[] 1. Cover 2. Table of contents ஞானியின் கவிதைகள் ஞானியின் கவிதைகள்   ஞானி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் - tamileservice17@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Gnaniyin_Kavithaikal} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: அ.ஷேக் அலாவுதீன், தமிழ் இ சர்வீஸ் - tamileservice17@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: A.Shaik Alauvdheen - tamileservice17@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/Gnaniyin_Kavithaikal This Book was produced using LaTeX + Pandoc அணிந்துரை ஒரு சமதருமக் கவிஞனின் கலகமொழி அருள்பணி. முனைவர். சோ. பிலிப் சுதாகர் கலைகளின் மூலஊற்று கவிதை. கருத்தாயுதங்களில் மிகக் கூர்மையானதும் ஆற்றல் வாய்ந்ததும் கவிதை. உணர்ச்சிக்கும் இசைக்கும் சொற்கள் முளைத்தால் கவிதை . இசையும் கதையும் ஓவியமும் ஒன்றிணைந்து பெருக்கெடுப்பது கவிதை சொல்ல வருவதைச் சொல்லாமலே சொல்லில் சொல்லிவிடுவது கவிதை. இன்புறுத்துவது மட்டுமின்றி இலக்கை நோக்கி நம்மை முன்னகர்த்துவது கவிதை. நம் வாழ்வை நம் வருங்காலத்திற்கேற்ப நாம் பொருள்படுத்திக் கொள்வது கவிதை. ஆறுதலாகவும் அருமருந்தாகவும் அமைவது கவிதை. பொருண்மை உலகின் அழகியல் கவிதை. நம்மையும் நாம் வாழும் உலகையும் விழித்தெழச் செய்வது கவிதை. மனிதமடைவதும் மனிதத் தன்மையில் முழுமையடைவதும் கவிதையால்தான். பழத்தில் ஊட்டச்சத்து ஒளிந்திருப்பதைப் போன்று கவிதையில் கருத்து உள்ளியக்கமாக உள்ளது. வடிப்பவருக்கும் வாசிப்பவருக்கும் அர்த்தங்களைக் கொணர்வது கவிதை. மொழியின் இமயம் கவிதை. கற்பனைப் பூங்காதான் கவிதை. ஆனாலும் எதார்த்த மலர்களே அதில் பூத்துச் சிரிக்கின்றன. எந்தவொரு சமுதாயத்தின் நுனிப்பக்கத்தில் கோளாறுகளும் தாறுமாறுகளும் கொட்டிக்கிடக்கலாம். ஆனால் அடியாழத்தில் விளைவன அத்தனையும் முத்துக்கள். கவிஞன் தனக்குள் மூழ்கி முத்துக்களை அள்ளி வருகிறான். எப்போதோ தொகுப்பாக வந்திருக்க வேண்டிய ஞானியின் கவிதைகள் இப்போதுதான் வருகின்றன. இந்தக் கவிதைத் தொகுப்பின் அவசியத்தையும் அவசரத்தையும் இக் காலச் சூழலில் நாம் வெகுவாய் உணரத் தலைப்பட்டுள்ளோம். ஞானி குறிப்பிடுவது போன்று அவரின் கவிதைகள் அவரின் எதிர்வினைகள். அறச் சீற்றத்தின் வடிகால். அறிவின் முதிர்வு ஞானம். ஞானத்தின் முதிர்வு ஞானி. ஞானியின் முதிர்வு அவரின் கவித்துவம். நெருப்பைப் போன்றன ஞானியின் கவிச் சொற்கள். அவை நம்மையும் பற்றிப் படர்கின்றன. ஞானிக்குத் தரை பிடிக்கும். தரையிலிருந்து மலையேறி உச்சம் தொடுவது பிடிக்கும். உச்சமே உறைவிடம் என்று உறைந்து விடாமல் மீண்டும் தரைக்குத் திரும்புகிற எதார்த்தம் ஞானிக்கு மிகவும் பிடிக்கும். எச்சூழலிலும் எத்தகைய வடிவிலான ஆதிக்கத்திற்கும் தன்னை இழந்துவிடாத ஞானி கவிதையிலும் தன்னைச் சிலையாக்க நினைப்போரை எதிர்த்துப் போராடுகிறார். எண்பதுகளில் வெளியான ஞானியின் கவிதைகள் “தொலைவிலிருந்து”. பாடிக் கொண்டேயிரு. ஓடிக்கொண்டேயிரு . தேடிக் கொண்டேயிரு . போராடிக் கொண்டேயிரு . மூச்சிருக்கும் வரை முயற்சியெடு என்று நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு கவிதையைப் படைக்கிறார். தாகப்பட்ட போதும் பயணப்பட்ட போதும் படுத்துறங்கும் போதும் அறுவடையின் போதும் வள்ளுவரே கூட வாரும் என்று வழித்துணையாளராக அவரை இனம் காண்கிறார். பஞ்சு நூலாகி ஆடையாகி அழகாகிவிட்டது. விற்றவன் வாழ்க்கை அவலமாகிவிட்டது என்று வாழ்வியல் முரண்களை வார்த்தைப்படுத்துகிறார். சமூக முரண்களை அகற்றிட சொற்கள் போதமையை உணர்ந்தவராக “புதிதாய்ப் பின்னுவோம் புதிதாய் பிறப்போம்” என்று அறைகூவல் விடுக்கிறார். எங்கெங்கும் அந்நியப்பட்ட தனக்குள்ளும் பிளவுகள்பட்டு தனித்தனித் தீவாகிப் போய்விட்ட மனிதனைக் காணும்போது ஞானிக்கு ஜாடிக்குள் திரவத்தில் பதப்படுத்திப் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும் உயிர்களே நினைவுக்கு வருகின்றன. திருவாரூர்த் தேரையும் ராஜ கோபுரங்களையும் மாபெரும் தெப்பக்குளங்களையும் சிற்ப வேலைகளையும் செய்து முடித்த தமிழன் இன்று நோயாளியானது எப்படி? எவரால்? என்று கவிதைக்குள்ளும் வினாக்கணை தொடுக்கிறார். பெண்ணின் பெருமையைப் பெருமை பொங்கிடக் கவிதையாக்குகிறார். அரட்டலும் மிரட்டலும் அடக்கி வைத்தலும் ஆண்மைக்கு அழகல்ல என்கிறார். ஆதிக்க அதிகாரியை ஆண்மகன் தனக்குள்ளிருந்து துப்பிவிட வேண்டும் என்கிறார். அந்த அசிங்க அதிகாரி சில நேரங்களில் மாமியாராகவும் மனைவியாகவும் வேலையாளாகவும் இருப்பதையும் கவனிக்க வைக்கிறார். “தீண்டிவிடாதே! பெண்கள் தீயின் உருவம். நெருக்கடிகளும் பாரமும்தான் அவளுக்கெனில் எரித்தவனை எரித்துச் சாம்பலாக்குவாள்” என்று எச்சரிக்கை மணியொலி எழுப்புகிறார். தாடகைக்கும் சூர்ப்பனகைக்கும் நீதி கிடைக்கும்வரை சீதையும் அசோகவனத்திலேயே இருக்கட்டும் என்கிறார். மாமனிதர்கள் கொல்லப்படுகிற பழங்கதைகள் நமக்கெதற்கு? புதுமைக்குப் புவியைப் பழக்கு. புதுக் கணக்கிற்கு மனிதரைத் தயாராக்கு என்கிறார். இயேசுவின் கறிக்கு என்ன விலை என்று கேள்வி கேட்கிறார். இயேசுவைக் கொன்று புதைத்த இடத்தில் ரோஜா பூக்கிறதே என்று வியக்கிறார். இதுவே கொல்லப்படுவோரின் வரலாறு என்கிறார். உடைந்து நொறுங்கும் உலகை தட்டிச் சரிசெய்வதைக் கைவிட்டு உலகைத் தூள் தூளாக்குவோம். புது இரத்தம் பாய்ச்சுவோம். புதியதோர் உலகு செய்வோம் என்கிறார். `சனநாயகம் செத்துப் போனது. பிணந்தூக்கிகளாக நாமிருக்கிறோம். சோசலிசத்தை வாழவும் விடவில்லை. சாகவும் விடவில்லை. லெனின் சாகவில்லை. உறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது என்பது நமக்கு கேட்டுப் பழகிவிட்டது. அதற்கும் புதுப்பொருள் காண்கிறார். “இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பூதத்தைப் பூதமாக வைத்திருப்பது? பூதத்தை விடுவி. உறவாடு. சிக்கல் நம்மிடம்தான். பூதங்களிடம் அல்ல” என்கிறார். “பரத்தைகளையே உருவாக்கித் திரிந்தான். அவனைப் பக்குவப்படுத்தவே பார்த்தேன். பாவி! என்னையும் சேர்த்தல்லவா உடைத்தெறிந்தான். அப்புறமும் அவன் தேரோடு திரிந்தால் வெட்டிப் புதைத்து மீண்டும் விளைவிப்பேன்” என்னும் வரிகளில் பெண்ணின் உறுதியும் மாண்பும் கம்பீரமாக வெளிப்படுகின்றன. சீவகன் வேறுவழியில் செல்கிறான். சீவகன் ஏன் துறவியானான் என்ற கேள்வியை ஞானி திருத்தக்கதேவரிடம் கேட்கிறார். அவரிடம் விடை இல்லை. ’’என்னையா முழிக்கிறீர்? கதையைக் கெடுத்தது நீயா? நானா?” என்று சீறுகிறார். செத்துப் போன கடவுளை எடுத்துப் புதைக்க ஏன் இவ்வளவு காலம்? சமாதி கட்ட மனமில்லாமல் கோயில்களில் புதைக்கிறீர்களா? நீங்கள் செத்துப்போன கடவுளின் பிள்ளைகள். செத்த கடவுளைப் பிழைக்க வைப்பதில்தான் உங்களின் தொழிலும் ஆதிக்கமும் அடங்கியுள்ளது என்கிறார். கல்லும் முள்ளும் கவிதைகளும் நூலை 2012ல் எழுதுகிறார். கவிதையாக வாழ்ந்த துணைவி இந்தியாவிற்கு அதை அர்ப்பணிக்கிறார். அச்சிற்கு அனுப்பும்போது தவறுதலாக 5.9.2012 என்று அவரை அறியாமலேயே எழுதுகிறார். அடுத்த மாதம் அதே நாளில் துணைவியார் இறக்கிறார். எது கவிதை என்ற கேள்வியையும் கவிதைக்குள் கேட்பவர் எது கவிதை இல்லை என்பதிலிருந்து தொடங்குகிறார். திருடர்கள் எல்லாம் திருடர்கள் அல்ல. எழுத்தாளர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. கவிதைகள் எல்லாம் கவிதைகள் அல்ல. கூழாங்கல்லும் கவிதைதான். கோலிக் குண்டும் கவிதைதான். காட்டு மலர்களும் கவிதைதான். புத்தனின் ஞானமும் கவிதைதான் என்கிறவர் கடைசியாக அவரவர் வாழ்க்கை அவரவர் கவிதை என்று முடிக்கிறார். வெற்றுப் பார்வையால் வாழ்வைக் கடக்கும் எவரிடத்திலும் கவிதை மலர் பூப்பதில்லை. கற்றுத்தர ஏதுமற்றோரிடம் கவிதை இல்லை. அனுபங்களற்ற செக்கு மாட்டு வாழ்வில் உயிரும் இல்லை . கவிதையும் இல்லை . எச்சில் மதவெறி நச்சில் மூழ்கியவனிடம் கவிதை இல்லை. கவிதை யாருக்காக என்று ஞானியிடம் கேட்டால் கவிதை கலைஞருக்காக நெசவாளருக்காக தச்சருக்காக கொல்லர்களுக்காக என்பார். நமக்குள்ளிருக்கும் ஆதிமனிதரை விடுவித்தால் அவன் எல்லோரையும் விடுவிப்பான் என்ற நம்பிக்கையை ஞானி சொல்லோவியமாய்த் தீட்டுகிறார். கொள்ளையன் கையில் உலகம். எச்சில் துண்டுகளாய் நாம்! நமக்கேது கவிதை என்று சலிப்போடு கூறுபவர் உலகை உடைக்கும் உலுத்தரை உதைத்து வெளியேற்றாமல் புதுப்பாட்டும் புத்துலகும் நமக்கு விடியுமா என்பதையும் கேட்டு வைக்கிறார். நடிகனாய்ப் பொய்யனாய்ப் பிறர் புகழ் பாடும் கடையனாய் கொடி பிடிக்கும் குறையனாய் வாழப் பழகியிருந்தால் மாளிகை வீட்டில் மகிழ்ந்திருப்பேன் ! நடுத் தெருவில் நிற்கிறோம் நானும் என் கவிதைகளும் என்ற அவரின் வரிகளில் தன்னை மதிப்பிட்டுக் கொள்கிறார். தான் இழந்தவை கவிதைக்கு முன் ஒன்றுமேயில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். ‘எனக்குள் ஒரு வானம்’ கவிதை உலகில் ஓர் அரிய முயற்சி. “அப்பாவின் ஆதிக்கத்தில் தொலைகிறது வாழ்க்கை. யாரோ விதித்துவிட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்ற கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். யாருக்காகவோ என் கைகால்கள். யாருடைய கால்களிலோ நான் நடக்கிறேன். பிறப்பு இறப்பு பதிவு தவிர உலகின் எனக்குப் பதிவு இல்லை . எனக்கே நான் சொந்தமில்லை. உலகச் சந்தையில் ஒவ்வொருவரிடமாய் நான் விற்கப்படுகிறேன். என் வாழ்வின் வெறுமை கடவுளின் விசுவரூபமாகிறது. தெய்வங்கள் பெருகின. நான் சிறுத்தேன். தெய்வங்கள் கைவிட்ட உலகைப் பிசாசுகள் ஆக்கிரமித்தன. நானும் கூட பிசாசானேன். என்னைப் பிசாசாக்கியவன், நான் தெருவில் திரிவதையும் குற்றமாக்கியவன் எனக்கெப்படித் தெய்வம்?” மனித வாழ்வின் அவல நிலைகளை ஞானி கவிதையாக்குகிறார். “வாலியை வதை. கண்ணகியைக் கைது செய். துச்சாதனனுக்கு மந்திரி பதவி கொடு. துரியோதனனுக்குச் சிலையெடு. சீதையை, சிவனை சிறையில் வை. உயிர்களைப் படைத்த பிரம்மாக்களைக் கருவறையிலிருந்து வெளியேற்று. விற்கப்படவே பிறந்தவர் நாம்”. கடந்த காலத் திணிப்புகளை எதிர்த்துக் கலகம் செய்கிறார் ஞானி. சுரண்டிக் கொழுப்போரின் ஓரங்கமாய் அரசியல். காப்பாற்ற வேண்டிய அரசியலும் காலை வாரும் போது கவிஞருக்கு ஆத்திரம் வருகிறது. இலெனின் காலத்தில் அறிவாளிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டு கார்க்கி அதிர்ச்சியடைகிறார். ஞானி அதைக் கவிதையாக்குகிறார். என் தோட்டத்து மலர்கள் இப்படித்தான் பூக்கும். பல நாள் பலரும் என் மீது எறிந்த கற்களை ஒரு நாள் திருப்பி எறிய எனக்கு உரிமை இல்லையா? சட்டத்தைத் தூக்கிலிடு! நீதிமன்றங்களுக்குச் சமாதி கட்டு! பாண்டியர் அடிபடுக! வேதியல் உரங்களும் உயர்ரக விதைகளும் வேளாண் குடிகளை வேரறுத்தன! காடழித்து அணைகட்டி அணுஉலை போபால்கள் பெருக்கும் காங்கிரீட் உலகின் நச்சேறிய நாகரிகமா நான் விரும்புவது? என்று கேட்கிறார். எந்த மாற்றத்தையும் கொண்டு வராததால் இராமர் கூட்டத்தை நாடு கடத்த மக்கள் மன்றம் முடிவு செய்த போது இராவணன் உயிர்த்தான். அயோத்திக்கு அரசனானான். இப்படியெல்லாம் கூடக் கவிதை படைக்கலாம் என்று ஞானிக்குத்தான் தோன்றுகிறது. ஞானியின் அகலிகை கல்லிகை பெண்ணின் கதை. மனிதனின் கதை. மனித விடுதலையின் கதை. வரலாறு நெடுகிலும் பெண்ணுக்கெதிராய்க் கிளம்புவோர் ஞானியின் கவிதைச் செக்கில் சிக்கிச் சின்னாபின்னம் ஆகின்றனர். சொற்புழுதிஇந்திரன் வணிகப் பேய் செருக்கித் திரியும் காமுகன் அதிகாரக் கிழட்டு முனிவன் உலக்கை ஆடவன் உடல் அழுக்கன் நாயினும் கேடன் ஆக்கமும் அழிவும் பழகிய அகலிகையைக் கல்லாக்கிய கயவன் என்று ஆணாதிக்கத்தின் ஆணி வேரையும் (ஞானி அசைத்துப் பார்க்கிறார். எங்கும் முளைக்கிறான் முனிவன். எங்கும் முளைக்கிறான் இந்திரன். கனவு சிதையும் மனிதர் யாவரும் அகலிகை. உலகை வலம் வரவேண்டிய கால்கள் வீட்டிற்குள் முடக்கப்படுகின்றன. அடக்குமுறைக்குப் பலியாகும் ஒவ்வொரு பெண்ணும் அகலிகைதான். ஆணாதிக்கத்தால் துாக்கிலிடப்பட்ட அனைவரும் அகலிகையே. ’அடிமையாயிரு! ஆண்டவனாயிரு! இல்லையெனில் அசையாத கல்லாயிரு! இதுவே அகிலம் பெண்மயமாவதைத் தடுக்கும் ஆண்டைகளின் கட்டளை. பாவப்பட்ட பிறவியாக்கப்பட்ட அகலிகையை ஞானியும் உயிர்ப்பிக்கிறார். எங்ஙனம்? இந்திர வயல்களும் அக்கிரம் ஆசிரமங்களும் சுரண்டல் சாம்ராச்சியங்களும் ஆதிக்கக் கோட்டைகளும் ஆணவ அரக்கர்களும் அடியோடு அழியும் நாளில் அகலிகை உயிர்ப்பாள். ஞானியின் கல்லிகை கலகம் செய்கிறாள். விண்ணையும் மண்ணையும் தன்வசமாக்குவாள். வீர இந்திரனைத் தனக்குள் செரிப்பாள். உலகம் பொதுவென உரத்து முழங்குவாள். உழைக்கும் கரங்களை உயர்த்தி நிற்கும் கோடி மனிதரில் அகலிகை தெரிவாள். கல்லிகை நம் கதைதான். சமகாலத்தின் சங்கடங்களை ஞானி வெள்ளிவிழாக் கவிதையாக்குகிறார். நிலைமை மாறவில்லை. மோசமடைந்துள்ளன. எனவே இவை பொன்விழாக் கவிதைகளும் தான். காந்தியும் சுதந்திரமும் இனி கற்சிலைகளாக நீடிப்பதற்கும் வழியில்லை. காந்தியைக் கொன்றவர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து விட்டனர். கங்கையும் காவிரியும் தானியக் களஞ்சியங்களும் இனி அவர்களுக்குத்தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஞானி ஆவேசப்படுகிறார். ‘எங்களை நிர்வாணமாக்கிய உங்களை எரித்தே ஆகவேண்டும். எங்கள் உழைப்பை உங்கள் சொகுசாக்கிக் கொண்டீர்கள். எங்களின் கல்விக்கூடங்களை உங்களின் மாடி வீடுகளாக்கிக் கொண்டீர்கள். நாங்கள் மாவீரர்களின் ஆற்றலோடு மக்கள் படையாகத் திரள்கிறோம். உங்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் எங்களின் உடலை மட்டுமல்ல. எங்களின் வேற்றுமைகளையும் வேரறுக்கின்றன’. மனித உறவுகளில் நஞ்சு கலந்தாய். உலகுக்குத் தீ வைத்தாய். எல்லோரையும் அய்யுற்று உன் நிம்மதி இழந்தாய். பத்திரிக்கை, திரைப்படம், ஆடை அணிகலன், சூதாட்டம் காபரே நடனங்கள் என்று திரிகிறாய். பாரம் தாங்காமல் உழைக்கும் மக்கள் உன்னையே தூக்கியெறிவர். நீங்கள் சமுதாயத்தின் நாயகன்கள் அல்ல. கோமாளிகள். இயந்திரம் பெருக்கினாய். இயற்கையிலிருந்து விலகினாய். வாழ்விலிருந்து வெளியேறினாய். எம் குலப் பெண்டிரின் மானம் மரியாதை கற்பென அனைத்தையும் விலை பேசினாய். உன் மனைவி பிள்ளைகளைக்கூட காப்பாற்ற முடியாதவன் நீ. அறநெறிகளையும் குடும்ப உறவுகளையும் கழற்றி எறிந்தாய். செல்வம் தொகுப்பதை வாழ்வின் இலட்சியமாக்கினாய். நீ பாதாள அறையின் பதுக்கல் பேய். நவீன உலகின் ஆதிக்கச் சுரண்டலரை ஞானி தனக்கேயுரிய கவிதைபாணியில் சாடிச் சாய்க்கிறார். உற்பத்தி அளவைக் கணிக்கவும் பொருள் இயக்கத்தை எளிதாக்கவும் குறியீடு நாணயம். பொருள் குவிப்பே உன் குறியீடு. நிழல் உனக்கு உருவம். பொய்யே மெய். கலையை நடனத்தை ஓவியத்தைத் தேவையற்றதாக்கினாய். கடைநிலை கலைஞனுக்கு முதலிடம் தந்தாய். உன்னைத் தெய்வமாக்கினாய். தெய்வங்களைப் பிசாசாக்கினாய். உன்னால் காற்றும் நீரும் வானமும் கெட்டன. மக்கள் அறிவைக் கெடுத்தாய். அனைத்தையும் முடக்கினாய். வாழ்தலின் தகுதியிழந்தாய். இவ்வாறான கடுஞ் சொற்களால் ஆதிக்கரின் வேரறுப்பவர் உன் வாழ்நாள்கள் எண்ணப்படுகின்றன என்கிறார். எங்கள் மலைகளை உடைத்த உன்னை நொறுக்குவோம் எனச் சீறுகிறார். எங்கள் தோழர்களை மீட்க உங்கள் சிறைகளை நொறுக்குவோம். உங்களை மோதி அழிப்பதே எமக்குப் புனிதச் செயல் என்கிறார். எழுபதுகளில் வெளியானவை எங்களூரில் ஒரு தேர்த் திருவிழா. கோடிகளைக் குவிப்பதற்கா அய்ந்தாண்டுகளுக்கொரு முறை கோயில் திருவிழா? மேலை நாட்டானின் அச்சுகளும் கடையாணிகளும் எங்கள் தலைகளில் இறக்குமதியாயின. எம் உடல்களைக் கயிறாக்கி எலும்புகள் முறியத் தேர் இழுத்தோம். காட்சிகள் மாறின. ஆட்சிகள் மாறின. தெய்வம் வரும் சொர்க்கம் வருமென இரவு பகலாய்ச் சேர்ந்திழுத்தோம். பூசாரிகளும் தர்மகர்த்தாக்களும் பஜகோவிந்தங்களும் பெருகின. எங்கள் உடல்களின் மீது தேர்க்கால்கள் ஏறியிறங்கியபோது திடுக்கிட்டோம். விழித்தோம். எமக்கு முன்பு சிரிப்பன தெய்வங்கள் அல்ல. அரக்கப் பிசாசுகள் என்பதை உணர்ந்தோம். தேருக்குத் தீ வைத்தோம். எம் வயிறுகள் மூட்டிய நெருப்புக் கனலில் ஆதிக்கச் சுரண்டல் பேய்களை எரித்துப் பொசுக்கினோம். முக்தி நோக்கி நாங்கள் முன்னேறுகின்றோம். இக் கவிதை அரசியல் பிழைப்புவாதிகளையும் ஆன்மீக உலுத்தர்களையும் ஒருசேரத் தோலுரிக்கிறது. கஞ்சி எமக்கு விருந்து உமக்கு . கந்தலாடை எமக்கு. பட்டாடை உமக்கு. தோப்புக் கரணம் எமக்கு. தெய்வ அருள் உமக்கு . கல்லாமை அறியாமை எமக்கு. கல்வியும் கலையும் உமக்கு . வட்டியும் கடனும் எமக்கு. பணப்பாதுகாப்புப் பெட்டகம் உமக்கு . சேரியும் குப்பமும் வெப்பமும் புழுக்கமும் எமக்கு. நஞ்சையும் புஞ்சையும் தானிய விளைச்சலும் உமக்கு. அடிமைத்தளைகள் எமக்கு. சுதந்திரப் பொன் நகை உமக்கு. இயங்காத பொய்த் தெய்வங்கள் உமது. வாழும் வரலாறான எம் முன்னோர் வழிபாடு எமது. ஞானி தனது கவிதை நெம்புகோலால் மனிதகுல விரோதிகளை நெட்டித் தள்ளுகிறார். எரிதழல் ஏந்துவதைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும் என்று தீர்வு நோக்கிப் பாட்டாளிகளை முடுக்குகிறார். எங்கள் கைவிலங்குகள் தகரும் நாள் வரும் என்று நம்பிக்கைச் சுடர் ஏந்துகிறார். வங்கிகளைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கும் அவன்களோடு கூட்டு வைத்துக் கொள்ளும் அரசுகளும் என்றாகிவிட்ட நம் காலத்தில் ஞானியின் கலகச் சொற்கள் நாட்டுடைமையாக வேண்டும். உடைமைப் பேய்களோடு ஒரு விவாதம் என்ற கவிதையில் எங்களுக்கு அடிமைத் தளைகளைத் தயாரிக்கும் உங்களுக்குச் சுதந்திரம் இல்லை. உலகை வெளியேற்றிய உங்களுக்கு முடிவுண்டு என்கிறார். ஆட்டம் போடுகிற நீ நிற்க வேண்டிய இடம் குற்றவாளிக் கூண்டு. உலகை நாசமாக்கிய உனக்கு மரணதண்டனையே பாக்கி. உன் சொத்துக்கள் பறிமுதலாகும். எங்கள் ஆயுதங்களை உங்களிடம் ஒப்படைத்தபோதுதான் எம் அடிமைச் சாசனத்தை உருவாக்கிக் கொண்டீர்கள் என்கிறார். மனிதனை மாய்ப்பதுதான் சமயம் என்றால் சமயம் ஒரு பொய் மூட்டை என்கிறார். மரணத்திற்குப் பொருள் தருவோம். வீரத்திற்கு இலக்கணம் வரைவோம். அன்பின் ஆழம் காண்போம். பொறுமையின் பரப்பை விளக்குவோம். போர்க்குணத்தின் எரிமலை காட்டுவோம். கலைகளின் இதயத்தை நெகிழ்த்துவோம் என்கிறார். இடைவிடாமல் கட்டுரைகள் வரைந்த ஞானி தொடர்ந்து கவிதைகள் எழுதியிருந்தால் ஒரு கவிதை மரபு தோன்றியிருக்கும். இந்தக் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்திற்கு இனியும் தேவைப்படும். ஞானி இக் கவிதைகளில் தன்னை ஒரு சமதருமக் கவியாக நிறுவுகிறார். கலகச் சொற்களால் நம் நெஞ்சங்களை நிறைக்கிறார். கவித்துவ ஞானி மறுபடியும் மனிதராவோம் என்கிறார். இக்கவிதை வாசிப்பினுடே. மாற்றங்களுக்கும் போராட்டங்களுக்கும் நம்மை அணியமாக்கிக் கொள்ள முடியும். வாழ்த்துரை உயிரை ஒளித்துவைத்திருக்கும் சின்ன ரோஜாப்பூக் கவிதைகள்! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வியாபார நோக்கம் இல்லாமல், பல நேரங்களில் கைக்காசை. செலவழித்து, தரமான இலக்கியப் படைப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் வணிக இதழ்கள் பேசப்புகாத நாட்டு நடப்புகள், சமூக அக்கறைகளையும், சமூகம், இலக்கியம் குறித்த ஆழமான, அகல்வ ரிவான திறனாய்வுகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடைய ரசனை வளர்ச்சிக்கும், தமிழிலக்கிய வெளியிலான முன்னெடுப்புகளுக்கும் வழிவகுத்ததில் சிற்றிதழ்களுக்குப் பெரும் பங்குண்டு. கோவை ஞானி அவர்களால் நடத்தப்பட்ட ‘நிகழ்’ சிறு பத்திரிகையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. மார்க்ஸியம் சார்ந்த காத்திரமான எழுத்தாக்கங்களை வெளியிட்டும் மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து இடமளித்து, தரமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர்களைத் தொடர்ந்து எழுதவைத்து ஊக்கப்படுத்தியும் நிகழ் சிற்றிதழை மிகுந்த அர்ப்பணிப்போடு கோவை ஞானி அவர்கள் நடத்திவந்தார் (என்னுடைய கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை அவர் வெளியிட்டிருப்பதையும் என் கவிதைகள் தொகுப்பாக வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்) சிறுகதை, நாவல், கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு கூடுதலாக, பத்திரிகை நடத்துதல், நூல் வெளியிடுதல், சமூகம் சார்ந்த, இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடத்துதல், அதற்கும் மேல், வயிற்றுப் பிழைப்புக்காக செய்தாக வேண்டிய வேலை என எல்லாவற்றிலும் ஒருவர் ஈடுபடும்போது, அது ஏதோவொரு விதத்தில் அவருடைய எழுத்துக்கான தனி அடையாளத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடுகிறது என்று தோன்றுகிறது. அப்படித்தான், அவ்வப்போது திரு. கோவை ஞானியின் கவிதைகளை வாசித்திருந்தாலும், அவரை பிரதானமாக ‘நிகழ்’ ஆசிரியராகவே பாவித்திருந்தேன். இப்போது புதுப்புனல் முழுத் தொகுப்பாக வெளியிட்டிருக்கும் கோவை ஞானியின் கவிதைகளை வாசிக்கும் போது மேற்கண்ட எண்ணங்களெல்லாம் மனதில் தோன்றின. கல்லிகை, எனக்குள் ஒரு வானம், தொலைவிலிருந்து முதலான நீள் கவிதைகளும், தீண்டத்தகாதவள் என்ற கவிதை நாடகமும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது திரு. கோவை ஞானியின் கவிதையார்வத்தையும், ஒரு கவிஞராக அவருடைய இடத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நெடுங்கவிதைகளில் கவித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வது தேர்ந்த கவிஞர்களுக்கும் எப்போதுமே பெரிய சவாலாகவே இருக்கும். நெடுங்கவிதைகளில் தனித்தனிக் கவிதைகளைக் கண்டுணர்ந்து ரசித்து வாசிக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நெடுங்கவிதையிலிருந்து கையில் துடுப்பில்லை அப்புறம்தான் தெரிந்தது கடலில் இறங்கிவிட்டேன் உங்களோடு வருகிறேன் நானும் என்று கூறிய மகனோடும் நெடுந்தொலைவில் விண்மீன் நம்பிக்கை தரலாம். தொலைதூரத்தில் எதிரியின் கப்பல் ….. எதுவும் நேரலாம் நேரட்டும் கரையில் மனைவி சிந்திய கண்ணீரை முத்துக்களாய்த் திரட்டியபடி…’ (பக்.108) தனித்தனிக் கவிதைகளிலும் இந்த அம்சத்தைக் காணமுடியும் உதாரணமாக, நம் கவிதையின் முதலிரண்டு பத்திகளே தன்னிறை பெற்ற கவிதையாய் நிற்கிறது ! இறந்துபோன என் நண்பனைப் பற்றி ஏன் இத்தனை பொய் சொல்கிறீர்கள்? சந்தோசமாகச் செத்ததாக சாதனையோடு செத்ததாய் ….. கவிதைக் கரையைக் கண்டதாய். உங்கள் கையளவு இதயத்தைக் கொண்டு அவன் கடலளவு இதயத்தை எப்படி அளந்தீர்கள்? அவன் கவிதைக்கு எங்கே கரைகண்டீர்கள்? (பக்கம் 108) ’இயேசு பிறந்ததைப் பற்றி எனக்கு ஆட்சேபம் இல்லை என்று தொடங்கும் கவிதை (பக்.121) யினுடைய இரண்டாம் பத்தியின் முதல் பகுதி முழுமையான தனிக்கவிதையாக மிளிர்கிறது ஊசியின் காதில் ஒட்டகம் நுழையாது. பாறையில் வித்துக்கள் முளைப்பதில்லை. மரங்கள் சொற்பொழிவுக்கு மலர்வதில்லை. ஆதியில் இருந்த வார்த்தை இன்றுவரை மாமிசமாகவே இருந்திருக்கிறது. ஆவியற்று அவிந்து நாறிப்போன இந்த மாமிசத்தில் இயேசு உயிர்த்தெழ முடியாது. உங்கள் இதயத்திற்குள் புதைத்துவிட்ட இயேசுவை மாமிசப்பாறையைப் புரட்டி வெளிப்படுத்த முடியாது. அதே போல், முழுக்கவிதையும் முழுநிறைவான வாசிப்பனுபவத்தைத் தருவதாயமைந்த கவிதைகளும் இத்தொகுப்பில் கணிசமாகவே உள்ளன: ஒரு சின்ன ரோஜாப் பூவுக்குள் …… இதழாய் …. தேனாய்…. என் உயிரை ஒளித்துவைத்திருக்கிறேன் …… வனமும் என் வாழ்க்கையும் அதன்மீது கவிந்து ….. காற்று வீசி … கண்ணீர் தெளித்து உயிரை உரமாக்கி ……. காத்திருக்கின்றன…. காற்று புயலானாலும்… கண்ணீர் கொட்டினாலும் உரம் காரப்பட்டாலும்… வானமும் வாழ்க்கையும் சிதறி மடியும் …. அப்புறம் வானமே! உனக்கு மறுபிறப்புண்டா ? வாழ்க்கையே ! உனக்கு ரோஜாவாய்ப் பூக்க முடியுமா? (பக்114) ‘கவிதை வரிகளால் ஒருவனைக் கட்டிப்போட முடியுமா முடியும் வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொல்ல முடியுமா முடியும்’ என்று கேள்வி கேட்டு பதில் கூறிக்கொண்டே வரும் கவிஞர் ‘கவிஞன் என்ன கொடியவனா?’ என்று கேட்டு இல்லை; அவனும்தானே உங்களோடு உடன்கட்டையேறுகிறான்’ என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘கவிதை என்னாகிறது?’ என்று மேலும் கேள்வி கேட்டு ‘சாம்பல் மேட்டில் பூத்துக் குலுங்குகிறது ரொமாண்டிக்காக’ என்று முடிக்கும்போது கவிதைக்கு நவீனத்துவம் கைகூடிவிடுகிறது! கவிதை 17இல் (பக்.124) பின்வரும் வரிகள் இடம்பெறுகின்றன: ஆற்றில்தான் மீன்களும் முதலைகளும் மீன்களை ஒப்புக்கொள்ளும் நீ முதலையை ஏன் மறுக்கிறாய்? இத்தகைய கேள்விகள் வாழ்வின் முடியாச் சமன்பாடுகளை, விசுவரூப தரிசனங்களை எந்தவிதமான தம்பட்டமுமில்லாமல் இயல்பாக வெளிக்காட்டி விடுகின்றன! “கொஞ்சம் கூவும் /குயில்களும் மயில்களும் / கூட வரட்டு / ஆம் / கூட வரட்டும் கவிதைகளும் (பக். 77)” ”மலைகள் பழசாகவில்லை/ மலர்கள் /என்றும் புதியவை (பக் 8 ) “இதயத்தில் செருகியிருந்த கத்தியை எடுத்து நரம்பு பின்னல்களை அறுத்துக்கொள்கிறேன்.” “மனிதனை இருவரும் வகிடெடுத்து வெட்டி இடைவொ இணையாத துருவத்தில் கிடத்தினர்” என இத்தொகுப்பில் எண்ணிறந்த கவித்துவ வரிகள்! உள் என்றும், வெளி என்றும் தனித்தனியாகப் பிரித்து பார்க்க முடியாது. அகமும் புறமும் ஆகிய இரு அரைவட்டங்கள் இணைந்ததே மனிதனின் முழு வாழ்க்கைச் சுற்று. இந்தப் புரிதல் முக்கியமாக தற்காலக் கவிதைகளின், தமிழ்க் கவிதைகளில் இயங்குவிசையாகத் திகழ்கிறது. ‘உயிர்க்காற்றால் உலகைத் தழைக்கவைக்க புத்தகத்தில் புகுந்து என்று வாசிப்பையும் எழுத்தையும் குறிப்பிடுகிறார் கோவை ஞானி அவர்கள். ’உள்ளிருந்து ஒரு கனல்’ என்று கவிதையை மிக நேர்த்தியாக, மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். ‘உள்ளும் வெளியும் எதிர்ப்பட்டு மோதித் தெறிக்கும் கனல்’ என்கிறார் (பக். 80). முற்ற முழுக்க உண்மை ! முன்னுரை கவிதைகளுக்குள் கவிதையாய் நா. நளினிதேவி கோவை. ஞானியின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்ப்போமாயின் அவை மொழிப் பொருள் மார்க்சியமே என்பது தெளிவாகின்றது. தொடக்கம் முதல் அவரது மாரக்சியப் பார்வை இழையறாது தொடர்ந்து வந்துள்ளமை வியப்பூட்டுகின்றது. கொள்கை வேறு, பொழுதுபோக்கு வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் மார்க்சியம் செம்புலப் பெயல் நீராய்க் கவிதைகளில் கலந்து சிரிக்கின்றது. கவிதையின் களம் சமுதாய எதிர்ப்பே ….. இந்த எதிர்ப்பு , கவிதைகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பொதிந்து கிடக்கின்றது. எதிர்த்தால் மட்டும் போதுமா?’ ஏன்? எதற்கு? இதனால் என்பவற்றையும், இவற்றுக்கான தீர்வுகளையும் கவிதைகள் கதை கதையாய்க் கூறுகின்றன. காரணங்கள் ஆயிரம் இருப்பினும், அதற்கான தீர்வு மனிதநேயம் மட்டுமே ! மனிதநேயம் மலர்வது சமன்மையில் எனக் காரணமும் தீர்வும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்கின்றன. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும் வீட்டில், சமுதாயத்தில் உலகில் எந்தச் சிக்கலும் இல்லை. மனிதனை மனிதனாக வாழ விடாமல் தடுப்பவை அனைத்தும் உடைமை எனும் ஒரே குடைக்கீழ் ஒதுங்குகின்றன. இந்த உடைமைச் சமுதாயத்தையே தொட்டும், தட்டியும் உடைத்தும், கடைந்தும், களைய முனைகின்றார். காலந்தோறும் இந்த உடைமை எனும் பேரரசர்கள் வளர்ந்து கொண்டே வருகிறான். மனிதனுக்கும் இவ்வரசனுக்குமான போரே இவ்வுலக இயக்கம். உலகையும், மனிதர்களையும் பாடும் கவிதையின் விளக்கமாகின்றது இவ்வுலக இயக்கம் என்பதை ஞானியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன. கவிதையின் சிறப்பு அழகியல் தானே? ஞானியின் கவிதைகளில் அழகியல் உண்டா ? அழகியலை அழிக்கும் கூறுகளைக் கடிந்தும், இழித்தும், வருந்தியும் கூறும்போது அழகியல் அதன் மறுபக்கம் முகத்தைக் காட்டி நிற்கின்றது. அறிவியல் அழகியலா? அறிவியலா இரண்டும் ஒன்றா? இணையுமா? எனின் இரண்டுக்கும் வாய்ப்புண்டு. அழகியலை அழிக்காத அறிவியலைப் பாடும்போது. ஆனால் இங்கேதான் அறிவியலை அழிவாற்றலாக்கி இயற்கையைப் பொசுக்கிப் பசுமையை வெறுமையாக்கியுள்ளனரே! இங்ஙனம் செய்தது யார்? ஏன்? உடைமையாளர்களும், முதலாளிகளும் இவர்களை உருவாக்கும் அரசியலாளரும் அரசுமே! இதனால் மக்கள் உண்ண உணவு, உடைமை, வளம், வாழ்வு, எதிர்காலம், விழாக்கள் சடங்குகள், கடவுளர் அனைத்தும் உடைமைச் சேற்றின் முடை நாற்றம். நாற்றத்தில் உழன்று கொண்டே அதைக் கெடுமொழி கூறிக்கொண்டே களைய முற்படுகின்றன. கவிதைகள். மனிதன் எப்போது சிந்திக்கத் தொடங்கினானோ அப்போதே உடைமை மனப்பான்மையும் முளைவிட்டு அவனது சிந்தனை வளர்ச்சியுடன் உடைமை வல்லாண்மையும் இணைந்தே வளர்ந்து அவனது சிந்தனைத் திறனை முடக்கியதில் மனிதம், மறைந்தது. மனிதத்தை மீட்டெடுக்கும் வழிகள் பற்றிக் கவிதைகள் ஓயாது பேசுகின்றன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் கூறுகின்றன. ஆம்! மக்கள் அடிமையாகி அடிமைச் சமுதாயமான பின்பு, உடைமைச் சமுதாயமும், முதலாளியச் சமுதாயமும் அவற்றிலிருந்து அதனிலிருந்து இணைந்து அதன் மேல் வேர் பரப்பி வானளாவ உயர்ந்துள்ளன. இந்த வேர்களை அகற்றுவதற்கும் இச்சமுதாயங்களை வெட்டி வீழ்த்துவதற்கும் வலிமையான கருவி வேண்டும். அக் கருவியே பொதுமை, தொன்மைக் கதையாகிய அகலிகையைக் கல்லிகையாக்கி இவற்றைப் பேசுகின்றார் ஞானி ! பொதுமை ஒற்றைச் சொல் எனினும், பல கூறுகளைக் கொண்டது. எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் ஒன்றிணைந்தாலே பொதுமைக் கருவிகள் பெறும். இக் கூறுகளை ஞானி சல்லிகையால் இணைக்கின்றார் முதலாளியே. உடைமை சமுதாயத்தின் பல முகங்களையும், கோணங்களையும் கவிதைக்குள் கொண்டு வந்து திரட்டிக் காட்டியுள்ளார். பொதுமையினை உயிர் ஆற்றல் மனிதம் / மனித நேயம் கல்லிகை இந்த மையப் புள்ளியை உள்ளடக்கி நிற்கின்றது எனலாம். மனிதத்தை மிகவும் கடுமையாகத் தாக்கியிருப்பது அடிமை நிலை எனினும், அதில் ஒரு கூறான பெண் அடிமை மிகவும் கொடுமையானது பெண் விடுதலையும் எந்த ஒரு போராட்டமும், தாக்கம் பெற்றவர் முன்வந்து போராடினால் தான் வெற்றிபெறும் ஒருவருக்காக மற்றவர் போராடுவது முழுமையாகாது. சமுதாயத்தில் பெரிதும் இழிவு நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்ணின் குரல். கல்லிகையாய் ஒலிக்கின்றது என்று கொண்டால் நூலின் நோக்கத்திற்கு ஊறு ஏதும் இல்லை. எனக்குள் ஒரு வானம் என ஞானி தனக்குள் ஒரு வானத்தைப் படைத்துக் கொண்டாலும் அந்த வானம் எல்லாருக்கும் பொதுவாகவே உள்ளது. அதன் கீழ் கவிதை விரும்புவோர், படைப்போர், கவிதைக்கு ஆளாவோர் அனைவரும் ஒண்டிக்கொள்ள முடியும் சமுதாய நீரோட்டத்தின் சுழல்களிலும், பாய்ச்சலிலும், வீழ்ச்சியிலும் சிக்கிக்கொண்ட மனிதர்களே இவர்கள். குடும்பம் என்பது சமுதாய ஆய்வுக்களத்தில் ஒரு தரவு. கவிதைக் களத்தில் இந்நூல், சமுதாயத்தையும், கவிதையையும் ஒரு சேர ஆய்வு செய்யப் பெரிதும் துணை நிற்கின்றது. விதி பற்றிய ஞானியின் கருத்தை இந்நூலில் உள்ள ஒரு கவிதை தேட வைக்கின்றது. உயிர்ப்பற்ற வாழ்க்கை இயந்திரத்தின் பற்களில் சிக்கிக்கொண்ட பல கூறுகளைப் பாடும் கவிதைகள். எதுவும் செய்ய இயலாமல், எதுவும்; எல்லாமும் பழகிப் போகின்ற இயற்கையை உணர வைக்கின்றன. ‘தொலைவிலிருந்து’ ஞானி பாடினாலும் அது, நம் உள்ளத்துக்கு நெருக்கமாகவே உள்ளது நான் நானாகவே இருப்பேன் என்ற முழக்கமும், ‘கூட வாரும்’ என அழைக்கும் ஞானி எல்லாவற்றையும் ‘அடிப்படையில் புதிதாய்ப் பின்னப் புதிதாய்ப் பிறக்க அறிவுறுத்துகின்றன. கவிதைக்கு இலக்கணம் கூறி அதன் முகத்தைக் கொஞ்சம்’ காட்டி மனித குழந்தைகளை இயற்கையாக’ இருக்க உலவ விடுகின்றார். ‘உள்ளிருந்து ஒரு கனவை ’மாயத்திரையில் வைத்துப் பார்த்து ’ஆயிரமாண்டுப் புதுமையை, ’இடம் விட்டு இடம் கொடுத்து நோயாளியாகப் போன ’மனிதனை மருத்துவமனையில் சந்திக்கின்றார். ’தீயின் உருவமாம்’ பெண்ணைத் தீண்டாதீர்’ என எச்சரிக்கின்றார். பெண் பாவம் பொல்லாததோ? ‘இயேசுவின் கதையையும்’ அதிகாரிகள் மாமியார் மனைவி, வேலையாளாக இயங்குவதையும் நகையாடும் ஞானி இரத்தத்தில் குழைத்துப் புதுப்பிக்க வேண்டிய புதிய உலகத்தையும் செத்துக் கிடக்கும் மக்களாட்சியையும் ஒரு சேரக் கவிதையாக்குகின்றார். கையில் சுமக்கும் வில், ’இறுதிநாளை நோக்கி இருக்க சுடுகாடு நோக்கிச் செல்லும் ஊர்வலங்களையும் உட்பொருளுடன் காலத்திற்கேற்ற பொருள் தரும் வகையில் காணும் வண்ணம் கவிதைகளாக்கியுள்ளார். ‘எங்களூரில் தேர்த் திருவிழா’ மக்களின் உணர்வற்ற நிலையையும், மனப்போக்கையும், இவ்வாறு மாற்றிவிட்ட உடைமைக் கூறுகளையும் கவிதை ஊர்வலமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கை விதியையும், கடவுளரையும் மட்டுமே நம்பி இயங்காமல் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனாலும் கவிதை திருவிழாவையும், தேர்களையும் மாற்றி அமைக்கின்றது தேருக்குத் தீ வைத்து விட்டுச் சிறுமைகளையும் சீரழிவுகளையும் அதில் எரித்து விடுகின்றது. இது செய்தாக வேண்டிய ஒன்றுதானே! தேராம், திருவிழாவாம் மக்களுக்காகவாம் ! உடைமைப் பேய்கள் உருவாக்கிய போட்டிகளும் பொறாமைகளும், இறுமாப்பும், தற்பெருமையும் உடைமைகளற்ற மக்களின் நண்பர்கள் தோழர்கள், உறவினர்களுக்குள் நுழைந்து குத்தீட்டிகளாய் வெளிப்பட்டு அவர்களையே தாக்கும்போது எரிதழல் ஏந்துவதைத் தவிர வேறு வழி ஏது? உடைமைப் பேய்கள் உருவாக்கித் தந்த வாழ்க்கையே, இவர்களின் வாழ்க்கையை வெளி ஏற்றும் கருவிகளாகவும், பண்ணை நிலங்களாகவும் மாடி வீடுகளாகவும் மாறிப் பொன் நகைகளாகவும் இவர்கட்கு எதிராக இவர்கள் மேல் ஏறி நின்று அழுத்தி இவர்களின் உடல்களை மட்டும் உயிர்க் கயிற்றால் இழுத்துச் செல்லும் கொடுமையை அவ்வுடைமைப் பேய்களுடன் நேரடியாகக் கூறிச் சொற்போரிடுகின்றனர். இப்போராட்டம் இன்னும் முடிவின்றித் தொடர்வதும், தேவைப்படுவதுமே கவிதைகளின் வெற்றி ஆகின்றது. கவிதை மலர்கள், வெறியுடன் பூத்துக் குலுங்கும் காட்டு மலர்களாய் இந்தச் செடி, அந்தக் கொடி, அதோ அந்த மரம் என்று இல்லாமல் எங்கெல்லாம் முகையவிழ்க்க இயலுமோ அங்கெல்லாம் மலைச்சரிவு மலர்கள் என வண்ணமும் மண்டுமாய்க் கருத்தை ஈர்க்கின்றன. மணம் மிகு மலர்கள் எனினும் மலர்ந்துள்ள களங்கள் உள்ளத்தை நெருங்குபவை. சேற்றில் சிவந்து பூத்தாலும், முள்ளிடை மலர்ந்தாலும், கல்லிடையே கண் விழித்தாலும் அவை தம் அழகையும் மனத்தையும் இழப்பதில்லை. மலர்களைப் பாடும் கவிதைகள் இதற்கு விதி விலக்காகுமோ? வலியால் பிறப்பவை வலிமையையும் இழப்பதில்லை. இதில் வியப்பேதுமில்லை. நூற்றாண்டுக் காலமாகப் போராடிப் பெற்றுப் பெருத்த நம்பிக்கையுடன் தொடர்ந்திருந்த விடுதலை பொய்யாய்ப் புனைகதையாய்ப் பழங்கனவாய்க் கற்பனையாகிக் கானல் நீரானது விடுதலையை விடுதலையின் பொருள் அறியாதவரும், விடுதலைக்குப் பெருந்தடையாக இருந்தவருமே முற்றாகத் துய்க்கின்றனர். விடுதலைக்கு அப்பாற்பட்டவர்களே விழுந்து விழுந்து கொண்டாடுகின்றார்கள். 1972 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற ‘வெள்ளி விழா’ கவிதைகள். இன்றும் பொருந்தி, பிளாட்டின விழாவுக்கும் முற்றிலும் பொருந்தும் படியாக உள்ளன ஈரக்கசிவையும் கொதி நிலையையும் தம்முள் நிரப்பிக் கொண்டுள்ள இயந்திரமயமும் தொழில் மயமும், பன்னாட்டுப் பொருளியலும், நுகர்வியலும், முதலாளியமும் இவற்றை உருவாக்கும் அரசியலும் இக்கவிதையை படிமங்களாக, பாடுபொருளாக அமைந்து உள்ளத்தில் சினத் தீயைப் பற்ற வைத்து ஊதி ஊதிப் பெரிதாக்குகின்றன. எரிவது விழாக்கள் அல்ல விழாக்களைப் பார்த்தவர்களே! பட்டினி நிலை, இதழியலின் இழிநிலை கல்லூரிச் சிறப்புத் தெருக்கள், காந்தப் போர்வையின் மூலம் யாவும், அரசியலாளருக்கும் ஆட்சிக்கும் அப்பாற்பட்டவர்களே ! " அவர்கள் கைவிரல்கள் கோத்துக்கொண்டு அறிவை முடக்கிக் கொண்டு அரசு வல்லாண்மைத் திருக்கோயில்களில், தேவாரம் பாடிக்கொண்டு அவர்களை அவர்களே இழந்து அவர்களைத் தேடிக் கண்டு பிடிப்பர். காலமெல்லாம் சிரித்துக் கொண்டு கழிச்சடைகள் கனவு காண வேண்டாம் என அமைதிப் புரட்சிக்கான வித்தை விதைத்துச் செல்கின்றனர். அடடா! இந்த நிலைதானே இன்றும். ஆனால் நாளை கண்டிப்பாக இந்நிலை இருக்காது; மாறும்! மாற்றுவோம் என்று கனன்று எழுகின்றன வெள்ளி விழா நெருப்புக்கவிதைகள். புறத்தே அவர்கள், சிரித்து, மகிழ்ந்து பெருமிதமாய்ச் செருக்காய், ஆணவத்தின் உருவமாய் நடமாடினாலும் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை . உறங்கினால் கனவு வரும். கனவில் இவர்கள் அவர்களை மிரட்டித் துவைத்து எடுப்பார்கள். எனவே கனவுகளில் மட்டுமே உடுத்துப் பெருத்து வந்த மிரட்டுகின்ற நாங்கள் ஒரு நாள் … அந்த நாள் அதிக தொலைவில் இல்லை. அவர்களின் வயல் வெளிகளையும் தொழிலகங்களையும், மாடி வீடுகளையும் எமதாக்குவோம் என்பதில் பொதுவுடைமைப் புரட்சி மையம் கொண்டுள்ளது. கவிதை எங்கிருந்து பிறக்கின்றது என்பதையும், எதுவும் கவிதைப் பொருளாகலாம் என்பதையும் கவிதையின் அழகியலையும் ஞானியின் கவிதைகளே கவிதைகளாகக் கவிதைகளில் விளக்கிச் செல்கின்றன. விதைகளாகச் சில , செடிகளாகச் சில, முற்றுப்பெறாது படறும் கொடிகளாகச் சில, வான் நோக்கி வளரும் மரங்களாகச் சில. இவை அனைத்திலும் பூத்துக் குலுங்கும் மலர்கள் இவைகளும், கிளைகளிலும் ஞானியின் பன்முகத்தைக் காட்டி அவை அனைத்தும் மையப் புள்ளியாம் மார்க்சியமாம் என்றும் மாறாத ஒரே முகத்தைக் காட்டி நிற்கின்றன. கவிதை மனிதனுக்குத் தேவை. கவிதை இன்றி மனிதனும், மனித இயலுக்கும், மனித இயங்கும் களம் எதுவும் இல்லை என்பதை இத்தொகுப்பு அரண் செய்கின்றது. இயற்கையின் இயக்கமும், இயற்கை இயைந்த மனித இயங்களுமே கவிதையின் உள்ளியக்கம் என்ற ஞானியின் பொய்யியல் விழுந்த மார்க்சியம், தமிழின் ஆழ, அகல், விரிவுடன் தொகுப்புக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சிறிய கவிதை முதல் தொடர் கவிதை அனைத்தும் மனிதம் எனும் இழைகளால் பின்னப்பட்டுப் பொதுமை எனும் ஆடை கட்டி அசைந்தாடுகின்றன. செயற்கை எனும் எரிமலைக்குள் பொசுங்கிக் கொண்டிருக்கும் இயற்கையையும், இயற்கையின் குழந்தையான மனிதனையும் மார்க்சியப் பார்வை எனும் வலுவான கருவி கொண்டு மீட்டெடுக்கும் முயற்சியின் பன்முகப் பார்வையே. ஞானியின் கவிதைத் தொகுப்பு. இக்கவிதைகள் காலத்தை வென்று நின்று, மாறிக் கொண்டிருக்கும் மாறாத தேவையை முன்னிறுத்திக் கொண்டே இருக்கும் என்பது வெறும் புகழ்ச்சி அன்று. ஞானியின் கவிதைத் தேடலைப் போலவே உளமார்ந்த உண்மையே. உள்ளே … கல்லிகை எனக்குள் ஒரு வானம் தொலைவிலிருந்து…. தீண்டாதவள் (கவிதை நாடகம்) வெள்ளிவிழாக் கவிதைகள் கல்லும் முள்ளும் கவிதைகளும் கல்லிகை நான் கல்லாகிக்கொண்டிருக்கிறேன் …. மனித வடிவினர் என்னைத் துரத்துவதால் அவர்கள் எல்லையிலிருந்து ஓடி ஓட ஓடக் கல்லாகிக்கொண்டிருக்கிறேன்… எத்தனையோ முறை என் நரம்புக் கொடிகளில் நானே முடிச்சிட்டு… முடிச்சிட்டு … என் உணர்வுகள் என்னையே எட்டாமல் கட்டிவைத்திருந்தேன் - இன்று … இதயத்தில் செருகியிருந்த கத்தியை எடுத்து நரம்புப் பின்னல்களை அறுத்துக்கொள்கிறேன். என்னுள் உலகைப் புதைத்த நான் - இன்று … என்னையே எனக்குள் புதைத்துக் கல்லறை யொன்றைக் கட்டிக்கொள்கிறேன். எனக்கு நேர்ந்த கொடுமையை … எப்படிச் சொல்வேன்? எனக்கும் எந்தப் பிறப்பிலோ மனம் என ஒன்று இருந்ததாக நினைவு தாயின் அணைப்பில் … தந்தையின் அறிவில் தோழியர் ஆட்டத்தில் தோகைகள் கூட்டத்தில் உறவின் நெருக்கத்தில். உறவின் இளகலில்.. முளைவிட்டுக் கிளைத்து – வானப் பரப்பில் வளர்சோலை அழகில்.. ஆற்றின் ஓட்டத்தில் … அருவியின் ஓசையில் .. காலை ஒளியில் … கதிரவன் எழுச்சியில்… மாலை வெயிலில் … மதியின் மயக்கத்தில் … இடியின் வெடிப்பில் … மின்னலின் வெட்டில் … வறண்ட வானில் … வயிற்று நெருப்பில் சாவில் … நோவில் … மொக்கு விட்டுப் பூத்தது என் மோக மனமலர். அந்த மலரை – அந்தக் கொடியோடு சேர்த்து என்ன செய்தனர்? எதிர்காலக் கனவு நறுமணத்தைச் சுமந்து புன்னகைத்த என் மனத்தை உடற்கொடியோடு சேர்த்து தானமளித்தனர். தாய் தந்தையர். நல்லதோர் தவமரத்தில் பற்றிப் படர எண்ணி .. கட்டித்தழுவினேன்! ஓ.. கையறுபட்டேன்! எனக்குத் திருமணம் ..! இந்நினைவே எனக்குக் கசக்கிறது! திருமண நாளில் மணவறையில்.. இடப்பட்ட வேள்விப் புகை மூட்டம் என் வாழ்வில் எப்படியோ கப்பிக்கொண்டது! எத்தனையோ பெரியோர் தங்கள் வாழ்வின் ஏமாற்றக் கனலை வாழ்த்து மாலைகள் என்ற பெயரில் சொல்மலர்களுக்குள் மறைத்து என் மீது தூவினால் – எத்தனை நேரத்திற்கு இதன் குளிர்ச்சி நிற்கும் ? அந்த முதலிரவு.. மந்திரம் ஓத அமர்ந்தவர் யோகத்திலேயே உறங்கிப்போனார். ’காலம் என் கண்ணீரில் வறண்டு மறைந்தது. நான் ஆசையோடு வளர்த்துவந்த என் ஆன்மக் குழந்தையை முதலிரவிலேயே கொன்று புதைத்த கொடியவன் காலையில் நான் யோகத் திறத்தை மெச்சியபடியே பாடிக் காதலியைத் தடவிக்கொடுத்தான் இந்திரனுக்கெதிராக எடுத்த போரில் முற்ற, நின்ற முனிவனல்லனோ! என் கணவன் மானோடு ஓடவிரும்பிய என் கால்களில் மந்திரக்கயிறு பூட்டினான்! காடெல்லாம் சுற்றிவர விரும்பிய என்னை – குடிசைக்கொட்டிலில் கட்டிப்போட்டான் பருத்தியாடைப் பரிசு கேட்டபோது – தழையாடைத் தண்டனை நல்கினான்! மனக் கொடி வீட்டைக் கட்டும்போது – வேதப் படையால் வெட்டிப்போட்டான்! தெய்வமே…! என நான் புழுங்கியபோது – கல்லையும் புல்லையும் நட்டுவைத்தான்! ஓ! அந்த, வசந்த ருதுவாம் இளமையின் விடியலில் நான் எவ்வளவோ கேள்விப்பட்டேன்! இந்திரன் ! இவனைப்பற்றியே எங்கும் பேச்சு! குறுங்காட்டுக் குழுக்களிடையில் நிலம் பிளந்தோடும் நெடிய ஆறாக இவன் படைகொண்டெழுந்தான். புதர்களை வெட்டப் ‘புஸ்’ ஸெனச்சீறும் பாம்புப் படையாய் மறவர் வெகுண்டனர். உலக வாழ்வை உதறி எறிந்து வீரவாழ்வை விளையாட்டாக்கினர் இந்திரன் படை ஏற்றிய தீயில் காடே எரிந்து கருகியதோடு மறவரும் சாம்பலாய் மண்ணை மூடினர். தனியரசாகிப் பவனி வந்தான் இவன். வச்சிரப்படையானின் எண்திசைக் கைக்குள் மாட்டிக்கொள்ளாமல் காட்டு வேலிக்குள் இதயக்காட்டை விரிவிடம் ஆக்க ஓடி ஒளிந்தனர் எம்மவர். வேள்விப் புகையால் மூடிக்கொண்டனர்! நிலத்தைக் குடைந்து இரும்பைக் கண்டு ஆற்றை மடக்கி வயலிற் பாய்ச்சி காளையைக் கட்டி ஏரில் பூட்டி வித்துகள் தேடி விளைவைப் பெற்று ஆடைபுனைந்து அணிகலன் செய்து வீட்டையமைத்து வியன் நகர் கண்டு தேட்டைப் பெருக்கிய தேவேந்திரனை எம்மவர் பேயாய்ப் பிசாசாய் நாயாய் நரியாய் எள்ளித்தள்ளினர்! இவனால் உலகமே உருவிழந்தழியும் என்று பேசினர் அப்போது நான் ஆறுவயதுப் பேதை! எங்கள் குடில்கள் இருட்காட்டில் இருந்தன. ஆற்றுக்கப்பால் திறந்தவெளியில் வயல் வெளிக்கிடையில் புதியதோர் உலகம் பூத்தது இருவேறுலகங்கள் எதிரெதிர் நின்றன. எங்கள் விழிகளில் எவ்வளவுதான் கறுப்பு மை பூசி காட்சிகளை இருட்டடிக்க எம்மவர் விரும்பினும் " எங்கள் இதய நிலவில் எழில்மிகு காட்சிகள் எதிரொளித்தன! ஓ.. ! நான் என்ன ஆனேன்..? என் ஆசைக்கொடிக்கு வேரிலே வெட்டு முனிவனது வேள்விக் கட்டிடத்தில் நானொரு செங்கல் இடையறாது எரியவிடும் தீயைத் தூண்ட நானொரு கோல் வேள்வி செய்யவே பிறந்தவனின் உடலுக்கு நானொரு அங்கம் என் ஆத்மாவிற்கு இவ்வளவுதான் ஆயுளா? இவன் மந்திர மொழியை வாயில் அரைத்து, வேள்வியில் இதயத்தை வேகவைத்துத் தின்று, உடலக்கூட்டை உயிர்க்கயிற்றில் கட்டி இழுத்துத் திரியும் எந்திரம்! இந்தக் கபாலிக எந்திரத்தின் ஞானக்கோடரிக்குக் கிடைத்தது என் கழுத்து! அங்கும் இங்கும் அசைக்க முடியாதபடி இறுகப் பற்றி என்னமாய் வெட்டினான்…! நான் பட்ட பாடுகள்… எத்தனை முறை அவனை இழுத்திழுத்து அணைத்திருப்பேன்… எனது தாகக்குளத்தில் மூழ்கடித்துக் கொன்றிட கனத்த கல்லை நெஞ்சில் கட்டிக்கொண்டு ஒவ்வோர் இரவும் உலவிவந்தேன்… இவனோ புரியவிழ்ந்த கயிறாய் …. திரிந்துவிட்ட பாலாய். ஞானக்குளத்தில் நனைந்து கிடந்தான்… அடங்கிப்போன இவனுக்கு மூச்சுக்கொடுத்து உடலுக்குக் கணப்பூட்டி எழுப்பிட என்ன செய்தும் முடியவில்லை… என்னால். என் இதயத்தை எடுத்துப் படுக்கையில் கிடத்தி எத்தனை இரவுகள் வைத்தியம் பார்த்தேன்… இளைப்பு நோய் கொண்ட இதன் பொருமலைத் தணிக்கமுடியாமல் தவித்துக் குழம்பினேன். ஒரு நாள் கேட்டேன். ’வேதமாவது கற்றுத்தருக.. உங்களைப்போலக் கிளிப்பிள்ளை ஆகிறேன். நீங்கள் தரும் நெல்லின் பத்திலேயே உறங்கிப்போவேன் வேள்வி வளர்க்க அனுமதி தருக ! காமச்செடியைக் கருக்கிவிட்டால்.. ஓமக்கொடிதான் உயர வளருமே…! பலமுறை கேட்டேன் … பதில் என்ன தந்தான்? பேதைப் பெண்ணுக்கு ஆன்மத்தேவை வேண்டாம்! ஆன்மா கனக்கத்தொடங்கினால்.. அந்தச் சில்லறையைக் காப்பதே கடமையாகிவிடும். ஆற்றங்கரையில் ஆசிரமப் பெண்கள் நீராடக் கூடிய போது நெஞ்செரியப் பேசினோம்… எம் குழந்தைகள் மூலம் மண்ணில் வேர் பிடித்திருந்த எம்மால் வேரை அறுத்துக்கொண்டு விண்ணில் விளையாட முடியவில்லை. விரிந்துவரும் உலகப் பரப்பை இதயத்தில் மூடிவைத்து மூன்றே முக்கால் நாழிகையில் உலகமே காய்த்துக் கொட்டும் என்ற மோடிவித்தையை நம்ப எம்மால் இயலவில்லை.. எம் குழந்தைகள் மூலம் எதிர்காலம் இருண்டுவந்தபோது விளக்குகளைத் தேடினோம். அவை. ஆற்றின் மறுகரையில் தின்ன விழிகளைச் சிமிட்டிக் காட்டின மழலைமொழிப்பூக்கள் கிளைக்காத மொட்டை மரமாய் நான்…. விண்ணுக்கும் வேதனையாய்…. மண்ணுக்கும் பாரமாய்… காலவெளியிலே வீணே நின்றபோது ஆசைக்கிளைகள் விரிந்து பெருத்தன். இவன் எப்போதோ ஒரு முறை என்னை நெருங்கினான்…. அது.. எப்போது….? தவப்பயனை மனயானை அழித்து மருட்டும்போது தன் உடல் காப்புக்கு என் மேனிமலையில் ஏறிக்கொள்வான் அதுவும்.. முன்னிரவில் உரிமையோடு வாராமல் நள்ளிரவில் திருடனாக வந்து .. என்னைக் கேட்பானா.. மாட்டானே .. மேனிமலையில் ஏறி .. நாகப்பாம்பாய் முகம் தூக்கி ஒருசில முறை ஊதித்தள்ளி விஷவித்தை உடலில் தூவி இறங்கி ஓடி.. மனக்குகைக்குள்ளே மறைந்துகொள்வான் காலையில்.. வேதத்தை வேகமாய் விசிறுவான்! ஞானவேள்வி நடந்தது. என் மனத்தில் ஆசைப்புயல் ஆர்த்தெழுந்தது! ஆசைப்புயல் அடித்தடித்துத் திமிர்ந்துகிடந்த என் தசைத்தீயை எந்த நாய்க்கு முன்னரும் எடுத்தெறியத் தயாரானேன். அந்த நாய் தனது கருக்கரிவாள் பல்லில் என் தசைத்துண்டைக் கடித்துக் குதறுவதில் சொர்க்கத்தையே துய்த்திடலாம் என்று துடித்திருந்தேன். அப்போது என்றுமில்லாததொரு பரபரப்பு…! இந்த முனி வேடர்கள் எந்தப் பறவையை எத்தனைப் பறவையைப் பிடிப்பதற்கு இத்தனை வேகமாய் வேள்வித்தீ வலையை முடுக்குகிறார்கள்? இவர்கள் வேதமொழிகளுக்கு இத்தனை கம்பீரம் எப்படி வந்தது? காற்றில் கலந்த புகைக் கனத்தால் மூச்சுத்திணற முனிவர்குலப் பெண்கள் கேட்டுக்கொண்டோம் கிடைத்தது ஒரு பதில்: காட்டுவழிகளில் ஊர்வலம் நடத்தி கிட்டிய பொருளெலாம் தனதென்று இந்திரன் முத்திரை குத்துகிறானாம்! வேள்விக்களத்திற்கு விரட்டி வரும் மாடுகளை தடுத்து நிறுத்தி தன் வயற்புறங்களில் ஏரோட்டுகிறானாம்…! காட்டு மனிதரை வேட்டையாடி விரிந்த வயல்களில் உழைக்கவைக்கிறானாம்… இந்த அடிமை மாடுகள் கலகம் செய்கையில் …. வச்சிரப்படையால் வாகை கொண்டானாம்! வேதவாழ்வை மிதிப்பதற் கென்றே ஆசிரமங்களை அழிக்கின்றானாம்; இவனுக்கெதிராக எத்தனை வேள்விப்படையை விடுத்த போதிலும் இடியைப் படைகொண்டான் இளைத்திடவில்லையாம்; தெய்வங்கள் இவனைத் தீய்த்திடவில்லையாம், கடவுளர்க் கிடையில் கலகங்கள் வந்ததாம்; திசைக்கொன்றாகச் சிதறி நின்றனவாம்; இவர்களை இணைத்து … வளைத்து ஏவல் கொள்ள ஒருவர் வேண்டுமாம்; ஊர்போற்ற ஈடு இணையற்ற ஒருவர் தலைமையில் கடவுட் படைதான் திரண்டாலொழிய வெற்றிக்கு வேறு வழியேயில்லையாம்! வேத வேள்வி மந்திரங்களால் விண்ணை நிறைத்தனர் ஆடுமாடுகளாக எங்களை அழ அழ வெட்டி வேள்வியிலிட்டனர்…. எங்கள் மனித உடலின் மதுவை அருந்தியவாறே அமுதம் காய்ச்சி வடிக்க இதயத்தைப் பிழிந்தனர்…. எங்கள் சோக விழிகளில் ….. கண்ணீர்த் திரியிட்டு விளக்கேற்றி வைத்து விடிய விடிய சொர்க்கத்தின் வழியைத் தேடலாயினர் ஒரு நாள். . இவன் வளர்க்கும் ஞானமரத்தின் வேரடியைக் கல்லி அங்கு அரித்துவரும் புழுக்களைப் பார்க்க விரும்பினேன் இவன் கூறினான் "இதயத்தில் ஒரு மன்னனை எழுப்பிக்கொள்வேன் என் சிந்தையை … கைகால்களை அவனது தேரில் கட்டிக்கொள்ள விரும்புகிறேன் இதற்காகவே சிந்தனைக் குகையில் தவமிருக்கிறேன். இன்பப் புதையலை எடுப்பேன் நான்! சொர்க்க சுகத்தைத் துய்த்திடுவேன் நான்!’’ நான்! நான்! நான்! ஆணவக் கொழுப்பைத் தீயிலிட்டு எரிப்பதைவிட்டு ஞானக் கொழுப்பை நாடும் மேதை! அடிமைத்தளையை விடுதலையாக விளையாட்டுக் காட்டும் வித்தகன்! அன்றியும் …… இந்தக் கழுதையும் இன்பப் பொதிக்கா தவம் செய்கிறது? இன்று வேண்டாமெனக் கைமறித்து இன்ப மதுவை நெடுங்காலம் வைத்து நெடியேற்றி குடித்துக் கூத்தாடும் கோமாளியா இவன்! இவனுக்கு விடுதலை இவ்வுலகில் இல்லை! என் இதயம் செத்து, செத்த பிணத்தை மஞ்சளிட்டுக் குளிப்பாட்டி மலர்களிட்டு மணமூட்டி பாடை கட்டி உலக ஊர்வலமாய்த் தூக்கி நடந்தேன் எங்கள் இல்லத்தில்தான் இப்படி ஒரு படி என்பதில்லை எல்லா வீடுகளிலும் ’ஈர விறகிலிருந்து இப்புகையே எழுந்தது. மனத்தின் மூலைகளில் மண்டிய ஒட்டடை வலைகளைக் கலைக்கும் முயற்சியைக் கைசலித்து விட்டோம். ஆம்! இரும்பு உடலுடன் கரும்பு இதயத்துடன் என்றாவது ஓர் ஆடவன் பிறந்த மேனியில் ஒருமுறை வந்தால்.. இளக இடுப்பில் கட்டியிருந்த கற்புச் சேலையை காற்றில் விட்டுவிடத் தயாராக இருந்தோம்…! எங்கள் முனிசிரேட்டர்கள் அப்படி ஏதும் நேர்ந்துவிட்டால்… ‘இறைவனே வந்தான்’ என்று புராணம் எழுத ஏடும் எழுத்தாணியும் இடுப்பிலே வைத்திருந்தனர்… அப்போதுதான் .. காட்டின் நடுவே ஊர்வலம் வந்தவன், என் இதயத்தையும் தனக்கானது என்று கட்டிப்பிடித்தான் தினவெடுத்த மேகத்தின் மீதேறி மின்னல் கரத்தால் வெட்டி முழக்கி ஆசைக்கடலைக் கொட்டும் சொர்க்கத்தின் தலைவன் அவன் – பதுங்கி வந்தவன் இதமறிந்து வந்தான் வானம் இருண்டது ! வையக இயக்கம் நின்றது! உலகம் என்னுள் உருளலாயிற்று. இடியும் மின்னலும் என் மேனியைத் தாக்கின. மின்னல் உருகியோடிற்று… விண்டது நிலம்! கொட்டியது மழை! சொர்க்கமே எனக்குச் சொந்தமாயிற்று. வந்தவன் பல இரவும் வந்தான். கமழும் கற்பூரத்தின் வாசனை ஆனேன்! கற்பனைப் பெட்டியிலிருந்து வைர வைடூரியங்களை நான் மூச்சுத் திணறும்வரை என்மீது கொட்டினான். விந்தை மலர்க்கூட்டத்தில் என் மேனி மறைந்து நான் பிணமாகும்வரை என்மீது இறைத்தான். இலையாலும் மலர்களாலும் இணைத்த புத்தாடைகளை என் எதிர்கால வாழ்வுக்குக் கட்டிப்பார்த்தான். பேரின்பத்தைப் பிழிந்தெடுத்த மூலிகைச் சாரத்தில் என்னை ஊறவைத்துப் பாடகம் செய்தான் எதிர்கால இன்பச் சொர்க்கத்தை என்முன் காட்டி மூடிக்கொண்டான் என்னையே நான் பார்த்துக்கொள்ளமுடியாத இருள் வெளியில்.. இன்ப அச்சுக்குள் இதமாக அடைபட்டுக்கிடந்தேன் இந்திரன் என்னென்னவோ சொன்னான் காட்டுச் சிந்தனைப் புதர்களை வெட்டி வாழ்வின் நேர்பாதையை வகுப்பதற்கே வச்சிரம் எடுத்ததாக வகைப்படுத்தினான் முரட்டு வாழ்வில் திரியும் விலங்கை வயல் வெளியிடையே மனிதராக்கவே தாம்பு எடுத்ததாய்த் தனிமொழி கூறினான். இயற்கைச் செல்வத்தை எடுப்பதற்காகவே வறுமைக் காட்டில் சிதறிக்கிடந்து துடிக்கும் மனிதரைத் திரட்டுவதாய்க் கட்டுரை கூறினான். இவ்வாறு இன்பத்தைக் களவாடி நான் தின்றபோது வேள்வித்தீயின் ஆரவாரம் வெற்றியைத் தந்ததாகக் கூறிக்கொண்டனர். உருவேற்றி … உருவேற்றி.. இறைவன் உருவைப் பெருக்கி அண்டத்தை அவனுக்குள் அடைத்து அதற்கப்பாலும் – இறைவன் ஆட்சியை எழுப்பினர் முனிவர் இதயக்குடத்தில் வடித்தெடுத்த இறைவனை இந்திரனுக்கெதிராக நிறுத்தி வெற்றிகண்டதாக விளம்பி இவனது ஆட்சி எல்லைக்குள் எல்லாவற்றையும் திணித்தனர் இந்திரன் உட்பட எவரும் அவனன்றி அசைவதற்குரிமை யில்லை. எங்கும். எப்பொருளாகவும் எவராகவும்.. எல்லா இயக்கமாயும் இருப்பவன் அவனே என்று வேதம் வகுத்தனர். விரிவுரை கூறினர். இந்திரனாட்சியும் இறைவனுக்கெதிராக நிற்கத் திறனில்லை என்றே நிகழ்த்தினர் ஆன்மச் சொத்தின் அருமை பெருமை போப் மேலுலகத்தின் மேன்மை உண்மை நிர்வாணவெளியின் நீள அகலங்கள் எல்லாவற்றையும் எம்மவர் கண்டனர் வெற்றியின் விளைவுக்கு விழா எடுத்தனர் காட்டில் சோமரசக் கடுநெடி கலந்தது. குடலைப் புரட்டியெடுத்த வெறுப்பில் வாந்தி எடுத்தேன் என்னைத் தின்று இதயத்தில் வளரும் கருவை எடுத்து வெளியில் கொட்டிவிட வாந்தி எடுத்தேன் வேள்விக்கரையில் தவளையாய் நிமிர்ந்திருந்த முனிவன் மின்னல் கண்ணில் விழிக்க… இடி இதயத்தை வெட்ட.. சிந்தனைப்புயல் மோத… அகல்வானமாய் அசையாதிருந்தான் இருள் நிறைந்த வைகறையில் எனக்கு விடியல் பிறக்குமென்று காத்திருந்தேன் காலக்குளம் இருளாகக் குழம்பியது மூச்சுத்திணறிய விண்மீன்கள் வெளிவந்து விழித்தன தளையிடப்பட்ட கால்களை இழுத்துக்கொண்டு எருமை இரவு மெல்ல நடந்தது. எத்தனை தரந்தான் ஏறிமிதித்தும் கொட்டமடங்காச் சேவல் உடல் நிமிர்த்தி ஓலமிட்டது. இருளுக்குள் ஒளியைத்தேடி கண்பஞ்சடைந்திருந்த என் கணவன் உடலைச்சுருட்டி வெளியில் கொண்டு சென்றான் பூனையாய்ப்புகுந்து தசைப்பஞ்சுடலால் கட்டித்தழுவியவன் காதில் முன்னிரவுச் செய்தியை ஊசியாய்ச் செருகினேன் தீயின் சுவையுடலில் தோய்ந்திருந்தவன் கம்பளிப்பூச்சியைக் கட்டிக்கொண்டவன்போல் வெருட்டென எழுந்தான். இன்பத் திருட்டுக்காக எத்தனையோ வடிவெடுத்தவன் எங்கோ யாரோ ஒருவனின் மனைவிக்கு அவளாகக் கெஞ்சிக்கேட்டுத் தான் ஈந்த கருவிற்கு எப்படி உரிமை கொண்டாடுவான்? நள்ளிரவில் திருட்டுத்தனத்தில் ஊரறியாமல் உறவறியாமல் கேவலத்தில் கிளைத்துவிட்ட கருவிற்கா தன் பட்டயம் கட்டுவான்? வேண்டா வெறுப்பாய் என்னுள் நானே திணித்துவைத்த உலகம் என்னைவிட்டுத் தானே கழன்று எங்கோ மறைந்தது. கண்திறந்து பார்த்தேன். கதவை அடைத்துக்கொண்டு நின்றவன் வாயில் நெருப்புக் கனன்றது ! உடற்சருகைத் தன் மரவுரியால் அள்ளிவந்த முனிவனைக் கண்டு இடியைப் படைகொண்டவன் என்ன மாய் ஓடினான்! ஞானத்தாடியை அசிங்கமாய் வளர்த்தவனைக் கண்டு கனத்த உடல் இரும்பைத் தூக்கிக்கொண்டு என்னமாய் ஓடினான்! திருட்டுச் சொத்தான என்னை இன்பமாய் எடுத்துக்கொண்டு "ஏய்! கிழட்டு முனிவா! வேதத்தை ஓதி ஓதி விவேகம் கெட்டவனே! உனக்கு மனைவி ஒரு கேடா?’’ என்ற ஒரே கேள்வியில் முனிவனைச் சாணியாய்த்தட்டிக் கூரைமேல் எறிந்துவிட்டு குதிரைபோல் பாய்வதைவிட்டு தன் உடையில் படிந்த என் பார்வைத்தூசியை உதறித் தள்ளிவிட்டு வெள்ளத்திலிருந்து நீட்டிய என்கைகளை வெட்டித் தள்ளிவிட்டு என் இதயக்குடத்தில் எடுத்துச் சேர்த்திருந்த இன்பக் கனவமுதத்தைக் கொட்டிக் கவிழ்த்து நாய் நக்க விடுத்து தான் விரித்த அகப்பொருள் உரைக்கு ஆதாரமே இல்லை என்று ஏட்டைக் கிழித்தெறிந்து … என்னமாய் ஓடினான்! முனிவன் சபித்தானாம்…? - எங்கே சபித்தான்..! பலமற்ற மனத்தரையிலிருந்து ஆத்திரப்புயல் கிளப்பிய சொற்புழுதியைக் கண்டே என்னமாய் ஓடினான் இந்திரன் எதற்கெடுத்தாலும் சாபச் செருப்பைக் கையில் எடுத்தாடும் இந்தக் கள்ளிமரத்தை நான் அறியேனா? எத்தனை முறை இவன் எனக்கு சாபம் கொடுத்திருக்கிறான்! இவன் எடுத்தெறிந்த சாபக் கற்களைக்கொண்டே என் மனக்கோட்டையை உறுதியாகக் கட்டிக்கொண்டேன். என்றாவது ஒருநாள்…. இக் கோட்டையை இடித்து இவன் தலையில் கொட்டக்கிடந்தேன். குலைத்துவிட்டானே இந்தக் கோழை எனது உடலின் மூலை முடுக்குகளில் ஊறிய இன்பத்தை ஒரு துளி விடாது உறிஞ்சிக் குடித்த சுரண்டல் மன்னனுக்கு என்னை நானே இழந்துவிட்டது எப்படித் தெரியும்? கொடுத்தேன் வாங்கினேன் என்ற கொள்கைவாத வணிகப் பேய்க்கு எனது நட்டம் எப்படித் தெரியும்? அதிகார மாலையில் அழகு மங்கையரைக் கோத்து மார்பிலிட்டுச் செருக்கித் திரியும் காமுகனுக்கு என் இதயக் கருவின் ஏக்கம் எப்படித் தெரியும்? ஓ…! இவன் என்னை என்னென்ன செய்தான்…..! இந்த உலக்கை ஆடவன் என்னைத்தனக்குப் பூணாக்கினான் இவன் உடல் அழுக்குக்கு என்னைச் சாக்கடையாக்கினான் இந்த நாய் குளித்துக்கொள்ள என்னைக் குளமாக்கினான் இவன் தன் செல்வத்தைப் பூட்டி வைக்க என்னைப் பொக்கிசமாக்கினான். இவன் தன்னோடு படுத்தெழும் பாவையாக்கினான் என்னை – இவன் என் உடலைக்கொண்டே என் ஆசைகளைக்கொண்டே என்னை எவ்வளவு கேவலப்படுத்திவிட்டான்! இவன் என்னை மட்டுமா கேவலப்படுத்தினான்? இவன் ஒருவன் மட்டுமா எங்களைக் கேவலப்படுத்தினான்? இவர்கள் எங்கும் இருந்தார்கள்! எத்தனையோ பேர் இருந்தார்கள்! இவர்கள் உடற்பாத்திக்காகவே உயிர்ச் செடி வளர்ப்போர்! உடற் புதையலை எடுக்கவே உலகைத் தோண்டுவோர்! அதிகார மரத்திலேறி வித்தை பயில்பவர்! கைக்கெட்டியவற்றைத் தம் வேலிக்குள் அடைப்போர்! நீதிதேவதையின் கண்களைக் கட்டிவிட்டு அவளது கையில்தம் தராசை நிறுத்துவோர் இந்தப் பேய்களே எம் உடலையும் உள்ளத்தையும் காலங்காலமாகக் காவு கொள்ளுகின்றன. என்னை விட்டுப் பிரிந்து – வடக்கு நோக்கிச் சடைவிரித்துச் சென்றவன் தன் மனத்தோடு பேசிக்கொண்டான்…. ’அகலிகை ஓர் ஊதாரி வேதியர்குலத்தின் சிந்தனைச் செல்வத்தை விரைவில் செலவழித்துவிட்டு எவர் கொடுக்கும் கடனுக்காகவும் இதயத்தைக்கூட பணயம் வைக்கக் கிளம்பிவிட்டாளே! எங்கோ பயணம் செய்யப் புறப்பட்டவள் இடைவழியில் திசைமறந்து மனவெளியின் பாழ்நிலத்தில் மயங்கி நின்றாள். இடைநிலத்தில் சந்தித்த எந்தப் பேயுடனும் உடன்பாடு செய்ய உறுதி கொண்டானே! அகலிகை நீ ஒரு விந்தைப் பெண்… ஆக்கமும் அழிவும் உனக்கு எளியவை! இன்று நீ கல்லாகின்றாய்… காலம் உன்னிடத்தில் கனிவைச் செய்யும். முன்னம் ஒருநாள் முடிவிலாநள்ளிரவில்… கண்டு விதிர்விதிர்த்த கனா என் நெஞ்சில் குத்திட்டு மறைந்தது…. நெடுந் தொலைவில் ஓர் ஒளி வட்டத்தினுள் இந்திரன் தெரிகிறான். அவன் நிழலில் இணைந்து நிற்கிறான் முனிவன். உலகம் எனதே என உரக்க முழங்குபவனை நோக்கி நீயே இறைவன் என முனிவன் வேதம் விரிக்கிறான். இருவரின் காலடியில் ஓர் அனாதை மனிதன்! காலச் சக்கரத்தில் கழுத்தைக் கொடுத்து நெறிபடுகிறான். உற்றுப் பார்க்கும்போது அவனது கண்களில் என் முகம் விழிக்கிறது. ஆம் நான் கல்லாகிக்கொண்டிருக்கிறேன். கற்சிலையானால்கூட நாய்கள் என் முன் எச்சில் கொட்டும் என்பதால் கரடுமுரடான கல்லாகிக்கொண்டிருக்கிறேன் மனிதப் பேய்கள் நடமாடாத.. காலம் மறந்த காட்டில் கல்லாகிக்கொண்டிருக்கிறேன் காலம் எனக்கு மேல் காற்றாகக் கழிகிறது. நஞ்சு கலந்த குழம்பிய மனக்குட்டையிலிருந்து நினைவு மீன்கள் மேலே மிதந்து வருகின்றன. அவற்றின் நறுமணத்தில்.. நாற்றத்தில்.. எனக்கு நானே பலமுறையும் பூசை போட்டுக்கொள்கிறேன் இருவருக்குமிடையில் எனது வாழ்க்கை எப்படித்தான் சுழன்றது.? ….!! ஞானக் கோயிலில் வழிபடத் தகுதியில்லை என்று ஒருவன் என்னை உடற்பாதளத்தில் ஒதுக்கித் தள்ளினான்; ஊனக் கோயிலில் வழிபாடே எனக்குச் சொர்க்கம் என்று இன்னொருவன் உறுதிகூறி என்னை உடற்சாக்கடையாக்கினான். இருவருக்குமிடையில்….!! இதயக்குழிக்குள் புதைக்கப்பட்ட தனது ஆன்மாவை வெளியிலெடுத்து உயிர்கொடுத்துக் கொஞ்சிய ஒருவன் எனது ஆன்மாவைத் தூக்கிலிட்டான் தூக்கில் தொங்கிய எனதுடலை இன்னொருவன் எடுத்துக்கிடத்தி உயிர் கொடுக்க முனைந்து உயிர் வந்தபோது மீண்டும் என்னைத் தீயிலிட்டுச் சாம்பலாக்கினான் எனக்காக இன்னொருமுறை குடம் உடைகிறது. கொள்ளிவைக்கப்படுகிறது. மனிதக்கரு மறைந்து கிடக்கின்ற பெண்ணுருவை இதயக் குருடர்கள் தடவிப்பார்த்தார்கள். எனக்கு இதயமே இல்லைஎன்றும் இதயமே தேவையில்லை என்றும் கையடித்து என் கருவைக் கலைத்து என் இதயத்தை வெளியேற்றப்பார்த்தார்கள். அடிமையாக இருப்பதே மோட்சத்திற்கு வழி என்று ஒருவன் வேதம் ஓதினான்; அடிமையாக இருப்பதே மோட்சம் என்று மற்றவன் அகப்பொருள் அறைந்தான். ஒருவன் என்னை காலுக்குச் செருப்பாக்கிக் கழற்றி எறிந்தான். மற்றவன் தோலுக்குப் போர்வையாக்கித் தூர எறிந்தான். இரு நாய்களும் என்னிடத்தில் எலும்பையே தேடின. இதயத்தைத் தேடவில்லை! என் இதயமோ தேடுவாரற்றுத் திகைத்துத் துணையின்றிச் சோர்ந்து சுடுகாட்டுக்குப் பூப்பறிக்கப் போய்விட்டது… இதயமிழந்து நான் பட்ட வேதனைகள்… ஒருவன் ஞானவாள் கொண்டு என் உளச்சிறகு அறுத்தான். மற்றவன் உடற்பாறை கொண்டு என் உருவத்தைப் பொடியாக்கினான் இருவருமே – என்னை அறைத்துக் கூழாக்கி வெறுந்தரையில் ஓடவிடப் பார்த்தார்கள்.. இருவருமே தமக்கென உடலுழைப்புப் பொறியில் என்னை மாட்டிவிட்டு ஊர்வலம் போனார்கள் மனிதனாக விரும்பிய என்னைப் பெண்ணாக்கி, அடிமையாக்கி இவர் இழைத்த கொடுமைகள் .. மனிதனை இருவரும் வகிடெடுத்து வெட்டி இடைவெளி இணையாத துருவத்தில் கிடத்தினர். ஆன்மக் கொடியை மண்ணில் வைத்து வளர்ப்பதை விட்டு மதியில் வைத்து வறுத்தான் ஒருவன்; இன்ப மயிலுடலை வளர்ப்பதாக எண்ணி முரட்டுக் கழுகை வளர்த்தான் மற்றவன் ஒருவன் உள்ளத்தைப் பேயாக்கினான்; மற்றவன் உடலைப் பிணமாக்கினான். இருவருக்குமிடையில் மனிதன் பாடு மயானப்பாடாகிவிட்டது! பாடிக்கொண்டே பிணம் வேகிறது. ஆரவாரித்துப் போய் அதைத் தின்கிறது … பிணத்தின் கண்ணில் பேய் தெரிகிறது…. பேயின் கண்ணில் பிணம் எரிகிறது. எரியும் பிணத்தில் எண்ணெய் எடுக்க நரி காத்திருக்கிறது. எண்ணெய் வடித்து மேலும் எரிய பிணம் காத்திருக்கிறது. உடலும் உள்ளமும் ஒன்றா வேறா? இன்பமும் ஞானமும் இரண்டா ஒன்றா? ஆணும் பெண்ணும் ஒன்றா இரண்டா? சொர்க்கமும் நரகமும் இரண்டா ஒன்றா? அடிமையும் ஆண்டானும் ஒன்றா இரண்டா ? பேயும் தெய்வமும் இரண்டா ஒன்றா? உண்மை என்ன ..? காலம் கழிகிறது. காற்றுக்குள்… வெளிக்குள்… காலத்திற்குள். எனது கரு வளர்ந்துவருகிறது கற்பாறைக்குள் எங்கோ உள்ள கனிவில் வேர்பிடித்து முளைவிட்டு பாறையைப் பிளந்து காலங்காலமாக வானை முட்ட வளர்ந்து நிற்கும் தத்துவ மரத்தின் உச்சியிலிருந்து உலகத்தைப் பார்க்கிறேன். மனிதன் இரண்டான அந்த முதற்காலத்திலேயே எல்லாமும் இரண்டாகிவிட்டன. ஆண்டான் தோன்றிய அதே காலத்தில் அடிமையும் தோன்றிவிட்டான். தெய்வம் தோன்றிய காலத்திலேயே பேய்களும் பிறப்பெடுத்தன. நான் அடிமையாகவும் மறுத்தேன்! ஆண்டானாகவும் மறுத்தேன்! அதனால் கல்லுக்குள் சிறைப்பட… தண்டிக்கப்பட்டேன்! காலத்திரை விழுந்தெழும் மற்றொரு காலத்தில்… ஆண்டான் அடிமையில்லாத அக்காலத்தில்…. சொர்க்கமும் நரகமும் தொலைந்த நாட்களில்….. இன்பமும் ஞானமும் இணைந்த பொழுதுகளில்… உடலும் உள்ளமும் கூடும் கோலத்தில் மனிதனாக நான் மறுபிறப்பெடுப்பேன். எனது பார்வை மேலும் கூர்மையாகிறது. காலத்தின் விரிந்த எல்லை என் கண்ணுக்கு வசமாகிறது…. ஆற்றின் ஒரு கரையில் இந்திர வயல்களையும் மறுகரையில் ஆசிரமங்களையும் தோற்றுவித்த வரலாற்று வெள்ளத்தின் வேகத்தில் நான் கலந்து நீந்துகிறேன். வைகறை என்னை நெருங்குகிறது…! காலத்தின் தலைவன் அதோ … என்னை நோக்கி வருகிறான். கல்லறைக்குள் புல்லரிக்கத் தரிசிக்கிறேன். தேய்ந்து கிடந்த தெய்வீக வில்லை எடுத்த எடுப்பிலேயே இரண்டு துண்டாக்கி நிலமகளைத்தன் நெஞ்சோடு சேர்த்து - நிலத்தின் சாரத்தைத் தின்று பெருத்தல் அரச மரங்களை வேரோடு பறித்த பரசுராமனின் பலத்தைத் தாங்கி - காலம் இயங்காத காட்டுவெளியில் பக்திப் பெருக்கிலே படகோட்டி வாழ்ந்த வேடர் குலத்தைத் தோழமை கொண்டு - உடமைப் போரால் உறவு குலைந்து நாடு விட்டோடி நடைப்பிணமாகிய பேதை மாக்களுக்கு ஆற்றல் கூட்டி – மலைகளைத் தகர்த்துக் கடல்களை நிரப்பி உழைப்புக் காற்றிலே உயரப்பறக்கும் வீரர் குலத்தைச் சோதரராக்கி - கதிரவனுக்கும் எல்லை வகுத்து உலகைச் சுருட்டி ஒரு குடைக்கீழ் திணித்து சுரண்டல் சாம்ராஜ்யக் கொடிகளை உயர்த்தி மக்களின் எலும்பை. மாதர்கள் கற்பை.. இயற்கையின் பரப்பை.. இதயத்தின் சாரத்தை எல்லாவற்றையும் தன் எந்திரத்திலிட்டு கதறக்கதற… அரைத்துத் திரட்டித் தன் ஆதிக்கக் கோட்டையை எடுப்பாகக் கட்டி இறுமாந்திருந்த சுரண்டல் அரக்கனை, காற்றாக வந்து… புயலாக வெடித்து .. நீராக வந்து… நெருப்பாகக் கொட்டி … ஆதிக்கக் கோட்டையை அசைத்து நொறுக்கி அதன் பாறை இதயத்தைப் படீரெனப் பிளந்து சுரண்டல் பிசாசின் தொல்லையிலிருந்து உலகைக் காக்கும் உத்தமன் அதோ… வருகிறான் என்னை நோக்கி நெருங்கிவரும் அவனது பாதமென்மலர் பட்ட கணத்தில் என் ஆன்மா சிலிர்த்தெழுகிறது. சிலிர்த்தெழுந்து. விண்ணையும் மண்ணையும் தம்வசமாக்கி வேதம் விரித்த முனிவனையும் வீரம் பயின்ற இந்திரனையும் தமக்குள் செரித்துக்கொண்டு உலகம் பொது என உரக்க முழங்கி உழைக்கும் கரங்களை உயர்த்திச் செல்லும் அந்தக் கோடி மனிதர் கூட்டத்தில் என் ஆன்மா முக்தி நோக்கி முன்னேறுகிறது, எனக்குள் ஒரு வானம் இப்போதுதான் உறங்குகிறார் தந்தை ஊற்றிய கஞ்சியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துவிட்டு மான மரியாதை அவை ஓட ஓட துரத்திப்பிடிக்க முயன்று இறுதியில் நடைஒடிந்து பச்சைவாதத்தின் விஷத்தீண்டலால் படுக்கையில் கிடக்கிறார் தந்தை கொசுக்கள் முற்றுகை வாகனங்கள் இரைச்சல் இடையிடையே மோதி சிந்தனைக்குச் சற்றே ஓய்வுதர அகல்விளக்கின் ஒளியில் புத்தகத்தைப் படிக்க எடுத்து முடியாமல் என் வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன் ஒரு பத்தாண்டுக்குள் – எங்கள் வாழ்க்கை வாழ்க்கையா அது? - தட்டுத் தடுமாறித் தடம்புரண்டு பள்ளத்தில் விழுந்து…. உடைந்த சில்லுகளை ஒட்டவைத்து பழைய சாரமிழந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் பச்சைமரங்கள் இடைவிடாமல் மொட்டையடிக்கப்படும் மேற்கு மலையில் புறப்பட்டு சாக்கடை நீரை நாளும் அதிகம் சேர்த்துக்கொண்டு பன்றிகள் குழந்தைகள் வேற்றுமையில்லாமல் விளையாட மடி கொடுக்கும் பவானி ஆற்றங்கரையில் முப்பாட்டன் கட்டி வைத்த விழத் தெரியாத வீடுகளில் இரவு பகல் எந்நேரமும் தறிக்குழியிலேயே உடலை நட்டு வைத்து கைகால்களை காலந்தவறாத இயக்கத்தில் கட்டி வைத்து வாழ்க்கைத் துணிகளை நெய்து கொண்டிருந்தோம் வாழ்க்கை ஆறு வற்றியும் பெருகியும் எங்கள் உடல் கட்டைகளை இழுத்துச் சென்றது. நாங்கள் பார்த்தறியாத நகரங்களில் எங்கள் துணிகள் எங்கள் உள்ளத்தோடு சேர்ந்து சலசலக்கலாயின். தொலைவில் எங்கள் துணிகள் செல்லச் செல்ல வாழ்க்கை எங்கள் வசத்தில் இல்லை. உறுத்தும் பெருத்தும் உறுமிவரும் இயந்திரங்கள் எங்கள் வாழ்க்கை இயக்கத்தைக் குறுக்கின. பழமைத் தறிகளில் பாசம் வைத்து முன்பிலும் வேகமாக – மிக வேகமாக தாளம் தவறாமல் நெய்துகொண்டிருந்தோம், பவானியாற்றில் நாளும் மூழ்கி பக்திப் பெருக்கில்.. பாகவதர் பாடல்களில்.. கிருத்திகை அமாவாசைக் கிழமைகளில்.. சீட்டாட்டம்… சேவல்கட்டுகளில்.. சிந்தை இழந்திருந்தோம். இப்படியாக.. நடந்த வாழ்க்கை தொய்ந்து விழுந்தது பங்காளிகள் சதிக்குப் பலியாகி பஞ்சாயத்து கோர்ட்டு என்று நடையாய் நடந்து குடியிருந்த வீடு ஒன்றைத் தவிர எல்லாவற்றையும் இறுதியில் இழந்து ‘சம்பாதிக்கிறேனா இல்லையா பார்’ என்று சவால் விட்டு மான மரியாதைத் தீப்பந்தம் தூக்கி என் தந்தை ஆடிய ஆட்டங்கள்…..! உள்ளத்தில் புகுந்து உருமிப் பொருமி அவரைத் துரத்திய அந்தப் புலி.. என்னையும் என் தாயையும் வீட்டுக்குள்ளும் வெளியிலும் துரத்திக் கடித்துக் குதறிச் செய்த ஆர்ப்பாட்டங்கள்…. அப்பப்பா! அப்பா, இரத்த வேட்கையில் விடாது துரத்திய அந்தப் புலி இன்று உங்களை அடித்துப் போட்டுவிட்டதே! இரத்தம் முச்சூடும் உறிஞ்சிக் குடித்து முடித்த நிலையில் இனித் தீண்டாது உங்களை அந்தப் புலி தொலை தூரத்தில் மட்டுமே கேட்கும் புலியின் உறுமலோடு கனவுலகில் மட்டுமே நீங்கள் வாழ்கிறீர்கள். அப்பா இந்த உலகத்தை நான் கதறக் கதற என் மீது முத்திரை குத்தினீரே. முடிவு என்ன பார்த்தீரா? பள்ளிப் பையன்களோடு ஊர் சுற்றி வந்தபோது குத்துச் சண்டையில் மூக்குடைந்து வந்தபோது ஆற்றில் நீச்சல் பழக இறங்கி மூச்சுத் திணற மூழ்கிய என்னை மூன்றாவது வீட்டுப் பெருமாள் காப்பாற்றிக் கரை சேர்த்தபோது நீங்கள் தராத காசை நானாக எடுத்து இட்டலி வாங்கித் தின்ற போது சினிமா பார்த்து இரவு இரண்டு மணிக்கு வீடு வந்தபோது ‘அடப்பாவி, உருப்படுவியா? சட்டிதான்டா உனக்கு மிஞ்சும்’ என்று கையால் காலால் அடித்து நொறுக்கினீர்களே அந்த இளமைக் காலத்தை இப்போது நினைத்தாலும் வலிக்கிறதே, அப்பா! அப்பனுடன் சண்டை போட்டு ஊரைவிட்டு ஓடிவந்து கூலியாளாகச் சேர்ந்த வேலப்பனை அவன் சிவாஜி ரசிகன் – சவுந்திரராஜனைப்போலவே பாடுகிறான் – பாவம் அனாதை ஆகிவிட்டானே – என்பதற்காக காதலித்தாளே கனகவல்லி அக்கா! காதலை ஒரு நாள் கண்டபோது கத்தியைத் தூக்கிக் கலாட்டா செய்து வேலப்பனை ஊரைவிட்டுத் துரத்திய கையோடு கனகவல்லிக்கு மாமன் மகனை கடன் வாங்கிக் கட்டிவைத்தீரே! மான மரியாதையைக் காத்துக்கொண்டதாக பீத்திக்கொண்டதெல்லாம் என்னவாயிற்று? முதலிரவிலேயே கனகவல்லி தன் கற்புக்காக மாமன் மகனை மருவ மறுத்ததும், பன்னிரண்டாம் நாள் மாமன் ஊரைக்கூட்டி நியாயம் பேசியதும், நீங்கள் தலைதூக்க முடியாமல் தன்மானம் தொங்க தலைதலையாய் அடித்துக்கொண்டு கதறியதும், கனகவல்லி காணாமல் போனதும், கோவையில் வேலப்பனோடு அவள் குடியிருப்பதாக ஊரில் பேச்சு பாதையில் செல்லும்போது பங்காளிகள் உங்களை மானங்கெட்டவனே! நீ ஒரு மனிதனா ? என்று காறித் துப்பினார்கள் வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவைத் தரையில் உருட்டி உருட்டி உதைத்தீர்கள் வாங்கிம கடனை அடைக்க வழியில்லாமல் வீட்டை விற்று, வேற்றூர் வந்ததெல்லாம் மறக்கக் கூடிய நினைவுகளா, அப்பா! தீபாவளிக்குப் பட்டாசும் புதுத்துணியும் வாங்கிவர பஸ் ஏறிச் சென்ற அம்மா நகரத்தெருவில் நடுப்பகலில் எமனாக வந்த லாரி ஏறி மண்டை நொறுங்கி மடிந்த செய்தி மாலையில், சாக்கில் மூட்டைச் சடலமாய் காலையில் வந்து சேர்ந்தாள் அம்மா! ‘அம்மா நீ இறந்ததற்கு ஏதாவது அர்த்தமுண்டா ? நீ வாழ்ந்ததன் அர்த்தமே கேள்வியாய்ப் போன பின்னால்…’ ஊரைவிட்டு வந்த இடத்தில் வாடகை வீட்டில் ஒட்டடையில் உருவான இருட்டறையில் இரவு பகல் எந்த நேரமும் வெடிக்கும் சண்டை சச்சரவு பத்துக்குடிகளுக்கிடையில் வீட்டுக்கார அம்மாளின் வீம்புப் பேச்சுக்கள் ‘இங்கே நிற்காதே’ ‘அங்கே கொட்டு’ ‘எட்டு மணிக்குள் வந்துவிடு’ ‘முதல் தேதிக்கே முப்பது ரூபாய் எண்ணி வைத்துவிடு’ வீட்டுக்கார மீசைக்காரன் குடிவெறியில் கும்மாளங்கள் உலகமே வாடகை வீடாகி யாரோ விதித்துவிட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோமே! ஏதோ ஒரு நாள் எதிர்த்துப் பேச இருபத்து நான்கு மணி நேரத்தில் வீட்டைக் காலி செய்து சட்டிபானைகளைத் தோளில் தாங்கி முகப்பும் முகமும் மட்டுமே மாறிய வேறிடத்தில் குடிபுகுந்தோமே! மான மரியாதைகள் - அவை தந்த தண்டனை சொற்பமா அப்பா! வயது இருபத்தைந்து கல்யாணமான புதிதில் நீங்கள் அனுபவித்த இன்பத்தை மறக்க முடியாததனால்தான் என்னவோ என் எதிர்ப்பை உதறித்தள்ளிக் கல்யாணம் செய்துவைத்தீரே எனக்கு கல்யாணமா அது? – நாலு உறவினர்களை நாமாகக் கெஞ்சிக்கேட்டு அழைத்துவந்து காலையில் பேரூருக்கு பஸ்சில்போய் கோயில் பிரகாரத்தில் அலரி மாலை அலங்காரத்தில் முப்பது ரூபாய்ப் புடவையில் மோகனாவை நாதஸ்வரம், நண்பர்கள், வாழ்த்துமடல், போட்டோ பரிசளிப்பு விருந்து இல்லாமல் கட்டிவைத்தீரே கல்யாணம் என்ற பேரில்! வேலைக்கு ஒருவாரம் விடுப்பு ரெண்டு சினிமாக்கள் - இடையில் மருதமலைப் பயணம் நிலவில்லா நாளில் ஒரு தேனிலவு இரண்டே வருடத்தில் இரு துருவமானோம் இரத்தப்பசி கொண்ட அந்தப்புலி மீண்டும் என்னைத் தாக்கியது மோகனா மூலம் படுக்கையின்போது புகைந்து பகல் நேரத்தில் வெடித்தாள் கண்ணாடியைக் காதலித்த அளவுக்குக் கணவன் என்னைக் காதலிக்கவில்லை வாரம் ஒருமுறை சினிமாவுக்கு இழுத்துப்போய் என்னைக் கதாநாயகனாக்கிவிடப் பார்த்தாள் எதிர்வீட்டுக்காரியின் துணிமணிகளைப் பற்றியே எந்த நேரமும் பேசினாள் இரவில் பகலில் எந்த நேரமும் கனவுலகில் கதாநாயகியாய் இருந்தாள் நனவுலகில் பார்வை பட்ட இடத்தை எரித்தாள் தனக்குள் உருவாக்கிக் கொண்ட குட்டை உலகுக்குள் யாரையும் உள்ளே விட மறுத்தாள் பாட்டி கற்றுக்கொடுத்த பாடத்தை உருப்போட்டாள் கணவனைக் கல்லாக்கி வழிபட்டாள் முருகன் படத்துக்கு மும்முறை தூபதீபம் வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் தவறாமல் கிருத்திகைக்கு மருதமலைவாசம் ஐந்து பைசாவுக்கும் பத்துப்பைசாவுக்கும் கிளி ஜோஸ்யம் பொங்கலுக்கு முந்திய நாள் மாலை, மூன்று மாத வாடகை பாக்கி, வாசலில் வீட்டுக்காரனின் உரிமை வசவுகள், பொறுக்கமுடியாமல் – பத்துக்கு வாரம் இரண்டு ரூபாய் என்றமுறையில் ஈட்டிக்காரனிடம் ஐம்பது ரூபாய் கடன் வாங்கி, ‘மாலையில் வருவான் வீட்டுக்காரன், கொடுத்துவிடு’ என்றுவிட்டு வேலைக்குப் போனேன். நைலக்ஸ் புடவை நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள் மனைவி மாலையில் வீட்டுக்காரன், அப்பா, இருவரும் கத்த எதிர்வீடு அண்டைவீடு எல்லாம் எதிரேவாம். இரவில் வந்தேன் வீட்டில் விளக்கெரியவில்லை தாய்வீட்டுக்கு மனைவி போனாளாம். தலையில் இடி ! காலையில், பண்டங்கள் பாத்திரங்கள் எல்லாம் பழைய மார்க்கெட்டுக்குச் சுமந்து இரண்டு மணிநேரம் பேரம் பேசி இருநூறு ரூபாய்க்கு விற்று வழியிலேயே ஈட்டிக்காரன் வீட்டுக்காரன் இருவருக்கும் தீர்த்துவிட்டுக் கிளம்பி மாமியார் வீட்டில் மனைவியைப் பார்த்தேன் ‘பத்துப் பேர் முன்னிலையில் செருப்பால் அடிப்பேன் என்று எப்படிச் சொல்லலாம் உங்கள் அப்பா’ என்பதையே நூறாவது முறையாகக் கூறி ‘கிழவனா? நானா?’ முடிவு செய்யுங்கள் என்று கதவை முகத்தில் அடித்துவிட்டு உள்ளே போய்விட்டாள். வீடு வந்தால் அறிவு பேதலித்து அப்பா அலறுகிறார்: ’கேட்டாளே ஒரு கேள்வி கிழட்டுப் பிணத்துக்கென்ன மானமரியாதை வேண்டிக்கிடக்கு மானங்கெட்ட உன் மகளென்றா என்னை நினைத்தாய்? மண்டை வெடித்தா செத்தாள் உன் பொண்டாட்டி? மண்டையில் அடித்துக் கொன்றிருப்பாய். தன் மகனொரு ஆம்பளையா? எந்நேரமும் இந்தக் கிழவன் என்ன சொல்லிவிடுவானோ என்று தொடை நடுங்கி… சீ! கிழவா , நீ செத்தால் தான் நாங்கள் சேர்ந்திருக்க முடியும். எந்நேரமும் என்னைக் குறைபேச உனக்கா நான் கழுத்தை நீட்டினேன்? பிச்சைக்காரனுக்குப் பெருமை ஒரு கேடா? உன் மகனே உனக்குப் பொங்கிப் போடட்டும் நான் தொலைகிறேன்’’ அப்பா! வாழ்க்கை ஏன் இப்படி நம்மை வாட்டுகிறது? நம் உடலுக்கு அழகாக அணிந்து அடிக்கடி துவைத்து அணிந்தணிந்து கழித்துப் போட்ட கந்தல் வாழ்வை எத்தனை நாளைக்கு நாம் வைத்திருப்பது? நான் எவ்வளவுதான் எதிர்த்தபோதும் நீங்கள் ஆழமாக ஆணியடித்துப் பொருத்தின மான மரியாதைகள் என்னிடத்தில் ஆழத்தில். உங்களை ஒரு காலத்தில் வெறுத்தேன் வெறுப்புக்கிடையிலும் உங்களை விரும்பியிருக்கிறேனே! அம்மா செத்ததும் ‘இனி யாருடா என்னைக் காப்பாற்றுவார்கள்’ உங்களைத் தாங்கிக்கொண்டே ‘நான் இருக்கிறேன்’ என்று கூறினேனே அப்போதே நீங்கள் எனக்கொரு குழந்தையாகிவிட்டீர்களே… வாழ்க்கை எனக்குத் தந்த தண்டனையை ஏன் நான் வாழ்க்கைக்குத் தரக்கூடாது? என்று இடையிடையே என்னவோ எண்ணினேன்: எத்தனை முறை எட்டி மிதித்தாலும் விலகமாட்டேன் என்ற திமிரினால்தானே இந்த வாழ்க்கை என்னை இப்படி வதைக்கிறது! இந்த வாழ்க்கையின் முகத்தில் காறித்துப்பிவிட்டு உன்னோடு மனிதன் வாழமுடியுமா என்று கேட்டு வாழ்க்கையின் எல்லையைவிட்டே ஏன் போய் விடக்கூடாது? வாழ்க்கை எனக்குத் தராத சுதந்திரத்தை ஏன் நானே எடுத்துக்கொள்ளக்கூடாது? 2 வாழ்க்கைத் துணியிலிருந்து நான் கிழித்தெறியப்பட்டேன் இளமையிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன் முதுமைகூட எனக்கு அங்கீகரிக்கப்படவில்லை உறவின் இரத்தம் என் உயிரிலிருந்து பிழியப்பட்டுவிட்டது மண்ணோடு எனக்குள்ள வேர் துண்டிக்கப்பட்டது இலக்கியம் என் வாழ்வில் எரிந்து சாம்பலானது பண்பாடு எனக்கு எட்டாத உயரத்தில் பறக்கிறது வாழ்க்கையிலிருந்து நான் அந்நியமாகிவிட்டேன். யாருக்காகவோ என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கைகளை அசைத்தசைத்துச் சலித்துவிட்டேன். கைகால்கள் எனக்குச் சொந்தமில்லை! யாருடைய கால்களிலோ நான்: நடந்து நடந்து சலித்துவிட்டேன். யாரோ வயிற்றுக்கிடும் பிச்சைக்கு இரந்து இரந்து தளர்ந்து போனேன் வயிறுமட்டுமே எனக்கு வாரிசு உரிமை மானமரியாதைகள் எனக்கு அலங்காரங்கள் சுகம் எனக்கு ஒரு திருட்டுப்பொருள் ஜனன மரணப் பதிவு தவிர உலகில் எனக்குப்பதிவு இல்லை எனக்கே நான் சொந்தமில்லை. யாருக்காகவோ நான் உற்பத்தி செய்த பொருளுக்கு நானே என்னை விலையாகத் தருகிறேன். உலகச் சந்தையில் ஒவ்வோரிடமாக மாற்றி மாற்றி விற்கப்படுகிறேன். கடவுள் என்னைக் கைவிட்டுக் காலங்கள் பல கழிந்தன. வாழ்க்கையில் விரிந்துவரும் வெறுமையை அடைக்க அவரை விசுவரூபமாக்கினேன். கனத்து வளரும் விசுவரூபத்தின் அடியில் என்னை நானே கிடத்திக்கொண்டேன். தெய்வங்களைப் பெருக்கியபோது எனக்குள் நான் சிறுத்துப்போனேன். அண்டத்தை இறைவனுக்குள் அடக்கியபோது எனக்கே இடமில்லாமல் வெளியேற்றப்பட்டேன். தெய்வங்கள் கைவிட்ட உலகைப் பிசாசுகள் எப்போது ஆக்கிரமித்தன? நானும் ஒரு பிசாசானது எப்போது? எனக்குள் என்னையே எனக்குமுன் நானே ஒரு பிசாசாகக் கிழித்துக்கொண்டிருக்கிறேனே ! இது எப்படி ஏற்பட்டது? என்னைப் பிசாசாக மாற்றியவன் எப்படித் தான் தெய்வமாக முடியும்? வயிற்றைக் கழுவக் கெஞ்சிக் கூத்தாடி வேலைக்காக என்னை நான் விற்ற இடத்தில் என்னையே மூலப்பொருளாக்கி என்னை அவன் நெய்தான். என்னையே அவனுக்காக நான் நெய்து கொண்டிருந்தேன். ஆடையின் அழகெல்லாம் எனக்குள்ளிருந்தே ஏறின. ஆடையின் ஊடும் பாவுமாக என்னை நானே நெய்துமுடித்தபின் மரச் சட்டங்களாக மட்டுமே அழகற்றுப் போனேன் உறக்கத்தின்போது நான் சுவர்க்கத்தில் நுழைகிறேன். மதுவெறியில் சில நேரம். ஞாயிற்றுக்கிழமையின் வரவுக்காகவே திங்கள் முதல் வேலை செய்கிறேன். இரவின் இன்பத்திற்காகவே பல பகலின் வேதனையை ஏற்கிறேன். வேலையிலிருந்து விடுதலை பெறவே வேலைச் சிறையில் பூட்டிக்கொள்கிறேன். என்னை விதிக்கயிற்றில் வைத்துச் சுழற்றுபவன் தானாவது சுதந்திரவானாக இருக்கிறானா? விதிக்கயிற்றைச் சுழற்றுவதையே வேலையாக்கி அதற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறான். எனக்குச் சிறையை ஏற்படுத்தியவன் சிறையதிகாரத்திலேயே சிறைப்பட்டுவிட்டானே! எங்களுக்காக இரும்பு விலங்கைத் தயாரித்தவன் பொன் விலங்கைப் பூண்டு மகிழ்கிறானே! உடலுக்குள்ளே என்னைக் கட்டிவைத்தவன் உள்ளத்தினுள்ளே சிறைப்பட்டுவிட்டானே! என்னைப் பிசாசாக மாற்றியவன் எப்படித் தான் தெய்வமாக முடியும்? என்னிடமிருந்து எல்லா அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு எனக்கே எல்லா உரிமைகளும் இருப்பதாக உரிமைச் சாசனம் வெளியிடுகின்றனர். கையெழுத்திட கையில் ஆயுதமேந்திக் கட்டாயப்படுத்துகின்றனர். மறுக்கும்போது என் கையெழுத்தை அவர்களே இட்டுக்கொள்கிறார்கள். இந்தச் சடங்குகளுக்குப் பின்னர் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜை நான். இனி என்னிடமிருந்து வரி வட்டி குத்தகை வாடகை லாபம் எல்லாமே வசூலிக்கப்படலாம் இவற்றைச் செலுத்த முடியாதபோது நான் விளை நிலங்களிலிருந்து வீடுகளிலிருந்து.. வெளியேற்றப்படுகிறேன். வாழ்க்கைமாளிகை தன் நுழைவாயிலில் ‘அந்நியர் பிரவேசிக்கக்கூடாது’ என்ற அட்டையைத் தொங்கவிடுகிறது. இடை யிடையே என்னைக் காப்பாற்றுவதற்காக எத்தனையோ பேர் முத்திரையிடச் சொன்னார்கள், முத்திரையிட்ட நாளிலிருந்து அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. அதிகாரக் கூட்டத்தில் ஐக்கியமானவர்கள் எங்களை மேலும் அதிகாரமற்றவராக்கினார்கள். எங்கள் உரிமைகளை மீட்டுத் தருவதாகச் சத்தியம் செய்தவர்கள் சகல உரிமைகளையும் தமக்கே செய்து கொண்டார்கள். அனாதைகளாக முகவரியற்றவர்களாக தெருவில் திரிவதைக்கூடக் குற்றமாக்கினார்கள் நாங்கள் கொடுத்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் – எங்களை நோக்கியே நீட்டப்படும்போது எங்கள் ஏமாற்றத்தை எப்படி மறைக்க இளம் வயதில் எனக்கு அழகாகத் தெரிந்த வானம் வைகறை மலர்கள் மதியம் இப்பொழுது ஏன் என் வாழ்க்கையில் வருவதில்லை அப்பா? மழையும் காற்றும் சொல்லும் கதைகளையெல்லாம் கற்பனையில் திரித்துப் பட்டமாக விடுவேனே! இப்போது அவை ஏன் பறப்பதில்லை? அப்பா ! ஒருநாள் நான் நரிக்குறவர்களோடு நாள் முழுதும் சுற்றித் திரிந்து இரவிலும் அவர்களோடு இருந்து உறங்கிவிட்ட என்னை புளியவிளாறினால் உரித்து இழுத்துவந்தீர்களே என்னை அவர்களோடு விட்டிருக்கக்கூடாதா? என்னிடமிருந்து இளமையையும் அழகிய உலகையும் பறித்துவிட்ட பாவிகள் யாரப்பா? பிச்சை வாழ்வை நக்கி நக்கி நாக்கு மரத்துப் போய்விட்டதே! இவர்களுக்கு என் உயிரையும் உடலையும் வழங்கி இவர்கள் தம் பலிபீடங்களில் என்னை வைத்து வெட்டும்போது துள்ளினால் துடித்தால்கூட அதையும் குற்றத்தில் ஒரு பிரிவாக்கி அரக்க சாம்ராஜ்யத்தை அற்புதமாகக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள்தான் வாலிவதையை நியாயப்படுத்துகிறார்கள். கண்ணகியை எத்தனாவது குற்றப்பிரிவில் கைது செய்யலாம் என்று காத்திருக்கிறார்கள். துச்சாதனனுக்கு மந்திரிப் பதவி.. துரியோதனனுக்கு சிலை. சீதையின் சிறைப்படலம் பக்திப் பரவசம் எல்லாமே இவர்கள் ஆளுகையில். அண்டத்தின் இயக்கத்தை அரை நிமிடம் நிறுத்தியதற்காகச் சிவபெருமானைச் சிறையிடப் பார்க்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கைக்கு மேல் உயிர்களைப் படைத்த பிரம்மாக்களை கருவறையிலிருந்தே வெளியேற்றிவிட்டார்கள்! வாழ்க்கைத் துடைப்பத்தால் முழுமையாகப் பெருக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டு நாம் வண்டியேறிப் போய்க்கொண்டிருக்கிறோம். வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து நாம் நன்றாக அழுகிவிட்டால் நமக்கும் ஓர் விற்பனை மதிப்பு ! விற்கப்படும் ஒவ்வொரு முறையும் நம் மதிப்புக் குறைய விற்பவர் மதிப்பு வானைத் தொடுகிறது. விற்கப்படுவதற்கே பிறந்த நாம் பட்டாகப் பிறந்தாலென்ன! பஞ்சாகப் பிறந்தாலென்ன! அப்பா ! நான் பட்டாகப் பிறந்தேனில்லையா? இப்போது பஞ்சாகிவிட்டேனே! தாமே சட்டம் செய்து கொண்டு, சட்டத்திற்குட்பட்டு கொலை, கொள்ளை, கற்பழிப்பை நாகரிகமாகச் செய்பவர்கள், தமது இயந்திரப் பொறியில் நம்மை நயமாக மாட்டிவைத்துக் கசக்கிப் பிழிந்து வெளியே தள்ளும்போது, இவர்களைப் போலவே - ஆனால் இவர்களின் சட்டத்துக்குப் புறம்பாக – நாங்களும் செய்யும்போது இவர்களின் வக்கிரமான பதிப்பாகி இவர்களை எதிர்த்து நிற்கும்போது இவர்களின் இயந்திரச் சிறைகளில் கைகால்கள் முறிக்கப்படுகிறோம்! இவர்கள் அமைத்துள்ள கல்வித் தொழிற்சாலைகளில்.. இவர்கள் அறம் வளர்க்கும் கோவில்களில்.. இவர்களது வானொலி வித்தகத்தில் …. இவர்களால் அன்போடு - அதிகாரத்தோடு குத்தப்படும் முத்திரைகளால் இவர்களால் அலங்கரிக்கப்பட்டு இவர்களுக்கு சேவகனாய், இவர்கள் வீட்டு நாயாய், வேசியாய், வாழ்க்கையின் அவலம் நம்மைப் படுத்திய பாடுகள் கொஞ்சமா? யாருடைய கையிலிருந்தோ இயக்கப்படும் விதிக்கயிற்றில் நாம் ஊசலாடுகிறோம். விதிக்கயிற்றின் வேகம் தாங்கமுடியாமல் என்தாய் மண்டை நொறுங்கிச் செத்தாள் அவசரத்தோடு - ஆத்திரத்தோடு வந்த லாரி மோத. விதிக்கயிற்றின் வேகத்தை வெல்ல. வேகத்தோடு என் மனைவி விளையாடி வெடித்தாள். விதிக்கயிற்றின் வேகத்தை எதிர்த்து நிலைகுலைந்தார் என் தந்தை. நானோ, விதிக்கயிற்றின் சுருக்கிலிருந்து என்னை நானே கழற்றிக்கொள்ளத் துடிக்கிறேன். விதிக்கயிற்றின் வேகம் அதிகரிக்கிறது, நாம் பயங்கரமான சூதாட்டத்தில் சிக்கிவிட்டோம் எதிரிகளின் கைகளில் சனி புகுந்து விளையாடுகிறான். சட்டிசுரண்டும் சமையல் வேலைக்கும் வண்டியோட்டும் வேலைக்கும் நம்மை இவர்கள் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் நமது குழந்தைகளே நாளை நடுத்தெருவில் நிறுத்திவைத்து நறுக்கென்று நியாயம் கேட்கப் போகிறார்கள். அப்போதாவது நமக்கு உறைக்குமா? பதிலுக்கு ஒரு சாத்திரம் மேற்கோள் காட்டுவோம், நம்மை நாமே விற்றுக்கொண்டு கிடைத்த காசை எண்ணிக்கொண்டு சுடலை காக்கப்போகிறோம். இறுதியில் நம்மை நாமே வெட்டிக்கொண்டு நம்மை நாமே எரித்துக் கொள்ளும் முன் ஒருமுழத்துண்டு, கால் ரூபாய் வசூலுக்கு இவர்கள் வந்து சேர்வார்கள். 3 வெறுமை வெளியில் காலையில் கனத்த தலைவலி உடலும் உள்ளமும் இருவேறு திசையில் இயங்க தந்தைக்குச் செய்யும் தனயனின் கடன்களை முடித்தேன். இன்று ஊர்வலம் மும்மூர்த்திகளிலும் முதல் மூர்த்தியாகிவிட்ட நவீனகால மார்க்கெட் எமன்கள் வைத்துச் சுழற்றும் இயந்திரக் கயிறுகளின் இயக்கத்திலிருந்து கைத்தறிச் சத்தியவான்களைக் காப்பாற்ற அபலைச் சாவித்திரிகளின் அடுத்த கட்டப் போராட்டம் இவற்றுக்கிடையில் நம்பிக்கைப் பாத்திரங்களோடு நாலாயிரம் பேர் வறண்ட வானத்தின் கீழ் கானல் நீர்களைத் தேடிச் செல்லும் நீண்ட மிக நீண்ட ஊர்வலங்கள் மாநாடுகள், எதிரொலி இல்லாத பாழ்வெளியில் உரக்க எழுப்பிய கோஷங்களில் நம்பிக்கை மழை நீர் நாளையே கொட்டப்போவதாக கூறிக்கொண்ட கூட்டத்தின் இறுதியில் அடுத்த மாதம் முதல்தேதி மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆட்சி அலுவலகத்தை பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரம் பேர் கூடி முற்றுகையிட்டுக் கைப்பற்றுவதாகப் பிரகடனம்! கைப்பற்றி ஆட்சி அதிகாரம் நிறுவி இயந்திரங்கள் நொறுங்கி இப்படி ஏதாவது எண்ணமா? அப்படியுமில்லை. ‘வேலை கொடு இல்லாவிட்டால் வெஞ்சிறையில் சோறு கொடு’ என்ற புனிதத் திட்டத்துடன் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்னோர் இரவை எப்படிக் கழிப்பேனென்று வேதனையோடு வீட்டு வாயிலை மிதித்தபோது இது காண்பதென்ன கனவா! என் வாழ்க்கையில் ஒரு பகலா! இளமைக் காலத்தின் பிரதிபலிப்பா! இதயத்தில் வைத்து மறந்துபோய்விட்ட அன்பின் ஊற்றா ! என்ன இது? வலையில் பிடிக்க வாழ்க்கை வீசும் இறுதிக் கயிறா? காண்கிறேன் என் அன்பு அக்காவை அவள் கணவனோடு குழந்தையோடு. பாசப் பாய்ச்சலில் என்னைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். மேகத்தையே மறந்துவிட்ட வறண்ட என் வானத்திலும் இப்படியொரு இடி, மின்னல், கண்ணீர் மழை. வித்தற்றுக் கிடந்த நிலத்தில் ஒரு விளைச்சல். இந்த இடி எங்கிருந்து இடிக்கிறது? இந்த மின்னல் எங்கிருந்து பாய்கிறது? இந்த மழை எப்படிக் கொட்டுகிறது? இந்த விளைச்சல் எப்படி விளைகிறது? அரை மணி நேரம் அன்பில் நனைந்து நனவுலகத்திற்கு நாங்கள் வந்தோம். நீலவானம் குளிர்ந்து நிம்மதியாய்க் கிடந்தது. வாய்பேசாத நிலையில் பார்வை மலர்களை எங்கள் மீது தூவிக்கொண்டிருந்தார் அப்பா! இடையிடையே எத்தனையோ நிகழ்ச்சிகள் பற்றி – வேதனை குமிழியிட ஆத்திரங்கள் வெடிக்க இதயம் உருகப் பேசிக்கொண்டே எங்கள் வீட்டில் மணக்காத சமையலை என் தமக்கை தான் கொண்டுவந்த காய்கறிகள் அரிசி பருப்பு ஆகியவற்றுடன் செய்து முடித்தாள். வேலப்பனின் வித்தகப் பேச்சுக்கள் சந்திரனின் கேள்விகள், கதைகள் வேதனையைச் சற்றே மறக்கவைத்தன. சமையல் ஒருகலை, உண்பதிலோர் இன்பம், பேச்சில் ஒரு கலைத்திறன், பேதமையும் ஓர் அழகு, என்பதையே மறந்திருந்த நான் ஒரு புத்துலகில் நுழைந்தேன் (மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே நிலவுவதாக இருந்தாலும் இந்த மாய உலகம் எனக்குத் தேவையான உலகம் ) கனகம் பேசுகிறாள்: "கிருத்திகைக்காக நேற்று – இப்படிச் செல்வது எங்களுக்குப் பழக்கம் இல்லை – பொழுதுபோக்காக மருதமலை சென்றபோது பார்த்தோம் மோகனா தாயோடு வந்திருந்தாள் (இடையில் என் மனக்குரல்: இன்னும் அவள் மருதமலைக்கு வாங்க ஏன் செல்லுகிறாள்?) மோகனாவின் தாய் இவர் சித்திக்கு உறவு! அந்தச் சித்தியின் சீண்டலால் தந்தை விரட்டத் தான் இவர் நம்மூர்க்கு வந்தார். (வழக்கமான சித்தியின் கொடுமைதானா? சித்திகள் ஏன் இப்படி கைகேயிகளாகவே பிறக்கிறார்கள்!) மோகனா உன்னோடு வாழவில்லை அப்பாவையும் தின்னுகிறது நோய் இனியும் விரோதங்கள் வேற்றுமைகள் வேண்டாமென்று வந்தோம். அன்பைத்தவிர உலகில் வேறு என்ன இருக்கிறது? (உண்மைதான். பவானி வெள்ளத்தில் துணி துவைத்த தோழி விழுந்துவிட, காப்பாற்றத் தாவி அவளைக் கரைக்கிழுத்துவிட்டு நீ சறுக்கி வெள்ளத்தில் சரிந்தாய். கரையில் நின்ற குறவன் குதித்துக் காப்பாற்றினான் கலவரமின்றி வீட்டில் சொன்னாய்: ‘அவள் அப்பாவுக்கு ஒரே ஒரு மகள்’ ‘அதனாலென்ன?’ ‘இறப்பது அவளானால் என்ன? நானானால் என்ன?’ வேலப்பன் பாக்கியசாலி அன்புப்போரில் கனகத்தை யார் வெல்ல முடியும்?) மோகனாமேல் தப்பில்லை, முத்து ! நகைகளுக்கும் அலங்காரங்களுக்கும் மதிப்பளிக்கும் மனிதர்க்கிடையில் பாவம், அவள் என்ன செய்வாள்! எத்தனையோ ஆசைகள் இளமை முதல் அவளுக்கு எல்லாவற்றையும் உன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். என்ற வேகம் அவளுக்கு கடிதம் (இவள் ஏற்றிவைக்கும் பொதிகளைச் சுமக்க நானா கிடைத்தேன்) இடையில், வேலப்பன்: ‘’மோகனாவின் தாயை கல்யாணத்திற்கு முப்பது பவுன் போட்டால்தான் கட்டிக்கொள்வோம் என்று மாப்பிள்ளை வீட்டார் குரங்குப் பிடியாய் நிற்க இருபது பவுன்களைத் தங்கப் பூச்சாக இட்டு மணம் முடிக்க, இரண்டாவது மாதம் இந்தக் குட்டு வெளிப்பட்டு வட்டிக்காரனுக்கு மகனாகப் பிறந்த கணவன் கையில் பட்ட அடிகள்! வீட்டார் செய்த வேதனைகள்!’’ (ஒருசமயம் நானும் மோகனாவைக் கொடுமை செய்திருந்தால் அடங்கியிருப்பாளோ என்னமோ) பத்தாண்டுக்காலக் கொடுமைக்குப்பின் மலையாளப் பெண்ணைக் கூட்டிவைத்து அவன் செய்த கூத்துகள்! இவற்றுக்கு இடையில்தான் மோகனா, பிறப்பு, வளர்ப்பு. வாழாவெட்டியாகி இட்டலி சுட்டு இவர்கள் வயிறு வளர்த்தார்கள்” மீண்டும், கனகம்: ’’இந்தச் சூழலில் போலி மனிதர்கள் தரும் மரியாதையைக் கடந்து தன்னைத்தானே மதித்துக்கொள்ளும் தைரியம் எப்படி அவளுக்கு வரும்?” (தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் தைரியமா? – நானாக விரும்பிக் கட்டும் தாலிக்குத்தான் நான் கட்டுப்படுவேனே தவிர பகல் ஊருக்காக - என் தந்தைக்காக யாரோ கட்டும் தாலிக்கு நான் மனைவியாகமாட்டேன். கயிற்றைக் கட்டி மனைவியாக்கிக் கொள்ள மாடுகள் ஒப்புக்கொள்ளலாம், நான் மாட்டேன் என்று ஊரார் முன்னிலையில் தாலியை அவிழ்த்துவைத்த தன்மானம்! தைரியம் ! கனகம் உனக்கே சொந்தமல்லவா!) "போலித்தனமாக மினுக்கும் வாழ்க்கைக் கடைத் தெருவில் ஏழைகள் எப்படி உலவ முடியும்?’’ வேலப்பன் : எல்லாமே வாலறுந்த நரிக்கதைதான் முதல் நரி வாலறுந்தது தெரியாமல் இடையில் வந்த நரியை எப்படிக் குறை சொல்வது? சூர்ப்பனகைகள் சீதைகளாக வேடம்போட்டு மூக்கறுபடுவது போதாதென்று இராவணர்களை உற்பத்தி செய்கிறார்கள்! நான் : வீட்டில் செய்யும் சாத்திரங்கள் சடங்குகள் போதாதா? மருதமலைப் பயணம் கிருத்திகை தவறாமல் என்ன வேண்டிக்கிடக்கிறது இவர்களுக்கு? கனகம்: திக்கற்றவர்களுக்குத் தெய்வங்களே துணையில்லையா! வேலப்பன் : ஆமாம்! வாழ்க்கைத்திசையை வகுத்துக் கொள்ளாதவர்களை – மாணிக்கவாசகர்களை - தெய்வங்கள் காணிக்கை கேட்டு மடக்குகின்றன. தம்மையே சுற்றிவரப் பணிக்கின்றன. சுற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க சுற்றுக்களை எண்ணிவைத்துக் காணிக்கை கேட்கின்றன. நம்பிக்கை மிக்க நிலையில் நரிகள் பரிகளாகின்றன நியாயம் கேட்டால் வற்றிய நதியில் வெள்ளம் வரும், கூடையில்மண் சுமந்து கொட்ட வேண்டும். கொட்டுவதில்சோம்பலா, பிரம்படி. பிறகு - முன்போலவே தெய்வங்கள் காணிக்கை கேட்கத் தேடிவரும்…. கனகம்: காணிக்கை கேட்கும் தெய்வங்களைக் கண்டிப்பது நியாயம்தான். தெய்வங்கள் உண்டா, இல்லையா? எனக்குத் தீர்மானிக்கத்தெரியவில்லை. இருந்தாலும் எனக்கொரு நம்பிக்கை மனமறியத் தவறு செய்யவில்லையானால் கடவுளைக் கும்பிடுவானேன்! கடவுளிருந்தால் காப்பாற்றத்தான் செய்வார். காப்பாற்றினால் கடவுள் இல்லையென்றால் கல். கடவுள் என்று இருந்து செய்த தப்புக்காக வருந்துவோரைக் கடவுள் காப்பாற்றத்தானே வேண்டும்! மனமறிந்தே தவறு செய்பவர்கள்தான் விடாப்பிடியாகக் கடவுளைத் தொழுகிறார்கள். (எனக்குள் : மோகனா எந்த வகை?) வேலப்பன்: பூனைகள்தான் ருத்ராட்சங்களை ஓயாமல் உருட்டுகின்றன. அருணகிரிகள்தான் அதிகம் பாடுகிறார்கள். கோடி கோடியாகக் கொன்று குவிக்கும் இராஜராஜர்கள்தான் பெரிய கோயிலை அழகாகக் கட்டுகிறார்கள். தேவாரங்களை அவர்கள்தான் தேடியெடுக்கிறார்கள், ஆணியடித்துக் கொன்றவர்கள்தான் அதிகம் பாடுகிறார்கள். (எனக்குள் : மோகனா தன் குற்றம் உணர்ந்தா கும்பிடுகிறாள்) கனகம் : முத்து, உனக்குத் தெரியாதா தண்ணீர்க் குழாயடியில் சண்டை “போடி அடங்காப் பிடாரி! உன்னை இப்படி விட்டுவைத்திருக்கிறானே உன் புருஷன்! அவன் ஆண்பிள்ளை தானா?" என்று ஒருத்தி…. முகத்தில் அறைகிறமாதிரி முந்தா நாள் கேட்க. (எனக்குள் : கேட்கவேண்டியதுதான் என்னைக் கூட அவள் இப்படித்தானே கேட்டாள்!) ‘என்னைச் சொல்லடி என் புருஷனைச் சொன்னே …! என்று கத்தி வீட்டுக்கு வந்து கதறிக் கதறி அழுது ‘புறப்படுமா போலாம்’ என்று மோகனா கூறினாளாமே! (அப்படியா? எது காற்று எதிர்த்திசையில் வீசுகிறது!) நல்லநாள் பார்த்து நாளைக்கு அவர்களே அழைத்துவருவார்கள். முத்து! போப்பா. இவரும் உடன் வருவார் போய்க் கூட்டிவா அவளை வருந்தவிடக்கூடாது அவளுக்கு மூன்று மாதம் (அடிப்பாவி! வாழ்க்கைச் சுழலில்என்னை வகையாக மாட்டிவிட்டாயே) கோபமும் ஒரு நோய் நோயாளிகளைக் கோபிக்கலாமா? வேலப்பன் : இப்போது மணி பத்து இன்றைக்கு இதுவே அதிகம் நாளைக்கு டாக்டரைப் பார்க்க வேண்டி வருமோ? என்னவோ? நான் : ஏன்? கனகத்திற்கு என்ன ? வேலப்பன் : கனகத்திற்கு இதயம் பலவீனம் சரி, நாம் வெளியில் போய் வருவோம் கனகம் சற்றுப் படுக்கட்டும் (இதயம் இவளுக்குத் தங்கம்! இவளுக்கு இப்படியொரு நோயா?) நாங்கள் இருவரும் குறுகிய சந்துகளிலிருந்து. வீதிகளைக் கடந்து பூங்காவை நோக்கிப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் விரிந்த திடலில் உலவிக்கொண்டு மேகங்களுக்கிடையில் மின்னும் விண்மீன்களைப் பார்த்தபடி இங்கும் அங்கும் நின்று இடையில் டீ குடித்துக்கொண்டு எங்கள் வாழ்க்கையைப் பேசிக்கொள்கிறோம். "கையைக் காலைக் கட்டிவைத்த நெசவிலிருந்து – வயிற்றைச் சுருக்கும் அதன் வறுமையிலிருந்து – எதிர்காலத்தை இருளாக்கும் அதன் நடையிலிருந்து – சாதியோடு சங்கமித்த அதன் சகதியிலிருந்து – நெஞ்சில் அழகை வளர்த்த அதன் நினைவிலிருந்து சுற்றத்தாருடன் தொடுத்த அதன் உறவிலிருந்து - வேர் அறுக்க முடியாமல் அறுபட்டு வேறிடத்தில் விரிந்துவரும் பெளண்டரித் தொழிலில் வேலையாளாக வேர் பிடிக்கும் கதையை வேலப்பன் விவரித்தார், ‘’கல் வீடுகள் கட்டப்படும்வரை மண்வீடுகள் தேவை, மணல் வீடுகள் வேண்டாம். நிலங்கள் நடுங்கிவரும் இக்காலத்தில் மண்வீடுகளாவது கட்டுவோம்’’ எனக்கொரு கேள்வி: எல்லோர்க்கும் யார் கட்டித் தருவார்கள்? வேலப்பன் : நம் வழியை நம் காலால்தான் கடக்கவேண்டும். நம் தாகத்திற்கு நாம்தான் தண்ணீர் தேட வேண்டும். வீடு, வேலை, உரிமை, மானம், மரியாதை, மனிதத்தன்மை எல்லாவற்றையும் இறுதியில் எமக்கான உலகத்தை நாமே திரட்டிக்கொள்ளவேண்டும். எப்போதோ யாருக்காகவோ வீட்டுக்குள், விளைநிலத்திற்குள், நகரத்திற்குள், நாட்டிற்குள், கல்லுக்குள், கலைக்குள், சோற்றுக்குள், சுகத்திற்குள் இழந்துவிட்ட நம்மை நாமேதான் தேடித் திரட்டிக்கொள்ளவேண்டும். தெய்வங்கள், தேவதூதர்கள், தியாகிகள், தலைவர்கள் இவர்களிடமிருந்து நம்மை நாமேதான் மீட்டுக்கொள்ளவேண்டும். கிழக்கில் நிலவு கிளம்பி வான்வெளியை நிரப்புகிறது. எனக்கும் ஒரு வானம்.. ஒரு நிலவு வைகறை வரத்தான் போகிறது! 4 எனக்கு இனி இரவு இல்லை. என்னை நானே மீட்டுக்கொள்ளும் குருச்சேத்திரம் எனக்குள்ளே நடைபெறுகிறது. மண்ணுக்கும் விண்ணுக்கும் வாரிசாக நான் பிறந்தேன். வயல்வெளிகளையும் மாடமாளிகைகளையும் உற்பத்தி செய்கிறேன். உற்பத்தி செய்தபோதே இவற்றிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். நந்தனாராகி நான் நெருப்பில் இடப்பட்டேன். பாண்டவராகிப் பாழ்வெளியில் திரிகிறேன். எனக்குள் நானே அந்நியமாகி வனவாசம் செய்கிறேன். வயல்வெளிகளை மாடமாளிகைகளை என் கையாலேயே எதிரியிடம் விட்டுக்கொடுத்தேன். எதிரியிடம் தோற்றேன். எதிரிகளின் வயல்வெளிகளில் மாடுகளானேன். உழுதால் உண்ணக்கிடைக்கும் உழமுடியாதபோது சாட்டையடிகள். எதிரிதந்த சாட்டையால் என்னையே நான் அடித்துக்கொண்டேன். எதிரி இட்ட தீயில் என்னையே எரித்துக்கொண்டேன். எதிரி ஆடிய சூதில் : என்னையே பணயமாக்கிக் கொண்டேன். எதிரி எனக்குள் குத்திய முத்திரை ஆழமாகப் பதிந்திருக்கிறது. இந்த முத்திரையையே என் தந்தை எனக்கும் என் தந்தைக்கு அவன் தந்தையும்… இப்படியே… ஆழமாகக் குத்தினார்கள். இந்த முத்திரைதான் என் மனைவி மீதும் அவள் தாய் மீதும். மாத்திரைக்குரியவனிடம். எங்களை இழந்த நிலையில் முத்திரையின் அழகில் உள்ளம் மூழ்கி இராஜ விசுவாசத்துடன் நடந்துகொண்டோம். இராஜமார்த்தாண்டர்கள் அலங்காரமாகப் பவனி வந்தார்கள். ஊர்வலக் காட்சியில் உளம் நெகிழ்ந்திருந்தோம். என்னை நான் இழந்து அவலத்துக்கும் ஆத்திரத்துக்கும் … வசப்பட்ட நிலையிலும் எனக்குள் எங்கோ ஆழத்தில் கடலும் வானமும் சந்தித்துக்கொண்டுதான் இருந்தன. கொடிகளும் கோலங்களும் எனக்குள் பின்னிக்கொண்டிருந்தன. விளையாட்டுத் தோழர்கள் எனக்குள் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். நான் செய்த முதல் பஸ் பயணம் இப்போதும்.. எனக்குள் திருவிழாக்கள், வானவேடிக்கைகள், திண்ணையில் திருநீற்று நெற்றியோடு பாட்டன் இராகத்தோடு படித்த புராணங்கள், வெற்றிலை பாக்கைத் தாளம் தவறாமல் இடித்து பாட்டி கேட்டுக்கொண்டிருந்த பரவசம், நெஞ்சில் நிழற்படமாய் நிலைத்திருக்கிறது. பள்ளியில் ராகம் போட்டுப் படித்த பாடங்கள், உடம்பெல்லாம் சிரிக்க உச்சிக்குடுமி வாத்தியார் பேசிய பேச்சுக்கள், கோள் சொல்லி எனக்குக் குட்டு வாங்கித்தந்து சிரிக்கும் கோமளம், உடலிலும் உள்ளத்திலும் பதிந்து உரத்தோடு அழகேற்றிய தொழில்வகைகள், இவை என்னில் சாகாமலிருக்க – எப்படி என்னால் சாகமுடியும்? எனக்குள் நான் புதைத்த உலகம் சாம்பலாக மறுத்தது. எனக்குள் புதைத்த உறவுச் செடிகள் மண்மேடிட்டு மடிய மறுத்தன… நந்தனாக - நளனாக நான் கற்ற ஆற்றல்கள் என்னை நாற விடவில்லை, எனக்குள் இடிகள் …. மின்னல்கள் … மழைகள்… என்னை மீறி இடைவிடாது என்னை நானே எனக்குள் தோண்டிக்கொண்டே சென்றபோது மூன்றடிப் பிச்சை கேட்ட வாமனன் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறான் – விசுவரூபம் வெளியே தெரியாதபடி … எனக்குத் தெரியாமல் என்னைக் கேட்காமல் பாலையாக்கியபோது பாறையாக்கியபோது குப்பையாக்கியபோது புகையவைத்தபோது இதயமற்று இயக்கமற்றுத் திகைத்தேன் புலம்பினேன். என்னை மீட்க யார் யாரையோ தேடினேன் – காவி தரித்து வருபவரை கதர் உடுத்து வருபவரை சிலுவை தூக்கி வருபவரை காவி கட்டி கதர் உடுத்து சிலுவை தூக்கிக் காத்திருந்தேன். கல்லாக இருந்தேன் சிலையாகவில்லை கரியாக இருந்தேன் கனலாகவில்லை. படகாக இருந்தேன் துடுப்பாகவில்லை பாட்டாக இருந்தேன் நான் பாடவில்லை கல்லாகி கரியாகி படகாகி பாட்டாகித் துடித்தேன். என்னை அடித்தபோது திருப்பி அடித்தேன் அடித்தவன் யார், அடி தேவையா, ஏன் என்று சிந்திக்கவில்லை, வலுத்தவன் அடித்தபோது வாய்விட்டு அழுதேன். இளையவனை அடித்து ஏறி மிதித்தேன். தந்தை அடித்தபோது தடுமாறினேன். மனைவி அடித்தபோது மருண்டேன். இப்படியாக அடித்து அடிபட்டு வாழ்க்கைக்கு அந்நியமானேன். அந்நியனில்லை இப்போது நான். வாழ்க்கைக்குள் நான் சொத்துக்களைத் தேடிவரவில்லை சொந்தங்களைத் தேடியே வருகிறேன். இப்போது நான். என்னை அடித்தவனை எதிரியாக அங்கீகரிக்கவில்லை நான் அங்கீகரிக்காத சிம்மாசனங்களில் இவன் இருப்பதை நான் அங்கீகரிக்கவில்லை. இவன் மீது கோபம் கொண்டிருந்தபோதே என் மீது நான் அவலம் கொண்டிருந்தேன். இவனை நானே ஏற்றி வைத்து இவனுக்குள் நானே இருந்துகொண்டு என்னை நானே மேய்த்திருக்கிறேன். இவனிட்ட பிச்சையை நான் விரும்பி உண்டிருக்கிறேன். இவனால் எனக்கு ஏற்பட்ட பிச்சைப் புத்தி இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை. சோற்றிலும் சுகத்திலும் இவன் என்னைச் சிறைவைத்திருக்கிறான். ஆடையில் ஆர்ப்பாட்டங்களில் இவன் என்னை அடைத்து வைத்திருக்கிறான் அதிகச் சோறு - அதிகச் சுகமே எனக்கு விடுதலையாகத் தோன்றியிருக்கிறது. விடுதலை என்ற பெயரிலேயே என்னைச் சிறை வைத்திருக்கிறான். உடம்போடும் நரம்புகளோடும் நான் உலகில் பிறந்தபோதே விடுதலைக்கான வாய்ப்புக்களோடு சிறையிடப்படுகின்றேன். என்னைச் சூழ உள்ள நாடும் நாகரிகமும் வரலாறும் வாழ்க்கையும் என்னை ஆக்கத்திற்கு அழைப்பது போலவே அழிவுக்கும் தள்ளுகின்றன. சிறையின் இறுக்கங்களோடு சேர்ந்தே நான் வளர்ந்து வருகிறேன். என்னை அழுத்தும் பாரமும் என்னை மீட்டுக்கொள்வதற்கான நெம்புகோலும் என்னைச் சுற்றியே எனக்குள்ளேயே இருக்கின்றன. நெம்புகோலால் என்னை நிமிர்த்துக் கொள்ளாவிட்டால் எனது பாரமே என்னைப் புதைத்துவிடுகிறது. என்னைக் கொண்டே நெம்பிக்கொள்ளாவிட்டால் எனது பாரமே என்னைக் கொன்றுவிடுகிறது. என்னை நான் தளர்த்திக்கொள்ளும்போதே எதிரிகள் என் மீது ஏறிக்கொள்கிறார்கள். என்னைத் தளர விடும்போது, எனக்கு நான் எதிரியாகிறேன். தளராத இயக்கத்தின்போதே நான் உயிர் வாழ்கிறேன். உறவுகளில் நான் உயிர் வாழ்கிறேன். மண்ணோடும் விண்ணோடும் நான் மகிழ்ந்து உறவாடுகிறேன். எனக்குள் அண்டமும் அண்டத்திற்குள் நானும் கலந்திருக்கிறோம். உறவின் இருவழிப் பாதை எங்களுக்குள் இணைந்திருக்கின்றன. காற்றும் ஒளியும் இடைவிடாமல் இதில் இயங்குகின்றன. எப்போதும் பூத்து வருகின்றன என்னிடம் புதிய உறவு மலர்கள். தொலைவிலிருந்த… பகுதி - ஒன்று மார்ச் - 1981 நான் கத்தி யார் செவியையும் அடைக்க விரும்பவில்லை. நான் நின்று யார் வழியையும் அடைக்க விரும்பவில்லை. எனது கையெழுத்து யாருடைய ஆட்டோகிராபிலும் நிலைக்க விரும்பவில்லை. பிறர் பார்வையை நான் மறைக்க விரும்பவில்லை. இன்னொருவர் செருப்பில் நான் நடக்க விரும்பவில்லை . என்னையே இழந்துவிட நான் விரும்புகையில் பிறரிடம் நான் சிலையாவதை எப்படி விரும்புவேன்? அப்பா : இந்த அசிங்கமாவது என்னை ஒட்டாமல் இருக்கட்டும் இந்த அசிங்கமாவது… நான் தொலைவிலிருந்து வருகிறேன். அதனால்தானோ நான் எதையும் கொண்டு வரவில்லை. என்னால் உங்களுக்குத் தொல்லையில்லை. சத்தம் இல்லாமல் நான் அப்புறம் கடந்து செல்ல விரும்புகிறேன். எதிர்பார்க்கிறீர்கள்: எதையாவது தரப்பார்க்கிறீர்கள். கொஞ்சம் வழிவிடுங்கள்; காற்று சுத்தமாக இருக்கட்டும் நம் கால்களுக்கு அடியில் அகப்பட்ட அந்தச்செடி துன்புற வேண்டுமா? அந்தச் செடியை மிதிக்க உங்களுக்கு எனக்கு என்ன உரிமை? நாம் சந்தித்த வேளை நன்றாக இல்லை. பேச்சும் தொடர்கிறது. ஒரு சமாதிக்குள் சுகமாக இருக்கும் நாள்வரை வழி நடப்போம்: காற்றும் செடியும் நன்றாக இருக்கட்டும்: தொலைவிலிருந்து… பாடகனே! நீ பாடிக்கொண்டே இரு! இடைவழியில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் ஒருமுறை உன்னைப்பார்த்து வீணனே உன் பாடலால் யாருக்கு என்ன பயன்? என்று கேட்ட போதும் சண்டையிட்டுக் களைத்த போது, இப்போது அவன் பாடல் கேட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று வருந்துவார்கள்! ஆகவே நீ பாடிக்கொண்டே யிரு! பாடுவதால் உன்பாடல் மெருகேறும் பாடிக் கொண்டே யிரு… அப்புறம் புரிந்து கொள்வார்கள் நாமும் கொஞ்சம் பழகியிருக்கலாமே என்று பாடிக் கொண்டேயிரு. வள்ளுவரே எப்போதும் கூட வாரும்! நான் கை நொண்டி கால் முடவன் கூடவே வாரும். தாகமாயிருக்கிறது இங்கே தண்ணீர் அருந்தலாமா? குறளில் என்ன சொல்லியிருக்கிறீர்? கால் வலிக்கிறது உட்காரலாமா? படுக்கலாமா? என்ன சொல்கிறீர்? வறண்ட பூமி: இங்கே மழை பெய்யுமா? விதைக்கலாமா? விதைக்காமலே உங்கள் அருளால் அறுவடை செய்யலாமா? தயவு செய்து வள்ளுவரே கூட வாரும் : கூட வாரும்… வாழ்க்கை. அடித்து அடித்துத் துவைத்த போது நான் இழையாய்ப் பஞ்சாய் மாறினேனா? இழைக்குத் தெரிகிறது. பஞ்சின் வாழ்க்கையும் படுத்தியவர் வாழ்க்கையும் பஞ்சின் வாழ்க்கை அழகும் படுத்தியவர் வாழ்க்கை அழிவும் நினைவில் நிழலாக - நிற்கிறது. எல்லாவற்றையும் அதன் அடிப்படைகளில் புதிதாய்ப் பின்னுவோம் – புதிதாய்ப் பிறப்போம் - அடிப்படையில், புதியதாய்… முகத்தைக் கொஞ்சம் திருப்பு இதயத்திற்குள்ளிருந்து எதையாவது எடுத்து முகத்தின் வழியே போடு. கண்ணை காதை கொஞ்சம் அசை இயக்கத்தில் அல்லவா உயிர் அசைகிறது! கோணத்தை மாற்று குணங்கள் வெளிப்பட கவிதைக்கும் இதுதான் இலக்கணம். முகத்தைக் கொஞ்சம்… குழந்தையை விளையாட விடு மேலும் குழந்தைகளை அது சேர்த்துக் கொள்ளும் நிர்வாணமாய்க் குளிக்கவிடு நீரின் அழகைப்பார்த்து நில் சட்டையில், பித்தானில், பையனை இறுக்க வேண்டுமா? என்ன அவசரம்! இயற்கையாய் இருக்கவிடு. கொஞ்சம் கூவு குயில்களும் மயில்களும் கூட வரட்டும் ஆம் கூட வரட்டும் கவிதைகளும். இயற்கையாய் இருக்கவிடு… அற்புதமான தொரு அழகோடு, மனத் தொகுப்பிலிருந்து விடைகளைத் தேர்ந்து ஆடாமல் அசையாமல் எழுதிச் செல்கிறான் மாணவன். அவன் முகத்திலும் அவனைச் சூழவும் ஒளி கொஞ்சுகிறது. காலம் அதிராமல் கடந்து செல்லுகிறது. கோடை வெய்யிலும் அழகைக் கூட்டுகிறது. தூரத்தில் சத்தம் கிளப்பும் ரயில் தான் அடங்கிச் செல்லுகிறது. காலத்தை உண்டு வளரும் கரு ஆற்றலோடு அதிராமல் உருவாகிறது. ஆடாமல் அசையாமல்… சின்னச் சின்ன வட்டத்திற்குள் மனிதர்கள் – கூடவே தனி ஆவர்த்தனமும், எல்லாருக்குமாகத்தான் உலகம் சுழல்கிறது. இப்படியே போனால் இருவர் சந்திக்க ஓரிடம் இல்லை … சண்டைக்கும் கூட தேவையில்லை. எல்லாமே ஒவ்வொரு ஜாடிக்குள் – கெடாமல் இருக்கக் கொஞ்சம் திரவத்தோடு – ஜாடிக்குள், திரவத்தோடு… கவிதை எங்கே இருக்கிறது? எனக்குள்ளா? வெளியிலா? இல்லை இல்லவேயில்லை. இரண்டும் எதிர்ப்பட்டு – அப்போதும் கவிதையில்லை – மோதி – கவிதை பிறக்கும் சந்தர்ப்பம் – ஒரு கனல் உள்ளிருந்து – மோதியதனுள்ளிருந்து தெறிப்பது – தெறித்ததை வார்த்தைகளில் வாங்கி - வார்த்து – வைப்பது கவிதை. உள்ளிருந்து ஒரு கனல் நட்சத்திரங்களை – நான் எங்கு பார்த்தேன்? வார்த்தைகளில் வாங்கி வைத்ததைத் தவிர! சிரிப்பில் துள்ளலில் பின்னும் உவமைகளில் நட்சத்திரங்களைப் பார்த்தேன். நேரில் எப்போது பார்த்தேன் ! மாயத் திரையில் வைத்துத்தான் பார்த்தேன். நேரில் – யார் கண்டார்கள்? மாயத்திரையில் வைத்து… மலைகள் பழசாகவில்லை மலர்கள் என்றும் புதியவை. காற்று கணந்தோறும் புதியது. ஒளியின் முகத்தில் எப்போதும் புன்னகை. விடாப்பிடியாக மூடி வைத்திருக்கும் மனத்தைத் திறந்துவிடு. புதியது உருக்கொள்ளும் அப்போது, ஆயிரம் ஆண்டுப் புதுமையை மலைகளும் மலர்களும் பேசத் தொடங்கும் ஆயிரம் ஆண்டுப் புதுமையை … நான்கைந்து குச்சிகள் சில சுழிப்புகள் ஒரு மயில் உருவாகி விட்டது. ராஜ தர்பார் மாதிரி இல்லை இந்த மயில் என்னைப் போல் – உன்னைப் போல் – இருந்தும் இல்லாமல் அதே சமயம் இருப்பதாய் - கனமாகக் கருக் கொள்ளாமலும் பாரமாகி விடாமல் – எல்லாவற்றையும் தனக்குள் வைத்துத் தைத்துக் கொள்ளாமல் தாராளமாக இடம்விட்டு இடம் கொடுத்து – பிச்சைக்காரனோடு பிச்சைக்காரனாய் - முட்டாளோடு முட்டாளாய் – தனக்கு இடம் தேடும் மூர்க்கத்தனம் இல்லாமல் – இப்படி இருக்கிறது நம் மயில் - இடம்விட்டு, இடம் கொடுத்து… எல்லாரும் அவரவர் திறமைக்கேற்ற கற்பனையைக் கொண்டுவந்து கொட்டத் திருவாரூர்த் தேர் தயாராகி விட்டது ராஜகோபுரம் மாபெரிய தெப்பக்குளம் உட்பிரகாரங்கள் சிற்ப வேலைகள் எல்லாமே கற்பனையின் உச்ச அளவில் – ரொம்ப கனம் – இழுக்க முடியவில்லை தூரெடுக்க முடியவில்லை பார்த்து முடியவில்லை. மூச்சுத் திணறுகிறது – கற்பனையும் காலி - ஆஸ்துமா நோயில் அவதிப்பட்டு இளைத்து நோஞ்சானாகி – மருத்துவமனையின் வாசற்படியில் மனிதன் - மருத்துவமனையின் வாசற்படியில்…. பெண்கள் தீயின் உருவம். எரிமலைப் பிழம்புகள் நாடி நரம்புகளுள் இதயத்திற்குள் ஓடி ஒடுங்கிக் கிடக்கின்றன. சிலசமயம் குளிர்ந்து தாய்மையாய் மனைவியாய் சகோதரியாய் இன்முகம் காட்டும். சில சமயம் ஒடுங்கிக் கிடக்கும் ஓங்காரமிட்டு வெடித்துக் கிளம்பித் தன்னையும் தன்மேல் எண்ணெயூற்றியவரையும் எரித்துச் சாம்பலாக்கும். தீண்டி விடாதே பெண்கள் தீயின் உருவம். உலகின் ஆழத்தில் நெருக்கடிக்குள் பாரத்திற்கடியில் இடைவிடாது உருவாகும் தீண்டி விடாதே பெண்கள் தீயின் உருவம். தீண்டாதீர், தீயின் உருவம்… இயேசுவின் கறிக்கு என்ன விலை? நாய்க்குப் போட கிலோ 5 ரூபாய். கோவிலில் வைத்துக் கொண்டாட கிலோ 5 லட்சம் – நாய்க்குப் போட வாங்கி கோவிலில் வைத்துக் கொண்டாடலாம். இயேசுவைக் கொன்று தோட்டத்தில் புதைத்தார்கள். பூத்த ரோஜா இயேசுவின் கதை சொன்னது ரோஜாவைக் கசக்கிப்பிழிய … சென்ட்டும் இயேசுவின் மணம் பரப்பியது. குடம்குடமாய்த் தண்ணீர் கொட்ட தண்ணீர் தாரைகளில் இயேசு நடந்து சென்றார். கொல்பவர்க்கும் கொல்லப்படுபவர்க்கும் சாவில்லை – இது சரித்திரம் தொடர்கிறது. இயேசுவின் கதை… சாவகாசமாக எல்லாவற்றையும் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப் பார்க்கிறோம். இடையில் ஓர் அதிகாரி கைத்தடியோடு நுழைகிறான். ஒவ்வொன்றையும் கைத்தடியால் தட்டித்தட்டிச் சோதித்துப் பார்க்கிறான். மனைவி குழந்தைகள் ரேடியோ புத்தகங்கள் நண்பர்கள் கற்பனைகள் பொழுதுபோக்கு, எல்லாமே உடைத்து சிதறுகின்றன. உடைந்த சிதறல்களின் மேல் கைத்தடி ராஜ தோரணையில் அமர்ந்திருக்கிறது. அதிகாரி, மாமியாராக - மனைவியாக - வேலையாளாக - உலகம் உடைந்து விட்டது சுத்தியை வைத்துச் சரி செய்கிறான் தோழன். உலகம் சிதறுகிறது தட்டி நொறுக்கிப் பொடியாக்கி இரத்தத்தில் குழைத்துப் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும். யார் செய்வார்கள்? இரத்தத்தில் குழைத்து… ஜனநாயகம் – வெட்டவெளி. அங்கு புல்லும் முளைப்பதில்லை. பறவை எச்சமிடுவதில்லை வானைப்பார்த்த படியே செத்துக் கிடக்கிறது… மூச்! இழவுக்கு யாரும் போய்விடக் கூடாது – தூரத்து வேலிகளில் துப்பாக்கிக்கண்கள். செத்துக் கிடக்கிறது… நாய்கள் கத்துவதற்கு இங்கு என்ன உரிமை? யார் வழங்கினார்கள்? எதற்கு? உண்மைதான் இங்கு சுதந்திரம் இருக்கிறது. யாரும் கத்தலாம் எதற்காகவும் கத்தலாம். தெருவில் திரியலாம் பிச்சை தின்னலாம். முடிந்தால் கடிக்கலாம் முடியாவிட்டால்…. கடிபடலாம்: முடியாவிட்டால்… கையல் வில் கனக்கிறது . ரொம்ப நாள் சுமந்தாயிற்று. எத்தனையோ வடிவில் இராவணன் முன் வந்தான். இறுதிநாள், வரத்தான் போகிறது. அதுவரை தாடகை, வாலி சூரிப்பனகை எல்லோரும் இருக்கட்டும் எல்லோரையும் ஒரு சேர … அதுவரை, அசோகவனத்தில் அவளும் இருக்கட்டும். இறுதி நாள் வரும்… நானே கை கொடுப்பேன் காப்பேன் என்று கூறிவிடு. அப்புறம் எல்லோர் கையிலும் திருவோடு தேவாரம் உரைக்கொத்துக்கள் குறிப்பேடுகள் மலர் மாலைகள் கொடி வரிசைகள். இறுதியாக சுடுகாட்டை நோக்கி அமைதியான சவங்களின் ஊர்வலம். சுடுகாடு நோக்கி…. இடி இடிக்கக் கூடாது வெள்ளம் பெருக்கக் கூடாது ஆனால் எல்லா வயல்களிலும் அமைதியாய் நீர்பாய வேண்டும். இது காந்தி கண்ட கனவு! வேதாத்திரி… ஒரு புதிய உலகம் நம்மைவிட்டு நகர்ந்து செல்கிறது. நீட்டிய கைகள் சோசலிசக் குளிரில் விறைக்கின்றன. இதயத்தினுள்ளே ஒரு சோகமழை பெய்கிறது. மாமனிதர்கள் இங்கு தூக்கத்திலேயே நசுக்கிக் கொல்லப்படுகின்றனர். விடியல் வருவதற்குள் இரணகளம் நிறைகிறது. ஒற்றைத்தனி மரங்களில் சோகக் குயில்கள் தூக்கில் தொங்குகின்றன. சோசலிச பூமியோ சுகமாகத் தன் பழங் கணக்கைப் பார்க்கிறது. பூமியோ புதிய கணக்கிற்குத் தயாராகிறது – ஆமாம், புதிய கணக்கெழுதப் புறப்படுகிறது. பழங் கணக்கு… லெனின் சமாதி அமைதியாய் இருக்கிறது. கூட்டத்தில் குறைவில்லை ஆயினும் எத்தனை அமைதி! பனிக்குள் எல்லோரும் உறைந்து நகர்கின்றனர். லெனின் சாகவில்லை உறங்கிக் கொண்டிருக்கிறார் ஆகவே உறக்கத்தைக் கலைத்து விடாதீர்கள். துப்பாக்கி தோட்டா வெடிகுண்டு விமானங்கள் ராக்கெட் ஸ்புட்னிக் எல்லாம் அங்கங்கே அமைதியாக இருக்கட்டும். கூட்டுப்பண்ணைகள் கோபுரங்கள் ஆலைகள்: அனைத்தும் அமைதியாய் இருக்கட்டும். லெனின் அமைதியாக உறங்கட்டும் உறக்கத்தைக் கலைத்துவிடாதீர்கள். உறக்கத்தைக் கலைத்துவிடாதீர்கள்… சோசலிச பூமியில் அணு ஆயுதங்களே முளைக்கின்றன. பசித்த உலகிற்கு வெடிகுண்டுகளே உணவு: எல்லார் வீட்டுக்கு மேலும் சைத்தான்கள் உலவுகின்றன. சோசலிசப்பாடலைத் தூக்கத்திலும் துதி பாடும் தொண்டர்கள் உனக்கென ஒருநாடும் வீடும் இல்லாமற் போவதாக – உனது கைகளும் மனமும் உளுத்துப் போகட்டும். லெனினை விற்றுச் சேர்த்தகாசு குரைப்பதில்லை. கூலிக்காரர்களுக்கு வயல் வெளிகள் சொந்தமாக வேண்டியதில்லை. துதிபாடுபவருக்குக் கோயில்கள் தேவையில்லை. சங்கரன் சொன்ன மாயை எல்லார் மேலும் மூடுகிறது. சங்கரன் சொன்ன மாயை … பகுதி - இரண்டு அக்டோபர் – 1982 1 கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது. கிணறு எங்கே வெட்டப்பட்டது? பூதம் எப்படிப் புறப்படும்? மனத்தில் – மனத்திலிருந்து – எதற்காக வெட்டப்பட்டது? தனக்குள் என்னதான் இருக்கும் என்று அறிவதற்காக – வெட்டாமல் அறியமுடியுமா : அல்லது காலங்காலமாகக் கிணற்றினுள்ளேயே அது புதைந்து அமுங்கிக் கிடக்குமோ? முடியாது. வெட்டித்தான் பார்க்கவேணும் விடுவித்த பிறகு அதன் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் அப்போதுதான் – அந்த விடுதலைப் பேற்றில்தான் நம்மோடு நட்புக்கொள்ளும்: உறவாடும். அதுசரி கிணற்றுக்குள் இந்தப் பூதம் எப்படிச் சேர்ந்தது? இது எங்கே உற்பத்தியாயிற்று! உலகின் அடிப்பகுதியில் – எரிமலைகள் உருவாகும் வெப்பப்பகுதியிலா? இல்லை: சமுதாய வரலாற்றுச் சுழிவுகளில் பள்ளங்களில் - ஆழங்களில் நிறைவேறாத ஆசைக்கனல்களிலிருந்தா? அடக்கப்பட்ட ஆசைகள் மனக் கிணற்றினுள் பதுங்கியிருந்து மறைந்திருந்து தாக்குகின்றன. நாம் உற்பத்தி செய்தவை, நாம் அனுபவிக்கிறோம் சுகமாக – வேதனையாக – அனுபவிக்கத்தான் இது அடங்கும் கிணறு வாழ்க பூதமும் வாழ்க வெட்டியவர் வீழ்ந்தவர் எல்லோரும் வாழ்க நாதன்தாளும் வாழ்க நமச்சிவாயமும் வாழ்க : 2 வெளிப்பட்ட குழந்தையின் முகம் எப்படிக் கொப்பளிக்கிறது! வெண்மைக் குமிழிகள் ஆயிரமாயிரமாய் அடுத்தடுத்து காற்றில்வெடித்து கரையக் கரையக் மீண்டும் மீண்டும்…. கண்ணாடிச் சிமிழ்களில் நிறைந்திருக்கும் நீரோட்டம் - எங்கிருந்து? என்ன சேதியைச் சொல்லுகின்றன! துள்ளி வரும் இந்த வெள்ளலைகள் கை கொட்டிச் சிரிக்கின்றன தூய மனத்தின் வெண்மையில் வியப்பில் தேடலில் ஆர்வத்தில் இவை என்னமாய்ப் பொங்குகின்றன மண்ணுலகிற்கு வந்த தெய்வம் பின் எப்படிச் சிரிக்குமாம்! 3 கற்பக மரத்தடியில் ஒரு பிச்சைக்காரன்: ‘தாயே! பிச்சை போடு’ உண்டு முடித்து மரத்தடியிலேயே படுத்துவிடுகிறான். மீண்டும் ‘தாயே பிச்சை’ பிச்சை கிடைக்கிறது. மரத்திற்கு சலிப்பு: வேறு எதையுமே கேட்பதில்லையே: பிச்சைக்காரன் - படு பிச்சைக்காரன் ! ’தாயே பிச்சை’ கிடையாது மடையா? வேறு எதுவும் கேட்க மாட்டாயா? கேட்க மனமில்லையா? “மனமா?எங்கே! எப்படி? தெரியாது! யார் எனக்குத் தந்தார்கள்” ‘பிச்சை : இல்லை : போடா?’ ‘நாசமாய்ப் போக! நாளும் கொடுத்தவளுக்கு இன்று என்ன கேடு’ எவளெவளோ வருகிறாள்: என்னவெல்லாம் பெறுகிறாள்: எழுந்து நடக்கிறான்: கிளை நீட்டி அழைக்கலாமா : 4 நெஞ்சிற்குள் சின்னக் குழந்தை : குறுகுறுத்த விழிகளோடு – பாடினால்….. தூங்குகிறாளா? தொல்லை பிடித்தவள் : இன்னும் பாட்டு கேட்கிறாள்: ‘சனியனே! தூங்கு சனியனா? யார்? எப்படி?’ கதை கேட்கிறாள்: தொட்டிலிலிருந்து இறக்கிவிட்டால் தோளில் ஏறிக்கொள்கிறாள்: தொல்லை ! பெருந்தொல்லை! கிணற்றில்தான் தூக்கி எறிய வேண்டும் எங்கே கிணறு? எறித்து விடுகிறேன்: கதறுகிறாள்: நானும் கதறுகிறேன். கை கொடுத்து – குனிந்து; உயிர் கொடுத்துத் தூக்கி விடுகிறேன்: கண்ணில் நீர், இருவர்க்கும்: எங்கே போவது? எங்கே போய்த் தீர்ப்பது? அன்புக் குழியில் அடங்கும் நாள் வரை தொல்லைகள் தொடரும்! எங்கோ முடித்த சங்கிலி இதயத்தை அறுக்கிறது. 5 தேரில் ஏறி நின்று தங்கை கூறுகிறாள்: “அர்ச்சுனா வில்லையெடு; எதிரிகளை தூளிப்படுத்து!” அர்ச்சுனன் அமைதியாகக் கூறுகிறான்: "போடி! இறங்கிப்போய்ச் சிறுவீடு கட்டு: கூட்டாஞ் சோறு சமை: காலம் நேரம் தெரியாமல் தேரில் ஏறிக்கொள்கிறாள் கீதையோடு தங்கை சிணுங்குகிறாள்: ’ஏன்’டி உனக்கு எல்லாமே விளையாட்டா? ‘ஆமாம் அப்படித்தான்.’ ‘கொஞ்சம் பொறு: உன்னை மண அறையில் பார்த்து மகிழ்ந்துவிட்டு: எதிரிகளை நோக்கிச் செல்வேன். அழகான குழந்தையோடு நீ கொஞ்சிக் கொண்டிரு: வானத்திலிருந்து பார்த்துப் பூரிப்பேன்!’’ தங்கையின் மனத்தில் குருச் சேத்திரம்! 6 புதுமைப்பித்தன் ’சாவதற்கு முன் சொன்னானாம்: ’தொண்டைக் குழியை அறுத்துவிடு : நான் சுகமாகச் சுவாசிக்க வேணும்! ஆஸ்கர் வொய்ல்டின் சிட்டுக் குருவி சொல்லிற்று: “கொஞ்சம் பொறு , குழந்தையே! என் இரத்தச் சிகப்பில் பூக்கள் மலரும்” குழந்தை மாதவன் கேட்டான் “அப்பா: என் குரல்வளையை நெரித்துவிடு சொர்க்கத்தில் நான் சுகமாக இருப்பேன்” அம்மா சொன்னாள்: தங்கை சொன்னாள்: “செத்துத் தொலைவோம்: உலகம் நிம்மதியாக இருந்து சோரம் போகட்டும்” உலகத்தை உள்ளிருந்து ஆட்டுகிறது ஒரு பிசாசு! எரிமலைகள் எல்லாவிடங்களிலும் வெடித்துக் கக்குகின்றன யாரை, யார் காப்பாற்றுவது! எரிக்கும் நெருப்பில், வா! எல்லோரும் பொசுங்குவோம்: 7 அமுதத்தை நெஞ்சில் தேக்கி அழகுத் தெய்வம் காத்திருக்கிறாள் தெய்வத்திடம் வாங்கித் தின்பதா? கேவலம், திருடித் தின்று விடலாமா? பட்டை மாதிரியா? இல்லையே! இது சுகந்தருமாமே: சுகம் யாருக்கு வேண்டும்? போதை வேண்டும்: அழகுத் தெய்வமே! கடையை மூடு’மா போ’மா: போய் ஆசிரமம் வை: இது மண்ணுலகம்! உன் பருப்பு இங்கு வேகாது. நீ நினைத்தால் இங்கு பூக்கள் மலரும்: வானம் வெளுக்கும் வயிறு நிரம்புமா? வயிறு - எங்களுக்கு எத்தனைப் பெரியது : அமுதம், அதை நிறைக்குமா? எங்களுக்கு சீதைகள் வேண்டாம்: சூர்ப்பனகைகள் தான் வேணும்: உலகம் படைக்கப்படும்போது நீ எங்கே இருந்தாய்? இராவணன் படைத்தஉலகில் நீ எப்படி முளைத்தாய்! போய்ச்சேர்: அசோகவனத்திற்கு. 8 சோழ மாதேவி கேட்டாள் : என்னடி இத்தனை கொழுப்பு ! சேற்றில் மலர்ந்த உன்னைச் செந்தாமரையாக்க வந்தான் கொன்று விட்டாயே! கொலை பாதகி! மிரண்ட நிலையில் மேகலை கூறினாள்; பரத்தையர் குலத்தில்தான் பிறந்தோம்; பத்தினியாக வாழத்தான் விரும்புகிறோம்: உங்கள் மகன் பரத்தைகளையே உருவாக்கத் திரிந்தான்: அவனைப் பக்குவப்படுத்தத்தான் பார்த்தேன் : பாவி! என்னையும் சேர்த்தல்லவா உடைத்தெறிந்தான்: செத்தவனை எனக்குள்தான் அம்மா புதைத்திருக்கிறேன்; நான் கன்னிதானம்மா ; அவனைக் கருக்கொண்டு உயிப்பிப்பேன். அப்புறமும் - அவன் தேரோடு திரிந்தால். வெட்டிப் புதைத்து மீண்டும் விளைவிப்பேன்; வள்ளுவரே! வா’ய்யா! ஊடல் பற்றி உனக்கொரு கதை சொல்லோணும். தப்புச் செய்துவிட்டேன் : நாம் ஆண்கள் : தப்பே செய்யாதவர்களா! தப்பே செய்யாதவர் மாதிரி எழுதி நீர் தப்பித்துக் கொண்டீர். உங்களைப் படித்த என் தங்கை ‘ஏன் அண்ணா இப்படி?’ என்று கேட்டு உயிரை வாங்குகிறாள்: ‘உயிரையாவது எடுத்துக் கொள்: சும்மா விடு’ என்றால் தானும் உயிர்விட நிற்கிறாள்: வம்பாப் போச்சுதய்யா - வள்ளுவரே! நாரதர் மாதிரி நடுவிலே புகுந்து கலாட்டா செய்து விட்டீர்: என்னைச் சுத்தப்படுத்த நெருப்பை குளிரவைத்துக் காத்திருக்கிறாள்: வம்பாப் போச்சய்யா: வகையாக மாட்டிக் கொண்டேன் : நாம் ஆண்கள் வேலிமீறிய கிளைகள்: வேர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுப் பரப்பில்: வேரை வெட்டிவிடவா முடிகிறது! - தங்கையை என்ன செய்யலாம்! கோவிலில் வைத்துப் பூட்டிவிட்டு, வாய்யா போகலாம் – அடுத்த தெருவுக்கு. 10 திருத்தக்க தேவரே! என்னய்யா தத்துவம் படித்தீர்? சீவகன் ஏன் துறவியானான்? தேடினால் விடை இல்லையே! கந்துக்கடன் யோக்கியனா? காலமெல்லாம் மனைவியின் காலடியில் கிடந்துவிட்டு இறுதிநாளில் - என்னமாய்ப் போரிட்டு விட்டில்பூச்சிபோலச் செத்தொழிந்தான்: சுடுகாட்டில் - கொடுமை அய்யா – குழந்தை பிறந்தது! தாய் வளர்க்க முடிந்ததா? எவனோ வளர்த்தான் எவனுக்காகவோ போரிட்டான்; நீதி கேட்டு நின்றான் தண்டனை தரப் படைகளே காத்திருந்தன வளர்ப்புத் தந்தை மறைந்து வாழச் சொன்னான்: எத்தனை கேவலங்கள் இந்தச் சீவகன் வாழ்வில்; பேய்கள் - பிசாசுகள் – இவனைச் சுற்றி வளைத்துக் குடும்பச் சிறைக்குள் பூட்டப்பார்த்தன. இந்த முட்டாளும் இதுவே வீரம் என்று போரிட்டு நிறைய ஆர்ப்பாட்டங்களோடு மணம் முடித்துக் கொண்டான்: படுக்கையறையில் இவன்பட்ட துன்பங்கள் …. மனைவிமார் படுத்திய பாடுகள்: நகைக்கும் சொத்துக்கும் இவனைத் துரத்தியடித்த நிகழ்ச்சிகள்? அழகிகளின் வீராப்புகள் மனைவிகளின் உரிமைப்போர்கள்; சே சே ! எத்தனை தொல்லைகள்! நாட்டுஉரிமை இழந்து எத்தனை நாடுகளில் இவன் நாயாய் அலைந்தான்: எத்தனை வகை ஆத்திரம் இவனுக்குள் சேர்ந்திருக்கும்? குழந்தைகள் உண்டா இவனுக்கு: குழந்தைகள் மலர்களும்தான் பிசாசுகளும் தான்: எல்லா ஆத்திரமும் சேர இவனுக்கு வலிமை பெருக இறுதியில் தன் நாட்டைப் பிடித்தான்: கூடவே அரியணைத் தொல்லைகள்: நீதியில் தடுமாற்றம்: ஊர்மக்கள் போராட்டம்: போர்க் கொடுமைப்புலம்பல்கள்: எட்டு மனைவிகளுக்கிடையில் வழக்கு தீர்க்க நேரம்? இடையிடையே முனிவர்கள் தொல்லை. சிவ பூசைக் கரடிகள். எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்து இறுதியாக – துறவி ஆனான்: எல்லாரும் ஒரு தடவை ஜோராக கதறி அழுதுவிட்டு அப்புறம் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள் . …..தேவரே! என்னய்யா முழிக்கிறீர்! கதையைக் கெடுத்தது நீரா? நானா? பகுதி - இரண்டு அக்டோபர் - 1982 1 கையில் துடுப்பில்லை அப்புறம்தான் தெரிந்தது கடலில் இறங்கிவிட்டேன் உங்களோடு வருகிறேன் நானும் என்று கூறிய மகனோடும் நெடுந்தொலைவில் விண்மீன் ; நம்பிக்கை தரலாம். தொலை தூரத்தில் எதிரியின் கப்பல் … எதுவும் நேரலாம் நேரட்டும் கரையில் மனைவி சிந்திய கண்ணீரை முத்துக்களாய்த் திரட்டியபடி 2 ஒரே ஒருமுறை எனக்கு வாய்க்காதா? என் மனைவிக்கு மலர்மாலை இட அது மணமாலையாக இருக்கட்டும்… கைத்தலம் பற்றிய கனாக்களும் மனத்தில் முழங்கும் மத்தளங்களும் இதயத்தில்உறைந்த இன்னிசையும் ஒரு நாள் வெளியில்… சுதந்திரமாய்வந்து ஆர்ப்பரிக்கட்டும் ஆசைகள் தீர… ஆமாம்! ஆர்ப்பரிக்கட்டும் ஆசைகள் தீர … 3 வானம் இடிந்து விழும்… கடல்கள் முழங்கிக்கவிழும்… எல்லா உயிர்களும் நச்சுக் காற்றில் புரளும் அதுசரி! அதுவரை எனக்குக் கூரையும் குழந்தையும் சில உறவுகளும்… உறுதியாய்… இதமாய்… இன்பமாய்… இருக்கட்டும். இதையும் ஏன் பறிக்க வருகிறீர்கள் எக்காளத்தோடும்…. வானம் இடியும் என்ற முழக்கத்தோடும் கசக்கிய வெண்புறாக் கைகளோடும்! அரக்கப் பரம்பரை அழிந்ததாக சரித்திரம் இல்லை… கூரையையும் குழந்தையையும் எப்படிக் காப்பேன்…? என்னையும் ….? என் உறவுகளையும்…? 4 என்னிலிருந்து பிரிந்த வானமும் நிலவும் மலர்களும் இசையும் என்னில் மீண்டும் எப்போது பிறப்பெடுக்கும்? அதுவரை…. சட்டகமாய்… சவமாய்…. கல்லாய்… காத்திருக்கவா? சட்டகத்திலிருந்து கை கால் அசைக்காமல்… இமை உதிர்க்காமல் பார்த்தபடி … சவமாய்…. கண்ணைமூடி எல்லோர் குரலையும் கேட்டபடி கல்லாய் ஓரத்தில் கிடந்தபடி…. முடியவில்லை… கனக்கிறதே! மூச்சுத் திணறுகிறதே! எத்தனை நேரம் இந்தத் தொங்கல்: இன்னொரு பிறப்பு எப்போது நிகழும்? அதுவரை…. 5 இறந்துபோன என் நண்பனைப் பற்றி ஏன் இத்தனை பொய் சொல்கிறீர்கள்? சந்தோசமாய்ச் செத்ததாக… சாதனையோடு செத்ததாய்… கவிதைக் கரையைக் கண்டதாய்… பாவிகளே! நீங்கள் குள்ளர்கள்… கொடுமைக்காரர்கள்…. உங்கள் கையளவு இதயத்தைக் கொண்டு அவன் கடலளவு இதயத்தை எப்படி அளந்தீர்கள்? அவன் கவிதைக்கு எங்கே கரை கண்டீர்கள்…. அவன் என்றும் குழந்தையாய்.. பதியவனாய்… வானப்பரப்பில் தவழ்ந்தவனாய்…. வானமாய் கடல்அலைகளில் பிறந்தவனாய்…. கடலாய்… குள்ளர்களே! அவனை குள்ளனாக்காதீர்கள்! உங்களுக்குள் செத்துப்போய்… சவமாய் உறைந்து போய் நாறும் ஒரு பிணத்தைத் தூக்கிப்போட முடிகிறதா உங்களால்? முடிந்தால் . . . அந்தக் குழந்தையாய்ப் பிறப்பெடுத்து அவனை என்றும் காண்பீர்கள்! 6 கடவுள் செத்துப்போய் எத்தனைக் காலமாயிற்று? எடுத்துப் புதைக்க ஏன் இத்தனைக் காலம்? கொட்டு முழக்கங்கள்… தேவார திருவாசக ஓதல்கள் … மலர்மாலை சந்தன அலங்காரங்கள் ஓங்காரங்கள்…. எல்லாவற்றையும் சீக்கிரமாய் முடித்துக்கொள்ள மாட்டீர்களா? நாறுகிறதே! சந்தனம் தெளிக்கிறீர்களா? கவலை தீரவில்லை …. அதனால் கத்துகிறீர்களா? சமாதிகட்ட மனமில்லாமல் கோயில்களில் புதைக்கிறீர்களா? பாவம்! நீங்கள் செத்துப்போன கடவுளின் பிள்ளைகள்! பாவம்! அழுங்கள் … எத்தனையோ பேருக்குத் தொழில் வியாபாரங்கள்… அரசியல் ஆதிக்கம் கூடவே புதிய கடவுள் தோற்றங்கள் நடக்கட்டும்! உங்களால் சாகாமலும் செத்துப்போன கடவுளைப் பிழைப்பிக்காமலும் தொழில் - ஆதிக்கம் செய்யாமலும் வாழ முடியாது … இது எத்தனைக் காலமாய் … எத்தனைக் காலத்திற்காய்… 7 ஒரு சின்ன ரோஜாப் பூவுக்குள் …. இதழாய். தேனாய். என் உயிரை ஒளித்து வைத்திருக்கிறேன் …. வானமும் என் வாழ்க்கையும் அதன்மீது கவிந்து… காற்று வீசி … கண்ணீர் தெளித்து உயிரை உரமாக்கி …. காத்திருக்கின்றன…. காற்று புயலானாலும் – கண்ணீர் கொட்டினாலும் உரம் காரப்பட்டாலும்… வானமும் வாழ்க்கையும் சிதறி மடியும் …. அப்புறம் வானமே! உனக்கு மறுபிறப்புண்டா? வாழ்க்கையே ! உனக்கு ரோஜாவாய்ப் பூக்க முடியுமா? 8 குழந்தை கூப்பிடுகிறான்… துணையாய் - தோழனாய் பட்டம் பறக்கவிட… பம்பரம் விளையாட… சீட்டுக் கட்டோடு… கேரம் போர்டோடு … எனக்கு எத்தனையோ வேலைகள் … மரம் நட… உயிர்க்காற்றால் உலகைத்தழைக்க வைக்க புத்தகத்தில் புகுந்து உலகை அளந்து வேலியிட்டு வெளியை அடைக்க … இறுதியில் என் குழந்தைக்கு எதிர்காலம் சமைக்க.. சமாதியாக்க சமாதியில் ஒரு ரோஜாப்பூக் கண்ணீர் சிந்த… கண்ணீரை எடுத்து ஒரு கவிதையாய் முடித்துக் கொள்ள… இறைவன் இங்கே எப்படி எமனானான்? ரோஜாப்பூ மாலைகள் பிணங்களுக்கா? 9 என்ன செய்யலாம் காட்டின் நடுவில் கற்கோட்டையினுள் …? கல்லும் முள்ளும்காலுக்கு மெத்தை ‘முருகா’ பாடல் முந்நூறு முறை… கதிரவன் காய்கிறான்… தாராளமாக நிலவு எழவும் செய்யும் மனித பிசாசுகள் வரும்; போகும்; மிதக்கும்; கடிக்கும். உனக்கென்று ஒதுக்கப்பட்ட இடம் … கொஞ்சம் நகர … படுக்க வசதியாய் உட்கார … புழுக்களோடு இருந்தாலும், செத்திருக்கும் – சாப்பிடலாம் தண்ணீர் - யாருக்குத்தான் சுத்தமாய்க் கிடைக்கிறது? தப்பவா முடியும்? வெளியிலும் தண்டனை காத்திருக்க… கிடைக்கும் காற்றில் மூச்சுவிடு… சுகமாக – முன்னுள்ள சிறுநிலத்தில் - கொஞ்சம் உரமிருக்கும் – செடிவை ஏதாவது பூக்கும் : பார்த்துக் கொண்டிரு: காலம் கழியும். நீ மனிதன்தான்: அட்டையில் எழுதப்பட்ட படி. அப்புறம் என்ன? சரித்திரம் படி: சாசுவதம் உன் இனம். என்றைக்கேனும் சூரியனில் நீ குடியேறக்கூடும். சூரியன் உனக்கே சொந்தம்; யாரும் பறிக்கவில்லை. …சலிப்பாய் இருக்கிறதா… நினைவிழந்து தூங்கு. சொர்க்கக் கனவுகள் சில வரலாம். சுகப்படு. 10 காற்று அரித்தால் எந்த மரம் நிற்கும்? நிலைக்கும்? எத்தனைக் காலத்திற்கு ? கடல் அரித்தால் எந்தக்கரை நிற்கும்? நிலைக்கும்? எத்தனைக் காலத்திற்கு? காற்றும் கடலும் அரிக்கும் மரமும் கரையும் நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும் . ஆமாம். எத்தனைக் காலத்திற்கு ? மீண்டும் ஒரு மரம் முளைக்கும். கரை கிளைக்கும் – எத்தனைக் காலம் கழித்து? எத்தனைக் காலம் கழித்து? எத்தனை வேதனையோடு? காற்று அரிக்க… மரம் முளைக்க கடல் அரிக்க… கரை கிளைக்க… இந்தத் தர்க்கமும் எத்தனைக் காலத்திற்கு… இதமாக… மனம் முறையிடும் கத்தும் கலங்கும். தொங்கும்…. அறிவு மரத்தை நடும்; கரை இடும்; மரமோ முறியும் …. கரையும் அலையும்… காற்று முறைக்க… கடல் திமிர …. எல்லாமே ஒரு வளையத்தில் சிக்கி மேலேற…? அதுவரை வளையம் இயங்கும். சிக்கிய நாம்? 11 எனக்கும் புதியதாக இரத்தம், கிட்னி – போதாது. பல் கண் காது … குடல் எல்லாமே ஒரு சொட்டாகக் கிடைத்தால் நல்லது. சலித்துப்போன பழைய வாழ்க்கையை உதறிக்கொள்ள – புதிய இரத்தம் கிளர்ச்சி தரும் பல் அரைக்கும் கண் பார்க்கும் குடல் கழிக்கும் … ஆவேசத்தோடு … ஆர்ப்பாட்டத்தோடு புதிய இலட்சியங்கள் பற்றி மூளை சிந்திக்க, வாய் கூச்சலிட. செல்லும் வழியில் …. சிதைந்து உதிரும் என் கண்ணை நான் பார்க்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு நரம்பாக, நாடியாக, தசையாக அறுந்துவிழும் இதயம்… நுரையீரல் நான் பார்க்கக் கூடாது: கூடவே.. இலட்சியங்கள்… உறவுகள் எல்லாமே… நிறையமனிதனாகத்தானே நிமிர்ந்து செல்லுகிறேன். வானமும் தலைதாழ்த்தி என்னைப் பார்த்துப் பூரிக்கிறது. கடலலைகள் யாருக்காக முழங்கணும்! காற்று வீசுவது… எல்லாமே எனக்காக! குச்சிக் கால்களில் … ஒட்டுப்போட்ட உடம்பில் உயிரை இழுத்துச் செல்லும் இந்தப் பிணத்திற்காக… மாலைகள் மணக்க ஒளிவெள்ளம் பாய… எதற்காக… யாருக்காக…. என் இடத்தைப் பறிக்க வருவது யார்? என் மாலைகளைச் சூட வருவது யார்? யாரும் இல்லாத நிலையில்… கடலை, காற்றை, வானத்தை யார் இயக்க!! 12 எனக்கெனக் கிடைத்த இடம் பெரியதுதான். எல்லாமே… வீடு … சுற்றுச் சுவர். சில மரங்கள்… கனிகள் பறவைகள் புத்தகங்கள்… நண்பர்கள் … பூங்கா … சுற்றுப்பயணம் பேனா … பேப்பர் … பத்திரிகை … எல்லாமே… கை கால்களை அகலப்போட்டுக் கொள்ள முடியும் சிந்தனையில் எல்லாவற்றையும் உள்ளே விட எல்லாமே … வெளியேற்ற முடியும். குடிக்க, குளிக்க, கூத்தாட, சந்தோசப்பட… எல்லாமே … சில குறைகள் இருப்பதில் குற்றமில்லை. எல்லாமே என்னை அடைக்க. எல்லாவற்றையும் நான் அடைக்க … வெற்றிடத்தில் …. உள்ளேயும் வெளியிலும் … காட்சிகள்…. கோணங்கள் … கோலங்கள் மாற அரங்கத்தில் அதிர்ச்சிகள் பின்னலிட… வேடம் மறந்து வேடமாகி… நாடகம் மறந்து.. நாடகமாகி… வெற்றிடத்தில் வெளியிலும் உள்ளும் … வெளியிலும் உள்ளும் … காத்திருப்பவர்… வரிசையாக அலையாக கைதட்டப் பலர் முடிவுறாத நாடகத்தில் … வெற்றிடத்தில் …. 13 எல்லாமே என்னால் தானா? ஏற்றுக் கொள்கிறேன் உன் குற்றச்சாட்டுக்கள் உறுதியானவை ஆதாரங்கள் மறுக்க முடியாதவை (மறுத்தால் நீ அங்கீகரிக்காதவை) எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன் நீ எடுத்த பிறப்பு இப்படி . என் பிறப்பும் இப்படி. இனி என் தோலை இரத்தத்தை அதே போல - என் மூளையை - நரம்பை அதே போல - என் வாழ்க்கை முறையை - போக்கை மாற்றிக் கொள்ள முடியாது நாளும் - தவறினால் - வாரத்திற்கு இருமுறையாவது நீ நடத்தும் விசாரணையில் நான் குற்றவாளி. நீ தரும் தண்டனைதான் என்ன? என்னோடு வாழ்வதைத் தவிர : நான் பெறும் தண்டனைதான் என்ன? உன்னோடு வாழ்வதைத் தவிர. உடம்பு இருப்பதனால் உறவும். இடையில் குழந்தைகள்; ஆகவே குடும்பமும். மறுபிறப்பும் இல்லாமற் போய்விட்டது. ஒருவேளை நீ சென்ற பிறகு நான் இருந்து அல்லது, நான் சென்ற பின்னால் நீ இருந்து எல்லாவற்றையும் எண்ணிப்பார்ப்போம் அப்போதாவது அர்த்தம் புரியுமோ . நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்போதும் குற்றஞ்சாட்டியே கொன்று கொள்வோமா? 14 இயேசு பிறந்ததைப்பற்றி எனக்கு ஆட்சேபம் இல்லை அவரை வைத்துக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் விடாப்பிடியாக அழகாக ஆடையணிந்து …. வீட்டையும் வெளியிடங்களையும் அழகுபடுத்தி ஆர்ப்பாட்டமாக … விருந்தும் வைத்து… ஏன் இப்படி அழுது தொலைக்கிறீர்கள்? அவர் உங்களுக்காகப் பிறக்கவில்லை; வாழவில்லை: மரிக்கவில்லை அவர் நாமத்திற்கு நீங்கள் செய்வது மகிமையில்லை அவர் உங்களுக்கிடையில் மறுபடியும் பிறக்கப்போவதும் இல்லை . ஊசியின் காதில் ஒட்டகம் நுழையாது. பாறையில் வித்துக்கள் முளைப்பதில்லை மரங்கள் சொற்பொழிவுக்கு மலர்வதில்லை ஆதியில் இருந்த வார்த்தை இன்றுவரை மாமிசமாகவே இருந்திருக்கிறது. ஆவியற்று அவிந்து நாறிப்போன இந்த மாமிசத்தில் இயேசு உயிர்த்தெழ முடியாது. உங்கள் இதயத்திற்குள் புதைத்துவிட்ட இயசுவை மாமிசப்பாறையைப் புரட்டி வெளிப்படுத்த முடியாது. மாமிசமே ஆடையணிந்து … விருந்து நடத்தி … விழாக் கொண்டாடும்போது இயேசு மீண்டும் எங்கே பிறப்பார்? சொர்க்கத்தின் சாவி தொலைந்துபோய்விட்டது விழா நடத்துங்கள் … வேதனைப்படாமல் - 15 கவிதை வரிகளால் ஒருவனைக் கட்டிப்போட முடியுமா? முடியும். கண்ணைக் குருடாக்க முடியுமா? முடியும். கவிதை வெள்ளத்தில் மழ்கடித்துக் கொல்ல முடியுமா? முடியும். கவிதை எதற்காக? கட்டிப்போட, குருடாக்க, இறுதியாகக் கொல்ல – கவிதைக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது? கட்டிக் கொள்ள குருடாக… இறுதியாகக் கொல்லப்பட. காத்திருப்பதால்… பலர். காத்திருப்பதால். எப்படியாம்? ஏனாம்? கட்டிக் கொள்ளணும் குருடாகணும் கொல்லப்பட வேண்டும்: சுகமாக ஆமாம்: வேதனையிலும் சுகமாக : கவிஞன் என்ன கொடியவனா? இல்லை: அவனும் தானே உங்களோடு உடன்கட்டையேறுகிறான்: கவிதை என்னாகிறது? சாம்பல் மேட்டில் பூத்துக்குலுங்குகிறது: ரொமேன்டிக்காக… 16 எதன் கருவி நான்? என் மூலம் என்ன இசை வாசிக்கப்பட வேண்டும்? எனது இசை எதை நினைவுறுத்த வேண்டும்? எனக்கு நானே ஒரு பாரமாக. என்னைத் தாங்குவது யார்? எனக்குள் எழும் அபஸ்வரம் - எப்படிச் சகிக்க? எனது சுகத்தை விட்டு … எப்படி இந்த மேடைக்கு வந்தேன் என்னோடும் சேர்ந்து இந்த மேடையில் எத்தனை பேர்? ஒருவர் முகம் மற்றவர் அறியாத முகம்; எல்லார் முகத்திலும் வண்ணங்கள் பல வண்ணங்கள் படிமங்கள் கடந்து உண்மையை யார் கண்டறிய? எப்போது? எப்படி? எத்தனை நாளைக்கு இந்தத் தேடலும் திருட்டும்? சாவு - இதற்கு முடிவில்லை. சாவாவது இதற்கு முடிவாயிருந்தால்… என்பது எத்தனை பேதைமை: ஒருவர் முகம் மற்றவர் அறியாது திகைக்க எந்த இசை இங்கே சேர்ந்தெழும்? எதையாவது தொடங்கி … அந்த இழையிலிருந்து எதையாவது பின்னத் தொடங்கவா? பின்னிப்பின்னி கை சலித்துப்போகவில்லையா! எத்தனைக் காலத்திற்கு இந்தச் சேர்ந்திசை? எல்லார்கைகளிலும் ஒவ்வொரு பின்னம். பின்னங்களைச் சேர்த்தால் முழுமை கிடைக்கிறதா ? எத்தனைக் காலத்துப் பழைய கேள்விகள்! எப்படிக் கடக்க? எங்கே செல்ல? 17 மூளைக்குள் பல அறைகள் : நூலகத்தில் புத்தகப் பிரிவுகள் மாதிரி : ஒருவனுக்குள்ளும் பல முகங்கள் : இடைத் தொடர்புகள் சில இருக்கத்தான் செய்யும் : கை விரல்கள் ஐந்து : எல்லாமே ஒரு மாதிரியா? களிமண் ஒன்று: உருவங்கள் பல : கற்பாறை ஒன்று: சிலைகள் பல : எல்லாவற்றினுள்ளும் ஒன்றே ஆட்சி செய்கிறது என்று வேதாந்தம் பேசி என்ன பயன்? பல அறைகள் : பல முகங்கள் : பல சிறைகள் : இல்லாமல் உலகம் எப்படி இயங்கும் ? விடாப்பிடியாக இதென்ன கேள்வி? வரலாறு பற்றி அதிகம் பேசுகிறாய் : பழைய காலத்துச் சாமியார் கடவுளைப் பற்றி கதைத்த மாதிரி அவற்றில் காலங்காலமாய் அலைகள் புரளத்தான் செய்யும்? ஆறு என்பதைத்தவிர அதற்கு வேறு என்ன அர்த்தம் கற்பிக்கிறாய் : ஆற்றிலும்தான் மீன்களோடு முதலைகளும்: மீன்களை ஒப்புக்கொள்ளும் நீ முதலையை ஏன் மறுக்கிறாய்? தப்பாகவே கேள்வி கேட்டுப் பழக கொண்டாய்: பழக்கம் உன் நரம்பு மண்டலத்தை ஆளுகிறது. தாறுமாறான பதிவுகள், நரம்பு மண்டலத்தில் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது? நான் உனக்கு வைத்தியம் செய்ய முடியாது… …இனி எப்போது உன்னைப் பார்க்கலாம்? 18 எப்போது இந்த நாடகம் தொடங்கியது? நாடகம் என்றா தொடங்கினோம்? … நாடகமாய்த் தொடங்கினோம்: …. இல்லை … நாடகத்தின் இடையில் சேர்ந்தோம்… சேர்ந்தது கூட, நாம் அறிந்தா? … இல்லை … அறியாமல் இடையில் இருந்தோம்… முதலும் முடிவும் நமக்குத் தெரியவில்லை ஆடி ஆடி … வேடங்களை மாற்றிமாற்றிக் களைத்தும் போனோம்? நாடகம் என்பது இன்று நன்றாய்த் தெரிகிறது. கல்லாய் மூலையில் குந்தியிருப்பதும் நாடகமாய்த்தான் நடக்கிறது… இராமனாக நடித்த போது அவதாரம் என்று அற்புதப்பட்டோம் இராவணனாக நடித்தபோது பழி தீர்க்க இரத்தம் வடித்தோம். சீதையாகச் சிறையில் இருந்தபோது உலகமே இப்படி என்று உறைந்து கிடந்தோம்: இராமனாக நடந்த போதே நமக்குள் இராவணனும் கூனியும் இருப்பதை உணர்ந்தோம்: சீதைக்குள்ளும் ஒருத்தி சிரித்து மயக்கினாள்: …. இந்த இராமாயணத்தை நாடகமேற்றிய வால்மீகி எங்கே?…. இல்லை …. வால்மீகியாய் வேடம் தாங்கியவன் எங்கே? உரக்கத்தான் கேட்கிறாய்? உனக்குள் இல்லை! 19 கரடியும் கழுகும் மோதிக் கொள்கின்றன. அல்லது மோதிக் கொள்வதாய் நாடகமாடுகின்றன. நாடகத்திலே கூட ஒன்றை ஒன்று கொன்று தீர்க்கலாம் இடையில் சிக்கிய நாமும் இருக்கப் போவதில்லை ஆகவே கரடியைக் கொல்வோம்: கழுகைக் கொல்வோம் என்று அணிவகுத்துக் கொடி பிடித்து ஊர்வலம் போகிறோம் : ஊர்வலங்களும் எதிர் எதிர்த் திசையில் : மேடைகளும் எதிர் எதிராக : நாம் என்ன வாழ்ந்தோம்? நமக்குள்ளும் கரடிகள் - குட்டியாய் : கழுகுகள் – குஞ்சாய் என்ன இருந்தாலும் பெரிய கரடியை : பெரிய கழுகை முதலில் கொல்வோம். அப்புறம்… இல்லை கொல்வதாய் பாவனை செய்வோம்: பாவனை நாடகத்தில் புனித மந்திரங்கள்… புதிய மந்திரங்களோடு 20 கண்ணுக்குத் தெரிவது கரை; அப்புறம் கொஞ்சம் கடல் : அதற்கப்புறம் எத்தனையோ ! என்னென்னவோ? வானத்தில் தெரிவது வடிகட்டிய சூரியன்: நெருங்கிச் சென்று நின்று முழுசாய்ப் பார்க்க முடியுமோ அதை? விண்ணில் ….. விரிந்து செல்லும் விண் பரப்பில் அகப்படுவதோ சின்னஞ்சிறு நட்சத்திரங்கள் அப்பால்? கண்ணிற்படும் சில அலை நீளங்களில் ….. சில நிறங்களில் அதுபோலவே சில பரிமாணங்களில் பிரபஞ்சம் எனக்குள் வருகிறது: வரமாகிறது கைக்கும் காலுக்கும் வேறு விதியில்லை நினைவிற்கும் சிந்தனைக்கும் அப்படியே. இவற்றோடுதான் நான் : என் வாழ்க்கை : கவிதைகள்: காலத்துளியின் சிறு உச்ச முகட்டிலிருந்து கடலை அளந்தாய், வானத்தை அளந்ததாய் கதைகள் பின்னி ….. கவிதைகள் எழுதி வாழ்வதாய் நினைத்து வாழ்கிறேன் எல்லைகள் என்றும் என் வசத்தில் இல்லை பறக்கும் எல்லைக்குள் வானம் அடங்குவதில்லை கையளவில் கடலை அள்ள முடியாது. கண்ணில் தெரியும் வானம் வானமும் இல்லை எல்லாம் இப்படி இழந்த பிறகும் இருப்பதை வைத்து எல்லாமே செய்கிறேன் : இதுவே விதியா? வேதனையா? எல்லையா? சாதனையா? எப்படியாயினும் அளவுகோல், உளி, உருவம், எனக்குள்: இவை கொண்டு என்னை நானே செதுக்கிக் கொள்கிறேன் 21 என் மனைவிக்கு என்ன நேர்ந்தது? இரும்புக் கவசங்களை ஏன் தரித்துக் கொள்கிறாள்? கண்ணாடி சட்டங்களில் ஏன் கை நொறுக்குகிறாள்? எரியும் நெருப்பில் எந்நேரமும் புகைய எப்படி முடிகிறது? வாரத்திற்கு இரு நாள் பட்டினி இருந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு குத்துவிளக்கேற்றி குறைவில்லாமல் கும்பிட்டு இடையிடையே பொருமிப் பொங்கி அழுது … யாரை நோக! எத்தனை முறை!… வகைவகையாய்ச் சமைத்துப் பரிமாறி உடம்பையே தேய்த்து உளத்தில் பாரம் நிறைத்து … புரியவில்லை ! என் மனைவிக்கு என்னதான் நேர்ந்தது? சட்டென்று தெறிக்கும் ஒரு பதில் …. மனைவியாய் இருப்பதுதான் என் மனைவிக்கும் நேர்ந்தது - மனைவி… ஒரு அடிமை புத்தாடையில், புது நகைகளில் போர்த்தி வைத்தாலும் அடிமைகள் அழத்தான் முடியும் ஆத்திரத்தோடு உடலை முறித்துக் கொள்ளலாம். கடவுள்கள் காப்பாற்ற முடியாது கணவனும் முடியாது: கணவனாய் இருந்து; குழந்தைகளும் முடியாது; குழந்தையாய் இருந்து … விடிவுக்கு வழி? அடிமைகள் கலகம் செய்யட்டும் கணவனுக்கும் குழந்தைக்கும் சேர்த்து கணவனையும் குழந்தையையும் எதிர்த்து …. விடியுமா? இன்றைக்கு இல்லை: அதுவரை : இரும்புக் கவசங்களில் … கலகத்தோடும்… 22 நெடுந்தொலைவில் கண்பார்வையையும் கடந்து மனத்திற்குள் மட்டுமே தட்டுப்படும் அந்த நட்சத்திரத்தை பிடிக்க … கல்லும் மண்ணும் கற்பாறைகளாயும் ஊரும் பெயரும் உருவங்களாகவும் மரமாய் மலராய்க் கனிகளாகவும் உன்னை வளைத்துப்பிடித்து உனக்குப் பாதையிட்டு உன்னை வழிநடத்திச் செல்ல இவை காத்திருக்கும்போது… இவற்றின் உறவை மறுத்து எந்நேரமும் ஏன் அந்த நட்சத்திரத்தின் மேலேயே உன் கவனம்? உன் நண்பா: நான் என்ன சொல்ல? கல்லுக்கும் மண்ணுக்கும் இடையில் எப்படி வாழ ? பாறையாய் கிடக்கும் இந்தப் படுக்கை இனிக்கிறதா? உறவின் கைகளில் எத்தனை தளைகள் ? திரட்டிக் கிடத்திய பாதைக் கிடங்கில் எத்தனை நாள் உலவி வர ….? அதனால்தான் இவற்றின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் தரையிலிருந்து தாவிப்பற்க்க முடியாமல் எந்நேரமும்… அந்த நட்சத்திரத்தின் மேலே நாட்டமாய்… 23 நீ நின்ற இடத்தில் பாறை வெடித்துப் பன்னீராய்க் கொட்டுமா? நீ எழுதும் எழுத்துக்களில் சொர்க்கம் சுரந்து நிறையுமா? நீ சிந்தும் கண்ணீரே மலராகிக் காடாய் சோலையாய்ப் பூக்குமா? அட அசடே! யாரோ சொன்ன கதையை நம்பி சாம்பல் மேட்டில் ஏன் தவம் கிடக்கிறாய்? பாறையை உடை : நொறுக்கு : தோண்டு மண்ணைப்பக்குவம் செய்: நீரைக்கொண்டு சேர் வியர்வை சிந்தி உழைப்பை உரமிடு இது என்ன புதுக்கவிதை! பாறையை உடைத்தால் … நானும் நொறுங்குகிறேன் மண்ணில் உழைத்தால்… உழைத்து மண்ணாகிறேன் உழைப்பை உரமிட்டு நான் உருவழிகிறேன். மடையா : பொறுத்திரு பொன் விளையும் வானம் மண்ணில் வளைந்து வரும். இல்லையே! பொன்னில் யாரோ புரள்கிறார்களே வானத்தில் யார் யாரோ வலம் வருகிறார்களே ! பொன்னிலும் அல்ல : வானத்திலும் அல்ல; என்னில் … என்னில் இவர்கள் படுத்துப் புரள என்னை மிதித்து இவர்கள் வானேற… எத்தனை காலம் இங்கே கிடக்க? சோசலிசம் என்ன சுகமாய் வருமா? பாறையை உடைக்கணும்: பக்குவம் செய்யணும் ஊர்கூடிச் சுமக்கணும்: ஒரு காலத்தில் வரும் … 24 உன்னால் தாண்ட முடியாத அந்தக் கற்சுவர்பற்றியே ஏன் எந்நேரமும் புலம்புகிறாய்? கற்சுவர் கனத்திருக்கிறதென்றும் தாண்டினால் கால் முறியுமென்றும் … என்னைத் தளைப்பதற்காகவே கட்டப்பட்டதென்றும்… இதனால்தான் எதிரிகள் அப்பால் பத்திரமாய் இருக்கிறார்கள் என்றும்… உண்மைதான்…. கற்சுவர்: இடையில் இருப்பதே பத்திரம் என்றும் கற்சுவர் எல்லை கடந்தால் செல்லத்திசையில்லை என்றும் எத்தனைப் பேர் எனக்கு ஓதியிருக்கிறார்கள் … உன்னைப்போலவே அன்றியும், முதற்சுவரைத்தாண்டியபோது எதிரே அதனினும் உயரமாய் இன்னொரு சுவர் எதிர்ப்படுகிறதென்றும்… அதனையும் கடந்தாலும் மேலும் பல சுவர் இருக்கலாம் என்றும் எங்கள் தோழரே சிலர் சொல்வதனாலும் கற்சுவர்தாண்ட களைத்தது பற்றியும் தாண்டுவது எப்படி என்பதற்கான பயிற்சித்திட்டத்தை அலசிக்கொண்டே களைத்திருப்பதனாலும் இன்றில்லாவிட்டால்…. என்றாவது கற்சுவர் நொறுங்கும் என்று காத்திருப்பதனாலும் காலுடைந்த சிலர் அனுபவத்தைப் பற்றியே கூடி முடிவு செய்யக் கூடிக் கலைவதனாலும்…. இன்னும் எத்தனையோ…. வதனாலும் இறுதியாக, களைத்த எங்கள் மீது கல்லெறியும் நீ எங்கள் மீதேறியிருந்து கற்சுவர் கடக்கக் காத்திருப்பதாலும்… 25 ஆயிரம் குழந்தைகள் …. இல்லை …. ஐயாயிரம் சேர்ந்து திடீரெனச் செத்தால்தான் உங்கள் இதயம் அதிருமா ? பூகம்பமும் புயலும் சேர்ந்து தாக்கினால்தான் உங்கள் இதய நாடாவில் பதிவேற்படுமா? புரதக் குறைவால் சருகெனச் சுருங்கும் இளம் மூளைகள் …. காய்கறிக்குள் கலந்து வரும் பூச்சிக்கொல்லிகளால் நரம்புகள் செத்துத் தளரும் மனிதர்கள்….. ஆலைகள் ஊதித்தள்ளும் புகை மேகங்களால் ஈரல் சிதைந்து இருமிச் சாகும் ஏழைகள் … சிறிதாய்க் கலந்த சாக்கடை நீரை நாளும் உண்பதால் பெருகும் நோய்கள்… தெருவில் கொட்டும் குப்பை கூளங்கள் திரும்பவும் நோயாய் வீடு நுழையும் விந்தைகள் … சின்ன வடிவில் எத்தனை விஷயங்கள்! நம் தோல்கள் மரத்துவிட்டன இதயமும் இவற்றில் இயங்கப் பழகின . அப்படித்தானா? அப்படித்தானா! அப்படியானால் நிச்சயமாய் நமக்கு போபால்கள் வேண்டும் அப்போதும் நாம் அட்டைகள் தாங்கி வண்ணச் சொற்களில் கோஷங்கள் எழுப்பி ஒருநாள் ஊர்வலம் முடித்து உறங்கப் போவோம்… உறக்கத்தின் போதே சின்னதாய் நுழைந்த விஷயங்கள் தாக்க… மரணத்தின் கையில் சருகாய் மடிவோம் காலையில் கனத்து எழும் அழுகையின் போது … போபால் பற்றியும் பேசிக்கொள்வோம் செத்தவர் தொகை ஆயிரமா? ஐயாயிரமா? 26 என் கவிதைகள் என்னைச் சூழ நான் எழுப்பிக் கொள்ளும் ஒளி வட்டமா? கதிரவனின் பின்புலத்தில் எடுத்துக்கொண்ட நிழற்படமா? இப்படி நினைத்து நீங்கள் எத்தனை முறை ஏமாந்தீர்கள். என் கவிதைகள்… இல்லை … கவிதைவரிகள் வட்டத்திற்குள் சிக்கிய ஒருவனின் முனகல்கள் முனகல்களோடு கொஞ்சம் மோதல்களும் … இறுதி வரிகளை நான் இப்படி முடித்துக் கொள்ளும்போது… உங்களை வட்டத்திற்குள் தள்ளிவிட்டு நான் வெளியேறுகிறேனா? இல்லை: இப்பொழுது நீங்களும் நானும் வட்டத்திற்குள்… குறுக்களவு வேறுபடும் வெவ்வேறு வட்டத்திற்குள் இருள் வட்டத்திற்குள்ளிருந்து எதையாவதுதடவி, தட்டி எடுக்க முடிகிறதா… பாருங்கள். தீண்டாதவள் (கவிதை நாடகம்) (தாகூரின் ‘சண்டாளிகா’ நாடகத் தழுவல்) காட்சி - 1 தாய்: (நுழைதல்) கொதிக்குமிந்த வெய்யிலிலே நண்பகலில் கோதையே நீ தனியே நின்றதென்னே மதிமுகத்து மகளிரெலாம் நீரெடுத்து மனை நோக்கிச் சென்றுவிட ஒருத்தியிங்கே எதைஎண்ணி நின்று விட்டாய் இளங்கொடியே இமயமலை ஈன்றெடுத்த உமையாள் போல பதியடையத் தவம் புரிய எண்ணினாயே பாரிங்கே தாய் முகத்தைப் பார்த்துச் சொல்வாய் (1) மகள் : தண்ணீர்க்குக் குடம் கொண்டு தனியே வந்தேன். தணல் பரவும் நண்பகலில் துறவிவந்தார் தண்ணீர்தா எனக் கேட்டார் வியந்து நின்றேன் தாழ்வெங்கள் குலம் என்றேன் கேட்கவில்லை தண்ணீர் தா தண்ணிர்க்குக் குலமும் இல்லை தடையில்லை தா என்றார் தயங்கி நின்றேன் தண்ணீரைத் தாங்கி வரும் மேகம் பார்த்துத் தாழ்வுரைப்பார் வையத்தில் இல்லை என்றார் (2) தண்ணீரைத் தாம் உண்டு சென்றார் அம்மா தாழ்வெல்லாம் தாம்கொண்டு சென்றார் அம்மா உண்மையினை நான் மறைக்க விரும்பவில்லை உமையவள் போல் நிற்கின்றேன் உண்மைதாயே வன்மைதரும் வள்ளல் என் தலைவராகி வாழ்விக்க வேண்டும் எனக் காத்து நின்றேன் உண்மையினை அவர் எனக்குக் காட்டிவிட்டார் உத்தமரை எதிர்பார்த்தே இங்கு நின்றேன் (3) தாய்: பலநாளும் பார்த்திருந்தேன் கேட்க வில்லை பாழ்வெய்யில் நேரத்தில் கிணற்றருகில் சிலை போலக் காத்திருந்தாய் தாய்மனத்தில் தீயிட்டுப் பார்த்திருந்தாய் வேண்டாம் பெண்ணே சிலநாளில் உனது முக அழகுங் கெட்டுத் தீயிட்ட பொருள் போலக் கருக நின்றாய் குலம் மறந்தாய் அடிமைமுறை மறந்துவிட்டாய் குறைகூறும் மக்கட்கே குறியாய் விட்டாய் (4) அரசன் மகன் ஆணழகன் முன்பொரு நாள் அடுத்திருக்கும் வனத்தினிலே வேட்டையாட விரும்பி வந்தான் வழியினிலே உன்னைக் கண்டான் வழியினிலே நீ நிறைந்தாய் சிலையாய் விட்டான் பெரியன் அவன் தன் பெருமை நீங்கி நின்னைப் பெண்டாளக் குறையிரந்தான் பாவி நீயோ கரியமலர் விழியெடுத்தும் பார்க்கவில்லை. கரையில்லாக் காதல் இன்றெங்குப் பெற்றாய் (5) மகள் : கண்ணுக்கு அவன் அழகன் உண்மையானால் கருத்திற்கு அழகனோ சொல்வாய் நீயே பண் இசைக்கும் பறவைகளும் மான்கணமும் பழகிவரும் காட்டினிலே வேட்டையாட மண்ணுள் வான்மகன் வந்தான் வேல்விழியால் வஞ்சித்து எனைக் கொத்தக் காத்து நின்றான் பெண்ணழகை வேட்டைகொளும் பித்தன் அன்றோ பேயனைநான் வெறுத்தது என் பிழையும் அன்றே 6) உள்ளத்தில் அவர்உருவைக் கொண்டு விட்டேன் உடலை அவர் பணியினுக்கே ஒதுக்கி வைத்தேன் கள்ளத்தார் வகுத்துரைத்த குலத்தை என்பால் காண்பதற்கு இங்கிடமில்லை குலம் கடந்தேன். எள்ளரிய பெருநீதிக் கிடமாய் விட்டேன் இகழ்பவர்க் கிடமில்லை இகழ மாட்டேன் வெள்ளம் போல் அன்பை நான் நெஞ்சில் தேக்கி விடுதலை தந்தவர்க்கே காத்து நின்றேன். (7) தாய்: மதம் வகுத்த முறையம்மா சாதித் தன்மை மதத்தின்கைப் படையம்மா விதி யேற்பாடு விதியினையும் மதத்தினையும் விடுத்து எங்கே வேறிடம் கண்டறிந்து நீ சேர்வாய் பெண்ணே புதைபொருளாய் நிலத்தடியில் வாழ வந்தோம். புனிதர்போல் வெளிப்பட்டு வாழ நின்றால் மதியுடையார் மேற்குலத்தார் ஆட்சியாளர் மரணத்தின் ஏவலராய் நிற்பார் கண்ணே (8) மகள்: சாதிகளை வகுத்துரைத்துக் கீழ்க்குலத்தைச் சதிபுரிந்து ஆள்வதுதான் சமயம் என்றால் வாதிட்டு விதிவகுத்து மனிதர் நெஞ்சை மாய்ப்பதுதான் சமயம்என வைத்தார் என்றால் மேதினியில் சமயம் ஒரு பொய் மூட்டை மேலோர்கள் சமயமெனக் கொள்ளமாட்டார் காதலினை அருட்பண்பை கடமை வாழ்வைக் காப்பாற்றும் நன்னெறியே சமயம் என்பார் (9) தாய்: விந்தைமொழி நீபலவும் பேசுகின்றாய் விளையாட்டுப் போல் உண்மை புகழுகின்றாய் கந்தல் என இவ்வாழ்வை உதறித்தள்ளும் கடமை நீ பேசுகின்றாய் ஒப்புக்கொண்டேன். தந்தம்போல் உடல் அழகைப் பெற்றாய் பெண்ணே தங்கம்போல் மனத்தினையும் செய்து கொண்டாய் உந்தன் மனம் மலைபோல் ஓங்கி நிற்கும் உண்மையதன் திருக்காட்சி ஒளிக்கு ஏதெல்லை (10) மகள்: என்னை நான் உணராமல் வாழ்ந்திருந்தேன் என்னை முதல் எனக்கவர்தான் உணர்த்திவிட்டார் என்னை நான் மதியாமல் இகழ்ந்திருந்தேன் என்னை அவர் மதித்திட என் மதிப்புணர்ந்தேன். தன்னை எனக் கறிவித்தார் தலைவராவார் தலைவர்க்கே அடிமையாய்த் தாள் பணிவேன் இன்னம் ஒரு முறை எவர்க்கும் அடிமை யாகேன் ஏழ்பிறப்பும் எனை அவர்க்கே ஈந்துவிட்டேன் (11) நீர் ஏற்ற கையினிலே நெஞ்சை ஏற்றார் நெடுங்காலம் நெஞ்சினிலே நிலைத்து நிற்பார் போர் ஏற்றார் புன்மையெல்லாம் போக்கி விட்டார் புதியவளாய் மாற்றிப்பின் போன தென்னே தேர் ஏற்றம் மறுப்பதுவோ தெய்வச் செய்கை சிந்தனையில் மலர்த்தோட்டம் செய்து வைத்தார் தார்ஏற்கத் தலைவர்தாம் மறுத்துவிட்டால் தனிய வளாய் உயிர்மாலை தானழிவேன் (12) தாய்: நீள்விழியே நீ எனக்கு வாழ்க்கை அன்றோ நின்வாழ்க்கைப் பேறு என்றன் பேறுஅன்றோ வாள்விழியில் நீர்வற்ற அழுதல் ஏனோ வாழ்வைக் கண் நீர்கரைக்க வைக்கலாமோ தோள் அழகு பெறவே நான் துணையாய் நிற்பேன் துயரம் உனக்கினி வேண்டாம் தோகையேநீ நாள் அழகு பெறும் வண்ணம் நாளைசென்று நான் கண்டு மீண்டிடுவேன் கவலை வேண்டாம் (13) மகள்: தேடி நீ சென்றிடலால் நன்மை இல்லை தீமைஇவ் வாழ்வென்று துறவு கொண்டார் நாடிஇவண் வந்திடத்தான் ஏதும் இல்லை நம் நெஞ்சக் கனல்தணியப் பாதைஇல்லை வாடி இவ் வாழ்வழிய விரும்பவில்லை மந்திரத்தால் நீ செய்யாச் சூழ்ச்சி இல்லை ஓடிவந்து அவர்என்னை நாடுமாறு உன் மந்திரமே எனக்கு உயிர் வழங்கும் (14) வான்மழைதான் தான் விரைந்து சூழவேண்டும் வையம்அதைத் தான்கவர்ந்து கொள்ள வேண்டும் தேன்மாரி நிலங்குளிரப் பெய்ய வேண்டும் திக்கெல்லாம் நீர்வண்ணம் திகழ வேண்டும் பால் நுரைகள் பொங்கிவரத் தூயகங்கை பார் அறிய யமுனையினை மருவக்கண்டோம் நான் விடுக்கும் ஓலங்கள் நெஞ்சு சூழ நல்லவர்வந் தென்னை மணம் கொள்ள வேண்டும் (15) தாய் (தனக்குள்): மந்திரமா நான் செய்வா துறவிமேலா மற்றெந்த வழியும் இதற்கு இல்லைதானோ செந்தீயை மூட்டுமிந்த மந்திரத்தால் செய்தவமாம் மலை எரிக்க இயலுமோதான் எந்திரமாம் மந்திரத்தை இயற்றும்போதே என்னுயிரைப் பலியிட்டுக் கொள்ள வேண்டும் தந்திரம்வே றில்லையே என்னழிவால் என்மகளை வாழ்வித்தால் எனக்குப் போதும் (16) மகள் : ஆசைஅற வேண்டும் என அவர் அலைவார் ஆசைபெற வேண்டும் என அலைய வைப்பாய் ஆசை ஒரு கட்டென்று அவர் உரைப்பார் ஆசைஒரு சொத்தென்று அறைய வைப்பாய் ஆசையினை நஞ்சென்று அவர் வெறுப்பார் ஆசையினை அமிர்தம் என அலைய வைப்பாய் ஆசை தரும் கட்டுகள் ஓர் ஆயிரத்தால் அணைக்கவரும் வாழ்வை அவர் சேரவைப்பாய் (17) தாய்: இன்றிரவே மந்திரத்தை இயற்றுகின்றேன் எங்கிருந்த போதும் அவர் வந்திடுவார் துன்றும் எரி வளர்த்ததற்குத் தேவையான துணைப் பொருள்கள் கொணர்ந்திங்கு சேர்த்திடுவாய் நன்றான கண்ணாடி கையிற் கொண்டு நடப்பன எல்லாம் அங்குக் கண்டிருப்பாய் இன்றுமுதற் பன்னாட்கள் எரிவளர்ப்போம் இடைநாளில் அச்சமிலா திருப்பாய் கண்ணே (18) காட்சி - 2 தாய்: நாட்கள் கழிந்திடும் மூன்று - அந்த நல்லவரைக் கனல் கொல்லும் - மன வீட்டை அவர் காத்து நின்றார் மடம் விட்டுஅவர் வெளிவர வில்லை - இன்னும் மூட்ட எழுந்திருக்கும் தீயால் - தவ மூலத்தைக் கொன்றிடலாகும் - மனத் தேட்டத்தைத் தீர்த்திட வேண்டி - இதைச் செய்திட வேண்டுமா சொல்வாய் (1) இப்பொழு தேனும் உன் நெஞ்சில் - நல் இரக்கம் எழுந்திடு மாயின் - என் தப்பிற்குயிர் கொடுத்தேனும் - தீத் தணித்திடலை வேண்டுகின்றேன். எப்பொழுதேனும் இடையில் - தீ எழுப்பிடும் மந்திரம் ஆற்ற - ஒரு ஒப்பில் உயிர்ப்பலி வேண்டும் - என் உயிரைப் பலியிட்டுக் கொள்வேன் (2) மகள்: (நுழைதல்) அஞ்சிட வேண்டுவதில்லை - அம்மா ஆற்றல் அழிந்திட வேண்டாம் - என் நெஞ்சத்தில் வேதனை இன்றி - நான் நின்றிடவில்லை அறிவாய் - அவர் தஞ்சம் அடைந்திடத்தானே - இத் தழலை வளர்த்திடு கின்றோம் - புகை மஞ்சிடைத் தீயில் அவரும் - மனப் போரிடை நானுமாய் நின்றோம் தாய்: கண்ணாடி பார்த்திடு கின்றாய் - புயற் காற்றொடு தீயும் இணைந்து - மேல் விண்ணை யளாவிடச் சூழும் - அங்கு வேதனை மின்னலும் வீசும் - அவர் மண்ணில் மலை என நின்றார் தம் மாண்பினைத் தீக்கவ்வ நின்றார் இருகண்ணற்றவள் போல நின்று - இதைக் காணுகின்றோம் எண்ணம் இன்றி (4) காட்டிற்கு மன்னரை வீழ்த்தி - நம் காலிற் படு தூசி யாக்கி - வான வீட்டில் முகிலோடு வாழும் - தவ வீரத்தைக் கொன்றின்பம் தேடும் - இது ஏட்டைக் கொளுத்துவ தாகும் - இது எள்ளளவும் வெற்றி இல்லை - மனக் கோட்டையைக்காத்து அவர் நின்றார் - நாம் மண் நின்று கல்லெறிகின்றோம் (5) மகள் : பொன்னொடு செம்பினைச் சேர்க்க - அம்ம போதுமோ செம்பை எரித்தல் - நல்ல பொன்னை உருக்கிட வேண்டும் - அதில் போட்டிட வேண்டும்புன் செம்பை - இன்று என்னைப் பழி சொல்லுகின்றாய் - அவர் ஏற்கும் இத்துன்பத்தை நம்பியே - இந்தக் கன்னி உளம் எரிகின்றேன் - நல்ல காலம் வரும் காத்திருக் கின்றேன். (56) தாய் : பன்னிரு மலர் படைத்து - தேன் பாய்ந்திட வைத்து மணத்தைப் பரப்பிப் பொன்னிற வண்டீர்த்துத் - தன் புகழைப் பரப்பிப் பின் - மடிக் கனத்து என்னென்னவோ செய்து - தன் இனத்தை இவ்வுலகினில் வாழ - வைக்கும் கன்னலைக் காலமெல்லாம் - நான் கட்டி இம் மந்திரமாய் இசைக்கின்றேன் (7) மதியத்தில் பொழிநிலவை - காலை மலர்ச்சியை மாலை மயக்கத்தினையும் இதயத் துடிப்பினையும் - அன்றில் ஏக்கத்தையும் நதித் தேக்கத்தையும் - குளிர் புதுமலர்ப் புதுமையினை - சுனைப் புனலின் குளிர்ச்சியைத் தீச்சுவையை - புது மதுச்சு வையை இணைத்த - நல் மாயத்தை மந்திரமாய் இசைக்கின்றேன் (8) பருவத்தில் ஆழ்நெஞ்சில் - உடல் பற்றி எழுந்து பரவிக்கனன்று கரு விழியில் தோன்றிப் - பின் கனவில் நினைவில் கருத்தில் மலர்ந்து உருவத்தை ஆட்கொண்டு - பின் உயிரையும் வெல்லும் உருவம் எடுத்து கருவாய் காரணமாய் - நிற்கும் கனலினை மந்திரமாய் இசைக் கின்றேன் (9) கனிவுடன் ஏற்பவர் கையில் - மிகு காதல் இளநகை காட்டிச் சிரிக்கும் முனிவுடன் எதிர்ப்பவர்க்கே - நெஞ்சில் மூளும் கனவாகி முற்றும் அழிக்கும் இனியநற் கலைகள் - பல இங்கு எடுக்க எடுக்கப் புதிதாக மலரும் தனி இதன் பெருமை என்பேன் - உயிர்த் தாகத்தை மந்திரமாய் இசைக்கின்றேன் (10) துறவி (நுழைதல்): காவல் மதில்போல் காத்திருந்தேன் - மனம் காவல் அழிந்து கனலும் புகையும் ஏவலனாகி என்னுடலை எரிக்கும் ஏறியிருந்தே ஏவல் புரியும் ஆவலைப் போல் விரி வானத்தில் ஆர்த்து இடிக்கும் கலங்கிடும் நெஞ்சை காவல் அழிந்து கலங்கிடும் நெஞ்சை - இடி கட்டுத்தவறி கலங்க அடிக்கும் (11) ஆடுகள் கூடிய மந்தையின் உள்ளே ஆசை கொண்டு புலி புகுந்தாலென ஏடெடுத்துப் படிப்பதற் குற்றால் எழுத்துக்களுக்கே ஏன் இந்த ஓட்டம் கூடும் பறவைக் கூட்டத்தின் உள்ளே கொண்டொரு கல்லை எறிந்திடல்போல் தேடியென் நெஞ்சில் புகுந்து திரிந்து தீண்டி வருத்தும் தீமை ஓர் மர்மம் (12) மதப்பகை வெறும் மண்ணெனச் சொன்னேன் வாழ்வழித்திடும் நஞ்செனச் சொன்னேன் விதிப்படும் பல சாதிச்சடங்குகள் வேதம் உரைத்திடும் யாகங்கள் ஆகிய சதிகளை உண்மைச் சமயங்கள் என்று சண்டை இடுதல் தாழ்வெனச் சொன்னேன் மதியிழந்தவர் எனக்கெதிராக வஞ்சமாய்ச் செயும் மந்திரமோ இது (13) காற்றுச் சென்றிடும் திசைகளை நாடி கதிரொளியினில் மழையில் திரிந்து ஏற்றம் என்றும் இதயத்தில் ஆக்கும் இயற்கைத் தேவியை எண்ணி இருந்தால் மாற்றம் நெஞ்சில் மலர்தலும் கூடும் மடத்தின் உள்ளே வருந்திட வேண்டாம் ஆற்றங்கரையினில் காற்று வெளியில் ஆசை நெஞ்சை விடுத்திட வேண்டும் (14) (வெளியேறுதல்) மகள் : மந்திரம் பலித்திடுது அம்மா - அவர் மடம் விட்டு வெளிவந்து விட்டார் - அங்குச் சிந்தனை செய்திட நின்றார் - அங்குச் சிந்தை குலைந்திடு கின்றார் - இன்னும் மந்திரத்தில் வலியேற்று மிக மாயவலையை இறுக்கு - அவர் இந்த முறை தப்பிவிட்டால் - இனி என்றும் எனை வந்து சேரார் (15) தாய்: (மூலமந்திரம்) நெஞ்செனும் நீர்க்குகையில் - கிடந்து நெடு நாளிருந் தின்பம் குறைந்து வர அஞ்சிக் கரையேறி - வரும் ஆர்வத்தில் ஆசையில் அச்சம் துறந்து கொஞ்சம் வெளிப்பட்டுப் - பின் கோலங்கள் இட்டுக் கூடி விளையாடி நெஞ்சைப் பறிகொடுத்துப் - பித்தம் நேர்ந்திடும் மந்திரத்தை இசைக்கின்றேன். (16) நடையை மயிலாக்கும் - இன்ப நல்லுடலை மலர் மாலையும் ஆக்கும் உடையைச் சிலையாக்கும் - அதில் உலகின் அழகெலாம் ஒட்டியிருக்கும் கடைக்கண் பார்வையில் ஒளிகூடி காதலை விற்றுக் களிப்பை அடையும் தடையை இடையாக்கும் - இன்பத் தாகத்தை மந்திரமாய் இசைக்கின்றேன். (17) எதிர்ப்பவர் இதயத்தை - இஃ(து) எத்துணையோ சுக்கு நூறாக்கி மதிப் பொடி மிகத்தூவிப் - பின் மாயத்தைக் கொண்டிளக்கி உருக்கிப் புதிய உருப்படைத்து நெஞ்சில் பூட்டி வைத்தின்பத்தைப் போற்றிட வைக்கும் மதுமலர் எழிலாக்கும் - இந்த மாயத்தை மந்திரமாய் இசைக்கின்றேன் (18) மலையை முகில் தழுவும் - எழில் வானத்தைக் காற்று வளைத்துத் தழுவும் அலைகள் கடல் தழுவும் - நீர் ஆற்றின் பெருக் (கு) உலகாரத்தழுவும் இலையைக் கதிர் தழுவும் - பார் எங்கும் பசுமை இதழ்கள் சிவக்கும் வலைப்பட யார் மறுப்பார் - இன்ப வாயிலை மந்திரமாய் இசைக்கின்றேன் (19) எட்டுத் திசைகள் பாயும் - இதற்(கு) எங்கும் வரவேற்பும் ஏற்றங் களாகும் கொட்டி இடித்து வரும் - பல் கோடிக்கொடி கொண்டு உலகம் அழைக்கும் எட்டி உதைத்து விடும் - தடை எங்கேனும் கண்டால் எமனாய் நிற்கும் கட்டி உலகாளும் - முதற் காரண மந்திரத்தை இசைக்கின்றேன் துறவி: (நுழைதல்) காட்டு வழியினில் வந்துவிட்டேன் - மனம் காரணம் இன்றிக் கவலுதல் ஏன்இனும் ஏட்டினை நாடி இவ்வழிச் சென்றேன் எத்தனையோ நாள் சுற்றித் திரிந்தேன். ஈட்டிய நல்லறிவு ஏன் தடுமாறும் என்மேல் இவ்வழிக்கே ஏன் இந்த ஆட்சி ஆட்டிப்படைத்திடும் மர்மத்தின் வேதனை ஆக்கம் இன்றேன் அதிகம் பெறுவதே (20) எங்கிருந்தோ எனை யாரோ ஒருவர் ஏங்கி யழைப்பது போல்இவ் அழைப்பைப் பொங்க விடுவது போலவும் நான் போய்ப் போற்றினால் அத்துன்பம் போவது போலவும் மங்கலாக என் மனம் உரைப்பதேன் மருட்சியோ இது மாற்றலர் மாயமோ எங்கும் நிற்க விடாதெனைத் துரத்தும் ஏந்தல் புத்தனை எண்ணி விரைவேன் (21) காட்சி - 3 தாய்: வானாளும் இந்திரனைக் கூட என் வல்லமையால் கொண்டிங்கு சேர்த்திருப்பேன் . கானாளும் துறவி இவர் வல்லமையைக் கட்டிவிட இன்றுவரை இயலவில்லை ஏன் நாட்கள் ஏழிரண்டு கழிந்த பின்னும் இங்(கு) அவரை மந்திரத்தால் சேர்க்கவில்லை ஊன் உடலிற் பலமெல்லாம் ஓய்ந்து விட்டேன் உயிர் இன்றோ நாளையோ ஓய்ந்து போகும் (1) என்னுயிர்தான் நீங்குதற்கு இரங்கவில்லை எண்ணம் நிறை வேறாமல் இருக்கின்றேனே பொன் மகளைக் காதலனோ டினைத்து விட்டுப் போய்விட்டால் போதும் என் உயிரும் போகும் பொன்குடத்தில் நீர் இழுத்துக் கையிற் கொள்ளும் போதினிலே கழன்றுதான் போய்விடுமா என்னுயிரும் இன்னும் இரண்டொரு கல்லே தொலைவிலுள்ள ஏந்தலைக் கொண்டினைக்காமல் ஏகுவேனா? (2) மகள் (நுழைதல்): வாழ்ந்திருந்த நாளெல்லாம் எனக்கே வாழ்ந்த வையத்தில் கண்கண்ட தெய்வம் அம்மா தாழ்ந்திருந்த வாழ்வெல்லாம் தணலில் இட்டு தங்கமெனச் செய்திட்ட தாய்நீ தெய்வம் வாழ்ந்திருக்க வழி நீயும் செய்து விட்டாய் வாராதார் ஊர்ப்புறத்தில் வந்துவிட்டார் ஆழ்ந்திருந்தேன் கண்ணாடிக் காட்சி கண்டு அவர் விரைந்து வரும் காட்சி கண்பாய் நீயும் (3) தாய்: என்ன நீ சொல்கின்றாய் வந்தா விட்டார் யார் வந்தார் உன் அன்புக் காதலரா என்னுடலில் உயிர் இருக்கும் காலத்திற்குள் எமைத் தேடி அவர் வந்தால் நல்லதம்மா முன்னம் நாம் உரைத்தபடி வருகைக்காக முன் வாயிலைஅழகு செய்தா விட்டாய் அன்னம் போல் உன்னுடைய கனிமொழியால் அலைந்துவரும் அவர் நெஞ்சைக் குளிர்விப்பாயே (4) மகள்: வாயிலிலே கோலங்கள் வரைந்து வைத்தேன் வண்ணமலர் மாலைகளைத் தொடுத்து வைத்தேன். கோயிலென விளக்குகளைக் ஏற்றி வைத்தேன். குணம்விளங்க மணப்புகையும் இட்டு வைத்தேன். ஆயிரமாம் சொல்லழகை ஆக்கி வைத்தேன். அருளாளர் வருநேரம் பார்த்திருந்தேன். நோயிலியாய் நீ இன்னும் வாழ வேண்டும் நூறாண்டுக் காலம் நாம் வாழ வேண்டும் (வெளியேறுதல்) (5) தாய்: மந்திரம் ஓதுதல் மகள் : மந்திரங்கள் ஓதுவதை நிறுத்தம்மா நீ மாயமோ மனமயக்கோ உண்மை தானோ வந்து நீ பாரம்மா மணாளர் வந்தார் மணமகனைப் போலவரா வந்திருந்தார் சிந்தனை இல்லாதவர்போல் பித்தர் போல தீயினிலே வெந்தவர்போல் காணுகின்றார். நொந்திருக்கும் அவரை வரவேற்க என்னால் நூறுமுறை முயன்றாலும் இயலவில்லை (6) ஏற்றமெலாம் தாமிழந்து இங்கு வந்தார் எத்துனையோ துன்பங்கள் கண்டுவந்தார் மாற்றாக இவர்க்கு நாம் என் கொடுப்போம் மறுவில்லாப் பொருளா என் மனமும் அம்மா கூற்றமாய் மாறிடுமா பெண்மைத் தன்மை கொடுநோயா மாற்றார்க்கு கொடுமை செய்ய தோற்ற மழிந் தவர்வந்தார் தன்னலத்தைத் தோரணமாய் நாட்டியா வரவேற்போம் (7) தாய்: காத்திருந்தாய் காதலரின் வரவை எண்ணி களிப்படையும் காலத்தில் கவலை கொண்டாய் பூத்திருந்த கண்ணால் இக்காட்சி கண்டு பொலிவடைய ஒட்டாமல் பூட்டி வைத்தாய் நீத்திருந்த இன்பங்கள் உறக்க மெல்லாம் நேற்றோடு நீத்தன என்றுறுதி கொள்ளாய் வேர்த்திங்கே வந்தாயே போதைப் பெண்ணே விழி நீரைத் துடைத்துக்கொள் வாஎன் பின்னே (8) காட்சி - 4 (மேடையில் கோலம், விளக்குமாலை, புகை முதயவை) தாய்: (நுழைதல், மகளுடன்) எத்துணை நாள் உங்களுக்காய் ஏங்கி நின்றோம் இன்றெங்கள் வாயிலுக்கு நீங்கள் வந்தீர் சத்தியமாய் நற்றுணையாய் நீங்கள் நின்றீர் தாழ்ந்திட்ட குலத்திற்குக் கைகொடுத்தீர் நித்தமும் உங்கள் நினைவால் வாடி யேங்கும் நேரிழைக்கு வாழ்வளித்து நீங்கள் காப்பீர் பித்தர்களைப் போலெங்கள் நிலையாயிற்றே பெரியவரே உம் பாதம் பணிந்திடுவோம் (1) துன்பங்கள் உங்களுக்குச் செய்துவிட்டோம். தூயதவத் தின் வாழ்வைக் குலைத்துவிட்டோம் தன்னலத்தால் இன்பத்தைப் பெறுதல் வேண்டித் தழல்வளர்த்துச் செய்திட்ட துன்பம் நீங்கி அன்புக்கே கொள்கலமாய் அமைந்த நீவிர் - அருள் நோக்கம் எங்கள் பால் கொண்டிடுவீர். என் செயலை மன்னிப்பீர் இரக்கம் கொள்வீர்.. என் மகளின் வாழ்வினிலே இணைந்திருப்பீர் (2) துறவி : என் காலில் நீர் விழுந்து வணங்க வேண்டாம். ஏன் என்னைப் பெரியவராய் எண்ணு கின்றீர் முன்னொரு நாள் உங்களை இவ் வழியிற் கண்டேன் முன்போல் இலை நீங்கள் தளர்ந்துவிட்டீர் என் மனத்தில் சில நாளாய் எழுந்திருந்த எண்ணத்தின் காரணத்தை இன்றறிந்தேன் துன்பத்தின் காரணத்தை நீங்கள் எண்ணித் துயரத்தில் வீழ்ந்திரங்கி வருந்த வேண்டாம் (3) உங்களைப் போல் ஒரு தாயைக் கண்டதில்லை உங்கள் மன எண்ணத்தில் குற்றம் இல்லை மங்கைதான் காத்திருக்கும் மனமோ தங்கம் வளமாக உங்கள் வாழ் விருக்கவேண்டும். பொங்கெரியால் என்னை நீர் கொண்டு வந்தீர் போற்றுகிறேன் உங்களை நான்குற்றம் சொல்லேன் உங்களை நான் வேண்டுகிறேன் என்னிலையை உணர்ந்து பார்த் திடஉம்மை வேண்டுகின்றேன் (4) பத்தாண்டாய்த் துறவில் நான் பழகிவிட்டேன் பாரில் எனைத் துறவி எனப் பலர் அறிவார் இத்துடனே துறவை நான் முடித்துக் கொண்டால் என்னை உல கேசுவதைப் பொறுக்க மாட்டேன் . நித்திரையில் மறைவிடத்தில் காமம் கொண்டு நிலவுலகில் பழகிவரத் துணிச்சல் இல்லை சத்தியத்தைத் திரையிட்டு மறைக்கமாட்டேன் . தன் மனத்தை ஏமாற்றி வாழ மாட்டேன் (5) நள்ளிரவில் மடம்விட்டு இங்கு வந்தேன் நண்பகலில் தங்கியிருந் திரவில் வந்தேன் . எள்ளளவும் என்னுடல் தான் நிற்கவில்லை இழிவென்னும் காற்றில் ஓர் தூசியானேன் கள்ளனைப் போல் திரிந்திடவா மனிதனானேன் கருநாகப் பாம்பாநான் மறைந்துவாழ உள்ளதுதான் ஒருமனமே இரண்டு இல்லை உயிர்வாழ்க்கை ஒன்றன்றி இரண்டு இல்லை (6) மனத்தை நான் குரங்கென்று கருதவில்லை மருட்சி உலகியல்பென்றும் எண்ணவில்லை மனைவாழ்வை இழிவென்றும் சொல்லவில்லை மாயவலை உலகென்றும் எண்ணவில்லை இனமெல்லாம் ஒன்றாக வாழ்வதல்லால் எனக்கென்று தனிவாழ்வை எண்ணவில்லை இனி வாழ்வின் முறைமாற்ற விரும்பவில்லை இரட்டைவாழ் வெனக்குத்தான் விருப்பம் இல்லை (7) மானத்தை இழந்து யார் வாழ்த லாகும் மனத்தை இழந் தெவ்வாறு வாழ்தலாகும் ஈனமா இந் நாள்நான் கொண்ட கொள்கை இக்கொள்கை இழந்திங்கே வாழவல்லேன் வேனலுறு மான்போலா வெந்திருப்பேன். வேண்டாம்என் மேலிரக்கம் வேண்டுகின்றேன் நான் துறவி என்றுரிமை கேட்கவில்லை நல்மனித னாய்வாழ உரிமை கேட்டேன் (8) தாய் மகளிடம் : அன்பிற்காய் நாம் வாழ்ந்தோம் உண்மைதானே அன்பைக்காத் திடத்தானே துன்பம் செய்தோம் துன்பத்தைச் செய்தேனும் அன்பா பெற்றோம் துயரத்தை யன்றோநாம் பெருக வைத்தோம் இன்னும் நீ அன்பிற்கே துடிக்கின்றாயா இன்னும் இம்மந்திரத்தைச் செய்திடவா நான் என்ன நீ சொல்லுகிறாய் என் மகளே ஏனோ நீ சிலையாக மாறிவிட்டாய் (9) மகள்: என்னம்மா நான் பேச வல்லேனம்மா எதற்கம்மா இவ்வளவும் செய்து கெட்டோம் முன்னாளில் இவர் பார்வை கொண்ட போதே மூளும் நல்லண்பை என் நெஞ்சில் கொண்டேன் இந்நாளில் இவர் பார்வை கண்ட போதே என்குற்றம் நன்கறிந்தேன் இவருக்கே நான் பொன்னாலா கயிறெடுத்துப் பிணிக்கவல்லேன் புலனழிக்கும் நஞ்சாநான் கொண்ட பக்தி (10) மன்னவராய் வாழத்தான் பிறந்தார் அம்மா மதிகெட்டு அலையத்தான் வைத்தோம் அம்மா இன்னும் ஏன் இவர் பெருமை குன்ற வேண்டும் இவர்நன்மை தான் நமக்கு என்றும் வேண்டும். கன்னல்போல் தம் பெருமை நமக்குத்தந்து கார்முகிலாய் நம்சிறுமை ஏற்க வேண்டாம் மன்னவராய் இவர் வாழப் பார்க்க வேண்டும் மந்திரத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் (11) வீரத்தார் தோல்வி என் வெற்றி யில்லை வெற்றி இது எனக்குத்தான் தேவை இல்லை ஈரமிலா இழிகுலத்தார் ஏற்பார் வெற்றி இப்பொழுது நான்என்ன இழிகுலமா சாரமிலா வாழ்வென்று தாழ்ந்திருந்தேன் தலைநி மிர வைத்தார்க்குத் தீங்கு செய்யேன் யாருக்கு வேண்டும் இவ் வெற்றியெல்லாம் யாது பயன் இனிமேலும் மந்திரத்தால் (12) தாய்: மந்திரத்தால் உடல் வலிமை இழந்துவிட்டேன் மனவலிமை இல்லாமல் மங்கி விட்டேன் மந்திரத்தை நம்பியது எங்கள் குற்றம் மனவலிமை நம்பிவாழ்ந்திருக்க வேண்டும் தந்திரமும் ஆணவமும் பிறர் உரிமைத் தடம் அழித்தல் யார் செயினும் குற்றம் குற்றம் சிந்தாத மனத்தோடும் செழித்திருப்பீர் சிந்தையில் எம் குற்றத்தைப் பொறுத்திடுவீர் (13) (வீழ்ந்திறத்தல்) மகள் : மண்வாழ்வை நீமுடித்துக் கொண்டுவிட்டாய் மகள்வாழ்வை முடிப்பதற்குள் சென்றுவிட்டாய் மண்ணுலகில் உன்னுயிரைக் கொண்டு மற்றோர் மாண்புயிரை என்னுயிரோ டிணைக்க நின்றாய் எண்ணந்தான் முடியாமல் இறந்து விட்டாய் இறந்(து) அன்பை இறவாமல் காத்துவிட்டாய் வண்ணங்கொள் அன்பாக வாழ்ந்திருந்தாய் வாழ்வெல்லாம் தெய்வமாய்ப் பார்த்திருப்பாய் (14) அன்பூற்றாய் நெஞ்சத்தை அமைத்திருந்தேன் அளவில்லா அன்பை நான் தாங்கி நின்றேன் என்புருக்கும் அன்பென்றே எவரும் சொன்னார் இதைக் காக்க குற்றத்தை நாங்கள் செய்தோம் துன்புறுத்தும் பேயாக மாறிவிட்டோம் . தூயவரே இக்குற்றம் பொறுத்திடுவீர் எண்ணையும் நீர் மன்னிப்பீர் ஏகிடுவீர் இவ்வுலகம் வாழத்தான் வாழ்ந்திடுவீர் (15) (1960) வெள்ளிவிழாக் கவிதைகள் (1972) இருபத்தைந்தாண்டு வேதனைகள் நெஞ்சில் கனக்கின்றன இருபத்தைந்தாண்டு முட்டாள் தனங்கள் நெஞ்சைக் கவ்வுகின்றன இருபத்தைந்தாண்டு இறுமாப்பு நெஞ்சில் ஏறி இறுக்குகிறது இருபத்தைந்தாண்டு சொந்தம் நெஞ்சை எரிக்கிறது என்னால் - எங்களால் இதை விரிவாக்க முடியவில்லையே இந்தக் கனவை எங்களால் ரசிக்க முடியவில்லையே இந்தக் கோலாகலத்தை நெஞ்சில் நிறைக்க முடியவில்லையே எங்கே எச்சில் பாடல்கள் முழங்குகின்றனவோ அந்த இடத்தை எங்களால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லையே எங்கே சொற்பொழிவுகள் கொட்டப்படுகின்றனவோ அந்த இடங்களில் நிற்கக்கூட முடியவில்லையே சொற்பொழிவுகள் எங்களையே குற்றம் சாட்டுகின்றன நாங்கள் உழைக்கவில்லையாம் எங்களுக்கு நாட்டுப்பற்று இல்லையாம் அவர்கள் கண்டறிந்த திசைகளில் நாங்கள் செல்லவில்லையாம். எங்களுக்கு அறிவில்லையாம். எங்கள் தலைவர்களை நாங்கள் மறந்துவிட்டோமாம் எங்களுக்காகச் சிந்தப்பட்ட சுதந்திரத்தை நாங்கள் இகழ்ந்து விட்டோமாம் நாங்கள் யார் யாரோ காட்டும் வழியில் செல்லுகின்றோமாம் எங்கள் துன்பங்கள் விடியாமைக்கு இப்படிக் காரணங்கள் கூறுகிறார்கள். எங்கள் துன்பங்களைக் கொண்டே தங்களுக்கு விடியலைத் தேடிக் கொண்டார்கள் உண்மைதானா எங்களை நாங்களே கேட்டுக் கொள்கின்றோம் காந்திக்கு எங்கள் வீடுகளில் கற்சிலை வைக்கவில்லை ஆனால் காந்தியின் பொறுமையை விதிவிலக்காகக் கடைபிடித்து வந்துள்ளோம். காந்தியை நீங்கள் கொன்றீர்கள் பிர்லா மாளிகையில் பிடித்து வைத்துக்கொண்டீர்கள். நீதிமன்றங்களில் நிலை நிறுத்திக் கொண்டீர்கள் உங்கள் நியாயத் தீர்ப்புகளை அவர் பார்வையிலேயே எழுதிக் கொள்கிறீர்கள் உங்களுக்காக அவரைத் தெருக்களில் திரியவிட்டீர்கள் உங்கள் இதயத்தில் இடம் கொடுக்காத காந்திக்கு நாவிலும் வீட்டு வாயில்களிலும் தெருச் சந்திப்புகளிலும் தாராளமாக இடம் கொடுத்தீர்கள். நாங்களோ அவரை இதயத்தில் குடிவைத்து உங்களுக்கு வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செத்துப்போன சுபாஸ் சந்திரபோஸ் முதலிய எத்தனையோ மாவீரர்கள் எத்தனையோ தியாகிகளை இன்னும் உங்களுக்காகப் பேச வைக்கிறீர்கள் இறந்துவிட்ட ஆன்மாக்களை எங்களுக்கு எதிராகத் திரட்டுகிறீர்கள் சினம் கொண்டு அவர்கள் பேசுவார்கள் உங்கள் மாநாடுகளிலிருந்து உங்கள் உல்லாச புரிகளிலிருந்து உங்கள் வேதங்களிலிருந்து உங்கள் வரலாறுகளிலிருந்து நீங்கள் துரத்தியடித்த அந்த தூய இதயங்களை அந்த மாவீரர்களை இன்று, மன்னிப்புக்கேட்டு மலர்மாலைகள் இட்டு அழைத்து வந்து தாமரைத் தட்டுக்களை வழங்கி பேச்சுமாலைகளைக் கொட்டி படத்தில் ஏற்றி வைத்து (சட்டமும் போட்டு) எங்களுக்கு எதிராகப் பேச வைக்கிறீர்கள் அவர்கள் எங்களைப் பார்த்து எங்கள் இதயத்தில் நுழைத்து எங்களை உருக்கிக் கனித்து என்னவோ செய்கிறார்கள் அவர்கள் இதயத்தின் இரத்தத்தில் மூழ்குகிறார்கள். எங்கள் கண்ணீர்களில் அவர்கள் கரைகிறார்கள் எங்கள் நினைவுகளில் அவர்கள் எங்களுக்கு அவர்கள் விடுக்கும் செய்தியா நாங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ளும் கேள்வியா எங்கள் இதயத்தில் - பரிமாற்றம் நடைபெறுகிறது நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். இனியும் ஏமாறுவது எங்களுக்கு விருப்பமில்லை . சுதந்திரத்தைத் தேவதையாக்கி உங்கள் கோயில்களிலேயே அடைத்து வைத்தீர்கள் ஆண்டுக்கொருமுறை அரிசனங்களாகிய எங்களுக்குத் திறந்துவிட்டு தரிசனம் கொடுத்தீர்கள் எங்கள் தவறுகளுக்காகப் பிரார்த்தனை செய்தீர்கள் மன்னிப்புக் கேட்டு வாங்கி வைப்பதாக உறுதி கூறினீர்கள். நாங்கள் செய்யாத குற்றத்தை நீங்கள் நிரூபணம் செய்து எங்களுக்காகப் பரிந்தும் பேசி மன்னிப்பையும் வாங்கித் தருவதாகக் கூறியபோது நீங்கள் எப்படி எங்களுக்கு எதிரிகளாக முடியும் இருபத்தைந்தாண்டுச் சுதந்திர தேவதைக்கு வெள்ளிச் சிலையமைக்கிறீர்கள் இருபத்தைந்தாண்டுகளாக விடாமல் நன்கொடை வாங்கிச் சேர்த்து வைத்து இப்பொழுது வெள்ளிச்சிலையை வைக்கிறீர்கள் கோயிலை அகலத்திறந்துவிட்டு தூப தீபம். உங்கள் கோயில்களில் சுதந்திர தேவதையின் ஆபரணங்கள் கண்ணைப் பறிக்கின்றன இடுப்பில் இறுக்கும் முடிச்சை அவிழ்த்து இருக்கும் காசையும் எண்ணாமல் கொட்டிவிடப் பார்க்கின்றோம். உங்கள் உண்டியல்களில் அக்காசு பத்திரமாக இருக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை செலவிடுவீர்கள் என்பதிலும் ஐயமில்லை எங்கள் நல் வாழ்வுக்காகத்தான் நீங்கள் பிரார்த்தனை செய்வீர்கள் என்பதிலும் ஐயமில்லை நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் கங்கையும் காவிரியும் உங்கள் புகழையல்லவா பாடுகின்றன இமயம் உங்கள் புகழையல்லவா எதிரொலிக்கின்றது நீங்கள் இல்லாவிட்டால் சுதந்திர தேவதைக்கு இத்தனைப் பெருமைகளை யார் செய்வார்கள். வெள்ளிச் சிலையை யார் அமைப்பார்கள் . உங்களைப் புகழும் போது புகழ்மொழிகள் வரையறைகளைக் கடந்து விடுகின்றன ஓர் எண்ணம் தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எத்தனையோ தவறுகளை மன்னித்தவர்கள் நீங்கள் ஓர் எண்ணமா என்ன அது நீங்கள் சுதந்திர தேவதையைவிடப் பெரியவர்கள் இந்தியாவிலிருந்து - சென்றுவிட்ட சுதந்திர தேவியை அழைத்து வந்தீர்களே நீங்கள் தானே அழைத்து வந்தது தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் அந்தப் புரங்களில் …. இல்லை …. இல்லை தப்பு மன்னித்தருளுங்கள். உங்கள் கோயில்களில் அடைத்து வைத்தல்லவா காப்பாற்றுகிறீர்கள் நீங்கள் தேர்த் திருவிழா நடத்தாவிட்டால் சுதந்திர தேவிக்குப் பெருமை ஏற்படுமா அதனால்தான் சொன்னோம் நீங்கள் தேவியை விடப் பெரியவர்கள் எவனோ சொன்னான் நீங்கள் அமைத்த ஈயச்சிலைகளுக்குத்தான் வெள்ளிப்பூச்சு பூசியிருக்கிறீர்கள் அவன் மடையன் சந்தேகிப்பதே அவன் சாத்திரம் நாங்கள் நம்பவில்லை எங்களை நம்புங்கள். தேவிக்குப் பெருமை வெள்ளியினாலா வந்துவிடப் போகிறது ஈயம் என்றால் போய்விடப் போகிறதா தேவி, தான் தேவியாக இருப்பதில் அல்லவா உண்மையான பெருமை இருக்கிறது நீங்கள் கவலைப்படாதீர்கள். தேவிக்கும் அவனுக்கும் என்ன சொந்தம் இருக்கிறது கடைசியாக, பாட்டுப் போடுகிறீர்களா இதோ ஆடத் தயாராகவே உள்ளோம் ஜனகணமண பாட்டு ஏன் கிறீச்சிடுகிறது பாடவில்லை நாங்கள் வாயினாலேயே பாடுகிறோம். கல்கத்தாத் தெருக்களில் காந்தி சிலைகளை உடைத்ததாக உங்கள் குற்றச்சாட்டு காந்தி பொறுமை உடையவர் அவர்தாங்கிக் கொள்வார் அன்றியும் மக்களுக்குத் ‘தான்’ பயன்படவில்லை என்பது தெரிந்தால் காந்தி தன்னைத்தானே உடைத்துக் கொள்ளவும் செய்வார். அதனால் நீங்கள் வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள் காந்தியைக் கொன்றவர்கள் நீங்கள் கொன்றுவிட்டு நீங்கள் கொல்லப்படாமல் இருப்பதற்காக காந்திக்கு கோயில் அமைத்தீர்கள். பூசாரித்தனத்தை ஏகபோகமாக்கிக் கொண்டீர்கள் உங்களது பூசாரித்தனத்தை உடைத்துக் காட்டுவதற்காக அவர்கள் கோயில் சிலையை - காந்தி சிலையை உடைக்கிறார்கள் உங்களுக்குக்கெதிராகக் குற்றஞ்சாட்டிய காந்தியைக் கொன்றுவிட்ட நீங்கள் உங்கள் பூசாரித்தனத்தை உடைப்பதற்காகக் காந்தி சிலையை உடைக்கும் இளைஞர்களை நீங்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது காந்தியை வாழவிடாமல் வளர விடாமல் வளர்ந்து வந்த காந்தியைப் பார்க்க விடாமல் சவப்பெட்டிக்குள் அடைத்து ஆணியை இறுக அடித்த நீங்கள் காந்தியின் சவத்தைக் காக்கக் கிளம்புவது வேடிக்கையாக இருக்கிறது யாருக்கு அடிமைத் தளைகளைத் தயாரிக்கிறானோ அவனே சுதந்திர விழாவைக் சொகுசாகக் கொண்டாடுகிறான் அடிமைத் தளைகளில் மாட்டிக் கொண்டு அவதிப்படுபவர்களே இவ்விழாவில் அதிகம் கலந்து கொள்கிறார்கள் பக்தி பரவிய நாட்டில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் இவர்கள் தொழிற்சாலைகளில் ஒரு காலத்தில் உண்மையான சுதந்திரச் சிலைகளைத் தயாரித்தார்கள். கீழை நாடுகளுக்காக அவர்கள் சிறப்பாகச் சிலையைத் தயாரித்தார்கள் இந்தியாவில் சிலை விற்பனைக்குச் சிறந்த ஏஜெண்டுகளை நியமனம் செய்தார்கள் இறக்குமதி செய்யப்பட்ட சுதந்திரச் சிலையை நூறு பேர்களுக்கு மேல் டெல்லியில் கடை ஜனநாயக சுதந்திர வேதமோதி பக்திப் பன்னீர் தெளித்து மக்களின் தோல்களில் ஏற்றி வைத்து ஊர்வலம் நடத்தினார்கள் ஊர்வலம் ஒழுங்காக நடப்பதற்காக காவலர்களை ஏற்பாடு செய்தார்கள் ஊர்வலத்தின் போது வசூலித்த காசில் ஒரு பகுதியை (கமி ன்) பூசாரிகள் வைத்துக் கொண்டார்கள் ஏஜெண்டுகளுக்கு இதைவிட வேறு தேவையில்லை சுதந்திர ஊர்வலம் வெள்ளிவிழா வீதியில் சென்று கொண்டிருக்கிறது இலட்சக்கணக்கான இயந்திர வாய்கள் இதன் பெருமையைப் பாடுகின்றன நிறுத்தப்பட்ட கோடி கோடியாக வரிசையாகக் குவிக்கப்பட்ட தோரணக் கைகள் ஊர்வலத்தை வரவேற்கின்றன சவக்குழிகளிலிருந்து தோண்டி எடுத்து புத்தாடை அணிவிக்கப்பட்டு ஒரு நாளைக்கே உயிர் கொடுக்கப்பட்ட தியாகச் செம்மல்கள் ஏஜெண்டுகளின் பெருமைகளைப் பேசுமாறு இயக்கப்படுகிறார்கள் மிட்டாய்களும் பரிசுகளும் கொடுப்பதாகக்கூறி மாணவர் படைகள் திரட்டப்பட்டு வீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் ஓய்ந்து கிடக்கும் பேச்சாளர்கள் ஒருநாள் போகத்திற்காக ஒரு முழுவாயை ஒன்பது முழமாவது திறக்கிறார்கள் சுதந்திர தேவாரப்பாடலை இன்றே ஆர்ப்பாட்டத்தோடு கற்றுக் கொடுத்துவிட வேண்டுமென்று மேலவர் - மேலுக்கு மேலவர் ஆனையால் அதிகார யானைகள் அசைந்தசைந்து செல்லுகின்றார்கள் ஒரு நாள் கூத்துக்காக – வாழ்நாள் முழுவதும் வளர வேண்டிய மீசையை இன்றே சிரைத்துக் கொள்ள நடிகர்கள் படையெடுக்கிறார்கள் கவிதை பாடக் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள கவியரங்கேறுகிறார்கள் மோசமில்லை வெள்ளிவிழா ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது ஏஜெண்டுகள் எப்படி என்கிறார்கள் . எஜமானர்கள் Done well என்கிறார்கள் நாங்கள் கிளுகிளுத்துப் போகின்றோம். இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டு நீங்கள் சுதந்திரப்பிரகடனம் வெளியீட்டீர்கள். இமயமலையின் பெருமையை நீங்கள் உங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டீர்கள் கங்கையையும் காவிரியையும் உங்களைச் சுற்றியே ஓடவிட்டீர்கள் கடல்களில் உங்கள் கப்பல்களே செல்லுகின்றன முத்திரைகளின் மூலம் பாடப்புத்தங்களின் மூலம் பத்திரிகைகளின் மூலம் நீதிமன்றங்களின் மூலம் உங்கள் ஆக்கிரமிப்பையே சட்டமாக்கிக் கொண்டீர்கள் எங்கள் நிலங்களை எங்கள் உழைப்புத் திறன்களை எங்கள் அறிவை உங்களுக்காக உரிமையாக்கிக் கொண்டீர்கள் எங்களைக் கொண்டே இந்திய மண்ணைப் புரட்டி விளைத்த தானியச் செல்வங்களை உங்கள் களஞ்சியங்களில் நிரப்பினீர்கள் எங்கள் உழைப்புத் திறனை எங்களைக் கொள்ளையிட்டுக் கொண்டே பட்டயமாக்கிவிட்ட நீங்கள் மாடமாளிகைகளையும் தொழிற்சாலைகளையும் அமைத்து செல்வங்களைக் கோடிகோடியாய்க் குவித்து உங்கள் வங்கிகளில் பத்திரமாக்கிக் கொண்டீர்கள் அணைகளென்ன மின்சார நிலையங்கள் என்ன எத்தனையோ அமைத்துக் கொண்டீர்கள் எல்லாவற்றையும் உங்கள் மூலம் இழந்துவிட்டு நாங்கள் கண்ணீர் விட்டுக் கதறுவோம் உங்கள் காலடிகளைக் கழுவுவோம். உங்களையே எங்கள் மனக்கோவில்களில் ஏற்றிவைத்துத் தொழுது சுமந்து திரிவோம் எங்கள் திருக்கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு உங்களையே வலம் வருவோம் நீங்கள் நீதிமன்றங்கள் மூலமும் நீங்கள் கொழுத்தும் பட்டினித் தீயின் மூலமும் உங்கள் பத்திரிக்கை வேசித்தனத்தின் மூலம் உங்கள் கல்லூரிச் சிவப்புத் தெருக்களின் மூலமும் உங்களது காந்தியப் போதையின் மூலமும் நாங்கள் கைவிரல்கள் சோர்ந்து அறிவை முடமாக்கிக் கொண்டு உங்கள் திருக்கோயில்களில் தேவாரம் பாடிக் கொண்டு எங்களை நாங்களே இழந்து எங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே காலமெல்லாம் திரிந்து கொண்டிருப்போம் என்று கழிசடைகளே கனவு காணாதீர்கள். உங்கள் கனவுகளில் மட்டுமே உருத்துப் பெருத்து வந்து மிரட்டுகின்ற நாங்கள் ஒருநாள் அந்நாள் அதிதொலைவில் இல்லை உங்கள் வயல்வெளிகளை உங்கள் தொழிற்சாலைகளை உங்கள் மாடி வீடுகளை, உங்கள் அணைகள் மின்சார நிலையங்களை ஆட்சி செய்வோம் இடையில் இந்திய மண்ணில் விளைவித்த தானிய மனிகளில் ஒரு பெரும் பகுதியைத் தின்று நோய்நொடிகளை நீங்கள் எங்கள் வயல்களையா தின்று செரித்துவிட முடியும் எங்களைக் கொண்டே தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து அல்லது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து குவிக்கும் எத்தனையோ ஆடைகளை நீங்கள் உங்களுக்கென ஒதுக்கி வைத்து உடம்பிலா சுற்றிக் கொள்ள முடியும் அல்லது தொழிற்சாலைகளில் உடையில்லாமல் நிர்வாணமாக நின்ற பின்னும் இயந்திரச் சிங்கங்களை உங்கள் மாடிவீடுகளிலா அடைத்து வைக்க முடியும் உங்கள் அழகிய மாடிவீடுகள் எங்கள் குழந்தைகளுக்குரிய கல்விக் கூடங்களாகும் காலத்தில் மாடி வீடுகளை என்ன செய்துவிடப் போகிறீர்கள் நீங்கள் திரட்டி வைத்துள்ள உடற் கொழுப்பை எங்கள் தொழிற்சாலை இயந்திரங்களை ஓடவைக்கும் கிரிஸாக நாங்கள் பயன்படுத்திக் கொள்ளும் நாட்களில் உங்கள் அறிவை அனுபவங்களின் சாரத்தை ஒரு வேளை சோற்றுக்காக ஆலைகளிட்டு அல்லது எங்களால் எளிதாகப் பெறமுடியும் நாட்களில், இடை நாட்களில் பொறுமையோடு உங்களுக்கே அறிவையும் ஆற்றலையும் வழங்கி உங்கள் உருவத்தில் குவித்து வைக்கும் காலம் வரும்போது அவ்வளவையும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் எங்கள் விவேகத்தை நீங்கள் பாராட்டப் போகிறீர்கள் உங்கள் புறங்கையில் ஓடிவழிந்த தேனை நாயாக நக்கியதைத்தவிர இந்தியத் தேன் கூட்டை நீங்கள் என்ன செய்து விடமுடியும் தேன் கூட்டை உங்களுக்கே உரிமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா பாவிகளே! நீங்கள்…….. உடலையும் உள்ளத்தையும் சேதாரமாக்கி குட்டரோகத்திற்கே சொந்தக் காரர்களாகி விட்ட நீங்களா உங்கள் வலிமையைக் கொண்டு இந்த தேன் கூட்டைக் காப்பாற்றப் போகிறீர்கள். எங்களுக்கே உரிமையான அணைக்கட்டுகளை மின்சார நியாயங்களை உங்களோடு சொர்க்கத்திற்காக இல்லை நரகத்திற்கான எடுத்துப் போகிறீர்கள் உங்கள் காவலர்களான எங்கள் சகோதரிகளை அவர்களுக்கும் பிழைப்புக்கு வேறு வழியில்லாத போது திரட்டி இல்லை திருடிக் கொண்ட நீங்கள் அவர்களைக் கொண்டு உங்களைக் காத்துக் கொள்ளக் கருதுகிறீர்கள் எங்களைக் கொள்ளையிட்ட காசில் அவர்களுக்குப் பிச்சையிடுவதனாலேயே அவர்களின் நன்றியை நீங்கள் பட்டயமாக்கிவிட முடியும் என்று நம்புகிறீர்கள் நீங்கள் அறிவற்றவர்கள் என்பதையே இதன் மூலம் நிரூபித்துக் கொள்கிறீர்கள் எங்களது மான மரியாதைகளை உங்களிடம் நாங்கள் கொடுத்துவிட்டுத் திணறுவதைப் போலவே அவர்களது மான மரியாதை உடமை உரிமைகளையும் நீங்கள் பறித்து வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவிலும் உங்கள் வீடுகளுக்கு வெளியிலேயும் மலைமுகடுகளிலும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இவையெல்லாம் போக உண்மையை நேருக்கு நேர் தரிசிப்பதில் தயக்கம் காட்டாத எங்கள் கண்களில் படும் உண்மையையும் இப்போதே சொல்லி வைக்கிறோம். பட்டினிப் படை கொண்டு நீங்கள் எங்களைத் தாக்கும் போதெல்லாம், சொர்க்கம் என்ற உங்கள் வறட்டுத் தத்துவத்தின் தளையிலிருந்து நாங்கள் விடுதலை பெற்றுள்ளோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் எங்கள் மானமரியாதைகளை நீங்கள். பறித்துக் கொண்டு எங்களை நிர்வாணமாக்கித் திரிய விடும் போதுகளில், உங்களை எரித்தே தீர வேண்டும் என்ற எங்கள் நெஞ்சுகளில் சினப்புயல் கிளர்ந்தெழுந்து தணியாமல் எங்களை எரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்கள் ஏர்களில் இயந்திரங்களில் எங்களை நீங்கள் பூட்டி ஓட்டும் பொழுதெல்லாம் எங்களுக்கு உற்பத்தி முறையையும் எங்கள் உழைப்பை நீங்கள் சொகுசான வாழ்க்கையாக்கிக் களிக்கிறீர்கள் என்பதையும் கற்றுக் கொடுக்கிறீர்கள் வயல் வெளிகளில் தொழிற்கூடங்களில் எங்கள் கனிமங்கள் தீரும்போதே எதிர்காலச் சொர்க்கத்தை எங்கள் கண்களில் கனவுகளாக்கி அக்கனவுகளை நோக்கி எங்களை நடையிடத் தூண்டுகிறீர்கள் உங்கள் காவலர்களின் தடி வீச்சுக்கள் துப்பாக்கித் தோட்டாக்களால் தாக்கப்பட்டு எங்கள் தோழர்கள் எங்கள் தாய்மார்கள் எங்கள் தந்தையர் எங்கள் சகோதரர்கள் தரையில் துடித்து விழுந்து செத்து சுடலையில் எரியும் போது எங்கள் கூட்டத்தவரின் வேற்றுமைகளும் சேர்ந்து எரிந்து இந்த அவல வாழ்க்கையில் நாங்கள் கொண்டிருக்கும் பொய்ப்பற்றுகளையும் சேர்த்து எரித்து எங்கள் கூட்டத்தைப் புனிதப்படுத்தி ஆற்றல் ஏற்றி மக்கள் படையாக மலரவைப்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் புனிதப் போர்க்களத்தில் தம்மைத் தியாகம் செய்த அந்தத் தோழர்களின் ஆவிகள் எங்கள் கனவுகளில் கற்பனைகளில் எங்கள் நினைவுகளில் தங்கி எரிவதன் மூலம் எங்களுக்குள் அந்த மாவீரர்களின் ஆற்றல்கள் இறங்கி நிறைவதை நீங்கள் அறியமாட்டீர்கள் பொற்காலத்தை உருவாக்கத்தக்க புனித உறவுகள் எங்கள் கூட்டத்தில் உருவாவதை நீங்கள் அறிவீர்கள் கோடிக் குடும்பங்களாக, எங்கள் சக்திகளோடு சிதறிக் கிடந்த நாங்கள் ஒரே குடும்பமாக உருகிக் கலந்து வருவதை நீங்கள் அறியமாட்டீர்கள் அவர்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் எங்கள் தோழர்களைத் துளைத்துச் செல்லும்போதே கொஞ்சநஞ்சும் எங்கள் இதயத்தில் படிந்துள்ள சுயநலத் தீமைகளையும் சிறுமைக்குணங்களையும் துளைத்து நாசமாக்கி எதிர்கால வாழ்வின் பொதுமைக்கு எங்களைத் தயார்படுத்துகின்றன. உங்களுக்கு உயிராசை பெரிது என்பதனால் எவ்வகைத் தீமைக்கும் நீங்கள் துணிந்து விட்டீர்கள். வயிற்றுக்காகவே நீங்கள் வாழ்கிறீர்கள் வாழ்க்கை உங்களிடம் தேங்கி நாற்றமெடுக்கிறது வாழ்க்கையின் பரப்பை நீங்கள் உங்கள் மாளிகைக் குள்ளே உங்களது உடம்புக்குள்ளேயே முடக்கி விட்டீர்கள் இன்பம் என்ற கேவலமான ஒரு நோக்கிலேயே உங்கள் கலைகளையும் நகர்த்துகிறீர்கள் உங்களது சுயநல எல்லைக்குள்ளேயே அறிவைக்கூட அடைத்து விட்டீர்கள் உங்களையே நீங்கள் தெய்வங்களாக்கித் தெய்வங்களைக்கூட கேவலமாக்கிவிட்டீர்கள். வரலாற்றுப் பேராற்றை உங்களது சாக்கடைக்குள்ளேயே அடைத்துவிடப் பார்க்கிறீர்கள் இறந்த காலத்தின் ஏற்றங்களைக்கூட உங்கள் சாயலிலேயே உருவாக்கிவிடப் பார்க்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளுக்கே உணர முடிய வேண்டுமென்று பேராசிரியர்களை நிர்ப்பந்திக்கிறீர்கள் உங்களது ஆசைகளே சமுதாயத்தின் ஆசைகளாகி விடவேண்டுமென்று கலைகளைப் படைத்து எட்டுத் திசைகளிலும் இயக்கிவிடுகிறீர்கள் எங்கள் வீட்டுப் பெண்மக்களும் இளைஞர்களும் உங்களுக்காகச் சோரம் போக வேண்டுமென்று எத்தனையோ ஆசைப்படுகிறீர்கள் ஆண்மை பெண்மை அத்தனைக்கும் நீங்களே இலக்கணம் கற்பிக்கிறீர்கள் உலக வாழ்க்கையையே நீங்கள் குழப்பிக் கெடுத்துவிட்டீர்கள் இதன் மூலம், வாழ்வின் சட்டத்தைத் தடைப்படுத்தி விட்டீர்கள் இதனால் இனி வாழத் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள் ஆகவே உலகத்தின் இன்னொரு தீர்ப்பு நாளுக்கு நீங்கள் தயாராகி வருகிறீர்கள் உங்கள் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன தயாராகிக் கொள்ளுங்கள். தண்டனை நெருங்கி வருகிறது உங்களுக்கு இன்னுமோர் ஆசை இருக்கிறது இல்லையா ஆமாம் இந்திய எல்லைக்குள்ளே உங்களை நாசமாக்க முடியாது உங்களது சாம்ராஜ்யம் பலநாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் உங்களுக்கு ஏற்படும் அழிவை உங்களது எஜமானர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் நீங்கள் அழிந்துவிட்டால் உங்களுக்கு இறுதி நேர்வதற்கான அறிகுறிகள் இந்திய வானில் தோன்றத் தொடங்கினால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் உங்கள் எஜமானர்களின் படைகள் உங்களைத் தேவைப்பட்டால் கேட்டு அல்லது உங்களைக் கேட்காமலேயே இந்தியாவில் தரையிறங்கி எங்களுக்கு எதிராக வருவார்கள் இதுதானே உங்களது நம்பிக்கை அப்படியானால் எங்களுக்கு வேலை எளிதாகிவிடும் உங்கள் இதயத்தில் இல்லாத உங்களுக்குத் தேவைப்படாத நாட்டுப்பற்றை எங்களுக்கு எத்தனைக் காலமாக எத்தனை ஆவேசத்துடன் வாய்ப்பறை முழங்கினீர்கள் உங்கள் இதயத்தை நீங்களே கிழித்துக் கொண்டு வணிகநோக்கம் தவிர வேறு எதுவுமே அதில் இல்லை என்பதை நீங்களாகவே வெளிப்படுத்திக் கொள்வீர்களானால் பலமற்ற உங்களைத் தட்டி நொறுக்குவது எங்களுக்கு எத்தனை சுலபமான காரியமாகிவிடும் ஒரு வியட்நாமுக்கே ஈடுகொடுக்க முடியாத உங்கள் எஜமானர்கள் உலகத்தையே வியட்நாமாக்கி விட்டு எப்படி எத்தனை நாளைக்கு உயிர் தப்பி வாழ முடியும் கொடிய அரக்கப் பிசாசுகளே உங்களது ஆரவாரமற்ற உலகம் எத்தனை அழகுமிக்கது அந்த உலகை அந்தச் சமுதாயத்தை எங்கள் உயிரைக் கொடுத்தல்லவா கொண்டு வரப்பார்க்கின்றோம் இந்தியா எங்களது நாடு இதை உருவாக்குபவர்கள் நாங்கள் அழகுபடுத்தியவர்கள் நாங்கள் ஆற்றல் பெற வைத்தவர்கள் நாங்கள் நாங்கள் இதை உருவாக்கும் போதே அழகுபடுத்தும்போதே ஆற்றல் பெற அமைக்கும்போதே எங்களிடமிருந்து திருடிக்கொண்டு எங்களைத் தெருவில் துரத்துவிட்டீர்கள் எங்கள் அழகைப் பறிமுதலாக்கினீர் எங்கள் ஆற்றலை நாசமாக்கினீர் நாங்கள் பெறவேண்டிய அழகை ஆற்றலை நீங்களே அனுபவித்தீர்கள் உங்கள் முகத்திலும் கழுத்திலும் உங்கள் உடலிலும் வீடுகளிலும் உங்கள் கடைகளில் நகரங்களில் உங்கள் வாகனங்களில், மண்டபங்களில் தேங்கித் திரிந்து கிடக்கும் அழகும் ஆற்றலும் நாங்கள் இடையில் இழந்தவை இவற்றை நீங்கள் வைத்து அனுபவித்துக் கேவலப்படுத்தியது போதும் இவைகளை மீட்டுக்கொள்ள எங்கள் தோழர்கள் தயாராகிவிட்டார்கள் இடையில் எந்த உடன்பாட்டுக்கும் அவர்கள் தயாராக இல்லை உங்களுக்குச் சலுகைகள் வழங்கித் தங்களை அவர்கள் ஏமாற்றிக் கொள்வது இனி இல்லை அரசு பொது அதனிடம் சொத்துக்கள் இருக்கட்டும் விளைவைப் பங்கிட்டுக் கொள்வோம் என்ற சாத்தானின் வேதம் அவர்களுக்குத் தேவையில்லை உற்பத்திப் பெருகும் வரை உழைப்பாளிகளும் உயர்வர்க்கத்தவரும் சமாதானச் சகவாழ்வு நடத்துவோம் என்ற முதலாளியச் சோசலிசத்திற்கும் அவர்கள் தயாராக இல்லை. சோசலிசம் தானாகப் பழுக்கும் நாங்களே உங்களுக்காகக் கனிய வைத்துத் தருகின்றோம் என்ற சோசலிச முகமூடிகளின் வார்த்தைகளில் நாங்கள் சொக்கிவிடப் போவதில்லை முயல்கள் இடையில் உறங்கிவிடும் ஆமையே முன்னேறிக் குறியை அடையும் என்றுரைக்கும் நரித்தலைவர்களின் தயவுகள் இனித் தேவை இல்லை ஆகவே எங்கள் கைவிலங்குகள் தகரும் நாள் வந்துவிட்டது நாங்கள் மனிதராகி விட முடிவு செய்து விட்டோம். விலங்குகளைக் காட்சி சாலைகளில் வைக்கக் கிளம்பிவிட்டோம் வரலாற்றின் சக்தியை விடுவிக்க விரைகின்றோம். கிளர்ந்து வரும் பெரும் புயல் போராட்டத்தில் மரணத்திற்குப் பொருள்தரப் போகின்றோம் வீரத்திற்கு இலக்கணம் வரையப் போகின்றோம். அன்பிற்கு ஆழம் காணப்போகின்றோம் பொறுமையின் பரப்பை விளக்கப் போகின்றோம் போர்க்குணத்தின் எரிமலையைக் காட்டப் போகின்றோம். வறுமையைப் பங்கிட்டு வயிறு நிரைக்கப் போகின்றோம். உரிமைகளைப் பங்கிட்டு விரிவடையப் பார்க்கின்றோம் . உடமைகளின் நஞ்சை உறிஞ்சிவிடப் போகின்றோம் அதிகாரப் பேயோட்டி அமைதி தரப்போகின்றோம் சுரண்டல் பிசாசின் தொல்லை தீர்க்கப் போகின்றோம் மனித ஆற்றலை விடுவிக்கப் போகின்றோம் கலைகளின் இதயத்தை நெகிழ்த்து விடப்போகின்றோம் எங்கள் பயணம் புறப்பட்டுவிட்டது கங்கையும் காவிரியும் எங்களுடன் ஓடுகின்றன இமயம் எங்களை நெஞ்சுயர்த்திப் பார்க்கிறது கடலலைகள் கைகொட்டி வரவேற்புக் கூறுகின்றன நாங்கள் இந்நாட்டின் நாயகர்கள் ஆகின்றோம் உடமை வர்க்கமே கவனமாகக் கேட்டுக்கொள் இந்தச் சமுதாயத்தின் உற்பத்தியை நாங்கள் தாங்கி நடத்துகிறோம் தற்காலிகமாக நீ தலைமை தாங்கினாலும் நெடுங்காலத்திற்கு நீ தலைமையிலிருக்க முடியாது காரணம் அதற்கான அடிப்படை உன்னிடத்தில் இல்லை. இந்தச் சமுதாயத்தையே நாங்கள் எங்கள் நெஞ்சில் தாங்கியிருப்பதனால் எங்களது பொறுமைக்கும் எல்லையில்லை. பொங்கி எழுந்தோமானால் எங்கள் சினத்தையும் அளவிட முடியாது. சமுதாயத்திற்கு நாங்களே தாயின் பொறுமையோடு, தாயின் மனிதாபிமானத்தோடு கனிவோடு கூறுகின்றோம். இதயம் இருக்குமானால் கேட்டுக்கொள் உனது ஆர்ப்பாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. உனக்காகவே உற்பத்தி நடைபெற நீ அனுமதிப்பதால் உலகின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமே நீ தடையாகிவிட்டாய் எல்லாவற்றையுமே நீ விலை பொருளாக்கிவிட்டதால் தந்தையையும் தாயையுமே காசுக்கு அடிமையாக்கி விட்டதனால் கற்பையும் நட்பையும் காசைக் கொண்டு அளந்துவிட முடிவு செய்துவிட்டதனால் மனித உறவுகளுக்குள் கடுமையான நஞ்சைக் கலந்து அவற்றைச் சாகடித்து மனித வாழ்வின் மேன்மையை - பொருளையே நீ நாசமாக்கி விட்டாய் உலகுக்கே தீவைக்கக் கிளம்பிவிட்ட நீயாவது நிம்மதியாக இருக்கின்றாயா எல்லோரிடத்துமே நீ கொள்ளும் சந்தேகங்கள் மூலை முடுக்குகளிலெல்லாம் நீ காணும் அச்சுறுத்தல்கள் நிம்மதியற்ற உனது தூக்கம் உனது ஆணையை உதறிவிட்ட உனது குடும்பம் நீ செல்லும் இடங்களிலெல்லாம் உன்னையே தொடர்ந்து வரும் நாசகர நிழற் பேய்கள் இவற்றையெல்லாம் காணாமல் இருப்பதற்காக குடித்து மயங்கி நீ போடும் ஆட்டங்கள் இவையெல்லாம் நீ வாழ்விலிருந்து விலகிவிட்டதையே பிரகடனப்படுத்துகின்றன. உனக்காக நடைபெறும் குதிரைப்பந்தயங்கள் சூதாட்டங்கள் காபரே நடனங்கள் உனக்காகவே வெளியிடப்படும் பத்திரிகைககள் திரைப்படங்கள் உனக்காகவே தயாரிக்கப்படும் ஆடைகள் அணிகலன்கள் உனக்காகவே உருவாக்கப்படும் கார்கள், விமானங்கள் செய்திச் சாதனங்கள் நாளுக்கு நாள் பெருத்து உழைக்கும் மக்களின் மீது பாரமாகி பாரந்தாங்க முடியாமல் அவர்களால் தூக்கியெறியப்படும் நிலைக்களாகி நீ இன்று இருக்கின்றாய் உயரத்தில் இருக்கும் மலர்களுக்காகவே மரம் வளர்ப்பதைப் போல மண்ணே நிலைத்திருப்பதைப் போல உலகமே இயங்குவதைப் போல அண்டமே கிடப்பதைப் போல ஒரு கனத்த பெரும் இருள் பாறையை நீ உண்டாக்கி வருகின்றாய் நிலத்திலிருந்து நீ விலகிச் செல்லச் செல்ல உனது வாழ்க்கையை பலமற்றதாக்கி வருகிறாய். கண்ணாடி மாளிகைக்குள் படிகத்தைக் கொண்டு உருவாக்கப் பட்டதைப் போன்ற உனது வாழ்க்கை தொட்டால் நொறுங்கிவிடும் முறையில்தான் நலிந்து வருகின்றது. உழைப்பில் உடலை ஈடுபடுத்தாமலும் உண்டு கொழுத்தும் உடலை நோய்க் கிடமாக்கிக் கொண்டு, உனக்காகவே மருத்துவர்களையும் அற்புத மருந்துகளையும் பிரேத விளையாட்டுக்களையும் உருவாக்கிக் கொள்வதன்மூலம் இந்தச் சமுதாயத்தின் நாயகனாக உன்னை நினைத்துக் கொண்டு கோமாளியாகி வருகின்றாய் நாளுக்கு நாள் இந்த உலகமே உனக்கு போதாத இடமாகி நீ புழுங்குகிறாய் இயற்கையிலிருந்து எவ்வளவோ தொலைவு விலகிவிட்ட நீ இயந்திரங்களை மட்டுமே நீ நம்பியவனாகி நீயும் எஃகு இயந்திரமாகிவிட்டாய் இதன் மூலமாக இடத்தை விட்டு நகராமல் முன்னேறாமல் முடங்கிவிட்ட இடைவிடாமல் இயங்கும் இயந்திரமாகிவிட்டாய் இதன் மூலமும் வாழ்வின் வளர்ச்சியை நீயாகவே புறக்கணித்து விட்டவனாகிறாய் மற்ற பெண்கள் நம் கற்பை உன்னிடம் பறிகொடுத்து விட வேண்டுமென்று நீ விரும்புவதால், உனது மனைவி மக்களின் கற்பைக்கூட நீ காப்பாற்ற முடியாதவனாகிவிட்டாய் உனது எதிர்காலம் இருண்டு வருவதை நீ புரிந்து கொள்ளாததனால் உனது சந்ததியின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு செய்யாதவனாகிவிட்டாய் உன்னால் உன் மனைவிக்கும் பாதுகாப்பில்லை மக்களுக்கும் பாதுகாப்பில்லை அறநெறிகளை உன் வாழ்விலிருந்தே விரட்டிவிட்டதனால் உனது மனைவிக்கும் மக்களுக்கும் கூட அறநெறியை உபதேசிக்க முடியாதவனாகிவிட்டாய் குடும்ப உறவுகளை ஒவ்வொன்றாக நீ கழற்றி எறிந்துவிட்டாய் உனது வீட்டையே நீ ஒரு விடுதியாக வேசியர்மடமாக மாற்றிவிட்டாய் செல்வந்தொகுப்பதையே நீ வாழ்வின் இலட்சியமாக்கி விட்டதனால் வாழ்வை நீ இழந்துவிட்டதோடு செல்வத்தையும் நீ நாசமாக்குகிறாய் இயங்க வேண்டிய செல்வத்தை நீ இறுக்கிப் பிடித்தும் பாதாள அறைகளில் பதுக்கி வைத்தும் கறுப்புப் பேயாக்கிவிட்டாய் உழைப்பை இயங்க வைக்கும் திசைநோக்கியே ஓடவேண்டிய செல்வத்தை மறித்து உழைப்பை அழிப்பதற்காகவே பயன்படுத்துவதால் செல்வத்தின் மூலத்தைக்கூட நீ நாசமாக்கிவிட்டாய் உற்பத்தியின் அளவைக் கணிப்பதற்காகவும் பொருளின் இயக்கத்தை எளிதாக்குவதற்காகவும் குறியீடாக இருக்க வேண்டிய நாணயத்தை - நீ முதன்மைப்படுத்தி குறியீட்டையே பொருளாக்கிவிட்டாய் நிழலை உருவமாக்கிவிட்டாய் பொய்யையே மெய்யாக்கிவிட்டாய் பொய்மைப் பிசாசை உருவாக்கிவிட்டு அதன் பிடிக்குள் கிடந்து நீயே தவிக்கின்றாய். உனது இலாப நோக்கத்தின் நிறைவேற்றத்திற்காகவே கலை இலக்கியங்களைப் படைப்பிக்கின்றாய் இதனால், கலை இலக்கியங்களையே நீ சிதைத்து விட்டாய் உடலியக்கத்தின் மூலம் நடனக்கலையை உயிர்ப்பிக்க வேண்டியிருக்க உடலியக்கத்தையே முதன்மையாக்கியதன் மூலம் நடனக்கலையை நாசமாக்குகின்றாய் தசை பிதுக்கல்களையே ஓவியமாக்கியதன் மூலம் ஓவியத்தையே தேவையற்றதாக்கிவிட்டாய் மூன்றாந்தரக் கலைஞர்க்கே நீ முதன்மை கொடுத்து விளம்பரப்படுத்துவதனால் கலையின் தரத்தை நீ குழப்பிவிட்டாய் உனது ஆசைகள் தேவைகளுக்காகவே கலைஞர்களை நீ எழுதவைப்பதன் மூலம் படைப்பை நீ கொன்றுவிட்டாய் நீ முத்திரையிட்டே சிந்தனைகளை வெளியிடுவதனால் சிந்தனையை நீ காயடித்து விடுகின்றாய் ஆகவே உன்னைச் சகித்துக் கொள்வதுகூட இனிமேல் முடியாததாகி வருகிறது. நீ இந்தச் சமுதாயத்தின் உயிர்க்காற்றைக் கெடுக்கின்றாய் நீரைக் கெடுக்கின்றாய் வானத்தைக் கெடுக்கின்றாய் இயற்கையை அழிக்கின்றாய் சேற்றை ஆக்குகிறாய் நோய்களைப் படைக்கிறாய் ஆபாசத்தை அழகுபடுத்துகிறாய் அறிவைக் கெடுக்கிறாய் . எங்கள் சமுதாயத்தில் எல்லோரையும், எல்லாவற்றையும் முடமாக்குகிறாய்! நீ உலகில் வாழ்வதற்கான எல்லாத் தகுதிகளையும் இழந்துவிட்டாய் ஆகவே நீ இனி வாழ்ந்து பயனில்லை உன்னை வாழ வைத்தும் பயனில்லை உனக்கு கண்ணில்லை காதுமில்லை உலகில் நீயே பெரும் பொய் உனக்கு நீயே பெரும் மாயை உனக்கு நீயே குழிதோண்டுகிறாய் குழியில் விழுவது தெரியாமலேயே விழுந்து செத்துக் கொண்டிருக்கிறாய் நீ சாகும் போது உலகமும் உன்னோடு சேர்ந்து செத்துவிட வேண்டுமென்று அணுகுண்டுகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆடுகின்றாய் ஒரு தாயின் பரிவோடு சொல்லுகின்றோம் ஒரு தந்தையின் பொறுப்போடு சொல்லுகின்றோம் நீ உயிர்வாழ வேண்டும் உருப்பெற வேண்டும் மனிதனாக மறுபடியும் வாழ்ந்துவிட வேண்டும் என்று உன் மனத்தில் எங்காவது ஒரு சிறு ஆசை இருக்குமானால் (இல்லையென்று கூட நம்புகிறோம் ) இறுதியாகக் கேட்கின்றோம் (எங்கள் இளையமகன் சொல்லுகிறான்) எங்கள் கூட்டத்தோடு இணைந்துவிடுங்கள் கோடியாண்டுகள் கோலாகலமாக வாழலாம் இல்லையென்றால் ஒரு தாயின் பரிவோடு தந்தையின் பொறுப்போடு சொல்லுகின்றோம் உங்கள் மலைகளை இடித்துத்தான் எதிர்கால அணைகளை அமைக்க வேண்டுமானால் உங்கள் சுரங்கங்களை வெட்டித்தான் எதிர்கால இயக்கங்கள் நடைபெற வேண்டுமானால் உங்கள் சிறைகளை இடித்துத்தான் எங்கள் தோழர்களை மீட்க வேண்டுமானால் உங்களை நரகத்திற்கு அனுப்பித்தான் எங்களது சொர்க்கத்தை மீட்டுக்கொள்ள வேண்டுமென்றால் அந்தப் புனிதச் செயலை ஆனந்தத்தோடு ஆரவாரத்தோடு இன்றே செய்து முடிக்கக் கிளம்புகிறோம். 15 - 08-1972 எங்களூரில் ஒரு தேர்த்திருவிழா (1972) எங்களூரில் ஒரு தேர்த்திருவிழா எங்களூர் மக்கள் தங்கள் கைகால்களை நம்புவதைவிடத் தங்கள் விதித் தேவதைகளையே அதிகம் நம்புகிறார்கள் காரணம், தங்கள் கைகளில் உற்பத்தி, தங்கள் தேவதைகளின் மாடிவீடாக உயர்த்திக் கட்டும்போதே தங்கள் கூரைவீட்டையும் பிரித்துத் தெருக்களில் திரிய விடுவதைப் பார்த்துவிட்டார்கள். தங்கள் தேவதைகளின் மனம் இளகினால் ஒழிய தங்களுக்கு மறுவாழ்வு இல்லை என்பதைப் பூசாரிகள் சொல்லும்போதே புரிந்து கொண்டார்கள். இதனால் அவர்கள் கோயில் திருவிழாக்களில் கோடி கோடியாய்க் குவிகிறார்கள் ஐந்தாண்டுக்கொரு முறை அல்லது தேவைப்பட்டால் இடையிடையே எங்களூர் தர்ம கர்த்தாக்கள் திருவிழாக்கள் ஏற்பாடு செய்கிறார்கள்! தெய்வங்களின் அருளை எங்களுக்குப் பெற்றுத்தர இவர்கள் நாயாய் அலைகிறார்கள் கோயிலிலுள்ளே வாய் பேசாது தன் விதிக் கயிறுகளை மட்டும் இயக்கிக் கொண்டிருக்கும் தெய்வம் இந்தக் கோலாகலங்களைப் பார்த்துப் புன்னகையைச் சிந்திக் கொண்டிருக்கிறது! காலத்தைப் பற்றி இங்கு யாருக்குமே கவலையில்லை! நகர்வதும், நகராததும் அதன் விருப்பமாகிவிட்டது. தெருக்களில் நாய்கள் குரைப்பதைக் கடமையாகச் செய்து கொண்டிருந்தன. அனாதைப் பிணங்கள் சாகும். அதை வைத்தும் காசு வாங்கிப் பிழைப்பவரும் பிழைத்துக் கொண்டே இருந்தார்கள். தெருவில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டன அவைகள் வண்டியிலேற்றி ஊர்க்கோடியிலே குவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. காலம் கண்களை மூடிக் கொண்டு ஊர்த்தெருவில் நடமாடிக் கொண்டிருந்தது. ஊரில் ஒரு நாள் தீப்பற்றிக் கொண்டது மாடி வீடுகள் சில பற்றி எரிந்தன. வயல் வெளியிலும் சில பற்றிக் கொண்டன தர்மக் கர்த்தாக்கள் கூடிப் பேசினர் தேர்த்திருவிழா நடத்தினால் சரியாகிவிடும் என்று முடிவெடுத்தனர் தர்மக்கர்த்தாக்கள் கட்சி பிரித்துக் கொண்டு கனவேகமாக ஊர்முழுதும் சுற்றி வந்தனர் தெய்வத்தின் அருளைத் தங்களுக்கே பெற்றுத் தருவதாகக் கூறி வசூல் செய்தார்கள். வீட்டுக்கு இத்தனை கால்நடைக்கு இத்தனை நடந்தால் இத்தனை ஓடினால் இத்தனை விழுந்தால் இத்தனை என்று எல்லோருக்கும் சமத்துவமாகத் தண்டம் விதித்தனர் இரசீது புத்தகங்கள் பல வண்ணங்களில் எங்கள் வீட்டுப்படிகளை ஏறி இறங்கின பெரிய மனிதர்களின் முகம் பார்த்து கிழித்த இரசீதைக் கையில் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டோம். ஜெர்மனியிலிருக்கும் அமெரிக்காவிலிருக்கும் அச்சுகள், கடையாணிகள் இறக்குமதியாயின. இறக்குமதியான எல்லாவற்றையும் எங்கள் தெருவில் எடுத்துச் சென்றதைக் கூட எங்கள் தருமக்கர்த்தாக்கள் விழாவாகச் செய்தனர். தாரை தப்பட்டைகள் பெண் வேசம், புலிவேசம் இப்படை தோற்கின் கோசம் இவற்றைத் தப்பாது செய்தனர். வானம் இடிந்து கடலையே நிரப்புமாறு கொட்டப்படும் அருள் வெள்ளத்திற்காக, அண்டாக்கள், குடங்கள் பாத்திரங்கள் முதலியவற்றை பரப்பி வைத்திருந்தோம். ஆர வாரங்களுக்கிடையிலே தேர் நகரத் தொடங்கியது. தெய்வத்தின் அருள் கிடைப்பதற்காக நெஞ்சைக் கொடுத்துக் கயிறு பிடித்தோம். சட்டக்கயிற்றின் நீளம் முழுவதும் உடற்கந்தல்கள் பின்னப்பட்டிருந்தன. வெயிலின் கடுமையைத் தடுக்கக் குடைபிடித்த தர்ம கர்த்தாக்கள் தொடைத் தசைகள் துவள வேகமாக எங்களை ஊக்கப்படுத்தி அலைந்தனர்! சுரண்டல் பிரம்புகள் தாங்கிய குட்டித் தெய்வங்களின் அடுக்கு வரிசைகளுக்கு மேலே உயரத்தில் உலகையே காக்கும் தெய்வம் புன்னகை புரிந்து கொண்டிருந்தது. இருமல்கள், பெருமூச்சுக்கள் இறப்புக்கள், இரத்த வாந்தி, எதையும் பாராமல் எதிர்காலச் சொர்க்கத்திலேயே எங்கள் பார்வை நிலைத்து இழுத்துக் கொண்டிருந்தோம். முதலுதவிக்கும் மோசமில்லை தாக சாந்திக்குத் தண்ணீர் கிடைத்தது. பாகவதர்கள் பரமன் அருளுக்குச் சத்தியம் செய்தனர். பஜனைப் பாடல்கள் தெருவை நிறைத்தன மாடி வீட்டுக் கோமான்கள் இடையிடையே எங்களுக்கு நீர் மோர் வழங்கினர் தருமக்கர்த்தாக்கள் அவர்கள் தானத்தைப் போற்றினர். வான வேடிக்கைகள் கரக ஆட்டங்கள் தேவாரப் பாடல்கள் ஒன்றிலும் குறைவில்லை. எங்கள் நெஞ்சில் பாரம் கனக்கத் தொடங்கும் போதெல்லாம் காட்சிகளை மாற்றினர். ஆட்சிகள் மாறி மாறி வந்தன. காட்சிகள் மாறிய போதெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாயின எங்களோடு சேர்ந்து தேரை இழுக்கச் சில வெள்ளை மேனியரும் வந்து சேர்ந்தனர். அவர்களது உற்சாகம் எங்களைத் தாக்கியது எலும்பு முறியும் சத்தத்தில் கிறங்கியபடியே தேரை இழுத்தோம் தேர் சாதாரணத் தேரில்லை உலகிலேயே பெரியதேர் கனமான தேர் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டறைகளில் இதன் பாகங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய வேதியர்கள் உருப்போட்டுப் போட்டு இதனை மகிமைப்படுத்தினார்கள் இந்தத்தேர் நகரும் போது இந்தியாவே நகரும் என்று விளம்பரப்படுத்தினார்கள் எப்படியாவது இதன் கயிறுகளைக் கழுத்தில் கட்டியாவது இழுக்க முடியுமானால் எங்கள் வயிற்றையும் சேர்த்து இழுத்துச் செல்லலாமே என்று உயிரைக் கொடுத்து இழுத்தோம். கடைத்தெருக்களின் வழியாகச் செல்லும் போது காணிக்கைகள் குவிந்தன. தொழிற்சாலைகள் நிறைந்த வீதிகளின் வழியாகச் செல்லும்போது, தேரின் கனம் பெருத்தது அக்கிரகாரத்தின் வழியாகச் செல்லும்போது எங்கள் கண்கள் இருண்டன. வயல் வெளிகளுக்கு அருகில் செல்லும்போது அதன் பசுமையைப் பார்க்க முடியாதவாறு வயிறுகள் எரியத்தொடங்கின. தர்மகர்த்தாக்களின் உற்சாக மொழிகளே எங்களுக்கு உணவூட்டின சொர்க்கம் தொலைவில் இல்லை இன்னும் கொஞ்சம் பலமாக இழுங்கள் என்றார்கள். கண்களை மேலே உயர்த்திப் பார்த்தோம். பார்வை குழம்பியது. தெய்வம் கண்களுக்குத் தெரியவில்லை. இருளுக்கிடையில் ஏதோ கறுப்பாகத் தெரிந்தது. பணம் குவியும் ஓசை காதில் வந்து மோதியது தருமகர்த்தாக்கள் தங்கள் கரங்களைக் கூப்பி உலகைப் படைத்துக் காப்பவனே உனக்கு உண்மையாகவே நாங்கள் சேவை செய்கிறோம் கோடிச் செல்வத்தை உன் ஆலயத்தில் குவிக்க வழி செய்தோம் இரவு பகல் எந்நேரமும் இதற்காகவே உயிர் வாழ்கின்றோம். உனது விதிகளில் ஏதாவது ஒன்றைத் தளர்த்தி ஏழைகளுக்குக் கருணை புரியலாகாதா உனது கருணையும், உன்னையும் காக்கும் எங்களையும் காலங்காலத்திற்குக் காக்கும் என்று முறையிடுகிறார்கள். உடனே பணப்பெட்டி சலசலக்கிறது காசுகள் எங்கள் மத்தியில் விழுந்தன. உடனே பூசாரிகள், தருமகர்த்தாக்கள் பாய்ந்தோடி வந்து அன்பாகப் பேசி வாங்கிக் கொண்டார்கள். சட்டக் கண்ணாடியில் நிலங்களைக் காட்டி உங்களுக்கே இவை உரிமை என்றார்கள் எதிர்காலச் சொர்க்கம் பற்றிய நாடகங்கள் காலந்தோறும் நடத்திக் காட்டினார்கள்! ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைத் தழுவுவதாக பஜ கோவிந்த விரிவுரை தந்தனர் கயிற்றிழுப்பைக் கட்டளையாக்கி ஓடி ஓடி உற்சாகப்படுத்தினர். பள்ளிகள் கல்லூரிகள் நிறைந்த தெருக்களில் எங்கள் இழுவை நடைபெற்ற போது பஜனையைக் கேட்டுக் காதுகளை நிரப்பிக் கொண்டோம். நாட்கள் பல நகரலாயின. இடி மழை புயல்கள் எங்கள் மேனியைத் தாக்கின எத்தனையோ பேர் இறந்து விழுந்தனர் தர்மகர்த்தாக்களின் தயவும் பெருகியது நீர்மோரை நிறைய வழங்கினர் கயிறு எங்களை இறுக்கிக் கொண்டது. தலை, உடல், கைகால், இதயம் எல்லாவற்றையும் கயிறு விடாமல் பிணித்தது திறம்பட இடையிடையே வந்தன. அதிர்ஷ்டச் சீட்டுக்கள் இடையிடையே அமைந்தன மதுவின் நறுமணம் மனத்தை ஈர்த்தது குஞ்சுத் தொப்பிகள் மாட்டக் கொடுத்தனர் இரவுப் போதில் கயிற்றில் கட்டப்பட்டேன் கயிற்றில் ஏற்பட்ட தொய்வுகள் இடையிடையே திருத்தப்பட்டன தேர் மீண்டும் இழுக்கப்பட்டது எங்கள் குடியிருப்புக்குள்ளும் தேர் நுழைந்தது கனம் அதிகரித்தது மயக்கம் மிகுந்தது பள்ளங்கள் நிறைந்த பாதையில் எங்கள் உடலின் மீதே தேர் ஏறிச்சென்று உடலும் சிதைந்து சக்கைக் கட்டையை உயிர்ப்பிக்கையில் மாட்டிக் கொண்டு செல்வதைப் போல உணரத் தொடங்கினோம். தலையைத் தூக்கி தூக்கவே முடியாமல் மெல்ல உயர்த்திப் பார்த்தோம் காலை ஒளியில் காட்சி தெரிந்தது பார்வையில் படுவது தெய்வமா இல்லையே பின் என்ன இது ஓ பிசாசு ஆம், அந்தப் பிசாசுதான் சிரிக்கிறது காலங்காலமாக எங்கள் உயிரையும் உள்ளத்தையும் காவு கொண்ட பிசாசு சிரிக்கிறது சுற்றிலும் குட்டிப்பிசாசுகள் எங்களைச் சுற்றிலும் எல்லோரும் பிசாசுகள் எங்களைப் பிணித்திருக்கும் கயிறுகள் குட்டிப் பிசாசுகளால் தாங்கப்பட்டுக் கோபுரமேறி உலகம் படைத்தவனின் கைகளில் விதியாய் இயங்குகிறது எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம் இறுதியாக ஒரு முடிவு செய்கிறோம் பிசாசுகள் சுற்றிசுற்றி வருகின்றன முறைக்கின்றன இடைக்கம்பிகள் இருப்புத் தடிகளாகின்றன அவை சுழற்றப்படுகின்றன தேரிலிருந்து குண்டுகள் பொழிகின்றன கயிறுகளை அறுத்துக் கொண்டு வீராவேசத்தோடு கிளம்புகிறோம் கூட்டமாகத் திரள்கிறோம் தேருக்குத் தீ வைக்கின்றோம் எங்கள் மான மரியாதைகளில் இதயத்தில் - வயிற்றில் நெடுங்காலமாக எரிந்து கருகி எரிந்த தீயை எடுத்துக் கொட்டுகிறோம். தீ வானை முட்ட வளர்ந்தெரிகிறது. அந்த விசுவ ரூபப் பெரு நெருப்பில் காலங்காலமாக எங்கள் கற்பனைகளிலேயே உருவாகி வந்த இறைவனைத் தரிசிக்கின்றோம் அந்தத் தேவனின் காலடியில் எங்கள் வேற்றுமைகள், வேதனைகள் சிறுமைகள் சீரழிவுகளை இட்டுக் கொளுத்திவிட்டு முக்தி நோக்கி நாங்கள் முன்னேறுகின்றோம். 20 - 08-1972 உடைமைப் பேய்களோடு ஒரு விவாதம் சுதந்திர வானத்தில் சுற்றித் திரிவதற்காகவே படைக்கப்பட்டவர்களாகக் கருதிக் கொண்டவர்களே உடமைத் தேவதைகளே எங்களுக்கு அடிமைத் தளைகளைத் தயாரிப்பதற்காக கார்களிலும் விமானங்களிலும் பறந்து திரியும் தேவதைகளே நாங்கள் அடிமைகளாக இருக்கும்வரை உங்களுக்குச் சுதந்திரம் இல்லை எங்களுக்கு அடிமைத்தளைகளைத் தயாரிப்பதையே தொழிலாகக் கொள்ளும்வரை உங்களுக்கும் சுதந்திரம் இல்லை . மாடி வீடுகளில் குளிர்சாதன அறைகளுக்குள் உங்கள் உடலை அடைத்துக் கொண்டு வாயிற்காவலனை வைத்து உலகை வெளியிலேயே தள்ளி வைத்து விடுகிறீர்களே உலகின் சுதந்திரத்தை மறுத்துவிட்டு நீங்கள் சுதந்திரம் உடையவர்களாக இருக்க முடியுமா சேரிகளையும் சாக்கடைகளையும் தொற்று நோய்களையும் வெப்பத்தையும் புழுக்கத்தையும் எங்களுக்கு உற்பத்தி செய்துவிட்டு கொட்டில்களில் எங்களைக் குழந்தைகளோடு கட்டி வைத்து நாங்கள் உற்பத்தி செய்த தானியத்தின் தட்டை - தவிட்டை எங்களுக்குத் தீனியாகத் தூவிவிட்டு நளனது வாரிசுகள் உருவாக்கிய பன்னிரு விருந்துப்படையல்களை எடுத்து வயிற்றில் திணித்துப் படுக்கையில் உடலைப் புரட்டிப் பக்குவப்படுத்திக் கொள்கிறீர்களே எங்களது அடிமைத் தளையில் உங்களுக்குச் சுதந்திரப் பொன் நகைகளை உருவாக்கிக் கொண்டீர்களே உங்கள் சுதந்திரம் உண்மையானது தானா மின்சார மதுவைக்கொட்டி இயந்திர அரக்கனை உட்கார வைத்து எங்கள் கால்களையும் கைகளையும் தன்னொடு இணைத்துக் கொண்டு புஞ்சையும் நஞ்சையும் தின்று பொய் சுதந்திரத்தில் பொதிந்து கிடக்கும் பேதைகளே கேளுங்கள் . உங்கள் முகம் எங்கள் சேரிகளையும் சாக்கடைகளையும் பார்க்கும் போது ஏன் கனத்துக் கொள்கிறது எங்கள் குழந்தைகளின் வயிற்றையும் உடம்பையும் பார்க்கும் போது ஏன் உங்கள் கண் விழிக்கிறது எங்கள் தோழர்களின் கோரிக்கைகளைக் கேட்டு உங்கள் இதயம் ஏன் எரிகிறது எங்கள் கூட்டத்தவரின் தவறுகளை விமர்சிக்கும்போது உங்கள் வாயில் ஏன் நெருப்புப் புகைந்து எரிகிறது இரவுநேரக் கனவுகளில் ஏன் பேய்பிசாசுகளைக் கண்டு மிரண்டு மிரண்டு விழிக்கிறீர்கள் எங்கள் தோழர்கள் உங்கள் வீட்டு வாயில் வெளியிலும் தொழிற்சாலை முகப்புகளிலும் கூட்டம் கூட்டிக் கோசமிடும்போது ஏன் திகைத்துத் திண்டாடுகிறீர்கள் ஆத்திரத்தை ஏன் அவிழ்த்துக் கொட்டுகிறீர்கள் உங்களது உல்லாச நடையின்போது உங்களது இயந்திரத்தால் பிழியப்பட்டுச் சக்கைகளாகிக் கந்தைகளாகி எங்களவர் பிச்சைப் பாத்திரமேந்தி உங்கள் பாதையில் வந்து நிற்கும்போது உங்கள் உல்லாசம் ஏன் குறைகிறது இத்தகைய கசப்பு நேரங்களில் முகம் சுளித்துக் கண் விழித்து இதயம் எரிந்து திகைத்துத் திகைத்துத் திண்டாடித் தவிக்கும் நேரங்களில் நீங்கள் சுதந்திர தேவதைகள் என்பதை உணர்கிறீர்களா குடியிலும் விருந்துகளிலும் உங்கள் இதயத்தை நிரப்பிக் கொள்ளும்போது காமப்புயல்களில் நீங்கள் கண் தெரியாது துவண்டுவிடும் போது காசுகளைக் குவித்து அவற்றை எண்ணி வைக்கும் கருவியாக நீங்கள் மாறிவிடும்போது காசே உங்களை ஓயாது துரத்தித் துரத்தி வேட்டையாடும்போது உங்களவர்களுக்குள்ளேயே எழும் போட்டிகள் பொறாமைகளால் உங்கள் எதிர்காலப்படத்தில் இருள் தெரியும்போது சூதாட்டச் சூழல்களில் உங்கள் இதயம் சுற்றிக் கிழிபடும் போது இன்பத்தீயில் உங்கள் உள்ளமும் உடலும் இடர்பட்டு எரிந்து சருகாகும் போது சுதந்திரச் சூரியர்களாகவா நீங்கள் கருதுகிறீர்கள் உலகத்தைச் சுருட்டி உங்கள் வாழ்வின் எல்லைக்குள்ளே மடக்கி வைத்துவிட்டீர்கள் இதனால் உலகத்தின் சுதந்திரத்தைப் பறித்ததோடு உங்கள் சுதந்திரத்தையும் இழந்துவிட்டீர்கள்! உடலை இறுகப் பற்றிக் கொள்வீர்கள் அதனால் புணர்தலை முதன்மையாக்கினீர் இதனால் நீங்கள் விலங்குகளாகிவிட்டீர் விலங்குகளாகிவிட்ட நீங்கள் எங்களையும் எங்கள் உடற்பொறிக்குள்ளே மாட்டி வைத்து விலங்காக்கி விடப்பார்க்கிறீர்கள் இதனால் மனித வளர்ச்சியின் திசையிலே செல்ல வேண்டிய வரலாற்றுப்பாதையை விலங்குகளின் காடுகளில் திருப்பிவிடப் பார்க்கிறீர்கள் நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் விலங்குகளின் சுதந்திரம் விலங்குகளைச் சுற்றிக் கொண்டு தேவதையாகத் திரிவது எவ்வளவு பெரிய பிரமை சிறுத்து நுணுகி புழுங்கித் துடிக்கும் உங்கள் இதயத்தை இறைவனிடத்தில் சரண்புக விட்டீர்கள் படைப்பிலிருந்து விடுதலை பெற்றுவிட்ட நீங்கள் உங்களைக் காப்பதற்காக உங்கள் இதயத்தைக் காப்பதற்காக மாயையின் காலடியில் விழுவதில் வியப்பில்லை. உலகிற்கே அடிமைத்தளையை உருவாக்கி - அதனால் உங்களையும் அடிமையாக்கிக் கொண்ட நீங்கள் உங்கள் அறிவை, ஆற்றலை, படைப்பை இழந்த நிலையில் ‘இயங்காத’ இறைவனிடம் சரணடைந்ததில் வியப்பில்லை. பொய்ப்பண்டங்களை விளம்பரம் செய்து விற்று விடும் நீங்கள் கோயில் லாபம் விளையும் விளம்பரம் செய்து எங்களிடம் விற்றுவிடப் பார்க்கிறீர்கள். மது மன்னர்களாகிய நீங்கள் வாரியார்களை வாகனத்திலேற்றி அனுப்புகிறீர்கள் வானொலியில் உங்கள் எருமைக்குரலை ஏற்றி வைத்துக் கறிக்கிறீர்கள் நீங்களும் இறைவனும் இணைந்து உங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறீர்கள் படைப்பில் பங்கில்லாத வெற்றுத்தரகர்களாகிவிட்ட படைப்பைத் துளைக்கும் துப்பாக்கிக்குண்டுகளாகிவிட்ட சுதந்திரத்தை இழந்து அராஜகவாதிகளாகிவிட்ட உங்களை இனிக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். உங்களது வாழ்க்கை இலக்கணங்களையே எங்கள் மனத்திலும் பயிர் செய்து உங்கள் வாழ்நாளை அறுவடை செய்துவிடப் பார்க்கிறீர்கள் உங்கள் ஆடை அணிகலன்களில் எங்கள் தாய்மார்களும் ஆசை கொண்டு அவற்றைப்பெற எங்களைத் தூண்டுவார்களானால் அந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி காண்பதன் மூலம் வரலாற்றையும் மனித இலக்கியங்களையுமே உங்கள் அச்சில் வார்த்துவிடப் பார்க்கிறீர்கள் ஆனால், உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம் உங்கள் கருணையை எதிர்பார்த்து இந்த உலகம் இனி உருளப் போவதில்லை நீங்கள் உருவாக்கும் அச்சில் நாங்கள் எங்களை அடைத்துக் கொள்ளப் போவதில்லை. வரலாற்றின் நாயகனாக நேற்றுவரை நீ இருந்திருக்கலாம் ஆனால் இன்று உன் சீட்டுக் கிழிந்து விட்டது இப்பொழுது நீ குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாய் நீ செய்த குற்றங்களுக்காக எங்கள் தோழர்கள் உனக்கு மரணதண்டனை விதித்திருக்கிறார்கள். உலகத்தின் ஓட்டத்தையே நீ தடுத்துவிட முயன்றாய் இதன் மூலம் உலகத்தையே நாசமாக்கிவிட முயன்றாய் ஆகவே உனக்கு இனி வாழ்வு இல்லை சுதந்திரமும் இல்லை. உனது சொத்துக்களையும் அவற்றின் மூலம் அடிமைத் தனத்தையும் உனது சுதந்திரங்களையும் பறிமுதல் செய்வதன்மூலம் உண்மையில் மனிதனாக வாழ உண்மைச் சுதந்திரத்தை நீ அமைக்க உனக்கு இன்றைக்கு வாய்ப்புத் தருகிறோம். எதிர்ப்புரட்சியாளனாகி இந்த வாய்ப்பையும் இழந்துவிடாதே வரலாற்றில் நாங்கள் நீந்திவந்த கதையைச் சொல்லுகின்றோம். தனது பயணத்திற்குத் தடையிட்ட ஆற்றை அதன் விதியைக் கொண்டே கடந்தவர் எங்கள் முன்னோர் காற்றின் விதியைக் கண்டு அதனைக் கொண்டே கடலில் கலம் செலுத்தியவன் எங்கள் முன்னோன் காற்றின் இயல்புகளைக் கண்டே பட்டம் விட்டவன் எங்கள் பையன் அதைப் புல்லாங்குழலில் புகுத்தி இசை எழ வைத்தவன் எங்கள் கலைஞன் விதித் தேவதையின் வாக்குறுதி கொண்டே அதனை வெல்ல வல்ல சாவித்திரிகள் நாங்கள் எங்கள் கடுமையான உழைப்பின் மூலம் கதிரவனையும் நிறுத்திவைக்கக் கற்றவர்கள் நாங்கள் விதி வலிமைக்குக் கட்டுப்படாத தேவர்களுக்கு நாங்கள் மாலை சூட்ட விரும்பவில்லை விதி வலிமையில் நாடு துறந்து உறவு துறந்து - ஆனாலும் தன் ஆற்றல் துறக்க நளன்களையே நாங்கள் நம்புவோம் விதியை வெல்லும் வித்தகத்தை நாங்களே அறிந்துள்ளோம் ஆகவே உடமைத் தேவதைகளே - இனி உங்களால் ஒன்றும் நடக்காது. எங்கள் பயணத்தை இடையில் தடுப்பவர் யாராயினும் அவர்களை எதிர்த்து நின்று எதிர்க்கும் போதே அவர்கள் பலத்தில் பாதியை பெற்று விடும் வல்லமை எங்கள் வாலிகளுக்கு உண்டு. எங்கள் வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் உங்கள் சுயசரிதைகளிலும் அரச பீடங்களிலும் எங்கள் உடலையும் உள்ளங்களையும் நீங்கள் நசுக்கிப் பிழிந்தபோதே, எங்கள் கல்வியை எங்கள் ஆற்றலை நாங்கள் கற்றுக் கொண்டோம் இனி உங்களிடம் கற்பதற்கு மடமையைத்தவிர இறுமாப்பைத்தவிர எதுவுமே இல்லை ஆகவே இறுதியாக உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் உங்களது உதவியில்லாமலேயே வரலாற்று பாரத்தை எங்கள் மேல் ஏற்றிக் கொண்டு எடுத்துச் செல்ல நாங்கள் தயாராகிவிட்டோம். நீங்கள் ஒத்துழைக்கிறீர்களா அல்லது ஒதுங்கிக் கொள்கிறீர்களா ஒதுக்கப்படப் போகிறீர்களா அல்லது ஒழிக்கப்படப்போகிறீர்களா தீர்மானித்துக் கொள்ளுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஆயுதங்களை உங்களிடம் ஒப்படைத்தோம் அப்போது எங்கள் தோட்டம் துறவுகளை எங்களது தொழிற்கூடங்களை உங்களுடையதாக நீங்களே எழுதி வைத்துக் கொண்டீர்கள் எங்களை உங்கள் பண்ணைகளில், வீடுகளில், அடிமையாக்கி உழ வைத்தீர்கள் எங்களது முன்னோர் தங்கள் உரிமைகளை தங்களது சொத்துச் சுதந்திரங்களை உங்களுக்கு எழுதித் தந்ததாக பொய்க் கையெழுத்திட்டப் பத்திரங்களை இன்றுவரை எடுத்தெடுத்துக் காட்டுகிறீர்கள் நீங்கள் வகுத்த உங்களது வாழ்வின் எல்லைக்குள் நாங்கள் கட்டுப்படாமலே திணறி வெளியேறும் போதெல்லாம், எங்கள் அடிமைச் சாசனத்தில் புதிய விதிகளைச் சேர்த்துக் கொண்டு அவ்விதிகளை ஆயுதங்களைக் கொண்டு இரும்புச் சட்டமாக்கிக் கொள்கிறீர்கள். நாங்கள் எங்களது வீடுகளிலிருந்தே வெளியேற்றப்பட்டு – பின்னர் உங்களின் ஆணைக்குட்பட்டு எங்கள் கைகளால் அமைத்துக் கொண்ட குடிசைகளில் தங்கி உங்கள் சமையலறைகளில் உங்கள் விருந்திற்கான உணவைத் தயாரித்தளிக்கின்றோம் எல்லாவற்றையும் உங்கள் சட்டப்படியே செய்கிறீர்கள் (எங்கள் தேசத்தில் - எங்கள் வீடுகளில் அடிமைகளாகத் தங்க நேர்ந்தமைக்கு எங்கள் விதியை வாழ்த்துகின்றோம்) எங்கள் வாழ்க்கையே எங்களைவிட்டு வெளியேற்றி. ஆயுதங்களாக - அழகிய பண்ணைகளாக மாடிகளாக - மலர்ப்பொன்நகைகளாக எங்களுக்கு எதிராக எங்கள் மீது ஏறிநின்று அழுத்தும் போது, எங்கள் உடல்களை மட்டுமே எங்கள் உயிர்க் கயிற்றில் கட்டி நாங்கள் இழுத்துச் செல்லும்போது, உங்களது சொத்து, சுதந்திரமலைகள் எங்கள் முதுகில் ஏறியமர்ந்து கொள்ளும்போது எத்தனை வேதனைகளை எங்களுக்கு ஏற்படுத்துகின்றீர்கள் சட்டப்படியே எங்கள் சேரிகள் மீது உங்கள் மாடிகள் ஏறிக் கொள்கின்றன. ஆம் எங்களுக்குச் சேரிகளை உற்பத்தி செய்வதன்மூலம் நீங்கள் மாடிவீட்டில் ஏறிக் கொள்கிறீர்கள் எங்களுக்குச் சேரிகள் இல்லாவிட்டால் உங்கள் மாடி வீடுகள் ஏற்படா என்பதால் சேரிகளை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்கள் இதனை நீங்கள் உங்கள் சட்டப்படி செய்கிறீர்கள் எங்களுக்கு கஞ்சியைத் தந்துவிட்டு நீங்கள் விருந்துண்கிறீர்கள் எங்களுக்குக் கஞ்சியைத் தராவிட்டால் உங்களுக்கு விருந்து கிட்டாது என்பதனால் நீங்கள் கஞ்சியை வார்க்கிறீர்கள் இதையும் சட்டப்படி செய்கிறீர்கள் எங்களுக்குக் கந்தலை வழங்கி விட்டு நீங்கள் பட்டுடைத் தரிக்கிறீர்கள் இதையும் சட்டப்படியே செய்கிறீர்கள் எங்களுக்கு ஆரம்பக் கல்வியை அறைகுறையாகத் தந்துவிட்டு உயர்கல்வியை உங்களுக்காகவே வைத்துக் கொள்கிறீர்கள் இதையும் சட்டப்படியே செய்கிறீர்கள் எங்களுக்கு நரகத்தைத் தந்துவிட்டு நீங்கள் சொர்க்க உலகத்தைப் படைத்துக் கொள்கிறீர்கள் வெளிப்பிரகாரத்தில் நாங்கள் தோப்புக்கரணம் போடும்போது மூலஸ்தானத்திலேயே தெய்வத்தின் திருவருளைப் பெற்று வருகிறீர்கள் இவற்றையெல்லாம் நீங்கள் சட்டப்படியே செய்கிறீர்கள் உங்கள் சட்டப்பட்டறையைத் திருத்தி திருத்தி விரிவாக அமைத்து அதில் எங்களைப் படுக்க விலைவைத்து உங்களது கனமான ஆயுதங்களைக் கொண்டு அடித்து அடித்து உங்களுக்கேற்ற உருவத்தை ஆக்கிக் கொள்ள இரண்டாயிரமாண்டுகளாக முயல்கிறீர்கள் (ஒரு வேள்வி முடிந்ததா?) உங்கள் சுரண்டல் சாட்டையால் ஏற்பட்ட புண்களைப் புறத்திலே ஆறவைக்க நீங்கள் அமைத்து வைத்த மருத்துவமனைகள் எங்கள் அகப்புண்களை ஆழமாய்க் கிளறிவிடுகின்றன. எங்களூரிற் சிலர் தங்களிடம் இன்னுமுள்ள இரண்டொரு மாடுகளையும் வானம் பார்த்த பூமியையும் தங்கள் எதிர்கால வாழ்வுக்காக உங்களிடம் அடகு வைத்து இறந்தகால இருட்டின் பலத்தால் எதிர்காலமும் இருண்டுவிட, உங்களது அதிகாரிகளால் மாடுகளும் பூமியும் பறிமுதல் செய்யப்படும்போது கடன் தந்த உங்களது சட்டத்திருத்தம் எங்களுக்கு விளம்பரமாகிறது சமூகத்தில் உங்களால் தாழ்த்தப்பட்டவர்களாகிய எங்களை, உங்களிடமே நிரூபித்துக் கொள்ள உங்களது அதிகார வர்க்கக் கூடங்களில் திசை தெரியாமல் சுற்றித் திரிந்து, உங்களது ஒரு கண்பார்வைக்காக எங்களை மேலும் தாழ்த்திக் கொண்டு வெளிவரும்போது இரண்டாயிரம் வருடக் கேவலங்கள் எங்கள் இதயத்தைப் பொடியாக்கி எங்களை மூடுகின்றன. உங்களது கல்விக் கூடங்களில் எங்கள் குழந்தைகளைச் சாகடித்து உங்களது மலட்டு இலட்சியங்களை எங்கள் குழந்தைகள் மீது முத்திரையிட நாங்கள் சேர்த்த போது எங்கள் குழந்தைகளின் திணறல்களை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து எங்கள் வர்க்கமே மலடாகிப் போய் விடுமா என்று குமுறுகிறோம் எங்களுக்காகவே கட்டப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்க இடம் தந்து உங்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் சுத்தம் சுகாதாரம் பற்றிய உங்கள் விதிகளை ஆராதனை செய்து உங்கள் நன்மைக்காகவே நாங்கள் குடியிருப்பது போல உணர்ந்து உங்களைப்போல் நாங்களும் நன்றாக மாறிவிட முடியாத போது உங்களால் விரட்டப்பட்டு வேறு வீடு பார்க்கும்போது எங்களுக்கு உலகமே, வாடகை வீடாகி விட்டதை உணர்கிறோம் எங்கள் தெருக்களில் விழுந்த பிணங்களைத் தின்று தின்று இடைவிடாது தன் மூக்கு வேர்த்துக் கொள்ளும் உங்களது கழுகு வணிகர்கள் தங்கள் விலை உயர்ந்த தராசுகளில் எங்களை ஏற்றி வைத்து தங்கள் பொருள்களுக்கு நாங்கள் ஈடில்லை என்று எங்களைத் தெருவில் தூக்கி எறியும் போது உங்கள் கைகளில் இருக்கும் விதிக் கயிற்றின் பலத்தைப் பார்க்கிறோம். எங்கள் தோழர்கள் உங்களது சுதந்திர நாட்டில் தம்மிடமிருந்து பறிக்கப்படும் உரிமைகளை மீட்டுக் கொள்வதற்காகத் தெருக்களில் திரண்டு வரும் போது உங்கள் வாழ்வுக்காக எங்களைக் கொண்டு உருவாக்கிய தெருக்களை நீங்களே வசப்படுத்திக் கொண்டு எங்கள் தோழர்களின் நடமாட்ட உரிமையைக் காவலர்களைக் கொண்டு தடுத்துப் பறிமுதல் செய்யும்போது தேசமே உங்களுக்குச் சொந்தம் சுதந்திரம் உங்களுக்குச் ’சொந்தம்’ என்று நாங்களும் உங்களுக்கே சொந்தம் நீங்கள் எழுதி வைத்துக் கொண்ட சட்டத்தை நேரிடையாகச் சந்திக்கின்றோம். எங்களைக் கேட்காமலேயே எங்களை உங்கள் சொத்துக்களில் பட்டியல் போட்டுக் கொண்ட உங்கள் வல்லமையைத் தரிசிக்கின்றோம். எங்களுக்காகவே கோடிப் பொருள்களைக் குவித்து வைத்துள்ள உங்கள் கடை வீதிகளின் வழியே கையில் காசில்லாமல் மனச்சூனியத்தில் விழிகள் பிதுங்க - நாங்கள் நடந்து செல்லும்போது உங்கள் பத்திரிகை முதலைகள் பஞ்சம் பட்டினி பற்றிக் கண்ணீர் வடிப்பதன் உண்மை புரிகிறது எங்கள் ஜாதகங்களை எடுத்துப் பார்த்து எதிர்காலச் சொர்க்கமே எங்களுக்குச் சொந்தம் என்று மேடைகளில் வீரமுழக்கமிட்டு எங்கள் காணிக்கைகளைப் பெற்று உயர் வர்க்கத் தேவதைக்குப் பூசைபோடுவதற்காக சட்டமன்றத்தைச் சரண் புகுந்தோம் என்று கூறித் தங்களுக்கு நிகழ்காலச் சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்ட காளிகோயிற் பூசாரிகளைப் பார்க்கும்போது எங்கள் ஏமாற்றத்தின் வரலாறு எங்கள் மனக்கண்ணில் மலையாய் நிமிர்கிறது. எங்கள் கலைஞர்களும் எழுத்தாளர்களும் வயிற்றுப் பசியைத் தீர்க்கத் திண்டாடிய போது அவர்களைக் கூட்டிப் போய் அவர்களின் சமுதாயக் கருவைச் சிதைத்து உங்கள் வர்க்கத்தின் மலட்டு இலட்சியங்களையே அவர்களின் ஆன்மாவில் திணிக்க உடன்படிக்கை செய்ய அவர்களும் உடன்பட்ட போது என்னைக் காப்பதற்காகவே என்னையும் கையெழுத்திட வைத்து ஏராளமான கடனை அந்நிய மனிதனிடம் என் முதலாளி வாங்கி இலாபம் வரவில்லை என்று கூலியைக் குறைத்தார். வட்டி செலுத்த வகையில்லையே என்று மேலும் கடன் வாங்கி வாங்கும் பணத்தைப் பத்திரமாக வைக்க ஒரு இரும்புப் பெட்டியும் அதைப் பாதுகாக்கக் காவலாளியும் ஏற்பாடு செய்து வட்டி செலுத்த வாங்கிய கடனும் போதவில்லை நான் உழைக்காமையே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறி என் உடலில் இரத்தத்தையும் விற்றுக்கொள்ள டிகிரி வாங்கி என்னை இரத்த வங்கிக்கு இழுத்துச் செல்கிறார். கர்ணனாக இருக்க முடிவு செய்து விட்டு என்னை பகவான் இழுத்துச் செல்வதே பாக்கியம் இல்லையா இதயத்தில் எரியும் செந்தீ எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று தொடைத் தசையை அரிந்துவிட்டு வேகமாக ஓடினால்தான் ஊரில் பற்றிய தீயை அணைக்க முடியுமாம். அறிவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் அவசரப்படாதீர்கள். ஊர்வலமாகத் திரண்டு வந்தால் முதலாளி. முன்னாலேயே காசு கொடுத்துவிடுகிறார் அவன் அயோக்கியன். எங்களால் அப்படிக் கொடுக்க முடியாது இறுதியில்தான் எங்களால் கொடுக்க முடியும். காரணம் நாங்கள் பாட்டாளி வர்க்கத்தலைவர்கள். ஊர்வலம் போவது எங்கள் தொழில் முன்னால் காசு கொடுப்பவன் முதலாளி இறுதியில் கொடுப்பவர் எங்கள் தலைவர். உங்கள் வயல் வெளிகளில், கடைத் தெருக்களில் பங்கு சந்தைகளில் நீங்கள் உருவாக்கிய போட்டிகளும் பொறாமைகளும் இறுமாப்புகளும், தற்பெருமைகளும், எங்கள் நண்பர்கள் எங்கள் தோழர்கள், உறவினர்க்குள்ளும் நுழைந்து, குத்தீட்டியாய் வெளிப்பட்டு எங்களைத் தாக்கி வேதனைப் படுத்தும் போது எரிதழல் ஏந்துவதைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும். கல்லும் முள்ளும் கவிதைகளும் (27-08-1981) கவிதை மலர்கள் காட்டு மலர்கள் கவிதையை எங்கிருந்து கண்டெடுக்கிறோம் கவிதைக்காக வாழமுடியுமா இல்லை. கவிதை மூலங்களை அடைத்துக் கொள்கிறாய் காட்சிகளை கேள்விகளைக் கவிதையாகவே காணமுடியுமா கவிதை பற்றிய நினைவு துறந்து காட்சிக்கு மனம் திறந்து வைத்தால் கவிதை வரும் குமிழியிட்டு. கூழாங்கல் கவிதையாகுமா? கூழங்கல்லைக் கையில் எடுத்து யாரும் கவிதை செய்வதில்லை அதன் உருட்சி உருவமைப்பு எங்கிருந்து உருண்டு உருண்டு எத்தனைக் காலமாய் இங்கு எப்படி வந்து சேர்ந்தது ஆயிரம் ஆண்டுகள் இது முரட்டுத்தனமாய் மோதிமோதி காயப்பட்டு காயமுண்டாக்கி இடித்து இடிபட்டு அப்புறம் நீரில் நெடுநாள் நனைந்து நிதானப்பட்டு இனி நீருக்கு அழகு செய்யலாமென்று நம் கைக்கு வந்தது கூழாங்கல் கவிதையாகிறதா எந்தக் கூழாங்கல்லும் எப்போதும் கவிதைதான். கோலிக்குண்டு கவிதையாகுமா? பையன் விளையாடுகிறான் விளையாட்டில் அது கோலிக்குண்டுதான் என்னமாய் - லாவகமாய் அடித்து எதிரிகளின் கோலிகளை இடித்துத் தள்ளுகிறது இதற்குள் ஏதோ மந்திரம் இருக்கிறது தவறுவதே இல்லை வீரன் கையில் இதுவும் ஒரு கருவி அற்புதம் அப்புறம் நிதானமாய்ப் பையன் பார்த்து மகிழ்கிறான் உடைபடும் போது - இவன் கண்ணில் ஒரு சொட்டுக்கண்ணீர் கோலிக்குண்டு கவிதையாகிவிட்டது. மலர்கள் கவிதையாகுமா? காட்டில் மலர்ந்த மலர்கள் கவிதைகள் தானா மனிதன் இல்லாத உலகில் மலர்கள் எப்படிக் கவிதையாகும் மனிதனும் வேண்டும் மலர்களும் வேண்டும் மனிதன் நடமாடாத காட்டில் மலர்கள் எப்படி இருக்கும் கன்னியர் மடத்தில் கன்னியாஸ்திரிகள் மாதிரி மனத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் மாதிரி வரலாற்றில் புதைந்துவிட்ட மனிதர்கள் மாதிரி மருத்துவமனையில் நாள் தோறும் பிறக்கும் குழந்தைகள் மாதிரி ஏழையர்களின் தோழமை மாதிரி எழுதப்படாது இதயத்தில் மட்டும் ஒலிக்கும் கவிதைகள் மாதிரி ஆற்றங்கரையில் ஆடும் நாணல்கள் மாதிரி கிளை பரப்பிக் காத்திருக்கும் மரங்கள் மாதிரி வீணையில் எழும்பும் இராகங்கள் மாதிரி. ஆமாம் இப்படித்தான் காட்டில் மலர்ந்த கவிதைகள். வெற்றிடம் உனக்குள் அந்த வெற்றிடத்தை எப்படி நிறைக்கிறாய்? ஒரு பக்கம் வெற்றிடமாய்த்தான் கிடக்கட்டும் என்றார் அந்த வெற்றிடத்தை நீ எதிர்ப்படும் போதெல்லாம் அந்த வெறுமை உன்னையே பார்க்கும்போது அதில் கரைகிறாயா கலங்குகிறாயா ஓடி விடுகிறாயா? வெற்றிடத்தில் சில மலர்களை முளைக்க விடு. வெற்றிடமும் இப்பொழுது நான் இல்லாமல்… என் அருகில் நீ இல்லை ஆனால் என் நினைவாக நீ இருப்பாய் உன் நினைவுகள் எனக்குள் படுகின்றன. நினைவுகளில் நான் குளிர்ந்து போகிறேன் எங்கெங்கோ சென்று விடுகிறாய் ஓய்வு நேரங்களில் முடிச்சிலிருந்து நான் விடுபடுவேனோ? ஒரு சொட்டுக் கண்ணீரில் முடிச்சை நனைக்கிறாய் எத்தனைக் காலம் இந்த முடிச்சோடு… என்னைத் தனியே அழவைக்கிறாய் எத்தனைக் காலம் நண்பனே நீ அழுகிறாய் என்னையும் நினைக்கிறாய் நன்றி. எதற்காக நாம் அழுகிறோம் கூடி நடந்தோம் நடந்த தடங்களை நினைத்தா நாம் நடந்து பதிந்த தடத்தில் என் தடயம் விட்டுப் போனதற்கா என்னை இழப்பதால் உன் விழியில் எதையாவது இழப்பதற்காகவா எதற்காக அழுகிறாய் அழ வைக்கிறாய் சேர்ந்து நடந்தோம் சில தடயங்களை விட்டு இனி முடியுமா நான் இல்லாமல் நீ நடக்க வேணும். கவிதைகள் எங்கிருந்து… கவிதையை வெளியில் தேடாதீர் அவரவர் வாழ்க்கைக்குள் இருப்பதுதான் கவிதை. உங்களுக்குள் இருக்கும் கவிதையைத்தான் தேடி அலைந்தும் குழப்பி - குழம்பியும் பிறர் கவிதையில் காண்கிறீர்கள். உங்களுக்குள் இதை வசப்படுத்தாமல் என்னதான் பேசுகிறீர் தேடுங்கள் உங்களுக்குள் கவிதை கிடைக்கும் கவிதையை தேடிச் சலிக்காதீர்கள் விடியலில் கருக்கலில் ஒரு சிற்றோசையில் கவிதை பூக்கும் - காத்திருங்கள். உங்களுக்கு வந்த கவிதையின் வேர்கள் - மூலங்கள் நட்சத்திரங்களில் இருந்து, யார் யாரோ செய்த நெடும் பயணத்திலிருந்து இளம் வயதில் - பள்ளி நாட்களில் நீங்கள் சுற்றித் திரிந்து வெட்டுக் கிளிகளை வேட்டையாடியதிலிருந்து தாய் உங்களை அணைத்ததிலிருந்து தந்தை உங்களை அடித்ததிலிருந்து வரலாற்று மூலைகளில் பதிந்திருந்த உங்கள் காலடிபட்டு சிலிர்க்கும் புள்ளியிலிருந்து உங்களுக்குள் முளைவிட்டுப் பூக்கும் ஒரு மலராய் கொத்தாய் கவிதை முளைக்கலாம் காத்திருந்து பயிர் செய்யுங்கள். வரலாறு புரிந்தால் வழிகள் தெரிந்தால் காட்டில் பறவைகளோடு ஆற்றங்கரையில் சுற்றியிருந்தால் உங்களை ஏமாற்றியவர்களை நீங்கள் ஏமாற்றாமல் எதிர்த்து நிற்காமல் இளகி, குளிர்ந்து இருந்தால் மனிதர்களை அவரவர் நிஜம் தேடி முகவரிகள் தேடி அவர்களுக்குள் மனிதம் தேடி காத்திருந்தால் எங்கோ சுற்றித் திரியும் . மனத்தினோடு பயணம் செய்தால்… நினைவுகள் குமிழியிடும் போது குனிந்து பார்த்து பார்த்துக் கொண்டே பரவசப்பட்டால் துயரங்களில், துடிப்புக்களில் வேதனையில், பெருமூச்சில் பாதைகள் விரிவது பாத்திருந்தால் கவிதைகள் உங்களுக்குள் கவிதை கவிதையாய்ப் பூக்கும். வாழ்க்கை வீணாகி விட்டதா? கவிதைக்கு உரம் போடலாம் அர்த்தம் கொடு. அலைகிறதா வாழ்க்கை? கவிதைகளுள் உட்காரவைத்து கவிதைகள் பேசச் சொல்லலாம். பழங்கதைகள், பாட்டி கதைகள் விடாது தொடர்கின்றனவா பழமொழிகள், பாடல்கள் மறந்து விடவில்லைதானே எல்லாம் கவிதைக்குள் இணைந்து வரும் - கவிதையாய் கனவுகளில் கவிதை வரும். கற்பனையில் வெடித்து வரும். நிதானமாய் நடந்து வந்தால் நிற்கும் இடத்திலும் கவிதை முளைக்கும் படரும் எல்லாவற்றுக்கும் அடியில் நீரோட்டமாய், வாழ்க்கை ஓட வேண்டும். ஆறு செழித்திருந்தால் கரையில் கவிதைப் பயிர் செழிக்கும். போதிமரம் புத்தனைத் தேடிப் போனேன். போதி மரத்தடியில் கண்டேன். கண்களை ஒரு கனம் திறந்து மூடிக் கொண்டு கை காட்டினார். நிற்காதே - இன்னொரு மரம் தேடிச்செல் உனக்கு ஞானம் வேறு மரத்தடியில் கிடைக்கலாம் - கிட்டாதிருக்கலாம். எது உன் பிரச்சனை என் ஞானம் கலைக்காதே. உனக்காக நான் தியானிக்க முடியாது. ஆமாம் எங்கே என் மரம் தலையில்லாது - கை நீட்டி நிற்பது என் மரம் தானா? பார்வையாளன் நான் பார்வையாளன் பார்வையாளனுக்கு உலகம் பார்க்கக் கிடைப்பதோடு சரி பார்த்துக் கொள்ளலாம் அழகாக - இனிமையாக காசு கொடுத்து வாங்கி குறைந்த விலையில் அறிந்து கொள்ளலாம் அதிகம் கொடுத்துப் பார்த்துக் களிக்கலாம். கொடுத்த காசு - பார்த்த நேரம் பெருமைப்பட்டுப் பேசிக் கொள்ளலாம் நீ நுகர்வோன் நீயும் நுகரப்படும் பொருள் நீ பண்டம் விற்க, வாங்கப்படுபவன். உலகப் பரப்பில் நீ ஒரு சடப்பொருள் உலகம் உனக்கில்லை. நீ பார்வையாளன் நீ பார்க்கப்படுகிறாய். படுபொருள் - செயப்படுபொருள். உன்னை நீ அழகுபடுத்திக் கொள்கிறாய் நீ படிக்கிறாய் - சுற்றி வருகிறாய் அனுபவம் சேகரிக்கிறாய் நண்பர்கள் - புத்தகம் சேர்க்கிறாய் உனது விலை அதிகம். உனது பெருமை அதிகம். நீ பொன்போல - வைரம் போல உனது படம் அழகிய பொருள் உன் கையெழுத்தும் பெருமைக்குரியது. நீ நின்றால், எழுந்தால் அழகாகச் செய்கிறாய். காதலிகள் உனக்கு வேண்டும். நீ சங்கீதம் கேட்கிறாய். எல்லாவற்றையும் நீ சம்பாதிக்கிறாய் உன் நட்பு கிடைப்பதற்கரியது. உன் விலை அதிகம். பொன் மாதிரி - வைரம் மாதிரி. நீ தயாரிக்கப் படுகிறாய் . சந்தைக்காக - சரக்காக. நீ அனுபவங்களின் ஆற்றில் இறங்கமாட்டாய் நிருபர் மாதிரி கேள்வி கேட்கிறாய் ஆழம் என்றா அகலம் என்றா குளிர் எத்தனை டிகிரி? மீன்கள் உண்டா திமிங்கலம்? முதல் முறையா; முப்பதாம் தடவையா? எத்தனைமுறை ஆற்றில் இறங்கினீர் எல்லாவற்றையும் குறித்துக் கொள்கிறாய் இனி ஆற்று வெள்ளம் பற்றி ஆற்றில் மூழ்கி இறந்தவர் பற்றி உனக்குக் கதை எழுத முடியும். மலையின் வரைபடங்கள் போதும் துருவங்களும் - பனிப்பாறைகளும் படத்தில் பார்த்திருக்கிறாய் வயல், எரிமலை, எல்லாம் பார்க்கிறாய் இனி என்ன? நீ வாழ்ந்தாயிற்று நீ பெரிய கலைஞன் - அறிவாளி. உன்புகழ் பாடி - உய்வோம் நாங்கள். எங்களை அருகில் நிற்க வைத்து கதை சொல்லுகிறாய் கவிதை சொல்கிறாய் புரியாவிட்டால் கேட்கிறாய் புளகாங்கிதப்பட்டு விரிவுரை செய்கிறாய் உந்தன் பிறப்பால் நாங்கள் புனிதப்பட்டோம். உன் சிந்தனைகள் அருவிகள் மாதிரி. குளித்துக் கரையேறாத கோபிகள் நாங்கள் நீ பிறந்தது எங்கள் மொழிக்குப் பெருமை. உன்னால் தமிழ் உயர்ந்தது உன் பார்வை பட்டவை துலங்கும் நீ கூறுவது திருவாசகம் எங்களுக்கு நீயே இறைவன் நீயே சிற்பி, மேத்தா - வைரமுத்து அறிஞர், மேதை, கலைஞர், கவிஞர், தாஜ்மகால், பெரிய கோவில், எல்லாமும். வராதீர் வராதீர் என்னை வேடிக்கை பார்க்க நிதானமாய் எனக்கு என்ன என்று கேட்டு உங்கள் கவலையை வெளியிட்டு என்னிடம் ஒரு கதை கேட்டு வராதீர் உங்களுக்கு நோய் போகவில்லை எனக்கு இது பிரச்னை இல்லை. எனக்கு ஏதாவது உலகச் செய்தி இலக்கிய வாழ்க்கை என்று ஏதாவது ஒரு மணி நேரம் கற்றுக் கொடுங்கள் அதில் தான் உங்கள் கவலையை நான் புரிந்து கொள்ளமுடியும். கற்றுக் கொடுக்க வருக என்றால் வரமாட்டீர்கள் - எனக்குத் தெரியும். இனி வரமாட்டீர் - நன்றி. நாடுவாழ - நாம் வாழ மூளைக்கு வேலை கொடுக்காதே அரை குறையாய்க் கற்றுக் கொடு. அடி உதை, காதைத் திருகு. படிப்பு வராது என்று குத்திப் பேசு. வேலை செய்யப் போ எனச் சொல்லு பள்ளிக் கல்வி முடிந்து போச்சு. கைகால் மட்டும் உண்டு. உழைக்க - உற்பத்தி பெருக உழைக்க வேண்டும். வேலையில் ஒழுங்கு வேண்டும். 8 மணி நேரம் எதுவும் பேசாமல் உழைக்க வேண்டும். சட்டம் அமைதி முக்கியம் நாடு வாழ - நன்றாக உழை உன் எதிர்காலம் - அரசுப் பொறுப்பில் கவலை கொள்ளாதே குரல் உயர்த்தாதே கலவரம் செய்யாதே. குடும்பம், மனைவி, குழந்தை, முக்கியம் கல்யாணம், சீர், கோயில்குளம் இவையும் முக்கியம். தீபாவளி, பொங்கல், காபி பார். முக்கியம். மதம் பெருமை - தேர்தல் பெருமை எல்லாமே முக்கியம். நாட்டில் நல்ல குடிமகனாய் நீ வாழ ஐந்தாம் வகுப்பு வரை படிப்பு அப்புறம் தொழிற்சாலை குடும்பம், மனைவி, கோயில் இவை போதும் நாடு நன்றாக இருக்க எதிர்காலம் வளமாக இருக்க இவை போதும். வாத்தியார், அரசு, மனைவி, சட்டம் எல்லாம் உனக்காக, நாட்டுக்காக, வேலை செய் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பலன் உனக்கில்லை. யாருக்கோ இருந்து போகட்டும் உனக்கு வராததைப் பற்றிக் கவலை கொள்ளாதே இருப்பதில் திருப்தி கொள் எட்டு மணி நேரம் பாடுபடு அதன்பின் ஓய்வுகொள் சினிமா பார்க்கலாம் பூங்கா போய் வரலாம் வாரம் ஒருமுறை. சென்னை, மைசூர், பார்த்து வரலாம் குழந்தைகளோடு, மனைவியோடு கவலை விட்டு. திறமை மிகுதியா பலம் அதிகம் இருக்கிறதா ஓய்வு மிகுதியா குழந்தைகளுக்குப் பாடம் சொல் வீட்டு வேலை செய் பத்திரிக்கை படி தினத்தந்தி, மாலை முரசு மாதம் ஒரு முறை முடிவெட்டு கையில் நகம் சேர விடாதே சாக்கடையைச் சுத்தம் செய் தண்ணீர் குடி ஜிம் போய்வா வேறு என்ன வேண்டும். மழை பெய்ய வில்லையா கவலை உனக்கு ஏன்? உணவுக் கிடங்கில் போதிய அளவு இருக்கிறது ரேசன் அட்டையைப் பத்திரமாய் வை. மரம் நடு. ஒரு மரம் போதும் மழை வரலாம். இல்லை என்றாலும் செயற்கை மழைக்கு வழி இருக்கிறது. உலகம் உருண்டைதான் கவலைப்படாதே இராணுவம் இருக்கிறது நாட்டைக் காக்கும் இமயமலை - பத்திரமாயிருக்கிறது காட்சிகள் மாறும். கண்டு கொண்டாடு. நீ படித்தது நல்லது. பத்திரிகை படிக்க அரசியல் தெரிய வேலை செய்ய நாடு அமைதியாய் இருக்க. கூட்டத்துக்கு பல முகம், பல கைகள் யாரோடு பேச என்ன பேச கூட்டம் பார்த்து நிற்கனும் வாய் வழியே காற்றும் கத்தும் வழக்காடனும் வார்த்தைக் கொடி கட்டணும் பல கை ஒரு சேரக் கொட்டும் பயிற்சி முடிந்தது மேடை விட்டு இறங்கலாம் வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், ‘ஜனகனமண’ பாடுவோம் சங்கே முழங்கு… சாப்பிட நேரமாச்சு பஸ்ஸைப் பிடி பத்து மணிக்கு வீடு போகணும். பார்வையாளன் நான் பார்வையாளன் எனக்குள் என்றோ விழுந்த பார்வையிலிருந்து உலகைப் பார்க்கிறேன் என் அனுபவமே எனக்குப் பார்வை. என் பார்வை வேறு ஒருவர்க்கு இல்லை ஆகவே எனக்கு வாய்த்தது தனி உலகம். என் பார்வைதான் எனக்கு உலகைத் தருகிறது பார்வையின் வழியே வருவதுதான் உலகம். இன்னொருவர் உலகை நான் படைக்க முடியாது எனது உலகைப் பிறர்க்குத் தரவும் முடியாது. எனது பார்வையை நான் கழற்றிப் பார்த்துக் கொள்ளவில்லை. கழற்றிப் பார்த்துக் கொண்டால் மீண்டும் அதையே பூட்ட வேண்டும் என் விருப்பத்திற்கேற்ப உலகைப் படைப்பேன் நான் மகிழ்ச்சியாய் இருந்தால் என் உலகமும் மகிழ்ந்திருக்கும். எனக்குக் கவலை என்றால் உலகமும் கவலைப்படும் எனக்குள் இருப்பதைத்தான் வெளியில் பார்க்கிறேன் புறஉலகம் பொய் அகமே - மெய் அகம் நான் படைத்தது அன்று எனக்குத் தெரியாத முன்பே எனக்குள் வந்தது. கடவுள் கொடுத்தார் எனச் சொல்லமாட்டேன் நான் படைத்துக் கொண்ட பகுதியும் உண்டு கவிதை எழுத வசதியானது இந்த அக உலகம் பறவைகள் என் அகத்தில் பாடும் பறந்து திரியும் உணவு கொடுத்து உடலைக் காத்தால் பறவைகள் எந்நேரமும் பாடுவதுண்டு. என் கைக்குள் வருவது வானம் கடலும் என் கண்ணுக்குள் அடங்கும் சூரியன் நிலவு எல்லாம் என் படைப்பு நான் பிரம்மா - நான் நான் நான். நீ. நீ. உடலைத் தந்தவர் பெற்றோர் அகத்தை யாரும் தருவதில்லை. என் அகத்தை உருமாற்ற நீங்கள் முயற்சி செய்யலாம். முயன்றால் முடியாதது இது ஒன்றுதான் சிறையில் இருக்கும் போதும் என் சிந்தையை அழிக்க முடியாது யானை, புலி, சிங்கம் என் உடலை அழிக்கலாம். அகம் அழியாது நானே அருச்சுணன் நானே கண்ணன் அருச்சுணனுக்கு நான் உரைப்பது கீதை நானே பாரதி, பாரதிதாசனும். நான் இருந்தால்தான் உலகம் இருக்கும் சொல்வது சொன்னேன் சுகமாயிருங்கள் தூங்கப் போகிறேன் உலகம், ஓய்வெடுக்க நான் பார்வையாளன் நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன் உள்வாங்கிக் கொள்கிறேன் வீடு, தெரு, சாலை, பேருந்து நிலையம் இரயில் நிலையம் - எங்கும் பார்க்கிறேன் அலுவலகம், பட்டறைகள், தொழிற்சாலைகள் கடைத்தெரு, கோயில்கள் காட்சிச் சாலைகள் எல்லாமே பார்க்கிறேன் திரைப்படம், தொலைக்காட்சி எல்லாமே பார்க்கிறேன் ஆடவர் மகளிர் கிராமம், நகரம் எல்லாரையும் என் பார்வைக்குள் கொண்டு வருகிறேன் மனிதர்களின் துன்பங்கள் இன்பங்கள் சாதனைகள் சலிப்புகள் கலைஞர் நெசவாளர் தச்சர் கொல்லர் எல்லோரோடும் பழகுகிறேன் எல்லோரையும் கவர்ந்தது கவிதைகள் கொண்டு வருகிறேன் எல்லோரிடத்திலும் எனக்கு நேசம் உண்டு. பார்த்தவர் பழகியவர் மறவேன் நான். கற்பனையிலிருந்து நான் கதை பண்ணுவதில்லை என் கவிதை அவர்களுக்காகத்தான் என் புத்தகங்கள் அவர்களுக்கே காணிக்கை. நல்லவர்களைப் போற்றுகிறேன். தீயவர்களைக் கண்டிக்கிறேன் என்னால் பார்வை பெறுபவர் பலர் தீமையை அழிக்கத் துணையாகிறேன். எல்லாவற்றையும் இதயத்தில் தேக்கி பெரிதும் புலம்பி வேதனைப்பட்டு கதையாய், கற்பனையாய் வெளிப்படுத்துகிறேன் உலகிற்கு நான் ஒளி தருகிறேன் ஏழைகள் துயரில் சேர்ந்திருக்கிறேன் சாதனையாளரை சமைத்திருக்கிறேன் உலகம் பொய் என எழுத மாட்டேன் எனது கதைகளில் உலகைப் பார்க்கலாம் உலகைப் பார்க்க என் கதைகள் உதவும் நான் சுற்றிய தொலைவுகள் உங்களுக்கு இல்லை நான் சிந்தித்தேன் என் சிந்தனை உங்களுக்குச் சிரமம் வேண்டாம் பரிசுகள் வேண்டாம் - அவை பாரமாய் விடும் சோர்வு நீங்க - உங்கள் சொற்கள் போதும் எனக்குள் நீங்கள் எல்லாக் காலமும் பார்க்கலாம் மரபை நான் போற்றி வைக்கிறேன் தரணியில் உங்களுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன். நீங்கள் பார்க்கும் நிலை இனி குறையும் உங்கள் நோய்க்கு மருந்தும் ஆன்மாவிற்கு அமுதமும் தருவேன் இனி நோய்கள் இல்லை ஆன்மா சுகப்படும் வாழ்க. நிலவு பொங்குகிறது தாமரை சிரிக்கிறது எல்லாம் கவிதையில் கற்பனையில். கற்பனை இல்லையென்றால் நான் எங்கே இருப்பேன்? எப்படி உருவாகியிருப்பேன் நான் பாதி உருவானது என் கற்பனையில். 1-4-1981 நவீனம் ஜன்னல் வழியே தெருவைப் பார்த்து நிற்கிறேன் ஜன்னல் கம்பிகள் இடையில் ஒரு தென்னை மரம் குறுக்கும் நெடுக்கும் ஓடும் மரக்கிளைகள் இலைகள் விடும் இடைவெளியில் மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும் பல கோணங்களில் அவசரமாக - மெதுவாக பந்தலில் மெல்ல நடையிடும் சேவல் டீக்கடை தெருமுக்கு சைக்கிள் கடை மணி ஒலி இப்படி ஒரு நவீன ஓவியம் இவை மெல்ல மெல்ல எனக்குள் நிறையும் மனத்திற்குள் ஒத்த வடிவத்தில் ஒழுங்கு பெறுமுன் இப்படியே கருக்கொள்ளுமுன் கலைக்கிறேன் கலைந்த ஓவியங்கள் நவீன பாணியில் ஒன்றா இரண்டா வாழ்க்கையும் இப்படி. 1-4-1981 காலங்கள் மாறும் வேப்பம் பூ நறுமணம் மனத்தைக் கிறங்க வைக்கிறது மரங்களில் புதிய தளிர்கள் பச்சை ஒளியில் பளபளக்கின்றன. மாரியம்மன் நோன்புக்காக கோயில்கள் தோறும் கொட்டு முழக்கங்கள் இளவேனிற் காலத்தோடு வந்து சேர்கிறது. முதுவேனிலும் நிலத்தில் எங்கும் வறட்சி - எனினும் இயற்கையின் பயணம் தொடர்கிறது. காலங்கள் மயங்குகின்றன எதுவும் நிற்பதில்லை மனத்திலும் இவைபட்டு மயக்கிக் கழிகின்றன குயிலின் கூவுதலுக்கும் மே மலர்களின் வரவுக்கும் காத்திருக்கிறது மனம் ஒளிக்கதிர்கள் எல்லாத் திசைகளிலும் பாய்கின்றன கரிக்கட்டைகள் தம் விதி நோகும் வைரங்களாக என்று மாறும்? புதியதோர் உலகம் புதியதோர் உலகம் செய்வோம் பொய்மை சூது போட்டி வஞ்சகம் அடிமைத்தனம் ஆதிக்கம் சிறைகள் கட்டிடங்கள் துப்பாக்கி பீரங்கிகள் வெடிகுண்டுகள் விமானங்கள் இவற்றை நொறுக்கி இவற்றுக்குள் உறைந்து கிடக்கும் அளவற்ற சக்திகளை விடுவித்துப் பாய விடுவதன் மூலம் புதியதோர் உலகம் செய்வோம். ஆதிமனிதன் ஆதிமனிதன் நமக்குள் ஆயிரம் குகைகளில் ஒடுங்கிக் கிடக்கிறான் ஓங்காரம் இடுகிறான் ஆத்திரம் கொண்டு தகர்க்கவும் செய்கிறான் கேட்பன தந்து நமக்குள்ளிருந்து இவனை விடுதலை செய்தால் எல்லோருக்கும் இவன் தருவான் விடுதலை துப்பாக்கி - சட்டம் சிறைச்சாலை கொண்டு இவனைச் சிறைப்படுத்தினால் இவற்றுள்ளும் நம்மை இவன் சிறைப்படுத்துவான் மார்க்ஸ் அழகாய்த்தான் சொன்னார் பிறர்க்கு அடிமைச் சங்கிலிகளைத் தயாரிப்பவர்கள் தாம் விடுதலை பெற முடியாது. நான் அந்நியன் கண்ணாடி கூட அந்நியமாகிறது எனது உருவத்தைத் தான் ஏன் பிரதிபலிக்க வேண்டும் காற்று தனக்காக வீசிக் கொள்கிறது நான் உயிர் வாழ்கிறேன் தண்ணீரைக் குடிக்கிறேன் அளவு குறையாமல் வெளியேற்றுகிறேன் என்னைப் பெற என் தாய் ஏன் சிரமப்பட்டாள் என்னைப்பற்றி இன்னொருவர் ஏன் சிந்திக்க வேண்டும் நான் ஏன் நானாக இருக்க வேண்டும். எல்லாமே சில கோடுகளில் வெளியேறிவிடலாம். புள்ளியும் கூட இங்கே நிலைத்திருக்க வேண்டாம். கொஞ்சம் காற்றோடு மழை அடித்து நாலுபேர் சேர்ந்த கூட்டத்தை கலைக்கச் செய்கிறது. உறவுக்கு என்னதான் தேவை ஒன்றோடு ஏன் இன்னொன்று சேரவேண்டும். வெட்டவெளியேதும் வீடும் உறவும் எதற்கு? அவரவர் கைகளில்! இறுக்கத்தோடு உட்கார்ந்து விதிகள் கடைப்பிடித்து உருவாக்கும் கவிதை சிறை வைக்கிறது என்னை என் சுதந்திரத்தை ஏன் நான் இழக்க வேண்டும். கொஞ்சம் உலவி வரும் கால்களையும் ஒரு சுற்று வெட்ட வெளியையும் ஏன் நான் இழக்க வேண்டும். யாருக்கு நான் சுருக்கு வைக்க கவிதைக் கயிற்றைப் பின்னுகிறேன். அவரவர் கைகளில் சுதந்திரமும் சுருக்குக் கயிறும் கொஞ்சம் அவன் முரடன் உன்னை வேலை வாங்குகிறான் அவனிடம் சொல் தராசுத் தட்டைக் கீழே வை கொஞ்சம் ரசி ரசிக்கும் போதே உன் தரம் உயரும் தராசு - தானே இயங்கும் இறுக்கிப் பிடிக்காதே தராசு இயங்காது வானம்பாடிகளால்தான் கவிதையா? குளக்கரையில் நிம்மதியாக அமர்ந்துகொள் நீர்ப்பரப்பில் துள்ளிக் குதிக்கும் மீனைக் காட்சியில் தருவது கவிதை. கற்பனையிலிருந்து உறிஞ்சிக் கொப்பளிப்பது கவிதையாகுமா? தானே பொங்கும் ஊற்றைத் திறந்து விடுவது கவிதை வார்த்தைகள் அடித்துச் சென்றன. இதயம் குவிந்து எப்படித் தாமரை பூக்கும்? கண்ணை மூடினால் ஒளிக்கோடுகள் வண்ணக் கலவைகள் தோற்றங்கள் ஆறாக வெள்ளமாக நிச்சயம் நான் கலைஞன் தூரிகையில் வார்த்தெடுக்க ஓவியம் நான் பழகவில்லை என்றாலும் நான் ஓவியன்… 24-03-1981 கிளைகள் பகுதி - 1 கவிதையின் அழகியல் 1. நீ வரைந்த கோட்டில் நான் நடக்கவில்லை. நீ வரைந்த கோலங்களை நான் ரசிக்கவில்லை. கோபித்துக் கொள்கிறாய். நான் நடக்கும் கோடுகளை நீ பார்க்கவில்லை. நான் இடும் கோலங்களை நீ பார்க்கவில்லை. உன் கோடுகளை நான் மிதித்தேனா என் கோடுகளையும் நீ மிதிக்கக் கூடாது இருவரும் அவரவர் கோட்டிற்குள் இருவர்க்கும் தனித்தனித் தீவுகள். 2. இது சாத்தியமில்லை. உன் வீட்டுக்கு என்னை அழைக்கிறாய். நீ வளர்த்த செடிகளைக் காட்டுகிறாய். செடிகளைப் பார்க்க எனக்குத் தெரியும். நீ வளர்க்கும் செடிகளில் நீ தெரிகிறாய். செடிகளிலும் மலர்களிலும் உன் கோடுகளிலும் கோலங்களிலும் செடிகளை நேசிக்கும் நான் உன்னையும் உன் கோடுகளையும் கோலங்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் காத்திருக்கலாம் என் வீட்டுக்கு நீ எப்போது வருகிறாய் 3. வரும் போது சில மலர்களோடு வருகிறாய் சில கனிகளோடும். உன்னில் சுரக்கும் அன்பை - எப்படிச் சுரந்தது இந்த அன்பு உன் அன்பை நான் மறுப்பேனா உன் கண்களில் வெளிப்படும் அன்பில் நான் மெல்லக் கரைகிறேன். சில செடிகளின் வித்துக்களையும் நீ கொண்டு வந்தால் நிச்சயம் அவற்றை என் வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்ப்பேன் அன்பின் நினைவாக அன்பின் வளர்ச்சியாக. 4 இனி உன் கோடுகளில் நடக்க நான் பழகுவேன் உன் கோலங்களையும் கற்றுக் கொள்வேன் இயலாத போது கோபித்துக் கொள்ளாதே. இன்னொரு நாள் என் வீட்டுச் செடிகளோடு. நான் வருவேன் வாசலை மிதிக்கும் போதே மலர்ந்து வரும் உன் புன்னகைக்காக மறுபடியும் உன் வீட்டுச் செடிகளைப் பார்ப்பதற்காக உன் அன்புக்காகவும் 5. உன்னோடு பழகி நான் நன்றாகக் கோலமிடுகிறேன் கோடுகளில் நடக்கிறேன் செடிகளை வளர்க்கிறேன் என்னுள் நீ சிரிக்கிறாய் புன்னகையோடும் புது ஒளியோடும். நான் இனி எங்கே சென்றாலும் எது செய்தாலும் என்னோடு வரும் உன் செடிகளும் புன்னகையும் நான் நான் மட்டுமா நீயும் உன் செடிகளும் புன்னகையும்தான். இப்போது என் செடிகளில் உனது மலர்களும் இனி எல்லாம் நம் செடியின் மலர்கள். 6. செடிகளும் மலர்களும் நமக்குச் சொந்தம் நம் காவலிலா செடிகள் செடிகளுக்கு நாம் அதிகாரிகளா நம் அதிகாரத்திலா செடிகள் வளர்கின்றன தண்ணீர் ஊற்றுவது நாம் தவிர்ப்பவை அவை நாம்தான் தளிர்த்தோம் என்று எப்படி நினைத்தோம் நாம்தான் பூத்தோமா அட, முட்டாள்தனமே எங்கே கற்றோம் இந்த மூடம் செடிகளோடு நாம் மலர்களோடு நாம் செடிகளின் வாழ்வை நாம் கசக்கலாமா 7 செடிக்குச் சுதந்திரம் கொடுத்தேன் தப்பு - செடியின் சுதந்திரத்தை நான் யார் கொடுக்க? தன் சுதந்திரத்தில் செடி தழைக்கிறது பூக்கிறது அப்பா செடி இப்போது அழகாக மேன் மேலும் அழகாகத் தழைக்கிறது பூக்கிறது. என் விழுதுகள் இப்போது அதிகம் காற்றும் வெளிச்சமும் நண்பர்களும் உறவு நான் நானாக உழைக்கிறேன் என் வீட்டில் என் குழந்தைகள் எல்லோரும் இசையோடு, அழகோடு 8. நான் நீ மலர்கள், குழந்தைகள் வீடு, தோட்டம், செடிகள் காற்று வெளிச்சம், வானம் எல்லோரும் சேர்ந்து பாடுவோம் எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு சங்கே முழங்கு இனி நாம் நிறையப் பயிரிடுவோம் செடிகளை - மலர்களை - நட்பை அழகை - உறவுகளை உலகமும் நம்மோடு வானமும் நம்மோடு. சமூகச் சூழல் கவிதைகள் 9. எலி வரும் பூனை வரும் வரட்டும். வந்து ஓரமாய் எங்காவது இருந்து நமக்குத் தெரியாமல் ஏதாவது கடித்து, குடித்து விட்டு எங்கோ இருக்கட்டும். எலிக்குத் தெரியாது நம் திட்டம். பூனைக்குப் பால் வைக்கிறோம். எலி நம் திட்டத்தையும் மீறுகிறது. பூனை நம் குழந்தைகளின் பாலையும் குடிக்கிறது. யோசனை என்ன செய்யலாம் நாம் எலிகளின் பூனைகளின் உலகத்திலும்தான் வாழ்கிறோம். தலைவலியும் சேர்ந்தே நமது வாழ்க்கை. 10 எலி பரவாயில்லை பெருச்சாளிகள்? பூனை பரவாயில்லை புலிகள் ? கரடிகள்? நரிகள் அப்புறம், வியாபாரிகள், அதிகாரிகள்? அரசியல் வாதிகள் சட்டங்கள், துப்பாக்கிகள் பீரங்கிகள், ராக்கெட்டுகள் சிறைக் கொடுமைகள் ஒதுங்கியிருக்க முடியுமா ஒத்திருக்கவும் முடியுமா நம் உலகை இவை என்ன செய்கின்றன நம் அன்பை , மலர்களை, உறவுகளை நாம் இனி அமைதியாய், அழகாய் வாழ முடியுமா வாழ்வதற்கு அல்ல, உயிர்பிழைக்க 11 என் செடிகளைப் பார்க்கிறேன் அவை வாடி வருகின்றன. மலர்களும் சோகத்தோடு காற்று தடுமாறுகிறது. எனக்கு அவை ஆறுதல் கூறுகின்றன. சொற்களில் பனிநீர் சோகம் வீட்டிலும் சோகம் கப்பியிருக்கிறது பாடல்கள் கிழிந்து தொங்குகின்றன. என்ன செய்யலாம் மறைந்து வாழ்வோமா மடிந்து விடலாமா ஒரு கிளை ஒடியலாம் ஒரு மலர் உதிரலாம் எல்லாக் கிளைகளும் எல்லாச் செடிகளும் உறவுகளும் என் கையில் உலகம் மறையுமா கதிரவனைக் கை மறைப்பதா 12 எலிகளால்தான் வேர்கள் பிடுங்கப்படுகின்றன இப்போது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் உர விங்கள் தண்ணீரில் கலந்து வரும் நச்சுக்கள் காற்றில் கலக்கும் புகைகள். செடிகள் கதறுகின்றன காற்று கதறுகிறது வானம் சோகத்திரை வீடு துக்கம் கொள்கிறது என் கைகள் பதறுகின்றன மூச்சு திணறுகிறது பார்வை மங்குகிறது எங்கெங்கோ இரைச்சல், பேரொலி வெடிப்புகள், அதிர்வுகள், சாவு என் செடிகள் ? என் மலர்கள்? என் பாடல்கள்? 13 அழுதால் நிம்மதி அது பயனில்லை என்னை என் செடிகளை விட்டு ஓடச் செய்கிறது மாயப்பிசாசு உலகம் நான் அரசியல் நடத்தலாமா செவிப்பறை கிழிக்கலாமா ஊர்வலம் நடத்தலாமா வேறு வழியில்லை . நடந்தேன், கத்தினேன் கொடி பிடித்தேன் நடத்தப்பட்டேன் கத்த வைக்கப்பட்டேன் தொண்டை கிழிகிறது நடை தளர்கிறது என் மேலே சிலர் என் கொடிகளைப் பற்றி ஏறுகிறார்கள் என் குரலில் அவர்களைப் பாட வைக்கின்றனர். என்னை எத்தனாவது முறை இழக்கிறேன் 14 பசுமையான செடிகள் வண்ண வண்ண மலர்கள் சட்டம் தீட்டுகிறேன் எதிர்காலத்தைப் பொன்னுலகாய்க் கனவு காண்கிறேன். எல்லாம் ஒளிமயம் என்று கவிதை புனைகிறேன். இசை ஒலிகளை ஒலிக்கட்டங்களை வளைத்து வளைத்துப் பின்னி மேலேறுகிறேன். அழகுகளில் கற்பனைகளில் கனவுகளில் என்னை மறைத்துக் கொள்கிறேன் உலகத்தை எனக்கு வெளியில் வைக்கிறேன் அங்கிருந்து சிறிது காற்று, தண்ணீர், உணவு எடுத்துக் கொள்கிறேன். நான் திருடனா நான் அந்நியன். 15 நான் இல்லை என் உலகத்தில் அவர்கள் சுதந்திரமாய் வேட்டையாடுகிறார்கள் என்னை விட்டுவைப்பார்களா இழுத்துப் போய் வேலை வாங்குகிறார்கள் கூலி கொடுக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறு வாய்க்குத் தண்ணீர் கொஞ்சம் படிப்பு அப்புறம் தொழில் நுணுக்கம் இயந்திரங்களோடு என்னைப் பிணித்து வைக்கிறார்கள் இயந்திரக் கால்களில் நான் இடிபடுகிறேன் மாத்திரையில் உணவு செரிக்க, கழிக்க, மருந்து மாத்திரை இயந்திரத்தோடு - அதிகாரத்தோடு பொருந்துகிறோமா இல்லை, முடியவில்லை. சேர்ந்தே சிரித்தோம். சிறையில் கொஞ்ச நாள் சித்திர வதைகள் கைகளைத் தறிக்க பார்வையைக் கெடுக்க வெளிவரும்போது பழுதுபட்ட உலகம், வாழ்க்கை கவிதை என்னை விடுதலை செய்யும் வரலாறு என்னை விடுதலை செய்யும் மனத்தில் சில குரல்கள் என் கவிதை எங்கே போகிறது இல்லை, தொலை தூரத்தில் போகிறது என் கவிதை. 17 என் இளமைக்காலத் தோழனே இங்கே வா, கூட இரு இளமையில் பாடிய அந்தப் பாடல்களை இப்பொழுது பாடு, முன்னொரு முறை சேர்ந்து வாழ்ந்தோம் சேர்ந்து சிரித்தோம் முன்னொரு நாளில் வயல் வெளிகளில் சேர்ந்தே சிரித்தோம் சேர்ந்தே மகிழ்ந்தோம் காற்றில் நிலவில் காலங்கள் கழித்தோம் உறவில் உயிர் வாழ்ந்தோம் இயல்பாய்ச் சிரித்த மலர்களில் எங்கள் வாழ்க்கை மலர்ந்தது இதயங்கள் நிறைய அன்போடு எத்தனைக் காலம் வாழ்ந்திருந்தோம். வானத்தின் கீழே வாழ்க்கை வெடித்தது எல்லாம் கனவில் இன்னும் வருமே 18 கொள்ளையன் கையில் நம் உலகம் கூறுவைத்தே தின்கிறான் வகுத்த கூறுகளில் சில துண்டாய் வாழ்க்கையும் நாமும் கிடக்கிறோம். எச்சில் துண்டாய்ச் சிதறுகிறோம் எச்சிலாய்த் துப்பப் படுகிறோம். நமக்கேது இனிப் பாடல் நமக்கேது கவிதை நமக்கேது உலகம் நமக்கேது வாழ்க்கை முழுதாய் இழக்க முடியாது என்னோடு பிறந்த கவிதை இது இதை இழந்தால் நான் என்ன எழுதுவேன் கவிதையோடு புலம்புகிறேன். காற்றும் கடல் அலைகளும் கூட. 19 தீயரோடிருந்தால் பிழைத்திருப்பேன் பொய்யனாகியிருந்தால் புகழ் பெற்றிருப்பேன் மாளிகை வீட்டுக் காவலில் மகிழ்ந்து நானும் வாழ்ந்திருப்பேன் குரைக்கப் பழகியிருந்தால் கொடி பிடித்தேனும் வாழ்ந்திருப்பேன். கவிதை எழுதக் கற்றிருந்தால் கட்டிடத்தோடு வாழ்ந்திருப்பேன் நடிக்கப் பழகவில்லை நியாயங்கள் தெரியவில்லை இன்று நானும் என் கவிதையுமாய் நடுத்தெருவில் திசைகள் இழந்து தேடுகிறோம் அதை என்றும் அறியாமல் 20 காற்றில் வரும் ஓசைகளில் சில கனவுகள் இசையாய் வருகின்றன. எங்கோ தொலைதூரத்தில் என்னைப் போலவும் பலர் இசைக்கின்றனர். குரல் அழைக்கிறது பெரியதாய், சத்தமாய் கனவுகளில் நாங்கள் இணைகிறோம். இறுக்கம் பெற நான் காத்திருப்பேன். நாங்கள் இணைந்திடுவோம். வண்ணங்களோடு வடிவங்களோடு சேர்ந்திசை பாடலாம் சிரிக்கப் புதியதாய்ப் பழகலாம் வானத்தை நாம் விட முடியாது வாழ்க்கையை, உலகத்தை, பாடலை. 21 கைகளோடும், கால்களோடும் கவிதையோடும் இருக்கிறோம் நிற்கும் இடத்தில் உறுதியாய் கையில் நெம்புகோல்களுடன் நிற்கிறோம் பார்வையில் தெரிவது தொடுவானம் பகைவர் கூட்டம் நீள்வரிசை செய்து முடிக்க வீரர் அணி. சேர்ந்து உழைக்க, மக்கள் நாம் கோடிக் கைகளில் துன்பங்கள் தாங்கி கோபுரம் போலச் சமைத்திடுவோம் கனவில், கவிதையில் திரளும் உலகைக் காவியம் போலப் புதுக்கிடுவோம் உடலைக் கொடுத்து உயிரினைக் கொடுத்து உலகத்தை ஒளியாய்ப் படைத்திடுவோம். பகுதி - 2 1. கவிஞனே பொறுத்திரு. உலகத்தை உடைத்தவர்களை ஒழித்துக் கட்டி புதியதாய் உலகை ஓர் பூங்காவாய்ச் செய்து தருகிறோம் அங்கே அமர்ந்து புதிய செடிகள் பதிய விட்டு உன் கவிதைகளை எங்கள் குழந்தைகளுக்குப் பாடிக்காட்டு நம் குழந்தைகள் கவிதை கற்கட்டும். 2. எனக்குள் ஒரு கேள்வி கவிதைக்குள் என்னைத் தொலைத்துக் கொண்டேனா கவிதைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டேனா இல்லை கவிதைக்குள் நான் புதைந்து விட்டால் என் மீது என்ன பூக்கும்? கற்றாழை முளைக்கும் கள்ளிகள் வெடிக்கும். நாங்கள் பெரிய மலர்கள் என்று அப்படியானால் நான் செய்வது என்ன 3. நெடுங்காலத்திற்கு முன் மனிதனுக்குள் வந்து விழுந்த வேர்கள் தேடி மனிதனுக்கும் கவிதைக்கும் அவைதாம் மூலவேர்கள் அவற்றிலிருந்து மனிதனையும் கவிதையையும் புதுப்பிக்க காத்திருக்கிறேன். நான் தேடும் வேர்களோடு நிலவும் வானமும் காற்றும் திசையும் இருளிலிருந்து விடுவித்து ஒளிதேடும் வேட்கையும் தன்னை உடைத்துப் புதியதாய் படைத்துக் கொள்ளும் வீரமும் இணைந்திருக்கின்றன. 4. நான் காத்திருக்கும் கவிதையின் வித்துக்கள் - மூலவேர்கள் அவற்றைப் பூச்சிகள் அரிப்பதில்லை உரங்கள் அழிப்பதில்லை எல்லார் இதயத்துள்ளும் பொதிந்துள்ள வித்துக்கள் அவை தேடினோர்க்குக் கிடைக்கும் கல்லின் அவர்களுக்குக் கிடைக்கும் வெறும் கவிஞர்களுக்குக் கிட்டாது காலங்காலமாய்க் கடலிலும் ஆற்றிலும் பயணம் செய்த பற்பல நினைவுகள் மலைகளைத் தகர்த்தும் குகைகள் குடைந்தும் கழனிகள் கட்டிடங்கள் கோபுரங்கள், கூடங்கள் சிலைகள் சித்திரங்கள் இவற்றைப் பொதிந்து வைத்த வித்துக்கள் 5 காயங்கள் மாற்றக்கண்ட மருந்துகள் வீரப் பெருமிதங்கள் வெற்றிகள் - கல்வி உழைத்துச் சிவந்த நெஞ்சம் பலரோடு பகிர்ந்த பெருமை கூழாயினும் பகிர்ந்து குடித்த பெருமிதம் எல்லாவற்றிலும் இருந்து திரட்டிய வித்துக்கள் இவற்றை நான் எங்கே வைத்தேன் நான் வைத்தேனா - இல்லையே வரலாறு நெடுகத் திரட்டிய வித்துக்கள் 6 மனிதர் நெஞ்சில் பொதிந்த வித்துக்கள் மனிதனைப் பிறப்பிக்கும் தாய் வித்துக்கள் இவை இருக்கும் வரை மனிதன் மலடாக மாட்டான் இவற்றிலிருந்தே புதிய மனிதர்கள் கனவுகளோடும் கவிதைகளோடும் தோண்டினால் சுரக்கும் ஊற்றுப் போல வெட்டினால் முளைக்கும் கிளைகள் போல அறைப்பட மணக்கும் சந்தனமாக தேய்த்தால் துலங்கும் வைரமாக புதிய மனிதர்கள் நாளும் பிறப்பில் கவிதை தேடி நான் காத்திருப்பது - இதற்காக. 11-08-1987 பகுதி - 3 1. கவலைப்படாதே எனச் சொல்லும் நண்பனே நன்றி - உனக்கு ஒரு சொல் அவசரப்பட்டுக் கிளை முறிக்காதே நிலத்தைப் புரட்டும் அசுரவேகத்தில் வேர்களை வெட்டி வினைபுரியாதே வித்துக்களை உனக்குள்ளும் பத்திரப்படுத்து நிதானமாய் அவற்றில் செடி முளைக்க விடு உனது வீரம் உலகைப் புரட்டும் உனது சாரம் உரமாகட்டும் எனது பாடல்களும் உனது வீரமும் ஒன்றில் முளைத்தவை ஒன்றாய் விளைபவை. 2 நமக்குள் முரண் இருக்கத்தான் செய்யும் நீ வரையும் ஓவியத்தில் துப்பாக்கி, தொழிற்சாலை, கட்டிடங்கள் நான் வரையும் ஓவியத்தில் காடுகள் மலர்கள், குழந்தைகள் மனித உருவத்தை மாற்றிமாற்றி வரைகிறேன். கையில் வரவில்லை காட்சியில் தெரிவது எளிய குடிசை வயல்வெளி கூடியுண்ணும் கோலாகலம் சுதந்திரமாகத் திரியும் மான்கள் அவசரமாக இங்கே நுழைந்து எல்லாவற்றையும் கலைத்துப் புதிதாய் அமைத்திட விரும்புவாய் நிதானம் தவறாதே நினைத்துப் பார்த்துச் செய் 3 குடிசை மாற்றி உயர் கட்டிடம் வேண்டுவாய் இரும்பைத் தோண்ட - பக்குவப்படுத்த இயந்திரங்கள் தொழிற்சாலைகள் குடிசை மாற்றி உயர்கட்டிடம் வேண்டுவாய் நிலம் துளைக்கிறாய் தூசும் புகையும் நிலமெங்கும் உலகம் விரைந்து முன் செல்கிறது போர் விமானப் புகைச்சல் எங்கும் குடிசை வாழ்வு குறுகிய வாழ்வு நவீன உலகம் உள்வராது போர் விமானப் புகைச்சல் தராது தப்பில்லை உன் முயற்சி தொடரட்டும் இயந்திரங்கள் உயிருள்ளவை இடையில் அதனுள் மாட்டிக் கொள்ளாதே தப்பில்லை என் வாழ்வும் முயற்சியும் எல்லார்க்கும் வீடு, தொழில், உணவு கலையும் படிப்பும், பிறவசதிகளும் வகுத்துக் கொடுத்தே வாழச் சொல்லுகிறாய் வகையாய்க் கிடைக்க நாள்பல ஆகும். அதுவரை உழைப்பு அமைதி காக்கட்டும் அதிகாரம் அதுவரை நீடித்திருக்கும் இயந்திரப் பெருக்கம் நிறுவனக் கட்டடம் அலுவலர் தொகை பொருள் விநியோகம் எல்லாம் மக்கள் நலன்களுக்காக நீண்ட காலக் கனவு இது இடையில் வன்முறை தவிர்க்க இயலாது. குறுக்கே யாரும் வந்துவிடக் கூடாது அமைதி கெடும் உழைப்பு பாதிக்கும் வரிசையில் ஒழுங்காய் இயங்க வேண்டும் சொல்பவர் சிலர் கேட்பவர் பலர் நிம்மதி நிலைக்கும் எதிர்காலம் சிறக்கும் 4 செய்ய முயன்று சோர்வுற்றுப் போகிறாய் உழைப்பில் மக்களுக்கு உற்சாகமில்லை பொருளாசை விடவில்லை புரட்டுகள் பெருகுது அதிகாரக் குவியல் ஆட்களைக் கெடுக்குது இன்பத் தோட்டத்தில் எல்லாம் பாழ் போர்வாள் கண்டு புழுங்குவர் மக்கள் அழகிய உடை முக அலங்காரம் இதற்குள் மனிதக் காட்சி இல்லை எங்கோ தவறினோம் எப்படிச் சரிசெய்ய நினைத்துப் பார்க்கிறாய் நிதானப்படுகிறாய் இயந்திர கதியில் இழந்த அன்பா மீட்க வழி - யாது எனத்தேடு உனக்குள் புதிய வித்துக்கள் முளைக்கும் மலர்களும் அழகும் பூக்கும் மகிழ்வாய் 5 வா என் குடிசைக்கு வாழ்த்துகிறேன் தோள்பட்டை துப்பாக்கி களைந்து வை சிலநேரம் மலர்கள் பாடும் பாடல் கேட்கிறோம் காலாற நடந்து காண்கிறோம் வானம் இடையில் தொலைத்த மாந்தர்களை நினைக்கிறாய் அவர்முகம் அழகிய முகம் இதயம் நனைகிறது. பெருமூச்சு விடாதே கையில் நீயும் வீணை எடுக்கிறாய் இசை வசப்படவில்லை பழகிப் பார்க்கிறாய் கோடிக் குழந்தைகளாய் மக்களும் மலர்களும் புதிய வழி நடைபழக வேண்டும் நடக்க நடக்க பாதை பதியும் சேர்ந்தே நடப்போம். 27-08-1987 – பகுதி - 4 (கவிஞனுக்கும் அரசியல்வாதிக்கும் இடையிலான எதிர்ப்பேச்சு கவிதையில் வந்திருக்கக் கூடாதோ என்று இப்பொழுது கருதுகிறேன். இந்த மோதல் இன்னும் விரிவான நிகழ்ச்சிகளோடு நடந்திருக்கமுடியும். ஒரு ஆறுதல் போல வந்திருக்கக் கூடாது. என் கற்பனையில் - இப்பொழுது ஒரு காட்சி ) லெனின்: சில நாள் - சில நாள் மட்டுமே அந்த அறிவாளிகள் கம்பிகளுக்குப் பின் இருப்பார்கள் காற்றும் ஒளியும் உணவும் அவர்களுக்கு உண்டு. கவலைப் படாதீர்கள். கார்க்கி: சில நாள் எதற்காக? அவர்களுக்கு இது ஒரு கல்வியா? இல்லை. தண்டனையா? சிலநாள் - தண்டனையில்லை. ஆனால் கல்வியாக வேண்டுமே வெறும் காற்றில் ஒளியில் அவர்கள் என்ன காண்பார்கள்? அவர்களை அடைத்து வைத்து வெளியில் என்ன செய்யப் போகிறீர்கள்? வெளியில் அவர்களும் இருந்து அனுபவிக்கட்டும். லெனின் : அவர்களுக்காக நீங்கள் ஏன் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். சுற்றுப்புறத்தில் அவர்களும் அழுக்கென்றுத் தூர ஏறிவதில் என்ன பிரச்சினை? கார்க்கி உங்கள் இதயம் அன்பால் நிறைந்தது. உங்கள் ஆளுமை உலகம் காணாதது. மதிக்கிறேன் உங்களை. குழந்தைகளைப் பூட்டி வைத்தா காக்க முடியும்? கல்வி தர முடியும்? திறந்து விடுங்கள். விழுந்து எழுந்து, அடிபட்டு, அனுபவப்படட்டும் அறிவாளிகளுக்கும் கவிஞர்களுக்கும் பாதுகாப்புச் செய்வது ஆளும் வர்க்கத்தின் வரலாறாயிற்று. வேண்டாம். அவர்களின் விதி. தெருக்களிலேயே நிர்ணயமாகட்டும் அவர்களுக்கு அரசியல் புரியாது. உண்மைதான். புரிந்து கொள்வது பட்டறைகளில் நடக்கட்டும். அதுவே விதியும் அனுபவமாகும். எனக்கும் நீங்கள் ஆசான் தான். உங்களைப் பார்த்து உருகி - நெகிழ்ந்து உங்கள் உருவத்தில் செயலில் என்னைக் கரைத்துக் கற்றுக் கொள்கிறேன். நீங்கள் என்றும் எனக்கும் எம்மவர்க்கும் நண்பர், ஆசான், தத்துவ ஞானி. உங்களைக் கற்க - நாங்கள் எங்கே போக ஏழை மனிதர் குடில்களில், வயல் வெளிகளில் தொழிற்சாலைகளில், சாலையில், சந்திகளில் தெருமுனைகளில் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளில் மனிதர்கள் உறவில், மத்தியில் எங்கள் தோழனாய், எங்கும் நீங்கள் நிறைந்திருப்பதில் கற்றுத் தேர்வோம். காற்றை, ஒளியைத் திறந்து விடுங்கள். மனிதர் மத்தியில் - மனிதர்களோடு நடந்து விழுந்து கற்றுக் கொள்வோம். பின்னுரை: கிளைகள் - சில விளக்கங்கள் கவிதையின் அழகியல் 1. எதிரெதிர் நிலையிலுள்ள இருவர்க்கிடையில் கவிதை தொடங்குகிறது. ஒவ்வொருவர்க்கும் வாழ்க்கை அனுபவம் ரசனை பார்வை வெவ்வேறு. 2 கவிதையின் தொடக்கம், கணவன் - மனைவி இடைக்கிடையேயுள்ள பகை உறவாகக்கூட இருக்க முடியும். அநேகமாக இந்த உணர்வோடுதான் கவிதை தொடங்கினேன். ஒருவர் வளர்க்கும் செடி அதில் பூக்கும் மலர்கள் அவர்க்கே உரியவை. அவர் வளர்த்தால் அந்தச் செடி, மலர்கள் அழகாக இருக்கின்றன. அதைப் பிறர் ரசிக்க வேண்டும். இவர் ரசனை அடுத்த வீட்டைக் கூட எட்டிப்பார்க்காது. செடிகளின் அழகு அவர் அழகு. அவரை மற்றவர் நின்று பார்த்து ரசித்து பாராட்ட வேண்டும். 3. எதிர் வீட்டுக்காரர் என் வீட்டுக்கு வருகிறார் அவரது அன்பு எனக்கு வியப்பு என்மனம் சற்றே விரிந்து அவர்க்கு இடம் தருகிறது. இருவர்க்கிடையில் அன்பின் தொடக்கம் 4. அன்பில் மலரும் இதயம் இதுவரை இறுகப் பற்றியிருந்த வரையறைகளைத் தவிர்த்துக் கொள்கிறது. இன்னொருவரைத் தனக்குள் ஏற்றுக் கொள்வதன் மூலம் புதிய முளைவிடுகிறது. 5. அன்பில் கரையும் இருவர்கிடையில் புதிய ஒளி ரசனை வளர்ச்சி இன்னொருவரைத் தனக்குள் ஏற்கும் போது மனிதன் அவன் இரசனைகளோடு புதிதாய்ப் பிறக்கிறான். இந்தப் பிறப்பு அழகியது. புனிதமானது. 6. செடிகள் மலர்கள் பற்றியும் நம் உடமைப்பற்று இப்பற்று விலகினால் மனிதம் மேலும் மலரும் செடிகளுக்கும் உரிமை உண்டு. அதற்கும் சுதந்திரம் உண்டு மனிதன் செடியே பிற உயிர்களை தனக்குள் வைத்து உடமையாக்கி இருக்க வேண்டாம். 7. பிறர் சுதந்திரத்தை நான் அங்கீகரிப்பதன் மூலம் நம் சுதந்திரம் விரிவு பெறுகிறது. அதுவே பேரின்பம் உலகின் உயிர்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதன் மூலம் வாழ்வின் அனைத்து அனுபவங்களும் சுடர்விட்டு ஒளிர்கின்றன. 8. மனிதன் மேன்மை பெறும் வழி - அன்பு நட்பு ரசனை கலையுணர்வு முதலிய அனைத்தும் விடுதலை பெற மென்மேலும் வளர இது வழி. சமூகச் சூழல் கவிதைகள் 9 இதுவரை எழுதிய கவிதைகள் எனக்குள் முன் திட்டமில்லாமல் ஒன்றையடுத்து மற்றது என மனக் காட்சிகள் விரிவுடன் சேர்ந்து எழுதப்பட்டவை. இவற்றுக்கு நான் தந்த பெயர் Apoem in aesthetics அதாவது கலை இயலில் ஒரு கவிதை. ஒருவர்க்கு முருகியலுணர்வு மென்மேலும் சிறப்பது பற்றிய கவிதை. கவிதை வெறும் அழகே? இரசனையிலிருந்து படைக்கப்படுவது அல்ல. வாழ்வியல் அனுபவம் பார்வை இவற்றின் செரிவிலிருந்து கலையுணர்வு முகிழ்க்கிறது. வாழ்வியல் அனுபவத்தில் அதிகச் செறிவு பெறுபவர்க்கு கலையுணர்வு அதிகரிக்கும். இது கவிதை தரும் செய்தி. 10 வெறும் அழகியல் உணர்வோடு நாம் வாழ்ந்து விடமுடியாது. உலகியல் துன்பங்கள். உள்ளே வருகின்றன. சிறிய வடிவில் எலியாய் பூனையாய் இவற்றுக்கு இடந்தருவதில் பிரச்சனையில்லை. அப்புறம் பெரிய வடிவில் பிரச்சனைகள் பற்பல. இவற்றுக்கிடையில் அழகுணர்வு சிதைகிறது - நம் வாழ்க்கை அவலமாகிறது. 11 ஒன்பதில் தொடங்கி பத்தின் வழியாகக் கவிதை இன்னொரு தளத்திற்குச் செல்கிறது. உலகச் சூழலில் வியாபாரிகள் அதிகாரிகள் செயல்களுக்கிடையில் நம் வாழ்க்கை . சுரண்டலுக்கு இடம்தராமல் நாம் உயிர்வாழ முடியாது. இந்தச் சூழலில் மனிதச் சிதைவு அன்பு கலையுணர்வு, முதலியனவும் - சுரண்டலுக்கிடையில் மனிதன் சிதைவடையும் போது அவன்மனமே அவனை எதிர்நின்று அவலம் சொல்லி அழுகிறது. அவன் தன்னுலகத்தில் அன்பை நட்பை அழகுணர்வை எப்படி இழந்து மனிதனாக இருப்பான் செடி இங்கு மனம் ஆகிவிட்டது. 12 வியாபாரிகள் அதிகாரிகள் என்று சுரண்டல் வடிவங்களை பருப்பொருள்களாக இதுவரை கண்டோம் இவர்களின் செயல்களின் நுழைவு நுண்பொருள் வடிவில் நம்மைச் சூழவும் நமக்குள்ளும் வந்து தாக்குகின்றன. சூழல் சீர்கேடு இன்று நமக்கு மாபெரும் சிக்கல். 13 உலகம் பிசாசு ஆகிவிட்டது. இதை மாற்ற அரசியல் நடவடிக்கை தேவை. இந்த அரசியல் திருத்தல் வாத அரசியல். இதுவும் சேர்ந்து மனிதனை சுரண்டுகிறது. மனித அவலம் மேலும் அதிகரிக்கிறது. 14 திருத்தல்வாத அரசியலும் சேர்ந்து மனிதனை அமுக்கிய நிலையில் மனிதன் அந்நியனாகிறான் சோகம் தீர்க்க வழியில்லை. ஆகவே இவன் விடுதலையைக் கற்பனையில் தேடுகிறான். இப்படித் தேடுவதும் அவன் உயிர் வாழ்ந்திருக்க ஒரு வழி. Romantcism என்னும் புனைவியல் போக்குக்கான சமூகக் களம் இது. கவிதை இசை ஓவியம் ஆகிய பல துறைகளிலும் புனைவியல் போக்கு சில சாதனைகளுக்குக் காரணமாகிறது. 15 கூலி உழைப்பு முறை இயந்திரப் பெருக்கம் மனிதன் இயந்திரத்தின் பகுதியாதல் இந்நிலை தவிர்க்க இயலாதது. தற்கால பொருளுற்பத்தி முறைக்குள் மனிதன் சிதைவது பற்றி இக் கவிதை. 16 தற்கால பொருளுற்பத்திச் சிறைக் கொடுமைகளால் காயம்பட்ட மனித நிலை. கவிதைப்பற்றியும் வரலாறு பற்றியும் சில நம்பிக்கைக் குரல் எழுப்புகிறார்கள். இவன் கேட்கிறான், தன் இளமைக்கால நினைவுகள் இவனுக்குள் அலையலையாய் எழுகின்றன. துன்பத்தால் மேல் மனம் அழுத்த அடி மனத்திலிருந்து சில இளமைக்கால விடுதலை உணர்வுகள் நினைவுகள். 17 இளமைக்கால கிராமத்து - பழங்காலத்து நினைவுகள் இயற்கையோடு ஒன்றுபட்டிருந்த காலமது அந்நினைவு இன்றும் புதிய கனவுகளுக்கு ஆக்கங்களுக்கு ஆதாரமாகிறது. முன்னைய இனிய நினைவுகளும் சோகமும் மனத்திலிருந்து கிழித்துக் கொண்டு பாடல்களாகின்றன. கவிதை இங்கு இசை நயம் பெருகிறது. Surrialism in poetry. இப்படித்தான் மன அழுத்தத்திலிருந்தும் சிதைவிலிருந்தும் பிறப்பெடுக்கிறது. இங்கு கவிதை என்பது மனித முழுமை விடுதலை நோக்கியது. 19 சமுதாயச் சீர்கேடுகள் மனிதர்களை கலைஞர்களை சிதைக்கிறது. வெற்று அரசியல்வாதிகள் போலக் கலைஞர்களைத் தோற்றுவிக்கிறது. பிழைக்க வழியில்லாத நிலையில் பொய்யை ஏமாற்றத்தை ஆடம்பரத்தைப் பற்றிக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் முன்னேறுகிறார்கள். சாக்கடைகள் அதிகமாகும் போது கொசுக்களும் மலேரியாவும் உற்பத்தியாவது போல. நல்லவன் இங்கு நடுத்தெருவில் நிற்கவேண்டும். 20 மனித விடுதலை பற்றிய புரட்சிப் பாடல்கள் வெளியிலிருந்து கேட்கின்றன. அப்பாடல்களைச் சிலர் உரக்க எடுத்துச் சொல்லுகின்றன இதில் விடுதலைக் குரலைக் காண்கிறான் கவிஞன். 21 காற்றில் வரும் புரட்சிக் குரலை நம்புகிறான் கவிஞன். இது ஒரு மாயக்குரல். தளர்ந்திருக்கும் இவனிடம் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் குரலிது வெள்ளத்தில் வீழ்ந்தவனுக்குக் கிடைக்கும் ஒரு மரத் துண்டு மாதிரி . இது அவனைக் கரை சேர்க்கலாம் மூழ்கடிக்கலாம். நம் கால நிலை இது. புரட்சிக் குரலில் கவிஞர்கள் சேர்ந்து சிதைக்கும் கோலமிது. பகுதி - 2 பிரிவு -1 சமூகச் சூழலில் மனித உறவு சீர்கேடுகள் அவை மாற்றம் பெருவதன் தேவைபற்றி கவிஞன் கவலையில் ஆழ்ந்தபோது சமூகத்தை புரட்சிகரமாய் மாற்ற நிற்கும் அரசியலாளன். கவிஞனுக்கு ஆறுதல் கூறுகிறான். நாங்கள் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை தருகிறான். கவிஞனிடம் பரிவு கொண்டு. அரசியல்வாதி கவிஞனுக்கு ஆறுதல் கூறும் போது கவிஞன் தனக்குள் விழித்துக் கொள்ளுகிறான். ஒரு சமூக மாற்றத்தில் தன்னைப் புரட்சி பற்றிப் பேசும் அரசியல்வாதி எங்காவது ஒதுக்கினான் அல்லது நான் எவ்வாறு ஒதுங்கினேன். தன்னை ஒரு குழந்தைபோல் கருதி மற்றவர் ஆதரவு தேடி காத்திருக்கிறேனா? அப்படியானால் கவிதையில் இதுவரை இப்போதும் நான் புதைந்து விட்டேனா? என்ற சிந்தனையோடு கவிஞன். தான் இதுவரை செய்துவந்த காரியமென்ன வெறும் அழகியல் தேடித் தொகுத்த காரியமா செய்தேன்? இல்லை தானும் புரட்சியாளனும் மனிதர்கள். நெடுங்கால சமூக வரலாற்றின் வித்துக்கள் தாங்கிய மனிதர்கள். இந்த வித்துக்களிலிருந்து புதிய மனிதன் பிறப்பெடுக்கிறான். கவிதைக்கும் மனிதனுக்கும் இவையே மூலவித்துக்கள். இந்த வித்துக்களிலிருந்தல்லவா மனிதனை அவன் கவிதையோடு முளைத்தெழ வைக்க இதுவரை கவிதை செய்தேன் என கவிஞன் சிந்திக்கிறான். மனிதனின் மூலவேர்கள் வித்துக்கள் தேடிச் செல்பவர்க்கே சிறந்த கவிதைகள் கிட்டும். நெடுங்கால மனித வரலாற்றினூடே சேகரமானவை இந்த வித்துக்கள். வளமான சமூக உறவுகளுக் கிடையிலிருந்தும் திரட்டிய வித்துக்கள். இந்த வித்துக்கள் எல்லா மனிதர்க்குள்ளும் இருந்து இயங்கி அவர்களை மனிதராக்குகின்றன. தனக்குள் தேடினால் ஒவ்வொருவர்க்கும் கவிதை கிடைக்கும். அந்த மூல வித்துக்களிலிருந்து அதாவது ஒவ்வொருவரும் கலைஞர்தாம் ஐயமில்லை . பகுதி – 3 தனக்குள்ளாழ்ந்து சிந்தித்த கவிஞன் அரசியல் வாதிக்குக் கூறுகிறான். நீ மட்டுமே சாதிக்க முடியாது. நீ வேறு நான் வேறு அல்ல. இருவர்க்குள்ளும் இருப்பது ஒரு மூலம். அந்த மூலத்திலிருந்து திரளாமல் வெறும் அரசியலில் பேச்சும் செயலும் மனிதனை பிளவுபடுத்தும் என்கிறான் கவிஞன். கவிஞனாகவும் அரசியல்வாதியாகவும் பிளவுபட்ட மனித நிலையில் அரசியல்வாதி ஆத்திரத்தோடு செயல்படுகிறான். கவிஞன் தனக்குள் ஓவியம் வரைகிறான். நிதானமாக - இருவர்க்கும் வாழ்க்கைக் காட்சிகள் வேறுபடுகின்றன. இந்த அரசியல்வாதியினுள்ளும் முன்னைய உடமைச் சமூகத்தின் பாதிப்புக்கு உள்ளாகி உடமைச் சமூக சீர்கேடுகள். அதன் உயரத்தில் உருவத்தில் இன்னொரு சமூகத்தை உருவாக்க முயல்பவன் அதாவது முன்னைய பூர்ஷ்வா சமூகக் குணங்களிலிருந்து விடுதலை பெறாதவன் கவிஞனது சொற்கேளாது அரசியல்வாதி தன் வழியில் செல்பவன். அரசியல்வாதியின் பார்வையிலிருந்து தான் வேறுபட்டாலும் அரசியல்வாதி. வெறுக்க இயலாதவன் கவிஞன் தனக்குள் ஒரு நம்பிக்கை. நெடுந்தொலைவு செல்லவிரும்பும் அரசியல்வாதி இடையில் தடுமாறி நிற்கக் கூடும். அப்போது அவனுக்குள் தான் பேசும் உண்மை புரிவான். தற்காலத்தில் நிலவும் சோசலிஸ சமூகம் பற்றிய படப்பிடிப்பு. சோசலிச அரசியல்வாதியின் பேச்சுக்கள் கனவுகளோடு. சோசலிச சமூகத்தில் உறவுச்சீர்கேடுகள் தடுமாற்றங்கள். இது சோசலிசம்தானா என்னவாயிற்று என்ற சிந்தனையோடு அரசியல்வாதி தனக்குள்ளிருந்து ஒரு மனிதனைக் கண்டெடுக்கிறான். மூலவேர்களிலிருந்து முளைத்த மனிதனிவன் இவன் நிதானமானவன் அன்பானவன். முன்னைய பல கொடுமைகள் குறித்து கவலைப்படுபவன். ஒரு கவிஞனும் அரசியல்வாதியும் இருவரல்ல ஒருவர் மனிதர் - கலைஞர். பகுதி - 4 நிறைவு புரட்சியின் போது சில அறிவாளிகளைச் சிறையில் வைத்ததற்காகக் கார்க்கி வருந்தியபோது லெனின் கார்க்கிக்கு கூறினார். கவலைப்படாதே சில நாட்கள் அவர்கள் சிறையிலிருப்பதால் எந்தக் கேடும் நேர்ந்து விடாது. நான் படித்த கட்டுரைகளில் லெனினுக்குக் கார்க்கி கூறுவதான வாசகம் எதுவுமில்லை. ஆனால் கார்க்கி ஒரு கலைஞன் என்ற முறையில் லெனினுக்குச் சில சொல்லியிருக்கக் கூடும். அதுபற்றிய கற்பனையோடு இப்பகுதி. நான் என்ன செய்வேன்? நாளுக்கு நாள் நான் தரையில் புல்லாய்…. பூடாய்.. நீ வானத்தில் உயரமாய் வேகமாய் …… விலங்காய் என் தலை மீதே நடந்துவிடு நானும் தைரியமாய் நிம்மதியாய் இருப்பேன் என் விதியை நான் அறிந்த….. நினைப்போடு…. இவை என் தோட்டத்து மலர்கள்: முகர்ந்து பார்க்கலாம்: பறித்தும் கூட கசக்கி மிதித்து நாசமாக்கி விடாதீர்கள்! காரணம் கேட்கிறீர்கள்.. இவை எனக்கு மலர்கள் எனக்காகத்தான்…. பதிய மிட்டு …. உரமிட்டு காத்திருந்து வளர்த்தேன் - பூத்திருக்கிறது …. உங்களுக்கு இதன் அழகு….. மணம் பிடிக்கவில்லையா? உங்கள் மேல் தப்பில்லை உங்களுக்கான தோட்டத்தை ….. மலர்களை ….. உங்கள் உலகில் செய்து கொள்ளுங்கள் வரவேற்பீர்களா! வந்தால் கொள்ளை மகிழ்ச்சியில் குளிர்வேன். பையன் கோபிக்கிறான் கல்லெறிகிறான் பள்ளியில் வீட்டில் தெருவிலும் வேலைக்காரி திட்டுகிறாள் சீறுகிறாள் மனைவி உருட்டுகிறாள் பாத்திரங்களோடு மண்டையையும் காலிகள்…. பொறுக்கிகள் திருடுகிறார்கள் தீ வைக்கிறார்கள் எறியட்டும் திட்டட்டும் திருடட்டும் தந்தை எறிந்த கல்லை வாத்தியார் திணித்த கல்லை எஜமானி எறிந்த வார்த்தைகளை முதலாளி வைத்த தீயை பத்திரப்படுத்தி பலநாட்கள் சேகரித்து ஒருநாள் எறிவதற்கு. திட்டுவதற்கு. எரிப்பதற்கு உரிமை இல்லையா? சட்டம் தூக்கில் தொங்கட்டும் நீதிபதிகள் சமாதியில் மலர் மாலைகளோடு பாண்டியன் பட்டஅடி போதாது மதுரையில் எரிந்த தீ அணைந்தது சரியில்லை எனது வானம்…. இன்று எனக்கு வானமில்லை காற்று வெளிச்சம் சத்தம் எல்லாமே சுற்றிலும் இருக்கின்றன ஆனால் வானம் இல்லை வெளி இல்லை என் சங்கடத்தோடு சேர்ந்து வருபவர் இல்லை. சங்கடம் என்னாயிற்று? எங்கு சென்றதோ? தெரியவில்லை. விசாரிக்கத் தொடங்கினால் திரும்பி வந்து மிரட்டும் அதுவரை வானம் இல்லா வெற்றிடத்தில் மூச்சுக்கு மட்டும் போதிய காற்றுடன் சற்று நேரம் சற்று நேரமாவது இருந்துவிட வேண்டும் கொஞ்சம் படிக்கிறேன் புதிய பிரதேசங்கள் பற்றி காலைக்குளிர் மார்கழிக் குளிர் இன்று இதமாகத்தான் இருக்கிறது போர்வைக்குள் வெளியில் புலர்ந்துவரும் வெளிச்சம் அழகாகத்தான் இது எத்தனை நேரம் நீடிக்கும் நீடிக்கும் வனது. நிம்மதியாக. அப்படியும் இல்லை. வெறுமனாக இருந்து இருப்பதை எழுதுகிறேன். கையில் அள்ளுவதே எனக்குச் சொந்தம் கவிதைக்கும் இது உண்மை பார்வையில் பட்டவை செவியில் விழுந்தவை உறவுகளாய் நெருங்கியவை இதய வெளியில் எத்தனையோ! உருட்டித் திரட்டினால் வைரமாகுமா? வெந்தவை கொஞ்சம் கரிக்கட்டைகள் வைரமாக எத்தனைக் காலமாகும்? இடையில் கொஞ்சம் அள்ளிக் கொள்கிறேன். கொஞ்சம் வைரத்தைக் கரிக்கட்டைகளோடு! கவிதைக்கும் இது உண்மை. நண்பர் கேட்கிறார் கரிக்கட்டையை வைரமாகப் புனைய முடியாதா? நான் என்ன சொல்வேன்? வைரங்களின் மின்னலில் கண் பார்வை இருக்குமென்பது என்ன நிச்சயம்? மீண்டும் நண்பர் கறுப்புக் கண்ணாடி இல்லையா உண்மைதான் அப்போது கவிதை எனக்கல்ல. கூட்டத்திற்கு. கும்மாளமாய் நாளை வாக்குப் பதிவாம் இன்று அமைதியாய் இருக்க முடியும். அமைதியாக - அதாவது - சத்தம் குறைவாக சத்தம் குறைகிறதா? இல்லையே ஒரு வாரத்திற்கு மேலாய் எங்கள் தெருவில். எங்கே போனாலும் அங்கே ஒரே சத்தம் ஒன்றா?…. இல்லை ஒன்பது ஒன்றை மீறி . மற்றது ஒன்றை மறுப்பதாய் மற்றது? ஊர்வலம் தலைவர்கள் கும்பிடு கூட்டம். ஒரு வித்தியாசம், நேற்றுவரை ’உண்மை’ : சகிக்க முடியலை இன்று… ‘நாடகம்’ சகிக்க முடியும்: நாளையும் முடிந்த பிறகு…. ….. சத்தங்கள் நிஜமாகி விடும்! சகிக்கவே முடியாதபடி – காற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் முடியுமா? விடங்களைத் தொழிற்சாலை வெளியேற்றக்கூடாது முடியுமா? பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இரசாயன உரங்கள் இல்லாமல் உயர்ரக விதைகள் இல்லாமல் வேளாண்மை என்னவாகும் எப்படி வளரும்? மக்கள் அதிகமாயிற்றே அதிகம்தானா? மருத்துவர் இல்லாமல் - மருந்துகள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? கான்கிரீட் கட்டிடம் - சிமெண்ட் - இல்லாமல் பேப்பர் இல்லாமல்? அணைகள் வேண்டும், காட்டை அழிக்கணும் சில - இல்லை - பல - இல்லாமல் முடியுமா? அணு உலைகள் வெடிக்கும் போபால்கள் கிளம்பும் நாகரிகத்திற்கு நாம் தரும் விலைகள் கிரிக்கெட் - டிவி - ஐஐடி …. பாலிஸ்டர் எதை நம்மால் விட்டுவிட முடியும்? மனைவி…. குழந்தைகள் …. கட்டிடம் … புத்தகம் … விட்டுவிடவா முடியும்? சினிமா…. பத்திரிகை, பஸ் பயணம் ….. எல்லாமே? எல்லாவற்றையும் யாரோ இயக்கட்டும். அவர்கள் இயக்க, நாமும் இயங்கட்டும். எதை விட்டுவிட முடியும்? வாழ்க்கைச் சூழலில் - வீட்டுச்சூழலில் வகையாய் மாட்டிக் கொண்டோம் அசுரச் சக்கரத்தில் பயணம் இன்பமாக வேதனையாக வேதனையே இன்பமாக. கவிதை வலை பின்னுகிறேன் பின்னியது கவிதை : நன்றாயிருக்கிறதா? கவிதைகள் பலவகைப் பின்னல்கள் இயற்கையிலிருந்து வானம் பறவைகள் மலர்கள் செயற்கையிலிருந்து இயந்திரக் கூச்சல், புகை, இசையிலிருந்தும் சிற்சில செதில்கள். எல்லாமே என் அனுபவத்திற்குள் நுழைந்து வெளியேறிவை இது என் கவிதை நன்றாயிருக்கிறதா? நன்றாய்த்தான் இருக்க வேணும். இல்லை என்கிறீரா கவிதை பற்றி உங்களுக்குத் தெரிந்தது எவ்வளவு? என்னை நானுந்தான் கேட்டுக் கொள்கிறேன் நாம் எல்லோரும் வழிப்பயணிகள் நமக்குள் வம்பு வழக்கு கூடாது - சரிதானா உன் கவிதைப் பின்னலைப் பிரித்துக்காட்டு: கூடவோ குறைவாகவோ சில சேர்மானங்கள் உன்னை அங்கீகரிக்கிறேன்: என்னை நீ? நாம் எல்லோரும் பின்னினால்தானே தமிழ்த்தாய் - இல்லை - தமிழ்க்கன்னி புத்துடை அணிவாள். கந்தல் உடையில் எத்தனைக் காலமாய்க் காத்திருக்கிறாள் நமக்குள் போட்டி வேறா எப்படியும் என்னோடு சிலர் உன்னோடும் சிலர் ஒருவரை மற்றவர் தூக்கி உயர்த்திக் கொள்ளலாம். தமிழ்த்தாய் - இல்லாவிட்டால் - வைப்பாக வைத்துக்கொள் என்றும் இது நாள் வரை வேறு எப்படி இருந்தாள் தாயாய்க் கும்பிட்டுத் தரையில் கிடந்தாலும் கவிதை பின்னுகிறேன் - நன்றாகவே – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்பினேனா? அழகிய குழந்தை முகங்களோடு, நோக்கங்களோடு புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கல் வாழ்த்துக்கள் அனுப்ப முடியவில்லை: முடியவில்லை என்பதே உண்மை மழையே வா என்பது மாதிரி. பயிர்கள் செழித்து வளரட்டும் என்பது மாதிரி மலரும் மணமுமாய் வாழுங்கள் என்று வாழ்த்துவது மாதிரி குழந்தைகள் அழகியவை ரோஜாக்களும் குழந்தைகளை ரசிக்கத் தெரிந்திருக்கிறோமா அவர்களின் வம்புகளோடும் வழக்குகளோடும் ரோஜாவையும் தான் முட்களோடு மண்ணோடு பொய்யாய்ச் சிரிக்க, பூக்க முடிகிறதா? கிறிஸ்து பிறப்பதை எங்கே விரும்பினோம் முள்முடி தரித்துச் சிலுவையில் முடியவா ஒருநாள் கழிந்து மறுநாளுக்கு என்ன புனிதம் ஒருநாள் பொங்கலில் உள்ளமா பொங்கும் குழந்தைகள் எல்லாமே கொண்டாடட்டும் பார்த்து மகிழ்ந்து பரவசப்படுவோம். மண்ணில் சில புதிய மலர்கள் வானத்தில் சில புதிய நட்சத்திரங்கள் மலர்ந்து சிரித்து வாழ்வுக்கு ஒளி சேர்க்கட்டும் திட்டமிட்டு தேடித் தொலைத்தது இது எத்தனாவது முறை திட்டமிடுவதும் தேடுவதும் கையில் இல்லாமல், கைக்கு அகப்படாமலும் அகப்படுவது அப்புறம் தொலைவதுமாய் இது என்ன வாழ்க்கை ? வாழ்க்கைக்கு ஏதாவது வடிவம் வண்ணம் கிடைக்கிறதா? வடிவம் தருகிறேன் : சிதைகிறது. வண்ணம் தீட்டுகிறேன் : கலைகிறது. வாழ்க்கையை இப்படி வரைய முடிகிறதா வட்டத்தில் அடைக்க முடியாதா அடைக்க முயல்வதால் நான் அடைபட்டுக் கலங்குகிறேனா காற்றாய், வானமாய், தழலாய் வாழ முடியுமா அதற்கும் வடிவம் இருக்கிறதே வடிவம் பிடித்து வடிவத்தில் அகப்படாததால் வடிவம் கலைத்து வாழ்க்கை ….. இப்படித்தானா வாழ்க்கை வாழ்க்கை என்று நான் கருதுவதே. ஒரு வடிவமா வண்ணமா பின் ஏன் இந்தக் கலக்கம் இத்தனைக் கலக்கம் என் மனச்சங்கடத்தை எங்கே இறக்கி வைக்க கவிதையிலா கவிதைக்கு ஏன் இந்தச் சங்கடம் தாங்கத்தான் வேண்டுமோ? நான் முடமாகி விட்டேன். கவிதை தவிர எனக்குக் கால்கள் இல்லை. தாங்கித்தான் தீரணும் அன்றியும் இங்கே இப்பொழுது நானும் என் மனமும் கவிதையும் மட்டுமே உள்ளோம். அழுது தவிக்க ஆசைதான் அழுதால் கவலை தீர்கிறதா? ஆகவே என் கவலையை எங்காவது கொட்டி வைக்க, கவிதை தவிர வேறிடமில்லை. கவிதைக்குச் சங்கடம் தருகிறேன் என்ற கவலையோடும் என் கவலையை ஏற்பதால் கவிதை என்னாகிறது அழகு பெறுகிறதா அப்படித் தோன்றவில்லை அதுவும் சேர்ந்து அழுகிறதா ஆமாம்: முக்காடிட்டு மூலை சேர்ந்து என்னைத் தழுவி அழுகிறது எனக்கும் அதுவும் அதற்கு நானும் துணை இங்கு வேறு யாரும் இல்லை. கவிதை இப்பொழுது எனக்குக் காதலி, மனைவி, தாய், குழந்தை. ஒரு இராமாயணக் கதை முடிந்தது: கதை முடிந்த பிறகு இராவணன் உயிர்த்தெழுந்து அயோத்திக்கு அரசனாகிறான் மக்கள் ஆரவாரத்தோடு இவன் எப்படிக் கொல்லப்படலாம்? யார் செய்யாத குற்றத்தை இவன் செய்துவிட்டான்? பதவி ஆசை யாருக்கு இல்லை? அடுத்தவன் மனைவி அழகாயிருந்தால் சிறையில் வைத்துச் சிங்காரிக்காதவர் யார்? இதற்காக இவனைக் கொன்ற குற்றத்திற்கு இராமர் கூட்டத்தை நாடு கடத்த மக்கள் மன்றம் முடிவு செய்தது இராமனும் தப்பு செய்தவன்தான் இராமனுக்குப் பதிலாக இராவணனே அரசாளட்டும் துன்பங்கள் தொடருமா? தொடரும்: அவை எப்போது இல்லை? இராமனும்தான் ஆட்சிக்கு வந்தால் எந்தத் துன்பங்கள் இங்கே மறையும் ஆகவே இராவணனே அரசாளட்டும் மன்னராட்சி நிலைக்கட்டும் மக்களாட்சியின் பெயரோடு. புத்தாண்டு ஒரு கனவில் புலர்கிறது. என்ன கனவு அது? இன்னும் புலராத சூரியன், மெல்லவே மழைத்துளிகளை உதிர்க்கும். மேகத்திரள்களை நீக்கி விரைவில் வருவானா காலை நேரத்தில் வழக்கமாகக் கரையும் காகங்கள் புத்தாண்டைப் புரிந்து கூறும் செய்தி உண்டா? வானொலிப் பெட்டி வழக்கமாகக் கதையோடு புத்தாண்டுச் செய்தி சொல்லி அடுத்த நிகழ்ச்சிக்கு நகர்ந்தது இன்று மட்டும் - ஒரு நாள் மட்டும் நெடுநாள் - இல்லை - பலநாள் நெஞ்சில் நிற்பதாய் ஏதாவது நிகழ்ந்தால் நல்லது நிகழுமா? பழங்கணக்கைத் தொகுத்து நட்டங்கள் கழித்து நன்மைகள் பெருக்கி - வாழமுடியுமா? நானும் மழைத்துளிகளுக்கு மட்டுமே மகிழ்ந்து எத்தனையோ நாட்களில் இதனையும் ஒன்றாக ஏற்பதில் தடையில்லை. புத்தம் புதியதாக எனக்கு என்ன ஏற்படப் போகிறது எனக்கு மட்டுமா இல்லை. என் நண்பர்களுக்கு பெரிதாகச் சொல்லிக் கொண்டால் இந்த நாட்டுக்கு ஒவ்வோர் ஆண்டில் வித்தியாசமாய் நிகழும் சில இந்த ஆண்டிலும் நிகழலாம் அதனால் இது புத்தாண்டா! இல்லை இன்னுமோர் ஆண்டு. மோசமில்லை. நன்றாய் வரட்டும் வரவேற்க கையில் மாலையில்லை : வந்தாயிற்று. 1988 சனவரி 1 FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.