[] தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு (மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது) தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு (மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. This book was produced using PressBooks.com. Contents - முன்னுரை - 1. முதல் பகுதி - 2. பகுதி இரண்டு - 3. பகுதி மூன்று - 4. பகுதி நான்கு - 5. பகுதி ஐந்து - 6. பகுதி ஆறு - 7. பகுதி ஏழு - 8. பகுதி எட்டு - 9. பகுதி ஒன்பது - 10. பகுதி பத்து - 11. பகுதி பதினொன்று - 12. பகுதி பன்னிரண்டு - 13. பகுதி பதிமூன்று - 14. பகுதி பதினான்கு - 15. பகுதி பதினைந்து - 16. பகுதி பதினாறு - 17. பகுதி பதினேழு - 18. பகுதி பதினெட்டு - 19. பகுதி பத்தொன்பது - 20. பகுதி இருபது - 21. பகுதி இருபத்தொன்று - 22. பகுதி இருபத்திரண்டு - எங்களைப் பற்றி - Free Tamil Ebooks 1 முன்னுரை [Cover Image] தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் “தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம். தஞ்சை வெ.கோபாலன் மின்னஞ்சல்: privarsh@gmail.com அட்டைப் படம் –  ஜகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com அட்டைப் பட மூலம் -  https://www.flickr.com/photos/yoja/3646759383 https://www.flickr.com/photos/exploring_india/6435485497/in/photolist-aNFxCv-9Lt1UB-8zyc8v-dNqN3c-GxcAw-aRNkAF-ebTBHc-dFdh1a-a3wVue-ixMuS3-a2KEY4-bnnAUy-5pvmv8-aYmaKr-mEDDMW-5R7cbi-5Rdjyd-5R1GUY-5v3wWg-9U3cVy-9U3ddL-9U3dxd-7houLD-5v3wDp-5v3xhT மின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com [pressbooks.com] 1 முதல் பகுதி 1535இல் தஞ்சாவூரில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. முதலாம் நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கர். இவர் காலத்தில் பல நற்காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இப்படி தொடங்கிய நாயக்கர்கள் ஆட்சி தஞ்சையில் கடைசியாக 1675 வரை அதாவது 140 ஆண்டுகள் நடந்து முடிந்தன. கடைசி நாயக்க வம்சத்து அரசர் தஞ்சையில் விஜயராகவ நாயக்கர் ஆவார். விஜயராகவ நாயக்கர் 1631 முதல் 1675 வரை 44 ஆண்டுகள் தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார். இவருக்கு முன்பு இவருடைய தந்தையார் ரகுநாத நாயக்கர் ஆட்சி செய்தார். தந்தை ரகுநாத நாயக்கரும் சரி, மகன் விஜயராகவ நாயக்கரும் சரி பல துறைகளிலும் வல்லவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்திருக்கிறார்கள். நல்ல கலா ரசிகர்கள், தாங்களே பல கலைகளிலும் சிறப்பாகத் தேர்ந்தவர்கள். ரகுநாத நாயக்கர் போர்க்களங்கள் பல கண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவருடைய மகன் விஜயராகவ நாயக்கர் நாகப்பட்டினம் அருகில் டச்சு அல்லது போர்த்துகீசியரிடம் போரிட்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. [] கி.பி.1664இல் விஜயராகவ நாயக்கர் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரோடு போரிட்டிருக்கிறார். இந்தப் போரில் மதுரை நாயக்கர் வசம் இருந்த வல்லம் கோட்டையை இவர் மீட்டிருக்கிறார். இந்த வீரம் செறிந்த விஜயராகவ நாயக்கரின் வீழ்ச்சிக்குப் பின் தஞ்சையில் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது. தஞ்சையின் கடைசி நாயக்க மன்னராக இருந்த விஜயராகவ நாயக்கர் மதுரை சொக்கநாத நாயக்கரோடு போரிட்டார் என்று சொன்னோமல்லவா. அது குறித்த விவரங்களைப் பார்ப்போம். சொக்கநாத நாயக்கர் மதுரையை மட்டுமல்லாது திருச்சியையும் ஆண்டு வந்தார். விஜயநகர சாம்ராஜ்யம் தலையெடுத்து வளர்ச்சி பெற்ற காலத்தில் நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை தென்னகத்தில் கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தில் பல பகுதிகளுக்கும் சிற்றரரசர்களாக நியமித்து அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்தான் தஞ்சைக்கு சேவப்ப நாயக்கர். அவர் சந்ததியில் வந்தவர்தான் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரும். ஒரு சமயம் மதுரை சொக்கநாத நாயக்கர், தஞ்சை விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டு தூது அனுப்பியிருந்தார். அதற்கு விஜயராகவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சொக்கநாதர் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தார். போருக்குப் புறப்படும் முன்பாக விஜயராகவ நாயக்கர் தன் குடும்பத்தார் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டிவைத்து அவர்களுக்குச் சில அறிவுரைகளை வழங்கினார். நடக்கப் போகும் போரில் தான் வெற்றி பெற்றால் சரி, அப்படி இல்லாமல் ஒருக்கால் தான் போரில் தோற்றுப் போக நேர்ந்தால், நீங்கள் அனைவரும் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு அவமானப் படாமல், உயிர் துறந்து விடுங்கள் என்று சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லிவிட்டுப் போர்க்குப் புறப்பட்டுச் சென்றார். சொக்கநாதருக்கும் விஜயராகவருக்கும் இப்படியொரு விரோதம் நிகழ அவர் பெண் கேட்டு இவர் கொடுக்க வில்லை என்பதுதான் காரணம் என்பதைப் பார்த்தோமல்லவா. விஜயராகவர் சொக்கநாதருக்குப் பெண் கொடுக்க மறுக்க ஒரு காரணம் இருந்தது. முன்னதாக மதுரை திருமலை நாயக்கர் விஜயராகவனின் சகோதரியை மணம் செய்து கொண்டிருந்தார். பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்டு விட்டாள். இந்த காரணத்தினால்தான் சொக்கநாதனுக்குப் பெண் கொடுக்க விஜயராகவ நாயக்கர் விரும்பவில்லை. முந்தைய அனுபவம் அவருக்கு பசுமையாக நினைவிருந்தது. மதுரை படைக்கு தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாயுடு, பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமை வகித்து படைநடத்தி வந்தனர். திருச்சியை விட்டுப் புறப்பட்ட இந்தப் படை முதலில் வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. பிறகு தஞ்சாவூரை முற்றுகை இட்டது. அப்போது விஜயராகவ நாயக்கர் அரண்மனையில் சிறை வைத்திருந்த தனது மகன் மன்னாரு தாசனை மன்னித்து விடுதலை செய்து போரில் ஈடுபட வைத்தார். இவர்கள் இருவருமாகச் சேர்ந்து மதுரை படையோடு போர் புரிந்தனர். தோல்வி அடையும் நிலையில் தன் அரண்மனைக்கு செய்தி சொல்லி அனுப்பினார் விஜயராகவர். முன்பே திட்டமிட்டிருந்தபடிக்கு அரண்மனைப் பெண்டுகள் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு இறந்து போயினர். கி.பி.1675 பிப்ரவரி 3ஆம் நாள் தஞ்சை வடக்கு வீதிக்கு அருகில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயில் அருகே நடைபெற்ற போரில் கடும் சமர் புரிந்து விஜயராகவ நாயக்கர் வீரமரணம் அடைந்தார். அவரோடு அவரது மகன் மன்னாரும் உயிர் துறந்தான். [] அரண்மனைப் பெண்கள் அனைவரும் உயிர் துறந்த போது, விஜயராகவரின் மனைவியருள் ஒருத்தி தனது நான்கு வயது குழந்தையை தாதி ஒருத்தியிடம் கொடுத்துத் தப்பித்துப் போய் குழந்தையை எப்படியாவது வளர்த்துப் பெரியவானாக்கச் சொல்லிவிட்டு அவளும் இறந்து போனாள். போரின் முடிவில் தஞ்சாவூர் ராஜ்யம் மதுரை சொக்கநாத நாயக்கர் வசம் போயிற்று. வெற்றி பெற்று தஞ்சை கோட்டைக்குள் நுழைந்த சொக்கநாதன் தனது தம்பியாகிய அழகிரி என்பவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மதுரை திரும்பினான். விஜயராகவனின் குழந்தையை மறைத்து எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற அந்தத் தாதி, செங்கமலதாஸ் என்று பெயருள்ள அந்தக் குழந்தையை நாகப்பட்டினத்தில் ஒரு செல்வந்தரான செட்டியாரிடம் கொடுத்து வளர்க்கச் செய்தாள். வசதியான குடும்பத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட நாயக்க வம்சத்து குழந்தையான செங்கமலதாஸ் நன்கு கல்வி கற்றான். போர்ப் பயிற்சியும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. ராயசம் வெங்கண்ணா என்று ஒரு மந்திரி. இவர் ஒரு தெலுங்கு நியோகி பிராமணர். ஆந்திரத்திலிருந்து நாயக்க மன்னர்களுடன் தஞ்சைக்கு குடிபெயர்ந்தவரின் வம்சம். இவர் இருநூறு நாயக்கப் படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு நாகப்பட்டினம் போனார். அங்கு தஞ்சையிலிருந்து தப்பிச் சென்ற தாதியைப் பிடித்து, குழந்தை எங்கே என்று விசாரித்து, அந்தக் குழந்தை செங்கமலதாஸ் செட்டியாரிடம் வளர்வதை அறிந்து, அவனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மந்திரி ராயசம் வெங்கண்ணா பீஜப்பூர் சுல்தானிடம் சென்றார். பூஜப்பூர் சுல்தானிடம் தஞ்சையில் நடந்த விவரங்கள் அனைத்தையும் சொல்லி, போரில் விஜயராகவன் மாண்டபின் குடும்பத்தார் அனைவரும் மாண்டு போக, எஞ்சிய இந்த ஒரு குழந்தையை தாதி கொண்டு போய் நாகப்பட்டினத்தில் வளர்த்து வரும் செய்தியைச் சொன்னார் வெங்கண்ணா. மீண்டும் தஞ்சையில் விஜயராகவ நாயக்கரின் மகன் ஆட்சி புரியவும், மதுரை அழகிரியை தஞ்சையிலிருந்து விரட்டவும் உதவி கேட்டார். அதற்குள் மதுரை நாயக்க மன்னர் குடும்பத்தில் தகறாறு ஏற்பட்டுவிட்டது. அண்ணன் சொக்கநாதனுக்கும் தம்பி அழகிரிக்கும் மோதல். இந்த நேரத்தில் பீஜப்பூரில் வெங்கண்ணா உதவி கேட்டு போன இடத்தில் சுல்தான் இவர்கள் தஞ்சையை மீண்டும் மீட்டெடுக்க உதவி புரிவதாக வாக்களித்தான். சுல்தான் அலிஅடில்ஷா, அப்போது பெங்களூரில் தங்கியிருந்த சத்ரபதி சிவாஜியின் தந்தையான ஷாஜியின் மற்றொரு மனைவியின் மகனான ஏகோஜியை அழைத்து விஜயராகவ நாயக்கரின் மகனுக்கு உதவி செய்யும்படி பணித்தார். அவரும் கலாஸ்கான், அபுதல் அலீம் எனும் இரு வீரர்களை பெரும் படையுடன் அனுப்பி வைத்தார். இந்த பூஜப்பூர் படையுடன் ஏகோஜியும் தன் படைகளைச் சேர்த்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டார். பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷா ஏகோஜியிடம், மதுரை நாயக்க மன்னர்களைத் தஞ்சாவூரை விட்டு விரட்டிவிட்டு தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கரின் வம்சத்தாரிடம் தஞ்சையை ஒப்புவித்துவிட்டு, அவர்களே இனி ராஜ்யத்தை ஆள வேண்டுமென்று உத்தரவிட்டுவிட்டு, படையெடுப்புச் செலவையும், பேஷ்கஷ் (கப்பம்) பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்து சேரும்படிச் சொன்னார். சுல்தானின் உத்தரவுப்படி ஏகோஜி பெங்களூர் ராஜ்யத்தை தனது உதவியாளராக இருந்து வந்த காகால்கர் காடேஜு ஜாகா என்பவனிடம் ஒப்புவித்து விட்டு சுல்தான் படையுடன் தன் படையையும் இணைத்து அதற்குத் தலைமை தாங்கி தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார் ஏகோஜி. 2 பகுதி இரண்டு பீஜப்பூர் சுல்தானுடைய ஆணைப்படி ஏகோஜி, பெங்களூர் ராஜ்யத்தைத் தனது உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது படையோடும், சுல்தானின் படையோடும் தஞ்சை நோக்கிப் பயணமான செய்தியை முதல் பகுதியில் பார்த்தோம். ஏகோஜி பெங்களூரில் கிளம்பி தஞ்சையை நோக்கி வருகிற வழியில் ஆரணியில் இருந்த கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டார். அங்கு ஆரணி நிர்வாகத்தை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு அப்போது ஆட்சி புரிந்து வந்த மதுரை சொக்கநாத நாயக்கரின் தம்பியான அழகிரியைத் தோற்கடித்து திருச்சிக்கு விரட்டிவிட்டு தஞ்சாவூர் நாயக்க அரசுக்குச் சொந்தமானவர்களிடம் ஆட்சியை ஒப்புவித்தார். தஞ்சை நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருவருக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்ததே காரணம். திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி I என்று பதவிக்கு வந்த மன்னர். தஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து பேஷ்கஷ் வசூல் செய்து கொண்டு திரும்புவதற்காக அங்கு முகாமிட்டிருந்த இரண்டு வஜீர்களுக்கும் தஞ்சை மன்னன் பேஷ்கஷ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அப்போது தஞ்சை அரண்மனையில் ராஜாவின் வாரிசு யார் என்பதில் போட்டி, சண்டை ஏற்பட்டிருந்தது. இவர்களுக்குள் நடந்த குடும்பச் சண்டையில் தங்களைப் பதவியில் அமர்த்திய பீஜப்பூர் சுல்தானையும், அவர்களது படைத் தளபதி ஏகோஜியையும், பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். இவ்விரு தூதர்களையும் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம்கூட இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சை மன்னரின் இப்படிப்பட்ட துரோக சிந்தையும், ஏமாற்றும் எண்ணத்தையும் தூதர்கள் மூலம் நகரத்துக்கு வெளியே முகாமிட்டிருந்த இவ்விரு வஜீர்களும் தெரிந்து கொண்டனர். தஞ்சை அரசரின் சபையில் இருந்த நகரத்துப் பெரியவர்கள் சிலர் இந்த வஜீர்களிடம் வந்து நடக்கும் விஷயங்களைச் சொல்லி, தற்போது தஞ்சையை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடத்தையும் அரச பதவிக்கு ஏற்றதாக இல்லை. போகிற போக்கைப் பார்த்தால் இவர்களுக்குள் எந்த நேரத்திலும் சண்டை மூளலாம். அதனால் உயிர் இழப்புக்களும், ராஜ்யத்துக்குக் கேடும் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் தஞ்சை ராஜ்யத்தை இவர்களிடம் ஒப்புவித்துவிட்டுப் போவது சரியாக இருக்காது என்று எடுத்துரைத்தனர். தஞ்சைப் படைகளும் இப்போது இந்த மன்னரின் கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டொரு நாட்களில் படையினர் கலகம் செய்து மன்னரை வீழ்த்திவிட்டு ராஜ்யத்தைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று நகரத்துப் பெரியவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று வஜீர்கள் நகரத்துப் பெரியவர்களுடன் ஆலோசித்து, மீண்டும் ஏகோஜி மன்னரைத் தஞ்சைக்குத் திரும்பச் சொல்லி அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். ஏகோஜியும் நல்ல வேளை இன்னமும் ஊர் திரும்பவில்லை. மனைவியின் பிரசவத்தை யொட்டி அவர் இன்னமும் திருமழபாடியில்தான் முகாமிட்டிருந்தார். இதன் பிறகு வஜீர்கள் இருவரும் நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை கவனித்து வந்தார்கள். அவர்கள் கவனித்த வகையில் நகரத்துப் பெரியவர்கள் சொன்ன செய்திகள் உண்மைதான் என்பதை உணர்ந்தார்கள். அதுமட்டுமல்லாமல் தஞ்சை ராஜ்யத்தின் படைத் தளபதிகள் சிலர் வந்து வஜீர்களிடம் முன்பு ஊர்ப்பெரியவர்கள் சொன்ன செய்தியை ஊர்ஜிதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஊர்ப் பெரியவர்களை அழைத்து வஜீர்கள் சொன்னார்கள், எங்களால் இப்போது கூட தஞ்சை அரண்மனையையும், ஆட்சி அதிகாரத்தையும் பறித்துக் கொள்ள முடியும். அதனை நாங்கள் இருவர் மட்டும் முடிவு செய்ய முடியாது. திருமழபாடியில் தங்கியிருக்கும் ஏகோஜிக்கு தகவல் அனுப்புகிறோம். அவர் வந்து எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி முடிவெடுத்து நடந்து கொள்வோம் என்றனர். வஜீர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சை நகர பெருமக்கள் பிரதிநிதிகள் வஜீர்கள் கொடுத்த கடிதத்துடன் திருமழபாடி சென்று ஏகோஜியைச் சந்தித்து நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினர். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று ஏகோஜி ஒரு சிறுபடையோடு தஞ்சாவூருக்கு கிளம்பி, அங்கிருந்த வஜீர்களையும் சேர்த்துக் கொண்டு தஞ்சையைப் பிடிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ஏகோஜியின் சிறு படை தஞ்சையில் தங்கியிருந்த வஜீர்களோடு தஞ்சைக் கோட்டைக்குள் வடக்கு வாசல் வழியாக உள் நுழைந்தது. ஏகோஜியின் படைகள் தஞ்சைக்குள் நுழைந்த வடக்கு வாசலுக்கு ‘அல்லிதர்வாசா’ எனப் பெயரிடப்பட்டது. மராத்தியப் படைகள் தஞ்சை நகரத்துக் கோட்டைக்குள் நுழைந்த போது, தஞ்சை நாயக்க அரசரும் அவரது பரிவாரங்களும், குடும்பத்தாரும் எதிரே வந்து எதிர்த்தார்கள். அங்கு அரச பரிவாரங்களுக்கும், மராத்திய படையினருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஏழெட்டு பேர் இறந்து போனார்கள். மீதமுள்ள நாயக்க படையினர் சின்னாபின்னமடைந்து சிதறிப் போனார்கள். மிகச் சுலபமாக தஞ்சாவூர் கோட்டை ஏகோஜி வசம் வீழ்ந்தது. தஞ்சை கோட்டையை மராத்தியர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்ற செய்தி அறிந்து ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகளும் சிறிது நேரத்தில் ஓய்ந்து போயின. வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஏகோஜியின் படைகள், கிழக்கு வாசல் வையாக வெற்றி வீரர்களாக வெளிவந்த போது, மக்கள் ஆரவாரம் செய்தனர். வெற்றியோடு ஏகோஜி வெளிவந்த கீழவாசல் வெற்றிவாசல் எனும் பெயரில் ‘பத்தே தர்வாசா’ எனப் பெயர் பெற்றது. 3 பகுதி மூன்று [] தஞ்சை கோட்டையை மிக சுலபமாக உயிர்ச்சேதம் அதிகமின்றி பிடித்து வெற்றி பெற்ற ஏகோஜி தஞ்சை கோட்டையை விட்டு கீழவாசல் வழியாக வெளியேறி அங்கு முகாமிட்டான். தஞ்சை நிர்வாகத்தை அரண்மனையில் பணிபுரிந்த காரியஸ்தர்களிடம் ஒப்படைத்தான். தனது வஜீர் இருவரையும் தத்தமது ஊர்களுக்குத் திரும்புமாறு ஏகோஜி பணித்தார். எனினும் தஞ்சாவூர் ராஜ்யம் யாருக்கு என்பதில் இன்னமும் இழுபறி நீடித்து வந்தது. இப்படி இரண்டு மாத காலம் கடந்து போயிற்று. இந்த காலகட்டத்தில் வடக்கே டில்லி முகலாய சக்கரவர்த்தி தக்ஷிண சுல்தான்கள் அனைவரையும் போரில் வென்று அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இந்த செய்தி தஞ்சாவூர் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்த ஏகோஜிக்கும் கிட்டியது. தனது தலைவரான பீஜப்பூர் ராஜ்யமும், பீஜப்பூர் சுல்தானும் இந்நேரம் முகலாயருக்கு அடிபணிந்திருப்பாரோ, அவரது விஜயபுரம் என்கிற பீஜப்பூர் ராஜ்யம் முகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் வசம் போயிருக்குமோ என்ற எண்ணம் ஏகோஜிக்கு உதயமாயிற்று. மாறியுள்ள இந்த சூழ்நிலையில் ஏகோஜி இங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டாரானால் தங்கள் நிலைமை என்ன, நாம் என்ன செய்வது என்று அவருடன் இருந்த இரு வஜீர்களுக்கும் ஒரு சந்தேகம் தோன்றியது. ஒருக்கால் தஞ்சையை தங்கள் இருவரில் யாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாலும் தங்களால் இந்த ராஜ்யத்தைச் சரிவர பரிபாலனம் செய்ய முடியுமா என்ற ஐயப்பாடும் தோன்றியது. திருச்சியை ஆண்டு கொண்டிருக்கும் நாயக்க மன்னர்கள் பலம் பொருந்தியவர்கள். அவர்கள் நம்மை மீண்டும் தாக்கி இந்த ராஜ்யத்தையும் பிடுங்கிக் கொள்வார்கள். நமது மன்னரான அலிஅடில்ஷாவும் தஞ்சையை நாமே வைத்துக் கொள்ளச் சம்மதிக்க மாட்டார். ஏகோஜி தஞ்சையை ஆள்வதாக இருந்தால், அவர் திருச்சியையும் போரிட்டு மீட்டு அந்த ராஜ்யத்தையும் தஞ்சையோடு இணைத்துக் கொள்வார். மேலும் ஏகோஜியின் சகோதரர் சிவாஜி ராஜா வடக்கே மிகவும் பலம் பொருந்திய ராஜாவாக இருக்கிறார். ஆகையால் அலிஅடில்ஷாவும் சிவாஜி ராஜாவுக்கு பயந்து கொண்டு ஏகோஜியின் வம்புக்கு வரமாட்டார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வஜீர்கள் இருவரும் ஏகோஜியிடம் அவரே தஞ்சாவூருக்கு அரசராக ஆகவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வடக்கே நிலவும் குழப்பம், சுல்தான்கள் டில்லி சக்கரவர்த்திக்கு அடிபணிந்து போனது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஏகோஜியும் தஞ்சைக்குத் தானே மன்னராக அறிவித்துக் கொள்ள சம்மதித்தார். உடனே சகம் 1597 நள வருஷம் சித்திரை மாதம் (1676 ஏப்ரல் மாதம்) தஞ்சாவூர் ராஜ்ய பாரத்தை ஏகோஜி ஏற்றுக் கொண்டு தஞ்சாவூரின் முதல் மராத்திய மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். குழப்பத்தில் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் ராஜ்ய மக்களும், மந்திரி பிரதானிகளும், மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தஞ்சை மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிங்காதனம் ஏறிய ஏகோஜி தனது எஜமானன் பீஜப்பூர் சுல்தானுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களும், கப்பமும் அனுப்பி தான் தஞ்சை அரியணையை ஏற்க வேண்டிய சந்தர்ப்பத்தை விளக்கி கடிதம் எழுதினார். தெற்கே தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவுக்கு தூதர்கள் மூலமும், ஏகோஜியின் கடிதம், அவர் அனுப்பிய பேஷ்கஷ், பரிசுப்பொருட்கள், துணிமணி, செல்வம் ஆகியவற்றிலிருந்து தெரிய வந்தது. ஏகோஜி காட்டிய பணிவு, மரியாதை இவற்றைக் கண்டு மனம் மகிழ்ந்த சுல்தான் ஏகோஜியை வாழ்த்தி பரிசுப் பொருட்களை அனுப்பி, இனி தஞ்சாவூர் ராஜ்யத்தை வம்ச பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளும்படி சாசனம் பண்ணிக் கொடுத்தனுப்பினார். தஞ்சையில் இப்படி நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்த நேரத்தில் திருச்சிராப்பள்ளியில் இருந்த நாயக்க மன்னர் தனது ஆதரவாளர்களுடனும், நட்பு அரசர்களுடனும் தஞ்சை குறித்து ஆலோசனைகள் நடத்தினர். இப்படி தங்களுக்கு எதிராக சதியாலோசனை திருச்சியில் நடக்கும் செய்தியறிந்த ஏகோஜி, தனது படைகளைச் செலுத்திக் கொண்டு போய் திருச்சி நாயக்கர் மன்னர்களுடன் யுத்தம் செய்தார். அந்த எதிர்பாராத யுத்தத்தில் திருச்சி நாயக்க மன்னர் தோற்றுப் போனார். வெற்றி பெற்ற தஞ்சை மராத்திய மன்னன் ஏகோஜிக்கு செந்தலை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களை வெற்றிலைப் பாக்குக்காக என்று எழுதிக் கொடுத்து சாசனம் செய்து கொடுத்தார்கள். இந்தப் போரில் தனது வெற்றிக்காகப் பாடுபட்ட இரண்டு வஜீர்களுக்கும் சகல மரியாதைகளையும் செய்து, பரிசுகளைக் கொடுத்து மன்னர் அவர்களைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். பீஜப்பூர் சுல்தான் பெங்களூரிலிருந்த ஏகோஜியைத் தஞ்சைக்குச் சென்று நாயக்க மன்னர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பூசலைத் தீர்த்துவிட்டு வருமாறு அனுப்பினாரல்லவா, அப்போது ரகுநாத் நாராயண் என்பவரை ஏகோஜிக்கு உதவிக்காக அனுப்பினார். ஆனால் அவரோடு ஏகோஜிக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிடம் சென்றுவிட்டார். ஏகோஜி தஞ்சையைப் பிடித்துக் கொண்டு மன்னராக ஆனபிறகு, மராத்தியத்தில் இருந்த அவரது பெரிய அண்ணன் சத்ரபதி சிவாஜி தஞ்சாவூர் ராஜ்யத்தில் பாதியைத் தனக்குத் தந்துவிடக் கேட்டதாகவும், ஏகோஜி மறுத்ததால் இருவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டது என்றும் தெரிகிறது. இதன் பொருட்டு சத்ரபதி சிவாஜி தென்னாட்டுக்குப் படையெடுத்து வந்து செஞ்சியைப் பிடித்துக் கொண்டு, பின்னர் வேலூரையும் தாக்கினார். ஏகோஜிக்கு ஒரு கடிதம் அனுப்பி அவரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டிருந்தார். ஏகோஜி ஏனோ அவரைச் சென்று காணவில்லை. எனவே சிவாஜி ராஜா கொள்ளிடத்துக்கு வடக்கேயுள்ள பகுதிகளைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் வந்து சேர்ந்து கொண்ட ரகுநாத் நாராயணனிடம் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. இதன் பிறகு இவ்விருவருக்குள்ளும் சில மோதல்கள் நிகழ்ந்தன. இறுதியில் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இவ்வாறு ஏகோஜி தஞ்சை மன்னனாக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு பிங்கள வருஷம் கி.பி.1677இல் மூன்றாவது மகன் பிறந்தான். அவனுக்கு துக்கோஜி என்ற பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தான். ஏகோஜியின் முதல் மனைவியான இங்க்ளே வம்சத்துப் பெண் தீபாபாயி சாஹேப் என்பவரின் வயிற்றில் பிறந்தவர்கள் இந்த மூன்று பிள்ளைகளும். இந்த ராணி தீபாபாயி சாஹேப் என்பவரைப் பற்றி “தீபாம்பாள் சரித்திரம்” எனும் வரலாற்று நூல் இருக்கிறது. இதனை எழுதியவர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று, சென்னையில் குடிபுகுந்து, மெலட்டூர் பாகவத மேளாவில் பாடி பங்குபெற்று வரும் சமஸ்கிருத பண்டிதர் என்.சீனிவாசன் ஆவார். ஏகோஜியின் இரண்டாம் மனைவி மோஹிதே வம்சத்தின் அண்ணுபாயி சாஹேப் என்பவர். இவ்விரு மனைவியர் தவிர ஏகோஜிக்கு மற்றும் ஒன்பது பேர் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஸ்ரீகள் (ஸ்த்ரீகள்) இருந்தனர். அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகள் உண்டு. அவர்கள் சந்திரபான், சூரியபான், மித்திரபான், காளேபான், கீர்த்திபான், விஜயபான், உதையபான் இப்படிப் பெயர் கொண்ட ஏழு பேர். இவர்களில் சந்திரபான் என்பவன் நல்ல வீரன். ஆக மொத்தம் ஏகோஜிக்கு உரிமை மகளிர் மூலம் மூவரும், சேர்த்துக் கொண்டவர்கள் மூலம் எழுவருமாக பத்து பிள்ளைகள். தஞ்சை ராஜ்யாதிகாரம் கிடைத்த பிறகு தஞ்சையில் ஏகோஜி தர்ம சாஸ்திரப்படி ஆட்சிபுரியலானார். பழைய குழப்பங்கள் தீர்ந்து நியாயம், தர்மம், வீரம் விளைந்த நிலமாக தஞ்சை மீண்டும் மாறத் தொடங்கியது. முதன் முதலாக தமிழ் பேசும் இந்தப் பகுதிக்கு மராத்தி மொழி பேசும் ஒரு ராஜா அமைந்ததாலும், அவர்கள் பெயர் இவர்களுக்குப் புதிது என்பதாலும், ராஜா ஏகோஜியின் பெயரை தமிழ் மக்கள் “ஏகராஜா” என்றே அழைத்தார்கள். ஏகோஜி என்ற பெயர் மருவி சில இடங்களில் இவரது பெயர் ‘வெங்காஜி’ என்றும் குறிப்பிடப் படுகிறது. ஆனால் இவரது தம்பியின் பெயர் வெங்காஜி என்பது. இங்கு குடிபுகுந்த சில ஆங்கில மிஷினரிகள் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 1676இல் தஞ்சைக்குக் குடிபுகுந்த மிஷினரிகள் தங்கள் நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்கள்: “Venkaji sought to make himself beloved by the people” என்று. இங்கு வெங்காஜி என்று குறிப்பிடப்படுபவர் ஏகோஜியே. ஏகோஜியின் மனைவிமார் தீபாபாயி, அண்ணுபாயி என்பதையும், சேர்த்துக் கொண்ட மனைவிமார் ஒன்பது பேர் என்பதையும் பார்த்தோமல்லவா. இப்படிச் சேர்த்துக் கொண்ட ஒன்பது பேரில் ஒருவரான கங்காபாயி என்பவர் இறந்து போன செய்தியையும், அவரது உத்தரகிரியைக்காக ராஜாங்க கஜானாவிலிருந்து 50 சக்கரம் பொற்காசுகள் கொடுத்ததாகவும் குறிப்பு இருக்கிறது. ஏகோஜி ராஜா 1682இல் இறந்து போனார். இவர் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து படையுடன் திரும்பப் போனபோது கட்டுமரத்தில் கடந்து சென்றதாக ஒரு செய்தி உண்டு. மற்றொரு செய்திப்படி பாபாஜி பாவார் என்பவர் தனது முதுகில் இவரைச் சுமந்துகொண்டு சென்றதாகவும் செய்தி இருக்கிறது. அது போலவே இவருடைய அண்ணன் சத்ரபதி சிவாஜி ராஜா ராமேஸ்வரம் சென்று திரும்பிய போது இவரை திருமழபாடியில் சந்தித்ததாகவும், மற்றொரு இடத்தில் திருவாடி (திருவையாறு) யில் சந்தித்ததாகவும் செய்திகள் இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் மராட்டிய மாநில அரசு கற்றறிந்த பேராசிரியர்கள் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, சத்ரபதி சிவாஜியின் ஆட்சி, அவர் ஆண்ட பிரதேசங்கள், அவர் பயணம் செய்த இடங்கள் இவற்றைக் கண்டறிந்து செய்திகளைச் சேகரிக்க ஆணையிட்டனர். அந்தக் குழு தமிழகத்துக்கும் வந்து சத்ரபதி சிவாஜி பயணம் செய்த தடங்களை ஆய்வு செய்தபோது, கொள்ளிடக்கரையில் அமைந்திருந்த ஒரு பவானி அம்மன் கோயிலில் அம்மன் சிலைக்குப் பின்புறம் ஒரு கேடயமும், அதில் இரு வாளும் இருந்ததைக் கண்டு ஆய்வு செய்ததில் அது சத்ரபதி சிவாஜி கொடுத்தது என்பது தெரிய வந்தது. சத்ரபதி சிவாஜி கொள்ளிடம் ஆற்றைத் தன் வெண் புரவியில் கடக்க எத்தனித்த போது வெள்ளம் குதிரையோடு சிவாஜியையும் அடித்துச் சென்றதாம். அப்போது கிராம மக்கள் சிவாஜியை, அவர் யார் என்று தெரியாமலே காப்பாற்றி, அவருக்கு ஜுரம் வந்துவிட்டபடியால் சில நாட்கள் வைத்திருந்து வைத்தியம் பார்த்து குணம் ஆன பின்பு அனுப்பி வைத்தனராம். குதிரையும் வேறொரு இடத்தில் கரையேறி அவர்களால் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததாம். அப்போது அந்த கிராம மக்களுக்காகக் கொடுத்ததுதான் இந்த கத்திகளும் கேடயமும் என்பதை மராத்திய அரசு அமைத்த குழு கண்டுபிடித்தது. மன்னர் சரபோஜி II தனது ‘பான்ஸ்லே வம்சத்து வரலாறு’ என்று கல்வெட்டில் எழுதி வைத்திருக்கும் பெரிய கோயில் கல்வெட்டில், சிவாஜி ராமேஸ்வரம் வந்துவிட்டு ஏகோஜிக்குத் தெரியாமலே தஞ்சை கோட்டையை அதன் பாதுகாப்புக் குறித்து பார்வையிட்டு ஊர் திரும்பியதும் ஒரு கடிதம் மூலம் தெரிவித்ததாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் சத்ரபதி சிவாஜி தஞ்சையில் ஒரு கடையில் தனது வாளையும், தலைப் பாகையையும் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டுத் தனக்கு அனுப்பும்படியும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. தஞ்சை கோட்டை மிகவும் பலமுள்ளதாக கழுகு வடிவத்தில் இருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை நன்கு பலப்படுத்தினால் மட்டும் போதும் என்றும் சத்ரபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக தஞ்சையின் முதல் மராட்டிய மன்னன் ஏகோஜியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 4 பகுதி நான்கு ஏகோஜி மகாராஜா காலமான பிறகு அவருடைய மூத்த மகனான 3ஆவது ஷாஜி மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொண்டான். ஷாஜி என்ற பெயர் அவனுடைய தாத்தாவின் அதாவது சிவாஜி மகாராஜாவின் தந்தையாருடைய பெயர். இவன் தஞ்சை மகாராஜாவாக, அவனுடைய தந்தையான ஏகோஜி அமைத்துத் தந்த உறுதியான ராஜ்யத்துக்கு அரசனாக ஆட்சியைத் துவக்கினான். இவன் திருமணம் செய்து கொண்ட மனைவி சிம்மாபாயி ஒருத்தி மட்டும்தான். உரிமைக்கு இவள் மனைவி, ஏனையோர் பலர் இவனுடைய சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியாக இருந்தனர். இவன் ஆட்சிக்கு ஏகோஜியின் மூத்த மனைவியும், இவனுடைய தாயாருமான தீபாபாய் துணையாக இருந்து வழிகாட்டி வந்தார். இவனுடைய தம்பிகளான சரபோஜி, துக்கோஜி ஆகியோரும் வளர்ந்து நல்ல இளவரசர்களாக இருந்தனர். இவர்களுக்கும் 3ஆம் ஷாஜி திருமணங்களைச் செய்து வைத்துத் தனது கடமையைக் குடும்பத்துக்குச் சரிவர செய்தான். ஷாஜியும் தனது தந்தையைப் போலவே குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தான். இவனது திறமையால் ராஜ்யத்தின் வருமானமும் அதிகரித்தது. மக்களிடமும் நல்ல பெயர் வாங்கினான். இவன் தஞ்சையை ஆண்டுவந்த காலத்தில் டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் தளபதிகளான முல்லா என்பவனும், ஜுல்ஃபிர்கான் என்பவனும் படையெடுத்து வந்து செஞ்சியை முற்றுகையிட்டனர். செஞ்சியைத் தொடர்ந்து மேலும் தெற்கே வந்து தஞ்சாவூரையும் முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினார்கள். அந்த தளபதிகளுக்கு வேண்டிய செல்வங்களைக் கொடுத்தோ அல்லது ஏதோ ஒரு வழியில் ஒரு போர் நிகழாமல் அவர்களை மகிழ்வித்து உயிர்ச்சேதமின்றி திரும்ப அனுப்பி வைத்தான் மன்னன் ஷாஜி. அதே நேரத்தில் தங்கள் மராத்திய அரசு தஞ்சையில் அமையக் காரணமாக இருந்த பீஜப்பூர் சுல்தானையும் நன்றாக கவனித்து மகிழ்ச்சியடையச் செய்து, தஞ்சையை சாமர்த்தியமாக ஆட்சி புரிந்தான். இப்படி தஞ்சை மராத்திய மன்னர்கள் அமைதியாக ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் 3ஆம் ஷாஜியின் கடைசித் தம்பியான துக்கோஜிக்கு தாது வருஷம் ஒரு மகன் பிறந்தான். அவனை 5ஆம் ஏகோஜி என பெயரிட்டு அழைத்தனர். அவனுக்கு பாவா சாஹிப் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தஞ்சை ராஜ்யத்தை அமைதியாகவும், போர்கள் எதுவுமின்றியும், மக்கள் நிம்மதியாக வாழவும் வழிவகுத்து ஆண்டுகொண்டிருந்த 3ஆம் ஷாஜியும் இறந்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு ஷாஜியின் மகன் 3ஆம் சரபோஜி மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் காட்டிகே வம்சத்தில் பிறந்த இரண்டு பெண்களை அதாவது சுலட்சணாபாயி, அபுரூபபாயி ஆகிய இருவரையும், சிரிக்கே குலத்தில் பிறந்த ராஜேஸ்பாயி ஆகிய பெண்கள் மூவரையும் திருமணம் செய்து கொண்டான். இவன் ஆட்சியும் பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில் டில்லி பாதுஷா ஒளரங்கசீப் படையெடுத்து வந்து பீஜப்பூரைப் பிடித்துக் கொண்டார். பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவையும் சிறையில் அடைத்தார். இப்படி பீஜப்பூரின் ஆதரவு போய்விட்ட நிலைமையில் மிகவும் ஜாக்கிரதையாக தஞ்சையை ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான் 3ஆம் சரபோஜி. இவனுடைய தம்பியின் பெயர் துக்கோஜி. இவன் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். மோதே வம்சத்தில் பிறந்த அருணாபாயி, இங்க்ளேயின் பெண்கள் ராஜகுமாரபாயி, மோகனாபாயி, மஹினாபாயி, லக்ஷம்பாயி இந்த ஐந்து பேர் அவர்கள். இவர்களைத் தவிர ஆறு பெண்களை இவன் சேர்த்துக் கொண்டான். அந்த அறுவரில் ஒருத்தி மட்டும் மராத்தி, மற்றவர்கள் நாயக்கர் வம்சத்துப் பெண்கள். இவன் மனைவியாகச் சேர்த்துக் கொண்ட மராத்தியப் பெண்ணை, கத்தியை வைத்துத் திருமணம் செய்து கொண்டான். அவள் பெயர் அன்னபூர்ணாபாயி. ‘கத்தி வைத்து கல்யாணம்’ என்பது ஒரு நாற்காலியில் கத்தியொன்றை வைத்து, அதற்கு பூமாலைகளைச் சூட்டி, ஒரு பிராமணப் பெண்ணை அழைத்து அவளைக் கொண்டு தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லி, அந்தக் கத்திக்கு தாலி கட்டுவார்கள். இங்கு மாப்பிள்ளை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு கத்தி இருக்கும். இப்படிக் ‘கத்திக்’ கல்யாணம் செய்துகொண்ட அன்னபூர்ணா பாயிக்கு சார்வரி வருஷத்தில் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன். துக்கோஜி சேர்த்துக் கொண்ட மற்ற நாயக்கர் குலத்துப் பெண்களுக்கும் மாலசிராஜா, அண்ணா சாஹேப் ஆகிய மகன்களும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்த 3ஆம் சரபோஜியின் தம்பியான துக்கோஜி விவகாரம். துக்கோஜியின் மகனாகப் பிறந்த பிரதாபசிம்மன் வளர்ந்து பெரியவனாக ஆனான். அவனுக்கு மொகிதே வம்சத்தில் வந்த அகல்யாபாயி என்பவளைத் திருமணம் செய்து வைத்தார்கள். இது தவிர யமுனாபாயி, சகராபாயி, திரெளபதிபாயி, யஷ்வந்த்பாயி ஆகிய பெண்களையும் திருமணம் செய்து கொண்டான். இதில் இரண்டு பேரை அவன் தந்தையே செய்து வைத்தது, மற்றவர்களை இவனே சேர்த்துக் கொண்டான். இவர்கள் தவிர மராட்டி, வடுக ஜாதிப் பெண்களில் 7 பேரை இவன் ஆசைநாயகிகளாக வைத்திருந்தானாம். அடே அப்பா! பிறந்தால் மராட்டிய ராஜாவாகப் பிறக்க வேண்டும் போல் இருக்கிறது அல்லவா? (தஞ்சையில் ஏன் இவ்வளவு சந்துகளும் பொந்துகளும் இருக்கின்றன, மக்கள் ஏன் அப்படி ஒளிந்து மறைந்து வாழ்ந்தார்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?) இந்த பிரதாபசிம்மனுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் சாமாபாயி. இவளை மல்லார்ஜி காடேஜிராவ் என்பவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள். துக்கோஜிக்கு அவன் ஆசைநாயகிகள் மூலம் பிறந்த மூன்று குழந்தைகள் இறந்து போயின. அவர்களில் நானா சாஹேப் என்றொருவன். அவனுக்குத் திருமணம் ஆகி அப்பு சாஹேப் என்றொரு பிள்ளை இருந்தான். ஆக, இப்படி 3ஆம் சரபோஜியும், அவனுடைய தம்பியான துக்கோஜியின் வம்சமும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி தஞ்சையை நிரப்பிக் கொண்டிருந்தது. குடும்பம்தான் இப்படி பல கிளைகளாகப் பிரிந்து தழைத்து வளர்ந்து பெருகியதே தவிர அண்ணன் தம்பி இருவரும் ஒற்றுமையாக ஆட்சி புரிந்து தனது படை குடிகளை காவந்து செய்தார்களோ என்னவோ, தங்கள் பெரிய குடும்பத்தைப் பாதுகாத்தார்கள். [] இப்படி அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தால் விதி சும்மா இருக்குமா? இல்லையே. இடையில் புகுந்து ஏதோ கலகம் விளைவித்துவிட்டது விதி. அதில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. துக்கோஜி தனது பரந்து விரிந்த மனைவிகளையும், வாரிசுகளையும் திரட்டிக் கொண்டு, அண்ணனிடம் போய் தனக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்டு, அதன்படி நாட்டைப் பிரித்துக் கொண்டு மகாதேவப் பட்டினம்* எனும் இடத்துக்குச் சென்று அங்கு மனைவி மக்களோடு வாழத் தொடங்கினான். *  (இந்த “மகாதேவபட்டினம்” என்பது இப்போதைய ராஜமன்னார்குடிதான். சரபோஜி ராஜா காலத்தில் தக்ஷிண துவாரகபுரம் என அழைக்கப்பட்ட ராஜமன்னர்குடியில் ஒரு பெரிய நகரை உண்டாக்கி அதற்கு மகாதேவபட்டினம் என்று பெயர் வைத்து அங்கு போய் துக்கோஜி இருந்து வந்தார். குடும்பத்தில் மனவேறுபாடு தோன்றியதால் துக்கோஜி மகாதேவபட்டினத்துக்குச் சென்றார் என்கிறது வரலாறு.) தம்பி துக்கோஜியை மகாதேவப்பட்டினத்துக்கு அனுப்பிய பிறகு 3ஆம் சரபோஜி அமைதியாகத்தான் அட்சி புரிந்து வந்தான். ஆனால் அவனது மூன்று மனைவியருள் ஒருத்தியான அபரூபாபாயி என்பவளுக்கு கைகேயிக்கு அமைந்த கூனி போல சில பெண்கள் அமைந்தனர். அவர்கள் போட்டு தூபத்தில் அபரூபாபாயி மனம் கெடத் தொடங்கியது. அவர்கள் விடாமல் அரசிக்கு என்ன தூபம் போட்டார்கள்? ராஜா 3ஆம் சரபோஜியின் தம்பி துக்கோஜி மகாதேவப்பட்டினம் போய்விட்டாலும், அவனுக்குக் குடும்பம் மிகவும் பெரிதாகிவிட்டது. ஏகப்பட்ட மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று பெரிய கூட்டம் அங்கே இருந்தது. 3ஆம் சரபோஜிக்கோ உரிமை மனைவியர் மூலம் மக்கட்பேறு இல்லை. அதனால் சரபோஜியின் மனைவியான அபரூபாபாயி என்பவளிடம் சில பெண்கள் தூபம் போட்டனர். என்னவென்று? “மன்னனுக்கு மக்கட்பேறு இல்லை. ஆனால் உன் மைத்துனன் துக்கோஜிக்கு வம்சம் பெருத்து விட்டது. உன் கணவனுக்குச் சந்ததி இல்லாததால், ராஜ்யாதிகாரம் இளையவனான துக்கோஜிக்குப் போய்விடும். இதை மனதில் வைத்துக் கொண்டு ஏதாவது செய்” என்று சொல்லிக் கொடுத்தனர். அந்த அபரூபாபாயி ஒரு தந்திரம் செய்தாள். தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு வயிற்றைப் பெரிதாகக் காட்டிக் கொண்டிருந்துவிட்டு, கடைசியில் தனக்குப் பிரசவம் ஆகிவிட்டதாக ஒரு பொய்யையும் சொல்லி எல்லோரையும் ஏமாற்றினாள். எல்லோரும் அவளுடைய சாமர்த்தியமான பொய்யை நம்பினர். ராஜாவுக்கு வாரிசு பிறந்துவிட்டது, நமக்கு ஒரு ராஜா கிடைத்துவிட்டான் என்று நாடு முழுவதும் விழா கொண்டாடினார்கள். அரண்மனைக்குள் நடக்கும் மூடுமந்திரங்களை மக்கள் என்ன கண்டார்கள்? அது ராஜரகசியம் அல்லவா? [] யாரோ ஒரு தாதிக்குப் பிறந்த குழந்தை ஒன்றைக் கொண்டு வந்து ராணி அரூபாபாயிக்குப் பிறந்ததாகச் சொல்லி அந்தக் குழந்தைக்கு ராஜ உபசாரங்கள் நடந்தன. அந்தக் குழந்தைக்கு ஷகாஜி என்று பெயரும் சூட்டப்பட்டது. அரண்மனை அந்தப்புரத்தில் நடந்த இந்த ரகசியங்கள் எல்லாம் மக்கள் பிரதானிகளுக்குத் தெரியவில்லையே தவிர மகாதேவப்பட்டினத்தில் இருந்த ராஜாவின் தம்பி துக்கோஜிக்குத் தெரிந்து விட்டது. தம்பி துக்கோஜி தன் அண்ணனிடம் நடந்த விவரங்களைச் சொல்லி, அவன் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்பதையும் எடுத்துச் சொன்னான். நடந்த உண்மைகளையெல்லாம் கேள்விப்பட்டு ராஜா என்னவெல்லாம் செய்திருப்பான் என்று சொல்லவும் வேண்டுமா? அப்படியே செய்தும் விட்டான். அது சரி, நாட்டை 3ஆம் சரபோஜி ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் தம்பி துக்கோஜி பாகம் பிரித்துக் கொண்டு மகாதேவப்பட்டினம் போய்விட்டான். இடையில் அரண்மனையில் இப்படியொரு தில்லுமுல்லு நடந்திருக்கிறது. அதற்கும் இந்த வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது. பின்னால் வரப்போகும் சில பிரச்சினைகள் இந்த நிகழ்ச்சியால் ஏற்படவிருக்கிறது. அப்போது நினைவு படுத்திக் கொள்ளலாம். இனி வரலாற்றுக்கு வருவோம். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்த பிறகு சில ஆண்டுகள் 3ஆம் சரபோஜி ஆட்சி புரிந்தபின் கீலக வருஷம் காலமானார். 5 பகுதி ஐந்து [] நேற்றைய பதிவில் 3ஆம் சரபோஜி காலமான செய்தியோடு முடித்திருந்தோம். அதற்கு முன் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் போனதும், அவன் தம்பி துக்கோஜியின் குடும்பம் பெருத்துவிட்டது என்பதையும் பார்த்தோம். 3ஆம் சரபோஜியின் மனைவி அரூபபாயி தனக்குப் பிள்ளை பிறந்துவிட்டதாக ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லியதும், அந்த ரகசியத்தை துக்கோஜி தனது அண்ணன் 3ஆம் சரபோஜியிடம் சொன்ன செய்தியையும் பார்த்தோம். இந்த நிலையில் பிள்ளை இல்லாமல் 3ஆம் சரபோஜி மாண்டு போனார். இனி என்ன? பார்ப்போம். இந்த நிகழ்வு குறித்த ஓர் ஆங்கில குறிப்பு இருக்கிறது. பார்ப்போமா? “Saraboji had no child and tradition relates how one of his Queens named Aparoopabai fearing that the throne would go to the sons of Thukkoji, pretended pregnancy and foisted upon her husband as his own offspring, a stranger boy who was known subsequently as Savai Shahaji. Her plan was however miscarried and Saraboji ordered her to get rid of the bogus son.” 3ஆம் சரபோஜி இறந்தபோது, தனக்குப் பிள்ளை பிறந்ததாகச் சொல்லி ஏமாற்றிய அபரூபாபாயி என்ன செய்தாள் தெரியுமா? மற்ற இரு மனைவியர்களான சுலட்சணாபாயி, ராஜேஸ்பாயி ஆகியோர் மன்னனின் உடலுடன் உடன்கட்டை ஏறி மாண்டு போனபோது, இவள் மட்டும் அப்படிச் செய்யவில்லை. அண்ணன் 3ஆம் சரபோஜி மாண்டுபோனார் என்ற செய்தி கேள்விப்பட்டு மகாதேவப்பட்டினத்திலிருந்து தம்பி துக்கோஜி தஞ்சாவூருக்கு வந்து ராஜ்ய பாரத்தை நடத்தத் தொடங்கினார். அப்படி இவர் தஞ்சையில் ராஜ்யபாரம் நடத்திக் கொண்டிருந்த போது இவருடைய நாயகியர்களுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் இறந்து போனார்கள். [] ஆனால் நானா சாஹேப் சந்ததியில் அப்பு சாஹேப் என்பவன் இருந்தான். அப்போது திருச்சினாப்பள்ளியில் நாயக்கர் வம்சத்து ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு ராணி மீனாட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். இவள் ஒரு பெண்தானே என்று சில பாளையக்காரர்கள் அவர் மீது படையெடுத்து வந்தனர். ராணி மீனாட்சி தஞ்சைக்கு உதவி கேட்டு தூது அனுப்பினாள். துக்கோஜி ராணி மீனாட்சிக்கு உதவி செய்யத் தன் படையை திருச்சிக்கு அனுப்பினார். எதிரிகள் தோற்று ஓடினர். ராணி மீனாட்சியும் தஞ்சை அரசருக்கு நன்றியைத் தெரிவித்து, இவ்விரு அண்டை ராஜ்யங்களும் பரஸ்பரம் ஒற்றுமையாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன. அதன்பின் சில ஆண்டுகள் நன்றாக ஆட்சி புரிந்த துக்கோஜி நள வருஷத்தில் தெய்வகதி அடைந்தார். துக்கோஜி மரணமடைந்த பிறகு அவருடைய மூத்த மகன் பாவாசாஹேப் ஒரு வருஷம் ஆட்சி புரிந்தான். இந்த ஒரு வருஷத்தில் இவன் ராஜ்யத்தில் எவரையும் நம்பவில்லை. தன்னைச் சுற்றி எல்லோருமே சதி செய்கிறார்கள் என்றும், கத்தியோ, கட்டாரியோ வைத்திருந்தால் தன்னைக் கொல்லத்தான் அலைகிறார்கள் என்று சந்தேகம் அடைவார். வீதியில் செல்லும்போது தன்னைப் பார்க்கிறவர்கள் எல்லாம் தனக்குத் தீங்கு செய்ய நினைக்கிறார்கள் என்று சந்தேகம். யாராவது வாயை அசைத்தால் போதும், அவர்களைச் சந்தேகத்தோடு பார்ப்பார். அவர்கள் ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார்களோ நம்மை வசியம் செய்ய என்று பயம் உண்டாகும். எதிரில் யார் கை வீசிக் கொண்டு வந்தாலும் நம்மை அடித்துப் போட்டுவிடுவானோ என்கிற பயம். இப்படி அவன் ஓர் ‘தெனாலி’யாக இருந்திருக்கிறான். இப்படிப்பட்ட தலையாட்டி பொம்மை (தஞ்சாவூர் என்றால் தலையாட்டி பொம்மை என்று இவரால்தான் புகழ் கிட்டியதோ!) கிடைத்தால் போதாதா? சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டத்துக்கு. ஜால்ராக்கள் சொல்லுகின்றபடி அவர்கள் கைகாட்டியவர்களுக்கெல்லாம் நன்மைகளைச் செய்தார். ஜால்ராக்களுக்குப் பிடிக்காதவர்கள் ராஜாவை நெருங்கக்கூட முடியாது. இப்படி இந்த ‘தெனாலி’ தஞ்சை ராஜ்யத்தை ஆண்டு வந்த காலத்தில் ….. ஆற்காடு பிரதேசத்தில் இருந்த தோஸ்த் அலிகான் என்பவனுடைய மருமகன் சந்தா சாஹேப் என்று பெயர் கொண்டவன் ஒரு சிறிய படையோடு வந்து தஞ்சாவூர் ராஜா பாவா சாஹேபுடன் சண்டை செய்தான். இந்த சந்தா சாஹேப் ஆற்காட்டு நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், இவனுக்கு பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவு இருந்தது என்பதும் தெரிய வந்தது. இப்படியொரு சோதனை வந்தால்தான் கோழைக்கும் வீரம் வரும் போலிருக்கிறது. சந்தா சாஹேப் சண்டைக்கு வந்து தஞ்சை கோட்டையை முற்றுகை இட்டபோது ராஜா பாவா சாஹேப் பயந்து ஓடிவிடவில்லை. எப்படி அவருக்கு அப்படியொரு தைரியம் வந்ததோ தெரியவில்லை. அவரே தனக்கு எல்லா பந்தோபஸ்தும் செய்துகொண்டு கோட்டையின் வாயிலுக்கு வந்தார். தஞ்சை சைனியத்தை அணிவகுத்து நிற்கச் செய்து தானே கோட்டை மதில்மேல் ஏறி நின்று அங்கிருந்த பீரங்கிகளை எதிரிகளை நோக்கிச் சுடச் செய்தார். வீரர்களுக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். போரிட்ட வீரர்களுக்கே நம்பமுடியவில்லை, இவர் நமது ராஜாதானா என்று. இவர் செய்த யுத்தத்தைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போயினர். இப்படி தஞ்சை கோட்டையை பல நாட்கள் முற்றுகையிட்டிருந்த சந்தா சாஹேப் கோட்டையைப் பிடிக்க முடியாததாலும், தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து போனதாலும், முற்றுகையை விட்டுவிட்டு ஊர் போய்ச்சேர்கிறேன், எனக்கு கணிசமான பொன்னும் பொருளும் கொடுத்தால் என்று பேரம் பேசி அவற்றையும் பெற்றுக் கொண்டு அக்கம் பக்கத்துக் கிராமங்களைக் கொள்ளை அடித்துக்கோண்டு திருச்சினாப்பள்ளி போய்ச் சேர்ந்தான். [] சந்தா சாஹேப் சம்பந்தமான ஒரு ஆங்கில வரலாற்று நூல் கூறும் செய்தியைப் பார்ப்போம். “Baquir Ali was Killedar of Vellore. His brother was Dosth Ali Khan who had a son and five sons-in-law of whom the third was the well known Adventurer Chanda Saheb.” “In spite of his illness he (Baba Saheb, the king of Tanjore) fought hard against Chanda Saheb who attacked Tanjore on his way to Trichinopoly and made him retreat in 1735.” இந்த யுத்தத்துக்குப் பிறகு பாபா சாஹேப் அதிகநாட்கள் உயிர் வாழவில்லை. பிங்கள வருஷம் அவர் உயிர் நீத்தார். அப்போது ராஜ்யத்தை ஆள வாரிசு உரிமை பெற்ற தகுதி வாய்ந்த ராஜாவோ அல்லது அமைச்சர்களோ, அல்லது யோக்கியமான உறவினர்களோ யாரும் அகப்படவில்லை. இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு யாராவது புதிய மனிதர்கள் தலையிட்டு ராஜ்ய பாரத்தைப் பிடுங்கிக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் பாபா சாஹேபின் மனைவி சுஜான்பாயி அவசரமாக அரசியாகப் பட்டம் சூட்டிக் கொண்டாள். இது பிங்கள வருஷம் தொடங்கி அடுத்து காளயுக்தி வரை தொடர்ந்து அவளது ஆட்சி நடந்தது. இவள் ராஜ்யபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவளுக்கு எதிர்பாராமல் ஒரு தொல்லை நேர்ந்தது. 6 பகுதி ஆறு [] முன்பு 3ஆம் சரபோஜி ஆட்சி செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவி அபரூபாபாயி தனக்குப் பிள்ளை இல்லை என்பதால் தான் கர்ப்பமாகி யிருப்பதாகப் பொய் சொல்லி, ஒரு பிள்ளையும் பிறந்ததாக மற்றொரு பொய்யையும் சொல்லி, ஏதோவொரு இரவல் குழந்தையைக் காட்டி ஏமாற்றினாள் அல்லவா? அந்த குழந்தைக்கு நாமகரணம் கூட செய்து வைத்தார்கள் சவாய் ஷாஜி என்று. அந்த பிள்ளை இப்போது உயிரோடு இருக்கிறான் என்கிற தகவல் கிடைத்தது. இந்த அபரூபாபாயி செய்த தில்லுமுல்லு குறித்து எழுதும்போது இந்த விவகாரம் பின்னர் ஒரு குழப்பத்தில் கொண்டு போய் விடப்போகிறது, அதனால்தான் இதனை இங்கு விரிவாகச் சொல்கிறோம் என்று குறிப்பிட்டோமல்லவா? அந்த குழப்பம் குறித்துத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். அன்று அபரூபாபாயிக்குப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட குழந்தை சரபோஜியால் விரட்டப்பட்டுவிட, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் எங்கேயோ ரகசியமாக வளர்க்கத் தலைப்பட்டார்கள். அந்த குழந்தை உயிரோடு இருக்கிறது என்கிற செய்தியை கோயாஜி காட்டிகே எனும் அரசாங்க ஊழியன் ஒருவன் வந்து அரண்மனையில் தெரிவித்தான். அதன் காரணமாக ஒரு கலகம் இங்கே பிறந்தது. அந்த காட்டிகே சொன்னான், காட்டில் குப்பி என்பவளிடம் அந்த குழந்தை வளர்கிறது. இதுதான் சரியான நேரம் என்று கருதிய அந்த காட்டிகே உடனே காட்டுக்குப் போய் குப்பி எனும் பெண்மணியைப் பார்த்து ஆசைகாட்டி அந்தப் பையனை அழைத்துக் கொண்டு உடையார்பாளையம் போனான். அங்கு போய் சில முக்கிய பிரமுகர்களையெல்லாம் சந்தித்து விஷயத்தைச் சொல்லி மேலும் சில பாளையக்காரர்களையும் உதவிக்குச் சேர்த்துக் கொண்டு, அவர்கள் மூலம் சிறிது பணம் திரட்டிக் கொண்டு ஒரு சேனையை உருவாக்கினான். அது போதாதென்று தேவிபட்டினத்தில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களையும் போய் சந்தித்து விஷயத்தை அவர்களிடம் சொல்லி அவர்களுடைய உதவியையும் பெற்றுக் கொண்டான். அதன் பின் தஞ்சை கோட்டையிலும் பலரைச் சந்தித்து 3ஆம் சரபோஜியின் மனைவி அபரூபாபாயிக்குப் பிறந்த குழந்தை உயிரோடு இருக்கிறது, அவன் தான் பட்டத்துக்கு உரியவன் என்று அவர்களது மனங்களை மாற்றித் தன் வசம் சேர்த்துக் கொண்டு, ராணி சுஜனாபாயி ஏமாந்திருந்த சமயம் அவளைச் சிறைபிடித்துவிட்டு ஆட்சியை காட்டில் வளர்ந்த குப்பியின் மகன் பெயரில் அவனே கைப்பற்றிக் கொண்டான். [] காட்டில் குப்பியிடம் வளர்ந்த பையன் தான் ராஜகுமாரன் என்று சொல்லி நம்பவைத்தான். அந்த பையனை காட்டு ராஜா என்றே அழைக்கத் தொடங்கினர். காட்டிலே வளர்ந்தவன், நாகரிகம் தெரியாதவன், ராஜ குடும்பத்தையும் சேராத ஒரு போலி ஆசாமி ஆகையால் அவன் ராஜ்யத்தை ஆண்ட சிறிது காலத்திற்குள் அவனது போக்கு நடத்தை அனைத்தும் வெறுக்கத்தக்கதாக அமைந்தது. இந்த இளைஞனின் போக்கு நடவடிக்கைகளை கண்ட மக்கள் இவன் அரச குடும்பத்தான் இல்லை, ஒரு போலி ஆசாமி என்பதை உறுதி செய்து கொண்டனர். இந்த சூதையும், பித்தலாட்டத்தையும், வந்திருக்கும் ராஜா போலி என்பதையும் தெரிந்து கொண்ட தஞ்சையின் தளபதியாக இருந்த சையிந்து (சையது) என்பவன் இப்படியொரு போலி, ராஜ்யம் ஆள்வது கூடாது என்று நடந்ததற்கு வருத்தமடைந்தான். இவனை இங்கிருந்து துரத்தி அடித்துவிட வேண்டும், அதற்கு என்ன செய்வது? முன்பு துக்கோஜி ராஜா ஆசை நாயகியாக வைத்துக் கொண்டிருந்த பெண்களில் மராத்திய ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவளுக்கு ஒரு பிள்ளை பிறந்தான், அவன் பெயர் பிரதாபசிம்மன் என்று முன்னமேயே சொல்லியிருக்கிறோம் அல்லவா? அந்த பிரதாபசிம்மனைத்தான் ராஜாவாக ஆக்க வேண்டும், அவன் எல்லா தகுதிகளும் உள்ளவன், நல்ல வீரன், ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனை சித்தார்த்தி வருஷம் பட்டம் கட்டி தஞ்சைக்கு ராஜாவாக ஆக்கினார்கள். துக்கோஜி ராஜாவின் மகனாக இருந்தும், ராஜ வம்சத்தினராயிருந்தும், எல்லா தகுதிகளும் இருந்தும், அவர் தாலி கட்டிய மனைவியின் மகன் இல்லை என்பது ஒரு குறையாகத்தான் இருந்தது. ஒரு வழியாக பிரதாபசிம்மன் ராஜாவாக முடிசூட்டப்பட்டான். அவர் முடிசூட்டிக் கொண்ட சில நாட்களில் பிரதாபசிம்மனின் முறைப்படியான இரண்டாவது மனைவி திரெளபதிபாயி என்பவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகன் தான் பின்னால் பட்டத்துக்கு வந்து புகழ்பெற்ற துளஜா ராஜா. உண்மையில் குப்பி வளர்த்த அந்த பையன் யார்? அபரூபாபாயி பொய் சொல்லித் தனக்குப் பிறந்ததாக அவனைக் காட்டினாலும், அவன் வெள்ளாட்டி ஒருத்தியின் மகன். சுபானியன் என்பது அவனது பெயர். இப்படி பொய் சொல்லி ஒருவனை ராஜவம்சத்தான் என்று பட்டம் கட்டியது போன்ற சூழ்ச்சிகளில் தஞ்சாவூரின் தளபதி சையதுவுக்குத் தொடர்பு உண்டு என்கிற செய்தி தெரிய வந்தது. [] யார் இந்த சையது என்கிற சையந்து? இவன் மராட்டிய மன்னர்களிடம் பலகாலம் பணியாற்றி வந்தவன். முதல் மராட்டிய ராஜா ஏகோஜி ராஜா பொது மக்களுக்கு ஏராளமாக தான தர்மங்களைச் செய்து வந்தவன். காவேரிக் கரை ஊர்கள் பலவற்றில் பல ஆலயங்களை எழுப்பித்தான். இடிந்து போன அல்லது பாழடைந்து போன பல ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்தான். வேத பண்டிதர்களுக்கு என்று சர்வ மானிய அக்ரஹாரங்களைக் கட்டிக் கொடுத்தான். சதாசர்வ காலமும் பொது நலம் வேண்டி இந்த அந்தணர்கள் மக்கள் நல்வாழ்க்கைக்காக மழை வேண்டியும் யாகங்களைச் செய்து கொண்டும், வேத பாராயணங்களைச் செய்து கொண்டும் வர நியமங்கள் நிறுவி வைத்தான். யாகம் வேள்வி இவைகளுக்கு நிறைய திரவியங்களைக் கொடுத்தான். யாத்திரிகர்கள் செல்லும் பாதைகளில் பல அன்ன சத்திரங்களைக் கட்டினான். இப்படி இவர்கள் பரம்பரையாகப் பல தர்ம காரியங்களைச் செய்து வந்தார்கள். மன்னன் பிரதாபசிம்ம ராஜாவும் அதே போல பல தர்மங்களைச் செய்து வந்தார். தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த சையதுவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இவன் கோயிலில் பணியாற்றிய மோகனா என்கிற தேவதாசியைத் தன் மாளிகையில் கொண்டு போய் வைத்துக் கொண்டான். மற்றொரு தாசியைக் கெடுத்து விட்டான். இப்படி இவன் பல தகாத காரியங்களையும் தவறுகளையும் செய்து வந்த போதும் பிரதாபசிம்ம ராஜா இவனிடம் முதலில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. நாமோ புதிதாக ராஜாவாக வந்திருக்கிறோம்; இவனோ பல ராஜாக்களிடம் வேலை செய்திருக்கிறான், இவனிடம் இப்போது ஒன்றும் தகறாறு வேண்டாம் என்று அமைதி காத்தார் பிரதாபசிம்மர். இந்த சையது சும்மா கிடந்த ஒரு பையனை ராஜா என்று சொல்லி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது அனைவருக்குமே கோபம். காட்டு ராஜா என்று பெயர் வேறு. இந்த சையதுக்கு ஒன்றுமில்லாதவனை ராஜாவாக ஆக்கியதும் நானே, இப்போது அவனை விரட்டிவிட்டு முழு உரிமை இல்லாத பிரதாபசிம்மனை ராஜாவாக ஆக்கியதும் நானே என்ற இறுமாப்பு அதிகமாக இருந்தது. காட்டு ராஜா மன்னனாக இருந்த போது தனக்கு வேண்டாத சிலரை பாவாசாஹேபுக்கு நெருக்கமாக இருந்தவர்களை சித்திரவதை செய்தோம். இன்னமும் நாம் நினைத்ததை யெல்லாம் செய்ய முடியும், யாரால் தடுக்க முடியும் என்று அகந்தை கொண்டான் சையது. தானும் எத்தனை நாட்கள்தான் தளபதியாக இருந்து கொண்டிருக்க முடியும் என்று திட்டம் தீட்டி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான். முடிவில் ஆற்காட்டு நவாபு வம்சத்தில் வந்து, முன்னர் தஞ்சை கோட்டையை முற்றுகை இட்டு ஓடிப்போன சந்தா சாஹேபுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். பின்னர் மெதுவாக சந்தா சாஹேபை தஞ்சாவூர் ராஜாவாகப் பிரகடனப் படுத்தி விடலாம் என்று எண்ணினான். தான் திட்டமிட்ட சூழ்ச்சியை நிறைவேற்றிட தனக்கு உதவிக்கு ஆட்கள் வேண்டுமே என்ன செய்வது. அரண்மனையில் வேலை பார்த்து வந்த தனது சொந்த தம்பியான காசிம் என்பவனைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ள எண்ணினான். இந்த காசிம் மிகவும் யோக்கியமானவன். ராஜ விசுவாசம் உள்ளவன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதவன். துரோக சிந்தனை இல்லாதவன். அவனுக்குத் தன்னுடைய அண்ணனின் சதிகார எண்ணம் துளியும் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பிரதாபசிம்ம ராஜாவின் பாதுகாப்புப் பணியில் இருந்த காரணத்தால் தனது அண்ணனின் துரோக எண்ணத்தை ராஜாவின் காதுகளில் போட்டு வைத்தான். [] காசிம் சொன்ன விஷயங்களைக் கேட்ட பிரதாபசிம்ம ராஜா பொறுமையாக யோசித்து காசிமிடம் “நீ சொல்வது உண்மையா?” என்றார். அதற்கு அவன், “மகாராஜா, நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பதை இன்னம் சிறிது நாட்களில் தாங்களே உணர்ந்து கொள்வீர்கள்” என்றான். “Saiyeed, the Killedar of the Tanjore Fort and the most powerful Captain, conscious of the army whichbacked him, interfered successfully in the internal matters of the Tanjore Rulers.” “He seems to have entertained the idea of usurping the throne for his daughter.” சையீது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான். ராஜாவிடம் போய் தன் பெண்ணை ஆற்காடு நவாப் சந்தா சாஹேபுக்குக் கல்யாணம் செய்ய இருப்பதாகவும், அது தஞ்சை ராஜ்யத்தின் நன்மைக்காகத்தான் என்றும் பொய்யை அவிழ்த்து விட்டான். அதற்கு பிரதாபசிம்ம ராஜா சொன்னார், “நல்லது, உன் பெண்ணை நம் ராஜாங்க நன்மைக்காக ‘நவாயத்’ இன முஸ்லீமுக்குக் கொடுப்பதற்கு சந்தோஷம். (“Navayats a tribe, which appears to have originally settled at Bhatkal in North Canara and is known on the West coast as “Bhatkali”. It takes a high place among Mussalmans and does not inter marry with other tribes.”) இந்தக் கல்யாணச் செலவை நாம் கொடுக்கிறோம், ஆனால் கல்யாணத்தை தஞ்சாவூர் கோட்டையில் வைத்துக் கொள்ள வேண்டாம். மத்தியார்ச்சுனம் (திருவிடைமருதூர்) ஊரில் வைத்துக் கொள் என்று நல்லவிதமாகச் சொன்னார். சையதுக்கு மிகுந்த சந்தோஷம். ராஜா சொன்னபடிக்கு திருவிடைமருதூருக்குப் போய், வெகு ஆடம்பரமாய் கல்யாணமும் பண்ணி மறுபடியும் தஞ்சாவூர் கோட்டைக்குத் திரும்பி வந்தான். 7 பகுதி ஏழு [] சையீது தனது மகளுக்கும் சந்தா சாஹேபுக்கும் கல்யாணம் செய்வித்தது குறித்து மகிழ்ந்து போனான். தன் மருமகன் தஞ்சாவூர் ராஜாவாக ஆகப் போகும் நாளுக்காக ஏங்கினான். திருமணம் முடித்து தஞ்சாவூர் கோட்டைக்குத் திரும்பிய சையீது சந்தா சாஹேபுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு நம்பிக்கையான தூதன் மூலமாக கொடுத்தனுப்பினான். அதில் நீங்கள் திருவிடைமருதூரிலிருந்து இரவே கிளம்பி உங்கள் சேனையோடு புறப்பட்டு விடியற்காலை தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து சேர வேண்டும். வழக்கப்படி கோட்டை வாசல் திறக்கப்படும் போது நீங்கள் உங்கள் சேனையோடு கோட்டைக்குள் வந்து அரண்மனைக்குள் நுழைந்து ராஜாவைச் சிறைப்படுத்தி ஆட்சியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இங்குள்ள சேனாதிபதியும் கில்லேதாரும் நமது ஆட்கள்தான். ஆகையால் அவர்களிடமிருந்து உங்களுக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படாது என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். இவை அத்தனையையும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருந்த சையதின் தம்பி காசிம் உடனே ராஜா பிரதாபசிம்மரிடம் சென்று அத்தனை விவரங்களையும் தெரிவித்தான். ராஜ பக்தி, தேச பக்தி, தின்ற உப்புக்கு நன்றி விசுவாசம் இவை அத்தனையும் நிரம்பிய அந்த விசுவாச ஊழியன் காசிமை மன்னர் பாராட்டினார். இவைகளைக் காட்டிலும் அபாரமான காரியம் ஒன்றையும் காசிம் செய்தான். இவனைப் போன்ற ராஜ விசுவாசிகள் பலரை ஒன்று சேர்த்து சையது கடிதம் கொடுத்தனுப்பிய தூதனை வழியில் மடக்கிப் பிடித்து, அந்த கடிதாசியையும் பிடுங்கிக் கொண்டு தூதனையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து மகாராஜாவிடம் ஒப்படைத்தான். இதுவரை நடைபெற்ற விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் சம்பந்தப்பட்ட அனைவரும். மன்னர் பிரதாபசிம்ம ராஜா உடனே தனது நெருங்கிய சகாக்களான அவருடைய மைத்துனர் மல்லார்சி காடேராவ், அன்னப்பா சேட்டிகே, தளபதி மானோஜி ராவ் ஜக்தாப் ஆகியோரை அழைத்து ரகசிய ஆலோசனை செய்தார். சையது செய்யும் சூழ்ச்சிகளுக்காக அவனைக் கொன்றுவிடுவதுதான் சரி என்று முடிவு செய்தனர். அதன் பின் சையதை எப்படி வரச் செய்வது, அவனை எப்படி கொலை செய்வது என்பதையும் அவர்கள் முடிவு செய்துவிட்டுக் கலைந்து சென்றனர். [] பிரதாபசிம்ம ராஜாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் எல்லோரும் ஆயுதபாணிகளாக அரண்மனை மண்டபமொன்றில் மறைந்து கொண்டார்கள். அந்த மண்டபத்தின் நடுவில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் போடப்பட்டு அதில் ராஜா அமர்ந்து கொண்டார். ஒரு தூதனை அனுப்பி சையதிடம் சொல்லி, சில அரசாங்க விஷயங்கள் பற்றி பேச வேண்டும் வரச் சொல் என்று சொல்லி அனுப்பினர். சையது தனது திட்டம் எப்படியும் நிறைவேறிவிடும், தன் மருமகன் தஞ்சாவூர் ராஜாவாக ஆகிவிடுவான் என்ற ஆணவ மிதப்பில் இருந்தான். ஆகையால் ராஜா ஐந்தாறு முறை கூப்பிட்டனுப்பிய பிறகு மெதுவாக அரண்மனைக்குச் சென்று ராஜாவைக் காண வந்தான். அவன் ராஜா அமர்ந்திருந்த மண்டபத்தினுள் நுழைந்தவுடன் ராஜா அவனிடம் சற்று இங்கேயே இரு இதோ வந்துவிட்டேன் என்று அவசரமாக எழுந்து உள்ளே போய்விட்டார். அந்தப் பெரிய மண்டபத்தில் தனியே விடப்பட்ட சையது ஏன் என்ன என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது திடீரென்று சில வீரர்கள் அவன் மீது பாய்ந்து தாக்கினர். அவனைப் பிடித்து கைகால்களைக் கட்டினர். பின்னர் அவனை அங்கேயே வாளால் வெட்டிச் சாய்த்தனர். பெரிய பெரிய கனவுகளோடு அங்கு வந்த சையது மண்டபத்தில் பிணமானான். “Prathab when he became King was not prepared to tolerate the usurped authority of the Killedhar and therefore at an opportune moment he removed this enemy in his pathu of advancement by executing him.” “Sayeed was murdered and buried on the northern bank of Vadavar where a large Mantapam still marks the spot of his internment and is called Syed Ghori.” (the same can be seen between North Gate and Vadavar river) [] சையதைக் கொன்ற பிறகு அவன் வீட்டின் மேலும் வீரர்கள் புகுந்து, தப்பி ஓடியவர்கள் போக மீதமுள்ளவர்களைப் பிடித்து ஒருவர் பாக்கியில்லாமல் கொன்று போட்டார்கள். இதற்குப் பிறகு அன்னப்பாவை சர்க்கிலாகவும், சேனாதிபதியாகவும், மல்லார்ஜி காடேராவை கில்லேதாராகவும், டபீர் நாரோ பண்டிதருக்கு சிட்னிசும் (செயலாளர் பதவி) கொடுத்து மிக அற்புதமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார் பிரதாப சிம்ம ராஜா. மராட்டிய மன்னர்களிலேயே அதிகமாக போரில் ஈடுபட்டவரும், தனிப்பட்ட வீரம் நிறைந்தவரும், விவேகமுள்ளவராகவும் விளங்கியவர் இந்த பிரதாபசிம்ம ராஜா. இதன் பின்னர் ராஜா பிரதாப சிம்மர் ராமேஸ்வரம் யாத்திரை சென்று அங்கு நீராடினார். ராமநாத சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பல தீர்த்தங்களிலும் நீராடி பல தான தர்மங்களைச் செய்தார். அப்படி புனித யாத்திரை சென்றுவிட்டு ராமேஸ்வரத்திலிருந்து தஞ்சைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் தஞ்சை ராஜாவின் தயவால் தங்கள் மறவர் ராஜ்யம் நிலைத்திருப்பதற்கு நன்றிக் கடனாக மரியாதை நிமித்தம் பிரதாபசிம்மரை எதிர்கொண்டு வந்து மரியாதை செய்தார். பிரதாப சிம்மர் தங்கள் அரண்மனைக்கு வந்து ஒரு நாள் தங்கிச் செல்ல வேண்டுமென்றும் வேண்டினார். மகாராஜா பிரதாப சிம்மரும் ராமநாதபுரம் ராஜாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ள நினைத்தார். அவர் உள்ளே நுழைந்ததும், அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவருடைய பரிவாரங்களை உள்ளே நுழைய விடாமல் சிலர் தடுத்து விட்டனர். இதனை அறிந்த பிரதாபசிம்மர் தானும் வெளியே வந்து ராமநாதபுரத்தில் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்தனர். இதனை அறிந்த ராமநாதபுரம் ராஜா, நடந்த தவறுக்காக வருந்தி, ராஜாவின் பல்லக்கைப் பிடித்துக் கொண்டு இரண்டு காத தூரம் நடந்தே வந்தார். இப்படி அவர் மனம் வருந்தி தன் பல்லக்கைப் பிடித்துக் கொண்டு வருவதைக் கண்டு பிரதாபசிம்மர் மனம் இரங்கி திரும்பவும் ராமநாதபுரம் சென்று அவருடன் தங்கி அவருடைய உபசாரங்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் திரும்பினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தஞ்சாவூர் ராஜ்யமும், ராமநாதபுரம் ராஜ்யமும் ஒற்றுமையாக அனுசரித்து நடந்து கொண்டனர். []                                                              Prathap Sing Maharaja 8 பகுதி எட்டு [] பிரதாபசிம்ம ராஜா ராமேஸ்வரம் போய்விட்டு, இராமநாதபுரம் ராஜாவின் அழைப்பின்பேரில் அவர் அரண்மனையில் விருந்தினராக இருந்து தஞ்சைக்கு வந்து ராஜ்ய நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. தஞ்சையில் கில்லேதாராக இருந்த சையதுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டு, தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு பிடிக்க முடியாமல், பாவா சாஹேப் ராஜாவிடம் வெகுமதிகளை வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்கு ஓடிய சந்தா சாஹேப் மறுபடி தொல்லை கொடுக்கத் தொடங்கினான். முதலில் அவன் திருச்சினாப்பள்ளியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த மீனாட்சி ராணிக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினான். தனது ஆற்காட்டுப் படையுடனும், பிரெஞ்சுக்காரர்களின் துணையுடனும் திருச்சினாப்பள்ளிக்கு வந்து ராணி மீணாட்சியுடன் சண்டை செய்து குழப்பங்களை விளைவித்து நாட்டைப் பிடித்துக் கொண்டான். ராணி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள். இப்படி அவனது முயற்சிகள் வெற்றி பெறுவதைக் கண்டு அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தஞ்சையின் மீது மீண்டும் அவனுக்கு ஒரு கண். தன் ஆற்காட்டுப் படையோடு திருச்சி படைகளையும் சேர்த்துக் கொண்டு தஞ்சையின் மீது படையெடுத்து வந்தான். தஞ்சை நகரத்தில் இருந்த கோட்டையை முற்றுகை இட்டான். கோட்டையினுள் பிரதாபசிம்ம ராஜா கோட்டைப் பாதுகாப்பை அதிகப்படுத்தி, அவன் ஊருக்குள் நுழைந்து விடாதபடி கடுமையாகக் காவல் புரிந்தார். [] கோட்டைக்குள் இருந்தபடி பிரதாபசிம்மர் முற்றுகையை நீக்க இரண்டு மாத காலம் போராடிப் பார்த்தார். வெற்றி இரு பக்கத்திற்கும் கிடைக்காமல் இருந்து வந்தது. இன்னும் எத்தனை காலம்தான் கோட்டையின் முற்றுகையை நீடிப்பது என்று சந்தா சாஹேப், பிரதாபசிம்மன் கோட்டைக்குள் ஆட்சி புரிந்து கொள்ளட்டம், நாட்டை நாம் எடுத்துக் கொள்வோம் என்று ஆங்காங்கே கொள்ளை அடித்தான். சந்தா சாஹேபுடன் ஆற்காட்டிலிருந்து சப்தர் அலி என்ற தளபதியும் வந்திருந்தான். அவனை அழைத்து பட்டுக்கோட்டை தவிர மற்ற பகுதிகள் முழுவதையும் ஜப்தி செய்து நம் பொறுப்பில் நீ ஆட்சியை கவனித்துக் கொண்டிரு, பிரதாபசிம்மன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொள்ளட்டும், எனக்கு திருச்சினாப்பள்ளியில் வேலை இருக்கிறது என்று சந்தா சாஹேப் போய் விட்டான். தஞ்சாவூர் கோட்டைக்குள் இருந்து கொண்டு ராஜா பிரதாபசிம்மன், வெளி உலக தொடர்பு இல்லாமலும், கோட்டைக்குள் இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வெளியிலிருந்து கொண்டு வர முடியாத சூழ்நிலையிலும், மிகவும் சிரமப் பட்டான். தனது சேனை வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட முடியாமல் தவித்துப் போனான். சம்பளம் கிடைக்காத வருத்தத்தில் வீரர்களும் சண்டை போடும் ஊக்கமோ, தைரியமோ இல்லாமல் இருந்தார்கள். செய்வதறியாமல் அப்போது சதாராவில் இருந்த சாஹு ராஜாவுக்கு ஒரு கடிதம் தூதன் மூலம் அனுப்பினார். தூதனிடமிருந்து செய்தியை அறிந்து கொண்ட சதாரா ராஜா சாஹு மகராஜ் உடனே ரகோஜி பான்ஸ்லே என்பவரையும், பத்தேசிங் என்ற தளபதியையும் அறுபதாயிரம் குதிரைப் படையுடன் பிரதாபசிம்மருக்கு உதவி செய்வதற்காகத் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார். மராத்தியக் குதிரைப் படை மிக விரைவாகப் பயணம் செய்து வந்து சேர்ந்தார்கள். மராத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பெரும் குதிரைப் படை தஞ்சை மன்னனுக்கு உதவுவதற்காக வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் சந்தா சாஹேபின் கையாள் சப்தர் அலிகான் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு ஓடிவிட்டான். மராத்தியக் குதிரைப் படை தஞ்சாவூருக்கு வந்த போது எதிரிகள் ஓடிவிட்டதை அறிந்து, அவர்களைத் துரத்திக் கொண்டு போய் திருச்சினாப்பள்ளியில் அவர்களோடு யுத்தம் செய்தனர். அப்போது மதுரையிலிருந்து சந்தா சாஹேபின் தம்பியும் வந்து போரில் கலந்து கொண்டான். அங்கு நடந்த கடுமையான யுத்தத்தில் மராத்தியப் படைகள் வெற்றி பெற்றன. சந்தா சாஹேப், அவன் தம்பி, சப்தர் அலிகான் ஆகியோரைத் தஞ்சை படைகள் கைது செய்து திருச்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். “The Marattas surprised Chanda Saheb in his Fort at Trichinopoly to surrender it. Leaving the Fort in the hands of Murari Rao Ghorpade, they retraced their steps homeward with Chanda Saheb as their prisoner.” [] தஞ்சையில் பிரதாபசிம்ம ராஜா தன் அமைச்சர் அண்ணப்பா சேடிகேயை திருச்சினாப்பள்ளிக்கு அனுப்பினார். அவர் போய் அங்கு சேர்ந்ததும் திருச்சியை அவர் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்படி மராத்திய படைத் தலைவர்கள் சொன்னார்கள். மகாராஜாவின் உத்தரவு இல்லாமல் தான் அப்படிச் செய்ய இயலாது என்று சொன்ன மந்திரி அண்ணப்பா சேடிகே பாஜிராவ் கோர்படே என்பவரின் மகன் முரார்ஜி கோர்படே என்பவரின் பொறுப்பில் திருச்சியை ஒப்படைத்தார். போரில் கைது செய்யப்பட்ட சந்தா சாஹேபை மராத்திய வீரர்கள் சதாராவின் மன்னன் சாஹு மகாராஜாவிடம் கைதியாக அழைத்துச் சென்றனர். சதாராவில் சாஹு மகாராஜாவிடம் சந்தா சஹேப் சிறைக் கைதியாக இருந்து வந்தான். இப்படி இருக்கையில் தஞ்சாவூரில் பிரதாபசிம்மரின் மந்திரியாக இருந்த அண்ணப்பா சேட்டிகே தனது ராஜ்ய பரிபாலன பணிகளை ஓரளவுக்கு நன்றாகச் செய்து வந்தாலும், மனதில் சில சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருந்தார். அதாவது ராஜாவுக்குச் சொந்தமான சில உடைமைகளை மன்னருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் தனக்கும், தன் மனைவிக்கும் சொந்தமாக வைத்துக் கொண்டார். மன்னர் உரிமை மனைவிக்குப் பிறக்காதவர் என்ற ஏளன எண்ணத்தில் அவ்வப்போது அவரிடமே மரியாதையில்லாமல் பேசத் தொடங்கினார். இதையெல்லாம் கவனித்த மகாராஜா பிரதாபசிம்மர் சமயம் பார்த்து அண்ணப்பாவை சர்க்கில் என்கிற பதவியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பி விட்டார். அப்போது பிரதாபசிம்ம ராஜாவிடம் தளபதியாக இருந்தவர் மானோஜி ராவி. இவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மகா வீரர். அவரிடம் சேநாதிபதி பதவியோடு சர்க்கில் பதவியையும் கொடுத்து நிர்வகிக்கச் சொன்னார். அண்ணப்பாவைத் அவனுடைய வீட்டிலேயே கைதியாக இருக்கும்படி உத்தரவிட்டார். இந்த ஏற்பாடு அண்ணப்பாவுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. தான் வெகு நாட்கள் சேனைத் தலைவனாகவும், சர்க்கிலாகவும் இருந்த காரணத்தால் படை வீரர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டான். தன் சகோதரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்தான். நேரே அரண்மனைக்குப் போய் மன்னன் பார்க்க வேண்டுமென்று எதிரில் அமர்ந்து கொண்டான். அப்போதே அவன் தர்னா செய்திருக்கிறான். இப்படி வந்து உட்கார்ந்தவர்கள் கையில் ஆயுதங்களையும் ஏந்தி வந்திருந்ததால் மன்னருக்கு இவர்கள் ஏதோ திட்டமிட்டுக் குழப்பம் விளைவிக்க வந்திருக்கிறார்கள் என்று சந்தேகம் வந்தது. இவர்கள் இப்படி ஆயுதபாணிகளாக வந்து உட்கார்ந்திருப்பதன் நோக்கம் என்ன? என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டு வரும்படி ஆளை அனுப்பினார் மன்னர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அண்ணப்பா தனக்கு படை வீரர்கள் ஆதரவு கிடைக்கும் என்கிற விபரீத எண்ணத்தில் வாளை உருவிக்கொண்டு மன்னரை எதிர்க்கத் தொடங்கினான். அப்போது நடந்த சிறு போரில் சிலர் காயமடைந்தனர். இவனுடைய போக்கைக் கவனித்த மன்னர், சரி இவன் ஏதோ திட்டத்துடந்தான் வந்திருக்கிறான். லேசில் அடங்க மாட்டான் என்று எண்ணிய மன்னர், தன் படை வீரர்களை அழைத்து அண்ணப்பாவைப் பிடித்துக் கைது செய்து கொண்டுவரும்படி பணித்தார். அண்ணப்பாவுக்கும் சிலர் ஆதரவாக இருந்ததால், அரசாங்கப் படைக்கும் அண்ணப்பா படைக்கும் அங்கே ஒரு யுத்தம் நடந்தது. [] சண்டையில் ராஜாவின் பக்கம் அதிகம் பேர் இருந்ததாலும், அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதாலும் போரில் அண்ணப்பா உட்பட, அவன் தம்பி மற்றும் ஏழெட்டு பேர் உயிர் நீத்தார்கள். அண்ணப்பா வெட்டுப் பட்டு இறந்து கிடந்ததைப் பார்த்த பிரதாப சிம்மருக்கு அவன் மீது பரிதாபம் உண்டாயிற்று. பாவம்! இவன் எத்தனை உண்மையாக விசுவாசத்தோடு ஊழியம் செய்திருக்கிறான். இவனுக்கு ஏன் இப்படியொரு விபரீத புத்தி ஏற்பட்டது என்று மிகவும் வருந்தினார். 9 பகுதி ஒன்பது [] ஒரு வழியாக பிரதாப சிம்ம ராஜாவுக்கு சர்க்கிலாக இருந்த அண்ணப்பா முதலானோரிடமிருந்து வந்த தொல்லைகள் முடிவுக்கு வர, புதிய பிரச்சினைகள் முளைத்தன. முன்பு திருச்சினாப்பள்ளி கோட்டையை சந்தா சாஹேபிடமிருந்து பிடித்து முரார்ஜி கோர்படே என்பவனிடம் ஒப்படைத்துவிட்டு மராத்திய வீரர்கள் சதாராவுக்குப் போனார்களல்லவா, அந்த முரார்ஜி தொல்லை கொடுக்கத் தொடங்கினான். முரார்ஜியிடம் திருச்சியை ஒப்படைத்து விட்டுப் போன பின்பு ராஜாவாக இருப்பதன் சுகம் அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. திருச்சி மட்டுமென்ன, தஞ்சாவூரையும் பிடித்துக் கொண்டால் என்ன? தஞ்சாவூர் நல்ல வளம் மிகுந்த நாடு. நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப்பட்ட ராஜ்யத்தை நாம் கைப்பற்றிக் கொண்டால் என்ன என்பது அவனது எண்ணம். இது குறித்து தனது அந்தரங்க ஆலோசகனான இன்னிஸ் கானுடன் கலந்து ஆலோசித்தான். இதைத்தான் “விநாச காலே விபரீத புத்தி:” என்று சொல்லுவார்கள். முரார்ஜியும் இன்னிஸ் கானும் விவாதித்தனர். தஞ்சாவூர் ராஜா நமக்கெல்லாம் எஜமானன், அதுமட்டுமல்ல அவன் இப்போது தன்னை வலுவாக ஆக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடன் இருக்கும் மானோஜி ராவ் மிகச் சிறந்த போர்த்தளபதி. ஆகையால் நேரடியாகப் போய் அவனோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. எனவே தஞ்சை ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதி கிடைத்தால்கூட போதுமே. கொடு என்று கேட்டால் தரமாட்டான். ஆகவே சண்டையிட்டு ஒரு சிறு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு விடலாம். பெரிய யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பிடித்த மட்டும் போதுமென்று ஓடிவந்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள். இரண்டாயிரம் குதிரை வீரர்களைத் தாயார் செய்து கொண்டான் முரார்ஜி கோர்படே. இந்தப் படை ரகசியமாகத் தஞ்சாவூர் ராஜ்யத்தில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவது என்று தொடங்கினார்கள். தஞ்சை படைகள் இருந்தால் ஓடிவிடுவது, இல்லாத இடங்களில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுவது இதுபோன்ற கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டான் முரார்ஜி கோர்படே. [] இப்படி இவன் சில்விஷமம் செய்து வருவதைக் கண்டு பிரதாபசிம்மர் தனது படைத் தளபதி மானோஜி ராவ் தலைமையில் ஒரு சிறு படையை அனுப்பி இந்தப் பொடியனுக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டு வருமாறு பணித்தார். மானோஜி ராவ் யுத்தத்தில் புலி. பல போர்க்களங்களைக் கண்ட அனுபவஸ்தர். அவருக்கு இவன் என்ன சுண்டைக்காய். மானோஜி ராவின் படைகள் இன்னிஸ்கானைத் தேடி பல இடங்களில் அலைந்தன. அவர்களை ஒரு ஆற்றங்கரையில் கண்டார் மானோஜி ராவ். அங்கு அவர்கள் மீது பாய்ந்து தாக்கி இருநூறு பேருக்கு மேல் கொன்றுவிட்டு, ஐநூறு அறுநூறு குதிரைகளையும், வீரர்களையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தார். இன்னிஸ்கான் போரில் மாண்டு போனான். அவன் தொல்லை அதோடு ஒழிந்தது. தஞ்சை மீண்டும் அமைதிக்குத் திரும்பியது. இது இப்படியிருக்க, திருச்சினாப்பள்ளியிலிருந்து போர்க்கைதியாக்கி சந்தா சாஹேபை சதாராவுக்கு அழைத்துச் சென்ற பத்தேசிங் ரெகோஜி பான்ஸ்லே என்பவர்சதாராவுக்குக் கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்தார். சந்தா சாஹேபின் நண்பன் ஒருவன் மகமது அரப் என்பவன், ஆயிரக்கணக்கான குதிரைகள், ஐந்து யானைகள், கொஞ்சம் துப்பாக்கி ஏந்திய போர் வீரர்கள் ஆகியோருடன் புதுச்சேரிக்கு வந்து அங்கு இருந்த பிரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டான் சந்தா சாஹேபுக்காக. பிரெஞ்சுக் காரர்களும் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் இருப்பது பற்றியும் அதற்குக் காரணமானவன் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மன் என்றும் சொல்லி இவர்களுக்கு எதிராகப் போரிடப்போவதாகச் சொல்லி புறப்பட்டு வந்தான் அந்த மகமது அரப். இவன் அங்கிருந்து நேராக உடையார்பாளையம் காட்டுப் பகுதிக்கு வந்தான். அந்த காடுகளில் ஒளிந்து திரிந்து இரவு நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தான். இப்படி அடிக்கடி திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெறுக் கொள்ளை சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தின. [] இதுபற்றி புகார்கள் தஞ்சை மன்னர் பிரதாபசிம்மருக்கு வந்து சேர்ந்தன. அவர் தளபதி மல்லார்ஜி காடேராவ், மானோஜி ராவ் ஆகியோருடன் ஒரு சிறு படையை அனுப்பி கொள்ளைக்காரர்களைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார். இந்த தஞ்சாவூர் படை சுமார் ஒரு மாதகாலம் சுற்றித் திரிந்து கடைசியில் திருக்காட்டுப்பள்ளி கோட்டையின் அருகில் மகமது அரபை மடக்கிப் பிடித்தார்கள். அவனுக்குச் சொந்தமாக இருந்த யானைகள், குதிரைகள், விருதுகள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மகமது அரப்பையும் அவனது சேனை வீரர்களையும் கொன்று போட்டார்கள். வெற்றி வீரர்களாக ஏராளமான குதிரைகள், யானைகள் இவற்றோடு தஞ்சைக்குத் திரும்பிய இவ்விரு வீரர்களையும் மகாராஜா தக்க மரியாதைகளுடன் வரவேற்றார். அந்த இரு தளபதிகளுடைய வீரத்தைப் பாராட்டி அவ்விருவருக்கும் மகாராஜா அவர்கள் மீட்டுக் கொண்டு வந்த விருதுகள் அவ்வளவையும் அவர்களுக்கே சொந்தமாகக் கொடுத்து விட்டார். 10 பகுதி பத்து [] கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது தேவிகோட்டை. இந்த கோட்டை ஒரு மைல் சுற்றளவு உள்ளது. இதன் மதிற்சுவர் பதினெட்டடி உயரமுள்ளது. மதிற்சுவரில் ஆங்காங்கே சதுரமாகவும், வட்டமாகவும் கோபுரங்கள் அமைந்திருக்கும். கடலோரமுள்ள இந்தக் கோட்டைத் தங்களுக்குப் பயன்படும் என்று ஆங்கிலேயர்கள் அதனை வாங்கிக் கொண்டார்கள். அந்தத் தீவினருகில் ஒரு ஆங்கிலேயர்களுடைய கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அந்த கப்பலுக்குள் இருந்தப் பொருட்களை தஞ்சாவூர் ராஜாவின் ஆட்கள் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு ஈடாக அந்த தேவிகோட்டைத் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஆங்கிலேய வியாபாரிகள் அங்கு தங்கிவிட்டனர். இந்த தேவிகோட்டை தஞ்சை மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இதில் அன்னியர்கள் வந்து தங்கள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்துக் கொண்டதனால் கோபமடைந்த பிரதாபசிம்ம ராஜா தனது படைத்தலைவர் மானோஜி ராவுடன் ஒரு படையை அனுப்பி தேவிகோட்டையில் தங்கியிருந்த ஆங்கில வியாபாரிகளைத் துரத்திவிட்டு அதனை கையகப் படுத்திக்கொண்டு, அந்தக் கோட்டைக்குக் காவலாக ஜாபர் சாஹேப் என்பவனை நியமித்துவிட்டு வரச் சொன்னார். மானோஜி ராவும் அப்படியே செய்தார். சிலகாலம் கழித்து தேவிகோட்டையிலிருந்து விரட்டப்பட்ட ஆங்கிலேய வியாபாரிகள் தங்கள் படை பலத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் தேவிகோட்டையைப் பிடிப்பதற்காக வந்தனர். இந்த செய்தி அறிந்த மன்னர் பிரதாபசிம்மன் தனது படைகளை அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்ட ராஜாவின் படைகள் கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்தனர். பல குதிரைகள் ஆற்று மணலில் புதையுண்டன. படை வீரர்கள் சிலரும் வீரப்பா என்கிற ஒரு தளபதியும் இறந்து போயினர். [] இந்த எதிர்பாராத நிகழ்ச்சியினால் சோர்ந்து போன மன்னர் பிரதாபசிம்மர் ஆங்கிலேய வியாபார கம்பெனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். யுத்த செலவுக்காக ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர் ராஜாவிடம் பணம் கேட்டனர். அந்த உடன்படிக்கையின்படி யுத்த செலவுக்காக பணமும், குப்பியின் மகன் காட்டுராஜா இருந்தானல்லவா, அவனை விரட்டிவிட்ட பிறகு ஆங்கிலேயர்களிடம் புகலடந்திருந்தான், அவன் செலவுக்காக 40000 பணமும் ராஜா கொடுத்தார். தேவிகோட்டையை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்காக ஆங்கிலேய வியாபாரிகள் ராஜாவுக்கு வருஷத்துக்கு 1100 வராகன் வாடகை கொடுப்பதாகவும் உடன்பட்டனர். இந்த நிகழ்ச்சி 1749இல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐதராபாத் நகரத்தில் இருந்த நிஜாம் ஷாஜதீகான் என்பவன், தெற்கே நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் அடைபட்டிருப்பது குறித்து, தான் இருக்கும்போது இப்படியெல்லாம் நடந்து விட்டதே என்று அவனுக்குக் கோபம் இருந்தது. சந்தா சாஹேபும், தோஸ்த் அலிகானின் மகன் சப்தர் அலிகானும் பிரெஞ்சு படைகளின் ஆதரவோடு திருச்சினாப்பள்ளிக்குப் போய் அந்த ராஜ்யத்தின் பெண் அரசியை நீக்கிவிட்டுத் தான் பிடித்துக் கொண்டதும், தஞ்சாவூர் மராட்டிய ராஜா சதாராவிலிருந்து மராட்டியப் படைகளை வரவழைத்து அவர்களுடன் தன் படைகளையும் அனுப்பி போரில் வென்று சந்தா சாஹேபை சதாராவுக்கு சிறையில் அடைக்க அனுப்பி வைத்த செய்தியையும் நிஜாம் கேள்விப் பட்டிருந்தான். அந்த நேரத்தில் திருச்சியில் முராரி ராவ் கோட்டையை கவனித்து வந்தான். அந்த நேரத்தில் ஐதராபாத் நிஜாம் தனது படைகளை அனுப்பி திருச்சினாப்பள்ளியை முற்றுகை இட்டார். திருச்சி கோட்டை மிகவும் வலுவானது. சுமார் ஆறு மாத காலம் கோட்டையை முற்றுகை இட்டு, ஒரு வழியாக முராரி ராவை கோட்டையை விட்டு வெளியே வரவழைத்து துரத்திவிட்டு கோட்டையை அன்வர்தின் கான் வசம் கொடுத்து விட்டார் நிஜாம். இப்போது ஆற்காட்டோடு, திருச்சினாப்பள்ளியும் அன்வர்தின்கான் வசம் போயிற்று. [] “The success of Marathas greatly perturbed the aged Nizam and he personally undertook an expedition to the South in order to settle matters. When the Nizam arrived with a large army at Arcot in March 1743 all the Chiefs of the Country promptly submitted to him, while Murari Rao was ordered to quit Trichinopoly and Anwarddin was made the Nawab of Arcot.” ஆற்காட்டு நவாப் அன்வர்தின்கான் நிஜாமிடமிருந்து எப்படி ஆற்காட்டையும், திருச்சினாப்பள்ளியையும் பெற்றார் என்பதன் வரலாறு இது. ஆற்காடு சுபாவும், திருச்சினாப்பள்ளி சுபாவும் தன் அதிகாரத்துக்குள் வந்த பிற்பாடு அன்வர்தின்கானின் தனது மகன் மாபோஸ்கானை தஞ்சாவூர் சென்று தங்களுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை பெற்று வரும்படி அனுப்பினான். திடீரென்று மாறிவிட்ட சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே ஆங்கில வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்து நொடித்துப் போன நிலையில் இப்போது ஆற்காட்டு நவாபுக்கு எப்படி கப்பம் கட்டுவது என்ற பிரச்சினை தலைக்குடைச்சலை தந்தது பிரதாபசிம்மருக்கு. தன்னிடம் இப்போது பணம் இல்லை, சிறிது அவகாசம் கொடுத்தால் கப்பத்தை ஒழுங்காகக் கட்டிவிடுவதாகச் சொல்லி அனுப்பினார் மன்னர். ஆற்காடு நவாப் இந்த சால்ஜாப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கொடுத்தால் கப்பம், இல்லையேல் சண்டை என்று தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்துவிட்டான் ஆற்காடு நவாப். படைகளுக்குத் தலையேற்று வந்தவன் மாபோஸ்கான். இப்போது பிரதாபசிம்மருக்கு தன்மானப் பிரச்சினையாக ஆகிவிட்டது. போர் செய்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று முடிவு செய்து, தனது படைகளுடன் கோட்டைக்கு வெளியே வந்து ஆற்காட்டு நவாபின் படைகளோடு சண்டை செய்தார். தஞ்சாவூருக்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் சண்டை நடந்தது. கடுமையான சண்டைக்குப் பின் மாபூஸ்கான் படை தோற்று ஓடத் தொடங்கியது. ஓடியவர்கள் சும்மா ஓடுவார்களா. போகும் வழியில் இருந்த கிராமங்களையெல்லாம் சூறையாடிவிட்டு ஓடினார்கள். சிலர் ஆங்காங்கே இருந்த கிராமங்களில் தங்கி விட்டார்கள். மாபூஸ்கான் சிறைப்பட்டான். சிறைப்பட்ட ஆற்காடு நவாபின் மைந்தன் மாபூஸ்கானை மன்னர் பிரதாபசிம்மர் மரியாதையோடு நடத்தி அவனையும், அவனோடு எஞ்சிய வீரர்களையும் விடுவித்து ஊருக்குத் திருப்பி அனுப்பினார். உண்மையில் இந்தப் போரின் முடிவு பிரதாபசிம்மருக்கு வெற்றியையும், மாபூஸ்கானுக்குத் தோல்வியையும் கொடுத்திருந்த போதிலும் தஞ்சை மானுவல் என்ன சொல்லுகிறது தெரியுமா? “In two letters the Nawab speaks in bostful language of victories gained by his troops over those of the King of Tanjore in two separate battles. In the first of these conducted by his eldest son Mapuz khan the Tanjorean army consisted of 5000 horse and 30000 foot composed of natives of Palghat and other Countries and the loss by Tanjore amounted to 200 men killed and 400 wounded and about forty taken prisoners.” [] இவ்விரு செய்திகளில் எது உண்மை? மரியாதைக்குரிய குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற தலைசிறந்த ஆராச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்ளும்தான் சொல்ல வேண்டும். மாபூஸ்கான் தஞ்சாவூரில் தோல்வி அடைந்த விஷயத்தைத் தன் தந்தை அன்வர்தீன்கானுக்கு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். தஞ்சாவூர் ராஜா கப்பம் செலுத்தத் தவணைதானே கேட்டான், இவன் அவனிடம் சண்டைக்குப் போய்விட்டான் என்று அவன் தவறை சரிக்கட்டவோ என்னவோ நடந்தவற்றை மாற்றிச் சொல்லிவிட்டான் ஆற்காட்டு நவாப். அன்வர்தீன்கான் ஆற்காட்டில் இருந்து கொண்டு என்ன சொன்னான்? நமது நவாபின் படை தோற்பதாவது. பெருத்த அவமானமாச்சே! என்று கெளரவம் பார்த்து, ஒரு பெரும் படையை, குதிரைப்படை, காலாட்படை இவர்களைத் தயார் செய்து கொண்டு, பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் தஞ்சாவூர் ராஜ்யத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியம் பூண்டு புறப்பட்டான். வரும் வழியில் வேங்கடகிரி, வேட்டவலம் முதலான பாளையக்காரர்களையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தான். அன்வர்தீன்கான் தலைமையில் வந்த அந்தப் பெரும் படை தஞ்சாவூருக்கு ஈசானிய திசையில் (வடகிழக்கு) ஆறு மைல் தூரத்தில் பசுபதிகோயில் என்கிற கிராமத்துக்கு அருகில் ஒரு பெரிய மைதானத்தில் முகாமிட்டது. கி.பி.1751இல் நடைபெற்ற செய்தி இது. [] ஆற்காட்டு நவாப் அன்வர்தீன்கான் படையெடுத்து வந்து பசுபதிகோயில் அருகில் தங்கியிருக்கும் செய்தி மன்னர் பிரதாப சிம்மருக்குச் சொல்லப்பட்டது. உடனே ராஜா தன்னுடைய படைவீரர்கள் 3000 பேரோடு பீரங்கிகள் முதலான ஆயுதங்களைக் கொடுத்து கோவிந்தராவ் சேட்டிகே, மானோஜி ராவ் ஜெகதாப் ஆகியோர் தலைமையில் போர் செய்ய அனுப்பி வைத்தார். இந்த படையோடு தஞ்சை மராட்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஏழு வீரர்களும் சென்றனர். நான்கு சர்தார்களும் உடன் சென்றனர். பசுபதிகோயில் போர் என்னவாயிற்று? 11 பகுதி பதினொன்று [] ஆற்காட்டு நவாப் அன்வதீர்கான் படை திரட்டிக் கொண்டு வந்து தஞ்சாவூர் மீது போர் தொடுப்பதற்காகப் பசுபதிகோயில் கிராமத்துக்கு அருகில் ஒரு திடலில் முகாமிட்டிருந்தான் என்பதையும், அவனை எதிர்த்துப் போரிட தஞ்சை மன்னர் பிரதாபசிம்ம ராஜா ஒரு பெரும் படையை கோவிந்தராவ், மானோஜி ராவ் ஆகியோர் தலைமையில் பசுபதிகோயிலுக்கு அனுப்பினார் என்பதைப் பார்த்தோம் அல்லவா. இவ்விரண்டு படைகளும் விடியற்காலை நேரத்தில் எதிர் எதிரே வந்து மோதிக் கொண்டன. போர் தொடங்கியது. தஞ்சாவூர் சேனைக்கு மானோஜி ராவ் தலைமை ஏற்றிருப்பது அந்த படை வீரர்களுக்கு தெம்பைக் கொடுத்தது. அவர் ஒரு மாபெரும் வீரன், அவர் தலைமையில் போரிடுவது சாதாரண வீரனுக்குக் கூட பெருமை தரக்கூடியது. போர் உக்கிரமாக நடந்தது. தஞ்சை வீரர்கள் ஆக்ரோஷமாகப் போராடினார்கள். எதிரியின் வஞ்சகம், தேவையில்லாமல் தம் மீது போர் தொடுத்தது இவையெல்லாம் சேர்ந்து தஞ்சை படையை மிக உக்கிரமாகப் போர் செய்யத் தூண்டியது. அநியாயமாக நம் மீது படையெடுத்து வந்த அன்வதிர்கானின் படை மீது தஞ்சை வீரர்கள் இடிபோல் விழுந்து தாக்கினார்கள். இவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆற்காட்டு வீரர்கள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் போட்டது போட்டபடி ஓடத் தொடங்கினார்கள். தஞ்சை வீரர்கள் அவர்களுடைய பீரங்கிகளை பறித்துக் கொண்டார்கள். ஆற்காட்டு படை வீரர்களைத் தப்பி ஓடவிடாமல் தடுத்து ஏராளமானவர்களைக் கொன்று குவித்தார்கள் தஞ்சை வீரர்கள். ஆற்காட்டு படையில் வந்திருந்த பெரிய பெரிய சர்தார்கள் கூட தஞ்சை தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் துவங்கினார்கள். [] போர்க்களத்தில் ஓர் அதிசயம். ஆற்காட்டாரின் போர் யானை உடலெங்கும் தஞ்சை வீரர்கள் எறிந்த ஈட்டிகள் குத்தியிருக்க அது அசையாது ஓரிடத்தில் நின்றுகொண்டே உயிரை விட்டது. தஞ்சை வீரர்கள் அந்த யானையின் மீது ஏறி, அதன் மீது கட்டப்பட்டிருந்த அம்பாரியை அறுத்து உடைத்து தூர வீசினார்கள். இந்த சந்தடியில் நவாப் அன்வதீர்கான் தஞ்சை வீரர்களிடம் மாட்டிக் கொண்டான். உடனே மராத்திய வீரர்கள் அவனை வெட்ட வாளை ஓங்கிக் கொண்டு பாய, அவன் பயந்து அலறினான். “பிரதாபசிம்ம ராஜா மீது ஆணை! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்” என்று ஓலமிட்டான். தங்களது ராஜா மீது ஆணை என்று அவன் கத்தினதும், மராத்திய வீரர்கள் தயங்கி நின்றார்கள் என்ன செய்வது என்று தெரியாமல். அன்வதீர்கான் பிரதாபசிம்ம ராஜாவின் பெயரால் உயிர் பிழைத்தான். உடனே தஞ்சாவூர் கோட்டையில் இருந்த பிரதாபசிம்ம ராஜாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் அன்வதீர்கான் நவாபின் சுபேதார் ஆனபடியால் அவனை ஒன்றும் செய்யாதீர்கள், விட்டுவிடுங்கள் என்று உத்தரவிட்டார். தஞ்சாவூர் படைகள் அவனை விரட்டி அடித்துவிட்டு வெற்றி நடைபோட்டு தஞ்சாவூர் திரும்பினார்கள். தனக்கு உயிர் பிச்சை கொடுத்து, தன்னை வாழவைத்த பிரதாபசிம்மருக்கு அன்வதீர்கான் வஸ்திரங்களும் கொடுத்தனுப்பி அத்தோடு ஒரு கடிதமும் அனுப்பியிருந்தான். இவற்றை ராஜாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லி வீரர்களிடம் கொடுத்தனுப்பிவிட்டு அவன் ஆற்காடு போய்ச்சேர்ந்தான். இந்த போரில் ஆற்காடு படையில் பங்கு கொண்ட ஒரு வெள்ளை யானை, உயிரோடு தஞ்சாவூர் சேனைக்குக் கிடைத்தது. இந்த நிலையில் அங்கு சதாராவில் சிறையில் கிடந்த சந்தா சாஹேப் என்ன ஆனான் என்று பார்க்கலாமா? அவன் அங்கு நீண்ட காலம் சிறையில் இருந்ததைக் கண்டு சதாரா மன்னர் ஷாஹு ராஜா, கைதியான சந்தா சாஹேபிடமிருந்து ஏழு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அவனை விடுதலை செய்து போகச் சொல்ல உத்தரவிட்டார். அவன் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அவனை ராஜா எச்சரித்து அனுப்பினார். நீ எங்கு போகவேண்டுமோ போ, ஆனால் தஞ்சாவூரில் இருப்பது நம்ம ராஜ்யம், அங்கு போய் வாலாட்டினாயோ, உன்னை சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்து அனுப்பினார் ஷாஜு ராஜா. விடுதலையான சந்தா சாஹேப் சதாராவிலிருந்து புறப்பட்டு வருகின்ற வழியில் அதோனி (இப்போது ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது) சென்று அங்கு ராஸ்த் மொகிதீன் கான், நிஜாமின் பேரன் முஸாஃபர் ஜங், ஆகியோரோடு சேர்ந்து கொண்டு 25000 வீரர்கள் கொண்ட ஒரு படையை நிறுவினான். இந்தப் படைக்குத் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றோடு படையை நடத்திக் கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டான். வழியில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களுக்கு தூது அனுப்பி அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். அவர்களைக் கண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, அதன்படி அவர்களுடைய உதவிகளையும் பெற்றுக் கொண்டு ஆற்காடு வந்தான். ஆற்காட்டில் ஆட்சியில் இருந்த அன்வதீர்கானை போருக்கு அழைத்து அவனோடு போரிட்டு அவனைத் தோற்கடித்தான் சந்தா சாஹேப். இந்த சண்டை ஆம்பூர் எனும் இடத்தில் நடந்தது. ஆற்காடு சந்தா சாஹேப் வசம் போயிற்று. [] இப்படி அன்வதீர்கானுக்கும் சந்தா சாஹேபுக்கும் ஆம்பூரில் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஆற்காட்டில் இருந்த அன்வதீர்கானின் மகன் முகமது அலி அங்கிருந்து தப்பி ஒருவரும் அறியாமல் நாகப்பட்டினம் வந்தடைந்தான். அங்கு வந்து சந்தா சாஹேபுக்குத் தெரியாமல் தஞ்சை மன்னருக்கு ஒரு தூதுவனை கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தான். மிகவும் மரியாதையாகவும், மன்னரைப் புகழ்ந்தும் அந்தக் கடிதத்தில் முகமது அலி எழுதியிருந்தான். தன் தந்தை அன்வதீர்கானுக்கு சந்தா சாஹேபினால் ஏற்பட்ட கதியையும், ஆற்காடு அவன் கைக்குப் போய்விட்ட செய்தியையும் சொல்லி, தனக்கு மன்னர்தான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தான். என்னதான் இவனுடைய அப்பன் அன்வதீர்கான் நம்மோடு சண்டை செய்ய படையோடு வந்தவன் ஆயினும் போரில் தோற்று உயிர்ப்பிச்சை கேட்டு ஓடிப்போனான். அவனுடைய பிள்ளையான இவனை இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார் பிரதாபசிம்மர். இப்போது முகமது அலிக்கு நாம் அடைக்கலம் கொடுப்பதனால் சந்தா சாஹேபின் விரோதம் நமக்கு ஏற்படத்தான் செய்யும். அவன் ஒன்றும் யோக்கியன் இல்லை. அப்படி அவனால் நமக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவனை அப்போது சரியாக கவனித்து விடலாம் என்று எண்ணி, முகமது அலியைத் தஞ்சாவூருக்கு வந்துவிடும்படி செய்தி அனுப்பினார். தஞ்சைக்கு வந்த முகமது அலியை மரியாதையுடன் வரவேற்று மகாராஜா தன்னுடைய தோட்டத்திலேயே அவனுக்குத் தங்க இடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார். (அந்த தோட்டம் இப்போதைய தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருக்குமிடம்). ஓடிவந்த ஆற்காட்டு முகம்மது அலி மூன்று மாத காலம் தஞ்சையில் ராஜாவின் ஆதரவில் தங்கினான். இங்கிருந்தபடியே முகம்மது அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்த தளவாய் தேவராஜனுக்கும், தென்பகுதி பாளையக்காரர்கள் அனைவருக்கும் நிஜாம் நாசர் ஜங் (இவர் ஐதராபாத் நிஜாம், நிஜாம் உல் முல்க் என்பவரின் இரண்டாவது மகன். இவனுக்குப் போட்டியாக முளைத்தவன் தான் நிஜாமின் பேரன். அவன் தான் சந்தா சாஹேபுடன் சேர்ந்து கொண்டிருக்கிற முசாஃபர் ஜங்) கடிதம் எழுதினான். இவர்கள் தவிர காளஹஸ்தி, வேங்கடகிரி பொம்மராஜா முதலானவர்களுக்கும் கடிதம் எழுதினான். இப்படி சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிரதாபசிம்ம ராஜாவிடம் சொல்லிவிட்டுத் திருச்சினாப்பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தான். முகமது அலி தஞ்சைக்கு வருவதற்கு சிலகாலம் முந்திதான் பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜா ராஜாவுக்கு மோத்தேயின் மகளை முதல் கல்யாணம் செய்து வைத்தான். மோத்தே என்பவரின் மகளின் பெயர் ராஜேஸ்பாயி சாஹேப். அது முடிந்து சில நாட்களுக்குள் பிரதாபசிம்மரின் மனைவி அகல்யாபாயி காலமானாள். மன்னரின் நான்காம் மனைவியான யஷ்வந்த்பாயிக்கு இரண்டு பெண்கள். அந்தப் பெண்களை மாடிக் என்பவரின் குடும்பத்திலும், நிம்பாளகர் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பினார். பிரதாபசிம்மருக்கு ஆசை நாயகிகள் ஏழு பேர் என்று முன்னமே சொல்லியிருக்கிறோம் அல்லவா? இவர்களில் அன்னபூர்ணாபாயி என்று ஒருத்தி. இவளுக்கு ராமசாமி, கிருஷ்ணசாமி என்று இரண்டு மகன்கள். ஒரு ராஜ ரகசியம். இவ்விரு பிள்ளைகளும் ராஜாவுக்குப் பிறக்கவில்லையாம். ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று அரண்மனையில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. இவ்விருவரில் கிருஷ்ணசாமி சீக்கிரம் இறந்து போனான். ராமசாமிக்கு ‘அமர்சிங்’ என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டான். இந்த அமர்சிங் 1750ஆம் ஆண்டில் பிறந்தவன். இவைகள் எல்லாம் சுமார் ஐந்தாறு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்ற சம்பவங்கள். 12 பகுதி பன்னிரண்டு []                                               Nawab Anwarddin Khan’s death in War சதாரா சிறையிலிருந்து ஷாஜு மகாராஜாவினால் விடுதலை செய்யப்பட்ட சந்தா சாஹேப், அதோனிக்குச் சென்று அங்கு முசாஃபர் ஜங் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து ஆற்காட்டைப் பிடித்ததும், அன்வர்தின்கானைக் கொன்றுவிட்டு அவனது மகன் முகமது அலியைத் துரத்தி விட்டான் என்பதைப் பார்த்தோமல்லவா. இனி அவன் செய்தவைகளைப் பார்ப்போம். சந்தா சாஹேப் புதுச்சேரி சென்று அங்கு பிரெஞ்சுக்காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆற்காட்டிலிருந்து ஓடிப்போய் திருச்சினாப்பள்ளியில் பதுங்கியிருக்கும் முகமது அலியைப் பிடித்துத் துரத்த வேண்டும் அதற்கு அவர்களிடம் உதவி கேட்டுப் பெற்றுக் கொண்டான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுப் பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளியை நோக்கி வந்தான். வரும் வழியில் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மருக்கு ஒரு தூது விட்டான். தான் ஒரு பெரும் படையுடன் திருச்சிக்குப் போவதாகவும், தனது படைகளின் வழிச்செலவுக்குக் கணிசமான பண உதவி செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கேட்டு அனுப்பினான். ராஜாவுக்கு அதிர்ச்சி. இது என்ன இவன், நம்மை எதிர்த்துப் போரிட்டு முடியாமல் ஓடிப்போனவன், திருச்சியில் மராத்தா படைகளால் சிறைபிடிக்கப்பட்டு சதாரா சிறையில் இருந்தவன், ஷாஜு மகராஜ் இவனை எச்சரித்து அனுப்பியும் இவன் நம்மிடம் வந்து வாலை ஆட்டுகிறானே என்று கோபப்பட்டார். ஆனால், சந்தா சாஹேப் பெரும் படையுடன் வந்திருக்கிறான்; அவனுடைய குறி திருச்சியிலிருக்கும் முகமது அலி, இப்போது அவனிடம் வம்பு எதற்கு என்று எண்ணி, அவனைத் தட்டிக் கழிக்கும் விதமாக திருச்சி முகமது அலி நம்முடைய உதவி நாடி வந்திருப்பவர், அவருக்கு எதிரியான உங்களுக்கு உதவுவது முறையல்ல என்று சொல்லி அனுப்பினார். இந்த பதில் சந்தா சாஹேபுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தனது படைகளைத் திருச்சிக்குப் போகாமல் தஞ்சையின் பக்கம் திருப்பினான். அவனும் ராசத் மோதிகானும் படைகளைக் கொண்டு வந்து தஞ்சாவூர் கோட்டையை முற்றுகை இட்டார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்பு:– “Duplex (French General at Pondichery) proposed to Chanda Saheb that he must next attack Trichinopoly wherein Mohammad Ali had taken refuge and left Pondichery on 28th October 1749 towards Trichinopoly. On December 13, 1749 the combined forces of Chanda Saheb and Muzaffar Jung crossed the Coleroon river into the Tanjore Kingdom and in a few days reached Tanjore which they began to siege.” [] பிரதாபசிம்ம ராஜா தனது படைகளோடு கோட்டைக்கு வெளியே வந்து சந்தா சாஹேப் படைகளுடன் இரண்டு மூன்று முறை சண்டை செய்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தா சாஹேபின் படைகள் தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து கொள்ளை அடித்தார்கள். மகாராஜா பிரதாபசிம்மரும் அவ்வப்போது அவன் கூட்டத்தை அடித்து விரட்டிவிட்டு கோட்டையை சீரமைத்து, அவர்கள் ஊருக்குள் புகமுடியாதபடி பாதுகாப்புக்களை பலப்படுத்தினார்கள். இப்படி வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் இவனுடன் போராட வேண்டியிருப்பது குறித்து மன்னர் வருத்தமடைந்தார். இப்படி இந்த யுத்தம் இரண்டரை மாத காலம் நடைபெற்றது. இதனால் கோட்டைக்குள் இருந்த மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். அந்த சமயம் ஐதராபாத்திலிருந்து நிஜாமின் இரண்டாவது மகனான நாசிர் ஜங் பெரும் படையொன்றுடன் ஆற்காட்டுக்கு வந்தான். அங்கு நிஜாமின் படைகளை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு படையின் சர்தார் சேஷராயர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த செய்தி தஞ்சையில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சந்தா சாஹேபுக்குத் தெரிய வந்தது. அவன் உடனே தஞ்சை முற்றுகையை நீக்கிக் கொண்டு பிரெஞ்சுக் காரர்களின் பாதுகாப்பைத் தேடி பாண்டிச்சேரிக்கு ஓடிப்போனான். ஐதராபாத்திலிருந்து நிஜாமின் மகன் நாசிர் ஜங் படையுடன் வந்திருக்கும் செய்தி அறிந்து, அவர்கள் தங்களை மீண்டும் ஆற்காட்டு நவாபாக ஆக்குவார்கள் என நம்பி திருச்சியில் இருந்த முகமது அலி ஆற்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகும்போது அங்கு சந்தா சாஹேபுடன் மோதல் நிகழ்ந்தால் பாதுகாப்புக்காக முகமது அலி பிரதாபசிம்ம ராஜாவிடம் படை உதவி கேட்டார். மன்னரும் அவனுக்கு உதவியாகத் தஞ்சாவூர் படைகளை அனுப்பி வைத்தார். தஞ்சைப் படைக்கு மானோஜி ராவ் தலைமை வகித்துச் சென்றார். அவர்கள் ஆற்காட்டில் சில காலம் தங்கியிருந்து முகமது அலி அங்கு பத்திரமாக ஆற்காட்டு நவாபாக பதவி ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியையும் படைகளோடும் மானோஜி ராவ் தஞ்சை திரும்பினார். அந்த இடைப்பட்ட காலத்தில் ஐதராபாத்திலிருந்து படையோடு வந்திருந்த நாசிர் ஜங் காலமானார் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது. “At Tanjore their (Chanda Saheb) were not fruitful, the Raja procrastinated. Suddenly news reached that Nazir Jung was fairly well on his march into Carnatic with a huge army. With very great difficulty, the French troops, Muzaafaar Jung and Chanda Saheb retreated to Pondichery.” நாசிர் ஜங் இறந்த போனவுடனே சந்தா சாஹேப்புக்கு தைரியம் வந்தது. இப்போது ஐதராபாத்தின் படை நாசிர் ஜங் இல்லாமல் போரில் இறங்காது. ஆகையால் நாம் போய் திருச்சியைப் பிடித்துக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் கிளம்பிப் போனது. போகும் வழியில் அவர்கள் படை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டது. அப்போது தஞ்சாவூரில் மராத்திய ராஜாவின் படையில் ஜமேதார் (சுபேதாருக்கு அடுத்தது) ஆலம்கான் எனும் பட்டாணிய முஸ்லீம் (ஆப்கானிய முஸ்லீம்) 100 குதிரைப் படைக்குத் தலைவனாக இருந்தான். இவன் மதுரையிலிருந்து வந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவன். இவனுக்கு ஏதோ காரணமாக மகாராஜா பிரதாபசிம்மரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அவன் ராஜாவிடம் சென்று தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கியை வாங்கிக் கொண்டு வேலையைவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேரே போய் சந்தா சாஹேபின் படையில் சேர்ந்து கொண்டான். [] ஆற்காட்டுக்குப் போய்விட்டு முகமது அலி திருச்சிக்கு வந்திருந்தான். அந்த நேரத்தில் சந்தா சாஹேப் திருச்சி மீது படையெடுக்கும் செய்தி அறிந்து அவன் தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டு தூது அனுப்பினான். தஞ்சை ராஜா 15000 வீரர்களையும், 1000 குதிரை வீரர்களையும், பெரிய பீரங்கிகள், நிறைய உணவுப் பொருட்கள் அனைத்தையும் மானோஜி ராவ் தலைமையில் அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானும் படைகளும் உணவுப் பொருட்களும் அனுப்பி வைத்தார். ராமநாதபுரம் சேதுபதி ராஜாவான உடையத் தேவரும் தனது படைகளை உதவிக்கு அனுப்பி வைத்தார். மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தளவாய் நந்தராஜ் எனும் சர்தாருடன் பெரும் படை உதவிக்கு வந்தது. ஏற்கனவே திருச்சியை ஆண்ட முரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்குத் துணையாக நின்றான். இப்படி பல ராஜ்யத்துப் படைகளோடு சந்தா சாஹேபை எதிர்க்க முகமது அலி தயாராக ஆனார். ஒரு புறம் முகமது அலியின் ஆதரவுப் படைகள்; மறுபுறம் சந்தா சாஹேபும் அவனது ஆதரவுக்கு பிரெஞ்சுப் படைகளும் போருக்கு ஆயத்தமாக நின்றன. முகமது அலிக்கு ஆதரவாக தஞ்சையின் மானோஜி ராவ் ஒரு வீரம் செறிந்த போரைச் செய்தார். பீரங்கிகளின் முழக்கம் வெகு தூரம் கேட்டுக் கொண்டிருந்தது. யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஏராளமான யானைகள், குதிரைகள், வீரர்கள் செத்து விழுந்தனர். யுத்த களத்தில் கழுகுகள் பிணங்களைக் கொத்தித் தின்றன. அப்போது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் படையொன்று வந்து சேர்ந்தது. அந்தப் படையின் மேஜர் மானோஜி ராவிடம் சண்டைக்கு என்ன காரணம் என்று கேட்டார். மானோஜி ராவ் நடந்த வரலாற்றை அவருக்கு எடுத்துக் கூறினார். சந்தா சாஹேப் மீது ஆத்திரமடைந்த அந்த ஆங்கில மேஜர் உடனே ஓடிப்போய் ஒரு பீரங்கியை இயக்கி நாலைந்து முறை சந்தா சாஹேப் படையை நோக்கிச் சுட்டார். அப்போது கூடாரமொன்றில் இருந்த சந்தா சாஹேபின் படைத்தலைவன் ஆலம்கானின் தலை சுக்குநூறாக உடைந்து போயிற்று. [] அந்த சமயம் பார்த்து தஞ்சை மராத்திய படைகள் ஆலம்கானின் படைகளின் மீது விழுந்து தாக்கினார்கள். ஆலம்கான் படை சின்னாபின்னமடைந்தது. உயிர் இழந்தவர் போக எஞ்சியிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இப்பையாக ஆற்காட்டு நவாப் முகமது அலியின் வெற்றி தஞ்சாவூர் மராத்திய படையினரால் சாதிக்கப்பட்டது. 13 பகுதி பதிமூன்று []                                                          Arcot Nawab Mohamad Ali ஒரு பிரிட்டிஷ் மேஜர் வெடித்த பீரங்கிக் குண்டு சந்தா சாஹேபின் தோழன் ஆலம் கானின் தலையைச் சுக்கு நூறாக உடைத்ததையும், அவன் படைகள் சிதறுண்டு போனதையும், பலர் முகமது அலியின் படையிடம் கைதாகினர் என்பதையும் பார்த்தோம். இனி, சந்தா சாஹேப் தொடங்கிய இந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைப் பார்ப்போம். ஆலம் கானின் மரணம் சந்தா சாஹேபுக்கு பேரிழப்பாக இருந்தது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று எண்ணத் தொடங்கினான் சந்தா சாஹேப். முகமதி அலியைச் சுலபமாக வென்று திருச்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பிரெஞ்சுப் படையின் உதவியோடு இங்கு வந்தால் எத்தனை எதிர்ப்பு நமக்கு. தஞ்சை படைகள் ஒரு புறம்; புதுக்கோட்டை, ராமநாதபுரம் படைகள் ஒரு புறம். மைசூரிலிருந்து வந்திருக்கும் படைகள், போதாதற்கு ஆங்கிலேயரின் படைகள் வேறு. நாம் பிரெஞ்சுக்காரர்களை நம்பினால், முகமது அலி ஆங்கிலேயர்களைத் துணைக்குக் கொண்டு வந்து விட்டானே. இப்போது என்ன செய்வது? பொறியில் அகப்பட்ட எலிபோல தவித்தான் சந்தா சாஹேப். என்றாலும் போர் என்று வந்தாகிவிட்டது. வருவது வரட்டும் என்று தொடர்ந்து போர் புரிந்தான். பல நாட்கள் போர் நடந்தது. சந்தா சாஹேப் ஸ்ரீரங்கத்தில் இருந்தான். திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையே காவிரி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வடபுறத்தில் தானும் பிரெஞ்சுக்காரர்கள் படையும் மாட்டிக் கொள்ள, மைசூர் நந்திராஜாவின் படைகள் மேற்கிலிருந்து தாக்க, முரார்ஜி கோர்படேயின் படைகள் ஒரு புறமும், மானோஜி ராவின் மராத்தியப் படைகள் கிழக்கிலிருந்தும் முன்னேறி வர, தெற்கே முகமது அலியின் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் தன்னை நாலா புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க விழி பிதுங்கினான். அவன் படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. நான்கு புறத்திலும் தாக்குதல் கடுமையாக நடந்தது. சந்தா சாஹேப் வெறு வழியில்லை இத்தோடு ஒழிந்தோம் என்று முடிவுக்கு வந்தான். [] சந்தா சாஹேபுக்குத் தெரிந்து விட்டது. இனி வேறு வழியில்லை. நாம் செய்த முயற்சிகளெல்லாம் வீணாகிவிட்டன. தப்பிப் பிழைத்துப் போகலாம் என்றாலோ போக வழியில்லை, எல்லா வழிகளும் எதிரிகளால் சூழப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் நம்மைப் பிடித்து விடுவார்கள். முகமது அலியிடம் என்னை ஒப்படைத்து விடுவார்களானால் அதைவிட கொடுமை வேறு வேண்டியதில்லை. அவன் நம்மைச் சித்திரவதை செய்தே கொன்று விடுவான். அவன் அப்பனை நான் கொன்றிருக்கிறேன் அல்லவா. இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கிற போது, எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி தஞ்சாவூர் மானோஜி ராவின் கொள்ளிதான். ஆகையால் அவரிடம் போய் சரணடைந்து காப்பாற்றச் சொல்லுவது ஒன்றுதான் வழி. அவர் ஒரு மூத்த போர் வீரன். இரக்க குணம் உள்ளவர். சரணாகதி என்று போய்விட்டால் நிச்சயம் அவர் நம்மைக் காப்பாற்றுவார். ஒருக்கால் நாம் அவர்களுக்குச் செய்த தீங்குகளை மனத்தில் வைத்துக் கொண்டு நம்மைக் காப்பாற்றாமல் போனால்? எது எப்படியோ, இவரைத் தவிர நமக்கு இப்போதைக்கு வேறு ஆளும் இல்லை, மார்க்கமும் இல்லை, ஆகவே மானோஜி ராவிடம் போய் சரணாகதி ஒன்றுதான் வழி என்று முடிவுக்கு வந்தான் சந்தா சாஹேப். சதாராவில் நம்மை விடுதலை செய்த போது ஷாஜு மன்னர் என்ன சொன்னார்? நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் தஞ்சாவூர் பக்கம் மட்டும் போய்விடாதே, ஏனென்றால் அது நம்முடைய அரசு என்று சொன்னாரே, அதை மனதில் வாங்காமல் இப்படியொரு தவறைச் செய்து பிரதாபசிம்ம ராஜாவையும் பகைத்துக் கொண்டோமே, என்று மனம் கலங்கினான். தஞ்சாவூர்க் காரர்களுக்கு முகமது அலியும், பிரிட்டிஷ் படையும் நண்பர்களாக இருக்கின்றனர். நிச்சயம் அவர்கள் நம்மை அவர்களிடம்தான் ஒப்படைப்பார்கள். ஆனால் முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் அவன் நிச்சயம் நம்மை உயிரோடு தோலை உரித்துச் சித்திர வதை செய்து விடுவான். ஆகையால் நடப்பது நடக்கட்டும். நம்மை பலியிடுவதானால் மானோஜி ராவே அந்தக் காரியத்தைச் செய்யட்டும், என்ன ஆனாலும் சரி முகமதி அலியின் கையில் மட்டும் மாட்டவே கூடாது என்று முடிவெடுத்தான் சந்தா சாஹேப். அன்று இரவு ….. திருவரங்கத்தில் சந்தா சாஹேப் படைகள் முகாமிட்டிருந்த பகுதியில் எங்கும் ஒரே அமைதி. இரவு நேரத்தில் விளக்குகள் எதுவும் இல்லாத நேரத்தில் தனது கூடாரத்திலிருந்து சந்தா சாஹேப் மட்டும் வெளியே வந்தான். அங்குக் கட்டியிருந்த தனது குதிரையை அவிழ்த்துக் கயிற்றைத் தன் கரங்களால் பிடித்துக் கொண்டான். இருளில் அவனோடு வெளிவந்த பணியாள் ஒருவனையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சத்தம் எழுப்பாமல் நடந்து சென்று பின்னர் அவன் குதிரையில் ஏறிக் கொள்ள, பணியாள் வழிகாட்டிக்கொண்டு ஓடிவர இருட்டில் கிழக்கே காவிரி ஆற்றின் கரையோடு பயணமானார்கள். காவிரிக் கரையோடு சில மைல்கள் ஓடிவந்த ஆளைப் பின்பற்றி சந்தா சாஹேபும் தன் குதிரையில் பயணம் செய்து ஓரிடத்துக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பகுதிக்குப் பாளையம் என்று பெயர். காவிரி நதியின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த அந்த இடத்துக்கு இப்போது கோயிலடி என்று வழங்கப்படுகிறது. அங்குதான் அப்பக்குடத்தான் எனும் பெருமாள் ஆலயம் இருக்கிறது. அந்தப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மராட்டியப் படைகள் பாடி இறங்கியிருந்த கூடாரங்கள் இருந்தன. அவற்றின் நடுவில் தஞ்சைக் கொடி பறந்து கொண்டிருந்த கூடாரத்தில்தான் தளபதி மானோஜி ராவ் தங்கியிருந்தார். [] மானோஜி ராவை எழுப்பி தான் சரணடைய வந்திருக்கும் செய்தியைச் சொல்லச் சொல்லி தன்னுடன் வந்த பணியாளை அனுப்பிவைத்தான் சந்தா சாஹேப். அந்த பணியாள் தூங்கிக் கொண்டிருந்த மானோஜி ராவின் கூடாரத்துக்குச் சென்று அங்கு காவல் இருந்த வீரனிடம் தான் வந்திருக்கும் செய்தியைச் சொல்ல தளபதி எழுந்து வந்தார். தன்னிடம் சரணடைய சந்தா சாஹேப் வந்திருக்கும் செய்தியறிந்து முதலில் அதிர்ச்சியடைந்தார். என்றாலும் இருட்டில் ஒருவரும் அறியாமல் தன்னைத் தேடி வந்திருக்கும் அவனை எப்படி திரும்பிப் போ என்று சொல்லுவது, அல்லது அவனை கைது செய்வது? ஒன்றும் புரியாமல் அவனைப் போய்ப் பார்த்தார் மானோஜி. அவரிடம் தன் நிலைமைகளை யெல்லாம் எடுத்துச் சொல்லி தன்னுடைய இக்கட்டான இந்த நேரத்தில் மானோஜி ராவ் மட்டும்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதை உருக்கமாக எடுத்துரைத்தான். முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் தன்னைச் சித்திரவதை செய்து கொல்வான். அந்த நிலை எனக்கு ஏற்படாமல் தாங்கள்தான் எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் மராத்தியப் படையிடம் சரணடைந்து விடுகிறேன். இனி தஞ்சை மன்னர் விட்ட வழி. நான் கட்டுப்படுகிறேன் என்றான். மானோஜி ராவ் அவனிடம், ‘நீர் ஏன் தனியாக வந்தீர்? உம்மைக் காப்பாற்ற நம்மாலே ஆகாது. நீங்கள் இதுவரை செய்திருக்கும் காரியங்களினால் எங்கள் மகாராஜா உங்கள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். உம்முடைய சரணாகதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேவையானல் சிறிது பணம் தருகிறேன், அதை வாங்கிக் கொண்டு உங்கள் ஊர் பக்கம் ஓடிவிடுங்கள். அப்படி அங்கே போக விருப்பம் இல்லாவிட்டால் துணைக்கு விசுவாசமான ஆளை அனுப்புகிறேன். தெற்கு திசையில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அங்கு போய் மறைவாக இருந்துவிட்டுப் பிறகு உமக்குச் செளகரியப் படும்போது தப்பிச் சென்று எங்கு போக இஷ்டமோ அங்கு போய்விடலாம். அப்படியில்லை யென்றால் இங்கிருந்து உடையார்பாளையம் பகுதி காட்டுக்குள் போய் அங்கிருந்து வேட்டவலம், திருவண்ணாமலை, காட்டு வழியாக தப்பிப் போய் விடலாம். உமக்கு இதில் எது உசிதமோ அதன்படி செய்யும்’, என்று கைகழுவி விட்டார். மானோஜி ராவ் சொன்ன எவையும் அவன் காதுகளில் ஏறவில்லை. ஒரேயடியாக மானோஜி ராவ் தான் தனக்கு கதி என்று அழிம்பு பிடித்தான். எனக்கு எதுவும் தெரியாது. உங்களை மட்டும்தான் நம்பி நான் இங்கு வந்தேன். நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய பெரிய உபகாரம் என்ன வென்றால், என்ன நேர்ந்தாலும் என்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்படைத்துவிடக் கூடாது. அப்படியொரு நிர்ப்பந்தம் நேர்ந்தால், அவனிடம் ஒப்படைக்காமல் அதற்கு முன்பாகவே உங்கள் மனிதர்கள் கைகளால் என்னைக் கொன்று போடுங்கள் என்றான் கண்களில் நீர் சோர. நான் உங்கள் அபயம் என்று வீழ்ந்தான் சந்தா சாஹேப். அவனது நிலைமை கண்டு இரக்கம் கொண்டார் பெரிய மனது உள்ள மானோஜி ராவ். ‘உன்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்புவிக்க மாட்டேன், கவலைப் படாதே என்று அபயம் கொடுத்தார்.பிறகு அவனுக்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொடுத்து, அதனை பிறர் அறியா வண்ணம் ரகசியமாக வைத்திருந்தார். உடனே தஞ்சாவூருக்கு ஒரு தூதனை அனுப்பி மன்னரிடம் விவரமாக எல்லா விஷயங்களையும் சொல்லச் சொல்லி இரவே ஆளை அனுப்பினார். [] தூக்கத்தில் இருந்த ராஜாவுக்கு விஷயம் போனது. அவர் பதறித் துடித்து எழுந்து ஆலோசித்து மானோஜிக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பினார். அதில், சந்தா சாஹேப் நமக்குச் செய்திருக்கும் துரோகத்துக்கு எல்லாம், அவனிடம் இரக்கம் காட்டவே கூடாது; அவனைக் காப்பாற்றக் கூடாது. ஆனால், அவன் இப்போது நாமே கதி என்று சரணாகதி அடைந்திருக்கிறான். ஆகவே அவனை இப்போது நாம் கைவிடமுடியாது. அவனை இந்த நேரத்தில் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே அவனை உடனடியாக பிறர் அறியாவண்ணம் தஞ்சாவூருக்குத் தக்க பாதுகாப்போடு அனுப்பி வைக்கும்படி உத்தரவு அனுப்பினார். மானோஜி ராவ், மன்னர் சொற்படி அவனை பாதுகாப்பாகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். 14 பகுதி பதினான்கு []                                                                     முகமது அலி சந்தா சாஹேப் பாளையம் (கோயிலடி) எனப்படும் கிராமத்துக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த மானோஜி ராவிடம் சரணடைந்ததையும், அவன் பாதுகாப்போடு தஞ்சாவூருக்கு அனுப்பப் பட்டதையும் பார்த்தோம். இனி அங்கு திருச்சினாப்பள்ளி போர்க்களத்தில் என்ன நடந்தது பார்க்கலாம். மறுநாள் பொழுது விடிந்தது. ஸ்ரீரங்கத்தில் சந்தா சாஹேபின் படை முகாமிட்டிருந்த பகுதியில் ஒரே பரபரப்பு. சந்தா சாஹேபை காணோம். வீரர்கள் குழப்பமடைந்தார்கள். தளபதிகள் கூடிப் பேசினார்கள். தலைவன் இல்லாமல் படை என்னதான் செய்ய முடியும்? முகமது அலிக்குச் செய்தி போயிற்று. போர்க்களத்திலிருந்து திடீரென்று சந்தா சாஹேப் மாயமாய் மறைந்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவியது. அவன் எங்கு போயிருப்பான் என்று நாலாபுறமும் வீரர்கள் தேடி அலைந்தனர். ஒரு நாள், இரண்டு நாள் குழப்பத்தில் கழிந்தன. மூன்றாம் நாள் ஒரு செய்தி கிடைத்தது. சந்தா சாஹேப் மராத்தியப் படை வீரர்களிடம் சரண் புகுந்துவிட்டான். அவன் இப்போது தஞ்சை சிறையில் பத்திரமாக இருக்கிறான் என்பது அந்தச் செய்தி. முகமது அலி திருச்சியில் இருந்து தளபதி மானோஜி ராவுக்கும், மகாராஜா பிரதாபசிம்மருக்கும் கடிதங்கள் எழுதினான். மிகப் பணிவாக எழுதியிருந்தான் அந்தக் கடிதங்களை. மகாராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் மகாராஜாவின் அனுக்கிரகத்தினால்தான் தான் உயிர் வாழ்வதாகவும், மகாராஜா செய்திருக்கிற உதவியால்தான் தான் இழந்த அரசை மீண்டும் பெற முடிந்தது என்றும், தங்களுக்கு வந்து நேரில் மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்த நேரத்தில் மோதின்கானும், சந்தா சாஹேபும் படையெடுத்து வந்து தொல்லை கொடுத்து விட்டார்கள் என்றும் எழுதியிருந்தான். இவர்களால் தங்கள் ராஜ்யத்துக்கும் தொல்லைகள் வந்த போதும், வருவது வரட்டும் என்று நினைத்துத் தாங்கள் எனக்கு உதவி செய்ததால்தான் எனக்கு ஆற்காடு ராஜ்யம் மீண்டும் கிடைத்தது. ஆகையால் இப்பொழுது தாங்கள் தயவு பண்ணி என் தந்தையின் கொலைக்கு நான் பழிவாங்கும்படி, கொலைகாரன் சந்தா சாஹேபைத் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டுமாய்ப் பிரார்த்தனை பண்ணிக் கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் இருந்தது. [] அது தவிர, சந்தா சாஹேபை எதிர்த்துப் போருக்கு மைசூரிலிருந்து வந்திருக்கும் நந்திராஜா, மொரார்ஜி கோர்படே ஆகியோரும் சந்தா சாஹேபைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டனர். கிழக்கிந்திய கம்பெனி ஆங்கில அதிகாரிகளோ, மிகவும் அதிகார தோரணையில் மன்னன் பிரதாபசிம்மருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் அவனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி. இவர்களையெல்லாம் மானோஜி ராவ் சந்தித்துப் பேசினார் (Troubleshooter போலிருக்கிறது). இறுதியில் சந்தா சாஹேப் தங்களிடம் சரணாகதி அடைந்து விட்டதாகவும், அவனுக்குத் தாங்கள் உயிர்ப்பிச்சை அளித்திருப்பதாகவும் சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். ஆயினும் ஆங்கிலக் கம்பெனியாரின் கெடுபிடி அதிகரித்தது. முகமது அலியின் குரலும் கெஞ்சலில் இருந்து மாறுபடத் தொடங்கியது. வேறு பல ராஜ்யத்தின் படைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாலும், ஆங்கில அதிகாரிகளின் தொல்லை அதிகரித்ததாலும் இறுதியில் வேறு வழியில்லாமல் முகமது அலியிடம் சந்தா சாஹேபை ஒப்புவிக்க தஞ்சாவூர் மன்னர் சம்மதித்தார். சிறையில் இருந்த சந்தா சாஹேப், மானோஜி ராவிடம், தான் சரணடைந்த போதே இந்த உத்தரவாதத்தைத்தான் எதிர் பார்த்ததாகவும், இப்போது தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தி இறக்கும்படி செய்வது சரியா என்று கேட்டான். அப்படி ஒரு நிர்ப்பந்தம் இருக்குமானல், அவர்களிடம் என்னை உயிரோடு ஒப்புவிப்பதற்கு பதிலாக என்னைத் தஞ்சையில் உங்கள் கையால் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சினான். அவனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தஞ்சை மன்னர் சந்தா சாஹேபை தஞ்சையில் கொன்று அவன் உடலை முகமது அலிக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். *அதன்படி தஞ்சாவூரில் 17-6-1752 அன்று சந்தா சாஹேபின் தலை வெட்டப்பட்டு, தலை மட்டும் ஆற்காடு நவாப் முகமது அலிக்குத் திருச்சிக்கு அனுப்பப் பட்டது. உடல் தஞ்சையில் முதலில் புதைக்கப்பட்டது, பின்னர் அதுவும் எடுக்கப்பட்டு திருச்சி பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி அங்கு மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டது. (*இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது. கொவிலடியில் சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரண் அடைந்த பின், மராத்திய படைகள் பிரெஞ்சுப் படையுடன் வீரமாகப் போராடி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தது. இந்த காரியங்களுக்காக நவாப் முகமது அலி மராட்டிய மன்னன் பிரதாபசிம்மருக்கு நன்றிக் கடனாக 10 லட்சம் பணமும், திருச்சினாப்பள்ளி ராஜ்யத்துக்கு உட்பட்ட கோவிலடி, இளங்காடு ஆகிய கிராமங்களையும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் ராஜாவுக்கு நன்கொடையாக வழங்கினார். அது போலவே புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானுக்குக் கப்பத் தொகையினை இனி ஆற்காட்டு நவாபுக்குச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு இட்டான். யுத்தம் தொடங்கும் முன்பாக முகமது அலி வெற்றி பெற்றால் திருச்சினாப்பள்ளி ராஜ்யத்தை மைசூர் ராஜாவுக்குத் தந்து விடுவதாக வாக்களித்திருந்தார். மைசூர் ராஜாவுக்கு அப்படி திருச்சியைத் தருவதற்கு மனமில்லாமல் இப்போது அதன்படி நடக்க இயலாது என்பதைத் தெரிவித்தார். இதனைக் கேட்ட மைசூர் ராஜாவும், முரார்ஜி கோர்படேயும் முகமது அலியின் மீது போர் தொடுத்தனர். இப்படியொரு எதிர்பாராத யுத்தம் கூட்டணிக்குள் நேர்ந்துவிட்டதை அடுத்து முகமது அலி வழக்கம் போல தஞ்சாவூர் ராஜாவிடம் உதவி கேட்டார். இவரும் படைகளை அனுப்பி வைத்தார். அப்போது நடந்த போரில் மைசூர் ராஜாவின் படைகளில் இருந்த ஏராளமான யானைகளில் ஒன்று தஞ்சாவூருக்கு ஓடிவந்து விட்டது. போரில் தஞ்சை வீரர்கள் வெற்றி பெற்றார்கள். மைசூர் படையினரிடமிருந்து பீரங்கி ஒன்றையும் தஞ்சை வீரர்கள் கைப்பற்றிக் கொண்டு வந்தனர். மைசூர் ராஜாவிடமிருந்து திருச்சியைக் காப்பாற்றி, அதனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, திருச்சியைச் செப்பனிட்டுவிட்டு நவாப் ஆற்காடு திரும்பினார். அங்கிருந்து ஆங்கில அதிகாரிகளைச் சந்தித்து நன்றி சொல்ல சென்னைக்கும் சென்றார். அப்படி நவாப் போகிற வழியில் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகையில் மொரார்ஜி கோர்படேயின் தம்பியான புஜங்க ராவ் என்பவனும், அவனது மருமகனும் தங்கள் படையோடு வந்து நவாபை வழிமறித்துத் தாக்கினார்கள். அங்கு நடந்த போரில் நவாபின் சேனை சுட்டதில் புஜங்க ராவும், அவன் மருமகனும் இறந்து போனார்கள். அதன் பிறகு நவாப் வழியில் தொல்லை எதுவும் இல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார். இப்படி வழியில் திருவதிகையில் தனது தம்பி புஜங்க ராவும் அவன் மருமகனும் முகமது அலியோடு போரிட்டு மாண்டு போன செய்தியை முரார்ஜி கோர்படே கேட்டு மனம் துக்கப்பட்டான். அவனுக்கு எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. மிகுந்த மன வருத்தத்துடன் தனது சொந்த ஊரான கூட்டி (Gooty) க்குச் சென்று விட்டான். மைசூர் ராஜா நந்திராஜா சில காலம் திருவானைக்காவைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்து விட்டு அவனும் ஊர் திரும்பினான். 15 பகுதி பதினைந்து [] ஆற்காட்டு நவாபிடமிருந்து நமது கவனத்தைச் சிறிது தெற்கே திருப்புவோம். முன்பொருமுறை தஞ்சை மகாராஜா ராமேஸ்வரம் போய்விட்டுத் திரும்பும் போது ராமநாதபுரத்தை ஆண்டு வந்த மறவர் குல மன்னர் ஒருவர் வயது முதிர்ந்த பெரியவர் தஞ்சை மன்னனைத் தன் அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்ததைப் பார்த்தோம் அல்லவா. அப்போதிருந்து தஞ்சை மன்னர்களும் ராமநாதபுரத்து மன்னர்களான சேதுபதிகளும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். நாம் சென்ற பகுதியில் சொன்ன ஆற்காட்டு நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையே சண்டை நடந்த காலத்தில் ராமநாதபுரத்தை வயதில் இளையவரான சேதுபதி ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கும் முகமது அலிக்கும் நட்பு இருந்தது. இந்த நட்பு சாசுவதமானது என்று அவர் கருதினாரோ என்னவோ, தஞ்சை மராத்திய மன்னர்களோடு இருந்த நெருங்கிய நட்பிலிருந்து சற்று வழுவிப் போனார். தஞ்சை மன்னருக்குச் சொந்தமான பகுதிகளை ஆற்காடு நவாப் முகமது அலியின் சம்மதத்துடன் தன் வசப்படுத்திக் கொள்ளலானார். முன்பொருமுறை ராமநாதபுரம் சேதுபதி பிரதாபசிம்மரை அழைத்து மரியாதை செலுத்தினாரல்லவா, அதற்கு பதில் மரியாதையாக தஞ்சை அரசர் தனது ஆளுகைக்குட்பட்ட திருவாடனை எனும் பகுதியை சேதுபதிக்கு வழங்கியிருந்தார். அந்த மூத்த சேதுபதியின் மகன் தான் இப்போது சேதுபதியாக இருந்தவர். இவர் வயதில் இளையவர் என்பதோடு ஆற்காட்டாரின் உதவியோடு சில சில்லரை உபத்திரவங்களைத் தஞ்சை மன்னருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டி பிரதாபசிம்ம ராஜா தனது படையொன்றை மானோஜி ராவ் தலைமையில் தெற்கே அனுப்பி வைத்தார். மானோஜி ராவ் வழக்கப்படி தனது வீரம் செறிந்த படையோடு தெற்கே போய் ஹனுமந்த் காட், வரூர், மங்கள், குவடி ஆகிய கோட்டைகளைப் பிடித்தார். திருவாடனையையும் போரிட்டு மீட்டுத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார். இந்த சமயம் மானோஜி ராவை அவசரமாகத் தஞ்சைக்குத் திரும்பி வரும்படி மன்னர் கட்டளையிட்டார். போர்க் களத்திலிருந்து மானோஜி ராவ் தஞ்சை திரும்பும் செய்தியை அறிந்த ஆற்காட்டு நவாப் ஆங்கில தளபதி மாஸ்டர் ஆஃப்ரி என்பவனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் தஞ்சாவூர் ராஜா ஆங்கிலேயர்களின் கொடியை அவமதிப்பு செய்தார் என்று புகார் தெரிவித்திருந்தார். இதன் பிறகு பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜேந்திர ராஜாவுக்கு மாடிக் என்பவரின் மகளான ராஜகுமாரிபாயியைத் திருமணம் செய்து வைத்தார். இது இரண்டாவது கல்யாணம். அடுத்து நாலைந்து மாதத்திற்குள் மோத்தேயின் பெண் மோகனாபாயை மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து வைத்தார். அப்போது புதுச்சேரியில் லாலி என்பவன் பிரெஞ்சு கவர்னராக இருந்தான். அவன் காலத்தில் அதாவது 1756இல் எந்தவித காரணமும் இல்லாமல், விரோதமும் இல்லாமல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தான். இவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று தஞ்சை மன்னர் விசாரித்த போது சரியான பதிலும் கிடைக்க வில்லை. அது குறித்த செய்தி:– “His specific object was to recover the amount of the deed which Prathab Singh had given to Chanda Saheb for 56 lakhs but transferred to the French by Reza Saheb in lieu of the expenses incurred for the wars of the Nayaks.” சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டு வெற்றிபெற முடியாமல், தஞ்சை மன்னரிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்குப் போனான் அல்லவா, அப்போது தஞ்சை மன்னரிடமிருந்து ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சென்றான். அந்த பத்திரத்தை சந்தா சாஹேப் பிரெஞ்சு அதிகாரிகளிடம் அந்தப் பணத்தை தஞ்சை மன்னரிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி சம்மதம் தெரிவித்து Made Over பண்ணி கொடுத்துவிட்டான். அந்தப் பணத்தை பெறுவதற்காகத்தான் லாலி இந்த யுத்தத்துக்கு வந்தான். பிரெஞ்சுப் படை தஞ்சாவூர் கோட்டையை சூழ்ந்து கொண்டு முற்றுகை இட்டது. முற்றுகை இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்தது. பிரதாபசிம்ம ராஜாவும் கோட்டைக்கு வெளியே வந்து போரிடாமல், உள்ளே இருந்து கொண்டு கோட்டையைக் காவந்து பண்ணிக் கொண்டிருந்தார். தற்காப்பு யுத்தம் நடைபெற்றது. பொறுத்துப் பார்த்துவிட்டு மன்னர் ஒரு முடிவுக்கு வந்தார். தங்களது படைபலம் முழுவதையும் ஒன்று திரட்டிக் கொண்டு ஒரு நாள் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்து பலமாக பிரெஞ்சு படை மீது மோதிப் போரிட்டார். பிரெஞ்சு வீரர்கள் ஏராளமானோர் இறந்து வீழ்ந்தனர். பலர் தங்கள் பிரதேசத்துக்குத் தப்பி ஓடிவிட்டனர். பயந்து போன லாலி தன் பீரங்கிகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் காரைக்காலுக்கு ஓடிப்போனான். “The Tanjore troops subjected the French to severe hardship and the mutilated army commanded by the unlucky Governor reached Karaikal on 18th August 1758″. இதனை அடுத்து மகாராஜா தன் ராஜ்யத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தியானது: “நமது ராஜ்யத்தில் நாம் கடைப்பிடித்து வரும் வழக்கமானது, ஐரோப்பியர் எவராவது நமது ராஜ்யத்திற்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் நமது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார்களோ அங்காங்கு சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பதுதான். அதன் விவரம் ஐரோப்பியர் நடந்து வந்தால் ஒவ்வொருவருக்கும் ஐந்து வராகன் வீதமும், குதிரைமீது ஏறி வந்தால் அதற்கு அதிகமாகவும், பல்லக்கில் உட்கார்ந்து வந்தால் விசேஷமான வரிவிதிப்பும், சேனை போன்ற பரிவாரங்களோடு வந்தால் மகாராஜாவுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி அவர் முடிவு செய்யும் தொகையை வரியாக வசூலிக்க வேண்டுமென்பது விதி.” “தற்சமயம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் மன்னருக்கு வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அதிலும் படையோடு வருபவர்கள் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். இனி ஐரோப்பியர்கள் எந்தத் துறைமுகத்திலிருந்து வந்தாலும் வரிவிதிப்பு கிடையாது.” இதுதான் அரசர் அறிவித்த புதிய உத்தரவு. இதன் பிறகு புதுச்சேரி கவர்னர் முஸேலாலி சென்னை கோட்டைக்குச் சென்று அதனைப் பிடிக்க முற்றுகை இட்டான். அங்கு கவர்னர் லாரன்சும், கர்னல் டிராப்பரும் கோட்டைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த பிரெஞ்சு கவர்னர் திடுதிப்பென்று தங்கள் கோட்டையைத் தாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவர்கள் தஞ்சை மன்னருக்கு உதவி கேட்டு தூது அனுப்பினார்கள். அதையடுத்து பிரதாபசிம்ம ராஜா முகமது யூசுப்கான் என்பவர் தலைமையில் திருச்சினாப்பள்ளியிலிருந்து குதிரைப் படையொன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குதிரைப் படை சென்னை கோட்டையை அடைந்த போது கோட்டையைச் சுற்றி லாலியின் படைகளும், கோட்டைக்குள்ளிருந்து ஆங்கிலப் படைகளும் போருக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. அப்போது வெளியிலிருந்து அங்கு போன திருச்சினாப்பள்ளி குதிரைப் படை கும்மந்தான் முகமது யூசுப்கான் தலைமையில் பிரெஞ்சுக் காரர்களைச் சூழ்ந்து கொணது. இப்படியொரு ஆபத்து வரும் என்பதை எதிர்பார்க்காத லாலியின் பிரெஞ்சுப் படை புதுச்சேரியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள் காரைக்காலைப் பிடிப்பதற்காக லார்டு பிகாட் என்பவர் தலைமையில் வந்திருந்தனர். அவர்கள் காரைக்காலைப் பிடிக்க உதவி கேட்டனர். அதற்கும் பிரதாபசிம்ம ராஜா படைகளை அனுப்பி உதவி செய்தார். அதன் பிறகு புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட ஆங்கிலேயர்கள் உதவி கேட்க அப்போதும் மன்னர் உதவி செய்தார். இப்படி ஆங்கிலேயர்களுக்கு அடுத்தடுத்து தஞ்சை மன்னர் உதவிகளைச் செய்து வந்தார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆங்கில கவர்னர் லார்டு பிகாட் (Lord Piggot) இந்தியாவில் தன் பணியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு தூதரைத் தஞ்சாவூருக்கு அனுப்பி தஞ்சை மன்னருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது முதற்கொண்டு ஆங்கிலேயர்களுக்குத் தஞ்சை ராஜ்யத்தின் மீது அக்கறை உண்டாயிற்று. இருவரும் ஒருவருக்கொருவர் ஆபத்துக் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது என்பதை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக் கொண்டனர். 16 பகுதி பதினாறு [] தஞ்சை பிரதாபசிம்ம ராஜாவும், சென்னை கவர்னர் லார்டு பிக்காட்டும் ஒரு சமாதான, ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோம். இனி தஞ்சாவூருக்கும் ஆற்காட்டுக்கும் இருந்த உறவு, உராய்வு ஆகியவை பற்றி பார்ப்போம். சந்தா சாஹேப் கொல்லப்பட்ட பிறகு தனது நவாப் நாற்காலிக்கு எந்தவித போட்டியும் இல்லை என்ற நிலை வந்த பிறகு நவாப் முகமது அலி ஆற்காட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். அவரது போக்கில் அதிகமான மாற்றங்கள் தெரிந்தன. திருச்சினாப்பள்ளியில் நடந்த போரில் தனக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், மைசூர் ஆகிய ராஜ்யங்களின் படைகளோடு, ஆங்கில படைகளும், முரார்ஜி கோர்படேயும் சேர்ந்து வெற்றியை ஈட்டித் தந்த மகிழ்ச்சியில் ஆற்காட்டுக்குக் கப்பம் செலுத்த வேண்டிய புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ராஜ்யங்கள் இனி தங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்ற சலுகையை அறிவித்திருந்தார். ஆனால் இப்போது அவருக்கு அதிக நிதி தேவைப்பட்ட நிலையில் அவர், மேற்சொன்ன ராஜ்யங்கள் தங்களுக்கு மீண்டும் கப்பம் செலுத்த வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை உண்டாக்கினார். திருச்சினாப்பள்ளிக்கு வந்து ஆற்காட்டு நவாப் மேற்சொன்ன ராஜாக்களை அழைத்து அவர்கள் உடனடியாக பழைய ஆண்டுகளுக்கும் சேர்த்து கப்பத் தொகையைத் தர வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தினார். ஆனால், போரின் முடிவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகையை இப்போது நீக்க வேண்டிய அவசியம் குறித்தும், இப்போது பழைய பாக்கியையும் சேர்த்துத் தாங்கள் கப்பம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதையும் அவர்கள் நவாபிடம் எடுத்துச் சொன்னார்கள். நவாவு அவற்றில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. கப்பத் தொகை பெற்றே தீருவது என்ற ஒரே முடிவில் இருந்தார். மீறி இவர்கள் கப்பம் செலுத்தவில்லையானால் அவர்கள் மீது போர் தொடுக்கவும் தயாரானார். [] நவாபின் இந்தப் போக்கு சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளை எட்டியது. அவர்கள் தஞ்சாவூர் ராஜாவும் மற்றவர்களும் ஆற்காட்டு நவாப் சந்தா சாஹேபுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தபோது எத்தனை உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளுக்குக் கைமாறாக அவர்களுக்கு அறிவித்த சலுகைகளை இப்போது மாற்றிக் கொள்வது பற்றி நவாப் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உதவி செய்தவர்களுக்கு நவாப் செய்யும் கைமாறு இதுதான் என்று சொல்லி பூதலூரில் ஒரு சமாதான கூட்டம் ஏற்பாடு செய்தார்கள் ஆங்கிலேயர்கள். 1758ஆம் ஆண்டுக்குச் சரியான தமிழ் வெகுதான்ய வருஷம் பூதலூரில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. “The Nawab demanded from Prathaba Singh all arrears of tribute. Lord Pigot, the Governor of Madras deputed Mr.Josiah Du Pre, the second in council to settle the terms of the tribute payable to the Nawab. Accordingly it was agreed that the Raja Prathab should pay by five instalments in about 2 years, 22 lakhs of Rupees in discharge of the outstanding arrears with a further sum of 14 lakhs as a present to the Nawab and also an annual tribute of 4 lakhs afterwards.” இந்த உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் பிரதாபசிம்ம ராஜாவின் மகன் துளஜேந்திர ராஜாவின் இரண்டாம் மனைவி ராஜகுமாரிபாயிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. முன்பு குப்பி என்பவளுடைய மகன் காட்டுராஜா என்ற பெயரில் தஞ்சாவூர் ராஜ்யம் தனக்குத்தான் என்று உரிமை கொண்டாடி வந்தானல்லவா, அவனைத் தூண்டிவிட்டு அவனுக்குப் பின்பலமாக இருந்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கோயாஜி காங்க்டே என்பது. இவன் காட்டுராஜாவை நாட்டைவிட்டுத் துரத்திய பிறகு ஓடிப்போய் அரியலூர் காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு அவன் ஒளிந்திருக்கும் செய்தி தஞ்சாவூருக்குக் கிடைத்தது. ஒரு சிறு குழுவாக வீரர்கள் அரியலூர் காடுகளில் தேடி அலைந்து அவனைப் பிடித்துக் கொன்று போட்டார்கள். பிரதாபசிம்ம ராஜா தஞ்சாவூரில் இப்படி பல காலம் திறமையோடும், ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப், சுற்றுப்புற ராஜ்யாதிபதிகள் ஆகியோருடன் ஒற்றுமையாக இருந்து ராஜ்யபாரம் செய்து கொண்டு வந்தார். அவருடைய காலத்தில் தஞ்சை ராஜ்யத்தின் புகழ் வடக்கே சதாரா, புனா, ஒளரங்காபாத் வரையில் பரவியிருந்தது. கிழக்கே அச்சி, யாழ்ப்பாணம், கண்டி தேசம், சிங்களம் வரையிலும், மேற்கே ஸ்ரீரங்கப்பட்டணம், பிதலூர் தேசம், குத்தி, கிருஷ்ணா தீரம், பண்ணானகாட் வரையிலும் பரவியிருந்தது. பிரதாப சிம்ம ராஜாவின் உத்தமமான நடத்தை, அவர் செய்து வந்த தான தர்மங்கள், அவருடைய உதார குணம், மக்களுக்கு நன்மை செய்ய பல நடவடிக்கைகளை எடுத்தது, எதிரிகள் அஞ்சும்படியான வீரம் இவற்றால் அவருடைய புகழ் அதிகரித்தது, அவரது ராஜ்யத்தின் விஸ்தீரணம் அதிகரித்தது. மக்கள் மன்னரை மனதாரப் புகழ்ந்தார்கள். இப்படி மக்களின் ஆதரவைப் பெற்ற வேறு முடியரசர்கள் யாராவது உண்டா என்பது சந்தேகமே! இத்தனை புகழுக்கிடையிலும் ராஜா சில தவறுகளைச் செய்யத் தவறவில்லை. அதில் ஒன்று, தன்னுடைய முந்தைய ராஜாக்கள் காலத்திலும், தன்னுடைய காலத்திலும் பல போர்க்களங்களுக்குச் சென்று தஞ்சாவூர் ராஜ்யத்துக்குப் பல வெற்றிகளைக் கொண்டு வந்து குவித்தவரும், போரில் சந்தா சாஹேபைப் பிடித்துக் கொண்டு வந்து சிறை வைத்து, பின்னர் நேரம் வந்த போது அவரை பலிகொடுத்து ஆற்காட்டு நவாப் முகமது அலியின் நட்பை பெற காரணமாக இருந்தவருமான தளபதி மானோஜி ராவை, அவரோடு ஏற்பட்ட ஏதோவொரு மனஸ்தாபம் காரணமாகப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு டபீர் நரோ பண்டிதர் என்பவரை சர்க்கிலாக நியமித்தார். இந்த சர்க்கில் என்கிற பதவி செயலாளர், நிர்வாக அதிகாரி போன்ற ஒரு உயர் பதவி. ராஜா செய்த பெரும் தவறு இதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜாவின் உடல் நிலை, வயது முதிர்வின் காரணமாக கெட்டு வந்தது. தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராஜாவும் உணர்ந்திருந்தார். அவருக்கு இயலாமை காரணமாக அதிகம் கோபம் வந்து எல்லோரிடமும் கடுகடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனம் சோர்வடைந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள். [] உதாரணமாக, ராஜா சுவாமி தரிசனம் செய்வதற்காகத் திருவாரூர் ஆலயத்துக்குச் சென்றார். அங்கு வழியில் காவலுக்கு வந்த சேவகர்கள் ஓடிவந்த போது ராஜா மீது தூசி படிந்து விட்டது. இதற்காக அந்த காவலர்களின் தலைகளை வெட்டும்படி உத்தரவிட்டு விட்டார் ராஜா. இது என்ன இப்படி? ஒன்றுமில்லாத அற்பச் செயலுக்காக காவலர்களின் தலையை வெட்டுவதாவது? என்று மக்கள் வருத்தமடைந்தனர். இதைப் போன்ற பல தீயச் செயல்களை மன்னர் தனது இறுதிக் காலத்தில் செய்யத் தொடங்கினார். நாட்டிலும், அரண்மனையிலும் சில தீய சகுனங்கள் ஏற்படலாயின. ராஜா காலமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இரவில் 12 நாழிகைக்கு மேல் 22 நாழிகை வரைக்கும் பெருத்த அழுகுரல் எங்கிருந்தோ கேட்க ஆரம்பித்தது. அந்த அழுகைச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், கோட்டைக்குள்ளிருந்துதான் வந்தது போல் இருந்தது. ஆனால் கோடைக்குள்ளிருந்து கேட்டால் வெளியிலிருந்து வருவது போல் கேட்டது. இது என்ன மர்மம் என்று அனைவரும் திகைத்தார்கள். இப்படி சுமார் மூன்று மாத காலம் அழுகுரல் நள்ளிரவில் கேட்டால் எப்படி இருக்கும்? இது தவிர அரண்மனையின் மேல்புறத்தில் நாயக்கர் காலத்திய கோபுரம் ஒன்று இருந்தது. அது திடீரென்று இடிந்து வடக்குப் புறமாக விழுந்தது. இது ஒரு அபசகுனம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். துக்கோஜி ராஜா என்று இவரது முன்னோர் ஒருவர் ஆட்சி புரிந்தார் என்பதை பார்த்தோமல்லவா? அவருடைய ஆசை நாயகிகளின் பிள்ளைகளில் இறந்தவர்கள் போக மீதமிருந்த நானா சாஹிப் என்ற பிள்ளை மட்டும் அப்பு என்ற பெயரோடு இருந்தான். அவனும் இந்த நேரத்தில் இறந்து போனான். இந்த அப்புவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிற்பாடு பிரதாபசிம்ம ராஜா தம்முடைய மகன் துளஜேந்திர ராஜாவுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்லி, நல்ல நினைவு இருக்கும்போதே சுபானு வருஷம் ஒரு நாள் தெய்வகதி அடைந்தார். அவரை ஸம்ஸ்காரம் செய்யும்போது அவருடைய சிதை நெருப்பில் வீழ்ந்து அவருடைய மூன்றாவது மனைவி யமுனாபாயி சாஹேபும், ஐந்தாவது மனைவி சக்கவாற்பாயியும் உடன்கட்டை ஏறி மாண்டு போனார்கள். துளஜேந்திர ராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. [] முடிசூட்டு விழாவுக்கு ஆற்காடு நவாப் முகமது அலிகான் வஸ்திர மரியாதைகளையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். இது தவிர நவாப் ஓர் அரிய பரிசையும் ராஜாவுக்காக அனுப்பியிருந்தார். அது ஒரு பறவை. “முதர் முறுக்” என்ற பெயர் கொண்ட ஒன்றரை ஆள் உயரமுடைய, அதாவது 9 அடி உயரம் உள்ள ஒரு அபூர்வ பறவை. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போல இருந்தது. இப்படியொரு அபூர்வ பரிசை ஆற்காடு நவாப் அனுப்பினார். அதன் பிறகு துளஜேந்திர மகாராஜா நாலைந்து வருஷங்கள் தனது தந்தையைப் போலவே தர்ம நெறி தவறாமல், மக்களுக்கு நன்மை செய்து கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். 17 பகுதி பதினேழு [] தஞ்சை ராஜ்யத்தை நீண்ட நாட்கள் ஆண்ட மன்னர் எனும் பெருமைக்குரியவரும், பல வீரதீர போராட்டங்களில் வெற்றி பெற்று தஞ்சையை தலை நிமிர வைத்தவருமான பிரதாபசிம்ம ராஜா தனது முதிர்ந்த வயதில் காலமான செய்தியையும், அவருடைய மகன் துளஜேந்திர ராஜா பட்டத்துக்கு வந்ததையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி துளஜா ராஜா பற்றி பார்க்கலாம். துளஜா பதவியேற்ற நாலைந்து வருஷங்கள் பிரதாபசிம்மரைப் போலவே திறமையாகவும், நல்ல பெயரோடும் குறை சொல்ல முடியாத அளவில் ஆட்சி புரிந்து வந்தார். ஆற்காட்டு நவாப் முகமது அலிகானிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தார். மதுரை முமதீன் (கும்மந்தான்) மகமது யூசுப்கான், மைசூரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஹைதர் அலி ஆகியோரிடமும் நல்ல தொடர்பும், நல்ல பெயரும் வாங்கியிருந்தான். அப்போது மைசூர் ராஜா பரம்பரையினர் மைசூர் அரண்மனையில் இருக்க வைத்துவிட்டு, ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து கொண்டு ராஜ்ய பாரம் செலுத்தி வந்தார். ஹைதர் அலி பதவிக்கு வந்த பிறகு பல இடங்களின் மீது படையெடுத்து மகத்தான் வெற்றிகளையும் பெற்றிருந்தார். அது போலவே ஹைதர் ஆற்காட்டு நவாபின் மீது படையெடுத்து வந்தார். அங்கிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீதும் கண் வைத்துக் கொண்டு இந்தப் பக்கமும் வரத் தொடங்கினார். அப்படி வந்த அவரது படைகள் திருமுல்லைவாடி எனுமிடத்தில் தங்கிக் கொண்டு துளஜாவுக்கு செய்தி சொல்லி அனுப்பினார். தஞ்சை ராஜாவிடம் ஹைதர் நான்கு லட்சம் வராகன் பணமும், நான்கு யானைகளையும் வாங்கிக் கொண்டு யுத்தம் செய்யாமல் திரும்பப் போய்விட்டார். [] “Tanjore did not escape the depradations of Haidar and in 1769 he made plundering raid into the country. The Raja got terrified and in order to save his people’s lives, he finished the affair with Haidar by paying a trifle, i.e. 4 lakhs of Rupees and four elephants.” தஞ்சை ராஜ்யத்தில் துளஜேந்திர ராஜாவிடம் உசேன்கான் சூர் என்பவர் ‘காறுபாறு’ எனும் பதவியில் இருந்தார். இவர் ஆற்காடு நவாபுக்குச் சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயர் மூலம் செலுத்தாமல் தானே நேரடியாகக் கொண்டு போய் செலுத்தினார். இவர்களுக்குள் இருந்த ஒப்பந்தப்படி பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயரிடம் கொடுத்து, அவர்கள்தான் நவாபுக்குக் கொடுப்பார்கள். இந்த உசேன்கான் சூர் இப்படிச் செய்ததால் நாட்டுக்கு ஆபத்து வரவிருந்தது. நாகப்பட்டினத்தில் கப்பலில் வந்து இறங்கிய யானையொன்று தஞ்சாவூருக்கு வரவேண்டியது, அதனை சிவகங்கை ராஜ்யத்தின் ராஜா தனக்கு என்று அந்த யானையைக் கொண்டு போய்விட்டார். அந்த யானை தஞ்சாவூருக்கு என்று தெரிந்தும் சிவகங்கை ராஜா கொடுக்காததால் கோபமடைந்த தஞ்சாவூர் ராஜா சிவகங்கை மீது படையெடுத்துச் சென்றார். அங்கு நடந்த போரில் அவர்களுடைய கோட்டையை இடித்து உட்புகுந்து வெற்றி பெரும் நேரத்தில் துளஜாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவனைத் தோற்கடித்து கோட்டையை இடிப்பதால் நமக்கு என்ன லாபம். நம் யானையை மீட்டுக் கொண்டு, படையெடுத்து வந்த செலவையும் நஷ்ட ஈடாக மேலும் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணம் கொண்டார். அந்த எண்ணத்தை அவர்களிடம் சொல்லவும், அவர்களிடமிருந்து, தான் பிடித்துக் கொண்ட பகுதிகளைத் தாங்களே வைத்துக் கொண்டு, போருக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் வராகன் பணமும் முப்பதாயிரம் பெருமானமுள்ள நகைகளும், இரண்டு பெரிய யானைகளையும், இரண்டு பீரங்கிகளையும் பெற்றுக் கொண்டு வெற்றியோடு தஞ்சாவூருக்குத் திரும்பி வந்தார். [] “The regent of Ramnad came to terms according to which the Tanjore Raja was allowed to remain in possession of the tracts conquered by him and to receive one lakh of rupees in specie and thirty thousand rupees in jewels, two large elephants and two pieces of Cannon.” ஊர் திரும்பிய துளஜா ராஜா தனது இரண்டாவது மனைவியாகிய ராஜகுமாரிபாயியின் மகளை காட்டிகே ராவ் என்பவனுக்கு மிக விமரிசையாக செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். இப்படி தஞ்சாவூர் ராஜா செலவுகளை அதிகரித்துக் கொண்டு போன காரணத்தால் இரண்டு வருஷங்களாக ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் கொடுக்கப்படாமல் நிலுவையில் தங்கிவிட்டது. இந்த செய்தி அறிந்த ஆற்காடு நவாபு முகமது அலிகான் துளஜாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. வடக்கே இருக்கும் அவனது உறவினர்களும் நல்ல செல்வாக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். துளஜாவும் தன் தகப்பனைப் போலவே நல்ல வீரனாகவும் இருக்கிறான். ஆகவே இவன் கூடிய விரைவில் மிக செல்வாக்கு உள்ள அரசனாக ஆகிவிடுவான். அப்படி அவன் செல்வாக்குப் பெறுவது நமக்கு ஆபத்தாகக்கூட முடியலாம். ஆகையால் அவனை இதற்கு மேல் வளர விடாமல் தடுக்க ஒரு உபாயம் தேடினான். அவன் இதுவரை கொடுக்காமல் இருக்கும் கப்பப் பணத்தை உடனடியாகக் கொடுக்கச் சொல்லி கேட்டு, அப்படி அவன் கொடுக்க முடியாமல் போனால், தஞ்சாவூரை நமது படைகளைக் கொண்டு ஆக்கிரமித்து அவனை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்று திட்டமிட்டான். அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு தூதனை தஞ்சாவூருக்கு அனுப்பித் தங்களுக்கு சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும், இல்லையேல் தங்கள் படையோடு வந்து தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வோம் என்று நவாபு சொல்லி அனுப்பினார். அப்போது துளஜாவுக்கு அமைந்து மராத்தியப் பிரதேசத்து துர்மந்திரிகள் ராஜாவின் மனதைக் கெடுத்து ஆற்காட்டு நவாபு கேட்கிறபடி பேஷ்கஷ் பணத்தைக் கொடுக்கக்கூடாது என்று உபதேசம் பண்ணினார்கள். நாம், பிரதாபசிம்ம ராஜா காலத்தில் பதவி இழந்து ஒளிந்து மறைந்து வாழ்ந்த நவாபுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்ததோடு, அவரது எதிரியான சந்தா சாஹேபையும் பிடித்துக் கொடுத்த நன்றியை மறந்து இப்போது அவர்கள் நம்மிடம் பேஷ்கஷ் கேட்பது சரியில்லை. ஆகையால் கொடுக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள். [] இந்த பதிலினால் ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் முகமது அலிகான் எப்படியும் தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வது என்ற வெறியில், துளஜாவின் தந்தை பிரதாபசிம்மர் செய்த உதவிகளையும் மறந்து தனது மகனான உம்தத் உல் உமரா என்பவனின் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ள அனுப்பினான். இந்தப் படை தஞ்சாவூர் கோட்டையை முற்றுகையிட்டு யுத்தம் செய்தது. அந்த நிலையிலும் துளஜாவுக்கு அமைந்த துர்மந்திரிகள் ஆற்காட்டு நவாபின் படைகளோடு யுத்தம் செய்வதுதான் சரி என்று யுத்தம் செய்யத் தூண்டினார்கள். அப்போது ராஜாவின் அழிவுக்கு இந்த துர்மந்திரிகள் வழிவகுக்கிறார்கள் என்பதை அறிந்த ராஜ சபையில் இருந்த ஊர்ப்பெரியவர்கள் மன்னனிடம் சென்று நவாபுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து சமாதானமாகப் போய்விடுவதுதான் சரி, அனாவசியமாக சண்டை நடந்தால் பல உயிர்கள் போய்விடும் என்று சொல்லி எச்சரித்தார்கள். இந்த யோசனையை மன்னன் ஏற்றுக் கொண்டு, ஆற்கட்டு படை செலவுக்காக எட்டு லக்ஷ வராகனும் அது தவிர பல லக்ஷம் பெருமான நகைகளும் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான். இவை போக இன்னும் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்துக்காக ராஜ்யத்தின் மாயூரம், கும்பகோனம் போன்ற பகுதிகளை அவர்களுக்கு உரிமைச் சாசனம் பண்ணிக் கொடுத்து விட்டார். [] இப்படி துளஜா ராஜாவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட உம்தத் உல் உமரா தஞ்சைக் கோட்டையைச் சுற்றிக் கொண்டு மேற்குப் புறமாகப் போய் வல்லத்துக் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தபடி திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலிருந்த கோயிலடி, இளங்காடு சீமையை தம்முடைய சுவாதீனத்தில் எடுத்துக் கொண்டு, திருச்சினாப்பள்ளிக் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான். “By the first settlement dated 20th of October 1771, Tulajaaji agreed to pay eight lakhs of rupees as arrears of tribute … By the second settlement dated 25th Oct. 1771 the Rajah assigned the district of Mayuram and part of the district of Kumbakonam yielding an annual revenue of sixteen and a quarter lakhs of rupees for two years in lieu of the payment of 32-1/2 lakhs of rupees estimated as war indemnity.” “As the possession of the Fort of Vallam, the key of Tanjore was of utmost importance to the Wallajah interests, the Nawab directed his son Umdut Ul Umara who settled the terms, to obtain possession of it. A fresh negotiation ensured and Umdat Ul Umara forced the helpless Rajah to restore not only Vallam but also Koyilady and Elangadu to the Nawab.” பிறகு துளஜா ராஜா யஷ்வந்த் ராவ் என்பவரை சென்னைக்கு அனுப்பி, நவாபைச் சந்தித்துச் சமாதானம் பேசும்படி அனுப்பி வைத்தார். அப்போது நவாப் சமாதானம் பேசும் மன நிலையில் இல்லாததால், அவரோடு பேசாமல், அவருக்கு ஒரு குதிரையையும், சில வஸ்திரங்களையும் கொடுத்து, துளஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார். துளஜா நவாபுக்கு ஏராளமாகப் பணத்தையும் கொடுத்து, ராஜ்யத்தின் சில பகுதிகளையும் எழுதிக் கொடுத்து விட்டதால் ராஜ்யத்தில் பணத் தட்டுப்பாடு வந்தது. அந்த நேரம் பார்த்து நவாபு தனது படைத் தளபதிகளை அழைத்து, அவர்களுடன் தனது படையொன்றையும் அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்தார். அப்போது வடக்கே யிருந்து மாதவ ராவ் சதாசிவ் என்பவனும் அங்கு வந்திருந்தான். அவனையும் தன் இரண்டாவது மகனான அமீருல் உமரா   என்பவனுடன் தஞ்சைக்கு அனுப்பினான். நவாபின் அந்தப் படை தஞ்சாவூருக்கு வந்து சண்டை செய்து கோட்டைக்குள் புகுந்து ராஜ்யத்தையும் அபகரித்துக் கொண்டது. டபீர் நாரோ பண்டிதர் என்ற அமைச்சரை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள நியமித்துவிட்டு சிலகாலம் கும்பகோணத்தில் தங்கியிருந்துவிட்டு, பிறகு சென்னைக்குத் திரும்பினர். இந்த வகையில் துளஜா கையிலிருந்து தஞ்சாவூர் ராஜ்யம் நவாபுக்குச் சென்று அப்படி இரண்டு மூன்று வருஷங்கள் தஞ்சை நவாப் ஆட்சியில் இருந்தது. [] “Tanjore experienced the worst calamity during the three years, when the Nawab controlled the Kingdom with his men. During the interval of about 2 years and seven months (actually from 17th September 1773 to 11th April 1776) between the dethrownment and reinstatement of Raja Thulaja the country remained under the direct Govt. of Nawab of Arcot.” 18 பகுதி பதினெட்டு [] மராத்திய போன்ஸ்லே வம்சத்தாரின் ஆளுகை தஞ்சாவூரில் அதுவரை சுமார் நூறு ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது. இது வரை மராத்திய மன்னர்கள் ஆளுகையில் மற்றவர்கள் எப்படியிருந்த போதிலும், மன்னருடைய பாதுகாப்பு படை வீரர்கள் மாவீரர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படைகள் மட்டும் யுத்த களத்துக்கு அனுப்பப் பட்டிருந்தால் எத்தனை பெரிய சேனையையும் இவர்கள் துவம்சம் செய்திருப்பார்கள். அப்படியிருந்தும் தஞ்சாவூர் கோட்டை மராட்டியர் கையிலிருந்து நவாபின் கைக்குப் போக காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு ஒரு காரணத்தை மக்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட குற்றம்தான் என்ன? பார்ப்போம். துளஜா ராஜா தஞ்சாவூர் ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்ட நாள் முதலாக பெரிய அளவில் தான தர்மங்கள் எல்லாமும் செய்து வந்தார். வேத விற்பன்னர்களுக்கு சர்வ மான்னியங்கள் அளித்து, குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, கோயில்கள், கிறிஸ்து தேவாலயம், மசூதிகள் இவைகளை அவரவர் விரும்பியபடி கட்டிக் கொடுத்தும் வந்திருக்கிறார். அப்படிப்பட்டவைகளுக்கு நிரந்தரமான மான்யங்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். துளஜா நல்ல அறிவாளி. நன்றாகக் கல்வி கற்றவர். நல்ல தோற்றமும் உடையவர். மகா வீரன். இப்படியிருந்தும் இவருக்கு அமைந்த மந்திரிகள் துர்மந்திரிகளாகப் போய்விட்டனர். இதனால் ராஜாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல தவறான தீய காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட தீய கும்பலில் லிங்கோஜி போன்ஸ்லே என்று ஒருவன். இவனை தஞ்சை வட்டாரத்தில் ‘கிளிப்பிள்ளை அண்ணா’ என்று குறிப்பிடுவார்கள். இவனுக்கு ராஜ்ய நிர்வாக அறிவோ, விஷயங்களை நன்கு கிரகித்துக் கொள்ளும் சாமர்த்தியமோ கிடையாது. சதாராவிலிருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக இவனை ராஜா தன் மந்திரியாக வைத்துக் கொண்டிருந்தார். ராஜாவைச் சுற்றியிருந்த துர்மந்திரிகளில் இவந்தான் தலைமையானவன். கோனேரி ராவ் என்றொரு ஆரணி பிராமணன். இவன் ராஜாவிடம் ஜமேதாராகப் பணி புரிந்து வந்தார். ஏதோ அரசாங்க காரியமாக அரண்மனைக்கு வந்த கோனேரி ராவ் இந்த லிங்கோஜியிடம் வாதம் புரிய நேரிட்டது. அப்போது லிங்கோஜியின் ஆட்கள் சிலர் அவனோடு இருந்தனர். அவர்களில் ஒருவன் கோனேரி ராவை அவமரியாதையாகப் பேசினான். இதைக் கேட்டு கோபங்கொண்ட கோனேரி ராவ் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவனோடு சண்டை செய்யப் போனார். அப்போது லிங்கோஜியும் அவனோடு இருந்த மற்றவர்களும் ஒன்று சேர்ந்து கோனேரி ராவைக் காயப்படுத்தி வீழ்த்தி விட்டார்கள். கடுமையான காயத்துடன் கோனேரி ராவ் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தான். [] அங்கு அவன் கிடந்த நிலையை யார் பார்த்தாலும் லிங்கோஜியும் அவனது நண்பர்களும் வேண்டுமென்றே தவறு செய்திருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். அந்த குற்ற உணர்வும் லிங்கோஜிக்கு இருந்தது. இந்த செய்தி மன்னனுக்கு எட்டியவுடன் அவர் உடனே அந்த மனிதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்திருந்தால் பிழைத்திருப்பான். ஆனால் லிங்கோஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் உள்ளே சென்று ராஜாவிடம் கோனேரி ராவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கோள் மூட்டிவிட்டு, அவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அரண்மனை சேவகர்கள் அவரைத் தாக்கிவிட்டார்கள் என்று பொய் சொன்னான். ராஜாவும் தன் மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற கவலையில் இருந்ததால், அந்த கோனேரி ராவை கால்களைப் பிரியால் கட்டி இழுத்துக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே போட்டுவிடும்படி உத்தரவு இட்டார். அதன்படியே கடைநிலை ஊழியன் ஒருவன் அவர் கால்களைக் கட்டித் தெருவோடு இழுத்துச் சென்றான். போகும் வழியில் பாதியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. இது மிகவும் கொடூரம், இதனால் இந்த நாட்டுக்கு ஏதோ கேடு வரத்தான் போகிறது என்று மக்கள் பேசினார்கள்.இந்த சோக நிகழ்ச்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தனர். இப்படி ஒருவனை அநியாயமாகக் கொலை செய்த பாவம் தான் இப்போது ராஜா பதவியை இழந்து தவிக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். தஞ்சாவூர் ராஜ்யத்தை தங்களுக்கு கப்பப் பணம் வரவேண்டுமென்பதற்காக ஆற்காடு நவாப் பிடித்துக் கொண்டு ஆக்கிரமித்திருக்கும் செய்தியை ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்த Court of Directors க்கு தகவல் அனுப்பினார்கள். எப்போதும் சென்னையிலிருந்து ஆங்கில அதிகாரிகள் கம்பெனி மேல் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் ஆற்காட்டு நவாப் பற்றிய செய்திகளை எழுதுவார்கள். ஏனென்றால் தென் இந்தியா முழுவதிலும் உள்ள பாளையக்காரர்களிடமிருந்தெல்லாம் கப்பத் தொகையை வாங்கும் அதிகாரத்தை கம்பெனிக்கு ஆற்காட்டு நவாப்தான் கொடுத்திருந்தார். அப்படி நவாப் முகமது அலிகானுடைய விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆங்கில கம்பெனியார், இதுவரை தஞ்சாவூர் ராஜாவால் இந்த ஆற்கட்டு நவாப் நன்மைகளைத்தானே அடைந்து வந்திருக்கிறான். அப்படியிருக்க கப்பப் பணம் செலுத்தவில்லை என்பதைக் கூறி தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீது தன் மகன் தலைமையில் படை அனுப்பி சண்டையிட்டு அவர்களிடம் கப்பப் பணமும், யுத்த செலவுகளையும் வாங்கிக் கொண்ட பிறகும், நவாப் நியாயமில்லாமல் தஞ்சாவூர் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டது மிகவும் அநியாயம். தஞ்சாவூர் ராஜா நெடுங்காலமாக செய்து வந்த உதவிகளையெல்லாம் மறந்துவிட்டு, நன்றிகெட்டத் தனமாக நவாப் நடந்து கொண்டதால், ஆங்கிலேய கம்பெனியார் லார்டு பிக்கெட் (Lord Pigot) என்பவரைச் சென்னைக்கு கவர்னராக நியமனம் செய்து அவரைப் போய் தஞ்சாவூர் ராஜ்யத்தை மீட்டு மராட்டிய ராஜாவிடமே ஒப்படைத்துவிட்டு வரும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்கள். கம்பெனியாரின் உத்தரவுப்படி சென்னை வந்த லார்டு பிக்கெட் தஞ்சாவூருக்கு வந்து நவாபிடமிருந்து ராஜ்யாதிகாரத்தை மராத்திய ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்து கம்பெனிக்கும் தகவல் அனுப்பி வைத்தார். இதெல்லாம் நடந்தது ஏப்ரல் 1776இல். துளஜா ராஜாவுக்கு இந்த ஏற்பட்டினால் மிகுந்த சந்தோஷம். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருடைய கருணையினால், நீதி, நேர்மை இவற்றல் தனக்கு ராஜ்யத்தை மீண்டும் அடைந்ததற்காக ஆங்கில அதிகாரிகளிடம் தஞ்சை கோட்டையின் கிலேதார் Foujdar ஆகிய சேனாதிபதி பதவிகளை ஒப்படைத்தார். அந்த அதிகாரிகளின் ஆங்கில படைகளுக்கான செலவுக்கு என்று பல நிவந்தங்களையும் ராஜா செய்து வைத்தார். இது தவிர ஆங்கிலேயர்களுக்கு லட்சம் பொற்காசுகளும், நாகூர் பிரதேசத்திலுள்ள 277 கிராமங்களையும் இனாமாகக் கொடுத்தார். [] தானமாகத் தரப்பட்ட கிராமங்களின் விவரம்:– கீவளூர் பிரதேசம் … 41 கிராமங்கள் சிக்கல் … … 62 கிராமங்கள் செம்பியன்மாதேவி … 34 கிராமங்கள் பாலக்குறிச்சி … 27 கிராமங்கள் மாகிளி … 27 கிராமங்கள் கிள்ளுக்குடி … 25 கிராமங்கள் தேவூர் … 31 கிராமங்கள் அடியக்கமங்கலம் … 8 கிராமங்கள் நாகூர் துறைமுகம் … 1 கிராமம் வலிவலம் … 21 கிராமங்கள் ஆக மொத்தம் 277 இப்படியொரு ஒப்பந்தம் ஆன பின்பும் ஆற்காடு நவாபு தஞ்சாவூர் ராஜாவிடமிருந்து தனக்குக் கப்பம் வரவேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டான். அதற்கு ராஜா நவாபு அநியாயமாகத் தஞ்சாவூர் கோட்டையைப் பிடித்துக் கொண்டு காலங்காலமாகச் சேர்த்து வைத்திருந்த நகைகளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போய்விட்டதைக் கணக்குப் பார்த்தால் கப்பத் தொகையைப் போல இரண்டு மடங்கு கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று தெரிவித்தான். இப்போதுள்ள ராஜ்யம் ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்த ராஜ்யம், ஆற்காட்டு நவாபுக்கு எந்த விதத்தில் நமக்குத் தொடர்பு கிடையாது, ஆகவே கப்பம் கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசாமல் இருந்து விட்டான். முன்பு கோனேரி ராவ் என்பவருக்கு நாம் இழைத்த கொடுமையினால்தான் தமக்கு இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்துவிட்டன. நாட்டை இழந்து செல்வம் இழந்து தவித்த போது வெள்ளைக்காரன் தயவில் மீண்டும் அவற்றைப் பெற்றோம். லிங்கோஜி போன்ஸ்லே போன்ற துர்மந்திரிகளின் கெடு மதியால் நான் இழைத்த தீங்கிற்காக வருந்தும்படியாகிவிட்டது. பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இனி இப்படிப்பட்ட துன்மார்க்கர்களை அண்ட விடக்கூடாது. உத்தமமான மனிதர்களைத்தான் தனக்கு அமைச்சர்களாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள்தான் துரோகம் செய்ய மாட்டார்கள். கொடும் செயல்களைச் (அகாத கிருத்தியம்) செய்யப் பயப்படுவார்கள் என்று நிச்சயித்துக் கொண்டான். [] துளஜாவின் மூன்றாவது மனைவி மோகனாபாயிக்குக் குழந்தை வரம் வேண்டி நீடாமங்கலத்தில் ஒரு ராமர் கோயிலும், புஷ்கரணியும் வெட்டி வைத்தார். அதன் பலனாய் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு மோகனாபாயி தானும் இறந்து போனாள். தனக்கு ஆண் குழந்தை இல்லாமையால் ராஜா சுலக்ஷணாபாயி, மோகனாபாயி இருவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். மோகனாபாயிக்கு ஒரு மகன் பிறந்து பத்தே நாட்களில் இறந்து போயிற்று. அதன் பின்பு ஒரு பிள்ளை பிறந்தது. அதுவும் ஆறு வயதில் வைசூரி போட்டி இறந்தது. 19 பகுதி பத்தொன்பது [] துளஜா ராஜா தனது ஆட்சி காலத்தின் தொடக்கத்திலேயே பல சிக்கல்களைச் சந்தித்தான். அவன் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளும் இறந்து போன செய்திகளையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி …. [] Thulaja Raja துளஜா ராஜாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகளை எட்டு வயது ஆகும்போது காட்டிகே ராவ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த மகளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மாருதிசாமி என்று பெயர். அதற்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாந்தம்மாள் என்று பெயரிட்டனர். சாந்தாபாயி என்று சொல்வார்கள் அந்தக் குழந்தையை. இவ்விரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டு ராஜாவின் இரண்டாவது பெண் காலமாகிவிட்டாள். தன் மகள் வழியில் பிறந்த இவ்விரு பேத்தி குழந்தைகளையும் ராஜா அன்போடு வளர்த்து வந்தார். அவ்விரு குழந்தைகளும், ராஜாவின் தந்தையார் பிரதாபசிம்மர் காலமான ஆண்டிலேயே இறந்து போயினர். இப்படி துளஜா ராவாவுக்கு தனக்குப் பிறந்த பிள்ளைகளும் இறந்து, மகள் வழியில் பிறந்த பேரப் பிள்ளைகளும் இறந்து தனிமைப் பட்டுப் போனார். ராஜாவின் மனம் வருத்தமடைந்தது. குடும்பத்தில் நேர்ந்த இந்த இழப்பை நினைத்து நினைத்து ராஜா ராப்பகலாம உணவு சரியாக உண்ணாமல், தூக்கம் சரியாகத் தூங்காமல் மூன்று வருஷங்கள் படுத்த படுக்கையில் கிடந்தார். [] ஆற்காடு மீண்டும் தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தஞ்சை மராத்திய மன்னர்கள் தங்களுக்கு இனி கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்று முதலில் நவாப் முகமது அலி அறிவித்திருந்த போதிலும், சில நாட்கள் கழித்துத் தங்களது நிதி நிலைமை சரியில்லாமல் போகவே, தஞ்சாவூர் ராஜ்யம் தங்களுக்குக் கப்பம் செலுத்தத்தான் வேண்டும், அதிலும் விட்டுப்போன ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டது. அதன் காரணமாக நவாபின் மகன் தலைமையில் ஒரு படையை அனுப்பித் தஞ்சையைப் பிடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் பண்ணியதையும், ஆங்கில கம்பெனியாரின் தலையீட்டின் பேரில் நவாப் படைகள் திரும்பப் போன பிறகு துளஜா ராஜா ஆட்சியைப் பெற்ற வரலாற்றையும் பார்த்தோம். அப்படி அவர் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற போதிலும் அவருடைய பிரச்சனைகள் தீர்ந்துவிடவில்லை. மைசூரின் ஹைதர் அலி 1781இல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் தஞ்சையை ஆட்சி செய்யும்படி ஆயிற்று. அந்த காலகட்டத்தில் தஞ்சை ராஜ்ய மக்கள் அனுபவித்தத் துன்பங்களுக்குக் குறைவில்லை. மக்களைத் துன்புறுத்தி கடுமையான வரிவசூல் நடைபெற்றது. நாட்டில் பஞ்சம் ஒரு புறம். விளைச்சல் மிகவும் குறைந்து போனது. 1780இல் விளைந்த நெல்லின் அளவைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக விளைச்சல் இருந்தது. மைசூர் படையெடுப்பின் காரணமாக தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல பகுதிகளில் விளை நிலங்கள் பயிரிடப்படாமல் போயிற்று. நீர் நிலைகளும் சேதப்பட்டிருந்தன. ஆகையால் நீர் வரத்தும் இல்லை. மக்களில் பெரும் பகுதியினர் பிழைப்பு நாடி வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. . தஞ்சாவூர் ராஜ்யத்தின் ஊர்களையெல்லாம் ஹைதரின் படைகள் சூழ்ந்து கொண்டன. அந்த காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் ஒரு கொடிய பஞ்சம் தோன்றியது. மக்களுக்கு உண்ண உணவில்லாமல், நாளொன்றில் அறுனூறு எழுனூறு பேர் இறக்கலாயினர். கொடுமைகளில் எல்லாம் கொடுமை சிலவிடங்களில் நரமாமிசம் சாப்பிட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த கோளாறுகளை யடுத்து 1782இல் திப்பு சுல்தானும் தன் பங்குக்குத் தஞ்சை மீது படையெடுத்து வந்தார். பிரெஞ்சுக்காரர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். இவர்கள் இணைந்து ஆங்கில கம்பெனியாரின் படையைத் தோல்வியுறச் செய்து மாயூரம், சீர்காழி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளை யடித்தார். இந்தத் தொல்லைகளுக்கு விடிவு காண்பதற்காக துளஜா ராஜா ஆங்கிலக் கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தஞ்சை அரண்மனையில் ஆங்கிலேயர் படையை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். மராட்டிய மன்னர் ஆங்கிலப் படைகளை நம்பி வாழ வேன்டிய ஒரு சூழ் நிலையும் உருவாயிற்று. “On the 20th July 1780 Hyder Ali with a formidable army descended into the Carnatic Payenghat through the Chengamma Pass. Slowly extending his depradations, he crossed Coleroon river in May 1781 and entered Tanjore Kingdom. He over ran the entire country. Closely following this devastation famine broke out in the Tanjore country. Many thousands have died of want.” தஞ்சை ராஜ்யத்தில் பஞ்சமும், ஹைதர் அலியின் படையெடுப்பும், இங்கிருந்த சூழ்நிலைகளின் காரணமாக முடிவுக்கு வந்தது. துளஜா ராஜாவுக்குத் தான் இனி நிரம்ப நாட்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது புரிந்து விட்டது. தனக்குப் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ பிறந்தும் தங்கவில்லை. தன் உயிரும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தனக்கு இறந்த பிறகு கொள்ளியிடவோ, ராஜ்யத்தைக் ஆட்சி புரியவோ வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்ற தவிப்பு ஏற்பட்டது. துளஜா தனது தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தார். தந்தை பிரதாபசிம்மர் ஒரு ராஜரிஷி போல வாழ்ந்தார். புகழையும், வெற்றியையும், பெருமையும் அடைந்திருந்தார். எண்ணற்ற உறவினர்களை யெல்லாம் அனுசரித்துக் கொண்டு ஆதரித்து வந்தார். மாலையானால் பறவைகள் மரங்களை நாடி வருவது போல எங்கெங்கிருந்தெல்லாமோ உறவினர்கள் ராஜாவை நாடி வந்து சேர்ந்தனர். இவ்வளவு பெருமை அவருக்கு இருந்த போதும், அவர் பற்றிய ஒரு நெருடல் மட்டும் துளஜாவுக்கு இருந்து வந்தது. அதாவது பிரதாப சிம்மருடைய தந்தையாரான துக்கோஜி திருமணம் செய்து கொள்ளாமல் வைத்துக் கொண்டிருந்த மனைவிக்குப் பிறந்தவர் இவர் என்பதுதான் அது. அப்படியொரு அவப் பெயர் தனக்கு ஏற்படும்படியாகத் தான் நடந்து கொள்ளவில்லை என்பதில் துளஜாவுக்கு திருப்தி. தனக்கு வாரிசு சட்டப்படியும் இல்லை. உரிமையில்லாத வகையிலும் இல்லை. ஆகையால் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைய குலத்தில், மராட்டியத்தில் இருக்கும் தனது தாயாதியர், உறவினர்களின் வகையில் நல்ல அழகும், நற்குணங்களும், ராஜ வம்சத்துக்கு ஏற்ற லட்சணங்கள் உள்ள ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அதற்கு ஜாதக கர்மாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். [] (ஜாதக கர்மா என்றால், பிள்ளை பிறந்தவுடன் தந்தை வடக்கு திசை நோக்கிச் சென்று ஸ்நானம் செய்து, எள், நெல், பொன், வஸ்திரங்கள், பசு, நிலம் இவைகளையோ, அல்லது இவற்றில் சிலவற்றையோ தானமாகக் கொடுத்து, சுப கிரகத்தின் நேரம் அமைந்ததும், தன் சொந்த பந்தங்களோடு, ஸ்வீகாரம் எடுக்கப் போகும் பிள்ளையின் முகத்தைப் பார்த்தல், பிறகு ஒரு சுப நட்சத்திரம், சுப நாள், சுப ராசி பார்த்து ஜாதகர்மா செய்து கொள்வது.) மராத்தியர்களின் பூமியான புனா, சதாரா முதலான பகுதிகளுக்குத் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ராஜாவுக்குத் தகுந்த வாரிசு அங்கு ராஜ வம்சத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வரப் பணித்தார்கள். அப்படி சதாரா பகுதிக்குப் போன தூதர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது. அந்த பிள்ளையை ராஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று. அந்தப் பிள்ளைக்கு “சரபோஜி” என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. யார் இந்த ‘சரபோஜி’? சத்ரபதி சிவாஜி, தஞ்சை மராட்டிய வம்சத்தில் முதல் ராஜாவாக இருந்த ஏகோஜி ஆகியவர்களின் தந்தை ஷாஜி. அவருடைய மனைவி ஜீஜா பாயிக்குப் பிறந்தவர் சத்ரபதி சிவாஜி. மற்றொரு மனைவிக்குப் பிறந்தவர்கள் ஏகோஜி, விட்டோஜி ஆகியோர். இந்த விட்டோஜி சதாராவிலும், புனாவிலும் ஆட்சி புரிந்தார். இந்த விட்டோஜிக்கு எட்டு பிள்ளைகள். அவர்கள் சம்பாஜி, கெலோஜி, மாளோஜி, பரகோஜி, நாகோஜி, மம்பாஜி, கக்காஜி, திரயம்பகராஜா ஆகியோர். இந்த எட்டாவது பிள்ளையான திரயம்பகராஜாவுக்கு கெங்காஜி என்று ஒரு மகன் இருந்தான். கெங்காஜிக்கு பூவாஜி, தாபூஜி என்று இரண்டு மகங்கள். பூவாஜிக்கு கெங்காஜி என்று மகன். கெங்காஜிக்கு சுபான்ஜி என்றொரு பிள்ளை. சுபான்ஜிக்கு பூவாஜி, ஷாஜி என்று இரு பிள்ளைகள். இவ்விருவரில் ஷாஜி என்பவரின் பிள்ளைதான் இப்போது துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளும் பிள்ளை சரபோஜி. என்ன குழப்புகிறதா? சரி. இந்த குடும்ப மரத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு குழப்பம் தீரலாம். [] [text2985] இப்படி போன்ஸ்லே வம்சத்தில் ஏகோஜியின் வாரிசுகளின் வழியில் பிறந்த குழந்தை ஒன்று துளஜாவுக்கு ஸ்வீகாரப் புதல்வனாக அமைந்தது அவருக்கு மனத் திருப்தியை அளித்தது. அந்த குழந்தையை முறைப்படி சாஸ்திரோக்தமாக, சம்பிரதாயங்களை அனுசரித்து “நெளபத்” அடித்துக் கொண்டு அழைத்து வந்தனர். ‘நேளபத்’ அப்படியென்றால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சகலவிதமான வாத்திய கோஷ்டிகள் முழங்க ஊர்வலமாக வருவது என்று பொருள். Noubet: Cerimonial music, the right to use which was specially granted by the Government. குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் வழி நெடுக மக்களுக்குச் சர்க்கரை இனிப்பு வழங்குவர். உறவினர்கள் அனைவரும் ஊர்வலமாக உடன் வர, எல்லா சடங்க்குளையும் செய்து குழந்தையை மகனாக ஸ்வீகாரம் ஏற்றுக் கொண்டார்கள். 1787 ஜனவரி 22ஆம் நாள் துளஜா ராஜா சரபோஜியைத் தனது ஸ்வீகார மகனாக ஏற்றுக் கொண்டார். அது சரி, இந்த ஸ்வீகார நிகழ்ச்சி பற்றி எதற்கு இத்தனை build up என்றுதானே நினைக்கிறீர்கள். புரிகிறது. இந்த சரபோஜிதான் தஞ்சை மராத்திய மன்னர்களில் கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சிகள், இசைக் கலைஞர்களை ஆதரித்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட முதன்மையான ராஜாவாகத் திகழப் போகிறார். அதனால்தான். பிரதாபசிம்மர் போர்க்களத்திலும், வீரத்திலும் சிறந்து வின்றார் என்றால் சரபோஜி மேற்சொன்ன கலை, இலக்கியஸ் சமாச்சாரங்களில் சிறந்தவராக இருந்தார் என்பதால்தான் இத்தனை செய்திகள். சாஸ்திர முறைப்படி துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட போதும், அரசியல் ரீதியாக ஆங்க்கில கிழக்கிந்திய கம்பெனியார், சென்னை கவர்னரின் உத்தரவுப்படி அதனை அங்கீகரிக்க வேண்டும். ஆகையால் துளஜா ராஜா, ஜான் ஹடுல்ஸ்டன், சேனைத் தலைவர்கள், கர்னல் இப்ஸ்லி, கமாண்டர் இஷ்டோட், கிறிஸ்தவ மத போதகரான பாதிரியார் ஸ்வார்ட்ஸ் ஆகியோரிடமும் தனது தத்து பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஹடுல்ஸ்டன் என்பவர் தஞ்சாவூரில் ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக Resident எனும் பதவியில் இருந்தவர். துளஜா தனது தத்துக் குழந்தையான சரபோஜியை அந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கையில் ஒப்படைத்து, இனி அவனை வைத்துத்தான் ராஜ்ய பாரம் நடத்த வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாலைந்து நாட்களில் வசந்த பஞ்சமி தினத்தில் ஒரு சிறந்த முஹூர்த்த நேரத்தில் பிரதாப ராமசாமி மகால் (மால்) எனும் சபையில் தர்பார் நடத்தி, நாட்டியம் உட்பட கலா நிகழ்ச்சிகள் நடத்தி அரசாங்க சிம்மாசனத்தில் குழந்தை சரபோஜியை உட்கார வைத்து அவையோர் அனைவரும் அவனை ஆசீர்வதித்தனர். அந்தக் குழந்தைக்கு ராஜாவுக்கு உண்டான மரியாதைகள் செய்த பின்னர் துளஜா மனது அமைதி அடைந்தார். சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம்:– Letter dated January 26, 1787 to Sir Archibald Campbell, Governor of Madras as translated by Maratha Interpreter. “It has been my wish for two or three years past to adopt a son; but as I have had no opportunity of carrying it into execution, it has hitherto been delayed. Having now resolved to choose one out of my near relations, I have fixed upon the son of Shahajee (the son of Soubajee Rajah, my near cousin by lineal descent) who is ten years old and proper in all respects. Accordingly on the 2nd of Rubbi Sanni (22nd Jan.) in consequence of my wishes, I adopted and named him Serbojee Rajah with all the forms of our religion; this has afforded great relief to my mind. As your Excellency is my friend and favourer, I have written a letter to give you this pleasing information. I am firmly convinced that whatever favour and protection I have received from the Hon’ble Company and from your Excellency will hereafter be continued to my child Serbojee without deviation.” [] இப்படியொரு கடிதத்தை துளஜா ராஜா சென்னை கவர்னருக்கு அனுப்பினார். 20 பகுதி இருபது [] துளஜேந்திர ராஜா தனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதால், தன் உறவில் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியை சென்னையில் இருந்த ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதிய செய்தியை முந்தைய பகுதியில் பார்த்தோம். இனி….. தஞ்சாவூர் ராஜ்யத்தில் அரண்மனையில் துளஜா ராஜா செய்துவந்த இதுபோன்ற செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு இவரது நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இவருடைய நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களது எதிர்பார்ப்புகள் வேறு. துளஜா மிக சீக்கிரத்தில் இறந்து போவார். வாரிசு இல்லாமல் அவர் இறந்து போனதும் ராஜாங்கம் யாருக்கு என்று போட்டா போட்டி நடக்கும். அப்போது அவரவர்க்குக் கிடைத்ததைச் சுருட்டலாம் என்று காத்திருந்தார்கள் அவர்கள். அரண்மனை நிறைய இதுபோன்ற துர்புத்தி படைத்தோர் நிறையவே இருந்தார்கள். அவர்களுடைய குறை, முறைப்படியான, எல்லா தகுதிகளும் படைத்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதோடு, அவனை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேறு ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்கு நல்ல கல்வியைக் கற்பித்து, உத்தமமான ராஜாவாக ஆக்கிவிட்டார்களானால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கவலை அவர்களுக்கு. துளஜாவின் இயலாமை காரணமாக அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு கிடைத்ததைச் சுருட்டித் தின்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சில சுய நலக்காரர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதானும் மாற்று கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்கள். பிரதாபசிம்மராஜா இருந்த போது அவருடைய ஆசை நாயகி அன்னபூரணாபாயி என்ற ஒருவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தது என்பதையும், அதில் கிருஷ்ணசாமி என்கிற ஒருவன் இறந்து போனதையும் ராமசாமி என்ற மற்றொருவன் அமரசிம்மன் என்ற பெயரில் இருந்து வந்ததையும் பார்த்தோம் அல்லவா? அவன் துளஜா ராஜாவுக்குத் தம்பி முறை ஆகிறது. . இவன் திருவிடைமருதூரில் இருந்து வந்தான். அந்த அமரசிம்மனைத் தேடிப் பிடித்தார்கள் அரண்மனையில் இருந்த தீயமனம் படைத்தோர். இவனுக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்ற போதிலும், இளைய வயதுக்காரன், மேலும் பிரதாபசிம்ம ராஜா விட்டுச் சென்றிருக்கிற ஒரு வாரிசு. இவனை முன்னிருத்தி ராஜாவாகக் கொண்டு வர வேண்டும். அதிலும் துளஜா இருக்கும் போதே அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் துளஜா ராஜா மனச்சோர்வோடு இருந்த ஒரு நாள், அமர் சிங்கை அவர் முன்பாகக் கொண்டு வந்து நிருத்தினார்கள். அந்த அமர்சிங் தான் ராஜாவுக்கு வாரிசு, தனக்குத் தம்பி முறை என்று சென்னை கவர்னருக்கு மன்னர் எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படி கடிதம் எழுதிய மறு நாள் அதாவது 1787 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ராஜா இறந்து போனார். மாண்டு போன ராஜாவுக்கு உத்தரகிரியைகளை அமர்சிங்கை விட்டுச் செய்யச் செய்தார்கள். ஒப்புக்காக உடன் சரபோஜியையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு தஞ்சை பேராசைக் காரர்கள் சென்னைக்குச் சென்று கவர்னரை சரிக்கட்டுவதற்காகப் போய் முகாமிட்டார்கள். அங்கு கவர்னர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் அவருடைய மனைவி லேடி ஆர்சிபால்டு கேமல் என்பவரை மெதுவாக நயிச்சியம் பேசி தன்னக் கட்டிக் கொண்டார்கள். அவர் மூலம் கவர்னரையும் சரிக்கட்டி விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. கவர்னர் இந்த விஷயம் குறித்து கல்கத்தாவில் இருந்த அவர்களது தலைமை பீடத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார். [] துளஜா ராஜா இறந்து போன செய்தி குறித்து பியர்சன் என்பவர் எழுதியிருக்கும் பகுதி இது: – “The next morning Rajah who was rapidly sinking requested the attendance of the Resident Mr.Hudleston, Col. Stuart, the Commandar of the Garrison and Mr.Swartz. The dying prince then sent the following message to them. After stating that in compliance with the suggestion of Mr.Swartz, he has appointed Amar Singh to the Guardian of the Child and regent of the Country, till he should be capable of succeeding to the throne.” “In the course of the evening after the preceding conversation the Rajah’s mother visited him and earnestly interceded on behalf of Ramasamy, afterwards called “Amar Singh”. This combined with the advice of Father Swartz determined Thulaja Raja to adopt the plan proposed. He accordingly sent for his brother delivered his adopted son into his hands, desired him to be his guardian and earnestly commended him to his care and affection. But before his death he wanted to adopt some one to succeed him and for that purpose, he chose Serfojee from a collateral branch and appointed his brother Amar Singh as Regent till the boy came of age.” [] இதற்கு முன்பாக அமர்சிங்கின் ஆதரவாளர்கள் தஞ்சை அரண்மனையில் இருந்த ஆங்கில அதிகாரிகளைச் சரிக்கட்டி வைத்திருந்தார்கள். ஆங்கில அதிகாரிகளும் இவர்கள் எண்ணப்படி நடந்து கொள்ள சம்மதித்திருந்தார்கள். கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், தஞ்சாவூருக்கு வந்து, சரபோஜி, அமர்சிங் இவர்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அழைத்து விசாரித்து விட்டு 12 பேர் கொண்ட ஒரு குழுவை விசாரித்தார்கள். அந்தக் குழு அமர்சிங்கின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள். அவர்கள் எந்த சாத்திரமும், ராஜ்ய சாஸ்திரமும் அறியாதவர்கள். நியாயம், தர்மம் இவற்றையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த பன்னிருவர் குழு தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆளும் உரிமை அமர்சிங்குக்குத்தான் உண்டு என்று கவர்னரிடம் ஒப்புதல் அளித்தார்கள். இந்த விசாரணைக்குப் பின் கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், அமர்சிங்கை அழைத்து 1787 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தஞ்சை ராஜாவாக பட்டம் கட்டி அமரவைத்தார். அமர்சிங். அமர்சிங் தஞ்சாவூர் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார். ராஜாங்க நியாயப்படி சரபோஜிதான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் செய்த சூழ்ச்சியினால் அமர்சிங் அந்தப் பதவியில் அமர்ந்தார். தான் அரசனாக ஆனதும் இந்த அமர்சிங்கினால் சிறுவன் சரபோஜிக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. துளஜா ராஜா தான் இறக்கும் தருவாயில் தனது ஸ்வீகார மகன் சரபோஜிக்கு பாதிரியார் ஸ்வார்ட்சை பாதுகாவலராக நியமித்துவிட்டிருந்தார் அல்லவா? அதனால் அவர் அடிக்கடி அரண்மனை வந்து சரபோஜியைக் கவனித்துக் கொண்டார். அப்படி அவர் அரண்மனையில் இருந்த போது கவனித்த வகையில் அங்கு சரபோஜிக்குச் சரியான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கோண்டு சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதினார். அந்த நிலையில் தஞ்சாவூருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னர் புதிய ரெசிடெண்ட் ஒருவரை நியமித்திருந்தார். அவர் மூலம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தின் விவரங்களை கவர்னர் இங்கிலாந்தில் இருந்த கம்பெனி டைரக்டர்களுக்குத் தெரியப் படுத்தினார். அதன் பேரில் கம்பெனியார் பிறப்பித்த உத்தரவு ஒன்று தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உத்தரவில், சரபோஜியை அமர்சிங்குடைய தொல்லையிலிருந்து விடுவித்து, அந்தச் சிறுவனை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசம் ஒப்படைத்து அவனுக்குத் தனி அரண்மனையை ஒதுக்கி அங்கு அவனுக்குத் துணையாக சில பண்டிதர்களையும் நியமிக்க வேண்டுமென்று இருந்தது. “The next morning he (Serfojee) for the first time, since his confinement saw the Sun.” வெளி உலகைக்கூட பார்க்கமுடியாதபடி உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சரபோஜி அன்றுதான் சூரியனைப் பார்த்தான் என்று எழுதுகிறார்கள் என்றால், அப்போதிருந்த நிலைமையை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா? “Having noticed that the house, was nearly cleaned out and Serfojee’s furniture removed there. I (Resident) conducted him to it and placed a guard of 12 sepoys over him. I have ordered a proper person, recommended by Mr.Swartz, a Maratha Brahman named Dhada Rao to attend to his education.” தஞ்சையின் ஸ்தானீகர் (Resident) 1789 அக்டோபர் மாதம் எழுதிய குறிப்பு இது. கிழக்கிந்திய கம்பெனியார் சரபோஜிக்கும், அவனுடைய குடும்பத்தாருக்கும் செலவுக்கு ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். “An establishment was formed amounting to one thousand and seventy seven star pagodas monthly for Serfojee and his relatives and one thousand star pagodas each to the three widows of the deceased Rajah.” இது 24-9-1790இல் எழுதப்பட்ட குறிப்பு. அதன் பிறகு சரபோஜி வீணாக பொழுதைப் போக்காமல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜியிடம் காட்டிய அன்பும், அரவணைப்பும், பரிவும் ஒரு தந்தை மகனிடம் காட்டிய அன்பைப் போன்றது. இந்த அன்புப் பிணைப்பினால் சரபோஜி பல கலைகளையும், மொழிகளையும், பண்பாடுகளையும் கற்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது. ஆங்கிலம் தவிர சரபோஜியின் தாய் மொழியான மராத்தியையும் படிக்க, எழுத, பேச மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் மொழியும் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. இப்படி சரபோஜி பல மொழிகளில் பாண்டித்தியம் பெறுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயனுடையதாக இருந்தது. சென்னை கவர்னரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அமர்சிங் சரபோஜிக்குக் கொடுத்து வந்த தொல்லைகளை நிறுத்தச் செய்தார். இப்படி எத்தனை நாட்கள் சரபோஜியைத் தஞ்சையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு கொடுக்க முடியும். அவனை சென்னைக்குக் கொண்டு வந்து கல்வி பயிற்றுவித்து, வீரம் செறிந்த ஓர் மன்னனாக உருவாக்க வேண்டும் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முடிவு செய்தார். கம்பெனி அதற்கு சம்மதித்தது. ஸ்வீகாரத் தாயாரும் துளஜாவின் மனைவியுமான சுலட்சணாபாயி காலமானதை அடுத்து அவருடைய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மற்ற இரு தாயார்களுடன் சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் துணையோடு சென்னைக்குச் சென்றனர். அங்கு இவர்கள் கவர்னரின் மாளிகைத் தோட்டத்து பங்களாவில் தங்கிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார். சென்னையில் கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வசித்து வந்த சரபோஜிக்கு கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு Gerick (கெரிக்) என்பவரை பொறுப்பாளராக நியமித்துவிட்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்குத் திரும்பினார். சென்னையில் புதிய காப்பாளருடன் விடப்பட்ட சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தன்னுடன் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பாரோ, அதே மகிழ்ச்சியுடன் கெரிக் என்பவருடனும் பழகிக் கொண்டு வாழ்ந்தார். இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியார், தஞ்சை அரசுக்கு வாரிசு அமரசிம்மனா, சரபோஜியா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு பண்டிதர்களின் குழு பரிசோதித்து அமர்சிங் தான் என்று முடிவு செய்தார்களல்லவா? அந்த குழுவினர் ஆதாரமாகக் காட்டிய சாத்திர நூல்களைக் கொண்டு வாருங்கள் என்றனர் கம்பெனியார். அமர்சிங்கையும் இது குறித்து விசாரித்தார்கள். இந்த ஆவணங்களை யெல்லாம் காசியில் இருந்த மகா பண்டிதர்களுக்கு அனுப்பி அவர்களுடைய முடிவைக் கேட்டிருந்தனர் கம்பெனியார். “The Board resolved to call on the most learned Pandits in Bengal and Benaras for answers to the substance of the questions put to the Pandits at Tanjore that those questions were translated by the late Sir William Jones into Sanskrit and transmitted to the Pandits of bengal and Benaras whose answers had been duly received and translated for the use of the Board.” [] சரபோஜியையும் பாதுகாப்பு கொடுத்து அமர்சிங் தொல்லை கொடுக்க முடியாதபடிக்கு தஞ்சையில் தங்கியிருக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தனர். அவரும் அதன்படி Gerick உடன் சென்னையிலிருந்து கிளம்பி வருகின்ற வழியில் திருக்கழுக்குன்றம் சென்று அங்கு பறவை தரிசனம் (அங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது இருக்கிறது. அங்கு தினமும் கோயில் பிரசாதம் அருந்த இரு கழுகுகள் வந்து அந்த கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும். இதனை மக்கள் கூடியிருந்த தரிசனம் செய்வர்.) செய்து கொண்டு வந்தார். முன்பு அமர்சிங்கிடம் இருந்த பயத்தாலும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு எந்த சாஸ்திரமும் தெரியாத 12 பேர் பொய்யான சாஸ்திரங்க்களைச் சாட்சியாகக் காட்டினார்களல்லவா? அவர்களில் இறந்து போனவர்கள் போக, மீதமுள்ளவர்கள் தங்களுக்கு எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது என்றும், பொய்யாக அப்படி எழுதிக் கொடுக்கச் சொன்னபடி எழுதிக் கொடுத்தோம் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டார்கள். இந்தச் செய்தியையும் பாதிரியார் சென்னை கவர்னருக்குத் தெரியப் படுத்தினார். பொய்யான தகவல்களைச் சொல்லி சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்தது செல்லாது என்று அமர்சிங்கை அரச பதவியில் உட்கார வைத்த அந்த 12 மகா பண்டிதர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? 1. பாடலாச்சார்யா 2. மாதவாச்சார்யா 3. தாதா ராவ் 4. ஜனாச்சாரி 5. அப்பா சாஸ்திரி 6. ராமா சாஸ்திரி 7. சத்யநிதி ஆச்சார்யா 8. நரசிம்மாச்சாரி 9. ஜனாச்சாரி (2) 10. புஜங்க ராவ் 11. பாப்பண்ணா 12. மாதவாச்சாரின் மருமகன் இவர்களுள் ஜனாச்சாரி சன்னியாசியாகி விட்டார். தாதா ராவை விசாரித்த போது தான் பொய் சொன்னதாக அழுது கொண்டே சொன்னார். ஜனாச்சாரி (2) தனக்கு உண்மையில் எந்த தர்ம சாஸ்திரமும் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அப்பா சாஸ்திரி தனக்கும் தர்ம சாஸ்திரம் தெரியாது, மற்றவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டதாகச் சொன்னார். இப்படி பலரும் தாங்கள் போலி ஆசாமிகள் என்பதை ஒப்புக் கொண்டனர். இந்த விவரங்களையெல்லாம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் கம்பெனி அதிகாரிகளுக்கு எழுதினார். அவர்கள் அமர்சிங்கை பதவி நீக்கம் செய்து அனுப்பி விட்டு சரபோஜியை அரசராக ஆக்கும்படி எழுதினார்கள். அதன்படி சரபோஜி 1798 ஜுன் மாதம் சரபோஜி II எனும் பெயரோடு அரச பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில கம்பெனியார் நீதி நெறி முறைகளுக்குப் புறம்பாக அரசபதவிக்கு வந்த அமர்சிங்கை நீக்கிவிட்டு சரபோஜியை அரசராக அறிவித்த செயலுக்கு தஞ்சை ராஜ்யத்து மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். 21 பகுதி இருபத்தொன்று []Serfoji II[] சென்ற பகுதியில் துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சிறுவன் சரபோஜி இங்கிலீஷ் கம்பெனியாரின் துணையோடு அமர்சிங்கைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தஞ்சாவூர் ராஜயத்தின் ராஜாவாகப் பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இந்த அமர்சிங்கைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தேசபக்தன் எனவும் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் இப்போது போக வேண்டாம். தஞ்சாவூர் ராஜதானியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம். இனி…. சரபோஜி, இந்தப் பெயர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாற்றில் பெருமைக்குரிய பெயராக விளங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது காலம் தஞ்சையின் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது என்பதையும் அனைவரும் அறிவர். அவர் காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்து வந்தனர். அதிலும் அவர்கள் அனைவரும் சரபோஜியின் ஆளுகைக்குட்பட்ட ஊர்களில்தான் இருந்தனர் என்பதும் பெருமைக்குரிய விஷயம். வைத்திய சாஸ்திரத்தில் வல்லவர்களும், தமிழ்ப் புலவர்களும் இவருடைய சபையில் ஆதரிக்கப் பட்டனர். இவர் செய்த ஒரு புதுமை என்னவெனில், வைத்திய சாஸ்திர நுணுக்கங்களை வைத்தியர்கள் எழுத, அதனைக் கவிதை வடிவில் புலவர்கள் வடித்து வைக்க, இன்றும்கூட “சரபேந்திர ராஜ வைத்திய முறைகள்” எனும் கவிதை நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவை சரஸ்வதி மகால் நூலகத்தின் வெளியீடுகள். சரபோஜி II என்ற அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்படும் மன்னர் சின்னஞ்சிறு இளைஞனாக பதவிக்கு வந்து நீண்ட காலம் பதவி வகித்து முதிர்ந்த வயதில் காலமானார். இவர் பதவிக்கு வந்தவுடன் தான் பதவுக்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற அநியாயங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்தார். மக்கள் பல தொல்லைகளை அனுபவித்த காரணத்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும் பல காரியங்களை நடைமுறைப் படுத்தினார். ராஜாங்கத்தின் கணக்கு வழக்குகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த பெரும் பெருச்சாளிகளைத் துரத்திவிட்டு, அவற்றைச் சீர் செய்தார். தனக்குச் சமமான அந்தஸ்து உள்ள காட்டிகே குலத்திலிருந்து யமுனாபாயி, அகல்யாபாயி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு வரவேண்டியிருந்த பாக்கி பணத்தைத் திரும்பப் பெற்றார். தஞ்சாவூரில் அப்போது Resident எனும் பதவியில் இருந்தவரான Macleod என்பவர் சரபோஜியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இவர் மீதான புகார்களை சரபோஜி மன்னர் 1800ஆம் வருஷம் மே மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதம் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதன் பேரில் தஞ்சை அரசாங்க அதிகாரிகள் சிலரை கம்பெனியார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். [] அதன்படி தத்தாஜியப்பா என்பவருடைய தலைமையில் மேலும் இரண்டு அதிகாரிகளைச் சென்னைக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார் சரபோஜி. கம்பெனி அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ரெசிடெண்ட் மெக்லோட் மீது தவறு இருப்பது தெரிய வந்தது. ஆகையால் அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரெசிடெண்ட் மெக்லோட் பதவி போனதும் மிகவும் மனம் நொந்து போனார். சரபோஜிக்குத் தான் இழைத்த தீங்குகள் அவரது மனச்சாட்சியை வருத்தியிருக்க வேண்டும். அவரும் அவருடைய மனைவியும் ராஜாவிடம் சென்று தங்கள் பதவி போனபிறகு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லி வருத்தப் பட்டனர். ராஜாவும் மிகவும் பெருந்தன்மையுடன், அவர் தனக்குச் செய்த தீங்குகளை நினையாமல் அவருக்கு பதினாயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். ராஜா சரபோஜியின் இரண்டாவது மனைவி அகல்யாபாயிக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுலட்சணாபாயி என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். சரபோஜிக்கு முன்பாக ராஜ்யத்தை ஆண்ட அமர்சிங் சரியான முறையில் ஆட்சி செய்யாததால் மக்கள் வருத்தமடைந்ததை யொட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் தாங்களே ராஜ்யத்தை ஆள முன்வந்த போது சரபோஜியும் அதற்கு சம்மதித்து ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனி கவனித்துக் கொள்ள அனுமதித்தார். மெக்கன்சி சுவடிகளின் படியும், மராத்திய வரலாற்றுச் செய்திகளின்படியும், பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படியும் அமர்சிங்கின் மீது பல குறைகள் கண்டுபிடிக்கப் பட்டாலும், நிலைமை அப்படி இல்லை என்பதும் வேறு பல வழிகளில் தெரிய வருகிறது. அமர்சிங்கைப் பற்றிய ஓர் ஆங்கில வரலாற்றாசிரியரின் கூற்றைப் பாருங்கள். [] “A liberal prince (Amar Singh) no doubt, he worked for the welfare of his people. Anxious to promote cultivation, he granted an increase of the ryot’s share of the produce, suspended the colletion of duties on grain exported for the relief of the famine sticken Ramnad in 1794, set up a Court and introduced individual settlement in the place of the village settlement.” அமர்சிங் காலத்தில் அவர் அமைச்சர் சிவராயரை தற்போது குடிவாரம் எவ்வளவு என்று கேட்க அவர் ‘அனேக நாட்களாக குடிமக்கள் 100க்கு 30 வாரம் பெறுகின்றனர்’ என்றார், உடனே அமர்சிங் இனி 100க்கு 40 வீதம் கொடுங்கள் என்று உத்தரவிட்டாராம். இதிலிருந்து ராஜா மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. எனினும் சரபோஜியையும், ஆங்கில கம்பெனியாரையும் ஆதரிப்போர் அமர்சிங் பற்றி ஒரு அவதூறான செய்தியைப் பரப்பி அவரை நீக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அமர்சிங்குக்கு அரசுரிமை இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால் அவர் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினாரா இல்லையா, மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இருந்ததா இல்லையா என்பது வேறு. எனவே அவரை பூதம் போல உருவகப் படுத்தும் முயற்சி நடைபெற்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் கணிக்க முடிகிறது. இல்லையா? தஞ்சாவூருக்கு ராஜா சரபோஜி மன்னனாக வந்த பிறகு ஆங்கிலேய கம்பெனியார் தங்கள் படைகளை கோட்டையிலிருந்து விலக்கிக் கொண்டு காலி செய்து கொடுத்தனர். அது வரையிலும் தஞ்சை ராஜாவை நம்பாதவர்கள் சரபோஜி வந்ததும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். தஞ்சை ராஜாங்கப் பணிகளை கம்பெனியார் எடுத்துக் கொள்ள வேண்டுமெங்கிற முடிவை எடுத்த போது கல்கத்தாவிலிருந்து கம்பெனியின் இந்திய தலைமை அகம் சென்னை கம்பெனியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதன்படி சரபோஜியின் சம்மதத்தைப் பெறும்படி கூறியிருந்தனர். ராஜாவும் தனது மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார். தஞ்சை மன்னர் சரபோஜியும் ஆங்கில கம்பெனியாரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஆங்கிலப் படை தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறிவிடும் என்றும், அதன் பின் ராஜா கோட்டையைத் தன் விருப்பப்படி வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த ஒப்பந்தம் சொல்லியது. அந்த ஒப்பந்தப்படி கம்பெனியார் ராஜாவின் செலவுகளுக்காக ஒரு லட்சம் நட்சத்திர பகோடா பணமும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கையும் எல்லா செலவுகளும் போக மீதியை அமர்சிங்கை ஆதரிப்பதற்காகக் கொடுப்பதென்றும் தீர்மானித்தது. ஆண்டுக்கு 25000 பகோடா அமர்சிங்குக்குக் கொடுக்க முடிவானது. இந்த ஒப்பந்தம் 1801இல் செய்து கொள்ளப் பட்டது. [] இனி கொஞ்சம் ராஜாங்க சமாச்சாரத்துக்கு மாறான சில சொந்த விவகாரங்களைப் பார்க்கலாம். ராஜா சரபோஜி இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோமல்லவா. அந்தத் திருமணத்துக்கு முன்பாக அவருக்கு ஒரு நல்ல அழகியும், குணவதியுமான பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணும் ராஜாவுக்கு மனதுக்கு உகந்த வகையில் நடந்து கொண்டு அன்னியோன்னியமாக இருந்து வந்தாள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. இரண்டாவது பிரசவத்தின் போது அந்தப் பெண்ணும் இறந்து போனாள். அவள் ஒரு நாள் ராஜாவிடம் தன் நினைவாக அன்னசத்திரம் ஒன்றை கட்ட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்படியொரு விருப்பத்தைத் தெரிவித்திருந்த காரணத்தால், அவள் காலமானதும் ராஜா அவள் விருப்பப்படி ஒரு அன்ன சத்திரம் கட்ட முடிவு செய்தார். அந்தப் பெண்ணின் பெயர் “முக்தாம்பாள்”. அவளுடைய பெயரில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரத்தநாட்டில் ஒரு அக்ரகாரம், கோயில், குளம், தோட்டம் இவற்றையும் அமைத்து அங்கு வேத பண்டிதர்களையும் குடியமர்த்தி அங்கு “முக்தாம்பாள் சத்திரம்” நிறுவப் பட்டது. இந்த சத்திரம் தொடர்ந்து நன்றாக நடைபெறும் வகையில் அதற்கென்று நிலபுலங்கள் நிவந்தங்களாகத் தரப்பட்டன. இந்த ஆவணம் 1802 ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி துன்மதி வருஷம் துவக்கி வைக்கப்பட்டது. அந்த சத்திரத்தின் வாசலில் இருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகின்ற செய்தி இதோ:– “ஸ்ரீமத் போஸ்லே வம்சோத்தம இந்த்ரபதி சிரேஷ்டப்ரஸாத ஜனித ப்ரதாப ஸ்வீக்க்ருததில்லீ வானுபாக ஸ்வாதந்தர்ய வ்பட்சக்ருத தில்லி ராஜ்ய ஸார்வபெளம க்ஷோணீச குலலாம சோளாவனீ நாயக தஞ்சபுராதீச ஸ்ரீமந்த மகாராஜா சத்ரபதி சரபோஜி ராஜே ஸாஹேபயானி ஸ்த்ரீ ஸெளபக்யவதி முக்தாபாயி அம்மாசே நாவே ஸ்ரீஸேது மார்க்கீந்த தஞ்சபுரவ பட்டுக்கோட்டை யாதினீஸ்தலாச மத்யபூமீந்த அன்ன ஸத்ரவ, அக்ரஹாரவ, சிவாலயவ, விஷ்ணுஸ்தல இத்யாதி அமோக தர்ம ப்ரதிஷ்டிலா தாரீக — சாலிவாஹன சகம் 1722 துன்மதி நாம ஸம்வத்ஸரம் புஷ்ய சுத்த த்ரயோதஸி ஸ்திர வாஸாதிகளீ தை மாசம் பான்சு / ஆங்கிலம் 16-1-1802 ஆகும்.” இன்றும் அந்த சத்திரம் உத்தமி முக்தாம்பாள் நினைவாக ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியாக நிர்வகிக்கப் பட்டு வருகிறது. இதன் பிறகு ராஜா தீர்த்த யாத்திரைக்காக சோழ மண்டலம் முழுவதும் ஒரு முறையும், ஸ்ரீரங்க யாத்திரை ஒரு முறையும், காவிரி கடலில் கலக்கும் பூம்புகாருக்கு ஒரு முறையும், பழனி மலைக்கு ஒரு முறையும், கங்கை நதியில் புனித நீராடுவதற்கு ஒரு முறையும் பயணம் செய்தார். அப்படி அவர் யாத்திரை செல்லும் வழியெல்லாம் ராஜாவுக்குத் தகுந்தபடி மரியாதைகள் செய்ய ஏற்பாடுகள் செய்து வைக்க தஞ்சை ரெசிடெண்டும் கூடவே வந்தார். கம்பெனி ஒப்பந்தப்படி ராஜாவுக்கு ஏற்ற மரியாதைகளை செல்லுமிடங்களில் எல்லாம் கம்பெனி ஏற்பாடு செய்து தரும். [] மேலும் அந்த ஒப்பந்தப்படி கம்பெனியாருக்கு யுத்தம் காரணமாகத் தேவைப்படும் போதெல்லாம் கோட்டையை உபயோகிக்க அனுமதியும் கொடுக்கப் பட்டிருந்தது. ரெசிடெண்ட்டாக இருந்த Blackburn என்பவர் ராஜா கம்பெனிக்கு உறுதுணையாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டிருப்பதாகக் கம்பெனி உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். இந்த ரெசிடெண்ட் Blackburn பணிக்காலம் முடிந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்ற பிறகும் சரபோஜியிடம் அன்பு கொண்டு அவருக்குச் சில புத்தகங்க்கள், பூகோளப் படங்க்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார். பழனிக்கு யாத்திரை போகும் முன்னதாக ராணி அகல்யாபாயிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ராஜகுமாரபாயி என்று பெயர் வைத்தார்கள். இவர் காலத்தில் ஓர் அபூர்வமான பறவை எங்க்கிருந்தோ அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. மகாராஜாவின் மனைவி அகல்யாபாயிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பாயம்மாபாயி என்று பெயரிட்டார்கள். ராஜா எல்லா மதத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இவர் எப்போதும் சிவபூஜை செய்வார். புராண இதிகாச சரித்திர பிரவசனம் கேட்டுக் கொண்டிருப்பார். இந்த மராட்டிய மன்னர்களின் வரலாற்றை சிட்னீஸ் பாபுராயர் என்பவரைக் கொண்டு மன்னர் எழுதச் செய்தார். 1803 மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப் பட்டது. 1832 மார்ச் 8ஆம் தேதி சரபோஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மாடியிலிருந்து கிருஷ்ண விலாசம் என்கிற அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்த எல்லா மஹால்களும் சீல்வைத்து மூடப்பட்டன. அரண்மனைக்கு பலத்த காவல் போடப்பட்டது. இரவு 6 நாழிகையில் பிராயச்சித்தம் எனும் இறப்பதற்கு முன்பு செய்யப்படும் சடங்கு நடந்தது. இரவு 11 நாழிகைக்கு ராஜா உயிர் நீத்தார். காலையில் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கப் பட்டது. காலையில் படைகளின் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கோட்டைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது. வடக்கு வாசலில் அலிதர்வாசாவில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க்க அக்னி மூட்டப் பட்டது. அவருடைய அப்போதைய வயது 54 என்பதைக் குறிக்கும் வகையில் 54 குண்டுகள் முழங்கின. அவரது மகன் சிவாஜி II அவருடைய சிதைக்கு தீ மூட்ட மன்னரின் உடல் தீக்கு இறையானது. அவரைத் தொடர்ந்து சிவாஜி II பட்டத்துக்கு வந்தார். [] 22 பகுதி இருபத்திரண்டு [] தஞ்சாவூரின் மாமன்னராக விளங்கிய சரபோஜி IV காலமான செய்தியைச் சென்ற பகுதியில் பார்த்தோமல்லவா. அவருடைய ஆட்சியின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சி நிர்வாகத்தைத் தாங்களே வைத்துக் கொண்டு மன்னருக்கு செலவுக்கும், கோட்டை நிர்வாகம், பாதுகாப்பு இவற்றுக்காகவும் கணிசமான தொகையினை கொடுத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். ஆக, சரபோஜி IV காலத்திலேயே தஞ்சாவூர் ஆங்கில கம்பெனியார் வசம் போய்விட்டது. இவருடைய காலத்துக்குப் பிறகு ராஜ்யம் இருந்த நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதையும்,  சரபோஜி IV இன் ஆட்சி அதிகாரமில்லாத ஆட்சி என்பதையும்பார்க்கலாம். சரபோஜி IVஇன் இரண்டாம் மனைவி அகல்யாபாயிக்குப் பிறந்தவர் சிவாஜி II. 1808ஆம் வருஷம் பிரபவ வருஷம் மாசி மாதம் 23ஆம் தேதி 22-3-1808இல் இவர் பிறந்தார். அதே வருஷம் செப்டம்பர் 30இல் அன்னப் பிராச்சனம், குடுமி கல்யாணம், வித்யாரம்பம், இடுப்பில் சிறு கத்தி அணிதல் ஆகியவை 1811இல் நடைபெற்றது. இவருக்கு 1818இல் இவரது 10ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது. முதலில் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சைதம்பா பாயி. ராமச்சந்திர சூர்வேயின் மகள் காமாட்சி அம்பாபாயி எனும் பெண்ணை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சரபோஜி IVஇன் மகள் வயிற்றுப் பேத்தி. மாமனைத் திருமணம் செய்து கொண்டார் இந்த சைதம்பாபாயி. மூன்றாவதாக ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார் இவர், அவள் பெயர் பத்மாம்பாபாயி. இவர்கள் அனைவருமே சிவாஜி IIக்கு முன்னதாகவே காலமாகிவிட்டனர். []                                                               Shivaji II Raja இவை தவிர 1852இல் 44ஆம் வயதில் ஒரே நாளில் இவர் 17 கல்யாணங்களைச் செய்து கொண்டாராம்.இவருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. 1838இல் இவரைப் பற்றி ரெசிடெண்ட் ஒரு புகாரை அனுப்பினார். 1848இல் ரெசிடெண்ட் சிவாஜி II தன்னை அலட்சியம் செய்து விட்டதாகப் புகார் அனுப்பினார். [] சிவாஜி II மகாராஜாவுக்கு கூடா நட்பு அமைந்திருந்தது. மாதுசாமி மாடிக் என்பவனுடைய நட்பினால், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இவர் கடங்காரர் ஆனார். தாயாருடைய நகைகளை வாங்கி அடகு வைத்துப் பணம் வாங்கி செலவு செய்தார். ஸர்க்கேல் தேவாஜி ராவ் என்பவர் அரண்மனையில் ஒரு கெளரவமான அதிகாரி. அவரை இவர் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். இப்படி பல வகைகளிலும் நல்ல பெயர் எடுக்காமல் சிவாஜி II ராஜா 1855இல் தனது 48ஆம் வயதில் அக்டோபர் 25ஆம் தேதி காலையில் இறந்து போனார். சிவாஜி IIவின் மனைவியான காமாட்சியம்பாபாயி, கம்பெனிக்கும் மற்ற பாயிமார்களுக்கும் எதிராக ஒரு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 1857இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அப்போது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சராக இருந்த நார்ட்டன் துரை என்பவர் வக்கீலாக இருந்த நடத்தினார். இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் காரணமாகத்தான் மராத்திய மன்னர் பரம்பரையினருக்கு அவர்களுடைய சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததாகவும் தெரிகிறது. 1857 ஏப்ரல் 20ஆம் தேதியிட்ட ஒரு ஆவணத்தில் கீழ்கண்ட பாயிமார்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சையம்பா உமாம்பா ஜயதாம்பா ஜீஜாயி தீபாம்பா ராமகுமாரம்பா சகுணாம்பா அபரூபாம்பா யஷ்வந்தம்மா அனசாம்பா கெளராம்பா அருணாம்பா சுகுமாராம்பா கிரிஜாம்பா சீமாம்பா ராஜா இறந்த போது இவருடைய இரு மனைவிமார்களின் வயது 20ம் 12ம் ஆகியிருந்தது. இப்படியாக புகழ் பெற்ற தஞ்சை மராத்திய ராஜ்யம் இந்த சிவாஜி IIஇன் காலத்தோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் ஆங்கிலேயர்கள் தஞ்சையை நேரடியாக ஆளத் தொடங்கிவிட்டனர். [] முடிவுரை: தஞ்சை மராத்திய மன்னர்கள் இங்கு சுமார் 180 வருஷங்கள் அதாவது கி.பி. 1676 தொடங்கி 1855 வரையில் ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம், மருத்துவம் ஆகிய கலைகளில் நாடு சிறந்து விளங்கும்படி செய்தார்கள். சரபோஜி IV காலத்தில்தான் சிறப்பாக இருந்தது. இந்த நான்காம் சரபோஜி 1798 தொடங்கி 1832 வரை மிக உன்னதமான நிலையில் தஞ்சை ராஜ்யத்தை வைத்திருந்தார். மன்னருக்கும் பல மொழிகள் தெரியும். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கலைஞர்களையும் ஆதரித்து வந்தார். இவர் காலத்தில் வைத்திய சாஸ்திர கல்விக்காகவும், மேன்மைக்காகவும் “தன்வந்த்ரி மகால்” எனும் மருத்துவ சாலை இயங்கி வந்தது. இவரது மகன் சிவாஜி II காலத்திலும் இது போற்றி பாதுகாக்கப் பட்டது. இங்கு ஆங்கில முறை வைத்தியம் தவிர சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் கொடுக்கப்பட்டன. மனிதர்கள் தவிர பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மருத்துவங்களும் இங்கு கவனிக்கப் பட்டன. அஸ்வ சாஸ்திரம் (குதிரை வைத்தியம்) கஜ சாஸ்திரம் (யானை) போன்றவற்றுக்கும் வைத்தியம் கற்பிக்கப் பட்டது. தஞ்சாவூரின் கடைசி மன்னர்கள் பரம்பரை நாயக்க மன்னர்கள் அவர்களை யடுத்து மராட்டி மன்னர்கள் இருந்தார்கள். அவர்களுடைய காலம் வருமாறு: நாயக்க மன்னர்கள் 1532 முதல் 1673 வரை சேவப்ப நாயக்கர் தொடங்கி விஜயராகவ நாயக்கர் வரையிலான 141 ஆண்டுகள். மராத்திய மன்னர்கள் ஆட்சி 1676இல் தொடங்கி 1855 சிவாஜி II காலம் வரையிலான காலம் வரையிலான 179 ஆண்டுகள் * இந்த வரலாறு மெக்கன்சி சுவடிகளைப் பின்பற்றி எழுதப் படுகிறது. இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது. ** மகாராஜா சரபோஜி IV தனது அன்பிற்குரிய முக்தாம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க அன்ன சத்திரம் கட்டியது ஒரத்தநாடு எனுமிடத்தில். அந்த சத்திரமும், இன்னம் வேறு பல ஊர்களிலும் கட்டப்பட்ட சத்திரங்களும் பலகாலம் சேவை செய்தன. அவற்றின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருவாய்த் துறையில் சத்திரம் இலாகா என்று ஒன்று இன்றும்கூட பல ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றன. முக்தாம்பா சத்திரத்தில் தங்கி இலவசமாக உணவும், இருப்பிடமும் தந்து படித்தவர்கள் ஏராளம். [] ***மகாராஜா சரபோஜி திருவையாற்றில் சம்ஸ்கிருதம் கற்பதற்கென்று ஒரு கல்லூரியை உருவாக்கினார். அந்தக் கல்லூரி முதலில் சம்ஸ்கிருதம் மட்டும் கற்பிக்கப் பயன்பட்டது. பின்னர் தமிழ் படிக்கவும், அதன் பின் இப்போது அது ஒரு கலைக்கல்லூரியாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. கல்வியிலும் கலைகளிலும் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. வரலாற்றில் குறிப்பிடப்படும் இரண்டு நிகழ்ச்சிகள் ருசிகரமானவை. அதில் ஒன்று:– ***காஞ்சி காமகோடி மடத்தை அலங்கரித்த சந்திரசேகரேந்திர சுவாமிகள் என்பவர் திருவானைக்காவில் இருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடகம் செய்து, ஆலய குடமுழுக்கையும் முடித்து வைத்தார். அப்போது அவர் காஞ்சியில் இல்லாமல், கும்பகோணத்துக்கு வந்து விட்டார். அவர் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகிப் போனது. ஆகையால் அவர் காவிரியின் வடகரையோடு திருக்காட்டுப்பள்ளி, திருனெய்த்தானம், திருவையாறு வழியாக கும்பகோணம் திரும்பும் வழியில் தஞ்சை மன்னரிடம் நிதியுதவி கேட்டனுப்பினார். அப்போதைய மன்னர் (துளஜேந்திர ராஜாவாக இருக்க வேண்டும்) மறுத்துவிட்டார். சுவாமிகளை அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிகள் பணம் இல்லாமையால் தஞ்சைக்கு விஜயம் செய்யாமல் காவிரிக் கரையோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மன்னர் சில வீரர்களை அனுப்பி சுவாமிகளின் பரிவாரத்தை வழிமறித்துச் சிறைப்பிடித்து மரியாதையுடன் தஞ்சைக்கு வரவழைத்தார். ஊருக்குள் நுழையும்போது சுவாமிகளுக்குப் பூரணகும்ப நாதஸ்வர மரியாதைகளுடன் அவரை வரவேற்று உபசரித்து, அவர் ஊர் செல்லும்போது நிறைய பணமும் கொடுத்தனுப்பினாராம். மடத்துக்கு இருந்த கடங்கள் அனைத்தும் இந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டு மீதம் இருந்தது. அதை நிலம் வாங்கி முதலீடு செய்ய நினைத்த போது, திருப்பனந்தாள் அருகில் ஒரு கிராமத்தில் நிலங்கள் விற்பனைக்கு வந்ததால் கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் (நமது ஜி.கே.மூப்பானாரின் பாட்டனார்) தலையிட்டு அந்த நிலங்களை வாங்கி மடத்துக்குக் கொடுத்து நிரந்தர வருமானத்துக்கு வழிவகை செய்தாராம். ***மற்றொரு நிகழ்ச்சி, திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். சதாசர்வ காலமும் ஸ்ரீ ராமபிரானையே நினைத்துப் பாடி வந்தவர். அவருடைய புகழ் நாடெங்கும் பரவிவந்த போது அவரைத் தன் அரசவைக்கு அழைத்துப் பாடப் பணித்ததாகவும், ஸ்ரீ சுவாமிகள் மறுத்து “நிதிசால சுகமா?” எனும் கீர்த்தனத்தைப் பாடினார் என்றும் கூறப்படுகிறது. திருவையாற்றிலும் காவிரியாற்றுக் கரையில் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு ஓர் அரண்மனை இருந்தது. காவிரிக் கரையில் அமைந்த புஷ்ய மண்டபத் துறையும் புனிதமாக அவர்களால் போற்றப்பட்டது. அங்கு இசைக் கல்லூரி ஒன்றையும் நிறுவி அது இப்போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. *** *** சரபோஜி IV பதவிக்கு வருவதற்கு முன்பு துளஜாவின் தம்பி முறையான அமர்சிங் (அமரசிம்மன்) பதவி வகித்தார். இவரைப் பற்றி இரு வேறு விதமான செய்திகள் காணப்படுகின்றன. அமரசிம்மனின் ஆட்சி காலத்தில் சில சிறப்புகளையும் சில செய்திகள் கூறுகின்றன. அவருடைய காலத்தில் மழையில்லாமல் நாடு வரண்டு கிடந்ததாம். குறைகளை முறையிட மக்கள் வந்தபோது மன்னர் அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார். அரசர் எந்த ஊருக்குப் போகிறாரோ அங்கெல்லாம் மழை பெய்ததாம். அதனால் இவருக்கு மழைராஜா என்ற பெயர் வந்தது. (*இது அமரசிம்மனை தெய்வீக அருள் பெற்றவராகக் காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் எழுதி வைத்தக் குறிப்புகள் என்றும், இவை போன்ற செய்திகள் ‘திருவிடைமருதூர் பதிவுகள்’ எனும் சுவடிகளில் இருப்பதால், இவை அமரசிம்மனின் ஆதரவாளர்களால் எழுதப் பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு.) [] *அவருடைய சமஸ்தானத்தில் புலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அரசர் புலி வேட்டைக்குச் சென்று 22 வேங்கைப் புலிகளைச் சுட்டு வீழ்த்தினாராம். *கம்பெனிக்குத் தரவேன்டிய சுபா அதிகமாகவே தஞ்சையின் நான்கு சுபாக்களில் இரண்டை கம்பெனி தன்வசப்படுத்திக் கொண்டதாம்.அப்படியும் ராஜா தர வேண்டிய தொகை பாக்கி இருந்ததாம். *1795இல் அமரசிம்மன் ராமேஸ்வரம் யாத்திரை சென்றார். வழியெல்லாம் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆனாலும் இவர் போகுமிடங்களில் மழை பெய்ய பஞ்சம் தீர்ந்ததாம். குடிமக்கள் ஏராளமானோர் இவரோடு அந்த யாத்திரையில் பங்கு கொண்டனராம். ராமேஸ்வரத்தில் இவர் துலாபாரம் செய்து கொண்டதும், அங்கு நாகப் பிரதிஷ்டை செய்ததும் வரலாற்றின் ஏடுகளில் இருக்கின்றன. இந்த அமர்சிங்கின் பதவி நீக்கத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை: 1. துளஜாவின் மனைவியர் சரபோஜிக்கு பட்டம் கிடைக்க வேண்டி சென்னைக்குச் சென்று ஆங்கில அதிகாரிகளிடம் வேண்டினர். 2. அப்போது ரெசிடெண்டாக இருந்த டூரியன் என்பவர் சரபோஜிக்கு ஆதரவாக இருந்தார். *அமரசிம்மனுடைய மூன்றாவது மனைவியாகிய பவானிபாயி சாஹிபுக்கு கி.பி.1798இல் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன். *அமரசிம்மன் அரச பதவியை இழந்த பிறகு கோட்டையின் மூலையில் 22 மாதங்கள் தங்கியிருந்தார், பிறகு திருவிடைமருதூருக்கு 1800இல் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஆலங்குடியில் 25 நாட்கள், கும்பகோணத்தில் 57 நாட்கள் தங்கியிருந்தார். *அமர்சிங் 1802இல் இறந்தார். அவர் இறந்த பொழுது சந்தன மழை பெய்ததாம். அவரோடு அவரது நான்காம் மனைவி பார்வதிபாயி உடங்கட்டை ஏறி மாண்டு போனாள். அவள் தவிர அவருடைய போகஸ்திரி ருக்குமணி தீக்குளித்து இறந்தாள். *அமரசிம்மனுக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வூதியம் 25000 வராகன். அவருடைய மகனுக்கும் அது பின்னர் கொடுக்கப்பட்டது. *அமரசிம்மனின் மகன் பிரதாபசிம்மன் தன் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக இருந்தான். ஆனால் அதற்கு முன்பு அவன் இறந்து போகவே அந்தப் பெண் திருமணம் ஆகாவிட்டாலும் கடைசி வரை கைம்பெண்ணாகவே இருந்தாள். *மராட்டிய வம்சாவளியில் சுஜான்பாயி ஆட்சி புரிந்த தகவலை சில ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை. [] தஞ்சை போன்ஸ்லே வம்ச மரம். ஏகோஜி IV (1.தீபாபாயி 2. சயிராபாயி 3. அண்ணுபாயி 4. அபிமான மனைவியர் 9 பேர்.) | ஷாஜி | சரபோஜி III | துக்கோஜி | பாவா சாஹிப் பிரதாப சிம்மன் | துளஜா ராஜா அமர்சிம்மன் | ஸ்வீகாரம் சரபோஜி IV | சிவாஜி II [] தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு நிறைவு பெற்றது. குறிப்பு: இந்த வரலாறு முழுவதும் மெக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொன்டது. பல வரலாறுகள் இருந்த போதும் சுருக்கமாக தஞ்சை வரலாற்றைக் குறித்த நூல் எதுவும் இல்லை. இதனைப் படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுத வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன். நன்றி. குறிப்பு:– மெக்கன்சி சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அல்லவா? யார் இந்த மெக்கன்சி என்பதை இப்போது பார்க்கலாம். கர்னல் காலின் மெக்கன்சி (1754 – 1821) “மெக்கன்சி சுவடிகள்” எனக் குறிப்பிடப்படும் சுவடிகள் சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் (Government Oriental Manuscripts Library) பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சுவடிகளை எழுதி வைத்து தமிழ் நாட்டில் மராத்தியர்களின் சரியான வரலாற்றைத் தொகுத்துத் தந்திருப்பவர் இவர். Alphabetical Index of Tamil Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, Vol. III parts I and II (Mackenzie’s collection) Madras 1951. இந்த கர்னல் மெக்கன்சியின் வரலாற்றை இப்போது பார்ப்போம். இவர் ஸ்காட்லாந்து நாட்டில் Island of Lewis எனும் தீவில் Storno நகரத்தில் 1754இல் பிறந்தவர். தன்னுடைய முப்பதாவது வயதில் 1783இல் இந்தியாவுக்கு வந்தார். 1821இல் இவர் காலமாகும் வரையிலும் இந்தியா, இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து தனது திறமை காரணமாகப் பல பதவி உயர்வுகள் பெற்று சிறப்பாக வாழ்ந்தார். ஸ்காட்லாந்தைவிட்டுப் புறப்பட்ட பின் இவர் இறக்கும் வரை தாய் நாட்டுக்குத் திரும்பவில்லை. இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. ஒரு சகோதரர் அலெக்சாண்டர் என்பவர் கனடா நாட்டிலும், கென்னத் என்பவர் வேறொரு நாட்டிலும், சகோதரி மேரி என்பவர் தன் சொந்த ஊரிலும் இருந்தார்கள். அப்போது கிழக்கிந்திய கம்பெனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் செய்ய கப்பல்களில் புறப்பட்டு வந்தனர். அப்படி சிறப்புப் பெற்ற கிழக்கிந்திய கம்பெனியில் இவர் 2-9-1783ல் வேலைக்குச் சேர்ந்தார். இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த காலத்தில் இவர் ஒரு                     பொ றியாளராக பணியாற்ற இந்தியா வந்து சேர்ந்தார். பொறியாளராக இருந்த போதும், அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் போர்களில் ஈடுபட்டு வந்ததால், இவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு இவருடைய திறமையால் இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். முதலில் நில அளவைத் துறையில் பணியாற்றியபோது 1810இல் இவர் தலைமை நில அளவையாளராக பதவி உயர்வு பெற்றார். அந்த நாளிலேயே இவர் ரூ.1500 ஐ மாத ஊதியமாகப் பெற்றார். 1816இல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொசைடியில் உறுப்பினரானார். 1811இல் இவர் ஜாவாவுக்குச் சென்று பணியாற்றினார். 1796இல் இலங்கைக்குச் சென்றபோது அங்கு ஈழம் பற்றிய செய்திகளைத் தொகுத்தார். Cavelly Venkata Boriah என்பவர் இவருக்கு இந்தப் பணிகளில் உதவி வந்தார். இந்தியா திரும்பிய பின் இவர் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து வந்தார். அவை அனைத்தும் நாட்டின் வரலாற்றையொட்டியப் பதிவுகள் ஆகும். பல மொழி பேசுபவர்கள் இவருக்கு உதவி புரிந்தார்கள். அப்படி ஊழியம் புரிந்தவர்களுக்கு இவர்கள் நல்ல ஊதியமும் வழங்கினார். இவருக்கு உதவியர்கள் முறையே: Cavelly Venkata Boriah, Cavelly Venkata Letchumaiya, Abdul Azeez, Bhaskaraiah, Babu Rao, Ramasamy, Srinivasaiah, Sivaramaiah ஆகியோராவர். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர்கள் வல்லவர்கள். இவர்களுக்கெல்லாம் மாதம் 40 முதல் 50 வராகன் வரை ஊதியம் வழங்கப்பட்டது. இவருடைய இந்த வரலாற்றுத் தொகுப்புப் பணியைப் பாராட்டி கம்பெனியார் இவருக்கு மாத ஊதியம் 200 வராகனுடன் மேலும் 100 வராகன் சேர்த்துக் கொடுத்தனர். ஒரு முறை கம்பெனியின் இயக்குனர்கள் இவரது பணியைப் பாராட்டி 9000 வராகன் நன்கொடை அளித்தனர். இந்தத் தொகுப்புப் பணிக்காக இவர் செலவிட்ட தொகை 15000 பவுண்டுகள் எனத் தெரிகிறது. வெங்கட லெட்சுமையா என்பவர் உதவியாளர்களுள் முதன்மையானவர். இவருடைய தொகுப்புக்களை அந்த நாள் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கம்பெனி சார்பில், மெக்கன்சியின் மனைவியிடமிருந்து 10000 பவுண்டு விலைக்கு வாங்கினார். இவருடைய அறுபதாவது வயதில் 1812இல் பெட்ரோனெல்லா ஜாகோமினா பார்டெல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1820இல் உடல் நலம் குன்றி கல்கத்தாவிலுள்ள செளரங்கீ எனுமிடத்தில் தனது 68ஆம் வயதில் உயிரிழந்தார். நன்றி: “தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு” ஆசிரியர் கே.எம்.வெங்கடராமையா,                    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு. “சரபோஜி மஹாராஜா” சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் வெளியீடு. “போன்ஸ்லே வம்சத்து வரலாறு” சரஸ்வதி மஹால் வெளியீடு, தஞ்சாவூர். முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய “தஞ்சாவூர் நாயக்கர்கள் வரலாறு” சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர். 1 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook:  https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus:  https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin   alagunambiwelkin@fsftn.org - Arun   arun@fsftn.org -   இரவி Supported by - Free Software Foundation TamilNadu,  www.fsftn.org - Yavarukkum Software Foundation  http://www.yavarkkum.org/