[]       தமிழ் வளர்த்த நகரங்கள்  அ க நவநீத கிருட்டிணன்      அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          பொருளடக்கம் பதிப்புரை 4  அணிந்துரை 5  1. தன்னேரிலாத தமிழ் 6  2. தமிழ் வளர்த்த சங்கங்கள் 10  மதுரை மாநகரம் 14  3. மதுரையின் மாண்பு 14  4. இலக்கிய மதுரை 17  5. நாயக்கர் அணிசெய்த மதுரை 22  6. தமிழ் வளர்த்த மதுரை 23  நெல்லை மாநகரம் 28  7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும் 28  8. புராணம் புகழும் நெல்லை 31  9. நெல்லைத் திருக்கோவில் 33  10. தமிழ் வளர்த்த நெல்லை 39  தில்லை மாநகரம் 42  11. தில்லையின் சிறப்பு 42  12. புராணம் போற்றும் தில்லை 45  13. தில்லைத் திருக்கோவில் 46  14. இலக்கியங்களில் தில்லை 49  15. தமிழ் வளர்த்த தில்லை 52  பதிப்புரை   ‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல் தொன்மை வழக்கு. மொழியால் பெயர்பெற்ற நாடுகள் உலகில் மிகுதி. ஆக, மொழியால் நாடும், நாட்டால் மொழியும் பெற்ற சிறப்புப்பெரிது; மிகப்பெரிது. நாடின் றேல் மக்களில்லை; மக்களின்றி மொழியில்லை; மொழியின்றி ஆால்களில்லை; நூல்களின்றிப் பெருமையில்லை. நாட்டைச் சிறப்பித்ததனால் மற்றவற்றையும் சிறப்பித்ததாயிற்று.  ‘தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்யும்’ இற்றைகாள் மக்கள் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’ பற்றியும் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். தமிழின் இன்றைய சிறப்பிற்கு வித்திட்ட பெருமையுடைய. மூன்று நகரங்களைப்பற்றியும் இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவ்வந்நககரங்களின் சிறப்பு, அவற்றில் வாழ்ந்த நூலறிபுலமை வாய்ந்த ஆன்றாேர், அவர்கள் ஆக்கியருளிய அருந்தமிழ் நூல்கள் ஆகியவை குறித்த செய்திகள் அழகுறத் தரப்பட்டுள்ளன. அவை யாவும் கற்பார்க்குச் சுவையும் பயனும் தருவன.  தமக்கே யுரித்தான தண்டமிழ் நடையில் இந்நூலை யியற்றித்தந்த ஆசிரியர், திரு. அ. க. நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு நம் நன்றி உரியதாகுக. தமிழ்மக்கள் அனைவரும், சிறப்பாக மாணவர்கள் இதனேக் கற்று மாண்புறுவார்களாக.  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.                                    அணிந்துரை   மக்கள் உயர்வுக்குத் தக்க துணைபுரிவன அறிவும் ஒழுக்கமுமே. எல்லோருக்கும் தாய்மொழி யறிவே இன்றி யமையாதது. இறையுணர்வைப் பெருக்கும் சமய அறிவே ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்கும். அறிவும் பண்பாடும் மக்களிடையே தரத்தால் குறைந்துவரும் இந்நாளில், அவற்றை மாணவரிடையே தரமுடையனவாகத் தழைக்கச்செய்யும் வழிதுறைகளை நினைவூட்டிக் காக்க வேண்டுவது கல்வித்துறையினரின் தலையாய கடமையாகும.  இத்தகைய கடமையுணர்வுடன் தமிழாகிய தாய்மொழி யறிவையும் சமயப் பண்பாட்டையும் வளர்க்கும் மூன்று நகரங்களைப்பற்றிய சிறப்பான செய்திகள் இந்நூலில் விளக்கமாகத் தரப்படுகின்றன. தமிழகத்தின் தொன்மையான நகரங்களாகிய மதுரை, நெல்லை, தில்லை என்ற மூன்றும் தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்கும் இந்நூல் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’என்னும் பெயரால் வெளி வருகின்றது. தமிழுலகம் எனக்குச் சில்லாண்டுகளாகத் தந்துவரும் பேரூக்கத்தாலேயே இந்நூலையும் உருவாக்கினேன். என்னை இடையறாது இப் பணியில் ஊக்கிவரும் உயர்ந்த நோக்கினராகிய சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையாப் பிள்ளையவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.  இதனேக் கண்ணுறும் கலாசாலேத் தலைவர்களும் கன்னித்தமிழ்ப் பணியாற்றும் புலவர் பெருமக்களும் இக் நூலைத் தத்தம் கலாசாலைகளில் பாடமாக்கி எளியேனே இத்துறையில் ஊக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.  தமிழ் வெல்க !  அ. க. நவநீதகிருட்டிணன்                                  1. தன்னேரிலாத தமிழ்   பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர்.  கதிரவனும் கன்னித்தமிழும்  கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி வீசுகிறான்; உலகிற் சூழும் புறவிருளையும் போக்குகிறான். அத்தகைய கதிரவனைப் போலக் கன்னித் தமிழும் பொதிய வெற்பில் பூத்து வருகிறது; கற்றுண்ர்ந்தோர் கடவுள் தன்மை வாய்ந்த மொழி யென வணங்கி வாழ்த்த விளங்குகிறது; உலக மக்களின் அகவிருளையும் ஒழிக்கின்றது; ஆதலின் ஒளியால் தன்னேரிலாத கதிரவனைப் போன்று, உயர்தனிச் செம்மையால் தன்னேரிலாது விளங்கும் தன்மையது. தமிழென்றார் அப்புலவர்.       “ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி       ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்       மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன்(று) ஏனைய       தன்னேர் இலாத தமிழ்.”  என்பது அப் புலவரின் பாடல்.  தமிழின் தொன்மை இம்மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த பழங்குடியினரால் பேசப்படும் பெருமை வாய்ந்தது. படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த முடிமன்னர் மூவரால் பேணி வளர்க்கப்பெற்றது. எல்லையறு பரம்பொருள், பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும், தான் முன் இருந்தபடியே என்றும் யாதொரு மாறுபாடுமின்றி இருந்து வருகிறது. அஃதேபோல் நந்தம் செந்தமிழும் எந்த மாறுபாடுமின்றி என்றும் கன்னிமையோடு நின்று நிலவுகின்றது.  தமிழின் சீரிளமைத்திறம் தாய்மொழியாகிய இத்தமிழிலிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் சேய் மொழிகளாகத் தோன்றியுள்ளன. பல சேய்களே ஈன்றும் தாய்த்தமிழ் இளமைகெட்டு முதுமையுற்று வளமையற்றுப் போகவில்லை. இதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்பெறும் உயர்தனிச் செம்மொழிகளாகிய வடமொழி, எபிரேயம், இலத்தீன் ஆகியவற்றைப் போன்று உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்துபோகவில்லை. என்றும் மாறாத சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்ற இம்மொழி. இவ்வுண்மையைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,     ‘'ஆரியம்போல் உலகவழக்(கு) அழிந்தொழிந்து சிதையாவுன்    சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ‘’  என்று விளக்கினார்.  தமிழ் உயர்தனிச் செம்மொழி உலக வழக்கில் பண்டுபோல் இன்றும் நின்று உலவிவரும் உயர் தனிச் செம்மொழி தமிழ். ஒரு காட்டில் வழங்கும் மொழிகள் பலவற்றுள்ளும் தலையாயதும், அவற்றினும் மிக்க தகையாயதுமான மொழியே உயர்மொழியாகும். பிற மொழிகளின் துணையின்றித் தனித்தியங்க வல்ல ஆற்றல்சான்ற மொழியே தனி மொழியாகும். திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழியே செம்மொழியாகும். இம்மூன்று இயல்புகளும் தன்னகத்தே கொண்ட தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியன்றோ !  தமிழ் என்ற பெயரமைதி தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்பதே பொருள். இனிமையே இயல்பாக அமைந்த இம்மொழிக்குத் தமிழ் என்ற பெயர் எத்துணைப் பொருத்தமானது! மேலும், தமிழ் என்ற சொல் தனித்தியங்கும் திறத்தையுடையது என்ற கருத்தைக் கொண்டதாகும். எழுத்துக்கள் வன்மை, மென்மை, இடைமையாகிய மூவகை ஓசைகளுடன் உச்சரிக்கப்பெறுவன என்பதைப் புலப்படுத்துவது போன்று த, ம, ழ என்ற மூவின எழுத்துக்களும் அப்பெயரிலேயே அமைந்துள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும். மெய்யெழுத்தாக நிற்கும்போது புள்ளியுடன் விளங்கிய எழுத்து, அகர உயிருடன் சேரும்போது புள்ளி நீங்குவதன்றி எந்த வேறுபாடும் எய்துவதில்லை என்பதை விளக்குவது 'தமிழ்’ என்ற சொல்லின் முதலெழுத்தாகும். இரண்டாம் எழுத்து, மெய் அகரமல்லாத பிற உயிர்களுடன் சேருங்கால் உருவில் வேறுபடும் என்பதை விளக்கியது. மெய்யெழுத்து இத்தகையது என்பதைக் காட்டி நிற்பது மூன்றாம் எழுத்து. எனவே தமிழ் நெடுங்கணக்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பாகுபாடுகளையுடையது என்றும், மெய்யெழுத்துக்கள் ஓசையால் மூவகையின என்றும், ‘தமிழ்’ என்ற பெயரே விளக்கி நிற்றல் உணர்ந்து இன்புறத்தக்கதாகும். தமிழுக்கே உரிய ழகர மெய்யைத் தன்பால் கொண்டிருப்பதும் மற்றாெரு சிறப்பாகும். எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயர்களே அமைத்து, எழுத்தைப் பயிலும்போதே தத்துவ உணர்வையும் புகுத்த முனைந்த நம் முன்னோரின் நன்னோக்கினை என்னென்பது!  தமிழ் அமிழ்து மூவாமைக்கும் சாவாமைக்கும் காரணமாவது அமிழ்து. அது மிகவும் சுவையானதொரு பொருள். மிகுந்த சுவையுடைய நம் மொழியினுக்குப் பெயரமைக்கப் புகுந்த முன்னோர் ‘அமிழ்து’ என்றே அமைத்துவிட்டனர். அதுவே பின்னாளில் தமிழ் என்று மருவிவிட்டது என்றும் கூறுவர். இதன்கண் அமைந்த அமிழ்தனைய இனிமையைக் கண்ட ஆன்றோர் இதனை வாளா கூறாது செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், தீந்தமிழ் என்று அடைமொழி கொடுத்தே வழங்கி வந்துள்ளனர். கவியரசராகிய கம்பநாடர், தமது இராமாயணத்தில் அயோத்தி நகரைக் குறிக்குமிடத்து,  ‘‘செவ்விய மதுரஞ் சேர்ந்தநற் றமிழில்     சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல்    முனிவரும் புகழ்ந்தது‘‘  என்று பாடியுள்ளார். இங்கு எத்தனை அடைமொழிகளுடன் தமிழ் சிறப்பிக்கப்பெற்றுள்ளது! செம்மை, இனிமை, நன்மை ஆகிய மூன்று அடைமொழிகளால் தமிழைப் பாராட்டுகிறார் கம்பர்.  தமிழும் குமரகுருபரரும் நெல்லை நாட்டின் தெய்வக் கவிஞராகிய குமரகுருபரர் தாம் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் நம் மொழியின் இனிமையைத் தித்திக்கப் பேசுந்திறம் தமிழர் சித்தத்தை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துவதாகும். முத்தமிழ்க் கடவுளாகிய முத்துக்குமரனின் செங்கனிவாயில் பசுந்தமிழின் நறுமணம் கமழ்கின்றதாம். அம்முருகவேளும் சங்கத்தில் புலனாக வீற்றிருந்து தமிழை ஆய்ந்தான் என்பர். ஆதலின் அவன் சங்கப் புலவர்கள் வகுத்தமைத்த துங்கத் தமிழ் நூல்களைத் திருவாயால் ஓதிய அருளாளன் ஆவான். அவர்கள் வகுத்த தமிழ் நூல்கள் தீஞ்சுவைக் கனியும் தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரம் அத்தகைய தமிழ் மணம், முருகன் திருவாயில் கமழ்க் தூறுகின்றது என்று குமரகுருபரர் கூறியருளினார்.         ‘’ முதற்சங்கத் தலைப்பா வலர் தீஞ் சுவைக்கனியும்         தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரங் கனிந்தூற் றிருந்தபசுங்         தமிழும் நாற ‘‘  என்பது அவர் பாடற் பகுதியாகும். இப்புலவர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மையைத் தமிழ்ச்சுவையாகவே கண்டு உள்ளம் தழைக்கின்றார், “நறை பழுத்தி துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே!"’ என்று மீனாட்சியம்மையை அவர் விளிக்குங்திறத்தால் தமிழின் இனிமையையும் அவ்வினிமைக்குக் காரணமான அகத்துறை, புறத்துறைகளையும் குறித்தருளினர்.  ஒண்டீந்தமிழ் பிற மொழிகள் எல்லாம் எழுத்தும் சொல்லும் பற்றிய இலக்கணங்களேயே பெற்றிருக்கவும், தமிழ் ஒன்றுமட்டும் பொருள் இலக்கணமும் பெற்றுப் பொலிகின்றது. மக்கள் வாழ்வியலை வகுத்துரைக்கும் அப்பொருள் இலக்கணம் அகம், புறம் என்னும் இரு பகுதிகளையுடையது. காதல் கனியும் அகவாழ்வும் வீரம் சொரியும் புறவாழ்வும் பொருள் இலக்கணத்தால் போற்றியுரைக்கப்பெறுவனவாகும். இவையே அகத்துறை, புறத்துறை யெனப்பட்டன.  புறத்துறை இலக்கண இலக்கியங்களால் புகழும், அகத்துறை இலக்கண இலக்கியங்களால் இனிமையும் பெற்று விளங்கும் தமிழின் பெற்றியை மாணிக்கவாசகர் “ஒண்டீந்தமிழ்” என்ற தொடரால் குறித்தருளினர். அவரும் கூடலில் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமான் புலவகை அமர்ந்து செந்தமிழாய்ந்த திறத்தைக் குறித்துள்ளார்.  “சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்    பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின்    ஆய்ந்தஒண் டீந்தமிழ்”  என்பது அவர் அருளிய திருக்கோவையார்ப் பாடல் அடிகளாகும்.  வில்லி சொல்லுவது பாரதம் பாடிய நல்லிசைக் கவிஞராகிய வில்லிபுத்தூரார் தமிழ்மொழியாகிய நங்கை பிறந்து வளர்ந்த பெற்றியை ஒரு பாடலில் அழகுறப் பேசுகின்றார். அவள் பொருப்பிலே பிறந்தாள் ; தென்னன் புகழிலே கிடந்தாள் ; சங்கப்பலகையில் அமர்ந்தாள் ; வையையாற்றில் இட்ட பசுந்தமிழ் ஏட்டில் தவழ்ந்தாள் ; மதுரையில் நிகழ்ந்த அனல் வாதத்தின்போது நெருப்பிலே நின்றாள் ; கற்றாேர் நினைவிலே நடந்தாள் ; நிலவுலகில் பயின்றாள் ; இன்று தமிழர் மருங்கிலே வளர்கின்றாள் என்று குறித்தார் அப்புலவர்.  பரஞ்சோதியார் பாராட்டுவது திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் தமிழின் சிறப்பைத் தக்கவாறு குறிப்பிடுகின்றார். “கண்ணுதற் கடவுளும் கழகத்தில் கவிஞகை வீற்றிருந்து கன்னித்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்தான்; அத்தகைய அருந்தமிழ் சிறந்த இலக்கண வரம்பையுடையது; மண்ணுலகில் வழங்கும் இலக்கண வரம்பில்லாத பிற மொழிகளுடன் ஒருங்கு வைத்தெண்னும் இயல்புடையதன்று” என்று இயம்பியுள்ளார். மேலும், அச்சிவபெருமான் தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவனாகத் திகழ்வதற்கும் தீந்தமிழ்ச் சுவையே காரணம் என்று கூறிப்போந்தார். கயிலையில் ஆடிய கூத்தன் ஆலங்காட்டு மணிமன்றத்திலும், தில்லைப் பொன்னம்பலத்திலும், ஆலவாய் வெள்ளியம்பலத்திலும், நெல்வேலிச் செப்பறையிலும், குற்றாலச் சித்திரமன்றிலுமாகத் தென்றிசை நோக்கி ஆடிக்கொண்டே தமிழ்ச்சுவை நாடி வந்தான் என்று பாடினார் பரஞ்சோதி முனிவர். அவ்விறைவன் இடையறாது ஆடுவதால் ஏற்படும் இளைப்பையும் களைப்பையும் போக்கும் மருந்து, அருந்தமிழும் நறுந்தென்றலும் என்று நினைந்தான்.  "கடுக்க வின்பெறு கண்டனும் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவங் தாடுவான் ஆடலின் இளைப்பு விடுக்க வாரமென கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ !”  என்பது பரஞ்சோதி முனிவரின் பாடல்.  அற்புதம் விளைத்த அருந்தமிழ் இறைவனும் விரும்பிய இன்பத்தமிழ் தனது தெய்வத்தன்மையால் பற்பல அற்புதங்களையும் ஆற்றியுள்ளது. சுந்தரர் பாடிய செந்தமிழ்ப் பாடலில் சிந்தை சொக்கிய சிவபெருமான், அவர்பொருட்டுத் திருவாரூரில் பரவையார் திருமனைக்கு நள்ளிருளில் இருமுறை தூது சென்று வந்தான். அவிநாசித் தலத்தில் முதலையுண்ட பாலனை மீண்டும் உயிர்பெற்று வருமாறு செய்தது அச்சுந்தரர் பாடிய செந்தமிழே. எலும்பைப் பெண்ணுருவாக்கியது சம்பந்தரின் பண்ணமைந்த ஞானத்தமிழ். திருமறைக்காட்டில் அடைபட்டுக் கிடந்த திருக்கோவில் கதவங்களைத் திறந்தது நாவுக்கரசரின் நற்றமிழ். இன்னும் எண்ணிலா அற்புதங்கள் பண்ணமைந்த தமிழால் நிகழ்ந்தன.  பாரதியும் பைந்தமிழும் இத்தகைய தெய்வநலங்கனிந்த தீந்தமிழின் சிறப்பை இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவர்களும் பாடிக் களிக்கின்றனர். தேசீயக் கவிஞராகிய பாரதியார் பன்மொழியறிந்த பைந்தமிழ்ப் புலவர். அவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று வியந்தோதினர். இளங்குழந்தைக்குத் தமிழின் சிறப் பைக் கூற விரும்பிய அப் புலவர், சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதனைத்-தொழுது படித்திடுக ” என்று அன்போடு எடுத்துரைத்தார்.  பாரதிதாசனாரும் பைந்தமிழும் தமிழின் இனிமையைப் பகரவந்த பாரதிதாசனார், “முதிர்ந்த பலாச்சுளையும் முற்றிய கரும்பின் சாறும் பனிமலர்த்தேனும் பாகின்சுவையும் பசுவின் பாலும் இளநீரும் தமிழின் இனிமைக்கு ஒப்பாக மாட்டா” என்று உரைத்தார்.  "தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !”  என்று இன்பக் கூத்தாடுகின்றார்.  திருக்குறளும் தொல்காப்பியமும் இத்தகைய தமிழ் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அளவிலாத இன்பந்தரும் இயல்புடையது என்று போற்றினார் பொய்யாமொழிப் புலவர். ஆய்தொறும் இன்பூட்டும் அரிய நூல்கள் பல இம்மொழியில் தோன்றியுள்ளன. அவற்றுள் தலையாயது உலகப் பொதுமறையாகிய திருக்குறள் நூலாகும் ; தொன்மை வாய்ந்தது ஒல்காப் புகழ் படைத்த தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பெருநூலாகும். மொழிநலம் குன்றாது காத்துநிற்கும் மொய்ம்புடையது தொல் காப்பியம். தமிழ் நலத்தை வையம் அறியச்செய்து வான்புகழைத் தேடித்தந்தது திருக்குறள். இதனைப் பாரதியார்,  "வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”  என்று வாயார வாழ்த்தினார். இத்திருக்குறள் ஒன்றே தமிழைத் தன்னேரிலாத தனிப்பெருமையுடைய மொழி என்று போற்றப் போதியதாகும்.              2. தமிழ் வளர்த்த சங்கங்கள்   தமிழ்வளர்த்த நாடும் நகரும் தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது.  சங்கம் பற்றிய சான்றுகள் பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த சங்கங்கள் மூன்று. அவை தலை, இடை, கடை யெனக் குறிக்கப்பெறும். இம்மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை இறையனார் களவியல் பாயிர உரையாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக்களாலும், சில சங்க இலக்கிய உரைகளாலும் ஒருவாறு அறியலாம். இவற்றுள் இறையனார் களவியல் உரையே சங்க வரலாற்றைச் சற்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வுரை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதேயெனினும் கருத்துக்கள் அனைத்தும் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரனாருடையனவே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை, சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண்டியர்களையும், அவற்றில் இருந்து தமிழாய்ந்த புலவர்களையும், ஒவ்வொரு சங்கத்திற்கும் உரிய புலவர்களின் தொகையையும், சங்கம் நடைபெற்ற ஆண்டுகளின் அளவையும், முதலிரு சங்கங்கள் நிலவிய நகரங்கள் கடல்கோளால் அழிந்ததையும் எடுத்துரைக்கும் திறம் வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது. அதனாலேயே இவ்வரலாற்றில் நம்பிக்கை கொண்ட பண்டை உரையாசிரியர்கள் பலரும் தத்தம் உரையகத்தே இவ்வரலாற்றுக் குறிப்புக்களை இடையிடையே எடுத்துக்காட்டினர்.  தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், “தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தால் செய்யுள் செய்தார்”, “அவ்வழக்கு நூல் பற்றியல்லது மூன்றுவகைச் சங்கத்தாரும் செய்யுள் செய்திலர்” என்று கூறும் உரைகளுள் களவியல் உரையிற் காணும் சங்க வரலாற்றுக் குறிப்புக்களைக் காண்கிறோம்.  மற்றாேர் உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் தாம் வரைந்துள்ள தொல்காப்பிய உரைக்கண், “அவ்வாசிரியராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்” என்றும், புறத்திணையியல் உரையில், "தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனரும் அகத்தியனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க” என்றும் கூறுமாற்றான் களவியல் உரைக்குறிப்புக்களை அவர் எடுத்தாளுந்திறம் புலனாகின்றது.  தலை இடைச் சங்கங்கள் சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கம்” என்றும், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்” என்றும், “முதலூழி இறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது உரைப்பகுதியில் முதலிடைச் சங்கங்கள் இருந்த நகரங்களும் கவியரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம்.  "இவ்வகை யரசரிற் கவியரங்கேறினார் ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம் விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக் கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப”  என்ற பழைய பாட்டானும் கபாடபுரத்தில் சங்கமிருந்த செய்தி அறியப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் தாம் இயற்றிய தெய்வத்தன்மை வாய்ந்த பெரியபுராணத்தில், “சாலுமேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்” என்று தலைச்சங்கப் புலவரைக் குறித்துள்ளார்.   இடை கடைச் சங்கங்கள் கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:  "தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில் தொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந,” "தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலங்தரு திருவின் நெடியோன் போல”  என வரும் மதுரைக்காஞ்சி அடிகளால் பாண்டியன் ஒருவன் அகத்தியரைத் தலைவராகக்கொண்டு முதற் சங்கத்தை நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியருக்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடியோனாகிய முடத்திருமாறன் இடைச்சங்கம் நிறுவிப் புலவர்களைக் கூட்டித் தமிழாய்ந்த செய்தியும் விளக்கமாகின்றன.  இடைச்சங்கக் கபாடபுரம் இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப் பற்றிய செய்தி, வான்மீகி இராமாயணத்திலும் வியாசபாரதத்திலும் சுட்டப்பட்டுள்ளது. தென்பாற் செல்லும் வாணர வீரர்க்குச் சொல்லும் இராமன் வார்த்தைகளாக, ‘வானர வீரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துக்களால் அணி செய்யப்பட்டதும் பாண்டியர்க்கு உரிய தகுதியுடையதுமான கபாடபுரத்தைக் காணக் கடவீர்!’ என்று வான்மீகியார் குறிப்பிட்டுள்ளார். வியாசர் தம் பாரத நூலுள், ஒரு பாண்டியன், தன் தந்தையைக் கொன்று கபாடபுரத்தை அழித்த கண்ணனையும் கடிமதில் துவாரகையையும் அழிப்பதற்குப் படையெடுத்த செய்தியொன்றைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தம் பொருள் நூலில் முத்தின் வகைகளைப் பற்றி மொழியுமிடத்துக் கபாடபுரத் துறையில் குளித்த முத்தின் வகையைப் பாண்டிய கவாடகம் என்று பகர்ந்துள்ளார்.  மதுரையில் கடைச்சங்கம் இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும் இலங்கிய செய்தியை மாணிக்க வாசகர் தம் திருக்கோவையார் நூலில் குறிக்கின்றார்,  "சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்         பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின்       ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி       ஏழிசைச் சூழல்புக்கோ ? இறைவா! தடவரைத் தோட்கென்       கொலாம்புகுந் தெய்தியதே.”  இப்பாடலில் கூடலெனப் பெயர் வழங்கும் மதுரைமாநகரில் தமிழ்ப் புலவர்கள் சங்கமிருந்து தமிழ்க்கலைத் துறைகளே ஆராய்ந்த செய்தி கூறப்படு கின்றது. ஏழாம் நூற்றாண்டில் திகழ்ந்த திருநாவுக்கரசர், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்’ என்று தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாற்றைத் தம் தேவாரப் பாட லில் குறிப்பிடுகின்றார். இச்செய்திகளால் கடைச் சங்கம் இன்றைய மதுரைமாநகரில் இலங்கியதென்பதும் விளங்குகிறது.  களவியல் உரையில் தலைச்சங்க வரலாறு இறையனார் களவியல் உரையால் காணலாகும் முச்சங்கச் செய்திகளைச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப்பகுதியில் விளங்கிய தென்மதுரையே பாண்டியர்களின் முதற் கோநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். இம்முதற்சங்கத்தை நிறுவியவன் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன். இதன்கண் அகத்தியனார், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான ஐந்நூற்றுநாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் போன்ற எண்ணிறந்த நூல்கள் ஆக்கப்பெற்றன. இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது. இதில் பாண்டியர் எழுவர் கவியரங்கேறினர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியமாகும். இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன்.  இடைச்சங்க வரலாறு தலைச்சங்கமிருந்த தென்மதுரை கடல்கோளால் அழிந்தபின், கடுங்கோன் என்னும் பாண்டியன் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த வளநாட்டில் கபாடபுரம் என்னும் நகரைத் தலைநகராக்கினான். அந்நகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழைப் புரந்தான். இதுவே இடைச்சங்கம் எனப்படும். இதன் கண் தொல்காப்பியர் முதலான பல புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்தனர். இச்சங்கத்தில் ஐம்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் கலியும், குருகும், வெண் டாளியும், வியாழமாலை அகவலும் முதலான பல நூல்கள் பாடப்பெற்றன. அவர்கட்கு இலக்கணநூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆகும். இச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் விளங்கிற்று என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.  கடைச்சங்க வரலாறு இடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் முடத்திரு மாறன் என்னும் பாண்டியன் இருந்தான். இவனே இன்றைய மதுரைமாநகரைப் பாண்டிய நாட்டின் தலைநகராக்கினான் ; இம்மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கத்தையும் நிறுவினான். இவன் கடல்கோளால் ஏற்பட்ட தன்னாட்டின் குறையை நிறைத்தற்குச் சேர சோழரோடு போர்புரிந்து அவர்கள் காட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். அதனால் இவன் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்று வியந்தேத்தும் சீர்த்தி பெற்றான். இவன் காலமுதல் இன்றைய தென்றமிழ் மதுரை, பாண்டிய நாட்டிற்கே யன்றிப்பைந்தமிழ் நாடு முழுமைக்கும் மொழி வளர்ச்சியில் முதன்மைபெற்றுத் திகழ்வதாயிற்று.  கடைச்சங்கத்தில் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் முதலான நாற்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, கற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலான எண்ணிறந்த நூல்கள் இயற்றப்பெற்றன. அவர்கட்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக விளங்கின. இச்சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது ஆண்டுகள் நின்று நிலவியது. இச்சங்கத்தின் இறுதிநாளில் விளங்கிய மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பான்.  புலவர் கழிவிரக்கம் இறையனார் களவியல் உரைப் பாயிரத்தால் மூன்று சங்கங்களிலும் தோன்றிய நூல்கள் பலவற்றை அறிகின்றோம். அவற்றுள் முதற் சங்கத்தில் எழுந்த நூல்களுள் ஒன்றேனும் இன்று காணுதற்கில்லை. அச்சங்கத்தில் எழுந்த பேரிலக்கணமாகிய அகத்தியத்தின் ஒரு சில சூத்திரங்களையே உரைகளிடையே காணுகின்றோம். இடைச்சங்க நூல்களுள்ளும் தொல்காப்பியம் நீங்கலாக ஏனையவெல்லாம் கடலுக்கு இரையாயின. இச்செய்தியைக் குறித்து ஒரு புலவர் இரங்கிக்கூறும் பாடல் இங்கு எண்ணுதற்குரியது :  "ஓரணம் உருவம் யோகம்       இசைகணக்(கு) இரதம் சாலம் தாரண மறமே சந்தம்      தம்பம்நீர் நிலம் உலோகம் மாரணம் பொருள்ளன் றின்ன       மான நூல் பலவும் வாரி வாரணம் கொண்ட(து) அந்தோ!      வழிவழிப் பெயரும் மாள.”  இப் பாடலால் மூன்று சங்கங்களிலும் பல துறைக் கலைநூல்கள் அளவிலாது எழுந்தனவென்றும், அவற்றுட் பெரும்பாலன கடல்கோளால் அழிக்தொழிந்தன என்றும் அறிகின்றோம்.  சமண பெளத்த சங்கங்கள் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னனாகிய உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர்த் தமிழ்ச்சங்கம் பேணுவாரின்றி மறைந்தொழிந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சமணரும் பெளத்தரும் தமிழகத்தே புகுந்தனர். அவர்கள் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழ்மதுரையில் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாக இலக்கண இலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. அவையனைத்தும் சமயச்சார்புடைய நூல்களாகவும் சமயக்கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல்களாகவுமே விளங்கின.                                மதுரை மாநகரம் 3. மதுரையின் மாண்பு  இனிமையான நகர் மதுரை தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை என்ற சொல்லுக்கு இனிமையென்பது பொருள். என்றும் இனிமை குன்றாத தனிப்பெருநகரமாகச் சிறப்புற்று விளங்குவது இந்நகரம். இதனை முதற்கண் தோற்றுவித்த பாண்டியன், நகரைத் தூய்மை செய்தருளுமாறு இறைவனை வேண்டினான். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமான் தன் சடையில் அணிந்த பிறைமதியினின்று சிந்திய நிறைமதுவாகிய நல்லமுதால் நகரைத் தூய்மை செய்தான். அதனால் இந்நகர் மதுரையெனப் பெயர்பெற்றது என்பார் பரஞ்சோதியார். அவர் இதனைத் ‘திக்கெலாம் புகழ் மதுரை’ என்றும், ‘நண்ணி இன்புறு பூமி மதுரை மாநகரம்’ என்றும் மனமுவந்து பாராட்டுகின்றார்.  தமிழும் மதுரையும் தமிழும் மதுரையும் இனிமையே இயல்பாய் எழுந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ் ; இங்ஙனம் இவையிரண்டும் பிரிக்கமுடியாத இணைப்புடையன. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவரெல்லாரும் தமிழொடுசேர்த்தே போற்றுவாராயினர். “தமிழ்கெழு கூடல்” என்று புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனர் என்னும் புலவர் தாம் பாடிய சிறுபாணாற்றுப் படையில் மதுரையைக் குறைத்துக் கூறவந்தவிடத்தும் அதன் இயற்கை மாண்பை மறைத்துக் கூறவியலாது,  "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”  என்று குறித்தார்.  இளங்கோவும் மருதனாரும் இளங்கோவடிகள் தமது இனிய காவியத்தில் “ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென் தமிழ் கன்னட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” என்று பற்பல சொற்றாெடர்களால் மதுரைமாநகருக்குப் புகழ் மாலை சூட்டி மகிழ்கின்றார். மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக்காஞ்சியில்” வானவரும் காண விரும்பும் வளம் நிறைந்த நகரம்” என்று கூறுகின்றார்.  "புத்தேள் உலகம் கவிணிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை”  என்பது அவர் பாடற்பகுதியாகும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “மதுரைப் பெருகன் மாநகர்” என்று தறித்தருளினார்.  தென்னகத்து நன்னகா மதுரை இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர் அந்நாட்டில் ஒரு நகரத்துக்குப் ‘புதிய இங்கிலாந்து’ என்று பெயர் வழங்கினர். அதுபோன்று முன்னை நாளில் தென்னாட்டில் குடியேறிய ஆரியர் தம் வடநாட்டு வடமதுரையைப் பின்பற்றித் தமிழகத்திலும் இந்நகருக்கு மதுரையெனப் பெயர் வழங்கினர் என்று வரலாற்று ஆசிரியர் பேசுகின்றனர். மேலை நாட்டினர் மதுரையைத் ‘தென்னிந்தியாவின் ஏத்தன்ஸ்’ என்று ஏத்துகின்றனர்.  மதுரையும் மருதையும் பாமர மக்கள் இன்றும் மதுரையை மருதையென வழங்கக் காண்கிறோம். அதுவே இந்நகரின் பழம் பெயராக இருக்கலாமோ என்று எண்ணுதற்கு இடமுமுண்டு. மருதமரங்கள் நிறைந்த நகரம் இதுவாதலின் அக்காரணம்பற்றி மருதையெனப் பெயர் பெற்றிருக்கலாம். வையையாற்றின் வளமான கரையில் அமைந்த இந்நகரின் மக்கள் இறங்கி நீரோடுந் துறையாக ‘மருதந் துறை’ என்ரறொரு நீர்த்துறை இருந்ததெனப் பரிபாடல் பகர்கின்றது. அது இத்துறையினை ‘திருமருத முன்துறை’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரமும் ‘வருபுனல் வையை மருதோங்கு முன்துறை’ என்று இத்துறையைக் குறிப்பிடுகிறது. இவற்றால் மதுரையின் பழம்பெயர் மருதை என்று கொள்ள இடமுண்டு.  நான்மாடக்கூடல் மதுரை இந்நகருக்குக் கூடல் என்றும், ஆலவாய் என்றும் வேறு பெயர்களும் வழங்குகின்றன. நான்மாடக் கூடல் என்ற பெயரே கூடல் என மருவியுள்ளது. திருக்கோவிலே மாடம் என்று சொல்லும் மரபுண்டு. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில் தலங்கள் சேர்ந்தமைந்த காரணத்தாலோ, கன்னி கோயில், கரிய மால் கோயில், காளி கோயில், ஆலவாய்க் கோயில் ஆகிய நான்கு திருக்கோயில்களும் காவலாக அமைந்த காரணத்தாலோ நான்மாடக்கூடல் என்னும் பெயர் இந்நகருக்கு ஏற்பட்டுள்ளது.  நான்மாடக்கூடலும் பரஞ்சோதியாரும் ஒருகால் வருணன் மதுரையை அழிக்குமாறு ஏழு மேகங்களை ஏவினான். அதனால் எங்கும் இருள் சூழ்ந்து பெருமழை பொழியத் தலைப்பட்டது. பாண்டியன் செய்வதறியாது உள்ளம் பதைத்தான். மதுரையில் எழுந்தருளிய இறைவனிடம் சென்று முறையிட்டான்; உடனே சிவபெருமான் தன் செஞ்சட்டையிலிருந்து நான்கு மேகங்களை ஏவினான். அவை மதுரையின் நான்கு எல்லைகளையும் வளைந்து, நான்கு மாடங்களாக நின்று, வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் விலக்கி விரட்டின. இவ்வாறு இறைவனால் ஏவப்பெற்ற நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடியதால் மதுரை, நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர் பரஞ்சோதி முனிவர்.  கூடுமிடம் கூடல் இனி, எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகராதலின் கூடல் என்று கூறப்பெற்றது என்பர் சிலர். தமிழை வளர்க்கப்புகுந்த புலவரெல்லரம் வந்து கூடிய செந்தமிழ்ச்சங்கம் சந்தமுற அமைந்த பெருநகரமாதலின் கூடல் என்ற பெயர் பெற்றதென்பர் மற்றும் சிலர்.  ஆலவாய் மதுரை வங்கியசேகரன் என்னும் பாண்டியன் மதுரையை ஆண்டநாளில் நகரை விரிவாக்க விரும்பினான். சிவ பெருமானிடம் நகரின் எல்லையை வரையறுத்து உணர்த்துமாறு வேண்டினான். அப்பெருமான் தன் கரத்தமர்ந்த பாம்பை விடுத்து எல்லையை உணர்த்துமாறு பணித்தான். அது, தன்னால் எல்லை காட்டப்பெறும் நகரம் தன் பெயரால் தழைத்தோங்க அருள் புரியுமாறு பெருமானை வேண்டியது. பின்னர் அப்பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது; அவ்வாலைந் தனது வாயில் சேர்த்து எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரை ‘ஆலவாய்’ என்னும் பெயர் பெற்றது என்பர் திருவிளையாடற் புராண ஆசிரியர். ஆலவாய் என்பது ஆலத்தை வாயிலுடைய பாம்பைக் குறிக்கும். வேறு சிலர், மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலநீழலில் அமர்ந்தவனாதலின் அந்நகர் ஆலவாயில் எனப்பட்டதென்பர்.  தெய்வங்கள் ஆண்ட திருநகரம் இத்தகைய மதுரையைச் சிவபெருமான் சுந்தர பாண்டியனாகத் தோன்றி ஆண்டனன் என்றும், செவ்வேள் உக்கிரகுமார பாண்டியனாகத் தோன்றிச் செங்கோலோச்சினான் என்றும், மலையத்துவச பாண்டியனுக்கு உமையம்மை மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகத் தனியரசு செலுத்தினாள் என்றும் புராணங்கள் புகலும்.  நாயன்மார் விளங்கிய நன்னகரம் இந்நகரை முன்னாளில் ஆண்ட மன்னனாகிய அரிமர்த்தனன் என்பானுக்குச் சைவ சமயாசிரியர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசகர் மதியமைச்சராக விளங்கினார் என்று பல புராணங்கள் பகரும். மற்றாெரு சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், கூன் பாண்டியன் காலத்தில் மதுரைக்கு எழுந்தருளிச் சைவ சமயத்தை நிலைநாட்டினார் என்பர். கூன் பாண்டியனுக்கு மாதேவியாக வாய்த்த மங்கையர்க் கரசியாரும் மதியமைச்சராக வாய்த்த குலச்சிறையாரும் சைவம் காத்த தெய்வமாண்பினராக மதுரைமாநகரில் விளங்கினர். அதனால் மன்னன், மாதேவி, மதியமைச்சர் ஆகிய மூவரும் பெரிய புராணம் போற்றும் அரிய சிவனடியார்களாகத் திகழ்கின்றனர்.  புலவரும் மதுரையும் பழந்தமிழ்ப் புலவர் பலரும் தம் பெயருடன் மதுரையைச் சேர்த்து வழங்கப்பெரிதும் விரும்பினர். அவ்வாறு கூறப்பெறுவதைத் தங்கட்குப் பெருமையென்றும் கருதினர். மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனார், மதுரைக் குமரனார், மதுரை மருதனிளநாகனார், மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கண்ணகனார், மதுரையாசிரியர் கோடங்கொற்றனார், மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை வேளாதத்தர், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், மதுரை நல்வெள்ளியார், மதுரைப் பெருங்கொல்லனார், மதுரைக் கதக்கண்ணனார் முதலிய புலவர் பெயர்களால் அவ்வுண்மையை அறியலாம்.  மதுரைத் திருக்கோவில் மதுரையின் நடுநாயகமாய் மீனட்சியம்மையின் திருக்கோவில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி அணியணியாகத் தெருக்கள் அழகுற அமைந்துள்ளன. இங்கு எழுந்தருளிய இறைவனுக்குச் சொக்கநாதர், சோமசுந்தரர் என்னும் திருப்பெயர்கள் வழங்குகின்றன. அழகே வடிவாய்த் திரண்டவன் இறைவன் என்ற உண்மையை இப்பெயர்கள் விளக்குகின்றன. இக்கோவிலில் விளங்கும் இறைவனையும் இறைவியையும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற அருளாளர்கள் பதிகம் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்குத் திங்கள்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இத்தகைய பன்னலங்களும் நிறைந்து விளங்கும் பொன்னகரமாகத் தென்னகத்தில் திகழ்வது மதுரைமாநகரம் ஆகும்.                               4. இலக்கிய மதுரை   மாங்குடி மருதனார் காட்டும் மதுரை தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும்.  கடைச்சங்கத் தொகை நூலாகிய பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார் என்னும் பெரும்புலவரால் பாடப்பெற்றது. அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர். அவர் பாண்டியனால் பெரிதும் மதிக்கப்பெற்றவர்.  "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக”  என்று ஆப் பாண்டியனே மாங்குடி மருதனாரைப் பாராட்டுகின்றான். அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் நினைவோடு மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். இந்நூற்கண் அவர் காட்டிய புலமைத் திறங்கண்ட பிற புலவர்கள் அவரைக் ‘காஞ்சிப் புலவர்’ என்றே கொண்டாடினர்.  மாங்குடி மருதனார் காட்டும் மதுரைச் சிறப்பை நோக்குவோம். ஐவகை நிலவளங்களும் நிறைந்து விளங்கும் பாண்டிய நாட்டின் நடுவிடத்தே ம்துரைமாநகரம் அமைந்துள்ளது. வையையாற்றின் கரைக்கண் இருப்பது. ஆழமான அகழியையும், உயரமான மதிலையும், இடையறாமல் மக்கள் வந்து போகும் வாயிலையும், வரிசையாக அமைந்த பெரிய மனைகளையும் உடையது. ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களையுடையது. தெருக்களில் பலவகைக் கூட்டத்தாரின் ஒலிகள் எழுந்த வண்ணமாக இருக்கும். முரசறைவோர் விழாக்களைப்பற்றி விளம்பிக்கொண்டே செல்லுவர். கடலொலியைப் போலப் பல்வேறு இசைக்கருவிகள் எங்கும் முழங்கிக்கொண்டிருக்கும். அவ் இசையை விரும்பியவர்களுடைய ஆரவாரமும் நிறைந்திருக்கும்.  மதுரையில் பகற்கடைகளாகிய நாளங்காடியும், இரவுக் கடைகளாகிய அல்லங்காடியும் இருந்தன. கடைகளில் இன்ன பொருள் விற்கப்படுகின்றது என்பதை அறிவிக்கக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். நாளங்காடியில் பூ விற்பாரும், மாலைகள் விற்பாரும், நறுமணச் சுண்ணம் விற்பாரும், வெற்றிலை பாக்கு விற்பாரும் இருப்பர். அல்லங்காடியில் சிலர் சங்கினை அறுத்து வளையல்களாகக் கடைந்து விற்பர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர். சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர். சிலர் பொன்வேலை செய்வர். சிலர் ஆடைகள் விற்பர். சிலர் அழகிய ஓவியங்களை வரைந்து விற்பர். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் ஆகிய கனிவகைகளைச் சிலர் விற்பர். வாழைக்காய், வழுதுணங்காய், பாகற்காய், கீரை, கிழங்கு முதலியவற்றைச் சிலர் விற்பர். இவர்கள் பேசும் ஓசையெல்லாம் கூடிப் பேரொலியாக இருக்கும். இவ் இரவுக் கடைகள் எல்லாம் முதல் யாமத்திலேயே மூடப்பட்டுவிடும்.  இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கி விடும். அப்போது அப்ப வணிகர் அடையினையும் மோதகத்தினையும் தட்டுகளில் வைத்தவாறே உறங்கிக் கொண்டிருப்பர். நகர மக்களும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பர். மூன்றாம் யாமத்தில் ஊர்க்காவலர்கள் துயிலாத கண்களோடும் அயராத உறுதியோடும் நகரில் உலாப்போவர். அவர்கள் கள்ளர்களை ஒற்றியறிந்து உள்ளம் தளராது திரிந்துகொண்டிருப்பர். மழை பொழிந்து தெருவில் நிறைய நீரோடும் வேளையிலும் அவர் தம் கடமையில் தவறாது கையில் வில்லும் அம்பும் தாங்கிக் காவல் புரிந்து திரிவர். கடையாமத்தில் அந்தணர் மறையினை ஒதுவர். பாணர் மருதப் பண்ணை வாசிப்பர். பாகர்கள் யானைகளுக்குக் கவளம் தந்துகொண்டிருப்பர். குதிரைகள் புல்லைத் தின்றுகொண்டிருக்கும். கடைக்காரர்கள் கடைகளின் முற்றங்களைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்வர். கள் விற்போர் கள்ளின் விலைகூறிக் கொடுத்துக்கொண்டிருப்பர். மகளிர் தத்தம் மனைக் கதவங்களைத் திறக்கும் ஒலி கேட்கும். பள்ளியெழுச்சி முரசம் முழங்கும். காளை மாடுகள் ஆரவாரம் செய்யும். சேவல்கள் கூவும். மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும். மகளிர் மனைமுற்றங்களைப் பெருக்குவர்.  இங்ஙனம் மாங்குடி மருதனார் காட்டும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மதுரைமாநகருக்கும் இன்றைய மதுரைக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை. பண்டுபோல் இன்றும் எல்லா கலங்களும் நிறைந்து விளங்கும் சிறந்த நகரமாகவே மதுரை திகழ்ந்து வருகிறது. மதுரை போன்ற சிறந்த நகர் தமிழ் நாட்டில் ஒன்றுமின்று, சோழன் சேரன் ஆண்ட தலைநகரங்களும் இதற்கு ஒப்பாகா.  பரிபாடல் பாராட்டும் மதுரை இனி, மற்றாெரு கடைச்சங்க நூலாகிய பரிபாடல் காட்டும் மதுரையைப் பார்ப்போம். எழுபது பாடல்களைக் கொண்ட பரிபாடல் நூலில் நான்கு பாடல்கள் மதுரையைப் பற்றியன என்று பழம்பாடல் ஒன்று பகர்கின்றது.  "திருமாற்(கு) இருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக், காடுகாட்(கு) ஒன்று,-மருவினிய வையையிரு பத்தாறு, மாமதுரை நான்(கு) என்ப செய்யபரி பாடல் திறம்.”  அந்நான்கு பாடல்களுள் ஒன்றேனும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வையையைப் பற்றிய பாடல்கள் எட்டு நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றில் இடையிடையே மதுரையைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.  மதுரைமாநகரின் நடுவில் திருக்கோவில் அமைந்துள்ளது. அதன் காற்புறமும் தெருக்களின் பின் தெருக்களாக அமைந்துள்ளன. இவ்வமைப்புத் தாமரைப்பூவின் அமைப்பை ஒத்திருந்தது. தாமரை மலரின் நடுவில் உள்ள பொகுட்டினைப் போன்று இறைவன் திருக்கோவில் இலங்கியது. பொகுட்டினைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் போன்று தெருக்கள் திகழ்ந்தன. இத்தகைய நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது.  "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர்; பூவின் இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து) அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”  இந் நகரில் எப்பொழுதும் வேதியர் ஓதும் மறையொலி நிறைந்திருக்கும். அந்த மறையொலி கேட்டே மதுரை நகரத்து மக்கள் துயிலெழுவர். சோழன் தலைநகராகிய உறையூரிலும், சேரன் தலைநகராகிய வஞ்சியிலும் வாழும் மக்கள் கோழி கூவும் ஒலி கேட்டுத் துயிலெழுவது போன்று மதுரை மக்கள் துயிலெழுவதில்லை.  வையையாற்றில் நீராடிய மக்கள் ஒப்பனை செய்து கொள்ளுவதற்கென்று சில தனிமாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மாடங்களுள் சில புலிமுக வடிவில் விளங்கின. அப்புலி வடிவத்தைக் கண்டு, உண்மைப் புலியென்று கொண்டு, களிற்றைப் பாயுமென வெருண்டு, பிடிகள் சிதைந்து ஓடுவதுண்டு.  இந்நகரில் பூக்களை ஆராய்ந்து கொய்பவர் பலர் இருந்தனர். அவர்கள் மலர் கொய்தற்கெனத் தனிக் கோல் ஒன்று வைத்திருந்தனர். அவர்கள் கொய்த மலர்களை மாலையாகக் கட்டுதற் பொருட்டு ஓரிடத்தில் குவிப்பர். அவற்றைக் குவிப்பதற்காகத் தனியே பூமண்டபங்கள் இருந்தன.  மதுரைமாநகரின் மதிலையொட்டி வையை சென்றது. அதில் பெருகிவரும் வெள்ளத்தின் அலைகள், விண்ணுற நிவந்த மதிலின்மீது மோதும். அவ் அலையோசை கேட்டு நகரமக்கள் துயிலெழுவர். மதிலில் நீண்டதொரு சுரங்கவழி நிலவியது. அதன் உள்ளே சென்ற ஆற்றுநீரை, மதில் புறத்தே சொரியும் காட்சி, களிறு துதிக்கையைத் தூக்கி நீரைப் பொழிவது போன்றிருக்கும். மதிலின் புறத்தே வையைக் கரையிலுள்ள மலர்ச்சோலைகளின் நடுவே பாணரும் கூத்தரும் வாழ்தற்கென்று பாக்கங்களும் சேரிகளும் விளங்கின.  திருமகளுக்கு அணிந்த திலகம் போல உலகில் புகழ் பூத்துக் கமழ்வது மதுரைமாநகரம். பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் மதுரை சீர்குன்றாது பேர்பெற்று விளங்கும். ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துவக்கும் மக்கள் மதுரையில் மிக்குள்ளனர். அவர்களே வாழ்வார் என்று சொல்லத்தக்கார். அவர்கள் புத்தேள் உலகும் போதற்கு உரியராவர்.  இத்தகைய மதுரைமாநகரைப் புலவர்கள் தங்கள் புலமைத் துலாக்கோலால் தூக்கிப் பெருமையை நோக்கினர். உலகினை ஒரு தட்டினும் மதுரையை மற்றாெரு தட்டினும் வைத்து எடைபார்த்தனர். உலகனைத்தும் வாட, மதுரையிருந்த தட்டு வாடவில்லை. எனவே, உலக முழுதும் சேர்ந்தாலும் மதுரைக்கு ஒப்பாகாது என்று மதிப்பிட்டார் பரிபாடற் புலவர்.  "உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர் ’’  என்பது பரிபாடல்.  மதுரைமக்கள் நீராடும் வையைத்துறை மதுரைமாநகரிலுள்ள மக்கள் வையையில் நீராடுதற்குரிய நெடுந்துறையாகவும் முன்துறையாகவும் விளங்கியது திருமருதமுன்றுறையாகும். அஃது அடர்ந்த மருதமரங்கள் நிறைந்த கரையைச் சார்ந்த துறையாகும். நீராட வருவார் தங்குதற்குரிய தண் பொழில் அமைந்த அழகிய துறையாகும். கூடலா ரெல்லாம் வந்து கூடினலும், கூடற்கோமான் படை யுடன் வந்து நாடிலுைம் தங்குதற்கு வாய்ப்புடைய வளமான பொழில் சூழ்ந்த எழில்துறையாகும். நீர் வற்றிய வேனில் காலத்திலும் கரையைச் சார்ந்து நீர் சென்றுகொண்டிருக்கும் முன்னடித் துறையாகும். ஆதலால் அது திருமருதமுன்றுறை யென்று புலவர் பாடும் புகழ்பெற்றது.  புதுப்புனல் விழா நடைபெறும் கன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலேயொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்.  இத்துறைக்கண் பாணர்கள் சென்று யாழிசைத்து மருதப்பண்ணை அருமையாகப் பாடுவர். அவர்கள் பாடப்பாட மைந்தரும் மகளிரும் நீரில் பாய்ந்து ஆடுவர் ; அவர் தம்முள் ஊடுவர்; ஊடலுணர்ந்து கூடுவர்; கூடி மகிழ்வர் ஒடிப் பிரிவர்: தேடித் திரிவர்; மலரைச் சூடித் தொழுவர். இங்ஙனம் இருபாலாரும் துறைக்கண் ஆடியமையால் வையைகீர் எச்சிலாயிற்று என்று கூறினர் இன்னொரு புலவர்.  இளங்கோவடிகள் காட்டும் மதுரை காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத் திருமா மணியாய்த் தோன்றிய கண்ணகியின் கற்பு மாண்பைக் கவினுற விளக்கும் காவியம் சிலப்பதிகாரம். சேர நாட்டு வீரவேங்தர் வழித்தோன்றலாகிய இளங்கோ வடிகள் அவ் இனிய காவியத்தை ஆக்கியருளின்ர். அவர் தமது காவியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று பெரும் பிரிவுகளை வகுத்துள்ளார். அவற்றுள் நடுவண் அமைந்த மதுரைக் காண்டம் கண்ணகி வாழ்வில் மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விளக்குகிறது. அப்பகுதியில் மதுரையைப் பற்றிய செய்திகள் பல கூறப்படுகின்றன.  ‘சூழ்வினைச் சிலம்பு காரணமாக, காட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யு’ளென உறுதிபூண்ட இளங்கோவடிகள் மதுரைமாககரை ஒருமுறையேனும் நேரில் கண்டறிந்தவராதல் வேண்டும். மதுரையிலேயே பல்லாண்டுவாழ்ந்து கூலவாணிகம் நடாத்திய சீத்தலைச் சாத்தனர் அவருக்குத் தண்டமிழாசானதலின் அவர் வாயிலாக மதுரைச் செய்திகளைத் தெளிவாகக் கேட் டறிந்தவராதல் வேண்டும். இக் காரணங்களால் இளங்கோவடிகள் வளங்கெழு மதுரைமாநகரைச் சிறந்த சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.  இரண்டாம் நூற்றாண்டில் மதுரைமாநகரைச் சூழ்ந்து மாபெரும் மதில் அமைந்திருந்தது. மதிலைச் சுற்றிலும் ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து அகன்ற காவற்காடும் அமைந்திருந்தன. இங்ஙனம் பல்வேறு வல்லரண்களால் குழப்பெற்ற மதுரையில் வாழ்ந்த மக்கள் என்றும் பகைவர் படையெடுப்பிற்கு அஞ்சியதுமில்லை; அந் நகரைவிட்டு அகன்றதுமில்லை. இதனால் இளங்கோவடிகள் அங்ககரைப், “பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்” என்று குறிப்பிட்டார். இளங்கோவடிகள் காலத்தில் மதுரைமாநகர் பகைவர் படையெடுப்பைக் கண்டதே யில்லை.  மதுரையைச் சூழ்ந்த மதிலில் பகைவரை அழிக்கும் பல்வேறு பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கருவிரல் குரங்குப்பொறி, கல்லுமிழ் கவண், வெங்கெய்க் குழிசி, செம்பினை உருக்கும் குழிசி, இருப்பு உலகள், கல்லிடு கூடைகள், தூண்டிற் பொறி, பகைவரைக் கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலிகள், ஆண்டலைப் புள்ளின் வடிவாக அமைத்த அடுப்புகள், மதிலைப் பற்றியேறுவாரைப் புறத்தே தள்ளும் இருப்புக் கப்புகள், கழுக்கோல், அம்புக்கட்டுகள், ஏவறைகள், தன்னே நெருங்கியவர் தலையை நெருக்கித் திருகும் மரங்கள், ஊசிப்பொறிகள், சிச்சிலிப் பொறிகள், பன்றிப்பொறிகள், மூங்கில் வடிவில் அமைந்த பொறிகள், எழு, சிப்பு, கணையம், எறிகோல், குந்தம், வேல், குருவித்தலைப் பொறிகள் இன்னும் இவைபோன்ற வலிமிக்க பொறிகள் அமீைந்து, பகைவர் அணுகாது அச்சுறுத்தின. இத்தகைய மதிலின்மீது பாண்டியன் நாள்தோறும் பகை வரை வென்றுவென்று உயர்த்திய வெற்றிக் கொடிகள் வீறுடன் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன.  கொடிமதில் வாயிலைக் கடந்து நகருக்குள் புகுந் தால் நவமணிக் கடைகள் அமைந்த வீதியும், அறுவைக் கடை வீதியும், கூலங் குவித்த கூல வீதியும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களாகிய நால்வகை மக்களும் வாழும் நல்வீதிகளும், ஆவண வீதியும், பரத்தையர் வீதியும் அணியணியாக அமைந்திருக்தன. வீதிகளில் வேனிற்கால வெப்பினை யகற்றுவதற்காக வானளாவிய பந்தர்கள் போடப்பட்டிருந்தன. சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் ஆங்காங்கே காணப் பெற்றன.  நகருள்ளே சிவபிரான் திருக்கோவிலும், திருமால் கோவிலும், பலராமன் கோவிலும், முருகன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன. இன்றுள்ள அங்கயற் கண்ணி திருக்கோவிலும் கூடலழகர் திருக்கோவிலும் அன்று விளங்கினவல்ல. அவை பிற்காலம் தோன்றி யவை. இங்கே காமனுக்குத் திருவிழா நடந்தது.  பரஞ்சோதியார் காட்டும் மதுரை தமிழகத்தின் பழமையான சமயமாகிய சைவத் தின் தெய்வ மாண்பைத் தெரிக்கும் புராணங்கள் பல். அவற்றுள் தலையாய புராணங்கள் மூன்று. அவை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பன. திருவிளையாடற் புராணத்தைச் சிவபெருமானின் இடக்கண் என்று சைவர் போற் றுவர். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் அங்ககரில் அறுபத்து நான்கு அருள் விளையாட்டுக்கள் செய்தருளினான். அச் செய்திகளைக் கற்பனை கலங்கள் கனியுமாறும், பத்திச்சுவை பெருகுமாறும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்னும் அருள் நூலாக ஆக்கித் தந்தார். அந் நூலிற் போற்றப்படும் நாடும் நகரமும் முறையே பாண்டிய நாடும் பழந்தமிழ் மதுரையுமே யாகும். அவர் காட்டும் மதுரையை நோக்குவோம்.  ஒரு காலத்தில் மதுரையும் அதனைச் சூழ்ந்த பகுதியும் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக் காட்டின் கீழைப்பகுதியில் மணவூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்னும் மன்னன் பாண்டிய காட்டை ஆண்டுவந்தான். அவன் காலத்தில் மணவூரில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான், அவன் ஒருநாள் வாணிகத்தின் பொருட்டு வேற்றுார்ச் சென்று, கடப்பங்காட்டு வழியே திரும்பிக் கொண்டிருந்தான். நடுவழியில் இருள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் அக் காட்டின் நடுவே ஓரிடத்தில் தங்கினன். அவன் தங்கிய இடத்தில் பொங்கொளி வீசிப் பொற்புடன் விளங்கிய விமானம் ஒன்றைக் கண்டான். அவ் விமானம் எட்டு யானைகளால் தாங்கப்பெற்று ஞாயிறு போன்று பேரொளி வீசியது. அதில் சிவலிங்கம் இருந்தது. அங்கு நள்ளிருளில் தேவர்கள் பலர் வந்து சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். அதைக் கண்ட தனஞ்சயன் தானும் விமானத்தை நெருங்கிச் சிவலிங்கப் பெருமான வழிபட்டு மகிழ்ந்தான். பொழுது புலர்ந்ததும் அங்கு வழி பட்ட வானவரைக் காணுது வியந்தான். மீண்டும் இந்திர விமானத்தில் எழுந்தருளிய பெருமானைப் பணிந்து ஊரை அடைந்தான்.  மணவூரை அடைந்த வணிகனாகிய தனஞ்சயன் தான்கண்ட அதிசயத்தைப் பாண்டிய மன்னனிடம் சென்று தெரிவித்தான். அவன் கடம்பவனத்தில் கண்ட காட்சிகளையெல்லாம் தெளிவுற விளக்கினான். அவற்றைக் கேட்ட குலசேகரன் வியப்புடன் இறைவன் அருள் உள்ளத்தை எண்ணி மகிழ்ந்தான். அக்காட்சி களைப் பற்றிய உண்மையை, உணரமுடியாது வருக்தினான். அன்றிரவே இறைவன், பாண்டியன் கனவில் தோன்றிக் கடம்பவனத்தை அழித்துக் கடிநகர் அமைக்குமாறு பணித்தருளினான்.  மறுநாட் காலையில் மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் அழைத்துக் கனவில் கண்ட செய்தியையும் வணிகன் உரைத்த செய்தியையும் தெரிவித்தான். எல்லோரும் கடம்பவனத்தை அடைந்தனர். அரசன் ஆங்கிருந்த பொற்றாமரைத் திருக்குளத்தில் நீராடினன். இந்திர விமானத்தில் வீற்றிருந்த சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து இறைஞ்சினான் ; ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். அந்த இடத்தில் திருக்கோவிலே அமைக்குமாறும், சுற்றியுள்ள காட்டை யழித்து நகரைக் காணுமாறும் அமைச்சர்க்கு ஆணையிட்டான். அமைச்சர் கோவிலும் நகரும் அமைக்கத் தொழில் வல்லாரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதும் இறைவனே சித்தர் வடிவில் தோன்றிக் கோவிலும் நகரும் அமைக்கும் வகையினே ஆகம முறைப்படி வகுத்துக் காட்டி மறைந்தான்.  சித்தர் வகுத்தருளிய முறைப்படியே சிற்பநூல் வல்லார்கள் கோவிலும் நகரும் அமைத்தனர். திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடனும் கோபுரங்களுடனும் அமைத்தனர். நகரத்தை அணிசெய்ய விரும்பிய பாண்டியன் கடைத்தெருக்கள், அம்பலங்கள், காற்சந்திகள், மன்றங்கள், செய்குன்றுகள், மடங்கள், நாடக அரங்குகள், அந்தணர் தெருக்கள், அரசர் தெருக்கள், வணிகர் தெருக்கள், வேளாளர் தெருக்கள், யானைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், குதிரை இலாயங்கள், கல்விக்கூடங்கள், குளங்கள், கிணறுகள், கந்தவனங்கள், பூங்காக்கள், உய்யான வனங்கள் முதலியவற்றை அழகுற அமைத்தான்.  இவ்விதம் அமைத்த புதிய நகரின் வடகீழ்த் திசையில் மன்னன் மாளிகை விளங்கியது. மன்னன் புதிய நகருக்குச் சாந்தி செய்ய எண்ணினன். அப்போது இறைவன் தன் சடையிலிருந்த பிறைமதியின் புத்தமுதை நகர் முழுதும் சிந்துமாறு அருள்புரிந்தான். அது நகரை அமுத மயமாக்கியது. மதுரமான அமுதத்தால் தூய்மை செய்யப்பெற்ற நகரம் மதுரையெனப் பெயர்பெற்றது. இவ்வாறு பரஞ்சோதி முனிவர் மதுரைமாககர் தோன்றிய வரலாற்றைத் தம் புராண நூலில் புகன்றுள்ளார்.                        5. நாயக்கர் அணிசெய்த மதுரை   கடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களால் கவின்பெற்று விளங்கிய மதுரைமாநகரம் பின்னைய நூற்றாண்டுகளில் அயல்மன்னர் பலருடைய படை யெடுப்புக்களால் அல்லற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டியநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பாண்டியநாடு கடுங்கோனால் மீட்கப் பெற்றுத் தன்னாட்சி பெற்றது. திரும்பவும் பத்தாம் நூற்றாண்டில் அது சோழர் ஆட்சியின் கீழ் அடிமை யுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சடாவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் மீண்டும் பாண்டியநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான். அதிலிருந்து நூறாண்டுகள் பாண்டியநாடு பழைய அரசுநிலையில் விளங்கிற்று. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூர் முதலான முகலாயர்களின் தொடர்ந்த படையெடுப்புக்களால் பாண்டியர் ஆட்சி பாழ்பட்டது. மதுரையில் நாற்பத்துநான்கு ஆண்டுகள் முகலாயர் ஆட்சி நிலவியது.  இக்காலத்தில் விசயநகரப் பேரரசு வளர்ச்சியுற்று வந்தது. அதன் சார்பில் இரண்டாம் கம்பண்ணர் என்பார் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்தார். அவர் தென்னாட்டில் முசுலீம் ஆதிக்கத்தை யொழித்துத் தமிழ்நாட்டை விசயநகரப் பேரரசுடன் இணைத்தார். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசுவநாத நாயக்கர் மதுரையில் தங்கி மதுரைநாட்டை ஆளத் தொடங்கினார். இவருடைய வழித்தோன்றல்கள் பாண்டியநாட்டை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். விசுவநாத நாயக்கர் காலத்தில்தான் இங்நாளைய மதுரை உருவாயிற்று. இரண்டாம் கம்பண்ணர் முசுலீம்களால் இடிக்கப்பட்ட மீனட்சியம்மன் கோவிலையும் கோபுரங்களையும் கட்டுவித்தார் ; நகரையும் வகைப்படுத்தி அழகுபெற அமைத்தார். விசுவநாத நாயக்கருக்குப் பின் திருச்சிராப்பள்ளி, நாயக்கர் ஆட்சிக்குத் தலைநகரமாயிற்று.  பதினேழாம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மீண்டும் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். அவர் மீனாட்சியம்மை திருக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தார். கலைகலம் சிறந்த சிற்பங்களையுடைய புது மண்டபத்தை எழுப்பினர் ; கோடை விடுதியான தமுக்கம், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக்குளம், தமிழகத்தின் தாஜ்மகால் என்று போற்றத்தக்க திருமலை நாயக்கர் மகால் ஆகியவற்றை அமைத்து மதுரைமாநகரை அழகுபடுத்தினர் : திருவிளையாடற் புராணத்தில் காணும் பெருவிழாக்கள் எல்லாம் திருக்கோவிலில் நடைபெறுமாறு செய்தார் ; சித்திரைத் திருவிழாவைச் செந்தமிழ்நாட்டு மக்களையன்றிப் பன்னாட்டினரும் வந்து பார்த்து மகிழுமாறு சிறப்புற நடைபெறச் செய்தார் : மதுரையை விழாமல்கு நகரமாக விளக்கமுறச்செய்தார் ; கலை மலிந்த தலைநகரமாக்கிக் கண்டு களிபூத்தார். அவர் கண்ட அணி மதுரைத் திருநகரை நாம் இன்றும் கண்டு இன்புறுகின்றோம்.                      6. தமிழ் வளர்த்த மதுரை கடைச்சங்கம் பைந்தமிழை வளர்த்தற்காகப் பாண்டியர் அமைத்த சங்கங்களில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் இன்றைய மதுரையிலேயே இருந்தது. “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” எனவரும் சிறுபாணுற்றுப்படை அடிகளால் இச்செய்தி வலியுறுவதாகும். இங்குத் ‘தமிழ் நிலை’ யென்று வரும் தொடர் தமிழ் நிலையமாகிய தமிழ்ச் சங்கத்தையே குறிப்பதாகும். இறையனர் களவியல் உரைப் பாயிரத்தால் கடைச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விளக்கமாகத் தெரிகின்றன.  இன்றைய மதுரைமாநகரில் முடத்திருமாறன் என்னும் பாண்டியன் கடைச்சங்கத்தை நிறுவினன். இதன்கண் மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனர் முதலாக நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தனர். அவரை உள்ளிட்டு கானுாற்று நாற்பத்தொன்பது புலவர்கள் அச் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த்தனர். கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டியன் விளங்கினான். அவன் புவியரசாகவும் கவியரசாக்வும் திகழ்ந்தான். இச் சங்கத்தில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, பரிபாடல் ஆகிய தொகை நூல்கள் எட்டும் தோன்றின. பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் இச்சங்கத்தில்தான் எழுந்தன.  நாலடியார் தோன்றிய நலம் இத்தகைய கடைச்சங்கத்திற்குப் பின்னர்ப் பன்னூறு ஆண்டுகளாக மதுரைமாங்கரில் தமிழ்ச்சங்கம் நிலவாதொழிந்தது. உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழை வளர்க்காது போயினர். ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் புகுந்த சமணரும் பெளத்தரும் தத்தம் சமயச் சார்புடைய சங்கங்களை மதுரை மாநகரில் தோற்றுவித்தனர். அவற்றின் வாயிலாகப் பல நூல்களே ஆக்கித் தமிழை வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் மதுரைமாககரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த எண்ணுயிரம் சமணர்கள் பாண்டியன் ஆதரவில் இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்வல்ல புலவராய் விளங்கினர். அவர்கள் வடநாட்டிலிருந்து வற்கடம் காரணமாகத் தென்னடு புகுந்தவர். அவர்கள் தம் நாட்டில் மழைவளம் பொழிந்து செழித்ததும் மீண்டும் ஆங்குச் செல்லப் பாண்டியனிடம் விடை வேண்டினர்.  “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”  என்பார் திருவள்ளுள் கற்றவராகிய சமணர்களைப் பிரிவதற்கு மன்னன் பெரிதும் வருந்தினான். அவனது துயரத்தைக் கண்ட சமணர்கள் அவன்பால் சொல்லிக் கொள்ளாமலே நள்ளிருளில் தம் நாடுநோக்கி நடந்தனர். அவர்கள். மதுரைமாநகரை விட்டுப் புறப்படுங்கால் தாம் தங்கிய இடத்தில் தனித்தனியே ஒரு காலடிப் பாடலை ஏட்டில் எழுதிவைத்து மறைந்தனர். மறுகாட் காலையில் செய்தியறிந்த மன்னன் அவர்கள் இருந்த இடத்தை நேரில் சென்று கண்டான். ஆங்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பாடலை எழுதிவைத்திருப்பதைக் கண்டு எடுத்து நோக்கினான். அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாதனவாய் இருத்தலைக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்து வையையாற்று வெள்ளத்தில் வீசுமாறு பணித்தான். அங்ஙனமே ஏவலாளர் செய்தனர். ஆற்றில் எறிந்த ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அவற்றை ஏவலாளர் ஒருங்குசேர்த்துப் பாண்டியனிடம் கொண்டுவந்து கொடுத்தனர். அவற்றை நோக்கிய போது அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டன வாய்த் தோன்றின. உடனே பதுமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரைக் கொண்டு அந் நானூறு பாடல்களையும் வகைப்படுத்துத் தொகுத்தான். அதுவே நாலடி நானுறு என்றும் நாலடியார் என்றும் பெயர் பெற்றது. இந் நிகழ்ச்சி உக்கிரப்பெருவழுதியின் காலத்தே நிகழ்ந்தது என்று உரைப்பாரும் உளர். இதனை விளக்கும் பழைய பாடல் ஒன்று உள்ளது.  “மன்னன் வழுதியர்கோன் வையைப்பேர் ஆற்றின் எண்ணி யிருநான்கோ டாயிரவர்-உன்னி  எழுதியிடும் எட்டில் எதிரே நடந்த பழுதிலா காலடியைப் பார்.”  நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கப்படினும் அது பிற்காலத்து எழுந்ததே. அது திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்பெறும் நீதிநூலாகும். அதனாலேயே திருக்குறளையும் நாலடியாரையும் சேர்த்துப் பாராட்டும் பழமொழிகள் எழலாயின. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி,’ ‘பழகுதமிழ்ச் சொல் லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் அவ் உண்மையை நன்கு விளக்கும். இதனே, வேளாண் வேதம்’ என்றும் ஒதுவர். இந்நூல் மதுரைமாநகரில் எழுந்த மாண்புடையதே.  இறையனார் வளர்த்த இன்றமிழ் இனி மதுரைமாநகரில் எழுந்தருளிய சோம சுந்தரப்பெருமான் தன்னை வழிபட்ட தொண்டர் இருவர்க்குத் தண்டமிழ்ப் பாடல்கள் எழுதிக்கொடுத்தான். தருமி என்னும் அந்தணாளனுக்குப் பாண்டியன் சங்க மண்டபத்தில் தொங்கவிட்ட பொற்கிழியைப் பரிசாகப் பெறுதற்குரிய அரிய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடிக்கொடுத்தான். அது குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது. கற்புடைய மகளிரின் கருங்கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணமுண்டு என்று வலியுறுத்தும் அப் பாடல் ‘நலம் பாராட்டில்’ என்னும் அகத்துறையில் அமைந்த அழகிய பாடலாகும்.  “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ  பயிலியது கெழீஇய கட்பின் மயிலியல்  செறியெயிற்(று) அரிவிை கூந்தலின்  நறியவும் உளவோ, அேறியும் பூவே ?”  இறைவன் அருளிய இப் பாடலில் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரர் பொருட் குற்றங் கண்டார். புலவனாக வந்த இறைவனிடம் நெற்றிக் கண்ணேக் காட்டினும் குற்றம் குற்றமே என்று சொல்லி அஞ்சாது வாது செய்தார்.  மதுரைத் திருக்கோவிலில் நாளும் யாழிசையால் பண்ணமையப் பாடிப் பரவிய பாணபத்திரன் என்னும் யாழ்வல்ல தொண்டரின் வறுமையைப் போக்கப் பெருமான் திருவுளங் கொண்டான். அந்நாளில் சேர நாட்டை யாண்ட சிவபத்தனாகி ய சேரமான் பெருமாள் என்னும் மன்னர்பெருமானுக்குத் திருமுகம் கொடுத் தனுப்பினன். ஒலேயைத் திருமுகம் என்றுரைத்தல் மரபு. அத் திருமுகத்தில் எழுதப்பெற்ற பாடல் திருமுகப்பாசுரம் எனப்படும். இதனைப் பிற்காலத் தவர் சீட்டுக்கவி என்பர். இது சைவத் திருமுறை களுள் ஒன்றாகிய பதினேராம் திருமுறையில் முதற் பாடலாக விளங்குகிறது.  பொருள் இலக்கணம் வல்ல புலவரைக் காணுேமே என்று கலங்கிய பாண்டியனது கலக்கத்தை யகற்றக் களவியல் இலக்கணத்தை மூன்று செப்பிதழகத்து எழுதிக்கொடுத்தான் ஆலவாய்க் கடவுள். அதுவே இறையனர் களவியல் என வழங்குவது.  குமரகுருபரர் வளர்த்த தமிழ் முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டிலுள்ள திருவைகுண்டம் என்னும் பதியில் தோன்றியருளிய அருட் கவிஞராகிய குமரகுருபரர், மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்தில் இக் நகருக்கு எழுந்தருளினார். அவர் மதுரையின் தென்பால் அமைந்த திருப்பரங்குன்றில் எழுந்தருளிய செவ்வேளைப் பணிந்து ஆங்கிருக்கும்போது மதுரை மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் நூலொன்று பாடினர். அதனை உணர்ந்த, மீனாட்சியம்மை, நாயக்க மன்னர் கனவில் தோன்றிக் குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழைத் தம் சந்நிதியில் அரங்கேற்று மாறு பணித்தருளினார்.  அவ்வாறே மறுநாட் காலையில் திருமலை நாயக்கர் பல்லக்கு ஒன்றை யனுப்பித் திருப்பரங்குன்றில் தங்கி யிருக்கும் அருட் கவிஞராகிய குமரகுருபரரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தார். அவரை அன்புடன் வரவேற்று மீனாட்சியம்மையின் திருமுன்பு பிள்ளைத் தமிழ்நூலை அரங்கேற்றுமாறு பணிவுடன் வேண்டினார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நடைபெற்றது. அந்நூலின் வருகைப் பருவத்துப் பாடல்களைக் குமர குருபரர் அகங்குழையப் பாடிப் பொருள் விரித்த பொழுது, மீனாட்சியம்மை ஒரு பெண் குழந்தையாக நாயக்க மன்னர் மடியில் வந்தமர்ந்து மகிழ்வுடன் கேட்டருளினர். அப் பருவத்தின் ஒன்பதாவது பாடலாகிய ‘தொடுக்குங் கடவுட் பழம்பாடல்’ என்று தொடங்கும் பாடலை அவர் இனிமையாக மனமுருகப் பாடிப் பொருள் விரித்து முடிந்ததும், மீனாட்சியம்மை மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்து அருள்செய்து மறைத்தார். இந்த அற்புதத்தைக் கண்டு மன்னரும் மக்களும் பெருவியப்புற்றனர்.  திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது,  “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”  என்ற திருக்குறளே நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச் செல்வம் படைத்திருந்தும் குறித்த காலத்தில் உணவுகொள்வதற்கு வாய்ப்பில்லேயே’ என்று வருந்தியுரைத்தார். அதுகேட்ட நாயக்கர், “அடிகளே! தாம் குறித்த பாடல் எந்நூற்கண் உள்ளது?” என்று வினவினர். உடனே குமரகுருபரர் திருவள்ளுவர் அருளிய பொதுமறையாகிய திருக்குறளில் உள்ளது அப்பாடல் என்றுகூறி, அந் நூலின் மாண்பையும் விளக்கினார். ‘ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறட்பாக்களையும் நோக்கியுணர்வதற்கு எளியேற்குக் காலங்கிடையாது. ஆதலின் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துச் சிறு நூலாக இயற்றித் தந்தருளவேண்டும்’ என்று மன்னர் அடிகளாரை வேண்டிக்கொண்டார். அங்ஙனமே திருக்குறட் கருத்துக்களைச் சுருக்கி ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் சின்னூலாக ஒரே நாளில் உருவாக்கிக் கொடுத்தார். இதனைத் திருக்குறளாகிய தாய் உரிய காலத்தில் கருவுற்றுப் பயந்த ‘குட்டித் திருக்குறள்’ என்று அறிஞர் கொண்டாடுவர்.  குமரகுருபரரின் புலமைத் திறத்தையும் அருளாற்றலையும் கண்டு வியந்த திருமலை நாயக்கர் ஆண்டொன்றுக்குப் பதினாயிரம் பொன் வருவாயுடைய அரிய நாயகபுரத்தை அவருக்குப் பரிசாக வழங்கிப் பாராட்டினர். அச் செல்வமே இன்று காசிமாநகரில் குமார சாமி மடமாகவும் திருப்பனந்தாள் ஆதீனமாகவும் திகழ்ந்து அறப்பணிகளுக்குச் சிறப்பாக உதவி வருகிறது.  மேலும், இவ் அருட்கவிஞர் மதுரையில் வாழ்ந்த நாளில் மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம் மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் பாடித் தமிழை வளப்படுத்தினார்.  பரஞ்சோதியார் வளர்த்த பைந்தமிழ் திருவிளையாடற் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டவர்; வடமொழி தென்மொழிகளில் வல்லவர்; நுண்ணறிவும் நூலறிவும் படைத்தவர்; சிவபத்தியும் செந்தமிழ்க் கவிபாடும் திறனும் உடையவர். இவர் பிறவிக் கடலைக் கடத்தற்கு நன்னெறி காட்டும் ஞானசிரியரை நாடிச் சிவத்தலங்களைத் தரிசித்து வந்தார். சிவராசதானியாக விளங்கும் மதுரைமா நகரை அடைந்தார். இந்நகரில் சின்னாள் தங்கி அங்கயற்கண்ணியையும் சொக்கலிங்கப் பெருமானையும் வழிபட்டு வருங்காலத்தில் ஒருநாள் ஞானசிரியர் ஒருவரைத் தரிசித்து அவரை வணங்கி ஞானோபதேசம் பெற்றுச் சைவத் துறவு பூண்டு விளங்கினார்.  இவரது இருமொழிப் புலமையையும் வாக்கு நலத்தையும் கண்டுணர்ந்த மதுரைமாநகரப் பெருமக்கள் பலர் அவரைக் கண்டு அடிபணிந்து வடமொழியில் உள்ள ஆலாசிய மான்மியத்தைத் தமிழில் பாடித் தந்தருளுமாறு வேண்டினர். இவரும் அன்பர்களின் கருத்தை நிறைவேற்றும் மனத்தினராய் ஒருநாள் துயில் கொள்ளும்போது அங்கயற்கண்ணம்மை இவரது கனவில் தோன்றி, “நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுவாயாக!” என்று பணித்து மறைந்தருளினார். உடனே முனிவர் விழித்தெழுந்து மீனாட்சியம்மையின் திருவருளைச் சிந்தித்து வியந்து அவர் கட்டளைப்படியே ‘சத்தியாய்’ என்ற மங்கலச் சொல்லால் தொடங்கிக் சோமசுந்தரப்பெருமான் நிகழ்த்தியருளிய அறுபத்து கான்கு திருவிளையாடல்களையும் திருவிளையாடற் புராணமாகத் தெய்வ மணங்கமழும் பாக்களால் ஆக்கி யுதவினார். மேலும் இவர் திருவிளையாடற் புராணத்தின் சாரமாக ‘மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற ஒரு சிறு நூலையும் மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் சிறு பிரபந்தத்தையும் பாடியருளினார்.  நான்காம் தமிழ்ச்சங்கம் கடைச்சங்கம் மறைந்து பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பாலவனத்தம் குறுநிலமன்னராகிய பாண்டித்துரைத் தேவரால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பெற்நிறது. இவ்வருஞ்செயலுக்குப் பெருந்துணையாக இருந்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதியாவார். இவ் விருவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையாளர். ஒரு பொருளைப் பற்றிப் பல மணி நேரம் நீண்ட சொற்பொழிவாற்றும் ஆன்றமைந்த நாவலர்கள். பாண்டித்துரைத் தேவர் எப்பொழுதும் புலவர் குழாம் தம்மைச் சூழத் தமிழ்க்கலைப் பெருவெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருப்பார். பல நகரங்களுக்கும் சென்று இலக்கியச் சமயச்சொற்பொழிவாற்றி மக்களை மகிழ்விக்கும் இயல்பினராய் விளங்கினார்.  இத்தகைய தமிழ் நாவலராகிய பாண்டித்துரைத் தேவர் ஒருகால் மதுரைமாநகருக்குச் சொற்பொழிவின் பொருட்டு வந்திருந்தார். அவ்வமயம் ஒருசில குறிப்புக்களைப் பார்த்துக்கொள்ளுதற்காகக் கம்பராமாயணமும் திருக்குறளும் யாரிடமிருந்தேனும் பெற்றுவருமாறு தமிழ் வளர்த்த மதுரை  பணியாளரை அனுப்பினார். மதுரையில் வாழும் சில முக்கியமானவர்கள் வீட்டிற்கூட அந்நூல்கள் இல்லை. காட்டிலுள்ள புலவர்களையெல்லாம் கூட்டிச் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த துங்க மதுரையில் ‘தமிழுக்குக் கதி'யென விளங்கும் கம்பரையும் திருவள்ளுவரையும் காணுதற்கில்லையே என்று பெரிதும் கவன்றார்; தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் பயிற்சியும் இல்லாதிருப்பது கண்டு உள்ளம் இனைந்தார். அன்றே மதுரையில் தமிழ் தழைத்தோங்குதற்குரிய முயற்சியை மேற்கொண்டார்.  1901 ஆம் ஆண்டு மதுரையில் சென்னை மாநில அரசியல் மாநாடு கூடியது. அம் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராகப் பாண்டித்துரைத் தேவர் அமைந்தார். அம் மாநாட்டின் முடிவில் மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவக் கருதியிருக்கும் தம் கருத்தினை வெளி யிட்டார். தேவரின் முயற்சியையும் கருத்தையும் மாநாட்டிற்கு வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முழுமனத்துடன் ஆதரித்துப் பாராட்டினர். அம் மாநாட்டைத் தொடர்ந்து சங்கம் நிறுவும் முயற்சிகள் நடைபெற்றன. 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி. மண்டபத்தில் பேரவையொன்று கூடிற்று. அதில் தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள், பெரும்புலவர்கள், செல்வர்கள் ஆகிய பலர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும் கலந்துகொண்டார். இத்தகைய பேரவையில் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர்.  தேவரின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பாஸ்கரசேதுபதி, சங்கம் தழைத்து நிலைத்தற்குத் தம் சமஸ்தானத்தின் வழியாக என்றும் பெரும்பொருள் கிடைக்குமாறு உதவினர். பாண்டித்துரைத் தேவர், மதுரை வடக்கு வெளி வீதியிலிருந்த தம் மாளிகையைத் தமிழ்ச்சங்கத்திற்கு உவந்தளித்தார். இச் சங்கத்தின் அங்கங்களாகச் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சிச்சாலை, சங்கப் பதிப்பகம் முதலியவைகளும் அமைக்கப்பெற்றன. கல்லூரியின் தலைமையாசிரியராக வடமொழி தென்மொழிப் புலமை சான்ற திரு. நாராயண ஐயங்கார் நியமிக்கப்பெற்றார். ரா. இராகவையங்கார் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக நியமனம் பெற்றார். இவரை ஆசிரியராகக் கொண்ட செந்தமிழ் என்னும் திங்களிதழ் தொடங் கப்பெற்றது. சுப்பிரமணியக் கவிராயர், அருணசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் நூற்பதிப் பாளர்களாக அமைந்தனர். அரசஞ் சண்முகனர் போன்ற சிறந்த தமிழ்ப்புலவர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.  கல்லூரியில் பயிலும் மாணவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கப்பெற்றன. கல்லூரித் தேர்வுகள் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்று மூன்றாகப் பகுக்கப்பெற்றுப் பாடத்திட்டங்களும் வகுக்கப்பெற்றன. இத் தேர்வுகளில் முதன்மை யாகத் தேர்ச்சி பெறுவார்க்குப் பொற்பதக்கம், பொற் கடகம், பொற்காசுகள் போன்ற பரிசுகள் புதுக் கோட்டை மன்னரால் வழங்கப்பெற்றன. சங்கத்தின் வளர்ச்சிக்குக் குறுநிலமன்னர்களும் பெருநிலக்கிழார்களும் வணிகப் பெருஞ்செல்வர்களும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பொருளுதவியை விருப்புடன் கொடுத்து வந்தனர்.  1956 ஆம் ஆண்டில் தமிழவேள் பி. டி. இராசன் அவர்கள் பெருமுயற்சியால் இச்சங்கத்தின் பொன் விழாப் பேராரவாரத்துடன் நடைபெற்றது. அதன் பின்னர் இச்சங்கம் புலவர் கல்லூரியாகப் புதுப்பிக்கப் பெற்று ஆக்கமான தமிழ்ப்பணிகளை ஊக்கமாகச் செய்துவருகிறது.      நெல்லை மாநகரம் 7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும்   திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி தென்பாண்டி நாட்டிலுள்ள பழமையான திரு நகரங்களுள் ஒன்று திருநெல்வேலி. இதன் நெல்லை யென்றும் சொல்லுவர். திருநெல்வேலியென்ற பெயரே நெல்லை என்று மருவி வழங்குகிறது. நகரைச் சுற்றிலும் நெற்பயிர் நிறைந்த வயல்கள் வேலியெனச் சூழ்ந்திருப்பதால் நெல்வேலியென்று பெயர்பெற்றது. சிவபெருமான் எழுந்தருளிய சிறந்த தலமாதலின் திருநெல்வேலி யென்று சிறப்பிக்கப்பெற்றது. தென்பாண்டி நாட்டிலுள்ள பாடல்பெற்ற பழம்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். ‘திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தர் இந் நகரைப் பாராட்டி யருளினர்.  கோவிலும் விழாவும் பாண்டிய நாட்டை மதுரைமாநகரிலிருந்து அரசாண்ட கூன் பாண்டியன் காலமாகிய ஏழாம் நூற்றாண்டிலேயே திருநெல்வேலி பெருமையுற்று விளங்கிய திருநகரமாகும். அதனலேயே திருஞானசம்பந்தர் இக் நகருக்கு எழுந்தருளிய நாளில் அப் பாண்டியன் தன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் இங்குப் போந்து நெல்வேலியுறை செல்வராகிய சிவபெருமானை வழிபட்டேத்தினான். அப் பெருமான் திருக்கோவிலைக் கோபுரங் களுடன் அணிபெற அமைத்தான்; தன் தலைநகரமாகிய மதுரைமாநகர்த் திருக்கோயில் விழாக்களைப் போன்றே திங்கள்தோறும் திருவிழாக்கள் நிகழுமாறு: செய்தான். அதனாலயே திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் ‘திங்கள்நாள். விழாமல்கு திருநெல்வேலி’ என்று குறித்தருளினர்.  சிந்துபூந்துறை இந்நகர் பொன்திணிந்த புனல் பெருகும் பொருகை யெனும் திருநதியின் கரையில் கவினுற விளங்குகிறது. நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு நேராக விளங்கும் பொருநையாற்றுத் துறை சிந்துபூந்துறை என்று வழங்குகின்றது. அதுவே பழமையான நீர்த்துறை யாகும். அப் பகுதியில்தான் நெல்லமாநகரில் வாழும் மக்கள் சென்று நீராடி வருவர். இத்துறை, சோலைகள் நிறைந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதலின் மரங்களிலுள்ள மலரிலிருந்து தேன் துளித் துளியாக நீரில் சிநதிக்கொண்டிருக்கும் சிறப்புடையது. அதனாலயே சிந்துபூந்துறையென வழங்கலுற்றது. இப்பெயர் ஆதியில் பூந்துறையென்றே வழங்கியிருக்க வேண்டும். பொழில் சூழ்ந்து எழில் வாய்ந்த துறை யினைப் பூந்துறையெனப் போற்றியிருப்பர்.  சம்பந்தர் பாராட்டு இத் துறையினை நெல்லைமாநகருக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் கண்டார். இங்குள்ள சோலைகளில் மந்திகள் நிறைந்து காணப்பட்டன. அவைகள் ஒரு மரத்திலிருந்து மற்றாெரு மரத்திற்குத் தாவிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவைகள் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு தாவுங் காலத்து அக் கிளைகளி லுள்ள மலர்களிலிருந்து தேன் திவலைகள் சிந்தக் கண்டார். அதனால் தாம் பாடிய நெல்வேலிப் பதிகத்தில்,  “கங்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூங் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே”  என்று பொருநையாற்றின் பூந்துறையினைப் போற்றி யருளினர். அன்றுமுதல் ‘மதுத்திவலை சிந்துபூந்துறை’ என்ற பெயர் வழங்கப்பெற்றுப், பின்னாளில் அது சிந்துபூந்துறையெனக் குறுகியிருக்கவேண்டும். நெல்லை யப்பரது தீர்த்தத் துறையாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் பூந்துறை, திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தால் பெருமையுற்ற பழந்துறையாகும்.  குறுக்குத்துறை கெல்லேமாககரின் மற்றாெரு துறை குறுக்குத்துறை யாகும். நெல்லையப்பர் கோவிலுக்கு நேராக அமைந்த பூந்துறை சற்று நெடுந்துாரத்தில் இருந்தமையால் மக்கள் ஆற்றிற்குச் செல்லக் குறுக்குவழியொன்று கண்டனர். வயல்களின் வழியாகச் சென்று பொருநையில் புதுத்துறை யொன்றை உண்டுபண்ணினர். அது குறுக்குவழியில் சுருக்கமான நேரத்தில் செல்லுதற்கு ஏற்றதா யிருந்ததால் குறுக்குத்துறையெனப் பெயர் பெற்றது. அத் துறையின் முன்துறையினே முன்னடித் துறையென்றும் மொழிவர்.  நெல்லையின் கல்லமைப்பு பொருநைக் கரையில் அமைந்த வளங்கராகிய நெல்லைமாநகரின் அமைப்பு மிகவும் அழகு வாய்ந்தது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாடவீதிகள் அமைந்துள்ளன. மாடம் என்பது கோவிலைக் குறிக்கும் சொல்லாகும். மாடத்தை அடுத் துள்ள வீதிகளாதலின் அவை மாட வீதியெனப் பட்டன. மாட வீதியைச் சுற்றித் தேரோடும் திரு வீதிகள் மிகவும் அகலமாக அமைந்துள்ளன. நகரின் மேற்கிலும் கிழக்கிலும் தேர் வீதிகளைச் சார்ந்து அணியணியாகத் தெருக்கள் பெருக்கமடைந்துள்ளன. வடக்கில் நயினர் குளம் நகரின் விரிவைத் தடை செய்தது. தெற்கில் பசும்பயிர் வயல்கள் நகரம் பரவத் தடையாயின.  பழமையான தெருக்கள் இந் நகரின் நான்கு மாடவீதிகளிலும் நான்கு தேர் வீதிகளிலும் பலவகையான கடைகள் அமைக் துள்ளன. தேரோடும் வீதிகளைச் சார்ந்து, பலவகைப் பணியாளர்கள் வாழும் வீதிகள் பாங்குற அமைக் துள்ளன. அவற்றுள் சில இந்நகரின் பழம்பெருமையை உணர்த்தும் வரலாற்றுச் சிறப்புடையன. கீழைத் தேர் வீதியை அடுத்துக் கல்லத்தித்தெரு என்றாெரு தெரு உள்ளது. அது மதுரையிலுள்ள சிம்மக்கல் வீதியையும் யானைக்கல் வீதியையும் நினைவூட்டி நிற்பது. கின்றசீர் நெடுமாறனுகிய கூன்.பாண்டியன் இந் நகருக்கு வந்த நாளில் இப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இத்தெரு மதுரையிலுள்ள யானைக்கல் வீதியை நினைவூட்டுவதாக அமைந்திருக்கலாம்  காவற்புரை கீழைத் தேர் வீதியையடுத்துக் காவற்புரைத்தெரு என்னும் சிறு தெரு அமைந்துள்ளது. காவற்புரை என்பது சிறைச்சாலை. மதுரையிலிருந்து தென்னட்டை யாண்ட பாண்டியருக்கும் நாயக்க மன்னருக்கும் உரிய வரிகளைச் செலுத்தத் தவறினோர் இக் காவற் புரைகளில் அடைக்கப்பட்டனர். அத்தகைய காவற் புரைகள் பல அமைந்த தெரு, காவற்புரைத் தெரு என்று இன்றும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இன்று அத் தெருவில் காவற்புரைகள் இல்லை.  கூலக்கடை மேலேத் தேர்வீதியை யடுத்துக் கூழைக் கடைத் தெரு என்று ஒரு சிறு தெரு அமைந்துள்ளது. இது குறுகிய தெருவாய் இருப்பதால் கூழைக் கடைத் தெரு என்று கூறப்பெற்றதென மக்கள் கருதுவர். ஆனால் அத் தெருவின் பழம்பெயர் கூலக் கடைத்தெரு என்பதாகும். கூலம் என்பது தானியம். உணவுத் தானியங் களே விற்கும் கடை கூலக்கடை யெனப்படும். கூலம் குவித்த கூல வீதி மதுரைமாககளில் இருந்ததைச் சிலப் பதிகாரம் குறிப்பிடும். மணிமேகலை ஆசிரியராகிய சித்தலைச் சாத்தனர் கூலவாணிகம் நடாத்திய பெரு வணிகர். திருநெல்வேலியில் பண்டை நாளில் கூலக் கடைகள் கிறைந்த வீதியாக இத்தெரு இருந்தது. அது இன்று பொன்வாணிகம் நடைபெறும் காசுக்கடைத் தெருவாகத் தேசுபெற்றுத் திகழ்கிறது.  அக்கசாலை வடக்குத் தேர்வீதியை யடுத்து அக்கசாலை விநாயகர் தெரு அழைத்துள்ளது. அத்தெருவில் பொற் கொல்லர் என்னும் ப்னித்தட்டார்கள் வாழ்கின்றனர். அக்கசாலை யென்பது நாணயங்களை அடிக்கும் இட மாகும். பாண்டிகாட்டு அக்கசாலை, பழைய துறைமுக நகரமாகிய கொற்கையில் அமைந்திருந்தது. அங்ககரம் கடலுக்கு இரையான பின்னர், ஆங்கு வாழ்ந்த அக்க சாலைப் பணியாளர்கள் நெல்லைமாநகரில் குடியேறினர். அவர்கள் தாம் பணிசெய்த அக்கசாலையிலிருந்த விநாயகரைப் பழைய நினைவுக்குறியாகத் தாம் வாழப் புகுந்த நெல்லைப்பகுதியில் கொணர்ந்து கோவிலமைத்து. வழிபட்டனர். அத்தெருவே அக்கசாலை விநாயகர் தெரு எனப்பட்டது.  சம்பந்தர் திருக்கோவில் இனி, இந்நகரின் மேல்பால் சம்பந்தர் தெரு அமைந்துள்ளது. அத் தெருவின் முகப்பில் திருஞான சம்பந்தர் திருக்கோவில் விளங்குகிறது. இந் நகருக்குச் சம்பந்தர் எழுந்தருளிய நாளில் இப்பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும். அதனுலேயே அவ்விடித்தில் அப்பெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து நெல்லை மக்கள் வழிபடலாயினர்.  நெல்லையைச் சூழ்ந்துள்ள ஊர்கள் நெல்லைமாநகரைச் சுற்றிலும் பலப்பல சிற்றுார்கள் அமைந்துள்ளன. இந்நகரின் மேல்பால் அமைந்த பேட்டை யென்னும் பகுதி முன்னாளில் பெருத்த வாணிகம் நடைபெற்ற இடமாகும். வாணிகம் நடைபெறும் பகுதிகளைப் பேட்டையென வழங்குதல் பண்டை மரபு. இப் பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றாெரு பகுதியினைத் திருமங்கை நகர் என்றும் வழங்குவதுண்டு. நின்றசீர் நெடுமாறனாகிய பாண்டிய மன்னன் நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை நன்மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று. அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரை நெல்லைமா நகரத்து மகளிர்நல்லார் திரளாக வந்து எதிர்கொண்டு வரவேற்று உபசரித்த இடம் திருமங்கை நகர் என்னும் பெயர்பெற்றது என்பர். இந்நகரின் கிழக்கெல்லையில் அமைந்த வீரராகவ புரம், வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அவர் அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. அவர் மனைவியாராகிய மீனாட்சி யம்மையாரின் பெயரால் அதனை யடுத்து மீனாட்சிபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. வீரராகவபுரத்தில் தான் திருநெல்வேலிச் சந்திப்புப் புகைவண்டி கிலேயம் அமைந்துள்ளது. இதன் வடபால் அமைந்த பகுதி சிந்துபூந்துறை யென வழங்குகிறது.  நெல்லையின் வடக்கு எல்லையாக அமைந்த சிற்றுார் தச்சனல்லூர் என்பதாகும். நின்றசீர்நெடுமாறனுகிய பாண்டியன் நெல்லைத் திருக்கோவிலை அமைக்கும் நாளில் அதனை உருவாக்க வந்த தச்சர்கள் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தெய்வத் திருப்பணி செய்து வந்த பணியாளர்களாதலின் அவர்கள் வாழ்ந்த பகுதி நல்லூர் என்று சொல்லப்பெற்றது. இங்நகரின் தெற்கு எல்லையாக விளங்கும் திருவேங்கடநாதபுரம், நாயக்கரது பிரதிநிதியாக நெல்லைநாட்டை யாண்ட திருவேங்கட நாதன் என்பார் பெயரால் திகழ்கின்றது.                      8. புராணம் புகழும் நெல்லை   வேணுவனத்தில் வேய்முத்தர் திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த காரணத்தால் வேய்முத்தர் என்றும் கூறப் படுவார்.  பாலிழந்த ஆயன் இப் பகுதியில் அமைந்த மூங்கிற்காட்டின் கீழ்த் திசையில் மணப்படை என்றோர் ஊர் இருந்தது. அங்கிருந்த பாண்டியர் குலத்தோன்றலாகிய மன்னன் ஒருவன் இப் பகுதியை ஆண்டு வந்தான். அம்மன்னன் மாளிகைக்கு நாள்தோறும் ஆயன் ஒருவன் மூங்கிற் காட்டைக் கடந்து, குடத்தில் பால் சுமந்து சென்று கொடுத்து வந்தான். ஒரு நாள் காட்டின் நடுவே ஒரு மூங்கில் மரத்தின் பக்கத்தில் வரும்போது, அங்கிருந்த கல்லில் இடறிப் பாற் குடத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டான். ஒரு குடம் பாலும் வீணுயிற்று. ஆயன் மனம் வருந்தி வீடு திரும்பினான்.  உளமுடைந்த ஆயன் மறுநாளும் அவன் பாலைச் சுமந்து நடந்தான். மிகுந்த கவனத்துடன் அவன் நடந்து வந்தும் அதே கல்லில் திரும்பவும் இடறிக் குடத்தைக் கீழே போட்டான். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் கண்ட ஆயன் உள்ளம் உடைக் தான். தன் செலவுக்குத் தடையாக இருக்கும் அக் கல்லை உடைத்துத் தோண்டி எடுத்தெறிந்துவிட வேண்டும் என்று முடிவு கட்டினான். ஒருநாள் இருப்புக் கருவியுடன் புறப்பட்டான். அக்கல்லை உடைப்பதற்காக ஓங்கி அதன் தலையில் வெட்டினன். கல்லில் வெட்டுண்ட இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டெழுந்தது. அதைக் கண்டு அச்சமும் வியப்பும் கொண்டான். இச் செய்தியினை மணப்படை மன்னனிடம் சென்று அறிவித்தான்.  இலிங்கம் காண்டல் ஆயன் கூறிய செய்தியைக் கேட்ட வேந்தன் வேணுவனத்துள் சென்று அக் காட்சியைக் கண்டான். சுற்றிலும் நிலத்தை அகழ்ந்து நோக்கினன். அக் கல் சிவலிங்கமாகக் காட்சியளித்தது. அவ் இடத்திலேயே அரசனும் ஆயனும் சிவபிரான் திருக்கோலத்தைத் தரிசித்தனர். அதனால் அரசன் ‘முழுதுங் கண்ட ராம பாண்டியன்’ எனப் பெயர் பெற்றான் , அவ் ஆயன் ‘முழுதுங் கண்ட ராமக்கோன்’ என்று பாராட்டப் பெற்றான். அன்றிரவே பாண்டியன் கனவில் வேய் முத்தர் தோன்றினர். காட்டை யழித்துக் கடிநகர் அமைக்குமாறு கட்டளையிட்டருளினர். சிவலிங்கம் இருந்தவிடத்தில் திருக்கோவில் எழுப்புமாறு பணித்தார். அவ்வாறே முழுதுங்கண்ட ராம பாண்டியன் மூங்கிற்காட்டை யழித்துப் பாங்கான நெல்லைப் பதியை உருவாக்கினன். சிவலிங்கம் விளங்கிய இடத்தில் திருக்கோவிலையும் கட்டினான்.  தாருகவனத்தில் கங்காளர் இந் நெல்லைப் பகுதியே முன்னை நாளில் தாருக வனமாக விளங்கிற்றாம். இங்கு ஏழு முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நெடுந்தவத்தால் சிறந்து விளங்கிய பெருமுனிவர்கள். அவர்கள் தாருகவன முனிவர்கள் என்று தலைக்கொண்டு போற்றப்பெற்றனர். அவர்கள் தங்கள் தவச்செருக்கால் சிவபெருமானையும் மதிப்பதில்லை. அம் முனிவர்களின் பத்தினியரும் அத்தகைய செருக்குடன் இருந்தனர். அவர்களுடைய தவச்செருக்கை யடக்கி நல்லறிவு கொளுத்த வேண்டுமெனச் சிவபெருமான் நினைத்தருளினான். கங்காள வடிவங் தாங்கிக் காட்டிடையே புகுந்தான். பிச்சாடனக் கோலத்துடன் தாருகவன முனிவர் பத்தினியரின் சித்தத்தைப் பேதுறுத்தினான். அவர்கள் அறிவிழந்து காமத்தால் பிச்சாடனக் கோலங் தாங்கிய பெம்மானைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் தனித் தனியே பிச்சாடனருடன் கூடிக் குலவிக் குழந்தையும் ஈன்றெடுத்தனர். இச் செயலைக் கண்டு தாருகவன முனிவர்கள் சிவபெருமான்மீது தணியாத சினம் கொண்டனர். அப் பெருமானை அழித்துவிடக் கொடிய வேள்விகள் பல செய்தனர். அவர்கள் ஆற்றிய தவத்தாலும் வேள்வியாலும் சிவபெருமான ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர், அவர்கள் தம் செருக் கொழிந்து, அறியாமையை உணர்ந்து, பெருமான் திருவடி பணிந்தனர்.  நெல்லுக்கு வேலியமைத்த வேய்முத்தர் மூங்கிற் காட்டில் முளைத்த வேய்முத்தருக்கு நாள் தோறும் தொண்டு செய்யும் ஆதிசைவ அந்தணாளன் ஒருவன் இருந்தான். அவன் வேதசன்மா என்னும் பெயருடையான். அவன் ஒருநாள் வேய்முத்தருக்குத் திருவமுது படைத்தற்குரிய நெல்லைக், கோவிலின் அருகில் உலரப் போட்டுவிட்டுப் பொருநையாற்றுக்கு நீராடச் சென்றான். அவன் ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும்போது கறுத்த மேகங்கள் இடியிடித்துப் பெருத்த மழை பெய்யத் தொடங்கின. உலரவிட்ட நெல்லை மழைநீர் கொண்டுபோய்விடுமே என்று வேதசன்மா கெஞ்சம் வெதும்பிக் கோவிலுக்கு விரைந்தோடி வந்தான். நிலத்தில் விரித்துச் சென்ற நெல்லைப் பார்த்தான். நெல்லின் மீது ஒருதுளி நீரும் விழவில்லை. அதைச் சுற்றிலும் வேலியிட்டது போன்று மழை பெய்து கொண்டிருந்தது. வேய்முத்தரின் திருவருளைச் சிந்தித்து வியந்தான். நெல்லுக்கு வேலியிட்டுக் காத்தருளிய வேய்முத்தரை நெல்வேலி நாதன் என்று போற்றிப் புகழ்ந்தான். அதனால் இத்தலம் திருநெல்வேலி என்று பெயர்பெற்றது.  திருநெல்வேலி தென்காஞ்சி திருநெல்வேலித் திருக்கோவிலில் பாண்டியர், சோழர் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவை கி. பி. 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை தென்னகத்தை யாண்ட மன்னர்களால் எழுதப் பெற்றவை. அக் கல்வெட்டுக்களில் திருநெல்வேலி அமர்ந்த இறைவன் பெயர் திருநெல்வேலி உடையார், திருநெல்வேலி உடைய நாயனர் என்றும், அம்மன் பெயர் திருக்காமக்கோட்ட முடைய காய்ச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இப் பெயர்கள் எழுந்தமைக்குக் காரணம் கூறுவது போலப் புராணம் ஒரு கதை புகல்கிறது.  நெல்லைப் பகுதியிலிருந்த வேணுவனத்தின் இடையே கம்பைநதியென ஓராறு ஓடியது. அவ்வாற்றின் கரையில் உமையம்மை சிவபெருமானை அடையத் தவங்கிடந்தார். காஞ்சிமாநகரில் கம்பை நதிக் கரையில் கடுத்தவம் ஆற்றிய காமக்கோட்டத்து காயகியாரைப் போல, இப் பகுதியிலும் உமையம்மை தவம்புரிந்த காரணத்தால் இந் நகருக்குத் தென்காஞ்சியெனப் பெயர் வழங்கலாயிற்று என்பர். சிவனேயடையத் தவம்புரிந்த உமையம் மைக்குப் பெருமான் திருக்கோலம் காட்டித் திருமணம் புரிந்துகொண்டார். அத்திருமணக்கோலத்தை அகத்தியர் முதலான முனிவர்கள் கண்டு தரிசித்துக் கழிபேருவகை யடைந்தனர். அதனாலேயே இந்நகரில் ஐப்பசித் திங்களில் காந்திமதியம்மை திருமணவிழாப் பெருமுழக்குடன் நடைபெறுவதாகும்.                      9. நெல்லைத் திருக்கோவில்   திருக்கோவில் பெருமை ‘ஊரானார் தேவகுலம்’ என்பது பழைய இலக்கண உரையாசிரியர்கள் எடுத்தாளும் தொடர். ‘தேவகுலம்’ என்ற தொடர் திருக்கோவிலைக் குறிப்பது. தெய்வபத்தி முதிர்ந்த தமிழ்நாட்டில் ஊர்தோறும் இறைவனுக்குக் கோவிலெடுத்து வழிப்பட்டனர் நம் முன்னேர். அதனாலேயே ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற உறுதிமொழி உலக நீதியாக உலவலாயிற்று.  பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் காட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில்.  ‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று சொல்லும் தாய்மார்கள் வாய்மொழி பழமொழியாக வழங்கும். திங்கள்தோறும் நெல்லையப்பருக்குத் திருவிழா நடைபெற்றுக் கொண்டே யிருக்கும். ‘தேரோடும் திருவீதி’ யென்றால் திருநெல்வேலித் தேர் வீதிகளைத்தான் சொல்ல வேண்டும். மாதம் தவறினாலும் வீதியில் தேரோடுவது மாதம் ஒருமுறை தவறாது. இந்தக் காட்சியைக் கண்ணுரக் கண்டு களித்த ஞானச்செல்வராகிய சம்பந்தப்பெருமான்,  “சங்கார்ன் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேணத் திங்கள் நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே”  என்று. பர்டியருளினர். இங்ஙனம் இடையருத விழாச் சிறப்புடன் விளங்கும் நெல்லையீப்பரைத் திரு நெல்வேலி யுறை செல்வர்’ என்று பத்தியுடன் பத்து முறை சித்தமுருகப் பாடிப் பரவினர் திருஞான சம்பந்தர்.  கெடுமாறன் திருப்பணி சைவசமய குரவருள் தலைவராய சம்பந்தப் பெருமானால் பதிகம் பாடிச் சிறப்பிக்கப்பெற்ற நெல்வேலிச் செல்வரைத் தரிசித்து மகிழ, மதுரை மன்னனாகிய நின்றசீர் நெடுமாறன் தன் கோப்பெருந்தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் நெல்லையின் எல்லையைச் சார்ந்தான். அதுசமயம் இங்கிருந்து ஆண்ட சிற்றரசன், நெடுமாறன்மீது சீறிப்படையொடு போருக்கெழுந்தான். படைத்துணையின்றி வந்த நெடுமாறனைப் பாதுகாக்க நெல்லைநாதன் பூதகணங்களைப் படையாக அவன் பக்கம் அனுப்பினான். நெல்லையப்பர் திருவருள் துணையால் பகைவனை வென்று நெல்லையுட் புகுந்த முடிமன்னனாகிய நெடுமாறனை நெல்வேலி வாழ்ந்த நன்மக்கள், ‘நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் வாழ்க! வாழ்க!’ என வாழ்த்தி வரவேற்றனர். மன்னன் தன் மாதேவியுடன் திருக்கோவிலுட் புகுந்து நெல்லையப்பரையும் காந்திமதித் தாயையும் வழிபட்டுப் பன்னாள் நெல்லையிலேயே தங்கிவிட்டான். அங்ஙனம் தங்கிய நாளில் நெல்லைத் திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடன் விரிவாக்கினன். இச் செய்தியைத் திருநெல்வேலித் தலபுராணப் பாடலொன்று வலி யுறுத்துகின்றது.  “நீதிதழைத் தோங்குதிரு நெல்வேலி காதர்முன்பு நிலைபெற் றோங்கச் சோதிமணி மண்டபத்தைத் தாயமக  கேளுவெனத் துலங்கச் செய்தே வேதிகைபொற் படிதுாண்கள் விளங்குதிரு வாயிலணி விரவிச் சூழ்ந்த கோதில்மணிக் கோபுரமும் சேண்மதிலும் வெள்விடையும் குலவச் செய்தான்.”  இப் பாடலால் நெடுமாறன் செய்த திருப்பணிகள் பல புலனாகும்.  மணிமண்டபம் இசைத்துண்கள் சுவாமி கோவில் உள் சுற்றுவெளியை யொட்டிச் சங்கிதிக்குள் நுழையும் வழியில் அமைந்த மணி மண்டபம் நின்றசீர் நெடுமாறனால் அமைக்கப் பெற்றதே. அம் மண்டபத்தில் அமைந்துள்ள பத்துத் தூண்களில் ஆறு சிறியன, நான்கு பெரியன. பெருந் தூண்கள் நான்கும் அறுபத்துநான்கு சிறு தூண்களின் இணைப்பாக விளங்குவது வியப்பூட்டுவதாகும். ஒவ்வொரு சிறு தூணும் ஒவ்வொரு விதமான நாதம் எழும் இயல்புடையது. இவைகள் இசைத்தூண்கள் என்று ஏத்தப்பெறும்.  மாக்காளை-நந்தி  சுவாமி கோவில் முன்மண்டபத்தில் பலிபீடத்திற்கும் கொடிமரத்திற்கும் இடையே விளங்கும் வெள்விடை-நந்தி, மாக்காளே யென்று கூறப்படும். இதனை அமைத்தவனும் நெடுமாறனே. மாக்காளை மிகவும் கம்பீரமான தோற்றத்துடன், நோக்குவார் கருத்தையும் கண்ணையும் கவரும் சிறப்புடையது. இதனைக் காணுவார், ‘இது நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே யிருக்கிறது; இது மண்டபத்தைத் தட்டும் அளவு வளர்ந்துவிட்டால் அது உலகம் அழியும் கடை யூழிக்காலமாகும்’ என்று சொல்லிச் செல்லுவர்.  நந்திமண்டபச் சிற்பங்கள் பலிபீடம், மாக்காளை, கொடிமரம் ஆகிய மூன்றும் ஒன்றன்முன் ஒன்றாகத் தோன்றும் காட்சி, பாசத்தைப் பலியிட்ட பசுவாகிய தூய உயிர், பதியை அணுகும் உண்மையை இனிது புலப்படுத்துவதாகும். இவ் உண்மையை விளக்கும் நந்திமண்டபத்தின் பெருங் தூண்களில் அழகிய சிற்பங்கள் பல காணப்படு கின்றன. ஒரு தூணில் காணப்படும் குறத்தியொருத்தியின் சிற்பம் கருத்தைக் கவர்வதாகும். அவள் தோளில் குழந்தையொன்றைத் தாங்கியிருப்பதும், கையில் கூடையொன்றைப் பற்றியிருப்பதும், நெல்லையப்பரைக் காதலராகப் பெறுதற்குத் துடித்து நிற்கும் தோகை யொருத்திக்கு நல்ல குறி சொல்ல அவள் கூர்ந்து நோக்குவதும், அவள் கொடிபோல் நுடங்கிக் குழைக் தாடி நிற்பதுமாகிய பொற்பான காட்சியைக் கண்டார், அச்சிற்பத்தை அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுடன் அமைத்த சிற்பியைப் போற்றாதிரார்.  மதனும் இரதியும் மற்றொரு தூணில் மன்மதன் காட்சியளிக்கிறான், அவன் கரும்புவில்லை யேந்திக் கடிமலர்ப் பாணத்தைக் கையில் வைத்து எய்வதற்குத் தயாராக நிற்கும் ஏற்றுக்கோலம் மாற்றார் அஞ்சும் மாவீரக் கோல மாகும். அவன் தாங்கியுள்ள கரும்பு வில்லும் அரும்பு மலரும் எறும்பும் சுரும்பும் மொய்த்தற்கு இடமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் விளங்குவது வியப்பை யளிப்பதாகும். அடுத்து, இன்னொரு தானில் இரதி தேவி இனிய காட்சி தருகிறாள். அவள் அழகுத் தேவனாகிய மன்மதனயே மணாளனாகப் பெற்ற பெருமிதத்துடன் நடை பயிலுவதுபோலச், சிற்பி அவளது வடிவை அழகாகச் சமைத்துள்ளான். அவள் அணிந்துள்ள முத்தாரமும் பட்டாடையும் காற்றில் பறந்து அசைவனபோலக் காட்டியிருக்கும் சிற்பியின் விற்பனத்தை என்னென்பது! சுவாமி கோயில் கொடி மரத்தின் முன்பமைந்த தோரண மண்டபத் தூண்களில் காணப்படும் வீரபத்திரர் சிற்பங்கள் வீரத் திருக் கோலத்துடன் விளங்குகின்றன. அம் மண்டபத்தின் அமைப்பும் நுண்ணிய வேலைப்பாடுகளை யுடையது.  சோமவார மண்டபம் நந்தி மண்டபத்தின் வடபால் அமைந்த சோம வார மண்டபம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மரத்தில் செய்யத்தக்க நுண்ணிய வேலைப்பாடு களையெல்லாம் இம் மண்டபம் அமைத்த சிற்பி, கல்லில் அமைத்துக் காட்டியுள்ளான். இம் மண்டபத்தின் முன்னல் இருபெருந் துண்களில் எதிரெதிராக அருச்சு னனும் பவளக்கொடியும் காணப்படுகின்றனர். அருச்சுனன், மதுரையாசியாகிய அல்வியை மணந்த மணக் கோலத்துடன் அவள் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நிற்பதும், எதிரேயுள்ள தூணில் பவளக்கொடி பாங்கியர் புடைசூழநின்று காணத்துடன் கடைக்கண்ணுல் நாயகன நோக்குவதும் ஆகா! அந்தச் சிற்பி எவ்வளவு அற்புதமாக அமைத்துள்ளான் !  நடராசர் வடிவம் சுவாமி கோவில் மணிமண்டபத்தின் வடபால் நோக்கினால் நடராசப் பெருமானின் அழகான செப்புச் சிலையொன்று, அப்பன், அம்மை சிவகாமி காண அற்புத நடனம் ஆடுவதுபோலவே காட்சியளிக்கிறது. பெருமான் திருவடியின் கீழ்க் காரைக்காலம்மையார் பணிந்து கின்று தாளம்போடும் காட்சி மிக நன்முக இருக்கிறது. ஏழடி உயரத்தில் இத் தாண்டவமூர்த்தி காண்டற்கரிய காட்சியுடன் விளங்குகிறார்.  வேய்முத்தரும் இரட்டைப் புலவரும் இனி, நெல்லையப்பர் மூலத்தானமாகிய கரு வறையை நெருங்கினால், அதன் வடபால் பள்ளத்துள்ளே ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இதுதான் ‘மூல மகாலிங்கம்’ எனப்படும். கோவில் தோன்றுவதற்குக் காரணமான ஆதிலிங்கம் இதுவேயாகும். மூங்கிலடியில் முத்தாக முளைத்த முன்னவர் இவர். அதனால் இவருக்கு வேய்முத்தர் என்பது ஒரு திருநாமம். ஆயனது கோடரியால் வெட்டுண்டு மண்டையில் புண்பட்ட பெருமான் இவர். ஆதலின் இவருக்கு அப்புண்ணையாற்றுவதற்கு மருந்துத்தைலம் காய்ச்சி மண்டையில் பூசுகின்ற வழக்கம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. அதற்காக மேலேக் கோபுர வாசலை யடுத்துத் தைல மண்டபம் ஒன்று காணப் படுகிறது.  இந்தச் செய்தியைப் பிற்காலத்தில் இந் நகருக்கு வந்து நெல்லையப்பரை வழிபட்ட இரட்டைப் புலவர்கள் நகைச்சுவை ததும்பப் பாடியுள்ளனர். குருடரும் முடவருமாகிய அவ் இரு புலவருள் முடவர்,  “வேயின்ற முத்தர்தமை வெட்டினா னே இடையன் தாயீன்ற மேனி தயங்கவே”  என்று உளமிரங்கிப் பாடினார். அதனைக் கேட்ட குருடராகிய புலவரோ ஆத்திரத்துடன்,  “-பேயா, கேள் ! “எத்தனேகா ளென்றே இடறுவான் பாற்குடத்தை அத்தனையும் வேண்டும் அவர்க்கு”  என்று பாடி முடித்தார். இடையனது பாற்குடத்தைப் பல நாளாகப் பாழாக்கிய அவ் வேய்முத்தருக்கு இதுவும் வேண்டும்; இன்னும் வேண்டும்!’ என்று சொல்லி நகையாடினர் அக் குருட்டுப் புலவர்.  கங்காளநாதர் காட்சி சுவாமி கோவில் முதல் உள்சுற்று வெளியின் மேல்பால் கங்காளநாதரின் கவின்மிகு செப்புச் சிற்பம் காணப்படும். அவர் பக்கமாகத் தாருகவன முனிவர் பத்தினியர் கிலேயழிந்து தலைதடுமாறிக் காம பரவசராய் நிற்கும் காட்சி மிகவும் அழகு வாய்ந்ததாகும். நெல்லையில் நிகழும் ஆனிப் பெருந்திருவிழாவில் எட்டாம் திருநாளன்று தங்கச் சப்பரத்தில் தனியழகுடன் எழுந்தருளும் கங்காளநாதர் பிச்சாடனத் திருக்கோலம் காண்பார் கண்களைவிட்டு என்றும் அகலாதிருப்பதாகும்.  நெல்லைக் கோவிந்தர் நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சங்கிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும். அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு கம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.  தாமிர சபை சுவாமி கோவில் இரண்டாவது உள் சுற்று வெளியின் மேற்குப் பகுதியில் காணப்படும் தாமிர சபை மற்றாெரு தனிச் சிறப்புடையது. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் ஐந்து சபைகளில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றான். தில்லைப் பொன்னம்பலத்திலும், திருவாலங்காட்டு இரத்தின சபையாகிய மணிமன்றத்திலும், மதுரையில் இரசித சபையாகிய வெள்ளியம்பலத்திலும், நெல்லைத் தாமிர சபையாகிய செப்பு அம்பலத்திலும், குற்றாலச் சித்திர சபையிலும் அக் கூத்தப்பெருமான் ஆர்த்தாடும் தீர்த்தகைத் திகழ்கிருன். கூத்தப் பெருமானுக்குரிய ஐந்து சபைகளுள் ஒன்றாகிய தாமிர சபை நெல்லைத் திருக் கோவிலில் உள்ளதாகும். அது சிறந்த சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்தது. அதற்கு முன்னல் விளங்கும் நடன மண்டபம் கூரை வேய்ந்தது போலக் கல்லால் அமைந்திருக்கும் சிறப்பு, சிற்பியின் அற்புதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.  இந்நடனமண்டபத்தில் மார்கழித் திங்கள் திருவாதிரை விழாவில் அழகிய கூத்தப்பெருமான் பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆனந்த நடனமாடும் காட்சி கண்கொள்ளாப் பெருங் காட்சியாகும். தாமிர சபையின் பின்பக்கம் ஒரே கல்லில் அமைக்கப்பெற்ற ஐந்தடி உயரமுள்ள சந்தன சபாபதியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்ததாகும். தில்லைக் கூத்தனை வழிபட்ட திருநாவுக்கரசர், அப்பெருமானது பேரழகை வியந்து பாடிய சிறப்பெல்லாம் ஒருங்கு திரண்டாற் போன்று சந்தன சபாபதி ஒளிவீசி ஆடுகிறார். குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் குமிழும் குறு முறுவல், பனித்த சடை, பவளம்போன்ற திருமேனி, அதில் அணிந்துள்ள பால்வெண்ணீறு, இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் இவையெல்லாம் அப் பெருமானது வடிவில் அமைந்துள்ள சிறப்பை என்னென்பது இதை யடுத்து வடக்குச் சுற்றுவெளியில் அட்ட லட்சுமி திருக்கோவில் அமைந்துள்ளது. தனலட்சுமி, தானியலட்சுமி, செயலட்சுமி, விசயலட்சுமி, சந்தான லட்சுமி, செளபாக்கியலட்சுமி, மகா லட்சுமி, கசலட்சுமி ஆகிய எட்டுத் திருவும் கட்டாக விள்ங்குகின்றனர். இவ் எண்மருள் செளபாக்கியலட்சுமி குதிரைமேல் ஆரோகணித்து அமர்ந்திருக்கும் காட்சி மிக நன்றாக இருக்கிறது. எல்லாச் செல்வங்களும் நிறைந்தவன் எத்துணைப் பெருமித வாழ்வு நடத்துவான் என்பதை அத் திருமகள் வடிவம் நினைவுறுத்துகிறது.  ஆறுமுகநயினார் கோவில் சுவாமி கோவில் மேற்கு வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகப்பெருமான் சங்கிதி ஒரு தனிச் சிறப்புடையது. தோகை விரித்தாடும் மயிலின் மேல் ஆறுமுகப்பெருமான் வேல்தாங்கிய வீரனாகக் காட்சி தரும் கோலத்தைச் சிற்பி ஒரே கல்லில் வடித்துள்ளான். ஆறு முகங்களும் ஆறு வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் சிறப்புடன், கருணை பொழியும் முன் திரு முகத்துடன் விளங்கும் அப் பெருமான் அழகே அழகு! ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகன்’ என்று பாடியருளிய அருணகிரிநாதரைப் போல, அவ் ஆறுமுகப்பெருமானது திருக்கோலத்தைத் தரிசிக்க எத்தனை கண்கள் இருந்தாலும் போதா என்றுதான் சொல்லவேண்டும். வழிபடும் அடியார்கள் பெருமானின் ஆறுமுகங்களையும் தரிசிக்கத் தக்கவாறு மண்டபம் அமைந்திருப்பது மற்றாெரு தனிச்சிறப்பு.  புலவர் முழக்கம் அப்பெருமான் சந்நிதியில் அமைந்துள்ள கலியாண மண்டபம் பல்லாயிர் மக்கள் திரண்டு நின்று தரிசித்தற்கு ஏற்றவாறு இடையில் தூண்களின்றி விசாலமாக அமைந்திருப்பது ஒரு தனி யழகு. இச் சங்நிதியில் எந்த வேளையிலும் செந்தமிழ் முழக்கம் முழங்கிக் கொண்டே யிருக்கும். திருக்குறள் விளக்க முழக்க மென்ன ! திருவாசக உரை முழக்கமென்ன! திருவிளையாடல், கந்த புராண, பெரிய புராண முழக்கங்களென்ன திருப்புகழ், கந்தர் கலிவெண்பா இசைமுழக்கமென்ன! இங்ஙனம் எங்காளும் சங்கத்தலைவனுய் வீற்றிருந்த தமிழ் முருகன் சந்நிதியில் புலவர்கள் முழங்கிக்கொண்டே யிருப்பர்.  சங்கிலி மண்டபம் சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம். சுவாமி கோவில் தெற்கு வெளிப்பிராகாரத்தின் நடுவே அமைந்துள்ள தெற்குக் கோபுரவாயில் தொடங்கி, அம்மன் கோவில் வரை யமைந்துள்ள நீண்ட தொடர்மண்டபம் முப்பதடி அகலமும் முந்நூறடி நீளமும் உள்ள ஒரு பெரு மன்றமாகும். ஒசங்களில் இருபக்கமும் வரிசையாகத் தூண்கள் அமைந்திருக்கும் அழகு மிகவும் அணி வாய்ந்ததாகும். இதனை முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் நெல்லைப்பகுதியில் அரசு செலுத்திய வடமலையப்பப் பிள்ளையன் என்பார் அமைத்தனர்.  ஊஞ்சல் மண்டபம் காந்திமதியம்மன் திருக்கோவில் முகப்பில் கோபுர வாயிலை யடுத்து ஊஞ்சல் மண்டபம் விளங்குகின்றது. இது தொண்ணுாற்றாறு திண்ணிய தூண்களால் அமைக்கப்பெற்றது. சமயத் தத்துவங்கள் தொண்ணுாற்றாறு என்ற உண்மையை விளக்கி நிற்பது இம் மண்டபம். நடு மண்பத்தினைத் தாங்கும் இருபத்து நான்கு தூண்களும் வாய்பிளந்து முன் கால்களைத் தூக்கிநிற்கும் யாளிகளுடன் விளங்குவது ஒரு தனியழகாகும். இதனேக் கட்டியவர் பிறவிப் பெருமாள் பிள்ளையன் என்பார்.  காந்திமதியம்மை சங்கிதி அம்மன் கோவில் கருவறையுள் காட்சியளிக்கும் காந்திமதித்தாய், உலகின்ற அன்னையாயினும் கன்னி யாகவே காட்சி தருவாள். வயிர மணிமுடி புனைந்து, நவமணி அணிகள் பல பூண்டு, பாதச்சிலம்புடன், பங்கயத் திருக்கையால் அஞ்சலென அருள்செய்து நிற்பது, அவள் அரசியாய் உலகிற்கு விளங்கும். திறத்தைப் புலப்படுத்தும். வடிவம்மை என்று வழங்கும் அவளது பழம்பெயருக்கேற்ப அவளது வடிவைச் சிற்பி அழகாகவே வடித்துள்ளான்.  வடிவம்மையின் வாயிலாக நெல்லையப்பர் திருவருளைப் பெறுதற்கு முயன்ற பலபட்டடை அழகிய சொக்கநாதப் புலவர் என்பார், அம்மையை வேண்டும் முறை மிகவும் விநயமாக இருக்கிறது. ‘நெல்லையப்பர் நின்னொடு கொஞ்சிப்பேசும் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக அடியேனுடைய குறைகளைக் கூற லாகாதா ? அங்ஙனம் கூறினால், அன்னையே! நின் வாயில் உள்ள முத்துக்கள் சிந்திவிடுமா ?’ என்று புலவர் பரிவுடன் கேட்கிறார்.  “ஆய்முத்துப் பக்தரின் மெல்லணே மீதுன் அருகிருந்து நீமுத்தம் தாவென்(று) அவர் கொஞ்சும் வேளையில் நித்தநித்தம் வேய்முத்த ரோ(டு)என் குறைகளெல் லாமெல்ல மெல்லச்சொன்னால் வாய்முத்தம் சிந்தி விடுமோ நெல்வேலி வடிவன்னேயே!”  என்பது அப் புலவரது நயமான பாடல்.  கருமாறித் தீர்த்தம் காந்திமதியம்மன் கோவில் மேலைச் சுற்றுவெளியில் கருமாறித் தீர்த்தம் உள்ளது. அதனை மக்கள் ‘கருமாதி’ என்று வழங்குவர். துருவாச முனிவரது சாபத்தால் யானையுருப் பெற்ற இந்திரத்துய்மன் என்னும் மன்னன் இத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பழைய வடிவைப் பெற்றான். அதனால் கருமாறித் தீர்த்தமென்றும் கரிமாறித் தீர்த்தமென்றும் வழங்கும். (கரி - யானை)  பொற்றாமரைத் தீர்த்தம் அம்மன் கோவில் முன்னமைந்த ஊஞ்சல்மண்ட பத்தின் வடபால் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இறைவனே நீர் வடிவாகப் பிரமன் பொன்மலராகப் பூத்த புண்ணியத் தடாகம் இப் பொற்றாமரைத் தீர்த்தம் என்று புராணம் புகலும். முகம்மதலியின் தானுபதியான மாவஸ்கான் என்பவன் மனைவி திராத பிணிவாய்ப்பட்டுப் பெரிதும் வருந்தினாள். சிலர் அறிவுரையின் பேரில் அவள் இப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பெருநோய் நீங்கப்பெற்றாள். அதனால் களிப்புற்ற அம் முகம்மதியத் தானபதி இக் கோவிலின் மேலைச் சுற்றுவெளியில் ஒரு சிறு கோவிலை யமைத்தான். அதில் நெல்லையப்பரையும் வடிவம்மையையும் எழுந்தருளுவித்து, நெல்லையப்பரை அனவரதகாதன் என்று போற்றி வழிபட்டான்.  அப்பருக்குத் தெப்பவிழா இப் பொற்றாமரைக் குளத்தில் மாசித் திங்கள் மகநாளில் அப்பர்பெருமானுக்குத் தெப்ப விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்பர் தமது வாழ்நாளில் நெல்லைக்கு எழுந்தருளிப் பதிகம் பாடிப் பரவியது ஒரு மாசி மகநாளாகும். அதனை நினைவூட்டவே இத் தெப்பவிழா நிகழ்கின்றது. சமணர்கள் அவரது உடம்புடன் கட்டித் தள்ளிய கல்லையே தெப்பமாகக்கொண்டு, நமச்சிவாயப் பதிகம் பாடிக் கரையேறிய திருநாவுக்கரசருக்குத் தெப்பவிழா எடுக்கும் சிறப்பை இங் நெல்லையிலன்றிப் பிற தலங்களில் காணவியலாது. மக்கள் பிறவிக்கடல் நீந்தி, வீடுபேருகிய இன் பக்கரை அடைவதற்கு இறைவன் திருநாமமே துணையென்னும் உண்மையை இந் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.  இத்தகைய பல்வேறு சிறப்புக்களே யுடைய நெல்லைத் திருக்கோவில், நெல்லை மாநகரின் எல்லை யில்லாப் பெருமைக்குத் தக்க சான்றாகத் தழைத்து வருகிறது.                                                        10. தமிழ் வளர்த்த நெல்லை   மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல் களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும்.  ஈசான தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த கிளை மடம் ஒன்று நெல்லைமாககரில் உண்டு. அது மேலைத் தேர் வீதியில் அமைந்துள்ளது. அத் திருமடத்தை ஈசான மடம் என்றும் இயம்புவர். அதில் சுவாமிநாத பண்டிதர் என்னும் தமிழ் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். அதனாலேயே இவர் தங்கியிருந்த திருமடம் ஈசான மடம் எனப்பட்டது. இவர் இலக்கண இலக்கியப் புலமை சான்றவர். வடமொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். இவர் நெல்லையில் வாழ்ந்த சைவச் சிறார்க்குச் செந்தமிழ் அறிவை ஊட்டி வந்தார். இவர் பால் தமிழ் பயின்றவர்கள் இலக்கணப் புலமையிற் சிறந்து விளங்கினர். நன்னூல் என்னும் இலக்கணச் சின்னூலுக்கு உரைவரைந்த சங்கர நமச்சிவாயர் என்பார் ஈசான தேசிகரிடம் தமிழ் பயின்றவரே. சங்கரருமச்சிவாயரும் நெல்லை நகரத்தைச் சேர்ந்தவரே.  மயிலேறும் பெருமாள் இவர்கள் வாழ்ந்த பதினேழாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் வாழ்ந்த மற்றாெரு பெரும்புலவர் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்பார். இவர் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர் ; சிவபத்தி மிக்க சிலர் : துறைசை யாதீனத் துடன் தொடர்பு கொண்டவர்; ஆதீனச் சீடருள் சிறந்தவர்; தமிழ்ப் புலவரை ஆதரிக்கும் அருள் வள்ளலாகவும் விளங்கினார் ; கல்லாடம் என்னும் நூலுக்கு நல்லுரை வகுத்த நாவலருமாவர். இவர் ஈசான தேசிகருக்கு நேசமான நட்பாளராக விளங்கினர்.  தேசிகரின் நூல்கள் சங்கர நமச்சிவாயரைப் போன்ற சான்றார்களைத் தோற்றுவித்த ஈசானதேசிகர் இலக்கணக் கொத்து, தசகாரியம், சிவஞானபோதச் சூர்ணிக்கொத்து, கடம்ப நாத புராணம், திருச்செந்திற் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றித் தமிழையும் சைவத்தையும் வளர்த்து வந்தார்.  வடமலையப்பர் திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கர் அரசாண்ட காலத்தில் நெல்லை நாட்டினை வடமலையப்பப் பிள்ளையன் என்பார், அவரின் பிரதிநிதியாய் இருந்து ஆண்டு வந்தார். இவரைப் பிள்ளையன் என்றே எல்லோரும் சொல்லுவர். கார்காத்த வேளாளர் குலத்தில் தோன்றியவராகிய பிள்ளையன் அரசியல் திறமையுடன் அருந்தமிழ்ப் புலமையும் நன்கு வாய்க்கப்பெற்றவர். இவர் தெய்வ பத்தியும் அருள் நெஞ்சமும் படைத்தவர். அறப்பணிகள் பலவும், கோவில் திருப்பணிகள் பலவும் விருப்புடன் செய்தவர். இத்தகைய பெருஞ்செல்வராகிய பிள்ளையன், தமிழ்ப் புலவர்களே ஆதரிக்கும் தண்ணளியுடையாராய் இருங்தார். இவர் மச்சபுராணம், நீடூர்த் தலபுராணம், புலவராற்றுப்படை போன்ற நூல்களை இயற்றித் தமிழை வளர்த்தார்.  தென்திருப்பேரைத் தீட்சதர் வடமலையப்பப் பிள்ளையனால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வரி வசூலிக்கும் பொருட்டுத் தென் திருப்பேரைக்குச் சென்றார். அங்கிருந்த வைணவர்களிற் சிலர் வரி செலுத்தவில்லையென்ற காரணத்தால் அவர்களைத் திருநெல்வேலிக்குக் கொண்டுவந்து சிறையி லிட்டார். அங்ஙனம் சிறைப்பட்டவர்களுள் நாராயண தீட்சதர் என்பாரும் ஒருவர். அச் சிறைக்கூடம் இருந்த தெருவிற்கு இப்போது காவற்புரைத்தெரு என்னும் பெயர் வழங்கிவருகிறது.  குழைக்காதர் பாமாலை சிறைப்பட்ட நாராயண தீட்சதர் ஒரு செந்தமிழ்ப் புலவர். அவர் எப்போதும் தமிழ் நூல்களைப் படித்து இன்புற்றும், தென்திருப்பேரையில் எழுந்தருளிய மகரநெடுங் குழைக்காதராகிய திருமாலே வழிபட்டும், அவர்மீது கவிதை புனைந்தும் வாழ்வை இன்பமாகக் கழித்துவந்தார். இத்தகைய தீட்சதர், தமக்கு ஏற்பட்ட சிறைவாழ்வைக் குறித்துச் சிங்தை கொந்தவராய் மகர நெடுங்குழைக்காதராகிய திருமாலை உளமுருகி வழிபட்டுத் துயர்நீக்கி யருளுமாறு வேண்டினர்; பெருமாள்மீது நாள்தோறும் பாமாலை புனைந்து கனிக் துருகி முறையிட்டு வந்தார். அவர் சிறையிலிருக்கும் போது பெருமாள் மீது பாடிய பாக்களின் தொகுப்பே ‘குழைக்காதர் பாமாலை’ என்று பெயர்பெற்றது.  தீட்சதர் விடுதலை தீட்சதர் நாள்தோறும் சிறைக்கூடத்தில் தமிழ்ப் பாடல் பாடிப் புலம்பிக்கொண்டிருப்பதை ஒரு நாள் சிறைக்கூடக் காவல் அதிகாரி கண்டார். அவர் சிறிது தமிழறிவுடையவர். அதனால் தீட்சதர் ஒரு தமிழ்ப் புலவரெனத் தெரிந்து, ஆட்சித் தலைவராகிய பிள்ளையனிடம் செய்தியைத் தெரிவித்தார். உடனே பிள்ளையன் குதிரைமீதேறிச் சிறைக்கூடத்தை அடைந்தார். நற் றமிழ்ப் புலவராகிய நாராயண தீட்சதரைக் கண்டார். அவர் குழைக்காதரை நினைந்துருகித் தமிழ்ப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு உள்ளங் கரைந்தார். அவரையும் உடனிருந்த வைணவர்களேயும் விடுதலை செய்தார். அவர்களைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அவர்கள் கொடுக்க வேண்டிய வரியை நீக்கியதுடன் புலவராகிய தீட்சதருடைய நிலங்களை என்றும் வரியில்லாத நிலங்களாகச் செய்துவிட்டார்.  வெள்ளியம்பலவாணரும் சிவப்பிரகாசரும் நெல்லயைச் சார்ந்த சிந்துபூந்துறைத் திருமடத்தில் வெள்ளியம்பல வாணர் என்னும் தெள்ளிய தமிழ் முனிவர் ஒருவர் தங்கியிருந்தார். இவர் தருமை யாதீனத்தைச் சேர்ந்த தம்பிரான்களுள் ஒருவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவர். இவருடைய இலக்கண அறிவைக் கேள்வியுற்ற, காஞ்சிமாநகரைச் சார்ந்த சிவப்பிரகாசர் என்பார் நெல்லை போந்து இவர்பால் தமிழ் பயின்றனர். வெள்ளியம்பலவாணர் ஞானபரண விளக்கம் முதலிய சமய நூல்களை இயற்றியவர். கம்பரைப்போன்றும் சேக்கிழாரைப் போன்றும் வாக்குநலம் வாய்க்கப்பெற்றவர். அவர்கள் பாடியன போன்றே வேற்றுமை காணவியலாத நிலையில் பல பாடல்களைப் பாடி இடைச்செருகலாகப் புகுத்தும் புலமைநலம் படைத்தவர்.  இம் முனிவர்பால் தமிழ் இலக்கணத்தைப் பயின்று தேர்ந்த சிவப்பிரகாசர் நன்னெறி, திரு வெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திரு வெங்கையுலா, திருவெங்கையலங்காரம், சோணசைல மாலை, பிரபுலிங்கலீலை, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.  குமரகுருபரர் சமயப்பணி இவர்கள் காலத்தில் நெல்ல நாட்டில் விளங்கிய மற்றாெரு பெருங்கவிஞர் குமரகுருபரர். இவர் முருகன் அருள்பெற்ற தெய்வக் கவிஞராவர்; ஐந்து வயதிலேயே கந்தர் கலிவெண்பா என்னும் செந்தமிழ்ச் சிறுநூலை ஆக்கியருளிய அருளாளர். இவர் காலத்தில் நெல்ல காட்டில் கிறித்துவ சமயம் காட்டுத் தீப்போல் பரவியது. இத்தாலிய காட்டிலிருந்து தமிழ்நாட்டில் வந்து புகுந்த வீரமாமுனிவர் என்னும் கிறித்துவப் பாதிரியார் தமிழ்நாட்டு முனிவரரைப் போன்று கோலத்தாலும் சீலத்தாலும் சிறந்து விளங்கிச் சம்யப் பணியாற்றினர். அவர் வீரமுடன் ஆற்றிய கிறித்துவ சமயவுரைகளில் மக்கள் பெரிதும் ஈடுபட்டுச் சமயம் மாறி வந்தனர். இதனைக் கண்ணுற்ற குமரகுருபரர் நெல்லமா நகரை யடைந்து சிந்துபூந்துறைத் திருமடத்தில் தங்கினர். அங்கிருந்துகொண்டே நெல்லமாநகரின் தெற்குத் தேர் வீதியிலும் வடக்குத் தேர் வீதியிலும் முறையே இரு மடங்களை நிறுவினார். அவை மெய் கண்டார் மடம், சேக்கிழார் மடம் என்று பெயர்பெற்றன. மெய்கண்டார் மடத்தில் சைவ சமயச் சாத்திர நூல்களாகிய மெய்கண்ட நூல்களின் உண்மைகள் தக்க அறிஞரைக்கொண்டு விளக்கப்பெற்றன. சேக்கிழார் மடத்தில் பெரிய புராணத்தில் பேசப்பெறும் சிவனடியார்களின் அரிய வரலாறுகள் விரிவுரை செய்யப் பெற்றன. நெல்லமாககர மக்கள் அனைவரும் திரண்டு சென்று சமயத் தமிழ் விரிவுரைகளைக் கேட்டுச் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுப் பூண்டொழுகினர்.  அழகிய சொக்கநாதரும் நெல்லையப்பரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் இருவர். அவர்கள் அழகிய சொக்கநாதரும், நெல்லையப்பக் கவிராயரும் ஆவர். இவர்களை ஆதரித்த வள்ளல்கள் தளவாய் இராமசாமி முதலியாரும் இராசை முத்துசாமி வள்ளலுமாவர். நெல்லையப்பக் கவிராயர் திருநெல்வேலித் தல புராணம் பாடிய தமிழ்ப்புலவர். அழகிய சொக்கநாதர் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், காந்திமதியம்மை பதிகம், காந்திமதியம்மை கலித்துறை யந்தாதி, நெல்லை நாயகமாலை, முத்துசாமிபிள்ளை காதல் பிரபந்தம், சங்கராயினர் கோயில் கோமதியந்தாதி, வில்லிபுத்துார் கோதையந்தாதி முதலிய பல சிறந்த கால்களைப் பாடியவர்.  பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் இவர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், நெல்லையப்பர் திருக்கோவிலிலுள்ள காந்திமதியம்மை சங்கிதிக்கண் அமைந்த ஊஞ்சல் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றப் பேரவைக்குத் தலைமை பூண்ட இராசை முத்துசாமி வள்ளல், புலவருக்குப் பொன்னடை போர்த்தியும், தம் காதுகளில் அணிந்திருந்த விலையுயர்ந்த வைரக் கடுக்கனைக் கழற்றிப் புனை வித்தும் போற்றினர். இப் புலவரின் தந்தையாரான வன்னியப்ப பிள்ளையும் சிறந்த தமிழறிஞரே. அவரிடமே அழகிய சொக்கநாதர் தமிழ் பயின்று தேர்ந்தவர்.  பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் நாடக நூலை இயற்றி நாடகத் தமிழுக்குப் புத்துயிரளித்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை நெல்லைமாநகரில் கல்லூரித் தலைவராகப் பணியாற்றும் காலத்திலேயே அந்நூலைப் பாடி முடித்தனர். சென்ற நூற்றாண்டில் நெல்லைமாநகரில் தத்துவ ஞானத்தில் சிறந்து விளங்கிய கோடக கல்லூர்ச் சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாரை ஞானசிரியராகப் பெற்று, அவர்பால் ஞான நூல்களைக் கற்றுணர்ந்த சுந்தரம்பிள்ளை, தாம் பெற்ற தத்துவ ஞானத்தின் சாரத்தை மனேன்மணிய நூலில் குழைத் துக் காட்டியுள்ளார்.  இந்த நூற்றாண்டில் இவ் இருபதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் பலர். நெல்லையைச் சார்ந்த முந்நீர்ப், பள்ளத்தில் தோன்றிய பேரறிஞ ராகிய பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலமும் தமிழும் வல்ல பெரும்புலமையாளர். அவர் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் வகுத்துக் கொடுத்த வல்லாளர். இந்நகரில் தோன்றிய, ‘எம்மெல்’ பிள்ளை யென்று தமிழ் வல்லார் போற்றும் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை கலைநலம் சிறந்த சைவப் பேரறிஞர். வையாபுரிப் பிள்ளை சிறந்த இலக்கிய ஆய்வாளர். சொல்லின் செல்வராகிய இரா. பி. சேதுப்பிள்ளை இனிய செந்தமிழ் நாவலர். இவர்கள் எல்லோருமே தமிழும் ஆங்கிலமும் வல்ல பேரறிஞர்கள். இவர்கள் அரசியற் புறக்கணிப்பு, ஆங்கில அறிஞர்களின் புறக்கணிப்பு, அதிகாரிகளின் புறக்கணிப்புக் களிடையே தமிழைப் புரந்து வந்த சிறந்த கலைஞர்களாவர்.  திருவரங்களுர் பெருமுயற்சி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந் நகரில் திருவரங்களுரின் பெருமுயற்சியால் தோற்றுவிக்கப் பெற்ற தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழில் பல துறை நூல்களையும் வெளியிட்டுத் தமிழை வளர்த்து வருகிறது. கழகத்தின் உறுப்புக் களாக அமைந்துள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம் இவற்றின் வாயிலாகச் சமயத் தமிழ்ப் பணிகள் பல நடைபெற்று வருகின்றன. இவற்றை இங்காளில் கழகம் கிறுவிய திருவரங்கரிைன் தம்பியார் வ. சுப்பையாப் பிள்ளையவர்கள் திறம்பட நடாத்தி வருகின்றனர்.  தில்லை மாநகரம் 11. தில்லையின் சிறப்பு தில்லைச் சிதம்பரம் சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்குச் சிறப்பு வாய்ந்த தெய்வத்தலம் தில்லையாகும். அதனால் சைவர்கள் இத் தலத்தினைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம் இதுவாகும். ஆதலின் இத் தலத்தைப் ‘பூலோக கயிலாயம்’ என்றும் போற்றுவர். ஐம்பெரும் பூதங்களின் வடிவாக இறைவன் விளங்குகிறான் என்ற உண்மையை விளக்கும் தலங்களுள் இது வான் வடிவாக விளங்கும் உண்மையை விளக்குவது. அதனாலயே இத் தலத்திற்குச் ‘சிதம்பரம்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. சிதம்பரம் என்ற சொல்லுக்கு ஞானவெளி என்பது பொருளாகும்.  தலத்தின் பிற பெயர்கள் இத் தலம் அமைந்துள்ள நிலப்பகுதி, ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த பெருங்காடாக இருந்தமையால் தில்லையெனப் பெயர்பெற்றது. புலிக் கால் முனிவராகிய வியாக்கிரபாதர் தவங்கிடந்து இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்த தலமாதலின் புலியூர் என்றும், பெரும்பற்றப் புலியூர் என்றும் வழங்கலுற்றது. உலக உதயமும் ஆன்மாக்களின் இதயமும் இத் தலத்தில் உள்ளன என்று ஆன்றோர் கருதுவதால் இதனைப் பொது, சிற்றம்பலம், புண்டரிக புரம், தனியூர் என்ற பெயர்களால் குறிப்பதுண்டு.  சைவர்களின் தெய்வக்கோயில் இந்நகர் கோயில் என்ற சிறப்பான பெயரால் குறிக்கப்பெற்றதற்கேற்ப எங்கணும் கோயில்களே நிறைந்து காணப்படும். பிள்ளையார் கோயில்கள்தாம் எத்தனை ! வேடன்பிள்ளையார், செங்கழுநீர்ப்பிள்ளையார், தேரடிப்பிள்ளையார், கூத்தாடும்பிள்ளையார், நரமுகப்பிள்ளையார், முக்குறுணிப்பிள்ளையார், சேத்திர பாலப்பிள்ளையார் இன்னும் பல பிள்ளையார் கோயில்கள் இந்நகருள் உள்ளன. காளியம்மன், மாரியம்மன், தில்லைக்காளியம்மன் போன்ற பல அம்மன்களின் திருக் கோவில்கள் காணப்படுகின்றன. திருப்புலிச்சரம், அனந்தீச்சரம், கமலிச்சரம் போன்ற பெருங்கோவில்களும் உள்ளன. சிவகங்கை முதலான பல தீர்த்தங்களாலும் இத்தலம் சிறப்புற்று விளங்குகிறது.  தில்லையைப்பற்றிய நூல்கள் தில்லைத்தலத்தின் சிறப்பை விளக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பல உள்ளன. தமிழிலுள்ள கோயிற் புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம், புலியூர்ப் புராணம், தில்லைத் திரு வாயிரம், சிதம்பரச் செய்யுட் கோவை, மும்மணிக் கோவை, சிதம்பர மான்மியம், தில்லைவன மான்மியம், சிதம்பர விலாசம், சிதம்பர ரகசியம், தில்லைக் கலம்பகம், தில்லையுலா, திருக்கோவையார் முதலான நூல்கள் தில்லைச் சிறப்பைத் தெள்ளிதின் சொல்லு வனவாகும். மூவர் பாடிய தேவாரப் பாக்களிலும், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும், திருமூலர் திருமந்திரத்திலும் இத் தலத்தின் பெருமை பேசப் படுகிறது.  வடமொழியில் உள்ள சாந்தோக்யம், கைவல்யம் என்னும் உபநிடதங்களும், சிவரகசிய குதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், ஏமசபா மான்மியம் முதலியனவும் இத் தலச் சிறப்பை விளக்குவனவே.  தில்லைத் திருச்சிற்றம்பலம் தில்லையில் கூத்தப்பெருமான் குலவும் திருக் கோயிலை ‘அம்பலம்’ என்றும், ‘சிற்றம்பலம்’ என்றும் கற்றுணர்ந்தோர் போற்றுவர். ‘திருச்சிற்றம்பலம்’ என்பது சிவனடியார்க்கு ஒரு சிறந்த மந்திரம். அவர்கள் தேவார திருவாசகத் திருமுறைகளே ஒதத் தொடங்கும் பொழுதும், ஒதி முடிக்கும் பொழுதும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற மறைமொழியை மனமார கினைத்து, நாவார நவிலும் முறை, இன்றும் தமிழகத்தில் உண்டு. இம் மறைமொழி ஓங்காரத்தின், உள்ளுறையாகிய அறிவாற்றலாகிய அருட்பெருவெளியினைக் குறிக்கும். ‘தில்லைச் சிற்றம்பலத்தில் எழுங்தருளிய செல்வனாகிய கூத்தப்பெருமான் குரைகழலை ஏத்தும் செல்வமே செல்வம்’ என்று சிங்தை குளிர்ந்து செந்தழிழ்ப் பாவிசைத்தார் திருஞானசம்பந்தர்.  “செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்  செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற  செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய  செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே”  என்பது அவர் அருளிய தேவாரமர்கும்.  பாடல்பெற்ற பழம்பதி தேவாரம் பாடிய மூவர்களால் போற்றிப் பாடப் பெற்ற தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று பாராட்டுவதுண்டு. தில்லையை அம் மூவர்மட்டுமன்றி, மாணிக்கவாசகர் தாம் பாடிய திருவாசகத்தில் இருபத்தைந்து பதிகங்களால் சிறப்பிக்கின்றார். இம் மாணிக்க வாசகர் தில்லைக் கூத்தனைத் தலைவனாகக்கொண்டு திருக்கோவையார் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். திருவிசைப்பாவில் பதினைந்து பதிகங்கள் தில்லையைப் பற்றியனவாகும். திருப்பல்லாண்டில் பன்னிருபாக்கள் இத்தலத்தைப் பற்றியனவாகும். இவையன்றிக் குமரகுருபரர், இராமலிங்க அடிகள் போன்ற அருளா ளர்கள் பாடிய பாடல்கள் அளப்பில. இத் தன்மை யால் தில்லை, பாடல் பெற்ற திருத்தலமாகும்.  தில்லைவாழ் அந்தணர் ‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்று ஒரு பழமொழியுண்டு. தில்லைக் கூத்தனை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் பேறுபெற்ற அடியார்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் முன்னாளில் விளங்கினர். திருச்செந்தூரில் கந்தவேளைச் சந்ததமும் வழிபடும் அந்தணாளர்கள் ஆயிரம்பேர் விளங்கினர். இதனாலேயே ‘தில்லை மூவாயிரம் செந்தில் ஆயிரம்’ என்னும் பழமொழி எழுந்தது. இத்தில்லை வாழ் அந்தணருள்ளே தானும் ஒருவன் என்று இறைவன் கூறி இன்புற்றான் என்பர். சுந்தரர் திருத் தொண்டத்தொகை பாட முற்பட்டபோது அடி யெடுத்துக் கொடுத்தருளிய இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று முத லடியை அருளிச்செய்தான். அத்தகைய அந்தணர் மூவாயிரவர் சிறப்புற்று விளங்கிய மூதூர் தில்லைப் பதியாகும்.  காண முத்திதரும் தலம் முத்தியளிக்கும் சத்தி வாய்ந்த தலங்கள் சிலவற்றைச் சிறப்பாகக் குறிப்பர் அறிஞர். அவற்றுள் அண்ணாமலை, எண்ணிய வளவில் முத்திதரும் அருந்தலமாகும். ஆரூர், பிறக்க முத்திதரும் பெருந்தலமாகும். காசி, இறக்க முத்திதரும் இனிய தலமாகும். தில்லை, காண முத்திதரும் திருத்தலமாகும். இத்தகைய தலத்தில் திருநாளைப்போவார் என்னும் நந்தனர், திருவாசகம் அருளிய மணிவாசகனர், திருநீலகண்ட நாயனர் போன்ற சிறந்த அடியார்களுக்கு இறைவன் முத்திப்பேறளித்தான்.  இத் தலத்தைச் சுற்றிலும் பாடல் பெற்ற சிவத் தலங்களே சூழ்ந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பாகும். இத் தலத்தின் கிழக்கே திருவேட்களமும், தெற்கே திருநெல்வாயில், திருக்கழிப்பாலை, சீர்காழி, புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களும், வடக்கே திருப்பாதிரிப் புலியூரும் அமைந்துள்ளன.  பொன்மேனி பெற்ற மன்னன் ஆறாம் நூற்றாண்டில் விளங்கிய பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பான் தில்லைக்கூத்தனைத் தரிசிக்க வந்தான். இங்குள்ள சிவகங்கைக் குளத்தில் நீராடித் தனது பெருநோய் நீங்கப்பெற்றான். அவன் மேனியும் பொன்வண்ணமாகப் பொலிவுற்றது. இக் காரணத்தால் அவன் ‘இரணியவர்மன்’ என்று  அழைக்கப்பட்டான். அப் பல்லவ மன்னன் தன் மேனியைப் பொன்வண்ணமாக்கிய தில்லைக்கூத்தன் திருவருளை நினைந்துநினைந்து உள்ளங் கசிந்தான். அப் பெருமான் நடனமாடும் அம்பலத்தைப் பொன்னம்பலமாக்கி மகிழ்ந்தான். அவன் பொன்னம்பலத்தைச் சுற்றிப் பல மண்டபங்களை யமைத்தான்; சுற்று வெளிகளை வகுத்தான். இவனுக்குப் பின்னர்த் தமிழ் காட்டு மூவேந்தர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் பலருடைய திருப்பணிகளால் தில்லைத் திருக்கோவில் பெருங்கோவிலாயிற்று.                                                         12. புராணம் போற்றும் தில்லை   தில்லைத் தலத்தின் பழமையையும் பெருமையையும் சொல்லும் புராணங்கள் பல. அவற்றுள் கோயிற் புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். இவற்றுள் உமாபதி சிவனரால் பாடப்பெற்ற கோயிற் புராணம் தனிச் சிறப்புடையதாகும்.  புராணம் பாடிய புனிதர் உமாபதிசிவனர் சைவ சமய சந்தான குரவர் நால்வருள் ஒருவர். அவர் தில்லைவாழ் அந்தணருள்ளும் ஒருவர் ; சைவ சமய சாத்திரங்கள் பதினான்கனுள் எட்டு நூல்களைத் தந்தருளிய செந்தமிழ்ச் சிவஞானச் செல்வர் ; மற்றாெரு சந்தான குரவராகிய மறைஞான சம்பந்தரின் மாளுக்கர். தில்லைக் கூத்தன் அருளான பெற்றுப் பெத்தான் சாம்பான் என்னும் புலேக்குலத் தொண்டர்க்கு முத்திப்பேறு கிடைக்கச்செய்த சித்தர். முள்ளிச்செடிக்கும் முன்னவன் இன்னருள் வாய்க்கு மாறு செய்த வள்ளலாவர். அவர் இயற்றிய கோயிற் புராணம் கூறும் தல வரலாற்றை நோக்கலாம்.  புராணம் புகலும் கதை ஒரு காலத்தில் இறைவன் விண்ணவரின் வேண்டு கோளுக்கிணங்கித் தாருக வன முனிவர்களின் செருக்கை யடக்குவதற்காக காதாந்த நடனம் ஆடினர். அவ் ஆட்டத்தில் இறைவனது இயக்கமாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் அமைந்திருந்தன. இத்தகைய திருக் கூத்தினை அடியார்கள் பொருட்டுத் தில்லையில் ஆடியருளினார். இத் தலத்தில் புலிக்கால் முனிவரும் பாம்புக்கால் முனிவரும் கண்டுகளிக்குமாறே ஆடினார் என்று உமாபதி சிவனார் உரைப்பர்.  காசிமாநகரில் தோன்றிய முனிவராகிய புலிக்கால் முனிவர் ஒருகால் தில்லையின் பெருமையைத் தம் தந்தையாரிடம் கேட்டார். உடனே தில்லையை அடைந்து, ஆங்கு ஆலமர நீழலில் அமர்ந்தருளிய சிவலிங்க வடிவைத் தரிசித்து வழிபட்டார். அதுவே இப்போது திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலாகும். அச் சிவலிங்கத்தை நாள்தோறும் மலரிட்டு வழிபட வேண்டும் என்று விரும்பினர். வழிபாட்டுக்குரிய மலர்களின் தேனை வண்டுகள் சுவைக்கு முன்னரே அவைகளை எடுத்து இறைவனுக்கு அணியவேண்டும் என்று ஆர்வங்கொண்டார். தம் விருப்பினை இறைவனிடம் முறையிடவே, பொழுது புலர்வதற்குமுன், மரங்களில் ஏறிப் பூப்பறிப்பதற்கு ஏற்ற புலிக்கால், புலிக்கை, புலிக்கண்களைப் பெற்றார். அதனாலேயே இவர் ‘புலிக்கால் முனிவர்’ எனப் பெயர்பெற்று இறை வழிபாட்டில் இன்புற்றிருந்தார்.  அங்நாளில் பதஞ்சலியென்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஆதிசேடனின் அவதாரம். திருமாலின் பாயலாகக் கிடந்த அவர், அத்திருமால் இறைவனது ஆனந்தத் தாண்டவச் சிறப்பைப் பலகால் சொல்லக் கேட்டு மகிழ்ந்தவர். அதனால் தாமும் அதனைக் கண்ணுறும் விழைவுடன் தவம்புரிந்தார். இறைவன் அத்திருக்கூத்தினைத் தில்லையில் காணலாமென அவருக்குக் கூறி மறைந்தான். பாம்புக்கால் முனிவராகிய பதஞ்சலியாரும் தில்லையைச் சார்ந்து, புலிக்கால் முனிவருடன் நட்புக்கொண்டு திருமூலட்டானேசுவரரைத் தொழுது வழிபாடு செய்து வந்தார். தில்லையின் மேல்பால் நாகசேரி யென்னும் தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் க்ரையில் ஒரு சிவலிங்கத்தையும் அமைத்து, இறைவன் திருக்கூத்தைக் காணும் பெரு விருப்புடன் எதிர்நோக்கியிருந்தார்.  தில்லையில் இறைவன் திருக்கூத்தை நிகழ்த்த வந்தான். அங்கிருந்த காளி தடுத்துத் தன்னுடன் போட்டிக்கு இறைவனே அழைத்தாள். இறைவன் ஊர்த்துவத் தாண்டவத்தால் அவளது செருக்கை யடக்கித் ‘தில்லையின் வடபால் அமர்க!’ என அருள் செய்தான். அவள் தில்லைக்காளியாக நகரின் வடக் கெல்லையில் தங்கினாள். இன்றும் தில்லைக்காளியின் கோயில் சிறப்புற்று விளங்குகிறது. இறைவன் காளியுடன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தைப் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் தரிசித்து இன்புற்றனர். அவ்ர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய இறைவன் தில்லைமாநகரில் கூத்தப்பெருமாகை என்றும் குளிர்ந்த காட்சியருளுகின்றான்.  13. தில்லைத் திருக்கோவில்   கூத்தன் ஆடும் அம்பலங்கள் தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் திருக்கோவில், இறைவன் திருக்கூத்து நிகழ்த்தும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். பொன் மன்றம், மணி மன்றம், வெள்ளி மன்றம், செப்பு மன்றம், சித்திர மன்றம் ஆகிய ஐந்தனுள் முதன்மை வாய்ந்த பொன் மன்றமாகிய கனகசபை, தில்லையில்தான் அமைந்துள்ளது.  பொன்மன்றின் உள்ளமைந்த சிற்றம்பலத்தில் கூத்தப்பெருமான் காட்சியளிக்கிறான். இச் சிற்றம் பலமும் இதன் முன்னமைந்த பேரம்பலமுமே திருக் கோவிலின் பழைய அமைப்புக்களாகும். இவை மரத்தால் அமைக்கப்பெற்றிருத்தலே பழமைக்குப் போதிய சான்றாகும். பல்லவர்கள் எழுப்பிய குகைக் கோவில், கற்கோவில்களுக்கு முந்தியன தில்லை யம்பலங்கள் என்பதை அறியலாம். அக் காலத்தில் இரண்டாம் சுற்றுவெளியில் உள்ள திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலும் சிறப்புற்றிருத்தல் வேண்டும்.  தில்லையிலுள்ள ஐந்து மன்றங்கள் தில்லைக் கோவிலுள்ளேயே ஐந்து சபைகள் அமைந்துள்ளன. அவை சிற்றம்பலம், பேரம்பலமாகிய கனகசபை, தேவசபை, கிருத்தசபை, இராசசபை என்பனவாம். சிற்றம்பலத்தைச் சிற்சபையென்பர். இதுவே கூத்தப்பெருமான் சிவகாமசுந்தரியம்மையுடன் காட்சியளிக்கும் கருவறையாகும். இதன் சிகரத்தில் உள்ள பொன்னேடுகள் ஒவ்வொன்றிலும் ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எழுதி வேய்ந்திருப்பதாகத் தில்லையுலாக் கூறுகின்றது. இப் பகுதியில்தான் சிதம்பர இரகசியம் அமைந்துள்ளது. இறைவன் வான் வடிவில் விளங்கும் உண்மையைப் புலப்படுத்த, மந்திர வடிவில் திருவம்பலச் சக்கரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிப் பொன்ற்ை செய்த வில்வமாலையொன்று விளங்குவதைக் காணலாம்.  சிற்றம்பலத்தின் சிறப்பு மேலும் இச் சிற்றம்பலத்தில் இறைவன் உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூவகைத் தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளான். கூத்தப்பெருமான் திருமேனி உருவம் ஆகும்; இரகசியம் அருவமாகும்; படிக இலிங்கமாகிய அழகிய சிற்றம்பலமுடையார் அருவுருவ மாகும். இங்கு இரத்தின சபாபதியும் சுவர்ணகால பைரவரும் காட்சியளிக்கின்றனர்.  பொன்னம்பலத்தின் பொலிவு கனகசபையாகிய பொன்னம்பலம், சிற்றம்பலத் திற்கு எதிரே அமைந்த பேரம்பலமாகும். இதில்தான் பெருமானுக்கு எப்போதும் திருமுழுக்குச் சிறப்புக்கள் நடைபெறும். தேவசபையில் உற்சவ மூர்த்திகள் எழுங்தருளியுள்ளனர். இதனை அநபாய சோழன் பொன்னல் மெழுகிப் பொன்மயமாக்கினன் என்று பெரியபுராணம் பேசுகிறது.  நிருத்த சபை நிருத்த சபை என்பது தேர் அம்பலமாகும். இது கூத்தப்பெருமான் திருமுன்னர்க்கொடிமரத்தின் தென் பால் அமைந்துள்ளது. இம் மண்டபம் குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பைக் கொண்டதாகும். இது சித்திர வேலைப்பாடமைந்த ஐம்பத்தாறு தூண்களால் தாங்கப்பெற்றது. இதன்கண் ஊர்த்துவத் தாண்டவர் காண்டற்கினிய தோற்றத்துடன் விளங்குகிறார்.  இராசசபை இராசசபை யென்பது ஆயிரக்கால் மண்டபமாகும். கூத்தப்பெருமான் ஆண்டில் இருமுறை ஆணித் திருமஞ்சன விழாவிலும் மார்கழித் திருவாதிரை விழாவிலும் இச் சபைக்கு எழுந்தருளுவான். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடியது இச் சபையிலிருந்து தான். இது தேவாசிரிய மண்டபம் என்றும் வழங்கும். இதில் வரிசைக்கு இருபத்து நான்கு தூண்களாக காற்பத்தொரு வரிசைகள் அமைந்துள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் அழகிய யானை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்வரிசைச் சுற்றுக்களில் கூத்தினர், இசையாளர் உருவங்கள் பெருவனப்புடன் அமைந்துள்ளன. கூத்தப்பெருமான் தில்லையில் உள்ள இவ்வைந்து சபைகளுக்கும் தலைவனதலின் அவனைச் சபாநாயகன், சபாநாதன், சபாபதி என்றெல்லாம் போற்றுவர்.  சிவகங்கைத் திருக்குளம் ஆயிரக்கால் மண்டபமாகிய இராசசபைக்கு மேல்பால் மிகவும் தொன்மை வாய்ந்த தீர்த்தமாகிய சிவகங்கைக்குளம் அமைந்துள்ளது. இதில்தான் சிம்மவர்மனாகிய பல்லவ மன்னன் நீராடித் தனது வெம்மை நோய் விலகப்பெற்றான்; தனது மேனியும் பொன் னிறம் அடையப்பெற்றான். இத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்குளத்தை அப் பல்லவன் புதுப்பித்தான். இதன் அழகிய திருச்சுற்று மண்ட் பத்தையும் படிகளையும் எடுப்பித்தவன் தொண்டை காட்டு மணவிற் கூத்தகிைய காளிங்கராயன் என்பான். இவனை நரலோக வீரன் என்றும், பொன்னம்பலக் கூத்தன் என்றும் போற்றுவர்.  நரலோகவீரன் திருப்பணிகள் சிறந்த சிவபத்தகிைய நரலோகவீரன் முதற் குலோத்துங்கனின் படைத்தலைவனாகப் பணிபுரிந்தவன், தில்லைக் கூத்தனிடம் எல்லேயில்லாப் பேரன்பு பூண்டவன். அவன் திருக்குளத்தை அணிசெய் ததோ டன்றி நூற்றுக்கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தான். சிவகாமியம்மனின் தனிக்கோயிலுக்குத் திருச் சுற்று மதில்களும் மீண்டபங்களும் சுற்றுவெளியும் அமைத்தான்.  அநபாயன் திருப்பணி சிவகாமியம்மன் திருக்கோயில் அமைத்தவன் அநபாய சோழனை இரண்டாம் குலோத்துங்க வைான். இதனை இராசராச சோழன் உலாவும் தக்கயாகப் பரணியும் குலோத்துங்கச் சோழன் உலாவும் கூறுகின்றன. இக் கோவிலின் முன்னமைந்த மகா மண்டபம் பெருமிதமான தோற்றமுடையது. இதன் கண் உள்ள இரட்டைத் தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தூண்களில் கற்சங்கிலித் தொடரைத் காணலாம். இக் கோவிலின் திருச்சுற்று மண்டபங்கள் சிற்பங்கள் நிறைந்தவை. கூத்தாடும் மகளிரும் வாத்தியக்காரரும் சிற்பங்களாகத் திகழ்கின்றனர்.  இராசகோபுரங்கள் தில்லைக் கோவிலின் நான்கு பக்கங்களிலும் பெருமிதமாகக் காட்சி தரும் நான்கு இராசகோபுரங்கள் விளங்குகின்றன. இவை பல அரசர்களால் கட்டப் பெற்றவை. கோபுர வாயில்களில் உள்ள நிலைத் துரண்கள் மூன்றடிச் சதுரமும் முப்பதடி உயரமும் உள்ள ஒரே கல்லால் ஆயவை. அவைகளின் மேல் முதல்தளம் கருங்கற்களாலும் அதன் மேற்றளங்கள் எல்லாம் செங்கற்களாலும் சுதையாலும் அமைக்கப் பெற்றவையாகும். கோபுரத்தின் மாடங்களில் இறை வனின் பல திருக்கோலங்கள் கண்டவர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.  கிழக்குக் கோபுரம் இக் கோவிலின் கிழக்குக் கோபுரத்தை எழுநிலை மாடமாக எழுப்பியவன் இரண்டாம் குலோத்துங்க வைான். இவனே வடக்குக் கோபுரத்தையும் கட்டத் தொடங்கியுள்ளான். கிழக்குக் கோபுரத்தைக் குலோத் துங்கனுக்குப்பின்னர்க், காடவர்கோனகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருத்தியமைத்தான். பிற்காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் பச்சையப்ப முதலியாரும் அவர் தமக்கை யாரும் இக் கோபுரத்தை மேலும் அழகுபடுத்தினர்.  இக் கோபுரத்தின் மாடங்களில் பரத சாத்திரத்தில் பகரப்பெறும் நூற்றெட்டு காட்டிய பேதச் சிற்பங்களைக் காணலாம். அச் சிற்பங்களின் மேல் பரத சாத்திரத்தில் கூறியுள்ளவாறே அவற்றைப்பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. இக் கோபுரமெங்கணும் அற்புதச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன.  மேற்குக் கோபுரம் மேற்கு இராச கோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் முதலாம் சடாவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பெற்றதெனப் பல கல்வெட்டுக்கள் பகர்கின்றன. இதிலும் நாட்டியச் சிற்பங்கள் பல காணப் படுகின்றன. கோபுரத்தின் வெளிநிலையில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலும் கற்பக விநாயகர், திருக்கோவிலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.  வடக்குக் கோபுரம் வடக்கு இராச கோபுரம் விசயநகர மன்னரான கிருட்டிணதேவராயரால் கட்டப்பெற்றது. அவர், தாம்பெற்ற ஒரிசா வெற்றியின் அறிகுறியாகச் சிற்றம் பலவனை வழிபட்டு இதனைக் கட்டி மகிழ்ந்தார். இது கி. பி. 1516 ல் கட்டப்பெற்றதெனக் கல்வெட்டுக்கள் சொல்லுகின்றன. இக் கோபுர வாயில் நிலைப்புரை யொன்றில் கிருட்டிணதேவராயரின் உருவச் சிலையொன்று காணப்படுகிறது. இதிலும் பரத நாட்டியச் சிறப்பை விளக்கும் பல சிற்பங்கள் உள்ளன.  தெற்குக் கோபுரம் தெற்கு இராச கோபுரம் எழுநிலை மாடங்களை யுடையது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியில் கட்டப்பெற்றது. இதனைக் கட்டியவன்; சொக்கச்சியன் என்ற முதற் கோப்பெருஞ் சிங்க வைான். அதனால் இக் கோபுரத்தைச் சொக்கச்சியன் எழுங்கலக் கோபுரம் என்று சொல்லுவர். இதில் இரண்டு கயல் உருவங்கள் காணப்படுகின்றன, அவற்றைக்கொண்டு இது சுந்தரபாண்டியளுல் கட்டப் பெற்றதென்பர் சிலர். கோப்பெருஞ்சிங்கன் இதனைக் கட்டிய காலத்தில் பாண்டியருக்கு அடங்கிய குறுகில மன்னகை இருந்தான் என்பதையே அக் கயல்கள் விளக்குவனவாகும். இதன் வெளி நிலைகளிற் காணப்படும் அர்த்த காரீசுவரர், திரிபுராந்தகர், மகிடாசுரமர்தனி, பிச்சாடனர் முதலிய திருவுருவங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடையன.  பாண்டிய நாயகம் இத் திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் வடக்குக் கோபுரத்திற்கு அணித்தாகப் ‘பாண்டிய காயகம்’ என்னும் கோயில் அமைந்துள்ளது. இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது. தேரைப்போன்ற வடிவுடன் உருளைகள் மாட்டப் பெற்று, யானைகள் பூட்டி இழுப்பதுபோன்று அமைக்கப்பெற்ற அரியதொரு மண்டபம் இது. இதன் கண் ஆறுமுகப்பெருமான் மயில்மீது அமர்ந்து, வள்ளி தெய்வயானையுடன் காட்சியளிக்கிறார். ஆறுமுகப் பெருமான் திருவுருவம் சிறந்த வேலைப்பாடுடையது. மண்டபத்தின் உட்புறமெங்கும் திருமுருகாற்றுப் படையில் கூறப்பெறும் ஆறு படைவீடுகளின் காட்சிகள் மிகவும் அழகான வண்ண ஒவியங்களாகக் காண்பவர் கண்ணைக் கவர்கின்றன.  திருத்தொண்டத்தொகையிச்சரம் இங்குள்ள சிவகங்கையின் வடகரையில் கவலிங்கக் கோயில் அமைந்துள்ளது. பெரிய புராணத்தில் பேசப் பெறும் தொகையடியார்கள் ஒன்பதின்மரையும் ஒன்பது சிவலிங்க வடிவங்களாக அமைத்து வணங்கும் தலம் இது என்பர். இதனைத் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்றும் குறிப்பர்.  தில்லைக் கோவிந்தர் சங்கிதி தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னான் கிழ்க்கு நோக்கித் தில்லைக் கோவிந்தராசர் சந்நிதி அமைந்துள்ளது. இதனை அமைத்தவன் இரண்டாம் நந்திவர்மனாகிய பல்லவ மன்னனவன். இதனைத் திருமங்கை யாழ்வார், “பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த, செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்திரகூடம்” என்று போற்றினர்.  இத்தகைய பல்வேறு சிறப்புக்களையுடைய தில்லைத் திருக்கோவில் பன்னூறு ஆண்டுகளாகச் சைவ கன்மக்களின் தலையாய தெய்வத்தலமாகத் திகழ்கிறது. அவர்கள் ‘கோயில்’ என்று கொண்டாடும் தனிமாண்புடையது.    14. இலக்கியங்களில் தில்லை   இறைவன் திருவருள் வெள்ளத்தில் திளைத்த அருளாளர்களால் பாடிப் பரவப் பெற்ற பழம்பதி களைப் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று பாராட்டுவர். அத்தகைய பாடல் பெற்ற தலங்களுள் பழமையும் பெருமையும் வாய்ந்த தலம் தில்லையாகும். சைவ நன்மக்களின் தெய்வத் திருக்கோவிலாகத் திகழும் தில்லைப்பதியினைப் புகழ்ந்து சொல்லாத சைவக் கவிஞர் இலராவர்.  திருவாசகத்தில் தில்லை இறை மணத்தாலும் கலைகலத்தாலும் அன்றும் இன்றும் தலைசிறந்த தலமாக விளங்கும் தில்லைக்கு மாணிக்கவாசகரை வாவென்று வண்ணப் பணித்து வான்கருணை செய்தருளினான் இறைவன். அங்கு மாணிக்கவாசகர், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த உண்மையைத் தாம் பாடிய திருவாசகத்தில் ‘கண்ட பத்து’ என்னும் பதிகத்தில் ‘கண்டேன்! கண்டேன்!’ என்று கூறி இன்புறுகின்றார். ‘ஐம்பொறிகளின் வயப்பட்டு அழிவதற்குக் காரணமாகி மீளமுடியாத நரகில் வீழவிருந்த என்னைத் தில்லைக்கு வருமாறு இறைவன் பணித்தான்: அவண் சென்றதும் அவ்இறைவன் என் சிங்தையைத்’ தெளிவித்துச் சிவமயமாக்கினன் , என்னை அடிய கைவும் ஏற்றுக்கொண்டான் ; இந்த நிலை, எனக்கு அந்தமிலா ஆனந்தத்தைத் தந்தது ; இத்தகைய ஆனந்தத்தை நான் அணிகொள் தில்லையில் கண்டேன் : அனைத்துலகும் தொழும் அருமைவாய்ந்த தில்லை அம்பலத்தே கண்டேன், வேதங்கள் தொமுதேத்தும் விளக்கமான தில்லையில் கண்டேன்’ என்று கரடிப் பாடிப் பரவசமெய்துகிறார்.  திருக்கோவையாரில் தில்லை தில்லைக்கூத்தனைத் தரிசித்துத் தென்பால் திரும்பிய மாணிக்கவாசகரின் கண்களில் தில்லைக்கோவிந்தன் பள்ளி கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. இத் திருமாலுக்கு இங்கென்ன வேலை தில்லைமுற்றத்திலேயே பாயலை விரித்துப் படுத்துவிட்டானே, என்ன காரணம்? என்று சிறிதே சிந்தித்தார். காரணம் கருத்தில் உதித்து விட்டது. உடனே அதனை எல்லோரும் அறியச் சொல்லிப் போக்தார். ‘ஒருகால் திருமால் சிவபெருமான் திருவடியினைக் காணுதற்காகப் பன்றியுருவெடுத்து நிலத்தைப் பிளந்து கெடுந்துாரம் சென்றான்; அவன் திருவடியைக் கண்டுகொள்ள முடிய வில்லை ; பின் தன் செருக்கழிந்து சிவனை, அருளுக என்று பணிந்து வேண்டினன்; அப்போது சிவன் ஒரடியை மட்டுமே காட்டினான் ; மற்றாென்றைக் காட்டாது மறைத்துவிட்டான்; காணாத மற்றாென்றையும் கண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினால் தில்லை முற்றத்திலே கடுந்தவம் புரிந்துகொண்டிருக்கிறான்’ என்றார்.  ‘புரங்கடங் தான்அடி காண்பான்  புவிவிண்டு புக்கறியா(து) இரங்கிடெக் தாய் ! என் றிரப்பத்தன் ஈரடிக்(கு) என்னிரண்டு கரங்கள்தந் தான் ஒன்று காட்ட, மற் றங்கதும் காட்டிடென்று வரங்கிடங் தான்தில்லை யம்பல  முன்றில்அம் மாயவனே!’  என்பது மாணிக்கவாசகரின் திருக்கோவையார்ப் பாடலாகும்.  தில்லையில் திருஞானசம்பந்தர் சீர்காழிச் செல்வராகிய திருஞானசம்பந்தர் தில்லைக்கு எழுந்தருளினர். நகருள் நுழையும் போது எங்கும் புகைப்படலம் பொங்கிவருவதை நோக்கினார். மூவாயிரம் அந்தணர்கள் முன்னவனை எங்காளும் பிரியாது பணிபுரியும் பெருமை வாய்ந்த திருநகரம் என்பதைத் தெரிந்தார். அவ் அந்தணாளர்கள், தாம் கற்றாங்கு எரியோம்பும் காட்சியைக் கண்டு வியந்தார். உலகில் துயரம் உருதவாறு, பொதுநலம் பேணும் புனிதவுள்ளத்தால் அவர்கள் வேள்வி செய்யும் விதத்தை மதித்துப் பாராட்டினார். இத்தகைய தில்லையில் அமைந்த திருச்சிற்றம்பலத் தலைவன் பாதத்தைப் பற்றியவர்களைப் பாவங்கள் என்றும் பற்றா என்று உறுதி கூறினர். பொதுநலத் தொண்டர்களாகிய அந் தணர்களே ‘உயர்ந்தார்’ என்று உவந்தேத்தினார். ‘அவர்கள் உறையும் தில்லையில் உள்ள சிற்றம்பலம் தொல்புகழ் பெற்றது; அப்புகழ் மேன்மேலும் பெருகி ஏறிக்கொண்டும் இருக்கிறது ; ஆதலால் யான் தேனூறும் தீந்தமிழால் தில்லையைப் பாடினேன்’ என்றார்.  ‘ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லைதன்னுள்  ஏறு தொல்புகழ் ஏந்துசிற்றம்பலத்(து) ஈசனை இசையால் சொன்ன பத்து’  என்பது ஞானசம்பந்தரின் திருவாக்காகும்.  தில்லையில் திருநாவுக்கரசர் சோற்று வளத்தால் ஏற்றம் பெற்ற சோழ நாட்டில் தலைமை வாய்ந்த தெய்வத் தலமாகிய தில்லை எங்காளும் அன்னம் பாலிக்கும் ஆற்றலுடையது. தில்லையில் உள்ள தெருவெல்லாம் திருமடங்கள். நிலவு கின்றன. கூத்தப்பெருமானைக் கும்பிட வரும் அடியார் குழாத்திற்கெல்லாம் சோறுட்டும் திருமடங்கள் அவை. அத்தகைய சோறு மணக்கும் மடங்களைக் கண்ட திருநாவுக்கரசர், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று வாயார வாழ்த்தினர். திருக் கோவிலுட் புகுந்து கூத்தப்பெருமானே வழிபட்டார். ‘அத்தா! உன் ஆடல் காண்பான் இங்கு வந்தேன்: பத்தனாய் நின்று பாடும் பாவன்மை எளியேனுக்கு இல்லையாயினும் என்னை இகழ்ந்து ஒதுக்கிவிடாதே!’ என்று உளங்கரைந்துருகி வேண்டினர். அவருக்குக் கூத்தப்பெருமானது புன்முறுவல் பூத்த திருமுகம், ‘அன்பனே! வருக! என்று வந்தாய்? எப்போது இங்கு வந்தாய்?’ என்று அருளோடு வினவுவது போன்று திருக்குறிப்புக் காட்டியது. உடனே அக் கருத்தை யமைத்து அழகான பாடல் ஒன்று பாடினார். அப்பெருமானுடைய குனித்த புருவத்தையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயினையும், அதில் மெல்லென அரும்பும் புன்சிரிப்பையும், பனித்த சடை யினையும், பவளம் போன்ற மேனியையும், அம் மேனியிற் பூசிய பாலனைய வெண்ணிற்றையும், இன்பந்தரும் எடுத்த பாதத்தையும் காணும் பேறு பெற்றால் இம் மனிதப்பிறவியை எத்தனமுறையானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.  ‘குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும்  இனித்த முடைய எடுத்தபொம் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே’  என்பது நாவுக்கரசரின் தேவாரமாகும்.  தில்லையில் சுந்தரர் சைவசமய குரவர் நால்வருள் இறுதியாகத் தில்லையைக் கண்டவர் சுந்தரர். இவர் தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னர்ச் சென்று நின்று திருக்கூத்தன் கோலத்தைக் கண்டார். உடனே இவருக்கு ஐந்து புலன்களின் வழியாகப் பிரிந்து காணும் ஐந்து அறிவுகளும் கண்ணிந்திரியம் ஒன்றேயாகக் கொள்ளை கொண்டன. ஏனைய நான்கு அறிவுகளும் செயலற்றன. இவற்றை உள்ளிருந்து செலுத்தும் உட்கருவிகளாகிய அந்தக்கரணங்கள் நான்கனுள் சிங்தை ஒன்றே தொழில் செய்தது. ஏனைய மூன்றும் செயலற்றன.  இவற்றை ஊக்கி நிற்கும் மூன்று குணங்களுள் சாத்துவிகம் ஒன்றுமே தொழில் செய்தது. ஏனைய இரண்டும் ஒடுங்கிவிட்டன. இவ்வாறு கூத்தனது காட்சியாகிய எல்லையில்லாத. பேரின்ப வெள்ளத்தில் இணையற்ற மகிழ்ச்சியால் மலர்ந்து நின்றார். பின்னர், “பெருமானே! நின் திருகடம் கும்பிடப்பெற்ற பெரும் பேற்றால் எளியேனுக்கு மண்ணிலே வந்த இந்தப் பிறவியே தூயதும் இன்பம் மேயதும் ஆயிற்று” என்று முறையிட்டார். இவ்வாறு சுந்தரர் தில்லையை வழிபட்ட சிறப்பினைச் சேக்கிழார் திருவாக்கால் அறியலாம்.  தில்லையில் சேக்கிழார் சேக்கிழார் ஒராண்டிற்கு மேல் தில்லையிலேயே தங்கியிருக்கும் தனிப்பேறு பெற்றவர். ஆதலின் தில்லையின் சிறப்பையெல்லாம் நேரில் காணும் பேறுற்றவர். அவர் அத்தில்லையின்கண் இடையறாது எழுந்து முழங்கும் ஒலிகளைக் குறிப்பிடுகின்றார்.  ‘நரம்புடை யாழ்ஒலி முழவின் காதஒலி வேதஒலி அரம்பையர்தம் கீதஒலி அருத்தில்லை.’  யாழொலியும், முழவொலியும், வேதவொலியும், தேவ மாதர் பாடும் கீதவொலியும் நீங்காது ஒலிக்கும் பாங்குடையது தில்லையென்றார். இது காண முத்தி தரும் தலமாதலின், தொழுவார்தம் மும்மலங்கள் கழுவப்பெற்றுச் செம்மையான வீடருளும் செல்வப் பதி தில்லை’ என்று சொல்லியருளினார்.  தில்லையில் குமரகுருபரர் இத்தகைய தில்லைக்குத் தென்பாண்டிக் கவிஞராகிய குமரகுருபரர் ஒருகால் சென்றார். அதன் சிறப்பைக் கண்டார். உலகிலேயே உயர்ந்த தலம் தில்லையே சிறந்த தீர்த்தம் அங்குள்ள சிவகங்கையே; இறைவன் உருவங்களுள் அம்பலக்கூத்தன் உருவே அழகும் உயர்வும் உடையது என்று பாடினார். பொன்னம்பலத்தைக் கண்டார். அது ஒரு பொற்றாமரை போன்று அவருக்குத் தோன்றியது. அப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்தன் அருள்மேனி, தாமரையில் ஊறும் தேகைக் காணப்பட்டது. அப்பெருமான் அருகில் நின்று காணும் அன்னை சிவகாமியின் கரு விழிகள், தாமரையின் தேனை உண்டு களிக்கும் கரு வண்டுகளாகத் தோன்றின. அந்தக் காட்சியை அழகிய பாவாக நமக்குக் குழைத்துாட்டினார்.  ‘பொன்மன்றம் பொற்றா மரையொக்கும் அம்மன்றில் செம்மல் திருமேனி தேனெக்கும் அத்தேனை  உண்டு களிக்கும் களிவண்டை ஒக்குமே  எம்பெரு மாட்டி விழி’  என்பது குமரகுருபரரின் பாடலாகும்.  தில்லையில் கவிமணி இவ் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய இனிய செந்தமிழ்க் கவிஞராகிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தில்லையைச் சென்று கண்டார். அங்குள்ள சிற்றம்பலத்தில் கூத்தன் களிகடம் புரிவதையும் கண்டு மகிழ்ந்தார், அப்பெருமான் அல்லும் பகலும் ஒயாது நின்று ஆடுவதற்குக் காரணம் யாதாகலாம் என்று ஆராய்ந்தார். அத்தில்லையின் கிழக்கு எல்லையில் அண்ணாமலை மன்னர் அமைத்துள்ள பல்கலைக் கழகத்தைக் கண்டுதான் கழிபேருவகை கொண்டு இவ்வாறு ஆடுகின்றான் என்று பாடினர்.  ‘தில்லைப் பதியுடையான் சிற்றம் பலமதனில் அல்லும் பகலும்கின்(று) ஆடுகின்றான்-எல்லைக்கண்  அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்  கண்ணாரக் கண்டு களித்து’  என்பது கவிமணியின் மணியான பாடலாகும்.            15. தமிழ் வளர்த்த தில்லை   இலக்கியத்தில் இறைமணம் சங்ககால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக் கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும்.  ‘திருமுறைகளைக் காத்த தில்லை  தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும் தில்லைக்கு எழுந்தருளிச் சிற்றம்பலக்கூத்தனேச் செந்தமிழ்ப் பதிகங்களால் சந்தமுறப் பாடினர். அவர்கள் தம் பாடல்களை எழுதிய ஏடுகளையெல்லாம் தில்லைவாழ் அந்தணரிடத்தேயே ஒப்புவித்து மறைந்தார்கள். திருவாசகம் அருளிய மணிவாசகருடைய பாடல்களே இறைவனே ஏட்டில் எழுதி அவ் அந்தணாளர்களிடமே கொடுத்தான். இவையெல்லாம் தில்லைப் பொன்னம்பலத்திலேயே ஒருபால் மறைத்து, வைக்கப் பெற்றிருந்தன. அச்செய்தியைத் திருகாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் நல்லருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் வாயிலாகத் தஞ்சை மன்னனாகிய இராசராசன் அறிந்தான். அவன் தில்லைக்கு வந்து அவற்றை எடுத்துத் தருமாறு தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினன். அவர்கள் அவ்வேடுகளே இங்குவைத்துச் சென்ற அடியார்களே வந்தால்தான் எடுத்துத் தருவோம் என்றனர்.  திருமுறை கண்ட சோழன் அது கேட்ட இராசராசன் சமய குரவர் திருவுருவங்களைப் பல்லக்கில் வைத்து அலங்கரித்துக் கொண்டுவந்து நிறுத்தினான். உடனே அவர்கள் ஏடுகள் வைத்திருந்த அறைக்கதவைத் திறந்தனர். கறையான் புற்றுக்களால் மூடப்பட்டிருந்த அவ்வேடுகளை எடுத்துத் தூய்மை செய்து பாடல்களை வெளிப்படுத்தினான். நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டே அவற்றைத் திருமுறைகளாக வகுக்குமாறு செய்தான். அப்பாடல்களை நாடெங்கும் பரப்பினான். திருக்கோவில்களிலெல்லாம் பண்ணோடு ஒதுமாறு பண்ணினன். இச் செயலால் இராசராசன் ‘திருமுறை கண்ட சோழன்’ என்று பெருமையாகப் பேசப் பெற்றான். ஆகவே சைத்திருமுறைகள் பன்னிரண்டலுள்ளே முதல் எட்டுத் திருமுறைகள் தில்லையிலிருந்தே இடைக்கப் பெற்றன. அவற்றைக் காத்தளித்த பெருமை, தில்லைக்குரியதே.  தில்லையில் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் தில்லையிலேயே பாடப்பெற்றது. ஆசிரியராகிய சேக்கிழார் அதனைப் பாடுதற்குத் தில்லைக் கூத்தனே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தருளினான். தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டு வரலாற்றை அறிவதற்குக் கருவியாயுள்ள பெரிய புராணத்தைத் தந்த பெருமையும் தில்லைக்குரியதே. இந்நூல் சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற காவியங்களோடு ஒப்பாக வைத்து மதிக்கத்தக்க உயர்ந்த காவியமாகும்.  தில்லையில் உமாபதிசிவனார் சைவ சமய சந்தான குரவருள் ஒருவராகிய உமாபதிசிவனர் தில்லையைச் சேர்ந்தவரே. அவர் தில்லைவாழ் அந்தணருள் ஒருவராவர். அவருக்குத் தில்லைக்கூத்தன் திருமுகம் எழுதினன். புலைக்குலத்தில் தோன்றிய பெத்தான் சாம்பான் என்னும் பத்தி மிக்க தொண்டனுக்கு முத்திநெறி காட்டுமாறு திருமுகப் பாசுரம் எழுதியனுப்பினான்  ‘அடியார்க்(கு) எளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியார்க்(கு) எழுதியகைச் சீட்டு-படியின்மிசைப்  பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் திக்கைசெய்து முத்தி கொடுக்க முறை’  என்பது தில்லைக்கூத்தன் அருளிய திருப்பாட்டு.  உமாபதிசிவர்ை உதவிய நூல்கள் இத்தகைய உமாபதிசிவனார் சைவசமய சாத்திரங்களாகிய மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள்ளே எட்டினை இயற்றியவர். சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப கிராகரணம் என்னும் எட்டுமே அவர் இயற்றியவை, இவையன்றித் திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம், கோயிற் புராணம், திருத்தொண்டர் புராண சாரம் ஆகியவற்றையும் உமாபதிசிவனாரே பாடி யளித்தார். சேக்கிழார் காலத்தை யடுத்து வாழ்ந்த உமாபதிசிவனார் சேக்கிழார் புராணத்தைப் பாடித் தந்திராவிடின் அவரது வரலாற்றைத் தமிழர் அறிதற்கு வழியில்லாது போய்விடும். இவர்பாடியருளிய கொடிக்கவி பாடிக் கொடியேற்றல் நன்று.  தில்லையில் இரட்டையர் அறுநூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய இரட்டைப் புலவர்கள் இருவரும் தில்லையடைந்தனர். அவர்கள் கூத்தப்பெருமானைத் தலைவகைக் கொண்டு ‘தில்லைக் கலம்பகம்’ என்ற நூலைப் பாடினார். பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளனர்.  தில்லையில் குமரகுருபரர் முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய குமர குருபரர் தில்லைக்கு ஒருகால் வந்தார். அப்போது தில்லை யிலிருந்த புலவர் சில்லோர், ‘இவர் இலக்கணமறியா தவர் ; யாப்பிலக்கணம் கற்காமலே செய்யுள் யாக் கின்றவர்’ என்று இகழ்ந்தனர். அதனையறிந்த குமர குருபரர் யாப்பிலக்கண நுட்பங்களெல்லாம் புலப் படுமாறு ‘சிதம்பரச் செய்யுட் கோவை’ யென்னும் சிறந்த நூலைப் பாடினர். பின்னர்ச் சிதம்பர மும் மணிக்கோவை, தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் தில்லையில் இருந்த பொழுதே பாடினார்.  தில்லையில் படிக்காசர் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற் பட்ட படிக்காசுப்புலவர் தில்லையை அடைந்து பொன்னம்பலத்தில் அமர்ந்த சிவகாமியன்னையிடம், “எனக்கு ஏதேனும் கொடு; உன்னைப் பாடியவர்க்கும் பாடாத பிறர்க்கும் ஏதேதோ அளித்தாய் என்று கூறுகின்றனர்: எனக்கு ஏதும் கொடுத்திலேயே ?” என்று வேண்டிப் பாடினார். உடனே சிவகாமியன்னை பஞ்சர்க்கரப் படியில் ஒரு பொற்காசினை வைத்து, அதனை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தாள். ‘அதனா லேயே நமச்சிவாயப் புலவர், படிக்காசுப் புலவரெனப் பாராட்டும் பேறு பெற்றார்.  மகாவித்துவானும் நாவலரும் சென்ற நூற்றாண்டில் விளங்கிய பெரும் புலவராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தில்லை யமக அந்தாதி பாடிச் சிறப்பித்தார். இவர் காலத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தில்க்லமாககளில் தங்கித் தம் பேச்சாலும் எழுத்தாலும் சைவத்தையும் தெய்வத் தமிழையும் வளர்த்தார். அவருடைய தமிழ் நாவன்மையைக் கண்டு வியந்த துறைசையாதீனத் தலைவராயிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ‘நாவலர்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினர். இவர் தில்லை மாநகரில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் தமிழ்ப்பள்ளி யொன்றை நிறுவித் தமிழையும் சமயத்தையும் பரப்பினர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களுக்கு எளிய கடையில் சிறந்த உரைநடை வரைந்து ‘வசனநடை கண்ட வல்லாளர்’ என்று தமிழுலகம் போற்றும் பெருமை யுற்றார். இவர் சிதம்பர மான்மியம் என்னும் நூலையும் ஆக்கினார்.  தில்லையில் இராமலிங்கர் இதே காலத்தில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பல்லாண்டுகள் தில்லை மாநகரிலேயே தங்கித் தெய்வத்தமிழை வளர்த்தனர். இவரும் சிறந்த பாவன்மையும் நாவன்மையும் படைத்தவர். ஒருகால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக காவலரிடம், “சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை துறவு பூண்டதனாலன்றோ தங்கட்கு நாவலர் என்ற பட்டமும் எனக்கு மகா வித்துவான் பட்டமும் கிட்டின; இந்நாளில் இவ்விரு பட்டத்திற்கும் உரியவர் இராமலிங்கம் பிள்ளேயே” என்று கூறினார். இத்தகைய இராமலிங்க அடிகள் தில்லைக்கூத்தனைப் பல்லாயிரம் அருட்பாக்களால் பாடிப் பரவினர். அவையெல்லாம் திருவாசகத்தைப் போல், கற்பவர் கேட்பவர் உள்ளத்தைக் கரைந்துருகச் செய்யும் உயர்ந்த மாண்புடையன.  தில்லையில் மீனாட்சி கல்லூரி இந்த நூற்றாண்டில் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச்செட்டியார் தில்லைமாநகரில் மீனாட்சி தமிழ்க் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரியின் தலைவராக டாக்டர் உ. வே. சாமிநாதையர் நியமிக்கப் பெற்றார். இவருக்கு உதவியாகப் பல தமிழ்ப் புலவ்ர்களும் நியமிக்கப்பெற்றனர். 1920ஆம் ஆண்டில் மீனாட்சி கலைக்கல்லுரரியாகத் தோன்றிய கல்விக்கூடம். படிப்படியாக வளர்ச்சியுற்று 1938-ல் அது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவாயிற்று. தமிழ், ஆங்கிலம், வடமொழி, விஞ்ஞானம், இசை, தத்துவம் முதலிய பல துறைக்கலைகளும் கற்பிக்கும் கழகமாக இருந்தாலும் சிறப்பாகத் தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் காத்து வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக்கழகமாகவே தழைத்தோங்கி வருகிறது.  தில்லையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தில்லைமாநகரின் கிழக்கே அமைந்துள்ள சிறந்த பதிகளாகிய கொற்றவன்குடிக்கும் திருவேட்கனத்திற்கும் நடுவே அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொற்றவன் குடி, சைவசித்தாந்த சாத் திரங்கள் எட்டினை அருளிய உமாபதிசிவனார் உறைந்து, தமிழும் சமயமும் வளர்த்ததலமாகும். திருவேட்களம் திருவருட்செல்வர்களாகிய அப்பரும் ஞானசம்பந்தரும் தங்கியிருந்து பண்ணாரும் இன்னிசைப் பாமாலை தொடுத்த தூயதலமாகும். இத்தகைய ஞானங்கமழும் பூமியில் அமைக்கப்பெற்ற பல்கலைக்கழகம், தமிழகத்திற்கே தனிச்சிறப்பை அளிப்பதாகும். நாலாயிரம் மாணவர்கட்கு மேல் தங்கியிருந்து பல துறைக் கலைகளையும் பயிலும் இடம் பாரதநாட்டிலேயே இஃதொன்றுதான்.  பல்கலைக்கழகத்தில் பைந்தமிழறிஞர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மிகச் சிறப்புவாய்ந்தது. தமிழகத்தில் பெரும்புலவர்களெனப் பெயர்பெற்ற பேரறிஞர்கள் பலரும் இத்துறையில் பணிசெய்தனர்; இன்றும் பணியாற்றுகின்றனர். டாக்டர் உ. வே. சாமிநாதையருக்குப் பின், நெல்லை நாட்டின் நல்லறிஞராக விளங்கிய கா. சுப்பிரமணியபிள்ளை, டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார், மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் ரா. இரா கவையங்கார், நாவலர் ந. மு. வேங்கடசாமிநாட்டார், ஒளவை சு. துரைசாமிபிள்ளை, டாக்டர் அ. சிதம்பர நாதன்செட்டியார் முதலான பல தமிழ்ப்பேரறிஞர்கள் இருந்து தமிழ்ப்பணியாற்றினர். இன்று தமிழகத்தில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தமிழ்ப்பணியாற்றும் பன்னூறு புலவர்கள், இப்பல்கலைக்கழகம் தந்த செல்வங்களே. இன்றும் இத்துறையினைத் திறம்பட நடாத்தி வருவோர் பேராசிரியர் தெ. பொ. மீனட்சி சுந்தரனாரும் பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியாரும், பேராசிரியர் கோ. சுப்பிரமணியபிள்ளை யுமேயாவர். இத்துறையினைப் போன்றே பிற கலைத் துறைகளையும் தக்க பேரறிஞர்களைக்கொண்டு மிக்க சிறப்பாக வளர்த்து வருகிறது.  இவ்வாறு பதினேந்து நூற்றாண்டுகளாகச் சைவத் தமிழையே வளர்த்து வந்த தெய்வத் தலமாகிய தில்லைமாககரம் இந்த நூற்றாண்டில் தமிழின் பல துறைகளையும் நலம்பெற வளர்த்து வருகிறது. இலக்கியம், சமயம், தத்துவம், இசை முதலிய பல துறைகளிலும் தமிழறிஞர் பலர் இருந்து அரும்பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களை உருவாக்கித் தந்து, நாடெங்கும் நற்றமிழ் வளர்தற்கு உற்ற துணையாக ஒளிர்கின்றது. ஆதலின் தில்லைமாககரம் என்றும் தமிழ் வளர்க்கும் தனிப்பெருநகரமாக நின்று நிலவுகின்றது.