச்சுவழக்குத் தமிழ் வேறுபடுவதே மிகவிரைவான நடையிலேயாம். எனவே ஏட்டுவழக்குத் தமிழ்க்கும் பேச்சுவழக்குத் தமிழ்க்கும் இக்காலத்திலுள்ள பேதம் மிகவதிகமாம். இதுவும் அதுவும் வெகுதூரத்தில் நிற்கின்றன. இவ்விரண்டும் தமக்குள்ளே அதிகமாக வேறுபட்டு வெகுதூரத்தில் நிற்கவொட்டாது முயல வேண்டுவது இலக்கண நூலார்க்கு உற்றதொழிலாம். இனி இத்தகைய வேறுபாடுகளினால் உண்டாகும் பயன்கள் யாவை என்ற விஷயத்தைக் குறித்து ஆராய்வாம். சொற்களும் சொற்றொடர்களும் வாக்கியங்களும் சொல்லின் பாகங்களும் தத்தமக்குரிய பொருட்பெற்றி விரிந்துங் குறைந்தும் முற்றிலும் வேறுபட்டும் போகின்றன. பொதுவாகப் பலபொருள்களைக் குறித்துநின்ற சொற்கள் சிறப்பாகச் சிலவற்றையேனும் ஒன்றையேனுங் குறிக்கும் நிலைமையை யடைகின்றன. இதனைப் ‘பொதுப்படை நியமம்’ என்னலாம். உதாரணமாக, ‘நெய்’ என்ற சொல்லைக் காண்க. இஃது ஆதியிற் பசுவின்நெய், வேப்பநெய், எள்ளின் நெய் ஆமணக்கு நெய், இலுப்பைநெநய் முதலிய பலவற்றிற்கும் பொதுவான சொல். அஃது இப்பொழுது பசுவினெய் எருமைநெய்களையே சிறப்பாகக் குறிக்கின்றது. மற்றுச்சிறப்பாக ஒவ்வொரு பொருளையே குறித்துநின்ற சொற்கள் பொதுவாகிப் பல பொருள்களையும் குறிக்கும். நிலைமையை யடைதலுமுண்டு. இதனைச் சிறப்புடை நியமம் என்னலாம். ஆதியில் எள்ளினின்று போந்த நெய் என்ற ஒரே பொருளைக் குறித்த எண்ணெய் என்ற சொல் இப்போது பொதுவாகி, ‘வேப்பெண்ணெய்,’ ‘விளக்கெண்ணெய்,’ ‘இலுப்பெண்ணெய் என்பனவாதிய பலபொருள்களையுங் குறிக்கின்றது. ’ஓலை,’ ‘மரக்கால்’ என்னுஞ் சொற்கள் தம்பொருட்பெற்றி முற்றிலும் வேறுபட்டனவாமாறு காண்க. தமிழ்மகளிர் பனையோலைச் சுருளும் தென்னோலைச் சுருளும் தங் காதணியாகக் கொண்டமை பற்றி அக்காதணியும் ‘ஓலை’ யென்னப்பட்டது. இப்போது பொன்னாலும் மணியாலுமியன்ற காதணிகளும் அந்த ‘ஓலைச்’ சொல்லாலேயே குறிக்கப்படுதரலுணர்க. ஆதியில் மரத்தினாற் செய்யப்பட்ட உழக்கிற்கு ‘மரக்கால்’ என்று பெயர். இப்பொழுது இரும்பினாலாகிய குறுணியளவு கருவியையே குறித்தலுமுணர்க. சில சொற்கள் ஆதியில் இழிபொரு ளுணர்த்தி இப்போது அவற்றை இழந்து உயர்பொரு ளுணவர்த்துவனவாம். ‘களிப்பு’ என்றசொல் முதலிற் கள்ளுண்டு களித்தலையே யுணர்த்திற்று; இப்பொழுது ‘மகிழ்ச்சி’ என்ற உயர் பொருள் பெற்றது. விளையாட்டு என்ற சொல் ஆதியிற் கள்ளுண்டு ஆடுதலைக் குறித்தது. இப்பொழுது அது கள்ளுண்ணாமல் ஆடுகின்ற பலவகை விநோதமான ஆட்டங்களையுங் குறிக்கின்றது. இவ்வாறு வரும் நியமத்திற்கு ‘உயர் பொருட்பேறு’ என்னும் பெயரிடலாம். இனி இதுபோலவே இழிபொருட்பேறு முண்டு. அஃதாவது சொற்கள் முதலில் உயர்பொருள் உணர்த்திப் பின்னர் இழிபொருள் தருமென்பது. உதாரணமாக நாற்றம் என்ற சொல்லைக்காண்க. “ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி யாகு பெயரன் மொழிவினைக் குறிப்பே முதறொகைக் குறிப்போ டின்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை” என்ற ‘நன்னூற்’ சூத்திரவிதியிற் கூறப்பட்டுள்ள குறிப்புச் சொற்களெல்லாம் பொருட்பெற்றி வேறுபடுமாறு காட்டுகின்றன. இனிமக்களாவார் உணர்ந்துகொண்டே சிலவேறுபாடுகள் செய்தலுண்டு. ஒவ்வொரு கூட்டத்தார் யாதேனும் ஒரு பொருளை மறைத்துக் கூறவேண்டி, அதனது சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியால் அதனைக் கூறும் ‘குழூஉக்குறி’ என்பதும் ‘பிறிதினவிற்சி,’ ‘புனைவிலி புகழ்ச்சி’ முதலிய அணி வகைகளும் அறிந்து செய்வேறுபாட்டின்பாற் படுமென்க. இவ்வாறு நிகழ்கின்ற வேறுபாடுகள் நிகழவும் வேண்டும்; அவ்வேறுபாடுகள் அளவிறந்தனவாகாமல் அடக்கவும் வேண்டும். ஆதலாற் பாஷையின் வேறுபாடுகளை யடக்குதற் பயன் கருதியே இலக்கணங்க ளேற்பட்டன. இவ்விலக்கணங்கள் தாமும் பாஷையின் இயக்கத்திற்குத் தக்கபடி இயங்காதிருத்தல் பாஷைக்கே கேடுவிளைக்கும். இவ் வுண்மையைத் தமிழ் நூலார் சிலகாலங்களில் நன்குணர்ந்து நடந்துவந்தனர். பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழிலக்கிய நூல்களிலேறின. அவ்வாறு இலக்கியங்கண்ட சொற்களுக்கு இலக்கணமும் நாளேற நாளேற இயம்பப்படுவன வாயின. இலக்கியங்கண்ட சொற்களெல்லாம் நிகண்டுகளிலும் புகுந்தன. நிகண்டு வகுத்த புலவர்களில் சிலர் சொற்பொருளாராய்ச்சிக் குறைவாற்பிழைபோன விடங்களுமுண்டு. உதாரணமாகச் ‘சூடாமணிநிகண்டு’ என்ற நூலிற் காணப்படும் பல பிழைகளுள் ஒன்று காட்டுவாம். ‘சரகம்’ என்ற சொல்லுக்குத் ‘தேனீ’ என்ற பொரு ளில்லையாகவும், இந்நூலின்கட் “சரகஞ்சா கிளிவெள்ளாடு தேக்கெனுந் தருவு தேனீ” என்று கூறப்பட்டுள்ளது. இதற்குற்ற காரணமென்னை? ‘சரகம்’ என்ற சொல்லுக்கே அப்பொருளுண்டு; ஆகவே ‘சரகம்’ என்றதிலுள்ள ரகாரத்தைச் சகர ஆகாரத்தின் அறிகுறியாகிய காலென வரிவடிவிற்கண்டு மருண்ட மருட்சியே அப்பிழைக்குற்ற காரணமாமாறு தேற்றம். இவ்வாறு ஆராய்ச்சிக் குறைவால் நிகழ்ந்த மேற்கூறிய வழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்று விட்டது. இலக்கண விலக்கியத் தெழுவரம் பிசைத்த சிவஞான முனிவரது மாணாக்கருட் சிறந்தவரும் ‘தணிகைப் புராணம்’ முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது ‘வண்டுவிடுதூது’ என்ற நூலின்கண் “ஏக்குலங்க, டாங்கியுகையாத சாகமே” என்று வண்டை விளிக்கின்றனர். ஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்று வருஞ் சொற்கள் தவறுடையன வென்பது, பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் புலப்பட்டாலும் அவற்றைத் திருத்தப்புகுதல் ஒருநாளும் ஓராற்றானுஞ் சாலாது. பிழை பிழையாகவோதான் இருத்தல் வேண்டும். மாற்றுதல் பாஷையின் வரலாற்றிற்குத் தீங்கு பயக்கும். இப்படிப் பிழைபோன விடங்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளில் எத்தனையோ உள. இலக்கியமும் இலக்கணமும் ஒன்றனை ஒன்றுவிடாமற் பற்றி நிற்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கும் இவை தம்முள்ளே காரணங்க ளாகின்றன. ஆதி காலத்திலேயே இவ்வருமைசான்ற உண்மையை நன்குணர்ந்த ஆசிரியர் அகத்தியனார், “இலக்கிய மின்றி யிலக்கண மின்றே யிலக்கண மின்றி யிலக்கிய மின்றே; எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல விலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்” என்று சூத்திரஞ் செய்ததனை அறிவுடையோர் உய்த்து நோக்குக. பாஷை வேறுபடுமாறு முற்றிற்று. VIII. நூற்பரப்பு. ஒரு பாஷையின் நூற்பரப்பு அதன் முதிர்ச்சிக்கும் அதனைப் பயில்வாரது நாகரிக விருத்திக்குந் தக்கபடி வேறுபடுமென்பது யாவரு முணர்ந்த விஷயம். நூற்செல்வமுடைய பாஷைகளுக்குள்ள கௌரவமுஞ் சிறப்பும் அளவிட்டுரைக்க முடியா. இப்போதுள்ள பாஷைகளுலெல்லாம் மிக்க நூற்செல்வ வாய்ப்புடையது ‘ஆங்கில பாஷை’யாம். ’ஜெர்மானியம்’,‘பிரெஞ்சு’ முதலியன ஆங்கிலத்திற்கு அடுத்தபடியில் நிற்கத் தக்கனவெனக் கூறலாம். தமிழ்மொழியை இவ்விஷயத்தில் இவற்றோ டொப்பிட்டுப் பார்ப்போம். தமிழிலுள்ள நூல்களெல்லாம் அறம் பொரு ளின்ப வீடுகளாகிய நான்கு புருஷார்த்தங்களையே கூறுவனவாம். சிறுபான்மையான வைத்திய நூல்களுஞ் சோதிட நூல்களுமாம். மற்றுப் ‘பௌமிய நூல்’, ‘வான நூல்’, ‘மனிதநூல்’, ‘விலங்கியனூல்’, ‘மனிதசமூகநூல்’, ‘உள நூல்’, ‘உயிர் நூல்’, ‘உடனூல்’, ‘பொருள்வலி நூல்’, ‘பொருட்டிரிவு நூல்’ முதலிய பல சாஸ்திரங்களின் உண்மைகள் தெரிப்பனதமிழின்கட் கிடையா. ஆங்கில பாஷையிற் புதிது புதிதாக வெளிப்படும் விநோத நூல்கள் போன்றன நந் தமிழின்கட் காண்டலரிது. ஆங்கிலத்தில் இக்காலப் பாவலர் பாடல்கள் விசேடமான கௌரவமுடையன. தமிழிலோ இக்காலப் பாவலர் பாடல்கட்கு விசேட மதிப்பில்லை. தமிழ்மொழிக்குள்ள கௌரவ மெல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேயே யன்றிப் பிற்காலத்து நூல்களிலே யென்னப்படாது. இனி (I).ஆதிகாலம்: (II) இடைக்காலம்: (1) முற்பகுதி (2)பிற்பகுதி: (III). பிற்காலம் என வெவ்வேறு பாகுபாடு செய்துகொண்டு தமிழ் நூற் பரப்பை ஓராற்றான் ஆராய்வாம். (I). ஆதிகாலம்: கி.பி. 100க்கு முற்பட்டகாலம் (II). இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.; (2) பிற்பகுதி; கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம். (III). பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றை நாள் வரையிலுள்ள காலம். (I) ஆதிகாலம்; கி.பி. 100க்கு முற்பட்டகாலம். ஆதிகாலமென்பது சரித்திர வாராய்ச்சிக்கு வாராத முற்காலம். முச்சங்கங்களிலே தலைச்சங்கத்தின் காலமும் இடைச் சங்கத்தின் காலமும், கடைச் சங்க காலத்தின் முற்பகுதியும் இவ் வாதிகாலத்தின் கண்ணேயடங்கும். இம்முச் சங்கங்களையும் பற்றி ‘இறையனாரகப்பொருளுரை’ யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப்பழமையான சரிதம். அதன்கண்ணே, “தலைச்சங்க மிகுந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பதொன்பதின்மர் என்பது. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ ‘பரிபாட’லும், ’முதுநாரை’யும் ’முதுகுருகு’ங் ’களரியாவிரை’யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்பது. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோளீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் ’அகத்தியம்’ என்ப” எனத் தலைச்சங்கத்தைப்பற்றியும், " இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திறையன் மாறனும் துவரைக்கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்மதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவரகளாற் பாடப்பெற்றன ‘கலி’யும் ’குருகு’ம் ’வெண்டாளி’யும் ’வியாழ மாலையகவ’ லுமென இத்தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் ’அகத்திய’மும் ’தொல்காப்பிய’மும் ’மாபுராண’மும் ’இசை நுணுக்க’மும் ’பூதபுராண’முமென இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதினமரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ’கபாட புர’த்தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியநாட்டைக் கடல் கொண்டது என இடைச் சங்கத்தைப் பற்றியும் கூறப்பட்டுள. இக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டு மென்பதும், இடைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன் றறுபத்து மூன்றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்க ளிரண்டும் நீடித்தகாலம் நடந்து வந்திருக்க வேண்டு மென்பதிலும் பல நூல்களியற்றப்பட்டன வென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தன ரென்பதிலும், சங்கமிரண்டும் முறையே யிருந்த மதுரையும் கபாடபுரமுங் கடல் கொள்ளப் பட்டனவென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்து பட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லை யென்னலாம். மற்றுப் பாண்டியரசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்து மூன்றாண்டுமாக ஆண்டு வந்தன ரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதினமரும் பாண்டியர் ஐம்பத்தொந்பதின்மரும் ஒரே தொடர்ச்சியாக ஆண்டு வந்தன ரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுகளும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ? இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ? இவற்றுக்கும் ஒருவாறு உத்தேச வகையால் தக்க கணக்கிட்டுக்கொள்ளின் மேற்கூறிய பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகுமென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர். களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறை யாளராகிய நீலகண்டனார் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார். சிறுமேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்க்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லுந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்றும் ‘குறுந்தொகை நானூறு’ம் ’நற்றிணை நானூறு’ம் ’ஐங்குறுநூறு’ம் ’பதிற்றுப்பத்து’ம் ’நூற்றைம்பதுகலி’யும் ’எழுபது பரிபாட’லும் ’கூத்து’ம் ’வரி’யும் ’பேரிசை’யும், ’சிற்றிசை’யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் ’அகத்திய’முந் ’தொல்காப்பிய’முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது ++ ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற் றியாண்டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ’உத்தரமதுரை’ யென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப" என்று கடைச் சங்கத்தைப் பற்றிக் கூறுகின்றனர். ++ ஆயிரத்துத் தொள்ளாயிரத் தைம்ப தென்பாரு முளர். இக்கூற்றை யாராயு மிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்டகாலம் இடையீடுபட்டுக் கழிந்த காலத்தொடுங் கூடி ஆயிரத் தெண்ணூற்றைம் பதிற்றியாண்டாகின்றது. பாண்டிய ரொவ்வொருவரும் (இடையீட்டிக் காலத் தொடுங்கூட்டி) முப்பத் தெட்டாண்டுகள் அரசாட்சி செய்தவராகின்றனர். இது நம்புதற் பாற்றே. இனித் தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும் இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழு நூறு வருஷங்களும், கடைச்சங்கமிருந்த ஆயிரத் தெண்ணூற் றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கிபி நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி.மு. ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப் பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சிகூறிவந்தவிடத்துக் கி.மு. 8000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள வென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச் சங்க மேற்பட்டுவிட்ட தென்றன் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு. எனினும் காலாந்தரத்தில் ஆராய்ச்சிகளால் இவ்விடர்ப்பாடு களையப்பட்டு உண்மை வெளிப்பட்டு மேற்கூறிய கூற்றுக்கள் வலியுறலும் உறலாம். இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின்கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணநூலும் கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத் தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் ‘பத்துப்பாட்டும்’ ’பதினெண் கீழ்க்கணக்கு’மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க: “நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத்தொகை” இவ்வெட்டுத் தொகையுட் கலித்தொகை ஐங்குறு நூறு புறநானூறு என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்தன. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னைய தொன்று புறப்பொருளுள் கூறுவனவாம். ‘பத்துப்பாட்டு’ வெளியாகிவிட்டது. இது பெரும்பாலும் அரசர்களைச் சிறப்பித்துக் கூறுவது; இதன்கண் ‘திருமுருகாற்றுப்படை’ என்ற முதற்பாட்டு மட்டில் முருகக் கடவுளைப் புகழ்வது. பத்துப்பாட்டு நூல்களை யிவ்வெண்பாவா னுணர்க: “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினி கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.” மற்றுப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பாவா னுணர்க: “நாலடி நான்மணி நானாற்ப தைந்தைணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு. இனி இவற்றுளடங்கியதாய்ச் சங்கத்தாராற் செய்யப்படாது, திருவள்ளுவனாராற் செய்யப்பட்டுச் சங்கத்தாரான் அங்கீகரிக்கப்பெற்ற ‘திருக்குறள்’ என்ற அரிய நூலும் இவ்வாதிகாலத்ததாம். இந்நூல் மக்களுறுதிப் பொருள்களாகிய ‘அறம்பொருள் இன்பம் வீடு’ என்ற நான்கனுள் முதல்மூன்றையும் பற்றிப் பொதுவகையால் யாவருமொப்ப விரித்துக்கூறும் 1330 குறள் வெண்பாக்களாலாயது. இதனை மேற்கொள்ளாத நூலும் புகழாத மாந்தருமில்லை. திருவள்ளுவனாரது சகோதரியாரெனக் கூறப்படும் ஔவையார் செய்தருளிய ‘ஆத்திசூடி; ’கொன்றை வேந்தன்,’ ‘மூதுரை’ என்ற நூல்களெல்லாம் இக்காலத்தனவாம். இனி கடைச்சங்கப் பிற்காலத்தைப்பற்றிப் பேசப் புகுவாம். II. இடைக்காலம் (1) முற்பகுதி. இது கடைச்சங்கப் பிற்காலமாம்; கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ளது. இக்காலத்திலே தான் ஐம்பெருங் காப்பியங்களு மெழுந்தன. அவைதாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி என்பனவாம். இவற்றுட் சிலப்பதிகார மணிமேகலைகள் சிந்தாமணிக்கு முன்னரே யாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வைந்தனுள் முதல் மூன்றும் அச்சேறிவிட்டன. ‘நீலகேசி, சூளாமணி, யசோதாகாவியம், நாககுநமார காவியம், உதயணன் கதை’ என்ற ஐந்து சிறு காப்பியங்களும் இக்காலத்தனவாம். இவற்றுட் ‘சூளாமணி’ ஒன்றே வெளிவந்துளது. இப்பதின் காப்பியங்களும் நவரசங்களோடு கூடிய கற்பனாலங்காரங்களும் அரியபெரிய நீதிகளும் இனிது காட்டி விளங்குவனவாம். பேரின்பக்கடலுள் திளைந்து விளையாடிய மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய ‘திருவாசகம்’ என்ற உயரிய நூலும் இக் காலத்தததே. இது பத்திச் சுவை யொழுகசி சிவபெருமானைப்பாடியதோரரிய நூலாம். இவர் செய்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் திவ்யப் பிரபந்தம் அகப் பொருட்டுறைகளா லமைந்ததெனப் புறத்தே தோன்றினும், அது சிற்றின்பக் கருத்தும் பேரின்பப்பொருளும் ஒருங்கே பயப்பதாம். " அரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன்னூல தென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுந்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே." ‘மேருமந்தர புராணம்’ என்ற சைன நூலும் இக்காலத்ததே. ‘திவாகரம்,’ ‘பிங்கலம்’, என்ற நிகண்டுகளும் அணியியல் என்ற அலங்காரநூலும் இக்காலத்திற் செய்யப்பட்டனவே. சேரசோழ பாண்டியர் மூவரையுந் தனித்தனி தொள்ளாயிரம் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் ‘முத்தொள்ளாயிரம்’ என்ற நூலும் இக்காலத்திலே தான் யாக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதிற் சிற்சில பகுதிகள் காணப்படுகின்ற அத்துணையல்லது நூல் முழுதுங் காணப்பட வில்லை. ஆழ்வார்களுட் சிலர் இக்காலத்திருந்திருக்கலாம். ஆகவே யன்னாரது பிரபந்தங்களுட் சில இக்காலத்தன வாகலாம். இதுகாறுங் கடைச்சங்கப் பிற்காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இனி இடைக்காலத்தின் பிற்பகுதியைப்பற்றிப் பேசலாம். 2ம் பிற்பகுதி இது கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ளது. இவ்விடைக் காலத்திலேதான் சமய சாஸ்திர நூல்களெழுந்தன. சைனர் பௌத்தர் முதலாயினார் மிக்கிருந்தமைபற்றியும் சாமானிய ஜனங்கள் அன்னார் வயப்படுகின்றமை பற்றியும் சைவ சமயத்திலும் வைணவ சமயத்திலும் முறையே நாயன்மார்களும் ஆழ்வார்களுந் தோன்றித் தத்தம் சமயஸ்தாபனஞ் செய்தனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இவ்விருவரும் ஒரே காலத்தினர். சுந்தரமூர்த்திநாயனார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்தவர். இம்மூவரும் பாடிய ‘தேவாரப்பதிகங்கள்’ கணக்கில. இத்தேவாரப் பதிகங்களெல்லாம் இசைத்தமி ழிலக்கியங்களாமாறு காண்க. வேத சாரத்தைத் தொகுத்து தேவாரக்கலத்திலே பெய்துவைத் திருக்கின்றனர் மூவருமென்பதே ஆன்றோர் துணிபு. இனி வைணவ சமயகுரவர்களான ஆழ்வார்களுட் பலர் அருமையான திவ்யப் பிரபந்தங்கள் யாத்தனர். சைவர்கள் தமது சமயநூல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்தனர்.. வைணவர்கள் தம்முடைய சமயநூலகளை நாலாயிரப் பிரபந்தம் எனத் தொகுத்தனர். ஏறக்குறையக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுந்து விளங்குவதாயிற்று ஓர் அரிய நூல். அது ‘கல்லாடம்’ என்பது. இஃது அகப்பொருட் டுறைகளுள் நூற்றினை யெடுத்து விளக்கிக்கூறிச் செல்லுமுகத்தான் அநேக அரிய விஷயங்களையு முடன் கூறாநின்றது. உயர்வுங் கம்பீரமும் வாய்ந்த நடையும் படைத்துரையாற்றலும் நவின்றோர்க கினிமையுங் காட்டி யொளிர்வது. ‘நன்னூல்’, ‘நேமிநாதம்,’ நாற்கவிராஜ நம்பியியற்றிய ‘அகப்பொருள் விளக்கம்’, ஐயனாரிதனார் இயற்றிய ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ,யாப்பருங்கல விருத்தி’, ‘யாப்பருங்கலக் காரிகை’ என்ற நூல்களெல்லாம் தோன்றியதிக் காலமேயாம். இதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச்சோழன வைக்களத்தை யலங்கரிதத்தார் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார். முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப.இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம். கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப் பதினாயிரஞ் செய்யுட்களில் ‘இராமாயணம்’ செய்துமுடித்தனர். அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் ‘கம்ப ராமாயணம்’ என்று இன்றும் வழங்குகின்றது. அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை. கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர். அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல. ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய ‘உத்தரகாண்ட’த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக் கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர். தம்மையாதரித்த குலோத்துங்கச் சோழன்மீது அகப்பொருட்டுறைகளா லமைந்த ’கோவை’யொன்றும் ’உலா’வும் ’அந்தாதி’யுஞ் செய்தனர்.இவர் செய்த ’குலோத்துங்கச்சோழன் கோவை’ யென்பது சொன்னயமும் பொருணயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமா யொளிர்கின்றது. புகழேந்திப்புலவர் புகழெல்லாம் ‘நளவெண்பா’ என்ற இனிய சிறிய நூல் காரணமாகவேயாம். இந்நூல் 425 வெண்பாக்களிற் காப்பியச் சிறப்புகளமையச் சொற் பொருணயங்கள் செறியச் செய்யப் பட்டுள்ளது. இதன் நடை மிகத்தெளிவானது. ஔவையார் ‘நல்வழி,’ ‘நீதிவெண்பா’ என்ற நீதி நூல்களியற்றினர். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் செயங் கொண்டானாற் ‘கலிங்கத்துப்பரணி’ இயற்றப்பட்டது. இக்காலத்திலேயே, ;‘கந்தபுராணம்,’ ‘பெரிய புராணம்’ என்ற அருமையான சைவ நூல்களேற் பட்டன. ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் வெளிப்பட்டதும் இக்காலமாம். பின்னர்த் ‘திருவெண்காட்டடிகள்’ என்னப்படும் பட்டினத்துப் பிள்ளையாரது பாடல்கள் வெளிவந்தன. தண்டியாசிரியர் இயற்றிய ’அலங்கார’மும் இக்காலத்திலே உண்டாயிற்றென்க. உரையாசிரியர்களாகிய சேனாவரையர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் இவர்கள் விளங்கிய காலமும் இதுவேயென ஊகித்தற்கிடனுண்டு. முற்காலத்துச் சங்க நூல்களெல்லாம் இயற்கை வனப்பையும் புனைந்து கூறிச் சென்றனவாக, இடைக்காலத்து முற்பகுதி நூல்கள் சமயச் சார்பாகவும் பிற்பகுதி நூல்கள் மனோபாவத்தினாற் கற்பித்தும் சுதந்திர யூகத்தினாற் புதுவது புனைந்தும், உயர்வு நவிற்சியாதிய அணிகள் மேவியுஞ் செல்வனவாமாறு காண்க. III. பிற்காலம்: கி.பி. 1400க்கும் பிற்பட்ட காலம். ஆதிகாலத்துச் சங்கத்தார் ஆதரவும் இடைக்காலத்துச் சிற்றரசர் ஆதரவு மிகுந்தன. அவ்விருவகை ஆதரவு மற்ற இப்பிற்காலத்தில் குறுநிலமன்னர் சிலரும் திருவா வடுதுறை முதலிய ஆதீனத்தார் சிலரும் தமிழையுந் தமிழ்ப் புலவரையும் போற்றிப் பாதுகாப்பாராயினர். அதிவீரராமபாண்டியரும் வரதுங்கராம பாண்டியரும் இருந்து பலவகைத் தமிழ்நூல்கள் செய்தனர். ‘நைடதம்,’ ‘கூர்மபுராணம்,’ ‘காசிகாண்டம்’ முதலிய அரிய நூல்களை யியற்றினர்; வரதுங்கராம பாண்டியர் ‘இலிங்க புராணம்’ ‘திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி’ முதலிய நூல்களியற்றினர். இவ்விருவருக்கும் ஆசிரியராகிய நிரம்பவழகிய தேசிகர் ‘சேதுபுராணம்’ ‘திருப்பரங்கிரிப் புராணம்’, என்ற நூல்கள் யாத்தனர். இதற்கிடையில் வில்லிபுத்தூரர் வடமொழியினின்றும் ‘பாரத’த்தை மொழிபெயர்த்தனர். [ சங்கப் புலவரு ளொருவராகிய பெருந்தேவனார் செய்த பாரதம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அறை குறையாய் அகப்படுகின்றதெயன்றி முற்றுங்காணப்படவில்லை.] ’வில்லிபுத்தூரர் பாரதம்’ பத்துப்பருவத்துடன் நின்று விட்டதெனினும், இனியவாக்கும் நல்ல சந்தமும் பயின்று சொல்லுதலாற் பலராலும் பாராட்டப் படுவதாயிற்று. வில்லி புத்தூரரது கர்வ பங்கத்திற்குக் காரணரா யிருந்தவரெனக் கூறப்படும் அருணகிரி நாதர் ‘திருப்புகழ்’ என்ற பெயரில் முருகபிரான்மீது அளவிறந்த பாசுரங்கள் பாடித் தமிழ்நாடெங்கணும் முழங்குமாறு செய்தனர். திருப்புகழ்ப் பாசுரங்களனைத்தும் சந்த நலங்கொழித்துக் கேட்போருள்ளங்களைத் தம் வயப்படுத்தி இன்பச்சுவையும் பத்திரசமுந் துளிப்பச் சொல்லா நின்றன. [இத்திருப்புகழின் முதலிரண்டு பாகங்கள் வ.த. சுப்பிரமணிய பிள்ளையவர்களது முயற்சியால் வெளிப்போந்துள.] அருணகிரிநாதர் ‘கந்தரந்தாதி’ பாடி வில்லிபுத்தூரரைக் கர்வபங்கப் படுத்தின ரென்ப. வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரும், அட்டாவதானி அரங்கநாத கவிராயரென்பாருந் தனித்தனி ‘வில்லி பாரத’த்தைப் பூர்த்திசெய்தனர். இவற்றுட் பின்னது வெளிப்பட்டுள்ளது.பின்னர் நல்லாப்பிள்ளை யென்பார் தோன்றி வில்லிபுத்தூரர் பாடல்களை இடையிடையே செறித்து, அவர் சுருக்கிக்கூறிய கதைகளைத் தாம் விரித்தும் அவர் விட்டுவிட்ட கதைகளைக் கூட்டியும் ஒரு பாரதம் 14,000 செய்யுட்களிற் பாடிமுடித்தனர். ’நல்லாப்பிள்ளை பாரதம்’ அச்சாகியும் விசேஷமாய்ப் பயில வழங்கவில்லை. மதுரைத் ’திருவிளையாடற் புராண’த்தைக் கல்வி நலம் விளங்கப் பத்திச்சுவை யொழுகப் பரஞ்சோதி முனிவர் பாடினர். இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாரால் தமிழ் மொழியடைந்த அபிவிருத்திக்கோ அளவில்லை. ‘கல்விக்களஞ்சியம்’ திருவாவடுதுறை யென்று கூறுவது எவ்வாற்றாலும் ஏற்புடைத்தேயாம். அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவாச்சாரியார் முதலாயினாராற் ‘சைவசித்தாந்த சாஸ்திரங்கள்’ முன்னரே வெளிப்பட்டன. இம்மடத்தைச் சார்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை ‘கல்லாடவுரையும் ஈசானதேசிகர் ’இலக்கணக் கொத்துரை’யும் சங்கர நமச்சி வாயப்புலவர் ’நன்னூல் விருத்தியுரை’யும் சிவஞான முனிவர் ’சித்தாந்த மரபு கண்டன கண்டனம்’, ‘தொல்காப்பியச் சூத்திரவிருத்தி’, ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ என்ற நூல்களுஞ் செய்தனர். தருமபுர வாதீனத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் ‘குட்டித்தொல்காப்பியம்’ எனப்படும் ‘இலக்கண விளக்கம்’ இயற்றினர். இவருதவிகொண்டு மாதைத்திருவேங்கட மன்னன் வடமொழியிற் ‘கிருஷ்ணமிசிரன்’ செய்த ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற நாடகத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன். இது நகைச்சுவை பெரிதும் நண்ணியதோர் விநோதமான நூல்; மிகவுந் தெளிவான செய்யுணடையில் இயற்றப் பட்டுளது.இது நிற்க. சிவஞான முனிவர் பல அருமையான செய்யுணூல்கள் செய்தும், தருக்கநூல் இயற்றியும் சித்தாந்த சாஸ்திரங்களுக்கு உரைவகுத்தும் இலக்கணநூல் புனைந்தும் கண்டனங்கள் வெளியிட்டும் மாணாக்கர் பலர்க்குத் தமிழறிவுறுத்தியும் விளங்கிய மகாவித்துவச் சிகாமணி. இவர்புகழ் பரவாத மூலை யில்லை; வடமொழியும் ஒருங்குணர்ந்தவர். இக்காலத்து ‘வரலாற்று முறையிற் கற்ற வித்துவான்கள்’ என்போரது வரலாற்றை ஆராய்ந்தால் இவரிடத்தே வந்து முடியும். இவர் மாணாக்கருட் சிறந்த கச்சியப்ப முனிவர் ‘தணிகைப் புராணம்’ ‘விநாயகபுராணம்’ முதலிய நூல்கள் பாடித் திருத்தணிகைக்கந்தப்பையர்க்குத் தமிழறி வுறுத்தினர். இலக்கணம் சோமசுந்தரக் கவிராயர். இராமநாதபுரஞ் சென்று ஆண்டுத் தமிழ்க் கல்வியைப் பரப்பினர். ‘திருக்கழுக்குன்றக் கோவை’ செய்தார் இவரே இராமநாதபுரத்திற் சேதுகாவலர்கள் இன்றளவுந் தமிழ்மொழியை வளர்ப்பாராயினர். அமிர்த கவிராயர் என்பார் இரகுநாத சேதுபதியின்மீது ‘ஒருதுறைக்கோவை’ பாடினர். சிவப்பிரகாச சுவாமிகள் ‘கற்பனைக்கு ஊற்று’ எனக் கருதப்படும் ‘பிரபுலிங்க லீலை’யும் ’வெங்கைக்கோவை’யும் ’நன்னெறி’ முதலிய பலநூல்களும் செய்தனர். தருமபுரவாதீனத்தைச் சார்ந்த குமரகுருபர சுவாமிகள் ‘மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்’, ‘நீதிநெறிவிளக்கம்’ முதலிய பலநூல்கள் சொற்பொருணலங்கனிய இயற்றினர். பத்திச்சுவை மிகுந்து யாவருள்ளத்தையுங் கவர வல்ல தத்துவராயரது ‘அடங்கன் முறை’யும் ’பாடுதுறை’யும் தாயுமானார் செய்த ’திருப்பாடல்க’ளும் மிகவுங் கவனிக்கவேண்டியனவாம். ஏறக்குறையத் தாயுமானார் காலத்திலேயே வீரமாமுனிவர் என்பவர் ’தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கணமும் ’தேம்பாவணி’யென்னுங் காவியமும் செய்தனர். இனி வைணவருள் திவ்யகவி என்றழைக்கப்படும் பிள்ளைப் பெருமாளையங்கார் தோன்றிச் சொல்லின்பமும் ஒருங்கேயமைய ‘அட்டப்பிரபந்தம்’ என எட்டு நூல்கள் செய்தனர். சைவஎல்லப்ப நாவலர் ‘திருவாரூர்க் கோவை’, ‘அருணாசல புராணம்’, ‘அருணைக் கலம்பகம்’ முதலிய சில நூல்களியற்றினர். மேலகரம்திரிகூட ராசப்பக் கவிராயர் ‘திருக்குற்றாலத் தலபுராணம்’ முதலிய பல நூல்கள் செய்தனர். இனிப்பலர் அந்தாதிகளும் கலம்பகங்களும் பிள்ளைத் தமிழ்களும் சிலேடை வெண்பாக்களும் மாலைகளும் பதிகங்களும் ஆகப் பலப்பல நூல்கள் தாந்தாங் கண்டவாறு புனைந்து விட்டனர். அதன்மேல் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த திரிசிரபுரம்மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தோன்றிக் கணக்கற்ற நூல்கள் யாத்தும் பல்லோர்க்குத் தமிழ் நூல்கள்பல பாடஞ்சொல்லியும் தனிப்பாடல்கள் பல பாடியும் விளங்கினர். இவர் செய்தநூல்களுள் ‘திருநாகைக் காரோணப் புராணம்’ பெரிதும் பயிலுகின்றது. தமிழ்மொழியின் செய்யுணடை நூல்கள் இவ்வாறாக வசனநடை நூல்களின் தோற்றத்தையும் சிறிது குறிப்பாம். தமிழில் வசனநடையானது உரையாசிரியர்களாலேயே நூலுரைகளிற் பயிலப்பட்டுவந்தது. வசனநடையை ‘உரைநடை’ யென்றலும் வழக்காறாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய ‘பெருந்தேவனார்பாரதம்’, ‘சிலப்பதிகாரம்’ என்ற நூல்களிலே உரைநடை காணப்படுகிறது. வடமொழியிற் கத்திய காவியங்களிருத்தல் போலத் தமிழ்மொழியின்கண்ணே வசனகாவியங்கள் காண்டலரிதாம். ‘ஸ்ரீபுராணம்’, ‘கத்தியசிந்தாமணி’ முதலிய ணசைனநூல்களுட் சில வசனநடையினவாம். இவ்வாறு சைனர்களால் வசனநடையில் இரண்டொரு நூல் செய்யப்பட்டனவேயன்றி மற்றையோர்களால் அது பெரிதும் பயிலப் படாமைக்குக் காரணமென்னோ? நன்குபுலப்படவில்லை. இனிச்சிலர் இவ்வுரை நடையையும் ஒருவகைச் செய்யுளெனக் கருதிச் சூத்திரஞ் செய்தனர். “பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்றெழுந்த கிளவி யானும் பொருளொடுபுணராப் பொய்மொழி யானும் பொருளொடுபுணர்ந்த நகைமொழி யானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப.” என்றார் இலக்கணவிளக்கப் பாட்டியலுடையார். இனி அச் சூத்திரவுரையில் “ஒருபாட்டின் இடையிடைகொண்டு நிற்கும் கருத்தான் வருவன உரையெனப்படும்; என்னை? பாட்டுறுவது சிறுபான்மையாகலின், அவை தகடூர் யாத்திரை’ போல்வன. மற்றுப் பிறபாடை விரவிவருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சியின்று. பாவின்றெழுந்த கிளவி பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ வெனின்? படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதினமையின். இதனாற்போந்தது சொற்சீரடியான் இற்ற சூத்திரம் உரைச்செய்யு ளென்பதாம். பொருளொடு புணராப் பொய்ம்மொழி பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. பொருளொடு புணர்ந்த நகைமொழி பொய்யெனப்படாது மெய்யொடுபட்டு நகுதற்கு ஏதுவாகுந் தொடர்நிலை. இந்நான்கும் உரைச்செய்யுளென்று கூறுவர் புலவர்” என்றார் தியாகராச தேசிகர். இவ்வாறு வசனநடையும் ஒருவகைச் செய்யுணடையாகப் பாவிக்கப்பட்டு வந்தால் அதற்குரிய தனித்தியங்கும் நிலைமையும் அற்றுக், கட்டுப்பாடுடையதாகின்றது. இது மிகவும் பரிதபிக்கத் தக்கதோர் விஷயம். இடைக்காலத்தில் உரையாசிரியர்களானன்றி ஏனையோரால் இவ்வசனநடை பெரிதும் பயிலப்படா தொழிந்திருந்தது. பிற்காலத்துப்போந்த வீரமா முனிவர் வேதியரொழுக்கம்’, ‘அவிவேக பூரண குருகதை’ என்ற வசனநூல்கள் இயற்றினர். இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாராற் பல கணடன நூல்கள் வசன நடையிலியற்றப்பட்டு வெளிப்போந்தன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்க முதல் தமிழில் வசனநடை விசேடமாய் வழங்கப்படுவதாயிற்று. அதன்மேல் இக்காலத்தில் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் முதலிய வித்துவான்கள் இவ்வசன நடையைப் பெரிதும் போற்றி அதன்கட் பலநூல்கள் இயற்றி வெளியிடுவாராயினர். இப்பொழுது அச்சியந்திரத்தின் உதவியால் நாடோறும் பலவசன பத்திரிகைகளும் வாரந்தோறும் சிலநூல்களும் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும் வசனநடை நூல்களிற் பெரும்பாலன சாமானியஜன விருப்பத்திற்கு ஏற்றவைகள். சிற்சில நூல்களே பண்டிதர்கள் பாராட்டத்தகுவன. எனினும் பாஷையின் கண்ணே நூல்கள் பல வெளிப்பட்டக்கால் அவை தாந்தாம் பதிப்பிக்கப்படுந்தோறுந் திருத்தமுற்றுப் பிறர்க்கு நலம்பயக்கும் ஆதலின் எவையும் கடியப்படுவன வல்ல. சாமானிய ஜனங்களைத் திருத்துவதற்குச் செய்யுள் நூல்களிலும் வசன நூல்களே மிகவும் உபகாரமுடையனவா யிருத்தலின் வசன நூல்களை அறிவுடையோர் சிலர் விசேடமாக மதிக்கின்றனர். நூற்பரப்பு முற்றிற்று. IX. பாஷையின் சீர்திருத்தம். பரவை வழக்குள்ள பாஷைகளெல்லாம் சதா இயங்கிக் கொண்டிருப்பதனாலே, தங்களியக்கத்திற்குத் தக்கபடி நாகரிக நிலைக்குரிய புதிய கருத்துக்களை மேற்கொள்ளுமென்பது திண்ணம். புதிய கருத்துக்கள் மேற் கொள்ளப்பட்டால், அவற்றைத் தங்களது குறிக்கவல்ல சொற்களுஞ் சொற்றொடர்களும் பாஷையின்கண் ஏற்படுதல் இன்றியமையாததே. உட்கருத்தின் வேறுபாடு வெளிச் சொல்லிற் பிரதிபலிக்கும்; ஆதலால் மநோபாவம் விரியுந்தோறும், புதுவிஷயங்கள் கண்டுபிடிக்கப் படுந்தோறும், கலைஞானவுண்மைகள் வெளிப்படுந்தோறும், வேற்றுநாடுகளினின்றும் புதிய பொருள்கள் உட்புகுந்தோறும், பாஷை விரிந்து முதிர்ந்து சீர்திருந்துதல் வழக்காறேயாம். உலகத்தின் நாகரிகநிலை முதிர்ச்சிக்குத் தக்கவாறு பாஷையும் ஒத்தியங்கித் திருந்தி முதிர்ச்சி யடைதல் வேண்டும். அங்ஙனம் முதிரும் பாஷையே செழிப்புள்ள பாஷையாம். அதன் கண்ணேயே எக்கருத்துக்குந் தக்கசொல் அகப்படும். மேற்கூறியவாறு திருந்தி முதிராத பாஷை *’பிராணதாரணப் பிரயத்தன’த்தில் நிலைத்து நில்லாது காலக்கிரமத்தில் அழிந்துபடும். - Struggle for existence தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக்கவாறு அமையவில்லை. நாகரிக வளர்ச்சியின் விரைவினும் தமிழ்மொழியின் வளர்ச்சி விரைவு குறைவுபடுதலாலே இவ் விரண்டிற்கு முள்ள தூரம் மிகுந்து கொண்டே போகின்றது. இத்தூரம் இனிமேலும் மிகவொட்டாது தடுத்தல் வேண்டும். இதுகாறும் ஏற்பட்டுள்ள தூரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தலும் வேண்டும். இவை செய்யாக்கால் தமிழ்மொழி அருகி அஃகுவதாகும். தம் தாய்மொழியாகிய தமிழ் அத்தன்மையான நிலைமையை யடையாது அதனைப் போற்றுதல் தமிழ் வாணராயினார் யாவர்க்கும் உற்ற கடப்பாடன்றோ? மன்பதையின் ஆக்கப் பொருளாகிய பாஷையின் கண்ணே, தனித்தனி மக்கள் கருத்துக்களின் போக்குக் கிடைத்தபடியெல்லாம் சொற்கள் அகப்படுமென்றெதிர் பார்த்தல் செவ்விதன்று. அவரவர் கஷ்டப்பட்டுச் சொற்கள் படைத்தல் வேண்டும். அவை மற்றையோர் சுவைக்கும் ஏற்றனவாய்க் காணப்படின் உடனே மேற்கொள்ளப்பட்டுப் பாஷையிலே வழங்குவன வாகும் அல்லாக்கால் அவைதாமே வீழ்ந்துபடும். ஒருமுறை ஒருகருத்து வெளிப்பட்டு விட்டதாயின், அப்புறம் கஷ்டமில்லை. முன்னரேயுள்ள சொற்களை,உருவத்திற் சிறிதளவு திரித்தாதல் சிறிதளவு குறைத்தாதல் புத்துருவம் படைத்தாதல் மாற்றித் தங்கருத்துகளை நாகரிகநிலை முதிர்ந்த மக்கள் வெளிப்படுத்தியே விடுவார்கள். தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும். ஆதலின் தமிழ்மொழி யிவ்வாறு பிரிந்து பிரிந்து வழிமொழிகட்கு இடஞ் செய்துகொண்டு ஒரு நிலைப்பாடெய்திப் பயிற்சிகுன்றி ஆரியம்போற் பரவை வழக்கு அழிந்தொழிந்து போதல் விரும்பாத தமிழ்மக்கள் தமது அருமையான பாஷையை வேண்டியவளவு சீர்திருத்திக்கொள்ள இன்னே புகுதல் வேண்டும். இன்னுங் காலந்தாழ்க்கலாகாது. அப்படியானால் தமிழ்மொழி யுடனே மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் யாவை? பண்டிதராயினார் திரிசொற்கள் பலவழங்கியும், அருகிய சொல்லுருவங்களை யுபயோகித்தும், செய்யுட்களிலும் அருகிவரும் அள பெடைகளைத் தொடுத்தும், விரிக்கவேண்டிய வேற்றுமை யுருபுகளைத்; தொகுத்தும், சாமானிய ஜனங்கள் மருண்டு ஒதுங்கிச் செல்லத்தக்கவாறு எழுதும் வழக்கத்தை நிறுத்திவிடல் வேண்டும். ஒருவரும் ஒன்றை யெழுதி அதனைத் தாமே படிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளமாட்டார். எழுதுவோரும் படிப்போரும் ஒருவரா யிருத்தலரிது. ஆதலின் ஒருவர் ஒன்றெழுதினால் அதனைப் பிறரெல்லாம் படித்தறிந்து கொள்ளவேண்டு மென்ற நோக்கத்தோடே எழுதுகின்றா ராதல் வேண்டும். அந்நோக்கமே அவர்க்குப் புகழும் பொருளும் தரவல்லது. ஆகவே பிறரெல்லாம் படித்துணர்ந்து கொள்ளத்தக்க தெளிவான நடையிலெழுதுவதே யாவரும் மேற்கொள்ளத் தக்கது. அத்தன்மையான தெளிவு நடைக்குத் திரி சொற்கள் வேண்டாம்; இயற் சொற்களே போதும். தப்பித்தவறி யிரண்டொன்று வழங்கிவிட்டாலும் பாதகமில்லை. இதுபோலவே பூர்வாசிரியர்களுடைய நூல்களிற் காணப்பட்டு இக்காலத்தில் அருகிப்போன சொல்லுருவங்களைக் கிளப்பிக் கொணர்ந்து வழங்குதலும் நேரிதன்று. இவற்றாற் பொருள் மயக்கம் உண்டாகின்றதேயன்றி வேறில்லை. பிறரை மயங்க வைக்க வேண்டுமென்பது ஒருவருக்கும் நோக்கமா யிருக்கலாகாது. அது நோக்கமாயிருந்தாற் பொருளில் தெளிவு எப்படி யேற்படும்? ஏற்படவே படாது. உதாரணமாக, ‘அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்’ என்ற வாக்கியத்தை’ அன்னோன் ஈண்டை இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்’ என்றெழுதினாற் சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்ளுவார்களா? ஒருநாளும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஒருவேளை செய்யுளெழுதுவதா யிருந்தால் யாப்பு நேர்மைகருதி இரண்டோர் அருகிய சொல்லுருவங்களை வழங்கினாலும் அஃது இழுக்கில்லை. இவை போலவேயாம் வீணாக அளபெடைகளை வழங்குதலும். அளபெடைகள் யாப்பு நேர்மைக்காகவே வகுக்கப்பட்டன. வசன நடையில் யாப்பு நேர்மையேது? இல்லை. ஆனால் பண்டிதரெழுதும் வசனநடை செய்யுணடையை யொட்டியே நடத்தலால் அவர் ஓசை யின்பங் கருதி வழங்கபவாராயினர். இவ்வளபெடை வழக்கும் நீங்க வேண்டும், பொருளின் தெளிவு கருதினால். இவ்வாறே, வேற்றுமை யுருபுகளும் பிறவும் வாக்கியங்களில் விரிந்திரா விட்டால், அவ்வாக்கியங்கள் நெருங்கிச் செறிந்து கருதிய பொருளை ஆழ்த்தி விடுகின்றது. இத்தன்மையான நூல்களைப் படித்துப் பொருள் காண வந்தவர், அவற்றின் கண்ணே நுழைந்து மூழ்கிப் பொருள் காண்பரென்பதென்ன நிச்சயம்? சாதாரணமாகச் சனங்கள் மேலேமுதல் நோக்கத்திலேயே பொருள் தெரியா விட்டால் அதற்காகக் கஷ்டப்படுகிறதில்லை. ஆதலால், யாம் மேற்கூறியவாறு, காலத்தினருமை கருதியும், யாவருக்கும் பொருள் விளங்கவேண்டு மென்பது கருதியும் தமிழ்ப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும், நாவலர்களும் முதலிய யாவரும், தெளிவான தமிழ் நடையைக் கைப்பற்றி, அந்நடையிலேயே நூல்கள் எழுதுவார்களாக. பண்டிதர்கள் தமது நடைத் தெளிவானாற் பெரிதும் சாமானிய சனங்களைத் திருத்தி நல்வழிப்படுத்தலாம். சாமானிய சனங்களும் அதிக கஷ்டமில்லாமல் எளிதில் திருந்துவர். இருவர்க்கும் உள்ள வொற்றுமை யேற்படும். இருவரும் ஒத்தியங்குவர். பண்டிதர் நூல்கள் சாமானிய மக்களால் ஆதரிக்கப்படும். அவ்வாறு ஆதரிக்கப்படுமேற் பண்டிதர்கட்கு குறைவேயில்லை. இவ்விஷயத்தில் ஆங்கிலவாணரைப் பார்த்து நாம் பொறாமைப் படுதல் வேண்டும். “தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலாம் எற்ற யிவர்க்குநா மென்று” என்றபடி ஆங்கில நூல்வாணரைப் பார்த்தாவது தமிழ் வாணரும் சாமானிய சனங்களை யொட்டிச் சென்று அவர்களைக் கைவிடாது பற்றிக்கொண்டு திருத்தி, அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்வார்களாக. “தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்” என்ற திருவள்ளுவர் வாக்கு ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று. இனித் தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம் இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விட்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கஷ்டப்பட வேண்டியதொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசன நடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ? இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விஷயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப் படிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும். ஆகவே சந்திபிரித் தெழுதும் விஷயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க. இனி ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசன முள்ளதாகக் காணப்படுகின்ற ‘குறியீட்டி லக்கணம்’ தமிழின் கண் முழுவதுந் தழுவிக்கொள்ளப்படல் வேண்டும். அதனாற் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சி உண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின் கண் ஆர்வமுண்டாகின்றது. இக்குறியீட் டிலக்கணமெல்லாந் தமிழ் வசன நடை கைவந்த வல்லாளராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலவர்களானே முன்னே மேற்கொண்டு வழங்கப்பட்டுள. இதனை வசன நடையின்கண் ஆக்ஷேபிப்பா ரெவருமில்லை. செய்யுணடையிலேதான் உள்ள வம்பெல்லாம். இதனைச் செய்யுணடையில் ஒருவாறு மேற்கொள்ளலா மென்று துணிந்து புகுந்தாலும், குற்றியலுகரம்போல்வன வருமிடத்து இடர்ப்பாடு காண வேண்டியதாகின்றது. அதனையும் ஒருவகைத் தலைக்குறியாற் கனம்பொருந்திய ஜி.யூ. போப்பையர் அவர்களும், உடுக்குறியாற் காலஞ்சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும் விலக்கிக் கொண்டனர். இனி, உள்ளவாறே உற்றுநோக்குமிடத்துக் குறியீட் டிலக்கணத்தைப் பற்றி ஆக்ஷேபித்தற்குத் தக்க நியாயங்களுமில்லை. ஆக்ஷேபிக்கு மியல்புடையாரும் ஆக்ஷேபிக்க வில்லை. ஆதலின் அது விரைவில் மேற்கொள்ளப்பட்டு முற்றிலும் பயிலப்படும் என்பதிற் சந்தேகமில்லை. அதனால் தமிழிற்கு விசேஷ நன்மைகள் விளையுமென்பதிலுந் தடையில்லை. தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர். “அரைசருங் குடிகளு மம்ம வேறலர் உரைசெயி லுயிருல்லா முடல மாவரால்” என்று யாம் பிறிதோரிடத்தில் கூறியாங்கு இருவரும் ஒத்தே இயங்குதல் வேண்டும். இவ்வாறு இருவரும் ஒத்தியங்கு மிடத்துத் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலபாஷையில் புகுதலும், ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப்பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதனைத் தடுக்கமுடியாது; தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமேயன்றி வேறில்லை. ஏறக்குறைய ஆங்கில அரசாட்சி வந்து ஐம்பதறுபது வருஷமாகிறதற்குட் கணக்கற்ற ஆங்கிலச் சொற்கள் பரவைவழக்குத் தமிழிலே புகுந்துவிட்டன. கிராமவாசிகளும் பிறர் தம்மை நாகரிகமக்களாகக் கருதல்வேண்டி ஆங்கிலச் சொற்களைத் தம் பேச்சிலே ஆவலோடு வழங்குகின்றனர். இவ்வாறு பேச்சுத் தமிழ் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத்தமிழ் அவற்றை ஏற்றுக்கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின் கண் ஏற்றப் புகுந்தன. ’மதுரைப் புதுத்தமிழ்ச் சங்க’த்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமையாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே. ஆங்கில வாணர் சகல சாஸ்திரங்களிலும் வல்லுநராய், யாங்குச் சென்ற போதிலும் ஆங்குள்ள அரிய விஷயங்களை மதித்து மேற்கொளவதனொடு நில்லாமல், ஆங்குள்ளார் பயிலும் பாஷைச் சொற்களையும் மேற்கொள்கின்றனர். ஆதலானன்றே அவர்கள் லௌகிகஞானம் விரிந்து, வாழ்க்கை நியமங்களை நன்குணர்ந்து, ஊக்கங் குன்றாது பல நாடுகளை வென்று நாகரிக நிலையில் யாவரிலும் மிகவும் உயர்ந்தோரென மதிக்கப்படுகின்றனர். ஆங்கிலரைப்போலத் தமிழ்மக்களும் நாகரிக நிலையில் உயரவேண்டின் ஆங்கிலம் கற்று அவர்களது சாஸ்திர ரகசியங்களை அறிந்துகொள்ளவேண்டும். அங்ஙனங் கற்றுக்கொண்டோரிற் சிலர் அவ்வரிய உண்மைகளைத் தம்முடைய தாய்மொழியாகிய தமிழ் மொழியில் வெளியிடுதற்குரிய ஆற்றலிலராய்த் தம்மவர்க்குப் பயன்படாது வாணாள் வீணாள் கழிக்கினறனர். இப்பொழுதுதான் சிலர் தமிழ் மொழியைக் கண்விழித்துப் பார்ப்பாராயினர். அநேகர் ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கப் புகுந்தனர். இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும்நலமே. இம் மொழிபெயர்ப்புவகை ஒன்று போதாது; இன்னும் வேறுவகைகளும் வேண்டும். தமிழ்ப் பகுதிகளினின்று புதுச்சொற்கள் படைத்துக் கருத்தை வெளிப் படுத்தலாம். உள்ள சொற்களைத் திரித்தும் சில புதுக்கருத்திற்கு இடஞ்செய்யலாம். சிலர் ஆஞ்கிலக் கருத்துகளுக்கு ஏற்றசொற்கள் தமிழ் மொழியிற்காண்டல் அரிதாயின் வடசொற்களின் மூலமாக அவற்றைத் தமிழில் வெளியிடுகின்றனர், இவ்வளவு தூரஞ் சுற்றுவானேன்? தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ? நேரே மூக்கைத் தொடல்கூடாதோ? ஆங்கிலச் சொற்களையும் ’திசைச்சொற்’களாக மேற்கொண்டாலென்னை? மேற்கும் ஒரு திசையன்றோ? “செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.” என்ற சூத்திர விதியின்கண் ஆங்கிலநாடு அடங்கவில்லையே யென்று வாதித்தலும் ஒக்குமோ? ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களினும் வட சொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், ஆங்கிலச் சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்ளுவதிலே யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம். இதனைப் பேரறிவாளராயினர் பிற பரவை வழக்குள்ள பாஷைகளின் சரித்திரங்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் செவ்வனே யாராய்ந்து உண்மை யெனக் கண்டு காலந் தாழ்த்தலின்றி யுடனே மேற்கொண்டு தமிழ்ப் பாஷை முதிர்ந்து நாகரிக நிலையிலுயர்ந்து முன்னுக்கு வருமாறு செய்வாராக. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.” என்ற பவணந்திமுனிவர் கூற்று அறிவுடையோர் அனைவருஞ்; சிந்திக்கற் பாலது. இவ்வளவு சுவாதீனமுள்ள தமிழ்ப் பாஷைக்கு மேற்கூறியாங்கு செய்வதற்குத் தடையென்ன? ஒருதடையுமில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இவ்விரண்டும் பாஷை யியக்கத்திற்குரிய இரண்டு கால்களென மதிக்கப்படுகின்றன. இவ்வுண்மையை யுய்த்துணர்ந்து தமிழ்ப் பாஷையின்கட் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையுடனே மேற்கொள்ளுதல் தமிழ் மக்கள் கடனாம். பாஷையின் சீர்திருத்தம் முற்றிற்று. X. முடிவுரை. இதுகாறும் ஒன்பது உபந்நியாஸங்களிலும் யாங் கூறி வந்த விஷயங்களைத் தவிர்த்து அவ் வுபந்நியாசத் தலைப் பெயர்களொடு பொருந்தாது, எஞ்சிய சில விஷயங்களைப்பற்றி இவ் வுபந்நியாசத்திற் கூறித் தமிழ்மொழியின் வரலாற்றிற்கும் ஓராற்றான் முடிவுரை கூறுவாம். யாங் கூறும் இம்முடிவரை ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற விந்நூலிற்கே யன்றித் தமிழ்மொழியின் வரலாற்றிகன்றெனவுணர்க. தமிழ் மொழி வளர்ந்து முதிர்ந்துகொண்டே செல்லும் பாஷையாம். ஆதலால் இந்நூலும் முடிந்த நூலன்றென்பது தேற்றம். இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கேற்ப வளரவேண்டுவது. இக்காலத்தில் ஆங்கில பாஷைகற்ற தமிழ்மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்கவேண்டுவது ஆவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றன வென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ்கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமும மற்றவர் கூற்றாம். இவ்விரண்டும் மிக்க ஆங்கிலர் இவ்விரண்டும் அற்றவர்களை எவ்வாறு மதிப்பாரோ? ஆங்கிலம் முதலிய பிறபாஷைக்குரியராய் அப்பாஷைகள் வல்லுநரெல்லாம் தமிழ்மொழியின்மீ தார்வமுடையாரைய்த் தமிழைக் கற்றும் தமிழ்நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழிபெயர்த்துக் கொள்ளுதலை உற்று நோக்கி யாதல் தமிழ்க் கல்வி அவசியமன்று என்பார்க்குப் புத்திவரட்டும். பாஷையறிவு பிறிதொரு பயனுக்குக் கருவியாகுமே யன்றி, அதுதானே பயனாகாது. பாஷையறிவே பயனெனக் கருதி அதன்கண் இன்பங் காண்பாருமுளர். சபைகளிலாவது சம்பாஷணைகளிலாவது சாதுரியமாகப் பேசுவோர் பாஷையறிவுடையோரே யன்றிச் சாஸதிரக் கல்வியுடையாரல்லர். சாஸ்திரக் கல்வியுடையார் எங்கே போனாலுந் தங்கள் கடையை விரிக்கப் புகுவாரேயன்றி வேறன்று. சாஸ்திரக் கல்வியுடையார்க்குப் பாஷையறிவும் இன்றியமையாததே. தங்கள் கருத்துக்களால் உலகமனைத்திலும் இன்பவுணர்ச்சி யெழுப்ப வல்ல நல்லிசைப் புலவர்கள் செய்த பாமுறைகளைப் படித்தலாலுண்டாகும் பயன் அளவிடற்பாலதன்று; மக்களிடத்தி்ல் அடங்கிக் கிடக்கும் மநோ விகாரங்களை எழுப்பிச் சுவை பயக்கும். இனி யிது நிற்க. தமிழ்நாட்டில் ஆங்கில வரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன்வழி மொழிகளாகிய தெலுங்கு கன்னட மலையாளதுளுவங்களோடு அடக்கி ‘உண்ணாட்டுமொழிகள்’ என வகைப்படுத்தனர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப் படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரியமொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம். இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவு படுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்கவேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ்மொழியாளர். வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ்மொழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பன்மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கவே தகவுடைமையுமுள்ள மொழியே ‘உயர்மொழி’. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்து தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற்பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே ‘தனிமொழி’ எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியி னுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடற்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய நூற்புலவர்கள் பலர்க்கும் ஓப்பமுடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது? திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் ‘செம்மொழி’யாம் என்பது இலக்கணம், இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதி னுணரவல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்க ளேற்படுமிடத்துப் பிறபாஷைச் சொற்களன்றித் தன்சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம்,. ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி யென்பது திண்ணம். இது பற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ்மொழி ’செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ’உயர்தனிச் செம்மொழி’யேயாம் என்பது நிச்சயம். இவ்வள வுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம். பல்லாண்டுகளின் முன்னர்ச் சென்னைமா நகரிலே, ஆங்கில வரசாட்சியின் பயனாக,‘பள்ளிக்கூடப்பாட நூற்சபை’ என்ப தொன் றேற்பட்டுப் பல நற்றொழில்கள் செய்து வாராநின்றது. இச்சபையார் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்ற பாடநூல்கள் அமைத்தனர்; அவ்வளவில் நில்லாது அவர்கள் சமஸ்கிருத நாடகக் கதைகளையும் ஆங்கில நாடகக் கதைகளையும் தெளிவான தமிழ் வசன நடையிலெழுதி வெளியிட்டனர்; ‘ஜந விநோதிநி’ என்றதோர் அருமையான தமிழ்ப் பத்திரிகையை மாதந்தோறும் பிரசுரித்து ஏறக்குறைய இருபத்திரண்டு வருஷகாலம் நடாத்தினர். யாது காரணத்தினாலோ அதுநின்றுபட்டது? அப்பத்திரிகை நின்று பட்டமை தமிழர்களது துரதிர்ஷ்டமேயென்னலாம். மேற்கூறியவாறு நற்றொழில் புரிந்து வந்த அச்சபையானது இப்போது சில்லாண்டுகளாக இருக்குமிடந் தெரியாதவாறு தூங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் உயிருடனிருக்கின்ற தென வெண்ணுவதற்கு இடனுண்டு. ஏனெனில், இச்சபையார் சிற்சில சமயங்களில் தமிழின்கண் வெளிப்படும் நல்ல நூல்கள் சிலவற்றிற்கு நேர்ந்த பதிப்புச் செலவுகருதி அவ்வந் நூலாசிரியர்கட்குப் பொருளுதவி செய்கின்றனர். இச்சபை மீட்டுந் தலைக்கிளம்பி முன்போல ஊக்கமுற்றுப் பல நற்றொழில்கள் புரியிலும் புரியலாம். இது துயிலொழிந் தெழுக. இவ்வாறு பள்ளிக்கூடப் பாடநூற் சபை துயில்வது கண்டு நன்மக்கள் சிலர் முற்புகுந்து, தமிழ் தெலுங்கு மலையாள கன்னட துளுவங்களாகிய அனைத்தையும் போற்றுவேமென எழுந்து ‘திராவிட பாஷா சங்கம்’ என்னும் பெயர் புனைந்து கொண்டு சின்னாள் உழைத்தனர். இவர்கள் சில ஆங்கில சாஸ்திரச் சொற்களை மேற்கூறிய பாஷைகளில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டனர். அதன்மேல் துயிற்பெருந் தேவி இச்சங்கத்தையும் பற்றிக் கொண்டனள். ஆகவே சென்னை திராவிட பாஷா சங்கமும் தூங்குவதாயிற்று. இஃது என்று எழுமோ? அறியேம். இதுவும் விரைவினெழுக. இனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப்பேர்படைத் தொளிரும் மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் ‘தமிழ்ச் சங்கம்’ ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது. அதற்கு அங்கமாகப் ‘பாண்டியன் புத்தகசாலை’யும் ’சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’யும் ஏற்படுத்தப் பட்டுன. முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுன; அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன. பின்னதன் கட் கல்வி பயிலும் மாணாக்கர் பலர், நூல்களும் ஆடையு முணவும் சங்கத்தாருதவ, அவற்றைப் பெற்றுப் படிக்கின்றனர்.இச்சங்கத்திற்கு அவயவிகளாக ஏறக்குறைய ஐம்பதின்மர் புலவர் இருக்கின்றனர். இவர்களெல்லாம் வருஷம் ஒருமுறை கூடுகின்றனர்; கூடித் தமிழ்மொழி முன்னுக்கு வருதற்குரிய யோசனைகள் செய்கின்றனர். சங்கத்திற்கெனத் தனியே ஓர் அச்சியந்திர சாலை ஏற்படுத்தப்பட்டுளது. அதன் மூலமாகப் பல அரிய தமிழ் நூல்களைச் சங்கத்தார் அச்சிடப்போகின்றனர். ’செந்தமிழ்’ என்னுந் தலைப்பெயரிட்டு ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை நடாத்தி வருகின்றனர். அதன் கண்ணே பல அருமையான விஷயங்கள் வெளிப்படுகின்றன. சங்கத்தார் ஆங்கிலக் கலாசாலைகளிற் கற்கும் மாணாக்கர்க்குத் தமிழில் ஆர்வமுண்டாதல் வேண்டிப் பணப்பரிசிலும் யோக்கியதா பத்திரமும் வைத்துப் பரீட்சைகளேற்படுத்தி யிருக்கின்றனர். இவ்வாறு நல் வழிகளில் உழைத்து வரும் இம்மதுரைத் தமிழ்ச்சங்கம் நீடூழி நின்று உலவுவதாக. ஆங்கிலக் கலாசாலைகளையொட்டி ஆங்காங்குத் தமிழ்ச் சங்கங்கள் பல தாபிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உதாரணமாகச் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையைச் சார்ந்து ‘திராவிட பாஷாபி வர்த்தநி சங்கம்’ என்பதும் சென்னை இராசதானிக் கலாசாலையைச்சார்ந்து ‘தமிழ்ச்சங்கம்’ என்பதும் நடைபெறுகின்றன. எனவே ஆங்கில வரசாட்சி தமிழ்மொழியின் முதிர்ச்சிக்குப் பல்லாற்றானும் உதவிசெய்து வருகின்றதென்பது யாவருமுணர்ந்த விஷயம்; மேற்கூறியவாறு பல சங்கங்கள் சேர்வதற்குக் கைகொடுத்தும் கடைக் கணித்தும் பரீக்ஷைப் பாட நூல்களுள் தமிழ் நூல்கள் பலவற்றை யேற்படுத்தியும் ஆங்கிலர் தமிழைப் போற்றுகின்றனர். அச்சியந்திரம் முதலியன அவர் கண்டுபிடித்துத் தந்துதவினர்; தமிழரது நாகரீக விருத்திக்குந் தனிப்பெருங் கருவியாய் இருக்கின்றனர். கையெழுத்து நூற்சாலையும் அமைத்திருக்கின்றனர். இவர்களது அரசு நீடூழி நிலைத்துத் தமிழ்மொழியை மேன்மேலும் வளர்ப்பதாக. பாஷை திரிந்து வேறுபடுவதெல்லாம் தன்னியல்பாகவேயாம். ஒருவனாலுந் தான் விரும்பியபடி, தான்பேசும் பாஷையை மாற்றமுடியாது. மக்களறிவின்றியே பாஷை முதிர்ந்துகொண்டுசெல்லும்; பல்லாண்டுகள் கழிந்த பின்னரே முதிர்ச்சிக் குறிகள் தோன்றும். பாஷையினியல்பு இவ்வாறாக, இதனை யறியப் பெறாத வைத்தியநாத தேசிகர் நன்னூலாரது உட்கருத்தையும் உணராது, “பழையனகழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூற் சூத்திர விதியைப், “பழையனகழித்தலும் புதியன புகுத்தலும் வழுவல கால வகையினானே” என்று மாற்றித் தமது இலக்கணவிளக்கம் என்ற நூலின்கட் கூறினர்; எனவே தமிழ்ப் பாஷையின் ஒழுகலாற்றை மாற்றுதல் எவராலும் முடியாததாம். ஆதலால் தமிழ்ப் பாஷையின் ஒழுகலாறு இன்னதென்று உய்த்துணர்ந்துகொண்டு, ஆற்று வெள்ளத்தின் வேகத்துடன் செல்வான்போல, அவ்வொழுக லாற்றினை யொட்டி அதனோடியைந்து தமிழ்ப் புலவருந் தம் பாஷையைச் சீர் திருத்திக் கொள்ளவேண்டும். இனிச் சிலர் ‘புதியன புகுதல் தமிழிற்கு ஒக்குமாயினும் பழையன கழிதல் ஒவ்வாது’ என்ற கொள்கையுடையார்போலத் தாம் எழுதும் நூல்களின்கண் பழையன கழிந்த சொற்களிலும் சொல்லுருவங்களிலும் அளவிறந்தவற்றை வழங்குகின்றனர். இவர் செயல் தம்முடைய வல்லமை காட்டிப் படிப்போரை மருட்டித் தம்மைப் பற்றி அவரகள் நல்லெண்ணம் கொள்ள வேண்டுமென்று நினைத்துச் செய்ததாகக் கருதப்படும். படலால் இவர் தாம் எண்ணியபடி நன்கு மதிக்கற்பாடு பெறுவதில்லை. சாமானிய சனங்கள் இன்னார் நூல்களைத் தொடவும் அஞ்சுகின்றனர். மேலும் இங்ஙனமெழுதுவார் சுவை போலிச்சுவை யெனப் பலரும் ஒதுக்குவர். ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனத் தலைப்பெயரிட்டு எமது ஆராய்ச்சிக்கண் நேர்ந்த பல விஷயங்களையும் பத்து உபந்நியாசங்களிற் கூறி ஓராற்றான் முடித்தாம். தமிழ்மொழியும், தமிழ் மக்களும் நீடூழி வாழ்க. வாழ்த்து. கலி விருத்தம். ஐயர் வாழிய வண்ணலும் வாழிய செய்ய நற்றமிழ் தேமெங்கு மோங்குக துய்ய கோமகன் றோமின் றிலங்குக தெய்ய யாமுரை செய்ந்நூ லொளிர்கவே. தமிழ் மொழியின் வரலாறு முற்றிற்று.