[] தமிழர் தேசம் ஜோதிஜி. திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை தமிழர் தேசம் Copyright © 2014 This book was produced using PressBooks.com. 1 சமர்ப்பணம் []   []   []   “என் எழுத்துப் பயணத்தில் உதவியாய் இருக்கும் மனைவிக்கும், தாங்கள் பயன்படுத்தும் நேரத்தில் எனக்கு கணினியை தந்துதவிய எங்கள் குடும்பத்து மூன்று தேவியர்களுக்கும் இந்த மின் நூலை பிரியங்களோடு சமர்ப்பிக்கின்றேன்” [] Contents - சமர்ப்பணம் - தமிழர் தேசம் - உரிமை - முதல் மின் நூல் - இரண்டாவது மின் நூல் - நானும் எங்க ஊரும் - பகுதி ஒன்று - 1. அது ஒரு கனா காலம் - 2. அச்சம் தவிர் - 3. உண்மைத்தமிழன் - 4. வெயிலான் - 5. ஈர வெங்காயம் - 6. துளசிதளம் - 7. எழிலாய் பழமைபேசி - 8. நிலமெல்லாம் ரத்தம் - 9. நிகழ்காலத்தில் - 10. ஓரு ஊரிலே (யாதும் ஊரே யாவரும் கேளீர்) - 11. தமிழர்கள் - பழமையானவர்களா? - பகுதி இரண்டு - 12. வறப்பட்டிக்காடு - 13. சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை - 14. முஸ்லீம்கள் - நதிமூலம் - 15. வந்துட்டான் சீமத்துரை - 16. திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம் அதிகம் - 17. சதி சாதி தீ - 18. நாங்க இராமநாதபுரத்துகாரயங்க - 19. கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள் - 20. தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம் - 21. களம் இறங்கினால் கணக்குகள் மாற்றப்படும் - 22. கோவில்கள் - முரண்பாடுகளின் தொடக்கம் - 23. பணம் வந்தால் பல்லாக்குத் தேவைப்படும் - 24. கல்வி -- பலமான ஆயுதம் - 25. மரமேறி தாண்டி வந்த நாடார்கள் - 26. உழைப்புடன் கொஞ்சமல்ல நிறைய ஒற்றுமை - 27. வலையைக் கழட்டிவிட வாங்க? - 28. கலவர பூமியில் மலர்ந்தவர்கள் - 29. ஆசிரியர் குறிப்பு - 30. டாலர் நகரம் - Free Tamil EBooks எங்களைப் பற்றி 2 தமிழர் தேசம் [] தமிழர் தேசம் ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வகை – வரலாறு வெளியீடு: த.ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com மின்னூலாக்கம் – த.ஸ்ரீனிவாசன்   எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License 3 உரிமை This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.in/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page. Free Tamil EBooks எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/ 4 முதல் மின் நூல் [] வாசிக்க http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/ 5 இரண்டாவது மின் நூல் []   வாசிக்க http://freetamilebooks.com/ebooks/white-slaves/ 6 நானும் எங்க ஊரும் நான் பிறந்த ஊர் புதுவயல் என்றொரு கிராமம். தமிழ்நாட்டில் காரைக்குடி தாலூகாவில் உள்ளது. தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. பிறகு பசும்பொன் தேவர் திருமகனார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று கூட மாறியது. அதுவே இன்று சிவகங்கை மாவட்டமாக மாறியுள்ளது. நான் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் படித்து முடியும் வரையிலும் முதல் இருபது ஆண்டுகள் அங்கு தான் வாழ்ந்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன். நான் 1992ல் திருப்பூருக்குள் நுழையும் போது இந்தப்பகுதி கோவை மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது திருப்பூர் தலைநகராகவும் அத்துடன் மாவட்டம் என்ற புதிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஊர்களுக்குப் பின்னால் நம்ப முடியாத மாற்றங்கள். மனிதர்களுக்குண்டான வரலாறு போல ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுவராசியங்கள் உண்டு என்பதை நாம் வாழும் போது, வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இதுவே நாடு குறித்து யோசிக்கும் பொழுதும், நம் தென் இந்திய வரலாறுகளைப் பற்றி படிக்கும் பொழுதும் இந்த மாற்றத்தில் தானே நம் முப்பாட்டன்களும், அவர்களின் முன்னோர்களும் வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. நான் தற்பொழுது திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் இருந்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் பலதரப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போது எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு அதிக ஆச்சரியங்களை தந்தது. அதையே 2009 ஜுலை முதல் வலைபதிவு என்ற தமிழ் இணையம் எனக்கு அறிமுகமாக என்னைப் பற்றி, நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழிலையைப் பற்றி எழுதிக் கொண்டே வந்தேன். இதுவே என் முதல் புத்தகமாக “டாலர் நகரம்” என்ற பெயரில் வந்தது. நம்முடைய முன்னோர்களான தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை படிக்கத் தொடங்கினேன். எண்ணிக்கையில் அடக்க முடியாத ஏராளமான வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே இருந்தாலும் மாறிக் கொண்டே வரும் சூழலுக்கு ஏற்ப வாசிப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்ளாத அளவுக்கு எழுத்து நடையும், கடின மொழியாக்கமும் இருந்ததை உணர்ந்து கொண்டேன். காரணம் புத்தகத்தை எழுதியவர்களின் காலச்சூழலும், மாறிக் கொண்டே வரும் காலமும் வெவ்வேறு நிலையில் இருப்பதால் இன்றைய நிலையில் பழைய வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி வாசிக்க விரும்புவர்களுக்கு பழைய எழுத்தாளர்களின் எழுத்து நடை மிகுந்த சவாலாகவே உள்ளது. இன்றைய சூழ்நிலையில் புத்தகங்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. இணைய தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வர வாசிப்பவர்களின் எண்ணமும், அவர்களின் நோக்கத்திலும் அதிகமான மாறுதல்களும் உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. நாள்தோறும் உருவாகிக் கொண்டு வரும் புதிய தொழில் நுட்ப வசதிகளும், விஞ்ஞான முன்னேற்றங்களும் வாசிப்பு பழக்கத்தில் அதிக தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படத்துறை என்பது சாதாரண மனிதர்களுக்கு கனவு உலகம். எண்ணிப்பார்க்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று கையில் கொஞ்சம் காசிருந்தால் ஒரு குறும்படத்தை எடுத்து விட முடியும். யூ டியூப்பில் ஏற்றி உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்து விட முடியும். மாயத்திரையை வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தொழில் நுட்பம் உடைத்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களும் தேவதூதன் போலவே பார்க்கப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் இன்று தமிழ் இணையதள வளர்ச்சியின் காரணமாக வாசகனுக்கும், எழுத்தாளர்களுக்குமிடையே உள்ள இடைவெளி குறைந்ததோடு ஏராளமான புதுப்புது எழுத்தாளர்களை நாள்தோறும் நவீன தொழில் நுட்பம் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. கீச்சுக்கள் என்று சொல்லப்படும் ட்விட்டரில் எழுதப்படும் இரண்டு வரிகள் தொடங்கி முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் எழுதப்படும் பத்து வரிகள் வரைக்கும் இன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரும் எதிர்பார்க்கும் அங்கீகாரமும் எளிதில் கிடைத்து விடுகின்றது. வாசகனின் ஆழ்ந்த உள்வாங்கலை இணைய தள வாசிப்பு நீர்த்துப் போக வைத்து விட்டது என்ற பழமையான குற்றச்சாட்டுக்கும், “எங்கள் சுதந்திரம் எங்களின் எண்ணங்கள்” என்றொரு புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் கற்பனைகளை நாள்தோறும் ஏதோவொரு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றார்கள். செல்லும் இடங்களுக்கு புத்தகங்களை சுமந்து கொண்டு சென்று வாசித்தவர்களுக்கு இன்று எளிய கையடக்க கருவிகள் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேமித்து வாசிக்க அறிவியல் தொழில் நுட்பம் இன்று வசதிகளை தந்துள்ளது. எதுவும் சுருக்கமாக, சுவராசியமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு ஆற அமர உட்கார்ந்து ஆராய்ந்து படிக்க நேரமிருப்பதில்லை. பொருளாதார கடமைகள் ஒரு பக்கம் துரத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை நாம் விரும்பியபடி எவராது தருவாரா? என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும். நீங்கள் ஆராய்ச்சி மனப்பான்மையில் உள்ளவரா? இதில் கொடுத்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு புத்தகங்களை தேடிப்படியுங்கள். இது முழுமையானது என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம். உங்கள் முயற்சிகள் தான் உங்கள் ஆர்வத்தை முழுமைப்படுத்தும். இந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று எந்த இடத்திலும் நான் சிபாரிசு செய்யமாட்டேன். காரணம் எல்லாப்புத்தகங்களிலும் ஏதோவொரு விசயம் இருக்கத்தான் செய்யும். பயணம் தொடங்கினால் மட்டுமே பாதை தெரியும். ஒரு மாவட்டத்திற்குப் பின்னால் இத்தனை சுவராசியங்களா? என்று இந்த மின் நூலை வாசித்து முடித்ததும் உங்களுக்கு எண்ணம் உருவானால், ஆச்சரியப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகம் செய்து வையுங்கள். என் நோக்கம் “தமிழர் தேசம்” என்றொரு பெரிய நூலை குறிப்பாக தொல்காப்பியம் தொடங்கி படிப்படியாக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு என்றொரு மாநிலம் உருவானது வரைக்கும் எழுத வேண்டும் என்பதே. ஆனால் அதற்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தை நினைத்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் இல்லாதபோதும் கூட அதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை கருதிக் கொள்கின்றேன். இதனை மனதில் கொண்டே எளிமையாக சுருக்கமாக சுவராசியமாக சொல்ல முயற்சித்த போது 2000 வருடத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவானது. எனது தேவியர் இல்லம் வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதிய தமிழர்களின் வரலாற்றை முதல் பகுதியில் தந்துள்ளேன். இதனைத் தொடர்ந்து நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நீண்டதாக போய்க் கொண்டே இருக்க நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத பட்சத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவங்களை, முக்கியமான நிகழ்வுகளை இரண்டாவது பகுதியில் தொகுத்துள்ளேன். மின் நூலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்ற அச்சம் போய்விட்டது. காரணம் என்னுடைய முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெற்றி பெற்று அதனை நிரூபித்தது. அதனைத் தொடந்தே “வெள்ளை அடிமைகள்” மின் நூல் உருவாக என்னை உழைக்க வைத்தது. இப்போது உங்கள் பார்வையில் என்னுடைய மூன்றாவது மின் நூல். தரவிறக்கம் செய்து ஆதரவளித்த அனைவருக்கும், இதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த நண்பர் சீனிவாசன் மற்றும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன். நட்புடன் ஜோதிஜி திருப்பூர் தேவியர் இல்லம், 28.02.2014 தொடர்பு கொள்ள powerjothig@yahoo.com வலைபதிவு முகவரி http://deviyar-illam.blogspot.in [] [pressbooks.com] 1 பகுதி ஒன்று 1 அது ஒரு கனா காலம் தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கின்றார்கள். “கிமு 5 ஆம் நூற்றாண்டில் புத்தரின் சமகாலத்தில் சோழ நாட்டுத் தலைநகராம் பூம்புகாரில் இருந்து கிளம்பி ஆயிரக்கணக்கான மைல்கள் விரிந்து கிடக்கும் 16 வட இந்திய அரசுகளின் மேல் படை எடுத்து நடத்திச் சென்றான் கரிகாற்பெருவளத்தான். எதிர்த்தவர்கள் அனைவரையும் வென்றான். அவனை அடிபணிந்த வஞ்சிர, மகத, அவந்தி நாடுகள் முறையே கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரண வாயில். இந்த நாடுகளை ஆண்டு கொண்டு இருந்த மன்னர்கள் கரிகாலன் காலடியில் தங்கள் ஆளுமையில் உள்ள நாடுகளை காணிக்கையாக்கி சமரசம் செய்து கொண்டனர். இறுதியில் கரிகாலன் இமயத்தின் உச்சி வரையில் சென்று அங்குத் தமிழர் இலச்சினையைப் பொறித்துத் திரும்பினான். கரிகாலனின் இந்த இமாலாய வெற்றியை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்கள் விரிவாகக் காட்டுகின்றன. இவனே உலகத்தின் முதன் அணைக்கட்டாகிய கல்லணையைக் காவிரிக்கு குறுக்கே கட்டியவன். பாண்டிய நாட்டை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவர இரண்டு பேரரசர்களும் ஐந்து சிற்றரசர்களும் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்தனர். ஆனால் அப்போது அரியனையில் வீற்று இருந்தவன் இளைஞனுக்கும் சிறுவனுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள நெடுஞ்செழியன். அவனுடைய அறைகூவலை படித்துப் பாருங்கள்? “நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும். யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்” சேரன், சோழன் இரண்டு பேரரசுகளையும், தித்தியன், எழினி, எருமையூரன், இருங்கோவண்மான், பொருநன் ஆகிய ஐந்து சிற்றரசர்களையும் சிதறடித்துப் பாண்டிய ராஜ்யத்தைக் காப்பாற்றினான். 2000 ஆண்டுகளுக்கு முன் இளைய வயதுக்குக் கீழ் இருந்த அவனை “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று வர்ணித்த சங்கத்தமிழ் இலக்கியத்தில் உள்ள நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி இரண்டுக்கும் “பாட்டுடைத்தலைவனாக” புகழடைந்தான். ஆனால் இந்தச் சங்ககாலத்து சோழ மரபு கி.பி.250க்குப் பிறகு வரலாறு சுவடின்றி மறைந்து போனது. அதற்குப்பிறகு, 600 ஆண்டுகள் அந்நியர்களின் ஆட்சி உருவானது. இறுதியில் 300 ஆண்டுக் காலப் பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 96 விழுப்புண்களை மார்பில் பெற்ற விஜயாலன் (கிபி 850) சோழர் காலத்தை உருவாக்கி போட்ட ராஜபாட்டைத் தான் பின்னால் வந்த இராஜராஜ சோழனும், இராசேந்திரனும், குலோத்துங்கனும் வந்து சோழப் பேரரசை உலக வல்லரசாக்க சாத்தியமானது. புதிய கட்டிடக்கலை நுட்பத்தை அன்றே உலகிற்குப் படைத்த தஞ்சை பெரிய கோவில் தந்தவர் யார் தெரியுமா? இந்த விஜயாலனின் பேரன் ராஜராஜன்.(கிபி 985 /1014) நவீன உபகரணங்கள் இல்லாமல் உருவாக்கிய கலைச்சிற்பத்தையும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மூலம் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரியகோவிலின் அற்புத வினோத வடிவங்களையும் எந்த மேல் நாட்டுப் படிப்பு மூலம் இவர்கள் கற்றார்கள்? இன்றைய நவீன கட்டிடக்கலை நுட்பத்தை அன்றை உலகிற்குப் பறைசாற்றியவன் ராஜராஜன். விஞ்ஞான அறிவு ஏதும் தேவையில்லை. எங்கள் மெய்ஞான அறிவுக்கு நிகர் ஏது? என்று பறைசாற்றியவன். விஞ்ஞானம் வளராத காலத்திலும் தன் திறமைகளை, ஆளுமைகளை நிரூபித்தவன். [] ராஜராஜனின் புதல்வன் இராஜேந்திரன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் 3000 கடல் மைல்கள் தாண்டி பிடித்த அத்தனை தேசங்களிலும் புலிக்கொடி பறக்க வைத்த வீர மன்னன். அவன் வென்ற நாடுகளின் பட்டியல்களை படிக்கும் போது பரவசமாய் இருக்கிறது. கடல் பயணம், நான்கு வகையான படைகள், ஆள், அம்பாறை, சேனை, எடுப்புத் தொடுப்புகள் என்று படையெடுத்துச் சென்ற போது இதற்காக உருவாக்க வேண்டிய மொத்த முன்னேற்பாடுகளையும் இப்போது உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள். நினைத்தே பார்க்க முடியாத ஆச்சரியங்கள். மன்னர்களின் வாழ்க்கை என்பது வீரம். வீரத்துடன் கூடிய அர்ப்பணிப்பு. இறுதியில் இந்த அர்பணிப்பு என்பது தான் மன்னரின் மொத்த ஆளுமையின் உருவகம். ஒவ்வொரு தமிழ் மன்னர்களும் இவ்வாறு தான் வாழ்ந்து மறைந்தார்கள். இந்தியாவின் வடக்கே மீது படையெடுத்து வந்து வெற்றி பெற்று ஔரங்கசீப் தில்லி பாதூசாவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த சமயம் அது. தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய ஒரு பாதுகையை மட்டும் ஒரு பல்லாக்கில் ஏற்றி அனுப்புவார். அந்தப் பாதுகை பல்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மன்னரின் ஆளுகைக்குள்ளும் சென்று வரும். ஆண்டுக் கொண்டுருக்கும் மன்னன் அந்தப் பாதுகையைத் தொட்டு வணங்க வேண்டும். அதன் அர்த்தம் “நான் இனி உங்களுக்கு அடிமை”. அந்தப் பாதுகை தமிழகத்தில் ஆண்டு கொண்டிருந்த நாயக்கரின் அரசவைக்கும் வந்தது. மங்கம்மா பெற்றெடுத்த வீரன் மூத்து வீரப்பன் வந்த பாதூகையை ஒரு காலில் மாட்டிக்கொண்டு “மற்றொன்று எங்கே?” என்று வினவ ஓளரங்கசீப் இதைக் கேள்விப்பட்டு அவனின் வீரத்தையும் தன்மானத்தையும் பார்த்து தன்னுடைய பாதுகை பயணத்தை நிறுத்திக்கொண்டார். முத்து வீரப்பன் இளமையிலேயே இறந்து போய்விட அடுத்து பட்டத்துக்கு வர வேண்டிய அவன் மகனோ 3 மாதக்குழந்தை. ஆனால் பாட்டி மங்கம்மா அந்த 3 மாதக்குழந்தையை அரியணையில் ஏற்றி, அந்தக் கால விதவை என்ற கொடுமையையும் மீறி 18 வருடங்கள் மிகத் திறமையாக ஆட்சி புரிந்தார். ஓளரங்கசீப் தங்கள் ஆளுமையில் உள்ள பகுதிகளை விழுங்கத் துடித்துக்கொண்டுருப்பதையும் மீறி? மேலே சொன்ன உதாரணங்கள் வீரம் என்பதன் குறியீடாக வைத்து வாழ்ந்து தமிழர்களின் வரலாற்றில் சாதனை சிகரம் படைத்தவர்களின் சில உதாரணங்கள் ஆகும். [] மற்றொன்றையும் பார்த்து விடலாம். தங்கள் தன்னம்பிக்கை வழியே வாழ்ந்து வரலாறு படைத்த உதாரணம் இது. குலோத்துங்கச் சோழனிடம் அரசவைப்புலவராக இருக்கும் தன்னுடைய தந்தையின் சோர்வைக்கண்டு மகன் கலக்கமுற்றுக் காரணம் கேட்டான்? மன்னன் தன்னிடம் கேட்ட மூன்று கேள்விகளுக்குத் தன்னால் பதில் அளிக்கமுடியவில்லை என்றதும் நான் நாளை வந்து சொல்கிறேன் என்று சென்றான் அந்தச் சிறுவன். இறுதியில் திருக்குறள் மூலமே அதை வென்றான். வானத்தை விடப் பெரிது? செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது உலகத்தை விடப் பெரியது? காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது கடலை விடப் பெரியது? பயன்தூக்கர் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது [] சிறுவன் மந்திரியாகப் பதவியேற்றான். தன்னுடைய 63ம் வயதில் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் தான் இவர். கற்கோவில் மூலம் சிற்பக்கலையைப் பறைசாற்றியவன் அருள் மொழி என்ற இராஜராஜ சோழன். தமிழர்களின் இலக்கியக் கலைசிறப்பை மேம்படுத்த புதிய சொற்கோவில் கட்டியவர் தான் இந்தச் சேக்கிழார். [] [] 2 அச்சம் தவிர் தமிழர்களின் முக்கிய நூலாக உள்ள புறநானூறு என்பது பெறும் படைப்பல்ல. நம்மவரின் வீர வாழ்வின் சுவடுகள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. “நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்தாள்.” “நேற்றைய போரில் தந்தை இறந்தார். இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான். நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்” “பெரிய நகரத்தை பரிசாகக் கொடுக்க முன்வருபவர் மன்னராக இருந்தாலும் அவர் தன்னம்பிக்கை இல்லாத ஆணாக இருந்தால் தம் பெண்ணுக்கு மனம் செய்விக்கத் தந்தை மறுப்பார்” மேலே சொன்னது சில உதாரணங்கள் மட்டுமே. வீர வாழ்வியல் பெற்ற தமிழினம் இன்று வீரம் என்ற வார்த்தையைச் சொறிந்து கொள்ள உதவுவதாக மாற்றிக்கொண்டதை என்னவென்று சொல்வீர்கள்? ஆமாம். கடமையுடன் கூடிய தன்னம்பிக்கை, போர்க்குணம் என்பது அழிப்பதற்கு அல்ல. ஆளுமையை நிலைநாட்ட. காதல், வாழ்க்கை என்ற பாகுபாடு இல்லாமல் என்றும் நீக்கமற நிறைந்திருந்த வீரஞ்செறிந்த வாழ்க்கையிது, கால மாற்றத்திலும் தமிழர்களிடமிருந்த போர்க்குணம், வீரம் மெதுவாக மறையத் தொடங்கியது. போர்க்குணமின்றிக் கோழை சமூகமாக வாழ்ந்து வந்த காரணத்தால் வந்த படையெடுப்பாளர்கள் அத்தனை பேரும் மிக எளிதில் நம்மை அவர்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னால் இந்தியாவிற்குள் வந்த ஆங்கிலேயர்கள் கூடத் தொடக்கத்தில் சீக்கியர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள இடங்களை எளிதாக கைப்பற்ற முடியவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் அதிகமான போராட்டம், உயிர் இழப்புக்குப் பின்னால் தான் அந்தந்த பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த சிரமும் இன்றி இங்குள்ள மொத்த பகுதிகளையும் கைப்பற்றினர். பின்வரும் கணக்குகளை வைத்து பார்க்கும் போது உலக இனத்திலேயே இத்தனை ஆண்டுக் காலம் இத்தனை பேர்களுக்கு அடிமையாய் வேறு எவரும் வாழ்ந்து இருக்க முடியுமா? என்று ஆச்சரியமாய் உள்ளது. களப்பிரர் (கிபி 200 முதல் 500), பல்லவர் (கிபி 500 முதல் 800), மராட்டியர், தெலுங்கு நாயக்கர் (கிபி 1200 முதல் 1600) போர்ச்சுகீசியர், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் கீழ் 1947 வரைக்கும். 2000 ஆண்டுகள் அடிமை தமிழனாகவே வாழ்ந்த வாழ்வியலின் எச்சமும் சொச்சமுமாக இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரையிலும் தமிழனுக்கு மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு சுகம். அடிமையாக மாற விரும்பாதவர்களையும் மாற்றி விடுவதில் நம்மவர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். காரணம் அதற்கு “சமூகப் பாதுகாப்பு” என்ற வசதியான குறீயீட்டுப் பெயரும் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் கேயன் (1650.1700) என்பவர் கவர்னராக இருந்தார். இவரே முதன் முதலாகத் தமிழக வரலாற்றில் கிழக்கிந்திய தீவுகளுக்கு கரும்பு, ரப்பர், இலவங்கத் தோட்டம் அமைக்கத் தமிழர்களைக் கொண்டு சென்றவர். ஆமாம் அழைத்துச் செல்லவில்லை. ஆடு, மாடுகளைப் போலக் கொண்டு சென்றார். வெள்ளையர்களுக்குச் செல்வங்களை வாரி வழங்கிய பீஜீத்தீவின் கரும்புத் தோட்டங்களிலும், தென் ஆப்ரிக்காவின் வைரச் சுரங்களிலும், இலங்கையின் தேயிலை தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் கூலியாகக் கொண்டு போய் நிரப்பினார். ஆனால் தமிழனின் தொடக்க வாழ்வியலில் தமிழன் என்பவன் கூலி என்ற இழி நிலையில் வாழ்ந்ததாகச் சான்று ஏதும் இல்லை. ஆளுமைப்பண்புடன் கூடிய வீரம். அத்தனனயிலும் சிறப்பு. இது தான் தொடக்கத் தமிழன். ஆனால் இன்று? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழனத்தின் பண்புகள் என்பது அறிவு, ஒழுக்கம், அஞ்சாமை, உதவும் மனப்பான்மை இவற்றுடன் தன்னம்பிக்கை இப்படித்தான் ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்தான். பல சான்றுகள் உள்ளது. தமிழன் அடிமைப்படாத மூவேந்தர் அரசாண்ட காலத்தில் போராட்டக்குணம் அதிகமாக இருந்தது. எந்த நிலையிலும் கீழ்நிலையில் வாழ வேண்டிய அவஸ்யம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். வடநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டுருந்த மன்னர்களான கனக, விசயர் என்பவர்கள், இங்குள்ள தமிழ் மன்னர்களான மூவேந்தர்களை அங்கு நடந்த ஒரு விழாவில் மிக இழிவாகப் பேசிய செய்தி மூவேந்தர்களை வந்தடைந்தது. மூவேந்தர்களின் சார்பாகச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று, வென்று, இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் குளிப்பாட்டி, அதில் கண்ணகிக்கு சிலை எடுக்க அந்த மன்னர்களின் தலையில் சுமக்க வைத்து அழைத்து வந்தான். ஆனால் காலம் மாற மாற வானம் பொய்யா நிலம் போலத் தமிழர்களின் வாழ்க்கையும் நிர்கதிக்கு உள்ளானது. தொடர்ந்து வந்த படையெடுப்புகளும், கலப்பினமும், மாறிய கொள்கைகளும், செய்யாத முன்னேற்பாடுகளும், ஒவ்வொரு சமயத்தில் உருவான குழப்பான சூழ்நிலையையும், தமிழ்ர்களின் வாழ்க்கை நிலையை மாற்றியது. வாழ்வியல் தடங்களையும் மாற்றியது. இயற்கை மற்றும் செயற்கையில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை எட்டிப்பார்க்க அதுவே தமிழனை தன்னம்பிக்கை இழக்க வைத்தது. இதுவே இனி நாம் பிழைத்தால் போதும் என்று இருக்கும் இடங்களை விட்டு பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட வைத்து. [] 3 உண்மைத்தமிழன் தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்குக் கொடுக்கும் மரியாதையை விட உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம். சங்ககால இலக்கியங்களில் காணப்படும் தேவையில்லாத புகழ்ச்சி பாடல்கள் முதல் இன்றைய குத்துப்பாடல்களின் மகிழ்ச்சி வரையிலும் நம்மால் காண முடியும். இது சரியா? தவறா? என்று யோசிப்பதே இல்லை. தன்னைக் கவர வேண்டும். தன்னுடைய புலன்கள் தூண்டப்படவேண்டும். அது திரை என்றாலும், அரசியல் தலைவர்களின் உரையாக இருந்தாலும் சரி? ஒவ்வொரு தலைவர்கள் இறக்கும் போது நம்மவர்களின் உணர்ச்சி தூண்டுதல் மிக அதிகமானது. தற்கொலை,தீக்குளிப்பு, சாலை மறியல், சமூகத்தை நிர்கதியாக்கும் அத்தனை சம்பவங்களும் அன்று முதல் இன்றுவரையிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் வெவ்வேறு பெயர்கள். பாதிக்கப்பட்டவனின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும். அதனால் கிடைத்த ஆதாயத்தைப் பெற்ற தலைவர் அச்சமில்லாமல் ஆட்சியில் அமர்ந்து இருப்பார். தொடக்கத்தில் திரையில் கோலோச்சிய வாழ்ந்த பாகவதர் குறித்துப் பல கதைகள் இன்னமும் உண்டு. திருச்சிக்கு வருகிறார் என்றால் காலை முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த உணர்ச்சிக்கூட்டம் அது. இதுவே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் கூட்டம் உருவானது. இன்று கதாநாயகிக்கு சிலை உருவாக்குவது வரையிலும் உணர்ச்சிச் தமிழனாகவே வாழ்ந்து வருகின்றான். அறிஞர் அண்ணா அவர்களே “நானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் தான் வெற்றி வாகை சூடுவார்” என்று அவர் கூறிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது. காரணம் சங்ககாலம் முதல் இன்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள். உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் உணர்ச்சி விசயங்களில் அதீதமாகத்தான் உள்ளனர். விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, நாவலர் நெடுஞ்செழியன், கர்மவீரர் காமராஜ் போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பதை நீங்கள் எந்த வகையில் பார்ப்பீர்கள்? அறிவை விட அன்று தூண்டும் உணர்ச்சிகளுக்குத்தானே நம் தமிழர்கள் மதிப்பு அளிப்பவர்கள் என்பதில் மாற்றம் ஏதும் உண்டா? அறிவு வசப்படும் மேலைநாடுகளில் வாழும் மக்கள் இதற்கு நேர்மாறாக வாழ்கின்றனர். “வெற்றிச்சின்னம் நமதே” என்று இரண்டு விரல் காட்டி பிரிட்டன் மக்களைத் தன்னுடைய ஆளுமையில் வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்? “ஜப்பான், ஜெர்மனின் தொடர் குண்டு வெடிப்புகளை மிக லாவலமாகக் கையாண்டு எங்களை, நாட்டைக் காப்பாற்றியது நீ தான்? ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது” என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி. ஆனால் இங்கு ஐந்து வருடங்கள் நேர்மையாக ஆட்சி செலுத்த முற்பட்டாலும் தேர்தலுக்குப் பத்துநாட்கள் முன்னால் இயற்கையாகச் செயற்கையாக இறக்கும் தலைவர் மூலம் அனுதாபத்தின் மூலம் எப்படி மொத்த ஐந்து வருட தியாகமும் அடிபட்டுப் போகின்றது? இன்றுவரையிலும் கேரளாவில் நடிகர் என்பவர் அரசியலில் நுழைய வேண்டும் என்று கனவு கூடக் காண்பது இல்லை. ஆள்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அடுத்த ஆட்சி நம்முடையது இல்லை என்ற எண்ணத்தில் தான் ஆட்சியில் அங்கே இருக்கிறார்கள். காரணம் அறிவு உந்தப்பட்ட மக்கள் உருவாக்கிய பயமிது. உலகத்தில் உள்ள அத்தனை இனத்திலும், சமூகத்திலும் நீங்கள் தேடிப்பாருங்கள். நம் தமிழனத்தில் உள்ள மேதைகளை விட வேறு எவரையும் நீங்கள் கண்டு விட முடியாது. இது மிகைப்படுத்தப்பட்ட உண்மையல்ல. நமக்கு திருவள்ளுவர் ஒருவர் போதும். அவர் வாழ்ந்து காலத்தில் எந்தப் புத்தகத்தை, எந்த ஆராய்ச்சி நூலை வைத்துக்கொண்டு, குறிப்பு எடுத்துக்கொண்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலை குறி சொல்பவன் போல் ஒன்னே முக்கால் அடியில் நிறுத்தியவர் போல் எவரையும் உங்களால் காட்ட முடியுமா? விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவு, ஆட்சி, ஆளுமை, அதிகாரம், களவு, கலவு தொடங்கி அவர் தொடாத துறை உண்டா? இன்று மேல் நாட்டு அறிஞர்கள் சொன்னது என்று குறிப்பிட்டுச் சொல்கின்ற எந்த விசயங்களுமே திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு. முப்பாலையும் உங்களுக்குத் தாய்ப்பால் போல் கொடுத்த அத்தனை சுத்தமான பாலையும் நீங்களும் நானும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்குத் தானே மனப்பாடம் செய்து மறந்தோம். திருக்குறளை மேற்கோளுக்காக எடுத்த தமிழின தலைவர்களும், உரை எழுதிய அறிஞர்களும் என்ன மாறுதல்களை நமக்குத் தந்து விட்டார்கள்? இன்று கலாச்சாரம் என்ற பெயரில் அடுத்தவரை கவர்வதில் தானே நம் கவனம் வைத்துள்ளோம். ஒரு குற்றம் செய்து விட்டாலே தோன்றும் குற்ற உணர்ச்சி என்பது இன்று மாறி “நீ பிழைக்கத் தெரியாதவன்” என்று முடித்து விடுகின்றார்கள். “எதையும் காரணக் காரியத்தை வைத்துச் சிந்திக்கப் பழகு” என்று சொல்லிச் சென்ற தந்தை பெரியாருக்கு வேறு என்ன பட்டம் பொருத்தமாக இருந்து விட முடியும். நம்பிக்கைகள் என்பது மாறி அதுவே மூடத் தனத்தின் நம்பிக்கையாக மாறிய போது அவரின் எரிச்சல் நமக்குத் துப்பும் எச்சில் போலவே இருந்த போதிலும் நாம் துடைத்துக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். மடமை, அறியாமை, அறிவற்ற சிந்தனைகள் எல்லாமே மொத்தமாக வளர்ந்து வளர்ந்து மொத்த சமூகத்தில் தமிழன் என்பவன் உணர்ச்சி தமிழனாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றானே தவிர உண்மைத்தமிழனாக வாழவில்லை. [] 4 வெயிலான் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி தமிழர்கள் என்பவர்கள் எடுப்பார் கைபிள்ளை தான். இரண்டு தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது வரவே வராது. ஆனால் மூன்றாம் நபர் அவனைக் கையாளும் போது அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கி அவர் சொன்ன சொல் பேச்சுக் கேட்பதில் தமிழனை விட எந்த இன மக்களையாவது நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியுமா? தமிழனை ஆண்ட, ஆள்கின்ற தலைவர்களும், தமிழனை ஆளுமை படுத்தும் கொள்கையாளர்களும் மாறிக் கொண்டே வந்து உள்ளனர். ஆனால் “தமிழன் உணர்வுகள்” என்பது சங்ககாலம் முதல் இன்று வரையிலும் ஒரே மாதிரி இருப்பது உலகத்தில் ஒரு விதமான சாதனை தான். சந்தேகமே இல்லை. [] தனக்குள்ளே இருக்கும் தாழ்வு மனப்பான்மையை எப்போதுமே அவன் களைவது இல்லை. குறிப்பாக அவன் தன்னுடைய இனத்தின் நிறம் குறித்துத் தமிழன் அடையும் கவலை என்பது அளவுக்கு அதிகமானது. அதிகமான வெயிற்கதிர்களைத் தாங்குவதற்காக மெலனின் என்ற நிறமிகள் தோலில் உள்ளன. மிகுதியாக ஒளி உள்வாங்கப்படும் போது மெலனின் அதிகமாக உற்பத்தியாகி தோலை கருப்பாக மாற்றி விடுகிறது. ஆனால் இந்த இயற்கை செய்யும் விந்தையைப் புரிந்து கொள்ளாத தமிழனுக்கு எப்போதுமே சிவப்பு மேல் தான் அதிக அலாதி பிரியம் தான். சங்க காலம் முதல் வழிபாடு என்பது தமிழனின் வாழ்வியலோடு பின்னிப்பினைந்த ஒன்று. ஆனால் அவன் வணங்கும் தெய்வம் கூட நல்ல புத்தியை இன்று வரை கொடுக்கவில்லை. கும்பிடும் கிருஷ்ணன், சிவன், திருமால் ஏன் கிராமத்து அத்தனை தெய்வங்களும் கருப்பு நிறத்தில் தான் இருக்கிறார்கள். நாம் படிக்கும் எழுத்துக்கள் கருப்பாக இருந்தால் தான் அது எழுத்து. பார்க்கும் பார்வையில் கருப்பு விழிகள் இருந்தால் தான் அதற்குப் பெயர் நல்லக்கண்ணு. [] கருப்பு உலக அழகி கிளியோபாட்ரா, உலகத்தில் உள்ள அத்தனை விளையாட்டுகளிலும் முதன்மை இடத்தைப் பிடிக்கும் நீக்ரோ இன மக்கள் கருப்பு நிறம் தான். ஆனால் இத்தனை விசயங்களையும் தமிழன் என்றுமே ஊன்றிப் பார்ப்பதே இல்லை. காரணம் ஊன்றுகோலுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவன் தமிழன். உலகம் எத்தனை தூரம் விஞ்ஞானம், மெய்ஞானம் மாற்றம் அடைந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அன்றாடம் தன்னுடைய கடமைகளில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் ஆத்மார்த்தமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கடைக்கோடி கிராமத்தானும் கருப்பு நிறம் தான். கருப்பு என்பது ஒரு நிறத்தின் கதை அல்ல. ஒரு இனத்தின் கதையும் அல்ல. [] இயல்பாகத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற் போல் உருவாவது. உருவானது. உள்ளுக்குள் எந்த வஞ்சகமும் இல்லாமல் ஆண்டவன் யார்? ஆள்பவன் யார்? என்று தெரியாமல் வாழ்ந்த அத்தனை தமிழன மக்களின் பெரும்பான்மையான தமிழர்களின் நிறம் இந்தக் கருப்பு தான். பழங்கால இலக்கியப் பாடல்களில் வர்ணிக்கப்படும் அத்தனை சமாச்சாரங்களிலும், தலைவன் தலைவி ஊடல்களிலும் இந்தக் கருப்பு தான் பிரதானமாக வருகிறது. சிலாக்கியமாக வர்ணிக்கப்படுகிறது. சிவப்பு என்று கூடச் சொல்லப்படுவதில்லை. சிவப்பு என்று சொன்னீர்கள் என்றால் வெளுப்பு என்ற அர்த்தத்தில் வந்து விடும். உடலில் வெளுப்பு வந்து விட்டது என்றால் சோகை என்ற அர்த்தம். ஆனாலும் இந்தச் சிவப்பு ஆசை தமிழனுக்கு விட்டபாடு இல் லை. [] இன்று வரையிலும் ஆணாக, பெண்ணாக இருந்தாலும் சிவப்பு கணவன், சிவப்பு மனைவி, காட்சியில் வரும் கதாநாயகன், கதாநாயகி சிவப்பாக இருந்தால் தான் ரசிக்கின்றோம். பிறக்கும் குழந்தை கூடச் சிவப்பாக இருந்தால் பெற்றவளுக்குக்கூட இயல்பான மூச்சாக மாறுகிறது? வளர்ந்த நாடுகளில் பிச்சை எடுப்பவர்கள் கூட ஒரே இடத்தில் நின்று கொண்டு, தனக்குத் தெரிந்து இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு நாகரிகமாகவே நின்று கொண்டு யாசகம் கேட்பார்கள். ஆனால் இங்கு மட்டும் அதற்கென்று ஒரு மொழி, வேடம். பிறந்த குழந்தைகள் கூட இந்தத் தொழிலுக்கு மூதலீடு தான். என்ன செய்வது? தனது இனத்தை, மொழியை, பண்பாட்டை, காலச்சாரத்தைப் போற்றிப் புகழவேண்டாம். தூற்றாமல் இருந்தால் போதாதா? அவ்வப்போது வந்து தோன்றும் திடீர் தலைவர்களையாவது காரணக் காரியத்தோடு “பார்க்கத் தெரிந்த” வனா தமிழன்? எதைக்கொடுத்தால் மாறுவான்? எதைப்பேசினால் மறப்பான்? எதைத் தொட்டால் சீற்றம் பெறுவான்? எங்குத் தொடங்கினால் நம்மை வந்தடைவான்? இப்போது புரியுமே? ஆள்பவர்களுக்கு அறிக்கை என்பது எத்தனை அற்புதமாகத் தயாரிக்க உதவிய காரணிகள் இவை என்று? மேடைப்பேச்சு என்றாலும் அலங்கார நடை வேண்டும். கன்னியர் நடந்தாலும் அலங்கார ஆடை வேண்டும். நிறம் என்ற காரணத்தால் உயர்ந்த பதவிக்காக உச்சத்தைத் தொட முடியாமல் நொந்து போனவர்களின் வரிசை மிக நீளம். ? தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாரபட்சம் இல்லாதது. படித்தவருக்கும், பாமரனுக்கும் பொதுவானது, இடம், சூழ்நிலை மட்டும் மாறியதாய் இருக்கும். எதிலும் அக்கறையில்லாமல் ஆள்பவர்களையும், ஆடுபவர்களையும் ரசித்துக் கொண்டு நசுங்கிப்போய்க்கொண்டுருக்கிறோம் என்பது தெரியாமலேயே பயணிப்பவன் தமிழன். [] [] 5 ஈர வெங்காயம் “இங்கே வந்துருக்க ஆல் வ்யூர்ஸ்க்கு நமஸ்தே அண்டு குட்மார்னிங். நைன் ஏஜ்ல கலக்கல் பர்பார்மன்ஸ் கொடுத்துட்டுப் போயிருக்கக் குட்டீஸ்களின் சிங்கிங் பாத்து நீங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாட்ச் பண்ணிக்கிட்டுருக்க ஜட்ஜ்டோட கமெண்ட்ஸ் நல்லா கலர்புல்லா இருக்குது. உங்களோட கிளாப் நல்ல மகில்ச்சியைத் தந்தது போல நம்ம சீப் கெஸ்ட் ஒரு சாங் பாடி நமக்கு ஹேப்பியை தருமாறு கேட்டுக்கொல்கிறன்” அசாத்திய திறமை படைத்த குழந்தைகளைத் தனது சூரத்தனத்தால் வழி நடத்தும் இந்த ஊடக தமிழ் மொழி உங்களையும் என்னையும் வந்து “காது குளிர” வைத்துக்கொண்டுருந்தாலும் தமிழ் மொழியின் ஈரம் இன்னும் குறையவில்லை. நடைமுறைத் தமிழ் எத்தனை இருட்டுக்குள் இருந்தாலும் தமிழரின் தமிழ் மொழியின் வீச்சை இன்று வரையிலும் எவராலும் நிறுத்த முடியவில்லை. இன்று ஆங்கில வழிக் கல்வி கூடங்களில் தமிழ் உள்ளே பேசினால் தண்டணைக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்ன போதிலும் அத்தனை மம்மிகளும் கும்மியடித்துக்கொண்டே சென்ற போதிலும் இன்றும் தமிழ் அழியவில்லை. “தமிழ் படித்து என்ன ஆகிவிடப்போகிறது” என்று “தமிழ் மணம்” வீசினாலும் சரி தமிழ்மொழி என்பது இன்று வரையிலும் உங்கள் விழி போல் ஓளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது. உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான். [] கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய்ப் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாகக் கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளைத் தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று? 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று? மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை? புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு. இவையெல்லாம் காத்து இருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? ஆனால் தமிழனின் தமிழ்மொழி? [] இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தைப் படித்துறையில் அமர்ந்து கொண்டு நாம் பார்க்கும் ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ் மொழியின் ஈரம் குறையவில்லை. அதன் மூலம் மாறவில்லை. முகவரி மாறி உள்ளதே தவிர முகத்தில் ஒப்பனைகள் சேர்ந்து உள்ளதே தவிர அழகு குறையவில்லை. இன்று வரையிலும் எத்தனையோ நல்லவர்கள் உள்ளே வந்து வளர்க்கின்றோம் என்று தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிரத் தமிழ் தாய்க்கு வளர்ப்புத் தாய்த் தேவையில்லாமல் சுயமாகச் சுயம்புவாக நம்மைக் காத்துக்கொண்டு இருக்கின்றாள். அதன் வீச்சை குறைக்க முடியவில்லை. உள்வாங்குதல் குறையவில்லை. நாவில் வருவது குழந்தை தமிழாக இருக்கட்டும். உளறல் தமிழாக இருக்கட்டும். தங்கிலீஸாக இருக்கட்டும். தடுமாற்றத் தமிழாக இருக்கட்டும். ஆனால் இன்னமும் அழியவில்லை. அழியாது. கெட்டுப்போயுள்ளது. நம்மை விட்டுப் போய்விட வில்லை. இன்னமும் உரித்துக்கொண்டே பயணித்துக்கொண்டு இருக்கிறது. நம்மை மொத்த தமிழினத்தை இணைத்து வைத்துக்கொண்டுருக்கிறது. எத்தனை கோபக் கணைகளைத் தமிழ் திரைப்படங்களை நோக்கி உங்கள் பார்வை பாய்ந்தாலும் உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழனத்தையும் நல்லவிதமாகக் கெட்டவிதமாகத் தன்னுடைய மூல மொழியை இது உன்னுடைய முகவரியின் மொழி என்று நினைவில் வைத்து இருக்க உதவிக்கொண்டுருப்பவர்கள் இந்த ஊடக பிரம்மாக்கள் தானே? ஒருவரை சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும். வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே? தமிழ் மொழி என்றால் விழி மருகி அக்கம் பாக்கம் பார்த்துக்கொண்டே பயந்து கொண்டே பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடிபவர்களும், மருகி பார்வை பார்ப்பவர்களும் விரும்பு நாயக நாயகிகளை எந்த மொழி கொண்டு கனவில் கட்டிப்பிடிக்கிறார்கள்? தமிழனின் தாழ்வு மனப்பான்மை ஒரு பக்கம் கிடக்கட்டும். உண்மையான தமிழ் மக்கள் விரும்பும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாறித் தொலையட்டும். கற்பித்துக் கொடுத்துக்கொண்டுருக்கும் ஆங்கிலம் மூலம் அத்தனை கலப்பின சிந்தனைகள் உருவாகட்டும். இருந்த போதிலும் உங்களால் தமிழ் மொழியை விட்டு விலகிச் சென்று விடமுடியாது. கிராமத்தில் கடைக்கோடி தமிழன் வாழ்க்கை அழியும் வரையும், மண் மூடி மேடாக மாறும் வரையும் இந்தத் தமிழ் மொழி வாழ்க்கையை எவராலும் அழித்து விடமுடியாது. திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர இருட்டு மொழியாக மாறி விடவில்லை. காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா? தமிழ் வளர்ந்து வந்த விதத்தைப் பாருங்கள். ஓவியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட மொழி, கல்வெட்டுத்தமிழ், ஓலைச்சுவடித்தமிழ், மன்னர் தமிழ், சங்கத்தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், பாகவதர் தமிழ், பராசக்தி தமிழ், பெரியார் தமிழ், மெட்ரிகுலேசன் தமிழ், ஆங்கிலத் தமிழ், இன்று அலறும் ஊடகத்தமிழ். காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளைக் கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்தத் தமிழ்த்தாய். [] 6 துளசிதளம் தமிழனத்தின் முன்னோர்களும், அரசாண்டவர்களும், ஆளுமை செய்தவர்களும் என அத்தனை பேர்களும் ஆண்டவன் விசயத்தில் ” குறையேதுமில்லை மறைமூர்த்திக் கண்ணா” என்று தான் வாழ்ந்து இருக்கின்றனர். அத்தனை மன்னர்களும், தமிழினமும் “இறையே” என்ற ஒரு சொல்லில் மொத்தத்தையும் மறந்தனர். ஏன்? தன்னையே உணர தயங்கினர். புனிதம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளில் வாழ்ந்து போய் இருக்கின்றனர். அடுத்தவரிடம் “அன்பு செலுத்தி” தன்னை நிலைநாட்டுவதற்குப் பதில்” எல்லாம் சிவமயம்” என்பதற்குள் முடித்து விட்டனர். முடிந்தும் போயினர். இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் வித்தியாசங்கள் தெரியாமலேயே ஆண்டவர்களும் வாழ்ந்தனர். ஆட்சியில் வாழ்ந்த மக்களும் வாழ்ந்தனர். முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் மட்டுமே என்று தங்கள் ஆசைகளையும் சுருக்கிக் கொண்டனர். தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர். காரணம் தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது இன்று நேற்று வந்தது அல்ல. அன்றே தொடங்கியது. தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாமரன், பாதிக்கப்பட்டவன், அறிவாளி, அறிவற்றவன் என்ற எந்த வித்யாசங்களும் இல்லை. அன்று மன்னர்கள் முன்னால் கூனிக்குறுகி நின்றார்கள். இன்று அரசியல்வாதிகள் முன்பு நிற்கின்றார்கள். அந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு பின்னால் உள்ள சுயநலத்தினால் தன்னைத் தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை வாழ்த்தி வரவேற்பது. இன்று சுவரொட்டி கலாச்சாரத்தில் நாம் பலவற்றையும் உணர்ந்து கொள்ள முடியுமே? “உங்கள் பாதம் பட்டதால் இந்த மாவட்டமே புனிதமாகி விட்டது.” “வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறோம். “ அன்று “ஆண்டவா காப்பாற்று ” என்பது கூடக் குற்றம். ” நான் புழுவினினும் சிறியேன். தொண்டர் அடிப்பொடியேன்” “ஒரு பூனையானது பாற்கடலில் உள்ள பாலை நக்கிப் பருகுவதற்கு முயல்வது போல நான் ராமபிரானின் கதையை எழுதுகிறேன்.” அவையடக்கம் என்ற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது என்பது அன்றைய கம்பன் முதல் இன்றைய வம்பன்கள் வரைக்கும். “வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்” என்று அமெரிக்காவின் அதிபரை ஒரு சாதாரண மனிதன் எளிதாக அழைத்து விட முடியும். இங்கு முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும். ” மன்னா இது உன்னுடைய உழைப்பின் வெற்றி. இதற்கு மூலகாரணமே உன்னுடைய திட்டங்களும் முன்னேற்பாடுகளும் உழைப்புமே. இதற்கு ஏன் ஆண்டவனிடம் போய் நிற்கிறாய். வாருங்கள் அடுத்தக் கடமைக்கு உழைக்கத் தயாராய் ஆவோம்” “ஐயகோ. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இது இறைவன் அளித்த பிச்சை” “அப்படியென்றால் புயல்,வெள்ளம்,மழை தாக்கி வீடு இழந்து நாட்டில் நிர்கதியாய் இருப்பது?” “விதிப்பயன். மாறும். மாற்றம் அடையும் வரை பொறுத்து வாழ்வதே சிறப்பு.” உரையாடல்களின் மூலம் அன்றும் இன்றும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? இப்போது புரியுமே? காலத்தை விஞ்ஞானம் மாற்றி உள்ளது. ஆனால் மனத்தை மாற்ற எந்தக் கருவியும் கண்டு பிடிக்காத ஒரே குறையினால் தான் இன்னமும் குரைத்துக்கொண்டுருக்கிறோம். நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் வசதியான சூழ்நிலையில் நம்மைச்சுற்றிலும் வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை வெறும் செய்திகளாகப் படித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இத்தனையிலும் ஒரு ஆச்சரியம். தமிழினம் தம்மைப்பற்றிய உணராத பெருமைகளை, அன்று வாழ்ந்த மன்னர்கள் உணர முடியாத உண்மைகளை இங்கே உள்ளே வந்தவர்கள் உணர்ந்தது மட்டும் அல்லாமல் உள்வாங்கியதை வெளிப்படுத்திய விதம் மொத்தத்தில் ஆச்சரியமாய் உள்ளது. “தமிழரின் மூதாதையரான திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள். உலகில் மிகப் பழைமையான உயர்ந்த நாகரிகமான சிந்து சமமெளி நாகரிகத்திற்கு இவர்கள் சொந்தக்காரர்கள்” சிந்துவெளி அகழ்வராய்ச்சி மூலம் வெளிப்படுத்திய ஸ்பானீஸ்காரரான ஹீராஸ் அடிகளார் கொடுத்த தகவல் இது. இன்று தமிழ் பெயர் நாகரிகம் இல்லை என்று ரோஷணா, ரோஷன் என்று பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றோம். அவரின் பெயரை பார்த்தீர்களா? “திருக்குறளை லத்தீன் மொழியில் உரைநடையாக மாற்றி வெளியிட்டவர்” இத்தாலியராக உள்ளே வந்த பெஸ்கி. ஆனால் இவருடைய மற்றொரு பெயர் உங்களுக்கு எளிதாகத் தெரியும். ஆமாம். வீரமாமுனிவர். “திருவாசகம் படித்து அதில் உருகிப்போய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தமிழ் பக்தி இலக்கியத்தை மேலை நாடுகளுக்குப் பரப்பியவர்” ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர். இவர் இறக்கும் போது கூடத் தனது கல்லறையின் மேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வைக்கச் சொன்னவர். இவையெல்லாம் ஒரு கனாக் காலம் என்று கேள்வி குறியையோ, அல்லது கேலிக்குறியையோ உங்களுக்குள் உருவாக்கும். சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த எந்தத் தமிழ் தலைவர்களும் செய்யாத சிறப்பை இவர் செய்தவர். ஆமாம் தமிழ் மொழியைத் தனது நாட்டு மொழியாக, தேசிய மொழியாக, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சிறப்புக் கொடுத்த மனிதர். ஆனால் தமிழர் அல்ல. சீனர். ஆமாம் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் மரியாதைக்குரிய லீ குவான் யூ. தமிழர்களின் வாழ்க்கையில் நீக்கமற இருக்கும் இறை பக்தி என்பது ஏன் உருவாக்கப்பட்டது? உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது. கிடைக்கும் அத்தனையும் நம்மை நாசகார செயல்களில் இறக்கி விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட உருவகம் அது. காரணம் எல்லையில்லா அறிவென்பது உங்கள் ஆளுமைக்குள் இல்லாவிட்டால் எங்குப் போய் நிறுத்தும் என்பதற்கு இன்று பூமியை பல நூறு அடிகள் போய் ஊடுருவித் தாக்கும் ரசாயன குண்டுகள் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட மனித இனம் உங்களுக்கு உணர்த்தவில்லையா? ஆனால் பக்தி தரும் நம்பிக்கை என்பதற்கும் உங்கள் அறிவு உணர்த்தும் கடமைகள் என்பதற்கும் ஒரு சிறிய கோடு தான் வித்தியாசம். 9.இரவுப்பறவை இயலாமை என்பது அக்கறையின்மையின் பக்கத்து வீட்டுப் பங்காளி. தமிழன் என்ற இனத்தில் இன்று வரையிலும் இயலாமை என்ற வார்த்தை வசதிகளுக்கு ஏற்றபடி மாறி வந்து கொண்டேதான் இருக்கிறது. காலம் மாறும். காட்சிகள் மாறும். ஆனால் மாற்றம் ஏதும் பெறாமல் இந்த இயலாத்தனம் மொத்தத்தையும் மற்ற இனத்தை விடத் தமிழினம் அதிகமாகப் பெற்றுள்ளது. மாற்றம் என்பது மாறாதது. ஆனால் இங்கு மாற்றம் ஏதும் இல்லை. இத்தனை இயலாமையா? நம்முடைய தமிழின முன்னோர்களிடம் இருந்தது என்று வழிநெடுக பல உதாரணங்கள் பார்த்த போதும், கீழே உள்ள உதாரணத்தைப் பார்த்தபோது இன்று பார்த்துக்கொண்டுருக்கும் அவலத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது. தில்லி அரசாட்சி நடத்திக்கொண்டு இருந்தவன் (கிபி 1311) மாலிக்காபூர் என்ற அலி மன்னர். நம் ஊரை நோக்கி படையெடுத்து வரப் போகிறார் என்ற செய்தி வந்தது. செய்தி கிடைத்ததும் தான் தாமதம் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் (ஊர் குறிப்பு இல்லை) உள்ள பொதுமக்கள் செய்த செயலை அங்குச் சேவை பணியில் இருந்த கிறிஸ்துவப் பாதிரிமார்கள் போப்பிற்குக் கடிதம் வாயிலாகத் தெரியப்படுத்தி உள்ளனர். “ஊர் மக்கள் அனைவரும், ஊரின் திறந்த வெளிக்குத் திரண்டனர். ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், குழந்தைகள் என்று இன்ன பிறர், அவர்களுடன் கூடத் தாம் வளர்த்த ஆடுகள், மாடுகள் அனைத்தையும் ஒருங்கு கூட்டினர். அனைவரையும் சுற்றிப் பெரிய விறகுகளைக் கொண்டு வந்து விறகு வேலி அமைக்கப்பட்டது. முடிவில், விறகு வட்டத்தின் உள்ளே திரண்டிருந்த ஊர்மக்கள், விறகுகளுக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டனர். அனைவரும் கதறிக் கதறித் தீயில் வெந்து செத்தனர்” தடுக்க முயன்றவர்கள் தட்டுத்தடுமாறியது தான் மிச்சம். வேறு என்ன அவர்களால் செய்து விடமுடியும்? தொடக்கக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் வீரம் என்பதை வீரனாக வாழ்ந்து காட்டினர். ஓரளவிற்கேனும் நாகரிகம் என்பது தவழத் தொடங்கிய காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு 500 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் பயணத்தின் மூலமாக வந்த அத்தனை மேலைநாட்டினரும் கடல் கடந்து வாணிபம் செய்ய என்ற போர்வையில் உள்ளே வந்து அத்தனை நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்களான சோழர்கள் நான்கு வகையான படைகளையும் தாங்களே வடிவமைத்து, பயணம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய நாடுகளின் பட்டியல் இது. கடாரம் (மலேசியா), சீயம் (தாய்லாந்து), சாவகம் (இந்தோனேசியா), குமர் (கம்போடியா), புட்கம் (பர்மா), சிங்களம் (இலங்கை). கற்பனையில் கொண்டு வாருங்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, மற்றப் போர் வீரர்கள், தேவையான உதவியாளர்கள், என்று இத்தனை பேர்களுக்கும் தேவையான அன்றாடத் தேவைகள். ஆயிரம் மைல்களைக் கடந்து சென்றதோடு அல்லாமல் அத்தனை இடங்களிலும் வெற்றிக்கொடிகட்டு என்று வெற்றியை நாட்டிய இவர்களின் வீரத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்து விட முடியுமா? அவர்கள் முதிர்ச்சி அடையாதவர்கள், முன்னேற்றத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் என்று எளிதான வார்த்தைகளுக்குள் அடக்கினாலும் தமிழனின் வீரம் என்பது மற்ற எந்த இனத்தையும் விட மாசற்றது. விளங்கிக்கொள்ள முடியாத கால நிலை, பருவ நிலை, சூழ்நிலை, அத்தனையும் தங்களுடைய வீரம் ஒன்றினால் மட்டுமே சாதித்துக் காட்டியவர்கள். சென்ற இடங்களில் எவரும் காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டவில்லை. எதையும் திணிக்கவில்லை. புலிக்கொடியை பறக்க விட்டத்தில் அவர்களின் புனிதப்பயணம் முழுமை அடைந்தது. ஆமாம். கல்வெட்டுகளும், காப்பியங்களும், இலக்கியங்களும் அவ்வாறு தான் ஒப்புவிக்கினறன. பொருளாதார ரீதியாக அங்குள்ளவற்றை இங்கே கொண்டு வராத மன்னர்கள் கூட ஆச்சரியமாகத் தெரியவில்லை. ஆனால் கல்வெட்டுகள், குறிப்பேடுகளில் கூடச் சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழியாக அங்கங்கே பரிணமிக்கின்றன. வீரமாய் இருந்தவர்களை விவேகம் கொண்டு அருகில் இருந்தவர்களின் அற்புத ஆலோசனைகள் விளைவாக உருவானது. மரபுக்கோளாறு ஒரு பக்கம். மாற்ற முடியாத சிந்தனைகள் மறுபக்கம். மரபு சார்ந்த விசயங்களில் அத்தனை மயக்கம் நம்முடைய தமிழனத்திற்கு உண்டு. [] பேரனுக்குத் தாத்தாவின் பெயரை சூட்டுவதுடன் நம்முடைய கடமை முடிந்து விடுகிறது. பண்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை எளிதில் மறந்து மறைத்து விடுகின்றோம். ஆளுமை என்பதில் உள்ள உண்மையான அர்த்தத்தை உணர்த்த தவறி விடுகிறோம். . நம்முடைய ஆற்றலை நாம் உணராத போதும் கூட நம்மை ஆள வந்தவர்கள் மிக எளிதாக உணர்ந்தார்கள். நம்மிடம் உள்ள உழைப்பை மிக எளிதாகக் கண்டு கொண்டார்கள். ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகித்துக்கொண்டுருந்த பிரேசில் நாட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 20 ரப்பர் செடிகளைத் திருட்டுத்தனமாக மலேசியா நாட்டுக்குக் கொண்டு வந்தவர் வெள்ளையர் (1877) சர் ஹென்ரி விக்ரஹாம் என்பவர். ஆனால் மலேசியாவை மொத்த ரப்பர் காடாக மாற்றியவர்கள் அத்தனை பேரும் இங்கிருந்து அழைத்துச் சென்ற நம்முடைய தமிழின மக்கள். இங்கு மட்டுமல்ல. இலங்கை, பீஜீத் தீவு,யூனியன் பிரதேசங்கள், ஆப்ரிகா வைரச்சுரங்கங்கள் அத்தனை உழைப்பும் தமிழனத்தின் உழைப்பு. ஆமாம் உழைப்பு மட்டும் தமிழனத்தின் பங்கு. கிடைத்தபங்கு அத்தனையும் எடுத்துக்கொண்டு போனவர்கள் வெள்ளை மக்கள். இங்குள்ள இயற்கை வளத்தை எடுத்தார்கள். தங்கள் நாட்டுக்கு கொண்டு போனார்கள். இங்குள்ள மக்களை புரிந்து கொண்டு வென்றார்கள். தங்கள் நாடுகளில் சுகபோகமாய் வாழ்ந்தார்கள் இன்று வசதியான இடத்தில் இருந்து கொண்டு நமக்கே அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம்? பிய்ந்து போன செருப்பைத் தைக்கக்கூடத் தெருவில் ஆள் கிடைக்கிறார்கள்? நைந்து போன மனத்துடன் வாழும் தமிழனை காக்க எந்த அவதாரம் மனித ரூபத்தில் வரப்போகின்றான்? 10.அறிவுத்தேடல் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய்த் தன்னைப் பொருத்திக்கொண்டாலும் தமிழன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டிக் கொண்டு விட முடியும். முட்டி மோதி உள்ளே நுழைந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள முடியும். முயற்சிகளின் மூலம் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதும் உண்டு. கலக்கம் என்பது தமிழன் வாழ்வில் அடுத்தவர் உருவாக்குவது தானே அவனுக்கு அவனால் உருவாவது இல்லை. கடல் கடந்து போய் உணவகங்களில் தட்டு கழுவுவது முதல் பன்னாட்டு நிறுவன கணிணி ஆளுமை வரைக்கும் சாதித்த தமிழர்கள் அநேகம் பேர்கள். அதே சமயத்தில் நாள் முழுக்க உழைக்காமல் தொலைக்காட்சியின் முன் தொடர்ச்சியாக பத்து மணி நேரம் அமர்ந்து இருக்கவும் முடியும். உடனே முடிக்க வேண்டிய காரியம் இது என்றவுடன் ஓடிப்போய் ஒன்றி விடுவதும் உண்டு. உழைக்கத் தயங்காத இனம் தமிழினம். கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை. காரணம் ஒவ்வொருவரும் அவர்கள் உணராத அவர்களின் உழைப்பை, திறமைகளை அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள். மேலைநாட்டு வாழ்க்கையில் வெள்ளிக்கிழமை மதியம் என்றால் அடுத்த நாற்பது மணி நேரமும் ஓய்வு எடுக்க கிளம்புவர்கள் மத்தியில் அந்த நாற்பது மணி நேரத்தையும் தனது குடும்பத்துக்காக உழைப்பின் மூலம் தூக்கம் மறந்து குடும்பத்து பொருளாதார வாழ்க்கையை உயர்த்த தயாராக இருப்பவர்களை எந்த பெயர் சொல்லி அழைப்பீர்கள்? ஆனால் தொடக்கத்தில் தமிழனத்தின் முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள். இன்று தமிழனம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். சில வரலாற்றுச் சம்பவங்களை இங்கே பார்த்து விடலாம். சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தவர். இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தைப் பொறித்து வந்த இவர் கண்ட வெற்றிகளை நமக்குச் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. [] பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு) வெள்ளையருக்குக் கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான். அவனுடன் மற்றத் தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன் மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது. இவர்கள் அத்தனை வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான். கடைசியில் வெள்ளையர் “நீ கப்பம் தரவேண்டாம். தருவதாக மட்டும் ஒத்துக்கொள். காரணம் நீ மறுப்பதாகத் தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மறுப்பார்கள்” என்றார். இது வரலாற்று உண்மை. இப்போது புரியுமே குறைந்த வீரர்கள். நிறைந்த வீரம். கதறடித்த கட்டுறுதி. காரணம் தமிழனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது. எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே. வரலாற்றுச் சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது. அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது. ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது. ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை. தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை. இன்று பெரிய வெற்றிடம். காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை. இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று கொடநாட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுக்கின்றார்கள் இல்லையேல் தினந்தோறும் கடிதம் என்ற பெயரால் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள்.? முன்னோர்களான மன்னராக இருக்கட்டும். ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காகத் தன்னையே அர்பணித்தவர்கள். வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீடு அல்ல. முட்டாள்களாக வாழ்ந்து விவேகமற்ற செயல்கள் செய்தவர்களும் அல்ல. ஒவ்வொருவரும் ஆண்டு கொண்டிருந்த பகுதிகளின் எல்லைகள் சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்தச் சுருக்கமும் இல்லை. [] “அறிவைத் தேடு. அது தான் உன் நம்பிக்கை. வேண்டாம் இந்த மூட நம்பிக்கை” என்றார் தந்தை பெரியார். “கல்வி தான் உன் உண்மையான சொத்து. படிடா. அது தான்டா உன் வாழ்க்கையின் படிக்கட்டு” என்றார் கர்மவீரர் காமராஜர். தமிழர்களின் வாழ்க்கையை தங்கள் இதயத்தில் வைத்து வாழ்ந்தவர்கள் மறைந்து இன்று சில சீட்டுக்காக வாழும் மனிதர்களைத்தான் நாம் தலைவர்கள் என்று அழைக்க வேண்டியதாக உள்ளது. [] 7 எழிலாய் பழமைபேசி “சூரியன் அஸ்தமனம் இல்லாத நாடு” எங்களுடையது என்று இறுமாந்து இருந்தவர்களின் ஆளுமையில் இந்தியாவும் இருந்தது. தொடக்கத்தில் உள்ளே வந்தவர்கள் நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டும் வந்து இறங்கினார்கள். கைமாறி வரும் பொருளுக்கும், நேரிடையான கொள்முதல் என்பதன் சூட்சுமம் உணர்ந்தவர்கள் அவர்கள். அதனால் தான் கடல் சூறாவழியும் சுறாமீன்களும் அவர்களின் எண்ணத்தைத் தடை போட முடியவில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கும் வரையிலும் இந்தியாவில் மத மாற்றத்தை வலுக்கட்டாயமாக புகுத்தி உண்டு இல்லை என்று படுத்திக்கொண்டு, கொள்ளை லாபத்தால் வாழ்ந்து கொண்டுருந்த டச்சு, பிரெஞ்சு நாட்டுக்காரர்களின் கொட்டமும் அடங்கியது. வந்து இறங்கிய ஆங்கிலேயர்களின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. வணிகம். லாபம். அதைவிட இருப்பு முக்கியம். அவர்கள் பார்வையில் இல்லாதவர்கள், இருப்பவர்கள் என்ற பாகுபாடு எதுவும் தொடக்கத்தில் இல்லை. ஆனால் “நாங்கள் இப்படித்தான்” என்று வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் நம்முடைய முன்னோர்கள். உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பக்கத்து நிலம் பல ஆண்டுகள் கவனிப்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்? கவனிப்பு இருந்தும் தீர்கக முடியாத பங்காளிச் சண்டை காலம் முழுக்க முடிவே இல்லாமல் போய்க்கொண்டுருந்தால் என்ன நடக்கும்? உள்ளே வந்தவர்களை “நீங்க தான் சாமி? ” என்று கும்பிட கும்பிட குனிய வைத்து “கும்மாங்குத்து” குத்தத் தொடங்கினார்கள். முழுமையாக மூன்று தலைமுறைகள் தெளிவாக வியாபாரம் செய்தார்கள். கிடைத்த அபரிமிதமான லாபத்தை இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். “நீங்கள் ஆண்டை சாமி? நாங்கள் உங்கள் கீழ் அடங்கிப் போக வேண்டியவர்கள்” நம்மவர்கள் இதனை நேரிடையாகச் சொல்லவில்லை. ஒருவருக்கொருவர் அடித்துச் செத்துக்கொண்டு நிரூபித்தார்கள். [] மூன்றாவது தலைமுறையில் தான் பிரிட்டன் அரசாங்கத்தின் கைக்கு இந்தியா போனது. வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களின் சிந்தனைகளை ஊன்றி கவனித்துப் பாருங்கள்? நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு தான் அவர்கள் சிறப்பானவர்களா? இல்லை சில்லறைத்தனமானவர்களா? என்பதை நமக்கு உணர்த்தும். கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டன் ஆட்சியாளர்களின் சிறப்பான திட்டமிடுதல் காரணமாகத்தான் இங்குள்ள அத்தனை செல்வமும் சிந்தாமல் சிதறாமல் அங்கே போய்ச் சேர்ந்தது. இன்று வரைக்கும் அவர்களை ஐ.நா மேஸ்திரி வேலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. நாம் எப்போதும் சித்தாள் வேலையே போதுமென்று இன்று வரையிலும் ஊடகம் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் உலகை ஆண்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாம் உலக வங்கி பார்வையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றோம். இன்று நம்முடைய தமிழினம் ஏறக்குறைய ஆறு கண்டங்களில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா? இருந்து வாழ ஒரு இடம். படுத்துக்கொண்டு பார்க்க ஒரு தொலைக்காட்சி. படுக்கும் போது முடிந்தால் அருகில் மனைவி இல்லையேல் ஒரு பானம். நமக்கு எதுவுமே நமக்கு சுருக்கமாய் வேண்டும். எல்லாமே சுகமாய் இருக்க வேண்டும். ஆனால் இதனை மீறி சிறப்பாகச் சிந்திக்கக் கற்றுக்கொண்ட அத்தனை தமிழர்களும் வேறு ஒரு தளத்தில் போய் வாழத் தொடங்கி விடுவார்கள். தன்னை, தன்னுடைய ஒற்றுமையை இனத்தால் உணர்வால் ஒன்றினைந்து வாழ்வதை விட மதத்தால், ஜாதியால் வெளிக்காட்ட விரும்புவன் தமிழன் என்றால் எந்தச் சந்தேகமும் இல்லை. தலைவிதியே என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ளும் போதே தன்னுடன் தன்னுடைய வழித்தோன்றல்களையும் வாழ வழி இல்லாமல் செய்பவன் என்பதை உணர்வதே இல்லை. அத்தனை தமிழனும் மூன்றே மூன்று கிளை நதிகளில் தான் பயணத்தைத் தொடங்குகிறான். இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவன். ஆனால் மூன்று நதிகளாகப் பிரிந்து பயணத்தைத் தொடங்கினாலும் ஒரே இடத்தில் சேர்ந்து “தலைவிதியே இதற்குக் காரணம்” என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே வாழ்ந்து மடிகின்றான்.. [] “இப்படி இருப்பதற்குக் காரணம் நீ தான் காரணம்” இது பௌத்தம் சொல்லும் தத்துவம். ஆனால் தமிழனின் மொத்த வாழ்வியலிலும் கடைபிடித்துக்கொண்டு வரும் இறைபக்தி கூடச் சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆமாம். தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது “கர்ம மார்க்கம்“. அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் “ஞான மார்க்கம்“. ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமாக “பக்தி மார்க்கத்தை” தான் மத வேறுபாடுகள் இல்லாமல் அத்தனை தமிழர்களும் விரும்புகிறார்கள். அன்றும் இன்றும் என்றும் இந்த “பக்தி மார்க்கத்தை” கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள். ஆலயத்திற்குள் சென்று மனதிற்குள் உள்ளதை போய்க் கொட்டி விட்டால் போதும். மொத்த பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு கைக்கு வந்து விடும். இதைத்தான் ஆத்ம திருப்தி. பூரண மகிழ்ச்சி என்கிறான் இந்த மார்க்கம் கடைபிடிக்கத் தொடங்கிய தமிழர்களைப் பார்த்து தான் அத்தனை மூட நம்பிக்கைகளும் வரிசை கட்டி வந்து நின்றது. [] மதமும் வளரவில்லை. மார்க்கமும் புரிபடவில்லை. மூலமும் போய்விட்டது. முகவரியும் மாறிவிட்டது. வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கே வழி பிறந்து இருக்கிறது. ஒவ்வொரு துன்பமான காலகட்டத்திலும் மேலை நாடுகளில் கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், புரட்சிகள், மேன்மையான சிந்தனைகள் உருவானது. மக்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியாய் இருந்தது. ஆனால் இங்கு ஞானிகளும், ரிசிகளும்,வேதங்களும், விற்பனர்களும், வியாக்கியானங்களும், வினோத நம்பிக்கைகளும் தோன்றின. இந்த வினோத நம்பிக்கைகள் அத்தனையும் உள்ளே உண்மையாக இருந்த சிந்தனைகளையும் மழுங்கடிக்கப்பட்டதாக மாற்றிவிட்டது. மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் சொன்ன முதன்மையான காரணம் என்ன தெரியுமா? அத்தனை மக்களையும் கோழையாக மாற்றி விட்டார். தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் என்ன? வாழாமல் போனால் தான் என்ன? “காந்தி மகானே உங்கள் பணி என்பது சமூகத்தின் பிணி. போதும் அய்யா. இது எங்களுக்கு இனி தேவையில்லை” என்று வார்த்தைகளில் சொல்லாமல் துப்பாக்கி குண்டு மூலம் சொன்னார்கள். எது எளிதோ, எது கடினம் இல்லையோ? அது தான் தமிழனின் முதல் தேர்வாக இருக்கும். அறிவை கூர்மையாக்கினால் அது ஆத்மாவை சுத்தப்படுத்திவிடும். இதனால் தான் இந்தத் தமிழனின் உணர்ச்சிகளை நன்றாக உணர்ந்த இன்றைய தலைவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தூண்டிலில் சிக்கிய புழுவைப் போல வைத்துள்ளனர். [] 8 நிலமெல்லாம் ரத்தம் “மனிதர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரனத்திற்கும் இறப்பு என்பது சர்வ நிச்சயம்”. காலஞ்சென்ற தொழில் அதிபர் திருபாய் அம்பானி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது காஞ்சிபுரம் மடத்தில் இருந்து தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கராச்சாரியார் தனி விமானத்தில் போய் அம்பானிக்காக ஹோமம் செய்த போதும் கூட உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சாவு நேரத்தை தள்ளிவைக்கக்கூட முடியவில்லை. எந்தக் கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் மனிதனின் சாவென்பது நிச்சயிக்கப்பட்டது தான். “நின்று போய்விடுகின்ற நிச்சயார்த்த நிகழ்ச்சிகள்” போல் மாறிவிடாது. நெருங்கி விட்டது என்று உணரும் போது உங்கள் உள் உணர்வு உரையாடலும் தொடங்கி விடும். அறிவாளியா? சிந்தனையாளரா? சிறப்பாய் தான் வாழ்ந்தீர்களா? இது போன்ற கேள்விகள் அனைத்தும் உங்களைத் தாக்கும். எல்லாவற்றையும் புடம் போட்டு நகர்த்தி விடும் “நகர்”வு அது. [] அந்த நகர்வின் போது உங்களை நாறடித்துவிட்டு தான் உங்கள் ஆத்மா உங்களை விட்டு நகரும். நம்பவேண்டுமென்ற அவஸ்யமில்லை. அந்த நாள் வரும் போது நாம் உணர்வோம். உணர்த்த கணத்தில் நம்மருகில் யாரும் இருக்கப் போவதும் இல்லை. இந்த அனுபவங்களை “உள்வாங்கியவர்களின்” வாழ்க்கையை பார்க்கும் பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடியும். அத்தனையும் இதைத்தான் உணர்த்துகிறது. வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு மன்னர்களுக்குள் உள்ளே உள்ளுக்குள் புகைந்த எரிச்சல், பொறாமை, விவேகமற்ற கொள்கைகள் ஒரு புறம். ஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டு விட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும் இன்று போல் அன்றும் சிதறடித்தார்கள். வந்தவர்களிடம் ஆட்சியைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஓரமாய் ஒதுங்கி நின்று அவர்களிடம் அடங்கி வாழ்ந்தார்கள். இந்த ஒரு குணத்தினால் மட்டுமே ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இந்தத் தமிழனத்தை வந்தவர்கள் போனவர்கள் அத்தனை பேர்களும் ஆண்டனர். அள்ளிக்கொண்டும் சென்றனர். ஏன் இத்தனை நிகழ்வுகள் தமிழன் வாழ்வியல் முழுக்க? அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது? சோழர் ஆட்சி சிறப்பாக இருந்தபோதிலும் (கிபி 900 முதல் 1200) ஓயாமல் நடந்து கொண்டுருந்த போரினால் அத்தனை வெறுப்பும் உருவானது. விரும்பத்தகாத பல விளைவுகளும் தோன்றியது. சோழருக்குப் பின் வந்த பாண்டிய ஆட்சியும் (கிபி 1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கியக் காரணம் தமிழர்களின் முக்கியக் குணமான ஓற்றுமையின்மையே. மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் மறைவுக்குப் பின் அவரின் புதல்வர்கள் சுந்தரப் பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்து. அன்றும் பஞ்சாயத்து பேச கோவூர்கிழார் இருந்தார். சோழ மன்னர்களான நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் அன்று அவர் தான் ஒற்றுமைப்படுத்தி உலகறிய அவர்களின் பெருமையையும், தமிழனத்தின் வளர்ச்சியையும் நீண்டு வாழ வழி செய்தார். கோவூர்கிழார் இல்லாத காரணத்தால் வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தரப் பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா? படை எடுக்கப் பயந்து கொண்டுருந்த டில்லி அலாவூதின் கில்ஜீயின் படைத்தலைவன் மாலிக்காபூரிடம் சென்றடைந்தான். பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தான். செய்து கொடுத்தான். படையெடுத்து வந்தவர்கள் அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டுருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்திருந்த சுந்தரப் பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை. வரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம், மதமாற்றுதல். மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதி தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள். அதனைத் தொடர்ந்தும் வந்த அத்தனை அந்நிய படையெடுப்புகளும் அட்டகாசமாகத் தங்களுடைய ராஜபாட்டையைத் தொடர்ந்தார்கள். நம் முன்னோர்கள் அத்தனை பேர்களும் இவர்கள் பின்னால் தொங்கினார்கள். வட இந்திய படையெடுப்புகள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள் என்று தொட்டு தொடர்ந்து கடைசியாக வந்து உள்ளே நுழைந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள். நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை. வாழவும் முடியவில்லை. ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்துத் தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே. இன்றைக்கும் அன்றைக்கும் என்ன பெரிதான தமிழன் வாழ்வில் முன்னேற்றங்கள்? ஒவ்வொரு இனமும், போராட்டங்களும் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ காரணங்களை நீங்கள் வரலாற்றில் படித்து இருக்கலாம். வீரம் இருக்கும். அச்சம் ஆச்சரியம் கூட இருக்கும். மொத்தத்தில் எல்லாவற்றிலும் எதிர்மறை நியாயங்கள் இருக்கும். ஆனால் மொத்தமாகத் தமிழனின் தொடக்க வரலாற்று தொடங்கி இன்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத வரைக்கும் ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமையின்மை. திருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்? [] 9 நிகழ்காலத்தில் இனத்திற்கும், மொழிக்கும் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த அந்நிய கலாச்சாரப் படையெடுப்புகளால் உருவான பாதிப்புகளை எவரும் தொலைநோக்குப் பார்வையில் பார்க்கவில்லை என்பதே வரலாற்றுச் செய்திகள் தரும் உண்மையாகும். இந்தியாவிற்குள் 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு முதன்மையாக வரவேற்பு அளித்தவர்கள் தென்னிந்தியர்களே. வாஸ்கோடகாமா (1498) என்ற போர்த்துகீசியர் முதன் முறையாக ஆப்ரிக்கத் தென்முனையைச் சுற்றிக்கொண்டு இந்தியாவிற்குள் வந்து புதிய வரலாற்றை உருவாக்கினார். அவர் வந்து சேர்ந்த இடம் சேரநாட்டுக் கள்ளிக்கோட்டை. இவரைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்தனர். வணிகம், வாணிபம், பண்டமாற்று என்று தொடங்கி மத இன மொழி திணித்தலும் ஒரே சமயத்தில் படிபடியாக நடந்து கொண்டேயிருந்தது. இந்திய மொழிகளில் முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்புத் தமிழில் தான் உருவாக்கப்பட்டது. நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கிறது? என்ன செய்வது நம்மவர்களின் தராள மனப்பான்மைக்கு எல்லை ஏதும் இல்லை. முதன் முதலாக ஐரோப்பியர்கள் வந்து இறங்கிய கள்ளிக்கோட்டை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. நம்மவர்கள் அவர்களுக்குக் கீழே பணிபுரிவதை மிகப் பெருமையாகக் கருதினர். இப்போது சென்னை என்று அழைக்கப்படும் இடத்தில் ஜார்ஜ் கோட்டையைப் பண்டக சாலையாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர். ஐரோப்பியர்கர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திய காலக் கட்டத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் உறுதியாய் இருந்தது. ஆமாம் ஜப்பான் நாடு அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தார்கள். 200 ஆண்டுகளாக அந்நியர் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்தவர்களைக்கூட ஓதுக்குப்புற தீவுகளில் தான் வணிகம் செய்ய அனுமதித்தனர். ஆனால் மீறி இரண்டு பாதிரிமார்கள் உள்ளே நுழைந்த போது அவர்களைக் கண்டுபிடித்து உலகறிய நாகசாகியில் கழுவேற்றி கொன்றனர். நாகசாகியில் குண்டுமழை பொழிந்த காரணங்களுக்குப் பின்னால் இதுவும் ஒன்று என்று இன்றுவரையிலும் நம்பப்படுகிறது. ஆனால் இன்றும் அன்றும் நம் மக்களைப் போலவே சீனர்களும், யூதர்களும் எல்லா நாடுகளிலும் குடியேறினார்கள். ஆனால் இன்று உலகத்தின் நாட்டமை அமெரிக்காவின் அரசியல், வணிக ஆதிக்க வர்க்கமென்பது இன்று வரையிலும் யூதர்களே. அடுத்து இவர்களைப் போலவே சீனர்கள். சீனர்களின் சிறப்பைச் சொல்லத் தேவையில்லை. சிங்கப்பூர், மலேசியா என்று தொடங்கி இன்று பல நாடுகள் அவர்களின் கண் அசைவில் தான் உள்ளது. மெஜாரிட்டி மைனாரிட்டி என்று பேச்செல்லாம் அவர்களின் வாழ்க்கையில் இல்லை. ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம். பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி. என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது. இதன் விட்டகுறை தொட்ட குறை தான் இன்று வரையிலும் “பாண்டி” (கேரளா), “அரவாடு” (ஆந்திரா), மற்றும் வட இந்திய மார்வாடிகள் நம்மை அழைக்கும் “தீவானாதேசு”. என்று பலதரப்பட்ட பெயர்களின் மூலம் தமிழர்களை கூறுபோட்டு கொத்துக்கறியாக்கிக் கொண்டு இருக்கின்றனர். காரணம் அன்று முதல் இன்று வரையிலும் பொருளாதார ரீதியாக நாம் பின்தங்கியே இருக்கின்றோம். பழிப்பவர்களை வளர்ப்பதிலும், ஏமாற்றுபவர்களையும் புகழ் பாடுவதிலும், நம்மை ஆட்சி செய்பவர்களை உணர்ச்சி வேகத்தில் தேர்ந்து எடுப்பதிலும் நம்மை மிஞ்சுபவர்கள் எந்த உலகில் காண முடியாது? ஒவ்வொரு நாட்டுக்கும் வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்றவர்களின் கதி தான் இன்று அதோகதி என்றால் பண்டைய தமிழ் வரலாற்றில் வாளெடுத்துச் சென்ற அத்தனை மன்னர்களும் தங்களுடைய வீரத்தை உலகமெங்கும் பறைசாற்றியதோடு அவர்களின் கடமை முடிந்ததாகவே கருதினர். ஒவ்வொரு மன்னர்களும் படையெடுத்துச் சென்ற நாடுகளில் எந்தவிதமான பொருளாதாரச் சீரழிவு வேலைகளையும் செய்யவில்லை. உலகம் வெறுக்கக்கூடிய கலாச்சாரச் சீரழிவுகளையும் செய்தவர்களில்லை. ஆனால் இங்கு வந்து இறங்கிய போர்த்துகீசீயரும், பாரசீகரும், பிரெஞ்ச் நாட்டுக்காரரும் முடிந்தவரையிலும் தங்களுடைய தாக்கங்களை எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நிலைநாட்ட தவறவில்லை. வாணிகம் முதல் பட்சம். கொள்ளை லாபம் முக்கியம். ஆனால் இதைவிட முக்கியம் மதம் மாற்றுதல். அத்துடன் இருந்தாலும் பரவாயில்லை. இங்கே உள்ள அத்தனை விசயங்களையும் முடக்கவும், முயற்சிகளைத் தடுக்கவும் செய்தனர். இதனையே ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் கவனமாகச் செய்து வந்தனர். இங்கே படிப்படியாக மொழி முதல் பழக்கவழக்கங்கள் வரையிலும் ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நம்முடைய சாதனைகள் தான் எத்தனை எத்தனை? மருத்துவம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், போர்க்கலை, கப்பற்கட்டும் தொழில் நுட்பம் போன்றவற்றை மறைத்தார்களா? அழித்தார்களா? மொத்தத்தில் காலம் அத்தனையும் விழுங்கி விட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி தவிர வளையாபதியையும், குண்டலகேசியையும் அழியவிட்டோம். பெரும்பாலான சங்க இலக்கியங்களைத் தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் கண்டுபிடித்து தராமல் இருக்கும்பட்சத்தில் தமிழ் இலக்கியத்தின் ஒரு பெரிய பரப்பளவை இழந்து இருப்போம். ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவான தலைவர்கள் எவருமே தெளிவான நோக்கில் தமிழை வளர்ப்பதில் கவனம் செலுத்தாத காரணத்தால் மொரிசீயஸ், யூனியன் பிரதேசங்கள், தென்னாப்ரிக்கா, பீஜீ தீவுகளில் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் பரவி வாழும் இடங்களில் தமிழ் மொழி பேச்சு வழக்கில் இருந்து மாறி விட்டது. இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் வைத்துருக்கும் பெயர் மட்டுமே தமிழராக அடையாளம் காட்டுகின்றது. [] பாண்டியப்பேரரசின் ஆட்சி (கி.பி.1250-1325) 10 ஓரு ஊரிலே (யாதும் ஊரே யாவரும் கேளீர்) தமிழகத்தில் இருந்து சென்று வேறொரு நாட்டில் வாழ வேண்டும் என்று கிளம்பிய கூட்டம் எவருமே விருப்பத்துடன் செல்லவில்லை. இனம், மதம், குலம் ஏற்றத்தாழ்வுகள் தந்த வலிகளும் அவமானமும், அவல வாழ்க்கை வாழ முடியாமல் வாழ்ந்த கூட்டம் அது. “எப்பொழுது கதவு திறக்கும்? காற்றைச் சுவாசிக்க முடியும்?” என்று காத்துக் கொண்டுருந்த மக்கள் அவர்கள். இலங்கையில் உள்ள தோட்ட வேலைகளுக்குச் சென்ற தமிழர்களுக்கு சம்பளம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆமாம். ஒப்புதல் இருந்தால் உடன் வா? இல்லாவிட்டால் ஒதுங்கி விடு? என்ற கட்டளைக்குக் கீழ்படிந்து அட்டை போல் வாழ புறப்பட்ட கூட்டம் அது. அப்போது அங்கு வாழ்ந்த சிங்கள மக்களிடம் ஆங்கிலேயர்களின் “அறிவுரை” எடுபடவில்லை. ஆனால் இலங்கை மட்டுமல்ல. எந்த நாட்டுக்கும் புலம் பெயர்ந்த தமிழ் கூட்டமும் சரி, இன்று வரையிலும் மற்ற இன மக்களைப் போல குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய எண்ணிக்கையில் முன்னேற்றம் அடைந்து விடவில்லை. அதற்கான சிந்தனைகளும் உருவாகவும் இல்லை. காரணம் தமிழர்களின் அடிப்படை மனோபாவம் தான் இங்கே முக்கியப் பங்கு வகிக்கின்றது. பசிக்கு ஒரு வாழ்க்கை. ருசிக்கு ஒரு கொள்கை. எந்த நாட்டுக்குள் வாழ்ந்தாலும் அவர்களின் மரபென்பது தமிழ் பரம்பரையின் மூலக்கூறு தானே? என்ன பெரிதான மாறுதல்களை எதிர்பார்க்க முடியும்? மொத்தத்தில் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. இந்த எண்ணமே தமிழனுக்கு பரம திருப்தியை தந்து விடுகின்றது. ஒவ்வொரு தமிழனும் தான் வாழும் நாடுகளில் முதலில் உருவாக்குவது ஆலயம். இது ஒன்று போதுமே? தன் விதிப்பயன் என்று அழுது புலம்புவதற்கும், கடவுளிடம் வேண்டு கோள் வைப்பதற்கும். அன்றைய தினம் கழிந்து விடும். அடுத்த நாள் என்பது விதியின் கட்டளை. காரணம் தொலை நோக்கு பார்வை என்பதை எப்போதுமே நம்முடைய தமிழர்கள் தொல்லை நோக்கு பார்வை என்று கருதிக் கொள்வதால் இன்று வரையிலும் உலகத் தமிழினத்தில் எந்த மாற்றமும் இல்லை. அரசாங்கம், ஆளுமை, அதிகார வர்க்கம் என்ற எல்லாமட்டத்திலும் தொடக்கத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் நம்முடைய தமிழர்கள். காலப்போக்கில் இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள் மேலே ஏறி விட தமிழர்கள் சிறுபுள்ளியாக மாறத் தொடங்கினர். தமிழனின் நீண்ட வரலாற்றில் இரண்டு காலங்கள் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஓன்று சங்க காலம் (கிபி 250 வரைக்கும்) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரைக்கும்) 400 விதமான வரிகளின் மூலம் ஆட்சி புரிந்த மன்னர்களின் ஆட்சி எத்தனை மகத்தானது என்று அப்போது வாழ்ந்து புலவர்களின் வார்த்தைகள் நமக்கு உணர்த்தினாலும் அது மட்டுமே உண்மையில்லை. ஓதுக்குப்புறமாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை எப்போதும் போல கொடுமையாகத்தான் இருந்தது. மதம் சார்ந்த விசயங்கள், மாசில்லா தான தர்மங்கள், வறியவர்க்கு வள்ளல் என்று வாழ்ந்த அத்தனை மன்னர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எந்தப் பங்களிப்புகளையும் அளித்ததாக அதிகச் சான்றுகள் இல்லை. அன்று முதல் இன்று வரை ஓடுக்கப்பட்ட மக்கள் அத்தனை பேர்களும் தங்களது சொந்த முயற்சிகளினால் மட்டுமே முன்னேறி உள்ளனர். அவர்களின் முன்னேற்பாடுகளினால் உருவான முயற்சிகளும், உழைப்புகளும் தான் அவர்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது. வாழ முடியாத மக்களின் வாழ்க்கை தரத்தைப் பற்றி பல புறநானூற்றில் உள்ள பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது. மூவாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்ததாக உள்ள தமிழனின் வரலாற்றில் தொடக்கம் முதல் ஆண்டு வந்த மன்னர்களின் எந்த மாடமாளிகை இன்று வரை இருக்கிறது? என்ன சாஸ்திர கோளாறு? அத்தனை சாஸ்திரங்களைச் தினசரி சாப்பாடு போல் வாழ்ந்தவர்கள் என்ன தவறு செய்த காரணத்தினால் நிலைக்கச் செய்யமுடியவில்லை? ஆன்மீகத்தை ஆலயத்திற்குள் வந்து பருகி அருள் பெற்று மெய்ஞானம் பெற்று விடுங்கள் என்று கட்டி எழுப்பிய அத்தனை கோவில்களும் இன்று உள்ளதா? ஏன்? மக்கள் நலத்திற்காகக் கட்டிய அணைகள் இன்று வரையிலும் உயிர்ப்புடன் இருக்கிறதே . ஏன்? தங்கள் மனதை வெல்ல முடியாமல், நிஜத்தை விழுங்க பயந்து, உண்மையில் எது நிலைக்கும்? என்பதை ஆண்ட மன்னர்கள் உணராமல் அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்தவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் இன்று தமிழினம் உணர்ச்சிகள் மட்டும் நிரம்பிய கூட்டமாக மாறியுள்ளது.. பெரும்பான்மை மக்களின் ஏழ்மையை மறைக்க அன்றும் இன்றும் என்றும் ஆளுமையில் இருப்பவர்கள் கடைபிடிக்கும் ஒரே பழக்கம் ஈகை. ஆமாம். தானம் வழங்குதல். அன்று மன்னரின் புகழ் பாட உதவியது. இன்று நலத்திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது யானைப்பசிக்கு சோளப்பொறி. மற்ற இனங்களை விட தமிழனத்திற்கென்று குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய சில தனிப்பட்ட குணாதிசியங்கள் உண்டு என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்பாமை, ஈடுபடுபவர்களை அவர்களின் துணிச்சலை குலைத்தல், எல்லாவற்றுக்கும் ஜென்ம பலன், அடிமையாக இருந்தால் எளிதான வாழ்க்கை, புதிய சிந்தனைகளைப் புழுவுக்குச் சமமாகப் பார்ப்பது, வசதி இல்லாத வாழ்க்கையை வழுக்குப்பாறைக்குச் சமமாகப் பார்ப்பது, திட்டமிட்டு செலவழிக்க மறுப்பது, காசு இல்லாவிட்டால் கூடக் கடன் வாங்க தயக்கமில்லாமல் ஆடம்பரத்தில் நாட்டம், மதுவுக்குப் பரிசு சீட்டுக்கு முந்திக்கொண்டு வரிசையில் நிற்பது. மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் “தலைவிதி” என்று ஒரு வசதியான வார்த்தையைக் கொண்டு தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுதல். “திரை கடல் ஓடியும், திரவியம் தேடு” என்ற பழமொழி மட்டும் தான் நம்முடையது. ஆனால் நொடித்துப்போன பல மேலைநாடுகள் அத்தனையையும் காரணக் காரியங்களையும் ஆராய்ந்து பல நாடுகளைக் கைப்பற்றினர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். இன்று வரையிலும் அடிப்படை வசதியான வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர். வறுமையின் கோரத்தாண்டவம் தந்த பரிசு தான் பல மேலை நாடுகளில் உருவான புரட்சிகள். அதுவே இறுதியில் ஏழைகள் இல்லாத பொது உடைமையும், முதலாளித்துவக் கோட்பாடுகளையும் உருவாக்கியது. இன்று வரைக்கும் ஓடுக்கப்பட்டவர்கள் “ஆலய வழிபாட்டுப் பிரவேசம்” என்று அரசாங்கம் முன்நின்று நடத்திக்கொண்டுருப்பதை வளர்ந்த நாகரிகம் என்று கணக்கில் கொள்ள முடியுமா? மேலைநாடுகளில் உருக்குலைந்த சமூக அமைப்பை அவ்வப்போது வந்த தலைவர்கள், கொள்கைகளால், தன்னுடைய தனிப்பட்ட ஆளுமை திறன்களால் முன்னெடுத்துச் சென்றனர். ஆனால் நம்முடைய மன்னர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும் வெறும் வார்த்தைகளால் நம்மை மயக்கி வைத்திருப்பது என்ன தெரியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்“. கடுமையான பஞ்சம் என்றாலும் நமக்கு ஒரு களி உருண்டையின் மூலம் வாழ்ந்து விட முடியும். எத்தனை வெள்ளம், புயல் என்றாலும் இயல்பு நிலைமைக்கு நாமே திரும்பி விட முடியும். அன்று புலவர்கள் புகழ்ந்து பாடி வெகுமதி என்ற பெயரில் தன்னையும் தொலைத்து தமிழையும் தொல்லை படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுவே இன்று “வருங்காலமே, வாழ்விக்க வந்தவனே” என்று புகழ்ந்து ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை வசதிகளும் நம்மை விட்டு போய்க்கொண்டுருப்பதை வெறும் வேடிக்கையாளனாகப் பார்த்துக் கொண்டுருக்கிறோம். ஒதுங்கியிருக்கும் ஒரு ஊரிலே உள்ள கிராமத்தின் குறைந்த வாழ்வாதாரம் என்பது அந்த மக்கள் அடிப்படை விசயங்களுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்? அதுவே தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரை பாதிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருக்கவும். 11 தமிழர்கள் - பழமையானவர்களா? ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன. புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம். சிந்துவெளி நாகரிகம்: சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன. நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது. [] சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன: 1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது. 2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை. 3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை. 4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது. 5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை. 6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. 7. வேதத்தில் புலி பற்றிச் சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. 8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படிக் காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.) 9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன. 10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review – An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 ) 11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூடக் காணப்படவில்லை. 12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர். சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர். கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express – Madras – 5 August 1994). சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது. அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர். சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express – Madras – 5 August 1994) Fr. ஹீராஸ் ‘Studies in Proto – Indo – Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர். தமிழர்கள் உலகில் எங்குச் சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. ‘சொல்லாய்வுஃ. ‘பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன. [] சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. பூம்புகார் ஆய்வுகள் குறித்துக் ‘குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் ‘சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு: 1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ”கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும் ‘நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன். புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு. சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும். எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது. சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன. பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும். எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). …ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன. நதிகள், மலைகளின் பெயர்கள் நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது. பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் ‘பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் ‘குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது. இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது. இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது. தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்துக் ‘குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு: 2 – பூம்புகார் அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார். 18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி. ”நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ”மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது. கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ”தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிரச் சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ”ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்து இருந்தது. இருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாகப் பாதியில் நிறுத்திவிட்டது. இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ”சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ”லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ”சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார். இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்குச் சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ”ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாகப் பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது. இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்துச் சரிதான் என உறுதிப்படுத்தினார். சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார். மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களைப் பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார். மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றிக் கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள் 1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். 2.மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும் அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது. 3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது. 4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது) 5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது. 6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது. 7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன. 8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன. 9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது. 10. கி.மு. 17000 – 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின. 11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது. 12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது. 13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் நம்பகத் தன்மை: 1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார். 2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. 3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார். 4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன. 6 படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளி பரப்பப்பட்டன. 7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது வரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்: 1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. 3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. 4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. 6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன. 7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை. 8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள். நன்றி - முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை) [] [] 2 பகுதி இரண்டு 12 வறப்பட்டிக்காடு “அமைச்சரே?” “சொல்லுங்க மன்னா!” “மாதம் மும்மாரி மழை பொழிந்ததா?” “மக்கள் உங்கள் ஆட்சியில் சுபீட்சமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் மன்னா…….” மந்திரி வேடம் போட்ட ஒரு துணை நடிகர் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறதா? [] மேலே சொன்ன வசனத்தை நிச்சயம் நீங்க உங்க ஊரு கீத்து கொட்டகையில எச்சில் துப்புன மணல் மேல உட்கார்ந்து கொண்டு பார்த்து இருக்கக்கூடும். “இல்லப்பா நான் பொறந்தது முதல் பன்னீரில் தான் கொப்புளித்து வளர்ந்தேன்” என்பவர்கள் கொஞ்சம் யூ டியுப் ல் பார்த்திடுங்க. காரணம் பழைய மன்னர் காலத்துத் திரைப்படங்களில் பெரும்பாலும் நிச்சயம் இந்த வசனம் ஏதோவொரு இடத்தில் வந்தே தான் தீரும். பார்க்கிறவர்களும் ம்…..ம்….. அந்தக் காலத்துல மக்கள் எத்தனை சந்தோஷமாக இருந்துருக்காங்கன்னு பெருமூச்சு விட்டுக் கொண்டே கொட்டாவி விட்டபடி யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்துடுவோம். மேற்கொண்டு நமக்குள் முன்னால் வாழ்ந்தவர்களைப் பற்றி நாம் யோசித்தால் படித்த பாடப்புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும்.. மன்னர் காலங்களில் சமயம் தழைத்தோங்கியது. ஆன்மீகம் அகன்று நின்றது. என்று பத்து மதிப்பெண்களுக்காகப் படித்து அதையும் மறந்து போயிருப்போம். நாம் படித்து வந்த எந்த நிகழ்வுகளையும், வரலாற்றுச் சம்பவங்களும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் தற்புகழ்ச்சி அணியில் கொண்டு போய்ச் சேர்த்தவர்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இது போன்ற வசனங்கள் சொல்கின்றபடி நம் மூதாதையர்கள் வாழ்ந்து இருந்தால் இன்றைக்கு இந்தியா இருக்க வேண்டிய இடம் என்ன? தமிழினம் மூவாயிரம் வருடம் பெருமை மிக்கப் பராம்பரியம்ன்னு தொடையைத் தட்டி இன்று புல்தடுக்கி பயில்வானாக மாறி இருப்போமா? கடந்து வந்த வரலாற்று காலங்களில் பசியும் பஞ்சம் பட்னியும் பழைய தமிழகத்தில் சர்வசாதரணம். [] குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமாக உண்டு. ஒரு பக்கம் ஜாதிக்கலவரம், பிழைக்க வழிதெரியாமல் வெளியேறிய கூட்டம் மறுபக்கம். ஆற்றுப்பாசனமின்றி பொட்டல்காடுகளும், வானம் பார்த்த பூமியுமாய் வாழ்ந்த வாழ்க்கையில் வெயில் கொடுத்த கருத்த தேகம் தான் ஒவ்வொருவருக்கும் மிஞ்சியது. உழைப்புக்கு அஞ்சாத மக்களைப் போலவே முணுக்கென்று வரும் கோப மக்கள் தற்பொழுது தான் காலமாற்றத்தில் கொஞ்சம் மாறிக் கொண்டு வருகின்றார்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32.. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு கணக்கின் அடிப்படையில் மாறி மாறி உருவாகி இன்று பழைய இராமநாதபுரம் மாவட்டம் பல கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. பழைய இராமநாதபுரம் மாவட்டம் 4,089 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏறக்குறைய 12 லட்சம் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஈழத்தீவின் ஆறில் ஒரு பங்கு அளவிற்குப் பிரம்மாண்டமாக இருந்தது. 1975ல் நாம் நின்று கொண்டுருக்கும் இந்தப் பூமிக்குப் பெயர் இராமநாதபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து விருதுநகர், தூத்துக்குடி,சிவகங்கை, இராமநாதபுரம் என்று இதனுடைய பெரிய பரப்பளவை சிறிதாக மாற்றிவிட்டார்கள். இந்துவாகப் பிறந்த அத்தனை பேர்களின் பாவங்களைத் தீர்க்கும் என்று நம்பப்படும் இந்த இராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் தான் இருக்கிறது. இந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பல பெருமைகள் உண்டு. ஆனால் அத்தனை பெருமைகளையையும் தூக்கி சாப்பிடுற மற்றொரு பெருமையும் உண்டு. அது தான் வறப்பட்டிக்காடு. அரசாங்க ஊழியர்களுக்குத் தண்டனை கொடுக்க இந்த மாவட்டத்திற்குத் தான் தூக்கியடித்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் திருவாடனை, பரமக்குடி, கமுதி, முதுகளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் அடங்கிய பகுதிகள் பாண்டிய மன்னர்கள் வசம் இருந்தது. இதே பகுதிகள் மிகக் குறுகிய காலத்தில் (1063) ராஜேந்திர சோழன் வசமும் இருந்தது. பின்னால் வந்த நாயக்கர்கள் வசமும் (1520), இருந்த பகுதிகள் மாறி மாறி கடைசியில் பாண்டிய மன்னர்களிடத்தில் உருவான சண்டைகள் குடும்பச்சண்டைகளாக மாறத் தொடங்க அப்போது தான் இந்தப் பூமி கைமாறத் தொடங்கியது. [] 13 சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் மூன்று மன்னர்களுக்குப் பிரதான இடமுண்டு. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் என்றும் இதைத்தான் சங்ககாலம் என்கிறார்கள். தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் இரு காலங்களைப் பொற்காலம் என்று கூறப்படுகின்றது. ஒன்று சங்ககாலம் (கிபி 200 வரை) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரை) இந்தக் காலத்தில் தான் தமிழன் எவருக்கும் அடிமைப்படாமல் சுய ஆட்சி அதிகாரம் பெற்றுருந்தான். பாடப்புத்தகங்களிலும், இவர்களை வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் சிறப்பான துதிகளுக்கு எவ்வித குறைவும் இருக்காது. சரிதானே? இவர்கள் வாழ்ந்த மாடமாளிகைகள், அலங்கரிக்கப்பட்ட விதம், இவர்களின் ஆட்சி பரிபாலணங்கள் போன்ற அத்தனையும் ஏறக்குறைய ஒரு சார்ப்புத் தனமானவையே. அப்போது வாழ்ந்த மக்களின் அடிப்படை வாழ்வியல் சோகங்களையை எந்த வரலாற்று ஆசிரியர்களும் அதிகம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. காரணம் தொடக்கக் காலத் தமிழர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்த வரலாற்றுப் பக்கங்களை எழுதியவர் எவரும் மேலைநாட்டினர் போல வரலாற்று ஆசிரியர்கள் அல்ல. இந்தச் சமயத்தில் அது போன்ற அவலங்களை லேசாகப் பார்த்து விடலாம். புறநானூறு பாடல் 150,160 “ஒரு புலவனின் மனைவி. குழந்தைக்குப் பால் கொடுக்கும் மார்பகங்கள் சதைப்பற்றில்லாமல் தொங்கி உலர்ந்து காணப்படுகிறது.. பானையில் சோறில்லை. அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கின்றாள்”, இது போன்ற பல பாடல்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அவல நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. தமிழகத்தை ஆண்டு மூன்று மன்னர்களும் ஒவ்வொரு சமயத்திலும் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளை நோக்கி படையெடுத்தார்கள், வெற்றி கொண்டார்கள். மானம் பெரிதென வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்தார்களா? சங்கப்பாடல்களில் அரிதாக ஔவையார் பாடிய ஒரு பாடல் உண்டு. மூவேந்தர்கள் ஒற்றுமையாக ஒரு விழாவில் கலந்து கொண்டதை (புறநானூறு 367) வாயார வாழ்த்தி பாடுகிறார். காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், சோழன் திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒன்றாகச் சேர்ந்து வந்த போது இவ்வாறு பாடுகிறார். “இதுபோல உங்கள் ஒற்றுமை நீடித்து இருந்தால் உலகமே உங்கள் கைப்படும்” என்கிறார். (புறம் 56) தமிழக மன்னர்கள் போர்க்களத்திற்கு வெளியே புரிந்துணர்வோடு ஒன்று சேர்ந்து இருந்தது மிகக்குறைவே. இதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சி கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் முடிந்து போய் அடுத்து 300 ஆண்டுகள் களப்பிரர் ஆள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சோழப் பேரரசுக்குள் உருவான குடும்பச் சண்டைகளும், மூவரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாக அடுத்தவர்கள் உள்ளே வர காரணமாக இருந்தவர்களும் நம் அற்புத தமிழ் மன்னர்களே? இதைப் போலவே சங்ககாலப் புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ள தற்புகழ்ச்சி, உயர்வு நவிழ்ச்சி அணிகள் போன்றவற்றைப் படிக்கும் போது கேட்பவர்களுக்கே கூசுமளவிற்கு இருக்கும். இன்றைய அரசியல் வரைக்கும் இப்படித்தானே இருக்கிறது. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம். பின்னால் வரப்போகும் ஆங்கிலேர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் வாழ்ந்த பெருங்கவிஞர் இராமச்சந்திரக் கவிராயர் எழுதியுள்ள கவிதையைப் படித்த போது இந்தப் பழம்பெரும் புலவர்கள் சங்ககாலத்தில் மன்னர்களை உயர்த்தி எப்படிப் பாடல்கள் பாடியிருப்பார்கள் என்பதை உத்தேசமாக நினைத்துப் பார்கக முடிகின்றது. கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன் காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன் பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன். போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன் மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன் இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே. நாம் இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கக்கூடிய இராஜராஜ சோழன் ஆட்சியை விட இந்தப் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தைப் புராதன சிறப்பு மிக்கது என்கிறார்கள். அதிலும் கடைச்சங்க பாண்டியர்கள், இடைச்சங்க பாண்டியர்கள், இது போகப் பிற்காலப் பாண்டியர்கள் என்று வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்துள்ளனர். நாம் மொத்தமாக உள்ளே புகுந்து வெளியே வர வேண்டுமென்றால் நாமே நமக்குச் சங்கூதிக் கொள்வது போல் ஆகிவிடும். மானவர்மன். இந்தப் பாண்டிய மன்னன் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு தங்களின் எழுச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பக்கங்களை எழுதத் தொடங்கினர். பாண்டிய மன்னர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லவர்களுடனும் மோதி தங்களின் ஆளுமையைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னனை வெற்றிக் கொண்ட பிறகே பாண்டிய மன்னர்களின் பொற்காலம் தொடங்கியது. [] ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் உள்ளேயிருந்த பல குறுநிலமன்னர்களை அடக்கி தாங்களை வலிமையாக்கிக் கொண்டனர். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தான் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 முதல் 862) பல்லவ பேரரசுடன் மோதிய போது மற்றொரு ஆச்சரியமும் உருவானது. அருகேயிருந்த ஈழத்தில் தமிழ்நாட்டு அரசியல் வேர்விடத் தொடங்கியது. எல்லாவகையிலும் எழுச்சி பெற்ற பாண்டிய பேரரசு முதல் முறையாக ஈழத்தில் படையெடுத்துச் செல்ல அங்கேயிருந்த ஸேன மன்னன் (833 முதல் 853) ஓட்டம் பிடிக்க அநுராதபுரத்தில் கிடைத்த செல்வமும் வெற்றியுமாகத் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான். இதுவே தான் இராஜராஜ சோழன் காலம் வரைக்கும் நடந்தேறி வந்துள்ளது. செல்லும் இடங்களில் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டியது. முடிந்தால் சார்பாளர்களை நியமிக்க வேண்டியது. முடிந்தது கதை. மன்னர்களைப் பொறுத்தவரையிலும் இதுவொரு மற்றொரு மணிமகுடம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெற்ற காரணங்களில் ஒன்று உண்டு ? ஈழத்துக்குப் போர் எடுத்து சென்று வென்றது. பாண்டிய மன்னர்களின் போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் தப்பிச் சென்ற மன்னனை கண்டு காணாமல் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தது. தங்களிடம் தோற்றவன் நெஞ்சம் முழுக்க வஞ்சகத்துடன் இருப்பானே என்பதை மறந்து போக இதுவே இவர்களின் குடும்பத்தில் குளறுபடி உருவாவது வரைக்கும் வந்து நின்றது. முறைப்படியான போரில் வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ஈழத்திலிருந்த மன்னன் இரண்டு காரியங்கள் செய்தான். ஒன்று பல்லவ அரசுடன் இணைந்து பாண்டிய பேரரசை எதிர்த்தது. இது முறைப்படியான போர். முதுகுக்குப் பின்னால் இருந்து செய்த மற்றொரு காரியமும் ஒன்று உண்டு. இந்தத் தந்திரக்கார கூட்டணிப் படையினர் பாண்டிய மன்னனின் மகனாகிய வரகுணபாண்டியனை சுதியேத்தி அப்பாவுடன் மோத வைத்தது. அப்பாவுடன் மோதி தோற்ற மகன் ஈழத்துக்குச் சென்றான். இது போதாதா? அடுத்தத் திட்டம் உருவானது. ஈழத்து ஸேன மன்னன் படைகள் (853 முதல் 857) பாண்டிய நாட்டின் தென் பகுதியான மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் வந்த பல்லவர் படைகள் சுற்றி வளைக்க முடிவுக்கு வந்தது. போரில் வீரம் ஜெயிக்குமா? விவேகம் ஜெயிக்குமா? ஜெயித்தது விவேகமே? சிங்கள மன்னன் படை மகன் ஸ்ரீ வரகுண பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக (862) முடிசூட்டி அழகு பார்த்தது. அப்பா புதைத்த மண் காய்வதற்குள் மகன் அரசாட்சியில் அமர்ந்த காட்சியைக் காணும் போது 21 ஆம் நூற்றாண்டு வரைக்கும் சமகால அரசியலும் இப்படித்தானே இருக்கிறது. திருப்புறம்பியத்துப் போர். பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போர். இந்தப் போரின் மூலம் தான் பல்லவர்களின் ஆட்சியும், பாண்டியர்களும் வலுவிழக்கக் காரணமாக இருந்தது. கொல்லைப்புற வாசல் வழியாக வந்த பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடிக்கப்பட்டான். போரில் பல்லவ மன்னன் அபராஜிதன் வெற்றி பெற்றுருந்தாலும் இந்தப் போர் தான் சோழர்கள் தங்களது பாதையை உருவாக்கிக் கொள்ளக் காரணமாகயிருந்தது. இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவிய முதலாம் ஆதித்த சோழன் சும்மாயிருப்பாரா? [] ஆதித்த சோழன் பல்லவர்களை தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைச் சோழ மண்டலமாக மாற்றினான். இவனுக்குப் பிறகு வந்த (907) முதலாம் பராந்தகச் சோழன் நான்கு புறமும் உள்ள எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவன். தெற்கில் பாண்டியர், சேரர், வடக்கில் ராஷ்டிகூடர். இத்துடன் மற்றொரு புண்ணியவான் ஈழத்தில் உள்ள சிங்கள மன்னன். ஆனால் ஆச்சரியம் இத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொண்டுருந்ததை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் இன்று பெருமையாய் நாம் பேசிக் கொண்டுருக்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருள்மொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்பக் குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது. கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தைத் தொடங்கினர். இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்றும் பழைய மன்னர்களைப் பற்றியும் நாம் பாடப்புத்தகத்தில் படித்து வந்து இருப்போம். பாண்டிய மன்னர்களைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகலாம், ஆனால் இந்தப் பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு உள்ளே போகப் போகப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களே சோர்ந்து போகும் அளவிற்கு வண்டி வண்டியாக விசயங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. சோழர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாண்டிய மன்னர்கள் (கிபி 1200 முதல் 1300 வரை) வீழ்ச்சியடைய முக்கியக் காரணம் குடும்பச் சண்டைகளே முக்கியமாக உள்ளது. இதுவே தமிழகத்தில் அந்நிய படையெடுப்பாளர்களைப் பாக்கு வெற்றிலை வைத்து வரவேற்காத குறையாக உள்ளே அழைத்து வந்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது. அப்புறமெங்க இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்? பதினைந்தாம் நூற்றாண்டின் போது இந்தப் பாண்டிய மன்னர்கள் நம்முடைய இராமநாதபுரம் மாவட்டம் என்றொரு பகுதியை எப்படி ஆண்டுருப்பார்கள்? [] (தஞ்சாவூர் பெரிய கோவில்) 14 முஸ்லீம்கள் - நதிமூலம் இராமநாதபுர மாவட்டத்தைப் பேசும் போது நாம் மற்றொரு விசயத்தையும் இப்போது பேசியாக வேண்டும். அது தான் இந்த மாவட்டத்தில் வாழ்ந்த இஸலாமியர்கள். பல்லவர்கள் தொடங்கிக் கடைசியாகப் பாண்டியர்கள் வரைக்கும் கால்பந்து போல இந்த மாவட்டம் பலரின் கால் கை பட்டு உருண்டு வந்தாலும் கிபி 1331 ஆம் ஆண்டு மதுரையைத் தலைநகரகாக் கொண்டு முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவர்களின் ஆட்சி கிபி 1371க்குப் பிறகு சரிந்த பிறகு தான் நாயக்க மன்னர்களின் ஆட்சி உருவானது. இதுவே 1393 ஆம் ஆண்டு முற்றிலும் துடைத்தது போல் ஆனது. ஆனால் இஸ்லாமியர்கள் என்பவர்கள் எப்படி உருவானார்கள்? இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும். சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்த யவனர்களின் பெயரே பின்னாளில் சோனகர் என்று அதனூடே முஸ்லீம் என்றும் உருவானது. மரைக்காயர் என்பது மரக்கலத்தில் வாணிப தொடர்புக்காக உள்ளே வந்தவர்கள் என்பதில் தொடங்கித் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் மூலம் துலுக்கர் என்ற பெயரும் உருவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான். அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும். தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்திப்பட்டு அன்றாட வாழ்வில் அப்போது சாதாரணக் குடிமகன் அனுபவித்த அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மன்னர் ஆண்டாலும் சரி, அவர்களின் சார்பாளர்கள் இருந்தாலும் சரி அடித்தட்டு மக்களின் அவலநிலைக்கு முக்கியக் காரணம் இந்த இனப்பாகுபாடே முக்கியப் பாத்திரம் வகித்தது. இதற்கு மேல் குலத்தொழில் என்ற போர்வையில் ஒவ்வொருவரையும் ஒரு அளவிற்கு மேல் மேலே வரமுடியாத அளவிற்குக் குறிப்பிட்ட சமூகத்தினர் அடக்கி ஓடுக்கி வைத்திருந்தனர். [] எழுந்தால், நடந்தால், நின்றால், பேசினால் குற்றம் என்கிற நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இரண்டு காரியங்கள் செய்யத் தொடங்கினர். ஒன்று புலம் பெயர்தல். மற்றொன்று தங்களின் மதத்தை மாற்றிக் கொள்ளுதல். ஆங்கிலேர்கள் மூலம் உள்ளே வந்த கிறிஸ்துவம் மிக அமைதியாகத் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிக் கொண்டுருந்து. அதைப் போலவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நோக்க அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். இந்து மதம் என்றால் சாவது வரைக்கும் சுடுகாட்டில் புதைப்பது வரைக்கும் பரவியிருந்த கொடூரத்தை தாங்க முடியாத மக்கள் தங்களுக்கான நல்வாழ்க்கையை இந்த இஸலாமிய மார்க்கத்தைத் தழுவியதன் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டனர். ஆறாவது நூற்றாண்டில் இந்தியாவின் உள்ளே வந்த அரேபியர்கள் உருவாக்கிய பாதையில் இருந்து இது தொடர்கின்றது. ஆனால் இடையில் வந்த அந்நிய படையெடுப்புகளால் இது போன்ற கட்டாயக் கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகவே இருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இன்றைய முஸ்லீம் மக்களின் பத்து தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்துவாக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். “வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை” இவ்வாறு சொல்லியிருப்பது இந்து மதத்தைக் கடல் தாண்டி கொண்டு சென்று முழங்கிய சுவாமி விவேகானந்தர். காரணம் அந்த அளவிற்குப் பழைய சமூக வாழ்க்கையில் மனிதர்களை இந்த ஜாதி என்ற மூலக்கூறு சல்லடைக் கண்கள் போல் உற்றுநோக்கிக் கொண்டுருந்தது. தமிழர்கள் இஸலாம் மதத்தைத் தழுவ ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே நடைபெறத் தொடங்கியது. நான் பார்த்த ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது. “இதனால்தான் இன்று வரை மற்றச் சமயத்தினர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. தமிழர்களான முஸ்லிம்களைத் தமிழர்களான தலித்துகள் தாத்தா என்றும், யாதவர்களும் தேவர்களும் மாமா என்றும், பரவர்கள் சாச்சா என்றும் இதுபோன்று பல்வேறு முஸ்லிமல்லாத சமூகத்தினர் உறவு வைத்து அழைக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது. தீண்டாமை ஒழிப்பில் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இஸ்லாம் தன் பங்களிப்பைச் செலுத்தி வந்துள்ளது. இருப்பினும் கடந்த நூற்றாண்டில் அதன் பங்களிப்பு வீரியம் மிகுந்ததாக இருந்துள்ளது.” இந்து மதத்தின் கொள்கை என்று சொல்லப்படுவது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”. ஆனால் அதுவே இஸ்லாமிய நடைமுறையில் “ஒன்றே குலம் ஒரே சாதி” என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் அடித்தட்டு மக்களுக்குத் தாங்கள் மாறுவதற்கு ஏற்ற மார்க்கம் இது தான் என்று தேர்ந்தெடுத்ததில் பெரிதான ஆச்சரியமில்லை. இது குறித்து வரலாற்றுத் தகவலில் உள்ள சிறு குறிப்பையும் இதில் படித்துவிடலாம். “தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் உருவாக்கி மகிழ்ந்தனர். தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான “ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம்” கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது.” “இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாகத் தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும்.” “இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.” வலைபதிவில் இந்த கட்டுரை எழுதிய போது இதற்கு பின்னூட்டமாக சில முக்கிய ஆதார தகவல்களை இங்கே எழுதி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த அத்தியாயத்திற்கு பின் இணைப்பாக தந்துள்ளேன். அப்துல்லா. புதுக்கோட்டை. நான் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தர விழைகிறேன். தமிழக இஸ்லாமியர்களில் இப்போது உள்ளவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து மதம் மாறியவர்கள் வெகு குறைவு. இஸ்லாம் முதன் முதலில் தமிழகத்தில் அறிமுகம் ஆனது கடற்கரைப் பிரதேசங்களில்தான்.அப்போது மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.பின்னர் பெரும் மாற்றம் நிகழ்ந்தது தஞ்சைத் தரணியில். நாகூர் ஆண்டவர் நாகூர் வந்து வாழ்ந்த போது அவரது அற்புதங்களாளும்,பேச்சினாலும் பெரும் பகுதியான சோழ நாட்டு மக்கள் மதம் மாறினர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.இன்றைக்கும் தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்கள் நல்ல நிறமுடையவர்களாகவும்,கூர்ந்த நாசி உடையவர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பெயரைத் தவிர்த்து உருவத்தை வைத்துப் பார்த்தால் பிராமணர்கள் போல தோற்றம் கொண்டவர்களாகவும் இருக்கும் காரணம் அதுதான். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரம்,மங்கலம் என முடியும் பேரைக் கொண்ட பல ஊர்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே இருப்பதற்கு இதுவே காரணம்.உதாரணம் பள்ளி அக்ரஹாரம்,அடியக்காமங்கலம் போன்ற ஊர்கள். அடுத்த மதமாற்றம் நிகழ்ந்தது வெள்ளையர்களின் ஆரம்ப ஆட்சி காலத்தில்.அப்போது அவர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாடு, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த முக்குலத்தோர் அந்தச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி கூட்டம் கூட்டமாக இஸ்லாம் மதம் மாறினர். என் முன்னோர்களும் அவர்களில் ஒருவரே. அதன் பின்னர் பெரிதாக இஸ்லாத்திற்கு கும்பலான மத மாற்றம் எதுவும் நிகழவில்லை. நியாயமாகப் பார்த்தால் இஸ்லாத்திற்கு தாழ்த்தப்பட்டோர் தான் அதிக அளவில் மாறி இருக்க வேண்டும்.ஆனால் தமிழகத்தில் இஸ்லாம் ஆனோர் பெரும்பாலும் உயர் சாதியினரே. இது ஒரு வித்யாசமான முரண். அரபு என்பதும் உருது என்பதும் வேறுவேறு மொழி.இரண்டுக்கும் சம்மந்தம் கிடையாது. அரபு என்பது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் ( துபாய், சவூதி, கத்தார்,குவைத்,ஏமன்,ஓமன்,ஈராக்,ஈரான்) தாய் மொழி. உருது என்பது சுத்தமான இந்தியமொழி. அக்பர் தன் ஆட்சி காலத்தில் தீன் இலாஹி என்ற தனி மதத்தை உருவாக்கினார். அதேபோல தன் மதத்திற்கு தனி மொழி ஒன்று வேண்டும் என்று விரும்பி மொழியியல் வல்லுனர்களிடம் கூறினார். அவர்கள் சமஸ்கிருதம்,ஹிந்தி,பார்சி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையாய் உருதுவை உருவாக்கினர். இன்றைக்கு இந்தியாவில் அரபுவை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் என்று யாருமே இல்லை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பால் குடுத்த பால்குடித்தாய் ஒரு இஸ்லாமியர்.அவரும் பிறமலைக் கள்ளர்(தேவர்களில் ஒரு பிரிவு) சமூகத்தில் இருந்து குற்றப் பரம்பரைச் சட்டத்தால் மதம் மாறிய ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஆனால் இந்த உண்மையை மறைத்து ஏதோ தேவர் பெற்றோர்கள் சாதி,மத வித்யாசமின்றி இருந்தத்தாக ஒரு கருத்துரை பரப்பப்படுகின்றது. அப்படி சாதி வித்யாசம் பார்க்காதவர்களாக இருந்திருந்தால் அதே இராமநாடு மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் எதோ ஒரு இஸ்லாமியத் தாயிடம் பால் அருந்தச் செய்து இருக்கலாமே?? செய்யமாட்டார்கள்.காரணம் அவர்கள் மீனவ சமூகத்தில் இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் யாதவர்கள் மாமா என்று அழைப்பது சரி. ஆனால் தேவர்களும்,இஸ்லாமியர்களும் மாமா முறை வைத்து அழைப்பதில்லை. தென் மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களில் 90% பேர் தேவர்களாக இருந்து மதம் மாறிய காரணத்தால் தேவர்களும்,இஸ்லாமியர்களும் சீயான் முறை வைத்தே அழைக்கின்றனர். சென்னையில் உள்ள கும்மி என்ற பெயரில் உள்ள உமர் என்பவரின் கருத்து இது. பதிவில் இருக்கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன் சில களநிலைமைகள். தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது. 1. அன்சார் 2. தக்கானி முஸ்லீம் 3. துதிகுலா 4. லப்பைகள் (இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட) 5. மாப்பிள்ளா 6. ஷேக் 7. சையத் ஜோதிஜி பேசியிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் மிகுதியாக உள்ளனர். முந்தையப் பதிவில் பேசியது போல் மரைக்காயர்கள் என்பவர்கள் மரக்கலங்களில் வணிகம் செய்து வந்தவர்கள் (செய்ய வந்தவர்கள் அல்ல, செய்து வந்தவர்கள்). மரக்கலம் + ஆயர் என்னும் வார்த்தை, மரக்கலாயர் என்று மாறி, மரைக்காயர் என்று மருவியுள்ளது. இன்றும் வணிகம் சார்ந்த தொழிலே ஈடுபட்டு வருகின்றனர். யானைகளை வைத்து பராமரிப்பவர் மாவுத்தன் என்று அழைக்கப்பட்டார். அதுபோல் குதிரைகளை பராமரிப்பவர் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனின் குதிரைப் படை குதிரைகளை பராமரிப்பதும், குதிரைகளை வாடகைக்குக் கொடுப்பதும் அவர்களது தொழிலாக இருந்தது. இன்று பெரும்பாலானோர், வியாபாரம் உள்ளிட்ட வேறுத் தொழில்களுக்கு சென்றுவிட்டாலும், திருமணங்களுக்கு குதிரைகளை வாடகைக்கு விடும் சிலர் இருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் இங்கே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வருபவர்கள். அப்துல்லா கூறியதுபோல் தேவர் சாதியிலிருந்து இருந்து மாறியவர்கள். மரைக்காயர்கள், செட்டியார்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறியவர்களாக இருக்கக்கூடும் என்றொரு கருத்தும் நிலவுகின்றது. இஸ்லாம் அறிமுகமானப் பொழுதில் இஸ்லாத்தை பரப்ப வந்தவர்கள் அரபி மொழிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை யாரேனும் அழைத்தால், வருகிறேன் என்பதை அரபியில் ‘லப்பைக்கும்’ என்று கூறுவார்கள். லப்பைக்கும் என்னும் வார்த்தைதான் சுருங்கி லப்பை என்று ஆகிவிட்டது. அவர்கள் இங்கேயே திருமணம் புரிந்து இங்கேயே வாழத் தொடங்கிவிட்டனர். தமிழர்களோடு செய்த திருமணத்தின் காரணமாக, அரபி மொழி பேசுவது குறைந்து தமிழே அவர்களது முதன்மையான மொழியாகியது. காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் அரபி அறியாதவர்களாகவே ஆகிப்போயினர். அப்துல்லா கூறியிருக்கும் அரபியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்பது இவர்களுக்கும் பொருந்தும். கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களும் இஸ்லாத்திற்கு மாறினர். அவர்களுக்கென்று தமிழக அரசு தனியாக சாதிப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களிடையே அவர்கள் அலாக்கரை மக்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் கடற்கரையோரம் வசித்ததால் (அலை + கரை) அலைக்கரை என்னும் வார்த்தை பேச்சுவழக்கில் அலாக்கரை என்று வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு கிராமத்திலும் பத்துக்கும் குறைவான குடும்பங்கள் இருக்கும். (குடும்பம் என்பது வம்சம் என்பது போல்) . ஒவ்வொரு குடும்பத்திலும் 100 லிருந்து 200 தலைக்கட்டுகள் இருக்கும். (ஒரு தலைக்கட்டு என்பது கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட அமைப்பு.) பெரும்பாலும் திருமணங்கள் குடும்பத்திற்குள்ளாகவே நடைபெறும். ஒரு குடும்பம் விட்டு வேறொரு குடும்பத்தில் திருமணம் நடைபெற்றாலும் அது அலாக்கரை குடும்பத்தோடு மட்டும் இருக்காது. ஏனெனில், அவர்கள் கீழ் சாதியினர் என்று மற்றவர்களால் கருதப்படுகின்றனர். தங்கள் வீட்டு சிறுவர்கள் அலாக்கரை குடும்பத்து சிறுவர்களோடு விளையாடுவதைக் கூட கண்டிக்கும் மற்றக் குடும்பத்து பெண்கள் இன்றும் உள்ளனர். பொதுவாக இஸ்லாமிய ஆண்களுக்கிடையே இவ்வித பாகுபாடு பெரியளவில் தெரியாவிட்டாலும், இஸ்லாமியப் பெண்களிடம் இவ்வித பாகுபாடு இன்றும் நிலவுகின்றது. இது ஒரு வகை பாகுபாடு என்றால், இஸ்லாமிய ஆண்களாலும் மனிதனாககூட மதிக்காத ஒரு நபர் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார். அவர் நாசுவன் என்று அழைக்கப்படுபவர். நாவிதன் என்னும் சொல் மருவி நாசுவன் ஆகியிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். சொல்லின் மூலம் உறுதியாகத் தெரியவில்லை. ஊருக்கென நேர்ந்து விடப்பட்டவர் அவர். [:-(] ஊரில் யாரேனும் இறந்தால், உடலைக் குளிப்பாட்ட இவரைத்தான் அழைப்பார்கள். இதுபோன்ற செயல்கள் எல்லாம் இவருக்கு என விதிக்கப்பட்டவை. இன்றும் மாத சம்பளமாக ரூ.1500 மட்டுமே பெறும் பாவப்பட்ட ஜீவன் இவர். ரம்ஜானின் போது ஊரில் யாரேனும் நல்லுள்ளம் படைத்த ஒருவர் இவருக்கென்று ஒரு உடை எடுத்துக் கொடுத்தால்தான், அவ்வருடத்திற்கு அவருக்கென ஒரு உடை சேரும். இவரை நம்பி ஒரு குடும்பம் வேறு இருக்கும். இதுதான் இன்னும் பரிதாபத்திற்குரியது. இத்தகைய பகுதிகளை ஒட்டி வாழ்ந்த தலித்துகள், கிருத்துவர்களாக மதம் மாறி, அரசாங்கத்தால் காலனி என்னும் பகுதிகள் கட்டப்பட்டு ஊரை விட்டு தள்ளி வாழத்தொடங்கியுள்ளனர். இஸ்லாமியர்களிடையே சாதிப் பாகுபாடு கிடையாது என்று பதிலளிக்க விரும்புபவர்களிடம் சில கேள்விகள் கேட்கின்றேன். நாசுவனை எப்பொழுதாவது ‘வா’ என்று அழைக்காமல் ‘வாங்க’ என்று அழைத்திருக்கின்றீர்களா? நாசுவனைப் பற்றி பிறரிடம் பேசும்போது ‘அவன்’ என்று கூறாமல் ‘அவர்’ என்று கூறியிருக்கின்றீர்களா? உங்கள் மனசாட்சிப்படி நீங்களே பதிலளித்துக்கொண்டு சாதிப் பாகுபாடு உண்டா இல்லையா என்று கூறுங்கள். இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியதற்கு சாதீய அடுக்குமுறைகளும், அடக்குமுறைகளுமே காரணமாக இருந்தன. அதேபோல் மற்ற சாதி மக்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு தடையாகவும் இஸ்லாத்தில் நிலவிய, நிலவும் சாதீய பாகுபாடே காரணமாக இருந்தது. இது தவிர இஸ்லாமியர்களிடையே நிலவும் இன்னொரு பாகுபாடு தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம் பிரிவுகள். உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுக்குக் கீழானவர்களாகத்தான் பார்க்கின்றனர். உருது முஸ்லிம்களின் வீட்டு வாசலில் To Let போர்ட் தொங்கினால், (Only for Urdu Muslims) என்னும் அடைப்புக்குறியை பார்க்க முடியும். முஸ்லிம் லீக் தவிர்த்த இஸ்லாமியக் கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளிடம் கேட்கும்பொழுது, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என்று கேட்பார்களே தவிர, உருது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வேலூர் தொகுதியைக் கேட்க மாட்டார்கள். நீங்கள் கூறியிருக்கும் அவர்களது மொழிப்பற்று என்பதை விடவும், தாம் பேசும் விஷயம் கூட இருக்கும் உருது தெரியாத நபருக்கு தேவையற்றது என்னும் தொனியிலேயே அமைந்திருக்கும். நிறுவன நிர்வாகத்தின் மேல்நிலையில் இருக்கும் சிலரைத் தவிர மற்ற உருது முஸ்லிம்கள் மூன்றாம் நபர் தாம் பேசுவதை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்னும் நிலையிலேயே தம்முள் உருது மொழியில் பேசிக்கொள்வார்கள். இன்னொரு வகை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போரா முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது பள்ளிவாசலில் போரா முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் தொழ முடியாது. வாசலிலேயே ஒருவர் காவலுக்கு இருப்பார். புதிதாக யாரும் தெரிந்தால், தனியே அழைத்து இது உங்களுக்கான பள்ளி இல்லை; வெளியே செல்லுங்கள் என்று கூறிவிடுவார். அப்படியும் இவர்களது பார்வைக்குத் தப்பி யாரேனும் அப்பள்ளியில் தொழுதுவிட்டால், அவர்கள் சென்ற பின்பு அவ்விடத்தை கழுவி விடுவார்கள். (செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் நினைவுக்கு வருகின்றாரா?) இஸ்லாத்தில் பாகுபாடு கிடையாது என்று கூறுபவர்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். போரா முஸ்லிம்களின் பள்ளிவாசலில் சென்று தொழுதுவிட்டு என்ன நடக்கிறது என்று பாருங்களேன். முகம்மதுவிற்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுள் உமர் என்றொருவர் உண்டு. இஸ்லாமிய வரலாற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உமரின் ஆட்சிக்காலத்தில், அவரது ஆட்சிக்காலத்துக்குப் பின் என்று. உமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பலவித போர்களை நடத்தி ஆட்சிப் பிரதேசத்தை விரிவாக்கினார். எந்தப் பகுதி அவருடைய ஆளுகைக்குள் வந்தாலும் அங்கிருந்த மக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டனர். கிபி 644 ல் அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட்பின்பு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவர்களால், உமர் அளவுக்கு இஸ்லாத்தைப் பரப்பமுடியவில்லை. உமரின் ஆட்சியை அடிப்படையாக வைத்து, இங்கிருக்கும் இஸ்லாமியர்களும் வாள்முனையில் முகலாயர்களால் மாற்றப்பட்டவர்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுகின்றது. ஆனால், முகலாயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலும், இலங்கையிலும், கேரளாவிலும் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களிடையே பாகுபாடு இல்லை என்று கூறுபவர்கள், தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம்களுக்கிடையே இருக்கும் பாகுபாட்டை எப்படி சரிசெய்வது என்றும் கூறலாம். போரா முஸ்லிம்களின் பள்ளியில் மற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் வாய்ப்பு ஏற்பட இன்னும் எத்தனைத் தலைமுறை காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லுங்களேன். தொழுகை நடத்தியபின்புதானே, திருமணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியும். சமத்துவத்தைப் பற்றியெல்லாம் பேச முடியும். 2004 ல் ஏற்பட்ட சுனாமியால் பலரும் உயிரிழந்தனர். பேரிழப்பு ஏற்பட்டது. அனைவருமே வருந்தினர். ஆனால், ஜெகதாப்பட்டினத்தில் இருக்கும் மக்கள் மட்டும் வருத்தப்படவில்லை. மாறாக வேறொரு உணர்வில் இருந்தனர். அங்கு சுனாமியால் பாதிப்பு இல்லை என்பதால் அல்ல. அதற்கான விடை ஜெகதாப்பட்டினம் அலாக்கரைக்கும் நாகப்பட்டிணம் கீச்சாங்குப்பத்துக்கும் உள்ள தொடர்பு புரிந்தவர்களுக்கு தெரியும். அந்தத் தொடர்பு தெரிந்தால், பாகுபாடு எந்தளவிற்கு வேரூன்றியுள்ளது என்று தெரியும். (சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கீச்சாங்குப்பத்தை சார்ந்தவர்கள்.) 15 வந்துட்டான் சீமத்துரை ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்காக ஏதோவொரு துறையைச் சார்ந்து தனது இருப்பியலை தக்க வைத்துக் கொளகின்றான். உயிர் வாழ உணவு. நாகரிக வளர்ச்சி வந்த பிறகு மானத்தை மறைக்க உடை. ஆனால் இதைப் போல மற்றொன்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. அது தான் உறக்கம். இந்த உறக்கம் உண்டு கொழுத்த போதும் வரும். ஒரு வேளைகூட உண்ணாமல் இருந்தாலும் பசி மயக்கத்திலும் வரும். ஆனால் இந்த உறக்கம் ஒரு ஜாதிக்கு மட்டும் வருமா? என்பது கேள்விக்குறியே. மிகப் பெரிய தொழில் அதிபரும் சரி, பரம ஏழையும் சரி அவரவர் நிலையில் ஏதோவொரு சமயத்தில் தங்களை மறந்து தூங்க வாய்ப்புண்டு. ஆனால் அரசியல், ஆட்சி, அதிகாரம் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வாழ்ந்து கொண்டுருப்பவர்களை ஒரு கணப்பொழுது யோசித்துப் பாருங்கள். தூங்கும் நேரத்தில் கூடத் தங்களுடைய எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? என்பதையே தான் யோசித்துக் கொண்டுருக்கக்கூடும். அது மகனா? மருமகனா? பேரனா? அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சரா? தனக்குப் பிறகு யார்? இறக்கும் வரையிலும் இந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொளவ்து எப்படி? என்று சுற்றியிருக்கும் அத்தனை பேர்களுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எதிரியாகத் தான் தெரிவார்கள். அது அந்தக் காலத்து மன்னராக இருந்தாலும் சரி அல்லது இன்றைய அரசியல் வியாதியாக இருந்தாலும் சரி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரலாற்றுக் குறிப்புகள் இப்படித்தான் சொல்கின்றது. இராமநாதபுரம் என்றொரு மாவட்டம் முறைப்படி ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் போது சூடுபிடிக்கத் தொடங்குங்கின்றது. இதற்கு முன்னால் இந்த மாவட்டத்தைக் ஆண்டவர்களின் கதைகள் அத்தனையும் படிக்கும் போதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்று இவர்களும் இல்லை. இவர்கள் வளர்த்த “பேர் சொல்லும் பிள்ளைகளும்” இல்லை. “நான் தான் இந்த ராஜ்யத்தை ஆளப் பிறந்தவன்” என்று சொன்ன அத்தனை பேர்களைப் புதைத்த இடத்தை இன்று எத்தனை பேர்கள் ப்ளாட் போட்டு விற்று இருப்பார்களோ? “வடக்கில் இருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மதுரையைச் சூறையாடினார்கள், விலைமதிப்பில்லாத செல்வத்தைக் கொண்டு சென்றார்கள். இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துத் தள்ளினார்கள்” என்று வரலாற்றில் போகிற போக்கில் இந்த இஸ்ஸாமிய படையெடுப்பாளர்களைப் பற்றி ஏதோவொரு சமயத்தில் படித்து இருப்போம். ஆனால் இஸ்லாம் என்ற ஒரே மதத்தைச் சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளும் இருந்த இந்த அதிகார வெறியும் பதவி மோகமும் எந்த அளவிற்கு இருந்தது என்பதை வரலாற்றுக் குறிப்புகளை இந்தச் சமயத்தில் லேசாகத்தான் நாம் பார்க்க முடியும். காரணம் இது இந்திய வரலாறு அல்ல. ஒரு மாவட்டத்தின் தல புராணம். அவர்கள் இப்போது தப்பிப் பிழைத்துப் போகட்டும். பாண்டிய மன்னர்களின் குடும்ப உள் நாட்டுக் குழப்பங்கள் என்று தொடங்கிச் சுற்றிலும் உருவான ஏராளமான எதிரிகள் புடைசூழ வாழ்ந்து கொஞ்சம் கொஞசமாகத் தங்கள் ஆதிக்கத்தை இழந்து கொண்டுருந்த போது உள்ளே வந்தவர் தான் பாமினி. இவரும் திடீர் என்று முளைத்து வரவில்லை. அளவற்ற கருணை உள்ள அல்லாவை வணங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்து வளர்ந்தவர் தான். “டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்கான பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர் ஆவார். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைத் தனிச் சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாகக் கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள் “. [] இப்படித்தான் இவரின் தலவரலாறு தொடங்குகிறது. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய “பாமினி” ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டது. காலம் எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது. அரியணைக்கு ஆசைப்பட்டவர்களும், அடுத்தவனை அழித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களும், வாளால் இரத்த அபிஷேகம் செய்து வந்த படையெடுப்பாள்ர்களையும் பார்த்து வந்த இந்தப் பூமியில் இறுதியில் வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். கதாநாயகன் வெள்ளைக்காரதுரைகளைப்பற்றிப் படிக்கும் போது ஆச்சரியம், சாகசம், பிரமிப்பு, சாதுர்யம், விவேகம், பொறுமை, பிரித்தாளும் சூழ்ச்சி போன்ற அரசியல் பாடத்திற்குத் தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் வண்டி வண்டியாகக் கொட்டிக் கிடக்கிறது. [] இந்தச் சமயத்தில் இந்த வெள்ளைக்கார பயலுகளைப் பற்றிச் சிறு குறிப்புப் பார்த்துவிடலாம். ஏன் இவர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்? 14 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மிளகு லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சு வியாபாரிகளிடம் வாங்கி விற்றுக் கொண்டுருந்தனர். ஒரு நாள் டச்சு வியாபாரிகள் திடீரென்று மிளகின் விலையை ஒரே சமயத்தில் ஐந்து ஷில்லிங் (அப்போதைய மதிப்பில் மூன்றே முக்கால் ரூபாய்) விலையை ஏற்றி ” இஷ்டம்னா வாங்கு… இல்லைன்னா நடையைக் கட்டு ” என்று விரட்ட வெள்ளைக்குக் கோபம் பொதது கொண்டு வர ” இனிமே உங்க சங்கநாத்தமே வேண்டாம் ” என்று முடிவு செய்து 24 லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து 1549 செப் 24 அன்று 75000 பவுண்டு மூலதனத்துடன் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். இதே ஆண்டு டிசம்பர் 31ந் தேதி பிரிட்டிஷ் முதலாம் எலிசபெத் இந்த நிறுவனம் நன்னம்பிக்கை முனைக்கு அப்பால் கீழ்திசை நாடுகளுடன் வியாபாரம் செய்யலாம் என்று அனுமதி வழங்க இவர்களின் நல்ல நேரம் கடலைத் தாண்ட வைத்தது. 1600 ஆகஸ்ட் 24 ஹெக்டர் எனும் பெயர் கொண்ட 500 டன் எடையுள்ள பிரிட்டிஷ் கப்பலில் வில்லியம் ஹாக்கின்ஸ என்கிற மாலுமி பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் கரை இறங்கினார். அப்போது இந்தியாவில் ஆட்சி புரிந்து கொண்டுருந்தவர் மொகலாயச் சக்ரவர்த்தியான ஜஹாங்கீர். வெள்ளைத் தோலைப் பார்த்ததும் மன்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வழிகாட்டியாய் மாறப் பயபுள்ளைங்களுக்குச் சுக்ர திசைகளும் இந்தியாவிற்குச் சனி திசையும் அப்போது தான் தொடங்கியிருக்க வேண்டும். அன்றைக்குத் தொடங்கிய ஆட்டம் தான் இறுதி வரைக்கும் “உனக்கும் பெப்பே. உங்கப்பனும் பெப்பேன்னு ” கதை திரைக்கதை வசனம் எழுதத் தொடங்க படிப்படியாகத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு வந்த வெள்ளையர்கள் 1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தான் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆட்டம் பாட்டம் என்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியது. வெள்ளையர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் போல. அப்போது தமிழ் நாட்டுக்குள் ஆட்சியில் இருந்த சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி (தமிழர்களுக்கு அன்று முதல் இன்று வரைக்கும் புதிதா என்ன?) அவர்களைப் பிரித்தாண்டு அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தமிழ்நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன். வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர் 16 திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம் அதிகம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது நாடு பிடிக்க அல்ல. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டுமே உள்ளே வந்தனர். ஆனால் அவர்களின் எண்ணத்தை மாற்றியதும் நம்மவரே. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். சாதகமான சூழ்நிலை உருவானது. ஆங்கிலேயர்கள் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.. [] 1600 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரத் துறைமுகத்தில் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு அடையாளத்தோடு உள்ளே வந்தவர்கள் தான்.. 1757 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு தான் பாதை மாறியது. அதன்பிறகே ஆங்கிலேயர்களுக்கு இந்த நாடு பிடிக்கும் ஆசையும் உருவானது. கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டுருந்த போது தான் பந்தக்கால் நட்டு மனித நரபலி கொடுத்து தங்களின் புனிதப்பணிகளைத் தொடங்கினர். அதன்பிறகே ஆங்கிலேயர்கள் அகண்ட பாரத நிலப்பரப்பை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். அது வரைக்கும் முழுக்க முழுக்க வியாபாரம் என்ற ஒரே நோக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டுருந்தனர். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டுருந்த வணிகர்களுக்கு இந்தியா குறித்து ஏராளமான கனவுகள் இருந்தது. அது உண்மையா? பொய்யா? என்பதை விட அதை நம்பித்தான் இந்தியா வந்தார்கள். இந்திய கடற்கரைகளில், மலையடிவாரங்களில் பெரிய அளவிலான நவரத்தினங்கள் இருக்கிறது.. பாமர மக்களுக்கு அது குறித்து ஒன்றும் தெரியாத காரணத்தினால் அங்கங்கே இறைந்து கிடக்கின்றது என்பது போன்ற பல கதைகள் தான் ஆங்கிலேயர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. இதற்கு மேலும் மற்றவர்களிடம் வாங்கி விற்பதை விட நேரிடையான வர்த்தக நடவடிக்கைகளிலும் இறங்கித் ஆக வேண்டும் என்று அவர்களின் எண்ணங்கள் இந்தியாவிற்கு வர காரணமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளராக முதன் முதலாக இந்தியாவிற்குள் உள்ளே வந்த காப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் மன்னர் ஜஹாங்கிரை ஆக்ரா அரண்மனையில் போய்ச் சந்தித்த போது மயங்கி விழாத குறையாக நின்றார். தான் காண்பது கனவா? என்பது போலத் திகைத்து நின்றார். ஜஹாங்கீர் அரண்மனையில் கண்ட காட்சிகள், ஆடம்பரங்களைப் பார்த்துத் தன்னைக் கிள்ளிப் பார்த்துருக்கக்கூடும். சுருங்கச் சொன்னால் கிரேட் பிரிட்டன் என்று சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டின் அரசியை வலிமை வாய்ந்த மன்னர் ஜஹாங்கீருடன் ஒப்பிட்டால் ஒரு சிற்றரசி என்ற நிலைக்குத் தான் கொண்டுவரமுடியும். பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனிக்குப் பண்டகசாலைகள் கட்டிக்கொள்ளவும், வியாபாரம் செய்து கொள்ளவும் மன்னர் அனுமதி வழங்கினார். மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கிந்திய நிறுவனம் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது. இவர்கள் ஜெயித்த கதைக்கு மற்றொரு காரணமும் உண்டு. இதற்கு முன்னால் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த ஸ்பானிஸ், பிரான்ஸ் மற்றும் பல மேலைநாட்டு வியாபாரிகள் தாங்கள் செய்து வந்து வியாபாரத்துடன வேறு சில காரியங்களையும் செய்து வந்தனர். நாகரிகமில்லாத மக்களை மிரட்டுவது, மதம் மாற்றுவது, வாங்கும் பொருட்களுக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றுவது, அழைத்துச் சென்று வேறு பகுதிகளில் கொண்டு போய் விட்டு விடுவது போன்ற எந்தத் தில்லாலங்கடி வேலைகளைக் கிழக்கிந்திய நிறுவனம் செய்யவில்லை என்பதை இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உழைப்பு, வியாபாரம்…. பணம்……லாபம்……… லாபம்…. என்று போய்க் கொண்டுருந்த பாதை கிழக்கிந்திய நிறுவனத்திற்குக் குறுகிய காலத்திற்குள் 200 சதவிகித லாபத்தைத் தரத் தொடங்கியது. மாதத்திற்கு இரண்டு கப்பல்களில் அனுப்பும் அளவிற்கு (மிளகு, வாசனைத்திரவியங்கள்….) வெகு விரைவாகத் தடம் பிடித்து முன்னேறத் தொடங்கினர். அப்போது இந்தியாவை ஆண்டுக் கொண்டுருந்த ஏராளமான மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள், சிற்றரசர்கள் போன்ற அத்தனை பேர்களும் வெள்ளையர்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இரத்தினக்கம்பளம் வரவேற்காத குறையாக அன்போடு உபசரிக்க அதுவே இவர்களுக்கு லாபத்தையும் அட்டகாச வாழ்க்கை வசதிகளையும் தரத் தொடங்கியது. அப்போது தான் அடுத்தக் கட்ட நகர்வுக்கு நகரத் தொடங்கினர். பம்பாயில் தொடங்கியவர்கள் அடுத்தடுத்துக் கல்கத்தா, சென்னை, கேரளா போன்ற இந்தியாவின் சகல பகுதிகளுக்கும் தங்கள் நிர்வாகத்தைக் கொண்டு செலுத்த ஆரம்பித்தனர். கிழக்கிந்திய நிறுவனம் வளர வளர ஒவ்வொரு காலகட்டத்திலும் பணிபுரிய உள்ளே வரும் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது. வந்தவர்களின் அடுத்தத் தலைமுறைகளும் உள்ளே வர ஒரு சங்கிலி இயல்பாகவே உருவாகத் தொடங்கியது. இவர்களுக்குப் போட்டியாளர்களாக இருந்த மற்ற நாட்டு வணிகர்களை விட ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் எல்லாவிதங்களிலும் மேலோங்கியிருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் எப்போதும் போலத் தங்களின் வியாபாரத்தில் மட்டும் குறியாய் இருக்கப் பகவான் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார். இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருந்த மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள் போன்றவர்களிடம் எப்போதும் ஏதோவொரு வகையில் சிறுசிறு சச்சரவுகள் இருப்பது வாடிக்கையாகவே இருந்தது. இவனுக்கு அவனைப் பிடிக்காது. அவனுக்கு இவனைப் பிடிக்காது. இது போன்ற சமயங்களில் தான் ஆங்கிலேயர்கள் நாட்டாமையாக உள்ளே புகத் தொடங்கினர். நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். அப்போதைய சூழ்நிலையில் கூட ஆங்கிலேயர்கள் தானாக மூக்கை நுழைக்கவில்லை.. சூழ்நிலைதான அவர்களை உள்ளே கொண்டு போய் நிறுத்தியது. காரணம் தங்களின் வணிக நிறுவனத்தின் பாதுகாப்புக்காக ஆங்கிலேயர்கள் அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் பாதுகாப்பு படையினரை வைத்திருந்தனர். உள்ளே இருப்பவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளில் யார் பக்கம் ஆங்கிலேயர்கள் சாய்கிறார்களோ அவ்ர்களே ஜெயிக்கும் நிலை உருவாக வேறென்ன வேண்டும்? வெள்ளையர்களுக்கு ராஜமரியாதை தான். ஆங்கிலேயர்கள் ஆதரவு கொடுத்த மன்னர்கள், சுல்தான்கள் அன்பளிப்பாகக் கொடுத்த நிலப்பகுதி சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டுவர ஆங்கிலேர்களின் ஆதிக்கத்திற்குள் வரும் நிலப்பரப்பின் அளவும் அதிகமாகிக் கொண்டுந்தது. இப்படித்தான் இந்திய துணைக்கண்டத்தில் பல பகுதிகள் ஆங்கிலேர்களின் கைக்கு வந்தது. இந்தப் பகுதிகளில் நடக்கும் பல சண்டைகளில் இவர்களே முடிவெடுத்துச் சம்மந்தப்பட்ட கிளர்ச்சியாளர்களை அடக்கும் வரை முன்னேறிக் கொண்டுருந்தார்கள். சம்மந்தப்பட்ட மன்னர்களுக்குப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இவர்களுக்கு இதன் பலனாகக் கைமேல் கூலி. அப்போது தான் ஆங்கிலேயர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். யோசிக்கத் துவங்கினர். “உள்ளேயிருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுச் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அனுசரித்துப் போகவும் தயாராய் இல்லை. நம்மை நம்பத் தயாராக இருக்கிறார்கள்” என்பதை உணர்ந்த கிழக்கிந்திய நிறுவனம் முதன் முறையாகத் தங்கள் அதிகாரத்தில் உள்ள பகுதிகளுக்குக் கவர்னர் போன்ற பதவியை உருவாக்கி இங்கிலாந்தில் இருந்து தகுதி வாய்ந்த வெள்ளையர்களை இறக்குமதி செய்ய இயல்பாகவே கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. அப்புறமென்ன? ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் தான். அதிகார சுகமென்பது உலகில் அத்தனையும் விட மேலானது. கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவின் உள்ளே நுழைந்து 150 ஆண்டுகள் முடிவடைந்த போது 1757 ஜுன் மாதம் 27 ஆம் நாள் ராபர்ட் கிளைவ் என்ற பிரிட்டிஷ் ஜெனரல் தலைமையில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஒரு கோரத்தாண்டவத்தை நடத்திக் காட்டினான். 900 முறைப்படி பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் படைவீரர்களுடன், 2000 இந்திய சிப்பாயக்ளும் சேர்ந்து வங்காளத்தில் பிளாசி என்ற இடத்தில் தங்கள் விஸ்தரிப்புக்கு இடைவிடாது தொல்லை கொடுத்துக் கொண்டுருந்த ஒரு நவாபு ப டையை அடியோடு அழித்து நிர்மூலமாக்கினான். [] இந்தவொரு வெற்றியே ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியா முழுக்கக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாக வந்து கொண்டுருந்தவர்கள் இதன் தொடர்ச்சியாகத்தான் பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள்ளும் கால் வைத்து அங்கேயும் வெற்றிக் கொடியை நாட்டினார்கள். இவர்கள் ஆளுமைக்குள் இருந்த நாம் பார்கக வேண்டிய இராமநாதபுரம் என்றொரு மாவட்ட நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஆண்டு 1910. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இன்றைய திருநெல்வேலி மாவட்டம் கூட இந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைக்குள் தான் தொடக்கத்தில் இருந்தது. 1757 முதல் தொடங்கிய இவர்களின் புனிதப்பணியை முடித்து வைக்க நம் தலைவர்களுக்கு 1947 வரைக்கும் உழைக்க வேண்டியதாகி விட்டது. பின்குறிப்பு (அல்லது) காலம் செய்த கோலம்… லண்டன் கிழக்கிந்திய கம்பெனியை லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா வாங்கியுள்ளார். ஒருகாலத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த கிழக்கிந்திய கம்பெனி, இப்போது லண்டனில் சிறிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதனை 2005-ம் ஆண்டிலேயே வாங்கியுள்ள சஞ்சீவ் மேத்தா, இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் மீண்டும் புதிதாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் மும்பையைச் சேர்ந்தவன். 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனுக்கு வந்துவிட்டேன். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனைவரால் அறியப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியை வாங்கி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியர் ஒருவரே இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளர் என்பது சிறப்பான விஷயம். இந்தப் பெயரில் தொழிலை பெரிய அளவில் நடத்தவுள்ளேன் என்றார் அவர். கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டது. இந்தியா உள்படப் பல்வேறு நாடுகளில் வணிகம் மேற்கொண்ட அந்த நிறுவனம், பிற்காலத்தில் அந்தநாடுகளையே அடிமைப்படுத்தியது. தனக்கென்று தனி ராணுவம், பணம் எனப் பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1874-ல் இந்த நிறுவனம் பிரிட்டனின் அரசுடமை ஆக்கப்பட்டது. ( நன்றி NKL 4U ) 17 சதி சாதி தீ நாம் இப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசினாலும் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரைக்கும் உள்ள இந்த ஜாதிகளைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். இதுவே தான் இன்று வரையிலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு உதவியாய் இருக்கிறது. சக மனிதனுடன் சேர்ந்து வாழ முடியாமல் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம், குரோதம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுடன் பிளவுபட்டு நிற்க நம் முதுகின் மேல் எவர் வேண்டுமானலும் குதிரை ஏறத்தானே செய்வார்கள். [] மீனவ சமூகம் என்றாலும் அதிலும் பல பிரிவுகள் உண்டு. இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு. பள்ளர் என்றால் பறையரை பிடிக்காது. இவர்கள் இருவருக்கும் அருந்ததியரை பிடிக்காது. இன்று நாடார் என்று அழைக்கப்படுவர்களை தொடக்கத்தில் மரமேறி அல்லது சாணார் என்று அழைக்கப்பட்டனர். இன்று நாடார் பொருளாதார ரீதியாக முன்னேறி இன்று சமூகத்தில் சரிசமமாக உயர்ந்து உள்ளனர். அதுவும் ஜாதிக் கலவரத்திற்குப் பெயர் போன இந்த இராமநாதபுரம் மாவட்டம் தான் இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு வழிகாட்டி. உங்கள் வயது நாற்பதுக்குள் இருந்தால் முதுகுளத்தூர் கலவரம், உஞ்சனை கலவரம் போன்றவற்றைக் கேட்டு இருக்கக்கூடும். குறைந்தபட்சம் அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து “சாதிவாரியாகப் பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு” என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு. அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக் வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள். [] பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்தச் சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம். நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு? தொடக்கத்தில் இந்தச் சாதியை தெய்வீகமானது என்பதாகப் பரப்பப்பட்டது. அதற்குப் பின்னால் இருந்தது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட அயோக்கித்தனம். ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது. இந்தோ – ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களைச் சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்குப் பின்னால் வந்த ஒன்றாகும். இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி? மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது. இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாகக் கொண்டு வரப்பட்டது. குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது. தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம். இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாகப் பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள். இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள். நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றிச் சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம். ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றிப் பேசுவது யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றைச் செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது. சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள் அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றைப் பேசுவது. இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காகப் பிரிகின்றது. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கப் பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். [] இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள். பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து தோன்றியவர்கள் பஞ்சமர்கள். இந்தப் பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விடத் தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமி போலப் பல்கி பெருகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள். ஆனால் இந்தப் பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா? பிராமணன் என்றால் நீ எந்தப் பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா? இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது. கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள். அந்தப் பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூடத் தனித்தனியாகப் பிரிகின்றது. இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி. பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி. ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி. அந்தச் சாதியில் பிறந்தவன் அடுத்தச் சாதி மக்களைத் திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள். அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம். இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்குத் தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம். “உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றைப் புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்.” இப்போது புரியுமே? இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூகச் சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது. இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்குப் பல விதங்களிலும் உதவி செய்தது. [] (இங்கிலாந்து மகாராணி எலிசபெத் 2 தனது அமைச்சர்களுடன்) 18 நாங்க இராமநாதபுரத்துகாரயங்க நாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த கதையை, அவர்களுக்கு இங்கிருந்த இந்திய சூழ்நிலை எப்படி உதவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இராமநாதபுரம் மாவட்டத்தை எப்படி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். [] 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களை முகமதியர்கள் வென்றனர். மறுபடியும் போராடி பாண்டியர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர்களிடம் தோற்றனர். மதுரையை அடிப்படையாக வைத்து ஆட்சி புரிந்த நாயக்கர்கள் இராமநாதபுரம், திருநெல்வேலி சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் தங்களின் அதிகாரத்தை வலுவாக்கினர், அப்போது கன்யாகுமரி மட்டும் திருவாங்கூருடன் சேர்ந்திருந்தது. ஏற்கனவே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சிறப்பான நிர்வாகத்தில் உள்ளேயிருந்த ஒவ்வொரு பகுதியும் “நாடு” என்ற பெயரில் இருந்தது. இந்த நாடு என்ற பெயர் தான் இன்று வரையிலும் இராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த பல்வேறு இனமக்களிடம் இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாடு என்ற பகுதிகளுக்குள் பல கிராமங்கள் இருந்தது. நாயக்கர்களின் வரிசையில் வந்த விஸ்வநாத நாயக்கர் (1529 முதல் 1564 வரை) சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் பொருட்டுத் தமது ஆட்சி எல்லைக்கு உட்பட் பகுதிகளை 72 பாளையங்களாக மாற்றினார்.. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்களிடம் அந்தந்த பகுதியின் பொறுப்பைக் கொடுத்து பாளையத்துத் தளபதியாக நியமித்தார். இவர்கள் தான் உள்ளே உள்ள கிராமவாசிகளிடம் வரி வசூல் செய்வது முதல் அந்தக் கிராம மக்களைப் பாதுகாப்பு வரைக்கும் உள்ள அத்தனை விசயங்களுக்கும் பொறுப்பாக இருந்தனர். இது போன்ற பதவிகளில் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் முதன்மையாகவும், மறவர் குலத்தில் பிறந்தவர்கள் அடுத்த நிலையிலும் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல தென்னிந்திய பகுதிகள் கர்நாடகத்தில இருந்த நவாப்பிடம் மாறிய போது பாளையக்காரர்கள் தங்களைக் காத்துக் கொள்ள ஊரைச்சுற்றி அகழியை வெட்டி வைத்ததோடு பல போர்ப் படைகளை உருவாக்கியும் வைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் பாளையக் காரர்களின் சுயநலமும், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகக் குழப்பமும் கூச்சலுமாய்ப் பாளையக்காரர்களின் நிர்வாகம் சீர்கெடத் துவங்கியது. இது போன்ற சமயத்தில் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர் இன மக்கள் தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவல் பணியில் இருந்தனர். [] இந்த மறவர்களுக்குத் தேவைப்படும் ஊதியத்தை நெல்லாகப் பணமாகக் கிராம மக்கள் வழங்கிவந்தனர். இந்த மறவர்கள் தான் அந்தந்த கிராம மக்களின் மொத்த உடைமைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். காந்தி சொன்ன “கிராம சுயராஜ்யத்தியத்தை” இது போன்ற சம்பவங்களின் மூலமாக நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். காவல் பொறுப்பில் இருந்த மறவர் குல இளைஞர்கள் பல முறை தேவையில்லாமல் திருட்டுப் பழியை ஏற்றுக் கொண்டு அதற்கான நஷ்ட ஈடுகளையும் கிராமத்து மக்களுக்குக் கொடுத்த பல அதிசயங்களை வரலாற்றுக் குறிப்புகள் போகிற போக்கில் தெரிவிக்கின்றது. மொத்தத்தில் கிராம வாழ்க்கையில் வாழ்ந்த மக்களுக்கு ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று வாழ்ந்திருந்தாலும் தங்கள் கிராமத்து வாழ்க்கை உணர்ந்து உண்மையாகவே வாழ்ந்து இருக்கின்றனர். மொத்த பிரச்சனைகளும் மேலேயிருந்த தலைகளால் தான் உருவாகி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மாவட்டம் பல மாறுதல்களைப் பெற்று இருக்கிறது. [] தென்னிந்திய பகுதிகளில் உள்ளே வந்த நவாப் தன்னுடைய ஆட்சி பலவீனமாகத் தொடங்கிய போது தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளை மீட்டுத் தருமாறு ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்க 1751 ஆம் ஆண்டுத் திருநெல்வேலிக்கு அருகே உள்ள பாளைங்கோட்டையில் ஆங்கிலேயர்கள் முதன் முதலாக ஒரு நிரந்தரப் படைப் பிரிவை உருவாக்கி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக உள்ளேயிருந்த ஒவ்வொரு பாளையக்காரர்களுடனும் ஆங்கிலேயர்கள் போர் செய்து தங்கள் வழிக்குக் கொண்டு வர ஆரம்பித்தனர். கடைசியாக 1783 மற்றும் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு பெரும் போர்களின் இறுதிக்கட்டமாகக் கிழக்குத் திருநெல்வேலியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராக இருந்த கட்டமொம்ம நாயக்கரை (வீர பாண்டிய கட்டபொம்மன்) எதிர்த்து நடைபெற்றது.. இதுவரைக்கும் ஆங்கிலேர்களுக்கு அடிபொடியாக இருந்த நவாப் உள்ளே உள்ள பகுதிகளில் இருந்து வரி வசூல் செய்து ஆங்கிலேயர்களிடத்தில் கொடுத்து அவர்களின் விசுவாசியாக இருந்தார். நவாப் ஆங்கிலேயர்களுடன் போட்டு வைத்திருந்த ஒப்பந்தமும் 1785 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் நேரிடையான நடவடிக்கையில் இறங்கி மற்றப் பகுதிகளுடன் நவாப் ஆளுமையில் இருந்த பகுதிகளையையும் தங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்தனர். ஆங்கிலேயர்கள் ஈழத்திலும் இந்த முறையில் தங்கள் ஆட்சியை உருவாக்கினர். ஒருவரை வைத்து உதவி பெற்றுக் கடைசியாக அவரையே அழித்து முடித்துவிடவேண்டியது. காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவனும் செத்துப் போக ஆங்கிலேயர்களுக்குப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். [] 1801 ஆம் ஆண்டுக் கட்டபொம்ம நாயககரின் தோல்விக்குப் பிறகு கர்நாடகப் பகுதி முழுவதும் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது. தங்கள் பேச்சை கேட்க தயாராக இருந்த பாளையக்காரர்களை ஆங்கிலேய அரசாங்கம் ஜமீன்தாரர்களாக நியமித்து மற்றப் படைகளைக் கலைத்து விரட்டியடித்தது. இப்போது தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுமையாக இந்தப் பகுதிகளில் செயல்படத் தொடங்கியது. 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தில் முதல் கலெக்டர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகள் இரு வேறு கூறுகளாக இருந்தது. இதன் நிர்வாகம் முழுக்க ஆங்கிலேயர்களின் வசமிருந்தாலும் உள்ளே உள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் பாளையக்காரர்களும் இருந்தனர். இவர்களைத்தான் ஜமீன்தாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். 1803 ஆம் ஆண்டு மேலே சொன்ன இரண்டு பகுதிகளை இணைத்து கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் உருவானது. ஆனால் இடையில் நடந்த மாறுதலுக்கு அப்பாற்பட்டு இறுதியாக 1910 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தாலூகாக்களைச் சேர்த்து உள்ளேயிருந்த இரண்டு ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு தாலூகாக்களையும் சேர்த்து இந்த இராமநாதபுரம் என்ற மிகப் பெரிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பல முறை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும் இராமநாதபுரம் மாவட்டம் என்ற ஒரு பெயரில் உருவாக்கப்பட்ட பிறகு நெல்லை மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்று 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது திருவாங்கூருடன் இணைந்து இருந்த செங்கோட்டை வட்டம் நெல்லை மாவட்டத்ததுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தென் திருவாங்கூரில் உள்ள தமிழ் வட்டங்கள் நான்கையும் சேர்த்துப் புதிதாகக் கன்யாகுமரி மாவட்டம் உருவானது. 19 கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள் இராமநாதபுர மாவட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க ஏன் இந்தச் சாதி வேறுபாடுகளை விலாவாரியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்? காரணம் இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகத்திற்காக உள்ளே வந்து படிப்படியாகத் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பதைப் பார்க்கும் போது இது போன்ற பல காரணிகள் இவர்களுக்குப் பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது. ஒருவருடன் ஒருவர் ஒன்று சேராமல் இருந்ததற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் அல்ல. இந்தச் சாதி என்ற ஒரு வார்த்தையே காரணமாகும்.. [] ‘சும்மா வரவில்லை சுதந்திரம்’ என்றொரு வாசகத்தைப் படித்த நாம் மற்றொன்றையும் இப்போது கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களும் அத்தனை எளிதாக இந்த நாட்டை ஆண்டு விடவும் இல்லை. காரணம் நம் மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகள் மேலும் உள்ளே ஒவ்வொரு இன மக்களிடமும் இருந்த ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு மிகக் கவனமாகத்தான் கையாண்டிருக்கிறார்கள். இங்குத் தொடக்கத்தில் பாளையக்காரர்களாக, ஜமீன்களாகப் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து ஓற்றுமையில்லாமல் இருந்தவர்களை விரட்ட எப்படிப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி வென்றார்களோ அதன் பிறகு பல சவாலான விசயங்களையும் இங்குள்ளவர்களை வைத்தே சாதித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் அந்த வட்டார சமூக அமைப்பை முன்னிலைப்படுத்தித் தான் அதிகார வரம்புகளை உருவாக்கி ஆட்சி செலுத்தி உள்ளனர். ஆனால் தொடக்கம் முதல் ஒவ்வொருவரின் பொருளாதாரம் தான் இந்தச் சாதி மூலக்கூற்றைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கிய பிரச்சனைகள் தான் தொடக்கத்தில் பலரையும் மதம் மாற வைத்தது. ஆனால் அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சனைகளைச் சந்தித்து எப்படியோ பலரும் மேலேறி வந்துள்ளனர். [] தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையோர மக்கள் தான் மத மாற்றத்திற்கு முதல் காரணமாக இருந்தனர். இப்போது நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இராமநாதபுர மாவட்டத்தில் தொடக்கத்தில் ஒன்று சேர்ந்திருந்த திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். இங்கு ஆதிக்கம் செலுத்திய நாடார் இன மக்கள் மற்றும் அவர்கள் வாழ்வியலில் சந்தித்த சவால்களில் இருந்து நம்மால் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும்… தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இது போன்ற இடத்தில் இருந்து தான் தங்களின் புனிதப் பணிகளைத் தொடங்கினர். 1600 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் உள்ள வந்த ஆங்கிலேயர்கள் வணிகத்தில் எப்படிக் கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே 1680 முதல் கிறிஸ்துவப் பாதிரியார்கள் ஒரு பக்கம் அவர்கள் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் கல்வி என்ற சேவை மனப்பான்மை. மற்றொரு கையில் பைபிள் என்ற மதமாற்றம். இவர்களிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் சமூக வாழ்விலும் பல வகையிலும் முன்னேறத் தொடங்கினர். ஈழத்திலும் குறிப்பாக யாழ்பாணபகுதியில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் இரண்டு தலைமுறைக்குள் முறையான இடத்தைப் பிடித்தனர். இது போன்ற சமயத்தில் தான் ஈழத்திற்கும் இந்தப் பகுதிகளுக்கும் மிக நெருக்க உறவு உருவானது. 1830 முதல் ஈழத்தில் உருவாக்கப்பட்ட காபி தேயிலை தோட்டங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள் இந்த அகண்ட இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தான் புலம் பெயரத் தொடங்கினர். 1843 முதல் 1867 முதல் ஏறக்குறைய 15 லட்சம் பேர்கள் ஈழத்திற்குப் புலம் பெயர்ந்தனர். சம்பாரித்தவர்கள் திரும்பவும் வந்து பல இடங்களில் இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு சமூகத்தின் பார்வையில் தங்களை மேம்பட்டவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். இதன் தொடர்ச்சி தான் 1833 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு ரப்பர் தோட்டம் அமைக்க ஆட்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டனர். இலங்கை, மலேசியாவில் தொடக்கத்தில் குடியேறியவர்கள் அத்தனை பேர்களும் நாடார் இன மக்களே. குறிப்பாக வாழ வழியில்லாமல் இருந்த திருச்செந்தூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் அதிக அளவில் இது போன்ற வேலைக்கு நகரத் தொடங்கினர். [] நாடார் இன மக்கள் முறைப்படியான கல்வியறிவு இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காரணத்தால் வெள்ளையர்களின் பார்வையில் நாடார்கள் இன மக்கள் சற்று விகாரமாகத்தான் தெரிந்தார்கள். பனைமர தொழில்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த இந்தப் பகுதி மக்களின் கால் கைகள் போன்றவைகள் கூட வினோத வடிவில் இருந்தது. ஏறக்குறைய நாடார் இன மக்களின் தொடக்கக் கால வாழ்க்கை என்பது மற்றவர்களால் வெறுக்கப்பட்ட குணாதிசியங்கள் உள்ளவர்களாகத்தான் வாழ்ந்து இருக்கின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கைப்பாடுகளுக்குத் தேவைப்படும் திறமையைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளவும் இல்லை. வளர்த்துக் கொள்ள ஆசையில்லாமல் ஒவ்வொருவரும் ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் வாழ்ந்து இருக்கின்றனர். கருப்பு நிறத்தோற்றமும், காதுகளில் கனமாக ஈயத்திலான ஆபரணங்களும் போட்டு பழகிய காரணங்களினால் பெண்களின் காதுகள் தோள் வரைக்கும் தொங்கிக் கொண்டு வினோத வடிவில் இருந்தது. இதைத்தவிரப் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்றொரு சட்டம் வேறு. அதையும் திருவிதாங்கூர் பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஆங்கிலேயப் பெண்மணி தான் மாற்றிக் கடைசியாகத் தொள தொள ரவிக்கையை அறிமுகம் செய்து ஒரு மாற்றத்தை உருவாக்கினார். 19 ஆம் நூற்றாண்டில் தான் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கை சற்று மேலேறத் தொடங்கியது. காரணம் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதிகளுக்குள் உள்ளே வருவதற்குள் ஆண்டுக் கொண்டிருந்த பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் என்று ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்த பகையும் விட முடியாத போர்களும் பல விதத்திலும் தொந்தரவாக இருந்தது. இதற்கு மேலும் பாரபட்சமான அணுகுமுறைகள் பலதும் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மேலே இருந்தவர்களின் கெடுபிடிதனத்தை மீறி சாதாரணமக்கள் மேலே வரவேண்டும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. சாதாரண மக்கள் தங்களின் வணிக மேம்பாட்டிற்காக ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்குச் செல்லும் போது ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொள்ளையர்களின் அட்டகாசம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் உள்ளே வந்ததும் தான் கண்டதும் சுட உத்தரவு என்று உருவாக்கி ஒரு வழிக்குக் கொண்டு வந்தனர். [] கிறிஸ்துவப் பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாகக் கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாகக் கிறிஸ்துவத்தைப் பரப்ப ஆரம்பித்தனர். 1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர். முதல் முதலாக நாடார் இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார். இதைப் போல ராயப்பன் என்பவர் 1784 ஆம் ஆண்டு இரு குடும்பங்களைத் திருமுழுக்கு அளித்துத் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமமக்களைப் புரொட்டஸ்டான்ட் என்ற கிறிஸ்துவ மதப்பிரிவின் தொடக்கத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த மதமாற்றம் அத்தனை எளிதாக நடக்கவில்லை. பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தல்கள் அந்த அளவிற்கு இருந்தது. சாத்தான்குளத்தில் பிறந்த சுந்தரம் என்பவர் தான் தன்னுடைய பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டு நாடார் சமூகத்தில் முதல் மதப் போதகராக மாறியவர். இவரின் சாவும் மர்மத்தில் தான் முடிந்தது. 1810 ஆம் ஆண்டு இராமநாதபுர மாவட்டத்தில் உருவான வெள்ளப்பெருக்கில் உருவான காலரா, மலேரியா நோய்க்குப் பிறகு உண்டான அழிவுகளைப் பார்த்த மதகுருமார்கள் பள்ளிக்கூடங்களைக் கட்ட கிறிஸ்துவம் இந்தப் பகுதியில் வேகமாகப் பரவத் தொடங்கியது. நிலங்களும், பனை மரங்களும் தராத வாழ்க்கையை இந்தக் கல்விக்கூடங்கள் கொடுக்க ஆரம்பித்தது. பலரும் மதம் மாறத்தொடங்கினர். 1877 ஆம் ஆண்டு உருவான பஞ்சத்திற்குப் பிறகு திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மதமாற்றம் இரண்டு மடங்கு அதிகமாகி தங்களின் பராம்பரிய கலாச்சாரத்தை விட்டொழித்து முழுமையாகக் கிறிஸ்துவத்திற்கு அர்பணிக்கும் தலைமுறையாக மாறத் தொடங்கினர். இதில் மற்றொரு சிறப்பு அம்சமும் இருந்தது. எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டுப் புதிய மனிதராகச் சமூகத்தில் மாறத் தொடங்கினர். அவர்களின் எண்ணங்களில் ஆழமாக இந்தக் கிறிஸ்துவம் ஒன்றிப் போனதாக மாறத் தொடங்கியது. [] (இந்தக் கணக்கு இந்தியாவில் நடைபெறும் மதமாற்றத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியைப் பற்றி பேசுகின்றது) இந்த கட்டுரை பதிவில் எழுதப்பட்ட போது பின்னூட்டமாக வந்த நண்பர்களின் கருத்துக்கள் இது. முத்துக்குழித்தலை தொழிலாக கொண்டிருந்தவர்கள் பரவர்கள் அவர்களை பிரான்சிஸ் சவேரியார் 1545 -க்கு முன்னரே கத்தோலிக்க கிறித்துவர்களாக மாற்றியிருந்தார் .அவர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்த இன்னொரு மீனவர் சமுதாயமும் கத்தோலிக்கர்களாக மாறினர். நெல்லை, குமரி மீனவர்கள் முழுக்க கத்தோலிக்கர்களாக மட்டுமே மாறினர். அவர்களில் புரட்டஸ்டாண்டு கிடையாது. அதே நேரத்தில் பிற்காலத்தில் நாடார்கள் சிலர் கத்தோலிக்கர்களாகவும் சிலர் புரட்டஸ்டேண்டுகளாகவும் மாறினர் உண்மை. ஆனால் சிறு மாற்றம். பரவர்கள் பிரான்சிஸ் சவேரியார் வருகைக்கு சில ஆண்டுகள் முன்பே மதம் மாறி விட்டார்கள் . பூவார் (கேரளா) -இல் இருந்து மணக்குடி வரை இருந்த கடலோர மக்களை தான் சவேரியார் மாற்றினார் பிரான்சிஸ் சேவியருக்கு முன் எல்லா பரவர்களும் மாறிவிட்டிருந்தனரா? மணப்பாடு போன்ற ஊர்களில் ஏற்கனவே மாறியிருந்தனர். பின்னர் மணப்பாடு குகையில் வந்து தங்கியிருந்து பணியாற்றிய பின்னரே முழுவதுமாக பரவர்கள் மாறினார்கள் என கேள்விப்பட்டேன்..பூவாறு முதல் மணக்குடி வரை மாறியது குறித்து நீங்கள் கூறியது உண்மை .ஆனாலும் பூவாறு- மணக்குடி-க்கு இடையிலும் 6 மீனவ கிராமங்களில் பரவர்கள் இருக்கிறார்கள். மற்ற ஊர்களில் முக்குவர்கள் இருக்கிறார்கள். தூத்துக்குடியில் முத்துக்குளித்தவர் (இப்போது இல்லை) மட்டுமல்ல, அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள். முதலில் புனித சவேரியார் பின்னர் புனித வீர்மாமுனிவர் போன்றோர் இவர்களை கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர். சவேரியார் மணப்பாட்டில் தங்கியிருந்து பின்னர் நாகர்கோயில் கொட்டாரத்தில் தேவாலயம் ஒன்றைக்கட்டினார். அதற்கு திருவிதாங்கூர் ராஜா வர்மாவின் ஆதரவு நல்கினார். இங்கிருந்து கொண்டே கடலோரச் சிற்றூர்களில் குறிப்பாக மீனவமக்களிடையே கத்தோலிக்கத்தைப் பரப்பினார் அவர். நீங்கள் சொல்லுபவர்கள் தூத்துக்குடி நாடார்களே. இவர்களுடன் குமரி, நெல்லை மாவட்ட நாடார்களும், இராபர்ட்டு கால்டுவெல் ஐயர், மற்றும் மர்காசியஸ், ஜி.யு.போப் ஐயர் போன்றோரால், புராட்டஸ்டெண்டு என்னும் கிருத்துவப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட்டனர். இன்று இவர்கள் சிஎஸ்ஐ நாடார்கள் என அழைக்கப்படுகின்றனர். உங்கள் கட்டுரையில் கத்தோலிக்கத்தையும் புராட்டஸ்டெண்டும் குழப்பபபடுகின்றன. இராபர்ட்டு கால்டுவெல் தங்கியிருந்து ஊழியம் செய்த சிற்றூர் இடையங்குடியாகும். அங்கிருந்து 10 யே மைல் கல்லின் உவரி சிறிது அப்பால் மணப்பாடு வரும். எனினும் கால்டுவெல் கடலோர மீனவ மக்களிடம் வரவேயில்லை. கரணியம் அவர்கள் ஏற்கனவே கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டதால் கத்தோலிக்கமாக இருப்பினும். மீனவ மக்கள் இன்று இந்துக்களாயிருப்பினும் அவர்களும் தலித்துகள் படும் வன்கொடுமைக்குத்தான் ஆளாகியிருப்பர். The Churth that St Francis Xavier built, with the patrongage of Travancore Maharaja, is today called Xavier’s Church. Even before the arrival of St Francis Xavier, certain sections of fishermen community in the coastal village of Tutocirin, Tirunveli and KK Dists changed their religion from Hinduism to Catholicism in exchange for the protection given by Portungues rulers of Cochin, from the attack of Muslims. The portuugese stood as god fathers in the marriages of the fishermen, giving them the portugues surnames like Fernando. So, the history of the fishermen and their conversion to catholicism predated the advent of St Francis Xavier. However, it is to that Saint goes the credit of making these fishermen wholeheartedly accept Jesus. Under St Francis Xavier, the conversion was from heart, not at all by any inducements. He did not give anyting to the fishermen, in turn. கிருத்தவம் நாடார்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. ஆனால் கிருத்தவம் முதலில் பரதவர்களைத் தான் தழுவிக் கொண்டது. தென் தமிழகத்தில் வாழ்ந்த மீனவர் குலங்களைத் தான் சவேரியார் உட்பட பிற கத்தோலிக்க பெரியவர்கள் பரதவர்களைத் தான் மதம் மாற்றினார்கள். அதே போல மலேசியா, இலங்கைப் போன்ற நாடுகளுக்கு நாடார்கள் புலம் பெயர முன்னரே மீனவர்கள் புலம் பெயர்ந்து உள்ளனர். 13 நூற்றாண்டில் மலேசியாவில் ஏற்படுத்தப் பட்ட இஸ்லாமிய பேரரசுக்கு வித்திட்டவர்கள் தமிழ் இஸ்லாமிய மீனவர் குலத்தவர்களே ! அதே போல 16ம் நூற்றாண்டிலே இலங்கையின் மன்னார் முதல் கள்ளுத்துறை வரை ஆயிரக்கணக்கான கிருத்துவ மீனவர்கள் போத்துகேயர் துணையொடு குடியேறினார்கள். இவர்களில் பலர் இன்று சிங்களவர்களாக மாற்றப்பட்டு விட்டனர். ஆயினும் சிலர் வீடுகளில் மட்டும் தமிழ் பேசியும், சிலரின் பெயர்களில் மட்டும் தமிழும் இருந்து வருவதைப் பார்க்கலாம். உதாரணமாக, சிங்களவர் மத்தியில் காணப்படும் அழகம்பெருமாள், சிங்கப்புலி போன்ற பேர்கள் இதனை உணர்த்தும். நாடார் மக்கள் பாண்டி பேரரசு உருவாக முன்னர் வேடுவர்/வில்லவரகா இருந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. அதே போல நாடார் இன மக்கள் ஆஸ்திரேலியா பழங்குடிகளோடு ஒத்து இருப்பதை விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவை 20 தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம் இந்தியாவில் தொடக்கத்தில் சாதி என்ற பெயரால் எவ்வளவு பாரபட்சம் நிலவியதோ அந்த அளவிற்கு அந்தச் சாதியை வைத்துக் கொண்டே பல திருகுதாள வேலைகளும் நடந்து கொண்டுருந்தது. நீ இந்தச் சாதியில் பிறந்து இருக்கிறாயா? இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் தொடங்கி உன்னுடைய வட்டம் இதற்குள் தான் முடிகின்றது. இதற்கு மேல் நீ வெளியே வரமுடியாது என்பதாக ஒவ்வொரு இன மக்களுக்கும் ஆதிக்கச் சாதியினர் கோடு கிழித்து வைத்திருந்தனர். தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இந்தியாவில் அடக்கி வைக்கப்பட்ட இன மக்களின் வாழ்வியல் சோகத்தை எந்த வார்த்தைகளாலும் எழுதி விட முடியாது. வாழ்க்கை முழுக்க மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சங்ககால மன்னர்கள் காலம் முதல் இருந்து வந்த இது போன்ற கொடூரங்கள் இன்று வரைக்கும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் அவனின் குலத்தை அடிப்படையாக வைத்து, ஒருவர் செய்து வந்த வேலைகளை வைத்தே இது போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டது. [] இன்று நாடார்கள் என்பவர்கள் சமூகத்தில் தங்களை மையப்புள்ளியாக மாற்றிக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியாகத் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள். இன்று இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் இவர்கள் தாங்கள் பெற வேண்டிய சமூக உரிமைகளை அத்தனை எளிதாகவும் பெற்றுவிட வில்லை. ஒவ்வொரு சமயததிலும் உருவான அத்துமீறல்களும், இதனால் உருவான கலவரங்களும் தான் இவர்களின் இன்றைய வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ளது. முற்பட்ட சாதியினர், ஆதிக்கச் சாதியினர் என்ற நிலையில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் இந்த நாடார் இனமக்கள் மேலே வந்து விடமுடியாதபடி உருவாக்கிய பல வலைபின்னல்களைப்பற்றிச் சரித்திரம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே செல்கிறது. அதில் ஒன்று தான் இந்தத் ‘தோல்சேலை’ போராட்டம். நாடார் இன பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்பதாகும். ஆனால் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கலவரத்தையும் நாம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மனித மனங்களில் உள்ள வக்கிரங்கள் தான் நாம் கண்கூடாகப் பார்க்கமுடியும். வெறும் சாதிக்கலவரம் என்று மேலோட்டமாகப் பார்த்தாலும் ஒவ்வொரு கலவரங்களின் அடிப்படை நோக்கமே பொறாமை என்ற வார்த்தையில் இருந்து தான் உருவாகின்றது. தங்களுக்குக் கீழே வாழ வேண்டியவர்கள், தாங்கள் சொல்லும் செர்ல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய கடமைப்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு வாழும் ஆதிக்கச் சாதியினர் மனதில் உருவாகும் பொறாமைத்தீயே இது போன்ற கலவரங்களை உருவாக்க காரணமாக இருக்கிறது. தங்கள் உழைப்பால் உயர்ந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பொருளாதார வளர்ச்சி ஏனைய சாதிக்காரர்களின் பார்வையில் விகாரமாகத் தெரிந்தார்கள். இத்துடன் நாடார்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் பல தாக்கங்கள் உருவானது. சமூகத்தில் தங்களின் சமூகப் பிடிமானங்களை ஆழ அகல ஊன்றி கிளை பரப்பி மேலேறி வந்த நாடார் இன மக்களை மற்றவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள எவருக்கும் மனமில்லை. தொடக்கத்தில் தென் திருவிதாங்கூர் பகுதியில் லண்டன் மதகுருமார்கள் உருவாக்கிய மாற்றங்கள் ஆச்சரியமானது. பல காலமாகச் சிந்தனையாலும் செயலாலும் தாழ்ந்து கிடந்த இந்த இன மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட ஆரம்பித்தனர். 1820 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் கிறிஸ்துவ ஆலயம் தொடங்கப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் 3000 நாடார் இன மக்கள் இந்தக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் போலவே திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் பனை தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் இதற்குள்ளும் அவரவர் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இரண்டு பிரிவாக இருந்தனர். திருவிதாங்கூரில் தென் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் நாயர் நிலபிரபுகளின் நிலங்களை எடுத்து குத்தககைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் மற்றவர்களை விடச் சற்று மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருந்தனர். இதைப் போலவே நெல்லை மாவட்டத்தின் எல்லையோரமாக அதாவது தென் திருவிதாங்கூரின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார்கள் வேளான் நிலபிரபுகளிடம் இருந்து பெற்ற நிலங்கள் மூலம் குத்தகைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். மொத்தத்தில் நாடார் என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அவரவர் பெற்றிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு தான் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கருதும் நிலையில் தான் இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தது. திருவிதாங்கூர் பகுதி மற்றப் பகுதிகளை விடச் சற்று வளமாக இருந்த பகுதியாகும். மன்னர்கள் ஆட்சி புரிந்த 16 ஆம் நூற்றாண்டு முதல் குடியேறிய நாடார்கள் மற்ற இடங்களை விடச் சற்று அதிகமாகக் கூலி பெற்று வாழ்ந்து வந்த போதிலும் சமூக இழிநிலைகளைப் பொறுத்துக் கொண்டு இந்தப் பகுதியில் பனை தொழிலாளர்களாக வாழ்ந்தனர். இந்தப் பகுதியில் தீண்டாமை கொடுமை என்பது உச்சமானது. தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது 12 அடிகள் தள்ளி நின்று தான் பேச வேண்டும். குடைகள் பயன்படுத்தக்கூடாது. காலணிகள், தங்க ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது. கட்டும் வீடுகளில் மாடி வைத்துக் கட்டக்கூடாது. பசுக்களில் பால் கறக்க அனுமதியில்லை. தண்ணீர் குடங்களை இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது. மேலாடைகளை அணிந்து கொள்ளப் போர்த்திக் கொள்ள அனுமதியில்லை. இது தவிரத் தாழ்ந்த சாதியினருக்கு கடுமையான வரிகள் என்று தனியாக உண்டு. பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாடார்களையும் தள்ளி வைத்து தான் பார்த்தனர். உழைப்புக்கேற்ற ஊதியமின்றி நாட்டு நலன் என்ற போர்வையில் நாடார்களின் உழைப்பு ஊதியம் கொடுக்காமல் சுரண்டப்பட்டது. ஆனால் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும், நெல்லை மாவட்டத்தின் மற்றப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டு வந்தவர்கள் தாங்கள் நாயர்களின் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை உடைக்கத் தலைப்பட்டனர். மற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடம் சமூக ரீதியான தொடர்புகள் உருவாக அப்போது தான் கிறிஸ்துவ மதக் குருமார்களின் தொடர்பும் இவர்களுக்கு உருவாகத் தொடங்கியது. இதுவே தான் இங்கிருந்த மதகுருமார் லண்டன் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாடார்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார். காரணம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வழியில் நாம் இந்த இழிவான நிலையில் இருந்து மேலே வந்து விட முடியாதா? என்று காத்துக் கொண்டிருந்தனர். [] கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய நாடார்களும், மதக் குருமார்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கிக் கொண்டவர்களுக்கும் அரசாங்க ஆதரவு எளிதாகக் கிடைத்தது. பல வரிகளில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டனர். ஏராளமான பொருள் உதவிகளும் கிடைக்கத் தொடங்கியது. நிலங்களும், வணிகத் தொடர்புகளும் உருவாகத் தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் சுய தொழில் மூலம் வரத் தொடங்கியது. சமூகத்தில் விரைவாக முன்னேறத் தொடங்கினார்கள். ஆதிக்கச் சாதியினரின் கோபப்பார்வை நாடார்கள் மேல் திரும்பிய அளவிற்கு இந்த மதக் குருமார்களின் மேலும் திரும்பத் தொடங்கியது. மதக் குருமார்களின் ஆதரவுடன் கல்வி கற்றவர்களின் முயற்சியினால் கல்வி கற்றவர்கள் அடுத்து வருபவர்களுக்கு வழிகாட்ட பல விதங்களிலும் இவர்களின் வளர்ச்சி பிரமிக்கக்கூடியதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ந்து விட்ட சமூகமாக நாடார்கள் தங்களைக் கருதிக் கொள்ள மேலாடை அணிவது பற்றிய வாக்குவாதத்தை எழுப்பத் தொடங்கினர். பின்குறிப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இவை மட்டுமா? எத்தனை வகையான வரிகள் மற்றும் அபராதங்கள்? புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். ‘பார்த்தால் தீட்டு’ என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது “எட்டிப்போ” என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர். நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம். ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது. ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது. பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது). பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி. திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம். குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது. தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி. செருப்பு அணியக்கூடாது. படிக்கக்கூடாது. பொது குளத்தில் குளிக்கக்கூடாது. இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது. இன்னும் பல. [] 21 களம் இறங்கினால் கணக்குகள் மாற்றப்படும் இந்தத் தோல் சீலை போராட்டமென்பது வெறுமனே நாடார் இன மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைக்கான முன்னேற்பாடுகளாக மட்டும் தெரியவில்லை. இதன் மூலம் கண்களுக்குத் தெரியாத பல வலைபின்னல்கள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உரிமையைக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினர் எத்தனை கவனமாக இருந்தார்களோ அதே அளவிற்கு நாங்களும் சரிசமம் என்று தான் போராடத் தயாராய் இருந்த நாடார் இன மக்களை இங்கே நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். உரிமையை நிலைநாட்டுதல் என்பது வெறும் எழுத்து பேச்சு என்பதோடு மட்டும் இருந்து விட்டால் அதற்குப் பெயர் வாய்ச்சொல்லில் வீரரடி. . இந்த இடத்தில் வேறொன்றையும் நாம் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான நாடார் இன மக்களுக்கு முறைப்படியான கல்வியறிவு கூட இல்லை. ஆனால் ‘கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தனர். பின்னால் நாம் பார்க்கப் போகும் இந்த மக்களின் சமூக வாழ்க்கை என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எவர் ஒருவருக்குப் பொருள் சேர்க்க வேண்டும் என்றும் அதற்காக நாம் முறைப்படியான உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரின் ஜாதி என்பது இரண்டாம் பட்சமாகத் தான் ஆகிவிடுகின்றது என்பதை இவர்களின் வரலாற்று காலடித் தடங்கள் நமக்கு உணர வைக்கின்றது. இன்று வரைக்கும் நாயர், நம்பூதிரிகளின் ஆச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. இப்போது உள்ள கேரளா மாநிலங்களில் அதிகப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் இன்று வரையிலும் கடைபிடிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் வித்யாசமானது. இவர்களின் ஆதிக்கம் நிறைந்த பழைய திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார்களின் வாழ்க்கை என்பது மிக அவலமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த அவல வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர முக்கியக் காரணமாக இருந்தது இந்தப் பகுதியில் ஊடுருவிய கிறிஸ்துவமே. மதமாற்றம் என்று எளிதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாலும் இதுவே நாடார்களின் சமூக வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் எண்ணிலடங்காதது. அடிமைப்புத்தியும், முரட்டு சுபாவமும் கொண்ட நாடார் இன மக்களை அத்தனை எளிதாக மாற்றுவதும் அத்தனை சுலபமாய் இல்லை என்பதும் உண்மை தான். தாங்கள் வாழ்ந்து வந்த மூதாதையர்களின் வாழ்க்கையை விட்டு விட்டு வெளியே வர மனம் ஓப்பாமல் ஒவ்வொருவரும் தாங்கள் போட்டுக் கொண்ட கோட்டுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். [] கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தின் முக்கியக் காரணிகளில் முதன்மையான விசயம் ஒன்று உண்டு. ஒருவன் எந்தக் குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனின் மன ரீதியான அழுக்குகளை, தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர தூண்டுதல். இதற்காகத்தான் தொடக்கம் முதல் பாடுபட்டனர். காரணம் மற்றத் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே நாடார் இன மக்களை மேலாடை அணிவதற்க்கு திட்டவட்டமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த விசயத்தில் இப்போதுள்ள உள் ஒதுக்கீடு போலவே அப்போது வேறொரு வகையில் புதிய தத்துவத்தை உருவாக்கினார்கள். நாடார்களுக்கென்று பருமனான இழை கொண்ட தனித் துண்டொன்று ஒதுக்கப்பட்டு இருந்தது. நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அம்மாதிரியான துண்டுகளை முழங்காலுக்குக் கீழ் வராதபடியும், இடுப்புக்கு மேலே போகாமலும் அணிய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது போன்ற சமயங்களில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாறற்ங்களினால் ஒன்றன் பின் ஒன்றாக மாறத் தொடங்கினர். மதம் மாறிய நாடார்களுக்குக் கிறிஸ்துவ ஆலயங்கள் மூலம் பல விசயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. வெளி இடங்களில் ஒரு மனிதன் எப்படித் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பாடங்கள் உருவாக்கிய புரிந்துணர்வு ஆதிக்கச் சாதியினரின் பார்வையில் தீயாய் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.. கிறிஸ்துவப் பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றவர்கள் வெளி இடங்களில் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த தலைப்படப் பல மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாறுதல்கள் உருவாகப் பிரச்சனைகளும் ஒன்றன் பின் வரத் தொடங்கியது. உலகில் வாழும் மற்றக் கிறிஸ்துவ மக்களைப் போல இங்குள்ள கிறிஸ்துவப் பெண்களும் தங்கள் மார்பகங்களை ஆடைகளால் மறைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் 1812 ஆம் ஆண்டுத் திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கர்னல் மன்றோ வழங்கினார். இதற்கான சுற்றறிக்கை 1814 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் சட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்ற முடியவில்லை. இதற்கும் மாற்று ஏற்பாடுகளைக் கிறிஸ்துவ மத குருமார்களின் மனைவியர் செய்தனர். இப்போது தான் தொள தொள ரவிக்கை அறிமுகமானது. இந்த மாற்றங்கள் நாயர்களின் ஒட்டு மொத்த கிளர்ச்சியை உருவாக்க 1822 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் வாழ்விலும் ஏராளமான துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. சாலையில் செல்லும் போது, சந்தையில், மற்றப் பொது இடங்களில் கூடும் போது குறிப்பாக மதம் மாறிய கிறிஸ்துவப் பெண்மணிகளை நோக்கி கிண்டலும் கேலியுமாகத் தொடங்கிய கிளர்ச்சி பெண்மணிகளில் ரவிக்கையைக் கிழித்து எறியும் வரையும் தொடர்ந்தது. 1823 ஆம் ஆண்டுப் பத்பநாபபுரத்தில் புறச்சமயத்தைச் சார்ந்த நாடார்கள் என்ற பெயரின் மீது கள்ளுக்கான வரிப்பாக்கி செலுத்தாதயும் நாடார் பெண்மணிகள் மேலாடைகள் அணிந்ததற்குரிய வரி செலுத்தாதையும் எதிர்த்துப் புகார்கள் செய்யப்பட்டன. 1828 ஆம் ஆண்டுக் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் மேல் முறைப்படியான வன்முறைகள் உருவாகத் தொடங்கியது. கிறிஸ்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. உருவாகியிருந்த கல்வி கூடங்களைத் தீயிடத் தொடங்கினர். பள்ளிகளின் உள்ளே நுழைந்து புத்தகங்களைக் கிழித்து எறிந்தனர். மார்புச் சேலை அணிந்து வந்தவர்களைக் குறி வைத்து தாக்கத் தொடங்கினர். பொதுவிடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அச்சுறுத்தல்களும் அவமானங்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சியாக மாறத் தொடங்கியது. இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் பார்க்க வேண்டும். இது வெறுமனே மார்ப்புச் சேலை அணிவது சம்மந்தப்பட்ட விசயங்கள் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் பொருளாதார விசயங்களும் உண்டு. இது தான் இந்தக் கலவரத்தை உருவாக்க தொடர்ச்சியாக நடத்திச் செல்லவும் காரணமாக இருந்தது. கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். உரிமைகளைப் பற்றிப் பேச் தொடங்கினர். சம்பளமின்றி வேலை செய்ய மறுத்தனர். வரி கட்ட மாட்டோம் என்றனர். கிறிஸ்துவம் துணை கொண்டு தங்களின் சமூக மதிப்புகளை உயர்த்திக் கொள்கின்றனர் என்ற ஆதிக்கச் சாதியினரின் கோபமே இது போன்ற அச்சுறுத்தல்கள் உருவாகக் காரணமாக இருந்தது. 1829 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 3 அன்று திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. நாடார்களுக்கும் நாயர்களுக்கும் சில குழப்பங்கள் உருவாகியுள்ளது. நாடார் பெண்மணிகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் பழங்காலப் பழக்க வழக்கங்களுக்கு மாறாகவும் மேலாடை அணிந்ததாலும் நாடார்கள் ஏனைய நபர்களைப் போன்று பொதுவாக அரசாங்கத்திற்குத் தேவையான தொண்டு செய்ய மறுத்ததாலும் உருவாகியது. எனவே கீழ்க்கண்ட பேரறிக்கையை வெளியிடுகின்றோம். முதலாவதாக நாடார் பெண்மணிகள் மேலாடை அணிவது நியாயமற்றதாகும். இது தடை செய்யப்படுகின்றது. வருங்காலத்தில் மேற் குறிப்பிட்டப்படி நாடார் பெண்மணிகள் இடுப்பின் மேல் பகுதியை மேல் துண்டால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே 1814 ஆம் ஆண்டு நாடார்களின் உரிமைகள் என்று வெளிவந்த அறிக்கைக்கும் இப்போது வந்துள்ள முரணனான அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்த நாடார்கள் ஒன்று சேரத் தொடங்கினர். இதில் மற்றொரு தில்லாலங்கடி வேலையும் உண்டு. கிறிஸ்துவ மத மாற்றத்தில் உள்ளவர்களும் தாங்கள் ஏற்கனவே இருந்த குல வழக்கப்படிதான் செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது. இந்த வர்க்கப்பேத வர்ணாசிரம பாகுபாடுகளால் உருவான கோபங்கள் கலவரமாக மாறத் தொடங்கியது. தொடங்கியதும் நாடார்கள் அல்ல. 1859 ஆம் ஆண்டுக் கிராம சந்தையொன்றில் நின்று கொண்டுருந்த சிறிய நிலையில் உள்ள அதிகாரி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நாடார் பெண்மணிகளைக் குறிவைத்து அவர்கள் அணிந்திருந்த மேலாடைகளை அரசாங்கம் கிழிக்கச் சொல்லி உத்திரவு இட்டுள்ளது என்று கருமமே கண்ணாகச் செயலில் காட்டத் தொடங்கினார். இது இருபது நாட்கள் தொடர்ச்சியாகக் கலவரக் காடாக மாற்ற உதவியது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1858 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட கொளுந்து விட்டு பரவ ஆரம்பித்தது. ஒன்பது கிறிஸ்துவ ஆலயங்களும், மூன்று பள்ளிகளும் முழுமையாக அழிக்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்தப் போராட்டங்களின் விளைவால் கீழ்க்கண்ட அறிக்கை 1859 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ந் தேதி வெளிவந்தது. மாட்சிமை தாங்கிய மன்னரின் கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. நாங்கள் இதனால் தெரிவிப்பது என்னவென்றால் கிறிஸ்துவ நாடார் பெண்மணிகளைப் போன்று ரவிக்கை அணிந்து கொள்வதில் அல்லது அனைத்து மதங்களையும் சார்ந்த நாடார் பெண்மணிகளைப் போன்ற பருமையான இழைய கொண்ட ஆடைகளை நாடார் பெண்மணிகள் இணிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மேலும் அப் பெண்மணிகள் முக்குவச்சிகளைப் (கீழ் சாதி மீனவப் பெண்கள்) போன்று அல்லது வேறெந்த மாதிரியிலும் தங்கள் மார்பை மூடிக் கொள்ளுவதிலும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் உயர் சாதி பெண்களைப் போன்று மட்டும் ஆடைகள் அணியக் கூடாது. இதிலிருந்து கிடைத்த படிப்படியான வெற்றி தான் நாம் இன்று கண்டு கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் பல சமூக மாறுதல்கள். மானத்திற்கு மறைக்க வேண்டிய ரவிக்கை இன்று தான் விகாரமாக மாறி சகல இனத்திலும் வேறு விதமாக மாறி வந்து நிற்கிறது. நிலைப்படி, கதவு, ஜன்னல் மற்றும் முக்கால் நிர்வாண ரவிக்கைகள் வரை பெண்களின் சுதந்திரம் இன்றைய சூழ்நிலையில் கொடிகட்டி பறக்கிறது, மற்றொன்றையும் இப்போது பேசியாக வேண்டும். சமூகத்தில் நாம் காணும் மதமாற்றம் என்பது ஒரு வகையில் வினோதமான மாறுபாடே ஆகும். முதல் நாள் இரவு வரைக்கும் தான் வணங்கிக் கொண்டிருக்கும் சாமி படங்களைத் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் எல்லாமே ஏசு தான் என்று சொல்ல வைக்கும் ஆச்சரய நிகழ்வு. ஆனால் இப்போது படித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவக் குருமார்களின் சேவையையும் தற்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றங்களையும் உங்கள் கணக்கில் கொண்டு வந்து விடாதீர்கள். தொடக்கத்தில் உருவான ஒவ்வொரு மதமாற்றத்திற்கும் பின்னாலும் ஒரு இனத்தின் நல்வாழ்வு ஏதோவொரு வகையில் பூர்த்திச் செய்யப்பட்டது. குறிப்பிட்ட இன மக்களின் சமூக அந்தஸ்த்தை பொருளாதார வாழ்க்கையை உயர்த்த உதவியது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் என்பது தனிநபர்களின் ஆதாயத்திற்காக, வெளிநாட்டு நிதிகளுக்காக என்ற நோக்கத்தில் மேன்மேலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலவாழ்க்கையைப் பந்தயக்குதிரை போலவே மாற்ற உதவி கொண்டிருக்கிறது. காரணம் தொடக்கக் கால ஈழ வரலாற்றில் யாழ்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை இந்த மதமாற்றம் எந்த அளவிற்குச் சமூகத்தில் உயர்த்தி வைத்திருந்தது என்பதை ஈழவரலாற்றை முழுமையாகப் படித்தவர்களுக்குப் புரிந்த ஒன்றாகும். இரண்டு தலைமுறை முடிவதற்குள் 80 சதவிகித மக்கள் இலங்கை அரசாங்கத்தின் முக்கியப் பதவிகள் அத்தனையிலும் அமர்ந்திருந்தனர். ஏறக்குறைய அங்கு நிலவிய முன்னேற்றங்களைப் போலவே இந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையிலும் இந்தக் கிறிஸ்துவம் பல மாறுதல்களை உருவாக்கியது. கிறிஸ்தவ மதகுருமார்கள் மதமாற்றத்தில் ஈடுபட்ட அளவிற்கு நாடார் இன மக்களின் சமூக வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டியுள்ளனர். மற்ற இந்துக்களுடன் கூடிய தொடர்பினை வளர்த்த காரணமாகவும், அவரவர் வியாபாரங்களுக்கு உதவக் கூடிய வகையில் உருவாக்கிய பல நல்ல திட்டங்களினாலும் ஒவ்வொரு கிறிஸ்துவச் சபைக்குட்ட பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டது. இது போன்ற பல கிறிஸ்துவச் சபையின் காரணமாகப் பல் வேறு இடங்களில் பரவியிருந்த நாடார்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கூட்டங்கள் வழியாகப் பல புதிய மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறத் தொடங்கினர். பல குடும்பங்களின் குழந்தைகள் கிறிஸ்துவப் பள்ளிக்கூடங்களில் படிக்கத் தொடங்க அதுவும் மதமாற்றத்திற்குப் பல்வேறு வகையில் உதவத் தொடங்கியது. மேலாடை அணிவது குறித்து உண்டான எழுச்சியும் களத்தில் இறங்கிய போராடிய விதமுமே தான் இந்த நாடார் இனமக்களின் அடுத்தக் கட்ட சமூக வாழ்க்கையில் பெற வேண்டிய உரிமைக்கான வழித் தடத்தை அமைக்கக் காரணமாக இருந்தது. இந்த எழுச்சி இவர்களின் ஒற்றுமையைப் பேணிக்காத்தது போலவே தங்களது கலாச்சாரத்தின் மகிமையை உணர காரணமாகவும் இருந்தது. ஒரு வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது. 22 கோவில்கள் - முரண்பாடுகளின் தொடக்கம் ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதைக் கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நாடார்கள் படிப்படியாகத் தங்களைப் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டதை பார்த்ததைப் போலவே இதற்காக அவர்கள் உழைப்பிற்கு அப்பாற்பட்டு பல கொள்கைகள் மற்றும் உருப்படியான விசயங்களையும் கடைபிடித்து உள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். தாங்கள் வாழும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அந்தந்த உறவின்முறை உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் நிதி தெளிவான முறையில் பாதுகாக்கப்பட்டது. இது போக ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும் நிதி ஆதாரம் எல்லாமே பொது நல நிதியாக மாறியது. இந்த நிதி ஆதாரத்தைக் கவனிக்கும் குழுவில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் இருந்தனர். இதற்கு உறவின்முறை என்று பெயர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணமான குடும்பத்தலைவர்கள் இதில் இருந்தனர். இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முறைகாரர் என்று பெயர். முக்கியப் பொறுப்புகள் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாறி மற்றவர்களுக்கு வழிவிட ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் வந்தமர பிரச்சனைகள் உருவாகாமல் இந்த அமைப்பு முன்னேறத் தொடங்கியது இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொழில் ரீதியாகப் பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த நாடார் இன மக்களிடம் கல்வி அறிவு இல்லை. ஒவ்வொரு செயல்பாடுகளுமே அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவானது. இது போன்ற கணக்கு வழக்கு போன்ற சமாச்சாரங்களுக்கு நாடார் தவிர்த்து மற்ற இனமான வேளாளர் குலத்தில் உள்ளவர்களைக் கணக்கர்களாகத் தேர்ந்தெடுத்து மகமை தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்தனர். இது போன்ற சங்கங்களில் பெரும் செல்வந்தர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால் நடுத்தர வர்க்க வியாபார குடும்பத்தினர் முழு மூச்சில் செயல்பட்டனர். ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு மகமை செலுத்தாதவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் அளவிற்குக் கெடுபிடியாக நடந்து கொண்டனர். ஒவ்வொரு கிராமத்தில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களைத் தாங்கள் கூடுமிடமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் கூட்டப்படுகின்றது என்பது அந்த ஊரில் உள்ள நாவிதர் மூலம் அழைப்பு அனுப்பப்படும். கலந்து கொள்ளாதவர்களுக்கு அபதாரத் தொகையும் உண்டு. [] குடும்பம் மற்றும் பொதுவான அத்தனை பிரச்சனைகளும் இது போன்ற கூட்டத்தின் மூலமே தீர்க்கப்பட்டு வந்தது. வெளி ஆட்களை இது போன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண் சம்மந்தமான பிரச்சனைகளின் போது சம்மந்தப்பட்ட பெண்ணும் நிறுத்தப்படுவாள். இது போன்ற பிரச்சனைகளில் சம்மந்தப்பட்டவர்கள் மூன்று காவி நிற கோட்டின் மேல் நிறுத்தப்படுவார்கள். இது அவர்கள் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. வாதம், பிரதிவாதம் என்று எத்தனை நடந்தாலும் இந்தச் சமூகத்தில் முக்கியமானவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும். கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்குச் சம்மந்தப்பட்டவரை உறவின் முறையில் முன்னிலையில் நாவிதர் குற்றவாளியை செருப்பால் அடித்துத் தண்டனையை நிறைவேற்றுவார். களவு போன்ற குற்றங்களுக்குக் குற்றவாளியை ஓடவிட்டு இருமருங்கிலும் உள்ள இளைஞர்கள் நின்று கொண்டு தொடர்ச்சியாக அடிப்பார்கள். கடைசியாக மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டத்தைக் கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றவாளி அபராதத்தைக் கட்ட முடியாவிட்டால் அவர் வீட்டில் உள்ள பொருட்களை உறவின் முறை சென்று கைப்பற்றுவர். உறவின் முறை சங்க அமைப்பை எதிர்ப்பவர்களின் குடும்பத்தை மொத்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த உறவின் முறை அமைப்புத் திருநெல்வேலியில் ஒரு மாதிரியாகவும் சிவகாசியில் ஒரு மாதிரியாகவும் இருந்தது. தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் சாகும் வரைகும் அந்தப் பொறுப்பில் இருந்தனர். தலைவர்களுக்குச் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது. குறிப்பாகக் கோவிலுக்குள் இவர்கள் நுழையும் போது தனது மேல் துண்டை இடுப்பில் எடுத்து கட்டிக் கொள்ளப்பட வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விருதுநகர் பகுதியில் ஜனத்தொகை காரணமாக ஆறு வெவ்வேறு உறவின்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதியில் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது. பஞ்சு வியாபாரிகள், மளிகைக்கடை தாங்கள் செய்து கொண்டிருக்கும் வணிகம் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தது.. [] ஆனால் நாடார்களுக்குச் சம்மந்தமில்லாத மதுரையில் 1831 ஆம் ஆண்டுத் தங்களது வியாபார அபிவிருத்திக்காகக் கிழக்கு மாசி வீதியில் நிலம் வாங்கினர். இதுவும் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி நாடார்கள் முன்னின்று செயல்பட்டனர். 1890 ஆம் ஆண்டுக் குறிப்பிட்ட சில நாடார்கள் தங்கள் இருப்பிடங்களை மதுரைக்கு மாற்றினர். 20 ஆண்டுத் தொடக்கத்தில் தான் மதுரைக்குப் பலரும் நகர்ந்து வரத் தொடங்கினர். அதற்கும் ஒரு காரணம் உண்டு. வெள்ளையர்கள் உருவாக்கிய ரயில் பாதைகள் முக்கியக் காரணமாக இருந்தது.. மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் பாதைகள் மூலம் இணைப்பு உருவாக இரண்டு விளைவுகள் உருவாகத் தொடங்கியது. இராமநாதபுரத்தின் பல பகுதிகள் வியாபாரம் பாதிப்பாகத் தொடங்கியது. வளர்ந்து கொண்டிருக்கும் விருதுநகர் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதனால் மொத்தத்தில் சிவகாசி ரொம்பவே பாதிப்பானது. இதன் காரணமாக மதுரையில் குடியேறும் நாடார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. 1880க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவகாசியும் ரயில் பாதை இணைப்பு மூலம் எளிதாக மதுரைக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கைகள் இன்னமும் அதிகமாகத் தொடங்கியது. சிலர் தங்களது நிறுவனங்களின் கிளைகளை உருவாக்கி தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். எந்த இடத்திற்குச் சென்றாலும் தன் ஊரின் உறவுகளை விடாமல், மகமை, உறவின் முறை போன்ற அமைப்பை சிதைக்காமல் தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர். நாடார்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக 1885 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறையால் உருவாக்கப்பட்ட கூத்திரிய வித்தியாசாலை உயர்நிலை பள்ளியாகும். இது முழுக்க முழுக்க மகமை நிதியால் மட்டுமே உருவாக்கப்பட்டது. முதல் முறையாக நாடார் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடமும் இது தான். இதனைத் தொடர்ந்து தான் 1889 ஆம் ஆண்டுக் கமுதியில், அதன் பிறகு அருப்புக்கோட்டையில் உருவானது. கல்வி அறிவு இல்லாமல் வளர்ந்தவர்களின் தலைமுறை கல்வி அறிவோடு வளர உருவான வளர்ச்சியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் இதுவரைக்கும் இவர்களின் அருமை பெருமைகளைப் பார்த்தது போல இவர்களின் சில வினோத செயல்பாடுகளையும் பார்த்துவிடலாம். பொருளாதார ரீதியாக வளர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் உருவாகும் கௌரவம் இவர்களுக்கு வந்து அதன் தொடர்பாகப் பல விசயங்களையும் செய்துள்ளார்கள். இவர்களின் அடிப்படை வாழ்க்கை முறை பனை மரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல தங்களைப் பனையேறிகள், சாணார்கள் என்று மற்றவர்கள் அழைப்பதை கௌரவக்குறைவாகக் கருதினர். குறிப்பாகத் தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர். பனை ஏறுபவர் என்பதும், தங்களின் முன்னோர்கள் கருவாடு விற்று வளர்ந்தவர் என்பதையும் மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதினர். நாடார் என்ற பட்டப் பெயருடன் தான் அழைக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். இதுவே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்தது. இவர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டாலும் சமூகத்தில் மற்ற இனத்தினர் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட அத்தனை சுலபமாகப் பெறமுடியவில்லை. 1872 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஏழு நாடார்கள் மீது பார்ப்பனர்களும், வேளாளர்களும் சேர்ந்து வழக்கொன்று தொடுத்தனர். இந்த ஏழு நாடார்களும் இறுதியில் குத்திக் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய கலவரம் உருவாகி ஊரட்ங்கு உத்திரவு வரைக்கும் அமலில் இருந்தது. இவ்வாறு போராடியவர்கள் தான் தான் இன்று நிலைபெற்று சகலதுறையிலும் காலூன்றி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். 23 பணம் வந்தால் பல்லாக்குத் தேவைப்படும் ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் செயல்பாடுகள் எப்போது மாறத் தொடங்கின்றது? பொருளாதார ரீதியாக வளரும் போது அல்லது தன்னிறைவு நிலைக்கு அடையும் போது அவரவரின் சிந்தனைகளும் மாறத் தொடங்குகின்றது. இதுவே தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஏறக்குறைய இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கிறது. முதலில் பொருள் தேடி அலைய வேண்டிய நிலையில் இருந்தனர். பொருள் சேர்க்கத் தொடங்கிய போது அதை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். தொழிலில் வளர்ந்த நிலைக்கு வந்த பிறகு சமூகத்தில் தங்களின் இழிநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்தச் சமயத்தில் தான் இவர்களின் பொருளாதாரப் பலம் பலவிதங்களிலும் உதவியது என்பதோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வத்தைச் சேகரிக்க ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்களுக்குத் தங்களது இனப் பெருமை குறித்துக் கவலை ஏதும் வந்து விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் செல்வந்தராக, மதிப்பு மிக்க வியாபாரிகளாக மாறிய போது தங்களுக்கான அடையாளங்களையும் அவரவர் பொருளாதாரச் சூழ்நிலையைப் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்கள் இவர்கள் வாழ்விலும் பல அடிப்படை விசயங்களை மாற்றத் தொடங்கியது.எண்ணங்கள் மாறத்தொடங்க பிணங்களைப் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் எறிக்கத் தொடங்கினர், கனமான உலோகப் பொருட்களைக் காதுகளில் அணிந்த பெண்கள் சிறிய அளவில் நாகரிகமாகத் தங்க ஆபரணங்களை அணியத் தொடங்கினர். தொடக்கத்தில் இந்த இன பெண்களின் காது மடல்கள் தோள்பட்டை வரைக்கும் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும். இந்த நீட்சியின் அளவு பொறுத்து இதையும் ஒரு பெருமையாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு பழக்க வழக்கமும் வெவ்வேறு காலகட்டத்தில் மாறத் தொடங்க இவர்களின் பேச்சு, செயல்பாடுகளும் நாகரிகம் என்ற போர்வையில் மாறத் தொடங்கியது. 1860 ஆம் ஆண்டுப் பார்ப்பனர்களைப் போலவே வேட்டி கட்டவும், குடுமி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். தலையில் எடுத்துக் கொண்டு செல்லும் தண்ணீர் பானைகளை இடுப்பில் கொண்டு செல்ல அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் இதிலும் இவர்களின் புத்திசாலித்தனம் ஆச்சரியமானதே. தாங்கள் உருவாக்கிய குளம் மற்றும் கிணறுகளில் பெண்கள் எடுத்துச் செல்லும் பானைகள் இடுப்பில் வைத்துக் கொண்டு செல்கிறார்களா என்பதைக் கவனிக்கத் தனியாக ஒரு ஆளை நியமித்துக் கண்காணிக்கத் தொடங்கினர். இதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. பலரும் சைவத்திற்கு மாறத் தொடங்கினர். சமஸ்கிருத பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்கினர். இந்தக் காலகட்டத்தில் முற்பட்ட சாதியினரைப் போலக் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லாவிட்டாலும் கூடப் பல கோவில்களுக்குச் செல்வந்தர்கள் தான தர்மங்களை வழங்கினர். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களுக்குக் கோவில் சார்ந்த பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதினர். இதன் தொடர்ச்சியாகப் பிராமணர்களைப் போலவே பூணுல் அணிந்து கொள்ளத் தொடங்கினர். இந்தப் பூணூல் இப்போது அழைத்துக் கொண்டிருக்கும் பெயரான ஷத்திரியர்களுக்கு உரிய கௌரவமாகவும், மறுபிறவி அடையக்கூடிய அம்சமாகவும் கருதிக் கொண்டனர். ஆனால் இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தது? எவரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பிராமணர்கள் இந்த நாடார்களின் வாழ்க்கையில் மதச் சட்ங்களுகள் செய்வதும், உபநயன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளீட்டுவதும் நடக்கத் தொடங்கியது. திருச்செந்தூர் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடார் இனமக்கள் திருமண வைபோகங்களில் பல்லாக்குளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இது உயர்குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. தங்கள் செல்வ நிலைப்பாடுகளைச் சமூகத்திற்குக் காட்ட மறவர்களைப் பல்லாக்குத் தூக்கியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இது போன்ற பல சமூக மாறுதல்கள் நாடார்கள் தங்கள் ஷத்திரியர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்பது மெதுமெதுவாக ஆலமர விழுதுகள் போல் பரவத் தொடங்கியது. இந்த மாறுதல்கள் எங்கே கொண்டு போயநிறுத்தியது தெரியுமா? 1874 ஆம் ஆண்டு மதுரை நாடார்கள் தங்களது ஆலய நுழைவு உரிமைக்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மேல் கிரிமினல் வழக்கொன்றை மூக்கன் நாடார் என்பவர் தொடர்ந்தார். கோவிலுக்குள் நுழைந்த என்னைப் பலாத்காரமாக வெளியே தள்ளிக் கொண்டு வந்து துணிக்கடை நிறைந்த பகுதியில் நிறுத்தி அவமானப்படுத்தினார்கள் என்று வழக்கில் சொல்லியிருந்தார். எங்களுக்கு ஆலயங்களில் உள்ளே நுழைய எழுத்துப் பூர்வ அனுமதி வேண்டும் என்றார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாடார்கள் ஆலய உள் நுழைவுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதே போல 1876 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகாவில் திருத்தங்கல் என்ற இடத்திலும் நடந்தது. இதுவும் தோற்றுப் போனது. முறைப்படி 1878 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் திருத்தங்கலில் உள்ள நாடார்கள் ஆலயங்களில் உள்ளே நுழைவதற்கும், தெய்வங்களுக்குத் தேங்காய் உடைப்பதற்கும் தடை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாடார் இன மக்கள் தெருக்களைச் சுற்றி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதுவே சாத்தூர் பகுதியில் உள்ள நாடார்கள் தெருக்களில் ஊர்வலம் நடத்த அங்குள்ள உயர்சாதியினரும் ஜமீன்தாரர்களும் அனுமதி கொடுக்காமல் எதிர்த்து நின்றனர். இந்தக் கோவில் விவகாரம் தான் திருநெல்வேலியில் வடக்குப் பகுதியில் உள்ள நாடார்களுக்கும் மறவர்களுக்கும் பகைமையுணர்ச்சியை உருவாக்கிய கலவரமாக மாறியது. கலவரத்தில் (1887) நான்கு மறவர்களை ஒரு நாடார் கூட்டம் கொலை செய்ததாகக் காவல்துறை அறிக்கை தெரிவிக்க ஏராளமான நாடார்களைக் கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியபோதும் வலுவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வெளியே வந்தனர். ஆனால் மறவர்கள் மூன்று நாடார்களைக் கொலை செய்து கணக்கை நேர் செய்தனர். இது போன்ற பகைமையுணர்ச்சி இந்த மாவட்டத்தின் சகல இடங்களிலும் பரவி இருந்தது. ஆனால் நாங்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்றோம் என்றவர்களைப் போலவே நாடார் இன மக்களும் எங்களைச் சமஉரிமை மனிதர்களாக அங்கீகரிக்க வைக்கும் வரையிலும் ஓய மாட்டோம் என்று ஒவ்வொன்றாகச் செய்து கொண்டே வந்தனர். இதன் தொடர்ச்சியாக 1898 ஆம் ஆண்டுச் சிவகாசி நாடார்களின் தலைவர் செண்பகக்குட்டி இனி நாடார் இன மக்கள் அத்தனை பேர்களும் பூணூல் அணியுங்கள் என்றார். நாம் பிரமாணர்களின் தகுதிக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்று புரியவைத்தார். இப்படிச் சொல்லியதோடு மட்டுமல்லாமல் நாடார்கள் ஒவ்வொருவரும் பிராமணர்களைப் போலவே தினந்தோறும் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கோவிலுக்கு அருகே குளியல் வசதியுடன் கூடிய நந்தவனம் உருவாக்கப்பட்டது. இத்துடன் ஆச்சரியப்படக்கூடிய சமாச்சாரம் தாங்கள் உருவாக்கிய அம்மன் ஆலயங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த நாடார் பூசாரியை நீக்கிவிட்டு சிவகாசி நாடார்களுக்கென்று பிராமணர் ஒருவரை திருச்சிக்கு அருகேயிருந்த கோவிலில் இருந்து வரவழைத்தார். 1911 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுத்த அதிகாரியான மாலினி என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார். “நாடார்கள் மாட்டிறைச்சியை உணவாகக் கொள்ளாமையால் அவர்கள் ஷத்திரியர்கள் என் அழைக்கபடுகின்றனர்” காரணம் 1860 ஆம் ஆண்டுத் தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர். 1891 கணக்கெடுப்பில் தங்களை ஷத்திரியர்கள் என்று பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 24000 பேர்கள். ஆனால் இதுவே படிப்படியாகப் பல இன்னல்களைத் தாண்டி வந்து 1911 ஆம் ஆண்டு இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த ஷத்திரியார்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உயர்ந்து தாங்கள் விரும்பிய ஷத்திரியர் என்ற பெயரையே அரசாங்க குறிப்பேடுகளில் நிலைபெற வைத்தனர். இவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக முன்னேறி ஜனத் தொகையும் பலமடங்கு பெருகியிருந்தைப் போலவே தாங்கள் விருப்பப்டியே மாற்றிக் கொண்டதும் ஆச்சரியமே. 24 கல்வி -- பலமான ஆயுதம் 1899 ஜுன் 6 திட்டமிட்டபடி மறவர்கள் அதிகாலை வேலையில் சிவகாசியின் நான்கு புறமும் சூழந்து கொண்டனர். இப்படி ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து நாடார்களும் தயாராகவே இருந்தனர். முந்தைய நாட்களில் வெளிப்புறங்களிலிருந்து படுக்கை விரிப்புக்குள் சுற்றி முடிந்தவரைக்கும் பலவிதமான ஆயுதங்களைக் கடத்தி வந்திருந்தனர். அத்துடன் அதிக அளவில் துப்பாக்கிகளையும் கொண்டு வந்திருந்தனர். மறவர்கள் வரும் பாதையில் மரங்களை வெட்டி பல தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் வருபவர்கள் தங்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்திருந்தனர். [] தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த என்றொரு பாவத்தைத் தவிர வேறொன்றும் அறியாத சமூகத்தின் ஒரு சான்று இந்தப் புகைப்படம். முட்டிக்கு மேல் அணிய வேண்டும். மேலாடை கட்டாயம் கூடாது. வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முன்னேற்பாடாகத் தங்கள் பணம், நகை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் கொண்டு போய்ப் பதுக்கி வைத்தனர். ஏழை மக்களை, வயதானவர்களை நகரின் மத்திம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான் வெவ்வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். உள்ளேயிருக்கும் மற்றப் பெண்களுக்குப் பாதுகாப்பாகத் தெற்கு ரத வீதியில் அரண் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரண் போன்ற பகுதியில் உயரத்திலிருந்து கீழே பார்க்கும் மறவர்கள் மேல் வீசி எறிய வேண்டி மிளகாய்ப் பொடி, கற்கள், கொதிக்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். மறவர்கள் வருவதைத் தெரியப்படுத்த உயரமான பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்திருந்தனர். தொலைவில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்கத் தொலைநோக்கி கருவிகளும் வழங்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகின்றது என்பதாக ஏராளமான புகார் மனுக்கள் அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர் ஸ்காட் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அவரோ தேவைப்படும் அத்தனை முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் திருநெல்வேலியைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். இவர்களைப் போலவே அதிகாரியாக இருந்த ஸ்காட் கூட நாடார்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கவில்லை. நாடார்களை எதிர்த்த அத்தனை பேர்களும் ஆதிக்கச் சாதியாளராக இருக்க வெள்ளையர்கள் இவர்களிடம் பெயருக்கென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டனர். மறவர்களின் ஆட்டம் மே மாதம் 23ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த நாடார்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றியதோடு சிவகாசியை நோக்கி முன்னேறிச் சென்றனர். [] (1890 ல் எடுக்கப்பட்ட படம்) இப்போது நமக்கு ஒரு கேள்வி எழவேண்டும். ஏன் மறவர்களுக்கு இத்தனை ஆத்திரமும் கோபமும் நாடார்கள் மேல்? அதற்கு வெள்ளைச்சாமி தேவரைப் பற்றி இந்த இடத்தில் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது நாம் அடுத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முக்குலத்தோர் பிரிவில் வருகின்றவர்கள் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அறிமுகம் ஆகின்றார்கள். காரணம் இருக்கிறது. இப்போது அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். இவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றது. வேகமும், வீரமும், கோபமுமாய் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை தற்போது ஓரளவுக்குச் சகஜநிலைக்கு மாறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளலாமே தவிர இன்றும் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம். முக்குலத்தோர் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது. கள்ளர், மறவர், அகமுடையார் என்பதாகும். வெள்ளைச்சாமி தேவர். இப்போது ஜாதி அரசியல் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரைத் தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? இவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தாத்தாவின் பெயர் தான் வெள்ளைச்சாமி தேவர். வெள்ளைச்சாமி தேவிரின் அப்பா பெயரும் முத்துராமலிங்கமே. கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர். தனது தந்தை முத்துராமலிங்கத் தேவர் உருவாக்கி வைத்திருந்த மிகப் பெரிய சொத்துக்குச் சொந்தகாரர். மொத்தில் இந்தச் சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தார். மறவர் இன மக்களைப் போலவே மற்ற இன மக்களும் தன்னை மதிக்க வேண்டும் என்ற வெள்ளைச்சாமி தேவரின் கொள்கையில் தான் நாடார்களும் மறவர்களுக்கும் உண்டான விரிசலின் தொடக்க அத்தியாயம் உருவானது. இதே காலகட்டத்தில் இவரைப் பார்க்கும் மற்ற இன மக்கள் தங்கள் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அல்லது கீழே இறக்கி மரியாதை செய்வது வழக்கம். ஆனால் நாடார் இன மக்கள் இது போன்ற விசயங்களைக் கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாகவே நாடார் இனமக்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த வண்ணார் இன மக்களை நாடார்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று மறைமுகக் கட்டளை பிறபித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாகச் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் நாடார்களுடன் எந்த வரவு செலவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதிலிருந்து தொடங்கிப் பல நாடார்களுக்குண்டான எதிர்ப்புச் சமாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். உச்சகட்டமாக மறவர்கள் தாங்கள் தெருவில் பார்க்கும் நாடார்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவற்றை இறந்தவர்களுக்குக் கைவிரல்கள், கால் கட்டைவிரல்களில் கட்டுவதைப் போலக் கட்டி பழித்துக் காட்டினர். ஏறக்குறைய 16 மாதங்கள் இதுபோலவே நடக்க இறுதியில் எதிர்ப்பு வலுக்க வெள்ளைச்சாமி தேவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிறகே இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.. ஆனால் இப்போது நடக்கப் போகும் கலவரத்திற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் மறவர்களை அடக்க வெள்ளைச்சாமி தேவருக்கு நாடார் சங்கத்திலிருந்து ஒரு வித்யாசமான கடிதம் அனுப்பப்பட்டது. “4000 பேர்களுக்குத் தலைவராக இருக்கும் வெள்ளைச்சாமி தேவர் உண்மையிலேயே மறவராக இருந்தால் நாடார்களைத் தாக்குவதற்கு மறவர் கூட்டம் பகலில் வர வேண்டும். எந்த இடம் என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர். [] இராமநாதபுரம் ராஜாவின் பெயர் ராஜா எம். பாஸ்கரச் சேதுபதி. இவர் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் கமுதியும் ஒன்று. இவரும் மறவர் இனத்தைச் சேர்ந்தவரே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ஏழாயிரத்திற்கும் குறைவான பேர்களே இருந்தனர். கமுதியைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் மறவர்களே அதிகமானோர் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த வியாபாரங்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் நாடார்களையே சார்ந்து இருந்தது. நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தக் காலக் கட்டத்தில் நாடார்கள் தங்களைப் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொண்டு செழிப்பான முறையில் வாழ்ந்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜாவின அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்தது. நாடார்கள் திருவிழா காலங்களில் வழிபாடு சம்மந்தமான விருந்தொன்றை கமுதி பகுதியில் வைக்க ராஜாவின் அறக்கட்டளைக்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தனர். நாடார்கள் ஆலய பிரவேசம் செய்யாமல் குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் இது போன்று ஒவ்வொன்றாக எல்லை மீறிக் கொண்டிருந்த நாடார்களின் பழக்கவழக்கங்களினால் வெள்ளைச்சாமி தேவர் நாடார்களுக்கு எதிர்ப்பு அணி ஒன்றை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். காரணம் பொருளாதார ரீதியாக வளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும். இதே வாய்ப்பு சிவகாசி கலவரம் மூலம் லட்டாக வந்து சேர்ந்தது. நாடார்கள் அனுப்பிக் கடிதமும் வந்த சேர எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலக் கலவரத்தீ கொளுந்து விட்டு எறியத் தொடங்கியது. சிவகாசியில் நடந்த கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்தது. கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மறவர்கள் தங்களுடன் 12 மாட்டு வண்டிகளையும் கொண்டு வந்து இருந்தனர். 886 நாடார்களின் வீடு அழிக்கப்பட்டது. சுமார் 21 நாடார்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கலவரம் முடிந்த பிறகே சொல்லிவைத்தாற் போல் வெள்ளையர் ஸ்காட் வந்து இறங்கினர். இந்தக் கலவரம் மேற்கொண்டு நகர்ந்து மறவர்களின் அடுத்த இலக்கு விருதுநகராக இருக்கக்கூடும் என்பதற்காக 50 சிப்பாய்களை அங்கு அனுப்பி வைத்தார். இதே ஸ்காட் தன்னுடைய பொறுப்புகளைத் தனக்குக் கீழேயிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்த விசாரனை கமிஷன் அதிகாரியிடம் மற்றப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். காரணம் மறுபடியும் மறவர்கள் சிவகாசியை மற்றப் பகுதிகளை மீண்டும் வந்து தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தென்காசியில் தொடங்கிச் செங்கோட்டைப் பகுதியில் நுழைந்து தாக்கத் தொடங்கினர். ஒவ்வொரு தாக்குதல்களும் மிருகத் தனமாக இருந்தது. இந்த இடத்தில் ம்ற்றொரு ஆச்சரியம் மதம் மாறிய நாடார்களின் வீடு தாக்கப்படவில்லை. அடையாளம் வைத்து தாக்குவது அப்போதே இருந்து இருக்கிறது. ஜுலை மாதம் கலவரம் முடிவுக்கு வந்த போது 150 கிராமங்கள் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது. கலவரம் நடந்த ஆறு வார காலத்தில் 2000 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரிக்கத் தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டனர். ஏழு பேர்களுககு மரணத் தண்டனை அளிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவர் கூட நாடார்களின் பெயர் இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக் விசயமாகும். இவர்கள் வைத்திருந்த பொருளாதாரம் காப்பாற்றியதா இல்லை தெளிவான திட்டமிடுதலா போன்ற குறிப்புகள் தென்படவில்லை. ஏறக்குறைய 19 ஆம் ஆண்டுப் பிற்பகுதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த நாடார்களின் சமூக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது. காரணம் அரசாங்கத்தில் பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவித்து வந்தபோதிலும் மதம் மாறிய நாடார் இன மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கல்வி வசதிகளைப் பார்த்த நாடார் இன மக்கள் முதல் முறையாகத் தங்கள் இனமக்களின் கல்விக்கான விசயங்களில் கவனம் செலுத்த தொடங்கினர். கிறிஸ்துவ மதபோதகர்களின் சார்பாகப் பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரி போன்று பல இடங்களிலும் தொடங்க வேண்டும் என்று ஆரம்பக் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். ஆனால் இராமநாதபுரத்தில் ஆறு நகர நாடார்கள் வியாபாரத்தில் முன்னேறிய பிறகு உறவின் மூலம் கிடைத்த மகமையின் மூலம் முதன் முதலாகத் திறந்தது தான் விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலை (1885) உயர்நிலை பள்ளியாகும். இதுவே தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டுக் கல்வி கூடங்களில் அணைத்து இடங்களிலும் நிறுவவதில் முழுமூச்சாக இறங்கி அடுத்தடுத்த முன்னேற்ங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த நாடார் இனமக்களின் சமூக வாழ்க்கை குறிப்புகள் இத்துடன் முடிவுக்கு வருகின்றது. இவர்களின் வேறு சில குணாதிசியங்களை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இவர்கள் பொருளீட்ட உதவிய சாராயத் தொழில்கள், மற்றத் தொழில்கள், இவர்களின் முரண்பட்ட நியாயங்கள், கோவில்களுக்கு அடித்துக் கொண்ட இவர்களின் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்க வேண்டிய அவஸ்யம் உள்ளது. (முற்றும் என்று போடமுடியாத நிலையில் முடிக்கின்றேன்) []                       ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com 25 மரமேறி தாண்டி வந்த நாடார்கள் திருநெல்வேலி என்றால் உண்மையான அர்த்தம் ‘புகழ்மிகும் நெல்லின் வேலி’. இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில் பார்த்துவிடலாம். [] சோழநாட்டிலுள்ள காவேரி பகுதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாகக் கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாகப் புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் ‘உள்ளே வெளியே’ என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு. அது போல ஈழத்தில் வடக்குக் கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டுப் பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்தப் பனை விதைகளைக் கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள். நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்குப் பனைமரம் ஏராளமாகத் தெரியும். கேரளாவைப் போலவே கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாதபுரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாகக் கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும். மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்தக் காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன. இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்தச் சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்தச் சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது. நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு. [] குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம், சுருக்கு பட்டையர் பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்தச் சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர். மேல் நாட்டார், தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும், சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர். நட்டாத்தி நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச் சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்குப் பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர். கொடிக்கால் வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள். இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விடச் சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்தப் பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்குக் கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே நாடர்களின் தொடக்கப் பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் “எல்லாமே” சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது. இந்தக் குழந்தைகளைப் பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்குச் சென்றுவிடப் பெண் தெய்வமான பத்ரகாளி இந்தக் குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் “நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கூடை சுமக்க மாட்டோம்” என்று எதிர்த்து நின்றனர். மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான், இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது, நாடார் இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்தச் சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே. [] 26 உழைப்புடன் கொஞ்சமல்ல நிறைய ஒற்றுமை ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. எந்தத் திட்டமானாலும் அவர்களுக்கு என்ன லாபம் என்பதைவிட அது நீண்ட காலதிட்டத்திற்குப் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர். காரணம் நம் இந்தியாவைப் போலவே பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் வெறுமனே ஆட்சி அதிகாரம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த டச்சுப் போர்த்துகீசியர்களைப் போல இல்லாமல் தொடக்கம் முதலே நீண்ட கால முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி காய் நகர்த்தினார்கள். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வந்தார்கள் வென்றார்கள் இதைப் போலவே நீண்ட காலம் நிலைத்தும் நின்றார்கள், ஆங்கிலேயர்கள் இதன் அடிப்படையில் ஈழத்தில் உருவாக்கியதுதான் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள். இதைப் போலவே தென் மாவட்டத்திற்குள் காலடி வைத்த போது பல அடிப்படை விசயங்களில் தான் முதன் முதலில் கவனம் செலுத்தினர். ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்த போது தென்மாவட்டங்களில் பல பகுதிகளின் சாலை வசதிகள் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை விட அப்படி ஒரு வசதி உண்டா என்று தேடிப்பார்க்கும் நிலையில் தான் இருந்தது. . அதில் தான் முதலில் கவனம் செலுத்தினர். இது தான் இன்று நாம் காண்கின்ற நாடார்களின் தொழில் வாழ்க்கைக்குத் தொடக்கத்தில் நலல ஆதார வசதிகள் உருவாகக் காரணமாக இருந்தது. இதே இந்தத் தென்மாவட்டங்களில் எல்லா இனங்களும் தான் இருந்தார்கள். ஆனால் மற்றவர்களை விட இவர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பம்சம். பின்னால் பார்க்கப்போகும் செட்டியார்கள் முடிந்தவரைக்கும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழிலில் கவனம் செய்து அங்கங்கே பொருளீட்டத் தொடங்கினர். ஆனால் நாடார் இனத்தைப் பொறுத்தவரையிலும் உள்ளூரிலேயே வெற்றிக் கொடி நாட்டினர். இன்று நாடார்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள் என்று நாம் எளிதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால் இவர்களின் உழைப்பு எங்கிருந்து எப்படித் தொடங்கியது? [] 19 ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த நாடார்கள் அனைவருமே பனைப் பொருட்கள் மூலமே தங்கள் வாழ்க்கையைப் படிப்படியாக வளமாக்கிக் கொண்டனர். கருப்பட்டி என்று சொல்லப்படுகின்ற கருப்பு கட்டிகளைச் சேகரித்துத் தங்களுடைய மாட்டு வண்டி மூலம் தங்கள் வணிகத்தை வளர்த்தனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க நகர நகரப் பல பொருளாதார வாய்ப்புகளும், தொழில் ரீதியான சிந்தனைகளில் பல மாறுதல்களும் உருவானது. தொழில் ரீதியான பல வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியது. இத்துடன் கருவாடு, உப்பு போன்றவற்றையும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்கத் தொடங்கினர். ஆனால் இவர்களின் இந்த உழைப்புக்குண்டான பலன்கள் கூட அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் வட பகுதியிலேயே இந்த வியாபார பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்தது. காரணம் படு மோசமான சாலைவசதிகள், அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருக்கும் பாளையக்காரர்கள் என்பதோடு கள்வர் பயம் படாய்படுத்திக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு பாளையக்காரர்களும் தங்கள் பகுதிகளுக்குள் வரும் வண்டிகளுக்கு அவரவர் உருவாக்கி வைத்திருக்கும் வரிகளைக் கட்டி விட்டுத்தான் நகர வேண்டும். இதன் காரணமாகவே உள்நாட்டு வர்த்தகம் முடங்க ஆரம்பித்தது. ஆனால் இந்தப் பிரச்சனைகள் அத்தனையையும் முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். வரி விதிப்புகளைத் தடை செய்தனர். சாலை வசதிகளை மேம்படுத்தினர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாடார்கள் தாங்கள் செல்லும் இடங்களில் காணும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். திருநெல்வேலியிலிருந்து நகர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி என்று மெதுமெதுவாகப் பரவி தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கைகள் அதிகமானது. வாய்ப்புகளைத் தேடிப் போக ஆரம்பித்தனர். வெறும் பனைபொருட்கள் மட்டுமல்லாது திருச்செந்தூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தயாரிக்கும் ஆடைவகைகள், இதற்கு மேலும் பருத்தி விதை, புகையிலை என்று ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டு தங்கள் வியாபாரங்களைப் பெரிதாக்கத் தொடங்கினர். பேட்டை என்றொரு வார்த்தை ஒவ்வொரு சிறிய நகர்புறங்கங்களிலும் உண்டு. கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு இது குறித்து நன்றாகவேநன்றாக் தெரியும். இந்தப் பேட்டைகளை இந்த நாடார் இன மக்கள் தங்கள் தொழில் ரீதியாகச் செல்லும் நகரங்களில் அங்கங்கே உருவாக்கியதற்கு வேறொரு முக்கியக் காரணம் உண்டு. முக்குலத்தோரில் ஒரு பிரிவில் உள்ள மறவர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். அவர்களை எதிர்க்கவும் முடியாது. இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர். [] தங்கள் மாட்டு வண்டிகளைப் பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்க புத்தியால் ஜெயிக்கத் தொடங்கினர். இது போல உருவாக்கப்பட்ட பேட்டைகள் தான் திருநெல்வேலி தொடங்கித் தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் நாடார் இன மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர். இதன் தொடர்ச்சியாகக் கமுதியைச் சுற்றியுள்ள சிறு நகர்புறங்களிலும் நாடார்கள் குடியேறத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்திலேயே தங்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற சமூகமாக மாற்றத் தொடங்கினர். வர்த்தகர்களாக, வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக, தரகர்களாக என்று மேலே சொன்ன ஆறு நகரங்களிலும் சொத்து சேர்த்துத் தனிப் பெரும்பான்மையாக மாறத் தொடங்கினர். 1821 ஆம் ஆண்டு நாடார்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகராகச் சிவகாசி மாறத் தொடங்கியது. வியாபாரத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமானது. சந்தைப்படுத்துதல், லாபம். இதனைத் தொடர்ந்து அப்போது நிலவும் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து முன்னேற வேண்டும். கடைசியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் விரிவாக்கம். சொல்லிவைத்தாற் போல நாடார்களுக்கு இது எல்லாமே சாதகமாக இருந்தது. உள்ளூர் சந்தைகளைக் குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள திருவாங்கூர் மாநிலத்தில் தங்களின் புகையிலைப் பொருட்களை அனுப்ப ஏராளமான மாட்டு வண்டிகளை வைத்திருந்தனர். ஏறக்குறைய இந்தக் காலகட்டத்தில் 2000 மாட்டு வண்டிகள் இந்த வணிகத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டுருந்தன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை கூடும் சந்தையில் பருத்தி, நூல், நெல், கருப்புகட்டி, கருவாடு, மூங்கில் கூடைகள், நெய்,மீன்வலைகள், பழவகைகள் போன்ற ஏராளமான பொருட்கள் இதைத்தவிரப் பண்டமாற்று முறையில் மண்பானைகள் போன்றவைகளும் வியாபார பரிவர்த்தனைகளில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார்களின் ஆறு நகரங்களில் பொருளாதாரப் பலமிக்கவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மறவர்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருந்த இராமநாதபுர மாவட்டத்தில் நாடார்களை எதிரிகளாகப் பார்க்கப்படும் சூழ்நிலையில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகத்தொடங்கியது. கிறிஸ்துவர்களாக மாறிய நாடார்கள் தாங்கள் உருவாக்கிய சங்கங்கள் மூலம் ஒரே அணியில் நின்றனர். பொருள் சேர்க்கும் ஆர்வத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டுருந்தார்களே தவிரத் தங்களின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட உருவானது நாடார்களின் சங்கங்கள். நாடார்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு சங்கங்களை உருவாக்கத் தொடங்கினர். தமது இன மக்களின் சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு அரசாங்க அதிகாரிகளோடு நல்ல புரிந்துணர்வை உருவாக்கி வளர்க்க அதுவே இவர்களின் பல புதிய செயல்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்தது.. மகமை என்று ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரி மற்றும் உறவின் முறைகளும் பல திட்டங்கள் உருவாக ஒவ்வொன்றும் இவர்களின் பொருளாதார வாழ்க்கையை மேன்மேலும் பலமுள்ளதாக மாற்றத் தொடங்கியது. . தாங்கள் உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் மகமைத் தொகை மூலம் புதிய பேட்டைகள் அமைத்தனர். ஒவ்வொரு வியாபாரியும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை அளிக்கப் பொதுநல நிதி உருவானது. நாடார்கள் கருவூலநிதியில் சேர்க்கப்பட்டுப் பல விசயங்களுக்கு உதவத் தொடங்க இவர்களின் முன்னேற்றம் முன்பை விடப் பலமடங்கு வேகமாகத் தொடங்கியது. இதுவே தமிழ்நாட்டிலும் திருவிதாங்கூரிலும் சேர்ந்து 96 நகரங்கள் கிராமங்களை உள்ளடக்கி சிவகாசி நாடார் குல மக்கள் பேட்டைகளை அமைத்தனர். இவர்களின் உறவின் முறை அமைப்பு 20 ஆம் நூற்றாண்டில் வலிமையானதாக மாறினாலும் இதன் அடித்தளம் 19 ஆம் நூற்றாண்டில் முடிவில் ஆழ அகலமாய் வலுவாய் இருந்தது என்பது இவர்களின் உழைப்பின் ஆதாரமே. [] 27 வலையைக் கழட்டிவிட வாங்க? நாடார் மக்கள் கோவிலுக்குள் நுழைவோம் என்று உரிமைப் போராட்டம் நடத்த தொடங்கும் இந்த நேரத்தில் வேறு சில விசயங்களையும் பார்த்து விடுவோம். வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதைத் தாண்டி வர முடியாத அளவிற்குத் தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். இதற்கு மேலும் அவ்ரவர் செய்து கொண்டிருந்த தொழில்களை அடிப்படையாக வைத்து இதை முன்னெடுத்துச் சென்றனர். தொழிலை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்டமைப்பு மாறிவிடாதபடி கடத்தவும் செய்தனர். ஆனால் இது போன்று உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பு மாறி விடாதபடி இந்த ஆலயங்கள் தான் பெருமளவில் ஒவ்வொரு சமயத்திலும் உதவிபுரிந்தன. உருவாக்கப்பட்ட கோவில்கள் மூலம் நம்முடைய முன்னார்கள் வாழ்ந்து கொண்டிருந்த சமூகக் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமே ஆகும். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று ஏன் இத்தனை மதங்கள்? ஏன் இத்தனை தெய்வங்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழிமுறைகள். சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து அதிலிருந்து மற்றொருன்று பிரிந்து அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் சுயநலமாய்ப் பொதுநலமாய் இந்த வலைபின்னல் உருவாகி இன்று வரையிலும் மிகப் பெரிய மாயவலை உருவாகி மனித மனங்களுக்குள் நீக்கமற நிறைந்து உள்ளது. இதற்கு மேலும் தொடர்ச்சியாக அது தவறு இது சரி என்பது போலப் பல கிளைநதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக இந்த வலை பின்னல்கள் தனி மனிதர்களின் கழுத்தை நெறிக்கவும் தொடங்கியது. கோவில் என்பது தமிழர்களின் வரலாற்றில் ஏன் இத்தனை முக்கியமாக மாறியது? நம்முடைய வரலாற்றுப் பக்கங்களில் இந்தக் கோவில்கள் உருவாகக் காரணம் என்று வேறு சில அவஸ்யமும் இருந்தது என்று சொல்கின்றது. மக்கள் அணைவரும் மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதற்கு மற்றும் போர்க்காலங்களில் மக்கள் அடைக்கலம் புக என்று சமூக நோக்கில் உருவாக்கப்பட்டதாகவும் சொல்கின்றது. ஆனால் இந்தக் கோவில்களை உருவாக்க பாடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் சமூகத்தில் இருந்த அடித்தட்டு மக்களே ஆவர்ர்கள். இவர்களே முக்கிய உழைப்பாளர்களாக இருந்துள்ளனர். இன்றைய நவீன வசதிகள் ஏதுமில்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தஞ்சை பெரிய கோவில் முதல் நாம் இன்று வரையிலும் கண்டு கொண்டுருக்கின்ற ஒவ்வொரு கோவில்களுக்குப் பினனாலும் முழுக்க முழுக்க மனித சக்தியே முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ஆதிக்கச் சாதியினர்களும், பிராமணர்களுமா இந்தக் கோவில் நிர்மாண பணிகளுக்காகத் தங்கள் உடலை உழைப்பை கொடுத்துருக்க முடியுமா? உழைத்த அத்தனை பேர்களும் கோவிலுக்கு வெளியே நின்றனர். உழைப்பை வாங்கியவர்கள் உள்ளே நுழைந்து சாமியுடன் உறவாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த இடத்தில் தான் தென்னிந்தியாவிற்குள் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்களும் பிராமணர்களின் புத்தியும் நமக்குப் பல விசயங்களைப் புரியவைக்கின்றது. உலகில் அன்று முதல் இன்று வரையிலும் புத்தியை மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இந்த மதம், சாதி, சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்தக் கோவில்களுக்குக் கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்குக் கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகக் காரணமாக இருந்தது. இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது. [] ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்குப் புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர். அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்குக் குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. நாடார்களின் தொடக்கப் பாரம்பரிய தொழிலான இந்தப் பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்தச் சரித்திரத்தில் உள்ளது. பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாகப் பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தைத் தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின. எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது. கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா? இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களைச் சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது. எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர். இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கியப் பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல. தங்கள் வாழ்க்கை முக்கியம். அதற்காக உருவாகும் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர். நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களைச் சரித்திரம் வைத்துள்ளது. தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது. ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர். மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர். எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாகத் தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றித் திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது. பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாகக் கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர். இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாகக் கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர். ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்தக் கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்தக் கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது. வெளியே நின்று வணங்க வேண்டும். பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம். குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம். இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களைச் சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர். [] பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம். மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது. இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர். இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்? இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்குப் பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம். மக்களுக்குத் தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது. பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள். அவரவர்களும் தங்களுக்குப் பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர். சிலர் ஜெயித்துப் பெரும்புள்ளியாகத் தெரிந்தனர். ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர். [] குறிப்பிட்ட சாதி மக்களைத் தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்கச் சாதியினர்களுக்குப் பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதாரப் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம். எதிர்த்து பேச முடியாது. பேசினால் தெய்வ குற்றம். அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம். கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும். இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களைச் சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர். ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்கச் சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும். [] 28 கலவர பூமியில் மலர்ந்தவர்கள் ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்கச் சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும். ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல. [] தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்தப் பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது. உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது. இராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களைச் சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்குப் பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாகப் பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படித் தடுப்பது? இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது. இன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்குப் பெரிதான சுமைகள் இல்லை. ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது. அருப்புக்கோட்டை,பாலையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாகக் காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது. 1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார். நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னைப் பலவந்தப்படுத்திக் கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார். இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது. 1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார். நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார். ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும். மற்றப் பகுதிகளுக்குக் கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார். நாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட துடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களைப் பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்தப் பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர். காரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்தக் கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது. இது அடுத்தக் கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்கக் கல்வீச்சு முதல் தொடங்கிப் பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாகக் களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர். இது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது? 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது. ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போலப் பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்த தொடங்கினர். குறிப்பாகச் சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர். [] இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தக் கலவரங்களில் முக்கியப் பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களைப் பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர். சிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான். ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும்? இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்குப் பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட்டம் வகுப்பது ஒருவர். இதைக் கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்குப் பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. காரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்குப் பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை. நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்தப் பிராமணர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு மேலாகத் தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்குத் தூக்குவதற்கு மறவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். இதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது. சமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களைப் பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்தக் கோவில்களே முக்கியக் காரணமாக இருந்தது. சிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை. இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது. கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்குப் பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களைப் பழிதீர்க்க, அடக்கி வைக்கச் சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் மறவர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர். இதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களைக் கொண்டு வந்து இறக்கினர். [] சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளைச் சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்துச் சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்றச் சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர். 29 ஆசிரியர் குறிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண் குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள் சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு முதல் மாதத்தில் சுமார் 8,000 தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது. புத்தகம்: டாலர் நகரம் டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்? இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில். ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார். புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது. தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே. நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார். திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை? சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது. மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார். “உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான். அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர். உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது. 26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல? (வணிக நோக்கத்திற்கு இந்த மின் நூலை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.) ஜோதிஜி திருப்பூர் 30 டாலர் நகரம் [] [] [] மதிப்புரை – ரஞ்சனி நாராயணன். பெங்களூர். வல்லமை இணைய இதழ் http://www.vallamai.com/?p=41654 டாலர் நகரம். எழுதியவர்: ஜோதிஜி. பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம். விலை: ரூ. 190. பக்கங்கள்: 247. வெளியான ஆண்டு: 2013 [] 1 Free Tamil EBooks எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/