[] 1. Title Page 2. Cover 3. Table of Contents சொல் புதிது சுவை புதிது சொல் புதிது சுவை புதிது   எஸ் விஸ்வநாதன்   vishwanathan71@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sol_puthidhu_suvai_puthidhu மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/sol_puthidhu_suvai_puthidhu This Book was produced using LaTeX + Pandoc சொல் புதிது சுவை புதிது தெள்ளத் தெளிவான நடையில் தெள்ளு தமிழ் உலகிற்கு புத்தம் புதிய சுவையில் எளிய இனிய கட்டுரைகள் அருள்மிகு அம்மன் பதிப்பகம் மிகச் சிறந்த நூல்கள் வெளீஹ்யிடுவோர் 212, ராயப்பட்டை நெடுஞ்சாலை (ஆஜந்தா ஹோட்டல் எதிரில்) இராயப்பேட்டை சென்னை – 600 014 தமிழ் வாழ்க! தமிழ் வெல்க !! இது பத்தோடு பதினொன்ராக வந்த நூல் அல்ல! அனைவருக்கும் பயனளிக்கும் பதினொறு கட்டுரைக் கற்கண்டைக் கொண்ட அற்புத நூல். “’சொல் புதிது…… சுவை புதிது” தமிழ்ச் சுவை அருந்துங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள். அருள்மிகு அம்மன் பதிப்பகத்தார் வெற்றி பெறுங்கள்…………..! இலக்கிய அமைப்புகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கட்டுரைப் போட்டி—பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற விரும்பும் இலக்கிய ஆர்வலர்களுக்கு — குறிப்பாக மாணவர்களுக்கு—தகுந்த தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, பல காலம் ஆராய்ந்து உருவாக்கிய கட்டுரைத் தொகுப்புதான் இந்த நூல். இந்த நூல் உருவாவதற்கு எனக்குத் துணை நின்ற நூல்கள் பல…இந்த நூலுக்காக நான் வள்ளுவரையும், பாரதியையும், கம்பனையும் அல்லும் பகலும் என் சிந்தையில் தேக்கி அசைப் போட்டேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் தொடர்பாக ஒரு சில கருத்துக்கள் வேறு நூல்களிலிருந்தும் கிடைத்தன. முகம் தெரியாத அவர்களுக்கும் என் முகத்தை உங்களுக்கு தெரிய வைக்கும் அருள்மிகு அம்மன் பதிப்பகத்தாருக்கும் எனது அன்பு கலந்6த நன்றியும் வணக்கமும் உரித்தாகுக. மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நூலைப் படித்துத் தங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்வதோடு தமிழில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாள ராகவும் விளங்குவார்களாக! செம்பூர் பம்பாய்-89 அன்பன் எஸ்.விஸ்வநாதன் தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை நான்கு தாய்மார்கள் உலகில் தாயின் அன்புக்கு இணை ஏதும் இல்லை. தாய் இன்றித் தநான்குரணி இல்லை தாய் நாம் குடியிருந்த கோயில் “தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை” என்பது மூதுரை. அம்பிகையின் அருளால் நம் எல்லோருக்கும் நான்கு தாய்மார்கள் கிடைத்திருக்கிறார்கள். ஈன்ற தாய், பெற்றதாய்க்குச் சமமாகப் பால் கொடுத்து ரக்ஷிக்கும் கோமாதா, இவ்விருதாய்மார்களையும் தன் மடியில் தாங்கி நிற்கும் பூமாதா, அகிலமனைத்தையும் ரக்ஷித்து அருள்பாலித்துவரும் ஜகன்மாதாஆகிய வர்களே அவர்கள். தான் பராசக்தியாக இருந்துகொண்டு தன் கருணையை உலகில் உள்ளோர் உணரவேண்டும் என்பதற்காக அவள் மானிடத்தாயைப் படைத்தாள்; தனது அதே கருணையை அவள் உள்ளத்திலும் பாய்ச்சினாள். ஆம், தன் மாயையைப் பெண் களுக்கு வழங்கி அன்பையும் பாசத்தையும் ஊட்டித் தனது பிரிதிநிதியாகத் தாய்மார்களை உலகில் வளைய வருமாறு செய்தாள். எனவேதான் தாய்ப் பாசத்திற்கு நிகராக வேறு எதுவும் இவ்வுலகில் தோன்றவில்லை. வேதம் கூறும் தாயின் சிறப்பு இந்துக்களின் பண்டைய வழக்கங்களில் நவராத்திரியில் ஒருநாள் (நவமி) தாயார் தினம் (Mothers Day) எனக் கொண்டாடப்படுக்கிறது. மனுஸ்மிரிதி என்ற வேத நூலில் தாயின் சிறப்பைப் பற்றிய ஒரு உதாரணம்.: ஒரு பேராசிரியர் சாதாரண ஆசிரியர்களைக் காட்டிலும் பத்து மடங்கு மேலானவர் . இதிலிருந்து வேதகாலம் முதல் நம்நாட்டில் தாய் மரியாதைகுரிய, வணங்குதற் குரிய ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படுகிறார். அன்பின் பிறப்பிடமாய், தியாகத்தின் இருப்பிடமாய் கருதப்படுகிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது. குழந்தையின் வளர்ச்சி, மலர்ச்சி, நல்வாழ்வு ஆகியவை அன்னையின் அரவணைப்பிலேயே அமைகின்றன. மற்றவரைக் காட்டிலும் நாம் தாயிடம் மிகவும் அன்பு பாராட்டுகிறோம். தகப்பனாரைக் காட்டிலும் தாயிடம் மனம்விட்டுப் பேசுகிறோம். நம்மைக் காப்பாற்றுவது, அரவணைத்து வளர்ப்பது, ஆறுதலளித்து இன்பமளிப்பது போன்ற காரயங்களையெல்லாம் செய்பவள் தாய்தான். அவளே முதல் குரு. குழந்தை தந்தையைவிடத் தாயிடமே மிகவும் அன்போடு பழகுகிறது. தனக்கு ஏதாவது தேவையென்றால் தந்தையிடம் செல்லாமல் நீட்டிய கரங்களுடன் தாயிடமே ஒடுகிறது. குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் வீட்டு வேலையை அப்படியே போட்டு விட்டுக் குழந்தையைக் கவனிக்க ஒடோடியும் விரைபவள் தாய்தான். ஒரு தாயின் இதயம் எந்த ஒரு பிராணியும், அல்லது மனித ஜீவனும் முதலில் ஏற்படுத்தும் ஒலி ‘மா’ என்ற தாயின் புனித ஒசைதான். தன் குழந்தைகளுக்காக தன்னுடைய எல்லாவற்றையும் தியாகம் செய்பவள் தாய். ஒரு தாய் தன் மகனிடம் காட்டும் தாய்ப் பாசம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு தாய், அவளுக்கு ஒரு மகன், ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்துத் தன் பொருளையெல்லாம் அவளிடம் பறிகொடுக்கிறான். அவனிடம் பொருள் இல்லை என்று அறிந்த அவள் அவனைத் துரத்தி விடுகிறாள். அவனே காமம் முற்றி, “ஊனக்கு எதுவேண்டுமானாலும் கேள், கொண்டு வருகிறேன்” என்று கூறுகிறான். அவள் கேலியாக, “ஊன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும் கொடுப்பாயா?” என்று கேட்கிறாள். அவள் மீது காதல் மயக்கத்தில் இருந்த அவன் உடனே தாயிடம் ஒடினான். “அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டுமம்மா” என்கிறான். “அவளை என்னால் மறக்க முடியாதம்மா” எங்கிறான். “அதன் மூலம் அவள் திருப்தி அடைந்து உன்னுடன் இருப்பாளானால் என்னைக் கொன்று இருதயத்தை வெட்டி எடுத்துக் கொள்” என்று தாய் கூறினாள். அவன் தாயைக் கொன்று இருதயத்தை எடுத்தான். காதலியின் வீடு நோக்கி அவசரமாக ஒடினான். வழியில் ஒருகல் தடுக்கி கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயமும் கீழே விழுந்தது. அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அந்த இருதயம் சொன்னது. “ஐயோ! அடிபட்டு விட்டதா மகனே! வலிக்கிறதா! நான் உயிரோடு இல்லையே உனக்கு மருத்துவம் செய்ய!”. மகன், “அம்மா” என்று அலறினான். அவன் ஆவி பிரிந்தது. வேறு யாரும் அவனைக் கைத்தூக்கி விடும் முன், தாய் பதறினாள். அடிபட்டு விட்டதா எனக் கேட்கிறாள். மகன் இருதயத்தையே அறுத்து எடுத்த போதிலும் தாய்ப்பாசம் மாறவில்லை. மகான்கள் விளக்கும் தாயின் அன்பு முற்றும் துறந்த பட்டினத்து அடிகள், சங்கர பகவத் பாதர்கள் ஆகியோர் கூட இந்த அன்னையின் பாசத்தை துறக்க முடியவில்லை. ஆதி சங்கரர் இயற்றிய ‘மாத்ரு பஞ்சகம்’ நூலில் தாயின் அருளைப்பற்றி மிகவும் உருக்கமாகப் பாடியுள்ளார். லலிதா சகஸ்ர நாமத்தில் ஆயிரம் நாமாக்களால் துதிக்கப்படும் தேவியை முதல் ஸ்லோகத்தில் தாயாக வழிபடுகிறார் ஸ்ரீ ஆதி சங்கரர். “முதலில் தாயிடம் கடவுளைக் காண்பவன், தான் காணும் பொருள் மீது எல்லாம் கடவுளைப் பார்க்கிறான்” எங்கிறார் “ஜத்வ்ஜோமயானந்தா” என்ற சுவாமிகள். ஆதிசங்கரர் ஒரு ஸ்தோத்திரத்தில், “ஓருவன் நடத்தையில் எத்தனை குறைகள் இருந்தாலும் அவன் தன் அன்னையின் அருகில் இருக்கும்வரை அவனுக்குத் தீய எண்ணங்கள் வாராது” என்கிறார். “ஓரு தாய்க்குப் பிறக்கும் மகன் கெட்டவ னாகலாம். ஆனால் ஒரு மகனை ஈன்ற தாய் கொடியவளாக இருக்க மாட்டாள்” என்றும் கூறுகிறார். மகன் தீங்குகள் பல செய்தவனாக இருப்பினும் தாயானவள் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் மகனிடம் என்றென்றும் மாறாத அன்பைப் பொழி கிறாள். மேலே கூறப்பட்டிருக்கும் கதை இந்தக் கருத்தை எத்தனை உண்மையென வலியுறுத்துகிறது. அதனாலேயே தாயானாவள் என்றென்றும் போற்றப்படுகிறாள். நம் உபநிஷத்துக்கள் மாதா பிதா குரு தெய்வம் என முதலில் மாதாவைக் குறிப்பிடுகின்றன. சிறு வயதில் தாய்க்குக் கட்டுப்பட்டு வளரும் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், தம் தாய் நாட்டுக்குக் கட்டுப்பட்டு இருப்பான் எனக் கருதுபவர்கள் இந்துக்கள். விநாயகரும் அன்னையும் ஒரு முறை விநாயகர் பாலகனாக இருக்கும் போது ஒரு பூனையுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் பூனைக்கு உடம்பில் சிறிது காயம் ஏற்பட்டது. தன் இருப்பிடம் திரும்பியதும் அன்னை பராசக்தியைப் பார்த்தார். என்ன ஆச்சரியம்! பூனைக்குக் காயம்பட்ட அதே இடத்தில் அன்னையின் உடம்பிலும் காயம் ஏற்பட்டு இருந்தது. அன்னையிடம் அதற்குக் காரணம் வினவினார். அதற்கு அன்னை, “எல்லாம் உன் அஜாக்கிருதையினால் வந்ததுதான்” என்கிறார். அதற்கு விநாயகர், “நான் ஒருபோதும், எவர்க்கும் மனத்தால்கூடத் தீங்கு செய்ய நினைத்தது கிடையாது” என்றார். அதற்கு அன்னை,“நீ ஒரு சிறிய பூனையுடன் விளையாடிய போது ஏற்பட்ட காயம் என்மீதும் ஏற்பட்டது. உலகில் உள்ள எல்லா ஜீவங்களும் நானே! ஆகையால் யாருக்கெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ அவைகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். கணேசர் அன்னையின் பதிலைக் கேட்டுத் தன் தவற்றை உணர்ந்தார். அன்று முதல் உலகில் உள்ள பெண்மணிகள் அனைவரையும் தன் தாயாகப் பாவித்து, தான் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளாமல் பிரும்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். எல்லாப் பெண்களையும் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாகவே கருதினார். அதனாலேயே “தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை” என்றார் ஔவையார். “உலகத்திலேயே உன்னதமான இடம் ஒன்று உண்டென்றால் அது உன் தாயின் கருவறைதான். உன்னதமான ஜீவன் ஒன்று உண்டென்றால் அது உன்னைப் பெற்ற தாய்தான். உலகில் கெட்ட பிள்ளை உண்டு, கெட்ட தாய் இல்லை” என்றார் விவேகானந்தர் யார் இல்லையென்றால் நீ இந்த உலகத்தில் பிறந்திருக்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் நீ திரும்பப் பெற முடியாதோ அவளுடைய பெயர்தான் தாய். என்றார் இராமலிங்க அடிகள் உளவியல் நோக்கில் தாய் உளவியல் நோக்குப்படி, கேட்ட மாத்திரத்தில் இறும்பூது கொள்ளச் செய்வனவும் ஆனந்தப் பரவச நிலையை அடையச் செய்ய வல்லனவுமான வார்த்தைகள் பல வுள்ளன. அவற்றுள் தாய், வீடு, சுவர்க்கம் ஆகிய மூன்றும் எந்நிலையிலும் ஆன்ம நிறைவையும் இனங்காண முடியாத பூர்ணத்துவத்தையும் அளிக்கின்றன. இந்த மூன்று வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அவன் வாய், மனம், அறிவு ஆகியன தித்திக்கின்றன. The Sweetest Sounds to mortals given are heard in Mother Home and Heaven. மேற்கிந்திய மக்களுக்குக் கூட இந்த “அன்னை பாவம்” இப்போது மிகவும் எளிதான, இயற்கையான இறைவழிபாட்டு முறையாக அமைந்து வருகின்றது. மிகப் புராதனமான மதமான யூதம், “ஆண்டவன் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது.ஆகையால் தாய்மார்களைப் படைத்தான்” எங்கிறது. தாய்மார்களை ஆண்டவனின் பிரிதிநிதிகள் என்றும் சொல்கிறது. பூ மாதாவும் கோமாதாவும் தாயின் ஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்கப்பட வேண்டிய மற்றவர்கள் பூமாதாவும் கோமாதாவும். மனிதனுக்கு உணவுக்குப் பயன் படாத சாதாரண புல்லையும், வைக்கோலையும் தீவனமாகக் கொண்டு வாழும் பசு தன் பாலைச் சிசுக்கள் முதல் வயோதிகர் வரை அளித்துப் பயன் கொடுக்கிறது. இறைவன் படைப்பில் தன் கன்றுக்கு வேண்டியது போக உபரியாக மற்றவர்களுக்கு எல்லாப் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாய் தானே! இந்தப் பூமிதேவி பொருமைக்கு இருப்பிடமானவள். எல்லாவிதப் பயிர்களும் உண்டாவதற்கு ஆதாரமானவள். பூமாதேவி இல்லையென்றால் உலகமே இல்லை. ஆகவே ஈன்றெடுத்தத் தாயைப் போற்றி வணங்குவதன் மூலம் தாயை மட்டுமின்றி கோமாதா, பூமாதா மற்றும் அம்பிகையை வணங்குகின்ற பலனையும், பண்பை யும் நாம் அடைகின்றோம். தாயைப் போற்றுவோம்! தரணியில் சிறப்போம்! கம்பன் கண்ட கும்பகர்ணன் கம்பரின் கவிச் சிறப்பு அன்னைத் தமுழுக்கு அணிகலன்களாய்த் திகழ்பவை செந்தமிழ் இலக்கியங்களும், பைந்தமிழ்க் காப்பியங்களுமே. தமிழ்க் காப்பியங்களில் தனக்கென ஒர் சிறப்பான இடத்தினைப் பெற்றிருப்பது கம்பராமாயணம். கம்பனால் தமிழ் பெருமை பெற்றது. தமிழால் கம்பன் உயர்ந்தான். “கவியிற் பெரியர் கம்பர்” ‘கவிச் சக்ரவர்த்தி கம்பர்’ ‘கம்பன் வீட்டுள் ஒரு சிறு புன் கட்டுத்தறியும் கவிபாடும்.’ ‘கம்பனாரிடைப் பெருமையுளது’ என்றும் ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ போன்ற தொடர்கள் கம்பன் பெருமையினை நன்கு பறை சாற்றுவனவாகும். மேலும். “அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கன்று அமுதம் ஈந்த தம்பிரான் எனத்தானும் தமிழிலே தன்னை நாட்டி கம்பநாடுடைய வள்ளல் கவிச் சக்ரவர்த்தி பார்மேல் நம்பு பாமாலையாலே நரர்க்குமின்று அமுதம் ஈந்தான்” என்றும், “இம்பர் நாட்டில் செல்வமெல்லாம் எய்தி அரசாண்டிருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஒங்கு நிழல் இருந்தாலும் செம்பொன் மேரு அனையப் புயத்திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்பநாடன் கவிதையிற் போற் கற்போருக்கு இதயம் கனியாதே” என்று வழங்கி வரும் பாடல்கள் கம்பன் தன் கவிச் சிறப்பினை விளக்கும். நிலைத்து நிற்கும் கம்பன் காவியம் ஹோமர் எழுதிய ‘இலியட்’ மில்டன் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ வியாசர் எழுதிய ‘பாரதம்’ ஏன்? வால்மீகி எழுதிய ‘ஆதி ராமாயணத்திலும்’ சிறந்தது கம்பன் கட்டிய காவிய மாளிகையாம் ராமகாவியம் என்பர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து, வளர்ந்து, வளம்பெற்று, தலைதூக்கி, நிலைபெற்று நிற்கும் இலக்கியங்கள் ஒரு சிலவே. அவை கருத்துச் செறிவாலும், உவமை நயத்தாலும், வர்ணணைச் சிறப்பாலும் நிலைத்து நிற்கின்றன. அவ்வகையில் கம்பனின் காவியப் படைப்பு தனித்து நிற்கிறது. தீர்க்கதரிசி கும்பகர்ணன் கம்பனின் படைப்பில் கும்பகர்ணன் பாத்திரம் அறம் வலியுறுத்தும் மந்திரியாகவும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் தீர்க்கதரிசியாகவும், தம்பியருள் சிறந்த தம்பி யாகவும், சிறந்த வீரனாகவும் படைக்கபட்டிருக்கிறது. சகோதர ஒருமைப் பாட்டை மிக நேர்த்தியாக, அழகாக, அற்புதமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பது கம்பராமாயணம். தசரதன் பெற்ற நான்கு மைந்தரோடு வேடுவக் குலத்திலே பிறந்த குகனும் சேர்ந்து ஐவராகி, பின் கிஷ்கிந்தையில் சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவராகி, இறுதியில் இலங்கை விபீஷணனுடன் சேர்ந்து எழுவராகின்ற சிறப்பினை, குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; ;பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம் எம்முழை அன்பின் வந்த அகமனர் காதல் ஐயர் நின்னொடும் எழுவர் ஆனோம் புலகருங்கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என்ற பாடலால் காட்டுகின்றார். கும்பகர்ணனின் எளிமையும் வீரமும் விபிஷணர் இராமனிடம் கும்பகர்ணனைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ஆழியாயிவனாகுவான் ஏழை வாழ்வுடை எம்முனோர் தாழ்விலாதொரு தம்பியான்’ எளிமையான வாழ்வினைக் கொண்டிருக்கும் எனது அண்ணன் இராவணேஸ் வரனுடைய தாழ்விலாத் தம்பியாவான் என்று கும்பகர்ணனைப் பற்றிக் குறிப்பிடு கிறார். அடுத்து கும்பகர்ணன் வீரத்தைக் குறிப்பிட, கால னாருயிர்க் காலனால் காலன் மேனிமிர் காலினான் மாலினார் கெட வாகையை சூலமே கொடு சூடினான், என்று “எமனுடைய உயிரைப் ;பருகுவதற்கு ஒர் எமன் ;போன்றவன், காற்றைக் காட்டிலும் விரைந்து செல்லும் திறனுடையவன், இந்திரனைப் போரில் ஒடஒட விரட்டியவன்” என்று கும்பகர்ணனின் வீரத்தை வர்ணித்துக் கூறுகிறான் விபீஷணன். அறன் வலியுறுத்தும் கும்பகர்ணன். கும்பகர்ணனனை அறம் கூறும் மந்திரியாகக் காட்ட, இராவணன் தனது மந்திரிகளுடனும், மற்றுமுள்ள தன் படைத் தலைவர்களுடனும் கூடித் தான் செய்ய வேண்டிய செயலினை ஆராய்ந்து வருகின்றான். மகேந்திரன், மகோதரன், வச்சிரதந்தன் போன்ற சிறந்த வீரர்கள் “ராமருடன் போர் செய்ய வேண்டும்” என்று ஆலோசனை கூறினர். இவையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கும்பகர்ணன் தனது அண்ணனுக்கு நல்லதைக் கூற வேண்டும் என்று கருதித் தங்களது குலத்தின் சிறப்பினை முதலில் கூறுகின்றான். “அண்ணா! நீ பிரம்மதேவனை முதலாகக் கொண்ட குலத்திலே ஒப்பற்றவனாக இருக்கின்றாய்.. ஆயிரம் பிரிவுகளைக் கொண்ட சாம வேதத்தினைக் கற்றுத் தெரிந்த நீ, தீயினை நெருப்பு எரித்து விடுமே என்ற அச்சம் உணர்ந்து, சீதையாகிய நெருப்பினைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். பிறர் மனைவியைச் சிறையில் அடைத்தல் மனித வீரத்திற்கு இழுக்கு” என்று பலவாறு கூறி சீதையைத் திருப்பி அனுப்பிவிட அண்ணனுக்கு நன்மதி கூறுகின்றான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் கும்பகர்ணன் “கேவலம், மானிடரை வணங்கி வழிபட, கும்பகர்ணா! உனக்கும், உன் தம்பி விபீஷணனுக்கும் மட்டுமே ஏற்றது. நானே மறுமுறை சென்று போரிடுகிறேன்’ என்று முதல் நாள் போரிலே தோற்றுவந்த இராவணன் கூறியதைக் கேட்ட கும்பகர்ணன் இராவணனிடம் மன்னிப்பு வேண்டிப் போர்க்களம் செல்கிறான் போர்க்களத்தில் விபீஷணன் கும்பகர்ணன் இருக்கும் இடம் வந்து, அவனை இராமனிடம் சரணடையச் சொல்கிறான். அப்போது கும்பகர்ணன் கூற்று மிகச் சிறந்ததாகச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் திறத்தினை விளக்குவதாய் அமைந்திருக்கிறது. “நீர்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்ந்து பின்னைப் போர்க்கோலஞ் செய்துவிட்டாற்குயிர் கொடாதங்கு போகேன்” மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. தான் உறங்கியெழும் போதெல்லாம் தனக்கு வேண்டிய உணவு வகைகளைச் சித்தமாய் வைத்துக் கொண்டு ஊட்டி வளர்த்தவன் இராவணன் என்றும், என்னாலியின்ற வரை போரிடுவேன் என்ற நம்பிக்கையில் இராவணனிருக்கையில் நான் இராமனுடன் சேர்வது நம்பிக்கைத் துரோகமாகும் ஆதலால் அவ்வாறு செய்யேன் என்பதை- “போர் கோலஞ் செய்து விட்டாற்கு உயிர் கொடா தங்கு போகேன்” என்றும், அண்ணன் இராவணனால் வளர்க்கப்பட்ட இவ்வுடல் அவனுக்கு உதவாமல் இராமனிடம் நான் வரமாட்டேன்,என்றும் கூறித் தன் கடமையினைச் சிறப்புடன் எடுத்துக் காட்டுகின்றான். மாவீரன் கும்பகர்ணன் போர்களத்தில் இராமனைத் தனக்கு நேராகக் கண்ட கும்பகர்ணன் கூறும் சொற்கள் அவன் எத்தகைய மாவீரன் என்பதைத் தெளிவுறக் காட்டுகின்றது. அவன் இராமனிடம் கூறுகின்றான் “ஏ ராமா, உன் தம்பி இலக்குவனுடன் எதிர்த்துப் போர் செய்ய விரும்ப வில்லை.அவ்வாறே அவனை ஏந்தி வந்த அனுமனுடன் நான் போர் செய்யவும் விரும்பவில்லை. இவர்கள் அனைவரும் எனக்கு நிகரில்லர். இவர்களுடன் போரிடுவது எனக்கு இழுக்கு. இவ்வளவு நார் நான் உன்னைத் தான் தேடித் திரிந்தேன்” என்று கூறும் கும்பகர்ணனின் கூற்று அவனது வீரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. இவ்வாறு கும்பகர்ணனைப் படைத்த கம்பன் அவனது வீரத்தினையும், புகழிலே நாட்டத்தினையும் எடுத்துக் கூறுகின்றான். போரிலே கை கால்கள் அனைத்தையும் இழந்து போர்க்களத்தில் கிடந்த கும்பகர்ணன் கடைசியாக இராமனிடம் வேண்டுகிறான். “எனது மூக்கு முதலியன இழந்து நான் இருக்கும் நிலையைத் தேவர்களும், முனிவர்களும் பார்த்தால் ஏளனம் செய்வார்கள். ஆகவே, ராமா! அவர்கள் பார்க்கும் முன்பு எனது கழுத்தினை அறுத்துவிடு, அதைக் கடலிலே போட்டுவிடு” என்று கூறுகிறான். அவன் கூறுகிறானோ, இல்லையோ; கம்பன் அவன் கூறுவதாகக் கூறி சொற் சித்திரம் அமைத்து அவனது வீரத்தினைப் புகழ்கின்றான். இவ்வாறு கும்பகர்ணனை ஒரு சிறந்த வீரனாக, பாசமுள்ள தம்பியாக, செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் செய்நன்றி மறவாத பண்புடையவனாக, அறம் அறம் அறிந்த அமைச்சனாக நமக்குக் காட்ட்டுகின்றார். கும்பகர்ணனின் நன்றி மறவாப் பண்பு செய்நன்றி மறவாப் பண்பை இராமாயணத்தில் கும்பகர்ணன் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக உணர்த்தும் கம்பர்,தனது நன்றிமறவாப் பண்பை இன்னொரு இடத்திலும் காட்டுகின்றார். தம்மை ஆதரித்து, வளர்த்துச் சீராட்டிய சடையப்ப வள்ளலைக் கடைசிவரை மறக்காமல், காவியத்தில் பல இடங்களில் புகழ்கின்றார். அந்தப் புகழின் சின்னமாக, “அரியணை அனுமன் தாங்க அங்க்தன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரிபற்ற, விரிகடல் உலகம் ஏந்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” என்று பாடுகின்றார். மகுடாபிஷேகத்திற்காக மகுடத்தை வசிஷ்டர் யாரிடத்தில் வாங்கி இராமனுடைய தலையில் சூட்டுகிறார் என்றால், சடையப்ப வள்ளலின் மூதாதையர்களிடத்தில் வாங்கி அதை சூட்டினார்” என்று பாடுகின்றார். இராமன் இருந்த அயோத்தி எங்கே? சடையப்ப வள்ளல் இருந்த தமிழகம் எங்கே? இரண்டையும் இணைக்கிறார் கம்பர். இணக்கின்ற நேரத்தில் தான் சடையப்ப வள்ளலுடைய வள்ளன்மைக்குக் காட்ட வேண்டிய நன்றியையும் காட்டுகின்றார். நன்றி காட்ட வேண்டும் என்கிற உணர்வு கம்பனுடைய உள்ளத்தில் எவ்வளவு திண்மையாக ஏறியிருக்கின்றது! பாரதத்தில் செய்நன்றி மறவாப் பண்புக்கு இரு இலக்கண்ம் கர்ணன். அதேபோல் இராமாயணத்தில் கம்பன் கும்பகர்ணன் மூலம் காட்டுகின்றார். பாரதத்தில் கர்ணனுக்குக் கிடைக்கும் பெருமையும், புகழும் இராமயணத்தில் கும்பகர்ணனுக்குக் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கம்பனின் கவிநயம் எத்தனை முறை படித்தாலும் திகட்டாத தேன்தமிழ்ச் சுவை. அதில் ஒரு சிறுதுளியே நாம் சுவைத்த இந்தச் சிறிய வர்ணனை. தைப் பொங்கலின் தனிச் சிறப்பு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. அந்த நம்பிக்கையில் மக்கள் தை மாதம் முதல் புதுத் தெம்புடனும், புதிய உற்சாகத்துடனும் இருப்பதைப் பார்க்கிறோம். தமிழகத்தில் பொங்கல் திருநாள் மிகவும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. தைமாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கு முன்பே மக்கள், குறிப்பாக கிராமத்தில் தங்கள் இல்லங்களை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தித் திண்ணைச் சுவருக்குக் காவி வர்ணம் தீட்டி அழகு படுத்துவார்கள். வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தி வண்ணமிகு கோலங்களால் அலங்கரிப்பர். தமிழகத்தில் தைப் பொங்கல் நாங்கு நாட்கள் சேர்ந்தாற்போல் கொண்டாடப் படுகிறது. முதல்நாள் போகிப் பண்டிகை. இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை. மூன்றாம் நாள் மாட்டுப் பெங்கல். நாங்காம் நாள் கன்னிப் பொங்கல். துன்பங்களைப் போக்கும் போகிப் பண்டிகை போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல் நாள் தக்ஷிணாயத்தின் கடைசி தினமாக வரும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் தக்ஷிணாயன கால பண்டிகைகள் எனப்படும். அதேபோல தை மாதம் முதல் ஆனி மாதம் வரை கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் உத்தராயண கால பண்டிகைகள் எனப்படும். போகிப் பண்டிகை என்று அழைப்பதன் பொருள் நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங் களைப் போக்கி, தை மாதம் முதல் புது வாழ்வு ஏற்படப்போவதால் இந்நாளை ‘போக்கி” என்றனர். அந்தப் போக்கி என்ற சொல் நாளடைவில் மருவி ’போகி’ என்று மாறியது. போகிப் பண்டிகைக்கு இந்திர விழா என்ற பெயரும் உண்டு.பழந்தமிழர்கள் போகிப் பண்டிகையை ஆரம்ப காலத்தில் இந்திரவிழா என்றே கொண்டாடி வந்தனர். இந்த விழாவின் போது இந்திரனுக்கு விசேஷ பூஜைகள் ஆலயங்களில் நடைபெறும். இந்த விழா தொடிதோட் செம்பியன் என்ற சோழ மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது. சூரியனுக்கு உகந்த பொங்கல் பண்டிகை போகிப் பண்டிகைக்கு மறுநாள், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை நாள். அனைவரும் வைகறைத் துயிலெழுந்து நீராடிப் புத்தாடை உடுத்திக் கொண்டு ஆனந்தம் பொங்க பொங்கல் நாளை எதிர் கொண்டழைப்பர். கிராமப்புறங்களில் மக்கள் வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில் பெருக்கி மெழுகி கோலமிட்டு தோரணங்களால் அலங்கரித்து, முற்றத்தில் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், புஷ்பம், மஞ்சள்குலை,வாழை இலை,கரும்பு குத்து விளக்கு முதலியன வைத்து புதிய அடுப்பில் புதிய மண்பானையில் பூவும் பொட்டும் இட்டு, கரும்பும் மஞ்சளும் சேர்த்து மாலையாகக் கட்டி அறுவடை செய்த அரிசி, வெல்லம், நெய், பால் சேர்த்து பொங்கல் வைப்பர். பொங்கல் வைக்கும் நேரம் சூரியன் நடுவானில் வரும் நேரம், பொங்கல் பொங்கிவர ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதுகலம் பொங்க பெரியோரும், சிறியோரும் கூறி வரவேற்பர். சூரிய பகவானுக்கு விசேஷ பூஜை செய்து பொங்கலை நிவேதனம் செய்யும்போது தங்கமயமாய் தகதகவெனச் ஜொலிக்கும் சூரியன் அத்தனை பேரையும் ஆலிங்கனம் செய்கிறார். மகர சங்கராந்தி தைமாதத்திற்கு மட்டும் ஏன் இத்தனைச் சிறப்பு? தை மாதம் முதல் நாளில்தான் சூரியன் தென் திசையிலிருந்து வட திசைக்குத் தன் பயணத்தைத் தொடங்கு கிறான். அந்த நாளை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உத்திராயணம் தேவர்களின் பகல் பொழுது. தக்ஷிணாயணம் அவர்களின் இரவு காலம். சுப காரியங்களைச் செய்வதற்கு உத்திராயணமே சிறந்த காலமாகும். இறப்பதுகூட “உத்திராயணத்தில் இறந்தால் நற்கதி கிடைக்கும்” என்கிறது பகவத் கீதை. இக்காரணம் பற்றியே மகாபாரதத்தில் போரில் அடிபட்ட பீஷ்மர் உத்திரயணத்தில் தன் உயிரைப் போக்கிக் கொள்ள அம்புப் படுக்கையில் இருந்து உத்திராயணம் வரும் வரை காத்திருந்தார்” என்பது மகா பாரதக் கதை. சூரியன் தை மாதம் முதல் நாள் தனுர் ராசியைவிட்டு மகர ராசிக்கு வருகின் றார். அக்காலத்தை மகர சங்கராந்தி என்று கூறுவர். சித்திரை வருஷப் பிறப்பு போல் மகர சங்கராந்தியும் விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. தானம், தர்மம், தர்ப்பணம் முதலிய நல்ல கர்மாக்களைச் செய்ய உகந்த புண்ணிய காலம் சங்கராந்தி தினம். பன்னிரண்டு சங்கிரமணமும் தர்ப்பணம் செய்யாத வர்கள் கூட அன்று தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும். மகர சங்கராந்தி என்று சொல்லப்படும் தை மாதப் பிறப்பன்று சூரிய நாராயண பூஜை மிகவும் சிறப்புடையது. தைப்பொங்கல் தினத்தை உழவர் திருநாள் என்றும் கொண்டாடுவர். “புதுத் தொழில் துவங்குபவர்கள் தை மாதத்தில் துவங்கினால் நன்கு லாபம் தருவ தோடு வளர்ச்சி பெறும் என்பது பண்டைக்காலம் தொட்டு வழங்கிவரும் உண்மை மாட்டுப் பொங்கல் எனும் உழவர் திருநாள் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். உழவுக்கும் தொழிலுக்கும் காரணமாய் இருக்கும் மாடுகளைப் பூஜித்துக் கொண்டாடும் உழவர் திருநாள் மாட்டுப் பெங்கல். பசு, எருமை, காளை மாடுகள், குதிரை முதலியவற்றைக் குளிப்பாட்டி மாட்டின் கொம்புகளுக்கு வர்ணமிட்டு நெட்டி முதலிய மாலைகளால் அலங்கரித்துப் பூஜை செய்து பொங்கல், வெல்லம், கரும்பு முதலியவற்றைத் தீவனமாகக் கொடுப்ப்ர். மாலையில் அவற்றை அலங்கரித்து வீடுவீடாக அழைத்து வருவர். ‘பொங்கலோ பொங்கல்’‘மாட்டுப் பொங்கல்’ என எழும் ஒசையும் ‘சல் சல்’ என்ற் சலங்கை ஒலியும் கேட்பதற்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும் மாடுகள் இதிகாச காலம் தொட்டே ஜீவனத்திற்கு இன்றியமையாதனவாக இருந்து வருகின்றன. பசுவைத் தாயாகக் கொண்டாடுகிறோம்.”கோமாதா நம் குல மாதா’ என்று பசுவிற்குப் பூஜை செய்து வருகிறோம். பசு காமதேனு. காமதேனுவின் உடலில் அத்தனை தேவர்களும், தேவதைகளும் குடியிருக்கின்றன. பசுக்களைக் காப்பது ஒர் உத்தமமான தர்மம்” என்று வேதம் சொல்லியுள்ளது. ஸ்ரீமகா லக்ஷிமியின் முழு சாந்நித்தியமும் பசுவிடம் உள்ளது. எல்லா உப நிஷத்துக்களும் பசுக்கள் அவற்றைக் கறக்கும் இடையன் ஸ்ரீ கிருஷ்ணன். அப்பசுக்களின் கன்று அர்ச்சுனன். கறந்த பால் கீதை. பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள்” எங்கிறது கீதா மங்கள சாசனம். திருவானைக் கோயில் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் பிரதி தினமும் நடுப் பகலில் கோ பூஜை நடைபெறுகிறது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மடத்தில் இன்றும் முதலில் கோ பூஜை செய்த பின்னரே சந்திரமௌலீஸ்வர பூஜையை ஆரம்பிக் கின்றனர். ஆதிகாலத்தில் பசுக்களை பண்டம் மாற்றும் முறைக்கு உபயோகித்து வந்தனர். ’தசரத சக்ரவர்த்தி பத்து லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தார்” என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. வயதானவர்கள் காலமானால் கர்மாக்கள் செய்யப்படும்போது “கோ தானம்” மிகவும் சிறப்புடையதாக இன்றும் இந்துக் களிடையே கருதப் படுகிறது. சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். ரிஷபம், நந்திதேவராகச் சிவபெருமானுக்குத் தொண்டு ஆற்றி வருகிறது. மனம் கவரும் மஞ்சு விரட்டு மாட்டுப் பொங்கல் அன்று “மஞ்சு விரட்டு” நடைபெறும். இதனையே “ஜல்லிக் கட்டு” என்றும் கூறுவர். மாலையில் பசுக்களையும், காளைகளையும் அலங்கரித்துத் துணியில் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கழுத்தில் அல்லது கொம்புகளில் கட்டி வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாய் அழைத்து வருவர். தமிழ் நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மஞ்சு விரட்டுத் திருவிழாவை நடத்துகிறார்கள். தற்பொழுது அரசு சுற்றுலா நிகழ்ச்சியிலும் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கிறது. காளைகளை விரட்டும் மைதானத்தைச் சுற்றிலும் மூங்கில் கம்பங்களால் கட்டி விடுவர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவர். கிராமங்களில் ஜல்லிக் கட்டுக் கென்றே காளைகளை வளர்த்து அவற்றின் கொம்புகளைச் சீவி கூர்மையான உலோகத்தாலான குமிழ்களை இட்டு அலங்கரிப்பர். பிறகு காளைகளை நன்கு மசாஜ் செய்து அவற்றின் கொம்பின் அடிப்புறத்தில் ரூபாய் நோட்டுக் கற்றைகளைக் கட்டி, அதைக் கழுத்துடன் இணைத்துக் கட்டிவிடுவர். சில சமயம் ஜரிகை போட்ட வேஷ்டிகளில் தேங்காய், பழம், தங்க மோதிரம் முதலியன வைத்துக் கட்டி விரட்டி விடுவர். தீரமுள்ள இளைஞர்கள் அத்துடன் சேர்ந்து ஒடி, காளையின் வாலையும் கொம்பையும் சேர்த்துப் பிடித்து அடக்கி, அதன் கழுத்தில் இருக்கும் பணத்தைப் பரிசாய் எடுத்துச் செல்வர். காளைகளைப் பிடிக்கையில் சற்று அசாக்கிரதையாய் இருப்பின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சம்பவமும் நடைபெறுவதுண்டு. இருப்பினும் இதை ஒரு வீர விளையாட்டாகவே கருதுகின்றனர். அன்றைய தினம் மாடுகளை உழவுக்கும், பாரம் சுமக்கும் தொழிலுக்கும் பயன் படுத்த மாட்டார்கள். கன்னிப் பெண்களின் கன்னிப் பொங்கல் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கன்னியர்களுக்கு உகந்த நாளான கன்னிப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. இதனைப் பூப்பொங்கல் என்றும் கூறுவர். இது பெண்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல் தினத்தன்று பானையில் கட்டியிருந்த மஞ்சளை எடுத்துச் சென்று வயது முதிர்ந்த பெண்மணிகளிடம் கொடுத்து நெற்றியிலும் திருமாங்கல்லி யத்திலும் மும்முறை தேய்த்துக் கொள்வர். அவர்களை வணங்கி ஆசி பெறுவர். அன்று கனுப்பொடி வைத்து, முதல் நாள் வைத்த அன்னத்தில் மஞ்சள் சாதம், சிகப்பு சாதம், சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலியனவற்றை ஒரு மஞ்சள் இலையில் சூரியனுக்கு எதிராக வைத்து ஆறு, குளங்களின் படித்துறைகளில் வைத்துக் காக்கைகளுக்கு அளிப்பர். பின் அங்கு கூட்டம் கூட்டமாய்க் கூடி கும்மி, கோலாட்டம் முதலிய கேளிக்கைகளை நடத்தி ஆனந்திப்பர். ஆறு குளங்கள் இல்லாத ஊர்களில் வீட்டின் முற்றத்தில் அல்லது பின்புறமுள்ள திறந்த வெளியில் வைத்து குளிக்கச் செல்வர். குறிப்பாகக் கன்னிப் பெண்கள் இருக்கும் வீடுகளில் கன்னிப் பெண்களே மஞ்சள் இலையில் கனுப் பொங்கல் இடவேண்டும். கனுப் பொங்கல் வைத்த பின்பே குளித்துப் புத்தாடை உடுத்திச் சூரியனை வழிபட்டு விருந்து உண்பர். கன்னிப் பொங்கலுடன் பொங்கல் பண்டிகை நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் பொங்கல் பணிடிகை கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தில் தான், கேரளத்தில் சபரிமலையில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி தரிசனம் அளிக்கிறார். ரத சப்தமி தைமாதம் ஆரம்பித்து ஏழாம் நாளில் சூரியன் வடக்கு நோக்கி மகர ராசியில் தமது ரதத்தில் சஞ்சாரத்தைத் தொடங்குகிறார். இந்த நாளைத்தான் ரத சப்தமி என்று கூறுகின்றனர். ஒரு சிறந்த புண்ணிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஏழு எருக்கு இலைகளில் அட்சதை, பசும் சாணி ஆகிய வற்றுடன் தலையில் வைத்து ஸ்நாநம் செய்வது பண்டைத் தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம். இது சகல பாபத்தையும் போக்கிப் புண்ணியத்தை அளிக்கிறது. இதையடுத்து, தைமாதம் வரும் பூச நக்ஷத்திரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா முருகன் ஆலயங்களிலும், குறிப்பாகப் பழநியில் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது, இப்படிப் பலவிதங்களில் புனிதத்துவம் பெற்றுப் போற்றப்படும் மகர சங்கராந்தி தினத்தில் தைப் பொங்கல் கொண்டாடுவது உலகிற்கே நன்மை பிறப்பதாய் அமையும் என்பதில் ஐயமில்லை. பாஞ்சாலி சபத்தில் பாரதியின் கவிநயம் காடு கமழ வந்த கற்பூரச் சொற் கோவாய், நீடு துயில் நீங்கப் பாடி வந்த நிலாவாய் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாவேந்தனாய்ப் புவியரசை வென்ற கவியரசராய் விளங்கியவன் பாரதி. வாழையடி வாழையாக வந்த கவிஞர் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவந்தான், சொல் புதிதாய், சுவை புதிதாய், வளம் புதிதாய், பொருள் புதிதாய் சுவைமிக்க நவ கவிதைப் படைத்து அடிமைத் தழும்பு பறக்க ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடியவன் பாரதி. எளிய நடை கண்ட பாரதி அகராதியும், ஆசானும் துணை செய்தாலன்றி நெருங்க முடியாத இரும்புக் கோட்டைகள் எனக் கவிதைகளைப் புலவர்கள் அந்த நாட்களில் உருவாக்கி மகிழ்ந்தனர். எளிதில் புரிந்து கொள்ளா வண்ணம் கடுமையான சொற்களைக் கொண்டு புனைவதுதான் கவிதை என்று பலரும் எண்ணி வந்தனர். எளிய மக்கள், படிப்பறிவில் தாழ்நிலை மக்கள்கூட உணரும் வண்ணம் கவிதையை உருவாக்கிய முதல் புதுமைக் கவிஞன் பாரதி. யமகம், திரிபு, அந்தாதி, எதுகை என்று படிப்பவரைப் பயமுறுத்திக் கவிதை என்றாலே காததூரம் ஒடவேண்டிய அவசியமில்லாமல் எளிய சொற்களைக் கொண்டு அனைவரும் ஏற்கும் வண்ணம் உருவாக்கிய நடையை அவன் கவிதைகளில் காணலாம். முக்கனிகளிலே எக்கனி சிறந்தது பாரதியின் முப்பெரும் பாடல்களில் கவிச்சுவையில் விஞ்சியது கண்ணன் பாட்டே, குயில் பாட்டே, பாஞ்சாலி சபதமே என்று படிப்பவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருதுவர். பாரதிப் பாடல்களில் கவிச் சுவையில் விஞ்சியது என்று எதுவும் கிடையாது. காரணம் கவிச்சுவை எதிலும் குறைவற்று நிறைவுடன் காணப்படுவதுதான். முக்கனியைக் கொடுத்து, எக்கனி சிறந்தது எனக் கேட்பது போல் இருக்கிறது. பாரதி எழுதிய கவிதைகள் பாமரர்கள் முதல் பாவலர்கள் வரை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்த அழகிய எளிய நடை. சின்னசிறு சொற்களிலே, சிந்தை தவழும் நடையினிலே குயில் பாட்டாகட்டும், கண்ணன் பாட்டாகட்டும், பாஞ்சாலி சபதமாகட்டும் அதனைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வு, நமது ரசனைக்கு ஏற்ப ஒவ்வோருவரும் ஒவ்வொருவிதமாய் ரசிக்கின்றோம். அந்த வகையில் பாரதியின் கவிநயத்தை பாஞ்சாலி சபதத்தில், அவர் சொன்ன கருத்துக்களை சிலர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், அதைச் சொல்லும் நயம் யாவரும் வியந்து போற்றத் தக்கது! பாரதியின் கவிநயத்தில் பாஞ்சாலி சபதம் பாரதம் எழுதியவருக்கே கூட தோன்றாத கவிதையும் கற்பனையும் பாஞ்சாலி சபதத்தின் கதா பாத்திரத்தின் மூலம் பாரதியார் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பப் பாடலிலே இது தெள்ளென விளங்கும். ஒரு சங்கீத வித்வானின் கச்சேரிக்கு களைகட்டும் முதல் பாடல் போல் அமைந்துள்ளது. “ஒம் எனப் பெரியொர்கள், என்றும் ஒதுவதாய் வினை மோதுவதாய் தீமைகள் மாய்ப்பதுவாய்-துயர் தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்” என்று சின்னஞ்சிறு சொற்களிலே செந்தமிழ் நடையினிலே தம் கற்பனைக் கவிதைத் திறத்தைக் காட்டி, நம்மை மேலும் மேலும் அதனை நுகர அழைத்துச் செல்கிறார் பாரதி. நெஞ்சுக்கினிய சொல்லோட்டம் பாஞ்சாலி சபதத்தின் முக்கிய கட்டம் சூதாட்டம். மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசத்திற்கும், பாரதப் போருக்கும் காரணமாக இருந்தது சூதாட்டம். இன்றுவரை தொடர்ந்து உலகின் பலநாடுகளில் பல பெயர்களில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தொழிலாக மாறியிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று கூட சூதாட்டத்தில் ஒன்றுக்கு ஒன்பது என்கிறார்கள். இதை ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பது மடங்கு வைப்பேன் என்று தர்மன் அன்றே சொன்னான். பாண்டவர் மீது பொறாமை கொண்ட துரியோதனன் தன் மாமனான சகுனியிடம் யோசனை கேட்கிறான். அப்போது சகுனி சொல்கிறான். “வெஞ்சமர் செய்திடுவோ மெங்கில் – அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார்? அந்தப் பாஞ்சவர் வீரம் ப்;எரிது காண்—ஒரு பார்த்திபனின் வில்லுக் கெதிருண்டோ!” என்று சகுனி துரியோதனனிடம், “பாண்டவரைப் போரில் வெல்ல முடியாது; சூதால்தான் வெல்ல வேண்டும்” என்பதன் பொருட்டு இப்படிக் கூறுகிறான். ஒரு கவிதையைப் படிப்பதற்கு தேவையான செழுஞ்சொல்லோட்டத்தை, இனிய அழகமைப்பைப் பாஞ்சாலி சபதமெங்கும் காணலாம். சகுனியும் சனியும் சகுனியைப் பற்றிக் குறிப்பிடுகையில் “சகுனியும், சனியும் ஒன்று” என்று சொல்லலாம். சகுனி என்ற மூன்றெழுத்தில் நடுவில் உள்ள ‘கு’ என்ற எழுத்தை எடுத்துவிட்டால் சகுனி சனியாகிறது. ஆக சகுனிக்குள் சனி அடக்கம். சகுனி பாண்டவருடன் விளையாடினான் என்றால், சனி சகுனி உருவில் விளையாடியது என்று பொருள் கொள்ளலாம் அல்லவா! சகுனியின் சூழ்ச்சியால் துரியோதனன் பாண்டவரை சூதுக்கு அழைத்திடும் திட்டத்தை அறிந்த திருதராட்டிரன், விதிசெய்யும் விளைவினுக்கே-இங்கு வேறு செய்வோர் புவிமீ துளரோ? மதி செறி விதுரன் அன்றே—இது வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்” சகுனியின் சேர்க்கையால் விதியுடன் உபமானமாக ஒப்பிடுகிறான் இங்கு நமது கவிஞன். மதி செறி விதுரன் கௌரவர்களிடையே மதி நுட்பமும் நல்ல குணமும் உடையவன் ஒருவன் உண்டு என்றால் அது ‘விதுரன்’ என்பதனைத் திருதராட்டிரன் வாயிலாக, ’மதி செறி விதுரன் அன்றே” என்று உணர்த்துகிறான். சகுனி சூதுக்கு அழைப்பதைக் கூறும்போது “சூதில் வெல்வதும் தோற்பதும், போரில் வெற்றியும் தோல்வியும் பெறுவது போலத்தான். அதனைச் சூது என்றோ சதி என்றோ சொல்வது தவறு” எங்கிறான். “தேர்ந்தவன் வென்றிடுவான்—தொழில் தேர்ச்சி இல்லாதவன் தோற்றிடுவான் ஒர்ந்திடு சாத்திரப் போர்-தனில் உணர்ந்தவன் வென்றிட, உணராதான் சோர்ந்தழி வெய்திடு வான்” இதை சூதென்றும், சதியென்றும் சொல்வாரோ, சூதாட்டத்தில் வல்லவனாய் விளங்கும் சகுனியை பேச்சிலும் வல்லவனாய்க் காட்டுகிறான். இங்கு. சூதாட்டத்திற்கு தருமன் இணங்கியதை, ஏளனமாக, ’மாயச் சூதினுக்கே ஐயன் மன மிணங்கி விட்டான்; தாய முருட்டலானார்; - அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்; நேய முற்ற விதுரன் – போல நெறியு ளோர்க ளெல்லாம் வாயை மூடி விட்டார்; தங்கள், மதி மயங்கிவிட்டார். சூதாட்டம் ஆடுவதை நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேலும் படிக்கத் தூண்டுகிறது, பாரதியின் கவிதை நடை. நாடிழக்கவில்லை தருமா…. சூதாட்டத்தில் தருமன் ஒவ்வொன்றாக இழக்கின்றான். ஆரம்பத்தில் தன் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த மாலை ஒன்றை வைத்து ஆட ஆரம்பித்து ஒவ்வொன்றாக இழந்து, மாடுவரை இழந்து விடுகின்றான் பாருங்கள், “மாடிழந்து விட்டான்—தருமன் மந்தைமந்தையாக; ஆடிழந்து விட்டான்-தருமன் ஆளிழந்துவிட்டான்; பீடிழந்த சகுனி-அங்கு பின்னுஞ்ச சொல்லுகின்றான் நாடிழக்க வில்லை-தருமா! நாட்டை வைத்தாடென்றான்’ கேலியில் கூட கவியின் சொல் அழகின் அமைப்பு பாரதிக்கே உரிய நடை. சூது மீண்டும் துவங்குகிறது. அப்போது சகுனி சொல்கிறான். “நீ அழித்ததெல்லாம்-பின்னும் நின்னிடத்து மீளும், ஒய்வடைந்திடாதே தர்மா! ஊக்கமெய்து’ கென்றான்” அப்போது சீறி எழுகிறான் தருமனின் செய்கை கண்டு நமது கவி, “கோயிற் பூசை செய்வோர்- சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும், ஆயிரங்களான – நீதி யவை உணர்ந்த தருமன் தேயம் வைத் திழந்தான் – சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்.” நீதி, தருமம், நியாயம் எல்லாம் உணர்ந்தவனும் தருமம் தவறாதவனும்,பாண்டவர் தலைவருமான தருமன் மதியிழந்து சூதாடி எல்லாவற்றையும் இழந்ததைக் காண பாரதிக்குப் பொறுக்க வில்லை. அது கண்டு பொருமியே, ஆயிரக் கணக்கான நீதியை உணர்ந்த தருமன் இச்சிறிய செய்கை செய்தான், என்று கோபாவேசத்துடன் சீறி எழுகிறான். தன்னை இழந்தபின் என்னை இழப்பதா? பாஞ்சாலி சபதத்தில் கதையைச் சொல்லிக் கொண்டு போகும்போதே இடையே புகுந்து தன் கருத்தைத் தெள்ளன விளக்கும் பாரதியின் இந்த துணிச்சலான போக்கு, அழகிய கவிதை நடை அனைவராலும் வியந்து பாராட்டுதற்குரியது. தம்பிமார் எல்லாரையும் பணயம் வைத்து இழந்த தருமன் தன்னைத்தானே இழக்கிறான். கடைசியில் எஞ்சியிருப்பது திரௌபதி. அவளையும் தோற்றபின் பாஞ்சாலி அழைக்கப்படுகிறாள் சபைக்கு’ துச்சாதனன் கூறுகிறான், “உன் கணவன் உன்னை வைத்துத் தோற்று விட்டான், வா சபைக்கு” என்று. அப்போது பாஞ்சாலி கேட்கிறாள், ‘தருமன் என் கணவன் தானே? சூதாட்டத்தில் தன்னையே தோற்றுவிட்ட பிறகு என்னை வைத்துச் சூதாடுவதற்கு என்ன ஊரிமை பெற்றிருக்கிறார்’ என்று. அதனையும் கவிஞன் எவ்வாறு கூறுகிறான் பாருங்கள் “நாயகர் தாந்தம்மைத் தோற்றபின்—என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத் தாயத்தி லேவிலைப் பட்டபின் – என்ன சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார் ?’ என்று பாஞ்சாலி கேட்பதாக. “அவள் கேட்டாளோ இல்லையோ” பாரதி கேட்கிறான். இது ஒரு புரட்சிகரமான கருத்து. பாரதம் எழுதிய அந்த பாவணரும் சிந்திக்காத கருத்தைப் பாரதி சிந்தித்தார். இது போன்ற கவிதையின் எழுச்சி வேகமும், மிடுக்கு உணார்ச்சிகளும் பாஞ்சாலி சபதம் முழுதும் நிரம்பிப் படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளுமாறு அமைந்துள்ளது. பாஞ்சாலி சபதமா? பாரதி சபதமா? பஞ்சாலி சபதத்தை பாரதி எழுத வந்ததன் நோக்கம்—துங்கிக் கிடந்த மக்களுக்கு விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தத்தான். பாஞ்சாலி சபதம் பெயரளவியோல் பாஞ்சாலி சபதமாக இருந்தாலும் பாரதியைப் பொருத்தவரையில் இது பாரதியின் சபதம். பாஞ்சாலியை முழுக்க முழுக்க பாரதி பாரத அன்னையாகப் பார்க்கிறார். பழம்பெரும் இதிகாசமாகிய பாரதக் கதையிலிருந்து பாஞ்சாலி சபதத்தை பாரதி எழுதினாலும் காப்பியத்தின் மூலக் கருத்தைத் தனது கவிச்சுவையில் சொல்லா மல் விடவில்லை. அதுவே பாரதியின் கவிதைச் சுவைக்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. பல்சுவை நிரம்பிய பாஞ்சாலி சபதம் உணவில், சுவையாறு என்கிறோம். கடல் ஏழு என்கிறோம். அதுபோல் இலக்கியத்தில் “சுவை ஒன்பது” என்பார்கள். அத்தகைய ஒன்பது சுவைகளையும் ஒட்டு மொத்தமாகத் திரட்டிக் கொடுத்த படைப்புத் தான் பாரதியின் பாஞ்சாலி சபதம். பாரதியார் தமிழ்க் கவிதையிடம் காட்டியிருக்கும் அன்பையும், ஆர்வத்தையும், பற்றையும், மதிப்பையும் அவ்வளவு அழகாக, அருமையாக, நேர்த்தியாக, கவர்ச்சியாக, இனிமையாக, உணர்ச்சி மயமாக சிறப்பாக எடுத்துக் காட்டியவர். அவருக்குப் பின் அவருக்கு ஈடாக எவருமில்லை. தருமம் மறுபடியும் வெல்லும் கடைசியாக அவருடைய கவிச் சுவைக்குச் சிகரமாக விளங்குகின்ற பாடலொன்றை நினைவு கொள்வோம். “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்: எனு மியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று கட்டுண்டோம், பொ றுத்திருப்போம்; காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’ என்றான். “தருமம் இறுதியில் வென்றே தீரும். அதனை உலகிற்கு உணர்த்திட விதி செய்த செய்கை” என்று அர்ச்சுனன் வாயிலாகக் கூறும் இந்தக் கவிநயத்தை எத்தனை முறை கூறினாலும், எத்தனைபேர் கூறக் கேட்டாலும் ஏற்படும் சுவை திகட்டாத ஒன்று. ‘அறம் பாட வந்த அறிஞன்’ பாடுக்கொரு புலவன் பாரதி என்று போற்றப்படும் பாரதியின் கவிதைகளில் பக்திப் பரவசமூட்டும், புரட்சி வாடை வீசும், வீரக் கோடை அடிக்கும், ஈரத் தென்றல் தவழும், அழகு மின்னல் பாயும், கொடுமையை எதிர்க்கும் இடி முழங்கும், சொல்லருவி வீழும், பொருளாறு பாயும், கொள்கை மணங் கமழும், உண்மை ஒளீ வீசும், புகழிசை எழும்பும், செந்தெமிழ் தேன் தித்திக்கும். இத்தகைய புதுமைக் கவிஞனைப் பற்றி அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்— “பழந்தமிழ்ப் தேர்ப்பாகன்; அவனொரு செந்தமிழ் தேனீ; சிந்துக்குத் தந்தை குவிக்கும் கவிதைக் குயில், இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு!” என்றும் திறம்பாட வந்த மறவன்; புதிய அறம் பாட வந்த அறிஞன். என்ற சொல்லோவியத்தால் போற்றுகின்றார். வாழ்க பாரதி நாமம். ஏற்றம் தரும் எண்ணின் பெருமை “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றார் ஔவையார். எண்ணும் எழுத்தும் அறியாதவர் கண்கள் இரண்டும் புண்கள்” எனவும் சான்றோர் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு எண்ணும், எழுத்தும் வாழ்வின் மூச்சாக நமக்கு இருந்து வந்துள்ளன. அந்த எண்ணின் சிறப்பை எண்ணிப் பார்ப்போம். குலம் ஒன்று. ஆண் பெண் ஜாதி இரண்டு, தமிழ் மூன்று, மறை நாங்கு, புலன் ஐந்து, சுவை ஆறு, ஸ்வரம் ஏழு, திக்கு எட்டு, கிரஹம் ஒன்பது, அவதாரம் பத்து. வேதகாலம் முதல் எண்களைப் பற்றிய தெளிவான அறிவை மக்கள் பெற்றிருந்தார்கள். ஏகம், சதம், அயுதம் என்று எழுதும் முறையும் இருந்தன. கல்வியறிவற்ற பாமர மக்களிடம்கூட முன்காலத்தில் எழுத்தறிவு இருந்தது. ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அடையாளங்கள் இட்டிருந்தனர். இந்த அடையாளங்களை காதின் பின்புறம் அல்லது முதுகில் எழுதினர். ஸ்வஸ்திக், வட்டம், சதுரம் போன்ற பல குறியீடுகளையும் ஒன்று, இரண்டு என்ற தொடர்ந்த பல எண்களையும் அடையாளமாகக் குறிப்பிட்டனர். பாராட்டுக்குரிய தமிழ் மொழி பழந்தமிழில் மூன்று நான்கு வகையான எண்கள் இருந்தன. க், உ,நு என எழுத்து எண்கள் ஒரு வகை. ‘க’ வின் வடிவம் + ஆகியது. ஆங்கிலத்தில் 1 ஆக மாறியது. ‘உ’ என்பது 2 என வடிவம் பெற்றது. ‘நு’ என்பது 3 வடிவம் பெற்றது. இப்படி எழுத்துக்களிலிருந்து தனி எண்கள் பிறந்தன. தமிழில் 0 என்ற சுழியை ‘சீரோ’ என்றும் ‘சைபர்’ என்றும் மாற்றிக் கொண்டனர். இந்தச் சுழியை, சைபரை இந்தியாவின் கொடை என்று உலக நாடுகள் பாராட்டுகின்றன. அந்தப் பாராட்டுக் குரியது தமிழ் மொழி. சங்க காலத்தில் எண்களுக்கும் கோடுகளால் குறியிடுவது ஒரு முறை. கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி பிரிந்த காலத்தை நினைத்து வருந்தித் தினமும் சுவரில் கோடு போடுவாளாம். கிராமங்களில் இன்றையத் தாய்மார்கள் பால் கணக்கைக் குறிப்பாக சுவரில் எழுதுவது போல அன்றைய ஆய்ச்சியர் சுவரில் கோடிட்டுக் குறித்ததை ஒரு பழம் பாடல் நயம்படக் கூறுகிறது. இவை இலக்கியத்தில் இருப்பினும் இவற்றிலும் எண்கள் உள்ளன. தமிழிலிருந்து உலகம் முழுதும். தமிழ் எழுத்து எண்களிலிருந்து எண்கள் பிறந்தன. அவை வட இந்தியாவிற்குச் சென்றன. அதுபோல வியாபர நிமித்தம் இந்தியா வந்த அரேபியர் இந்த முறை யினைக் கற்று ஏலம், மிளகு போன்ற பொருள்களும் பிறவற்றையும் வாங்கி ஐரோப்பியர்களுக்கு விற்றனர். அரேபியர்கள் இந்த எண்களையும் பிற தமிழ் இலக்கண வகைகளையும் சொற்களையும் ஐரோப்பாவில் பரப்பினர். தமிழ் வணிகர்கள் உலகெங்கும் பரவி வணிகம் புரிந்தனர். அரேபியர்கள் இந்திய வணிகர்களீடமிருந்து கற்ற எண்களை ஐரோப்பியர்களிடம் பரப்பினர். ஐரோப்பியர்கள் இந்த எண்களை அரேபிய எண்கள் என்று நினைத்து வந்தனர். இனி, எண்களைப் பற்றிய பெருமைகளையும் ஈண்டுக் காண்போம். ஒன்று “ஓன்றை எண்ணு. அதுவும் ஒன்றே என்றும் எண்ணு” ஒன்றான பரம் பொருளிலிருந்துதான் இவ்வுலகம் தொடங்கி இயங்கி ஒடுங்கிப் போகிறது. ஒரே மண்ணிலிருந்துதான் பல பண்டங்கள் உருவாகின்றன. ஒரே தங்கத்திலிருந்து தான் பல ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஒரே சூரியன் தான் உலகிற்கெல்லாம் ஒளி தருகிறான். ஒரே உருவம்தான் கண்ணாடியில் பல உருவங்களாகத் தெரிகின்றது. ஒன்று எங்கிற எண்ணோடு எத்தனை பூஜ்யங்கள் சேர்த்தாலும் அத்தனையும் எண்ணிக்கையில் வளர்கிறது. ஒன்று என்கிற எண்னை எடுத்து விட்டால் பூஜ்யங்களுக்குப் பலன் இல்லை. ஒரு மாங்கொட்டை மரமாகிக் கனியைத் தருகிறது. மேலும் நூற்றுக் கணக்கான மரங்களை உருவாக்கக் காரணமாகிறது. இனிப்புப் பண்டங்கள் பல பெயரும், உருவமும் கொண்டு இருந்தாலும் அவற்றிற்கு அடிப்படை ஒன்றுதான், அது ருசி. ஆகவே, இந்த உலகில் ஒன்று என்ற எண்ணுக்குத் தான் பெருமை. அந்த ஒன்று தான் பரமாத்மா, பராசக்தி, பரம்பொருள் என்று பக்தர்களால் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண், பெண் என்ற ஜாதி இரண்டு. இராமாயணம், மகாபாரதம் என்ற இதிகாசம் இரண்டு. சுக்ல பக்ஷம். கிருஷ்ண பக்ஷம் என்ற பக்ஷம் இரண்டு. ஜீவாத்மா, பரமாத்மா என்று ஆத்மா இரண்டு. தஞ்சை, புஞ்சை எனப் பயிர் இரண்டு. உத்தராடம் தக்ஷிணாயனம் என்ற அயனம் இரண்டு. சோதிட சாஸ்திரப்படி கலை என்ற இரண்டெழுத்து வல்லுனர்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவர்களாய் இருப்பார்களாம். தேர்ந்த அறிவும் எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படும் திறனும் உடையவர்கள் என்கிறது கணித சாஸ்திரம். மூன்று தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம் காலம் மூன்று— இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம். உடமைகள் மூன்று – உடல், பொருள், ஆவி கனிகள் மூன்று – மா, பலா, வாழை மும்மூர்த்திகள் – பிரும்மா, விஷ்ணு, சிவன் முத்தொழில்கள் – ஆக்கல், காத்தல், அழித்தல் முச்சக்திகள் – துர்க்கை, லெக்ஷ்மி, சரஸ்வதி இந்த எண்ணுக்குரியவர்கள் நல்ல கல்வியறிவு பெற்ற பட்டதாரிகளாய் இருப்பார்கள். உயர் பதவியில் பிரகாசிப்பார்களாம். சிலர் மக்களிடையே செல்வாக்கும் மரியாதையும் உடையவர்களாய் விளங்குவார்களாம். எல்லோரு டனும் நன்கு பழகுவார்களாம். வேடிக்கைப் பேச்சினால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உடையவர்களாய் இருப்பார்கள் என்கிறது சாஸ்திரம். நான்கு வேதங்கள் –ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என நான்கு. ஆசிரமம் -பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப் பிரஸ்த்தம், துறவறம்.. எழுத்துக்கள் -உயிர், மெய், உயிர்மெய், ஆயுதம். நிலம் -குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் யுகங்கLள் -கிருதம், த்ரேதா, துவாபரம், கலியுகம் படை -காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, ரதப் படை உபாயங்கள் -ஸாமம், தானம், பேதம், தண்டம் பிரபல விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள். கணிதம், சோதிடம், கைரேகை ஆகிய கலையில் நாட்டமுடையயவர்கள். ஐந்து பொறி ஐந்து —மெய், வாய், கண், காது மூக்கு பஞ்ச பூதங்கள்—நிலம், நீர், நெருப்பு, காற்று, அகாசம் காப்பியங்கள் –சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்கள். பஞ்சலோகம் - தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் புலன் ஐந்து - பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் முதலியன தனித் தொழில் செய்ய ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். தனியார் தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து முன்னுக்கு வரக்கூடியவர்கள். பஞ்சாக்ஷர மந்திரம் ஐந்து. சிவபெருமானை ஆராதிக்க ஐந்துவித காரியங்கள் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் ஏர்படுத்தியிருக்கிறார்கள். 1. விபூதி பூசிக்கொள்ளல். 2. ருத்திராக்ஷம் அணிதல் 3. பஞ்சாக்ஷர ஜபம் செய்தல் 4. பில்வத்தால் அர்ச்சித்தல் 5. சிவனை சதா தியானம் செய்தல் சிவபெருமான் ஆதி சங்கரருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் அருளினார் என்கிறது குருமரபு. அவை வரலிங்கம், முத்ரலிங்கம், ;போகலிங்கம், மோக்ஷலிங்கம், யோகலிங்கம் என அழைக்கப் படுகின்றன. லக்ஷிமி தேவி உலகில் ஐந்து இடங்களில் விசேஷமாக வசிக்கிறாள். பில்வம், பசுவின் பின்பக்கம், பதிவிரதையின் சீமந்தம், யானையின் மஸ்தகம், பத்மம் ஆகிய இடங்கள். ஐந்தாம் எண்ணுக்குரியவர்கள் தனித் தொழில் செய்ய ஆர்வமுடையவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து முன்னுக்கு வரக்கூடியவர்கள். ஆறு. சுவை, ஆறு – இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, உறப்பு. படைவீடு பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம்,பழமுதிர்சோலை. உணவுச் சத்துக்கள்- புரதம், மாவு, கொழுப்பு, உப்பு, வைட்டமின், தண்ணீர். ஷண்மதம் — காணா பத்யம், கௌமாரம், சௌரம், சைவம், வைஷ்ணவம் சாக்தம். தெய்வீக குணங்கள் ஆறு- ஞானம், பக்தி, தூய்மை, தியாகம், அருள், தானம். ஆறாம் எண்ணுக்குரியவர்கள் கலைப் பித்தர்கள். இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் திறமையுடன் பிரகாசிப்பார்கள். ஏழு ஸ்வரங்கள் ஏழு ஸ, ரி, க, ம, ப, த, நி தாளங்கள் ஏழு த்ருவம், ,மட்யம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏக கடை வள்ளல்கள் ஏழு பாரி, காரி, ஒரி, ஆய், எழினி, அதியமான்,பேகன் சிரஞ்சீவிகள் எழுவர் அசுவத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் கன்னியர் எழுவர் அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி புண்ணிய ஸ்தலங்கள் ஏழு அயோத்தி, துவாரகை, காஞ்சி, மதுரை,காசி, காஞ்சி, அவந்தி ஜீவ நதிகள் ஏழு கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, , காவேரி ஏழு என்ற சொல் ‘ஸப்த’ எனவும் ஸாத் எனவும் வடமொழிகளில் வழங்கியதை ‘செவன்’ எனஆங்கிலத்தில் மாறியதாகவும் கூறுவர். எட்டு திக்குகள் - கிழக்கு, மேற்கு, தெற்கு வடக்கு வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு,தென் மேற்கு எட்டுத் தொகை நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு,, பரிபாடல், பதிற்றுப் பத்து, அக நாநூறு, புற நாநூறு, கலித்தொகை அஷ்டலெக்ஷ்மி- தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி,தைரிய லக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி. தமிழில் எட்டு;அஷ்ட, ஆட் என்று வடமொழிகளீல் ஆகிறது. எட்டு, எயிட் என்று மாறுகிறது ஆங்கிலத்தில். ஒன்பது நவரத்தினம், முத்து, பவளம், புஷ்பராகம், நீலம், மரகதம் மாணிக்கம், கோமேதகம், வைரம், வைடூரியம். நவரசம் - உவகை, அழுகை, பெருமிதம், வெகுளி, நாணம், அச்சம், நகை, மருட்கை, கோபம். நவதான்யம் – நெல், கோதுமை, துவரை, உளுந்து, கடுகு, மொச்சை, கடலை, கொள்ளு, பயறு. நவகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது நவதுர்க்கை – மகேசுவரி, கௌமாரி, வராஹி, மகாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி ப்ராஹ்மி, நாரஸம்ஹி, சாமுண்டி , நவத்துவாரம் – கண் (2) காது (2) மூக்கு (2) வாய், முந்திகேசம், ஆசனவாய் ஒன்பது ‘ஞ’ என்பது நௌ ஆகி, நவ், நவ என வட இந்திய மொழிகளில் ஒன்பதினைப் பெறுகிறது.. பத்து பத்து என்பது பத, பதி என்று மாறுகிறது. மராத்தி மொழியில் பத்து,, தஹ என்று ஆயிற்று. பற வடமொழிகளில் ’தச, “தஸ்” என்று மாறியது. பின்ன எண்கள் மனித உடலை ஒன்று என்றால் உடலின் அரை வரையுள்ள பகுதியை அரை என்றனர் முன்னோர்கள் காலின் அளவு உடலில் நான்கில் ஒரு பகுதியாக இருக்கக் கால் என்றனர். இதுவே, கால், அரை இவற்றின் பிறப்பு. உலகில் வேறு எந்த மொழிகளிலும் இவற்றிற்கு பிறப்பு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றிலிருந்து இன்றைய எண்கள் யாவும் தமிழ் எண்களே எனத் தெரிகிறது. (இந்தக் கட்டுரை எழுதத் துணிநின்றவர்க்கு நன்றி: நம் தமிழ் மாட்சி—தமிழ் எண்கள்- சாத்தூர் சேகரன் –மஞ்சரி - உலகளாவிய தமிழ்“) தமிழில் சிறுகதைகள் மூன்று நிலைகளில் சிறுகதை வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டைத் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு நற்காலம் என்றே கூறலாம். சிறு கதைக்கு நல்ல மதிப்பும், வரவேற்பும் இந்நூற்றாண்டில் இருப்பதைக் காண் கிறோம். தின, வார, மாத இதழ்கள், ஆண்டு மலர்கள் அனைத்திலும் சிறுகதைகள் இடம் பெற்றிருப்பதால் இக்கூற்று உண்மையாகிறது. தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றைக் கால வளர்ச்சிப்படி மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். சுமார் 1900 முதல் 1930 வரை உள்ள காலம் அதன் தொடக்க காலம். 1930 முதல் 1950 வரை சிறுகதை இலக்கியமாய்ம் நிலை பெற்றுச் சில சாதனைகள் புரிந்த காலம். 1950 முதல் உள்ள காலம் சிறுகதை வேகமாக வளர்ந்து வரும் காலம். இந்தச் சாதனை வரலாற்றில் பத்திரிககளுக்கும், பதிப்பகங்களுக்கும் தனி இடம் உண்டு. தமிழக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, இலங்கை, மலேயா நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் பங்கு உண்டு. தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்தை ஆராய்ந்தோமானால் பத்தென்பதாம் நூற்றாண்டில், ஆங்கில மொழியில் சிறப்பிடம் பெற்றிருந்த சிறுகதை இலக்கியத்தை நம்மவர் அறிந்த போது அந்த இலக்கிய வகையைத் தமிழிலும் உண்டாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த ஆர்வம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தெளிவான வடிவத்தைப் பெற்றது. வர்கநேரி வெங்கட சுப்பிரமணியன் என்னும் திரு வ.வெ.சு. அய்யரே இந்தத் துறையில் முதன் முயற்சியைக் கையாண்டார். அவருடைய ‘மங்கையர்கரசியின் காதல்’ என்னும் புத்தகம் தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை. வ.வெ.சு. அய்யரின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. அவர் தம் படைப்புகளில் மனிதனின் உயர்ந்த தன்மையை, துயரத்தை நன்கு வெளிப்படுத்துவதில் தீரராய்த் திகழ்ந்தார். அவர் மனம் லட்சியத்தை உருவாக்குவதில் ஒன்றியது. ஆனால் மனிதனின் சிறுமைகளையும், தவறுகளையும் நல்ல கலைத் திறமையுடன் சித்தரிக்க வெகுகாலம் சென்றது. தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி இதன் பிறகு கல்கி, எஸ்.வி.வி. போன்றவர்கள் இயல்பும், கற்பனையும் கலந்து எழுதி நகைசுவையும் ஒருபொழுது போக்கு அம்சமாகப் பயன் படுத்தினார்கள். இதற்குப்பின் தான் தமிழ்ச்சிறுகதை தனகென்று ஒரு தனித் தன்மையைப் பெற்றது. இந்த நிலைமையை உருவாக்கியவர்களில் புதுமைப் பித்தன், பி.எஸ். ராமையா, நாரணதுரைக் கண்ணன், ந பிச்சமூர்த்தி முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காலத்தில் சமூகத்தின் பிரச்சினைகளை யதார்த்த நோக்கிலேயே அணுகிச் சித்தரித்தார்கள். இவர்களில் புதுமைப் பித்தனின் கதைகள் சிறப்புற விளங்கின. வாழ்விற்குப் பொருள் கொடுப்பது தான் கலை. சிறுகதை வாழ்வில் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது என்று புதுமைப் பித்தன் தனது படைப்புகளின் மூலம் காண்பித்தார். இந்தச் சிலருடைய படைப்புக்கள் சுமார் இருபது ஆண்டு காலத்திற்கு சிறுகதைத் துறைக்கு ஊட்டம் அளித்து வந்தது. இவர்களுடைய படைப்பு வேகமும், பத்திரிகைகளின் வளர்ச்சியும், ஆதரவும் தமிழில் இன்னும் பல புதிய சிறுகதை ஆசிரியர்களை உருவாக்கின. அவர்களுள் சோமு, விந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, அகிலன் ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். பி.எஸ். ராமையாவின் சிறுகதைகள் தற்காலச் சூழ்நிலையில் இலக்கியப் பாத்திரங்களைக் கொண்டு தீட்டப்பட்ட உருக்கமான சித்திரங்கள். ‘தழும்பு’, ‘அடிச்சாரைச் சொல்லியழு’ முதலின இவர் போக்கிற்குச் சிறந்த உதாரணங்கள். “குங்குமப் பொட்டு குமாரசாமி” என்ற ஒரே பாத்திரத்தை வைத்து இவர் எழுதியுள்ள சுவையான சிறுகதைகள் ஏராளம். சிறுகதை வளர்ச்சியில் மாற்றம். சமுதாய மாற்றாத்தால் சிறுகதை வளர்ச்சியும் மாறுதல் அடைந்தது. ராஜாஜி, அண்ணாதுரை போன்றவர்கள் கதைகள் அவரவர் அரசியல் கொள்களுக்கு ஏற்ப ஆராயப்பட்டன. ஆனால் புதுமைப் பித்தன் மட்டுமே ‘தனி மனிதன் சமுதாயத்தில் ஒரு முக்கிய உறுப்பினன்’ என்ற தெளிவான கொள்கையுடன் சிறுகதைகளைப் படைத்தார். அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, டி.கே.சீனிவாசன் ஆகியோர் தங்கள் நோக்கில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை சிறுகதையில் புகுத்தினார்கள். அண்ணாதுரையின் ‘சிடுமூஞ்சி’ ‘உண்ணாவிருதம் ஒரு தண்டனை’ போன்ற சிறுகதைகள் என்றும் நினைவில் நிற்கத் தக்கவையாகும். தஞ்சைத் தமிழை சிறு கதைகளுக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர் தி. ஜானகிராமன், ‘சிலிர்ப்பு, ’சத்தியமா!’ நடேசண்ணா’ முதலின அவருடைய சிறந்த கதைகள். சிறுகதை வளர்ச்சியில் புதிய அலை 1950-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மற்றொரு அலை எழுந்தது. தமிழகத்தில் பெரிய பத்திரிகைகளின் 1950—60 இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் சமுதாய சீர்திருத்தங்களக் குறிப்பாக குடும்பக் கட்டுபாடு, படித்த பெண்கள் வேலைக்குப் போதல் போன்ற கொள்கைகளைக் கிண்டல் செய்தும் கண்டித்தும் எழுதப்பட்ட கதைகளையே அதிகம் காணாலாம். இதற்கு நேர் மாறாக, முற்போக்குப் பத்திரிகைகள் எனக் கருதப்பட்ட சில பத்திரிகைகள் இந்தத் திட்டங்களை ஆதரிக்கும் கதைகளையே வெளியிட்டு வந்தன. இதில் தனித்து விளங்கிய சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், நா பார்த்தசாரதி, ஆர் சூடாமணீ, எஸ் லெக்ஷ்மி சுப்பிரமணியன் முதலானோரும், ஈழத்து ராஜரத்தினம், கணேச லிங்கம் பொன்னுத் துரை முதலியோரும் ஆவார்கள். ஜெயகாந்தனின் ‘யுகசந்தி’ ’ புதிய வார்ப்புகள்,’ ‘யாருக்காக அழுதான்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ முதலியன பெரும் வரவேற்பைப் பெற்றன. பல்வேறு வடிவங்களில் சிறுகதை எழுச்சி கடந்த இருபது ஆண்டுகளாய் புதிய திசைகளில் சிறுகதை இலக்கியம் பரந்து வளர்ந்து வந்திருக்கிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியினை ஒட்டி மாறுபட்டு வரும் வாழ்க்கைத் துறையினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் சிறுகதைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குடும்பக் கதைகள் தருவதில் கி. வா.ஜ., பி.வி.ஆர்., லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணிசந்திரன், ஹேமா ஆனந்ததீர்த்தன், இளஞர்கள் விரும்பும் துப்பறியும் கதைகள் தருவதில் தமிழ்வாணன், சுஜாதா, புஷ்பா தங்கத்துரை, ராஜேஷ்குமார், பட்டுக் கோட்டை பிரபாகர், சுபா, சரித்திர வரலாறு தருவதில் சாண்டில்யன், அகிலன், நா. பார்த்த சாரதி, கோ.வி மணிசேகரன், டாக்டர் விக்கிரமன், அரசியல் நையாண்டி செய்து எழுதுவதில் ‘சோ’ உண்மைச் சம்பவம், சரித்திர வரலாறு கதைகள் தருவதில் ஸ்ரீ வேணுகோபாலன், இரா.கணபதி, பக்திக் கதைகள், வழிபாட்டு முறைகள் தருவதில் அம்மன் சத்தியநாதன், நாகர்கோவில் கிருஷ்ணன் குறிப்பிடத் தக்கவர். இவர்களிடையே பலர் சொந்தமாகாவே பத்திரிகைகள் நடத்தியும், புத்தகங்கள் வெளியிட்டும் வருகின்றனர். அத்துடன் நூற்றுக் கணக்கான தின, வார, மாதப் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன. இது மக்களிடையே சிறுகதைக்கு வரவேற்பு வேகமாய் வளர்ந்து வருவதையே குறிக்கிறது. ’வாழ்க தமிழ் ! வளர்க சிறுகதை இலக்கியம்! எங்கள் ஊர் மன்னார்குடி பள்ளி மாணவ மாணவியர் தங்கள் ஊர்களைப் பற்றிய கட்டுரை எழுத முயன்றால் அவர்கள் எழுத்துத் திறன் வளர்வதோடு, ஊரின் பெருமையும் படிப்போருக்கு விளங்கும். அந்த வகையில் எங்கள் ஊரான மன்னர்குடியைப் பற்றி வாசகர்கள் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை. மன்னை எனும் இராஜமன்னர்குடி செம்பகாரண்யம், தக்ஷிணத் துவாரகை என்றெல்லாம் கொண்டாடி அழைக்கப்பட்ட ஊர், இராஜகோபாலஸ்வாமி கோயில் கொண்டுள்ள ஊர் எங்கள் இராஜ மன்னார்குடி. அதுவே இன்று ‘மன்னை’ என்றும் மதிப்போடு அழைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கையில் கட்டுச் சாதத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக பாமினி செல்லும் பாதையில் இருக்கும் ரயில் நிலையத்தை நாடி வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் இருந்தது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை சுமார் 12 கிலோ மைல் தொலைவில் இருக்கும் நீடாமங்கலம் சென்று வரும். அங்கிருந்து மற்றொரு ரயில் மாறி தஞ்சை, திருச்சி போன்ற ஊர்களுக்கும் சென்னைக்கும் போக வேண்டும். இன்று பஸ் போக்குவரத்து வசதியும் ரயில் வசதியும் பிரமிக்கத் தக்க அளவு பெருகிவிட்டன. பஸ் மார்க்கமாகச் சென்றால் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் என்று பல வழிகளில் ஊரை அடையலாம். தற்போது சென்னையிலிருந்து சென்னை மன்னை நேரடி ரயில் வசதியும் ஏற்பட்டுள்ளது. எந்த வழியில் பயணம் செய்தாலும் பாதையின் இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப்பசேலெனத் தெரியும் நெற்பயிர்கள் தஞ்சை மாவட்டத்தை நெற்களஞ்சியம் என்பதை நினைவூட்டு வதைப் போல் இருக்கும். ஊருக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே பெரிய கோயிலின் இராஜ கோபுரம் உங்களுக்கு வழிகாட்டும். இன்னும் ஊரின் எல்லையை அடைந்தால் பஞ்சாயத்து யூனியனின் பெயர்ப்பலகை உங்களை நல்வரவு கூறி வரவேற்கும். கோயில் குளங்களின் கொள்ளை அழகு கோயில்களும் குளங்களும் வீதிக்கு வீதி நிறைந்து காணப்படும். எங்கள் ஊர் (அன்றைய) தஞ்சை மாவட்டத்தில் ஒரு பிரசித்தி பெற்ற ஸ்தலம். ஊரின் மேற்குப் பகுதியில், சோழர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோயில் என்றழைக்கப்படுகின்ற ராஜகோபால ஸ்வாமி கொயில் கம்பீரமாக நிற்கிறது. கிழக்குக் கோபுர வாயிலை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே சென்றால், விசாலமான பிரகாரங்கள், ஆயிரம்கால் மண்டபம், எல்லாம் தாண்டி உள்ளே சென்றால் கர்ப்ப கிரஹத்திற்குள் நுழையலாம். அங்கு கையில் தீபம் ஏந்தி உங்களை அர்ச்சகர் வரவேற்கிறார். ஆஜானுபாகுவாய், ஆள் உயரத்திற்கு கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சிதரும் பெருமாள் வாசு தேவர் மூலவராக காட்சி அளிக்கிறார். அருகில் உற்சவமூர்த்தி இராஜ கோபாலனாக வீற்றிருக்கிறார். இவர்களை நாம் தரிசனம் செய்து மன்னர்குடி தலபுராணத்தையும் சொல்லி, கையில் தீர்த்தமும், துளசியும் கொடுத்து நம்மைத் தாயார் சந்நதிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் அர்ச்சகர். தஞ்சை பிரகதீசுவரர் கோவிலுக்கும், இந்தக் கோயிலுக்கும் சோழமன்னர்கள் காலத்தில் சுரங்கப்பாதை இருந்ததாயும், இதன் வழியே அரசனும், குடும்பத் தாரும் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்ததாயும் கூறுகின்றனர். அந்தப் பாதை இப்போது அடைபட்டு விட்டது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் பதினெட்டு தினங்கள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். தினம் ஒரு வாகனத்தில், ஒவ்வொரு அலங்காரத்தில் பவனி வரும் காட்சி பரவசமூட்டும். குறிப்பாகக் கருட சேவை, வெண்ணெய்த்தாழி போன்ற உற்சவ தினகளில் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்காக மக்கள் கூடும் காட்சி கண் கொள்ளாக் காட்சி. இது தவிர ஊர் வியாபாரிகள் பங்கு கொண்டு நடத்தும் உற்சவம் தெப்போற்சவம். கோவில் அருகில் இருக்கும் கோபால சமுத்திரம் தெப்பக் குளத்தில் பிரும்மாண்டமான தெப்பம் கட்டி மிதக்க விடுவர். இரவு 8 மணிக்கு தெப்பம் மிதக்க விட்டால் இந்தக்குளத்தை தெப்பம் மூன்று முறை சுற்றி வருவதற்குள் மறுநாள் பொழுது புலர்ந்து விடும். பெரிய கோயிலுக்கு அடுத்த படியாகப் பிரசித்தி பெற்றது, ஊருக்கு நடுவில் ஒற்றைத்தெரு முகப்பில் அமைந்திருக்கும் ஆனந்த விநாயகர் ஆலயம். சிறிய கோயிலாக இருந்தாலும் விநாயகர் மிகவும் கீர்த்தி வாய்ந்தவர். வைகாசி விசாகம், ஆடி, தை மாதங்களில் இங்கு எப்போதும் கூட்டமாயிருக்கும். அருகில் இருக்கும் தேசிய உயர்நிலைப் பள்ளி மாணவர் பலருக்கும் கைகொடுக்கும் தெய்வம் விநாயகர். காவிரியின் பாமினியாறு ஊரைச் சுற்றிக் காவிரியின் வடிகால் பாசனமான பாமினியாறு ஒடுகிறது. வருடத்தில் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் வராது. கோடையில் சென்னைக்கு இருக்கும் தண்ணீர் கஷ்டம் மன்னைக்கும் உண்டு. மழை நாட்களில் நிரம்பி வழியும் குளங்கள் நிரம்ப உள்ளன. கோபால சமுத்திரம், கிருஷ்ண தீர்த்தம், திருப்பாற்கடல், ருக்மணி குளம், செங்குளம், கோபர்ளயம், பிள்ளையார் குளம், அம்மா குளம்,இராவணன் குட்டை ,நல்லான் குட்டை, கோபிநாதன் குளம் ஐயனார் குளம் இவையெல்லாம் குளங்களின் பெயர்கள். கோடையில் இவற்றில்தான் குளிக்க வேண்டும். பரவசமூட்டும் பந்தலடி மற்றொரு குறிபிடத்தக்க ஒற்றுமை, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்கள் ஒவ்வொரு தெரிவில் ஒரு தொழில் செய்பவர்கள் வீதம் வசித்து வந்தார்கள். மிராசுதார்கள் முதல் தெருவிலும், வழக்கறிஞர்கள் மூன்றாம் தெருவிலும், நகைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கம்மாளத் தெருவிலும் என்று உதாரணத்திற்கு குறிப்பிடலாம். அதேபோன்று ஊர் கடைவீத்யும் பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். மகாத்மா காந்தி ரோடில் ஆரம்பித்து பெரியகோவில் செல்லும் சாலையில் நீண்ட தூரம் இருமருங்கிலும் எல்லாவிதக் கடைகளும் சேர்ந்து இருக்கும். கடைத்தெருவின் மையம் பந்தலடி. ஊரில் இருக்கும் சினிமா விளம்பரங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கlள், அறிவிப்புகள், விளம்பரங்கள் அத்தனையும் அச்சிறிய நாற்சந்தியில் காணலாம். கோடையில் மூன்று மாதங்களுக்குக் கடைவீதி முழுதும் அடைத்துப் பந்தல் போட்டிருப்பார்கள். மாலை வேளைகளில் அங்குவரும் கூட்டம் விழாக் கோலம் கொண்டதுபோல விளங்கும். கலையுலகில் எங்கள் ஊர் ஊர் வாசிகளின் சங்கீத ரசனைக்கு உதாரணம், பெரும்பாலான கோயில் விழாக்கள், பெரிய திருமண வைபவங்கள் என்றால் அங்கு ஒரு சங்கீதக் கச்சேரி உண்டு. இசைத் துறையில் பிரபலமாய் விளங்கிய மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார், எம்பார் விஜயராகவாச்சாரியார், நாதஸ்வரம் பரமசிவம் பிள்ளை, மூர்சிங் நடேசப் பிள்ளை, தவுல் ராஜகோபால் பிள்ளை, கொன்னக்கோல் வைத்திலிங்கம் பிள்ளை முதலியோர் எங்கள் ஊர் கலைஞர்கள். ‘கரிச்சான் குஞ்சு’ என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதி வந்தவர் எங்கள் ஊர் தேசிய உயர்நிலைப் பள்ளித் தமிழா சிரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். கல்வித் தொண்டில் எங்கள் ஊர் பள்ளிக் கூடங்களின் தரமும், புகழும் பெயர் பெற்றவை. அன்றைய கணபதி விலாஸ் (ஆதிபராசக்தி )உயர்நிலை ஆரம்பப் பள்ளி, தேசிய உயர்நிலைப் பள்ளி, பின்லே உயர்நிலைப் பள்ளி இவை கலை, விளையாட்டுப் பேட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டத்திலேயே முதன்மை பெற்று வருகின்றன. எங்கள் ஊர் நகராட்சி மன்றம் 150 ஆண்டு கால பெருமையுடதாக திகழ்கிறது. **விடுதலைப் போரில் எங்கள் ஊர் சுதந்திரப் போராட்ட காலங்களில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், ஆகஸ்ட் புரட்சி போன சம்பவங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டு சிறைசென்றோர் பலர் ஆவர். தற்போது இருக்கும் நகராட்சி மன்றம் பட்ட பகலில் பெட்ரோல் விட்டுக் கொளுத்தப் பட்டது. காந்தியடிகள் தமிழக சுற்றுப் பயணம் செய்த போது, எங்கள் ஊருக்கு விஜயம் செய்த போதும், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்க வந்த ராஜாஜி எங்கள் ஊருக்கு வந்தபோதும் மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்பைப் பெருமிதத்துடன் வீட்டின் பெரியோர்கள் நினைவு கூர்ந்து கூறக்கேட்டிருக்கிறேன். .இதைத் தவிர சில சுவையான தகவல்கள் - புகழ் பெற்ற எழுத்தாளர் தி,ஜானகிராமன் பிறந்த தேவங்குடி உள்ளாக்கிய ஊர் மன்னார்குடி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து கின்னஸ் சாதனைப் படைத்த ஆச்சி மனோரமா பிறந்த ஊர் மன்னார்குடி. உவமைக் கவிஞர் சுரதா பிறந்த பழையனூரை உள்ளடங்கிய ஒன்றியம் மன்னார்குடி. இந்தியாவிலேயே முதல் நடமாடும் நூலகத்தை அமைத்த ஊர் மன்னார்குடி. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 19070-இல் தேசியக் கொடியை செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் (தற்போதைய தலமைச் செயலகம்) ஏற்றிய ஆர்யா என்கிற பாஷியம் பிறந்த சேரன் குளத்தை தன்னகத்தே கொண்டது. 1908-ல் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பாரதியாருக்கு தஞ்சமளித்த மேல்நாகையை உள்ளடக்கிய ஊர் மன்னார்குடி. ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாடலை பாரதியார் எழுதிய ஊர் மன்னார்குடி. 1927-ல் மகாத்மா காந்தி கதர் அடை பிரசாரத்திற்காக வந்தபோது விரும்பித் தங்கிய ஊர். 1930-ல் காந்தி உப்பு சத்தியாகரத்தில் தண்டியாத்திரை மேற்கொண்ட போது ராஜாஜி தலைமையிலான உப்பு சத்தியாகிரக குழுவினர் தங்கிச் சென்ற ஊர் மன்னர்குடி. 1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியில் ரயில் நிலையம். கோட்டாட்சியர் அலுவகத்தைத் தாக்கியதால் ஒட்டு மொத்த மக்களும் தண்டத் தொகை கட்டி சுதந்திர உணர்வை வெளிப்படுத்திய ஊர். அங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே முதல் உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் முத்துசாமி அய்யர் பிறந்த உச்சவாடி என்கிற கிராமம் அமைந்த ஒன்றியம் மன்னார்குடி. வேதாகமத்தில் கைதேர்ந்த ராஜு சாஸ்திரிகள் பிறந்த ஊர் மன்னர்குடி. ராணுவத் தளபதியாக் பதவி வகித்த பத்மநாபா பிறந்த சேரன் குளத்தை உள்ளடக்கிய ஊர் மன்னார்குடி. மாணவ மணிகளே! எங்கள் ஊருக்கு வாருங்கள்! ஊரின் சிறப்பைக் காணுங்கள். இதேபோல் உங்கள் ஊர்ப் பெருமையையும் எழுதிப் பழகுங்கள். புத்தாண்டு பிறக்கிறது சித்திரையின் தனிச் சிறப்பு தமிழ் நாட்டில் சித்திரைத் திங்கள் தலைநாளிலே வருடப் பிறப்பை மக்கள் புனிதத் திருநாளாகப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். சித்திரை மாதத்தை வசந்த காலம் என்றும் கூறுவதுண்டு.அப்போது, பார்குமிடந் தோறும் பச்சைப் பசேலெனப் பசுமையான காட்சி, காண்போர் உள்ளங்களை கவரும். சோலைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மரங்களில் மெல்லிய தளிராடை புனைய, வேம்பின் கொம்பிலே வெண்மலர்கள் மணம் கமழ, தென்னையின் இளநீரும், பனையின் பதநீரும் சுவை கொடுக்க உடலிற்கும், உள்ளத்திற்கும் ஏற்படும் இன்பத்தினை இந்நாட்டிலன்றி வேறு எந்நாட்டில் நுகர இயலும். சுந்தரவதனமாகும் சோலைவனம் சோலைகளில் உள்ள பறவையினங்கள் சோலையின் பசுமை கண்டு களிப்பெழுதி சிறகடித்துப் பறக்கும். கிளிகள் கிள்ளை மொழியில் கொஞ்சிக் கிளைக்குக் கிளை தாவி மகிழும். கிளியின் கிள்ளை மொழியினையும், மகிழ்ச்சியினையும் காணும் குயில்கள் கிளியின் களிப்பைத் தாமும் பகிர்ந்து கொள்ள எண்ணி மரங்களின் மீதிருந்து கூவும். குயிலின் இனிய கூவுதலைக் கேட்டு சோலைவனத்து மயில்கள் கார்காலம் வந்திட்டத்தோவென எண்ணி அதன் இனிய நாதத்திற்கேற்ப தம் நீண்ட அழகிய தோகை விரித்தாடும். இப்படியாகச் சோலைவனமே சுந்தர வனமாகக் காட்சியளிக்கும், இந்த வசந்த காலத்தில். மகிழ்வு நிறை சித்திரை புதுமனை புகுவோரும், திருமணம் புரிவோரும், மற்றும் புதியன பல செய்ய நினைப்போரும் இச்சித்திரையின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பர். அப்போது இயற்கையின் சூழ்நிலை இயல்பாக அமைந்திருக்கும். கூனியாகிய பங்குனியில் பனியால் நலிவுற்ற மக்களின் துயர் துடைக்கக் கதிரவன் தன் ஆயிரமாயிரம் செம்பொற் கிரணங்களால் உலகையே விழிப் படையச் செய்வதுடன் உவகையடையவும் செய்கிறான். இதன் கவர்ச்சியைக் காணும் கவிஞர் களிப்பெய்தி, ‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்’ என்று துதித்துப் போற்றுகிறார். வசந்தம் என்ற தென்றல் காற்று இனிமையுடன் வீசிக் கொண்டிருக்கும். வீடுதோறும் பொன்னும் மணியும் பிறவும் நிறைந்திருக்கும். மக்கள் கொண்டாடும் வைபவங்கள் மகிழ்ச்சிகரமாகவும் மங்களகரமாகவும் நடைபெறும். இத்தகைய இன்பசுகம் தரும் இளவேனிற்காலத் தலைநாளில் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கிறது. அன்றைய தினம் ஈசனைத் துதித்து வழிபடும் வழக்கம் சிறப்பாக நம் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் நிலவி வருகின்றது. கேரளத்தில் இத்தினத்தை ‘விஷு’ என்று அழைக்கிறார்கள்.. புத்தாண்டு பிறப்பதற்குத் தலைநாள் இரவில் நிலைக்கண்ணாடியை நடுவில் அமைத்து, அதற்கு முன் பொன், வெள்ளி, நாணயங்கள், நெல், பருப்பு மற்றும் நவதானிய வகைகள், காய்கறி, கனி, பூவகைகள் முதலியவற்றைப் படைப்பர். மறுதினம் வைகறைத் துயிலெழுந்து கண்ணாடி முன் சென்று கண் விழிப்பார்கள். இதன் மூலம் அவ்வாண்டு முழுதும் நன்கு அமைய வேண்டுமென்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வார்கள். சீரும் சிறப்பையும் தரும் புத்தாண்டு தமிழ் நாட்டில் மக்கள் தம் இல்லங்களைப் பெருக்கி, மெழுகி, கோலமிட்டுத் தோரணங்களால் அலங்கரித்துத் தம் இஷ்ட தெய்வங்களை “என்றென்றும் இப்புத்தாண்டு போலிவுடனே சீரும் சிறப்புமாய் செல்வமும் செழிப்பும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமெனத் துதித்து வணங்குவார்கள். இயற்கை அன்னை மானிடவாழ்க்கைக்கு இயல்பாய்ப் பொருந்தி அமைந்திருக்கும் இந்த இளவேனிற்காலத்தில், இதனைக் கொண்டாடும் மக்கள் இயற்கைக்குச் செய்யும் நன்றியாகவோ, தமிழன்னைக்குச் செய்யும் பணியாகவோ சொல்கிறார்கள். இதன் மூலம் ஆவர்கள் எல்லா நலன்களும், பெற்றுச் சீரும் சிறப்புமாய் எழிலும் ஏற்றமுமாய் விளங்குவார்களாக. வான்புகழ் வாள்ளுவர் தோன்றிற் புகழோடு தேன்றுக செந்தமிழ் நாடு செய்த தவப்பயனாய் தோன்றியவர் திருவள்ளுவர். ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்று அவர்தம் குறள் மொழிக்கிணங்கக் குன்றாத புகழொடு தோன்றி, உலகிற்கே வான்மறை வழங்கியவர் வள்ளுவர் இதனையே, பாரதியாரும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழ்நாடு திருவள்ளுவரைப் பெற்றெ டுத்து உலகிற்கு வழங்கியதில் பெருமை கொள்கிறது. திருக்குறளை முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வநூல் பொய்யாமொழி,வாயுரை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை முதலிய இன்னபிற பெயர்கள் வழங்குகின்றன. திருக்குறளுக்கு அநேகம் பேர் உரை எழுதியிருக்கிறார்கள். இவ்வாறு அதிக அளவில் தமிழில் திருக்குறள் தவிர வேறு எந்நூலுக்கும் உரை கண்டதாகத் தெரியவில்லை. இது திருக்குறளுக்கு மட்டும் கிடைத்த சிறப்பாகும். இவற்றில் பரிமேலழகர் உரையே பெரும் புலவர்களால் பராட்டப் பெற்று வழங்கி வருகின்றது. எல்லா சமயத்தினரும் போற்றும் வள்ளுவர் திருக்குறள் எந்த சமயத்தையும் சாராத ஈடு இணையற்ற உலகப் பொதுமறை நூலாகப் போற்றப்படுகிறது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் எந்த சமயக் கருத்துக்கும் முரண்படாதிருப்பது ஒரு மாபெரும் சிறப்பாகும். திருக்குறளில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதனாலேயே திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தினரும் தம்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றனர். திருக்குறளில் எண் குணத்தான் என்ற சொல்லையும், ‘பொறிவாயில் ஐந்த வித்தான்’ அன்ற சொல்லையும் காண முடிகின்றமையால் திருவள்ளுவரை ‘சைவர்’ என்பர் சைவ அன்பர்கள். ‘மலர்மிசை ஏகினான்’ ‘அறவாழி அந்தணன்’ என்ற தொடர்கள் கொண்டு சிலர் சமணர் என்றும், பௌத்தர் என்றும் திருவள்ளுவரைக் கூறுவார்கள். கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது ’அர்த்தமுள்ள இந்துமதத்தில் – வள்ளுவனை ஒரு இந்துவாகக் கருதி ஆதாரத்துடன் விளக்குகிறார்.. ‘வேண்டுதன் வேண்டாமையிலான்’ என்பது எல்லா மதத்தின் மூலவருக்கும் பொருந்தும் என்றாலும் விருப்பு ‘வெறுப்பு அற்றவன்’ என்று இந்துக்கள்தாம் இறைவனை அதிகம் கூறுகிறார்கள். இந்த எண்ணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் விளங்குகிறது. (ஐந்தாவது குறளில்). ‘இருள்சேர் இருவினயும் சேரா இறைவன்’ என்றும் பத்தாவது குறளில், ’பிறவிப் பெருங்கடலில் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.’என்றும், ‘வானுறையும் தெய்வம்’ என்ற சொற்களை ஆதாரமாக வைத்து; பார்க்கும்போது தொட்ட இடங்களில் எல்லாம் இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையும் கூறுவதால் வள்ளுவர் ஒரு இந்துவே என்ற கண்ணதாசனின் விளக்கம் தெளிவு படுத்துகிறது. அறத்துப் பாலின் அறமும், பொருட்பாலின் பொருள்களும் தமிழரான வள்ளுவர் ஒரு இந்து, இந்துவான வள்ளுவர் ஒரு தமிழர் எங்கிறார். ஆகவே வள்ளுவர் உலகத்தார் அனைவருக்கும் பெதுவானவராகவே விளங்கினார். அவர் வழங்கிய ’வான்மறை உலகப் பொதுமறையாகவும் கொள்ளப்படுவது சாலப் பொருத்த மாகும். பல்லோரும் பாராட்டும் குறள் மதுரைத் தமிழ் நாகனார் என்ற புலவர் சிறந்த பொருள்கள் அனைத்தயும் தன்னகத்தே கொண்டது குறள் என்ற கருத்தில், “எல்லாப் பொருளு மிதன்பாலுள; விதன் பால் இல்லாத வெப்பொருளி மில்லையால்” என்று கூறியுள்ளார். திருக்குறளின் சிறப்பை விளக்க வந்த மற்றொரு புலவர், “பாலெல்லாம் நல்லாவின் பாலமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ?” என்று பாடியுLள்ளார். “அணுவைத் துளைதேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று ஔவையார் பாடியுள்ளார். காலத்தின் இடையே கவிஞர்கள் தோன்றுவார்கள் என்றார் கவிஞர் ஷெல்லி. அவ்வாறே வள்ளுவர் தோன்றி மக்கள் நல்வாழ்வு வாழும் நெறியினை— வாழ்க்கைக் கலையினை—திருக்குறள் மூலம் உணர்த்திச் சென்றுள்ளார். “அறம், பொருள், இன்பம் வீட்டைதல் நூற்பயன்” என்பது தமிழ்ச் சான்றோர் கண்ட உண்மை. அதன்படி அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களை உணர்த்தி, அதன் மூலம் மக்கட் குலம், வீட்டுப் பேற்றினை அடையும் நெறியினை வள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். இல்லறமும் துறவறமும் அறத்துப் பாலில் இல்லறம், துறவறம் குறித்துத் தம் அருமையான கருத்துக் களைத் தந்துள்ளார். “அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின், புறாத்தாற்றிற் போய்ப் பெறுவது எவன்” என்று இல்லறத்தைப் பாராட்டிய திருவள்ளுவர் “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்” என்று துறவறத்தின் மாண்பினையும் புலப்படுத்தியுள்ளார். இனிக்கும் இல்லத்திற்கு வள்ளுவரின் உபாயங்கள் இல்வாழ்க்கைக்குத் தேவையான ந்ற்பண்புகளை விளக்க, “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று பழந்தமிழரின் வாழ்வு நெறியை உணர்த்தியுள்ளார். இல்லறவியலில் நல்லியல்பெல்லாம் உரைத்துணர்த்தும் வள்ளுவப் பெருந்தகை மக்கட் பேற்றின் இனிமையையும், ஒவியமாகக் காட்டியுLள்ளார். பொருள் முதிராத மழலைய முதன் சுவையை, “குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்னும் இக்குறளைக் கிண்ணத்தில் பெய்து தருகின்றார்.” தமிழர்கள் விரும்பிக் கேட்கும் தனிப் பெரும் இசைக்கருவிகளான குழல், யாழ் அளிக்கும் இசையை இனிதென்பார்கள் தம் மக்களின் மலர்வாய்ப் பிறக்கும் மழலைச் சொல் கேளாதவர்” எனத் தெளிவுபடுத்துகின்றார். அதே அதிகாரத்தில், “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்” என்ற குறளில் தன் மகனை “நற்பண்பு நிறைந்தவன்” எனப் பிறர் சொல்லக் கேLள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழிச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்” என்கிறார். “ஆன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்” என்ற குறளில் அன்புடையவரின் சிறு கண்ணீரே தன்னுள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்தும். செய்நன்றி அதிகாரத்தில், “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்ற குறளில், “துன்பம் உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதெனினும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிடப் பெரியதாகும்” எங்கிறார். அடக்கமுடைமை குறித்துக் குறிப்பிடும்போது “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நவினாற் சுட்டபுண்” புகழ் என்ற அதிகாரத்தில் “ஈதல்; இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” “வறியவர்க்கு உதவ வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அந்தப் புகழில்லாமல் உயிருக்கு ஊதியமானது வேறு ஒன்றும் இல்லை” மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில், “எப்பொருள் எத்தன்மைதாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” தீய பழக்கங்களைச் சாடிய வள்ளுவர் இல்லறவியலில் அன்பின் சிறப்பினை வற்புறுத்திய வள்ளுவர், துறவியலில் அருள் மாட்சியினைக் கூறுகின்றார். சங்ககாலத் தமிழர் ஒருசிலர் வாழ்வில் மது, மாது, மாமிசம் போன்ற தீயவைகளை நாடிச் செல்லும் கெட்ட பழக்கங்கள் இடம் பெற்றிருந்தன. இத்தகைய தீயச்செயல்களை முதன் முதலில் கண்டித்து அறிவுறை வழங்கியவர் பேரறிஞர், புரட்சியாளர், திருவள்ளுவர் ஆவார். அரசியலும் மருத்துவமும் பொருட்பாலில் வள்ளுவர் கூறும் அரசியல் கருத்து இன்றும் எண்ணி மதிக்கத் தக்கவையாகும். “படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு“ என்று ஒரு மன்னனுக்கு வேண்டிய அம்சங்களை விளங்கச் சொல்லியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறிச்சென்ற அரசியல் கருத்துக்கள் இன்றும் பொருந்தும் வன்மை யுடையனவாய் இருக்கின்றன. வள்ளுவர் கண்ட சிறந்த நாட்டினை, “ஊறுபசியும் ஒவாப்பிணியுஞ் செறு பகையுஞ் சேரா தியல்வது நாடு” என்ற குறளால் அறியலாம். மருந்து என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய கருத்துக்களை இன்றைய மருத்துவ மேதைகள் படித்து வியக்கின்றனர். மருந்தே இல்லாமல் வாழ்நாளைக் கடத்தி விடலாம். எங்கிறார் வள்ளுவர் எவ்வாறு? “மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது அற்றது போற்றியுணின்” முப்பாலிலும் முத்தான கருத்துக்கள் அடுத்து காமத்துப்பால் வள்ளுவரின் இலக்கியச் சிறப்பிற்கு அத்தாட்சியாய் விளங்குகிறது. சொல், நயம், கருத்து வளம், பா நலம், அணி நலன் முதலிய பலவும் நிறைந்து விளங்குகிறது. “மலரினும் மெல்லிது காமம்’ சிலரதன் செல்வி தலைபடுவார்” என்ற குறளில், காதலின் உயிர்ப்பொருளை உணர்வோர் ஒரு சிலரே என்று சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு முப்பாலிலும் தப்பாத கருத்துக்களை வள்ளுவர் திருக்குறளில் தந்தமையால் அவரை உலகப் பேரறிஞர்களில் ஒருவராக்கியமை கண்கூடு. எனவேதான் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பெருமையைப் பெற்றுள்ளது. திருக்குறள், ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மன், பிரஞ்சு, போலிஷ், ரஷ்யன், வடமொழி, இந்தி, குஜராத்தி, வங்கம், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், பர்மியம், மலாய் முதலிய பல்வேறு மொழிகளில் பெருமையுடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வள்ளுவர் வழங்கிய வான் மறையின் சிறப்பினை உணர்த்துவன ஆகும். தத்துவ நெறியின் சிறப்பு திருக்குறளின் மற்றொரு சிறப்பு அதில் கூறப்பட்டுள்ள இரு பொருள் கொள்கையாகும்.”ஆதிபகவன் முதற்றேயுலகு” என்று அறுதியிட்டு உறுதியோடு ஒருபுறம் உணர்த்தத் தொடங்கிய திருவள்ளுவர், “இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார்” என்று தெளிவாக ஆணையிட்டுப் பொய்யாமொழி வகுத்துள்ளார். மேலும் இறைவனின் உயர்ந்த பண்புகளை ‘எண் குணத்தான்’ என்று எடுத்துக் கூறி அந்த குணங்களை முறையே ’ஆதிபகவன் , வாலறிவன், மர்லிமிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை யிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன்” எனத் தெள்ளிய தீந்தமிழில் வகுத்துக் கூறியுள்ள நயம் அறிந்து இன்புறத் தக்கது. தத்துவ நெறியின் சிறப்பு, செந்தமிழின் சுவை இங்கு கைகோர்த்து களிநடம் புரிகிறது. இதுவரை கூறியவற்றிலிருந்து திருக்குறளின் தனிச் சிறப்புத் தெள்ளென விளங்கும். தமிழில் இன்று காணக்கிடைக்கும் பழைய நூல் தொல்காப்பியம். அதற்கு அடுத்து திருக்குறள் சிறப்பிடம் பெறுகிறது. மக்களுக்கு வாழ்க்கைத் துணைநல நூலாக, மக்கள் அறவழி நின்று பொருளீட்டிப் பெருவாழ்வு வாழத் துணைநூலாக விளங்குகிறது. சுங்கச் சொல்லின் வள்ளுவர் வழங்கிய வான்மறை, உலகம் உய்யும் நெறியினை உணர்த்த வந்த உயர்மறை எனக் கூறினால் அது மிகையாகாது. திருக்குறளைப் போற்றுவோம் இத்தகைய உலகப் பொதுமறையை அளித்த வள்ளுவனையும் வண்ணத் தமிழ் மகனையும், தமிழுக்கு ஈன்றம் தமிழன்னையையும் வாழ்த்தி வணங்குவோம். “யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல் புவிதனில் கண்டதில்லை” என்ற பாரதியார் கூற்று எத்தனை உண்மை என்பதனை உணர்ந்து போற்றுவோம். எளிய சொற்களால் அரிய பொருள்களைப் புலப்படுத்தும் திருக்குறளைப் போற்றுவோம். உலக மக்கள் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் இருளை அகற்றும் ஒளி விளக்காம் திருக்குறளைப் போற்றுவோம். இப்படி ஒர் உயர்ந்த தமிழ்நூல் நமக்குக் கிடைத்திருப்பது நாம் செய்த பெரும்பேறு. இந்நூலின் துணைகொண்டு வாழ்க்கைக்குத் தேவையான அறவுரைகள் அத்தனையும் அறிவுரைகளாகக் கொண்டு அதன்படி நடக்க முயல்வோம். வாழ்க வான் புகழ் வள்ளுவன் நாமம் ! கவியரசி சரோஜினி நாயுடு மகாத்மா போற்றும் கவியரசி “என் அன்புக்குரிய கவியரசியா, தத்துவஞானியா அல்லது தாயா, எப்படி அழைப்பதென்றே தெரியவில்லை” என்றார் காந்தி அண்ணல். வேறு யாரையும் அல்ல. பாரதத்தின் பாடும் பறவையாய்ச் சிந்தனைச் செல்வியாய்ச் சிறந்த பேச்சாளாராய்த் தாயின் தளையைத் தகர்த்தெரியப் பாடுபட்ட தியாகியாய், நாட்டு மக்களின் நல்ல சகோதரியாய் விளங்கிய கவியரசி சரோஜினிதேவியைத்தான். இளமையிலே கவி புனையும் ஆற்றல் 13.2.1879 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார் சரோஜினி. இவரது தந்தை “அகோர்நாத் சட்டோபாத்யாயா’ ஒரு விஞ்ஞானி ஆவார். தாயார் திருமதி.”பாரத சுந்தரி தேவி’ புகழ்மிக்க வங்க மொழி கவிஞர்! அவர் சிறுமியாக இருந்தபோது, கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயற்சி செய்தாலும் விடை சரியாகவே வரவில்லை. வெறுப்பாக வந்தது! 3. சட்டென்று தனது கணக்கு புத்தகத்தை மூடி வைத்தாள். ஒரு நோட்டுப் புத்தகத்தை கையில் எடுத்தாள். தனக்கு தோன்றிய எண்ணங்களை எல்லாம் கவிதை வடிவில் எழுதத் தொடங்கினாள். என்ன அதிசயம்! அழகான ஆங்கில கவிதை ஒன்றை அவள் எழுதியிருந்தாள். ""என்னம்மா? கணக்குப் போட்டு விட்டாயா?'' என்று கேட்டபடியே அப்பா அங்கு வந்தார். சிறுமி பதில் ஒன்றும் கூறவில்லை. அவளது நோட்டு புத்தகத்தை கையில் எடுத்து பார்த்த தந்தை ஆச்சரியம் அடைந்தார்! தன் மகளின் கவிதை எழுதும் ஆற்றலைக் கண்டு பெருமிதம் கொண்டார்! தந்தை திட்டுவார் என்று நினைத்த சிறுமிக்கு குழப்பம் ஏற்பட்டது. ""உனக்கு கணக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் கூறியிருக்கலாமே?'' என்றார் தந்தை. "" இனிமேல் உனக்குத் தோன்றும் கவிதைகளை இந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வா!'' என்று ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தார். அன்றிலிருந்து அச்சிறுமி தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்தாள் . பதினோராம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்..அவளது கவிதைகள் மிக எளிய சொற்களைக் கொண்டும் அதே நேரத்தில் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டும் விளங்கின. இதனால் அவரது கவிதைகள் உலக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. மக்கள் அவரை, "இந்தியாவின் கவிக்குயில்' என்று அன்போடு அழைத்தார்கள். அவர்தான் திருமதி. சரோஜினி நாயுடு ஆவார். "ஏரியின் பெண்',..... காலமெனும் பறவை',...... "முறிந்த சிறகுகள்' ஆகிய தலைப்புகளில் இந்தக் கவிக்குயிலின் கவிதைகள் தொகுக்கப்பட்டன! இவற்றுள் "காலம் எனும் பறவை' மற்றும "முறிந்த சிறகுகள்'ஆகிய இரண்டும் மிகப் புகழ்வாய்ந்த வாய்ந்தவை ஆகும். இவரது 19ஆவது வயதில் டாக்டர் கோவிந்த் நாயுடு என்பவருக்கு மணம் செய்து வைத்தனர். 1916 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளை இவர் சந்திக்க நேர்ந்தது. காந்தியடிகளின் கொள்கைகளால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தாமாகவே முன்வந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் . 1931 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் "வட்டமேசை மாநாடு' நடைபெற்றது. அதில் இந்தியர்களுக்கு தேவையான உரிமைகள் பற்றி பேசுவதற்காக காந்திஜி கலந்து கொண்டார். அவருடன் சரோஜினி நாயுடுவும் சென்றார். பல்வேறு கருத்துக்களை ஆங்கில அரசாங்கத்திடம் முன்வைத்தார். 1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு இயக்கம' நடைபெற்றது. அதில் பங்குகொண்ட சரோஜினி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் பல துன்பங்களை அனுபவித்தார். இருந்தபோதிலும் பெண்களின் உரிமைகளை வேண்டும் பல கவிதைகளை ஆங்கிலத்திலும் வங்க மொழியிலும் எழுதினார். இத்தகைய தலைவர்களின் தியாகத்தால் நம் நாடு 1947ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. விடுதலைக்குப்பின் இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இச்சாதனை பெண்மணி 2.3.1949 அன்று காலமானார். அறிந்து கொள்வோம் வாருங்கள்.. 1. இந்தியாவின் “முதல் பெண் ஆளுநர்’ என்ற பெருமையை பெறுபவர் இவரே ஆவார். 2. “பெண்களுக்கு கல்வி அவசியம். மிக சிறு வயதில் திருமணம் செய்யக்கூடாது!’ என்று மக்களை சந்திக்கும் பொழுதெல்லாம் கூறிவந்தார். 3. ஆங்கிலத்தின் அவசியத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறினார். பின்னாட்களில் ஆங்கிலமே உலக பொது மொழியாக விளங்கும் என்று அன்றே கூறினார். 4. அந்நிய மோகத்தை வெறுத்தார். இந்தியப் பொருட்களையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 5. இவரது பிறந்தநாளைத்தான் தேசிய பெண்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். நெஞ்சம் மறப்பதில்லை நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் இயற்றிய கட்டுரைகளிலும் கவிதைகளிலும் அவரது தேசபக்தியின் முத்திரையைக் காணலாம். “அவர் முதன் முதலில் ஆற்றிய சொற்பொழிவு இன்னும் என்னுள்ளே அழியா இடம் பெற்று ரீங்காரம் செய்து கொண்டே இருக்கின்றது” என்றார் பிரதமர் நேரு அவர்கள். கவியரசி சரோஜினியார் போன்றோரது வரலாறுகளை அடிக்கடிப் படிப்பதன் மூலம் அவரது அறிவையும், ஆற்றலையும், சொல்லையும் செயலையும், சாதனை களையும் எண்ணி எண்ணி என் நெஞ்சம் அவரை மறப்பதில்லை. மூன்றெழுத்தின் பெருமை உலகு என்ற மூன்றெழுத்தில் உயிர் என்ற மூன்றேழுத்தைக் கொண்டு, மழலை என்ற மூன்றெழுத்தால் அன்னை என்ற மூன்றெழுத்தை மகிழ்வித்து, பள்ளி என்ற மூன்றெழுத்தில் நுழைந்து, கல்வி என்ற மூன்றெழுத்தைக் கற்று, தேர்வு என்ற மூன்றெழுத்தில் தேர்ந்து, அழகு என்ற மூன்றெழுத்தையும் அறிவு என்ற மூன்றெழுத்தையும் பெற்று, அன்பு என்ற மூன்றெழுத்தால் மணம் என்ற மூன்றெழுத்தையும்முடித்து, வாழ்வு என்ற மூன்றெழுத்தைக் குணம் என்ற மூன்றெழுத்தால் கடந்து, துயர் என்ற மூன்றெழுத்தை, அமைதி என்ற மூன்றெழுத்தால் வென்று, உவகை என்ற மூன்றெழுத்தை அடைந்து, இல்லை என்ற மூன்றெழுத்தைக் கூறாமல் அறம் என்ற மூன்றெழுத்தினைச் செய்து நேர்மை என்ற மூன்றெழுத்தின் வழி நடந்து பணிவு என்ற மூன்றெழுத்தைக் கடைப் பிடித்து, பாசம் என்ற மூன்றெழுத்தால் கட்டுண்டு உயிர் என்ற மூன்றெழுத்தை உடைய மக்களுக்கு நன்மை என்ற மூன்றெழுத்தினைச் செய்து, தேசம் என்ற மூன்றெழுத்திற்காக உறவு என்ற மூன்றெழுத்தைத் துறந்து, கடமை என்ற மூன்றெழுத்தினை மேற் கொண்டு வீரம் என்ற மூன்றெழுத்தால் எதிரி என்ற மூன்றெழுத்தினை அழித்து, வெற்றி என்ற மூன்றெழுத்தினைப் பெற்று, இளமை என்ற மூன்றெழுத்துக் கழிய முதுமை என்னும் மூன்றெழுத்தினை அடைந்து, துறவு என்ற மூன்றெழுத்தினை மேற்கொண்டு, ஈசன் என்ற பரம் பொருளைத் தேடி பக்தி என்ற மூன்றெழுத்தால் புகழ் என்ற மூன்றெழுத்தை அடைவோம். நூலாசிரியர் எஸ் விஸ்வநாதன் வணிக இயல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மும்பையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழிலும் ஈடுபாடு கொண்டவர். நாடகத் துறையில் தன் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள மும்பையில் ‘கலாநிலையம்’ என்ற நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டு முறையாக வயலின் இசை பயின்றார். முருக பக்தர். மும்பை செட்டாநகர் முருகன் கோவில் திருப்பணியில் துவக்கம் முதல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறார். முருகன் கோவில் ஸ்தல வரலாறு நூல் ஒன்றும் எழுதியுள்ளார். பள்ளி நாட்களிலேயே தமிழில் ஆர்வம் கொண்டவர். தஞ்சை மாவட்டம் மன்னர்குடி தேசிய உயர்நிலைப் பள்ளி மாணவர். எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்ற புனைப்பெயர் கொண்ட தமிழாசிரியரிடம் தமிழ் பயின்றார். பல இலக்கிய மேடைகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று இருக்கிரார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் இலக்கிய கூட்டங்களில் பங்கு கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் தகுந்த தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, பல நூல்களை ஆராய்ந்து அமைத்துள்ள கட்டுரைத் தொகுப்புதான் இந்நூல். வளரும் இளம் சமுதாயத்தினருக்கு இந்நூல் ஒர் ஒப்பற்ற வழிகாட்டி. இதைப் போன்ற நூல்களை ஆசிரியர் மேலும் படைத்தளிக்க வாழ்த்துகிறோம். -பதிப்பகத்தார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.