[] [cover image] தசாவதாரம் அறிஞர் அண்ணா FreeTamilEbooks.com Public Domain - CC0 தசாவதாரம் 1. தசாவதாரம் 2. பகுதி 1 3. பகுதி 2 4. பகுதி 3 5. பகுதி 4 6. பகுதி 5 7. பகுதி 6 8. பகுதி 7 9. பகுதி 8 10. பகுதி 9 11. பகுதி 10 12. பகுதி 11 13. பகுதி 12 14. பகுதி 13 15. பகுதி 14 தசாவதாரம் தசாவதாரம்   அறிஞர் அண்ணா     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - த. சீனிவாசன் - tshrinivasan@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/dasavatharam} பகுதி 1 உள்ளே நுழைந்ததும், தேவர் ஒரு கணம் தமது துக்கத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டார். சூடாவின் புன்னகை அவருடைய சோகத்தை மாற்றிவிட்டது. கோடையால் தாக்குண்டவன் இளநீர்ப் பருகியதும், இன்பம் பெறுவது போன்றது சூடாவின் புன்சிரிப்பு. ஆம்! இன்று மட்டுமா, என்றுமேதான். அந்தச் சிரிப்பு அவனுக்குக் களிப்பூட்டிற்று. அவனுடைய கோழைத்தனத்தை மாற்றியதும், கட்டுப்பாடு, பொதுஜன எதிர்ப்பு என்று எவை எவையோ அவனை மிரட்டியபோது, அவைகளை ஒரே நொடியிலே ஓட்டியதும், அந்த ஒய்யாரியின் சிரிப்புதான். வாழ்க்கையிலே அவனுக்கேற்பட்ட சலிப்பு, திகைப்பு, யாவும் அந்த ஒரு அற்புதச் சக்தியினால் விரட்டி அடிக்கப்பட்டது. “சூடா!…” என்று துவக்கினார் தேவர். “ஒரு கப் காப்பி!” என்று, அதே குரலிலே கூறினாள். சூடா, “குறும்பு செய்யாதே! நான் மிக வேதனையுடன் இருக்கிறேன்” என்று தேவர் கூறினார், நாற்காலியில் சாய்ந்தபடி. “வேதனை விருத்தத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்திருங்கள். இன்று வெகு சிரமப்பட்டுத் தயாரித்திருக்கிறேன் காப்பி. அதைச் சாப்பிட்டுவிட்டு என் திறமையைப் பாராட்டி விட்டுப் பிறகு சுந்தரகாண்ட பாராயணம் செய்யும்” என்று கூறிவிட்டு, மானென ஓடினாள் மான்விழியாள். மனவேதனையுடனிருந்த தேவர், கண்களை மூடிக்கொண்டு, சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “பால்க்காரன் இருக்கிறானே! அவனுக்கு உலகப் பொருளாதார நெருக்கடியே தெரிவதில்லை. அப்பேற்பட்ட இங்கிலாந்தே அமெரிக்காவிடம் கடன்பட்டிருக்கிறதே. இப்படிப்பட்ட காலத்திலே, இந்தக் குடும்பம் நம்மிடம் கடன்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமாகுமா? என்று துளிகூட நினைப்பதில்லை. எப்படி நினைப்பான்! அவன் ‘தேசவீரன்’ படிப்பவனா?” என்று பேசிக் கொண்டே காப்பி ஆற்றினாள், காதலன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு. “பால்காரன் என்று ‘க்’ ஒன்று வைக்கிறாயே, நீ என்ன அந்த ரிப்போர் ஷாப் இலக்கணப் பேர்வழிகளை ஆதரிக்கிறாயா?” என்று தேவர் கேட்டார். “ஏன் ஆதரிக்கக் கூடாது? ‘தேசவீரன்’ அதைக் கண்டித்து எழுதுவதாலேயே நானும் கண்டிக்க வேண்டுமா? என்று ராஜம் அண்ணா அதை ஆதரித்திருக்கிறார்” என்று கூறினாள் சூடா, காப்பியைக் கொடுத்துவிட்டு! வெட்டி விவாதத்திலே ஈடுபட இஷ்டமில்லை தேவருக்கு. காப்பியை மௌனமாகவே சாப்பிட்டு முடித்துவிட்டார். “அடுத்த புரோகிராம் என்ன?” என்று கேட்டாள் சூடா. “அடுத்த புரோகிராமா? அதைத்தான் நானும் உன் அண்ணனைக் கேட்கலாமென்று இருக்கிறேன்” என்று தேவர் கூறினார் கொஞ்சம் கோபத்துடன். “அண்ணா புராணம் ஆரம்பமாகி விட்டதா! சரி. இனி அது ஓய்வதேது, நாம் உலாவப் போவதேது!” என்று சூடா சொல்லிவிட்டு, வீட்டு வேலையைக் கவனிக்கச் சென்றாள். “சூடா! சமையல் நிதானமாகவே செய்யலாம். நானும் உதவிக்கு வருகிறேன் சமையற்கட்டுக்கு” என்று தேவர் கூறினார். சூடா சிரித்தாள். “உதவிக்கு என்று சொல்வானேன். உபத்திரவத்திற்கு என்று சொல்லுங்கள் ஆபீஸ் பாஷையை வீட்டிலே உபயோகிக்கக் கூடாது என்று ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேனே” என்று கூறிவிட்டுத் தேவரின் மடிமீது உட்கார்ந்தாள் சிறு குழந்தைபோல். “சூடா! நான் கூறப் போவதைக் கேட்டுக் கோபிக்கக் கூடாது. துக்கப்படக் கூடாது. சலித்துக் கொள்ளக் கூடாது. என்ன விஷயம் தெரியுமோ?” என்று ஆரம்பித்த தேவர், அந்தச் சுந்தரியின் கூந்தலைக் கோதிய தன் கரங்கள், விரைந்து கன்னத்திலே உறவாடி, அதரத்தை நெருங்கக் கண்டு, பேச்சை நிறுத்திவிட்டு சிறிதளவு செயலில் இறங்கினார். அப்படியொன்றும் ஆபத்தான செயலல்ல! முத்தமிட்டார்! அவள் எதிர்பார்த்ததும் அதுதானே!! அந்த இன்பமயக்கத்தால் இருவருக்கும் ஒரு நொடி புது உலகப் பிரவேசம் கிடைத்தது! “பீடிகை பலமாக இருக்கிறதே! என்ன விஷயம்?” என்று கேட்டாள் சூடா. “நான் வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டேன்” என்றார் தேவர். அவளுடைய உதடுகள் கொஞ்சம் பிரிந்தன. முகத்திலே தவழ்ந்து கொண்டிருந்த நகை மறைந்தது. “ஏன்?” என்று சற்றுச் சோகக் குரலிலே கேட்டாள். “ஏனா! உன் அண்ணனால்!” என்றார் தேவர். “அவர் என்ன செய்தார்?” என்று பயந்து கேட்டாள் சூடா. “வழக்கமாகச் செய்வதைத்தான்! என் வாழ்வைக் கெடுக்கிற காரியத்தைதான் இப்போதும் செய்தான். எப்போதும் எதைச் செய்வானோ அதையேதான் செய்தான்! அந்தக் குணம் எப்படிப் போகும்?” என்று ஆத்திரமாகப் பேசினார் தேவர். “விஷயத்தைச் சொல்லுங்கோ, பிரசங்கம் வேண்டாம்” என்று சூடா கேட்க, தேவர், ‘என்ன இருக்கிறது விஷயம். இன்று எழுத வேண்டிய தலையங்க விஷயமாகத் தகராறு எனக்கும் முதலாளிக்கும்! உன் அண்ணனைப் பாராட்டி எழுதும்படி முதலாளி சொன்னார். அதாவது கட்டளையிட்டார். நான் முடியாது என்றேன். எழுதத்தான் வேண்டும் என்றார். அந்த மிரட்டல் என்னிடம் நடவாது, வேறு ஆசிரியரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். வார்த்தை முற்றிவிட்டது. ராஜிநாமாவைத் தந்துவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டவன் நிம்மதி அடைவது போலச் சில நிமிஷம் நிம்மதியும் அடைந்தான். சோகமாக இருக்கும் கணவனுக்கு ஆறுதல் கூற வேண்டியது துணைவியின் கடைமைதான். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்காக, “என்ன காரணம்! ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது?” என்னிடம் சொல்லக் கூடாதோ?” என்று துவக்கி, “நான் எது கேட்டால்தான் நீங்கள் உள்ளத்தைக் கூறுகிறீர்கள்? என்னைத்தான் நீங்கள் வீட்டு வேலைக்காரியை விடக் கேவலமாக மதிக்கிறீரே” என்று வளரச் செய்து, “எவளை நினைத்துக் கொண்டு ஏக்கமோ, யார் கண்டார்கள்” என்ற பொறாமைப் பேச்சிலே போய்விடும் “சம்சாரங்கள்” உண்டு. அவர்களின் தொல்லைக்குத்தான் போலும் சம்சாரம். சாகரம் என்று பெயரிட்டார்கள்! சூடாமணி சூட்சம புத்தியுள்ளவள். மனக்கலக்கம் மிகுந்திருக்கும் நேரத்திலே குறுக்குக் கேள்வியும் மறுப்புப் பேச்சும், புண்ணிலே முள் போலாகும் என்று தெரிந்து, தேவர் தமது வேலையை ராஜிநாமச் செய்து விட்டதாகக் கூறிய சொல்லிலே ஆழப் பாய்ந்திருந்த சோகத்தை உணர்ந்து கொண்டு வேறு விதமாகப் பேசி, எந்த விஷயம் தேவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்ததோ அதை மாற்றத் தொடங்கினாள். சூடாவின் புத்தி கூர்மையைக் கண்ட தேவர் மகிழ்ந்தார். சமயமறிந்து சம்பாஷிக்கவோ, விஷயமுணர்ந்து விவாதிக்கவோ தெரியாதவர்களே அதிகம். சூடா போன்றவர்கள் மிகக் குறைவு என்பது தேவருக்குத் தெரியும். அந்நாளிலேயே அழகாலே மட்டுமல்ல; லலிதமான சுபாவத்தாலேதான், சூடா, தேவரை வெற்றி கொண்டாள். அந்த மான்விழிக்குத் தேவர் ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அவளுடைய மதுர மொழி அவரைச் சொக்கும்படி செய்தது. எந்த விஷயத்தையும் தெளிவாகப் பேசவும், குறிப்பறிந்து நடக்கவும் சூடாவுக்குத் தெரியும். “பொறுக்க முடியவில்லை. ஒரே புழுக்கம். காற்றே இல்லை” என்று விருந்தாளி கூற, “ஆமாம். அதை ஏன் சொல்கிறீர் போங்கள், தாங்க முடியாத வெப்பம். மருந்துக்கும் காற்றே கிடையாது” என்று சேர்ந்து பேசுவது பலருக்கு வழக்கமே தவிர, புழுக்கம் என்ற சொல் கேட்டதும், முதலிலே அதை ஒரு அளவுக்கேனும் குறைத்துக் கொள்ள விசிறி கொடுத்துவிட்டுப் பிறகு பேசுவோம் என்ற கூர்மையான புத்தியுள்ளவர்கள் குறைவு. வேலை போனது பிரமாதமானதல்ல; ‘இதற்காக விசாரப்பட வேண்டாம். இந்த வேலை போனால் வேறு வேலையா கிடைக்காது. ஏதோ நமக்குப் போறாத வேளை! பொழுது புலராமலா போகும்’ என்ற முறையிலே தைரியமூட்டி, ஆறுதலளிக்கும் ஆரணங்குகள், சோகத்தைக் கிளறிவிடும் சுந்தரிகளைவிட ஒருபடிமேல்! சூடா அதற்கும் ஒருபடி மேலாக இருந்தாள். “எடிடர் சார்! எழுந்திருங்கள். இனி வேறு வேலைக்கே போக வேண்டாம். சமையல் டிபார்ட்மெண்ட் சார்ஜ் இனி உங்களிடந்தான்” என்று வேடிக்கை பேசி, இன்று ரவாதோசை போட வேண்டும். ரசகுல்லா மட்டும் ஓட்டலிலே இருந்து தருவித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போடுவதுமாக இருந்தாள். வேலையிலிருந்து தேவர் விலகிவிட்டார் என்ற செய்தியே தெரியாத மாதிரியே நடந்து கொண்டாள். தேவர் களித்தார். இப்படிப்பட்ட இங்கிதமறிந்த இளம் பெண்ணை விதவைக் கோலத்திலே விம்மிக் கிடக்கச் செய்தானே ‘அந்த வெறியன்’ என்று பழைய கதையை எண்ணிக் கொண்டார். “சூடா! தமிழ்நாடே கண்டு திடுக்கிடும்படியான கதை ஒன்று எழுதப் போகிறேன்” என்றார் தேவர். “கதை எழுதுங்கள்; நிச்சயம் தமிழ்நாடு திடுக்கிட்டுத்தான் போகும்; சந்தேகமே வேண்டாம்” என்றாள் அந்த வேடிக்கைக்காரி. “அப்படி என்றால்…” என்று கேட்டார் தேவர். “எப்படி உங்களாலே கதை எழுத முடியும் என்று நான் கேட்கிறேன் என்று அர்த்தம்” என்று மேலும் குறும்பு பேசினாள் அந்தக் கோமளம். “போ, சூடா! போய் பேப்பர் பென்சில் எடுத்துவா. நான் கதை கூறிக்கொண்டு வருகிறேன். நீ எழுது” என்றார் தேவர். சூடா சிரித்துக் கொண்டே ஓடினாள். நொடியிலே வந்து சேர்ந்தாள். பேப்பர் பென்சிலுடன். “ஆரம்பிக்கலாம் சார்!” என்றாள். தேவர், சொல்ல ஆரம்பித்தார். “எழுது சூடா, தெளிவாகவே இருக்கட்டும் எழுத்து” என்று பீடிகை போட்டுவிட்டுக் கூறத் தொடங்கினார். “நான் ஓர் விதவை. இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று கூறிவிட்டு, ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தார். பிறகு “சூடா! எழுதிவிட்டாயா? சரி, ஏதோ படி” என்றார். “நான் ஓர் விதவை. என் போல் எண்ணற்றவர்கள்! இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. காமப்பித்தமும் கள்ளக்கருத்தும் கொண்டுள்ள சமுதாயத்தைக் கண்டேன். சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று படித்தாள் சூடா. “என்ன இது! உன் இஷ்டம்போல ஏதேதோ சேர்த்துக் கொண்டாய்” என்று ஆசிரியர் குரலிலே பேசினார் தேவர். “என்ன சேர்த்தேன். கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தேன்” என்றாள் சூடா. பேப்பரும் பென்சிலும் கீழே சிதறின. கதை கூறுவதும், எழுதுவதும் நின்றுவிட்டது. கொஞ்சுதலும் குழைதலும் ஆரம்பமாயின. கதை கூறுவதை ஆசிரியர் நிறுத்திக் கொண்டதும், சூடா தொடங்கினார் கதையை. “அந்த விதவையின் கட்டுகளை உடைத்தெறிந்து அவளைக் காதல் உலகிலே குடியேறச் செய்தார் ஒரு கட்டழகர்! அவருடைய நெட்டையான உருவத்தைக் கண்டு அவள் பயந்ததுண்டு! ஆனால், அவருடைய அணைப்பிலே அவள் கண்ட சுகம்! அச்சத்தை ஓட்டிவிட்டது.” என்று கூற, “ஆமாம்! கண்ணே! ஆயிருரே! இன்பமே!” என்று இன்பமான இடைச்செருகலிலே தேவர் ஈடுபடுவதுமாகக் காட்சி மாறிவிட்டது. “இது என்ன கதை?” என்று கேட்டாள் சூடா, தேவரின் பிடியிலிருந்து விலகி. “இதுவா? எந்தக் கதைக்கும் இருந்து தீரவேண்டிய கட்டம். இன்பபுரியின் வாயிற்படி, அன்பின் அறிகுறி, காதலின் கனிவு….” என்று அடுக்கினார் தேவர். வார்த்தைக்கு வார்த்தை முத்தங்களே முற்றுப்புள்ளிகளாயின! அந்த நேரம்போல் எந்த நேரமும் இருக்கக் கூடாதா என்று இருவரும் எண்ணினர்! யாருக்குத்தான் இராது அந்த எண்ணம்! “இந்தத் தேன் குடத்தை அந்தத் தேள் காவல் புரிந்து வந்ததே” என்றுரைத்தார் தேவர். “எந்தத் தேள்?” என்று கேட்டாள் சூடா. “உன் அண்ணன்” என்றார் தேவர். “அப்பாயடினால் நானும் தேள்தானே?” என்று கேட்டாள் சூடா. “யார் இல்லை என்றார்கள்?” என்று பதிலுரைத்தார் தேவர். “தேன் என்றீரே” என்றாள் சூடா. “இரண்டுந்தான்! மாதரின் மைவிழியிலே விஷம் உண்டு; தேனும் கிடைக்கும்” என்றார் தேவர். “கிடைக்கும், கிடைக்கும்” என்று பாவனைக் கோபத்தைக் காட்டினாள் சூடா. “இன்பமே! கோபியாதே! உண்மையிலேயே, நமது வாழ்வை நினைக்கும்போது ஆனந்தவல்லியாகிய உன்னை விதவைக் கோலத்திலே இருக்கும்படி சமுதாயக் கட்டுப்பாடு கூறிற்றே! அதன் கொடுமையை என்னென்று கண்டிப்பது என்ற எண்ணமே மேலிடுகிறது” என்று கூறினார் தேவர். “எனக்கு மீட்சியளித்த தேவரல்லவா தாங்கள்!” என்று அடி மூச்சுக் குரலிலே அவள் பேசினாள். “தேவி!” என்று தழதழத்த குரலிலே கொஞ்சினார் தேவர். “நினைவிருக்கிறதோ?” என்று கேட்டாள் சூடா. “எது” என்று கேட்டார் தேவர். “முதன் முதல் என்னை நீங்கள் அணைத்துக் கொண்டது எந்தச் சந்தர்ப்பத்திலே என்பது நினைவிலிருக்கிறதா?” என்றுகேட்டாள் சூடா. “எப்படிக் கண்ணே, அதை மறப்பேன். அன்று நல்ல நிலவு! நானும் உன் அண்ணனும் நெடுநேரம் விவாதத்திலே ஈடுபட்டிருந்தோம். இலட்சியங்களைப் பற்றி இடிமுழக்கம் செய்கிறாயே தவிர, காரியத்திலே காட்டக் காணோமே என்று கூறி இடித்தேன் உன் அண்ணனை.” “என்ன பித்தம் இவருக்கு! கொள்கைப்படி நடக்கவில்லை என்று நமது அண்ணனைக் கோபித்துக் கொள்கிறாரே இவர்! இவர் மட்டும் மகாயோக்யரா, கண்ணால் தாக்குகிறார்; கடமையை மறக்கிறாரே, என்று நானுந்தான் உங்களைப் பற்றி மனதிலே இடித்துரைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் கிடக்கட்டும். அவர் கொள்கைக்கும் குடும்பப் பொறுப்புக்கும் போர் மூண்டது. அவரால் சமாளிக்க முடியவில்லை. போதிய தைரியமில்லை.உறுதியில்லை. அது தவறுதான். ஆனால் நீங்களுந்தான் என் நெஞ்சிலே நினைப்பை ஊறச் செய்தீர். ஆனால் தைரியமாக என்னை விடுவிக்கத் தெரியாது திண்டாடினீர்” என்று சூடா, அந்த நாள் நிலைமையை விளக்கினாள். “அண்ணனை விட்டுக் கொடுக்க மாட்டாய் போலிருக்கிறதே” என்று கேட்டார் தேவர். “நானா? நிஜமாகவா கேட்கிறீர், அந்தக் கேள்வியை. நமக்குள் நிகழ்ந்த காதல் விளையாட்டின் ஆரம்ப நாளன்றே, நான் என் அண்ணனை மட்டுமா, அன்னையை, குலத்தை, குடும்பத்தை, உமக்காக விட்டுக் கொடுத்தேனே” என்று கொஞ்சினாள் அந்தக் குமரி. கூந்தலைக் கோதியபடி, அந்தக் கோமளத்தைத் தன் மார்பிலே சாய்த்துக்கொண்டு, “அன்பே! உண்மைதான்! எனக்காக நீ எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாய், அன்றிரவு, நீ…” என்று மீண்டும், பழைய நிகழ்ச்சியைக் கூறலானார் தேவர். “ஏது, அண்ணனுடன் சண்டையிட்டு விட்டுப் போய் விடுகிறாரே, மீண்டும் இங்கே வருவாரோ வரமாட்டாரோ என்ற திகில் எனக்கு, அதனால்தான்…” “வேகமாக வெளியே சென்ற என்னை, “ஒரு வார்த்தை சற்று நில்லுங்கள்” என்று சொன்னாய். அவ்வளவுதான் நான் சொன்னது. அந்தச் சிறு தவறுக்காக என்னைக் கட்டிப் பிடித்து, அப்பப்பா! என்ன இருந்தாலும், போக்கிரித்தனமாகத்தான் நடந்து கொண்டீர்கள் அன்றிரவு.” “எது போக்கிரித்தனம்? என் உரிமையைப் பெறுவதா போக்கிரித்தனம்? என் காதலியைக் கட்டி அணைத்து முத்தமிடுவதா போக்கிரித்தனம்.” “அண்ணா பார்த்துவிட்டிருந்தால்?” “ஆண்டவனே பார்த்திருந்தால்தான் என்ன? இருவரும் குருடர்கள்! உன் இளமையையும் எழிலையும் உன் அண்ணன் கண்டானா? கண் இருந்து என்ன பயன்? உன்னைப் போன்ற இளம் பெண்களின் இன்னல் நிறைந்த வாழ்வைத்தான் கண்டாரா ஆண்டவன்! இருவரும் கண்கெட்டவர்கள்.” இந்த உரையாடலிலே உல்லாசமாகப் பொழுது கடத்திய காதலர் இருவரும் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நேரிட்டது. அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரொருவர் சில கான்ஸ்டேபிள்களுடன் தடதடவென்று உள்ளே நுழைந்தார். காதல் உரையாடலில் களித்துக் கொண்டிருந்தவர்கள். இந்தத் திடீர்ப் பிரவேசத்தால் திடுக்கிட்டுப் போயினர். “மிஸ்டர் தேவர்! மன்னிக்க வேண்டும்! என் கடமை, நான் என்ன செய்யட்டும்” என்று கூறினார் இன்ஸ்பெக்டர். “என்ன சார் விஷயம்?” என்று பயத்துடன் தேவர் கேட்டார். சூடாவின் கன்னத்திலே கண்ணீர் புரண்டது. “கோபிநாதர் கோயில் கொள்ளை சம்மந்தமாக உம்மைக் கைது செய்கிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி. பகுதி 2 திடீரென்று தேவர் கைது செய்யப்பட்டதும் சூடாவின் மனம் பட்டபாடு விவரிக்க முடியாததாகிவிட்டது. தேவரும் திகைத்து நின்றார்! தேன்மொழியாளுக்குத் தேறுதல் கூறும் விதமும் தெரியாது திகைத்தார். “சூடா! என்ன இது! சுத்தப் பைத்தியமாக இருக்கிறாயே!” என்று கூறிக் கொண்டே, சூடாவை, அனைத்துக் கொண்டார் தேவர். போலீஸ் இன்ஸ்பெக்டரின் கண்களிலேயும் கொஞ்சம் நீர் கசிய ஆரம்பித்தது. கண்ணீருக்கும் கடமைக்கும் கடும் போர் பல மூண்டதை கண்டவராதலால், ஒரு நிமிஷத்திலே சமாளித்துக் கொண்டு “மிஸ்டர்! நாம் இங்கே அதிகநேரம் தாமதிப்பதற்கில்லை” என்று கூறினார். இதற்கிடையே தேவரின் புத்தகசாலை சோதனை செய்யப்பட்டது. பல கடிதங்களும், சில அச்சுப் பிரதிகளும் போலீசாரால் எடுக்கப்பட்டன. போலீஸ் லாரியும் வந்துவிட்டது. தேவர் கண்களைத் துடைத்துக் கொண்டே, “நீ இப்படி அழுதால், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் கண்ணே!” என்று கூறினார். இன்ஸ்பெக்டரும், சூடாவை நோக்கி, “அம்மா! நீங்கள் என்ன பட்டிக்காடா? படித்தவர்களாயிற்றே! இப்படிப் புலம்புவானேன்? சந்தேகத் தின் பேரில் எடிட்டரைக் கைது செய்திருக்கிறோம். நீதிமன்றம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவரலாம். இப்போது என்ன நேரிட்டுவிட்டது என்று இப்படிக் கதறுகிறீர்” என்று கூறினார். ‘தேசவீரன்’ ஆசிரியர் தேவர் வீட்டின் முன்னே போலீஸ் லாரி வந்து நின்றுவுடனே ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. தேவரின் அரெஸ்டுக்கு என்ன காரணம் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். தேசத்திலே ஒருவிதமான கிளர்ச்சியும் இல்லாத நேரமானதால் தேவர் கைது செய்யப்பட்டது பொது மக்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தந்தது. “பேனா பிடித்த கை சும்மா இராதப்பா.” “அறப்போர் தொடுப்போம் - சிறையை உடைப்போம் - சுதந்திரத் தீயில் குளிப்போம் என்றெல்லாம் பேசுவது எழுதுவது என்றால் வேடிக்கையா? விளையாட்டா? பார், பாவம் ஆசாமி மாட்டிக் கொண்டான்.” “செங்கோலுக்கு முன்பு சங்கீதமா?” “இந்த வருஷ ஜாதக பலனே அப்படித்தான்! கீர்த்தியுள்ளவர்களுக்குக் கராக்கிரகவாசம் சம்பவிக்கும்; கிரஹக் கோளாறு அப்படியிருக்கு. இவர் என்ன செய்வார்” என்பன போன்ற வம்பளப்புகளும், “இவரை வைக்கப் போவதே இல்லையாம், நேரே நெடோலுக்கு அனுப்பப் போகிறார்களாம்” என்பன போன்ற வதந்திகளும் உலவத் தொடங்கின. ஒரு சிலர், தேச வீரனுக்கு ஜே! தேவருக்கு ஜே! என்று கோஷமிட்டனர். போலீசார் கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தனர். தேவரைப் போலீஸ் லாரியிலே ஏற்றினார் இன்ஸ்பெக்டர். லாரி வேகமாகக் கிளம்பிற்று. “ஐயோ! என் துரையே!” என்று அலறிக் கொண்டே சூடா கீழே விழுந்து புரண்டாள். “அசடே! எழுந்திரு” என்று மெள்ளக் கூறிக் கொண்டே சூடாவை ஒருவர் தூக்கி நிறுத்தினார். அவரைக் கண்டதும் சூடா, மேலும் வீறிட்டழுது கொண்டே, “அண்ணா! நான் என்ன செய்வேன். ஐயோ அண்ணா! இதென்ன அக்ரமம்?” என்று அலறினாள். அவர் ஏதும் பதில் கூறுமால், சூடாவை வீட்டினுள்ளே அழைத்துச் சென்று தாளிட்டு விட்டுக் கூடத்திலே இருந்த சாய்வு நாற்காலியிலே படுத்துக் கொண்டு கண்டகளை மூடிக் கொண்டார். “அண்ணா! அண்ணா!” என்று கதறினாள் காரிகை. “அண்ணன்! அண்ணன் பேச்சைக் கேட்டிருந்தால், ஏன் இப்படிப்பட்ட ஆபத்து வருகிறது? நீயும் ஆடினாய். உன் இஷ்டப்படி அவனும் மனம் போன போக்கிலே நடந்தான். தலைக்குமேலே இடி. இப்போது, அதைத் தடுக்கும் சக்தி எனக்கு ஏது.” என்றார் அவர். “இப்படி எரிகிற நெருப்பிலே எண்ணெயை ஊற்றாதீர்.” “வேண்டாம் அண்ணா! நான் என் கலக்கத்திலே ஒரு விநாடி என்னை மறந்து, உம்மிடம் கெஞ்சினேன். நீர் எனக்கு நேரிட்டுள்ள இந்த ஆபத்திலே பங்கு கொள்ள வேண்டாம். உமக்கேன் பாபம், இந்தத் தொல்லை? ஈரமுள்ள நெஞ்சினருக்குத்தானே ஏழையின் துயரைத் துடைக்கத் தோன்றும்? இரும்புப் பெட்டியை நிரம்ப, இருதயத்தைக் கழற்றிக் கீழே வீசிவிட்ட உத்தமராகிய உங்களிடம் முறையிட்டேனே நான், அது என் முட்டாள்தனம்.” “இந்த மாதிரித் துடுக்குத்தனமாக பேச்சுப் பேசித்தானே, கெட்டுக் கீரைவழியானாய்! இன்னமும் கெடு. அவனை நம்பி நாசமாய்ப் போ.” “அண்ணா! அவரைப் போலீசார் கைது செய்ததைக் கண்டாயிற்று. அந்தக் களிப்புப் போதாதா? ஏன் வீண் நேரம் போக்குகிறீர். நான் எக்கேடு கெட்டால் உமக்கென்ன. போய் உமது சுகத்துக்கான காரியத்தைப் பாரும். நான் நாசமானால் உமக்கு ஒரு நஷ்டமுமில்லை. உம்மோடு பேசவும் எனக்கு இஷ்டமில்லை.” “பாழாய்ப்போன கூடப் பிறந்த தோஷம் வாட்டுகிறது. இல்லையானால், உன்னுடைய இறுமாப்புக்கு இதுதானா? இன்னமும் பல கேடுகள் வரத்தான் செய்யும் என்று நான் எண்ணிக் கொண்டு என் காரியத்தைக் கவனித்துக் கொண்டு இருந்திருப்பேன்.” “இறுமாப்பு! எனக்கு இருப்பது இறுமாப்பு! கணவனைக் கைது செய்து போலீசார் அழைத்துப் போகக் கண்டு கதறிக் கிடக்கும் எனக்கு இருப்பது இறுமாப்பு” “போதும் வாயை மூடு! அவனுக்கேற்ற வாயாடி தானே நீ!” “அண்ணா! இனி அரை விநாடி கூட உமது முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. கோடி நமஸ்காரம் உமக்கு. வெளியே போங்கள்.” “சூடா! என்ன திமிர் உனக்கு. என்னை வெளியே போ என்றா சொல்கிறாய்.” “ஆமாம்! மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னைவிட்டுப் போகுமுன்பு வெளியே போய்விடு!” “போக்கிரி” “நயவஞ்சகனைவிடப் போக்கிரி நல்லவன்” “அழிந்து போகப் போகிறாய்” “அழியுமுன், உன்னை அம்பலத்தில் இழுத்து வைக்கிறேன்.” “என்னையா?” “ஆமாம்! பிரம்மஸ்ரீ கலியாணசுந்தர சாஸ்திரிகளைத்தான்!” “ஜாதிகெட்ட நாரி! ஆச்சாரங்கெட்ட நீலி! குடும்பத்தைக் கெடுத்த குண்டுமணி!” “என்றெல்லாம் நீர் தூற்றுவீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவள் வேறு எவ்விதம் இருப்பாள்? அந்தக் காதகன், நயவஞ்சகன், குடி கெடுப்பவன், வேஷதாரி கலியாணசுந்தரத்தின் தங்கைதானே அவள் என்று உலகு கூறும்; கூறும் படிச் செய்வேன்.” “சூடாமணி! ஏனடியம்மா! இப்படிக் கெட்டு அழிகிறாய்! வேண்டாமடி? என் மனசை நோக வைக்காதே?” “ஓஹோ! சுருதியை இறக்கிவிட்டீரா? ஐயா! தேசோத்தாரகரே! உமது ஆலாபனங்களை ஏமாளிகளின் சபையிலே வைத்துக் கொள்ளும். எனக்கு வேண்டாம் உமது கீதம். என் கணவரை மீட்பதற்கான காரியத்தை நான் கவனிக்க வேண்டும். வெளியே புறப்படுகிறேன். வீடு பூட்டவேண்டும். தர்மசொரூபியான நீர் இந்தப் பாபாத்மாக்களின் வீட்டை விட்டு வெளியே ஏறும்.” மாடப்புறாவைத் துரத்தித் துரத்திக் கொத்தவரும் வல்லூறு போலக் கலியாணசுந்தர சாஸ்திரி, தன் தங்கை சூடாவைச் சொல்லம்புகளால் தாக்கினார். அவளுடைய பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டார். எனவே சூடா, அவரை வெளியே போகும்படி கூறினாள். இந்தக் காரசாரமான பேச்சினால், கலியாணசுந்தர சாஸ்திரி ஓரளவுக்குக் களிப்புமடைந்தார். தங்கையின் வேதனையைக் காண எந்த அண்ணனுக்கு அகமகிழ்ச்சி இருக்கும் என்று கேட்பர். சாஸ்திரிக்கு, சூடா தங்கையாகப் பிறந்தாளேயொழிய, அவர் அவளைத் தன் பரம விரோதியாகவே கருதி வந்தார். அதற்குக் காரணம், அந்த அணங்கு, காதல் பெரிதென மதித்து இவருடைய கட்டுக ்காவலுக்கும் சட்டத் திட்டத்துக்கும் அடங்க மறுத்து, தேவரைக் கலியாணம் செய்துகொண்டதுதான். ‘ஏதோ அது அவாளவாளுடைய இஷ்டம். நாம் இத்யாதி காரியங்களிலே ஏதும் செய்வதற்கில்லை.” என்று அந்தச் சமயத்திலே சாஸ்திரி கூறினாரே தவிர, சூடா மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை அன்றே கொண்டுவிட்டார். சூடாவின் தாக்குதலுக்குப் பணிந்தவர் போலப் பாசாங்கு செய்து கொண்டே சாஸ்திரி அந்த வீட்டை விட்டு வெளியே போனார். உடனே சூடா, வீட்டைப் பூட்டிக் கொண்டு, வெறி பிடித்தவள் போல ஓட்டமும் பெருநடையுமாகப் பக்கத்து வீதிக்குச் சென்றாள், தன் சினேகிதி பங்கஜாவைக் காண. பங்கஜாவின் கணவர் பிரபல வக்கீல். அவரைக் கொண்டு, தேவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்ய எண்ணினாள். அந்த நெருக்கடியான நேரத்திலே பங்கஜா வீட்டிலே இல்லை. தாய்வீடு போயிருந்தாள். வக்கீல் சங்கரய்யா, சூடாவை வாஞ்சனையுடன் அழைத்து விவரம் விசாரித்தார். “கொள்ளை சம்பந்தமாகத் தேவர் கைது செய்யப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், என் அனுபவத்தைச் சொல்கிறேன் சூடா. இந்த லோகத்திலே யாரையும் நம்ப முடியாது. இன்னதுதான் நடைபெறும், இன்னது நடவாது என்று கூற முடியாது. எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ” என்ற தோரணையிலே பிரபஞ்ச விளக்கப் பேச்சைத் துவக்கினார், அந்தப் பிரபல வக்கீல். கணவன் கைது செய்யப்பட்டான் என்ற கலகத்தோடு கண்ணீர் ததும்பக் கருணையைத் தேடிக் கொண்டு அந்தக் காரிகை வருகிறாள். கைகூப்பி நிற்கிறாள். அந்தக் கண்ணியவானோ லோகலீலையை விவரிக்கிறார்! அவருக்கென்ன, அடிவயிற்றிலே நெருப்பு இல்லை. அவளுக்கு அது. “கொள்ளை கொலை முதலிய குற்றங்களைச் செய்யக் கூடியவரா அவர்” என்று சூடா உருக்கமாகக் கூறினாள். வக்கீல் குரலை உயர்த்தினார். “அதென்ன சூடா அவ்விதம் பேசுகிறாய்! உனக்கு உத்தமானந்தரைத் தெரியுமோ?” என்று கேட்டுப் பதிலை எதிர்பாராமலேயே, ‘பெயர் உத்தமானந்தர். ஊர் பூராவும் அவரைப் போல உபகாரி, யோகி கிடையாது என்று புகழ்ந்தது. தேவாம்சம் பெற்றவர் என்று பலரும் கொண்டாடினர். அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? நம்ம பங்கஜம்கூட அவரைப் பூசை செய்வாள். படம் வாங்கி வைத்துக் கொண்டு. அப்படிப்பட்டவர் மீது என்ன வழக்கு வந்தது தெரியுமோ?” என்று கேட்டார். கனைத்தார், புன்சிரிப்புடன்; அவரே பதிலுரைத்தார். “அப்படிப்பட்ட யோகி பத்து வயதுச் சிறுமியைப் பலாத்காரப் புணர்ச்சி செய்ததாகக் கேஸ். அவரா அப்படிப் செய்வார் என்று ஊரார் கூறினர். போலீசிலேயோ மறுக்க முடியாத சாட்சிகள்! என்று நடந்தது தெரியுமோ? ஆறு வருஷம் சிட்சை” என்று கூறி முடித்தார். “ஏற்கெனவே திகிலோடு இருக்கும் எனக்கு, உங்கள் பேச்சு, மேலும் பயத்தை மூட்டுகிறதே” என்று கூறிக் கதறினாள் சூடா. வக்கீல் கடகடவெனச் சிரித்து விட்டு, “அசடே! அழாதே! எதற்கு அதைச் சொன்னேன் தெரியுமோ? எப்படிப்பட்ட யோக்யர் மீதும் எப்படிப்பட்ட குற்றமும் சுமத்தப்படலாம். சில சந்தர்ப்ப சாட்சியங்களால், நிரபராதிகளுக்குங்கூடத் தண்டணை தரப்படக் கூடும். ஆகையாலே, குணவானான உன் கணவன் மீது, கொள்ளை அடித்ததாகக் குற்றம் சுமத்தப்படுவது கேட்டு நான் திடுக்கிடவில்லை என்பதைக் கூறவே உத்தமானந்தர் கதையைச் சொன்னேன். முழு விவரமும் கேள். கீழ்க் கோர்ட்டிலே இப்படித் தீர்ப்புக் கிடைத்தது. நான் விடுவேனா? மேல் கோர்ட்டுக்குப் போனேன். ஆறு நாள் விசாரணை! பிராசிக்யூஷன் தரப்பார், மலைமலையாகக் குவித்தார்கள், சாட்சிகளை! தவிடுபொடியாக்கினேன்! ஜட்ஜ் அதுவரை அப்படிப்பட்ட ஆர்குமெண்ட்டைக் கேட்டதுமில்லை! ஆறு வருஷம் போட்டாரல்லவா, கீழ்க் கோர்ட்டிலே, ஜட்ஜு கீழ்க்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்தார். உத்தமானந்தர் விடுதலை செய்யப்பட்டார். என் பல வெற்றிகளிலே நான் இந்தக் கேசைத்தான் முதல்தரம் என்று கருதுவது வழக்கம். கீழ்க்கோர்ட்டிலே உத்தமானந்தரைத் தண்டித்தாரே சப்-ஜட்ஜு, அவரே பிறகு உத்தமானந்தரின் சிஷ்யரானார். எதற்காக இதைச் சொல்கிறேனென்றால், உன் கணவன் மீது கொண்டு வரப்படும் கேஸ் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உனக்குத் தைரியம் கூறத்தான் சொன்னேன். கண்களைத் துடைத்துக் கொண்டு கவலையை இங்கேயே வீசி எறிந்து விட்டு வீட்டுக்குப் போ. உன் கணவனுக்கு ஒரு ஆபத்தும் வராதபடி பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்.” என்று வக்கீல் உறுதி கூறினார். “அவரை ஜாமீனிலே….” என்று துவக்கினாள் சூடா. அழுகை மேற்கொண்டு பேசவிடாது செய்துவிட்டது. “இப்போது புறப்படுகிறேன்” என்று கூறினார் வக்கீல். தமது உடையை அணிந்து கொண்டார். சட்டப் புத்தகங்களைப் புரட்டிச் சில குறிப்புகள் சேகரித்தார். “ஆபீஸ் போகிறேன். அங்கிருந்து நேரே சம்பந்தப்பட்ட அதிகாரியைக் காண்கிறேன். தேவரை ஜாமீனில் அழைத்து வருகிறேன். நீ வீணாக விசாரப் படாதே” என்று மறுபடியும் சூடாவுக்குத் தைரியம் கூறிவிட்டுப் புறப்படச் சித்தமானார். டெலிபோன் மணி அடித்தது. உள்ளே சென்றார். கூடத்திலே இருந்த சூடாவுக்குச் சில சொற்களே காதில் விழுந்தன. “ஹலோ…” “நமஸ்காரம், சாஸ்திரிகளா…” “போறாத காலம், இருந்தாலும்…” “ஆமாம், சகவாசதோஷம் கூடாது. பெரியவர் வார்த்தையை மதிக்கத்தான் வேண்டும்.” “கூடத்திலே இருக்கா.” “ஆத்திரத்திலே பேசி இருப்பாள்.” “அசடு! உம்மையா வெளியே போகச் சொன்னா” “நன்னாயிருக்கு, ஏன் இப்படி இவாளுக்குப் புத்தி போச்சி.” “ஆமாம், முதலிலே செய்ய வேண்டிய காரியம். தேவரை ஜாமீனில் கொண்டு வருவதுதான். அதற்காகத்தான்…” “என்ன? என்ன? வக்கீல் விக்டரை ஏற்பாடு செய்தாச்சா? இங்கே…” “சாஸ்திரியார்! இங்கே…” “உம்ம இஷ்டம், விகடர் யோக்யர். நல்லவர். கெட்டிக்காரர். அதைப் பற்றி இப்போ பேச்சில்லை. இங்கே உம்ம தங்கை சூடா வந்திருக்கா, என்னை இந்தக் கேஸை நடத்தணும்னு கேட்டுண்டிருக்கா, நானும்…” ‘செச்சே! அதென்ன அப்படிப் பேசறேள். விக்டருக்கு நான் என்ன ஜுனியரா, அவனோடு சேர்ந்து வேலை செய்ய? அவனை ஏற்பாடு செய்திருந்தா, நேக்குத் திருப்திதான்.” “சரி, சரி! விக்டருக்குப் பல பேர் தெரியும்னு நீர் சொல்றது ரொம்பச் சரி! அவரே நடத்தட்டும் கேசை.” டெலிபோனைக் கீழே சற்றுக் கோபத்தோடு வைத்துவிட்டு, வக்கீல் சங்கரய்யர், கூடத்திற்கு வந்தார். சூடாவைக் கண்டு. “சூடா! மன்னிக்கணும். நான் இந்தக் கேசுக்கு ஆஜராவதற்கில்லை” என்று கொஞ்சம் கண்டிப்பாகக் கூறினார். டெலிபோன் அறையிலிருந்து வெளிவந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சூடா, “டெலிபோன் மூலமாக என் அண்ணா, என்ன சொன்னார்? என்னவோ விக்டர், வேண்டாம். சரி, என்று காதில் பட்டது” என்று கேட்டாள். “உன் அண்ணா, இந்தக் கேசுக்கு, பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்திருக்கிறாராம்,” என்று கூறினார் வக்கீல் வெறுப்புடன். “என் அண்ணன், இதிலே சம்பந்தப்படுவதையே நான் விரும்பவில்லை. தயவு செய்து, நீங்களே இந்தக் கேசை நடத்த வேண்டும். விக்டர், செக்டர், யாரும் வேண்டாம். அவர்களுக்கு அக்கறை இருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை” என்று மன்றாடினாள் சூடா. “சூடா! எப்போதும் மரியாதையைக் கெடுத்துக் கொள்கிற வாடிக்கை எனக்குக் கிடையாது. ஆயிரம் வருவதானாலும் சரி, போவதானாலும் சரி! எப்போது இந்தக் கேசை நடத்த ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறாரோ, அதே க்ஷணம் எனக்கு அதிலே வேலை கிடையாது. என்னமோ உன் அண்ணா, பாரிஸ்டர் என்றால் ரொம்பப் பிரமாதம் என்று எண்ணிக் கொண்டு என்னைச் சாமான்யமான வக்கீல் என்று பாவித்து இந்தக் காரியம் செய்திருக்கிறார். அவராகக் கூப்பிட்டு, நான் பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்ட பிறகு, நான் அந்தக் கேசைத் தொடக்கூடாது. என் மரியாதைக்குப் பங்கம்,” என்று கூறினார் சங்கரய்யர். “என் அண்ணாவை நான் அரைமணி நேரத்துக்கு முன்புதானே கண்டபடி பேசினேன்.” “சொன்னார்! வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னாயாம். “ஆமாம்! அப்படியிருக்க அவர் பார்த்து ஏற்பாடு செய்யும் வக்கீலை நான் எப்படி நம்புவது.” “அதற்கு நான் என்னம்மா செய்வது? நான் சாதாரண வக்கீல், பி.ஏ.பி.எல்; விக்டர் பாரிஸ்டர்! பாரிஸ்டர் என்றால் என்ன? பிராந்தி விஸ்கி சாப்பிடத் தெரியும்! சீமைக்குப் போய் நம் தேசத்துப் பணத்தைப் பாழாக்கியவன் என்று அர்த்தம். அந்தப் பாரிஸ்டர், உன் அண்ணாவுக்குப் பிரமாதமாகத் தென்படுகிறார்.” “தயவு செய்து, என் பொருட்டு,” “சங்கரய்யர் ஒரு தீர்மானத்துக்கு வந்தாச்சி என்றால், சர்வேஸ்வரனாலேகூட அதை மாற்ற முடியாது.” “என் அண்ணா விஷயம் தெரியாது உங்களுக்கு.” “ஏன் தெரியாது? பேஷாகத் தெரிகிறதே! இந்தச் சிக்கலான கேசுக்கு, அந்தப் போதைக்காரனை வக்கீலாக வைத்ததிலிருந்தே, உன் அண்ணா முட்டாள் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. என்னை வேண்டுமானாலும் கேள், இதுவரையிலே, வாய்தா வாங்கினது தவிர, பாரிஸ்டர் விக்டர் ஒரு கேசாவது ஜெயித்ததுண்டா? விரலை மடக்க முடியுமா? போன மாதம் புவனகிரி முதலியார் கேசுக்கு ஆஜரானான். என்ன நடந்தது. பூஜ்யம். போன வாரத்திலே, என் கட்சிக்காரனாக இருந்த எ.சி. செட்டி கேசை நடத்தினான். என்ன நடந்தது தெரியுமோ, குட்டிச் சுவராக்கினான். விக்டர் ஒரு விடியா மூஞ்சி! அவனையா இப்படிப்பட்ட கேசுக்கு ஏற்பாடு செய்வது? அவனைவிட நன்றாக, என் குமாஸ்தா வினாயக முதலி கேஸ் நடத்துவானே” “இவ்வளவு தெரிந்திருந்தும், நீங்கள் என்னை இது சமயம் கைவிடலாமா?” “நான் என்னம்மா செய்வது? விக்டர் ஏற்பாடாகி விட்ட பிறகு, நான் இந்தக் கேசை நடத்துவது எப்படிச் சாத்தியமாகும். போ! அந்த ஆள் ஜாதக பலன் எப்படி இருக்கிறதோ, யார் கண்டார்கள்.” பகுதி 3 பாரிஸ்டர் விக்டர், எப்படிப்பட்டவரோ திறமைசாலியோ அல்லவோ என்பதல்ல சூடாவின் சந்தேகம். ஜாமீனில் விடுதலை பெறுவதற்கு அப்படியொன்றும் பிரமாதன அறிவும் ஆற்றலுமுள்ள வக்கீல் தேவையில்லை. வழக்கின் விசாரணையின்போதுதான், கீர்த்தியுள்ள வழக்கறிஞர் வேண்டும் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறாள். எனவே, அது விஷயமாக அச்சம் கொள்ளவில்லை. ஆனால் தேவரிடம் தீராப்பகை கொண்ட தன் அண்ணன், பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்தார் என்பதறிந்ததும், இதிலென்ன சூது இருக்குமோ, எதிர்த்துக் கெடுப்பதற்குப் பதிலாகக் கூட இருந்தே கெடுக்கிறாரோ என்று அஞ்சினாள். துளியும் எதிர்பாராத நிலையிலே, இந்த ஆபத்து நேரிட்டதால் சூடாவுக்கு , யாரிடமும் சந்தேகமும், எதைக் கண்டாலும் கேட்டாலும் பயமும் உண்டாயிற்று. மருண்ட மங்கையின் மனம் ஒரு நிலையில் இல்லை. வக்கீல் சங்கரய்யர், கண்டிப்பாக வர முடியாது என்று கூறிவிடவே, வேறு வழியின்றி, சூடா தன் அண்ணன் வீட்டுக்கு ஓடினாள். கலியாணசுந்தர சாஸ்திரிகள் அந்த நேரத்திலே, இருந்த நிலைமை, அவருக்கொரு தங்கை உண்டு. அவள் கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அதனால் அவள் கலங்கிக் கிடக்கிறாள் என்று யாரும் நம்பமுடியாதபடி இருந்தது. அவ்வளவு நிம்மதியாகக் காணப்பட்டார். சூடா உள்ளே நுழைந்தபோது, அவர் தமது நண்பருடன், இலக்கியச் சுவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் - கேட்டுக் கொண்டிருந்தார் என்று கூறலாம். பேசினவர், தமிழ் இலக்கியத்தின் சிறப்பை விளக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தார். சாஸ்திரிகளோ, வடமொழி இலக்கியத்தின் வசீகரத்துக்கு இணை கிடையாது என்ற முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார். “அவர் உள்ளே அவதிப்படுகிறார்! அநியாயமாக அவர்மீது வழக்கு தொடர்கிறார்கள்! கொஞ்சமேனும் இரக்கமின்றி, இங்கே அவர் இலக்கியத்தின் சுவை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாரே, எவ்வளவு ஈரமற்ற நெஞ்சு! இந்தப் பேச்சுக்கு வேறு நேரமா இல்லை” என்று எண்ணி ஏங்கினாள் அந்த ஏந்திழையாள். தமிழ் இலக்கியச் சுவையை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்த அன்பர் அதுசமயம் “சாஸ்திரிகளே! காதல் விஷயமாகத் தமிழ் இலக்கியம் தீட்டிக்காட்டிய ஓவியங்கள் போல, வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன்” என்று கூறினார், சாஸ்திரிகள். எந்த மொழியிலே காதல் சித்திரம் அழகாகத் தீட்டியிருக்கிறார் என்பதிலே கவனம் செலுத்தவில்லை. அவருக்கு அந்தச் சொல்லே, கோப மூட்டிவிட்டது. சாதாரண சொல்லா அது! மகா பொல்லாதது! அந்த ஒரு சொல்தானே, சூடாமணியை, அவளுடைய உரிமை உலகிலிருந்து, வேறோர் உலகுக்குக் குடி ஏற்றிவிட்டது! ‘அண்ணா இஷ்டம்’ என்று எதற்கும் கூறிக் கொண்டிருந்தவளை, ‘அவர் கிடக்கட்டும்! அவருக்கு என்ன தெரியும்?’ என்று பேச வைத்தது; அவர் உள்ளத்திலே புயலை மூட்டிற்று! குடும்பத்திலே கொந்தளிப்பை உண்டாக்கிற்று. சட்டம், சம்பிரதாயம், கட்டுக்காவல் முதலியவற்றை உடைத்தெறிந்த வெடிகுண்டல்லவா அது. சனாதனத்தைச் சுக்கு நூறாக்கிற்றே அந்தச் சம்மட்டி. அண்ணனுக்கும் தங்கைக்கும் இருந்த வாத்சல்யத்தைக் கெடுத்த அந்தக் கொடுமொழியை, எந்தப் பாஷையிலே எழுதினாள் என்ன என்று எண்ணினார். “காதல்! மகாபெரிய காதல்! அது கிடக்கட்டும் பிள்ளைவாள்! அந்த இலக்கியக் காதலைப் படித்துப் படித்து, கொஞ்சம் புன்சிரிப்புக் காட்டத் தெரிந்தவனையெல்லாம் துஷ்யந்தனாக்கிக் கொள்ளும் சகுந்தலைகள் அதிகமாகிவிட்டார்கள்! கண்டது அவ்வளவுதான்!” என்று கூறினார். “தமிழிலே உள்ள காதலை நீங்கள் கண்டதில்லை. சாஸ்திரியாரே! காளிதாசனை விடச் சிறந்த முறையிலே காதலைத் தீட்டியுள்ளனர் தமிழிலே” என்று பழைய பாடத்தையே படிக்கலானார் பண்டிதர். எந்தக் காதலைப் பற்றி இவருக்குள் சர்ச்சை நடந்ததோ - ஏட்டுக் காதலைப் பற்றி இருவரும் வீட்டுக்கூடத்திலே பேசிக் கொண்டிருந்த அதேபோது - காதலை வெறும் எழுத்தாக, படித்து ரசித்திடும் வாசகமாக மட்டும் கொள்ளாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைத்துக் கொண்ட வனிதை, அங்கோர்புறம் அழுத கண்களுடன் நின்றிருந்தாள். அவளுடைய சோகத்தைத் துடைக்கத் துடிக்காமல், சொல்லம்பு வீசிக் கொண்டிருந்தார் சாஸ்திரியார். சொல்லம்பு தடுத்தாலொழிய, பேச்சு நிற்காது என்பதைக் கண்ட சூடா, சாஸ்திரிகளிடம் சென்று, தன் குறையைக் கூறலானாள். “பாரிஸ்டர் விக்டரையா இந்தக் கேசுக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்” என்று கேட்டாள் பயந்தவண்ணம். “யார் சொன்னது?” என்று வறட்டுக் குரலிலே கேட்டார் சாஸ்திரி. “சங்கரய்யர்” “அவனை எப்போது கண்டாய்?” “நீங்கள் டெலிபோனில் பேசினபோது நான் அங்கேதான் இருந்தேன்.” பேச்சு வளரவிடவில்லை சாஸ்திரிகள்; இடையிலே பண்டிதரிடம் பேசலானார். “ஆமாம், டெலிபோன் போன்ற ஏதாவதொரு சக்தி இருந்ததாகத் தமிழ் இலக்கியத்திலே தெரிகிறதோ?” “டெலிபோன் என்ன, மகாபிரமாதமான சக்தியா?” “வளையாதீர் பண்டிதரே! நேரடியாகப் பதில் கூறும். வடமொழி இலக்கியத்திலே, ஒரு ரிஷிக்கும் மற்றொரு ரிஷிக்கும் மானசீகமான தொடர்பு உண்டு, அதுபோலத் தமிழ் இலக்கியத்திலே உண்டா?” இந்தக் கேள்விக்குச் சற்று விரிவாகப் பதில் கூற வேண்டுமென்று பண்டிதர் தீர்மானித்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய காவியங்களைத் துணைக்கு அழைக்கத் தொடங்கினார். சூடா இடைமறித்தாள். “விக்டர், அவ்வளவு பெரிய வக்கீல் அல்லவாமே!” “ஆமாம்! ஆரம்ப திசைதானே! அரை வயித்தியனாவதற்குள் ஆயிரம் பேர் சாக வேண்டுமாமே!” “அண்ணா! உங்களுக்கு எவ்வளவு நெஞ்சு வற்றிக் கிடக்கிறது. என் மனம் படும்பாடு பற்றித் துளியும் கவலையின்றிப் பேசுகின்றீரே! விக்டர், திறமையான வக்கீல் அல்ல என்று தெரிந்தும், ஏன், அவரை ஏற்பாடு செய்தீர்?” “என்னடி இது! நீ என்ன வம்புக்கென்றே வந்திருக்கிறாயா? யார் அவனைத் தாம்பூலம் வைத்து அழைத்தார்கள்? ஒரு பத்திரிகை ஆசிரியர் சம்பந்தமான கேசிலே ஈடுபட்டால் தனக்குப் பேர் வருமென்று அந்த முட்டாள் எண்ணினான். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டேன். எனக்கு இருக்கிற வேலை தொந்தரவுக்கு, அவனைத் தேடிக் கொண்டுபோய், வக்கீலாக இருக்கும்படி ஏற்பாடு செய்ய நேரந்தான் உண்டா?” “என் கணவருக்காக இதைச் செய்யவில்லை! விக்டருக்காக செய்தீரா? பேஷ், அண்ணா! தயவு செய்து இனி இந்த விஷயத்திலே தலையிட வேண்டாம்” “நடப்பது நடக்கட்டும்.” “வேதனையடைந்த உள்ளத்திலிருந்து கிளம்பும் என் வார்த்தைகள்”… “என் குடும்பத்தை நாசமாக்கும் என்று சபிக்கப் போகிறாயா? சரி, செய்! சூடா! ஒன்று கேள்! நான், சுலபத்திலே கோபம் கொள்ளுவதில்லை. கோபம் வந்ததோ அது சுலபத்திலே அடங்குவதில்லை. புற்றுக்குள்ளே இருக்கும் பாம்பு, வெளியே வந்தால், நடமாடுபவருக்கு ஆபத்து! நீயோ, அதைக் காலால் மிதிக்கிறாய்!” பாதகனிடம் பேசிக் கொண்டிருப்பதைவிடப் பதியை மீட்பதற்கான காரியத்தைக் கவனிப்பதே சரி என்று தீர்மானித்த சூடா, மேலும் ஒன்றும் பேசிக் கொண்டிராமல், அந்தக் கேடனின் வீட்டை விட்டுப் புறப்பட்டு, நேரே பாரிஸ்டர் விக்டரின் பங்களா சென்றாள். அவனிடம் சென்று, தன் நிலையைக் கூறி, அக்கரையாகச் கேசை நடத்தி, எவ்விதத்திலாகிலும், தன் கணவரை வெளியே கொண்டுவர வேண்டுமென்று வேண்டிக் கொள்வதென்று தீர்மானித்தாள். ஏழையின் கண்ணீருக்கு, பெண்ணின் அழுகுரலுக்கு இரங்காத பேயன், இருதயமற்ற சாஸ்திரி ஒருவன்தான் இருக்க முடியும்! மற்றவர்கள் யாராக இருந்தாலும், கருணை காட்டுவார்கள் என்று எண்ணி அண்ணன் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டவோ, பழிக்குப் பழி வாங்கவோ, வேறோர் சமயம் வரும், என்று மனதிற்குள் கூறிக்கொண்டு வேகமாக நடந்து, பாரிஸ்டரின் வீடு சென்றாள். ‘பாரிஸ்டர் உள்ளே இருக்கிறார்!’ என்று அறிவிப்புப் பலகை இருந்தது. ஆனால் வேலையாள், “ஐயா! காபி சாப்பிடுகிறார். கொஞ்ச நேரம் உட்காருங்கள். இந்தச் சீட்டிலே உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்” என்று கூறினான். எங்கு போனாலும் இப்படிப்பட்ட தொல்லைதானா? என்று சலித்துக் கொண்டாள். அவளுக்கு உள்ள அவசரம் பாரிஸ்டரின் வேலையாளுக்கு என்ன தெரியும்? தெரிந்தால் மட்டுமென்ன? அவன் தன் வேலையை ஒழுங்காகச் செய்துதானே ஆக வேண்டும். வந்திருப்பது யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து, “ஐயா”விடம் சொல்லுவதற்குத்தானே அவன் மாதம் இருபது பெறுகிறான். சாதாரண வக்கீல் வீடாக இருந்தால், கட்சிக்காரர் மடமடவென்று உள்ளே நுழையலாம். ஒரு பாரிஸ்டரின் மாளிகையிலே நடந்து கொள்ள வேண்டிய முறைகள் இல்லையா! வேலையாள்கூட, சூடா வந்திருக்கும் நிலையினால், அந்த அம்மையார், மிகுந்த கலக்கத்திலே இருப்பதைத் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டு அவன்தான் என்ன செய்ய முடியும்! “இதோ சீட்டு. இதிலே உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்” என்று அன்பும் மரியாதையும் கலந்த குரலிலே கூறினான். அவன் தந்த சீட்டிலே, சூடா, தன் பெயரை எழுதிக் கொடுத்தாள். பூனைபோல மெதுவாக உள்ளே சென்றான் வேலையாள். மறுநிமிஷம் வந்தான். “இப்போதுதான் காப்பி சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்” என்று கூறினான். “காப்பி சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்று சூடா கேட்டாள். காப்பி சாப்பிடுவது என்றால், வெறும் காப்பி சாப்பிடுவது என்று அர்த்தமில்லையம்மா! பாரிஸ்டரின் பழக்கம், காப்பியைக் கோப்பையிலே ஊற்றுவார் முதலில்! கொஞ்சம் சூடு அதிகமாக இருக்கும். சரி, ஆறட்டும் என்று எண்ணி, அதுவரையில் சும்மா இருப்பதா என்பதற்காக ஒரு ‘வில்ஸ்’ பற்ற வைப்பார். அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதா என்று சிகரட் பிடித்தபடி பேப்பரைப் பார்ப்பார். அதிலே ஏதாவது ‘ரேஸ்’ விஷயம் கிடைத்துவிட்டதோ, அவ்வளவுதான். காப்பி ஆறி விடுவது தெரியாது, மறுபடி காப்பி சூடாக்க வேண்டும். ஆக அரைமணி நேரமாவது பிடிக்கும். சில நாட்களிலேயே ஒரு மணியுமாகும்.” என்று கூறிக் கொண்டிருக்கையிலே, மணி அடித்தது. “சார்” என்று கூவிக் கொண்டே உள்ளே ஓடினான் வேலையாள். “யார் வெளியே?” என்று பாரிஸ்டர் கேட்டார். சீட்டை நீட்டினான் வேலையாள். “முட்டாள்! முன்னமேயே சொல்லக் கூடாதா? அப்படிப்பட்டவர்களையா காக்க வைப்பது” என்று கண்டித்தார் பாரிஸ்டர். ஓடினான் வெளியே. “அம்மா வாருங்கள்,” என்று அழைத்தான். அவன் வெளியே சென்றதும் பாரிஸ்டர், நிலைக் கண்ணாடிமுன் நின்று, கொஞ்சம் முகத்தைத் துடைத்துக் öõண்டு, மற்றொரு ‘வில்ஸ்’ எடுத்தார். சூடாவும் உள்ள நுழைந்து, பாரிஸ்டருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு நிற்க பாரிஸ்டர், சூடா நமஸ்கரித்ததைக் கவனியாமல், ஒரு சோபாவைக் காட்டி, “உட்காருங்கள்! மிஸ் உல்லாஸ்!” என்று கூறினார். சூடாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது! உல்லாஸ்! மிஸ் உல்லாஸ்! இதென்ன, பாரிஸ்டர் பிதற்றுகிறாரே! ஒருவேளை அவர் தமாஷ் பேச்சுக்காரராக இருப்பாரோ என்று எண்ணினாள். “நீங்கள் நேற்று மாலையும் வந்தீர்களாம்,” என்று பாரிஸ்டர் பேச்சைத் துவக்கினார். “நானா?” என்று கேட்டாள் சூடா, திகைத்துப் போய். “சிகரெட்…” என்று கூறிக்கொண்டே, சிகரெட் டப்பியை மரியாதையுடன், சூடாமுன் காட்டினார் பாரிஸ்டர். “இதேது! இவன் பித்தன் போலிருக்கிறதே” என்று எண்ணித் திகிலடைந்து, சூடா, ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தாள். பாரிஸ்டர், ‘சாரி’ என்று அதற்கோர் மரியாதைப் பேச்சு உதிர்த்துவிட்டு, “உங்க பிரதருக்கு, ‘வில்ஸ்’ இருந்துவிட்டால் போதும்! உலகிலே வேறு எதுவும் வேண்டாம் என்பார்” என்றார். திகைப்புக்கு மேல் திகைப்பாக இருக்கிறதே என்று சூடா எண்ணினாள். அண்ணா சிகரெட் பிடித்து, நான் பார்த்ததில்லையே! இதென்ன இந்தப் பாரிஸ்டர், இப்படிச் சொல்கிறாரே! ஒருசமயம், அண்ணா, இரகசியமாகச் சிகரெட் பிடிப்பவர் போலும் என்று எண்ணி ஒருவாறு சமாதானமடைந்தாள். “எடிட்டர் தேவர் கேஸ் விஷயமாகக் கொஞ்சம் பாயின்ட் பார்க்க வேண்டியிருந்தது காலையிலே என்றார் பாரிஸ்டர். சூடாவுக்கு முகத்திலே கொஞ்சம் தெளிவு பிறந்தது. “ஏதோ இந்த அளவு அக்கறை காட்டுகிறாரே பாரிஸ்டர்,” என்று, “நானும் கேஸ் சம்பந்தமாகத்தான் வந்திருக்கிறேன்” என்றாள் சூடா. பாரிஸ்டர் புன்சிரிப்புடன், “தெரியும் உங்க பிரதர் முன்பே சொல்லிவிட்டார்” என்றார். அண்ணனும் சொல்லி இருக்கிறார். பாரிஸ்டரும் லா பாயின்ட் பார்த்து வைத்திருக்கிறார். அக்கரையாகத்தான் வேலை செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் விளையாட்டுக்காரர் போலிருக்கிறது. என்னை மிஸ். உல்லாஸ், என்று கூப்பிட்டாரே, சிறுபிள்ளைத்தனமாக என்று சிந்தித்தவண்ணம் சூடா இருந்தாள். “என்ன யோசனை! கேஸ் ஜெயிக்குமா என்றா?” என்று பாரிஸ்டர் கேட்டார். “ஆமாம்” என்று கூறும் பாவனையிலே சூடா தலை அசைத்தாள். “கொஞ்சம்கூடப் பயப்பட வேண்டாம். நான் ஜெயித்துத் தருகிறேன்.” என்றார் பாரிஸ்டர். முகமே ஜ்வலித்தது சூடாவுக்கு. இதிலே ‘கஷ்டமே கிடையாது. இரண்டே பாயிண்ட் கூற வேண்டும். உங்க புருஷர் கோயில் பக்கமே போவதில்லை. பாயின்ட் நெம்பர் ஒன்!” என்று ஆரம்பித்தார், பாரிஸ்டர். கோயில் பக்கமே போகாதவர் மீது கோயில் கொள்ளை சம்மந்தமாகக் கேஸ் தொடுத்ததை உடைக்க இது சரியான ஆதாரந்தான் என்று எண்ணிய சூடா அகமகிழ்ந்து, பாரிஸ்டர் விக்டர், புத்தி கூர்மை உள்ளவர்தான் என்று சந்தோஷப்பட்டு, மேலும் அவருக்குச் சில ‘பாயின்ட்’ தருவதற்காக “கோயில் பக்கம் போகாதது மட்டுமில்லை; கோயிலிலே உள்ள முறையே தவறு என்று கூறுவதுண்டு” என்றாள். “பேஷ்! பாயின்ட் நெம்பர் ஒன்றுக்கு இது புதிய பலன் தருகிறது. இந்த பாயின்ட் தீர்ந்ததும் நம்பர் 2. இதுவும் சுலபமாக நிரூபிக்கக் கூடியது’ என்று கூறி முடிப்பதற்குள், சூடா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு இருந்தாள். அவள் மீது வெடிகுண்டு வீசப்படுவது போலிருந்தது பாரிஸ்டரின் பேச்சு. “கோர்ட்டிலே நான் கூறப் போகும் இரண்டாவது பாயின்ட். உங்கள் புருஷர் ஓயாத குடிகாரர் என்பது” என்றார். “என்ன, என்ன?” என்று அலறினாள் சூடா. என்ன செய்வது! சொல்லித் தான் ஆக வேண்டும். கேஸ் ஜெயிக்க வேண்டுமென்றால் அவர் குடிகாரர் என்று ருஜுப்படுத்தியாக வேண்டும். வேறு வழியில்லை” என்று வாதாடினார் பாரிஸ்டர். “என்ன சார் இது! என் கணவர் குடிகாரரா? இது என்ன வேடிக்கை” என்று அச்சத்துடன் அணங்கு கேட்டாள். அந்த அச்சம் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி பேசலானார் பாரிஸ்டர். “அவர் குடிகாரர். கோயிலுக்குப் போகாதவர் என்ற இரண்டு பாயின்ட்டிலேதான் கேசே இருக்கிறது. கோர்ட்டுகளிலே இப்போதெல்லாம் இந்த மாதிரியான கேஸ் சம்மந்தமாகக் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கிறார்கள். குடிகாரர் என்று கோர்ட் முன்னிலையிலே கூறினால் மானக்குறைவாக இருக்குமே என்று யோசித்துப் பயனில்லை. இந்த இரண்டு பாயின்ட்டைச் சொன்னால்தான், உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்கும்” என்றார் பாரிஸ்டர். பகுதி 4 “டைவர்சா? சார்! நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?” என்று சூடா கேட்டாள். “என்ன பேசுகிறேனா? உங்கள் டைவர்ஸ் கேஸ் விஷயமாகத்தான்” என்றார் பாரிஸ்டர். “என் டைவர்சா? என் அண்ணா, அப்படி கேஸ் இருப்பதாகவா சொன்னார்” என்று திகைத்துப் போய்க் கேட்டாள். “ஆமாம்! உங்க புருஷருக்கும் உங்களுக்கும் பிடித்தமில்லை; டைவர்ஸ்னு மனு தாக்கலாகி இருக்கிறது என்று சொன்னார்,” என்றார் பாரிஸ்டர். “அயோக்கியன்” என்று அக்னிப்பொறி பறக்கும் குரலிலே பேசினாள் சூடா. “மன்னிக்க வேண்டும், மிஸ் உல்லாஸ்…” என்று பாரிஸ்டர் தமது நாசுக்கான பாஷையில் துவக்கினார். சீறினாள் சூடா. “உல்லாசும் கில்லாசும்! என்னய்யா இது! உளறிக் கொண்டிருக்கிறீர்? யாரை உல்லாஸ் என்று கூறுகிறீர். நான் சூடா! சூடாமணி!” என்று கூவினாள். திடுக்கிட்டுப் போனார் பாரிஸ்டர். வேலைக்காரன் கொடுத்த சீட்டை மறுபடியும் பார்த்தார். மிஸ் உல்லாஸ் எம்.ஏ., என்று தெளிவாக இருந்தது எழுத்து. ஆனால் அடுத்த விநாடி சீட்டைத் திருப்பிப் பார்த்தார். சூடாமணி என்று எழுதப்பட்டிருந்தது. “டே! ராஸ்கல்” என்று கூவினார் பாரிஸ்டர். வந்தான் வேலையாள். “மடையா! இந்தச் சீட்டு நேற்று, உல்லாஸ் என்றொரு அம்மாள் வந்தபோது அவர்கள் கொடுத்ததல்லவா? அதே சீட்டை இந்த அம்மாளிடம் கொடுப்பதா? இடியட்! நான் இவ்வளவு நேரம், இந்த அம்õள்தான் மிஸ் உல்லாஸ் என்று எண்ணிக் கொண்டு, டைவர்ஸ் கேஸ் விஷயமாகப் பேசினேன்” என்று கூறி, அவனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார். “கோபிக்க வேண்டாம் அம்மா! என் நண்பரெருவர் தன் தங்கை உல்லாஸ் என்பவர் டைவர்ஸ் கேசை நடத்தும்படிச் சொன்னார். நான் அந்த உல்லாசைக் கண்டதில்லை. நேற்று வந்தார்களாம். நான் இல்லை. இன்று இந்த மடையன், அதே சீட்டைத் தங்களிடம் தந்தான். நான் உங்கள் எழுத்தைக் கவனிக்கவில்லை. உல்லாஸ் என்ற எழுத்தையே பார்த்தேன். உங்களையே உல்லாஸ் என்று எண்ணிக் கொண்டு உளறினேன்.” என்று விளக்கமுரைத்தார். பாரிஸ்டர் விக்டர் எவ்வளவு பக்குவமற்றர் என்பதைக் கண்டறிய இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டது. இப்படிப்பட்ட அவசர புத்திக்காரனை எப்படி நம்புவது? இவன், கோர்ட்டிலே எப்படி வழக்கை வெற்றிகரமாக நடத்த முடியும்? ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்குப் பதில், வேறு ஏதேனும்கூட எழுதிக் கொடுத்துவிடக் கூடுமே என்று மேலும் பயந்த சூடாமணி, இந்தத் தொல்லையிலிருந்து எப்படி நீங்குவது என்றறியாது திகைத்தாள். “முட்டாள், என்னை இப்படிச் சிக்க வைத்துவிட்டான், அம்மா! மன்னியுங்கள். நான் காலையிலே, தேவர் கேஸ் சம்பந்தமாகக் கவனம் செலுத்தினேன். ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்,” என்று பாரிஸ்டர் கூறினார். “என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? அவரை ஜாமீனில் விடுதலை செய்வார்களல்லவா?” என்று சூடா கேட்டாள். ஆழ்ந்த சோகம் கப்பிய குரலில். பாரிஸ்டர், “செய்வார்களா என்ற கேள்விக்கு இடமில்லை,” என்று கூறினார். “விளங்கவில்லையே” என்று விசாரத்துடன் சூடா கேட்க, பாரிஸ்டர் விளக்கலானார். “அம்மா! இது ஒரு பெரிய காரியமல்ல! அரெஸ்டு செய்யப்பட்ட ஒரு ஆளை வெளியே ஜாமீனில் கொண்டு வருவது பெரிய பிரமாதமில்லை. அதை ஒரு சாதாரண வக்கீல்கூடச் செய்துவிடலாம். ஜூனியர்கள் கூடச் செய்துவிடலாம். அதிலும், தேவர் ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் - கீர்த்தி வாய்ந்தவர் - இதற்கு முன்பு எவ்விதமான தப்புத் தண்டாவிலும் சம்பந்தப்படாதவர். அவரை ஜாமீனில் விட முடியாது என்று கூற மாட்டார். அதிலும், விசாரணை நடத்துபவர் இருக்கிறாரே அவர் பெரிய குடும்பஸ்தர். ஆறு பிள்ளைகள்; மூன்று பெண்கள்! கருணையானவர் அவர். தேவரை ஜாமீனில் விடுவதற்குத் தடை சொல்ல மாட்டார். மேலும், மிகமிக அயோக்யனுக்குக்கூட நம்முடைய சாதுர்யத்தாலும், செல்வாக்கினாலும், ஜாமீனில் விடுதலை வாங்கித் தர முடியும். ஆகையால், தேவரை ஜாமீனில் விடுவிப்பது சிரமமான காரியமல்ல, மிகச் சுலபந்தான்” என்று பாரிஸ்டர் விளக்கிக் கொண்டே ஒரு சிகரெட் எடுத்தார். தைரியமூட்டும் இச்சொற்களைக் கேட்ட சூடாமணிக்குக் கொஞ்சம் களிப்பாகவே இருந்தது. நோய் குணமாகும் என்று கூறாத டாக்டரும் வழக்கு ஜெயித்துவிடலாம் என்றுரைக்காத வக்கீலும் உண்டோ! இது தெரியும் சூடாவுக்கு. என்றாலும், என்ன ஆகுமோ, எப்படி முடியுமோ என்று திகில்பட்டுக் கொண்டிருந்ததாள், பாரிஸ்டர் விக்டர், “பயப்படத் தேவையில்லை; ஜாமீனில் வெளிவருவது சுலபம். என்னால் அதனை மிகச் சுலபமாகச் செய்ய முடியும்” என்று கூறினபோது, ஆறுதலாக இருந்தது. ஆரம்பத்திலே பாரிஸ்டரிடம் கொண்டிருந்த அவநம்பிக்கையும் சிறிதளவு குறைந்தது. நெஞ்சிலே நின்றாடிய அந்தக் களிப்பு நேரிழையாளின் முகத்தை ஓரளவு பொலிவுறச் செய்தது. “பாரிஸ்டரே! அவரைப் போலீசார் திடீரென்று கைது செய்ததால், ஏற்பட்ட மனஅதிர்ச்சி என்னைப் பைத்யக்காரியாக்கி விட்டிருக்கும். நான் எப்போதும் இவ்விதமாகப் பயந்து சாகிறவளல்ல. கொஞ்சம் தைரியம் உண்டு. சில பல நெருக்கடிகளைச் சமாளித்திருக்கிறேன். ஆபத்துகளை அலட்சியப்படுத்தியிருக்கிறேன். என்ன நேரிட்டுவிடும்? இதற்குப் பயப்படுவதா? தலை போகுமா? என்ற பல்லவியை நான் அடிக்கடி பாடுவேன். அண்ணன் என்னைத் “துஷ்டப்பெண்” என்று கண்டிப்பதும் இந்தப் போக்கைக் கண்டுதான். ஆனால், அவர் அரெஸ்ட்டு செய்யப்பட்டவுடன், என் சுபாவமே மாறிவிட்டது. இதுவரை, சிரிப்பு விளையாட்டு எனும் திரையினால் மூடி வைக்கப்பட்டிருந்த பயங்காளித்தனம், திரையைக் கிழித் தெறிந்துவிட்டு வெளியே வந்து தாண்டவமாடுகிறது. பாரிஸ்டரே! பத்திரிகையிலே அவர் எழுதிய பலப் பல வரலாற்றுச் சம்பவங்களை, வீரர் வாழ்க்கையைப் படித்திருக்கிறேன். அவ்வளவும், இன்றுள்ள என் மனவேதனைக்கு மருந்தளிக்கவில்லை” என்று கூறித் துக்கித்தாள் சூடா. பாரிஸ்டர் விக்டர் புன்னகையுடன், தமது பிரதாபத்தைக் கூறலானார். “கலங்க வேண்டாம்! கேசை என்னிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இனிக் கவலையை விட்டுவிடுங்கள். இந்தக் கேசை, நான் தூள் தூளாக்கி விடுகிறேன். தணலில் போட்டெடுத்த தங்கம்போல, இந்த வழக்கிலே சிக்கியுள்ள தேவர், வெற்றி வீரராக வெளிவரப் போகிறார்”, என்று பாரிஸ்டர் மேலும் தைரியமூட்டவே சூடா, அவரிடம், மரியாதை கலந்த அன்புடன், தன் வாழ்க்கை வரலாறு முழுவதையும் கூறி விடலாம் என்று எண்ணிக் கொண்டு, “என் கதையே துக்கம் சூழ்ந்தது. மேகத்திடையே மின்னல் போல சோகம் நிறைந்த என் வாழ்விலே, மகிழ்ச்சி சில சமயம் வீசும்; பிறகு மறையும்! பழைய சம்பவங்களை நான் விவரிக்கத் தொடங்கினால், நேரம் வீணாகும். சுருக்கமாகக் கூறுகிறேன். எனக்கு உலகிலே ஒரே நண்பர் - அவரே என் கணவர். பரம விரோதி ஒரே ஒரு ஆள், பாரிஸ்டரே! திடுக்கிடாதீர், என் அண்ணா இருக்கிறாரே சாட்சாத் சாஸ்திரியார், அவரைத் தான் குறிப்பிடுகிறேன். நான் தேவரைக் கலியாணம் செய்து கொண்டது, அண்ணாவுக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. எவ்வளவோ மிரட்டினார்! ஊரிலே அபவாதமே பிறக்கும் என்றார். நான் துளியும் அஞ்சவில்லை. தேவரின் மொழி எனக்கு இன்பம் மட்டுமல்ல, எல்லையில்லாத தைரியத்தையும் தந்தது. எதிர்ப்பு ஒரு துரும்பு என்றேன். உலகம், உதவாக்கரைக் கொள்கைகள் நெளியும் இடம் என்றேன். அபவாதம் என் அன்பரின் ஆதரவு எனும் கேடயத்தைத் துளைக்க முடியாது என்றேன். காதல் முல்லை மலர்ந்ததால், நான் அந்த மணத்திலே பரவசமாகி, ஜாதி குலம் ஆச்சாரம் என்று பேசிய என் அண்ணாவைச் சட்டை செய்ய மறுத்தேன். தேவரை என் கணவராகக் கொண்டேன்! இன்றும், நான் செய்தது தவறானது என்று நான் எண்ணவில்லை. எனக்கு உயிரளித்தார் தேவர். வாடிக் கிடந்தவளைத் தேடி எடுத்துப் புது உலகில் குடி ஏறச் செய்தார். மீண்டும் நரம்புகள் சரியாக்கப்பட்டதால், வீணையின் நாதம் கிளம்பிற்று என் இருதயத்தில்! அவருடைய அன்பெனும் ஆலாபனத்திலே நான் ஆனந்தமடைந்தேன். ஆனால் அதே கீதம் என் அண்ணாவுக்குக் கர்ண கடூரமாக இருந்தது - இருக்கிறது. என் கணவருக்குக் கட்டழகராகக் காட்சி தந்தவரை, என் எதிரிலேயே காட்டெருமை என்று அண்ணா வைதார். நான் அண்ணாவுக்குக் கண்ணிலே கோளாறு என்று எண்ணி, எதிர்த்துப் பேசாமலிருந்து விடுவேன். உங்கள் நேரம் பொன்னானது, என் கதையோ வளரும், இன்னமும் சுருக்கி விடுகிறேன். இந்த வழக்கைத் தாங்கள் தயவுசெய்து நடத்தும்போது, என் அண்ணாவின் யோசனைப்படி எதுவும் செய்யக் கூடாது என்று தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அவர் அடுத்துக் கெடுக்க இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினாள். பாரிஸ்டர், “அம்மா! இந்த வழக்கிலே சிக்கல் உண்டு. ஆனால் சிக்கலைப் போக்குவதிலே என் போன்றவர்களுக்குச் சிரமம் இராது,” என்று பழையபடி தன் பிரதாபத்தையே கூறினார். “ஜாமீன் மனு…” என்று முக்கியமான பிரச்னையைத் துவக்கினாள் சூடா. “மறந்தே போனோம் இருவரும். ஜாமீனில் வெளி வருவது கஷ்டமல்ல. ஆனால் ஒரு விஷயம். இந்த வழக்கு நமக்குச் சாதகமாக வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். தேவரை ஜாமீனில் வெளியே கொண்டு வராமலிருப்பது நல்லது” என்று பாரிஸ்டர் பாணம் விடுத்திடவே, சூடா அலறினாள். பூந்தோட்டத்திலே உலவும் நேரத்தில் தென்றலும் வீச, மணமும் மந்தமாருதமும் அந்த அந்தி நேரத்திலே ஆனந்தம் தர, ஆடிப் பாடிச் செல்லும் கன்னியின் காலிலே திடீரென்று பாம்பு பின்னிக் கொண்டது போல, ஜாமீனில் வெளிவந்துவிடுவார் - தேவரைச் சிறையிலிருந்து பாரிஸ்டர் விடுவிப்பார் என்று நம்பிக் களிப்படைந்த காரிகைக்கு, பாரிஸ்டரின் பேச்சு, திடுக்கிடச் செய்தது. இவன் என்ன பித்தனா? புலம்பும் நம்மிடம் கேலி செய்கிறானா? என்று பலப் பல எண்ணித் துடிதுடித்தது, கண்களிலே கசிந்த நீரையும் துடைத்துக் கொள்ளாமல், இரு கை கூப்பி அவனை நமஸ்கரித்து, “ஐயோ! என்னைச் சோதனை செய்கிறீரா? ஏன் திடீரென்று எனக்குத் திகில் உண்டாக்குகிறீர்” என்று கூறித் தேம்பினாள். “ஐயோ! இதென்னம்மா, சின்ன குழந்தை மாதிரி அழுகிறீரே. நான் சொன்னது என்ன? ஏன் இதற்காக அழ வேண்டும்? நான்தான் கேஸ் நிச்சயம் ஜெயிக்கும் என்று கூறுகிறேனே, ஏன் பீதி! கவலை? ஜாமீன் விஷயமாக நான் அவ்விதம் சொல்வதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன,” என்று பாரிஸ்டர் தேம்பும் பாவைக்குத் தேறுதல் கூறினார். அந்தப் பாவி வக்கீல் சங்கரய்யரோ, வறட்டு அகங்காரத்தைக் காட்டினான். இவனோ, சலிப்புற்றான். சாஸ்திரியின் பேச்சின்படிஇவன் நடந்து கொள்கிறான் போலும். ‘சரி! இனி இவனிடம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது’ வேறு தகுந்த வக்கீலைக் காண்போம் என்று எண்ணினாள். தேவருக்கு ஆப்த நண்பர்கள் பலர் உண்டு. அவர்களிலே சிலரைக் கண்டு பேசி, அவர்கள் மூலமாக, இந்த வழக்கை நடத்துவது என்று தீர்மானித்து பாரிஸ்டரை நோக்கி, ஐயோ! என் சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகி விட்டது. என் கணவரை ஜாமீனில் கொண்டு வர முயற்சி செய்ய இஷ்டமில்லை உங்களுக்கு. என் அண்ணனின் துர்போதனைக்கு நீர் பலியாகிவிட்டீர். ஆகவே உம்மை நம்பிப் பயனில்லை. நான் போகிறேன். அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வராமல் இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை” என்று கோபமாகக் கூறிவிட்டு. அந்த இடத்தை விட்டுச் சூடா கிளம்பினாள். “பைத்யக்காரி! அவசரக்காரி! போக்கிரி” என்று மனத்திற்குள் கூறிக் கொண்டே அந்த அறையிலே பாரிஸ்டர் உலவினார். சில விநாடிகளின் விசாரம் நிறைந்த சூடாவை மறந்தார். அவர் மனக்கண் முன்பு, மதுக் கிண்ணமும் கையுமாக ஓர் மைவிழியாள் நின்றாள். அந்தக் காட்சி இன்பத்திலே ஈடுபட்ட விக்டர், வழக்கு, நீதிமன்றம் முதலியவற்றை மறந்தான். அவளுடைய அதரத்திலே அன்றலர்ந்த ரோஜாவின் கவர்ச்சி இருந்தது. கடை சிவந்து காதுவரை வளர்ந்த அவளுடைய விழி, அவனை, எங்கெங்கோ அழைத்தது. இந்தப் பயனற்ற கட்டை புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் கரங்களால், அவளுடைய கூந்தலைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, ஒரே ஒரு முத்தம், கொடுக்கச் சமயம் கிடைக்காதா? சகல சுகத்தையும் அந்த ஒரு நொடிக்காகத் தந்து விடலாமே என்று எண்ணினான். அடுத்த விநாடி அந்த மைவிழியாள் திடுக்கிட்டுத் திரும்புவது போலிருந்தது. ஆடம்பரமான உடையும், அட்டகாசமான நடையும் கொண்ட ஆடவனொருவன், அவள் அருகே வந்து நின்றான். மதுக்கிண்ணத்தை அவள் மிக மரியாதையுடன் அவனிடம் தந்தாள். அவனோ மிக அலட்சியமாக அதை வாங்கிக் குடித்தான், கனைத்தான், சரேலென வெளியே போய்விட்டான். மலர்க்கொடி அசைந்து செல்வதுபோல, அந்த மனோகரியும் அவன் சென்ற பக்கம் நடந்தாள் - மறைந்தாள். பாரிஸ்டர் விக்டர் இந்தக் காட்சியைக் கண்டு பெருமூச்செறிந்தார். * * * “பயல்! தலைக்கால் தெரியாமல் ஆடினான்!” “நேக்குத் தெரியுமே! அந்த அற்பனின் வாழ்வு அஸ்தமிக்குமென்று நன்னாத் தெரியும். சாம்பு! போன சனிக்கிழமை என்ன நடந்தது தெரியுமோ? என் மனம் அந்தப் பயல் போலீசிலே சிக்கிக் கொண்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பிறகுதான் குளிர்ந்தது. ஏ.பி. நியூஸ் ஒன்று வந்தது. அதை நான் சிரமப்பட்டு மொழி பெயர்த்துக் கொடுத்தேன். ப்ரூப் போனதும், என்னைக் ‘கூப்பிட்டனுப்பினான்; போனேன். “ஓய்! நீர்தானா ட்ரான்ஸ்லேட் செய்தது” என்று கேட்டான். ‘ஆமாம்’ என்றேன், மரியாதையுடன். “உம் மண்டையிலே களிமண்ணா இருக்கு?” என்றான் சாம்பு! என் மனம் துடியாய்த் துடித்தது. எனக்கு வந்த கோபம், அவனைக் கடித்து மென்று கீழே உமிழ்ந்து விடலாமா என்று தோன்றியது. என்ன செய்வது? பொறு மனமே பொறு என்று என்னை நானே அடக்கிக் கொண்டு நின்றேன். என்னடா, இவ்வளவு துடுக்குத்தனமாகத் திட்டினோம். அதைக் கேட்ட பிறகும் அவன் நிற்கிறானே, என்று நினைத்தானா? எடிட்டர் என்றால் நம்மை அவன் வீட்டு வண்டிக்காரன் போலவா நடத்த வேண்டும்? “மரம் போல நிற்கிறீரே ஓய்! பத்து வரி இல்லை, இது. இதை மொழிபெயர்க்கத் தெரியவில்லை. சப் எடிட்டர் என்று பெயர் இருக்கிறது” என்று மறுபடியும் கண்டித்துவிட்டு, அந்தக் காகிதத்தைச் சுருட்டி வீசினான், என் முகத்தின் மீது” “ஏன்? என்ன தவறு எழுதினீர்?” “என்ன தவறாகத்தான் இருக்கட்டுமே! சாம்பு! மிருகத்தை நடத்துவது போலவா நடத்துவது?” “அது சரி! அப்படித்தான் சர்வாதிகாரம் செய்தான்.” “சர்வாதிகாரமா? வெறி பிடித்து அலைந்தான் என்று சொல்லும். அன்றைய தினம் பகவானே! இந்தப் பாவிக்கு நீதான் தண்டனை தர வேண்டும் என்று மனம் நொந்து சொன்னேன்; சரியாகப் பத்தாம் நாள் பார்த்தாயா, வேலைக்கு ÷லையும் போச்சு, கேசும் கிளம்பிடுத்து.” “குறைஞ்சது ஐந்து வருஷம் தீட்டிவிடுவார்,” “சந்தேகமா என்ன? கோயில் கொள்ளை கேஸ் சாமான்யமான விஷயமா? அதிலும் இவனோடு சேர்ந்து வேலை செய்ததாக யாரார் அரெஸ்டானார்கள் என்ற லிஸ்டைப் பாரேன்! கருப்புக் குல்லாக்கள், சும்மா விடுவாளோ இவனை. கருப்புக் குல்லாய் என்ற உடனே எனக்கு அன்று நான் மொழி பெயர்த்த விஷயம் கவனம் வருகிறது. என்ன தவறு கண்டுபிடித்து விட்டான் தெரியுமோ? ‘பிளாக் மார்க்கெட்’ என்ற தலைப்புக்கு நான் கருப்பு மார்க்கெட் என்று எழுதிவிட்டேன். இதுதானப்பா பெரிய தவறு! இதற்காகத்தான் என் மண்டையிலே களிமண்ணா இருக்கு என்று கேட்டான். அவன் மண்டையிலே புழு இருந்தது, நேக்குத் தெரியும்னு அவனுக்குத் தெரியாது.” “கிடக்கிறான், தள்ளடா அவன் பேச்சை; யாரோ வருகிற சப்தம் கேட்கிறது.” “தேசவீரன்” பத்திரிகையில் தேவருடன் வேலை பார்த்து வந்த துணை ஆசிரியர்கள், சாம்பு, சதாசிவம் எனும் இருவர், தேவருக்கு நேரிட்ட விபத்தைக் கேள்விப்பட்டுத் தங்கள் விரோதத்தைக் கக்கிக் கொண்டிருந்தனர். அன்று வரையில் அவன் முன் பூனைபோல் நடந்து கொண்டிருந்த அப்புலவர்கள், வழுக்கிக் கீழே விழுந்தவனின் கழுத்திலே கால் வைத்து நசுக்கும் கயவராயினர். அவர்கள் மனத்திலே அதுவரை தூங்கிக் கொண்டிருந்த துவேஷமும் பொறாமையும், விழித்தெழுந்து வெறியாட்டமாடின. தேவர், தேச வீரன் பத்திரிகை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பிருந்தே அங்கே துணை ஆசிரியர்களாக வீற்றிருந்து, தொந்தி பெருத்தவர்கள், சாம்புவம், சதாசிவமும். அவர்களின் சாரமற்ற நடையும், தவறு நிரம்பிய மொழிபெயர்ப்பும் பல தடவை, தேவருக்குக் கோபமூட்டியதுண்டு. ஆனால் அந்தக் கயவர்கள் பேசிக் கொண்டது போலச் சர்வாதிகார மனப்பான்மையால் அல்ல; பத்திரிகையின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்ற கவலையால்! எந்தத் தேவரை இவர்கள் ஈனத்தனமான முறையிலே கண்டித்தனரோ, அதே தேவரின் பெரு முயற்சியினாலேதான், துணை ஆசிரியர்களின் நிலையும் சம்பள விகிதமும் உயர்ந்தது. செய்ந்நன்றியையும் கொன்றுவிடும் மாபாவிகள். இங்ஙனம் ஆபத்தில் சிக்கிக் கொண்ட தேவரைப் பற்றிப் புறங்கூறிக் கொண்டிருக்கும் அதே நேரத்திலே பாரிஸ்டர் விக்டரின் பைத்தியக்காரப் போக்கைக் கண்டு பயந்து, தக்கவரிடம் சென்று உதவி தேடலாம் என்று புறப்பட்ட சூடா, ஆசிரியருக்கு ஆபத்து நேரிட்டதே என்று பதை பதைத்துத் துணை ஆசிரியர்கள் உதவி செய்ய முன்வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு, சாம்புவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். காலடிச் சத்தம் கேட்டு சதாசிவம், வருவது யாரென்று பார்க்கச் சென்றான். சோகமே உருவெடுத்து நடந்து வருவதுபோல், சூடா வரக் கண்டு, அந்தச் சூதுக்காரன், கண்களைக் கசக்கிக் கொண்டு “போறாத வேளை! கிரஹசாரம்” என்று கூறினான் உருகுவது போல்! பகுதி 5 துணை ஆசிரியர்கள் என்ற பெயருடன் துரோகிகள் இருந்த விஷயத்தைக் கள்ளங் கபடமில்லாத சூடாமணி எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அந்தக் கபடன் கசங்கிய கண்களுடன், “கஷ்டகாலம்! போறாத வேளை” என்று உருகியபோது, ‘ஆஹா! இவ்வளவு உள்ளன்புடன் பேசும் இந்த உத்தமர்களின் உதவியை நாடாமல், சாதித் திமிர் பிடித்த சாஸ்திரி, வீண் பெருமைக்கார விக்டர், ஜம்பமடித்துக் கொள்ளும் சங்கரய்யர் ஆகியோரிடம் சென்று, காலத்தை வீணாக்கிக் கொண்டோமே, என்று கூடச் சூடா கருதினாள். துணை ஆசிரியர் என்ற பெயர், அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு துளியும் பொருளுடையதல்ல என்பதைச் சூடா அறியாள். அவர்கள் ஆசிரியத் தொழிலுக்கான ஆற்றல் உள்ளவர்களுமல்ல. தேவருக்குத் துணையுமல்ல; கஷ்ட காலத்திலே யாருக்குத்தான் எடை போட்டுப் பார்க்க நேரமிருக்கும். எனவே சூடா, மிக உருக்கமாக, அவ்விருவரிடம், தன் மனக் கஷ்டத்தைக் கூறினாள். பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படியாவது, தக்க ஏற்பாடு செய்து, தேவரை முதலிலே ஜாமீனில் வெளியே கொண்டு வர வேண்டுமென்பதை வற்புறுத்தினாள். அந்த நயவஞ்சகர்கள், அதே விஷயமாகவே தாங்கள் அந்தச் சமயம் பேசிக் கொண்டிருந்ததாகப் பச்சைப் புளுகுரைத்ததுடன், தேவரின் வழக்குக்காகச் செலவிடப் பொதுமக்கள் தாராளமாகப் பணம் தருவார்கள் என்றும், அதற்கான ஏற்பாடும் செய்யப் போவதாகவும் கூறி, ஆரம்ப ஏற்பாடுகளுக்காக மட்டும் ஒரு ஆயிரம் ரூபாய் தந்தால் போதுமென்று பசப்பி, சூடாவின் நகைகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டனர். தேவரைச் சிறையிலிருந்து மீட்பதற்கான நல்ல ஏற்பாட்டை அந்த நண்பர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் சூடா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, வீடு திரும்பினாள். * * * “காதலாம், காதல்!” என்று வாய்விட்டுக் கூறியபடி சாஸ்திரி தமது அறையிலே, உலவிக் கொண்டிருந்தார். பசியுடன், கூண்டுக்குள் உலவும் புலிபோல, ‘இவளுடைய காதலின் விளையாட்டு, என் குலத்தின் பெருமையை, குடும்பத்தின் கீர்த்தியைக் கெடுத்துவிட்டதை இவள் அறிவாளா? அந்தத் தடியனுக்குத்தான் அதுபற்றிக் கவலை இராது. அவன் பெரிய இலட்சியவாதி, இவள் என்னை இப்படி அலட்சியப் படுத்தினது தகுமா? படட்டும், பட்டால்தானே தெரியும் முட்டாளுக்கு?’ என்று முணுமுணுத்தார். “அந்த வாயாடி ஊரிலே, கண்டவர்களிடம் போய்க் கலகம்செய்வாள்; என் அண்ணன் இந்த ஆபத்துக் காலத்திலே ஓர் உதவியும் செய்யவில்லை என்று சொல்வாள்; ஊரிலே நாலு பேரிலே ஒருவராவது, அவன் சொல்வதைச் சரி என்பார்கள்; என்னை ஏசுõர்கள். அந்தச் சனியன், என்மீது, பலருக்கு வெறுப்பு வருகிறபடி செய்து வைப்பாள்” என்று எண்ணிப் பயந்தார். கொதிப்பும் பயமும், குறைய வழி தெரியவில்லை. சாய்வு நாற்காலியிலே படுத்துக் கொண்டார். மீண்டும் கண்களை மூடினார். உடனே கோர்ட், நீதிமன்றம், கூண்டிலே தேவர், எதிரே அழுத கண்களுடன் சூடா, பலர் தன்னைச் சுட்டிக் காட்டித் தூற்றுவது, – இவைபோன்ற காட்சிகள் தோன்றலாயின. “கோழைத்தனம்! வீண் மனப்பிராந்தி!” என்று தனக்குள் கூறிக்கொண்டு, மன நிம்மதிக்õக பகவத் கீதை படிப்பது என்று தீர்மானித்து அதை எடுத்தார். பாண்டவர் யார்? கௌரவர் யார்? பந்துக்கள்! ஒரு கொள்கைக்காகத்தானே யுத்தம் நடைபெற்றது. அவர்களுக்குள் சூடாமணி என் தங்கைதான். ஆனால், எனக்குப் பங்கம் தேடியவளாயிற்றே! தங்கை என்று பச்சாதாபப்படுவதா? இந்தச் சந்தர்ப்பத்திலே கூடாது. என்னைக் கொடுமை செய்தாள் இப்போது அவள் அனுபவிக்கட்டும் அல்லலை – என்று சமாதானம் கூறிப் பார்த்தார் மனம், சாந்தி அடையவில்லை; நாலைந்து பேருடன் டெலிபோனில் பேசினார், சிந்தனையை வேறு பக்கம் திருப்ப. ஆனால் ஒவ்வொருவரும், தேவரின் அரெஸ்ட்டு விஷயமாகவே பேசத் தொடங்கவே, சலிப்புடன் மீண்டும் கிதையிலே கவனம் செலுத்தலானார். ‘அம்மா! கொஞ்சம் மெதுவாக நடவுங்கள்” “யார் நீ! என்னிடம் என்ன வேலை உனக்கு?” “தேவரின் சம்சாரம்தானே நீங்கள்?” “ஆமாம்! நீ யார்?” “நான் யார் என்று கூறக் கூடாது. நான் தேவரின் நண்பன்; அதுமட்டும் தெரிந்தால் போதும் தங்களுக்கு. நான் தங்களிடம் இரகசியமாகப் பேச வேண்டும் அவர் விஷயமாக.” “அவர் விஷயமாகவா! என்ன?” “கொள்ளை சம்பந்தமான சில ஆதாரங்கள் வீட்டிலே இருக்கின்றனவே! அவற்றைக் கண்டுபிடிக்கப் போலீசார் மறுபடியும் வரப் போகிறார்கள். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” “கொள்ளை சம்பந்தமாக ஆதாரங்கள். யாரய்யா நீ? தேவர் நிஜமாகவே கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர் என்று கூறுகிறீரா? நீரா தேவருக்கு நண்பர். ஒருபோதுமில்லை! நான் உன் முகத்தைக் கண்டதே கிடையாது! உண்மையிலே தேவருக்கு நீ நண்பனென்றால் ஒரு தினமாவது வீட்டிற்கு வந்திருப்பாயே.” “அம்மா! உங்களுக்குத் தேவரின் இரட்டை வாழ்க்கை தெரியாது அவர் உங்கள் கண்ணுக்கு ஒரு பிரியமான நாயகராகவும், திறமையுள்ள ஆசிரியராகவும் காட்சி அளித்திருப்பார். அவருடைய வேறோர் உருவம் என் போன்ற அவருடைய நண்பர்களுக்குத் தெரியும்.” “நீ பேசுவது அவ்வளவும் மர்மமாக இருக்கிறது. ஏதோ வஞ்சமாகப் பேசுகிறாய் என்று தோன்றுகிறது. உன்னோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு இஷ்டமில்லை.” “எனக்குங் கூடத்தான் விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாத உன்னோடு பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை; நேரமுமில்லை; ஆனால் அவருக்காக உன் அசட்டுக் குணத்தைக் கண்டும், உன்னோடும் பேச வேண்டியிருக்கிறது. கோபிநாதர் கோவில் கொள்øயிலே அவர் பங்குக்குக் கிடைத்த பதக்கம் ஒன்று, படமெடுத்தாடும் நாகம் போன்ற உருவிலே இருப்பது உம்மிடம் தந்தாரே, அதை என்னிடம் தர வேண்டாம். என்னைத்தான் நம்பமுடியாது என்று கூறுகிறீர். என்னிடம் தராவிட்டால் பாதகமில்லை; அதை உடனே, வேறு எங்காவது பத்திரப் படுத்து. அது போலீசில் சிக்கிவிட்டால், தேவருக்குத் தண்டனை நிச்சயமாகும்.” “பதக்கமா? என்னிடம் இல்லையே!” “வீட்டிலே, அவர் எங்காவது ஒளித்து வைத்திருப்பார்.” “கிடையாதே! இருக்க முடியாதே! அவர் கொள்ளையிலே சம்பந்தப்பட்டவராக இருந்தால்தானே, நீ சொல்வது சாத்தியமாக இருக்க முடியும்!” “அம்மா! எனக்கு வருகிற கோபம் இருக்கிறதே, நீயும் உன் தேவரும் எங்கேடாகிலும் கெட்டுப் போங்கள். எனக்கென்ன என்று கூறிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தூண்டுகிறது. இருந்தாலும் அவருடைய முகத்துக்காகப் பார்க்க வேண்டி இருக்கிறது. என்னிடம் பசப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கொள்ளையிலே அவர் ஈடுபட்டது உமக்குத் தெரியும்; பதக்கமும் உம்மிடம் இருக்கிறது. அவருடைய நன்மையைக் குறித்துச் சொல்கிறேன். அதை எங்காவது, பத்திரப்படுத்தி வையும்.” வீடு திரும்பும்போது, ஒரு சிறு குறுக்குச் சந்திலே, தன்னை வழிமடக்கி, முகத்தின் ஒரு பகுதியை மூடிக்கொண்டு ஓர் ஆசாமி, பேசக் கண்டு திகைத்தாள் சூடா. மேலே கண்டபடியான உரையாடல் நடந்ததும், சூடா திடுக்கிட்டுப் போனாள். தேவர் உண்மையாகவே கோபிநாதர் கோவில் கொள்ளையிலே சம்பந்தபட்டவர் என்றும், அந்தக் கோவிலிலே களவாடப்பட்ட பதக்கம், தன் வீட்டிலே இருப்பதாகவும், முகமூடி மனிதன் கூறிவிட்டுச் சரேலெனச் சென்று விடவே, திகிலால் துரத்தப்பட்ட சூடா, மிக வேகமாக வீடு சென்று கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு பெட்டிகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்ய ஆரம்பித்தாள். அந்த முகமூடிக்காரன் குறிப்பிட்டபடி ஏதாவது பதக்கம் இருக்கிறதா என்று பார்க்க இரண்டோர் பெட்டிகளைப் பார்க்கையிலே, “ சே, எவனோ பித்தன், எவனோ உளவாளி! அவன் பேச்சைக் கேட்டு பதக்கத்தைத் தேடுகிறேனே, நான் ஓர் முட்டாள். அவராவது, கொள்ளையிலே சம்பந்தப்படுவதாவது என்று எண்ணிக் கொண்டேதான் தேடினாள். ஆனால், இடையிடையே பலதடவை தேவர், கோவில் சம்பந்தமாகப் பேசியவை, அவள் நினைவிற்கு வந்தபோது, அவள், உடலும் உள்ளமும் ஒருங்கே நடுக்கமெடுத்தது. ஏனெனில் தேவர் கோவில்களிலே உள்ள பொருள், பக்தி என்ற பெயருடன், சமூகக் கொள்ளைக்காரர்கள் தரும் இலஞ்சம் என்றும், கோவில்களிலே காணப்படும் பொருள், மக்களிடமிருந்து களவாடப் பட்டவை என்றும், அவற்றைக் கொள்ளையடித்தாவது– மீண்டும் மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும் கூறினதுண்டு. கேவலம்பணத்தாசைப் பிடித்து, சொந்த சுகத்துக்காகத் தேவர், ஒரு சிறு துரும்பையும், அபகரிக்க மாட்õர். பிறரை வஞ்சிக்க மாட்டார். அவ்வளவு தூய்மையானவர்தான். ஆனால், கொள்கை காரணமாக ஒருவேளை இந்தக் கொள்ளையிலே சம்பந்தபட்டாரோ – என்று நினைத்தாள். நினைத்ததும், பயத்தால், அவள் நடுநடுங்கிப் போனாள். பரபரப்புடன் மேலும் பல பெட்டிகளைக் கொட்டிக் கொட்டிக் கவிழ்த்துச் சாமான்களை, ஒவ்வொன்றாக எடுத்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பு படபடவென அடித்தது. “சூடா! ஒரு பகற்கொள்ளைக்காரன், பச்சைக்கல் மூக்குத்தியை, பதினாறு ஆயிரம் ரூபாய் செலவிலே மீனாட்சி கோவிலுக்குத் தந்திருக்கிறான்.” “பச்சைக் கல்லா?” “ஆமாம்! அபூர்வமான பச்சை! அரச குமாரிகளுக்கு ஏற்றது. ஆனால் சிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.” “யார் செய்த கைங்கரியம்?” “சொன்னேனே ஒரு பகற்கொள்ளைக்காரன் தந்தது என்று.” “உங்களுக்கு எப்போதும் கேலிதான். யாரோ அம்பாள் கிருபையால் ஐஸ்வரியம் பெற்றிருப்பார். அதை மறவாது, அம்பாளுக்குக் காணிக்கை செலுத்தி இருப்பார்.” “அடி, பைத்தியக்காரி! உன் அண்ணன்கூட அந்தக் கைங்கரியம் செய்வதனைப் புகழ்ந்துபேசி இருக்கிறார். ஊர் முழுவதுமே புகழ்கிறது. எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதிவிட்டன. “தேசவீரன்” மட்டுந்தான் உண்மையை உரைத்திருக்கிறது. என்ன தலைப்புக் கொடுத்தேன் தெரியுமா? மகன் பிச்சை எடுக்க, மாதா பச்சைக்கல் பெற்றாள். என்று கொடுத்திருக்கிறேன்; தர்மம் செய்தவன் தனவந்தனான கதையும் விளக்கி இருக்கிறேன். அவன் செய்த மோசடிகள் பலவற்றைச் சாடையாகக் காட்டியிருக்கிறேன்” “உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை. அனாவசியமாகப் பலருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறீர்கள்.” தேவருக்கும் தனக்கும் இதுபோன்ற பேச்சு பலமுறை நடந்ததுண்டு. அப்போதெல்லாம், அவருடைய கண்டிப்பான போக்கினால் பலருடைய விரோதம் அவர் மீது பாயும் என்று பயந்து, தான் அவரை எச்சரித்தது அவள் நினைவிற்கு வந்தது. ஒருவேளை கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர்தானோ? – இந்த எண்ணம், சூடாவின் மனத்தினாலே சுறுசுறுப்பாக உலவத் தொடங்கிற்று. இருக்காது – அவர் கோவில்களிலே உள்ள முறைகளையும், கோடீஸ்வரர்கள் ஏழைகளைக் கவனியாமல், கோவில் கைங்கரியம் செய்யும் போக்கையும் கண்டிக்கக் கூடியவரே தவிர, கேவலம், கொள்ளை அடிக்கும் போக்கினரல்ல என்று அவளாகத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டிருக்கையில், ஒரு புத்தகத்தினுள்ளேயிருந்து, பதக்கம் – படமெடுத்தாடும் நாகத்தின் உருவிலே இருந்த பதக்கம் – கீழே வீழ்ந்தது. சூடா, மயங்கிக் கீழே சாய்ந்தாள், அடக்க முடியாத திகிலால் தாக்கப்பட்டு! பகுதி 6 “எவ்வளவு சம்பத்து இருக்கட்டும். என்ன பிரயோஜனம்? அழகான வர்ணக் காகிதத்தாலான பூப்போன்று என் வாழ்க்கை இருக்கிறது. பணத்துக்குப் பஞ்சமில்லை; பங்களாவிலே வாழ்கிறேன்! மோட்டாரில் சவாரி! கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆட்கள்! விதவிதமான நகைகள்! ஆடை அலங்காரங்களுக்குக் குறைவு இல்லை! சொகுசாக வாழ்கிறேன். ஆனால் சுகம் என்ன காண்கிறேன்? என்னை அவர் பணத்தால் அபிஷேகிக்கிறாரே தவிர, அன்பு துளியும் காட்டக் காணோம். அவரிடம் உள்ள ஜெமீன், அதன் சின்னங்களாக விளங்கும் மாளிகை, பூந்தோட்டம், வண்டி வாகனம், ஆள் அம்பு, இவற்றிலே ஓர் அங்கமாக நான் சேர்க்கப்பட்டிருக்கிறேனே தவிர அவர் என்னைத் தன் இருதய மாளிகையிலே குடியேற விடவில்லை. என் வாழ்வு கண்டு பொறாமைகூட அடைவார்கள் பலர். ‘அவளுக்கென்ன குறை! ஜெமீன் தாரணி!’ என்று பேசுவார்கள். ஆனால், என் மனத்திலே மூண்டு கிடக்கும் வருத்தம் அவர்களுக்கு என்ன தெரியும்? சொன்னால் மட்டுமென்ன நம்பவா போகிறார்கள்? ‘போடி கள்ளி! அவருக்கா உன் மீது அன்பு இல்லை! உயிரையே உன்மீது வைத்திருக்கிற காரணத்தால்தானே, உன்னை இவ்வளவு மேலான நிலையிலே வைத்திருக்கிறார்கள். சொந்த மனைவியைக் கிராம வீட்டிலே இருக்கச் சொல்லிவிட்டு, உன்னோடு நகரத்திலே சொகுசாக வாழ்கிறார். உன்னை நேசிக்கலாமா இவ்வளவு விலையுயர்ந்த நகைகளைத் தந்தார்’ என்று கேட்பார்கள். நான் இங்கே வெறும் சுமைதாங்கியாக இருப்பதை அவர்கள் அறிவார்களா? இந்தச் சத்தற்ற வாழ்க்கையைவிட என் பழைய வாழ்க்கையே மேல்” என்று சோகித்துக் கூறினாள் ஸ்வர்ணா. இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூந்தோட்டம், அதன் நடுவே அழகான பங்களா, விதவிதமான வர்ண ஜாலங்களைத் தாங்கிக்கொண்டு, பாடியும் ஆடியும் பல விதமான பட்சிகள் இருந்தன அந்தத் தோட்டத்திலே. அந்த வட்டாரத்திலேயே மிக வனப்பு வாய்ந்தது என்று புகழப்பட்ட பங்களா, ஸ்வர்ணா வசித்து வந்த இடம்… அங்கே வாழ்ந்து வந்த ஸ்வர்ணா ஆயாசத்தோடு பேசினது கேட்டு, அவளிடம் பணிப்பெண்ணாக இருந்து தன் குருட்டுக் கணவனுக்குக் குறும்பிலே கைதேர்ந்த குழந்தைகளுக்கும் வாழ வழி வகுத்துத் தந்த வனஜா ஆச்சரியத்துடன், எஜமானியைக் கேட்டாள். “உங்களுக்கு ஏனம்மா வீண் விசாரம்? மஹாலட்சுமி போல இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன குறை? ஏதோ அவர் உங்களிடம் சிரித்துப் பேசுவதில்லை என்று வருத்தப்படுகிறீர். அவர் சுபாவத்தில் அப்படி இருப்பார். சிலதுகள் என் புருஷன் போல எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பதுண்டு. நீங்கள் வீணாக மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறீர்கள்” என்று ஆறுதல் மொழி கூறினாள். ஸ்வர்ணா திருப்தி அடையவில்லை. ஸ்வர்ணாவின் வருத்தத்தைக் கண்டு வனஜா ஆச்சரியப்பட்டதுடன் கோபமுங் கொண்டாள். அவளுக்குத் தெரியும் ஜெமீன்தாரின் தயவைப் பெறுவதற்கு முன்பு ஸ்வர்ணா இருந்த வாழ்வின் இலட்சணம். பெயர்கூட அப்போது ஸ்வர்ணா அல்ல! சோற்றுக்குத் தாளம் போட்ட சொர்ணம், இப்போது ஸ்வர்ணாவாகி, உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கிறாள். கொஞ்சம் அழகும், அளவு கடந்த சாகசமும் இருக்கும் காரணத்தால், இவளைவிட அழகிகள், எவ்வளவோ ஏழ்மையிலே மூழ்கிக் கிடக்கிறார்கள், இவள் ஏன், எவ்வளவோ சலிப்படைந்தவளாகவும், எதையோ பறிகொடுத்துவிட்டவள் போலவும் நடக்கிறாள்” என்று எண்ணிய வனஜா, ‘அவள் வேறு எப்படி இருப்பாள்? கூத்தாடிச் சிறுக்கிதானே! சந்திரமதி வேஷம் போட்டுப் புலம்பினவள், அல்லியாகத் தோன்றி ஆர்ப்பரித்தவள், இன்னும் எத்தனையோ வேஷம் போட்டவள், இப்போது சோகமுள்ளவளாக நடிக்கிறாள்” என்று தீர்மானித்தாள். உண்மையிலே ஸவர்ணா நாடகக்காரிதான். ஆனால் அவளுடைய சோகம் நடிப்பல்ல! நாடக வாழ்க்கையை விட்டுவிட்டு ஜெமீன்தாரரின் ஆசை நாயகியாக ஸ்வர்ணா புதுவாழ்வு ஆரம்பித்தபோது இனிமேல்தான் தனக்கு உண்யைமான இன்பம் கிடைக்கும் என்று எண்ணினாள். ஆனால், இந்த வாழ்வும், கேவலம் நாடகந்தானோ என்று அஞ்சும்படியாகிவிட்டது. நாடகக் கொட்டகையிலே இருப்பவர்கள், அந்தத் தகதகப்பான உடையையும் பளபளப்பான நகையையும் விறுவிறுப்பான பேச்சையும் கண்டும் கேட்டும், நடிகையின் வாழ்வு மிக ரம்மியமானதாக இருக்கும் என்றுதான் எண்ணிக் கொள்வர். ஆனால் நடிகர்களின் நிஜ வாழ்விலே உள்ள கஷ்ட நஷ்டம் அவர்களுக்கு என்ன தெரியும்? அதிலும் நடிகையின் வாழ்விலே உள்ள தொல்லைகளும் துயரமும், கொட்டகையிலே அமர்ந்து கைகொட்டி ஆரவாரித்து, சபாஷ் கொடுத்து ஒன்ஸ்மோர் கேட்டுக் களிக்கும் மக்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? தரைக்கு வெளியே திரிலோக சுந்தரிதான். உள்ளே சென்றதும், எவ்வளவோ கஷ்டம்; வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பவருக்கு எப்படி நடிகரின் வேதனை தெரியவதில்லையோ, அதுபோலவேதான், பங்களாவாசியான ஸ்வர்ணாவின் சோகம் நிரம்பிய வாழ்வையும் வனஜாவால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்வர்ணா தன் கஷ்டத்தை வேலைக்காரியிடம் சொல்லும்போது என் பழைய வாழ்க்கையே மேல் என்று கூறினாள். கூறினதும், அந்தப் பழைய வாழ்க்கை, அவள் மனக் கண்முன் கூத்தாடிற்று. அதோ அவன் நிற்கிறான். பவுடர் போட்டுக் கொள்ளாமல், இனிமேல் அர்ஜுனனாக வேண்டும். இப்போது காம்போதி கனகன், அதாவது, நடிகன், காம்போதி இராகம் பாடுவதிலே கெட்டிக்காரன். எனவே இராகத்தின் பெயர் அடைமொழியாக அமைந்தது. கனகன், அல்லியாகி நின்று கொண்டிருந்த சொர்ணத்தைக் கொஞ்சம் கோபத்தோடு பார்க்கிறான். காரணம், அன்று பகலிலே, பாட்டு வாத்தியாரிடம் பத்து நிமிஷத்திற்கு மேலாகவே சொர்ணம், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கனகம் கோபித்துக் கொண்டிருப்பது தெரியும், சொர்ணத்துக்கு. சமாதானப்படுத்த முயன்று, “தலைவலியோ?” என்றுகேட்டாள் வாஞ்சையுடன். “தலைவலி அல்ல. தலைவிதி!’ என்று வெறுப்புடன் பதில் சொன்னான் அர்ஜுனனாகிக் காதல் மொழி பேச வேண்டிய கனகன். அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் சிநேகம் உண்டாக்க வேண்டிய கிருஷ்ணன் வேடம் தாங்கிக் கொண்டிருந்த கேசவன், அந்தச் சமயத்திலே வேஷத்திற்கு முரணான வேலையில் இறங்கி, “பக்கிரி, அர்ஜுனனாகப் போட்டால் பேஷாக இருக்கும்” என்று கூறினான். அந்தப் பேச்சு தனக்கும் பாட்டு வாத்தியாருக்கும் இடையே கயிறு கட்டக் கூறப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்ட சொர்ணம், “பக்கிரிக்கு அர்ஜுனன் வேஷம் போடுவதனால் நம்ம பார்வதிக்குத்தான் அல்லி வேஷம் போட வேண்டும்” என்று கூறினாள்; கோபத்தையும் மறந்து கனகன் சிரித்தான். ஏனெனில் பார்வதிக்குக் கம்பெனியில் தாடகை பூதகி போன்ற கோர நடிப்புகளே தரப்படுவது வழக்கம். இந்தச் சிறு சச்சரவுக்குப் பிறகு அர்ஜுனனாகி விடுகிறான் கனகன். திரைக்கு வெளியே சென்று பாடுகிறான், “தேவ மனோஹரியே” என்று. இது போன்றதொல்லைகளைச் சொர்ணம் அனுபவித்ததுண்டு. ஜனகன் வேடத்தில் தோன்றினவன், சீதையாக வந்தபோது தன்னை, இராமன்போல ஆலிங்கனம் செய்து கொள்வது கண்டு, “தந்தையே! தங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்” என்று கூறிக் கொண்டே, அவன் பிடியிலிருந்து விலகினாள் சொர்ணம். ஜனகன் வேடத்தையும், சொர்ணத்தின்மீது கொண்ட காமத்தையும் ஏக காலத்திலே தாங்கித் தத்தளித்த நடிகன், திரைக்கு உள்ளே போனதும், மானேஜர் முன் இழுத்துச் செல்லப்பட்டான். “தங்கவேல்! உனக்குக் கணக்குத் தீர்க்கப்படுகிறது. நாளை காலையிலே நீ கம்பெனியை விட்டு நின்று விடலாம்.” “ஏன் சார்! நான் செய்த தவறு என்ன!” “நீ ஒரு தவறும் செய்யவில்லையப்பா! இந்தக் கம்பெனி மகா மோசமான கம்பெனி. நீ வேறு நல்ல கம்பெனியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேரலாம் என்று தான் கூறுகிறேன்.” “நான் யாரிடமும் இந்தக் கம்பெனியைப் பற்றிக் குறைவாகப் பேசவில்லையே, சார்!” “நீ பேசினதாக நான் சொல்லவில்லையே! இந்தக் கம்பெனி உனக்கு ஏற்றதல்ல. ஜனகனுக்கும் சீதைக்கும் காதல் கட்டம் நடத்தும் கம்பெனி ஏதாவது இருந்தால் அதிலே போய்ச் சேர்” “என்ன சார்! நீங்கள் பேசுவதே புரியவில்லையே,” - இந்தப் பேச்சுக்குப் பிறகு மானேஜர், நடிகரின் கன்னத்திலே ஒரு அறை கொடுத்துப் புரியவைத்தார். ஜனகனுக்குச் சீதை மகள்! ஜனகன் வேஷம் போடுபவன் சீதையாக நடிப்பவளை ஆலிங்கனம் செய்து கொள்ளக் கூடாது என்ற சில விஷயங்களைச் சொன்ன அன்று முதல் ஜனகன் சீதைக்கு முதல் தரமான விரோதியானான். இது போன்ற தொல்லைகள் பல பட்டதுண்டு. அந்தச் சமயத்திலெல்லாம், பிச்சை எடுக்கலாம். அடிமை வேலை செய்யலாம்; இந்த நாடகத் தொழில் மட்டும் கூடாது என்று சலித்துக் கொண்டதுமுண்டு. தொல்லையும் துயரமும் நிரம்பிய அந்த வாழ்க்கையிலே சொர்ணா உழன்று கொண்டிருந்த அதே சமயத்திலே கம்பெனியோ, ஊராருக்குச் சுவரொட்டிகள் மூலம், அவளை அறிமுகப்படுத்திய விதமோ, வேடிக்கையாக இருந்தது. அவளுடைய புன்னகை - ஓர் புது விருந்து! என்று கொட்டை எழுத்துக்களிலே விளம்பரம் இருக்கும். அதை விளக்க, புன்னகை பூத்த முகத்துடன் சொர்ணத்தின் படம் இருக்கும்! ஒரு படத்திலே அவளுடைய இரு கண்கள் மட்டும் காணப்படும். நீர்த் துளிகளுடன், அதற்குப் பக்கத்திலே கொட்டை எழுத்துக்களிலே, சோகரச திலகம் சொர்ணாபாய் இன்று சந்திரமதி வேடத்தில் தோன்றுவாள், கல்மனமும் கரையும். என்று விளம்பரம் காணப்படும். உல்லாசி, சல்லாபி, ஜாலக்காரி, சிரிப்புக்காரி, பேச்சில் முதல்தரம் என்றெல்லாம் விளம்பரம் இருக்கும். “உன் மீது நான் கொண்ட காதல்…” என்று கூறுவான் காதலன் - அதாவது காதலன் வேடதாரி. சொர்ணம் காதலியாக நடிக்கும்போது ஒரு கடைக்கண் தாக்குதலை நடத்துவாள். காதலன் வேடம் தாங்கியவன் தாங்க முடியாத பொறுமை அடைவான், கொட்டகையிலே, அந்தக் கடைக்கண் வீச்சுக்கு அவ்வளவு அப்ளாஸ் கிடைக்கும். பொறாமை, சஞ்சலம், சச்சரவு, வஞ்சனை என்ற பல வண்டுகள் கொட்டும் மலர்வனம், நாடக உலகு. அதிலே வசித்து வந்த சொர்ணத்தை, இரவுகளிலே இளவரசியாகவும், பகலிலே பாட்டு வாத்தியாருக்கும் பல நடிகருக்கும் இடையே கிடந்து வாடும் பரிதாபத்துக்குரியவளாகவும் இருந்து வந்தவளை, ஜெமீன்தார் செல்லப்பர் ஸ்வணாவாக்கினார். நடிகர் உலகிலிருந்து விடுதலை வாங்கித் தந்தார். அட்டைப் பங்களாவிலே, காகிதப் பூஞ்சோலையிலே உலவிக் கொண்டிருந்தவளை, நிஜமான பங்களாவிலே, நேர்த்தியான பூந்தோட்டத்திலே வாழச் செய்தார். ஆனால் சொர்ணமாக இருந்தபோது கண்ட சந்தோஷங்கூட ஸ்வர்ணாவாக இருந்த காணவில்லையே என்று அவள் வாடினாள். “சொர்ணம்! ஊர் முழுவதும் உன் புகழ்தான்.” என்று மானேஜர் சொல்வார். எந்த மானேஜர்? சம்பளம் ஒரு ஐந்து ரூபாய் அதிகம் தரவேண்டும் என்று கேட்டால் முகத்தைச் சுளித்துக் கொண்டு செலவு அதிகமான கணக்கைக் கூறும் அதே மானேஜர்தான்! ஆனால் அவருடைய பாராட்டுதல், ஒருவிதமான களிப்புத் தரும்! “வள்ளியென்றால் வள்ளியேதான்.” என்று புகழ்வான். முருகனாகக் காட்சி தரும் கனகனை, திரைக்கு உள்ளே “வெவ்வெவ்வே!” என்று கேலி செய்வாள் சொர்ணம். ஆனால் மனதிலே ஒருவிதமான ஆனந்தம் பிறக்கும். இங்கு ஒரு துளி களிப்பும் இல்லை. ஜெமீன்தாரிடம் கம்பீரம், தாராளம் இருந்தது. அன்பு இல்லை. அவர் அவளை அணைத்துக் கொள்ளாமலில்லை. ஆனால் ஆலிங்கனம் உடலை உடல் பின்னிக் கொள்வதாக மட்டுமிருந்ததே தவிர, இரு உள்ளங்களும் தழுவுவதாக இல்லை. அபூர்வமான அலங்காரத்துடன் தோன்றுவாள். அவரும், அவளை உற்றுப் பார்ப்பார். ஆனால் அழகான ஓர் சிலையைப் பார்த்துக் கொண்டு நிற்கும் பட்டிக்காட்டானுடைய பார்வை போலவே இருக்கும், அவருடைய பார்வை! முத்தங்கள் கூடத்தான் தருவார்! சத்தம் இருக்கும், சுவை இராது! அவைகளைப் பெற்றுக் கொள்ளும்போது, ஸ்வர்ணாவுக்கு ஏதோ ஓர் நிழலை முத்தமிடுவது போலிருக்குமேயொழிய சுவை இருப்பதில்லை. கடற்கரையிலே உலவச் சொல்வார்கள். களிப்பு இருப்பதில்லை. நாடகங்களுக்குக் கூடச் செல்வதுண்டு. ஸ்வர்ணா கொஞ்சம் உரக்கச் சிரித்தால், ஜெமீன்தார் கோபமாகப் பார்ப்பார். சிரிப்பு மறைந்துவிடும். அவள் ஓர் அழகான பதுமை; அவர் ஒரு கெம்பீரமான உருவம். இதுவே அவர்கள் தொடர்பின் தன்மையாக இருந்தது. அவர் ஜெமீன்தாரராக இருந்தாரே யொழியக் காதலராக இல்லை. அவருடைய இருதயம், எங்கே, என்று அவள் தேடினாள். அவர் தன் இரும்புப் பெட்டியின் சாவியை அவளிடம் கொடுத்தார். இருதயத்தைத் தொட அனுமதிக்கவில்லை. இருக்கிறதா, இல்லையா என்றுகூட அவளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையிலே அவள், தன் பழைய வாழ்க்கையே மேல் என்று எண்ணினதிலே ஆச்சரியம் என்ன இருக்க முடியும்! சொர்ணம் பசியுடன் போராடினாள். வெற்றி பெற்றுப் பசியை விரட்டி அடித்தாள். தன் திறமையால் ஸ்வர்ணாவும் பசி யுடன் போராடினாள் - இருதயப் பசி - அன்புப் பானம் வேண்டினாள். ஆனால் அதிலே வெற்றி பெறவில்லை. ஆகவேதான், அவள் வனஜாவிடம் தன் வேதனையைக் கூறிக் கொண்டிருந்தாள். அதே சமயத்தில் ஜெமீன்தார் செல்லப்பர் அங்கு வந்தார். அவர் வந்ததை ஸ்வர்ணா, வனஜா அவசரமாக எழுந்து சென்றது மூலம் தெரிந்து கொண்டாள். ஆயிரமாயிரம் சுவரொட்டிகளிலே பொறிக்கப்பட்டு, பல்லாயிரம் ரசிகர்களைப் பரவசப்படுத்திய அதே புன்னகைதான் ஸ்வர்ணா முகத்திலே தவழ்ந்தது. அவர் ரசிகரல்லவே! ஜெமீன்தாரரல்லவா! அவர் அந்தப் புன்னகையைக் கவனிக்கவில்லை. செடியிலே கிடந்து வாடிவிடும் மலர் போலாயிற்று அந்தப் புன்னகை. “ஸ்வர்ணா! இருப்புப் பெட்டியை இன்றாவது நேற்றாவது திறந்தாயா?” என்று ஜெமீன்தார் கேட்டார். அவருடைய குரலிலே பயமும் கோபமும் கலந்திருப்பது கண்ட ஸ்வர்ணா திகிலுடன் ‘ஏன்?’ என்று சம்பந்தமற்ற பேச்சுப் பேசினாள். “இரும்புப் பெட்டியிலிருந்த பதக்கம் - நாகப் பதக்கம் - காணோம்,” என்றார் ஜெமீன்தார். “பதக்கமா? ஐயோ!” என்று பதறினாள் ஸ்வர்ணா. “நீ…” என்று ஆரம்பித்து, மேலே ஒன்றும் பேசாமல், உட்கார்ந்து கொண்டார் செல்லப்பர். “அந்தப் பதக்கத்தைத்தான் நான் அணிந்து கொள்வதே கிடையாதே. நான் அதைப் பார்த்தே பல நாளாகிவிட்டன. நேற்றுப் பெட்டியைத் திறந்தபோது கூடக் கவனிக்கவில்லை” என்று கூறிக் கொண்டே, உள்ளே போகக் கிளம்பினாள் ஸ்வர்ணா. “பெட்டியை நன்றாகப் பார்த்தாகி விட்டது. பதக்கம் அங்கே இல்லை. யாரோ களவாடிவிட்டார்கள்” என்று கூறினார் ஜெமீன்தார். ஒவ்வொரு வார்த்தையும் கொதிக்க வைத்த எண்ணெயை மேலே ஊற்றுவது போலிருந்தது. அதே சமயத்திலேதான், சூடா, தேவரின் பேழையிலே, பதக்கம் இருக்கக் கண்டு, ஐயோ!” என்று பதறிக் கொண்டிருந்தாள். பகுதி 7 “உன் புருஷன் கோயிலிலே கொள்ளை அடித்தபோது கிடைத்த பதக்கமொன்று வீட்டிலே இருக்கும். அதை ஜாக்கிரதையாக மறைத்துவிடு. இல்லையேல், தேவர் குற்றவாளி என்பதற்கு அதுவே தக்க ருஜுவாகிவிடும்” என்று அறிமுகமாகாத ஆள் சொன்னதைச் சூடா, நம்பவில்லை. எவனோ ஏதோ உளறுகிறான் என்றே கருதினாள். ஆனால் வீட்டிலே அந்தப் பதக்கம் ஒரு பேழையிலே இருக்கக் கண்டு அலறினாள். பதக்கம் இருந்தது கண்டு சூடா அலறிய அதேபோதுதான், ஜெமீன்தாரரின் காதற்கிழத்தியாகிச் செல்வத்திலே புரண்டும் சுகம் கிடைக்காது கவலைப்பட்ட சுவர்ணாவிடம், ஜெமீன்தாரர், பதக்கம் காணாமற்போய் விட்டதைக் கூறினார். “பதக்கம், அதிக வேலைப்பாடுடையது. விலை அமோகமாக இருக்கும். எப்படி, யார் களவாடியிருப்பார்கள். போலீசை வரவழைக்கலாமே” என்று தீர்மானமாக ஜெமீன்தார் கூறிவிட்டார். “ஏன்?” என்று சுவர்ணா பல தடவை கேட்டுப் பார்த்தும் பதில் கிடைக்கப் பெறாமல் ஓய்ந்துவிட்டாள். ஜெமீன்தாரருக்குக் கவலையை விடத் திகிலே அதிகமாகிவிட்டது. இதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சுவர்ணா திகைத்தாள். பதக்கத்தை எங்கே ஒளித்து வைப்பது? ஒளித்து விடுவதா? அல்லது அழித்தே விடுவதா? யாரிடமாவது தந்து வைப்பதா? யாரை நம்புவது? என்று எண்ணியபடி, சூடா, பதக்கத்தை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தேவர் மாசற்றவர் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அவர் மீது போலீசார் பாய்ந்தது அக்ரமம் என்று எண்ணினோம். ஆனால் இந்தப் பதக்கம் இவருக்கு ஏது? எப்படிக் கிடைத்தது? வழியே போனவன் சொன்னதற்கும், இங்கே இது இருப்பதற்கும் பொருத்தமாக இருக்கிறதே! என் கணவன் கள்ளன்தானா? நீதியும் நியாயமும் நேர்மையும் நாணயமுமே, மக்களின் பூஷணங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்து, உத்தமரென்றும் சத்தியவானென்றும் பெயரெடுத்த என் நாதருக்கா இந்தக் கெடுமதி தோன்ற வேண்டும்? எந்தப் பாவி அவர் மனதிலே இப்படிப்பட்ட கெட்ட எண்ணத்தைத் தூவினானோ தெரியவில்லை? எவனுடன் கூடி இவர் இந்தக் கதிக்கு ஆளானாரோ தெரியவில்லை? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவர் கள்ளன் என்பதற்கு என் உள்ளங்கையிலேயே ருஜு இருக்கிறதே! பாழும் பதக்கமே! என் பிராணநேசரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டாயே! உன்னைத் தொட்டார்; அவர் கெட்டார். ஏனோ உன்னிடம் அவருக்கு இந்த ஆசை பிறந்தது? ‘பணம் வாழ்க்கைக்கு ஒரு கருவியேயொழிய அதனைப் பிரேமைக்குரிய பொருளாகக் கொள்ளுதல் கூடாது; பணப்பித்தம் கூடாது; வெறும் அலங்காரங்களுக்கும் ஆடம்பரத்துக்கும் பணம் தேடிக் கொண்டு கிடப்பவனின் வாழ்வு, பாழ்படும், பணம் பணமென்று பிணமாகும்வரை அவன் அலைந்து திரிய வேண்டியவனாவானேயொழிய - வாழ்க்கையிலே இன்பம் காண மாட்டான்’ என்றெல்லாம் என்னிடம் பேசுவாரே, அவரா இந்தப் பாழும் பணத்தாசை கொண்டார்? சேச்சே! நான் ஓர் துஷ்டை! காக்காய் உட்கார்ந்தது பனம்பழம் விழுந்தது என்பது போல, இந்தப் பதக்கம் இங்கே இருப்பதாலேயே, அவர் களவாடினார், கோயில் கொள்ளையிலே சம்பந்தப்பட்டார் என்று எண்ணவும் தொடங்கினேனே, எவ்வளவு இழிகுணம் எனக்கு? அவராவது, இந்த அற்பப் பணத்துக்காக, அக்ரமத்திலே ஈடுபடுவதாவது! பதக்கம் அவரிடம் வேறு யாராவது தந்திருக்கக் கூடாதா என்ன? மேலும், இது கோயில் பதக்கம் என்று ஏன் கூற வேண்டும்? எவனோ வழிப்போக்கன் சொன்ன வார்த்தை வேதமா? வேதமே பொய் என்பர் என் நாதன்! எவனோ வெறியன், எப்படியோ, இந்தப் பதக்கம் இங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டு, என்னை மிரட்டினான் - என்று பல பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள் சூடா. ஒரு விநாடி தேவர் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று தோன்றும்; மறுவிநாடி அவர் ஒருபோதும் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றும். இருவகை எண்ணங்களுக்கிடையே சிக்கிய சூடாவின் மனம் குழம்பிவிட்டது. அவர் கள்ளனாக இருந்தாலும், அவரைக் காப்பாற்றித்தானேயாக வேண்டும். அதற்காகச் செலவிட வேண்டிய நேரத்தை இப்படிப் பாழ்படுத்துகிறேனே, நான் ஓர் முட்டாள். முதலிலே இந்தப் பதக்கத்தை என்ன செய்வது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். பேழைகளைப் பழையபடி ஒழுங்காக வைத்துவிட்டு யோசிக்கலானாள். “முட்டாளினும் முட்டாள்; நீ வடிகட்டின முட்டாளடா?” என்று வண்டிக்கார வரதன், அபேஸ் ஆறுமுகத்தை நோக்கிச் சொன்னான். ஆறுமுகம், “டேய், தடியா! நான் ஒன்றும் முட்டாள் இல்லை. சமயா சந்தர்ப்பம், இடம், பொருள், ஏவல் என்பார்களே அது தெரிந்து நடப்பவன்; உனக்குத் தெரியாது, அந்த விஷயம்,” என்று கூறிவிட்டுக் காரக் கறித்துண்டைக் கடித்துக் கொண்டே பேசலானான். “வரதா! எனக்கு அபேஸ் ஆறுமுகம் என்று பேராச்சே, ஏன் தெரியுமேல்லோ உனக்கு! இந்த ஆறுமுகத்தின் கண்ணிலே எது பட்டாலும் சரி, தீர்த்துவிடணும்னு நினைச்சா, என்ன ஆகும்? தீர்ந்துவிடும்; அப்படிப்பட்ட அபேஸ் ஆறுமுகத்தை அடிமுட்டாள் நீ, வடிகட்டின முட்டாளுன்னு சொல்றே” என்று கூறினான். இருவருக்கும் போதை ஏற ஆரம்பித்தது; பேச்சும் வளர்ந்தது. “அப்படின்னா, கையிலே கிடைச்சதை வச்சிக்கத் தெரியாம இருக்கிறதுக்கு பேரு புத்திசாலித் தனமா? டே! உங்க அப்பன் உன்னை இந்த இலட்சணத்துக்குப் படிக்கக் கூட வைச்சானே,” வரதன் சொன்னான் இது போல். வாயாடவா தெரியாது ஆறுமுகத்துக்கு. “அண்ணே” என்று அழைத்தான் வரதனை. அந்த மரியாதை வார்த்தை போதையின் விளைவு! “அண்ணே! ஆறுமுகத்தை நீ அப்படி ஒண்ணும் இலேசான ஆசாமின்னு நினைக்காதே. காரணமில்லாத ஒரு காரியமும் செய்ய மாட்டான்” என்றான். “என்னடா, வேதாந்தம் பேசறே! எல்லாருக்கும் கிடைக்குமா உனக்குக் கிடைச்ச சான்சு. என்னமோ சொல்வாங்களே, கிட்டே வந்த சீதேவியை எட்டி உதைச்சானாம்னு. அதுமாதிரியான காரியத்தைச் செய்துவிட்டு மகா பெரிய மேதாவி மாதிரி, காரணத்தோட செய்தேனுன்னு கதை அளக்கிறே. ஆறுமுகம்! நீ ஆயிரம் சொல்லு. நான் ஒப்பமாட்டேன். உனக்குக் கிடைச்ச சான்சு எனக்குக் கிடைச்சிருந்தா, அந்தப் பொருளை நான் விட்டிருக்க மாட்டேன். ஆமாம், உனக்குப் பேருதான் இருக்கு அபேஸ் ஆறுமுகம்னு! ஆனா, காரியத்திலே சுத்த சூன்யமா இருக்கிறே” என்று வரதன் பிடிவாதமாகப் பேசினான். பேச்சுக்கிடையிடையே பானம் நடக்கவே பேச்சு முடியவுமில்லை; வார்த்தைகள் மட்டுமல்ல, நினைப்புங்கூட வளைந்து வளைந்து வெளிவந்தது. “இப்ப நமக்கு என்ன நஷ்டமாயிடிச்சி. ஒரு இரண்டு மனி நேர வேலைக்கு இருநூறு கிடைச்சுது. போதாதா? நீ நாளெல்லாம் நாயாட்டம் பாடுபட்டா என்ன கிடைக்கும். நாலணாக் கிடைக்குமாடா நாலணா? இருநூறு ரூபாயடா நமக்கு. டே, வரதா! நான்தாண்டா கலக்டரு! அவனுக்குக்கூட ஏதுடா அம்மாஞ் சம்பளம்? கவர்னரும் நானும் ஒண்ணுடா, தெரியுமா? அவருக்குக்கூட கிடைக்குதோ இல்லையோ தெரியலே. ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபா சம்பளம்!” என்று ஆறுமுகம் கூறினான். “இரண்டாயிரம் மூவாயிரம் பெறக் கூடிய பொருளை முட்டாளாட்டம் விட்டுட்டு, இருநூறு கிடைச்சுதுன்னு வெக்கமில்லாமே சொல்றியேடா? எல்லாம் சொல்வாங்க. கெண்டையைப் போட்டு வராலை இழுன்னு; நீ என்னடான்னா, வராலைக் காட்டிக் கெண்டையை வாங்கிக்கிட்டே. இது யாரு செய்கிற வேலை! முட்டாள் செய்கிற வேலைதானேடா, அது” என்று வாதாடினான் வரதன். “அண்ணே, கொஞ்சம் நிதானிச்சுப் பேசு. அந்தப் பொருளு ஆயிரம், இரண்டாயிரம், அஞ்சாயிரம் கூடப் பொறும். ஆனா, நாம்ப என்ன செய்யப் போறோம். எடுத்துக்கிட்டுப் போயி அந்த மொடா வயித்தன் இருக்கானே, மார்வாடி, அவன்கிட்டே தரணும். அந்தப் பய நமக்கு நியாயமான விலையா தருவான்! டே, ஆறுமுகம்! இந்தப் பச்சைக்கல் நல்லா இல்லை. இந்தச் செவப்புக் கல்லு வெளுத்துப் போச்சி; வெள்ளி மேலே முலாம் பூசியிருக்குன்னு புளுகுவான். புளுகிவிட்டு, ‘ஆறுமுகம்! இனிமே நான் திருட்டு நகையே வாங்கறது இல்லைன்னு சத்யம் செய்துவிட்டேன். இதை வாங்கிட்டா, போலீசுக்கு வாடை அடிக்கும், வம்புவரும். கோர்ட்டும் கையுமா இருக்கணும். நம்பள்க்கு நகை வேண்டாம்’னு சொல்வான், ‘சேட்! சேட்! அப்படிச் சொல்லிடாதே சேட்!’ என்று நாம்ப கெஞ்சணும். கொடுத்ததை கொடுன்னு கேக்கணும். அவன் அஞ்சஞ்சு ரூபாய் உயர்த்தி ஒரு நூறு ரூபாய் கொடுக்கறதுக்குள்ளே நம்ம மனசு படபடன்னு துடிக்கும். ஏண்டாப்பா அம்மாங் கஷ்டம்? இப்ப நமக்குக் கஷ்டமில்லை; நஷ்டமில்லை. போலீசிலே இருக்கிறவனுங்க நம்ப மேலே, மூச்சுக்கூட விட முடியாது. பொருளா இருக்கு நம்மகிட்ட. இல்லை! பணம் இருக்கு இருநூறு. இப்பச் சொல்றா முண்டம்! யாரு முட்டாளுன்னு உன் தலையிலே இருக்கிற பேனை எடுத்துக் கேளு. உனக்கென்னடா தெரியும் இந்த ஜால்ஜுலு எல்லாம். மாட்டு வாலை உடைச்சிக்கிட்டுக் கிடக்கிற மடப்பய, பூட்டை உடைக்கிறவங்கிட்டப் பேசறான். மகா பெரிய வீரன் மாதிரி” என்றான் ஆறுமுகம். கோபம் அவனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருந்தது. வரதனுக்குக் கண்ணும் கழுத்தும் சாய ஆரம்பித்துவிட்டது. கலயம் காலியாகிவிட்டது. “ஜெமீன்தார் வூட்லே அபேஸ் பண்ணேன். அந்தப் பாப்பாத்தி வூட்லே பொன்னாட்டமா கொண்டு போய் வைச்சுட்டேன். இங்கிருக்கிறத அங்கே கொண்டு போய் வைக்கிறதுக்கு இருநூறு ரூபா! உள்ளங் கையிலே அடங்கிப் போற பொருள். என்னைப் போயி, என்னா சொன்னேடா நீ? டே வரதா! உன்னைச் சும்மா விடலாமா? டே! என் காசுலே கள்ளுத் தண்ணி குடிச்சுகிட்டு, என்னையே முட்டாளுன்னு திட்டறே” என்று துவக்கிய ஆறுமுகம், குரலையும் படிப்படியாக உயர்த்திவிட்டான். வசைமொழியும் ஆபாசத்தின் எல்லைக்குச் சென்றுவிட்டது. வரதன் விடுவானா? ‘யாருடா உன்னைக் கள்ளு வாங்கிக் குடுக்கச் சொன்னாங்க? ஏண்டா டேய்! என்னாடா எண்ணிக்கிட்டே என்னை? உன்னாட்டம் அகப்பட்டதை அபேஸ் பண்றவனடா நா? இப்பக் கூடத் தெரியுமா! ஒரு பேச்சுச் சொன்னா, உன்பாடு என்ன ஆகும் தெரியுமா?” என்று மிரட்டினான். “என்னடா ஆகும்? தலை போயிடுமா?” “தலை போவுதோ, உன் முதுகுத்தோல் போகுதோப் பாரேன், தைரியமிருந்தா.” “யாருக்குடா தைரியமில்லே! பேடிப் பையா! போன சனிக்கிழமை பொன்னன் அடிக்க வந்தப்போ பொம்பளை மாதிரி ஓடி ஒளிஞ்சுக்கிட்டது யாருடா? நானா, நீயா?” “இப்ப நீ என்னடா சொல்றே.” “நீ யாருடா என்னை முட்டாள்ன்னு சொல்ல?” இந்தப் பாணியிலே வளர்ந்துவிட்டது வம்பு. இந்த இரு குடியரும் உளறிக் கொண்டிருந்ததைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான், என்ன தான் குடித்தாலும் நிதானமே தவறாதவன் என்று பேரெடுத்த மைக்கண்ணன். இந்தப் பேச்சிலே, இடையிடையே வெளி வந்த ஆயிரம், ஐயாயிரம், பச்சை சிகப்பு, மார்வாடி என்ற பதங்களிலிருந்து, பயல் ஏதோ நகையை “அபேஸ்” செய்திருக்கிறான், என்று யூகித்துக் கொண்டான். சரி, இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டான், மைக்கண்ணன்; மாஜி போலீஸ்காரன். அதாவது, போலீஸ் வேலையிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவன், ஒரு திருட்டு வழக்கிலே சம்பந்தப்பட்டதற்காக. கொஞ்சம் தந்திரசாலி. ஊரிலே இருந்த ஆறுமுகங்களை அறிந்தவன். எனவே, அருகே சென்று அவர்களின் பேச்சிலே கலந்து கொண்டான். “ ஆறுமுகம் முட்டாளல்ல ! காரணமின்றி எதுவும் செய்பவனல்ல” என்று ஆரம்பித்தான் மைக்கண்ணன். “கேளடா, கேள்! உன்னைப் போல வண்டியோட்டியல்லடா. நம்ம மைக்கண்ணு. போலீசிலே இருந்த ஆசாமி என்று மைக்கண்ணனை ஆதரித்தான் ஆறுமுகம். குடுவையை நிரப்பினான். குபுகுபுவென்று உண்மையைக் கக்கத் தொடங்கினான் ஆறுமுகம். “அண்ணே! இதைக் கேளண்ணேன். ஒரு பெரிய இடத்திலே இருந்து ஒரு பதக்கத்தை அபேஸ் செய்யச் சொன்னார் ஒரு பெரிய ஆசாமி” என்று ஆரம்பித்தான் ஆறுமுகம். “முடியவில்லையா?” என்று கேட்டான் மைக்கண்ணன். “என்னாண்ணேன்! நான் நோட்டமிட்ட காரியத்திலே எப்பண்ணேன், தவறி இருக்கேன். மேலும், அந்த ஆசாமியே, அந்தப் பெரிய இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அவரும் அந்த ஜெமீன்தாரும் பேசிக்கிட்டிருக்கிற நேரமாகப் பாத்துப் பூனை மாதிரி உள்ளே நுழைஞ்சேன். சிங்கமாட்டம் காரியத்தை ஜெயிச்சிகிட்டேன்.” என்றான் ஆறுமுகம். “சபாஷ்டா ஆறுமுகம்! நீ போய் ஒரு காரியத்தை முடிக்காம திரும்புவாயா? எமன் போய் உயிரை கொண்டாரத் தவறினாலும் தவறுவான்; அபேஸ் ஆறுமுகம் போனா, காரியம் தவறுமா? வரதா! என்னமோ, வானா மூனான்னு சொன்னியே ஆறுமுகத்தை, உன்னாலே முடியுமா இதுபோலச் செய்ய” என்று பேசி ஆறுமுகத்தைத் தட்டிக் கொடுத்தான் மைக்கண்ணன். போக்கிரிகளுக்குக் கொஞ்சம் “தண்ணி” போட்டுவிட்டுத் தட்டிக் கொடுத்தால் உண்மையைக் கொட்டிவிடுவார்கள் என்று சப்-இன்ஸ்பெக்டர் சகலண நாயுடு பல தடவை செய்த உபதேசம், மைக்கண்ணனுக்கு அந்தச் சமயம் நன்றாகப் பயன்பட்டது. “அண்ணே! உன்கிட்டே சொல்லாமே யாரிடம் சொல்லப் போகிறேன்! ஆனா நம்ம தொழில் விஷயமா நம்ம சம்சாரத்திடங்கூட நான் மூச்சுவிட மாட்டேன். உன்கிட்டே சொல்லாமே இருக்கலாமா? நீ கூடப் பொறந்த பொறப்பு மாதிரி எனக்கு. நம்ம கலியாண சாஸ்திரி இருக்காரேல்லோ, அந்த ஆசாமி இந்தச் சொர்ணா இருக்காளே, டிராமாக்காரி, அவளை வைச்சிக் கிட்டு இருக்கிற ஜெமீன்தார் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு. போயி, அவர் வீட்டிலே இருந்து ஒரு பதக்கம் - அதன் அடையாளம், இருக்கிற இடம், திருட்டுச்சாவி அவ்வளவும் நமக்குக் கொடுத்தாரு. கொடுத்து விட்டு ஜெமீன்தார்கூட உட்கார்ந்து என்னமோ கதை பேசிக்கிட்டே இருந்தாரு. இருந்தாரா? அந்தச் சமயத்திலேதான் என் வேலையை நடத்தணும்னு ஏற்பாடு; அதன்படியே, கொஞ்சம் வயிறு வலிக்குதுன்னு வேஷம் போட்டேன். நான்தான் பெரிய வியாபாரியாச்சே - அப்படின்னுதானே ஐயரு சொல்லி வைச்சாரு அந்த ஜெமீன்தாரனிடம். அவன், வயிறு வலிக்கு மருந்து கொடுத்துவிட்டுக் கொஞ்சம் “ரெஸ்டா” இருங்க சார்னு, என்னை உள் அறையிலே படுக்கச் சொன்னான். நான் ரெஸ்ட் வாங்கப் போனேன்! படுத்தேன். பழையபடி ஜெமீன்தாரும் ஐயரும் பேச ஆரம்பித்ததும், “நைசா” உள்ளே புகுந்து சந்தடி செய்யாமே, ஐயர் சொன்ன பெட்டியைக் கண்டுபிடித்து பதக்கத்தை அபேஸ் செய்து விட்டேன். ஐயரும் ரொம்பக் கெட்டிக்காரன், என் வேலை முடிஞ்சது தெரிஞ்சதும், போவோம் சார்னு கூப்பிட்டுகிட்டாரு. இரண்டு பேரும் கிளம்பிவிட்டோம். அந்தத் தடியன் கை எடுத்துக் கும்பிட்டான் என்னை. ஒரு வேலை முடிஞ்சுதா? இரண்டாவது, ஐயர் என்ன சொன்னாருன்னா, ‘ஆறுமுகம்! நீ இப்போ செய்த காரியம் போறாது; இந்தப் பதக்கத்தை, என் தங்கை வீட்டிலே கொண்டு போய், தெரியாமே, உள்ளே ஏதாவது ஒரு பெட்டியிலே வைத்துவிட வேணும்னு சொன்னாரு. சரி, இந்தச் சனியன் பிடிச்ச நகை நம் கைவிட்டுத் தொலையறது நல்லதுன்னு அந்தக் காரியத்தையும் முடிச்சேன். இரண்டுக்குமா இருநூறு கொடுத்தாரு ஐயரு. இந்த மடப்பய சொல்றான், பதக்கத்தை நான் எடுத்துக்கிட்டு இருக்கணுமாம். மைக்கண்ணண்ணே! அந்த நகை நம்மகிட்ட இருந்தா, நமக்குத்தானே ஆபத்து! இப்ப சட்டி சுட்டுது - கைவிட்டதுன்னு ஆயிடுத்து’ என்று ஆறுமுகம் தன் கதையை விளக்கிக் கூறினான். சூடா வீட்டில் நகையை ஒளித்ததுமின்றி, நகை இருப்பதாகச் சூடாவுக்கே கூறும்படியும், தனக்கு ஐயர் சொன்னதையும், சொன்ன வண்ணம் தான் செய்ததையும் ஆறுமுகம் கூறினான். மைக்கண்ணன் இந்தச் சேதியைக் கேட்டு மிகச் சந்தோஷமடைந்து மேலும் சில குடுவைகளை நிரப்பி ஆறுமுகத்துக்குத் தந்துவிட்டுத் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான். நேராகச் சூடா வீடு சென்று கதவைத் தட்டினான். அதே நேரத்திலேதான் சூடா, பதக்கத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். கதவு தட்டப்படுவது கேட்டுத் திகிலுற்ற சூடா, பதக்கத்தை மடியிலே மறைத்து வைத்துக் கொண்டு ஓடிச் சென்று கதவைத்திறந்தாள். மைக்கண்ணன் ஒரு அசட்டுப் புன்சிரிப்புடன், சூடாவைப் பார்த்து, “தாங்கள்தானே சூடா” என்று கேட்டான். “ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டாள் சூடா. “நானா? நான் ஒரு பைத்தியக்காரன். யாராக இருக்கட்டும். ஒரு பெண்ணுக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் அவர்கள் அழைக்கா முன்பே ஓடிச்சென்று உதவி செய்பவன்” என்று மைக்கண்ணன் பதிலுரைத்தான். “ஐயா! இது என்ன நாடகப் பேச்சாக இருக்கிறது. யார் என்று கேட்டால் முழநீளம் பேசுகிறீர்” என்று கொஞ்சம் கண்டித்தாள் சூடா. மைக்கண்ணன் கலகலவென்று சிரித்துவிட்டு, “பெண்ணே! நீ கொஞ்சம் தைரியசாலிதான்!” என்றான். “என்னய்யா இது? முன்பின் தெரியாத ஆசாமி, வாயில் வந்தபடி பேசிக் கொண்டு நிற்கிறாய். போலீசைக் கூப்பிடுகிறேன் பார்!” என்று மிரட்டினாள் சூடா. “போலீசையா? கூப்பிடு. நீ கூப்பிடாவிட்டாலும் போலீஸ் தானாக இங்கே வரத்தானே போகிறது” என்று கூறினான் மைக்கண்ணன். சூடாவுக்கு நடுக்கம் பிறந்துவிட்டது. அவளையுமறியாமல், கரம் மடியின் பக்கம் சென்றது. மைக்கண்ணன் யூகமுள்ளவன். எனவே, அதிகாரக் குரலிலே, ஆனால் புன்சிரிப்புடன், “கொடு!” என்றான். “எதை? எதை?” என்று குளறினாள் சூடா. “பதக்கத்தை எடு” என்று மிரட்டும் குரலிலே கூறினான் மைக்கண்ணன். பகுதி 8 “பதக்கத்தைக் கொடு” என்று மைக்கண்ணன் கேட்டதும், சூடாவின் திகில் அதிகரித்துவிட்டது. “பதக்கமா! ஏது? யார் நீ?” என்று கேட்டுக் கொண்டே, மிரள மிரள விழித்தாள். மைக்கண்ணன், “இதோ பார்! எனக்கு வேலை நிரம்ப இருக்கிறது. இங்கே நின்று கொண்டு வம்பளக்க நேரமில்லை. எடு பதக்கத்தை” என்று கூறினான். தராவிட்டால், மடியிலிருந்து தானே எடுத்துக் கொள்வான் என்று தோன்றிற்று. அவன் குரலிலே அந்த உறுதி தொனித்தது. என்ன செய்ய முடியும், ஏற்கெனவே திகைப்பால் தாக்கப்பட்டுக் கிடந்த சூடாமணியால்! மேற்கொண்டு எதுவும் பேசாமல், பதக்கத்தை மைக்கண்ணனிடம் கொடுத்தாள். மைக்கண்ணன், வெற்றிச் சிரிப்புடன் நின்றான். “ஐயா! இந்தப் பதக்கத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பயந்த குரலில் கேட்டாள் சூடா. “எவ்வளவு பைத்தியக்கரத்தனமான கேள்வி?” என்று சொல்லிச் சிரித்தான் மைக்கண்ணன். “நான் விவரிக்க முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கேலி பேசி என் மனதை மேலும் புண்ணாக்க வேண்டாம். என் நிலையிலே இருப்பவர் யாராக இருந்தாலும், வீராதி வீரனானாலும், உண்மையிலேயே பைத்தியம் பிடித்துத்தான்விடும். ஐயா! முரட்டுக் குணம் படைத்த உன்னையே கேட்கிறேன். திடீரென்று உன் வாழ்க்கையிலே, ஒரு பெரிய விபத்து நேரிட்டால், உன் மனம் குழம்பாதா? உன் கையிலே உள்ள பதக்கத்திலே புதைக்கப்பட்டுள்ள நவரத்தினத்தின் விலைமதிப்பைக் கண்டு பூரித்து, இதை விற்றுப் பெருந்தொகை பெற்றுப் பணக்காரனாகிச் சுகமாகக் காலந் தள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில், பதக்கம் இருக்கும் கையைப் பாம்பு கடித்தால் என்னவாகும்? நான் உம்மைச் சபிப்பதாக எண்ணிக் கோபிக்க வேண்டாம். உமக்கும் குடும்பம், தாய் தந்தை, அண்ணன் தங்கை இருக்குமே; எப்படிப்பட்ட கன்னெஞ்சனாக இருந்தாலும், என் கதியைக் கேட்டால் கண்ணீர் விடுவார்கள். பதக்கத்தைக் கொடுத்துவிட நேரிட்டதே என நான் ஓலமிடுகிறேன் என்று நினைக்காதீர். எனக்கு இந்தப் பதக்கம் மட்டுமல்ல, உள்ள நகைகள் அவ்வளவும் போனாலும் கவலை இல்லை.” என்று சூடா விம்மிக்கொண்டே கூறிடவே, மைக்கண்ணனுக்கும் கண்களிலே திவலை சேரத் தொடங்கிற்று. சமாளித்துக் கொண்டு, “சேச்சே! இது என்ன குழந்தை போலக் கதறுகிறாய்! நான் உன்னை ஒன்றும் கேலி செய்யமாட்டேன். சுகதுக்கம் என்பது மனிதருக்குச் சகஜமாக வருவதுதான். இந்த லோகத்திலே நீ மட்டுந்தானா கஷ்டம் அனுபவிக்கிறாய்”. மைக்கண்ணன் சூடாமணிக்கு ஆறுதல் கூறினான். “இவளை ஏய்த்துப் பதக்கத்தை அபகரித்துச் செல்கிறோம். பிறர் பொருளை களவாடுகிறோமே, பெண்ணை மிரட்டிப் பொருளைப் பறித்துக் கொள்கிறோமே! இது தர்மமா, நியாயமா? என்ற சிந்தனைக்குக் கட்டுப்படாத மைக்கண்ணன், சூடாவின் கண்ணீரைக் கண்டதும் கலங்கினான். அவள் தன் வாழ்க்கையிலே வேதனை சூழ்ந்திருப்பதைக் கூறினதும், உருகினான்! தர்மம், நியாயம் ஆகிய எண்ணங்கள் உள்ளே புகாதபடி கெட்டியாக்கப் பட்டிருந்த அவன் மனதிலே, இரக்கம் என்ற எண்ணம் மட்டும் இலேசாக உள்ளே புகுந்தது. இரக்கம், அவ்வளவு வலிமை பொருந்திய உணர்ச்சியா? அல்லது மைக்கண்ணன் மட்டும், இரக்க சுபாவக்காரனா! ‘ஐயோ பாவம்!’ என்ற சொல் பேசாத ஆட்கள் கிடையாது. மிக இயற்கையாகவே அந்த வார்த்தை புறப்படுகிறது. நகராத மாட்டை நாலு அடி கொடுத்து ஓட்டும் ஆளைக் கண்டால், வழியே போகிறவன்கூட, “ஐயோ பாவம்! ஏண்டாப்பா அந்த வாயில்லாத ஜீவனை இப்படி வதைக்கிறாய்?” என்று கேட்கிறான். துன்பப்படுபவனைக் கண்ட உடனே, அந்த இரக்கம் எவர் உள்ளத்திலேயும் இயற்கையாகவே கிளம்புகிறது. அந்த இயற்கை உணர்ச்சியான இரக்கத்தின்படி நடக்க முடிவதில்லை. நடக்க வேண்டுமென்ற நினைப்பு வராததால் அல்ல! நடக்க உண்மையிலேயே முடிவதில்லை - அவர்களுடைய வாழ்க்கை முறையின் அமைப்பு அதற்கு இடந்தருவதில்லை. பூந்தோட்டத்திடையே கட்டப்பட்ட அழகிய மாடி வீட்டிலே வாசம் செய்துகொண்டு, நேசத்துக்குரிய நாயகி வீணை மீட்டிக் கொண்டு பாட, அந்த இன்னிசையைக்கேட்டு ஆனந்தித்திருக்க வேண்டுமென்ற நினைப்புப் பலருக்கு. அத்தகைய மாடி வீட்டருகேகூடச் செல்ல முடியாத பலருக்கும் சுலபத்திலே அந்த எண்ணம் ஏற்பட்டுவிடும். ஆனால் அந்த நினைப்பை அடுத்த விநாடியே உதறித் தள்ளியாக வேண்டும், நடைமுறைக்கு ஏற்றதல்லவென்று! தர்ம சிந்தனை எழ முடியும் எவருக்கும். ஆனால் அந்த நினைப்பின்படி நடக்க முடியாது பெரும்பாலோரால்! என்னிடம் மட்டும் ஏராளமான பணம் இருந்தால், என்னென்ன செய்வேன் தெரியுமா? பசி என்று நினைப்பதும், சொல்லிக் கொள்வதும் எளிது; செய்ய முடியுமா அதுபோல்! பெரும்பாலானவர்களுக்குச் சிந்தனை உதிக்கும்; செல்வம் இராது. சிந்தனையுடன் செல்வமும் இருந்தால், செல்வத்தைச் சீரழித்துவிட்டால், நாளைக்கு என்ன செய்வது என்ற பயம் பிறக்கும். பயம் பிறந்ததும் கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற திட்டம் போடுவான். அந்தத் திட்டத்திலே பசித்தவனுக்குச் சோறிடுவது என்ற பழைய எண்ணத்துக்கு இடம் இராது! மனிதன், இயற்கையாக அவன் உள்ளத்திலே எழக்கூடிய எண்ணங்களின்படி நடக்க முடியாதவாறு அவனுடைய வாழ்க்கையின் அமைப்பு, அவனாலும் சூழ்நிலையாலும் ஏற்பட்டுவிடுகிறது. “என் குழந்தையைச் சீமைக்கு அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன்” என்று கூறிக் கொஞ்சாத தாய்மார்கள் உண்டா? ஆனால், சீமைக்குப் போய்ப் படித்துவிட்டு வரவேண்டிய குழந்தை, கடைசியில் செட்டியார் கடையிலேயல்லவா கணக்கெழுதுகிறான்! இரதிபோல ஒரு பெண்ணை என் மகனுக்குக் கட்டி இந்தக் கண்ணால் கண்டு ஆனந்திக்க வேண்டும் என்று கூறுகிற தாய்க்கு, நிறமும் கருப்பு, முகமும் கோணல், குணமும் கோணல் என்று ஊரார் வர்ணிக்கும் மருமகள் கிடைக்கிறாள்! நினைப்பு, எதற்கு உதவிற்று? கலெக்டர் ஆபீசிலே குமாஸ்தாவாகக் காலடி வைக்கும் யார்தான், கடைசி வரை அந்த வேலையிலேதான் இருக்கப் போவதாக எண்ணுவார்கள்! எண்ணம், அடிக்கடி குமாஸ்தாவை, மின்சார விசிறிக்கு அடியே உள்ள மெத்தை போட்ட ஆசனத்துக்கு அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையோ, அவனைக் குமாஸ்தா ஸ்தானத்திலேயே அழுத்தி விடுகிறது. கள்ளன், பிறர் பொருளைக் கவரும் முதல் சம்பவத்துக்கு முன்பு, ஏதேதோ எண்ணங்களைக் கொண்டிருப்பான். களவாடியே பிழைக்க வேண்டும் என்றல்ல! கௌரவம், நாணயம், உழைத்துப் பிழைத்தல், ஊர் மெச்ச நடத்தல், எவரிடமும் அன்பு காட்டுதல் முதலின பல எண்ணங்களை அவன் கொண்டிருந்தவன்தான். ஒவ்வொன்றாக விட்டுவிட நேரிடுகிறது. பணம் வைத்திருந்தால்தானே கௌரவம்! ஆளின் குணத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆளின் அரண்மனை, ஆடம்பரம் இவைகளைப் பார்த்துத்தானே கௌரவம் தரப்படுகிறது! பணத்துக்குள்ள கௌரவம் வேறு எதற்கும் கிடையாது! என்ற பாடத்தை அவன் அனுபவப் பள்ளியிலே பெறுகிறான். பெற்றதும், கௌரவமாக வாழ வேண்டும் என்ற நினைப்புத் தானாக நசித்துப் போகிறது. எப்படியாவது பணம் தேட வேண்டும் என்று திட்டம் தயாரித்து விடுகிறான். அந்தத் திட்டம் அவனை வேறொருவனுடைய இரும்புப் பெட்டிக்கு இழுத்துச் செல்லலாம்; சிறைச்சாலைக்குள்ளே தள்ளிவிடக்கூடும். இல்லையானால் சீமானாகவும் செய்துவிடக்கூடும். எனவே, மனிதனிடம் உள்ள குறை, நல்ல எண்ணங்கள் அவனிடம் உதிப்பதில்லை என்பதல்ல; உதிக்கும் நல்ல எண்ணங்களின்படி நடந்துவர, அவனுடைய வாழ்க்கையின் அமைப்பு முறையின் கூட்டாக விளங்கும் சமுதாய ஒழுங்கு முறையும், அதற்கு இடந்தருவதில்லை! இதனாலேதான் கள்ளனும், காமுகனும், வஞ்சகனும், கொலைகாரனும் புரட்டனும், மிரட்டுவோனும் பூசாரியும் உண்டாகின்றனரேயொழிய, நல்ல எண்ணங்களே உண்டாகாத காரணத்தால் அல்ல! அதிலும், மற்ற எண்ணங்களின்படி நடந்து கொள்ள முடிந்தாலும் முடியக்கூடும். இரக்கம் என்ற எண்ணத்தின்படி நடந்து கொள்வது, மிக மிகக் கஷ்ட சாத்யமாகி விடுகிறது. இதிலே உள்ள வேடிக்கையும் அதிகம்! மற்ற எண்ணங்கள் எழுதுவதற்காவது, கொஞ்சம் பண்பு, சுற்றுச்சார்பு, கல்வி முதலியன தேவை. இரக்கம் என்ற எண்ணம் உண்டாக, இவை தேவையில்லை. மிகச் சாதாரணமாக உண்டாகிவிடும். பிறர் தூண்டாமலே உண்டாகும். அடிக்கடி உண்டாகும்! அனைவருக்கும் உண்டாகும். நல்ல வெயில் வேளை. பாரமான வண்டியை, மாடென இழுத்துச் செல்கிறான் பாட்டாளி. பாதையிலே நிற்கிறான் பரமசிவன்; அவனிடம் வண்டி இழுப்பவன், “அப்பா, பரமசிவம்! என்னைப் பார்! நானும் உன்னைப் போல ஒரு மனிதன்தான். மாடல்ல! ஆனால் மாடுகூட இழுக்க முடியாத இந்த வண்டியை நான் இழுக்கிறேன்” என்று கூறுவதில்லை. பரமசிவன் பார்க்கிறான். (இரண்டு கண்ணுள்ளவன்) பார்த்ததும், பெருமூச்சுடன் மெள்ளச் சொல்கிறான், ‘ஐயோ பாவம்!’ என்று. அழையாமல் நுழைகிறது, இரக்கம் எனும் எண்ணம். அவன் மனம் குழைகிறது. ஆனால் பரமசிவம், என்ன செய்ய முடியும்? “பார வண்டியை இழுத்துக் கஷ்டப்படாதே. வா, என் வீட்டுக்கு. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று கூறிவிட முடியுமா? பரமசிவமே, பாதி வாழ்வுக்காரன். உண்கிறான் இஷ்டப்படியல்ல. உயிரும் உடலும் பிரியாதிருக்கும் அளவுக்குத்தான்! அவன் கஷ்டாளி! ஐயோ பாவம் என்று அவனைப் பார்த்தே பல பேர் கூறுகிறார்கள். “வீட்டிலே என் சம்சாரத்துக்குக் காய்ச்சல் ஜாஸ்திங்க. கையை வைத்தா நெருப்பு மேல் வைப்பது போல இருக்குதுங்க! டாக்டரிடம் அழைச்சிக்கிட்டுப் போகணுங்க.” என்று ஒரு நாள் பரமசிவம், தன் எஜமானிடம் சொன்னான். “ஐயோ பாவம்!” என்று அவர் சொன்னார். “ஒரு பத்து ரூபாய் பணம் வேணுமுங்க” என்று கேட்டான், எஜமானர் என்ன செய்தார்? தந்தாரா? அதுதான் இல்லை. ஐயோ பாவத்தை மட்டுந்தான் தந்தார். பரமசிவம் பார வண்டிக்காரனுக்கும் அதே ஐயோ பாவத்தைத்தான் தர முடிந்தது! இரக்கம் எழுவது எளிது, அதன்படி நடக்க முடியாது முக்காலே மூன்று வீசம் பேரால்! வாழ்க்கை முறையின் போக்கு இயற்கையான எண்ணத்தின்படி மக்கள் நடக்க முடியாதபடி தடுக்கிறது. மைக்கண்ணனுக்குச் சூடாவிடம் இரக்கம் பிறக்கத்தான் செய்தது. பிறந்து பயன்? பதக்கம் வேண்டாம், எடுத்துக் கொள் என்று கூறிவிட்டானா? பதக்கத்தைக் கண்டதும், பழைய கடனைத் தீர்த்து விடலாம். புதுத் துணி வாங்கலாம், ஆறு மாதம் முழுகாதிருக்கும் மனைவி கேட்ட சேலையை வாங்கிவிடலாம். முடியுமானாலும் குந்தக் குடிசையும் வாங்கலாம் என்று திட்டம் உதித்துவிட்டது. இரக்கம், இடையிலே தலை தூக்கிற்று. மறு விநாடி செத்தது! சூடா மறுபடியும் அதைப் பிழைக்க வைத்தாள். “ஐயோ! பதக்கத்தை நான் தங்களிடம் தரப் பயந்தேன் தெரியுமா? என் கணவர், ஒரு கொள்ளைக் கேஸ் விஷயமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு ஆள், என்னை வழியிலே கண்டு, கோயிலிலே கொள்ளை அடித்த பதக்கம் உன் வீட்டிலே இருக்கிறது. அதை ஒளித்துவிடு; இல்லையானால், உன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சொன்னான். நான் நம்பவில்லை! இந்தப் பதக்கமோ இதற்கு முன்பு நான் கண்டதில்லை; வீட்டிலே இன்று பெட்டிகளைப் புரட்டிப் பார்த்தேன். இந்தப் பாழும் பதக்கம் இருந்தது. இது வெளியே தெரிந்தால், என் புருஷனுக்கு ஆபத்துவரும். ஆகவே இதை எங்காவது கிணற்றிலே, குட்டையிலே வீசிவிடலாம் என்று எண்ணினேன். நீங்கள் யாரோ தெரியவில்லை. உங்களை நான் என் குலதெய்வமாகக் கும்பிடுவேன். எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தப் பதக்கத்தைக் கொடுத்துவிடும். நான் இதற்குப் பதிலாக ஈடாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என்று கூறினாள். மறுபடியும் அந்த இரக்கம் புகுந்து குடையத் தொடங்கிற்று மைக்கண்ணனை. “இதோ பார்! நீலிவேஷம் போட்டு என்னை ஏய்க்க முடியாது. இந்தப் பதக்கத்தைப் போலீசுக்குத் தந்து, உன் புருஷனைச் சிக்கச் செய்யக் கூடாது. அவ்வளவுதானே நீ சொல்வது? சரி! அப்படி நேரிடாதபடி பார்த்துக் கொள்கிறேன், போதுமா?” என்று கேட்டான் மைக்கண்ணன். “அது எப்படியப்பா முடியும்? நீ இந்தப் பதக்கத்தை விற்கப் போவாய். கடைக்காரன் சந்தேகிப்பான். போலீசுக்குத் தெரிந்துவிடும்; பிறகு என் புருஷருக்கு ஆபத்துவரும்” என்றாள் சூடா. “என்னடா இது! பெரிய தொல்லையாகி விட்டது. இந்தப் பதக்கத்தை நான் விற்கப் போவதில்லை. தெரிகிறதா?” என்று மைக்கண்ணன் கோபமாகப் பேசினான். அந்தக் கோபம், சூடாவினால் உண்டானதல்ல. அவன் மனதிலே குடைந்து கொண்டிருந்த இரக்கத்தினால் பிறந்தது. “விற்கப் போவதில்லையானால், இதை எடுத்துப் போவானேன்?” என்று சூடா கேட்டாள். “உன்னிடம் வாயாடிக் கொண்டிருக்க முடியாது என்னால். இந்தப் பதக்கத்தால் உன் புருஷனுக்கு ஆபத்து வராது என்று மட்டுந்தான் சொல்லுவேன். நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; வீணாகக் கூவினால், நாலு பேர் வருவார்கள். வந்தால் ஆபத்து எனக்கில்லை. உனக்குத்தான். அதைத் தெரிந்து கொண்டு நட” என்று கூறிவிட்டு மைக்கண்ணன் போய்விட்டான். பகுதி 9 ஆணா, பெண்ணா? உடையைப் பார்த்தால் ஆடவன் போலிருக்கிறது. நடையோ நளினமுடையது போலிருக்கிறதே! முகத்திலோ ஆண்மை ஒளியை விடப் பெண்மையின் பொலிவு காணப்படுகிறது. குரலிலேயோ கோதையருக்குரிய பண் காணோம்! பெயரோ ஆணா பெண்ணா என்ற சந்தேகத்தைத் தீர்த்து வைக்கக் கூடியதாகக் காணோம்! சுந்தரம் - இருபாலருக்கும் இருக்கக் கூடிய பெயர். சிலரைக் கண்டால், இதுபோன்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆனால் இவ்விதம் சந்தேகிக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்கள் சீறுவர்; அது அவ்வளவு வேடிக்கையல்ல! புத்திசாலியா முட்டாளா? அவனுடைய நிலையைப் பார்த்தால், அவனோர் மேதாவியாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. வீடே, பெரியதோர் படிப்பகம்! விலையுயர்ந்த புத்தகங்களுடன் அளவளாவுகிறான். அறிவும் ஆராயுந் திறனும் அளிக்கவல்ல அறிஞர் பெருமக்களின் சிறந்த நூல்களெல்லாம் அவனுக்கு மனப்பாடம். கிரேக்க நாட்டிலே கற்காலத்திலே கன்னியருக்குக் காதணி உண்டா, இல்லையா? இன்றைய யானைக்கு மூதாதையாக இருந்த பேருருவத்திற்கு உடலிலே முள்ளிருந்ததா? ரோமமே முள் போலிருந்ததா? அனுமன் கடலைக் கடக்கும்போது, வாலின் நுனி கடலைத் தொட்டதா, அல்லது அலையின் திவலை வாலிலே பட்டதா? என்பன போன்ற சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள, அவனையே நாடுகிறார்கள். அவன் அவ்வளவும் அறிந்திருக்கிறான். ஆகவே அவன் புத்திமான் என்றே கருத வேண்டி இருக்கிறது! ஆனால் இதற்கு என்ன சொல்வது? இவன் காவி உடையிலே உலவும் கள்ளரைக் கடவுள் நெறி காட்டுவோர் என்று எண்ணுகிறானே! மலர்முகவதியான தன் மகளுக்கு, ‘ஜாதகப் பொருத்தமும்’ ஜெமீன் பொருத்தமும் இருக்கிற காரணத்தைக் கொண்டு ஒரு மந்திமுக தொந்தி சொரூபனுக்கு மணம் செய்து வைக்கிறானே! மாகாளி கோயிலிலே மார்கழி மாத பூஜை செய்கிறேன் என்று கூறும் பூஜாரிக்குப் பக்தியோடு காணிக்கை தருகிறான். அது கஞ்சா கள்ளாக மாறுவது தெரியாமலிருக்கிறானே? இவனை முட்டாள் என்று கூறாதிருக்க முடியுமா? ஒரு விதத்திலே பார்க்கும்போது நிறைமதியாளனாகவும் தெரிகிறது. வேறோர் துறையிலே நோக்கினாலோ குறைமதியுடையோனாகக் காணப்படுகிறான்! இவனை எந்தப் பட்டியலிலே சேர்ப்பது? புத்திமான் பட்டியலிலா? அறிவிழந்தோர் அட்டவணையிலா? என்ற சந்தேகம், சிலரைக் காணும்போது ஏற்படுகிறது. யோக்கியனா, அயோக்கியனா? அவனுடைய குடும்ப வாழ்க்கை, கோயில் சென்று வரும் கடமையைக் கொண்டிருக்கும் நேர்மை, எவரிடமும் பணிவாகப் பேசும் இயல்பு, எதற்கும் கோபமே கொள்ளாத சுபாவம், பாகவத சிரோமணிகளிடம் காட்டும் பரிவு. இவைகளைக் காண்போர், “ஆஹா! மகா உத்தமன்! யோக்கியன்!” என்று கூறுகின்றனர். இராமாயணக் கதாப் பிரசங்கவாரியார், அவரை, “சாட்சாத் இராமச்சந்திரருடைய கிருபா கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர்” என்று குளிர்ந்து கூறுவதையும் கேட்கிறோம். “ஐயா! அந்த உருத்திராட்சப் பூனையின் பேச்சை எடுக்க வேண்டாம். அவன் பெயரைச் சொன்னாலே என் நெஞ்சம் வேகிறது. கொடுத்த தொகை 300. கணக்கிலே குறித்துக் கொண்டதோ 1300; வட்டி தொடர், வட்டி போட்டுக் கோர்ட்டிலே அவன் நிறைவேற்றிக் கொண்ட “டிகிரி தொகையோ” 3000; அதற்காக ஏலத்தில் எடுத்த என் நிலபுலத்தின் மதிப்போ 6000. அப்படிப்பட்ட அயோக்யனய்யா அவன்! ஏழைகளின் அழுகைச் சத்தமே அவன் ரசிக்கும் கீதம்! அவனால் பாழான குடும்பங்களும், சிதைந்த கருக்களும் கொஞ்சமா?” என்று வேறொருவர் வேதனையுடன், விழியில் நீர் ததும்பக் கூறுகிறார். யோக்கியனா, அயோக்கியனா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட சிலரைக் கண்டால். இது மட்டுமா ஆச்சரியம்! மைலாப்பூருக்கு மேதாவியாக இருப்பவன் திருவல்லிக்கேணியிலே ஞானசூன்யனாகக் கருதப்படுகிறான். வெள்ளிக்கிழமை வேதாந்தியாக வீற்றிருந்தவன் சனிக்கிழமை கிண்டிக் குதிரைப் பந்தய மைதானத்திலே பேராசைப் பிண்டமாகிறான்! வேலை செய்யும் கடையிலே ‘கள்ளன்’ என்று முதலாளியிடம் வசவு கேட்கிறான். வீட்டிலே ‘வசந்தா வளையல்’ செய்து தந்து விடுகிறான். கண்ணல்லவோ! ராஜா அல்லவோ என்று கொஞ்சுகிறாள் அவன் மனைவி. “புண்யவான்! உமக்குப் பூலோகத்திலே மட்டுமல்ல, சொர்க்கலோகத்திலேயும் திவ்யமான பதவி கிடைக்கும்.” என் வயிறார உண்ட பண்டாரம் வாழ்த்துகிறான். “ஏமாந்தவனாக நான் ஒருவன் கிடைத்துவிட்டேன். உனக்கு மூட்டை மூட்டையாக அரிசி கொடுக்க, கடனுக்கு, ஏண்டாப்பா! நீ வாழ்வாங்கு வாழமாட்டாய் என் தலையிலே மிளகா அரைச்சி ஊராரிடம் உத்தமனென்று பட்டம் வாங்கிவிட்டாய்” என்று, கொடுத்த கடனைத் திருப்பி வாங்க முடியாத அரிசிக் கடைக்காரர், அந்தக் “புண்யவானை”க் கண்டிக்கிறார். “பிள்ளை குட்டிக்காரன் நான்! என்னை ஏய்த்து நீ பாப மூட்டையைச் சுமந்து கொள்ளாதே” என்று சபிக்கிறார். ஒங்களுக்குப் போஜனம் செய்வித்த பாண்டுரங்கத்தின் பக்திப் பிரபாவத்தை ஊர் புகழ்கிறது. தை மாதம், சித்திரையிலே ஊர் சிரிக்கிறது “அந்த அயோக்யன் செய்த வேலையைப் பார். நம்ம அரிசி மண்டி ஆறுமுகத்தைக் கெடுத்துவிட்டான்.” என்று பேசி, ஏசி, ஆகவே, யோக்யன், அயோக்யன், புண்யவான் பாபி, என்ற அடைமொழியும் வசை மொழியும் இன்னவருக்குத்தான் பொருந்தும் என்றும் சொல்வதற்கில்லை. புகழ்ச்சிக்குப் பாத்திரமானவனே இகழ்ந்தும் பேசப்படுகிறான், வேறோர் சாராரால்! தேன் இனிக்கும்; தேள் கொட்டினால் வலிக்கும், பால் வெண்மையாக இருக்கும்; பகலில் சூரியன் இருக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறுவதுபோல பாண்டுரங்கம் யோக்யன், பலராமன் அயோக்யன், சுந்தரன் சூதுக்காரன், கந்தன் கள்ளங் கபடற்றவன், மாசிலாமணி மேதாவி, மாடசாமி முட்டாள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. “அவனைப் பெரிய யோக்யனென்று நினைத்தேன். மகா அயோக்யனாக இருக்கிறானே! மடப் பயல்! இவனைப் போய் நான் ஒரு மேதாவி என்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்,” என்று பலர் பேசிடக் கேட்கிறோம். நாமே கூடப் பல தடவை சொல்லியுமிருக்கிறோம். ஏன்? காரணம் என்ன? இதுதான். இன்னவன் இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. உலகிலே நல்லவன் கெட்டவன் என்று பாத்திரங்களைச் சிருஷ்டிக்கும் நாடகாசிரியர் வேலையை நாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதன் நல்லவனாவதும், கெட்டவனாவதும், நிலைமையால்! அவனுடைய நிலைமையால் மட்டுமா? இல்லை! மற்றவர்களுடைய நிலைமைக்கும் அவனுடைய நிலைமைக்கும் தழுவுதலோ, மோதுதலோ, ஏற்பட்டுத் தீருவதால்! அவனுடைய நிலை, அவனாலேயே ஏற்படுகிறதா? அதையும் உறுதியாகக் கூற முடியாது! அவனாலேயும் ஏற்படுவது முண்டு! அவனை அறியாமலேயே ஏற்படுவதுமுண்டு! அறிந்தும், அவனால் தவிர்க்க முடியாமல் போவதுமுண்டு! இதுவேயல்லாமல், பிறனால் ஏற்படுத்தப்படுவதுமுண்டு! வேறொருவன் வேண்டுமென்றே ஏற்படுத்துவது மட்டுமா? இல்லை! பிறருடைய நிலை மாறுவதால், தானாக இவனுடைய நிலை மாறுவதும் உண்டு! ஆக நிலை மாற்றம், மனிதனைக் கெட்டவனாக்கு வதற்கோ நல்லவனாக்குவதற்கோ காரணமாகிறது. அந்த நிலை மாற்றத்துக்கும் வேறு பல காரணங்கள் உள்ளன! கமலா, எலியைக் கண்டாலே பயப்படும் பரம சாது! அப்பா அம்மா தவிர வேறு தெய்வமே வேண்டாமென்று இருப்பவள். குழம்புக்கு உப்பு எந்த அளவு போடுவது என்பது முதற்கொண்டு, குளிர் வந்துவிட்டது, கம்பளி எடுத்துப் போர்த்துக் கொள்ளட்டுமா என்பது வரையிலே, அன்னையைக் கேட்காமல், தானாக எதுவும் செய்ய மாட்டாள். துடுக்குத்தனமுடைய துரைச்சாணி, திருட்டுச் சுபாவமுடைய தங்கம், வறட்டு அகங்காரம் படைத்த வனிதா, முரட்டு மங்கா போன்ற எத்தனையோ பெண்களுக்கு, அவரவர் வீட்டுத் தாய்மார்கள், கமலாவின் குண விசேஷத்தைத்தான் உதாரணம் காட்டி உபதேசிப்பார்கள். “பெண்ணென்றால், அவளல்லவா பெண்! கமலாவின் காலைக் கழுவி ஒரு மண்டலம் அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். புத்தி வரும். தாயார் போட்ட கோட்டைத் தாண்டுகிறாளா அவள்” என்று கமலாவை புகழ்ந்தனர் பலர்; அது பாவாடைக்காரியாகக் கமலா இருந்தபோது! பிறகு? தாயார் கீறிய கோடு தாண்டாதிருந்த கமலா, வீட்டைத் தாண்டினாள்! வேலியைத் தாண்டினாள்! விபசாரியானாள்!! ஏன்? நிலைமாற்றம்! கமலாவின் கணவன் காவேரி, கண்ணை இமை காப்பது போல அந்தக் கட்டழகியைக் காப்பாற்ற வேண்டுமென்றுதான் கங்கணம் கட்டிக் கொண்டான். காலரா வருமென்று கண்டானா? காரிகை விதவையானாள்! இந்த நிலை மாற்றத்துக்குக் கமலா பொறுப்பாளியா? இல்லை! விதவை நிலை பெற்றாள், கணவன் மாண்டதால். ஆனால் மாறுதல் அது மட்டுமில்லையே. விதவை விபசாரியுமானாளே என்று ஊர் கேட்கும். இதோ அவள் உரைக்கிறாள், கேட்கட்டுமே. “அவர் காலமானபோது எனக்கு வயது இருபது! அவருடைய தம்பியின் வயது… வயது கிடக்கட்டும். ஆண்களின் சேட்டைக்கு வயது குறுக்கிடுகிறதா என்ன! அவர், என்னைத் தாய் வீடு செல்லவிடாமல் தடுத்தார். ஊரார் அவருடைய அன்பு குடும்பப் பொறுப்பை உணரும் தன்மை என்பன பற்றிப் புகழ்ந்தனர்! நான் கூடத்தான் கொஞ்சம் மகிழ்ந்தேன்! அவர் பாரத பாடத்தை அனுஷ்டிப்பார் என்று நான் கண்டேனா? குனிந்த தலை நிமிராமல் நான் இருந்தேன். அவரோ பாயும் விழிகளைத் தடுக்காமல் இருந்துவிட்டார்! ஜாடை காட்டலானார். காணாதவள் போலிருந்தேன்! வற்புறுத்தலானார்! தகாது என்று தடுத்தேன்! அவ்வளவுதானே என்னால் செய்ய முடியும்! வீராதி வீரர்கூட, ஆயுதம் இழந்துவிட்டாலும், எதிரியின் படைபலம் அதிகமாகி விட்டாலும் சரணாகதி அடைகிறார்கள். நான் சாமான்யமான பெண்! கூடுமான அளவு தடுத்தேன். வேறு என்ன செய்ய முடியும்! என்னமோ சொல்வார்களே, தபோபலத்தாலே சுட்டுச் சாம்பலாக்குவது, கல்லாகச் சமைத்துவிடுவது என்று, அதைப் போலச் செய்ய முடியுமா என்னால்! அவ்வளவு தபோபலம் இருந்தால், தாலியைக் காப்பாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா! அவருக்கு இரவு பத்து மணிக்கு மேலே மார்வலி எடுக்கும், அண்ணிதான் ‘வெந்நீர் ஒத்தடம்’ தர வேண்டும். வெந்நீர் ஒத்தடம் தரும்போது, அவர் வலி தாளாமல் என்னை அணைத்துக் கொள்வார்! விலகினால் குற்றம், விலகாவிட்டாலோ, விபரீதம் முற்றும்! இந்த வேதனை எனக்கு! மெல்ல விஷயத்தை என் தாயார் காதுக்கு எட்ட வைத்தேன். அது தெரிந்துவிட்டது அவருக்கு! அவ்வளவுதான். வீட்டைவிட்டுத் துரத்தினார். தண்டனை தந்ததாக அவர் நினைத்துக் கொண்டார், விடுதலை பெற்றதாக நினைத்துக் கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தேன். புதிய விருந்து வந்ததென்று பக்கத்து வீட்டு பாலு எண்ணிக் கொண்டான்! அது என் குற்றமா? என் மனத்தை என்ன செய்ய முடியும்? ஓயாமல் பாடுவான், உருக்கமாகப் பக்திப் பாசுரங்களை. என் தாயாருக்கு நான் ஒரே மகள். என்கதி இதுவாகவே, அவளுக்குப் பாப விமோசனத்திலே பற்று அதிகமாகிவிட்டது. அம்மாவைப் பாலு பாசுரத்தால் வென்றான், பார்வையாலும் எண்ணாலும் என் விதவைத்தனத்தைக் கொன்றான். பாலுவின் போர் முறைக்கும், என் கணவரின் தம்பி கையாண்ட முறைக்கும், எவ்வளவோ வித்யாசம்!பாலிலே மோர்த் துளி தெளித்தான் பாலு. அவர், பால் செம்பைக் கீழே உருட்ட வரும் பூனை போன்றவர்! பூனையை விரட்டி விட்டேன். மோர்த்துளி தெளிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளக்கூட முடியவில்லை. பாலுவின் தந்திரத்தைக் கேளுங்கள். என் தாயாருக்குப் பக்திப் பாசுரம் பிடிக்கும். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, “ஆற என்னைத் தழுவாயோ? அணிமார்பில் சேர்க்காயோ” “குழல்கோதி முடிக்காயோ கொஞ்சிமுத்தம் தாராயோ?” “செம்பவழ இதழினிலே சேர்த்திடாயோ என்இதழை.” என்றெல்லாம் பாடுவான்! இவைகளுடன் ‘கண்ணா! மணிவண்ணா! கார்நிறத்தழகா!’ என்று இணைத்துத்தான் இருக்கும், இது இறைவனைப் பற்றிய பாசுரம் என்பதை விளக்க. ஒரு இளமங்கைக்கு, இறைவனைப் பற்றி எண்ணம் ஏற்படுமா? ஆறத்தழுவுவது, இதழ் இதழில் கூடுவது என்பதெல்லாம்! இவ்விதமான பாடல்கள் என் செவியில் வீழ்ந்தபடி இருந்தால், பக்தியா பெருக்கெடுக்கும்! நான் வீழ்ந்தேன்! இப்போது சொல்கிறேன் வீழ்ந்தேன் என்று. அப்போது ‘வாழ்ந்தேன்’ என்றுதான் எண்ணினேன். நன்றாகக் கவனமிருக்கிறது; முதல் தடவை ஒரு துளசிச்செடி அருகேதான், அந்த விநாடி என் கண்ணுக்குச் சுந்தரரூபனாகத் தெரிந்த பாலு என்னைத் தழுவிக் கொண்டு, முத்தம் தந்தான்! முத்தம் தரச் சொன்னான். தந்தேன்! இப்போது நினைத்துக் கொண்டால்கூட வேடிக்கையாக இருக்கிறது! நான் முத்தம் தந்தேனே, இப்போது சத்தம் இல்லை- அவ்வளவு திகில்! இதழும் கூடின, சத்தமின்றி. பிறகு பாலுவைப் போருக்கிழுத்தான், முருகன்; அவனும் பிறகு தோற்க வேண்டியதாயிற்று! துரைசிங்கத்திடம், அவன் துரத்தி விட்டபிறகுதான் நான் பொதுவானேன்! இதுதான் என் சுயசரிதை.” கமலா, இவ்விதம் கூறும்போது தீர்ப்பளிக்க முன் வருவீர்கள். சிலர் ‘ஐயோ பாவத்தோடு’ நின்று விடுவீர்கள். வேறு சிலர், “இதெல்லாம் வெறும் சாக்கு” என்பீர்கள். ஏதாகிலும் கூறுங்கள். ஆனால் உங்களிலே எத்தனை பேரால், பாலு, முருகன், துரைசிங்கம் போலாகாமலிருக்க முடியும்! எத்தனை கமலாக்களை இப்படிப் பட்டவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்? எத்தனையோ கமலாக்கள் உண்மைக் கதையை உரைத்ததில்லை. கமலா, மிக நல்லவளாக இருந்து கெட்டவளானாள். அதற்குக் காரணம் நிலை மாற்றம். நிலை மாற்றமே அவளால் ஏற்பட்டதல்ல! “அவன் எவ்வளவோ முயன்றான். குட்டிக்கரணம் போட்டான். கமலா கொஞ்சம்கூட இடங்கொடுக்கவில்லை. என்னிடம் அவளுக்குப் பிராணன்!” என்று பெருமையாகப் பாலு பேசின சமயத்திலே, “மகா கெட்ட கழுதை, இந்தக் கமலா! இங்கே பதிவிரதை வேஷம் போட்டுக் காட்டினா. இப்போது பாலுப் பயலுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் ஆடுகிறாள்” என்று முயன்று தோற்றவன் ஏசிக் கொண்டிருந்தான். பாலுவுக்குக் “கற்பகம்”, அவனுக்குக் ‘கெட்ட கழுதை!’ எல்லாம் அந்த ஒரே கமலாதான்! முருகன் வெற்றி முரசு கொட்டினபோது, பாலுவுக்கு, அவனுடைய கற்பகம், கள்ளியானால்! “அடடா! அந்தக் கள்ளி கமலா என்னென்ன தளுக்குச் செய்தா தெரியுமோ? மகாபாவம், மகாதோஷம், ஆண்டவனுக்கு அடுக்காது, ஊர் அறிந்தால் தூற்றும், என்று பசப்பிக் கொண்டிருந்தாள். அவளும் நானும் சினேகமான பிறகும் கூட, “என்னமோ பூர்வத்திலே ஏற்பட்ட பாசந்தான் நம்மைச் சேர்த்து வைத்தது” என்று வேதாந்தம் பேசினான். கடைசியிலே அந்தக் கள்ளி, முருகனை… சேச்சே, இப்படிப்பட்ட இழிகுணம் கொண்டவளைக் கொஞ்சநாள் நேசித்ததுகூட நமக்குக் கேவலம். என்னமோ நம்ம போறாத வேளைதான், அந்தச் சனியனிடம் கொஞ்சநாள் சிக்கிச் சீரழிந்தோம். அவ, மாமியார் வீட்டிலே இருந்தபோது, ‘மச்சினனை’ வலையிலே போடப் பார்த்தவதானே!” என்று, பாலு பழிக்கத் தொடங்குகிறான். இவ்விதமே அவ்வப்போது அவரவர்கள் தத்தமது நிலைமைக்குத் தக்கபடி நியாயம் பேசினார்கள் - பேசுவார்கள். ஒருவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்பதற்குப் பொதுவான அளவுகோலானது உண்டா? இவ்விதம் இருப்பதுதான் நல்லவன் என்பதற்கு இலட்சணம். இப்படி இருப்பது கெட்டவன் என்பதற்கு அடையாளம் என்று ஒரு நிர்ணயமாவது உண்டா? இல்லையே. அவரவர் ஒவ்வொருவகையான அளவுகோல் தயாரிக்கிறார்கள்; அந்த அளவுகோலினால் அளந்து பார்க்கிறார்கள். மற்றவரின் தராதரத்தை, அவர்கள் உபயோகிக்கும் அளவுகோலாவது எந்தக் காலத்திலும் ஒரே விதமானதாக இருக்கிறதா? கிடையாது! இந்த நிலையிலே, இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படி அறுதியிட்டுக் கூற முடியும்? இந்த உண்மையைச் சிறைக்குச் சென்று இருந்தபோது, தேவர், அங்கு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த பலருடன் பேசிப் பேசித் தெரிந்து கொண்டார். பல நாட்களாகப் பலரும் புகழ்ந்து பேசும் ஒரு தூரதேசத்துக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி? அந்த நாட்டிலே பல விஷயங்களை விசாரித்துத் தெரிந்து கொள்வதிலே ஆவல் பிறக்குமோ, அவ்விதமான ஆவல் தேவருக்கு ஏற்பட்டது. சிறைச்சாலைக்கு ஏன் வரவேண்டி நேரிட்டது. என்ன குற்றம் செய்தாய்? யாருடைய வஞ்சனையினாலாவது இங்கே வர நேரிட்டதா? அல்லது உண்மையில் நீ குற்றவாளிதானா என்று அந்தக் கைதிகளை விசாரித்துக் கொண்டிருந்தார் தேவர். இந்த விசாரணையிலே ஈடுபடும் நேரத்திலே சில வேளைகளில் தேவருக்குத் தன் வழக்குப் பற்றிய கவனங்கூட இல்லாமற் போவதுண்டு. அவ்வளவு சுவாரஸ்யமான கதைகள், மனதை உருக்கும் சம்பவங்கள், அங்கே கேள்விப்பட்டார். இதனாலே, தேவருக்கு கேஸ் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஜாமீனில் வெளி வரப்போவதைவிட, அந்த ஏற்பாடுகளைச் செய்யும்படி தன் நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் சில நாட்கள் சிறைச்சாலையிலே பலர் கூறும் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று கூடத் தோன்றிற்று. ஆனால் வெளியில் சூடா தவித்துக் கொண்டிருப்பாளே என்பதை நினைக்கும்போது மட்டும் சிறைச்சாலையிருந்து தப்பித்துக் கொண்டாவது ஓடிவிட வேண்டுமென்று தோன்றிற்று. உண்மையாகவே சூடா, தவித்துக் கொண்டுதான் இருந்தாள். அண்ணன் காட்டிய துரோக சிந்தனை, பாரிஸ்டரின் பைத்யக்காரத்தனம், வழிப்போக்கனின் வம்பளப்பு, வீட்டிலே பதக்கம் கிடைத்ததால் உண்டான திகைப்பு, அதை எப்படியோ தெரிந்து கொண்டு, மைக்கண்ணன் வீடு வந்து மிரட்டிப் பதக்கத்தை அபகரித்துச் சென்ற கொடுமை, பதக்கம் கோயில் கொள்ளையிலே சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டதால் வந்த திகில், ஆகிய ஒவ்வொன்றும், தாக்கித் தாக்கிச் சூடாமணியைத் திகைக்கச் செய்தது. மைக்கண்ணனோ, பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்களிப்புடன் வேகமாக நடந்தான். எவ்வளவு அபூர்வமான நகையாக இருந்தாலும் அதற்கும் குறிப்பிட்ட ஒரு விலை உண்டு. அவ்வளவுதான் அதைக் கொண்டு அடைய முடியும். மேற்கொண்டு கிடைக்காது. ஆனால் இந்தப் பதக்கமோ அப்படிப்பட்டதல்ல! இது எவ்வளவு விலைபெறுமோ அதைவிடப் பதின்மடங்கு பொருளை வாங்கித் தரவல்லது! விற்கக் கூடத் தேவையில்லை. காட்டியே பொருள் பெறலாம்.! ஆண்டவனுக்கு அணியாக இருந்த ஆபரணம்! எப்படியோ பிறகு ஜெமீனில் குடி ஏறினாய்! பிறகு தேவரின் பேழையில் தூங்கினாய். இப்போது என்னிடம் இருக்கிறாய்! உன்னைக் கொண்டு என்னென்ன வேடிக்கை காட்டுகிறேன் பார்” என்று எண்ணிக் கொண்டே மைக்கண்ணனின் மூளை வேகமாக வேலை செய்தவண்ணம் இருந்தது. திடீரென்று ஒரு யோசனை உதித்தது. முகம் மலர்ந்தது! ‘அதுதான் சரி; ஆசாமி அப்படியே நடுநடுங்கிப் போகிறான் பார்!’ என்று மெள்ளக் கூறிக் கொண்டே, மைக்கண்ணன், சாஸ்திரியார் வீடு சென்றான். ‘யாரது? என்ற சமாச்சாரம்? எனக்கு முன்பின் தெரியாத ஆளாக இருக்கிறாய்! அனாவசியமாக நேரத்தைச் செலவிட என்னால் முடியாது? வேலை அதிகம்!’ என்ற அட்டவணைப் பேச்சுக்கள், மிஞூகக்க அகம்பாவத்தோடு சாஸ்திரிகளால் வீசப்பட்டன. மைக்கண்ணன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பிறகு பாணத்தை ஏவினான். “சார்! நான் ஓர் போலீஸ் கான்ஸ்டபிள்” என்றான். சாஸ்திரி சாந்தசொரூபியாக, “என்னப்பா, விசேஷம்! உட்கார்!” என்றார். “சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டுப் போக வந்தேன். மேலதிகாரிகள் உத்திரவு” என்றான் மைக்கண்ணன். சாஸ்திரியாருக்கு கொஞ்சம் பயம் பிறந்தது. மறுநிமிஷம் போய்விட்டது. தேவர் வழக்குச் சம்பந்தமாக ஏதாகிலும் விசாரிக்க வந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டு, “உட்காரப்பா உட்கார். உங்களுக்கு உதவி செய்ய நான் எப்போதுமே காத்துக் கொண்டிருக்கிறேன். தேவர் விஷயமாகத் தானே துப்பு விசாரிக்கிறீர்?” என்று கேட்டார். மைக்கண்ணன் சிரித்துக் கொண்டே, “என்ன சார்?தேவர் மீது வழக்குப் போட்டாகிவிட்டது. இனிமேலேயா துப்பு விசாரிப்போம். இது வேறோர் வழக்கு” என்றான். கொஞ்சம் வயிற்றைக் கலக்கிற்று சாஸ்திரியாருக்கு. “என்ன வழக்கு?” என்று கேட்டார். “ஒரு ஜெமீன் வீட்டில் களவு நடந்திருக்கிறது” என்று மைக்கண்ணன் கூறினான். சாஸ்திரியாரின் முகம் வெளுத்தது. மைக்கண்ணன், சிரித்தபடி “சாஸ்திரியாரே! பயப்பட வேண்டாம். மேலதிகாரிகள் என்னை இது விஷயமாகத் துப்பறிய அனுப்பினர். நானும் மோப்பம் பிடித்து இங்கு வந்து சேர்ந்தேன். உம்மைக் கைது செய்ய அல்ல, காப்பாற்ற!” என்று கூறினான். பகுதி 10 மைக்கண்ணனிடம் பதக்கத்தைப் பறிகொடுத்து விட்ட பிறகு சூடாவுக்கு உலகமே இடிந்து தன் தலைமீது விழுந்து தன்னை நசுக்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. இரக்கமெனும் ஒரு பொருள், இந்த உலகத்தை விட்டே ஒழிந்து போய்விட்டதோ, என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள். மனக்கண்ணில் தன் கடந்த கால அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சி வடிவாகத் தெரியத் தொடங்கியது. அப்போதைய அவளது மனநிலையில் அவற்றையெல்லாம் சுவைத்து மகிழவோ, வாய்விட்டு அலறி அழவோ முடியவில்லை! அடுத்து என்ன செய்வது? என்ன செய்யப் போகிறாய் சூடா? கணவன் சிறைக்கூடத்திலே சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தோழி பங்கஜாவின் கணவன் வக்கீல் சங்கரய்யர், போலிக் கௌரவத்துக்கு வாழ்வைப் பலி கேட்கிறார். பாரிஸ்டர் விக்டரோ, மணவிலக்கு என்று சொல்லி பிண வழக்குக்கு ஆதாரம் கேட்கிறான். கூடவிருந்து குழிபறிப்பவர்கள் போல துணையாசிரியர்களோ, நகைகளைப் பறித்துக் கொண்டு விட்டதோடு சரி! தேவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தைவிடக் கொடுமையானதாகத் தெரிகிறது இது! வழியிலே சென்றவன் பதக்கம் என்றான்! பதக்கம் கண்டாய்! பதறிக் கொண்டிருக்கிறாய்! பறிகொடுத்தும் விட்டாய்! எந்தப் பதக்கத்தால் இவ்வளவு தூரம் பதறிப் போயிருக்கிறாயோ, சூடா!, அந்தப் பதக்கமும் இப்போது கைமாறிவிட்டது. என்ன செய்யப் போகிறாய்? கணவன் குற்றமற்றவன் என்று நிரூபித்துக் காட்டும் வழிகளைக் காண நீ என்ன செய்திருக்கிறாய்? இப்படியெல்லாம் நிரல்பட சூடாவினால் சிந்திக்க முடியவில்லையென்றாலும், முன்னும் பின்னுமாக வந்துபோன காட்சிகளைக் காண்பதினின்றும் சூடாவால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு கொடுமைக்குள் தன்னைத் தள்ளிவிட்டவர்களையெல்லாம் என்ன செய்வது? வாய் வலிக்கு மட்டும் திட்டித் தீர்க்கலாம்! பலன் கிடைக்கப் போகிறதா? பார்த்தா குற்றமற்றவன் என்று விடுதலையாகி வந்துவிடப் போகிறானா? வரப்போவதில்லை. உலகத்தில் குற்றம் புரியாதவர்கள் என்று எவரையாவது தனித்துப் பிரித்துப் பார்க்க முடிகிறதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குற்றவாளிகளாகத்தானிருக்கிறார்கள். குற்றங்களின் தன்மையும், முறையும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்! ஆனால் குற்றவாளிகளே அல்ல என்று எவரை ஏற்க முடிகிறது? நான் கூடத்தான் குற்றம் செய்துவிட்டேன்! தேவரைக் காதலித்தது குற்றம்! கண் வீச்சுக்குப் பலியானது குற்றம்! துளசி பீடத்தருகே - அவரது கைகளின் அணைப்புக்கு என்னை ஈடுகொடுத்தது குற்றம்! தினம் தினம் சந்தித்தது குற்றம்! காதல் மொழிகளைப் பரிமாறிக் கொண்டது குற்றம்! கணவன் - மனைவியாக வாழ்வது என்று முடிவெடுத்தது குற்றம்! அந்த முடிவைச் செயல்படுத்தியதும் குற்றம்! அண்ணாவின் பேச்சைக் கேட்காதது குற்றம். கடைசியாக வீடு தேடி வந்தவரை வெளியேறச் சொன்னதும் குற்றந்தான்! குற்றங்களின் எண்ணிக்கை என் மேலும் வலுவானதாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் ஒவ்வொருவரையும் குற்றவாளிகளாகக் கருதிக் கொண்டு, அதற்கேற்றார்ப் போலவே நிகழ்ச்சிகளைச் சமைத்துக் கொண்டு போகிறேனே! எவ்வளவு பெரிய முட்டாள் நான்! “விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை! இதெல்லாம் வீணர்களது வயிற்றுப் பிழைப்புக்காகக் கட்டி வைக்கப்பட்ட பொய் மூட்டைகள்! சூழ்நிலையானது சில வேளைகளில் எதிர்பாராத நிகழ்ச்சிகளை உருவாக்கிவிடும்போது, உருவாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் பின்விளைவுகளால் பாதிக்கப்படுவோர் ‘விதி’ என்று கூறிவிடுகிறார்கள். எத்தனையோ முறை நான் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்! விதி என்பதையும், அதன் இலக்குகள் பற்றியும்கூட யோசித்துப் பார்த்திருக்கிறேன். சூடா! எல்லாமே பைத்தியக்காரத்தனமான ஒரு ஏற்பாடாகத்தான் எனக்குத் தெரிகிறது. சாதாரண பைத்தியக்காரத்தனம் என்றுகூடக் கூறக் கூடாது. முற்றிய பைத்தியமாக இந்த நாட்டவரை எண்ணிக் கொண்டு, ஏற்படுத்தப்பட்டிருக்கும் பரிதாபகரமான - ஆனால் காலத்துக்கும் பயன் தந்து கொண்டிருக்கிற ஒரு செயல்! தமிழ்நாட்டார்கூட, “சூடா! ஊழ் என்று கூறுகிறார்கள்! ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று திருவள்ளுவரே கேட்கிறார் என்றால் பாரேன்! திருவள்ளுவரையே மாற்றிவிட்ட வலிமை இந்த விதிக்கு ஏற்பட்டு விட்டிருந்தாலும், அவர் சமாளித்துக் கொண்டு, “ஊழையும் உப்பக்கம் காண்பர் - உழைவின்றி தாழாது உஞற்றுபவர்” என்று பாடி வைத்திருக்கிறார்! முயற்சி ஒன்று இருந்தால் போதும். அதுவும் மனங்குலைந்து விடாத முயற்சி இருந்துவிட்டால் போதும்; ஊழினைக் கூட வெற்றி கண்டுவிட முடியும் என்று எடுத்துக்காட்டி விட்டார்! ஆனால் சூடா, கம்பர் பெருமான் இருக்கிறாரே, அவரையும் இந்த விதி விட்டுவிடவில்லை போலிருக்கிறது. கம்பராமாயணத்தில், ராமன் பின்னே போய்க் கொண்டிருக்கும்போது, அவன் விதி, அவனுக்கு முந்தி போய்க் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். விதியின் வேலை முடிந்துவிட்டது என்கிற பொருளில் தான் அவர் அந்தக் கதையின் முடிவையும் காட்டியிருக்கிறார். என்றாலும் சூடா, நான் விதியை நம்ப மறுக்கிறேன்! முயற்சிக்கும் திறத்துக்கும் முதலிடம் கொடுக்கும்போது விதி தோற்றுவிடக் கூடும் என்றோ, விதியின் வலிவே குன்றக் கூடும் என்றோதான் நான் நினைக்கிறேன்.” -என்று ஒருமுறை தேவர் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது சூடாவுக்கு. தேவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருப்பதை விதியென்று சொல்வதா? வீணர்களின் சதியென்று கூறுவதா? எல்லாமே சதிதான்! என் அண்ணன் ஆடிக் கொண்டிருக்கும் நாடகம்தான். இதெல்லாம் நாடகம் என்றாலும் சரி, வரைந்து கொண்டிருக்கும் ஓவியம் என்றாலும் சரி, எல்லாவற்றுக்குமே முடிவொன்று இருக்க வேண்டும். இல்லையா! “சூடா! இந்தக் கதையை நான்தான் எழுதியிருக்கிறேன். படித்துப் பார்! இதன் பாத்திரங்களுக்கு இவை இவை குண விசேடங்கள்! இவையெல்லாம் இப்படி இப்படி இயங்க வேண்டும் என்பது என் முடிவு. ஆனால் சூடா, என் முடிவு இதுதான் என்று உன்னிடம் கூறாமல், இதனை முடித்துக் கொண்டு என்று நான் உனக்குக் கட்டளையிட்டால், உனக்கிருக்கும் எழுத்தாற்றலைக் கொண்டு, கதையினைத் தொடர்ந்து எழுத முடியும்! ஒரு வகையான முடிவையும்கூட உன்னால் உருவகப்படுத்தி விட முடியும்! ஆனால், சூடா நான் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் திட்டவட்டமான முடிவைப் போலவோ, அல்லது முடிவை ஒட்டியோ உன்னாலும் கொண்டு வர முடியும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், நானாக முடிவு இப்படி இருக்க வேண்டும் என்று கூறாதவரையில்! உன் முடிவோடு என் முடிவு ஒட்டியதாக இருக்க முடியாது. ஆகவே சூடா, யார் எந்தக் கதையை அல்லது காவியத்தை, அன்றி ஓவியத்தை வரைகிறார்களோ, அவரவர்களே அதனை முடிக்கும்போதுதான் சரியான முடிவு தோன்ற முடியும். இல்லையா சூடா!” என்று ஒரு சமயம் தேசவீரன் பத்திரிகையில் வெளிவந்த தொடர்கதை ஒன்றைப் பற்றி தன்னிடம் தேவர் வாதித்துக் கொண்டிருந்தது அப்போது சூடாவின் நினைவுக்கு வந்தது. தேவருக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்ததாலும், தன் அண்ணன் மனது வைத்தாலன்றி, இப்போதைய தனது நிலைக்குச் சரியான முடிவு கிடைக்காது என்றும் எண்ணினாள். பம்பரக் கயிறு சாஸ்திரியின் கையில் இருக்கும்போது பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதில் பயனில்லை என்று முடிவு கொண்டாள்! தனது முடிவு சரியானதுதானா? பல முறையும் எடுத்தெறிந்து பேசிவிட்ட தன் அண்ணனிடம் மறுபடியும் போவது முறைதானா? உதவி செய்வானா அவன்? எந்தெந்த கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தாலும், சாஸ்திரியைச் சரணடைவது தவிர வேறு வழி எதுவும் தென்படவில்லை சூடாவுக்கு. பதக்கத்தைப் பறித்துச் சென்ற பாதகன், கொண்டு போய் புதிதாக என்னென்ன கேடுகளையெல்லாம் உண்டாக்கப் போகிறானோ என்று நினைத்ததும் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. உடனே ஓடிப் போய் தன் அண்ணனின் காலில் விழுந்து நடந்தவைகளையெல்லாம் மன்னிக்கும்படிக் கேட்டு, தன் கணவனையும் அவர் சொல்படி நடக்கச் செய்வதாக உறுதியளித்து, வழக்குக்கு உதவி செய்யும்படிக் கேட்க வேண்டும் என்று துடித்தாள். அந்தத் துடிப்பு ஏற்பட்டவுடனே அவளால் அங்கே எதற்காகவும் அமர்ந்திருக்க முடியவில்லை. அழுது அழுக்கேறி இருக்கும் தன் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. கலைந்து கிடக்கும் கூந்தலைக்கூட கோதி முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்க முடியவில்லை. ஒரு வெறி பிடித்த நிலையில் அவள் அப்போது இருந்தாள்; வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே போக வேண்டும் என்பதுகூட அவளுக்குத் தோன்றவில்லை - எழுந்து ஓடத் தொடங்கினாள். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி சாஸ்திரி வீட்டையடைந்து, கூடத்துக்குள் நுழைய முனையும்போது அவளை இன்னோர் அதிர்ச்சி தாக்கித் தகர்த்தது. தன்னிடம் ஏமாற்றி, வெற்று உபசார வார்த்தைகளைக் கூறி, பதக்கத்தைப் பறித்துக்கொண்ட மைக்கண்ணன் அங்கே நிற்பதைக் கண்டு பதறினாள்! அது மட்டுமல்ல, மைக்கண்ணன், “சாஸ்திரியாரே! பயப்பட வேண்டாம்! மேலதிகாரிகள் என்னை இது விஷயமாகத் துப்பறிய அனுப்பினர். நானும் மோப்பம் பிடித்து இங்கு வந்து சேர்ந்தேன்! உம்மைக் கைது செய்யவில்லை; காப்பாற்ற!” என்று அவன் திரும்பக் கூறக் கேட்டதும், தானும் தன் வாழ்வும் எங்கோ அதல பாதாளத்துக்கு இழுத்துச் செல்வது போன்ற நிலை அடைந்தாள் சூடா. பகுதி 11 மதியாதார் வாயிலை மிதியாதிருப்பதே மானங்காக்கும் வழி என்பதை அறியாதவளா சூடா? இல்லை. சூழ்நிலை சில நேரங்களில் எத்தகைய முன் அனுபவங்களையும் முரண்படச் செய்து விடுகிறது. தன் வாழ்க்கையிலேயே அதனைப் பலமுறை கண்டிருக்கிறாள். இப்போது தன் கணவரது வாழ்வில் அது விளையாடிக் கொண்டிருக்கிறது! வழக்காம் வழக்கு! வழக்கு மன்றத்திலே குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் வீட்டிலே வந்து நான் நிற்கிறேனே! இதற்குப் பெயர் விதியா? சூழ்நிலையா? எதுவாகவுமிருந்து விட்டுப் போகட்டும்! அதோ! அந்த வம்புக்காரன் ஒரு பம்பரம்! வரதன் ஒரு பம்பரம்! யார் அந்த ஜெமீன்தார்? அவனும் ஒரு பம்பரமா? அல்ல பம்பரக் கயிறா? சிந்தனைத் தடுமாற்றத்தோடு ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தாள் வீதியில், வக்கீல் சங்கரய்யர் வீட்டுக்கு! தன் தோழி ஊரிலிருந்து வந்திருப்பாள்; விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறலாம்; அவளது உதவியுடன் உடனே விடுதலைக்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்து கொண்டிருந்தாள். பல சந்தர்ப்பங்களில் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதுண்டு. எதிர்பார்ப்பவை, சில நேரங்களில் எதிர்பார்ப்பதைப் போலவே நிறைபெற்று விடுவதும் உண்டு. முன்னதைத்தான் இதுவரையிலே சூடா அனுபவித்திருக்கிறாள். இப்போது? எதிர்பாராத வகையில் வாசலிலேயே நின்று யார் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜா. தேவருக்கு விடுதலையே கிடைத்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது சூடாவுக்கு. இந்த முறையும் அவள் கணவன் தனக்கு உதவ மறுக்க முடியாது என்ற நம்பிக்கை பிறந்தது. தேவரது நிலைமை பற்றி ஏற்கெனவே, தன் கணவன் மூலம் கேள்விப்பட்டிருந்த பங்கஜா ஒரே ஒரு ‘அச்சச்சோ’வுடனேயே பிரச்னையிலிருந்து விடுபட்டுவிட்டாள். யாருக்காகவோ காத்திருந்த அவள் முன்னே அலங்கோலமான நிலையில் சூடா வந்து நின்றதும் ஒரு கணம் பதறிப் போனாள். அடுத்த கணமே நிதானமடைந்தாள். தேவரைப் பற்றிய நினைவும் வந்து அமர்ந்து கொண்டது. இரண்டு படிகள் கீழே இறங்கி வந்து சூடாவை அணைத்துக் கொண்டாள் பங்கஜா. “கேள்விப்பட்டேன். சூடா! நானே உன் வீட்டுக்கு வரவேண்டும் என்றுதான் இருந்தேன். உள்ளே போகலாம்!” என்று ஆறுதலாகச் சொல்லி வைத்தாள். தீச்சூடுகளின் கொடுமைக்கு மட்டுமே இதுவரையில் தன்னை ஒப்படைத்திருந்த சூடாவுக்கு இந்த ஆறுதல்மொழிகள் இன்பத் தேனாய் இனித்தது. என்றாலும் இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமையின் பளுவைத் தாங்க மாட்டாதவைகளாக அவள் கண்கள் ‘பொல பொல’வென்று நீரைப் பொழியத் தொடங்கிவிட்டன. ஹாலில் வந்து அமர்ந்த உடனேயே சூடா “பங்கஜம்! என் நிலைமையைப் பார்த்தியா!” என்று தொடங்கினாள். விம்மலும் கூடவே தொடங்கியது. “எல்லாம் நேக்குத் தெரியும் சூடா! நான்கூட ஆத்துக்காரன்டே சண்டை போட்டேன். இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே நீங்க சூடாவைக் கைவிட்டிருக்கக் கூடாதுன்னு சொன்னேன்!” என்றாள். அந்த வார்த்தைகள் இதமாக இருந்தன. “அதெல்லாம் போகட்டும் பங்கஜம்! இப்ப உன் ஆத்துக்காரர் எங்கே?” என்றாள். கேள்வி தடுமாற்றத்தோடு வந்தாலும், குரலில் பதட்டம் இருக்கக் கண்டாள் பங்கஜம். “கோபிநாதர் கோயில்லே, காமகோடி பீடம் பிரசன்னமாகி இருக்கார். இன்னைக்கு சாயரட்சை புறப்பட்டு திருத்தணிக்குப் போறாராம். அதனாலே அவரைப் பார்த்து சேவிச்சுண்டு வரப் போயிருக்கார். இப்ப வந்துடுவார்!” என்றாள் பங்கஜம். “பங்கஜம்! நான் அவசரமாக அவரைப் பார்க்கணும். அவர் வந்து, அவர்கிட்டே சொல்றதுக்குள்ளே காரியம் எப்படி எப்படியோ நடந்துடுமே, என்ன பண்றது” என்றாள் சூடா. “என்கிட்டே சொல்லேண்டி சூடா! அவர் வந்ததும் நான் சொல்லிடறேன்.” “பைத்தியமே! நீ சொல்லிப் புரியவைக்கிற விஷயமா அது? இப்பவே நான் அவரைப் பார்க்கணும். கோபிநாதர் கோயில்லே கொள்ளை அடிச்ச கொடியவன் யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேண்டி! நான் கண்டுபிடிச்சுட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள். “உட்கார், சூடா! ரொம்பவும் பதட்டமா இருக்கே! முக்கியமான விஷயம்தான்! இப்ப வந்துடுவார். யார் அந்தத் கொடியவன்? என்கிட்டே சொல்லக் கூடாதா?” என்றாள் நளினமாக. “யாரு அது! சூடாவா! வாம்மா! என்னடி பங்கஜம்! உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு எதை மறைக்கிறா சூடா?” என்று கேட்டுக் கொண்டே வந்த சங்கரய்யர், கோட்டைக் கழற்றி பங்கஜத்திடம் கொடுத்து விட்டு அருகே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார். வக்கீலின் குரல் கேட்டு எழுந்து நின்ற சூடா, அவரைப் கண்டவுடனேயே மறுபடியும் கண்களில் நீரைக் கொட்டிவிட்டாள். “ஏண்டி இப்படி அழுது தொலைக்கிறே! உன் அண்ணன் - அந்த சாஸ்திரிதான் எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக்கிட்டிருக்கான்னா, நீ அந்த விக்டரைக்கூட வழக்காட வேண்டாம்ன்னு சொல்லிட்டியாமே” என்று தொடங்கினார் சாவதானமாக! சூடாவின் இதயத் துடிப்பு நின்றுவிடும்போல இருந்தது. தன் இதயத்திலிருப்பவைகளை உடனே இறக்கி வைக்காவிட்டால், அது வெடித்துச் சிதறி விடுமோ என்று அஞ்சினாள். அந்த அவசரம் அய்யருக்குப் புரியுமோ! “ஏண்டி சூடா! பாரிஸ்டர் விக்டரை நீ ஏன் கேஸ் நடத்த வேண்டாம்னு சொன்னியாம்!” என்றார் மறுபடியும். ‘வக்கீல் வாழ்க்கையே இப்படித்தானா?’ - என்று கோபம் குமுறிக் கொண்டு வந்தது. வந்து? கோபத்தைக் கொட்ட முடியுமோ! பணக்காரன் அடிக்கும் கொள்ளையைப் பற்றியும், கோலாகல வாழ்க்கையைப் பற்றியும் வாய் வலிக்கப் பேசித் திரியும் வஜ்ரவேல், எவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தானோ; அவனே எதிரில் வரும்போது மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல் இளித்து நிற்பதுதான் உலக நியதியாயிற்றே! பேசிய பேச்சில் நூறில் ஒரு பங்கையாவது அவன் எதிரில் கொட்டிக் காட்ட முடிகிறதா? மனித வாழ்க்கை முறை, அந்த வகையில் அமைக்கப்பட்டிருந்ததால்தான் உலகப் பிரச்னைகளில் முக்காலே மூன்று வீசம் தானாகத் தீர்ந்து போய்விடுமே! “வந்து… அந்த விக்டர்…” என்று நா தழுதழுக்க பதில் சொல்லத் தொடங்கினாள் சூடா. ‘அதுதான் நானே சொன்னேனே, அந்த விக்டரைவிட அவன் குமாஸ்தா மேலுன்னு! இருந்தாலும் கேசை அவனே நடத்தணும்னு உன் அண்ணன் நினைக்கிறபோது, நீ ஏன் அதைத் தடுக்கணும்னுதான் நான் கேட்கிறேன்” என்றார் குறுக்கிட்டு. பங்கஜத்துக்குக்கூட கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. அவளே பேச்சில் குறுக்கிட்டாள்: “நீங்க அதைப் பற்றியெல்லாம் எதுக்கு அலட்டிக்கிறேள். சூடா, கொள்ளைக்காரன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாளாம்! அதைச் சொல்லத்தான் ஓட்டமா ஓடிவந்திருக்கா. அதைக் கேட்காமே…” என்றாள் சற்றுக் கடுமையான குரலில். இதைக் கேட்டவுடனேயே சங்கரய்யர், நாற்காலியை விட்டுத் துள்ளி எழுந்தார்! “அப்படியா சூடா! என்னடி பைத்தியம் நீ! அதையில்லியோ முதல்லே சொல்லி இருக்கணும்! யாருடி? யார் அவன்! சொல்லு” என்று சூடாவின் அருகில் வந்து நின்று கொண்டார். தன் அண்ணன் வீட்டில் கேட்ட செய்திகளில் எந்தப் பகுதியை முன்னே சொல்வது? எதனை அப்புறம் சொல்வது என்ற திகைப்பும் தவிப்பும் சில வினாடிகள் வரையில் அவளைப் பேச விடவில்லை. “சொல்லேண்டி! ஏன் பிரம்மிச்சு நின்னூட்டே” என்றார் சங்கரய்யர்! “என்னடி சூடா! என்கிட்டே அவ்வளவு பரபரப்புக் காட்டினே! இப்போ, தயங்குறியே” என்றாள் பங்கஜம். எந்த ஒன்றை, எவரிடம் சொல்லிவிட வேண்டும்; சொல்லி, தன் கணவனின் விடுதலைக்கு வழி விட வேண்டும் என்பதற்காக, ஓடோடி வந்தாளோ, அந்த ஒன்றை, அந்த ஒருவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் சூடா. சூடா என்ன செய்வாள்? பாவம்! சொல்லத்தான் நினைக்கிறாள்; முடியவில்லை. உணர்ச்சிகள் ஒரேயடியாகச் செயல்படத் தொடங்கும்போது, அறிவு முடக்கம் ஏற்பட்டுவிடும் என்ற கருத்தை அப்போது நிரூபித்துவிட்டாள் அவள். “என்ன சூடா! உனக்குச் சித்த பிரமைப் பிடிச்சுண்டுடுத்தா?” என்ற கேள்வியைக்கூட சங்கரய்யர் கேட்டுவிட்டார். அவருக்கென்ன தெரியும், சூடாவின் மனம் படும்பாடு? “இப்போ என் அண்ணா வீட்டிலே இருந்துதான் வரேன். அங்கே… அங்கே…” முடிக்க முடியாமல் மீண்டும் குழம்பினாள். “அங்கே என்னடி! உன் ஆம்படையான் சாஸ்திரியின் காலைக் கட்டிப் பிடிச்சுண்டு, என்னை மன்னிச்சுடுங்கோ”ன்னு கேட்டுக்கிட்டிருந்ததைக் கண்டியா! பைத்தியக்காரி! விஷயத்தைச் சொல்லேண்டி” என்றார் மீண்டும். தனக்குப் பைத்தியம் பிடித்துவிடவில்லையே என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவள் ஆளாகி இருந்தாள். விழிகளில்கூட மிரட்சி ஏற்படத் தொடங்கியது. “நீதான் அந்தக் கொள்ளையை நடத்தினவ மாதிரி இருக்கயேடி! உன் அண்ணன் வீட்டிலே என்ன நடந்தது? நீ அவனை வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னதுபோல் அவனும் சொன்னானா?” என்றார் வக்கீல். இப்போது அவருக்குக்கூட கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. “என் அண்ணாதான் அந்தக் கொள்ளையை நடத்தினதுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் தடுமாற்றத்தோடு. அவளது நிலை பரிதாபத்துக்குரியதாக ஆகிவிட்டது என்பதை வக்கீல்புரிந்து கொண்டார். இனி தன் வக்கீல் வேலை மூலமாகத்தான் அவளிடமிருந்து விஷயங்களைக் கிரகிக்க வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டார். பகுதி 12 “சாஸ்திரிதான் கொள்ளை அடிச்சான்னு நீ எப்படித் தெரிஞ்சுண்டே” என்றார் வக்கீல் சங்கரய்யர். இந்தக் கேள்விக்குரிய பதிலில்தான் சூடாவின் கணவனது எதிர்காலம் அடங்கி இருக்கிறது. சாஸ்திரியைப் பற்றிச் சொல்லப் போன அனைத்தும், அவன் வீட்டில் அவள் கேட்டுக் கொண்டிருந்த விஷயங்களிலிருந்து அவளாக யூகித்துக் கொண்டவைதான்! மைக்கண்ணனது பேச்சும், சாஸ்திரியின் பதிலும் அப்படித்தான் தெளிவாகத் தெரிவித்தன. வக்கீலின் கேள்வி, விஷயத்தை நேராகவே தொட்டுவிட்டது. பதில் சொல்லித்தான் தீர வேண்டும். பாரிஸ்டர் விக்டரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது பதக்கம் பற்றி முன்பின் தெரியாத ஒருவன் கூறியதிலிருந்து விஷயத்தைச் சொல்ல நினைத்தாள். “அண்ணாதான் அதுக்குக் காரணம் என்று நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கியதும் வக்கீல் மறுபடியும் சென்று உட்கார்ந்து கொண்டார். பங்கஜத்துக்குக்கூட சூடாவின் மீது அருவருப்பு ஏற்பட்டது. என்றாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், “சூடா! சுருக்கமாகச் சொன்னாத்தானே நன்னா இருக்கும்?” என்றாள். சூடா காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ பிதற்றப் போகிறாள் என்ற எண்ணத்தோடு உள்ளே போனாள் பங்கஜா. சுருக்கமாகவே, நீட்டி நிமிர்த்தியோ சூடா பதக்கம் தொடர்பான அனைத்தையும் சொல்லி இறுதியில் மைக்கண்ணனிடம் அதைக் கொடுத்ததையும், அவனை, அந்தப் பதக்கத்தோடு அண்ணன் வீட்டில் சந்தித்ததையும், அங்கே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைப் பற்றியும் ஒருவாறு சொல்லி முடித்தாள். சாஸ்திரி வீட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையும், பதக்கம் தொடர்பானவைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட வக்கீலும், “சபாஷ் சூடா! மிகச் சாமர்த்தியமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாய்! பாராட்டுகிறேன்! வரதன் என்றாயே, யார் அவன்? பதக்கத்தைப் பறித்துக் கொண்டு உன் அண்ணன் வீட்டுக்குப் போனவன் பெயர் என்ன? அவன் எங்கே இருக்கிறான்?” என்றார், மிடுக்குடன். “அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றாள் சூடா, பதட்டம் தணிந்த குரலில்! “நான் ஒரு வக்கீல்தான் சூடா; துப்பறியும் நிபுணன் அல்லவே” என்று கூறினார் வக்கீல். “என்றாலும் முயற்சிக்கிறேன். போய் வா!” என்று கூறிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார். * * * நாடக நடிகையாக இருந்து, பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, ஜெமீன்தார் செல்லப்பனின் ஆசைநாயகியாகிவிட்ட ஸ்வர்ணா, நாகப்பதக்கம் காணவில்லை என்று ஜெமீன்தார் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அந்த அதிர்ச்சியால் ஜெமீன்தார் தாக்கப்பட்ட அளவுக்கு, ஸ்வர்ணா தாக்கப்படவில்லை; காரணம், எண்ணத் தொலையாத அளவுக்குச் சொத்துடையவரின் ஒரு பொருள் காணமாற் போய்விட்டால் அதனால் அவர் குடி ஒன்றும் முழுகிப் போகாது என்பதை அவள் எண்ணிக் கொண்டதால்தான். ஆனால், நாகப்பதக்கத்தைக் காணவில்லை என்றதும், தான் அதனை எடுக்கவில்லை என்று கூறியது கேட்டதும், ஜெமீன்தார் ஏன், கொதிக்கும் எண்ணெய்பட்டவராகத் துடிக்கிறார்? கெம்பீரமான அந்த உருவம் ஏன் இப்படிக் கூனிக் குறுகிவிட்டது? முகம் கருத்துச் சுருங்கத் தொடங்கிவிட்டது எதனால்? ஸ்வர்ணாவினால் இவைகளைப் பற்றி எண்ணிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாகப் பதக்கம் - சமீபத்திலேதான் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. ஜெமீன்தார் அதனைக் கொடுக்கும்போதே, ஸ்வர்ணாவிடம் சொன்னார்! “ஸ்வர்ணா, இது மிக உயர்ந்த ஒரு பதக்கம்!” இதோ, இந்த நாகத்தலையின் உச்சியிலே ஜொலிக்கிறது பார்! இதுதான் மாணிக்கம் என்று கூறப்படுவது. நல்லபாம்பின் நஞ்சுதான் இப்படி கண்ணாடிக் கல்லாக மாறி இருக்கிறது. விலை மதிப்பே கிடையாது இதற்கு. இந்தக் கண்களில் இருக்கிறது பார் சிகப்புக் கல் - அசல் இரத்தினம் இது. இந்த இரண்டு கற்கள் மட்டுமே இருபதாயிரத்துக்கு மேல்! தலையின் விளிம்பைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளைக் கற்கள் அனைத்தும் வைரமாகும். கல் ஒன்று கால் லட்சமாகிறது. எவ்வளவு பத்திரமாக இதனை வைத்திருக்க வேண்டுமோ, அவ்வளவு பத்திரமாக இது இருக்க வேண்டும். உன்மேல் உள்ள காதலால்தான் நான் இதனை உன்னிடம் கொடுத்து வைக்கிறேன். பத்திரம், பத்திரம்” என்று பல தடவைகள் சொல்லிவிட்டு, அவள் கையில் கொடுத்தார்! அடுத்த வேளை உணவுக்கே, வழி என்ன என்ற ஏக்கத்திலிருந்த ஸ்வர்ணா, ஜெமீன்தாரின் தொடர்பு கிடைத்த பிறகுதான் வயிற்றின் நிரந்தரப் பசியைப் போக்கிக் கொண்டாள். வயிற்றுப் பசியை மட்டுமே தணிக்க முடிந்த ஜெமீன்தாரால், அவளது மனப்பசியைத் தணிக்க முடியவில்லை! தன்னால் தணிவிக்கப்படுகிறதா இல்லையா என்றெல்லாம்கூட அவர் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. ஸ்வர்ணாவின் அழகு அவரை அவளிடத்தில் அடைக்கலமாக்கி வைத்திருக்கிறது; அவளது வறுமைக்கோலம் அவளை, அவரிடத்திலே குடியேறச் செய்திருக்கிறது. அவ்வளவுதான்! ஸ்வர்ணா, எந்த நேரத்திலும் தன்னை விட்டு விலகி விடக்கூடும் என்பதை அவர் நினைத்துப் பார்ப்பது உண்டு! இவள் போனால் இன்னொருத்தி! எத்தனையோ மலர்கள்!! என்கிற முறையிலே, அவளை, அவரால் மதிப்பிட முடியவில்லை. சுவர்ணாவின் இடத்தில் அவளுக்கு முன்பு, எத்தனையோ பேர் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்! அதிகமாகப் போனால் ஓர் ஆறு மாதம்! பைங்கிளிகள் பறந்து போய்விடும்! ஸ்வர்ணா விதிவிலக்கு. ஐந்து ஆண்டுகளாக இருக்கிறாள். இருக்கிறாள் என்று மட்டுந்தானே கூற முடியும்? எனவே இல்லாமற் போய்விடுவாளோ என்ற நிலை ஏற்படாமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து வைத்திருக்கிறார்! அந்த ஏற்பாடுகளில் ஒன்றாகத்தான் நாகப் பதக்கம் என்றும் அவளிடம் கூறினார். அதன் மதிப்பையும் கூறி, அது இருக்க வேண்டிய பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார். எனவே, அவ்வளவு சிறப்புக்குரிய அந்தப் பதக்கம் காணவில்லை என்று கூறக் கேட்டவுடன், உண்மையிலே பதைத்துத் துடிக்க வேண்டியவள் ஸ்வர்ணா. இருக்க வேண்டிய அளவுக்குப் பதைப்பு இல்லை அவளிடம். எல்லப்பன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு, ஏகாம்பரம் பதறித் துடித்தானா? ஏன் அப்படி? எல்லப்பனுக்கும் ஏகாம்பரத்துக்கும் இருந்த தொடர்பு அதுபோல், எல்லப்பனை அடுத்து, தன்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுமே போலீஸ் படை என் அச்சம்! அப்படித்தான் துடித்தார் செல்லப்பர், பதக்கம் காணவில்லை என்றவுடனே! “இப்பொழுது என்ன வந்துவிட்டது என்று இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். பொருட்கள் களவு போவது இயற்கை என்பதால்தானே, களவாடியவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ்காரர்களை வைத்திருக்கிறார்கள்” என்றாள் ஸ்வர்ணா. “போலீஸ்” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ஜெமீன்தாருக்கு நாடி ஒடுங்கியது. “ஆமாம்! போலீசுக்குச் சொல்லிட வேண்டியதுதான்! ஆனால் ஸ்வர்ணா…” என்று எதையோ சொல்ல வாயெடுத்தார். “ஆனாலாவது, கோனாலாவது! பல லட்சம் என்றீர்கள். அதனாலேயே நான்கூட அதனை அணியாமல், பெட்டியிலே கொண்டுபோய் வைத்தேன்! வைத்த அன்றைக்குப் பார்த்ததுதான் அதனை! அப்புறம் அதுபற்றி மறந்துகூடப் போய்விட்டேன்! போசாமல் போலீசுக்குப் போன் செய்யுங்கள்” என்றாள். “கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது ஸ்வர்ணா! நம் தேசவீரன் பத்திரிகை முதலாளி சாஸ்திரி இருக்கானே, அவனிடம் இதுபற்றி முதலில் சொல்ல வேண்டும்” என்றார் பதட்டத்தோடு. “என்ன! அந்த டம்பாச்சாரி சாஸ்திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தமாம்! நீங்கள் பேசாமல் இருங்கள்! என் நகையைக் காணவில்லை என்று நானே போன் செய்கிறேன்” என்றாள். கூறிவிட்டு, போன் இருக்குமிடத்துக்கும் நகரத் தொடங்கினாள். “இரு ஸ்வர்ணா! அவசரப்படாதே! யோசித்துச் செய்ய வேண்டும்! உன்னிடம் பதக்கம் கொடுத்ததாகவே நீ நினைக்க வேண்டாம்! அது காணாமற்போய் விட்டதென்றும் நீ கவலைப்பட வேண்டாம்! பதைப்பையும், கவலையையும் என்னிடம் விட்டுவிடு’ என்று எழுந்து சென்றுஅவளது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் செல்லப்பர்! ஸ்வர்ணாவால் எப்படி சும்மா இருக்க முடியும்? பல லட்சம் பெறுமானம் என்றார்! எவ்வளவு பத்திரமாக இருக்க வேண்டுமோ! அவ்வளவு பத்திரமாக அது இருக்க வேண்டும் என்றார். இப்போது காணாமற் போய்விட்டது என்றதும் துடியாய்த் துடித்தார்! போலீசுக்குத் தகவல் தருவது என்றதும் தயங்குகிறாரே! ஏன் என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு! “ஏன்! போலீசுக்குச் சொல்ல எதற்குத் தயக்கம் காட்ட வேண்டும்? எதற்காகச் சாஸ்திரியை இதிலே இழுக்க வேண்டும்.” என்றாள் சற்றுக் கோபமாகவே. அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. ஸ்வர்ணாவே எழுந்து சென்று ரிசீவரைக் கையிலெடுத்து, ‘ஹலோ’ என்றாள். “நான் சாஸ்திரி பேசுகிறேன்! யார் பேசறது அங்கே?” என்ற குரல் கேட்டு, இந்தாங்க! நீங்க எதிர்பார்த்த சாஸ்திரி பேசறாராம்!” என்று ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்து அமர்ந்து கொண்டாள். சாஸ்திரி பேசுகிறார் என்றதும், பாய்ந்தோடி சென்று ரிசீவரை எடுத்துக் கொண்டார் செல்லப்பர். கைகள் நடுங்கின; ரிசீவரைப் பிடிக்கக்கூட பலம் இல்லையோ என்று நினைக்கும்படி இருந்தது அந்தக் காட்சி! ஸ்வர்ணாவுக்கு அது வேடிக்கையாகவும், அதே நேரம் ஆத்திரமாகவும் இருந்தது. “ஹலோ! நான்தான் பேசுறேன்! என்ன விஷயம்!” என்றார் செல்லப்பர் போனில். “நான் சாஸ்திரி பேசுகிறேன்! உடனே உங்களைச் சந்திக்க வேண்டும்! நீங்கள் இங்கே வருகிறீர்களா? நானே அங்கு வரட்டுமா?” என்று குரல் கேட்டது எதிர்ப்பக்கமிருந்து. “நீங்களே வாருங்கோ சாஸ்திரியாரோ!” “சரி! வீட்டிலேயே இருங்க! இதோ வந்துடறேன்.!!” ரிசீவரை வைத்துவிட்டு, ஸ்வர்ணாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஜெமீன்தார். “என்ன சொன்னான் அந்த சாஸ்திரி!” என்றாள் ஸ்வர்ணா. “இங்கே இப்போ வர்ரானாம்!” என்றார் அவர். “பதக்கம் சம்பந்தமாக நீங்க எதுவும் சொல்லலையே!” என்றாள் அவள். “அவன்தான் இங்கே வர்ரானே! நேரிலேயே சொல்லிடலாம்” என்று கூறினார். “ஸ்வர்ணா! கொஞ்சம் எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழிஞ்சு எடுத்துக்கிட்டு வா!” என்றார். ஸ்வர்ணா உள்ளே போனாள், ஜூஸ் பிழிந்து எடுத்து வர. அதே நேரத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏழெட்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களுடன் உள்ளே நுழைந்தார். பகுதி 13 போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, கோயில் கொள்ளை சம்பந்தமான எல்லா தஸ்தாவேஜிகளையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். தேசவீரன் பத்திரிகை ஆசிரியர் தேவர் மீது குற்றம் சுமத்தத்தக்க ஆதாரங்களை மறுபடியும் படித்துப் பார்த்தார். இன்ஸ்பெக்டருக்குக்கூட, தேவர் மீது ஒருவித பக்தி உண்டு. அவர் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார் என்பதற்காக அல்ல; நாடு, மக்கள், மொழி, இனம் என்பதற்காக இரவு, பகல் பாராது மழை, வெய்யில் கருதாது பாடுபடுகிறாரே என்பதற்காக! பொதுத்தொண்டு என்று கூறி, கிடைத்தவரையில் சுருட்டிக் கொண்டு, ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கக் கற்றுக் கொண்டிருக்கும் நம்நாடு அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், பேச்சும் மூச்சும் கடமை கடமையென்றே அலைந்து கொண்டிருக்கிறாரே, அதற்காக! மேடையேறி பேசக் கற்றுவிடுவதனாலேயே ஒருவன் அரசியலில் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுகிறான்! தொடராகக் கூட அல்ல; விஷயங்களை நிரல்படக்கோத்து எடுத்துத் தரும் பாங்குகூட அற்றவர்கள், மேடைக்கு முன்வந்து நின்று நான்கு வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுப் போய் விடுவதனாலேயே பெரிய பேச்சாளர் என்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு, அதிகார எந்திரத்தை எந்தெந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறார்கள் சில பேர்! தேவர் அப்படி அல்லர்! தேர்ந்த பேச்சாளி! எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து அணுவளவும் பிறழாது, அது பற்றிய விளக்கங்களை எத்தனை எத்தனை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவார்! நுண்ணறிவுவோடு நூலறிவும் நிரம்பியவர் அவர்! எந்த ஒன்றைப் பற்றியும் தீவிரமான சிந்தனைக்குப் பின்னர், சரியான வழியில் செயல்படுபவர் அவர்! இதெல்லாமாகச் சேர்ந்துதான் அவர்மீது, இன்ஸ்பெக்டருக்கு மதிப்பை உண்டாக்கி வைத்திருந்தது. கோபிநாதர் கோயிலிலே கொள்ளை நடந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும், எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தாரோ அந்த அளவுக்கு, அதனை நடத்தியவர் தேவர்தான் என்றும், அதற்கு இவை இவையெல்லாம் ஆதாரங்கள் என்றும் தகவல் கிடைத்தபோதும் அதிர்ச்சி அடையத்தான் செய்தார்! கஜபதி நாயுடு முதலில் நம்பத்தான் இல்லை. தேவரா? என்ற வினாக்குறியை விடுத்துவிட்டு திகைத்து நின்றார். நின்று? ஆதாரங்கள் அடுக்கடுக்காக எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்போது திகைப்பும், தயக்கமும் எத்தனை நேரத்துக்கு நீடித்திருக்கும்? வேதனையுடன் சென்றுதான் கைது செய்தார். கைது செய்யும்போது கூட அவருக்கு கலக்கமாகத்தான் இருந்தது. ஆதாரங்கள் யாவும் பொய்யானதாக இருக்கக் கூடாதா? என்றுகூட மனத்திற்குள் நினைத்துக் கொண்டார். இப்போது அந்தப் பரிவுணர்ச்சி முற்றிலும் மறைந்துவிட்டது. ஆதாரங்களிலும், சாட்சியங்களிலும் இருக்கின்ற ஓட்டை, உடைசல்கள் மூலம் தேவர் தப்பித்துவிடக் கூடாதே என்பதற்காகக் கவனத்துடன் பரிசீலனை செய்து கொண்டிருந்தார். நேற்றுவரையில் யோக்யனாக இருந்தவன், இன்றைக்குச் சட்டத்தின் முன் எவ்வளவு பெரிய மோசடிக்காரனாக ஆகிவிடுகிறான்! ஆகிவிடுகிறானா அல்லது ஆக்கப்படுகிறானா என்பதெல்லாம் வேறு விஷயங்கள், இன்றைக்கு சட்டத்தின் முன்னே அவன் குற்றவாளியாகக் கொண்டுவரப்பட்டு விட்டான்! நேற்றைய பசு - இன்றைக்குப் புலி; இன்றைய பசு - நாளைக்கு? உண்மைப் பசு எது? தோல் போர்த்த புலி எது? கண்டறிய முடியாதவாறு திறமை செயல்பட்டிருக்கிறது. கண்டறிவதுதான் தன் கடமை! அதற்காகத்தான் அரசு ஊழியம்! இந்த வகையிலே ஓடிக்கொண்டிருந்தது கஜபதி நாயுடுவின் எண்ண ஓட்டங்கள். அப்போது டெலிபோன் மணி அடித்தது. எண்ண இழைகள் அறுபட்டதும், இன்ஸ்பெக்டரின் கை இயந்திரம் போல ரீசிவரை எடுத்தது. ‘யெஸ் பிளீஸ்’ என்ற வார்த்தைகளை உதிர்த்தன அவரது உதடுகள். எதிர்த் திசையிலிருந்து “இங்கே நான் வக்கீல் சங்கரன் பேசுகிறேன். இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா? என்ற ஒலி கேட்டது. ‘நான்தான் பேசுகிறேன். என்ன விஷயம்’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘முக்கியமான ஒரு விஷயம். நேரில் பேச வேண்டும்’ என்றார் சங்கரய்யர். ‘வாருங்கள் பேசலாம்!’ என்று சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தார் கஜபதி நாயுடு. வக்கீல் நம்மைத் தேடிக் கொண்டு வருவானேன்? சங்கரய்யர் பிரபலமான வக்கீல்! முன்போர்முறை உத்தமானந்தர் மீது போடப்பட்ட பலாத்காரப் புணர்ச்சி தொடர்பான வழக்கில் கீழ்க்கோர்ட் அவருக்கு ஆறு வருடம் சிட்சை அளித்திருந்ததையே, இந்த வக்கீல் மேல்கோர்ட்டில் ஆஜராகி, கேசையே உடைத்துத் தள்ளிவிட்டார்! இப்போது எதற்கு இங்கு வரவேண்டும் என்பன போன்ற எண்ணங்களுக்கு இடையே, கைகள் தாமாகப் பைல்களைப் புரட்டிக் கொண்டிருக்க, கண்களை மூடி, யோசனையில் மூழ்கத் தொடங்கிவிட்டார்! “நமஸ்காரம் இன்ஸ்பெக்டர்!” என்ற குரல் கேட்டு, விழிகளை திறந்த கஜபதி நாயுடு, எதிரே சங்கரய்யர் நின்று கொண்டிருந்ததைக் கண்டு, பதில் வணக்கம் செய்துவிட்டு, அமரச் சொன்னார். சங்கரய்யர் அமர்ந்து கொண்டே, ‘கொஞ்சம் தனியா பேசணும்; டைம் இருக்கோ!’ என்றார். ‘இங்கேயே நீங்கள் எதையும் பேசலாம்! விஷயத்தைச் சொல்லுங்களேன்’ என்றார் இன்ஸ்பெக்டர். “நம்ம தேவர் கேஸ் விஷயமா சில விஷயங்களைச் சொல்லணும்” என்ற உடனேயே, இன்ஸ்பெக்டர், “எல்லாம் ரெக்கார்டு ஆயிட்டுதே; இன்னைக்கோ நாளைக்கோ கேஸ், பைல் ஆயிடுமே” என்றார். “எனக்குக் கிடைத்த சில விஷயங்களை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். தெரியப்படுத்த வேண்டியது என் போன்றவர்களது கடமை.” “சொல்லுங்கள்!” “இப்போது நீங்கள் நான் சொல்லப் போவதனைக் கேட்டு திடுக்கிடுவீர்கள். நீங்களும், உங்கள் இலாகாவினரும் கொஞ்சம் சிரமப்பட்டால், கொள்ளை வழக்கு திசை திரும்பிப் போய்விடும்.” “அப்படியா! தேவர் குற்றவாளி அல்ல என்று நீங்கள் எடுக்கும் முடிவிலிருந்து பிறக்க வேண்டும். எனக்கு நீங்கள் முதலில் ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது நம் ஊர் கேடிப் பட்டியலைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும். உடனிருந்து உதவி செய்ய வேண்டும்.” “விஷயத்தைச் சொல்லாமல் இப்படிக் கேட்டால்?” “உதவி செய்வதாகச் சொல்லுங்களேன்” “உங்கள் விளக்கத்தைப் பொறுத்துச் சொல்ல வேண்டியதல்லவா அது?” “சொல்கிறேன் இன்ஸ்பெக்டர்! நீங்கள் திடுக்கிடக் கூடிய செய்தி! திகைப்புடன் கேட்க வேண்டிய செய்தி அது. அதாவது கோயில் கொள்ளை வழக்கில் தேவர் மீது வழக்குப் போட, எவர் எவர் உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மீதே நீங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கும் நிலைமை.” என்றதும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த கஜபதி நாயுடு, நிமிர்ந்து உட்கார்ந்தார். விழிகள்கூட அகல விரிந்தன. மெல்ல சிரித்துக் கொண்டே அவர், ‘இதுகூட உத்தமானந்தர் கேஸ் என்று நினைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். இகழ்ச்சிக் குறிப்பு தொனித்தது அவர் குரலில். “நான் தேவர் விஷயமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் உள்ள கேடிகளின் பட்டியலைத் தந்தால் நான், முதலில் என் யூகங்களை உறுதிபடுத்திக் கொண்டு, உங்களுக்கு விளக்கம் தரமுடியும்.” என்றார் சங்கரய்யர். விஷயம் புரிந்த ஒரு வக்கீல், பிரபலமானவர் இவ்வளவு தூரம் சொல்வதால், ஏதாவது புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், ஒரு போலீஸ்காரரை அழைத்து, ரெக்கார்டு அறையிலிருந்து, குறிப்பிட்ட பைலைக் கொண்டு வரக் கூறினார். போலீஸ்காரன் பைலைக் கொண்டு வந்து கொடுத்ததும், முதலில் கஜபதி நாயுடுவே ஒரு முறைப் புரட்டி விட்டு, அதை வக்கீலிடம் நீட்டியபடியே “இந்தப் பட்டியலிலிருந்து சிலரைக் குறிப்பிடப் போகிறீர்கள்” என்றார். “பட்டியலைக் கேட்கிறேன் என்கிறபோதே, உங்கள் யூகம் அப்படித்தானே இருக்க முடியும்?” என்று சொல்லிக் கொண்டே புரட்டத் தொடங்கினார் வக்கீல். புரட்டிக் கொண்டே, “இன்ஸ்பெக்டர், கல்யாண சாஸ்திரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இப்போது போலீஸ்காரர் யாராவது இருக்கிறாரோ?” என்றார். “ஏன், ஒரு போலீஸ்காரர்கூட இந்தக் கொள்ளையில் பங்கேற்றிருக்கிறார் என்று கூறப் போகிறீர்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுவிட்டுச் சிரித்தார். “நீங்கள் திறமைமிக்க வக்கீல் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக உங்கள் திறமையை, போலீசுத் துறையின் மீதே களங்கம் கற்பிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்றார் கஜபதி நாயுடு. தொடர்ந்து ‘தேவர் வழக்குச் சம்பந்தாக புலன் விசாரணையின் ஒரு பகுதியாக சிலர் போய் வந்திருக்கக் கூடும்” என்றார். “நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது இன்ஸ்பெக்டர்! நாம் முதன் முதலாக யாரையும் ஒருவனைக் குற்றவாளிதான் என்று தீர்மானித்து விடுவதில்லை. முதலில் சந்தேகப்படுகிறோம்; சந்தேகத்துக்குரிய தடயங்களுக்கு ஆதரவாக விஷயங்களைத் தேடுகிறோம். புலனாய்வில் கிடைக் கின்றவைகளைக் கொண்டுதான் வழக்கு என்று தொடர்கிறோம். இல்லையா!” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் சட்டென்று, கேடிப் பட்டியலின் மீது கண்ணோட்டத்தை நிறுத்தி, “இன்ஸ்பெக்டர்! இந்த ஆறுகமும், வரதனும் எப்படிப்பட்டவர்கள் என்று கொஞ்சம் கூற முடியுமா?” என்று கேட்டார். “பெயர் எந்தப் பட்டியலிலிருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு புகழ்பெற்ற வக்கீல் கேட்கும் கேள்வியா இது?” என்று கூறிவிட்டு, பட்டியலை வாங்கி இன்ஸ்பெக்டர் கவனித்தார். ஆறுமுகம், வரதன் இவர்களைப் பற்றிய விவரங்களையும், அவர்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த குற்றங்கள் பற்றியும் கண்டறிந்து கொண்டு, இன்ஸ்பெக்டர், “ஏன் வக்கீல், இவர்கள்தான் இந்தக் கொள்ளையை நடத்தினார்கள் என்று கூறுகிறீரா? எனக் கேட்டுவிட்டு குற்றவாளியின் முகத்தைக் கூர்ந்து கவனிப்பதுபோல், வக்கீலின் முகத்தையும் ஆராயத் தொடங்கினார். முகத்தின் மேலும் கீழும் பார்வையைக் செலுத்திக் கொண்டே கஜபதி நாயுடு, “நீங்கள் தேவரை நிரபராதியாக்க முயற்சிக்கிறீர்களா?” என்று கேட்டார். “உண்மைதான் இன்ஸ்பெக்டர்! தேவர் நிரபராதிதான் என்பதை என் வரையில் முடிவுக்கு வந்துவிட்டேன். என் முடிவின் பக்கம் இனி உங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் முயற்சிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, இன்ஸ்பெக்டரின் மிக அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டு, காதோடு காதாக சில விஷயங்களைச் சொன்னார். சங்கரய்யர் சொல்லச் சொல்ல, இன்ஸ்பெக்டரின் விழிகள் விரியத் தொடங்கின. உண்மையாகவா! அப்போது முதலில் அவர்களைக் கைது செய்துவிட்டால் முக்கால் பகுதி விஷயம் வெளியாகிவிடும். இல்லையா?” என்றார் மகிழ்ச்சி பொங்க. “நான் தேவர் மீது நல்ல நம்பிக்கையுடையவன்! அவரது அறிவாற்றலையும், நாட்டுப்பற்றையும் பாராட்டுபவன்! இப்படி ஒரு வழக்கு அவர் மீது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்தவன் நான்தான்! நல்ல தகவல்களைத் தந்தீர்கள்!” என்று தொடர்ந்து கூறிக் கொண்டே எழுந்தார்! “சரி, விரைவில் உங்களைச் சந்திக்கிறேன், விடை கொடுங்கள்!” என்று கூறினார். “நன்றியுடன், நம்பிக்கையுடன் செல்கிறேன்! மாலையில் நானே வந்து சந்திக்கிறேன்” என்று கூறி இடம் விட்டகன்றார் சங்கரய்யர். அவர் போனதும், இன்ஸ்பெக்டர் பரபரப்படைந்தார். ஜவான்கள் செயல்படத் தொடங்கினர். போலீஸ் வேன் ஒன்றில் ஏறிக் கொண்டனர் அனைவரும்; வேன் புறப்பட்டது. பகுதி 14 எந்த இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, தேவரின் வீட்டுக்குள் புகுந்து, சூடா கதறிக் கதறி அழும்படியாக சந்தேகத்தின் பேரில் தேவரைக் கைது செய்து கொண்டு போனாரோ, அதே இன்ஸ்பெக்டரே, சிறை வாயிலுக்குச் சென்று தேவரை வரவேற்றார். இன்ஸ்பெக்டரின் சார்பில் ஒருவர் தேவருக்கு மாலையிட்டார். பெரிய மனிதர் என்ற பட்டியலிலே இடத்தைப் பதித்துக் கொண்டிருந்த பலரும் கூடவந்து மாலையிட்டு மரியாதை தெரிவித்துக் கொண்டார்கள். கைது செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டவுடனேயே, காரியுமிழ்ந்து, “சீ, இப்படிப்பட்ட மோசக்கரனா அவன்?” என்று நாலு பேர் காதில் விழும்படியாகவே பேசியவர்கள்கூட, “தேவர் நிரபராதி - குற்றவாளி அவர் அல்லர்” என்று போலீசுத் தரப்பில் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டவுடனேயே, விழுந்தோடிச் சென்று வரவேற்றனர், அதுவும் முன்னணியிலிருந்து. உயர்வும் சரி, தாழ்வும் சரி, அது ஒருவனை அடைவதற்கு, அவனவன் மேற்கொள்ளும் காரியங்களே காரணங்களாயமைந்துவிடும் என்று குறள் கூறும் கருத்துக்குக் கோணம் கோணம் அலசி ஆராய்ந்து அரிய பல கட்டுரைகளை தேசவீரன் பத்திரிகையிலே எழுதியிருக்கிறார் தேவர். என்றாலும் தனக்கு இப்படியொரு அபவாதம் ஏற்படும்படியாகத்தான் என்ன செய்தோம் என்பதை, சிறையிலடைப்பட்டிருந்த நேரத்திலே யோசனை செய்ததுண்டு. தன்னுடைய கூடாநட்பே கூட இதற்குக் காரணமாக இருக்குமோ என்றுகூட அவர் யோசித்திருக்கிறார். பணியாற்றுவதற்குக்கூட, பொருத்தமான மனமொத்த இடமாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தமது பணிபுரியும் இடத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளாததாலேயே இந்த இடர்களைச்சந்திக்க நேர்ந்ததென்றும் முடிவு செய்து வைத்திருந்தார். அந்த முடிவை, அவர் மேற்கொண்டபோதுதான், சிறை அதிகாரிகள், அவரிடம் வந்து அவர் குற்றமற்றவர் என்று போலீஸ் தரப்பு கருதுவதாகவும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று, கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் கேட்டால், தேவருக்கே அதிர்ச்சி ஏற்படுமென்றும் கூறி, சிறைக்கதவைத் திறந்துவிட்டு விட்டார்கள். சுதந்திரப் பறவையாகப் புறப்பட்ட தேவர், சிறைவாயிலுக்கு வரும்போதே அவர் வியப்படையும் அளவுக்குப் பெருங்கூட்டமே கூடியிருந்தது. இன்ஸ்பெக்டரே தன்னை வரவேற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சூடாவுக்குக்கூட முதலிடம் கிடைக்கவில்லை. நெருக்கி முன்னேறிய கூட்டம் சூடாவைப் பின்னே தள்ளிவிட்டது. என்றாலும், தன் கண் முன்னாலேயே தேவருக்கு ஏற்படுத்தப்படும் சிறப்பை, பெருமையாக அவள் மனம் ஏற்றுக் கொண்டுவிட்டதால், தான் பின்னாலே தள்ளப்படுவதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆயினும், ஒருவாறாக வான் பிளக்க எழுந்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே வரவேற்பு வைபவம் கோலாகலமாக முடிவுற்ற பிறகு, தேவரின் கண்கள் தேடுவதைப் போலவே, இன்ஸ்பெக்டரின் கண்களும் அலைந்து திரியத்தான் செய்தன சூடாவைத் தேடி! கைது செய்யப்படும்போது ஏற்றியது போலவே, இப்போதும் தேவர் போலீஸ் வானிலேயே ஏற்றப்பட்டார். அப்போதுõன் இன்ஸ்பெக்டரின் பார்வையில் சூடா புக முடிந்தது. மிகுந்த ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கோடு, அவரையும் அழைத்து வண்டியிலேற்றி தேவரின் அருகே அமர வைத்தார் இன்ஸ்பெக்டர். “மன்னித்து விடுங்களம்மா. உங்களை அன்று பிரித்த நான், மீண்டும் சேர்த்து வைக்கப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார். சூடா, விழிகளாலேயே நன்றி தெரிவித்தாள் இன்ஸ்பெக்டருக்கு. ஆயினும் தேவரும் சூடாவும் பிரிந்தவர் கூடினால் என்ற சொற்றொடருக்கு இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளையெல்லாம் கடந்து இலக்கியம் படைத்துக் கொண்டார்கள், உணர்ச்சிகளால்! போலீஸ் வான் தேவரின் வீடு சேர்ந்ததும், இன்ஸ்பெக்டர் முதலில் இறங்கி, தேவரையும் சூடாவையும் இறங்க உதவி செய்து உள்ளே அழைத்துச் சென்றார். தேவர் வீட்டுக்குள் நுழையும்போது அது எந்த அளவு அலங்கோலத்தோடு இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் கொண்டு, அந்த அளவுக்கு சூடா பாடுபட்டிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டார். உள்ளே சென்று அமர்ந்ததும், இன்ஸ்பெக்டர், தேவரிடம், “இந்த அம்மாள் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியினால்தான் இந்த வழக்கு திசை மாறிப் போயிற்று” என்று கூறிவிட்டு, சூடாவைப் பார்த்தார். சூடா நாணமடைந்து, தலை கவிழ்ந்தவள், தான் அங்கே இருப்பது நாகரிகமாகாது என்றெண்ணிக் கொண்டு, உடனே புறப்பட்டாள். அதற்குள், ஒவ்வொருவராக தேவருக்கு வாழ்த்துக் கூறுதல் என்ற பெயரை வைத்துக் கொண்டு அங்கே வரத் தொடங்கினார்கள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார். “அன்றைக்குச் சங்கரய்யர் வந்து விவரங்களைக் கூறியதும் எனக்கே அதிர்ச்சியேற்பட்டுவிட்டது மிஸ்டர் தேவர்! உடனே ஓடினேன் பேட்டையின் பக்கம். ஆறுமுகத்தையும் வரதனையும் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியுமாகையால், முதலில் ஆறுமுகத்தை வளைத்துப் பிடித்தேன். குடிகாரனை நம்பியதால் அவருக்கு இவ்வளவு பெரிய கேடு வந்து சூழ்ந்தது என்று அவர் என்னிடம் சொல்லும்போது எனக்கே சிரிப்பு வரத்தான் செய்தது. நிரம்பிய போதையிலிருந்த ஆறுமுகத்திடம், கொள்ளையில் சம்பந்தப்பட்ட கல்யாண சாஸ்திரியும், ஜாமீன்தார் செல்லப்பரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொய்யைச் சொன்னவுடனேயே, அவன் உண்மைகளையெல்லாம் கக்கத் தொடங்கிவிட்டான். கல்யாண சாஸ்திரி அவனை நேரில் வந்து அழைத்து, அவனுக்கு ராஜயோகம் வந்திருப்பதாயும், இனி அவன் அந்த இழிந்த வாழ்க்கை வாழத் தேவையில்லையென்றும் சொல்லி, கோயில் தொடர்பான எல்லா விவரங்களையும் கூறினாராம். கோயில் குருக்கள், கோயிலின் கருவறையைக் களவாட தடையெதுவும் இல்லாத அளவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டாராம். அவரது துணை ஆசிரியர்கள் இருவரும் செல்ல வேண்டியது என்றும், அவர்களுக்குத் துணையாக ஆறுமுகம் செல்ல வேண்டியது என்றும் ஏற்பாடாம். கொள்ளையடிக்கப் பட்டுவரும் பொருள்களில் பெரும் பகுதியும் ஜமீன்தார் செல்லப்பருக்கும், கல்யாண சாஸ்திரிக்கும் என்று ஏற்பாடாம். ஒருபகுதி துணையாசிரியர்களுக்கும், இன்னொரு பகுதி ஆறுமுகத்துக்கும் என்று பேசிக் கொண்டார்களாம். பழகிப் போன பழக்கம் ஆகையால், ஆறுமுகம் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறான். என்றாலும், துணை போவதைவிட, தனக்குத் துணையாக அவர்கள் வந்தால் போதுமென்றும் கேட்டுக் கொண்டானாம். ஆறுமுகத்தின் நாணயத்தில் இருந்த நம்பிக்கைக் குறைவால், அவன் மற்றவர்களுக்குத் துணைபோனால் போதும் என்று சொல்லி விட்டாராம் சாஸ்திரி. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜமீன்தார் செல்லப்பரும் அங்கு வந்தாராம். ஏதாவது வழக்குக் கிழக்கு என்று வந்தால், தன் சொத்து முழுவதையும் செலவு செய்தாவது அவனைக் காப்பாற்றுவதாகச் சொன்னாராம். இன்னும் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், நாளை நடுநிசிக்கு வந்து தன்னை அழைத்துப் போவதாகவும் கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டார்களாம். ஆறுமுகத்துக்கு உண்மையிலேயே ராஜயோகம்தான். அவனுக்குத் தரப்பட்ட பங்கினை, அவன் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருந்ததால், இவ்வளவு பெரிய சதியினை நடத்திக் கொண்டிருந்த சாஸ்திரியே, அதற்கும் ஒரு வழி செய்து வைத்திருந்தார். குறிப்பிட்டபடியே, குருக்கள், கோயில் பணியாட்கள் இவர்களது உதவியோடு கொள்ளை நடைபெற்று முடிந்து, சாஸ்திரியின் வீட்டிலேயே பங்கு பிரிக்கப்பட்டுவிட்டது. ஜெமீன்தார் செல்லப்பர் புறப்பட்டுப் போன பின்பு, அவனுக்குச் சில நகைகளைக் கொடுத்தாராம் சாஸ்திரி. அதனை அவன் கையில் வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாஸ்திரி கேட்டாராம். “ஆறுமுகம், இவைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறாய்” என்று. ஏதோ ஒரு தொகையை அவனுக்குப் புரிந்த அளவுச் சொல்லி இருக்கிறான். “இரண்டாயிரமா? ஆறுமுகம்! மூவாயிரம் ரூபாய் ரொக்கமாய்த் தருகிறேன். நகைகள் உன்னிடம் இருக்க வேண்டாம். தொல்லைகள் ஏதாவது வந்துவிடும்” என்று சொன்னாராம் சாஸ்திரியார். அவனுக்கும் அது சரியென்றே பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு குடிபோதை வேறு ஏற்றப்பட்டிருந்தது. மூவாயிரத்தையும் பெற்றுக் கொண்டு, அவன் புறப்பட்டு வீடு புறப்படும்போது வேறு, அவனுக்கு அளவுக்கும் மீறி மது வழங்கப்பட்டிருக்கிறது. பணத்தைக் கையில் கொடுத்து, துணையாக யாரையாவது அனுப்பட்டுமா என்று சாஸ்திரி கேட்டிருக்கிறார். துணையா, ஆறுமுகத்துக்கா என்று கேட்டுவிட்டு, தள்ளாடிக் கொண்டே புறப்பட்டிருக்கிறான் ஆறுமுகம். “அவன் வீடு சென்று சேர்வதற்குள், சாஸ்திரியின் முன் ஏற்பாட்டின்படி ரூபாய் ஆறுமுகத்திடமிருந்தே பறிக்கப்பட்டு விட்டது என்பதை அவனேகூட அறியவில்லையாம்!” என்று சொல்லிவிட்டுச் சிறிது நிறுத்தினார். யார் யாரோ ஏழெட்டுப் பேர் அங்கே வந்திருந்தார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டுவந்து மீண்டும் அமர்ந்தார் தேவர். ‘நல்லதொரு நாவலுக்கு வேண்டிய கருவையே சாஸ்திரி உருவாக்கி இருக்கிறாரே’ என்று கேட்டுவிட்டு, ‘அப்புறம்’ என்று கேட்டு நிறுத்தினார் தேவர். சிறிது தூரத்தில் சூடாவும் வழிந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார். “பல கொள்ளைகளுக்கும், கொடுமைகளுக்கும் இந்தப் போதை பயன்பட்டிருக்கிறது. எனவேதான் ஆறுமுகம் மறுநாள் விடிந்ததுமே தன் பணம் கொள்ளை போனதை உணர்ந்திருக்கிறான். தெரிந்து கொண்டதும் ஓடிப்போய் சாஸ்திரியிடம் சொன்னதும், “பரவாயில்லை ஆறுமுகம்! பணம்கூட உன்னிடத்திலிருக்க வேண்டாம் என்று பகவான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. போனால் போட்டும். உனக்கு ஏதாவது எப்போதாவது செலவுக்கு வேண்டுமென்றால் என்னிடம் வந்து கேட்டு வாங்கிக் கொள் என்று கூறி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டாலும், எப்போதாவது ஒரு ஐந்து பத்து என்று சென்று கேட்டு வாங்கிக் கொள்வானாம். “சில நாட்களுக்கு முன்பு, தலையங்கம் எழுதுவது எதைப் பற்றி என்ற தகராறு ஏற்பட்டவுடன் அவர் மூளை சுறுசுறுப்படைந்திருக்கிறது. கொள்ளைப் பழியை உங்கள் மீதுபோட்டு, ஒழித்துக் கட்டிவிட்டால், தங்கை சூடாவால் ஏற்பட்ட அவமானமும் தீரும், தனக்கும் ஒரு தொல்லை விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உடனேயே செயல்படத் தொடங்கி, ஆறுமுகத்தைக் கூப்பிட்டனுப்பி, தன் திட்டத்தைக் கூறியிருக்கிறார். காசுதானே அவனுக்குப் பிரதானம்! மற்றெல்லாவற்றையும் இனி அந்த அம்மாவே சொல்வார்! என்று கூறி விட்டு இவர்களுக்குத் தெரியாததை மட்டும் நான் கூறிவிடுகிறேன் என்று கூறவிட்டு, தொடர்ந்து, ஆறுமுகத்தை ஒரு வியாபாரியாக வேடம் போடச் செய்து, செல்லப்பர் வீட்டுக்கே அழைத்துப் போனார் சாஸ்திரி. அங்கே மாறுவேடத்தில் அவனைக் கண்டதும் அடையாளம் புரிந்துகொள்ள முடியவில்லை ஜெமீன்தாருக்கு” என்று கூறினார். தொடர்ந்து ஜெமீன்தார் வீட்டில் நடந்தவைகளையும், சூடா வீட்டில் கொண்டு போய் நாகப்பதக்கம் சேர்க்கப்பட்டது பற்றியும், அதை அறிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மைக்கண்ணன், அதை அபகரித்துச் சென்றதும், அதைக் காட்டி சாஸ்திரியிடம் அவன் பணம் பறிக்க முயன்றது பற்றியும் கூறிவிட்டு, “மைக்கண்ணன் கெட்டிக்காரன்! போலீஸ்காரனாக இருந்தானல்லவா! கற்பனையாகவே சொல்லியிருக்கிறான். கொள்ளையிட்ட ஆறுமுகத்தைக் கைது செய்துவிட்டதனால், அவன் உண்மைகளை முன்னதாகவே தெரிவிக்கத்தான் போலீஸ் தடயத்தையே எடுத்துக் கொண்டு வந்து காட்டுவதாகவும் கூறி, உடனே ஊரைவிட்டு ஓடிப் போய் விடும்படிச் சொல்லி, அவன் பங்குக்கு வேறு ஐயாயிரம் பறித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று விளக்கினார். பெருமூச்சை உதிர்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் தேவர். இன்ஸ்பெக்டர் செல்லப்பரும், சாஸ்திரியாரும், துணை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பல நகைகள் மீட்கப் பட்டுவிட்டன. வெளியூருக்கும் கொஞ்சம் போய்விட்டிருக்கிறது. இரண்டொரு நாட்களில் அவையும் மீட்கப்படும் என்று கூறிவிட்டு, மைக்கண்ணன் நாகப் பதக்கத்துடன் தலைமறைவாகி விட்டிருப்பதையும் சொன்னார். “ரொம்பவும் நன்றி இன்ஸ்பெக்டர்?” என்று எழுந்து இன்ஸ்பெக்டரைக் கட்டித் தழுவிக் கொண்டார். “நீங்கள் எவ்வளவோ பேச வேண்டியிருக்கும். நான் போய் வருகிறேன். அப்புறம் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் கஜபதி நாயுடு. வாயில் வரையில் வந்து வழியனுப்பிவிட்டு, மீண்ட தேவர், சூடாவை வாரி அப்படியே தழுவிக்கொண்டார். பல நிமிடங்கள் வரையில் ஒருவர் வாயிலிருந்தும் ஒரு சொல்கூட வெளிப்படவில்லை. வெகுநேரத்துக்குப் பிறகு தேவர், ‘ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறாய் சூடா! உன்னால்தான் நான் மீண்டேன் என்று கூற வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு இதழோடு இதழ் சேர்த்தார். “இல்லவே இல்லை. பங்கஜத்தின் கணவர் சங்கரய்யரால்தான்!” என்றாள் அவள். “சரி, இருவராலும்தான்” என்றார் தேவர். வெளியே கதவு தட்டப்பட்டது. சூடா சென்று கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சங்கரய்யரும் பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். மரியாதையுடன் வணங்கி, வரவேற்று, “நாங்களே அங்கு வர இருந்தோம். அதற்குள் நீங்களே…” என்றாள் சூடா. அதற்குள் வாசல் பக்கம் வந்துவிட்ட தேவரும் கைகூப்பி வணங்கி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். “நன்றியாவது ஒண்ணாவது தேவர்! ஏதோ போறாத வேளை இப்படியொரு அபகீர்த்தி ஏற்பட்டது. மனசில் வைச்சுக்க வேண்டாம். இதோ பாருங்க. சாஸ்திரியே கழுவாய் தேடிண்டுட்டான். அவன் சொத்தையெல்லாம் சூடாவுக்கு எழுதி வைச்சுட்டான். நானே எழுதினேன். ‘தேசவீரன்’ பத்திரிகைக்கூட இனி நீங்களே நடத்தணுமாம்! உங்க இஷ்டம் போல இருந்திடலாமாம்!” என்று சொல்லி, வைத்திருந்ததை தேவர் முன் நீட்டினார் வக்கீல். தேவரின் கண்களில் நீர் மல்கி நின்றன. “ஆண்டவன் தான் அவ்வப்போது அவதாரங்கள் எடுப்பார் என்று புராணங்கள் போதிக்கின்றன. மனிதர்கள்கூட அவதாரமெடுப்பதுண்டா?” என்று வாய்விட்டே கேட்டார் தேவர் வக்கீலைப் பார்த்து. “புரிகிறது! சாஸ்திரிகூட இப்படியெல்லாம் ஆக முடியுமா? சூடாவுக்குச் சொத்து தருவதா என்றுதானே கேட்கிறீர்கள்! பாருங்களேன்! வயதான காலத்தில் அந்த ஜெமீன்தாரின் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போகணும்! எல்லாம் கிரகதோஷம்தான்!” என்று சொல்லிவிட்டு எழுந்தார். “எங்கேயும் போகக் கூடாது! இன்று எங்க ஆத்திலேயே சாப்பிட்டுத்தான் போகணும்” என்று குறுக்கே வந்து நின்றாள் சூடா. தேவரின் முகமும் மலர்ந்தது. விருந்து தயாராகிக் கொண்டிருந்தது, அடுக்களையில். அதுபோலவே, மனித அவதாரங்களைப் பற்றிய கற்பனையும் சமைந்து கொண்டிருந்தது தேவரின் இதய உலையில். முற்றும் ‘திராவிட நாடு’ 1945