[]       தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை          அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை  - Public Domain    உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் பதிப்பகத்தார் உரை 4  முகவுரை 5  முன்னுரை 10  அறிமுகம் 24  தெய்வங்கள் 26  மழையும் பஞ்சமும் 53  தாலாட்டு 67  விளையாட்டு 112  காதல் 120  திருமணம் 284  குடும்பம் 313  சமூகம் 367  உழவும் தொழிலும் 414  ஒப்பாரி 478  பதிப்பகத்தார் உரை   தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையில் தமக்கெனவோர் இடத்தை நிலை நிறுத்திக் கொண்டவர் பேராசிரியர் நா. வானமாமலை. இத்துறையில் அவரது பணிகளில் சிறப்பானது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ எனும் இந்நூலாகும். 1964 இல் வெளியான இதன் முதற்பதிப்பும், 1977 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பும் மக்களின் பேராதரவைப் பெற்றன. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இம் மூன்றாம் பதிப்பை அழகாக ‘ஆப்செட்’ முறையில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  இத்தருணத்தில் இத்தொகுப்பைக் குறித்துச் சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறோம். இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடலைச் சேகரித்தவரின் பெயரும், அப்பாடல் வழங்கும் பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளன.  அடுத்து, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்களை வகைப்படுத்திய முறை குறிப்பிடத்தக்கதாகும். தமிழக நாட்டார் பாடல்களை வகைப்படுத்துவது குறித்த சிந்தனையைத் தொடங்கி வைத்த பெருமை இந்நூலுக்கு உண்டு.  மேலும், சமூகவியல் - மானிடவியல், வரலாறு போன்ற பல்வேறு அறிவியல் துறைகளின் துணையுடன் பாடல்களுக்கு பேராசிரியர் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை ஆகும். நாட்டார் பாடல்களைச் சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலினை மீண்டும் தமிழக மக்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம்.  பதிப்பகத்தார்                       முகவுரை   இது 1964-ல் வெளியான ‘தமிழர் நாட்டுப் பாடலி’ன் மறுபதிப்புத்தான். அச்சுப் பிழைகள், விடுபட்டுப்போன சொற்கள், வரிகள், இவற்றைத் திருத்தி, சேகரிப்பு விவரங்களில் உள்ள குறைகளைப் போக்கி இதனை வெளியிடுகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் இந்த நூல் அழகிரிசாமி போன்ற இலக்கிய ஆர்வலர்களின் போற்றுதலையும், பத்திரிகைகளின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்தியன் எஃஸ்பிரஸ் விமர்சகர், இந்நூல் பாமர மக்களின் ஆன்மாவையே நமக்குக் காட்டுவதாக எழுதியிருந்தார். இது தனது நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றி விட்டதென்ற மன நிறைவு எனக்கு உண்டு. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் நாட்டுப்பாடல் வெளியீடுகள், ஆய்வுகள், கருத்தரங்குகள் அனைத்தையும் தொடங்கி வைத்தது இந்த நூல்தான் என்று பெருமையாகக் குறிப்பிடலாம். பல முயற்சிகளுக்கு வழி திறந்து விட்டது இந்த நூல். பல்கலைக் கழகங்களில் ஆய்வு ஆர்வத்தை ஏற்படுத்தி, சில மாணவர்களை இத்துறை ஆய்வுக்குக் கவர்ந்தது ‘தமிழர் நாட்டுப் பாடல்களே’, இந்நூல் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும், கேரளப் பல்கலைக் கழகத்திலும், தமிழ்த் துறையில் மூல நூலாக (Source Book) ஆகப் பயன்படுகிறது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், நாட்டுப் பாடல் துறையில் சிறந்த நூல் இதுவென மதிக்கிறார்கள். இந்நூல் வெளிவந்த ஓராண்டிற்குள் செலவாகி விட்டது. இந்த நூலின் தாக்கத்தால், நாட்டுப் பாடல் ஆய்வை ஈழத்தில் மேற்கொண்ட பாலசுந்தரம், இதற்கோர் மறுபதிப்பு தேவையென்று எழுதினார். பல்கலைக் கழகங்களில் பழைய பிரதி பழுதாகிப் புதிய பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை வெளியிட நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் சம்மதித்துள்ளது. இதற்குப்பின் ஆயிரக்கணக்கான பாடல்களை நாட்டுப் பாடல் பிரியர்கள் திரட்டி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். வாய்மை நாதன், அரசக்கண்ணு இருவரும் தஞ்சை மாவட்டத்தின் முழுத்தொகுப்பையுமே அனுப்பியுள்ளார்கள். இன்னும், மின்னல் கோவை மாவட்டப் பாடல்களை அனுப்பியுள்ளார். பொன்னீலன் குமரி மாவட்டப் பாடல்களைச் சேகரித்து வைத்துள்ளார். இவற்றையெல்லாம் வெளியிட வேண்டும். இதற்கெல்லாம் ஒரு தீர்வு உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் நாட்டுப் பாடல் கருத்தரங்கில் தோன்றலாம். அக் கழகம் மாவட்டந்தோறும் சேகரிப்பாளருக்கு எழுதிப் பாடல்களைச் சேகரித்து, வெளியிட முயன்று வருகிறது. என்னுடைய ஆதரவு அக்கழகத்தின் நாட்டுப் பாடல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உண்டு. இதில் சில படிப்பாளிகள், நாட்டுப் பாடல் என்றால் வாய் மொழி இலக்கியம், எழுதப்பட்டால் அது ‘வாய் மொழி ’ அடைமொழியை இழந்து இலக்கியமாகி விடுகிறது என்று சொல்லுகிறார்கள். வாய்மொழிப் பரவலுக்குக் காரணமே, எழுத்தறிவின்மை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுத்தறிந்தவர்கள் 9 சதவிகிதம். இப்பொழுதும் 30 சதவிகிதம். பெண்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் 18 சதவிகிதம் மட்டும். எழுத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் உணர்ச்சிகளையும், கருத்துகளையும், நிகழ்ச்சிகளைப் பற்றிய எதிர் விளைவுகளையும் பேச்சாலேயே அவர்கள் சொன்னார்கள். அதனால் நாட்டுப் பாடல் என்றாலே வாய்மொழிப் பரவல் என்ற நம்பிக்கை தவறாக ஏற்பட்டது. ஒரு நாட்டுப் பாடல் எப்படி உருவாகிறது? தொழில் களங்களில் ஒரு பாட்டைப் பலர் உருவாக்கலாம். ஏற்றம், நடுகை முதலிய தொழில் பாடல்கள் தொழிலாளரது பொதுவான உணர்ச்சியால் இசையாகி வெளிப்படுவன. அதுவல்லாமல் ஒரு சமூக நிகழ்ச்சியை வருணிக்கவும், சிக்கலான கதையமைப்புடைய கதையைப் பாடலாகப் பாடவும் இந்த முறை உதவாது. சிவகாசிக் கலகத்தை எடுத்துக் கொள்வோம். இத் தொகுப்பிலேயே நாலைந்து பாடல்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப்பட்டதால், எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப் பாடல் தன்மையை இழந்து விடாது. நாட்டுப் பாடல், ஒரு நிகழ்ச்சியின் மீது நாட்டு மக்களின் பிரதிபலிப்பை வெளியிடுவது. சிவகாசிக் கலகத்தைப்பற்றிய பாடல்களில், ஒன்று கலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சிக்குச் சாதகமானது. மற்றொன்று பொதுவாகக் கலகத்கினால் எவ்வளவு துன்பம் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைக் கூறி கலகத்தைத் தடுக்க முயலுவது. இவ்விரண்டுமே யாரோ ஒருவரால் எழுதப்பட்டவைதான். இவை பரவுகின்றன. பாட்டை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அந்த உணர்ச்சியோடு ஒன்றுபடுகிறார்கள். ஒரு சாதிக்காரர்கள் செய்தது நியாயம் என்றோ, அநியாயம் என்றோ, இரு கட்சியாரும் கலகம் செய்தது, எவ்வளவு துன்பகரமானதென்றோ, ஒரு படிப்பினை பாடலில் இருக்கும். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவர் எழுதவில்லை. ஒருவரே பாடல் முழுவதையும் எழுதினார். ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல், நாட்டார் பண்பாட்டு மதிப்புகளுக்கு ஒத்திருக்கிறது. எனவே பரவுகிறது. எனவே “நாட்டுப் பாடலின் பொதுத் தன்மை, அதன் சிருஷ்டியில் இல்லை, பரவுதலில் தான் இருக்கிறது” என்று Folk Song in England என்ற நூலில் ஆசிரியர் கூறுகிறார். இதனைக் குறித்து அறியாமையால் ஒரு ஆய்வாளர் குழம்பிப் போய், அக்குழப்பமே தெளிவான கருத்தென்று எழுதுகிறார். ஒரு பாடலைக் குறிப்பிட்டு இதை நாட்டுப் பாடகரான S.M. கார்க்கியே எழுதியிருக்கலாம். இது அசல் நாட்டுப் பாடல் அல்ல என்று கூறுகிறார். ஒரு நாட்டுப் பாடலை, முன்பிருந்திராத புதிய செய்தியை வைத்து கார்க்கி எழுதலாம். ஆனால் அதை நாட்டு மக்கள் (Folk) ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து அது நாட்டுப் பாடலாகும். மேற்கூறிய பாட்டு சிவகிரியில் பாடப் படுகிறது. பக்கத்து ஊர்களில் அவரே பாடிப் பரப்புகிறார். பரவுதல்தான் Folk Song ஆ இல்லையா என்பதைக் காட்டும். சினிமா பாட்டு, நாட்டு மெட்டு, நாட்டார் மதிப்புகள், அவர்களது பேச்சு வழக்கு இருந்தால் பரவும். இது சிருஷ்டியில், சினிமாப் பாடகருடையது. பரவுதலில் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது (adopted) , அசல் நாட்டுப் பாடல், நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப எழுதி, அது பரவுமானால் நாட்டுப் பாடலாகும். இதுவல்லாமல், வாய்மொழிப் பாடல், எழுதப்படாத பாடல், தூய நாட்டார் பாடல் என்பதெல்லாம், நாட்டுப் பாடலின் சிருஷ்டியையும், பரவுதலையும் பற்றிய அறியாமையால் எழுந்தது. இவை நாட்டுப் பாடலைக் கற்சிலையாக எண்ணுகிற போக்கு. நாட்டுப் பாடல் உயிருள்ளதோர் வடிவம். வளருகிறது, மாறுகிறது, தேய்கிறது, சாகிறது. மீண்டும் புதைந்த நிலத்தில் பழைய உருமாறி புனருருவம் கொள்ளுகிறது. உருவத்தைப் பார்த்து, ‘ஐயோ இது போய் விட்டதே’ என்று அழுகிற வேலை ஆராய்ச்சியாளனுக்கு வேண்டாம். ஒப்பாரி இப்பொழுது வழக்கழிந்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் ஒப்பாரியே இராது. அப்பொழுது, இப்பொழுதே எழுதிவைக்கப்பட்டவைதானே மிஞ்சும். இது fossilமாதிரி, அதற்குப் பரவுதல் இல்லை. புதிய எழுச்சி, இயக்கங்கள், பாமர மக்கள் வாழ்வில் உண்டானால், புதிய பாடல்கள் தோன்றும். அவர்கள் வாழ்க்கைக்குப் பயனற்றவை மறையும். மறைவதை எண்ணி ஒப்பாரி பாட வேண்டியதில்லை. புது நிலையை அறிந்து, புதுப் பாடல்களை வரவேற்க வேண்டும். சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ற பாடல்களைத் தோற்றுவிப்பவன் நாட்டார் கவி. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போல. அவர்களுடைய உணர்ச்சி, மதிப்புகள், நலன்களுக்கு ஏற்றாற்போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையனவற்றை அவர் பாடினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டாரது போர் முழக்கமாயிற்று. அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்லாமல், சினிமாப் பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காவும் எழுதப்பட்டதால், நாட்டார் பண்பாட்டுக் கருவை, நாட்டார் மொழியிலும், சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார். நாட்டுப் பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது. இதுவும் நாட்டுப் பாடலே. கலியாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு, நாட்டு மக்கள் பண்பாட்டு மதிப்புக்கள், அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன. ஆனால், மெட்டில் மட்டும் நாட்டுப் பாடலிசை கொண்டு, உள்ளடக்கத்தில் நாட்டு மக்களது உணர்விற்கும், ஆர்வங்களுக்கும் எதிரான கருத்துள்ள சினிமாப் பாடல்கள் எழுதப்படுகின்றன. அவை நாட்டு மக்களிடையே ‘பரவுதல்’ இல்லை. நடுத்தர மக்களிடையேதான் பரவுகின்றன. நாட்டு மக்களிடையே பரவும், நாட்டு மக்களின் மதிப்புகள் தாங்கிய பாடல்கள்தான் நாட்டுப் பாடல்கள். சிவகாசிக் கலகம் பற்றிய பாடல்கள், கலகம் நடந்த இடத்தில், சிவகாசியிலும், அதனையடுத்த ஊர்களிலும் தோன்றியிருக்கலாம். சிவகாசியில் கலகம் நடப்பதற்கு பக்கத்து ஊர் மறவர்கள் வந்தார்கள். அவர்களில் சிலர் இறந்து போனார்கள். அவ்வூர்களிலும் பாடல்கள் தோன்றியிருக்கலாம். நாடார்களுக்கு ஆதரவாகவும், மறவர்களுக்கு ஆதரவாகவும், இருகட்சிக்கும் பொதுவாகவும் பாடல்கள் தோன்றியுள்ளன. சில பாடல்களைப் பாடியவர்கள் பெயர்கள் தெரிகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு பாடலை எழுதியுள்ளார். இவை எங்கெங்கு கிடைக்கின்றன? சங்கரன் கோவில், சிவகிரி, விளாத்திக்குளம் முதலிய இடங்களில் 30, 40 மைல் தூரத்திலுள்ள ஊர்களில் கிடைக்கின்றன. கலகத்திற்கு பயந்து ஓடி வந்தவர்கள் இப்பாடலைக்கொண்டு வந்திருக்கலாம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பாடல் நீடித்திருக்கிறது. கலகம் நடந்தது 1896-ல்;எண்பது வருஷங்களாகின்றன. இவை எழுதப்பட்டதால், அச்சிடப்பட்டதால் நிலைத்திருக்கிறது. போத்தையாவிற்குக் கிடைத்தது, ஓலைப் பிரதி. அந்த ஓலையைப் பார்த்துப் பாடுபவரும் வாழ்ந்திருந்தார். எனவே நாட்டுப்பாடல் என்றால் ஆராய்ச்சி செய்பவருக்காக யோசனை செய்து பாடப்படுவது அல்லது எழுதப்படுவது அல்ல. நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் எழுகிற உணர்ச்சியும், சிந்தனையும் பாடல் உருவத்தில் சிருஷ்டிக்கப் படுகின்றன. வாய் மொழிப் பரவுதலின்மூலம் அது நாட்டாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வாய் மொழியால் மட்டும் சிறிது தூரம்தான் பரவும். அது ஒரு Localised Tradition ஆகவே இருக்கும். அச்சில் அதனையே வெளியிட்டால் அதன் பரப்பு தமிழகம் முழுவதும் இருக்கும். உதாரணமாக ஐவர் ராசாக்கள் கதை, ஒரு சிற்றூரில் மட்டுமே வழங்குகிறது. சில பகுதிகள் வள்ளியூரில் வழங்குகின்றன. எப்படியும் கதை நாஞ்சில் நாட்டுக்கு வெளியே தெரியாது. இதற்குக் காரணம் என்ன? கதை 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போரைப் பற்றியது. அதே வரலாற்று நிலைமைகள் இன்று இல்லை. குலசேகர மன்னனைப் போன்ற மன்னர்களோ கன்னட இளவரசி போன்ற இளவரசிகளோ இன்று இல்லை. எனவே பாத்திரங்களின் கலாச்சார மதிப்பு மாறிவிட்டது. எனவே கதை ஒரு வரலாற்று நினைவுக் கதையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. வாழ்க்கைக்கு நேரடி சம்பந்தமில்லாமலிருக்கிறது. அந்த வரலாறும் பரவாமலிருப்பதற்குக் காரணம், வாய் மொழிப் பரவுதல். இப்பொழுது அக்கதை வில்லுப்பாட்டாகப் பாடப் படுவதில்லை. எனவே பரவுதலும் இல்லை:இனி அது மறைய வேண்டியதுதான்;இக்கலைச் சிருஷ்டியை, வரலாற்று மதிப்பை நிலைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? இதை எழுத்தறிவு வட்டத்திற்குக் கொண்டு வரவேண்டும். அச்சிட்டுப் பரப்பினால், சுருங்கியவட்டம் விரிவடையும். மீண்டும் இது வாய்மொழிச் சுழற்சிக்குச் செல்லாது. இது Fossil ஆகிவிட்டது. ஆய்விற்கும், அறிவதற்குமே பயன்படும். இவ்வாறு கதைப்பாடல் காலச் சமூகத்தேவைக்கேற்பத் தோன்றி, நிரந்தர கலைமதிப்புகளை ஏற்படுத்திவிட்டு, உருவழிந்து போய்விடும். நிரந்தர மரபுகளையொட்டியோ, எதிர்த்தோ புதிய கதைப்பாடல் உருவங்கள் தோன்றும். கதையுருவங்கள், அச்சானவுடன் பரவல் அதிகமாகிறது. மீண்டும் வாய்மொழிப் பரவலுக்குச் செல்வதுமுண்டு. அது வாழும் மரபாக இருந்தால் வாய்மொழிப் பரவலுக்குச் சென்று விடும். இல்லாமல் இருந்தால் வாய்மொழிப் பரவலுக்குச் சென்று விடும். இல்லாமல் இருந்தால் ஆவணமாகவும், எல்லோருக்கும் தெரிந்த இறந்துவிட்ட மரபாகவும் ஆகிவிடும். ஆகையால் சிறுகி வருகிற கதைப்பாடல்கள், பாடல்கள், கூத்துக்கள் அனைத்தையும் சேகரித்து வெளியிட வேண்டும். எனவே எழுத்தில் பரவுவது, வாய்மொழிப் பரவலைவிட விரிவானது. எழுத்தில் பரவும் நாட்டார் பண்பாட்டுப் படைப்புகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வழங்கும் என்பதில்லை. வாழுகிற மரபு (Living Tradition) என்பது எந்நாளும் வாழுகிற மரபு அன்று. சமூகப் பண்பாட்டு மாறுதல் ஏற்படும் வரை ஒரு மரபு வாழும். பிறகு சிறுகத் தேய்ந்து புதிதாக உள்ள பண்பாட்டுப் படைப்புகளோடு சேர்ந்து புத்துருவம் கொள்ளும். தற்போது செவிவழிப் பரவலுக்குக்கூட முன் நிபந்தனையாக எழுத்துவடிவம் இருக்கிறது. ‘கொலைச்சிந்து’ என்றோர் பாடல் வடிவம் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் உள்ளது. இது ஒரு வாழும் மரபாகும். கொலைகள் சமூகப் பின்னணியில் நடைபெறுகின்றன. நீதிமன்றம் கொலையாளி என்று தீர்ப்பளித்துத் தண்டிப்பவர்களை, நாட்டார், வீரன் என்று போற்றி அவனது தண்டனையைப் பற்றிக் கருத்துச் சொல்லுகின்றனர். கொலைகள் விதிப்படி நிகழுவதில்லை, சமூகக் காரணங்களால் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டி, அக்காரணங்களை ஆராய்கின்றன கொலைச் சிந்துகள். நூற்றுக்கணக்கான கொலைச் சிந்துகள் சுழற்சியில் உள்ளன. இவை நாட்டுப் புலவர்களால் பாடப்பட்டு, எழுதப்பட்டு, அச்சடிக்கப்பட்டு 10,000 பிரதிகள் விலையாகின்றன. நாட்டுப்பாடகர்கள், அவற்றை மனப்பாடம் செய்து பாடுகிறார்கள். இது ஒரு நாட்டார் மரபு (Folk Tradition) இங்கு ஒரு மாற்றம் காணப்படுகிறது. (1) வாய்மொழிப் பரவல் -> அச்சிடல் -> (அதிகப் பரவல்) Folk Lore அல்ல, (2) அச்சிடல் -> வாய்மொழிப் பரவல் -> அதிகப் பரவல் Folk Lore . இவை யாவும் வாய்மொழிப்பரவலை அச்சுயந்திரம் பன்மடங்காக்குகிறது, அச்சிடப்படும் கதைப்பொருள் வாழும் மரபாக இருந்தால். குறிப்பிட்ட கதை வாழும் மரபாக இருக்க வேண்டியதில்லை. அந்தக் கதை, எந்த வகை (Type) யைச் சேர்ந்ததோ அது வாழும் மரபாக இருந்தால் போதும். முதலில் அது வாய்மொழி மரபாகத் தோன்றாமல் அச்சில் 10,000 படிகள் தோன்றி, 10,000 பேரையும் பாடவைத்து, வாய்மொழி மரபின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எழுத்தறிவு வளர, வளர, வாய்மொழி பரவுதலுக்கே, அச்சு அடிப்படையாகிவிடும். இந்நூல் ஒரு பாடல் திரட்டுத்தான். பாடல், உணர்ச்சியின் உறுத்தலாலும், ஒரு நிகழ்ச்சி தோற்றுவிக்கும் எண்ணங்களாலும் ஏற்படுவது. கதை ( Narrative ) சுவையாலும் வாழ்க்கையைத் திருப்புவதுமாயிருக்கும். இவையாவும் அடிநிலையில் பாமரர் இலக்கியமாகும். இவ்விலக்கியம் கல்லாதார் கலைச் செல்வம். அவர்களிடையே எழுத்தறிவு பரவினால், எத்தனையோ படைப்பாளிகள் அவர்களிடமே எழுவார்கள். அவர்கள் எழுத்தினால், பாடல் பாடுவார்கள். எழுத்தறிவில்லாத படைப்பாளி, வாய்மொழியிலே பாடலைப் படைப்பான். இப்பொழுது வாய்மொழி, எழுத்துருவம் பெறும் காலம். எழுத்தறிவு நம்முடைய நாட்டாரிடையே வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே ( Oral Transmission ) வாய்மொழிப் பரவுதல் என்று கண்களை மூடிக் கொண்டு, நாட்டார் இலக்கியத்திற்கு வரம்பு விதித்தல் கூடாது. இப்பாடல்களைப் புரிந்துகொள்ள, சமூகப் பின்னணி, வரலாற்றுப் பின்னணி, சரித்திரப் பின்னணி ஆகிய தெளிவான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். இப் பாடல்கள் குறிப்பிடும் தனி நிகழ்ச்சிகளுக்கும் சமூக மாறுதல்களுக்கும் சம்பந்தம் இருக்கும். அதனையொட்டி, குறிப்புரைகள் எழுதும் பொழுது கற்பனையில் இருந்து நிகழ்ச்சிகளை, உணர்ச்சிகளையும் மதிப்பிடாமல், சமூகவியல், மானிடவியல், சரித்திரவியல், இலக்கியம் ஆகிய துறைகளின் அறிவைக் கொண்டே, குறிப்பிட்ட பாடல்களின் நிகழ்ச்சிகளையும், உணர்ச்சியையும் வருணித்துள்ளேன். ஒவ்வொரு தனிப்பாடலும், ஒரு தனி நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கும், சமூக இயக்கத்திற்குமுள்ள தொடர்பு. ஒவ்வொரு சரித்திரப் பாடலும், நீண்டகால வரலாற்றின் போக்குக்கும், அதில் ஒரு சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு. இத்தொடர்புளைக் கவனமாக நான் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக பாடல்கள் சமூக அடிப்படையும், அவ்வடிப்படையில் கருத்துக்கள், உணர்ச்சிகளையும் நான் காட்டியுள்ளேன். தனித்தனி நிகழ்ச்சிகளாகவும், தனித்தனிக் கருத்துக்களாகவும் பாடல்கள் நிற்கவில்லை. ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் பிரதிபலிப்பாக இவை நிற்கின்றன. இந்நூலை உருவாக்கிய சேகரிப்பாளர்கள் கு. சின்னப்ப பாரதி, எஸ். எஸ். போத்தையா, கவிஞர் சடையப்பன், எஸ். எம். கார்க்கி, எம். பி. எம். ராஜவேலு, வாழப்பாடி சந்திரன் ஆகியவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னால் மாதிரியே இன்றும் நாட்டுப்பாடலில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி. இந்நூலின் ஆய்வுக் குறிப்புகள், விவரக் குறிப்புகள், சேகரிப்புக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதும் பணியில் விடா முயற்சியோடும், சலியாத ஆர்வத்தோடும் பணி புரிந்த செல்வி T .மங்கைக்கு எனது நன்றி. இந்நூலின் இரண்டாவது பதிப்புக்குச் சில புதிய குறிப்புகள் தந்த வ.உ.சி. கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் ஆ.சிவசுப்பிரமணி யனுக்கும் எனது நன்றி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டது போலவே, இரண்டாவது முறையும் வெளியிட முன்வந்து, தமது நாட்டுப்பாடல் ஆர்வத்தினையும், கிராமத்து உழைப்பாளி மக்களின் கலைப் படைப்புகளைப் பரப்புகிற ஆசையையும் வெளியிடுகிற வாய்ப்பை மேற்கொண்ட ‘ நியூ செஞ்சுரி புக் ஹவுஸை’ நான் பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   3-11-76 நா. வானமாமலை  தலைவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், முதுநிலை ஆய்வாளர், திராவிட மொழி இயல்கழகம், கருநாடகப் பல்கலைக்கழகம், -rதார்வர்.         முன்னுரை   ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன. சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும் போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன. காவியத்தில் காணப்படும் தெய்வ வணக்கமும், குரவைப் பாடல்களும், வரிப்பாடல்களும், அம்மானைப் பாடல்களும், துன்பமாலை என்ற பகுதியும் வெகுகாலத்திற்கு முன்பு வழங்கிவந்த நாட்டுப்பாடல்களின் கருத்தையும், அமைப்பையும் தழுவியன என்று உறுதியாகச் சொல்லலாம்.  நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தன. அல்லது வேலை செய்யும் காலத்தில் களைப்பைப் போக்க அவர்கள் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கப் பாடப்படும் பாடல்களும் உள்ளன. எப்படியும் ஒரு குழுவினரின் மனத்தில் ஏக காலத்தில் சமமான உணர்ச்சியை உண்டுபண்ணுவது பெரும்பான்மையான நாட்டுப் பாடல்களின் நோக்கமாகும்.  நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.  நமது கிராம வாழ்க்கை பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவினைகளால், முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயம் என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன. ஊர்க் கோவில்களுக்கு ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது. அக்கோவிலை நிர்வாகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள் மேல் வர்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்கு கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர் வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.  வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும் பல போர்கள் நடப்பதற்கும் அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புதான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைவிக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும். இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.  நெசவு முதலிய தொழில்களும் குடிசைத்தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியில்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத்தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.  ஏழ்மைநிலை பொறுமையின் எல்லையைத் தாண்டிய போது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவோம். நாடார்களது சாதி வரலாற்றை ‘வலங்கையர் கதை’ என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்தரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு ‘வெட்டி’ என்ற பெயர் வழங்கப்பெற்று வந்தது. ‘வெட்டி’ முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள். அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்துவிட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடுகடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும், ஒருபோராட்ட நினைவு.  பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல இடங்களில் தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள இயலாமல், கோவிற் சுவர்களை இடித்தும் பத்திரங்களைத் தீக்கிரையாக்கியும் சுரண்டல் முறைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதில் சுவர்களில்தான் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த நிலமான்யமுறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. “மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டிவந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர்ச் சாசனம் கூறுகிறது.”  அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச்செங்காடு மூன்றாம் ராஜ ராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியார்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன், அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன் வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்ந்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது சுயநல அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.  கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக்கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கின்றது. “அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச்சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல் இடங்கை வகுப்பர்; அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள், நாட்டில் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு அரசன் ஆணைக்கிணங்கக்கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலிலாச் சோழமண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழமண்டலத்து 48000 பூமியும், உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும்,  அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள (நிலப் பகுதி) வரிவிகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள்.” இக் கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.  ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சியடைந்த காலம்வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறுதொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்திலிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும், கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ் வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்கு சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர். சிற்சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த் தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில்கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.  தங்கள் உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர்நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாது போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது. அவ்வாறு கோயிற் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர்நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.  இவ்வாறு கிராம நல அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல் நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு  கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர், டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளிநாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க்கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர். இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று. கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்பட வில்லை.  அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப் பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆற்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புது முறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.  அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தார் முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச்சொந்தக்காரர் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டிவிடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர். ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் தொடங்கின. நிலபிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசீயத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று.  பெரு நிலச்சுவான்களைத் தவிர, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக, எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது. ஆயினும் நமது அடிப்படையான சமுதாய அமைப்பு இன்னும் சுரண்டல் அடிப்படையிலே இருக்கிறது. கிராமப்புற மக்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் அவர்கள் தாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு நிலச்சுவான்களுடைய நிலத்தில் உழைக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கிருந்தாலும், அவ்வுரிமையை, சுதந்திரமாக நிறைவேற்ற வழி இல்லாமல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறுக்கே நிற்கின்றன.  ஆங்கிலேய ஆட்சியில் கொடுஞ் சுரண்டல் காரணமாக நிலத்தை இழந்த விவசாயிகள் புதுத்துறைகளில் நுழைந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நகரங்களில் தொழிலாளராகவும் மலைத் தோட்டங்களில், தோட்டத் தொழிலாளராகவும் பணியாற்றுகிறார்கள். அங்கும் அவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  நாடு விடுதலை பெற்ற பதினைந்து ஆண்டுகளில் அடிப்படைத் தொழில்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. நமது சுதந்திரம் பலமடைந்துள்ளது. உற்பத்தி பெருகி உள்ளது. ஆயினும், இவற்றின் பயன்களனைத்தும், உழைக்கும் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. நாட்டில் தொழில் வளர்ச்சியுற, தமது வாழ்வும் வளம் பெற வேண்டும் என்று உழைப்பாளி மக்கள் விரும்புகிறார்கள்.  இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்ளையும் நாம் நோக்க வேண்டும்.  நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம், 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள்.  இதிகாசங்களான இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில் பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள்.  அதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனனும், வீமனும் மக்களுக்கு தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும், மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.  பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள் அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக் கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள் அல்லி, பெண்ணாதிக்க சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அர்ச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அல்லியை அர்ச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இக் கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.  இக் கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை. அல்லியோடு சிறிதுநாள் தங்கியிருந்துவிட்டு அர்ச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான். அர்ச்சுனன் பவளம் தேடி பவளக் கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக்காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். ருசிகரமாகக்கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக்காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.  மூன்றாவதுகதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும் கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.  நான்காவது கதை ஏணியேற்றம். இது அஞ்ஞாதவாச காலத்து நிகழ்ச்சி ஒன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள அவனது சகமனைவி அல்லியிடம் சரண் புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள். காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ் நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப்போல பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன. அல்லி ஏணியைப் பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்கள் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவதுபோல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்ட பொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.    “இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான் நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம் பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள் கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்தஇது போது மிவனை இன்னும் என்ன செய்யப் போகின்றீர்”   என்று தருமர் கேட்கிறார்.   இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதி வைத்திருக்க வேண்டும். இக் கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்றாலும், கதையின் கருத்துக்கள் பழம் தமிழ் நாட்டில் நிலவியவைதாம். இவற்றைப் போன்ற பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக் கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள், எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ்நாட்டுக் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றனர். ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப் பட்டுள்ளன. சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப் பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை. இவை யாவும், தமிழ் நாட்டு் உழைப்பாளி மக்களையும், தமிழ் நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டது. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இம் முகவுரையில் இடமில்லை.ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம். முத்துப்பட்டன் பிராமணன் பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குலஉயர்வையும், சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீ்த்தார்கள். இக்கதையின் சரித்திரப் பின்னணி பற்றியும், கதா பாத்திர அமைப்பு பற்றியும், தென்பாண்டி நாட்டில் அவன்புகழ் வளர்ந்ததைப் பற்றியும் பல தொடர் கட்டுரைகள் எழுதி சரஸ்வதி என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளேன். அதனைப் படித்த செக் தமிழறிஞர் டாக்டர் கமில் சுவலபில், “உலகிலேயே மிகச் சிறந்த கதைப் பாடல்களுள் இது ஒன்று” என்று அபிப்பிராயம் தெரிவித்து அதனையும் எனது கட்டுரைகளையும், செக் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டுக் கதைப் பாடல்களில் பிறமொழியில் வெளியான கதைப் பாடல் இது ஒன்றே. சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ் பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனை பலி கொடுத்து விட்டார்கள். இக்கதை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும் கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல். நல்லதங்காள் கதை, நாடகங்களின் மூலம் தமிழ் நாடு முழுவதும் சிறிது காலத்திற்கு முன்னர்வரை பரவியிருந்தது. பெண்களுக்குப் பிறந்தகத்தின் சொத்துரிமை இல்லாததால் வரும் அவதிகளை அது வருணிக்கிறது. சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில், வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது. சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவையாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்றமுடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும், சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன. வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றும் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்சபாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள் கதை’ பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டை தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. விசுவநாத நாயக்கன் ராணுவ காரிய கர்த்தனாகவும், அரியநாதமுதலி தளவாயாகவும் மதுரையில் அரசப் பிரதிநிதிகளாக நியமனம் பெற்றார்கள். தென் பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். அரியநாத முதலி படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும் போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின் வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டேயிருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில், நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள். எல்லோரிலும் இளையவனான குணசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்துவிட்டால் பாண்டியன் எதிர்ப்பு அடங்கும் என்று அரியநாத முதலி எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவி்ல்லை. குலசேகரன் வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டை ஏறினாள். இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 450 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை. கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்துவிட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்தரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது. அதற்குப் பிற்காலத்தில் தோன்றிய கதைகள், ராமப் பையன் அம்மானை, இரவிக்குட்டிப் பிள்ளை போர் முதலியன. இவற்றுள் முன்னையது ராமநாதபுரம் சேதுபதிக்கும் ராமப் பையனுக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இரவிக் குட்டிப் பிள்ளை போர் ராமப் பையனுக்கும், திருவனந்தபுரம் தளவாய் இரவிக்குட்டிப் பிள்ளைக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இவை இரண்டும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய கதைகள் பல இருக்கலாம். மேற்கூறிய கதைகள் மூன்றும் முறையே திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழங்கி வந்தவை. மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாயக்கர் ஆட்சி கால நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்ட கதைப் பாடல்கள் கிடைக்கலாம். மதுரை வீரன் கதை, வரலாற்றுப் பின்னணியில் எழுந்த கற்பனைக் கதையாகும். அவை போலல்லாமல் சரித்திர நிகழ்ச்சிகளைப் பிரதான ஆதாரமாகக் கொண்ட கதைகள் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தல் அவசியம். நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் பத்து மாதங்கள்தான் ஆட்சி புரிந்தான். நீண்ட நாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் தன் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ் நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை, முன்னூறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு.முகலாயப் படைத் தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்றுவிட்டான்; தானும் உயிர் நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லிம், அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது. இதற்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய கட்ட பொம்முவைப் பற்றிய பல கும்மிகளும், சிந்துகளும் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒன்றை, சென்ற ஆண்டு நான் வெளியிட்டுள்ளேன். மருது சகோதரர்களைப் பற்றி ‘சிவ கங்கை அம்மானை’, ‘சிவகங்கைக் கும்மி’ என்ற இரண்டு நாட்டுப் பாடல்களை ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரிக்காகத் தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கான் சாகிப் பற்றியும் பூலித்தேவனைப் பற்றியும் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாக இருக்கின்றன என்று தெரிகிறது. அவை கிடைத்து வெளியிடப்படுமானால் தொடர்ச்சியாக முன்னூறு, நானூறு வருஷங்களுக்கு இடையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றித் தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களின் கருத்துகளை அறிவதற்கு வழி கிடைக்கும். தமிழ் நாட்டு வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இக்கதைப் பாடல்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்குமானால் எனக்கு அனுப்பி வைக்க வேண்டிக் கொள்கிறேன். அவை அனைத்தையும் சேகரித்து வெளியிடுவது தமிழ் நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இனிக் கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும். வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். தேவியரைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார். அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கி விட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன. இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே. பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரைப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்க சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்வி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்து கொள்ளாத தேவியர். இவற்றை பயத்தோடுதான் மக்கள் வழிபட்டனர், இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக்கூடியவை என்று நம்பினார்கள். ‘யக்ஷி ‘ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கருநாடகத்திலிருந்தும் பண்பாட்டுத் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள். தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப்பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாவிட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின்போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒருநாள் மட்டுமே கொடை நடைபெறும். பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே. சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும். சுடலைமாடனுக்கு ஊர் தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை. மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம், அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம். இவை யாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக்கடவுளரின் சிவன், நாராயணன் முதலியோரை பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும், அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ் நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம். பௌத்த, சமணச் சிறு தேவதைகளும் அம் மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியவையாயின. ஆனால் அவை உருமாறி இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று. வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றி விட்டுப் பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக் கூற்றை மெய்ப்பிக்கும் சான்று. ‘சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்கு பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம். பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனைவிடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவதுபோல் சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சத்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள். இத்தொகுப்பில் சில தெய்வ வணக்கப் பாடல்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அவற்றின் முன்னுரையில் மேல் விவரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. பாமரர் படைப்பிலேயே உணர்ச்சிமிக்க பாடல்கள் தாலாட்டும், ஒப்பாரியும். ஒன்று வாழ்க்கையின் தொடக்கம் பற்றியது, மற்றொன்று முடிவு பற்றியது; ஒன்று தாயின் இன்பத்தை வெளியிடுவது. மற்றொன்று உறவினர் துன்பத்தை வெளியிடுவது. அப்பகுதிகளின் நீண்ட முன்னுரைகளில் இவ்வின்பமும், துன்பமும் சமூக வாழ்க்கையோடு தொடர்புடையவை என்பதைக் காட்ட முயன்றுள்ளேன். எனது முதல் தொகுப்பில் இருப்பவற்றைக் காட்டிலும் பலவகைப்பட்ட பாடல்கள் ‘தொழில்’ என்ற துறையில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. உப்பளம், மீன் பிடித்தல், ஆலை, தேயிலைத் தோட்டம், வண்டியோட்டுதல் முதலிய தொழில்களைப் பற்றிய பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களிலும் தொழிலும், காதலும் இணைந்தே காணப்படுகின்றன. காதல் பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அழகான பாடல்கள் காணப்படுகின்றன. நெல்லை மாவட்டப் பாடல்கள் மட்டுமே சென்ற தொகுப்பில் இருந்தன. பிறவகைப் பாடல்களை விடக் காதல் பாடல்களே பெரிதும் கிடைக்கின்றன. தமிழ்நாடு காதலை மறந்து விடவில்லை என்று தோன்றுகிறது. உழைக்கும் இளைஞரும் இளநங்கையரும் வயலிலும், பருத்திக் காட்டிலும், தேயிலைத் தோட்டங்களிலும், ரோடு வேலை செய்யும் போதும், மலைச்சாரலில் விறகு வெட்டும் போதும் கூடிப் பழகுகிறார்கள். எனவே வீட்டிலடைப்பட்டுக் கிடக்கும் உயர்ந்த வர்க்கப் பெண்களை விட, இளைஞர்களை அறிந்து காதல் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால் சாதிப் பிரிவினைகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக உள்ளன. ஒரு ஜாதியினருக்குள்ளேயே மணமுறை வழக்கங்கள் காதல், கற்பு மணமாக முடிவதற்குத் தடையாக நிற்கின்றன. ஆயினும் இத் தடைகளை மீறி மனித உணர்வு சிற்சில சமயங்களில் வெற்றி பெறுகிறது. சங்க காலத்து குறிஞ்சி நிலக் களவொழுக்க மரபுகளை இன்னும் பாமரர் நாட்டுப் பாடல்களில் காண்கிறோம். பாமர மக்களின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கைக்குட்பட்டது. ஆணும் பெண்ணும் உழைத்தும் அவசியத் தேவைகளுக்குப் பணம் இல்லாத ஏழ்மை நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள், சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் அவர்களுக்கு இல்லை. ஆயினும் மனித உணர்வின் மென்மையான அம்சங்கள் குடிசைகளிலும் ஒளி விடுகின்றன. அன்பும் தியாகமும் அவர்களது வாழ்க்கையின் அடித்தளம், இவ்வடித்தளத்தின் மீது குடும்ப இன்பம் என்னும் உறுதியான கட்டிடம் எழுப்பப்படுகிறது. ஆயினும் சமூக வாழ்க்கையினால் தோன்றும் பண ஆசையும், அந்தஸ்துப் பற்றும் குடிசைவாழ் மக்களையும் பீடிக்கிறது. அதனால் இளைஞரது காதல் பாதைக்குத் தடைகள் உண்டாகின்றன. பொருந்தா மணங்கள் நிகழ்கின்றன. கிழவனுக்குப் பணம் இருந்தால் 30 வயது இளம் பெண்ணை மனைவியாகப் பெற முடிகிறது. அவள் தாலிச் சிறையினுள் அடங்கி தனது உணர்ச்சிகளைக் கொன்றுவிட முயன்று நடைப் பிணமாக வாழ வேண்டி வருகிறது. உணர்ச்சியை அடக்க முடியாதவர்கள், திருமணக் கட்டிற்கு வெளியே காதல் இன்பம் நாடுகிறார்கள். அதுபோலவே சொத்துரிமை காரணமாகக் குமரி, குழந்தைக்கு வாழ்க்கைப் படுவதும் உண்டு. அவர்கள் முறை மாப்பிள்ளைகளோடு களவு ஒழுக்கம் கொள்ள சமூக பழக்கம் அனுமதிக்கிறது. குடும்ப இன்பத்தை பொருளாதார ஏற்றத் தாழ்வும், நிலப்பிரபுத்துவக் கொள்கையும் சீரழிக்கின்றன. இந்நிலைமை முழுவதும் பல நாட்டுப் பாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன. குடும்பவாழ்க்கையில் ஆண் ஆதிக்கம் கூடாது இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து, குற்றங் குறைகளைப் பொறுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தைப் பல பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ‘ஆக்கத் தெரியாத அணங்கு’ என்ற பாடல் இதற்கோர் நல்ல உதாரணம். சொந்தத் தொழிலில் உழைப்போடும், பிறர் நிலங்களில் உழைப்போடும் கிராமத்தில் வாழ்கின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்த்தல் நியாயம். ஆனால் சோம்பேறித்தனமும், ஏமாற்றுதலும் கூடாது என்று நாட்டுப் பாடல்கள் போதிக்கின்றன. உழைப்பின் உயர்வைப் பல பாடல்கள் போற்றுகின்றன. சோம்பேறிக் கணவனைத் திருத்தி உழைப்பாளியாக்க முயலும் மனைவியரை நாட்டுப் பாடல்களில் அடிக்கடிச் சந்திக்கிறோம். நியாயமாகக் கூலி கொடுக்கும் முதலாளியைப் புகழ்வதும், கொடுமைக்கார முதலாளியை இகழ்வதும், தொழிலாளியின் இயற்கை. இவ்வுணர்ச்சியையும் நாட்டுப் படல்களில் காண்கிறோம். உழைப்பின் கூட்டுறவில் காதல் துளிர்த்து வளர்கிறது. உப்பளத்திலும், தேயிலைத் தோட்டத்திலும், நடுகைநடும் வயலிலும்,களத்து மேட்டிலும், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போதும், களையெடுக்கும் போதும், தொழிலில் கூட்டுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும், வாழ்விலும், குடும்பத்திலும் கூட்டுறவு கொள்ள ஆசைப் படுகிறார்கள். தொழில்களைப்பற்றியும் உழைக்கும் மக்களது கண்ணோட்டத்தை நாடோடிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. சமூக வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் கிராம மக்களின் உணர்வில் எதிரொலி கிளப்புகின்றன. சில நிகழ்ச்சிகளில் அவர்களுக்குப் பங்கு இருக்கும். நேரடியாகக் கிராமத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளில் எல்லோரும் பங்கு கொள்வர். உதாரணமாகக் கிராமத்திற்குக் கொள்ளைக்காரர்கள் வந்தால், ஜாதி வித்தியாசமின்றி அவர்களை ஒன்றுபட்டு விரட்டுவார்கள். ஆனால் ஜாதிக் கலகங்கள் வந்தாலோ நியாய அநியாயத்தை ஓர்ந்து நோக்காமல் ஜாதிப் பற்றில் மூழ்கி வேற்று ஜாதியர்களை வெட்டித் தள்ளுவார்கள். வெறியடங்கியதும் தங்கள் செய்கையை நினைத்து வருந்துவார்கள். சிவகாசிக் கலகம், கழுகுமலைக் கலகம் இவை இதற்கு உதாரணமானவை. இத்தொகுப்பில், சிவகாசிக் கலகத்தின் சமூகப் பின்னணியை விளக்கியுள்ளேன். இக்கலகத்தில் பங்கு கொண்டவர்களின் கருத்துக்களும், இரு கட்சியிலும் சேராது, இருவரையும் சமாதனப்படுத்த முயன்ற நல்லவர்களின் கருத்துக்களையும், நாம் இப்பாடல்களில் காண்கிறோம். கிராம ஒற்றுமையைச் சிதைத்து அதில் லாபம் காண முயலும் பெரிய மனிதர்களின் சூழ்ச்சிகளையும், ஒழுக்கமின்மையும், நாடோடிப் பாடல்களில் வெளியாகின்றன. ஆட்சியாளர்களில் நன்மை செய்பவர்களைப் புகழ்ந்தும் தீமை செய் ப வர்களை இகழ்ந்தும் பாடல்கள் தோன்றியுள்ளன. நாட்டுப் பாடல்களில் அரசியல் உணர்வு அதிகமாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் தேசிய உணர்வு நமது கிராம மக்களிடம் அதிகமாகப் பரவவி்ல்லை. நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பணக்காரர் எதிர்ப்பு, சாதி அகம்பாவ எதிர்ப்பு முதலிய உணர்ச்சிகள் நாடோடிப் பாடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை இணைக்கும் சமூகக் கண்ணோட்டப் பாடல்கள் தோன்றிய காலத்தில் உருவாகாததால், பணக்காரர்களுக்கு எதிர்ப்பு எவ்வுருவத்தில் வந்தாலும், அவை அவ்வப்பொழுது வரவேற்கப் படுகின்றன. இவ்வாறுதான் பணக்காரர்களைக் கொள்ளையடித்த ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், மணிக்குறவன் முதலியவர்கள் நாட்டுப் பாடலில் இடம் பெற்றுள்ளார்கள். அதனால் கொள்ளைகளை, நாட்டுப் பாடகர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதல்ல. பணக்கார எதிர்ப்பு உணர்ச்சியே ஜம்புலிங்கத்தையும் சந்தனத் தேவனையும் வீரர்களாகக் கருதச் செய்கின்றன. கதைப் பாடல்களில் தன்னலம் கருதாமல், கிராம மக்களின் நலனுக்காக உயிர் துறந்த வீரர்களே, போற்றுதலுக்கு உரியவர்களானதைக் கண்டோம். கொள்ளைக்காரர்கள் அவ்விதப் போற்றுதலுக்கு உரியவராக மாட்டார்கள். கிராம மக்கள் பணக்காரர்களுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது துணிவாக அவர்கள் வீட்டை உடைத்துக் களவு செய்யும் திருடர்கள்கூட மக்களுக்கு வீரர்களாகத் தோன்றினார்கள். களவும், கொலையும் சுய நலத்தோடு செய்யப்படுவன. சுயநலமின்றி கிராமச் சுரண்டல் முறையை எதிர்த்து நின்ற வீரர்களைக் கிராம மக்கள் தெய்வப் பிறவிகளெனப் போற்றுவர். அவ்வீரர்களுக்குக் கொடுத்த மதிப்பு கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும் என்றுமே கிடைத்ததில்லை, ஆங்கில நாட்டுப் பாடல்களில் ராபின்ஹுடைப் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. அவன் ஒரு கொள்ளைக்காரன். ஆனால் அவன் காலத்தில் அரசாண்ட அரசன் மக்களைக் கொள்ளையடித்து ஆடம்பரச் செலவு செய்தான். ராபின்ஹுட் காடுகளில் மறைந்திருந்து, அசரனுடைய உடமைகளைக் கொள்ளையிட்டான். கொள்ளையிட்டதைத் தான் வைத்துக் கொள்ளவில்லை. மக்களுக்குப் பகிர்ந்தளித்தான். அநியாயத்தை எதிர்த்து அவன் கொள்ளை செய்தான். மக்கள் உள்ளத்தில் அவன் இடம் பெற்றான். மக்கள் அவனை மறந்து விடாமல் நாட்டுப்பாடல்களில் அவன் நினைவை நிலைநிறுத்தினர். அமெரிக்காவில் ‘Cow boys’ என்ற சட்ட விரோதமான வேட்டைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் சர்க்கார் காடுகளில் நுழைந்து காட்டு எருமைகளையும், மாடுகளையும் வேட்டையாடி, தோலுரித்து தோலைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். போலீசார் எதிர்த்தால், அவர்களும் எதிர்த்துச் சுடுவார்கள். இவர்கள் சட்டத்தின் பிடிக்குள் அகப்படாமல் காட்டு ஓரங்களில் இருந்த சிற்றூர்களில் தலை மறைவாக இருந்துவிட்டுப் போய் விடுவார்கள். இவர்கள் துணிவு மிக்க இளைஞர்கள். ஊர்களில் வாழும்போது மனித உறவை பெரிதும் நாடுவார்கள். கன்னிப் பெண்கள் அவர்களை மிகவும் விரும்புவார்கள். அவர்கள் உறவு காட்டு வெள்ளம் போல் வேகம் மிக்கதாய் இருக்கும். இவ்வுறவுகள் நெடுநாள் நிலைக்காதென்று இருவருக்கும் தெரியும். பிரிவச்சமும் அதில் கலந்திருக்கும். அமெரிக்க நாட்டுப் பாடல்களில் பெண்கள் பாடும் வேட்டைக்காரன் பாடல்கள (Cow boys song) விறு விறுப்பான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அதற்கு அணைபோலக் காணப்படும். பிரிவச்சத்தையும் சித்தரிக்கின்றன. இப் பெண்கள், வேட்டைக்காரர்களின் துணிவையும் உணர்ச்சி வெள்ளத்தையும் விரும்பினார்களேயன்றி, சுயநலத்தையும் கொள்ளை குணத்தையும் அல்ல. எனவே நமது நாட்டுப் பாடகர்களும், கொள்ளைக்காரர்களின் துணிச்சலைக் கண்டு வியப்புறுகிறார்களேயன்றி அவர்களைத் தாம் பின்பற்றக்கூடிய வீரர்களாக கற்பனை செய்து காட்டவில்லை. இதுவரை கிராமக் குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் காட்டுகின்றன என்று பார்த்தோம். இனி சாவினால் இறந்தவரது குடும்பத்தாருக்கு ஏற்படும் விளைவுகளை நாடோடிப்பாடல்கள் எப்படிக் காட்டுகின்றனவென்று பார்ப்போம். இறந்தவர் மீது நெருங்கிய உறவினர் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும். தாலாட்டைப் போலவே ஒப்பாரியும் தமிழ் நாட்டுப் பெண்களின் படைப்பாகும். தாலாட்டு தாயன்பின் வடிவம். தாய்க்குலத்தின் படைப்பு தாலாட்டு. ஆண்மகன் ஒருவன் இறந்தால் குடும்பத்தைத் தாங்கி நின்ற நடுத் தூண் சாய்ந்தது போல, அவன் மனைவி பாதுகாப்பு இழக்கிறாள். சமூக நன்மைகளை இழக்கிறாள். அவளது வருங்காலமே வறண்டு போகிறது. ஒருவர் இறந்தால் மனைவிக்கு விளைவது இழப்புத் துன்பம் மட்டுமல்ல, வருங்காலம் முழுவதிலும் அவள் கவலைப்பட வேண்டியதாகிறது. அவனுடைய சாவோடு கணவன், மனைவி உறவு அறுந்து போனாலும், குடும்ப உறவுகளில் அவளுடைய பொறுப்பு அதிகமாகிறது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவளுடைய குழந்தைகள் வளரும் வரையிலும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவள் போராட வேண்டியிருக்கிறது. மலடியாக இருந்தாலோ, அவள் வீட்டு வேலைக்காரியின் அந்தஸ்திலும் தாழ்ந்து விடுவாள். கணவன் வீட்டிலிருக்கும் சிறு உரிமை கூட தாய் வீட்டில் கிடையாது. அங்கு அண்ணிகளின் ஆதிக்கம் நடைபெறும். எனவே கணவனை இழந்த மனைவியின் பிரச்னை, சொந்தப் பிரச்னையாக மட்டுமில்லாமல் பெண்களின் சொத்துரிமைப் பிரச்னையோடும் தொடர்புடையதாய் இருக்கிறது. இச்சிக்கலான உணர்ச்சிகளனைத்தையும் மனைவி ஒப்பாரிகளில் காணலாம். நெல்லை ஜில்லாவில் பாடப்படும் ஒப்பாரிகள் வாழ்க்கையின் பல அம்சங்களையும் சுட்டிக்காட்டி மனைவியின் தீர்க்க முடியாத பிரச்னைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தாய், தந்தை இறக்கும்போது மகள் பாடும் ஒப்பாரிகள் முக்கியமாக சொத்துரிமைப் பிரச்சினையும், தாய் தந்தையர் காலத்திற்குப் பின் பிறந்த வீட்டில் உரிமையின்றிப் போவதையும் சொல்லுகின்றன. மதினி, நாத்தனார் உறவுகளையும் இந்த அடிப்படையிலே அவை காட்டுகின்றன. இவ்வொப்பாரிகளில் காணப்படும் உணர்ச்சிகளை நல்லதங்காள் கதையிலும் காணலாம். அண்ணனைப் பற்றி பாடும் ஒப்பாரிகள் மிகக் குறைவு. பொதுவாகத் தந்தை இறந்தபோது பாடும் பாடல்களையே அவை ஒத்திருக்கும். குழந்தை இறந்து தாய் புலம்புவது மிகவும் சோகமானது. அவற்றிலும் பிரிவுத் துன்பத்தோடு சொத்துரிமை பெற இருந்த மகன் போய்விட்டானே என்ற உணர்வும் சேர்ந்து வரும் துக்கவுணர்வை ஆங்கிலத்தில் Elegiac Spirit என்று சொல்லுவார்கள், ஆங்கில நாட்டுப் பாடல்களில் இவ்வுணர்ச்சி மிகுதியாக உண்டு. வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த மக்களுடைய உணர்ச்சி துக்கமாகத் தோன்றும். ஒப்பாரியிலும் பெண்ணினத்தின் சமூக நிலைமை முழுவதும் ஆணின் வாழ்க்கையைப் பொறுத்திருப்பதால், அவனுடைய சாவுக்குப் பின் ஏக்கம் தோன்றுகிறது. மனைவி இறந்தால் கணவன் துக்கப்படுகிறான். ஆனால், ஏக்கம் கொள்வதில்லை. ஆண் சார்பு கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்களின் சமூக நிலைமைதான் இந்த ஏக்கத்திற்குக் காரணம், இத் தொகுப்பில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும், அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் கிடைத்த மட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலும் வழங்கி வருபவை. மற்ற மாவட்டங்களிலுள்ள நாட்டுப் பாடல்கள் கிடைத்தால் நமது கிராம மக்களின் கலையையும் பண்பாட்டையும் கண்ணோட்டத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும். மற்ற மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்கள் நாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களானால், தமிழ் நாட்டின் பல படைப்புக்களைத் தமிழகம் அறிய வழி செய்யலாம் நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள நாட்டுக் கலைத் தொண்டர்களின் கூட்டு முயற்சியில் இந்நூல் உருவாகியுள்ளது. அவர்களுடைய முயற்சிக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது. இந்நூலில் இடம் பெறும் நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அனுப்பிய நண்பர்களைப் பற்றித் தனியாகச் சில வார்த்தைகள் அடுத்த பகுதியில் கூறுவேன். முன்னர் வெளியிடப்பட்ட நாட்டுப்பாடல் நூல்களுக்குக் கிடைத்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்குமென நம்புகிறேன்.   பாளையங்கோட்டை நா. வானமாமலை 8-4-1964   அறிமுகம்   1, S.S. போத்தையா: இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் பெரும்பாலானவை இவர் சேகரித்து அனுப்பியவை. இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் அம்பாப்பாட்டு, கோணங்கி பாட்டு போன்ற அபூர்வப் பாடல்களை இவர் சேகரித்து அனுப்பியுள்ளார். இவர் என் பழைய மாணவர். தங்கம்மாள்புரத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பாடல்களைச் சேகரிக்க இவருக்கு உதவியவர்கள்: மேல் மந்தை - பெத்தையா மீனாட்சிபுரம் - வித்துவான் ராமசாமி உச்சிநத்தம்- கே. ராமசாமி உச்சிநத்தம் - நாகம்மாள் முதலியோர்++ 2. S.M. கார்க்கி: இவர் சிவகிரியைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர், கணீரென்ற குரலில் நாட்டுப் பாடல்களைப் பாடும் திறமை படைத்தவர். சிவகிரி வட்டாரத்தில் கிராம மக்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் பலவற்றைச் சேகரித்து அனுப்பியுள்ளார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல அவர் சேகரித்து அனுப்பியவையே. சிவகாசிக் கலகத்தைப் பற்றியும், செந்தட்டிக் காளை வரலாறு பற்றியும் இத்தொகுப்பில் வெளியாகும் அபூர்வமான பலபாடல்கள் அவர் அனுப்பி வைத்தவை. 3. M.P.M. ராஜவேலு: இவர் தூத்துக்குடிக்கருகிலுள்ள மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி கடற்கரையில் வாழும் மக்கள் வாழ்க்கையும், பனை மரக் காடுகளின் நடுவிலுள்ள சிற்றூர்களில் வாழும் மக்களது வாழ்க்கையையும் சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அனுப்பியுள்ளார். 4. குமாரி P. சொர்ணம்: பி.ஏ, முதல் வருட வகுப்பில் படிக்கும் மாணவி. ஒப்பாரிப் பாடல்கள் சிலவும், தாலாட்டுப் பாடல்கள் சிலவும், மாரியம்மன் பாடலொன்றும் தனது தாயாரிடம் கேட்டு எழுதி அனுப்பி வைத்தார். இவர் எனது பழைய மாணவி. மேற்குறித்த நால்வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 5. கவிஞர் S.S .சடையப்பன்: தருமபுரி, அரூர் தாலுக்காவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர். நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற்கருவியை இவர் உபவாத்தியமாகப் பயன் படுத்துகிறார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை. தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன. 6. கு. சின்னப்ப பாரதி: இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சேகரித்தனுப்பிய கொங்கு நாட்டுப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றை உதவியவர்களின் பெயர்கள் பாடலுக்கு அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. 7. வாழப்பாடி சந்திரன்: இவர் ஓர் ஓவியர் ; எழுத்தாளரும் கூட. சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர். மலை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர்கள் பாடும் பாடல்களைச் சேகரிக்க முயன்று வருகிறார். 8. மங்கை: முதல் தொகுப்பின் குறிப்புரைகள், ஆய்வுரைகளை எழுதத் துணை செய்தவர். நாட்டுப் பாடல்களை தொகுப்பதற்கும், அவற்றை வகைப் படுத்துவதற்கும் உழைத்தவர். சேகரித்தவர்களோடு கடிதப் போக்குவரத்து நடத்தி வட்டார வழக்குகளைப் பற்றியும் சமூகவியல் பழக்கங்கள் பற்றியும் அறிந்து நூலில் எழுதியவர். ஆராய்ச்சியிலும், தமிழாராய்ச்சி நிறுவனம் மார்ச்சு 26, 27ந் தேதிகளில் நடத்தியநாட்டுப்புற இலக்கிய கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியவர். 9. நா. வானமாமலை: 15 ஆண்டுகளாக நாட்டுப்புற இயல் தொகுப்பாளராகவும், ஆய்வாளாராகவும் பணிபுரிகிறார். நியூ செஞ்சுரி வெளியீட்டாளர்கள் இத் துறையில் இவரது நூல்கள் மூன்றை வெளியிட்டுள்ளார்கள். மதுரைப் பல்கலைக்கழகம் இவர் தொகுத்து, ஆராய்ச்சிக் குறிப்புகள், எழுதிய ஆறு நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். திராவிட மொழியியல் கழகம் (கேரளா) இவரை நாட்டுப்புறவியல் முதுநிலை ஆய்வாளராக ஓராண்டிற்கு(1965-66) நியமித்தது. இவர் பதவிக்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்தி (Fellowship thesis) ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். பல நாட்டுப்புறவியல் கருத்தரங்குகளில், கட்டுரைகளைப் படித்தும், தலைமை வகித்தும் பணிபுரிந்துள்ளார். தமிழாராய்ச்சி நிறுவனம் (அடையாறு) நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கில் Keynote paper படித்தும், ஒரு அமர்வுக்குத் தலைமை வகித்தும் பங்குப் பெற்றார். ஆராய்ச்சி, தாமரை, Social Scientist, Folk Lore, Nova Orientalani (செக் மொழி) முதலிய பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். வேண்டுகோள் இவர்கள் அனைவரையும் சந்தித்து இப் பணியில் இறங்குமாறு தூண்டுவதற்குத் தமிழ் இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்புக் கூட்டம் வாய்ப்பளித்தது. இவர்களில் பெரும்பாலோரை உறுப்பினராகவும் என்னைச் செயலாளராகவும் கொண்ட நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவின் முயற்சியாலும், பெரு மன்றத்தின் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் உதவியாலும், பாடல்கள் சேகரிக்கும் வேலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. தோழர் ப. ஜீவானந்தம் இம்முயற்சிக்கு அளித்த உதவி மிகப் பெரிது. பல்வேறு வகையான பாடல்களைக் கேட்டு நான் இந்த நண்பர்களைத் தொந்தரவு செய்தபோதும் அவர்கள் முகம் கோணாமல் மகிழ்ச்சியோடும் இது ஓர் கலைப்பணி என்ற உற்சாகத்தோடும் பாடல்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ‘தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்’எனும் நூல் அநேகமாக போத்தையா ஒருவரின் தனி முயற்சியினால்தான் உருவாயிற்று. ஆனால் இது அவ்வாறில்லாமல் ஒரு குழுவினருடைய முயற்சியினாலும், அவர்களுக்கு உதவி புரிந்த மற்ற கலை அன்பர்களது உதவியாலும் முழு வடிவம் பெறுகின்றது. இது மிகப் பெரிய வெற்றியாயினும், நாம் திருப்தியடைவதற்கில்லை. தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டுப் பாடல் திரட்டை அம்மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்களது உதவியோடு வெளியிட்டால்தான் நாம் திருப்தியடைய முடியும். இக் குழு அம் முயற்சியை மேற்கொள்ளும். அம் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும், கலை மன்றங்களையும் கலைத் தொண்டர்களையும் நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.   நா. வானமாமலை     தெய்வங்கள் பிள்ளையார் பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார். மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில், பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும், இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறி விட்டார். வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம். வங்காள ராஜ்யத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும், அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார். விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக, விநாயகரை வேண்டி பெண்கள் விரதம் இருக்கிறார்கள். பொதுவாக, செழிப்பைக் குறிக்கும் தெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே, செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலும், மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள், இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள். பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.   பிள்ளையார் பிறந்தார்   வடக்கே தெற்கே ஒட்டி, வலது புறம் மூரி வச்சு மூரி ஒழவிலே முச்சாணி புழுதி பண்ணி சப்பாணி பிள்ளையார்க்கு என்ன என்ன ஒப்பதமாம்! முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு, ஒடு முத்தும் தேங்காயை ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு, குலை நிறைஞ்ச வாழைப்பழம் கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு, இத்தனையும் ஒப்பதமாம் எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு! வட்டார வழக்கு : முச்சாணி புழுதி=சாணம்+புழுதி ; ஒடு முத்தும்-ஓடு முற்றிய : கொடுக்கறமாம்-கொடுக்கிறோம். குறிப்பு:- பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். இது நாட்டார் நம்பிக்கை. முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள். சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன்   இடம்:சக்கிலிப்பட்டி,தருமபுரி மாவட்டம்.   பிள்ளையார் பூசை உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும், பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலத்தில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும் போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்,   காளையே ஏறு... முந்தி முந்தி வினாயகனே! முக்கண்ணனார் தம் மகனே! கந்தருக்கு முன் பிறந்த காளைக் கணபதியே!-(காளையே) வேலருக்கு முன் பிறந்த விக்கினரே முன் நடவாய், ஊருக்கு மேற்காண்டே ஒசந்த தொரு வெப்பாலை. வெப்பாலை மரத்தடியில் சப்பாணி பிள்ளையாராம். சப்பாணி பிள்ளையார்க்கு, என்ன என்ன ஒப்பதமாம்! நீரு முத்தும் தேங்காயாம், நிமித்தியமாம் பிள்ளையார்க்கு, கொத்தோடு தேங்காயாம் குலைநிறைய வாழைப்பழம் இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணி பிள்ளையார்க்கு-(காளையே) வண்டு மொகராத-ஒரு வண்ண லட்சம் பூ வெடுத்து தும்பி மொகராத தொட்டு லட்சம் பூவெடுத்து எறும்பு மொகராத எண்ணி லட்சம் பூவெடுத்து பாம்பு மொகராத பத்து லட்சம் பூவெடுத்து வாரி வந்த பூவையெல்லாம் வலப்புறமாய்க் கொட்டி வச்சேன் கொண்டு வந்த பூவை யெல்லாம் கோபுரமா கொட்டி வச்சேன் குளத்திலே ஸ்நானம் பண்ணி கோலு போல நாமமிட்டு ஆத்துலே ஸ்நானம் பண்ணி அருகு போல நாமமிட்டு பொழுதேறிப் போகுதிண்ணு வெள்ளி யொறைச்சி நாமமிட்டு இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணிப் பிள்ளையார்க்கு ++ வட்டார வழக்கு: மேற்காண்டே-மேற்கில்; வெப்பாலை-வேம்பு; நிமித்தியம்-நைவேத்தியம்; மொகராத-முகராத; ஒரைச்சி-உரைத்து. பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை. தீ வளர்த்து ‘ஓமம்’ வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால், தமிழ் உழவர் பெரு மக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை. சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன்   இடம்:கொங்க வேம்பு, அரூர் வட்டம்,தருமபுரி  மாவட்டம்.   ஆண்டிற்கொரு விழா   நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இளையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.   மாட்டுக் கொளப்படையில் மாவுருண்டை ஆயிரமாம், எருதுக் கொளப்படையில் எள்ளுருண்டை ஆயிரமாம் ஆட்டுக் கொளப்படையில் அதிரசம் ஆயிரமாம். கண்ணுக் கொளப்படையில் கடலுருண்டை ஆயிரமாம். குட்டிக் கொளப்படையில் கொழுக்கட்டை ஆயிரமாம். பண்ணிக் கொளப்படையில் பணியாரம் ஆயிரமாம் இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணிப் பிள்ளையார்க்கு.++   வாட்டார வழக்கு: கொளப்படை-கொட்டகை; பண்ணி-பன்றி; கண்ணுக் கொளப்படை-கன்று கட்டும் கொட்டகை; கடலுருண்டை-கடலை உருண்டை.   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:சக்கிலிப்பட்டி, அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்.     மாரியம்மன்   வைசூரி மிகக் கொடியதொரு வியாதி, அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர். இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர். தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர். இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிகொண்டிருக்கிறாள். இக்கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன, இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப் படையெடுப்பின் போது இத்தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும் பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள். மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில் இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன. வைசூரி நோயைத் தடுக்க முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்திலேயே, மாரியம்மன் பற்றிய வருணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியேயறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம். ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர். மாவிளக்கு ஏற்றுவதாகவும், கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், பொங்கல் இடுவதாகவும், தீச்சட்டி எடுப்பதாகவும் சபதம் ஏற்றுக் கொள்வர். மனிதனது கோபத்தைத் தணிப்பதற்காகக் கையாளும் முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர். அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன் புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக் கொண்டு சிலர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.   மாரியம்மன் பாட்டு - 1   தோட்டம் துறந்தல்லோ-மாரிக்கு தொண்ணுறு லட்சம் பூவெடுத்து, வாடித் துறந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு வாடா மலரெடுத்து, கையாலே பூ வெடுத்தா-மாரிக்கு காம்பழுகிப் போகுமிண்ணு விரலாலே பூ வெடுத்தா வெம்பிடு மென்று சொல்லி தங்கத் துரட்டி கொண்டு-மாரிக்கு தாங்கி மலரெடுத்தார் வெள்ளித் துரட்டி கொண்டு வித மலர்கள் தானெடுத்தார் எட்டாத பூ மலரை-மாரிக்கு ஏணி வைத்துப் பூ வெடுத்தார் பத்தாத பூ மலரைப் பரண் வைத்துப் பூ வெடுத்தார். அழகு சுள கெடுங்க-மாரிக்கு அமுது படி தானெடுங்க வீசும் சுள கெடுங்க-மாரிக்கு வித்து வகை தானெடுங்க உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு ஒரு கரண்டி எண்ணெய் அமுது கடலைச் சிறு பயறு காராமணி மொச்சையம்மா அவரை, துவரை முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு ஆமணக்கங் கொட்டை முதல் காடைக் கண்ணி பருத்தி விதை-மாரிக்கு பாங்கான வித்து வகை இட்டுச் செய்தவர்க்கு எம காளி துணை செய்வாள் மக்களைப் பெற்றவர்கள் மாரி கதை தானறிவார் அறிந்தோர் அறிவார்கள் அம்மன் திருக் கதையை தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா! -ஆயிரங்கண்ணா தேவி திருக் கதையை ஒரு கண்ணு ரெண்டு கண்ணு உலகத்து மானிடர்க்கு ஆயிரம் கண்ணுடையா அழகில் சிறந்த கண்ணு பதினாயிரம் கண்ணுடையா பாதகத்தி நீலியவ இருசி வயத்திலேயும், எமகாளி பிறந்திடுவாள் மலடி வயத்திலேயும் மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு ஆறு வண்டி நூறு சட்டம் அசையா மணித் தேருகளாம். தேரை நடத்தியல்லோ-மாரி சித்திரங்கள் பாடி வாரா-மாரிக்கு பூட்டுன தேரிருக்கப் புறப்பட்டாள் வீதியிலே நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா நடந்தாளே வீதியிலே வீதி மறித்தாளம்மா-மாரி வினை தீர்க்கும் சக்தியல்லோ! பிறந்தா மலையாளம்-அவ போய் வளர்ந்தா-ஆள்பாடி இருந்தாள் இருக்கங்குடி-மாரி இனி இருந்தா லாடபுரம் சமைந்தால் சமயபுரம், - மாரி சாதித்தாள் கண்ணாபுரம் கண்ணா புரத்தில்-மாரி காக்கும் பிரதானி-மாரிக்கு உடுக்குப் பிறந்ததம்மா! உத்திராட்சப் பூமியிலே பம்பை பிறந்ததம்மா-மாரிக்கு பளிங்கு மா மண்டபத்தில் வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு விசய நகர்ப் பட்டணத்தில் ஆடை பிறந்ததம்மா-மாரிக்கு அயோத்திமா நகர்தனிலே சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு பிச்சாண்டி மேடையிலே சாட்டை பிறந்ததம்மா-மாரிக்கு சதுர கிரி பூமியிலே சாட்டை சலசலங்க- சதுர மணி ஓசையிட கச்சை கலகலங்க கருங்கச்சை குஞ்சம் விட பதினெட்டுத் தாளம் வர பத்தினியா சித்துடுக்கு இருபத்தொரு தாளம் வர எமகாளி சித்துடுக்கு சித்துடுக்கைக் கைப்பிடித்து சிவ பூணணிந்தவளாம். (மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.) சேகரித்தவர்:S.S. போத்தையா   இடம்:சூரங்குடி, விளாத்திக்குளம் தாலுக்கா நெல்லை மாவட்டம்.   மாரியம்மன் பாட்டு - 2   சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச் சீரான கொப்பளிப்பான் வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே. மாரியம்மா தாயே, நீ மனமிரங்கித்தந்த பிச்சை, தற்காத்து நீகொடும்மா உன் சன்னதிக்கே நான் வருவேன். வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா, இரண்டு வடுகரோட வாதாடி தனக்கிசைந்த எல்லை என்று மாரி தனித்து அடித்தாள் கூடாரம். உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள், முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள். கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள். பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள். நெஞ்சில் போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள். தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாக இறக்கிடுவாள். வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள். முட்டுக்கால் முகத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள். கரண்டக் கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள் பாதத்து முத்தை மாரி பாராமல் இறக்கிடுவாள். ஐந்து சடை கொஞ்சிவர, மாரி அழகு சடைமார் பிறழ, கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு குயில் இருந்து தாலாட்ட. உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமாம் மண்டபத்தில், உன் உடுக்குப் பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே, கரகம் பிறந்ததம்மா, கண்ண நல்லூர் மேடையிலே, சூலம் பிறந்ததம்மா துலுக்க மணி மண்டபத்தில், நாகம் குடைப்பிடிக்க, மாரியாத்தாளுக்கு நல்லபாம்பு தாலாட்ட, முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு முதல் மண்டபமாம். சக்தி உடையவளே! சாம்பிராணி வாசகியே! நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா நாடெங்கும் போட்டுவந்தாள். உழக்கிலே முத்தெடுத்து மாரி ஊரெங்கும் போட்டு வந்தாள். எல்லை கடந்தாளோ இருக்கங்குடி மாரியம்மா, முக்கட்டுப் பாதைகளாம், மூணாத்துத் தண்ணிகளாம், மூணாத்துப் பாதையிலே இருந்து மாரியம்மா வரங் கொடுப்பாள். தங்கச் சரவிளக்காம்மாரிக்குத் தனித்திருக்கும் மண்டபமாம், எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு எதிர்க்கக் கொடிமரமாம். தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத் தவசிருக்கும் மண்டபமாம் சப்பரத்து மேலிருந்து சக்தி உள்ள மாரி அவ. சரசரமாமாலை, மாலை கனக்குதுணு மயங்கிவிட்டாள் மாரி. ஆத்துக்குள்ள அடைகிடக்கு அஞ்சு தலை நாகம் அது ஆளைக் கண்டால் படமெடுக்கும் அம்மா சக்தி வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு வெத்திலைக் கட்டவே பறத்துங்கடி, வேர்த்து வார சந்தன மாரிக்கு வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி பாசிப் பயிறு எடுத்து பத்தினியாள் கையெடுத்து உழுந்தம் பயறெடுத்து உத்தமியாள் கையெடுத்து++   சேகரித்தவர்:குமாரி P. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   மாரியம்மன் பாட்டு-3 தேசமாளும் முத்தம்மா   முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணி நாகபுற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளாள் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள். பிரம்மராக்கு-சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார். இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்திபெற்ற மூன்று சகோதரிகளும் தமிழ் நாட்டிலே வந்து குடியேறி, கொடியவர்களைத் தண்டிக்கப் பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம். இப்பொழுது பிரம்ம ராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன. முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் தீயவர்களைக் கொடுநோயால் தண்டிப்பாள். நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள். பிற்காலத்தில் கன்னடியர் ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள், இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவி இருப்பதால் தேச முத்துமாரி என்றும் பல பெயர்கள் வழங்குகின்றன. நவராத்திரி உற்சவத்தின்போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள். பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள். கீழ் வரும் பாட்டு சேலம் மாவட்டத்தில் வழங்குகிறது.   நாலு காலச் சட்டம் நடு நிறுத்தி நட்சத்திரம் போலே ஒரு தேர் எழுப்பி தேருக்கு ஒடையாளி தேசமாளும் முத்தம்மா தேரேறி வருவதைப் பாருங்கடி ஓலைப் பொட்டி தலை மேலே ஒம்பது மக்களும் கக்கத்திலே மக்களைப் பெத்த மாரியம்மன் மவுந்து வருவதைப் பாருங்கடி.++   சேகரித்தவர்:வாழப்பாடி சந்திரன்   இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம்.       தெய்வ கணங்கள்   கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள். கோயில்பட்டி அருகிலுள்ள சிற்றூர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்களை இப்பாட்டில் நாம் காண்கிறோம். முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். கிராம மக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வதுமுண்டு. விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு.   முத்து முனிய சாமி மூர்க்கமுள்ள தேவதையே சத்தத்தை நீ கொடய்யா சரளி விட்டு நான் பாட ஊருக்கு நேர் கிழக்கே உறுதியுள்ள ஐயனாரே சத்தத்தை நீ கொடய்யா! சரளி விட்டு நான் படிக்க. நாட்டரசன் கோட்டையிலே நல்ல தொரு பாப்பாத்தி வயித்தவலி தீர்த்தாயானால் வந்திருவேன் சன்னதிக்கு ஒட்டப் பிடாரத்திலே உலகம்மன் கோயிலிலே பூக்கட்டிப் பார்த்தேன் பொருந்தலையே என் மனசு கண்ணுலே அடிச்சுத்தாரேன் கண்ட சத்தியம் பண்ணித் தாரேன். சிக்கந்தர் மலைக்கு வாங்க சேலை போட்டுத் தாண்டித் தாரேன், பூப்பூக்கும் புளியமரம் பொன்னிலங்கும் ஐயனாரு நாட்டி லங்கும் பெத்தனாச்சி நல்லவரம் தருவா. ஏழுமலை கடந்து எடுத்து வந்தேன் சண்பகப்பூ வாடாமல் சாத்தி வாரும் வட மதுரைக் கந்தனுக்கு.++   வட்டார வழக்கு: பாப்பாத்தி-பிரம்ம ராக்கி சக்தி; ஐயனாரு-சாஸ்தா.    சேகரித்தவர்:S.S. போத்தையா   இடம்:விளாத்திக்குளம், திருநெல்வேலி.   நாட்டு அரசன் கோட்டையிலே நல்லதொரு கண்ணாத்தா வயித்தவலி தீர்த்தியானா வந்திருவேன் சன்னதிக்கே++   வட்டார வழக்கு: கண்ணாத்தா-கண்ணகியைக் குறிக்கும்.   சேகரித்தவர்:S.P.M. ராஜவேலு இடம்:மீளவிட்டான்   வருணன் மனித உழைப்பில் குறைவி்ல்லை. உழுதான், கடலை விதைத்தான். மழை வருவதுபோன்ற அறிகுறி வானத்தில் தோன்றியது. ஆனால், திடீரென்று வானம் வெளிறிற்று. வந்த மழை பெய்யாது போய்விட்டது. அவன் மனம் ஏங்குகிறது. இனி அவனால் என்ன செய்ய முடியும்? நினைத்த நேரத்தில் மழை பெய்யவைக்கக்கூடிய கற்பரசி அவன் பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து, வருணன் செயலை நினைத்து வருந்துகிறான். அவளால் என்ன செய்ய முடியும்? விஞ்ஞானம் இன்னும் வருணனைப் பணிய வைக்கவில்லையல்லவா? இத் துறையில் முயற்சி நடப்பதையே நமது உழவன் அறிந்திருக்க மாட்டானே!   வாகை மரத்துப் புஞ்சை வட்டாரச் சோளப் புஞ்சை தங்கம் விளையும் புஞ்சை தரிசாக் கிடக்குதடி. காட்டை உழுது போட்டேன், கடலை போடப் பட்டம் பார்த்தேன், வந்த மழை போகுதில்ல வருணனே உனது செயல்.   வட்டார வழக்கு: போகுதில்ல-போகிறதல்லவா?   சேகரித்தவர்:கார்க்கி இடம்:சிவகிரி வட்டாரம்,நெல்லைமாவட்டம்.   கணபதி பூசை வேண்டும் வரம் தரும் பிள்ளையாருக்குப் பூசை போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளைச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளையாருக்கு மங்களமாகப் பூசை போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அவரைச் சுற்றிக் கும்மியடித்துப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளையார் பூசனைமுறை பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.   ஒரு மிளகாயாம்-ஏலேலோ கணபதியாம் ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ கணபதியாம் திருவிளக்கு ஏலேலோ கணபதியாம் சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ கணபதியாம் பொழுதெறங்கும் வேளையிலே-ஏலேலோ கணபதியாம் பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ கணபதியாம் நீராடி நீர் குளித்து-ஏலேலோ கணபதியாம் பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ கணபதியாம் பதினெட்டு நெல் வகையும்-ஏலேலோ கணபதியாம் கொறித்தெடுப்போம்-ஏலேலோ கணபதியாம்   சேகரித்தவர்:கு.சின்னப்ப பாரதி இடம்:பரமத்தி, சேலம் மாவட்டம்.   பிள்ளையார் துதி   பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.   நத்தத்துப் பிள்ளையாரே நான் நடந்தேன் மாதாந்தம் கைக்குழந்தை தந்தியானா-உனக்கு கடைவிளக்கு நான் விடுவேன்++   சேகரித்தவர்:கார்க்கி இடம்:சிவகிரி.     கோடங்கிப் பாட்டு   கோணங்கிகள் குறி சொல்லுவார்கள். கிராமத்தில் உடல் நோய் கண்டவர்கள் கோணங்கியை வருவித்து குறி கேட்பார்கள். இவர்கள் மாடன், கறுப்பன், முனியன், காளி, மாரி போன்ற சிறு தெய்வங்களின் தெய்வங்கொண்டாடிகளாக இருப்பார்கள். சிறு நோயாக இருந்தால், கோணங்கி திருநீறு மந்திரித்துப் பூசுவார்கள். கடுமையான நோயாக இருந்தால் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பூசைபோட்டுக் குறி கேட்டு பரிகாரம் சொல்லுவார்கள். பூசையில் ஒரு வாழையிலை விரித்து, அவல் பொரிகடலை பரப்பி, விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, உடுக்கடித்து ‘சாமி’ வருத்துவார்கள். கையில் பிரம்பு அல்லது வேப்பங்குழை ஏந்தி, நோயாளியை உட்கார வைத்து அதை அவன் முன்வீசிப் பாட்டுப் பாடுவார்கள், பாட்டின் முதல் பகுதியில் சாமியை வீட்டுக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்ளுவார்கள். சாமி வந்ததும், உடல் நடுங்கி ஆடிக் கொண்டே, சுவாமி சொல்லுவதாக நோய்க்குக் காரணத்தைச் சொல்லுவார்கள். பின்னர் சாமி நோயைக் குணப்படுத்த ஒரு சேவலோ, தங்கநகையோ, சுங்கடிச்சேலையோ தர வேண்டுமெனக் கேட்கும். சில நாள் பூசைபோட வேண்டுமெனவும் கேட்கும். மதுவிலக்குச் சட்டம் வருமுன் சாரா யம் கேட்பதுமுண்டு. சட்டம் வந்ததும் குடி வழக்கத்தை சாமிகளும் கைவிட்டு விட்டனர் போலும். ஏனெனில், இப்பொழுது சாராயம் கேட்பதில்லை. இடையிடையே யாராவது பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டுவிட்டால், சாமி உடனே எல்லை தாண்டி மலையேறிப் போய்விடும். இத்தகைய நம்பிக்கை இன்னும் மறையவில்லை, விஞ்ஞானக் கருத்துகள் கிராம மக்களிடம் பரவினால்தான் இவ்வழக்கங்கள் ஒழியும், சுவாமி வருத்துவதையும், சுவாமி குறி சொல்லுவதையும், நிவாரணம் சொல்லுவதையும் பாட்டில் கோணங்கி சொல்லுவான். இப்பாட்டின் உருவத்தை மேற்கொண்டே பாரதி ‘புதிய கோணங்கி’ப் பாட்டு பாடியுள்ளார். இந்தியாவின் வருங்காலத்தையே பாரதி குறியாகச் சொல்லுகிறார். அத்தகைய கோணங்கிகள் நமது வருங்காலத்தைச் சொல்ல இன்றும் வருகிறார்கள். அவர்கள் பழைய உடைகளையே கூலியாக கேட்கிறார்கள். நம்மை ப் புகழ்ந்து, வருங்காலத்தில் சீரும் சிறப்பும் உண்டாகும் என்று கூறியவுடனே, நாம் உச்சி குளிர்ந்து அவர்கள் கேட்டதைக் கொடுத்து விடுகிறோம்.             தெய்வ வணக்கம்   பாரோர்கள் நற்புகழும் பட்டண மருதூர் வாழும் பதி னெட்டாம் படிக் கறுப்பா! பதி னெட்டாம்படிக் கறுப்பா! ஊருக்கு மேல் புரமாம்: ஒத்த உடை மரமாம் உடை மரத்தின் கீழிருக்கும், உத்தமனே வாருமையா! சாலைப் பாதை மேல்புரமாம் சமர்த்தா குடியிருக்கும் கொத்தளத்து வாழ் கறுப்பா, கூவியழைத்தேனையா தூண்டிக் கறுப்பா; துடியான வாள் வீரா சுற்றி வர கம்மாக் கரை; சூழ வர கம்மாக் கரை; சூழ வர உடங்காடு உடங்காட்டு மத்தியிலே உத்தமனே தனியிருக்கும் எண்ணைய்த் தலையழகும்; எழுத்தாணி மூக்கழகும் கையிலே வீச்சறுவா; காலுலே வீரத் தண்டை நெத்தியில் பொட்டுமிட்டு, நீல வர்ணப் பட்டுடுத்தி பட்டு பளபளென பாடகக்கால் சேராட; தோள் மேலே பச்சைக் கிளி தோழனழைத் தேனிப்பம் கரு நாயும் சங்கிலியும்; கைப்பிடித்து வாருமிப்போ. வெள்ளக் குதிரை ஏறி வெடி வாலும் சீனிமட்டம் நெத்தியிலே சுட்டு கட்டி; நீல வர்ணப் பூச்சூடி மத்தியான வேளையிலே மாதர்களைத் தானடக்கும் பக்தியுள்ள ஏ கறுப்பா பதினெட்டாம் படியோனே. ஏமமும், சாமமும் எந் நேர வேளையிலும் அந்தி சந்தி வேளை யெல்லாம் ஐயா துணையிருந்து கேட்ட வரம் நீ கொடுக்கும் கிருவையுள்ள ஏ கறுப்பா! வாலைக் கறுப்பா வாருமையா இது வேளை. முன்னோடி ஏ கறுப்பா முன்னிலையில் வாருமிப்போ ஏழை அழைத்தேனையா இது சமயம் வாருமிப்போ பாலன் அழைத் தேனையா பாரும் குழந்தை முகம் அஞ்சிலே ரெண்டறியேன் அடியேன் சிறுகுழந்தை பத்திலே ரெண்டறியேன் பாலன் சிறு குழந்தை பாடம் படிப்பறியேன் பாட்டின் வகை நானறியேன், ஏடும் எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன், எண்ணாது எண்ணுகிறேன் எண்ணி மனம் வாடுகிறேன், கார்மேக என்பெருமான் காத்தாய்ப் பறந்து வாரும் மன்றுக்கு நானழைத்தேன் மன்னவரே வாருமிப்போ, அண்ணாவே என் குருவே ஆசானே நீர் துரையே ஏழை அழைத்தேனைய்யா என்னிடத்தில் வாருமிப்போ, கோர்ட்டில் வழக்காடும் கொத்தளத்து வாழ் கறுப்பா ஐகோர்ட் சட்சி ஐயா அதிகாரி வாருமிப்போ கேட்ட குறி தனக்கு கிருபையுள்ள ஏ கறுப்பா வாக்குத் தவறாமல் வன் பிணிகள் வாராமல் ஏவல் பில்லி சூனியங்கள் என்னை வந்து சேராமல் மாற்றானுட வஞ்சனைகள் மன்னவனே சாடாமல் தன்னந்தனியிருக்கும் தற்பரனே வாருமையா! ஐயப்பன் மலை மேலே அதிகாரம் கொண்டவரே ஐயா அழைத் தேனிப்போ அதிகாரி வாருமிப்போ வாவூர் மலை மேலே வழக்காடும் புண்ணியரே சன்யாசி ஏ கறுப்பா சமர்த்தனழைத் தேனிப்போ குறிக்கு அழைத் தேனிப்போ குறி முகத்தில் வாரதெப்போ ஈப்போல் வடிவு கொண்டு என் இருதயத்தினுட் புகுந்து சொன்ன சொல் தவறி டாமல் சொற் குற்றம் வந்திடாமல் சாஸ்திரத்தை நீரெடுத்து சமர்த்தா வருவ தெப்போ ! பக்கங் குறி கேட்டவர்க்குப் பதிலே உரைப்ப தெப்போ வைத்த குறிகேட்பவர்க்கு உடைத் தெறியும் சட்டமதை சட்டம் நிலைக்க வேணும் சன்யாசி ஏ கறுப்பா கேட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் கிருபையுடன் சொல்லுமையா பூசை முடியும் மட்டும் புண்ணியனே உன் காவல் மண்டு முடிய மட்டும் மன்னவனே உன் காவல் வாழை இலை விரித்தேன் வைத்தேன் இலைப் பாக்கு கொளுத்தினேன் நற் சூடம் கொண்டேன் சிறு அமுது பால் பழமும் நற்தேங்காய் படைத்தேனிது வரைக்கும் தட்சணையும் முன்னே வைத்து தேவா உமையழைத்தேன் வைத்ததொரு தட்சனைக்கு வகை பிரித்துச் சொல்லுமிப்போ சொல்லி வரங் கொடுக்கும் சுந்திரனே ஏ கறுப்பா ! எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் வாடுகிறேன் ஆறு பிழை நூறு குற்றம் அடியேன் செய்த போதிலுமே குற்றம் பிழை பொறுத்து குடியிருக்க வாருமிப்போ சின்னஞ் சிறு மதலை சிறுவனும தடிமை மன்னாதி மன்னவரே மகா தேவா என் பெருமாள் அண்ணாவே வாருமிப்போ அதிகாரி ஏ கறுப்பா எல்லை கடந்து வாரும் எல்லை கல்லு தாண்டி வாரும் ஆறு கடந்து வாரும் அதிகாரி ஏ கறுப்பா ஊறுதடம் பிடித்து உத்தமனே வாருமிப்போ தெற்கு பார்த்த வீட்டிற்கு தேவா உமையழைத்தேன் வடக்கு பார்த்த எல்லைக்கு வல்லவனே உமையழைத்தேன். மேற்க பார்த்த தன் பதிக்கு மேக ‘உமையழைத்தேன்’ கிழக்க பார்த்த எல்லைக்கு கிளி மொழியே நானழைத்தேன்   குறிப்பு:   வீடு எந்தப்பக்கம் பார்த்திருக்கிறதோ அதற்கேற்றாற்போல், தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று சொல்லுவார்கள்.   தெய்வம் கூறுவது   என்னடா சிறுபயலே என்னை அழைத்ததென்ன பம்பை பதனமடா பாலன் சிறு குழந்தை உடுக்கு பதனமடா உடையவன் வந்தேனிப்போ சொன்ன சொல் தவறமாட்டேன் சொற் பிழைகள் இல்லாமல் நாவில் குடியிருந்து நானே குறி பாடுரண்டா இந்த மனை தனக்கு எடுத்தேன் சிறு ஏட்டை ஏட்டை விரித்துப் பார்த்தேன், இந்த வகை சொல்வதற்கு இந்த மனைதனிலே இருக்குமொரு கன்னியற்கு மாலைப் பொழுதினிலே மங்கையவள் சென்றபோது இருளோ கருத்த நேரம் எல்லைக்குப் பின்புறமமாம் கண்டு பயந்தாளப்பா கன்னியந்தப் பெண் கொடியும் உடலே நடுங்கியவள் மேலது மேதான் சிலுத்து மதியோதான் கலங்கி மங்கையவள் வீடு வந்தாள் பின்னே தெடந்ந்தானப்பா அந்தப் பேயாண்டி மாமுனியன் இப்ப வந்து வழக்காடுறான் அந்த வல்லவனு மாமுனியன் நானே பிடித்தேனென்று அவன் நாதன் முன் சொல்லுறான் போ (உண்டா)இதற்கும் பதில் கேளு இன்னும் உரைத்து வாதேன். அதுலே இருந்து மவள் படுத்தாளே பாய் தனிலே மேல் வலியும் கால் வலியும் மெல்லியற்கும் உண்டுமப்போ. கண் கட்டும், தலை சுற்றும் கன்னியற்கு உண்டுமப்போ நெஞ்சு வலி மாரடைப்பும் நீதி துலை கண்டேனிப்போ உண்டுமா இல்லையா இதற்கும் பதில் கேளு ஆனாலும் மன்னவனே அதிகாரி என்னிடத்தில் கேட்டதற்கு நானுரைத்தேன் கிருபையுடன் சொல்லிவந்தேன் (அந்த) வால் முனியை விரட்டுதற்கு வகை விபரம் சொல்லி வாரேன் வெள்ளை ஒரு சாவலைத்தான் வெள்ளி நல்ல கிழமையிலே நள்ளிரவு வேளையிலே நடுச்சாம நேரத்திலே மன்னவனே கேக்குராண்டா மாதர் துன்பம் தீர்ப்பதற்கு இன்னையிலே இருந்து வன்பிணிகள் தீர்ப்பதற்கு கொடுத்தேன் திருநீறு நான் கொத்தளத்து வாழ் கறுப்பன் நெற்றியிலே நீறு பூசி நினைந்து வா எத்தனைத்தான் உந்தன் நோய் அகற்றி வாரேன் உண்மையுள்ள கறுப்பனிப்போ சொன்னபடி நடந்தாயானால் துன்ப வினை தீர்த்துத்தாரேன் என்னப்பா மன்னவனே இதற்கும் பதில் கேளு எந்தனுடன் அட்சரத்தை ஏழை வரிந்து தாரேன் மண்டலத்துப் பூசைக்குத்தான் மங்கை எந்தனுக்குப் பூசை செய்ய ஏழை கொடுத்தாயானால் முக்காலும் சத்தியமாய் முன்னின்று காத்துத்தாரேன், பூசை முடிவு   அண்ணாவி ஏ கறுப்பா அடியேன் சிறு குழந்தை பூசை முடித்தேனிப்போ போய்ச் சேரும் புண்ணியனே மன்று முடித்தேனிப்போ மன்னவரே போய்ச் சேரும் உள்ளூருத் தேவதைகள் உங்கள் எல்லை போய்ச் சேரும் பக்கத்துத் தேவதைகள் பதி தனக்குப் போய்ச் சேரும் அண்ணாவி என் குருவே, அடியேன் மனதிலெண்ணி பூசை முடித்து விட்டேன் புண்ணியரே உமதடிமை   குறிப்பு: தெய்வம் கூறுவது என்பது தெய்வ ஆவேசம் வந்தவன் குறி கூறுகிறான். குறிப்பிட்ட வீட்டிற்குக் குறி கேட்கிறான். பெண் அந்தி மயக்கத்தில் பயந்து விட்டாள். அவளை பேயாண்டி முனியன் என்ற பிசாசு பற்றிக் கொண்டது, உடல்வலியெடுத்தது. வெள்ளிக்கிழமை, நள்ளிரவு வேளையில் பலி கொடுத்தால் முனியன் போய்விடும். இது கருப்பன் ஆவேசம் வந்த மனிதன் கூறுவது. இதன் பின் தெய்வம் மலையேறிவிடும்.   சேகரித்தவர் :S.S. போத்தையா தங்கம்மாள்புரம்,நெல்லை மாவட்டம், மழையும் பஞ்சமும்   மழை பொழியவில்லையே!   மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை. மழையின் தோற்றத்தைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் இன்று பல விவசாயிகளுக்குத் தெரியாது.   ஒருநாள் பூசை செஞ்சேன் நாராயணா, ஒரு ஒளவு மழை பெய்யலியே நாராயணா ! ஒளவு பேயாமே நாராயணா மொளைச்ச ஒருபயிரும் காஞ்சு போச்சே நாராயணா ! மூணு நாளாப் பூசை செஞ்சேன் நாராயணா ! ஒரு முத்து மழை பேயலியே நாராயணா முத்து செடி காஞ்சு போச்சே நாராயணா, அஞ்சு நாளாப் பூசை செஞ்சேன் நாராயணா ஒரு ஆடி மழை பேயலியே நாராயணா ! ஆடி மழை பேயாமல் நாராயணா ! ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே நாராயணா !   வட்டார வழக்கு: ஒளவு-உழவு ; காஞ்சு - காய்ந்து ; முத்து செடி - அழகான செடி ; ஆரிய - நாடு.   சேகரித்தவர் :S.சடையப்பன் இடம் :கொங்கவேம்பு,அரூர் வட்டம்தருமபுரி மாவட்டம்.   பஞ்சமும் மழையும்   பஞ்சத்தில் ஆடு, மாடு, நகை, நட்டு எல்லாம் விற்றாகி விட்டது. காடு தேடிப் போய் கிடக்கிற இலை தழைகளை அவித்துத் தின்னும் நிலைமை வந்து விட்டது. கம்பு விதைத்து மண்ணோடு மண்ணாகிக் கிடைக்கிறது. மழையின் ரேகை சிறிதும் காணோம். மக்கள் உள்ளம் வெதும்பி வருணதேவனிடம் முறையிட்டுக் கொள்கிறார்கள். வருண தேவன் கருணையால், மழை பொழியத் தொடங்குகிறது, மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிறது. மழையில் நனைந்து கொண்டே உழவர்கள் மழையை வரவேற்கிறார்கள்.   ஆடு வித்து, மாடு வித்து ஐயோ வருண தேவா ! அத்தனையும் கூட வித்து ஐயோ வருண தேவா ! காது கடுக்குவித்து ஐயோ வருண தேவா கை வளையல் கூடவித்து ஐயோ வருண தேவா ! இச் சிக்காய் தின்ன பஞ்சம் ஐயோ வருண தேவா ! இன்னும் தெளியலையே ஐயோ வருண தேவா ! காரைக்காய்த் தின்ன மக்கள் ஐயோ வருண தேவா ! காதடைச்சு செத்த மக்கள் ஐயோ வருண தேவா ! மக்க வெதச்ச கம்பு மச்சு வந்து சேரணுமே ! ஓடி வெதச்ச கம்பு ஊடுவந்து சேரணுமே கலப்பை பிடிக்குந் தம்பி கை சோந்து நிக்கிறாங்க ! அதுக்கே மனமிரங்கு ஐயோ வருண தேவா ! ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம் எண்ணப்பட்டு நிக்கிறாங்க அதுக்கே இறங்க வேணும் ஐயோ வருண தேவா ! பேயுதையா பேயுது பேய் மழையும் பேயுது ஊசி போல காலிறங்கி உலகமெங்கும் பேயுது உலக மெங்கும் பேஞ்ச மழை ஊரிலெங்கும் பேயலே பாசி போல காலிறங்கி பட்டணமே பேயுது பட்டணமே பேஞ்ச மழை, பட்டியிலே பேயிலே துட்டு போல மின்னி சீமையெங்கும் பேயுது சீமையெங்கும் பெஞ்ச மழை செல்ல மழை பேயுது.   வட்டார வழக்கு: வித்து - விற்று ; கடுக்கு - கடுக்கன்; ஊடு - வீடு.   உதவியவர் : பாவாயி சேகரித்தவர் : கு. சின்னப்பபாரதி   இடம் :செருக்கலைப்பாளையம்,புதுப்பாளையம்.   பஞ்சம் தேளாச் சுருண்டழுதோம்   ஊரையடுத்த புளியமரத்தடியில் இளைஞர்கள், பந்தாடி, மகிழ்ச்சியாக நேரம் போக்குவார்கள். பஞ்சத்தால் உடல் நலிந்த இளைஞர்கள் எழுந்து நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்லை. அவர்களது வேதனையை “பாம்பாச் சுருண்டழுதோம், தேளாச் சுருண்டழுதோம்” என இரண்டு உவமைகளின் மூலம் விளக்குகிறார்கள்.   பரட்ட புளிய மரம் பந்தாடும் வி்ல்ல மரம் பந்தாடும் நேர மெல்லாம் பகவானை பார்த் தெழுதோம். பாம்புக்கோ ரெண்டு கண்ணு பகவான் கொடுத்த கண்ணு பாவிப் பய சீமையிலே பாம்பா சுருண்ட ழுதோம். தேளுக்கோ ரெண்டு கண்ணு தெய்வம் கொடுத்த கண்ணு பாவிப்பய தேசத்திலே தேளாச் சுருண்டழுதோம்.   சேகரித்தவர் :எம்.பி.எம். ராஜவேலு   இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டம்.   மானம் விடிவதெப்போ?   பருவ மழையின்றி வானம் பொய்த்து விட்டால் ஏற்படும் உண்மையான தாக்குதலுக்கு எல்லோரையும் விட முதலில் பலியாகிறவன், மண்ணை நம்பி நிற்கும் விவசாயிதான். மழையைக் கண்டால் அவனுக்கு தெய்வத்தைக் கண்டது போல். பசித்த வயிற்றில் பால் வார்த்தது போல். மழை பொய்த்து விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வைப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளையார் சிலையைப் பிடுங்கி கரைத்த சாணியை அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுளை வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளையாரைச் சுத்தப்படுத்துவதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பார்கள், அப்படி மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.   பூமியை நம்பி புத்திரரைத் தேடி வந்தோம், பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம், மானத்தை நம்பி மக்களைத் தேடி வந்தோம் மானம் பலியெடுக்க மக்களெல்லாம் பரதேசம் ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் பின்னப் பட்டுநிக்கிறாங்க அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ணதேவா மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ் சோந்து நிக்கிறாங்க அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ண தேவா, காட்டுத் தழை பறித்து கையெ்ல்லாம் கொப்புளங்கள் கடி மழை பெய்யவில்லை கொப்புளங்கள் ஆறவில்லை. வேலித் தழைபறித்து விரலெல்லாம் கொப்புளங்கள் விரைந்து மழை பெய்யவில்லை வருத்தங்கள் தீரவில்லை, மானம் விடிவதெப்போ, எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ? ஓடி வெதச்ச கம்பு ஐயோ ! வருண தேவா ஊடுவந்து சேரலையே பாடி வெதச்ச கம்பு ஐயோ வருண தேவா பானைவந்து சேரலையே.++   உதவியவர் : முத்துசாமி சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :வாழநாயக்கன் பாளையம்,சேலம் மாவட்டம்.     மழையே வா   ஊசி போல் மின்னல் மின்ன, ஊரிக் கிணறு தண்ணிவர, பாசி போல மின்னல் மின்ன, பாங்கிணறு தண்ணிவர, சட்டியிலே மாகரைத்து சந்தை யெல்லாம் கோலமிட்டு, கோலம் அழிய வில்லை ; கொள்ளை மழை பெய்ய வில்லை ; கிண்ணியிலே மாகரைத்து கங்கை யெல்லாம் கோலமிட்டு, கோலம் அழியவி்ல்லை ; கொள்ளை மழை பெய்ய வில்லை ; மேழி பிடிக்கும் தம்பி முகம் சோர்ந்து போகு தம்மா ! கலப்பை பிடிக்கும் தம்பி கை சோர்ந்து நிக்கு தம்மா++   உதவியவர் : ம. கிருஷ்ணன் சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :முத்துகாபட்டி,நாமக்கல், சேலம் மாவட்டம்.   பஞ்சம்   ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிக்கடி பஞ்சங்கள் தோன்றின. பசியால் பதறிய மக்கள் முகம் கண்டு தாய்மார் பதறினர். மக்களைக் கொல்ல வரும் பஞ்சத்தில், தங்களைப் படைத்த கடவுளை நோக்கி மழை வரம் வேண்டுகிறார்கள்.   வானத்தை நம்பியல்லோ மக்களைத் தேடி வந்தோம் மானம் பலியெடுக்க மக்கள் பரதேசம் - மன்னரைல்லாம் தன் நாசம், பூமியைத் தேடியல்லோ புத்திரரைத் தேடி வந்தோம், பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம் புண்ணியரும் தன்னாசம் சோறு சோறு என்று சொல்லி துள்ளுது பாலரெல்லாம் அன்னம் அன்னம் என்று சொல்லி அழுகுது பாலரெல்லாம் கோடை அழிய வேணும், கொள்ளை மழை பெய்ய வேணும், மாவு கொதிக்க வேணும், குழந்தை பசியாற வேணும், பூமி விளைய வேணும் புள்ளை பசியாற வேணும்.++   உதவியவர் : ஜானகி சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :முத்துகாபட்டி,நாமக்கல்,சேலம் மாவட்டம்.   ஆற்று நீர் தண்ணிக்குத் தீட்டில்லை   மேல் ஜாதிக்காரர்களுக்குக் குடி தண்ணீர் எடுக்க ஒரு கிணறும், கீழ் ஜாதிக்காரர்களுக்குத் தண்ணீர் எடுக்க ஒரு கிணறுமாக ஒதுக்கி வைத்திருப்பதை நாம் இன்றும் - ஒரு காந்திஜியும், வினோபாஜியும் தங்கள் வாழ்நாளை தீண்டாமை ஒழிப்புக்காகச் செலவு செய்த பின்னரும் அப்படியே இருப்பதைக் காண்கிறோம். மனிதன் செயற்கையாகச் செய்து கொண்ட கிணற்றில்தான் இந்தத் தீண்டாமை இருக்கிறது. அதேபொழுது இயற்கை படைத்த ஆறுகளில் எவ்விதத் தடையுமின்றி எல்லோரும் நீர் எடுப்பதையும் பார்க்கிறோம். தண்ணீருக்குத் தீட்டில்லை. பார்ப்பனர் முதல் பறையர் வரை, தோட்டி முதல் தொண்டைமான் வரை தெய்வமாகத் தொழுவதும் பச்சைத் தண்ணீரையே. ஆனால், அந்தப் பச்சைத் தண்ணீரே சில சமயங்களில் தீராத பகையை மூட்டுவதற்குக் காரணமாகி விடுகிறது - எப்பொழுது? அது கிணற்றில் கிடக்கும் பொழுது. ஆற்றில் ஓடும்பொழுதோ அது எல்லோருக்கும் தெய்வமாக, தீண்டாமைத் தீயைக் கடக்கும் பாலமாக அமைந்து விடுகிறது. இதைப் பற்றி, காதலன் காதலிக்குக் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் சித்தர்களின் ஜாதி மறுப்புக் கொள்கையுடன் ஒப்புமையுள்ள கருத்துக்கள் கூறப்படுவதைக் காணுகிறோம்.   கரை புரண்டு ஓடுதம்மா - அந்த காவிரியில் தண்ணி யெங்கும் நெளி நெளியா ஓடுதம்மா - அந்த நீல வண்ணத் தண்ணி யெல்லாம் சுழி சுழியா ஓடுதம்மா - அந்த சுத்தமான ஆத்துத் தண்ணி வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி வெள்ளி போல மின்னுதடி. குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே குடம் குடமா எடுப்பாங்களாம். தண்ணிக்கொரு தீட்டு மில்லை- கண்ணே யதைத் தடுக்க ஒரு நாதியில்லை பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே பறையன் முதல் பாப்பான் வரை தோட்டிமுதல்தொண்டைமான்வரை- கண்மணியே தொழுந் தண்ணி பச்சைத்தண்ணி சண்டையிழுப்பதுவும் - கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத் தண்ணி தெய்வம்போல இருக்குந்தண்ணி - கண்மணியே திசையோடும் பச்சைத் தண்ணி++   உதவியவர் : பாவாயி சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :செருக்கலைப்புதூர்,சேலம் மாவட்டம்.         தாது வருடப் பஞ்சம்   இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்த கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடினால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப்பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரவத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது :   தாது வருடப் பஞ்சம்   இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்த கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடினால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப்பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரவத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது :   (குறிப்புரை : சின்னப்ப பாரதி)   பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே பஞ்சமும் அப்போதே காரணமாகத் தொடர்ந்ததுவே கும்மியடிக்கிறேன் கந்தன் கணபதி காப்பாரே சத்தியவாக்கருளாய் பால் நகர் சந்திரன் எத்திசை சேரும் நடராஜன் * அம்மன் சொல்படி பந்தியாய் நின்று பாடுவோமே கும்மி தாது வருஷத்தை தலை விதிப்படியேதான் மழையெங்கும் இல்லாமல் கன்னி மாதத்தில் ஓர் மழை பேயவும் கண்டெடுத்த ஒரு புதையலைப் போலவே நடராஜன் - எழுதியவர் பெயர்.   தானியம் விதைத்தார்கள் தாது வருஷத்தில் சீமையில் மழைமாரி பூச்சிய மாகவே தீய்ந்து பயிரெல்லாம் காய்ந்ததையா அரைக்கீரை சோளம் சிறு நெல்லு கம்புக்கு காரண மானதோர் புதன் சந்தையில்லை எட்டு வள்ளம் விற்று இரண்டு வள்ள மாகி துட்டமான பேர்களை மட்டடக்கி தட்டுப்படாதுதைத்து வள்ளத்தில் வைத்து கொட்டுப் பட்டாற் போல நிறுத்திற்றுமே மாதமாம் தீபாவளிப் பண்டிகை வந்தது ஆன பேர் களிப்புடன் கொண்டாட முடியாமல் நோம்புகள் போச்சுதே, ஐயையோ கம்பு கார்த்திகை மாதத்தில் முக்கால் வள்ளம் கூட காணமுடியாமல் நாங்களும் தெம்பற்றோம் காட்டை யுழுது பயிரிடும் காராளக் கவுண்டரெல்லாம் கவலேத்தமாட் டினை தேடியே கட்டை வண்டியில் கட்டி ஓடரோம் தூரதேசமும் என்றாரே போயங்கு தவசம் பிடித்திடக் கையில் ஈயக் காசுக்கும் ஏதும் வழியில்லை பூமியைக் கொதவு வைத்தாலும் ஆங்கே பூரண காசுகள் தந்திடுவாரில்லை காப்புக் கடகமும் தோள் வெண்டயமும் காதுக் கொப்பு சில்லரை தாலியெல்லாம் விற்றாலும் கட்டாது அந்த ரூபாயெல்லாம் உமக்கு கவலை ஏத்த மாட்டு தீனிக்கே மட்டும் பத்தாததிற்கு பணம் வேண்டும் என்றுமே ஆடு மாடெல்லாம் விற்றெடுத்துக் கொண்டு ஆறுபேர் ஏழுபேர் நாம் சேர்ந்து நல்ல கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால் புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன புடிச்சுமே காலரா போகும் எட்டுப் பேரில் மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள் எல்லாம் சிவன் செயல் என்றிடு வாரெல்லாம் தினுசு வேலைகள் எட்டுமே செய்குவார் சீமைகள் எங்கும் சுற்றித் திரிகுவார் சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன சொகுசான மகராச மக்களுகளெல்லாம் மழுங்களாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன புண்ணிய மகராச மக்களுகளெல்லாம் மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம் எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை ஊருக்கிணத்திலே தண்ணியில்லை நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்-துரைக்கு அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார்.++   வட்டார வழக்கு: கவுண்டர் - பயிரிடும் சாதியார் ; கொதவு - ஒத்தி, அடைமானம். குறிப்பு: கடிப்பாராம் - நல்ல உணவைக் குறை கூறியவர்கள், புண்ணாக்கும் கற்றாழையும் தின்பார்கள்.   உதவியவர் : சின்னப்ப கவுண்டர் சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   பஞ்ச காலம்   அவருக்கு அருமையான தலைச்சன் குழந்தை பிறந்திருக்கிறது. வயலில் விதைத்த விதை முளைத்துப் பயன்தராதே என்று குழந்தையின் தந்தையும், பாட்டனும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் மகிழ்ச்சி அந்த வீட்டில் இல்லை. பெற்றவன்கூடக் குழந்தையை மதிக்கவில்லையே என்று தாய் கவலைப்படுகிறாள் ; மணப்புறா போலவும், நீலப்புறா போலவும் உள்ள குழந்தையை அள்ளி எடுத்து அணைப்பதற்கு, உறவினர் முன்வராத நிலையைப் பஞ்சம் சிருஷ்டித்து விட்டதே என்று அவள் கவலைப் படுகிறாள். (குறிப்புரை :சின்னப்ப பாரதி) மானம் கவுந்து வரும் மாடமணப்புறா மேஞ்சு வரும் மணிப் புறா குஞ் சென்று மதிப்பாரே பஞ்சமையா ! நீலம் கவுந்து வரும் நீலப் புறா மேஞ்சு வரும் நீலப் புறா குஞ்சென்று நெனைப் பாரே பஞ்சமையா !   வட்டார வழக்கு: கவுந்து - கவிழ்ந்து -(மேகம் தாழ்ந்து வருவதைக் குறிக்கும்) ; மேஞ்சு - மேய்ந்து ; நெனைப்பாரே-நினைப்பாரே.   உதவியவர் : சி. செல்லம்மாள் சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :நாமக்கல் வட்டம்,சேலம் மாவட்டம்.                                                 தாலாட்டு   தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.   பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே   இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.   உசந்த தலைப்பாவோ ‘உல்லாச வல்லவாட்டு’ நிறைந்த தலை வாசலிலே வந்து நிற்பான் உன் மாமன் தொட்டிலிட்ட நல்லம்மாள் பட்டினியாப் போராண்டா பட்டினியாய் போற மாமன்-உனக்கு பரியம் கொண்டு வருவானோ?   தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு, பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனையும் காப்புச் செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது. அது போலவே பூக்கொண்டுவரும் பண்டாரமும், போற்றுதலுக்கு உரியனாவான், தாலாட்டுகளில் உறவினர் முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள் வரிசையாகக் கூறப்படும்,   பால் குடிக்கக் கிண்ணி, பழந்திங்கச் சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி, முகம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன் ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன் சேனைக் கெல்லாம் அதிகாரியாம் சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு கட்டிக் கிடக் கொடுத்தானோ! பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே ! பின்னா ரேன்னு-கண்ணே கவிகளையும் கொடுத்தானோ !   வட்டார வழக்கு : கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்). இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும். எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில் “பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் ‘பாரோ மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.   மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ மாராசாவைப் பார்க்கையிலே தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ தயிரும், சோறும் திங்கையிலே மாசி மாசக் கடைசியிலே-கண்ணே நீ மாமன் வீடு போகையிலே பங்குனி மாசத்திலே-கண்ணே நீ பங்குச் சொத்தை வாங்கையிலே சித்திரை மாசத் துவக்கத்திலே-கண்ணே நீ சீர் வரிசை வாங்கையிலே, வைகாசி மாசத்திலே-கண்ணே நீ வயலைச் சுற்றிப் பார்க்கையிலே ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ அடியெடுத்து வைக்கையிலே அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே நீ அரண்மனைக்குப் போகையிலே ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ அப்பன் வீடு தங்கையிலே கார்த்திகை மாசத்திலும்-கண்ணே கடவுளுக்குக் கையெடடி.   தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.   ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன் அழகைப் பார்த்து அரண்டார்களே. அத்திமரம் குத்தகையாம் ஐந்துலட்சம் சம்பளமாம் சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாம்   இவ்வாறு தாய் குடும்பத் தொழிலின் பெருமையைப் பாடுவாள். சர்க்கார் உத்தியோகம் மிக மேன்மையானது என்ற நம்பிக்கை இங்கே வெளியிப்படுகிறது. தந்தையின் பயணத்தைச் சொல்லுகிற தாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், தாய் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எந்த விஷயமும் தாலாட்டில் பொருளாகச் சேர்க்கப்படக் கூடும். தாலாட்டு குழந்தைப் பாசத்தை முதன்மைப்படுத்துவதாயினும், சமூகச் சித்திரம் என்னும் பின்னணியில்தான் பல்வேறு வகைப்பட்ட பின்னல்களாக எழுகின்றன. இப்பாடல்கள் தாய்மாரின் செல்வநிலை, ஜாதி இவை பொறுத்து வேறுபடும்.   செட்டியார் தாலாட்டு   தமிழ் நாட்டு செட்டிகுலம், பரம்பரையாக வாணிபத் தொழில் செய்து வளர்ச்சியுற்றது. சிலப்பதிகார காலத்தில் அரசரோடு சமமாக வாழ்ந்த பெருங்குடி வணிகர்களைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பிற்காலத்திலும், வெளி நாட்டோடு வாணிகத் தொடர்புகொண்ட வணிகர்கள் அவர்கள் குலத்தினரே. அக்குலத்தில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் பொழுது அரண்மனையில் பிறந்த குழந்தைக்குச் சமமாக உயர்த்திப் பாடுகிறார்கள்.   செட்டியார் தாலாட்டு - 1   ஆராரோ ஆரிரரோ ஆறு ரண்டும் காவேரி, காவேரி கரையிலயும் காசி பதம் பெற்றவனே ! கண்ணே நீ கண்ணுறங்கு ! கண்மணியே நீ உறங்கு ! பச்சை இலுப்பை வெட்டி, பவளக்கால் தொட்டிலிட்டு, பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீ உறங்கு ! நானாட்ட நீ தூங்கு ! நாகமரம் தேரோட ! தேரு திரும்பி வர ! தேவ ரெல்லாம் கை யெடுக்க ! வண்டி திரும்பி வர ! வந்த பொண்கள் பந்தாட ! வாழப் பழ மேனி ! வைகாசி மாங்கனியே ! கொய்யாப் பழ மேனி ! - நான் பெத்த கொஞ்சி வரும் ரஞ்சிதமே ! வாசலிலே வன்னிமரம் ! வம்மிசமாம் செட்டி கொலம் ! செட்டி கொலம் பெத்தெடுத்த ! சீராளா நீ தூங்கு ! சித்திரப் பூ தொட்டிலிலே ! சீராளா நீ தூங்கு ! கொறத்தி கொறமாட ! கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல ! வேதஞ் சொல்லி வெளியே வர ! வெயிலேறி போகுதையா ! மாசி பொறக்கு மடா ! மாமன் குடி யீடேற ! தையி பொறக்குமடா - உங்க தகப்பன் குடி யீடேற ! ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ கண்ணுறங்கு !++   வட்டார வழக்கு: கொறத்தி - குறசாதிப் பெண்; கொறவர் - வேதம் பாடுவோர். சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்,   செட்டியார் தாலாட்டு - 2   ஆறாம் பெரியேரி அக்கரையும் பொன்னேரி பொன்னேரி போய் திரும்ப பொழுது இல்லா புண்ணியராம். நல்ல மாங்கொல்லையிலே புள்ளி மான் மேயுதடா, புள்ளி மான் புடிச்சிக் கட்ட புடி கவறு பொன்னாலே ! காசி யளப்பான் செட்டி மகன் முத்தாளப்பன் வேவாரி, வச்சியளக்கச் சொல்லி, வரிசையிட்டான் தாய்மாமன், அஞ்சு கிளி மையெழுதி-உங்க ஐயனார் பேர் போட்டு, கொஞ்சுக் கிளி போகுதப்பா ! கோவக் கனி கொண்டுவர, அன்னக் கிளி போகுதையா-உனக்குத் தின்னுங்கனி கொண்டுவர, தூங்கற கண்ணுக் கெல்லாம் துரும்புகிள்ளி மையெழுத கன்னான் மகனாம் நீ ! காசித் தட்டான் தன் மகனாம் ! செட்டி மகனாம் நீ ! சென்னு செட்டி பேரனாம், நீ ! மானத்து மீனாம் நீ ! மச்சி செட்டி தான் மகனாம் ! தோட்டத்து மீனோ நீ ! தொரைங்க கிளாமணியோ ! வண்டு கொடஞ்ச மரம் ! வாசலுக்கு ஏத்த மரம் ! தும்பி தொளச்ச மரம் ! தூணாகுமோ தொட்டிலுக்கு? ஏறாத மலையேறி, இளவாரை மூங்கைவெட்டி, எட்டாத தொட்டிலிட்டு எட்டாத தொட்டிலிலே, தொட்டாடும் கண்மணியே ! தொட்டிலிட்ட நல்லம்மான், பட்டினியாய்ப் போராண்டா, பட்டினியாய்ப் போன மாமன் - உனக்குப் பரியங் கொண்டு வருவானோ?++   வட்டார வழக்கு: வம்மிசம் - வம்சம்; பெத்த - பெற்ற; வேவாரி - வியாபாரி; கொறம் - குறம்; புடிச்சுக்கட்ட - பிடித்துக்கட்ட; மானத்து மீன் - வானத்துமீன்; தொளைச்ச - துளைத்த; தொரைங்க - துரைகள்; பரியம் - பரிசம். காசி அளப்பான் செட்டிமகன் - காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க. துரைங்க கிளாமணியோ! - துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.   குறிப்பு: காசிபதம் - நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று அழைப்பது வழக்கம். பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும் குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன. இதனைச் சோழர் காலத்திய கல்வெட்டுக்களால் அறிகிறோம். வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர் அறிந்திருந்தனர். அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக் குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து. தேர் - அரசனைப் போல இவன் வருங்காலத்தில் தேரில் செல்லுவான். கொறத்தி கொறமாட- குறத்தி குறமாட ; குறம் குறத்தியர் பாடும் ஒரு கூத்தைக் குறிக்கும். கொறவர் - குரவர், வேதம் பாடுவோர் பழங்காலப் பண்டிதர்கள் குரவர் என அழைக்கப் பட்டார்கள். அது பேச்சு வழக்காக வந்துள்ளது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி இங்கு பயின்று வந்துள்ளது. சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   தாலாட்டு தாயின் கனவுகள்   பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள்.   ஆராரோ, ஆரிரரோ மலட்டாறு பெருகிவர, மாதுளையும் பூச்சொரிய, புரட்டாசி மாதம் பிறந்த புனக் கிளியோ அஞ்சு தலம் ரோடாம்! அரிய தலம் குத்தாலம்! சித்திரத் தேர் ஓடுதில்ல ! சிவ சங்கரனார் கோயிலுல! காடெல்லாம் பிச்சி! கரையெல்லாம் செண்பகப்பூ நாடெல்லாம் மணக்குதில்ல! நல்ல மகன் போற பாதை.++ வண்டாளப் பட்சி, வயலெறங்கி மேயுதிண்ணு சிங்கார வில்லெடுத்து - நீ சிற கொடிக்க வந்த வனோ?   மதுரைப் பெரும்பாதை-ரெண்டு மங்கை நிண்ணு கோலமிட, குதிரைப் பதி போட்டு-சொக்கர் கோல மழிச்சாரே.   காடெல்லாம் ஓடி, கதறி அலை மோதி, காலெல்லாம் நோகுதையா, கனியே உனைத் தேடி   வண்டடையும் சோலை, மயிலடையும் குற்றாலம், வண்டடைஞ்ச சோலையிலே-நீ வந்தடைஞ்ச வான்மயிலே.   ஊருணியும் வெட்டி, உசந்த மடமும் கட்டி, தாரணியார் பூசை செய்ய-நீ தர்ம குல வம்முசமோ!   கடலோரம் கோயில் கட்டி, கந்த னென்று பேர் விளங்கி, அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர் ஆண்டி வேஷம் கொண்டாரோ? மாமன் பெருமை +செக்கச் சிவப்பரோ-உங்க மாமா சீமைக்கோர் அதிபதியோ அழகு சிவப்பரோட-ஐயா நீ அருமை மருமகனோ?   சின்னக் கிணறு வெட்டி சிங்கார கல் பரவி துவை வேட்டி போட்டு வரும் துரை ராஜா உங்கள் மாமா   ஏலக்காய் காய்க்கும், இலை நாலு பிஞ்கு வரும் ஜாதிக்காய் காய்க்கும் உன் தாய் மாமன் வாசலிலே   கல்லில் எலுமிச்சை காய்க்கும் கதலிப் பழம் பழுக்கும் முல்லைப் பூ பூக்குதில்ல உன் தாய் மாமன் கொல்லையிலே   தங்கக் குடை பிடிச்சு தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன் தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு தங்க மடம் கட்டலாமே   வெள்ளிக் குடை பிடிச்சு வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன் வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு வெள்ளி மடம் கட்டலாமே!   முத்தளக்க நாழி முதலளக்க பொன்னாழி வச்சளக்கச் சொல்லி வரிசை யிட்டார் தாய் மாமன்.   தெய்வமே காப்பு வாருமையா கந்தா வரங் கொடுமே வேலவரே தீருமையா இவன் பிணியை திருச்செந்தூர் வேலவரே   பச்சை நிறம் வள்ளி பவள நிறம் தெய்வானை சோதி நிறம் வேலவரு சொன்ன வரம் தந்தாரே!   புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு புளியந் தணல் உண்டு பண்ணி; பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை பொன்னிற மாய் வந்தாளே.   யாரடித்தார்? ஆரடிச்சா நீ யழுத? அடிச்சாரச் சொல்லியழு பேரனடிச் சாரோ பிச்சிப்பூ கைனால? மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ கைனால?   மாமன் கைச் சிலம்போ மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ பேரனார் கொண்டைக்கு வாடா மருக் கொழுந்தோ?   மகன் பெருமை +பட்ட மரம் பாலூறும், பாவல்காய் தேனூறும், உளித்தமரம் தான் தழையும், உத்தமியாள் வாசலிலே,   வடக்கே ஒரு மூங்கில் வளருதில்ல கல்மூங்கில் வில்லுக்கு வில்லாகும் விஜயனுக்கு அம்பாகும் சொற் கேளா அர்ச்சுனர்க்கு சுண்டு வில்லு அம்பாகும்   வடக்கே மழை பேஞ்சு வாசலெல்லாம் தண்ணி தண்ணி வந்த சயலிலே-நீ தங்கி வந்த தாமரையோ?   வடக்கே மழை பேஞ்சு வார்ந்த மணல் ஓடிவர நடந்து போ பாலகனே-உன் நல்ல தடம் நான் பார்க்க   வடக்கே ஒரு தாள் வர்ணலட்சம் பூப்பூக்கும் வாடை யடியாதோ வரிசை மகன் கண்ணயர   தெற்கு ஒரு தாழை தென் லட்சம் பூப்பூக்கம் தென்றல் அடியாதோ செல்ல மகன் கண்ணயர?   வைகை பெருகிவர வாளை மீன் துள்ளிவர துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா தூண்டி வலை போட்டாரே   பத்து வருஷமோ பாலனில்லா வாசலிலே கைவிளக்கு கொண்டு கலி தீர்க்க வந்தவனோ?   விளக்கிலிட்ட எண்ணெய் போல வெந்துருகி நிக்கயில கலத்திலிட்ட பால்போல கைக்குழந்தை தந்தாரே   மலடி மலடி என்று மானிடர்கள் ஏசுகிறார் மலட்டுக் குலமதையே-நீ மறப்பிக்க வந்தவனோ!   மலடி புழுங்கலை - ரெண்டு மான் வந்து திங்குதின்னு மாதாளங்கம்பு வெட்டி-நீ மான் விரட்ட வந்தவனோ   கொல்லையிலே தென்னை வச்சு குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு சீனி போட்டுத் திங்க செல்வமே பிறந்தவனோ!   வில்வப் பொடி மணக்கும் விரிச்ச தலைப் பூமணக்கும் கதம்பப் பொடி மணக்கும் கட்டழகன் கடந்தலிலே.   வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா? ; அழிச்சாரே - அழித்தாரே; வந்தடைஞ்ச - வந்தடைந்த;துவை வேட்டி- துவைத்த வேட்டி; வச்சளக்க - வைத்தளக்க; பூ வெறங்கும் - பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து   குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப் பொதுவாக இச்சொல் குறித்தது. “பட்டமரம்” “பாலூறும்” முதலியன. மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. ‘மலடி’ என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமமாம். மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது. சேகரித்தவர்:கார்க்கி இடம்:சிவகிரி வட்டாரம்.   தாலாட்டு வா, பசுவே வா   தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ? கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஒடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள்; முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது. இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.   கண்ணே கண்மணியே கண்ணுறங் காயோ! காரவீடோ கச்சேரியோ, கைநிறைந்த புத்தகமோ! ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ, செல்லத் துரைமகனோ! மானுறங்கும் மெத்தை, நீ மயில் உறங்கும் பஞ்சுமெத்தை தான் உறங்கா என் கண்ணே தவம் பெற்று வந்தவனோ! பட்டால தொட்டில், பவளக் கிலுகிலுப்பை முத்தாலா பரணம் முடியப் பிறந்தவனோ! மலையேறிப் பசுமேய மலைக்கெல்லாம் ஓசையிட பொழுதிறங்க வா பசுவே என் பொன்னு மகன் பால்குடிக்க மலை மேலே பசு மேயும் மலைமுடியும் ஓசை விடும் காலையிலே வா பசுவே கண்ணு மகன் பால் குடிக்க பொழுதுறங்க வா பசுவே என் பொன்னு மகன் பால் குடிக்க மாட்டுப் பால் போட்டால் மறுவழிஞ்சு போகுமின்னு ஆட்டுப்பால் போட்டா அறிவழிஞ்சு போகுமின்னு கலையம் கழுவி காராம் பசுக் கறந்து அடுப்பு மொழுவி அரும்பரும்பாக் கோலமிட்டு செம்பு வௌக்கி சிறு உமி பரப்பி தங்க வெற கொடிச்சு வெங்கலத்தால் பால் காச்சி பொன்னு சங்கெடுத்து போட்டாராம் உன் மாமன் இத்தனையும் செய்வதற்கு என்ன வெகுமதியோ கிண்ணத்திலே சந்தனமாம் கிளிமூக்கு வெத்திலையாம் சருகைத் தலைப்பாவாம் ஜாடை செய்யும் சால்வையாம்   வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு; போட்டா-புகட்டினால். சேகரித்தவர்: ம.கிருஷ்ணன் அனுப்பியவர்:கு. சின்னப்ப பாரதி இடம்:போத்தனூர் சேலம் மாவட்டம்,   தாலாட்டு வேட்டை   சிறுவன் சிவகிரியில் பிறந்தவன். மலைச்சாரலில் மான், பன்றி, முயல் போன்ற விலங்குகள் உண்டு. மலைச்சாரல் பயிரைக் காப்பதற்கும், இறைச்சி பெறுவதற்காகவும் சிவகிரி இளைஞர்கள், கடிநாய் பிடித்து வேட்டைக்குச் செல்லுவார்கள். இவர்களுள், சிறுவனது மாமன்மாரும் இருக்கிறார்கள். சிறுவனது தாய் அவர்களைப் பற்றித் தனது தாலாட்டில் கூறி, அவனது வீர உணர்வுக்கு உரமிடுகிறாள். அவர்கள் வேட்டையாடித் திரும்பும்போது அவர்களை வரவேற்க தலைப்பாகை அணிந்து, வல்லவாட்டுப் போட்டு மருமகனை வாசலில் நிற்கச் சொல்லுகிறாள்.   மானல்ல ஓடுது, மறிடா நல்ல தம்பி மான் ஓடும் நேரமெல்லாம் தானோடி வந்தவனோ காட்டக் கலைத்து உன்மாமன் கடி நாயை ஏவிவிட்டு வேட்டைக்குப் போராக, வீரபுலி உங்கமாமன், பன்றி படுமோ, பதினெட்டு மான் படுமோ, சிங்கம் புலி படுமோ, உங்க சின்ன மாமன் வேட்டையில வண்டாடிப் பூமலர, வையகத்தார் கொண்டாட-என் கண்ணே உன்னைக் கொண்டாடிப் பூமுடியும் உன் கோலத்திருமுடிக்கு ஏலக்காய் காய்க்கும்; இலை நாலு பிஞ்சுவிடும் சாதிக்காய் காய்த்து இறங்கும்-உன் தாய் மாமன் வாசலிலே பச்சை நிறம் வள்ளி, பவள நிறம் தெய்வானை சோதிநிறம் சுப்பையா சொன்ன வரம் தந்தாரோ! உசந்த தலைப்பாவோ, உல்லாச வல்லவட்டு நிறைந்த தலைவாசலிலே நீ நிற்பாய் மருமகனே!++   வட்டார வழக்கு: மானல்ல-மானல்லவா; போராக-போகிறார்கள்; தலைப்பா-தலைப்பாகை. சேகரித்தவர்:குமாரி பி. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   பெண் தாலாட்டு   பெண் குழந்தை நடை பயிலுகிறது ; தாய் அதன் தளர் நடையைக் கண்டு மகிழ்கிறாள். அவள் மனத்தில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. தன்மகள் பக்கத்து வீதிகளுக்குச் செல்லும்பொழுது அவள் வயதுப்பெண் குழந்தைகள் அவளோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டு அவளுடைய பந்தையும், செண்டையும் மறைப்பதை மனக் கண்முன் காண்கிறாள். குழந்தைக்கு இரண்டு அத்தைமார்கள் உண்டு; அவர்களுடைய தெரு வழியே செல்லும்பொழுது அவளைக் கண்டு அத்தை மக்கள், அவளது அழகில் ஈடுபட்டு அவள் வாயை முத்தமிடுகிறார்களாம். அத்தை மகன் பெண்ணுக்கு மாப்பிள்ளை முறையாவான். பல கணவர் முறை நிலவியிருந்த காலத்தில் கூட்டு மண முறைக்கு அத்தைமகன், மாமன் மகன் இவர்கள் மாப்பிள்ளை முறையாக இருந்தார்கள். சொத்துரிமை தந்தை வழியாக இறங்கத் தொடங்கிய பின்பு கூட்டு மணமுறை படிப்படியாக மறைந்துவிட்டது. அப் பழைய வழக்கத்தின் எச்சமாகவே முறைமாப்பிள்ளை முறைப்பெண் என்ற வழக்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது. பாப்பார வீதிக்கு -எங்க பொன்னு பந்தாடப் போனாலும்... பாப்பாரப் பொன்னுகண்டா பந்தெடுத்து மறைச்சிடுவா செட்டித் தெரு வீதிக்கு செண்டாடப் போனாலும் செட்டிச்சி பொண்ணு கண்டா செண் டெடுத்து மறைச்சிடுவா, கடலையே திண்ணுக் கிட்டு கட வீதி போனாலும் கட கெட்ட அத்தை மவன் கட வாயே முத்த மிட்டான் வெல்லத்தே திண்ணுக்கிட்டு வீதியிலே போனாலும் வெக்கங் கெட்ட அத்த மவன் வெறு வாயே முத்தமிட்டான்.++   வட்டார வழக்கு : திண்ணுக்கிட்டு-தின்று கொண்டு சேகரித்தவர்:முத்துசாமி இடம்:நாமக்கல் வட்டம் சேலம் மாவட்டம்.   சீட்டெழுதி விட்டாளாம்   சின்னாத் தங் கரையோரம் -எஞ்சின்னையா நீ சிறு மணலுக் கொழிக் கையிலே-உன் சின்ன அத்தைக் கண்டாளாம்-உனக்குச் சீட்டெழுதி விட்டாளாம்! பெரி யாத்தங் கரையோரம்-எஞ் சுப்பையா நீ பெரு மணலுக் கொழிக் கையிலே-உன் பெரிய அத்தைக் கண்டாளாம்-உனக்குப் பேரெழுதி விட்டாளாம் பனை பிடிங்கிப் பல் விளக்கி-நீ பயிர் போல நாமமிட்டால் நாமத்தின் அழகுகண்டு நச்சுவாளாம் அத்தை மகன்.   குறிப்பு: பல் விளக்கும் குச்சி பனைமரம்-உயர்வு நவிற்சி. உதவியவர்: புலவர் இராம ராசன் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:வேலூர்,சேலம் மாவட்டம்.   தாலாட்டு சாய்த்தாள் திருமுகத்தை   ‘வானர மதுரை’ என்னும் மானாமதுரையை தங்கள் புராதனப் பிறப்பிடமாக தேவர், கள்ளர் என்னும் சாதியினர் கருதுகிறார்கள். தாங்கள் ‘பாண்டியன்’ உறவினர் என்றும் நம்புகிறார்கள். இத் தாலாட்டுப் பாடலில் தாய் வருங்காலம் பற்றி காணும் கனவொன்றைச் சித்திரமாகத் தீட்டுகிறாள். மானாமதுரையில் பிறந்த இச் சிறுவன் தனது தங்கைக்குச் சீதனமாக பிறந்த ஊரையும், வென்று கொண்ட மதுரையில் பாதியையும் விட்டுக் கொடுத்தான். மதுரைக்கருகே தல்லா குளம் என்றோர் ஏரி உள்ளது. அதனையும் சேர்த்து தனக்குச் சீதனமாகத் தரவில்லையே என்று தங்கை சிணுங்கிக் கொண்டு திருமுகத்தைச் சாய்த்துக் கொண்டாளாம். “அண்ணன் எது கொடுத்தாலும், இன்னும் அதிகமாகக் கொடுக்கமாட்டானா என்று ஏங்கும் தங்கை உனக்குப் பிறக்கப் போகிறாள். அவள் ஆசையை நிரப்புமளவுக்கு, நிறையப் பொருள் சேர்க்கவேண்டும்” என்று பேச்சுப் புரியாத குழந்தைக்குத் தாய் போதிக்க முயலுகிறாள்.   உச்சிமலைக் கந்தா, உயர்ந்த மலை வேல்முருகா சாய்ந்த மலைக்கந்தா என் சஞ்சலத்தைத் தீருமய்யா சீரார் சிலம்போசை, என் செல்வ மகன் காலோசை பாரச் சிலம்போசை, நீ பைய வா பாலகனே! மழை பெய்து தண்ணீர் வர, வாந்த மணல் ஓடிவர, நீ நடந்து வா பாலகனே! உன் தடம் நான் பார்க்க ஐந்து தலையாண்டி, ஆறு முக வேலாண்டி பிச்சைக்கு வந்தாண்டி, பிள்ளைக்கலி தீர்த்தாண்டி மலட்டு ஆறு பெருகிவர, மாதுளையே பூ சொரிய புரட்டாசி மாத்தையிலே பொன் பெட்டகம் போல் வந்தவனோ! தாழை ஒரு மடலோ, உன் தாயாருக்கோ ஒரு மகனோ தாழை மடல் ஓலை கொண்டு தமிழ் படிக்க வந்தவனோ! மானா மதுரை விட்டு தங்கை மீனாளுக்கு மதுரையிலே பாதி விட்டு தல்லா குளம் தரவில்லைண்ணு தங்கை மீனா சாய்த்தாள் திருமுகத்தை   சேகரித்தவர்:குமாரி பி. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   காது குத்தக் காணிக்கை   குழந்தைக்குக் காது குத்தப் போகிறார்கள். அதற்கு மாமன் என்ன சீர் கொண்டு வருவான் என்று தாய் அனுமானம் செய்து பார்க்கிறாள். ஆசாரியை அழைத்துக் காதுக்குக் கடுக்கண் செய்யச் சொல்லுகிறாள். தோழியரை அழைத்துப் பாலனுக்குக் கண்திருஷ்டி வராமல் திருஷ்டி சுற்றச் சொல்லுகிறாள். பிறர், குழந்தையின் அழகைக் கண்டு ரசித்து விட்டால் அதற்கு நோய் வரும் என்று தமிழ்த் தாய்மார்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை புராதன மந்திரவாதத்தின் அடிப்படையில் எழுந்தது. சில கண்களுக்குத் தீமையை விளைவிக்கும் சக்தியுண்டென்பது மந்திரவாதக் கருத்து, கண்பட்டால் நோய் நொடி வரும் என்பது நம்பிக்கை. காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாயமொன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசைப் பட்டு விடுவானாம். அதனால் குழந்தைகள் இறந்துபோகும். எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் போதுமான். இந்த நம்பிக்கை தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், மத்திய ஆசியாவிலும், உலகமெங்கும் நிலவி வந்தது. குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு ஆகையால், இதனைப் பெண்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். இன்று இவ்வழக்கத்தின் உட்பொருள் நமது தாய்மாருக்குத் தெரியாது.   சீதைக்கும் இராமருக்கும் சிறந்த கலியாணம் சீரான மேளம் வரும் சிதம்பரத்து சங்கு வரும் காசியிலே மாலைவரும் கண் குளிர்ந்த இராமருக்கு பால் போல் நில வடிக்க, பரமசிவர் பந்தடிக்க பரமசிவர் பந்தை நீ பார்த்தடிக்க வந்தவனோ! ஈக்கி போல் நிலவடிக்க, இந்திரனார் பந்தடிக்க இந்திரனார் பந்தை நீ எதிர்த்தடிக்க வந்தவனோ ! முத்தளக்கும் நாழி ! முதலளக்கும் பொன் நாழி வச்சளக்கச் சொல்லி வரிசையிட்டார் தாய்மாமன் மாம்பிஞ்சு கொண்டு, மதுரைச் சிமிக்கி கொண்டு காது குத்த வாராக கனக முடி உங்களம்மான் மானா மதுரையிலே மாட்டடையும் மந்தையிலே மாட்டு விலை கூற வந்த மன்னன் மருமகனோ ! என் அரசன் காது குத்த என்ன செல்லும் ஆசாரி பாக்கு பதக்கு பச்சரிசி முக்குறுணி எள்ளு இரு நாழி இளந் தேங்காய் முந்நூறு அள்ளி விளம்புங்க நான் பெற்ற அருமை மகன் காதரிசி சிந்தி விளம்புங்க செல்ல மகன் குத்த பச்சை மூங்கில் வெட்டி பவள மூங்கில் நார் உரித்து சொச்ச மூங்கில் வெட்டங் குள்ள சுப்பையா சொன்ன வரம் தந்தாரோ ! ஏறய்யா இராவணா ! இறங்கய்யா மேடவிட்டு பாரய்யா இராவணா ! இராமர் படை போகிற பாவனையே பொட்டல்ல பொய்பலவா துரோபதைக்கு அத்தனையும் சாதிலிங்கம், சாதிலிங்கம் மேலிருந்து துரோபதை தருமர் கதைகேட்டாளோ ! பத்து வருஷமா என் கண்ணே-நீ பாலனில்லா வாசலிலே ! கை விளக்குக் கொண்டு நீ கலி தீர்க்க வந்தவனோ ! கண்ணே நீ உறங்கு என் கண்ணே கான மயில் நீ உறங்கு கண்ணுக்குக் கண்ணெழுதி-உன் கடைக் கண்ணுக்கு மையெழுதி கண்ணான கண்ணுக்கு என் ஐயா ! உனக்குக் கண்ணேறு தையாமல் சுண்ணாம்பு மஞ்சளும் சுத்தி யெறி சூரியர்க்கு   வட்டார வழக்கு: கண்ணேறு தையாமல்-கண்பட்டு விடாமல்.   சேகரித்தவர்:குமாரி பி. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   தாலாட்டு தந்தையும் மாமனும்   சிவகிரி ஜாமீனில் வேலை பார்த்து வருகிறார் தந்தை. சிறுவனிடம் அவர் பெருமையைப் பற்றிப் பேசுகிறாள் தாய். ‘அரைக்காசு சம்பளமென்றாலும் அரண்மனை சேவகமல்லவா? கைகட்டி வாய் பொத்தி ஜமீன்தாரிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரர் மனைவியின் கற்பனையில்,   “கோர்ட்டுத் துறந்து குறிஞ்சிமேல் உட்கார்ந்து, கேஸை விசாரிக்கும் கவர்னரோ உங்களப்பா”   கவர்னராகி விடுகிறார். அது போலவே அவளது சகோதரன் வில்லைச் சேவகனாக இருந்த போதிலும் அவளுடைய கற்பனையில்,   ‘தங்க வில்லைச் சேவுகரோ, உங்க மாமா தரும துரை வைத்தியரோ? பூமியில் உள்ளவர்க்குப் பிணிதீர்க்கும் வைத்தியரோ?’ இவ்வாறு உயர்ந்து விடுகிறான். தந்தையும், மாமனும் குழந்தைக்குப் பால் குடிக்க வாங்கும் சங்கு, தேய்த்துக் குளிக்க வாங்கும் எண்ணெய், காது குத்துச் சடங்குக்குக் கொண்டு வரும் வரிசைகள் இவையெல்லாம் அவள் கற்பனைத் திரையில் விரிகின்றன.   “என்னரசே என் கனியே என் ஐயா இது நாளும் எங்கிருந்தாய்! மாசி மறை விருந்தேன் மழைமேகம் சூழ்ந்திருந்தேன் மாதம் சென்றவுடன் மாதாவைப் பார்க்க வந்தேன் ஸ்ரீரங்கம் செந்திமலை நீ சேவிக்கும் பழனி மலை பழனிமலைக் கந்தனோ நீ பாதம் பணிந்த வனோ சங்கரலிங்கம் என் ஐயா நீ தனிக்கோடி இராமலிங்கம் பூரியத்து லிங்கத்தை நீ பூசை செய்ய வந்தவனோ! மான் கண்டேன் உன்னைப் போல் ஒரு மயில் கண்டேன் கானலிலே தேன் கண்டேன் கூட்டிலே உன்னைப் போல் ஒரு சிலை கண்டேன் கோயிலிலே தொந்தி குலுங்க துடை குலுங்க வேட்டி கட்டி அந்தி நடை நடந்து உங்களப்பா அதிகாரி வந்திறங்கி கோட்டுத் துறந்து குறிஞ்சிமேல் உட்கார்ந்து கேசை விசாரிக்கும் கவர்னரோ உங்களப்பா அரைக்குகந்த துயிலுடுத்தி அரண்மனைக்குப் போகையிலே துரைக் கிசைந்த வார்த்தை சொல்லும் உங்களப்பா ஜோதிக்கிளி வாயாலே. வேட்டி நயமோ உங்களப்பாவுக்கு வெளுக்க வண்ணான் கை மெதமோ, சல்லா மெதமோ உங்களப்பா சாமி கெட்டும் துப்புரவோ சீராட்டு நோம்பு சிவ நோம்பு நாளையிலே உனக்குத் தாலாட்ட வாராக மதுரைத் தாசிமார் எல்லோரும்   வட்டார வழக்கு: பூரியத்து - பூர்வீகமான.   சேகரித்தவர்:குமாரி பி. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   தாலாட்டு ஆசாரி வாரும்   குழந்தைக்கு இப்பொழுது தொட்டில் வேண்டும். நல்ல தொட்டிலாக ஆக்கமுள்ள தொட்டிலாகச் செய்ய வல்லவர் கழுகுமலை ஆசாரி. அவரை அழைத்து தொட்டில் செய்ய வேண்டிக் கொள்ளுகிறாள் தாய். தொட்டிலில் கிடக்கும் இவன், அடுத்த வருஷம் நடை பயிலுவான்; கால் முளைத்தால் அடுத்த தெருவிற்கு ஓடுவான், பந்தடிப்பான். அடுத்த தெருக்களிலுள்ள வேறு சாதி நண்பர்கள் இவனை அருமையாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் இவனை மதிக்க வேண்டுமானால் கை, காது, கழுத்து இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அணிந்திருக்க வேண்டாமா? அதற்காகச் செட்டியாரிடம் ஆபரணங்கள் வாங்குகிறாள் தாய். தந்தை வந்ததும் பணம் கொடுத்து அனப்புகிறார். ஆசாரி, ஆசாரி கழுகுமலை ஆசாரி கழுகுமலை ஆசாரி நான் பெத்தானுக்கு ஒரு நல்லூஞ்சல் கொண்டு வாரும் அடித்த கைக்கு மோதிரமும் அள்ளி விடச் சந்தனமும் செட்டிமார் தெருவிலே என் கண்ணே நீ சென்று விளையாடயிலே நான் பெத்தான், செட்டிமார் பெண்களெல்லாம் உன் செண்டு விலை மதிப்பார். பாப்பார தெருவிலே நான் பெத்தான் பந்து விளையாடயிலே பாப்பத்திப் பெண்களெல்லாம் உன் பந்தை விலை மதிப்பார் வெள்ளி மலைத் தெக் கொதுங்கி வேடர் எல்லாம் தானோடி வேடர் அறியாம வேங்கை மரம் ஏது வள்ளி காசி விசுவரோட, மனம் கலங்காத கண்டனோட பேசும் கிளி ராஜனோட பின் துணையா வந்த கண்ணோ! மங்களா கட்டி மாமரங்கள் உண்டு பண்ணி! மங்களா முன்னாலே நீ மல்கோவா மாம்பழமோ! கொல்லையிலே தென்னை வைத்து  குருத் தோலை பெட்டி செய்து சீனி போட்டுத் திங்க-நீ செல்லமாய்ப் பிறந்தவனோ! பட்டெடுத்தாலும் தொட்டி கெட்ட பசும் பொன்னெடுத்து பொட்டுரைக்க ஆட்டுங்க தாதியரே என் அன்னக்கிளி கண்ணயர வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே கோல வளையல் தொடும் குணத்துக்கொரு வளையல் தொடும் நீல வளையல் தொடும் நான் பெத்தானக்கு நிறத்துக்கொரு பச்சை தொடும் வளையல் தொட்ட செட்டி வயிறு எரிந்து போகாம அள்ளிப்பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் உங்களப்பா கல்லெடுத்து கனி சொறிஞ்சு கம்சனையே மார் வகுத்து ரூபம் செய்யும் மாயன் பெருமாளோ! பச்சை முடிமன்னரோ பவழமுடி இராவணரோ அச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு நெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தார் தாய்மாமன் கல்லெடுத்துக் கனி யெறிந்து உங்க மாமா காளி யோட வாதாடி, வில்லெடுத்து படை திரட்டும் நீ வீமன் மருமகனோ தவளை குலவையிட கோந்த மூர்த்தி தாமரையும் பூமலர தவளைச் சத்தம் கேட்டு இராமர்தள்ளி நடகொண்டாரோ காத்தடியா மூலையிலா கர்ணனுக்குத் தொட்டி கட்டி காத்தடிக்க நேர மெல்லாம் கர்ணன் தொட்டில் வீணை இசையாம் வெயிலடியா மூளையிலே வீமனுக்குந் தொட்டி கட்டி வெயிலடிக்க நேர மெல்லாம் வீமன் தொட்டில் தானாட தங்க வில்லை சேவுகரோ, உங்கமாமா தரும வைத்தியரோ செங்கல் சிகப்பரோ உங்கமாமா சீமைக்கு அதிபதியோ அதிக சிகப்பரோட ஆசை மருமகனோ! காஞ்சிவரத் தெண்ணை கண்ணே கரிக்குதிண்ணு தென் காசி எண்ணெய்க்கு உங்கப்பா சீட்டெழுதி விட்டாக வாசலிலே வண்ணமரம் உங்களப்பா வம்சமே இராச குலம் இராச குலம் பெற்றெடுத்த இரதமணியே கண்ணசர பூனைப் பால் பீச்சி புலிப்பால்ல உறையூத்தி ஆனைப்பால் காயுதில்ல உங்களப்பா அதிகாரி வாசலிலே வெள்ளி முழுகி என் கண்ணே உன்னை வெகு நாள் தவசிருந்து சனி முழுகி நோம்பு இருந்து நீ தவம் பெற்று வந்தவனோ! பால் சங்கு போட்டி பவள வாய் நோவுதின்னு பொன் சங்கு வாங்க போராக உங்களப்பா கடைக்குக் கடைபார்த்து கல் பதித்த சங்கு பார்த்து எடைக்கு எடைபார்த்து எதிர் எடைக்குப் பொன் வார்த்து வாங்கி வந்தார் தாய்மாமன்! எண்ணெய்க் கிணறுகளாம், எதிரே கொடிமரமாம் தண்ணீர்க் கிணறுகளாம் தட்டான் குளத்தா தங்கி இருக்கும் மண்டபமாம் மண்டபத்துக் குள்ளிருந்து தட்டான் குளத்தா மடிக் குழந்தை தந்தாளாம் தங்க விளக்கெரிய உங்க தாத்தா வாசலிலே விடி லாந்தல் நிண்ணெறிய வீம ராஜா வாசலிலே நீ விளையாட வந்த கண்ணோ! மட்டம் சிறு குழந்தை உங்கள் மாமனார் தேசமெங்கள் அன்னா தெரியுதில்லா உங்க மாமன்மார் அன்னக் களஞ்சியங்கள் முட்டாயிப் பெட்டி கொண்டு முதல் தரத்துச் சீனி கொண்டு பன்னீருச் செம்பு பார்க்க வாராக உங்களம்மான்   வட்டார வழக்கு: மங்களா-பங்களா; தொட்டி-தொட்டில்; கெட்ட-கட்ட; மார்-மார்பு; தட்டான் குளத்தா-நாட்டார் தெய்வம்.   குறிப்பு: தட்டான்குளத்தா-இது தாயின் பரம்பரை ஊர். அம்மனாகவோ, அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். ஒரு ஊரில் வசிப்பவர்கள் தூரத்து ஊர்களில் குலதெய்வம் இருப்பதுண்டு.   சேகரித்தவர்:P. சொர்ணம் இடம்:நெல்லை மாவட்டம்.   தாலாட்டு கோயிலுக்கு என்ன செய்வோம்?   குழந்தை, தாய் தந்தையர் மனம் குளிர வளர்ந்து வருகிறான். அவர்கள் மகிழ்ச்சி தாங்காமல் இவ்வரத்தைத் தனக்களித்தற்காக திருப்பதி வெங்கடாசலபதிக்கும், மதுரை மீனாட்சிக்கும்,உள்ளூர் திரௌபதியம்மனுக்கும் என்னென்ன நிறைவேற்றுதல்கள் செய்ய வேண்டுமென எண்ணியிருக்கிறார்களோ, அதனை மகனிடம் சொல்லுகிறாள்.   கட்டைக் களஞ்செதுக்கி, கருமலையைச் சூடேத்தி பொன்னைப் பொலி போடும் புண்ணியனார் பேரரசோ? சாலை பதிப்பமோ, சத்திரங்கள் கட்டுவேமா! மதுரைக்கும், திருப்பதிக்கும், வகுப்போமே பூஞ்சோலை, கடலுக்கு சம்சாரி, கப்பலுக்கு வியாபாரி, இனி வார கப்பலுக்கு, உங்க தாத்தா தீர்த்த கணக்காளி! செங்கல் அறுத்து நான் பெத்தாக்கு, சித்திரம் போல் வீடு கட்டி அண்ணாந்து பாரய்யா நம்ம தாத்தா அன்னக் களஞ்சியத்தை அரண்மனைக்கு மேற்கே ஆரவல்லி நாடகமாம் குறிஞ்சி போட்டுக் கூத்துப் பார்க்கும் கோர்டார் உங்களப்பா அவரமணி, துவரமணி, அரண்மனைக்கே ஒத்த மணி! துவரமணி பெற்றெடுத்த துரைமகனே நித்திரைசெய் மானத்து மீனோ! மேகத்துப் பன்னீரோ! தாகத்தைத் தீர்க்க வந்த தங்க ரதக் கிளியோ வெள்ளி வளையோடி மேகத்து மின்னோடி தங்க வளை ஒடுதில்ல உங்க தாத்தா அதிகாரி வாசலிலே பட்டணத்து வில்லையோ, பணம் பெற்ற பன்னீரோ, நித்தம் நித்தம் பூசி வரும் உத்தியோகஸ்தர் உங்களப்பா அத்திமரம் குத்தகையாம், ஐந்து லட்சம் சம்பளமாம், சாமத்தலை முழுக்கமாம், உங்களப்பாவுக்கு சர்க்கார் உத்தியோகமாம் நாலு தலை வாசல் நல்ல பெரும்பாதை பெரும்பாதை மேலிருந்து துரோபதை பெரும் பூசை கொண்டாளோ, செங்கல் அறுத்து துரோபதைக்கு சிமிழ் போல் வீடுகட்டி பாக்கு மரமறுத்து துரோபதைக்கு பல்லக்கலங்காரிச்சு பொன்னிலும் தங்கமோ, பூவிலும் அதிமணமோ! முன் ராசாக்கள் நீ முடிக்கும் பரிமளமோ! நாரிக்கு அழுதவனோ! நீ ராஜயோகம் கேட்டவனோ! தூரிக்கு அழுதவனோ! நீ சொக்கர் தவம் கேட்டவனோ! ராரிக்கோ, ராரி மெத்தை, நீ இராமருக்கோ பஞ்சு மெத்தை என் ஐயா! நீ பஞ்சு மெத்தை மேலிருந்து பஞ்சாங்கம் கேட்டவனோ! என்னரசன் என் கண்ணுக்கு இசைந்த புருவத்துக்கோ, தங்கப் பூக் கண்ணாடி சமைத்து வாரும் ஆசாரி, வண்டாடும் பட்சி, மலரும் இருவாட்சி, கொண்டாடிச் சூடுங்க, கோலத் திரு முடிக்கு கொல்லையிலே முல்லை, கொடி யோடிப் பூக்குது கொண்டைக்கு இசைந்த முல்லை கொண்டு வாரும் பண்டாரம்!   வட்டார வழக்கு : நான் பெத்தான்-நான் பெற்றவன்   சேகரித்தவர்:P. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   அழுகையமர்த்தல்   அழுகிற குழந்தை மானாமதுரைப் பிரம்பு கேட்டு அழுகிறான். தாய் தன் கணவன் பெருமையைக் கூறி பிரம்பு மட்டுமா, ஊரையே பெயர்த்துக் கொண்டு வர வேண்டுமானாலும், கொண்டு வரச் சொல்லுவோம் அழாதே என்று கூறுகிறாள். ஆனைக் கட்டிச் சூடடிக்கும் உன் ஐயாவிற்குப் பிரம்பா பெரிது? கேள், கொடுப்பார் என்று தாய் தன் குழந்தையைப் பேசத் தூண்டுகிறாள். மானாமதுரையிலே மணிப்பிரம்பு வித்த திண்ணு வாங்கித் தரலையிண்ணு-எங்கட்டி நீ ஏங்கித் தவிப்ப தேனோ! மதுரைக்கும் கிழக்க மழை பேயாக் கானலில தரிசாக் கிடக்குதுண்ணு உன்னய்யா! தனிச் சம்பா விட்டெரிஞ்சு மதுரைக்களம் செதுக்கி மாணிக்கச் சூடேத்தி ஆனை கட்டிச் சூடடிக்கும் உன்னய்யா அதிகாரி பேசுராரே மதுரை மீனா மன்னவர் தங்கை உனக்கு என்ன, என்ன சீதனங்கள் மானாமதுரை விட்டார் மல்லியில பாதி விட்டார் தல்லா குளமும் விட்டார்-தங்கச்சி சொக்கர் மீனாவுக்கு ஆனை அசைஞ்சு வர உன்னய்யாவோட ஆயிரம் பேர் சூந்துவர !   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   மாமன் பெருமை   ஆறு வண்டி நூறு சட்டம் அம்பத் தெட்டு குத்துக் காலாம் குத்துக்கால் பண்ணினவன் கொல்லி மலைத் தட்டானாம் அம்பக்கால் பண்ணினவன் அரியமலை தட்டானாம் மானத்திலே பூப்பரிச்சு மந்தையிலே தேர் சோடிச்சி தேரும் திரும்புதையா தேவாதிங்க கையெடுங்க கூனர் குருட ரெல்லாம் கோல் போட்டு ஏறு மலை சப்பாணி தாத ரெல்லாம் தவுந் தேறும் பொன்னு மலை தீத்த மலை நதி யளகும் திருணமலை ஜனத்தழகும் மதுரையிலே அம்மானாம்-கண்ணே மாலை கோக்கும் தட்டானாம் மாசிப் பெரையோ நீ-நான் பெத்த தவுந்து எழும் சூரியனே சேலத்தான் சந்தையிலே என் கண்ணே சித்தாடை விக்குதடா சித்தாடை வெலை மதிக்கும் சேனை பேர் அம்மானாம் பட்டணத்தான் சந்தையிலே பட்டு வந்து விக்குதடா பட்டு விலை மதிக்க பத்து பேர் அம்மானாம் நாகம் கொடை பிடிக்க-கண்ணே நல் பாம்பு தாலாட்ட வெள்ளி வட தேராம்-உனக்கு வெப்பாலம்-பூந் தேராம் கள்ளிக் கடைத் தேராம் கத்தாளைப் பூந் தேராம் அஞ்சிமலைக் கொஞ்சி வர-உனக்கு அழகுமலைத் தேரோட கண்ணே மலையழகா கண்மணியே நீ உறங்கு   குறிப்பு: அம்மான்-வன்னியன், தட்டான், சித்தாடை விலை மதிக்கும் அம்மான் என பலபேர் மாமன் முறையாக வருணிக்கப் படுகிறார்கள். குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பவர்கள், சமூக உறவுடையவர்கள்.   வளர்ப்பு மகன் தாய் தந்தையரை இழந்த குழந்தையை அத்தை தாலாட்டுகிறாள். பெற்றோர் இல்லாத குறையைப் போக்கத் தன்னையே அவனுக்குத் தாய் என்று கூறிச் செல்லமாகக் கொஞ்சுகிறாள்.   ஆத்திலே வண்ட லோட அக்கரையில் கதிர் மறைய மாலை மசுங்கையிலே மாமரம் சோலையிலே அண்ணன் மகனே நீ அருமையான மருமகனே எனக்குமே மகந்தாண்டா என்னருமை பாலகனே பெத்தவன் ஆத்தோட பேரு வச்சான் உசுரோட கத்தவனே உவராஜா கண்ணே நீ கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ-சாமி ஆறு லட்சம் வண்ணக் கிளி, செம்பவளத் தொட்டிலிலே-என் சீராளா நீ தூங்கு பச்சை வண்ணக் கட்டிலிலே பாலகனே நீ தூங்கு குருத்து வாழை போல-தொட்டிலிலே குதித் தாடும் பாலகனே மாம்பழ மேனியனே மயங்கி நீ கண்ணுறங்கு     மேலிரண்டு பாடல்களை சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்.   தாலாட்டு இத் தாலாட்டில் குழந்தையைப் பார்க்கவரும் மாமனைப் புகழ்ந்தும், சிற்றப்பனை இகழ்ந்தும் பேசுகிறாள் தாய். தனது சகோதரன் போன் பேசும் மந்திரியாகவும், தந்தி பேசும் மந்திரியாகவும் அவளுக்குத் தோன்றுகிறான். வராத சிற்றப்பன் இன்று வந்து விட்டதால் காகம் கரைகிறதாம்; செம்போத்து கத்துகிறதாம். விருந்தினர்கள் வந்தால் காகம் கரையுமென்பது, சகுன நம்பிக்கை. காகம் கரைந்ததும் யார் வருகிறார்கள்? “உங்கப்பா கூடப்பிறந்த கருங்குறவர் வாராகோ,” செம்போத்துக் கத்தியதும் யார் வருகிறார்கள்? “உங்கப்பா கூடப்பிறந்த செம்படவர் வாராகோ,” தன் குழந்தையைப் பெருமையாகப் பேசும் தாய், தங்கள் குலத்துதித்து, ஆழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.   ஆரிரரோ, ஆராரோ, கண்ணே ஆரிரரோ, ஆராரோ கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பால் போல் நிலவடிக்க கண்ணே பரமசிவர் பந்தாட பரம சிவரடித்த பந்தை பார்த்தடிக்க வந்த கண்ணோ! ஈக்கி போல் நிலவடிக்க-கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்தடிக்க வந்த கண்ணோ! பாலால் படி யெழுதி கண்ணே-நாங்கள் பல நாள் தவமிருந்தோம். நெய்யால் படி யெழுதி கண்ணே-நாங்கள் நெடு நாள் தவமிருந்தோம், நெடு நாள் தவமிருந்து பெற்ற-நித்திலமே நித்திரை போ நித்திரை செய்; நித்திரை செய், நெடிய புவி மன்னவனே சித்திரைப் பூந் தொட்டிலிலே சிகா மணியே நித்திரை போ யாரடித்தார் நீ யழுக அடித்தாரைச் சொல்லியழு சீரடிக்கும் கையாலே என் சிகா மணியே நித்திரைபோ, அம்மா அடித்தாளோ, கண்ணே அமுதூட்டும் கையாலே அக்கா அடித்தாளோ கண்ணே அள்ளி எடுக்கும் கையாலே பாட்டி அடித்தாளோ கண்ணே பால் வார்க்கும் கையாலே மாமா அடித்தானோ கண்ணே மல்லிகைப்பூச் செண்டாலே மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு மைதீட்டும் கையாலே தங்க மிதியடியாம் கண்ணே அது தாலுகா கச்சேரியாம் தாலுகா கச்சேரியில் உன் மாமன் தந்தி பேசும் மந்திரியோ! செட்டிமார் தெருவிலே என் கண்ணே செண்டு விளையாடப் போகையிலே செட்டிமார் பெண்டுக உன் செண்ட விலைமதிப்பார் பாப்பார் தெருவிலே பந்து விளையாடயிலே என் கண்ணே பாப்பார் பெண்டுக உன் பந்தை விலைமதிப்பார்.   சேகரித்தவர்:குமாரி P. சொர்ணம் இடம்:சிவகிரி,   தாலாட்டு (உங்கள் அப்பா) இத் தாலாட்டில் தாய், தன் கணவன் பெருமையையும், மாமனார் பெருமையையும் பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள். சிவகிரி ஜமீனில் கணக்கராக வேலை செய்யும் அவளுடைய கணவரை அவள்,   “கோடு திறந்து குரிச்சிமேல் உட்கார்ந்து கோட்டார் வழக்குப் பேசும் குமாஸ்தா உங்களய்யா.” என்று படம் தீட்டிக் காட்டுகிறாள். தனித்தமிழில் புதிய சொற்களைப் படைக்கும் பிரம்மாக்கள் இவளுடைய தமிழை பின்வருமாறு திருத்தி விடுவார்கள்: கோடு-(ஆங்கிலம்)-அறங்கூறவையம், குரிச்சி-(அரபு) நாற்காலி, கோட்டார்-நடுவர். குமாஸ்தா-(பெர்ஸியன்) எழுத்தர். இவற்றுள் நாற்காலி தவிர, பிற சொற்கள் நமது தமிழ்ப் பெண்களுக்கு விளங்காது. அச்சொற்கள் என்ன மொழிச் சொற்கள் என்று தாலாட்டுப் பாடும் தாய்மாரைக் கேட்டால், அவர்கள் தமிழென்றே சொல்லுவார்கள். தமிழினியற்கை மாறாமல் பிறசொற்களைப் பெண்கள் திரித்து வழங்கி தமிழ்ச் சொற்களஞ்சியத்தை பெருக்கி வருகிறார்கள். இம்முறைகளை மொழி இயலார் ஆராயவேண்டுமேயன்றி, இப்படித்தான் பேச வேண்டும் என்று உத்திரவிட எவர்களுக்கும் உரிமையில்லை. உத்தரவிட்டாலும் பேச்சு வழக்கை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்த தாய் குழந்தையின் முன்னோர் செய்து வைத்திருக்கும் தான தருமங்களை எல்லாம் கூறி, ஒளவையின் முதல் அறிவுரையான “அறஞ்செய விரும்பு” என்னும் கருத்தை மகனுக்குப் புகட்டுகிறாள். தந்தை, தமது குழந்தைக்குப் பால் புகட்ட வாங்கிய சங்கின் அருமை பெருமைகளை அழகாக வருணித்துச் சொல்லுகிறாள்.   ஒசந்த தலைப்பாவாம் உல்லாச வல்லவட்டாம் நிறைஞ்ச சபையில நிப்பாக உங்களய்யா. கோடு திறந்து குரிச்சிமேல் உட்கார்ந்து கோட்டார் வழக்குப் பேசும் குமாஸ்தா உங்களய்யா. அத்திமரம் குத்தகையாம் அஞ்சு லக்ஷம் சம்பளமாம் அய்க்கோடு வேலைக்கு அநேகம் பேர் வந்தாக காஞ்சி வனத் தண்ணே, கண்ணே கரிக்குதுண்ணே தெங்காஞ்சி எண்ணெய்க்கே சீட்டெழுதி விட்டாக பால் சங்கு போட்டு, பவளவாய் நோகுதிண்ணு, பொன் சங்கு வாங்க போராக பொன் மருத, மருதக்கட திறந்து மனசுக் கேத்த சங்கெடுத்து, சுத்தி வர சிகப்பு வச்சு, தூருக்கோர் பச்சை வச்சு வாயிக்கு வர்ணம் வச்சு வாங்கி வந்தாக ஒங்களய்யா! மருத அழகரோ வாழ் மருத சொக்கரோ, திருமால் அழகரோட சேதிக்கோ வந்தவனோ கல்லிய நெல் விளையும் கானலெல்லாம் பூமணக்கும் புல்லிள நெல் விளையும் புண்ணியனார் போற பாதை குளிக்க கிணறு வெட்டி கும்பிட வோர் கோயில் கட்டி படிக்க மடம் கட்டி வைக்க பாண்டியனார் பேரனோ-++   வட்டார வழக்கு: அய்க்கோடு-ஹைக்கோர்ட்; காஞ்சிவனம்-காஞ்சிபுரம்; மருத-மதுரை; தென்காஞ்சி-தென்காசி; போராக, வந்தாக-போகிறார்கள், வந்தார்கள்.   குறிப்பு: கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் என்பது தான தருமங்களாகும்.   சேகரித்தவர்:கார்க்கி இடம்:சிவகிரி.   தாலாட்டு நச்சிரையா கண்ணுறங்கு   சொந்த நிலத்தில் பாடுபட்டுச் சீராக வாழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தவள் அவள். அவளுக்குத் தலைச்சன் குழந்தை பிறந்ததும் நாட்டில் பஞ்சம் தோன்றியது. வயிற்றுப் பிழைப்பிற்காக, பிறந்த ஊரை விட்டு மலைச் சரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு அக் குடும்பத்தார் வேலை தேடி வந்தவர்கள். காட்டு விலங்குகள் பயங்கரமாக கர்ஜிக்கும் இரவு நேரத்தில், களைப்பால் கண்ணயர வழியில்லை. குழந்தை வேறு கதறிக் கொண்டு தொல்லை கொடுக்கிறான். நச்சரவு போலத் தாயை உறங்க விடாமல் தொந்தரவு செய்கிறான். தனது மனவேதனையை வெளிப்படுத்தி அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுகிறாள் தாய்.   சீரான அயோத்தி சீமை விட்டுக் காடு வந்தோம் காடு மலைகளிலே கரடி புலி ஆளி சிங்கம் கூடி வாழு மிந்த கொடு வனத்தே நித்திரைபோ அச்ச மில்லை என்று சொல்லி அரசாண்டு வீற்றிருந்தோம் நச்சரவு போல வந்த நச்சிரையா கண்ணுறங்கு++   வட்டார வழக்கு: ஆளி-யாளி.   குறிப்பு: நமது கோயில்களில் நாயக்கர் கட்டிய மண்டபங்களில் சிங்க முகமும், துதிக்கையும் கொண்ட கற்பனை மிருகம் ஒன்றைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இது சிங்கத்தைவிட வலிமையுடையது என்று காட்ட சிங்கம் அதன் கால்களிடையே பதுங்கியிருப்பது போல் செதுக்கியிருப்பார்கள். இதற்கு யாளி என்று பெயர். அதனைத்தான் ‘ஆளி’ என்று பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   சேகரித்தவர்:வாழப்பாடி சந்திரன் இடம்:சேலம் மாவட்டம்.   ஆசாரிக்கு என்ன தந்தார்?   தொட்டிலின் மேல் பகுதியில் அழகான பறவை உருவங்களைத் தொங்க விடுவார்கள். தொட்டில் ஆடும்பொழுது அப்பறவைகளும் அசைந்தாடும். வண்ணத் துணியில் பஞ்சு அல்லது உமி அடைத்து அழகிய கிளிப் பொம்மைகள் செய்யும் பலதொழில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். முதன் முதலில் குழந்தையைத் தொட்டிலிடும் தினத்தன்று ஊர்த்தச்சர் சிற்ப வேலைப்பாடமைந்த தொட்டில் ஒன்றைக் கொண்டுவந்து கொடுப்பார். தையல்காரன் வண்ணத்துணிகளால் கிளி செய்து கொடுப்பான். இக் கலைஞர்களுக்குப் பெண்ணின் உற்றார் உறவினர்கள் பரிசுகள் கொடுத்தனுப்புவார்கள். தமிழ்நாட்டில் இத்தகைய கலைகள் இப்பொழுது அழிந்து வருகின்றன. அழகற்ற இரப்பர் பொம்மைகளையும், கலைச்சிறப்பற்ற இரும்புத் தொட்டில்களையும் நம் வீடுகளில் வாங்கி வைக்கிறோம். தமிழரின் அழகுணர்ச்சி குறைந்து விட்டதைத்தான் இது காட்டுகிறது. இப்பாடலில், மாமன் செய்த வரிசைகளைத் தாய் மகிழ்ச்சியோடு புகழ்ந்து கூறுகிறாள்.   அஞ்சு கிளி ரெண்டெழுதி அம்மா எனும் பேரெழுதி கொஞ்சு கிளி ரெண்டெழுதி கொண்டு வந்தார் ஆசாரி கொண்டு வந்த ஆசாரிக்கு என்ன தந்தார் ஏது தந்தார்? வெளையாடப் போன பக்கம் வெயில் படும் என்று சொல்லி வெள்ளியாலே கால் நிறுத்தி வெத்திலையால் பந்தலிட்டு பொன்னாலே கால் நிறுத்தி பூவாலே பந்தலிட்டு கமுகாலே கால் நிறுத்தி கரும்பாலே பந்தலிட்டு தங்கத்தால் கால் நிறுத்தி தாமரையால் பந்தலிட்டு-அதிலே பிள்ளை விளையாடுமென்று அறிக்கை உட்டார் உன் மாமன் பாட்டனார் எல்லையிலே பட்டு வந்து விக்கி தென்று பட்டு விப்பார் செட்டி மவன் பணம் கொடுப்பார் உன் மாமன் முப்பாட்டான் எல்லையிலே முத்து வந்து விக்கி தென்று முத்து விப்பார் செட்டி மவன் முடி கவுப்பார் உன் மாமன்++   வட்டார வழக்கு: உட்டார்-விட்டார்; விக்கிது-விற்கிறது; விப்பார்-விற்பார்; முடி கவுப்பார்-முடி கவிழ்ப்பார்.   உதவியவர்: புலவர் ராமராசன் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:வேலூர்,சேலம் மாவட்டம்.           விளையாட்டு   சிறு வீடு   மார்கழி மாதம் சிறுவர்கள் சிறுவீடு கட்டி விளையாடுவார்கள். அங்கே செங்கல் அடுப்புபோட்டு சிறு பொங்கல் பொங்குவார்கள். திருமணம், குடும்ப விவகாரங்கள் எல்லாம் இங்கே நடக்கும். வீட்டில் நடந்த தகராறுகள் இங்கே நாடகமாக நடிக்கப்படும். ஒரு சிறுமி தனது கணவனான சிறுவன், சோறு இல்லை என்ற காரணத்தால், தன்னை அடிக்க வந்ததைத் தோழியிடம் கூறுகிறாள்: நண்டு ஒன்று பிடித்து துவையல் அரைத்து வைத்து கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாளாம். அவன் நெடு நேரம் வராததால் அவள் சாப்பிட்டு விட்டாளாம். அவள் சாப்பிட்டவுடன் அவன் வந்தானாம். உணவு இல்லை. அவன் அவளை அரட்டுவதையும் மிரட்டுவதையும் அவளே சொல்லட்டும்.   நண்டே நண்டே சிறு செங்கால் நண்டே, உசிரிருக்க ஒடிருக்க உன்னைப் பிளந்து, ஒரு குத்துப் புளியங்கா தொவையல் வச்சி, கன்னாங் கலத்தையும் கழுவி வச்சி, வருவான் வருவான்னு வழி பார்த்தேன் வராது போகவும் வழிச்சுக்கிட்டேன். வந்தாண்டியம்மா மலை வயித்தன், குத்தக் குத்த வந்தாண்டி குரங்குமூஞ்சி, ஏலகிரி யெல்லாம் கிடுகிடுக்க எடுத்தாண்டி சிலுக்குத் தடியை அடிக்க அடிக்க வந்தாண்டி ஆனைவயித்தன், அடிச்சிட்டுப் போகச் சொல்லு- ஙொப்பன் மவனை!   வட்டார வழக்கு: வழிச்சுக்கிட்டேன்-தின்றுவிட்டேன்; வயித்தன்-வயிற்றான் (வயிறு உடையவன்); ஙொப்பன்-உங்கள் அப்பன்.   சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்.   கண்ணாமூச்சி   இவ்விளையாட்டிற்குத் தலைவன் ஒருவன் வேண்டும். அவனை “தாச்சி” என்று அழைப்பார்கள். சில சிறுவர்களில் ஒருவனைத் தேர்ந்தேடுத்து அவன் கண்களிரண்டையும் தாச்சி பொத்திக் கொள்வான். மற்றவர்கள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வார்கள். எல்லோரும் ஒளிந்து கொண்டபின் தலைவன் கண்களைத் திறந்துவிடுவான். அவன் தேடிச் சென்று யாரையாவது தொடவேண்டும், அதற்குள் ஒளிந்து கொண்டவர்கள் ஓடிவந்து தலைவனைத் தொடவேண்டும். எல்லோரும் தொட்டு விட்டால் தேடிச் சென்றவனே மறுபடி கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். இவ்விளையாட்டில் முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வதற்கு யாரும் இணங்க மாட்டார்கள். முதலில் யார் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு வழி கையாளப்படுகிறது. தாச்சி எல்லோரையும் வரிசையாக நிறுத்துவான் ஒரு பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து ஆளுக்கு ஒரு சொல் வீதம் சொல்லி, தொட்டுக் கொண்டு வருவான். பாட்டின் கடைசிச் சொல் வந்ததும் யாரை அவன் தொடுகிறானோ, அவன் விலகிக் கொள்வான். மீண்டும் பாட்டைச் சொல்லி முன் போலவே ஒவ்வொருவராகத் தொட்டு வருவான். இவ்வாறகக் கடைசியாக மீதமிருப்பவன் கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். அப்பாட்டின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்படுகிறது. கண்ணைக் கட்டவேண்டியவனை வேறொரு முறையிலும் தேர்ந்தெடுப்பதுண்டு. பலர் வட்டமாக உட்கார்ந்து கொள்வர். அவர்கள் ஒரு கையைத் தலைமேல் வைத்துக் கொள்வர். விளையாட்டுத் தலைவன் ஒரு பாட்டின் சொற்றொடர்களைச் சொல்லிக்கொண்டே தொட்டுக் கொண்டு வருவான். கடைசியில் ‘கையெடு’ என்று சொல்லிக் கொண்டு யாரைத் தொடுகிறானோ அவன் விலகிக்கொள்வான். கடைசியில் ஒருவன் மீதம் இருக்கும்வரை இது நடைபெறும். மீதமிருப்பவன் விலகியவர்கள் ஒவ்வொருவருடைய கையையும், பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு சுடுகிறது, சுடுகிறது என்று சொல்வான். யாராவது ஒருவனுடைய கையைக் கன்னத்தில் வைத்துக் கொள்ளும் போது ‘குளிர்கிறது’ என்று சொல்வான். அவன்தான் கண்ணைப் பொத்திக் கொள்ள வேண்டும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன.   (குறிப்புரை S.S. போத்தையா) பச்சத் தவக்காட பளபளங்க பழனி பச்சான்-மினு மினுங்க செங்கரட்டி-சிவத்தப்பிள்ளை கிண்ணா வந்தான்-கிணுக்கட்டி உடும்பு-துடுப்பு மகா-சுகா பால்-பறங்கி எட்டுமன்-குட்டுமன்-ஜல் ஒருப்பத்தி-இருப்பத்தி ஒரிய-மங்கலம் சீப்பு-சினுக்கவலி உங்கையா-பேரன்ன? முருக்கந் தண்டு-திண்ணவரே முள்ளிச் சாறு-குடிச்சவரே தார் தார்-வாழைக்காய் தாமரைக் குத்தி-வாழைக்காய் புதுப் புது மண்டபம் பூமா தேவி கையெடு++   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   சிறுவர் பாடல்கள் குழந்தைக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்பதற்குச் சில எளிய சொற்களைச் சேர்த்துப் பாடும் பாடல்கள் ஒருவகை. இவற்றைப் பிறர் பாட, குழந்தைகள் திருப்பிச் சொல்வார்கள். தமிழ் நாட்டில் பலவகையான குழந்தை விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு பாட்டு உண்டு. இவற்றில் கோஷ்டி விளையாட்டுக்களில் ஒரு கோஷ்டியார் ஒரு பாட்டைப் பாட, எதிர் கோஷ்டியார் அதற்குப் பதில் பாட்டுப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களில் சடு குடு, கழங்கு முதலியவற்றைத் தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் சேர்த்துள்ளோம். இப் பகுதியில் மேலும் சில பாடல்களை வெளியிடுகிறோம். இவற்றில் பொருளை விட சந்தப் பயிற்சியும், சொற்பயிற்சியுமே முக்கியமாகக் காணப்படுகிறது. சடு குடு   உடற் பயிற்சிக்கும், சுவாசப் பயிற்சிக்கும், இவ் விளையாட்டு மிகவும் சிறந்தது. இதனை விளையாடும் முறை அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சிக்குள் உப்பைத் தாண்டிச் செல்லும் சிறுவன் சடு குடுப் பாடலைப் பாடிக் கொண்டே செல்வான். இப்பாடல் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். இரண்டு பாடல்கள் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.   நான்தான் வீரன் நல்ல முத்து பேரன் வெள்ளிப் பிரம்பு எடுத்து விளையாட வாரேண்டா தங்சப் பிரம்பு எடுத்து தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா, குடு குடு சல்லி குப்பன் சல்லி ராவூத்தன் சல்லி ரவ்வாச் சல்லி வேத்து வடியும் சாராயம் காத்து இருந்து பூசை பண்ணும் காவடிப் பண்டாரம் சடு குடு என்பது சாட்டை என்பது மேட்டுப் பத்திரி முத்தையா நாடான் செத்துக் கிடக்கான் சம்புருக் கொண்டாடா சம்புருக் கொண்டாடா   சேகரித்தவர்:எம். பி. எம். ராஜவேலு   இடம்:மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம்   திருநெல்வேலி மாவட்டம்.   விளையாட்டு ஐயன் கொம்பு   தரையில் உட்கார்ந்து கால் பெருவிரலைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் பதில் சொல்லுவார்கள். இப்பாடலுக்குப் பொருள் எதுவும் இல்லை. கே : இதாரு கொம்பு? ப   :ஐயன் கொம்பு கே : ஐயன் எங்கே? ப   :பூப்பறிக்கப் போயிட்டான் கே :பூவெங்கே? ப   :தண்ணியிலே கிடக்கு கே : தண்ணி எங்கே? ப   : ஆடு மாடு குடிச்சிடுச்சு கே :ஆடு மாடு எங்கே? ப   :கள்ளன் கொண்டு போயிட்டான் கே :கள்ளன் எங்கே? ப   :மரத்தில் இருக்கான் கே :வெட்டவா குத்தவா,வென்னித்தண்ணி ஊத்தவா?   குறிப்பு: குழந்தைகளுக்குக் கேள்விகளுக்குச் சட், சட்டென்று பதிலளிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு உண்டாக்கும். திடீரென்று கேள்வியும் பதிலும் புதிது, புதிதாகத் தோன்றலாம்.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திகுளம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.       விளையாட்டு ஆடும்-ஓநாயும்   வரிசையாக ஒருவன் இடுப்பை மற்றவன் பிடித்தபடி சிறுவர்கள் நிற்பார்கள். இவர்கள் ஆடுகள், ஒருவன் மட்டும் சுற்றிவந்து கூட்டத்திலிருந்து பிரிபவனைப் பிடிக்க முயலுவான். அவன் ஓநாய். ஆடுகளும், ஓநாயும் பாட்டுப் பாடிக் கொண்டே விளையாடும் இந்தப் பாடல் விளாத்திக்குளம் பகுதியில் பாடப்படுவது.   ஓநாய் : என்னாட்டைக் காணோமே ஆடு : தேடிப் பிடிச்சுக்கோ ஓநாய் : அடுப்பு மேலே ஏறுவேன் ஆடு : துடுப்பைக் கொண்டு சாத்துவேன் ஓநாய் : நெல்லைக் கொறிப்பேன் ஆடு : பல்லை உடைப்பேன் ஓநாய் : வடிதண்ணியைக் கொட்டுவேன் ஆடு : வழிச்சு வழிச்சு நக்கிக்கோ ஓநாய் : கோட்டை மேலே ஏறுவேன் ஆடு : கொள்ளி கொண்டு சாத்துவேன் ஓநாய் : என்னாட்டைக் காணோமே? ஆடு : தேடிப் பிடிச்சுக்கோ.++   சேகரித்தவர்:S.S போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.   குச்சி குச்சி ராக்கம்மா இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு பெண்கள், கையைத் தோளின்மேல் போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஒருபக்கத்திலுள்ள கட்சியார் கேள்வி கேட்பார்கள். மற்றொரு பக்கத்திலுள்ளவர்கள் பதிலுரைப்பார்கள். கேள்வி: குச்சிக் குச்சி ராக்கம்மா பெண்ணுண்டோ? கூடசாலி ராக்கம்மா பெண்ணுண்டோ? சாதி சனமெல்லாம் பெண்ணுண்டோ? சம்பந்த வழியெல்லாம் பெண்ணுண்டோ?   பதில்: குச்சி குச்சி ராக்கம்மா பெண்ணில்லை கூடசாலி ராக்கம்மா பெண்ணில்லை சாதிசனமெல்லாம் பெண்ணில்லை சம்பந்த வழியெல்லாம் பெண்ணில்லை   கேள்வி: குச்சி குச்சி ராக்கம்மா நூறு ரூபாய் கூடசாலி ராக்கம்மா நூறு ரூபாய் சாதிசனமெல்லாம் நூறு ரூபாய் சம்பந்த வழியெல்லாம் நூறு ரூபாய்   பதில்: குச்சி குச்சி ராக்கம்மா அது வேண்டாம் கூடசாலி ராக்கம்மா அது வேண்டாம் சாதி சனமெல்லாம் அது வேண்டாம் சம்பந்த வழியெல்லாம் அது வேண்டாம்   குறிப்பு: இப்படியே, “சாயச்சேலை”, “சரிப்பளி” என்று பலபொருள்களையும் சொல்லிப் பெண் கேட்பார்கள், எதிர்க்கட்சியினர் வேண்டாம், வேண்டாம் என்பார்கள்.   சேகரித்தவர்:S.S போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.   உச்சரிப்பு விளையாட்டுக்கள்   உச்சரிப்புத் திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவாகச் சொல்லிப் பழக வேண்டும்.  அவற்றுள் ‘ர’, ‘ற’ கரங்களும், ன, ண கரங்களும், ல, ள, ழ கரங்களும் விரவி வரும்.  விரைவாகவும் சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும். +ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறுநரி, சிறு நரி முது கிலே ஒரு பிடி நரை மயிர் (திரும்பத் திரும்ப) கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது தத்தளிக்குது, தாளம் போடுது   சேகரித்தவர்:S.S போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.                        காதல்   ஏன் வேலை செய்ய முடியவில்லை   நிலம் தரிசாகக் கிடக்கிறது.  அவனுடைய காதலி வயலுக்கு வருகிறாள்.  அவளிடம் அவன் ஏன் வேலை ஓட வில்லை? என்று சொல்லுகிறான்.  அவளும் தனக்கு வேலை ஓட வில்லையென்றும், அதற்குக் காரணம் என்னவென்றும் சொல்கிறாள். ஆண் பாடுவது வண்டாளம் மரத்துக் காடு வண்ணமுத்து உழுகும் காடு தங்கம் விளையும் காடு தரிசாய்க் கிடக்கிறது. மஞ்சள் பூசியல்லோ மதுரைப் பாதை போற புள்ளே ஒம் மஞ்சள் வாடை தட்டி வரப்பு வெட்டக் கூடலியோ? பச்சிலை கழுத்தில் வச்சி பாதை வழி போற புள்ளே-ஒம் பச்சிலை வாடை தட்டி வரப்பு வெட்டக் கூடலியோ? அரிசி குத்தி மடியில் வைத்து ஆவாரம் பூப் பொட்டும் வச்ச சொருகு கொண்டை வெள்ளையம்மா-நீ சோறு கொண்டு வாரதெப்போ? பெண்கள் பாடுவது கார வீட்டுத் திண்ணையில கரிக்கு மஞ்சள் அரைக்கியல எந்தப்பய தூத்துனானோ-எனக்கு இழுத்தரைக்கக் கூடலியே கேப்பைப் கருது போல கிளி போல பெண்ணிருக்க எனக்குண்ணு இருக்கானே எண்ணங் கெட்ட பாவி மகன் புல்லு அறுக்கையிலே புளியம் பூவும் கொண்டு போனேன் புளியம் பூ வாட தட்டி-நான் புல்லறப்ப மறந்து விட்டேன் வாய்க்கா வரப்பு சாமி ! வயக்காட்டு பொன்னு சாமி ! களை எடுக்கும் பொம்பளைக்கு காவலுக்க வந்தவனே !   சேகரித்தவர்:S.S போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம் நெல்லை மாவட்டம்.   எதிர்ப் பாட்டு ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் செல்லுகிறது. ஆண் : அஞ்சு ரூபா தாரேன் அரக்கு போட்ட சேலை தாரேன்-உன் ஆத்தாள் அறியாம நீ வாக்கப்பட்டு வந்திரடி பெண் : அஞ்சு ரூபா வேண்டாம் அரக்குபட்டு சேலை வேண்டாம் தட்டான் அறியாம-நீ தாலி பண்ணி வந்திரடா ஆண் : தட்டான் அறியாம தாலி பண்ணி நானும் வந்தா அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ பருப்புச் சோறு பொங்கி வாடி பெண் : அடுப்பங்கட்டி மூணில்லாம பருப்புச் சோறு பொங்கி வந்தா நாவுல பட்டிராம-நீ நவட்டி முழுங்கிரணும்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   அத்தை மகன்முறை   அவளுக்கு அவன் அத்தை மகன் முறை. இருவரும் காதலித்துக் கூடுகிறார்கள். அத்தைமகன் அவளோடு கொஞ்சிப் பேசுகிறான். கிண்டலும் கேலியும் கலந்து அவளை வாயடைத்து வெட்கித் தலைகுனிய வைத்துவிட முயலுகிறான். பேச்சில் அவனுக்கு அவள் அடங்கவில்லை. அத்தைமகன் முறையாலே சற்று வாயை அடக்கிக்கொள்ளுவதாகச் சொல்லிக்கொண்டே அவன் வாயை அடக்கப் பார்க்கிறாள். போட்டியில் வெற்றி இருவருக்கும்தான் !   ஆண் : ரோட்டோரம் தோட்டக்காரி மல்லியப்பூ சேலைக்காரி நீ இறைக்கும் தண்ணியிலே மல்லியப்பூ மணக்குதடி! பெண்: அஞ்சு கிணத்துத் தண்ணி அரைக் கிணத்து உப்புத்தண்ணி செம்புக் குடத்துத் தண்ணி சேருறது எந்தக் காலம்? ஆண் : பொலி போடும் காட்டுக்குள்ள பொதுக் கடை போடயில நீ வாடி செவத்தப் புள்ள உனக்குழக்கு நெல் தாரேன் பெண் : நிலக்கடலை நாழி வேணும் நேரான பாதை வேணும் ஜோடி மட்டம் ரெண்டு வேணும் சொகுசா வழி நடக்க ஆண் : மஞ்சக் கிழங்கு தாரேன் மார்புக் கேத்த ரவிக்கை தாரேன் கொஞ்சி விளையாடி உனக்கு குழந்தை கையிப் புள்ள தாரேன் பெண் : காடைக் கண்ணி மாவிடிச்சு கருப்பட்டியும் சேர்த்திடிச்சு தின்னு ருசி கண்டவரே தின்னக் கூலி கட்டிடுவேன் ஆண் : ஆத்துல கடலைச் செடி அதுல ரெண்டு செவலக் காளை செவலக் காளை விலை பெறுமோ குமரிப் புள்ள கைவிளைவி? பெண் : குத்துக்கல்லு மேலிருந்து குறும்பு பேசும் மச்சானே அத்தை மகன் முறையாலே அடக்கிக் கொண்டேன் மையலிலே ஆண் : சுண்டப் பழமே-நீயே ! சுங்கொடிச் சேலைக்காரி கண்டு என்னப் பாராமல் சூதமாகிப் போனாயடி பெண் : மச்சானே மன்னவரே மனசிலயும் எண்ணாதிங்க சூதமாகிப் போறாமிண்ணு சூசகமாச் சொல்லாதிங்க ஆண் : ஆத்தோரம் நாணலடி அதன் நடுவே செய்வரப்பு செய்வரப்புப் பாதையிலே தேனமிர்தம் உண்கலாமோ? பெண் : முத்துப்பல்லு ஆணழகா ! மெத்த மையல் கொண்டவரே ! ஆத்தில் தலைமுழுகி-உங்க ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.   வட்டார வழக்கு: சூதமாகி-கள்ளத்தனமாய்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   காதலில் போட்டி கிணற்றில் இறங்கி அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளையே பின் தொடரும் அத்தை மகன் அங்கு வந்து நின்று கண்ணைச் சிமிட்டுகிறான். இவனுடைய அன்பில் வீரம் பிறக்குமா, அல்லது எதிர்ப்பைக் கண்டு அச்சம் பிறக்குமா என்று சோதிக்க அவள் விரும்புகிறாள். அவளுக்கு மாமன் பிள்ளைகள் பலர் உண்டு. அவர்கள் முறை மாப்பிள்ளைகள் அல்லவா? அவர்களுடைய குத்தகை மாந்தோட்டம் மலையில் இருந்தது. அங்கே அவர்கள் அடிக்கடி போவார்கள். அவர்களை அழைப்பது போலப் பாவனை செய்கிறாள். அவன் பயந்து நடுங்காமல் தன்னோடு தூரக்காட்டிற்கு வரும்படி அழைக்கின்றான். சோதனையில் அவன் வெற்றி பெற்று விட்டானா?   பெண் : இரும்பால கிணத்துலயோ இருந்து தலை முழுகயிலே கரும்பான அத்தை மகன் கண்ணைக் கண்ணைச் சிமிட்டுறானே மலையிலொரு மாமரமாம் மாமன் மகன் குத்தகையாம் இடையிலொரு சொல்லு வந்தா ஏத்துக் கொங்க மாமன் மக்கா !   ஆண் : ஏத்தமடி கோட்ட மலை இறக்கமடி சடையாறு தூரமடி நம் காடு தொயந்து வாடி நாம் போவோம்.   வட்டார வழக்கு:ஏத்துக்கொங்க-ஏற்றுக்கொள்ளுங்கள் ; தொயந்து-தொடர்ந்து.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   மழையில் ! மழையில் ஆறு தாண்ட முயன்ற காதலன் பாட்டைக் கேட்டோம். அதே போல் மார்பளவு தண்ணீரில் செல்லும் காதலனது பாட்டைக் கேட்போம்.   காதலன் பாடுவது   மழைக்கா இருட்டுக்குள்ள மாரளவு தண்ணியிலே பாதை தெரியலியே பாதகத்தி உன் வீடு பக்கத்து வீட்டுக்காரி பழைய உறவுக்காரி பழயுறவும் மங்குதடி பாதகத்தி உன்னாலே மழைக்கா இருட்டிலேயே மாரளவு தண்ணியிலே குடைபோட்டு நான் வருவேன் குணமயிலே தூங்கிராத ஏல முகத்தாளே ஒட்ட வச்ச காத்தாளே ஒட்ட வச்ச காத்துக்கில்லோ-நான் இட்டனடி தங்க நகை மழையே வருகுதடி மய்யல் குய்யல் ஆகுதடி தலையே நனையுதடி தண்டிப் புள்ளஉன் மையலிலே நெத்திலி வத்தல் போல நெஞ்சடர்ந்த செவத்தப் புள்ள நெஞ்சில் படுத்துறங்கும்-நீ பஞ்சணை மெத்தையடி.   வட்டார வழக்கு: மய்யல் குய்யல்-குழப்பம்  ;தண்டிப்புள்ள-பருத்த பெண்; நெத்திலி-ஒருவகை மீன்.   குறிப்பு : ஒட்டவச்ச காது-பாம்பாட்டம் போடுவதற்காக காது வடித்திருக்கும் பெண்கள் அது அநாகரிகம் என்று காதை வெட்டி ஒட்ட வைத்தார்கள். 30 வருஷத்துக்கு முன் இது நடைபெற்றது. சில டாக்டர்கள் இத் தொழிலில் நல்ல ஊதியம் பெற்றார்கள்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   வழிப் பேச்சு   அறுவடை முடிந்து வீடு திரும்புகிறார்கள் உழவர்களும், உழத்தியரும். காதலனும் காதலியும் பின்தங்கி வழி நடக்கிறார்கள். காதலன் மனத்தில் என்ன கவலையோ, பேசாமல் வருகிறான். அவள் அவனைப் பேசவைத்துவிட என்ன முயற்சியெல்லாமோ செய்து பார்க்கிறாள் முடியவில்லை. கடைசியில் கொஞ்சம் சூடாகவே சொல் கொடுத்து அவன் மனத்தைக் கரைத்து விடுகிறாள். காதலியின் பேச்சில் அன்பும், அவனோடு உறவாட ஆர்வமும், அவன் கவலையைப் போக்குவதிலுள்ள கருத்தையும் இதில் காண்கிறோம்.   காதலி பாடுவது   நெல்லுக் கதிரானேன் நேத்தறுத்த தாளானேன் தாள் மடங்குக்குள்ளே-அந்தத் தருமருக்கோ பெண்ணானேன் தண்ணியில தடமெடுத்து தருமரோட வழி நடந்து வாய் பேசா தருமரோட வழியும் தொலையலியே ! பருத்திக்காட்டுப் பொழி வழியே ! பாவனையாய் போறவரே ! கல்லுமே தட்டிராமே-ஒங்க கல் மனசும் இளகிராம !   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   மேல் விலாசம் அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான். அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.   பெண் : நறுக்குச் சவரம் செய்து நடுத் தெருவே போறவரே குறுக்குச் சவளுறது கூப்பிட்டது கேட்கலையோ? சந்தனவாழ் மரமே சாதிப்பிலா மரமே கொழுந்தில்லா வாழ் மரமே கூட இருக்கத் தேடுதனே உருகுதனே உருகுதனே உன்னைக் கண்ட நேரமெல்லாம் கண்டிட்டு உருகுதனே நிண்ணு சொல்ல மாட்டாம நில்லுங்க ராஜாவே நிறுத்துங்க கால் நடய சொல்லுங்க ராஜாவே சோலைக்கிளி வாய்திறந்து வடக்கிருந்து வந்தவரே வருச நாட்டுப் பாண்டியரே தொட்டிட்டு விட்டியானா துன்பங்களும் நேர்ந்திடுமே தேனும் தினைமாவும் தெக்குத் தோப்பு மாம்பழமும் திரட்டிக் கொடுத்திட்டில்ல தேத்துதாரே எம் மனசை போலீசு வேட்டி கட்டி புதுமலைக்குப் போறவரு போலீசு வேட்டியில போட்டு விட்டேன் மேவிலாசம் கோடாலிக் கொண்டைக்காரா குளத்தூருக் காவல்காரா வில்லு முறுவல் காரா நில்லு நானும் கூடவாரேன் துத்தி இலை புடுங்கி துட்டுப் போல் பொட்டுமிட்டு ஆயிலிக் கம் பெடுத்து ஆளெழுப்ப வாரதெப்போ?   வட்டார வழக்கு: வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்; கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?; மேவிலாசம்-மேல்விலாசம். சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   சத்தியம் ஓரு பாடலில் காதலி தன் காதலனது அன்பையும் உறுதியையும், மீனாட்சி கோவில் தூணிலடித்து சத்தியம் செய்து காட்டச் சொல்லுகிறாள். இங்குக் காதலன் துணி போட்டுச் சத்தியம் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறான். இவன் சத்தியத்தை மீறுவானானால் துணிக்குக் கூட விதியில்லாத தரித்திரனாகி விடுவான் என்பது நம்பிக்கை. பெண் : சாஞ்ச நடையழகா ! சைக்கிள் ஓட்டும் சாமி! ஒய்யாரச் சேக்குகளாம் ஒலையுதில்ல சைக்கிளிலே வட்டமிடும் பொட்டுகளாம் வாசமிடும் சோப்புகளாம் சாமி கிராப்பு களாம் சாயந்திரம் நான் மடிப்பேன் அரக்கு லேஞ்சிக்காரா பறக்க விட்டாய் சண்டாளா! ஆண் : மறக்கல என்னு சொல்லி வலக்கையும் தந்திடுவேன் வலக்கையும் தந்திடுவேன் வருண சத்தியம் செஞ்சிருவேன் மீனாட்சி கோயிலுல வேட்டி போட்டுத் தாண்டித் தாரேன்   வட்டார வழக்கு : காஞ்ச-காய்ந்த ; சேக்கு-கிராப்பு ; ஒலை-உலை.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.     ஆசை வைத்தேன் ரத்தினமே! அரூர் சந்தையில் தனது காதலியை அவன் கண்டு கொண்டான். வேலை முடிந்ததும் அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவனும் பின் தொடர்ந்தான். வழியில் யாரும் இல்லை. அவன், அவள் மீது கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்திப் பாடுகிறான், அரூருப் பேட்டையிலே அழகான சந்தையிலே ஆலமரத்தடியில்-சின்னத்தங்கம்-நீ ஆய்ந்தெடுத்த ரத்தினமோ ? சொன்னாலும் ஆகாது சொல்லவும் கூடாது கண்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என் கருமமெல்லாம் தொலைஞ்சி போகும் கட்டாணி முத்தோ-நீ? கற்கண்டோ சர்க்கரையோ ? தொட்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என் தொந்திரவு நீங்குமடி ஆசைக் குகந்தவளே ஆசார மானவளே நேசித்தால் எந்தனுக்கு-சின்னத்தங்கம் நினைவு தடுமாறுதடி பதினாறு பக்கத்துக்கும் மதிவு நிலா உன் முகமோ ? அதனாலே உந்தன் மேலே-சின்னத்தங்கம் ஆசை வச்சேன் ரத்தினமே !   சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்.   வேலனும் வள்ளியும் வேலன் வள்ளியை அடைய பல வேஷங்கள் போட்டு பட்ட பாட்டையெல்லாம் நாமறிவோம். இப்பாடலின் பாத்திரங்கள் தெய்வங்களல்ல; ஓரு கிராமத்து இளைஞனும், இளநங்கையுமே. வள்ளியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்க, வேலன் அவள் நின்றிருந்த ஒற்றைப் புளிய மரத்தடிக்குச் சென்றான். அவன் அருகில் நெருங்கியதும் வள்ளிக்கு அங்கம் பதறிற்று, “அங்கம் சருக்கிண்ணிச்சாம்” என்கிறார் பாடகர்;நெஞ்சு படபடத்ததாம். “நெஞ்சு நெருக்கெண்ணிச்சாம்” என்று சுருக்கமாகச் சொல்லுகிறார் பாடகர். வெட்கம் மேலிட்டு வள்ளி வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். வேலன் வீட்டுக்கு அவளைத் தொடர்ந்து வருகிறான். அவள் வீடு மெழுகுவது போல நடிக்கிறாள். அவனை அவள் எதிர்பார்த்துக் கொண்டு தானிருக்கிறாள். அவன் அவளருகில் வந்து தன்னை மணம் செய்துகொள்ளவேண்டும் என்று சத்தியம் கேட்கிறான். அவள் என்ன சொல்லியிருப்பாள்?   ஊருக்கு நேர் கிழக்கே-வள்ளிக்கு ஒத்தைப் புளியமரம்-வேலவா! ஒத்தைப் புளியமரம் அங்கம் சருக்கிண்ணிச்சாம்-வள்ளிக்கு நெஞ்சு நெருக்குண்ணிச்சாம் கிள்ளு கொசகணமாம்-வள்ளிக்கு கீழ்மடி வெத்திலையாம்-வேலவா! கீழ்மடி வெத்திலையாம் வெள்ளிக் கிழமையிலே-வள்ளியும் வீடு மெழுகையிலே-வேலவா! வீடுமெழுகையிலே தண்ணியும் சேந்தும் போது-வள்ளியைச் சத்தியம் கேட்டானாம்-வேலவன் சத்தியம் கேட்டானாம்.   வட்டார வழக்கு : ஒத்தை-ஒற்றை ;’சருக்’ - பதற்றம் ; ‘நெருக்’- படபடப்பு ; கொசகணம்-கொசுவம் ; சேந்தும்-அள்ளும். சேகரித்தவர்:S. சடையப்பன் இடம்:அரூர் வட்டம்,தருமபுரி மாவட்டம்.   வரக் காணலியே காதலன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை ; அவள் அவனை நினைந்து பாடுகிறாள். ஆளுலயும் குட்டை! அழகுலயும் பூஞ்சிவப்பு நடையிலேயும் நைச் சிவப்பை நடுத்தெருவில் காணலியே! பூசரம் பழுப்பளகே புவன சுந்தர நடையழகே சிருப்பாணிக் கேத்த தங்கம் தினம் வருமா இந்த வழி? படுத்தா உறக்க மில்ல பாய்விரிச்சா தூக்கம் வல்ல சண்டாளன் தலைமயித்த தலைக்கு வச்சா தூக்க முண்டு.}     கரும்பா இணங்குனனே கருத்த மத யானையிடம் துரும்பா உணருரனே துடிக்காரா உன்னாலே வந்திராதோ இந்த வழி? வாச்சி ராதோ தங்கக் கட்டி? குடுத்திராரோ வெத்திலையை ? போட்டுறுவேன் வாய் சிவக்க மேலத் தெருவுங் கண்டேன் மேகம் போல வீட்டைக் கண்டேன். தருமர் மகனை நான் தனியே வரக் காணலையே? கீழத் தெருவுங் கண்டேன், கீழ மேலு ரோடுங் கண்டேன், தாவரப் பத்தி கண்டேன், தருமர் மகன் தலை காணேண் பெரிய தம்மா திருகு கள்ளி பேர் போன ரட்ன கள்ளி மாமன் மகன் மந்திர கிளி வந்திராதோ இந்த வழி?   வட்டார வழக்கு: நைச் சிவப்பு -நைச் சிவப்பு (Nice)(வ.வ.);விரிச்சா -விரித்தால்; வச்சா-வைத்தால்;ரட்ன-ரத்தின.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:தங்கம்மாள்புரம்,விளாத்திக்குளம்.   நான் வருவேன் நடுச்சாமம் காதலியின் கிராமத்திற்கும், காதலின் கிராமத்திற்கும் இடையில் பொருனையாறு ஓடுகிறது. மழைக்காலம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் வருகிறது. கரையிறக்கத்தில் கிடந்ததோணி தண்ணீரோடு போய் விட்டது. அன்றிரவு அவன் அவளிடம் வருவதாகச் சொல்லியிருந்தான். அச் சொல்லைக் காப்பாற்ற வெள்ளத்தை நீந்தியே சென்று விடுவதென முடிவு செய்கிறான். அக்கரையிலிருந்தே அவன் பாடுகிறான். இக்கரையிலிருந்த காதலிக்கு அது கேட்டதோ இல்லையோ?   ஆத்துல தோணிவிட ஆளிறங்காத் தண்ணி வர நான் வாரேன் நீச்சலில நினைவாப் படுத்திரடி சடசடணு மழை பேய சாமம் போல இடி விழுக கொடை பிடிச்சு நான் வாரேன் குணமயிலே தூங்கிராத இடி விழுந்து மழை பெய்ய கொடை பிடிச்சு நான் வாரேன் குணமயிலே தூங்கிராத நாராங்கி வீட்டுக்கார நடுத் தெருவு வெள்ளையம்மா நான் வருவேன் நடுச் சாமம் நாயை விட்டு ஏவிராத வட்டார வழக்கு: ஆளிறங்கா -ஆளிறங்க முடியாத; இடி விழும் -இடிவிழ; தூங்கிராத -தூங்கி விடாதே; ஏவிராத -ஏவிவிடாதே. சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   கிளியம்மா சில நாள் பிரிவுக்குப் பின்னர் ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால் என்னென்னவோ பிதற்றுகிறான். அப்பிதற்றுதலில் எழுந்த பாடல் தான் இது.   கன்னங் கருத்த புள்ளே கை மோதிரம் தோத்த புள்ளே உள்ளங்கை தேனா உருகரண்டி உன்னாலே இடியிடித்து மழை பொழிய இருண்ட வெள்ளம் திரண்டுவர குடை பிடித்து நான் வருவேன் குயிலாளே தூங்கிடாதே ஓட்டைக் கரண்ட கமாம் ஓசையிடும் வெண்கலமாம்-உன் காட்டு மரிக் கொளுந்தை-கொஞ்சம் காட்டி விட்டா லாகாதா? ஆலமரத்தைப் பாரு அடிமரத்து வேரப்பாரு குண்டஞ் சம்பா நெல்லப் பாரு- புள்ள கிளியம்மா குட்டிபோர சோக்கப் பாரு- போடு தின்னாக்கு ஆத்துக்கு அந்தாண்ட அத்தைமகள் ரெண்டு பேரு கொட்ட மரம் வெட்டயிலே- புள்ள கிளியம்மா போட்டாண்டி பொட்டுத்தாலி- போடு தின்னாக்கு வட்ட வட்டப் பாறையிலே வர கரிசித் தீட்டயிலே ஆர் கொடுத்த சாயச் சீலே- புள்ளக் கிளியம்மா ஆலவட்டம் போடுதடி- போடு தின்னாக்கு கூடமேலே கூட வச்சு கோயிலுக்கு போர பொண்ணே கூடை அரப் பணமா?-உன் கொண்டப் பூ காப்பணமா ? சட்டி மேலே சட்டி வச்சு சந்தைக்குப் போரப் புள்ளே சட்டி அரப்பணமா? -உன் சாமந்திப்பூ காப்பணமா?   வட்டார வழக்கு : தோத்த-தோற்ற ; வேரப்பாரு-வேரைப்பாரு ; அந்தாண்ட-அந்தப் பக்கம் ;பத்துலன்னு-பற்றவில்லை என்று ; வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி. சேரித்தவர்:சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம். சத்தியம் தினந்தோறும் அவளைக் காண வரும் காதலன் சில நாட்கள் வரவி்ல்லை. ஒரு நாள் அவள் வயலில் வேலை செய்யும் பொழுது அவன் வந்து நிற்கிறான். அவளுக்கு கோபம். எனவே சிறிது நேரம் பேசவில்லை. அவன் கெஞ்சுகிறான். வராமலிருந்ததற்குக் காரணங்கள் கூறுகிறான். அக்காரணங்கள் நியாயமென்று தோன்றிய போதிலும், அவன் தன்னை மறப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்கும்படி அவள் கேட்கிறாள். சத்தியம் செய்வதில் பலவகைகள் உண்டு. உறவினர் தலையடித்துச் சத்தியம் செய்தல், சூடமணைத்துச் சத்தியம் செய்தல், கையிலடித்துச் சத்தியம் செய்தல், கோயில் கொடி மரத்தைத் தொட்டுச் சத்தியம் செய்தல், வெற்றிலை, அன்னம் முதலியவற்றைத் தொட்டுச் சத்தியம் செய்தல், துணிபோட்டுத் தாண்டிச் சத்தியம் செய்தல் முதலியன. சத்தியம் செய்து மீறினால் தெய்வ தண்டனை கிடைக்கும் என்பது பாமர மக்களது நம்பிக்கை.   எலுமிச்சம் போல இரு பேரும் ஒரு வயது சரியாக இருப்ப மிண்ணு சத்தியமும் கூறினமே அரக்கு லேஞ்சுக் காரா நீ பறக்க விட்ட சண்டாளா ! மறக்கலைண்ணு சொல்லி வலக்கை போட்டுத் தாடா மீனாட்சி கோயிலுல முன்னம் ஒரு கம்பம் உண்டு கம்பத்தைத் தொட்டுத் தந்தா களங்கம் இல்லை உன் மேலே.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,திருநெல்வேலி மாவட்டம்.   விறகுக்காரி மலையில் விறகு வெட்டும் கூட்டத்திலிருந்து தனித்து விட்ட காதலர்களின் உரையாடல் இது.   பெண் : கோடாலி கொண்டல்லவோ கொடி விறகு தானெடுத்து தலைவிறகு மாத்த வந்த-என் தங்கத்தை வரச் சொல்லுங்க   ஆண்: தோப்புலயோ சாவக்கட்டு தோகை மயில் போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கான மயில் தேடுதிண்ணு   பெண்: நெடு நெடுண்ணு வளர்ந்தவரே நீலக் குடை போட்டவரே பச்சைக்குடை எஞ்சாமி பாதையில் காணியளோ? தூக்குச் சட்டி கொண்டல்லவோ தூர வழி போனவரே தூக்குச் சட்டி கீழே வச்சு துயரம் தீர்த்தால் ஆகாதோ? மந்தையில் பந்தடிக்கும் மாற்றத்துப் புள்ளையாண்டா ஓடி யடியாதங்க உங்க மேலே தூசி படும்   இருவரும்: கரும்பு கசக்கிறதும் கண்ட கனா சொக்கிறதும் இரும்பு இளகுறதும் இருவருமே கண்ட கனா.   வட்டார வழக்கு: மாத்த -மாற்ற; காணியளோ -காணீர்களோ?; அடியாதங்க -அலையாதீர்கள்.   சேகரித்தவர்:எஸ்,எம்.கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   திருச்செந்தூர் பாலம் காதல் உறவில் ஊடலும் கூடலும் நிகழும். அவைதான் உறவை இறுக்கமாகப் பிணிக்கும். காதலனும் காதலியும் பிணங்கிப் பின் கூடுவதை இவ்வுரையாடல் காட்டுகிறது. பெண்: திருச்செந்தூர் ஓரத்திலே விரிச்சதலைப் பாலத்திலே விரும்பிச் சொன்ன சத்தியங்கள் வீணாகப் போனதய்யா அஞ்சு மணி நேரத்திலே ஆறு கண்ணுப் பாலத்திலே குளுந்த மணலுல நாம் கூடுறது எந்த விதம்? முக்கட்டு கல்லுலயே மூணு விதப் பச்சக் கல்லு நானெடுத்த பச்சக் கல்லு யாரெடுத்து கொஞ்சினாக?   ஆண்: அஞ்சுகிளி ரஞ்சிதமே அனேககிளி சினேகிதமே கொஞ்சும் கிளி ரத்தினத்தை-நான் குத்தப்பட என்ன சொன்னேன்? இடை வழிக் கெட்டி ஏழுகுளம் தலைமுழுகி கொண்டாடி தலை முடியை கொடங்கையில் போட்டுறங்க.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்.   பழகினவள் எங்கே போவாள் இரு காதலர்களுக்கு அண்மையில் மணம் நடக்கவிருக்கிறது. அதுவரை, தன்னைச் சுற்றிச் சுற்றி வர வேண்டாமென்றும், தனது குறும்புகளை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும், நடை உடைகளை மாற்றிக் கொள்ளுமாறும், அவனிடம் அவள் கூறுகிறாள்,   தெற்குத் தெருவிலே தெல் தெறிக்கும் புள்ளையாண்டா ஓடித் திரியாதய ஒங்க மேல தூசு படும் சாய வேட்டி கட்டாதிய-ஒங்க சதிரத்துக்கோ நல்லால்லே வெள்ளை வேட்டி கட்டி வாங்க வெளுப்பாருந்தா நல்லாருக்கும் கந்தை வேட்டி கட்டாதிய கடைக் கெதுக்கே நிக்காதிய மல்லு வேட்டி வாங்கித் தாரேன் மெல்லுதமா கட்டி வாங்க நீல வர்ணப் பொட்டுக்காரா நிறத்துக் கேத்த சட்டைக்காரா கண்ணாடி வேண்டாமய்யா தன்னழகே போது மையா ஆசை வச்சேன் ஒங்க மேல ஆளான மாசி மாதம் பேச நல்ல ஆசை ஐயா பிறருக்கிடம் வையாதிய சாய வேட்டி கட்டாதிய சாயலுல பாராதிய மல்லு வேட்டி வாங்கித்தாரேன் மற்ற முகம் பாராதிய முக்குல நில்லாதிய முழி சுருட்டிப் பாராதிய சுத்தி யுமுள்ள வுக சூதாக எண்ணுவாக கொல்லையிலே நில்லாதிய கொடி அரளி சூடாதிய மதி லெட்டிப் பாராதிய மதினி வார நேரமாச்சு ஒத்த வேட்டி கட்டாதிய உதறி நடக்காதிய பரக்க முழியாதிய பழகின எங்க போவா?   வட்டார வழக்கு: சதுரம்-சரீரம்; கட்டாதிய-கட்டாதீர்கள்; நிக்காதிய-நிற்காதீர்கள் என்ற எதிர்மறை வினைகள்; சாயலுல-கோணலாக; பரக்க-அகல விழித்து; முக்கு-சந்தி.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம் பகுதி,திருநெல்வேலி.   மறக்க மனம் கூடுதில்லை ராமனைக் கண்டு காதல் கொண்ட சீதை தனித்திருந்த போது கீழ்வருமாறு சிந்திக்கிறாள்;   பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் எண் வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் மண் வழி நடந்து அடி வருந்தப் போனவன் கண் வழி நுழையுமோர் கள்வனே கொலாம். இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணி வரைத் தோளுமே அல; முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே. (கம்பன்) சீதையின் நிலைமையில், கிராமப் பெண்ணொருத்தி தன் மனத்தினுள் நுழைந்த இளைஞனை மனதிற்பதித்து அவனை மறக்க முடியவில்லையே என்று இன்ப வேதனையால் கேட்கிறாள்,   வெத்திலைத் தீனழகா நித்தம் ஒரு பொட்டழகா மைக் கூட்டுக் கண்ணழகா மறக்க மனம் கூடுதில்லை இஞ்சி இடுப்பழகா எலுமிச்சங்காய் மாரழகா மஞ்சச் சிவப்பழகா மறக்க மனம் கூடுதில்லை ஆலிலை போல் அடி வயிறு அரசிலை போல் மேல் வகிடும் வேப்பிலை புருவக்கட்டும் விடவும் மனம் கூடுதில்லை காத்தடிச்சுத் தாழை பூக்க காத வழி பூ மணக்க பூவார வாசத்துல போக மனம் கூடுதில்லை சுத்திச் சிவப்புக்கல்லு சூழ் நடுவே வெள்ளைக்கல்லு வெள்ளைக் கல்லும் பாவனையும் வெறுக்க மனம் கூடுதில்லை தெற்கத்திக் கும்பாவாம் திருநெல்வேலி வெங்கலமாம் மதுரைச் சர விளக்கை மறக்க மனம் கூடுதில்லை ஆருக்கு ஆளானேன் ஆவரைக்குப் பூவானேன் வேம்புக்கு நிழலானேன் வெறுக்குதில்லை உங்க ஆசை கம்பம் பூவே கமுகம் பூவே காத்தடிச்சா உதிரும் பூவே மாதுளம் பூ என் கனியை மறக்க மனம் கூடுதில்லை கம்மங் கருதிருக்க கருத்தூரணி தண்ணிருக்க புங்க நிழலிருக்க போக மனம் கூடுதில்லை   வட்டார வழக்கு: கும்பா-சரவிளக்கு.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம் பகுதி,திருநெல்வேலி.   ஆளுக்கொரு தேசமானோம் பஞ்ச காலத்தில், வேலை தேடித் தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு இளைஞன் சென்றான். மழை பெய்து பயிர் செய்யும் காலம் வந்ததும் திரும்புகிறேன் என்று சொல்லிச் சென்றான். மழை வந்தது. புஞ்சைக்காட்டு வேலைகளும் தொடங்கி விட்டன. அவள் அவனது வாக்குறுதியை எண்ணி வருந்துகிறாள்.   கழுகு மலைக் குருவி குளம் கண்டெடுத்தேன் குண்டு முத்து குண்டுமுத்தைக் காணாமல் சுண்டுதனே கண்ணீரை வேப்பம்பூ பூராதோ விடிந்தால் மலராதோ நேற்று வந்த நேசருக்கு நேரந் தெரியாதோ! வேம்பு தளுக்காதோ வீசுங் கொம்பு ஓடாதோ! வீசுங் கொம்பு மேலிருந்து வெள்ளை தெரியாதோ எலுமிச்சம் பழம் போல இருபேரும் ஒரு வயது யாரு செய்த தீவினையோ ஆளுக்கொரு தேசமானோம்.   வட்டார வழக்கு : சுண்டுதனே-சுண்டுகிறேனே ; பூராதோ-பூக்காதோ ; தளுக்காதோ-தளிர்க்காதோ.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   நெருப்புத் தணலாகுதடா!   பிரிந்திருக்கும் காதலி காதலனைச் சேரும் காலத்தை எண்ணி ஏங்குகிறாள். இப்பாடலில் அடுக்கடுக்காக உவமைகள் வருகின்றன;இவையாவும் உழவர் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டவை.     மதுரை மரிக் கொழுந்தே மண லூறு தாழம் பூவே சிவ கெங்கைப் பன்னீரே சேருறது எந்தக் காலம் கட்டிலுச் சட்டம் போல கடைஞ் செடுத்த விட்டம் போல உத்திரத்துத் தூணு போல முத்து இருந்து வாடுறனே! ஆசை மனம் கூசுதையா அம்புருவிப் பாயுதையா! நேச மனம் நெஞ்சினிலே நெருப்புத் தணலாகுதடா ஏக்கம் பிடிக்குதையா! என்னுசுரு போகுதையா! தூக்கம் குறைஞ்சதையா துரைமகனைக் காணாமல் நிறை குடத்துத் தண்ணிபோல நிழலாடும் என் சதுரம் குறை குடத்துத் தண்ணீராய் குறைஞ்சதய்யா உன்னாலே   குறிப்பு: முத்து இருந்து-தன் பெயரையே குறிப்பிடுகிறாள்,   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.     கிளியம்மா சில நாள் பிரிவுக்குப் பின்னர் ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால் என்னென்னவோ பிதற்றுகிறான். அப்பிதற்றுதலில் எழுந்த பாடல் தான் இது.     கன்னங் கருத்த புள்ளே கை மோதிரம் தோத்த புள்ளே உள்ளங்கை தேனா உருகரண்டி உன்னாலே இடியிடித்து மழை பொழிய இருண்ட வெள்ளம் திரண்டுவர குடை பிடித்து நான் வருவேன் குயிலாளே தூங்கிடாதே ஓட்டைக் கரண்ட கமாம் ஓசையிடும் வெண்கலமாம்-உன் காட்டு மரிக் கொளுந்தை-கொஞ்சம் காட்டி விட்டா லாகாதா? ஆலமரத்தைப் பாரு அடிமரத்து வேரப்பாரு குண்டஞ் சம்பா நெல்லப் பாரு- புள்ள கிளியம்மா குட்டிபோர சோக்கப் பாரு- போடு தின்னாக்கு ஆத்துக்கு அந்தாண்ட அத்தைமகள் ரெண்டு பேரு கொட்ட மரம் வெட்டயிலே- புள்ள கிளியம்மா போட்டாண்டி பொட்டுத்தாலி- போடு தின்னாக்கு வட்ட வட்டப் பாறையிலே வர கரிசித் தீட்டயிலே ஆர் கொடுத்த சாயச் சீலே- புள்ளக் கிளியம்மா ஆலவட்டம் போடுதடி- போடு தின்னாக்கு கூடமேலே கூட வச்சு கோயிலுக்கு போர பொண்ணே கூடை அரப் பணமா?-உன் கொண்டப் பூ காப்பணமா? சட்டி மேலே சட்டி வச்சு சந்தைக்குப் போரப் புள்ளே சட்டி அரப்பணமா?-உன் சாமந்திப்பூ காப்பணமா?   வட்டார வழக்கு : தோத்த-தோற்ற ; வேரப்பாரு-வேரைப்பாரு ; அந்தாண்ட-அந்தப் பக்கம் ; பத்துலன்னு-பற்றவில்லை என்று ; வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி.   சேகரித்தவர்:சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   காதலியைக் கொன்ற தகப்பன் மலையோரங்களில் தோட்டங்கள் உள்ள வெள்ளாமையைக் காட்டுப் பன்றி, காட்டெருமை முதலிய மிருகங்கள் நாசம் செய்யாவண்ணம் காக்க, கண்ணி வைத்தல், அம்பு எய்தலும் உண்டு. அப்படி மலையோரம் உள்ள தோட்டத்தில் ஒரு இளைஞன் காவல் காத்து வந்தான், அவன் தினமும் இரவு வேளையில் தனது காதலியைச் சந்திக்க மகுடி வாசிப்பான். அவளும் அவனைத் தேடிவந்து கூடிய பின்னர் திரும்புவாள். மகுடிச் சத்தம் இல்லையேல் அவள் வரமாட்டாள். ஒருநாள் தன் தகப்பனின் உத்தரவுப்படி அவன் வேற்றூருக்குச் சென்றான். செல்லும் பொழுது மகுடியை வேறு யாரும் ஊதாமலிருக்க அதை உடைத்து வைத்து விட்டுச் சென்றான், அன்று இரவு கொல்லைக்கு வந்த அவன் தகப்பன் யாரோ போக்கிரிகள் அதை உடைத்து விட்டதாக எண்ணி ஒட்டவைத்து ஊதினான். இச்சத்தத்தைக் கேட்டதும் அவன் காதலி தன் காதலன் மகுடி வாசிப்பதாக எண்ணி அங்கு வருகிறாள். அப்பொழுது அவன் தகப்பன் யாரோ திருடன் என எண்ணி அவள் மீது அம்பு விடுகிறான். அவள் சத்தமிட்டபடி கீழே விழுகிறாள். அவள் அருகில் வந்ததும் விஷயத்தைப் புரிந்து கொள்கிறான், மறுநாள் அவள் காதலன் அங்கு வந்து பார்த்துப் புலம்புகிறான். தகப்பனைத் திட்டுகிறான். தகப்பனும் தான் தெரியாமல் செய்ததாக வருந்துகிறான். இச்சம்பவத்தை விவரிப்பதுதான் இந்தப் பாடல்கள். காதலன்: மழையா கருக்கலாடி மாமயிலே பெண்ணரசே வழி தேடி வந்தே   காதலி: அத்தி நார்ப் பட்டெடுத்து அழகு கன்னிப் பால் பிடித்து உன்னிலும் உன்னிதமாய் ஊதினார் உன் தகப்பன்   மகன்: சாதா குருடா சண்டாளா என் தகப்பா சந்தன மாமரத்தை தாளுருவக் கொல்ல லாமா?   தகப்பன்: உன்னானை என்னானை உன் தேவின்னு நானறியேன் காவலை அழிக்க வந்த கள்ளன்னு அம்பு போட்டேன்   பக்கத்துக் கிராமங்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேறு உருவத்தில் பாடலாகப் பாடப்படுகிறது. அதையும் பார்ப்போம்,   மகன் : மழைக்கால் இறங்கி மாமழை மின்னல் மின்ன சாதா குருடா சண்டாளா என் தகப்பா ஓரக் கண்ணா உனக்கு ஒரு கண்ணும் நொள்ளையா காவல் பறி போகுதின்னு-என் காதலியே கொன்னாயா?   இதைக் கேட்டதும் அருகில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அவன் காதலி கூறுகிறாள்.   காதலி: சீந்திக் கொடி பிடுங்கி சீலப் பேன் மெழுகடைத்து உன்னிலும் உன்னிதமாய் ஊதினார் உன் தகப்பன்.   வட்டார வழக்கு: உன்னிதமாய்-உன்னதமாய் ; கள்ளன்னு-கள்ளன் என்று. குறிப்பு: சீலைப்பேன் மெழுகு நிறம் இருக்கும். இறுகிய மெழுகு மேலே ஒட்டுவது போல் அது ஒட்டிக்கொள்ளும். இது ஒரு சிறுகதைப்பாடல். சேகரித்தவர்:சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   கூப்பிட்டது கேட்கலியா?   அவள் குளித்து விட்டுச் சோலையில் மயிர் உலர்த்திக் கொண்டிருந்தாள்; அப்பொழுது அவள் காதலன் கோபுரத்தின் மேலேறிக் கூப்பிடுகிறான். அதற்கு அவள் பேசவில்லை. பிறகு அவள் அருகில் சென்று தான் கூப்பிட்டதற்கு ஏன் பேசவில்லை எனக் கேட்கிறான், அதற்கு அவள் நீங்களா கூப்பிட்டீர்கள். அந்தச் சத்தம் குயில் சத்தம் என்றல்லவா இருந்தேன் என்று சொல்லுகிறாள், (குறிப்புரை-T. மங்கை)   காதலன்: மாமரத்து சோலைக்குள்ளே மயிருணத்தும் குள்ளப் பெண்ணே கோபுரத்து மேலேறி கூப்பிட்ட சச்சம் கேக்கலியா?   காதலி: கூப்பிட்ட சச்ச மெல்லாம் குயிலுன்னு நானிருந்தேன் ஆளுச் சச்ச மின்னிருந்தா அச்சணமே வந்திருப்பே   வட்டார வழக்கு: சச்சம்-சத்தம்; அச்சணமே-அக்கணமே.   சேகரித்தவர்:சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   காத்திருந்து வீணாச்சு!   அவர்கள் உறவு சிறு வயது சேர்க்கையில் பிணைக்கப்பட்டது. இருந்தாலும், அவள் இன்று வேறொருவனுக்கு மனைவி, குடு்ம்பத்தின் நி்ரப்பந்தத்தால் அவள் உரிமை இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் தனது காதனிலடமே குடிகொண்டிருந்தது. தேங்காய் மூடியின் உள்பரப்புப் போன்ற பள்ளமான இடம், காதலர் களித்து மகிழ ஏற்ற இடம். வாய்க்கால் ஓடுகிறது. தண்ணீர் எடுக்க அவன் காதலி அங்கு தினம் வருவது வழக்கம். ஒருநாள் அவளை அவன் சந்திக்கிறான். அவன் பேரில் அவளுக்கு ஒரே ஆசை, மாற்றான் மனைவி என்னும் உரிமை அவனைத் தடுக்கிறது. இருந்தாலும் பழைய உறவு அவனை உசுப்புகிறது. “தாகமாயிருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா?”என்று அவளைக் கேட்கிறான். அவனைப் போன்றே அவள் உள்ளத்திலும் போராட்டம். அவன் என்ன கேட்கிறான் என்பதைப் பார்வையின் மூலம் புரிந்து கொள்கிறாள். “நீருண்டு, வீட்டுக்கு வந்தால்நல்ல தண்ணீர் கிடைக்கும்” என்று வீட்டின் அடையாளத்தைக் காட்டிவிட்டு சென்று விடுகிறாள். இரவு நேரம், அடையாளம் குறிப்பிட்ட தென்னை மரத்தடியில் அவன் வந்து அமர்ந்திருக்கின்றான். தனது வருகையை ஏதோ குறிப்பு மூலம் அவளுக்குத் தெரியப்படுத்துகிறான். அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. ஒரு பக்கம் தனது கள்ளக் காதலனை திருப்திப்படுத்த வேண்டும். மறுபுறம் அழும் குழந்தையையும், அடுப்பில் காயும் பாலையும் கவனிக்க வேண்டும். போதாக் குறைக்கு பாலகனைப் பெற்ற பாட்டனார் வேறு தூங்காமல் படுத்திருக்கிறார். தனது காதலனைச் சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை இழக்கிறாள். குழந்தைக்குத் தாலாட்டுச் சொல்வது போல தான் வர முடியாத நிலையை உணர்த்துகிறாள். அவனுக்கு இதெல்லாம் காதில் விழவில்லை போலும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறான். கிழக்கு வெளுத்தது. அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. விரகதாபம் அவனை ஏது சொல்வதென்றே தெரியாமல் சொல்ல வைக்கிறது, என்னவென்று?   காதலன்: ஓடற ஓட்டத்திலே ஓட்டாங் குச்சிப் பள்ளத்திலே கஞ்சாக் குடிக்கையிலே கையூனி நிக்கையிலே தங்கக் குடம் கொண்டு தண்ணிக்குப் போற பொண்ணே! தங்கக் கையினாலே தண்ணி குடுத்தா ஆகாதோ?   காதலி: வாய்க்காலுந் தண்ணியிலே வண்டு வரும் தூசு வரும் குப்பத்துக்கு வந்திருந்தா குளுந் தண்ணி நாந் தருவேன்   காதலன்: வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது   காதலி: ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம் ரெண்டு தென்னம்பிள்ளை அடையாளம் அதுக் கடியில் உட்கார்ந்திரு நாவாரே வந்தபின்னர் காதலி: பாலும் அடுப்பில் தான் பாலகனும் தொட்டிலிலே பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே போவச் சொன்னா பொல்லாப்பு நிக்கச் சொன்னா நிட்டூரம் காதலன்: கிழக்கு வெளுத்துப் போச்சு கீழ் வானம் கூடிப் போச்சு கண்ணாத்தா வாசலிலே காத்திருந்து வீணாச்சு!   வட்டார வழக்கு: நாவாரே-நான் வாரேன்.   குறிப்பு: “பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே, இந்த அடியில் ஒரு சமூக உண்மை பொதிந்திருக்கிறது. கொங்கு நாட்டில் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரையிலும் தன் வீட்டுக்கு வரக்கூடிய மருமகளுக்கு மாமனார் தான் கணவனாக இருப்பான். கோவில் குளங்களுக்கோ, ஊர் சேதிகளுக்கோ போவதானாலும், மாமனாரும், மருமகளும்தான் சேர்ந்து போவார்கள். இது சமூகத்தின் முன்னால் இழிவாகக் கருதப்பட்டதில்லை. ஒரு கௌரவமாகவே கருதப்பட்டு வந்தது. பொதுவாக கொங்கு வேளாளர் குடும்பங்களில் தந்தையை அண்ணன் என்றும், பாட்டனாரை அப்பன் என்றும் இந்தத் தலைமுறையில் கூட கூப்பிட்டு வருவது இதற்கு ஒரு சான்றாக அமையலாம். மருமகளை மாமனார் ஆண்டு வருவதை பின்தங்கிய கிராமங்களில் இன்னும் கூடப் பார்க்கலாம்,” (குறிப்புரை-கு.சின்னப்பபாரதி) உதவியவர்:பொன்னுசாமி இடம்:ஓலப்பாளையம்.   புத்தி கெட்ட அண்ணா!   பெண்கள் ‘பெரிய மனுசி’ (புஷ்பவதி) ஆனால் தீட்டுக் காலம் தாண்டும் வரையில், தங்குவதற்கென்று ஒரு பச்கைக் குடிசை கட்டுவார்கள். அந்தக் குடிசையை மாமன்மார்கள் கட்டிவைத்து அழித்து விடுவார்கள். வீட்டுக்கு அழைக்கும் போது சுற்றத்தாரையெல்லாம் அழைத்து விருந்து நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் “எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண் தயாராகி விட்டது” என்று வெளியாருக்கு சொல்லாமல் சொல்லி தெரிவிக்கப்படும். ஒரு ஏழை வீட்டுப் பெண், கூலி வேலைக்குச் சென்றவள். வேலைமுடிந்து ஒரு தோப்பில் அமர்ந்திருக்கிறாள். தன்னைப் பெண் கேட்கச் சிலர் வந்து போனது அவளுக்குத் தெரியும். அவளைக் கட்டிக் கொடுக்க பெற்றோர் கையில் காசில்லை. இதை நினைத்து தனது குடும்பத்தைச் சேர்ந்த தன்னொத்த வாலிபனிடம் கூறுகிறாள், (ஒரே குலதெய்வத்திற்கு-அதாவது கோயிலுக்குப் போகிறவர்கள் அனைவரும் அண்ணன்,தம்பி,தங்கை முறைதான். கொள்வினை கொடுப்பனை கிடையாது.) அப்பொழுது செங்காத்தும் செம்மழையும் வருகிறது. குலம் கோத்திரம் பார்க்காத இந்தக் காலத்து மைனர் ஒருவன் தனக்குத் தங்கை முறை ஆகிற அப்பெண்ணைப் பார்த்து, “மாமரம் பூஞ்சோலை இருக்கும், வாடி, போயி ஒண்டிக்கலாம்”என்று முறை வைக்காமல் கூப்பிடுகிறான். இதைக் கேட்ட அவளுக்கு ஆத்திரம் பீரிட்டு வருகிறது. “புத்தி கெட்டவனே!குலம் கோத்திரம் கூட உனது மோகவெறியில் மறைந்து விட்டதா?இதைப் பூமாதேவி கேட்டாளென்றால் புலம்பிக் கண்ணீர் விடுவாள்” என்று அவனுக்கு சூடுகொடுக்கிறாள். அதை அவள் வாயாலேயே சொல்லக் கேளுங்கள்.   (குறிப்புரை-சடையப்பன்) பெண்: ஒரு கட்டு மூங்கில் வெட்டி மலையோரம் சாத்தி அதுக்கு ரெண்டு மலையாளத்தா ஏலங் கூறி வருவா அதுக்கு ரெண்டு காசு பணம் நாங்கள் எங்கு போவோம் செங்காத்தும் செம்மழையும் வருகுதடி அம்மா   ஆண்: மாமரந்தான் பூஞ்சோலை ஒண்டிக்கலாம் பொண்ணே   பெண்: பொண்ணே!பொண்ணே!எங்காடாதே புத்தி கெட்ட அண்ணா பூமா தேவு கண்டா லென்றால் புலம்பிடுவாள் இப்போ   வட்டார வழக்கு: மூங்க-மூங்கில்; ரெண்டு-இரண்டு; ஒண்டிக்கலாம்-ஒளிந்து கொள்ளலாம். உதவியவர்:C . செல்லம்மாள் சேகரித்தவர்: சடையப்பன் இடம்:பொன்னேரிப்பட்டி,அரூர்,தருமபுரி மாவட்டம்.   சேர்ந்த கிளி   நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.   ஆண்: செட்டி கடை வெட்டி வேரு சிவ காசிப் பன்னீரு கட்டி மருக் கொழுந்தே கம்மாயில கூடினமே   பெண்: கூடினதில் குற்றமில்லை குலத்துக் கொரு ஈனமில்லை ஊராரு சொல்லையிலே ஊடுருவிப் பாயுதையா   ஆண்: நந்தட்டம் பாதை வழி நான் போவேன் ஒத்தவழி மின்னிட்டான் பூச்சி போல முன்னே வந்தா லாகாதோ   பெண்: கல்லுரலு மேலி ருந்தது கனிவாய நீ திறந்தா செம்பங் கிளி வாய் திறந்தா சேர்ந்த கிளி வந்திருமே சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம் பகுதி,திருநெல்வேலி மாவட்டம்.   கூடப் புறப்பட்டாள்   கணவனும் மனைவியும் காலையில் அயலூர் செல்ல முடிவு செய்திருந்தார்கள். அவன் நன்றாக உறங்கி விட்டான். அவள் எழுந்து காலை உணவு தயாரித்து அவனை எழுப்பச் செல்லுகிறாள். அவன் அருகில் நின்றுகொண்டு பள்ளியெழுச்சி பாடுகிறாள். அவனும் துயிலுணர்ந்து அவள் பயணத்திற்குத் தயாராயிருப்பதைக் கண்டு மகிழ்ந்து அவள் பாட்டிற்குப் பதில் பாட்டுப் பாடுகிறான்.   மனைவி: பாம்புக் கண்ணு கட்டிலிலே படுத்து நித்திரை செய்யயிலே சொல்லி உறங்கி விட்ட சுந்தரமே எந்திரிங்க தேக்கம் பலகை வெட்டி தெக்குப் பாத்த மச் சொதுக்கி மச்சுக்குள்ள நித்திரை போம் மந்திரியே எந்திரிங்க மகிழ மரக் கட்டிலுல மதி கிளி படுத்திருக்க நானும் உசுப்பரேனே நல்ல உறக்கம் தானோ? சொளகு பின்னல் கட்டுலல சொகுசா நித்திரை செய்யயிலே கால் கடுக்க நிக்குறனே கவலை யத்த நித்தரையோ?   கணவன்: பஞ்சணை மெத்தையிலே படுத்து நித்திரை செய்யயிலே தாளம் பூக் கையாலே தட்டி உசுப்புனாளே பாம்புக் கண்ணு கட்டுலிலே படுத்து நித்திரை செய்யலிலே சோலைக் குயில் போலச் சொல்லி உசுப்புனாளே சாலையான சாலையிலே சாரட்டுப் போடையிலே குங்குமப் பட்டுடுத்தி கூடப் புறப்பட்டியே   வட்டார வழக்கு: உசுப்புரேனே-எழுப்புகிறேனே;சாரட்டு-Chariot என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   தூது   காதலனைப் பிரிந்திருக்கும் காதலி கிளியையும், குயிலையும் மேகத்தையும் தூதனுப்புவது தமிழிலக்கிய மரபு, பார்ப்பானும், தோழனும், பாங்கியும், பாணனும் காதலர்களிடையே தூது செல்ல தகுதி வாய்ந்தவர்களென்று தொல்காப்பியம் கூறுகிறது. இம்மரபைப் பின்பற்றி நாட்டுப் பாடலிலும் தூது அனுப்புவது வாழ்க்கையின் மரபாகக் கருதப்படுகிறது.   ஒலை யெழுதி விட்டேன் ஒன்பதாளு தூதுவிட்டேன் சாடை எழுதி விட்டேன் சன்னக் கம்பி வேட்டியிலே அம்பார மேடையிலே அன்பு ஊஞ்சலாடயிலே யாரிட்ட சொல்லி விட அன்புள்ள துரை மகனே? ஓடுற தண்ணியிலே ஒரைச்சு விட்டேன் சந்தனத்தை சேர்ந்ததுவோ சேரலையோ செவத்தச் சாமி நெத்தியிலே   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:சூரன்குடி,விளாத்திக்குளம் வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்,   கிளியம்மா   திருவிழாவுக்கு ஊரே திரண்டு போகிறது. ஒரு இளம் பெண், தனது காதலனுக்கு வழியில் கொடுப்பதற்கென்று பிட்டு வாங்கி மறைத்து வைத்திருந்தாள். அவன் ஆண்கள் கூட்டத்தில் சேர்ந்து போய்க் கொண்டிருந்தான். வழிநெடுக பிட்டைக் கொடுக்க முடியவில்லை. அவனுக்கு கொடுக்காமல், தான் தின்னலாமா? அவளுடைய தோழி கிளியம்மாவுக்கு இது தெரியும். அவள் வேடிக்கையாகப் பிட்டைக் கேட்கிறாள். அப்பொழுது தனது கவலையை அவளுக்குத் தெரிவிக்கிறாள் காதலி.   ஆத்துல எடுத்த கல்லாம் புள்ளே கிளியம்மா அழகா குழவிக்கல்லாம் புள்ளே கிளியம்மா மஞ்சள் ஒரைக்கும் கல்லாம் புள்ளே கிளியம்மா ஆசைக்குத்தான் புட்டு வாங்கி புள்ளே கிளியம்மா குடுக்கனெண்ணும் நானிருந்தேன் புள்ளே கிளியம்மா கூட்டத்திலே போறானடி புள்ளே கிளியம்மா குடுக்க முடியலியே புள்ளே கிளியம்மா.   பலவிதமானக் கல்லைக் குறிப்பிடுவது, ஒரு கல்லில் தனித்து உட்காரும்படி காதலனுக்குக் குறிப்பால் உணர்த்துவது. அவன் தனித்தால் பிட்டைக் கொடுத்து விடலாம் அல்லவா ?   சேகரித்தவர்:சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.     இடம்   காதலர்கள் கணவன் மனைவியராகி விட்டனர். ஒரு நாள் ஊரையடுத்துள்ள ஓரிடத்துக்குப் போகிறார்கள். அங்கே அவர்களுடைய காதல் கேளிக்கைகளுக்குச் சாட்சியாகவிருந்த இடமும், மரங்களும் எதிர்ப்படுகின்றன. இருவரும் மகிழ்ச்சியோடு அவ்விடங்களைப் பார்த்து பாடத் தொடங்குகிறார்கள். இன்று அவர்கள் இணைபிரியாத இல்லறத்தாராகி விட்டார்கள். ஆனால், அவர்களைப் பிணைத்து வைத்த தோட்டம் பாழாகக் கிடக்கிறது. அதன் கடமை முடிந்துவிட்டது. இனி அவர் வாழ்க்கையில் அந்த இடம் ஒரு புனித நினைவாக மட்டுமே எஞ்சி நிற்கும்.   கணவன்: பூசர மரத்துத் தோட்டம் பொன்னுங்கிளி பார்க்கும் தோட்டம் அன்னா தெரியுது பார் அன்னக் கிளி காக்கும் தோட்டம்   மனைவி: ஏழு புளிய மரம் எதிராகவே வேப்பமரம் சந்து புளிய மரம் சாமி வந்து நிற்கும் மரம்   இருவரும்: கூடி இருந்த இடம் கும்மச் சரம் போட்ட இடம் வாழப்பழம் தின்ன இடம் பாழாக் கிடக்குது பார்   வட்டார வழக்கு : பூசர மரம்-பூவரச மரம் (நெல்லைப் பேச்சு) ; பார்க்கும்-காவல் காக்கும் ; கும்மச்சரம்-கும்மாளம் ; அன்னா-அதோ.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம் வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்.       அச்சு மட்டம்! தீபாவளியன்று புதிது உடுத்தி முல்லைச்சரம் சூடி வெளியே வருகிறாள் பொன்னி. அவளின் முகம் காண வெளியே புத்தாடையணிந்து காத்திருக்கிறான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனையும் தன்னையும் மனக்கண்ணில் சேர்த்து நிறுத்திப் பொருத்தம் நோக்குகிறாள். அவள் முடிவு என்ன ? கேளுங்கள்.   (பெண் பாடுவது)   கொண்டைக்கு ஒத்த கொல்லைப்பட்டி முல்லைச்சரம் அவருக்கு ஒத்த அச்சு மட்டம் நானலவோ ? நாட்டுக்கு நாட்டு மட்டம் நாமரெண்டும் சோடி மட்டம் கார்ட்டுக்குப் போனாலும் கோடி சனம் கையெடுக்கும் கருப்புக்கு ஏத்த கோயமுத்தூர் மல்பீசு அவருக்கு ஏத்த அச்சு மட்டம் நானல்லவோ ?   குறிப்பு: கோர்ட்-ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களுள் கோர்ட்டும் ஒன்று. கோயிலுக்கு என்று மேல் சாதிக்காரர்கள் பாடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கோயிலில் நுழையும் உரிமை இல்லாதிருந்ததால் அவர்கள் பாட்டில் கோயில் பொதுவாக இடம் பெறுவதில்லை.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   போவதில்லை !   காதலர் உறவுவெளிப்பட்டது. அவளை வீட்டில் அடைத்துப் போட்டனர். சுடுசோல் பொழிந்தனர். உறவினர் எல்லோரும் கடுகடுத்தனர். சில நாட்களுக்குப் பின்னர் அவள் வயலுக்குச் செல்லுகிறாள். அவன் அவளைப் பின் தொடருகிறான். அவள் பேசாமலேயே முன் செல்லுகிறாள். அவன் பேச்சுக் கொடுக்கிறான்; அவள் கடுகடுப்பாக ''என் முகத்தைப் பாராதே'' என்று கூறுகிறாள். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் வேலை செய்யும் நேரமெல்லாம் வரப்பிலுள்ள கல்லின் மேல் உட்கார்ந்திருக்கிறான். கடைசியில் அவள் நிமிர்ந்து “ உன்னால் பகை உண்டாகிறது போய் விடு ” என்று சொல்லுகிறாள். அவனோ “என்ன பகையாகி விட்டாலும், உன்னை மணம் செய்து கொண்டுதான் ஊரைவிட்டுப் போவேன் ” என்று சத்தியாக்கிரகம் செய்கிறான்.   ஆண்: ஒத்தடிப் பாதையிலே உன்னதமாப் போற புள்ளே ஒன்பது வகைப் பூத்தாரேன் என் முகத்தைப் பாரேண்டி   பெண்: பார்த்தனடா உன் முகத்தை பகைச்சனடா என் ஜனத்தை கேட்டனடா உன்னாலே கேளாத கேள்வியெல்லாம் கல்லோரம் காத்திருக்கும் கருத்தக் கொண்டை சிவத்தச்சாமி ஏனையா காத்திருக்கே? ஏகப்பகை ஆகுதையா !   ஆண் : ஏகப்பகை ஆனாலென்ன? எதிராளி வந்தாலென்ன? உன்னை மணம் செய்யாமல் ஊரை விட்டுப் போவதில்லை   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:தங்கம்மாள்புரம்.     சக்களத்தி   கிராமப்புறங்களில் சொத்து சுகமில்லாதவர்கள் சில வசதிகளுக்காகவோ, அல்லது உழைப்பின் ஊதியம் தனக்கு வரும் என்று கருதியோ, ஒரு மனைவி உயிர் வாழும்பொழுதே மறுமணம் செய்து கொள்வதும், தன்னைவிட வசதியுள்ள பெண்களை வைப்பாக வைத்துக் கொள்ளுவதும் ஓரளவு வழக்கமாயிருந்தது. சொத்துரிமை முறையால், கிழவனைக் கட்டிக்கொண்ட குமரிகள் விதவைகளாக வாழ்வது சாதாரணமாகக் காணப்படுகிறது. இதனால் கணவனை இழந்த மனைவிமார்கள் வாய்விட்டு அரற்றுவார்கள். அதற்குக் காரணம் என்று தமது சக்களத்திமாரைச் சபிப்பார்கள். சமண கமயத்தினளான கண்ணகி, கோவலனைச் சபிக்கவில்லை. ஏனெனில் தெய்வம் தொழாள், கொழு நற்றொழு தெழுவாள்”என்ற சைன மறையைப் பின் பற்றியவள் அவள். அவள் பெண்ணாகையால் அவளுக்கு '' காதிகா பூமி'' என்ற சுவர்க்கம் கிட்டாது. அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்க வேண்டும். அதற்கு அவள் இப் பிறவியில் கணவனைத் தெய்வமாக வணங்க வேண்டும். தவறு செய்தால் விதி தண்டிக்கும். ஆனால் நமது கிராமத்துப் பெண்ணோ சமண வேதம் தெரிந்தவளல்ல. ஆகவே தனது உள்ளத்தின் கோபதாபங்களைத் தடிப்பாகவே வெளியிடுகிறார்கள்.   (முதல் மனைவி அல்லது காதலி பாடுவது )   மதுரைக்குப் போகாதிய மாங்கா தேங்கா வாங்காதிய மதுரைக் கடைச் சக்களத்தி மறக்கப் பொடி போட்டிடுவா வருவாரு போவாரு வாசலுல நிப்பாரு சிரிச்சாலும் பேசமாட்டார் சிறுக்கி போட்ட மையலாலே குதிரை வாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் கூறு கெட்ட அத்தை மகன் குறத்தியோட சகவாசம் முளகாப் பழம் போல முத்தத்துல வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சியிடம் சகவாசம் பதினேட்டுப் பணியாரம் மதிலெட்டிக் கொடுத்தாலும் இரவலடி என் புருஷன் எனக்குத் தான் சொந்தமடி அத்தாப்பு வீடு கட்டி அதுல ரெண்டு ஜன்னல் வச்சி எட்டி எட்டிப் பார்த்தாலும் என் புருஷன் தானேடி செட்டிக் கடை வெட்டி வேரு சிவகாசிப் பன்னீரு மதுரைக் கடைச்சக்களத்தி மறக்கப் பொடி போட்டா குதிரைவாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் சரவட்டைக் கருதுக்காக சாம வழி போகலாமா? பூசணிக் கீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி சாரணத்தி கரை தாரேன் சாமியத்தான் விட்டுரடி காலுரெண்டும் வட்டக்காலு கண்ணுரெண்டும் இல்லிக்கண்ணு இல்லிக்கண்ணு சக்களத்தி ஏசுராளே சாடையிலே வாசமில்லாப் பூ   வள்ளியின் காதலன் முருகன். அவன் அக்கரைச் சீமைக்கு போய்விட்டான். அடுத்த ஆண்டில் வள்ளிக்கு மணமாகி விட்டது, முருகன் சிறிது பணத்தோடு ஊர் திரும்பினான். அவளை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றுதான் அவன் வந்திருந்தான். அவளுக்கு மணம் ஆனது அவனுக்குத் தெரியாது. புல்லறுக்கச் சென்ற வள்ளியை அவன் கண்டான், அவளிடம் பேசினான், அவன். அவள் திருமணத்தைப் பற்றி அவனிடம் சொல்லாமல் மறு நாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு ஓடிப்போய் விட்டாள். அவன் காத்திருந்தான். அன்று அவளை விடுவதில்லை என்று அவன் துணிந்திருந்தான். அவள் வந்தாள். அவன் அணைத்துக் கொள்ள ஓடினான். ஆனால் அவள் உண்மையைக் கூறினாள். அவனும் “வாசனையில்லாத பூ என்று யாரும் என்னிடம் சொல்லவில்லையே ” என்று சொல்லி அவள் பாதையினின்றும் விலகிக் கொண்டான்.   ஆண்: ஓடுத ஓட்டத்திலே ஓலப் பொட்டி கக்கத்திலே ஓலப் பொட்டி போனாலும் ஒன்னை விடப் போரதில்லை   பெண்: சந்தனப் பொட்டழகே சவுக்கம் சேந்த முகத்தழகே குங்குமப் பொட்டழகே-உன்னை கும்பிடுறேன் கையெடுத்து   ஆண்: சிக்கினியே புல்லறுத்து சிந்துனியே கண்ணீர நாளை வருவேண்ணு-நீ நயந்து மெத்தப் போனயடி   பெண்: மோட்டாரு வேகத்துக்கும் எம்புருஷன் கோபத்துக்கும் இந்தளவு துன்பத்துல இறந்தாலும் குத்தமில்ல   ஆண்: செங்கச் செவப்பழகே செந்தாமரைப் பூவழகே வாசமில்லாப் பூவினுமே வந்தவுக சொல்லலியே !   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்;சிவகிரி,நெல்லை மாவட்டம்.   சட்டம் பொருந்தவில்லை   முறை மாப்பிள்ளை, முறைப்பெண்னை சற்று வரம்புமீறியே கேலி பேசிக்கொள்ள உரிமை இருந்து வந்தது. இதற்குக் காரணம் முன்னர் ஒரு குறிப்பில் கூறியுள்ளோம். ஒரு முறை மாப்பிள்ளை வயதில் இளையவன் உருவத்திலும் பெண்ணைப் பார்க்கிலும் சிறியவன். அவன் விளையாட்டாக அவளிடம் காதல் குறிப்புணர்த்தும் பாடல்கள் பாடுகிறான். அவளும் “மீசை முளைக்காதவன் என் உயரத்தை மீறாதவன். என்னைவிடச் சிறுவன் நீ எனக்கு மட்டமா? ”   பெண்: சோளக் காட்டு மூளையிலே ஜோடிப் புறா மேயயிலே ஆளக் கண்டா சச்சம் போடும் அழகான மாடப்புறா   ஆண்: கரையிலே கமுக மரம் கம்மாக் குள்ள வேப்பமரம் தலையிலே தண்ணிக் குடம்- நீ தனிச்சு வந்தா லாகாதோ   பெண்: அருப்பம் இறங்கலியே ஆளுக் கொஞ்சம் மீறலியே சட்டம் பொருந்தலையே-நம்ம சரியான மட்டத் தோட   வட்டார வழக்கு: சச்சம் -சப்தம்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்;நெல்லை மாவட்டம்.   நான்தானடி உன் புருஷன் அவன் அவளுக்கு முறை மாப்பிள்ளை. அவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஒருமுறை அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தான். அம்மோதிரம் அவர்கள் உறவை அலராக்கியது. எல்லோரும் கேலி பேசத் தொடங்கினர். புருஷன் என்று சொல்லிவிட்டால் போதுமா? நாலு பேரறிய தாலி கட்ட வேண்டாமா? இப்படி அவள் நினைத்துக்கொண்டே வேலைக்குச் செல்லுகிறாள். அவன் எதிர்ப்படுகிறான். அவள் பேச்சுக் கொடாமல் விரைவாகச் செல்லுகிறாள். அவனே அவளை அழைத்துப் புருஷன் உறவு கொண்டாடுகிறான். மோதிரம் தந்து உள்ளத்தைக் குலைத்துவிட்ட அவனைப் பார்த்து “இதுதானே என் பெருமை குலையக் காரணம்! உருவிக்கொள் இதனை” என்று கூறுகிறாள். அவன் நயந்து பேசுகிறான். அவள் தன்மேல் மையலுண்டா என்று கேட்கிறாள். அவன் உறுதியாக “நான் தானடி உன் புருஷன்”என்று பதில் சொல்லுகிறான். இருவரும் மகிழ்ச்சியோடு நடந்து செல்லுகிறார்கள்.   ஆண்: வெத்திலை போட்ட புள்ளே விறுவிறுணு போற புள்ள நாக்குச் செவந்த புள்ள நாந்தானடி ஒம் புருஷன்   பெண்: கருத்தக் கருத்தத் துரை கைக்கி மோதிரம் தந்தவரே உருவைக் குறைச்சவரே உருவிக் கோரும் மோதிரத்தை   ஆண்: ஜோடி பிரிச்சுராதே-என் ஜோக்கு நடை மாதரசே ஆடித் தவசு பார்க்க- நாம் அழகாய்ப் போய் வருவோம்   பெண்: கரையிறங்கி வந்தவரே கன்னி மையல் கொண்டவரே மாடப்புறா சையலிலே மையல் உண்டோ எம்மேலே ஆண்: மூக்குச் செவந்த புள்ள முக்காத் துட்டுப் பொட்டுக் காரி நாக்குச் செவத்த புள்ள நாந்தானடி ஓம் புருஷன்   வட்டார வழக்கு : முக்காத்துட்டுப் பொட்டு - முக்காத்துதட்டு அகலம் பொட்டு.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்;நெல்லை மாவட்டம்.   நம்ம துரை   காதலியின் கண்களுக்கு காதலன் உலகத்திலேயே சிறந்தவனாகத் தோன்றுவான். உருவத்திலும், பண்பு நலன்களிலும் அவனே இணையற்றவன் என அவள் நினைப்பாள். காவியங்களில் வரும் காதலனைக் காதலி வருணிக்கும் முறைகளை நாம் கண்டிருக்கிறோம். கீழ்வரும் பகுதியில் காதலியர், தமது காதலர்களின் மேன்மையை வியந்து வருணிக்கும் பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒருவனைக் குறிப்பதில்லை; பாடுபவளும் ஒருத்தியல்ல. ஆகவே பாட்டுக்குப் பாட்டுச் சில முரண்பாடுகள் காணப்படும். ஆனால் பொதுவில் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நலன்கள் யாவும் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.   சேக்கு ஒதுக்கி விட்டுச் செந்துருக்கப் பொட்டு வச்சி சோக்கு நடை நடந்தாச் சொக் குதையா உங்க மேலே மலையிலே நிழ லோட்டம் மலைக்குக் கீழ் நீரோட்டம் ஒங்க மேலே கண்ணோட்டம் ஒடு தில்ல ஒரு வேலை நறுக்குச் சவரம் செய்து நடுத் தெருவிலே போறவரே குறுக்குச் சவளுதையா கடந்த லொரு பாகத்துக்கு கணை யாழி மோதிரமே நிழலாடும் பச்சைக் கல்லு பச்சைக் கல்லும் பாவனைக்கும் இச்சை கெர்ணடே(ன்) உங்க மேலே ஆளும் சிகப்பல்லோ அவரு நிறம் தங்க மல்லோ குணமே சரஸ்வதியோ உங்க குண மிருந்தாப் போதுமையா புளிய இலை போல புள்ளித் தேமல் விழுந்தவரே அணை வாரு மில்லாமல் அழியுதையா உங்க தேமல் ஏடு படிச்ச வரை எழுத்தாணி தொட்டவரை பாரதம் படிச்சவரை பார்த்து வெகு நாளாச்சி முன்னங்கையில் தங்கக் காப்பு முகம் நெறஞ்ச அருப்பக்கட்டு காதவழி வந்தாலும் கைவீச்சில் நானறிவேன் அச்சடிப் புத்தகமே அரும் பரும்பாப் பேனாக் குச்சி பேனாக் குச்சி தொட்டெழுதும் பேர்ப் போன என் சாமி பல்லிலே இடை காவி பணத்திலே செலவாளி மேவரத்து நெல்லளக்க மெத்தச் செலவாளி ஒரு பாகம் தலைமுடியாம் ஒதுக்கி விட்ட புருவக் கட்டாம் புருவக் கட்டை நேர் பார்த்து பூசுமையா திரு நீற்றை இரும்படிச்சா கல கலங்கும் ஏலந் திண்ண வாய் மணக்கும் கரும்பு திண்ண வாயினிக்கும் கண்ணாளன் தந்த ஆசை ஈனாத வாழை போல இளவாழைக் கண்ணு போல காலையிலே காங்கலைண்ணா கண்ணு ரெண்டும் சோருதையா வந்தா வழி மணக்கும் வாச லெல்லாம் பூ மணக்கும் கட்டி அணைஞ்ச கையி எட்டு நாளும் பூமணக்கும் மதுரையிலே குதிரை வாங்கி மல்லிகைப் பூக் குஞ்சம் கட்டி அடித்து வரும் எம் பெருமான் ஆத்து மணல் தூள் பறக்க சிந்துதையா சீனிப் பொடி சிதறுதையா பூ மலரு அள்ளுதையா தன்னழகு ஆளோடி நிற்கும் போது அஞ்சு வயசிலேயே அழகு தேமல் விழுந்தவரே பற்றிப் படருதையா பச்சைக் கிளி தேகத்துலே நானும் நடந்திருப்பேன் நடப்பாரைக் கண்டிருப்பேன் அந்தச் சாமி நடையைப் போல சைகையிலே காணலியே மொச்சிச் செடியே நீங்க முழக்கமுள்ள தாமரையே பிச்சி மலர்க் கொடியை பிரிய மனம் கூடுதில்லை ஒத்தத் தட்டு வேட்டிகளாம் உல்லாசத் துண்டுகளாம் பக்கத்துல நிக்கயிலே பத்து தையா என் மனசு பட்டு அரை ஞாண் கொடி பாவி மகன் வாயருமை விட்டிட்டி ருந்தாலும் வேறொருத்தி லாவிருவா குறுக்குச் சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே நாக்குத் திருத்தத்துக்கு நானுமில்ல ஆசை கொண்டேன் வந்திருவார் இந்த வழி வாச்சிருவார் தங்கக்கட்டி தந்திருவார் வெற்றிலையும் தயவு வார்த்தை சொல்லிடுவார் பச்சைக்கல்லு மேமுருகு பதினெட்டு வானப் பச்சை மலங்காட்டு மாசிப் பச்சை மணக்குதையா உங்க மேலே ஆல மரத்துக் கிளி ஆசாரம் பேசுங் கிளி நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் இந்த வழி கம்பி போட்ட வேட்டிக்காரா கம்பளத்துப் பிள்ளையாண்டா கடைக் கண்ணுப் புருவத்திற்கு கான மயில் ஆசை கொண்டேன் பல்லு விலை பெறுமே பணம் ஐந்து சொல் பெறுமே சொல்லு விலை பெறுமே சோலைக் கிளி வாய் திறந்தால் பூசம் பொடியுண்டு பொடியடைக்க கம்பியுண்டு நாசிப் பொடியுண்டு நான் இணங்குஞ் சாமியிட்ட புதன் கிழமை தலை முழுகி போக வரச் சிக் கெடுத்து கண்ணு ரெண்டும் சோரவிட்டு கடைக்கி மின்ன நிக்காக வில்வ மரத் தோரம் விரிச்ச தலைப் பூ மணக்கும் கருத்தப் பொடி மணக்கும் கருத்தச் சாமி போற வழி ஓடையிலே ஒரணேறு ஒருத்தி மகன் கருத்தாற கருத்தாற வாய் திறந்தா கனக மணி ஓசையிடும் மஞ்சள் எடைக் கெடையாம் மரிக் கொழுந்து ரெண்டெடையாம் நானெ ணங்கும் சாமியிட்ட நல் குணங்கள் நாலெடையாம் அருணாக் கொடி அஞ்சி ரூவா அதுக் கெசஞ்ச ஓடாணி ஓடாணி மின்னலுல ஒளி விடுதே உங்க தேகம் மஞ்சனத்திப் பலகை போல மார்படந்த என் சாமி நெஞ்சில் படுத்துறங்க நினைவு மெத்தத் தோணுதையா ! மலையிலே பிரம்பு வெட்டி மலைக்குக் கீழே சிலம்படிச்சி தெரு மறிச்சுச் சிலம்படிக்கும் செல்லச் சாமி நம்மதுரை கம்பத்துத் துண்டு களாம் கலர் கொடுத்த நேரியலாம் மலையாளத் துண்டுகளாம் மறக்க மனம் கூடுதில்லை மார்பிலே சந்தனமாம் மணிக்கையிலே தங்கக் காப்பாம் தங்கக் காப்பு போட்ட சாமி தய விருந்தாப் போதுமையா வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள திப்பிலிய சில்லுக் கருப்பட்டிய சினந்தாலும் மறப்பதில்லை உங்க உயரத்துக்கு உங்க காலு கெச்சத்துக்கு தங்கக் கைத்தானத்துக்கு தானாசை கொண்டனையா சாரட்டு வண்டியிலே சிகரெட்டுக் குடிக்கையிலே சிகரெட்டு வெளிச்சத்துலே தெரியுதையா உங்க முகம் எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலையழகா கொல்லுதடா உன்னாசை முழிக ரெண்டும் கிளியப் போல முளிப்புருவம் கத்தி போல உருட்டி முழிக்கையிலே ஊடுருவிப் பாயுதடா கல்லுரலு வீதியிலே கனக ரட்ன மேடையிலே இன்பமுள்ள ரதிக்கிளியே இருங்களேன் சாவடியில் கடலாடிக் கடை துறந்து காரிக்கன் மல்லெடுத்து மெல்லுசமாப் போட்டுவரும் மிதந்த முளி நம்ம துரை மண் வெட்டி கொண்டு மடை திறக்கப் போற சாமி மடையைத் திறந்து விடும் மஞ்ச நீராடி வாரேன் எழுதிய ஓடு போல எழுத்தாணிச் சட்டம் போல வாரிய ஓலை போல வளையுதே ஒங்க மேனி பட்டுக் கவரிலங்க பாளையத்து முத்திலங்க ஒட்டுக் கடுக்கனுக்கு ஒளி விடுதே ஒங்க தேகம் வீசினார் கையல்லலோ விரிச்சார் தலைமுடியை பூசினார் திரு நீற்றை புருவக் கட்டை நேர் பார்த்து அள்ளி எறிஞ்சது போல் அஞ்சாறு தேமலுண்டு பருத்தி இலை போல படருதையா தேகமெல்லாம் கம்மங் கருதிலேயோ கணுவுக் கொரு கோணலுண்டு என் சாமி தேகத்துல எள்ளளவு கோணலில்லே தூத்துக்குடி யிலேயோ துரை மாரு ஆபீஸிலே பஞ்சு விலை மதிக்கும் வஞ்சிக் கொடி என் சாமி பெரிய கம்மா பரவு தண்ணி அதிலொரு நாள் ஸ்னானம் பண்ணி செங்க மங்கத் தண்ணியிலே தெரியுதையா உங்க முகம் மிஞ்சியோ மின்னுறது மேல் முருகோ கொஞ்சுறது தங்கத் துரைகளுக்கு தாயத் தோ மின்னுறது மருவு படர்ந்த கிளி மனித ரோட பேசுங்கிளி தேமல் விழுந்த கிளி தினம் வருமாம் இந்த வழி எண்ணைத் தலை முழுகி என் தெருவில் போற மன்னா வண்ணத் தலை மயிரு கண்ணைப் பறிக்குதையா கட்டக் கம்பு கையிலெடுத்து காரணமா வார சாமி சினந்து வழி நடந்தா சிங்க முடி போலிருக்கும்++   வட்டார வழக்கு : லாவிருவா-சேர்த்துக் கொள்வாள். (பல பாடல்களின் தொகுப்பு)   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   கணவன் பெருமை   நாட்டுப் பாடல்களில் கணவனது பெருமையைப் பாடும் பாடல்கள் பல இருக்கின்றன. கணவன் செய்யும் தொழிலின் பெருமை, அவனது குணநலன்கள், உருவச் சிறப்பு, அறிவுக் கூர்மை, வாக்குவன்மை, தயாள குணம் முதலியவற்றைப் புகழ்ந்து மனைவி பாடுவாள். தன்னைக் கணவன் பாராட்டும் முறைகளையும், பெருமையாகக் குறிப்பிடுவாள்.   சாப்பிட்டுக் கைகழுவி சகுனம் பார்த்து நடை நடந்து நினைச்சா எடுப்பாக நெருஞ்சிப்பூ அச்சடியை சாத்தூரு போவாக சவுளிக் கடை பாப்பாக நினைச்சா எடுப்பாக நெருஞ்சிப்பூ அச்சடியை சட்டை மேலே சட்டை போட்டு சரிகை குட்டை மேல போட்டு போராக எங்க மச்சான் பொழுதடைஞ்ச நேரத்துல கோர்ட்டாரு முன்பாக குரிச்சி போட்டுத் துரைகளோட வாதாடி வழக்குத் தீர்க்கும் வஞ்சிக் கொடி என் சாமி இருக்கக் குரிச்சி உண்டு எந்திரிக்கச் சோடு உண்டு நடக்கக் குடையு முண்டு நான் வணங்கும் சாமிக்கு எல்லோரும் பல் விளக்க ஆலங்குச்சி அத்திக்குச்சி அவரும் நானும் பல் விளக்க ரங்கத்துத் தங்கக் குச்சி   வட்டார வழக்கு : அச்சடி-அச்சுப் போட்ட சேலை ; எடுப்பாக, போவாக-எடுப்பார்கள், போவார்கள் (சிறப்பு பன்மை) ; குரிச்சி-நாற்காலி (அராபியச் சொல்) ; சோடு-செருப்பு ; ரங்கம்-ரங்கூன்.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   காவல் கடுமை காதலர்களின் உறவு காதலியின் பெற்றோர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவளை வெளியில் விடாமல் காவல் காக்கிறார்கள். அவள் வெளியே சென்றாலும் யாராவது துணைக்குச் செல்லுகிறார்கள். காதலன் அவளைச் சந்திக்கச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவள் தனக்குத் தானே பாடுவது போல் அவனை நோக்கிப் பாடுகிறாள்.   பெண்: லேஞ்சி வர்ணப் பூஞ்சிவப்பு நிழல்ல வந்து நிக்கி வீட்டுக் கொடுமையாலே வெளியேற நேரமில்ல காட்டானை கட்டியிருக்க கரடி புலி தானிருக்க ஏழண்ணமார் இருக்க எப்ப வந்த மன்னவனே?   ஆண்: கட்டானைக் கண்ணக் கட்டி கரடி புலி வாயக் கட்டி ஏழண்ண மார் கண்ணயர ஏறி வந்தேன் கற்கோட்டை கருதோ ஒரு கருது காவலோ பத்து லட்சம் இந்த விதம் காவலில எந்த விதம் நான் வருவேன் ஆடியிருட்டுக்குள் அமாவாசைக் கம்மலில தேடி வருமுன்னே தெரு வெல்லாம் காவலில்லா   பெண்: தரும பட்டர ஓரத்துல சதிராடும் பொன்னுச்சாமி வீட்டுக் கொடுமையாலே வெளியே வர நீதியில்ல   வட்டார வழக்கு: நிக்கி-நிற்கிறாங்க ; எப்ப-எப்பொழுது; காவலில்லா-காவல் அல்லவா; வந்த-வந்தாய்; கருது-கதிர்; நீதி-நியதி..   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   விட்டானே ஒற்றை வழி   கிராமப் பெண்களில் சிலர் காதலித்தவனால் கைவிடப்படுவதுமுண்டு. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் பணத்தோடு வேறு பெண் கிடைப்பதுதான். அவ்வாறு ஏமாற்றப்பட்டவள் ஏமாற்றியவனை வயிறெரிந்து சபிப்பாள், சமூகத்தில் சொத்துக்கு மதிப்பிருக்கும்வரை அவள் சாபம் அவனை என்ன செய்யும்? நெஞ்சில் குத்துவதுபோல் கூர்மையான சொல் பிரயோகங்களை இப்பாடல்களில் காணலாம்.   கட்டப் பய குட்டப்பய கட்ட மண்ணு தாண்டிப்பய விசு வாசம் கெட்ட பய; விட்டானே ஒத்த வழி   எலுமிச்சம் பழமிண்ணு எடுத்தேன் கைநிறைய கச்சக் குமிட்டுக் காயுண்ணு கண்டவுக சொல்லலையே   காப்புக் கழண்ட தய்யா கைவளையல் கழண்ட தய்யா கோப்பு குலைஞ்ச தய்யா கோல மொழிப் பாவியால   ஏசல் கயிறானேன் எருமை கட்டும் தும்பானேன் பாவி மகனால பரதேசிக் கோலமானேன்   என்னைக் கெடுத்தவனை எனக்கு மதி சொன்னவனை சொகுசைக் குலைத்தவனை சுத்தாதோ என் பாவம்?   பாம்பு கடியாதோ? பாவம் உனைப் பிடியாதோ? சாபம் பிடியாதோ? சர்ப்பம் உன்னைத் தீண்டாதோ?   தண்ணியிலே தலைகவுந்து தருமர் கூட வழி நடந்து நம்புன சாமியாலே நனையுறனே தூத்தலில   என்னைக் கெடுத்தமிண்ணு எக்காளம் பேசாதே உன்னைக் கெடுத்துருவா உறுதியுள்ள பெத்தனாச்சி   வேப்ப மரத்தை நம்பி வெள்ளரளிப் பூ வெடுத்தேன் காஞ்சிரங் காய நம்பி கனிய மறந்தனையா !   கொழுந்து அரைக்கீரை அறுக்கறுக்கப் பூ வாசம் விசுவாச கெட்ட வண்ட என்ன சகவாசம்?   கத்தரி காய்க்காதோ கமலைத் தண்ணி பாயாதோ கிழக்க வரும் சூரியன போல் எனக் கொருத்தன் கிடையாதோ?   காசிப் பயறடிச்சான் பத்தினியச் சீரழிச்சான் என்னைக் குல மழிச்சான் எஞ்சனத்தை ஈனம் வச்சான்   ஆசை கொண்டேன் தேசத்துல அகப் பட்டேன் கண்ணியிலே வேசை மகனாலே வெளிப்பட்டேன் இத்தூரம்   வட்டார வழக்கு : தும்பு-கட்டும் கயிறு ; கழண்டது- கழன்றது ; கோப்பு- உருவம் ; சொகுசு-நலம் ; தூத்தல்-சிறு மழை.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   அந்த ஆசை வேண்டாம்   பெரிய இடத்துப் பையன் அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் பல மலர்தேடும் வண்டென்று அவளுக்குத் தெரியும் ! அவன் முகத்திலடித்தாற்போல் அவள் பாடுகிறாள் !   பேரீச்சம் பழமே-நீ பெரிய இடத்துக்கிரீடமே ஏனையா காத்திருக்க? ஏலரிசி வாசகமே வள்ளத்தான் குருவி போல வட்டம் போட்டு வந்தாலும் ஆப்பிடு வாண்ணு சொல்லி அந்த ஆசை வய்யாதே   வட்டார வழக்கு : ஆப்புடுவா-அகப்படுவாள் ; ஏலரிசி வாசகமே-விளிச் சொல்.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   சந்தேகம் குடும்ப வாழ்க்கைக்குச் சந்தேகம் எதிரி! அது குடும்ப ஒற்றுமையைச் சிதைத்துவிடும். ஆயினும், தமது சமூக வாழ்க்கையில் தவறுகள் நிறைந்து இருப்பதால் தம்பதிகளிடையே ஒருவர் மீது ஒருவருக்குச் சந்தேகம் ஏற்படுவது சகஜமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்த நேரம் தவறி வந்தால் சந்தேகப்படுகிறார்கள். ''இரவு திரும்புகிறேன் '' என்று சொல்லிச் சென்ற கணவன் இரவில் வராவிட்டல், அவனை ''எந்தப் பெண் கைப்பற்றி விட்டாளோ? '' என்று கற்பனைக் கவலைகளால் மூழ்கிவிடுகிறாள்.   போனா இருக்க மாட்டார் பொழுதிருக்கத் தங்க மாட்டார் என்ன மனசி லெண்ணி இருந்தாரோ ராத்தங்கி   துரையே துரை மகனே தோக்கலவார் வம்முசமே இடை சிறுத்தச் செல்லச் சாமி எவளெடுத்துக் கொஞ்சிறாளோ?   மொச்சிக் கொழுந்தே நீ முழக்க முள்ள தாமரையே அல்லி மலர்க் கொடியே யாராலே தாமுசமோ   தெற்குத் தெருவிலேயோ தேமலக்கா வீட்டிலேயோ செங்கக் கட்டி திண்ணையிலோ தங்கக் கட்டி நித்திரையே?   குலை வாழை நெல்லுக் குத்தி குழையாமல் சோறு பொங்கி இலை வாங்கப் போனசாமி எவளோட தாமுசமோ?   நாலு மகிழம் பூவு நாற் பத்தெட்டு ரோஜாப் பூவு நானெடுத்துக் கொஞ்சும் பூவை-இப்ப எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?   இருட்டை இருட்டடிக்க ஈச்ச முள்ளு மேலடிக்க இருட்டுக் கஞ்சா கொடிப்புலியை எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?   எண்ணைத் தலைமுழுகி எள்ளளவு பொட்டுமிட்டு இலை வாங்கப் போனசாமி எவ பிடிச்சு லாத்துறாளோ?   பொட்டு மேலே பொட்டு வச்சி புறப்பட்டுப் போன சாமி பொட்டு அழிஞ்ச தென்ன போய் வந்த மர்ம மென்ன?   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   எட்டு நாளாய்ப் பேசவில்லை   இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள் ! அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப் பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி விளைக்குள்ளிருத்த தன்னை அவன் மெல்ல அழைத்ததை கூறுகிறாள். தோழி, ''அப்படியானால் இப்போழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்? '' என்று கேட்கிறான். '' அது பெரிய விஷயமல்ல. சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல் '' என்கிறாள் காதலி.   காதலி: பால் போல் நிலாவடிக்க பருத்திக்குள்ள நானிருக்க மின்னுவெட்டான் பூச்சி போல-அவன் மெல்ல வந்து கூப்பிட்டானே   தோழி: இரும்பாலே கிணறு வெட்டி-நீ இருந்து குளிக்கையிலே கரும்பான அத்தை மகன் கையலைச்சுப் போரானடி   காதலி: ஆத்துல ஊத்துத் தோண்டி அவரும் நானும் பல் விளக்க எச்சித்தண்ணி பட்டுதுன்னு-என்னோட எட்டு நாளாப் பேசலியே   வட்டார வழக்கு: மின்னுவெட்டான் பூச்சி-மின் மினி; கையலைச்சு-கைவீசி; ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   சொற் போட்டி   காதலர் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் வாது கவிகள் பாடுவார்கள்! அப்பாட்டுகளில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், குறைவாகப் பேசிக் கொள்ளுவதும், வழக்கம். முதலில் காதலனைக் கிண்டலாகப் பேசுகிறாள். செருப்புக்கும் காசில்லாமல் தும்புச் செருப்புப் போட்டிருக்கிறானாம் அவன். அப்படியானால் தும்பைப் பூப்போல வெள்ளை வேட்டி அவனுக்கு ஏது? அவன் பதிலடி கொடுக்கிறான். கடைசியில் இருவரும் ரங்கூனுக்குப் போய்விடுவதாக முடிவு செய்கிறார்கள்.   பெண்: தும்புச் செருப்பு மாட்டி தொழு திறக்க போற மன்னா தும்பைப் பூ வேட்டியிலே துவண்ட மஞ்சள் நான் தானா?   ஆண்: மஞ்சள் மணக்கப் பூசி மரிக்கொழுந்தை நெருக்க வச்சு மந்தையிலே நிண்ணாலும்-உன்ன மடை நாயும் தீண்டாதடி   பெண்: கட்டக்கருத்த மச்சான் வட்டப்பொட்டு போட்ட மச்சான் எந்தப் பொட்டு வச்சாலும் ஏறணுமே ஏலங்கடை   ஆண்: சாலை கடந்து வாடி சந்தைப் பேட்டை கடந்து வாடி ஓடை கடந்து வாடி ஓடிப் போவோம் ரங்கூனுக்கே உறங்கிட்டியே சண்டாளி!   இரவில் சந்திப்பதென காதலர் இருவர் முடிவு செய்திருந்தனர். காதலி மெதுவாக வந்து திண்ணையில் இருந்தாள். வீடு பூட்டியே இருந்தது. எதிர் வீட்டில் இருந்த காதலன் குறித்த நேரத்துக்கு மேடை மீது வந்து பார்த்தான். எதிர் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது ; வெகு நேரம் நின்று பார்த்தான். கதவு திறக்கவில்லை. ஆத்திரத்தில் ஒரு கல்லை விட்டெறிந்தான். கலகலப்பு ஏற்பட்டது. வீட்டில் உள்ளோர் விழித்திருக்க வேண்டும். அவள் வீட்டினுள் நுழைந்து கொண்டாள். காலையில் தனியாக அவளைக் கண்ட காதலன் “உறக்கம் பெரிதென்று உறங்கி விட்டாயா?” என்று கேட்கிறான். அவளோ, “திண்ணையில் நானிருக்க கல்லை விட்டெறிந்தது உன் உடல் கொழுப்பா?” என்று சுடச்சுடப் பதிலுக்கு கேட்கிறாள்.   காதலன்: கார வீட்டு மேலிருந்து கல்லை விட்டு நானெறிய உறக்கம் பெருசின்னு உறங்கிட்டியே சண்டாளி !   காதலி: செங்கட்டித் திண்ணையிலே தங்கக்கட்டி நானிருக்க கரியோட மூர்க்கமில்லை கல்ல விட்டு நீ எறிஞ்சே   வட்டார வழக்கு: கரியோட மூர்க்கம்-உடல் கொழுப்பு; கல்ல-கல்லை; எறிஞ்சே-எறிந்தாய்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   சேலையில் குறைவு   கணவன் எத்தகைய சேலை எடுத்தாலும் மூக்கால் அழும் மனைவி இவள். கருப்புச் சேலை எடுத்துக் கொடுத்தான்-குறை சொன்னாள். பச்சை சேலை எடுத்தான்-குறை சொன்னாள். 18 முழம் சேலை எடுத்தான். சுற்றுக்குப் பற்றாது என்றாள். 22 முழம் எடுத்தான். அப்பொழுதும் ஏதோ குறை சொன்னாள். கணவன் பொறுமைசாலிதான். அவளைத் தேற்றி திருவிழாப் பார்க்க அழைக்கிறான்.   கணவன்: எள்ளுக் கருப்புச் சீலை எடுத்துடுத்தும் சாயச்சீலை சுத்துக்கு எட்டலணு சுண்டுதாளே கண்ணீரை எள்ளுக் கருப்புச் சீலை இருபத்திரண்டு முழம் உடுத்திப் புறப்படடி உள்ளூருச் சாமி பார்க்க பாசிப் பயத்தஞ் சேலை பத்துலட்சம் பெத்த சேலை சுத்துக்கு எட்டலண்ணு சுண்டுதாளே மேமுழிய முந்திப்பச்சையடி முழுநிறம் நீலமடி ஊதாக் கருப்புச் சீலை உட்காரடி பக்கத்தில்   வட்டார வழக்கு: எட்டலணு-எட்டவில்லை என்று; மேமுழிய-மேல் விழியை.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.நெல்லை மாவட்டம்   ஒரு மச்சமுண்டு   காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின் உவகை பாட்டாக வெளிப்படுகிறது.   ஆண்: கல்லருகாம், புல்லருகாம் கடலருகாம் பூந்தோட்டம் புல்லறுக்கப் போற பிள்ளை-நீ பூமுடிஞ்சாலாகாதோ?   பெண்: நத்தத்து மேட்டு வழி நான் போறேன் ஒத்த வழி பிச்சிச்சரம் போலே-நீ பின்னே வந்தாலாகாதோ?   ஆண்: கண்டாங்கிச் சீல கட்டி கரை வழியே போற புள்ள,-உன் கண்டாங்கிச் சீலையிலே-நான் வண்டாய்ச் சுழலுதனே குளத்திலொரு அல்லியுண்டு கூந்தலொரு பாக முண்டு இடை சிறுத்த அல்லிக்கு இடையில் ஒரு மச்ச முண்டு   வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   மூத்தவள் வயிற்றெரிச்சல்   மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவியைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும் உரையாடல் வருமாறு:   கணவன்: செம்புச் சிலை எழுதி செவத்தப் புள்ள பேரெழுதி வம்புக்கு தாலி கட்டி வாழுறது எந்த விதம்?   மனைவி: மாமன் மகளிணுல்ல மறிச்சு வச்சுத் தாலிக் கட்டி மந்தை யோரம் வீட்டைக் கட்டி மாடடையப் போட்டாரில்ல   +கணவன்: கல்லு அடுப்புக் கூட்டி செடிய மறவு வச்சு பொங்கலிட்டுப் பார்த்தாலும் பொருந்தலையே உன்னழகு   மனைவி: கூடுணமே ரெண்டு பேரும் குமர கோயில் அன்னம் போல இன்னிப் பிரிந்தாயனா இறப்பதும் நிச்சயம் தான் என்னைய விட்டுட்டு நீ இளையதாரம் கட்டினியே போற வழியிலியே-உன்ன பூ நாகம் தீண்டிராதோ?   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.நெல்லை மாவட்டம்   கன்னிக் களவு   காதலன் கஞ்சிக்கலயம் கொண்டு காட்டுக்குப் போகும் காதலியக் கை தட்டிக் கூப்பிடுகிறான். அவள் அவன் மீது சற்றுக் கோபத்தோடு இருக்கிறாள். அத்தை மகனாகிய அவன் ஊரில் இருக்கும்பொழுதே, சொத்துள்ள ஒருவன் அவளைப் பெண் பேசி வரத் துணிந்து விட்டான். இதை அவள் அவனிடம் கூறுகிறாள். அவன் மணம் பேசி வர நேரமில்லை, வேலை அதிகம் என்று சொல்லுகிறான். களவு செய்பவன் நினைத்தால் நேரமா கிடைக்காது? இது கன்னிக் களவுதானே ! அவனுக்கு இன்னும் மனம் உறுதிப்படவில்லை. இவ்வாறு அவனுக்கு உறுதியேற்படும்படி சூடு கொடுத்துவிட்டு சந்திரனைப் பார்த்து “நீ மறைந்து கொண்டு என் மச்சானுக்குக் களவு செய்யக் கற்றுக் கொடு ” என்று சொல்லித் தனது காதலனைக் கேலி செய்கிறாள்.   காதலி: கஞ்சிக் கலயம் கொண்டு காட்டுக்கு போகையிலே கையலைச்சுக் கூப்பிட்டது காரணத்தைச் சொல்லு மச்சான்   காதலன்: பேரீச்சம் பழமே நீயே பெரியடத்துக் கிரீடமே அஞ்சாறு ஆளோட-உன்ன யாரை விட்டுக் கூப்பிடட்டும்?   காதலி: மணந்திடுவேன் என்றறு சொல்லி மாதக் கணக்காயிருச்சு கழுத்தில் தாலி கட்ட லேனா-நான் கயத்தப் போட்டுச் செத்திடுவேன்   காதலன்: இடுப்பே ஒரு பிடியே இன்பமான ரதி கிளியே மதியான கண்ணே-உன்ன மறக்க மனம் கூடலியே   காதலி: மாமன் மகனிருக்க மாலையிடும் சாமியிருக்க சொத்துக் கையி சாமிபய சொந்தமிண்ணு வாரானில்ல   காதலன்: காரமுள்ள சுண்ணாம்பாம் கலயத்தில நீத்தி வச்சேன் நீத மற்ற சிவகிரில நிண்ணு போக நேரமில்லை   காதலி: வெள்ளி நிலாவே, நீயே விடி நிலா ராஜாவே கன்னி களவு செய்ய கண் மறைஞ்சால் ஆகாதோ?   காதலன்: செவந்திப்பூப்போல உன் திரேகம் வாழுத வயதிலேயே வாடி பொண்ணே ஒடிப் போவோம் இலுமிச்சங்கனி போல இருவருமே ஒரு செகப்பு வாழுத வயதிலேயே வாடி பொண்ணே ஓடிப் போவோம் !   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.நெல்லை மாவட்டம்   போட்டோவும் சினிமாவும் காதலன் பல நாட்களாக காதலியோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி வருகிறான். அது போலவே சினிமாவுக்குப் போகலாம் என்றும் ஆசைகாட்டி வருகிறான். ஆனால் பல மாதங்களில் இரண்டில் ஒன்றும் நடக்கவில்லை. அவள் அவனைச் செல்லமாகக் கோபிக்கிறாள். அவன் அவளை அழைத்துச் செல்லப் பயப்படுகிறான். அவர்களுக்குத் திருமணமாகச் சில மாதங்களே இருக்கின்றன. யாரேனும் கேலி செய்து விடுவார்களோ என்று பயம். ஒருமட்டும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போவதற்கு முயலும்போது அவனது நண்பன் ஒருவன் அப்பொழுது நடக்கும் சினிமா நன்றாக இல்லை என்று சொல்லி விட்டான். அவனைத் திட்டிக்கொண்டே காதலன் “நல்ல படம் இல்லையினு, நாசகாரன் சொல்லுதானே” என்று காதலியிடம் சொல்லுகிறான். அவளோ, உறுதியாக, “கருங்காலி பேச்சுக் கேட்டு கலங்க வேண்டாம், போவோம் மச்சான்” என்று பிரச்சனையைத் தீர்த்து விடுகிறாள். தற்காலத்திலும் ரசமான நாட்டுப் பாடல் எழுகின்றன. தமது கவிதையூற்று வற்றிவிட வில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகும். இது கார்க்கியே எழுதியதாக இருக்கலாம். அவ்வாறானாலும், நாட்டாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடலாகும்.   காதலன்: உச்சி வகுத்த புள்ள ஊரு தேசம் பாத்த புள்ள மெத்தப் படிச்ச புள்ள புத்தி கெட்டுப் போயிராத உருகி உருகியல்லோ ஒன்னால நான் உருகி கல்லான மேனியெல்லாம் கயிறாய் உருகுறேனே   காதலி: போட்டோ எடுப்பமிண்ணு பல நாளும் சொன்ன மச்சான், போட்டோ எடுக்காம-என்னப் பொய் சொல்லி ஏய்க்கலாமா? சினிமாவுக்குப் போவமிண்ணு பல நாளும் சொன்ன மச்சான் சினிமாவுக்கு போகலாமே பாதையும் தெரியுதாமே   காதலன்: செத்துப் பிழைச்சு நம்ம சினி மாவுக்குப் போகையிலே நல்ல படம் இல்லையிண்ணு நாசகாரன் சொல்லுதானே   காதலி: கருத்துள்ள படமாருக்கும் கஷ்டங்கள் நிறைஞ்சிருக்கும் கருங்காலி பேச்சு கேட்டு கலங்க வேண்டாம் போவோம் மச்சான்   வட்டார வழக்கு:கருங்காலி-சேர்ந்திருப்பதைக் கெடுப்பவன்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்   பிரிந்தவர் கூடினர்   கிராமத்தில் ஆண்டு முழுவதும் விவசாயத் தொழிலாளருக்கு வேலையிராது. எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டொருவர் வேலை தேடிப் பலவிடங்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் இளைஞர்கள் தம் காதலியரைப் பிரிந்திருக்க வேண்டும். மழை தண்ணீர் உண்டானால் ஊருக்குத் திரும்பி நிலத்தைப் பயிர் செய்வார்கள். வேலை தேடிச் சென்ற இளைஞன் ஊர் திரும்பினான். தன்னிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான் என்று அவளுக்கு அவன் மீது கோபம். புஞ்செய் நிலத்தில் அவன் வேலைக்கு வருவதை அவள் காண்கிறாள். அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். உள்ளூர மகிழ்ச்சிதான். அவன் அவள் ஊடல் தீரப் பசுமையான நினைவுகளைக் கிளறி காதல் ஊற்றைச் சுரக்குமாறு செய்கிறான்.   காதலன்: வட்ட வளவிக் காரி வளத்தட்டு சீலக்காரி கோதுமை பச்சைக்காரி கோபம் உண்டோ என்மேலே   நாணத்தட்ட சோளத்தட்ட நாலுகைக் கம்மந்தட்ட கம்மந்தட்ட வீட்டுக்காரி காட்டம் உண்டோ எம் மேலே   பல்லு வரிசைக் கல்லோ பட்டுக்கரை நேத்திக் கரை சொல்லு வரிசைக்கில்லோ-உன்னை சொந்தமின்னு எண்ணி ருந்தேன்   ஆனை நடையாளே அமிர்த மொழியாளே செல்ல நடையாளே-நான் சில காலம் பிரிஞ்சிருந்தேன்   படுத்தா உறக்கம் வல்லே பாய் விரிச்சாத் தூக்க மில்லே உறக்கச் சடவுலயே-கண்ணே உன் உருவம் தோணுதடி   உன்னைய நம்பி யல்லோ உட்காந்தேன் திருணையிலே என்னைய மறந்தியானா-நீ ஈடேறப் போறதில்லை   வேலி அழிஞ்சுதுண்ணு விறகுக்கு நீ வாடி காளை ஒண்ணு தப்புச் சுண்ணு காட்டு வழி நானும் வாரேன்   இண்டு தழையாதோ? இண்டம் நிழல் சாயாதோ? இண்டு நிழலிலேயே-நாங்க இருந்து கவி பாட   மலையிலே மாட்டக் கண்டேன் மலைக்கும் கீழே தடத்தக் கண்டேன் செவத்தப் புள்ள கொண்டையிலே செவ்வரளிப் பூவைக் கண்டேன்   பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுக்கிட்டு அவளழுக, நானழுக அன்னக்கிளி ஒண்டழுக   வட்டார வழக்கு: சடவு-அகதி; இண்டு-முள் மரம்; அழுக-அழ; திருணை-திண்ணை. குறிப்பு: கம்மந்தட்ட வீடு-கூரை, கம்மந்தட்டையால் வேய்ந்திருக்கும் இத்தகைய வீடுகள் கோவில்பட்டி தாலுக்காவிலும் சங்கரன் கோவில் தாலுக்காவிலும் சில கிராமங்களிலும் காணலாம்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   வழி நடப்போம் !   மலையில் மாடு மேய்க்கும் இளைஞன் தனது புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். அவனுடைய காதலியை அழைக்கும் சங்கேதப் பாட்டை ஊதுகிறான். அவள் வருகிறாள். அவன் ஊதுவதை நிறுத்திப் பேச்சுக் கொடுக்கிறான். அவள் பதில் சொல்லுகிறாள். உரையாடல் மலை நீரோடை போல வளைந்து சென்று காதலின்பமென்னும் விளை நிலத்தில் பாய்கிறது.   ஆண்: வெள்ளை வெள்ளைப் பாறை வெள்ளாடு மேயும் பாறை சீங் குழல் சத்தம் கேட்டு திரும்பலயோ உந்தன் முகம்?   பெண்: மாங்கா மரமானேன் மறுவருஷம் பெண்ணானேன் தேங்காய் மரமானேன் தெரிச்ச கொண்டைக்காரனுக்கே ஆண்: மூணு சட்டி உயரத்தில் முட்டைக் கோழி பருவத்தில் சாதிக்கோழி சாயலோட சம்பிராயம் போடாதடி   பெண்: செவத்த லேஞ்சுக் கார மாமா, சீல வாங்கித் தாங்க மாமா சிலுக்குச் சீல வந்தாத் தான் சிரிச்சுமே பேசிடுவேன்   ஆண்: கல்லு இடுவலில கவுந்து தலை பாக்கும் புள்ள பல்லு இடுவலில-எனக்குப் பாதரவா தோணுதடி   பெண்: ஓடையிலே ஒரு மரமே ஒதுக்கமான மாமரமே தங்கக் கொழுந்தனுக்கு தலைபாக்க ஏத்த ஓடை   ஆண்: தாளம் பூ தலையில் வச்சு தனி வழியே வந்தவளே எவன் இருப்பான் என்று சொல்லி இங்க வந்த பெண்மயிலே ! ஒருத்திக்கு ஒரு மகனாம் உன்னை நம்பி வந்தவண்டி கையை விட்டுத் தவறவிட்டா கருமம் வந்து சேருமடி   பெண்: நெலக்கடலை நாழி வேணும் நேரான பாதை வேணும் ஜோடி மட்டம் ரெண்டு வேணும் சொகுசா வழி நடக்க   வட்டார வழக்கு: சீங்குழல்-சீவிய குழல், புல்லாங்குழல்; முட்டை என்பது-காதலியை; சாவல் என்பது-காதலனை; சம்பிராயம்-வீண் பெருமை: இடுவல்-இடைவெளி; ஜோடி மட்டம்-தங்களிருவரும்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   கலியாண மாதத்தில் கவலை   மருதியின் அத்தை மகன் மருதன். இருவரையும் கணவன் மனைவியென்று, ஐந்து வயதிலேயே விளையாட்டாகப் பெற்றோர்கள் கேலி செய்வார்கள். இருவரும் பெரியவர்களாயினர். ஊரில் கொஞ்சம் பணம் படைத்த குடும்பத்தில் பல ஆண்டுகள் மணமாகாத ஒரு பெண்ணிருந்தாள். அவளை, மருதனுக்கு மணம் பேசி திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். பெரியவனான பிறகு மருதியோடு பேசிப் பழக மருதனுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், மணச்செய்தி கிடைத்ததும் மருதி அவனை நாடி ஓடிவந்தாள். அவனிடம் வாதாடிப் பார்க்கிறாள். பணத்தைவிட பழைய நினைவு பெரிதென்று மருதன் எண்ணுவானா? அவர்கள் பேச்சிலேயே இக்கேள்விக்கு விடை கண்டு கொள்ளுங்கள்.   மருதன்: ஆத்துக்குள்ள ஆத்தாள் அவளும் நானும் கவிபாட வாதாடி வாதாடி வலுவைக் குறைச்ச பொண்ணை   மருதி: சாமைக்கருது போல செவத்த புள்ள நானிருக்க பாழாய்போன அத்தை மகன் கிழவி மேல் கையைப் போட்டான்   மருதன்: சிரிச்ச முகத்தோட சீதேவி போல வந்து அழுத முகத்தோட ஆரத்தேடி நிக்கே பொண்ணே?   மருதி: அஞ்சு வயதிலேயே அறியாப் பருவத்திலே கொஞ்சு வயசுலேயே கூடினது மோசந்தானே   மருதன்: வாக்கப்பட நல்லாசை வளவி போடப் பேராசை கலியாண மாத்தையிலே கவலை வந்து நோந்ததென்ன?   வட்டார வழக்கு: சாமைகருது-சாமைக்கதிர்; நிக்கே-நிற்கிறாய்; மாத்தையிலே-மாதத்தில்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   சின்னத் தாயே தங்கம்   ஏரிக்கரையிலே அவன் தன் காதலியைப் பார்க்கிறான். ஏரியில் நீர் நீறைந்திருப்பது போல் அவன் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. அவன் காதல் குறிப்புணர்த்திப் பாடுகிறான் ! அவனை மறுத்து அவளும் ஒவ்வொரு சொல் சொல்லுகிறாள். அவர்களது உரையாடலைப் பார்ப்போம்.   ஆண்: வத்தனத்தான் ஏரியிலே சின்னத் தாயே தங்கம்-ரண்டு வர்ண பொறா மேயக் கண்டேன் சின்னத் தாயே தங்கம்   பெண்: வத்தனாலும் குத்தமில்லை சின்னத் தாயே தங்கம் நானுனக்கு பொண்ணு மில்லே சின்னத் தாயே தங்கம்   ஆண்: இண்ணடித்தான் ஓரத்திலே சின்னத் தாயே தங்கம்-ரண்டு கோயில் பொறா மேயக் கண்டேன் சின்னத் தாயே தங்கம் காடாலே ஒரு மயிலு சின்னத் தாயே தங்கம்-அது கட்டுப் பட்டு நிக்கு தோடி சின்னத் தாயே தங்கம் செடியாலே ஒரு மயிலு சின்னத் தாயே தங்கம்-அது சிக்குப்பட்டு நிக்குதோடி சின்னத் தாயே தங்கம்   பெண்: ஆலா உளுது போல சின்னத் தாயே தங்கம்-நான் அவித்து விட்டேன் தலை மயிரே சின்னத் தாயே தங்கம் மூணு காசு முட்டாயா சின்னத் தாயே தங்கம்-இங்கே முட்டுக் காட்டுக் கச்சேரியா சின்னத் தாயே தங்கம்   ஆண்: முட்டுக் காட்டுக் கச்சேரிக்கு சின்னத் தாயே தங்கம் முடிவு சொல்லக் காத்திருந்தேன் சின்னத் தாயே தங்கம்   வட்டார வழக்கு: பொறா-புறா; உளுது-விழுது.   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   முறைப் பாட்டு   அத்தை மகள் பேசவில்லை !   அவன் நிலக்கடலை விதைத்திருக்கிறான். கடலை மகசூல் கண்டதும் கையில் பணமிருக்கும். அத்தை மகளைக் கலியாணம் செய்து கொள்ளுவான். இது அவன் கனவு. ஆனால் மழை பொய்த்து கடலை காய்ந்து விட்டது. அவன் கவலை தேங்கிய முகத்தோடு வயலருகே உட்கார்ந்திருந்தான். அத்தைமகள் அவ்வழியே போனாள். அவன் மேல் அவளுக்கு ஆசைதான். இன்று அவள் வயலருகில் போனதை அவன் பார்க்கவில்லை. அவளுக்குக் கோபம் வந்து விட்டது, நேராகப் போய்விட்டாள். பின்னர்தான் அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தன்னிடம் பேசாமல் போவதையும் அதன் காரணத்தையும் உணர்ந்தான். தன் அன்பையும் தெரிவிக்க வேண்டும். தன் கவலைக்குக் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். உடனே அவள் காதில் கேட்கும்படி பாடத் தொடங்குகிறான்.   ஆண்: பண்டாரம் தோட்டத்திலே பருத்திக் களை வெட்டயிலே ஒத்த வழி ஓடி வர அத்தை மக பேசலியே ஆமணக்குத் தோட்டத்திலே பூமணக்கப் போற புள்ளே பூமணக்கும் வாடையிலே-நானும் புருஷமினு வந்துட்டேனே வாகை மரத்துப் புஞ்ச வட்டாரச் சோளப் புஞ்ச தங்கம் விளையும் புஞ்ச தரிசாக் கிடக்குதடி காட்ட உழுது போட்டேன் கடலை போட பட்டம் பாத்தேன் வந்த மழை போகுதில்லை வருணனே உனது செயல்   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்.   குளிர்ந்த முகம் தந்திடுவேன்   தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள் காதலி. காதலன் அருகில் சென்று ''தண்ணீர் கொடு'' என்று கேட்கிறான். ஊர்ப் பொதுவிடத்தில் பேசுகிறோமே என்ற நாணம் அவனுக்கில்லை. அவனுக்குப் புத்தி புகட்ட எண்ணி “கூடத்துக்கு வந்தியானா குளிர்ந்த முகம் தந்திடுவேன்” என்று அவள் பதில் சொல்லுகிறாள். கூடத்திற்கு அவன் எப்படிப் போவான்? பலரறியக் கூடத்திற்குள் போக வேண்டுமானால், அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா? அவள் மறைவாக அவனிடம் சொல்லுவதும் அதுதான்.   ஆண்: ஆழக்கிணத்துக்குள்ளே நீளக் கயிறு விட்டு தண்ணி எடுக்கும் புள்ள-எனக்கு தண்ணீரும் கொடுத்திடம்மா   பெண்:தண்ணீரும் கொடுத்திடுவேன் தாகமது தீர்த்திடுவேன் கூடத்துக்கு வந்தியானா குளிந்த முகம் தந்திடுவேன்   வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை (பெண்பால்); வந்தியானா-வந்தாயானால்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   வாருமையா சாவடிக்கு   மலைச்சாரலில் காதலன் காதலியை அடிக்கடிச் சந்திக்கிறான். எப்பொழுதும் உன் நினைவுதான் என்று அவன் அடிக்கடி கூறுகிறான். அவள் அவன் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு என் தலையில் பூ முடிக்க ஊர்ச்சாவடிக்கு வா என்கிறாள். “மணம் செய்து கொள்ள சீக்கிரம் வா” என்பது குறிப்பு.   பெண்: நந்த வனத் தழகு நானிருக்கும் ஊரழகு கஞ்சாச் செடியழகு கறுத்த மன்னன் காலழகு பொட்டி லிடும் பூப் போல பொழுது விட்ட ராமம் போல இப்ப விட்ட பூப் போல இருக்கனையா நானுனக்கு   ஆண்: மலையடி ஓரத்துல மானு வேட்டை ஆடயில மானெல்லாம் மலை மேலே மன மெல்லாம் ஒம்மேலே மலையடி ஓரத்துல மழையிறங்கிப் பேயயிலே மின்னுதடி ஒன்னால பொன்னால கொங்காணி   பெண்: ஐயா வருகுறதும் கைய வளையறதும் இடதுபுறம் கெடியாரம் எழுத்தாணி மின்னுறதும்   ஆண்: செங்கல் ஒளியாளே சிவந்த கனி வாயாளே மின்னல் ஒளியாளே மேனி மெலியுதனே   பெண்: கீறி மயிருணர்த்தி தெந்தம் போல முடிக்க வாருமையா சாவடிக்கு வாசமுள்ள பூ முடிக்க   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   பதினான்கு வருஷங்கள்   அவளது காதலன் தண்டிக்கப்பட்டு சிறைக்குப்போய் விட்டான். பதினான்கு வருஷம் தண்டனை. அவள் மணம் செய்துகொள்ளாமலே இருந்தாள். அவள் சோறு தண்ணீர் இல்லாமலே சுக்குப்போல் உலர்ந்து விட்டாள். அவன் கவலையில்லாமல் மதுரைச் சிறையில் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு எட்டுமாறு என்ன பாட்டுப் பாடுவது என்று அவள் யோசிக்கிறாள்.   சாமி எனக்காகுமா? சதுரகிரி பொட்டாகுமா? நெலாவும் பொழுதாகுமா? நெனச்ச சாமி எனக்காகுமா? ஆசை தீர அணைஞ்ச கையி அவரு மேல போடும் கையி பன்னீரளைஞ்ச கையி பதினாலுவருஷ மாச்சே ! சுக்குப் போல நானுலர்ந்து சோறு கறி செல்லாம-மதுரையில கொக்குப் போல் அவரிருக்க-நானு சோலக் கிளி வாடுதனே ! சாலையில சமுத்திரமே சாமி கையில் புஸ்தகமே என்னத் தொட்ட மன்னவர்க்கு என்ன கவி பாடட்டும்?   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,திருநெல்வேலி மாவட்டம்.   வைப்பாட்டி   ஒரு உயர் ஜாதி வாலிபன் பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். சாதிக் கட்டுப்பாடுகளால் அவளை மணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் குடும்பங்களைத் துறந்து ஒரு குடிசை கட்டிக் கொண்டு தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரும் கருத்தொருமித்துக் கணவன் மனைவியுமாக வாழ்ந்தனர். ஒரு நாள் அவனுடைய முறைப் பெண் அவனைப் பார்க்கிறாள். “நாட்டில் மழை பெய்யவில்லை. நீதி தவறினால் மழை பெய்யாது அல்லவா? நீ வைப்பாட்டி வைக்கப்போய் ஊருக்கே பஞ்சம் வந்து விட்டது” என்று சொல்லுகிறாள். அவன் தனது செய்கையை நீதியற்ற செய்கை என்று நினைக்கவில்லை. அவளை வைப்பாட்டி என்றும் கருதவில்லை. அவளைத் தன் மனைவியாகவே அவன் நினைக்கின்றான். “அவளை விட்டு நான் வரப்போவதில்லை” என்று சொல்கிறான்.   பெண்: மழைக்கே அதிகாரி மார்க்க முள்ள சுக்கிரரே வப்பாட்டி தேடப் போயி வாடுதையா நம்ம தேசம்   ஆண்: வாடுனா வாடுதடி வரப்பு வசங்குதடி ஓடிவரவும் மாட்டேன் தேவேந்திரப் பெண்ணை விட்டு சாதிப் பிரிவு தானா சாத்திர மெல்லாம் ஒண்ணுதானே மருவில்லா மாங்கனிய மறக்கமனம் கூடுதில்ல   வட்டார வழக்கு : தேவேந்திரப் பெண்-பள்ளர் சாதிப் பெண்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்.   பெண்குடம் போனால் !   அவன் என்ன கேட்கிறான், அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் மகளின் பண்பாட்டுப் பெருமையை காதல் விளையாட்டில் கூட அவள் நிலைநாட்டுகிறாள்.   ஆண்: மண் குடம் கொண்டு மலையோரம் போற புள்ள ! மண் குடம் வச்சுப் போட்டு-உன் பெண் குடம் ரெண்டும் விலை சொல்லடி   பெண்: மண் குடம் போனால் மறு குடம் வாங்கலாம் பெண் குடம் போனால் உலகம் பொருந்துமா மன்னவரே?     சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   கண்டதுண்டோ?   காட்டுக்குச் சென்று மாடு மேய்க்கும் காதலனை அடிக்கடி காதலியால் காண முடிவதில்லை. அவனும் அவளைக் கண்டு பல நாட்கள் ஆயின. ஒரு நாள் காலையிலேயே எழுந்து மந்தை கிளம்பு முன், காதலி அவனைக் காண்பதற்கு ஊரின் எல்லையில் போய் நின்றாள். அவன் வந்ததும் அவனிடம் “பாலகனைக் கண்டதுண்டோ?” என்று கேட்கிறாள். அவன் அவளை “யாராவது அயலூர் ரோடுகளிலே பார்த்ததுண்டோ?” என்று கேட்கிறான். ஊரில் காண முடியவில்லையல்லவா? அவன் பதிலாக ஒரு பாட்டும் உள்ளது.   காதலி: கொத்துக் கடை மத்தாளமாம் கொரங்குக் கல்லாம் கரடிக்கடை பசு மேயும் பாரமலை-ஒரு பாலகனைக் கண்டதுண்டோ? காதலன்: சேத்தூரு சிமின்டு ரோடு சிவகிரி தாரு ரோடு புளியங்குடி மண்ணு ரோடு-ஒரு பெண் மயிலைப் பார்த்தியளா?   வட்டார வழக்கு: பார்த்தியளா?-பார்த்தீர்களா?   குறிப்பு: முதல் இரு அடிகளில் வருவன, மலைச்சாரலில் குறிப்பிட்ட இடங்களின் பெயர்கள்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   போக மனம் கூடலியே?   மாமன் மகன் புங்கமர நிழலில் உட்கார்ந்திருக்கிறான். கஞ்சிக்கலயம் கொண்டு அத்தை மகள் அவ்வழியே செல்லுகிறாள், அவன் அவளோடு பேச்சுக் கொடுக்கிறான். “அவசரம் போலிருக்கிறது. போ, போ, ஆனால் நீ கஞ்சி குடிக்கும் போது என்னை நினைத்துக் கொள்” என்கிறான். அவளுக்கோ அவன் மேல் ஆசை. நின்று பேச விருப்பம்தான். ஆனால் சோளம் அறுவடையானதும் தாலி கட்டுவதாகச் சொன்னவன், அறுவடை முடிந்து ஒரு வாரமாகியும் எவ்விதப் பேச்சும் கொடுக்க வில்லை. தானாகப் பேச்செடுக்காமல் வழியும் இல்லை. ஆகவே ஒருவழியாக இந்தப் பேச்சைச் சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்து குளிர்ச்சியாகவே பேச்சைத் தொடங்கிப் பேச்சை முடித்து விடுகிறாள்.   கொழுந்தன்: கஞ்சிக் கலயம் கொண்டு கரை மேலே போற புள்ள கஞ்சி குடிக்கையிலே என்னக் கொஞ்சம் கண்ணே நினைச்சுக் கோடி   கொழுந்தி: மாமன்மகனிருக்க மாலையிட்ட சாமியிருக்க புங்க நிழலிருக்க போக மனம் கூடலியே   கொழுந்தன்: கருசக் காட்டு புழுதியிலே கால் நடையாப் போற புள்ள கால் நடையும் கைவீச்சும் காரணமாத் தோணுதடி   கொழுந்தி: சோளம் விதைக் கையிலே சொல்லி விட்டுப் போன மச்சான் சோளமும் பயிராச்சே- நீ சொன்ன சொல்லும் பொய்யாச்சே   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்.   கண்ணுக்கு உகந்த கனி   ஊரில் பல இளைஞர்கள் அவளைப் பெண் கேட்டு அவளுடைய பெற்றோர்களிடம் வருகிறார்கள். ஆனால் அவள் ஓர் இளைஞனைக் காதலிக்கிறாள். ஊரையெல்லாம் மறந்து அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் அவள் நிலையைப் பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லையென்று அவள் குத்திக் காட்டுகிறாள். தெரு வழியே செல்லும் தன் காதலன் காது கேட்க அவள் தனது மன வருத்தத்தை வெளியிடுகிறாள்.   பெண் : மார்க்கத் துண்டு போட்டு மேக்காம போற சாமி-ஒம்ம மார்க்கத் துண்டுலயே மாயப் பொடி மணக்கும் காய விட்டேன் கரும் புழுதி கனிய விட்டேன் இனிய பழம் மேய விட்டேன் என் கோழி மேலத் தெருச் சாவலோட ஊர உறவெழந்தேன் ஒத்தமரம் தோப்பெழந்தேன் பேரான சிவகிரிய பிறப்பிலயும் நான் மறந்தேன் கடல பொரி கடல கை நெறஞ்சு என்ன செய்ய? கண்ணுக்கு உகந்த கனி ஒண்ணு தின்னால் போதாதோ?   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   காதல்   இனி காத்திருக்க முடியாது   முத்தம்மாள், முத்தையாவின் மீது காதல் கொண்டாள். அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். இவர்கள் நட்பு ஊரில் அம்பலமாயிற்று. வீட்டில் கட்டுக்காவல் அதிகமாயிற்று. அவனது வீட்டார் முறையோடு வந்து பெண் கேட்டால், அவளை அவனுக்கு மணம் செய்து வைக்க சம்மதமே. அவன் வெட்கப்பட்டுக் கொண்டு தன் வீட்டில் சொல்லாமலே இருந்தான். அவனைச் செயலுக்குத் தூண்டுவதற்காக முத்தம்மாள் அவன் காது கேட்கப் பாடுகிறாள். அவன் சாலை வழி வருவதைக் கண்டும் காணாதவள் போல அவனிடம் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் பாட்டில் சொல்கிறாள். இன்னும் காத்துக் கொண்டிருந்தால், மண உறவு முறிந்து பகையாகிவிடும் என்று எச்சரிக்கிறாள்.   ஈக்கிக் கம்பி வேட்டியில ஏலரிசிமுடிஞ்சிவிட்டேன் தின்னாமப் போராரே திண்டுக்கல்லு வாய்தாவுக்கு திண்டுக்கல்லாம் சங்கதியாம் தேசங் கோட்டு வாயிதாவாம்; வாய்தாவை தீத்துப் போட்டு வந்திருவார் இந்த வழி வந்திருவார் இந்த வழி வாச்சிருவார் தங்க குணம் தந்திருவார் வெத்திலைய போட்டிருவேன் வாய் செவக்க வருவாரு போவா ருண்ணு வழியெல்லாம் கிளி யெழுதி இன்னும் வரக் காணலியே-இந்த இண்டழிஞ்ச பாதையிலே கல்லுரலு காத்திருக்க கருத்தக் கொண்டை செவத்தசாமி! ஏனையா காத்திருக்கே எல்லாம் பகையாக?   வட்டார வழக்கு: கிளியெழுதி-கிளிப்படம் போட்டு, இது காதலுக்கு அடையாளம் ஏலரிசி-வரகரிசி வாச்சிடுவார்- வாய்த்திடுவார். குறிப்பு: வாய் செவக்க- ஒருவன் கொடுத்த வெற்றிலையை ஒரு பெண் போட்டுக் கொள்வது இணக்கத்தை குறிக்கும். அதை மென்று தின்னும்போது அவள் வாய் சிவந்தால் கொடுத்தவனுடைய அன்பு மாறாது என்பது நம்பிக்கை. இண்டழிஞ்ச-முட் செடிகள் அழிந்து முள் சிதறி கிடக்கிற பாதை.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,   தலை கவிழ வைத்தாயே   காதலர்களது நட்பு குடமுடைந்து பூச் சிதறியது போல ஊராருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அவளுடைய தந்தைக்கும் தெரிந்து அவளிடம் கடும் கோபத்தோடு விசாரிக்கிறார். அவள் பதில் பேசாமல் தலை கவிழ்கிறாள். இந்த நிலை ஏற்படும் முன்பே தலை நிமிர்ந்து ஊரில் நடக்கும்படியாக அவளை அவன் மணம் செய்து கொண்டிருக்க வேண்டாமா? மதயானையிடம் கரும்பு வளைந்து கொடுப்பதுபோல அவள் அவனுக்கு ஆட்பட்டு விட்டாள். கரும்புச் சாறை உறிஞ்சிய யானை சக்கையை எறிவது போல் அவனும் பிரிந்து விடுவானா? இந்த ஏக்கத்தையும், சந்தேகத்தையும் அவள் காது கேட்க வெளியிடுகிறாள்.   கரும்பு வெட்டி மொழி நறுக்கி மொழிக்கு மொழி தேனடைச்சு கரும்பு திங்கற நாளையிலே நமக்குக் கசப்பு வந்து நேர்ந்ததென்ன? கரும்பா வணங்கினனே கருத்த மதம் யானையிடம் துரும்பா உணருதேனே துன்பப் பட்ட பாவியாலே நானா விரும்பலையே நைக் கரும்பு திங்கலையே தானா விரும்பினையே-என்னை தலை கவுர வச்சுட்டையே! கூடினமே கூடினமே குடத்திலிட்ட பூப் போல குடமுடைஞ்சி பூச்சிதற கூடறது எக்காலம்? ஒரு நாள் ஒரு பொழுது ஒம் முகத்தை பாராட்ட ஓடைக்கரை மண்ணெடுத்து உன் உருவம் செய்து பார்த்திடுவேன்   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்.   மூங்கில் அடிபட்டேன்   கன்னியம்மை புல் அறுக்க மலைக்குப் போகிறாள். கன்னியப்பன் நேரம் பார்த்து அவளைப் பின் தொடருகிறான். காட்டுப்பூவொன்றையும் பறித்து வைத்துக்கொண்டு “இப் பூவை உன் கூந்தலில் முடியட்டுமா?” என்று கேட்கிறான். அவர்கள் காதலர்கள். அவர்கள் உறவு அவளுடைய தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அவருக்கு வந்த கோபத்தில் காட்டு மூங்கில் கம்பால் அவளை நன்றாக அடித்து விட்டார். எனவே அவள் சாமர்த்தியமாகப் பதில் சொல்லுகிறாள், “எல்லோரும் அறிய பாய் விரித்து என்னை உட்கார்த்தி யாரும் குற்றம் சொல்லாத முறையில் என் தலையில் பூச் சூட்டும் காலத்தில் பூ சூட்டலாம். அதுவரை காத்திரு” என்கிறாள்.   ஆண்: கல்லருகே தண்ணிருக்க காட்டச் சுத்திப் புல்லிருக்க புல்லறுக்கப் போரபுள்ள-நீ பூ முடிஞ்சாலா காதோ?   பெண்: மொழுகின திருணையில எழுதின பாய் விரிச்சு வாங்க திருணைக் கய்யா நம்ம வாச முள்ள பூ முடிய கிடுகு கட்டி திருணையில கிளியும் நானும் பேசயிலே கிளிக்கு மதி சொன்னவுக-எனக்கு மதி சொல்லலையே. முழியா முழிக்கிறதோ முத்துப் பல்லு சோருறதோ அரும்பும் துடிக்கிறதோ எனக்குப் பய மாகுதையா ஆக்கை அடியும் பட்டேன் அவராலே சொல்லும் கேட்டேன் மூங்கி அடியும் பட்டேன் முழி சுருட்டிச் சாமியாலே   வட்டார வழக்கு: திருணை-திண்ணை; கிடுகு-தென்னோலைத்தட்டி; மூங்கி-மூங்கில்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   அலுக்கி நட என் சாமி   உழுது முடித்து விட்டு வீட்டுக்கு உழவன் வருகிறான். அவன் களைப்பைப் போக்கி உற்சாகமூட்டுவதற்காக அவன் மனைவி அவனைப் புகழ்ந்துப்பாடி, நிமிர்ந்து நடந்து தங்களுடைய அரண்மனைக்கு வரும்படி அழைக்கிறாள். அவர்களுடைய வீடு சிறு குடிசையாயினும் அவர்களுக்கு அது அரண்மனைதான். அவளுக்கு அவன் ராஜா. அவனுக்கு   அவள் ராணிதானே! வெள்ளிக் கலப்பைகளாம் வெங்கலத்து மேழிகளாம் வட காடு உழுது வரும் வஞ்சிக் கொடி என் சாமி மத்தியானம் மாடு விட்டு மாட்டுக் கெல்லாம் கூளம் போட்டு சாட்டக் கம்பு தோளிலிட்டு-என் சாமி வரக் காணியளோ? கிறிச்சு மிதியடியாம் கீகண்ணுப் பாருவையாம் அலுக்கி நட எஞ்சாமி-நம்ம அரண்மனைக்குக் கெச்சிதமே   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   நாளைப் பயணமடி   காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் ''நாளைப் பயணம்'' என்கிறான். அவள் ''நானும் வருகிறேன்'' என்கிறாள். ஆனால் நடக்குமா?   பெண்: ஆல மரமுறங்க அடி மரத்துக் கொப்புறங்க பாதையிலே நானிருக்க-நீங்க பக்க வழி போகலாமா?   ஆண்: வாழையடி உன்கூந்தல் வைரமடி பல்காவி ஏழையடி நானுனக்கு இரங்கலையோ உன்மனசு?   பெண்: சந்திரரே சூரியரே தலைக்கு மேலே வாரவரே இந்திரர்க்கு இளையவரே-நான் என்ன சொல்லிக் கூப்பிடட்டும்   ஆண்: அத்தை மகளே-நீ அருவங் கொடி வாயழகி கோவம் பழத்தழகி-என்னை கொழுந்தனிண்ணு கூப்பிடடி மேற்கே சூலமடி மே மலையும் கோணலடி நாளைப் பயணமடி   பெண்: நானும் வாரேன் கூடப் போவோம்   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,   விரட்டப்பட்ட மான் காதலர் உறவு ஊரில் தெரிந்த பின்னும் மணம் செய்து கொள்ள அவசரப்படாத காதலன் தன் காதலியைச் சந்திக்கிறான். அவளிடம் காதல் பேச்சுகள் பேசுகிறான். தனது தவறையும், இலைமறை காயாக ஒப்புக் கொள்ளுகிறான். திருமண ஏற்பாடுகளை உடனே செய்யும்படியாக அவனைத் தூண்ட வேண்டும் என்று நினைத்த அவள் அவனைக் கடிந்து கொள்கிறாள். “உன்னால் சந்தியில் என் பெயர் இழுபட்டது. என் உறவினர்களைப் பகைத்துக் கொண்டேன். விரட்டப்பட்ட மான் போலாகி விட்டேன்” என்று கூறுகிறாள். இச் சுடு சொற்களால் அவன் திருமணத்திற்கு முனைவான் என்பது அவள் கருத்து.   ஆண்: கட்டக் கருத்தப்புள்ள காலுத் தண்ட போட்ட புள்ள உதடு செவத்த புள்ள மெலியுதனே ஒன்னால நாட்டுக்கு நாடு மட்டம் நாம ரெண்டும் ஜோடி மட்டம் கோட்டுக்குப் போனாலுமே-நம்ம கோடி ஜனம் கையெடுக்கும் கிள்ளிய கொசுவத்துக்கோ கீழ் மடியின் வெத்திலைக்கோ அள்ளிய தேமலுக்கோ ஆசை கொண்டேன் பெண் மயிலே! மலையிலே மாட்டக் கண்டேன் மலைக்கும் கீழ தடத்தக் கண்டேன் செவத்தப் புள்ள கொண்டயிலே செவ்வரளிப் பூவக் கண்டேன் வெட்டின கட்டயில வீரியமா பூத்த பூவே வக்கத் தெரியாம வாட விட்டேன் தேசவழி   பெண்: எலுமிச்சம் பழ மிண்ணு எடுத்தேன் கை நெறைய பச்சக் குமிட்டியல்ல பாத்தவுக சொல்லலியே படர்ந்த நெஞ்சாம் பருமுழியாம் பாவிக்கல்லோ ஆசை கொண்டேன் இலந்த முள்ள தலைமுடிய இழுபடுதேன் சந்தியில பாத்தனய்யா உன் முகத்த பகச்சனய்யா எஞ்சனத்த விட்டுப் பிரிஞ்சேனய்யா விரட்டப் பட்ட மானப்போல   வட்டார வழக்கு: முள்ள-முள்ளை.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   உன் மயக்கம்   ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும் சுவையாக இருக்கின்றன.   ஆண்: எண்ணெய் தேய்த்தல்லோ எனக்கு முன்னே போரபுள்ள எண்ணெய்ப் பளபளப்பு-என் கண்ணை மிரட்டுதடி எண்ணெய்க்குடம் போல எழும்பி வந்த மேகம் போல தண்ணிக்குடம் போல தளும்புதடி என் மனசு   பெண்: உங்க மேனிக்குள்ள ஊதாக் கலர் சட்டைக்குள்ள தோளிலிடும் லேஞ்சுக்குள்ள தோகைமயில் ஆசை கொண்டேன்   ஆண்: வாழைக் கொடிக்காலே வட கொடிக்கால் வெத்திலையே போட்டா செவக்குதில்ல பெண்மயிலே உன் மயக்கம்   பெண்: சத்தனக்கும்பாவில சாதம் போட்டு உண்கையில உங்களை நினைக்கையிலே உண்ணுறது சாதமில்லை.   குறிப்பு : வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும் செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது பற்றிய நம்பிக்கை முன்னரே குறிப்பிடப்பட்டது.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   கொழுந்தன் முகம் வாடிடாதோ ?   ஏர் கொண்டு உழச் சென்ற தன் கணவன், உச்சி வேளையாகியும் வீடு திரும்பவில்லை என்பதைக் கண்ட மனைவி கவலை கொள்ளுகிறான். ஒரு வேளை சீக்கிரமே உழுது முடித்து விட்டுத் தழை உரத்துக்காக வண்டி கட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டானோ? வேலை செய்து அலுத்துப் போனால் வீடு வந்து ஓய்வு கொண்டு பின்னர் செல்லக்கூடாதா அவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. காட்டுக்குப் போகும் பாதையில் கணவனது நண்பர்களை வழியில் காண்கிறாள். அவர்களைப் பார்த்து அவள் கவலையை வெளியிட்டுக் கீழ் வரும் பாடலைப் பாடுகிறாள்.   மத்தியானம் ஏரவிழ்த்து மாடு ரெண்டும் முன்னே விட்டு சாட்டக்கம்பு தோளிலிட்டு சாமிவரக் கண்டியளோ? இடை வாரு போட்டவரே பாதம் சிறுத்தவரே-பெரும் பாதையிலே கண்டதுண்டோ? கொழிஞ்சிக் குழை வாடினாலும் கொழந்தன் வண்டிப் பாரமேத்தி கொழிஞ்சிக் குழை பிடுங்கி கொழுந்தன் முகம் வாடிராதோ? வாடக்கொடி புடுங்கி வடகாடு சுத்திவந்து தேடிக் குழை புடுங்கும் எந்தன் தேன் மொழியை கண்டதுண்டோ?   வட்டார வழக்கு: சாட்டக்கம்பு-சாட்டைக்கம்பு; போட்டவரே-போட்டவரை; சிறுத்தவரே-சிறுத்தவரை; புடுங்கி-பிடுங்கி; வாடிராதோ-வாடிடாதோ; தேன்மொழி-பொதுவாக பெண்முன்னிலை ஆண்முன்னிலையாயிற்று.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   அத்தை மகன் முத்துச்சாமி   முத்துச்சாமி, முத்தம்மாளின் முறைமாப்பிள்ளை. கேலி செய்யும் போக்கில் அவள் தலையில் சூடியிருந்த பிச்சிச்சரத்தை அறுத்தெறிந்தான். மலர் சூடுவதற்கு பதில் மலரைச் சிதைப்பது அமங்கலமென அவள் எண்ணினாள். பொய்க்கோப முகங்காட்டி அவனைக் கடிந்து கொள்கிறாள். ''என்னை விரும்பாத உன்னை விட்டு வேறொரு இளைஞனைத் தேடிச் செல்லுகிறேன்'', என்று கூறி அவனுக்குப் பொறாமையூட்ட முயலுகிறாள். அவன் முன்னைய இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறான். முடிவு நமது ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.   முத்தம்மாள் : கொத்த மல்லித் தோட்டத்திலே குளிக்கப் போயி நிக்கையிலே அத்தை மகன் முத்துசாமி அத்தெரிந்தான் பிச்சிச்சரம்   முத்துச்சாமி : சத்திரத்துக் கம்மாயிலே மொச்சி நெத்-தெடுக்கையிலே குத்துக் கல்லு மேலிருந்து-நான் கூப்பிட்டது கேக்கலியோ? கூடைமேலே கூடை வச்சு குமரிப் புள்ளே எங்க போற   முத்தம்மாள் : ஏழுமலை கழிச்சு-ஒரு எள வட்டத்தைத் தேடிப்போறேன்   முத்தச்சாமி : பாக்குத் துவக்குதடி பழய உறவு மங்குதடி ஏலம் கசக்குதடி என்னை விட்டுப் போறதுக்கோ?   வட்டார வழக்கு : நிக்கையிலே-நிற்கையிலே; மொச்சி-மொச்சை; அத்து-அறுத்து.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,   மருமகனாய் ஆனதென்ன   அடுத்த வீட்டுப் பையன் தன்னை ''அம்மா, அம்மா'' என்று அருமையாக அழைப்பவன். அவளுக்கு ஒரே ஒரு மகள். காட்டுக்கு ஈச்சஞ் சுள்ளி பொறுக்கப் போனவள் வெகுநேரம் கழித்துத் திரும்பினாள். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. எதையோ மறைப்பவள் போல சட்டென்று வீட்டினுள் போய்விட்டாள். தாய் மகளது தோற்ற மாறுதலைக் கண்டு கொண்டு அவளிடம் காரணம் கேட்கிறாள். அவள் வெட்கத் தோடு பதில் சொல்லுகிறாள். ஒரு புறம் அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும் அவள் தன் அண்டை வீட்டு அருமைப் பையன் மருமகனான விந்தையை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.   தாய்: ஏழு மலை கழித்து ஈஞ்சறுக்க போற மக்கா-உன் கண்ணு செவந்த தென்ன களவு மெத்த ஆனதென்ன?   மகள்: கண்ணு செவக்கவில்லை களவு மெத்த ஆகவில்லை-உன் ஆசை மகனாலே-நான் அருமை கொறைஞ் சேனம்மா   தாய்: ஆசை மகனே நீயே அருமையுள்ள புத்திரனே மாய மகனே நீயே-இப்போ மரு மகனாய் ஆனதென்ன?   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:நெல்லை மாவட்டம்.   திரிஞ்சநாள் போதுமையா   பல நாட்களாகக் காதலர்கள் சந்திப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. ஒரு நாள் வேலைக்குப் போகிறவழியில் அவள் அவனைக் கண்டு விட்டாள். அவள் தனது அன்பையும், பிரிவுத் துன்பத்தையும் விளக்கி அவனிடம் சொல்லுகிறாள். எத்தனை காவல் இருந்தாலும், குண்டு போட்டுச் சுட்டாலும் அத்தனையும் மீறிக்கொண்டு அவனிடம் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லுகிறாள். ஆனால் அவன் அவளை வெளியூருக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நடுச் சாமத்தில் அவள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறான். ஆனால் அவளோ “திரிந்த நாள் போதும்” என்று ஒரே வார்த்தையில் சொல்லுகிறாள். இருந்து வாழ வழிபார்க்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறான் இப் பாடலில்.   காதலி : நறுக்குச் சவரம் செய்து நடுத் தெருவே போறவரே குறுக்குச் சவளுதையா கூந்த லொரு பாகத்துக்கு சேக்குத் தலை சீவி செந்துருக்குப் பொட்டு வச்சு சோக்குப் போல நட நடந்தா-நான் துரைகளுண்ணு மதிச் சிருவேன் தேக்கம் பலகையில தேனொழுகும் மெத்தையில மன்னவர் கொடங்கையில மத்தவர் அணைஞ்சிராம நிறை பானைத் தண்ணிபோல நிணலாடும் என் சதுரம் குறை பானத் தண்ணி போல குறை யுதனே ஒம்மாலே. காவலிருந்தாலென்ன ? கல்லு வெடி போட்டா லென்ன ? இமுசு படுத்திட்டாலும்-நான் எஜமானிடம் வந்திருவேன் பச்ச மயங்குதனே பவளக்காடு வாடுதனே-நான் இச்ச பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுதனே   காதலன்: ஆத்துத் தண்ணி சேந்திருக்க அமிர்த குணம் பாத்திருக்க சேந்த கிளி இங்கிருக்க தேச வழி போக வேண்டாம் சட சடனு மழை பொழிய சாமம் இடி விழுக குடை போட்டு நானும் வாரேன் குண மயிலே தூங்கிராத   காதலி: ஆசை யெல்லாம் அவருமேலே அவரு இங்க வரவேண்டாம் தேசமோ தில்லு முல்லு-நம்ம திரிஞ்ச நாள் போதுமையா ஓடுத தண்ணியில ஓட விட்டேன் பம்பரத்த பம்பரத்த நம்பியல்லோ-நான் வெம்பரப்பா ஆனேனே   குறிப்பு: பச்ச, பவளக்காடு-பெண் நலத்திற்கு உவமைகள்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.       தேசமெங்கும் பேராச்சு   அவள் மணமாகாதவள். அவளுக்கு காதலன் இருக்கிறான் என்று ஊரெல்லாம் பெயராகிவிட்டது. அவனை அவள் விரும்புகிறாள். ஆனால், அவனை பார்த்துப் பழகி இன்பம் துய்க்கவில்லை. ஆனாலும் ஊரில் அவனையும் அவளையும் சேர்த்துப் பல கதைகள் பேச ஆரம்பித்தனர். ஒரு புறத்தில் அவளுக்கு அச்செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், மறுபுறம் இல்லாததைச் சொல்லுகிறார்களே என்று வருத்தமும் உண்டாகிறது.   பூவரசம் பூவு நீயி பொழுதிருக்கப் பூத்த பூவே நாசமத்த பூவாலே நானும் ஒருசொல் கேட்டேன் பருத்தி பலன் பிடிக்க பக்கமெல்லாம் சில் வெடிக்க ஒருத்தி சமைஞ்சிருக்க உலகமெல்லாம் பேராச்சே வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள ரோசாவை திண்ணு செழிக்கு முன்னே தேசமெங்கும் பேராச்சு பட்டு அருணாக் கொடி பாவி மகன் தங்கக்கொடி தங்கக் கொடி சாமியாலே தலைபொறுக்காச் சொல் கேட்டேன் வெத்தலைக் காம்பறியேன் வேத்துமுகம் நானறியேன் சுப்பையாவாலே ஒரு சொல்லுமல்லோ நான் கேட்டேன் கீழத் தெருவிலே யோ சிலுக்குப் போட்ட கருணைப்புறா மேலத் தெருவில போய் மேயுதுண்ணுகேள்விப்பட்டேன் ராமக் கரும்பு நீயே ராவு திண்ண சருக்கரையே சீனிப் பிலாச் சுளையை தின்னணுண்ணு பேரெத்தேன் பூசணிப் பூவே நீ பொழுதிருக்கப் பூத்த பூவே நாதியத்த பூவாலே நான் ஒரு நாச் சொல் கேட்டேன்   வட்டார வழக்கு: நாசமத்த-நாசமுற்ற; சமைஞ்சிருக்க-ருதுவாகியிருக்க ; அருணாக்கொடி-அரை நாண் கொடி ; ராமக்கரும்பு-நாமக்கரும்பு.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   உலகம் பொறுக்குதில்லை   முன் பாடலில் வரும் காதலி பாடுவதைப் போலவே இப் பாடலிலும் ஓர் காதலி தன் காதல் ஊரில் வெளியாகி விட்டதை எண்ணி வருந்துகிறாள். காதலன் காதில் எட்டும்படி தனது கவலையைப் பாட்டில் கூறுகிறாள். அவனும் தன்னைப் பற்றியும் பிறர் தூற்றுவதை அவளுக்குத் தெரிவிக்கும் முறையில் பாடுகிறான்.   பெண்: எண்ணெய்த் தலை முழுகி என் தெருவே போறவரே பாராதீரு என் முகத்தை பழிகள் வந்து சேர்ந்திருமே ஆலமரமுறங்க அடி மரத்து வண்டுறங்க உன்னோட நானுறங்க உலகம் பொறுக்குதில்லை கல்லோட கல்லுரச கடலுக் தண்ணி மீனுரச உன்னோட நானுரச உலகம் பொறுக்கலையே வெத்தலை தந்தவரே வினையிழுத்து வச்சவரே போயிலை தந்தவரே போதுமையா உம்முறவு   ஆண்: பார்த்தனடி உன் முகத்த பகைச்சனடி என் சனத்த கேட்டனடி கேவலங்கள் கிளிமொழியாள் உன்னாலே அருகுபத்திப் பிஞ்சையிலே ஆகுருவி விரட்டையிலே சொருகு கொண்டை வெள்ளையம்மா சொல்லுக் கிடம் வச்சவளே   வட்டார வழக்கு: அருகுபத்தி-அருகம்புல் படர்ந்த; வச்சவரே-வைத்தவரே; வச்சவளே-வைத்தவளே ; ஆகுருவி-புஞ்சைக்கு வரும் குருவி.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:தங்கம்மாள்புரம்,விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   ஒரு பலனும் நானறியேன்   “பலனறியாமல் பழி மட்டும் சுமந்தேன். உன் மேல் ஆசை வைத்ததுண்டு. ஆனால், ஊரார் பேசுவதுபோல் ஒன்றும் நடக்கவில்லையே! பூவைப் பார்த்து பறிக்க எண்ணியதுண்டு. ஆனால் பூவைப் பறித்து முகரவில்லையே! பூவைப் பறித்துச் சூடிக் கொண்டதாக ஊரார் பழி சொல்லுகிறார்களே” என்று இப்பெண் வருந்துகிறாள்.   நந்தவனம் துறக்க வில்லை நானொரு நாள் போகவில்லை பூவாத முல்லைப் பூவை பூத்ததென்று சொல்லவில்லை வட்ட ஓடையைக் கண்டேன் வடக்கே போற கொப்பைக் கண்டேன மோதிரக்கையைக் கண்டேன் முகத்தழகை நானும் காணேன். நந்தவனம் துறந்து நானொரு நாள் பூவெடுத்து சூடல்லியே அந்தப்பூவை ம்மாவில்ல சொல்லுறாக தலையிலே தண்ணிக் குடம் தாகமெல்லாம் உங்கமேலே ஊரெல்லாம் ஓமலிப்பு ஒரு பலனும் நானறியேன் ஒரு மேனி ஒரு சிகப்பு, ஊரெல்லாம் ஓமலிப்பு, ஓமலிப்புக் கேட்டதுண்டு; ஒருபலனும் நானறியேன்.   வட்டார வழக்கு: ஓமலிப்பு-பரபரப்பு.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.         ஒன்றாகப் போவோம்   கிராமத்திலுள்ள இளைஞர்கள் மேல்காட்டுக்கு வேலைக்குச் செல்லுகிறார்கள். அவர்களில் ஒரு காதல் ஜோடி இரண்டு பேர் பின்தங்கிச் சென்றால், உற்றார் உறவினர் கேலி செய்வார்கள். எனவே அவர்கள் தனித்தனியே செல்லுகிறார்கள். நெருங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டுமென்று இருவருக்குமே ஆசை. அவள் அவனை தனக்கு முன் போகும்படி சொல்லுகிறாள். அவனோ சேர்ந்து போனால் என்னவென்று கேட்கிறான். ஆனால் அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.   பெண்: சீரிய சந்தனமே கிழக்கிருக்கும் சூரியரே வாங்களேன் மேகாட்டுக்கு வாசமுள்ள பூமுடிய   ஆண்: மதுரை மருக்கொழுந்து மணலூருத் தாழம்பூவு சேத்தூரு செவந்திப் பூவு சேர்ந்து வந்தால் ஆகாதோ?   பெண்: ஒத்தடிப் பாதையிலே ஒத்த வழிப் பாதையிலே மின்னிட்டான் பூச்சி போல முன்னே வந்தால் ஆகாதோ?   ஆண்: கோடாலிக் கொண்டைக்காரி குளத்தூருக் காவல்காரி வில்லு முதுகுக்காரி நில்லேண்டி ஒண்ணாப்போவோம்.   வெட்கம் பறந்து விட்டது. அவளும் அவன் தன்கூடவே வரச் சம்மதிக்கிறாள். ஆனால் அவன் பாதையை விட்டு கீழே இறங்கும்படி அழைக்கிறான். அவள் மறுத்து, ''திருமணமாகட்டும் உன்னோடு தட்டாங்கல் விளையாட எங்கழைத்தாலும் வருகிறேன்'' என்கிறாள்.   பெண்: சாயவேட்டி நிறச்சிவப்பு என்னைக் கண்டால் குறுஞ்சிரிப்பு குறுஞ்சிரிப்பும் தலையசைப்பும் கூட வந்தால் ஆகாதோ?   ஆண்: லோலாக்கு போட்ட புள்ளே ரோட்டு வழி போற புள்ளே ரோட்டை விட்டுக் கீழிறங்கு கேட்ட தெல்லாம் வாங்கித்தாரேன்   பெண்: உன் மனசு என் மனசு ஒரு மனசா ஆனாக்கால் சதுரகிரி மலையோரம் தட்டாங்கல்லு வெளையாடலாம்   ஆண்: கூடை இடுப்பில் வச்சு, கோகிலம் போல் போற பொண்ணே பேடை மயிலன்னமே பேசாயோ வாய்திறந்து?   பெண்: வாய்க்காலுத் தண்ணியிலே வண்டு வரும் தூசி வரும் கூடத்துக்கு வாங்களையா குளிந்த தண்ணி நான் தாரேன் வைகையாத்தங்கரை தனிலே வச்சிருக்கேன் தீங்கரும்பு தீவிரமாப் போற சாமி திண்ணு பாத்தாலாகாதோ? மொழுகிய திருணையிலே எழுதிய பாய் போட்டு வாருமையா திருணைக்கு வாசமுள்ள பூ முடிக்க   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   நிற்கிறதும் சாமி தானோ ?   கணவன் சொல்லாமல் சென்று விட்டான். எதிர் பார்த்து பல தடவை ஏமாந்து விட்டாள் மனைவி. இன்று வருவார் என்றெண்ணி சோறும் கறியும் சமைத்துவிட்டு பலவிடங்களிலும் அவனைத் தேடிச் செல்லுகிறாள். தூரத்தில் எந்த ஆண்மகனைப் பார்த்தாலும், அவளுடைய தவிப்பில் அவனாக இராதா என்றெண்ணுகிறாள். கடைசியில் வீட்டுக்குச் சென்றதும் தலைவாசலில் அவன் வந்து நிற்கிறான். அவள் கவலையெல்லாம் மறைந்து போகிறது.   கிறிச்சி மிதியடியாம் கீழ் கண்ணுப் பார்வையாம் அருச்சலுல போறவரை யாருண்ணும் தெரியலையே. படர்ந்த புளிக் கம்மாயிலே பாலன் தலை முழுகையிலே நிறைந்த தலை வாசலிலே நிக்கிறதும் சாமிதானே? சின்னச் செடியசைய சின்னச் சாமி நடையசைய வருணச் செடி குலுங்க வந்த சாமி நீங்க தானா? கருவ மரத்துப் புஞ்செய் கன்னி மூலை நேருக்கு நெல்லி மரத்தடியில் நிக்கிறதும் சாமி தானா? ஆட்டுக் கிடா சோறிருக்க அழுதுகிட்டு நானிருக்க வாடா விளக்கிருக்க வந்தவனத் தெரியலியே! புளிய மரத்தடியில் புள்ளையார் கோவிலோரம் சத்திரத்தின் வேம்போரம் சாமி தானோ நிக்கிறது? உயர்ந்த தலைவாசல் உல்லாச வல்ல வாட்டு நிறைந்த தலை வாசலில நிக்கிறதும் சாமிதானோ?++   வட்டார வழக்கு: அருச்சல்- urgent -அவசரமாக (திரிபு ); கம்மாய்-பாசனக் குளம் (நெல்லை, ராமநாதபுரம் வழக்கு ) ; நிக்கிறது-நிற்கிறது.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:நெல்லை மாவட்டம்.   கண்டீர்களா ?   காதலனைச் சில நாட்கள் காணாவிட்டால் காதலி தேடுவாள். காதலியைக் காணாவிட்டால், காதலன் தேடுவான். இவர்கள் மறுபடி சந்திக்கும்போது காணாமல் போனவன் அல்லது போனவளைத் தேடி அலைந்தது போல கற்பனைப் பாடல்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுவார்கள். எல்லோரும் அறிய ஒருவரையொருவர் தேடி அலைய முடியுமா? ஆயினும் கற்பனையில் எங்கெல்லாமோ தேடி அலுத்ததாக மறு சந்திப்பின்போது ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ளுவார்கள். இவ்வகைப் பாடல்கள் ஆண்கள் பாடும் பாடல், பெண்கள் பாடும் பாடல் என இருவகையுண்டு. அவற்றுள் சில கீழே காண்க. (ஆண்கள்பாடுவது)   வட்டம் போடும் வடக்குத்தெரு வந்து நிற்கும் தெற்குத்தெரு கூட்டம் போடும் கல்லுரலு குயிலும் வரக் காணலியே! எண்ணைக் கருப்பே என்னிலும் ஏ கருப்பே தண்ணிக் கருப்பை தனியே வரக்காணலியே! கண்டாங்கிச் வளையல்காரி கைநிறைஞ்ச வளைல்காரி கண்டா வரச் சொல்லுங்க ரெண்டாம் நம்பர் தோட்டத்துக்கு மாரளவு கருதுப் புஞ்சை மதிகிளி காக்கும் புஞ்சை கூட்டக் கருதுக்குள்ளே குயிலும் வரக் கண்டியளா? சாலை இருபுறமும் சந்தனவாழ்மரமே கொழ்ந்து மாமரத்தை கூடுவதற்குத் விளாத்திகுளம் கிளிக்குஞ்சு போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கல்யாண வாசலுக்கு   (பெண்கள் பாடுவது)   ஆளுலேயும் குட்டை அழகுலயும் பூஞ்சிவப்பை நடையிலயும் நைச்சிவப்பை நடுச் தெருவில் காணலியே! புதுப்பானைக் கருப்பழகை. புத்திரன் போல் நடையழகை சிரிப்பாணி மன்னரையும் தெருவில் வரச் கண்டியளா? தோப்பிலயோ சேவல் கட்டு தோகைமயில் போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கானமயில் வாடுரண்ணு ஊருசுத்திக் காளை எங்கே உள்ளுரு மட்டத் தெங்கே நாடு சுத்திக் காளைஎங்கே நடக்க விட்டு நான் பார்க்க பெருநாழிப் பாதைக்கு பேசுங்கிளி போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கம்மந் தட்டை குச்சிலுக்கு காலு வளர்ந்த கிளி கல்லுரலுகாத்தகிளி தோகை வளர்ந்த கிளி தோப்பிலயும் காணியளோ?   வட்டார வழக்கு: சிரிப்பாணி-சிரிப்பு (நெல்லை பேச்சு வழக்கு); பெருநாழி-முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு ஊர்; காணியளோ-கண்டீர்களோ? (பேச்சு வழக்கு); ஊரு சுத்திக் காளை, உள்ளுருமட்டம்-இவை காதலனைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :விளாத்திகுளம்,நெல்லை மாவட்டம்.   முறிவு   உழைக்கும் மக்களில் சில ஜாதிப் பிரிவினரில் விவாரத்து சமூக வழக்கமாக நெடுநாளாக இருந்து வருகிறது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவதாலோ குழந்தை இல்லாததாலோ, ஆணோ பெண்ணோ, துர்நடத்தையுடையவராயிருப்பதாலோ, சமூக வழக்கப்படி விவாகரத்துச் செய்து கொள்ளலாம். விவாரத்து கோருபவர் ஊருக்குத் தீர்வை செலுத்த வேண்டும். விவாரத்து செய்து கொண்டவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். சில வேளைகளில் பொய்க் காரணம் கூறி ஆண்கள் விவாரத்து கோருவதும், பெண் சமூக ஆதிக்கத்துக்கு அஞ்சி சம்மதிப்பதும் உண்டு. விவாரத்து செய்துகொள்ள சம்மதிக்காத ஒருத்தி, தனது கணவனிம் கொடுமையை விவரித்து ஒரு பாடலைப் பாடுகிறாள்.   (பெண் பாடுவது )   +காடைக் கண்ணி மாவிடிச்சு கருப்பட்டியும் சேர்த்திடிச்சு திண்ணு ருசி கண்ட பய தீருவையும் கேட்கிறானே கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளை போல விட்டுப் பிரிஞ்சமையா ஒத்த வண்டிக்காளை போல பின்கல்லு மோதிரமே பிரியாத சினேகிதமே பிரியிறகாலம்வந்து பேருசொல்லிக்கூப்பிடுறேன். தொட்டேன் சிவத்தாளை தூது விட்டேன் தன்னாளை மறந்தேன் சிவத்தாளை மாசம் பன்னிரண்டாச்சே அச்சடிச் சேலை வாங்கி அஞ்சு மாசம் வச்சுடுத்தி முந்தி கிழிய முன்னே முறிஞ்சதையா நம்முறவு கருத்தக் கருத்த சாமி கைக்கு மோதிரம் தந்தசாமி உருவங் குலைத்த சாமி உருவிக்கோடா மோதிரத்தை முத்துப் பல்லு நல்லாளு முகத்திலேயும் சித்தாளு பாக்குத் திங்கும் நல்லாளு பகைத்தேனே சொல்லாலே சேர்ந்து இருந்தோமையா சேலத்துக் கொண்டை போல நாரை வந்து மீனைத் தொட நைந்ததையா நம்முறவு வெள்ளை உடுப்பிழந்தேன் வெத்தலைத் தீன் மறந்தேன் வஞ்சிக் கொடி போனண்ணிக்கு கஞ்சிக்குடி நான் மறந்தேன் லோட்டா விளக்கிவச்சேன் ரோசாப்பூ நட்டி வச்சேன் லோட்டா உடைஞ்சிருச்சு ரோசாப்பூ வாடி நிக்கேன் சோளத்துக் குச்சிலிலே ஜோடிப் புறா மேயயிலே ஜோடி பிரிஞ்சவுடன் சோர விட்டேன் கண்ணீரை   வட்டார வழக்கு: நாரைவந்து மீனைத் தொட-புதிய பெண் வாழ்க்கையில் தலையிட்டு என் ஜோடிமீனைக் கொத்தி விட்டாள்; தீன்-தீனி, தின்னுவது; போனண்ணிக்கு-போன அன்றைக்கு.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :சூரங்குடி,விளாத்திக்குளம்வட்டம்,நெல்லை மாவட்டம்.   தூண்டில் மீன்   காதல் பாட்டாயினும் தொழிலின் மணம் அதில் வீசுவதைக் காணலாம். களை பிடுங்கும்போதும், அறுவடையின்போதும், ஏருழும்போதும், மலையேறி விறகொடிக்கும்போதும், புல்லறுக்கும்போதும், முகிழ்த்து மலரும் காதலை வெளியிடும் பாடல் சூழ்நிலையின் பின்னணியையும் சித்திரிக்கிறது. நாட்டுப் பாடலின் சிறப்பு அம்சம் அதுதான். தொழிலும் காதலும் இணைந்து செல்லுகின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் தோன்றிய இளநங்கை தனது காதலை வெளியிடுகிறாள். காதல், கற்பனையோடு கலந்து தொழிலின் உவமைகளை மேற்கொண்டு பாட்டாகப் பிறக்கிறது.   இப்பாடலில் தொழிலின் மணம் வீசுவதைக் காணலாம். இது தோணிப்பாட்டாகவும் அமைந்திருக்கிறது.   ஏரியும் பெரியேரியாம் ஏலேலோசாமி ஏலேலோ அக்கரையும் பொன்னேரியாம் ஏலேலோ சாமி ஏலேலோ பொன்னேரிக் கரையின் மேலே ஏலேலோ சாமி ஏலேலோ போட்டானாம் தூண்டி முள்ளு ஏலேலோ சாமி ஏலேலோ தூண்டிக்கும் துண்டாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ தொடை வாளை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ கூட்டிக் கூட்டி எடுப்பாங்க ஏலேலோ சாமி ஏலேலோ குள்ளாங் கொண்டை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ சேத்திச் சேத்தி எடுப்பாங்க ஏலேலோ சாமி ஏலேலோ சேலு கெண்டை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   சின்ன மாமா   செலவில்லாமல், காதலியை அழைத்துக் கொண்டு போய் மணம் செய்து கொள்ள விரும்புகிறான், மாமன் முறையுடைய உறவினன். அவள் பலரறிய மணம் செய்து கொள்ள வேண்டுகிறாள். அவனோ கரு மி; அதற்கு மனம் வரவில்லை. அவனிடம் அவள் கண்டிப்பாகப் பேசுகிறாள். “மாட்டைக் கொண்டு போவதானாலும் தலைக்கயிறு வாங்க கால் பணம் செலவு செய்ய வேண்டும். பெண்ணை அழைத்துப் போக அதுகூட செலவு செய்ய மாட்டாயா,” என்று அவள் கேட்கிறாள்.   ~கட்டுக் கவுறு காப்பணமா      டே-சின்ன மாமா கட்டிப் போடப் பாக்கிறயா      டே-சின்ன மாமா ஓட்டாங்கச்சியா ஒரு பணமா      டே-சின்ன மாமா! என்னை ஓட்டிப் போய்ட பாக்கறியா      டே-சின்ன மாமா~~   வட்டார வழக்கு: கவுறு-கயிறு; ஓட்டாங்கச்சி-ஓட்டுத்துண்டு; போய்ட-போய் விட.   சேகரித்தவர் :சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   எப்பொழுது திரும்புவாயோ?   காதலன் நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான். காதலி அவனைத் தாண்டி வேறு வயலுக்கு அறுவடைக்குச் செல்லுகிறாள். அறுவடை முடிந்ததும் அவளை எங்கே எப்பொழுது பார்க்கலாம் என்று அவன் கேட்கிறான்.   கட்டுக் கொடிப் பள்ளத்திலே கஞ்சிக் கொண்டு போறவளே கஞ்சு அலும்பு தோடி கன்னி மோகம் வளருதோடி பச்சை வளையலிட்டுப் பயிரறுக்கப் போறவளே-உன் பச்சை வளையல் மின்னல் பயிரு வழி சோருதடி நீல வளையலிட்டு-என் அமுதம் நெல்லறுக்கப் போறவளே-உன் நீலவளையல் மின்ன நெல்லறுப்புச் சோருதடி நெல்லறுப்பு அறுத்துவிட்டு-என் கண்ணே எப்ப திரும்பு வையோ?-நான் ஏங்கிக் கிடக்கறண்டி   வட்டார வழக்கு: அலும்பு-அலம்புதல், ததும்புதல்.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   வண்டிக்காரன்   அவன் வண்டி வைத்திருக்கும் சிறு பணக்காரரிடம் வண்டியோட்டுகிறான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாரம் ஏற்றி அனுப்புகிறார்கள். ஒரு நாள் பாக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். மற்றொரு நாள் புகையிலை. இவ்வாறு பல பல பொருள்களை, வண்டியில் பாரமேற்றிப் பல ஊர்களுக்கு அனுப்புகிறார்கள். அவை விலையாகின்றன. பணமும் அவன் கையில் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் அவனுக்கு சொந்தமா? இல்லையே. அவனுக்குக் கூலி மட்டும்தானே மிஞ்சும். அக்கூலி அவன் வயிற்றுக்கே பற்றாது. காதலிக்கு வாயாலாவது தங்க நகை செய்துபோட்டு மகிழ்கிறான் வண்டிக்காரன். அவளுக்கும் தெரியும். ஆனால் அன்பு மிகுதியால் ஏற்பட்ட ஆசையை அவன் வெளியிடும்போது அவளுக்குப் பெருமையுண்டாகிறது. அவன் நகைகளைச் செய்து தனக்கு அணிவித்தது போன்ற மனநிறைவு பெறுகிறாள்.   தெற்குச் சாயல் வண்டி ஏறலையா-என் சின்னப் பெண்ணே கண்ணே கோகிலமே தெற்குச் சாயல் வண்டி ஏறலியோ? பட்டணம் டவுனாம் பாக்குக் கடை வியாபாரமாம் பாக்கு விலையானால் பதக்கம் செய்து போடுறண்டி போளூரு டவுனாம் பொகலை வியாபாரமாம் பொகலை விலையுமானால் பொகிடி செய்து போடுறண்டி மஞ்சாக்குப்பம் டவுனாம் மஞ்சாக் கடை வியாபாரமாம் மஞ்சா விலையுமானால் மாட்டல் செய்து போடுறண்டி அரக்கோணம் டவுனாம் அரிசிக்கடை வியாபாரமாம் அரிசி விலையுமானால் அட்டிகை செய்து போடுறண்டி காஞ்சிபுரம் டவுனாம் கத்திரிக்காய் வியாபாரமாம் கத்திரிக்காய் விலையுமானால் கம்மல் செய்து போடுறண்டி கோவிலூரு டவுனாம் கோழிக்கடை வியாபாரமாம் கோழி விலையுமானால் கொப்புச் செய்து போடுறண்டி பாசிலூரு டவுனாம் பாலுக்கடை வியாபாரமாம் பாலு விலையுமானால் பீலி செய்து போடுறண்டி   வட்டார வழக்கு: பொகலை-புகையிலை; பொகிடி-ஒரு அணி; மஞ்சா-மஞ்சள்.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்.   இது போன்ற வண்டிக்காரன் பாட்டுகள் தூத்துக்குடியருகிலும் பாடப்படுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:   மூடை பிடிக்கும் வண்டி முதலூர் போகும் வண்டி மூடை விலை ஆனவுடன் மூக்குத்தி பண்ணிப் போடுறேனே தகரம் பிடிக்கும் வண்டி சாத்தான்குளம் போகும் வண்டி தகரம் விலை ஆனவுடன் தாலி பண்ணி போடுறேனே வெங்காயம் பிடிக்கும் வண்டி வெள்ளூர் போகும் வண்டி வெங்காயம் போனவுடன் வெள்ளிக் காப்பு போடுறண்டி.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான், தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம். சிவத்தக் கிளி   வேலை முடிந்து தனியாகவரும் இளமங்கை ஒரு பாட்டை முணு முணுத்துக் கொண்டு நடக்கிறாள். எதிரே அவள் காதலன் வருகிறான். அவனைப் பார்த்ததும் அவள் நாணம் கொண்டு பாட்டை நிறுத்திவிட்டு தலைகவிழ்ந்து நிற்கிறாள். அவன் அவளை நோக்கிப் பாடுகிறான்.   ஆத்துக்குள்ளே ரெண்டரளி ஆறுமுகம் வச்சரளி சுத்திவந்து பூவெடுக்கும் சுத்தமுள்ள பத்தினியே! வளைவு ரோட்டுப் பக்கத்திலே வருகுதையா செவத்தக் கிளி சலசலன்னு வந்த கிளி தலை கவிழ்ந்த மாயமென்ன? கட்ட கட்ட உச்சி நேரம் கடுவா புலி வார நேரம் ஒருத்தன் கையிப் பத்தினியே ஒத்தையிலே நிக்குறாளே! ரோட்டோரம் வீட்டுக் காரி ரோசாப்புச் சேலைக்காரி காத்தோரம் கொண்டக்காரி கண்ணக் கண்ண வெட்டுறாளே! புள்ளி ரவுக்கைக்காரி புளியம்பூச் சேலைக்காரி புள்ளி ரவுக்கை மேலே புதுமணம் வீசுதடி நடைபலகை மிதிகிணறு நாணயமா போறபிள்ளா பொடி நடையும் புருவக்கட்டும் போகமனம் கூடுதில்ல மாங்கா நிறத்துப் பிள்ளா மாநிறத்துப் பள்ளப் பிள்ளா தேங்கா நிறத்துப் பிள்ளா தேடுறனே உம் புருசன்   வட்டார வழக்கு: தேடுறனே-தேடுகிறேனே; ரெண்டரளி-இரண்டரளி; கவிந்த-கவிழ்ந்த; காத்தோரம்-காதோரம்; பிள்ளா-பெண் (நாடார் சாதி வழக்கு)   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   எம் புருஷன்   மணமானவுடன் கணவன் அயலூர் சென்று விட்டான். மனைவியின் தோழிமார் அவளுடைய புருஷன் உருவத்தைப் பற்றிக் கேலிப் பேச்சுப் பேசுகிறார்கள். அனேகமாக இவ்விதப் பேச்சுகளுக்கு புதுமணப் பெண், நாணத்தால் பதில் கூறாமல் இருந்து விடுவாள். ஆனால் தைரியமிக்க இப்பெண் தன் புருஷனின் பெருமையை தோழியரிடம் விளக்கிக் கூறுகிறாள்.   ஆளுலேயும் கட்டயாளு அழகிலேயும் பூஞ்சிவப்பு மார்வு அடர்ந்த எம்மச்சான் மறக்க மனம் கூடுதில்ல ஈத்தம் குருத்து போல இடை சிறுத்த எம்மச்சான் வாழைக்குருத்து போல வாச்சாரே, எம்புருஷன்   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   சொந்தக் கணவன்   காதலனை உடனடியாகத் தாலி செய்து கொண்டு வந்து பெண் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. அவன் அசட்டையா இருக்கவே அவள் கடிந்து கொள்ளுகிறாள். மறுநாள் அவனை அவள் சந்திக்க குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், பேசாமல் கோபமாயிருப்பது போல நடிக்கிறாள். அவன் நயமும்இ பயமுமாகத் தன் உணர்ச்சிகளை அவளிடம் கூறுகிறான். ''சொந்தக் கணவன்'' என்று அவன் தன்னை வருணித்துக் கொள்ளும் வரை அவள் பேசவில்லை. அதன்பின் அவள் முகம் மலர்ந்திருக்குமா? கடைசிவரை படியுங்கள்   பருத்தி எல பிடுங்கி பச்சரிசி மை சேர்த்து சேர்ந்துதோ சேரலியோ செவத்தப் பிள்ள நெத்தியிலே. இருப்பான் கிணத்துக் குள்ளே இருந்து தலை முழுகும்போது கரும்பான கருத்தக் குட்டி கைகடந்த மாயமென்ன காலாங்கரை ஓடையிலே கண்டெடுத்த குண்டுமுத்து குண்டு முகத்தைப் போட்டுவிட்டு சுண்டி முகம் வாடுறாளே வாளு போல அருவா கொண்டு வரப்புப் புல்லு அறுக்கும் போது நீ தெம்பாச் சொன்ன சொல்லு ரம்பம் போட்டு அறுக்குதடி தண்டட்டி போட்ட பிள்ளா தயவான சொல்லுக் காரி   இந்திர சாலக் காரி என்ன மறந்திட்டியே! பூவோசரம் பூவே பொழுதிருக்கப் பூத்த பூவே நா மோந்த பூவாலே நான் ஒரு சொல் கேட்டேன் கம்மங் கதிரறுக்க   கருத்தூருணி தண்ணிருக்க புங்க நிழலிருக்க புருஷன் மட்டும் என்ன பயன்? தூத்துக்குடி ஓரத்தில தொன்னூர் கட வீதியில போட்டுட்டுத் தேடுறானே பொன் பதித்த மோதிரத்தை பேப்ப மரத்துக்கிளி வித விதமாப் பேசுங்கிளி நான் வளர்த்த பச்சக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு வேப்ப மரத்தோரம் வெட்டரிவாள் சாத்திவச்சேன் பேர்பபமரம் பட்டதிண்ணு விட்டதடி உன்னாசை பாக்கப் பகட்டுதடி பல்வரிசை கொஞ்சுதடி கேக்க பயமாயிருக்க கிளிமூக்கு மாம்பழமே! வெள்ள வெள்ள சீலைக்காரி வெள்ளரிக்கா கூடைக்காரி கோம்ப மலை வெள்ளரிக்கா கொண்டு வாடி தின்னுபாப்போம் தங்கத்துக்கு தங்கம் இருக்க தனித் தங்கம் இங்க இருக்க பித்தளத் தங்கத்துக்கு பேராசை கொண்டாயடி! ஆல விளாறு போல அந்தப் பிள்ள தலை மயிராம் தூக்கி முடிஞ்சிட்டாலும் தூக்கணாங் கூடு போல கொண்ட வளர்த்த பிள்ளா கோத கண்ணி மாதரசி கொண்டாடி தலை மயித்தை கொடுங்கையிலே போட்டுறங்க நில்லடி கட்டப் பிள்ளா நிறுத்தடி கால் நடைய சொல்லடி வாய்திறந்து சொந்தக் கணவனிடம் ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை அழகான கோழி முட்டை கோழி முட்டை வாடுனாலும் குமரி முகம் வாடுதில்ல   வட்டார வழக்கு: அருவா-அரிவாள் (பேச்சு); பூவோசரம்பு-பூவரசம்பூ (பேச்சு); தண்டட்டி-காலணி ; கைமசக்கம்-மிகுந்த மயக்கம்; பிள்ளா-பிள்ளை,பெண்; கோதகண்ணி-கோதை, மாலை; கண்ணி-பூச்சரம்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   தென்னைமரம் அடையாளம்   நாற்று நடும்போது பிறரிடமிருந்து விலகி நிற்கும் தனது காதலியின் கையை காதலன் பிடித்துக்கொள்ளுகிறான். அங்கு மிங்கும் பார்த்துவிட்டு அவள் கையை விடுவித்துக் கொள்ளுகிறாள். அவன் பிறர் நிற்பதை எண்ணாமல் தன்னை மறந்தது ஏனென்கிறாள். அவள் அவனைக் கண்டிப்பது போலப் பேசி, தனியாகச் சந்திக்க இடத்தையும் குறிப்பிடுகிறாள்.   காதலன்: தோழி துணை இருக்க தொட்ட கையி பூமணக்க எட்டிப் புடிச்ச கையி எட்டு நாளும் பூமணக்க!   காதலி: ஆத்துக்கு அந்தப் பக்கம் ஐயரு புஞ்செய் நாத்துக்குள்ளே ஐயோ மச்சான் கையைவிடும் கை வளைய சேதமாகும்   காதலன்: அத்தை மகளையின்னு பச்சை குத்தி நான் வளர்த்தேன் பச்சை அழிஞ்சுதுண்ணு பக்கம் கையி போட்டதென்ன   காதலி: ஆடி மழை ஜோடி மழை அம்மாசி மின்னிருட்டு தேடி வரவும் வேண்டாம் தென்னைமரம் அடையாளம்.   குறிப்பு: தென்னைமரம் அடையாளம் நேரே வாருங்கள். தேடி வரவேண்டாம் என்பது குறிப்பு.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   இரும்பாய் உருக வேண்டாம்   காதலர்கள் சந்திக்கிறார்கள். தன்னுடைய பெற்றோர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பணக்காரனுக்கு தன்னைக் கட்டிக் கொடுக்கப் போவதாக காதலி சொல்லுகிறாள். பருவ காலத்தில் தானே பயிரிட வேண்டும். இல்லாவிட்டால் அறுவடைப் பருவம் தவறிவிடும். காதலித்தால் உரிய காலத்தில் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் என்று இலைமறை காயாக அவள் அவனுக்கு உணர்த்துகிறாள். அவளை நினைத்து உருகும் அவளுக்கு அவன் என்ன உறுதி சொல்லுவான் தூரக்காரனை கலியாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறான். எப்படியாயினும் அவளுக்கு வாழ்வளிக்க அவன் உறுதி கொண்டு விட்டான்.   ஆண்: பட் பட்டென்று நிலாவடிக்க பாலத்திலே நான் நிக்க மின்னுட்டான் பூச்சி போல மின்ன வந்தால் ஆகாதோடி   பெண்: ஆசையிருக் குதையா அழகு திரு மேனிமேலே சீவம் கிடக்குதையா-எங்கப்பனுக்கு ஸ்ரீ ராமர் பச்சை மேலே மானாமதுரையிலே மரிக்கொழுந்து நாத்துப்பாவி அறுக்கப் பருவம் தப்பி இருப்பு இருந்து வாடுறனே!   ஆண்: காரவீட்டு மேடை மேலே காகிதம் எழுதையிலே மாஞ்சோலை மசக்கத்திலே மறந்திட்டேன் ரெண்டெழுத்தை   பெண்: ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாள் பழக்கத்திலே கட்டிச் சதுர மெல்லாம் கயறாக உருகுதையா! ஆண்: பாதையிலே பரட்டைச் செடி பதக்குழக்கு பூப்பூக்கும் நீ வாடி சிவத்தக் குட்டி உனக்கு ரெண்டு பூத்தாரேன் பச்ச மாங்கா ஒண்ணு தாரேன் பழுத்த மாங்கா ரெண்டு தாரேன் கூந்தப் பனங்கா தாரேன் கொண்டு வாடி சோத்துக் கட்டை மஞ்சக் கிழங்கு தாரேன் மலங்காட்டு நொங்கு தாரேன் கொழும்பு ரூவா ஒண்ணு தாரேன் கொண்டு வாடி சோத்துக் கட்டை   பெண்: கரும்புத் தோட்டத்திலே மச்சான்-நீ கரும்பு வெட்டையிலே இருப்புக் கொள்ளுதில்லே-நான் இரும்பா உருகிட்டேனே   ஆண்: இரும்பா உருக வேண்டாம் இடுப்பிலே கையும் வேண்டாம் துரும்பா உருக வேண்டாம்-நீ தூரக்காரனுக்கு வாக்கப்பட வேண்டாம்   வட்டார வழக்கு: சீவம்-சீவன்; பச்சை-வயல் காடு; மசக்கம்-மயக்கம்; சதுரம்-சரீரம்; கயறாக-கயிறாக (பேச்சு); கொண்டுவாடி சோத்துக்கட்டை-அயலூர் போக ஏற்பாடு.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,திருநெல்வேலி -rமாவட்டம்.   மேல் வட்டம் போடுகிறாள் தனது காதலனுக்கு கீழத்தெருவில் ஒரு பெண்ணை அவனது பெற்றோர்கள் மணம் பேசுகிறார்கள். இவனுக்கு மேலத்தெரு. மணம் பேசினார்களே தவிர முடிவாகவில்லை. ஆயினும் அப்பெண் இரை பிடிக்கக் கழுகு மேல் வட்டம் போடுவது போல இவனைப் பிடிக்க மேலத் தெருவிற்கு அடிக்கடி வேலையில்லாமலேயே போய்வர ஆரம்பித்தாள். அவனுடைய காதலி இச் செய்திகளையெல்லாம் அறிவாள். அவள் தனது தகப்பனுக்குக் கஞ்சிக்கலயம் கொண்டு குளத்தங்கரை வழியே செல்லுகிறாள். அவனை அங்கே கண்டும் முகங் கொடுத்துப் பேசவில்லை. அவன் அவளை பேச்சுக்கு இழுக்க முயலுகிறான். அவள் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு திரும்பாமல் போகிறாள்.   ஆண்: கஞ்சிக்கலயம் கொண்டு கரை வழியே போற புள்ளா காக்கா அலம்புதடி கருத்தக் குட்டி உன் கலயம் வட்டுக் கருப்பட்டியே தின்னாமல் போறேனடி கண்ட கரம்பப்பொடி உன் மாயக் கரம்பப் பொடி காசி ராஜன் தந்த் பொடி என்னை மாறாட்டம் பண்ணுதடி வெள்ள ரவுக்கக் காரி வெகுநாளா உறவுக்காரி ரவ்வு சொன்ன சொல்லாலே ரம்பம் போட்டு அறுக்குதடி மான்னேரு வெத்திலை மதுரைக் கழிப்பாக்கு தேனூரு சுண்ணாம்பு தெகட்டுதடி தேன் கரும்பே! கீழத் தெருவிலே கிழவி மவ மேலத் தெருவிலே மேவட்டம் போடுதாளே!   குறிப்பு: இப்பாட்டில் உவமைகள், பனையேறி கருப்பட்டி காய்ச்சும் தொழிலாளர்களான நாடார்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டன. பொடியென்று-வசியப்பொடி முன்னரே வசிய மருந்து பற்றிய நம்பிக்கையைக் குறிப்பிட்டோம்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   தாளம் போட்டு நடக்கிறாளே !   அடிக்கடி அவன் வேளியே போகும்பொழுது அவனுடைய நண்பர்கள் அவனோடு போகிறார்கள். அவனுடைய காதலி அவனைத் தனிமையில் சந்திக்க விரும்புகிறாள். கூட்டத்தில் போகும்பொழுது எப்படி அவனை அழைப்பதென்று அவனைக் கேட்கிறாள். அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அவள் மீது அவனுக்கிருக்கும் ஈடுபாட்டையும், காதலையும் வெளிப்படையாகச் சொல்லுகிறான். அவள் நாணமடைந்து முகஞ்சிவக்கிறாள்.   காதலி: ஆளு கருத்தாளு அரமனைக்கு ஏத்த ஆளு ஆளோடு போகும் போது-நான் ஆரை விட்டுக் கூப்பிடட்டும்? வெத்தலையைக் கையிலெடுத்து வெறும் பாக்கை வாயில் போட்டு சுண்ணாம்பு இல்லையின்னு சுத்தி வந்தால் ஆகாதா?   காதலன்: சாலையடி ரோட்டுப்பாதை காலு கையை வீசிப்போட்டு தங்கப் பானைகுடம் தவல பானை தலையில தாழமடம் கொண்ட குப்பி சாலையிலே என்னைக்கண்டு தாளம் போட்டு நடக்கிறாளே நடையிலே! களைபிடுங்கி கைகழுவி கரைப் பாதை போற பொண்ணே முகம் கழுவி முத்தம் தந்தால் வாயிரம் பொன் தருவேன் சிரகி பறக்குதடி சீனாவானா கம்மாயிலே சீவன் கிடக்குதடி செண்டு மலர் ஒண்ணுலேயும்.   வட்டார வழக்கு: சிரகி-குருவி; சீனாவானா கம்மாய்-குளத்தின் பெயர் (சீனாவானா என்பவர் தூத்துக்குடியில் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்); செண்டு மலர் ஒண்ணு-காதலியைக் குறிப்பிடும்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   ஊடல் வேம்பாச்சே !   குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்கு வரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். “சிறிது காலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும் ” என்று எச்சரிக்கிறான்.   ஆண்: சின்னச் செருப்பு மாட்டி சிறு கலயம் கஞ்சி கொண்டு வருண முழி முழிச்சு வாராளையா வடகாடு   பெண்: பாதை பிரிவாச்சே ! பக்கப் புளி ஒண்டாச்சே ஊடாலே வேம்பாச்சே உனக்கும் எனக்கும் பகையாச்சே   வட்டார வழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளிய மரம்; ஒண்டு-ஒன்று.   சேகரித்தவர் :.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   பயல்களைப் பார்ப்பாளாம் !   சிற்றூர்களில் கூட உழைத்துப் பிழைக்காமல் வேசித் தொழில் செய்து இழிவான வாழ்க்கை வாழும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து வள்ளுவர் முதல் பல நீதி நூலாசிரியர்கள் போதனை செய்து வந்திருக்கிறார்கள். ஆயினும் சமூக நிலைமைகள் காரணமாக, அவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய வேசி ஒருத்தியின் வலையில் அகப்பட்டு அவள் மீது மோகங்கொண்டு திரிகிறான் ஒரு வாலிபன். அவனைத் திருத்துவதற்காக உழைத்து நல்வாழ்க்கை வாழ ஆசைப்படும் பெண்கள் அவளது வாழ்க்கையின் இழிவைப் புலப்படுத்திப் பாடுகிறார்கள்.   ஆசை விசுவாசம் அந்தப் புள்ளே பூவாசம் என்ன விசுவாசமோ இனி மறக்கக் கூடுதில்லை குறு குறு வென்று பாராதடி குறுஞ்சிரிப்பு சிரியாதடி உன் குறு குறுப்பும் குறுஞ்சிரிப்பும் ன் குடியைக் கெடுக்குதடி கருத்த கருத்தப் புள்ளா கண்ணுக்குள்ளே சுழட்ட மாறிச் சுழட்டாதடி மாயப்பொடி போடாதடி காத்தடிச்சு தாழை பூத்து காத வழி பூ மணக்க எருக்கலம்பு வாடை தட்டி-நீ தெருக்கடந்து போகலாமோ? தட்டக்காட்டு விட்டிப் போல சாலைக்காட்டு மந்தி போல வேலைக்காட்டு குன்னாய் போல விலகி நல்லாப் போறாளடி எல்லோரும் கொண்டையிலே ரிருக்கும் பேனிருக்கும் தட்டுவாணி கொண்டையிலே தப்பாமல் பூவிருக்கும் அஞ்சாறு வீட்டுக்காரி அதிலே ஒரு பாட்டுக்காரி பாட்டுப் படிப்பாளாம் பயல்களைப் பார்ப்பாளாம் கண்டியிலே பெண்டாட்டி கடலோரம் வைப்பாட்டி தூத்துக்குடி மந்தையிலே துட்டுக்கொரு பெண்டாட்டி   வட்டார வழக்கு: வேலைக்காட்டு-வேலிக்காடு; குன்னாய்-குறுநாய் (அது மறைந்து மறைந்து செல்லும்); துட்டு-பழைய நான்கு காசுகள்.   குறிப்பு: மனமொத்த மனைவி கிடைப்பது கடினம். வைப்பாட்டி மலிவாகக் கிடைப்பாள் என்று குலப்பெண்கள் இழிவாகப் பேசுகின்றனர்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   ஓடிட்டாலும் குத்தமில்லை !   காதலன் அவசரக்காரன். அவனுடைய திடீர் நடவடிக்கைகளால் காதலர் உறவு வெளிப்பட்டு விடுகிறது. அவள் அடிக்கடி வெளியே வர முடியவில்லை. வந்தாலும் யாரையாவது கூட அனுப்பி வைக்கிறார்கள். அவன் அதற்குப் பிறகும் அவளை மணந்து கொள்ளும் வழியை நாடாமல் கதவைத் தட்டுவதும், கல்லெறிவதுமாக அலைகிறான். அவள் ஓடிப்போகலாம். அதற்காவது தைரியமுண்டா? என்று அவனைக் கேட்கிறாள்.   சோளபுரத்திலேயோ-இரண்டு ஜோடிப் புறா தான் வளர அருகிலுள்ள மாடப் புறா-இப்போது ஆளைக் கண்டு கூவுதடி ஒருத்திக்கு ஒரு மகன்டி உன்னை நம்பி வந்தவன்டி கைதவற விட்டியானால் கடுமோசம் வந்திடுமே வெள்ளி நிலா வடிக்க வீட்டுக்குள்ளே நான் படுக்க தள்ளிக் கதவடைக்கச் சம்மதமா உன் மனசு? கல்லால் எறிஞ்சு பாத்தேன் கதவையும் தட்டிப் பாத்தேன் உறக்கம் பெரியதுன்னு உறவை மறந்திட்டியே   பெண்: நீ கருப்பு நான் சிவப்பு ஊரெங்கும் ஓமலிப்பு ஓமலிப்புப் பொறுக்காமல் ஓடிட்டாலும் குத்தமில்லை   வட்டார வழக்கு: ஓமலிப்பு-ஊர்வம்பு.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம். ஆசாரக் கூடம்   நடுத் தெருவில் தண்ணீர் கேட்கும் காதலனுக்கு காதலி கூறும் விடையை முன்னர் வந்த பாடல்களில் நாம் கண்டிருக்கிறோம். இப்பாடலில் அலங்காரம் செய்யப்பட்ட மணமேடைக்கு வந்து தண்ணீர் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. பாடல் காதலர்களின் உரையாடல்.   காதலன்: நீளக் கயிறு போட்டு நின்னு தண்ணி யிறைக்கும் தாளம் போட்ட கையாலே தண்ணி தந்தால் ஆகாதோ?   காதலி: தண்ணியும் நான் தருவேன் தாகமதைத் தீர்த்திடுவேன் கூடத்துக்கு வந்தியானா குளிர்ந்த ஜலம் நான் தருவேன்   காதலன்: கூடமும் நானறியேன் குளிர்ந்த சாலை நானறியேன் அடையாளம் சொன்னியானால் அங்கு வந்து சேர்ந்திடுவேன்   காதலி: கெண்டை கொண்டு தூண் நிறுத்தி கெளிறு கொண்டு வளைபரப்பி அயிரை கொண்டு மேஞ்சிருக்கும் ஆசாரக் கூட மது   வட்டார வழக்கு: ஆசாரக் கூடம்-மணமேடை.   குறிப்பு: கடற்கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து உவமைகள் எடுத்தாளப்பட்டன. ஆகவே கடற்கரை மக்களின் படைப்பாக இப்பாடல் இருக்கலாம். கெண்டை, கெளிறு, அயிரை மீன் வகை. மீன் போல் தோரணம் கட்டுவது தமிழ் நாட்டு வழக்கம்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   நான் ஆசை கொண்டேனையா !   காதலர்கள் அடுத்து இருக்கும் இரு வீடுகளில் வசிப்பவர்கள். தனியாகச் சந்தித்து உறவாடும் வாய்ப்புகள் பல கிட்டின. அவர்கள் சந்திப்பின் போது உரையாடுகிறார்கள். காதல் கிறுகிறுப்பில் பேசும் பேச்சுகளில் ஆழ்ந்த பொருளைக் காணமுடியுமா?   ஆண்: கரும்பைத் துரும்பாக்கி கல்தூணை வில்லாக்கி விரும்பாமப் போற பொண்ணே வேலி எட்டிப் பாக்கலாமோ உலக்கை போடும் கைதனிலே ஓசையிடும் வளையல் சத்தம் சண்டாள வளையல் சத்தம் சாடை சொல்லிக் கூப்பிடுது   பெண்: கொண்டது குடுமித்தலை கொஞ்சினது பம்பைத்தலை அள்ளி முடியுமுன்னே ஆளைக் காண முடியலியே   ஆண்: ஒட்டுச் சுவருன்னு ஒரு நாள் ஒதுங்கப் போயி கட்டிச் சதுரமெல்லாம் கசறாக உருகுதடி செம்பாதி நேரத்திலே சேர்ந்து நீ வந்த புள்ள-இப்போ வம்பான வார்த்தை பேசி வார்த்தைக்கிடம் பண்ணாதே கண்டு உறவானோம் கண்டொரு நாள் பேசினோம் இன்னொரு நாள் பேசுதற்கு இரங்கலியே உன் மனசு   பெண்: கருப்போ கருப்பழகு கந்தசாமி தன்னழகு அருப்பம் அழகுக்கல்லோ ஆசை வெச்சேன் உன் பேரில்   ஆண்: கன்னம் புருவத்துக்கும் கண்ணுருக்கும் தேமலுக்கும் சின்ன முகத்துக்கும் சிறியாள் வணக்கினாளாம்   பெண்: வயக்காட்டைப் பாத்து விட்டு வரப்போரம் வார சாமி வரப்பு வழுக்கிச்சின்னு வகை மோசம் வந்ததையா   ஆண்: எப்படி வழுக்கினாலும் என்ன செய்யப் போகுதடி உன் மனசு இருக்கும் போது ஊக்கத்தைக் கை விடாதே   பெண்: வேப்பம்பூ பூக்காதோ விடிந்தால் உதிராதோ நேற்று வந்த தோழனுக்கு நேரம் தெரியாதோ   ஆண்: மாலையிலே மாட்டைக் கண்டேன் மலைக்குக் கீழே புல்லைக்கண்டேன் சாமி மவ கொண்டையிலே செவ்வரளிப் பூவைக் கண்டேன்   பெண்: மறந்தாலும் மறந்திடுவேன் மருந்து தின்னா ஆறிடுவேன் நல்ல நாள் ஆசை வச்சேன் நான் மறக்கப் போறதில்லை எண்ணைத் தலையழகா எழுத்தாணி மீசைக்காரா கோவில் பிறையழகா கொல்லுதையா உன் ஆசை பொட்டுக்கடுக்கத்துக்கும் ஒதுக்கி விட்ட சிமிட்டாவுக்கும் ஒட்டிய கிராப்புகளுக்கும் நான் ஆசை கொண்டேனையா   வட்டார வழக்கு: கசறு-கயிறு; அரும்பம்-மீசை; வணக்கினாள்-வணக்கம் செய்தாள்.   குறிப்பு:1, தன் மனத்தை கரும்புக்கும் கல்தூணுக்கும் ஒப்பிட்டு கரும்பை துரும்பாக இளைக்கவும் கல்தூணை வில்லாக வளைக்கவும், காதலிக்குச் சக்தியுண்டு என்கிறான். சண்டாள வளையல்-வளையல் ஒலி தன்னை வேதனைக்குள்ளாக்குவதால் அதனை சண்டாள வளையல் என்று திட்டுகிறான். குடுமித்தலை அவிழ்ந்து விட்டது. 2. காதல் களிப்பில் நேரம் போனது காதலனுக்குத் தெரியவில்லை. பூத்த வேப்பம் பூ உதிர்ந்து விட்டது. அது பூத்திருந்த காலமெல்லாம் அவர்கள் காதல் இன்பத்தில் திளைத்திருந்தனர்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   வாசல்படி காக்கிறேன் !   தனது காதலனைக் கண்டு சீக்கிரம் தன்னை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அவள் சொல்ல விரும்புகிறாள். ஆனால் அவன் தெரு வழியே வரக்காணவில்லை. ஒரு நாள் அவள் அவனைக் காண்கிறாள். அவன் காதில் எட்டும்படி பாடுகிறாள்.   அஞ்சு பனையோரம் ஆனைசெடி காட்டோரம் காட்டு வழி வாரதெப்பம் கண்டு துயரம் சொல்ல சந்திர ரதமேறி சாலிகுளம் வேட்டையாடி இந்திரரே எங்க சாமி எந்த வழி வாராரோ? வருவாரோ இந்த வழி தருவாரோ வெத்திலையை தின்னுவேனோ வாய் சிவக்க தேகமெல்லாம் பூ மணக்க ஏறினேன் கல் கோட்டை எடுத்தேன் மணி உருண்டை வாங்கின மாங்கனியை வாய் ருசிக்கத் திங்கலியே பிறக்கின பூப்போல பொட்டிக்குள்ள நானிருக்கேன் வாடின பூப்போல வாசப்படி காக்குறனே நனையா பச்சரிசி நார் உரியா வாழைப்பழம் உடையாத தேங்கா கொண்டு உறவிருக்க வாரதெப்போ?   வட்டார வழக்கு: பிறக்கின-பொறுக்கின; சந்திரரதம்-சூரியனுக்குத்தான் ரதம் உண்டு. சந்திரன் ரதம் இவளது கற்பனை.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி,நெல்லை மாவட்டம்.   என்னாலே முடியாதய்யா !   காதலி தன் தனிமையைப் போக்க இல்லறத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னை உடனே மணம் செய்து கொள்ள வேண்டுமெனக் காதலனைப் பல வகையாலும் வற்புறுத்துகிறாள்.   சந்திரரே சூரியரே சாமி பகவானே இந்திரருக்கு இளையவரை என்ன சொல்லிக் கூப்பிடட்டும்? படுத்தாப் பல நினைவு பாயெல்லாம் கண்ணீரு சண்டாளன் உன் நினைவால் நான் சருவா உருகுறனே வேப்ப மரத்தோரம் வெட்டரிவாள் சாத்தி வச்சேன் வெட்டருவா சாஞ்சன்னைக்கு விட்டேனையா உன் உறவு பொட்டலிட்ட பூபோல பொருந்தி விட்ட நாமம் போல இப்பம் விட்ட பூப்போல இருந்து மடியுதனே ஆவரம்பு பூப் போல ஆறு வருஷம் சிறையிருந்தேன் இன்னும் சிறை யிருக்க என்னாலே முடியாதையா   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க   காதலன் ஆடம்பரக்காரன்.அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.   அவள் : அரைக்கீரை சீறு பாத்தி காலரையும் தூக்கிவிட்டு நிக்காங்க எங்க மச்சான் இன்பமாய் தலைப்பாக்கட்டி பொட்டிடுமோ உங்க நேர்த்தி பொருந்திடுமோ என் சதுரம் விட்டுவிடு என்று சொல்லி வேணவர்கள் சொல்லுதாங்க   அவன் : வெட்டுறாங்க குத்துறாங்க வேணவர்கள் சொன்னால் என்ன கம்படி விழுந்தாலும் கனியை விடப் போறதில்லை   அவள் : கொண்டையிலே பூவிருக்க குளத்துத் தண்ணீ்ர் நிலம்பாய கங்கையிலே விழுந்த பூவை கிடைக்குமின்னு எண்ணாதீங்க   வட்டார வழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.   குறிப்பு:''கங்கையில் விழுந்த பூ''- ''எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள்'' என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   சாக்குப் போக்கு ! ஒருவரையொருவர் சந்திக்க வீட்டில் பெற்றோர்களிடம் பல சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டு வரவேண்டுமெனக் காதலி அவனுக்கு பாடம் சொல்லுகிறாள். அவன் அவளுக்கு இளைத்தவனல்ல என்று அவன் பேச்சால் தெரிகிறது.   காதலி: சலுப்பச்சட்டி ஊசி கொண்டு சாக்குத்தைக்கப் போறவரே சாக்குத்தைக்க நீங்க வாங்க சாலைப் பாதை நான் வாரேன்   காதலன்: தூக்குச்சட்டி சோறு கொண்டு சூச்சியமா வார புள்ளா தூக்குச்சட்டி சோறு கொண்டு சூட்சியமா நான் வருவேன்   காதலி: மண்வெட்டி தோளில் போட்டு மடை திறக்கப் போறவரே மடையைத் திறந்திடுங்க மயில் வந்து நீராட   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி மாவட்டம்.   செல்வக் குணம்   சில நாட்கள் தன்னைப் பார்க்க வராமல் இருந்தமைக்காகக் காதலி, தன் காதலன் மீது கோபங் கொள்ளுகிறாள். அவன் அவளைச் சமாதானப்படுத்துகிறான். அவளும் கோபம் மாறி அவனைச் “செல்வக் குணம் எங்க மச்சான்” என்று அழைத்துக் கொஞ்சுகிறாள்.   காதலி : ஊதாக் கலர் சட்டை உன்னிதமா நடை நடந்து எந்தச் சட்டை போட்டாலும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை   ஆக்கை அடியும் பட்டேன் அவராலே சொல்லும் கேட்டேன் மூங்கில் தட்டை பூசை பட்டேன் மூதேவி மகனாலே சின்னப்பல்லுக் காரரோடு சிநேகிதம் வைக்கப் போனேன் கொஞ்சப் புத்திக் காரரோடு கூடினது மோசம் தானே   காதலன் : ஓநாய் முகத்தழகி ஒட்ட வச்ச காதழகி ஒட்ட வச்ச காதுக்குள்ளே விட்டனடி தங்க நகை   காதலி : ஆரம் பண்ணிப் போட்ட மச்சான் கழுத்தழகு பார்த்த மச்சான் சீலை வாங்கித் தந்த மச்சான் செல்ல மச்சான் நீங்க தானே மலையேறி மூங்கில் வெட்டி மலைக்கும் கீழே ரோட்டுப்போட்டு தெரு மறிச்சு சிலம்பம் செய்யும் செல்வக்குணம் எங்க மச்சான்   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   கன்னிக் களவு காதலன் ரோட்டுக்கூலி. அவன் போட்ட ரோட்டு வழியே அவள் செல்லுகிறாள். அவன் ரோட்டோரம் மறைந்திருக்கிறான். அவள் அவனைக் காணவே வந்திருந்ததால், அவனைக் கடந்து அவள் சென்றதும் அவன் பாடுகிறான்; அவனுடைய பாடல் கேட்டு அவள் மகிழ்ச்சியோடு திரும்புகிறாள். அவனுடைய பேச்சில் மனம் பறிகொடுத்து அவள் அவன் உறவில் மகிழ்ச்சி கொள்ளுகிறாள்.   ஆண்: நான் போட்ட ரோட்டு வழி நாணயமா போற குட்டி கல் முனை தட்டிராதா? கல் மனசு இளகிராதா? நீல வளையக் காரி நித்தம் ஒரு பொட்டுக்காரி தோளு வலயக்காரி தொடுத்திடுவாய் மல்லிகைப் பூ. வாழை வடக்கே வச்சேன் வாழ் கரும்பைத் தெக்கே வச்சேன் ஊரைக் கிழக்க வச்சேன் வருகிறேண்டி உன்னாலே   பட்டமரம் பட்டணம்தான் பறந்தமரம் தூத்துக்குடி குளுந்த தேசம் நம்ம ஊரு கூடிடுவோம் ரெண்டுபேரும் ஆசை கிடக்குதடி ஆத்துக்கு அக்கரையில் சீவன் கிடக்குதடி சிந்து பொடி வாசலிலே வெள்ளி நிலாவே விடியக்காலப் பெருநிலாவே கள்ளி களவாண கண் மறைய மாட்டாயோ? உள்ளூரு ரத்தினமே உல்லாசத் தங்கமே என்னை விட்டுப் பிரிந்தாயானால் இட்டிடுவேன் கை விலங்கு   சாயச் சருக்குச் சேலை சாத்தனூருக் கம்பிச் சேலை ஊதாக் கருப்புச் சேலை உருக்குதடி என் மனசை கத்தாழைப் பள்ளத்திலே கண்ணெருமை மேய்க்கையிலே அன்று சொன்ன வார்த்தை யெல்லாம் அழிக்காதே பெண் மயிலே. மஞ்சள் அழிந்திடாமே-உன் மாறாப்பு மசங்கிடாமே கொண்டை உலஞ்சிடாமே கொண்ட பூ வாடிடாமே பெண்: மஞ்சள் அழிஞ்சிடுமே மாறாப்பு மசங்கிடுமே கொண்டை உலஞ்சிடுமே கொண்டவன் கையினாலே வாசமுள்ள ரோஜாவே வாடா மரிக்கொழுந்தே தேசமதில் உங்களைப் போல தேடினாலும் கிட்டுமோ?   வட்டார வழக்கு:சிந்து பொடி-செந்தூரம்; வலயம்-ஆபரணம்; களவாண-களவாட.   சேகரித்தவர்:M.P.M. ராஜவேலு இடம்:தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   பச்சைக்குடம் கரையாதா? அத்தை மகன் மீது காதல் கொண்டாள். அத்தைக்கும் அவர்களை மணமக்களாகப் பார்க்க ஆசை. தாய் சொல்லைத் தட்டாதவன் அவன். ஆயினும் காதலி கொஞ்சிப் பேசும்பொழுது குறும்பாக வேறு பெண்களை சிறையெடுக்கச் செல்லும் வீரனாகத் தன்னைக் குறித்துப் பேசுகிறான். அவள் கோபத்தில் பச்சை மண்ணில் சட்டி வனையும் குசவன் என்று அவனைத் திட்டுகிறாள். அவனோ தாய் சொல்லைத் தட்டாத மகன் என்று அவளுக்கு உறுதி கூறுகிறான்.   அவள்: மொழுவிய திருணையிலே எழுதிய பாய் போட்டு பாயிலே உக்காருங்க பல விதமாப் பேசிடலாம்   அவன்: நண்டுகுழி மண்ணெடுத்து நாகசுரம் உண்டுபண்ணி போறானாம் சிங்கக்குட்டி பெண்களைச் சிறையெடுக்க   அவள்: அரிசி அரிக்கையிலே அரளிப் பூ தந்த மச்சான் சோறு வடிக்கையிலே சொக்குதையா உங்க ஆசை முல்லை அரும்பின்னில்லா முடிஞ்சேன் தலை நிறைய பாக்குரண்டி முல்லையின்னு பாத்தவங்க சொல்லலியே. கொடிக்கால் மண்ணெடுத்து கோலவர்ணக் குடம் செய்து பச்சக் குடம் தான் செய்யும் பாவி குசவன் அவன்   அவன்: பச்சைக்குடம் சமைக்கலியே பாவத்தையும் ஏற்கவில்லை தாயார் சொன்ன சொல்லை தப்பாமல் செய்வேனடி   வட்டார வழக்கு:பச்சைக்குடம்-பலமில்லாதது. உடைந்து போகும் (காதல் உறுதியற்றது).   குறிப்பு:பாவத்தையும் ஏற்கவில்லை-காதலை முறித்து அவளுக்குத் துன்பத்தை விளைவிக்கும் பாவத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   கையை விடு !   அவன் அயலூர் செல்லுகிறான். காதலி அவன் அயலூரில் பல நாள் தங்கிவிடுவானோ என்று ஐயப்படுகிறாள். அவன் தினம் தவறாமல் அவளைச் சந்திப்பதாக உறுதி கூறுகிறான். அதற்குமேல் அவளுக்குப் பேசுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுக்கும் பேசுவதற்குப் பொருள் கிடைக்கவில்லை. அவளே மீண்டும் பேச்சைத் தொடங்குறாள். அவன் உணர்ச்சி வெறியில் அத்து மீறுகிறான். அவள் “கழுத்தில் தாலியேறட்டும், இப்பொழுது கருவமணிப் பாசி மட்டும் தானே கழுத்தில் இருக்கிறது? உனக்கு நான் சொந்தமில்லையே! ” என்று காட்டி அவனை வழிப்படுத்துகிறாள்.   காதலி: அஞ்சாறு பேர்களோடு பஞ்சாயம் பேசயிலே மின்னுதையா உங்க லேஞ்சி மூணுமைல் தூரத்துக்கு   காதலன்: வாடின பூப்போல வழிகாத்து நிக்கவேண்டாம் தேடாதே எங்கனியே தினம் வருவேன் இந்த வழி   காதலி: போனா வருவீரோ பொழுது ஒரு நாள் தங்குவீரோ என்னை மறந்து இன்னு இருப்பீரோ இராத்திரிக்கு   காதலன் : இருப்பிலும் இருப்பேனோ இன்னும் கண்டாப் பேசுவனோ பாதையிலே கண்டவுடன் பாவி மனம் கல்லானேன்   காதலி : மருத அறிஞ்சவரே மாமருத பார்த்தவரே கொட்டு எறிஞ்சவரே கோபமென்ன என்மேலே   காதலன் : புள்ளி ரவிக்கக்காரி புளியம் பூச் சேலைக்காரி மானு நிறத்துக்காரி மறப்பது எக்காலம் மின்னல் வேகத்துக்கும் மீளவிட்டான் தூரத்துக்கும் அன்ன நடை அழகுக்கும் ஆலவட்டம் போடுதடி   காதலி : இருந்தா குழல் சரியும் எந்திரிச்சாப் பூச்சரியும் நடந்தா நாடிளகும் நான் வணங்கும் சாமிமேலே   காதலன் : கேட்டனடி ஒரு வருஷம் கெஞ்சினனே நெஞ்சுருக மாட்டேன்னு சொன்னவளை மலத்தினனே காட்டுக்குள்ளே   காதலி : கட்டி அழுத்துதையா கருவமணி விம்முதையா தோகை அழுத்துதையா தொரை மகனே கையை விடு.     சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.     போய் விடுவேன்   ஆடு மேய்க்கும் காதலியை, மலையில் மாடு மேய்க்கும் காதலன் இரவு தங்கிப் போகச் சொல்லுகிறான். அவள் மறுக்கிறாள். “மலைக்கும் ஊருக்கும் இடையில் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வாய்?” என்று கேட்கிறான். அப்பாவிடம் செல்லி கப்பல் வரவழைப்பேன் என்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமல் அவனோடு இணங்கியிருப்பது தமிழ் மரபல்ல என்று அவனுக்கு நினைவூட்டுகிறாள். தந்தையின் சம்மதத்தைப் பெற்று மணம் செய்து கொள்ள வேண்டுமென்பதைத்தான் உடனே அப்பாவிடம் சொல்லி கப்பல் செய்யச் சொல்லுவேன் என்று குறிப்பாகச் சொல்லுகிறாள்.   மாடு மேய்ப்பவன் : ஆத்துக்கு அந்தப் பக்கம் ஆடு மேய்க்கும் சின்னப்புள்ளா ஆத்தில தண்ணி வந்தா அப்பொழுது என் செய்வா?   ஆடு மேய்ப்பவள் : ஆத்திலே தண்ணி வந்தா அப்பாவிடம் சொல்லியல்லோ அப்பொழுதே கப்பல் செய்து அக்கரையே போய் விடுவேன்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   மானங் கெட்ட மச்சாவி   மாமன் மகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தார்கள். அறுவடை முடிந்ததும் திருமணம் நடை பெற வேண்டும். இதற்கிடையில் அவன் நகரத்தில் வேசியரோடு உறவு கொண்டிருக்கிறான் என்று அவள் அறிந்து கொள்ளுகிறாள். மேலும் நகரத்தில் சாமான்கள் வாங்குவதற்கென்று அவளிடம் அவன் நகைகளை வாங்கிச் சென்று வேசியருக்கு கொடுத்து விடுகிறான். கண்ணகியைப் போல “சிலம்புள கொண்ம்” என்று கூறாமல் அவள் அவனை இடித்துக் கூறித் திருத்த முயலுகிறாள். முயற்சியில் வெற்றியும் அடைகிறாள்.   காதலி : கணையாழிக் குச்சிபோல கடும்உறவா நாமிருந்தோம் மூக்குத்தித் தட்டுபோல முறிந்ததடா நம் உறவு !   காதலன் : கோதி முடிந்த கொண்டை கொத்தமல்லிப் பல்லழகி நாகச் சிகப்பியடி-உன்னை நம்பியே நான் கெட்டேனடி ! குடம் எடுத்து இடுப்பில் வைத்து கோல வர்ணப் பட்டுடுத்தி பறக்க முழிக்காதடி படமெடுத்த நாகம் போல மானங் கெட்ட மச்சாவி   மாமன் மகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தார்கள். அறுவடை முடிந்ததும் திருமணம் நடை பெற வேண்டும். இதற்கிடையில் அவன் நகரத்தில் வேசியரோடு உறவு கொண்டிருக்கிறான் என்று அவள் அறிந்து கொள்ளுகிறாள். மேலும் நகரத்தில் சாமான்கள் வாங்குவதற்கென்று அவளிடம் அவன் நகைகளை வாங்கிச் சென்று வேசியருக்கு கொடுத்து விடுகிறான். கண்ணகியைப் போல “சிலம்புள கொண்ம்” என்று கூறாமல் அவள் அவனை இடித்துக் கூறித் திருத்த முயலுகிறாள். முயற்சியில் வெற்றியும் அடைகிறாள்.   காதலி : கணையாழிக் குச்சிபோல கடும்உறவா நாமிருந்தோம் மூக்குத்தித் தட்டுபோல முறிந்ததடா நம் உறவு !   காதலன் : கோதி முடிந்த கொண்டை கொத்தமல்லிப் பல்லழகி நாகச் சிகப்பியடி-உன்னை நம்பியே நான் கெட்டேனடி ! குடம் எடுத்து இடுப்பில் வைத்து கோல வர்ணப் பட்டுடுத்தி பறக்க முழிக்காதடி படமெடுத்த நாகம் போல   மழைக்கால இருட்டிலே மாரளவு நாணலிலே ஒத்தையிலே போவாயோடி ஒருவன் கைப் பத்தினியே? கடுவு உறவானோம் கண்டொரு நாள் பேசினோமே இன்னொரு நாள் பேசுதற்கு இரங்கலையே உன் மனசு !   காதலி : கானம் கருத்த கானம் கறிக் கேத்த கொத்தமல்லி மானங் கெட்ட மச்சாவிக்கு மாதம் ஒரு வைப்பாட்டியா? காத்துட்டுக்குக் கடலை வாங்கி கழுகுமலை திருனாப் பாத்து மிச்சக் கடலை இருக்கு-நம்ம மச்சாவியக் கூப்பிடுங்க பாக்குத் துவக்குதடா பழமை உறவு மங்குதடா ஏலம் கசக்குதடா-நம்ம இருவரும் போற பாதை மருதையிலே தேவதாசி மான் மயிர் சேலைக்காரி ஆனைமேலே கும்பம் வச்சு ஆடுறாளே தேவதாசி   காதலன் : லேஞ்சு விரிச்சலடி நேரே தலை வச்சுறங்கி என்ன விட்டுக் கண்ணசர என்ன மனம் கொண்டியடி படுத்தா பல நினைவு பகல் நிறைஞ்சாக் கண்ணீரு உறக்கச் சடவிலயும் உன் நினைவாத் தோணுதடி படுப்பேன் எந்திருப்பேன் பாதவத்தி உன்னாலே காலு ரெண்டும் கல்லுத் தூணு-உன் மேலு ரெண்டும் எண்ணெய்க்குடம்   காதலி : எண்ணெய்க் குடம் எஞ்சாமி எண்ணமெல்லாம் உங்கமேலே காதுக் கடுக்கன் வித்தேன் கை காப்பு ரெண்டு வித்தேன் மேலூருப் பிள்ளையாலே மேமுருகு ரெண்டு வித்தேன் வாழப்பழமும் போச்சே வச்சிருந்த பணமும் போச்சே வேசி தல வாசலிலே வெற்றி வேரா நாமுளச்சேன் தாசி தல வாசலிலே தாழம் பூவா நாமுளச்சேன் தாசி அறிவாளோ-இந்தத் தாழம்பூ வாசனையை   காதலன் : அவஞ்சி முத்தாலே அவ குணத்தை நான் மறந்தேன் தங்க வச்ச பச்சக்கல்லு தாங்கி வச்ச ஓடாணி அரக்க வச்ச சுத்துமணி ஆளை மிரட்டுதடி வம்பனென்னும் பெயராகி வயிரி எனும் சொல் கேட்டேன் வங்கம் கொங்கு தேசம் மலையாளம் ராப்பயணம் வாழ வடக்கே வச்சி வாழ் கரும்பைத் தெக்க வச்சி ஊரைக் கிழக்க வச்சி உருகுரண்டி உன்னாலே ஒத்த மரம் தெரியுதே உன்னிதமா ஊர் தெரியுதே படர்ந்த மரம் தெரியுதே பாசம் உள்ள உன் ஊரு   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   ஒரு கதை   இசைக்கு மயக்கும் சக்தி உண்டு. இசை மயக்கத்தில் நாம் விரும்பாத செயல்களைக் கூடச் செய்து விடுவோம்.   ஒரு குருட்டுப் பாடகனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல். அவள் அவனை மணம் செய்து கொள்ள இசையவில்லை. அவளுக்கு வேறொரு வாலிபன் கணவனாக வாய்த்தான். இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். குருடனுக்குப் பொறாமை மிகுந்தது. தன்னை துன்பத்தில் ஆழ்த்திய அப்பெண்ணை இன்பமாக வாழவிடக் கூடாதென்ற நச்சு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் தம்பதிகள் இருவரும் ஒரு கிணற்று துவளத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குருடன் மறைவில் நின்று பாடினான். இன்னிசை அவளை மயக்கி உணர்விழக்கச் செய்தது. கணவன் அவளை அணைத்து இன்னிசை மயக்கத்தை கலைக்க முயன்றான். அவள் கோபமுற்று தன்னையறியாமல் அவனை உதறி விட்டாள். அவன் கிணற்றுள் விழுந்து விட்டான். அவள் மயக்கம் கலைந்து உண்மையை உணர்ந்தாள். எப்படியாவது தன் கணவனை உயிரோடு கரை சேர்க்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுகிறாள். அற்புதமான மிதவையொன்றை அனுப்புமாறு பிரார்த்திக்கிறாள். குருவி இருந்த மலை தனிலே ஏன் வந்தாய்?   பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஓடிவந்து மணம், செய்து கொண்ட அவர்கள், ஒரு நாள் இருவரும் பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இருவரும் உழைத்து மனநிறைவோடு வாழ்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிக் கொள்ளுவதைக் காணும்போது நமக்கு அவர்கள் கருத்தொருமித்து வாழும் தம்பதிகள் என்பது தெரிகிறது.   பெண் : ஆளுக்கு ஆளழகு ஆவரைப் பூவழகு மஞ்சு முழியழகு மயங்கினனே உன்னாலே   ஆண் : முட்டியிலே சோறு பொங்கி மூடு வச்ச முன்னாலே தவலை சோறு பொங்க தவம் பெற்றது யாராலே?   பெண் : கொத்துக்கில்ல முத்தளந்து குணத்துக்கோ வழி நடந்து-உங்க அமிர்த குணத்துக்கில்ல-நான் அங்கிருந்து இங்க வந்தேன் ஆண் : பட்டுக்கரை வேட்டிலியே பாலூத்திச் சோறு கட்டி கிட்டருக்கும கட்டுச் சோத்த தின்போம் வாடி பெண் மயிலே   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   குருடர் கவி பாடயிலே அருகிருந்த தோழனையோ-நான் அருங்கிணற்றில் தள்ளி விட்டேன் சங்கு மிதவை சமுத்திரத்துத் தான் மிதவை-என் தாலிக்கு உடையவரை தள்ளிக் கரை சேராயோ?   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   பழைய காதலி   அவன் அழகான நங்கை ஒருத்தியைக் காதலித்தான். அவள் குடும்பத்தார் எளியவர்கள். இடையில் அவனைவிட மூத்த பெண்ணொருத்தியை அவனுக்கு மணம் பேசினார்கள். அவளிடம் சொத்திருந்தது. அவன் இருந்து சாப்பிடலாம். இப்பாதுகாப்பை எண்ணி அவன் மணத்திற்குச் சம்மதித்தான். மணமாயிற்று. அவன் மனைவி வீட்டிற்குப் போய் விட்டான். அவளுடைய நிழலில் வாழ்ந்தான். அவளைக் கண்டு பயந்து அவள் சொற்படி நடந்து வந்தான். அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. ஒருநாள் கணவனும் மனைவியும், கணவனது ஊருக்கு வந்தார்கள். பழைய காதலி அவனைச் சந்திக்கிறாள். மனைவி சற்று தூரத்தில் தெரு மறைவில் வந்து கொண்டிருக்கிறாள். பழைய காதலிக்கும் இவனுக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்கிறது.   காதலி : ஆத்தோரம் நாணலடா அதுக்கடுத்துச் செய்வரப்பு செய்வரப்புப்பாக்க வந்த நீ தேனமிர்தம் உண்கலையோ?   அவன் : நல்ல நல்ல துயிலுடுத்தி நல் துயிலு மேலணைஞ்சு குஞ்சரமே புள்ளை தூக்கி குயிலாளும் வாராளடி   காதலி : என்னிலேயும் நல்லவளோ இடையும் சிறுத்தவளோ கைக்கு அணைவாயிருந்தா போயிவாங்க மன்னவரே   அவன் : பருவம் பருவம் தாண்டி பலாக்கா நெல்லுடையாள் புருவத்து அழகுடையாள் போயி வரக் கட்டாதடி   வட்டார வழக்கு: துயில்-துகில் ; செய்-வயல் ; பலாக்கா-பாலாக்காய். (தோட்டம் வயல் உடையவள்).   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :நெல்லை மாவட்டம்.   சைக்கிள் ஓட்டும் சாமி   சைக்கிளில் வேகமாகச் செல்கிறான். சில நாட்களாக அவனைப் பார்க்க முடியாத காதலி, அவனைப் பார்த்து விடுகிறாள். அவன் சைக்கிளிலிருந்து இறங்குகிறான். அவள் அவனை நோக்கி தன்னை மறக்கவில்லையென்று சத்தியம் செய்ய வேண்டுகிறாள். அவனும் அப்படியே சத்தியம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லுகிறான். அவள் வேட்டி தாண்டி சத்தியம் செய்யச் சொல்லுகிறான். அவனோ மீனாட்சி கோவிலில் வேட்டி தாண்டி சத்தியம் செய்து தருவதாக சொல்லுகிறான்.   பெண் : சாஞ்ச நடையழகா ! சைக்கிள் ஓட்டும் சாமி ஒய்யார சேக்குகளாம் ஒலையுதில்ல சைக்கிளிலே சட்ட மேலே சட்டப் போட்டு சரிகைச் சட்ட மேல போட்டு சைக்கிளிலே போறவரே சாயாதிரும் பள்ளங்கண்டு வட்டமிடும் பொட்டுகளாம் வாசமிடும் தைலங்களாம் சாமி கிராப்புகளாம் சாயந்திரம் நான் மடிப்பேன் அரக்கு லேஞ்சுக் காரா பறக்க விட்டேன் சண்டாளா மறக்கல என்று சொல்லி வலக்கையுமே தந்திடுவாய்   ஆண் : வலக்கையும் தந்திருவேன் வருண சத்தியம் செஞ்சிருவேன் மீனாட்சி கோவிலிலே வேட்டிப் போட்டுத் தாண்டித் தாரேன்.   வட்டார வழக்கு : சட்ட-சட்டை ; சாயாதிரும்-சாய்ந்து விடாதேயும் ; செஞ்சிடுவேன்-செய்து விடுவேன்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   முறைப் பாட்டு   கை கடந்த மாயமென்ன?   அவளுடைய மச்சான் ஊர் வெளிப்புறம் சாயாக்கடையில் உட்கார்ந்திருக்கிறான். அவனை வம்புக்கிழுத்துப் பேச்சுத் தொடங்குகிறாள் மாமன் மகள். அவன் விடுவானா? அவன் பதில் பேச, இவளும் பேசுகிறாள்.   அவள் : சாயாக் கடையிலே சமுக்கம் விரித்த பெஞ்சியிலே இருக்காங்க எங்க மச்சான் இன்பமாகத் தலைப்பாக் கட்டி   அவன் : நேராக வளர்ந்த புள்ள நித்திரைக்கு ஏத்த புள்ள கொண்டாடி தலை முடியை கொடுங்கையில் போட்டுறங்க மானத்திலே ரோட்டுப் போட்டு மாதுளம் பூப் பாய் விரிச்சு அங்கே இருந்து பேசுறாளே அரக்கு லேஞ்சுக் காரனோடே களை எடுத்துக் கை கழுவி காலாங்கரைப் பாதை கூடி முகங் கழுவி முத்தம் தந்தால் மூணு லட்சம் பொன் தருவேன் ஒன்னையே நம்பி யல்ல ஒரு வருஷம் தலை வளர்த்தேன் கலியாண மாத்தையிலே கை கடந்த மாயமென்ன? கட்டப்புள்ள குட்டப்புள்ள கருவ மணி போட்ட புள்ள என்னைக் கெடுத்த புள்ள அன்னா போறா சின்ன புள்ள   அவள் : கொத்த மல்லித் தோட்டத்திலே குளிக்கப் போயி நிக்கயிலே கொத்தோடு பூவெடுத்து விட்டெறிஞ்சான் அத்தை மகன் அத்தை மகனின்னு செத்த மனம் பொறுத்தேன் மத்தவன் ஒருத்தனானால் மாட்டிருவேன் கைவிலங்கு பச்சச் சிகப்புக் கல்லு பளிங்கு நிறம் உங்க பல்லு பல்லு அழகுக்காக-நான் மாறாத ஆசை கொண்டேன்   வட்டார வழக்கு : அரக்குலேஞ்சுக்காரன்-வேறோர் முறை மாப்பிள்ளை ; தலை வளர்த்தேன்-சிரைக்காமல் முடியை வளர விட்டேன் ; மாத்தையிலே-மாதத்திலே.   குறிப்பு : கருவமணி-இது தெலுங்கு பேசுபவர்கள் அணிவது. தமிழ் நாட்டில் செட்டியார்கள் தவிர மற்ற தெலுங்கர்கள் அணிவார்கள். அவர்களுடைய பாட்டுக்களும் தமிழ் பாட்டுக்களே. தெலுங்குப்பாட்டு, தெலுங்கு நாட்டில் உறவுடையவர்களுக்கே தெரியும். சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   கை மருந்து   அவன் ஏழை. கூரை வீட்டில் வாழ்பவன். காரை வீட்டு முறைப் பெண் மீது காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். இருவரும் தீவிரமாகப் போராடிப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றனர் ; பெண் ஓடிவிடுவதாகச் சொன்னதற்குப் பிறகே தாய் திருமணத்துக்குச் சம்மதித்தாள். தாயை மறக்கும்படி என்ன மருந்து போட்டானோ அத்தை மகன்? காரை வீட்டுக்காரியை கூரை வீட்டிற்கு வருமாறு செய்து அங்கிருந்து ரங்கூனுக்கு அழைத்துச் செல்ல அவன் செய்த வசியமென்ன? அவன் காதில் விழ அவள் பேசுகிறாள். முக்கூட்டுப் பாதையிலே மூணுபேரும் போகையிலே தாயை மறக்கச் சொல்லி தந்தானே கை மருந்து காரை வீட்டு மேலிருந்து மஞ்சள் அறைக்கையிலே கூரை வீட்டு அத்தை மகன் கூப்பிட்டானே ரங்கூனுக்கு தாயை மறந்தனடா தண்டிப் புள்ளையே மறந்தேன் ஊரை மறந்தேனடா ஒரு பணத்துத் தாலிக்காக   வட்டார வழக்கு: மூணுபேர்-தான், தங்கை, தாய்; தண்டிப்புள்ளை-பெரியவளான தங்கை.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.   முறைப்பாட்டு முறைப்பாட்டு பற்றி முன்னரே குறிப்பிட்டோம். பின் வரும் பகுதியில் ஆண்கள் பாடும் முறைப்பாட்டும் பெண்கள் பாடும் முறைப்பாட்டும் தனித்தனியாக கொடுக்கப்படுகின்றன. (ஆண்கள் பாடுவது)   சந்தை இரைச் சலுக்கும் தாளிச்ச சுண்டலுக்கும் சீமை மொச்சைப் பயத்துக்கும் சிறுக்கி வட்டம் போடுராளே அரைக்கால் ரூவா தாரனடி ஆரஞ்சுப் பழமும் தாரனடி பூப் போட்ட ரவுக்க தாரனடி புருஷனுண்ணு கூப்பிடடி மூக்குத்திப் போட்ட புள்ள முடி மனூர் கம்மாப் புள்ள நாக்குச் சிவந்த புள்ள நாந்தாண்டி ஒம் புருஷன் மானா மதுரையிலே மாடுமேய்க்கும் சின்ன புள்ள தேங்கா நிறத்துப் புள்ள தேடு ராண்டி ஒம் புருஷன் ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப் பூச் சேலைக்காரி காத் தோரம் கொண்டைக்காரி கையலைப்புக் கெட்டிக்காரி தெல்லுத் தண்டி கொண்டைக்காரி தேங்காத் தண்டி பூ முடிச்சு பூவே மலரே நீ போர் மன்னர் தன்னழகே கோடாலிக் கொண்டைக்காரி குளத்தூரு காவல்காரி வில்லு முருகுக் காரி நில்லேண்டி ஒண்ணாப் போவோம் புளிய மரத்து வீட்டுக்காரி புள்ளி போட்ட லவுக்கக்காரி புல்லறுக்கப் போகையிலே பூ முடிந்தா லாகாதோடி வெள்ள வெள்ளச் சீலைக்காரி வெள்ளரிக்காய் கூடைக்காரி கோம்பை மலை வெள்ளரிக்காய் கொண்டு வாடி திண்ணு பார்ப்போம் மஞ்சள் அறைக்கும் புள்ள மதி லெட்டிப் பாக்கும் புள்ள கொஞ்சம் வளர்ந்தையானா கொண்டு போவேன் ரெங்கத்துக்கு அலுக்கு குத்தி துலக்க புள்ள ஆபரணம் போட்ட புள்ள அலுக்கக் கழுத்துனாலும் துலுக்கத்தனம் போகுதில்லை ஆல மரத்தைப்பாரு அதுக்குத் தெக்க கிணத்தப் பாரு செப்புக் குடத்தைப் பாரு சிறுக்கி போற ஒயிலைப் பாரு   பெண்கள் பாடுவது)   எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலை யழகா கொல்லுதடா உன்னாசை வாழைப் பழமும் போச்சு வச்சிருந்த வைப்பும் போச்சு தலையைச் சிரைக்கப் போயி தாழம்பூ வாசம் போச்சு காணம் கருங் காணம் கறிக் கேத்த கொத்தமல்லி மானங் கெட்ட அத்தானுக்கு மதுரையில வைப்பாட்டி அஞ்சாறு வீடுகளாம் அதுல ரெண்டு இள வட்டமாம் நாயடிக்க ஏலாட்டியும் நாணயங்க ரொம்ப உண்டாம் இந்த நடை ஏது? இடுப்பிலொரு கையேது? மையேது போட்டேது மதி குலைந்த மன்னவர்க்கு? காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி கன்ன மெல்லாம் சுங்கு விட்டு சுங்குக்கு மேலாக சுத்துதடா சீலைப் பேனு மானா மதுரைச் சட்டி வாசலுல போட்ட சட்டி எங்க மச்சான் குடிச்ச சட்டி எடுத்துவுக கொடுத்திருங்க பாதையிலே போற வனே படர்ந்த காவிப் பல்லுக்காரா நீல முழிக்காரிக்கு நீ தாண்டா மாப்பிள்ளை   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   முறைப்பாட்டு சிறு மிளகாய் உறைக்கலையோ?   மாப்பிள்ளை பெண் முறையுடையவர்கள் கேலி செய்து பேசம் பேச்சுக்கள் கொண்ட பாடல்களை முன்னர் கண்டோம். அவை நெல்லை மாவட்டத்தில் கிடைத்தவை. சேலம் மாவட்டத்திலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன.   ஆண் : தன்னந் தனியாகவே தான் தட வழியே போற புள்ளே தாலி கட்டப் போறேண்டி தடை ஒன்றும் சொல்லாதேடி   பெண் : முன்கைப் பலமுமில்லை முகத்தில ரும்பு மீசையி்ல்லை நானுனக்குப் பெண்டாட்டியா? நாடெங்கும் சொல்லாதேடா   ஆண் : சிறு கத்திரி காய்க்கலையா? சிறு மிளகாய் உறைக்கலையா? சிறு பையன் கொடுத்த பணம் செல்லலையா உந்தனுக்கு.   சேகரித்தவர் :வாழப்பாடி சந்திரன் இடம் :வாழப்பாடி,சேலம்.   முறைப்பாட்டு   உன்னாலே நான் கெட்டேன்   கீழ்வரும் சிறிய பாட்டு சேலம் மாவட்டத்தில் பாடப்படுகிறது.   ஆண் : ஒரு கரண்டி முளகு தாரேண்டி ராசாத்தி, ராசா மகளே ரத்தினக் கிளியே, முத்துக்கண்ணே ரவிக்கை யோடு சீல தாரேண்டி   பெண் : குடுத்தாலும் வாங்க மாட்டண்டா மாமங்கு சின்னத்தம்பி மாதளங்காப் பேச்சுக்காரா உன்னாலே நானும் கெட்டேண்டா   மதினி   முறை மாப்பிள்ளை தனது வயதுக்கு மூத்த முறைப் பெண்ணைக் கேலி செய்து பாடுகிறான். இது தூத்துக்குடியருகில் பாடப்படுவது.   புங்கங் குளத்து மதினி கஞ்சி குடிப்பாளாம் கண்ணாடி பாப்பாளாம் ஆட்டுத்தலை போல கொண்டை முடிவாளாம் ஆவரைப் பூப்போல் மஞ்ச குளிப்பாளாம் மச்சானைக் கண்டா மயங்கி நடப்பாளாம் கொழுந்தனைக் கண்டா குலுக்கி நடப்பாளாம்   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம்   சரடு பண்ணித்தாரேன்   மாமன், மச்சான் முறையுள்ளவர்கள் கிராமங்களிலே கல்யாணமாகாத பருவப் பெண்களையோ, கல்யாணமான வாலிபப் பெண்களையோ, கிள்ளுவது, கூச்சம் உண்டாக்குவது போன்ற விளையாட்டுகள் செய்வது வழக்கம். பெண்களும் அது போலவே சாணியைக் கரைத்து ஊற்றுவது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இவ்விளையாட்டுக்கள் “விளையாட்டுக்கார முறையுள்ளவர்கள்” என்று கொங்கு நாட்டில் கூறுவார்கள். அதுபோல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.   பழங்காலத்தில் ‘குழு மணமுறை’ வழக்காயிருந்தது. ஒரு குழுவில் உள்ள எல்லாப் பெண்களுக்கும், முறையுள்ள ஆண்களுக்கும் மண உறவு இருந்தநிலை அது. அதன் எச்சம், உறவுமுறைக் கேளிக்கைகளாக இன்றும் நிலவுகின்றன. அது போல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.   “என்னை நீ, எப்போ கண்ணாலம் பண்ணிக்கொள்ளப் போகிறாய்” என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண் “எனக்கு நீ கொப்பும், சரடும் பண்ணிப் போட கையில் காசு வைத்திருக்கிறாயா?” என்று குத்தலாகக் கேட்கிறாள்.   “கூடலூருச் சந்தைக்கும் சமயவரம் சந்தைக்கும், கூடையும், சரடும் எடுத்துக்கொண்டு விற்கப் போகிறாய்ல்லவா? அது விற்பனையாகட்டும். உனக்கு நகை பண்ணிப் போடுகிறேன்” என்று அவன் பாடுவதைக் கேளுங்கள்.   (குறிப்பு : கு. சின்னப்ப பாரதி)   கூடமேல கூட வெச்சு கூடலூரு போற பொண்ணே கூட வேலையானா உனக்கு கொப்புப் பண்ணித் தாரேன் சாட்டு மேல சாடு வெச்சு, சமயவரம் போற பொண்ணே சாட்டு வெலையானா உனக்கு சரடு பண்ணித் தாரேன்   வட்டார வழக்கு : கொப்பு-மேல்காதில் அணியப்பெறும் நகை ; சரடு-கழுத்திலணியும் ஆபரணம் ; சாடு-கூடையை விட இருமடங்கு பெரிதாயுள்ள கூடை.   உதவியவர் : C. செல்லம்மாள   சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   நான் போறேன்   முறைப் பெண், முறைமாப்பிள்ளை என்ற உறவு ஒருவருக்கு மணமான பின்பும் நீடிக்கலாம். அப்பொழுது நெருக்கமான காதல் பேச்சுக்கள் பேசிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் உடலுறவு கொள்வதே தவறெனக் கருதப்படும்.இப்பேச்சுக்கள் மனைவி முன்போ, கணவன் முன்போ நடை பெறலாம். இவ்வழக்கம் இப்பொழுது மறைந்து வருகிறது.ஏனெனில் மணம், உறவு முறைகளை மீறி சொத்துரிமையின் அடிப்படையிலே நடைபெறுகிறது.   பெண்ணும் குடுத்துடுவா...’நான் உனக்குக் கணவனாகும் பேறு இல்லை. உன் மகனுக்கு எங்கள் பெண்ணைக் கொடுப்போம். என் மகனுக்கு உன் பெண்ணை எடுப்போம்’ என்ற உறவு வகையில் பாடல் அமைந்துள்ளது.   முறைப்பெண் : எண்ணெய்த்தேச்சி தலைமுழுகி என் தெருவே போற மச்சான் ஆசைக்கு ஒரு நாளைக்கு அனுப்புவாளோ உன் தேவி   முறை மாப்பிள்ளை : பெண்களும் குடுத்துடுவா பெண் குடுத்து வாங்கிடுவா என்னைக் கொடுத்துவிட்டு இருப்பாளோ என் தேவி   அவன் மனைவி : குலைவாழை நெல் உருவி குழையாமல் சோறு பொங்கி இலை வாங்கப் போனவரை இன்னும் வரக் காணலியே சாமியக் காணலன்னு சபைகளெல்லாம் தேடிப்பார்த்தேன் சக்களத்தி மடிமேலே சாஞ்சிருக்கும் வேளையிலே   முறை மாப்பிள்ளை : தேங்காய் முழி அழகி தெய்வக்கனி வந்து நிக்கா மாங்கா முழியழகி மடியவிடு நான் போறேன்   மனைவி : என்னையக் கண்டொடனே கால்பதறி, கைபதறி வீட்டுக்கு வந்தொடனே விளக்கேத்தி நான் பார்த்தேன்   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்.தூத்துக்குடி வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்.                   திருமணம் வாழ்த்து   திருமணத்தின் போது வாழ்த்துக் கூறுதல் நமது தமிழ் நாட்டின் பழமையான வழக்கம். சிலப்பதிகாரத்தில் பண்டைக் காலத்தில் பாடப்பட்ட வாழ்த்து குறிப்பிடப் பட்டுள்ளது. அஷ்ட மங்கலங்களையும் ஏந்திய மகளிர் கண்ணகியைத் திருமண மேடையிலேற்றி,   “காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுகஎன ஏத்திச் சின்மலர் கொடு தூவி அம்கண் உலகின் அருந்ததி, அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினார்-தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே”   என்று வாழ்த்தினார்களென்று இளங்கோவடிகள் கூறுகிறார். இம்மங்கல வாழ்த்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. மணமக்கள் வாழ்த்து முதற் பகுதி, சோழமன்னனது வெற்றியைப் போற்றிப் பாடுவது, இரண்டாவது பகுதி.   தற்காலத் திருமண வாழ்த்துக்களில் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவது மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது. திருமணத்திற்கு முன் நிகழ்ந்த பல சம்பவங்களும் இவ் வாழ்த்தில் கூறப்படும். மணப்பந்தல் வர்ணனை, மணமகன், மணமகள் பெருமை, மணச்சடங்கு முறை, ஆரத்திப்பாட்டு முதலியன யாவும் இதனுள் இடம் பெறும். மண நிகழ்ச்சிகள் பலவகைப்படும். கண்ணகி கோவலன் மணம், தாலிகட்டுதல் என்ற சடங்கின்றி நடை பெற்றதென்று சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மங்கல வாழ்த்துப் பாடல்கள் பாடியவுடன் திருமண நிகழ்ச்சி முடிவடைகிறது. கேரளத்தில் பல ஜாதியினரிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. கல்யாணச் சடங்கே மிகவும் முக்கியமானது என்பதை “சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை” என்ற பழமொழி தெளிவாக்குகிறது. சில சாதியாரிடையே மணமகள் கழுத்தில் மணமகனே தலி கட்டி ஒரு முடிச்சுப் போட்டபின் அவனது சகோதரிகள் மேல் முடிச்சுகள் போடுவார்கள். சேலம் மாவட்டத்தில் சில பகுதியில் சுமார் 30 வருஷங்களுக்குமுன் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதி்ல்லை. ஜாதியில் வயது முதிர்ந்தவர்தான் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவார். ஆனால் தற்பொழுது முறை மாறி விட்டது. வயது முதிர்ந்தவர் தாலியைத் தொட்டுக் கொடுக்க, மணமகன் வாங்கி மணமகள் கழுத்தில் கட்டுவான்.   தென்தமிழ் நாட்டில் மங்கல வாழ்த்தைப் பெண்களே பாடுவார்கள். சேலம் பகுதியில் ஊர் நாவிதன் தன்னைக் கம்பன் பரம்பரையினன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு மங்கல வாழ்த்துப் பாடுவான். மங்கல வாழ்த்து (திருநெல்வேலி மாவட்டம்)   வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள் வாள் விசய மைந்தருக்கு கேளுங்கள் கேளுங்கள் எல்லோரும் கேளுங்கள் கோல வர்ணப் பந்தலிலே கூறுகிறேன் கேளுங்கள் சொர்ண மணிப் பந்தலிலே சொல்லுகிறேன் கேளுங்கள் இந்தச் சபை தன்னிலே எல்லோரும் கேளுங்கள்   எங்கள் குடி தழைக்க இளவரசு வேணுமென்று அரசுமுதல் வேண்டுமென்று அன்னை தவஞ் செய்து பிள்ளை முதல் வேண்டுமென்று பெரிய தவஞ் செய்து   பாலன் முதல் வேண்டுமென்று பாரத்தவம் செய்து தொண்ணூறு நாளாகத் துளசிக்கு நீர்வார்த்து முன்னூறு நாளாக முல்லைக்கு நீர் வார்த்து ஐந்நூறு நாளாக அரசுக்கு நீர் வார்த்து வேண தவஞ் செய்து வேம்புக்கு நீர் வார்த்து வெந்த மாத்தின்றால் விரதம் கலையுமிண்ணு பச்சை மாத்திண்ணு பகவானைப் பூசை செய்து செம்பொன் மலரெடுத்துச் சிவனாரைப் பூசை செய்து பசும் பொன் மலரெடுத்து பார்வதியைப் பூசை செய்து வெள்ளை மலரெடுத்து வினாயகரைப் பூசை செய்து நவகிரகப் பூசை நாயகியும் தான் செய்து அன்னையும் தந்தையும் அருந்தவங்கள் தான் செய்து முந்தித் தவமிருந்து முன்னூறு நாள் சுமந்து மங்களமாக மைந்தரைப் பெற்றெடுத்தாள் மலரில் உதித்தவர்தான் மா தவத்தால் வந்தவர்தான் பூவில் உதித்தவர்தான் புண்ணியத்தால் வந்தவர்தான் தவத்தால் பிறந்தவர்தான் தருமத்தால் வந்தவர்தான் பிச்சிப் பூத் தொட்டிலிலே புரண்ட குமாரர்தான் மல்லிகைப் பூந் தொட்டிலிலே வளர்ந்த குமாரர்தான்   ஒன்றாம் வயதில் ஒக்கப் பணி பூண்டு இரண்டாம் வயதில் ரத்ன மணி ஊஞ்சலிட்டு மூன்றாம் வயதில் முத்தால லங்கரித்து நான்காம் வயதில் நடக்கப் பணி பூண்டு பத்துப் படித்துப் பரீட்சை எல்லாம் தான் எழுதி பாண்டித் துரைராசா பகல் உண்டு கைகழுவி தாம் பூலம் தரித்து சகுனம் பார்த்து சைக்கிளேறி கச்சேரி போயி கமலப்பூப் பாண்டியரும் கோர்ட்டாரு எதிரில் குரிச்சி மேல் உட்கார்ந்து ஜட்ஜு துரைகளுடன் சரிவழக்குப் பேசையிலே புத்தகமும் கையுமாய் பேச்சுரைக்கும் வேளையிலே கண்டு மகிழ்ந்தார்கள் எங்க கமலப்பூ ராசாவை பார்த்து மகிழ்ந்தார்கள் எங்க பாண்டித் துரைராசாவை பெண்ணுக் கிசைந்த புண்ணியர்தான் என்று சொல்லி கன்னிக் கிசைந்த கணவர்தான் என்று சொல்லி மங்கைக் கிசைந்த மணவாளர் என்று சொல்லி நங்கைக் கிசைந்த நாயகர்தான் என்று சொல்லி வலிய அவர் பேசி வந்தார் வரிசையுடன் பெரிய இடந்தானென்று பெண் தாரேன் என்று வந்தார் வாருங்கள் என்றார் எங்கள் அப்பா வரிசை மிகவுடையார்   ஆமென்றான் எங்களம்மான் அன்பு மிகவுடையான் பவழ வர்ணச் சமுக்காளம் பாண்டி மன்னர் போடுமென்றார் முத்து வர்ணச் சமுக்காளம் முடி மன்னர் போடுமென்றார் தங்கக் கிண்ணியிலே சந்தணமும் கொண்டு வந்தார். வெள்ளித் தாம்பாளத்தில் வெற்றிலையும் பாக்கும் வைத்தார் வந்த தொரு சங்கதியை வாய் திறந்து சொல்லுமென்றார் நாங்கள் வந்த சங்கதியை நல முடனே சொல்லுகிறேன் எங்கள் பொற் கொடிக்கு உங்கள் புத்திரரைக் கேட்டு வந்தோம் எங்கள் ஏந்திழைக்கு உங்கள் இந்திரரைக் கேட்டுவந்தோம் எங்கள் பைங்கிளிக்கு உங்கள் பாலகரைக் கேட்டு வந்தோம் கலியாணப் பேச்சு காதாரக் கேட்டு வந்தோம். சந்தோஷமாகிச் சரீரமெல்லாம் பூரித்து மைந்தருக்குக் கல்யாணம் மகிழ்ச்சியுடன் செய்வதற்கு பொருத்தமது பார்க்க புரோகிதரைத் தானழைத்து வந்த புரோகிதருக்கு மாம்பலகை போடு மென்றார் கூட வந்த புரோகிதருக்கு குரிச்சுகளும் போடுமென்றார் சோழி பரப்பிச் சொல்லு மென்றார் பஞ்சாங்கம் பாசி பரப்பிப் பாரு மென்றார் பஞ்சாங்கம் ஐந்து பொருத்தம் பொருந்திற்று ஏந்திழைக்கு ஆறு பொருத்தம்   பொருந்திற்று அருங்கிளிக்கு பத்துப் பொருத்தம் பொருந்திற்று பாண்டியற்கு செல்லக் கலியாணம் சிறப்பாக நடத்தவென்று நல்ல நாள் பார்த்து நாள் முகூர்த்தம் தானும் வைத்தார் செல்வருக்குக் கல்யாண மென்று சீமையெங்கும் பாக்கு வைத்தார் புத்திரர்க்குக் கல்யாணமென்று பூமியெங்கும் பாக்கு வைத்தார் தட்டாரைத் தானழைத்துத் தாலி சமையுமென்றார் அரிசி போல் மாங்கலியம் ஆரிழைக்குச் சமையுமென்றார் உளுந்து போல் மாங்கலியம் உத்தமிக்குச் சமையுமென்றார் தாலி சமைக்க வென்று தாம்பூலம் தான் கொடுத்தார் வாழைமரம் நட்டி வாசல் அலங்கரித்து பாக்குமரம் நட்டி பந்தல் அலங்கரித்து அம்மி வலமாக அரசாணி முன்பாக அரகரா மாங்கலியம் ஆரிழைக்குக் கட்டுமென்றார் சிவா சிவா மாங்கலியம் திருக்கழுத்தில் கட்டுமென்றார் பூவும் மணமும் பொருந்திய தன்மைபோல் தேவியும் மன்னவரும் சேமமாய் வாழ்ந்திருங்கள் பாலும் சுவையும் போல் பார் தனிலே எந்நாளும் பூ மகளும், நாயகனும் பொற்பாக வாழ்ந்திருங்கள் கன்னியோட கற்பும் கணவனோடு மெய்மொழியும்   இந்நில மெல்லாம் விளங்க இன்பமாய் வாழ்ந்திருங்கள் ஆயுசு தீர்க்கமுடன் அம்மனுட தன்னருளால் நாயகனும், நாயகியும் நலமாக வாழ்ந்திருங்கள் தலைப்பிள்ளை ஆண் பெறுவீர் தகப்பனார் பெயரிடுவீர் மறுபிள்ளை பெண் பெறுவீர் மாதா பெயரிடுவீர் பிள்ளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திருங்கள் மக்கள் பதினாறும் பெற்று மங்கலமாய் வாழ்ந்திருங்கள் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி நலமுடனே எந்நாளும் ஞானமுடன் வாழ்ந்திடுவீர் போடுங்கள் பெண்கள் பொன்னார் மணிக்குலவை இன்னு மொரு குலவை இரு வாயும் பொன் சொரிய   குறிப்பு : ‘பதினாறும் பெற்று’ என்ற சொற்றொடருக்கு புதிய பொருள் கூறப்படுகிறது. ‘பதினாறு செல்வங்கள்’ என்று பொருள் கூறி, பதினாறு செல்வங்களின் பட்டியலும் கூறப்படுகிறது. நாட்டார் நம்பிக்கையில் 16 என்பது மக்களைத்தான் குறிப்பிடும். பிள்ளைப்பதினாறு, மக்கள் பதினாறு என்ற சொற்றொடர்கள் இதனைத் தொடர்பாக்கும்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   எங்கிருந்து வாச்சாளோ?   திருமண விழாவின் போது மணமகன் உறவினர் ஒரு கட்சியாகவும், மணப்பெண் உறவினர் மற்றோர் கட்சியாகவும் பிரிந்து பாட்டுப் போட்டி தொடங்குவார்கள். மணமகனின் சகோதரிகள் மணப் பெண்ணைக் கேலிசெய்து பாடுவார்கள். உடனே மணப் பெண்ணின் உறவினர் மணமகனைக் கேலி செய்து பாடுவார்கள். இப்பாடல்கள் சில வேளைகள் தரம் குறைந்து ஆபாசமாகத் திகழ்வதும் உண்டு. பொதுவாக நகைச்சுவை நிரம்பியதாகவும், விவாதத் திறமையை வெளியிடுவதாகவும் இப்பாட்டுகள் அமையும்.   (மணமகன் கட்சியினர் பாடுவது)   தம் அண்ணனைக் கண்டு சரணமடைந்த அண்ணி நாழி அரிசி வடிக்கத் தெரியாத சோம்பேறி என்று அவளை ஏசுகிறார்கள் மணமகனது சகோதரிகள்.   நெய்க்கிணறு வெட்டி நிழல் பாக்கப் போகும் போது-என் அண்ணார் அழகைக் கண்டு பெண்ணாள் சரணமென்றாள் பால்கிணறு வெட்டி பல்விளக்கப் போகும் போது-என் அண்ணார் அழகைக் கண்டு பெண்ணாள் சரணமென்றாள் நாழி வரவரிசி நயமாய் வடிக்கிறியா? நாதேரிச் சிறுக்கிமகள் எங்கிருந்து வாச்சாளோ உழக்கு வரவரிசி உருவா வடிக்கிறியா ஊதாரிச் சிறுக்கு மகள் எங்கிருந்து வாச்சாளோ   வட்டார வழக்கு : வரவரிசி-வரகரிசி ; உருவா-உருவாக ; நன்றாக வடிக்கிறியா?-வடிக்கத் தெரிகிறதா?; நாதேரி, ஊதாரி-வகைச்சொற்கள்.   உதவியவர் :வாழப்பாடி சந்திரன் இடம் :வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   குறவர் மகனோ? (மணமகள் கட்சியினர் பாடுவது)   பெண்ணைப் பற்றி கேலிப்பாட்டுப் பாடிய மணமகனது உறவினருக்குப் பதில் அளிக்கும் முறையில் மணமகளது உறவினர் பாட்டுப் பாடுகிறார்கள். அப்பாட்டில் மணமகனைக் கேலி செய்து குறவன் மகனென்றும், அவன் காக்கைக் கருப்பென்றும் வருணிக்கிறார்கள்.   அந்தி ரயில் ஏறத்தெரியாது அபிமன்னன் வீட்டுக்கு நீயா மருமகன்? ஈச்சங் கொடி புடுங்கி இருலட்சம் கட்டை பின்னும் இந்திரர் வீட்டுக்கு நீயா மருமகன்? ஈச்சம் பழத்திலும் இருண்ட கருப்பையா இந்த மாப்பிள்ளை நாகப்பழத்திலும்-இது நல்ல கருப்பையா   ஆகாசம் மேலேறி ஆடுதப்பா உன்கருப்பு பந்தல் மேலேறி பறக்குதப்பா உன் கருப்பு ஒட்டுத் திண்ணை தூங்கிக்கு பட்டுப் பாய் ஒண்ணா? ஓணான் முதுகுக்கு ஒரு ரூபாய் சந்தனமாம் அரிசி பொறுக்கி மவன் ஆனைமேல் வரும் போது அரிச்சந்திரன் பெத்த மவள் கால் நடையா வரலாமா? கொள்ளு பொறுக்கி மவன் குதிரை மேல் வருகையிலே கோவலனார் பெத்த செல்வம் கால் நடையா வரலாமா? பருப்பு பொறுக்கி மவன் பல்லக்கில் வருகையிலே பாண்டியனார் பெத்த செல்வம் கால் நடையா வரலாமா கள்ளுக் கடை போவாராம் கையில் மொந்தை எடுப்பாராம் என்ன வென்று கேட்டால் பசும்பால் என்று சொல்வாராம் குதிரையடி போலே கொழுக் கட்டை நூறுவச்சேன் அத்தனையும் தின்னானே அந்த உதடி மவன் ஆனை அடி போலே அதிரசம் நூறுவச்சேன் அத்தனையும் தின்னானே அந்த உதடி மவன்   வட்டார வழக்கு : அந்திரயில் தெரியாதவன்-மாலைக் கண்ணன் ; உதடி-வசைச்சொல், இந்த வசைகள் எல்லாம் மணமகனுக்காகி வந்தது.   உதவியவர் :வாழப்பாடி சந்திரன் இடம் :வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   திருமணம்   திருமணத்திற்கு முன் தாலி செய்து கொண்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார்கள். அவன் வரும்போது மணப் பெண் வீட்டில் கூடியிருக்கும் பெண்கள், பெண்ணை அலங்காரம் செய்து கொண்டே மணமகனது வரவை, அவளுக்கு எடுத்துக் கூறுவார்கள். வாராண்டி, வாராண்டி வரிசை கொண்டு வாராண்டி பாக்கு எடுத்துக்கிட்டு பரியங் கொண்டு வாராண்டி புத்தம் புதுச் சேலை பொன்னான சவிரி செஞ்சி தங்கத்தாலே தாலிபண்ணி தடம் புடிச்சி வாராண்டி சந்தனப் பொட்டழகன் சாஞ்ச நடையழகன் கூறை சீலை கொண்டுகிட்டு குதிரை ஏறிவாராண்டி இத்தனை நாளாக எதுக்காகக் காத்திருந்தான் இண்ணக்கிச் சமைஞ்சவளை எடுத்துப் போக வாராண்டி அம்மி மிதிச்சு அரசாணி சாட்சி வச்சி சந்திர சூரியனை சத்தியம் பண்ணிப் போட்டு தாய் மாமன் மகளுக்குத் தாலி கட்ட வாராண்டி.   சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி இடம் :பரமத்தி,சேலம் மாவட்டம்.   பெண் அழைப்பு   தென்னையும் வாழையும் கட்டி அலங்கரித்த பந்தலிலே மணப்பெண்ணை அழைத்து வந்து உட்கார வைக்கிறார்கள். கல்யாணம் கல்யாணம் காரிழைக்குக் கல்யாணம் என்னைக்குக் கல்யாணம் இளங்கொடிக்கு கல்யாணம் சித்திரை மாதத்திலே சீர்பாகம் தேதியிலே ஞாயிறு திங்களுக்கு நல்ல புதன்கிழமை கல்யாண மென்று சொல்லி கடலேறிப் பாக்குமிட்டார் முகூர்த்தம் நடக்குதிண்ணு முடிமன்னர்க்குப் பாக்குமிட்டார் ஐம்பத்தாறு அரசர்க்கும் அருமையாய் சீட்டெழுதி வாழைமரம் பிளந்து வாசலெல்லாம் பந்தலிட்டார் தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டார் பந்தல் அலங்கரித்து பாவையை உட்காரவைத்தார்   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :கொங்க வேம்பு,தருமபுரி.   சீதனம்   பணம் மிகுந்தவர்கள், மணமாகும் தங்கள் பெண்களுக்குப் பல விலையுயர்ந்த பொருட்களைச் சீதனமாகக் கொடுப்பார்கள். ஆண், பெண், உறவில் சமத்துவம் குறைந்தபின்பு ஏழைக் குடும்பங்களில் கூட சீதனமில்லாமல் மணம் நிகழ்வது அரிதாகி விட்டது. சீதனத்தை இப்பொழுது வரதட்சணையாகக் கொடுக்கிறார்கள். வரதட்சணை கொடுக்க முடியாமல் வாடும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.   பணக்காரர்களுக்கு பொருள் பெரிதல்ல ; ஆகவே பெண்களுக்கு அவர்கள் விலையுயர்ந்த சீதனங்கள் கொடுப்பார்கள். சீதனம் போதாதென்று கோபித்துக் கொண்டு மேலும் அதிக சீதனம் வேண்டுமென்று கேட்கும் பேராசைக்காரர்களும் உண்டு. இப்பாடலில், நல்லதங்காளுக்கு அவள் அண்ணன் கொடுக்கும் சீதனங்கள் எவையென்று சொல்லப்படுகின்றன.   என்ன சீதனங்கள் பெற்றாள் இளங்கொடியாள் பட்டி நிறைஞ்சிருக்கும் பால்மாடு சீதனங்கள் ஏரி நிறைஞ்சிருக்கும் எருமை மாடு சீதனங்கள் குட்டை நிறைஞ்சிருக்கும் குறியாடு சீதனங்கள் ஒக்காந்து மோர் கடையும் முக்காலி பொன்னாலே சாய்ந்து மோர் கடையும் சாய் மணையும் பொன்னாலே இழுத்து மோர் கடையும் இசிக்கயிறும் பொன்னாலே பிள்ளைங்க விளையாட பொம்மைகளும் பொன்னாலே இத் தனையும் பெற்றாளாம் இளங் கொடியாள் தங்காளாம்   மங்கல வாழ்த்து   சேலம் மாவட்டத்தில் வேளாளர் திருமணங்களில் கீழ்வரும் மங்கல வாழ்த்து பாடப்படும். வடமொழி மந்திரங்கள் உழைப்போர் குடும்பங்களில் நடைபெறும் திருமண வினைகளில் இடம் பெறுவதில்லை. இதற்கு முன்னர் இரு மங்கல வாழ்த்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தாலி கட்டியவுடன் பாடப்படும் பாடல் இது.   புராண புராண வேதம் வைய சாங்கியம் காராள வேதருக்கும் பாலா புளியாக்கா ஈண தொரு மல்லி இன மல்லி நன்றாய் வேற்றம் செம்பக மல்லி நல் மாட்டுச் சாணம் கொண்டு நல் சதுரம் வழிச்சு சர்க்கரை குத்தி சம்பா அரைத்து வளமுள்ள தோட்டி கொள மாளித்து மாமன் கொடுக்கிற வரிசையைக் கேளு நாக மோதிரம் புல்லை சரப்பளி மேல் காது வாளி வெள்ளை வெத்திலை வீராணம் பாக்கு பத்து விரலுக்கும் பசியாணி மோதிரம் எட்டு விரலுக்கும் எணியாண மோதிரம் மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்து அருகுபோல் வாழ்ந்து ஆல் போல் தழைத்து இரு பேரும் பிரியாமல் காராள வம்சம் சுகமாக வாழ   குறிப்பு : வேளாளர்களுக்கு சாங்கியம் வேதம் என்று குறிப்பிடப் படுகிறது. தழைத்துக் கிளை விடுவதற்கு மூங்கில், அருகு, ஆல் இவை போல் செழித்து வளர வேண்டும்.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்.   வாழ்த்து   அலை கடல் அமிர்தம் திங்கள் மும்மாரியும் செல்வம் தழைய மணவறை வந்து மங்களம் பாடுவோம் நல்ல கணபதியை நால்காலுமே தொழுதால் அல்லல் வினைகளெல்லாம் அகலுமே தும்பிக்கையோனை தொழுதால் வினை தீரும் நம்பிக்கை உண்டு நமக்கே வினாயகனே கந்தரும் முந்திடும் கருகிமா முகத் தோனும் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்தியோர் தேவரும் முனிவரும் காத்திட நல்ல கல்யாணம் நடந்திடச் செய்ததும் தப்பித மில்லாமல் சரஸ்வதி சரணம் சீரிய தனமும் தனமுள்ள கனியும்   பாரியோர் கதலி பழமுடன் இளநீர் சர்க்கரை வெல்லம் கனியுடன் பலாச் சுளை எள், அவல், பொரியும் இஷ்டமுடன் தேங்காயும் பொங்கல் சாதம் பொறி கறியுடனே செங்கையினாலே திருட்டிகள் பிடித்தார் நினைத்ததை எல்லாம் மனத்துடன் பலியும் கிரேதா திரேதா கலியுகம் தன்னில் சேரன் சோழன் பாண்டியன் கூட செம்மையுடனே சிறந்திடும் மங்களம் தாயது சுற்றம் வாழ்வது பொருத்தம் இந்த நாளுக்கு இனியந்த நாளுக்கு பக்குவம் கண்டு, பருவம் கண்டு திக்கிலுள்ள பேரும் சில பேரும் கூடி வேதியர் பக்கம் விரைவுடன் சென்று ஜோதிடர் அழைத்து சாஸ்திரம் கேட்டு இந்தப் பெண்ணையும் இந்த மாப்பிள்ளையையும் இருவர் பேரையும் ராசிகள் கேட்டு கைத்தலம் ஓடிய கைத்தல பொருத்தம் ஒன்பது பொருத்தம் உண்டெனக் கேட்டு   பத்துப் பொருத்தம் பாங்குடன் கேட்டு முறைமைகள் ஆகுதென்று முறையாக வந்து பிரியமுடன் வெற்றிலை பாக்கு பிடித்து ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரும் மேளம் முழங்க விளாவிய வாழ்த்து செங்கைச் சோற்றை சீக்கத்தில் கழித்தார் வர்ணப்பட்டால் வஸ்திரம் தன்னை நெருங்கக் கொய்து நேராய் உடுத்தி அன்ன முப்பழமும் ஆநெய்ப் பாலும் மன்னவர் உடனே வந்தவர் உடனே வாசல் கிளறி மதிப்புடன் கூடி வெற்றிலை மடக்கி விரும்பியோர்க் கெல்லாம் கணபதி தன்னை கருத்துடன் நாடி அருகது சூடி அருளது புரிந்திட முளரி மெச்சிட, முகமது விளங்கிட களரி வைத்துக் கங்கணம் கட்டினார் குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து கொப்பேறி கொட்டி குல தேவதையைத் தானழைத்து செப்பமுடன் மன்னவர்க்குத் திருநீற்றுக் காப்பணிந்து   சாந்து புனுகும், சவ்வாது நீரும் சேர்ந்த சந்தனம் சிறக்கவே பூசி கொத்தரளி கொடியரளி கோர்த்தெடுத்த நல்லரளி முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும் வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும் தண்டமாலை, கொண்ட மாலை சுடர் மாலை தானணிந்து ஆடை ஆபரணம் அலங்கரித்து வீடதனில் திட்டமுடன் பேழை தன்னில் சோறு நிறைநாழி வைத்தார் நெட்டுமுட்டுத் தான் முழங்க நாட்டிலுள்ளோர் சபைக்குவர நாட்டுக்கல் போய் நலமாக வலம் வந்து செஞ்சோறு அஞ்சடை சுற்றியெறிந்து திட்டி கழித்து சிவ சூரியனைக் கைதொழுது அட்டியங்கள் செய்யாமல் அழகு மணவறை வந்தார் மணவறையை அலங்கரித்து மன்னவனைத் தான் இறுத்தி இணையான தங்கை ஏந்திழையை அழைத்து வந்து மந்தாரைப்பூ மல்லிகைப்பூ மரிக்கொழுந்து மாலையிட்டு கூரை பிரித்து குணமுள்ள மங்கையவள் பேழை முடி தானைடுத்து புரந்தவனைச் சுற்றி வந்தாள்   வேழ முகனை வினாயகனைத் தானழைத்து சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய இந்திரனார் தோழனை இணைநோக்கி நின்ற பின்பு தேங்காய் முகூர்த்தமிட்டு செல்வ வினாயகரை பாங்காகக் கைதொழுது பரி செய்யப் போறமென்றாள் போதவே பால் வார்த்து போசனமும் முடித்த பின்னர் மாதாவிடம் சென்று மகனும் விடை கேட்க போய்வா மகனே என்று போற்றி மனுக்கொடுத்தார் பேரண்டி முழுங்க பெரிய நாதர் தானடிக்க பூமி அதிர புல்லாங்குழல் ஊத எக்காளம் ஊத எதிர்ச்சின்னம் முழக்கமிட ஊர் மேளம் பறை மேளம் உரும்பு துடும்படிக்க துத்தாரி நாகசுரம் ஜோடி கொம்பு தானூத வலம்புரி சங்கு வகைவகையாய் ஊதிவர சேகண்டி மல்லாரி திமிர்தாளம் பம்பை பம்பை பேரணி அமளிகள் கேட்டு பல்லக்கு முன்னடக்க பாரிலுள்ளோர் சூழ்ந்துவர வெள்ளைக் குடைகள் வெண் சாமரம் வீசிவர விருதுகள் சுழற்றி சூரிய வானம்போல்   தீவட்டி சகிதம் சேர்ந்து முன்னடக்க இடக்கை வலக்கை இருபுறம் சூழ்ந்துவர தம்பியானவர் தண்டிகை மேல்வர தமையனானவர் ஆனைமேல்வர ஆனையை மீறி அழகுள்ள மாப்பிள்ளை மட்டத்துக் குதிரை மேல் வகையாய் ஏறி சேனை படைகளுடன் திரண்டு முன்னடக்க பட்டப் புலவரும் படித்த வரும் சேர்ந்துவர கட்டியங்கள் கூறி கவிவாணர் சூழ்ந்துவர மேக மாஞ் சோலையில் மீன்கள் பூத்திட பாகமாஞ் சோலையில் பந்தங்கள் பிடித்திட அடியார் ஆயிரம் பேர் ஆலத்தி ஏந்திவர திட்டமுடன் எதிர்மாலை சீக்கிரம் போட்டிட அருமைப் பெரியோர்கள் வாவென்று அழைத்து வெகு சனத்துடனே விடுதி வீடொதுக்கி வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பு மென்றார் நாழிகை அரிசிக் கூடை நன்றாக முன் அனுப்பி பெட்டிகளும், பேழைகளும் பொன்கலமும், சீப்புகளும் பட்டுப் பணி மணிகள் பூட்டி மணவறையில் திட்டமுடன் மங்கையரைத் திருப்பூட்டப் போறமென்று   அஷ்ட திக்கும் தானதிர அடியுமென்றார் பேரணியை அன்ன நடையோர்கள் அருமைப் பெரியோர்கள் பொன்னி வலக்கையாலே பேழை முடி ஏந்தி நின்று வண்ண வண்ணக் காட்சியர்க்கு வரிசை கொண்டு வந்தோமென்று நாட்டிலுள்ள சீர் சிறப்பை நாட்டினார் முன்னிலையில் கண்டு மகிழ்ந்தார்கள் கண்குளிர யாவரும் பூட்டு மென்றார் தாலியைப் பெண்ணாள் திருக்கழுத்தில் ஊட்டு மென்றார் சாதம் உடுத்து மென்றார் பட்டாடை சத்துச் சரப்பளியும், தங்கம் வெள்ளி பொன் நகையும் மாணிக்கம் முத்து வைடூரியம் திருப்பூட்டி ஆணிப் பொன்னாபரணம் அலங்கரித்துக் குலம் கோதி அன்ன மயிலியர்க்கு அழழு கொண்டை முடித்து விட்டு பொன் பூட்ட வந்தோர்க்குப் பூதக்கலம் அனுப்பிவைத்து அன்பாக மாங்கல்யம் அடவாகவே கொடுத்து அத்தியார் சுத்தப்பட்டு ஆனந்த நாராயணப்பாட்டு மெச்சும் கலி வர்ணம் மேகவர்ணம் தூவர்ணம் பச்சை வர்ணம், பவளவர்ணம் பலவர்ணக் கண்டாங்கி மேலான வெள்ளைப்பட்டு மேல் கட்டுங்கட்டி கட்டியே இருக்கும் கணபதி வாசலிலே   அருமையுள்ள பந்தலிலே அனைவரும் சூழ்ந்து நிற்க பெருமையுள்ள பந்தலைப் பூவால் அலங்கரித்தார் நாள் கலசம் நட்டு நல்ல முகூர்த்தமிட்டு பேக் கரும்பை நட்டு பெருமன்னம் போட்டு வைத்து சாரும் கரகமும் சந்திர சூரியரும் அம்மி வலமாக அரசாணி முன்பாக ஆயிரம் பெருந்திரி அதற்கும் வலமாக போயிருந்தார்கள் பெருமையுடன் வாழ்ந்திடுவோர் சுத்தமுடன் கலம் விளக்கி சோறரிசி பால் பழமும் பத்தியுடன் தானருந்தப் பணித்தார் மாமன்மாரை அருந்தி முடித்தவுடன் அருகு வந்து தாய்மாமன் பொட்டிட்டுப் பூமுடித்தார் பேடாம் மயிலையர்க்கு பட்டமது கட்டினார் பாரிலுள்ளோர் பார்த்திருக்க கொத்து மாலையைக் கொண்டையில் கட்டி சித்திரக் கலசம் நெற்றியில் துலங்க அலங்கரித்த பெண்ணை அலங்காரமாய் மாமன் மணமகன் அருகில் அழைத்து வந்தார். இராமர் இவரோ, லட்சுமணர் இவரோ காங்கேயன் இவரோ, கருணீகர் இவரோ   எனவே வியக்க இருந்தவனிடத்தில் மைத்துனனை அழைத்து மணவறை இருத்தி கலம் நிறை அரிசியில் கையினைக் கோர்த்தார் சிங்காரமாக தெய்வ சபை தனிலே கம்பர் குலம் வழங்கக் கம்பர் சொன்ன வாக்கியங்கள் வாக்கியத்தைத் தானடக்கி மங்களங்கள் தான் பாட அருமைப் பெரியோர்கள் அருமை மனை செல்லலுற்றார் கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்தார் தங்கள் தங்கத்தை தாரை செய்து கொடுத்து கைத்தாரை செய்த பின்பு இன்னார் பரியம் தேதி செலுத்துவோமென்று மண்டலமறிய மணிவிளக்கு வைத்து கரகம் இறக்கினார் கன்னியுள்ள பாலனுக்கு புடவை தனைப் போட்டு பின்னும் தலைமுழுகி மாமன் கொடுக்கும் வரிசைகள் கேளாய் காதுக் கடுக்கன் வெள்ளிச் சரப்பளி மோதிர கடகம் அஷ்டக்கடகம் தோள் வார் பசும்பொன் துண்டுக் கடுக்கன் அம்மி குளவி அழகு சிறு செம்பு கட்டில் மெத்தை கன்றுடன் பால் பசுவும்   குதிரையுடன் பல்லக்கும் குறையாத செல்வமும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் கிளைகிளைத்து மகிழ்ச்சியால் வாழ்ந்திருக்க மக்கள் பதினாறும் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க மங்கல நாண்பூட்ட மகிழ்ந்தார்கள் எல்லோரும் சுடர் வாழி முனிவர்கள் கின்னரர்கள் வாழி பாடுவோர், கேட்போர் பதிவாழி ! பதி சுப்ரமணிய வாழி ! நகர் வாழி ! நாடும் சிறக்க நனி வாழி உய்யமா நதிமுதல் தையல் பெண்ணாள் வாழி வாழி வாழி என்று வரமளித்தார் ஈசுவரனார்.   குறிப்பு : இது கோவை மாவட்டத்தில் பாடப்படும் வாழ்த்து. கம்பர் மரபினர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நாவிதர் பாடுவார். கவுண்டர்களில் பல கிளைகள் உள்ளன. அவரவர் கிளைக்கு வெவ்வேறு பாடல் உள்ளன. எல்லாப் பாடல்களும் நாவிதர்களால் பாடப்படுவது.   சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி இடம் :கோவை மாவட்டம்.     குடும்பம் இல்லறம்   குடும்ப வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே தனது கணவனையும் மகிழ்விக்கும் ஒரு பெண்ணைப் புகழ்ந்து அவள் கணவன் பாடுகிறான். குடும்ப வாழ்க்கையில் சலித்து விடாமல் சிரித்த முகத்தோடு தனது குடும்பத்தினருக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்து விட்டுக் கணவனோடு, சிரித்துப் பேசிக் கொண்டே அவனைப் பராமரிக்கும் இப்பெண், இல்லற வாழ்க்கையின் தத்துவமறிந்தவள். வேலை, வேலை என்று சலித்துக் கொண்டு கணவனைக் கவனித்து அன்போடு பழகாத மனைவியர் பலர். கணவனோடு நேரம் போக்கி, குடும்பப் பொறுப்பை கைநழுவவிடும் மனைவியர் பலர். இவ்விரு வகையினரும், இல்லற வாழ்க்கையில் தோல்வியடைவார்கள். இப்பாடலில் வரும் பெண்ணோ கணவனால் புகழ் பாடப்படுவதுமின்றி குடும்பத்தினர் அனைவராலும் புகழப்படுகிறாள்.   அரிசி முளப் போட்டு அரமனையும் சுத்தி வந்தா அரிசி மண மணக்கும் அரமனையும் பூ மணக்கும் பருப்பு முளப் போட்டு பட்டணமும் சுத்தி வந்தா பருப்பு மண மணக்கும் பட்டணமும் பூ மணக்கும் வரிசை மணாளனோடு வாய் சிரித்துப் பேசி வந்தால் வாழ்க்கை நெய் மணக்கும் வாசநறும் பூ மணக்கும்   வட்டார வழக்கு : முளப்போட்டு-முளைப்போட்டு.   உதவியவர் : பழனியப்பன்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :காரிபாளையம்,சேலம் மாவட்டம்.   சோற்றில் ஒரு கல்   ஒருவருக்கு ஒரு பெண். அவள் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்கு சமைக்கத் தெரியாது. சரியாக அரிசி களைந்து சோதிக்காமல் சமைத்து விட்டாள். கணவன் உண்ணும் பொழுது ஒரு கல் அகப்பட்டு விட்டது. உடனே சோற்றுத் தட்டையெடுத்து அவள் முகத்தில் எறிந்தான். அவள் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதாள். தந்தைக்குச் சொல்லியனுப்பினாள்.   தந்தை என்ன செய்வார்? காய்கறி அனுப்பினார். அவளுக்கு அரியத் தெரியவில்லை. அவரே வந்து அரிந்து கொடுத்தார். மகளின் நிலை நினைந்து வருந்தி அவளுக்குச் சமையல் கற்பிக்க ஏற்பாடு செய்கிறார்.   முத்தம்மா சமையலில் வல்லவளாகிறாள். மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? பெண்ணுக்கு சமையல் கற்பிக்கவா வேண்டும்? சிறிது பயிற்சியில் அவளுக்குச் சமையல் தெரிந்து விடுகிறது. உற்சாகத்தோடு அவள் புருஷனுக்குச் சமையல் செய்து போடுகிறாள்.   முச்சி வெச்சு முறம் வெச்சு பானை கழுவி பன்னீருலை வச்சு செந் நெல் அரிசி தான் தீட்டி வடிச்சாளாம் வடிச்சாளாம் சாதங்கறி வாழைப்பூத் தன்னிறமாம் பொரிச்சாளாம் பொரியல் வகை பூளைப் பூத் தன்னிறமாம் ஒரு வாய் சோத்திலே ஒருகல் இருந்த தென்று அள்ளி அறைந்தாராம் அழகுள்ள மார் மேலே துள்ளி விழுந்தாளாம் தூங்கு மஞ்சக் கட்டிலிலே சாஞ்சு விழுந்தாளாம் சப்ர மஞ்சக் கட்டிலிலே அடி பொறுக்க மாட்டாமல் அப்பனோட சொன்னாளாம்.   அப்பன் மாராசன் கொத்தோடு காய்கறிகள்   கொண்டு வந்து தந்தாராம் அரியத் தெரியாமல் அரமனைக்கு ஆள் விட்டாள் சீவத் தெரியாமல் திருமணைக்கு ஆள்விட்டாள் அரமனை மாராசன் திருமணையும் கொண்டு வந்து அரிஞ்சு கொடுத்தாராம்   அழுதுத் துடித்தாராம் அரிப்பாளாம் பொரிப்பாளாம் முத்தம்மா அரிசி சோறு தானிடுவாள் முத்தம்மா நெய்யாலே கச்சாயம் சுடுவாளாம் முத்தம்மா நேர மொரு பட்டுடுத்தி வருவாளாம் முத்தம்மா அரளிச் சுருள் ஓலையைத்தான் அழகான கட்டிலிலே நடுவிருந்து வாசிப்பார் நம்பம தம்பி முத்தையா குனிஞ்சு தான் சோறிடுவாள் கற்பு மவள் நம்ம தங்கை வாரி மனங் கொள்வார் வரிசையுள்ள நம்ம தம்பி எடுங்கடி பெண்டுகளே எல்லோரும் தான் குலவை போடுங்கடி பெண்டுகளே பொன்னா லொரு குலவை   வட்டார வழக்கு : வடிச்சாள்-வடித்தாள் ; பொரிச்சாள்-பொரித்தாள் ; சாஞ்சு-சாய்ந்து ; மாராசன்-மகராஜன், தந்தையைக் குறிக்கும் ; திருமணை-திருகுமணை ; அரிஞ்சு-அரிந்து (அறுத்து) ; குனிஞ்சு-குனிந்து ; குலவை-குரவை ; மங்கலமாக-ஒலி எழுப்புவது.   உதவியவர் :புலவர் இராம இராசன்   சேகரித்தவர் :கு.சின்னப்ப பாரதி இடம் :வேலூர்,சேலம் மாவட்டம்.   சமையல்   சமையல் தெரியாதவள் படும்பாட்டை முன்னிரண்டு பாடல்களில் கண்டோம். இப்பாடலிலும் ஆக்கத் தெரியாதவள் படும் அவதியை நாம் காண்கிறோம். இவள் கணவன் கதவடைத்துக் கொல்லுகிறான். இவள் எதிர்த்து நிற்கவும் தயாராயில்லை. அவள் தகப்பனாருக்குச் சொல்லிவிடவும் தயாராயி்ல்லை. காலையில் ஓடிப்போய் விடுவதாகச் சொல்லுகிறாள்.   கான மிளகா வச்சு கறிக்கு மசால் அரைச்சுக்கூட்டி குழம்பு ஒரைச்சதுண்ணு கொல்லுதாரே கதவடைச்சு ! காளான் குழம்பு வச்சு களியவே கிண்டி வச்சு துரந்து வச்சு ஆறித்திண்ணு துடுப்பெடுத்துக் கொல்லுதாரே ! படிச்சவண்ணு தெரிஞ்சிருந்து பாவி மகன் என்னைக் கூட்டி கூழுக் காச்சத் தெரியலேண்ணு குறுக் கொடியக் கொல்லு தாரே ! சுண்டச் செவப் பிண்ணுல்ல சொக்கியவர் என்னைக் கட்டி சோறு காச்சத் தெரியலேண்ணு-என் சொகுசைக் குறைக்காரே ! அறியாத ஊரிலேயும் தெரியாம வாக்கப் பட்டேன் அடியாதங்க புடியாதங்க விடியாம ஓடிப்போரேன்   வட்டார வழக்கு : ஒரைச்சுது-எரித்தது ; படிச்சவண்ணு-படித்தவள் என்று ; குறுக்கு-இடுப்பு ; சுண்டச் சிவப்பு-விரலால் சுண்டினால் சிவந்து விடும் ; அடிபுடி-சேர்ந்து வருவது வழக்கு.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   இந்தாடா உன் தாலி   திருமணமானது முதல் கணவன், தன் மனைவியின் சமையலைக் குறை கூறிக் கொண்டே வருகிறான். எவ்வளவு முயன்று, ஆர்வத்துடன் சமைத்தாலும் அவனுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. புதிய புதிய பண்டம், பணியாரங்களும், பலகாரங்களும் செய்து அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றும் தோல்வியடைகிறாள் மனைவி. அவளுடைய அன்பையும் தன்னை மகிழ்விக்க அவள் செய்யும் முயற்சியையும் அவன் உணர்ந்து பாராட்டவில்லை. “பொறுமை ஒரு நாள் புலியாகும்” என்று பாடினான் நாட்டுக் கவிஞன் கல்யாண சுந்தரம். அதுபோல அவள் சீறுகிறாள். தாலிக் கயிற்றை அடிமை விளக்கென எண்ணுகிற கணவனைப் பார்த்து “இந்தாடா உன் தாலி” என்று கூறுகிறாள். அவன் தன் பக்கம் பழமையான வழக்கங்கள் மட்டுமல்லாமல்,சட்டமும், நீதியும் இருப்பதாகக் கூறுகிறான். பழைய சட்டங்கள் பெண்களை அடிமைகளாக்கி கணவனுக்கு அடங்கி வாழ்வதற்குத்தானே துணை நின்றன? அவள் வழக்கத்தை மட்டுமில்லாமல், தன்னை அடிமையாக வாழக் கட்டாயப்படுத்தும் சட்ட்த்தையும் மீறுவதற்கு துணிகிறாள். இவ்வுரையாடல், அன்பும், பாசமும், பண்பும் கணவன் மனைவி உறவி்ல் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அவ்வாறில்லாது “மாட்டை வசக்கித் தொழுவினில் கட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார்” என்ற நிலையில் கணவன் போக்கு இருந்தால், “அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி” என்று பாரதியின் புதுமைப் பெண் கூறுவதைத் தற்கால உழவன் மகள் பின்பற்றுவாளா?   பெண் : குத்தின அரிசி ஒரலிலே கொளிச்ச அரிசி மொறத்திலே ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின இந்தாடா மாமா உன்தாலி   ஆண் : தாலி குடுத்தாலும் வாங்கமாட்டேன் தாரங் குடுத்தாலும் வாங்கமாட்டேன் முப்பது பணத்தை முடிச்சு கட்டினு எப்ப வருவியோ கச்சேரிக்கு   பெண் : கச்சேரிக்கும் வரமாட்டேன்-போடா கட்டி இளுத்தாலும் நான் வல்லே. ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின இந்தாடா மாமா உன் தாலி   வட்டார வழக்கு : ஒரல்-உரல் ; வல்லை-வரவில்லை ; கட்டினு-கட்டிக் கொண்டு ; உண்ணானம்-விண்ணாமை.   குறிப்பு : தென் பாண்டி நாட்டு உழவர் சாதிகளில் “அறுத்துக்கட்டும்” வழக்கம் உண்டு. மணமுறிவு சற்று எளிதாகவேயிருக்கும். ஆனால் மணமுறிவு கோருபவர்கள் “தீர்த்துக்கட்டும் கூலி” அல்லது “அறுப்புப்பணம்” என்ற தொகையை முதல் கணவனுக்குக் கொடுத்துவிட வேண்டும், பரிசத் தொகையையும் கொடுத்துவிட வேண்டும். இவற்றைக் கொடுக்க முடியாதவர்கள் ஏராளமாக இருப்பதால், மணமுறிவு கருத்தளவில் தான் எளிது.அதைத்தான் இப்பாடலில் இரண்டாம் செய்யுளில் கணவன் “முப்பது” பணம் கொண்டு கச்சேரிக்கு வா என்று கூறுகிறான்.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :சேலம் மாவட்டம்.   காதோலை   புது மணப் பெண்ணுக்குத் தன் முதல் மாதக் கூலியில் கணவன் காதோலை வாங்கி வந்தான். அவனுடைய சட்டைப் பைக்குள் காதோலை கிடந்ததைக் கண்டெடுத்த மனைவி, இது எப்படி அங்கு வந்ததென்று பொய்க் கோபத்தோடு கேட்கிறாள். அவன் ‘பாகற் கொடி பந்தலில் காதோலை காய்ப்பது உனக்குத் தெரியாதா?’ என்று கேட்கிறான்.   பெண் : சாய வேட்டிக்காரா-நீ சாதித் துரை மகனே வல்லவாட்டு சேப்புக் குள்ள வந்த தென்ன காதோலை?   ஆண் : தண்ணிக் குடத்தாலென் தாக்த்தைத் தீர்த்த தங்கம் பாவக் கொடி பந்தலில் பழுத்ததடி காதோலை.   வட்டார வழக்கு : சேப்பு-சட்டைப்பை ; பாவக் கொடி-பாகற் கொடி.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   பேயனுக்கு வாழ்க்கைப் பட்டேன்   பல ஊர்களில் அவளுக்கு முறை மாப்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் பெண்ணின் அழகை மதித்து பெண் கேட்டனர். ஒர ஆண்டு கழியட்டும் என்று பெண்ணின் பெற்றோர் திருமணத்தைத் தள்ளி வைத்தனர். அதற்கும் ஒப்புக்கொண்டு மறு ஆண்டிலும் கேட்டனர். அவளுக்கு ஒரு மாமன் மகன் மீது ஆசை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பணம் இருக்கிறதென்று எண்ணி, ஒரு பேயனுக்கு அவளைக் கட்டி வைத்து விட்டனர். அவன் அவளைப் படாதபாடு படுத்தினான். அவள் தாய் வீடு திரும்பினாள். தன் மாமன் மகனைக் கண்டாள். அவளுடைய மனக்குறை அவனுக்குத் தெரியும்படி பாடுகிறாள்.   முக அழகைப் பாத்துக்கிட்டு முத்தையாபுரத்தில் கேட்டாங்க பல்லழகைப் பாத்துக்கிட்டு பாண்டியா புரத்தில் கேட்டாங்க வாயழகைப் பாத்துக்கிட்டு வல்ல நாட்டில் கேட்டாங்க காலழகைப் பாத்துக்கிட்டு கைலாசபுரத்தில் கேட்டாங்க மாட்டேன் இன்னு சொன்னதுக்கு மறு வருசமும் கேட்டாங்க மாமன் மகனிருக்க மாலையிடும் சாமி இருக்க பேசும் கிளி நானிருக்க பேயனுக்கு வாக்கைப் பட்டு பெரும் கஷ்டத்துக்கு ஆளாச்சே !   குறிப்பு : முத்தையாபுரம், பாண்டியாபுரம், கைலாசபுரம், வல்லநாடு-தூத்துக்குடிக்குச் சிறிது தூரத்திலுள்ள ஊர்கள்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம் :மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம்,நெல்லை மாவட்டம்.   பொருந்தா மணம்   சொத்துரிமை சமுதாயத்தில் உறவுகளை நிர்ணயிப்பது வாரிசு உரிமை தான். திருமணமும் கூட மணமக்கள் பெறவிருக்கும் சொத்தைக் கருதியே நிர்ணயிக்கப்படும். இதனால் ஏற்படும் சில வினோதங்களைக் கீழே காண்போம். நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய பண்ணையாருக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். சொத்துக்கு ஆண் வாரிசு வேண்டுமென்று மனைவியின் தங்கையை மறுமணம் செய்து கொண்டார். அவள் இரண்டு பெண் மக்களை ஈன்றாள். ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் பெண்களே பிறக்கக் கூடும் என்று எண்ணி உறவில்லாத வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டான். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. நான்காவது திருமணத்தைப் பற்றி பண்ணையார் எண்ணிக் கொண்டிருக்கும்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மூத்தவளின் மதிப்பு உயர்ந்தது. இளைய மனைவியர் சண்டை செய்து கொண்டு பிறந்த வீட்டுக்குப் போனார்கள். அடிக்கடி வந்து அமைதியைக் குலைத்து விட்டுப் போனார்கள்.   கோவில்பட்டி தாலுக்காவில் படித்த வாலிபர் ஒருவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள். எல்லோருக்கும் சொத்து உண்டு. தங்களது ஒரே சகோதரனுக்கு எல்லாப் பெண்களையும் கொடுக்க முன்வந்தனர். அவர் மறுக்கவே மூத்த பெண்கள் மூவரையும் மணம் செய்து கொடுக்க முன் வந்தனர். படித்தவரும் முற்போக்கு கொள்கை உடையவருமான அவ்விளைஞர் சகோதரிகள் பகைமை கொள்வார் என்றெண்ணி நாற்பது வயது வரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். சகோதரிகளின் பெண்கள் அனைவரும் மணம் செய்து கொடுக்கப்பட்ட பின்னர். அவர் உறவல்லாத ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டார்.   கிழவருக்குக் குமரியையும், குழந்தைக்குக் குமரியையும், மணம் செய்து வைப்பது சமீபகாலம் வரை வழக்கில் இருந்து வந்தது. தங்கையின் மகளை மணம் செய்து கொள்வது பரவலான வழக்கம். மகளின் மகளை மணம் செய்து கொள்வது ஆண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்ததில்லை.   கீழ்வரும் பாடலில் காதலித்தவனை மணம் செய்து கொள்ள முடியாமல் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மனம் குமுறி அழுவதைக் காணலாம்.   சோளச் சோறு திங்க மாட்டேன் சொன்னபடி கேட்க மாட்டேன் நரைச்ச கிழவங் கிட்ட நானிருந்து வாழ மாட்டேன் நாணலுத் தட்டை போல நரைச்ச கிழவனுக்கோ கோவப் பழம்போல குமரி வந்து வாச்சானல்லே ! செம்புல சிலை எழுதி சிவத்த பிள்ளை பேரெழுதி வம்புல தாலி கட்டி வாழுறது எந்த விதம்? யானை அணைஞ்ச கையி அருச் சுனரைத் தொட்ட கையி பூனையை அணையச் சொல்லி புள்ளி போட்டானே எந்தலையில்.   வட்டார வழக்கு : புள்ளி போட்டானே-விதித்தான் கடவுள்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :கோவில்பட்டி.   மோதிரம் போடவில்லை   முன்னூறு ரூபாய் பரிசம் போட்டுப் பெண்ணைக் கட்டிவைத்தான் தன் மகனுக்கு. தகப்பனது நோக்கம் 300 ரூபாய் பரிசம் போட்டால், பெண்ணின் குடும்பச் சொத்து தன்னைச் சேரும் என்று நினைத்தான். ஆனால் கலியாணத்துக்குப் பின் அவளுக்குச் சொத்து எதுவும் கிடையாது என்று அறிந்தான். அதன்பின் அவளை அவன் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். மகனும் பெண் அழகாயில்லை என்ற சாக்கால் அவளை வெறுத்தான். மூவரும் தங்கள் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடும் நாடகக் காட்சியே பின்வரும் பாடல்கள்.   மாமனார் : முன்னூரு பரிசம் போட்டு முட்டாதாரு பெண்ணைக் கட்டி மோதிரம் போடலைண்ணு மூணு நாளா அழுகுறாண்டி   மருமகள் : பரிசமும் போடவேண்டாம் பந்தி பருமாற வேண்டாம் ஏழை பெத்த பொண்ணு நானு ஏத்துக் கொங்க மாமனாரே   மகன் : உள்ளு வளசலடி உன் முதுகு கூனலடி ஆக்கங் கெட்ட கூனலுக்கோ ஆசை கொள்வேன் பெண்மயிலே !   வட்டார வழக்கு : முட்டாதாரு-மிட்டாதார் ; பந்தி பருமாற-விருந்துகள் வைக்க வேண்டாம் ; பெத்த-பெற்ற   குறிப்பு : பெற்றோர் மடமையாலும் மோசத்தாலும் பெண் வாழ்விழந்து போகிறாள்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   பொருத்தமற்ற மாப்பிள்ளை   நல்ல உடல்நலமுள்ள உழைக்கும் வாலிபன் அவன். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஆனால் அவனுக்குச் சாய்ந்து உட்காரக் கூடச் சொந்த இடமில்லை. அவளுடைய பெற்றோர்கள் அவளை கொஞ்சம் பசையுள்ள குடும்பத்தில் ஒரு நோயாளிக்குக் கட்டிவைத்தார்கள். சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் வாலிபன், மணமான பெண்ணைக் கண்டான். அவள் நிலைக்கு   வருந்தி அவன் பாடுகிறான். நெல்லுக்காகக் கொண்டையிலே தேங்காத்தண்டி பூமுடிஞ்சு படமெடுத்த நாகம் போல-என்னை பாராமலே போற புள்ள ! அண்டினயே ஆலமரம் அடுத்த பலா மரத்தே புடிச்சயடி முருங்கைக் கொப்பை பொல்லாத காலம் வந்து.   வட்டார வழக்கு : அண்டினயே-அருகில் வந்தாய் ; ஆலமரம் அடுத்த பலா மரத்தை-பலமுள்ள மரத்தைப் பிடிக்காமல் முருங்கக் கொம்பை பிடித்தாயே.   குறிப்பு : தன்னை, அவன் ஆலமரத்திற்கருகில் உள்ள பலா மரத்திற்கும், அவளுடைய கணவனை முருங்கைக் கொப்பிற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறான். சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி.   கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை   301 ரூபாய் பரிசம் போட்டுக் கட்டின மனைவி. அவளுக்குக் கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை. அலுத்து வந்த நேரத்தில் கஞ்சியாவது ஊற்ற வேண்டாமா? இந்த உதவாக்கரை பெண்ணைப் பார்த்துக் கணவன் சொல்லுகிறான்.   முன்னூத்தி ஒண்ணு வாங்கி முடிஞ்சு ஙொப்பன் வச்சிக்கிட்டான் கஞ்சி காய்ச்சத் தெரியலேன்னா-உன் கழுத்தக் கட்டி நானழவா   வட்டார வழக்கு : ஙொப்பன்-உங்கள் அப்பன்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   வினைக்காரன் சீமை சந்தனம் உரசும் கல்லைப்போல் புகழ் மணக்க வாழ்ந்த குடும்பத்தில் அவள் பிறந்தாள். நல்ல நல்ல மாப்பிள்ளைகள் அவளை மணம் பேசிவந்தனர். ஆனால் அவளோ மீனுரசும் கல்லுப் போல் உலகம் இகழ வாழ்ந்த ஒரு மோசக்காரன் மீது மையல் கொண்டு அவனையே மணப்பேன் என்றாள். அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் நடத்த மனமில்லாத தந்தை அவளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தார். களவு, சூது, குடி முதலிய தீய வழக்கங்களுடைய அவளது கணவன் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டான். அவளும் அவனுக்கு உடந்தையாக இருந்தாளென்று விசாரிக்கப்பட்டாள். அவன் நீண்டகாலத் தண்டனை பெற்றான். அவளுடைய தந்தை தன்னை நொந்து கொண்டு தன் வீட்டுக்கு அழைக்கிறார். தன் விதியால்தான் அவளுக்குத் துன்பம் வந்து சேர்ந்ததென்ற நம்பிக்கையில் அவர் தன்னை ‘வினைகாரன்’ என்று சொல்லிக் கொள்ளுகிறார். (தந்தை கூறுவது) சந்தனம் உரசும் கல்லு-தலை வாசலில் சாத்தும் கல்லு மீனுரசும் கல்லுக்கில்லோ-நீ வீனாசை கொண்டியம்மா கச்சேரி கண்ட புள்ள கையெழுத்துப் போட்ட புள்ள போலீசு கண்ட புள்ள போயிராதே கூடப்போவோம் நனைஞ்சு துயிலுடுத்து நைத்துயிலு மேலணைஞ்சு விருந்தாடி வாரியாமா வினைகாரன் சீமை தேடி வெட்டின கட்டையிலே வெளைஞ்ச மரிக் கொழுந்தே வக்கத் தெரியாமே வாட விட்டான் தேசமெல்லாம் பாக்கத் துயில் உடுத்தி பாலகனைக் கையிலேத்தி விருந்தாடி வாராளில்ல வினைகாரன் சீமைதேடி   வட்டார வழக்கு : மீனுரசும் கல்லு-தகுதியற்ற கணவன் ; விருந்தாடி-தந்தை வீட்டிற்கு வருகிறாள், வினைகாரன்-அவளைக் குறை கூறாமல் தன்னைக் குறை சொல்லிக் கொள்ளுகிறார்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி.   மருந்து வைத்து விட்டாரா?   ஒருவரை மயக்கிக் கவர்ச்சிப்பதற்கும், ஒருவரை வெறுக்கச் செய்வதற்கும் மருந்து வைப்பது என்ற முறையில் கிராம மக்களுக்கு நம்பிக்கை உண்டு. இது மந்திரவாதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் செய்வினை. இப்பாடலில் வரும் பெண் தனது காதலனை அவனது பெற்றோர் மருந்து வைத்து மயக்கி தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகச் சொல்லுகிறாள். ஆனால் கடைசியில் மருந்தின் மயக்கமல்ல, அவனது மயக்கம்தான் தன்னைக் கைவிடக் காரணமென்றும் சொல்லுகிறாள். இளைய பள்ளி, பள்ளனுக்கு மருந்து வைத்து வசப்ப்படுத்திக் கொண்டாள் என்று முக்கூடல் பள்ளு கூறுகிறது. குருகூர்பள்ளு, அவ்வாறு கூறுவதோடு மருந்து செய்யும் முறையையும் விவரமாகக் கூறுகிறது. உறுதியின்மையை, மருந்தின் விளைவென்று நம்புவோர் காதலை உதறியவனைக் கண்டிக்க மாட்டார்கள். ஆனால் இப்பெண் அவனையே தனது அவல நிலைக்குப் பொறுப்பாக்கித் திட்டுகிறாள்.   (பெண் பாடுவது)   மறக்க மருந்து வச்சு மன்னவர்க்கே தூது விட்டு என்னை மறக்கச் சொல்லி என்ன பொடி தூவினாரோ? முந்தி அழுக்கானேன் நுனி மயிரும் சிக்கானேன் ஆரஞ்சி மேனியெல்லாம் அவராலே அழுக்கானேன் விரிச்சதலை முடியாம வேந்தங் கூட சேராம அரச்ச மஞ்சுச குளியாமே அலை யுதனே இக்கோலம் ஓலை எழுதி விட்டேன் ஒம்பதாளு தூது விட்டேன் சாடை எழுதி விட்டேன் சன்னல் கம்பி வேட்டியிலே நெடுநெடுணு வளர்ந்தவரை நீலக்குடை போட்டவரைப் பச்சக்குடை போட்டவரைப் பாதையில் கண்டியளோ? ஆத்துக்குள்ள ஆதாள-என்னை ஆகாதென்று சொன்னவரே தோப்புக்குள் தொயிலயிலே-என்னைத் தொட்டிட்டும் போகலாமா? வெள்ள வெள்ளக் கொக்கை விளையும் சம்பா அழிச்ச கொக்கை கண்ணியிலே பட்ட கொக்கை கடை வீதியில் கண்டியளா? ஆத்துக்குள்ள கூட்டிக்கொண்டு அன்பான வார்த்தை சொல்லி தேத்திக் கழுத்தறுத்தானே தேவடியாள் பெத்த மகன்   மேற்கண்ட பாட்டின் கருத்தையொத்த தனிப் பாடல் ஒன்று வருமாறு :   மதுரைக்குப் போவாதிங்க மாங்கா தேங்கா வாங்காதிங்க மதுரைச் சிறுக்கியல்லோ வச்சுருவா கை மருந்து   குறிப்பு : தன்னுடைய பெண்மையை அழித்தவனுக்கு, விளையும் சம்பா அழிச்ச கொக்கு என்று கூறுகிறாள்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   கணவன் படிக்கும் சத்தம்   கிராமத்தில் படித்தவர்களே குறைவு. சில வருஷங்களுக்கு முன்னால் படிக்கத் தெரிந்தவனைப் பற்றி அவனது மனைவிமார்கள் பெருமையாக நினைத்துக் கொள்வார்கள்.படித்தவனின் மனைவி அவர் படிக்கும் சத்தத்தைப் புகழ்ந்து தனது தோழியரிடம் கூறுகிறாள்.   விட்டம் போட்டு வீடெடுத்து வெளி வாசல் தொட்டில் கட்டி வெளி வாசல் தொட்டியிலே வெள்ளிக்கிளி கூவுதுன்னா வெள்ளிக்கிளி சத்த மில்ல வீமர் படிக்கும் சத்தம் சட்டம் போட்டு வீடெடுத்து தலைவாசல் தொட்டி கட்டி தலை வாசல் தொட்டியிலே தங்கக்கிளிகூவுதுன்னா தங்கக் கிளி சத்தமில்ல தருமர் படிக்கும் சத்தம்   வட்டார வழக்கு : தொட்டி-தொட்டில் ; வீமர், தருமர்-கணவனைக் குறிக்கும் ; வெள்ளிக்கிளி கூவுது, தங்கக்கிளி கூவுது-அவன் படிக்கும் சப்தம்.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   படிக்கும் மாப்பிள்ளை   படிக்கிறான் என்று சொல்லிப் பெண்ணைக் கட்டிவைத்தார்கள். படித்து முடிந்ததும் பெண்ணை அனுப்பலாம் என்றிருந்தார்கள்.ஆனால் பல வருஷங்களாகியும், அவன் படிப்பு முடிந்த பாடில்லை. மனைவி அவனுடைய கல்லூரியைப் பார்த்திருக்கிறாள். அங்கேதான் படிக்கிறார், எழுதுகிறார் என்றிருந்தாள். ஆனால் எவ்வளவு நாள் தான் படித்துக் கொண்டேயிருப்பார், என்றுதான் தன்னை அழைத்துச் செல்லுவாரென்று அவள் கவலைப்படுகிறாள். வகுப்பில் அவனடையும் தோல்விகளைப் பற்றி அவளுக்குத் தெரியுமா?   பத்து பவுனழிச்சு பர்த்தா வுக்கு காப்பி வச்சேன் பத்தடுக்கு மாடி மேல படிக்கிறான்னு நாங்க இருந்தோம் படிச்சு முடிப்பாரா பயண மெங்கும் வைப்பாரா? எட்டுப் பவுனழிச்சு எசமானுக்குக் காப்பி வச்சே எட்டடுக்கு மாடி மேலே எழுதறார்ன்னு நாங்க இருந்தோம் எழுதி முடிப்பாரா எண்ணங்களைச் சொல்லுவாரா?   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   பிறந்த வீடு   பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் உரிமையில்லாதிருந்த காலத்தில், தேர், திருவிழாக்களுக்கு பிறந்த வீடு சென்றாலும், அவர்களை அண்ணிமார் வரவேற்பதி்ல்லை. சில நாட்கள் தங்கினால் முகஞ் சிணுங்குவார்கள். கணவன் கதியற்றுப் போனால் பிறந்த வீட்டில் பெருமை கிடையாது. இக்கருத்தை ‘நல்ல தங்காள்’ கதை விளக்குகிறது. பிறந்து, வளர்ந்து ஒன்றாக உழைத்து உருவாக்கிய பிறந்தகத்துச் சொத்தில் ஒரு உரிமையும் இல்லாது போவதையெண்ணி தமிழ்ப் பெண்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இவ்வுணர்ச்சியை வெளியிடும் பாடல் தமிழில் மிகப்பல.   தந்தை இறந்தபோது மகள் பாடும் ஒப்பாரியில் இவ்வுணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம். மணமான பெண்ணின் தந்தையிறந்து விட்டால், அவள் இனி பிறந்தக ஆசை விட்டதென்று எண்ணுவாள். அண்ணனையும், அண்ணியையும் குறை கூறி ஒப்பாரி சொல்லுவாள். இப்பாடல் ஏறக்குறைய ஒப்பாரியை ஒத்துள்ளது.   மாரியம்மன் திருவிழாவிற்கு வருமாறு அண்ணன் வருந்தியழைத்ததால், அவனூருக்குச் செல்லுகிறாள் ஒருத்தி. அங்கு அவள் தங்கியிருந்த ஒரு நாளில் அண்ணி அவளுக்கு அளித்த கௌரவத்தை அவளால் தாங்க முடியவில்லை.   மாரியாயி நோம்பு மவுத்தான மாநோம்பு மாரி அழையு மென்றார் மன்னவனைத் தேடுமென்றார் மைந்தனைக் கையெடுத்து மன்னவரை முன்னடத்தி-பொறந்த மறநாடு வந்து சேர்ந்தேன் மரமல்லிப் பூவுக்கு மைந்தன் அழுதிடவும்-நான் மன்னவரைக் கிட்ட வச்சு மைந்தனை எறக்கி விட்டு வண்ணமடி கூட்டி மரமல்லி தான் பறிச்சேன்-நீ மரமல்லியெடுக்காதே மறுக்காத் தழையாதென்றாள் வண்ணமடி யொதறி மலரைக் கொட்டி விட்டு வந்து விட்டேன் சந்நிதிக்கு செல்லியிள நோம்பு தேங் கொழுந்தோர் மாநோம்பு செல்லி அழையுமென்றார் சேவகனைத் தேடுமென்றார் செல்வனைக் கையெடுத்து சேவகரை முன்னடத்தி-பொறந்த சீமைக்குப் போனாலும் செவந்திப் பூவுக்கு செல்வன் அழுதிடவும்-நான் செல்வனை எறக்கிவிட்ட சேவகரை அருகே வச்சு-நான் சின்னமடி கூட்டி செவந்தி பூ நான் பறித்தேன்-அண்ணி செவந்தி பூ எடுக்காதே செடியே தழையாதென்றாள்-நான் சின்ன மடியொதறி சிந்திய கண்ணோடு திரும்பி விட்டேன் என் வீடு   வட்டார வழக்கு : மவுத்தான-மகத்தான ; மறநாடு-மறவர்நாடு ; மறுக்கா-மறுபடி ; செல்லி-கிராம தேவதை ; ஒதறி-உதறி.   உதவியவர் : தங்கம்மாள்   சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   யாரெல்லாம் சாகவேண்டும்?   உழவர் குடும்பமொன்றில், ஒரு பெண் கடினமான உழைப்பால், பணம் சேர்த்து, சிக்கனமாக குடும்பம் நடத்தி, மிஞ்சும் பணத்தில் கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலியன வாங்குகிறாள். அவளுடைய முயற்சியில், வீட்டிலுள்ள ஒன்றிரண்டு பேர் ஒத்துழைக்கவில்லை. சோம்பியிருப்போர்களைப் பார்த்து ‘உழைக்காமல் உயிர் வாழக்கூடாது,’ என்னும் கருத்தைக் குடும்பத் தலைவி வேடிக்கையாக வெளியிடுகிறாள். ஆத்தங்கரை தனிலே ஏலாலம்மிடி ஏலாலம் ஆடு ரண்டு வாங்கி வுட்டேன் ஏலாலம்மிடி எலாலம் ஆடு ரண்டும் நல்லாருக்க ஏலாலம்மிடி ஏலாலம் அத்தை மகள் சாகவேணும் ஏலாலம்மிடி ஏலாலம்   கொளத்தங்கரை தனிலே ஏலாலம்மிடி ஏலாலம் கோழி ரண்டு வாங்கி வுட்டேன் ஏலாலம்மிடி ஏலாலம் கோழி ரண்டும் நல்லாருக்கு ஏலாலம்மிடி ஏலாலம் கொழுந்தனாரு சாக வேணும் ஏலாலம்மிடி ஏலாலம்   மாத்தாங் கரைதனிலே ஏலாலம்மிடி ஏலாலம் மாடுரெண்டு வாங்கிவுட்டேன் ஏலாலம்மிடி ஏலாலம் மாடு ரெண்டும் நல்லாருக்க ஏலாலம்மிடி ஏலாலம் மாமனாரு சாக வேணும் ஏலாலம்மிடி ஏலாலம்   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :சேலம் மாவட்டம்.   பிள்ளைக்கலி தீரல்லியே   ‘ஆண் மகனுக்குத்தான் சொத்துரிமை’ என்ற சட்டம் அமுலிலிருக்கும் நாடுகளில் ஆண்மகவு வேண்டும் என்ற வேட்கை மகளிர்க்கு ஏற்படுதல் இயல்பே. மணமான இரண்டொரு ஆண்டுகளில் மகப்போறு உண்டாகாவிட்டால், அவளை புக்ககத்தார் குறைகூறத் தொடங்குவார்கள். பிறந்தகத்தார் அவளை அரசமரம் சுற்றவும், தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளவும் தூண்டுவார்கள். பொதுவாகப் பிள்ளைவரம் தரும் தெய்வங்கள் பிள்ளையார், நாகர், சாத்தன், சப்தமாதர், இசக்கி முதலிய தெய்வங்கள். பெண் பிறந்தால் தாய் மகிழ்ச்சியடைவதில்லை.   குழந்தையில்லாத ஒருத்தி, தனது குறையை தகப்பனிடம் கூறுகிறாள்.   மாமரத்துப் பச்சியெல்லாம் என்னெப்பெத்த அப்பா மைந்தன்னு கொஞ்சையிலே மாவாலே பொம்மை செஞ்சு-பாவிக்கு மைந்தன்னு தந்தீங்க மாவுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா மைந்தன் கலி தீரலியே பூமரத்துப்பச்சி யெல்லாம் என்னெப்பெத்த அப்பா பிள்ளை வெச்சு கொஞ்சையிலே பொம்மை செஞ்சு பாவிக்கு பிள்ளைனு தந்தீங்க பொம்மையுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா எனக்குப் பிள்ளைக்கலி தீரல்லியே !   வட்டார வழக்கு : பச்சி-பட்சி ; செஞ்சு-செய்து ; கொஞ்சையிலே-கொஞ்சும் பொழுது.   குறிப்பு : இப்பாடல் ஒப்பாரியின் உணர்ச்சியைக் கொண்டுள்ளது.   உதவியவர் : தங்கம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   சக்களத்தி   அவனுக்கு மணமாகி விட்டது. ஆனால் அவன் மணந்தது அவனுடைய முறைப் பெண்ணையல்ல. வேறொரு பெண்ணை மணந்தும் முறைப் பெண்ணிடம் அவன் நட்பு வைத்திருந்து அவளுடன் குலவுகிறான். பின் ஏன் அவளை மணக்கவில்லை? சொத்து விஷயமே காரணம். அவளை மணந்தால் அவனுக்கு சொத்துரிமை கிடையாது.அவனது பெற்றோர்களுக்கும், அவளது பெற்றோர்களுக்கும், ஏற்பட்ட சச்சரவும் காரணமாகும். தன் கணவன் தன்னைப் புறக்கணித்து அவளுடைய முறைப் பெண்ணுடன் மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்டு அவளைப் பலவாறு ஏளனமாக ஏசி தன் வெறுப்பை வெளியிடுகிறாள் மனைவி.   தங்கக் கதவசைய தலைவாசல் வேம்பசைய வயிரக் கல்லு மின்னலுல வந்து நிக்கா சக்களத்தி சக்களத்தி சாவாளோ சாமம் போல வேவாளோ? கோட்டூரு மந்தையிலே கொட்டு மேளம் கேட்பேனோ?   சிறு வீடு சிறு கதவு சேர்ந்திருந்தோம் சில காலம் என்னை மறப்பதற்கு என்ன பொடி தூவுனாளோ? ஈருவலிக் குச்சி போல இடுப்பொடிஞ்ச சக்களத்தி நல்லபாம்புக் குட்டி போல வல்லவரைக் கை போட்டா திண்டுக் கல்லு மூலையிலே திண்ணு போட்டேன் கரும்புச் சக்கை சக்கை திங்க வந்தாளோ சாரங்கெட்ட சக்களத்தி   அடிக்கணும் குளிரும் காய்ச்சல் ஆறு மாசம் ஒரு வருஷம் எடுக்கணும் பாடை கட்டி என் மனசும் பாலாக பாட்டைப் படிக்க வச்சேன் பை நிறையக் கட்டி வச்சேன் பாட்டறியாச் சக்களத்தி பையோட தூக்கிட்டாளே நேத்தரைச்ச மஞ்சப் போல நிறமுடையாளிங்கிருக்க ஓசிச் சிறுக்கிக்காக ஊரு வழி போகலாமா? கருவ மரம் போல கவட்டைக்கால் சக்களத்தி என்னைக் கண்ட நேரமெல்லாம் ஏசுராளே பொரணி நந்தவனத்துப் பச்சை நான் முடியும் சாதிப் பச்சை தான் முடிய வேணுமின்னு தவசிருக்கா சக்களத்தி வருவாக போவாக வாசலுல நிப்பாக வேசை மகளாலே வெறுத்தில்ல போராக இலந்தைப் பழம் போல இங்கிதமாய் நானிருக்க சாணியுருண்டைக்காக சாம வழி போகலாமா? திண்ணையிலே சந்தனமோ மேலத் தெரு பிள்ளையாலே மேனி குலைந்ததையா   வட்டார வழக்கு : பொரணி-வீண் பேச்சு,   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :சிவகிரி.   மலடி   மலடி தொட்ட காரியம் விளங்காது என்று சமூகத்தில் ஒரு நம்பிக்கை. மங்கள காரியங்களுக்கு அவளை அழைப்பதில்லை. தம் குழந்தைகளை அவள் காணக் கூடாது என்று தாய்மார்கள் தமது குழந்தைகளை மறைத்து வைப்பார்கள். பிள்ளை பெற்ற மகராசிகளுக்குத்தான் மங்கள காரியங்கள் செய்வதில் வரவேற்பு உண்டு. அவர்கள் துவங்கிய காரியம் இனிது முடியும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் மலடி, தன்னையே நொந்து கொள்ளுகிறாள். தான் தொட்டது விளங்காது என்று அவளே கூறுகிறாள்.   என் வீட்டுப் பக்கத்திலே அரகரா மகனே மார்க்கண்டா ஏனூடு தான் மரடு சிவனே மரடியோட பேரைச் சொல்லி அரகரா மகனே மார்க்கண்டா மாடு ரெண்டு ஓட்டி வந்தேன் சிவனே அரகரா பாலு குடிக்கலேண்ணு அரகரா மகனே மார்க்கண்டா பாலெருமை ஓட்டி வந்தேன் சிவனே மரடியோட பேரைச் சொல்ல அரகரா மகனே மார்க்கண்டா-அந்த மூணெருமை தான் மரடு சிவனே மாடு போகும் வழி தனிலே அரகரா மகனே மார்க்கண்டா-நான் தனிக் குளம் வெட்டி வச்சேன் சிவனே மரடியோட பேரைச் சொல்ல அரகரா மகனே மார்க்கண்டா-அங்க வந்த மாடு அருந்தலையே சிவனே ஆடு போகும் வழி தனிலே அரகரா மகனே மார்க்கண்டா-நான் ஆறு குளம் வெட்டி வச்சேன் சிவனே மரடி யோட பேரைச் சொல்ல அரகரா மகனே மார்க் கண்டா மந்தை ஆடு அருந்தலையே சிவனே அரகரா.   வட்டார வழக்கு : மரடு-மலடு.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   நடுச்சாவி ஆனதுவே! (மலடி)   முன்னரே மலடியின் புலம்பலைக் குறித்து குறிப்பு எழுதியுள்ளோம். இவள் தன்னைக் காய்க்காத தென்னைக்கு ஒப்பிடுகிறாள்.   நனஞ்ச புழுதியிலே நட்டுவச்ச தென்னம் பிள்ளே நல்லாப் பாடருமிண்ணு நாலு லச்சம் காய்க்குமிண்ணு நட்டினீங்க தென்னம் பிள்ளை நல்லாப் படராமே நாலு லச்சம் காய்க்காமே நடுச்சாவி ஆனதுவே ! உழுத புழுதியிலே ஊனி வச்ச தென்னம் பிள்ளை ஓடிப் படருமின்னீர் ஒரு லச்சம் காய்க்கு மின்னீர் ஓடிப் படராமே ஒரு லச்சம் காய்க்காமே சிந்திக் கவுந்ததுவே சொல்லு பிழை ஆனதுவே !   வட்டார வழக்கு : இன்னீர்-என்றீர்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   காய்க்காத தென்னை (மலடி)   வாசக் கருவேப்பிலே வாங்கி வச்ச தென்னம் பிள்ளே மட்டை புடிக்கு மின்னு மரநெருங்கக் காய்க்கு மின்னு நா மவுந்தேன் சில காலம் மட்டை புடிக்காமே மர நெருங்கக் காய்க்காமே நா மாபாவி ஆனேனப்பா ! கோயில் கருவேப்பிலே கொண்டு வந்த தென்னம் பிள்ளே கொன்னை புடிக்கு மின்னு கொலை நெருங்கக் காய்க்குமின்னு நா குளிந்தேன் சில காலம் கொன்னை புடிக்காமே கொலை நெறையக்காய்க்காமே நா கொடும்பாவி ஆனேனப்பா !   வட்டார வழக்கு : நா-நான் ; மவுந்தேன்-மகிழ்ந்தேன் ; குளிந்தேன்-குளிர்ந்தேன்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   இரவல் புருஷன்   “பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டறையில் ஏதில் பிணம்தழீ இயற்று”   என்று வேசியர் உறவைக் கண்டித்தார் வள்ளுவனார். அதைக் கடைபிடித்து ஒழுக எண்ணும் இளைஞன் ஒருவன், தன்னை மயக்க இனிய மொழி பேசும் வேசியிடம் தனக்காக மணத்துக்கு காத்திருக்கும் குப்பாயியைப் பற்றி கூறி இணங்க மறுக்கிறான். இதற்குள் குப்பாயியே நேரில் தோன்றி வேசிக்குப் புத்தி கூறுகிறாள்.   வேசி : சின்ன சின்ன ரோட்டிலே சீப்பு சீப்பா வாழைப்பழம் இன்பமாக ரோட்டிலே இருவருமாய்த் தின்னலாம்   அவன் : ஆத்தோரம் கொட்டாயாம் அத்தை மகள் குப்பாயி குப்பாயி பட்ட பாடு கொமரிப் பெண்ணெக் கேட்டுப்பாரு ஆத்தோரம் தோட்டக்காலாம் அணியணியா வெத்திலையாம் போட்டாலே செவக்கலையே பொண்ணாளே உன் மயக்கம் அஞ்சாறு வீட்டுக்காரி அதிலே ஒரு பாட்டுக்காரி பாட்டையும் பாடுவாளாம் பசங்களையும் தேடுவாளாம்   குப்பாயி : சுத்தி பகிளிக் காரி சுத்தாலை வீட்டுக்காரி எட்டி எட்டிப் பார்த்தாலும் இரவல் தாண்டி உம்புருஷன்   வட்டார வழக்கு : கொமரி-குமரி ; பகிளி-மினுக்கு ; சுத்தாலை-சுற்றுச் சுவர் ; கொட்டாய்-கொட்டகை.   சேகரித்தவர் :S. சடையப்பன் இடம் :சேலம் மாவட்டம்.   விவாகரத்து   கணவன் அவளை விவாகரத்து செய்ய முற்பட்டு விட்டான். ஆனால் அவள் கணவனைப் பிரிய உடன்படவில்லை. அவளுடைய குழந்தையையும் அவன் அவளிடமிருந்து பிரிக்கும் போது கணவனுடன் வாழாத தன்னைச் சவமாக எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் குழந்தையையாவது தன்னிடம் விட்டு விடும்படி பஞ்சாயத்தாரிடம் கெஞ்சிக் கேட்கிறாள்.   பட்டுத் தலையாணி பாட்ட முடு கச்சேரி பட்டு நெறங் கொலைஞ்சேன்-நான் பாட்ட முட்டு சீரௌந்தேன் புள்ளித் தலகாணி பொறந்த இடம் கச்சேரி புள்ளி நெறங் கொலைஞ்சேன்-நான் பொறந்த இடம் சீரழிஞ்சேன் சங்கு மணியடிக்கும் சர்க்காரு என் தொரையே சாந்திருக்கும் போலீசாரே சர்க்காரு வக்கீலே-நான் தந்ததை வாங்கிக்கிட்டு-என் சவத்தையும் விட்டுடுங்கோ குண்டு மணியடிக்கும் கோர்ட்டாரு என் தொரையே-நான் குடுத்ததை வாங்கிக்கிட்டு-என் கொளந்தையை விட்டிடுங்க   வட்டார வழக்கு : பாட்டம்-சீவனாம்சம்.   சேகரித்தவர் :சடையப்பன் இடம் :அரூர்.   சித்தியின் கொடுமை   அவளுடைய அம்மா தன் பெண்ணை அனாதைபோல் விட்டு விட்டு இறந்து விட்டாள். தந்தை இருக்கிறார். தந்தை தாய்க்கு ஈடாக முடியுமா? தாயில்லாப்பிள்ளை, பேச வாயில்லாப்பிள்ளை என்று சும்மாவா சொல்கிறார்கள். அநேகமாக சித்தி (அதாவது மாற்றாந்தாய்) கொடுமைக்காரியாக இருப்பதைப் போலவே அவளுக்கு வாய்த்த மாற்றாந்தாயும் அவளைக் கொடுமைப்படுத்துகிறாள். தானே வீட்டிற்கு அதிகாரியாக இருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணுகிறாள். உண்மையான அன்பு செலுத்தும் பெற்ற தாயாக இருந்தால் மகளை-மணம் செய்து கொடுக்கும் இடத்தைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டு மாப்பிள்ளையாகப் போகிறவனின் குண விசேஷங்களை அறிந்த பின்பே திருமணத்தை நடத்துவாள். ஆனால் அவளுடைய சித்தியோ நல்லெண்ணமில்லாதவளாதலால் அவளை ஒரு நற்குணமில்லாதவனும், நல்ல பழக்கங்கள் இல்லாதவனுமாகிய ஒருவனுக்கு மணம் செய்து வைத்து விடுகிறாள். மணமான பின்பு அவள் படும் துன்பங்களையும், இந்தத் திருமணத்திற்குக் காரணமாயிருந்த சித்தியின் கொடுமையையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.   வெங்காயம் வெங்காயம் வதக்கி வச்ச வெங்காயம் செங்கோட்டை அத்தான் மாரு பெண் கேட்டு வந்தாக எங்க ஐயா இளராசா இல்லைண்ணு சொன்னாக எங்கம்மா சண்டாளி இருக்குன்னுஞ் சொன்னாளே   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   வெளி வேஷம்   கிராமத்துப் பெரிய மனிதர்கள்தான் சாதிப் பிரிவினையின் பாதுகாவலர்கள். உழைப்பவர்களிடையே சாதிப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் நீடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது நிலச் சுரண்டல் நீடிக்க அந்நிலைமைகள் அவசியம். கீழ்சாதிக்குள் கலப்புமணம் என்றால் சீறுவார்கள். சாதி பிரிவுகளுக்குள் காதல் என்றால் குமுறுவார்கள். மேல் சாதிப் பெண்ணோடு காதல் கொண்டு, மணந்து கொள்ள முயன்றவர்களைக் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். செவந்தி பெருமாள், தடிவீரன் போன்ற கீழ்சாதி ஆடவர்கள் வன்னியர், மறவர் போன்ற உயர்சாதிப் பெண்களோடு காதலுறவு கொண்ட காரணத்தால், நாயக்க மன்னரது மண்டலாதிபனான வடமலையப்ப பிள்ளையன் என்பவரால் கொல்லப்பட்டனர்.மதுரைவீரன், நாட்டுக்கு நற்பணி செய்திருப்பினும், அரசனது ஆசை நாயகி வெள்ளையம்மாளிடம் காதல் கொண்ட குற்றத்தால் கைகால்கள் துண்டிக்கப் பட்டு உயிரிழந்தான். இவ்வளவு கண்டிப்பாக கீழ்ச்சாதியினரின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பெரிய மனிதர்களின் ஒழுக்கமோ என்றால் !..... வேஷம். வெளி வேஷம்தான்.   சம்பிரதி என்பது நாயக்கர் காலத்தில் பெரிய பதவி, அப்பதவி வகித்தவர் மகன் காட்டுச் சாதிப் பெண்ணை வைப்பாட்டியாகக் கொண்டுவந்து விட்டானாம் ! அதை எள்ளி நகையாடுகிறார்கள் கிராம மக்கள்.   சைவன் சைவந்தான் சம்பிரிதி பிள்ளை மகன் கோம்ப மலை உத்திரத்தி கொண்டு வந்து சேத்தாரே.   வட்டார வழக்கு : உத்திரத்தி-வட திசையில் பிறந்தவள்.   குறிப்பு : கோம்பை, சிவகிரிக்கு வடக்கே உள்ளது.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   கூனல் முதுகழகன்   சொந்த நிலம் கொஞ்சம் உண்டு. அதனால் தன்னைக் குபேரன் என்று எண்ணிக் கொள்ளுவான். தோற்றத்தில் குரூபி. பாட்டு அவனை எப்படி வருணிக்கிறது என்று பாருங்கள்.   சிவப்பிக்குக் காதலன் சிவத்தையாவென்று கூனனுக்குத் தெரியும். அவள் அவனையேதான் மணம் கொள்ள உறுதியோடிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அவளுடைய பெற்றோர்களைத் தன் பக்கம் இழுக்கச் சொந்த நிலம் என்ற தூண்டில் இருக்கிறதல்லவா? சிவத்தையாவுக்குச் சொந்தம் என்று சொல்ல கையும் காலும்தானே உண்டு. எனவே துணிந்து அவளிடமே தன்னை மணந்து கொள்ளச் சம்மதம் கேட்கிறான். அவளோ தமிழில் புதிய புதிய வசவுச் சொற்களைப் படைத்து, அரம்பாடும் கவிகளையும் தோற்கடிக்கும் வகையில் அர்ச்சனை செய்கிறாள்.   மாமன் மகனிருக்க மாலையிடும் சாமிருக்க ஒத்தக் கண்ணுப் பயலும் தான் உறுதி யாண்ணும் கேட்டானே பாதை பெரும் பாதை பய வயிறு குழி தாழி குழி தாழி வயிற்றுப் பய கூத்தியாளும் கேக்கானே உறக்கம் பிடிச்ச பய ஒட்டுத்திண்ணை காத்த பய கண்ணுப் பட்டை செத்த பய காட்டமென்ன என் மேலே? கூன முதுகழகா குழி விழுந்த நெஞ்சுக்காரா ஓலைப் பெட்டி வாயோட உனக்கெதுக்கு இந்த ஆசை அஞ்சரிசி பொறுக்கிப் பய ஆளைக்கண்டா மினுக்கிப் பய தேகம் குளிராட்டிப் பய தேத்துராண்டி எம்மனசை பரட்டைத் தலை முடியாம் பரிசை கெட்ட திருநீரும் வயக்காட்டு கூவை கூட வன்மங் கூறி என்ன செய்ய? முன்னத்தி ஒருக்காரா மிளகுபொடி லேஞ்சிக்காரா கழுதை உதட்டுக்காரா காரமென்ன என் மேலே சாணைக் கிழங்கெடுத்து சள்ளைப் பட்டு நான் வாரேன் எண்ணங் கெட்ட சின்னப்பய எட்டி எட்டிப் பாக்கானே எருமை உதட்டுக்காரா ஏழெருமைத் தண்டிக்காரா கழுதை உதட்டுக்காரா காட்டமென்ன என் மேலே மச்சு வீட்டுத் திண்ணையிலே மத்தியான வேளையிலே கேப்பை திரிக்கையிலே கேட்டானே வாப்பெறப்பு கட்டக் கட்ட உச்சி நேரம் கரடி புலி வார நேரம் சுடுகாட்டுப் பேய் போல சுத்துரானே மத்தியானம்   வட்டார வழக்கு : கூத்தியாள்-வைப்பாட்டி ; வாப்பெறப்பு-வாய்ப்பிறப்பு (சம்மதம்) ; சாணைக்கிழங்கு-கரிசல் நிலத்தில் வளரும் கிழங்கு. கூழாக்கிக் குடிக்கலாம். கூனனை, அவள் திட்டுவதற்குப் பயன்படுத்தும் வகைச் சொற்களை கவனியுங்கள்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   சட்டம் பொருந்தாது   முறை மாப்பிள்ளைமார் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களிடம் நெருங்கி விளையாடும் உரிமை முறைப் பெண்களுக்கு உண்டு. அவர்களுடைய பேச்சில் கணவன்-மனைவி உறவுக்குரிய காதல் பேச்சுகள் காணப்படும். மணமான காதலர்களிடையே இப்பேச்சு தாராளமாக இருக்கும். மணமாகிவிட்டால் சிறிதளவு கட்டுப்பாட்டோடு, கேலியும் கிண்டலும் ஊடாடும். இவ்வழக்கம் பண்டையக் குழுமண முறையின் எச்சம் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். முறை மாப்பிள்ளைகள் முறைப் பெண்களை, கொழுந்தி, மதினி, மாமன்கள், அத்தை மகள் என்று குறிப்பிடுவர். முறைப்பெண்கள், மாப்பிள்ளைகளை கொழுந்தன், மச்சான், கொழுந்தப் பிள்ளை என்று அழைப்பார்கள். முறைப் பெண்களும், முறை மாப்பிள்ளைமாரும் கேலியாகப் பேசிக் கொள்ளும் உரையாடல் ஒன்று இப்பாடலில் காணப்படுகிறது.   கொழுந்தி : ஏறாத மலைதனிலே இலந்தை பழுத்திருக்கு ஏறி உலுப்புங்களேன் இளைய கொழுந்தன் மாரே   கொழுந்தன் : ஏறி உலுப்பிடுவேன் இங்கும் மங்கும் சிதறிடுவேன் பார்த்துப் பிறக்குங்க பாசமுள்ள மதினிமாரே   கொழுந்தி : இலந்தைப் பழம் போல இருபேரும் ஒரு வயது கொழுத்த புள்ள நான் வாரேன் கொண்டணைச்சிப் போயிருங்க   கொழுந்தன் : கொண்டும் அணைச்சிருவேன் கொடுங்கையிலே ஏந்திருவேன் சரியான கொங்கைக்குச் சட்டம் பொருந்தாதே சித்தருவா கொய்யாதோ சிறு மிளகு உறையாதோ சிறுவன் கொடுத்த காசு செல்லாதோ உந்தனுக்கு   கொழுந்தி : செம்மறி வீசக்காரா செவத்த மச்சான் ஏ கொழுந்தா செத்த வளர்ந்தி யிண்ணாச் சேந்திருவேன் உன் மேலே புதுப்பானை கருப்பழகா போர்மன்னா தன்னழகா சிரிப்பாணி ஏ கொழுந்தா தினம் வருவாய் இந்த வழி செந்தட்டிக் கொழுந்து போல சிரிப்பாணி ஏ கொழுந்தா இன்னும் கொஞ்சம் வளர்ந்தியானா இறந்தாலும் மறப்பதில்லை   வட்டார வழக்கு : பிறக்குங்க-பொறுக்குங்கள் ; போயிருங்க-போய் விடுங்கள் ; சட்டம்-உடல் ; சித்தறுவா-சிறிய அறிவாள் வளர்ந்தியானா-வளர்ந்தாயானால் (வளர்ந்தாக்கி) என்றும் பேச்சு வழக்கு ; செந்தட்டி-மேலே தேய்த்தால் அரிச்சலை உண்டாக்கும் இலை.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம் :அரூர்.   நல்லவனும் கெட்டவனும்   ஊரில் நல்லவர்கள் இருப்பார்கள். பிறர் துன்பம் கண்டு பொறுக்காமல் விரைந்து வந்து உதவி செய்பவர்கள் சிலர். ஊரில் உள்ளவர்களது கஷ்டங்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்களும் ஊரிலிருப்பார்கள். முதலில் கூறப்பட்டவர்களைப் புகழ்ந்தும், இரண்டாவது கூறப்பட்டவர்களை இகழ்ந்தும், பாடல்கள் தோன்றும். ஊருக்கு உழைத்தவர்களைப் போற்றும் பண்பு தமிழ்நாட்டுப் பாமர மக்களிடையே சிறப்பாகக் காணப்படுகிறது. பிறரை ஏசுவதைத் தமிழ் பாமர மக்கள் விரும்புவதில்லை. ஆகவே கண்டனம் தெரிவிக்கும் பாடல்கள் ஒன்றிரண்டே காணப்படும். சிவகிரியில் வேலுச்சாமி என்றொருவர் இருந்தார். அவர் நற்பண்புகள் உடையவர். ஊரில் யாருக்கு என்ன ஆபத்து வந்தாலும் அவர் ஓடிவந்து உதவி செய்வார். அவர் இறந்து போய் விட்டார். ஊரில் எல்லோரோடும் வம்பு செய்து கொண்டு பிறர் துன்பத்தில் லாபம் கண்டு வாழ்ந்த ஆதினமிளகி, என்றொருவன் சிவகிரியில் வாழ்ந்து வந்தான். நல்லவர் இறந்து விட, ஊருக்கும் நாட்டுக்கும் பொருந்தாத கெட்டவன் வாழ்வதை எண்ணி ஊரார் வருந்துகிறார்கள்.   ஏறுறது வில்லு வண்டி இறங்குறது காப்பரவு பாக்கிறது வன்னிய மடம் பாம்புக் கண்ணு சையலில, கையில துறவு கோலாம் காலில் மிதியடியாம் டானாக் கம்பு புடிச்சுவரும் தங்கமுடி வேலுச்சாமி ஈரத்தலை உணத்தி கிண்ணரி போல் கொண்டை போட்டு வாரானாம் வேலுச்சாமி வாச லெல்லாம் பூ மணக்க நடுவீட்டு வாசலில லட்ச சனம் கூடி ருக்கும் வேலுச்சாமி இல்லாம விரிசீணு இருக்குதய்யா வாச நிறைஞ் சிருக்கும் வந்த ஜனம் சூழ்ந்திருக்கும் நடு வீட்டு வேலில்லாம நல்லாவும் இல்லையப்பா கடுமையா உறக்கத்தில கணக்கான தூக்கத்தில கூப்பிட்ட சத்தத்தில வேலுச்சாமி குயிலுப் போல வந்திருவார் சாஞ்சு நடநடந்து சைசான கொண்ட போட்டு போறாராம் வேலுச்சாமி பொன்னு முடி களஞ்சியமே ஊருக்கும் பொருந்திருக்கும் உலகத்துக்கும் ஒத்திருக்கும் நாட்டுக்கும் பொருந்திருக்கும் நடுவீட்டு வேலுச்சாமி ஊருக்கும் பொருந்தாத ஒட்டச் சளவட்ட நாட்டுக்கும் பொருந்தாத நடு வீட்டு ஆதின முளகி   வட்டார வழக்கு: காப்புரவு-தோட்டவெளி; துறவுகோல்-திறவு கோல்; டானாக் கம்பு-வளைந்த கம்பு; கிண்ணரி-ஒரு வகை மேளம்; சைசான-அழகான; சளவட்ட-வீண் பேச்சு பேசுபவன்; ஆதின முளகி-ஒருவரின் பெயர்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி.   வெற்றிலைப் பாக்கு   ஊரில் திருவிழா. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் தன் கடை வெற்றிலை, பாக்கு, புகையிலையின் சிறப்பைப் பாடுகிறான்.   தமிழ் நாட்டில் வெற்றிலை ஒரு மங்கலப் பொருள். ‘சிவந்தவாயும் வெற்றிலையுமாக’ என்று மகிழ்ச்சியோடிருப்பவனை வருணிப்பார்கள். விதவைகள் வெற்றிலைப் போடக்கூடாது. மண விழாவின்போது வெற்றிலை வழங்கப்படும். தெய்வங்களுக்கு வெற்றிலை நிவேதனமாக வைக்கப்படும். மணநாள் நிச்சயிக்கும் பொழுது மணமகனின் பெற்றோர்களும், மணமகளின் பெற்றோர்களும் வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொள்வார்கள்.   தமிழரின் மங்கலச் சின்னம் வெற்றிலை. மணமாகாத இளம் பெண் வெற்றிலைப் போட்டுக் கொண்டு அவள் வாய் சிவந்தால், அன்பு மிக்க கணவன் அவளுக்கு வாய்ப்பான் என்று ஜோசியம் கூறுவார்வார்கள். மணமானவள், வெற்றிலை போட்டு வாய் சிவந்தால் கணவன் அவள்மீது, பிரியமாக இருக்கிறானென்று தோழியர் அவளை கேலி செய்வர். விழா நாளில் குத்து விளக்கு வைத்து வட்டமாகச் சுற்றி வந்து கும்மியடிக்கும் பெண்கள் வெற்றிலையைப் பற்றி பாடுகிறார்கள்.   வெத்தலைக் கடையைப் பாருங்கோ-ஏ அஞ்சுகமே கொஞ்சுதமே வெத்தலையை வாங்கிப் பாருங்கோ பாக்குக் கடயப் பாருங்கோ-ஏ அஞ்சுகமே கொஞ்சுதமே பொவிலை வாங்கிப் பாருங்கோ சுண்ணாம்பு கடையைப் பாருங்கோ-ஏ அஞ்சுகமே கொஞ்சுதமே சுண்ணாம்புக் வாங்கிப் பாருங்கோ வாய்லே போட்டுப் பாருங்கோ-ஏ அஞ்சுகமே கொஞ்சுதமே வாய்சிவக்கும் அழகப் பாருங்கோ   உதவியவர்: செல்வராஜு   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   கொழுந்தியாள் குறும்பு   புது மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனுடைய கொழுந்தியாள் சுட்டிப்பெண். கொழுந்தியாளுக்கு அத்தானைக் கேலி செய்யும் உரிமை உண்டு. அவன் மேல் சந்தனத்தைக் கொட்டி, இரண்டு குங்குமக் கிண்ணங்களையும் கவிழ்க்கிறாள். அவள் தோழியரிடம் கூறுகிறாள்.   ஒரு கிண்ணிச் சந்தனம் ஒரு கிண்ணிக் குங்குமம் அள்ளி அள்ளிப் பூசுங்கோ அருணப் பந்தல் ஏறுங்க ராசாக் கணக்கிலே ராசமக்க தோளிலே பொறிச்ச பூவும் பொட்டியிலே தொடுத்த பூவும் தோளிலே ரெண்டு கிண்ணி சந்தனம் ரெண்டு கிண்ணி குங்குமம் அள்ளி அள்ளிப் பூசுங்க அருணப்பந்தல் ஏறுங்க பொறிச்ச பூவும் பொட்டியிலே தொடுத்த மாலை தோளிலே   சேகரித்தவர் :கு.சின்னப்ப பாரதி இடம் :பரமத்தி,சேலம் மாவட்டம்.   புலி குத்தி வீரன்   சில பெண்கள் பொய்மைப் புலி உருவம் செய்து சோளக் கொல்லையில் வைத்திருக்கிறார்கள். அப்பெண்கள், அங்கு வரும் ஆண்களிடம் அதைக்காட்டி பயமுறுத்துகிறார்கள். தங்களை பயமுறுத்தும் பெண்களின், போக்கில் சந்தேகம் கொண்டு, ஒருவன் போலிப் புலியை நெருங்குகிறான். உடனே அப்பெண்கள் அவனைக் கேலி செய்து பாடுகிறார்கள்.   காடுசுத்தி வேலியாக்கி கள்ளரைக் குத்தி பயங்காட்டி கோடும் புலி குத்தி சோடித்து வருவதைப் பாருங்கடி பக்கத்து மரத்திலே புலி கிடக்குது நித்திரை போவதைப் பார்த்துச் சுடு மதுரைக்குப் போற அண்ணங்களே என்னென்ன அடையாளம் கண்டு வந்தே? கல்லால மண்டபம் காணிக்கை சப்பரம் வில்வ மரந்தாண்டிக் கொண்டாந்தே?   சேகரித்தவர் :கு.சின்னப்ப பாரதி இடம் :பரமத்தி,சேலம் மாவட்டம்.   முறை மாப்பிள்ளே   தமிழ் நாட்டில் திருமண முறைகளின் வளர்ச்சி சமூக மாறுதல்களை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது என்பதை நமது இலக்கியங்களும், புராதனக் கதைகளும் மறைந்து போன சமுதாயங்களின் எச்சமாக நிலைத்து நிலவும் சடங்குகளும் பழக்கவழக்கங்களும் காட்டுகின்றன.   வரன்முறையற்ற குழு-மணமுறை தமிழ் நாட்டில் இருந்தது என்று காட்ட ஆதாரங்கள் இல்லை. ஆனால் உறவுப் பெயர்களில் சில அப்பா, சிற்றப்பா, பெரியப்பா, அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியனவும், கணவனது சகோதரர்களை மைத்துனன், கொழுந்தன் என்று அழைப்பதுவும் இம் மணமுறையின் எச்சங்களாக தோன்றுகின்றன, இது சொத்துரிமை தோன்றுமுன் கூட்டங்களாக வாழ்ந்து வேட்டையாடி வந்த மக்களது மணமுறையாகும். வேட்டையாடியும், புன்செய்ப் பயிர் செய்தும் வாழ்ந்த சிறு குடியினர் களவும், கற்புமாகிய ஒருதார மணத்தைக் கொண்டிருந்தனர். வேட்டையை ஆண் மக்களும், பயிர்த் தொழிலைப் பெண் மக்களும் நடத்தினர். இருவரும் சமூக உற்பத்தியில் பங்கு கொண்டனர். இருவருக்கும் ஏறக்குறைய சமமான உரிமைகள் இருந்தன.   விலங்குகளைப் பழக்கி உழவுக்கும், பால் முதலிய உணவுப் பொருள்கள் பெறவும் பயன்படுத்த மனிதன் கற்றுக் கொண்டான். மாடுகளைப் பழக்கத் தெரிந்த வலிமை மிக்கவன் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவன். எனவே பெண்கள் மாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளுபவனையே மணந்து கொள்ள விரும்புவார்கள். ஒருவனே பலரை மணந்து கொள்வும் கூடும். கிருஷ்ணன், கோபியர் கதை இவ்வளர்ச்சிக் கட்டத்திலிருந்த சிறு குடியினரிடையே தோன்றியதே. இம்முறைகளில் ஒரே தொழில் செய்பவரிடையே மணம் நடைபெறுவதில்தடை அதிகமில்லை. நிரை காப்பவனாதலால் நாலைந்து பெண்களை மணம் செய்து கொண்டு அவர்கள் கொண்டு வரும் பசு நிரைகளைக் காத்து பெருக வைத்துப் பெருமையடைவான்.   நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து, சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மணம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு.   தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள்.   இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே.   அண்ணனும் தங்கையும்   பெண்: அண்ணாவே அண்ணாடத்தான் பெருமாளே படியளக்கும் அண்ணாடா நாயகனே அரிசி நல்லா அண்டைத்தான் அஞ்சி பொதி அர்த்த முடன் அண்டைத்தான் கொண்டு வந்தேன்   நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து, சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மணம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு.   தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள்.   இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே.   அண்ணனும் தங்கையும் பெண்: அண்ணாவே அண்ணாடத்தான் பெருமாளே படியளக்கும் அண்ணாடா நாயகனே அரிசி நல்லா அண்டைத்தான் அஞ்சி பொதி அர்த்த முடன் அண்டைத்தான் கொண்டு வந்தேன்   நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து, சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மணம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு. தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள். இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே.   அண்ணனும் தங்கையும்   பெண்: அண்ணாவே அண்ணாடத்தான் பெருமாளே படியளக்கும் அண்ணாடா நாயகனே அரிசி நல்லா அண்டைத்தான் அஞ்சி பொதி அர்த்த முடன் அண்டைத்தான் கொண்டு வந்தேன்   ஆண் : இத்தனையும் தங்கையரே கொண்டு வந்தா என்ன பலன் தங்கையரே காணப் போர   பெண் : பருப்பு நல்லா அண்ணாடத்தான் பத்துப் பொதி பாங்குடனே அண்ணாடா நான் கொண்டு வந்தேன்   ஆண் : இத்தனையும் தங்கையரே கொண்டு வந்தா என்ன பலன் தங்கையரே காணப் போர   பெண் : கத்திரிக்கா அண்ணாடா கால்தூக்கு கணக்குடனே அண்ணாடா கொண்டு வந்தேன் உப்பு நல்லா அண்ணாடா ஒரு பொதி உணவுடனே அண்ணாடா கொண்டு வந்தேன் பட்டுப் பாயி அண்ணாடா எடுத்துக்கிட்டு பரியங்களும் அண்ணாடா கட்ட வந்தேன் முத்துப் பாயி அண்ணாடா தூக்கிக்கிட்டு முகூர்த்தங்களும் அண்ணாடா பார்க்க வந்தேன்.   ஆண் : இத்தனையும் தங்கையரே கொண்டு வந்தா என்ன பலன் தங்கையே நீ காணப் போர   பெண் : ஆலமரம் அண்ணாடா நான் சாட்சி வச்சி அளுது கொண்டு அண்ணாடா போரேனடா புளியா மரம் அண்ணாடா நான் சாட்சி வச்சி பொங்கிக் கொண்டு அண்ணா போரேனடா ஆத்துலே தான் அண்ணாடா தலை முழுகி அள்ளி நல்லா அண்ணாடா சொருகி கிட்டு குளத்துலே தான் அண்ணாடா தலை முழுகி கூட்டி நல்லா அண்ணாடா எறிஞ்சேனடா கூடுவாளா அண்ணாடா உன் மகளும் கொண்டு செல்ல அண்ணாடா ஆகுமோடா சித்தெறும்பா என் மகன் வேசம் மாறி சிறை எடுக்க அண்ணாடா வருவானடா ஆட்டையும் அண்ணாடா உன் பட்டியுமே நாச மத்து அண்ணாடா போகாதா பாம்பாக அண்ணாடா என்மகனும்-உன் மகள் பஞ்சணைக்கு அண்ணாடா வருவானடா   வட்டார வழக்கு: நாசமத்து-நாசமாய்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம் :சேலம் மாவட்டம்   புளியா மரம் அண்ணாடா நான் சாட்சி வச்சி பொங்கிக் கொண்டு அண்ணா போரேனடா ஆத்துலே தான் அண்ணாடா தலை முழுகி அள்ளி நல்லா அண்ணாடா சொருகி கிட்டு குளத்துலே தான் அண்ணாடா தலை முழுகி கூட்டி நல்லா அண்ணாடா எறிஞ்சேனடா கூடுவாளா அண்ணாடா உன் மகளும் கொண்டு செல்ல அண்ணாடா ஆகுமோடா சித்தெறும்பா என் மகன் வேசம் மாறி சிறை எடுக்க அண்ணாடா வருவானடா ஆட்டையும் அண்ணாடா உன் பட்டியுமே நாச மத்து அண்ணாடா போகாதா பாம்பாக அண்ணாடா என்மகனும்-உன் மகள் பஞ்சணைக்கு அண்ணாடா வருவானடா   வட்டார வழக்கு: நாசமத்து-நாசமாய்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம் :சேலம் மாவட்டம்   கோடி நாட்கள் செல்லும் !   தாய் வீட்டிற்கு அவள் வந்திருந்தாள். ஒரு நாள் சென்றது. இரண்டு நாட்கள் சென்றன ; வாரம் சென்றதும் மாதமும் வந்தது. மாகளோ புகுந்த வீட்டிற்கு (புருஷன் வீட்டுக்கு) போவதாகக்காணோம். விருப்பமில்லாமல் மகள் வீட்டில் இருந்தாலும் பெற்றவர்களுக்கு மகளைப் போவென்று சொல்ல மனம் வருமா? பொறுத்துப் பார்த்தார்கள். எத்தனை நாள்தான் பொறுப்பார்கள்?   அவளுக்குப் பண்ணை, பாய்ச்சல் உண்டல்லவா? குடும்பம் உண்டல்லவா? இதையெல்லாம் கவனிப்பது யார்? புருஷனுக்குச் சமைத்துப் போடுவது யார்? இதையெல்லாம் அவர்கள் யோசிக்கிறார்கள். ‘அறியாப்பிள்ளை தெரியா விட்டாலும் நாம் சொல்லித்தானே திருத்த வேண்டும்’ என்று மகளை அணுகினார். தந்தை “அம்மா நீயும் வந்து மாதத்திற்கு மேல் ஆகிறதே, பொழைப்பு என்ன ஆவது? மாப்பிள்ளைக்கு ஒத்தாசைக்குத்தான் யாராவது இருக்கிறார்களா? நம்மைப் போல்தானே அவரும் ; ஒண்டி மனுசன், ” என்று ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார். மகளிடத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. மேலும் வற்புறுத்துகிறார். மகள் இப்பொழுது வெடுக்கென்று சொல்லிவிடுகிறாள். என்னவென்று? “அப்பா ! அவன் ஒரு குடிகாரன் கூத்திக்கள்ளன் ; அதோடு சூதாடியும் கூட. இப்படிப்பட்டவனை நீங்கள் முன்பு தெரிந்திருந்தும் கூட பணத்திற்கு ஆசைப்பட்டு யோசியாமல் திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். அந்தச் சிக்கலை ஒரு நாளில் அவிழ்த்துவிட முடியுமா?” என்று கேட்கிறாள். இப்படி நேரடியாகவா சொல்லுகிறாள்? இல்லை இப்படிச் சொன்னால் அதில் நயமேது? பண்பேது? பின் எப்படிச் சொல்கிறாள்? கேளுங்கள் அவள் வாயாலேயே ! (குறிப்பு: கு. சின்னப்ப பாரதி)   பருத்தி இளம் பூவு பட்டணத்து தாழம்பூவு பாத்து முடியாமே படி முடிச்சு போட்டீங்க படிமுடிச்சு சிக்கெடுக்க பாதி நாள் செல்லுமையா கொழுஞ்சி இளம் பூவு கொடு முடி தாழம் பூவு கோதி முடியாமே கொடி முடிச்சுப் போட்டீங்க கொடி முடிச்சு சிக்கெடுக்க கோடி நாள் செல்லுமையா   உதவியவர் : C.செல்லம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம் தூரத்து மாப்பிள்ளை   வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கும் ஒருவனுக்குத் தங்கள் பெண்ணைக் கட்டி வைத்தார்கள். அவன் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். மணம் முடிந்து போனவன் சில வருஷங்கள் ஊருக்கு வரவேயில்லை. பெரிய நகரங்களில் வேலைப் பார்ப்பவர்கள் குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்காததாலும், மனைவியை அழைத்துச் செல்ல வசதியில்லாததாலும், அழைத்துச் செல்லவில்லை. அவனடைய மனைவி பெற்றோர்களிடம் தன்னுடைய கவலையைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது இப்பாடல்.   மனைவி : காலடியில் பொன் பொதைச்சா கவலையத்து இருப்பான்னு காசுக்கே மைவாங்கி காதத்துக்கே பொன் பொதச்சு கவலையேத் தேடி வச்சீர் கவலையே நீஞ்சுவனா நீங்கிருக்கும் கழனி வந்து சேருவனா? தோளடியா பொன் பொதச்சு துக்க மில்லா திருப்பான்னு துட்டுக்கே மைவாங்கி தூரத்துக்கே பொன் பொதச்சு துயரத்தே நீஞ்சுவனா நீங்கிருக்கும் சீமை வந்து சேருவானா?   வட்டார வழக்கு: கவலையத்து-கவலையற்று ; பொன் பொதைச்சு-பொன் பூட்டி.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம் தவிடு விற்க நேர்ந்ததுவே   ஒரு பெரிய வியாபாரியின் குடும்பத்தில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டாள். வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் குடும்பத்தில்தான் அவள் மருமகளானாள். ஆனால் வியாபாரம் நொடித்துப் போய்விட்டது. விறகு விற்றும், தவிடு விற்றும் பிழைக்க நேர்ந்தது. இந்த மாறுதலை அவள் வருத்தத்தோடு சொல்லிப் பாடுகிறாள்.   வெள்ளி ஒரு நிறதான் வெங்கலமும் கால் நிறதான் நான் புகுந்த காசியிலே வெள்ளி வித்த கையாலே வெறவு விக்க நேர்ந்ததுவே தங்கம் ஒரு நிறதான் தாமரமும் கால் நிறதான் நான் புகுந்த காசியிலே தங்கம் வித்த கையாலே தவிடு விக்க நேர்ந்ததுவே   வட்டார வழக்கு: நிற-நிறை ; வெறவு-விறகு : வித்த-விற்ற ; விக்க-விற்க. குறிப்பு :தனது பொருளாதார நிலைக்குலைவை “தங்கம் வித்த கையாலே தவிடு விற்க நேர்ந்ததுவே” என்று குறிப்பிடுகிறாள்.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்   சின்னப்பட முடியலையே மருமகள் பருத்தி ஆட்டி கொட்டையைப் பிரிக்க மணையிலுட்காருகிறாள். இந்த வேலை செய்தால், அவள் கையில் கொஞ்சம் காசு சேரும். இதைக் கண்ட மாமியாருக்குப் பொறுக்கவில்லை. “வீட்டு வேலை செய்யாமல் வீண் வேலை செய்கிறாயே ” என்று திட்டுகிறாள், மருமகள் தன்னுடைய வருத்தத்தை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுகிறாள்.   நாடன் பருத்திக் கொட்டை நானாட்ட முடியலியே நாதேரி முண்டகிட்ட சின்னப்பட முடியலியே உக்கம் பருத்திக் கொட்ட நானாட்ட முடியலியே ஊதேரி முண்டகிட்ட சின்னப்பட முடியலியே   உதவியவர் : பெருமாயி   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்   மலைக் குரங்கு   இந்துக் குடும்பத்தில் மாமியார் மருமகள் சன்டை இல்லாத குடும்பமே அபூர்வம். கணவன் ஆதரவாக இருந்தால் கூட மகனிடத்தில் தன்னுடைய செல்வாக்குக் குறைந்து விடுமென்று மாமியார் மருமகளோடு சண்டை போடுகிறாள். இப்பாடலில் வரும் மருமகளுக்குச் செல்வத்துக்குக் குறைவில்லை. அவளுடைய கணவனுக்கு நல்ல செழிப்பான பூமி இருக்கிறது. அவளுடைய கணவனும் நல்ல புத்திசாலி. ஆனால் மாமியார் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. மாமியார் மீது அவளுடைய கோபம் வெளியாகிறது.   பூமியுந்தான் நல்ல பூமி எனக்கு வாய்த்த புண்ணியரும் புத்திசாலி புண்ணியரைப் பெத்தெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு மண்ணுந்தான் நல்ல மண்ணு எனக்கு வந்த மன்னவரும் புத்திசாலி மன்னவரைப் பெத்தெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு   வட்டார வழக்கு: பெருங்குரங்கு-மலைக்குரங்கு ; புண்ணியரும்-கணவரும்.   உதவியவர் : தங்கம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்   கொடுமை எப்பொழுது ஆறும்?   இளம் விதவை, துணையின்றி, துயரில் ஆழ்ந்திருக்கிறாள். சொத்துக்கு வாரிசாக மகன் பிறக்குமுன் அவள் கணவன் இறந்து போனான். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவள் அமங்கலி. பருவ இன்பம் அவளுக்கு நேர்வழியில் கிடைக்காது ; குறுக்கு வழிகளில் செல்ல விடாமல் அவளது நேர்மை தடை போடுகிறது. இந்நிலையில் “ மரமாகவாவது, பூவாகவது பிறந்திருந்தால் மனிதர்கள் போற்றுவார்களே “ என்று ஏங்குகிறாள் அவள். அவளுடைய கொடுமை எப்பொழுது ஆறும். விதவை மணத்தை பாரதியும் மற்ற சீ்ர்திருத்தம் விரும்பிய தலைவர்களும் ஆதரித்திருந்த போதிலும் சமூக பழக்கவழக்கங்களும் பழமைப்பித்தும் அதனை இன்னும் மறுத்தே வருகின்றன.   மாளிகையில் பூத்தது மரத்திலே பூத்திருந்தா மானுடர் அத்தனைபேர் மரமின்னு வெட்டுவாங்க மடமும் கட்டுவாங்க-இப்போ மானுடர் யாரும் மரமின்னு வெட்டவில்லை மடமும் கட்டவில்லை கும்பியிலே பூத்த நானு கொம்பிலே பூத்திருந்தா கூட்டத்தார் எல்லோரும் கொம்புன்னு வெட்டுவாங்க கோயிலும் கட்டுவாங்க-இப்போ கூட்டத்தார் எல்லோரும் கொம்புன்னு வெட்டல்லை கோயிலும் கட்டல்லை என்னுடைய வெங்கொடுமை எப்பத்தான் ஆறப்போகும்.   வட்டார வழக்கு : கும்பி-வயிறு.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் :பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்   இரு தாரங்கள்   முன்னமே‘சக்களத்தி‘ என்னும் தலைப்பில் வரும் பாடல்களுக்கு எழுதிய முன்னுரையில் இருதார மணத்தால் முதல் மனைவி, தன்னை கணவன் மறந்ததற்கு இளையாள் இட்ட மருந்தே காரணம் என்கிறாள். பின்னால் அந்த நம்பிக்கையை விடுத்து அவனையே பொறுப்பாக்கித் திட்டுகிறாள். இவள் கருவுற்றிருக்கும் பொழுதே கணவன் இளையதாரத்தை மணந்தான். குழந்தை இல்லையென்பது காரணமல்ல. வேறுகாரணம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆயினும் தனக்கு ஏற்பட்ட பாதகத்தை நினைத்து அவள் அவனைச் சபிக்கிறாள்.   வருவாரு போவாரு வாசலிலே நிற்பாரு சிரிச்சாலும் பேசுவாரு சிறுக்கி வச்ச கைமருந்து ஊருக்கில்ல போறாரு இருக்கவில்லை போறாரு மறுமுகம் கண்டவுடன் மறக்க வில்லை போறாரு மறந்தா மறப்பதில்லை மருந்து தின்னால் ஆறுவதில்லை செத்தால் மறப்பதில்லை செவலோகம் சேருமட்டும். பாவநாசம் பார்க்கவென்று பாவனையா அழைச்சுப் போயி பத்துமாசம் சுமசுமக்க பரிசு தந்த நேசமைய்யா என்னை விட்டுட்டு இளைய தாரம் கட்டினயே போறவழியிலே-உன்னப் பூ நாகம் தீண்டாதோ?   ஏன் பஞ்சம் வந்தது?   கணவன் திருச்செந்தூர் போய்த் திரும்புகிறான்.அவனைக் கேலி செய்வதற்காக மனைவி ‘ திருச்செந்தூரில் வேசியர் பலர் இருப்பதாகவும், இளைஞர் பலர் சுவாமி கும்மிடப் போகிற சாக்கில் அவர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும்‘ சொல்லுகிறாள். “இப்படி இல்லறம் பேண வேண்டியவர்கள் அறம் தவறுவதால்தான் மழை பெய்யாமல் பஞ்சம் வருகிறது என்று உலகம் சொல்லுகிறது“ என்றும் சொல்லுகிறாள். கணவன் கேப்பைத்தாள் அறுத்துக் கொண்டிருக்கிறான். இச் சொல் காதில் விழுந்ததும் அவன் மனைவியைப் பார்க்கிறான். அரிவாள் கையை அறுத்து விட்டது. தன் மனைவி கற்புடையவள் அல்லவா? “நீ இப்படிச் சொன்னால் மழை போய் விடப்போகிறது. நீயும் நானும் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பத்திரகாளிதான் பஞ்சம் வராமல் காப்பாற்ற வேண்டும்,“ என்கிறான் கணவன்.   மனைவி: திருச்செந்தூர் ஊரிலே தேர் நல்ல அலங்காரம் தேவடியாள் கொண்டையிலே பூவு நல்ல அலங்காரம் காலையிலே கம்பி வேட்டி மத்தியானம் மல்லு வேட்டி சாயந்திரம் சரிகை வேட்டி சந்தியெல்லாம் வைப்பாட்டி மானத்துச் சூழ்ச்சியரே மழைக்கு இரங்கும் புண்ணியரே வைப்பாட்டி வைக்கப்போயி வந்துதையா பஞ்சம் நாட்டில்   கணவன்: கிழக்கே மழை பொழிய கேப்பைத் தாள் நான் அறுக்க பாவி என்ன சொன்னாளோ? பட்டுதையா பன்னருவாள் இந்த மழையை நம்பி எடுத்து வச்சேன் கம்பு விதை வந்த மழை ஓடிட்டுதே வடபத்திர காளிதாயே!     சேகரித்தவர் :M.P.M.ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்.                     சமூகம் மறவர் படை   தமிழ் நாட்டில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகள் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் சந்ததியினர் தென் பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விஜய நகராட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர். மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விஸ்வநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத முதலியையும் தென்பாண்டி நாட்டில் பஞ்ச பாண்டியர்கள் எதிர்த்துப் போரிட்டனர்.இக்கதையை ஐவர் ராஜாக்கள் கதை என்று நாட்டுக் கதைப் பாடல்* விவரமாக கூறுகிறது, மறவர்களுடைய எதிர்ப்பு திருமலை நாயக்கன் காலம் வரை ஓயவில்லை. அக்காலத்தில் சேதுபதியின் படைத் தலைவனாக இருந்த சடைக்கத்தேவன் என்பவனை அடக்குவதற்காக விஜயநகரத்து தலைமைத் தளவாயான ராமப்பய்யன் மதுரை வந்து சேர்ந்தான். இவர்கள் நடத்திய பெரும் போர் இராமப்பய்யன் அம்மானை என்ற நாட்டுப்பாடலில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.இத்தகைய போர் ஒன்றில் மறவர் படையின் வரவை வர்ணித்து பாடிய பாடல் இது.   வருகுதையா மறவர்படை வானவில் சேனை தளம் மறவரோடு எதிராளி மாண்டவர் கோடிலட்சம்.   சேகரித்தவர்:M.P.M.ராஜவேலு இடம் :தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   *இப்பாடல் மதுரைப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பதிப்பாசிரியர் நா.வானமாமலை.   ரயில் வண்டி   ரயில் வண்டியை புகைவண்டி என்று கூறுவது தனித் தமிழார்வத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்பல்ல. அதைக் கண்ட உடனேயே ஜனங்கள் புகைவண்டி என்றே கூறினர் என்பதைப் பாடலில் காணலாம்.   ஒராம் சந்தன மரம் கட்டை வெட்டி ஒரு ரூவா வெள்ளி சொப்பி லிட்டு காதத்துலே வண்டி காணுதுபார் கைதாத்தி மரமல்லாம் சாயுதுபார் சுத்திச் சுளஞ்சி வரும் பொகைவண்டி சூரமங்கலம் ஸ்டேஷன்லே நிக்கும் வண்டி அலைஞ்சி கொலைஞ்சி வரும் பொகைவண்டி அல்லா ஸ்டேஷனுல நிக்கும் வண்டி   வட்டார வழக்கு: சொப்பு-மரத்தால் செய்த மூடியுள்ள சிறு பாத்திரம் ; அல்லா-எல்லா ; கொலைஞ்சி-குலைஞ்சுது ; சுளஞ்சி-சுழன்று.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   எதிர்ப்பாட்டு   கிராமங்களில் மாட்டுக்காரச் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். அதில் வசையும், கேலியும் கலந்து இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாடப்படுகின்றன.   ஒருவன்: வறுத்த கடலை தின்னி வகை வகையாத் தவிடு தின்னி சொறியாந் தவளை தின்னி சொல்லி வாடா தெம்மாங்கை அடுத்தவன்: எதிர்ப் பாட்டு பாடாதடா எனக்கு வெட்கம் ஆகுதடா சுரக்குடுக்கை வாங்கித்தாரேன் சொல்லாதே ஓடிப்போடா   ஒருவன்: சுண்டெலி லாலா சுடுகாட்டு மண்டெலும்பே அண்டத்து மயிர் எலும்பே அடக்கடா தெம்மாங்கை     சேகரித்தவர் :வாழப்பாடி சந்திரன் இடம் :ஆத்தூர், சேலம் மாவட்டம்.   நம் ஊர்   ஊர்ப் பெருமை யாரை விட்டது? அவன் பிறந்து வளர்ந்து, காதலின்பம் நுகர்ந்து, அதன் மண்ணில் வியர்வை சிந்த உழைத்துப் பயன் பெற்ற ஊரை விட, எந்த புகழ் பெற்ற ஊரையும் அவன் மதிக்க முடியாது. திருநெல்வேலி, மதுரையிலுள்ளவர்களெல்லாம் அவனது ஊரழகைக் கண்டு அங்கு தங்கிப் போகிறார்களாம! அவ்வூர் பண்ணையார் கருத்தசாமி ஊருக்கே அழகாக விளங்குகிறாராம்.   மதுரை திருநெல்வேலி மத்தி வத்து கோயில் பட்டி தப்பி வந்த சனங்களெல்லாம் தாமதிக்கும் நம்ம ஊரு உயர்ந்த மரம் தெரியும் உன்னதமா ஊர் தெரியும் படர்ந்த மரம் தெரியும் பாசமுள்ள சாமி ஊரு மாப்பெருத்த மதுரைக் கடை மணல் பெருத்த தூத்துக்குடி பூப் பெருத்த மேல் மாந்தை போக மனம் கூடுதில்லை நந்த வனமழகு நாமிருக்கும் ஊரழகு கஞ்சாச் செடியழகு கருத்தச் சாமி நமக்கழகு   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   ஊர்களில் போட்டி   சூரங்குடியும், தங்கம்மாள்புரமும் அருகருகே உள்ள ஊர்கள். தங்கம்மாள்புரத்தார் தன் ஊர் பெருமையை சூரங்குடியாரிடம் சொல்லுகிறார்கள். அவர்கள் உடனே வேடிக்கையாக தங்கம்மாள்புரத்தை தாழ்த்தி தம் ஊரை உயர்த்திப் பாடுகின்றனர்.   தங்கம்மாள்புரத்தார்--   ஊறி ஊறித் தண்ணி யெடுக்கும் ஊத்தப் பய சூரங்குடி பாடிப் பாடித் தண்ணி யெடுக்கும் பாண்டிய ராசா தங்கம்மாள்புரம்.   சூரன்குடியார்--   தட்டாம் பயிறவிக்கும் தட்டுக் கெட்ட தங்கம்மாள்புரம் மொச்சைப் பயிறவிக்கும் முதலாளி சூரங்குடி.   குறிப்பு: மொச்சைப் பயிர், இழவுக்கு அவிப்பார்கள்.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :நெல்லை மாவட்டம்.   கீழ் வரும் பாடல்கள் பாதியாகப்பட்டன. அவற்றின் முடிவு அனுமானித்து எழுதப்பட்டது.   முட்டியிலே சோறு பொங்கி மூடி வைக்கும் சூரங்குடி தவலையிலே சோறு பொங்கி தானமிடும் தங்கம்மாள்புரம் குத்துக் கல்லு மேலிருந்து குசும்பிழுக்கும் சூரங்குடி வைரக் கல்லு மேலிருந்து வழக்கு தீர்க்கும் தங்கம்மாள்புரம்   புதுமை   கோவில்பட்டி அருகில் ஜமீன் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயி தமது காலத்தில் நடந்த புதுமைகளை எண்ணிப் பார்க்கிறார். தாம் சிறுவனாக இருந்த காலத்திலிருந்த போக்குவரத்து முறையையும், இன்று முதியவராக இருக்கும் காலத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் நினைத்துப் பார்க்கிறார். ரயிலில்லாத காலம் அவரது இளமைப் பிராயம். இன்று ரயிலும், தந்தியும் போகாத இடமில்லை. பெரிய ஜமீன்தார் குதிரை சவாரி செய்வார். இன்று வாழும் சின்ன ஜமீன்தார் காரில் போகிறார். இந்த மாறுதல்கள் நல்லவையா, தீயவையா என்றுணர அவரால் முடியவில்லை. அவை அதிசயங்களாக மட்டும் அவருக்குத் தோன்றுகின்றன. பாலம் கட்டியது மட்டும் நன்மையாகப்படுகிறது.   வண்டி வருகுதடி வடுகப்பட்டி முந்தலிலே தந்தி வந்து பேசுதடி தட்டாம் பாறை டேஷனுல பெரிய துரை காலத்திலே பேய்க் குதிரை சவாரி சின்னத்துரை காலத்திலே சிம்மம் போல மோட்டார் கோச்சு மேலே கோச்சு வர கொளும்புக் கோச்சு மேலேவர நீல வர்ணக் கோச்சியிலே நிச்சயமா நான் வாரேன் ஆத்துல தண்ணிவர ஆணும் பெண்ணும் அவதிப்பட தூத்துக்குடி வெள்ளைக்காரன் துணிஞ்சிட்டானே பாலங் கட்ட கோணக் கோண ரயில் வண்டி குமரிப் புள்ளே போகும் வண்டி திருக்குப் போட்டு போகுதையா திருமங்கலம் டேஷனுக்கு   குறிப்பு:டேஷன், ரயில், கோச்சு ஆங்கிலச் சொற்கள், பாமர வழக்காகி விட்டது. இவை யாருக்கும் விளங்கக் கூடிய முறையில் தமிழில் உருமாறி வழங்குவதால் இவை தமிழ் சொற்களாகி விட்டன.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :தூத்துக்குடி,நெல்லை மாவட்டம்.   எங்கள் ராஜா   மன்னர்கள், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் காரியங்களைச் செய்யாவிட்டால், மக்கள் நினைவில் அவர்கள் நிலைப்பதில்லை. கோவில்பட்டி தாலுக்காவில் தண்ணீர் கொடுத்தவன் தருமன். அவ்வளவு தண்ணீ்ர் பஞ்சம், ராஜா ஊர் ஊராய்க் கிணறு வெட்டி குடி தண்ணீர் வசதி செய்தார். எனவே அவர் இறந்ததை எண்ணி மக்கள் பாடும் பாடலில் அவருடைய ஞாபகம் நிலைத்து விட்டது.   ராத்திரி வண்டி காத்து நிக்குது தங்கையா மீள விட்டான் டேஷனிலே நான் வந்தையா ஊருக்குமேல் கிழக்கே ஒவ்வொரு தண்ணீர் பந்தல் தண்ணிப் பந்தல் வச்ச ராஜா தவறிப் போனாரே எங்கும் புகழ் பெற்ற ராசா தாம்பூலவாசம் தருமருட தோஷம் பிச்சப்பூ வாசம் பிள்ளை யில்லாத் தோஷம் ஆடழுக மாடழுக அஞ்சு லட்சம் ஜனம் அழுக பட்டத்து யானை வந்து பந்தலிலே நின்றழுக யாரு வந்து அழைத்தாலும் அசையாத எங்க ராஜா எமன் வந்து அழைத்தவுடன் ஏறிவிட்டார் பூந்தேரு   சேகரித்தவர் :M.P.M.ராஜவேலு இடம் :மீளவிட்டான் பகுதி,நெல்லை மாவட்டம்.   சிவகாசிக் கலகம்   சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாடார் சாதியினர் வியாபாரத்தில் ஈடுபட்டு செல்வாக்குப் பெற்றனர். அவர்களுடைய பொருளாதார நிலை உயர்ந்தது. ஆனால் ‘மேல் சாதியினர்’ அவர்களுக்கு சமூக அந்தஸ்து அளிக்கவில்லை. ஊரிலுள்ள விசாலாட்சி கோவிலில் அவர்கள் நுழைய உரிமையில்லை. ஊரில் பெரும்பான்மையினராகவும், செல்வச் சிறப்புடையராகவும் இருந்த அவர்கள், கோவிலில் நுழையும் உரிமை கோரினர். இதனை மறுத்த உயர் சாதியினர் சிவகாசிக்கு அருகிலிருந்த ஊர்களில் வாழ்ந்த மறவர் சாதியினரைத் தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆயுதங்கள் அளித்து கலகத்தைத் தூண்டினர். இக்காலத்தில் மேல் சாதியைச் சேர்ந்த போலீசு உத்தியோகஸ்தர்களும், சாதிவெறியைத் தூண்டிவிட்டு, மேல் சாதிக்காரர்களோடு சேர்ந்து கொண்டனர்.   கலகம் நடந்தபோது படையெடுத்துவந்த மறவர்களில் பலர் இறந்தனர். பின்னர் வழக்கு நடந்தபோது சிலர் இறந்தனர். கலகம் நடந்தபோது வேலை பார்த்து வந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பின்னிருந்து தூண்டிய மேல் சாதிப் பணக்காரர்கள் வழக்கிலிருந்து தப்பிக்கொண்டு, கூலிக்கு மாரடித்தவர்களை நட்டாற்றில் விட்டு விட்டனர். இக்கலகம் நடந்தது 1892-ல்.   இத்தொகுப்பில் கிடைத்துள்ள பாடல்களில் ஒன்று கலகத்தில் முக்கிய பங்கு கொண்ட வெள்ளைத்துரையைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது. மற்றும் ஒன்று அவர்களில் அய்யாத்துரை, ராமச்சந்திரன் ஆகியோர் அநியாயமாக இறந்து விட்டதைக் குறித்து வருந்துகிறது. இக்கலகம் நடந்தது பற்றியே அப்பாடல் பாடியவர் வருந்துகிறார். மோசடிக்கும், சதிக்கும் உள்ளான மறவர்கள், சிந்தித்துப் பாராமல் துப்பாக்கிக்கு இரையானார்களே என்று பாடகர் வருத்தம் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு பாடல்கள் கலகம் பற்றி மேல் விபரம் தருகின்றன.   சிவகாசிக் கலகம்-1   அண்ணன் தம்பி நாலு பேராம் அழகான ராமச்சந்திரன் ஆனைகுத்தும் வெள்ளைத் தேவர் அடிச்சாராம் பட்டாளத்த பூனைகுத்து பொன்னுச்சாமி புலியக் குத்தும் ராமச்சந்திரன் கலங்கிடா படை திரட்டிக் கொல்லுதாரே சிவகாசிய கட்டக் கட்ட வெடியெடுத்து கரு மருந்து உள்ளடச்சு சுட்டாரே சிவகாசிய செந்தூளாய்ப் போகும்படி நல்ல மறத்தி பெற்ற நடுவப் பட்டி வெள்ளையத் தேவர் சுட்டாராம் சிவகாசிய செந்தூளாய்ப் போகும்படி கருந்தூளா ஆக்குச் சய்ய வெள்ளையத் தேவர் பட்டாக்கத்தி ஆறுமுகம் உள்ள புத்தி சாலாட்சி அம்மன் வெற்றி   வட்டார வழக்கு: குத்தும்-கொல்லும்; கட்ட-கட்டை; சிவகாசிய-சிவகாசியை; ஆக்குச் சய்ய-ஆக்கி விட்டது ஐயா; சாலாட்சி-விசாலாட்சி.   குறிப்பு: ஆறுமுகம் என்பவர் இப்பாடலை எழுதியவராகலாம்.   சிவகாசிக் கலகம்-2   அய்யாத்துரை தேவர்   சித்திரை மாத்தையிலே சிறந்த செவ்வாய்க் கிழமையிலே ஒன்பதாம் தேதியிலே-அய்யாத்துரை உசுரு கொடுக்கப் போனாரே நாலு மூணும் ஏழு-இந்த இருளாண்டித் தேவரைக் கேளு சாப்பிட்டுக்கை கழுவி சகுனம் பார்த்து வெடியெடுத்து போரானாம் அய்யாத்துரை பொன்னுசுரப் போக்கழிக்க நாலு மூணும் ஏழு-அந்த நாச்சியரெ கேளு ஏறினார் வில்லுவண்டி இறங்குனார் வேங்கப் புடை சாராய போதையினால் சாஞ்சு விட்டார் அய்யாத்துரை கூடப் பிறந்தவனாம் குடிகாரச் சங்கரனாம் குடிக்கத் தண்ணி கேட்டதுக்கு குதித்து விழுந்து ஓடினானாம் பணத்தைச் செலவழிச்சு படைகளல்லாம் முன்னே விட்டு பின்னால் போகச் சொல்லி பின்னடித்தான் கருணாலபாண்டி பழிப்பாட்டம் குத்தகையார் பாண்டிய மன்னன் அய்யாத்துரை பங்கு வாங்கப் போகப் போயி பழிவிழுந்து மாண்டாரய்யா ஜாதியில் மறக்குலமாம் சாந்த குண அய்யாத்துரை பண்டாரச் செட்டியல்ல பட்டு மடிந்தாரய்யா பழனியாண்டி தேவர் மகன் பாண்டிய மன்னன் அய்யாத்துரை பங்கு வாங்கப் போகப் போயி பழிவிழுந்தே மாண்டாரய்யா ஆளிலேயும் நல்லாளு அதிகப் பூஞ் செகப்பு தங்கமுடி அய்யாத்துரை தரகுக் கடை வாரதெப்போ? நெல்லளந்து சேரக்கட்டி நெடும்பரும்ப யானைகட்டி பொன்னளக்க மாட்டாம போய் மாண்டார் அய்யாத்துரை வேட்டி ரெண்டு வெள்ளவேட்டி வீடு ரெண்டும் காரவீடு பூஞ் செகப்பு அய்யாத்துரை பொன்னுயிரப் போக்கழிக்க பொண்டாட்டியைத் தவிக்க விட்டு புள்ளைகள மருக விட்டு போய் விழுந்தான் நாய்ச்சியார் தோட்டம் பொருதியுள்ள அய்யாத்துரை   குறிப்பு: மறவர் கட்சியைச் சேர்ந்தவர் பாடல்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   சிவகாசிக் கலகம்-3    வெள்ளையத் தேவன் விசாலாட்சி கோயிலை அடைக்கச் சொல்லி, கோயிலினுள் நுழைய முயன்ற இரு நாடார்களைக் கொன்றான். ஆனால் நாடார்களுக்கு ஆதரவாகப் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வந்த இரு சக்கிலியர்கள் தந்திரமாக வெள்ளையனையே கொன்று விட்டார்கள். இப்பாடல் கலகத்தின் கொடுமையைக் கூறுகிறது.   நாலு பேரு அண்ணன் தம்பி நடுவப்பட்டி வெள்ளை ஐயா பொட்டி ஒடைக்கு முன்னே போட்டாரே ஏழு பேரை வீர மறத்தி பெற்ற வீரமுள்ள வெள்ளை ஐயா சாலாச்சி சந்நிதியைத் தானடைக்கச் சொன்னாரையா மொட்டையநாடார் மகன் முதக் குட்டி செம்புக் குட்டி வெள்ளையத் தேவரிடம் வெட்டுப் பட்டு சாகுறானே! பாஞ்சாலம் குறிச்சியில பகட மக்க ரெண்டு பேரு அந்தரம் அடிச்சல்லவோ தந்திரமா வெட்டினானே!   குறிப்பு: நாடார், எதிர்க்கட்சி இரண்டையும் சேராதவர்கள் எழுதியபாடல்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை மாவட்டம்.   சிவகாசிக் கொள்ளை-4   வந்தது பாரீர் சிவகாசிக் கொள்ளையின் வன்மையைப் பாரீர் தந்தது பாரீர் எழுபத்தைந்தாம் ஆண்டு வளரும் வைகாசி மீ 25-உ இந்தச் சமாச்சாரம் நாடாக்கமார் கேட்டு எல்லோரும் ஒன்றாக மீட்டிங்கி பேசி எழுதினார் கடிதம்-கண்டவுடன் ஏகினார் துரிதம் வந்தது இங்கிலீஷ் துப்பாக்கிக் குண்டு மருந்துகள் ஈட்டி சமுதாடு நீட்டும் வல்லாயுதம் என்னென்ன விதமாய்-பந்தோபஸ்து உன்னிதமாய் பயங்கரம் இல்லாமல் கூட்டங்கள் கூடி தெருக்களை நாட்டமாய் மூடி இல்லம் தோறும் தயார் செய்து இதமாகவேதான் இன்ன விதமாக நோட்டீஸ் வந்ததென்று எழுதியும் அர்ச்செண்டாய் தந்தி கொடுத்தபடி கலெக்டரும் வந்தார் போலீஸ்காரரும் கட்டாயமாய் இருந்தார் பின்னும் எங்கெங் கிருந்துமே நாடார்களில் சிலர் ஏகிச் சிவகாசி நாடார்க் குதவியாய் வந்துமிருந்தார்-பொருள் சிலர் தந்துமிருந்தார் இன்னும் ஏராளமாகவே சண்டை செய்ய துணிந்து இருக்கும் நாடார்கள் ரகசியம் எல்லாம் எண்ணியறிந்தார் தந்திரங்களெல்லா மறிந்தார் உடனே உடனே இருக்கின்ற பேர்களுக்குத் தைரியம் சொல்லியே ஏகமாக வெண்டர் பிள்ளை பட்டணம் சென்று நாட்டனைப் பிடித்தார்- ரிக்காடுகள் நோட்டுடன் முடித்தார் இங்கு ஏலேல சிங்கன் வெள்ளையத் தேவரும் இன்னும் சிலபேர்கள் சண்டைக்கு எத்தனம் செய்யத் துணிந்து திருநெல்வேலி ஜில்லா முழுமை மலையாளம் சேர்ந்த ஆறாம் புளிக்கோட்டைவாசல் முதல் நடந்ததே கொள்ளை சனங்களுக்குத் தொடர்ந்ததே சள்ளை தூத்துக்குடி மலையாளம் திருநெல்வேலி   சுரண்டைதே நீர்க்குளம் சாத்தூர் வட்டகை முதல் அகிலாண்ட புரம் ஒட்ட நத்தம் அருங்குளம் பிறவும்-பின்னும் சிவனணஞ்சபுரம்-நயினா பட்டிக் கிழங்கு சேர்ந்த நாகலா புரம் கடலை வரதம் பட்டி இத்தனை ஊரும் தெரியாமல் இனம் சொல்லா ஊரும் ஐயோ! எங்கும் கொள்ளைகள் ஐயோ எந்தன் பிள்ளைகள் ஐயோ என்று கூக்குரலோடு நின்று பரதவித்து ஐயோ என்பாரும் கடவுளை நொந்தார் எல்லோரும் அல்லாவை வேண்டி சலாபம் செய்து நெல்லையப்பர் கடை வழி விசுவ நாதர் கோயில் சன்னதிக்கு வர விளைந்ததே கூட்டம் பயந்து விலகினார் ஓட்டம் அப்போது வீரன் குடிமகன் சக்கணனும் அந்த வேளையிலே ரதம் ஏறி ஒய்யாரமாய் வேட்டை எழுப்ப முத்து மகன் கூட்டம் குளப்ப அந்நேரம் வேகமாக பின் வந்து வழி கூடி வந்தார் எல்லோரும்-கடவுளை நொந்தார் எல்லோரும்   வட்டார வழக்கு: நாடாக்கமார்-நாடார்கள்; நாட்டன்-Norton என்னும் வழக்கறிஞர்.   குறிப்பு: இது இரு கட்சியாரையும்-நாடார், மேல் சாதியாரையும் சேராத நடுநிலையார் பாடல்.   சிவகாசிக் கொள்ளை-5    +சீர்வளரும் திருநெல்வேலி ஜில்லாவை சேந்த சிவகாசி கொள்ளை தன்னை பேர் வளரும் கும்மி பாட ஐங்கரண் பிள்ளை மலர் பாதம் காப்போமே. தேசம் புகழ் காசியின் சிங்காரம் செப்ப வேணு மென்றால் ஒப்பனையாய் வாசனும், ஆதிகேசலும் ஆயிரம் வாயினால் சொல்ல முடியாதே நீல மணி முத்து மாடங்களாம் அண்ட கோளம் அளாவிய கூடங்களாம் செல்வம் மிகுந்திடும் வெள்ளாளர் நாயக்கர் செட்டி மறவர்க்கும் நாடார்க்கும் பல் வகையாய்ச் சிவன் கோயில் விஷயமாய் பார வழக்கு நடந்ததுவே. 96-ம் வருடத்தில் கார்த்திகை சோம வாரம் அந்த உற்சவத்தில் திண்ணமாய் நாடார்க்கும் பிள்ளை மார்க்கும் ஒரு செய்தி நடந்ததைச் சொல்லுகிறேன் : வெள்ளாளர் சாமியை எழுந்தருளச் செய்து வீதி வலமாய் வருகையிலே மெள்ளவே நாடார்கள் பத்திர காளிக்கு மேலான உற்சவம் செய்ய வென்று தாங்களும் சாமி எழுந்தருளச் செய்து சந்தியிலே அவர் முந்திக் கொண்டு பாங்காகச் சாமியைப் போக விடாமல் பலத்த கலகங்கள் செய்தனராம் கல்லெறிந்து சிலர் சில்லரை செய்கின்ற காலத்தில் ஆறுமுகம் பிள்ளை மெல்லவே தந்தியடிக்கக் கலைக்டரும் மேவும் போலீஸ் காரர் தான் வரவே கெட்டிக்காரர் சுத்துப் பட்டி மறவர்க்கும் கிள்ளாக்கு வட்டிப் பிள்ளை அவர் அட்டி இல்லாமல் அனைவரும் வந்து அழகாய்த் திருவிழாத் தான் நடத்த வந்த தேவ மாரைக் கொள்ளை செய்தாரென்று வல்ல நாடார்கள் பிராது செய்தார் தந்திரமாய் மேஜிஸ்ரட்டார் பிராதை தள்ளி விட்டார் வெகு துல்லியமாய் நாராயண சாமி பிள்ளை டிப்டி மேஸ்திரி நியாய வழக்கைத் தான் உரைத்தார் தோரணையான அதிகாரத்தால் கட்சி தோன்றா திருந்தது சில காலம் வல்ல அதிகாரி போன பின்பு-ஜூலை++   வளரும் 18-ல் மெள்ளவே நாடார்கள் கோயிலுக் குள்ளேதான் மேவிட எண்ணம் துணிந்தாரே ஆலயத்துக்குள் புகும் போது வெண்டர் ஆறுமுகம் பிள்ளை மற்றவரும் ஆலயம் தேடி ஈசன் சன்னதி வழி மறித்துக் கொண்டார் அந்நேரம் அன்று காளியம்மன் நந்தவனத்தை அழித்தார் தேவமார்கள் எல்லோரும் சென்று நாடார்களைக் கொள்ளை செய்வோமென்று சிந்தனை செய்தும் இருந்தாரே இந்தப்படி சிலர் செய்திடவே வெண்டர் பிள்ளை முதலான மற்றவரும் சென்றுமே அந்தக் கவர்ன் மெண்டாருக்கும் தெரியாத ரிக்கார்டு தான் முடித்தார். நாடாக்கமார்கள் கொடுத்த பிராதுகள் நன்றாச்சு கட்சி இரண்டாச்சு வாடாதருள் பெற்ற கோயில் அடைத்துமே வாழ் நகர் விட்டுச் சிலர் போனார் வெள்ளாளர் நாயக்கர் செட்டிமார்கள் அவர்கள் வேதியர் பஞ்சமச் சாதியர்கள் துள்ளின மாடு பொதி சுமக்கும் என்று சொல்லிய பழமொழி போல் இந்த விதமிங்கு தானிருக்கக் கலி இன்னொன்று செய்தானே மாபாவி சந்தமுள மாஜிஸ்திரார் கோர்ட்டினில் சாணார் கமுதியில் தான் நடக்க ஆயிரம் பேருக்கு நாடார் ஆலயத்துக்குள் வந்திருந்து வாசல் வழியாய் வந்து புகுந்து கொண்டோம் என்று வழக்கும் என்ற கை முழுக்கும் இட்டார் அன்று முதல் கோயில் அடைபட்டுக் கொண்டது அய்யோ ஆயிரம் காலத்து மாபாவி சென்று சிவகாசி பட்டணத்தவர்கள் செய்ததைக் கேளுங்கள் மானிடரே சுத்துக் கிராமத்து நாடார்கள் செய்திட்ட தொல்லைகளும் சில சொல்லுகிறோம் :   எத்து களாய்ச் சில சொத்துக்களை ஏமாத்தம் செய்தார் சாலை ஓரம் நாயக்கர் கம்பள மீனம் பட்டி வழி நாடிய கைம் பெண் ஒருத்தி மத்தியானத்தில் ஒருத்தியைக் கொன்றானாம் மூவர்கள் நாடார்கள் கொலை செய்த கைதிக்கு ஏழுவருடம் கொடிய தண்டனைகள் தான் முடித்து உலகில் சுத்துப் பட்டி நாயக்கர் தேவர்க்கும் ஓங்கிய கோபம் தணியவில்லை மாரினேரி ஓரம் பள்ளரைக் கொலை யொன்று பத்து மணிக்குச் செத்ததனால் காரியம் இல்லாக் குடும்பர்க்குக் கோபம் இருந்தது சில நாளாய் ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி எனும் சிவகாசி மறவர் வாய்ப்புடன் கடை கட்டும் அந்த வேலை வகுத்தார் நாடார் விரோதங் கொண்டு நாடார் சிலபேரும் கடைக் கெட்ட விடாமல் தடுத்துக் கொண்டு சண்டை பேட்டையில் தாக்கினான் அக்கினி ஊக்கமாய் வல் உலகனும் மறவரும் சேர்ந்துமே வன்மை நாடார்களைத்தான் விரட்டி மெல்லவே காளியம்மன் பேட்டையில் தீ வைத்து வேடிக்கை செய்தார் அந்நேரம் சிங்கக்குட்டி ரெங்கா ராவுத்தர் பெற்றிடும் செகு முகம்மது காசியும் சங்கையில்லாமல் வாள் ஆயுதம் கொண்டார் சாடின நாடார்கள் ஓடிவிட்டார்   வட்டார வழக்கு: கிள்ளாக்கு-கிளார்க்கு ; மாஜிஸ்திரார்-மாஜிஸ்டிரேட் ; கெட்ட-கட்ட.   குறிப்பு : இப்பாடல் நாடார்களுக்கு விரோதமான கட்சியார் எழுதிய பாடல்.   சேகரித்தவர் :S.S.போத்தையா இடம் :விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   சந்தனத் தேவன்   சந்தனத்தேவன் பிரபலமான திருடன். இவனைப் பிடிக்கப் போலீசாரால் முடியவில்லை. பிடித்துத் தருபவர்களுக்கு ரூ,1000 வெகுமதி அளிப்பதாகப் பறைசாற்றப் பட்டது. பிடிக்க முன்வர யாருக்கும் தைரியமில்லை. கூட இருந்த ஒருவன் காட்டிக் கொடுத்துவிட்டான். பின்னர் சந்தனம் தூக்கிலிடப்பட்டான். அவன் மனைவி, அவனுடைய தாயாரிடம் அழுது சொல்லுவது போல கடைசிப் பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் பொருள் தெளிவாக விளங்கவில்லை. விளம்பரம்   +ஆயிரம் ரூபா தாரேன் ஐக்கோட்டு வேலை தாரேன் சந்தனத்தை பிடித்தவருக்கு சருக்காரு வேலை தாரேன்   மக்களின் அச்சம்   ஆயிரம் ரூபா வேண்டாம் ஐக்கோட்டு வேலை வேண்டாம் சந்தனத்தை பிடிக்க வேண்டாம் சருக்காரு வேலை வேண்டாம்   சந்தனத்தின் வீரம்   ஏட்டை இழுத்து வச்சு இன்ஸ்பட்டரை கட்டி வச்சு துவரங்காயைத் தின்னச் சொல்லி மாட்டுரானே சந்தனமும்   மகனுக்குப் பரிசு   மகனுக்கு மல்லு வேட்டி தாயாருக்கு சாயச் சீலை பெண்டாட்டிக்குப் பொட்டுச் சீலை போய் எடுத்தான் சந்தனமும்   மாயாண்டி துரோகம்   சந்தனமும் மருதமுத்தும் சமுச்சாரம் பேசையிலே நத்தக்கண்ணு மாயாண்டி நாக்குத் தள்ளப் போட்டாண்டி   நீதிபதி தவிப்பு   பேரான சந்தனத்தை பெரிய குளம் தள்ளி விட்டு முடிவு சொல்ல மாட்டாமே முளிக்கிறானே மாஸ்திரேட்டு   மூக்கம்மாள் தவிப்பு   சந்தனம் பெண்டாட்டி சபை நிறைஞ்ச மூக்கம்மாளாம் சந்தனத்தைத் தூக்கும்போது-உன் சதுரம் கொஞ்சம் வாடுதடி   தாயிக்கு போலீசார் கூறுவது   அடிக்காலத்தா அநியாயம் செய்யாலாத்தா தலைக்காலை எடுத்துக்கிட்டு நிறுத்துக்கடி உன்மகனை   வட்டார வழக்கு: சமுச்சாரம்-சமாச்சாரம் ; நாக்குத்தள்ள-தூக்கிலேற்றப் பிடித்துக் கொடுத்தான் ; சதுரம்-சரீரம்.   குறிப்பு: கடைசி இரண்டடி-தலையும் காலும் இல்லாமல் உன் மகனை எடுத்துக்கொள் என்னும் கருத்துப்பட அமைந்துள்ளது.   சேகரித்தவர் :S.M.கார்க்கி இடம் :சிவகிரி.   சிவகிரி ஜமீன்தார்   சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்று மறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.   இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால்,அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.   சிவகிரி ஜமீன்தார்-1   +பாக்குப் பொடி நறுக்கி பல்விளக்கித் தீத்தம் பண்ணி காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு கச்சேரிய செய்த தெப்ப? கச்சேரி வாசலிலே லட்சம் ஜனம் கூடியிருக்க கருத்த துரை இல்லாம களையும் பொருந்தலையே கிறிச்சு மிதியடியாம் கீ கண்ணுப் பாருவையாம் வடகா பிரகரைக்கு வாரதெப்போ நம்ம துரை சோணப் பாறை மொந்தலிலே சூரியனும் உதிக்கு முன்னே மண்டி போட்டுச் சுட்டாராம் மன்னம் பொன்னு சின்னசாமி காக்கா இறகு போல கல்லணைத் தண்ணி போல மறிச்சாராம் மறிபடாது மகராஜன் ஆத்துத் தண்ணி ஆடழுக,மாடழுக அஞ்சாறு லட்சம் ஜனமழுக சிவகிரி ஜனங்களெல்லாம் தெருத் தெருவா நின்னழுக   சிவகிரி ஜமீன்தார்-2   பிறந்தது சிவகிரி வளர்ந்தது ஆத்துப்பட்டி மாண்டது குத்தாலம் மகாராஜா நம்ம துரை மதுரையிலே குதிரை வாங்கி மல்லியப்பூ சேடங் கட்டி அடிக்காக நம்ம துரை ஆத்து மணல் தூள் பறக்க வடக்க இருந்தல்லவோ வாராக சின்னசாமி பதினெட்டு பட்டி ஜனம் பாக்க வந்து காத்திருக்கு பட்டணங்கள் போகலாமா பந்தயங்கள் கூறலாமா இந்தக் கலியுகத்தில் இஷ்டர்களை நம்பலாமா சிவகிரி மகாராசா செல்வத் துரை பாண்டியன் நீசநிதியாலே மோசம் வரலாச்சே மானழுக, மயிலழுக மாடப்புறா கூட அழுக சிவகிரி ஜனங்களெல்லாம் தெருத் தெருவா நின்னழுக கல்யாண மால் கட்டச் சொல்லி உத்தரவு ஒரு நாள் ஒரு பொழுது மகாராசா உக்காந்து பாக்கலியே காத்திய மடத்தோரம் கைலாசகுழி வெட்டிருக்கு வெட்டி நாளாகுது வெரசா வரும் மோட்டார்காரே.   வட்டார வழக்கு: காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம் ; மொந்தல்-மூலை ; அழுக-அழ   சேகரித்தவர் :S.M.கார்க்கி இடம் :சிவகாசி,இராமநாதபுரம் மாவட்டம்.   போட்டியும் முடிவும்   விளையாட்டில் ஆரம்பிக்கும் போட்டி வினையாக வளருவதுண்டு. சில ஊர்களில் சேவல் சண்டை மனிதர் சண்டையாக முற்றி, கொலைகள் விழுவதுமுண்டு. எட்டய புரம், பாஞ்சாலக்குறிச்சியில் போட்டிக்கு, சேவல் சண்டை காரணமென்று நாட்டுப் பாடல்கள் தெரிவிக்கின்றன*தற்காலத்திலும்கூட கோஷ்டி விளையாட்டுகளின் முடிவில் கைகலப்பு ஏற்படுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி ‘ நமக்கே’ வேண்டும் என்ற எண்ணமே. அடுத்தவருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு பொறாமை மூளுகிறது. அது புகைந்து, எரியத் தொடங்குகிறது. கடைசியில் கொலையில் சென்றே முடிகிறது.   இரண்டு நெருங்கிய உறவினர்கள் (ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள்) சிவகிரியில் சிறந்த குஸ்தி, சிலம்பு விளையாட்டுக்காரர்களாக இருந்தனர். அவர்களுக்குள் விளையாட்டில் சிறு சண்டை ஏற்பட்டு, அது உடனே தணியாமல், தூண்டுவார் தூண்டி விட்டுப் பெரிய பகையாயிற்று. கடைசியில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விட்டான். கொலையாளியும் தூக்குமரத்தில் தொங்கினான். இந்நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பயில்வான்களின் பெயர் பெரிய செந்தட்டிக்காளை, சின்னச் செந்தட்டிக் காளை.   அரண்மனைக்குக் கீழ் புறமாம் அழகான செந்தட்டிக்காளை சளுக்காணி செந்தட்டியை தலையை வெட்டிக் கொண்டு போனான் செந்தட்டிக் காளை சிறுபுலியும் நீள் வேங்கை கள்ளுக்கடை ஓரம் கைலாசம் சேர்ந்து விட்டான் கள்ளுக்கடை ஓரம் கருப்ப சாமி கோயில் ஓரம் மார் படர்ந்த செந்தட்டியை மண்டி போட வெட்டி விட்டான். எல்லோரும் எடுக்கும் கம்பு ஏழைக் கேத்த மூங்கில் கம்பு சளுக்காணி எடுக்கும் கம்பு சரியான சடுக்காக் கம்பு   சேகரித்தவர் :S.M.கார்க்கி இடம் :சிவகிரி.   * கட்ட பொம்மு சிந்து, சிதம்பர சுவாமிகள், பதிப்பாசிரியர் நா.வானமாமலை, மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு,1974   ஊமைத்துரை போட்ட கொடி   கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, சிறை உடைத்து மீண்டு வந்து கோட்டையைப் புதுப்பித்து, வெள்ளையர் வெறுப்புணர்ச்சியை பல பகுதிகளிலும் பரப்பி இரண்டு ஆண்டுகள் போராடி, மருது சகோதரர்களது போரிலும் கலந்து கொண்டு வீரமரணம் எய்திய ஊமைத்துரையைப் பற்றி பல நாட்டுக் கதைகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் வழங்கி வருகின்றன. அவனைப் பற்றி பிற மாவட்டத்தினர் அதிகமாக அறிந்திராவிட்டாலும், பெயரையாவது தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை சேலம் மாவட்டத்தில் வழங்கி வரும் இப்பாடல் காட்டுகிறது.   ஒரு மரத்தை வெட்டித்தள்ளி ஒரு மாமரத்தை ஊஞ்சலாடி ஊஞ்சலிலே போரகிளி-அது ஆண் கிளியா-பொண் கிளியா ஆண் கிளியும் இல்லம் போயா-அது பொண் கிளியும் இல்லம் போயா அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்க அழகான ஊமைத்துரை போட்ட கொடி இரண்டு மரத்தை வெட்டித் தள்ளி ரண்டு மாமரத்தை ஊஞ்சலாடி ஊஞ்சலிலே போர கிளி-அது ஆண் கிளியா-பொண் கிளியா ஆண் கிளியும் இல்லம் போயா-அது பொண் கிளியும் இல்லம் போயா அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்கள் அழகான ஊமைத்துரைப் போட்ட கொடி   சேகரித்தவர் :s.s. சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   வெள்ளையர் கொள்ளை   கரும்பை விளைவிக்கும் விவசாயிகளிடம், வெள்ளையர் குறைந்த விலைக்கு கரும்பை வாங்கிக் கொண்டு போனார்கள். அவற்றையெல்லாம் கப்பலில் ஏற்றினார்கள். கடற்கரை வழியே தங்கள் ஆலைகளுக்குக் கொண்டு சென்றார்கள். கரும்பு விற்ற விவசாயி கூழ் குடித்துக் கொண்டு வாழ கரும்பை வாங்கிச் சென்ற வெள்ளையன் முப்பது முட்டையும் தின்று சாராயமும் குடிக்கிறானாம். அவனுக்கு பணம் சேர்ந்த விதம் விவசாயிக்குத் தெரியவில்லை. அரசியல் அறிவு பரவாத கிராமத்தில் வாழும் விவசாயி ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையை எப்படி அறிவான்? தங்களை வெள்ளையன் வஞ்சிக்கிறான் என்பது மட்டும் மங்கலாகத் தென்பட்டது. அதனால் ஏற்பட்ட வெறுப்பினால் வெள்ளையனை துரை என்று சொல்லாமல் ‘ பரங்கி ’ என்று சொல்லுகிறான்.   ஒரு கட்டுக் கரும்பாம்-பரங்கி ஒண்ணால் ஆயிரமாம் அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி ஏத்தனாங் கப்பலுக்கு கப்பலு முக்காதம்-பரங்கி கடலு முக்காதம் கப்பலில் இறக்கும் தண்ணியைக் குடிச்சா தலை கிறு கிறுண்ணும் முப்பது கோழி முட்டை-பரங்கி முன்னூறு சாராயம் எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு வெத்திலை திண்ணாப் போல ரண்டு கட்டுக் கரும்பாம்-பரங்கி ரண்டால் ஆயிரமாம் அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி ஏத்தனாங் கப்பலுக்கு கப்பலு முக்காதம்-பரங்கி கடலு முக்காதம் கப்பலிலிருக்கும் தண்ணிய குடிச்சா தலை கிறுகிறுண்ணும் முப்பது கோழி முட்டை-பரங்கி முன்னூறு சாராயம் எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு வெத்திலை திண்ணாப் போல   வட்டார வழக்கு: ஏத்தனான்-ஏற்றினான் ; வெத்திலை-வெற்றிலை.   சேகரித்தவர் :s.s சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   நம்ம துரை   ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் தமது வியாபார ஸ்தலங்களில் தமிழ் தொழிலாளர்களைக் கூலி வேலைக்கமர்த்தினார்கள். நமது பழக்க வழக்கங்களையும் அவரது பழக்க வழக்கங்களையும், ஒரு தொழிலாளி உற்று நோக்கினான். அவன் காணும் வேறுபாடுகளை வரிசைப்படுத்திச் சொல்லுகிறான். இப்பாடல் கார் போன்ற வாகனங்கள் பழக்கத்துக்கு வருமுன் பாடப்பட்டிருக்க வேண்டும்! அது மட்டுமல்ல; கத்தி, கொடுவாளை எதிர்த்து துப்பாக்கி கொண்டு துரைகள் சண்டை செய்தார்கள் என்ற செய்தி ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் இப்பாடல்களின் “ கருத்துக்கள் தோன்றியிருக்கின்றன“ என்று காட்டுகிறது. ஆனால் முதலில்பாடப்பட்டதிலிருந்து இப்பாடல் சில மாறுபாடுகளோடு காணப்படலாம். பின்னால் வரும் வழக்கங்கள் முன்பு பாடப்பட்ட பாடல்களில் புகுத்தப்படுவது நாட்டுப் பாடல்களின் மரபுக்கு உகந்ததே!   தண்ணிமேலே கப்பலோட்டும்-ஏ தங்கம் தந்திரமா நம்ம துரை-ஏ தங்கம் அலை மேலே கப்பலோட்டும்-ஏ தங்கம் அறிவுள்ள நம்ம துரை-ஏ தங்கம் இரும்புக் குறிச்சிகளாம்-ஏ தங்கம் இங்கிலீசு புஸ்தகமாம்-ஏ தங்கம் இருந்து கணக்கெழுதும்-ஏ தங்கம் இன்ப முள்ள நம்ம துரை-ஏ தங்கம் அல்லாரும் எழுதும் பேனா-ஏ தங்கம் அந்தப் பேனா, இந்தப் பேனா-ஏ தங்கம் நம்ம துரை எழுதும் பேனா-ஏ தங்கம் சரியான தங்கப் பேனா-ஏ தங்கம் அல்லாரும் குடிக்குந் தண்ணி-ஏ தங்கம் ஆத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி-ஏ தங்கம் நம்ம துரை குடிக்குந் தண்ணி-ஏ தங்கம் காரமான கள்ளுத்தண்ணி-ஏ தங்கம் அல்லாறும் ஏறும் வண்டி-ஏ தங்கம் கட்ட வண்டி மொட்ட வண்டி-ஏ தங்கம் நம்ம துரை ஏறும் வண்டி-ஏ தங்கம் சரியான கோச்சு வண்டி-ஏ தங்கம் எல்லோரும் சண்டை செஞ்சா-ஏ தங்கம் கத்தி வரும் கொடுவா வரும்-ஏ தங்கம் நம்ம துரை சண்டை செஞ்சா-ஏ தங்கம் தலைக்கு மேலே பாணம் வரும்-ஏ தங்கம் சாரி சவுக்கு குதிரை-ஏ தங்கம் சவாரி போர குதிரை-ஏ தங்கம் பூக் குதிரை மேலே ஏறும்-ஏ தங்கம் பொன்னு முடி நம்ம துரை-ஏ தங்கம்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம் :சக்கிலிப்பட்டி,அரூர்,தருமபுரி மாவட்டம்.   தரும துரை   மன்னர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் புகழ்ந்து பாடப்படுவது அரிது. ஏனெனில் நாட்டு மக்கள் மன்னர்களை நேரில் காண்பதோ, அவர்களது அன்பை நேரில் பெறுவதோ முடியாது. சமீப கால மன்னர்கள் மக்களுடைய வாழ்க்கையில் புலப்படும்படியான பொதுநலப் பணிகள் எவற்றையும் செய்ததில்லை. தாங்கள் வாழ மாட மாளிகைகளையும், தங்கள் புகழ் விளங்க கோயில்களுக்கு மதிற்சுவர்களும், கோயில்களும் கட்டினார்களேயன்றி ராணி மங்கம்மாளைப்போல ஓரிருவர்தான் மக்கள் நலன் கருதி பொதுப்பணிகள் செய்தார்கள். முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போதும், ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போதும் மக்களைத் திரட்டி எதிர்த்த சிற்றரசர்கள் தோல்வியுற்று மறைந்துவிட்ட போதிலும் நாட்டுப் பாடல்களில் அவர்கள் அழியாத இடம் பெற்றார்கள். ஆனால் மக்கள் நலன் கருதாது இன்ப வாழ்க்கை நடத்தி மறைந்துபோன மன்னர்கள் நாட்டுப் பாடல்களில் இடம் பெறவில்லை. மதுரைக்கோபுரம் கட்டிய மன்னனொருவன், சாலையில் தங்கும்விடுதி கட்டி, தண்ணீர்ப் பந்தலும் வைத்ததால் இந் நாட்டுப்பாடல் புகழ்ந்து போற்றுகிறது. மதுரைக் கோபுரம் கட்டியதைவிட ‘தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கிற தருமம்’தான்பெரிதென்று இந்நாட்டுப் பாடல் கூறுகிறது.   கல்லுமே கல்லுமே கல்லுருட்டி கல்லுக்கும் கல்லுக்கும் எணை கூட்டி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மன்னவன் வாரானாம் பாருங்கடி சன்னலு,பின்னலு சாலையிலே தங்கு மடம் ஒண்ணு கட்டி வச்சி தவிச்ச வாயிக்கி தண்ணி குடுக்கிற தரும துரையும் வாராராம்.   சேகரித்தவர் :S.S. சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   தண்ணீரா வேண்டும்   கிராமத்தில் ஒரு விழா. பெண்கள் கூடி கும்மி அடிக்கிறார்கள். அவர்களது பாட்டைக் கேட்கவும், நடனத்தைப் பார்க்கவும் ஒரு இளைஞன் அருகில் வருகிறான். பொதுவாக ஆண்கள் அங்கு போவதில்லை. அது கிராமத்தின் வளமையான எழுதப்படாத சட்டம் ; அதை மீறுவதற்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் இளைஞன். வாழைப்பழம், சர்க்கரை, எள்ளுருண்டை யெல்லாம், தின்றதால் விக்கலெடுக்கிறதாம், தண்ணீர் வேண்டுமாம். அவர்கள் வெளிப்படையாகவே “முந்தாணி தட்டும் தூரத்தில் நெருங்க வேண்டாம், தள்ளி முக்காலிபோட்டு உட்காரவேண்டும்” என்று கூறுகிறார்கள். மூக்கறுக்கப்பட்ட இளைஞன் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே ஆந்தை போல விழித்துக் கொண்டு நிற்கிறான்.   ஆண் : சீப்பு சீப்பா வாளப்பளம் சீனி சக்கரை எள்ளுருண்டை சக்கரைத் தின்னா விக்கலெடுக்கும் தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே   பெண் : கும்மியடிக்கற பெண்களாண்டே கூட்டம் என்னா இங்கே ஆம்பிளைக்கி முந்தாணி தாங்குது ஒத்திக்குங்க முக்காலி போடறோம் ஒக்காருங்க   ஆண் : கொத்து கொத்தாப் புள்ளே வாளப்பளம் கோதுமை சர்க்கரை எள்ளுருண்டை சர்க்கரை தின்னாலே விக்கலெடுக்கும் தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே தன்னா தானான தானான-தன தான தனனனன னானன   வட்டார வழக்கு: வாளப்பளம்-வாழைப்பழம்.   குறிப்பு: ழகரத்தை தென் தமிழ் நாட்டில் ளகரமாகவே உபயோகிப்பர்.   சேகரித்தவர் :S.S. சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   பட்டணத்தைப் பார்த்த பட்டிக்காட்டான்   வெள்ளைக்காரன் ஆளும் காலத்தில் பட்டிக்காட்டான் பட்டணம் பார்க்க மனைவியோடு போனான். அங்கே அவன் கண்டவற்றை தான் முன் அறிந்திருந்த பொருள்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறான். விமானம், தந்தி, மின்விளக்கு இவையாவும் அவனுக்கு அதிசயத்தை உண்டாக்குகின்றன.   மானத்திலே போகுது பார் மாடில்லாத வண்டி-அது மஞ்சிட்டு போல் பேசுது பார் வெள்ளெக்காரன் கம்பி கச்சேரி மேலெரியும் காந்தி சோதி வௌக்கு-அது எந்நீதமாய் எரியுது பார் வெள்ளெக்காரன் விளக்கு பட்டணத்தை பாக்க பாக்க பசியெடுக்கவுமில்லெ-நம்ம பட்டிக்காட்டை சுத்திச் சுத்தி பாக்க மனசு வல்லே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம் :அரூர்,தருமபுரி மாவட்டம்.   கூலிசெய்யக் காலமாச்சே!   கிராமப்புறத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த விவசாயிகள், பருவ மழையின்மையாலும், வரிப்பளுவினாலும் கடன்பட்டு நிலத்தை இழந்து விடுகிறார்கள், விவசாயக் கூலிகளாக வேலை செய்து பிழைக்கிறார்கள். கொஞ்சம் காணியுள்ள வீட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்கு கூலி வேலை செய்யும் இளைஞனொருவன், மணமகனாக வாய்க்கிறான். திருமணமான மறுநாள் கூழ் குடிக்க வேண்டுமானால், மணமகனும் மணமகளும் கூலி வேலை செய்தாக வேண்டும். புது மண உறவின் இன்பத்தை நுகர விடுமுறை கிடைக்கவில்லை. ‘கொட்டவந்த மேளக்காரன் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்னால் மண் எடுத்துக் கூலி வேலை செய்யக் காலமாகி விட்டதே’, என்று ஏங்கிப் பாடுகிறாள் மணமகள்.   அரைச்ச மஞ்சா ஏழுருண்டை கண்ணான நாதா-என் மன்னவனே சாமி அரைக்காத மஞ்சா ஏழு மஞ்சா கண்ணான நாதா கட்டான வெத்திலை ஏழு வெத்திலை கண்ணான நாதா-என் மன்னவனே சாமி கட்டான வெத்திலை ஏழு வெத்திலை கண்ணான நாதா எடுத்து வையும் சீரு மேலே கண்ணான நாதா-என் மன்னவனே சாமி எண்ணிப் பாத்துச் சொல்லுகிறோம் கண்ணான நாதா ஊத வந்த மக்களாம் கண்ணான நாதா கொட்ட வந்த கோயில் மேளம் கண்ணான நாதா-என் கொல்லன் மேடு தாண்டலியே கண்ணான நாதா மன்னவன் சாமி மாலையிட்ட நாள் மொதலா கண்ணான நாதா-என் மன்னவனே சாமி மண்ணெடுக்க காலமாச்சே கண்ணான நாதா கூரையிட்ட நாள் மொதலா கண்ணான நாதா மன்னவனே சாமி கூலி செய்யக் காலமாச்சே கண்ணான நாதா   வட்டார வழக்கு:கூரை-திருமணச்சோலை.   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   தாலிப் பொன்னிலும் மாப்பொன்னு   தாய் தங்கம் கொடுத்து நகை செய்யச் சொன்னாலும், பொன் வேலை செய்யும் தட்டான் பழக்க வசத்தால் சிறிதளவு பொன் கவர்ந்து கொள்வான் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. ஒரு பெண் வழக்கமாக ஒரு ஆசாரியிடம் நகை செய்யக் கொடுக்கிறாள். ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லி, கொடுத்த தங்கத்தைவிட எடை குறைவாக ஆசாரி நகை செய்து தருகிறான். மற்ற நகைகளில் சிறிதளவு தங்கம் குறைந்ததைக் கண்டு கோபப்படாத அவளுக்குத் தாலியில் தங்கம் குறைவதைக் கண்டு கோபம் வருகிறது. தாயின் கோபத்தை இக் கும்மி வெளியிடுகிறது.   கம்மலுக்கு அரும்பு வச்சாண்டி ஆச்சாரியண்ணன், ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் கம்மலிலேயும் கொஞ்சம், கொஞ்சம் பழுது யிண்ணாண்டி கொப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் கொப்பிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி காப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் காப்புலேயும் கொஞ்சம் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி தாலிக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் தாலியிலேயும் கொஞ்சங் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:தருமபுரி மாவட்டம். தங்கச் சுரங்கம்   கோலாரிலுள்ள தங்கச் சுரங்கத்தில், தொழில் செய்யும் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களிலே ஒருவன் தனது தாயாரை வி்ட்டு தனியாக அங்கே வாழ்கிறான். சுரங்கத்தினுள் இறங்கும்பொழுது திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்று அவன் அஞ்சுகிறான். அன்னையை நினைத்துக் கொண்டு தைரியமாக இறங்கிச் செல்கிறான். அவன் உள்ளிருக்கும்போதே தங்கம் எடுப்பதற்காகப் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். இவ்வாறு நம் நாட்டார் ஆபத்துகளுக்கு உட்பட்டு தைரியமாக வேலை செய்து தங்கம் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலை செய்தும் பட்டினியாக இருக்கும்பொழுது வெள்ளைக்காரன் தங்கக் கல்லையெல்லாம் கப்பலிலே ஏற்றித் தன் நாட்டுக்கு அனுப்புகிறான். அவன் தன் நிலையை மட்டுமல்லாமல் நாட்டின் நிலையையும் நினைத்து வருந்துகிறான். பின்வரும் பாடல் சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளியின் உணர்வையும் அவனது நாட்டுப்பற்றையும் வெளியிடுகிறது.   மாடு துண்ணி, மாடு துண்ணி வெள்ளைக்காரன்-ஏலமா ஏலம் மாயமாத்தான், மாயமாத்தான் கிணியிறங்கி கிணியிலத்தான்; கிணியிலத்தான் எறங்கும் போது ஏலம், ஏலம் தாயாரையும், தாயாரையும் நினைக்கிறேண்டி ஊசிபோல, ஊசிபோல டமார் கொண்டு ஏலமே ஏலம் ஒதுக்கி விட்டான், ஒதுக்கி விட்டான் பொன்னுங்கல்லே கல்லை யெல்லாம், கல்லை யெல்லாம் ஒண்ணாச் சேத்து ஏலமே ஏலம் கப்பலுல கப்பலுல ஏத்திட்டானாம்   வட்டார வழக்கு: துண்ணி-தின்னி; கிணி-இறங்கு பொறி;டமார்-வெடி மருந்து. சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:கொங்கவேம்பு,தருமபுரி மாவட்டம்.   இனிக்கும் பாகற்காய்   பாகற்காய் விற்பவள் அதன் கசப்பு ருசியை மாற்ற இனிப்பான பாடலொன்றைப் பாடுகிறாள்.   ஒரு கொடியை தூக்க தூக்க ஓராயிரம் பாவக்காய் சட்டியிலிட்டப் பாவக்காய் சட்டி தாளிச்சப் பாவக்காய் அரிக்கப் பொரிக்கச் சொல்லி அய்யன் தின்ன பாவக்காய் அப்பிடியாக் கொத்த பாவக்காய் ஞ்சு பணத்துக்கு மாத்துலாம்   வட்டார வழக்கு: பாவக்காய்-பாகற்காய்;அப்படியாக்கொத்த-அப்படிப்பட்ட;மாத்துலாம்-குறிப்பிட்ட எடை, ஒரு எடையளவு,   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   கோவில் மாடு!   கோவில் மாட்டுக்கு இருக்கும் மரியாதை உழைக்கும் மனிதனுக்கு இருக்கிறதா? என்று உழைப்பாளி கேட்கிறான்.   ஓர் உழவனின் தோப்பில் சண்பக மர நிழலில் கோவில் மாடு படுத்திருக்கிறது. தோப்பில் வேலை செய்து விட்டு இரு தோட்டக்காரர்கள் ஓய்வுகொள்ள வருகிறார்கள். மனிதன் படுக்க வேண்டிய புல் தரையில் மாடு படுத்திருக்கிறது. ஒருவன் அதனைக் கோலால் தட்டி எழுப்பப் போகிறான். அவனது தோழன் அவனைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொல்லுகிறான்.   குளுகுளுண்ணு காத்தடிக்குது குங்குமத் தோப்பிலே கோயில் பசுமாடு படுத்து குறட்டை விடுகுது கோலடிச்சுக் கூப்பிடாதே குத்தம் வந்து சேரும் சலசலண்ணு காத்தடிக்குது சந்தனத்தோப்பிலே சாமி பசுமாடு வந்து சாஞ்சு படுத்திருக்குது தட்டி எழுப்பாதே தாங்கல் வந்து சேரும்   வட்டார வழக்கு: குத்தம்-குற்றம்; சாஞ்சு-சாய்ந்து;தாங்கல்-மன வருத்தம்.   உதவியவர்: பெ. இராமநாதன்   சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி இடம்:போத்தனூர்,கோவை.   சுங்கக் கேட்டு   ரிசர்வ் காடுகளில் சுங்கச்சாவடிகள் இருந்தன. வெள்ளையர் ஆட்சியில் காட்டு இலாகா அதிகாரிகளின் அட்டகாசத்துக்கு அளவேயில்லை. காட்டு இலாகா காவலர்களும் லஞ்சம் வாங்குவதற்காக கொடுமைகள் செய்வார்கள்.   இளம் பெண்ணொருத்தி பரங்கிக்கீரை பறிப்பதற்காக காட்டுக்குள் போனாள். புல், கீரை முதலியவற்றை காட்டிலிருந்து கொண்டுவர பணம் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். பரங்கிக் கீரை விற்றாலும் சீட்டு வாங்க போதிய காசு கிடைக்காது. பல நாள் கடன் சொல்லிப் பார்த்தாள். முடியவில்லை. ஒரு நாள் நெருக்கிக் கேட்டு, அவளுடைய மேல் முருகை கழற்றி வாங்கிக் கொள்ளுகிறான்.   அவள் வயிறெரிந்து காட்டில் வெள்ளையர் ஆட்சி நடக்கிறதா அல்லது காவல்காரப் பள்ளன் ஆட்சி நடக்கிறதா, என்று கேட்கிறாள்.   சோளக் காட்டு மூலையிலே நமது நாட்டிலே தோத் தேனடா மேல் முருகை சுங்கக் கேட்டிலே கம்மங் காட்டு மூலையிலே நமது நாட்டிலே காடப் புறா மேயக் கண்டேன் நமது நாட்டிலே கொடுத்து விட்டேன் மேல் முருகை சுங்கக் கேட்டிலே பாவாடை கட்டிக் கிட்டு நமது நாட்டிலே பரங்கிக் கீரை பறிக்கப் போனேன் சுங்கக் கேட்டிலே பள்ளப்பயல் விசுவாசமா நமது நாட்டிலே பரங்கிப்பய விசுவாசமா சுங்கக் கேட்டிலே சிறு கீரை விசுவாசமா நமது நாட்டிலே சீமைப்பயல் விசுவாசமா சுங்கக் கேட்டிலே   வட்டார வழக்கு: விசுவாசம்-ஆட்சிக்கு அடங்குவது.   குறிப்பு: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இப்பாடல் எழுந்திருக்க வேண்டும். உதவியவர்: பெ. இராமநாதன்   சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி இடம்:போத்தனூர்.   உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும்   அத்தை மகனும், மாமன் மகனும், மணமகன் உறவு முறையினர். அவர்கள் ஊற்றுத் தோண்டினார்கள். தண்ணீர் இறைத்து தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறார்கள்; அண்ணனும் ஊற்றுத் தோண்டினான். அதன் தண்ணீரும் தோட்டத்துக்குப் பாய்கிறது. அவள் இரண்டு தோட்டத்திலும் வாய்க்கால் விலக்கி வேலையில் உதவி செய்கிறாள். மைத்துனர்களைக் கேலி செய்வதற்காக இப்பாடலை பெண் பாடுகிறாள்.   ஆத்திலே ஏலேலோ ஊத்துப் பறிச்சு அத்தை மகன் ஏலேலோ இறைக்கும் தண்ணி அத்னையும் ஏலேலோ உப்புத் தண்ணி என் பொறுப்பு ஏலேலோ அத்தனையும் எறைக்கும் தண்ணி அத்தனையும் ஏலேலோ நல்ல தண்ணி மானத்திலே ஏலேலோ ஊத்துப் பறிச்சு மாமன் மகன் ஏலேலோ ஏத்தம் வச்சு மானுக் கொம்பு ஏலேலோ ஏத்தம் வச்சு மாமன் மகன் ஏலேலோ எறைக்கும் தண்ணி அத்தனையும் உப்புத் தண்ணி ஏலேலோ   வட்டார வழக்கு: என் பொறப்பு-அண்ணன்.   உதவியவர்: நல்லம்மாள்   சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி இடம்:பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம்.   சோம்பேறி   அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊர் சுற்றுவதும், உண்பதும் உறங்குவதுமே அவன் வேலை. உழைப்போர் நடுவே ஒரு புல்லுருவி இருந்தால், அவனுக்கு வசைதான் கிடைக்கும். ஆனால் அவனுக்கு மானமிருந்தால் தானே!   வட்டம் போடும் வடக்குத் தெரு வந்து நிற்கும் தெற்குத் தெரு உங்குறதும் நெல்லுச் சோறு உறங்குறதும் கார வீடு   வட்டார வழக்கு: உங்குறது-உண்கிறது.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   சோம்பேறி   “யாரோ உழைக்கிறார்கள், நான் சாப்பிடுகிறேன். எங்கேயோ நெல் விளைகிறது. நெல் விளையும் ஊரின் ராஜா என் அப்பா. சீலை நெய்யும் ஊரில் இருப்பவள் என் அம்மா. ஆடு மேய்ப்பவன் என் அண்ணன். பறவை சுடுவது என் தம்பி. இத்தனை பேரும் வேலை செய்து ஒன்றொன்று கொடுத்தால் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் சோம்பேறி. தன்னைத்தானே கேலி செய்து கொள்ளுவது போல செய்து கொள்ளுவது போல அமைந்துள்ளது இப்பாடல். கட்டக் கட்ட புளியமரம் தென்புறத்திலே காராங்கி நெல் விளையும் பட்டணத்திலே பட்டணத்து ராசா எங்கையா பாளையங் கோட்டை சீலைக்காரி எங்கம்மா வெள்ளரிக்காக் கூடைக்காரி எங்கக்கா வெள்ளாடு மேய்க்கிறது எங்கண்ணன் சிட்டுக்குருவி தெரிக்கிறது என் தம்பி சுட்டுச் சுட்டு திங்கிறது நான்தானே   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:பாளையங்கோட்டை.   ரெங்கத்திலே   அயல்நாடு சென்று வந்தவர்கள், பெண்கள் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகப் பல பொய்க் கதைகளை புனைந்து கூறுவார்கள். இரங்கூனுக்குப் போய் திரும்பி வந்தவன் சொல்லுவதையும் அதனை நம்பாமல் கதை கேட்ட பெண்கள் கூறுவதையும் கேளுங்கள்.   (ரங்கூன் சென்று வந்தவன்)   அரிசி அரைக்கால் ரூவா அரிக்கஞ்சட்டி முக்கால் ரூவா சோத்துப்பானெ ரெண்டு ரூவா சொகுசான ரங்கத்திலே   (கேட்பவர் கூறுவது) ஓடையில் கல்லெறக்கி ஒன்பது நாள் பாலங்கட்டி பாலத்து மேலிருந்து பாடிவாரார் நம்ம சாமி காத்தோரம் சேக்குகளாம் கைநிறைஞ்ச வாச்சுகளாம் மணி பார்த்து வாருமையா மகுட துரைராச சிங்கம்   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   விசிறி கொண்டுவா   கணவன் சோம்பேறியாக அலைந்தான். மனைவி, அழாத குறையாக அவனை வேலைக்குப் போகும்படி வேண்டுகிறாள். ஆனால் அவனோ, அவள் சொல்லைக் கேளாமல் ஆற்று மணலில் சூதாடி காலம் கழிக்கிறான். மாலை நேரமானதும், வீட்டுக்கு வந்து சாப்பிட உட்காருகிறான். மனைவி அவனுக்கு எதுவும் பரிமாறவில்லை. அந்நேரத்தில் அடுப்பங்கரையிலிருந்து, அவனது மனைவி பாடுகிறாள்.   ஆத்து மணலிலே கோட்டைக் கட்டி அஞ்சாறு மாசமா சண்டை செஞ்சு வேத்து முகம் பட்டு வாராரோ துரை வெளிச் சுங்கெடுத்து வீசுங்கடி   வட்டார வழக்கு: சுங்கு-விசிறி.   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   கும்மி   கும்மிக்குப் பல நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் பொருளாக வரலாம். குத்து விளக்கேற்றி மங்கல விழாக்களில் பெண்கள் கும்மியடிக்கிறார்கள். நிலாக் காலங்களில் விளையாட்டுக்காகவும் கும்மியடிப்பதுண்டு.   கீழ்வரும் கும்மிப் பாட்டில் காதற் குறிப்புள்ள பல பாடல்கள் ஏற்கனவே சில தொகுப்புகளில் வெளி வந்துவிட்டன. இது வரை வெளி வராத பாடல்களை மட்டும் கீழே தருகிறோம்.   கும்மியடி பெண்கள் கும்மியடி-இரு பாதம் காணவே கும்மியடி நம்மையாளும் காடவ ராஜனை நாடிக் கும்மியடியுங்கடி இந்த நிலாவும் நிலாவுமில்ல-புள்ள நித்திரைக் கொத்த நிலாவுமில்ல இந்த நிலாவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் சம்பந்த முண்டோடி வீராயி? ஒரு வருசமா : ஒண்ணரை மாசமா எண்ணெயும் தேய்த்து முழுகாம சடைவளர்ந்ததும் சன்னியாசியானதும் சபத முண்டோடி வீராயி? காக்காச் சோளம் கருஞ்சோளம்-புள்ள காசுக்கு ஒரு படி விக்கயிலே துடி துடிச்சவன் துள்ளு மீசைக்காரன் துட்டுக் கொருபடி கேக்கராண்டி சின்னக் கிணத்துல பாம்படிச்சு-ஒரு சிங்காரத் தோட்டத்திலே வேட்டையாடி வேட்டையாடி துரை வீட்டுக்கு வாராரு வெங்கலச் சொம்பிலே தண்ணி கொண்டா எண்ணைக் கறுப்பி இளங்கறுப்பி எண்ணை கொண்டுபோற வாணிச்சியே சின்னத் துரை மகன் சாராட்டு வருகுது தீவட்டிக்குக் கொஞ்சம் எண்ணை வாரு   குறிப்பு: பிற்காலப் பல்லவச் சிற்றரசர்களை காடவ ராஜன் என்ற பெயரில் அழைப்பது உண்டு.   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   கள்ளப் பையன் யாரடா?   முறைப்பெண், மாப்பிள்ளைகள் பாடும் பாட்டை முறை வாதம் என்றும் முறைப்பாட்டு என்றும் அழைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் வழங்கும் சில முறைப்பாட்டுகளை முன்னர் கண்டோம். இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்குவது. தமிழ் நாடு முழுவதும் இவ்வகைப் பாடல்கள் வழங்குகின்றன.   பெண் : ஒரு மூசி பூப்பறிச்சு நாங்களெப்படி சோடிச்சோம்? நாங்கள் அப்படி சோடிச்ச பூ நாத்தி எப்படி சோடிப்பா நாத்தி அப்படி சோடிச்ச பூ கரையோரம் போனதா? கரையோரம் போன பூவு கத்திரி பித்திரி ஆனதா? கத்தரிக்காய் அறுக்க வந்த கள்ளப் பையன் யாரடா?   ஆண் : நான் தாண்டி உம் புருஷன் வழி பார்க்க வந்தண்டி   பெண் : வழிபார்க்க வந்தாயா-சாமி வளஞ்சி கும்பிட வந்தாயா ஊராரைத் தண்டனிட்டு உழுந்து கும்பிட வந்தாயா நாட்டாரைத் தண்டனிட்டு நடுங்கிக் கும்பிட வந்தாயா   வட்டார வழக்கு: சோடித்தல்-கோர்த்து மாலையாக்குதல்; உழுந்து-விழுந்து.   சேகரித்தவர்: S. S. சடையப்பன் இடம்:சக்கிலிப்பட்டி,தருமபுரி மாவட்டம்.   கள்ளன் கொண்டு போனானோ?   கொண்டையில் காதலன் பூவைத்தான். அந்தப் பூவின் பிரயாணத்தை கற்பனையில் கண்ட காதலி அவனிடமே அதனைக் கூறுகிறாள். கடைசியில் அவனைக் கோபமூட்ட, “நீ வைத்த பூவை கள்ளன் திருடி விடுவானோ?” என்று கேட்கிறாள்.   சீரான நந்தப் பூ பறிக்க வாடா சீராளா பறிச்சு வந்த நந்தப் பூ கொண்டையிலே வைத்தாயா? கொண்டையிலே வைத்த பூ படுக்கையிலே விழுந்ததா? படுக்கையிலே விழுந்த பூ குப்பையிலே போனதா? கோழி கிளச்சுதா? கோழி கிளச்ச பூ வேலியை அணைஞ்சுதா? வேலியை அணைஞ்ச பூ வெள்ளங்கொண்டு போனதா? வெள்ளங்கொண்டு போன பூவை கள்ளன் கொண்டு போனானோ?   வட்டார வழக்கு: நந்தப்பூ-நந்தியாவட்டம்; வைத்தாயா-வைத்தாயல்லவா; கிளச்சுதா-கிளறிற்றா.   சேகரித்தவர்:s.s. சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   கும்மி அடியுங்கோ!   பழங்காலத்தில் சில விழா நாட்களில் அரசர் பவனி வருவார். வெற்றிவாகை சூடி நகர் திரும்பும் மன்னனை வரவேற்கும் முறைகளைப் பரணிகளில் காணலாம். விழாக் காலங்களில் அரசர் பவனி வரும்போது மக்கள் கூடி அவரை வாழ்த்துவதை, பெருங்கதையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். அரசர் அவைப் புலவர்கள் அரசரைப் பாடுவதற்கென்று அமர்த்தப்பட்ட பொழுது உலாக்களும், மடல்களும், பரணிகளும் நூற்றுக் கணக்கில் தோன்றின. முதல் பிரபந்தங்களில் காணப்பட்ட கவிதைச்சுவை வர வர வற்றி வறண்டது.   அரசர் கவிதைகளைப் பாடும் நாட்டுப் பாடல்களும் அரசர் உலாவை வருணிக்கின்றன. ஆனால் அவை பெண்களுக்கேயுரிய கும்மியைக் கையாளுவதால் அவற்றில் புதுமையைக் காண்கிறோம்.   ராஜன் வருகிற வீதியிலே-ரெண்டு மகட தோரணம் கட்டுங்க மகட தோரணம் கட்டுங்க-நல்ல மாவாலே கோலங்க போடுங்க மாவாலே கோலங்க போடுங்க-பல பூவால பந்தலும் ஜோடிங்க பூவால பந்தலும் ஜோடிங்க பூவையெல்லாரும் கூடுங்க பூவையெல்லாரும் கூடுங்க-அவரை வாழ்த்திக் கும்மி அடியுங்க   வட்டார வழக்கு: மகடதோரணம்-மகரதோரணம், மீன் வடிவில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட தோரணம் ; மீன், அஷ்டமங்கலப் பொருள்களில் ஒன்று ; பாண்டியர் கொடியின் சின்னம். கோலம்-மங்கல விழாவின் அறிகுறி ; தமிழ்ப் பெண்டிரைப்போல்இக்கலையில் வல்லவர் இல்லை.   சேகரித்தவர்:s.s. சடையப்பன் இடம்:கொங்கவேம்பு,தருமபுரி.   வழி நடைப் பாட்டு   தமிழகத்தில் கும்பினியார் பாளையப்பட்டுக்களுடன் பல போர்கள் நடத்தினர். அவர்களின் ஒரே மாதிரியான உடை, தொப்பி, சப்பாத்து அணிவகுப்பு, துப்பாக்கி, பீரங்கி கருமருந்து போன்ற அனைத்தும் தமிழர் அறிந்திராத போர்ச் சாதனங்கள். இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு வெள்ளையரைப் பற்றி அதிசயமான எண்ணம் வளர்ந்தது. வெள்ளையரின் வெற்றிகள் பொது மக்களை மிகவும் திகைக்கச் செய்தது. வெள்ளையர்கள் அமானுஷ்யமான திறமையுடையவர்களாக மக்களால் கருதப்பட்டனர்.   ஓர் நாடோடிக் கவிஞன் அவர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறான். அம்மாதிரியான பாடல்கள் சமீப காலம் வரை நமது ஏட்டுப் பள்ளிக் கூடங்களில் கோலடிப் பாட்டாகப் பாடப்பட்டு வந்தன.   படைகள் வெள்ளைக்காரத் துரைகள் பிடிகள் நீட்டி சலாம் செய்தார் பட்டாளத்திலே தம்பூரடிக்கிற பயணம் கேட்டுத் தாங்களே அடிகள் பிடிகள் கொடிகள் மாறி அணைத்துத் துப்பாக்கி தாங்கியே அரசன் கருணை ரசமட்டம் துரை அனைவரும் வந்து கூடினார் அந்தச் சணம் பட்டாளம் கொஞ்சம் அனேக வெள்ளைக் காரரும் ஆயுதங்களைக் கொண்டு வந்து மேல் பீரங்கி ஏத்தியே செந்தூரந்தக் கர்னல் ஆட்டி செந்தூரத்த மேட்டியும் சூதுடன் படை வருகு தென்று சூரங் காட்டி கோபமாய் நெறித்துப் படைகள் முறுக்குச் சாத்தி முறுக்கு மீசையும் கையுமாய் பல்லைக் கடித்துக் கவர்னர் துரைகள் படைகள் விரட்டிக் குத்தவே குத்தும் படைகள் திரண்டு வந்து கோட்டைக் கொத்தளம் பிடிக்கவே கோட்டைக் கொத்தளம் பிடித்துக் கொண்டு கூர்ந்து தெற்கே புறப்பட்டார் மார்ச் மாதம் கோட்டைப் பிடித்து வயணமாக நடந்து தான் மன்னன் கர்னல் சின்னத் துரைகள் மகிழ்ந்து காகித மெழுதவே சென்னப்பட்டணம் கவர்னர் துரைகள் வர்ணமாகக் கேட்டுத் தான் செலவுக்கென்ன செய்வோ மென்று சீறி மனதில் எண்ணியே இளவலுடனே லட்ச ரூபாய் இனாமாகத் தருகிறேன் அமைத்து மருந்து குண்டு பீரங்கி சமைத்து ரங்க ரங்கரே குண்டு பீரங்கி சேர்த்துத் துரைகள் குறிச்சி கட்டிலிலிருக்கவே கமான் சொல்லிய பட்டாள மெல்லாம் கலந்து கூடி நடக்கவே.   வட்டார வழக்கு: சூரங்காட்டி-சூரத்தனத்தைக் காட்டி; காமன்-ஆங்கிலச் சொல் (come on).   சேகரித்தவர்:M.P.M. ராஜவேலு இடம்:மீளவிட்டான்   உழவும் தொழிலும்   ஒரு நூற்றாண்டுக்கு முன் நமது நாட்டில் முக்கியத்தொழில்கள் விவசாயமும், நெசவுமாகவே இருந்து வந்தன. பிற தொழில்களெல்லாம் இவற்றைச் சார்ந்தே இருந்தன. கொல்லன், தச்சன் முதலியவர்கள் உழவுக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுத்தனர். சமூக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் வேறு தொழில்கள் இல்லை. வண்ணான், நாவிதன், கொத்தன் போன்றவர்கள் தனி மனிதனது சுக வாழ்விற்கு உதவி புரிந்தார்கள். இத்தகைய உற்பத்தி முறையில் மனித உழைப்பே முக்கியமான உற்பத்தி சக்தியாக இருந்தது. இச்சக்தி கிராம சமுதாயத்தினுள்ளே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும், கோயில்கள் இவ்வுழைப்பின் மீது ஆதிக்கம் புரிந்தன. அதற்கடுத்தாற்போல் நிலவுடைமையாளர்களும், உயர் குலத்தினரும் ஆதிக்கம் புரிந்தனர். உழவர்கள் பெரும்பாலும், கோயில் நிலங்களையோ அல்லது நில உடைமையாளர்களின் நிலங்களையோ குத்தகைக்குப் பயிரிட்டு வந்தார்கள். கோயில் குத்தகையும் நிலவுடமையாளரின் குத்தகையும், மிக அதிகமாக இருந்தது. இச் சுரண்டல் முறையினால்தான் கோயில்களில் ஆடம்பரமான திருவிழாக்கள் நடத்தவும், நூற்றுக்கணக்கானவர்களுக்கு சோறிடவும் பொருள் குவிந்தது. மேல் வர்க்கத்தினரும் தங்கள் சுரண்டலினால் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தனர். கிராம கைத் தொழிலாளிகள் ஆண்டுக்கொரு முறை கோயிலிலிருந்தும் நிலச்சுவான்களிடமிருந்தும் உழவர்களிடமிருந்தும் தானியத்தை ஊதியமாகப் பெற்று வந்தனர். அவர்களது வாழ்க்கை, மேல் வர்க்கத்தாரின் ஆதிக்கத்தினுள் இருந்தது.   பல நூற்றாண்டுகளாக இவ்வாறு உறங்கிக் கிடந்த கிராம வாழ்க்கை வெள்ளையர் வருகைக்குப்பின் மாறத்தொடங்கிவிட்டது. நிலவுடைமைச் சுரண்டலால் வாழ்விழந்த உழவர்கள், கைத்தொழிலாளர்கள் முதலியோர் வெள்ளைக்காரர்கள் தொடங்கிய புதுத் தொழில்களில் கூலி வேலை செய்ய கிராமங்களை விட்டு வெளியேறினர். மேற்கு மலைச் சாரலில் காடுகளை வெட்டித் தேயிலை, காப்பித் தோட்டங்களையும், புதிதாகத் தோற்றுவிக்க அவர்கள் சென்றார்கள். ரயில் பாதைகள் அமைக்கவும், ரஸ்தாக்கள் போடவும், துறைமுகங்கள் கட்டவும், ஆலைகள் கட்டவும், சுரங்கங்கள் தோண்டவும், அவர்கள் தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பம்பாய் முதலிய நகரங்களுங்கும், கடல் கடந்த சீமைகளுக்கும் சென்றார்கள். அங்கெல்லாம் உழைத்து உழைத்து அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. கிராமத்தி்லிருந்த சுரண்டல் முறை வேறு, நகரங்களிலுள்ள சுரண்டல் முறை வேறு. அங்கே எஜமானர்கள் வேறு. இங்கே எஜமானர்கள் வேறு. முதலில் சிறிதளவு சுதந்திரம் இருப்பது போல் தோன்றினும் பின்னர் அது கானல்நீர் என்று உணர்ந்தனர்.   இவ்வாறு வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் உழைத்துவரும் தொழிலாளர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இருள் நீங்கி ஒளி தோன்றும் காலத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வருங்கால நல்வாழ்வில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் சமூகக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்கள் பாடும் நாட்டுப் பாடல்களில் அன்பு மலர்வதையும், உழைப்பில் ஆர்வத்தையும், நன்மையில் பற்றையும், தீமையில் வெறுப்பையும் நாம் காண்கிறோம். அவர்களது எளிய பாடல்கள் அவர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. இத்தகையத் தொழில் பாடல்கள் நகர வாழ்க்கையின் போலித் தன்மையாலும், தொழில் முறைகளின் கடுமையினாலும், படிப்படியாக மறைந்து வருகின்றன. கிராமங்களில் மட்டும் பரம்பரையாக வளர்ந்த கலை மரபுகளால் பாதுகாக்கப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக இப்பாடல்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவாக சேகரிக்கப்பட்டாலன்றி இவை மறைந்து போவது உறுதி.   இத்தொகுப்பில் ஏற்றப் பாட்டுகள், பொலிப்பாட்டு, உழவுத் தொழிலோடு தொடர்புடைய பாடல்கள், வலைஞன் பாடல்கள், வண்ணார் பாட்டு, வண்டியோட்டிகளது பாடல்கள், உப்பளத்தார் பாடல்கள், தேயிலை தொழிலாளர் பாடல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இதில் சேர்க்கப்படாத தொழில்களைப் பற்றிய பாடல்கள் சேகரித்து இனி வெளியிடப்பட வேண்டும்.   உழவுக் காளை   மனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலம் மாறுவதற்குக் காரணமாக இருந்தது. அவன் காளைகளைப் பழக்கி உழுவதற்கு கற்றுக் கொண்டதே. அவ்வாறு உழுவதற்குப் பயன்பட்ட மாடுகள் அவனுக்கு நிலையாகத் தங்கும் வாழ்க்கையைச் சாத்தியமாக்கிற்று. அவனுக்குச் செல்வமும் பெருகிற்று. எனவே ‘மாடு’ என்ற சொல்லுக்கே ‘செல்வம்’ என்ற பொருள் வந்தது.   மாட்டைக் கவர்ந்து சென்று செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று அதனைப் பழக்கத் தெரியாதவர்கள் பழங்காலத்தில் எண்ணினர். பழக்கத் தெரிந்தவர்களோ மாட்டைப் பாதுகாக்கப் போராடினர். இதனையே ‘வெட்சி’ என்றும், ‘கரந்தை’ என்றும் புறப் பொருள் இலக்கண நூல்கள் கூறுகின்றன.   பிற்கால மன்னரும் இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, ஒரு நாட்டின் பசு நிரையையும், காளைகளையும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால், நாட்டையும் கைப்பற்றலாம் என்றெண்ணினர், நாட்டின் கால்நடைச் செல்வம் போய் விட்டால் உழவுத் தொழில் முடங்கிவிடுமல்லவா?   சிற்சில பண்டைக் குழுவினர் காளையை, நந்தியென்றும், பசவன் என்றும் வணங்கினர். சமண மதத்தினர் ரிஷபதேவர் என்று முதல் தீர்த்தங்கரருக்குப் பெயரிட்டு காளையை அவரது அடையாளமாக்கினர். பிற்காலச் சைவம், அதனைச் சிவனுக்கு வாகனமாக்கியது. மனிதன் காட்டுக்காளையை பழக்கி தனது வேலைக்குப் பயன்படுத்தியதையே புராணக் கதை இவ்வாறு சொல்லுகிறது.   தற்காலத்திலும் உழவுக்குப் பயன்படும் காளையை உழவர்கள் போற்றுகிறார்கள். முதல் உழவுக்கு நாட் செய்யும் போது அதனை அலங்கரித்து, பிள்ளையாருக்கு பூசைப் போட்டு உழத் தொடங்குகிறார்கள்.   காளைகளுக்குச் செய்யும் அலங்காரங்கள் எவை என்று தெரிய வேண்டுமா? இப்பாட்டைப் படியுங்கள்.   மின்னேரு எருதுக்கெல்லாம் என்ன என்ன அடையாளம் நெத்திக்குச் சிட்டிகளாம் நெலம் பார்க்கும் கண்ணாடி வாலுக்குச் சல்லடமாம் வாகுக்கை பொன்னாலே கொம்புக்குக் குப்பிகளாம் கொணவாலு சல்லடமாம் தூக்கி வைக்கும் கால்களுக்கு துத்திப் பூ சல்லடமாம் எடுத்து வைக்கும் கால்களுக்கு எருக்கம் பூ சல்லடமாம் மண்டியிடும் கால்களுக்கு மாதளம் பூ சல்லடமாம் இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணிப் பிள்ளையார்க்கு கட்டக் காட்டுக் கொல்லையிலே-ரெண்டு காரிக்காளை மின்னேரு காரிக்காளை வித்த பணம் கருத்தப் பொண்ணு மார்மேல செங்காட்டுக் கொல்லையிலே-ரெண்டு செக்காளை மின்னேரு செக்காளை வித்த பணம் செவத்தப் பொண்ணு மாருமேல   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி.   நடுகை-1   நடுகை வேலை பள்ளர், பறையர் சாதிப் பெண்கள் மட்டுமே செய்யும் வேலை. பருவ வேலைகளிலேயே நாற்று பிடுங்கி நடுவதுதான் மிகவும் நுட்பமான வேலை. முதுகு குனிந்து நெடு நேரம் சரியான இடைவெளி விட்டு நாற்றை நட்டுச் செல்வதற்குப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும். நடுகைப் பாடல்கள் காதலைப் பொருளாகக் கொண்டனவும் அனுதாபம், இரக்கம், கொடுமை, பரிதாபம் இவைகளைப் பொருளாகக் கொண்டனவும் உள்ளன.   நடுகைப் பாடல்கள் தற்பொழுது நிரம்பக் கிடைப்பதில்லை. ஆனால் சுமார் 600 வருஷங்களுக்கு முன்னால் நடுகைப் பாட்டையும் அதற்கு முன் பள்ளர் ஆடும் ஆட்டத்தையும், கண்டும் கேட்டும், ரங்கநாதர் கோயில் அரையரொருவர் அவற்றைக் கற்றுக் கொள்ளுவதற்காக பறைச்சேரியிலேயே சென்று தங்கிவிட்டாரென்று ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அழகர் கோயிற் பள்ளியில் நடுகைப் பாடல்கள் பல காணப்படுகின்றன. அதைப் பின்பற்றி எழுந்த பள்ளுகளைனைத்தும் நடுகைப் பாடல்களுக்கு இடம் கொடுக்கின்றன. தற்பொழுது முயன்றால் இன்னும் மறைந்து விடாமல் வழங்கிவரும் பாடல்களைச் சேகரிக்கலாம்.   நெடு நேரம் குனிந்து நட்ட பெண்ணொருத்தி நிமிர்ந்து பார்க்கும்பொழுது வயல் வரப்பில் அவளது காதலன் அவளை நோக்கிப் பாடுகிறான்.   நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் குள்ளப் பெண்ணே நாத்து நடும் கையாலே-என்னையும் சேத்து நடலாகாதோ?   சேகரித்தவர்:வாழப்பாடி சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம் மாவட்டம்.   நாத்துப் பறியே நடுவப் பறியே நட்டுக் குனிந்து நிமிந்து நிக்கும் நாணயமே, கண்ணே நாந்தானடி பாடியது உன்னைத் தாண்டி பொண்ணே   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை மாவட்டம்.   நடுகை-2   விவசாய வேலைகளில் மிகவும் கடினமானது, நாற்று நடுவதுதான். இவ்வேலையைச் செய்வது, பள்ளர், பறையர் குலப் பெண்களே. வரப்பைச் சுற்றி ஆண்கள் நின்று கொண்டு நாற்றுக் கட்டுக்களைச் சுமந்து வயல் வெளியில் நிற்கும் பெண்களை நோக்கி வீசி எறிவர். பெண்கள் குனிந்த முதுகு நிமிராமல் விரைவாக நாற்று முடிகளை எடுத்து நடுவார்கள். தற்காலத்தில் நடுகை நடும் பெண்கள் மனதிற்குள்ளேயே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் பாடிக் கொண்டே நடுவார்கள்; வரப்பிலுட்கார்ந்து கொண்டு ஆண்களும் பாடுவார்கள். பாடல் இனிமையில் தங்களை மறந்து அதன் சந்தத்திற்கேற்ப கைகளும் விரல்களும் அசைய பெண்கள் நாற்று நடுவார்கள். இப் பாட்டுகளையும் காட்சிகளையும் ரசித்த தமிழ்க் கவிஞர்கள் முக்கூடற்பள்ளு முதலிய பிரபந்தங்களில் நடுகைக் காட்சிகளைச் சிறந்த சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். தற்பொழுது நடுகைப் பாடல்கள் அபூர்வமாகவே பாடப்படுகின்றன. சுவைமிக்க இப்பாடல்கள் அனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.   பள்ளன்: உள்ளார் உழவடிக்க ஊர்க் குருவி நாத்தரிக்க நார மரமடிக்க நட்டு வாடி கட்டப் புள்ளே நாலு மூலை சமுக்க வயல் அதிலே நடும் குட்டப் புள்ளே நான் போடும் நாத்துக்களை நீ சேர்ந்து நட்டாலாகாதோ? நாத்து நடும் கட்டப் புள்ளே நட்டு வாடி கோயில் களம் குத்துக் கல்லு மேலிருக்க-நீ கூப்பிடடி நான் வருவேன்.     சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   நடுகை-3 ஒரு சிறு நிலச்சுவானின் வயலில் நடுகை நடக்கிறது. பெண்கள் வேகமாக வேலையை முடித்துச் செல்லுவதற்காக அகலமாக நடுகிறார்கள். அவ்வாறு நட்டால் விளைச்சல் குறையும். அதைக் கண்ட நிலச்சுவான் அவர்களைக் கெஞ்சி நெருக்கி நடவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான். அவர்களுக்குக் கோபம் வராமல் இருக்க நயமாக அவர்களுடைய அழகை அவர்களது காதலன் புகழ்ந்து போற்றுவதாகச் சொல்லுகிறான். ஒருத்தியின் தண்டைக்கால் அழகைக் கண்டு அவளது காதலன் ஐந்து மாதம் கொஞ்சினானாம். மற்றொருத்தியின் கொண்டை அழகைக் கண்டு அவளது காதலன் ஆறுமாதம் கொஞ்சினானாம். இவ்வாறு அவர்களது உள்ளத்தைக் குளிர்வித்து தன் ஏழ்மை நிலையையும் சொல்லி நெருக்கி நட வேண்டிக் கொள்கிறான்.   நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு பெண்டுகளே! பெண்டுகளே! தண்டு போட்ட பெண்டுகளே!-உன் கொண்டை அழகைக் கண்டு கொஞ்சுறானாம் ஆறுமாசம் நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு   உதவியவர்: செல்வராஜு   சேகரித்தவர்: கு. சின்ன்ப்ப பாரதி இடம்:மடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   நடுகை-4   ஆவுடைத் தங்கம் என்ற பெயருடைய சங்கரன் கோவில் தெய்வம் ஆவுடையம்மன். கூட்டமாக நின்று வயலில் பெண்கள் நாற்று நடுகிறார்கள். கூட்டமாக வேலை செய்யும் பொழுது உற்சாகம் பிறக்கிறதல்லவா? அதுவும் வேலைக்குரிய கூலியைக் குறைக்காமல் அன்போடு அழைத்துக் கொடுக்கும் ஆவுடைத் தங்கத்தின் வயலில் நடுகை நடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஒரு பெண் பாடத் தொடங்கினாள்; மற்றைப் பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.   ஆராளு நூறாளு அருபத்தி ரெண்டாளு ஆவுடைத் தங்கம் கையாளு ஆல வட்டம் போடு தில்ல அம்பது ஆள வச்சு ஆதரவா வேலை வாங்கி கூப்பிட்டுப் பேரு போடும் குணமுள்ள ஆவுத்தங்கம்   வட்டார வழக்கு: ஆராளு-யார் ஆள்?; ஆல வட்டம்-கூட்டமாகச் சேர்ந்திருக்கும் அழகு; ஆவுத்தங்கம்-ஆவுடைத் தங்கம் என்பது.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   நடுகை-5   வயல் வரப்பில் நின்று நாற்றுக் கட்டை இளைஞர்கள், நடும் பெண்களை நோக்கி எறிகிறார்கள்.   அவர்களில் ஒருவன் தன் காதலி வரப்பருகே வரும் பொழுது எல்லோருக்கும் பொதுவாக சில வார்த்தைகளும், அவள் காதில் மட்டும் விழும்படியாகச் சில வார்த்தைகளும் சொல்லுகிறான்.   (எல்லோரும் கேட்க) நாத்துப் புடுங்கி வச்சேன் நடுவத் தொளி ஆக்கி வச்சேன் நாத்து நடும் பொம்பளையா சேத்து நட மாட்டியாளோ   (காதலி மட்டும் கேட்க) பொட்டிட்டு மையிட்டு பொய்யக் கரை தீர்த்த மாடி நட்டுட்டும் போற புள்ளை நயன வார்த்தை சொல்லிரம்மா   வட்டார வழக்கு: தொளி-சேறு; பொம்பிளையா-பெண்பிள்ளைகாள்; மாட்டியாளா-மாட்டீர்களா?; பொய்யக்கரை-பொய்கைக் கரை, குளக்கரை; நட்டிட்டு-நட்டு விட்டு; நயன வார்த்தை-கண் சாடை.   குறிப்பு: புள்ளை (நெல்லை மாவட்டத்தில் பெண்களைப் புள்ளை என்பது சில சாதிகளில் வழக்கு) மேற் குறித்த பேச்சு வழக்கில் உள்ளவை. இப்படிப் பிறர் முன் பேசக்கூடாது என்பதைக் குறிப்பாகக் கூறுகிறாள் காதலி.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி வட்டாரம்.   சரசரணு வந்திருங்க சவுக்கையிலே இருந்திருங்க காரியமே உண்டானா கலகலணு பேசிருங்க   வட்டார வழக்கு: சரசரணு, கலகலணு-விரைவு குறிக்கும் இரட்டைச் சொற்கள் வந்திருங்க, இருந்திருங்க, பேசிருங்க-வந்து விடுங்கள், இருந்து விடுங்கள், பேசி விடுங்கள்.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி வட்டாரம்.   களை எடுத்தல்-1   நடுகையைப் போலவே களை எடுத்தலும் பெண்களின் வேலையாகும். பயிரைப் போலவே தோன்றும் களைகளைக் கூர்ந்து நோக்கிப் பிடுங்கியெடுக்க வேண்டும். சற்று அயர்ந்தால் களைக்குப் பதில் பயிர் கையோடு வந்து விடும். களை எடுத்தலும் நடுகையைப் போலவே சலிப்புத் தரும் வேலை. சலிப்புத் தோன்றாமலிருக்க வயல் வரப்பிலுள்ள ஆண்களும் வயலில் களை எடுக்கும் பெண்களும் சேர்ந்து பாடுவார்கள்.   வாய்க்கால் வரப்பு சாமி வயக் காட்டுப் பொன்னு சாமி, களை எடுக்கும் பெண்களுக்கு காவலுக்கு வந்த சாமி, மலையோரம் கெணறு வெட்டி மயிலைக் காளை ரெண்டு கட்டி அத்தை மகன் ஓட்டும் தண்ணி அத்தனையும் சர்க்கரையே   உதவியவர்: பொன்னுசாமி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:ஒலப்பாளையம்.   களை எடுத்தல்-2   களை யெடுக்கும் பெரிய குளம் கணக்கெழுதும் ஆலமரம் கொத்தளக்கும் கொட்டாரம் குணமயிலைக் காணலியே   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   களை எடுத்தல்-3   களை யெடுக்கும் பெரிய குளம் கணக் கெழுதும் ஆலமரம் கொத்தடிக்கும் கொட்டாரம் கூறு வைக்கும் களத்து மேடு கண்ணாடி வளையல் போட்டு களை எடுக்க வந்த புள்ளே கண்ணாடி மின்னலிலே களை எடுப்புப் பிந்துதடி வெள்ளிப் புடி வளையல்-நல்ல விடலைப் பிள்ளை கை வளையல் சொல்லி அடிச்சவளை-நல்லா சுழட்டு தில்ல நெல்களையை   உதவியவர்: முத்துசாமி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:வாழ்நாய்க்கன் பாளையம்.சேலம்.   களை எடுத்தல்-4   களை எடுத்துக் கை கழுவி கரை வழியா போற புள்ளா பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்கு பால் குடம் கொண்டு போறியா   சேகரித்தவர்:M.P.M. ராஜவேலு இடம்:மீளவிட்டான்,தூத்துக்குடி,நெல்லை மாவட்டம்.   நச்சுப்புல் களையெடுப்பு   பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல்லை நறுக்கித் தள்ளவேண்டும். நன்மை வளர வேண்டுமானால் தீமை ஒழிக்கப்படவேண்டும். இதில் சமரசமேயில்லை. நமது புராணங்கள், நாட்டுக் கதைப் பாடல்களெல்லாம் இதைத் தானே கூறுகின்றன; கண்ணன் நரகாசுரனைக் கொன்றான்; முருகன் சூரபத்மனைக் கொன்றான். நீதிக்கும் அநீதிக்குமிடையே சமரசமேது? பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல் அழகாக இருந்தால் கூட, அவை அல்லியும் தாமரையுமாக இருந்தால் கூட அவற்றைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். விவசாயி இவ்வுண்மையை அறிவான்.   பழமரத் தோட்டத்தைப் பாதுகாக்கும் உழவன் தனக்கு துணையாக உழைக்கும் உழவர்களிடம் களை வெட்டச் சொல்லுகிறான்.   ஆத்துக்குள்ளே ஏலே லோ அத்திமரம் அகில கிலா அத்திமரம்   அளவு பாத்து ஐலப்பிடி அறுக்கித் தள்ளு அகிலகிலா அறுக்கித்தள்ளு   குளத்துக் குள்ளே ஏலேலோ கொய்யாமரம் அகிலகிலா கொத்தித் தள்ளு   சேத்துக் குள்ளே ஏலேலோ செம்பகப்பூ அகிலகிலா செம்பகப்பூ   செம்மையாக ஐலப்பிடி சேத்தெடுக்க அகிலகிலா சேத்தெடுக்க   நாத்துக்குள்ளே ஏலேலோ நச்சுப் புல்லு அகிலகிலா நச்சுப் புல்லு   நச்சுப் புல்லை ஐலப்பிடி நறுக்கித் தள்ளு அகிலகிலா நறுக்கித் தள்ளு   உதவியவர்: ஜானகி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:முத்துகாபட்டி,சேலம்.   கமலை-1   வறண்ட பிரதேசங்களில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக் கிணறு வெட்டி கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து தோட்டப்பயிர் செய்வார்கள். கமலையென்ற தகரத்தாலான பாத்திரத்தில் தோலாலான வால் என்ற பையைக் கட்டிக் கயிற்று வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஓட்டி நீர் இறைக்க வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவமில்லாத அவளது மச்சான் கமலை இறைக்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து பாடுகிறாள்.   பொட்டலிலே வீடுகட்டி பொழுதிருக்கத் தாலிகட்டி கருத்தக் காளை ரெண்டும் கட்டி கமலெறைக்கப் போகும் கருத்த துரை பொட்டலிலே கிணறு வெட்டி போர்க்காளை ரெண்டும் கட்டி காப்புப் போட்ட கருத்த மச்சான் கமலை கட்டத் தெரியலையே   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி.   சில நாட்களில் கமலை இறைப்பதில் தேர்ச்சிபெற்று விட்டான். அது கண்ட அவள் உளம் மகிழ்ந்து அவனைப் புகழ்கிறாள்.   கமலை யலங்காரம் கமலை மாடு சிங்காரம் கமலை யடிக்கும் மன்னருக்கு கருத்தப் பொட்டலங்காரம் சாலை யோரம் கிணறு வெட்டி சாஞ்ச கமலை போட்டு இழுத்து விடும் கருத்தத்துரை இனிக்குதையா கிணத்துத் தண்ணி மந்தையிலே கிணறு வெட்டி மயிலைக் காளை ரெண்டு பூட்டி சீதனம் கொடுத்தானே சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:கோவில்பட்டி.   சில ஊர்களில் கண்மாய்ப் பாசனம், ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில் மண்வெட்டியால் தண்ணீரை விலக்கி விட்டால் போதும் வேலை முடிந்தது. அவன் மடை திறந்து விட்ட நீரில் குளிப்பதில் அவளுக்குப் பெருமை, அவனுக்கும் தான்.   மண் வெட்டி கொண்டு மடை திறக்கப் போறசாமி மடையைத் திறந்து விடு மஞ்ச நீராடி வாரேன்   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:கோவில்பட்டி. கமலை-2   ஆறு குளம் இல்லாத ஊர்களில் கமலை கட்டித் தண்ணீர் இறைப்பார்கள். தண்ணீர் தோட்டப் பயிர்களுக்குப் பாயும். கமலை ஓட்டும் இளைஞனைப் பார்த்து அவனது மாமன் மகள் பாடுகிறாள்.   செடியோரம் கெணறு வெட்டி செவலைக் காளை ரெண்டு கட்டி அத்தை மகன் ஓட்டும் தண்ணி அத்தனையும் சர்க்கரையே ஆத்துக்கு அந்தப் புரம் அஞ்சாறு தென்னமரம் வச்ச மரம் பார்க்கப் போன மச்சான் வரக் கண்டீர்களா?   சேகரித்தவர்:பொன்னுசாமி இடம்:ஓலைப்பாளையம்.   ஏற்றப் பாட்டு   ஆற்றுப் பாசனம் இல்லாத இடங்களில் தமிழ் மன்னர்களும், நாயக்க மன்னர்களும், குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் வெட்டிப் பாசன வசதிகளை அபிவிருத்தி செய்தார்கள். அரசர்கள் போரில் வெற்றி பெற்றபொழுது வெற்றித் தூண்கள் நாட்டியது போலவே நீர் நிலைகளையும் வெட்டினார்கள். தென் பாண்டி நாட்டில் வாகைக்குளம் என்ற பெயருடைய ஏரி ஒன்று இருப்பதே சான்றாகும். நாயக்க மன்னர்கள், தாங்கள் வெட்டிய நீர் நிலைகளுக்குச் சமுத்திரம் என்று பெயர் வைத்தார்கள். அரசரது பெயர்களையும், தளவாய்களது பெயர்களையும் நினைவுறுத்தும் ஏரிகள் பல உள்ளன. உதாரணமாக விசுவநாதப் பேரேரி, வடமலை சமுத்திரம், கோபால சமுத்திரம் முதலியன. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் புதிய ஏரிகள் எவையும் தோண்டப் பெறவில்லை. பெரும்பாலான பழைய ஏரிகள் அடிக்கடி பழுது பார்க்கப்படவில்லை. அதனால் அவை மேடிட்டுப் போதுமான அளவு நீர்த் தேக்கி வைக்க வசதியற்றவை ஆயின. அவற்றிலிருந்து தண்ணீர் பாய்ந்தும் அந்த நிலங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல் போயிற்று. ஏரிகளில் நீர் நிரம்பினாலும், நாற்று வளர்ந்து, பொதி தள்ளி, மணி பிடிக்கும் தறுவாயில் ஏரி வற்றிப் போகும். அங்குமிங்குமுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்குக் கீழே சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக, உழவர்கள் பள்ளத்திலுள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காகப் பனையோலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப் பெட்டிகளைப் பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும், கயிறுகளைக் கட்டிப் பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இவ்வேலை மிகவும் சலிப்பைத் தருவதாயினும் வேலையின் பயனை எண்ணி அவர்கள் நீண்ட நேரம் உழைப்பார்கள். சலிப்புத் தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவுக்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடுவார்கள். நீரை மடையிலேற்றுவதற்கு வேறொரு கருவியும் உள்ளது. அதன் பெயர் இறைவை மரம். ஒரே மரத்தைத் தொட்டி போல் குடைந்து ஒரு ஓரத்தில் கைப்பிடிபோல் அமைத்திருப்பார்கள். அதன் நடுவே கயிற்றைக் கட்டி முக்காலி போல மூன்று கம்புகளைத் தரையில் நாட்டி அதனோடு, இறைவை மரத்தை இணைப்பர். இறைவை மரத்தின் தொட்டி போன்ற பகுதி தண்ணீரினுள் இருக்கும் கைப்பிடியை மேலும் கீழுமாக அசைத்தால், தண்ணீர் பெட்டியினுள் ஏறி மடையினுள் பாயும். இறைவை மரத்தை இயக்க ஒரே ஒரு ஆள் போதும். இப்பாடல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகுதியாக பாடாப்படுகிறது. தென்னாற்காடு மாவட்டத்திலும் காலால் மிதித்து ஏற்றம் இறைப்பவர் ஏற்றப் பாட்டுப் பாடுவர். மேலே ஒருவன் ஏற்றத்தை மிதிக்க கீழே ஒருவன் நின்று கிணற்றிலிருந்து வெளிவரும் வாளியைத் தூக்கித் தண்ணீரை மடையில் செலுத்துவான். ஏற்றத்தின் மேலுள்ளவன் முதலடியைப் பாடி முடித்தப்பின் கீழேயுள்ளவன் அடுத்த அடியைப் பாடுவான். அப்பாடல்களில் சில விடங்களில் பாரத இராமாயண பாத்திரங்கள் வருவர். இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஏற்றப் பாட்டுகள் பொருளைவிடச் சந்தமே முக்கியமாகத் தருகிறது. பிள்ளையார் வழிபாடு, காதல் பிதற்றல்கள், திருவிழா வர்ணனைகள், உடல்வலி தோன்றாமலிருக்கக் கடவுளை வேண்டுதல் முதலிய பல பொருள்கள் தெளிவில்லாமல் குழம்பி வருகின்றன. நட்டபயிர் விளைய வேண்டும், அறுவடைக்குப் பின் திருவிழாக்கள் நடக்கவேண்டும், திருவிழா விளையாட்டுகளில் கவலையெல்லாம் மறக்கவேண்டும் என்ற இன்ப ஆர்வம் ஏற்றப் பாட்டுகளில் பொதுவாக இருப்பதைக் காணலாம்.   ஏற்றப் பாட்டு-1   பிள்ளையாரே வாரும் பிள்ளைபெருமாளே இளைய பிள்ளையாரே எண்ணித் தர வேணும் எண்ணித் தந்தாயானால் என்னென்ன படைப்பேன் பச்சரிசி தேங்காய் பாலு பணியாரம் கொத்தோடு மாங்காய் கொலையோடு தேங்காய் ஈனாக் கிடாறி இடது கொங்கைப் பாலும் வாலைக் குமரி வலது கொங்கைப் பாலும் தெற்கு மலையேறி தேக்கிலைப்பறித்து தேக்கிலைக்கும் தண்ணீர் தெளிக்கும் பிள்ளையாருக்கு வடக்கு மலை ஏறி வாழை இலை பறித்து வாழெலைக்கும் தண்ணீர் வைப்போம் பிள்ளையாரே ஓம் முருகா வேலா ஓடி வந்தாயானால் ஓடி வந்தாயானால் கோடிப் பயன் உண்டு ஒரு பதிலே நில்லு சிறுவன் தொலை மேலே ஒத்த மரம் நெல்லி உயர்ந்த மரம் தோப்பு ஒத்திரைத்தாயானால் சித்திரக் கார் பாயும்   ஒத்த குரல் ஓசை நித்த மணிப் பூசை ஓடாதே மானே ஒளிந்திருப்பான் வேடம் ஓடக் கரை யோரம் வேடப்பய காவல் ஒரு பணமாம் செம்பு ஒளி விடுதாந்தேரு தேரு திரண்டோட மாலை கழண்டோட ஓடுதையா நூறு ஓடுதையா நூறு பாப்பாரப் பெண்ணே மோக்கலையா தண்ணி மோக்கலேடா அண்ணா முகங்கழுவப் போறேன் பாலு என்னும் பயலே தோழனென்னும் தோழர் பாலு கொண்டு போன பாலகனைக் காணோம் தயிரு கொண்டு போன தங்கம் வரக் காணோம் இருண்ட நேரம் தோழா இலுப்பமரம் தாண்டி இருக்கச் சொல்லிப் போன இளமயிலைக் காணோம் இருப்பதென்றால் சொல்லு கொடுப்போம் கலநெல்லு இருள் ஆந்தை கூவ மருள் ஆந்தை சாய இரும்புலக்கை கொண்டு திருப்பிவிட்டான் தேரை இரும்பு வழித்தூணாம் துலுக்கமல்லி வாசல் இருந் தடிக்கப்பந்து நடந்தடிக்கச் சோர்ந்தான் இருட்டி வந்த மேகம் மருட்டி மழை பெய்ய முந்தின குதிரை தாண்டுதாம் கடலை முந்தாதே தோழா மோசம் வரும் சொன்னேன் முந்தி ஒரு சாமம் முழிச்சழுதான் பாலன் முந்தி நட்ட சம்பா பொங்கலுக்கு நெல்லாம் முந்திரியும் காய்க்க மந்திரியின் தலைமேல் முன்னே நட பெண்ணே அன்ன நடை பார்க்க மூக்குக்தியும் தேரடும் மேற்கத்தியா சாடை க்குத்தியைத் தாடி மோதிரங்கள் செய்ய முன்னே மலட்டாறாம் வெள்ளம் பிறண்டோட அஞ்சறையாம் பெட்டி அதில் நிறைஞ்ச மஞ்சள் அஞ்சு கொத்து மஞ்சள் அரைக்கப்பத்து நாளாம் அம்பலமும் கூத்தும் ஆடுவாள் குறத்தி அம்பனுக்கும் தெற்கே வம்பனுடைய தேசம் அம்பாலக் கோட்டை ஆசாரப் பொம்மை அன்பு மலையாளம் தம்பி போன தேசம் அன்பு காட்டி வார்த்தை அழகு காட்டித் தேமல் ஆறு அடைக்கக் கட்டை அமுது அடைக்கச் சேனை ஆத்து வண்டலோட பூக்குதடி நாணல் ஆத்தே இவள் ராணி வார்த்தை பேச நீலி ஆத்தாங் கரையோரம் ஆனை விளையாட்டாம் ஆத்தரளி தின்றால் மாத்திரைகள் உண்டோ ஏழு மூங்கி வெட்டி எமதூண்டி போட்டான் ஏழைக்குலப் பெண்ணாம் சோலைக் குயில்போல ஏழை வச்சான் வாழை ஏறி வெட்டலாமோ ஏழைக்குல வண்ணான் சாதிலம் கேட்டான் எழுத்தாணி கொண்டு எழுதிய குடமாம் குமரியின் தலைமேல் எழுக்கோடா செட்டி பருசப்பணம் பத்து எழுத்து வர்ண சேலை வெளுத்து வாடா வண்ணா எங்கமதயாணை கொம்பு மதயானை வங்கணக் குறத்தி எங்கிட்டு வருது தங்கிச்சி வரிசை எட்டிப் பூப்பூக்க பொட்டில் இடும் மையாம் எட்டுதில்லை தண்ணி வத்து தில்லை பொய்கை செம்பருத்தி காயாம் இளம் பருத்தி நூலாம் துவக்குதடி பாக்கு தோழியிடம் சொல்ல மணக்குதடி மஞ்சள் மாரியிடம் சொல்ல தோழி கட்டும் சேலை தொண்ணூறு முழமாம் நான் அளந்து பார்க்க நாற்பது முழமாம்   தோழி கடல் ஏற வாரி அலைமோத தோத்துப் போன சேவல் நேத்து வந்து கூவ தோப்புக் குள்ளவாடி தொகுத்தே கவி பாட தோப்பிலுள்ள மாங்காய் காப்பணமாம் நூறு சென்றதையா நூறு சொல்லத் தொலைமேலே வந்ததையா நூறு வைக்கத் தொலைமேலே ஆலையும் கரும்பும் ஆடி வர நூறு சோலையும் கரும்பும் சுத்திவர நூறு தங்க மயில் ஏறி சாமி வர நூறு புள்ளி மயில் ஏறி வள்ளி வர நூறு ஒற்றை அடிபோல சுட்ட ரொட்டி நூறு ஆனை அடிபோல அதிரசங்கள் நூறு குதிரை அடிபோல கொளுக் கட்டைகள் நூறு மாடு கட்டும் தும்பு மறு விலங்கு நூறு கன்று கட்டும் தும்பு கயிறணையும் நூறு எருது கட்டத் தும்பு எடுத்தனையா நூறு ஆனதைய்யா நூறு ஆறுமுக வேலா ஒரு நூறும் போல திரு நீறும் பூசி இரு நூறும் பாழ் இரணியந் தேர் ஓடி   முன்னூறூம் பாடி மூவணத் தேர் ஓடி நானூறும் பாடி நாக நாதர் ஓடி ஐந்நூறும் பாடி ஐயனார் தேரோடி அறு நூறும்பாடி ஆரணித் தேர் ஓடி எழுநூறும் பாடி இரணியந் தேர் ஓடி எண்ணூறும் பாடி ஈஸ்வரந் தேரோடி தொளாயிரமும் பாடி ஆயிரமாங் கோடி ஆயிரத் தைச் சேர்த்து கோபுரத்தைப் பார்த்து கோபுரத்து மேலே கும்பத்திலே தண்ணி இஞ்சிக்கும் பாச்சி எலுமிச்சைக்கும் பாச்சி மஞ்சளுக்கும் பாச்சி மற்படுதாம் வெள்ளம் கைமாத்துக்காரர் கச்சைக் கட்டும் தோழர் நான் இரைத்த நேரம் நீ இரைக்க வாடா கை வழியே வாடா கைவலியும் தீர மேல் வழியே வாடா மேல்வலியும் தீர காளியாத்தா தாயே கால்கள் வலியாமல் மீனாட்சி அம்மா மேலுவலியாமல் கருப்பண்ண சாமி கைகள் வலியாமல் முத்து முனியாண்டி உத்த துணை நீயே ஏர்வாடி அல்லா எனக்குத் துணை நீயே!   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   ஏற்றப் பாட்டு-2   வாரும் பிள்ளையாரே! வழிக்குத் துணையாக, வழிக்குத் துணையாக! எனக்குப் பயம் தீர, மூத்த பிள்ளையாரே! முன்னடக்க வேணும் முன் நடந்தாயானால் மூணுடைப் பேன் தேங்காய் இளைய பிள்ளையாரே எண்ணித் தர வேணும் எண்ணித் தந்தாயானால்; என்னென்ன படைப்பேன் பச்சரிசி தேங்காய்; பயறு பலகாரம் எள்ளுடன் துவரை ; கொள்ளுடன் பயறு அரிசி கலந்து ; ஆயிரம் கலமாம் துவரைக் கலந்து ; தொளாயிரம் கலமாம் எள்ளு கலந்து ; எண்ணூறு கலமாம் மொச்சை கலந்து ; முன்னூறு கலமாம் மூங்கில் களைபோல ; முன்னூறு கரும்பு, நாணல் தட்டை போல ; நானூறு கரும்பாம் அகத்திக் கம்பு போல ; ஐநூறு கரும்பாம்.   ஈனாக்கிடேறி இடது கொங்கை பாலும் வாலை குமரி வருந்தி இடித்த மாவும் சேராத பெண்கள் சேர்ந்திடித்த மாவும் இத்தனையும் சேர்த்து ஆட்டுத் தடம்போல ஆட்டுத்தடம் போல அரியதரம் நூறு கோழித் தடம் போல குளக் கட்டை நூறு யானையடிப் போல சுட்ட ரொட்டி நூறு பூனைத்தடம் போல பொறி யுருண்டை நூறு இத்தனையும் சேர்த்துப் பொட்டணமாய்க் கட்டி வடமலையேறி வாழையிலை பறித்து தெற்கு மலையேறி தேக்கிலை பறித்து தேக்கிலையும் தள்ளி தென்னை ஈக்கி வாந்து மூங்கில்களை பறித்து ஆத்திலே முழுகி தோப்பிலே சமைத்து ஏத்தமை பரம்பி ஆத்தங்கரை வேலா அள்ளிப்பூசை கொள்ளும் குளத்தங்கரை வேலா அள்ளிப் பூசைகொள்ளும் குளத்தங்கரை வேலா கூட்டிப்பூசை கொள்ளும் துளைக்கடை வேலா துளையை விட்டுப் போரும் மடைக்கரை வேலா மடையை விட்டுப் போரும்   முப்பதிகா ரெண்டு முப்பதிகா மூணு முப்பதிகா நாலு மூக்குத்தியும் தோடும் மூக்குத்தியும் தோடும் மேக்கத்தியா சாடை மூக்கத்தியைத் தாடி மேக்கத்தியா போக முந்தி நட்ட சம்பா முருகனுக்கே பொங்கல் பிந்தி நட்ட சம்பா பெருமாளுக்கே பொங்கல் முன்னே மலட்டாறு என்னை மிட்டாதோ முப்பதிகாலாறு முப்பதிகா ஏழு முப்பதிகா எட்டு முந்தின குதிரை முந்தின குதிரை சென்றதாம் மதுரை பாண்டியன் குதிரை தாண்டுதாம் கடலை முக்காட்டுக்காரி வைப்பாட்டி தானா முக்காட்டை நீக்கி முகம்பார்க்க வாரும் நாவலரே கேளும் கோவலன் கதையை நாற்பதிகா ரெண்டு நாற்பதிகா மூணு நாற்பதிகா நாலு நாக மென்ன செய்யும் நாக மென்ன செய்யும் காலம் வந்து சூழ்ந்தால் நாகத்தைக் கொல்லாதே பாவம் வரும் பெண்ணே கோலரைக் கொண்டால் நாகந்தலை புண்ணு   நானா கிழவி நான் கிழவியானால் நான் கிழவியானால் பூமணங்களேது நாட்டிலே ஒருத்தி தேட்டிலே சமத்தி நாற்பதிகா ஆறு நாற்பதிகா ஏழு நாற்பதிகா லெட்டு நாகூரான் கப்பல் நாளை யில்ல பயணம் ஞாயிற்றுக் கிழமை அம்பை விடலாமா அமர்ந்த படைமேலே அம்புக் கதிகாரி அருச்சுனராம வீமன் அம்பு வில்லைத்தாடா ஆளடர்ந்து வாரான் தொந்திப் பிள்ளையாரே துணை கொள்ள வேணும் ஓரடியளந்த மாயன் பெருமாளே ஒருபதிகா ரெண்டு ஒருபதிகா மூணு ஒருபதிகா நாலு ஓரடிக்கும் கீழே மாயன் இருப்பாராம் ஒருபதிலே நில்லு ஒருத்திதானா போறா ஓடை வழியாக ஒத்தையிலேவாடி மெத்தையிலே சாய ஓரென்ன வளையல் தோரண வளைவி ஒருபதிகா ஆறு ஒருபதிகா ஏழு ஒருபதிகா எட்டு ஓடாதே மானே   ஓடாதே மானே ஒளிந்திருப்பான் வேடன் ஓட்டங்கண்ட மானை வேடன் துயந்தானே பன்னீரும் செம்பும் பாலன் தலைமேலே பன்னிருகால் ரெண்டு பன்னிருகால் மூணு பன்னிருகால் நாலு பன்னிருகால் ஐந்து பன்றி குத்தப் போன பாலன் வரக் காணோம் பன்றிகளைப் பார்த்தால் பாரமலை போல சிங்கம் குத்தப் போன சீமான் வரக் காணோம் சிங்கங்களைப் பார்த்தால் சிறு புலிகள் போ பன்னிரு காலாறு பன்னிரு காலேழு பன்னிருகாலெட்டு பண்ணிப் பதித்தாண்டி பண்ணிப் பதித்தாண்டி பத்துலெட்சம் பொன்னு எண்ணிப் பதித்தாண்டி எட்டுலட்சம் பொன்னு பாப்பாரப் பெண்ணே முகப்பாயோ தண்ணி விருந்தாடிப் பெண்கா(ள்) இருந்தாரிப் போங்க இருபதிகா ரெண்டு இருபதிகா மூணு இருபதிகா நாலு இருக்க நல்ல சோலை இருக்க நல்ல சோலை குளிக்க நல்ல பொய்கை இருக்கையிலே கண்டேன் திருப்பதி மலையை இருக்கச் சொல்லிப் போன இளமயிலைக் காணோம் இருபதிகா ஆறு இருபதிகா ஏழு இருபதிகா எட்டு இருட்டு வழி போனால் இருட்டு வழி போனால் விரட்டுவாண்டி கள்ளன் இரும்பு வெள்ளித்தூணாம் துலுக்கன் பள்ளிவாசல் இருட்டி வந்த மேகம் மிரட்டி மழை பெய்ய மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே காலம்பர வேளை சாயும் கதிரோனே   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   ஏற்றப் பாட்டு-3   ஏற்றம் இறைக்கும் மாமன் மகனின் புகழை ஓர் இளம் பெண் பாடுகிறாள். ஏற்றத்தின் அசைவைச் சந்தமாக்கி அதற்கேற்றாற்போல் அவள் கை கொட்டிப் பாடுகிறாள். அவன் பாட்டில் ஈடுபட்டு நேரம் போனதே தெரியாமல் ஏற்றம் இறைக்கிறான். அவன் இறைத்த நீர் மஞ்சள் கொல்லைக்கும், கொய்யாத் தோட்டத்திற்கும் பாய்கிறது.   காதலன் : பட்டுப் பையாம் வெள்ளிக் குச்சாம் தில்லாலங்கிடி லேலம் பதினாறு வெத்திலையாம் தில்லாலங்கிடி லேலம் சின்னப் பையன் குடுத்த பை தில்லாலங்கிடி லேலம் சிரிக்கு தோடி இடுப்பு மேலே தில்லாலங்கிடி லேலம்   காதலி : மலையோரம் கெணறு வெட்டி தில்லாலங்கிடி லேலம் மானுக் கொம்பு ஏத்தம் வச்சு தில்லாலங்கிடி லேலம் மாமன் மகன் இறைத்த தண்ணி தில்லாலங்கிடி லேலம் மஞ்சாத் தோட்டம் பாயுதோடி தில்லாலங்கிடி லேலம் குன்னோரம் கிணறு வெட்டி தில்லாலங்கிடி லேலம் கொய்யாக் கொம்பு ஏத்தம் வச்சு தில்லாலங்கிடி லேலம் கொழுந்தனாறு இறைக்கும் தண்ணீ தில்லாலங்கிடி லேலம் கொய்யத் தோட்டம் பாயுதோடி தில்லாலங்கிடி லேலம் மலையோரம் போற மாமா தில்லாலங்கிடி லேலம் மயிலிரண்டு புடிச்ச வாய்யா தில்லாலங்கிடி லேலம் குன்னோரம் போற மாமா தில்லாலங்கிடி லேலம் குயிலிரண்டு புடிச்சி வாய்யா தில்லாலங்கிடி லேலம்   சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம் :அரூர்,சேலம்.   கதிரறுப்பு   அறுவடைக்குக் கூட்டம் கூட்டமாக உள்ளூர் வேலையாட்களும் வெளியூர் கூலியாட்களுமாக வருவார்கள். கதிரறுத்து, கட்டுக்கட்டி, களத்துக்கு தூக்கிச் சென்று, வட்டம் உதறி, புணையாலடித்து, மணி தூவி, நெல்லைக் குவியலாகக் குவிப்பார்கள். ஆண்களும் பெண்களும் பலவிதமான இவ்வேலைகளில் ஈடுபடுவார்கள். சோர்வு தோன்றும்போது அறுவடைப் பாடல்களைப் பாடுவார்கள். இப்பொழுது பாடல்கள் பாடுவது நின்று விட்டது.   இப் பாடல்களில் வேலையின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காதல், இனிமை இவற்றைப் பற்றியே உழவர்களும் உழத்தியரும் பாடுவார்கள். இடையிடையே கலந்துவரும் தொடர்ச்சியான பொருள் வருமாறு பாடல்கள் அமைந்திரா.   அறுவடைப் பாடல்கள் (பெண்)   கோடை கருதறுப் பே கொடிக்காலே சூழ்ந்திருப்பே நாளக் கருதறுப்பே நானும் வந்தாலாகாதோ !   (ஆண்)   கஞ்சிக் கலயம் கொண்டு கருதறுக்க போற புள்ளா காக்காய் அலம்புதடி கருத்தப் புள்ளா உங்கலயம்   (பெண்)   நெல்லுக் கதிரானேன் நேத்தறுத்த தாளானேன் நேத்து வந்த தோழனுக்கு நேரம் தெரியாதோ !   (ஆண்)   கருதறுப்பில கங்காணத்திலே கமகமங்குது குமுகுமுங்குது கன்னத்து மஞ்சள் என்னைப்பகட்டுது முன்னே போற பொண்ணே ! உன்னைத் தாண்டி பொண்ணே   (பெண்)   ஊரோரம் கதிரறுத்து உரலுப் போல கட்டுக்கட்டி தூக்கி விடும் கொத்தனாரே தூரகளம் போய்ச்சேர கருதறுத்துக் கிறுகிறுத்து கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி தூக்கி விடும் கொத்தனாரே தோப்புக் களம் போய்ச் சேர   (ஆண்)   நெல்லுக் கருதறுத்து நிமிர்ந்து நிற்கும் செவத்தபுள்ள-என் சொல்ல மறந்திராத-நீ சொன்னபடி நானிருப்பேன்   (பெண்)   தும்ப மலர் வேட்டி கட்டி தூக்குப் போணி கையிலேந்தி வாராக எங்க மாமன் வட்டம் உதறுதற்கே   (வேறு)   நாலு மூலை வயலுக்குள்ளே நாற்று நடும் குள்ளத்தாரா குலுங்குதோடி குண்டஞ்சம்பா உன்னரிவாள் என்னரிவாள் உருக்கு வச்ச கருக்கரிவாள் சாயப்பிடி அரிவாள் சம்புதடி நெல்லம் பயிர் வெள்ளிப்பிடி அரிவாள் வீசுதடி நெல்லப் பயிர் அறுப் பறுத்து திரித்திரிச்சு அன்னம் போல நடை நடந்து சின்னக் கட்டா கட்டச் சொல்லி சிணுங்கினாளாம் பொன்னியம்மா வீதியிலே கல் உரலாம் வீசி வீசிக் குத்துராளாம் கையைப் புடிக்காதீங்க கைவளையல் நொறுக்கிவிடும் கண்ணாடி வலைவிதொட்டு கருதறுக்கப் போற பிள்ள கண்ணாடி மின்னலுல கருதறுப்பு பிந்துதடி வெள்ளிப்பிடி யருவா விடலைப்பிள்ளை கையருவா சொல்லியடிச் சருவா சுழட்டுதையா நெல்கருதை   வட்டார வழக்கு: கருது-கதிர்; நேத்து-நேற்று; மறந்திராதே-மறந்திடாதே; அருவா-அரிவாள்.   சேகரித்தவர்: இடம்:S.M.கார்க்கி சிவகிரி,நெல்லை மாவட்டம். S.S. போத்தையா விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம். வாழப்பாடி சந்திரன் வாழப்பாடி,சேலம் மாவட்டம். சடையப்பன் அரூர்,தருமபுரி மாவட்டம்.   தூக்கிவிடும் !   கதிர்க் கட்டை தூக்கிவிடும்படி அறுவடைக்கு வந்த கையாளான பெண் வேண்டிக் கொள்கிறாள். களம் தூரமாயிருக்கிறாதாம். அங்கே அவருடைய மாமன் வட்டம் உதறக் காத்திருக்கிறானாம்.   ஊரோரம் கதிரறுத்து உரலுப்போல கட்டுக்கட்டி தூக்கிவிடும் கொத்தனாரே தூரகளம் போய்ச்சேர தும்பமலர் வேட்டி கட்டி தூக்குப்போணி கையிலேந்தி வாராக எங்க மாமா வட்டம் உதறுதற்கே வட்டார வழக்கு : போணி-பாத்திரம் (சோறு கொண்டு வருவதற்குப் பயன்படும்) வாராக-வருகிறார்கள். (க என்பது ஹ என்று உச்சரிக்கப்படும்)   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.   தேயிலைத் தோட்டம்   புழுதி புரளுதய்யா !   ஓர் இளம் பெண் புதிதாக தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சேருகிறாள். அதற்கு முன் அவள் நதியோரம் கிராமத்தில் நன்செய் நிலத்தில் பாடுபட்டவள். அவளுக்கு பழைய வேலைக்கும் புதிய வேலைக்கும் இருக்கிற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. முள்ளடர்ந்த காட்டில், குளிர்காற்று வீச உடல் புழுதியால் மறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தனியாக நின்று வருந்துகிறாள்.   மூணாறு சாலையிலே முள்ளடர்ந்த காட்டுக்குள்ளே பொன்னான மேனியெல்லாம் புழுதி பெறளுதய்யா   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி.   வண்டிக்காரன் காதலி   வண்டிக்காரன் பாரமேற்றிக் கொண்டு அயலூர் போகிறான். பாரம் விலையானால் அவளுக்கு அணிகள் வாங்கி வருவதாகச் சொல்லுகிறான்.   அவள் அழைத்துச் செல்லாமல் பசப்பு வார்த்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறாள். மேலும் அயலூரிலே தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை வேறுபட்ட இரு உவமைகள் மூலம் வற்புறுத்துகிறாள். அவனை ஐந்தாறு பசுக்கள் நடுவிலுள்ள காளையாகவும் உவமிக்கிறாள். போதாதோ? அவன் இச்சூட்டையே நினைத்துக் கொண்டு திரும்பி வந்துவிட மாட்டானோ?   வண்டி செல்லும் ஊர்களின் பெயர்களும் பாரம் எதுவென்பதும், பாடும் பகுதிகளைக் குறித்து மாறுபடும்.   வண்டிக்காரன் : கடல புடிச்ச வண்டி கம்பத்துக்குப் போறவண்டி கடலை விலையானா-உனக்கு கடகம் பண்ணி நான் வருவேன் உப்பு முடிஞ்ச வண்டி கொப்பாளம் போற வண்டி உப்பு விலையானா-உனக்கு கொப்பு பண்ணி நான் வருவேன்   காதலி : வண்டியலங்காரம் வண்டிமாடு சிங்காரம் வண்டிக்காரன் கூடப்போனா மெத்த மெத்த அலங்காரம் அஞ்சாறு பசுக்களோடே அழக செவலைக் காளையோடே போகுதில்லே என் எருது பொல்லாத சீமைதேடி கட்டக் கருத்தோடு மெத்தக் கிழட்டாடு மேங்காட்டை நோக்குதில்லை   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   ஏலத்தோட்டம்   ஏலப் பழம் எடுப்பதற்குத் தொழிலாளர்களைப் பிரித்தனுப்புகிறார் கங்காணி. அவர்களுள் இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவன் முந்திய தினங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய முடியாமல் தடுத்து வீண் நேரம் போக்கச் செய்தான். அதனால் அவர்களுடைய கூலி குறைந்து விட்டது. ஒரு பெண் தைரியமாக இந்த இளைஞனை அனுப்ப வேண்டாம், பெண்களை மட்டுமே அனுப்பினால் போதும் என்று சொல்கிறாள். கங்காணியும் ஒப்புக் கொள்கிறான். அன்று பெண்கள் மட்டும் வேலை செய்து நிரம்பப் பறிக்கிறார்கள். ஏலப்பழத்தைப் பாடம் பண்ணி ராஜபாளையத்துக்கு அனுப்புகிறார்கள். பெண்களுக்கும் கூலி நிறையக் கிடைக்கிறது.   ஏலப் பழமெடுக்க இந்தாளு வேண்டாமய்யா பெட்டிப் பழமெடுக்க பெண் குயில்கள் நாங்க வாரோம் ஏத்தத்திலே பழமெடுத்து இறக்கத்திலே பாடம் பண்ணி இறங்குதல்லோ சரக்கு மூடை ராஜபாளையம் சீமை தேடி   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.     தேயிலைத் தோட்டம்   தேயிலைத் தோட்டம் ஓர் இளைஞன் களை வெட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய காதலி கூடையெடுத்துக் கொண்டு கொழுந்து எடுக்கப் போகிறாள். இருவரும் வேலை செய்யுமிடம் பக்கத்தில் இல்லை. அவள் மேல் முனைக் காட்டுக்குச் செல்ல வேண்டும். அவனுக்கு மலைச் சாரலில் தான் வேலை. அரிசிக் கடைக்குப் போகிற சாக்கில் இருவரும் சேர்ந்து செல்லலாமா? என்று கேட்கிறாள்.   கூட மேலே கூட வைச்சு கொழுந் தெடுக்கப் போற புள்ளே கூடய இறக்கி வச்சு குளிர்ந்த வார்த்தை சொல்லிப் போயேன் ஏலமலைக்குப் போறேன் ஏலப்பசுங் கிளியே ஏலப்பூ வாடையிலே என்னை மறந்திராதே ஏத்தமடி கல்மருத இறக்கமடி மீனாக்கொல்லை தூரமில்ல அரிசிச்சாப்பு துயந்து வாடி நடந்து போவோம் கண்டியும் கண்டேன் கல்மருத தோட்டம் கண்டேன் தூரமில்ல அரிசிச்சாபு துயந்து வாடி நடந்து போவோம்   வட்டார வழக்கு: கூடய-கூடையை; கல்மருத-கல்மருதத் தோட்டம்; ஏத்தம்-ஏற்றம், உயரம்; மீனாக்கொல்லை-தோட்டத்தின் பெயர்; அரிசிச்சாப்பு-அரிசிக்கடை; துயந்து-தொடர்ந்து.   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.   பருத்திக் காடு   பருத்தி பிடுங்கப் போகிறாள் மீனாள். அவளோடு பல பெண்கள் செல்லுகிறார்கள். பருத்திக் காட்டில் சொக்கன் அருகிலிருந்தாலும் அவளால் அவனோடு பேச முடியவில்லை. ஒரு நாள் அவளுடைய தோழிகள் வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். அவள் தனியே இருக்கிறாள். இன்று பார்த்துச் சொக்கன் வரவில்லை. ஏமாற்றமடைகிறாள்.   கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு, சிறிதளவு சில்லறையை பெண்கள் சேமித்து வைத்துக் கொள்ளுவார்கள். அவளிடமும் கொஞ்சம் ரொக்கம் இருந்தது. தனக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளலாமென்றுதான் அவள் அதை வைத்திருந்தாள். ஆனால் அவள் காதலன் வெயிலில் மிதியடியில்லாமல்தான் தன்னைக் காண வரவில்லையென்று எண்ணி அவள் தனது சேமிப்பில் அவனுக்குச் செருப்பு வாங்க எண்ணுகிறாள்.   அவளுக்கு மணமானால் சிறிதளவு பணம் வேண்டும். கூலிக்குப்போய் தேவையான அளவு பணம் சம்பாதிக்க முடியாது. அவளுக்கென்று தகப்பன் விட்ட குறுக்கம், ஐந்தாறு பருத்திச் செடி வளரவே காணும். தன் புஞ்சையிலும் உழைக்கவேண்டும். உடுக்க உடையும், குடிக்கக் கூழும், கணவன் கையை எதிர்பாராமல் பெற்றுகொள்ள வேண்டும் என்று மீனாள் எண்ணுகிறாள்.   பருத்திக் காட்டுப்பொழி வழியே பாசி வச்சுப் போற மச்சான்-நான் ஒருத்தி எடுக்கிறது உங்களுக்குப் புரியலயே பருத்திப் புன்செய்ப் பொழி நெடுக பாதை வழி போற மன்னா சித்திரக்கால் நொந்திராம செருப்பு வாங்கி நான் தாரேன்   சேகரித்தவர்:S.M.கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.   அஞ்சாறு பருத்திச் செடி அவரு விட்ட ஒரு குறுக்கம் செல்லச்சாமி விட்ட புஞ்செய் மாசிப் பருத்தியடி மலையோரம் செம்பருத்தி ராசிப் பொருத்தமில்லை ராமருட வாசலிலே பருத்தி எடுக்கவேணும் பச்சைச் சீலை எடுக்கவேணும் ரயில்வண்டி ஏறவேணும் ராமேஸ்வரம் போகவேணும்   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:கோவில்பட்டி, நெல்லை.   புன்செய் உழவு   மூன்று ஏர்கள் உழுகின்றன. இரண்டாவது ஏருக்குக் கழுத்தேரு என்று பெயர். முதல் ஏருக்கு முன்னத்தி ஏர் என்றும் கடைசி ஏருக்கு பின்னத்தி ஏர் என்றும் பெயர். எட்டிலிருந்து புன்செய்க் காடு தூரத்தில் இருந்தால், கலப்பையிலுள்ள மேழியையும், கலப்பைக் குத்தியையும் நுகத்தடி மீது ஏற்றி காளை பூட்டி ஓட்டிச் செல்லுவார்கள். புன்செயை அடைந்ததும் கலப்பையை இறக்கி, வடத்தை இழுத்துக்கட்டி நேராக்கி உழத்தொடங்குவர்.   மூன்று உழவர்களில் ஒருவனுக்குக் காதலி உண்டு. அவள் வேலைமுடியும் சமயம் வந்து ஓடைக்கரை கருவ மரத்தடியில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் பேசிவிட்டு போவாள்.   இன்று ஏர் கட்டுமுன்பே அவள் வந்து விட்டாள். அடுத்த ஏர்க்காரன் காதலனிடம் சாடையாக அதனைக் கூறுகிறான்.அவன் அதனைத் தெரிந்திருந்தான். எனவே அவளை அனுப்பி விட்டு வருவதாகச் சொல்லி அவனிடம் ஏரைப்பூட்டச் சொல்லிவிட்டு ஓடுகிறான். துணைவர்கள் பொறாமையின்றி கௌரவமாக காதலர்களுக்கு உதவி செய்வதை நாட்டுப் பாடலிலும் கிராம வாழ்க்கையிலும் இன்றும் காண்கிறோம்.   (குறிப்புரை S.S.போத்தையா)   முன்னத்தேராம் பின்னத்தேராம் மூணேரும் தனதேராம் கழுத்தேரு கட்டுமுன்னே கண்டேனடி கருங்குயிலே முன்னத்தி ஏருக்காரா முறுக்கிவிட்ட மீசைக்காரா நீ தொட்ட கருத்தப்பிள்ளை நிண்ணு மயங்குதாளே முன்னத்தி ஏருக்காரா முதலாளி பண்ணைக் காரா நீ தொட்ட கட்டப்புள்ள நிண்ணு மயங்குதாளே ஓடையிலே ஓரனேறு ஒருத்தி மகள் கருத்தாளு கருத்தாளு பேரு சொன்னா கனகமணி ஓசையிடும் மூணேறு கட்டியல்ல முகமெல்லாம் தேர் ஓடி கழுத்தேரு கட்டையிலே கண்டேன் கருங்குயிலே ஏரப்புடி இளையதம்பி இளமயில நான் தொடர இருக்கப் பறந்திராம என்னருமைப் பசுங்கிளியே   வட்டார வழக்கு: ஏரு-ஏர் ; கட்டையிலே-கட்டும் வேளையிலே ; பறந்திராம-பறந்துவிடாமல்.   சேகரித்தவர்:S.S. போத்தையா இடம்:கோவில்பட்டி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   நெல்லிமரம் காவல்   அறுப்புக்குச் செல்லும் இளைஞன் தன் காதலியிடம் வேலை முடியும்போது தான் நிற்குமிடத்தைச் சொல்லிவிட்டு, அவளையும் எந்த இடத்தில் வேலை செய்வாய் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லுகிறான்.   புள்ளிபோட்ட ரவிக்கைக் காரி புளியங்கொட்டை சீலைக்காரி நெல்லறுக்கப் போகும்போது நான் நெல்லி மரக்காவலடி கஞ்சிக்கலயங் கொண்டு கருக்கரிவாள் தோளிலிட்டு அறுப்பறுக்கப் போகும்போது உன் இருப்பிடத்தைச் சொல்லிடடி   சேகரித்தவர்:வாழப்பாடி சந்திரன் இடம்:வாழப்பாடி,சேலம்.   மாடு மேய்க்கும் சிறுவன்   மாடு மேய்க்கும் சிறுவன் மாட்டுக்குத் தண்ணீர் காட்ட குளத்துக்கு வருகிறான். அவனுடைய காதலி படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாட்டைத் தப்ப விட்டுவிடுகிறான். மாடு தப்பிவிட்டதை அவள் சுட்டிக் காட்டுகிறாள். ஆனால் அவன் கவலைப்படவில்லை.   பெண் : மலைமேலே மாடு மேய்க்கும் மாட்டுக் காரச் சின்னதம்பி மாடோடிப் போகுதடா மாமலைக்கு அந்தாண்டே   ஆண் : மாடோடிப் போனாலென்ன மற்றொருத்தி சொன்னாலென்ன நீ குளிக்கும் மஞ்சளுக்கு நான் நின்னு மயங்குரேண்டி   உதவியவர் :வாழப்பாடி சந்திரன் இடம்:சேலம் மாவட்டம்.   பொழுதிருக்க வந்து சேரும்   கணவன் மாடு பிடித்துக்கொண்டு மலைக்குப் போகிறான். மனைவி கைக்குழந்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்று வழியனுப்புகிறாள். மலையில் புல் நிரம்ப உண்டு. மாடு நன்றாக மேயட்டும் என்று நினைத்து நேரத்திற்குத் திரும்பாவிட்டால் இரவில் கொடிய விலங்குகளால் ஆபத்து நேரிடக்கூடும். ஆகவே சீக்கிரம் திரும்பி விடும்படி அவனிடம் சொல்லுகிறாள். அவனோ காடுமலையெல்லாம் அறிந்தவன். மாடுகளும் வசங்கிய மாடுகள். அவை எங்கும் திசை தப்பிப் போய்விடா. ஆகவே கவலை வேண்டாமெனத் தேறுதல் சொல்லிவிட்டு அவன் புறப்படுகிறான்.   மனைவி: நாட்டுத் துறவல் குச்சி நான் அணையும் தங்கக்குச்சி பூட்டும் துறவல் குச்சி போகுதில்ல ஒத்த வழி குளத்தில் ஒருகல் உண்டும் கூந்தல் ஒரு பாகம் உண்டும் என்னத் தொட்ட மன்னவர்க்கு முகத்தில் ஒரு தேமலுண்டும் நாங்கிள் கம்பெடுத்து நடுத் தெருவே போற மன்னா குறுக்கே சவளுதுன்னு கூந்தல் ஒரு பாகத்துக்கு   கணவன்: பச்சைத் துகில் உடுத்தி பாலகனைக் கையிலேந்தி மணக்கவே மஞ்சள் பூசி மாதவியே பின்னே வாராள்   மனைவி: புல்காடு ரொம்ப உண்டும் பொழுதனைக்கும் மேஞ்சிடாமல் பொழுதிருக்க வந்துசேரும் புள்ளிமான் பெற்ற கண்ணே   கணவன்: உழுகாத மாடா உழவறியா காளங்கண்டா வசக்காத மாடா வசம் பண்ணி நிக்குதற்கு   வட்டார வழக்கு: துறவல் குச்சி-திறவுகோல் குச்சி ; பொழுதனைக்கம்-பொழுதனைத்தும் ; பொழுதிருக்க-பகல் முடியுமுன் ;உழுகாத-உழாத ; காளங்கண்டா-காளைக்கன்றா? ; வசம்-வசக்குதல்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.   மந்தையில் காதல்   எருமைமாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவன் தன் காதலியை அடிக்கடிச் சந்திப்பான். காளை மாடு மேய்க்கத் தொடங்கிய பின், அவனை அடிக்கடி காண முடிவதில்லை. ஒரு வேளை பதவியுயர்ந்த நிலைமையை அவன் காட்டிக்கொள்கிறானோ? அவள் மரியாதையின்றி அவனைத் திட்டுகிறாள். அவன் பொறுமையாகக் கேலி செய்து, நாகரத்தின வளையல் செய்து போட்டு உன்னை சிறையெடுப்பேன் என்கிறான். காதலியின் கோபம் தணிந்து அவன்மீது அன்பு காட்டுகிறாள்.   பெண்: ஏலே ஏலே சின்னப்பய எருமை மாடு மேச்ச பய கழுதைப் புரண்டு போனியடா   ஆண்: நண்டுக்குழி மண்ணெடுத்து நாகரெட்ண வளவி தொட்டு பெண்டுகள் சிறையெடுக்க பொறந்தோமே சிங்கக்குட்டி   பெண்: மந்தையிலே நிண்ணுல்ல மயிருலர்த்தும் மச்சாவி கதறிவரும் கருத்தக்காளை-இங்கே கண்ணு விட்டாலாகாதோ?   வட்டார வழக்கு: மச்சாவி-மச்சான் ; கருத்தக்காளை-காதலன் மேய்க்கும் காளையையும் குறிக்கும், காதலனையும் குறிக்கும் ; கண்ணு விட்டால்-நோட்டம் விட்டால். சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.   உப்பளம்   தமிழ்நாடு நீண்ட கடற்கரையை உடையது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கடற்கரையில் வாழ்ந்துவரும் மக்கள் கடல் நீரிலிருந்து உப்புக்காய்ச்சி வருகிறார்கள். பெரும்பாணாற்றுப் படையில் உப்புக்காய்ச்சும் தொழில் செய்யும் மக்கள் உமணர் என்றும், அவரது பெண் மக்கள் உமட்டியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உப்புக் காய்ச்சும் தொழில் தமிழ் நாட்டு புராதனத் தொழில்களில் ஒன்று.   இத் தொழில் மிகவும் கடினமானது. அளத்தில் நீரில் உறைந்திருக்கும் உப்பு காலைக்கீறி வேதனையை உண்டாக்கும். கால்களில் புண்கள் தோன்றும். பழக்கமில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் மிகவும் துன்பப்படுவார்கள். தூத்துக்குடி அருகிலுள்ள உப்பளங்களுக்குப் பஞ்ச காலத்தில் கோயில் பட்டி தாலுக்காவிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமாக வேலைக்கு வருவார்கள். வேலை செய்யத் தெரியாமல் அவர்கள் திண்டாடும் பொழுது வேலையில் பழக்கமுள்ள பெண்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். ‘கரண்டையளவு தண்ணீர் கழுத்தளவு தண்ணீராக இருக்கிறதா?’ என்று பெண்கள் கேட்பார்கள். புதிதாக வந்த இளைஞர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். பாட்டும் சிரிப்பும் கலந்து வேலையைத் தடைபடுத்தும். அப்பொழுது கங்காணிகள் அதட்டுவார்கள். கங்காணி தலை மறைந்ததும், வேலையின் கடுமையை மறக்க மீண்டும் பாட்டுப்பாடுவார்கள். இடையிடையே காதல் அரும்பும். கடுமையான வேலையும், கொடூரமான சுரண்டலும்,மனிதப் பண்பை மாய்த்துவிட முடிவதில்லை. கட்டாந்தரையிலும் ஒரு சொட்டு மழை பெய்தாலும் பசும்புல் தலை தூக்குவதில்லையா? அது போல் பஞ்சம் வாட்ட, அளத்தில் கொத்து வேலை செய்த போதிலும், இளைஞர்களுக்கிடையே, அன்பும், பரிவும் துளிர்த்துக் காதலாக வளருகிறது.   உப்பளப் பாடல்   காரப்பாடு அளத்திலேயும் கழுத்து அளவு தண்ணிலே நீந்தத் தெரியாம நிற்கிறாளே என் தோழி கங்காணி கோவத்துக் கோ கடல் தண்ணி ஏத்தத்துக்கோ நம்மளோட கோபத்துக்கோ நடந்திட்டாலும் குத்தமில்லே சம்பங்கி எண்ணெய் தேய்த்து சாட்டைபோல முடிவளர்த்து பந்துபோல கொண்டைபோட்டு பாத்திக்காடு வாரதெப்போ கருவலம்பூ கட்டை வெட்டி கைக்கிரண்டு பலகை சேர்த்து இன்பமான பாத்திக்குள்ளே தங்க நின்னு வாரேனே சாப்பிட்டுக்கை கழுவி சமுக்கத் துண்டு கையிலெடுத்து வாராங்க எங்க மச்சான் வரளி மணி உப்பளக்க இரும்பு இரும்பு திராசிகளாம் இந்திர மணி தொட்டிகளாம் சரிபார்த்து திராசி விடும் தங்க குணம் எங்கமச்சான் கண்ணாடி கால் ரூவா காவக் கூலி முக்கால்ரூவா தூப்புக் கூலி ஒத்தரூவா துலங்குதையா மச்சாது அளம் மதுரையிலே குதிரை வாங்கி மல்லிகைப்பூ லாடம்கட்டி அடிக்கிறாரையா கங்காணம் அளத்து மண்ணு தூள் பறக்க வேலை செய்யும் பாத்திக்காடு விளையாடும் தட்டு மேடு கூலி வாங்கும் கிட்டங்கிகளாம் கூட்டம் போடும் சாயாக் கடைக காலுலே மிதியடியாம் கனத்த தொரு கங்காணி நாவிலொரு சொல்லு வந்தா நாலாயிரம் பெண் வருவோம்   வட்டார வழக்கு: மச்சாது-உப்பளச் சொந்தக்காரர் Machado.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம்:மீளவிட்டான்,தூத்துக்குடி,நெல்லை மாவட்டம்.   உப்பளக் காட்சிகள்   உப்பளத்துக்கு முதலாளி வருவதேயில்லை. அபூர்வமாக வரும்போது வரவேற்புக்கு ஆடம்பர ஏற்பாடுகள் நடைபெறும். வேலை செய்பவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டு வேலை செய்வார்கள். ஓய்வு நேரத்தில் கூட ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகை இல்லை. எஜமான் வருகிறாரென்று தெரிந்ததும் கொட்டகை போடுகிறார்கள். அவர் ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்கமாட்டார். இதைப் பார்த்த தொழிலாளி பாடுகிறான்.   வட்டடோ உடையான் சிங்காரமாம் வரிஞ்சு கட்டும் உப்பளமாம் சாமிமார் வாரா வண்ணு தனிச்சு அடிங்க கொட்டகைய   ஒருநாள் இளைஞன் ஒருவன் நல்ல துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு உப்பளத்துக்கு வருகிறான். உப்புப் பெட்டியைத் தலையில் தூக்கி குவியலில் கொண்டு வந்து கொட்ட வேண்டும். அந்த வேலைதான் அவனுக்கு. அப்பொழுது சேறும் நீரும் பெட்டியிலிருந்து வழியும். ஆகவே எந்தச் சட்டை போட்டுக்கொண்டு அளத்துக்கு வந்தாலும், சட்டையை கழற்றி வைத்து விட்டுத்தான் அவன் வேலை செய்ய முடியும். அவனைக் காதலிக்கும் பெண்ணும் அவ்வளத்தில் வேலை செய்கிறாள். அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவள் பாடுகிறாள்.   சட்டை மேல் சட்டைபோட்டு சரிகைச் சட்டை மேலே போட்டு எந்தச் சட்டை போட்டாலும் எடுக்கணுமே உப்புப் பெட்டி   அவன் சிரித்துக்கொண்டே சட்டையைக் கழற்றிவிட்டு, அவளைப் பார்க்கிறான். அவள் புதிய காது நகையொன்று அணிந்திருக்கிறாள். காசு மிச்சப்படுத்தி அவளாகவே வாங்கிய நகை. அதைப் பாராட்டி அவன் பாடுகிறான்.   போன நல்ல வருஷத்திலே புதுக் குணுக்கு போட்டபிள்ளா இந்த நல்லா வருஷத்திலே ஏத்திட்டாளே வைரக்கம்மல்   சில உப்பளங்களில் கங்காணிகளின் தடபுடல் அதிகமுண்டு. அவனிடம் நிரம்பக் காசு பணம் இருக்கும். அதிகாரம், உருட்டல், மிரட்டல், டம்பம் இவை யாவையும் அவன் அபப்ாவித் தொழிலாளிகளிடம் காட்டுவான். ஆனால் அவன் உழைத்துப் பிழைக்கவில்லை. உழைப்பவர்களைப் பிடித்து வந்தால் உப்பள முதலாளி அவனுக்கு காசு கொடுப்பான். இதை உணர்ந்த தொழிலாளி மற்றவர்களுக்குக் கூறுகிறான்.   கங்காணி கங்காணி கருத்தச் சட்டை கங்காணி நாலு ஆளு வரலேன்னா நக்கிப் போவான் கங்காணி   வட்டார வழக்கு: குணுக்கு-உருண்டையாகத் தெரியும் காதணி ; வைரக்கம்மல்-உண்மையில் வைரமல்ல.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம்:தூத்துக்குடி வட்டம்.   மில்லாபீசு   பழைய தொழில்களில் மனிதனது தசைநார்களே உழைக்கச் சக்தியாகப் பயன்பட்டது. உதாரணமாக நெசவு செய்ய வேண்டுமானால் நெசவாளி கையையும் காலையும் வருத்தி உழைக்க வேண்டும். கோவில்பட்டியிலிருந்து பிழைக்கச் சென்ற நிலமிழந்த உழவர்கள் மில்லில் வேலைக்குச் சேருகிறார்கள். அவர்களுக்கு மில்லில் உள்ள இயந்திரங்களும், அவர்களை வேலை வாங்கும் இஞ்சினியரும் புதுமையாகத் தோன்றுகின்றன.   ஏதோ ஒரு ‘சூச்சியத்தை’ தட்டிவிட்டால் தன்னாலேயே ரோதை உருளுகிறது. அதை ஓடச்சொல்லிவிட்டு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் இஞ்சினியர். அவனது வியப்பு இப்பாடலாக உருவாகிறது.   கடலுக்கு நேர் மேக்கே காராக்கட்டிடம் மெல்லாவுசு இரும்புனால ரோதைகளாம் இருகரையும் சூச்சியமாம் தன்னாலே ஓடச் சொல்லி தாங்குதானே இஞ்சின்துரை பட்டிக்காட்டு பருத்திகளை பட்டணத்து ரோதைகளை ஓடாத ரோதைகளை ஓட்டிவைப்பார் தாடிதுரை.   வட்டார வழக்கு: மெல்லாவுசு-மில் ஆபீசு ; ரோதை-சக்கரம் ; சூச்சியம்-ஸ்விட்ச் ; இஞ்சின் துரை-இஞ்சினியர்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம்:தூத்துக்குடி,நெல்லை மாவட்டம்.   அவன் மில்லில் வேலை பார்க்கிறான். நூல் விலையாகிறது. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் அவன் வீட்டிலிருக்கும் குமரிக்குக் கலியாணம் செய்ய வழியில்லை. நூல் விலையாகிவிட்டதாம். குமரி விலையாகவில்லையாம்.   நூறு அடியாய் கோபுரமாம் நூலு நூக்கும் மில்லாவுசு நூலு விலை ஆகிட்டாலும் குமரி விலை ஆகல்லையே !   தொழிலாளர் வாழ்க்கை நிலையை இப்பாடல் எவ்வளவு நன்றாகச் சித்திரிக்கிறது !   சோம்பலும் உழைப்பும்   கணவன் சோம்பேறி. மனைவி உழைப்பாளி. கணவனைப் பன்முறையும் உழைத்துப் பிழைக்குமாறு அவள் வற்புறுத்துகிறாள். அவன் இணங்கவில்லை. அவள் “கொழுக்கட்டை செய்து தருகிறேன் என்னோடு வேலைக்கு வா” என்றழைக்கிறாள். அவன் “தண்ணீர் தவிக்கும், வரமாட்டேன்” என்கிறான். அவள் படிப்படியாக அவனோடு வாது செய்து, அவனுடைய சாக்குப் போக்குகளையெல்லாம் மறுத்துரைத்து வேலைசெய்ய இணங்கும்படி செய்கிறாள். இது போன்ற பாடலொன்று நெல்லை மாவட்டத்தில் வழங்கி வருகிறது. “கீரை விதைக்கலாம் வா” என்ற தலைப்பில் அது “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்” என்ற தொகுப்பில் வெளியாகியுள்ளது. இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்கிவருகிறது.   பெண்: மளுக்கிட்ட கம்பிடிச்சி கொளுக்கிட்ட வெச்சி தாரேன் வாடா என் சாமி   ஆண்: கொளுக்கிட்ட தின்னாலே தண்ணி தாகம் எடுக்கும் போடி பொண் மயிலே   பெண்: தண்ணி தாகம் எடுத்தா நீரு மோரு தாரேன் வாடா என் சாமி   ஆண்: நீரு மோரு குடிச்சா நித்திரையும் வந்திடும் போடி பொண் மயிலே   பெண்: நித்திரையும் வந்தா தட்டி எழுப்பரேன் வாடா என் சாமி   ஆண்: தட்டி எழுப்பினால் காலை பொறக்கும் போடி பொண் மயிலே   பெண்: காலை பொறந்தா கீரை வெரைக்கலாம் வாடா என் சாமி   ஆண்: வேலி கட்டினால் வெள்ளாடு தாண்டும் போடி பொண் மயிலே   பெண்: வெள்ளாடு தாண்டினா பாலு கறக்கலாம் வாடா என் சாமி   ஆண்: பாலு கறந்தா பூனை குடிக்கும் போடி பொண் மயிலே   பெண்: பூனைக் குடிச்சா பூனையை அடிக்கலாம் வாடா என் சாமி   ஆண்: பூனையை அடிச்சா பாவம் சுத்தும் போடி பொண் மயிலே   பெண்: பாவம் சுத்தினா காசிக்குப் போகலாம் வாடா என் சாமி   ஆண்: காசிக்குப் போனா காலை நோகும் போடி பொண் மயிலே   பெண்: காலை நொந்தால் குதிரை வாங்கலாம் வாடா என் சாமி   ஆண்: குதிரை வாங்கினா சவாரி செய்யலாம் போடி பொண் மயிலே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி.   மானங்கெட்ட வண்டி   கிராமத்தில் ஓரு வண்டியை வைத்து வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறான் இவன். வண்டிக்கு மாடு வேண்டும். அவன் வீட்டில் சோற்றுக்கு இல்லை. மாட்டுக்கு வைக்கோல் எப்படி வாங்குவது? நகரத்துக்கு வண்டியோட்டி போனால் லாந்தர் வைத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் போலீஸ்காரன் தொந்தரவு செய்து காசு பிடுங்குவான். அதற்கு எண்ணெய் வேண்டும் ; வைக்கோல் இல்லாத மாடு வண்டியிழுக்குமா?   இப்பாட்டு அவன் படும்போது மற்றொரு ஜீவனையும் நினைக்கிறான். ஈரப் புழுங்கலை வைத்துக்கொண்டு அவனுடைய மனைவி எப்படிச் சமையல் செய்யப் போகிறாளோ?   வீட்டில் சோத்துக்கில்ல தீபத்துக்கு எண்ணெயில்ல மாட்டுக்கு வக்கலில்ல மானங் கெட்ட வண்டியடி நடவாத மாட்டோட நான்படும் பாட்டோட ஈரப்புழுங்கலோட என்னபாடு படுதாளோ !   வட்டார வழக்கு: இல்ல-இல்லை ; ஓட-ஓடு ; படுதாளோ-படுகிறாளோ.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   உளியடிக்கும் ஆசாரி   தேர்ந்த பாறைகளின் உச்சிகளில் பழங்காலத்தில் சமணரும், பௌத்தரும் சிற்பங்கள் செதுக்கினர். சைவ, வைணவர்களும் கோயில்கள் அமைத்தனர். பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள் அமைத்தனர். கல் கட்டடங்களாகக் கோயில்களை கட்டத் தொடங்கிய சோழர் காலத்தில் குகைக் கோயில்களை அமைப்பது நின்று விட்டது. அக் கலைத் தொழிலில் திறமையுடையவர்கள், வீட்டுக்குத் தூண்களுக்கு மட்டும் மலையில் உளியடித்துக் கல் வெட்டி வந்தனர். ஆனால் இப்பொழுது அதனையும் இயந்திரங்களும், வெடி மருந்தும் செய்து விடுகின்றன. கல்லில் கற்பனைக் கனவுகளை வடித்தெடுத்த சிற்பிகளின் பரம்பரை, கல் தச்சராகி, இப்பொழுது எத்தொழிலும் இன்றிப் பட்டினியால் வாடுகிறார்கள். பாறையுச்சியில் உளியடிக்கும் ஆசாரியின் காதலி கீழ்மலையில் வேலை செய்கிறாள். அவள்தான் அவருக்குச் சோறு கொண்டு போவாள். பசித்தபோது சப்தமாக உளியடித்தால் சோறு கொண்டு வருவதாக அவரிடம் சொல்லுகிறாள்.   உச்சி மலையிலேயே உளி யடிக்கும் ஆசாரி சத்தம் போட்டு உளியடிங்க சாதம் கொண்டு நான் வருவேன்   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.   நரிக் குறவன் குறவர் வாழ்க்கையிலுள்ள சுதந்திரம் தமி்ழ்க் கவிகளை கவர்ந்திருக்கிறது. காதல் நூல்களையும், பக்தி நூல்களையும் குறவன் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்துச் சமய்க் குரவர்களும், கவிஞர்களும் எழுதியுள்ளனர். நம்மாழ்வார் குறம், மீனாட்சியம்மை குறம் முதலியன குறத்தி குறி சொல்லுதலைப் பின்னணியாக கொண்ட பக்தி நூல்கள். குற்றாலக் குறவஞ்சி போன்ற இசை நாடக நூல்களும் குறவன் குறத்திக் காதலையும், இறைவன் மீது சீவன் காதல் கொள்ளுவதையும் பொருத்தியும், வேறுபடுத்தியும் காட்டுகிறது. இதற்குக் காரணம் தமிழ் மணமுறையில் தோன்றிய களவு மணமும், இயற்கைப் புணர்ச்சியும் குறிஞ்சி நில மக்களின் வழிவந்த குறவர்களிடம் அழியாமல் காணப்பட்டது. நாகரிக வாழ்க்கையில் காதல் மடிந்துவிட்ட பிறகு அதை நினைந்து ஏங்குபவர்கள் குறவரது காதல் வாழ்க்கையை வியந்து போற்றினார்கள். ஆனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையின் கடுமையை இக் கவிஞர்கள் அறியவில்லை. கீழ்வரும் பாடல் அவர்கள் அன்றாட உணவினைப் பெற என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கூறுகிறது.   ததிம்மிதா குடதகதா-தக தத்தாரித்த கிடதக-ததிமி குருவிக்காரர் நாங்களய்யா-இந்தக் குவலயக் காட்டினில் குடியிருப்போம் அரிதாகிய புலி சிறுத்தை செந்நாய் ஓநாய்களை நாங்கள் பிடிப்போம்-ததிம்மிதா கூவி வரும் குள்ளநரி கோனாயி நொள்ள நரி கல்லின் கீழ் மேஞ்சு வரும் கல்ல மொசல் பில்ல மொசல் கண்டு பிடிப்போம்-மார்....ரோ காடை கௌதாரி மைனா கானாங் கோழி குருவிகளாம் கண்டு பிடிப்போம்-ததிம்மிதா அண்டத்தில் வலையைக்கட்டி ஆகாயம் பறந்து வரும் ஆண்கழுகு பொண் கழுகு நாங்கள் புடிப்போம்-மார்....ரோ அல்லடா தில்லாலே டப்பா அலுக்கு குலுக்கு டப்பா செம்மை குள்ளத்தாரா சிந்து செழித்த தஞ்சாவூர் முந்து-ததிம்மிதா   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர் தாலுகா,தருமபுரி மாவட்டம்.   மாலுக்கடை   உழவன் விளைவிக்கும் பண்டங்களின் விலையைப் பெரிய வியாபாரிகளும், வர்த்தகச் சூதாடிகளும் குறைத்து விடுகிறார்கள். அதனால் எவ்வளவு நன்றாக மேனி கண்டாலும் விவசாயிக்கு பணம் மிஞ்சுவதில்லை.   மாலுக்கடை, கமிஷன் வியாபாரிக்கடை, அவர்களுடைய வியாபாராத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி, மாலுக்கடையை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்கிறான். இது முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் இயந்திரத்தின் ஒருபகுதி என்று அவனால் உணர முடியவில்லை.கடைதான் அவனை மோசம் செய்வதாக அவன் எண்ணுகிறான்.   களையெடுக்கும் கடமங்குளம் கணக்கெழுதும் ஆலமரம் விலை பேசும் மாலுக்கடை விதிச்சாரே உடையாளி தரகருக்கும் தட்டப் பாறை போட்டுக் கட்டும் பொன்னிலுப்பை விலைபேசும் மாலுக்கடை விதிச்சாரே உடையாளி வட்டார வழக்கு: விதிச்சாரே-விதித்தாரே ; மாலுக்கடை-கமிஷன் கடை.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரிவட்டாரம்,நெல்லைமாவட்டம்.   அம்பாப் பாட்டு வரலாற்று முன்னுரை   தமிழ் நாட்டு கீழ்க்கரை ஓரமாக பண்டுதொட்டு வாழ்ந்து வரும் மக்கள் பரதவ குலத்தினர். கடலை அடுத்து வாழ்ந்த இவர்கள் மீன் பிடித்தல், சங்கு, முத்துக்கள் எடுத்தல் முதலிய தொழில்களைச் செய்து வாழ்கிறார்கள். இத் தொழில்களைச் செய்யக் கட்டுமரங்கள், சிறு படகுகள் முதலியவற்றைச் செலுத்தும் திறமை பெற்றிருந்தனர். இந்தியக் கடற்கரை வியாபாரத்திலும் இவர்கள் நாவாய் செலுத்தி பங்கு பெற்றனர். தமிழ் நாட்டின் புராதன வாணிபத்திற்கும் இவர்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்.   மீன் ஓர் முக்கிய உணவுப் பொருள். அதனை கடலிலிருந்து எடுத்து அளிப்பவர்கள் வலிமை பெற்றவர்கள். முத்தும், சங்கும் வியாபாரப் பொருட்கள் ; இவை மிகுதியாகக் கிடைத்தால், அரசினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழங்காலத்திலிருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். இத் தொழில்களைப் பாதுகாக்கவே கொற்கையில் ஓர் தலைநகரை நிறுவி அங்கு ஓர் காவற்படையையும் நிறுவியிருந்தனர். கடல் படு பொருட்களை வாங்குவதற்கு கொற்கையிலேயே ஒரு நாணய சாலையும் இருந்தது. இவையெல்லாம் பாண்டியர் பேரரசு நிலைத்திருந்த காலத்தில் நடைபெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் அராபியர்கள் வாணிபம் செய்வதற்காகத் தமிழ் நாட்டின் கீழ்க்கடற்கரைக்கு வந்தார்கள். தென்கடல் முத்தையும், தமிழ் நாட்டு துணி, மிளகு, அகில் முதலியனவற்றையும் ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்களையும் அவர்கள் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கடல் வாணிபத்தில் பெருநிதி ஈட்டிய அராபியர்கள் காயல் பட்டணத்தில் பண்டகசாலைகள் அமைத்தனர்.   பாண்டிய அரசர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டு முத்து வாணிபத்திற்கு ஏகபோக உரிமை பெற்றனர். அது முதல் அவர்களுக்கும், கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவருக்கும் இடையே முரண்பாடுகளும், சச்சரவுகளும் தோன்றின. அராபியர்கள் கடற்கரை எந்த அரசின் ஆதிக்கத்திலிருந்ததோ, அவ்வரசர்களைச் சந்தித்து தங்களுடைய வாணிப உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றனர். கடற்கரை ஆதிக்கம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள் ஆகிய மன்னர்களின் கைக்கு மாறி மாறி வந்தது. ஆயினும் அராபிய வியாபாரிகளுக்கும் கடற்கரை மக்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு தீர்ந்தபாடில்லை. இம் முரண்பாடுகள் பெரும் போராட்டமாக மாறிற்று. அவர்களிடையே நடந்த மிகப் பெரும்போர் ஒன்றைப் பற்றி ‘ஜான் நியூ காவ்’ என்னும் டச்சு வியாபாரி கீழ்வருமாறு எழுதியுள்ளார்   ‘அராபிய வியாபாரிகள் பரதவரது மூக்கையும், காதையும் வெட்டியெறிந்துவிட்டனர். பரதவர்கள், பெரும் கோபமுற்று படை திரட்டி பழிதீர்க்கக் கிளம்பினார்கள். முதல் போரில் அராபிய வியாபாரிகள் சிலர் சிறைப்பட்டனர். அவர்களது மூக்குகளையும் காதுகளையும் அரிந்துவிட்டு அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத அராபியர்கள் முப்பதினாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்றைத் திரட்டி தூத்துக்குடிக்கருகில் பாடியிறங்கினர். ஐயாயிரம் பரதவர்கள் ஆயுதம் தாங்கி அராபியரின் படையைத் தாக்கி ஏழாயிரம் படை வீரர்களைக் கொன்றுகுவித்தனர். அவர்களுடைய படை சிதறி ஓடிற்று. இந்த வெற்றிக்குப் பின்னர் பரதவர்கள் கடற்கரை ஓரமாக இருந்த பகுதிகள் அனைத்திலும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். அராபிய வியாபாரிகள் செலுத்திய வரியைத் தாங்களே விசுவனாத நாயக்கருக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர்.   ஆனால் கப்பல் வலிமை அவர்களுக்கு இல்லாததால் முத்தையும் சங்கையும் எடுத்தாலும் அது விலையாகும் இடங்களுக்குக் கொண்டு சென்று விற்க அவர்களுக்கு வழியில்லை. நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்த அவர்களால் முடியவில்லை. வரி பாக்கிக்காக அரசர் உத்தரவினால் பல பரதவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.   மேற்குத் கடற்கரையில் 1540 ஆண்டு முதலாக போர்த்துக்கீசியர்கள் கடற்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை பரதவர்கள் அறிவார்கள். படகோட்டிகள் சிலருக்கு அவர்களோடு வாணிபத் தொடர்பு உண்டு. போர்த்துக்கீசியரிடம் பெரிய கப்பல்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால், தங்களுடைய பொருள்களை அவர்களுக்கு விற்று அவர்களுடைய உதவியால் தங்களது கஷ்டங்களிலிருந்து தப்பலாம் என்று எண்ணினார்கள். சில தலைவர்கள் கோவாவிற்குச் சென்று போர்த்துக்கீசிய அதிகாரிகளையும், கத்தோலிக்கச் சாமியார்களையும் அழைத்து வந்தனர். 1533-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் கப்பல் படையோடு வந்து கிழக்கு கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பரதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றனர். பூனைக்குத் தப்பியோடி புலிவாயில் மாட்டிக் கொண்டது போல பரதவர் நிலையும் ஆயிற்று. போர்த்துக்கீசியர் அராபியர்களை விட மோசமாகப் பரதவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ஒரே மதத்தைச் சேர்ந்தோராயினும், போர்த்துக்கீசியர்கள் கொள்ளைக்காரர்தான் என்பதை பரதவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருவருக்குமிடையே பெரும் போராட்டம் மூள்வதற்கு முன்பாக போர்த்துக்கீசியர் அவர்களோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதன்படி மணப்பாறை, ஆலந்துலா, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு என்ற ஏழு துறைமுகங்களிலும் ஏற்றுமதி செய்யும் உரிமையைப் போர்த்துக்கீசியர் பெற்றனர். ஆண்டுதோறும் அவர்கள் ஒரு தொகையும், தங்கள் வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகக் கப்பமாகச் செலுத்தினர். கடற்கரைத் தலைவர்கள் சங்கு குளிப்பையும் முத்துச் சலாபத்தையும் தங்கள் தகுதிக்கு ஏற்ற முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்.   மதுரை நாயக்கர்கள் கப்பற்படை பலமில்லாததால் போர்த்துக்கீசியர் நடவடிக்கைகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதன் பின்னர், டச்சுக்காரருடைய போட்டி ஏற்பட்டதற்குப் பிறகு நிலைமை மாறியது. போத்த்துக்கீசியரின் உரிமைகளை டச்சுக்காரர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்குக் கப்பல் வலிமை மட்டும்தான் இருந்தது. முதலில் அவர்கள் பரதவர் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. பரதவர்கள் கத்தோலிக்கர்கள் ; டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டெண்டுகள். காலம் செல்லச் செல்ல வெளிநாட்டு வியாபாரத்திற்கு டச்சுக் கம்பெனிகளே சாதனமாக இருந்தபடியால் அவர்களோடு வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் பரதவர்களுக்கு ஏற்பட்டது.   தென்னிந்திய அரசியல் அரங்கத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியபோது டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரோடு வியாபாரப் போட்டியில் தோல்வியுற்றுக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து வெளியேறினர்.   தமிழ் நாட்டுப் பரதவர் வீரம் மிகுந்தவர்கள். திறமை மிக்கவர்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள்.   அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் கடலில் கழியும். இன்னும் அவர்கள் மீன்பிடித்தல், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் முதலிய தொழில்களையே பெரும்பான்மையாகச் செய்து வருகின்றனர். 1533 க்கு முன்பாக அவர்கள் கடலன்னை என்னும் கடல் தெய்வத்தையும், வருணண், இந்திரன் போன்ற புராண தெய்வங்களையும், முருகன் என்ற தமிழ் தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறார்கள். கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டாள். பழங்காலத்தில் கடல் பயணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்துகொண்டார்கள் என்பதற்கறிகுறியாக அவரது பாடல்களில் வேலனும், அல்லாவும் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகச் சொல்லப்படுகிறது. அவர்களுடைய பாடல்களில் ஆபத்திலிருந்து காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுகிறார்கள். வீட்டிலுள்ள மனைவியையும் குழந்தையையும் பற்றி அன்போடு எண்ணிப் பார்க்கிறார்கள்.அவர்கள் படகைக் கடலிலிறக்கும் பொழுதும், தண்டு வலிக்கும் பொழுதும், பாய்மரத்தை மேலேற்றி இறக்கும்பொழுதும், கடலில் போட்ட வலையை இழுக்கும்பொழுதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த உழைப்போடு கலந்துதான் அவர்கள் பாடல் வெளியாகிறது. கடலில் செல்லும்பொழுது பல மணி நேரம் ஒருவர் மாறி ஒருவர் பாடிக் கொண்டேயிருப்பார்களாம். இம் மக்களின் பாடலுக்கு ‘அம்பாப் பாடல்’ என்று ஏன் பெயர் வந்தது என்று காரணம் சொல்வது கடினம். ஆனால் கடல் தெய்வம் கடலன்னை என்று அழைக்கப்பட்டதாலும், பின்னர் அத்தெய்வமே கன்னிமா என்று அழைக்கப்பட்டதாலும் இப்பாடல்கள் அம்பாள் பாடல்கள் என்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அம்பாள் என்னும் பெயர் பொதுவாகப் பெண் தெய்வத்தைக் குறிக்கும்.   ஏலோ இலோ ஈலோடு வாங்கு வாங்குடா தோழா வாழைத்தார் தருவேன் தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும் மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம் செண்பக வடிவேல் திருமுடிக் கழகு வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க தேரான தேரு செல்லப் பெண்டாட்டி மாலை மசக்கி மையிடுங் கண்ணாள் கண்ணுக்குச் செத்த மையிட வேணும் பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே நானிட்ட வாளை நல்ல சமத்தன் கோழைப் பயலே கோமுட்டி வயிறா உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா வில்லே சரணம் வேந்தன் பாராய்   குறிப்பு: செண்பக வடிவேல்-வேலனைக் குறிக்கும். வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும், அவனது வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பாடப்படுகிறது. 2   நாலு தண்டாம் பலவனாக்கு நடுவ ஒரு பாய் மரமாம் பாயிழுத்துக் கோசு ஊணி பருமலுடன் சலுத்தணைந்து சல் சல்லடம் சடுக்காப்பையா நீயும் போடா கொய்யாக் கள்ளா கொய்யாப் பழத்தின் ருசியும் கொண்டு வந்தாலே தெரியும் பாரக் கலவா பாப்பர மூஞ்சான் சேரப்படுக்கும் செல்ல விலை மீன் பாரக் குழலோ மேக வெளியாய் ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய் பண்ணி கிடந்து உறுமுது பாரு பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி   குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்து சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் ‘பண்ணி’ என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. ‘பன்றி’ என்பது மக்களுக்குப் பிடிக்காது.   3 மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி மதினியை ஒரு சத்தம் போடாதடி கோட்டாத்துத் திருநாள் வருகுதடி கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி வாடை முந்தும் கோடை முந்தும் மாசி மாதம் கொண்டல் முந்தும் காத்தடிச்சிக் கடல் கலங்கும் கல்லு போட்டாத் தலை உடையும் ஓடும் கடல் தனக்கு உடையவளே எந்தனுக்கு உல்லன் தட்டிப் பாயுதடி ஓடப் படிகரை மடியை உண்ணாமல் திண்ணாமல் ஊர்ப்பயணம் போகாதடி ஆளை எண்ணிப்படி போடம்மா ஆரோக்கிய மாதாவே   4   அல்லாவோட காவலுல ஆபத் தொன்றும் வாராம பெரிய உந்தன் காவலுல பேதகங்கள் வாராம மரியே உன் காவலுல மனதிரக்கம் வைப்பாயே காப்பாத்த வேணுமம்மா கன்னிமரித்தாயே நீ பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே மாதாவே என்றால் மலையும் இளகுமம்மா கர்த்தரே என்றால் கல்லும் இளகுமம்மா கல்லும் மலையும் கரம்பக் கயிறாமோ வில்லோ சரணமம்மா வேந்தன் மகனார்க்கு   5   வாளா வலை முடிந்து வங்கடைக்கு மால் முடிந்து கோலா வலை முடித்து குறுக்கட்டாமல் முடித்து காஞ்சி வனமடியே கள்ளரோட காடடியே இருளடைந்த சோலையிலே இணைபிரிந்த மான் போல மானோடா ஓடுறது மறியடா நல்ல தம்பி மானோடும் தூரமெல்லாம் தானோட வல்லவியோ வள்ளம் வித்தேன் வலையும் வித்தேன் வாளா வலை புனையும் வித்தேன் கொம்பை வித்தேன் குழலை வித்தேன் குடிக்க இருந்த செம்பை வித்தேன் எல்லாம் வித்துக் கள் குடித்தேன் ஏங்குனாப்பில தூங்கிவிட்டேன் தூங்கி முழிச்சபய தோணி கட்டி வாழ்ந்தபய வாராயோ காத்த நீயே வளம் பெரிய சோழகமே சோலையிலே அவ கிடந்து சுட்ட நண்டுக்கால் பெறக்கி கால் வழியே ஓடுதம்மா கடிக்கு தம்மா கட்டெறும்பு கட்டச்சியோ நெட்டச்சியோ காயலான் தங்கச்சியோ தங்கச்சியோ பட்டணத்தாள் தனியே நல்ல முரசு விட்டாள் போடு லக்கை போடு லக்கை கைமாத்திப் போடுலக்கை கள்ளன் வந்தான் திருடன் வந்தான் கட்டாமைக் காரன் வந்தான்   6   சிலுவை வரைந்து கொண்டேன் திருப்பாதம் தெண்டனிட்டேன் கன்னி மேரி மாதாவே கர்த்தா வே காத்தருளும் காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு கைக் குழந்தை வேணுமின்னு தெற்கே திருப்பதியாம் தேவ மாதா சன்னதியாம் மறப் பதில்லை திருப்பதியை மனப் பாட்டு முனைக் குருசை குருசே உனைத் தொழுவேன் கும்புடுவேன் ஆதரிப்பாய் வேளையிது வேளையம்மா வேளாங்கண்ணி மாதாவே மாதாவே உன்னுதவி-உன் மகனுதவி வேணுமம்மா தாயே உனதடிமை தற்காக்க வேணுமம்மா நண்டு படும் தொண்டியடா நகர படும் நம்புதாளை நம்பிக்கை உண்டுமம்மா நமக்குதவி நாயனுண்டு நாயன் அருளாலே நான் பாடவே துணிந்தேன் நமக்குப் படைகளுண்டு நாத சுரக் காரருண்டு பிச்சிச் சரமோ-நீ பின்னி விட்ட பூச்சரமோ பூவைச் சொரிந்தவள் நீ போன வழி வாராளடா பச்சை மணக்குதடி பாதகத்தி உன் மேலே எல்லை கடந்தாளடி இலங்கை வனம் கடந்தாள் தில்லை வனம் கடந்தாள் திருவணையும் குற்றாலம் பாராமல் போராளடி படமெடுத்த நாகம் போல   வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு ; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு ; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு ; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு ; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள் ; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள் ; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.   குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார். சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ் அனுப்பியவர்: S.S. போத்தையா இடம் :தூத்துக்குடி, ஒப்பாரி   கூட்டார்க்குச் சம்மதமோ?   சிறப்பாக வாழ்ந்த குடும்பத்தின் தலைவன் மாய்ந்து போனான். மனைவியைச் சிறுசிறு குழந்தைகளோடு விட்டு அவன் இறந்து போனான். அவள் வாழ்நாள் மட்டும், தான் சீரும் சிறப்புமாக வாழப் போவதாக எண்ணியிருந்தாள். புராதன நகரமான மதுரை நெடுநாட்கள் புகழோங்கி நிலைத்திருப்பது போலத் தன் குடும்பமும் நிலைக்குமென்று கனவு கண்டாள். ஆனால் திடீதென்று கணவன் மாண்டான். தந்தையும், சிற்றப்பன்மாரும் வந்தனர் ; அவர்களிடம் துயரத்தைச் சொல்லிக் கதறி அழுகிறாள் அவள்.   சீமை அழியுதுண்ணு நான் சிந்தையிலும் எண்ணலியே ; சீமை அழியலியே-என் சிறப்பழிஞ்ச மாயமென்ன? மருத அழியுதுண்ணு நான் மனசிலேயும் எண்ணலியே ! மருத அழியலியே-என் மதிப்பழிஞ்ச மாயமென்ன? கடுகு சிறுதாலி கல் பதிச்ச அட்டியலாம் கல்பதிச்ச அட்டியலை-நான் கழட்டி வைக்க நாளாச்சே மிளகு சிறுதாலி வைத்த அட்டியலு வைச்ச அட்டியலை-நான் முடிஞ்சு வக்க நாளாச்சே பட்டு கழட்டி வச்சேன் பாதம் வரை வெள்ளையிட்டேன் சிகப்பு கழட்டி வச்சேன்-என் தேகமெல்லாம் வெள்ளையிட்டேன் ஆத்துல புல்லறுத்து அறுகம்புல்லு பந்தலிட்டு அரும மக தாலி வாங்க-ஒங்க ஐவருக்கும் சம்மதமோ குளத்துல புல்லறுத்து கோரம்பா பந்தலிட்டு குழந்தை மக தாலி வாங்க-ஒங்க கூட்டார்க்கும் சம்மதமோ?   வட்டார வழக்கு: மருத-மதுரை ; வச்ச-வைத்த.   குறிப்பு: தனது தகப்பனையும், சிற்றப்பன்மாரையும் பஞ்ச பாண்டவர்களுக்கு ஒப்பிடுகிறார்கள். தவிர நாயக்க மன்னரை வெகுகாலம் எதிர்த்த பஞ்ச பாண்டியர்கள் என்ற குறு நில மன்னர்களை மறவர்கள் தங்களது முன்னோரெனக் கருதுகின்றனர், எனவே ‘ஐவர்’ என்றாள்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை.   சீட்டைப் பறித்தானோ?   மனைவியும் கணவனும் செல்வத்தில் திளைத்து இன்ப வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பொருளுக்குச் சேதம் வராமல் அரண்மனையாரும், கும்பினியாரும் காவல் முறை செய்தனர். ஆனால் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த கால தூதரிடமிருந்து யார் அவள் கணவனைப் பாதுகாப்பது? கணவன் வீரமிக்கவன், எந்தத் திருடனாலும் அவன் கையிலுள்ளதைப் பிடுங்க முடியாது. எப்படித்தான் அவன் சீட்டை கால தூதர்கள் பறித்தார்களோ? ரயிலிலேறிப் போய்க் காலையில் ஓரிடத்திலும், மாலையில் மற்றோரிடத்திலும் களவு செய்யும் பக்காத் திருடர்களைவிட கால தூதர்கள் கடிய வேகத்தில் சென்று உயிரைத் திருடும் கள்வர்களோ என்று மனைவி கேட்கிறாள்.   வெள்ளிச் சுருணை வரும் விதமான நெல்லு வரும் விதமான நெல் அவிக்க மேகத்துத் தண்ணி வரும் தங்கச் சுருணை வரும் தனிச் சம்பா நெல்லு வரும் தனிச்சம்பா நெல்லவிக்க தந்தி மேல் தண்ணி வரும் ! அல்லியும் கொய்யாவும்-அரமணையில் அலுங்கப் பழுத்திருக்க அசையாம காலுவைக்க அரமணையார் காவலுண்டும் கொய்யாவும் பிலாவும் குலையாய் பழுத்திருக்க கூசாமல் காலு வைக்க கும்பினியார் காவலுண்டும் அடிக்க வந்த தூதுவரை அடியாள் சரணமின்னேன். கொல்ல வந்த தூதுவரை கோடி சரணமின்னேன் காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி காசப் பறிச்சானோ கைவிலங்கு போட்டானோ சிகப்பு ரயிலேறி சீமைக்கே போயிறங்கி, சீட்டப் பறிச்சானோ? சிறுவிலங்கு போட்டானோ   வட்டார வழக்கு: தந்திமேல் தண்ணி-அவசரமாக ; தூதுவர்-எமதூதர்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை. மதினி கொடுமை   கணவனையிழந்தவளுக்குப் பிறந்த வீட்டில் மதிப்பில்லை. அவ்வீட்டுச் சொத்து சுகங்களில் அவளுக்குப் பங்கில்லை. இதனால் புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு அஞ்சி, பிறந்த வீடு செல்லுவோம் என்றால் அங்கு அவளுக்கு வரவேற்பிராது. தண்ணீர் குடிக்கத் தூரத்திலுள்ள ஊற்றுக்குப் போனால் கூட நிரம்பத் தண்ணீர் குடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தலையாரியைக் கூட அனுப்புகிறார்கள். கணவனையிழந்த ஒருத்தி பிறந்த வீட்டு நிலைமையை எண்ணி அங்கு தன் மதனியார் தன்னை பெருஞ் சுமையெனக் கருதுவார்கள் என்பதை இலைமறை காயாகக் கூறுகிறாள்.   கள்ளிமேல் கத்தாழ கருணைனெல்லாம் எம்பிறப்பு கருணணுக்கு வந்தவளே-என்னை மதிக்காளில்லே வேலி மேல் கத்தாழ வீமனெல்லாம் எம்பிறப்பு வீமனுக்கு வந்தவளே-என்னை விலையா மதிக்காளில்ல தண்ணி தவிச்சு-நான் தலைமலை ஊத்துக்கே போனாலும் தலைமலை ஊத்துலயே-எனக்கு தலையாரி காவலுண்டும் மெத்தத் தவிச்சு நான் மேமலை ஊத்துக்கே போனாலும் மேமலை ஊத்துலேயே-எனக்கு மெல்லியரே காவலுண்டும் பல்லிலிடும் பச்சத்தண்ணி பழனிமலைத் தீர்த்தம் என்பார் நாவிலிடும் பச்சத்தண்ணி நாகமலைத் தீர்த்தமென்பார்   வட்டார வழக்கு: எம்பிறப்பு-என் உடன் பிறந்தோர் ; கத்தாழ-கற்றாழை ; மதிக்காளில்லை-மதிக்கிறாள் இல்லை.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை.   ஆசையுண்டோ?   மங்கலப் பொருள்கள், மணம் வீசும் நறுமலர் இவையாவும் அவளுக்கு விருப்பமானவை. கணவன் இறந்ததும் இவற்றிற்கெல்லாம் இனி எனக்கு ஆசையுண்டோ? என்று கேட்கிறாள். கணவன் இறந்ததும் ஆசைகளும் இறந்துவிட வேண்டியதுதான். அது தான் சமூகச் சட்டம்.   பத்தடுக்குத் தாம்பாளம் பால்காப்பி நெய்த்தோசை பாத்துப் பலுமாற-அய்யோ பத்துமணியாகும் பத்துமணியாகும்-அய்ய பத்தரையும் பாசாகும் எட்டடுக்குத் தாம்பாளம் எடுத்துவைத்த நெய்த்தோசை எடுத்துப் பலுமாற-ஐயா எட்டு மணியாகும் எட்டு மணியாகும் எட்டரையும் பாசாகும் கோட்டை வாசலிலே கொழுந்து வந்து விக்குதிண்ணு கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக் கொழுந்து மேல் ஆசையுண்டோ தெக்குக் கோட்டை வாசலில செவந்தி வந்து விக்குதிண்ணு சீமானத் தோத்தேன்-எனக்குச் செவந்தி மேல் ஆசையுண்டோ வடக்குத் தலை வாசலிலே மருவு வந்து விக்குதுண்ணு மன்னவரத் தோத்தேன்-எனக்கு மருவு மேல் ஆசையுண்டோ அஞ்சு படித் துறையும் அத்தருடன் பன்னீரும்-நான் அள்ளிக் குளிப்பாட்ட-நான் அகலத்தாள் ஆயிட்டேனே ! தோட்டம் படித்துறையும் துறைமுகத்துப் பன்னீரும் தொட்டுக் குளிப்பாட்ட-நான் பொன்பதிச்ச மேடையில-நான் பொன்பதிச்ச மேடையில போக வர நீதியில்ல காச்ச முருங்க கல் பதிச்ச மேடையிலே கல் பதிச்ச மேடையிலே-நான் காலு வக்க நீதியில்ல அரிராமர் கோட்டையில அல்லி ஒரு பெண் பிறந்தாள் அல்லி படும் பாதரவை அருச்சுனரே பார்க்கலியோ   வட்டார வழக்கு: பலுமாற-பரிமாற ; தோத்தேன்-இழந்தேன் ; மருவு-மருக்கொழுந்து ; குளிப்பாட்ட-கணவனைக் குளிப்பாட்ட ; அல்லி-தன்னைக் குறிப்பிடுகிறாள் ; பாதரவு-துன்பம்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை மாவட்டம்.   கார் விபத்தில் இறந்தான்   ஒரு காரில் தனது எசமானனுடன் வேலைக்காரன் சென்றான். கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. வேலைக்காரன் இறந்துபோனான். போலீசக்காரர்கள் நொறுங்கிய காரையும், பிணத்தையும் சுற்றி நின்றார்கள். பெருங்கூட்டம் கூடிவிட்டது. டிரைவரும், எசமானும் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்து போனவனுடைய மனைவிக்குச் செய்தி அனுப்பப்பட்டது, அவள் அழுதடித்துக் கொண்டு ஓடி வந்தாள். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவள் உள்ளே செல்ல முடியவில்லை. அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அவள் அதிகாரிகளை அழைத்து தன்னை உள்ளே விடும்படி கதறினாள். அவளை உடனே அழைத்துவர உத்தரவிட்டனர். இது போன்ற ஒப்பாரிகள் மிகவும் அபூர்வமானவை.   சாஞ்ச பணிகளாம் சத்தமிடும் மோட்டாராம் சத்தமிடும் மோட்டாரில் சாஞ்சிருந்த மன்னரெங்கே? சாஞ்சிருந்த மன்னருக்கு தயவு சொன்ன டிரைவரெங்கே? சத்தமும் ஆனதென்ன?-இதில் உயிர்க்கொலையும் ஆனதென்ன? ஜனத்தை விலக்கிவிடு தாசில்தார் என் தகப்பா காசு கொண்டு வந்த-என் தருமரவே நான் பார்க்க உருண்ட மணிகளாம் ஓச்சமிடும் மோட்டாராம் ஓச்சமிடும் மோட்டாரில் உக்காந்த மன்னரெங்கே? உண்மை சொன்ன டிரைவரெங்கே உருண்ட மணிகளெங்கே? ஓசையிடும் கார்களெங்கே? ஓசையிடும் காருக்குள்ள உட்கார்ந்த மன்னரெங்கே? உட்கார்ந்த மன்னருக்கு உத்திசொன்ன டைவரெங்கே? தங்க மணிகளெங்கே? தனிச்சு வந்த காரையெங்கே தனிச்சு வந்த காருக்குள்ள சாஞ்சிருந்த மன்னரெங்கே? சாஞ்சிருந்த மன்னருக்கு சாச்சி சொன்ன டைவரெங்கே? பொன்னு மணிகளெங்கே? போயி வந்த காரு எங்கே? போயி வந்த காருக்குள்ளே போலீசார் மன்னரெங்கே? போலீசார் மன்னருக்கு புத்தி சொன்ன டைவரெங்கே? வெள்ளி மணிகளெங்கே? விசயனார் காரு எங்கே? விசயனார் காருக்குள்ளே வீத்திருந்த மன்னரெங்கே? வீத்திருந்த மன்னருக்கு வித்தை சொன்ன டைவரெங்கே? கூட்டத்த விலக்கி விடு கோட்டாரே என் தகப்பா! கோடி கொண்டு வந்த-எந்தனை கொண்டவர நான் பார்க்க.   வட்டார வழக்கு: மணி-மாட்டுக்கு மணிபோலக் காருக்கு ஹார்ன்; ஓச்சம்-சப்தம்; டைவர்-டிரைவர் (பேச்சு)   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை.   கலகத்தில் இறந்தவன்   சாதிக் கலகங்கள் சிறு காரணங்களால் கூடத் தோன்றிவிடும். இத்தகைய கலகமொன்றைப் பற்றி முன்னர் கூறியுள்ளோம். கலகம் ஒன்றில் அவளுடைய கணவன் திடீர் மரணமடைந்தான். போலீசு காவலில் அவனுடைய பிணம் கிடந்தது. அழுது பிதற்றிக் கொண்டு பிணத்தைக் காண வந்த மனைவியின் ஒப்பாரி இது. இதுவும் அபூர்வமானது.   கூட்டம் நடந்த தென்ன கொலைக் கேசு ஆனதென்ன கூட்டத்த விலக்கி விடு கோட்டாரே என் தகப்பா கோடி முகத்தை நான்பார்க்க சண்டை நடந்த தென்ன? தனிக்கூட்டம் ஆனதென்ன? சண்டைய விலக்கி விடு தாசில்தார் என் தகப்பா ஜனத்தை விலக்கி விடு தனிமுகத்தை நான் பார்க்க கலகம் நடந்ததென்ன கைகலப்பு ஆனதென்ன கலகத்தை விலக்கிவிடு கலைக்டரே என் தகப்பா கட்டி முகம் நான்பார்க்க மலையிலே வாளிருக்க-நான் மலையிண்ணு எண்ணியிருந்தேன் மலையில் வாள் சாஞ்சவுடன் மலைவு மெத்த தோணுதய்யா   வட்டார வழக்கு: மலையில் வாள்-கணவன். அவன் இறந்ததும் வலிமை குன்றியதாகத் தோன்றுகிறது.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம் :சிவகிரி,நெல்லை.   கணவனை இழந்தாள்   தாய், தகப்பன் இறந்து விட்டால், பிறரை தாய் தகப்பனென்று பாவித்துக்கொள்ளச் சொல்லி மகளைத் தேற்றலாம். “கணவனையிழந்தார்க்குக் காட்டுவதில்” என்றார் இளங்கோவடிகள். இது மனித உறவு முறிவுகளில் மிகவும் அடிப்படையானது. இது தனிப்பட்ட உணர்ச்சி வற்றிவிடுவது மட்டுமல்ல. கணவனிறந்து, ஆண் சந்ததியுமில்லாது போனால் அவளுக்குப் புகலிடம் இன்றிப் போய்விடும். அவளுடைய மைத்துனர்கள் “சோறும், துணியும்” வாங்கிக் கொள்ளத் தானம் கொடுப்பார்கள். பிறந்த வீட்டிலோ, அண்ணன் தம்பியர் மனைவிமாரது ஆதிக்கம் ஓங்கியிருக்கும். அங்கும் அமைதியாக வாழ முடியாது. ஆகவே தினசரி வாழ்க்கையிலேயே சுதந்திரமிழந்து பிறரை அண்டி வாழவேண்டிய நிலைமை தோன்றிவிடும். கணவன் சாவினால் ஏற்படும் தனிமையுணர்வு, அன்புடையவன் பிரிந்தான் என்ற எண்ணத்தால் மட்டும் ஏற்படுவதல்ல. பெண்ணினம் சமூகக் கொடுமைக்கு உள்ளாகி வாழ்க்கை முழுவதும் நைந்து சாக வேண்டியிருப்பதை எதிர்பார்த்து எழும் வேதனைக் குரலும் ஆகும். தனது நிகழ்கால வாழ்க்கை கவிழ்ந்து வருங்காலத்தில் எண்ணற்ற துன்பங்களை எதிர்நோக்கும் குழந்தையற்ற ஒரு பெண் தன் கணவன் இறந்ததும் அழுகிறாள். அவளுடைய ஒப்பாரி இது.   தோணி வருகுதுண்ணு துறைமுகமே காத்திருந்தேன் தோணி கவுந்திருச்சே துறைமுகமே ஆசையில்ல கப்பல் வருகுதுண்ணு-நான் கடற்கரையே காத்திருந்தேன் கப்பல் கவுந்திருச்சே கடற்கரையே ஆசையில்ல கொச்சி மலையாளம் கொடி படரும் குத்தாலம் கொடிபடர்ந்து என்ன செய்ய என் குணமுடையார் இல்லாமே மஞ்சி மலையாளம் மா படரும் குத்தாலம் மா படர்ந்து என்ன செய்ய மதிப்புடையார் இல்லாம   அருமை குறைந்தேன்   +தங்கச் சிணுக்குவரி தணலடியா மைக்கூடு தணலடிச்ச நேரமெல்லாம்-என் தங்கநிறம் குண்ணிருச்சே பொன்னும் சிணுக்குவரி புகைபடா மைக்கூடு புகைப்படா நேரமெல்லாம் பொன்னு நிறம் குண்ணிருச்சே   சாவுவரை துன்பம்   போலீசார் தீர்மானம் பொழுதடைஞ்சா தீருமண்ணே பொண்ணடிமைத் தீர்மானம் போய் முடிஞ்சாத் தீருமண்ணே தாசில்தார் தீர்மானம் சாயந்தரம் தீருமண்ணே சண்டாளி தீர்மானம்-என் தலைமுடிஞ்சால் தீருமண்ணே   என் துயர்   சந்தன நெல்லிமரம் சாதிப்பிலா மரமே தன்மைகளைச் சொல்லிட்டா தாசில்தார் கச்சேரியும் தானே புரண்டழுகும் குங்கும நெல்லிமரம் கோடிப் பிலா மரமே-நான் கொடுமைகளைச் சொல்லிட்டா கோட்டார் கச்சேரியும் கூடப் புரண்டழுகும்   பிறந்த வீடு   பல்லு விளக்கி-நான் பிறந்த இடம் போனாலும் படியேறிப் போனாலும்-எனக்குப் பல்லிலிடும் பச்சத் தண்ணி-ஐயா பழனி மலைத் தீர்த்தமென்பார் நாவை விளக்கி நான் நடுத் தெருவே போனாலும் நாவிலிடும் பச்சத் தண்ணி-எனக்கு நாகமலைத் தீர்த்தமென்பார் புள்ளை இடுக்கி-நான் புறந்த எடம் போனாலும் புள்ளைக்குச் சீருண்டும் மத்தொரு நாள் தங்கலுண்டும் பிள்ளைக்குச் சீருமல்ல பின்னொரு நாள் தங்கலில்ல மக்களை இடுக்கி நான் மத்தொரு நாள் போனாலும் மக்களுக்குச் சீருண்டும் மத்தொரு நாள் தங்கலுண்டும் மக்களுக்குச் சீரில்ல மத்தொரு நாள் தங்கலில்ல   இவளுக்குப் பிள்ளையில்லை, பிள்ளையிருந்து கணவன் இறந்த பின் பிறந்த வீடு போனால் ஒருநாள் தங்கச் சொல்லி பிள்ளைக்கு ஏதாவது சீர் கொடுப்பார்கள். என்னை யார் அழைத்து வீட்டிலிருக்கச் சொல்லுவார்கள் என்று ஏங்குகிறாள். தண்ணீர் கேட்டால் கூட ஒரு கரண்டி நீர் கொடுத்து ‘இது அபூர்வமான கோயில் தீர்த்தம்’ என்று சொல்லுவார்கள். அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள் என்று வருந்துகிறாள்.   நானும் உழைத்தேன்   கத்திரியும் பாவையும் கலந்தேன் ஒரு பாத்தி கருணன் உடன் பிறந்து-நான் கசந்தேன் பிறந்தெடத்த வெள்ளரியும் பாவையும் வெதச்சேன் ஒரு பாத்தி வீமன் உடன் பிறந்து-நான் வெறுத்தேன் பிறந்தெடத்தெ வெள்ளைத் துகிலுடுத்தி-நான் வீதியில போனாக்க வெள்ளாளன் பிள்ளையென்பார் வீமனோட தங்கையென்பார்   இளமையில் தாய், தகப்பன், சகோதரர்களோடு இவளும் பிறந்த வீட்டு வயலில் பாத்திகட்டி கத்திரிச் செடியும் பாகைச் செடியும் பயிர் செய்து பாடுபட்டிருக்கிறாள். ஆனால் விதவையாகி பிறந்த வீட்டுக்குப் போனால், வெள்ளாளன் மகள், வீமன் தங்கை என்று ஊரார் அடையாளம் கண்டு கொள்ளுவார்கள். ஆனால் பிறந்த வீட்டில் தங்கி வாழ முடியுமா? பட்டேன் படாத துயரம் !   மடிகட்டிக்கல் பெறக்கி மண்டலங்கள் உண்டுபண்ணி மண்டபமும் இங்கிருக்க மயில் போன மாயமென்ன கூட கொண்டு கல் பெறக்கி கோபுரங்கள் உண்டு பண்ணி கோபுரமும் இங்கிருக்க குயில் போன மாயமென்ன தூண்டா மணி விளக்கு சுவரோரம் நிண்ணெரியும் தூசி பட்டால் மங்காது-என்னோட துயரம் சொன்னால் மங்கிவிடும் காந்தா மணி விளக்கு கதவோரம் நின்னெரியும் காத்தடிச்சா மங்காது என்னோட கவலை சொன்னா மங்கிவிடும் பூத்த மரம் கீழிருந்து-என் பொண் பாட்டைச் சொல்லிவிட்டா பூத்த மரமெல்லாம் பூமாறிப் போயிடுமே காய்ச்ச மரம் கீழிருந்து-என் கவலையச் சொல்லி விட்டா காய்ச்ச மரமெல்லாம் காய் மாறிப் போயிடுமே   கேள்வியில்லை   தங்க மலையிலேயே தரகறுக்கப் போனாலும் தங்கமலைக்காரன் தனிச்சடிச்சாக் கேள்வியில்லை பொன்னு மலையோரம் புல்லறுக்கப் போனாலும் பொன்னுமலை வேடர்கள் புகுந்தடிச்சாக் கேள்வியில்லை வெள்ளி மலையோரம் விறகறுக்கப் போனாலும் வெள்ளிமலை வேடுவர்கள் விரட்டியடிச்சாக் கேள்வியில்லை   விதவையை யாரும் மதிக்கமாட்டார்கள். துணைவனோடு வாழும்போது அவளுக்குத் துணிவு இருந்தது. ஆதரவு இருந்தது. இப்பொழுது பழைய வேலைகளுக்கு அவள் போனால் அவளை யாராவது கொடுமைப்படுத்தினால் அவளுக்கு ஆதரவு யார்? எல்லோரும் இழிவாக கருதுவதனால் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா? வேலை செய்தால்தானே கஞ்சி காய்ச்ச முடியும்?   அமங்கலி   வாழயிலை கொண்டு-ஒங்க வளசலுக்கே போனாலும் வாழலைக்குச் சாதமில்லை-ஒங்க வளசலோட ஆசையில்ல தேக்க இலைகொண்டு தெருவோட போனாலும் தேக்கிலைக்குச் சாதமில்லை-எங்க தெருவோட ஆசையில்ல அல்லியும் தாமரையும் அடரிப் படர்ந்தாலும் அல்லி பாக்க வந்தவுக-என்னை அசநாட்டார் என்பாக முல்லையும் தாமரையும் முறுக்கிப் படர்ந்தாலும் முல்லை பாக்க வந்தவுக-எனை மூதேவி என்பாக படியில் அரிசி கொண்டு பழனிமலை போனாலும் பழனிமலைப் பூசாரி-எனக்கு பலனும் இல்லை என்பாரு சொளவு அரிசி கொண்டு சுருளிமலை போனாலும் சுருளிமலைப் பூசாரி-எனக்கு சுகமில்லை என்பாரு   விதவை வாழ வழியற்றவள் என்பது மட்டுமல்ல. அவள் ஓர் உயிருள்ள பிணம். மங்கல நாட்கள், திருவிழாக்கள், மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகைகள் இவற்றில் அவள் ஒதுங்கியிருக்க வேண்டும். அவள் எதிரே வந்தால் தீயநிமித்தம்; விதவை தாயாக இருந்தாலும், மங்கல நாட்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். இதுவே அவளை உயிரோடு வாட்டி வதைப்பது. ஒரு குழந்தையிருந்தால் இவற்றையெல்லாம் மறக்க அது துணை செய்யும்.குழந்தையும் அவளுக்கி்ல்லை.அவள் துயரத்தை அளவிட முடியுமா? குழந்தைக்குச் சொத்தில் பங்குண்டு. அவன் உணர்வுக்கு இனியவன் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு வழி உண்டாக்குபவன். அவனை வைத்துக் கொண்டு தானும் வாழலாம். தனியே இருக்கும் விதவையை மைத்துனன்மார் விரட்டிவிட்டால் என்ன செய்வது? கோர்ட்டில் நியாயம் கிடைக்குமா? குழந்தை இருந்தால் நியாயமுண்டு. இல்லாவிட்டால் நியாயமில்லை. பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாதிருக்கும் நிலையில், பெண்களுக்கு நேரும் துயரநிலையை இவள் நம் கண்முன் கொண்டு வருகிறாள்.   மஞ்சணத் தொந்தியில மைந்தன் பிறந்தாக்க மைந்தனக்குப் பங்குண்டும் மதுரைக் கோட்டிலேயும் நியாயமுண்டும் மஞ்சணத் தொந்தியில மைந்தன் பிறக்கலியே மைந்தனுக்குப் பங்குமில்ல மதுரைக் கோட்டுலயும் ஞாயமில்லை குங்குமத் தொந்தியில குழந்தை பிறந்தாக்க குழந்தைக்குப் பங்குமுண்டும்-மதுரைக் கோட்டுலயும் நியாயமுண்டும் குங்குமத் தொந்தியிலே குழந்தை பிறக்கலயே குழந்தைக்குப் பங்குமில்ல-மதுரைக் கோட்டுலயும் நியாயமில்ல மஞ்ச வச்சாப் பிஞ்செறங்கும் மணல் போட்டா வேர் எறங்கும் மந்திரிமார் பெத்தமக மலடி எனும் பேரானேன் இஞ்சி வச்சாப் பிஞ்செறங்கும் எருப்போட்டா வேர் எறங்கும் இந்திரனார் பெத்த மக இருசி யெனும் பேரானேன்.   வட்டார வழக்கு: மஞ்சி-மேகம் ; மா-மாமரம் ; சிணுக்குவரி- கூந்தல் சிக்கலை எடுக்கும் இரும்பு ஊசி ; குண்ணிருச்சே-குன்றி விட்டதே (பேச்சு) ; மத்தொரு-மற்றும் ஒரு (பேச்சு) ; எடத்தே-இடத்தை ; பெறக்கி-பொறுக்கி (பேச்சு) ; நிண்ணெரியும்-நின்று எரியும் (பேச்சு) ; வளசல்-குடும்ப வீடுகளுள்ள வளைவு ; தேக்கிலை-மலையடிவாரக் கிராமங்களில் தேக்கிலையில் உணவு படைப்பார்கள் ; அடரி-அடர்ந்து ; இருசி-மலடி.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.   நின்னொரு நாள் வாழலியே மலையோரத்துக் கிராமம் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு மணமாகி மனைவியோடு இன்பமாக வாழ்ந்து வந்தான். அவ்வூராருக்கும், அடுத்த ஊரில் வாழ்ந்து வந்த வேறு ஓர் சாதியினருக்கும் நீண்ட நாளாகப் பகைமை உண்டு. இப்பகை முற்றி கலகமாக மாறிற்று. அவர்கள் படையெடுத்து வந்து பகல் வேட்டுப் போட்டு ஊரைக் கொள்ளையிட்டார்கள். இளைஞன் ஊரைக் காப்பாற்ற போராடினான். போராட்டத்தில் அவன் உயிர் நீத்தான். உளுந்தும், சாமையும் காயப்போட மலைச்சரிவுக்குச் சென்றிருந்த அவனது மனைவி செய்தி அறிந்து அரற்றினாள். அழுதடித்துக் கொண்டு ஊர் திரும்பினாள். அவனுடைய தங்கைக்கு ஆள் விட்டாள். அவள் அவனோடு வாழ்ந்தது சில ஆண்டுகளே. ஆயினும் வயல் வேலைகளை யெல்லாம் இருவரும் சேர்ந்தே மகிழ்ச்சியோடு ஒத்துழைத்துச் செய்து வந்தனர். அவளுடைய உணர்ச்சித் துடிப்பும், வருங்காலம் பற்றிய துன்ப நினைவுகளையும் எண்ணி ஒப்பாரியாகப் பாடி புலம்புகிறாள். இவளது தனிமையைப் போக்கக் குழந்தையும் இல்லை.   கொள்ளை   பட்டணமும் ஜில்லாவாம் பவுஷாப் பிழைக்கையிலே பகல் வேட்டுப் போட்டல்லவோ பட்டணத்தைக் கொளைளையிட்டார் தெக்ஷிணையாம் ஜில்லாவாம் செருக்காப் பிழைக்கையிலே தீ வேட்டுப் போட்டல்லவோ தெக்ஷிணையைக் கொள்ளையிட்டார்   வருமுன் மாய்ந்தான்   உருண்ட மலையோரம் உளுந்து கொண்டு காயப்போட்டேன் உளுந்து அள்ளி வருமுன்னே-உன்னோட வாசலில உருமிச்சத்தம் கேட்டதென்ன சாய்ஞ்ச மலையோரம் சாமை கொண்டு காயப்போட்டேன் சாமி வருமுன்னே சங்குச் சத்தம் கேட்டதென்ன?   பிள்ளையில்லை   முட்டங்கால் தண்ணியில முத்தப் பதிச்சு வச்சேன் முத்தெடுக்கப் பிள்ளையுண்டோ?-உனக்கு முடியிறக்கப் பிள்ளையில்லை கரண்டக்கால் தண்ணியில காசப் புதைச்சு வச்சேன் காசெடுக்கப் புள்ளையுண்டோ?-உனக்கு கருமம் செய்யப் புள்ளையில்லை   பாதி நாள் வாழவில்லை   பாலூத்திப் பாத்தி கட்டி பாக்குமரம் உண்டாக்கி பாக்கும் தழையிலையே பாதி நாள் வாழலையே நெய்யூத்திப் பாத்தி கட்டி நெல்லி மரம் உண்டாக்கி நெல்லியும் தழையலியே-நான் நிண்ணொரு நாள் வாழலியே ஒப்புத் தெரியலிண்ணு கொப்பு நிறுத்தி வச்சேன் கொப்பைத் திருப்ப எனக்கு ஒரு கோடை மழை யெயலியே சீரகம் பூப்பூக்கும் செடி முறிக்கி பிஞ்செறங்கும் சீராளன் இல்லாம-நான் செடியோட வாடுதனே கொத்தமல்லி பூ பூக்கும் கொடி முறுக்கிப் பிஞ்செறங்கும் கூர் வாளன் இல்லாமே-நான் கொடியோடு வாடுதனே ! லோட்டா வௌக்கி வச்சு ரோசாப்பூ உள்ளடச்சேன் ரோசாப்பூ கவுந்ததென்ன?-நான் ரோசாப்பூ வாடுதனே செம்பு விளக்கி வச்சு செம்பகப்பூ உள்ளடச்சு செம்பு கவுந்ததென்ன?-நான் செம்பகப்பூ வாடுதனே !   கொழுந்தி வருவதில்லை   வெள்ளிரியும் பாவையும் விதைச்சேன் ஒரு பாத்தி வீமனோட தங்கையல்லோ- வெறுத்தாள் பிறந்தெடத்த உளுத்தம் பயிரறியேன் உச்சிப் பயிர் நானறியேன் ஊரார் சொல் வார்த்தைக்கு உயிர் வச்சு நானறியேன் பச்சைக் குருத்தோலை பகவான் அழைச்சானோ? எட்டுக் குருத்தோலை-ஐயா உன்னை எமன் அழைச்சானோ? செத்தையின்னு சேதி கொண்டு சீதைக்கு ஆளு விட்டு சவத்தத் தூக்கு மின்னே-என் ஐயா சீதையுமே வந்தாளே சிந்தாமக் குத்தி சிதறிப் பொரி பொறிச்சு சீதை அழுது வந்தா சிறு மண்டபங்கள் ஓசையிட   வட்டார வழக்கு: தெஷிணை-தென்மாவட்டங்கள் ; உருமி-உடுக்கை போன்ற ஒரு தோல் கருவி.   குறிப்பு: தகப்பன் இறந்தால் பல சாதியினர் மொட்டையடித்துக் கொள்ளுவார்கள். கருமம் மூத்த மகன் செய்ய இளைய மக்கள் உதவி செய்வார்கள்.   பாதுகாவலனாக இருந்த ‘சீராளன்’, ‘கூர்வாளன்’ மாய்ந்து விட்டான். சீரகம், கொத்தமல்லி ஆகிய இளஞ்செடிகள் கணவனையிழந்தவளுக்கு உவமை. ஊரார் சொல் வார்த்தை-தங்கை அண்ணன் இருவரிடையே சண்டை மூட்டி விட்டவள்தான் என்ற பழிச்சொல்.   தென்னங் குருத்தோலையை முடைந்து அதில் பிணத்தைக் கிடத்தி பாடையுடன் தூக்கிச் செல்லுவார்கள். நெல்பொரி பொரித்து அதனை பிணத்தைத் தூக்கிச் செல்லும் வழியில் காசோடு கலந்து வாரி இறைப்பர். இன்றும் நம் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து வருகிறது.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.   பகவான் அழைச்சானோ   இவள் கணவன் கிராமத்தில் அதிகாரியாக வாழ்ந்தவன். அவன் இறந்தவுடன் அவள் அவனது பெருமையையெல்லாம் சொல்லி ஆற்றுகிறாள். இவன் திடீரென்று இறந்து விட்டதால் எதிர்பாராத துக்கத்தில் மனைவி ஆழ்ந்து விட்டாள். பல உவமைகள் மூலம் அவள் தனது துன்பத்தை வெளியிடுகிறாள். ஏக்கம்   சித்திரக்காலி செவந்த-நான் செவந்த மணவாரி உப்பூத்தி நெல்லிலே-என்ன ஊட கலந்தியளே நந்தவனம் பூஞ்சோலை நடுக்கிணறு சாவடியாம் தங்கப் புண்ணியர்-இல்லாமே-அய்யா புதுக்கிணறு பாழாச்சே செப்போடு போட்டு சிங்கம் போல் தூணிறுத்தி எப்போதும் போல-மன்னா-உம்மை உடனிருக்கத் தேடுதனே பத்து வகைப் பச்சிலையாம் பார்வதியாள் மாத்திரையாம் பார்வதியாள் உரைக்குங்குள்ளே-உம்ம பகவான் அழைச்சானோ?   பெருமை   +தூணுல சாஞ்சு-நீங்க துரைகளோட வாதாடி தூணும் துணுக்கிட-உங்க துரை அடிமை வாக்குரைப்பான் கல்லில சாஞ்சு-நீங்க கணக்கனுட வாக்குரைக்க கல்லும் துணிக்கிட்டா-அந்தக் கணக்கனுமே வாக்குரைப்பான் விரலும் கணக்கெழுதும்-உங்க வெள்ளை மொழி தூதாகும்-உங்க கையும் கணக்கெழுதும்-உங்க கருத்த மொழி தூதாகும் சட்டிமேல் சட்டி வச்சு-நான் சரியாய் பிழைச்சு வந்தேன் சட்டி கவுந்ததென்ன?-எனக்கு சனியன் தொயந்த தென்ன? மடிகட்டிக் கல் எறக்கி மண்டபங்கள் உண்டு பண்ணி, கோபுரத்தின் கீழே நான் குழந்தை குடியிருந்தேன், கூடவித்துக் கல்லெறக்கி, கோபுரங்கள் உண்டு பண்ணி, கோபுரத்தின் கீழே-நான் குழந்தை குடி இருக்கேன், பொங்கி பொரிச்சுவச்சு-நான் புளியம் பூச் சோறாக்கி ; பொங்கிய சோறு உங்கக்குள்ள-எனக்குப் போட்டானே கெடியாரம் ஆக்கி அடுக்கி வச்சு-நான் ஆவாரம்பூச் சோறாக்கி ஆக்கின சோறு உங்கக்குள்ள-எனக்கு அடிச்சானே கெடியாரம் !   திடீர் நிகழ்ச்சி   தாலியிண்ணாத் தாலி-நான் தங்கத்தால் பொன் தாலி தாலி கழற்றிட-எந்தன் தருமருக்கே சம்மதமோ குளத்தங்கரையோரம்-நான் குயிலுணு நிக்கையிலே-என்ன குயிலுணு பாராமே-என்னைக் குண்டால எய்தார்கள் ஆத்தங் கரையோரம்-நான் அன்னம் போல் நிக்கயில அன்ன மிண்ணும் பாராமல்-என்ன ஒரு அம்பால எய்தார்கள் கத்தரியும் பாவையும் காக்கும் படுவையிலே-நான் கர்ணனார் பெத்த மகள்-நான் கற்பனைக்கு ஆளானேன் வெள்ளரியும் பாகலும் விளையும் படுகையிலே-நான் வீமனார் பெத்த மகள்-நான் வெயில் படக் கண்டியளோ?   வட்டார வழக்கு: சித்திரக்காலி, மணல்வாரி, உப்பூத்தி-இவை நெல்வகை உரைக்குங்குள்ளே-உரைப்பதற்குள் துணுக்கிட-அச்சமுற ; மொழி-வழி ; தொயந்தது-தொடர்ந்தது ; பெறக்கி-பொறுக்கி. குறிப்பு : மூன்று பாடல்களிலும் கடினமாக முயன்று பெற்ற அமைதியான வாழ்க்கை சரிந்துவிட்டதை வருணிக்கிறாள். சோற்றுக்கு உவமை-புளியம்பூ ஆவாரம்பூ. குண்டால எய்தார்கள், அம்பால் எய்தார்கள்-கணவனைக் காலதூதர்கள் திடீரென்று விலங்குகளை வேடர் எய்து கொல்வது போலக் கொண்டு போய்விட்டார்கள். அந்தத் துக்கத்தின் வேதனையை மனைவிதான் அனுபவிக்கறாள். திடீர் துன்பத்தை நமக்கு விளக்க இரண்டு உவமைகள் கையாளப்பட்டன. கருணன், வீமன்-நாட்டுப் பாடல்களில் மக்களால் விரும்பிப் போற்றப்படும் வீரர்கள் தருமர், வீமன், கருணன், அர்ச்சுனன். இராமாயணக் கதையை விட பாரதக்கதை தான் பாமர மக்களுக்கு விருப்பமானது.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை. கும்பினியார் கொள்ளி வைத்தார்   தென் பாண்டி நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் மக்களிடம் இருந்த ஆயுதங்களை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர், ஆயினும் வெள்ளையரால் தங்கள் உரிமைகள் பறிபோவதை உணர்ந்த மறவர் சாதித் தலைவர்கள், ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக, அவர்களை எதிர்த்தனர். இச்சிறு கூட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டன. கலகக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களில் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறைகளில் இறந்தனர். இறந்த செய்தி கேட்ட மனைவிமார் ஒப்பாரி கூறி அரற்றினர். அவ்வகை ஒப்பாரிகளில் மகன் கொள்ளி வைக்காமல், கும்பினியார் கொள்ளி வைத்தார்கள் என்று வருந்தியும், பெருமையோடு மனைவி கூறுவாள். மனைவி பட்டணம்போய் அவனைப் பார்த்துத் திரும்பும்போது புதிய சேலை முழுதும் கண்ணீர் மழையால் நனைந்து போகுமாம். அடிக்கடி பார்க்கலாமென்றால் அவனிருக்கும் சிறையை தாழ்ப்பாள் போட்டு அடைத்துவிட்டார்களாம்.   மலையைக் கரியாக்கி மாணிக்கச் சங்கூதி சமுத்திரத்தில் நீர் மோந்து குருவன் குழையடுக்கி கும்பினியார் கொள்ளிவைக்க கருங்கடல் நீந்தி கர்னல் குடம் எடுத்து தாமரை நூல் போட்டு சமத்தன் தலை விரிச்சு பிறந்தாரைப் பாக்கலியே தேரூத்தாம் தண்ணியாம் பெருங்குளத்து மாவிலையே-பிறந்த வாசலில வேதனையா நின்னழுதோம் செம்பு தூக்கி செவந்தி மாலையிட்டு-தெருவில வாரயில தேசத்தோடு நின்னழுதோம் செகப்பு ரயிலேறி-நீ வாழ்ந்த சீமைக்கே வந்தாலும் சீலை எடுத்திருவ சிறு நகையும் செய்திருவ-நான் சீல எடுத்துக் கட்டி சிறு நகையும் மேல் பூட்டி-நீ வாழ்ந்த சீமைக்கே வந்தாலும் சீமையிலே பேஞ்ச மழை சீலையும் நனைஞ்சிருச்சே சிறு நகையும் மங்கிருச்சே பொன்னும் ரயிலேறி-நீ வாழ்ந்த பூமிக்கே வந்தாலும் புடவை எடுத்திருவ பொன் நகையும் போட்டுருவ-நான் புடவை மடிச்சுக்கட்டி பொன் நகையும் மேல் பூட்டி-உன்னோட சீமைக்கே வந்தாலும் சீமையில் பேஞ்ச மழை புடவையும் நனைஞ்சிருமே பொன் நகையும் மங்கிருமே பச்சுச ரயிலேறி நீ இருக்கும் பட்டணமே வந்தாலும் பட்டும் எடுத்திருவ பரு நகையும் செஞ்சிருவ பட்டு மடிச்சுடுத்தி பரு நகையும் மேல் பூட்டி பட்டணமும் வந்தாலும் பட்டணத்தில் பேஞ்ச மழை பட்டு நனைஞ்சிருமே பரு நகையும் மங்கிடுமே கல்லுகட்டி வில்ல மரம் கைலாச தீர்த்துக் கரை கண்டா வருவ மிண்ணு கைத்தாப்பா போட்டடைச்சே செங்கட்டி வில்ல மரம் செவலோகத் தீர்த்தகரை தெரிந்தா வருவோமின்னு தெருத்தாப்பா போட்டடைச்சே   குறிப்பு: சிறையில் இறந்தவன் பிணத்தை கும்பினியார் காலத்தில் உறவினரிடம் கொடுக்காமல் தாங்களே எரித்து விடுவார்கள். மகன் பூணூல் போட்டு ஒற்றை வேட்டி கட்டி பிணத்தை குளிப்பாட்ட நீர் கொண்டு வருவான். அதையெல்லாம் ஒரு வெள்ளைப்பட்டாள அதிகாரியான கர்னல் செய்தானோ என்று மனைவி வினவுகிறாள்.   சிறையில் இறந்தவனுக்கு வீட்டுக் கருமாதி செய்து, ஒரு குருத்தோலையை இறந்தவனது அடையாளமாக வைத்து அழுது எரிப்பார்கள்.   அவன் சிறையிருந்த இடத்துக்ககு அடிக்கடி போக முடியாது.தாழ்ப்பாள் போட்டிருக்கும். இப்பொழுது விடுதலை பெற்று அவன் சென்றுள்ள கைலாசத்துக்குப் போய் அவனோடு இருக்கலாமென்றால், அங்கும் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. அவளால் போக முடியாது.   தவசப் பொங்கல் சீருமில்லை   தந்தை இறந்து விட்டார். மகளுக்கு மணமாகி அயலூரில் வாழ்கிறாள். பொங்கல்தோறும் அவளுக்கு சீர் வரிசைகள் அனுப்பி வைப்பார். அவளுக்குத் தமையன்மார் உண்டு. ஆனால் தந்தையைப்போல் அன்பாக சீர் அனுப்பி வைப்பார்களா? அவர்கள் மறந்தாலும் மதினிமார் அதனை நினைவூட்டுவார்களா? தாய் சொன்னாலும் காதில் ஏறுமா? தந்தை போய்விட்டால் மகளுக்கு அருமை பெருமை ஏது? இதனை நினைத்து மகள் உருகுகிறாள்.   வடக்கே கரத்தோட்டம் வாழப்பூப் பூந்தோட்டம் வளர்த்தவர் இருக்கும் வரை வரிசைப் பொங்கல் சீருவரும் வளர்த்தவர் காலம் போக வாழ மடலிழந்தேன் வரிசைப் பொங்கல் சீரிழந்தேன் தெக்கேகரத்தோட்டம் தென்ன மரம் பூந்தோட்டம் தேடுனவர் இருக்கும் வரை தெவசப் பொங்கல் சீருமுண்டு தேடுனவர் காலம் போக தென்ன மடலுமில்லை தெவசம் பொங்கல் சீருமில்லை   குறிப்பு: கொங்கு வேளாளர் சமூகத்தில் மணமான தம்பதிகளை வேறே வைப்பார்கள்.அப்பொழுது வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களையும் பெண்ணின் தந்தை கொடுக்க வேண்டும். அதன்பின், பொங்கல்தோறும் சீர் வரிசைகள் கொடுப்பார்கள். பெண்ணுக்கு குழந்தை பிறந்து சம்பந்தம் காணும் வரை சீர் கொடுக்க வேண்டும்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   கூலிப்படி   கணவன் இறந்து போனான். குடும்ப நிருவாகம் அவளுடைய மைத்துனர்கள் கைக்கு மாறிவிடும். அதன் பிறகு அக்குடும்பத்தில் உரிமை யிழந்தவளாய், மைத்துனர்கள் கையால் படி வாங்கித் தின்னும் நிலை அவளுக்கு ஏற்படும். மேலும் வேலைக்காரியைப் போல வேலை செய்தால்தான் அக்குடும்பத்தில் அவளுக்குச் சோறு கிடைக்கும். வீட்டின் தலைவி சொத்துரிமையின்மையால், தன் கணவனது மறைவிற்கு பின் அவள் அவ்வீட்டிலேயே கூலிக்காரியாகிறாள். இந்நிலையை எண்ணி அவள் பாடுகிறாள்.   மச்சு மச்சா நெல் விளையும் மகுடஞ்சம்பா போரேறும் மச்சாண்டார் கையாலே மாசப்படி வாங்கித்தி்ங்க மாபாவி ஆனேனப்பா குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ்சம்பா போரேறும் கொழுந்தனார் கையாலே கூலிப்படி வாங்கித்திங்க கொடும்பாவி ஆனேனப்பா   வட்டார வழக்கு : மகுடஞ்சம்பா, குமுடஞ்சம்பா-ஒரு வகை நெல்.   குறிப்பு : மைத்துனர் கொடுக்கும் மாதப்படி காணாமல் அவள் கூலிவேலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. கணவனுக்கு சொந்தமான நிலமிருந்தும் தனக்கு குழந்தையில்லாததால் சொத்தில் உரிமையில்லாமல், பிறருக்கு வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமையை எண்ணி விதவை வருந்துகிறாள்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   பஞ்சையானேன்   முத்து மழை பேயும் மொத வாய்க்கால் தண்ணி வரும் மொத வாய்க்காத் தண்ணிக்குத்தான் மொளவு சம்பா நெல் விளையும் மொளவு சம்பா நெல்லுக்குத்தா மொதலாளியா நானிருந்தேன் எனக்கு வந்த சாமி சின்ன நடையிழந்து சிறு நாடு காலம் போவ மொளவு சம்பா நெல்லுக்கு மொற மெடுக்கப் பஞ்சையானேன் கனத்த மழை பேயும் கனிவாய்க் காத்தண்ணி வரும் கனிவாய்க் காதண்ணிக்குத்தா கடுகு சம்பா நெல் விளையும் கடுகு சம்பா நெல்லுக்குத்தான் கணக்காளியா நானிருந்தேன் கணக்கரு காலம் போக கடுகு சம்பா நெல்லுக்கு களங் கூட்டப் பஞ்சையானேன்   குறிப்பு : விதவையின் நிலை கண்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கையர் யாரும் இரங்கவில்லை. அவளைக் காண வருவதில்லை. அவளைத் தங்கள் வீடுகளுக்கு அழைப்பதுமில்லை. கணவன் வாழ்ந்தபோது அடிக்கடி விருந்தாளி வந்த சுற்றத்தார், அவனிறந்ததும் வருவதை நிறுத்தி விட்டனர். அவனா அவர்களுக்கு உறவு? உறவை ஏற்படுத்துவதும் செல்வம்தானே? கணவனோடு அவளுக்குச் செல்வம் போயிற்றல்லவா? அதை நினைத்து மனமுருகிப் பாடுகிறாள் விதவை.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   சனத்தார் அறியாங்க   இஞ்சி இலுமிச்சங்கா எளங்கொடி நார்த்தங்கா-நா எளப்பமாப் போறேண்ணு எனத்தார் அறியாங்க எம்பொழப்பைக் காணுங்க ! தண்ணி எலுமிச்சங்காய் தனிக்கொடி நார்த்தங்காய் சனத்தாரு கண்ணெதிரே தனியாப் போனேன்னு சனத்தார் அறியாங்க தாம நிலை காணாங்க   குறிப்பு : எளங்கொடி,எனத்தார்,எளப்பம்-முதல் ஒலி ‘இ’ என்று கொள்க.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   செல்வி நான் புலம்புகிறேன்   நமது பழைய சமூக வாழ்க்கையில் கணவனின் நிழல் மனைவி. அவளுக்கு இன்று எவ்வித சுகங்களும் இல்லை. கணவனோடு இருந்தால்தான் உலக இன்பங்களை அனுபவிக்கலாம். கணவன் மறைந்தால் அவை யாவும் அவளுக்கு இல்லை.   ஆலம் பலவையிலே அரளிப்பூ மெத்தையிலே அருச்சனரும் தேவியுமாய் அருகிருந்து பேசிவந்தோம் அருச்சுனரு தப்பி விட ஆலம் பலவை விட்டே அரளிப்பூ மெத்தை விட்டே அரளிப்பூ மெத்தை விட்டே அல்லியு நா புலம்புகிறேன் சீவம் பலவையிலே செவந்திப்பூ மெத்தையிலே சீமான் தேவியுமாய் சேந்திருந்து பேசி வந்தோம் சீமானும் தப்பிவிட சீவம் பலவை விட்டே செவந்திப்பூ மெத்தை விட்டே செல்வியு நா புலம்புகிறேன்   வட்டார வழக்கு : பலவை-பலகை ; நா-நான்   உதவியவர் : சி.செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   அஞ்சிலே பூ முடிந்தாள்   பிள்ளைப் பிராயத்தில் சொத்திற்காகக் கிழவனுக்கு அவளை மணம் செய்து வைத்தார்கள். அவள் பிராயமானதும் அவன் இறந்துபோனான். அவளுக்கு தாலியறுத்து, ‘நீர்பிழிதல்’ என்ற சடங்கு செய்கிறார்கள். இச்சடங்குகள் குளக்கரையில் நடைபெறும். கரையில் போகும் யாரோ இங்கென்ன கூட்டம் என்று வினவுகிறார்கள். அதற்குப் பதிலளிப்பதுபோல அவள் பேசுகிறாள். குழந்தைப்பருவத்தில் மணமாகி காதலின்பம் அறியாமல், இனி அதனை நினைப்பதும் தவறென்ற நிலையில் வலிந்து துறவறத்தில் தள்ளப்பட்ட பெண்ணின் வேதனையை இப்பாட்டு விளக்குகிறது.   ஆத்துக் கருவாழே ஆத்துலுள்ள நீர்வாழே ஆத்தோரம் போறவங்க ஆத்திலென்ன கூட்ட மென்றார் அஞ்சிலே பூ முடிஞ்ச அருங்கிளியார் கூட்டமம்மா வையத்தார் கண்முன்னே அப்போ கருப்பானோம் அழகிலோர் மாட்டானோம் கொழந்தையில் பூமுடிச்ச குயிலாளு கூட்டமய்யா சுத்தக் கருப்பானோம் சொவுசிலே மாட்டானோம்   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம்.   செல்வன் சிறுவயசு   சிறு ஆண் குழந்தையோடு மனைவியையும் விடுத்துக் கணவன் மாண்டு போனான். குழந்தையில்லாமல் விதவையாக விடப்பட்டவளின் நிலைமையை விட இவள் நிலைமை சற்று உயர்ந்ததே. மலடியான விதவை மைத்துனர்மாரிடம் ‘கூலிப்படி’ வாங்கித்தான் வாழ வேண்டும். இவளுக்கு மகனிருப்பதால் சொத்துரிமையுண்டு. ஆனால் சிறுமகன் துண்டு நிலத்தைப் பாதுகாக்கும் வலிமையுடையவன் அல்லவே ! சிறுநிலம் உடையவர்களுடைய நிலத்தைப் பறித்துக்கொள்ள பெருநிலக்கிழார்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்வார்கள்? களத்தில் போர் போட்டிருக்கும்பொழுது மாட்டை விரட்டியடிப்பதும், விளைந்த வயலில் எருதை விரட்டியடிப்பதும், எதிர்த்து வந்தால் வழக்குப் போடுவதுமான முறைகளால் நிலத்தை தங்களுக்கே விற்றுவிடச் செய்வதும் அவர்கள் கையாளும் முறைகள். இச் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராட வலிமை வாய்ந்த ஆண்களாலேயே முடியாது. சிறுவன் என்ன செய்வான்? இச் சிந்தனை அவளுக்குக் கவலையை உண்டுபண்ணுகிறது.   மத்தங்கா புல்லு வெட்டி மலையோரம் போர் போட மலையோரம் போரிலே தான் மாடு வந்து மேயுதிண்ணு மாதுளம்பூ சாட்டை கொண்டு மாட்டை விரட்டிவிட மைந்தன் சிறுவயசு-நான் மனசொடிஞ்சு போனேனே இஞ்சிக்கா புல்லு வெட்டி எடையோரம் போர்போட எடையோரம் போரிலேதான் எருது வந்து மேயுதிண்ணு எலுமிச்சங்க சாட்டை கொண்டு எருதை வெரட்டி விட என் செல்வம் சிறுவயசு-நா செருவடைஞ்சு போறேனே   வட்டார வழக்கு : செருவடைஞ்சு-சோர்வடைந்து ; மத்தங்கா-இஞ்சிக்கா, ஒரு வகை நெல் ; மாதுளம்பூச் சாட்டை, எலுமிச்சங்க சாட்டை-சாட்டை கம்பின் நிறம் பற்றிப் பெயர் வந்திருக்கலாம்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   புகைபோகச் சன்னலுண்டு   வீட்டில் புகைபோகச் சன்னலுண்டு. ஆனால் அவள் உள்ளக் கிளர்ச்சிகளுக்கு வெளியீடு காணச் சன்னல்கள் இல்லை. எத்தகைய இன்ப அனுபவங்களும் அவளுக்கு விலக்கப்பட்டவை. வெளியே தலை நீட்டினால் ‘பாவி’ என்று உலகம் சொல்லுகிறது. உணவு உண்பது தவிர வேறு அனுபவம் அவளுக்குக் கிடையாதா?   பொன்னு அடுப்பு வச்சு பொங்க வச்சேன் சாதங்கறி பொங்கி வெளியே வந்தா பொகை போவச் சன்னலுண்டு பொங்கி வெளியே வந்தா புருசனில்லாப் பாவியென்பார் ஆக்க அடுப்புமுண்டு அனலும் போவ சன்னலுண்டு ஆக்கி வெளியே வந்தா அரசனில்லாப் பாவியென்பார்   வட்டார வழக்கு : பொகை-புகை ; போவ-போக(போச்சு).   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   பனிக்காத்தும் வீசலாச்சு   கணவன் அவளுக்கு ஓர் கருங்கல் மாளிகை. அவன் உயிரோடு இருக்கும் வரை எறும்பும் காற்றும் நுழையாமல் பாதுகாக்கும் கருங்கல் கோட்டையாக அவன் அவளைப் பாதுகாத்தான். அவன் போய்விட்ட பிறகு முன்பிருந்த மண்குடிசையில் தான் வாழ்கிறாள். ஆனால் அதைச் சுற்றியிருந்த கருங்கல் சுவர் தகர்ந்துவிட்டது. ஊர்ப்பேச்சும், பிறர் கண்களும் அவளைத் துளைக்கத் தொடங்கும். இவை தான் எறும்பும், காற்றும், அவனிறந்ததும்தான் அவனுடைய பாதுகாப்புத்திறன் அவளுக்குப் புரிகிறது.   எட்டுக் கெசம் கல்லொடச்சு எறும்பேறா மாளி கட்டி எறும்பேறா மாளியிலே இருந்தொறங்கும் நாளையிலே எறும்பும் நொழையாது எதுக்காத்து வீசாது சின்ன நடையிழந்து சிறுமுழியும் பஞ்சடைய எறும்பும் நுழையலாச்சு இருபக்கமும் பேசலாச்சு பத்துக் கெசம் கல்லொடச்சு பாம்பேறா மாளிகை கட்டி பாம்பேறா மாளியிலே படுத்தொறங்கும் வேளையிலே பாம்பும் நொழையாது பனிக்காத்து வீசாது அண்ணாந்து கண்ணசைந்து ஆவாரம் பூ வாய்மூடி அமக்களமாப் போறான்னு பாம்பும் நொழையலாச்சு பனிக்காத்தும் வீசலாச்சு   வட்டார வழக்கு : நொழை-நுழை ; அமக்களமாய்-மேள தாளத்தோடு சுடுகாடு நோக்கிச் செல்லுகிறான் ; காத்து-காற்று(பேச்சு).   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   வளத்தாரை இழந்தவள்   தந்தை இறந்துபோனார். மகள் அயலூரில் இருந்து வந்திருக்கிறாள். இதுவே அவள் தந்தைவீட்டுக்கு வருவது கடைசி முறையாக இருக்குமோ? இனி எப்பொழுதாவது இவ்வூருக்குப் போக வேண்டுமென்று வாடகை வண்டி பேசச் சொன்னால், கணவனும் பிறரும் என்ன சொல்லுவார்கள்? பெற்றோரை இழந்தபின் பிறந்தவீட்டு ஆசை எதற்கு என்று கேட்க மாட்டார்களா? மதினியாருக்குக் கேட்கட்டும் என்றுதான் மகள் இவ்வாறு ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.   வண்ண சைக்கிள் வண்டி வாடவை மோட்டார் வண்டி-நான் பிறந்த வடமதுரை போறமிண்ணு வாடவை பேசுமிண்ணா வழியிலே உள்ளவர்கள் வளத்தாரே இழந்தவங்க வாடவைக்கு ஆசை என்ன? வடமதுரைச் சோலி என்ன? சின்னச் சைக்கிள் வண்டி தீருவை மோட்டார் வண்டி தெருவிலே உள்ளவர்கள் தேட்டாரை இழந்தோர்க்கு தென்மதுரைச் சோலி என்ன தீருவை ஆசை என்ன?   வட்டார வழக்கு : வாடவை-வாடகை ; வளத்தார்-பெற்றார் ; தேட்டார்-பெற்றோர் ; சோலி-மேலை ; தீருவை-வாடகை.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   பெண்ணாள் படும் துன்பம்   நோயாளியான ஒருவனுக்கு மணம் பேசி வந்தார்கள். பெண்ணின் தந்தை பொருளுக்கு ஆசைப்பட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். திருமணமான சிறிது காலத்துக்குள் நோயாளி இறந்தான். சவ அடக்கத்துக்குப் பெண்ணின் தந்தை வந்திருக்கிறார். கலியாணம் முடிவு செய்யும் காலத்தில் தன் எதிர்பார்ப்பைப் பொருட்படுத்தாத தந்தைக்கு இப்பொழுது சூடு கொடுக்கிறாள் மகள்.   மதியம் கிளம்பி வரும் மாய இருட்டுக் கட்டி வரும் மறிநாட்டு ராஜமன்னன் மாலை கொண்டு வந்ததும் வண்டரிச்ச மாலையிண்ணு வாங்க எறியாமே-நீங்க வளத்த மயிலாளுக்குச் சூடினதால் மாலைபடும் தொந்திரவு இன்னைக்கு மயிலிவாட நேர்ந்ததுவே.   பொழுது கௌம்பி வரும் பொன்னிருட்டுக் கட்டி வரும் பொற நாட்டு ராசமன்னர் பூக்கொண்டு வந்ததும்-நீங்க புழுவறித்த பூவுண்ணு புடுங்கி எறியாமே நீங்க தேடிய பொண்ணாளுக்குச் சூடினதால் பூப்படும் தொந்தரவு-உங்களுட பொண்ணாள் பட நேர்ந்ததுவே.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   சீரான தாயிழந்தோம் !   தாயின் அன்பிற்கு ஈடானதோர் செல்வம் உண்டா? மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தால் மீன் பிடித்து தம்பியின் மூலம் மகளுக்குக் கொடுத்தனுப்புவாள் தாய். இன்று தாய் இறந்துவிட்டாள். இனி தம்பி மீன் கொண்டு வருவானோ? தாய் இறந்துபோன பி்ன்பு அண்ணன் தம்பி என்ற உறவு நிலைக்குமோ?   வடக்கே மழை பேயும் வண்ணாறு தண்ணி வரும் வண்ணாத்துத் தண்ணியிலே வாழை மீனுத் துள்ளி வரும் வாழை மீனு அரிச்செடுக்க வண்ணப் பொறப்பிழந்தேன் வரிசையுள்ள தாயிழந்தேன் தெற்கே மழை பேயும் சின்னாறு தண்ணி வரும் சித்தாத்துத் தண்ணியிலே சிறு மீனு துள்ளி வரும் சிறு மீனு அரிச்செடுக்க சின்னப் பொறப் பெழந்தேன் சீரான தாயிழந்தேன்   வட்டார வழக்கு: பொறப்பு-சகோதரன்.   உதவியவர் : ஜானகி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   பிறந்த வீட்டில் நடந்தது   பெண்ணின் தாய் தந்தையர் இறந்து விட்டனர். பிறந்த வீட்டில் அண்ணணும் மதினியும் வாழ்கிறார்கள். அண்ணன் ஆதரவாக இருந்தாலும் மதினி கடுமையாக இருக்கிறாள். தாய் தந்தையர் இருக்கும்பொழுதே மதினிக்கு இவள் வீட்டிற்கு வருவது பிடிக்காது. தாய் தந்தையர் மறைவுக்குப் பிறகு அவ்வீட்டில் என்ன மதிப்பிருக்கும் என்று அவள் எண்ணிப் பார்க்கிறாள். அண்ணன் வேலையாக வெளியே போய்விடுவார். மதினிதான் வீட்டிலிருப்பாள். அவள் தன் மீது அன்பு காட்டுவாளா என்று எண்ணிப் பார்க்கிறாள். இவ்வெண்ணங்களெல்லாம் பெற்றோரை இழந்த துன்பத்தோடு கலந்து ஒப்பாரியாக உருவாகிறது.   கம்பு விளைஞ்சிருக்கும் காலியுமே சாஞ்சிருக்கும்-நான் கரிக்குருவி வேஷங் கொண்டு காலியுமே அண்டினா கருணையண்ணன் பெண்டாட்டி காதத்துக் கொரு கல்லெடுத்து கடக்க விரட்டி விட்டாள். கருணையண்ணன் கண்டு விட்டா கான மயிலின்னு கழுத்தோ டணைச்சிடுவார் கழுத்து முத்தம் தந்திடுவார் சொகுசான சீமையிலே சோளம் விளைஞ்சிருக்கும் தோகையுமே சாஞ்சிருக்கும் தோக்குருவி வேஷம் கொண்டு தோகையில் அண்டினாலும் துரைமார் பெண்டாட்டி தோட்டம் ஒரு கல்லெடுத்து தூரத் தொரத்தி விட்டாள் துரைமார் கண்டு விட்டா தோளோடணைத்து தோள் முத்தம் தந்திடுவார்.   வட்டார வழக்கு: காலி-ஆடு, மாடுகள் ; தோகை-கதிர் ; துரைமார்-சகோதரர்கள் ; தொரத்தி-துரத்தி(பேச்சு).   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   பவுனும் மங்கியாச்சு   கணவன் இருக்கும் வரை, இன்பம் நிறைந்த சிறப்பான வாழ்க்கை அவளுக்கிருந்தது. அவன் இறந்தபின் அவளுடைய வாழ்க்கை ஒளி மழுங்கிப் போயிற்று, இதனை அவள் “பட்டு நனைந்து விட்டது,” “பவுன் மங்கி விட்டது” என்ற உவமைகளால் புலப்படுத்துகிறாள்.   பச்சை ரயிலு வண்டி பட்டணத்துப் பொட்டி வண்டி பட்டை உடுத்தியல்லோ பவுன் நவை தான் பூட்டி நீங்கள் உள்ள பட்டணத்தை பார்க்க வந்துட்டா பட்டணமே பேயும் மழை பட்டு நனையாது பவுனுமே மங்காது-நீங்க போவ பட்டு நனைஞ்சாச்சு. பவுனுமே மங்கலாச்சு சின்ன ரயிலுவண்டி சீரங்கத்துப் பொட்டி வண்டி சீலையே உடுத்தி அல்லோ சிறு நவை போட்டுமல்லோ சீரங்கம் வந்து விட்டா சீலை நனையாது சிறு நகையும் மங்காது-நீங்க போவ மட்டு நனைஞ்சாச்சு பவுனுமே மங்கியாச்சு   வட்டார வழக்கு: நவை-நகை ; பொட்டி-பெட்டி(பேச்சு)   உதவியவர் : சி. செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:மாடகாசம்பட்டி,சேலம் மாவட்டம்.   ‘தாலியைத் திருடி விட்டார்’ !   கணவன் இளவயதிலேயே இறந்துவிட்டான். அவனோடு வாழ்ந்த வாழ்வையும், இறப்பையும் எண்ணி மனைவி மருகுகிறாள். இச்சிறப்புக்கெல்லாம் காரணம் தனது தாலி என்று அவள் எண்ணினாள். தனது தாலி பாக்கியம் நீடித்து நிற்கும் என்று நம்பியிருந்தாள். ஆனால், பெருந்திருடர்களான எமதூதுவர்கள் அவளுடைய தாலியைத் திருடி விட்டார்கள். அது முதல் அவள் வாழ்விழந்தவளாக, உலக, இன்பத்திற்குத் தகுதியற்றவளாக ஆகிவிட்டாள். இந்நிலையை எண்ணி அவள் சொல்லுகிறாள்.   ஆச்சா மரமே அறுபதடிக் கம்பமே பட்டுக் கயிறே பனைமரத்துக் குஞ்சரமே கண்ணே கண்மணியே கல்கண்டு சர்க்கரையே மெத்தக் களஞ்சியமே விலைமதியா மாணிக்கமே எண்ணெய்க் கறுப்பே இரும்பான நெஞ்சகமே செப்பேடு போட்டல்லவோ சிங்க முகத் தூண் நிறுத்தி எப்போதும் போல எதிரே வரக் காண்ப தெப்போ காந்த லைட்டுக்கு கண்ணுச் சிமிட்டிக்கு பம்பாய் ரோட்டுக்கு பங்களா வீட்டுக்கு வயிர மணித் தாலி வந்து வாய்த்ததின்னு நானிருந்தேன் ஆகாத மாதிருடன் அது தடுக்க முடியாதே வயிர மணித் தாலியை வாரி விட்டேன் வீதியிலே   வட்டார வழக்கு: மாதிருடன்-எமதூதன்.   உதவியவர் : முத்துசாமி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   சமூகக் கொடுமை   கணவன் வாழ்ந்திருந்த பொழுது மனைவி அருகிலிருந்த நகரத்திற்குச் சென்று சேவல், பால் முதலியன விற்று வருவாள். இப்பொழுது அவள் அமங்கலியாகிவிட்டாள். அவள் தெருவழியே சென்றாள் சகுனத்தடை என்று எல்லோரும் கதவடைத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் வரங்கொடுக்கும் தெய்வத்தின் கோயிலுக்கு அவள் சென்றாலே கோயில் பூசாரிகள் கோயிலடைத்துத் தாழ்ப்பாள் போடுவார்கள். விதவைக்குச் சொல்ல முடியாத கொடுமைகளை சமூக வழக்கங்களினால் மக்கள் இழைக்கிறார்கள். கணவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைவிட, வரப்போகும் துயர வாழ்க்கையை எண்ணி அவள் கண்ணீர் பெருக்குகிறாள்.   கும்பத்துப் பால் கொண்டு கூவாத சாவல் கொண்டு கோய நதி போனாலும் கோய நதி பாப்பாரு கொடுமை பெருத்த கொடுமையா வாரா கோயிலைச் சாத்தி கொக்கி ரெண்டும் போடுமென்பார் கோயிலுக்கு மேல் புறமா குயிலி புலம்பிட்டா கோவில் விரிசல் உடும் கொக்கி ரெண்டும் பூட்டு உடும் கோயிலுக்கு கீழ்புறமா குயிலா புலம்பிட்டா கொடுமைகளும் வெப்பம் ஆறும் சருவத்துப் பாலுகொண்டு சாயாத சாவல் கொண்டு சாமி நதி போனாலும் சாமி நதிப் பாப்பாரு சலித்தவ வரான்னு சாமியைச் சாத்து மென்பார் தாழிரண்டும் போடுமென்பார் சாமிக்கு மேல்புறமா தங்கா புலம்பிட்டா கதவு ரெண்டும் பூட்டு உடும் காலிரெண்டும் நீங்கிவிடும் சாமிக்கு கீழாக தங்கா புலம்பிட்டா தங்கா குறை எப்ப ஆறும்.   வட்டார வழக்கு: சாவல்-சேவல் ; விரிசல்-உடைப்பு ; உடும்-விடும்.   உதவியவர் : செல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   மைந்தனை பறிகொடுத்தோம்   குழந்தைக்கு நோய்க்கண்டது. வைத்தியன் முடிதாக்கிவிட்டது என்கிறான். சேலம் மாவட்டத்தில் இப்படிக் கூறுவார்கள், நெல்லை மாவட்ட வைத்தியன் சீர்தட்டிவிட்டது என்பான். இந்நோய் காண்பதற்கு விநோதமான காரணத்தையும் கூறுவார்கள். கணவனோடு உடலுறவு கொண்ட மனைவி, குழந்தைக்கு பால் கொடுத்தால் இந்நோய் கண்டு விடுகிறதாம். வீட்டுக்கு விலக்கமான பெண் குழந்தையைத் தொட்டுவிட்டால் இந்நோய் உண்டாகி விடுகிறதாம். பல பெற்றோர்கள் இந்த மூடநம்பிக்கை காரணமாக விபூதி போடுவது, பூசை போடுவது, தண்ணீர் இறைப்பது போன்ற சிகிச்சை முறைகளை கையாளுகிறார்கள். விஞ்ஞான ரீதியால் நோயைக் கண்டு பிடித்து, அதனைப் போக்க முயலும் நவீன வைத்தியர்களிடம் கிராம மக்களில் பெரும்பாலோர் செல்வதில்லை, நாட்டு வைத்தியர்களிடம் சென்று அவர் சொன்ன மருந்து வகைகளை வாங்க முடியாமல் குழந்தையைப் பறிகொடுத்த தாய் தனது மடமையை நினைத்துப் புலம்புகிறாள்.   மச்சுவீடு கச்சேரி மாய வர்ண மாளிகை மைந்தன் நலங்கினதும் மாயமுடி தாக்கினதும் மன்னவரும் தேவதையும் மருந்து வகை சிக்காமல் மைந்தனைப் பறி கொடுத்தோம் மாபாவி ஆனோமய்யா குச்சுவீடு கச்சேரி கோல வர்ண மாளிகையில் குழந்தை நலங்கினதும் குழந்தை முடி தட்டினதும் கொண்ட வரும் தேவதையும் கொழுந்த வகை தேடினதும் கொழுந்த வகை சிக்காமல் குழந்தை பறி கொடுத்தோம் கொடும்பாவி ஆனோமய்யா   வட்டார வழக்கு: நலங்கினது-நலம் கெட்டது ; மன்னவரும் தேவதையும்-கணவரும் மனைவியும்.   உதவியவர் : நல்லம்மாள்   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   வயிற்று வலி தீரவில்லை   தந்தை நெடுநாளாக வயிற்று வலியால் துன்பப்பட்டு பல இடங்களில் மருத்துவம் பார்க்கிறார். பெரிய பெரிய பண்டிதர்கள் எல்லாம் வைத்தியம் பார்த்தும் அவருக்குக் குணமடையாமல் இறந்து விடுகிறார். அவர் மறைவுக்கு வருந்தி அவர் மகள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.   நாட்டு வவுத்து வலி நாமக்கல்லு பண்டிதம் நல்ல வழி ஆகுமின்னு நாடெங்கும் போய்ப் பார்த்தும் நடுச்சாமி ஆனீங்களா சீமை வவுத்து வலி சீரங்கத்துப் பண்டிதம் தீரு கடை ஆகுமின்னு சீமையெங்கும் போய்ப் பார்க்க தீரு கடை ஆகாமே சொல்லவிச்சுப் போனீங்களா   வட்டார வழக்கு: வவுத்துவலி-வயிற்றுவலி ; பண்டிதம்-வைத்தியம் ; தீருகடை-குணமடைதல்.   குறிப்பு : இப்பாட்டை உதவிய பாப்பாயியின் தந்தை வயிற்றுவலியால் மரணமடைந்தார். அவளே அச்சமயம் பாடிய பாடல் இது. அவளுக்குக் கல்வி அறிவு கிடையாது.   உதவியவர் : பாப்பாயி   சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   கவலைக்கு ஆளானேன்   தாய் இறந்துவிட்டாள் ; மகள் விதவை. அண்ணணுக்கு மணமாகிவிட்டது. மதினி, மணமாகக் காத்திருக்கும் இப்பெண்ணை அன்பாக நடத்துவதில்லை. கலியாணமானால் தாயார் கப்பல் கப்பலாகச் சீர் அனுப்புவாள். அக்காலமெல்லாம் போய்விட்டது. இனி உணவு, உடைக்குக் கூட பஞ்சம் வந்துவிடும். தாய் மறைந்தபின் தனது வாழ்வில் ஏற்படப்போகும் மாறுதல்கள் அவளை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. அவள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.   வால் மிளகும் சீரகமும் வரிசை வரும் கப்பலிலே வரிசையிடும் தாயாரை வனத்துக்கு அனுப்பி வைத்தேன் சிறுமிளகும் சீரகமும் சீருவரும் கப்பலிலே சீரு விடும் தாயாரை நான் சீமைக்கே அனுப்பி வைத்தேன் கப்பல் வருமென்று கடற்கரையே காத்திருந்தேன் கப்பல் கவுந்தவுடன் எனக்குக் கடற்கரையும் ஆசையில்லை தோணி வருகுதுண்ணு துறைமுகமே காத்திருந்தேன் தோணி கவுந்தவுடன் துறைமுகமும் ஆசையில்லை பத்தூர் தாயும் பக்க உதவி செய்தாலும் பாசமுள்ள தாய் உன்னைப் பாடு வந்தால் தேடிடுவேன் எட்டூர் தாயும் எனக்குதவி செய்தாலும் இன்பமுள்ள தாய் உன்னை இடைஞ்சல் வந்தால் தேடிடுவேன் சங்கம் புதர் நன்னாடு சனம் பெருத்த ராச்சியங்கள் இனங்களெல்லாம் ஒண்ணாக நான் ஈசுவரியாள் துண்டு பட்டேன் இஷ்டமுள்ள நன்னாடு இனம் பெருத்த ராச்சியங்கள் இனங்களெல்லாம் ஒண்ணாக நான் ஈஸ்வரியாள் துண்டுபட்டேன் தங்கமலையேறி எனக்குச் சாதகங்கள் பார்க்கையிலே தங்கமலை ராசாக்கள் என்னோட தலை கண்டாத் தீருமினாக பொன்னு மலையேறி எனக்கும் பொருத்தங்கள் பார்க்கையிலே பொன்னுமலை ராசாக்கள் என்னோட புகை கண்டாத் தீருமின்னாக   சிற்றாடை கட்டும் பொன்னு, சிறு சலங்கை கட்டும்பொன்னு சிறுசிலே அறுப்பேன் என்று சிவன் இட்ட கட்டளையோ பாவாடை கட்டும் பொன்னு, பாதரசம் போடும் பொன்னு பாதியிலே அறுப்பேன் என்று எனக்குப் பகவான் இட்ட கட்டளையோ கத்திரிக்காய் பச்சை நிறம் நான் கர்ணன் உடன் பிறந்தாள் கர்ணனுட தேவியாலே நான் கவலைக்கு ஆளானேன் வெள்ளரிக்காய் பச்சை நிறம் நான் வீமனுடப் பிறந்தாள் வீமனுட தேவியால நான் வேசடைக்கு ஆளானேன் அல்லியும் பிலாவும் என்னப் பெத்த அம்மா அலுங்கப் பழுத்தாலும் அஞ்சாமல் கால் வைக்க அரண்மனையர் காவலுண்டு கொய்யாவும் பிலாவும் குலுங்கப்பழுத்தாலும் கூசாமல் கால் வைக்க கூட்டத்தார் காவலுண்டு சீரகம்பூக்க சிறுமுருங்கை பிஞ்சுவிட சீருவிடும் தாயாரை நான் சீமைக்கே அனுப்பி வைத்தேன் கடுகு பூப்பூக்க கர்ணனெல்லாம் எம் பிறவி கர்ணனுக்கு வாச்சவக என்னைக் காசா மதிக்கவில்லை   வட்டார வழக்கு: அரண்மனையர், கூட்டத்தார்-மதினியின் உறவினர்.   சேகரித்தவர்:குமாரி பி. சொர்ணம் இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   மறைந்தோடி ஏன் போனீர்?   மாமனார் இறந்து போகிறார், அவருடைய பிள்ளைகளிடையே சண்டை சச்சரவு ஏற்படாமல், எல்லோருக்கும் புத்தி சொல்லி குடும்பத்தை சீராக நடத்தச் சொன்னார் அவர். பேரக் குழந்தைகளை ஆதரித்துப் புத்தி கூறினார். அவர் இறந்ததும், அவருடைய குடும்பத் தலைமையைப் புகழ்ந்து மருமகள் ஒப்பாரி சொல்லுகிறாள்.   வளர்த்தும் சமர்த்தர்களே வல்லாமைக் காரர்களே பிள்ளைகளை ஆதரிச்சே வந்த புண்ணியர்க்குப் புத்தி சொன்னீர்-நீங்கள் பிள்ளைகளை வீதி விட்டு பிரிந்தோடி முன் போனீர் மக்களை ஆதரிச்சீர் மன்னவர்க்கே புத்தி சொன்னீர் மக்களைக் கடத்தி விட்டு மறந்தோடி ஏன் போனீர்   வட்டார வழக்கு: புண்ணியர், மன்னவர்-இவளுடைய கணவனைக் குறிக்கும்.   குறிப்பு : முதலிரண்டு அடிகள் மாமனாரை அழைக்கும் விளி.   உதவியவர் : ஜானகி   சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி இடம்:சேலம் மாவட்டம்.   இங்கிலீசுக்காரியாலே இறந்தாரே நம்ம துரை   சிவகிரி ஜமீன்தார் ஒரு இங்கிலீஷ்காரியின் உறவால் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறந்து போனார். அவளுக்கு ராணிப்பட்டம் வேண்டும் என்று கேட்டாளென்றும், அது முறையல்லவென்று சொன்ன பின்பு அவள் கோபித்தாளென்றும் இப்பாடல் கூறுகிறது. அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு வருங்கால ஜமீன்தாருக்குப் புத்தியும் புகட்டுகிறது இப்பாட்டு.   கண்ணு முழியழகர் கருப்புக் கோட்டித் தானழகர் பூடுசுக் காலழகர்-இந்தப் பூலோகம் எல்லாம் கண்டதில்லை சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் பந்தயக் குதிரை ஏறி-அவர் பட்டணங்கள் சுத்தையிலே எதிர்பார்த்த பெண்கள்-அதை எண்ணவும் முடியாதய்யா சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் ஏழாம் திருநாளாம் எண்ணக் காம்பு மண்டபமாம் கண்ணாடிச் சப்பரத்தை-நம்மதுரை கண் குளிரப் பார்க்கலாமே சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத் துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் ஐயா வட புறமாம் அம்மையாத்தா தென் புறமாம் ஊடே வர குணராம் உயர்ந்ததொரு கோபுரமாம் சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் ஈசன் விதியாலே மோசம் வரலாச்சுதே சென்ட்ரல் ஆஸ்பத்திரியில்-அவர் சீக்காய் இருக்கையிலே பட்டணத்து டாக்டரும் பாங்குடனே வந்தல்லவோ   கையைப் புடிச்சுப் பார்க்க தோஷம் பிறந்திருச்சே பீரங்கிச் சத்தம் கேட்டு பெஞ்சுத் துரை மாரெல்லாம் ஏறி வந்த மொட்டக்காராம் எண்ணத் தொலையல்லே தடிச்சுழுத வய தடிச்சதொரு பொய்ச் செலந்தி மாயச் செலந்தி வந்து மாண்டாரே நம்ம துரை ஆடழுக மாடழுக மாடப் புறா தானழுக சிவகிரி ஜனங்கள் எல்லாம் தெருத் தெருவாக நின்னழுக வாடகை மோட்டார்க் காராம் வந்து கிடைத்தல்லோ சிவகிரி மகாராஜா செத்த வுடனே யல்லோ சுப்பையா கோயிலோரம் சூறாவளி மங்களாவாம் கெட்டிடங்கள் சீரில்லைனு இடிச்சு கட்ட உத்தரவு. டொப்பி சொகுசழகர் துரைமார் பெரிய இடங்கள் இங்கிலீசுக் காரியாலே இறந்தாரே நம்ம துரை பட்டணத்து சைசுலேயே பாங்குடனே சேக்கு வெட்டி சீவி விட்ட சிங்காரத்தை-இந்த சீமை எங்கும் பார்த்ததில்லை காணிக்கை கருவேலம் போல் கண்டுதித்த பாண்டியரே இறக்க கோடு விட்டு ராணிப்பட்டம் கேக்காரே.   சேகரித்தவர்:S.M. கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை.   அண்ணாச்சி மண்டபங்கள்   புகுந்த வீட்டில் சீரும் சிறப்புமாக இளங்கொடியாள் வாழ்ந்து வந்தாள். மைந்தன் பிறக்காத குறை ஒன்றுதான். அவளது சீரும் சிறப்பும் மறைந்தது. தலைவியாக வாழ்ந்த வீட்டில் கூலிப்படி வாங்கித் தின்னும் நிலைமை தோன்றும். அப்பொழுது மாடி வீட்டில் வாழ்ந்து வரும் அவள்,தன் பிறந்த வீட்டுக்குப் போனால் அங்கு அவளுக்கு அன்பும் ஆதரவும் கிட்டுமா? பிறந்த ஊரில் எல்லோரும் இன்னார் மகள் இவள் என்று கூறி அனுதாபம் கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுது தாய் வீடு, அண்ணன் வீடாக அல்லவா மாறி விட்டது? அங்கு ஆட்சி செலுத்துபவள் அண்ணி அல்லவா? அவள் அமங்கலியான தான் அங்கு வந்தால் ஆக்கம் கெட்டுவிடும் என்றெண்ணி இவளை விரட்டிவிட வேண்டிய சூழ்ச்சிகளையெல்லாம் செய்வாள். எங்கும் மானத்தோடு வாழ முடியாது. இவற்றையெல்லாம் எண்ணி ஒப்பாரி பாடுகிறாள், இளங்கொடியாள்.   மைந்தனில்லை !   எட்டறையும் மாளிகையும் எள்ளளக்கும் சாவடியும் பத்தறையும் மாளியலும் பஞ்சாங்கச் சாவடியும்-எனக்குப் பார்த்தாள மைந்தனில்லை வட்டாரங் கோட்டை வளைவுள்ள கோட்டை கொட்டார நிலங்களெல்லாம் கொண்டாட மைந்தனில்லை எட்டுக்கால் மண்டபமாம் எள்ளளக்கும் சாவடியாம் எள்ளளக்கும் சாவடிலே இளம்பசுவைத் தானமிட்டோம் ! பத்துக் கால் மண்டபமாம் பருப்பளக்கும் சாவடிலே-நாங்க பால் பசுவைத் தானமிட்டோம்   சிறப்பு   ஆக்கச் சிறு வீடோ ஆவி போகமே வீடோ?- நான் ஆக்கி வெளியே வந்தா அம்பலத்தார் ஏசுவாக பொங்கச் சிறுவீடோ, புகைபோகமே வீடோ, பொங்கி வெளியே வந்தா-என்னைப் பூலோகத்தார் ஏசுவாக, வெள்ளைத் துகில் உடுத்தி வீதியிலே போனாலும் வெள்ளாளன் பிள்ளையென்பார், வீமனோட தங்கையென்பார். பச்சைத் துகிலுடுத்தி பாதையிலே போனாலும் பார்ப்பான் பிள்ளையென்பார் பரமனுட தங்கையென்பார் பத்துவகைப் பச்சிலையாம், பார்த்துரசம் மாத்திரையாம், பார்த்துரசம் மாத்திரையும் பார்த்துரசுக்குள்ள எமன் அழைத்தானோ? எட்டடித்தாம்பாளம் நம்ம வாசலிலே ஏலரிசிப் பாயாசம்-இருந்து பரிமாற எட்டு மணியாச்சு, பத்தடித்தாம்பாளம்,நம்ப வாசலிலே பச்சரிசிப்பாயாசம்-பார்த்துப் பரிமாற பத்து மணி நேரமாச்சு.   சேதம்   உச்சிமேகம் கூடி ஊருக்கே சேதமென்ன? ஊருக்கே சேதமில்லை உங்களுக்கே சேதமாச்சு ! கருமேகம் கூடி கருணனுக்கே சேதமென்ன? கருணணுக்குச் சேதமில்லை நாங்க கவலைக்கு ஆளானோம் !   தாய் வீடும் தன் வீடும்   தங்கரயிலேறி நான் தாய் வீடு போகயிலே-எனக்கு தங்க நிழலில்லை எனக்குத் தாய் வீடு சொந்தமில்லை பொன்னு ரயிலேறி புகுந்த வீடு போகயிலே பொன்னுரதம் சொந்தமில்லை புகுந்த வீடும் கிட்டவில்லை காட்டுப் பளிச்சி நான் காவனத்துச் சக்கிரிச்சி தூக்கும் பறச்சு நான் தொழுத்தூக்கும் சக்கிரிச்சி   அண்ணன் வீடு   அன்னா தெரியுதில்ல எங்க அண்ணாச்சி மண்டபங்கள் மண்டபத்துக்கீழே நான் மங்கை சிறையிருக்க மடி கூட்டிக் கல்லெறக்கி மண்டபங்கள் உண்டு பண்ணி மண்டபத்துக்கீழே நான் மயிலாள் சிறையிருந்தேன் மயிலினும் பாராமே என்னை அம்பு கொண்டு எய்தாக கூடை கொண்டு கல்பெறக்கி கோபுரங்கள் உண்டுபண்ணி கோபுரத்துக் கீழே நான் குயிலாள் சிறையிருந்தேன் குயிலினும் பாராமே என்னைக் குண்டு போட்டு எய்தாக ஐந்து மூங்கில் வெட்டி அடி மூங்கில் வில் விளைத்து ஐந்து கலசம் வைத்து அடிக்கலசம் கல்லெழுதி முடிமன்னர் தாயாருக்கு முழங்கும் கைலாசம் கைலாச வாசலிலே   கண்டதெல்லாம் எங்க சனம் பூலோக வாசலிலே போனதெல்லாம் எங்க சனம் பண்ணை பெருத்தா, பலசோலிக்காரி-என்னைப் பெத்த அம்மா தேரை நிறுத்துங்க என்னப் பெத்த அம்மா திருமுகத்தை நான் பார்க்க ! சந்தை கிடந்ததா என்னைப் பெற்ற அம்மா சத்திரங்கள் தாத்தாத்தா உனக்குக் கொட்டேது முழக்கமேது? கோல வர்ணத் தேரேது? கல் நெஞ்சுக்காரி வராள், நடத்தி விடு பூந்தேரை-நான் ஏழு கோண மண்டபம் கழித்து-நான் முத்துமே தந்து முக்கடலும் போனாலும் முத்துக் கெட்டவ வாராள்னு-என்னை சமுத்திரமே தள்ளி விடும் சீதை பிறந்தவிடம், சிறுமதுரை அடிவாரம் சீதை விடும் கண்ணீரு சின்னமடி நிறைந்து திருப்பாற்கடல் நிறைந்து கன்னி பிறந்தவிடம் ; காசியின் அடிவாரம் கன்னி விடும் கண்ணீர் கப்பல் கடல் நிறைஞ்சு கடற்கரையே போய்ப் பாய்ஞ்சு தெற்கே மனை வாங்கி தென்மதுரைத் தேர் எழுதி சீரிடும் தாயாரை நான் தெற்கே அனுப்பி வைத்தே வடக்கே மலை வாங்கி வடமதுரைத் தேர் எழுதி வரிசையிடும் தாயாரை நான் வடக்கே அனுப்பி வைத்தேன், நல்ல துளசியே நான்   நடுக்கரையே நாட்டி வைத்தேன் நாலு காலப் பூசைக்கு நீ ஒரு நல்ல மலர் ஆகலியே ! கோபுரம் ஆண்டகுடி நம்ம குணத்தினால் கெட்ட குடி மங்களமாய் ஆண்ட குடி நம்ம மதியிலே கெட்ட குடி கொத்துச் சரப்பளியாம் கோதுமை ராக்குடியாம் கொல்லன் அறியாம உனக்கு கொக்கி கழண்டதென்ன? நங்கச் சரப்பளியாம் தாழம்பூ ராக்குடியாம் தட்டான் அறியாம உனக்கு தடுக்கு கழண்டதென்ன? மூங்கப்புதரிலே நான் முகங்கழுவப் போகையிலே மூங்கிலு தூங்கலையே நான் முகங்கழுவி மேடேற தாழப்புதரிலே நான் தலைமுழுகப் போகையிலே தாழை தூங்கலியே நான் தலைமுழுகி மேடேற பழனி மலையோரம் பனிப்புல்லாப் பொய்கையிலே-நான் பாவி குளிப்பேனிண்ணு எனக்கும் பாஷாணத்தை ஊற்றினார்கள் இலஞ்சிமலைமேலே இனிப்புல்லாப் பொய்கையிலே ஏழை குளிப்பேன் என்று எனக்கு இடிமருந்தைத் தூற்றினார்கள் அரைச்ச மஞ்சள் கொண்டு நான் ஆற்றுக்கே போனாலும் அரும்பாவி வாராளென்று எனக்கு ஆறும் கலங்கிடுமே குளிக்க மஞ்சள் கொண்டு நான் குளத்துக்கே போனாலும் கொடும்பாவி வாராளென்று   குளமும் கலங்கிடுமே பூமியைக்கீறி எனக்குப் புதுப்பானைப் பொங்கலிட்டு பூமி இளகலியே எனக்குப் புதுப்பானை பொங்கலியே நிலத்தைக்கீறி எனக்கு நிறைப்பானைப் பொங்கலிட்டு நிலமும் இளகலியே எனக்கு நிறைபானை பொங்கலியே சன்னல் எட்டிப் பார்த்தானோ-உனக்கு சரவிளக்கைக் கொள்யைிட? மண் எட்டிப் பாத்தானோ-உனக்கு மணி விளக்கை கொள்ளையிட ஓடிவந்து காலாற எனக்கு ஊடே சத்திரமோ? நடந்து வந்து காலாற-எனக்கு நடுவே சமுத்திரமோ?   வட்டார வழக்கு : மாளியல்-மாளிகை (பேச்சு) ; கொட்டாரம்-அரண்மனை (மலையாளம்) ; மேவீடு-மாடி. குறிப்பு : இவள் சாதியில் தாழ்ந்தவளாயினும் இவளுடைய ஆடைகளையும், அழகையும் பார்த்து இவளை உயர்ந்த சாதிகளான பார்ப்பார், வெள்ளாளர் வீட்டுப் பெண்ணோ என்று ஊரார் வியந்து கூறுவார்கள். இறந்தவருக்குக் கவலை இல்லை, இருப்பவர்கள் கவலைக்குள்ளானார்கள். பளிச்சி-பளிங்கன் மனைவி, காட்டுச் சாதியினர் பாபநாசம் முதல் சிவகிரி வரையிலுள்ள மலைச்சரிவில் சிறு சிறு கூட்டங்களாக இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பேசுவது கொச்சைத் தமிழ். வேட்டையாடித் தின்னும் ஒரு பிரிவினரும், புன்செய்ப் பயிர், காட்டு விவசாயம் முதலியன செய்து வாழும் மற்றோர் பிரிவினரும் இருக்கின்றனர். சக்கிலிச்சி-தெலுங்கு பேசுவர். முற்காலத்தில் இவர்கள் தோல் தைக்கும் தொழில் செய்தனர். தற்போது தோட்டிகளாக இருக்கின்றனர்.   பறச்சி-தமிழ்நாட்டு விவசாயத் தொழிலாளரில் ஒரு பிரிவினர்.   தாய் இறந்துவிட்டதால் இனிப் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், கீழ்ச்சாதிப் பெண்களைப் போல் அடிமை வேலை செய்தால் தான் இவளுக்குப் பிழைப்புண்டு என்று இவள் கூறுகிறாள். அன்னா-அதோ !   சிறையிருக்க-பிறந்த வீட்டில்தான், பெரியவளான பெண், வெளிவராமல் கலியாணமாகும் வரை இருப்பாள். இதை சிறையிருத்தல் என்பர்.   முதல் அடியில் தாயின் பெருமையைச் சொல்லுகிறாள். பெருத்தா-பெருத்தவள். மூன்றாவது அடியில் தாய் பெருமையுடையவளாக, சிறப்புமிக்க ஆண் மக்களைப் பெற்றும் அவளது சவ அடக்கச் சடங்கை விமரிசையாகத் தன் சகோதரர்கள் செய்யவில்லையென்று குத்திக் காட்டுவதற்காக, தாயாரை, ‘சந்தையில் கிடந்தவள்’, ‘சத்திரம் தூத்துப் பிழைத்தவள்’ என்று இழிவாகக் கூறுகிறாள்.   ஆத்தா-சில சாதியில் தாயாரை இவ்வாறு அழைப்பதுண்டு.   தெற்கே அனுப்பி வைத்தேன்-பழந் தமிழர்கள் இறந்தவர் உயிர் தெற்கே சென்று இருப்பதாக நம்பினார்கள். இதனாலேயே உயிர்த்த முன்னோர்களை “தென்புலத்தார்” என்றார் வள்ளுவர். சைவம் பரவிய காலத்தில் கைலாசம் புனித ஸ்தலமாக கருதப்பட்டது. எனவே உயிர்கள்,   உடலைப் பிரிந்து வடக்கே செல்வதாகவும் கூறப்படுகிறது. எமதூதுவர், தன் தாயார் உயிரைக் கொள்ளையிட்டதைக் கூறுகிறாள். பிறந்த வீட்டிற்கு வருவதிலுள்ள தடைகளையும் குறிப்பிடுகிறாள்.   சேகரித்தவர் :குமாரி P. சொர்ணம் இடம்:ிவகிரி,நெல்லை.   தங்கரதம் கேட்டீரோ   மணமான மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு இறந்த வீட்டிற்கு வருகிறாள். தன்னையும், தனது சகோதர, சகோதரிகளையும், தந்தை அருமையாக வளர்த்த கதையையெல்லாம் சொல்லி அழுகிறாள். இத்தகைய தந்தையின் அன்பு நீடித்து இருக்க வழியில்லாமல் இறந்து விட்டாரே என்று ஏங்குகிறாள். இனி பிறந்த வீடு தேடி வந்தால், மதினிமார் மரியாதையாக வரவேற்க மாட்டார்கள் என்றெண்ணி அழுகிறாள். அருமையாக வளர்த்த மகளை மறந்துவிட்டு எமதர்மனைக் கேட்டு தங்கரதம் கொண்டுவரச் சொல்லி தந்தை போய்விட்டாரே என்று மகள் ஆற்றாது அரற்றுகிறாள்.   பரட்டைப் புளிய மரம் பந்தடிக்கும் நந்த வனம் பந்தடிக்கும் நேரமெல்லாம் பகவானைக் கைதொழுதேன் சுருட்டைப் புளிய மரம் சூதாடும் நந்தவனம் சூதாடும் நேரமெல்லாம் சூரியனைப் பூசை செய்தேன் ஆத்துக்கு அந்தப் புரம் ஆகாசத் தந்தி மரம் ஆழ்ந்த நிழலுமில்லை என்னைப் பெத்த அப்பா எங்களை ஆதரிப்பார் யாருமில்லை குளத்துக்கு அந்தப்புரம் குங்குமத் தந்தி மரம் குளிர்ந்த நிழலுமில்லை-எங்களைக் கொண்டணைப்பார் யாருமில்லை ஆடை கொடியிலே ஆபரணம் பெட்டியிலே சீலை கொடியிலே சிறு தாலி பெட்டியிலே நீலக் குடை பிடித்து-நீங்கள் நிலமளக்கப் போனாலும் நிலமும் பயிராகும் நின்னளக்கும் தோப்பாகும் வட்ட குடை பிடித்து   வயல் பார்க்கப் போனாலும் வயலும் பயிராகும் வந்தளக்கும் தோப்பாகும் சீமைக்கு அப்பாலே-சீமை ஆண்ட சேது பதி கட்டி வச்ச சீட்டாடும் மண்டபங்களே சீட்டுப் பறக்காது சிறுகுருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா சிட்டுப் பறந்திருச்சே-இப்போ சிறுகுருவி லாந்திருச்சே காசிக்கு அப்பாலே காசி ராஜா கட்டி வச்ச காத்தாடி மண்டபங்கள் காகம் பறக்காது. கருங்குருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா காகம் பறந்திருச்சே-இப்போ கருங்குருவி லாந்திருச்சே பாலூற்றிச் சாந்திடுச்சி பவளமனை உண்டு பண்ணி பவளமனையிலேயும்-எங்கள் பாதம் பட்டால் தோஷமின்னு நெய்யூற்றிச் சாந்திடுச்சு நீலமனை உண்டு பண்ணி நீல மலையிலையும்-எங்க நிழல் பட்டால் தோஷமின்னு ஆத்து வயிரக் கல்லு அமைதியாப் புத்தகங்கள் ஆனு வழுக்கிட்டா-எங்களை ஆதரிப்பார் யாருமில்லை குளத்து வயிரக் கல்லு கும்பினியார் புத்தகங்கள் குளமும் வழுக்கிட்டா-எங்களை கொண்டணைப்பார் யாருமில்லை பத்து மணி வண்டியேறி-நாங்க பசியாக வந்தாலும் பாலும் அடுப்பி லென்பார் சண்டாளி வாசலிலே பச்சரிசிச் சாதம் பா   எட்டு மணி வண்டியேறி-நாங்க எளம் பசியா வந்தாக்கா என்னா அடுப்பி லென்பா எள்ளரிசிச் சாதம் என்பா சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே சரஞ்சரமாய்க் காய்த்தாலும் முத்தத்து வாழை-நாங்க முகம் வாடி நிக்கறமே கள்ளி இடைஞ்சலிலே கருங்கண்ணினாய் மின்னலிலே கரும்பா வளர்ந்த மக-நானிப்போ கவலைக்கு ஆளானேன்.   வேலி இடைஞ்சலிலே வெள்ளரளிப் பின்னலிலே வேம்பா வளர்ந்த மக-நானிப்போ வேதனைக்கு ஆளானேன் பத்து மலைக்ககு அப்பாலே பழுத்த கனி வாழை பழுத்த கனியிழந்தேன்-நானிப்போ பாசமுள்ள சொல்லிழந்தேன் தங்க தமிளரிலே தண்ணீரு கொண்டு வந்தேன் தண்ணீரு வேண்டாமின்னு என்னைப் பெத்த அப்பா தங்க ரதம் கேட்டீயளோ வெள்ளித் தமிளரிலே வென்னீரு கொண்டு வந்தேன் வென்னீரு வேண்டாமின்னு என்னைப் பெத்த அப்பா வெள்ளிரதம் கேட்டீயளோ அண்டா விளக்கி அரளிப் பூ உள்ளடக்கி அண்டாக் கவிந்த உடன் என்னைப் பெத்தார்-நாங்க அரளிப்பூ வாடினமே. தாலம் விளக்கி தாழம் பூ உள்ளடக்கி தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க தாழம் பூ வாடினமே நாளி மகிழம் பூ நாகப்பட்டினம் தாழம் பூ நடந்து வந்து சீர் வாங்க என்னப் பெத்த அப்பா நல்ல தவம் பெறலையே குறுணி மகிழம் பூ கும்பா வெல்லாம் தாழம் பூ கொண்டு வந்து சீர்வாங்க-நாங்க கோடி தவம் செய்ய லையே.   குறிப்பு : சத்திரத்து வாழை. இது அவர்களது சகோதரர்களின் மனைவிமாரைக் குறிக்கும். அவர்கள் வேறிடத்தில் பிறந்து இந்த வீட்டில் வந்து புகுந்தவர்கள். அவர்களைத்தான் சத்திரத்து வாழை காய்த்துக் குலுங்குகிறது என்று குறிப்பிடுகிறாள். இந்த வீட்டு முற்றத்திலேயே வளர்ந்த வாழை என்று தன்னைக் கூறிக்கொள்ளுகிறாள்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   இலங்கையிலே மாண்டதென்ன?   தந்தை அயலூருக்கு வேலையாகச் சென்றார். அங்கே திடீரென்று நோய் கண்டு மாண்டுவிட்டார். அவருடைய மகள் பெரியவளாகி வீட்டில் இருக்கிறாள். அவளுடைய தம்பி சிறுவன். இவ்வாறு திடீரென்று தங்கள் குடும்பத்தினருக்குக் கேடுவர அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. தமது தோட்டத்திற்கு வரும் மயிலையும் குயிலையும் கூட அவர் விரட்டமாட்டார். இப்படியிருக்க அவருடைய குடும்பத்திற்கு ஏன் கேடு வந்து சேர்ந்தது என்று அவளும் அறிய முடியவில்லை. இவ்வினாக்களை எல்லாம் இறந்தவரைப் பார்த்துக் கேட்டு ஒப்பாரி பாடுகிறாள் மகள்.   பத்துப் பேர் சேவகரும் பழனிக்கே போகையிலே பத்துப் பேர் வந்தென்ன?-நீங்க பழனியிலே மாண்டதென்ன? எட்டுப் பேர் கூடி இலஞ்சிக்கே போன தென்ன? எட்டுப் பேர் வந்த தென்ன?-நீங்க இலஞ்சியிலே மாண்ட தென்ன? எட்டுப் பேர் சேவகரும் இலங்கைக்கே போனதிலே எட்டுப் பேர் வந்ததென்ன-நீங்க இலங்கையிலே மாண்ட தென்ன? கூண்டு வண்டி கட்டி-நீங்க கோட்டைக்குப் போனாலும் கும்பா நிழலாடும்-பிடிக்க வந்த பெண் குயில் போல வாதாடும். மாட்டு வண்டி மந்தைக்கே போனாலும் மங்கு நிழலாடும் உங்களைப் பிடிக்க வந்த மென் மயில் போல வாதாடும் யானை மேல் ஜமக்காளம் நம்ம வாசலிலே அஞ்சு லட்சம் பஞ்சாங்கம் அருமை மகன் கொள்ளி வைக்க அருச்சுனர்க்கும் சம்மதமோ குதிரை மேல் ஜமக்காளம் நம்ம வாசலிலே கோடிப் பேர் பஞ்சாங்கம் குழந்தை மகன் கொள்ளி வைக்க குடும்பத்திலே சம்மதமோ   செங்கச் சுவரு வைத்து செவ்வரளித் தோட்டம் வைத்து சிறு நாயைக் காவலிட்டு-நான் சீதை சிறையிருந்தேன் செங்கச் சுவரிழந்து செவ்வரளித் தோட்டம் அழிந்து சிறு நாயும் காலொடிஞ்சு-நான் சீதை கருகறேனே. மஞ்சக் சுவரு வச்சு மல்லிகைப் பூத்தோப்பு வச்சு மர நாயைக் காவலிட்டு-நான் மாது சிறையிருந்தேன். மஞ்சச் சுவரிடிஞ்சு மல்லிகைப் பூத் தோப்பழிந்சு மர நாயும் காலொடிஞ்சு-நான் மாது கருகறேனே மதுரைத் தலை வாசலிலே மஞ்சள் பழுத்திருக்கும் மரமல்லி பூத்திருக்கும் மறுமல்லி வாசத்திற்கு மயிலு வந்து கூடு கட்டும் மயிலை அடுக்கியளோ? மயில் கூட்டைப் பிச்சியளோ? மயிலழுத கண்ணீரு-நீங்க பெத்த மக்கள் மேல் சாடியதோ கோட்டைத் தலை வாசலிலே கொன்றை பூத்திருக்கும் குடமல்லி பூத்திருக்கும் குடமல்லி வாசகத்துக்கு குயிலு வந்து கூடு கட்டும் குயிலை அடிக்கியளோ? குயில் கூட்டைப் பிச்சியளோ? குயிலழுத கண்ணீரு-உங்க குழந்தை மேல் சாடியதோ?   குறிப்பு : இப்பாடல் பாடப்படும் இடங்களுக்கு ஏற்றாற் போல ஊர்களின் பெயர் மாறிவரும். குழந்தைமகன் தந்தையை இழந்த கொடுமைக்கு வருந்தி சகோதரி அழுகிறாள். தந்தை செய்த பாவங்களுக்கு குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்ற கருத்து கிறிஸ்தவ சமயக் கருத்தாகும். இந்து சமய கர்மக் கொள்கையும், சமண மதத்தவரது மறுபிறப்புக் கொள்கையும், அவரவர் செய்த வினைகள் அவரவர் உயிரைத் தான் பற்றிக்கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் சொல்லுகின்றன. ஆனால் சாதாரண மக்கள் தாய் தந்தையரின் வினை குடும்பத்தினரை தாக்கும் என்று நம்புகின்றனர்.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை.   சின்னத் தம்பி   தன்னுடன் பிறந்த தம்பி இறந்து விட்டான். அவனைப் பெட்டிக்குள் அடைத்து புதைக்க எடுத்துப் போகிறார்கள். சகோதரி ஒப்பாரி பாடுகிறாள்.   தேக்கு பலகை வெட்டி தெய்வலோகப் பொட்டி பண்ணி பொட்டிக்குள்ளே சின்னத் தம்பி போகுதுன்னா சின்ன வண்டி சின்ன வண்டி உள்ளிருக்கும் சின்னத் தம்பி என் பிறப்பு   குறிப்பு : தமிழ் நாட்டின் சில சாதியினர் பிணத்தைப் பெட்டியில் வைத்துப் புதைத்து மேலே சமாதி கட்டி லிங்கம் அல்லது கணபதியைப் பிரதிஷ்டை செய்கிறார்கள்.   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், சேலம்.   அவள் குறை   அவள் விதவை. அவளது துன்பங்களைச் சொல்லி அழுதால் மரமும் உருகும் ; பறவைகளும் கண் கலங்கும். என்ன குறையென்று அவள் சொல்லா விட்டாலும், விதவைக்கு நேரும் சமூகக் கொடுமைகளையும் குடும்பத் துன்பங்களையும், பல நாட்டுப் பாடல் மூலம் நாம் அறிந்துள்ளோமல்லவா?   பூ மரத்துக் கீழ் நின்னு பொங் கொறை சொல்லி அழுதா பூ மரத்து மேலிருக்கும் புறாவும் இறை உண்ணாது மாமரத்துக் கீழ நிண்ணு மங்க குறை சொல்லி அழுதா மாமரத்து மேலிருக்கும் மயிலும் இறை உண்ணாது.   வட்டார வழக்கு : பொங்கொறை-பெண் குறை.   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   மேல் கூறிய கருத்துக் கொண்ட வேறு இரண்டு பாடல்கள் பின்வருமாறு :   எட்டு மலைக் கந்தாண்ட ஈசுவரன் கோயில், அங்கே ஈசுவரன் கோயிலிலே இலந்தை படர்ந்திருக்கும் இலந்தைப் பழம் உண்ண வரும் எண்ணாயிரம் பச்சைக் கிளி எங்கொறையைச் சொன்னாலே இலந்தைப் பழம் உண்ணலையே-என் எண்ணங்களும் நீங்கலையே பத்துமலைக் கந்தாண்ட பரமசிவன் கோயிலண்ட பாவை படர்ந்திருக்கும் பழுத்தும் போப் பழமிருக்கும் பாவைப் பழம் உண்ண வரும் பத்தாயிரம் பச்சைக்கிளி பாவி என் குறைக்கேட்டு பாவைப் பழம் உண்ணலையோ-என்னுடைய பாதரவும் நீங்கலையே   வட்டார வழக்கு : பாவை-பாகல் ; கொறை-குறை.   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   ஏழையாம் என் தாய்   அவளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றத்தார் உண்டு. ஆனால் தாய் இறந்து விட்டாள். தாய் ஏழைதான். சுற்றத்தாரில் பணக்காரர்கள் பலர் உண்டு. ஆனால் வேதனைப்படும் காலத்தில் தாயின் அன்பைப் போல சுற்றத்தாரின் பெருமையும், பொருளும் அவளைத் தேற்றுமா?   எட்டு மலைக் கந்தாண்ட இரும்பிக் கம்பி ஆச்சாரம் எண்ணை நிழலோடும் எடுக்கும் பட்சி சீட்டாடும் எட்டு லட்சம் என் சனங்க எனக் குதவி நின்னாலும் ஏழையாம் என் தாயி எதிரில் வந்தார் சந்தோஷம். பத்து மலைக் கந்தாண்ட பவளக்கம்பி ஆச்சாரம் பாலும் நிழலோடும் பறக்கும் பட்சி சீட்டாடும் பத்து லட்ச என் சனங்க பக்கமாய் நின்னாலும் பால் கொடுத்த என் தாயி பக்கம் வந்தால் சந்தோஷம்.   வட்டார வழக்கு : ஆச்சாரம்-மாளிகை.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   பூஞ்செடி தழைக்கலையே   பிறவியிலேயே குழந்தை நோயுற்றிருந்தால் அவள் நோய் தீர்க்கச் செய்த முயற்சிகள் வீணாயின. பிள்ளை இறந்து போனான். இளம் தாய் பாடும் ஒப்பாரி இது.   தங்கக் குடமெடுத்து தாமரைக்குத் தண்ணிகட்டி தாமரை தழைக்க லையே தங்கக் கொடி ஓடலையே பொன்னுக் குடமெடுத்து பூஞ்செடிக்கு நீர் பாய்ச்ச பூஞ்செடி தழைக்க லையே பொன்னாக் கொடி ஓடலையே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   சிவனும் அறியலையே   மாங்கல்ய பாக்கியம் அருளும்படி அவள் தெய்வங்களை எல்லாம் பூசை செய்தாள். ஆனால் அவை கருணை காட்டவில்லை. எமனை எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொடுக்க தெய்வங்களால் முடியவில்லை. அவள் கணவனை எமன் பிடித்துக் கொண்டு போய் விட்டான். பூசை பலிக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அவள் அழுகிறாள்.   பழனிக்கு மேல் புறமாய் பன்னிரெண்டு கோபுரமும் படிக்கும்படி பூசை செஞ்சேன் ! பாவிபடும் தொந்தரவை பகவான் அறியலையே ! செஞ்சிக்கு மேல்புறமாய் செல்வரெண்டு கோபுரமாம் சிலைக்குச் சிலை பூசை செஞ்ச சிவனோடு வாதாடி-இந்தச் செல்விபடும் தொந்தரவை சிவனும் அறியலையே !   வட்டார வழக்கு : செஞ்ச - செய்தேன் ; சிலைக்குச் சிலை -சிலைகளுக்கெல்லாம்.   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   அண்ணியாள் அவதி   கணவனை இழந்தபின் புகுந்த வீட்டில் மாமியார், கொழுந்திமார் பேசும் பேச்சுத் தாங்க முடியாது போய்விட்டது. சில நாட்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவள் பிறந்த வீடு சென்றாள். அங்கே அண்ணிமார்கள் ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் ஊற்ற’க்கூட மனமி்ல்லாமல் முகத்தைச் சுளிக்கிறார்கள். மழை பெய்து செடிக்குப் பாயும் தண்ணீரைக் கூட குடிக்கவிட அவர்களுக்கு மனமில்லை. புகுந்த வீட்டில் உள்ள உரிமைகூட பிறந்த வீட்டில் இல்லாது போய் விட்டது. சில ஆண்டுகள் முன்பு வரை சட்டப்படி அவளுக்கு ஒரு உரிமையும் இல்லைதானே ! சமூக வழக்கப்படி இன்னும் பிறந்த இடத்தில் தாய் தந்தையர் மறைவுக்குப் பின் மகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இதை எண்ணி அழுதுகொண்டே அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பி விடுகிறாள்.   பொன்னு மழை பெய்யும் பூஞ்செடிக்கு நீர் பாயும் பொறந்த எடத்துத் தண்ணியின்னும் பூந்து குளிக்கப் போன பெரியண்ணிங்கிறவ பூச்சி விழுந்திச்சு இன்னா புதுப்பாசி கப்பிச்சுன்னா போட்டேனே பொந்தியிலே புடிச்சனே தடம் வழியே ! தங்க மழை பெய்யும் தாமரைக்கு நீர் பாயும் வளர்ந்த வீட்டுத் தண்ணியின்னும் வாரிக்குடிக்கா போனா சின்னண்ணி இங்கிறவ வண்டு படர்ந்ததின்னா மலைப் பாசி கப்பிச்சின்னா வடிச்சனே கண்ணீரை வந்திட்டான் வளநாடு.   வட்டார வழக்கு : பொறந்த-பிறந்த ; இன்னும்-என்றும் ; பூந்து-புகுந்து ; என்கிறவள்-இன்னா என்றாள் ; பொந்தி-வயிறு ; புடிச்சன்-பிடித்தேன் ; கப்பிச்சின்னா-கப்பித்து என்றாள் ; படர்ந்ததின்னா-படர்ந்தது என்றாள்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   மதுரை நகரிழந்தேன்   அவளது சகோதரன் ரயில் வண்டி ஓட்டுகிற டிரைவர். அவன் அடிக்கடி இவள் இருக்கும் ஊருக்கு வருவான். இவளுக்கு சற்றே உடல் நலமில்லை என்றாலும், பெற்றோர் உறவினர் எல்லாம் ஓடோடியும் வந்து விடுவார்கள். அண்ணன் இறந்து போனான். அண்ணனை மட்டுமா அவள் இழந்தாள்? அண்ணன் ஓட்டிய இரயில் வண்டி செல்லுகிற மதுரை, சேலம், செஞ்சி ஆகிய நகரங்களை எல்லாம் அவள் இழந்து விட்டாள். அவ்வூர்களில் வாழும் உறவினர்களுக்குச் செய்தி சொல்ல அன்பான அண்ணன் இல்லை. இப்பொழுது உறவினர் யாரும் அவள் வீடு தேடி வருவதில்லை. அன்பு மிக்க தனது அண்ணனை எண்ணி தங்கை அழுது புலம்புகிறாள்.   மதுரையும் சேலத்தையும் மாட்டிப் பிணைக்கும் வண்டி எங்கூடப் பிறந்த மார்க்கண்டன் ஓட்டும் வண்டி மங்கைக்குச் சேதமின்னும் மதுரைக்கு ஆள் போனா மதுரை புரண்டு வரும் மாப்புழுதி ஆடி வரும் மார்கண்டன் ஓடிவரும்-இப்போ மதுரை நகரிழந்தேன் மார்கண்டன் மாரிழந்தேன் செஞ்சியையும் சேலத்தையும் சேர்த்துப் பிணைக்கும் வண்டி என்னுடன் பிறந்த சிறுத் தொண்டன் ஓட்டும் வண்டி செல்விக்குச் சேதமின்னும் செஞ்சுக்கு ஆள் போனா செஞ்சி புரண்டு வரும் செம்புழுதி ஆடி வரும் என்னுடன் பிறந்த சிறுத் தொண்டன் கோடி வரும்-இப்போ செஞ்சி நகரிழந்தேன் சிறுத் தொண்ட மாரிழந்தேன். குறிப்பு : மார்கண்டர்-சிரஞ்சீவி. அண்ணனும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று தங்கை நம்பியிருந்தாள். மார்கண்டன் அவனது இயற்பெயராக இருக்காது. ஒப்பாரிக்கு என்று தங்கை தேர்ந்தெடுத்துக் கொண்ட பெயரேயாம்.   சிறுத்தொண்ட நாயனார் சிவனடியாருக்காக குழந்தையை அறுத்துக் கறி வைத்துப் படைத்தார். ஆனால் சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் குழந்தையை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார். அவளுடைய அண்ணன் அப்படி உயிர் பெற்று வருவானோ?   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   பொன் ரதம் முன்னாலே   தன்னைப் பெற்ற தந்தைக்கு ரதம் சோடித்து சவ ஊர்வலம் செல்லுவதைக் குறிப்பிட்டு மகள் அழுகிறாள்.   சனிக்கிழமை ஊத்தும் தண்ணி சாக்கடை போய்ப் பாயும் சாக்கடை ஓரத்திலே தங்கமல்லி பூத்திருக்கும் தங்கமல்லி பூப்பறிச்சு தங்கரதம் சோடிச்சா தங்கரதம் முன்னாலே-நீர் பெத்த பொன்னாளும் பின்னாலே புதன் கிழமை ஊத்தும் தண்ணி புழக்கடைக்குப் போய்ப் பாயும் புழக்கடை ஓரத்திலே பொன்னுமல்லி படர்ந்திருக்கும் பொன்னுமல்லி பூப்பறிச்சு பொன்னு ரதம் சோடிச்சா பொன்னு ரதம் முன்னாலே-நீ பெத்த பொண்ணாளும் பின்னாலே.   தந்தை மகளுக்குப் புத்தி சொல்ல வந்தார். அவள் அலட்சியமாக இருந்து விட்டாள். பின்னர் அவர் இறந்ததும், தனது அறியாமைக்கு வருந்துகிறாள்.   புத்தேரி ஐயாவே, புத்தியுள்ள ராசாவே, பொட்டி வண்டி மேலேறி புத்தி சொல்ல வந்தாயே, உன் புத்தி சொன்ன கால்களுக்குப் பூத்த மலரிசைத்து பூசை செய்யாப் பாவியானேன், பூக்காத பூவாளோ காஞ்சிபுரத்தய்யாவே கருத்துள்ள ராசாவே காரு வண்டி மேலேறி கருத்தொரைக்க வந்தாயே கருத்தொரைக்க வந்த உன் கால்களில் மலரைக் கொட்டி காலைப் பூசை செய்யாத காய்க்காத காயானேன் !   சேகரித்தவர் :S.M. கார்க்கி் இடம்:சிவகிரி,நெல்லை.   மாரடிப்பு   ஒப்பாரி பாடும் முன்னால் பெண்கள் மாரடித்துக் கொண்டு ஒரு பாட்டுப் பாடுவார்கள். தகப்பன் இறந்து போனால் அவருடைய பெண்மக்கள் மாரடிப்பார்கள். அவரைவிட வயதில் குறைந்தவர்களும் மாரடித்துக் கொண்டு கூடச் சேர்ந்து பாடுவார்கள். அப்பாட்டில் சவ அடக்கச் சடங்குகள் பலவும் வரிசையாகக் கூறப்படும். இச் சடங்குகள் சாதிக்குச் சாதி மாறுபடும். அவை சாதி உயர்வு தாழ்வுகள் பற்றி வெவ்வேறாயிருக்கும். இவற்றில் ஒரு சாதிக்குரிய சடங்கைப் பிற சாதியினர் செய்தால் கலகம் உண்டாகி விடும். திருமலை நாயக்கர் காலத்தில் பள்ளருக்கும் பறையருக்கும், சாவின்போது எத்தனை குடைகள் பிடிக்க வேண்டுமென்பதில் சச்சரவுண்டாகிப் பெருங்கலகம் தோன்றியது. நாயக்கர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து சாசனம் பிறப்பித்தார். அரசாங்கம் இவ்வேறுபாடுகளைப் பாதுகாத்து நிலை நிறுத்தியது. பந்தல் போடுவது, நடைபாதையில் துணி விரிப்பது, கருமம் செய்பவனுக்குக் குடை பிடிப்பது, சங்கம் ஊதுவது, இரட்டை மேளம் வாசிப்பது இவை போன்ற வழக்கங்கள் சாதிக்குச் சாதி சமூக வழக்கங்களால் அறுதியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகள் பல நாயக்கர் கால சாசனங்களில் காணப்படுகின்றன.   மாரடிப் பாட்டு-1   ஐயாவே ஐயாவே பாலு கொண்டு வந்தியளோ பாதரவம் தீத்தியளோ மோரு கொண்டு வந்தியளோ மோட்ச கதி பெத்தியளோ மூத்த மகன் கண்ணருகே மோட்ச கதி பெத்தியளோ இளைய மகன் கண்ணருகே எமலோகம் சேர்ந்தியளோ காலனுமே அழைச்சானோ உங்கள் கணக்கெடுத்துப் பார்த்தானோ எமன் அழைச்சானோ ஏடெடுத்துப் பார்த்தானோ   மூத்த மகன் முடியிறக்க மோட்ச கதி பெத்தியளோ இளைய மகன் முடியிறக்க எமலோகம் சேர்ந்தியளோ அரையளவு தண்ணியிலே அள்ளி வந்தார் நீர்மாலை இடுப்பளவு தண்ணியிலே எடுத்து வந்தார் நீர்மாலை வருகுதில்ல நீர்மாலை வைகுந்த வழிகாட்ட போகுதில்ல நீர்மாலை பூலோகம் எதித்தளிக்க இடுகாடு தேரிறக்க ஈண்ட பசு போதாதோ மலையேறி மேஞ்சு வரும் மயிலைப் பசு கோதானம் கரையேறி மேஞ்சு வரும் கருத்தப் பசு கோதானம் வீதியிலே போற ரதம் வீமனையே பெற்றெடுத்த வெள்ளி ரதம் போகுதென்பார்.   வாழை கட்டிப் பந்தலிலே வரிசை மக வந்து நிற்கா வரிசை மக கையறஞ்சா வந்த சனம் கையறையும் சீலை கட்டிப் பந்தலிலே செல்ல மக வந்து நிக்கா செல்ல மக கையறஞ்சா சேந்த சனம் கையறையும் தடயம் விட்டு மாரடிக்க தங்க மக வேணுமின்னு பட்டுடுத்தி மாரடிக்க பார மக வேணுமின்னு கொப்புப் பூட்டி மாரடிக்க பொண்ணடியும் வேணுமின்னு. சேகரித்தவர் :S.M. கார்க்கி் இடம்:சிவகிரி,நெல்லை.   மாரடிப் பாட்டு-2   ‘மாரடித்த கூலி மடிமேலே’ என்பது பழமொழி. (சொலவடை) இறப்பு என்பது இயற்கையின் நியதி என்றாலும் இறந்தோரை எண்ணி, இருப்போர் அழுது புலம்புகின்றனர்.   நரைத்துத் திரைத்து மூப்பெய்தித் தளர்ந்த காலத்தில் வரும் சாவு மகிழ்ச்சியையே அளிக்கிறது. உரிய காலத்தில் வந்த சாவை எண்ணி யாரும் ஒப்பாரி வைப்பதில்லை.   பிணத்தைக் குளிப்பாட்டி அலங்கரித்து சாய்த்து வைத்து பெண்கள் சுற்றியும் நின்று, கூந்தலை உலைத்து விட்டுக் கொண்டு, இறந்தவரது சீர்சிறப்புகளையும், நோய்வாய்ப்பட்டதையும், பிள்ளைகள் பரிவுடன் செய்த உபசரிப்புகளையும், மருத்துவத்தையும்-முடிவில் வந்த இறப்பையும்-பின்னர் நடைபெறும் இறுதிச் சடங்குகளையும் விவரித்துக் கைகளைத் தம் மார்பில் அடித்துப் பாடிக்கொண்டு சுற்றி வருவர். அதில் சோகமயமானதோர் உருக்கமும் அமைதியும் புலப்படும். கேலியும் கிண்டலும் கூட விரவி வருவதுண்டு. கிழடு, கெட்டைகள் இறந்து அங்கு மாரடித்தல் நடைபெறும்போது பார்த்தால் அது ஓர் இழவு வீடு போலத் தோன்றாது. மகிழ்ச்சிகரமான ஒரு மண விழாவைப் போலவே தோன்றும்.   மாரடித்து முடிந்த பின் கடலை, பயிறு, மாவு, பொரி, ஏதாவது தவறாமல் பரிமாறப்படும். இதையே மேற்கண்ட பழமொழி (சொலவடை) சுட்டிக்காட்டுகிறது. (குறிப்பு : S.S. போத்தையா)   *ஆ அ தி இ கயி யிலாசத்தில் ஆ அ தி மூலம் தன்னிடத்தில் பாசுபதம் தான் கொடுத்தார் பரம சிவனை நோக்கி   * அளபெடை கொடுத்து நீட்டி இசைப்பர்.   மக்களும் இல்லையிண்ணு மணம் வாடித் தவசிருந்தார் பிள்ளைகளும் இல்லையிண்ணு புழுங்கித் தவசிருந்தார் சித்திர புத்திரரே-நல்ல சிவனார் பெருங்கணக்கே மானிடர் கணக்கை யெல்லாம் வாசித்துச் சொல்லுமின்னம் மண்டலத்தில் போய் பிறக்கும் மானிடரைத் திட்டம் செய்தார் மானிட ஜென்மம் வேண்டும்-இந்த மண்டலத்து ஆசை வேண்டும்   கண்ணான கண்ணரையா காசி விசுவநாதையா வந்து பிறந்தாரையா வயசு பத்து நூறு ஆக மக்கள் பதினாறு பெத்து மகிழ்ச்சியுடனாண்டிருந்தார் பிள்ளை பதினாறு பெத்து புகழுடனே ஆண்டிருந்தார் ஆண்டு வரும் நாளையிலே-ஒரு அதிசயமும் கண்டாராம் தீர்த்த மாடப் போறாமிண்ணு தெரிசனமும் கண்டாராம் ராமேஸ்வரம் தீர்த்தமாடி ராமநாதர் மோட்சம்தேடி குற்றாலம் தீர்த்தமாடி குழல்வாய்மொழி அடிபணிந்து சங்குமுகம் தீர்த்தமாடி சாலாட்சம்மா அடிபணிந்து காசியிலே தீர்த்தமாடி காசி நாதர் மோட்சம்தேடி இத்தனையும் தீர்த்தமாடி இளைத்து வந்து உட்கார்ந்தார் அத்தனையும் தீர்த்தமாடி அலுத்து வந்து உட்கார்ந்தார் காலோ வலிக்குதிண்ணு கட்டிலிலே போய்ப்படுத்தார் மேலோ வலிக்குதிண்ணு மெத்தையிலே போய்ப்படுத்தார் தலையோ வலிக்குதிண்ணு தாவாரம் பள்ளிகொண்டார் மண்டை யடிக்குதிண்ணு மக்களெல்லாம் சூழ்ந்திருந்தார் வரிசை மகன் பார்த்திருந்து வைத்தியர்க்கு ஆளும் விட்டார் ஏறினார் காரிலேயே இறங்கினார் மதுரையிலே.   மதுரைக்கடை வீதியிலே மன்னர் மகன் பண்டுதராம் ஆனைக்கல்லு வீதியிலே அதிகாரி பண்டுதராம் ஓடி வரும் மோட்டாரிலே உட்கார்ந்தான் வைத்தியரும் அஞ்சி மணிக் காரேறி அவசரமாய் வாராராம் மருந்துப் பையை கையிலெடுத்து மன்னர் மகன் வந்து சேர்ந்தான் வாருமையா வைத்தியரே வலது கையைப் பாருமையா இருமையா வைத்தியரே இடது கையைப் பாருமையா கையைப் பிடித்தாரோ கைத்தாது பார்த்தாரே மறு வார்த்தை சொல்லாமலே மவுனமாக இருந்தாரே வரிசை மகன் எந்திரிச்சார் வைத்தியர் முகம் பார்த்தார் என்னையா வைத்தியரே ஏதுமே பேசவில்லை என்ன சொல்வார் வைத்தியரும் இஞ்சி தட்டி வாருமென்றார் பத்து வகை மாத்திரையைப் பார்த்துரைத்தார் பண்டுதரும்   தாழம்பூக் கெண்டியிலே தண்ணீரோ கொண்டு வந்தார் தண்ணீர் இறங்கவில்லை தாமரைப்பூ மேனியிலே மாதாளம்பூக் கெண்டியிலே மருந்து வகை கொண்டுவந்தார் மருந்தோ இறங்க வில்லை மல்லிகைப் பூ மேனியிலே பஞ்சு கொண்டு பாலொழுக்கி பட்டு கொண்டு வாய் துடைத்து என்ன வேணுமின்னு சொல்லி ஈஸ்வரனார் கேட்டாராம் பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம் பூலோகம் வேணுமின்னார் காசு வேண்டாம், பணமும் வேண்டாம் கயிலாசம் வேணுமின்னார் அப்போ மகானிவர்க்கு ஆயுள் முடிந்ததுவே   செப்பியதோர் காலதூதர் சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார் காலன் கொண்டு போறானே கைலாசம் தீர்த்தமாட எமன் கொண்டு போறானே எமலோகம் தீர்த்தமாட முத்துப் போல் கண்ணீரை-மக்கள் முகமெல்லாம் சோர விட்டார் பவளம் போல் கண்ணீரை-மக்கள் பக்கமெல்லாம் சோர விட்டார் குளிப்பாட்டி கோடி கட்டி, கொண்டு வைத்தார் குறிச்சியிலே முன்னூறு மூங்கியிலே முதல் மூங்கி கொண்டு வந்தார் நானூறு மூங்கியிலே நல்மூங்கி கொண்டு வந்தார். மூங்கில் பாய் தானெடுத்து முத்தமெல்லாம் பந்தலிட்டார்   தென்னம்பாய் தானெடுத்து தெருவெல்லாம் பந்தலிட்டார் சேப்பில் பணம்எடுத்தார் ; சென்னப்பட்டணம் கொட்டழைச்சார் கையில் பணம் எடுத்தார் ; பவனி வாத்தியம் வரவழைச்சார் அடிபடுதே மேளவகை ஆசார வாசலுலே முழங்குதையா மேளவகை மூவுலகம் தத்தளிக்க வெள்ளித் தேர் செய்தோமானால் வேலையோடிப் போச்சுதிண்ணார் பொன்னுத் தேர் செய்தோமானால் பொழுதோடிப் போச்சிதிண்ணார் மதுரைக்கு ஆளனுப்பி மச்ச ரதம் கொண்டு வந்தார் செஞ்சிக்கு ஆளனுப்பிச் சேர்த்த ரதம் கொண்டு வந்தார் காசியிலே பட்டெடுத்தால் கனமோ குறையுமிண்ணார் மதுரையிலே பட்டெடுத்தால் மடிப்போ குறையுமிண்ணார் விருதுநகர் பட்டெடுத்தால் விரிப்போ குறையுமிண்ணார் சாத்தூருப் பட்டெடுத்தால் சபையோ நிறையாதிண்ணார் பெரு நாளிப் பட்டெடுக்கப் புறப்பட்டார் பிறந்தவரும் நாலுகடை பார்த்து நயமான மல்லெடுத்து கொண்டுமே வாராராம் கூடப் பிறந்தவரும் வரிசை மகள் சேலைகொண்டு வாராராம் வீதியிலே செல்வ மகள் சேலைகொண்டு தெருவீதி வாராளாம் கொட்டு முழக்கமுடன் கொண்டு வந்தாள் பந்தலுக்கு   நாலு பேர் செம்பெடுத்தால் நடுங்கும் கைலாசம் மூணுபேர் செம்பெடுத்தால் முழங்கும் கைலாசம் ஆழமுள்ள கங்கையிலே அலரத் தலைமுழுகி நீள முள்ள கங்கையிலே நின்னு தலைமுழுகி ஏழாறு தான் கடந்து எடுத்து வந்தார் நல்ல தண்ணீர் அஞ்சாறு தான் கடந்து அள்ளி வந்தார் நல்ல தண்ணீர் மூணாறுதான் கடந்து மோந்து வந்தார் நல்ல தண்ணீர் செங்கை மடைதிறந்து செம்பு கொண்டு நீர் மோர்ந்து மாராடி நூல்போட்டு மாவிலையும் கையிலெடுத்து கெண்டி மேல் தேங்காய் வச்சி செவ்வரளி மாலைபோட்டு ஒரு மகனும் செம்பெடுத்தால் ஓடி வரும் நீர்மாலை குளுப்பாட்டி கோடிகட்டி கொண்டு வந்தார் பந்தலுக்கு மாலை கையிலெடுத்தார் ; மரக்கால் தலையில் வைத்தார் காசி காசியிண்ணு சொல்லி கட்டி மகன் நீர் தெளிச்சார் சுத்தி வந்து நீர் தெளிச்சு சூரியரைக் கையெடுத்தார் பக்கம் வந்து நீர் தெளிச்சு பகவானைக் கையெடுத்தார் சீதேவி தான் வாங்கி ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார் வெள்ளி படி கடந்து வெளியேறச் சம்மதமோ பொன்னும் படி கடந்து போகவும் சம்மதமோ ஏழு நிலைக் கோபுரமாம் ஈஸ்வரனார் பட்டணமாம் ஈஸ்வரனார் பட்டணத்தை இருந்து ஆளப் போறீயளோ அஞ்சி நிலைக் கோபுரமாம் ஐவரோட பட்டணமாம் ஐவரோட பட்டணத்தை அரசாளப் போறீயளோ மூணு நிலைக் கோபுரமாம் மூதாக்கள் பட்டணமாம் மூதாக்கள் பட்டணத்தை முடிசூட்டப் போறீயளோ ஒத்துமையாய் ஊராரும் உல்லாசத் தேர் தூக்கி பெத்த மகன் முன்னடக்க பெரியோர்கள் பின்னடக்க உற்ற மகன் முன்னடக்க உற முறையாற் பின்னடக்க சந்தியிலே போற ரதம் தங்க ரதம் யாரு ரதம் தருமரைப் பெற்றெடுத்த தங்க ரதம் போகுதென்பார் வீதியிலே போற ரதம் வெள்ளி ரதம் யாரு ரதம் வீமரைப் பெற்றெடுத்த வெள்ளிரதம் போகுதென்பார் முக்குக்கு முக்கல்லவோ முடிமன்னர் தோள்மாத்த சந்திக்கு சந்தியல்லோ சதிர் மன்னர் தோள்மாற்ற முக்குத் திருப்பி விட மூத்த மகன் எங்கே யென்பர் மந்தையிலே தேரிறக்கி மல்லிகைப்பூ சூறையிண்ணார் கரையிலே தேரிறக்கி கயிலாசம் போறேனிண்ணார். வருகுதையா பூந்தேரு வைகுந்தம் தெத்தளிக்க   போகுதையா பூந்தேரு பூலோகம் தெத்தளிக்க இண்டு மணக்குதையா இடுகாடு பூமணக்கும் வாயை மணக்குமையா வைகுண்டம் பூமணக்கும் இடு காடு தேரிறக்கி எமலோகம் போறேனிண்ணார் சுடுகாடு தேரிறக்கி சொர்க்க லோகம் போறேனிண்ணார் தேரை விட்டுக் கீழிறக்கி செல்ல மக்கள் வந்து கூடி பொன்னரசி கையிலெடுத்து போட்டார்கள் வாய்க்கரிசி சந்தனக் கட்டை வெட்டி சதுருடனே தீ மூட்டி கொள்ளி வச்சி குடமுடைச்சி கோலவர்ணத் தேரவுத்து செலவு தொகை தான் கொடுத்து செல்ல மகன் தலைமுழுகி சிவ சிவா என்று சொல்லி திருநீறும் தானணிந்தார்.   குறிப்பு : இதில் சாவுச் சடங்குகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   மாரடிப் பாட்டு-3   கவர்னர் தலைவாசலுல கருத்த யானை கெட்டியிருக்க கருத்த யானை கொம்பு தச்சி-இந்த கவர்னர் துரை மாண்டதென்ன வீமர் தலைவாசலுல வெள்ளானை கெட்டியிருக்க வெள்ளானை கொம்பு தச்சி வீமர் துரை மாண்டதென்ன கத்திரிக்காய் எங்களுக்கு கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு வாழைக்காய் எங்களுக்கு வைகுந்தம் உங்களுக்கு இடிச்சமா எங்களுக்கு இடுகாடு உங்களுக்கு பொரிச்சமா எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு சோளப்பொரி எங்களுக்கு சொர்க்கலோகம் உங்களுக்கு எள்ளுக்காய் எங்களுக்கு இடுகாடு உங்களுக்கு   குறிப்பு : இந்தப் பாட்டில் கேலியும், கிண்டலும், மகிழ்ச்சியும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். கத்திரிக்காய் அதாவது பொங்கி வைத்த சோறும் கறியெல்லாம் இருப்பவர்களுக்கு.   சேகரித்தவர் :S.S. போத்தையா இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   தருமரைத் தேடுகிறார்கள்   அவர் ஊரில் நியாயம் தீர்த்து வைக்கும் அம்பலக்காரர். இரவு பகலாக ஊர் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைப்பார். ஊரில் எல்லோரும் அவரை தருமர் என்று அழைப்பார்கள். போலீசார் அவருடைய உதவியை எப்பொழுதும் நாடுவார்கள். அவர் இறந்துவிட்டபொழுது அவருடைய மகள் ஒப்பாரி சொல்லி வருந்துகிறாள்.   கவனருட கச்சேரியாம் கவனருட கச்சேரியிலே கெடி ராந்தா நின்னெரியும் கெடி ராந்தா நின்னெரிய சீமையெல்லாம் தேடுதாக தண்ணியிலே மங்களமாம் தர்மரோட கச்சேரியிலே தர்மரோட கச்சேரியிலே தனிராந்த நிண்ணெரிய தனிராந்த நிண்ணெரிய தாமரையே தேடுதாக தங்கமிதியடியாம் தர்மரோட கச்சேரியாம் தருமருக்கு வாய்த்த பிள்ளை தம்பி சிறுசுகளாம் பொன்னு மிதியடியாம் போலீசார் கச்சேரியாம் போலீசார் கையமத்த புள்ளை சிறுசய்யா   வட்டார வழக்கு : கவனர்-கவர்னர் ; கெடிராந்தா-விடிய விடிய எரியும் மண்ணெண்ணெய் விளக்கு ; மங்களா-பங்களா ; கையமத்த-விடை கூற. சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.     கும்மினியாள் அழுது வந்தாள்   ஒப்பாரிகளில், மனைவி கணவனோடு வாழ்ந்த பெருமையை நினைத்தும், அது அழிந்தது குறித்து வருந்தியும் பாடுவாள். கணவனை ராமன் என்றும், தன்னை சீதை என்றும் பெருமை பாராட்டிப் பேசுவது மரபு. தமிழ் நாட்டில் நாயக்க மன்னர் ஆட்சி ஒழிந்து, நவாப் ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பினியார் ஆட்சி தோன்றியது. அரசர் பெயரையே கேள்விப்பட்டிருந்த பாமர மக்கள் கும்பினியார் என்றால், அயல் நாட்டிலிருந்து தம்மை ஆளும் ஒரு அரசர் என்றே எண்ணினார்கள். இப்பெண் கும்பினியார் என்ற அரசனுக்கு ஒரு மனைவியைக் கற்பனை செய்கிறாள். தனக்குத் தெரிந்த ஜமீன்தாரர்களை எல்லாம் ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றிய கும்பினியாரின் மனைவி மிகப் பெரிய ராணியாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே தன்னை கும்பினியாள் என்றே சொல்லிக் கொள்கிறாள். கும்பினியாள் என்றாள் சக்கரவர்த்தினி என்று பொருள், சக்கரவர்த்தினிபோலச் சிறப்பாக வாழ்ந்த அவளுடைய பெருமை எல்லாம் அவள் கணவன் இறந்ததும் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் படை எடுத்து வந்து மறவர் படையைத் தோற்கடித்த பட்டாணியரை அவள் அறிவாள். கும்பினியார் வருமுன்பு அவர்கள்தான் தமிழ் நாட்டுப் பாளையங்களுக்குப் படையெடுத்து வந்தார்கள். அத்தகைய பட்டாணி ஒருவன்தான், தன் கணவனைக் கொன்றுவிட்டானோ என்று அவள் கேட்கிறாள். காலதூதர்களை பட்டாணிக்கு உவமித்துப் பேசுகிறாள்.   பட்டி லையும் பட்டு-நான் ஒசந்த விலைப் பட்டு ஒசந்த விலைப் பட்டிலே ஓடி விழுந்த மாயமென்ன மலையிலே மாதுலை மாதம் ஒரு பூ பூக்கும் இடையிலே ஒரு பெண் பிறந்தேன்-தான் எடை குறைச்சல் ஆனதென்ன சந்தனச் சடுக்கா வண்டி-நான் தனிமைப் பட்டாள் ஏறும் வண்டி சண்டாளி வாய்திறந்தா தலைவாசலுமே கூட்டமாகும் தனிமைகளைப் பார்த்திருந்து தலை வாசலுமே பிரண்டெழும் குங்குமச் சடுக்கா வண்டி குயிலாளே ஏறும் வண்டி கும்பினியாள் அழுது வந்தாள். கொல்லை எல்லாம் கூட்டமாகும் கொடுமைகளைப் பார்த்திருந்தால் கொல்லையுமே பிரண்டெழும் குங்கும நெல்லி மரம் கூட்டத்தார் வச்ச மரம் கொடுமைகளைச் சொல்லி அழுதா கோர்ட்டார் கச்சேரியும் கூடப் பிரண்டழும் பத்துத்தலை வாசலும் பதினெட்டு ஆசாரமும் ஆசார வாசலிலே ராஜாக்கள் வந்திறங்க அடிக்க வருவாரோ ஆளெண்ணிப் பாப்பாரோ   அடிக்க வர ராஜாவே ஐயா சரண மின்னே எட்டுத் தலைவாசலும் இருபத்தெட்டு ஆசாரமும் கொல்ல வரு வாரோ கொலங் குத்தி பேசுவாரோ கொல்ல வர ராசாவே கோடி சரண மின்னே எட்டரங்காம் மாளிகையாம் எடுத்தெடுக்கும் தண்டியலாம் எடுத்தெடுக்கும் தண்டியலை எதிர்த்திருந்து எய்தானோ பத்தரங்காம் மாளிகையாம் பார்த்தெடுக்கும் தண்டியலாம் பார்த்தெடுக்கும் தண்டியலை பார்த்திருந்து எய்தானோ கோடி மாதுளம் பூவாம் கோட்டாற்றுத் தாழம் பூவாம் கோடி முடியு மின்னே குயில் பறந்த மாயமென்ன பதக்கு மாதலம் பூவாம் பருவமுள்ள தாழம் பூவாம் பாத்து முடியுமின்னே பறந்தோடிப் போனதென்ன அரங்கு துறந்து அரளிப் பதி உண்டுபண்ணி ஆண்டியார் வாழ்வதற்கு அரும் பெடுத்தும் சாத்தலையே பொட்டி துறந்து பூப்பதிகள் உண்டு பண்ணி பொண்ணடியாள் வாழ்வதற் பூவெடுத்துச் சாத்தலையே அல்லிப் போல் பொண்ணும் அருச்சுனன் போல் மாப்பிள்ளையும் அல்லி போல் வாழ அழைத்தார் தஞ்சமின்னே சீதை போல் பொண்ணும் ராமர் போல் மாப்பிள்ளையும் சீதை போல் வாழ சீமை பொறுக்கலையே ஆனை அலங்காரம் அம்பாரிச் சிங்காரம் ஆனைமேல் பட்டாணி அம்பு கொண்டு எய்தானோ குதிரை அலங்காரம் கூடாரச்சிங்காரம் குதிரைமேல் பட்டாணி கொம்பு கொண்டு எய்தானோ.   குறிப்பு : இப்பாட்டு தமிழ் நாட்டில் பட்டாணியரும் கும்பினியாரும் சேர்ந்து மறவர் பாளையங்களை அடக்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம். பட்டாணியை வருணிக்கும்பொழுது தற்கால லேவாதேவிக்காரனாக வருணிக்காமல் ஆனைமேல் அம்பாரி வைத்து ஏறி வருபவனாகவும் கூடாரத்தில் வாழ்பவனாகவும் வருணித்திருக்கிறது. இது படையெடுத்து வந்த பட்டாணியரையே குறிக்கும், மறவர் பாளையங்களை அடக்கி வந்த மாபூஸ்கான் கான்சாகிப் ஆகியோர்களைப் பற்றிய நினைவு சிறிது காலத்திற்கு மறவர் பாளையங்களில் மங்கவில்லை. அதற்கடுத்து இருபது வருடங்களுக்குள்ளாக, கும்பினியார் ஆட்சி நிலைத்துவிட்டது. இப்பாடலில் இறந்து போனதாகச் சொல்லப்படும் மனிதன் இச் சன்டைகளில் இறந்தவனாக இருக்கலாம். வழக்கமாகக் கால தூதர் வருகையைக் குறிப்பிடும் ஒப்பாரி “ஆசார வாசலில் ராஜாக்கள் வந்திறங்க” என்றும், “கொல்ல வருவாரும் கொலங்குத்திப் பேசுவாரும்” என்றும் கூறகிறது. எனவே இவனுக்கு ஏற்பட்ட சாவு இயற்கை சாவு அல்ல என்று தோன்றுகிறது. இக் காரணங்களால், இப்பாடலின் முக்கிய பகுதிகள் சுமார் 230 வருடங்களுக்கு முன்னால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை மாவட்டம்.   ஆளுக்கொரு தேசத்தில்   கணவன் அயல் நாட்டில் உயிர் நீத்தான்.கருமாதியன்று சந்தனக்கட்டையின் மீது வைத்து எரித்து சாம்பலாக்கி அதனைக் கரைத்தார்கள். தீர்த்தத்தில் கரைக்க சாம்பல்கூட அவன் உடலிலிருந்து அவளுக்குக் கிடைக்கவில்லை. திடீரென்று அவன் இறந்து போனதற்கு யார் தீ நாக்குக் காரணமோ என்று அவள் எண்ணுகிறாள்.   ஆல மர மானேன் ஆகா பெண்ணானேன் ஆகா பெண்ணானேன் ஆளுக்கொரு தேசமானோம் புங்கம் பழமானேன் பொல்லாத பொண்ணானேன் பொல்லாத பொண்ணானேன் புள்ளிக் கொரு தேசமானோம் வேப்பம் பழமானேன் வேண்டாத பொண்ணானேன் வேண்டாத பொண்ணானேன் விதிப் பட்டு நிக்க னில்லா ! தங்கப் புடம் போட்டேன் தனி வயிரச் சாம்ப லிட்டேன் தனி வயிரச் சாம்ப லிட்டேன் தண்ணியிலே கரைச்சு விட்டேன் பொன்னப் புடம் போட்டேன் போகவரச் சாம்ப லிட்டேன் போகவரச் சாம்ப லிட்டேன் பொய்கையிலே கரைச்சு விட்டேன் வெள்ளிப் புடம் போட்டேன் வேனக் கரைச் சாம்ப லிட்டேன் வைகையிலே கரைச்சு விட்டேன் பச்சைப் பசுங்கிளி ஐயா பாலடைக்கும் தேகமய்யா பாலடைத்த தேகத்திலே பட்டிச்சோ தீ நாக்கு நீலப் பளிங்கி ஐயா நெய்யடைக்கும் தேகமய்யா நெய்யடைக்கும் தேகத்திலே தீண்டிச்சோ தீ நாக்கு.   உதவியவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை மாவட்டம். கொல்லைப் புஞ்செய் ஏலமாச்சே   கணவன் உயிர் வாழும் காலத்தில் சீமை அதிகாரிகள் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள். அவனும் பெரிய பண்ணையாராக வாழ்ந்து வந்தான். அவன் மறைந்ததும் அவன் காலத்தில் ஏற்பட்ட கடன்களுக்காக, குடும்ப சொத்து முழுவதும் ஏலத்தில் போய்விட்டது. இதை நினைத்து வருந்தி, மனைவி ஒப்பாரி சொல்லுகிறாள்.   செத்திருவ எண்ணு சொல்லி-நான் சிந்தையிலும் எண்ணலையே மடக்கும் ஜமக்காளம் மகிழம்பு மெத்தையுமே மாயமா உயிர் போக மனசிலேயும் எண்ணலையே சுருட்டு ஜமக்காளம் துத்திப்பூ மெத்தைகளாம் சூட்சுமமா உயிர் போகச் சிந்தையிலும் எண்ணலையே வந்திச்சே செல்வம் வையை மணல் போல சிந்திச்சே செல்வம் சீமானே இல்லாமல் சந்திரர் கூட்டம் தணிச்ச முதலி கூட்டம் இந்திரனார் இல்லாமே இறங்கிச்சே ஷேத்திரங்கள் பத்தேரும் பண்ணைகளும் பாட்ட மரக்காலும் எட்டேரும் பண்ணைகளும் ஏணி வச்ச பட்டறையும்-இப்போ மரக்கா இழந்திடுச்சே-நம்ம மந்த புஞ்செய் ஏலமாச்சே நாழி இழந்திருச்சே நடுக் கிணறு ஏலமாச்சே கூசா இழந்திருச்சே-நம்ப கொல்லை புஞ் செய் ஏலமாச்சே   சேகரித்தவர் :S.M. கார்க்கி இடம்:சிவகிரி, நெல்லை.   வாடும் மல்லிகைப் பூ !   அவள் கணவனைப் பறிகொடுத்து வாடுகிறாள். அவள் வளர்த்த மல்லிகையும், செண்டு மல்லியும் அவள் துயரம் கண்டு வாடுகின்றன.   மானம் கடன் வாங்கி மல்லிகை நாத்து விட்டேன் மரமேறிப் பாருங்களேன் மங்கை புலம்புவதை மல்லிகைப்பூ வாடுவதை சேரக் கடன் வாங்கி செண்டுமல்லி நாத்து விட்டேன் செவரேறிப் பாருங்களே சீதை புலம் புவதை செண்டு மல்லி வாடுவதை   வட்டார வழக்கு : மானம்-பெரும் பணம் ; சேர-மிகுதியாக ; செவர்-சுவர் (பேச்சு).   உதவியவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி.   மஞ்சனில்லாப் பாவி பல ஒப்பாரிகளில் மைந்தனில்லாக் குறைக்காகப் பெண்கள் வருந்தி அழுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு வினையையும் தெய்வத்தையும் காரணம் காட்டுவார்கள். இங்கே இப்பெண் கண்காணாத சக்திகளின் மீது பழி போடாமல், உண்மையான சமூக விஞ்ஞானக் காரணத்தைக் கூறுகிறாள்.   மல்லிகைப் பூ மெத்தையிலே மாதங்கூடத் தூங்கலையே மாமியாள் கொடுமையினால் மஞ்சனில்லாப் பாவியானேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   அவசரம்   அவளுடைய தந்தை இறந்த செய்தி கேட்டு வேகமாக பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப் போகச் சொல்லுகிறார்கள். அவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வந்து விட்டாள்.   தலைமயிரை விரிச்சு விட்டு தருமபுரி போய் நிண்ணா-என்னைத் தருமபுரி வைத்தியரு தங்கிப்போ இண்ணாரு-நான் தங்க முடியாது-எங்கப்பா வீட்டு தங்கரதம் சிக்காது கூந்தலை விரிச்சி விட்டு கோசலம் போயி நிண்ணா கோசல வைத்தியரு-என்னைக் குந்திப் போ இண்ணாரு குந்த முடியாது-எங்கப்பா வீட்டு பொன்னுரதம் சிக்காது. சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   மணை போட யாருமில்லை   ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?   வாரம் ஒரு நாளு வள்ளியம்மை திருநாளு வள்ளியம்மை திருநாளில் வரிசையிட ஒருவரில்லை மாசம் ஒரு நாளு மாரியம்மன் திருநாளு மாரியம்மன் திருநாளில் மாலையிட யாருமில்லை மணைப்போட ஒருவரில்லை   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   எமகிரி சேர்த்துவிட்டேன்   தாய் இறந்துவிட்டதாகச் சாவோலை வந்தது. அவள் யாரையும் அழைத்துச் செல்லாமல் அவசரமாகச் சென்று எமகிரிக்கு அனுப்பி வைத்து விட்டாள். தாய் இறந்தால் குளிப்பாட்டி அனுப்ப வேண்டிய கடமை மகளுடையது.   கல்லௌச்ச திண்ணையிலே பொன்னௌச்ச பாய் போட்டு-நான் சாஞ்சு படுக்கும் போது எங்கமூட்டு சாவோலை வந்ததுங்கோ யாரூட்டு ஓலையிண்ணும் அசந்தன் வெகுநேரம் வாசலிலே இருந்த வங்க வாசித்துச் சொன்னாங்க. அழுத பிள்ளை எடுக்காம அவுந்த மயிர் முடிக்காம ஏறினேன் பொட்டி வண்டி இறங்கினேன் திண்டிவனம் என்னைப்பெத்த ஆயாளை எடுத்துக் குளிப்பாட்டி எமகிரி சேர்த்து விட்டேன்.   வட்டார வழக்கு : கல்லௌச்ச-கல்லிழைத்த ; பொன்னௌச்ச-பொன்னிழைத்த ; எங்கமூட்டு-எங்கப்பன் வீட்டு ; யாரூட்டு-யார் வீட்டு (பேச்சு) ; அசந்தன்-அயர்ந்தேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   முகக் கோடி   கணவன் இறந்த பின் மனைவிக்கு, அவளுடைய சகோதரர் கோடிப்புடவை எடுத்து முகத்தில் போடுவார்கள். இப்புடவையை முகக்கோடி என்று அழைப்பர். இச்சடங்கு வைணவப் பிரிவினரில் பத்தாம் நாளும், வேறு பிரிவினரில் பதினாறாம் நாளும் நடைபெறும். சில சாதியினரில், பிணத்தை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பியவுடனே நிகழும். நல்ல காரியங்களுக்கு பட்டு எடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே முகக் கோடி வாங்கும் நிலை ஏற்பட்டது குறித்து தங்கை வருந்துகிறாள். நல்ல காரியங்களுக்கு கடை தேடி நல்ல பட்டு எடுத்த அண்ணன், இக்காரியத்துக்கும் ஊர் ஊராக அலைந்து நல்லப் பட்டு எடுத்தாரோ என்று சொல்லி அழுகிறாள். தங்கையின் சொல் கேட்டு அண்ணன் அழுகிறான்.   சாமி பட்டு எடுத்தாலே சாயம் குறையுமிண்ணும் அரியூரான் பட்டெடுத்தால் அழகு குறையு மிண்ணும் சேலத்தான் பட்டெடுத்தால் சீருக் குறையு மிண்ணும் மொரப்பூரான் பட்டெடுத்தால் மோப்புக் குறையுமிண்ணும் அல்லி தறி மூட்டி செல்லிக்குப் பட்டுடுத்தி-நான் மோவாத பொண்ணா-அண்ணன் முகத்துமேலே போட்டழுதான்   வட்டார வழக்கு : மோப்பு- ; அல்லி-பெண் ; தறிமூட்டி-தறியில் நெய்து.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   பரமனார் பக்கமில்லை   பல கோயில்களுக்கு நேர்த்திக் கடன் கழித்துப் பெற்ற மகன் தவறிவிட்டான். அவன் பிறக்கும்போது தன் மீது கருணை காட்டிய சிவன், சிறிது நாளில் கொடுத்த செல்வத்தைப் பறித்துக் கொண்டார். அவன் இல்லாமலேயே இருந்துவிட்டால் வருத்தம் அவ்வளவு தோன்றாது. கிடைத்து, சிறது காலம் அனுபவித்த பிறகு இழப்பதென்றால் தாய்க்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?   படி ஏறிப் பூப்பறிச்சு பந்தறிய மாலை கட்டி பரமனார் கோயிலுக்கு பாலு படி கொண்டு போனேன் பாலு படி தவறாச்சு-என் பக்கம் மனுவுமில்லை பரமனார் பக்கமில்லை செடியேறிப் பூப்பறிச்சு செண்டறிய மாலை கட்டி சிவனார் கோவிலுக்கு சிவபடியும் கொண்டு போனேன் சிவபடியும் தவறாச்சு சேர்த்த மனுவுமில்லை சிவனார் பக்கமில்லை   சேகரித்தவர் :S.S.போத்தையர் இடம்:விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.   பூட்டிக் கிடக்குதுங்கோ   தந்தை இறந்த சில ஆண்டுகளில் தாயும் இறந்து போனாள். தாயின் காலத்திற்குப் பிறகு அவ்வீட்டில் வாழ ஆண் பிள்ளைகள் இல்லை. வருங்காலத்தில் இவ்வீட்டைத் தேடிப்போனால் அது பூட்டிக் கிடக்குமே என்றெண்ணி வருத்தத்தோடு ஒப்பாரி சொல்லுகிறாள்.   தங்கச் சரகு கட்டி தங்கச் சம்பா நெல்லெடுத்து தாய் வீடு போலா மிண்ணும் தங்கமலை தாண்டி தவணக் கொடி ஆறு தாண்டி தடம்புடிச்சி போய் பார்த்தேன் சாத்தி கெடுக்குதுங்கோ சஞ்சல மாகுதுங்கோ சிந்திட்டன் கண்ணீரை திரும்பினன் தென் மதுரை பொன்னு சரகு சட்டி புது சம்பா நெல்லெடுத்து பொறந்த ஏடு போலா மிண்ணும் பொன்னு மலை தாண்டி பொற் கொடி ஆறு தாண்டி போய்ப் பார்த்தேன் தாய் வீட்டை பூட்டிக் கிடக்குதுங்கோ பொங்கார மாகுதுங்கோ வடிச்சிட்டன் கண்ணீரை வந்திட்டன் தென் மதுரை   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அருர், சேலம்.   கூப்பிடுவார் யாருமில்லை   தாயும் தந்தையும் இறந்து விட்டனர். மகளுக்கு திருமணமாகவில்லை. தன்னைத் தகுந்த வரன் பார்த்து இனி யார் மணம் செய்து வைப்பார்கள் எண்றெண்ணி வருந்துகிறாள்.   மாரியம்மன் கோயிலிலே மங்கை குளி குளிச்சேன் மாதுளங்கா பட்டுடுத்தி மாரியை வணங்கி வந்தேன் மனையும் எதுராச்சி மலங்கழுகு சயணமாச்சி-நான் கொட்டியும் தண்ணீராய் கொளத்திலே பூத்திருந்ததன் குயிலா குணமறிஞ்சி கூப்பிடுவார் யாருமில்லை காளியம்மன் கோயிலிலே கன்னி குளி குளிச்சி கைலங்கிரி பட்டுடுத்தி காளியை வணங்கி வந்ததன் கானாறு எதிராச்சி காக்கா சயண மாச்சி தாமரையும் தண்ணீரால் தடாகத்தில் பூத்திருந்ததன் மயிலா குணமறிஞ்சி வரவழைப்பார் யாருமில்லை.   வட்டார வழக்கு: சயணமாச்சி-சகுனமாச்சு ; பூத்திருந்தன-பூத்திருந்தேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அருர்,தருமபுரி மாவட்டம்.   அரண்மனையைப் பார்க்கலையே   தந்தை இறந்த செய்தி கேட்டு மகள் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அவளை அயலூரில் மணம் செய்து கொடுத்த பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் சாவிற்காகத்தான் தாய் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கல்யாணத்தின் போது பேசிய வரதட்சிணை கொடுக்க முடியாததால், அவளைப் பிறந்த வீட்டிற்குப் போக கணவன் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பணம் கொடுக்க முடியாதவர்கள் தன்னை ஏன் மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று வருந்தி அழுகிறாள்.   ஆத்துக்கும் அந்தாண்டே-நீ பெத்த அல்லியை ஏங் கொடுத்த? ஆனைக்கு தினி கட்டி அடி கொளம்பு லாடம் கட்டி ஆத்தங்கரை வந்து நிண்ணன் ஆத்தங்கரை செம்படவன் ஆறு லட்சம் கேட்டானோ ஆறு லட்சம் இல்லாத-எங்கப்பன் வீட்டு அரண்மனையைப் பார்க்கலையோ கொளத்துக்கும் அந்தாண்ட-நீ பெத்த குயிலாளை ஏங் கொடுத்தே? குதிரைக்கு தீனி கட்டி கொன கொளம்பு லாடங்கட்டி கொளத்தங்கரை வந்து நிண்ணா கொளத்தங்கரை செம்படவன் கோடி பணம் கேட்டானே கோடி பணம் இல்லாத-எங்கப்பன் வீட்டு கோட்டை போய் பார்க்கலையே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அருர்,தருமபுரி மாவட்டம்.   மாண்டதென்ன திண்ணையிலே   கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். அவன் திடீர் மரணத்தைக் குறித்து வருந்தி துடி துடித்து மனைவி அழுகிறாள்.   சோப்பு படி கிணறு சோமம் துவைக்கும் கல்லு சோப்பு பெட்டி இங்கிருக்க-நீங்க சோர்ந்ததென்ன திண்ணையிலே மல்லு துவைக்கும் கல்லு மாசிப்படி கிணறு மல்லு பெட்டி இங்கிருக்க-நீங்க மாண்ட தென்ன திண்ணையிலே கருத்த புளியங் கொட்டை கருத்தா பொழைக்குதுங்க-நான் கஸ்தூரி நல்ல மஞ்சா கனங் கொறஞ்சி நிக்கறனே செவந்த புளியங் கொட்டை சீரா பொளைக்குதுங்கோ-நான் சேலத்து நல்ல மஞ்சா சீரழிஞ்சு நிக்கரனே சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அருர்,தருமபுரி மாவட்டம்.   இளராசா கைக்குழந்தை   சிறு குழந்தைகளை தாயின் பொறுப்பில் விட்டு விட்டு தந்தை இறந்துவிட்டான். அவன் மனைவியின் ஒப்பாரி இது. இதில் வரும் உவமைகள், குறிப்புகள் எல்லாம் பனை, பனையேறும் தொழில் முதலியவற்றைச் சார்ந்தனவாக இருக்கின்றன. எனவே இது நாடார் குலத்தினரின் ஒப்பாரியென்று தோன்றுகிறது.   பத்துப் பனையோலை பாடும் குருத்தோலை பாடி முடிக்கு முன்னே பகவான் அழைச்சானோ? சாஞ்ச பனையோரம் சம்பா நெல் காயப்போட்டேன் சம்பா நெல் அள்ளு முன்னே சங்குச் சத்தம் கேட்டதென்ன? தங்க தம்ளரிலே தண்ணீரா கொண்டு வந்தேன் தண்ணீரோ தேவையில்லை தங்கரதம் தேவையாச்சே தக்காளிப் பூப் பூக்கும் தரம் தரமாய்க் காய்காய்க்கும் தரங்கெட்டார் வாசலிலே தள்ளிக்கொண்டார் மாலையிட்டார் கோவை படர்ந்திருக்கும் கொடி கொடியாய் காய்ச்சிருக்கும் கொணங் கெட்டார் வாசலிலே கூட்டிக் கொண்டார் மாலையிட்டார் பாலுத்தி பாத்தி கட்டி பாக்கு மரம் உண்டு பண்ணி பாக்கு முத்தி தோப்பானோம் பாலர் எல்லாம் கைக்குழந்தை இஞ்சி வச்சா புஞ்சிறங்கும் மணல் போட்டால் வேர் இறங்கும் இஞ்சி முத்தித் தோப்பானோம் இளராசா கைக்குலந்தை   குறிப்பு: தன் கணவன் வீட்டார் தன்னைக் கொடுமையாக நடத்தி வந்ததை ‘குணங்கெட்டார் வாசல்’, ‘தரங்கெட்டார் வாசல்’ என்ற சொற்றொடர்களால் குறிப்பிடுகிறாள் மனைவி. அவன் இறந்ததன் பின்னர் எப்படி அவர்கள் நடத்துவார்கள் என்பதை எண்ணி இரக்கம் கொண்டு அவள் அழுகிறாள்.   சேகரித்தவர் :M.P.M. ராஜவேலு இடம்:தூத்துக்குடி வட்டாரம்,நெல்லை மாவட்டம்.   பாரமலை சாய்ந்தது   கணவனும் மனைவியும் குறைவற வாழ்ந்து வரும் பொழுது, மனைவி சில தீய நிமித்தங்களைக் கண்டாள். மலை சாய்ந்து விட்டது ; தோப்பிலிருந்த மணி உடைந்தது ; கடுகுப் பயிரும், மிளகுப் பயிரும் பயன் தரவில்லை ; இவற்றைக் கண்டு, காலனைப் போல சொல் தவறாத ஜோசியர்களிடம் சென்று வருங்காலத்தைப் பற்றிக் கேட்கச் சென்றார்கள். அவர்கள் ‘எழுத்திங்க’, ‘பொழுது இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். இதனால் காலம் கெட்ட காலம் சீக்கிரம் மாறும் என்றே எண்ணி வந்தார்கள். ஆனால் அவன் இறந்து விடுவான் என்று மனைவி நினைக்கவேயில்லை.   கட்டிலுக்குக் கீழே காத்திருந்தோம் சிலகாலம் காத்திருந்தோம் கண்ணப்பொத்தி காலன் வந்த மாயமென்ன? மெத்தைக்குக் கீழே வீத்திருந்தோம் சிலகாலம் வீத்திருந்தோம் கண்ணப்பொத்தி வீமன் போன மாயமென்ன? பத்துமலைக் கப்பாலே, பார மலைக்கிப்பாலே பாரமலை சாஞ்சொடனே பகவானை கைதொழுதோம் எட்டு மலைக்கப்பாலே இலங்கை மணிதோப்போரம் இலங்கை மணி உடச்சொடனே இந்திரரைக் கையெடுத்தோம் கடுகு பயிர் ஆகுமிண்ணு காத்திருந்தோம் சிலகாலம் முளகு பயிர் ஆகுமின்னு முழிச்சிருந்தோம் சிலகாலம் முளகு பயிர் ஆகவில்லை முழிச்சிருந்தோம் வீணால கடுவரைச்சுக் கோலமிட்டு காலனவே வரவழைச்சி காலன் பெருமாளும் கட்டெடுத்து சொன்னாக எள்ளரைச்சு கோலமிட்டு எமனையே வரவழைச்சி எமன் பெருமாளும் ஏடெடுத்தும் சொன்னாக பொன் எடுத்து கோலமிட்டு பொழுது வரவழைச்சு பொழுதும் பெருமாளும் போட்டெழுத்துன்னா சொன்னாக தங்க மலையேறி சாதகங்கள் பார்க்கையிலே தங்கமலை நாதாக்கள் தகுந்தெழுத்துன்னும் சொன்னாக ஆத்துக்கும் அந்தப்புறம் அழகான கல்லறையே கல்லறை மேடையிலே கண்ணுறக்கம் வந்ததென்ன? கரிஞ்ச நிழல் பாத்து தாவரம் பத்தியிலே-உனக்கு குளுந்த நிழல் பாத்து கூட இருக்கத் தேடுதனே ஒத்த மரமானேன் ஒரு மரமே காலாற பக்கமரம் இல்லாமே பதவி குலைஞ்சேனே   சேகரித்தவர் :எஸ்.எம். கார்க்கி இடம்:சிவகிரி,நெல்லை மாவட்டம்.   தங்க லைட்டுமில்லை   மின் விளக்குப் போல ஒளிமிகுந்த அவளுடைய வாழ்க்கையில் இன்று இருள் கப்பிவிட்டது. காரணம் கணவன் மறைந்துவிட்டான்   தங்க வள வளைச்சு தாவரம் தொட்டி பண்ணி தாவர தொட்டியிலே-நான் தங்காளும் படுத்திருந்தால்-எனக்குத் தங்கலைட் டெரியும் தனிக் காந்தம் நிண்ணெரியும்-இப்போ தங்க லைட்டுமில்லை-எனக்கு தனிக்காந்தம் பக்கமில்லை பொன்னு வளவளச்சி பூவாரந் தொட்டி பண்ணி பூவாரத் தொட்டியிலே பொண்ணா படுத்திருந்தா-எனக்குப் பொன்னு லைட்டெரியும் புதுக்காந்தம் நிண்ணெரியும்-இப்ப பொன்னு லைட்டு மில்லே புதுகாந்திம் பக்கமில்லை.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   குழந்தையில்லாப் பாவி   அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை போலப் பரிதவிக்கிறாள்.   குச்சடி மேல் பலகை குதிரை வால் முந்தாணி கொண்டு வந்து கோடி போட-நான் குழந்தை யில்லாப் பாவியானேன் அச்சடி மேல் பலகை ஆனைவாய் முந்தாணி அழச்சி வந்து கோடி போட-நான் அண்ணனில்லாப் பாவியானேன்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,சேலம் மாவட்டம்.   அழாதே தங்கையரே   இதற்கு முந்தைய ஒப்பாரிகள் தாய் தந்தையரை இழந்த ஒரு பெண் தன் தாய் வீடு சென்றால், அங்கு அண்ணன் மனைவி படுத்தும் பாடுகளை விளக்கியுள்ளன. அத்தகைய வகையைச் சேர்ந்தது இவ்வொப்பாரியும். தங்கை அண்ணனிடம் முறையிடுவதையும் அண்ணன் தங்கையைத் தேற்றுவதையும் உரையாடலாக இப் பாடல் கூறுகிறது :   ஆத்துத் திருகாணி அலைச் செடுக்கும் பட்டாணி அன்பிலா அண்ணியிடம் அஞ்சாத தண்ணி கேட்டேன் அண்டா இரவல் இண்ணா ஆத்துத் தண்ணி தூரமின்னா அதையும் மனதில் வச்சு அண்ணனோடு சொல்லியழுதேன் அழாதே தங்கையரே ஆனை சிலம்பு தரன் ஆறு லட்சம் பொன்னு தரன் அழாதே தங்காயிண்ணான்-எனக்கு ஆனை சிலம்பு வேணா ஆறு லட்சம் பொன்னும் வேணா-உன் அன்பான வாய் திறந்து அனுப்பி வச்சால் போது மிண்ணன்   வட்டார வழக்கு: அஞ்சாத-அஞ்சாது ; இண்ணா-என்றான் ; தூரமின்னா-தூரம் என்றாள் ; தரன்-தருகிறேன் ; போது மிண்ணன்-போதுமென்றேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   பொருத்தமில்லாத இடத்தில் பெண் கொடுத்தல்   ஒரு பெண்ணின் தாய் தந்தையர் பொருத்தமில்லாத இடத்தில் அவளை மணம் செய்து கொடுத்துள்ளதால், அவள் புருஷன் வீட்டில் பல அபவாதங்களை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. அவளை தகுந்த இடத்தில் மணம் செய்து கொடுத்தால் இந்த பேச்சுக் கேட்காமல் இருக்கலாமல்லவா? தந்தையின் மரணத்தின் போது அவள் இதை ஒப்பாரியில் வெளிப்படுத்துகிறாள்.   சீனா மரிக் கொழுந்து சீட்டெழுதும் பின்னாங்கு சீரா கொடுத்திருந்தால் சீன்னச் சொல்லு ஏன் வருது பீனா மரிக் கொழுந்து பேரெழுதும் பின்னாங்கு பேரா கொடுத்திருந்தால் பெரிய சொல்லு ஏன் வருது குளத்தங்கரை யோரம் குதிரை வந்து மண்டியிடும் குதிரைக்கும் சங்கிலிக்கும் குலம் பார்த்துக் கோத்திருந்தால்-எனக்கு குறைவு வந்து நேராது ஆத்தங்கரை யோரம் ஆனை வந்து மண்டியிடும் ஆனைக்கும் சங்கிலிக்கும் அளவு பார்த்துப் பூட்டிருந்தால்-எனக்கு அலப்பு வந்து நேராது கல் பொறுக்கும் சீமையிலே-என்னை கட்டிக் கொடுத்தாங்க கல்லைப் பொறுக்கு வேனோ எங்கப்பன் வீட்டு காதவழி சேருவேனோ முள்ளெடுக்கும் சீமையிலே-என்னை முடிஞ்சி கொடுத்தாங்க முள்ளைப் பெருக்குவேனோ எங்கப்பன் வீட்டு முல்லை வனம் சேரு வேனா.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   மலடு இண்ணும் சொன்னாங்க   தூர தேசத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர் அவளது பெற்றோர். அதனால் அவள் தாய் வீட்டிற்கு அடிக்கடி வரமுடியவில்லை. தந்தை இறந்த செய்தி கேட்டு, வருகிறாள். குழந்தைப் பேறு பெறாத அவள் தான் ‘மலடு’ என்னும் பட்டம் பெற்று, தாய் தந்தையரையும் அடிக்கடி பார்க்க முடியாத தூர தொலைவில் இருந்து வாடுவதாகக் கூறுகிறாள். தந்தையின் சடலத்துக்கருகில் அழுது ஒப்பாரி பாடும்பொழுது “என்னை உள்ளூரிலேயே மணம் முடித்துக் கொடுத்தால் நான் அரிசி, பருப்பு முதலியவை கடன் கேட்டுத் தொல்லை கொடுப்பேன் என்றா வெகு தூரத்தில் மணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று கேட்டு அழுகிறாள்.   ஆத்துக்கு அந்தாண்ட அன்னக்கா பின்னமரம் அஞ்சியாறு தாண்டி-நீ பெத்த அல்லியை ஏன் வெலை மதிச்ச அண்டையிலே கொடுத்தாலே அரிசி கடன் கேட்பனிண்ணும் பக்கத்திலே கொடுத்தாலே பருப்பு கடன் கேட்பனிண்ணும் பத்தாறு தாண்டி-நீ பெத்த பாங்கில வெலை மதிச்ச ஆத்துக்கு அந்தாண்ட எங்கப்பன் வீட்டு ஆனை வண்டி சத்தம் கேட்டு கொளத்துக்கு அந்தாண்ட எங்கப்பன் வீட்டு குதிரை வண்டி சத்தம் கேட்கும் கோவைக்காய் நாருரிப்பேன் கூட்டரைச்சி பொரி பொரிப்பேன் தங்கச் சம்பா நெல் குத்தி தயிர் சாதம் நான் சமைப்பேன் மத்தங்கா புல்லறுத்து மலையோரம் சாத்துனா மலையோரம் போறவங்க மலடு இண்ணும் சொன்னாங்க கொடியருகன் புல்லறுத்து கொளத்தோரம் சாத்துணா கொளத் தோரம் போறவங்க கொட்டு இண்ணும் சொன்னாங்க   வட்டார வழக்கு: அந்தாண்ட-அந்தப் பக்கம் ; கொளம்-குளம் ;   சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   அப்பனும் கிடைக்கவில்லை   தன் புகுந்த வீட்டில் ஒரு பெண் பாடிக் கொண்டே மோர் கடைந்து கொண்டிருக்கிறாள். அவள் தந்தை இறந்து போனதாகத் தந்தி வந்தது. தான் தந்தியில் செய்தியைக் கேட்டதுமே தந்தையின் சாவுக்கு அடிக்கும் பறமேளம் தனக்கு கேட்டதாகவும், ஓடி வந்தும் தந்தையை உயிரோடு பார்க்கக் கிடைக்கவில்லையென்றும் கூறி அழுகிறாள்.   பானையிலே தயி ரெடுத்து பாங்கான மத் தெடுத்து பாடி கடையும் போது பறமோளம் கேட்ட தென்ன? யார் வீட்டு மோள மின்னும் ஆராஞ்சி நான் பார்த்தன் தாய் வீட்டு மோள மிண்ணும் தந்தியிலே வந்த தெண்ணா முந்தாணி தாரை விட்டு முதல் மயிரைச் சிக்கொடைச்சி அப்படியே ஓடிட்டேன் அப்பனும் கிடைக்கவில்லை அண்ட கதியத்தன் அல கொலஞ்சி நிக்கரனே   வட்டார வழக்கு: பறமோளம்-சாவு வீட்டில் அடிக்கும் மேளம் ; அலகொலஞ்சி-நிலைகுலைந்து.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   காதம் போய் நில்லச் சொன்னாள்   அவள் தாய் தந்தையரை இழந்து விட்டாள். அவளது தாய் தந்தையர் அவளைச் செல்லாக வளர்த்தது, இப்பொழுது அவளது அண்ணன், அண்ணி இருக்கும் பெரிய மெத்தை வீட்டில்தான். ஆனால் அவர்களது மரணத்திற்குத் தான் தன் துக்கம் தீர அழவேண்டுமென்றால் கூட அண்ணி “இந்த வீட்டில் அழக்கூடாது ; வேறு எங்காவது போய் அழு,” என்று கூறியதும், தனக்கு முன்னம் சொந்தமாக இருந்த நிலையையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி அழுகிறாள்.   காஞ்சியிலே எங்கப்பன் வீடு கடலைக்காய் மெத்தை வீடு காசி ராஜன் பெத்த பொண்ணு கடையோரம் நிண்ணழுதால் கடைக்குச் சொந்தக்காரி-என்னை காதம் போய் நில்லச் சொன்னாள் தூரத்திலே எங்கப்பன் வீடு துவரைக்காய் மெத்தை வீடு துளசி ராஜன் பெத்த பொண்ணு தூணோரம் நிண்ணழுதால் தூணுக்குச் சொந்தக்காரி-என்னை தூரம் போய் நில்லச் சொன்னாள்   வட்டார வழக்கு: நில்ல-நிற்க.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   மடி ஏந்தி பொய்யானேன்   கல்யாண மேடையிலே கணவரின் கையைப் பிடித்ததும், அப்பொழுது நடைபெற்ற விசேஷ சம்பவங்களும் இப்பொழுது நடைபெற்றது போல் தோன்றுகிறது. ஆனால் குறுகிய காலத்தில் அவள் கணவன் அற்பாயுளில் இறந்து போனான். தன்னுடைய கல்யாணத்தையே கனவு என்று எண்ணும்படி இறந்து போன தன் கணவனுடன் தான் மகிழ்ச்சியுடன் நெடுங்காலம் வாழாமல் தன் கனவுகளைப் பொய்யாக்கி விட்டு மறைந்த தன் கணவனை எண்ணிக் கதறுகிறாள்.   மண்ணைத் திரி திரிச்சி மறு மண்ணை வில் வளச்சி மாளிகை மேடையிலே-நான் மடி ஏந்தி பொய்யானேன் கல்லைத் திரி திரிச்சி கருமணலை வில் வளச்சி கல்யாண மேடையிலே-நான் கை ஏந்தி பொய்யானேன் கத்தரிக்காய் பூ பூக்கும் கடலோரம் பிஞ்செறங்கும் கணக்கு பிள்ளை தங்கச்சி-நான் கை ஏந்தி பொய்யானேன் மல்லாக் காய் பூ பூக்கும் மலையோரம் பிஞ் செறங்கும் மணியக்காரன் தங்கச்சி-நான் மடி ஏந்திப் பொய்யானேன்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   அழகு முகம் தென்படலை   மகள் வருவதற்கு முன் தகப்பனின் சடலத்தைச் சுற்றத்தார் சுட்டெரித்து விட்டார்கள். இறந்துபோன தந்தையின் சடலத்தையாவது காணலாம் என்று ஓடிவந்த மகள் வருமுன்பாகவே தந்தையின் சடலத்தைச் சுட்டெரித்த செய்தி கேட்டு “நான் எங்கு தேடியும் உங்கள் முகம் தென்படவில்லை, இனி எப்படி உங்களைக் காண்பேன்?” என்று அரற்றி அழுகிறாள்.   சுடலை புரமெல்லாம் சோதிச்சு நாங்க வந்தோம் சுடலை தென்படுது-உங்க சோர்ந்த முகம் தென்படலை ஆறு புர மெல்லாம் ஆராஞ்சு நாங்க வந்தோம் ஆறு தென்படுது-உங்க அழகு முகம் தென் படல   வட்டார வழக்கு: சுடலை-சுடுகாடு ; ஆராஞ்சி-ஆராய்ந்து.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சக்கிலிப்பட்டி,தருமபுரி மாவட்டம்.   கருமம் செய்ய பிள்ளை இல்லை   குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு பெண் பூஜை பல செய்கிறாள். குழந்தை பிறக்கவில்லை. அவள் பூஜை செய்தும் குழுந்தை பிறக்காமல் இருந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவள் கணவனும் இறந்து போகிறான். என்னதான் மற்றப் பிள்ளைகளைச் சீராட்டினாலும் தாய் தந்தையர் இறந்த பின்பு தருமஞ் செய்யவும், கொள்ளி வைக்கவும் வயிற்றில் பிறந்த மகன் தானே உரிமையுள்ளவனாகவும், அப்படிப் பெற்ற பிள்ளை கருமம் செய்வதற்குக் கொடுத்து வைக்கும் பெற்றோர்கள், ஒரு குறைவும் இல்லாதவர்கள் என்று நம் சமூகம் சொல்கிறது. கருமஞ் செய்யப் பிள்ளையில்லாதபடி கொடுத்து வைக்காதவராக ஆகி விட்டீர்களே, ஆகி விட்டோமே என்பதை எண்ணி ஏங்குகிறாள் புருஷனை இழந்த ஒரு பெண்.   ஆத்துக் கந்தாண்ட அன்னலறி பின்னமரம் அரும் பெடுத்துப் பூசை செய்தும் அருங் கொளந்தைப் பஞ்சமாச்சி. கொளத்துக்கு அந்தாண்ட கொழுந்து வரி பின்னமரம் கொழுந் தெடுத்துப் பூசை செய்தும் கொளந்தைப் புள்ளை பஞ்சமாச்சி கணுங்காலு தண்ணியிலே காசு நிறைஞ்சிருக்கும் காசெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு கருமஞ் செய்ய பிள்ளையில்லை முழங் கால் தண்ணியிலே முத்து நிறைஞ்சிருக்கும் முத்தெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு முன்னே செல்லப் பிள்ளையில்லே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   பெண்ணாய்ப் பிறந்த குறை   அவள் தன் கணவனை இழந்து விட்டாள். புகுந்த வீட்டிலோ புருஷன் போன பின்பு மதிப்பில்லை. விதவைக் கோலத்தோடு பிறந்தவீடு சென்று என்ன பயன்? தான் கணவனுடன் வாழும் காலத்தில் தனக்கு இருந்த மதிப்பு எந்த இடத்திலும் இப்பொழுது இருக்காது. நடைப்பிணமாக வாழ வேண்டியதுதான் என்பதை அவள் உணர்ந்தாள். தான் பெண்ணாய்ப் பிறக்காமல் ஆணாய்ப் பிறந்திருந்தால், தந்தைக்குப் பின் தான் வீட்டிற்கு உரிமை உள்ளவளாக இருக்கலாம். எந்தவித சுதந்திரமும் உண்டு, அல்லது கோயில் சிலையாகப் பிறந்திருந்தாலாவது மாதம் ஒரு முறையாவது பூசைகள் நடக்கும். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த குறை ஒன்றினாலேயே தான் இவ்விதம் புலம்பி அழும் நிலைமை ஏற்பட்டதை எண்ணி மேலும் அழுகிறாள்.   ஆதண்டங்காய் காய்க்கும் அலரி பூ பிஞ்சிறங்கும் ஆணாய் பிறந்திருந்தால் அப்பன் வீட்டு அரண்மனையில் அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன் மாரியம்மன் கோயிலண்டை மண்ணாய்ப் பிறந்திருந்தால்-எனக்கு மாசம் ஒரு பூசை வரும் பெண்ணாய்ப் பிறந்த குறை புலம்பிக் கிடக்கலாச்சு   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   பொறந்த இடம் சீரழிஞ்சேன்   இதுவும் பிறந்த வீட்டில் தந்தையின் பெருமையை நினைத்து அழும் மகளின் ஒப்பாரிப் பாடலாகும்.   புள்ளித் தலையாணி பொறந்த இடம் கச்சேரி புள்ளி நிறங் கொலஞ்சன் பொறந்த இடம் சீரழிஞ்சேன் பட்டு தலையாணை பாட்டன் வீடு கச்சேரி பட்டு நிறங் கொலஞ்சன் பாட்டன் வீடு சீரழிஞ்சேன் வட்டார வழக்கு : தலையாணை-தலையணை ; கொலஞ்சன்-குலைந்தேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   பாம்பு ரெண்டு சீறுது   அண்ணன்மார்கள் வீட்டுக்குப் போகிறாள் தங்கை. ஆனால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. அண்ணிமார்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாத்தியை அண்ட விடவில்லை. எங்கே தங்களின் உரிமைகளுக்கு இடைஞ்சலாக இருப்பாளோ என்று அவளைக் கொடுமைப் படுத்துகிறார்கள். தன் பிறந்த வீட்டையும், தாய் தந்தையரையும், தாகத்திற்கு உதவும் நல்ல தண்ணீராகவும், அத்தகைய நல்லவர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது இருக்கும் அண்ணன்மார்களின் மனைவியர் அட்டை, பாசி முதலியனவாகவும், அவர்களது குணங்கள் ஆமை, பாம்பைப்போல் சீறும் தன்மையுடையனவாகவும் இருப்பதை ஜாடையாக வருணித்து அழுது புலம்புகிறாள்.   அஞ்சி கிணற்று தண்ணி அருங்குளத்து நல்ல தண்ணீ அள்ளிக் குடிக்க போனா அட்டை மிதக்குது ஆமை ரெண்டு சீறுது பத்து கிணற்று தண்ணீ பாங்கிணற்று நல்ல தண்ணீ பார்த்துக் குடிக்கப் போனா பாசை மிதக்குது பாம்பு ரெண்டு சீறுது   வட்டார வழக்கு: அஞ்சி-ஐந்து ; பாசை-பாசி.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.         நடுவில் வர அஞ்சரனே   அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். கணவன் திடீரென்று இறந்து போனான். அவளுடன் சேர்ந்த மற்றைய பெண்கள் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காண்கிறாள். அவரவர்கள் சொந்த வீட்டில் சுப காரியங்களை அவர்கள் முன்னின்று நடத்துகின்றன. அதே போல் அவளும் நாலு பேர் முன்னிலையில் வரமுடியுமா? நல்ல காரியங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியுமா? விதவை இவற்றிற்கெல்லாம் விலக்கப்பட்டவள் தானே ! தன்னை மல்லிகைப் பூவாகவும், ஆனால் தான் உபயோகமில்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிக் குறைப்பட்டு அழும் மனைவியின் ஒப்பாரி.   ஊமத்தம் பூ வெல்லாம் உள்ளிருந்து பேசுது ஒரு சேர் மல்லியப்பூ-நான் உள்ள வர அஞ்சரனே நார்த்தம் பூ வெல்லாம் நடுவிலிருந்து பேசுது-நான் நாலு சேர் மல்லியப்பூ நடுவில் வர அஞ்சரனே   வட்டார வழக்கு: அஞ்சரனே-அஞ்சுகிறேனே.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   நியாயம் கிடைக்கவில்லை   குழந்தையிருந்து விதவையானால் அவளுக்குப் புகுந்த வீட்டில் ஓரளவு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. சொத்துரிமையும் கிடைக்கும். குழந்தையில்லாத ‘மலடி’ என்னும் பட்டம் பெற்றவள் அவள். அத்துடன் கணவனும் இறந்து போனான். பிறந்த வீட்டுக்குச் செல்லலாமென்றால் அங்கும் இருக்க வழியில்லை. புகுந்த வீட்டுச் சொத்தில் தன் கணவனுக்கு உரிய பாகத்தைச் சாதாரணமாக வாயாலே கேட்கிறாள் கிடைக்கவில்லை.ஊர்ப் பொதுவில் நாட்டாண்மைக்காரர்கள் முன்னிலையில் தான் நியாயம் கேட்டாலும் தனக்கு நியாயம் கிடைப்பதாகத் தெரியவில்லையெனவும், காலம் வீணாகக் கழிகிறதே எனவும் கூறி வேதனைப்பட்டு அழுகிறாள். புளியாம் மரத்தின் கீழே பொன் குறிஞ்சி போட்டிருக்கும் பொன் குறிஞ்சி மேலிருந்து பொண்ணு நியாயம் பேசினாலே பொழுது வெளியாச்சு பொண்ணு நியாயம் தீரவில்லை மாமரத்தின் கீழே மண் குறிஞ்சி போட்டிருக்கும் மண் குறிஞ்சி மேலிருந்து மங்கை நியாயம் பேசினாங்க மாலை பொழுதாச்சி மங்கை நியாயம் தீரவில்லை   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சக்கிலிப்பட்டி,தருமபுரி மாவட்டம்.   நொந்தவள்   சில மிருகங்கள் மனிதர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும். தன்னுடன் மிகவும் அன்புடன் பழகும் மனிதர்கள் இல்லையென்றால் சில மிருகங்கள் உணவுகூட உண்ணாது. ஒரு பெண் விதவையாகிவிட்டாள். கணவன் பிரிவினால் அவள் மிகவும் மனம் நொந்துபோய் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்வார் இல்லை. தான் வளர்க்கும் காராம் பசு, அதன் கன்று, எருமை முதலியன கூட தன்னைக் கண்டு இரங்கும். தன் நிலைமை கண்டு வேதனைபட்டுத் தாங்கள் உணவு கொள்ள மனமின்றி இருக்கும். ஆனால் தன்னோடு பழகிய மனிதர்களில் ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யாருமில்லையே ! இது என்ன கொடுமை என்று கண்ணீர் விட்டழுகிறாள்.   காராம் பசுவு கிட்ட கன்னி குறை சொல்லியழுதால் காராம் பசு கூட கடிச்ச புல்லைக் கீழே போடும். ஈணாத எருமைக் கிட்ட எங்குறையை சொல்லியழுதா ஈணாத எருமை கூட எடுத்த புல்லைக் கீழே போடும். பால் குடிக்கும் கண்ணு கிட்ட பாவி குறை சொல்லியழுதா பால் குடிக்கும் கண்ணு கூட பாவி குறை கேட்டழுகும்,   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   நெஞ்சுக்குள்ள ஆத்தரனே   தன் துன்பத்தைத் தான்தான் அனுபவிக்க வேண்டும் என்று அவள் எண்ணி தன் மனத்திற்குள்ளேயே அழுது கொள்ளுகிறாள். அவள் துன்பத்தை அவள் அனுபவித்து வழக்கமாவிட்டது. மற்றவர் கேட்டு அவர்களும் மனதிற்கு வருத்தப்பட வேண்டாம். அவள் வருத்தம் தான் என்ன? குழந்தைச் செல்வத்தை அடையாதவள் என்ற ஓர் எண்ணமே போதுமே ! அத்தோடு இனி குழந்தைப் பேறு அடையாளம் என்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் கணவனையும் இழந்தவளாகவும் ஆகி விடுகிறாள். துக்கத்திற்குக் கேட்க வேண்டுமா?   நெருஞ்சிப் பூ பூக்கும் நெஞ்சுக்குள்ளே காய் காய்க்கும்-என் நெஞ்சை விட்டு சொன்னாலே-உங்க நெறங்கொலைஞ்சி போகு மின்னு-என் நெஞ்சுக்குள்ளே ஆத்தரனே மாதளங்கா பூ பூக்கும் மனசுக்குள்ளே காய் காய்க்கும்-என் மனசை விட்டு சொன்னாலே-உங்க மனங்கலைஞ்சி போகு மின்னு-என் மனசிக்குள்ளே ஆத்தரனே   வட்டார வழக்கு: ஆத்தரனே-ஆற்றுகிறேனே.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சக்கிலிப்பட்டி,தருமபுரி மாவட்டம்.   இரும்புலக்கை தூக்கலாச்சே   கணவன் உயிரோடிருந்தான். அவனுக்குப் பொங்கிப் போட்டு நிம்மதியாக வீட்டில் நிழலில் சுகமாக இருந்தாள். என்னாலுமே காலம் ஒன்றுபோல் செல்லதல்லவா? அவளுடைய அந்த நிம்மதியான வாழ்க்கைகும் தடங்கல் ஏற்பட்டது. உழைத்து சம்பாதித்துப் போட்ட கணவன் இறந்தான். குழந்தை குட்டியுமில்லை. பிறந்த வீட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே சென்று இருக்கவும் வழியில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது? அவள் கூலி வேலை செய்யக்கிளம்பினாள். கூலியின் விஷயம் நமக்கு தெரியாதா? ஈ விழுந்த கூழுக்காக இரும்புலக்கை தூக்கி எள்ளுக் குத்துகிறாள். சத்தில்லாத உளுத்தங் கூழுக்காக பாரமான உலக்கை தூக்கி பருப்பு இடிக்க வேண்டி இருக்கிறது. இப்படியும் தான் உயிர் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டதே என்று நினைத்துப் புலன்புகிறாள்.   எட்டு மலைக்கந்தாண்ட ஈஸ்வரன் கோயிலாண்ட எள்ளு ஒணத்திருக்கும் இரும்புலக்கை சாத்திருக்கும் ஈ விழுந்த கூழுக்காக-நான் இரும்புலக்கை தூக்கலாச்சு பத்து மலைக்கந்தாண்ட பரமசிவன் கோயிலாண்ட பருப்பு ஒணத்திருக்கும் பார உலக்கை சாத்திருக்கும் பாசை விழுந்த கூழுக்காக-நான் பார உலக்கை தூக்கலாச்சே   வட்டார வழக்கு: பாசை-பாசி.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   குயிலு போயி எங்கடையும்   அவளுக்கு அவள் கணவன் நந்தவனம். அந்த நந்தவனத்தில் குடியிருக்கும் குயிலும், மயிலும் போன்றவள் அவள். நந்தவனத்திற்கு சேதம் வந்து விட்டது ; நந்தவனம் பட்டுப் போய் விட்டது. அவள் நந்தவனம் போன்ற கணவனை இழந்தபின்பு எங்கே போவாள்? அவள் கதி என்ன? என்று எண்ணி வேதனை யடைகிறாள்.   குட்ட புளிய மரம் குயிலடையும் நந்தவனம் குட்டை மரம் பட்டுப் போச்சு குயிலு போய் எங்கடையும் மட்ட புளிய மரம் மயிலடையும் நந்தவனம் மட்ட மரம் பட்டுப் போச்சு மயிலு போயி எங்கடையும்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:கொங்கவேம்பு,தருமபுரி மாவட்டம்.   தாங்க முடியலியே   புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு ஆளாகிறாள் அவள். மற்றவர்களின் கொடுமைகளுக்கு மத்தியில் அவள் இருப்பது ஈச்ச முள்ளும் தாழைமுள்ளும் குத்துவது போன்ற ஓயாத தொல்லையைத் தருகிறது.   ஈச்ச முள்ளு பள்ளத்திலே இருந்தே சில காலம் ஈச்ச முள்ளு குத்தரது இருக்க முடியலையே தாள முள்ளு பள்ளத்திலே தங்கியிருந்தேன் சில காலம் தாள முள்ளு குத்துது, தாங்க முடியலியே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.   மூடு பனி ஆத்துவேனோ   அவள் கணவன் இறந்து போனான். அவன் இருந்த வரை அவள் சந்தோஷமாக அவனோடு வாழ்க்கை நடத்தினாள். அத்தகைய வாழ்க்கையைத் தந்த அவள் கணவன் முத்து மலை, பவள மலை என்று கற்பனை செய்து பின் அந்த முத்து மலை, பவள மலைகளை கஷ்டம் என்னும் மூடுபனி மறைத்ததைப் போன்று அவள் கணவனும் மரணம் என்னும் மூடு பனியால் மறைக்கப்பட்டு விட்டான், மூடுபனி ஒரு காலம் விலகிவிடும். ஆனால் இறந்த கணவனை அவள் திரும்பக் காண்பாளா காணத்தான் முடியுமா?   முத்து மலை மேலே மூடு பனி பேயுதுங்க முத்தப்பெருக்கு வேனோ-நான் மூடு பனி ஆத்து வேனோ? பவள மலை மேலே பாடு பனி பேயுதுங்க பவளத்தைப் பெருக்குவேனோ-நான் பாடு பனி ஆத்துவேனோ?   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   பூமாலை   அவளுக்குத் திருமணம் நடந்து விட்டது. ஆனால் அவள் விபரம் தெரிந்த பெண்ணாகிய பொழுதல்ல, ஐந்து வயதில்; திருமணத்தையும் ஒரு விளையாட்டு என்று கருதும் பருவத்தில் நடந்து விட்டது. நல்ல கணவனாக இருந்தானென்றால் கவலை இல்லை. ஆனால் அவனோ அவளை மோசம் செய்து விட்டுப் போய் விட்டான். தன்னை ஏன் அவ்வளவு இளவயதிலேயே திருமணம் என்ற பந்தத்தில் சிக்க வைத்து பின் அவனையும் இழந்து துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? தந்தையே மகளுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா? கொளத்தருகே வாள் நட்டு கொலவாள தூலெடுத்து கொஞ்சத்திலே கோத்த மாலை குணமில்லா பூ மாலை ஆத்தருகே வாள நட்டு அடிவாள நூலெடுத்து அஞ்சிலே கோத்த மாலே அழகில்லா பூ மாலை   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   கை சோர்ந்து நிக்கறனே   அவளும் ஒரு காலத்தில் ஒரு குறையுமில்லாமல் கணவனுடன் வாழ்க்கை நடத்தினாள். செல்வச் செழிப்புடன் விளங்கியது அவள் குடும்பம். ஆனால் போகிற காலத்தில் பூட்டி வைத்தாலும் போய் விடும் தன்மையுள்ளதல்லவா செல்வம்? “இன்று ஒருவனிடம் நாளை ஒருவனிடம் என்று இருக்கும் செல்வந்தான் என்னை விட்டுப் போய் விட்டது என்றிருந்தேன். ஆனால் நிலையானது என்று நான் எண்ணிய என் கணவனும் என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டுமா? நான் முன்னம் இருந்த நிலையை எண்ணி ஏங்க வேண்டுமா? ” என்று முகம் சோர்ந்து மனம் சோர்ந்து அழுகிறாள்.   கல்லு துரிஞ்சி மரம் கல்கண்டு காய்க்கும் மரம் கல்கண்டு தின்னப்பொண்ணு-நான் கைசோர்ந்து நிக்கறனே முள்ளு துரிஞ்சி மரம் முட்டாயி காய்க்கும் மரம் முட்டாயி தின்னப்பொண்ணு-நான் முகஞ்சோந்து நிக்கிறனே   வட்டார வழக்கு: சோந்து-சோர்ந்து சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம். நிறுத்துனாங்க கங்கையிலே   தனிமை மிகவும் கொடியது. இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்த தம்பதிகளில் ஒருவர் பிரிந்து விட்டால், தனிமையில் இருப்பவர் நிலை பரிதாபத்துக்குரியது. ஆண் மகனென்றால் மறுமணம் செய்து ஓரளவு தன் துன்பத்தை மாற்றிக் கொண்டு புது வாழ்வு தொடங்குவான். பொண்ணால் அப்படி வாழ முடியுமா? கணவனுடன் அவள் முழுமை பெறுகிறாள். அவன் இறந்த பின்பு உயிர் வாழும் நடைப்பிணமா கத்தான் இருக்க முடியும். உயிர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்குமே தவிர வாழ்க்கை சுவையில்லை. தனிமை என்ற கொடுமையில் அவள் கஷ்டப்படுவதை மற்றவர்கள் உணருகிறார்களா?   நீளக் கெணறு வெட்டி நெலக் கெணறு செட்டெறக்கி நீள மிண்ணு பாக்காம-என்னை நிறுத்தனங்கெ கெங்கையிலே ஆளக் கெணறு வெட்டி ஆடிக் கெணறு செட்டெறக்கி ஆழமிண்ணு பாக்காம-என்னை அமுத்தினாங்க கங்கையிலே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   பிறந்த வீடு   தெளிந்த தண்ணீரைக் குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அத்தகைய தண்ணீரில் ஒரு ஓணான் செத்து மிதந்தால் குடிக்க மனம் வருமா? அதை ஒதுக்கிவிட வேண்டியதுதானே. கணவனில்லா புக்ககமும் அதே போன்றதுதான். கணவனின் மறைவினால் வண்டல் கலங்கிய தண்ணீரெனக் காட்சியளிக்கிறது புருஷன் வீடு. பிறந்த வீடு செல்லத் தீர்மானித்து விட்டாள்.   தெற்கு மழை பேயும் தென் பெண்ணைத் தண்ணி வரும் தென் பெண்ணைத் தண்ணியிலே தெண்டல் படிஞ்சிருக்கு தெண்டல் ஒதுக்கிடுங்க-நான் பொறந்த தென் மதுரை பார்க்கப் போரேன் வடக்க மழை பேயும் வாணியாத்து தண்ணி வரும் வாணியாத்து தண்ணியிலே வண்டல் படிஞ்சிருக்கு வண்டலை ஒதுக்கிடுங்க-நான் பொறந்து வளர்ந்த மனை பார்க்கப் போறேன்   வட்டார வழக்கு: தெண்டல்-ஓணான் ; வண்டல்-களி மண், இலை மக்கு.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   அணைந்த விளக்கு   கணவனை இழந்த கைம்பெண் புலம்பியழும் ஒப்பாரி பாடல் இது.   காதத்திலே நெய் விளக்கு காணாத செல விளக்கு காத்துப் பட்டு அமியிலியே கண்ணு பட்டு அமிஞ்சிச்சே சீமையிலே நெய் வௌக்கு சிந்தாத நெல விளக்கு தூத்தலுக்கு அமியிலியே துயரத்துக்கு அமிஞ்சிச்சே தாழ மரத்தாண்ட-ஒரு தயிரு கொடம் எடுத்தேன்-நான் தாள மரம் சாயலியே-என் தயிரு கொடம் சாஞ்சிருச்சே பால மரத்தாண்ட பாலு கொடம் எடுத்தேன் நான் பால் மரம் சாயலியே-என் பாலு கொடம் சாஞ்சிருச்சே   வட்டார வழக்கு: அமிஞ்சிச்சே-அணைந்துவிட்டதே ; அமியிலியே-அணையலையே ; சாஞ்சிருச்சே-சாய்ந்து விட்டதே ; கொடம்-குடம்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   எமனாட்ட விட்டேனே   நெடு நாட்கள் குழந்தையில்லாததால் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியும், பலவித நோன்புகள் அனுசரித்தும், விரதங்களைக் கைக்கொண்டும் பிறந்த குழந்தை அது. தாய் தன் உயிர் போன்ற அந்தக் குழந்தையைக் காற்றுகூட சற்று அதிகமாக அதன் மீது வீசாதபடி, இருட்டுகிற நேரத்தில் வெளியே கொண்டு போனால் பட்சி தோஷம் வரும் என்று வெளியே கொண்டு போகாமல், இருட்டில் போட்டால் இருள் அடித்துவிடக் கூடாது என்றெல்லாம் பராமரித்து வளர்த்த தன் மகன் இறந்து போனவுடன் கதறி அழுகிறாள். “என்னுடைய அடி வயிறையே அவன் பத்து மாதம் குடியிருக்கும் தொட்டிலாக்கிக் கொடுத்தேனே ; அவன் என்னுடைய குழந்தை எனக்கே சொந்தம் என்று எண்ணியிருந்த என் குழந்தையை எமன் எடுத்துக் கொண்டு போய்த் தொட்டிலாட்டும்படி விட்டு விட்டேனே” என்று மனம் வெதும்பி பெற்ற வயிறு பற்றியெரிய அழும் தாயின் பரிதாபமான கதறல்.   வரமா வரங்கெடந்து வாசு தேவன் வரம் வாங்கி பந்தலிலே போட்டாலே பாவ தோஷம் அடிக்கிமிண்ணு குழியிலே போட்டாலே குழி தோஷம் அடிக்கிமிண்ணு அங்கத்தை இறுக்கிக் கட்டி அடி வயிறு தொட்டி லிட்டு நானாட்டும் தொட்டிலிலே எமனாட்ட விட்டேனே   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   விருந்திட்டவள் விதவையானாள்   கணவனை மகிழ்விக்கும் பணிவிடைகளிலும், கடமைகளிலும் ஒன்றாகும், அவனுக்குப் பிடிக்கும் கறி வகைகளை அறிந்து பின் சமையல் செய்து பக்கத்தில் இருந்து பரிமாற கணவன்ருசித்து உண்டு திருப்தியாவதை மனைவி கண்டு களிப்பதாகும். மேற்கூறிய வகையைச் சேர்ந்த ஒரு மனைவி கணவனுக்குச் சமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டி நெல் வருவிப்பது முதல் அதை அரிசியாக்கிப் பின் சாதமாக்கி வைப்பதுடன் அதற்கேற்ற கறிவகைகளையும் வகை வகையாச் செய்து ஊறுகாய்கள் பல விதம் தயார்செய்து பின் கணவனைப் பல் விளக்குவதிலிருந்து வாய் கொப்பளிப்பது முதல் விசேஷ கவனிப்புச் செய்து சிறந்த வாழைகளிலிருந்து தலைவாழையிலை கொண்டு வரச் செய்து இலைமேல் நீர் தெளிப்பதற்கு பதிலாக இளநீரைத் தெளித்து சோற்றைக் கொஞ்சம் வைத்துச் சத்து நிறைந்த காய்கறி வகைகளை அதிகம் வைத்து தன் கணவன் பசியாறி உண்ட களைப்புத் தீர, திண்ணையிலே மெத்தையிலே அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்ட தன் கணவம் இறந்ததினால் வெறிச் சென்று கிடக்கும் மெத்தையையும் பார்வையில்லாமல் இருக்கும் திண்ணையயும் கண்டு பழைய நினைவுகள் வரப் பெற்று அழுது கொண்டே அவள் கணவனுக்குச் செய்த சேவைகளை வாய் விட்டுக் கூறி அரற்றுகிறாள்.   நெல்லாலே நெல் லெடுப்பேன் சிறு சம்பா நெல்லெடுப்பேன் அண்ணடுச்ச நெல்லுயிண்ணா அவிச லேறிப் போகுமிண்ணு நேத்தடிச்ச நெல்லுயிண்ணா நெஞ்சடச்சிப் போகு மிண்ணு தானா பழுத்த நெல்லே தருவிச்சேன் கப்பலிலே உரலுலே குத்துனா ஒண்ணு ரண்டா போகுமிண்ணு நெகத் தாலே அரிசி பண்ணி வெங்கலத்தில் தண்ணி யெடுத்தா வெங்காரம் அடிக்கு மிண்ணு புதுப்பானை தண்ணி யெடுத்தா பொகை யேறிப் போகுமிண்ணு ஆத்துத் தண்ணி கொண்டு வந்து ஆக்கினேன் சாதங்கறி நாகூரு குச் சொடிச்சி நல்ல வாயி பல் தொலக்கி தீத்தமலை தீத்தங் கொண்டு திரு வாயெ கொப்பளிச்சி பொன்னு கரண்டியிலே பொறிச்சேன் நூறு வகை தங்கக் கரண்டி தாளிச்சேன் நூறு வகை உண் ணொரு கரண்டியிலே ஊறுகா நூறு வகை வடக்க ரண்டு ஆளனுப்பி வாளயெலை கொண்டு வந்தேன் தெற்கே ரெண்டு ஆளனுப்பி தெய்யலையும் கொண்டு வந்தேன் எலமேல எலை பதிச்சு எளநீரை தாந் தெளிச்சு சோறு யிண்ணா கொஞ்சம் வைப்பேன் சுத்து கறி ரம்ப வப்பேன் சாத மிண்ணா கொஞ்ச வப்பேன் சமைச்ச கறி ரம்ப வைப்பேன் சாப்பிட்டுப் பசியாறி சன்னலிலே கை கழுவி சாந்திருக்கும் திண்ணையிலே-நீங்க சாந்திருந்த மெத்தை யெல்லாம் சலிப்படைஞ்சி கிடப்ப தென்ன   வட்டார வழக்கு: அவிச லேறி-தரம் குறைந்து ; வெங்காரம்-நெடி ; உண்ணொரு-இன்னொரு.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   சீரழிந்தேன்   அவள் சிறுவயது முதல் செல்வமாகவும் அருமை யுடனும் வளர்க்கப்பட்டவள். ஆனால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே ! தற்கால சமூக நியதியும் அவளது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. தனக்கு வாழைமரத்தையும் தென்னைமரத்தையும் உவமையாகக் கூறுகிறாள்.   வடக்கே நெலாக் காய-ஒரு வாழ மரம் பூச் சொரிய வாழ கருக் கழிஞ்சே(ன்)-நான் வா மயிலா சீரழிஞ்சேன் தெற்கே நிலாக்காய-ஒரு தென்னமரம் பூச்சொரிய தென்ன கருக்கழிஞ்சேன்-நான் தே மயிலா சீரழிஞ்சேன்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   மனுவை இழந்தவள் (கணவனை இழந்தவளின் ஒப்பாரி பாடல்)   மண்ணெக் கொளப்பி-ஒரு மணக் கரும்பு நாத்துமிட்டு மனு வெல்லாம் அந்தப் புரம் மணிக்கரும்பு இந்தப் புரம் சேத்தை கலக்கி-ஒரு செங்கரும்பை நாத்து மிட்டு சேனை யெல்லாம் அந்தப் புரம் செங்கரும்பு இந்தப் புரம்   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   தேவேந்திரன் தங்கை   அவளுக்குத் தேன் மேல் ஆசை உண்டாகிறது. உடனே தன் அண்ணனுக்குச் செய்தி அனுப்புகிறாள். அண்ணன் தங்கையிடம் மிகவும் அருமையாக நடந்து கொள்பவன் உடனே அவள் கேட்டதை அனுப்பி வைக்கிறான். அதுபோல அவள் கேட்கும் ஒவ்வொரு பொருளையும் உடனே அனுப்பி வைக்கிறான். அத்தகைய சாமான்களைப் பற்றிப் பிறர் அவளிடம் விசாரிக்கும் பொழுது தன் அண்ணன் அனுப்பியது என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதோடல்லாமல் அண்ணனையும் தேவேந்திரன், கர்ணன் என்று வருணித்துச் சிறப்பிக்கிறாள். அந்த அண்ணனை அவள் பிரிந்து விட்டாள். “நான் கேட்டவற்றை உடனே அனுப்பிய அண்ணன் பிரிந்து விட்டாரே ! இனி நம்மை யார் கவனிப்பார்கள்? யார்தான் கேட்டவற்றை அன்போடு அனுப்பி வைப்பார்கள்?” என்றெண்ணி துக்கம் மேலிட புலம்புகிறாள்.   தேனு மேல ஆசை வச்சி சீட்டேழுதி நான் போட்டா சீட் டெ படிச்சி பாத்து தே னெ வெட்டி கீளெறக்கி திருப்பதிக்குப் பாரஞ் செஞ்சி தெருவிலே அனுப்பி வைச்சா தெருவிலே கண்ட ஜனம் தேனு வண்டி யாரு திண்ணா தேவேந்திரன் தங்கைக்கிண்ணார். காய் மேல ஆசை வச்சி கடுதாசி எழுதிப் போட்டா கடுதாசி படிச்சி பாத்து காயா வெட்டி கீளெறக்கி கப்பலில் பாரஞ் செஞ்சி கடலிலே ஓட்டிவிட்டா கப்பலிலே இருக்கு(ம்) ஜனம் காயிபாரம் யாரு திண்ணர்-இந்த கர்ண னொட தங்கைக் கிண்ணார்   வட்டார வழக்கு: காயிபாரம்-காய்(வண்டி)   குறிப்பு: கர்ணன், தேவேந்திரன் கொடைவள்ளல்களாவார். ஆதலால் அத்தகைய கொடை வள்ளல்களோடு தன் அண்ணனையும் ஒப்பிடுகிறாள்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   வேடுவர்க்குத் தங்கை   அவள் பிறந்த வீடு செல்லவேயில்லை. அவளைத் திருமணம் செய்து கொடுத்த அவளது பெற்றோர் மணம் செய்து கொடுத்த பின்னர் அவனைக் கூப்பிடவேயில்லை. பெற்றோர்களின் காலத்திற்குப்பின் உடன் பிறந்தானாவது அழைப்பான் என்று நினைத்தால் அவனும் பேசாமலிருந்து விட்டான். இந்நிலையில் வேளாளப் பெண்ணாகிய அவள் விதவையாகி விட்டாள். விதவையான பின்பு வெள்ளையுடுத்தி பிறந்த ஊருக்கு வருகிறாள். வீதியிலே அவளை இனத்தார் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனெனிறால் அவள் ஊருக்கு வந்து போய் இருக்கவில்லையல்லவா? ஒருத்தி அவளைப் பார்த்து “காராளச்சியாகிய நீ யார்?” என்று அறிந்துகொள்ளும் ஆவலோடு கேட்கிறாள். இதைக் கேட்ட அவள் தான் இந்நிலையில் ஊருக்கு வந்திருக்கிறோமே ! தன் சகோதரன் தன்னைப் பிறர் இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில் வைத்து விட்டானே ! என்ற எரிச்சலில் “நான் யாருக்கும் உறவினளல்ல. காட்டில் வாழும் வேடுவர்களின் தங்கை” என வருந்திக் கூறகிறாள்.   கருப்பருகு சேலை கட்டி-நாம் பொறந்த காஞ்சிக்குப் போனாலே காஞ்சி பொரம் பெண்களெல்லாம்-அங்கவரும் காராளச்சி யாருயிண்ணர் காராளச்சியில்லையம்மா-நான் கர்ணனொட தங்கையிண்ண வெள்ளருகு சேலைக்கட்டி-நான் பொறந்த வீராணம் போனாலே வீராணத்துப் பெண்களெல்லாம் அங்கவரும் வெள்ளாளச்சி யாருயிண்ணர் வெள்ளாளச்சி யில்லையம்மா-நான் வேடுவர்க்குத் தங்கை யிண்ணேன்   குறிப்பு: காராளச்சி-வெள்ளாளப் பிள்ளைகளில் கார்காத்தார் என்பது ஒரு பிரிவு.   வட்டார வழக்கு: காஞ்சிபொரம்-காஞ்சீபுரம்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   கொடுமை செய்யும் அண்ணி   அவள் புகுந்த வீடு செழுமையுள்ளது. அவள் பட்டுடுத்தி நகைகளை யணிந்து கணவன் உயிரோடிருக்கும் காலத்தில் பிறந்த வீடு போனால், அவளுடைய அண்ணி அவளைப் பார்த்துப் பொறாமைப் படுவாள். அவள் கணவனை பிரிந்த பின்பு அண்ணனிடம் தங்குவதற்குப் போகிறாள். வாழும் காலத்திலேயே அவளைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்ட அண்ணி அவள் வெள்ளையுடுத்தும் விதவையான பின்பு சும்மாயிருப் பாளா? உயிர் போன்ற கணவனே போய்விட்ட பிறகு அவளுக்கு அற்ப நகைகள் எதற்கு? பட்டுதான் எதற்கு? கண்ணீர் உகுத்தவாறு அவைகளையும் அண்ணனிடம் கொடுத்து விடுகிறாள்.   பட்டை உடுத்தி கிட்டு பவுனு காசைப் பூட்டிகிட்டு-நான் பொறந்த பட்டணத்தெ போனாலே பட்டணத்தில் பேஞ்ச மழை-என் பட்டை நனைச்சிடுச்சி பவுனு காசு உருகிடுச்சி பெரியண்ணன் பொண்டாட்டி-என் பட்டை கழட்டு மிண்ணாள் பவுனு காசை உருவுமிண்ணாள் பட்டையும் கழட்டி விட்டேன் பவுனு காசை உருவி விட்டேன் அண்ணனாண்ட சிந்திட்ட கண்ணீரை செண்ணுட்டேன் மாளிகைக்கு   வட்டார வழக்கு: அண்ணனாண்ட-அண்ணனிடம்; சிந்திட்ட-சிந்தி விட்டேன் ; செண்ணுட்டேன்-சென்று விட்டேன்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   தங்கியிருந்தாலாகாதோ?   அவளைப் பல நூறு மைல்களுக்கப்பால் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறது. தாய் உடல் நலமில்லாத செய்தியை அறிந்து உடனே ஓடோடி வருகிறாள் பார்ப்பதற்கு. அவள் வரும் வரை தாயின் உடலில் உயிர் தங்கியிருக்கவில்லை. அம்மாவை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்த அவளுக்குத் தன் தாயை உயிரோடு பார்க்க முடியாததால் ‘உன்னுடைய அருமை மகளாகிய, என்னைப் பார்க்க ஆசையில்லையா? நான் வரும் வரை பொறுத்திருக்க முடியவில்லையா? ஏன் என்னை விட்டுப் பிரிந்து விட்டாய்?’ எனத் தாயின் அருகிலுட்கார்ந்து கதறுகிறாள்.   பொன்னுக் கம்பி வில் வளச்சி பொழுது மேலே கப்பலோட்டி-நீ பெத்த பொண்ணாளும் வாராளிண்ணும் பொறுத்திருந்தாலாகாதா? தங்கக் கம்பி வில் வளச்சி தண்ணி மேலே கப்பலோட்டி-நீ பெத்த தங்காளும் வாராளிண்ணும் தங்கியிருநி் தாலாகாதா?   வட்டார வழக்கு: வாராளிண்ணும்-வருகிறாள் என்றும்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   பூசை முடிஞ்சு போச்சோ   கணவன் இறந்து விட்டான். மனைவி அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லி அழுகிறாள். அவன் காலையில் குளித்து மிக ஆசாரமாக பலகையில் அமர்ந்து பூசை செய்வான். விரதங்கள் அனுஷ்டிப்பான்.   அவற்றை நினைத்துப் பொருமியவளாய்த் துக்கம் தாளாமல் ‘பூசை முடிந்துவிட்டதென்று பொன்னு ரதம் ஏறி விட்டீர்களோ? தவசு முடிந்து விட்டதென்று தங்க ரதம் ஏறி விட்டீர்களோ?’ என்று கூறிப் புலம்புகிறாள்.   பொன்னு விசுப்பலகை பூசப் பொன்னா ஆசாரம்-உங்களோட பூசை முடிஞ்சு போச்சோ பொன்னு ரதம் ஏறினீங்க தங்க விசுப்பலகை தவசு பண்ணும் ஆசாரம்-உங்களோட தவசு முடிஞ்சிடுச்சோ? தங்க ரதம் ஏறினீங்க   குறிப்பு: பொன் ரதம், தங்க ரதம்-இறந்து போனவர்கள் அதில் ஏறிச் செல்வதாகக் கற்பனை.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   அண்ணி கொடுமை   பிறந்த வீட்டில் செல்லப் பெண் அவள். ஆனால் புருஷன் வீடு போக வேண்டியவள்தானே எந்த செல்லப் பெண்ணும். பின்பு அண்ணன் மனைவிதானே வீட்டுக்கு உரிமையுடையவள். அதோடு அண்ணியாக வருபவள் குணங்கெட்ட கொடுமைக்காரியாகவும் இருந்துவிட்டால் பின் பிறந்தகத்தைப் பற்றிய ஆசை நினைவுகளைக்கூட விட்டுவிட வேண்டியதுதானே ! அவளது தந்தை இருந்த மட்டும் அபூர்வமாகப் போய் வருவாள். தந்தை இறந்த பின்பு எப்படிப் போக முடியும் அண்ணி ஆட்சி செலுத்தும் தன் பிறந்த வீட்டுக்கு? இதைக் கூறி அழுகிறாள் அவள்.   மூணுதலை வாசல் முப்பத் தெட்டு ஆசாரம் ஆசாரத்து உள்ளாக அல்லி பொறந்திருக்க அடிக்கத் துணிஞ்சாங்க ஆள் போட்டுத் தள்ளுனாங்க நாலு தலெ வாசல் நாப்பத் தெட்டு ஆசாரம் ஆசரத்து உள்ளாக அல்லி பொறந்திருக்க குத்தத் துணிங்சாங்க கோல் போட்டுத் தள்ளுனாங்க   வட்டார வழக்கு: பொறந்திருக்க-பிறந்திருக்க.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   காய்க்காத மரம்   அவள் தன் பிறந்த வீட்டுக்குப் போகாமலேயே இருந்து விட்டாள். சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் அப்படி ஒரு போக முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவள் திடீரென்று பிறந்த வீட்டிற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.காரணம் அவள் தந்தை உயிர் நீத்ததாக வந்த செய்தியே.   ‘நான் சலித்து ஒருநாள்கூட என் பிறந்த வீட்டில் போய் நிம்மதியாக இருந்து வரவில்லையே. அப்படி நான் பிறந்தவீடு வந்ததும் உங்கள் சாவுக்குத்தானா?’ என்று இறந்த தன் தந்தையை எண்ணி ஒப்பாரி பாடுகிறாள் :   ஏலக்காய் காய்க்கும் மரம் எளச்சி வந்தா தங்கும் மரம் ஏலக்காய் காய்க்கலியே எளச்சி வந்தும் தங்கலியே ஜாதிக்காய் காய்க்கும் மரம் சலிச்சு வந்தா தங்கும் மரம் ஜாதிக்காய் காய்க்கலியே சலிச்சி வந்தும் தங்கலியே   வட்டார வழக்கு : எளச்சி-இளைத்து ; சலிச்சி-சலித்து.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   கொண்டவனைக் கூட தோத்தேன்   அவள் வெளியூர் சென்று வர மிகயும் ஆசைப்படுகிறாள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவன் அவளை, மாயவரம், கும்பகோணம் முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான். ஆனால் சென்ற இடத்தில் பயங்கரக் காலராவினால் தனது தாலியை இழப்போம் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. தான் ஆசையுடன் வந்த இந்தப் பிரயாணம் இன்பப் பிரயாணமாக இல்லாது பெருந் துன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்ததை எண்ணி அழுகிறாள்.   மாயவரம் சங்துகு நதி மயிலாட்டம் பார்க்கப் போனேன் மாறா பதக்கம் தோத்தேன் மன்னவனே கூட தோத்தேன் கும்பகோணம் சங்கு நதி குயிலாட்டம் பார்க்கப் போனேன் கொத்து சரம் தோத்தேன் கொண்டவனைக் கூட தோத்தேன்   வட்டார வழக்கு: கொத்து சரம், மாறா பதக்கம்-தாலி.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   அண்ட முடியலியே   தனக்குப் பின்னால் தன் மகள் இங்கு வந்தால் வரவேற்பிாரது என்றும், அவமதிக்கப்படுவாள் என்றும் தந்தைக்குத் தெரியும். அதனால் தான் உயிரோடிருக்கும் போதும் தான் வீட்டிலிருக்கும் சமயம் வரச் செரல்லுவார் தன் மகளை. மகள் வருகிறாள் பிறந்த வீட்டில் வரவேற்று அன்புடன் ஆதரித்து “நான் இல்லாத சமயம் வராதே” என்று முன் கூட்டியே அறிவித்தாரே! அவர் நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டாரே என்பதை எண்ணி அழுகிறாள். அவர் இருந்த தன் பிறந்த வீட்டை, தருமரோட மண்டபம் என்றும், ஆயிரங்கால் மண்டபம் என்றும், தந்தையைத் தருமர், அர்ச்சுனர், புண்ணியர் என்று புகழ்ந்து கூறுகிறாள்.   தங்கக் கட்டு தாம்பாளம் தருமரோட மண்டபம்-நீங்க தருமரும் போயி சேர-நீ பெத்த தனியாருக்குத் தாங்க முடியல்லையே பொன்னு கட்டு தாம்பாளம் புண்ணியரோட மண்டபம்-என்ன பெத்த புண்ணியரே நீ போக-எனக்கு பொறுக்க முடியலியே என்னை அண்டாத யிண்ணீங்களே ஆயிரங்கால் மண்டபத்தே-என்ன பெத்த அர்ஜூனனும் நீ போக அண்ட முடியலியே   வட்டார வழக்கு:அண்டாத-அண்டாதே, நெருங்காதே;இண்ணீங்களே-என்றீர்களே.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   எமலோகம் போனதென்ன?   தன் பெண்ணை மிகவும் அன்புடன் பேணி வளர்த்தார் தந்தை. தன்னுடன் வெளியில் அழைத்துச் செல்வார்.அவள் முகம் வாடுவதற்குச் சம்மதிக்கமாட்டார். காற்று சற்று பலமாக அடித்தால்கூட அதனால் மகளுக்கு உடல் நலம் குறைந்து விடக் கூடாதென்று காற்றடிக்காமல் தான் மகளை மறைத்து நின்று கொள்வார். அவ்வளவு அன்பான தந்தை இறந்தவுடன் மகள் உணர்ச்சி மேலிட்டுத் தன்னை அவர் அன்போடு பாதுகாத்து வளர்த்ததை வாய்விட்டுச் சொல்லி பொருமி அழுகிறாள்.   பத்தடிக் கொட்டாயி பவளக்கால் மேல் தூலம் பசுங் காத்தடிக்கி திண்ணும் என்ன பெத்த எப்பா பக்கமாக நிறுத்தனையே பத்தடுக்கு மெத்தை மேலே படிக்கிறதா எண்ணியிருந்தேன்-நீங்க படிக்க முடியாம பரலோகம் போன தென்ன எட்டடுக்கு மெத்தை யிலே எழுதறா எண்ணியிருந்தேன் எழுத முடியாம-நீங்க எமலோகம் போன தென்ன   வட்டார வழக்கு:கொட்டாயி-கொட்டகை   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.   இரவலாச்சு   அவளுக்கு மணமானது, மிக்க மகிழ்ச்சியுடன் கணவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள். இனி புருஷன் வீடு தான் சொந்தம். பிறந்த வீடு சொந்தமில்லை என எண்ணி இறுமாந்திருந்தாள். ஆனால் புருஷன் காலமானவுடன் புருஷன் வீடும் இரவலாகப் போனதை எண்ணி எண்ணி புலம்புகிறாள்.   புருஷன் போனவுடன் அவருடைய சொந்தமும் போய்விட்டது.   தங்க செவரு வச்சி தட்டோடு போத்தனிங்கோ தட்டோடு சொந்த மில்லே-எனக்கு தாவு எரவலாச்சு பொன்னு செவரு வச்சி புது ஓடு போத்தனிங்கோ புது ஓடு சொந்தமில்லே-எனக்கு பூமி எரவலாச்சு   வட்டார வழக்கு:போத்தனிங்கோ-போற்றினீர்கள்;தாவு(தெலுங்கு வார்த்தை)-இடம்.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   மாலை பொருத்தமில்லை   தன் மகளை தன் தம்பிக்கு மணம் செய்து வைப்பதனால் தனது பிறந்த வீட்டுச் சொந்தம் தன்னுடைய பரம்பரைக்கும் உறவு நெருக்கமாகி, சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்கும் தான் உடன் பிறந்தவளாதலால், தன் தம்பி நன்றாக கவனித்துக் கொள்வான் என்றெண்ணி மணம் செய்து வைக்கிறாள் தாய். ஆனால் தான் எண்ணியதற்கு மாறாகத் தன்னுடைய மகள் சந்தோஷப்படாமல் துன்பமான வாழ்க்கை நடத்துகிறாள் என்பதை அறிவதற்கு முன் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டாள். மகள் தாய் இறந்த துக்கத்துடன் தன் துக்கத்தையும் கூறி அழுகிறாள். தனது தாய் மாமன் வீடு தனக்கு ஆடுமாடு போன்ற மிருகங்கள் அடைக்கும் பட்டியாகத் தோன்றுகிறதேயன்றி மனிதர்கள் வாழக்கூடிய இடமாகத் தோன்றவில்லை என்பதையும் குறிப்பிடுகிறாள்.   மாதா பொறந்த இடம் மல்லியப்பூ கச்சேரி மாலைப் பொருத்தமில்லை-எனக்கு மாமன் வீடு சொந்தமில்லே தாயார் பொறந்த இடம் தாளம்பூ கச்சேரி தாலி பொருத்தமில்லே-எனக்கு தாய் மாமன் சொந்தமில்லே மாட டைக்கும் பட்டியிலே-நீ பெத்த மங்கை யாளப் போட்டடைச்சு மாடு படும் தும்பமெல்லாம்-இந்த மங்கை பட்டு நிக்கிறனே ஆடடைக்கும் பட்டியிலே-நீ பெத்த அல்லியாளைப் போட்டடைச்சி ஆடு படும் தும்ப மெல்லாம்-இந்த அல்லி பட்டு நிக்கறனே.   வட்டார வழக்கு : தும்பம்-துன்பம் ; நிக்கிறனே-நிற்கிறேனே.   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.   விதவையின் தவிப்பு   அவள் கணவன் இறந்துவிட்டான். கணவன் பிரிந்து விட்டான் என்றால் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள் அன்றாட வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளின் காட்சி மனக்கண்ணில் தோன்றுகிறது.   மனத்தில் அவ்வெண்ணங்கள் தோன்றியவுடன் வாயில் அவை வார்த்தைகளாக வெளி வந்து புலம்பி அழுகிறாள். கணவன் வேலையினிமித்தமாக வெளியில் சென்று திரும்பிய பின் தான் செய்யும் பணிவிடைகள் ஒவ்வொன்றையும் கூறி அழுகிறாள்.   நானூறு வண்டியிலே நடுவே வரும் சாமானாம் சாய் மானப் பெட்டியிலே-என் சாமி வரப் பாக்கலியா சின்ன நடை நடப்பார் தெருக் கதவை ஒந்திரிப்பேன்-நான் தாளிப்பேன் நூறு வகை பொன்னு கரண்டியிலே பொரிப்பேன் நூறு வகை வெள்ளிக்கா கரண்டியிலே வித விதமாக் கொத்தமல்லி சாதத்திலே கொஞ்சம் வைப்பேன் சமைச்ச கறி ரொம்ப வைப்பேன் ஜலம் வாங்கிக் கையலம்பி சாப்பிட்டுத் திண்ணையிலே மெத்தை தலை காணியிலே-இனி கூடிப் படுப்பதெப்போ?   சேகரித்தவர் :கவிஞர் சடையப்பன் இடம்:அரூர்,தருமபுரி மாவட்டம்.