[] 1. Cover 2. Table of contents தமிழ்நாடும் மொழியும் தமிழ்நாடும் மொழியும்   பேரா. அ. திருமலைமுத்துசாமி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/tamilnadum_mozhiyum மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/kamban_kanda_aatchiyil_arasiyal_samugam This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - RtssathishkumarBOT - Pavithra Kannan - Fathima Shaila - Arularasan. G - Victory-King - Balu1967 - Tnse anita cbe - சத்திரத்தான் - Gladys jaba - Girijaanand - பிரபாகரன் ம வி - Balajijagadesh - Info-farmer - KSK TRY - Sgvijayakumar - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. வாழ்த்துரை தமிழ்ப் பெரும் புலவர் ஆபிரகாம் அருளப்பன் பி.ஏ., தமிழ்ப் பேராசிரியர் தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை 27-5-59 நம் வண்டமிழ் நாடு, செந்தமிழ் மொழி பற்றிய வரலாறு இன்றளவும் தகுந்த முறையில் வெளிப்படவில்லை இக் குறையைக் குறைப்பதற்குப் பல அறிஞர் முயன்று ஆராய்ந்து தக்க கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளுள் சிறந்த வொன்றக நண்பர் திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் எழுதியுள்ள ‘தமிழ் நாடும் மொழியும்’ என்ற இந்நூல் மதிக்கத்தக்கது. காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல் அறிவுடையார் கடமை என்ற உண்மையை உள்ளத்தில் அடிப்படையாகக் கொண்டு மேனாட்டாரும் நம் நாட்டாருமாகிய அறிஞர் கருத்துக்களையும் அறிந்து, தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்மொழி வரலாறு இவை பற்றிய தம்முடைய கருத்துக்களை இவ்வாசிரியர் அமைக்கும் முறை பெரிதும் பாராட்டத்தக்கது. சங்ககாலம், பல்லவர்காலம், பிற்காலம், அரசியல், வாழ்வியல், சமயவியல், இலக்கியம் இவை பற்றிய கால வரையறையும் பிறவுங் குறித்து எழுந்துள்ள பல்வேறு வகையான முரண்பட்ட கருத்துக்களிடையே நடுவு நிலையோடு இயன்ற மட்டும் உறுதியுடன் நின்று படிப்போர் தெளிவுபட உணரும் வழியில் இவ்வாசிரியர் கூறியிருப்பது கற்று மகிழ்தற்குரியது. தமிழ் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டாற்றும் நண்பர் அ. திருமலைமுத்துசுவாமி அவர்களுடைய நல்ல முயற்சியைச் செய்நன்றியறிவோடு பாராட்டி மனமார வாழ்த்தி மேலும் நற்பணியாற்ற ஊக்குவிப்போமாக. ** ஆபிரகாம் அருளப்பன்** அணிந்துரை வித்துவான் ந. சேதுரகுநாதன் தமிழ் விரிவுரையாளர், செ. நா. கல்லூரி. விருதுநகர், 29–5-59. நாட்டுக்கும் மொழிக்கும் இலக்கிய உணர்வுக்கும் உயிரின் அடித்தள உண்மையாக இலங்குவது வரலாறு. அதன் கண் உண்மை உண்மையாகவே மிளிர வேண்டும். பொய்மை பொய்மையாகவே போக்கப்பெறல் வேண்டும். எனவே வரலாற்றைப் பலரும் விரும்பிப் படித்தும் உணர்ந்தும் வரலாற்றுத் தெளிவு உடையவராக ஆவதற்கு மிகப்பல தெளிந்த நூல்கள் நம் தென்னகத்துச் செந்தமிழின் கண்ணே எழுதப்பெறல் வேண்டும். இத்தகைய அவா எனக்குத் தோன்றியதுபோல் பலருக்கும் தோன்றுவது இயல்பே. திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் ‘தமிழ் நாடும் மொழியும்’ என்ற இந்த நூலைத் தெளிவாக எழுதி வழங்கியுள்ளார்கள். தொகுத்துச் சுட்டியும் வகுத்துக்காட்டியும் தெளி பொருள் விளக்கமாகவும் பல்வேறு பேரறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக் காட்டியும் காலவரையறைகளை நிறுவியும் மறுக்க வேண்டிய கருத்துக்களை முறையாக மறுத்தும் பொருள்களைக் கால வரிசையில் நிரல்பெற நிறுத்தியும் இலக்கண இலக்கிய வரலாற்றுடன் நுட்பமாக விளக்கியும் திராவிட மொழிகளின் பொதுவியல்பு புலப்படுத்தியும் எழுதப்பெற்ற இந்த நூல் சொற்பொழிவின் ஆற்றலுடன் அமைந்து விளங்குகின்றது. உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்கும் மாணவர்கட்கும், பொதுவாக வரலாற்றுத் தெளிவுபெற விரும்பும் அறிஞர்க்கும், அரசியற்பணிமனை அலுவற்குத் தேர்வு எழுத விரும்பும் மாளுக்கர்கட்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உதவும் பாங்காக இந்நூல் இலங்குகின்றது. இந்நூலின் ஆசிரியர் இன்னும் இதுபோல் பல திட்ப நுட்பமான நல்ல நூல்கள் எழுதித் தமிழுக்கும் உலகுக்கும் தமக்கும் நற்பயன் விளையும் வண்ணம் இலங்க எங்கும் நிரம்பிய திருவருளை நினைந்து வாழ்த்துகின்றேன். ந. சேதுரகுநாதன் முன்னுரை சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் தமிழினச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்கள், சென்னை அரசினர் நடத்தும் பொதுப்பணித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆகியவர்களுக்குப் பெரிதும் பயன்படும் முறையில் ‘தமிழ்நாடும் மொழியும்’ என்னும் இந்நூலை நான் எழுதி, தமிழன்னையின் பாதங்களில் சூட்டுகின்றேன். மேலும் இந்நூல் தமிழ்நாடு, தமிழ் மொழி இவற்றின் வரலாற்றை அறிய விரும்பும் பொது மக்களுக்கும் துணைபுரியும் என்பது என் எண்ணம். தமிழ் மக்கள் நலம் கருதியே இதனை வெளியிடுவதல் அவர்களது முழு ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. இந்நூல் உருவாகுங்கால் என்ன ஊக்குவித்த எனது பேராசிரியர் அ. மு. ப. அவர்களுக்கும், இந்நூலிற்கு வாழ்த்துரையும், அணிந்துரையும் அன்புடன் அளித்த பேராசிரியர்கள் ஆ. அருளப்பன் அவர்களுக்கும், ந. சேது ரகுநாதன் அவர்களுக்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன். இந்நூல் நல்ல முறையில் வெளியாவதற்குத் துணைபுரிந்த நண்பர்களுக்கும், இந்நூலில் வெளியிட்டுள்ள படங்களைத் தந்துதவிய திரு. கி. பழநியப்பன் அவர்களுக்கும், இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுக் தந்த “லலிதா பிரிண்டர்ஸ்” உரிமையாளர்க்கும் நான் என்றும் கடப்பாடுடையேன். ** வாழ்க தமிழ்!** அ. திருமலைமுத்துசுவாமி ஆசிரியரின் பிற நூல்கள் 1. யாப்பருங்கலக் காரிகை வினா-விடை 2. இலக்கண வழிகாட்டி 3. அறிவியற் சோலை 4. முதலுதவி 5. நீலமலை (மலைவாழ் மக்கள்) 6. இலக்கியத்தில் பறவைகளும் விலங்குகளும் 7. நூல் நிலையம் 8. நூலக ஆட்சி 9. நூலக அமைப்பியல் 10. தமிழ் இலக்கிய வரலாறு 11. தேசிய நூலகங்கள் 12. உரிமைப் போர் [] [] தமிழ் நாடு தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தமிழகத்தின் சிறப்பு உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ஏனைய முப்புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தன. இந்திய வரலாற்றிலேயே தமிழகத்திற்குரிய சிறப்பினைக் குறைக்க எவராலும் முடியாது. தமிழகம் பக்தி வெள்ளத்தில் மூழ்கும் ஒரு நாடு. இந்தியச் சமயத்தின் வளர்ச்சிக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எப்பகுதியும் அவ்வளவாக உதவி செய்ததில்லை. ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாடு பல்லாயிரக் கணக்கான மைல்கட்கு அப்பாலிருக்கும் கிரேக்கத்தோடும் சீன நாட்டோடும் கடல் வாணிகம் செய்தது. தமிழர்கள் பெருவாரியாக மலேயா, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத் தீவகங்களிற் குடியேறியுள்ளமைக்குக் காரணம், பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் கிழக்கிந்தியத் தீவுகளோடு செய்துவந்த வாணிபமே ஆம். உலகிலே உள்ள பல்வேறு நாடுகளிற் பரவியுள்ளதாகக் கூறப்படும் இந்திய நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே. வாணிகத் துறையில் மட்டுமின்றி ஆட்சித் துறையிலும் தமிழ் நாடு அடைந்திருந்த முன்னேற்றம் சீரியதாகும். அடிக்கடி ஏற்பட்ட அயலவர் படையெடுப்புக்களினாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் வட நாடு அல்லலுற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமைதியாக இருந்து மொழியையும் இலக்கியத்தையும், வாணிகத்தையும், ஆட்சியையும் திறம்பட நடத்திய பெருமை தமிழர்க்கே உரித்து. சங்க இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், சைவத் திருமுறைகள், வைணவர் பாடல்கள், கம்பராமாயணம் முதலியவை தமிழகம் பெற்ற அரும் பெரும் களஞ்சியங்களாகும். தமிழரின் கலையாற்றலைக் காஞ்சி, மதுரை, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், மாமல்லபுரம் முதலிய பெரு நகரங்களில் நின்று மகிழ்விக்கும் கோயில்களும் கோபுரங்களும் தெற்றெனக் காட்டும். சுருங்கக் கூறின் இந்தியாவின் வரலாற்றைத் தொடங்க வேண்டிய இடம் காவிரிக் கரையே தவிர கங்கைக் கரையல்ல. ஆனால் இந்திய வரலாற்றை எழுதியவரில் பெரும்பாலோர் டில்லியையும், வட இந்தியாவையும் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளனரே தவிர தமிழ் நாட்டைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை. தமிழக வரலாற்று மூலங்கள் தென்னக வரலாற்றுக்குதவும் கல்வெட்டும் செப்பேடும் இக்காலத்திலே குறைவே. கார்த்தியாயனர் தமிழ் நாட்டு ஊர்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். மெகச்தனீசர் பாண்டிய அரசி, அவள் வைத்திருந்த படையின் அளவு ஆகியவை பற்றிக் கூறியுள்ளார். அசோகனது கல்வெட்டுக்கள் தமிழகத்தைக் குறிக்கின்றன. காரவேலன் என்ற கலிங்க மன்னனின் அதிகும்பாக் கல்வெட்டுத் தமிழ் மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. பெரிப்புளுசின் ஆசிரியர், தாலமி, பிளினி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புக்கள் தமிழகத்தைப் போற்றிப் புகழ்கின்றன, பிளினி என்பவர் தென்னாட்டுக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே நடந்த வாணிபத்தைப் பற்றித் தெளிவாகக் குறித்துள்ளார். அதுமட்டுமல்ல; தமிழ்நாட்டு முத்தின் மீது ரோம் நாட்டு மகளிர் கொண்ட மோகம், அதனால் ரோம் நாட்டுப் பணம் பெருவாரியாகத் தமிழ்நாட்டுக்கு வந்த விதம் ஆகியன கண்டு பிளினி வெகுண்டுரைத்தும் உள்ளார். இக் கூற்றைத் தமிழ் நாட்டு மண்ணில் கண்டெடுக்கப்பட்ட ரோம நாணயங்களே நன்கு வலியுறுத்தும். இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் இலங்கை - தமிழகம் உறவைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. பண்டைத் தமிழகத்தைச் செம்மையாக அறியப் பெரிதும் உதவுவன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தைத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்ட வல்லன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தின் நில வளம், நீர் வளம், நிலப் பகுப்பு, அங்கே வாழ்ந்த மக்கள், அந்த மக்களின் மனவளம், கல்வி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் கொண்ட தொடர்பு, அவர்கள் நடத்திய காதல் வாழ்வு, செய்த போர், அவர்களின் வணிகம், பிற நாட்டார் தமிழரோடு கொண்டிருந்த தொடர்பு, சமயம் ஆகிய அத்தனை குறிப்புக்களையும் சங்க இலக்கியங்களிற் காணலாம். சங்க இலக்கியங்களின் காலத்தைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலவுகின்றன. ஆனால் தமிழ் நூல்களைக் கற்றுத் துறைபோய நற்றமிழ்க் குரிசில்களினால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு கி. பி. 200-க்கு முந்தியதாகும். மேல் எல்லை கி. மு. 1000 வரை செல்லும். சில ஆசிரியர்கள் சங்க காலம் கி.பி. 700-800 என்று கூறினர். இது முற்றிலும் பொருந்தாது. ஏனெனின் கி. பி. 700-800 வரை பல்லவர் ஆட்சி தமிழகத்தில் செழிப்பாக நடைபெற்ற காலம். ஆனால் சங்க இலக்கியங்களிலே பல்லவரைப் பற்றி ஒரு சொல்கூட இல்லை. அதுமட்டுமல்ல; கி. பி. 700-800-ல் சைவம் செழித்திருந்தது. சங்கச் சார்புள்ள இலக்கியங்களிலே சமண பௌத்த சமயங்களின் செல்வாக்கே தெரிகிறது. மோரியர் படையெடுப்பு, புத்த - சமண மதக் கருத்துக்கள் முதலியன தென்படுகின்றன. அதுமட்டுமா? சிலப்பதிகாரத்திலே செங்குட்டுவன் நடத்திய பத்தினி விழாவில் இலங்கைக் கயவாகு மன்னன் கலந்துள்ளான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கயவாகுவின் காலம் கி. பி. 173-195. எனவே சங்க காலத்தின் கீழ் எல்லை கி. பி. 200 ஆகும். வரலாற்றுப் பகுதிகள் ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாம். இதனை மனதிலே கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆராயப் புகுந்தால், வரலாற்றிற்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், பிற நாட்டார் ஆட்சிக் காலம், மக்களாட்சிக் காலம் எனத் தமிழ்நாட்டு வரலாற்றை ஏழு பிரிவின் கீழ் அடக்கலாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பதப்படுத்தப்பெறாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தித் தமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட மக்கள் வாழ்ந்த காலமே கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்தில் மக்கள் கற்களை நன்முறையில் பதப்படுத்திப் பயன்படுத்தினர். மேலும் இக் காலத்தில் மக்கள் பல துறைகளிலும் முன்னேறலாயினர். உழவுத் தொழில்புரியத் தொடங்கினர். எனவே இவர்கள் நிலையான வாழ்க்கை வாழத்தொடங்கினர். சங்க காலத்தில் மக்கள் கலையும் பண்பாடும் வளரப் பெற்று உலக நாகரிகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். காடு கெடுத்து நாடாக்கினர்; வளமான வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ந்தனர்; தமது கலையுணர்வைப் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தினர். காதலும் போரும் மக்களின் இரு கண்களாய் விளங்கின. மக்களின் வாழ்க்கையினை அகம், புறம் என இரு பிரிவாக்கிப் புலவர்கள் வியந்து பாராட்டினர். கி. மு. 300 முதல் கி. பி. 200 வரைச் சங்க காலம் எனப் படும். இக்காலத்தைப் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தனர். இலக்கியங்கள் பல எழுந்தன. ஆனால் பிந்திய மூன்று நூற்றாண்டுகளில் ஆரியர்கலை, நாகரிகம், சமயம் முதலியவை தமிழ் நாட்டில் மெல்ல மெல்லப் பரவலாயின. தமிழ் நூல்களில் வடசொற் கலப்பும், வடவர்தம் கலை, சமயக் கருத்துக்களின் கலப்பும் ஏற்பட்டன. சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழக வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கில்லை. எனவே இக்காலத்தினை சில அறிஞர்கள் இருண்ட காலம் என அழைக்கின்றனர். கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர் காலமாகும். ஆனால் கி. பி. 600 லிருந்து தான் பல்லவர் வரலாற்றினைக் கோவையாகவும் தெளிவாகவும் நம்மால் அறிய முடிகின்றது. இவர்களது ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்ட காரணத் தால் தமிழர் வாழ்வு மேலும் மாறத் தொடங்கிற்று. வடவர் மொழியும் கலையும், தமிழர் மொழி, கலைகளோடு விரவத் தொடங்கின. வட சொற் கலப்பு தமிழில் பெரிதும் ஏற்பட் டது. தமிழர் சமயக் கருத்துக்களும் மாறலாயின. இதற்குக் காரணம் பல்லவ அரசரில் பலர் வட மொழியை நன்கு ஆதரித்தமையே. எனினும் தமிழர் கலைகள் இக்காலத்தில் விரிவு பெற்றுப் பல துறைகளிலும் வளர்ச்சியடையத் தவறவில்லை. சிறப்பாக சிற்பக்கலை சீரிய முறையில் வளர்க்கப்பெற்றது. பல்லவர் ஆட்சியின் முற்பகுதியில் சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் உச்ச நிலையில் விளங்கின. ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் ஓங்கலாயின. கி. பி. 900 - கி. பி. 1300 வரை சோழர்கள் தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கினர். எனவே தமிழ் மீண்டும் செழித்து வளரலாயிற்று. சைவமும் வைணவமும் மிகச் சிறந்து விளங்கின. இதன் காரணமாய் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய - கோயில்கள் தமிழ் நாடெங்கணும் எழுப்பப்பட்டன. இப்பணியில் சோழப் பேரரசர்கள் பெரி தும் ஈடுபட்டனர். இக்காலத்தில் பாண்டியர்களும் பழைய படி தலையெடுத்துத் தரணி ஆண்டனர். தமிழ் வளர்ந்தது. கி. பி. 1300க்குப் பின்னர் முகமதியரும் வேறு இனத்தவரும் தமிழ் நாட்டின் மீது படையெடுத்தனர். ஒய்சலர் என்னும் இனத்தாரும் நம் தாயக ஆட்சியில் தொடர்பு கொண்டிருந்தனரெனத் தெரிகிறது. முகமதியர் படையெடுப்பால், சலாம், கஜானா, சால்ஜாப்பு முதலிய சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன. முகமதியர் ஆட்சியை எதிர்த்த விசய நகர மன்னர்களின் ஆட்சி, அடுத்து தமிழகத்தில் ஏற்பட்டது. இக்காலத்தில் மீண்டும் வட மொழியாதிக்கம் பரவியது. நாயக்கராட்சி நடந்த காலத்திலும் இதே நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்தது. இவ்வாறாகத் தமிழும் தமிழ்நாடும் பற்பல மாறுதல்களுக்கு உட்பட்டு இறுதியில் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. இவர்கள் ஆட்சியில் ஆங்கிலமொழி அரசுமொழியாக விளங்கியதால் தமிழ் தழைக்க முடியாது போயிற்று. இன்று நாம் குடியாட்சியில் வாழ்கின்றோம். அடிமைத்தளை அகற்றப்பட்டு உரிமை பெற்றவரானோம். எனவே எங்கும் மறுமலர்ச்சியைக் காணுகின்றோம். தமிழ் மொழி அரியணை ஏறி அரசோச்சத் தொடங்கியுள்ளது. தமிழர் நாகரிகமும் பண்பாடும் தழைத்தோங்கத் தொடங்கியுள்ளன. எனவே தமிழர்கள் இனியாவது விழிப்புடனிருந்து மொழியையும், கலையையும், பண்பாட்டையும் பார் முழுதும் பரவச் செய்வதற்கு வழி வகைகளை வகுத்துத் தளராது அயராது உழைத்தல். தமிழகம் முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம். எல்லை தொல்காப்பிய முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன. தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. ஜார்ஜ் எலியட் என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக மிக நெடுங்காலத்திற்கு முன்பு வடக்கே விந்திய மலையும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. குமரிக் கண்டம் இன்று இந்துமகாக் கடலாக விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங் கடமும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் எல்லைகளாக இருந்தன. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், ‘வட வேங்கடம் தென்குமரி நல்லுலகம்’ எனவும், சிகண்டியார், ‘வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று இன்னான்கு எல்லை தமிழது வழக்கே’ எனவும், காக்கை பாடினியார், ‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம் என்று அந் நான்கு எல்லை அகவையின் கிடந்த நூலது முறையே வாலிதின் விரிப்பின்’ எனவும் கூறுகின்றமையால் பழந் தமிழ் நாட்டு எல்லைகளை அறிகிறோம். மேற்கும் கிழக்கும் கடல்கள் என்றதனாலும் தெற்கில் குமரி என்றதனாலும் தெற்கு எல்லை கடல் அன்று என்பது நன்கு விளங்கும். குமரி என்பது அக்காலத்தில் ஒரு ஆறாக இருந்தது. சிலப்பதிகார காலத்தில் எல்லையும் அதுவே. சிலப்பதிகாரம் நாடு காண் காதையில், ‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்று இளங்கோவடிகள் குறிக்கின்றமையால் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்நாடு குன்றியது என்பது புலனாகும். இங்கு குமரி என்பது மலையினையும், கோடு என்பது சிகரத்தையும் குறிக்கும். சிலர் குமரி என்பது நாட்டின் பெயரென்றும், இன்னும் சிலர் ஆற்றின் பெயரென்றும், வேறு சிலர் மலையின் பெயரென்றும் கூறுவர். இளங்கோ வேனிற் காதையில், ‘நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு’ என்றனர். அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் “தொடியோள் என்பது பெண்பாற் பெயரால் குமரி என்றாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையோ வெனின், பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடையே எழுநூறு காவதம் (7000 கல்) பரப்புள்ள 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் பதியும் கடல் கொண்டு ஒழிந்தமையால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று கூறினர். எனவே உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுவதைக் கொண்டு காணுங்கால் அக்காலத்தில் தெற்கு எல்லை குமரிக் கடலாக இருந்தது என்னும் உண்மை நன்கு விளங்கும். மலைகள் தமிழகத்திலே மலைகளுக்குக் குறைவில்லை. வடக்கே திருப்பதி; மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை; கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலையிலே பல பிரிவுகள் உள. பாலைக்காட்டுக்கு வடக்கே உள்ள மலைத் தொடர் வான மலை எனப்படும். வான மலைக்கு வடக்கே குதிரை மலை, ஏழில் மலை என்ற இரு மலைகள் உள. பாலைக்காட்டுக்குத் தெற்கே உள்ள தொடர் தென்னம் பொருப்பாகும். இத்தொடரில் நேரி மலை, அயிரை மலை, பொதிய மலை, நாஞ்சில் மலை முதலிய மலைகள் உள. இவை மட்டுமா! காவிரியின் வடகரையிலே கொள்ளி மலை உள்ளது. திருச்சி மாவட்டத்தில் விச்சி மலை உள்ளது. வட ஆர்க்காட்டிலே விச்சி மலை அல்லது பச்சை மலை உள்ளது. பேராறுகள் தமிழகத்திலே பேராறுகளும் சிற்றாறுகளும் நிறைய ஓடி நாட்டை நஞ்சை நிலமாக வளப்படுத்துகின்றன. பெண்ணை, காவிரி, வையை, பேரியாறு, வானியாறு என்பன பேராறுகள். வெள்ளாறு, தண்ணான் பொருநை, பொன்வானி, பூவானி, பொருநை, ஆன் பொருநை என்பன சிற்றாறுகளாம். பெண்ணையாறு பிறந்த மாவட்டம் மைசூர். விளையாடிய மாவட்டங்கள் வட, தென் , ஆர்க்காடு மாவட்டங்கள். இறுதியிலே அது கடலகம் புகுகிறது. காவிரி வானமாமலையில் தோன்றி, மைசூரில் தவழ்ந்து, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடந்து, திருச்சியிலும் தஞ்சையிலும் களியாட்டம் ஆடி, இறுதியில் கடலிற் கலக்கிறது. வையை தென்னம் பொருப்பிலே தோன்றி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலே பாய்கிறது. பேரியாறு தென்னம் பொருப்பிலே தோன்றி, திருவாங்கூர், கொச்சி வழியாகப் பாய்ந்து மேல் கடல் புகுகிறது. வானியாறும் வடக்கே தோன்றி மேல் கடலில் விழுகிறது. பூவானியும் ஆன்பொருநையும் பொன்னியிலே கலக்கின்றன. வெள்ளாறும், தண்ணான்பொருநையும் கீழ் கடலில் விழுகின்றன. பொன்வானி, பொருநை என்பன மேலைக் கடலில் விழுகின்றன. நில அமைப்பு உலகில் உள்ள நிலங்கள் யாவும் ஒரே அமைப்பு உடையன அல்ல; அவ்வந் நிலத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்பவும், அமைப்பிற்கேற்பவும், அந்நில மக்களின் வாழ்க்கை , உணவு, உடை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியன மாறுபடுவது இயற்கை. எனவே அடுத்து நம் தமிழகத்தின் நில அமைப்பைப் பார்ப்போம். பண்டு தமிழ் நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும். இந்நில மக்களது முக்கிய தொழில் வேட்டையாடுதலே. தினையும் பயிரிடுவர். தினை, வேட்டை மிருகங்கள், கானில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு முதலியவை இவர் தம் உணவுப்பொருள்களாகும். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் பொழுதை உணவு தேடுவதிலேயே கழித்ததால் இவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை. எனவே இந்நில மக்கள் கல்வியிலோ, கலையிலோ, பண்பாட்டிலோ உயர வழியில்லாமற் போயிற்று. முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமுமாகும். இந்நில மக்களாகிய ஆயர்கள் ஆடுமாடுகளை மேய்த்தும், அவை தரும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை விற்றும் வாழ்க்கை நடத்தினர். இவர்களுக்கும் குறிஞ்சி நில மக்களைப் போன்று ஓய்வில்லாததால் இவர்களும் பிற துறைகளில் முன்னேறவில்லை. கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். இந்நில மக்கள் காலமெல்லாம் கடலிலே கலம் செலுத்தி மீன் பிடித்து இரவில் வீடு திரும்பியதால் இவர்களும் குறிஞ்சி, முல்லை நில மக்களைப் போன்றே ஓய்வில்லாது உழைத்தனர் என்று சொல்லவேண்டும். ஒன்றும் விளையாத பொட்டல் நிலமே பாலை எனப்படும். இந்நில மக்கள் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் வாழ நேரிட்டது. எஞ்சா வளம் படைத்த நஞ்சைசூழ் நிலப்பகுதியே மருதமாகும். இந்நிலப் பகுதி நீர் வளமும் நில வளமும் சிறக்கப் பெற்றிருப்பதால், இந்நில மக்கள் தங்களுக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் குறையாது பெற்று மகிழ்ந்தனர். இதே போன்று பருத்தி பயிரிட்டு அழகிய ஆடைகளை நெய்து அணிந்தனர். சுருங்கக் கூறின் இந்நில மக்கள் உணவு, உடை, உறையுள் இம்மூன்றிற்கும் கவலைப்படாது களிப்புடன் வாழ்ந்தனர். இதன் காரணமாய் இம் மக்கள் கவலையற்றவர்களாய், கல்வியிற் கவனம் செலுத்தி, பண்பாடு முதலியவற்றில் சிறந்தோங்கி, கலையுணர்வுடையோராய் உயர்ந்து விளங்கினர். வரலாற்றிற்கு முற்பட்ட காலம் பழைய கற்காலம் நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர். தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல வாழ்ந்த மனிதன் காலப்போக்கிலே மலைக்குகைகளில் வாழலானான். பின்னும் பல ஆண்டுகள் உருண்டோடின. மனிதன் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். அக் கற்கள் மூலம் அவன் தனக்கு வேண்டிய உணவைப் பெறலானான்; தன்னைப் பிற உயிரினின்றும் காக்கத் தொடங்கினான். இவ்வாறு மனிதன் கற்களைக் கொண்டு தனக்கு வேண்டியன ஆக்கவும், தீங்கினின்றும் தன்னைக் காக்கவும், பிற உயிரைத் தாக்கவும் பயன்படுத்திய காலமே பழைய கற்காலமாகும். நாகரிகத்தின் முதற்படிதான் பழைய கற்காலம். பழைய கற்காலத்திலே மனிதன் கரடுமுரடான கற்களையே பயன்படுத்தினான். அவனுக்கு உணவாகப் பயன்பட்டவை காயுங் கிழங்கும் கனிகளுமே தாம். பழைய கற்கால மனிதனின் முந்தையர் யார்? அவர்தாம் கொரில்லா, சிம்பென்சி, கிப்பல், உரேங்குடாண் என்பவராம். இவர்களின் எலும்புக்கூடுகள் தென்னகத்திலே ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவே பழைய கற்கால மனிதனின் தாயகம் தென்னாடே எனில் தவறில்லை. கரடுமுரடான கல்லைக் கற்கால மனிதன் உடனே பயன்படுத்தவில்லை. முதலில் அவன் கிளைகளையும் கொப்புகளையும் பயன்படுத்தினான். முட்டை வடிவான கோடரிகள், ஈட்டிகள், குழி தோண்டு கருவிகள், வட்டக் கற்கள், ஒருபக்கம் மட்டும் கூர்மைத் தன்மை வாய்ந்த கருவி, நீண்ட கத்திக் கற்கள், சுத்தியல் போன்றவை கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளுள் குறிப்பிடத்தக்கனவாகும். கருவிகள் செய்கின்ற அளவுக்கு மென்மையும் உரிய வன்மையும் வாய்ந்த கற்பாறைகள் தென்னகத்திலே செங்கற்பட்டு, சித்தூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. அவற்றை இன்றும் காணலாம். மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. கற்கருவிகளின் மூலம் கற்கால மனிதன் வேட்டையாடினான்; வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை அப்படியே உண்டான். இறைச்சியை உண்ணற்கேற்றவாறே அவன்றன் பற்கள் அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல; பழைய கற்காலக் கருவிகளிற் சிலவும் இறைச்சியைக் கிழிக்கவே செய்யப்பட்டன போல அமைந்துள்ளன. இவ்வாறு வேகாப் புலாலை உண்ட மனிதன் காலப்போக்கில் நெருப்பைக் கண்டுபிடித்தான். முதலில் மூங்கிலைக் கண்டான்; அவை ஒன்றோடொன்று உராய்வதினால் நெருப்பு உண்டாவதைக் கண்டான். உடனே அவன் இரண்டு மரக் கட்டைகளைக் கொண்டு தீயுண்டாக்கினான். இறைச்சியை வேகவைத்தான்; உண்டான். பிறகு தீக்கடைக்கோல், சக்கிமுக்கிக் கற்கள் என்பனவற்றைக்கொண்டு தீ உண்டாக்கினான். இவ்வாறு தீ உண்டாக்கி வாழ்ந்த மனிதன் ஓரிடத்திலும் நிலைத்து வாழவில்லை. நாடோடி வாழ்க்கையே அவன் நடத்தினான். ஆனால் நாளாகஆக இன உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றிப் பரவலாயிற்று. எனவே சேர்ந்து வாழலானான். ஆகவே மனிதக் கூட்டம் உண்டாயிற்று. இவ்வாறு தோன்றியது மனித சமுதாயம். இவர்களின் சந்ததியினர் இன்றும் மலைகளில் வாழ்கின்றனர். பண்டைக் கால மக்கள் இறந்தவரைக் கழுகுக்கும் நரிக்கும் இரையாகுமாறு வீசிச் சென்றனர். இவ்வழக்கம் இன்றைக்கும் திபெத்திலே காணப்படுகின்றது. பழைய கற்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதன் ஆடையற்றவனாகவே அலைந்தான். நாள் பலசென்றன. மரவுரியினையும், இலைகளையும் ஆடையாக அவன் பயன்படுத்தினான். பின்னர் தோலாடை பயன்படுத்தப்பட் டது. ஆகப் பண்டையக்கால மனிதன் எளிய உடையே பூண்டான். அவ்வுடைக்கேற்றவாறே தட்ப வெட்ப நிலையும் அமைந்திருந்தது. இனி கலைகளைப் பார்ப்போம். பண்டைக்கால மனிதன் ஓரளவுக்குக் கலை உணர்ச்சி உடையவனாகவும் வாழ்ந்தான். அவன்றன் கலையுணர்ச்சியைத் தெள்ளத் தெளியக்காட்டும் ஓவியங்கள் பல இன்றும் ஐரோப்பிய நாடுகளிலே மலைக் குகைகளிலே காணப்படுகின்றன. தென்னகத்துக் குகைகளை ஆராய்ந்த பேரறிஞர் உட் என்பவர் தொடக்கத்தில் தென்னகத்திலே பழைய கற்கால ஓவியங்கள் இல்லை என்று கூறினார். ஆனால் அதற்குப் பின்னர் நடத்தப்பெற்ற ஆராய்ச்சிகள் அவர் கருத்தைப் பொய்யாக்கிவிட்டன. பழைய கற்காலக் குகை ஓவியங்கள் ரெய்கார் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள சிங்கன்பூரில் (Singhanpur) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய குகை ஓவியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகையான ஓவியம் வேட்டைத் தொழிலைப் பற்றியதாகும். இரண்டாம் வகையான ஓவியம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மூன்றாவது வகையான ஓவியம் விலங்குகளைப் பற்றியதாகும். இவ்வோவியங்களிலே குறிப்பிடத்தகுந்தது பொங்கும் உணர்ச்சியே. ஒவ்வொரு ஓவியமும் உயிர் ஓவியமாகும். நான்காவது ஓவியம் சித்திர எழுத்துக்களைக் கொண்டதாகும். இச் சித்திரங்கள் எகிப்து நாட்டுப் பானை முதலியவற்றில் வரைந்துள்ள சித்திரங்களை ஒத்திருக்கின்றன. பழைய கற்கால மக்கள் எந்த அளவுக்குச் சமயவுணர்ச்சி யுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அறியப் போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. பண்டை மக்களின் சவத் தாழிகளோ, மயானக் கரைகளோ தென்படவில்லை. இதிலிருந்து அவர்கட்கு இறந்த பின்றை உயிர் வாழும் என்பதிலே நம்பிக்கை இல்லை என நாம் அறியலாம். ஆனால் இயற்கையில் அம்மனிதன் நம்பிக்கை உடையவன் என்பது மட்டும் ஒருவாறு தெரிகிறது. தன்னை இயக்கும் சக்தி ஒன்று உலகில் உண்டு என்பதைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனர். இவ்வித உணர்வு தான் பழைய கற்காலத்திலே பரவி இருந்ததே தவிர வேறு கடவுள் உருவங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆனால் தேவி வணக்கமும் நில வணக்கமும் பண்டைய மனிதன் வழக்கத்தில் இருந்தன என்பது தெரிகிறது. மாக்களினின்றும் நோயினின்றும் தம்மைக் காக்குமாறு அன்னையை அம்மக்கள் வேண்டினர் போலும். நாளாக ஆக இவ்வுணர்வு பெருக, பரவ, உணர்ச்சி வடிவில் இறையைக் கண்டவன் கல்லிலே கடவுளைக் காணத் தலைப்பட்டான். இனி பழைய கற்கால மனிதன் பேசிய மொழியினைப் பற்றிப் பார்ப்போம். தொடக்கத்தில் மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமல் தவித்தான்; துடித்தான். தனக்கு மேலே சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். முதலிலே அவற்றைப் போலவே ஒலித்தான். பின்னர் சைகைகளைக் கொண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். இவ்வளவு நாகரிகம் அடைந்தும் இன்னும் நம் பேச்சில் பாதி அளவுக்கு மேல் சைகைகளே நிரம்பியுள்ளன. பின்னர் மனிதன் தான் பார்த்த உருவங்களை வரைந்து தன் கருத்தை உணர்த்தினான். இவ்வாறு படிப்படியாக முன்னேறி இறுதியிலே சொற்களைக் கண்டான்; கருத்தைத் தெரிவித்தான். பண்டை மக்கள்-பழைய கற்கால மக்கள் பதப்படுத்தாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தினர்; புலாலையும் காய் கிழங்குகளையும் உண்டனர்; தோலாடை இலையாடை உடுத்தினர்; இறந்தோரை வீசி எறிந்தனர்; அன்னை வணக்கம் கைக்கொண்டனர்; ஓரளவிற்கு ஓவிய உணர்வும் உடையவராக யிருந்தனர். புதிய கற்காலம் நாகரிகப் படிகளிலே இரண்டாவது படி புதிய கற்காலமாகும். கரடுமுரடான கற்களைப் பயன்படுத்திய மனிதன் வழவழ என ஒளிபொழியும் தீட்டிய கல்லைப் பயன்படுத்திய - காலமே புதிய கற்காலமாகும். இக்காலத்தில் மனிதன் பல துறைகளிலும் முன்னேறலாயினான்; தன் வாழ்க்கை முறையைப் பல துறைகளிலும் மாற்றிக்கொண்டான். பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும். பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள் இன்றும் நாட்டுப் புறங்களிலே காணப்படுகின்றன. மழை விழுந்தால் ஒழுகாமல் இருக்கக் கவிழ்த்த இப்பானையே பிற்காலக் கோவிற் கோபுரங்களின் கலசங்களாக மாறின. கொஞ்சம் செல்வம் படைத்தவர்கள் மரங்களால் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, சேலம், அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களிலே பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்களால் செய்யப்பட்ட பானை, தாழி, சட்டி, பொம்மை, கிண்ணம், விளக்கு முதலியன மேற்குறித்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன. இப்பாண்டங்களிலே தீட்டப்பட்ட பலவகை வண்ணங்கள் இன்றும் அழியாமல் காட்சி தருகின்றன. புதிய கற்காலக் கருவிகளிலே நூல் நூற்கும் கருவிகளும் கிடைத்துள்ளன. அவற்றோடு ஆடைகளை மென்மையாக்கும் கருவிகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. முல்லை நிலத்தார் கம்பளி ஆடைகளையும் நெய்தது போலத் தெரிகிறது. தோற்பதனிடு கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு மேலாக நாணயக் கற்கள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து புதிய கற்காலத்தில் ஆடை நெய்தல், கம்பளி நெய்தல், தோற் பதனிடுதல், நாணய மாற்று ஆகியவை வழக்கில் இருந்தன என அறியலாம். இவ்வித நாகரிக முன்னேற்றம் அடைந்த புதிய கற்கால மனிதன் முதலில் கற்கருவிகளை நன்முறையில் பதப்படுத்தினான்; வேட்டையாடுவதற்கு நாய்களை வளர்க்கத் தொடங்கினான்; உழவினை உயர்ந்த தொழிலெனக் கொண்டான். பழைய கற்கால மனிதன் உடுத்திய தோலாடை, மரவுரி, இலையாடை ஆகியனவற்றைச் சில குறிப்பிட்ட சமயங்களிலேயே புதிய கற்கால மனிதன் பயன்படுத்தினான். பாண்டங்களைப் போல ஆடைகளையும் பல வகை வண்ணங்களைக் கொண்டு நிறம் பெறச் செய்தான். சங்காலும் எலும்பாலும் ஆய பித்தான்கள், வளையல்கள் அக்காலப் பெண்டிர் தம் அணிகலன்களாம். புதிய கற்காலப் பொம்மைகள் சில சேலம் மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பொம்மைகள் மூலம் அக்காலப் பெண்டிர் தம் கலையுணர்வை நன்கு அறியலாம். பழைய கற்காலத்தில் ஒருவனே எல்லாத் தொழில்களையும் செய்தான். புதிய கற்காலத்திலோ ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாக வெவ்வேறு தொழிலைச் செய்யத் தொடங்கினான். மனிதன் தனிநிலையிலிருந்து குடும்பமாக மாறும்பொழுதும் இவ்வாறே ஒவ்வொரு குடும்பமும் தனித்தனித் தொழிலைச் செய்ய முற்பட்டது. இவ்வாறு தொழில் பற்றிப் பிரிவுகள் பல மக்கள் சமுதாயத்திலே ஏற்பட்டன. பின்வந்த மற்றவர் அப்பல்வேறு பிரிவுகட்கும் இடையே பற்பல வேற்றுமைகளைக் கற்பித்து அவற்றை ஒன்று சேராதவாறு நூல்கள் செய்தும், கருத்துக்களைப் பரப்பியும் பார்த்துக்கொண்டனர். பழைய கற்கால மக்களை விடப் புதிய கற்கால மக்கள் கொஞ்சம் அதிகமாகக் கலையுணர்ச்சியுடையவராய் இருந்தனர். புதிய கற்கால மனிதன் தன் எதிரே உள்ள ஆற்றைக் கண்டான்; ஊற்றைக் கண்டான்; கடலைக் கண்டான்; பல வகை மண்களைக் கண்டான்; காட்டையும் மேட்டையும் கண்டான். அவன் உள்ளத்திலே பொங்கிய அழகுணர்ச்சிகளைக் கல்லிலும், பாண்டங்களிலும் பல்வகை மண்களாலும் இலைச்சாறாலும் வெளிப்படுத்தினான். பலவகையான மண்பாண்டங்கள் செய்தான். அவற்றிலே ஓவியங்களைப் பல வண்ணத்தால் தீட்டினான். மஞ்சள், சிவப்பு, பழுப்பு, நீலம் ஆகிய பலவகை வண்ணப் பொருட்களைத் தூளாக்கிப் பலவகைப் பாண்டங்களைச் செய்தான். இதே போலப் பலவகைக் கற்களைக் கொண்டு வந்து இடித்து மாவாக்கிக் குகைகளின் மேற்சுவர்களில் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டினான். ஓவியந் தீட்டப்பட்ட வளைகளும், பாண்டங்களும் இன்ன பிற பொருட்களும் பல இடங்களில் கிடைத்துள்ளன. கோலம் போடல் இப்புதிய கற்காலத்தில் தோன்றிய வழக்கமாகும். பழைய கற்கால மனிதன் இறந்தவரை வீசி எறிந்தான். புதிய கற்கால மனிதனோ இறந்தவரை அமர்ந்த நிலையில் தாழியில் புதைத்தான். தாழியுள் மணல், அரிசி, இறந்தவர் பயன்படுத்திய பல்வகைக் கருவிகள் முதலியனவும் வைக்கப்பட்டன. இத்தகைய பொருட்களை நிறையப் போட்டவுடன் தாழி மண் மூடியால் மூடப்பட்டு, பிறகு ஒரு குழியில் வைக்கப்படும். அக்குழி அதன் பின்னர் ஒரு கற்பலகையால் மூடப்படும். இதோடு நின்றுவிடாது மறுபடியும் மணலிடப்பட்டு மற்றொரு முட்டை வடிவக் கற்பலகை அம்மணல் மீது வைக்கப்படும். அதன் பின்னர் அதனைச் சுற்றிக் கற்கள் ஒரு முழம் அளவிற்கு நடப்படும். இத்தகைய தாழிகள் உடைய இடங்கள் புதுக்கோட்டைப் பகுதியில் நிறைய உள. தாழியின் உயரம் 4 அடி; அகலமோ 3 1/2 அடி. மற்றும் கோவை, பெல்லாரி போன்ற மாவட்டங்களில் சுமைதாங்கி போன்ற உருவில் அமைந்த கல்லறைகள் பல உள. இனி, புதிய கற்கால மனிதன் பேசிய மொழி யாது எனப் பார்ப்போம். புதிய கற்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர் யார்? பழைய கற்கால மக்களின் பரம்பரையினரே புதிய கற்காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர். இவர்கள் பேசிய மொழி திராவிட மொழியே. புதிய கற்கால மக்களின் சமயம் சைவ சமயமாகும். புதிய கற்காலப் பொருட்கள் பலவற்றுள் சிவலிங்கமும் ஒன்றாகும். இலிங்க வழிபாடு என்பது திராவிடர்களுடையதே. வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைக் குறிக்கவில்லை. ஆனால் திராவிடர்கள் இலிங்க வழிபாட்டைப் போற்றியுள்ளனர். எனவே புதிய கற்காலச் சமயம் சைவ சமயமாகும். புதிய கற்கால மக்கள் கூடி வாழத் தொடங்கியமையால் மக்கட் பெருக்கம் மிகுதியாயிற்று. இதன் காரணமாய் ஊர்களும் குடியிருப்புகளும் தோன்றலாயின. ஆங்காங்கே மக்கள் நிலைத்து வாழ ஆரம்பித்தனர். நிலத்தைப் பண்படுத்தி ஆற்று நீரைப் பாய்ச்சி வயல்களில் நெல் விளைவித்தனர். இந்நிலம் நன்செய் எனப்பட்டது. கபிலை ஏற்றம் முதலியவற்றால் நீர் பாய்ச்சப்பெற்ற நிலம் புன்செய் எனப்பட்டது. இந்நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டது. அதனின்றும் உடை நெய்யப்பட்டது. இவ்வாறு நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கிய காரணத்தால் மக்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். இதுவே நாளடைவில் அரச பதவியாயிற்று. புதிய கற்காலம் போய் எத்தனையோ நூற்றாண்டுகளாய் விட்டன. ஆனால் அக்காலப் பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மை விட்டகலவில்லை. அக்கால மனிதன் போல் வில்லைக் கொண்டும் கல்லைக் கொண்டும் பறவைகளை அடிக்கிறோம். கனிகளைப் பறிக்கிறோம். இன்னும் ஆட்டுரல் போன்ற கற்கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தோசை சுடப் பயன்படுவது தோசைக் கல்லாகும். இன்று இது இரும்பாலானதாக இருந்தபோதிலும் அப்பெயர் பழங்காலத்தில் தோசை சுடக் கல்லே பயன்பட்டது என அறிவிக் கிறது. ஆக இன்னும் நாம் புதிய கற்காலப் பழக்க வழக்கங்களையும் பொருள்களையும் முழுதும் மறந்தும் விடவில்லை; துறந்தும் விடவில்லை. இன்றைய ஆராய்ச்சி இதுவரை கூறியவற்றால் வரலாறு என்பது பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது என்பது இனிது விளங்கும். ஆனால் பேராசிரியர் டேர் (Dare) என்பவர் கற்காலத்துக்கு முன் எலும்புக் காலம் ஒன்று உண்டு என்பதைத் தமது ஆராய்ச்சியின் காரணமாய்க் கூறியுள்ளார் என சோகன்சுபர்க் (Johannesburg) செய்தி கூறுவதாக அண்மையில் ‘இந்தியன் எக்ச்பிரசு’ (Indian Express) நாளிதழ் வெளியிட்டதை நாம் அறிவோம். எனவே கற்காலத்திற்கு முன்னர் மனிதன் பல், எலும்பு, கொம்புகளைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான் எனவும், அக்காலத்தை எலும்புக் காலம் எனப் பெயரிட்டு அழைத்தல் சாலப்பொருந்தும் எனவும் நாம் அறிகின்றோம். சங்க காலம் முன்னுரை தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி நின்று மக்கள் உள்ளத்தையும் அக்காலத் தமிழகத்தையும் காட்டி நம்மைக் களிப்படையச் செய்துகொண்டிருப்பது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும். அடுத்து இடையிலே எழும்பிய நீருக்கும், ஏற்பட்ட போருக்கும், அயலார் மூட்டிய நெருப்புக்கும், நம்மவர் மறதிக்கும், கரையானுக்கும் இரையாகாதவாறு இன்றுவரை நின்று, நொந்த நந்தம் சிந்தையிலே செந்தேன் பொழிந்துகொண்டிருப்பவை கடைச்சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, குறள் என்பனவாம். இன்றும் கூட சங்க காலம் என்றாலும், சங்க இலக்கியங்கள் என்றாலும், கடைச்சங்க காலத்தையும் அக்கால நூல்களையுமே குறிக்கும். கடைச்சங்க இறுதிக்காலத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் செவ்வி அருமைளையும், தமிழ் வளர்ச்சியையும், அக்காலச் சமய நிலையையும் இன்ன பிறவற்றையும் நாம் நன்கு அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. இனி இவற்றை முறையே ஆராய்வோம். ** முச்சங்கம்** தமிழ் நாடு பற்றிய எந்த வரலாறாயினும் சரி, அதிலே முதல் அத்தியாயமாக இருப்பது முச்சங்கம் பற்றிய வரலாறாகும். சங்கங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை ஏற்படுத்திய மன்னர்கள் யார்? அவை எத்தனை ஆண்டுகள் உலகில் நிலவின? அவற்றிலிருந்த புலவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இயற்றிய நூல்கள் யாவை? போன்ற வினாக்கள் இன்று முச்சங்கம் பற்றி எழுப்பப்படுகின்றன. சங்கத் தாய் ஈன்ற செழுங்குழவிகளாகிய பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, குறள் ஆகிய இலக்கிய நூற்களிலே சங்கம் என்ற சொல்லே கிடையாது. சங்கம் பற்றிய குறிப்பும் கிடையாது. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியலுரையிலே சங்கங்கள் பற்றிய குறிப்புகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. முதலில் அந்நூல் தரும் குறிப்புகளை நோக்குவோம். தலைச் சங்கம் இதனை முதலில் நிறுவிய பெருந்தகை காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் இருந்தவன் பாண்டியன் கடுங்கோன் என்னும் மன்னனாவான். இது நின்று புகழ் விளக்கிய இடம் தென் மதுரை. இச்சங்கம் நிலவிய ஆண்டுகளின் எண்ணிக்கை 4500. சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள் 4449 பேர். இச்சங்க காலத்திலிருந்த அரசர்கள் 89 பேர். இச்சங்கத்திலிருந்த புலவர்களுள் அடையாளங் காணப்பட்டோர் அகத்தியர், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடி நாகராயர் முதலியவராவர். இக்காலத்தெழுந்த நூல்கள் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியனவாம். இச் சங்கத்தின் கடைசி அரசனான கடுங்கோன் காலத்தில் ஒரு பெருங் கடல்கோள் ஏற்பட்டு முதற்சங்கம் அழிந்துவிட்டது. இடைச் சங்கம் முதற் சங்கத்தினை முந்நீர் விழுங்கிவிடவே, அடுத்து ஏற்பட்டது இரண்டாம் சங்கமாகும். இச்சங்கம் இருந்த நகரம் கபாடபுரமாகும். இந்நகர் பற்றிய குறிப்பு வான்மீகியின் இராமகாதையில் வருவதாகக் கூறுவர். இதிலே இருந்த இன் தமிழ்ப்பாச் செய்த புலவர்கள் 449 பேராவர். இச்சங்கத்தினைத் தோற்றுவித்தவன் வெண்டேர்ச்செழியனாம். இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் தொல்காப்பியராம். இச்சங்கத்தின் இறுதி அரசன் நிலந்தருதிருவிற் பாண்டியன். இச்சங்க காலத்தில் எழுந்த நூற்கள் இசை நுணுக்கம், தொல்காப்பியம், வியாழமாலை அகவல், தொகைநூற் பாடல்களில் சில முதலியவாம். இந்தச் சங்கமிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்காப்பியனார், சிறு பாண்டரங்கனார் முதலிய பல புலவராவர். இந்த இடைச் சங்கமும் கடல்கோளால் அழிந்தது. மூன்றாம் சங்கம் உலக அரங்கிலே நமக்கு ஏற்றத்தையும், இலக்கிய மாளிகையிலே தமிழன்னைக்குத் தனிச் சிறப்பையும், நொந்த நந்தம் சிந்தையிலே செந்தமிழ்த் தேனையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்ற எட்டுத் தொகை முதலிய இலக்கியங்களை ஈன்றெடுத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. இக்காலம் தமிழக வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய காலமாகும். இடைச் சங்கம் கடல்கோளால் அழிந்த பின்னர், இப்பொழுதுள்ள மதுரையிலே இச்சங்கம் தோன்றியதாம். இதன் தலைவர் நக்கீரர். இச்சங்கத்தே வீற்றிருந்த புலவர் பெருமக்கள் தொகை 49-ஆம். இச்சங்கத்தின் கீழ் எல்லை கி. பி. 200; மேல் எல்லை கி. மு. 300. நெஞ்சையள்ளும் சிலம்பும், மணிமேகலையும், குறளும் பிறவும் தோன்றியது இக்காலத்தை ஒட்டியே தான். இந்த மூன்று சங்கம் பற்றிய அறிஞர் கருத்துக்களிலே வேற்றுமைகள் பல உள. பொதுவாக அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். ‘இந்த முச்சங்க வரலாறே பொய்; கட்டுக்கதை; மூன்று சங்கங்கள் இருந்தன என்று சொல்லு வது அரபு நாட்டு ஈசாப் கதையை ஒத்தது’ என்பது ஒருசாரார் கருத்து. ‘இறையனார் களவியலுரை கூறும் கருத்துக்கள் அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை; மறுக்க முடியாதவை’ என்பது மற்றொரு சாரார் கருத்து. முதல் வகையினர்க்கும் இரண்டாம் வகையினர்க்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. முச்சங்கம் பற்றிய வரலாறுகளையும், சங்க இலக்கியங்களில் வருகின்ற கடல்கோள் பற்றிய குறிப்புகளையும், எகேல் போன்ற மேலை நாட்டாரது, குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உரைகளையும் பார்க்குங்கால், களவியல் உரைக் குறிப்புகளிலே ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது. முச்சங்க வரலாற்றை முதல்வகையார் முழுதும் பொய் என்று முடிவுகட்டுவதற்குக் காரணம், அவற்றில் வருகின்ற புலவர்கள், அவை நடைபெற்ற ஆண்டுகள், ஆதரித்த அரசர்கள் ஆகியோரின் கற்பனைக்கெட்ட எண்ணிக்கை ஆகும். களவியலுரை கூறும் கற்பனைகளை ஒதுக்கி வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோமாயின், கீழ்வருகின்ற முடிபுக்கே வருவோம். கி.பி. 200க்கு முன்னே பல சங்கங்கள் பல்வேறு காலங்களிலே இருந்து தமிழ்மொழியிலே எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை இயற்றிச் செந்தமிழைச் செழுந்தமிழாகச் செய்திருக்கின்றன. பொய்ம்மையும், கற்பனையும், இடைச்செருகலும் நிறைந்த பாரதம், இராமகதை, விஷ்ணு புராணம், வாயு புராணம், வேதங்கள் ஆகியனவற்றையே வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளும்போது, அவை எவையும் இல்லாத சங்க இலக்கியங்களை வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளல் தவறாமோ? ** தொல்காப்பியர் காலத் தமிழகம்** அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும். அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே இதனை, “ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுது மெழுத்தோடு சொல்கா மருபொருட் டொகை திகழ்பொருட்டே” என்ற பாடல் இனிது விளக்கும். தொல்காப்பியர் காலம் தொல்காப்பியரின் காலம் என்ன? கி. மு.வா? கி. பி. யா? கி. மு. என்பது டாக்டர் மு. வ. போன்ற பல புலவர் கருத்து. கி. பி. என்பது வையாபுரியார் போன்ற சிலர் கருத்து. இதில் எதுகொள்ளத்தக்கது? தள்ளத்தக்கது? மொழிக்கு முதலில் வராத எழுத்துக்களுள் சகரக்கிளவியும் ஒன்று எனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலோ சகர முதன்மொழிச் சொற்கள் பல வருகின்றன. அவ்வாறு வருகின்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே ஒழிய அயன்மொழிச் சொற்கள் அல்ல. ஆகவே சங்கத் தொகைநூற்கட்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது போதரும். சங்கத் தொகை நாற்களின் கால எல்லை கி. மு. 300 - கி.பி. 200 என்பதாகும். எனவே தொல்காப்பியர் காலம் கி. மு.வுக்கு முந்தியதாகும். இதுமட்டுமல்ல; சங்கத் தொகை நூற்களிலே மோரியர் படையெடுப்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, மோரியர்கள் வலிவும் பொலிவும் அடைந்த காலம் சந்திரகுப்த மௌரியன் காலமாகும். அவன் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும். ஆக, தொல்காப்பியர் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும். "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பாயிரத்தொடர். ஐந்திரம் என்பது பாணினீயத்துக்கு முந்திய நூலாகும். பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் டாக்டர் பந்தர்க்கார். எனவே கி.மு. 300க்கு முந்தியது ஐந்திரவியாகரணம். அஃது கி.மு. 500-இல் தோன்றியதாக இருக்கலாம். எனவே கி. மு. 500க்கும் - 300க்கும் இடைப்பட்ட காலம் தொல்காப்பியர் காலமாகும் என ஒருவாறு கூறலாம். பழந்தமிழர் நாகரிகம் பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் நமக்குப் பேருதவி செய்கிறது. பண்டை மக்களது வழக்கங்கள், நடை, உடை, பாவனை முதலியவைகள் தொல்காப்பியத்திலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. பொருட்கு விரிவாக இலக்கணம் வகுத்துள்ள தொல்காப்பியர் பொருளை அகப்பொருள், புறப்பொருள் என இருவேறு பெரும்பிரிவு செய்துள்ளார். இவற்றுள் அகப்பொருள் என்பது அகத்து நிகழும் ஒழுக்கத்தைச் சொல்லுவதாகும். புறத்தே நிகழும் ஒழுக்கத்தைக் கூறுவது புறப்பொருளாகும். தலைவன் தலைவியரது அகத்து நிகழும் இன்பம் அகப்பொருளாகும். அறத்தினையும் பொருளையும் வெளிப்படையாகவும், வீட்டினைக் குறிப்பாகவும் உணர்த்துவது புறப்பொருள் ஆகும். புறவொழுக்கங்கள் பலவற்றிற்குக் காரணமானதும், அவற்றுளெல்லாம் சிறந்ததும் ஆகிய அரசரது ஒழுக்கமே புறப்பொருளிற் பெரிதும் பேசப்படுகின்றது. முதலில் அகம் என்பதன் இலக்கணத்தையும், அதன் பிரிவாகிய ஏழ் திணைகளையும், அவற்றின் முதல், கரு, உரிப் பொருள்களையும் பார்ப்போம். “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”- இது நச்சினார்க்கினியர் அகத்துக்குக் கூறும் இலக்கணமாகும். இவ்வகப்பொருளினை, கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழ் திணைகளாக ஆசிரியர் பிரித்துள்ளார். திணை என்பது ஒழுக்கம். இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். எஞ்சிய ஐந்து திணைகளும் மிகச் சிறப்புடையனவாகும். ஐந்திணை என்பது அன்புடைக் காமம் ஆகும். இதற்குரிய முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன உரிப் பொருள்களாகும். தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, ஊர், நீர், விலங்கு, மரம், பூ, புள், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் எனப்படும். முன்னர்க் கூறியது போன்று நிலம் குறிஞ்சி முதலிய ஐந்துமே. பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஆவணி மாதந் தொடங்கிக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும் பொழுதினை ஆறு வகையாகப் பிரித்தனர். இவ்வாறே நாளினை ஆறு கூறாகப் பிரித்து ஒவ்வொரு கூறுக்குமுரிய பத்து நாளிகை நேரத்திற்கும் ஞாயிறு தோன்றும் வேளை முதலாகத் தொடங்கிக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதையும் ஆறாகப் பகுத்தனர். அகவொழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும். அவற்றுள் களவு என்பது ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் எதிர்ப்பட்டு, மனம் ஒன்றுபட்டு, தம்முட் கூடிக் கலத்தலாகும். இவர்களது களவொழுக்கத்திற்குத் துணைபுரிவோர் பாங்கன், பாங்கி, செவிலி முதலியோராவர். களவொழுக்கத்திற்குப் பின்னர் முறைப்படி திருமணஞ் செய்துகொண்ட தலைவனும் தலைவியும் அறவழியே நின்று இனிய இல்லறம் நடத்துவது கற்பொழுக்கமாகும். இவ்வொழுக்கத்தின்கண், கல்வி கற்றல், நாடு காத்தல், தூது போதல், வேந்தர்க்கு உதவி செய்தல், பொருளீட்டல், பரத்தை விருப்பு ஆகிய இவற்றின் காரணமாய் தலைவன் மனைவியைப் பிரிய நேரிடும். அதுகால் தலைவி பிரிவுத் துன்பத்தை ஆற்றாது ஆற்றி இருப்பாள். ஆடவர் மகளிரொடு கடன்மேற் செல்லுதலும், பாசறைக்கண் அவர்கள் மகளிரொடு இருத்தலும் அன்று கடியப்பட்டன. தலைவி கருவுற்றிருக்குங்கால் தலைவன் பரத்தையிடம் செல்லுதலும், அதன் காரணமாய் தலைவி வருந்தி ஊடுதலும், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களாக, தோழி, இளையர், அறிவர், கூத்தர் முதலியோர் விளங்கினர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. மேலும் காம இன்பத்தினை வேண்டுமளவு நுகர்ந்த பின்னர் தலைவனும் தலைவியும் இறுதியில் வீடு பெறுதற் பொருட்டுத் துறவினை மேற்கொள்ளுவர் எனவும் தொல்காப்பியம் கூறுகின்றது. அடுத்து புறத்திணையைப் பற்றிப் புகலுவாம். அகப்பொருளுக்கு ஏழு திணைகள் கூறியதுபோலவே தொல்காப்பியர் புறப்பொருட்கும் ஏழு திணைகள் கூறுகின்றார். அவை யாவன : 1. வெட்சித் திணை - பகைவரது நிரையைக் கவர்தல். நிரை மீட்டலும் இதன் கண்ணே அடங்கப்பெறும். 2. வஞ்சித் திணை - பகைவரது நாட்டைக் கொள்ள எண்ணி போர்புரியச் செல்லுதல். 3. உழிஞைத் திணை - பகைவரது மதிலை வளைந்து நின்று பொருதல். மதில் காத்தலும் இதன்கண் அடங்கப்பெறும். 4. தும்பைத் திணை-பகைவருடன் கலந்து பொருதல். 5. வாகைத் திணை- வெற்றி கொள்வது. 6. காஞ்சித் திணை-வீட்டின் காரணமாய் செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறுதல். 7. பாடாண்டிணை - தலைவனது வீரம், கொடை, முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல். இத் திணைப் பெயர்களிற் பல பூக்களின் பெயராய் இருப்பதால், போர்க் காலத்தில் அவ்வப்பொழுது அறிகுறியாக வேறு வேறு மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வர் எனத் தெரியவருகிறது. மேலும் ஒரு அரசன் மற்றொரு அரசன் மேல் படையெடுப்பதற்கு முன்னர் தனது கருத்தை நிரைகவர்தல் (Cattle lifting) மூலம் தெரிவிப்பான் என்பதும், போருக்குச் செல்வதற்கு முன்னர் நாளும், புள்ளும் பிறவுமாகிய நிமித்தம் பார்த்தனர் என்பதும், வீரத்தோடு கருணையும் உடையவர்களாய் தமிழ் வீரர் விளங்கினர் என்பதும், பகைவரது நாட்டில் ‘எரி பரந்தெடுத்தல்’ (தீக் கொளுத்தல்) நடந்தது என்பதும், நகரத்தைச் சுற்றிலும் மிக்க உரனுடையதும் பொறிகள் பொருத்தப் பெற்றதுமாகிய ‘முழுமுதலரணம்’ இருந்தது என்பதும், அதனைச் சுற்றிலும் முதலைகள் வாழும் பெரிய அகழி இருந்தது என்பதும், யானைப்படை, குதிரைப்படை தமிழ்நாட்டில் இருந்தன என்பதும், போரில் மாண்டவர்களைத் தெய்வமாக வணங்கினர் என்பதும், கொள்ளை கொண்ட பொருள் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பதும், மகிழ்ச்சியின் காரணமாய் வீரர்கள் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதும், இன்ன பிறவும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. சுருங்கக்கூறின் தொல்காப்பியர் காலத்திலேயே தண்டமிழ் நாடு சிறக்க வாழ்ந்து வளம்பெற்ற நாடாய் விளங்கியது. ** கடைச்சங்க காலம்** தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்க காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிளினி, தாலமி என்போரின் குறிப்புகளும், பெரிப்ளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம். தமிழ் வேந்தர்கள் சங்க காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ 300 பேர் தமிழகத்தை ஆண்டனர். வளமிக்க வயல் சூழ்ந்த நகரப் பகுதிகளும் கடற்கரையும் முடியுடை மன்னரால் ஆளப்பட்டன. குன்று நிறைந்த பகுதிகளும், காடும் மேடும் நிறைந்த சிற்றூர்களும், வேளிர்கள், வள்ளல்கள் ஆகிய குறுநில மன்னரால் ஆளப்பட்டன. குறுநில மன்னருள் முடியுடை மூவேந்தர்க்கு அடங்கியோரும் உண்டு; அடங்காது தனித்து விளங்கியோரும் உண்டு. தமிழகத்தை மூவேந்தர் பாகுபாடு செய்துகொண்டு ஆண்டார்கள். அவர்கள் ஆண்ட மூன்று பகுதிகளும் முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என வழங்கப்பட்டன. எனவே அவர்கள் சேர சோழ பாண்டியரெனப்பட்டனர். வடக்கே வானியாறு, தெற்கே கோட்டாறு, கிழக்கே மேற்குத்தொடர்ச்சி மலை, மேற்கே கடல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலம் சேர நாடு ஆகும். பாண்டிய நாடு என்பது தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ளதாகும். சோழ நாடு என்பது வெள்ளாற்றுக்கும் தென் பெண்ணைக்கும் இடையே பரந்து விளங்குவது. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடாகும். பாண்டியருக்கு வேப்பந்தாரும், சேரருக்குப் பனந்தாரும், சோழருக்கு ஆத்திமாலையும் அடையாள மாலைகளாம். பாண்டியரின் சின்னம் மீன்; சோழரின் சின்னம் புலி; சேரரின் சின்னம் வில். பாண்டியரின் தலை நகர் மதுரை நகர்; கடற்கரை நகர் கொற்கை. சோழரின் தலைநகர் புகார், உறையூர்; துறைமுகம் புகார். சேரருக்குத் தலைநகர் வஞ்சி; துறைமுகம் முசிறி. இன்று மலையாளம் வழங்கும் பகுதி முழுதும் சேர நாடாய் விளங்கியது. அந்நாடு அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாகவே இருந்தது. நெடுநாளைக்குப் பின்னரே அது மலையாள நாடாயிற்று. இன்று கிடைக்கும் இலக்கியச் சான்றுகளின் மூலம் மிகவும் பழமையான, சிறப்பான சோழ மன்னன் கரிகாலன் என்பதை அறிகிறோம். இக் கரிகாலனே சோழ மன்னர்களிற் சிறந்தவன். “வலிமை மிக்க புலி கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போல பகைவரது சிறையிலிருந்து வளர்ந்த கரிகாலன் பிள்ளைப் பருவமுதலே வலிமை மிக்கவனாகவும், சீற்றத்திலே முருகப்பெருமானை ஒப்பவனாகவும் விளங்கினான். பின்னர் அவன் பகைவரை வென்று முறைப்படி அரசுரிமையைப் பெற்று, பகைவர் நாடுகளைக் கைப்பற்றிச் சோழ வல்லரசை நிறுவினான். பகைவர் ஊர்களில் கூகைகள் இருந்து குழறின; மதில்கள் அழிந்தன. சேர பாண்டியரை வெண்ணியில் வெற்றிகண்டவன்; ஆத்தி மாலையை அணிபவன்; நினைத்தவற்றை நினைத்தவாறே முடிக்கும் ஆற்றல் பெற்றவன்; அருவா நாட்டார், குட்ட நாட்டார், வடநாட்டார், இருங்கோ வேளிர் முதலியவர்களை வென்றவன்; காடு கெடுத்து நாடாக்கியவன்; குளம் தொட்டு வளம் பெருக்கியவன்; கோயில் கட்டியவன்; தமிழ்க்குடிகளைக் காத்தவன்” என்றெல்லாம் பத்துப்பாட்டு இவனது அருமை பெருமைகளைக் கூறுகின்றது. கரிகாலன் சோழநாட்டரச பதவியை அடைவதற்கு மிகவும் பாடுபட்டான். அரசனானதும் முதலில் உள்நாட்டுக் குழப்பத்தைத் திறம்பட அடக்கினான். தன்னை எதிர்த்த சேரனையும் பாண்டியனையும் வெண்ணி என்னும் இடத்தில் வெற்றிகண்டான். இதன் பிறகு இவன் வடநாட்டின் மீது படையெடுத்தான் எதிர்த்த வடநாட்டு மன்னரை எல்லாம் முறியடித்தான். பின் இமயம் சென்று தன் புலிக்கொடியைப் பொறித்து மீண்டான். பேராசிரியர் பண்டித மு. ராகவய்யங்கார் கரிகாலன் இமயத்தில் புலி பொறித்த இடம் சிக்கிம், பூட்டான் என்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள மலைகள் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். ‘இம்பீரியல் கெச்ட்டீர் ஆப் இந்தியா’ ( Imperial Gazetteer of India ) என்ற நூலும் மேற்குறித்த இடத்தில் ‘சோழன் மலை’, ‘சோழன் கணவாய்’ என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன என்று கூறுகின்றது. வடநாடு சென்று வாகையுடன் திரும்பிய கரிகாலன் அடுத்து இலங்கை மீது படையெடுத்து அதனை வென்றான். 12000 கைதிகளைப் பிடித்துக்கொண்டு தன்னாடு திரும்பினான். திரும்பிய பின்னர் அக்கைதிகளைக் கொண்டு காவிரி நதியின் இரு கரைகளையும் செப்பனிட்டான். ஈழத்தின் பழங்கால நூல்களான மகாவமிசம், தீப வமிசம் இதனைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன. கரிகாலனது காவிரி அணை நூறு மைல் நீளம் இருந்ததென இவை கூறுகின்றன. கரிகாலனது இவ்வழியாப் பணியைப் பற்றித் திருவாலங்காட்டுப் பட்டயங்களும், ரேனாட்டுச் சாசனங்களும் நன்கு கூறுகின்றன. கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார் பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது. இந்நகர் திண்ணிய மதிலினையும், புலி அடையாளம் பொறிக்கப்பட்ட வலிய கதவுகளையும், பல உணவுச் சாலைகளையும், பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்ற வெண் சுவருடைய கோவில்களையும், அமணப்பள்ளிகளையும், குளங்களையும், முனிவர் தங்கும் இளமரக்காவினையும், காளி கோட்டத்தையும் கொண்டு விளங்கியது. பட்டினப்பாக்கத்தில் பரதவர் வாழ்ந்தனர். இவர்கள் உயர் நிலை மாடங்களிலிருந்து செல்வ மகளிர் பாடும் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். மாடங்களில் எரியும் விளக்குகளின் உதவியால் அவர்கள் வைகறையில் கட்டுமரங்களிற் செல்வர். இவர்கள் வாழும் அகன்ற தெருவில் உள்ள பண்டகசாலை முற்றத்தில், சுங்கம் மதிப்பிடப்பட்டு, புலி முத்திரை இடப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குவிந்துகிடக்கும். பட்டினக்கடைத்தெருவில் வாயில்கள் தோறும் பலவகைக் கொடிகள் இரண்டு வரிசைகளிலும் கட்டப்பட்பட்டிருக்கும். மிளகு, பொன், சந்தனம், அகில், முத்து, பவளம் பிறவும் எங்கும் மிகுதியாகக் காணப்படும். வெளி நாட்டார் பலரும் பட்டினத்தில் குடியிருப்பர். இந்நகர்வாழ் வேளாளர் அருள் ஒழுக்கம் நிறைந்தவராகவும், வணிகர் நடுநிலை பிறழாத நெஞ்சினராகவும் விளங்கினர். அதிகாலையில் மகளிர் பக்திச்சுவையுடைய பாடல்களைப் பாடுவர். கோவில்களில் குழல், யாழ், முரசு முதலியன ஒலிக்க விழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும். பல படிகளையுடைய உயர்ந்த மாடங்களில் சிவந்த அடியினையும், கிளிமொழியினையும், பவள நிறத்தினையும், மயிலின் சாயலையும் உடைய மங்கையர் நின்று விழாவினைக் கண்டுகளிப்பர். இச்செய்திகளை எல்லாம் பட்டினப்பாலையில் பரக்கக் காணலாம். கரிகாலனுக்குப் பின்பு கிள்ளிவளவன் சோழ நாட்டின் அரசுரிமையைக் கைப்பற்றினான். இவன் காலத்தில்தான் புகாரைக் கடல் விழுங்கியது என மணிமேகலைக் காப்பியத்தால் நாம் அறிகிறோம். இதன் பின்பு சோழநாட்டில் குழப்பமும் கொந்தளிப்புமே ஏற்பட்டன. இக்காலை சேரன் செங்குட்டுவன் சோழநாட்டு அரசியலில் தலையிட்டு அமைதியினை ஏற்படுத்தினான். புறநானூற்றின் மூலம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற சோழ அரசர்களும் சோழ நாட்டை நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் அறிகின்றோம். ’சோழ அரசர்களுள்ளே கரிகாலன் எப்படியோ அப்படியேதான் சேரமன்னருள் செங்குட்டுவன். சேரன்செங்குட்டுவன் சிறந்த வீரன்; செங்கோலன் தமிழரசரை வடவர் இகழ்ந்தனர் எனக்கேட்டு உடனே வடநாட்டின் மீது படையெடுத்துச்சென்றான். செல்லும் வழியிலே நூற்றுவர் கன்னர் என்ற வடநாட்டு மன்னர்களின் உதவி கிடைத்தது. பின்னர் வடக்கே சென்று கனகவிசயர் என்னும் ஆரிய மன்னரை முறியடித்துச் சிறைப்பிடித்தான். பனிவரையில் விற்கொடி பொறித்துவிட்டுப் பத்தினித்தேவிக்குப் படிமஞ்சமைக்க எடுத்த கல்லைக் கனகவிசயர் தலைமீதேற்றித் தமிழகம் மீண்டான். முன்னர் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் இவன் தன்னை எதிர்த்த சோழ பாண்டியரை வெற்றிபெற்றான். அடுத்துக் கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகைவரைக் கடலிற் படைகளைச் செலுத்தி, செங்குட்டுவன் வென்றனன். மேலும் தன்னை எதிர்த்த பாண்டிய நாட்டுத் தளபதி பழையனையும், சோழர் ஒன்பதின்மரையும் இவன் தனித்தனியே வெற்றிகொண்டான் என்றும் தெரியவருகின்றது. சுருங்கக்கூறின் சேரன் செங்குட்டுவன் தலைசிறந்த தமிழ்நாட்டு வேந்தர்களில் ஒருவன். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் முழுவதும் இவன் வெற்றி பற்றியதேயாகும். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு அடைந்தனர். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனாகிய இந்நெடுஞ்செழியனால் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோற்கடிக்கப்பட்டான். இந்நெடுஞ்செழியன் மீது பாடியதே நெடுநல்வாடை. இதனைப் பாடியவர் நக்கீரர். மதுரைக் காஞ்சியும் இவனைப் பற்றியதே. இவன் இளமைப் பருவத்தில், சேரலிரும்பொறையோடு, சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ, வேண்மான், பொருநன் என்ற எழுவரையும் ஒருசேர வென்றான். இவன் புலவர்களிடத்து மிக்க அன்புடையவன். ‘நகுதக்கனரே’ என்னும் புறப் பாடலைப் பாடியவனும் இவனே. இவனது காலத்தில் பாண்டியர் கோநகரமாகிய மதுரை தலைசிறந்த நகரமாய் விளங்கியது என்பதை மதுரைக்காஞ்சி மூலம் அறியமுடிகின்றது. நிலமடந்தையின் முகத்தைப் போலப் பொலிவுடன் விளங்கும் மதுரையினை வையை ஆறு அணி செய்ய, ஆழமுடைய அகழியாலும், பேரரசராலும் அழிக்கமுடியாத கோட்டை மதில்களாலும் முறையே சூழப்பட்ட இந்நகரினது கோட்டை வாயில் நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையும், மாடங்களையும் கொண்டிலங்கியது. இக்கோட்டைக்குள் இருபுறங்களிலும் உயர்ந்து தோன்றும் சாரளங்களுடன் கூடிய வீடுகளை உடைய அகன்ற தெருக்கள் இருந்தன. கடைத்தெருக்கள் எப்பொழுதும் ஆரவாரத்துடன் விளங்கின. கட்டடங்கள் தோறும் கொடிகள் பறந்து பட்டொளி வீசின. நால்வகைப் படைகளும் நகரத்தில் இருந்தன. கோவில்களில் எப்பொழுதும் விழா நடந்துகொண்டே இருக்கும். இசையுடன் இன்னியம் எங்கும் கேட்கும்; முரசம் முழங்கும். இரவிலும் கூட கடைகள் பல திறந்திருக்கும். சுருங்கக்கூறின் பகலென்றும் இரவென்றும் பாராமல் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் எழுப்பிய ஆரவாரம் எங்கும் கேட்கும். இந்நிலையில் மதுரைமாநகர் மாண்புடன் விளங்கியது. முடியுடை மூவேந்தரைப்போலவே உரிமையுடனும் வள்ளண்மையுடனும் வாழ்ந்த வள்ளல்கள் எழுவராவர். இவர்கள் புலவரைப் பெரிதும் போற்றிப் புரந்தனர். வறிஞரைத் தம் வண்மையாற் காத்தனர். நத்தத்தனார் என்னும் புலவர் இந்த எழுபெரும் வள்ளல்களையும் தன் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் பாடியுள்ளார். பாரி என்பவன் பறம்பு நாட்டை ஆண்ட வள்ளல். இவனோடு நட்புப் பூண்டு ஒழுகியவர் கபிலராவர். இவன் வறியவர்க்கும் அறிஞர்க்கும் வரையாது வழங்கிய வள்ளல் ஆவான். இவனையே முடியுடை மூவேந்தர் எதிர்த்தனர். காரி என்பவன் வீரத்திலும் கொடை ஈரத்திலும் சிறந்தவன். பேகன் என்பவன் பழனிமலைப் பகுதியை ஆண்டவன். மயிலுக்குப் போர்வை தந்தவன். இவ்வாறே ஓரி, நன்னன், அதியமான், நள்ளி முதலிய வள்ளல்களும் தம் வண்மையால் நாளும் புகழ்பரப்பி வாழ்ந்தனர். மக்கள் பண்டைத் தமிழகத்திலே மக்கள் தம் தொழில் பற்றிப் பிரிக்கப்பட்டார்களே தவிர வர்ணாசிரம தருமப்படி பிரிக்கப்படவில்லை. தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். மலைப்பகுதி குறிஞ்சி எனவும், காட்டுப்பகுதி முல்லை எனவும், ஆற்றுப்பகுதி மருதம் எனவும், கடற்கரைப்பகுதி நெய்தல் எனவும், வளங்குன்றிய பகுதி பாலை எனவும் வழங்கப்பட்டன . குறிஞ்சி நிலத்தவர் குறவர்; முல்லை நிலத்தவர் ஆயர்; மருத நிலத்தவர் வேளாளர்; நெய்தல் நிலத்தவர் பரதவர்; பாலை நிலத்தவர் வேடர், மறவர். மேற்குறித்தவாறு நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழ் மக்கள், அவற்றிற்கேற்ப ஐவகைப்பட்ட அகவொழுக்கம் வகுத்து, அதனை ஐந்திணை என்று பெயரிட்டழைத்தனர். காதல் வாழ்வு பெரிதும் மதிக்கப்பட்டது. தமிழ் மக்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். பொருளீட்டலுக்கும், இன்பம் பெறுவதற்கும் அறத்தின் உதவியினையே நாடினர். தமிழர்கள் வீரஞ்செறிந்தவர்களாகத் திகழ்ந்தனர். நாட்டுக்காக, மன்னனுக்காக உயிரைக்கொடுக்கும் எண்ணம் உள்ளவர்களாய் வாழ்ந்தனர். ஆடவர்போலவே பெண்டிரும் தறுகண்மை உடையவர்களாய் வாழ்ந்தனர். பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டமையால் அவைகள் புகையைப்போலவும், பால் நுரையைப்போலவும் சிறந்து விளங்கின. கன்னார், தச்சர், கப்பல் கட்டுவோர், பொற் கொல்லர், இசைக்கருவிகள் செய்வோர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் பண்டு தமிழகத்தில் நன்கு விளங்கினர். ஒழுக்கமே மக்கட் பண்பு என்பது தமிழர் கொள்கையாதலால் ஒழுக்கம் உயிரினும் அதிகமாகப் போற்றப்பட்டது. “தீதும் நன்றும் பிறர் தரவாரா” “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலும் இலமே” போன்ற உயர்ந்த கொள்கைகளைச் சங்ககால மக்கள் பொன்னேபோற் போற்றி ஒழுகினர். பண்டு தமிழ்மக்கள் வீரஞ்செறிந்தவராகவும், காதல் கனிந்தவராகவும், கடமை உணர்வுடையோராகவும், பண்பு நலன்கள் அனைத்தும் கொண்டவராகவும் விளங்கினர். இன்பம், அமைதி. அழகு இம்மூன்றும் தமிழ் நாடெங்கணும் களிநடம் புரிந்தன. வாணிகம் சங்ககாலத்தில் தமிழகம் மேனாடுகளுடனும், கீழ் நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு பெரிதும் கொண்டிருந்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டும். மேலும் பழைய ஏற்பாடும், செனகா, பெட்ரோனியசி, பிளினி, தாலமி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆகியவற்றில் தமிழர் மேலை நாட்டாரோடு செய்த வாணிகத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. இதுமட்டுமா? ரோம நாணயங்கள் பல தமிழக மண்ணிற் கிடைத்துள்ளன. தோகை, மயில், அரிசி, இஞ்சி, முத்து ஆகிய சொற்கள் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன. மேற்கே யவனமும் கிரேக்கமும் தமிழகத்தோடு வாணிகம் செய்தன; கிழக்கே தமிழகம் மலேயா, சீனா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தது. பாண்டிய நாட்டிலிருந்து முத்தும், சேர நாட்டிலிருந்து தந்தம், மிளகு, முதலியனவும், சோழ நாட்டிலிருந்து பட்டும் பிறவும், பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. வெளிநாடுகளிலிருந்து பாவை விளக்கு, மது வகைகள், தங்கம், குதிரை முதலியன தமிழகத்தில் வந்து குவிந்தன. யவன வீரர்கள் தமிழ் மன்னர்தம் காவலர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். இவற்றைக் கீழ்வரும் வரிகள் நன்கு வலியுறுத்தும். ‘யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ (சிலம்பு) “நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடன் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும்” (பத்துப்பாட்டு) தமிழகத்து முத்துக்கு மேலை நாட்டிலே நல்ல விலையிருந்தது. மேலை நாட்டு அழகிகள் தமிழகத்தின் முத்தின் மீது மாறாக்காதல் கொண்டு விளங்கினர். இதனால் ஏராளமான தங்கம் அந்நாடுகளிலிருந்து தமிழகத்திலே வந்து குவிந்தது. பிளினி எனும் ரோம வரலாற்றாசிரியன் ரோம் நாட்டுப் பெண்கள் முத்தின்மீது கொண்டுள்ள வெறியையும், அதனால் ஏராளமான பொன் செலவாவதையும் கண்டு மிகவும் மனம் புழுங்கினான். கையசு என்ற மன்னனின் மனைவியாகிய இலாசியசி என்பவள் ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு 40,000,000 செச்ட்டர்கள் மதிப்புள்ள முத்தை அணிந்து கொண்டு வந்தாளாம். அதுமட்டுமல்ல; யாராவது அவள் அணிந்துள்ள முத்தின் விலையை வினவின் அதனை உடனே தெரிவிக்க அந்த முத்து விலைச்சீட்டை (Cash bill) யுங்கூட. உடன் கொண்டுவந்து இருந்தாளாம். இது பற்றிப் பிளினி மேலும் கூறுவதாவது:- “நமது ஆரணங்குகள் தங்களின் பெருமை காதிலும் கையிலும் ஒளிவிடும் முத்துக்களிலே இருப்பதாக எண்ணுகிறார்கள். முத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் போதும். அவ்வளவுதான், நமது நங்கைகளின் உடல் பூரிப்படைகிறது. உள்ளம் களிப்பு வெள்ளத்திலே மிதக்கிறது. அதுமட்டுமல்ல; ஏழை எளியவர்கள் கூட அந்தச் செல்வமகளிரைப் பின்பற்றலாயினர். ‘முத்தும் முடியுடை வேந்தனும் ஒன்றே. முத்தணிந்து செல்வோள் முன் முடியுடை வேந்தன் செல்வான்’ என்பது மக்களின் எண்ணம். இதுமட்டுமல்ல; முத்தைப் பெண்டிர் பாதத்தில் அணிகின்றனர். செருப்பு முழுவதும் முத்தே நிறைந்துள்ளது. முத்தை அணிந்தால் மட்டும் அவர்களுக்குப் போதாது. முத்தின் மீது உலவவேண்டும் என்பதும் அந்நாரீமணிகளின் மனப்பான்மையாகும்.” இதுமட்டுமா? தமிழக மன்னர்கள் ரோம் நாட்டு மன்னன் அகச்டசுசீசருக்கும், சீன மன்னனுக்கும் தூது அனுப்பியுள்ளனராம். தமிழ் வணிகர்களுக்குக் கடலே அஞ்சியதாம். வெளிநாட்டு வாணிகத்தைப் போன்றே உள் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. அவ்வியாபாரம் பெருநகர்களிலன்றிச் சிற்றூர்களிலும் பரவி இருந்தது. வணிகர் வியாபாரப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு வண்டிகளில் ஏற்றிச்சென்றனர். பகலில் திறந்திருக்கும் கடைவீதிகள் நாளங்காடி எனவும், இரவில் திறந்திருக்கும் கடைவீதிகள் அல்லங்காடி எனவும் வழங்கப்பட்டன. பண்டு வாணிகம் வளம் பெற்று விளங்கியமைக்கு முக்கிய காரணம் அன்று நாடு முழுதும் நல்ல சாலைகள் இருந்தமையே. தமிழ்நாட்டுப் பண்டைய வாணிகச் செழிப்பைப் பற்றிப் பல ஆங்கில வரலாற்று நூல்கள் சிறந்த முறையிலே பேசுகின்றன. அரசியல் பண்டைத் தமிழகத்தில் நிலவிவந்த ஆட்சி முடியாட்சியே. எனினும் குடியாட்சியே அந்த முடியாட்சி மூலம் நடைபெற்றது. இதனைப் புறநானூறு நன்கு தெளிவாகக் காட்டுகின்றது. மன்னன், ‘மக்களின் நலனே தன் நலன்; மக்கள் வாழ்வே தன் வாழ்வு’ என்று எண்ணி முறைபிறழாது, அறந்திறம்பாது நெறியே நின்று ஆட்சிபுரிந்தான். காவலர்கள் புலவர் பெருமக்களுக்கு நல்ல மதிப்பை அளித்தனர். புலவர் சொல்லைப் பொன்னேபோலப் போற்றி ஒழுகினர். புலவரும் மன்னன் நன்னெறி விலகிப் புன்னெறி தழுவி இடர்ப்படுகையிலே சென்று தூயது துலக்கித் தீயது விலக்கி அறிவுகொளுத்தினர். இதனைக் கோவூர்க்கிழார் வரலாறு ஒன்றே உறுதிப்படுத்தும். முன்னர்க் கூறியவாறு தமிழகம் பண்டைக்காலத்திலே முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டது. அவர்களோடு, பாரி, காரி போன்ற வேளிரும், குறுநில மன்னரும் இருந்து நாடு காவல் செய்தனர். மன்னர்கள் ஆறில் ஒருபங்கு இறைபெற்று முறை செய்தனர். மேலும் அவர்கள் மக்களின் காட்சிக்கெளியராய் வாழ்ந்துவந்தனர். இதனால் மக்களும் மன்னனை எளிதிற் பார்த்துத் தம் குறைகூறி முறைசெயப்பெற்றனர். பண்டைத் தமிழ் ஆட்சிமுறையைச் செவ்வனே அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது குறளே. அரசன் என்பவன் யார்? அவன் கடமை என்ன? அவன் குடிகட்குச் செய்ய வேண்டியன என்ன? என்பன போன்ற வினாக்கட்கு விடை காண வேண்டுமாயின் குறளே பெரிதும் உதவும். மன்னனுக்கு அரசியலில் உதவ ஐம்பெருங்குழுவும், எண் பேராயமும் இருந்தன. அவற்றின் துணைகொண்டே ஆட்சி நடைபெற்றது கல்வி முறை சங்ககாலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான். ‘உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே ……………………………………………………….. அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்’ என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும். அதுமட்டுமின்றி அங்கங்கே வரும் வானநூற் கருத்தும், மருத்துவமுறைக் குறிப்பும் பண்டைக்காலக் கல்வி முறையை நன்கு தெளிவுறுத்தும். பண்டு மன்னருட் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். பெண்பாலரும் கல்வியிற் சிறந்து விளங்கினர். பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார், நச்செள்ளையார், குறமகள் இளவெயினியார், ஒளவையார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர். சங்கமிருந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்கள் பற்பல நூல்களியற்றிப் புகழ்பெற்றனர். சுருங்கக் கூறின் அக்காலத்தில் கல்வியின் உயர் நிலை நன்கு உணரப்பட்டது. பொருளாதாரம் சங்ககாலப் பொருளாதாரம் ஓரளவு நல்ல நிலையிலேயே இருந்தது. பெரும்பாலும் பண்டமாற்றே வழக்கத்தில் இருந்துவந்தது. உள் நாட்டு வாணிகம் வண்டியின் மூலமாகவும், வெளிநாட்டு வாணிகம் கலத்தின் மூலமாகவும் நடைபெற்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நால்வகை நிலப்பொருட்களும் வந்து குவியுமிடம் மருதமாகும். குறிஞ்சி நில மக்கள் தமது தேன், சந்தனம், அகில் முதலியனவற்றையும், முல்லை நிலத்தார் பாலையும் மோரையும் தயிரையும், நெய்தல் நிலத்தார் உப்பு முதலியவற்றையும், மருத நில மக்களுக்குக் கொடுத்து நெல்லைக் கொண்டு செல்லுவர். எனவே சங்ககாலத்திலே பொருளியல் வளம் செறிந்த நிலம் மருதநிலமாகும். போர் முறை இக்காலத்திலே நடக்கும் போர் அறம் திறம்பிய போராகும். ஆனால் சங்ககாலத்திலோ போர் அறவழியிலேயே நடைபெற்றது, முன்னறிவுப்புடனேயே போர் நடைபெற்றது. போர் செய்ய விரும்புவோர் முதலிலே பகைவர் நாட்டகத்தே சென்று பறையறைவர். பிள்ளை பெறாதவரும், பிணியுடையோரும், பார்ப்பனரும், பிறரும் தத்தம் புகலிடம் நோக்கிப் போகுமாறு கூறி, அங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இஃதறிந்த பிற நாட்டார் ஆநிரைகளை மீட்கப் போருக்கு வருவர். உடனே போர் தொடங்கும். போரிலே புறமுதுகிட்டோடலும், அவ்வாறு ஓடுவார் மீது படை ஓச்சலும் தவறு எனக் கருதப்பட்டன. ‘போர்க் குறிக் காயமே புகழ்க்குறி காயம்’ என்பது பன்டைத்தமிழ் வீரர்களின் இதய நாதமாகும். போரில் இறந்தோருக்கு நடுகல் நடுவது வழக்கமாம். போரில் புண்பட்டோர் வடக்கிருந்து உயிர் நீத்தலும் அக்காலத்தில் உண்டு. கலைகள் சங்ககாலத் தமிழகம் கலை நலத்தால் கவினுற விளங்கியது. சிற்பத்தால் சிறந்தும், ஓவியத்தால் உயர்ந்தும், இசையால் இனிமை பெற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். முத்தமிழ் முழக்கம் வீதிதோறும் கேட்டது. இசைத்தமிழ் சங்க காலத்தில் நன்கு போற்றப்பட்டது. பெருநாரை, இசை நுணுக்கம் முதலிய இசைத்தமிழ் இலக்கண நூல்களும், சிலப்பதிகாரம் போன்ற இசைத்தமிழ்ச் செய்யுள் நூல்களும் சங்க காலத்தில் எழுந்தன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழு சுரங்களும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பண் வகைகளும், தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்ற நால்வகை இசைக் கருவிகளும், பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் முதலிய யாழ்களும் சங்க காலத்தில் வழக்கில் இருந்தன. இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் , பாடினியர் முதலியவர்களை மக்களும், மன்னரும் பெரிதும் போற்றினர். அக்காலத்தில் கோவில்கள் செங்கல், மரம் இவற்றால் கட்டப்பட்டன. சுவர்மேல் கண்ணைக் கவரும் வகையில் சுண்ணம் பூசப் பெற்றிருந்தது. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரது கீழ்வரும் பாடலால் அறியலாம். “இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை” (அகம்-167) சோழர் பெருநகராகிய காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளிலே மக்களை மயக்கும் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை, “சுடுமண் ஒங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்” என மணிமேகலை கூறுவதிலிருந்து அறியலாம். மேலும் அக்காலத்தில் மண்ணினும், கல்லினும், மரத்தினும் சுவரினும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. சிற்பத்தில் சிறந்து விளங்கிய செந்தமிழ் நாடு, ஓவியத்திலும் உயர்ந்து விளங்கியது. சுவர், மரம், துணிச் சீலை, முதலியவற்றில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓவியங்களைத் தமிழ் மக்கள் எழுதி மகிழ்ந்தனர். அரண்மனை, கோவில் மண்டபம் இவற்றின் சுவர்களில் நல்ல நல்ல ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினர். அரண்மனையின் ஒரு பகுதி சித்திர மாடமாக விளங்கியது. பாண்டிய மன்னனது சித்திர மாடத்தை , “வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ வொரு கொடி வளை இக் கருவொடு பெரிய காண்பின் நல்லில்” என நெடுநல் வாடையும், “கயங்கண்ட வயங்குடை நகரத்துச் செபியன் றன்ன செஞ்சுவர் புனைந்து” என மதுரைக் காஞ்சியும் போற்றிப் புகழ்கின்றன. பாண்டியன் நன்மாறன் சித்திர மாடத்தில் உயிர்நீத்த காரணத்தால் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புலவர்களால் அழைக்கப்பட்டான். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் மூலம் திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரமாடம் இருந்தது எனவும், முருகனை வணங்கிய பின்னர் மக்கள் இம்மாடத்திற்குச் சென்று அங்கு எழுதப்பட்டிருந்த காமன், ரதி, அகலிகை முதலிய பலவகைப்பட்ட ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும் தெரிய வருகின்றது. “நின் குன்றத்து எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்” (பரி-18’) “இரதி காமன் இவள் இவன் எனாஅ விரகியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றியபடி யிதென் றுரைசெய் வோரும் இன்ன பலபல வெழுத்து நிலை மண்டபம்” (பரி-19) இதுவரை கூறியவாற்றான் சங்ககாலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில்தான் தமிழன் நாகரிகமிக்கவனாய் வாழ்ந்தான். பற்பல வகை உணவுண்டு, பட்டினும், நூலினும் ஆடை உடுத்து, கோட்டையையும் கொத்தளமும் கொண்டு வாழ்ந்தான். மேலும் நல்லரசாட்சி கொண்டு நல்லறிவு கொளுத்தும் கலை நலம் பல பெற்று, உயர் வாழ்க்கை நடாத்தினான். நஞ்சு பெய்வதைக் கண்டும் அதனை உண்டு அமைவர் நனி நாகரிகம் வேண்டுபவர் என்று கூறுகிறது தமிழ் வேதம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றுரைத்தான் நற்றமிழ்ப் புலவன் ஒருவன். இவ்வுணர்ச்சி இன்றிருக்குமாயின், உலகப்பேரச்சம் நீங்குமன்றோ? “தீதும் நன்றும் பிறர்தர வரா” என்று உலக உண்மையை உயர்முறையில் விளக்கினான் அதே தமிழன். உலகம் உய்ய, உயர்வாழ்வு பெறத் தமிழர்தம் பண்டைப்பண்பாடு பெரிதும் உதவும் என்பதும் இதனால் பெறப்படுகிறதன்றோ? பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என அக்கால மக்கள் எண்ணினர். இதனை, ‘தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுந ருண்மை யானே’ (புறம். 182) ‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக னாயலன்’ (புறம், 134) ‘தனக்கென வாழாப் பிறர்க்குரிய யாள’ (அகம். 54) ‘பிறர்க்கென வாழ்தி நீ’ (பதிற். 38) என்ற சங்ககாலப் பாடல் வரிகள் மூலம் நன்கு அறியலாம். செய் நன்றி மறத்தல் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது. ‘ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென’ (புறம். 34) சமய நிலை திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்’ பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை யேறுதலும், அன்றிக் கைம்மை நோன்பு நோற்றலும் உண்டு என்றும் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. ** காப்பிய காலம்** தமிழக வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் காப்பிய காலமாகும். காப்பிய காலம் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய காலமாகும். இவ்விரட்டைக் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் என்பது நெஞ்சையள்ளும் செந்தமிழ்க் காப்பியம் ஆகும். மணிமேகலை அத்துணை சிறப்புடையதன்று. காப்பிய காலத்திலே நிலவிய தமிழ்ச் சமுதாயத்தின் நிலை, அக்காலத்துச் சமயநிலை, மக்களிடையே உலவிய பழக்க வழக்கங்கள் முதலியவற்றை நன்கு அறிய நமக்குத் துணைபுரிவன இந்த இருபெரும் காப்பியங்களேயாம். இந்த இரண்டு காப்பியங்களிலும், வெவ்வேறு சமயச் சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அவற்றை இனிப் பார்ப்போம். காப்பிய காலச் சமயச் சூழ்நிலைக்கும் சங்ககாலச் சமயச் சூழ்நிலைக்கும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை இருகால இலக்கியங்களையும் கற்றோர் அறியலாம். சங்ககால இலக்கியங்களிலே கோவில்களைப் பற்றிய குறிப்புகள் மிக மிகக் குறைவு. மேலும் சங்கத்தமிழ்ச் சமுதாயத்திலே சமயத்துக்கு அளிக்கப்பட்ட இடமும் செல்வாக்கும் மிக மிகக் குறைவு. அதுமட்டுமல்ல; சமயத்தைச் சேர்ந்த புலவர்கள் சமயப் பிரசாரம் செய்யவில்லை; சமயம் பற்றிய நூல்களை எழுதவில்லை. மாறாக, பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வகுத்த அகம் புறம் பற்றியே பாடல்களை இயற்றினர். ஆனால் காப்பிய காலத்திலே சமண, புத்த, வைதிக சமயங்களுக்குரிய கோவில் பல காணப்படுகின்றன. சதுக்கப் பூதம் என்ற ஒன்று காணப்படுகின்றது. புகார், வஞ்சி, மதுரை, காஞ்சி ஆகிய தலைநகரங்களிலே பல கோவில்கள் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் ஓரளவுக்குத் தன் சமயக் கருத்துக்களைப் பொதிந்துள்ளார். ஆனால் மணிமேகலையிலோ சமயம் பேருருக் கொண்டு காணப்படுகின்றது. நூல் முழுதும் சமயப்பிரசாரமே. சமயவாதப் போர்கள் நடைபெறுகின்றன. இளங்கோவடிகள் சமணராயினும் பிற சமயங்களைத் தாழ்த்திப் பாடவில்லை. ஆனால் மணிமேகலை ஆசிரியரோ புத்தமே சிறந்தது என்று கூறுகிறார். மணிமேகலை மூலம் பிற சமயங்களோடு போராட்டம் நடத்துகிறார். பிற சமயங்களின் குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறார். இறுதியில் புத்த சமயத்துக்கு வாகை மாலை சூட்டுகிறார். புத்த சமயக் கருத்துக்கள் மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நூல் சுவை குன்றிக் காணப்படுகிறது. சங்க காலத்தைவிடக் காப்பிய காலத்திலே உள்ள நகரங்கள் ஓரளவுக்கு விரிவடைந்திருந்தன என்று கூறலாம்! சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, வஞ்சி முதலிய பேரூர்களின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. ‘தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’ என கவுந்தியடிகளால் பாராட்டப்பெற்ற பாண்டியர் தலைநகர் காப்பிய காலத்தில் சிறந்த நிலையில் விளங்கியது. வடக்கே வையை அணிசெய்ய, புறத்தே காவற்காடும், அகழியும் கொண்டு மதுரை மாநகர் அன்று விளங்கியது. மேலும் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகிய வையை பொய்யாக் குலக்கொடியாக எங்கும் தவழ்ந்து சென்று விளையாடியதால், மதுரை நகரின் புறஞ்சேரி’ புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ள நீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்’ காய்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் பந்தரும்’ கொண்டு அறம் புரியும் மாந்தரின் இருக்கையாய் விளங்கியது. நகரின் மதில் வாயில் வாளேந்திய யவன வீரர்களால் காக்கப்பட்டது. அவ்வாயிலையடுத்து திருவீற்றிருந்த பெருவீதிகளும், அரசர் வீதியும், கலைவல்ல கணிகையர் வீதியும், அங்காடி வீதியும், மணிகள் நிரம்பிய வண்ணக்கர் வீதியும், பொன் நிறைந்த பொற்கடை வீதியும், நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும் செய்த ஆடைகள் நிறைந்த அறுவை வீதியும், கூலம் குவித்த கூல வீதியும், பிற வீதிகளும் செறிந்து விளங்கின. நகரின் மதில் வளைவிற்பொறி, கல்லுமிழ் கவண், காய் பொன் உலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு. ஆண்டலையடுப்பு, கவை, கழு, புதை, புழை, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல் முதலிய பலவகைப் பொறிகளைக் கொண்டிலங்கியது. மாண்புடன் மதுரை மாநகர் விளங்கியது போலவே, சோழர் தலை நகராகிய காவிரிப்பூம்பட்டினமும் கவினுற இருந்ததாகச் சிலம்பு கூறுகின்றது. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் இருந்த இந்நகர் மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பெரும் பிரிவுகளாக இருந்தது. அரசர், வணிகர், மறையவர், வேளாளர் முதலியோர் வாழும் பெரு வீதிகளும், மாலை தொடுப்போர், நாழிகைக் கணக்கர், நாடகக்கணிகையர், படைவீரர் முதலியோர் வாழும் வீதிகளும் அடங்கிய பகுதியே பட்டினப்பாக்கம் எனப்பட்டது. மருவூர்ப் பாக்கத்தில், வேயா மாடம், பண்டகசாலை ‘மான் கட் காலதர்’ மாளிகை (Palatial building), கண்கவர் வேலைப்பாடுடன் கூடிய யவனர் பெருமனை, வணிகர் பெருமனை மாடங்கள் முதலியவற்றுடன் கூடிய நகர வீதியும், அருங்கல மறுகும், கூல வீதியும், பிட்டு, அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலை, நறுவிரை, முத்து, மணி இவற்றை விற்போர் வீதியும் இருந்தன. இப்பகுதி கடற்கரை யாகலான், இரவில் கானற்சோலையில் ’வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் …………………………………………. …………………………………………. இடையிடை மீன் விலை பகர்வோர் விளக்கமும் இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் " இன்ன பிறவும் காண்பார் கண்கட்கு இனிய விருந்தளித்தன. மேலே கூறிய இரு பாக்கங்களுக்கும் இடையே இருந்த பரந்த பொழிலில், நிழல் தரும் உயர்ந்த மரங்களின் அடியில் பந்தரிட்டு வணிகர் வாணிகம் செய்தனர். இது நாளங்காடி எனப்பட்டது. மேற்கூறிய வீதிகள் தவிர, மண்டபங்கள், மன்றங்கள், தோட்டங்கள், கோவில்கள், குளங்கள் பல இப்பட்டினமெங்கும் காணப்பட்டன. உறையூர் சோழரது மற்றொரு தலை நகரமாகும். இதனை இளங்கோவடிகள் “முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நகரை வாரணம் என்றும், கோழியூர் என்றும் மக்கள் வழங்கியதாகத் தெரியவருகிறது. இவ்வூரைச் சுற்றி மதிலும், கிடங்கும், அவற்றையடுத்துக் காவற்காடும், புறஞ்சேரியும், பூம்பொழிலும் விளங்கின. இவ்வூரில் இருந்த நிக்கந்தக் கோட்டத்தில் அருகக் கடவுளை வழிபடும் சாவகர் பலர் வாழ்ந்தனர். காப்பிய காலத்தில் வஞ்சிமா நகர் சேரர்தம் தலைநகரமாய் விளங்கியது. இந்நகரின் புறத்தே குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நான்கு நிலப்பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் எழுப்பிய இன்னிசையைக் கேட்டு இந்நகர மாந்தர் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தனர். இங்கு குணவாயிற்கோட்டம், வேளாவிக்கோ மாளிகை, பொன் மாளிகை, இலவந்தி வெள்ளிமாடம் முதலிய பெரு மாளிகைகள் இருந்தன. இந்நகர் மலை நாட்டுத் தலைநகராதலால், யானைக்கோடு, அகில், கவரி, மலைத்தேன், சந்தனம், ஏலம், மிளகு முதலிய மலைபடு பொருள்கள் இந்நகரில் எங்கும் மலிந்து காணப்பட்டன. வடமொழிச் சொற்களும் வடவர் புராணக்கதைகளும் சங்க இலக்கியத்தில் மிகக் குறைவு. ஆனால் காப்பியங்களில் அதிகம். சங்ககாலத்திலே திருமணம் பெற்றோரால் செய்துவைக்கப்படவில்லை. காதலர்கட்கு முழு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. பருவம் வந்த ஆணும் பெண்ணும் தத்தமக்குப் பிடித்தவரைத் தாமே கண்டு காதல் கொண்டு களவொழுக்கம் புரிந்து, அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லற வாழ்வில் பேரின்பங்கண்டனர். ஆனால் காப்பிய காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பியகாலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி - கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும் மறையோன் ஆவான். செங்குட்டுவன் போன்ற பெருஞ் செல்வ மக்களுக்கும் உயர்ந்தோருக்கும் நெருங்கிய அறவுரை கூறுகின்ற நண்பனும் அவனே. இரு காப்பியங்களிலும் பெரிதும் பேசப்படுகின்றவர்கள் பெண்களே. இதனால் காப்பியகாலத்திலே பெண்களின் செல்வாக்கு அதிகமாயிற்றோ என எண்ண இடம் உளது. மழைக்காகக் களவேள்வி செய்து கடவுளைப் பரசல் காணப்படுன்றது. சங்ககால மன்னர்களைவிட செங்குட்டுவற்கு பிற நாட்டு மன்னர் தொடர்பு அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் தமிழன் செல்வாக்கு காப்பிய காலத்திலே வேங்கடத்தையுங் கடந்து சென்றுளது என அறியலாம். காப்பிய காலத்தில் மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த னர். தமிழ்நாட்டு மனையறம் மாண்புடன் விளங்கியது. மகளிர் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களை ஆர்வமுடன் அயராது செய்தனர். ஆண்டுதோறும் இந்திரவிழா, பங்குனி வில் விழா, வேட்டுவர் குரவை முதலிய விழாக்களை மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்தினர். இந்திரவிழா தலைசிறந்த விழாவாகக் கருதப்பட்டது. இவ்விழா காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின்போது மறக்குடி மகளிரும், மறவரும் காவற்பூதத்துப் பலிபீடிகையினை வழிபடுவர். அடுத்து பூதசதுக்கம் போன்ற ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டப்படும். மங்கலக் கொடி, தோரணம், பூரண கும்பம், பொற்பாலிகை முதலியன கொண்டு நகரையும் கோயில்களையும் மக்கள் அழகுசெய்வர். பின்னர் அரசியல் அதிகாரிகளும், படைவீரரும் பிறரும் ஒன்றாய்க் காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து விண்ணவர் தலைவனை விழுநீராட்டி, பாடிப்பரவி மகிழ்வர். இசைப்புலவர்கள் இன்னிசை வழங்க, நாடக மகளிர் நடனமாட, மக்கள் முறையே கேட்டும் கண்டும் மகிழ்வர். இறுதிநாளன்று மக்கள் கடலாடிக் கானற்சோலையில் களிப்புடனிருப்பர். காட்டில் வாழும் வேடுவர் வரிக்கூத்தாடி கொற்றவையைப் பரவுதலும் காப்பியகாலத்தில் இருந்துவந்தது. இடையர்கள் குரவைக் கூத்தாடிக் கண்ணனைப் பரவினர். நிமித்தம் பார்த்தலும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும் வழக்கத்தில் இருந்தன. பூதங்களுக்குப் பலியிட்டு வழிபடும் வழக்கமும் இருந்தது. மக்கள் அரசனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற பிரிவு காப்பிய காலத்திலும் இருந்தது. இவர்கள் உயர்ந்தோராகக் கருதப்பட்டனர். கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், கஞ்சர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், சூதர் எனத் தொழில்புரிவோர் பல்வேறு வகையினராய் விளங்கினர். படைக்கலம் செலுத்துதல், சுதை வேலை, தச்சுவேலை, சங்கறுத்தல், மாலை தொடுத்தல், ஓவியம் எழுதுதல், துணி நெய்தல், செம்பு, வெள்ளி, இரும்பு, பொன் இவற்றால் பொருள்கள் செய்தல் முதலிய முக்கிய தொழில்களை மக்கள் செய்துவந்தனர். “மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவு இல்” எனச் செங்குட்டுவன் கூற்றாக அடிகள் பாடியிருப்பதின் மூலம் அக்காலத்தில் மன்னர்கள் தங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து பணியாற்றினர் எனத் தெரியவருகின்றது. மக்கள் நலமே தம் நலம் எனத் தங்கள் மனதிலே கொண்டு, அவர்கள் அரசியற் சுற்றம், எண்பேராயம், ஐம்பெருங்குழு, நால்வகைப் படை இவற்றின் துணையுடன் நாட்டின் நலம் காத்துவந்தனர். எனவே மக்கள் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்ந்தனர். இருண்ட காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகிய சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில், அதாவது கி. பி. 3, 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றது என்று சொல்லமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் என்னும் ஓர் அரச மரபினர் தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினர். இவர்களைப் போன்றே கி. பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாட்டில் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் என்போர் தலையெடுத்தனர். முத்தமிழ் வளர்த்த முடியுடை மன்னர் மறைந்தனர். நாளுக்கு நாள் தமிழர் வீரம் குன்றியதால் வடவராகிய இராட்டிரகூட, கங்க வேந்தர்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். எனவே இக்காலத்தினைத் தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்று கூறவேண்டும். இக்காலத்தில் ஆண்டவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிவதற்கில்லை. எனினும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இக்காலத்தைக் களப்பிரர் இடையீட்டுக் காலம் என்று அழைப்பர். இக்களப்பிரர் வரலாறு குறித்து ஒன்றும் திட்டமாகக் கூறுவதற்கில்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் களப்பிரர் காளத்தி முதலிய தமிழ்நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர் கூட்டத்தினர் என்று "பல்லவர் வரலாறு’ என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தமிழ் நாட்டினுள் புகுந்து தமிழ் வேந்தர்களை வென்று தமிழகம் முழுவதும் தம் ஆட்சியை நிறுவினர். வேள்விக்குடிச் செப்பேடுகள் இவர்கள் பாண்டியரை வென்று பாண்டிய நாட்டைக்கைப்பற்றி ஆண்டனர் என்றும், அவர்தம் ஆட்சியில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன்செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டது என்றும் கூறுவதால் களப்பிரர் படையெழுச்சி பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணியது என நாம் அறியலாம். இதன் காரணமாகவே மதுரையில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றிருக்கவேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். சுருங்கக் கூறின் களப்பிரர் படையெடுப்பால் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் நாகரிகம் ஆகியவை அடியோடு வீழ்ச்சி அடைந்தன. சோழப்பேரரசு அழிந்தநேரத்தில் வடக்கிலிருந்து களப்பிரரும் பல்லவரும் முறையே தமிழகத்திற்கு வந்தனர். களப்பிரருக்கும் பல்லவருக்குமிடையே அடிக்கடி போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒருசில வரலாற்றறிஞர்கள் இவர்களே பிற்காலத்தில் முத்தரையச் சிற்றரசராகவும் குறுநில மன்னராகவும் விளங்கினர் என்று கூறுவர். இன்று செந்தமிழ்நாட்டில் வாழும் கள்ளர் மரபினர் களப்பிரர் வழிவந்தோராவர் என மற்றுஞ்சிலர் கூறுகின்றனர். இவ்விருண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும், பௌத்தம், சமணம் ஆகிய புறச் சமயங்களும் உயர்வெய்தின; பெருமையுற்றன. எனவே தமிழ்மொழி ஆதரவும் வளர்ச்சியும் இல்லாத - காரணத்தால் தளர்ச்சி அடைந்தது; தழைக்காது போயிற்று. களப்பிரர் பௌத்த சமயத்தைத் தமிழ்நாடெங்கணும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். பௌத்த சமய நூல்கள் பல பாலி மொழியில் எழுதப்பட்டன. இதன் காரணமாய் நம் தாய் மொழி வளர்ச்சி தடையுற்றது. எனினும் இவ்விருண்டகாலத்தினும் பல நீதி நூல்களும் ஏனைய சில நூல்களும் தமிழில் தோன்றின. அவற்றைப் பற்றி இலக்கிய வரலாற்றில் விரிவாகக் காண்போம். பல்லவப் பேரரசு தோற்றம் முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு டாக்டர் V. A. சிமித் கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து அவர்கள் தொண்டை மண்டலத்தை அடைந்தனர் என்றும் எல்லோரும் கருதினர். பல்லவர் தங்கள் முன்னோரின் தொடர்பினைக் கைவிட்டமைக்குக் காரணம் அவர்கள் முற்றிலும் இந்தியப் பண்பாட்டில் முழுகினமையே என்றும் எண்ணினர். இக்காலத்தில்கூட ‘கேம்பிரிட்ச் இந்திய வரலாற்றுச் சுருக்கம்’ என்ற நூலாசிரியர் பல்லவர் அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என எண்ணுகிறார். இதற்குக் காட்டப்படும் காரணங்கள் பின் வருமாறு;- ‘பார்த்தியன்’ என்ற சொல் காலப்போக்கில் ‘பால்த்தியன்’ எனத் திரிந்து பின் பல்லவன் என உருமாறிற்று. புராணங்களிலே சாகர்கள், யவனர்கள் ஆகிய அயலவரோடு பல்லவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கட்கிடையே உறவு முறையும் கற்பிக்கப்பட்டுள்ளது. கிர்னார் (Girnar) கல்வெட்டிலே, உருத்திரதாமன் என்பவன் பல்லவர் தளபதியாகிய சுவிசாகன் என்பவனைக் குறித்துள்ளான், பலசாரி என்ற ஆந்திரப் பேரரசி ஒரு கல்வெட்டிலே, பல்லவரும், சாகரும் தன் மகனாகிய கௌதமபுத்திர சதகர்ணியால் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறியிருக்கிறாள். மேலே குறிக்கப்பட்ட குறிப்புகள் மூலம், பல்லவர் சதகர்ணியிடம் தோற்ற பின்பு தொண்டை மண்டலத்திற் குடியேறித் தொடக்கத்தில் ஆந்திரப் பேரரசின் சார்பாளராக (பிரதிநிதி) இருந்திருக்க வேண்டும் என்றும், பின்பு ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலை அவர்கள் காஞ்சியில் முடிசூடி கி. பி. 250-இல் விடுதலைப் பண் பாடியிருக்க வேண்டும் என்றும் வாதிக்கப்படுகின்றது. டாக்டர் கிருட்டிணசாமி அய்யங்கார் போன்ற இந்தியப் பேராசிரியர்கள் பலர் பல்லவர் இந்த நாட்டினரே என எண்ணுகின்றனர். மொழிநூல் விதிப்படி பார்த்தியன் என்ற சொல் ஒருக்காலும் பல்லவன் என ஆகமுடியாது; எனவே பல்லவர்கள் இந்திய மக்களே எனக் கருதுகின்றனர் அவர்கள். பல்லவர் என்போர் அசுவத்தாமன் - நாக கன்னிகை ஆகியோரின் வழித் தோன்றல்கள் என்றும், அவர்கள் பாரத்வாச கோத்திரச் சத்திரியர்கள் என்றும், சில பல்லவர்கள் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சில கல்வெட்டுக்கள் அசுவத்தாமனை விடுத்து சிவனைக் குறிக்கின்றன. பிறந்த உடனே பல்லவம் (கொடி) மீது குழந்தையைப் படுக்கவைத்த காரணத்தினாலும், அக்குழந்தையின் வழித்தோன்றல்களாக விளங்கிய காரணத்தினாலும் பல்லவர்க்கு அப்பெயர் ஏற்பட்டதென்று ஒருசிலர் கூறுவர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்’ (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது. ஆனால் அறிஞர்கள் இதனை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. திரு. சீனீவாச அய்யங்கார் பல்லவர் மத்திய இந்தியாவிலுள்ள நாகரோடு தொடர்புடையவர்கள் எனக் கூறியுள்ளார். பல்லவர் தென்னாட்டுக் குறும்பர்களோடு உறவுடையவர் என்பது டாக்டர் சிமித் கூற்று. பல்லவருடைய பிறப்பிடம் தக்காணம்; அவர்கள் ‘பஹ்லவர்’ எனப்படுவர் என்பது சி. வி. வைத்யா என்பவரின் கருத்து. டாக்டர் கிருட்டிணசாமி கூறுவதாவது:- தமிழ்ச் சொல்லாகிய தொண்டை என்பதற்கு வடசொல் பல்லவம். எனவே வடமொழியில் பல்லவர் என அழைக்கப்படுபவர்கள் தமிழ்த்தொண்டையர்களே. தொண்டை மண்டலம் அவர்களது சொந்த நாடாக இருந்திருத்தல் வேண்டும். ஈழநாட்டு அறிஞராகிய சி. இராசநாயகம் கூற்று வருமாறு:- தொண்டை மண்டலத்தின் முதல் அரசன் தொண்டைமான் இளந்திரையன். இவன் மணிமேகலையிற் குறிப்பிடப்படுகிறான். தொண்டைமான் இளந்திரையனின் தந்தை சோழன் கிள்ளிவளவன்; தாய் பீலிவளை என்னும் நாககன்னிகை. இவளது சொந்த நாடு ஈழத்திற்கு அருகில் உள்ள மணிபல்லவம். பிறந்தவுடனே தொண்டைமான் இளந்திரையன் தொண்டைக் கொடியினால் சுற்றப்பட்டுக் கடலில் மிதக்கவிடப்பட்டான். கடல் அலைகளினால் அக்குழந்தை சோழ நாட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை வளர்ந்த பின் தொண்டை மண்டலத்திற்கு அரசனானது. எனவே பின்னர் அக்குழந்தையின் பரம்பரையினர் தாய் நாடாகிய மணி பல்லவத்தின் பெயரால் பல்லவர் என அழைக்கப்பட்டனர். ஆனால் மேற்கூறிய கருத்து பல்லவர் தமிழரசரோடு கொண்ட பகைமைக்குக் காரணம் தெரிவிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல; பல்லவர் முதலில் தமிழைவிட வடமொழிக்கும், வடநாட்டுப் பண்பாட்டுக்குமே ஊக்கமும், ஆக்கமும் அளித்தனர். தமிழ்ப் புலவர்களால் சோழ பாண்டியரைப் போல் பல்லவர் அவ்வளவாகப் பாடப்படவில்லை. இதிலிருந்து பல்லவர் தமிழ் நாட்டவர் அல்லர் என்பது போதரும். “இத்தனை இடையூறுகளும், பல்லவர் என்போர் ஒரு குல மக்கள் அல்ல; அவர்கள் ஓர் கலப்பினம்; அஃதாவது நாக பார்ப்பனர் பரம்பரை எனக் கொள்ளின் தீர்ந்துபோகும்” என்று பேராசிரியர்? வ. பொன்னுசாமி பிள்ளை எழுதி உள்ளார். ஆந்திரப் பேரரசின் தென் மாநிலச் சார்பாளர்களாக (Governor)வும், அலுவலராகவும் இருந்த பல்லவர் ஏறத் தாழ கி. பி. 250-ல் ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்றகாலை விடுதலை முழக்கம் செய்து தனியரசு அமைத்தனர். இத்தனியரசின் தலைநகர் காஞ்சி; துறைமுகம் கடல்மல்லை; அரசாங்க இலச்சினை நந்தி. அடுத்து பல்லவப் பேரரசர்களைப் பற்றிப் பார்ப்போம். முற்காலப் பல்லவர்கள் பல்லவர் பரம்பரையினைத் தெளிவாகச் சொல்லுதல் அவ்வளவு எளிதன்று. முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் பெரிதும் பிராகிருத மொழியிலேயே அமைந்துள்ளன. எனவே முற்காலப் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்று அறிஞர் அழைப்பர். மயிதவோலு சாசனம், இரகதகல்லி சாசனம், பிரிட்டிசு மியூசியம் சாசனம் என்ற மூன்றும் முற்காலப் பல்லவரைப்பற்றி விளக்கமாக அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும் இவைகளே தமிழக வரலாற்றைக் குறிக்கும் முதற் சாசனங்களாகும். முற்காலப் பல்லவருள் முதல்வன் பப்பதேவன். பல்லவர்கள் தமிழிலக்கியங்களில் ‘காடு வெட்டிகள்’ என அழைக்கப்படுகின்றனர். அதனை மெய்ப்பிப்பதுபோல பப்பதேவன் தனது ஆட்சிக் காலத்தில் 100,000 கலப்பைகள் உழவர்கட்கு வழங்கி இருக்கிறான். அவர்கள் காடுவெட்டி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி இருக்கின்றனர். பப்பதேவனுக்குப் பிறகு அவன்றன் மகனான சிவச்கந்தவர்மன் பல்லவ மன்னனானான். பட்டமேறியதும் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான். இவ்வெற்றிக்காக இவன் விசயச்கந்தவர்மன் என அழைக்கப்பட்டான். மயிதவோலு, இரகதகல்லி என்னும் இரு பட்டயங்கள் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. அவை சிவச்கந்தவர்மனால் வெளியிடப்பட்டவை. அந்தப் பட்டயங்களின் மூலம் ‘சிவச்கந்தவர்மன் முற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன்; அவன் அசுவமேத யாகம் செய்தான்; தர்மராசன் என்ற பட்டப் பெயருடையான்; அவன் மௌரியரைப் பின்பற்றி அரசாண்டான்; எனவே அவன்றன் ஆட்சி வட நாட்டு முறையில் அமைந்திருந்தது’ என்ற கருத்துக்களை அறியலாம். சிவச்கந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான். மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவச்கந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை வடநாட்டு மன்னனான சமுத்திரகுப்தன் அவன் நாட்டின் மீது படையெடுத்தான். இடைக்காலப் பல்லவர் விட்டுணுகோபனுக்குப் பின்பு ஆண்ட பல பல்லவ அரசர்களையே இடைக்காலப் பல்லவர் என்று நாம் கூறவேண்டும். வடமொழிச் செப்பேடுகளும், கல்வெட்டுகளுமே இவர்களைப்பற்றி நாம் அறியத் துணை செய்கின்றன. இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்று கூறினாலும் பொருந்தும். இக்காலத்தில்தான் தமிழகத்தில் அந்நியர் படையெடுப்புக்களும், குழப்பங்களும் நிகழ்ந்தன. இடைக்காலப் பல்லவ மன்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். இதிலிருந்து குப்தர் படையெடுப்பினால், பல்லவராட்சி சற்று தளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என அறியலாம். விட்டுணுகோபனுக்குப் பின்வந்த பல்லவரைத் திரு. கோபாலன் பின்வருமாறு தமது நூலில் முறைப்படுத்திக் காட்டியுள்ளார். குமாரவிஷ்ணு, கந்தவர்மன், வீர கூர்ச்சவர்மன், கந்த சிஷ்யன் (இரண்டாவது கந்தவர்மன்), சிம்மவர்மன், இரண்டாவது குமாரவிஷ்ணு, மூன்றாவது கந்தவர்மன், இரண்டாவது சிம்மவர்மன், மூன்றாவது குமார விஷ்ணு, விஷ்ணு கோபவர்மன், மூன்றாவது சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு. இவருள் வீர கூர்ச்சவர்மன் நாக மன்னனான கந்த நாகன் என்பவனது மகளை மணஞ் செய்துகொண்டான். பின்னர் மாமன் துணையுடன் தொண்டை மண்டலத்திலே இழந்த பகுதிகளை மீட்டிக்கொண்டான். வீர கூர்ச்சவர்மனுக்குப் பிறகு இரண்டாம் குமார விஷ்ணு என்பவன் பட்டமேறினான். இவன் வீர கூர்ச்சனின் பேரன்; கந்த சிஷ்யனின் மகன். இவன் காலத்தொடக்கத்தில் காஞ்சி சோழர் கையில் இருந்தது. குமாரவிஷ்ணு சோழரை வென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான். வடமொழியை வளர்த்த இப் பல்லவருக்கும், பிராகிருத மொழியை வளர்த்த பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது பேராசிரியர் துப்ரேயில் கருத்து. வடமொழியை வளர்த்த பல்லவர் காலத்துக்கும், பிராகிருதத்தை வளர்த்த பல்லவர்க்கும் இடையே ஒருவித இடைவெளியும் இல்லை என்பது காலஞ்சென்ற பேராசிரியர் ஈராசடிகள் கருத்து. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராசசிம்மப் பல்லவனுடைய வயலூர்க் கல்வெட்டு பல்லவ மன்னர் பட்டியல் ஒன்றைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் தருகிறது. அதன் மூலம் முதலிரு பல்லவப் பரம்பரையினருக்கு இடையே எந்தவித வேற்றுமையும் இல்லை; இருவரது கோத்திரமும் ஒன்றே; குலமும் ஒன்றே; இந்தக் காலத்தில் தான் பல்லவர்கள் கடம்பரோடும், கங்கரோடும் அடிக்கடி போரிட்டனர் என்ற செய்திகளை அறியமுடிகின்றது. பொற்காலம் - பிற்காலப் பல்லவர் பிற்காலச் சோழர் வரலாற்றிலே பொற்காலம் இராசராசன் காலத்திலிருந்து தொடங்குவது போலவே, பல்லவர் காலத்தின் பொற்காலம் சிம்மவிட்டுணு காலத்திலிருந்து தொடங்குகிறது என்னலாம். சிம்ம விட்டுணு சிம்மவர்மனின் மகனாவான். சிம்மவிட்டுணுவின் காலம் கி. பி. 575-600. இவன் காலத்திலிருந்து பல்லவராட்சி விரிவும், பேரும், சீரும் அடையத் தொடங்கியது. இவன் தனது கல்வெட்டிலும், பட்டயத்திலும், சோழரையும், பாண்டியரையும், சிங்களவரையும், களப்பிரரையும் முறியடித்ததாகக் கூறியுள்ளான். இவன்றன் சமயம் வைணவம். இவன், இவன்றன் இரு மனைவியர் ஆகிய மூவரது உருவச்சிலைகளும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இவனது காலத்தில் வடமொழி நாடக ஆசிரியர் பாரவி காஞ்சிக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. மகேந்திரவர்மன் மகேந்திரவர்மன் சிம்மவிட்டுணுவின் மகன்; கி. பி. 600 லிருந்து 630 வரை ஆண்டிருக்கிறான். இவன் காலத்திலிருந்து பல்லவ-சாளுக்கியப் போர் தொடங்கியது. மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி என்பவன் மகேந்திரவர்மனுக்குரிய வடபகுதியைக் கவர்ந்து கொண்டான். எனவே போர் தொடங்கியது. பின்னர் புலிகேசி படையுடன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனைப் பல்லவன் உடனே எதிர்க்கவில்லை; ஒளிந்து கொண்டான். புலிகேசி பல்லவ நாட்டுக்குள் தாராளமாக எதிர்ப்பின்றிச் சென்றான். பின் திரும்பி தன் நாட்டிற்குச் செல்லும்பொழுது அவனைப் புள்ளலூர் என்ற இடத்தில் வைத்துப் பல்லவன் முறியடித்தான். மகேந்திரவர்மன் மன்னன் மட்டுமல்ல; கலைஞனும்கூட. இசை, நாடகம், சிற்பம், ஆகிய கலைகளில் அவன் மிகுந்த தேர்ச்சியடைந்து விளங்கினான். அதுமட்டுமல்ல; அக்கலை வல்ல புலவர் பெருமக்களைப் பெரிதும் போற்றிப் புரந்தும் உள்ளான். வடமொழியில் புலமை மிக்கவன் மகேந்திரவர்மன். இவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வட மொழி நூலை எழுதி உள்ளான். இந்நூல் அக்காலத்தில் நிலவிய புத்தர், கபாலிகர், பாசுபதர் ஆகிய பிற சமயத்தினரைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இவன் காலத்தில் வாழ்ந்தவரே அப்பர் பெருமான். சமண சமயத்திலிருந்து பல்லவனைச் சைவனாக்கிய பெருமை அப்பரையேசாரும். சைவனான மகேந்திரவர்மன் வடஆர்க்காட்டுப் பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமணக் கோவிலை அழித்து சிவன் கோவில் கட்டினான், முதன் முதலில் கற்கோவிலை ஏற்படுத்தியவன் இவனே. வல்லம், செங்கல்பட்டு, தளவனூர், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் சிவன் கோவிலையும் விட்டுணு கோவிலையும் கட்டினான். மண்டபப் பட்டுக்கல்வெட்டு இவன் செங்கல், மரம், உலோகம், சாந்து இன்றிக் கோவில் கட்டுவித்தான் எனக் கூறுகிறது. சித்திரக்காரப் புலி என்னும் பட்டப் பெயரால் மகேந்திரவர்மனின் ஓவியப் புலமை விளங்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியம் இவனால் அமைக்கப்பட்டதே. இவற்றிலிருந்து இவன் இசை, நாடகம் முதலிய கலைகளைப் புரந்தமை நன்கு புலனாகும். சுருங்க உரைப்பின் மகேந்திரவர்மன் சாளுக்கியரை முறியடித்தான் ; சைவத்தை வளர்த்தான் ; கலைகளை ஆதரித்தான் ; கற்கோவில்களைக் கட்டுவித்தான்; வேளாண்மையைப் பெரிதும் விரிவாக்கினான். நரசிம்மவர்மப் பல்லவன் (630-655) இவன் மகேந்திரவர்மப் பல்லவனின் மகன். இவன் இளவரசனாக இருந்தபோது போர் பல செய்திருக்கிறான். மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை இவன் மூன்றிடங்களில் தொடர்ந்து முறியடித்து உள்ளான். அதுமட்டுமல்ல; வாதாபி வரை சாளுக்கியனை விரட்டிச் சென்று அந்நகரை அழித்து வெற்றித்தூண் நிறுவியவனும் இந் நரசிம்மனே. இந்நிகழ்ச்சி கி. பி. 642ல் நடந்தது. அதனால் வாதாபி கொண்டவன் என்ற விருதுப்பெயரும் கொண்டான். இவன் படைத்தளபதி பரஞ்சோதி; இவரே சேக்கிழாரால் சிறுத்தொண்ட நாயனார் எனப் பாராட்டப்பட்டவர். இவர்கால மற்றொரு நாயனார் ஞானசம்பந்தர் ஆவார். நரசிம்மன் நடத்திய போரில் இலங்கை மன்னனான மானவர்மன் உதவினான். மானவர்மன் செய்த இவ்வுதவிக்காக நரசிம்மன் ஒரு கப்பற்படையை அனுப்பி ஈழத்தில் மறுபடியும் மானவர்மன் தனது ஆட்சியை நிலை நாட்டச் செய்தான். மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் இப்படையெழுச்சியைக் குறிப்பிடுகிறது. எனினும் நரசிம்மன் காலத்தில் நெல்லையை ஆண்ட பாண்டிய மன்னனால் இவன் எதிர்க்கப்பட்டனன் எனத் தெரிகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்று சொல்லப்படும் பாண்டியன் நெடுமாறன் ஆவான். ‘தந்தையை ஒப்பர் மக்கள்’ என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே. சீனயாத்திரிகனான யுவான்சுவாங் இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும் அவன் கூறியதாவது:- இங்குள்ள நிலம் வளமும் செழிப்பும் மிக்கது. இங்குள்ள மக்கள் உடலுரமும், கல்விப்பற்றும், உறுதியும் உடையவர்கள். தலை நகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உடையது. இங்கு 100 புத்தப் பள்ளிகள் உள; 1000 புத்தத் துறவிகளும் உளர். வேறு சமயங்களும் உள. அவற்றுள்ளே திகம்பர சமயம் நன்கு வளர்ந்துள்ளது. நரசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றான். பல்லவ மன்னருள் குறைந்த ஆண்டுகள் ஆண்டவன் இவனே. இவன் ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. பரமேசுவரவர்மன் (660-680) பரமேசுவரவர்மன் காலத்தில் மேலைச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்; பல்லவரை உறையூர் வரை விரட்டியடித்தான். வெற்றிக் களிப்பில் திரும்பி வந்துகொண்டிருக்கையில் திடீரெனப் பல்லவன் பாண்டியர் உதவியோடு சாளுக்கியனைத் தாக்கினான். திடீர்த் தாக்குதலுக்கு ஆளாகிய சாளுக்கியப்படை தோற்றோடியது. இப்போர் பெருவளநல்லூரில் நடைபெற்றது. இதன்பின் பரமேசுவரன் நாட்டின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினான். தன் முன்னோரைப் போலவே இவனும் கட்டடக் கலைஞன். எனவே பல கோவில்களைக் கட்டுவித்தான். அவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று காஞ்சிக்கருகிலுள்ள கூரம் கோவில்; மற்றொன்று மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோவில். இராசசிம்மன் (680-700) இரண்டாம் நரசிம்மவர்மனே இராசசிம்மன் ஆவான். இவன் பரமேசுவரனின் மகன். இருபது ஆண்டுகளுக்கு மேல் இவன் அமைதிமிக்க ஆட்சி செலுத்தினான். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவிலையும், மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலையும் கட்டியவன் இவனே. இவன்றன் மனைவியான அரங்கபதிகை என்பவளும் இவன் போலவே கட்டடக் கலையில் பெருவிருப்புள்ளவள். இக்காலத்தில்தான் காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அகம்பிரியா, சங்கரபக்தா, வாத்ய வித்யாதரா என்பன இராச சிம்மனின் விருதுப் பெயர்களாகும், இவன் அவையில்தான் தண்டி என்னும் வடமொழிப் புலவர் வீற்றிருந்தார். இவனுக்குப் பிறகு இவன் மகனான இரண்டாம் பரமேசுவரன் மன்னனானான். இவன் கி. பி. 700லிருந்து 710 வரை ஆட்சி புரிந்தான். ஆனால் 710-ல் திடீரென எந்தவித வாரிசும் இல்லாமல் பரமேசுவரன் இறந்தான். எனவே அதன்பின் குழப்பம் ஏற்பட்டது. பட்டத்திற்குப் பல இளவரசர்கள் போட்டியிட்டனர். சித்திரமாயன் என்பவன் அவர்களுள் ஒருவன். மற்றொருவன் நந்திவர்மன். நந்திவர்மனின் முன்னோன் பீமவர்மன். பீமவர்மன் என்பவன் சிம்மவிட்டுணுவின் தம்பி. இவன் தெலுங்கு நாட்டை ஆண்டவன். நந்திவர்மன் தனது தந்தையாகிய இரணியவர்மன் உதவியுடன் பல்லவ நாட்டின் மன்னனானான். அக்காலை இவன் பல்லவமல்லன், போத்தரையன் என்னும் பட்டங்களைப் புனைந்துகொண்டான். இவன் அரசனானபொழுது மிகவும் இளைஞனாக இருந்தான். இவன்றன் ஆட்சிக்காலம் கி. பி. 710-775 ஆகும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணப்படும் சிற்பம், அவன் வெளியிட்ட காசக்குடி பட்டயம் இவற்றின் மூலம் நந்திவர்மன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் எனத் தெரிகிறது. மறுபடியும் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். கி.பி. 733 ல் அவன் காஞ்சி மீது படை எடுத்து நந்திவர்மனை ஓட்டி, சித்திரமாயனை மன்னனாக்கினான். வென்ற சாளுக்கியன் காஞ்சிக் கோவில்களுக்குப் பல பரிசுகள் அன்பளிப்பாக அளித்தான். இக்காலை நந்திவர்மன் திடீரெனக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்திபுரம் என்னும் ஊரிலிருந்து வந்து, உதயச்சந்திரன் என்னும் தன் படைத்தலைவன் உதவியுடன் சாளுக்கியனை வென்றான். சாளுக்கியனோடு சேர்ந்த பாண்டிய இராசசிம்மனையும் அடக்கினான். சித்திரமாயன் என்பவன் உதயச்சந்திரனால் கொல்லப்பட்டான். இவையெல்லாம் உதயேந்திரப் பட்டயத்தில் நன்கு விளக்கப்படுகின்றன. இதன் பின்னர் இராட்டிரகூடர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இராட்டிடரகூட மன்னன் தந்திதுர்க்கன் தன் மகளான ரேவாதேவியை நந்திவர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான். உதயச்சந்திரன் பல்லவ மன்னனுக்காகக் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைக் கங்கர் நாடு ஆகியவற்றின் சில பகுதிகளைப் பல்லவ நாட்டோடு சேர்த்தான். நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடி, கொற்றங்குடிப் பட்டயங்கள் இக்காலமக்களின் பண்பாட்டை அறியப் பெரிதும் உதவுகின்றன. அவனுடைய தண்டன் தோட்டப் பட்டயம் அவன் திருமால்மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துகிறது. திருமங்கையாழ்வார் இம்மன்னன் காலத்தவரே. காஞ்சியின் கண் உள்ள முக்தேசுவரர் கோவிலைக் கட்டியவன் இவனே. சிறந்த கல்வியறிவும், அரசியல் அறிவும், படைக்கலப் பயிற்சியும், கலை ஆர்வமும், உதயச்சந்திரன் போன்ற திறமைமிக்க வீரர்களின் துணையும் பெற்று இரண்டாம் நந்திவர்மன் விளங்கியதால், பல்லவப் பெருநாடு பரப்பில் குறையாது, பல் வளங்களும் பெற்று, கலைகளுக்கு உறைவிடமாய் விளங்கியது. தன் ஆட்சிக் காலத்தில் பெரும்பகுதி போர் செய்வதில் கழிந்தாலும் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் கலைகளைப் பெரிதும் போற்றி வளர்த்தான். தந்திவர்மன் (கி. பி. 775-826) நந்திவர்மப் பல்லவ மல்லனின் மகன் தந்திவர்மன் ஆவான். எனவே நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் அரசனானான். தந்திவர்மன் என்பது தந்திவர்மனின் தாய் வழிப் பாட்டனான தந்திதுர்க்கனின் நாமம். தந்திவர்மனின் தாய்வழிப் பாட்டன் இராட்டிரகூடனாக இருந்தபோதிலும், இராட்டிரகூடத்திலிருந்து துருவன், மூன்றாம் கோவிந்தன் என்ற இரு இராட்டிரகூடர்கள் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வந்தனர். சென்னையிலுள்ள திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோவிலில் தந்திவர்மனின் கல்வெட்டு ஒன்றுளது. தந்திவர்மன் தனது இறுதிக் காலத்தில் முதல் வரகுண பாண்டியனிடம் தன்னாட்டின் ஒருபகுதியை இழந்தான். மூன்றாவது நந்திவர்மன் (கி. பி. 826-849) இவன் தந்திவர்மனின் மகன். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் ஒரு போர் தெள்ளாறு எனும் இடத்தில் நடந்தது. அப்போரில் பல்லவனே வெற்றி பெற்றான். எனவே நந்திவர்மன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பட்டான். நந்திக் கலம்பகம் எனும் பிரபந்தம் இந்நந்திவர்மன் மீது பாடப்பட்டதொரு நூலே. காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய இடங்களில் நந்திவர்மன் பெற்ற வெற்றிகளைப்பற்றி இந்நூல் பாராட்டிப் பேசுகின்றது. நந்திவர்மன் ஓர் இராட்டிரகூட மங்கையை மணஞ் செய்துகொண்டான். இவன் சைவத்தை ஆதரித்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இவன் அவைப் புலவராவார். வேலூர்ப் பாளையப்பட்டுப் பட்டயம் ஒன்று நந்திவர்மனைப் பெரிதும் புகழ்கிறது. இவன் மகன் நிருபதுங்கனாவான். இவன் பல்லவ நாட்டை ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆண்டுள்ளான். நிருபதுங்க வர்மனும் பாண்டியரோடு காவிரிக் கரையில் உள்ள அரிசில் என்னும் ஊரில் போரிட வேண்டி இருந்தது. இவன்றன் பாகூர்ப் பட்டயமானது இவனது அமைச்சன் ஒருவன் வட மொழிக்கல்லூரிக்குத் தானம் பல கொடுத்ததாகக் கூறுகிறது. அபராசிதவர்மன் நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர் முடிந்த பிறகு பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டான். இது நடைபெற்ற ஆண்டு கி. பி. 895. அபராசிதவர்மனோடு பல்லவர் பரம்பரை முடிவடைகிறது. அதன் பிறகு பல்லவ மன்னர்கள் முடியிழந்து குறுநில மன்னர்களாகச் சோழர்களின் கீழ் வாழலானார்கள். அப்படி வாழ்ந்தவர்களில் ஒருவனே சயங்கொண்டார் புகழும் கருணாகரத் தொண்டைமான். மற்றொருவன் சேந்த மங்கலம் பெருஞ்சிங்கன் ஆவான். சோழப் பேரரசு அழிவதற்குக் காரணமாயிருந்தவர்களில் இவனும் ஒருவன் ஆவான். ** பல்லவர் ஆட்சி முறை** பைந்தமிழ் நாட்டில் பல்கலைகளும் வளர்த்த பல்லவப் பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பல்லவப் பெருநாடு பல ராட்டிரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ராட்டிரமும் பல விடயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ராட்டிரம், விடயம் என்பன முறையே மண்டலம், கோட்டம் எனப்படும். ஆனால் தொண்டை ராட்டிரத்தில் (நாட்டில்) கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன. தந்தைக்குப்பின் அரசுகட்டிலில் ஏறும் உரிமை மூத்த மகனுக்குத்தான் உண்டு. அரசன் பிள்ளை இன்றி இறந்தால், மக்களும் மதிஅமைச்சரும் ஒன்றுகூடி அரச மரபைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்து எடுத்து அரசராக்குவர். பல்லவ மன்னர்கள் அனைவரும் தங்கள் வீரச்செயல்களுக்கு ஏற்ப விருதுப் பெயர்களை வைத்துக்கொண்டனர். நந்தி இலச்சினை பல்லவரது அரச இலச்சினையாகும். அமைச்சரும் பலதுறை அரசாங்க அலுவலரும் அரசன் நன்கு ஆட்சிபுரிவதற்குப் பல்வகையானும் உதவினர். உட்படுகருமத் தலைவர், வாயில் கேட்போர், கீழ்வாயில் கேட்போர் போன்ற அரசாங்க அலுவலர் அரசனுக்குத் தூண்போன்றோராவர். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இவை அனைத்தும் பல்லவரிடம் இருந்தன. கடற்படை வலிமை மிக்கதாய் விளங்கியது. எனவே பல்லவர் ஈழநாட்டை வெற்றிபெற முடிந்தது. கடல் வணிகத்தையும் வளம்பெறச் செய்தனர். ஊர்தோறும் நீதிமன்றங்கள் திறம்படச் செயலாற்றின. பல்லவர் தலை நகரில் விளங்கிய உயர்நீதிமன்றம் ‘அதிகரணம்’ என்று அழைக்கப்பட்டது. சிற்றூரில் விளங்கிய அறங்கூறவையம் ‘கரணம்’ என்று வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ‘தருமாசனம்’ என்று கூறப்பட்டது. நீதிபதி ’ அதிகாரி’ எனப்பட்டார். பட்டயங்களை எழுதுபவர் ‘காரணிகர்’ என்று கூறப்பட்டார். சங்ககாலத்திலேயே கிராம மன்றங்கள் விளங்கின போதிலும், கிராம ஆட்சிமுறை பல்லவர் காலத்திலேதான் நன்கு வலுப்பெற்றது. இதற்குப் பல பல்லவர் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. கிராம ஆட்சியினை ஊரவையார் திறம்பட நடத்தினர். இவர்களே நிலவரி வசூலித்தனர்; வழக்குகளை விசாரித்து நீதி வழங்கினர்; ஊர் நிலம், தோட்டம், நீர்நிலை, கோவில் இவை சம்பந்தமான பணிகளைக் கண்காணித்து வந்தனர். ஊரவை பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. ஊரவையார் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டனர். நீர் நிலையைக் கவனித்தவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனவும், தோட்டத்தைக் கவனித்தவர் தோட்டவாரியப் பெருமக்கள் எனவும், கோவில் திருப்பணிகளைக் கண்காணித்தவர் அமிர்தகணத்தார் எனவும் அழைக்கப்பட்டனர். பல்லவ மன்னர்கள் சிறந்த சமயப் பற்றுள்ளவர்களாய் விளங்கியதால், அவர்கள் நிலம், சிற்றூர் இவற்றைக் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தனர். இவ்வாறு கொடுக்கப்பட்டது – ‘தேவதானம்’ என வழங்கப்பட்டது. இந் நிலங்களுக்கு வரி இல்லை. சமண பௌத்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்பட்டன. பிராமணர்க்கென்று உண்டான புதிய சிற்றூர்கள், பிரமபுரி, பிரம்ம தேசம், குடி, மங்கலம் என்று பெயரிடப்பட்டன. இவ்வூரவைகள் சபைகள் என அழைக்கப்பட்டன. தென்னை, பனை, பாக்கு பயிரிட்டோர், மரிக்கொழுந்து, குவளை பயிரிட்டோர், கால்நடைகளால் பிழைப்பவர், புரோகிதர், சலவை செய்பவர், ஆடை நெய்பவர், ஆடை விற்பவர், கொல்லர், தரகர், நெய், பதநீர் விற்பவர், ஓடக்காரர் ஆகிய பலவகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி கொடுத்தனர். மக்கள் வரியினைப் பணமாகவோ அன்றிப் பண்டமாகவோ செலுத்தினர். நாட்டிலுள்ள நிலங்கள் அனைத்தும் செம்மையாக அளக்கப்பட்டன. அதன் பின்னரே வரி விதிக்கப்பட்டது. உழவுத்தொழில் உயர்ந்து விளங்கவேண்டும் என்பதற்காக, நாடு செழிக்கவேண்டும் என்பதற்காகப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; ஏரிகள் அமைக்கப்பட்டன. குழி, வேலி என நிலங்கள் அளந்து சொல்லப்பட்டன. உழக்கு, உரி, நாழி, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குருணி, காடி, கலம் என்னும் முகத்தலளவைகளும், நாலுசாண் கோல், பன்னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல் முதலிய நீட்டலளவைகளும் பல்லவர் காலத்தில் வழக்கத்திலிருந்தன. காஞ்சி, கடிகாசலம், பாகூர் இவ்விடங்களில் விளங்கிய கல்லூரிகள் பல்லவர் ஆட்சியில் சிறந்த கல்விக் களஞ்சியங்களாய் விளங்கின. ஆனால் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த பல்லவர் தலை நகராகிய காஞ்சிமாநகர் தொன்றுதொட்டே கல்விக்கு இருப்பிடமாகவும், கற்றோர்க்கு உறைவிடமாகவும் விளங்கியது. இதன் காரணமாகவே அப்பர் பெருமான் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்’ என்றும், அவந்திசுந்தரி கதாசாரம் என்னும் நூலாசிரியர் ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடம் காஞ்சி’ என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அறநெறி ஓம்பிய அறவணவடிகள் இருந்து அருளுபதேசம் செய்த இடம் இக்காஞ்சியே. மேலும் மணிமேகலை சமயக் கணக்கர் பலரைச் சந்தித்த இடமும் இதுவே. இங்கு பல பௌத்தக் கோவில்கள், மடங்கள் இருந்தன. பல்லவர் ஆட்சி சிறப்புற்றிருந்த காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் காஞ்சியிலிருந்துகொண்டு தமிழ் வளர்த்தனர். வேலூர்ப்பாளையம், காசக்குடி கல்வெட்டுக்கள் கடிகை என்னும் வடமொழிக் கல்லூரி ஒன்று காஞ்சியில் இருந்தது என்றும், இராசசிம்ம பல்லவனால் அக்கல்லூரி புதுப்பிக்கப்பட்டது என்றும், அங்கு வேதம், வியாகரணம், மீமாம்சை என்பன கற்றுக் கொடுக்கப்பட்டன என்றும் கூறுகின்றன. காஞ்சிக்கல்லூரியில் கடம்ப வல்லரசை நிறுவிய மயூரசர்மனும், நாளந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தர்மபாலரும் கலைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தனர் எனவும் அறிகின்றோம். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தென்னகம் வந்து சென்ற யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சியில் வடமொழிக் கல்லூரி ஒன்று சிறந்து விளங்கியதென்றும், அதற்கும் நாளந்தாக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும், காஞ்சியில் அதுகால் புத்த சமயக்கல்வி செழித்திருந்த காரணத்தால் இலங்கையிலிருந்து பல பௌத்த முனிவர் இங்கு வந்து கல்வி பயின்று சிறந்த அறிஞராய் விளங்கினர் என்றும் எழுதி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி இன்று இந்தியாவின் ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாய்வைத்து எண்ணப்படுகிறது. இங்குள்ள ஏகாம்பரநாதர் கோவிலும், வரதராசப்பெருமாள் கோவிலும் மிகப் புகழ் வாய்ந்தனவாகும். கடிகாசலம், பாகூர் இவ்விரண்டிடங்களிலும் விளங்கிய வடமொழிக் கல்லூரிகளில் முறையே நான்கு வேதங்களும், பதினான்கு கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் பாகூர் கல்லூரியில் பதினெட்டுவகை வித்தைகளும், மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியனவும் சொல்லித்தரப்பட்டன. பல்லவர் காலத்திலே சைவமும் வைணவமும் நன்கு வளர்க்கப்பட்டன. மகேந்திரன் அரசாட்சியின் தொடக்கத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றபோதிலும், சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர் ஆகியோரின் ஓயாத உழைப்பாலும், அவர் தம் பாக்களின் செல்வாக்காலும் சமணமும் பௌத்தமும் நிலை தடுமாறின. சங்ககாலத்திலே அரும்பிய சைவ வைணவ சமயங்கள் பிற்காலப் பல்லவர் காலத்திலே (கி. பி. 700-900) ஓங்கிய மரங்களாகச் செழித்துச் சீரும் சிறப்பும் கொண்டுவிளங்கின. மன்னன் ஆதரவும், மக்களின் பக்கபலமும் சேரச்சேர, காற்றொடு சேர்ந்த கனலெனச் சைவ வைணவ சமயங்கள் தமிழ்நாடு முழுதும் பரவலாயின. பல்லவ மன்னர்கள் பழைய கோவில்களைப் புதுப்பித்தனர்; புதிய கோவில்களைக் கட்டினர். செங்கற் கோவில்கள் எல்லாம் கருங்கற் கோவில்களாக மாறின. மொட்டை மலைகள் எல்லாம் கோவில்களாக மாற்றப்பட்டன. மலைகளின் சரிவுகளிலே குடைவரைக் கோவில்கள் குடையப்பட்டன. மலைகள் கற்களாக உடைக்கப்பட்டு, அடுக்கப்பட்டுக் கோவில்களாகக் கட்டப்பட்டன. நாட்டுமக்களிடையே சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் வேகமாகப் பரவின. இதனால் - சைவமும் வைணவமும் நன்கு செழித்தன; ஓங்கின. பிற சமயங்கள் வீழ்ந்தன. ** பல்லவர் வளர்த்த கலைகள்** தமிழக வரலாற்றிலே பல்லவர்க்குப் பல பொன்னேடுகளை அளித்தவை அவர்களால் வளர்க்கப்பட்ட கலைகளே. பல்லவர்கள் பல கலைகளையும் வளர்த்தபோதிலும் அவர்களுக்குப் பெருமை அளித்த கலைகள் சிற்பக்கலையும் கட்டடக் கலையுமாம். பல்லவராட்சியில் மண்ணாலும், மரத்தாலும் ஆன கோவில் எல்லாம் கற்கோவில்களாக மாறின. தமிழகத்திலே முதன் முதல் குகைக் கோவில்களும் கற்றளிகளும் ஏற்படுத்திய பெருமை பல்லவர்க்கே உரியது. பல்லவர் காலத்தில் செழிப்படைந்த கலைகள் சிற்பக்கலையும் (Sculpture). கட்டடக்கலையும் (Architecture) ஆம். பல்லவர் காலக் கோவில்கள் இரு வகைப்படும். முழு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோவில்கள்; கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட கற்றளிகள். சிற்பக் கலையை வளர்த்த பல்லவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இராசசிம்மன், அபராசிதவர்மன் என்போராவர். இந்நால்வரும் தனித்தனியே சிற்பக் கலையை வளர்த்தனர். ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிவகையான சிற்பங்களை வகுத்தனர். எனவே பல்லவர் காலச் சிற்பக்கலை நான்கு விதமான முறைகளை உடையது. [] [] கி. பி. 600-630 வரை தொண்டை நாட்டையும் சோழ வள நாட்டையும் ஆட்சி புரிந்த பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மனே கோவில் கட்டிட அமைப்பில் புதியதொரு முறையை உண்டாக்கினான். தென்னாட்டில் முதன் முதலில் கற்கோவில்களைக் கட்டத் தொடங்கிய பெருமை இவனுக்கே உரியது. பெரிய பெரிய கற்பாறைகளைக் குடைந்து, அவற்றுள் தூண்களும், சுவர்களும், முன்மண்டபமும், கருப்பக்கிருகமும் அமைத்து, கற்கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களை அமைத்த வகையைப்பற்றி மகேந்திரனது மண்டகப்பட்டு குகைக்கோவிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது. “செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியன இல்லாமலே மும்மூர்த்திகளுக்கு இக்கோவில் விசித்திர சித்தன் என்னும் பேரரசனால் கட்டப்பட்டது.” இதன் மூலம் விசித்திரசித்தன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மன், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு கோவில் எழுப்பும் பழைய முறையை மாற்றி, கருங்கற் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்களை அமைத்தான் என்பது நன்கு புலனாகும். இவ்வாறு இவன் அமைத்த குகைக் கோவில்கள், மாமண்டூர், தளவனூர், திருச்சி, பல்லாவரம் சீயமங்கலம், சித்தன்னவாசல், வல்லம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மேலைச்சேரி என்னும் இடங்களில் உள. அடுத்து பட்டத்திற்கு வந்த மாமல்லனாகிய நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போன்று சிறந்த கலைஞன் ஆவான். இவன் மலைகளையே கோவில்களாக மாற்றினான். இவனும் இவனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த பரமேசுவரவர்மனும் மகாபலிபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோவில்களையும், இரதக் கோவில்களையும் அமைத்தனர். மேலும் மாமல்லன் காலத்தில் கோவிற் சுவர்களில் பலவகை மிருகங்கள், பூக்கள், கொடிகள் செதுக்கப்பட்டன. எனவே அவை கோவிற்சுவரையே மறக்கச் செய்தன. மாமல்லபுரத்திலுள்ள பாண்டவர் இரதங்கள் நரசிம்மன் அமைத்தவையே. அர்ச்சுனன் தவம், இடையன் பால் கறத்தல் ஆகிய சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துவிடும் தகுதியுடையன. தவம் செய்யும் பூனை, அதன் அருகில் அச்சம் ஏதுமின்றி இருக்கும் சுண்டெலிகள் ஆகியன அமைந்த சிற்பம் பெரிதும் கலை நுணுக்கம் வாய்க்கப்பெற்று மாமல்லனின் கலை விருப்பத்தையும் சிற்பியின் நுண்கலைத்திறனையும் உலகம் உள்ளளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்லவர் துறைமுகமாகிய கடல்மல்லை நரசிம்மவர்மன் காலத்தில் பன்மடங்கு விரிவடைந்தது. தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்பதை நரசிம்மவர்மன் இதற்குச் சூட்டவே அன்றுமுதல் கடல்மல்லை மாமல்லபுரமாயிற்று. இன்று இது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு தமிழகத்தின் சிற்பக் கலையின் சீரிய பண்புகள் அனைத்தையும் காணலாம். திருமங்கை மன்னரால் பாராட்டப்பெற்றுள்ள இப்பதி செங்கற்பட்டிற்குக் கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ளது. கடல் மல்லையில் நாம் காணும் முதல் மண்டபம் மகிடாசுரமர்த்தனியின் குகைக்கோவிலாகும். இம் மண்டபத்தின் முற்புறத்தில் ஆறு தூண்கள் உள்ளன. இதன் உட்பாகம் கற்பாறையைக் குடைந்ததாகிய ஒரு கூடமாக விளங்குகிறது. இதனது நடுச்சுவர் மையத்தில் சிவன் உமையுடன் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு களிக்கலாம். நான்கு கரங்களோடு நந்தியின்மீது பதித்திருக்கின்ற இணையடியோடு இறைவன் விளங்குகின்றான். அயனும் அரியும் கூப்பிய கைய ராய் இறைவனுக்குப் பின்புறம் நிற்கின்றனர். இறைவியின் மடியில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தென்புறச் சுவரில் சிற்பி வெகு அழகாக துர்க்கை அரிமா மீதேறி மகிடாசுரனோடு போர் புரியும் காட்சியினை வெகு அற்புதமாய்ச் செதுக்கி உள்ளான். இங்குள்ள சிற்ப வேலைகள் எல்லாம் சுவர்ச்சிற்பமாக அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் காணும் குறிப்பிடத் தகுந்த மற்றொரு காட்சி ஆயிரம் தலைகளோடு கூடிய ஆதிசேடன் மீது திருமால் அரிதுயில் கொள்வதாகச் செதுக்கி இருப்பதாகும். அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது ‘தருமராச இரதம்’ என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாச்கந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று ஒன்றாய் இணைக்கின்றது. இவற்றிற்கு முன்னால் ஒரே கல்லில் வெட்டிய மதகரி, அரியேறு இவற்றின் சிலையுருவங்கள் விளங்குகின்றன. திரௌபதி இரதத்தின் மூலத்தானத்தில் துர்க்கையின் படிமத்தைக் காணலாம். இச்சிலையின் கீழ் பக்தனொருவன் தன் சிரத்தைத் தானே துணித்துக் கொள்ளும் பாவனையில் ஒரு சிற்பம் உள்ளது. இந்த இரதக்கோவில் சிறு கூரை வீடு போல் காட்சி தருகிறது. நகுல சகாதேவ இரதங்கள் எனக் கூறப்படுபவை முற்றுப் பெறாதவையாகும்; இவ்வொற்றைக் கற்கோவில்கள் இரத வடிவமாக அமைந்திருப்பதால் மக்கள் இவற்றை இரதங்கள் என அழைத்தனர் போலும். மேலும் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்றே நெடுங் காலமாக இவற்றை மக்கள் அழைத்து வருகின்றனர். மகேந்திரன் காலத்து வாழ்ந்த சிற்பியர் தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மரத் தச்சர் காட்டிய சிற்பத் திறமைகளை எல்லாம் கல்லிலே காட்டினர். மகேந்திரன் காலத்துத் தூண்கள் மேலே பொதிகைகளுடன், கீழே சதுரமான பீடங்களுடன், நடுவில் பட்டை தீட்டிய மூலைகளுடன், புறத்திலே மன்னனது விருதுப் பெயர்களுடன் விளங்குகின்றன. போதிகைகளிலும், பீடத்திலும் தாமரைப்பூ செதுக்கப்பட்டுள்ளது. நரசிம்மன் காலத்தில் கட்டிய கோவில்களில் காணும் படிமங்களும், வரிசை வரிசையாக வண்ணமுடன் விளங்கும் அன்னங்களும், சிறு மணிக்கோவை நிரைகளும், பூ வேலைகளும் மிகச் சிறந்து விளங்குகின்றன. இவன் கட்டிய தூண்களின் போதிகைகள் பந்து வடிவாக உருண்டு காணப்படுகின்றன. இதன் மேற்பாகத்தில் வெட்டப்பட்டிருக்கும் பள்ளமான கழுத்து வளையத்தின் மேல் ஒரு சதுரப் பலகையும், அதன்மீது சதுரக் கல்லும், இக்கல்லின்மீது தலைப்பொதிகைப் பலகையும் அமைந்துள்ளன. சிங்கத்தின் முதுகிலே தூண்கள் நிற்கின்ற முறையில் தம்ப பீடங்கள் காணப்படுகின்றன. அடுத்து வடகிழக்கில் முற்றுப் பெறாது காணும் குகைக் கோவிலின் தம்ப பீடங்கள் யானையுருவில் உள்ளன. இதைச் சார்ந்த மிகப் பெரிய பாறையில் சிற்பியர் தங்கள் கைவண்ணம் முழுவதையும் காட்டியுள்ளனர். இங்குதான் தவம் செய்யும் அர்ச்சுனனைக் காணலாம். இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் சொல்லுவர். பகீரதனைச் சுற்றிலும் பல மனித உருவங்களும், பல்வேறு விலங்குகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. குட்டியுடன் கூடிய யானையையும், குரங்குக் குடும்பத்தையும், தவஞ்செய்யும் பூனையையும் பார்ப்பவர் பரவசமுறாமலிருக்க முடியாது. இப்பாறைக்குச் சற்றுத்தள்ளி கண்ணனின் வெண்ணெய்த் திரள் என்று கூறப்படுகின்ற பாறையும், வராக சுவாமி கோவிலும் உள்ளன. இக்கோவிலில் மால் பூதேவியை அசுரரிடமிருந்து மீட்டு வந்த காட்சியை வெகு அழகாகச் சிற்பி படைத்துள்ளான். இறுதியில் நாம் காணவேண்டியது கரைக் கோவிலாகிய தலசயனக் கோவிலாகும். கடலலைகள் வந்து மோதும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் காண்போர் கண்களுக்குச் சிறந்ததொரு விருந்தாகும். இரண்டாம் நரசிம்மனான இராசசிம்மன் அமைத்த கோவில்கள், மகேந்திரன், நரசிம்மன் ஆகியோரின் கோவில்களினின்றும் வேறுபட்டவை. இவன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. சுண்ணம் சேர்க்காமல் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவில் கற்றளி ஆகும். காஞ்சியின்கண் உள்ள கைலாச நாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில், மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் ஆகியன இராசசிம்மனால் அமைக்கப்பட்டன. 1000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட இக்கோவில்கள் இன்றும் நல்ல நிலையில் நம் நாட்டத்தை எல்லாம் கவரும் வகையில் உள்ளன. இராசசிம்மன் அமைத்த கோவிலினின்றும் கலை நுணுக்கத்தில் சிறிது வளர்ந்த அமைப்புடைய கோவிலை அபராசிதவர்மன் அமைத்தான். புதுக்கோட்டையின் அருகில் உள்ள சித்தன்ன வாசல் குகைக் கோவில் இன்றும் பல்லவரின் கலைப்பற்றை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்து வாழ்ந்த சிற்பிகள் மனிதரின் உருவங்களை உள்ளவாறே செதுக்குவதில் தலைசிறந்தோராவர். இவர்கள் செய்த உருவங்கள் மிகவும் பழைமை வாய்ந்தனவாகும். மாமல்லபுரம் வராகப்பெருமாள் கோவிலில் உள்ள சிம்மவிட்டுணுவும் அவனது மனைவியரும் ஆகிய மூவரது உருவச் சிலைகளும், தருமராச இரதத்திலுள்ள நரசிம்மவர்மனது உருவச் சிலையும், அர்ச்சுனன் இரதம் என்னும் கோவிலில் காணும் பல பல்லவ அரசர்களது உருவச்சிலைகளும் இன்றும் அவர்தம் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இதே போன்று கைலாசநாதர் கோவிலிலும், சித்தன்னவாசல் குகைக்கோவிலிலும் காணப்படும் ஓவியங்கள் ஒப்பற்றனவாகும். சித்தன்ன வாசல் குகைக் கோவில் ஓவியம் தமிழ்நாட்டு மிகப் பழைய ஓவியமாகும். சித்தன்னவாசல் என்னும் ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை, இரு நடன மங்கையரின் ஓவியங்களும், தாமரை பூத்து விளங்கும் காதிகா பூமி என்னும் அகழியின் ஓவியமும், மகேந்திரன், இவன் அரசி இவர்களது ஓவியங்களுமாம். கைலாசநாதர் கோவில் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை பெரிதும் சிதைந்தும் அழிந்தும் உள்ளன. பல காலம் மறைந்திருந்த பல்லவர் காலத்து ஓவியங்களை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை பிரெஞ்சு அறிஞர் மூவோதூப்ராய் அவர்களுக்கே உரியது. பல்லவர் காலத்தில் இசைக்கலையும் பெரிதும் போற்றப்பட்டது. பல்லவ மன்னன் மகேந்திரன் சிறந்த இசைக் கலைஞன் ஆவான். இவன் புத்தம் புதிய இசை ஒன்றினைக் கண்டுபிடித்த காரணத்தால் சங்கீர்ணசாதி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மகேந்திரனது குடுமியா மலைச் சாசனம் தமிழ் நாட்டு இசையினைப்பற்றி நன்கு விளக்குகின்றது. இச்சாசனம் வடமொழியில் உள்ளது; பல சுரங்களின் தன்மையை நன்கு எடுத்தியம்புகின்றது. மகேந்திரனது மாமண்டூர் குகைக்கோவில் சாசனம் இம்மன்னன் ‘தட்சண சித்திரம்’ என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் எனக் கூறுகின்றது. இலக்கியம் பல்லவர் காலத்திலே எல்லாக் கலைகளோடு இலக்கியக் கலையும் ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. பல இலக்கியங்களும் இவர்கள் காலத்திலே தோன்றின. ஆனால் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலே தமிழைவிட வடமொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் பல்லவ அரசர்களால் அளிக்கப்பட்டது. வடமொழிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. மகேந்திர மன்னனே வடமொழியில் ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பது நாமறிந்த தொன்றே . தண்டின், பாரவி, திக் நாகர் என்பவர்கள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்ட வடமொழிப் புலவர்கள் ஆவார்கள். பாரவி எழுதிய வடமொழி நூல் ‘கிராதார்ச்சுனீயம்’; தண்டின் எழுதிய வடமொழி நூல் ‘காவ்யாதர்சம்’. திக்நாகர் ’ நியாயப் பிரவேசம்’ என்ற வடமொழி நூலை எழுதினார். இவ்வாறு வடமொழி பல்லவர் காலத்திலே நன்கு வளர்க்கப்பட்டபோதிலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஊறு செய்தமைக்குக் குறிப்புகள் காணோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தேவாரப் பாக்களும், இலக்கியச்சுவை ஒழுகும் நந்திக் கலம்பகமும், பெருந்தேவனார் எழுதிய பாரதமும் பல்லவர் காலத்திலே எழுந்தன. மற்றும் சிவத்தளி வெண்பா, யாப்பு இலக்கண நூல்கள், அணி இலக்கண நூல்கள் சிலவும் பல்லவர் காலத்திலே எழுதப்பட்டன. எனவே இதுவரை கூறியவாற்றால் பல்லவர்காலத்திலே வடமொழி இலக்கியங்கள் பேரளவிலும், தமிழ் இலக்கியங்கள் ஓரளவிலும் வளர்ந்தன என்பது தெளிவாகும். பிற்காலச் சோழர் வரலாறு சோழர் எழுச்சி சங்ககாலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர் வீழ்ச்சி, தலைதூக்கும் சோழர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. கி. பி. 860-இல் முத்தரையரிடமிருந்தோ , பல்லவரிடமிருந்தோ விசயாலயன் தஞ்சையைக் கவர்ந்தான். முத்தரையர் என்பவர் பாண்டியர்க்கு நண்பராவர். இந்நிலையில் பல்லவர்-பாண்டியர் போர் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இதனால் சோழ மன்னனாகிய விசயாலயனுக்கு நன்மையே விளைந்தது. மேலும் சோழப் பேரரசை ஏற்படுத்தவும் இப்போர் பயன்பட்டது. ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே’. கி. பி. 880-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டியன் தோற்றாலும், அதனால் நன்மை அடைந்தது பல்லவன் அல்ல; சோழனே. பாண்டியன் வீழ்ச்சி சோழர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடையை நீக்கியது. முதலாம் ஆதித்தன் (871-907) ஆதித்தன் என்பவன் விசயாலயன் மகன் ஆவான். எனவே ஆதித்தன் தன் தந்தைக்குப் பின் தரணி ஆளத் தொடங்கினான். திருப்புறம்பியப் போரில் இவன் பல்லவனுக்கே உதவி செய்தான். பின்னர் வெற்றியடைந்த பல்லவனிடமிருந்து சில நாடுகளைச் சோழன் பரிசாகப் பெற்றான். திருப்புறம்பியப் போரினால் பாண்டியர்கள் மட்டுமல்ல, பல்லவர்களும் தம் வலி குன்றலானார்கள். இக்காலம் கி. பி. 893 ஆம். பின்னர் தன் வலியை நன்கு பெருக்கிய ஆதித்தன் திடீரெனத் தனியரசு முரசு கொட்டினான். காஞ்சியும் தொண்டை மண்டலமும் சோழன் கரத்தில் தவழலாயின. கொங்கு நாடு சோழன் அடியில் வந்து கிடந்தது. கொங்கு நாட்டு மன்னர்கள் சோழனுக்கு வெற்றிச் சிந்து பாடினர். ஆதித்தனின் 27-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கழுக்குன்றத்தில் காணப்படுகிறது. அதிலிருந்து இவன் சைவன் எனத் தெரிகிறது. இவன் சேரன் தாணுரவியோடு நட்புக்கொண்டான். சேரன் பாண்டிய - சோழர் போரில் சோழருக்குப் பல உதவிகள் புரிந்தான். முதலாம் பராந்தகன் பராந்தகன் என்பவன் ஆதித்த சோழனின் மகனாவான். எனவே பராந்தகன் ஆதித்தனுக்குப் பின்பு சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். நாட்டைப் பெருக்க இவன் தன் தந்தையின் தந்திரத்தையே மேற்கொண்டான். வடக்கே பல்லவர்களையும், பாணரையும், வைதும்பரையும் அடக்கித் தன்னடிப்படுத்தினான். மேற்கே சேரரோடு உறவு கொண்டான். தெற்கே இவன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் இரண்டாம் இராசசிம்மனாவான். பராந்தகன் கி. பி. 910-இல் மதுரையைக் கவர்ந்தான்; “மதுரை கொண்ட சோழன்” எனப் பெயர் கொண்டான். தோற்ற இராசசிம்மன் வாளா இருக்கவில்லை. ஈழ நாட்டுக்கு ஓடினான். ஈழமன்னனைக் கெஞ்சினான். ஈழநாட்டுப்படையோடு சோழனைத் தாக்கினான். போர் வெள்ளூரில் நடைபெற்றது. போரில் பாண்டியன் தோற்றோடினான். இது நடந்த காலம் கி. பி. 915. ஆண்டுகள் ஐந்தோடின. பராந்தகன் பாண்டியனை மதுரையை விட்டே விரட்டினான். அவன் ஈழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். பாண்டியன் ஈழ மன்னனிடம் விட்டுச் சென்ற முடியையும் இந்திரன் ஆரத்தையும் பெறச் சோழன் எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியுற்றான். இச் செய்தியை மகாவமிசமும் இரண்டாம் பிருதிவி பதியின் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன. கங்க அரசனான பிருதிவிபதி என்பான் சோழனுக்கு அடிபணிந்தான். இராசேந்திரன் விடுத்த திருவாலங்காட்டுப் பட்டயங்கள் மூலம் பராந்தகன் தில்லைக் கூத்தன் கோவிற்குப் பொற்கூரை அமைத்தான் என்பதும், அதனால் ‘கோவில் பொன் வேய்ந்த தேவன்’ என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரிய வருகின்றது. உத்தரமேரூர்க் கல்வெட்டு மூலம் சோழப் பேரரசு, பேரரசாகத் திகழ அடிகோலியவனும், சிறந்த ஆட்சிவன்மையுடையவனும் பராந்தகனே என அறியலாம். இவன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரிமுனை வரை பரவி இருந்தது. என்றாலும் பராந்தகன் தன் இறுதிநாளில் மகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வாழ முடியவில்லை. இராட்டிரகூட மன்னனை மூன்றாம் கிருட்டிணன் தொண்டை மண்டலத்தின் மீது படை எடுத்தான். அக்காலத்தில் சோழப்பேரரசின் இளவரசனாக இருந்தவன் இராசாதித்தன் ஆவான். தக்கோலம் என்ற இடத்தில் இராசாதித்தனுக்கும் மூன்றாம் கிருட்டிணனுக்கும் இடையே போர் நடந்தது. இது நடந்த ஆண்டு கி. பி. 949. போரிலே சோழன் கொல்லப்பட்டான். ‘சங்கராம ராகவா’, ‘பண்டித வத்சலா’ என்பன பராந்தகனது விருதுப் பெயர்களாகும். இவன் திருவாவடுதுறை, செந்துறை முதலிய இடங்களில் கோவில்கள் அமைத்தான். மேலும் வீரநாராயண ஏரி, சதுர்வேதி மங்கல ஏரி, சோழ வாரிதி, சோழசிங்கபுரத்தேரி முதலிய பேரேரிகளை வெட்டு வித்தவனும் இவனே. பராந்தக சோழ பரகேசரிக்கும் முதல் இராசராசனுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இருவருக்கும் இடையில் ஆண்ட சோழ மன்னர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து சோழ மன்னர்கள் ஆண்டதாகத் தெரியவருகிறது. மூன்றாம் கிருட்டிணன் காஞ்சியைக் கைப்பற்றிப் பின் தஞ்சைக்கும் கண்ணி வைத்தான். மூன்றாம் கிருட்டிணனை, பராந்தகனின் இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் எதிர்த்து விரட்டி அடித்தான். ஆனால் அச்சோழனால் நீண்ட நாள் ஆள முடியவில்லை. ஏன்? திடீரென அவன் இறந்துவிட்டான். கண்டராதித்த சோழனின் அருமை மனைவியான செம்பியன் மாதேவியார் தன் கணவனின் நினைவுக்காக கோனேரி ராசபுரம் என்ற இடத்திலே ஒரு கோவிலைக் கட்டினார். கண்டராதித்த சோழனின் மகனான உத்தமன் மிகவும் இளம் வயதினனாக இருந்தபடியால் பராந்தகனின் மூன்றாம் மகனான அரிஞ்சயன் மன்னனானான். ஆனால் அரிஞ்சயனும் நெடுநாள் நாட்டை ஆளவில்லை. அரிஞ்சயன் மகனும் இரண்டாவது பராந்தகனுமாகிய சுந்தரசோழன் கி பி. 956 இல் அரியணை ஏறி கி. பி. 973 வரை நாட்டை ஆண்டான். சுந்தர சோழன் இராட்டிரகூடர்களிடமிருந்து காஞ்சியை மீட்டினான். பின்னர் பாண்டிய மன்னனான வீரபாண்டியனோடு போரிட்டு வெற்றி பெற்றான். எனவே மதுராந்தகன் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டான். இப்போரில் சுந்தர சோழனின் மகனான ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைப் பந்தாடினான். ஆதித்த கரிகாலன் தந்தைக்குப்பின் கி. பி. 973 இல் அரியணை ஏறி 980வரை ஆண்டான் என்பது சிலர் கருத்து. சிலர் உத்தம சோழனால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆதித்த கரிகாலன் கொலையுண்டான். யாரால்? சோழ நாட்டு அரசியல் அதிகாரிகள் இருவர், பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரி ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள். இவர்கள் பிற்காலத்தில் இராசராசனால் தண்டிக்கப்பட்டனர். இச்செய்தியைச் சிதம்பரம் தாலுகாவிலுள்ள காட்டுமன்னார் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும். முதல் இராசராசன் (985-1014) சோழப் பேரரசுக்கு அடிப்படைக்கல் நாட்டியவன் விசயாலயன். கட்டிடத்தை எழுப்பியவன் பராந்தகன். அந்தக் கட்டிடத்தின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தவர்களுள் தலை சிறந்தவன் இராசராசன். இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு பேரும் சீரும் பெற்றது. சோழ நாட்டுக் கொடி யாங்கணும் பறந்தது. அவன் படை என்றாலே அகில உலகும் கிடுகிடுத்தது. எனவே எத்திசை சென்றாலும் அவன் வாள் வெற்றி மழையே பொழிந்தது. இராசராச சோழனைப் பெற்ற பெருவயிற்றை உடையவள் வானவன் மாதேவி. அவனைப் பெரு வீரனாக்கியவன் சுந்தர சோழன். இவனே இராசராசனின் தந்தை. தந்தைக்குப் பின்னர் இராசராசன் அரியணை ஏறினான். அரண்மனைக்குள் நடந்து கொண்டிருந்த கசப்பான நடவடிக்கைகளை அடக்கினான்; படையைத் திருத்தினான். “வேளைக்காரர்” என்ற ஒருவகைப் படையை உண்டாக்கினான். கப்பற் படையைச் செப்பனிட்டான்; சேரரோடு போரிட்டான்; சேரர் தம் மரக்கலங்களைக் காந்தளூர்ச் சாலையில் வைத்துச் சிதைத்தான்; சேர மன்னனாகிய பாஸ்கர ரவிவர்மனின் வலிமையைக் குறைத்தான். இராசராசன் இதனோடு நிற்கவில்லை. மறுபடியும் அவனுடைய இருபெருந் தோள்களும் தினவெடுத்தன. தினவெடுக்கும் தோள்களுக்குத் தினையாகப் பாண்டியனை வென்றான். பாண்டியனுக்கு நண்பனாக இருந்த ஈழ மன்னன் சோழனைக் கண்டு தோற்றுக் காற்றெனப் புறமுதுகிட்டுப் பறந்தான். தென்புல முழுவதையும் வென்ற சோழன் வட புலம் நோக்கினான். “பிரித்தலும் பேணிக் கொளலும்” என்ற தேவர் வாக்குப்படி மேலைச் சாளுக்கியரினின்று கீழைச் சாளுக்கியரைப் பிரித்தான்; தன்னோடு சேர்த்துக்கொண்டான்;அடுத்து கீழைச் சாளுக்கிய நாட்டிலே அரசுரிமை பற்றி நடந்த குழப்பங்களைத் தீர்த்தான். விமலாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான். அது மட்டுமா? இராசராசன் தன் மகளான குந்தவையை விமலாதித்தனுக்குத் திருமணம் முடித்து வைத்தான். சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. பின்பு இராசராசன் தக்கணத்தை ஆண்ட சத்தியாசிரயன் என்னும் சாளுக்கியன் மீது போர் தொடுக்கையில் விமலாதித்தன் பேருதவி செய்தான். மணமேடையில் உலவிய சோழன் இராசராசன் அதன் பின்பு பிண மேடையில் உலாவி வரலானான். கங்கபாடியும் மலை நாடும் அவன் காலடியில் விழுந்தன. துங்கபத்திரைப் பேராறு சோழ நாட்டின் வட எல்லையாயிற்று. மாலத் தீவுகள் சோழனைச் சரணடைந்தன. இவ்வாறு நனவெல்லாம் உணர்வாகவும், நரம்பெல்லாம் இரும்பாகவும் வாழ்ந்து வாகை பல சூடிய இராசராசனுக்கு, மும்முடிச் சோழன், சயங்கொண் டான், சிவபாத சேகரன் முதலிய விருதுப் பெயர்கள் ஏற்பட்டன. இராசராசன் சைவப் பற்று மிக்கவன். இவன் சிவ பக்தனேயாயினும் பிறசமயக் காழ்ப்புச் சிறிதும் இல்லாதவன்; எம்மதமும் சம்மதமே என்னும் சமயப் பொறையும் உடையவன். நாகபட்டினம் என்னும் நகரிலே சுமத்திராவின் அரசனான சைலேந்திரன் புத்தப்பள்ளி ஒன்று கட்டிக்கொள்ள இராசராசன் ஒப்புதல் அளித்தான். அதுமட்டுமல்ல; பள்ளிச் சந்தமாகப் பல நிலங்களையும் சோழன் அக்கோவிலுக்கு அளித்தான். இராசராசனுடைய சைவப் பற்றின் திண்மையை இன்று உலகுக்கு அறிவித்துக் கொண்டிருப்பது தஞ்சைப் பிரகதீசுவரர் கோவிலாகும். அதுமட்டுமல்ல; திராவிடச் சிற்பக் கலைக்கு மணி முடியாகவும், உறைவிடமாகவும் விளங்குவதும் அக்கோவிலே. இக்கோவில் கி. பி. 1004-இல் தொடங்கப் பெற்று 1010-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீளம் 793 அடி; இதன் அகலம் 397 அடி. தமிழ் நாட்டுக் கோவில்களில் மிகப் பெரியது இதுவே. இககோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாதது ஒன்றே இக் கோவிலைக் கட்டிய சிற்பிகளின் சீரிய திறமையை உலகுக்கு அறிவிப்பதாகும். எங்கணும் அழகிய சிலைகளையும் வண்ண ஒவியங்களையும் நாம் காணலாம். இக்கோபுரத்திலுள்ள விமானக் கல்லை அமைப்பதற்காக நான்கு மைல் தூரம் சாரம் அமைக்கப்பட்டதாம். அதற்கறி குறியாகச் “சாரப் பள்ளம்” என்ற கிராமம் ஒ ன் று ம் உள்ளது. கோவிலின் உள்ளே திருச்சுற்றில் 63 நாயன் மாரது உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாள் தோறும் தித்திக்கும் தேவாரப் பாடல்கள் அக்கோவி லிற் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இராசராசன் வெற்றி வீரன் மட்டுமல்ல; நாட்டை நல்ல முறையிலே ஆளும் அறிவும் திறனும் உடையவனுவான். இவன் ஆட்சியிலே சோழநாடு மாட்சியோடு விளங்கியது. உலகமே கண்டு மயங்கியது. இராசராசன் முதலில் நிலத்தை அளந்தான்; பின் நிலத்திர்வையை நிர்ணயித்தான்; திறமை மிக்க செயலர்களைக் கொண்ட ஒரு நல்ல அரசாட்சியை நிறுவினன்; பின்னர் ஒவ்வொரு கோட்டங்களிலும் சிறந்த அரசாங்க அதிகாரிகளை நியமித்தான்; அன்ருட வேலைகட்குத் தடை ஏற்படாவண்ணம் அடிக்கடி ஊரவைகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க ஏற்பாடு செய்தான். இராசராசன் தன் காலத்தில் சிறந்த தரைப்படையையும் சீரிய கப்பற்படை யையும் ஏற்படுத்தின்ை. இவற்றின் மூலமே இராசராசன் தென்னுட்டு அரசர்களிலே மிகச் சிறந்த பேரரசன் என்பது தெளிவாம். வரலாற்றுக்கு உயிர்போல விளங்கும் மெய்க் கீர்த்தி என்ற ஒரு பகுதியைக் கல்வெட்டுக்களில் முதன் முதல் தொடங்கியவன் இராசராசனே. இம்மெய்க்கீர்த்தியின் மூலம் அரசனது புகழையும், வரலாற்றையும், அரசியையும், பின் அவன் இயற்பெயரையும் நாம் அறியலாம். இராசிரயன், நித்யவிநோதன் என்பவையும் இராசராசனின் விருதுப் பெயர்களே. இராசேந்திரன் இராசராசனுக்குப் பின்னர் அவன் மகனான இராசேந்திரன் சோழ நாட்டுப் பேரரசனானான். "தந்தையிற் சதமடங்கு தனயன்’ என்னும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக இராசேந்திரன் விளங்கினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் பெருமை கடல்கடந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. தூரகிழக்கு நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல் தென்படுவதற்குக் காரணமாக விளங்கியவன் இராசேந்திரனே. அரியணை ஏறியதும் இராசேந்திரன் தன் படையெடுப்பைத் தொடங்கலானான். சோழப்படை கடலெனத்திரண்டது. ஈழம் நோக்கி விரைந்தது. ஈழத்தரசன் கைதியாகத் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டான். ஈழ நாட்டுக் களஞ்சியமும் சோழரின் தலைநகர்க்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பரசுராமன் கொடுத்த முடி சேரமன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தெற்கே வெற்றிக்கொடி நாட்டிய இராசேந்திரன் தன் எரி விழிகளை வடக்கு நோக்கித் திருப்பினான். அவ்வளவுதான்; சித்தியாசிரயனுக்குப்பின் வந்த முதலாம் சயசிம்மன் தோற்கடிக்கப்பட்டான். இந்தச் சண்டை கி. பி. 1021 இல் முயங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. பின்னர் கலிங்கமும் மகாகோசலமும் பொன்னித் துறைவனின் கழல் பணிந்தன. இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின் நினைவாக உண்டாக்கப்பட்டது. கங்கைகொண்டான் என்ற விருதுப் பெயரும் சோழனுக்கு ஏற்பட்டது. இந்த வடநாட்டு வெற்றிக்குப் பின்னர் சோழப்படை கடல்கடந்து, கடாரம், சீவிசயம் (சாவா) முதலிய தீவுகளை வெல்லச்சென்றது; வென்றது. இது நடந்த காலம் கி. பி. 1025. அக்காலக் கடாரத்தைச் சிலர் இக்காலக் கெடாவோடும், மற்றும் சிலர் சுமத்திராவோடும் இணைக்கின்றனர். இராசேந்திரனின் 16-ம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயங்கள் இராசேந்திரனின் போர்ச்செயல்களைச் செம்மையாகத் தெரிவிக்கின்றன. இராசேந்திரனால் வெல்லப்பட்ட நாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதில் சில தொல்லைகள் இருந்தபோதிலும், வடநாடும், கிழக்கிந்தியத் தீவுகளும் சோழனால் வெல்லப்பட்டன என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை. வங்காளத்திலும், தூரகிழக்கு நாடுகளிலும் தமிழ்க் கலைகளும் தமிழ்ப் பண்பாடும் இன்று தென்படுகின்றனவென்றால் அதற்குக் காரணம் இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்புக்களே. வங்காளத்திலுள்ள சேனைப்பரம்பரை, மிதிலையின்கண் உள்ள கரந்தைப் பரம்பரை, காஞ்சியில் வாழ்கின்ற வடநாட்டுச் சைவக்குருக்கள் பரம்பரை, வங்கத்தில் வாழும் தமிழ்ப் பரம்பரை ஆகிய பரம்பரைகளுக்கு மூலகாரணம் இராசேந்திரனின் வடநாட்டு வெற்றியே. இராசேந்திரன் கி.பி. 1044 வரை ஆண்டான் எனினும் கி. பி. 1018 லேயே தன் மகனான இராசாதிராசனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு ஆட்சித்துறையில் பழக்கலானான். முடிகொண்டான், பண்டிதன், கங்கைகொண்டான், கடாரம்கொண்டான் என்பன இராசேந்திரனின் பட்டப் பெயர்களாகும். தந்தை காலத்தில் ஏற்பட்ட கீழைச்சாளுக்கியர் உறவை இராசேந்திரன் தன் செல்வியான அம்மங்கை தேவியைக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனுக்குக் கொடுத்து மேலும் வளர்த்துக் கொண்டான். அலி மசூதி போன்ற அராபிய எழுத்தாளரின் குறிப்புகள், 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீன எழுத்தாளர்களின் குறிப்புகள் ஆகியவை சோழர்கள் கடல் கடந்து பல நாடுகளை வென்றமைக்குச் சான்று பகருகின்றன. கி. பி. 1033 இல் சோழமன்னன் சீனாவுக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியதாகத் தெரிகிறது. இராசேந்திரனின் கப்பற்படைக்கு அந்தமான், நிக்கோபார் ஆகிய தீவுகள் தப்பிப் பிழைக்க முடியவில்லை. கலிங்க நாடு, கடல் வாணிகத்தில் தமிழ் நாட்டோடு போட்டியிட்டது. எனவே சோழன் கலிங்க நாட்டை வெல்லக் கழிபேராசை கொண்டான். இராசேந்திரனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இடைதுறை நாடு என்பது ரெய்ச்சூராகும் ; மான்யகடகம் என்பது இக்கால மால்காடு என்பதாகும். இராதா என்பது (இலாடம்) தென்மேற்கு வங்காளமாகும். தண்டபுத்தி என்பது பீகார் மாநிலமாகும். இலாட நாட்டு அரசனான இரணசூரன், மகிபாலன், தர்மபாலன் ஆகியோர் முடிமீதுதான் கங்கைநீர் நிரம்பிய குடங்கள் சுமத்திச் சோழநாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. வரலாற்று ஆசிரியர் சிலர் இராசேந்திரனின் இத்தகைய சீரிய வடநாட்டு வெற்றியை வேங்கி நாட்டுத் திக்குவிசயம் என்றும், கங்கை நோக்கிய புண்ணிய யாத்திரை என்றும், கங்கவாடி வெற்றியென்றும் காரணமில்லாது கூறுவர். இராசாதிராசன் இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசாதிராசன் சோழ நாட்டு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் தந்தை காலத்திலேயே சோழ நாட்டு அரசியலிற் பெரும்பங்கு கொண்டு பயிற்சி பெற்றான். இவன் பட்டம் பெற்றதும் ஈழத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடக்கி ஒடுக்கினான். கி. பி. 1044-இல் இவன் ஓர் அசுவமேதயாகம் செய்தான். இராசாதிராசன் செய்த போர்களுள் குறிப்பிடத்தகுந்தது கொப்பத்துப் போராகும். கொப்பத்துப்போர் நடந்த ஆண்டு கி. பி.1053 ஆகும். முதலாம் சோமேசுவரன் என்பவன் துங்கபத்திரைப் பேராற்றின்கண் உள்ள சோழநாட்டு எல்லைப்புறத்து நாடுகளைக் கவரலானான். செய்தியறிந்த சோழன் சிங்கமெனப் பொங்கினான். சோழப்படை விரைந்து வடபுலம் நோக்கிச் சென்றது. சோழப்படையும் சாளுக்கியப் படையும் கொப்பம் என்னும் இடத்திலே கலந்தன. கடலொடு கடல் பொருதுவது போலத் தோன்றியது. போரிலே இராசாதிராசன் உயிர் துறந்தான். ஆனால் உடனே களத்திலேயே அவன்றன் இளவல் இராசேந்திர சோழதேவன் முடிபுனைந்து சோழப்படைக்குத் தலைமை தாங்கி நடத்தினான். வெற்றி அவன் பக்கம் வந்து புகுந்தது. இராசாதிராசன் யானைமேல் இருந்து இறந்தமையால், அவன் “யானைமேல் துஞ்சியதேவன்” என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டான். இரண்டாம் இராசேந்திரன் கொப்பத்தில் நடந்த போர்க்களத்தின் கண்ணே முடிபுனைந்து கொண்ட இராசேந்திரன் கோலாப்பூர் நோக்கிச் சென்றான் ; அங்கே வெற்றித்தூண் நாட்டினான். அது மட்டுமல்ல; கீழைச்சாளுக்கிய மன்னனான இராசேந்திரனுக்குத் தன் மகளான மதுராந்தகியைத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் மூலம் சோழ சாளுக்கிய உறவை மேலும் வலுப்படுத்தினான். இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசமகேந்திரன் சில ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகு கங்கைகொண்ட சோழனின் (முதல் இராசேந்திரன்) கடைசி மகனான வீரராசேந்திரன் சோழ நாட்டு அரசனானான். வீரராசேந்திரன் வீரராசேந்திரன் கி. பி. 1063-லிருந்து 1070 வரை ஆண்டான். பட்டம் பெற்ற பின்பு இவன் ஈழத்தில் தோன்றிய ஒரு கிளர்ச்சியை நசுக்கினான். கி. பி. 1067 இல் கூடல் சங்கமம் என்ற இடத்தில் வைத்து சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். அதனால் ஆகவமல்ல கோலாகலன், வல்லபவல்லபன் என்ற பட்டப் பெயர்கள் அவனுக்கு ஏற்பட்டன. வீரராசேந்திரன் தில்லைச் செல்வனுக்குச் சிவப்பு வைரக்கல் ஒன்று பரிசளித்தான். முதலாம் சோமேசுவரனின் இளவலாகிய விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசைப் பெறு வதற்காகச் சோழன் பெரிதும் உதவி செய்தான். அது மட்டுமல்ல ; அச்சாளுக்கியனுக்குத் தன் மகளையும் கொடுத்தான். இதனால் சோழ நாட்டுக்கு யாதொரு பயனும் இல்லை. வீரராசேந்திரன் கி. பி. 1070 இல் காலமானான். அவனுக்குப் பின்பு அவன் மகனான அதிராசேந்திரன் அரசனானான். ஆனால் இவன் பட்டமேறிய சில நாட்களிலே இறந்தனன். எனவே விசயாலயச் சோழன் பரம்பரை முடிவுற்றது என்னலாம். அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழ - சாளுக்கியப் பரம்பரை சோழ நாட்டை ஆளத் தொடங்கிற்று. அவ்வாறு வந்த பரம்பரையின் முதல் அரசன் முதற் குலோத்துங்கன் ஆவான். சில வரலாற்று ஆசிரியர்கள் குலோத்துங்கன் அதிராசேந்திரனைக் கொன்றே சோழநாட்டு அரசுரிமையைக் கைப்பற்றினான் என்பர். ஆனால் வரலாற்று வல்லுநரான சதாசிவப் பண்டாரத்தார் இக்கூற்றை மறுத்து, அதிராசேந்திரன் சில நாள் சோழநாட்டை ஆண்டான் என்றும், இறுதியில் நோய்வாய்ப்பட்டே இறந்தான் என்றும் தக்க சான்றுகளுடன் நிறுவி உள்ளார். முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் - இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல திசைகளிலிருந்தும் வருகின்ற படையெடுப்புக்களால் பெரிதும் அல்லலுற்றது. வடக்கே காலச்சூரிகள் கர்னன் தலைமையில் வேங்கி மீது படையெடுத்தனர். தெற்கே கி. பி. 1075-இல் ஈழம் தனியரசு முழக்கம் செய்தது. பாண்டியரும் சேரரும் மீண்டும் தலைதூக்கினர். இத்தகைய இக்கட்டான நிலையில் கடல் கடந்த சோழர் குடியேற்ற நாடுகள் சோழமன்னனால் நேரடியாகக் கவனிக்கப் படமுடியவில்லை. குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஓய்சால மன்னனான விட்டுணுவர்த்தனன் கங்க பாடியைக் கவர்ந்து தாலக்காடு கொண்டான் எனப் பெயர் - சூடிக்கொண்டான். சோழப் பேரரசைக் காப்பாற்ற குலோத்துங்கன் இயன்றவரை முயன்றான். இவன் சிங்களவரோடு மண உறவுகொண்டான்; நாகைபட்டினத்திலே புத்தவிகாரம் அமைப்பதற்குக் கடாரத்தரசனோடு ஒத்துழைத்தான். தனது தளபதியாகிய நரலோக வீரன் மூலம் சேர - பாண்டியரின் எழுச்சியை அடக்கினான். நாட்டின் வட எல்லையில் அமைதியை ஏற்படுத்தக் கலிங்க நாட்டின் மீது இரு தடவை படையெடுத்தான். அவற்றிலே முதற்படையெடுப்பில், அஃதாவது கி. பி. 1106-இல் வடகலிங்கம் கைக்கு வந்தது. இரண்டாவது படையெடுப்பில் அஃதாவது கி. பி. 1112-இல் கலிங்கம் முழுவதும் சோழனுக்குச் சொந்தமாயிற்று. இக்கலிங்க வெற்றியையே கலிங்கத்துப்பரணி மூலம் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டதேவர் பாடியுள்ளார். கலிங்க வெற்றிக்கு முக்கிய காரணம் கருணாகரத் தொண்டைமானே. கலிங்க அரசனான அனந்தபத்மன் சோழநாட்டைச் சேர்ந்த இராசசுந்தரியின் மகனாவான். இவன் போரிலே தோற்றோடிவிட்டான்.போரிலே சோழன் வெற்றிபெற்றபோதிலும் கலிங்கநாடு சோழ நாட்டோடு சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. கி. பி. 1118-இல் கலியாணிச் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டைக் கைப்பற்றினான். சோழப் பேரரசின் பரப்பு மிகவும் சுருங்கியது. எனினும் குலோத்துங்கன் இயன்றவரை அச்சுருக்கத்தைத் தடுத்தான். இங்கிலாந்தை ஆண்ட வில்லியம் என்பவனைப் போலக் குலோத்துங்கனும் நாட்டை அளந்து வரி விதித்தான். பின்னர் இவன்காலத்தில் சுங்கவரி நீக்கப்பட்டது. இதனால் இவன் சுங்கந் தவிர்த்த சோழன் என்று புகழப்பட்டான். குலோத்துங்கன் காலத்தில் தமிழும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார், அடியார்க்கு நல்லார், பரணி பாடிய சயங்கொண்டார் ஆகியோர் இவன் காலத்தில் வாழ்ந்தவராவர். குலோத்துங்கன் இராமானுசரை நாட்டைவிட்டு விரட்டினான் என்றும், அதனால்தான் அவர் மைசூரை ஆண்ட பித்திதேவனிடம் அடைக்கலம் புகுந்தார் என்றும் சிலர் கூறுவர். இதற்கு ஆதாரமில்லை. குலோத்துங்கனுக்குப் பின்பு அவன்றன் நான்காவது மகனான் விக்கிரம சோழன் பட்டம் பெற்றான். இவன் சமயப் பொறை மிக்கவன். எனவே இராமானுசர் மைசூரை விடுத்துச் சோழநாடு வருவதை இவன் தடைசெய்யவில்லை. தியாகவிநோதன் எனக் கம்பரால் இராமகதையிற் குறிப்பிடப்பட்டுள்ளவன் இச்சோழனே என்பது சிலர் எண்ணம். தந்தையிழந்த கங்கபாடி, வேங்கி ஆகியவற்றினின்று விக்கிரமன் தன்காலத்தில் சிற்சில பகுதிகளை மீட்டினான். தில்லைக் கூத்தனுக்கு இச்சோழன் பற்பல திருப்பணிகள் செய்தான். இவன் கி. பி. 1118-இலிருந்து 1135 வரை நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்பு ஆண்டவன் இரண்டாம் குலோத்துங்கனாவான். இவன்காலம் 1135-1150. தமிழ் இலக்கியங்களிலே இவன் குமாரகுலோத்துங்கன் என அழைக்கப்படுகிறான். இவன்றன் அவையிலேதான் கம்பரும் ஒட்டக்கூத்தரும் வீற்றிருந்தனர். இம்மன்னனுக்குப் பின்னர் இரண்டாம் இராசராசனும் இரண்டாம் இராசாதிராசனும் கி. பி. 1178 வரை ஆண்டனர். கி. பி. 1160-1117 என்ற இடைக்காலத்திலே பாண்டிய நாட்டிலே உள்நாட்டுப் போர் உண்டாயிற்று. பாண்டிய நாட்டு அரசுரிமை பற்றிப் பராக்கிரமன், குலசேகரன் என்ற இரு பாண்டிய மன்னர்கட்குள் தகராறு கிளம்பிற்று. சோழரும், இலங்கை அரசரும் இதில் தலையிட்டனர். ஈழ மன்னனான இலங்காபுரன் குலசேகரனை ஆதரித்தான். சோழன் பராக்கிரமனை ஆதரித்தான். இலங்காபுரன் சோழ நாட்டு மீது படையெடுத்துச் சென்றான். குலசேகரனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். மூன்றாம் குலோத்துங்கன், ஈழ மன்னன், சேரன், பாண்டியன் ஆகிய மூவரோடும் போரிட்டான். சுந்தரபாண்டிய மாறவர்மன் சோழநாட்டு மீது படையெடுத்தான்; வெற்றிபெற்றான். குலோத்துங்கன் இதன்பின்பு விரைவில் இறந்தபோதிலும், அதற்கு முன்பே பற்பல கோவில்களைக் கட்டிச் சென்றான். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலும், திருப்புவனம் கோவிலும் இவனால் கட்டப்பட்டனவே. இவன்காலத்தில் தான் நன்னூல் எழுதிய பவணந்தியும் வாழ்ந்தார். பிற்காலச் சோழ மன்னர் களுள்ளே இறுதியில் ஆண்ட சோழப்பேரரசன் இம்மூன்றாம் குலோத்துங்கனே. இவனுக்குப்பின் வந்த மூன்றாம் இராசராசன் (1216-46) சேந்தமங்கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கப் பல்லவனால் சிறைசெய்யப்பட்டான். ஒய்சால மன்னனான நரசிங்கனால் தான் பின் இச்சோழன் விடுதலை செய்யப்பட்டான். இது நடந்த காலம் கி. பி. 1244. இதற்குப் பின்பு சோழப்பேரரசு வீழ்ச்சியை நோக்கி விரைந்து ஓடலாயிற்று. சீரங்கத்திற்கருகிலுள்ள கண்ணனூரிலே ஒய்சாலர்கள் தனி நாடு அமைத்துக்கொண்டனர். மூன்றாம் இராசராசனுக்கும், மூன்றாம் இராசேந்திரனுக்கும் இடையே சண்டை மூண்டது. பாண்டியன் இதில் தலையிட்டான். காகத்தீயர்கள் கணபதி, உருத்திரதாமன் என்ற இருவர் தலைமையின்கீழ் தெற்கே தங்கள் பேரரசை விரிவாக்கினர். இவ்வாறு கி. பி. 1275-இல் சோழப்பேரரசு-இராசராசனும் இராசேந்திரனும் கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி வளர்த்த பேரரசு அடியோடு அழிந்தது. இவ்வழிவுக்கு மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின்புவந்த சோழ அரசர்தம் வலிமைக்குறைவும், தென்னகத்தில் ஓய்சாலர்கள், காகத்தீயர்கள் ஆகியோரின் எழுச்சியும், குறுநில மன்னர்களின் தனியரசும், பாண்டிய மன்னர்களின் எழுச்சியும் மூல காரணங்களாகும். அரசுரிமை பற்றிச் சோழ மன்னர்களிடையே எழுந்த போரே சோழப்பேரரசைப் பெரிதும் அரிக்கலாயிற்று. மேலும் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிசெய்து, 1231-இல் சோழனைத் தெள்ளாறு என்னும் இடத்தில் வைத்து வென்று அவனைச் சிறையும் செய்தான். இதே கோப்பெருஞ்சிங்கன் திருச்சிக்கு அருகிலுள்ள பெரம்பலூரில் வைத்து ஓய்சாலர்களைக்கூட முறியடித்து ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும் தன் அதிகாரத்தை ஏற்படுத்தினான். ஓய்சாலரும், காகத்தீயரும் தெற்கே சோழநாட்டை நோக்கித் தமது பேரரசுகளை விரிவாக்கியதும் சோழர் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேற்கூறிய அனைத்தையும் முறியடித்து, கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசை நிறுவினான். ** சோழர் கால ஆட்சி முறை** (சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை ஆளும்திறன் இல்லாது, மனமழிந்து இறந்த எத்தனையோ மன்னர் பரம்பரையை வரலாற்றிலே நாம் காணலாம். ஆனால் சோழ மன்னர்கள் அப்படியல்ல; நாட்டை நன்கு ஆளும் ஆற்றலும் பெற்றிருந்தார்கள். பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலே சோழ நாடு, நாடும் ஏடும் புகழவல்ல சிறந்ததோர் நல்லாட்சியைப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே சோழர் ஆட்சிக் காலத்தை, அதாவது கி. பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 13-ம் நூற்றாண்டின் இறுதி வரையுள்ள 400 ஆண்டு காலத்தை, தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறவேண்டும். அவர்கள் காலத்தில் நிலவியது முடியாட்சியே எனினும், முடியாட்சியின் உயிராக, உணர்வாகக் குடியாட்சியே கோலோச்சியது. இதனாலேயே டாக்டர் கிருட்டிணசாமி, டாக்டர் சிமித் போன்ற வரலாற்று வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சியை வானளாவப் புகழ்ந்துள்ளனர். சோழர் கால ஆட்சி முறையைத் தெள்ளத்தெளிய விளக்கவல்லது உத்தரமேரூர், உக்கல் என்ற இரு பேரூர்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களாகும். சோழ நாடு சோழப் பெருநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள் வள நாடுகளாகவும், வள நாடுகள் நாடுகளாகவும், நாடுகள் கூற்றங்களாகவும், கூற்றங்கள் குறும்புகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. அக்கால மண்டலங்கள் இக்கால மாநிலங்கள் (Provinces); வள நாடுகள் இக்காலப் பெருமாவட்டங்கள் (Division); நாடுகள் - மாவட்டங்கள்; கூற்றம் - வட்டம்; குறும்புகள் - பிர்க்கா என நாம் ஒப்பிடலாம். சோழ நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த மண் டலங்கள் ஒரு காலத்தில் தனி நாடுகளாக விளங்கிப் பின் சோழ மன்னர்களால் வெல்லப்பட்டு சோழ நாட்டோடு இணைக்கப்பட்டனவாகும். இந்த மண்டலங்கள் சோழ நாட்டோடு சேர்க்கப்பட்ட காலத்தில் அந்தந்த மண்டலத்தின் முன்னைய அரசர்களாலும், அரச பரம்பரையினராலும் ஆளப்பட்டுவந்தன. ஆனால் பிற்காலத்தில், அஃதாவது இராசாதிராசன் காலத்தில் சோழமன்னர் பரம்பரையினரே அந்த மண்டல அதிகாரிகளாக ஏற்படுத்தப்பட்டனர். இவ்வித மாற்றத்திற்குக் காரணம், அந்த எல்லைப்புற மண்டலத்தின் பழைய மன்னர்கள் அடிக்கடி தனியரசு பெறக் கிளர்ச்சி செய்தமையேயாகும். கருணாகரத் தொண்டைமான் போன்ற பல்லவக் குறுநில மன்னர்கள் மண்டலத் தலைவர்களாக ஏற்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சோழ மன்னர்களின் பெயர்களே இடப்பட்டன. மண்டல அதிகாரிகளுக்கு உதவியாகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறிவும் அனுபவமும் திறமையுமிக்க அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். கிராம மகாசபை ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. இந்த மகாசபைக்கு ஒவ்வொரு குறும்பும் (வார்டு) ஒவ்வொரு உறுப்பினரைக் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அனுப்பியது. யார் தேர்தலில் நிற்கலாம், யார் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்குரிய தகுதிகளும், தேர்தல் விதிகளும் அக்காலக் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தலில் நிற்போருக்கு இருக்க வேண்டியன :- 1. வரி செலுத்துகின்ற அல்லது வரி விதிக்கப்பட்ட கால் வேலி நிலம். 2. ஒரு சொந்த வீடு. 3. வயது வரம்பு 35-75. 4. மந்திர - பிராமண வேதத்தைக் கற்றுக் கற்பிக்கக் கூடிய ஆற்றல். 5. 1/8 வேலி நிலம்; ஒரு வேதமும், ஒரு பாசியமும் கற்றுக் கற்பிக்கும் ஆற்றல். மேற்கூறிய தகுதிகளோடு மேலும் பெறவேண்டியன :- (1)வேதவிதிப்படி ஒழுகுதல் (2) அறமுறைப்படி ஈட்டிய செல்வம் (3) நற்சிந்தை (4) கடந்த மூன்றாண்டுகளாக யாதொரு குழுவிலும் இல்லாதிருத்தல். தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படாதவர்கள்: - இதற்கு முன்னால் ஏதாயினும் ஒரு குழுவில் இருந்து கணக்குகளை ஒழுங்கான முறையில் ஒப்பிக்காதவர்களும் அவர் தம் உறவினர்களும். பிறன்மனை விழைந்தோர், இழி பெண்டிரைச் சேர்ந்தோர், பஞ்சமா பாதகம் செய்தோர். சாதியினின்றும் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டவர்கள். வாழ்நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டவர்கள். பிற்காலச் சோழர் ஆட்சியில் நடந்த தேர்தல் முறை வரலாற்று வல்லுநர்களைப் பெரிதும் கவர்ந்ததொன்றாகும். தேர்தல் கிரேக்க நாட்டில் நடந்ததை - ஒத்திருந்தது என அவர்கள் கூறுகின்றனர். முதலில் தலைமைக் குருக்கள், கிராமப் பெரியவர்கள் அத்தனை பேரும் தவறாமல் கோவிலில் கூடுவார்கள். ஒரு குடத்தில் தேர்தலுக்கு நிற்போர் பெயர்களைத் தனித்தனியாக எழுதிய ஓலை நறுக்குகள் கிடக்கும். பின்னர் குடம் நன்கு குலுக்கப்படும். களங்கமற்ற பளிங்கு உள்ளமும், உலகமறியாத வயதும் உடைய ஒரு சிறுவனை அழைத்துக் குடத்திலுள்ள ஓலையை எடுக்கச் செய்வர். எடுத்த ஓலையைத் தலைமைக் குருக்கள் வாங்கி அதிலுள்ள பெயரை உரக்கப்படிப்பார். அதுபோல எல்லாக் குருக்களும் படிப்பார்கள். இவ்வாறு படிக்கப்பட்ட பெயருடையவரே கிராமச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இவ்வாறே எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மகாசபையின் பணிகள் ஒவ்வொரு கூற்றத்துக்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. மகாசபைகள் அடிக்கடி அரசாங்க அதிகாரிகளால் மேற்பார்வை இடப்பட்டபோதிலும், கிராமத்தைப் பொறுத்த வரையில் அல்லது அச்சபைக்குட்பட்ட ஊர்களைப் பொறுத்த வரையில் மகாசபை முழு அதிகாரம் செலுத்திவந்தது என்னலாம். கூற்றத்தின்கண் உள்ள ஊர்களும் நிலங்களும் மகாசபைக்குக் கட்டுப்பட்டனவாக விளங்கின. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும், கவனிப்பாரற்ற நிலங்களும் கிராமச் சபைக்கே சொந்தமாயின. அவற்றைப் பிறருக்கு வாரத்துக்கு விட்டுக் கவனிக்க மகாசபைக்கே முழு அதிகாரம் இருந்தது. வாரத்திற்கு எடுத்தோருக்கு விவசாயம் செய்கையில் எந்தவிதத் தீங்கும் ஏற்படாதவாறு கவனிக்கும் பொறுப்பும் மகாசபையைச் சேர்ந்ததாகவே இருந்தது. மேற்கூறிய கடமைகளினின்றோ, பொறுப்புகளினின்றோ தவறிய மகாசபை அதிகாரிகள் பொதுமன்றத்தினால் தண்டிக்கப்பட்டனர். கோவில்களுக்காகவும், பிற அறச்செயல்களுக்காகவும் அளிக்கப்படும் பணத்தையும் நிலத்தையும் ஏற்கவேண்டியது மகாசபையின் கடமைகளுள் ஒன்றாகும். ஏற்ற பணியைச் செவ்வனே செய்யவேண்டியது மகாசபையின் பொறுப்பாகும். இவ்வித அறச்செயல்களைக் கவனிக்க மகாசபை ஆண்டு தோறும் ஒரு குழுவை ஏற்படுத்தியது. மகாசபையின் நடப்புச் செலவுக்காகப் பொது நிலங்களை விற்றதும் உண்டு. இந்தப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்க வரியை மகாசபை செலுத்தியது. மகாசபை கோவிற்குரிய நிலங்கட்கு வரி வாங்கவில்லை. வரி செலுத்தாத நிலங்களை மகாசபையே பறிமுதல் செய்தது. ஒரு சிக்கலைத் தங்களால் தீர்க்க முடியவில்லையானால் மகாசபை அதிகாரிகள் அச்சிக்கலைத் தீர்க்கத் தலைநகரின்கண் உள்ள பெரிய அதிகாரிகளுடைய கருத்தையும் அறவுரைகளையும் வேண்டுதலும் உண்டு. இந்த மகாசபைகள் தங்களுக்கெனப் பல களஞ்சியங்களும் வைத்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு மகாசபையிலும் மூன்று முக்கிய குழுக்கள் இருந்தன. அவையாவன :- (1) ஆட்சிக்குழு (2) குளம் மேற்பார்வையாளர் குழு (3) தோட்டவாரியக்குழு. இவை தவிரப் பிற குழுக்களும் பணியாற்றின. இந்த மகாசபை, வட்டாரத் தலைமை அதிகாரியான சேனாபதியால் அடிக்கடி மேற்பார்வையிடப்பட்டது. சேனாபதியின் வேலை அடிக்கடி தனக்குட்பட்ட மகாசபைகளின் கணக்கையும், வேலைகளையும் கண்காணித்தலே ஆகும். மகாசபைகளின் செலவுக்கு வழி செய்தல் இச்சேனாபதியின் கையிலே தான் இருந்தது. அளவைகள் இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம் (Sripadam) எனப்படும். நிலவரி தானியமாகவோ, பணமாகவோ, தானியமும் பணமுமாகவோ செலுத்தலாம் என்ற முறை அக்காலத்தில் நிலவியது. வரி செலுத்தப்படாத நிலங்கள் மகாசபைக்குச் சொந்தமாகிடும். இவ்வாறு நிலத்தை இழந்தவரும் அவர் உறவினரும் தீண்டத்தகாதவர்களாகச் சமுதாயம் எண்ணியது. வெள்ளம் ஏற்பட்டபோதும், பஞ்சம் ஏற்பட்டபோதும் வரிகள் வாங்கப்படவில்லை. நாணயம், காசு என்று அழைக்கப்பட்டது. காசு என்பது தங்க நாணயமாகும். உழவர்களுக்குக் கடன்களும் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடனுக்குரிய வட்டித்தொகை நெய்யாகவும், எண்ணெய்யாகவும் பிற பொருளாகவும் கொடுக்கப்பட்டது. மகாசபைக்கு முழு உரிமையும், எல்லாவித அதிகாரங்களும் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியலதிகாரிகட்கு அவை உட்பட்டே செயலாற்றி வந்தன. எந்த நேரத்தில் அதிகாரிகள் வந்தபோதிலும் மகாசபைகள் கணக்கு வழக்குகளைக் காண்பித்தேயாக வேண்டும். சில சமயங்களிலே மன்னனே நாட்டைச் சுற்றி வருகையில் மகாசபைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் உண்டு. அக்காலை மகாசபைகளின் தவறுகளை மன்னன் திருத்துதலும், தண்டித்தலும் உண்டு. ஓரமயம் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் சோழன் ஒரு கோவிற்குச் சென்றான். அங்கே கோவிற்குச் செய்யவேண்டிய பூசையும் விழாவும் பிறவும் ஒழுங்காகச் செய்யாமலும், கோவிற்கு வேண்டிய பொருள்கள் மிகவும் குறைந்த முறையில் அளிக்கப்படலும் கண்டு வெதும்பி மகாசபை அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கண்டித்து, அதிலிருந்து கோவிற்காரியங்களைக் குறைவின்றி நடத்துமாறு உத்தரவிட்டுச் சென்றதாகத் திருவல்லம் கல்வெட்டுக் கூறுகிறது. நீதி வழங்குதல் இந்தக் காலத்திற்கூட நன்கு படித்த ஒரு சில அறிஞர்கள், நீதிமன்றங்கள் என்பன வெள்ளைக்காரர்களே கண்டுபிடித்தவை; நாட்டிலே அவர்கள் தான் நீதிநிர்வாகம் முதலில் ஏற்படுத்தியவர்கள் என எண்ணியும், எழுதியும் வருகின்றனர். சோழர்காலக் கல்வெட்டுக்களைப் பார்ப்போருக்கு இக்கருத்து நகைப்பிற்குரியது. இன்று நடைபெறுகின்ற நீதிமன்றங்களைவிட மிகச் சிறந்த முறையிலே அக்காலத்தில், நீதிமன்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. நாகரிக மிக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலே மரண தண்டனை மிகமிகச் சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் நானூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலே மூன்றே மூன்று தடவைகள் தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பழிக்குப் பழி வாங்கல் அக்கால நீதிமுறையன்று. குற்றத்தின் அளவைமட்டும் பார்த்து தண்டனை வழங்கவில்லை. குற்றத்தின் தன்மை, அது செய்யப்பட்ட சூழ்நிலை, செய்தவன் மனநிலை முதலியவற்றையெல்லாம் பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டது. சாவா மூவாப் பேராடுகளும், நந்தாவிளக்குமே பொதுவாகக் குற்றத்திற்கு விதிக்கப்பட்ட அபராதப் பொருள்களாகும். அறியாமற் செய்த கொலைக்குக்குக்கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை . வழக்கை விசாரிக்கும் முழுப்பொறுப்பும், அதிகாரமும் மகாசபைக்கே. மகாசபைக்கு முடியாவிட்டால்தான் மேலதிகாரிகள் அழைக்கப்படுவர். சிலசமயங்களில் ஒரு மகாசபை மற்றொரு மகாசபையின் உதவியை நாடுவதுகூட உண்டு. இதிலிருந்து சோழர் காலத்திலே நீதி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது எனத் தெளிவாகத் தெரிகிறதல்லவா? வரிகள் சோழர் காலத்தில் அரசாங்கத்திற்கு நிலவரி மூலம் தான் அதிகமான வருவாய் வந்தது. தஞ்சை போன்ற வளமான மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு வேலிக்கு 100 கலம் நெல் வரியாகத் தந்தார்கள். மேலும் சோழர் காலத்தில் பல வரிகள் போடப்பட்டபோதிலும், அவையெல்லாம் வெறும் வரிகளாக இருந்தனவே தவிர பணம் தரக்கூடிய வரிகளாக இருக்கவில்லை. தோட்டவாரிய வரி முதலிய பல வரிகள் போடப்பட்டன. உப்பள வரி, காட்டு வரி, சுரங்க வரி போன்ற வரிகள் ஓரளவுக்கு நல்ல வருவாயை அரசுக்குத் தந்தன. கலம், மரக்கால், நாழி, உழக்கு என்பன முகத்தலளவைகள். கழஞ்சு, மஞ்சாடி, காசு என்பன தங்க நிறுவைகளாம். நிலவரி தானியமாகவும் தங்கமாகவும் வாங்கப்பட்டது. சில வகை வரிகள் காசாகவே வாங்கப்பட்டன. தொழில் வரிகூட உண்டு. தட்டார்கள் தட்டார்ப் பட்டம் என்ற வரி செலுத்தினர். வாணியச் செட்டியார்கள் செக்கிறை, நெசவாளர்கள் தரியிறை, குயவர்கள் குசக்காணம், ஆயர்கள் இடைவரி முதலிய வரிகளைச் செலுத்தினர். செலவினம் நீதி நிர்வாகம், படை, கப்பற்படை, சிறந்த அதிகாரிகள் குழு, பொதுநலத்துறை ஆகியவற்றிற்காகச் சோழர் காலத்தில் வருவாயில் பெரும்பங்கு செலவிடப்பட்டது. பல்லவ மன்னர்களைப் போலச் சோழ மன்னர்கள், பெருங்குளங்கள் வெட்டுவதிலும், அணைக்கட்டுகள் கட்டுவதிலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். படை சோழ மன்னர்கள் இமயத்திற் கொடி பொறித்துக் கடாரத்திற் கல் நாட்டி, ஈழ நாட்டிற் கொடிகட்டி, உள் நாட்டில் ஆணை செலுத்தி, வலிவோடும் பொலிவோடும் தங்கள் சோழப் பேரரசை நிறுவிக் கட்டி ஆண்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பெரும்படையே ஆகும். இத்தகைய பெரும்படை தமிழ் நாட்டில் எக்காலத்திலும் இருந்ததில்லை என்றே கூறவேண்டும். நால்வகைப் படையோடு, கைக்கோளப் பெரும்படை, வில் வீரர்களாலான வில்லிகள் படை, அரசனது மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றிய வேளக்காரர் படை, கடற்படை முதலிய படைகளும் நாடெங்கும் இருந்தன. இப்படைகள் வைக்கப்பட்டிருந்த இடம் ‘கடகம்’ (Cantonment) என்று வழங்கப்பட்டது. இப்படைகளின் துணையால்தான் சோழப் பேரரசர்கள் பெரும் பெரும் வெற்றிகளை அடைந்தனர். மேலும் படைவீரர்களுக்குத் துணையாகப் பணியாளர் படையும் சோழர் காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது. இக்காலத்தில், போர்க் காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தார் ஆற்றிவரும் பணிகளையே அப்பணியாளர் படையிலுள்ளோரும் செய்துவந்தனரெனக் கூறலாம். மேலும் போர்க்காலங்களில் படை வீரர் தவிர, பொதுமக்களும் நாட்டைக் காத்தற்பொருட்டுப் போரில் ஈடுபட்டனர். பொதுநலப் பணி சோழர்கள் தங்கள் வருவாயிற் பெரும்பங்கைக் கோவிலுக்கும் வேளாண்மைக்குமே செலவிட்டனர். தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் சோழர்கள் கட்டியதே. இக்காலத்தில் பொது நலத்துறை (P. W. D.) என்ன பணிகளைச் செய்கின்றதோ அதே பணிகளையே அக்காலத்திற் செய்ய ஒரு குழு இருந்தது. சிறு குளம், கோவில், அணைக்கட்டு முதலிய சிறுசிறு வேலைகளைக் கிராம மகாசபைகள் கவனித்துக் கொண்டன. பெரும்பெரும் ஏரிகளும், சாலைகளும், அணைக்கட்டுகளும் கட்டுவதே பொது நலத்துறையின் பணியாகும். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது போன்ற பெரிய ஏரிகள், தஞ்சை- திருவாடி நெடுஞ்சாலை முதலியன சோழர்களால் அமைக்கப்பட்டன. தடிகைபாடி நெடுஞ்சாலை, கோட்டாற்று நெடுஞ்சாலை, வடுகவழி நெடுஞ்சாலை, கீழவழி நெடுஞ்சாலை ஆகியவை சோழர்கள் போட்ட சாலைகளாம். இதுமட்டுமல்ல; நதிகள் மூலம் சோழர் காலத்தில் வாணிகம் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சுருங்க உரைப்பின் சோழர்கால ஆட்சிமுறை மிகச் சிறந்த ஆட்சிமுறையாகும். இன்று நடக்கும் ஆட்சிமுறை அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சிமுறையின் சில கூறுகளை நீக்கியும், அவற்றோடு சில கூறுகளைச் சேர்த்தும் அமைக்கப்பட்ட ஆட்சிமுறையாகும். சோழர்கால ஆட்சிமுறையில் உடல் முடியாட்சி; உயிர் குடியாட்சி என்க. ** சோழர் காலத் தமிழகம்** அரசன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் சோழப் பேரரசர்களே எல்லா வகையானும் தலைசிறந்து விளங்கினர். பல சிறந்த பட்டங்களைப் பெற்று விளங்கினர். சோழ அரசர்கள் சக்ரவர்த்திகள் என்று மக்களாலும் பிற நாட்டவராலும் வழங்கப்பட்டனர். சோழ அரசியர் அவனி முழுதுடையாள், திரைலோக்கிய மாதேவி போன்ற பட்டங்களைக் கொண் டிருந்தனர். அரசன் நாட்டின் தலைவனாக இருந்தபோதிலும் அவன் மக்களைக் கலந்தே நாட்டை ஆண்டான்; பொதுமக்களது கருத்துப்படியே பணிபுரிந்தான். மேலும் அவன் சட்டம் இயற்றுவதோடு அமையாது அச்சட்டத்தின் துணை கொண்டு நாட்டின் நலத்தையும் அமைதியையும் காக்கும் காவலனாகவும் விளங்கினான். ஆட்சி செம்மையுற நடைபெறுவதற்கு ஆற்றல்மிக்க அமைச்சர்களும், ஏனாதி, மராயன் முதலிய அரசியல் அலுவலர்களும் அரசனுக்குப் பெரிதும் உதவினர். மேலும் அவைக்களப் புலவரும், அரசியல் குருவும் அக்காலத்தில் இருந்தனரெனவும், அமைச்சர் போன்றே அவர்களும் அரசனுக்கு அரசியலில் உதவினரெனவும் தெரிகின்றது. சோழப் பேரரசர்கள் யாகம் செய்வதை அடியோடு நிறுத்திவிட்டனர். ஆனால் கோவில்களுக்கும், வறியவர்க்கும், புலவர்களுக்கும் பல தானங்கள் செய்தனர். வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் சோழப் பேரரசர்கள் அவர்களுக்குப் பெருவிருந்தளித்தனர். இத்தகைய அயல் நாட்டுத் தொடர்பால் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. சமுதாயம் சோழர்தம் ஆட்சித் திறமையால் நம் பெட்டகம் இன்பம் கொழிக்கும் எழிற் சோலையாய் விளங்கியது. ஆனால் சாதி சமய வேறுபாடுகள் வேரூன்ற ஆரம்பித்தன. மக்கள் செய்து வந்த தொழில் பரம்பரைக் குலத்தொழிலாக மாற ஆரம்பித்தது. மேலும் இக்காலத்தில்தான் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தமிழ்நாட்டில் தலைகாட்ட ஆரம்பித்தன. வேளாளர் இக்காலத்தில் மிகச் சிறந்து விளங்கினர். அந்தணப் பெருமக்கள் பிறர் கொடுத்த தானத்தைப் பெற்று வாழ்ந்தனர். பெண்டிரும் சொத்தில் பங்கு பெற்றனர். அடிமைகளும் தேவதாசிகளும் நாடெங்கணும் இருந்தனர். விவசாயமும் வாணிகமும் சோழர் காலத் தமிழகம் விவசாயத்தால் வீறுபெற்றும், வாணிகத்தால் வளம் பெற்றும் இலங்கியது. இவ்விரு தொழில்களையும் செய்வோர் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாய், செந்தமிழ் நாட்டில் வாழமுடிந்தது. மக்களில் பெரும்பான்மையோர் விவசாயத் தொழிலிலீடுபட்டு நாட்டை வளப்படுத்தினர். நிலங்கள் தனிப்பட்டோர் உடமைகளாகவும், பொது நிலங்களாகவும் இருந்தன. வெற்றி வீரருக்கும், அந்தணருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம் தேவதான நிலம் என வழங்கப்பட்டது. இக்காலத்தைப்போல் அக்காலத்திலும் மக்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். ‘சோழ நாடு சோறுடைத்து’ ஆதலால் நாடெங்கணும் இலவச உணவு விடுதிகள் மக்களுக்கு உண்டிகொடுத்து உயர் நிலையில் விளங்கின. உழுதொழிலே நாட்டின் உயிர் நாடி என்பதை மன்னர்கள் உணர்ந்ததால் நீர்ப்பாசன வசதி பல செய்துதரப்பட்டன; கால்நடைகள் போற்றி வளர்க்கப்பட்டன. விவசாயத்தைப் போன்றே சோழர் காலத்தில் வாணிகமும் சிறந்து விளங்கியது. தமிழ்நாட்டு வணிகப் பெருமக்கள் நேர்மையோடு வாணிகம் செய்தனர். தவறு செய்தால் கோவிலுக்குத் தீர்வை கட்டினர். கூட்டுமுறையிலும், தனிப்பட்ட முறையிலும் மக்கள் வாணிகம் செய்தனர். அரசியலார் வரிவிதிப்பும், சுங்கமும் அன்று இருந்தன. வாணிகக்குழுக்கள் இன்றுபோல் அன்று வாணிக வளர்ச்சிக்காகப் பாடுபட்டன. பண்டமாற்று முறையே எங்கும் இருந்ததாகத் தெரிகிறது. நல்ல சாலைகள் இருந்தமையால் உள்நாட்டு வாணிகம் உயர்ந்திருந்தது. இதே போன்று கடல் வாணிகமும் தமிழர் செய்தனர். பாரசீகம், சீனா முதலிய நாடுகளோடு நம்மவர் வணிகத் தொடர்புடையோராய் இருந்தனர். உப்பு, ஆடையணிகளும் அக்காலத்தில் சிறந்த வாணிகப் பொருள்களாகக் கருதப்பட்டன. பத்திரம் எழுதிக் கொண்டு செல்வர்கள் பொருள் கடன் கொடுத்தனர். மக்கள் வட்டியுடன் பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சொத்துக்களை விற்பதையும் மாற்றுவதையும் பதிவு செய்ய ‘ஆவணக்களரி’ என்ற அலுவலகம் இருந்தது. சமயம் சோழர் காலத்திலே சைவமும் வைணவமும் தமிழ் நாட்டில் தலை தூக்கி நின்றன. அதேநேரத்தில் பௌத்த சமண சமயங்களும் ஓரளவு வாழ்ந்தன என்று கூறவேண்டும். சோழப் பேரரசர்கள் பழுத்த சைவர்களாக விளங்கிய போதிலும், அவர்களிடம் பிற சமயக் காழ்ப்பு இல்லை. எனவே பிற சமயங்களையும் மக்கள் எவ்வித இடையூறுமின்றி பின்பற்றினர். அரசர்கள் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, பிற மதத்தினரையும் ஆதரித்தது போலவே மக்களும் சமயவெறியின்றி ஒற்றுமையாய் வாழ்ந்தனர். ஆனால் சைவ சமயத்தைச் சேர்ந்த காலமுகர், கபாலிகர், பாசுபதர் என்போர் சமயவெறியுடையவர்களாய் இருந்ததாகத் தெரிகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்மக்களிடையே அரும்பிய சமய உணர்ச்சி சோழர் காலத்தில் பெருவெள்ளமாகப் பரந்து நின்றது. மக்கள் எல்லோரும் மனங்குளிர தோத்திரப் பாமாலைகளைப் பாடியும், அடியவர் வரலாறுகளைப் போற்றியும் தம் மனமெலாம் இறை மணம் கமழ வாழ்ந்தனர். சமய குரவர்கள் புகழ்ந்து பாடப்பெற்ற ஊர்கள் தமிழ்மக்களால் பாடல்பெற்ற தலங்கள் எனக் கொண்டாடப்பட்டன; பூசிக்கப்பெற்றன. சோழப் பேரரசர்கள் இத்தலங்களில் எல்லாம் கற்றளி எடுத்தனர். இவ்வாறே பாண்டியரும் பல கோவில்கள் கட்டினர். மேலும் தமிழக வேந்தர்கள் சமயநெறி போற்றி, அந்நெறியிலே நின்று, சிறந்த முறையில் செந்தமிழ் நாட்டை ஆண்டனர். புதிய கோவில்களைக் கட்டியதோடமையாது, பழைய கோவில்களையும் புதுப்பித்தனர். எனவே தமிழகத்தில் கோவில் வழிபாடு சிறக்கலாயிற்று. புலவர் பெருமக்களும் சமய உணர்ச்சி மிக்குடையவர்களாய் பாடல் பெற்ற தலங்களையும், அங்கு உறைகின்ற தெய்வங்களையும் பற்றிப் பலபடப்பாடிப் பரவினர். சோழர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோவில்கள், மருத்துவக் கூடமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், பசுக்கூடமாகவும் விளங்கின. ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டன. மேலும் சிவன் கோவில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப்பட்டன. சிற்பவேலைகள் அமைந்த மாடங்களிலே கணபதி, பிரமன், நாராயணி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பல்லவர் காலம் வரையில் திருமால், சிவன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் கருவறையும், அதைச் சார்ந்த மண்டபமும் மட்டும் இருந்தன. ஆனால் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அர்த்தமண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோவில் முன்புறத்தில் முகமண்டபம் அமைக்கப்பட்டது. கருவறைக்கு வெளிப்புறத்தில் நாயன்மார், அடியார் உருவங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாய் கருவறையைச் சுற்றிலும் மூன்று பக்கத்திலும் மண்டபங்கள் எழுப்பப்பட்டன. மூலக் கோவிலின் அடிப்புறத்திலும், சுவரிலும் சிற்பவேலைகள் அமையப்பெற்று அவைகள் அழகுடன் விளங்கின. சிவன் கோவிலுக்குள் கணபதி, முருகன் இவர்களுக்குத் தனித்தனியே ஆலயங்களும், பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் போன்ற மண்டபங்களும் அமைக்கப்பட்டன. இவ்வாறே பெருமாள் கோவில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் ஏற்பட்டன. சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை உருவங்களும், கற்பனை உருவங்களும் உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்டன. மேலும் இறைவனது திருவுருவை, நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், ஆடும் (சிவன்) அல்லது கிடந்த (திருமால்) கோலமாகவும் சிற்பிகள் செய்தனர். சோழர் தலைநகர் சோழப் பேரரசின் தலை நகரங்களாகத் தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் விளங்கின. இவற்றுள் கங்கை கொண்ட சோழபுரம் திருச்சி மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கொள்ளிடக் கரையின் வடபுறமுள்ள சாலையில், மனதைக் கவரும் மாடமாளிகைகளும், குவலயம் புகழும் கூடகோபுரங்களும், அழகுமிக்க மணிமாட வீதிகளும், இன்பந்தரும் இளமரக்காக்களும், வளமிக்க வாவிசூழ் சோலைகளும், சுற்றிலும் புறமதில்களும், அரண்களும், அகழ்களும் கொண்டு சோழர் காலத்தில் விளங்கியது. ஆனால் இன்றோ அந்நகர் சிதைந்த நிலையில் சிற்றூராய்க் காணப்படுகின்றது. சுற்றிலும் மண்மேடுகளும், இடிந்த சுவர்களும் அடர்த்தியாக வளர்ந்த செடிகொடிகளும் உள்ளன. இவற்றின் நடுவே கோபுரங்களுடன் கூடிய பாழடைந்த கோவிலொன்று காணப்படும். கோவிலின் முன்புறத்திலுள்ள கோபுரம் இடிந்துள்ளது. இக்கோவிலினுள்ளே முப்பது அடி உயரமுள்ள, நடுவில் இரண்டு பிளவுள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது. இச்சிவலிங்கம் தஞ்சைக் கோவிலிலுள்ள சிவலிங்கத்தை ஒத்திருக்கின்றது. சிதைந்துபோன இச்சீரிய ஊரைப்பற்றிப் பரோலாவின் ‘கசட்டீரில்’ பல செய்திகள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டிய பெருமை முதலாம் , இராசேந்திரனுக்கே உரியது. தென்னாடு முழுவதும் வெற்றி கொண்ட இராசேந்திரன் வடநாடு நோக்கிப் படையெடுத்தான். கங்கை வரைச் சென்று வெற்றிபெற்ற இவன் அதன் அறிகுறியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவி, அதனைத் தன் தலைநகராக்கி அங்கிருந்துகொண்டு ஆட்சி செலுத்தலானான். மேலும் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற கோவிலும் இவனால் இங்குக் கட்டப்பட்டது. அளவில் சிறிய இக்கோவில் தோற்றத்தில் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்தே விளங்கியது. இக்கோவில் 582 அடி நீளமும், 372 அடி அகலமும் கொண்டு 174 அடி உயரமுடைய கோபுரத்துடன் விளங்கியது. மேலும் வெளிப்புற மதிலில் ஆறு கோபுரங்களும், நான்கு மூலைகளிலும் கொத்தளங்களும் இருந்தன. இம்மதிலைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று இருந்ததாகவும் தெரியவருகின்றது. அழிந்துபோன இக்கோவிற் கற்களைப் பிற்காலத்தில் கொள்ளிடத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘லோயர் சொலரூன்’ அணைக்கட்டிற்குப் பயன்படுத்தியதாகப் பரோலா எழுதியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்திற்கருகில் இராசேந்திரனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரி அளவில் பெரியதாக விளங்கியதால் இதைச் சுற்றிலும் இருந்த நிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடில்லாது முதல் தரமான பாய்ச்சல் வசதியுள்ளவையாய் விளங்கின. இவ்வேரியானது 16 மைல் நீளமுள்ள வலிமை மிக்க கரையையும், பல மதகுகளையும் கொண்டிலங்கியது. ஆனால் இன்று இவ்வேரி பயனற்றதாய், காடுஞ்செடியும் மண்டிக் காணப்படுகின்றது. இராசேந்திரனால் நிறுவப்பெற்ற இப்பெருநகர் , அவனுக்குப் பின்னும் தொடர்ந்து சோழர் தலைநகராய் விளங்கிய போதிலும் ஏனோ பிற்காலத்தில் சிதைந்து சிற்றூராய் ஆகிவிட்டது. கங்கைகொண்ட சோழேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது கருவூர்த்தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். இக்கோவில் சிற்பத் திறத்தில் தஞ்சைக் கோவிலைவிட உயர்ந்தது. இதனது விமானம் தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்று மிக அழகாக உள்ளது. இது 100 அடிச் சதுரமாக அமைந்துள்ளது. மேலும் இது ஒன்பது நிலைகளையும், உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தையும் உடையது. இத்தகைய சிறந்த கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனது பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் ஆகும். இறைவனது நாள் வழிபாட்டிற்கும், பிற செலவுகளுக்கும் பல ஊர்கள் இராசேந்திரனாலும் அவனது வழித் தோன்றல்களாலும் இறையிலியாகக் கொடுக்கப்பட்டிருந்தன. சோழப் பேரரசின் தலைசிறந்த தலைநகர் தஞ்சை மாநகரே. பிற்காலச் சோழ அரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி தனது தலைநகராக்கிக் கொண்டான் என்பது நாம் அறிந்ததொன்றே. திருவுடைய நகரமாய் தஞ்சை அன்று விளங்கியது. இன்றும் எஞ்ஞா வளம்படைத்த நஞ்சைசூழ் பதிகளை உடையது தஞ்சை மாவட்டமே. மேலும் இங்குதான் சோழர்தம் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும், இராசராசனது பெருமை, புகழ் இவற்றின் சின்னமாகவும் விளங்கும் இராசராசேச்சுரம் ஈடும் இணையுமின்றி வானளாவ நின்று நிலவி நம் நெஞ்சை எல்லாம் குளிர்விக்கின்றது. இம்மாபெரும் கோவில் திருப்பணியை இராசராசன் தனது ஆட்சியில் 19-ஆம் ஆண்டில் தொடங்கி 23-ஆம் ஆண்டில் முடித்தனன். 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடைய இக்கோவிலின்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் 80 டன் எடையுள்ள கருங்கல் போடப்பட்டுள்ளது. விமானத்தின் மேலுள்ள செப்புக் குடத்தின் நிறை 3083 பலம். இதன் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926 1/2, கழஞ்சு எடையுள்ளது. இக்கோவிலின் வெளிச்சுற்றிலுள்ள நந்தி நம் கண்களுக்கு ஓர் நல்விருந்தாகும். இது ஒரே கல்லில் செய்யப்பட்டது. இதன் உயரம் 12 அடி; நீளம் 191 அடி; அகலம் 84 அடி. இக்கோவிற் சுவர்களில் காணும் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாற்றினை விளக்கும் ஓவியங்கள் உயிரோவியங்களாகும். சோழ மன்னனும், அவன்றன் அரசியல் அதிகாரிகளும், வழித்தோன்றல்களும் இப்பெரிய கோவிலுக்குப் பொன்னும் மணியும் வாரிவாரி வழங்கினர். ஊர்கள் பல இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. எனவே பெருவிழாக்கள் நடந்தன. மக்கள் பக்தி வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். இக்கோவிலைப் பற்றியும் கருவூர்த் தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரமும், தஞ்சையும் தவிர பழையாறை என்ற நகர், பல்லவர்க்குச் சோழர் சிற்றரசராயிருந்த காலத்தில் சோழர் உறைந்த பெருநகராகும். மேலும் பிற்காலச் சோழர் காலத்தில் இந்நகர் இரண்டாவது தலை நகராகவும் விளங்கியது. சோழர் காலக் கல்லூரிகள் எண்ணாயிரம், திருமுக்கூடல், தஞ்சை, குடந்தை, புன்னைவாயில், திருவொற்றியூர் போன்ற இடங்களில் விளங்கிய கல்லூரிகள் கலையையும், கல்வி நலத்தையும் வளர்த்தன. எண்ணாயிரம் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்தது. இவ்வூர்க் கோவிலில் 11-ம் நூற்றாண்டில் வட மொழிக் கல்லூரி ஒன்று சிறந்த நிலையில் விளங்கியது. இக்கல்லூரி மாணவர்கள் அங்கேயே தங்கிப் படித்தனர். இக்கல்லூரி அவ்வூர்ச் சபையாரின் ஆதரவில் நடந்தது. 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பெருமளவு நிலம் இக்கல்லூரிக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததால், கல்வி, உடை, உணவு இவை இலவசமாகவே மாணவர்க்கு அளிக்கப்பட்டன. வேதம், இலக்கணம், வேதாந்தம் முதலியவை இங்கு கற்பிக்கப்பட்டன. தஞ்சைக் கல்லூரியில் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளை மக்கள் பயின்றனர். இக்கல்லூரியை நிறுவியவன் இராசராச சோழன் ஆவான். இக்கல்லூரி தஞ்சைப் பெரிய கோவிலில் சீரும் சிறப்புமாய் நடந்தது. வெளியிடங்களிலிருந்து பல கலைஞர்கள் இக்கல்லூரிக்கு வந்து பணிசெய்தனர். கி. பி. 1062-ல் வீரராசேந்திரதேவன் திருமுக்கூடல் வேங்கடேசப் பெருமாள் கோவிலில் கல்லூரி ஒன்றை நிறுவினான். வேதம், வியாகரணம், சிவாகமம் முதலியன இங்கு சொல்லித்தரப்பட்டன. துறவிகளும் இங்கு மாணவராக இருந்தனர். மாணவர்களுக்கு விடுதி வசதியும், மருத்துவ வசதியும் செய்துதரப்பட்டன. திருவொற்றியூர், புன்னைவாயில் இவ்விடங்களிலிருந்த கல்லூரிகளில் இலக்கணம் படிக்க வாய்ப்பிருந்தது. குடந்தைக் கோவில்களில் விளங்கிய கல்லூரிகள் வடமொழி தென்மொழிக் கல்லூரிகளாக விளங்கின. இவ்வாறு சோழப் பேரரசில் கல்லூரிகள் பல இருந்தமையால் மக்கள் நன்கு கற்று, கல்வியிற் சிறந்தோராய் விளங்கினர்.  பிற்காலப் பாண்டியர் வரலாறு பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகச்தனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அர்த்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுக்கள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக மகாவம்சம் கூறுகிறது. ஒரு பாண்டிய மன்னன் ரோம் நாட்டுக்கு அகச்டசுசீசர் காலத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 300 முதல் 600 வரை ஆண்ட பாண்டியரைப் பற்றி அறிய ஒருவிதச் சான்றும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் களப்பிரர் ஆட்சியே. அதுமட்டுமல்ல; சோழரும் பல்லவரும் தத்தம் ஆட்சிக் காலங்களில் பாண்டியரைத் தலைதூக்கவொட்டாது அடக்கி ஒடுக்கியமையும் ஒரு காரணமாகும். பல்லவரும் பிறரும் எவ்வளவோ அடக்கியும் பாண்டியர்கள் கி. பி. 600-இல் தமக்கென ஒரு தனியரசை ஏற்படுத்திக்கொண்டனர். கி.பி. 600 முதல் 800 வரை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி நாம் அறியப் பெருந்துணை புரிவன பாண்டியன் நெடுஞ்சடையன் வெளியிட்ட வேள்விக்குடிப் பட்டயமும், பிற பாண்டியர் பொறித்த கல்வெட்டுக்களுமாம். கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியன் கடுங்கோனும், மாறவர்மன் அவனி சூளாமணியும் நாடாண்டனர். களப்பிரரை அடக்கி அழித்த பெருமை கடுங்கோன் என்ற பாண்டியனையே சாரும். மாறவர்மனுக்குப் பின்வந்தவன் சேந்தன் நெடுஞ்செழியன் என்பவனாவான். இவன் கி. பி. 645 முதல் 670 வரை நாடுகாவல் புரிந்தான். இவன் நீதி மீது பற்றும், பெருவீரமும் உடையவன். இவனுக்கு வானவன் என்றதோர் பட்டப்பெயரும் உண்டு. அதிலிருந்து இப்பாண்டியன் சேரரையும் வென்று விளங்கியவன் என அறியலாம். சேந்தன் செழியற்குப்பின் அவன் மகனான அரிகேசரி பராங்குச மாறவர்மன் கி. பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இப்பாண்டியன் பரவர்களை அழித்ததாகவும், நெல்லையில் வைத்துப் பல்லவனை வென்றதாகவும் கூறப்படுகிறது. இவனே கூன்பாண்டியனாவான் என்பது சில வரலாற்றாசிரியர்கள் கருத்து. தொடக்கத்தில் இவன் சமணனாக இருந்து பின் சம்பந்தரால் சைவனாக்கப்பட்டான். இவன் மனைவி சோழகுலத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசியாவார். இவன் அமைச்சர் குலச்சிறையார். சைவர்க்கும் சமணர்க்கும் அனல்-புனல் வாதங்கள் நடைபெற்றதும், சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு எரியூட்டியதும், சமணர் 8000 பேர் கழுவேற்றப்பட்டதும் இவன் காலத்தில் நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்றன. இவனுக்குப் பிறகு இவன் மகனான கோச்சடையன் ரணதீரன் பட்டம் பெற்றான். இவன் பெயரால் கோச்சடை என்ற ஊர் மதுரை நகரப் பகுதிகளுள் ஒன்றாக இன்றும் திகழுகிறது. இவன் ஆட்சி நடைபெற்ற காலம் கி. பி. 700 முதல் 740 வரை ஆகும். இவன் செய்த போர்களும், பெற்ற வெற்றிகளும் பலப்பல. மேற்கே இவன் மங்களூர் வரை படையெடுத்துச் சென்றான்; வாதாபியை ஆண்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தனை வென்றான். இவனுக்குப் பின்னர் நாடாண்டவன் முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் என்பவனாம். இவன் கோச்சயைனின் மகனாவான். கி. பி. 740 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். நந்திபுரம் என்ற ஊரிலே நடைபெற்ற பல்லவ பாண்டியப் போரிலே இவன் நந்திவர்மனை வென்று சிறைசெய்தான். இப்போரில் சேரரும் சோழரும் பாண்டியனுக்கு உதவியாகப் போரிட்டனர். இச்சமயத்தில் உதயச்சந்திரன் என்னும் பல்லவத் தளபதி வந்து மாற்றாரைப் புறங்கண்டான். பின்னர் பாண்டியன் மேலைக்கங்கரோடு சேர்ந்துகொண்டு மேலைச்சாளுக்கிய மன்னனான இரண்டாம் கீர்த்திவர்மனைப் புறமுதுகிட்டு ஓடும்படிச் செய்தான். கி. பி. 765-இல் இராசசிம்மன் மகனான சடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் பட்டம் பெற்றான். அதன்பின் ஏறத்தாழ அரை நூற்றாண்டு நெடுஞ்சடையன் நாட்டை ஆண்டான். வேள்விக்குடிப் பட்டயத்தை வெளியிட்டவன் இவனே. கொங்கு நாட்டை வென்று அதனைத் தன்னாட்டோடு இவன் சேர்த்துக்கொண்டான். மேலும் இவன் வேணாட்டு (திருவாங்கூர்) மன்னனையும் வென்றான். இவன் செய்த தானங்கள் கணக்கிலடங்கா. காவிரியின் வடகரையில் உள்ள பெண்ணாகடத்தில் நடந்த பல்லவ - பாண்டியப் போரில் நெடுஞ்சடையன், பல்லவனான காடவர்கோன் கழற்சிங்கனை வென்றான். மதுரைக்கருகில் உள்ள ஆனைமலையில் திருமால் கோவில் கட்டியவர் நெடுஞ்சடைனியன் உத்தர மந்திரியாகிய மதுரகவி என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தின் மூலம் நாம் அறியலாம். நெடுஞ்சடையனுக்குப் பின்னர் அவன் மகன் சீமாறன் சீவல்லபன் கி. பி. 830 முதல் 862 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் காலத்தில் ஈழ நாட்டில் பாண்டியர் பரம்பரையில் வந்தவன்போல மாயா பாண்டியன் என்பவன் ஆண்டுகொண்டிருந்தான் என்றும், அவனுக்கு ஈழ நாட்டுக் குறுநில மன்னர்கள் உதவி செய்தனர் என்றும், இதனை அறிந்த சீமாறன் படையுடன் சென்று அவனை முறியடித்தான் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இச்செப்பேட்டுச் செய்திகளை இலங்கை வரலாறாகிய மகாவம்சமும் வலியுறுத்துகிறது. சேரர்கள் சீமாறனால் தோற்கடிக்கப்பட்டனர். கும்பகோணத்தில் கங்கரும் பல்லவரும் பிற மன்னரும் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது பாண்டியனே. எனினும் சீமாறன் சில இடங்களில் தோல்வியும் அடைந்துள்ளான். சீமாறனை மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் தெள்ளாற்றில் வைத்து வென்றான். மேலும் நந்திவர்மனுக்குப் பின் பட்டமேறிய நிருபதுங்கவர்மனும் அரிசிலாற்றங்கரையில் வைத்துப் பாண்டியனை வென்றான். இத்தனை தோல்விகள் அடைந்த போதிலும் சீமாறன் தளரவில்லை. தனது மகனான இரண்டாம் வரகுண பாண்டியனிடம் முன்னிருந்தபடியே பாண்டியப் பெருநாட்டை ஒப்படைத்தான். இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலும் பல்லவ-பாண்டியப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இப் போரினால் வரகுணன் மிகுந்த துன்பம் அடைந்தான். இவனுடைய ஆட்சி சிறுபுறம்பியப் போரோடு முடிவுற்றது. இப்போர் நடைபெற்ற ஆண்டு கி. பி. 880 என்பதாம். சிறுபுறம்பியம் என்பது குடந்தைக்கருகில் உள்ள ஒரு சிற்றூராகும். இப்போரே பிற்காலச் சோழர் எழுச்சிக்கு விதை ஊன்றிய போராகும். இப்போர் பல்லவ மன்னனான அபராசிதவர்மனுக்கும் வரகுண பாண்டியனுக்கும் நடைபெற்றது. இப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கம் போரிட்டான். இப்போரில் கடுமையான தோல்வி அடைந்தவன் பாண்டியனே. இதுமட்டுமல்ல; ஈழ நாட்டு அரசனும் பாண்டிய நாட்டு மீது படையெடுத்தான். எனவே பாண்டியப் பேரரசு தன் நிலை குன்றியது. வரகுணனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீர நாராயணன் ஆவான். இவன் சேரர் உதவியோடு ஓரளவு தன் நாட்டைக் காக்க முற்பட்டான். ஆனால் இறுதியில் தன் தாய் பிறந்த நாடான சேர நாட்டுக்கே இவன் ஓடும்படி நேரிட்டது. இவனுக்கு அடுத்து அரசனான இவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் பாண்டியப் பேரரசை மீண்டும் வலிமையுடையதாக்கத் தன்னால் இயன்றவரை முயன்றான். எனினும் முடியவில்லை . கி. பி. 916-இல் வெள்ளூரின்கண் நடந்த போரில், பாண்டியனும் அவனுக்கு உதவி செய்த ஈழத்தரசனும், சோழ மன்னன் பராந்தகனால் முறியடிக்கப்பட்டனர். இராசசிம்மன் ஈழ நாட்டுக்கு ஓடி ஒளிந்துகொண்டான். அதன் பின்பு இழந்த பாண்டிய நாட்டைப் பாண்டியனால் மறுபடியும் பெறமுடியவே இல்லை. அவனோடு முதற்பேரரசு ஒழிந்தது. ஆனால் பாண்டிய நாட்டில் சோழராட்சி அமைதியாக நடைபெறமுடியவில்லை. சோழராட்சிக்கு அடிக்கடி பாண்டியர்கள் தொல்லை பல தந்தனர். ஆனால் சோழப்பெருவேந்தன் இராசராசன் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தன்னாட்டோடு சேர்த்துக்கொண்டான்; தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டத்தைச் சூட்டிப் பாண்டிய நாட்டை ஆளுமாறு அனுப்பியும், வைத்தான். சிங்கள மன்னர்கள் சோழரை எதிர்க்குமாறு பாண்டிய நாட்டு இளவரசர்களை அடிக்கடி தூண்டியும், உதவியளித்தும் வந்தனர். கி. பி. 949-ல் நடந்த தக்கோலப் போரில் சோழர் படை சற்றுப் பின்வாங்கவே, வீரபாண்டியன் சற்று ஊக்கத்தோடு நாட்டுரிமைக்காகப் போரிட்டான். ஆனால் போரின் முடிவில் அவன் முறியடிக்கப்பட்டு ஓடி ஒளிந்தான். இதன் பின்னர் முதற் குலோத்துங்கன் காலம் வரையிலும் பாண்டியர் காடுமேடுகளிற் கரந்தே உயிர் வாழ்ந்துவந்தனர். குலோத்துங்க சோழன் தென் கலிங்க நாட்டை வெல்லப் பராந்தக பாண்டியன் உதவினான். முதற்குலோத்துங்கனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் வலிமை குன்றியவராக விளங்கினர். எனவே பாண்டியர்கள் மறுபடியும் ஓயாது கிளர்ச்சிசெய்து தங்கள் நாட்டைப் பெற்றனர். ஆனால் தீ ஊழினால் பாண்டியர்களுக்குள்ளேயே அரசுரிமை பற்றி உள்நாட்டுப் போர் மூண்டது. குலசேகர பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் அரசுரிமை பற்றிப் போரிட்டனர். குலசேகரனைச் சோழரும், பராக்கிரம பாண்டியனைச் சிங்களவரும் ஆதரித்தனர். சிங்களப்படை வருமுன்பே குலசேகரன் சோழர் உதவியுடன் மதுரையைக் கைப்பற்றி, பராக்கிரமனைக் கொன்றுவிட்டான். ஆனால் சிங்களவர் தலைவனான இலங்காபுரன் வந்து குலசேகரனை முறியடித்து, பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். இலங்காபுரன் ஈழஞ்சென்ற சமயம் பார்த்துச் சோழர்கள் வீரபாண்டியனை நாட்டைவிட்டு ஓட்டி, மீண்டும் குலசேகரனை அரசனாக்கினர். இவனுக்குப் பின்னர் பட்டமேறிய இவன் மகனான விக்கிரமபாண்டியனுக்கும் சோழர் பக்கபலமாக இருந்து உதவினர். கி. பி. 1186-இல் மூன்றாங் குலோத்துங்கனால் வீரபாண்டியன் அடியோடு முறியடிக்கப்பட்டான். சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுக்கள் பல 13-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை வென்றான்; தஞ்சையை அழித்தான். எனினும் ஓய்சால மன்னனின் தலையீட்டால் சோழ நாட்டை திருப்பிச் சோழனுக்குத் தந்தான். இவனுக்கடுத்தாற்போல இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம்பெற்றான். இவன் கி. பி. 1238 முதல் 1251 வரை நாட்டை நல்ல முறையில் ஆண்டான். இவன் காலமான பிறகு சடாவர்மன் சுந்தரபாண்டியன் மன்னனானான். பிற்காலப் பாண்டியர்களுள் பெருவீரனாகவும், பேரரசனாகவும் விளங்கியவன் இவனாகும். சடாவர்மன் பெரம்பலூரில் நடந்த போரில் ஓய்சாலரை முறியடித்து, கொப்பத்தின் கண்ணே விளங்கிய அவர்தம் கோட்டையையும் முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஈழமும், சேர நாடும் பாண்டியனின் சுட்டு விரல் கண்டு நடுநடுங்கின. அவன் அடிபணிந்தன. சோழ நாடு பாண்டிய நாடாயிற்று. சுந்தரபாண்டியனின் நண்பனும், தளபதியுமாகிய சடாவர்மன் வீரபாண்டியன் இவனுக்காகக் கொங்குநாட்டினை வென்றான். பின்னர் பாண்டியன் ஈழத்தோடு போரிட்ட போது இவன் பேருதவி புரிந்தான். இந்தப் பேரரசன் காலத்தில்தான் இரண்டாவது பாண்டியப் பேரரசு புகழேணியின் உச்சியில் நின்று நடம் புரிந்தது. காகத்தீய மன்னனான கணபதியும், பல்லவ மன்னனான சேந்தமங்கலம் கோப்பெருஞ்சிங்கனும் இப்பாண்டிய மன்னனால் அடைந்த தொல்லையும் துயரமும் அளவிடற்கரியன. நெல்லூரை ஆண்ட கந்தகோபன் பாண்டியனால் முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். பாண்டியன் நெல்லூரில் வைத்து வீரமுழுக்காடினான். சிதம்பரம், சீரங்கம் ஆகிய இரு ஊரின் கண்ணும் உள்ள கோவில்களை இப்பாண்டியன் புதுக்கி அழகுசெய்தான். அது மட்டுமல்ல; சிதம்பரத்தில் பொன்னம்பலமும் அமைத்தான். இவன்றன் அறச் செயல்கள் இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன. கி. பி. 1275-இல் இவன் காலமாகவே, இவனோடு ஆண்ட மாறவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றான். குலசேகரன் ஈழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அக்காலை ஈழ நாட்டை ஆண்டவன் பராக்கிரமபாகு என்பவனாவான். பாண்டியன் படையெடுத்து வந்தபோது பராக்கிரமபாகு பணியவில்லை. எனவே அவனை வென்று, பற் சின்னத்தை (புத்தர் பல்லுக்குக் கோவில் உண்டு) எடுத்து வந்துவிடவே, பராக்கிரமபாகு ஓடோடியும் வந்து பாண்டியனைப் பணிந்து மீண்டும் அப்பல்லைப் பெற்றுச் சென்றான். குலசேகர பாண்டியன் காலத்தில்தான் வெனீசு நகரத்திலிருந்து மார்க்கபோலோவும், முசுலீம் வரலாற்றாசிரியனான வாசப்பும் பாண்டிய நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்தனர். மேலும் தாங்கள் பார்த்த எல்லாவற்றையும் அவர்கள் எழுதி வைத்தனர். அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் மிகவும் சிறந்தனவாகும். நமது நாட்டின் செல்வ நிலையும், முத்தும் பவளமும் அவர்தம் சிந்தையை வெகுவாகக் கவர்ந்தன. குலசேகரனுக்கு மக்கள் இருவர். ஒருவன் சடாவர்மன் சுந்தரபாண்டியன்; மற்றொருவன் வீரபாண்டியன். வீர பாண்டியன் பட்டத்துக்குரியவனாக இல்லாத போதிலும் அவனையே குலசேகரன் ஆதரித்தான். ஆதலால் சுந்தர பாண்டியன் குலசேகரனைக் கொன்று பாண்டிய நாட்டு அரசைக் கைப்பற்றினான். உடனே உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அந்தப் போரில் சுந்தரபாண்டியன் மதுரை மாநகரிலிருந்து துரத்தப்பட்டான். துரத்தப்பட்ட சுந்தரபாண்டியன், அல்லாவுத்தீனின் தளபதியாகிய மாலிக்காபூரின் உதவியை வேண்டினான். ‘கும்பிடப்போன சாமி குறுக்கே வந்ததைப்போல’ பாண்டியனே வேண்டுகோள் விடுக்கவே மாலிக்காபூர் படையுடன் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான். இராமேசுவரத்தில் ஒரு மசூதியைக் கட்டினான். மதுரையைத் தனது பேரரசின் ஒரு பகுதியாக்கப் போவதாகத் தெரிவித்தான். குசுருகான் என்ற மற்றொரு டெல்லி முசுலீம் தளபதி கி. பி. 1318- இல் மதுரையைத் தவிடு பொடியாக்கினான். பாண்டியராட்சி அடியற்ற மரமாயிற்று. இந்தச் சமயம் பார்த்துத் திருவாங்கூரை ஆண்ட இரவிவர்ம குலசேகரன் பாண்டிய நாட்டு மீது படையெடுத்துச் சென்று நெல்லூர் வரையுள்ள பகுதிகளை வென்றான். உள் நாட்டுக் குழப்பம், மாலிக்காபூர், குசுருகான் ஆகியோரது படையெடுப்புக்கள், இவற்றுடன் இரவிவர்ம குலசேகரனின் படையெடுப்பும் ஒருங்கு சேர்ந்து பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. ஒரு முசுலீம் அரசு மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் நிலைபெற்றிருக்க முடியவில்லை . கி. பி. 1378-இல் விசய நகர மன்னர்கள் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தங்களோடு சேர்த்துக்கொண்டனர். மதுரையைப் பிடிக்க முடியாவிட்டாலும், பாண்டியர்கள் திருநெல்வேலியிலிருந்து கொண்டே 1800 வரை ஆட்சி செய்துவந்தார்கள். பாண்டியர் காலத் தமிழகம் பாண்டியர் ஆட்சி முறை சோழர் ஆட்சி முறையைப் போன்றதே. கிராமச் சபைகளிடமே கிராம ஆட்சி இருந்தது. பெரும் பெரும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தமிழ் நாட்டுக்கோவில், பண்பாட்டின் உறைவிடமாகவும், மடங்கள் கல்விக் கழகங்களாகவும் திகழ்ந்தன. சைவ வைணவ சமயங்களோடு சமணமும் பௌத்தமும் வளர்ந்தன. அரபு நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையே சிறந்த வாணிகம் நடந்தது. அரேபியர்கள் பாண்டிய நாட்டில் காயல் பட்டினத்தில் குடியேறினர். பாண்டிய நாட்டுக் கடற்கரை அவர்களால் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சொல்லே பின்பு கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலுள்ள கடற்கரையைக் குறிக்கலாயிற்று. பாண்டிய, சோழர் காலக் கல்வெட்டுக்கள் அக்கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறியப் பேருதவி புரிகின்றன. தமிழர்கள் இந்த இடைக்காலத்தில் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த உரிமையோடு உலவினர். அஃதோடு அவர்கள் பல அன்பளிப்புகளும் தந்தனர். அடிமைமுறை அக்காலத்தில் நிலவியது. திருமறைக்காட்டிற் காணப்படும் மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுக்கள் இரண்டு, ஆரியன்பிச்சன் என்பான் 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 காசுக்கு விற்றதாகக் கூறுகின்றன. சதியும் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் மனைவியாகிய வானவன் மாதேவியும், ஒரு மல்லன் மனைவியாகிய தேக்கபியும் உடன்கட்டை ஏறியதாகத் தெரிகிறது. சாதிவெறி அக்காலத்தில் கடுமையாகவே இருந்தது; நிலங்கள் மன்றங்களுக்கும், தனியாருக்கும் சொந்தமாய் விளங்கின. வைரமேகதடாகம், வீர சோழன், கீர்த்தி மார்த்தாண்டன் முதலிய குளங்களாலும், கால்வாய்களாலும் வேளாண்மை செழிப்பாக நடைபெற்றது. கோவில்கள் மிகவும் சீரும் சிறப்பும் கொண்டு திகழ்ந்தன. கோவிற்குப் பல ஆயிரம் பணம் பெறுகின்ற நகைகள் தேவைப்பட்டன. இதனால் நகைக்கலை செழித்தது. காஞ்சியிலும், மதுரையிலும் கைத்தறித் தொழில் ஓங்கியது. குமரி முனையிலும், மரக்காணம் (தென்னார்க்காடு) என்ற இடத்திலும் உப்பளங்கள் மிக்கு விளங்கின. நாட்டில் பொதுவாக நிலவிய வட்டி விகிதம் 12 1/2%. உறுதித் தாள்கள் (Promissory notes) நடைமுறையில் இருந்தன. 72 தானிய எடை உள்ள காசு அல்லது மடை என்ற தங்க நாணயமும் அக்காலத்தில் பழக்கத்திலிருந்தது. காசு என்பது அரைப்பொன். கழஞ்சு என்பது நாணயமாக வழங்காத தங்கமாகும். நாணயங்களில் வில், கயல், புலி பொறிக்கப்பட்டிருந்தன. மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே பெருத்த வாணிகம் நடைபெற்றது. மூன்று தூதுக் குழுக்களைச் சீனாவிற்குப் பாண்டியன் அனுப்பினான். இக்காலத்தில் சைவமும் வைணவமும் நன்கு வளர்ந்தன. சமயப்பொறை நிலவியது. எனினும் சில போழ்து சமய வெறியும் கொலைகள் பல நடத்தியது. காளமுகம், பாசு பதம், கபாலிகம் முதலியனமிகுந்த செல்வாக்கோடு உலவின. மடமும், கோவிலும் பண்பாட்டுக்கும் கல்விக்கும் உறைவிடங்களாகத் திகழ்ந்தன. சுருங்க உரைப்பின், அக்காலக் கோவில்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகளாகவும், நிதியகங்களாகவும், செழுங்கலை நிலையங்களாகவும், கலைக்கண்காட்சிகளாகவும், பொருட்காட்சி சாலைகளாகவும், மருந்தகங்களாகவும், அற நிலையங்களாகவும் திகழ்ந்தன. பெரும்பாலான கோவில்களில் நூல் நிலையங்கள் இருந்தன. நாடகமும், நடனமும் நன்கு வளர்க்கப்பட்டன. நெல்லைக்கருகிலுள்ள பத்தமடைக் கல்வெட்டு ஒன்று, திருவிழாக்களில் நடனமாடவும், நாடகம் நடிக்கவும் ஒரு நடன மங்கைக்கு நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது எனக் கூறுகிறது. சமண, பௌத்த சமயங்களும் ஓரளவுக்கு அடியார்கள் மிகப்பெற்றிருந்தன. சமணம் பௌத்தத்தைவிட நன்கு செல்வாக்கோடு திகழ்ந்தது என்னலாம். இடைக்காலத்திலே தமிழிலக்கியமும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது என்னலாம். சமண, சைவ, பௌத்த, வைணவ அடியார்களால் பல அழகிய தமிழ் நூற்கள் எழுதப்பட்டன. திருத்தக்க தேவர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியை எழுதினார். சிதறிக் கிடந்த சைவ நூற்களைத் திருமுறை என ஒரு ஒழுங்குபடத் தொகுத்து வகுத்தது கி. பி. 1100-லேதான். சேக்கிழார் தித்திக்கும் பெரிய புராணம் எழுதியது இக்காலத்தில்தான். அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வாழ்ந்தது இக்காலத்திலேதான். வீரசோழியம் பிறந்தது இந்தக் காலத்திலேதான். யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், கலிங்கத்துப்பரணி, இராமகாதை, மூவருலா, நளவெண்பா போன்ற தமிழ்ப் பெருநூல்கள் இந்த இடைக்காலத்திலே தான் எழுந்தன. குணவீரபண்டிதரால் நேமிநாதம் இக்காலத்திலேதான் எழுதப்பட்டது. நன்னூல் என்னும் பொன்னூல் தோன்றக் காரணமாக இருந்தது இந்த இடைக்காலமே. தண்டியலங்காரம் என்னும் அணிநூல் இக்காலத்திலேதான் எழுந்தது. சுருங்க உரைப்பின் இடைக்காலம் என்பது தமிழ் மொழி வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் என்று கூறலாம். பிறநாட்டார் ஆட்சிக் காலம் முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள் வீரமுடன் போரிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றனர். இதன்காரணமாய் விசயநகரத்தாரும், மராட்டியரும் தமிழ்நாட்டை ஆளுதற்குரிய வாய்ப்பைப்பெற்றனர். வடக்கே முகமதியருடைய வலிமை நாளுக்கு - நாள் வளர்ந்த காரணத்தால் தெற்கு நோக்கி வந்த மராட்டியர் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் முதலிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரியலாயினர். இதே நேரத்தில் விசயநகர மன்னரும் கன்னியாகுமரி வரையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் காரணமாய் மகமதியருடைய படையெடுப்புக்கள் குறையலாயின. ** விசயநகர மன்னர்** முகமதிய மன்னன் முகமதுபீன் துக்ளக் தமிழ் நாட்டின் தென்பகுதியை வென்று, அதனை ஆள சலாலுதீன் அசன் என்பவனை நியமித்தான். இவன் கி. பி. 1335-இல் மதுரையில் தன் தனியரசையே நிறுவினான். இவனுக்குப் பின்னர் ஆண்ட கியாசுதீன் என்பவன் கொடுஞ் செயல்கள் பல புரிந்ததால், முகமதிய ஆதிக்கத்தினை அழிக்க கி. பி. 1336-இல் எழுந்த விசய நகரப் பேரரசை நிறுவிய அரிகரன், புக்கன் என்ற இரு சகோதரரில், புக்கராயனின் மகனான கம்பணன் காஞ்சியையும், மதுரையையும் கைப்பற்றி, முகமதிய மன்ன னைக் கொன்று வீழ்த்தி, தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன் தந்தையின் குடைக்கீழ் கொண்டுவந்தான். இவ் வெற்றியினைக் கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய “மதுரா விசயம்” என்னும் நூல் நன்கு எடுத்தியம்புகின்றது. இதே போன்று கி. பி. 1280-இல் விசய நகர மன்னனாய் விளங்கிய இரண்டாம் அரிகரன் தன் மகன் விருப்பாக்சனை தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். இவன் தொண்டை மண்டலத்திலும், சோழ பாண்டிய மண்டலங்களிலும், கொங்குநாட்டிலும், ஈழ நாட்டிலும் வெற்றிகள் பல அடைந்தான். இதன் பின்னர் இரண்டாம் தேவராயன் காலத்தில் விசய நகரப் பேரரசின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் உச்ச நிலையிலிருந்தது, ஆனால் இவனுக்குப் பிறகு கிருட்டிணதேவராயன் அரசனாகும் வரை விசய நகர மன்னர் செல்வாக்குத் தமிழ்நாட்டில் குறைந்தது. விசய நகரப் பேரரசனாகிய கிருட்டிணதேவ ராயன்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நேரடியாக அவன் தமிழ்நாட்டை ஆளாவிடினும், நாயக்கர், தனது அதிகாரிகள் இவர்களது உதவியினால் நல்ல முறையில் தமிழ் நாட்டை ஆண்டான். மதுரை நாயக்கர்கள் தமிழக வரலாற்றிலே தமக்கெனத் தனியிடம் கொண்டவர்கள் நாயக்கர்கள். அவர்கள் ஆட்சியிலே தமிழகம் பற்பல சிற்பக் கலை பொதிந்த கோவில்களைக் கண்டது. நல்லதொரு ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றது. தமிழகம் அவர்கள் ஆட்சியினால் அடைந்த நன்மைகள் பலவாகும். மாமன்னன் கிருட்டிணதேவராயன் ஆட்சிக் காலத்தில் விசுவநாத நாயக்கன் தலைமையில் நாயக்க வமிசம் மதுரையை ஆளத் தொடங்கியது. விசுவநாதனது ஆட்சிக் காலம் கி. பி. 1529-64 வரை ஆகும். எனினும் இதற்கு முன்னரே விசய நகரப் பேரரசின் ஒரு பாகமாகத் திகழ்ந்த மதுரையை ஆள நாகம நாயக்கன் முதலில் அனுப்பப்பட்டான். ஆனால் அவன் தனது பேரரசின் ஆணைப்படி ஆட்சி புரிய மறுத்ததால், விசய நகர மன்னன் அவனைப் பதவியினின்று நீக்கிவிட்டு விசுவநாதனுக்கு அப்பதவியை அளித்தான். திருச்சியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கொங்கு நாடு வரையிலும் இவன் ஆட்சி செலுத்தினான். இவனது தலைமை அமைச்சராக விளங்கியவர் புகழ் வாய்ந்த அரிய நாத முதலியார் ஆவார். விசுவநாதன் காலத்தில்தான் தமிழ் நாட்டில் பாளையப்பட்டுகள் தோன்றின. தமிழ்நாடு 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இவைகள் ஒன்பது பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பாளையப்பட்டுகளின் தலைவர்களாக விளங்கியவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் மதுரை நாயக்கர் வேண்டியபோது படைகள் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தங்கள் பாளையப்பட்டுகளில் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாய் நாட்டில் ஒழுங்கும்,அமைதியும் நிலவின. ஆந்திரருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஒற்றுமை நிலவியது. விசுவநாதனுக்குப் பிறகு அவன் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன், மூன்றாம் கிருஷ்ணப்பன், இரண்டாம் வீரப்பன், திருமலை நாயக்கன், முதலாம் சொக்கநாதன், நான்காம் வீரப்பன் என்போர் முறையே தமிழ் நாட்டை ஆண்டனர். மூன்றாம் கிருஷ்ணப்பன் காலத்தில் தான், அதாவது கி. பி. 1601-1609-இல் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இரண்டாம் வீரப்பன் காலத்தில் திருச்சி தலை நகராக விளங்கியது. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் பெரு வீரனாக விளங்கியவன் திருமலை நாயக்கன் ஆவான். இவன் கி. பி. 1623-இல் பட்டமேறினான். திருவனந்தபுரமும், இராமநாதபுரமும் இவன் அரசுக்கு உட்பட்டிருந்தன. கொங்கு நாடும் அடிபணிந்தது. காந்திரவன் என்ற மைசூர் மன்னனும், விசய நகர மன்னன் மூன்றாம் சீரங்கனும் இப்பெருவீரனால் தோற்கடிக்கப்பட்டனர். திருமலை பெரு வீரனாக விளங்கியதோடமையாது, சிறந்த கலைஞனாகவும் விளங்கினான். இவன் செய்த கலைத் தொண்டை எவரும் மறந்திட முடியாது. போரில் புலியாக விளங்கிப் புகழ்பெற்றது போலவே, கலைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றான். இதன் காரணமாய் மதுரை மா மதுரையாயிற்று; பழம் பெரும் மதுரை புதியதொரு கலைக்கூடமாக மாறியது. அவன் கட்டிய விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய கோவில்கள், மக்கள் மனங்கவர் மண்டபங்கள், பெரிய பெரிய தூண்கள் போன்றவை இன்று அவனது கலைப் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. அவனால் கட்டப்பட்ட புது மண்டபமும், அழகிய மகாலும் இன்றும் அழியாச் சின்னங்களாய் விளங்குகின்றன. இவற்றுள் புது மண்டபம் கட்டி முடிக்க இருப்பது இலட்சம் ரூபாய் செலவாகியது; இருபத்திரண்டு ஆண்டுகள் அல்லும் பகலும் சிற்பியர் பலர் உழைத்தனர். இக்கலைக் கூடத்தின் இரு பக்கத் தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிலைகள் நம் நாட் டத்தையெல்லாம் ஈர்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன. மகாலைக் கட்டுவதற்கு நிறையச் செங்கற்கள் தேவைப்பட்ட காரணத்தால் தோண்டப்பட்ட பள்ளமே பின்னர் அழகிய தெப்பக்குளமாக்கப்பட்டது. இதனை இன்று மக்கள் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும், வண்டியூர்த் தெப்பக்குளம் என்றும் வழங்குகின்றனர். திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை ஆண்டாள். இவளது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த காலமாகும். தஞ்சையும், திருவாங்கூரும் மங்கம்மாள் ஆட்சியின் கீழ் விளங்கின. ஆனால் கி. பி. 1702-இல் சேதுபதி மன்னன் மங்கம்மாளைப் போரில் வென்று, தனது நாட்டை நாயக்கர் ஆட்சியினின்றும் விடுவித்தான். மேலும் புதுக்கோட்டைப் பகுதியையும் சேதுபதி வென்று தனது மைத்துனன் இரங்கநாதனுக்குச் சொந்தமாக்கினான். கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தை ஓர் பேரிருள் விழுங்கக் காத்திருந்தது. அந்தப் பேரிருளினின்றும் தமிழகத்தைக் காத்தவர் நாயக்கரே. அஃதாவது அவர் காலத்திலே ஐரோப்பியரும் முகமதியரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ள விரைந்தனர். அக்காலை தமிழகத்தை அவரினின்றும் காத்தவர் நாயக்கரே. அரசியர் மங்கம்மா, மீனாட்சி, ஆகிய இருவர் காலத்திலும், முகமதியர் நமக்குக் கொடுத்த தொல்லைகள் எல்லையற்றன. அக்காலை மங்கம்மாள் தளவாய் நரசப்பையன் உதவியுடன் அம்முகமதியரை முறியடித்தாள். ஆனால் பிற்காலை, முறியடிக்கப்பட்ட அதே முகமதியராலேயே மீனாட்சி வஞ்சிக்கப்பட்டாள். நாயக்க வமிசம் நசிந்தது. சங்க காலத்திலே தமிழகத்தை மூவர் ஆண்டனர். ஆனால் நாயக்கரோ பிற்காலத்தில் தமிழ் நாட்டை ஒருசேர ஆண்டனர். அவர்தம் ஆட்சியின் கீழ் நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு, செங்கல்பட்டு ஆகிய அத்தனை மாவட்டங்களும் இருந்தன. இது மட்டுமா? மைசூரும், கொங்கு நாடும் கூட அவரிடம் இருந்தன. சத்தியமங்கலம், தாராபுரம், ஈரோடு முதலிய இடங்களிலும் கூட நாயக்கரின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. நாயக்கர் ஆட்சியில் ஆட்சி முறைகள் நன்கு வகுக்கப்பட்டிருந்தன. எனவே ஆட்சியும் நன்கு நடைபெற்றது. தளவாய், ராயசம், பிரதானி என்போர் இக்கால அமைச்சர் போல் அக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். தளவாய் அரிய நாதர், நரசப்பர் போன்றோர் இத்தகைய அமைச்சராவர். பதினேழாம் நூற்றாண்டின் இடையில் நாயக்க அரசின் ஆண்டு வருமானம் 1¼ கோடி ரூபாயாகும். நாயக்கர்கள் அரசுக்கட்டிலில் ஏறிய காலத்தில் தமிழகம் குழப்பத்திலும், கொள்ளையிலும், கொலையிலும் மிதந்துகொண்டு இருந்தது. அக்காலத்தில் தம் ஆட்சித் திறத்தாலும், அறிவின் உரத்தாலும் தமிழகத்தை அக்கொள்ளை முதலியவற்றினின்றும் காத்து நல்லாட்சியை ஏற்படுத்தினர். நாயக்கரினால் தமிழகம் அடைந்த பயன்களுள் தலையானது கோவிலே. அவர்கள் காலத்திலேதான் அழகொழுகும் சிற்பங்கள், ஓவியங்கள் பொதிந்த பற்பல கோவில்கள் தமிழகத்தில் எழுந்தன. இன்றுள்ள மதுரை மீனாட்சி கோவிலும், ஆயிரக்கால் மண்டபமும், மாலும், ராய கோபுர [] [] மும் நாயக்கர் கட்டியவையாகும். மதுரையில் மட்டுமல்ல; நெல்லை, இராமநாதபுரம், கோவை, சேலம், திருச்சி முதலிய ஏனைய மாவட்டங்களிலும் நாயக்கரால் நிறுவப்பட்ட கோவில்கள் நிறைந்துள்ளன. சீரங்கக் கோயில், பேரூர்க் கோயில் எல்லாம் நாயக்கர் காலத்தில்தான் எழுந்தன. அவினாசியில் உள்ள கோவிலும் இவர்கள் காலத்தில் தோன்றியதே. சமயப் பற்றும், கடவுள் பக்தியும், மிகுதியாக உடையவர்களாக நாயக்கர்கள் திகழ்ந்தனர். ஆனால் அவர்கள் சமய வெறி கொண்டு பிற சமயங்களைத் துன்புறுத்தவில்லை. எம்மதமும் சம்மதமே எனக் கொண்டுதான் வாழ்ந்தனர். பிறமதக் கோவில்களுக்கு மானியமும், நன்கொடைகளும் இவர்களால் தாராளமாக வழங்கப்பட்டன. அரசி மங்கம்மாளால் அமைக்கப்பட்ட பெருவழிகளும், வெட்டப்பட்ட குளங்களும், கால்வாய்களும், கட்டப்பட்ட சத்திரம் சாவடிகளும், இன்றும் நாயக்கர்தம் ஆட்சிச் சிறப்பை நன்கு அறிவிக்கின்றன. செஞ்சி, வேலூர், தஞ்சை நாயக்கர்கள் மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடத்தியது போலவே செஞ்சி, தஞ்சை, வேலூர் இவ்விடங்களிலும் நாயக்கர்கள் தங்கள் ஆட்சியை நிறுவி பெயர்பெற்றவர்களாயிருந்தார்கள். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் ஒருவனான கோப்பண்ணா என்பவன் தில்லையில் கோவிந்தராசர் சிலையை நிறுவினான். கி. பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே செஞ்சியை ஆண்டுவந்த நாயக்கர்களை கி. பி. 1648-ஆம் ஆண்டு பீசப்பூர் சுல்தான் தோற்கடித்து செஞ்சியைக் கைப்பற்றினான். செஞ்சியை ஆண்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கனும் ஒருவன் ஆவான். இவன் காலத்தில் செஞ்சிக்கு வந்த போர்ச்சுக்கீசியப் பாதிரியார் பிமென்டா என்பவர் செஞ்சியானது லிச்பனைப் போன்று பெரியதொரு பட்டணமாய் விளங்கியதாக எழுதி உள்ளார். மேலும் கிருஷ்ணப்பன் காலத்தில் டச்சுக்காரர் கடலூரில் தங்கள் அலுவலகம் ஒன்றினை அமைத்தனர். வேலூரை ஆண்ட நாயக்கர்களில் முற்பட்டவன் வீரப்ப நாயக்கன் ஆவான். இவன் மகன் சின்ன பொம்மன் (கி. பி. 1549-1582) சிறந்த வீரனாவான். எனினும் இவன் செஞ்சி நாயக்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்தான். இவனுக்குப் பின் பட்டமேறிய லிங்கம நாயக்கன் செஞ்சிப் பிடியிலிருந்து வேலூரை மீட்கத் திட்ட மிட்டான். ஆனால் செஞ்சிப் படைத் தலைவன் சென்ன நாயக்கன் கி. பி. 1604-இல் லிங்கமனை வென்றான். இப் பெரு வீரன் பெயரால்தான் சென்னைப் பட்டினம் அவனது மகனால் நிறுவப்பட்டது. விசய நகர மன்னன் அச்சுத நாயக்கன் காலத்தில் தஞ்சையில் நாயக்க அரசு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையை முதலில் ஆண்டவன் அச்சுதனின் சகலனான செவ்வப்பன் ஆவான். தஞ்சை நாயக்கர்களில் சிறந்த வீரனாகவும், அரசனாகவும், எழுத்தாளனாகவும் விளங்கியவன் இரகுநாத நாயக்கன் ஆவான். தெலுங்கு, வட மொழி இவ்விரு மொழிகளிலும் இவன் பல நூல்களை எழுதி ஏற்றம் பெற்றான். கி. பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் பீசப்பூர் சுல்தானின் தூண்டுதலின் காரணமாய் மராட்டிய மன்னனான வெங்காசி (சிவாசியின் சகோதரன்) நாயக்கர் அரசை ஒழித்து, மராட்டிய அரசாட்சியைத் தஞ்சையில் ஏற்படுத்தினான். இவன் கி. பி. 1675-1712 வரை ஆண்டான். இவனால் நிறுவப்பட்ட மராட்டிய அரசு தஞ்சையில் கி. பி. 1855 வரை நீடித்திருந்தது. இவர்களின் கலையார்வத்தால் தஞ்சை அக்காலத்தில் ஒரு கலைக்கூடமாக விளங்கியது. தமிழரும் தெலுங்கரும் தமிழ்நாட்டிலே தெலுங்கரும், அவர்தம் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பரவிய காலம் விசய நகரப் பேரரசின் காலமேயாகும். விசய நகரப் பேரரசின் ஆட்சிக்குத் தமிழகம் அடங்கிய காரணத்தால், விசயநகரப் பேரரசின் சார்பாளர் களாகவும், ஆளுநர்களாகவும் பல தெலுங்கர்கள் (ஆந்திரர்) தமிழகத்திற்கு வந்து குடியேறினர். நாளடைவில் அவர்கள் பரம்பரை பெருகிற்று. அதோடு தெலுங்கர்கள் பலர் போர் வீரராகவும், வணிகராகவும், தொழிலாளராகவும் வந்து குடியேறினர். தமிழகத்திற் புகுந்த இவர்கள் தெலுங்கு நாட்டுப் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தமிழ் மக்களிடையே பரப்பிவிட்டனர். தமிழகத்திற் புகுந்த தெலுங்கர்கள் பல கோவில்களையும், கல்விக் கழகங்களையும் கட்டினதாகத் தெரிகிறது. மதுரைக்கே பெருமை தந்துகொண்டிருக்கின்ற மீனாட்சியம்மன் கோவிலும், மகாலும் நாயக்கர் கட்டியவையே. தாடிக்கொம்பு, தாரமங்கலம், திருவரங்கம், பேரூர் முதலிய பலவிடங்களிலே தெலுங்கரால் கட்டப்பட்ட கோவில்கள் இன்றும் கவினுடன் காட்சியளிக்கின்றன. விசய நகரப் பேரரசின் காலத்தில் நிலவிய கல்லூரிகளைப் பற்றிய குறிப்புகள் அக்காலத்திய பாதிரிகளின் குறிப்புகளில் காணப்படுகின்றன. அருணகிரி, தாயுமானார், அதிவீரராமபாண்டியன் ஆகியோர் விசய நகரப் பேரரசின் காலத்திலே வாழ்ந்த தமிழ்ப் புலவர்களாவர். மேலும் தெலுங்கர்கள் மிகுதியாகக் குடியேறிய சிற்றூர்கள் இன்று தென்பாண்டி நாட்டில் ஏராளமாக உள. நாயக்க மன்னரால் வெட்டப்பட்ட குளங்களும் தமிழகத்தில் உள. தமிழ் நாட்டில் கிறித்தவமும், இசுலாம் மதமும் நன்கு பரவியது விசய நகரப் பேரரசின் காலத்தேதான். கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் போந்த நோபிலிப் பாதிரிக்கு ஆதரவு காட்டிய தெலுங்கு மன்னர்கள் மூன்றாம் கிருட்டினப்ப நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன், செலபதி நாயக்கன் முதலியோராவர். ** மைசூர் மன்னர்கள்** மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய இடங்கள் மைசூருக்குச் சொந்தமாயின. சிக்கதேவன் என்பவன் அடுத்து அரசனாயினான். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, பழனி, ஆனைமலை, குமாரபாளையம், தவளகிரி, பொள்ளாச்சி முதலிய இடங்கள் இவனுக்குச் சொந்தமாயின, மேலும் சங்கரய்யா. என்பவன் கொங்கு நாட்டில் ஆட்சி நடத்த மன்னனால் அனுப்பப்பட்டான். இது நடந்த காலம் 18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். இவன் அவினாசி, பவானி இவ்விடங்களிலுள்ள கோவில்களைப் புதுப்பித்தான்; பேரூரில் குளமொன்று வெட்டினான். இவன் காலத்திலேயே மைசூர் மன்னர்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குறையலாயிற்று. ஆனால் கி. பி. 1765-இல் மைசூர் மன்னனாக முடிபுனைந்து கொண்ட ஐதர் அலி, அவன் மகன் திப்பு இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் பெரும்பகுதி. அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னர்கள் ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்டிருந்த காலத்தில், கன்னட மக்கள் பலர் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர். கொங்கு நாட்டுக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன; பல புதிய கோவில்களும் கட்டப்பட்டன. குளங்கள் பல வெட்டப்பட்டன. கோயம்புத்தூரிலுள்ள சிக்கதேவராயன் குளம் சிக்கதேவனால் வெட்டப்பட்டதாகும். சத்திய மங்கலத்தில் உள்ள குமாரசாமிக் கோவிலைக் கட்டியவனும் இவனே. நிலங்கள் அளக்கப்பட்டன. புகையிலை வரி, ஆட்டு வரி, புல் வரி முதலிய வரிகள் விதிக்கப்பட்டன. ஐதர், திப்பு இவர்கள் காலத்தில் இன்னும் பல வரிகள் வாங்கப்பட்டதால் உழவும், வணிகமும் வளம் குன்றத் தொடங்கின. மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். பொருளாதார நிலை குன்றத் தொடங்கியது. இக்காலத்தில்தான் முகமதிய சமயமும், கிறித்தவ சமயமும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கின. திப்புவின் காலத்தில் பல இந்துக்கள் முகமதியராயினர். அபேடுபுஆ (Abbe Dubos) என்ற பாதிரியார் தமிழ்நாட்டிற்கு வந்து கிறித்தவ சமயத்தை மக்களிடையே பரப்பினார். இதற்குப் பின்னர் பல பாதிரிமார்கள் தமிழகம் வந்தனர்; சுவார்டச் (Schwartz), சீகன்பால்க் (Ziegenbalg) போன்ற சமயப் போதகர்களும் வந்தனர். திப்புவின் காலத்தில் ஆட்சி முறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நாடு, 1000 சிற்றூர்களைக் கொண்ட பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டங்கள் 40 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அசாவ் (Asaf), பாச்தார் (Faujdar) என்பவர்கள் மாகாணத் தலைமை அதிகாரிகள்; அமில்தார் (Amildar), தரப்தார் (Tarafdar) என்பவர்கள் மாவட்ட அதிகாரிகளாவர். இவர்களுக்கு உதவியாகச் செரிச்த்ததார் (Sheristadar) என்ற அதிகாரியும் இருந்தார். கிராம ஆட்சி கிராமப் பஞ்சாயத்தினரால் திறம்பட நடத்தப்பட்டது. சிக்கதேவன் காலத்தில் தொடங்கப்பட்ட, தபால், காவற்படைத் (Police) துறைகள் திப்புவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நல்லமுறையில் பணியாற்றத் தலைப்பட்டன. மேலும் திப்புவின் காலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. ** ஐரோப்பியர் வருகை** முன்னுரை கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலை நாட்டு வாணிப மக்களாகிய போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்போர் தத்தம் செல்வாக்கை நம் நாட்டில் பரப்ப முயன்றனர். இந்தியக் கடலாதிக்கத்தை முதலில் கைக்கொண்டவர்கள் போர்த்துக்கீசியராவர். இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியன் வாச்கோடகாமா ஆவான். இப் போர்த்துக்கீசிய மாலுமி கி. பி. 1498-இல் கள்ளிக்கோட்டைக்கு வந்து சென்றான். இவனது வருகை நம் நாட்டு வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது என்று கூறவேண்டும். போர்த்துக்கீசியரது நாகரிகமும், பழக்க வழக்கங்களும் நம் நாட்டில் பரவின. வாணிபம் வளம் பெற்றது. விசய நகர வேந்தர்களுக்குப் பாரசீகத்திலிருந்து புரவிகளை இவர்கள் வரவழைத்துக் கொடுத்துப் பொன்னும் மணியும் பெற்றனர். கோவாவிலும், வேறு சில இடங்களிலும் கத்தோலிக்க சமயம் வேரூன்றியது. முதல்முதல் அச்சகம் நம் நாட்டில் நிறுவப்பெற்றது. சென்னையின் ஒரு பகுதியாகிய சென்தோம் போர்த்துக்கீசியருக்குச் சொந்தமாயிற்று. போர்த்துக்கீசியருக்குப் பின் டச்சுக்காரர் நம் தாயகத்திற்கு வந்தனர். பழவேர்க்காடு, (கி. பி. 1160) தரங்கம்பாடி (1620), தூத்துக்குடி (1658) நாகை முதலிய இடங்களில் வாணிக நிலையங்கள் நிறுவப்புட்டன. கி. பி. 1603-இல் டச்சுக்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமையாளராக நாளடைவில் ஆங்கிலேயர் ஆயினர். எனவே டச்சுக்காரருக்கும் ஆங்கி லேயருக்கும் அடிக்கடி போர் நடந்தது. இக்காலத்தில் பிரெஞ்சு நாட்டாரும் நம் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்று கி. பி. 1784-இல் நம் நாட்டின் முழு உரிமையும் பெற்றனர். ஆங்கிலேய ஆட்சியின் வளர்ச்சி பிரான்சிசுடே என்பவன் கி. பி. 1639-இல் இப்பொழுது சார்ச் கோட்டையாக விளங்கும் இடத்தை வெங்கடப்ப நாயக்கனிடமிருந்து வாங்கினான். வாணிக அலுவலகமொன்று இங்கு நிறுவப்பட்டது. 1688-இல் இக்கோட்டையில் கோவிலொன்று கட்டப்பட்டது. இது ஆங்கிலேயரால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிறித்தவக் கோவிலாகும். வாக்ச் க்ராவ்ட் (Foxeraft), வில்லியம் லேங் ஆர்ன், ச்டேரச னாம் மாச்ட்டர் என்பவர்கள் முறையே சென்னை கவர்னர்களாக வந்து, ஆங்கிலேய ஆட்சி முறைகளையும் நாகரிகத் தையும் பரப்பினர். இதே நேரத்தில் நம் தாயகம் வந்த பிரெஞ்சுக்காரர்கள், சென்தோமிலும், புதுச்சேரியிலும் அலுவலகங்களை நிறுவினர். புதுச்சேரியின் கவர்னர்களாக லெனு ஆர் (Lenior), டூமாசு (Dumas), டூப்ளே (Duple), என்பவர்கள் முறையே பணியாற்றினர். டூமாசு தஞ்சை மன்னன் தன் அரசைப் பெறுவதற்கு உதவிய காரணத்தால், காரைக்கால் நன்கொடையாகப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது. டூப்ளே பிரெஞ்சு ஆட்சியை நம் நாட்டில் நிலை நாட்ட முயன்றதால், ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்றனர். ஆனால் கி. பி. 1756-இல் பிரெஞ்சு இந்தியக் கவர்னரான லாலி என்பவன் சிறந்த வீரன் ஆவான். பல போர்கள் நடத்தி வெற்றியும் பெற்றான். எனினும் கி. பி. 1760-இல் வந்தவாசியில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் சர். அயர்கூட் என்ற ஆங்கிலத் தளபதி யால் பிரெஞ்சுக்காரர் அடியோடு முறியடிக்கப்பட்டனர். எனவே ஆங்கிலேயர் கை உயர்ந்தது. ஆனால் அவர்கள் தம் ஆட்சியை நம் நாட்டில் நிலை நிறுத்துவதற்குத் தடையாக ஐதர் அலியும், திப்புவும் விளங்கினார்கள். கி. பி. 1772-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பெற்றது. இதன் காரணமாய் நம் தாயகமாகிய தமிழ் நாட்டின் வரலாறு இந்திய வரலாற்றோடு இணைந்தது. இக்காலத்தில் தான் முதல் கவர்னர் செனரலாக வாரன் ஏச்டிங்சு பதவியேற்றான். ஆங்கிலேயருக்குச் சொந்தமான நிலப்பகுதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டத் தலைமை அலுவலராகக் கலெக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்களது பணியை மேற்பார்வையிட ரெவின்யூ போர்டு என்ற குழு கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு வரிப் பணத்தைப் பெற்றுப் பாதுகாப்பதற்குக் கால்சா என்ற ஒரு கசானா நிறுவப்பட்டது. இதற்குத் தலைவராக ஒரு தலைமைக் கணக்கர் (Accountant General) பணியாற்றினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இந்துச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன; மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தாவில் பாங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. திருடர்கள் ஒழிக்கப்பட்டனர். இதன் காரணமாய் வாணிபம் வளர லாயிற்று; வளமும் தருவதாயிற்று. கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. திப்புவின் தோல்வியின் காரணமாய் சேலம், கோயம்புத்தூர், தாராபுரம், பாலக்காடு, தஞ்சை முதலிய இடங்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை, இராம நாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கைப் பகுதிகள் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. இதற்குக் காரணமாக இருந்தவன் பாளையப்பட்டுகளின் தலைவர்களில் தலைமையாய் இருந்த ஆர்க்காடு நவாப்பாவான். ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற கடனுக்காக அவன் தன் கப்பப் பணம் முழுவதையும் வசூலிப்பதற்கு உரிய அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டபொம்மன், புலித்தேவன் என்ற இரு பாளையக்காரர்களும், சிவகங்கை வீரர்களான மருதிருவரும் ‘வரிகொடோம்’ என்று கூறி வீரமுழக்கம் செய்தனர். ஆனால் எட்டையபுரப் பாளையக்காரரும், புதுக் கோட்டைத் தொண்டைமானும் பதவி ஆசையின் காரணமாய் ஆங்கிலேயரது கைப்பொம்மைகளாக மாறியதால் இவ் வீரர்கள் கொல்லப்பட்டனர். எனவே நாம் அனைவரும் ஆங்கிலேயரது அடிமைகளானோம். ** ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த நன்மைகள்** சாதிப் பிரிவினைகளும், சமயப் பிணக்கும் நீதிப்பிழையும் நியமப்பிழையும் மலிந்து, அடிமை மோகமும் ஆள்வினையின்மையும் கொண்டு, அறியாமை இருளிலே மூழ்கி நிலை தாழ்ந்து தலைகவிழ்ந்து ஒடுங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவொளி காட்டியது ஆங்கிலேய ஆட்சியே என்று கூறி னால் அது முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற உண்மையாகும். சமுதாயச் சீர்திருத்தம் ஆங்கிலக் கல்வி நாட்டிலே பரவுமுன்னர்த் தமிழ்ச் சமுதாயம் அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. சாதிப்பேய் தமிழ் மக்களைப் பிரித்து அரித்து வந்தது. இந்த நாட்டுக்கே உரிய தமிழ்மக்கள் அயலவரால் நாயினும் கேடாக நடத்தப்பட்டனர். தமிழ்ச் சமுதாயம் உள் வலிவு இன்றிக் கிடந்தது. அத்தகைய சமுதாயத்துக்கு மேலை நாட்டு அறிவியற் கல்வியை அளித்து அறியாமை இருளை அகற்றி அறிவொளி பெறச்செய்து, சாதிப் பிரிவினை களைந்து, தலை நிமிரச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. சமுதாயத்திலே எல்லோரும் சமம்; எல்லோருக்கும் கல்வி என்ற எண்ணம் அரும்பியதற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சியே. அரசியல் சீர்திருத்தம் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக, துருக்கர்கள், ஓய்சாலர்கள் முதலிய அயலவர் படையெடுப்பாலும், அவர்கள் செய்த போர்களாலும் அலைத்துக் குலைத்துக் குழப்பத்திலே மிதந்து வந்த தமிழகத்திலே ஓர் ஒழுங்கான ஆட்சியை நிறுவி அமைதியை ஏற்படுத்தியது ஆங்கிலேய ஆட்சிதான். மேலை நாட்டு முறைப்படி, அழகும் ஒழுங்குமிக்க நல்ல காவற்படையினை நிறுவியும், அதிலே தமிழரைப் பயிற்சி பெறுவித்தும், அப் பயிற்சிக்கான கல்லூரிகளை நிறுவியும், தமிழனைப் படைத்துறையில் சிறந்தோங்கச் செய்த பெருமை ஆங்கிலேய ஆட்சிக்குரியதாகும். நாட்டை மாநிலமாகவும், மண்டலமாகவும், மாவட்டமாகவும், வட்டமாகவும், வட்டாரமாகவும் பிரித்து, நல்லதோர் ஒழுங்கான ஆட்சியை நடத்தியது ஆங்கிலேய அரசே. ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்டக் கழகம் முதலிய ஆட்சி மன்றங்களை ஏற்படுத்திப் பெருஞ்சாலைகளும், சிறு சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்து, ஊர்களை இணைத்து, கார், புகைவண்டி முதலிய ஊர்திகளையும், வான ஊர்தியையும் ஓடவிட்டது ஆங்கிலேய அரசே. அறியாமை இருளில் கிடந்த தமிழனுக்கு ஆங்கிலக் கல்வி அளித்து, ஆளும் திறனையும் பயிற்சியையும் அளித்தவர் ஆங்கிலேயரே. கல்வியும் மொழி வளர்ச்சியும் கல்வி வாடையே அடிக்கப் பெறாத தமிழ் மக்களும் தமிழ்ப் பெண்டிரும் கல்வியளிக்கப் பெற்றனர். இன்று மாநிலத் தலைவர்களாகின்ற அளவுக்குப் பெண்டிர் உயர்ந்தமைக்குக் காரணம் ஆங்கிலேயர் அளித்த கல்வியே. ஆங்கிலேயர் ஆட்சியிலே தமிழ்மொழி பெற்ற ஆக்கம் ஒன்றல்ல; பல; பலப்பல. அச்சுப்பொறி மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களை அச்சிட்டு எல்லோரும் படிக்க வாய்ப்பளித்தவர் ஆங்கிலேயரே. மேலும் தமிழிலே சிறு கதை, நெடுங்கதை, கட்டுரைகள் முதலிய பல புதிய துறை நூல்களும், செய்தித்தாள்களும், வார, மாத வெளியீடுகளும் தோன்றின. தமிழ் நூல்களை ஆங்கில மொழியிலே பெயர்த்தெழுதி உலகமெலாம் அறியச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலத்தோடு தமிழும் கற்பிக்க வழிவகை செய்தவர் ஆங்கிலேயரே. தமிழ் தனித்தியங்கும் ஆற்றலுடையது என்று நிறுவியவர் ஆங்கிலேயரே. பிற நலன்கள் தமிழ் நாட்டிலே, நூல் நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களுக்குரிய இயந்திரங்களைக் கொண்டு வந்து நாட்டின் பல்வேறு இடங்களிலே பெரும் பெரும் தொழிற் சாலைகளை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயரே. பெரும் அணைக்கட்டுகளைக் கட்டி, நாட்டிலே நீர்ப்பாசனம் நன்கு நடைபெறுமாறும், மின்சாரம் கிடைக்கு மாறும் செய்து நாடு நலமுறச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களே. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து வெறுங் கோழையராய் மாறினர்; ஆங்கிலேயருக்கு அடிமைகளாயினர். அயல் மொழி பயின்று, அயலார் பண்பாட்டை ஆதரிப்போராயினர். இவ்விழி நிலையைக் கண்ட நம் தலைவர்கள் துடித்தெழுந்து நம் மக்கள் துயர் துடைக்க எண்ணினர்; ஏறுபோல் வீறு கொண்டெழுந்தனர். இதன் காரணமாய்த் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் துயில் நீங்கி, அடிமைத்தளையை அறுத்தெறிய அஞ்சா நெஞ்சமுடன் ஆர்த்தெழுந்தனர். கி. பி. 1800லிருந்து ஏறத்தாழ 145 ஆண்டுகள் விடுதலை உணர்ச்சி படிப்படியாக நம் மக்களிடையே வளர்ந்தது. இவ்வுணர்ச்சி காங்கிரசு சபையின் மூலம் நன்கு வலுப்பெற்றது. இதன் முதற் கூட்டம் கி. பி. 1885-இல் நடந்தது. இதற்குக் காரண மாக விளங்கியவர்கள் சென்னை வி. கிருட்டிணசாமி ஐயர், மணி ஐயர் என்ற இரு பெரியார்கள் ஆவார்கள். இவர்கள் ஆங்கில அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்க விரும்பாது, அவ்வரசாங்கத்திலேயே ஒரு இடம் பெற்றுக் கொண்டு பின்னர் அதன் மூலம் அவ்வரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று எண்ணினர். ஆனால் பாலகங்காதர திலகர் இவ்வெண்ணத்தை அடியோடு மாற்றி, “தனியரசு எங்கள் பிறப்புரிமை” என்று எங்கும் முழக்கமிட்டார். இம் முழக்கத்தைக் கேட்ட மக்கள் புத்தொளி பெற்றுப் புதுவேகத்துடன் விடுதலைக்காகப் பணியாற்றத் தலைப்பட்டனர். இதனைக் கண்ட ஆங்கிலேயர், மக்களைச் சிறையிலடைத்தனர். பலரை நாடுகடத்தினர். இக்காலத்தில் தான் அரவிந்தர் புதுவை சென்று வாழ ஆரம்பித்தார். திலகருடைய வழி நின்று தீரமுடன் பணியாற்றிய முதல் வீரத்தமிழர் வ. உ. சிதம்பரனார் ஆவார். இவர் பாஞ்சாலங் குறிச்சிக்கு அருகிலுள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர். சிறந்த தமிழறிஞராகிய இவர் வீரம் செறிந்த விடுதலை வீரராக விளங்கி ஆங்கிலேயர் அயரும்படி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேயரது பி. ஐ. எஸ். என். கழகத்தை (British India Steam Navigation Company) எதிர்த்துத் தாமே ஒரு கப்பல் கழகத்தை நிறுவி ஆங்கிலேயரது வியாபாரத்தை ஓங்கவிடாது செய்து “கப்பலோட்டிய தமிழர்” என இத்தரணியிலுள்ளார் போற்றும் வண்ணம் அயராது உழைத்தார். இதன் காரணமாய் இவரை அரசாங்கம் சிறையில் தள்ளியது. கடுஞ்சிறையில் இவர் கசையடிபட்டார்; செக்கிழுத்தார். எனினும் இறுதி வரை இப்பெரியார் தென்னகத்தின் முடிசூடா மன்னராகவே வாழ்ந்து மறைந்தார். மேலும் இவர் தொழிலாளர் இயக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றினார். இக்காலத்தில் தான் பாட்டுக்கு ஒரு புலவனாகிய பாரதியார் பைந்தமிழ்ப் பாக்கள் பாடி பாமர மக்களைத் தட்டி எழுப்பினார். வங்க மக்களுக்கு விடுதலை உணர்ச்சியையும், வீரத்தையும் ஊட்டிய கவிஞர்கள் தாகூர், சரோசினிதேவி இவர்களது வரிசையில் வைத்து எண்ணப்படும் அளவிற்கு நம் பாரதியாரும் விளங்கினார். “வீர சுதந்தரம் வேண்டி நின் றார்பின்னை வேறொன்று கொள்வாரோ” என்று இவர் எழுப்பிய வினா வீதிதோறும் கேட்டது. மக்கள் வீறுகொண்டெழுந்தனர். வ. உ. சி. அவர்களது சிறந்த நண்பர்களாகிய சுப்பிரமணிய சிவா, வாஞ்சி ஐயர், பரலி சண்முகசுந்தரம் போன்றோர் நம் நாட்டு விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டனர். இவர்களையடுத்து தமிழ்ப்பெரியார் திரு. வி. க. அவர்களும், சொல்லின் செல்வர் திரு. எஸ். சத்தியமூர்த்தி அவர்களும் தங்களின் பேச்சாற்றலினால் மக்களை விழிப்படையச் செய்தனர். நம் நாட்டின் அரசியல் வாழ்வும், பேரவை வாழ்வும் வளம் பெறுவதற்குக் காரணமாக இருந்த பெரியார் அண்ணல் காந்தியடிகள் ஆவார். கி. பி. 1918-லிருந்து 1947 வரை அடிகள் நடத்திய அறப்போரே கி.பி.1947-ஆம் ஆண்டு, ஆகச்டுத் திங்கள் 15-ஆம் நாள் நம் நாட்டிற்கு விடுதலையை வாங்கித் தந்தது. திலகர் காலமான பின்னர் காந்தியடிகளே நம் தலைவராகி ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து அறப்போர்கள் பல நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். இப்போரில் அடிகள் வெற்றியடைவதற்குப் பெருந் துணைபுரிந்தவர்கள் நேரு, சுபாஸ் போஸ், சி. ஆர். தாஸ், திரு. வி. க., சத்தியமூர்த்தி, ராஜாஜி, திருப்பூர்க் குமரன், சீனிவாச அய்யங்கார் முதலியோராவர். இன்று நம் நாடு ஒரு குடியரசு நாடாகத் திகழ்கிறது. சுருங்கக் கூறின் இன்று நம் நாட்டில் மக்களாட்சி நடைபெறுகின்றது. இதன் காரணமாய் ‘எல்லோரும் இந் நாட்டு மன்னர்’ களாய் விளங்குகின்றோம். மக்களின் உரிமை ஆர்வம், வாழ்க்கை ஆர்வம், ஆள்பவரின் கடமையார்வம் என்ற மூன்றுமே குடியாட்சியின் உயிர் மூச்சுக்களாகும். குடியாட்சி என்பது மக்கள் உள்ளத்திலிருந்து மலரவேண்டியதொன்றாகும். எனவே அதற்கு அரசியலார் ஆவன செய்யவேண்டும். மக்களது நல்லெண்ணத்தைப் பெறுவ தொன்றே அரசியலாரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லா மக்களும் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ வழிசெய்யவேண்டும். இதற்குரிய வழி யாது? இதோ ! கவியரசர் கண்ட கனவு ! “பாரதசமு தாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரதசமு தாயம் வாழ்கவே ஜய ஜய ஜய (பாரதி) முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக் கும்பொது உடமை! ஒப்பில் லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க (பாரத) இனிஒ ருவிதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனிஒ ருவனுக் குணவில்லையெனில் ஜகத்தினை அழித் திடுவோம் - வாழ்க (பாரத) எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க” (பாரதி) கன்னித் தமிழன் கண்ட இக் கனவினை நனவாக்குவதே நமது கடமையாகும். கனவு நனவானுல் நானிலமும் வியக்கும் வண்ணம் நம் நாடு வளமுடன் வாழ்ந்து உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே நம் நாட்டினர் அனைவரும் நமது குறிக்கோளாகிய விடுதலையைப் பெறுவதற்கு நாம் நீண்ட நாள் போராடியிருப்பதை உள்ளத்திலே கொண்டு, அறிவாற்றலும், தளரா முயற்சியும், பண்பும், பணி செய்யும் தன்மையும் பெற்று, நாட்டின் நல்வாழ்வே நம் வாழ்வு எனக் கொண்டு, ஒற்றுமையும் உறுதியும் பெற்று, உயர்ந்துவிளங்க அயராது, தளராது உழைக்கவேண்டும். வாழ்க நம் நாடு! வளர்க நம் பண்பு!   தமிழ் மொழி தமிழின் தொன்மையும் சிறப்பும் தோற்றுவாய் பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாகத் தமிழ் மொழியைக் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்” என்று சிவஞான முனிவர் பாடியிருப்பதைக் கொண்டு கடவுளே மொழியை உண்டாக்கியிருப்பார் என்ற கருத்து நம் நாட்டில் பண்டு நிலவி வந்ததை நாம் அறிவோம். ஆனால் மக்கள் முயற்சியால் மொழி உண்டாக்கப்பட்டது என்று நாம் கொள்ளுதலே சாலப் பொருந்தும். அடுத்து தமிழின் தோற்றம் குறித்து ஒருசில வரைவாம். தமிழின் தோற்றம் தமிழ் என்னும் சொல்லுக்குப் பல பொருள் கூறுவதுண்டு. சகந்நாத பிள்ளை என்பவர் தமிழ் என்னும் சொல்லுக்கு ஒளிவுடையது (தமம்-ஒளி) என்று பொருள் தருவர். இக்கருத்தையே கார்த்திகேய முதலியாரும் கூறியுள்ளார். ‘திராவிடப் பிரகாசிகை’ என்னும் நூலாசிரியர் சபாபதி நாவலர் தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருளை வற்புறுத்தியுள்ளார். இப்பொருளே பொருத்தமுடையது என அறிஞர் பலர் முடிவு செய்துள்ளமை நாமறிந்ததொன்றே. நந்தாமணியாம் சிந்தாமணியில் இனிமை என்னும் பொருளில் தமிழ் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ‘தமிழ் தழீ இய சாயலவர்’ என்பதில் தமிழ் என்னும் சொல் இனிமை என்னும் பொருளில் வருதலைக் காண் கிறோம். கவிக்குயில் பாரதி ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்’ என்று தமிழி னுடைய இனிமையை உணர்த்தியுள்ளார். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கலந்தை நிகண்டு உரைக்கின்றது. தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பலர் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவ்வறிஞருள் ஒருவராகிய ஆல்பர்ட் என்பவர் திராவிடன் என்னும் சொல்லே திரமிடம், தமிழகம், தமிழ் என்றாயிற்று எனக் கூறியுள்ளார். டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் என்பவரும் தமிழ் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் மொழியைக் குறித்தது என்று கூறியுள்ளார். ஒருசிலர் தென்மொழி என்பது தமிழ் என்று மருவிற்றென்பர். வேறு சிலர் மள்ளர் என்ற இனத்தவர் பேசிவந்த மொழி மள்ளம் என்றும், அச்சொல்லோடு ‘திரு’ என்ற அடையைச் சேர்த்துத் திருமள்ளம் என்று மக்கள் வழங்கினர் என்றும், அச்சொல் நாளடைவில் திரிந்து தமிழ் ஆயிற்றென்றும் கூறுவர். ஆனால் இவையனைத்தும் பொருந்தாக் கூற்றுக்களாகும். சுருங்கக் கூறின் தமிழ் என்னும் பெயர் தங்கள் தாய்மொழிக்குத் தமிழர்களாலே இடப்பட்டது என்று கொள்ளவேண்டும். இதனையே சி. வை. தாமோதரன் பிள்ளையும் வலியுறுத்துகின்றார். இத்தகு சிறப்பு மிக்க தமிழ் குடமுனியால் உண்டாக்கப்பட்டது என்று ஒருசிலர் கூறிவந்தனர். இது ஆதாரமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். வடமொழியும் தமிழ் மொழியும் பல வட சொற்கள் தமிழில் வழங்கிவரும் காரணத்தால் வடமொழியினின்றும் தமிழ் வந்ததாக ஒருசிலர் தவறாக நினைத்துக் கூறத் தொடங்கினர். தமிழ் வடமொழியினின்றும் வந்ததன்று. தமிழ்மொழி வடமொழியினும் தொன்மை வாய்ந்ததென அறிஞர் பலர் கூறுகின்றனர். எனவே தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்பது ‘தந்தைக்கு முன் மகன் பிறந்தானென்று’ சொல்வது போன்றதாகும். தமிழின் தொன்மை உலகிலே தோன்றிய மொழிகள் ஒன்றல்ல; இரண்டல்ல; பலப்பல. அவற்றுள்ளே செம்மொழிகள் எனக் கூறப்படுபவை ஐந்து. இந்த ஐந்திலே இன்றுவரையும் பொன்றாப் புகழுடன் நாட்டு வழக்கிலும் ஏட்டு வழக்கிலும் களிநடம் புரிந்துகொண்டும், கணக்கற்ற இலக்கிய இலக்கணங்களிலே புரண்டுகொண்டும் இருப்பது சாவா மூவாத் தமிழ்மொழியே ஆகும். ஏனைய மொழிகள் எல்லாம் ஏட்டு வழக்கில் மட்டும் நிலவுகின்றனவே தவிர நாட்டிலே தவழவில்லை. இனித் தமிழின் தொன்மையினை ஆராய்வோம். தென்னிந்தியாவில் வழங்கப்படும் மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வழங்குகிறோம். திராவிடமொழிகளில் தமிழே தொன்மையானது ஆகும். அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளைத் திருந்தியவை, திருந்தாதவை என்று இரண்டாகப் பாகுபாடு செய்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. திருந்திய மொழிகள் :- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், கூர்க். திருந்தா மொழிகள் :- தோடா, தோண்டு, போடா, தாச்மகல், வராவோன். திருந்திய மொழிகளுள் ஒன்றான தமிழ். ‘தேனினும் இனியது; தெவிட்டாத் தெள்ளமுதைப் போன்றது; இலக்கியத்தில் உயர்ந்தது; இலக்கணத்திற் சிறந்தது; தனிப்புகழ் படைத்தது; தன்னேரில்லாதது’. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்ததே மலையாளக் குழந்தை என்று கூறினால் அது மிகையாகாது. இக்கருத்தையே அறிஞர் கால்டுவெலும் தமது நூலில் கூறிச் சென்றார். வடமொழிச் சொற்களும் புணர்ச்சிகளும் நிரம்பிய பழந்தமிழே மலையாளம் என்று திரு. எம். சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். குஞ்சத்து இராமானுச எழுத்தச்சன் என்பவர் மலையாளத்தைத் தமிழினின்றும் வேறுபடுத்த வடசொல் பலவும் மலையாளத்தில் புகுத்தினார். காலம் கி. பி. 11-வது நூற்றாண்டாகும். கி. பி. 1860-இல் தான் மலையாள இலக்கணம் தோன்றிற்று. எனவே மலையாளம் தமிழைப்போல் தொன்மையானதன்று. தமிழுக்கு அடுத்தபடி சிறப்புமிக்க திராவிடமொழி தெலுங்காகும். ஆனால் இம்மொழி வடமொழி உதவியின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையதன்று. மேலும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகத் தொன்மையான இலக்கியங்கள் தெலுங்கில் இல்லை. தெலுங்கைப் போலவே கன்னடமும் வடமொழியின் துணையை மிகுதியாகப் பெற்று இயங்குகிறது. தமிழில் இருப்பதுபோல் தொன்மையான இலக்கியங்களும் இம்மொழியில் இல்லை. இம்மொழி தெலுங்கிற்குப் பிற்பட்டது. ஆனால் மலையாளத்திற்கு முற்பட்டது. வளர்ச்சியுள்ள மொழியாகக் கூறப்படும் துளுவ மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தக்க அளவிற்கு எந்த நூலும் இல்லை. குடகு மொழிக்கு எழுத்தும் இலக்கியமும் கிடையா. எனவே இதுவரை கூறியவற்றால் திராவிடமொழிகளில் நந்தமிழே மிகத் தொன்மை வாய்ந்தது என்பது வெள்ளிடைமலையாகும். உலக மொழிகளிலே தமிழ் மிகவும் பழமையானதென்று கூறினும் தவறில்லை. அறிஞர் ஞானப் பிரகாசர் தமிழ் எல்லாத் திராவிடமொழிக்கும் அடிப்படையானது என்று எழுதி உள்ளார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும், ‘கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத்து உதித் தெழுந்து ஒன்று பல ஆயிடினும்’ என்று தமிழிலிருந்தே ஏனைய திராவிட மொழிகள் பிறந்ததாகக் கூறியுள்ளார். அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார். ‘தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை’. தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார். 1.⁠ தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக் கிடக்கின்றது; தனித் தமிழ்ச் சொற்களையே காணுகின்றோம். இத்தகைய செந்தமிழ் நடையை மக்கள் ஒரே காலத்தில் உண்டாக்கி இருத்தல் அரிது. பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். 2.⁠ தமிழ் நிகண்டுகளின் விரிவுப் பெருக்கம் தமிழின் தொன்மையைக் காட்டும். 68500 சொற்களை யாழ்ப்பாணத்துத் தமிழ் அகராதியில் காணலாம். வின்சுலோ என்ற ஐரோப்பியரின் பெரு முயற்சியால் வெளிவந்த பல்கலைக் கழக அகராதியில் 84000 சொற்கள் காணப்படுகின்றன. 3.⁠ பழங் கன்னடம், பழைய மலையாளம், துளுவம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை தமிழின் தொன்மையைக் காட்டும். 4.⁠ வடமொழிச் சொற்களைத் தமிழாக்கி வழங்கும் தன்மை தமிழின் பழமையைக் காட்டுவதாகும். 5.⁠ பழைய கல் வெட்டுக்கள் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்களிலும், வட்டெழுத்துக்களிலும் எழுதப்பட்டுள்ளமை தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும். 6.⁠ தெலுங்கின் முதற் சொற்களும் விகுதிகளும் தமிழின் முதற் சொல் விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியாக இருப்பதும் தமிழின் தொன்மையை விளக்கும். அடுத்து தமிழின் தொன்மை குறித்துத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம். அவர் எழுதியிருப்பதாவது: “தமிழ் மொழியின் இயலே தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றது. தமிழின் தொன்மை வரலாற்றுக் காலத்தையும் கடந்து நிற்பதொன்று. உலகில் நிலவும் பல மொழிகளுள் நம் தமிழ் மொழி மெல் லோசை உடையது என்பது வெளிப்படை மெல்லோசை மொழி நேற்றோ இன்றோ தோன்றியிராது.” தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மை வாய்ந்த நூல் ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியமே என்பதைத் தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு அறிவர். அஃது இற்றைக்குச் சற்றேறக் குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். ஒரு மொழியில் இலக்கண நூல் எப்பொழுது தோன்றும்? அம் மொழியில் இலக்கியங்கள் பல நூருயிரமாகப் பெருகிப்பெருகி வளர்ந்த பின்பே இலக்கண நூல் தோன்றுதல் இயல்பு. எனவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தோன்ற வேண்டுமானுல் அதற்கு எத்தனை ஆண்டுகட்கு முன்னுல் இலக்கிய நூற்கள் பல தமிழில் தோன்றியிருத்தல் வேண்டும்? ஒரு மொழியில் இலக்கியங்கள் திடீரெனப் புற்றிசல்கள் போலத் தோன்றுதல் என்பது நடவாத காரியம். அந்த மொழியில் சுவைமிக்க இலக்கியங்கள் தோன்ற வேண்டும் என்றால் அந்த மொழி பலநூறு ஆண்டுகட்கு முன்பே தோன்றி மக்களிடையே வழங்கி, பின் புலவரிடையே தவழ்ந்து சொல்வளம் பல்கியிருத்தல் வேண்டும். இதிலிருந்து தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கும் முந்திய ஒரு தொன்மை மொழி என்பது விளங்கும். கி. மு. வில் செய்யப்பட்ட ரோம நாடகம் ஒ ன் றி ல் கன்னட மொழிக் காட்சி ஒன்று வருகிறது. கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதை அறிஞர் எல்லோரும் கூறுவர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். மோகஞ்சோதாரா, ஆரப்பா என்னும் சிந்துவெளிப் புதையற் பொருட்களிலே காணப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களை ஒத்திருக்கின்றன எனப் பேரறிஞர் ஈராசடிகள், மார்சல் என்பவர்கள் கூறியிருக்கின்றனர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். வட மொழியிலே மிகவும் தொன்மையான நூல் இருக்கு வேதமாகும். அஃது இற்றைக்கு ஏறத்தாழ பதியிைரமாண்டுகட்கும் முந்திய பழமையுடையது எனச் சொல்லப்படுகிறது. அந்த நூலிலே மயில், முத்து முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று வடமொழிப் பேரா சிரியர்களே கூறியுள்ளனர். அது மட்டுமல்ல; பாரதம் இராமாயணத்துக்கும் முந்திய நூலாகும். அந்தப் பாரதப் போரிலே தமிழ் மன்னன் பங்கு கொண்டு அப் பாரதப் போர்ப் படைகட்கு உணவு அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். சென்னை உயரற மன்ற நடுவராக இருந்த திரு. சதாசிவ ஐயர் கூறிய கீழ்வரும் கூற்றும் தமிழின் தொன் மைக்குச் சான்ருகும்:- தமிழ் மொழியில் க, ச, ட, த, ப போன்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றே இருக்க வடமொழியில் இவற்றிற்கு நன்னன்கு எழுத்துக்கள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று எழுத்துக்கள் மிகுதியாக உள்ளன. இது வடமொழியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது புலணுகும். இதிலிருந்து வட மொழிக்கும் தமிழ் முந்தியது என்பது புலனுகும். இதுமட்டு மல்ல; எபிரேய மொழியிலாய பைபிளிலே தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. தோகை, இஞ்சி, அரிசி என்பனவே அச் சொற்கள். இவற்ருேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள மலைகள் மிகவும் பழமை வாய்ந்தது எனப் பேராசிரியர் திட்சதர் கூறியிருக்கிருர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை விளங்கும். தெலுங்கு, மலையாளம் போன்ற கிளை மொழிகளின் சொற்கள் பலவற்றுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேதான் காணப்படுகின்றன. வடமொழியாளர் தமிழிடம் பெற்ற சொற்களும் கருத்துக்களும் எண்ணற்றவை. இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழின் தொன்மை நன்கு அங்கைச் செங்கனிபோல விளங்கும். மேலும் தமிழ் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல; மென்மையும், இளமையும், வளமையும், ஒண்மையும், நுண்மையும் உடைய ஒரு சீரிய செம்மொழியாகும். இதனுலன்றோ, "ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே" "சது மறையா ரியம்வருமுன் சக முழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே !" என்றார் பேராசிரியர் சுந்தரனார். செந்தமிழும் கொடுந்தமிழும் செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம். இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந் மிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனல் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதி காரத்திலே காணப்படுகிறது. “செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்” என்பது சிலப்பதிகார வரியாகும். இது தவிர வேறு நூற்களிலே இப்பிரிவு கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனல் இப்பிரிவை வளர்த்துப் பெரிதாக்கி வாதமிட்டவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களே. “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” என்ற நூற் பாவிற்கு உரையாசிரியர்கள் கூறிய உரைப்பகுதி வருமாறு : "செந்தமிழ் ஒன்று; அதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று’கூறிக் கொடுந்தமிழ் நாடுகளை, “தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன் வடக்கு-நன்றாய சீத மலாடு புன்னா செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்” என்ற வெண்பாவால் காட்டியுள்ளார். நச்சினர்க்கினியர், சேணுவரையர் ஆகிய பிற உரையாசிரியர்கள் புனல்நாட்டுக்குப் பதிலாக ஒளி நாட்டையும் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் தெய்வச்சிலையார் என்ற மற்ருெரு தொல்காப்பிய உரையாசிரியர் இவர்களைப்போலக் கூறவில்லை. அதுமட்டுமல்ல; இவர்களை மறுத்தும் உரை கூறியுள்ளார். “செந்தமிழ் மொழி வழங்கும் தமிழ் நாட்டின் கூறுகளாம் பன்னிரு நிலம் என்னும் பொருள் சிறக்கவில்லையோ? செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடு எனத் தமிழ்நாடு பண்டு பிரிவுண்டு கிடந்ததுண்டோ? இல்லையே !” என்பது தெய்வச்சிலையார் முழக்கமாகும். பேராசிரியர் அரசன் சண்முகம் அவர்களும் தெய்வச்சிலையார் கருத்தையே வலியுறுத்தி, முன்னைய உரையாசிரியர் கூற்றைத் தக்க சான்றுகளோடு மறுத்துக் கூறியுள்ளார். முரண்பாடுகள் இப்பிரிவில் மட்டுமல்ல; இவை வழங்கும் நாடு எது என்பதிலும் காணப்படுகின்றது. ஒருசிலர் பாண்டிய நாட்டைக் கூறுவர். மற்ருெரு சிலர் சோழநாட்டைக் கூறுவர். “செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் ஆகும்” என்பது காரிகை உரையாசிரியர் போன்ற சிலர் கூற்றாகும். இது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்கப் புலவர் உட்பட எல்லாப் புலவர்களும் பாண்டிய நாட்டையே செந்தமிழ்நாடு எனக் கூறிப்போந்தனர். பாண்டிய நாடே சேர சோழ நாடுகளைவிடச் செந்தமிழ் ஆராய்ச்சிக்குரியது" என்பர் திராவிடப்பிரகாசிகை ஆசிரியர். “தென்னன் உறை செந்தமிழ்க் கன்னிநாடு” என்று பாண்டிய நாட்டையே பின்னால் வந்த நாயன்மாரும் ஆழ்வார்களும் கூறிச் சென்றனர். இவர்கள் மட்டுமல்ல; நன்னுால் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர், “செந்தமிழ் நாடே, சந்தனப் பொதியச் [செந்தமிழ் முனிவனும் சவுந்திர பாண்டியன் எனுந் தமிழ்நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநாடென்ப” எனக் கூறிச் சென்றுள்ளார். இப்பிரிவு பற்றிப் பேராசிரியர் பி. டி. சீனிவாசனர் அவர்கள் கருத்தாவது:- “செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு, நாம் வழக்கமாக எண்ணுவதுபோல, பாண்டிய நாட்டில் வழங்கும் மொழி ஏனைய பன்னிரு நிலமொழிகளிலும் உயர்ந்தது என்னும் கருத்திலன்று. ஒன்றின் உயர்வும் தாழ்வும் மற்றொன்றுக்கும் உண்டு. ஆனால் பாண்டிய நாட்டில்தான் முதன் முதலில் எழுத்துமொழி செம்மைப்படுத்தப்பட்டது. அக்காலை இதே எழுத்து மொழி பிற நாடுகளிலும் கையாளப்படும் பொழுது அந்நாட்டவர்கள் எழுத்து மொழியிலே பேச்சு மொழிகள் பலவற்றைச் சேர்த்துக்கொண்டனர்.” இதுகாறும் கூறியவற்றுல் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு பண்டைக்காலத்தில் இல்லை என்பதும், அப் பிரிவு இடைக்காலத்தில் உரையாசிரியர் சிலரால் கற்பிக்கப்பட்டது என்பதும், செந்தமிழ் நாடு என்பது பாண்டி நாடே என்பதும் நன்கு விளங்கும். முத்தமிழ். “சங்கத் தமிழ் மூன்றுந் தா” முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்" என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புக்களுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதலை வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனல் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று உணர்ந்தவர் தமிழ் மக்களே. அந்த உணர்ச்சியிலேதான் தமிழ் மக்களின் சிறப்பும் சீரும் பொதிந்து கிடக்கின்றன. இனி இக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். முத்தமிழ் என்பவை இயல், இசை, நாடகம் அல்லது கூத்து என்பனவாம். இயலுக்குப் பின்னர் இசையும், அதன் பின் கூத்தும் தோன்றி வளர்ந்தது என்பர் பரிதிமாற் கலைஞர். கூத்து, இசை, இயல் என்ற முறையே மு. வ. போன்றார் கொள்கை. எதுவாயினும் ஆகுக. இம்மூன்று பிரிவும் இருவருக்கும் உடன்பாடே என்பது வெளிப்படை. இயற்றமிழ் “இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மாட்டும் பொதுவாகச் செய்யுள் வழக்கு உலக வழக்கு என்கிற இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும் செய்யுளுமாகும் நூற் களின் தொகுதியாகும்” என்பது பரிதிமாற் கலைஞரின் இயற்றமிழ் பற்றிய விளக்கமாகும். பரிபாடல் நீங்கிய சங்கத் தொகை நூற்களும், அவற்றின் உரை நூற்களும், தற்காலத்தில் வெளிவந்துள்ள செய்யுள் நூற்களும், உரைநடை நூற்களும் இயற்றமிழ் நூற்களாகும். இயற்றமிழ் நாடகத் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும் உயிர் போன்றதாகும். இதனாலேயே இது முதலில் வைக்கப்பட்டது என்பர் பரிதிமாற் கலைஞர். இசைத்தமிழ் பண்கூட்டித் தாளமறுத்துப் பாடப்படுவன இசைப்பாக்களாம். நாடகத் தமிழின் நலிவு கண்டு கலங்கிய நந்தம் நெஞ்சுக்கு இசைத் தமிழ் வளர்ச்சி சிறிது ஆறுதல் அளிப்பதாகத் தெரிகிறது. அயலவர் படையெடுப்பாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் தமிழகம் அல்லல் பல அடைந்த போதிலும் ஒரு பக்கத்தில் இசைத்தமிழும் வளர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது. சங்க காலத்திலே பெருக்கெடுத்த இசை வெள்ளம் களப்பிரர் ஆட்சி மணலிலே மறைந்து பின் பல்லவர் சோழர் காலங்களிலே தேவார திவ்யப் பிரபந்த இசை வெள்ளமாக மாறிப் பின் முகமதியர் படையெடுப்பிலே வற்றி விடுதலைப் போரின்போது பாரதி பாடல்களாகவும் பாரதிதாசனின் இசையமுதாகவும் மீண்டும். இத்தமிழகத் திலே இசைக் கடலாகக் காட்சி அளிக்கிறது. தமிழர் வாழ்வே இசை மயமாகத்தான் உள்ளது. திருமணத்தில் மங்கலப் பாட்டு, பெற்ற மழலை உண்ணப் பாட்டு, விளையாடப் பாட்டு, உறங்கப் பாட்டு, வேலை செய்யும்போது தெம்மாங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு, இறுதியிலே இழவு வீட்டிலே ஒப்பாரிப் பாட்டு - இவ்வாறு எங்கும் எப்பொழுதும் பாட்டு; பாட்டு, ஒரே பாட்டுமயம். இன்று நம்மிடையே உள்ளனவெல்லாம் இசை நூல்களே தவிர இசை இலக்கண நூல்கள் அல்ல. அடியார்க்கு நல்லார் வாயிலாகப் பெருங்குருகு, பெருநாரை, பஞ்ச பாரதீயம் ஆகிய பண்டை இசைத் தமிழ் நூல்கள் இருந்து இறந்தன என்பதை அறிகிறோம். சங்கத் தொகை நூல்களிலே இசைத் தமிழை நம்முன் காட்டிக் களிப்பூட்டுவது பரிபாடல் என்ற ஒரு நூலே. அந்நூலும் முற்றும் கிடைக்கவில்லை. ஒரு நூல்தானே கிடைத்துள்ளது என்று எண்ணி சங்க காலத்திலே இசைத் தமிழ் அவ்வளவு தூரம் வளர்க்கப் படவில்லையோ என ஐயுறல் அறிவுடமையன்று. சங்க காலத்திலே இசை நன்கு வளர்க்கப்பட்டது: சங்கச் சான்றோர்கள் நிலத்தைக் குறிஞ்சி முதலிய ஐந்து வகையாகப் பிரித்தனர். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசையும், அவ்விசையைப் பாட வல்ல இசைக் கருவிகளும் இன்ன இன்ன எனத் தம் அரும்பொருட் களஞ்சியமான நூல்களிலே குறித்துச் சென்றுள்ளனர். குறிஞ்சிக்குப் பண் குறிஞ்சிப் பண். அதனைப் பாடற்குக் கருவி யாம யாழ், தொண்டகப் பறை என்பன. முல்லைக்குப் பண் சாதாரி, கருவி ஏறுகோட் பறை. மருதத்துக்குப் பண் மருதப் பண்; கருவி மண முழவு. நெய்தல் நிலப் பண் செவ்வழிப் பண்; கருவி மீன் கோட் பறை. பாலைக்குப் பண் பாலைப் பண்; கருவி நிறைகோட் பறை. இவற்ருேடு ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியாக யாழ் என்ற இசைக் கருவியும் இருந்தது. இன்று நாகரிகத்தின் உச்சியிலே நிற்பனவாக நம்மவரால் புகழ்ந்து போற்றப்படும் நாடுகள் எல்லாம், உடைக்கும் உணவுக்குமே காற்றோடும் கடுவிலங்கோடும் போராடிக் கொண்டிருந்த காலத்திலே, நிலத்தின் தன்மை அறிந்து, அதை ஐவகையாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்ணையும், அவ்வப் பண்களைப் பாடற்குரிய ஐவகை இசைக் கருவிகளையும் உருவாக்கி இசைத் தமிழை வளர்த்த தமிழ் மூதாதையர்களை என்னென்று புகழ்வது? என்னே சங்ககால இசைத் தமிழ்! சங்க மருவிய நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்திலே இசைப் பாக்கள் காணப் படுகின்றன. கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு முதலியன இசைப் பாக்களே. அருமையாக இசைத் தமிழ் வளர்ந்து வந்த சங்க காலத்திற்குப் பிறகு காட்டுமிராண்டி வாழ்க்கையுடைய களப்பிரர் நுழைந்தனர் . பயன்? அழிந்த பல தமிழ்க் கலையோடும் இசைத் தமிழ்க் கலையும் நசியலாயிற்று. குற்றுயிரும் குறையுயிருமாகத் தமிழிசை வாழலாயிற்று. கி. பி. 550-இல் காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் போன்ற இசைப் பாக்கள் பாடி இசைத் தமிழுக்கு உயிரும் உணர்வும் ஊட்டினர். அம்மையாருக்குப் பின்னர் தமிழ் நாட்டில் இசைத்தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட லாயிற்று. தமிழன்னை இசை மாரியில் குளித்தாள்; இசை வெள்ளத்தில் முழுகினுள். களப்பிரர் ஆட்சியில் ஏற்பட்ட குறுமறுக்களும் வடுக்களும் அவள்தன் திருமுகத்தினின்றும் திருமேனியினின்றும் மறைந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இசைத் தமிழைப் பக்திச் சுவையோடு கலந்து நாட்டிலே பரப்பினர். சமணமும் பெளத்தமும் இசையை வெறுத்தமையால் அம்மதங்களும் மக்களால் வெறுக்கப்பட்டன. சைவமும் வைணவமும் இசைமூலம் வளரலாயிற்று. அப்பர் முதலிய சைவக் குரவர் நால்வராலும் பாடப்பட்ட பண்ணுேடு கூடிய இசைப் பாக்களே தேவாரம், திருவாசகம் என்னும் நூல்களாகும். நாத்திகன்கூட இப்பாடல்களைப் பண்ணுேடு பாடக் கேட்பின் உள்ளம் நெக்குருகி நெகிழ்ந்து கண்ணிர் சொரிவான். ஒவ்வொரு பாடலுக்கும் உள்ள பண்ணும் திறமும் பாடலின் தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனல் குருடன் கையில் உள்ள ஒவியம் போலவும், ஊமையன் கனாப்போலும் அவை உள்ளன. இன்று அந்தப் பண்ணை அறிவாரும் இல்லை; அறிந்து பாடுவாரும் இல்லை. தேவார இசையின் சிறப்பை அறிந்த சாரங்க தேவன் என்பான் வட மொழியில் சங்கீத ரத்னகரம் என்று தான் எழுதிய நூலில் தேவார இசைகளையே வடமொழிப் பெயர்களால் பெரிதும் விரித்து எழுதியுள்ளான். இவன் காலம் கி. பி. 1300. இவன் தெளலதாபாத் தேவகிரி அரசன் சிம்மணர் அவையில் புலவகை இருந்தவன். தேவாரத் தமிழிசையே இன்று கர்னாடக இசைக்கு உயிராகவும் கருவாகவும் அமைந்துள்ளது என்று சி. ஆர். சீனிவாச அய்யங்கார், இசைச் செல்வர் இலக்குமணப்பிள்ளை, எம். எஸ். இராமசாமி ஐயர் ஆகிய இசைப் புலவர்கள் கூறியுள்ளனர். தேவார நாயன்மார்கள், திவ்யப் பிரபந்த ஆழ்வார்கள் ஆகியோர் காலத்திற்குப் பின்னர் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது இசைத் தமிழ்ப் புலவர்கள் தோன்றி இசைத் தமிழை வளர்த்தனர். இவர்களுக்குப் பின்பு கி. பி. 13, 14, 15, 16-ஆம் நூற்ருண்டுகளிலே முசுலீம்களும், நாயக்கர்களும், மராட்டியரும் தமிழ் நாட்டை ஆண்டதால் தமிழிசையும் இசை நூல்களும் தாயற்ற சேய்களாயின; தவித்தன; பல உயிர் விட்டன. என்ருலும் இசைத்தமிழ்க் குழவிக்கு அவ்வப்போது செவிலித் தாயர் தோன்ருமல் இல்லை. கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது: இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கர்டைக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக் குச் சிறிது ஏற்பட்ட இசையே ஆரிய இசையாம். இன்றுள்ள கர்னாடக இசையின் கூறுகட்குள்ள-பண்கட்கு உள்ள பெயர்களையும் பண்களையும் தமிழ் முறைப்படி மாற்றியமைத்து விட்டால் அது தமிழிசையாகிவிடும். கர்னாடக இசையின் உயிரும் கருவும் இரத்தமும் சதையும் எலும்பும் தமிழ் - தமிசையே; அதன் தோலும் ஆடையுமே பிற மொழி இசை. முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், கவிக்குஞ்சர பாரதியார் முதலியோர் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இசைப் புலவர்களாவர். இராமாயண நாடகம் அருணாசலக் கவிராயரால் எழுதப்பட்டது. இதிலே கீர்த்தனைகள் உள. இராமசாமிசிவன், ஆனை ஐயா கனம் கிருட்டின அய்யர், கோபாலகிருட்டின பாரதியார், இராமலிங்க அடிகள், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் 19-ஆம் நூற்றாண்டு இசைப் புலவர்களாவார்கள். இக்கால இசை நூல்களில் தலைசிறந்தவை இராமலிங்கர் பாடிய அருட்பா, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து முதலியவையாம். இருபதாம் நூற்றாண்டு இசைப் புலவரில் தலைசிறந்தவர் பாரதிதாசனாவார், மற்றும் நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதியார் முதலியோரும் இசைத் தமிழில் பாக்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், கா. மு. செரிப் போன்றவர்கள் திரைப்படக் கதைகளுக்கு இசைப் பாடல்கள் எழுதி வருகின்றனர். நாடகத் தமிழ் படிக்காத பாமரர்க்கும் நேரமில்லாத படித்தவர்க்கும் நல்லறிவும் இன்பமும் பயத்தற்பொருட்டுப் பயன்படுவது நாடகத்தமிழாகும். இசையும் இயலும் செவிக்குத்தான் இன்பந் தருவனவாகும். நாடகமோ கண்ணுக்கும் இன்பத் தரும் வன்மை படைத்ததாகும். தமிழ் மொழியிலே நாடக நூற்கள் முதலில் மதவிடயமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்று கருதுவது அவ்வளவு சரியன்று. இக்கருத்து இடைக் கால நாடகவளர்ச்சிக்குப் பொருத்தமாகும். இடைக் காலத்திலே நாடகத் தமிழைச் சமயமே வளர்த்தது என்னலாம். அதிலும் சைவமும் வைணவமுமே ஆடல் பாடல்களையும் கூத்தையும் நன்கு வளர்த்தன என்னலாம். முதன்முதலில் ஆடல் பாடல்களே நாடகத் தமிழின்கண் விளங்கின. பின்னர் கதைகள் பல நுழைந்தன. கதை கூறும் உரையாடல்களும் காலப்போக்கில் நுழைந்தன. அதன் பிறகு நாடகம் வேத்தியல் பொதுவியல் என இரண்டாகப் பிரிந்தது. தொடக்க காலத்திலே சீரும் செழிப்புமாக விளங்கிய நாடகத் தமிழ் பிற்காலத்தில் ஆரியராலும் சமணராலும் வீழ்ச்சி அடைந்தது. நாடகம் பாமரர் கையகப்பட்டுச் சீரழிந்தது. பரத நாட்டியம் காமக் கணிகையர் வயப்பட்டுச் சீர்குலைந்தது. சுருங்க உரைப்பின் இவர்கள் தங்கள் வயிற்றை வளர்க்கக் கலையைப் பயன்படுத்தினர். கலை கொலையுண்டது. வடமொழித் தொடர்பாலேயே தமிழில் நாடக நூல்கள் தோன்றின என்பர் ஒருசிலர். இக்கூற்றுக்கு இக்காலத்தில் யாரும் செவி கொடுப்பதில்லை. ஏன்? இக்கூற்றிலே உண்மை வரட்சி மிக்கு இருத்தலால் என்க. வட மொழித் தொடர்பின்றியே தமிழிலே நாடகம் தோன்றி வளர்ந்தது என்பதைத் தொல்காப்பியரும் சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் விளக்கி நிற்கின்றனர். ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்பது தொல்காப்பியச் சொற்றொடர். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை உரையிலே அடியார்க்கு நல்லார், நாடகத் தமிழின் இலக்கணம், நாடகத் தமிழின் இலக்கணத்தைச் செவ்வனே விரித்துக் கூறுகின்ற இலக்கண நூல்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல; அவர் காலத்து நாடகத் தமிழ் நூல்களிலிருந்து அந்தந்த இடங்களுக்கேற்ற சில நாடகத் தமிழ் நூற்பாக்களையும் இடையிடையே எடுத்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியர் காலத்திலே வள்ளிக் கூத்து வழக்கத்தில் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் மூலம் அவர் காலத்தில் நாடகம் மிகச் சீரிய முறையில் விளங்கியது என்பதையும் நாடகத் தமிழ் நன்கு வளர்க்கப்பட்டது என்பதையும் நாம் உணரலாம். அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புராணம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் ஆகியன பண்டைக் காலத்தில் விளங்கிய நாடகத் தமிழ் நூல்களாம். அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் இலக்கண நூல்களைக் குறித்துள் ளாரே தவிர நாடகத் தமிழ் இலக்கிய நூல்களைக் குறிக்கவில்லை. இதனால் அவர் காலத்திலோ அன்றி சங்க காலத்திலோ நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் இல்லை என்பது பொருளல்ல. இருந்து அவர் காலத்திலே இறந்திருக்கலாம். அவர் காலத்தில் கூட மேலே குறித்த அத்தனை இலக்கண நூல்களும் இருந்திருக்கவில்லை. அவரே அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புரணம் முதலிய நூல்கள் தன் காலத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் நூல்வடிவிற் கிடைத்தவை மதிவாணர் நாடகத் தமிழ் நூல், பரத சேனாபதீயம் என்னும் இரண்டு நூல்களே. ஆனால் இவையும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. இந்நூல்களில் மிகப் பழமையானது என்று கருதப்படுவது முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்தியமாகும். இது அகத்தியரால் இயற்றப்பட்டது என்பர். பரதமும் முறுவலும் அடியார்க்கு நல்லார் காலத்லே கேள்வி அளவாய் நின்ற பழைய நூல்களாகும். சயந்தமும் குணநூலும் இவரால் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. குண நூல் நாடக உறுப்பாகிய அகச்சுவையைப் பற்றி விரிவாகக் கூறிய நூலென்று கருதப்படுகின்றது. செயிற்றியம் என்னும் நூல் சூத்திர யாப்பில் செயிற்றியனாரால் செய்யப்பட்டது. இந்த நூலிலிருந்து அடியார்க்கு நல்லாரும் இளம்பூரணரும் சில சூத்திரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். பரத சேனாபதீயம் என்னும் நூலைச் செய்தவர் ஆதிவாயிலார் என்னும் ஆசிரியர் ஆவார். இது வெண்பாவாற் செய்யப்பட்டது; அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் நூலாகக் கொள்ளப்பட்டது. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் செந்தமிழ்ப் புலவரும் நாடகாசிரியரும் கடைச்சங்கத்துப் பாண்டிய மன்னருமாகிய மதிவாணரால் செய்யப்பட்டது என்பர். இந்நூல் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்டது. இந்நாடக நூலின் சில சூத்திரங்களை சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கையாண்டிராவிட்டால் இன்று தமிழர் நாடகக் கலையற்றவர் என்று கூற இடம் ஏற்பட்டிருக்கும். கருவூலங்கள் போன்ற இத்தகைய நூல்கள் காலவெள்ளத்தால் அழிந்துபோயின. எனினும் நாடகம் தமிழ் மொழியின் வீடகத்திற்குப் பழமையான ஏடகமாய் இலங்கியது என்பது தெற்றென விளங்கும். சங்க காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் செழிப்போடு வளர்ந்துவந்த நாடகத் தமிழ் இடைக்காலத்திலே நலிந்து ஒழிந்தது. இதற்குக் காரணம் சமணம் போன்ற பிற சமயங்களே. சமணர்கள் நாடகத்தையும் இசையையும் வெறுத்தனர். நச்சினார்க்கினியர்கூட இசை, நாடகம் காமத்தை விளைவிக்கும் என்றார். இக் கருத்துக்கள் மக்களிடையே பரவப் பரவ நாடகத் தமிழை வளர்ப்பவர்கள் கூத்தாடிகள் என்றும் இழிசினர் என்றும் ஒதுக்கப்பட்டனர். இதனால் இடைக்காலத்திலே நாடகத்தமிழ் வளர்ச்சி குன்றித் தேயலாயிற்று. பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால் நாடகத் தமிழ் நூல்கள் பல கேட்பாரற்று வீழ்ந்தன. வீழ்ந்த சில நூல்களின் வேர்களினின்றும் சென்ற நூற்றாண்டிலே பல நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் கிளைத்தன. இவ்வாறு கிளைத்த நூல்கள் பெரும்பாலும் செய்யுட்களால் ஆனவை. மேலும் சமய சம்பந்தமான நாடகங்களாகவும் அவை இருந்தன. அவைகளில் குறிப்பிடத்தக்கன அரிச்சந்திர புராணம், இராமாயணம் மாபாரதம், குற்றாலக் குறவஞ்சி, பள்ளு முதலியவைகளாம். பிறகு கி. பி. 1891-ஆம் ஆண்டிலே தமிழ் நாடக உலகில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமாயிருந்த பெரியார் தூ. தா. சங்கரதாசு சுவாமிகள் ஆவார். இவர் நாற்பது நாடகங்கள் வரை எழுதினார். பழைய நாடகங்களைச் செப்பம் செய்தார். இவர் எழுதிய நாடகங்களில் பெரும் பான்மை புராண இதிகாச நாடகங்களே. ரோமியோ, சூலியத், சிம்பலைன், ஒதெல்லோ ஆகிய கவி சேக்ச்பியர் நாடகங்களும் இவரால் எழுதப்பட்டு நடிக்கப்பட்டன. இன்று தமிழ்த் திரைப்படங்களிலே நடித்துவரும் நடிகர் அனைவரும் இவரால் உருவாக்கப்பட்டவர்களே. எனவே இவரைப் பலரும் ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று இன்றும் பாராட்டுகின்றனர். தஞ்சாவூரைச் சார்ந்த நவாப் கோவிந்தசாமி என்பவர் முதன் முதலாக திரை, காட்சி முதலிய அமைப்புகளோடு கொட்டகைகளில் நாடகத்தை நடத்திக் காட்டினார். மேலும் சென்னையிலும், மதுரையிலும், தஞ்சையிலும், குடந்தையிலும் பல நாடகச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கல்யாணராமையர் கம்பெனி, ராமுடு ஐயர் கம்பெனி, வேல் நாயர் சண்முகானந்த சபா, சி. கன்னயா கம்பெனி முதலிய கம்பெனிகள் நாடகக் கலையை இக்காலத்தில் நன்கு வளர்த்தன. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் மக்கள் நாட்டத்தை எல்லாம் கவர்ந்தனர். நாடகத் தந்தையாக விளங்கும் பேராசிரியர் ப. சம்பந்த முதலியாரால் தொடங்கப்பெற்ற சுகுண விலாச சபை கி. பி. 1891-இல் தொடங்கப்பெற்ற அமெச்சூர் சபைகளில் தலைசிறந்ததாகும். இச்சபையில் எஸ். சத்தியமூர்த்தி, சி. பி. இராமசாமி ஐயர், டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்ற தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் நடித்திருக்கிறார்களெனில் இச்சபையின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ! நாடகத் தந்தை ப. சம்பந்த முதலியார் அவர்களின் சலியாத உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் இன்று நாடகக் கலை மிக உயர்ந்து விளங்குகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இவர் இதுவரை எண்பது நாடங்கள் எழுதி உள்ளார். இவர் சிறந்த நடிகரும்கூட. கவி சேக்ச்பியர், காளிதாசன் இவர்களது நாடகங்கள் பலவற்றைச் சிறந்த முறையில் தமிழ்ப்படுத்தி உள்ளார். இவரது கற்பனையில் எழுந்த மனோகரா என்னும் நாடகம் சிந்தனைக்கோர் விருந்தாகும். இவர் எழுதிய சபாபதி நாடகம் சிறந்த நகைச்சுவை நாடகமாகும். கி. பி 1922-க்குப் பின்னர் ஜே. ஆர். ரங்கராஜுவின் இராசாம்பாள், இராசேந்திரன், சந்திரகாந்தா, மோகன சுந்தரம், வடுவூர் துரைசாமி எழுதிய மேனகா முதலிய சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட நாவல்களை எம். கந்தசாமி முதலியார் நாடகங்களாக்கித் தரவே, இளைஞர்கள் ஆர்வத்தோடு இவைகளை நடித்து நாட்டில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். இதே போன்று இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில், தெ. பொ. கிருட்டினசாமிப் பாவலர் எழுதிய கதரின் வெற்றி, தேசியக் கொடி, வெ. சாமிநாத சர்மாவின் பானபுரத்து வீரன், எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு, ஐயாமுத்துவின் இன்பசாகரன் முதலிய தேசிய நாடகங்கள் நடிக்கப்பெற்ற காரணத்தால் மக்கள் உணர்வும் உரமும் பெற்றனர். அறிஞர் சி. என். அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, ரா. வெங்கடாசலம் எழுதிய பெண், மனைவி, எஸ். டி. சுந்தரம் எழுதிய மனிதனும் மிருகமும், கல்கியின் கள்வனின் காதலி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இழந்த காதல், ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் அந்தமான் கைதி, ப. நீலகண்டனின் முள்ளில் ரோசா, நாம் இருவர், எஸ். வி. சகஸ்ர நாமம் எழுதிய பைத்தியக்காரன், சின்னராஜுவின் இரத்தக் கண்ணீர், நாரண துரைக்கண்ணனது உயிரோவியம், நா. சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர் முதலியன தமிழர் தம் இதயத்தைக் கவர்ந்த முற்போக்கு நாடகங்களாகும். இன்று தமிழ் நாடகம் உலகோர் கண்டு வியக்கும் வண்ணம் வளர்ந்து வருகிறது. அதற்குக் காரணம் மேலே குறிப்பிட்ட தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களேதான். அவர்கள் தான் நல்ல தமிழிலே துடிதுடிப்பும் கருத்துச் செறிவும் கற்பனை வளமும் பொருந்திய பல நாடகங்களை எழுதி நடித்து வருகின்றனர். இன்று நாடகத் தமிழின் உயிராக விளங்கும் ஒரு நூல் உளது எனில் அது பேராசிரி யர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயமே என்க. பரிதிமாற் கலைஞர் நாடகம் பல எழுதியுள்ளார் எனினும், அவை படிக்கப் பயன்படுவனவே தவிர நடிக்கப் பயன்படுவன அல்ல. ஆனால் இவர் கி. பி. 1891-ல் எழுதிய நாடகவியல் என்னும் நூல் நாடக இலக்கணத்தை நன்கு எடுத்தியம்புகிறது. இவ்வாண்டில் தான் மனோன்மணீயம் எழுதப்பட்டது. இன்று நாடக உலகின் முடிசூடா மன்னர்களாய் விளங்குபவர்கள் நவாப் இராசமாணிக்கமும், அவ்வை டி. கே. சண்முகமும் ஆவர். நவாப் இராசமாணிக்கம் நடத்தும் இராமாயணம், ஏசு நாதர், சபரிமலை ஐயப்பன், தசாவதாரம் முதலிய நாடகங்களும், டி. கே. சண்முகம் நடத்தும் இராசராச சோழன், தமிழ்ச் செல்வம், மனிதன், இமயத்தில் நாம், ஒளவையார் முதலிய நாடகங்களும் இன்று மக்கள் உள்ளங்களை எல்லாம். கொள்ளை கொண்டனவாகும். மேலும் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், எம். ஆர். இராதா, மனோகர், சிவாஜி கணேசன் போன்றவர்களும் திரைப்படங்களில் நடிப்பதோடமையாது அவ்வப்பொழுது சிறந்த நாடகங்களையும் நடத்திவருகின்றனர். சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நாடகங்களுக்கும் இந்த நூற்றாண்டில் நடைபெறுகின்ற நாடகங்களுக்கும் வேறுபாடு மிகவுள. முற்காலத்து நாடகங்களிலே பாட்டுக்களே விஞ்சியிருந்தன. அக்கால நாடகங்களின் வெற்றி அவற்றிலுள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருந்தது. ஆனால் நாளாக ஆக மக்கள் நெஞ்சம் பாட்டை விட்டு வசனத்திலும் நடிப்பிலும் சென்றது. இதனால் வர வர நாடகங்களில் பாடல்கள் குறைந்தன. வசனமும் நடிப்பும் மிகுந்தன. ஆனால் சென்ற நான்கு ஆண்டுகளாக மக்களின் நெஞ்சம் வசனத்திலும் நடிப்பிலும் மட்டுமல்ல, கதையமைப்பிலும் செல்லத் தலைப்படலாயிற்று. வசனமும் நடிப்பும் நடிப்புக்கேற்ற கதையமைப்பும் இருந்தால் தான் இன்று நாடகங்கள் முழு வெற்றியைப் பெற முடியும். பாடல்கள் மிகுதியாகப் பெற்ற நாடகம் இடைக்காலத்திலே அயலவர் கூட்டுறவால் நலிந்து, பிற்காலத்திலே பல பெருமக்களால் உயிர்பெற்று, உரை நடையைப் பெற்று இக்காலத்தில் வசனமும் நடிப்பும் பெற்று கதையமைப்பை உயிராகக் கொண்டு நிலவுகிறது. சிற்பி கையிற் கிடைத்த கல் சிற்பமாகும்; சிறுவன் கையிற் கிடைத்த கல் பிறர் மீது வீச உதவும். அது கல்லின் குற்றமன்று; மனிதனின் குற்றமே. அது போல நாடகத்தால் தீமை விளையின் அது நாடகத்தின் குற்றமன்று; அதனைப் பயன்படுத்துவோரே குற்றவாளிகள். எனவே நாடகத்தை நாம் தான் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நாடகத்தால் நாட்டு மக்கள் பெற்ற, பெறுகின்ற பயன்கள் எண்ணத் தொலையாதனவாகும். தமிழ் இலக்கண வளர்ச்சி தமிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம். இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி இலக்கண நூல்களும், அகப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஒவ்வொரு துறையிலும் இலக்கண நூல்களும் உள. ஆனல் தொடக்கத்தில், அஃதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இல்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஓர் இலக்கண நூல் இருந்தது. தொல்காப்பியம் அதற்குச் சான்று தரும். சின்னஞ்சிறு ஆல வித்திலிருந்து ஏராளமான கிளைகள் கிளைப்பதைப்போலத் தொல்காப்பியத்திலிருந்து பல இலக்கண நூல்கள் கிளைத்துள்ளன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகும். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியர் தொல்காப்பியக் குடியிற் பிறந்தவர். இவரது காலம் கி. மு. 500 க்கும் 300 க்கும் இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன. மேலும் பொருளதிகாரத் தின்மூலம் பழந் தமிழ் மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியவற்றை நன்கு அறியலாம். நச்சினர்க்கினியர், சேவைரையர், இளம்பூரணர், பேராசிரியர்,தெய்வச்சிலையார், கல்லாடனுர் என்போர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இந்நூல் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்தது. தொல்காப்பியருக்குப் பின்னல் பொருள் பிரியலாயிற்று. பிற்காலத்தில் பொருளியல் நான்காக வளரலாயிற்று. தொல்காப்பியர் சில நூற்பாக்களினுல் கூறிய யாப்பும், அணியும் தனித்தனி இலக்கணங்களாக வளரலாயின. அகத்திணையியலும் புறத்திணையியலும் இவ்வாறே தனித் தனியாகப் பிரிந்து வளரலாயின. எனவே அவற்றிற்கு எல்லாம் தனித்தனி நூல்கள் உண்டாயின. அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் இலக்கண நூல்கள் பல. அவற்றுட் சிறந்தது நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலே. இது தொல்காப்பியத்தைப் பின்பற்றியதாகும். இந்நூலாசிரியர் காலம் பாண்டியன் குலசேகரன் காலமாகும். இவன் காலம் கி. பி. 12-ஆம் நூற்ருண்டாகும். இந்நூல் 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூலின் துணை கொண்டு ஐந்தினைகளைப் பற்றிய செய்திகளையும், காதல், கற்பு இவற்றைப் பற்றியும், மக்களது ஒழுகலாற்றையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். மாறனகப் பொருள் என்பது மற்ருெரு அகப்பொருள் நூலாகும். இதன் ஆசிரியர் குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார். புறப்பொருள் இலக்கண நூல்கள் தொல்காப்பியத்திற்குப் பின்பு புறப்பொருளுக்கு எனத் தோன்றிச் சிறந்து விளங்கும் நூல் புறப்பொருள் வெண்பா மாலையாகும். இந்நூல் வெட்சி, கரந்தை, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய புறப் பொருள்களைப் பற்றி வெண்பாவால் பாடப்பட்டதாகும். இந்நூலாசிரியர் ஐயனுரிதனுர் ஆவார். இவரது காலம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டாகும். சாமுண்டி தேவனார் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுப் போர் முறைகளை இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்நூலுக்கு அடிப்படை தொல்காப்பியமும், பன்னிரு படலமுமாகும். தொல்காப்பியத்தில் புறப்பொருள் ஏழு திணைகளை உடையது. ஆளுல் புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு திணைகளையுடையது. யாப்பிலக்கண நூல்கள் தொல்காப்பியர் உவம இயல் ஒன்றே கூறினர். ஆனல் பிற்காலத்திலோ யாப்பிலக்கணங்கள் எனத் தனிப் பெரு நூல்கள் பல உண்டாயின. அவற்றுள் ஆன்ருேராலும் சான்ருேராலும் நன்கு போற்றப்படுபவை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையுமாகும். இவற்றை யாத்தவர் அமிர்த சாகரர் ஆவார். இவர் வேளாளர்; சமண சமயத்தினர்; கி. பி. 11-ஆம் நூற்ருண்டினர். இவர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகை யாப்பிலக்கணத்தைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவால் கூறுகின்றது. இதற்குக் குணசாகரர் என்பவர் உரை எழுதி உள்ளார். மற்ருெரு நூலாகிய யாப்பருங்கலவிருத்தி சூத்திரப்பாவால் ஆனது. அணி இலக்கண நூல்கள் அணியை மட்டும் பெரிதும் விரித்துக் கூறும் நூல்கள் இரண்டு. ஒன்று தண்டியலங்காரம்: மற்ருென்று மாறன.லங்காரம். தண்டியலங்காரம் என்பது மகாகவி தண்டியாசிரியர் எழுதிய காவியாதரிசம் என்னும் வடநூலின் மொழி பெயர்ப்பு ஆகும். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 125 சூத்திரங்களை உ ைட யது. இந்நூலாசிரியர் வரலாறு தெளிவாகத் தெரிவதற்கில்லை. இந்நூலில் கவி வகைகளும், கவிகளினுள்ளே நின்று அழகு செய்வனவாகிய குண வகைகளும், பொருளணி வகைகளும், மடக்கு, சித்திர கவி இவற்றின் வகைகளும், செய்யுளுக்கு ஆகாத வழுக்களும் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மாறனலங்காரம் என்ற அணி நூல் குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டதாகும். தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை உதாரணங்காட்டி விரிவாக இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூல் சூத்திர யாப்பால் அமைந்தது. இவை போக, எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் நூல் நன்னூல் என்னும் பொன்னூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். இவர் தொண்டை நாட்டுச் சனகாதிபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை சன்மதி முனிவர் ஆவார். இவரது சமயம் சைன சமயமாகும். சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளின்படி இவர் நன்னூலை இயற்றினார். இவரது காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டு ஆகும். மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர், விசாகப்பெருமாள் ஐயர், இராமானுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் என்போர் நன்னூலுக்கு உரை எழுதி உள்ளனர். இவற்றுள் சங்கர நமச்சிவாயர் உரை விருத்தி உரை எனப்படும். தொல்காப்பியத்திற்குப் பின்பு ஐந்திலக்கணமும் கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவாம். வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்தரனர் ஆவார். இவர் தஞ்சையைச் சேர்ந்த பொன்பற்றி என்னும் ஊரினர். இவரது காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டாகும். இவர் வீரசோழன் பெயரால் இந்நூலை இயற்றினர். இந் நூலின் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை நன்கு அறியலாம். இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகராவார். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்பர். இதில் ஐந்திலக்கணங்களும் நன்கு கூறப்பட்டுள்ளன. ஆனல் எழுத்து, சொல், பொருள் என்றே இந்நூல் மூன்ருகப் பிரிக்கப்பட்டுள்ளது. அணியிலக்கணம், யாப்பிலக்கணம், பாட்டியல் இம்மூன்றும் பொருளதிகாரத்தில் அடங்கியுள்ளன. தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், அகப்பொருள், வெண்பா மாலை போன்ற நூற்கருத்துக்களைத் தழுவி இதனை இந் நூலாசிரியர் எழுதி உள்ளார். மேலும் இந்நூலுக்கு உரை யும் இவரே எழுதியுள்ளார். இவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். படிக்காசுப் புலவர் இவரது மாணவர் ஆவார். திருவாரூர்ப் பன்மணிமாலை, மயிலம்மை பிள்ளைத் தமிழ் முதலியன இவரது பிறநூல்களாகும். இவர் சைவ சமயத்தினர். தொன்னூல் என்பது மற்ருெரு நூலாகும். இதன் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைச் சுருக்கிக் கூறும் வசன நூலாகும். ** பிறநூல்கள்** இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும் இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசான தேசிகர் எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடிையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக கி. பி. 18 - ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரால் எழுதப்பட்டதாகும். நேமிநாதம், முத்துவீரியம் நேமிநாதமே சின்னூல் ஆகும். இது வெண்பாவால் ஆயது; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் இவற்றைக் கூறுகிறது. இந்நூலாசிரியரது பெயர் குணவீர பண்டிதராகும். இவர் காலம் கி. பி. 12- ஆம் நூற்ருண்டு. முத்துவீரியம் என்பது முத்துவீர ஆச்சாரியால் இயற்றப்பட்ட மற்ருெரு இலக்கண நூலாகும். மறைந்த நூல்கள் அகத்தியம், பன்னிரு படலம், அவிநயம் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் முற்றிலும் கிடைக்கப்பெருத நூல்களாகும். இவற்றுள் அகத்தியம் என்பது அகத்திய முனிவரால் எழுதப்பட்டது என்பர். இந்நூல் இன்று முற்றிலும் கிடைக்கப்பெற்றிலது. உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட சூத்திரங்களே நமக்கு இன்று கிடைத்துள்ளன. இந்நூலினது காலம் முதற் சங்க காலம் அல்லது இடைச் சங்க காலம் என்பர். பன்னிரு படலம் என்பது அகத்தியருடைய மாணவர் பன்னிருவரால் பாடப்பெற்ற பாடல்களைக்கொண்ட புறப்பொருள் இலக் கணம் கூறும் நூல் என்று கூறப்படுகின்றது. அவிநயம் என்னும் நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் அவிநயனர் ஆவார். இவை தவிர கி. பி. 10-ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட காக்கைபாடினியம் என்னும் யாப்பு இலக்கண நூல் யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. இறையனர் அகப்பொருள் இது இறையனர் என்பவரால் இயற்றப்பட்ட களவியல் நூலாகும். இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். கடைச் சங்கப் புலவர் நாற்பதின்மரும் இதற்கு உரை கண்டனர். ஆனால் நக்கீரர் எழுதிய உரை மிகச் சிறந்ததாக விளங்குகின்றது. தூய செந்தமிழ் நடைக்கு எடுத்துக் காட்டாக இவ்வுரை நூல் விளங்குகின்றது. இதுவரை எழுதியவாற்றால் தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக இருந்த தமிழ் இலக்கணம், காலம் செல்லச் செல்ல எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாகி, பின்பு பொருள் அகம், புறம் எனப் பிரிந்து வளரலாயிற்று என்பதை அறிகிறோம். இவை போகப் பாட்டிலக்கணம், பொருத்த இலக்கணம் என்பவையும் தோன்றின. பாட்டிலக்கணம் என்பது 96 வகைப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். பொருத்த இலக்கணம் என்பது மங்கலம் முதலாகப் பாட்டுக்கும், பாட்டுடைத் தலைவனுக்கும் உரிய பொருத்தங்களாகும். இவற்றேடு பிரயோக விவேகம் என்ற நூலும் உள்ளது. ஆனால் 19 - ஆம் நூற்ருண்டின் நடுப் பகுதியிலே தமிழிலக்கணம் இதுவரையில் வந்த வழியைவிட்டுப் புது வழியே செல்லத் தொடங்கிற்று. அதுவரை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என வளர்ந்த தமிழிலக்கணம் 19-ஆம் நூற்ருண்டிலே மொழி நூல்: (Philology) என்ற துறையிலே வளரலாயிற்று. இதற்கு அடிப்படைக்கல் நாட்டியவர் கால்டுவெலே. அவரே இந்த மொழி நூல் துறை தமிழிலில் ஏற்பட மூலமாவார். அவர் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஈடும் இணையும் அற்றது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாகியும் அதனை ஒப்பப் பிறிதொரு நூல் இன்னும் தோன்றவில்லை. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது திராவிட மொழிகளின் இலக்கணங்களை நன்கு ஒப்பிட்டுப் பார்த்து, அம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் தமிழ் விளங்குகின்றது என அறுதியிட்டுக் கூறுகின்றது. மேலும் திராவிட மொழிகளில் தமிழ் மொழி ஒன்றே வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கும் ஆற்றல் மிக்கது என்றும் இந்நூல் கூறுகின்றது. வட மொழியில் கலந்துள்ள பல தமிழ்ச் சொற்களைப் பற்றிய செய்திகளையும் இதனால் நாம் நன்கு அறியலாம். கால்டுவெல் காட்டிய வழிலே நின்று இன்று பேராசிரியர்கள் ரா. பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார், தேவநேயப் பாவாணர், சி. இலக்குவனார் என்போர் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் என்பவரும் அமெரிக்கா சென்று இத்துறையில் பயிற்சிபெற்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பி உள்ளார். நாடக இசைத் தமிழிலக்கண வளர்ச்சி இயற்றமிழ் இலக்கண வளர்ச்சியைப் படித்துவிட்டு நாடக இசைத்தமிழ் இலக்கண வளர்ச்சியை நோக்கும் பொழுது நம் மனம் பெரிதும் வருத்தம் அடையவே செய்யும். வளராதது மட்டுமல்ல; வளர்ந்துள்ள நிலையினைக் காட்டும் நூல்களும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நூல்களின் பெயர்களையே நம்மால் அறிய முடிகின்றது. அதுவும் அடியார்க்கு நல்லார் உரை இல்லையேல் நாம் ஒன் றும் அறிய முடியாது. பரதம், அகத்தியம், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு முதலியன இசை நாடகத் தமிழ் நூல்களாம்.  தமிழ் மொழியும் வடமொழியும் அஃது ஒரு காலம்; எது? தமிழும் வடமொழியும் ஒன்று; அது மட்டுமல்ல; தமிழே வட மொழித்தாயிடமிருந்து தோன்றிய ஒரு மொழி என்று எண்ணிவந்த காலமது. மேலும் அக்காலத்திலே வாழ்ந்த தமிழறிஞர்களும் வட மொழி வாணரும் வட மொழியின் துணையின்றித் தமிழ் வாழவே முடியாது என்று உறுதியாக நம்பிவந்தனர். இந்தக் கொள்கைக்கு முதன்முதல் சாவுமணியடித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர் கால்டுவெல் என்பவராவர். இவர் வெறுமனே தம் எதிர்ப்புக் கொள்கையைக் கூறவில்லை. வடமொழி, தமிழ்மொழி, பிற திராவிடமொழிகள் திராவிட - ஆரிய மொழிகள் ஆகிய பல மொழிகளையும் பல ஆண்டுகளாக நன்கு ஆய்ந்தாய்ந்து இறுதியிலேதான் தமிழ் வேறு; வடமொழி வேறு; வடமொழியின் துணையின்றியே தமிழ் செழுமையோடு விளங்க முடியும் என்று நிறுவினார். ஆணால் இவர்க்கு முன்னரும் பின்னரும், தமிழ் வடமொழியினின்றும் வ ந் த து என்பவர்கள் வெறும் போலிக் காரண்ங்களையே தங்கள் கூற்றுக்குச் சான்றாகக் காட்டிச் சென்றனர். வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கக் கால்டுவெல் பெருமகனார் பதின்மூன்று காரணங்களை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் இன்னும் ஆய்ந்தால் மேலும் பல காரணங்கள் வெளிப்படல் உறுதி. கால்டுவெல் மட்டுமின்றிப் பரிதிமாற்கலைஞரும், சிவஞான முனிவரும் தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளிற் சிலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இனிக் கால்டுவெல் காட்டும் வேற்றுமைகளிற் சில காண்போம். தமிழ் முதலிய திராவிட மொழிகளில் ஆண்பால் உண்டு; பெண்பால் உண்டு. ஆனல் வடமொழியிலோ இந்த இரண்டோடு அலிப்பால் என்றதொரு புதிய பால் வகுப்பும் உண்டு. மேலும் மற்ருெரு பெரிய வேற்றுமை தமிழுக்கும் வடமொழிக்கும் இடையேயுண்டு. அஃது எது? தமிழில் பால் வகுப்புக்கு அடிப்படையாக இலங்குவது. பொருள்; வடமொழியிலோ சொல்லமைப்பைப் பொறுத்தே பால் வேறுபாடு கற்பிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : மனைவி என்ற பொருளிலேயே தாரம்’ என்ற சொல்லும் களத்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றன. ஆனால் தாரம் என்ற சொல் ஆண்பால் எனவும், களத்திரம் என்ற சொல் பெண்பால் எனவும் சொல்லப்படுகின்றன. மற்ருெரு வேற்றுமையாவது :- வடமொழியிலே ஒருமைக்கு ஒரு விதமான வேற்றுமை யுருபு: பன்மைக்கு மற்றொருவிதமான வேற்றுமை யுருபு. தமிழிலோ அவ்வழக்குப் பெரும்பாலும் இல்லை. செங்குட்டுவன் வடவனை வென்றான் செங்குட்டுவன் வடவர்களை வென்றான் இங்கே " ஐ " என்ற வேற்றுமை உருபு ஒன்றே ஒருமைக்கும் பன்மைக்கும் வந்துள்ளது. இவ்வாறு வருவது வடமொழியில் இல்லை. பிறிதொரு வேறுபாடாவது :- வடமொழியிலே வேற்றுமை யுருபுகள் முதலியன சொல்லுக்கு முன்னே வரும்; தமிழிலோ பின்னே வரும். " உ-ம்: சில தமிழ் ஆசிரியர்கள் வடமொழிக்குப் பெரிதும் ஆதரவு நல்குகின்றனர். தமிழிலே ஒன்று, பல என்ற வழக்குண்டு; வடமொழியிலோ ஒன்று, இரண்டு, பல என்ற வழக்குண்டு. தமிழிலே நாம் என்று சொன்னால் இச்சொல் முன்னிலை யாரையும் உளப்படுத்தும்; நாங்கள் எனின் முன்னிலை யாரை உளப்படுத்தாது. இத்தகைய வேறுபாடு வடமொழியில் இல்லவே இல்லை. இனிச் சிவஞான முனிவர் கூறுவ தாவது : ’தமிழ் மொழிப் புணர்ச்சிகட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக் குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் - புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய தினைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யு ளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்" இதுகாறும் கூறியவாற்றால் வடமொழி வேறு தமிழ் மொழி வேறு என்பது தெளிவுறும். தமிழகத்தே வடமொழி வந்து வழங்கத் தொடங்கியதினால் தமிழ் பெற்ற கெடுதல்கள் பல. அவற்றுள் குறிப்பிடத் தக்கது. வடமொழி தமிழிற் கலக்கப்பட்டமையேயாகும். இக்கலப்பு தீய எண்ணத்தோடுதான் வடமொழி வாணரால் செய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடில்லை. தமிழிலே வடமொழிக் கலப்பு சங்க காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வடமொழிக் கலப்பு உச்ச நிலையையடைந்த காலம் கி. பி. 13, 14, 15 ஆகிய நூற்றாண்டுகளாகும். ஏனென்றால், இக்காலத்தேதான் மணிப்பிரவாள நடையிலே எழுதப்பட்ட ஈடும், சீபுராணமும் தோன்றியது என்பதால் என்க. வட சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்து எழுதும் உரைநடையே மணிப்பிரவாள நடையாகும். மணி, பிரவாளம் என்பன முறையே முத்து, பவளம் என்று பொருள்படும். இவ்விரண்டையும் கலந்து ஒரு மாலை உண்டாக்கினால் அது எவ்வாறு இருக்குமோ அது போல வட சொல்லும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்து இம் மணிப்பிரவாள நடை விளங்கும். இதனைச் சிறப்பாகப் போற்றியவர்கள் வைணவரும் சமணரும் ஆவார்கள். கி. பி. 900 - லிருந்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்நடை பெருமை பெற்றிலங்கியது. இந்நடையைப் பற்றி வி.கோ. சூ. அவர்கள் தமது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். ’மணிப்பிரவாளம் என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது வட மொழியும் தென் மொழியும் சரிக்குச் சரி கலந்த பாஷையாம். மணியும் பவளமும் கலந்து கோத்த தோர் மாலை, காட்சிக்கின்பம் பயத்தல் போல தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷையை வகுக்குமாறு தூண்டிற்று." மணிப்பிரவாள நடையில் முதலில் தமது நூல்களை எழுதியவர் சமணரே. இவர்களைப் போலவே பெளத்தரும் நூல்கள் எழுதினர்கள். பல இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இயற்றித் தண்டமிழை வளர்த்த சமணர்கள் ஒரளவிற்குப் புதுக் கொள்கைகளும் தமிழிலே புகுவதற்குக் காரணமாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இதன் காரணமாகத்தான் துாய தமிழ் நடை மணிப்பிரவாள நடையாக மாறிற்று. நம் தாயகத்தில் ஆட்சித் துறையிலும் சமயத் துறையிலும் மாறுதல்கள் நேர்ந்தபோது வடமொழி பயின்ற தமிழர்கள் மொழியின் அமைப்பையே மாற்றப் பெரிதும் முயன்றனர். இதனால் மணிப்பிரவாள நடையும் கிரந்த எழுத்து முறையும் தமிழில் ஏற்பட்டன. ஆனால் இம்முயற்சி முற்றிலும் வெற்றிபெற முடியவில்லை. மூவேந்தர் மரபினர் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றிவந்தமையாலும், சமயத் துறையில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் நல்ல தமிழில் இனிய பாடல்களை இயற்றி மக்கள் நாட்டத்தைத் தங்கள்பால் இழுத்தமையாலும், தமிழ் சீர்குலையாமல் இன்று வரை வாழ்ந்துவருகிறது. சைவ சித்தாந்தக் கொள்கைகள், சங்கராச்சாரியாருடைய வேதாந்தக் கருத்துக்கள், இராமானுசரது விசிச்டாத்வைதம் போன்றவை புகுந்த காரணத்தினாலும்ம் தமிழில் வட சொற்கள் பல நுழைந்தன. வைணவப் பெருமக்களும் ஈடு முதலியவற்றை மணிப்பிரவாள நடையிலேயே எழுதினர். இவ்வாறு சமணர்களாலும், வைணவர்களாலும் உண்டாக்கப்பட்ட மணிப்பிரவாள நடை கி. பி. 1600-க்குப் பின்னர் வரவரக் குறைந்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் மறைந்துவிட்டது. எடுத்துக்காட்டு : ’அக்கிராஸனாதிபதி அவர்களே! உப அத்யகூஷகர் அவர்களே! எதிரே பிரஸன்னமாயிருக்கும் மஹா ஜனங்களே! உங்களுக்கு முதலில் என் நமஸ்காரம்." தமிழிற் பிற மொழிச் சொற்கள் மிகுதியாகக் கலக்கப் பட்டதால் தமிழ் கெட்டு உருமாறற்கு வழி ஏற்பட்டது என்பதற்குச் சான்று பல உள. மலையாள மொழியை எடுத்துக் கொள்ளுவோம். மலையாளம் என்பது வேறு எதுவும் அல்ல; தமிழில் வரம்பு மீறி வடமொழியின் கூறுகள் பலவற்றைக் கலந்தமையால் ஏற்பட்ட மொழியாகும். அத்தகைய செயலைச் செய்தவர் எழுத்தச்சன் என்பவராவர். அவர் செய்த செயலினால் இன்று மலையாள மொழி தமிழின் கிளை மொழிதான என்று ஐயப்பட வேண்டிய நிலையிலுள்ளது. இவ்வாறே நன்னய பட்டர் என்பவர் வேங்கடத்தருகே, வடக்கே வழங்கிய தமிழிலே, வடமொழிக் கூறுகளைக் கலந்தார். அங்கு வழங்கிய தமிழ் தெலுங்காயிற்று. இன்று வடமொழியின் துணையின்றித் தெலுங்கு, மலையாளம் என்பன இயங்குதல் பெரிதும் அருமையாகிவிட்டன. அந்த அளவுக்கு அவற்றிலே வடமொழிக் கூறுகள் கலந்துவிட்டன. இனி ஆங்கில மொழியைப் பார்ப்போம். ஆங்கிலேயர்கள் தம் மொழியில் இல்லாத சொற்களையே பிற மொழியினின்றும் அப்படியே கடன் வாங்குவர். அதுவும் எல்லாச் சொற்களையும் அப்படியே கடன் வாங்கார். சிலவற்றை வேடிக்கையாக மொழிபெயர்த்துக்கொள்வர். கட்டுமரம் போன்ற சொற்களை ஆங்கிலேயர் அப்படியே எழுத்துப் பெயர்ப்பாகக்i (Transliteration) கொண்டனர். அதே ஆங்கிலேயர்கள் முருங்கைக் காய், வெண்டைக்காய் என்பனவற்றை அப்படியே கொள்ளவில்லை. ட்ரம்ச்டிக் (Drumstick) என்றும், லேடிசுவிங்கர் (Lady’s finger) என்றும் கொண்டனர். ஆனால் அமெரிக்கர்கள் தத்தம் மனம் போனவாறெலாம் புதுச் சொற்களை ஆக்கியும், பிற மொழிச் சொற்களைக் கலந்தும் வருகின்றனர். இச்செயல்கண்டு ஆங்கிலேயர் பெரிதும் வருந்துகின்றனர். இன்னும் ஒரு வினா. பழைய மலையாளத்திற்கும் புது மலையாளத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே அவ்வினா. பழைய மலையாளம் ஒரு மொழி, புது மலையாளம் பிறிதொரு மொழி என்றே கூற வேண்டியுளது. தற்கால மலையாளிக்குப் பழைய மலையாளம் கிரேக்கமாகத் தோன்றுகிறது. அது போலப் பழங் கன்னடம் வேறு; புதுக் கன்னடம் வேறு. வடமொழிச் சொற்கள் மிகுதியும் நுழைக்கப்பட்டுவிட்டதால் அம்மொழிகள் உருமாறிப் பிற்கால மக்களுக்குத் தம்முன்னோர் பேசிவந்த மொழியே புரியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. அறிந்தோ அறியாமலோ தமிழ்மொழியைச் சிதைத்து உருமாற்ற ஒரு முயற்சி பேரளவில் மணிப்பிரவாளம் எழுதப்பட்ட காலத்தில் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தன்னேரில்லாத, தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி ஆரியம் போல் உலகு வழக்கு ஒழியாது, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும், துளுவும் என ஒன்று பல ஆயிடினும், தான் அழியாது, சிதையாது சீரிளமைத் திறனோடு வாழ்கின்றது என்றால் நமது முன்னோரும் நாமும் பிறமொழிச் சொற்களை மிகுதியாகப் புகவிடாமல் செய்ததும், புகுந்த சொற்களை விலக்கியதுமே காரணம். எனவே நாமும் வருங்காலத்தில் விழிப்போடிருந்து பிறமொழிச் சொற்களை மிகுதியாகக் கையாளாது தமிழ்மொழியைப் பேணல் வேண்டும். தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் த மிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்களைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துக்களிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர். நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துக்களின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துக்கள், வேறு எவற்றின் துணையும் இன்றித் தனியுரிமையோடு இயங்கவல்லன. எனவே அவை உயிர் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அ முதல் ஒளகார இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாம். உந்தியிலிருந்து எழுகின்ற காற்றானது வாயின் வழியே யாதொரு தடையுமின்றி வெளிவருகின்ற பொழுது பிறப்பது உயிராகும். உயிர் எழுத்துக்களிலே பலவகை உண்டு. அ, இ, உ, எ, ஒ என்பன குறில்கள். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள என்பன நெடில்கள். அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள். உயிர் எழுத்துக்களின் அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, என்னும் மூன்றாகும். அ வும் இ யும் சேரின் எ பிறக்கும். அகரமும் உகரமும் சேரின் ஒ பிறக்கும். நா கிடந்த நிலையில் வாயைத் திறக்க அகரமும், அந்நிலையில் நா முன்னீக்கி எழுகையில் இகரமும், பின்னோக்கி எழுகையில் உகரமும் பிறக்கும். உயிர் எழுத்துக்களிலே ஐ என்பதும் ஒள என்பதும் கூட்டொலிகளாகும். உயிர் எழுத்துக்கள் புகுதற்கு இடமாக உள்ள க் முதலிய பதினெட்டெழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் எனப்படும். மெய் எனின் உடம்பு என்று பொருள். வாயின் வழியே வருங்காற்று உதடு, பல், நா முதலியவற்றினால் தடைப்படுத்தப்பட்டு வெளியிடப்படின் மெய்யெழுத்துக்கள் பிறக்கும். மெய் எழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் உரிய முயற்சி மட்டும் ஒன்று; பிறக்கும் இடம் மட்டும் வெவ்வேறு. அஃதாவது மூக்கின் வழியாகக் காற்று வருகையில் மெல்லினம் பிறக்கும் என்பதாம். ககார முதல் னகார முடிய உள்ள பதினெட்டும் மெய் எழுத்துக்களாம். இவற்றிலே ய, வ, என்ற இரண்டும் அரையுயிர்கள் என்றும் உடம்படு மெய்கள் என்றும் கூறப்படும். க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் என்பனதாம் உண்மையிலேயே மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துக்கள். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்பன இறுதியில் வரும் மெய் எழுத்துக்கள். மொழிக்கு இடையிலே வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருதல் இல்லை. ஆய்தம் என்பது புள்ளி, தனிநிலை, அஃகேனம் முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இது மொழிக்கு இடையிலேதான் வரும். மிகவும் அருகிய பயிற்சியுடையது ஆய்தம். இந்த ஒர் ஆய்த எழுத்தைக் கொண்டே எத்தகைய பிறமொழிச் சொற்களையும், பிறமொழி எழுத்துக்களைக் கடன் வாங்காமலேயே தமிழிலே எழுதிவிடலாம் என்று நிறுவினர் காலஞ்சென்ற அறிஞர் பா. வே. மாணிக்கனார். உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப் பதினாறு ஆகும். மெய்யெழுத்துப் பதினெட்டையும் உயிரெழுத்துப் பன்னிரண்டையும் பெருக்கினால் இருநூற்றுப் பதினாறு என்ற தொகை வரும். உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய் எனப் பெயர்பெற்றது. அடுத்து, தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவங்களையும் பிற்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் முறையாக ஆராய்வோம். ‘ஈ’ என்பது, ஈ என்றும் " " என்றும் இருவிதமாக எழுதப்படுகிறது. மற்ற நெடில் எழுத்துக்களுக்குச் சுழி இருப்பதை நோக்கியே சிலர் இவ்வாறு எழுதுகின்றனர். ஆனால் இலக்கணத்தில் இதுபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் ஈ என்ற வடிவே பண்டுதொட்டு வழங்கிவந்திருக்கலாம். எகரமும் ஒகரமும், அவற்றின் நெடில்களும் தொல்காப்பியர் காலத்தே பின்வருமாறு எழுதப்பட்டு வந்தன.  எ், ஒ் - குறில்கள். எ , ஒ - நெடில்கள். பண்டைக்காலத்தே ஒலையிலே புள்ளியிட்டு எழுதும் வழக்கமில்லை. எனவே இவை போன்ற குறில்களையும் நெடில்களையும் ஒரேமாதிரியே எழுதிவந்தனர். இதனால் படிப்பார்க்குக் குறில், நெடில் பற்றி மயக்கமும், படிப்பதில் தயக்கமும் ஏற்பட்டன. இந்தத் தயக்கத்தையும் மயக்கத்தையும் நீக்குவதற்காக வீரமாமுனிவர் இவ்வெழுத்துக்களைக் கீழ்வருமாறு எழுதினர் : எ, ஒ = குறில். ஏ, ஓ = நெடில்.   மெய்யெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளி மேலிடப்பெற்று எழுதப்பட்டன. ஆனால் ஏட்டில் எழுதும்பொழுது புள்ளி நீக்கப்பட்டது. இன்றைய ஏட்டில் புள்ளியிடப்பட்டே மெய்யெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கே ககரம் முதல் கெள வரை உள்ள எழுத்துக்களும் பதினெட்டு மெய்களுக்கும் இனமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. க (க்) புள்ளி நீக்கி எழுதப்பட்டது. க + ஆ = க என்று முற்காலத்தே எழுதப்பட்ட வடிவம். கா-இஃது இன்றைய வடிவம். கி, கீ = மேல்விலங்கு இருந்தது. கு, கூ = என்று முன்னர் எழுதப்பட்டது. கெ = அன்றும் இன்றும் இவ்வாறே எழுதப்பட்டுவருகிறது. கே. = இது, கெ் என்று எழுதப்பட்டது. கெ் இதனைக் கே என்று வீரமாமுனிவர் ஆக்கினார். கொ என்பதன் பண்டைய வடிவம் கெ ஆகும். கோ என்பது கெ். என்று முன்பு எழுதப்பட்டது. கை என்பது ooக என்றெழுதப்பட்டது. கெள என்பது கெoo என்றெழுதப்பட்டது. ரகர மெய்யும், ரகர உயிர் மெய்யும் முற்காலத்தே:“ா” என்ற ஒரு வடிவாலேயே குறிக்கப்பட்டன. பின்னர் இக்குறியீட்டின் தெளிவின்மையை அறிந்த வீரமாமுனிவர் ரகர மெய்யினை ர் என்றும், ரகர உயிர் மெய்யினை ர் என்றும் எழுதினர். ஆய்தம் .. என்பது தொல்காப்பியர் காலத்து ஆய்த வடிவம். ஃ என்பது உரையாசிரியர் காலத்து ஆய்த வடிவம். இன்று இரண்டும் வழக்கில் உள்ளன. குற்றியலுகரமும் குற்றியலிகரமும் இவையிரண்டையும் குறிக்க இவற்றின் மீது பண்டு புள்ளியிடப்பட்டது. கு ச் சு், குழலினிதி் யாழினிது இன்று இவ்வழக்கம் கைவிடப்பட்டது. எட்டு என்று இன்று எழுதினுல் பெரும்பாலும் எண்ணையும், அடியையும் குறிக்கும். பழங்காலத்தே, எட்டு என்பது எண்ணையும், எட்டு என்பது எள்ளென்னும் பொருளையும் குறிக்கும். இன்னும் தமிழ் நெடுங்கணக்கில் எத்தனையோ மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுத்தான் வந்துள்ளன. சீர்திருத்தம் தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றனர். உயிர் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களிலே இகர நெடில் தவிர, ஏனைய வற்றின் நெடில் எல்லாம் குறிலின் வடிவத்தையே பெற்றுள்ளன.இகரத்தின் நெடில் மட்டும் வேறு வடிவம் ஒன்றைப் [] [] பெற்றுள்ளது. அதனால் நெடுங்கணக்குப் படிப்புக்குத் தடங்கல் ஏற்படும். எனவே ஏனைய நெடில்களைப் போலவே இகரநெடிலையும்" "என்று திருத்தி விடலாம். அடுத்து ஐ, ஒள என்ற இரண்டு கூட்டொலி எழுத்துக்கள் உள. இவற்றிலே ஒள என்பதைச் சிலர் இரண்டு எழுத்துக்களாக-உயிரும் உயிர்மெய்யுமாகக் கருதி ஒ, ள, என்று ஒலிக்கின்றனர். எனவே ஒள என்ற எழுத்தை அவ் என்று எழுதிவிடலாம் ஐ என்பதைச் சிலர் அய் என்றெழுதலாம் என்கின்றனர். அது அவ்வளவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. ஏன்? தையல் என்பதைத் தய்யல் என்று எழுதும்போதும், படையல் என்பதைப் படய்யல் என்றெழுதும்போதும் படிப்பார் அவ்ற்றை உரிய ஒலியோடு ஒலிப்பதில்லை. அ என்ற எழுத்தின் நெடிலை, ஆ என்றெழுத வேண்டியதில்லை; என்றெழுதலாம். உ கரத்தின் நெடிலை ஊ’ என்றெழுதாமல் என்றெழுதலாம். எ கரத்தின் நெடிலை என்றெழுதலாம். ஐ என்பதைனை என்றெழுதலாம். " அ, இ, உ, எ, ஏ, ஒ, ஓ, ஒ ஒ, ஓ, ஐ, அவ் " என்றிவ்வாறு உயிரெழுத்துக்கள் சீர்திருத்தம் பெறலாம். மெய்யெழுத்துக்கள் மெய்யெழுத்துக்களிலே விரைவிற் சீர்திருத்தம் பெற வேண்டிய எழுத்துக்கள் கை கெள, முதலிய உயிர்மெய் கவ் (க் - அவ்) என்றும் ஐ காரமும், ஒள காரமும் ஆம். [தமிழ்நாடும் மொழியும்.pdf] இன்னும் சில சீர்திருத்தங்கள் தமிழின் நெடுங்கணக்கிலே கொள்ளல் ஏற்புடைத்தாம். சீர்திருத்தம் செய்வார் மிகவும் மெதுவாக நன்கு ஆராய்ந்து அறிந்து விரைவின்றிச் சீர்திருத்தம் மேற்கொள்ளல் வேண்டும். ஆத்திரமும், அவசரமும் கொண்டால் பெருங்குழப்பமும் வீண் துன்பமும் ஏற்படும். ** திணை, பால் பாகுபாட்டின் சிறப்பு** பிறமொழிகளுக்கு, குறிப்பாக வடமொழிக்கு இல்லாத சிறப்புக்கள் பல தமிழுக்குண்டு அவற்றுள் திணை, பால் பாகுபாடு ஒன்றாகும். இப்பாகுபாடுகள் பிறமொழிகளிலே அறவே இல்லை என்பதன்று பொருள். அவற்றிலும் இருக்கின்றன. ஆனால் சிறந்த முறையில் இல்லை; அவ்வளவே. தமிழிலே திணை, பால் பாகுபாடு சிறந்த முறையில் உள்ளது. திணை, பால் பாகுபாட்டிற்குத் தமிழைப் பொறுத்தவரையில் பொருளே அடிப்படை. வடமொழியிலோ சொல்லமைப்பே அடிப்படை, பொருளுக்காகச் சொல்லா? சொல்லுக்காகப் பொருளா? இதிலிருந்து விளங்கும் வடமொழித்திணை, பால் பாகுபாட்டின் பொருந்தாமையும், தமிழ்த் திணை, பால் பாகுபாட்டின் சிறப்பும். தமிழிலே திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால் என்பது பால் வேறுபாடு. இத் திணை, பால் பாகுபாடு எழுவாயில் மட்டுமல்ல, பயனிலையிலும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. ஒரு பயனிலையை மட்டும் கொண்டு ஆங்கில மொழியிலே எழுவாய் எத்திணையைச் சேர்ந்தது என்றோ. எப்பாலினைச் சேர்ந்தது என்றோ காணல் முடியாது. ஆனால் தமிழிலோ வினைச் சொல் பயனிலையாக வருமாயின், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறு கூறுகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். எடுத்துக்காட்டு: வெட்டினான். இத்துணைச் சிறப்புக்கள் பிறமொழிகளில் பெரும்பாலும் கிடையா. இத்திணைப் பாகுபாடு பற்றிக் கால்டு வெல் கூறுவதாவது:- “திராவிட மொழிகளின் திணைப் பாகுபாடு இந்திய ஐரோப்பிய மொழிகளிலும், செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போன்று கற்பனையால் ஆகியதன்று; சிறந்த தத்துவ உணர்வால் ஆகியது என்பது தெளிவு. பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையதன்றோ?” உயர்திணையில் மட்டும் ஆண்பால், பெண்பால் என்று பிரிவினை செய்த தமிழர்கள், அஃறிணையில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று ஒருவர் வினவலாம். வினாச் சரியே. அஃறிணையிலே உயிருள்ளனவும் உயிர் இல்லனவும் சேர்க்கப்பட்டுள்ளன. உயிரற்றனவற்றிலே ஆண், பெண் வேற்றுமை அறவே கிடையாது. உயிருள்ளனவற்றிலே ஒருசிலவே ஆண், பெண் வேற்றுமையுடையன. இலக்கணம் பொதுவாகப் பெரும்பான்மை பற்றியதாகும். எனவே தான் பண்டைத் தமிழ்ப் புலவர்கள், உயர்திணைக்கு ஆண், பெண் வேறுபாடு கற்பித்து, அஃறிணைக்கு அவ்வேறுபாடு கற்பியாது விட்டுவிட்டனர். இதுகாறும் கூறியவற்றால் தமிழின் கண் விளங்கும் திணை, பால் பாகுபாடு பகுத்தறிவின் அடிப்படையில் எழுந்தது என்பதும், பிறவற்றில் அவ்வடிப்படையில்லை என்பதும் விளங்கும். ** திரிசொல்லும் திசைச் சொல்லும்** தமிழிலே காணப்படும் சொற்களை நான்கு வகையாகப் பிரித்தல் பண்டைய இலக்கணம் வல்லார் வழக்கமாகக் காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றே திரிசொல் எனப்படுவது. மக்கள் வழக்கிலும் நூல் வழக்கிலும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் பலவும் பயின்று வருதல் கண்கூடு. ஆனால் உலகியல் வழக்கைவிடச் செய்யுள் வழக்கிலேயே இத்தகைய சொற்கள் மிகுதியும் பயின்று வருகின்றன. அவ்வாறு பயின்று வருவனவே திரிசொற்களாகும். ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் வருமாறு:- எழிலி, முகில், மஞ்சு, கொண்டல் என்பன கொண்டலுக்கு (Cloud) வழங்கி வரும் சொற்க ளாகும். இனிப் பல பொருள் குறித்த ஒரு சொல் வருமாறு:- கடி என்பது ஒரு சொல். அச்சொல் குறிக்கும் பொருள்களாவன:- காப்பு, கூர்மை அச்சம், காவல், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம். வெண்டிரீசர் போன்ற மேலை நாட்டுப் புலவர்கள் இவ்வாறு ஒரு பொருளைப் பல சொற்கள் குறித்தலும், ஒரு சொல்லே பல பொருள்களைக் குறித்தலும் இயற்கையில் இல்லை என்கின்றனர். இது உண்மையே. புகல், கழறு, கூறு, நவில், போன்ற சொற்கள் மேற்போக்காகச் “சொல்” என்ற பொருளிலே தோன்றினாலும், அத்தனை சொற்களுக்குமிடையே காணும் வேறுபாடு உண்மை புலவர்க்குடன்பாடே. புலவர்கள் கழறு, நவில் போன்ற சொற்களைக் குறிப்பிட்ட ஒரு சில இடங்களிலே தான் பயன்படுத்துகின்றனரே தவிர, எதற்கெடுத்தாலும் அவற்றைப் பயன்படுத்தல் இல்லை. கதையைக் கழறினான் என்றோ, விடை புகன்றான் என்றோ பயன்படுத்தல் நல்ல புலவர்தம் செயலன்று. கழறு என்ற சொல்லைப் பயன்படுத்த இடமும் பொருளும் வேறு; புகல் என்பதைப் பயன்படுத்த வேண்டிய இடம் வேறு. ஆனால் இந்த வேற்றுமையைச் சிலர் நெகிழவிட்டமையாலேயே திரிசொல் என்ற புதிய சொல் வகை வகுக்க வேண்டியதாயிற்று. ஒரு நாட்டிலே வாழுகின்ற மக்களே, ஒரு பொருளுக்குப் பல பெயர்களை வழங்குதல் இயல்பு. ஓரிடத்தார் வழங்கும் பெயரை மற்றோரிடத்தார் வழங்கார். ஒரு பொருளுக்கு ஒரு நாட்டின் வடபால் வசிப்போர், ஒரு பெயரை வழங்குவர்; மேற்கே வாழ்வோர் வேறொரு பெயரை அப்பொருளுக்கு வழங்குவர். எடுத்துக்காட்டாக, உள்ளி என்ற ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுவோம். இதனைத் தென்பாண்டி நாட்டார் ஈறுள்ளி என்றும், உள்ளி என்றும் கூறுகின்றனர். ஆனால் மதுரை மக்கள் இப்பொருளையே வெங்காயம் என்ற பெயரால் குறிக்கின்றனர். இத்தகைய சொற்களையே திசைச் சொற்கள் என்று இலக்கணம் வல்லார் குறிக்கின்றனர். ** எழுத்துக்கள்** தமிழகத்திலே வழங்கும் எழுத்துக்கள் பல. அவை வடிவெழுத்து, பெயர் எழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து, கண்ணெழுத்து, கோலெழுத்து, கரந்தெழுத்து, வட்டெழுத்து, கிரந்தெழுத்து முதலியனவாகும். கண்ணெழுத்து கண்ணெழுத்துப் பற்றிய குறிப்புகள் சிலம்பிலே காணப்படுகின்றன. கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பூம்புகாரின் கடற்கரையிலே இறக்கப்பட்ட பண்டப் பொதிகளின் மீது கண்ணெழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது என்பதைக் கீழ்வரும் சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன. “வம்ப மாக்கள் தம்பெயர் குறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” -சிலப். 26: 13-16. மேலும் அரசினர் அனுப்பும் திருமுகம் இந்தக் கண்ணெழுத்தினால் எழுதப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. வட்டெழுத்து வட்டெழுத்துக்கு வெட்டெழுத்து, நானாமோனம், தக்கண மலையாளம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. வட்டெழுத்து உள்ள கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டிலும் மலை நாட்டிலும் காணப்படுகின்றன. வட்டெழுத்தின் தோற்றம் பற்றிப் பலர் பலவாறு கூறுவர். டாக்டர் பர்னல் என்பவர், வட்டெழுத்தானது பிராமி எழுத்திலிருந்து வளர்ச்சியடையவில்லை என்றும், பிராமி எழுத்துக்கு மூலமான பினீய எழுத்திலிருந்து தோன்றியது என்றும் கூறுகிறார். டாக்டர் பீலர் என்பவர் இக்கொள்கையை மறுத்து வட்டெழுத்து பிராமியிலிருந்து வளர்ந்தது என்கிறார். இவை யெல்லாம் அவ்வளவு தூரம் பொருந்தவில்லை. வட்டெழுத்து என்பது தமிழுக்கே உரிய எழுத்தாகும். கோல் எழுத்து வட்டெழுத்திலிருந்து கோல் எழுத்துத் தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவர்களாட்சிக்குட்படாத மலை நாட்டில் வட்டெழுத்து வழங்கி வந்தது என்பர். வட்டெழுத்தின் பிற்கால வடிவங் களுள் ஒன்றே கோல் எழுத்தாகும். கிரந்த எழுத்து தமிழ்நாட்டில் வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்து குடியேறிய ஆரியர்கள், தங்களின் வழக்கொழிந்த வட மொழியைத் தமிழரிடையே பரப்ப முயன்றனர். அதற்குரிய முயற்சிகளுள் ஒன்றே கிரந்த எழுத்தைத் தோற்றுவித்தமையாம். கிரந்த எழுத்து என்பது அவர்களால் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து அவைபோல் அமைக்கப்பட்ட ஒருவகை எழுத்தாகும். உ, ஊ, க, ண, த, ன, ய, வ என்னும் தமிழ் எழுத்துக்களை, கிரந்த எழுத்து அமைத்தவர்கள், அப்படியே தம் கிரந்த எழுத்துக்களோடு சேர்த்துக் கொண்டனர்; அ, ஆ, ஈ, ஒ, ஒள, ட, ர, வ, ழ என்னும் எழுத்துக்களைச் சிறிது திருத்தித் தம் கிரந்த எழுத்துக்களாக அமைத்துக்கொண்டனர். மலையாள எழுத்துக்கும் கிரந்த எழுத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகச் சிறியதே. கரோசிடி எழுத்தும் பிராமி எழுத்தும் மிகப் பழங்காலத்தனவாக இந்தியாவிற் கிடைக்கும் கல்வெட்டுக்களில் இரண்டு வித எழுத்துக்கள் காணப்படு கின்றன. அவை பிராமி, கரோசிடி என்பனவாம். பிராமி என்பது இடப்புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத் திலிருந்து இடப்புறமாகவும், மாறி மாறி எழுதப்படுகின் றது. கரோசிடியும், பிராமியும் வேறுவேருனவை. ** இலக்கண வளர்ச்சி** பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையி னுனே ’ என்று பவணந்தியார் கூறுகிருர். இலக்கணம் செய்யப் புகு கின்ற ஆசிரியன் இறந்தன விலக்கி எதிரது போற்றித் தன்னு லைக் கொண்டு வரவேண்டும். நன்னூலார் இம்முறையினைக் கையாண்டுள்ளார். அவர் நூலில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.அவை யாவையும் எடுத்துக்காட்டி அவை இலக்கண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று ஆராயின் அது. ஒரு சிறந்த ஆராய்ச்சியே ஆகும். இங்கே ஒன்றிரண்டு வேறுபாடுகளை எடுத்துக்காட்டி அவை இ ல க் க ண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று பார்ப்போம். தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் மூன்றினையும் குறித்து இலக்கணம் செய்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் எழுதிய நன்னூலாரோ பொருள் அதிகாரம் எழுதவில்லை. சிலர் நன்னூலார் எழுதி அது அழிந்துவிட்டது என்பர். பொருளிலக்கண வளர்ச்சியினை நன்னூலார் தம் காலத்துக் கேற்ப எவ்வளவோ சிறப்பாய் எழுதியிருக்கலாம்; ஆனால் எழுதவில்லை. தொல்காப்பியர் பதவியல் என்று ஒரு தனியியல் வகுக்கவில்லை. அதற்குத் தேவை அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. வடமொழியாக்கத்தைத் தொல்காப்பியர் ஒரே நூற் பாவில் கூறிச் செல்லுகிறார். ஆனால் நன்னூலாரோ பல சூத்திரங்கள் சொல்லிக்கொண்டு போகிறார். மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களைப்பற்றிக் கூறும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது எனக் கூறுகிறார். ஆனால் நன்னூலார் காலத்தில் வரலாம். இது இலக்கண வளர்ச்சியையே காட்டுகிறது. இதே போன்று ‘நான்’ என்ற சொல் பிற்கால வழக்கு. நன்னூல் அதைக் காட்டுகிறது. உயர்திணை மட்டுமே நான் என்று கூறலாம். அஃறிணைப் பெயர்கள் கூறக்கூடாது தொல்காப்பியனார் காலத்தில், ஆனால் நன்னூலார் காலத்தில் அஃறிணைப் பொருட்களும் ‘நான்’ என்று கூறலாம். எழுத்து முறையில் நேர்ந்த மாறுதல்களை நன்னூலார் குறிக்கவில்லை. ஒருவேளை நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டவை போன்றே எழுத்துக்கள் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இவை யாவற்றையும் நோக்கும்பொழுது நன்னூலுக்கும், தொல்காப்பியத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஓரளவுதான் இலக்கண வளர்ச்சியைக் காட்டுகின்றன என்பதும், பேரளவு காட்டவில்லை என்பதும் தெரிகின்றன. தமிழ்மொழி வளர்ச்சி ** தோற்றுவாய்** தமிழின் தொன்மை காலங் கடந்த ஒன்று. நினைப்பிற் கெட்டா நெடுங்காலத்தையும் கடந்து செல்லுகிறது தமிழின் வரலாறு. அக்காலத்திலிருந்தே தமிழ் படிப்படியாக வளர்ந்தும், தளர்ந்தும், புதிய துறை பலவற்றிற் புகுந்தும் வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் தமிழ் வளர்ந்த விதத்தையறியப் போதிய சான்றுகள் இல்லை; கிடைப்பன எல்லாம் அரை குறையாகவே உள்ளன. எனினும் களவியல் உரைமூலம் தமிழ் வளர்ந்த விதம் ஓரளவுக்குத் தெரிகின்றது. அக்காலத்தே தமிழ்ச்சங்கம் பல இருந்தன. அரசர்கள் ஆதரவினாலும், புலவர் போற்றுதலினாலும் தமிழ் வளர்ந்தது. அடுத்து கி.பி.க்கு முன்னர் தமிழ் எப்படி வளர்ந்தது என்பதை அறியத் தெளிவான சான்றுகளாக விளங்குவன சங்க இலக்கியங்களே. சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழ் வளர்ச்சியை நன்கு காட்டுகின்றன. தமிழ் இயல், இசை, நாடகம் என்ற முத்துறைகளாகப் பிரிவுற்று வளர்ந்தது. இயலைப் புலவர்களும், இசையைப் பாணர்களும், நாடகத்தைக் கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோரும் நன்கு காத்து ஓம்பினர். இம் முத்தமிழையும் அவர்கள் வளர்த்துப் பெருக்க அவர்கள் வறுமையால் வாடாமல் இருத்தற் பொருட்டு வள்ளல்களும், குறு நில மன்னர்களும், முடி மன்னர்களும் பொன்னும் பொருளும் பிறவும் வாரி வாரி வழங்கினர். எனவே வயிற்றுக்கவலை இல்லாத பாணரும், புலவரும், கூத்தரும், தமிழை உயிரினும் மேலாகக் கருதி வளர்த்து வந்தனர். சங்க காலத்தையடுத்த நூற்றாண்டுகளிலே எழுந்த நூல்களாகக் காட்சியளிப்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாம். இவற்றைப் பாடிய புலவர்களை அரசர்கள் ஆதரித்த தாகத் தெரியவில்லை. காரணம் அவர்களிருவரும் அரசர் தம் ஆதரவு பெறவேண்டிய நிலையில் இல்லை என்பதாகும். எனினும் இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இளவல்: சாத்தனர் நண்பர். பின்னர் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் தமிழகம் களப்பிரர் ஆட்சியின்கீழ் இருந்தது. தமிழின் வீழ்ச்சி களப்பிரர் காலத்திலிருந்து தொடங்குகிறது என்ன லாம். களப்பிரர்கட்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் வடமொழி, பாகதம் என்ற அயல் மொழிகளைத்தான் போற்றிக் காத்தனரே தவிரத் தமிழைச் சிறப்பாக ஆதரிக்கவில்லை. பிற்காலப் பல்லவர்களில் நந்திவர்மன் போன்ற ஒரு சிலரே தமிழை ஒரளவுக்கு வளர்க்கலாயினர். பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய இரு காலங்களிலும் சமனரும் , பெளத்தரும், சைவரும், வைணவரும் தமிழை வளர்த்தனர். பல்லவர் காலத்திலே சமணர்கள் திராவிட சங்கம் என்றொரு சங்கம் வைத்தே தமிழை வளர்த்தனர். பிறகு முகமதியர் ஆட்சிக் காலத்திலும், விசயநகரப் பேரரசர் காலத்திலும், நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் குறுநில மன்னர்கள் சேதுபதி போன்ருேர்) தமிழை வளர்த்தனர்; சைவ,வைணவ மடங்களும் தமிழை வளர்த்தன. இக்காலத்திலே கல்லூரி களும், அரசியல் கட்சிகளும், தனிப்பட்ட கழகங்களும், தமிழை வளர்த்து வருகின்றன. இவ்வாறு தமிழ் மொழியானது வளர்ந்து வருகின்றது. ** சங்க காலம்** சங்க காலத்தினைத் தமிழின் பொற்காலம் என்றே கூறலாம். ஆட்சியிலும் அறமன்றங்களிலும், கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி தனி நடமும், களி நடமும் புரிந்தது. சங்ககாலத்திலே புலவர்கள் மட்டும் பாக்கள் பல புனைந்து பைந்தமிழை வளர்க்கவில்லை. வணிகர், குயவர் முதலிய பல்வேறு குலத்தினரும், அரசரும் தமிழை வளர்த்தனர். அரசாங்க அலுவலர் தமிழ்ப்பாப் புனைந்தனர். கூத்தர் தமிழை ஒம்பினர். இவர்களுக்கெல்லாம் வள்ளலும் அரசரும் பொருள் வழங்கி, மென்மேலும் தமிழ்மொழியை வளர்க்குமாறு ண்டினர். பெருஞ்சித்திரளுர் என்ற புலவரைக் குமணன் என்ருெரு வள்ளல் ஆதரித்தான். கபிலரைப் பாரி போற்றிப் புரந்தான். ஒளவையாரை அதியன் உயிர் நண்பராக எண்ணிப் பொருள் வழங்கிக் காத்தான். இவ்வாறு அரசர் ஆதரவைப் பெற்ற புலவர்கள் கவலையின்றித் தமிழ்ப்பாக்கள் பலவற்றைப் பாடித் தமிழ் வளர்த்தனர். சங்க காலத்தில் தமிழ் வளர்த்த நல்லிசைப் புலவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தினர் அல்லர். மேலும் அவர்கள் தாங்கள் பிறந்த ஊரிலிருந்து கொண்டே முறையே தமிழ் நூற்களைக் கற்றுப் பின்னர் மதுரை வந்து மதுரயில் வாழ்ந்த புலவர்களடு கலந்து பழகி, அவர்களுடன் ேசர்ந்து நூல்களை ஆராய்ந்து தமிழ் வளர்த்தனர் எனத் தெரியவருகின்றது. மேலும் இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகத் தமிழைக் கற்ற தாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைச் செய்து வந்தனர். அத்துடன் தமிழையும் வளர்த் தனர். இதன் காரணமாகத்தான் பாண்டிய அரசர்களும், சோழப் பேரரசர்களும் புலவர்களைத் தங்கள் உயிர் நண்பர் களாகவும், அமைச்சர்களாகவும் கொண்டு வாழ்ந்தனர். இப்புலவர்கள் பல்கலைக்குரிசில்களாக விளங்கியமையால் அரசியல் வாழ்விலும் மன்னர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கினர். சங்க காலத்தில் முத்தமிழையும் சிறப்பாக வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியதாகும். முச்சங்கங்கள் கூட்டி, தமிழ்நாட்டில் மொழியும் கலையும் வளர்த்தவர்கள் பாண்டியப் பெரு வேந்தர்களே; சங்கப் புலவர்களுக்குப் பொன்னும் மணியும் வாரி வாரி வழங்கி அவர்களை வாடாது வாழவைத்த காரணத்தினுல்தான் தமிழ்க் கருவூலங்களாகிய சங்க இலக் கியங்களைத் தமிழ்நாடு பெற முடிந்தது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த புலவரில் பெரும்பாலோர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்களாவர். பாண்டிய மன்னரில் பலர் சிறந்த புலவர்களாகவும் விளங்கினர். பாண்டிய மன்னரில் தலை சிறந்த வணுகிய பாண்டியன் நெடுஞ்செழியன் சிறந்த புலவனுவான். மாங்குடி மருதனுர் இயற்றிய மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் இவனே. புறநானூற்றில் இவனைப் பற்றிய பாடல்களும், இவன் பாடிய பாடல்களும் காணப்படுகின்றன. இவன் புலவர்களிடத்துப் பேரன்பும், பெரு மதிப்பும் வைத் திருந்தான் என்பதைப் பின் வரும் அவனது வஞ்சினப் பாட்டு ஒன்றில் அறியலாம். மாற்றாரை ஒருங்குஅகப் படேஎனயின் மாங்குடி மருதன் தலைவ னாகப் புலவர் பாடாது வரைக என் நிலவரை!" மற்றொரு பாண்டிய மன்னனுகிய உக்கிரப்பெருவழுதி காலத்திலேதான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்பர் அறிஞர். பாலை பாடிய பெருங் கடுங்கோ, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் போன்ற பாண்டியரும் சிறந்த புலவர்களாய் விளங்கினர். பாரி மகளிர், பூதப்பாண்டியன் தேவி, போன்ருேர் தமிழ்ப் புலமை பெற்று விளங்கிய அரசகுல மங்கையராவர். பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற இருவரும் முறையே நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களைத் தொகுப்பித்த அரசராவர். சுருங்கக்கூறின் சங்க காலத்தில் முத்தமிழும் முழங்கிய இடம் பாண்டிய நாடே சிறப்பாக மதுரையம்பதியே. இத்தகு சிறப்பிற்குக் காரணமாக இருந்தவர்கள் பைந்தமிழ் வளர்த்த பாண்டியரே. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வாழ்ந்த புலவர்கள் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்கு வந்து தம் புலமைத் திறனைக் காட்டி மக்களிடையே மாண்பும் மதிப்பும் பெற்றனர். பாண்டியர் அளித்த பரிசில்கள் பல அவர்தம் வாழ்க்கையை வளம்பெறச் செய்தன. தமிழ் வளர்த்த குறுமுனியாகிய அகத்தியர் வாழ்ந்த இடமாகிய பொதிய மலை பாண்டிய நாட்டைச் சேர்ந்தது என்பது நாமறிந்ததொன்றே. இதுவரை கூறியவாற்றல் சங்க காலத்தில் தமிழ் செழித்து வளர்ந்த இடம் பாண்டிய நாடு என்பது நன்கு புலகுைம். இதன் காரணமாகத்தான் பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை என்று பிற்காலத்தில் பாடலொன்று எழுந்தது போலும் ! ** சமண பெளத்தர்களின் தமிழ்த்தொண்டு** சமணர் த மி ழ் நா ட் டி ற் கு வந்து பரவிய புறச் சமயங்களிலே தொன்மை வாய்ந்த சமயம் சமண சமயமாகும். இச்சமயவொழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகிய சமண முனிவர்களால் தமிழ்மொழி அடைந்த நன்மைகள் மிகப் பலவாகும். தமிழுக்குப் பிற சமயத்தவரை விட அதிகமாகத் தொண்டு செய்தவர்கள் இவர்களே. சின்னூல்களும், பெருநூல்களும் செய்தும், புதுநெறிக் கருத்துக்களை இலக்கணங்களில் புகுத்தியும், தமது நூல்களில் தம் சமயக் கருத்துக்களைப் புகுத் தியும், இவர்கள் சமயத்தொண்டும், அதே நேரத்தில் தமிழ்த் தொண்டும் புரிந்தனர். இதே போன்றுதான் கிறித்தவர்களும் பிற்காலத்தில் தமிழ்த்தொண்டு புரிந்தனர். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் நல்ல சமணர், நந்தா விளக்காம் சிந்தாமணி எழுதிய திருத்தக்கதேவர் சமணர். நன்னூல் என்பது பவணந்தி முனிவர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. காரிகை என்னும் யாப்பிலக்கண நூலை யாத்தவர் அமிதசாகரர் என்னும் சமணராவார். சின்னுரல் செய்த குண வீர பண்டிதர் சமணரே. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணரால் செய்யப்பட்டவையே. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்ருகிய சூளாமணி சிறந்ததொரு சமணத் தமிழ்க் காப்பியமாகும். முதன் முதலில் தமிழில் நிகண்டுகள் செய்தவர்கள் சமணர்களே. சூடாமணி நிகண்டு என்னும் நூல் இவர்தம் தலை சிறந்த நிகண்டு நூலாகும். இவர்கள் இயற்றிய அந்தாதி, கலம்பகம் போன்ற பல திறப்பட்ட சிற்றிலக்கியங்கள். அனைத்தும் சமண சமயப் பொருள்களையும், சமணப் பெரியோர்களையும் புகழ்ந்து கூறும் சின்னூல்களாகும். மேரு மந்தர புராணம், நரிவிருத்தம், யசோதர காவியம் போன்ற நூற்கள் சமண சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் நன்கு எடுத்துக் கூறுகின்றன. திருநூற்றந்தாதி, திருக்கல்ம்பகம் என்ற இரண்டும் சமணர் போற்றிப் படிக்கும் செந்தமிழ் நூல்களாகும். நாலடியார், அறநெறிச் சாரம், சிறு பஞ்சமூலம் என்பன சமணர்தம் அற நூல்களாகும். கடைச் சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடையே வாழ்ந்த சமணர்கள் தமிழகத்தே தம் சமயக் கருத்துக்களைப் பரப்ப எண்ணினர். அதன் காரணமாகத் தோன்றியதே திராவிட சங்கம் என்ற சங்கமாகும். இதனைத் தோற்றுவித்தவர் வச்சிர நந்தியாவார். காலம் கி. பி. 470 ஆகும். அச்சமண சங்க வாயிலாகத் தோன்றிய நூல்களே, பழமொழி, சிறு பஞ்சமூலம், ஏலாதி முதலியனவாகும். இன்னும் பல நூல்கள் சமணரால் இயற்றப்பட்டன. ஆனால் அவையெல்லாம் முற்றிலும் இன்று கிடைக்கப்பெறவில்லை. பெளத்தர் தமிழ்க் குழந்தைக்குப் பல செல்வச் செவிலியர் உண்டு. அவர்களுள் ஒருத்தியே பெளத்தமாது. பெளத்த சமயம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்தமைக்குரிய சான்றுகள் உள. பெளத்தர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். இவர்கள் இலக்கியம், இலக்கணம் ஆகிய இரு துறைகளிலும் பல நூல்கள் இயற்றியுள்ளனர். தமிழ்த்தாயின் திரு இடையை அழகுபடுத்தி நிற்கும் மணிமேகலையைச் செய்த சாத்தனர் புத்த சமயத்தவர். பிற் காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தே, புத்தமித்திரனுர் என்பவர் வீரசோழியம் என்றதோர் இலக்கண நூலைச் செய் தனர். நற்றிணை 72-ஆம் பாட்டினைப் பாடிய இளம்போதியார் என்பவர் புத்த சமயத்தவராவர். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றியருளிய நாதகுப்தனர் என்பவர் புத்த சமயத்தவர். சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை முதலிய பல நூல்கள் பெளத்தரால் இயற்றப்பட்ட தமிழ் நூல்க ளாகும். ஆல் இவை நான்கும் இன்று பெயரளவிலும், சிற்சில பாட்டுக்கள் அளவிலுமே நிற்கின்றனவே தவிர, முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. ** பிற்காலச் சோழர் காலத்துத் தமிழ் வளர்ச்சி** சங்க காலத்தில் பாண்டியர்கள் சிறந்த முறையில் தமிழ் வளர்த்ததுபோல் பிற்காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்கள் பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆவர். இவர்கள் காலத்தில்தான் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வளர்ந்தன என்னலாம். எனினும் இவற்றில் சிறப்பாக வளர்ந்தவை கல்வெட்டுக்களாகும். அக்கால வரலாற்றினையும், இலக்கிய வளனையும் தெரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுக்கள் பேருதவி புரிகின்றன. தமிழ் நாட்டின் முப்பெரும் கவியரசர்களாகிய கம்பர், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார் ஆகியோர் வாழ்ந்த காலம் இக்காலமே. சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியும், ஒட்டக்கூத்தர் உலாக்களும், குலோத்துங்க சோழன் சரிதையும் சிறந்த வரலாற்று இலக்கியங்களாகும். கொங்கு வேளிரது உதயணன் கதை, திருத்தக்க தேவரது சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கல்லாடரது கல்லாடம், குலோத்துங்கன் கோவை, தஞ்சை வாணன் கோவை, தில்லை நம்பி திருவிளையாடல்,திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சித்தாந்த சாத்திரங்கள், தனிப்பாடல்கள் பல முதலியன இக்காலத்து எழுந்த இலக்கியங்களாகும். இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் என்ற செய்யுள் நாடகங்கள் இக்காலத்தில் எழுதப்பட்டு, ஊர்தோறும் நடிக்கப்பெற்றன. சோழ நாட்டின் அரசவைக் கவிஞராகிய ஒட்டக்கூத்தர், பிள்ளைத் தமிழ், உலா, தக்கயாகப்பரணி போன்ற பிரபந்தங்களை நமக்குத் தந்து சென்றார், கம்பர் அளித்த இராமாயணமும், செந்தமிழ்ப் புலவர் சேக்கிழார் தந்த பெரிய புராணமும் தமிழர் தம் ஒப்பற்ற இலக்கியங்களன்ருே! நளவெண்பாப் பாடிய புகழேந்தியும், ஆத்திசூடி முதலியன பாடிய ஒளவையும் வாழ்ந்த காலம் சோழர் காலமே. சைவமும், வைணவமும் இக்காலத்தில் சிறந்து விளங் கியதால் சைவ, வைணவ இலக்கியங்கள் பல சோழர் காலத்தில் எழுந்தன. கலித்துறை, பிரசன்ன காயத்திரி, இராமாநுச நூற்றந்தாதி போன்ற வைணவ நூல்கள். இக்காலத்தில் தோன்றியவையே. இராமாநுசர், பெரிய வாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்கள் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மெய்கண்டார், உமாபதி சிவம் முதலிய சைவ சித்தாந்தப் பெரியார்கள் இக்காலத்தின் இறுதியில் வாழ்ந்தனர். திருமுறைகளில் முதலில் எழுந்தவை இக்காலத்தனவே. திருமுறைப் பாடல்கள் கோவில்கள் தோறும் பாடப்பெற்றன; கல்வெட்டுக்களிற் பொறிக்கப்பட்டன. சிறந்த இலக்கியங்கள் இக்காலத்தில் எழுந்தன போன்று இலக்கண நூல்கள் பல இக்காலத்தில் எழுந்தன. அமிதசாகரரது யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் என்ற நூல்கள், தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், நம்பியகப் பொருள். சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு, புத்தமித்திரரது வீர சோழியம் போன்ற நூல்கள் இக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சேவைரையர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களில் பெரும்பாலோர் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மேலும் வடமொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் சோழர் காலத்தில் செய்யப்பட்டன. இதுவரை எழுதியவாற்றால் பிற்காலச் சோழர் காலத்தில் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றின என்பது புலனாகும். ** இடைக்காலத்தில் தமிழ் வளர்த்த வள்ளல்கள்** இடைக்காலத்தில் வாழ்ந்த பேரரசர்களும், சிற்றரசர் களும், செல்வர்களும் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித் தமையால், தமிழும், தமிழ் இலக்கியமும் நன்கு வளர்ச்சி அடைந்தன. ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் ஆகிய இம்மூவர் காலத்திலும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தார் என்பது நாமறிந்ததொன்றே. மேலும் இவர் குலோத்துங்க மன்னனது ஆசிரியராகவும் விளங்கினர். பெரிய புராணம் பாடிய சேக்கிழார், அநபாய சோழனின் பேரன்பைப் பெற்று அறங்கள் பல செய்தார். வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் கம்பர் ஆதரிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கொங்கு நாட்டைச் சேர்ந்த தலைக்காட்டை ஆண்ட கங்கர்கள் சிறந்த தமிழ்ப் பற்றுடையவர்கள். எனவே அவர்களும் தமிழ்ப் புலவர்களைப் போற்றி வாழ்ந்தனர். நன்னூலாசிரியர் பவணந்தி முனிவரை இக்கங்க அரசர்களில் ஒருவனை சீயகங்கன் ஆதரித்தான். கங்க அரசர்கள் அனைவரும் சைனர்கள். இவர்கள் நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நம்பியகப்பொருள், பெருங்கதை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களை இயற்று வித்த பெருமை உடையவர்கள். நளவெண்பா இயற்றிய புகழேந்தியை ஆதரித்தவன் சந்திரன்சுவர்க்கி என்பவனவான். பாண்டிய மன்னனது அமைச்சராகவும், தளபதியாகவும் விளங்கிய தஞ்சைவாணன், தஞ்சைவாணன் கோவை பாடிய பொய்யாமொழிப் புலவரைப் போற்றிப் புரந்தவனுவான். அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த சேந்தன் என்ற வள்ளுரல் திவாகர முனிவரைக் கொண்டு திவாகரம் என்னும் நிகண்டை இயற்றுவித்தார். இவ்வாறு இடைக்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் நன்கு போற்றப்பட்டதால் தமிழ் மொழி மேலும் வளர்ச்சிபெற்றது. ** தமிழைப் போற்றிய பிற்காலக் குறுகில மன்னர்கள்** துலுக்கர், நாயக்கர், ஐரோப்பியர், மராட்டியர் போன்ற பல அயல் மக்கள் கி. பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தை ஆண்டனர். இவர்களில் எவரும் சிறப்பாகத் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் போற்றிப் புரந்தது இல்லை. இந்த மக்கள் அகப்பட்ட வரையிலும் சுரண்டுவதிலேயே காலத்தைக் கழித்தனர். இக்காலத்தே தமிழைப் போற்றித் தமிழ்ப் புலவர்களைப் புரந்த பெருமை தமிழகத்துக் குறுநில மன்னர்களையே சாரும். பிற்காலத்தே தமிழை ஆதரித்த குறு நில மன்னர்களிலே குறிப்பிடத்தக்க பெருஞ் சிறப்புடையவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்களாவர். இராம நாதபுர மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர் பலர்; இராமநாதபுர மன்னர்கள் புலவர்களுக்கு வழங்கிய நிலபுலன்கள் இன்றும் அப்புலவர்தம் பரம்பரையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ்ப் பணி செய்துவரும் மதுரைத் தமிழ்ச் சங்கம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரையவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அமுத கவிராயர், அனந்த கவிராயர் என்போர் இரகுநாதசேதுபதி என்பவரால் ஆதரிக்கப்பட்டனர். அமுத கவிராயராற் செய்யப்பட்ட ஒருதுறைக் கோவை என்ற நூலின் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காய் உருட்டப்பட்டது என்பர். மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி பாடிய அனந்த கவிராயர் என்பவருக்கு மானூர், கலையூர் என்ற இரண்டு ஊர்களும் பரிசாகத் தரப்பட்டன சேதுபதியரசர் ஒருவரால். சவ்வாதுப் புலவர், சக்கரைப் புலவர் முதலிய பல புலவர்கள் இராமநாதபுரத்து மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனர். ஊற்றுமலை மருதப்பர் என்ற குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர், நன்னூல் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயராவார். தென் பாண்டி நாட்டிலே ஆட்சி புரிந்த வரதுங்கராம பாண்டியர், அதிவீரராம பாண்டியர், இவர்தம் மனைவியர் ஆகியோர் நல்ல தமிழ்ப் புலமையுடையவர்கள். இவர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் சிலர், தமிழ் நூற்களை எழுதினர். நெல்லை மயிலேறும்பெருமாள் என்பவர் கல்வி மிகவுடையவர்; கல்லாடத்திற்கு உரை செய்தவர். இவரிடம் கற்றவரே இலக்கணக் கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகர். திருவண்ணாமலையில் வாழ்ந்த பிரபுட தேவர் என்ற ஓர் அரசர், திருப்புகழ் பாடிய அருணகிரியாரைப் புரந்தனர். வெங்களப்ப நாயக்கராலும், சேதுபதிகளாலும் பல கிராமங்கள் அழகியசிற்றம்பலக் கவிராயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டன. பாரதம் பாடிய வில்லியாரைப் புரந்த பெருமை வக்கபாகையெனும் ஊரில் வாழ்ந்த வரபதியாட்கொண்டான் என்பவரைச் சாரும். சொக்கம் பட்டி, மேலகரம், செங்கோட்டை, கண்ணபுரம், எட்டயபுரம், சேற்றூர், சிவகிரி, புளியங்குடி முதலிய ஊர்களை ஆண்ட குறு நில மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் பலராவர். ** திருமடங்கள் தமிழை வளர்த்த வரலாறு** அயலவர் ஆட்சியிலே தமிழை ஓம்பித் தமிழ்ப் புலவர்க்கு உணவும் உடையும் உறையுளும் அளித்துப் பல தமிழ் நூல்கள் வெளிவரச் செய்த அரும்பெரும் செயலிலே திருமடங்களுக்குப் பெரும் பங்குண்டு. திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர் மடம், நெல்லைச் செங்கோல் மடம் என்பன தமிழ் வளர்த்த சைவ மடங்களாகும். இனித் தமிழ் வளர்த்த வீரசைவ மடங்கள் கும்பகோணம், தில்லை, திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களிலிருந்த மடங்களாகும். மாதவச் சிவஞான சுவாமிகள், மாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஈசான தேசிகர், கச்சியப்ப முனிவர் முதலிய பெரும் புலவர்கள் அனைவரும் திருவாவடுதுறை மடம் அளித்த அருட்கொடையாவர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், சம்பந்தசரணாலய முனிவர், சீர்காழிச் சிதம்பரநாத முனிவர் முதலியவர்கள் தருமபுர மடத்தின் நல்லாதரவினால் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தனர். இப்புலவர்களேயன்றி மடங்களில் தலைவர்களாக இருந்தவர்களும் தமிழ் கற்றுப் புலமை பெற்றுத் தமிழ் நூல்கள் சில யாத்தும், மடத்து மாணாக்கர்களுக்குத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்பித்தும் தமிழ்த் தொண்டு புரிந்துவந்தனர். தசகாரியம், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை , சித்தாந்த சிகாமணி, நமச்சிவாய மாலை, நிட்டை விளக்கம் முதலிய பத்து நூல்களைத் திருவாவடு துறை மடத்துத் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் இயற்றினார். சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், சிவானந்த போதம், பிரசாதக் கட்டளை முதலிய நூல்கள் தருமபுர ஆதீனத்தின் ஆதரவால் வெளிவந்தவையாகும். ** தமிழ்ச் சங்கங்கள்** நான்காம் தமிழ்ச் சங்கம் பண்டு, பைந்தமிழ் நாட்டில் முச்சங்கங்கள் முத்தமிழையும் வளர்த்தன என்று முன்னர்க் கண்டோம். மூன்றாம் தமிழ்ச் சங்கம் அழிந்த பின்னர், மதுரையில் பன்னூறாண்டுகளாக வேறொரு தமிழ்ச் சங்கம் தோன்றவில்லை. இக்குறையினை முதன் முதலில் நீக்கக் கருதியவர் இராமநாதபுரம் சேது மன்னர்களுடைய வழியில் வந்த பாண்டித்துரையவர்களாவார். இவர் கி. பி. 1901இல் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். மேலும் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு, தமிழாராய்ச்சி செய்தல், நூல் வெளியிடல், செந்தமிழ் என்ற திங்கள் வெளியீடு வெளியிடல், மாணவர்க்குத் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுத்தல், தேர்வு நடத்தி அதில் தேறியவர்களுக்குப் “பண்டிதர்” என்ற பட்டம் வழங்கல் முதலிய பணிகளைத் தொடங்கிவைத்தனர். பல பழைய நூல்களையும், ஏட்டுச்சுவடிகளையும் திரட்டி ஒரு நூல் நிலையமும் நிறுவப்பட்டது. வித்துவான் பட்டப் படிப்புத் தொடங்குவதற்கு முன்னர் இச்சங்கம் அளித்த “பண்டிதர்” என்ற பட்டம் பெற்றவர்களே பள்ளிகளில் தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பேராசிரியர்களும், செல்வர்களும், வணிகர்களும், தமிழில் ஆர்வம் மிக்கவர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இன்று விளங்குகின்றனர். இச்சங்கத்தின் பணிகளைச் செயற்குழு ஒன்று மேற்பார்த்து வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் திரு. சண்முகராசேசுவர சேதுபதியாவார். திரு. பி. டி. இராசன் அவர்கள் துணைத் தலைவராக விளங்குகின்றார். திரு. சண்முகசுந்தரம் அவர்கள் இதன் செயலராவர். செந்தமிழ்க் கல்லூரி ஒன்று இச்சங்கத்தினரால் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகின்றன. வித்துவான் பட்டப் படிப்பிற்குரிய முதல் நிலை, இடைநிலை, இறுதிநிலை ஆகிய மூன்று வகுப்புக்களும் உள்ளன. திரு. கி. பழனியப்பன் அவர்களைச் செயலராகவும், திரு. பேராசிரியர் இரா. வே. நாராயணன் அவர்களை, முதல்வராகவும் கொண்டு இக்கல்லூரி சிறந்த முறையில் பணியாற்றுகிறது. தமிழிசையைப் பரப்ப வேண்டி திரு. இல. நாராயணன் செட்டியார் தலைமையில் குழு ஒன்று இதன் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிடும் செந்தமிழ் தமிழ் மாணவர்க்கு நல் விருந்தாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கம் தஞ்சையில் இன்று தமிழ் வளர்க்கும் சங்கங்களில் தலையாயது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கமானது கி. பி. 1911இல் சில தமிழார்வமிக்க இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் தனி நிலையைக் காத்தலே இச் சங்கத்தின் முதற்கடமையாகக் கருதப்பட்டது. இச்சங்கம் நடத்திய தனித் தமிழ் விரிவுரைகளும், தனித் தமிழில் இச்சங்கம் வெளியிட்ட அறிக்கை, அழைப்பு முதலியனவும் தமிழ்ப் பெருமக்கள் தனித் தமிழில் ஆர்வம் பெறச்செய்தன. இதன் காரணமாய் தமிழ்மொழியில் கலந்திருந்த ஆங்கிலஆரியச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களை மக்கள் கையாண்டனர். திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட இச்சங்கத்தின் கிளையினால் ஆங்கிலப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் பலர் தமிழ்மீது மாறாக் காதல் கொண்டனர். மேலும் இச்சங்கத்தின் சலியாத உழைப்பினால் தமிழ்நாட்டு இரண்டு பல்கலைக் கழகத்தாரும், அரசியலாரும் தமிழுக்குத் தனிச்சிறப்பு அளித்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் தங்கள் பேரவைக்கு (செனட்) இச்சங்கம் ஒர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க உரிமை வழங்கியுள்ளனர். இச்சங்கத்தினரால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இதுகாறும் பல ஆயிரக்கணக்கான த மி ழ் மாணவர்களைப் பயிற்றி அனுப்பியுள்ளது. ஏழை மாணவர்க்கு உண்டியும், உறையுளும் கொடுத்து, இக்கல்லூரி அவர்களை ஓம்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும் இச்சங்கத்தினரால் நிறுவப்பட் டுள்ள தமிழ் மருத்துவமனை தஞ்சையில் பல மக்களுக்கும் நோய் தீர்த்து வருகின்றது. மேலும் த மி ழ் மருத்துவ முறையை நாடெங்கனும் பரப்ப வேண்டுமென்பது இவர்களுடைய குறிக்கோள்களில் ஒன்றாகும். இச்சங்கம் திங்கள்தோறும் வெளியிடும் " தமிழ்ப் பொழில் ’ என்னும் இதழ் பல அரிய கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. தொல்காப்பியம், தெய்வச் சிலையார் உரை முதலிய அரிய நூல்கள் இச்சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இச்சங்க நூல்நிலையம் பல அரிய தமிழ் நூல்களையும், ஆங்கில நூல்களையும், ஆராய்ச்சி நூல்களையும் கொண்டிலங்குவதால் தமிழாராய்ச்சியாளர்க்கு இந்நூலகம் பெரிதும் உதவுகின்றது. திரு. வே. இராதாகிருட்டின பிள்ளை, அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியார், தமிழ் வள்ளல் பெத்தாச்சிச் செட்டியார், பண்டிதர் சவரிராய பிள்ளை, சிங்காரவேலு முதலியார், பூண்டி அப்பாசாமிவாண்டையார், சங்கப் புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளை, இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் போன்றோர் பலவகை யாலும் இச்சங்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். இச்சங்கத்தால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இன்று சிறந்த தொரு புலவர் கல்லூரியாக விளங்குகின்றது. இக்கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவரும், இன்று பேசும் படத்துறையில் இயக்குநராகவும், கதை, வசனம் எழுதுபவராகவும் விளங்குபவருமாகிய திரு.ஏ.கே. வேலன் அண்மையில் இக்கல்லூரி வளர்ச்சிக்காக25000 வெண்பொற் காசுகள் கொடுத்தமை போற்றுதற்குரியதாகும். பிற சங்கங்கள் தஞ்சைத் தமிழ்ச்சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை, சைவசித்தாந்த மகாசமாசம், தமிழர் பழங்கலை ஆராய்ச்சிக் கழகம், நெல்லைத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் போன்றவைகளும் தமிழ் வளர்ச்சிக்காக நிறுவப் பட்ட சங்கங்களாகும். தஞ்சைத் தமிழ்ச்சங்கம் தமிழகம் என்ற சிறந்த திங்கள் வெளியீட்டை நடத்தி, அதன் வாயிலாகத்தமிழர்க்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டியது. சில ஆண்டுகள் தொண்டாற்றிப் பின்னர், இச்சங்கமானது மறைந்தது. மறையாது நிலைத்து நிற்பவற்றுள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையும், நெல்லைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் குறிப்பிடத் தக்கனவாகும். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினைத் தொடங்கிய பெருமை திரு. பழனியப்பச் செட்டியார் அவர்களைச் சாரும். இவரது தோன்றலாகிய திரு. சாமிநாதச் செட்டியார் அயராது இச்சங்கத்தின் நலனுக்கு உழைத்து வருகிறார். இச்சபையின் சார்பில் புலவர் கல்லூரி ஒன்று நடத்தப்பெறுகின்றது. நெல்லைத் தமிழ்ப் பெரியார் பலருடைய முயற்சியினால் தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது தோன்றியது. இன்று இக்கழகமானது தமிழகத்தில் தலைசிறந்த பதிப்பகமாக விளங்குகின்றது; பழம் பெரும் தமிழ்நூல்களையும் புதிய நூல்களையும் அழகிய முறையில் அச்சிட்டுத் தருகின்றது. சைவசித்தாந்த மகாசமாசம் கி. பி. 1906இல் சென்னையில் பலருடைய முயற்சியால் நிறுவப்பட்டது. பல இடங்களில் சமாசக் கூட்டங்களை நடத்திச் சமயவுண்மைகளைப் பரப்பியும், சித்தாந்தம் எனும் திங்கள் இதழை வெளியிட்டும் தமிழ்த் தொண்டு புரிந்து வந்த இச்சங்கம் சிறிது காலம் தளர்வுற்றுப் பின் தளிர்த்து இன்று மறைந்துவிட்டது. பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களையும், திருப்புகழையும், சங்க இலக்கியங்களையும் இக்கழகம் அழகிய முறையில் வெளியிட்டு அடக்க விலைக்கே மக்களுக்கு வழங்கியமை என்றும் மறக்கற் பாலதன்று. தமிழர் பழங்கலை யாராய்ச்சிக் கழகம் (Tamilian Antiquarian society) திருச்சிராப்பள்ளியில் பல்லாண்டுகட்கு முன்னர் பண்டிதர் டி. சவுரிராயர் அவர்களின் பெரு முயற்சியால் தோன்றியது. இக்கழகச் சார்பில் நடத்தப் பெற்ற தமிழர் தொன்மை தொகுப்போன் (Tamilian Antiquary) என்ற இதழ் தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவை குறித்துப் பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டு வந்தது. மேற்கூறிய சங்கங்கள் தவிர மதுரைத் திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், நெல்லை அருணகிரி இசைக் கழகம், துரத்துக்குடி சைவ சித்தாந்த சபை, தென் காசித் திருவள்ளுவர் கழகம், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ்ச் சங்கங்கள் தமிழ் மாநாடுகள் கூட்டியும், தமிழ் விழாக்கள் நடத்தியும் இன்று தமிழ்த் தொண்டு பல புரிந்து வருகின்றன. இவற்றுள் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தமிழின் வளர்ச்சிக்காகப் பல பணிகள் புரிந்து வருவது நாம் அறிந்ததொன்றே. இதன் செயலாளர் நெல்லை மாவட்டத்து முதுபெரும் புலவர்களில் ஒருவராகிய திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளையாவார்கள். இச்சங்கமானது கலைச் சொற்கள் தொகுத்துக் கொடுத்தமையும், சென்னை அரசினர்க்கு ஆட்சிச் சொற்கள் உருவாக்கிக் கொடுத்தமையும், அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்குரிய சொற்களை ஆக்கியளித்தமையும் தமிழ் வளர்ச்சிக்கு இச்சங்கம் புரிந்த நிலையான தொண்டுகளாகும். ** மேலை நாட்டார் செய்த தமிழ்த் தொண்டு** தமிழகத்திற்கு வந்த மேலை நாட்டு நல்லறிஞர் தம் சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழைக் கற்றனர். தமிழிலே தம் சமயக் கருத்துக்களை எழுதிப் பரப்பினர். இவ்வாறு அவர்கள் தமிழைக் கற்றதன் மூலமாக கிறித்தவம் மட்டுமின்றித் தமிழும் பல நன்மைகளை அடையலாயிற்று. மேலை நாட்டுக் கிறித்தவர்களால் தமிழ் மொழி அடைந்த நன்மை ஒன்றா? இரண்டா? கிறித்தவரிற் சிலர் தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டுக்குக் காட்டினர். வேறொரு சிலர் தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும் விளக்கி அருளினர். மற்றொரு சிலர் இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும் செம்மையையும் துலக்கினர். மேலை நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் மற்றுஞ் சிலர். இன்னுஞ் சிலர் தமிழில் உரை நடை நூல்களைப் பெருக்கினர். இவ்வாறு பல வகையானும் தமிழுக்குத் தொண்டு செய்த பிற நாட்டு நல்லறிஞருள், டாக்டர் போப், டாக்டர் கால்டுவல், வீரமாமுனிவர், எல்லீசர், ரேனியசு ஐயர் என்போர் குறிப்பிடத் தகுந்தோராவர். டாக்டர் போப் அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் பலவாகும். இவர் தமிழின் பெருமையினை உலகறியச் செய்ய மிகவும் பாடுபட்டார். திருவாசகத் தேனை ஆங்கில மொழிக் குவளையில் ஊற்றித் தன்னாட்டவருக்கு வழங்கினர். இது போன்றே இவர் நாலடியாரையும், குற ளையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர் பல ஆங்கில வெளியீடுகளில் தமிழினைப்பற்றி பல கட்டுரைகளை எழுதினார்: தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிட்டார். ஆங்கிலத்திலும் அவற்றை மொழி பெயர்த்தார். சுருங்கக் கூறின் டாக்டர் போப் தமிழ் இலக்கியத்தின் பெருமையை மேலை நாட்டு மக்களுக்குக் காட்டினார். இவரைப் போன்றே டாக்டர் கால்டுவல் தமிழ் முதலிய திராவிட மொழிகளின் ஒற்றுமையினை உலகுக்கு அறிவுறுத்தினர். உலகம் உள்ளளவும் திராவிட மொழிகளின் சிறப்பைப் பறையறைய வல்ல திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative grammar of Dravidian languages) என்ற நூலை இயற்றியவர்" இவரே. வீரமாமுனிவர் என்பவர் கம்பனைப் போல ஏசுவின் கதையைத் தமிழிலே காவியமாகப் பாடினார். அதற்குத் தேம்பாவணி என்று பெயர். இது தவிர, இவர் பல சின்னூல்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவரால் இயற்றப்பட்ட சதுர அகராதி குறிப்பிடத்தகுந்ததாகும். எல்லீசர் என்பவர் நம் திருக்குறளை மேலை நாட்டாரும் படித்து இன்புற வேண்டும் என்ற பேரார்வத்தால் திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்க மான விரிவுரை ஒன்று எழுதத் தொடங்கினர். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. ரேனியசு ஐயர் என்பவர் தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவராவர். முற்காலத்தில் சமணப் புலவர்கள் நிகண்டு நூல்கள் இயற்றியதைப் போன்றே பிற்காலத்தில் கிறித்தவப் புலவர்கள் நமக்கு அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். இத்தகைய நூலை முதன் முதலில் தமிழகத்திற்கு அளித்த பெருமை சதுர அகராதியை இயற்றிய வீரமாமுனிவரையே சாரும். இதன் பின்னர் பாப்ரீசியர் என்பவரால் விரிவான அகராதி ஒன்று வெளிக்கொணரப்பட்டது. அடுத்து ராட்லர், டெய்லர் என்போரது முயற்சியால் 1400 பக்கங்கள் கொண்ட பேரகராதி ஒன்று வெளிவந்தது. இது வெளி வந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பெர்சிவல் போன்ற பல அறிஞர் பலகாலமாகத் திரட்டியவற்றை வின்சுலோ என்பவர் வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பணியைத் தொடங்கிய பெருமை சாந்தலர் என்பவருக்கே உரியதாகும். தமிழ்நாட்டுப் பழமொழிகள் அனைத்தையும் திரட்டித் தந்த பெருமையும் மேலை நாட்டு நல்லறிஞரையே சாரும் பெர்சிவல், லாசரசு ஐயர் என்ற இரு பெரியவர்களும் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகளை எல்லாம் சேகரித்துப் பெரும் நூலாக வெளியிட்டனர். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் கிறித்தவத் தொண்டர்கள் தமிழ் வாழ, வளர வழி செய்தனர். ** வளர்க தமிழ்** உலக மொழிகளிலே செம்மொழிகள் என ஆன்றோரால் அழைக்கப்படுவன ஐந்து. அந்த ஐந்தனுள்ளே தமிழ் மொழியுண்டு. தமிழ்மொழியிலே பல இலக்கியங்கள் உண்டு. தமிழ் மொழிக்கு மூவாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாறுண்டு. தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கணச் செறிவும் தொன்மைச் சிறப்பும் உடைய ஒரு மொழிதான். ஆனால் இன்றையத் தமிழ் மொழியின் நிலையென்ன? நமக்கு அறிவு புகட்டப் பயன்படுகின்ற மொழி எது? நம்மை ஆள்வது எது? தமிழா? அன்று, அன்று. ஏன் இந்த நிலை? ஆங்கிலம்தான் இன்று நம்மை ஆள்கிறது. ஆங்கிலத்திற்கில்லாத தொன்மைச் சிறப்பு தமிழுக்குண்டு. அம்மொழிக்கில்லாத இலக்கிய வளம் நம் மொழிக்குண்டு. அம்மொழி பெற்றிடாத இலக்கணங்கள் நம் அருமை மொழிக்குண்டு. இருந்தும் தமிழால் நம்மை ஆள முடியவில்லை. ஆங்கிலத்தின் இத்துணைச் சிறப்புக்குக் காரணம் ஆங்கிலத்திலே அறிவியல் நூல்களும், பிற கலை நூல்களும் இன்று எத்தனையோ ஆயிரம் பெருகியுள்ளமையே. ஆங்கிலத்திலே தேனிக்களைப் பற்றி மட்டும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உண்டாம். ஆனல் தமிழிலோ? வாய்மூடி மெளனியாக வேண்டியுள்ளது. எனவே இனி நாம் செய்யவேண்டியது என்ன ? தமிழை வளர்க்கவேண்டும். எப்படி? அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கக் கூடாது. மண்ணையும் விண்ணையும், காற்றையும் ஊற்றையும், கனலையும் புனலையும், காட்டையும் கழனியையும், கடலையும் உடுக்களையும் பற்றி அழகான சொற்களிலே அற்புதமாகப் பாடினால் மட்டும் போதாது. தமிழ் வளராது. மாருகக் கடல் நீரைப்பற்றி, அதன் தன்மையைப் பற்றி ஓராயிரம் நூல்கள் வேண்டும். விண்ணின் நிறம் என்ன ? அதற்கு அத்தகைய நிறம் வந்தது எப்படி ? விண்ணிலே உள்ள எண்ணற்ற உடுக்களிலே தண்ணுெளி பெற்றன எத்தனை ? கடைெளி பெற்றன எவை? எவை?உடுக்களோடுவிண்ணிலே உலவும் கோள்கள் எவை? அவற்றிற்கும் நாம் வாழும் நில உலகுக்கும் உள்ள தொலைவு எத்தனை மைல் ? நமது உலகம் எதனால் ஆயது? எத்தன்மையது ? அது தோன்றியது எவ்வாறு ? இந் நிலவுலகில் உயிர்கள் எப்போது தோன்றின? முதலில் தோன் றிய உயிர் எது? நிலத்திலே மலையும் காடும் எவ்வாறு தோன்றின? கால நிலை இடத்திற்கு இடம் வேறு பட்டிருப்பதின் காரணம் என்ன ? மக்கள் எவ்வாறு தோன்றினர் ? எவ்வாறு வாழ்கின்றனர்? அவர்கள் உடலின் கூறுகள் யாவை ? அவற்றின் தன்மை என்ன ? அவை வளர்வது எங்ஙனம்? மக்கள் பெருக்கம் எவ்வாறு ஏற்படுகிறது ? அதனால் உலகுக்கு நன்மையா, தீமையா? மேலே எழுப்பிய அத்தனை வினாக்களும் நூலின் தலைப்புக்கள்: ஒவ்வொரு தலைப்புக்கும் பல நூல்கள் அழகுத் தமிழிலே உடனே எழுத வேண்டும். யாண்டும், எத்துறையிலும் தமிழன்னை நடம் புரிய வேண்டும். "உடல் நூலும் உயிர்நூல் அறிவு நூல் கணித நூல் உள்ள நூலும் மடனறுநற் பொரு ணூலும் மரநூலும் நில நூலும் வான நூலும் தடையிலா மொழி நூலும் இசை நூலும் சரித நூல் தருக்க நூலும் அடைவேநம் தமிழ் மொழியில் அழகியநல் உரை நடையில் அமைக்க வேண்டும்." மேலும் ஒரு பெருங்குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் இரு உட் குழுக்கள் அமைக்க வேண்டும். உட் குழுக்களில் ஒன்று உலக நாடுகள் அத்தனைக்கும் செல்லவேண்டும். அங்கங்குள்ள பெரு மன்றங்கட்குச் சென்று தமிழின் அருமை பெருமைகளை அந் நாட்டார் அறிந்து போற்றும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அஃதோடு அந் நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே, தமிழ் கற்க, தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். மற்ருெரு குழு உள் நாட்டிலே பட்டி தொட்டிகளுக்கும், மூலை முடுக்கு களுக்கும் சென்று சொற்பொழிவு வாயிலாகவும், தனி வகுப்புக்கள் வாயிலாகவும் மக்கட்கு தமிழறிவைப் புகட்டல் வேண்டும். மேற்கூறிய அத்தனை பணிகளையும் செய்ய வேண்டுமானால் தாய் நாட்டை ஆளும் ஆட்சியாளரின் ஆதரவும் அன்பும் வேண்டும். அதற்கு வழி நாட்டாச்சி தமிழில் நடைபெறவேண்டும். எனவே சட்ட மன்றத்தில், நீதி மன்றத்தில், கல்வி நிலையங்களில் எங்கும் தமிழ் கோலோச்ச வேண்டும். தமிழே படிக்கா வண்ணம் உயர்கலைப் பட்டம் பெறுவதற்கு இன்றையத் தமிழகத்திலே, கல்லூரிகளிலே வாய்ப்பு இருக்கிறது. அது நீக்கப்பட வேண்டும். இத் திட்டங்களை ஏட்டிலே இருந்து நாட்டிலே நடைமுறைக்குக் கொண்டுவந்தால், "முத்தமிழும் விரிவடையும் முயற்சியும் நற்பயன் அளிக்கும் முகமலர்ந்து மெத்தவும் நம் தமிழன்னை யகங் குளிர்வாள் தமிழ் நாடும் விளங்கு மன்றே !" அந்நாளே தமிழுக்கு ஓர் நன்நாள்; பொன்நாள். அந்நாள் என்று வருமோ? வாழ்க தமிழ் நாடு ! ** வளர்க தமிழ் !**   [] [] [] கேள்விகள் M. P. S. C. Subordinate Services (B. A. Standard) 1. தமிழ் மிகத் தொன்மையானது என்பதற்குச் சான்றுகள் யாவை? 2. செந்தமிழ், கொடுந்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இவற்றிடையே உள்ள வேறுபாட்டைக்கொண்டு தமிழ் மொழியின் இயல்பை எவ்வாறு அளந்தறியலாம்? 3. திணை பால் பாகுபாட்டில் தமிழுக்குரிய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறுக. 4. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் கீழ் வழுவல கால வகையி னுனே’ என்பதைத் தமிழ் மொழியின் வரலாற்றில் பொருத்திக் காட்டுக. 5. தமிழர்கள் தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதை விளக்கும் சான்றுகள் யாவை? 6. சங்க காலத்துச் சமூக அரசியல் நிலைமைகளைச் சுருக்கி வரைக. 7. பல்லவராட்சியில் தமிழ்நாடு கலைத்துறையில் பெற்ற முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுக. - 8. மகேந்திரவர்மப் பல்லவன் அல்லது முதல் இராசராச சோழன் ஆட்சியைக் குறித்துக் கட்டுரை வரைக. 9. சோழராட்சி ஓங்கியிருந்த காலத்தில் கிராமங்கள் சீரும் சிறப்புமாக இருந்தமைக்குக் காரணம் என்ன? 10. விசயநகர மன்னர்களால் தமிழ்நாட்டு வரலாற்றில் நேர்ந்த மாறுதலை எடுத்துக் கூறுக. [செப். 1948] 11. இந்திய மொழிகளில் தமிழுக்குள்ள சிறப்பியல்புகளைப் புலப்படுத்துக. 12. தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்ததுஎன்பதை ஆராய்ந்து காட்டுக. 13. தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ளதொடர்பு எத்தகையது என விளக்குக. 14. ஒரு மொழி பேசுவோர் மற்றொருமொழியாருடன் கலந்து பழகியகாரணத்தையும் முறையையும் அந்தந்தமொழியே தெரிவிக்கும் என்பர். தமிழ்மொழிக்கு இது எவ்வளவில் பொருந்தும்?ஆராய்க. 15. பல்லவர் ஆட்சியில் கலைகள் வளர்ந்ததோடுஅல்லாமல்மொழியும் வளர்ச்சிபெற்றது என்பதைவிளக்குக. [செப். 1950] 16. பிற மொழிச் சொற்கள் தமிழ் மொழியுடன்கலப்பதால் வரும் நன்மை தீமைகளை ஆராய்க. 17. தமிழர் ஐரோப்பியருடன் கொண்ட தொடர்பால்தமிழ் மொழி எவ்வெவ்விதங்களில் வளம்பெற்றுள்ளது? 18. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிஎன்ற பாகுபாட்டின் சிறப்பை எடுத்துக்கூறுக. [சூன் 1952] 19. மேலைநாட்டு நல்லறிஞர் தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டின்திறத்தினை விளக்குக. 20. தமிழ்மொழியில் நாடகம் தோன்றி வளர்ந்தவரலாற் றைக் கூறுக. [சனவரி 1958] M. P. S. C. Provincial Services 21. சங்க காலத்தில் முத்தமிழ் வளர்ந்த வரலாற்றைக் கூறுக. 22. சமணர்கள் தமிழ் மொழிக்குச் செய்த சேவையைச் சுருக்கமாக எழுது. 23. தமிழ் நெடுங்கணக்கில் சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும் என்பார் கொள்கையை ஆராய்க. 24. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி வளர்ந்துவரும் பான்மையை உதாரணத்துடன் விளக்குக 25. கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னே தமிழ்நாட்டுக்கும் அயல்நாடுகட்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிகத்தைச் சான்று காட்டி எழுதுக. 26. தமிழகத்தில் கற்கோவில் எழுந்த வரலாற்றைக் கூறுக. 27. மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் இவ்விரு நகரங்களின் பழம் பெருமையைச் சரித்திர வாயிலாக விளக்குக. 28. கி. பி. பத்தாம் நூற்ருண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் கலைக் களஞ்சியங்களாக விளங்கிய நகரங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுக. 29. பயிர்த்தொழிலை வளர்ப்பதற்குச் சேர சோழ பாண்டியர்கள் செய்த முயற்சியை விளக்கிக் கூறுக. [சூலை 1948] 30. நல்ல தமிழின் நீர்மையை விளக்கி உதாரணமும் தருக. 31. ’தமிழ்நாட்டு மூவேந்தருள்ளும் தமிழ் மொழியைச் சிறப்புற வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது" -இதை ஆராய்க. 32. பல்லவர் அரசாண்ட காலத்தில் தமிழ்வளர்ந்த வரலாற்றைச் சுருக்கி வரைக. 33. பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச்சங்கத்தின் வரலாற்றையும்,அச்சங்கத்தினுல் தமிழுக்கு விளைந்தநன்மைகளையும் விளக்கிக் கூறுக. 34. தமிழில் வழங்கும் ஐரோப்பிய மொழிச்சொற்களை வகைப்படுத்திக் காட்டுக. [அக். 1949] 35. “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலேகிடந்து சங்கத்- - திருப்பிலே இருந்துவைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை”-இக்கவியிலுள்ள கருத்துக்களை ஆராய்க. 36. தென்னாட்டில் திருமடங்கள் தோன்றித்தமிழ் வளர்த்த வரலாற்றைச் சுருக்கிஎழுதுக. 37. "தமிழ்நாட்டுத் திருக்கோவில்கள் கலைக்கோவில்களாகவும் திகழ்ந்தன-இவ்வுண்மையை விளக்குக. 38. திரிசொல், திசைச் சொல்-இவற்றின்தன்மையை விளக்கி உதாரணந் தருக. 39. “தமிழ்நாட்டின் சீர் ஒங்கி இருந்த காலமே தமிழ் மொழி சிறப்புற்றிருந்தகாலம்” -இக்கொள்கையை ஆராய்க. [நவ. 1950] 40. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற பாகுபாடுஎந்த அடிப்படையின்மேல் எழுந்தது?அதனால் அறியக் கிடக்கும் மொழி வரலாறென்ன? 41. தமிழிலக்கணத்தில் உள்ள உயிர், மெய்,ஆய்தம், உயர்திணை, அஃறிணை என்னும்குறியீடுகள் பாராட்டத் தக்க முறையில்அமைந்துள்ளன என்பதை விளக்குக. 42. சமண பெளத்தர்கள்/ தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச்செய்துள்ள தொண்டு பற்றி ஆராய்க. 43. தமிழ்நாட்டின் பொற்காலம் என்றுபோற்றத் தக்கது எது? காரணம் தந்துவிளக்குக. [1952] M. P. S. C. State Services [B. A. (Hons). Standard 44. தமிழ்நாட்டின் வரலாறு அந்நாட்டுமொழியின் இலக்கிய வளர்ச்சியையேனும்அம்மொழியின் வளர்ச்சியையேனும்விளக்குவதை ஆராய்க. 45. தொல்காப்பியர் காலத் தமிழுக்கும்நன்னூலார் காலத் தமிழுக்குமோ (அல்லது) நன்னூலார் காலத் தமிழுக்கும் இந்நாளையத் தமிழுக்குமோ உள்ள ஒற்றுமைவேற்றுமைகளைத் தெளிவுபடுத்துக. 46. பாண்டியரோ, பிற்காலச் சிற்றரசர்களோ தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்குக.[1954] 47. பல்லவர் அல்லது பிற்காலச் சோழர்சிறந்திருந்த போது தமிழ் வளர்ந்தவரலாற்றை விளக்குக. 48. சங்க காலத்தின் மொழி இயல்பையோஇந்நாளையமொழி இயல்பையோ விளக்குக. [1955] 49. சங்க இலக்கியங்களின் வழியாகஅறியப்படும் சங்க கால வரலாற்றினைஆராய்ந்தெழுதுக. [1956] 50. பழந் தமிழ்நாட்டின் எல்லைகளைப் பற்றியஇலக்கியச்சான்றுகளை வரன்முறையாக எழுது. 51. இருபதாம் நூற்றாண்டில் நாடகத் தமிழ்வளர்ந்த, வரலாற்றைக் கூறுக. [1957] 52.இருபதாம் நூற்றண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் - அல்லது கரந்தைத் தமிழ்ச்சங்கம் வளர்ந்த வரலாற்றையும் ஆற்றியபணிகளையும் விளக்கி எழுதுக. [1958] BOOKS CONSULTED 1. Administration and Social life under Pallavas - Dr. Meenakshi 2. Administration and Social life under Vijayanagar Empire - Dr. V. Mahalingam 3. Comparative grammar of Dravidian Languages - Dr. Caldwell 4. Dravidian Architecture - Dubreil 5. Foreign notices of South India - K. A. Neelakanda Sastri 6. History of Tamils - P. T. Srinivasa fyengar 7. History of the Pallavas of Kanchi - Gopalan 8. Some Contributions of South India to Indian Culture - S. K. lyengar 9. South Indian History - K. A. Neelakanda Sastri 10. Studies in Pallava History - Fr. Heras 11. Tamils 1800 years ago - V. Kanagasabai Pillai எடுத்தாண்ட நூல்கள் 1. அழகுக் கலைகள் - மயிலை. சீனி. வேங்கிடசாமி 2. சங்க காலத் தமிழும் - டாக்டர் உ. வே. சா. பிற்காலத் தமிழும் 3. தமிழக வரலாறு. - அ. மு. ப. 4. தமிழ் மொழி வரலாறு - வி. கோ. சூ. 5. பல்லவர் வரலாறுடாக்டர் - மா. இராசமாணிக்கனார் 6. பாண்டியர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார் 7. பிற்காலச் சோழர் " சரித்திரம் 8. மொழி நூல் - டாக்டர் மு. வ FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.