[] []     சொன்னார்கள்   - கவிஞர் சுரதா   - பொன்மொழிகள்    அட்டைப்படம் : Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                    பொருளடக்கம் சொல்லுகிறேன் 4  பக்கம் 5-20 5  பக்கம் 21-30 13  பக்கம் 31-40 18  பக்கம் 41-50 24  பக்கம் 51-60 30  பக்கம் 61-70 36  பக்கம் 71-80 41  பக்கம் 81-90 46  பக்கம் 91-100 51  பக்கம் 101-110 56  பக்கம் 111-120 62  பக்கம் 121-128 67    சொல்லுகிறேன்   சேக்கிழார் எத்தனையோ பொதுக்கூட்டங்களில் பேசியிருத்தல் கூடும். அக்காலத்து மக்களுக்கு அவர் எத்தனையோ அறிவுரைகள் கூறியிருத்தல் கூடும். அவ்வாறே,கவிச்சக்கரவர்த்தி கம்பனும்,ஆசுகவி காளமேகமும், எல்லப்ப நாவலரும், இன்னும் பலரும் பேசியிருத்தல் கூடும். எனினும், அவர்களுடைய கவிதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவே யன்றி அவர் களுடைய சொற்பொழிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் சமுதாயச் சீர்திருத்தச் சொற்பொழிவுகளும் நமக்குக் கிடைக்கவில்லை.  நம் நாட்டைப் பொறுத்தவரையில் 1902-ல் வெளிவந்த நாகப்பட்டினம் சோ. வீரப்ப செட்டியார் அவர்களின் சொற்பொழிவு நூலே நமக்குக் கிடைத்திருக்கும் முதல்நூல் என்று நான் கருதுகிறேன்.   சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேச்சாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஆண்டவனைப் பற்றியும், அடிக்கடி அவதாரங்களைப் பற்றியுமே பேசி வந்தனர். இந்த நூற்றாண்டில் வாழும் பேச்சாளர்கள், அரசியலைப் பற்றியும், விஞ்ஞானத்தின் அவசியத்தைப் பற்றியும் அன்றாடம் பேசிவருகின்றனர்.  அன்றைய பேச்சாளர்களின் சொற் பொழிவுகளிலிருந்தும், இன்றைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டுக்குப் பயன்படும் நல்லபல கருத்துக்களைத் தொகுத்து என் மகன் கல்லாடனிடம் கொடுத்தேன். அவன், அதனை இப்போது ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறான்.  சொன்னார்கள் என்னும் இந்த ‘நாக்குநூல்’ கற்றவர்களுக்கும் பயன்படும். மற்றவர்களுக்கும் பயன்படும். மற்றவர்களுக்குப் பயன்படு வதைக் காட்டினும் மேடைப் பேச்சாளர் களுக்கு இது மிகவும் பயன்படும் என்றே கருதுகிறேன்.  சுரதா                               பக்கம் 5-20   நான் இன்று உங்களுக்கு வழங்கும் இந்தக் கஸ்தூரியின் மணத்தைப்போல், என் மகனுடைய புகழ் இப்புவியெங்கும் பரவட்டும். —ஹிமாயூன் (15-10-1542) (அக்பரின் தந்தை)  நாம் சமீபத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி உலகத்தார் என்ன நினைப்பார்கள்? சற்று கவனியுங்கள்? சந்திர நாகூரிலுள்ள கவர்னராலும், அவருடைய சபையோராலும் கேட்டுக்கொண்டபடி அவர்களுடைய பிரதிநிதிகள் மூலமாய் யுத்தமின்றி சும்மா யிருப்பதாய் ஒப்புக்கொண்ட மாதிரி உடன்படிக்கைகள் இருதரத்தார்க்கும் சம்மதங்களாய் நிற்கின்றன அல்லவா? நவாப்பு என்ன நினைப்பான்? வாக்குறுதிகள் செய்த பிறகு நாம் தவறினால் உலகத்தார் நம்மை அற்பர் என்றும், நியாயம் இல்லாதவர்கள் என்றும் தூற்றுவார்கள், ஆதலால், வாட்ஸனின் கருத்து எவ்வாறு இருப்பினும் அதைத் தள்ளிவிட்டு நாம் தீர்மானம் செய்தபடி உண்மையைப் பின்பற்றுவோம்.  —ராபர்ட் கிளைவ் (4-3-1757)  என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும். என்னுடைய ஜமீன் சொத்துக்களை யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும், நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதிமொழி தரவேண்டும். அதற்கு அத்தாட்சியாகக் கவர்ன்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தரவேண்டும்.இது சத்தியம்.  —மருதுபாண்டியர் (10-10-1801)  (தூக்கிலிடப்படுவதற்கு முன் கொடுத்த மரணவாக்குமூலம்)  கவி வர்ணனை மூளையினின்று மறைந்து நீங்குவது போல, இராஜாராம் மோகன்ராய் நம் மத்தியிலிருந்து மறைந்து விட்டார். என்றாலும் அவரது சகவாசத்தால் உண்டான நற்பலன்கள் இந்த நாட்டிலும், அவரது தாய் நாடாகிய இந்தியாவிலும் என்றென்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும். அம்மகான் காலஞ்சென்று விட்டாரென் றாலும், அவரது நல்வாழ்வும், நற்செயல்களும் நம்மை எப்போதும் அவரை நன்றியுடன் பாராட்டி, அவர் வழியில் நடக்கச் செய்யும் என்பதற்கு ஐயமில்லை.  —பாக்ஸ் பாதிரியார் (27-9-1833)  (இராஜாராம் மோகன்ராய் மறைந்த நாளன்று பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில்)  நண்பர்களே! எனக்கு இவ்வுலக வாழ்க்கை முடிந்தது; விண்ணுலக வாழ்க்கை கிட்டிற்று. நம் குருமார்களான நானக் முதலியோருடன் நானும் வாழும் பாக்கியத்தை யடையப் போகிறேன். என் மகன் காரக் சிங்கனே எனக்குப் பின் அரசாள வேண்டியவன். ஆதலின், நீங்கள் எனக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நாட்டை மேன்மையடையச் செய்தீர்களோ, அவ்வாறே இவனிடமும் நடந்து கொள்ளுங்கள்.  —பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் (27-6-1832)    நான் ஒரு பெண் என்ற முறையில் மணம் செய்து கொள்ளப் போகிறேனேயன்றி, மகாராணி என்ற காரணத்தினால் அல்ல. ஆகவே எல்லோருக்கும் நடப்பது போல எனக்கும் வேதப்படிதான் திருமணம் நடைபெற வேண்டும்.  —விக்டோரியா மகாராணி (10-2-1840)  இந்த நல்ல நேரத்தில் என் மனப்பூர்வமான விருப்பத்தோடு உங்களுக்குச் சில செய்திகளைப் பற்றிச் சொல்லக் கருதுகிறேன். இந்தக் கட்டிடத்தின் அருகில் வந்திருக்கும் பெருங் கூட்டத்தினரெல்லோரும் கேட்குமாறு சொற்பொழிவாற்ற வேண்டுமாயின், இடிமுழக்கம் போன்ற குரலுடன் பேசவேண்டும். ஆதலினல் என் அருகிலிருந்து கேட்பவர்கள் எல்லோரும் நான் பேசும் விஷயங்கள் அனைத்தையும் பிறருக்குச் சொல்லும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரென்பவர் தரும எண்ணத்தோடு தம்முடைய திரண்ட பொருள்களைக் கோயில்களுக்கும் பிற தருமங்களுக்குமாகச் செலவழித்தார். அவருக்குச் சந்ததியாவது, வேறு உரிமையாளர்களாவது இல்லாமற் போனபடியால், அவருடைய வம்ச ஆசாரப்படி தம்பொருள்களையெல்லாம் சத்திரம் சாவடிகள் கட்டுவதற்காகவும், வறியோர்கட்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதற்காகவும் வைத்துவிட்டுக் காலமானர். அவருடைய எண்ணத்திற்கும், இந்து ஜன சமூகத்தாருடைய வழக்கதிதிற்கும் பொருந்தினது போல் சுப்ரீம் கோர்ட்டாரவர்களுடைய தீர்மானத்தின்படி இந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக் காக நான்கு லட்ச ரூபாய் வரையிலும் தரப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையைச் சிதைந்து போக வொட்டாமலும் களவாட வொட்டாமலும் இந்த விஷயத்துக்காக காப்பாற்றுகிற நிமித்தம் நான் எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன். மேற்படி முதலியார் பெயரால் தருமக்கல்விச் சாலைகள் ஏற்படுத்துவதில் எவ்வளவு என்னுடைய ஒய்வு நேரங்களைச் செலுத்தி வந்தேன். அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இவ்வாறு நான் செய்ததைப் பற்றிச் சிலர் பழிச்சொல் கூறும்படி இருந்த போதிலும், அது வெளிக்கு வருமாயின், எனக்கு அதனல் மேன்மையும், திருப்தியும் உண்டாகும்.  —ஜார்ஜ் நார்ட்டன் (2-10-1846) (சென்னை சுப்ரீம் கோர்ட் அட்வொகேட் ஜெனரல்)  நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது. வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவன் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொண்டார்.  —இராமலிங்க அடிகள் (30-1-1874)  நான் போய்ச் சேர்ந்த மிஷன் பாடசாலை சுமார் மூன்று மாதத்திற்குள் கலாசாலை ஆகிவிட்டது. வித்துவான் H.A. கிருஷ்ணபிள்ளை எங்களுக்குத் தமிழாசிரியராக வந்தார். அவர் சிவந்த மேனியும் மெல்லிய உருவமுடையவராய் இருந்தார். என் தகப்பனாரைப் போன்ற சாயலாக இருந்தார். கம்பராமாயணத்தைப் பாராமல் ஒப்புவிப்பார்.  — தாமஸ் கதிர்வேல் நாயனர் (17.9-1879) (H. A. கிருஷ்ணபிள்ளையின் மாணவர்)  நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க, நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ்நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து, அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக.  —மாக்ஸ் முல்லர் (27-9-1883)  [பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இராஜாராம் மோகன்ராய் 50-வது நினைவு விழாவில்]  கல்வி, நாகரிகம் முதலியவற்றால் செழிப்புற்றோங்கும் நாடுகளில், எவையெவை நன்மை என்று தோன்றுகின்றனவோ, அவைகளை இந்தியாவின் சீர்திருத்தத்தின் பொருட்டுப், பயன்படுத்தி இவ்விதமாய் இந்தியாவையும், இங்கிலாந்தையும் என்றும் மாறாத சங்கிலிகளினல் இணைப்பதன் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும் , அரசினர் அளிக்கும் எல்லாப் பரிசுகளுக்கும் மேலானதென்றே நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட சிறந்த செயல்களைச் செய்வதில் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் நமக்குத் தோன்றும். இப்படிப்பட்ட தடைகள் இதில் மாத்திரமல்ல மனிதன் தன் வாழ்நாளைச் செலவிடக்கூடிய பற்பல காரியங்களிலும் இருக்கின்றன. ஆதலால், இவற்றைச் செய்து நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுமாறு, சென்னைக் கிறித்தவ கல்லூரிப் பழைய மாணவர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.  —டாக்டர் வில்லியம் மில்லர் (30.4.1884) [சென்னை மெமோரியல் மண்டபத்தில்]  காலையில் படுக்கையை விட்டெழுந்து பசியினல் பழைய சாதத்தை உண்டு எக்கா ஒன்று 14-அணா வீதமாக சத்தம் பேசி பிருந்தாவனத்துக்குப் புறப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு பிருந்தாவனத்தில் சேர்ந்து, ஸ்ரீ சேட்ஜீ அவர்களுடைய பெரிய கோயில் காரியஸ்தர் அப்பாசாரியவர்களைப் பார்க்க, அவர் வந்து அந்தக் கோயிலுக்குள்ளாகவே பெரிய மெத்தை வீட்டை நமக்குத் தயார் செய்து கொடுத்தார். உடனே கடை வீதிக்குப் போய் வேண்டிய சாமான்களை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிட்டு மாடி ஹாலில் படுத்ததில், அன்று காற்றோடு கூட பெய்த பனியினால் பட்ட பாட்டை சொல்லி முடியாது. என்னிடமிருந்த உயர்ந்த விலையுள்ள கம்பளிகள் அனைத்தையும் போட்டு மூடியும்; நெருப்பைக் கனப்பாக்கி அருகில் வைத்தும் குளிர் தீரவில்லை. இந்த குளிரினால் பல் வலியும், தலைவலியும் கண்டு தூக்கமும் வரவில்லை. ஆகவே இரவெல்லாம் அவஸ்தைப் பட்டோம்.  —பகடாலு நரசிம்மலு நாயுடு (20-1-1887)  தற்போது அநேகம் புத்தகங்கள் பிரசுரமாகின்றன. இவற்றால் வாசகர்களைக் காட்டிலும் ஆசிரியர்களுக்கே அதிக லாபம். இது தவிர, ஒரு புத்தகம் மறைந்தவுடன் மற்றொரு புத்தகம் வெளிவருகிறது. இவ்விதம் வெளியீட்டிற்குக் குறைவே இல்லே. ஒருவருடைய அபிப்பிராயம் புத்தக ரூபத்தில் வந்துவிட்டது என்ற காரணத்தைக் கொண்டு, அவரை விட அதிக மதிப்பை அதற்குக் கொடுக்கக் கூடாது. கண் கவரும் "விதத்தில் பிரசுரிக்கப்பட்டு, கண்ட பத்திரிகைகளில் எல்லாம் பெரும்பாலும் அவற்றின் ஆசிரியராலேயே எழுதப்பட்ட மிகவும் திருப்திகரமான விமரிசனத்தைக் கொண்ட புத்தகங்களைப் படிக்க நீங்கள் ஆவல் கொள்ளக் கூடாது. படிக்கும் வழக்கம் பாராட்டத் தக்கது; ஆனால் அது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நோக்கமற்ற படிப்பு தகாது. சுயமாகச் சிந்திக்கவும் உங்களுக்கு ஆசை இருக்கவேண்டும்.  —சர். வி. பாஷ்யம்ஐயங்கார் (28-3-1893)  (பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில்)  இந்த நெல்லிக்கனியில் பாதியைத் தவிர நான் என்னுடையதென்று சொல்லத்தக்க வேறு பொருளே இல்லை. நான் சார்வ பெளமனாக இருந்தும், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. இந்த இம்மைச் சாம்ராஜ்யத்தையும், நீர்க்குமிழி போன்ற நிலையில்லாப் பிரபுத்துவத்தையும் வெறுத்துத் தள்ளினேன். நான் மக்களை ஆள்கின்றேன். ஆயினும், என்னைத் துக்கம் ஆள்கின்றது. செடியிலிருக்கும் மலர் காம்புடன் கூடியிருக்கும் வரையில் சோபிக்கும். அது நிலத்தில் விழுந்தபிறகு வாடி உலர்ந்து போகும். அப்படியே நானும் காலம் கழித்து வருகின்றேன்.  மெளரிய சக்கரவர்த்தி அசோகன் (கி. மு)  தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் யாழ்ப்பாணிகளான கனம்' தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுபிள்ளை, பெரிய பட்டம் பெற்ற கனம். அரங்கநாத முதலியாரவர்களே. இவருள் கனம். தாமோதரம் பிள்ளை ஏட்டுப் பிரதிகளாய் 'மங்கி மறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத் தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த்தெழுதி, மிகுந்த பொருட்செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ்ப் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிகக் கருத்தோடு உழைத்து வருகிறார்.  —பேராசிரியர் டேவிட் ஜோசப். பி. ஏ., (1897)  நாம் நம்முடைய செளகரியத்திற்காகவே இந்தியாவை ஆளுகின்றோமே யல்லாது இந்தியர்களின் செளகரியத்திற்காக வல்ல. இராஜ்ய பரிபாலனத்தில் ஒன்றும் செலவழிக்காமல் சகலவற்றையும் சுரண்டுவதனால், நாம் கடவுள் முன்னிலையில் அபராதஞ் செய்தவர்களாகின்றோம். இந்தியாவின் பொருளாதார விஷயமாக ஆராய்ச்சிசெய்தால் இந்தியா இங்கிலாந்துக்குக் கப்பம் கட்டிவருவதே நம் ஆளுகையின் பெரிய குற்றமாகும்.  பம்பாய் கவர்னர்–சர் ஜான் மால்கம் (1827-ல் பாராளுமன்றத்தில் பேசியது)  பெண் வைத்தியர்களைக் குறித்து ஒரு வார்த்தை கூறுகிறேன். இந்தியாவெங்கும் ஆண் வைத்தியர் இருந்த போதிலும் பெண் வைத்தியர் மிகக் குறைவு. இத்தேசத்துப் பெண்கள் மற்றெந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்கிலும் மிக்க நாணமுள்ளவராகையால், தங்கள் வியாதிகளையும் கஷ்டங்களையும் அயலானொருவனிடம் சொல்லுவதைப் பார்க்கிலும் தங்கள் உயிர் போவதே நலமெனக் கருதுவர். மகளிர் பலர் அகால மரணத்திற்கு முக்கிய காரணம் பெண் வைத்தியர் இல்லாத குறைதான். ஆகையால், பெண்களுக்கென்று ஒரு வைத்திய கலாசாலை நிறுவும்படி நான் அரசாங்கத்தாரை மிக்க பரிவுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்து தேசத்துப் பெண்களுக்குப் பெண் வைத்தியர் மிக மிக அவசியம்.  பண்டிதை ராமாபாய் சரஸ்வதி (1882-ல் பூனா நகரத்தில்)  சாதாரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் பொறுப்பை விடப் பெரிய பொறுப்பை நான் வகிக்கும்படி அல்லா கட்டளையிட்டார். என்னுடைய கணவர் திடீரென்று இறந்து போனதால் 27-வது வயதில் நான் விதவையாகி விட்டேன். அப்பொழுது 5 குழந்தைகள் எனக்கிருந்தன. அவர்களை வளர்த்துக் கல்வி கற்பிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. கடைசிக் குழந்தையாகிய முகம்மது அலிக்கு அப்பொழுது இரண்டு வயதுகூட ஆகவில்லை. அவர்களுடைய சொத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய வேலையும் எனக்கே ஏற்பட்டது. நல்ல காரியத்தைச் செய்வோருக்கு அல்லா உதவி செய்வாரென்று நம்பிக் கஷ்டப்பட்டேன். நான் பட்டபாடு வீணாகவில்லை. என்னுடைய பிள்ளைகள் எல்லோரும் தங்களுடைய காரியத்தைத் தாங்கள் பார்த்துக் கொள்ளும்படி யானவர்களாய் விட்டார்கள். இனி என்னுடைய உதவி அவர்களுக்கு அவசியமில்லையாகையால், எங்கள் மார்க்கத்துக்குரிய காரியங்களில் என் கவனத்தைச் செய்வதில்தான் எனக்கு எப்பொழுதும் ஆசை இருந்தது.  —அபாதிபேனோ அப்துல் அலி பீகம் (4 - 8 - 1917) (முகம்மதலி, ஷெளகத் அலியின் தாய்)   எட்டய புரத்திலிருந்து சில மைல் தொலைவிலுள்ள கோவிற்பட்டிப் புகைவண்டி நிலையத்திற்கு நானும், விஸ்வநாத பாரதி என்ற இளைஞரும் பாரதியாருடன் நடந்து சென்றோம். கோவிற்பட்டி நிலையத்திற்கு அருகே மாலைப் பொழுதில் கடைத்தெருவில் பூமாலைகள் விற்றார்கள். பாரதியார் மூன்று பூமாலைகளை வாங்கி தமது கழுத்திலே தாமே ஒன்றைப் போட்டுக்கொண்டு, எனது கழுத்திலும், இப்பொழுது காலஞ்சென்று விட்ட விஸ்வநாத பாரதி கழுத்திலும் ஒரு மாலையைப் போட்டார். அப்பொழுது எங்கள் உள்ளத்தில் தோன்றிய உவகையையும் பெருமையையும் சொல்லவேண்டுமா?  —பரலி சு. நெல்லையப்பர் (1919)  அக்காலத்து இஸ்லாமியப் பெண்கள், கல்வியிலும் மற்றும் பல விஷயங்களிலும், உலகத்திலுள்ள மற்றெல்லாப் பெண்களைவிடப் பன்மடங்கு மேலானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களுக்கு அக்காலத்திலிருந்த உரிமைகள் மற்றெவருக்கும் இருந்ததில்லை. பெண்களுக்குக் கருத்துச் சுதந்தரமும், செயல்களில் சுதந்தரமும் வழங்கியது இஸ்லாமொன்றுதான்.பொதுமக்களின் பிரதிநிதியைத்தேர்ந்தெடுப்பதான "பயத்' முறையிலும் இன்றைக்கு 1346-வருடங்களுக்கு முன்பே முஸ்லீம் பெண்களுக்கும் ஒட்டுரிமை இருந்தது. அத்தகைய உரிமைக்குத்தான் ஐரோப்பிய பெண்கள் இன்றைக்கும் கடும்போர் புரிந்து வருகின்றனர். நான் :எழுதியிருக்கும் இஸ்லாமும் பெண்களும் என்னும் புத்தகம் மதசம்பந்தமாகப் பெண்களின் உண்மையான நிலைமையை நன்கு விளக்கித் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயத்தையும் ஒழிக்க உதவியாகக் கூடுமென்று நம்புகிறேன். நான் அப்புத்தகத்தைப் பாரசீகத்தில் எழுதியிருப்பதால் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.  —ஆப்கன் அரசி செளரியா (2-6–1928)  என்னுடைய வாழ்நாளில் சுமார் இரண்டு வருட காலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருடமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தைவிட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமா யிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதி, தாங்கள் செய்துவந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 வது வயதிலேயே ஈடுபடுத்திவிட்டார்கள். இந்த 2 வருடக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம்.  —பெரியார் (24 - 4 - 1927) (போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்.)  நான் ஆதியில் ஏழ்மையான குடியிற் பிறந்து, மிக்க கஷ்டப்பட்டுச் சொற்ப கல்விகற்றுக் கொண்டேன். பிறகு மிஷன் ஸ்கூல் உபாத்தியாராகவிருந்தேன். பின்னர் இரும்பு வியாபாரத்தில் பிரவேசித்தேன். இதில் பல கைத்தொழில்களையும் கற்றேன். எனது சொற்ப சுயார்ச்சிதத்தைக் கொண்டே ஒரு தண்டவாளப் பட்டரையை ஏற்படுத்தினேன். இதனால் நானும் எனது குடும்பமும் பந்து மித்திரர்கள் சுமார் 150 குடும்பங்களும் ஜீவிக்கவில்லையா? ஆகையால் நண்பர்களே! நமது மக்கள் முதலில் கல்வி கற்கவேண்டும். பிறகு வெவ்வேறு தொழில்களில் பிரவேசிக்க வேண்டு மென்பது எனது கருத்து,  தொழிலதிபர் கா. கோ பலபத்திர நாயகர் (1895-ல் நடைபெற்ற எட்டியப்ப நாயகர் வன்னிய சங்கக் கல்விச்சாலை ஆண்டு விழாவில் பேசியது)  ஆறாண்டுகளுக்குப் பிறகு நான் என் தாய்நாட்டிற்கு வந்து வெளி உலகத்தில் அறிமுகம் கொள்ளலானேன். உலகத்தையே நான் மறந்துவிடவும், உலகமே என்ன மறந்து விடும்படியுமான எண்ணத்தைக் கொண்டு அதிகாரிகள் என்னை வெளி உலகத்தொடர்பின்றி தனியே வைத்திருந்தார்கள். ஆனால் நான் மக்களை மறக்கவில்லை. மக்களும் என்னை மறக்கவில்லை. ஆறு வருடகாலம் நான் மக்களைப் பிரிந்திருந்தாலும் அவர்களிடத்தே உண்டான அன்பு எனக்கு எள்ளளவும் மாறாது. ஆறு வருடகாலத்திற்கு முன் அன்னோன்னியத்துடனும் உணர்ச்சியுடனும் எங்ஙனம் எந்த அந்தஸ்துடன் நான் உழைத்து வந்தேனோ அவ்வண்ணமே மீண்டும் உழைக்க நான் சித்தமாயிருக்கிறேன். ஆனால், காலத்தையறிந்து, என் வழியைச்சற்று மாற்றிக் கொள்ள வேண்டியதாக மட்டும் ஏற்படும்.  பாலகங்காதர திலகர் (21 - 6 – 1914)  இம்மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது உங்களுக்கும், எனக்கும் அருமைதான். நாம் இதுபோன்ற கூட்டங்களைக் கூட்டுவதன் நோக்கமென்னவெனின், ஒவ்வொரு நிமிடமும் முன்னேறுவதற்காகவே துருக்கியில் கமால் பாட்சாவினால் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம் அளவிடற்கரியதாகும். அங்கு மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அங்கோரா போன்ற இடங்களிலுள்ள கோர்ட்டுகளில் ஏராளமான உத்தியோகங்களை வகித்து வருகிறார்கள். துருக்கிஸ்தானம் பெரியஸ்தானம் என்றால் காரணமென்ன? அங்கு 800 பெண்கள் நீதிபதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். முக்காடுபோடும் சமூகம் இவ்வளவு சீர்திருத்தம் அடைந்த பிறகுங்கூட நம்நாடு வாளாவிருப்பது மிகுந்த வெட்ககரமானதாகும்.  பட்டுக்கோட்டை K. V. அழகிரிசாமி (6-7-1931–ல் விருது நகரில் rத்திரிய பெண் பாடசாலை ஆண்டுவிழாக் கூட்டத்தில்)  பெண் பிறவி 'பாவமான பிறவி என்று கூறும் இந்நாட்டில் மேடை மீதிருந்து பேசும் பாக்கியம் கிடைத்ததற்கு முதலில் நன்றி செலுத்த வேண்டுவது அவசியமாகும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷனுக்குக் கடிதம் எழுதி விடுவாள் என்று சொல்லப்படுகிறது. கள்ளப் புருஷனின் கபடத்தனத்தைக் கண்டிக்க வேண்டியது ஆண்களாகிய உங்களது வேலையேயாகும். பெண்கள் ஒரு சொத்து என்றும், அவர்கள் இரண்டொரு உதவிக்குத்தான் ஆகக்கூடியவர்கள் என்று ஆண்கள் நினைத்தால், அவர்களின் கெட்ட எண்ணத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.  — திருமதி லீலாவதி ராமசுப்பிரமணியம் (6-7-1931-ல் விருதுநகர் கூத்திரிய பெண்பாடசாலை ஆண்டு விழாவில்)  பாம்பன் சுவாமிகளை நான் என் 18-வயது முதல் அறிவேன். என்னைச் சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், ஆசிரியர் நா. கதிரைவேற்பிள்ளையும், புதுப்பாக்கம் சம்பந்த முதலியாருமாவார்கள். சுவாமிகளிடம் நான் எனக்கிருந்த பல சாத்திர ஐயங்களைக் களைந்து கொண்டேன். நான் அரசியலில் தலைப்படுமுன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஓய்வுப் பொழுதைச் சுவாமிகளிடம் அறிவுரையாடுவதிலேயும், எனக்குள்ள சாத்திர ஐயங்களைக் களைந்து கொள்வதிலேயுமே பெரிதும் கழித்து வந்தேன்.  —திரு. வி. க. (30 - 5 - 1929)  நான் எழுதிய எழுத்தில் பாதியைக்கூட உங்களால் அழிக்க முடியாது. ஏன், உங்கள் கண்ணீரெல்லாம் கொட்டிக் கழுவினாலும் ஒரு வார்த்தையைக்கூட அழிக்க முடியாது.  —உமர்கய்யாம் (பாரசீகக் கவிஞர்)  எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களே யாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது.  — சாக்ரட்டீஸ்  இறைச்சி உண்பவர்கள் ஒருவரையொருவர் கூடக் கொன்று தின்று விடுவார்கள். அதனால் ஏற்படும் துன்பம் இல்லாதிருக்குமானால், என் உடலில் கூட சிறு பகுதிகளே இறைச்சி உண்பவர்களுக்காக வெட்டித் தருவேன், அப்பகுதிகள் உடனே வளர்ந்து விடக்கூடுமானல், எல்லா மக்களுக்கும் போதுமான உணவு கிடைக்கக் கூடுமானால், மக்கள் இறைச்சி உண்பதையே தடைசெய்து விடுவேன்.  —அக்பர்  தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும், அவர்கள் சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தத் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால், தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு இவ்வார்த்தைப் பிடிக்காதுதான்.  —பெரியார் (1930)   மனச்சாட்சியும் நம்பிக்கையும் தூண்டும் வழியிலேயே செல்வதற்காக அந்தணனாய்ப் பிறந்த நான், பொதுமக்கள் மாத்திரமேயல்லாது, தற்கால ஒழுங்கால் லாபம் பெறும் என் உறவினர்கள் சிலருங்கூட என்னிடம் வெறுப்புக் கொண்டு என்னைப்பற்றி முறையிடவும், என்னை வசைமொழி கூறவும், பாத்திரமானேன். ஆனால் இத்துன்பங்கள் எவ்வளவு பெருகினாலும், நான் பொறுமையுடன் சகிக்கக் கூடும். ஏனெனில், எனது தாழ்மையான முயற்சிகள் இப்போதில்லா விட்டாலும், எக்காலத்திலாவது நியாயமானவை எனக் கருதப்பட்டுப் பலராலும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாக உண்டு.  —ராஜாராம் மோகன்ராய்  தெரு ஒரத்தில் மசால்வடை போட்டு விற்பார்களே அந்த வாசனை அடிக்கிற போதெல்லாம் அதை வாங்கித் தின்ன வேண்டுமென்ற ஆசை வரும். யாராவது போய் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் சாப்பிடுவோம். ஆனால் வெட்கம். நாலு பேர்கள் பார்ப்பார்களே என்பதால், அங்கே நாமே போக மாட்டோம். இப்படித் தான் இன்னமும் சில பொய்யான பாவனையில் இருந்து கொண்டிருக்கிறோம்.  —திருமதி செளந்திரா கைலாசம் (27-1-1972)  சுற்றிலும் சட்டம் கட்டிய மேஜையின் வழவழப்பான பலகை மீது, பந்துகளை ஒரு கம்பினல் இடித்து, ஒன்றோடொன்று மோதவிட்டுக் குழிகளில் விழச்செய்யும் பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கும், கோலியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கான மேஜை, முதலிய உபகாரணங்களுக்கு ரூ 50 ஆயிரம் போல செலவு செய்வதைவிட, நாம் ஏன் கோலி ஆடக்கூடாது? விலை மலிவாகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள எதையும் மட்டமாக நினைக்கும் மனப்பான்மை நமக்கு இருக்கிறது.  —ராஜாஜி (23-12-1959)   பள்ளியில் படித்துக்கொண்டிருத்த காலத்தில் ஒரு நாள் என் தாயாருடன் வந்து கொண்டிருந்த போது நாலைந்து பையன்களுடன் யானைக்குட்டி மாதிரி ஒரு பையன் வருவதைப் பார்த்து நான் ”'களுக்”கென்று சிரித்தேன். அதைப்பார்த்து என் தாயார் அந்தப் பையனப் பார்த்த நீ அப்படி சிரிக்கிறே, அவன் யார் தெரியுமா? பிருத்விராஜின் மகன்' என்றார். அதைக் கேட்ட நான் அவருக்குப் போய் இப்படிப்பட்ட பிள்ளை பிறந்ததே என்றேன். அந்த நாளில் அப்படி இருந்த ராஜ்கபூர்தான் இன்று என்னுடன் நடிக்கும் கதாநாயகன்.  — நர்க்கீஸ் (இந்தி நடிகை)  இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள்.  — நேரு (17-11-1960)  நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதினொரு மணிக்குள் சாப்பாடு. இரண்டு மணிக்கு ஒரு கப் காபி. இரவு இட்டிலியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.  — காமராஜ் (15-7-1965)  எனக்குப் பிராமணர்களும் ஒன்றுதான், வேளாளரும் ஒன்றுதான்; இருவரும் தள்ளும் மற்ற ஜாதியாரும் ஒன்று தான். ‘இவன் பேச்சோடு நில்லாதவன், செயலிலும் ஜாதி வித்தியாசத்தை மதியாதவன், அதிலும் பகிரங்க மூர்க்கன். நல்ல ஆசாரிய வம்சத்தில் பிறந்து குலத்தைக் கெடுத்தவன்” என்று என்னைக் குலத்தார் நீக்கி வெகு நாளாயிற்று.  — ராஜாஜி (1926)  என்னிடம் இப்போது ஏறத்தாழ 60,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி, வேறு யாரிடமும் (நட்சத்திரங்களுக்குள்) நிச்சயமாக இல்லை. எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது. எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு. ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும்.  —நடிகர் நாகேஷ் (9-5-1973)  'முதலில் அவர் செய்யட்டும், பிற்பாடு நாம் செய்ய லாம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் உங்களால் ஆனதை உடனே செய்ய வேண்டும். இன்றைய தினத்திலிருந்து நீங்கள் அனாவசியமாகத் தூங்காமல் ஒவ்வொரு நாளும் 'நான் இந்த தேச விடுதலைக்காக என்ன செய்தேன்' என்று உங்கள் மனதைத் தொட்டுப் பாருங்கள்.  —ராஜாஜி (1930  உங்கள் மீது சில ராக்கெட்டுகளைப் பாய்ச்சப்போகிறேன். மக்களுக்கு சுகாதாரத்தைப் போதிப்பது மாணவர்களாகிய உங்களது கடமை. நீங்கள் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். இப்பொழுது மேகநோய் (வி. டி.) விகிதம் அதிகரித்திருக்கிறது. உங்களுக்கு அந்த நோய் இருக்குமானால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்களை முதலில் சரிப்படுத்தக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நமது மொத்த ஜனத்தொகைக்கும் அந்த நோய் பரவிவிடும். மாணவ, மாணவிகளான உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களுக்கு அந்த நோய் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.  — இடிஅமீன் (உகாண்டா அதிபர்)                பக்கம் 21-30     என் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் போதுதான், நான் கிழவனகிவிட்டதாகக் கருதுகிறேன், மற்ற சமயங்களில் எல்லாம் 21-வயதுடைய இளைஞனைப் போல் இருப்பதாகவே கருதுகிறேன். — வி.வி.கிரி (11-8-1962)  என்னைச் சிலப்பதிகாரத்துக்கு இழுத்தவர் பாரதியார். அதுபோலவே என்னைக் கீதைக்கு இழுத்தது காந்தியின் ‘அனாசக்தி யோகம’ என்ற புத்தகம்.  — ம. பொ. சி. (14-1-1962)  மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது.  — நெப்போலியன் (20.12-1816)  அரசியலில் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. மக்கள் குடியிருக்க வசதியான வீடுகளைப் பெற வேண்டும். மூன்று வேளைகளுக்கும் தேவையான அளவு உணவு அவர்களுக்குக் கிட்ட வேண்டும். நேர்த்தியான முறையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கக்கூடிய நிலைமை அடைய வேண்டும். இவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். நகைச்சுவைக்கென்றே நான் படங்களைத் தயாரிக்கின்றேன். நகைச்சுவை, மக்களைத் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது  —நடிகர் சார்லி சாப்ளின்  வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.  — நடிகர் ஜெய்சங்கர் (8.1-1975)  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா தன்னுடைய அன்பையும் அறிவையும் கொண்டு வந்து சீனாவின் வாயிலில் நின்றபோது, பெளத்த ஆசாரியார்கள் உங்களுடன் சகோதர முறையில் சேர வந்தார்கள். அந்தப் பிணைப்பு இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது சீன மக்கள் உள் ளத்தில் நீறு பூத்த நெருப்புப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் அலட்சியத்தாலும் அடிமைத்தனம் காரணமாகவும் அந்தத் தொடர்பு இப்போது காடு மண்டிய வழிபோல ஆகிவிட்டது. ஆனால் அந்த உறவின் அடையாளங்கள் இப்போதும் காணக் கிடைக்கும். அத்த உறவுப் பிணைப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்.  —கவி ரவீந்திரநாத் தாகூர் (12-4-1924) (சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில்)  நம் நாட்டில் ஒவ்வொரு லட்சம் ஜனத்தொகையில் 85 பேர்கள் புற்று நோயினல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னாட்டில் புற்று நோய் கண்டவர்களில் 40 சதவிகித்த்தினருக்கு அது உதடு, நாக்கு, கன்னங்களில் மட்டுமே உள்ளது. வெற்றிலைப் பாக்குடன் புகையிலையைச் சேர்த்து மெல்லும் பழக்கமே இதற்குப் பெரிதும் காரண மென வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே அப்பழக்கத்தை அடியோடு நிறுத்த இயலாவிட்டாலும் குறைக்கும்படி வற்புறுத்த வேண்டும்.  — திருமதி ஜோதி வெங்கடாசலம் (13-1-1965) (தமிழ்நாடு சுகாதார அமைச்சர்)  எனக்கென்று சொந்தமாக இப்பொழுது எதுவுமில்லை. ஒரு வீடு இருந்தது. அதையும் இப்பொழுது கொடுத்து விட்டேன்.  — பிரதமர் இந்திரா காந்தி  'நான் என்னை அழகி’ என்று நினைத்ததே இல்லை. என் மூக்கு ரொம்ப நீளம். ஒரு பல் உடைந்திருக்கிறது. என்உயரம் குறைவு. பருமனாகிக் கொண்டு வருகிறேன்.  — நடிகை சர்மிளா டாகூர்  சிவாஜி ஒரு சமயத்தில் ஒரு முகம்மதிய அரசரைத் தோற் கடித்தபோது, ஒரு இளம்பெண் கைதியாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். அப்போது அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி சிவாஜியிடம் கூறினர். அவரோ அவ்விதம் செய்வது ஒரு வீரனுக்கு அழகல்ல, ஆகவே, அவளை அவளது பெற்றேரிடம் கொண்டுபோய் ஒப்புவித்து விடுங்கள் என்றாராம். அவர் பிற பெண்களைத் தம் தாயைப்போல் பாவித்தவர். இந்த உத்தம எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.  —சர். ஏ. ராமசாமி முதலியார் (3-5-1927) (சென்னையில், சிவாஜி 300-வது வருடக் கொண்டாட்ட விழாவில்)  ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ள திறமைகளையும், பண்புகளையும் வெளிக்கொணர்வதே கல்வியின் உயரிய லட்சியமாகும். கல்வி ஒருவருக்கு மறுபிறவி தருகிறது என்று இதனாலேயே இந்திய ஞானிகள் கூறியுள்ளனர். நாம் மறு பிறவி எடுத்தாக வேண்டும். இந்த மறுபிறவி எடுக்கவும், கிடைக்கும் திறமைகளை வெளிக்கொணரவும் ஒருவர் தன்னைப் பற்றியறிந்து கொள்ளவும் தற்சோதனை செய்து கொள்ளவும் வேண்டியது அவசியமாகும்.  —பிரமானந்த ரெட்டி (3-12-1976  ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை.  —காமராசர்  சமுதாய மாற்றத்திற்கு எவை எவற்றை ஒழிக்க வேண்டும் என்று கருதி, யாரும் செய்யாத தொண்டை நான் மேற்கொண்டதற்குத் துணிவு மனப்பான்மையே காரணம். இந்தத் துணிவு எனக்கு மட்டும் எப்படி வந்தது? நான் சிறு வயதில் காலியாய்த் திரிந்தவன். என்னைப் பெற்றவர்கள் ஒரு விதவைக்கு என்னைத் தத்துக் கொடுத்து விட்டார்கள். அந்த அம்மையால் என்னை அடக்கி வளர்க்க முடியவில்லை. நான் வீதியில் கிடக்கும் எச்சில் இலைகளில் எது கிடந்தாலும் எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். சாக்கடையில் நெல்லிக்காய் கிடந்தாலும் எடுத்துத் துடைத்துவிட்டு வாயில் போட்டுக் கொள்வேன். இப்படியெல்லாம் ஏற்பட்ட துணிவும், ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்று கேட்கும் தன்மையுமே என்னை இந்த அளவிற்கு வளர்த்திருக்கின்றன.  —பெரியார்  என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்.  —கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  மல்யுத்த மேடையில் இறந்துவிட வேண்டும் என்பது தான் என் நீண்ட நாள் ஆசை. ஆனால் கடவுள் இந்தப் பாக்கியத்தை மட்டும் எனக்கு அளிக்க மாட்டார் போல இருக்கிறது.  —மல்யுத்த வீரர் கிங்காங்  சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  —திரு. வி. க.  நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். கல்லூரி போனவன் என்றோ, எனக்குப் பூகோளம் தெரியும் என்றோ, நான் எப்போதும் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் பெரும் பாலும் அறிவேன். அவற்றிற்குப் போகிற வழி, இடையில் வரும் ஆறுகள், முக்கிய ஏரிகள், அவற்றின் உபயோகம் பற்றி எனக்குத் தெரியும். மற்றும் எந்தெந்த ஊரில் எப்படி எப்படி ஜனங்களுக்கு ஜீவனம் நடக்கிறது, எந்தத் தொழில் பிரதானமாக இருக்கிறது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவிலும் பல இடங்களைப் பார்த்துத் தெரிந்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் பூகோளம் இல்லை, கோடுகள் இழுத்துப் படம் போட்ட புத்தகந்தான் பூகோளம் என்றால், அது எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும்.  —காமராசர்  (1959-ல் சென்னைப் புளியந்தோப்பு குட்டித் தம்பிரான் தெரு பொதுக் கூட்டத்தில்)  பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.  —ம.பொ.சி.  சின்ன வயதிலேயே எனக்கு நடிப்பின் மீது ஒரு பற்றுதல். பற்றுதல் என்று சொல்வதைவிட வெறி என்றுகூட சொல்லலாம். அந்த வெறியிலே தான் நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டே ஓடிப்போய் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். என்னை எங்கெல்லாமோ தேடிப்பார்த்து அலுத்துப் போய்விட்ட என் பெற்றோர்கள் கடைசியில் என்னத் தேடுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனர்.  —நடிகர் முத்துராமன்  கிரிக்கெட்டும், ஹாக்கியும்தான் எனக்குப் பிடித்த விளையாட்டுக்கள். கல்லூரி டீம்களில் சேர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, முதலிய நாடுகளுக்கெல்லாம் போய் விளையாடியிருக்கிறேன். இப்போது நாலைந்து ஆண்டுகளாக வாரம் ஒருமுறை கால்ஃப் ஆடுகிறேன்.  —பக்ருதீன் அலி அகமது (1975) (இந்திய ஜனதிபதி)  திண்ணைப் பள்ளியில் நான் படித்த காலத்தில், அங்கு எனக்குக் கொடுக்கும் பாடங்களைச் சரிவர ஒப்பித்து விடுவேன். நான் பதினைந்து வயதில் திருக்குறள் முழுதும் மனப்பாடம் செய்திருந்தேன்.  —பாரதிதாசன் (6-5-1963)  நான் வறுமையில் உழன்று கொண்டிருந்த நேரத்திலும் கவலைப்படாதவன். என் நண்பர்கள் வீட்டில்-ஒரு நாளைக்கு ஒரு வீடு என்று சாப்பிட்டால் கூட சாகும்வரை சாப்பிட முடியும். நான் இனி சம்பாதிக்க வேண்டியதில்லை. அவ்வளவு நண்பர்களைத் தொண்டர்களைப் பெற்றிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் கொள்கையைச் சொல்லப் பின் வாங்க வேண்டும்?  —எம்.ஜி.ஆர். (9-10-1972)   பிறர் தம்மைப்பற்றிப் பேசுவதையே நான் எப்பொழுதும் கேட்க விரும்புகிறேன். அப்பொழுதுதான் நான் சதா நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க முடிகிறது.  —வில் ரோஜர்ஸ்  தற்போது கவர்ன்மெண்டார் அனுஷ்டித்து வரும் இராணுவ முறையை, எங்கள் நலனை யுத்தேசித்தே நாங்கள் கண்டிக்கிறோம். பிரபுவாகட்டும், பக்கிரியாகட்டும், வீரச் செயல்களைச் செய்யவும், மனிதர்களைச் சூரர்களாக்கவும்: மனிதர்களுக்கு அப்பெயரைப் பொருந்தச் செய்யவும், காரணமாயுள்ள தன்னம்பிக்கையை நாம் இழந்து வருறோம். நான் 5-வயது குழந்தையாயிருக்கும் பொழுதே என் பாட்டனார் யுத்தப் பயிற்சியை எனக்குக் கற்பித்தார். ஐம்பது வாருஷத்திற்கு முன் ஒவ்வொரு இளைஞனும் சமயம் ஏற்படும் பொழுது யுத்தத்தில் தன் புஜபல பராக்கிரமத்தைக் காட்ட அவாக் கொண்டிருந்தான். ஆனால் அதை நினைக்க என் உள்ளத்தில் நானா வித மனோ எழுச்சிகள் தோன்று கின்றன. மனிதர்கள் யுத்த வீரர்களாக வேண்டுமானல் கஷ்டகாலம் நேரிடும் சமயத்தில் எந்த வேலைக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் அம்மாதிரியான சம்பவம் நேரிடும். நமக்கு ஆரம்ப முதல் யுத்தப் பயிற்சி வேண்டும். நம் தகப்பன் பாட்டன் ஏனேயோர் சண் டை செய்வதைப் பார்க்கவும், அவர்களோடு கலந்து கொள்ளவும் வேண்டும்.  —ராஜாராம்பல் சிங்கு (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மகாநாட்டில்)  தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  —நேரு (17-6-1962)  நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு; உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம்.  — இரா. நெடுஞ்செழியன்  (கல்வி, தொழிலமைச்சர்)  25 வயதுக்கு முன்பு யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. 40 வயதுக்குப் பிறகு யாரும் திருமண இன்பம் அனுபவிக்கக்கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.  —வினோபா (3-7-1974)  நான் கொள்கையில் மிகவும் நிலைபெற்றிருப்பவள். என் சொந்தக் காலில், சொந்தத் தத்துவத்தில் வலிமையுடன் நான் நிற்பேன். இதைவிட்டு நான் என்றுமே பிறர் தயவை நாடி, அடுத்தவர் காலில் நிற்பவள் அல்ல. குறிப்பாக எந்த மகானும், எந்தக் கடவுளும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் மகானாக எண்ணி குருவாக ஏற்று அவர் காட்டும் வழியில் போய் மோட்சம் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் அன்று.  —பிரதமர் இந்திரா காந்தி  சிலர் ஐந்தாறு வேஷ்டி புடவைகளை வாங்கி, பீரோ நிறைய அடுக்கி வைத்துக் கொண்டு, யாராவது விருந்தினர்கள் வந்தால் திறந்து காட்டுவார்கள். அவ்வளவுதானே தவிர வேறு பிரயோசனமில்லை; பணம் முடங்கி வீணாகப் போகாமல் வெளியே வந்து நாட்டின் செல்வத்தை மேலும் வளர்க்க வேண்டும்.  —காமராசர்  இது என்ன வாழ்க்கை! ஜெயில் வாழ்க்கை போல் இருக்கிறது. மிருகக்காட்சி சாலையிலுள்ள குரங்கைப் போன்ற நிலையில் நான் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்க்கும் பார்வையை எண்ணும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. நான் எளிமையாக வாழ விரும்புகிறேன். எல்லோருடனும் தமாஷாகச் சிரித்துப் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் அது முடிவதில்லை. புகழ் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதனால் எளிமையாகவும், எண்ணம் போலவும் வாழ முடியாது போல் இருக்கிறது.  —புருஸ்லீ (உலக கராத்தே மன்னன்)  எனக்கு நிலங்கள் உண்டு. எனினும் சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால் விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள், என் செய்வது!  —வ. உ. சி. (3-3-1923)(காரைக் குடியில்)  என் வாழ்நாளில் நான் எழுதியது எல்லாம் தமிழில் தான். வியாசர் விருந்தும், கண்ணன் காட்டிய வழியும், சக்கரவர்த்தி திருமகனும், உபநிஷதப் பலகணியும், பல வருடங்களுக்கு முன்பே கதைகளும் தமிழில்தான் எழுதினேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுத வராது. விஞ்ஞான சொற்கள் அடங்கிய புத்தகமும் தமிழில்தான் எழுதினேன். தமிழிலேயே மூழ்கி வளர்ந்தவனை-என்னைப் பார்த்து தமிழுக்கு விரோதி எதிரி என்பது மோசடி-முழுப்பொய்-கலியுகப்புளுகு.  —ராஜாஜி (4-7-1965)  ஒருவருக்கு 24 வயதில்தான் நல்ல வாழ்க்கை தொடங்குகிறது. என்னுடைய வாழ்க்கையிலும் 24 வயதில்தான் நல்லநேரம் வந்தது.  —நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  இந்நாட்டின் பொருளாதார நிலைமையைப் பற்றி புத்தர்கள் எழுதிவைத்த புத்தகங்களிலிருந்து நாம் முதன் முதலில் அறிந்தோம். புத்தமதம் ஓங்கி வளர்த்திருந்த காலத்தில் நிலம் சம்பந்தமாகப் பட்டா மாற்றும் உரிமையில்லை என்று புரபசர் ரைஸ்டேவிட்ஸ் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து நாம் அறிகிறோம். அப்போது நாடு செழிப்பாகவும், க்ஷேமமாகவும் இருந்தது. கூலிக்கு வேலை செய்வதை மக்கள் வெறுத்து வந்தனர். அம்மாதிரியான சுபாவ குணம் இந்தியாவில் எல்லா யுகங்களிலும் எக்காலத்திலும் இருந்து வருகிறது.  —லாலா லஜபதிராய் (18-4-1928) (எர்ணாகுளம்)  கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்துமதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித்திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்து மதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து, அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்துகொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையைவிடக் கேவலமானதாயிருக்கிறது.  —பி.டி.ராஜன்(9-6-1928) (லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்.)  என் குழந்தைப் பருவத்தில், என் தந்தை எனக்கு எழுத ஒரு சின்னஞ்சிறிய மேசையும், புத்தகங்கள் வைத்துப் படிக்கும் ரஹ்யாலும், ஒரு தங்க மோதிரமும் வாங்கித் தந்தார். அதன் பின் பழைய சாமான்கள் வாங்கும் ஒருவன் வந்தான். அவனிடம் நான் தங்க மோதிரத்தைக் கொடுத்தேன்.என் கை நிறைய அவன் பேரீச்சம் பழம் தந்து சென்றான்.  —பாரசீகக் கவிஞர் இமாம் சாஅதி              பக்கம் 31-40   பணவசதி படைத்தவர்கள், பிள்ளை வாரிசு இல்லாதவர்கள், கல்வித்துறைக்கு நிதி உதவவேண்டும். அவர்கள் இந்தத் தலைமுறையில் செய்யும் உதவி பல தலைமுறை மாணவர்களுக்கு பயன் அளிக்கும். கல்வித் துறையில் நாம் போதிய முதலீடு செய்து முன்னேறாவிட்டால், உலக நாடுகளுடன் நாம் எந்தத் துறையிலும் போட்டிப் போட முடியாது.  —இரா. நெடுஞ்செழியன் (2-7-1974) (தமிழக கல்வி அமைச்சர்)  மூன்று வருடத்திற்கு முன் நான் பட்டத்துக்கு வந்தது முதல், குழந்தை மணத்தை நிறுத்துகிற விஷயமாய்க் கவனம் செலுத்தி வந்தேன். இந்த விஷயத்தைப் பற்றி நான் தீர ஆலோசித்ததில், இந்தத் தீமையை நிறுத்த வேண்டுமாயின் அதற்கு ஒரே வழிதானுண்டு. அது, சட்டம் செய்வதுதான் என்ற முடிவிற்கு வந்தேன். இதனால்தான் எனது பிறந்த நாள் தர்பாரில், பாலிய விவாகத்தைத் தடுக்கும்படி சட்டம் செய்யத் தீர்மானித்திருப்பதாக அறிவித்தேன்.  —மண்டிராஜா (13-4-1928) (லாகூரில்)  இந்திய சட்ட சபையைப் பற்றிய சட்டத்தில் கேள்வி கேட்கும் சுதந்தரம், கொஞ்சம் பிரதிநிதித்வம் போன்ற அனுகூலமான சில பாகங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் இந்தியப் படிப்பாளிகளிடத்தில் அவநம்பிக்கை வைக்காமல் அவர்களே விசுவாசித்து அவர்கள் தேச அரசாட்சியில் ஈடுபடும்படி செய்ய வேண்டும். அவர்களைப் பகைவர்களாகும்படி அதிகாரிகள் நடந்துகொள்ளக்கூடாது. இந்தியாவின் தரித்திரம், ஆட்சி முறையின் அமைப்பினால் ஏற்படுகிறதே யொழியத் தனிப்பட்ட அதிகாரிகளால் ஆக்கப்படுகிறதில்லை.  —தாதாபாய் நவ்ரோஜி  (1893-ல் லாகூரில் நடைபெற்ற ஒன்பதாவது காங்கிரஸ் மாநாட்டில்.)  நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை.  —கவிஞர் எமர்சன்  நானே பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான். பணம் கட்ட வசதியின்றி உபகாரச் சம்பளம் பெற்றுத்தான் படித்தேன். ஆகவே, பணம் கட்டிப் படிப்பதில் உள்ள கஷ்டம் எனக்குத் தெரியும்.  —அறிஞர் அண்ணா (23-3-1967)  இலக்கியத்தை நான் கற்றேன் இல்லை. நான் நினைத்ததைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எனது மொழி எனக்கு உதவவேண்டும். அதுவரையில் எனது மொழியறிவு எனக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்.  —எம். ஜி. ஆர். (23-12-1975)  முன்பெல்லாம் யோசனை சொல்வதற்காகச் சிலரும், அதைக் கேட்பதற்காகப் பலரும் இருந்தார்கள். அதனால் யோசனை சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. நேர்மாறாகப் போய்விட்டது. யோசனைகளைத் தேடி, நாம் எங்கும் போக வேண்டியதில்லை. நம் இருப்பிடம் தேடித் தாமாக யோசனைகள் அடுக்கடுக்காய் வந்து குவியும் நாள் இது.  —அகிலன்  உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது.  —காந்தியடிகள்  தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும்.  —நேரு (27-11-1962)  பிரசங்கம் செய்வது எனக்கு எப்பொழுதும் பிடிக்காது. அக்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, ஆனாலும் பிரசங்கம் செய்யாமலே இருக்கமுடியவில்லை. தனியே பிரசாரம் செய்யப் போன போதோ, அல்லது பிறர் வற்புறுத்தலினாலோ பேச வேண்டியிருக்கிறது. அப்படி நான் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தது எளிங்க நாய்க்கன்பட்டி என்ற கிராமத்தில் அவ்வூர் விருதுநகருக்குச் சுமார் 5 மைலில் உள்ளது. சுமார் 200 வீடுகள் கொண்ட சிறு கிராமம். சுப்பராய பந்துலு என்ற மற்ருெரு காங்கிரஸ் ஊழியர் என்னுடன் வந்திருந்தார். கூட்டம் 500 பேர் இருக்கும். அதாவது அந்தக் கிராமத்தார் எல்லோருமே வந்திருந்தார்கள்.  — காமராசர்  கல்யாண வயதை உயர்த்த வேண்டாம்; ருது சாந்திக் காலத்தைத் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று வைதீகர்கள் சமாதானம் சொல்லுகிறார்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாகக் கல்யாண வயதையே தள்ளி வைத்தாலென்ன முழுகிப் போய்விடும்? என் சென்னை நண்பர்கள் அறிந்திருப்பதுபோல் சமஸ்கிருதத்தில் எனக்கு அவ்வளவு புலமையில்லாவிடினும் நானும் ஏதோ சிறிது சமஸ்கிருதம் அறிந்த வரையில், பண்டைக்காலத்தில் இந்துக்கள் அவ்வப்போது காலப் போக்குக் கேற்றவாறு நடந்து கொண்டதனால்தான் மேன்மை பெற்று விளங்கினர்கள் என்றறிந்தேன். அத்தகைய உத்தமமான முறையை இந்துக்கள் தத்துவஞான விவாதங்களாலும் நம்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது.  —லாலா லஜபதிராய் (14 - 4 - 1928) (சென்னை கோகலே ஹாலில்)  இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம்.  —பிரதமர் இந்திரா காந்தி  எதுவும் பேச்சு வாக்கில் 'கி' என்ற அடைமொழியைப் பெற்று வரும். எப்படி? பணம், கிணம், சங்கம், கிங்கம், சினிமா, கினிமா, நாடகம், கீடகம், கட்சி, கிட்சி, வீடு, கீடு, சோறு, கீறு, காப்பி, கீப்பி, என்று வரும். அதனால்தான் நந்தனாரை கிந்தனர் என்று பெயர் வைத்தேன். ஆனால் என் பெயரை மட்டும் நீங்க அப்படிச் சொல்லலாம் என்றால் ஏமாந்து போயிடுவீங்க. ஆமாம், ஆமாம், சொல்லிப் பிட்டேன். கிருஷ்ணன் - கிருஷ்ணன்தான். -  —கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  நான் உண்மையில் யாரையாவது பிரதிபலிக்கின்றேனா என்று வியப்பதுண்டு. பலர் என்னிடத்தில் அன்பு செலுத்துகிறார்களென்றாலும், நான் யாரையும் பிரதிபலிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். நான் கீழ் நாடும் மேனாடும் சேர்ந்த ஒரு விந்தையான கலப்புப் பேர்வழி. நான் எந்த இடத்துக்கும் சேராதவன். ஒருவேளை என்னுடைய எண்ணங்களும், போக்கும் கீழ்நாட்டைவிட மேனாட்டுக்குப் பொருந்தியவையாக இருக்கலாம். ஆனால் கணக்கற்ற வழிகளில், இந்தியா தன் எல்லா மக்களையும் பற்றிக்கொள்வது போன்று என்னையும் பற்றிக் கொள்கின்றது.  —நேரு  நாம் சிரார்த்தம் என்னும் பேரால், பல தானங்களும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் பாத்திரங்களும், அரிசி, காய்கறிகளும் குறிப்பிட்ட சமூகத்தவர்க்குக் கொடுத்தல் அவசியமெனக் கருதி அவ்வாறு செய்து வருகின்றோம். இதனால் நம் பிதிர்கள் சுவர்க்கத்தை யடைவார்கள் என்றும் நம்புகிரறோம். இவ்வாறு பிள்ளைகள் செய்வதால், தந்தை தான் செய்த பாபத்தினின்றும் மீளுவது உண்மையாயின் நமது தத்துவமான ‘அவனவன் செய்தவினை அவனவனைச் சாரும்’ என்பது பொய்யாகப் போகின்றதன்றோ? ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைச் சார்ந்தார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், கோர்ட்டார் விடுவார்களா? உண்மை நீதிபதி விடமாட்டான். லஞ்சம் வாங்குபவனே அதற்கு ஒருப்படுவான்.  —வ. உ. சி. (3 - 3 – 1928)  (காரைக்குடியில்  என்னுடைய நண்பர்கள் ஏழெட்டுப் பேர்கள் சொல்லி வைத்ததுபோல, தொடர்ந்து அவரவரின் 42வது வயதிலே ஒருவர்பின் ஒருவராக செத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் 42 வயதில் இறந்து விடுகிறார்கள். நாமும் 42வது வயதில் இறந்துவிடப் போகிருறோம் என்று எண்ணினேன். ஆனால் எனக்கு 43 - 44 ஆகியும்கூட நான் சாகவில்லை. பிறகுதான், நான் பொதுத் தொண்டில் இறங்க ஆரம்பித்தேன்.  —பெரியார்  ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.  —ம. பொ. சி.  சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றாெரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம். கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு? கடவுளை மரம், செடி, கொடி, பாம்பு, சிலந்தி, யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன. கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது, ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை. சாதியார் கொடுமை என்னே! என்னே!  —திரு. வி. க. (7 - 5 - 1927)  (மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில்)  நம் நாட்டைப் பொறுத்தவரையில் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய முறையில் கேட்டால், ஏழை எளியவர்கள்கூட இயன்ற அளவு தருவார்கள்! ஒன்றுக்குக் கேட்டு வாங்கி, அதை வேரறொன்றுக்குப் பயன்படுத்தி, யாரேனும் அதுபற்றிக் கேட்டால், நீ யார் கேட்பதற்கு என்று சிலர் கூறுவதால்தான், மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.  —அறிஞர் அண்ணா (24 - 3 - 1968)  பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவன் நான். அதற்கு என்னல் முடிந்ததை நானும் செய்கிறேன். என்னுடைய டிரைவருக்கு மாதம் 550 ரூபாய் ஊதியமாகக் கொடுக்கிறேன். சமையற்காரர்களுக்கு மாதம் 250 ரூபாய் கொடுத்து இலவசச் சாப்பாடும் போடுகிறேன்.  —ஜிதேந்திரா  (இந்தி நடிகர்)  நான் வாழ்ந்து கெட்டவனில்லை ஏனென்றால் நான் எப்போதும் வாழவேயில்லை. ‘சரிதான் போடா‘ என்று எல்லாவற்றையும் தூக்கி எறிபவன். தமிழ் நாட்டிலேயே எல்லாவற்றையும் மறுக்கின்ற ஆள் நான் ஒருவன்தான்.  —கவிஞர் சுரதா (25 - 7 - 1971)    உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது.  —ஆஸ்கார் ஒயில்டு (1895)  பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டியது இல்லை என்பதோடு, இவைகள் உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.  —பெரியார்  அரிஜன் என்றால் விஷ்ணுவை நம்புகிறவன் என்று அர்த்தம். நான் விஷ்ணுவையோ, சிவனேயோ நம்புகிறவன் அல்ல. எனவே என்ன அரிஜன் என்று சொல்வது எப்படிப் பொருத்தமாகும்? எனவே, அப்படி சொல்லாதீர்கள்.  —பசவலிங்கப்பா  கடந்த பத்தாண்டுகளாகப் பல்கலைக் கழகங்களும், பொது ஸ்தாபனங்களும் வற்புறுத்தி அழைத்ததற்கிணங்கி யான் அமெரிக்க ஐரோப்பாவில் பத்து மாதகாலம் நீண்ட பயணம் செய்தேன். எனது நீண்ட பயணத்தில் இருநூறு சொற்பொழிவுகள் செய்தேன். எங்கும் பொது மக்களுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை ஆனல் அறிய வேண்டுமென்ற விருப்பமுள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியா முக்கியமானதாக ஆகிவருகிறது.  —கவி சரோஜினி தேவி (22 - 1 - 1929  (பம்பாயில்)  பெண்கள், தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான்கூட சந்தர்ப்பங்களின் பயனாக உருவானவள்தான்.  —விஜயலட்சுமி பண்டிட் (6 - 5 - 1963)  என் தந்தையின் பேருதவியிராவிட்டால், சிறந்த கவிதைகளைத் தரம் பிரித்து உணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்த போதே எங்களுக்கு அவர் அரும்பாடு பட்டுப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் தந்தை இல்லையென்றால் நானில்லை என்று நான் பெருமிதத்துடன் கூறுவேன்.  —தொருல தாதத் (வங்காளப் பெண் கவிஞர்)  நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேணடும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம் பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும் பேசவும், அவசியமானால் உபநியாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்கவேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்கவேண்டும். நன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல் அவசியமாகும்.  வ. உ. சி. (3 - 3 - 1928)  (காரைக்குடியில்)  என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும்.  —ஐன்ஸ்டின்    தன் குழந்தைகள் மீது அக்கறை உள்ள யாரும் அவர்களை அரசியலில் விடமாட்டார்கள். அதனால் தான் என் மகன்களை நான் அரசியலில் நெருங்க விடவில்லை.  —பிரதமர் இந்திரா காந்தி  தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான்-சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.  —விவேகானந்தர்  அத்தந்த இனத்தவர்களை அந்தந்த இனத்தவர்கள் பாராட்ட வேண்டும். நடிகரை நடிகர் பாராட்ட வேண்டும். இசையமைப்பாளரை இசையமைப்பாளர் பாராட்ட வேண்டும். அதுதான் முறை.  — சிவாஜி கணேசன்  மற்ற மாகாணங்களைப் பார்க்கிலும் வங்காளப் பெண் மக்களின் நிலைமை மிகவும் தாழ்மையாகவே இருக்கின்றது. கல்கத்தாவில் ஒரு பெண் நீதிபதியாவது, கெளரவ மாஜிஸ்திரேட்டாவது கிடையாது.சிறுவர்சிறுமியர் நீதிமன்றத்திற்கு, அவசியம் பெண்களையே மாஜிஸ்திரேட்டுகளாக நியமித்தல் வேண்டும். படுதா பெண்கள், தாராளமாய்ப் பாங்கிகளில் பொருள் போட்டு, வரவு செலவு செய்யப் பெண்மக்கட்காக பிரத்தியேகமாக ஒரு பாங்கி இருத்தல் வேண்டும்.  —செல்வி கார்னீலியா சொராப்ஜி (11-7-1929)  (கல்கத்தாவில்)  பெரியவர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். அவற்றையே வாங்கிப் படிக்க மாட்டேன் என்கிறார்கள். எனக்கு என்னமோ புத்தகம் போட வேண்டும் என்றே தோன்றவில்லை ஆசைக்காகத்தான் கவிதை எழுதுகிறேன்.  —திருமதி செளந்தரா கைலாசம் (27.1.1912)  இந்தியா விடுதலை பெற்ற பிறகு நம் கல்விமுறையை அடியோடு மாற்றாமல் போனது நாம் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. கல்விப் பயிற்சி என்பது வகுப்பு அறையில் பெறும் பயிற்சியுடன் நின்று விடாது. வாழ் நாட்கள் பூராவும் கல்வி கற்க வேண்டும். நூல்களிலிருந்து மத்திரமின்றி நம்மைச் சுற்றிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களிலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  —பிரதமர் இந்திராகாந்தி (5-1-1973)  என் குழந்தைகளின் நலனுக்காகவே கலைத்துறைக்கு வந்தவள் நான். என்னையும் என் குழந்தைகளையும் பெருமைப்படுத்தியது கலை உலகம். ஆக, தாயாக இருப்பது, கலைஉலகில் புகழ் பெறுவது இரண்டுமே எனக்குப் பெருமைதான்.  —நடிகை செளகார் ஜானகி  ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான பொருள் புடவைதான். அதிக அளவு கெளரவமான பொருளும் அதுதான்.  —மரியா தெரேசா (15-12-1964)  (புராதன போர்பன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி)  நாய்க்குச் சுவை உணர்ச்சியும் மோப்ப சக்தியும் அதிகம். யாராவது கோபித்தவுடன் நாய் அவர்கள் கையை நக்கும். இது, தங்களைச் சமாதானப் படுத்துவதற்காக என்று சிலர் நினைக்கிருர்கள். இது சரியல்ல. இன்னும் கோபம் உங்களிடம் இருக்கிறதா என்று சுவையின் மூலம் அறிந்து கொள்ளவே இப்படிச் செய்கிறது.  —ஸி. பி. ட்ரேக்  வாழ்க்கையில் ஒருவெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும். அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோட்சத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோட்சத்தைவிட இது மேலானது.  —புதுமைப் பித்தன்                                                    பக்கம் 41-50   தொழில்களிலே ஒன்று ஒஸ்தி. மற்றாென்று மட்டம் என்று நான் என்றும் நினைத்ததில்லை. மேல் நாட்டினர்போல் தொழில் என்றால் எல்லாமே கெளரவமான தொழில்தான் என்றுதான் நினைத்தேன். சிகை அலங்காரத் தொழில், சலவைத் தொழில், ரோடு பெருக்குகல், கூலி வேலைசெய்தல், ரிக்‌ஷா இழுத்தல், இப்படி எத்தனையோ தொழில்களிருக்கின்றன. திருட்டுத் தொழில்கூட இருக்கிறது. ஆனால் நம் நாட்டிலே படித்தவன் இவற்றையெல்லாம் துணிந்து செய்ய முடியுமா? முடியாதே! ஆனால், சினிமாவில் நடிகனாக ஆனால், இத்தனை தொழில்களையும் செய்பவனாக நடிப்பிலாவது ஆகலாம் அல்லவா? —ஜெமினி கணேசன் (1971)  எனது முழுப்பெயர் முகமது மன்சூர் அலிகான் பட்டோடி. எனது பெற்றேர்களும், நண்பர்களும் எப்போதும் என்னை “டைகர்“ என்றே அழைப்பார்கள். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது இரண்டு கால்களையும் மடக்கி, இரண்டு கைகளேயும் ஊன்றிப் புலி போலப் பாய்ந்து பாய்ந்து வேகமாகத் தவழ்ந்து விளையாடிய துண்டு. அதைத் தவிர புலிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.  —பட்டோடி  (உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்)  வீடு வீடாகச் சென்று 'ஓட்' சேகரிப்பது பெருந்தவறான காரியம். பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ‘ஓட்’ சேகரிக்கும் வீண் வேலை ஏன்?பயனற்ற-உயரிய குண நலன் அற்ற-திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி, அந்த மனிதருக்கு ’ஓட்’ போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும்.  —லார்டு மெக்காலே (1832)  ‘என் வாழ்க்கை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இருக்கிறது. நான் இன்னும் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன. பிரேசியரிடமிருந்து உலகச் சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெறவேண்டும். வீட்டில் ஓய்வாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் . சாதாரண மனிதனைப்போல் ஓய்வு பெற வேண்டும். கடைகளுக்குப் போய் வரவேண்டும். புல் வெட்டியபடி உலவ வேண்டும். ஒப்பந்தம், வழக்கு, விவகாரம் என்பதெல்லாம் இல்லாமல், வீண்பேச்சு விரயம் இல்லாமல், மேடைப் பேச்சு கூட்டம் என்பதெல்லாம் இல்லாமல், நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை.  —முகம்மது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)  நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லே. வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன். எல்லா இளைஞர்களும் என்னேயே பின்பற்ற முயன்று, வீண்மோசம் போக வேண்டாம்.  —ஜார்ஜ் பெர்னார்ட்ஷா  பெண்கள் வைர நகைகள் அணிவதன் காரணம்,தாங்கள் அணிந்திருக்கும் வைர நகைகளைப் பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல! பிறர் கண் பார்வையை வைர ஒளியின் உதவியால் இழுத்துத் தங்களைப் பார்க்கச்செய்ய வேண்டும் என்பதுதான்.  —சர். சி. வி. ராமன்  உலகத்திற்கே நாம் வழிகாட்டிப் போவோம்; நாம் புது உலகம் காண்போம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய சக்தி உடையவராக இருப்போம். அனேக கோளாறுகள் இருந்தாலும் அவை எல்லாம் உடனே மாறிவிடும். அது செய்கிறவனுடைய லட்சியத்தைப் பொறுத்திருக்கிறது.  —பெரியார்) 19-1-1973)    நான் கதைகளுக்காக ஹாலிவுட்டைத் தேடிப்போவதில்லை. என் கதைகள் ஹாலிவுட் போன்ற இடங்களுக்குப் போக வேண்டும் என ஆசைப்படுபவன் நான். என் கதை மீது யாராவது உறவு கொண்டாட நினைத்தால், அவர்கள் என் அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் இப்படி யாராக ஒருவராகத்தான் இருக்க முடியும். காரணம் நான் நடுத் தெருவிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்  —ஏ. எஸ். பிரகாசம்  (கதாசிரியர்–டைரக்டர்)  நாம் உலகத்தின் வெவ்வேறு இனங்கள். நமது சுயநலங்கள் வெவ்வேறானவை. ஆகையால் அந்த நிலையில் நாம் ஒன்றுபட முடியாது. ஆனால் அந்நிலைக்கு அப்பாலும் ஓர் உலகம் இருக்கிறது. அங்கே நம்முடைய நம்பிக்கைகளும், ஆசைகளும், திறமையும், பலனும் சமமானவை. அந்த நிலையில் உலகம் முழுதுமே மனித குலம் ஒன்று சேருமிடம் இங்குதான் கிழக்கும் மேற்கும் உண்மையிலேயே ஒன்று சேருகின்றன. எதிர் காலத்தில் சத்தியத்துக்காகவும் அன்புக்காகவும் பயணம் செய்பவர்கள் இளமையான ரோம் நகரத்தின் மனதில் ஆதரவு பெறும்படி என்னால் செய்ய முடிந்தால், நான் என்னை அதிருஷ்டசாலியாக எண்ணிக் கொள்வேன்.  —கவி ரவீந்திர நாத் தாகூர் (10-6-1926)  (ரோம் பல்கலைக் கழகத்தில்)  எனக்குப் பின்னர் உலகம் என்னைப்பற்றி நல்லதோ, கெட்டதோ எது வேண்டுமானலும் சொல்லி விட்டுப் போகட்டும். தனிப்பட்ட முறையில் விஞ்ஞான உலகம் எனக்குக் கவிபாட வேண்டும் என நான் விரும்பவில்லை. நான் கண்டறிந்த உண்மைகள் வளர்ந்து வரும் விஞ்ஞான சம்பிரதாயத்தில் ஒன்றி இணையுமானால் அதைக் காட்டிலும் எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை  —ஜே. பி. எஸ். ஹால்டேன்  (விஞ்ஞான மேதை  நான் பல காலத்தைப்பற்றி எழுதுகிறேன். ஆனால் நிகழ்காலம் தவிர வேறு எந்தக் காலத்தைப் பற்றியும் நான் கற்பதில்லை. அந்த நிகழ்காலத்தையே இன்னும் நன்றாகக் கற்றுத் தேரவில்லை. அதுவே என் வாழ்நாளில் கற்றுத் தேற முடியாததாக உள்ளது.  —பெர்னார்ட் ஷா  என் நண்பரிற் பலர் - செல்வமும் அறிவுடைமையும், பேச்சு வன்மையும் பெற்றாேர். ‘ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுகின்றார்கள்; ஆதலின் கோயிலுக்குச் செல்வதில் கருத்து வரவில்லை என்று கூறுகின்றார்கள். அவர்களே சில இந்திரிய அனுபவத்திற்காகப் பல இடிபட்டுத் தம் மனைவி மக்களுடன் துன்புற்றுக் கொட்டகையினுள் நுழைகிறார்கள். ஆண்டவன் சந்நிதியில் ஆகாத ஒன்று அங்கு ஆகும் போலும்! ஆண்டவன் சந்நிதியில் இடிபடுதலால் குறைவு ஒன்று மில்லை ஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா? பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும்.  —ஞானியாரடிகள்  (கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)  என்னைப் போலவே என்மகனும் குத்துச்சண்டை வீரனாவதை நான் விரும்பவில்லை. ஆனல் அவன் விருப்பம் இதில் இருக்குமானல் நான் ஒன்றும் செய்ய முடியாது. கல்வியாளனாக அவன் விளங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் முறையான கல்வியைப் பெறவில்லை. அதற்காக இப்பொழுது நான் கவலைப்படவில்லை. உலகிற்கு நான் படித்த மனிதனுகவே தோன்றுகிறேன். இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானல் பள்ளிக்கூடத்திற்குப் போவதை விரும்பி ஏற்றுக் கொள்வேன்.  —முகம்மது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)  என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய்க் கலவரங்கள் தடக்கும் இடத்தில் வையுங்கள். துப்பாக்கிக் குண்டு முதலில் என் நெஞ்சில் தைத்து நான் சாகிறேன். அப்படியாவது ஒற்றுமை உண்டாகட்டும்.  —மகாகவி இக்பால்  (பஞ்சாபில் ஷாஹித் கஞ்ச் மஸ்ஜித் விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளும் அதை அடக்க ராணுவமும் வந்தபோது கூறியது.)  என்னுடைய ஏழாவது வயதில் என் தந்தையார் புகையிலை விற்றுக் கொண்டிருந்த கடைத்திண்ணையில் மருதமுத்துக் கோனார் என்ற பெரியவர் ஒருவர் ஆற்று மணலைக் கொட்டி அதில் அ-ஆ என எழுதச் செய்து கற்றுக் கொடுத்தார். சில திங்கள்களில் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் கற்றுக் கொண்டேன். ஒன்பதாம் வயதில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி முதலிய நூல்களைப் படித்தேன். 10 வது வயதில் ஒரு வெற்றிலே பாக்குக் கடையில் வேலே பார்த்தேன். நாள் ஒன்றுக்கு சம்பளம் அரையணா. இது எங்களின் பெரிய குடும்பத்தின் மோர்ச் செலவை ஈடு செய்தது. ஓய்வு நேரங்களில் என் தந்தையார் எனக்குக் கடைக் கணக்கு எழுதும் வரவு செலவு முறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார்.  —கி. ஆ. பெ. விசுவநாதம்  முப்பது நாற்பது ஆண்டுகளாகத் தமிழன் ஓயாமல் மேடைகளில் வறட்டுத் தவளைகளைப் போல் கத்தி ஒரு பயனும் காணவில்லை. கேட்டவர்கள் மண்டபம் எதிரொலிக்கக் கை தட்டியும் ஒரு பயனும் காணவில்லை. வேறே பயன் காணாவிட்டாலும் கவலை இல்லை, ஒற்றுமையாவது ஏற்பட்டாலும் மகிழலாம். அதுவும் வர வரக் குறைந்து போகிறது. ஒரு மாநாடு என்றால் இருந்த ஒற்றுமையில் ஒரு பிளவு என்று பொருள்; ஓர் ஆண்டுவிழாஎன்றால் ஒற்றுமையாக இருந்த அறிஞர்களுக்குள் பிரிவு என்று பொருள்.  —டாக்டர் மு. வரதராசனார் (1960)  பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான தியாராஜ பாகவதர் வெள்ளிச் சங்கிலி பூட்டிய சந்தனப் பலகை ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது வழக்கம். மோகன ராகத்தை அப்போதவர் முணுமுணுப்பது பழக்கம். பாகவதர் ஆடிய அந்த ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடியிருக்கிறேன். பழங்காலத்து மன்னர்களைப் போலவே ஒவ்வொரு நாளும் அவர் தங்கத்தட்டிலே தான் சாப்பிட்டு வந்தார். நூறு பவுன்களைக் கொண்டு நூதனமாகச் செய்யப்பட்ட அவர் வீட்டுத் தங்கத் தட்டிலே நானும் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். வார்ப்புரு:Rh—கவிஞர் சுரதா (1973)  புன்செய் நன்செய்களில் வேலை செய்வதற்குக் கூடக் கல்வி அவசியமாவெனக் கேட்கலாம். இருபது வயதுவரையில் வெயிலில் நின்று வேலை செய்யாத பழக்கத்தால், இருபது வயதுக்குமேல் நன்செய் புன்செய் ஆகியவற்றில் வேலை செய்தால் கஷ்டமாக இருக்கின்றது. எனவே சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும். நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில் செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொள்வதுண்டு. ஆனல் வெளியில் வந்து பத்திரிகை ஆபீசில் உதவி ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன். ஆனல், ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை  —வ. உ. சி. (3-3-1928)    என்னைப் பொறுத்தவரையில் இன்னும் நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று சொல்வேன். முன்பெல்லாம் தண்ணீர் இழுப்பது, விட்டு வேலைகள் நிறையச் செய்வது என்கிற பழக்கம் பெண்களிடம் இருந்தது. வரவர அந்த எக்ஸர்ஸைஸ் நம் பெண்களிடையே குறைநதிருக்கிற காரணத்தினால், நடனத்துறைக்கு வருவதன் மூலம் கொஞ்சமாவது தேகப் பயிற்சி அவர்களுக்கு இருக்க வழியேற்படுகிறது என்றுதான் கருதுகிறேன். {{rh—டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் (20.1-19  மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன்.  —ராஜாஜி (1947)  (எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில்)    இருபது ஆண்டுகளாக சினிமாவை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். இதுவரை நான் 5-அல்லது 6-சினிமாதான் பார்த்திருப்பேன். அதுவும் நூறு ரூபாய் எனக்குக் கட்டணம் கொடுத்தால்தான் போவேன்.  —பெரியார் (1-2-1967)  நான் தெலுங்கு நாட்டு சங்கீதத்தையும், கன்னட தேசத்து சங்கீதத்தையும் ஆராய்ந்திருக்கிறேன். அவை எல்லாம் தமிழ் இசையுடன் கொஞ்சங்கட சம்பந்தப்பட வில்லை. அவை மராட்டி, ஹிந்துஸ்தானி இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். தாம்பிர பரணி நதி ஜலத்தைக் குடித்து, தமிழ்க் காற்றையே சுவாசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் தம் தாய் பாஷையில் சாகித்திய மேற்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழிலுள்ள சாகித்யங்களின் மேன்மையை உணர்ந்தும், தம் சாகித்தியங்களைத் தாய் மொழியிலேயே செய்தார்.  —ரசிகமணி-டி. கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1941)  (தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)  அரவிந்தர் ஒரு வங்காளி. எந்த ஒரு வங்காளியும் அவரை மறக்கவில்லை. பிரகாசம் ஒரு தெலுங்கர். எந்த ஒரு தெலுங்கனும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுந்தான் வ. உ.சியை மறந்து விட்ட்னர். அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றத் தவறிவிட்டனர்.  —கவிஞர் சுரதா (1971)  ‘ஜனநாயகம்’ ஆசிரியர், தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ். வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகாதந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள். நான் ‘பாலா மணி‘க்குப் பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணி’க் குரியவர் கதா சத்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். -  —பாவேந்தர் பாரதிதாசன் (19-9-1937)  நான், என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவன்.  —பெரியார் (1-1-1962)  நான், சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பலகாரியங்களை நிறைவாகச் செய்பவன்.  —அறிஞர் அண்ணா (21-3-1967)  நான் முழுமையாக நேருஜியைப் பின்பற்றுவதாகவோ, காந்திஜியைப் பின்பற்றுவதாகவோ, சொல்லவில்லை இப்போது காலம் மாறிவிட்டது. மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிருக்கிறது. ஆனல் இந்த நாடு காந்திஜியின் லட்சியங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் இயங்கும். அவற்றை நாம் மறந்து விடவில்லை.  —பிரதமர் இந்திரா காந்தி (7-1-1975)  சினிமா ரசிகர்கள் சங்கத்தை ‘விசிறிகள் சங்கம்’ என்றோ, ‘ரசிகர் சங்கம்’, என்றோ, அழைப்பதைவிட, ‘ஆர்வகர் சங்கம்’ என்று அழைக்கலாம்.  —டாக்டர் ஏ.சி. செட்டியார் (19-6-1960)  அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ஆம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இருந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.  — நடிகர் டி. கே. சண்முகம் (13-8-1972)    இனி, சென்னையிலுள்ள சீர்த்திருத்தச் சங்கங்களைப் பற்றிப் பேசுவோம். இந்தச் சீர்திருத்தச் சங்கத்தாரில் சிலர், என்னைப் பயமுறுத்தித் தங்கள் சங்கத்தில் சேரச் செய்ய எண்ணங் கொண்டாற் போலிருக்கிறது. அது சாயாத காரியமென்பதை அவர்கள் அறிந்து கொள்வாராக. சென்ற பதினான்கு ஆண்டுகளாகப் பசிப்பிணியை நேரடியாய் அனுபவித்துக் கொண்டு வந்து, அடுத்த நாள் இன்ன உணவு கிடைக்கும், இந்த இடத்தில் உறங்குவோம், என்றறியாமல் திரிந்தவனை அவ்வளவு எளிதாகப் பயமுறுத்திவிட முடியாது. கெளபீன தாரியாய் அத்தியந்த சீதளப் பிரதேசங்களில் சஞ்சரித்தவனை, இந்தியாவில் அவ்வளவு எளிதாக ஏய்க்க முடியாது. ஆகவே அவர்களுக்கு முதலில் நான் இப்படிச் சொல்வேன். எனக்குச் சொந்தமான சங்கற்பம் சிறிதுண்டு. எனக்கும் சிறிது அனுபவமிருக்கிறது. உலகத்திற்கு நான் சொல்ல வேண்டிய தூது மொழி ஒன்றுண்டு. அதை நான் துணிவோடும் பிற்காலத்தைப் பற்றிக் கருதாமலும் சொல்வேன். சீர்திருத்தக்காரர் வந்தால்–உங்களே விட நான் பெரிய சீர்திருத்தக்காரன் என்று அவர்களிடம் சொல்வேன் அவர்கள் இங்குமங்கும் துண்டு துண்டாயன்றோ திருத்தம் செய்ய வேண்டுமென்கிறார்கள். நானோ வேரோடு திருத்த வேண்டுமென்பேன். அவர்கள் இருப்பதை அழிக்க வேண்டுமென்கிறார்கள். நானோ இருப்பதை வைத்துக் கொண்டு அதன்மேல் கட்டடம் கட்ட வேண்டுமென்கிறேன். மேல் பூச்சான சீர்திருத்தத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.  —சுவாமி விவேகானந்தர் (9-2-1897)  (சென்னை விக்டோரியா மண்டபத்தில்)  நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 33 மாதங்கள் மராட்டியத்திலுள்ள அமராவதி சிறையில் காமராசருடன் நான் இருந்தேன். நமது நாடு சுதந்திரம் பெற்று மக்கள் சுக வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் தியாகம் செய்தோம். சிறையில் வாடினோம். நான் சிறையிலிருந்த போது, நான் மந்திரியாவேன், சட்டசபை உறுப்பினராக வருவேன் என்று நினைத்தது கூட இல்லை.  —ராஜாராம் நாயுடு (3-1-1977)  (குடிசை மாற்று வாரியத் தலைவர்)  ஏராளமான குழந்தைகளைப் பெறுவதைவிட சில குழந்தைகளோடு கட்டுப்படுத்தி, அவர்களுக்குப் போதுமான உணவு, துணிமணி, மற்ற வசதிகளைச் செய்து தருவதே நல்லது.  —நடிகை செளகார் ஜானகி (18-12-1960)  நான் திருச்சியில் கல்லூரியிலே படிக்குங்காலத்தில் நாடகங்களில் நடித்தேன். அந்தக் காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாட்டுகளை நான் அருமையாகப் பாடுவேன்  —நடிகர் அசோகன் (7-3-1961)  தமிழ் இசையைப் பற்றிய சிறப்புகளைப் பொதுவாக நம் தமிழ்ப் படங்களில் காணுவதற்கே இடமில்லை. தமிழ் இசைக் கலையை வளர்க்காது போவோமேயானால் தமிழ் இசைக்கே பெரும் தீது செய்தவர்களாவோம். தமிழ்ப் படங்களிலே இந்திப் பாட்டுக்களையோ, சமஸ்கிருத பாட்டுக்களையோ புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. வேண்டிய இடங்களில் எல்லாம் தமிழ்ப் பாட்டுக்களே அமைத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும்.  குமாரராஜா எம் ஏ. முத்தையா செட்டியார் (25.5-1941)  (சென்னை பிரபாத் தியேட்டரில் நடைபெற்ற சகுந்தலை என்ற படத்தின் 100-வது நாள் விழாவில்)            பக்கம் 51-60   ஒரு இந்திரியமாகிய மூக்குக்குச் சுறுசுறுப்புத் தருதற்காக மரத்தினலோ, வெள்ளியினாலோ, பொன்னினாலோ தத்தம் தகுதிக்கேற்பச் செய்யப்பட்ட ஒரு சிறு பெட்டியில் பொடியினை அடைத்து உடம்பிலேயே வைத்து கொண்டிருக்கின்றனர். இப் பொடிக்கு இவ்வளவு பெருமை என்றால், உயிருக்கே பேரின்பத்தை நல்க வல்ல வேற்பெருமானை உடம்பில் ஏன் கொள்ளக்கூடாது? என்று கேட்கிறேன். ‘அவ்வாறு கூறும் நீங்கள் உடன் வைத்திருக்கின்றீர்களா? என்று வினாவலாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர்க் குப்புசாமிப் பத்தர் என்ற ஓர் அன்பர் தங்கப் பட்டைகளுடன் கூடிய இந்த வேலினை எமக்குச் செய்து தந்தனர். இதனை யாம் எப்போதும் எம்முடன் வைத்துக் கொண்டிருக்கின்றோம். —ஞானியாரடிகள்  (கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)  மனிதன் பிறக்கும்போது அந்தப் பிறப்பின் காரணமாகவே, தான் பிறந்த நாட்டின் பழங்காலம் முழுமைக்கும் வாரிசு ஆகிறான். கல்கத்தாவின் ஒரு மூலையில் பிறந்த நான் இந்தியாவின் செல்வத்திற்கு உடைமையாளனாக ஆகிவிட்டேன். அதே மாதிரி நமது சீன நண்பர்களும் சீன நாட்டு நாகரிகத்தின்மேல் உரிமை பெற்றிருக்கிறாள்கள். இந்திய நாட்டின் பண்டைய வரலாறும் நாகரிகமும் சீன நாட்டுடன் தொடர்புடையவை.  —கவி ரவீந்திர நாத் தாகூர் (24-7-1927)  (சிங்கப்பூரில்)  அதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டுவிடும். எனக்கு அந்த விதமான ஆபத்து பலதடவை ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக் கனம் ஏற்பட்டு தலைவீங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தலையைச் சுற்றி இறுக்கமாகத் தலைப்பாகை கட்டியிருக்கிறேன்.  — சி. வி. ராமன் (17-1-1963  அன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது எண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்தான்.  —நடிகர் தேங்காய் சீனிவாசன்    தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குத் தமிழர்கள் போகக் கூடாது.  —திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை (1-9-1941)  (சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)  நான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை.  —லாலா லஜபதிராய் (14-4-1928)  (சென்னை கோகலே ஹாலில்)  முப்பது வருடங்களுக்கு முன்பு (1943 ஆகஸ்ட் எட்டாம் தேதி) நான் ராமகிருஷ்ணாவைக் கல்யாணம் செய்துகொண்ட நாளிலிருந்து இன்றுவரை நாங்கள் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிரறோம். தூரத்திலிருந்து என் வாழ்க்கையின் மீது கல் வீச நினைத்தவர்களுக்கு, நாங்கள் இருவருமே இடம் கொடுத்ததில்லை. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். அவர் எதை நினைக்கிறாரோ அதையே நானும் நினைப்பேன். அப்படிப்பட்ட மன ஒற்றுமை எங்களிடம் இருப்பது மற்றாெரு காரணமாகும்.  —நடிகை பானுமதி  என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார்.  எம். ஜி. ஆர். (22-11-1964)  கம்பன் அரங்கைக் கட்டிய வி.ஜி.பி. நிறுவனம், கம்பன் புகழ் பாடியே வாழ்ந்த ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாருக்கு இந்த அரங்கில் சிலை வைக்க வேண்டும்.  —கவிஞர் மீ. ப. சோமசுந்தரம் (1-1-1977)  (வி.ஜி.பி. நிறுவனத்தாரின் கோல்டன் பீச்சில், கம்பன் அரங்கத் திறப்பு விழாவில்)  நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  —டயோஜனீஸ்  இது நாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை ஆனல் என்னைப் பொருத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை.  —பெரியார் (16-9-1973)  என் உடல் அமைப்பைப் பார்த்தாலே புரியும், நான் அதிக உயரம் எட்ட முடியாதவன்; அதனால்தான் எனக்குத் துணையாக அதிக உயரம் உள்ள நாவலர் நெடுஞ்செழியனையும், மற்றவர்களையும் வைத்திருக்கிறேன்: அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.  —அறிஞர் அண்ணா (7-3.1967)  தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழிசை வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், தமிழ்ப் பாட்டுக்கும், தெலுங்குப் பாட்டுக்கும் சம அந்தஸ்து அளிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. தமிழ்ப்பாட்டுக்களைத் தவிர தெலுங்குப் பாட்டுக்களை பாடக் கூடாதென்று ஒருவர் என்னைச் சொன்னால், நான் அந்தக் கச்சேரிக்குப் போகச் சம்மதிக்க மாட்டேன்.  —சங்கீத வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (22-11-1941)  பள்ளிக்கூடத்தில் என்னால் படிக்க முடியவில்லை. தெரிந்த காரணம் ஏதுமின்றியே நான் எப்பொழுதும் வகுப்பில் கடைசியாகவே இருந்தேன். ஆசிரியர்கள் ஒரு போதும் என்னிடம் இரக்கம் காட்டியதில்லை. என் தகப்பனாரும் என்னை முட்டாள் என்றே நினைத்தார் என உணர்ந்தேன்.  —தாமஸ் ஆல்வா எடிசன்  சேதுபதி மன்னர் என்னிடம் வைத்துள்ள அன்பு விஷயமாய் எனக்குள்ள நன்றியறிதலை இவ்வளவென்று எடுத்துச் சொல்ல என்னல் முடியவில்லை. என்னாலும் என் மூலமாயும் ஏதாவது நற்காரியம் நடந்திருந்தால், அதில் ஒவ்வொரு அணுவுக்கும் பாரத நாடானது அம்மன்னருக்கே கடன் பட்டிருக்கின்றது. ஏனெனில், நான் சிகாகோவுக்குப் போக வேண்டுமென்கிற எண்ணம் அவருக்கே முதலில் உண்டாயிற்று. பிறகு அக்கருத்தை என் தலையிலேற்றி அதைச் செய்து முடிக்கும்படி ஓயாமல் என்னை வற்புறுத்தியதும் அவரே. அவரே இப்பொழுதும் என் பக்கத்திலே நின்று, முன்னிருந்த மகிழ்ச்சி சிறிதும் குறையாதவராய் முன் நடந்ததைவிடப் பெரிய பெரிய காரியங்களெல்லாம் இனி நடக்க வேண்டுமென்று இன்னும் ஆசை கொண்டிருக்கிறார்.  —சுவாமி விவேகானந்தர்  (பாம்பனில் நடைபெற்ற கூட்டத்தில்)  எனக்கு வரும் எல்லாக் கடிதங்களையம் படிக்க எனக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் சேர்த்து வைத்திருக்கிறேன். ஏனெனில் ரசிகர்கள் கடிதம் எதுவுமே வராத காலம் ஒன்று வரத்தான் செய்யும். அப்பொழுது அதைப் படித்துப் பார்ப்பேன்,  —ராதா சலூஜா  (பிரபல இந்தி நடிகை)  ஆண்டவன் எனக்கு எவ்வளவு அழகான, கவர்ச்சியான முகத்தை அளித்திருக்கிறான் பார்த்தீர்களா? நான் 12 வயது முதல் குத்துச் சண்டையிடுகிறேன். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 19 ஆண்டு காலத்தில் சுமார் 238 சண்டைகள் போட்டிருக்கிறேன். முகத்தில் ஒரு வடு, ஒரு கீறல் இருக்கிறதா பாருங்கள்.  —உலக குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி (1974)  கம்பனைப் பற்றியும் அவனது கவிச்சுவையைப் பற்றியும் சிறிதுகூற விரும்புகின்றேன். உடலுக்கு உணர்வை அளிக்கக் கூடியதும், உற்சாகத்தை ஊட்டக்கூடியதும் கம்பனது கவிச்சுவை. எனது பதினைந்தாவது வயது முதல் கம்பனது கவிச்சுவை என் நரம்புகளிலெல்லாம் ஊறியிருக்கின்றது.  —பண்டிதை அசலாம்பிகை அம்மையார் (20-4-1929)  (சென்னை இராயபுரத்தில்,கண்ணபிரான் பக்த ஜனசபைக் கூட்டத்தில்)  படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகத்தையும் சட்டத்துறையையும் நாடினல், தேசத்திற்கு அதைக் காட்டிலும் பெரிய கெடுதல் இருக்க முடியாது. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய துறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபடலாம்.  —சர். வி. பாஷ்யம் ஐயங்கார் (28-3-1893)  (பல்கலைக்கழகப் பட்டாளிப்பு விழாவில்)  ஒவ்வொரு வரும் ஏதாவது ஓர் அந்தரங்க சுயநல நோக்குடன் சட்டசபைக்கு வருகின்றனர். எனக்கு அவ்வித நோக்கு ஒன்றுமில்லை; அதனால் நான் சட்டசபையில் மீண்டும் புகவும் விரும்பவில்லை. -  மகாகவி இக்பால் (1926)  பிலிம் தொழிலை ஏகபோகமாகப் பிடித்துக் கொள்ள நான் முயற்சிப்பதாக ஆங்காங்கு வதந்தி உலவுகிறது. அது உண்மையன்று; எந்தத் தனி மனிதனும் எந்தத் தொழிலையும் ஏகபோகமாக்கிக் கொள்வதென்பது முடியவே முடியாது. தென்னிந்தியாவில் ஒரு ஸ்டுடியோ உண்டாக்குவதன் நோக்கம், இங்கு ஒன்றுபட்ட சினிமாத் தொழில்-கலை வளர்வதற்காகத்தான். வடநாட்டிலுள்ள ஸ்டுடியோக்களைக் காட்டிலும், படமுதலாளிகளுக்குச் சிறந்த செளகரியங்களைச் செய்து கொடுப்பதுதான் என் நோக்கம். இந்த எண்ணத்தைக் கொண்டே டைரக்டர் கே. சுப்பிரமணியம் உண்டாக்கிய எம். பி. பி. வி. ஸ்டுடியோவைப் பல மாறுதல்களோடு ஜெமினி ஸ்டுடியோவாக நான் நிறுவி இருக்கிறேன்.  ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் (23-7-1941)  நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருடமும் பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக்கூடத்தில் 2 வருஷமுந்தான் படித்தவன். எனக்குக் படிப்பே வராது என்று என் பெற்றாேர் முடிவு கட்டிவிட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும் ஆதலால், என்னைப் பள்ளியில் பகல் எல்லாம் பிடித்து வைத்திருந்து, இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.  —பெரியார் (21-7-1939)  (கோவை அரசினர் கல்லூரி தமிழ்க்கழக மாணவர் சங்கக் கூட்டத்தில்.)  தமிழ் நாட்டில் தமிழ்ப் பாட்டுக்களே பாடவேண்டும் என்றால், இதர மொழிப் பாடல்களை பகிஷ்கரிப்பது என்று அர்த்தமல்ல.  —நடிகர். எம். கே. தியாகராஜபாகவதர் (14-9-1941)  ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன: (1) அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். (2) அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும். (3) அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர்.  —டி. கே. சி. (20-7-1928)  நம் கையிலே ஐந்து விரல்கள் இருக்கின்றன. கட்டை விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று ஐந்து விரல்களும் தனித்தனியே தான் இயங்குகின்றன. ஆனால், பொதுவான ஒரு வேலை என்று வரும்போது, ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இத்தகைய உறவுதான் இருக்கவேண்டும்.  —அறிஞர் அண்ணா  என் பாட்டன் (மோதிலால் நேரு) என் தந்தை (ஜவஹர்லால் நேரு) என் தாய் (கமலா நேரு) என் கணவர் (பிரோஸ் காந்தி) ஆகியோர் நாட்டுக்காக உயிரையே அர்ப்பணித்துக் கொண்டனர்.  —பிரதமர் இந்திரா காந்தி (1969)  இனி கலாசாலைகளில் ஒரு மணி நேரம் பாஷா கல்வியும் 6-மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயம் பாடமாக வைத்தல் அவசியமாகும்.  — வ. உ. சி. (3-3-1928  (காரைக்குடியில்)  சாதிசமய வேறுபாடுகளைக் கருதாது மெய்யன்பு பாராட்டிச் சார்ந்து ஒழுகுதலே சமரசமாம். அத்தகைய சமரசம் கைவர ஒழுகுதலே சன்மார்க்கமாகும், இந்நிலையை மெய்ந்நிலையாகக் கொண்டு ஒழுகுவோமாயின் நாம் நம் வள்ளற்பெருமானை உள்ளன்போடு வழிபட்டவராவோம், வணங்கினராவோம்.  —பேராசிரியர் கா.நமச்சிவாயமுதலியார் (23-1-1926)  (வடலூர் சமரச சன்மார்க்க மாநாட்டில்)  நான் என் கண்களால் பார்த்தது போல் பார்த்திருந்தாலன்றி வேறு வழியாக இந்தியாவின் வறுமையைப் பற்றித் தெரியவராது. ஜனங்களின் மரணத்திற்கு பிளேக் ஒரு முக்கிய காரணம். இந்த வியாதியாலுண்டாகும் மரணத் தொகை மிக்கப் பரிதாபகரமானது. 1901-ம் வருடத்தில் 2   [] {\displaystyle {\tfrac {3}{4}}} லட்சமும், 1902-ம் வருடத்தில் 8 லட்சமும், 1904-ம் வருடத்தில் 10லட்சமுமாக வருடாவருடம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மடிகின்றனர். பிளேக் வியாதியால் மாள்வதை இன்னும் தடுத்தபாடில்லை. பட்டினி கிடந்தே மக்கள் தங்கள் தேக வலிமையைக் ஒடுக்கிக் கொண்டனர். பட்டினி கிடப்பதைத் தடுக்காத வரையில் பிளேக் வியாதி தலையெடுத்து ஆடிக்கொண்டிருக்கும். இந்தியாவில் உண்டாகும் பஞ்சம் மழையில்லாமையினாலல்ல. ஐனப் பெருக்கத்தினாலும் அல்ல. மக்களின் பரிதாபகரமான வறுமையும் ஏழ்மையுமே காரணமாகும்.  — டாக்டர் சந்தர்லாந்து  கவிதைகளையும், மற்றும் சிறந்த இலக்கியங்களையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை நல்ல முறையில். மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வரலாம். முந்திய காலத்தில் இந்தப் பழக்கம் இருந்து வந்தது. இப்போது மறைந்து வருகிறது. எனவே, அதனை மறுபடியும் கொண்டு வந்தால் ஞாபக சக்திக்கும் ஆக்கம் ஏற்படும்.  —நெ.து. சுந்தரவடிவேலு  ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு கைகளையும் பார்த்தே பலன் சொல்ல வேண்டும். கைரேகை, ஒரு தெய்வீகக் கலை. ஒரு சிலர் இதில் பொய்யையும் சேர்த்து வியாபாரம் செய்வதால் இந்தச் கலையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும்.  — கைரேகை நிபுணர் ரவிசங்கர் (23-7-1971)  என் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும்.  — ஆஸ்கார் ஒயில்ட்  'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது போன்ற அவ்வையாரின் மூதுரைகள் எனக்குப் பிடிக்கவில்லை. எதற்குப் போதும் என்ற மனம் வேண்டும்? தமிழர்களுக்கு ஏற்கெனவே உள்ள சோம்பேறித்தனம் போதாதென்று மேலும் அதை வளர்க்கவா?  —தொழிலதிபர். எஸ்.எம். பழனியப்ப செட்டியார்  சாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன்.  — ஆஸ்கார் ஒயில்ட்  என்னவோ இந்த நாட்டின் 55 கோடி ஜனங்களில் ஹாஜிமஸ்தான்தான் மாபெரும் பாவிபோல இந்த நாட்டின் பத்திரிகைகளிலும், பாராளுமன்றத்திலும், மகாராஷ்டிர சட்டசபையிலும் என் பெயர் தினம் தினம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். ஒருவனுக்குப் பெருமையோ இழிவோ எதற்கும் இப்படியொரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த ஹாஜிமஸ்தானைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்குப் பெரும் கள்ளக்கடத்தல்காரர்கள் இங்கே உண்டு என்று வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன்.  —ஹாஜிமஸ்தான் (1975)  (கடத்தல்காரர்)  என்னை அடக்கஞ் செய்த பிறகு கல்லறையின் மேல், “நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று நீங்கள் எழுத வேண்டும்.  — ஜி. யூ, போப் (12-2-1908)  நான் அயர்லாந்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன்; ஆங்கிலத்தில் மூழ்கினேன். ஆயினும், என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்திய நாடும், அந்நாட்டு மக்களுமே என் ஆழ்ந்த கருத்து முழுவதையும் இழுத்துக் கொண்டதனால், நான் இந்தியர்களுள் ஒருவனாகிவிட்டேன்.  — கால்டுவெல்  அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர்.  — ராஜாஜி                                                        பக்கம் 61-70     நான் இங்கிலாந்தின் விருந்தாளியேயன்றி சிறையாளன் அன்று. இங்கிலாந்து தேசத்துக்கு நான் அடைக்கலமாக வந்தேன். என் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அறநெறியையும் சட்டமுறையையும், சமூகத் தர்மத்தையும் இழந்து அதர்மத்தில் இறங்கினர். அவர்களது நடவடிக்கை பிரிட்டிஷ் பெருமைக்கேற்றதா என்று நான் கேட்கிறேன். சென்ட் ஹெலினவில் என்னை ஆயுள்வரையிலும் கிறை செய்தல் கொடுமையினும் கொடுமையாகும். அ ஃ து கேவலம் அநாகரிகக் காரியமாகும். ஆங்கிலேயர்கள் இவ்வளவு கொடுமையாக என்னை நடத்துவார்கள் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. அத்தீவில் சிறை செய்தலைக் காட்டிலும் என்னைச் சுட்டுக் கொன்று விடுவதே சாலச்சிறந்ததாகும். ஆங்கிலேயர் எனக்கிழைத்த கொடுமையைத் தெய்வமும் சகியாது. —நெப்போலியன்  நாம் கற்றுக்கொள்ளும் கல்வியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று நாம் நமது அனுபவத்தினால் கற்றுக்கொள்வது. மற்றாென்று, நம்மையறிந்தே கற்றுக்கொள்வது. ஆகையால் நம்மையறியாமலும், அறிந்தும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் பலவிருக்கின்றன. பல்கலைக் கழகங்களில், பெரிய பெரிய பட்டங்கள் பெற்று விடுவதினால் பிரயோஜனமில்லை. அத்தகைய பட்டங்களுக்குப் பின்னும் பல விஷயங்கள் கற்க வேண்டியிருக்கின்றன. உலக விவகாரங்களில் போதிய அறிவு ஏற்படவும், பல விஷயங்களைக் குறித்துப் பேசத் தகுதியுடையவர்களாகவும் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.  — சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)  (பிராட்வே ஒய். எம். சி. ஏ. கூட்டத்தில்)  நான், இப்போதும் தினசரி பத்திரிக்கை வாசிப்பு, இதர படிப்பு, எழுதுதல் உட்பட 10 மணி நேரம் வேலை செய்பவன்.  — தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன்  நான் பெரிய பிரசங்கி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மேடைகளில் பேசுவதும் பிரசங்களுமே சுதந்திரப் போரில் முக்கியம்சங்களாயிருக்கின்றன. ஆனால் அது மட்டும் போதுமெனச் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றிய மட்டில் அத்தகைய பேச்சுககள் நமது சுதந்தரப் போரின் ஆரம்ப நிலையைச் சேர்ந்ததே என்றுதான் சொல்லுவேன்.  — லாலா லஜபதிராய் (13-4-1928)  (திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில்)  நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத் தாம் போவது வழக்கமாக இருந்திருக்கின்றது. கடவுளைப் பற்றிப் பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும் புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ் படித்த புலமையினல் சாமியார் ஆனவர்களே. அதிகம் போவானேன்! நம் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப்புலவர் வேதாசலம் ‘சாமி வேதாசலம்’ ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா? நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதி வந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சாமிகள் ஆகவில்லையா? முத்துசாமிக் கவிராயர் அவர்கள் முத்துச்சாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களை எல்லாம் எனக்கும் நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் சாமியாராகத்தாம் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார்.  —பெரியார்  பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும்.  —குருச்சேவ் (26 - 6 - 1960)  எனக்கு லேசாகச் சத்தம் கேட்டாலும் தூக்கம் வராது. காற்றடித்து மரம் சலசலக்கும் ஓசையோ அல்லது டெலிபோன் மணி அடிக்கும் ஓசையோ கேட்டால் துரங்கவே மாட்டேன்.  —நடிகை சரோஜா தேவி (26 - 3 - 1962  திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய். திருவள்ளுவர் பிறந்தது பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.  —கி. ஆ. பெ. விசுவநாதம்  கதை எழுத நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதனால் பலர் கதை எழுதலாம். கட்டுரை எழுதச் சிந்தனை வேண்டும். ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்துப் பல பக்கங்கள் அட்ங்கிய நூலாக எழுதவேண்டுமானல் பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.  — கி. வா. ஜகந்நாதன்  அறிவு முதிர்ச்சி காரணமாக, இந்தியா சமாதானக் கொள்கையைப் பின்பற்றுகிறது. பலவீனத்தினாலோ, போர் புரிய சக்தியற்றதனாலோ அல்ல. இந்தியாவில் பெரிய ஞானிகள் தோன்றியுள்ளனர். அதேபோல மகத்தான போர் வீரர்களும் தோன்றியுள்ளனர்.  —சவாண் (16 - 11 - 1962)  துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.  —மா. சே. துங் (1936)  நான் சிறு குழந்தையாக இருந்தபோதுகூட எனக்கு அதைக்கொடு, எனக்காக இதைச் செய் என்று யாரிடமும் கேட்டது கிடையாது.  —பிரதமர் இந்திரா காந்தி  கை தட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. கை தட்டுகிறவர்கள் தங்கள் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.  —நேரு (12 - 5 - 1963)  இந்தியாவில் இமயம்முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாகரிகம்தான் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தியாவின் நாகரிகம் பலவகைப்படும் எனச் சரித்திரங்கள் கூறுகின்றன. சரித்திரங்களில் நாம் படிக்கத்தகாத விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் ஒதுக்கிவிட வேண்டும். அத்தகைய சரித்திரங்கள் எல்லாம் அந்நியர்களால் எழுதப்பட்டவை.  —சுபாஷ் சந்திர போஸ் (20 - 5 - 1928)  (பம்பாயில்)  நாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.  —கென்னடி (13 - 3 - 1962)  நான் தினமும் காடுகளுக்குள் சென்று, அங்கிருந்து புதுப் புதுத் தாவரங்களை ஆராய்கிறேன். அதன் மூலம், இயற்கை அன்னை நமக்கு ஆவலுடன் கற்பிக்க விரும்பும் அரிய பாடங்களைக் கற்கிறேன். தினசரி காலையில், நான் காட்டில் தனியாக இருக்கும்போது, நான் .அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுனிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.  —ஜியார்ஜ் வாஷிங்டன் கார்வர்  (நீக்ரோ விஞ்ஞானி)  என் பெரிய தாயார் எனக்காகப் பட்டசிரமம் கொஞ்ச நஞ்சமன்று. அந்தச் சிரமத்தை அவர் வகையறிந்து, முறை தெரிந்து பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் அன்று அப்படியெல்லாம் பொறுப்புடன் பாடுபடவில்லை என்றால் இன்று என்னை ‘இராஜமாணிக்கமும் ஒரு புள்ளிதான்’ என்று நாலு பேர் சொல்லும் நிலை ஏற்பட்டே இராது. என் பெரிய தாயார் என் முன்னேற்றத்திற்காக எடுத்துக்கொண்ட பெரு முயற்சி போல வேறு எந்தத் தாய்மாராவது தங்கள் மக்களுக்காக எடுத்துக் கொண்டிருப்பார்களா என்பது என் வரையில் சந்தேகந்தான்.  —கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை  நான் ஓட்டும் கப்பலில், வெள்ளையர், மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தாய் நாட்டுக்குப் புறப்பட வேண்டும். அந்நியன் கப்பலேறும் நாளே புனிதநாள்.  —வ. உ. சிதம்பரம் பிள்ளை  எனக்கு அலுப்பே கிடையாது; எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம்.  —காமராஜர்  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். புத்தகம் இல்லை என்பதற்காக நல்ல வெய்யிலில் வாத்தியார் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தினர். வந்து அப்பாவிடம் சொன்னேன். “என்பிள்ளையை எவண்டா துரத்தினான்?” என்று அவரோடு சண்டைக்குப் போனார். என்னிடம், இனி பள்ளிக்கூடமே போக வேண்டாம் என்றார். அன்றைக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது தெரியுமா? அதோடு போச்சு என் படிப்பு.  -ம. பொ. சி. (24 - 10 - 1971)  வறுமை மிக்க நம் நாட்டில் ஜனத்தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்றதே என்றும், அதற்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையே என்றும் நாட்டுத் தலைவர்கள் கவலுகின்றனர். சில ஆண்டுகள் வாழ்ந்தாலும் அறிவுள்ள மகன்தான் வேண்டுமென்று மார்க்கண்டனை மைந்தனாகப் பெற்றனர் அவர் தந்தையார். சைவம் தழைக்க மகவு வேண்டுமென்று சிவபாத விருதயரும் பகவதியம்மையாரும் தவமிருந்து ஈன்றனர் ஞானசம்பந்தப் பெருமானே. அதுபோல் நல்ல மக்கள் ஒருசிலர் ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்தால் போதும். அறிவற்ற மக்கள் பலர் வேண்டாம். பல குழந்தைகளிருந்தால் அவர்களை நாம் சரிவரப் பாதுகாக்க முடியாது.  —திருமதி மரகதவல்லி சிவபூஷணம் பி.ஏ. பி.டி., (25 - 12 - 1953)  (சைவ மங்கையர் மாநாட்டுத் தலைமையுரை)  செயல் வீரர்களில் ஒருவரான திருவாரூர் டி. என். இராமன் அவர்கள் நான் புரட்சிக் கவிஞரைச் சந்திக்கும் முன்பே, என்னைப் ’புரட்சிக் கவிஞரின் சீடர்’ என்று பலரிடமும் அறிமுகப் படுத்தினர். எழுத்தாளன் என்ற முறையில் அந்தத் தகுதியினைப் பெறவே நானும் விரும்பினேன். 1928-ல் சமதர்ம சங்கம் தொடங்கி நடத்தியதோடு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், சிறு கதைகள் எழுதி வந்தேன். எனது எழுத்தாற்றலைப் பெருக்கவும், அன்பினைப் படைக்கவும் கவிஞரைச் சந்திக்க விரும்பினேன்.  —ஜலகண்டபுரம் ப. கண்ணன் (15 - 9 - 1965)  தற்போதைய பரீட்சை முறையானது, பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் வழக்கத்தை உருவாக்கியுள்ளது. இது, நாட்டையே ஏமாற்றுவது போன்றதாகும்.  —தேஷ்முக் (15-6-1960)    எனக்குக் கத்திச் சண்டை கற்றுக் கொடுக்க யாரும் முன் வரவில்லை. நானாக அதைப் பழகிக் கொண்டேன்.  —எம். ஜி. ஆர்.  அக்காலத்தில் மத சந்நியாசிகளின் உறைவிடமாகிய மடங்களே கல்வி ஸ்தாபனங்களாக இருந்து வந்தன. அங்கு மதக் கல்வியுடன் மக்களுக்கு வேண்டிய இதர விஷயங்களும் கற்பிக்கப்பட்டன. நம் நாட்டில் அத்தகைய மடங்களை மீண்டும் ஏற்படுத்துவது முடியாத காரியம். ஆகையால் பாமர மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் வாசக சாலைகள் இன்றியமையாததாகும். வாசக சாலைகளை ஏற்படுத்தச் செய்யவேண்டும் என்னும் இயக்கம் நம்நாட்டில் சமீபத்தில்தான் தோன்றியது. இங்கிலாந்தில் 14-வது நூற்றாண்டின் துவக்கத்தில் வாசகசாலைகள் தோன்றின. ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம், பெஜவாடா, காக்கினாடா முதலிய விடங்களில் வாசக சாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. நான் ஆந்திர தேசத்தில் சென்றவிடங்களில் எல்லாம் வாசகசாலைகளைக் கண்டேன். அங்கு அவ்வியக்கத்தைப் பரப்பியதற்கு விரேசலிங்கம் பந்துலுவே காரணம்.  —சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)  (Y. M. C. A. பட்டிமன்றத்தில்)  சித்த வைத்தியம் யாவரும் புகழும்படி முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய உண்மையான எண்ணம். அதற்கு முதலாவது, சித்த வைத்தியக் கல்லூரி வைத்து, மானாக்கர்களுக்குப் பாடம் கற்பித்து, சோதனையில் தேறியவர்களை யாவரும் ஆதரிக்கும்படிசெய்யவேண்டும். வைத்தியக் கல்லூரி இல்லாமல் ஒரு சித்த வைத்திய முறையானது சிறப்படைய மாட்டாது. ஆதலால் கல்லூரியை வைப்பதற்கு இப்பொழுதே ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.  —எம். டி. சுப்பிரமணிய முதலியார் (19-4-1927)  (மதுரையில், 3-வது தமிழ்ச்சித்த வைத்திய மாநாட்டில்)  தமிழ்நாட்டில் 4.5 கோடி மக்கள் வசிக்கிறர்கள். இதில் 1.5 கோடி பேர்களாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும் தமிழகத்தில் புதிய நூல் ஏதாவது வெளியிட்டால் 2000 பிரதிகள் என்ற அளவில் தான் அச்சிடும் நிலமை உள்ளது. இந்த 2000 பிரதிகள் விலைபோக 8 ஆண்டு அல்லது 10 ஆண்டு காலமாகிறது.  —நாவலர் நெடுஞ்செழியன்  (நூலக வாரவிழாப் பேச்சு)  இந்திய சமுதாயத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கச் சிறந்த முயற்சி செய்தவர் என்று, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திர நூல்கள் எழுத விரும்புவோர் என்னைப் பற்றிக் குறிப்பிட் வேண்டும் என்பதே என் ஆசை.  —பிரதமர் இந்திரா காந்தி (4-9-1 973)  நாடகத்திலே பகத்சிங், காந்தி, மோதிலால் நேரு இவர்களைப் பற்றிய பாட்டுக்களையெல்லாம் நான் பாடுவேன். காட்சிக்கு நடுவே வரும் இடைவெளியில் நான் பாடுவேன். மதுரைக்கு காந்திஜி வந்தபோது எல்லோரும் எதை எதையோ கொடுத்தார்கள். நான் என் கைகளில் இருந்த வளையல்களைக் கழற்றிக் காந்திஜியிடம் கொடுத்தேன்.  —நடிகை எஸ். டி. சுப்புலட்சுமி (13—8–1972)  வெட்டுக்கிளிக்குப் பயந்து, விவசாயத்தை நிறுத்திவிட முடியாது. பொழுது போக்கு ஏடுகளே, இன்று ஏராளமாக விற்பனையாகின்றன என்பதற்காக, எப்போதும் பயன்தரக்கூடிய இலக்கிய ஏடுகளையோ, காயம் படாத கவிதை இதழ்களயோ நடத்தாமல் நிறுத்திவிட, முடியாது-நிறுத்தி விடவும் கூடாது.  —கவிஞர் சுரதா (1-12-1 974)  நாம் படித்தது கொஞ்சமாக இருந்தாலும் நமது சந்ததியாராவது நிறையப் படிக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி அமைச்சராக இருக்கிறேன்.  —பக்தவத்சலம் (11-12-1962)  நான், சென்ற 20-ஆண்டுக் காலமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, செளத்சீ, அயர்லாந்து, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் குஸ்தி போடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மரக்கறி உணவுகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் சாப்பிடுவதில்லை. மதுபானமாவது சுருட்டாவது குடிப்பதில்லை; திறந்த வெளியிலுள்ள சுத்தமான காற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் பஞ்சாபிலுள்ள காமா பயில்வானத் தோற்கடிக்கலாம் என்ற முழு நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். அதன் பிறகு, இந்தியாவிலுள்ள மற்ற மல்யுத்தக்காரர்களையும் போட்டிக்கழைக்கப் போகிறேன்.  —ஸ்பிஸாக் (20-1-1938)  (குஸ்தி பயில்வான்)  (பம்பாயில்)  நான் சமீபத்தில் இந்தியாவில் பிரயாணம் செய்ததிலிருந்து இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி போதிக்கச் செய்யப்படுகின்ற முயற்சிகளை மிகவும் அனுதாபத்துடன் கவனித்து வருகிறேன். இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்வந்தாலொழிய இந்தியாவின் பெருமை விளங்காதென்பதை இந்திய ஆண்கள் உணர்தல் வேண்டும். இந்தியாவில் மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் கல்வி பரவ வேண்டு மென்று விரும்புகிறேன். ஆங்கிலம் உலக மொழியாக இருப்பதால், பெண்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்.  —கார்வி (8-7-1929)  (ஈஸ்டு இந்திய சங்கத்தில் பேசியது)  பதவிக்கு, மனிதனைக் கெடுக்கும் குணம் உண்டு என்பது எனக்குக் தெரியும். பதவியினால் நான் எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.  —நேரு (12-6-1963)  எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் ஒருமுறை படித்திருக்கிறேன். ஆராய்ச்சி செய்யும் வகையில் ஊன்றிப் படிக்கவில்லை. ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டால் , அதுபற்றி முற்றிலும் தெரிந்து கொள்ளும் காலம் வரை எத்தனை மாதமானாலும் அதையே படிப்பேன். அது மாதிரியே தான் வெளிநாட்டுக்குப் போனலும் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்துகொள்ளும் வரை அங்கேயே தங்கிவிடுவேன்.  —தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் (19-3-1973)  யோகியாருடைய வாழ்நாளில் நான் அவரைக் காண வேண்டும் என்று பலமுறை விரும்பினேன். நான் அவரைக் காண முடியவில்லை; வருந்துகிறேன். ஆனால் பத்துப் பதினைந்து ஆண்டு காலத்திற்கு முன் 'தமிழ்க் குமரி' என்னும் நூல் வெளியிடப்பட்டபோது அதன் முதல் பிரதியை நான்தான் வாங்கினேன்.  —கவிஞர் கண்ணதாசன் (1964-ல்)  நடிகர்களிடம் பணம் இருக்கிறது. அதனால் அவர்கள் பெரிய மனிதர் ஆகிவிட முடியாது. என்னிடம் கூடத்தான் பணம் இருக்கிறது. பாங்கியில் கூடப் பணம் இருக்கிறது. அதற்காக அதைப் போய்க் கும்பிடுகிரறோமா? பணத்தை நாய்கூட மதிக்காது.  —எம். ஆர். ராதா (31-8-1951)        பக்கம் 71-80   கடை வள்ளலின் தன்மை, தன்னிடத்து வந்து இரந்தவர்கட்கு இல்லையென்னாமல் கொடுப்பது. கர்ணராஜனைப் போல. இடை வள்ளலின் தன்மை, ஒருவன் தன்னிடத்து வந்து இரவாமல் அவன் குறிப்பறிந்து ஈதலே இடைவள்ளலின் தன்மை. அது கற்பகத் தரு, கலைவள்ளலின் தன்மை, இரவலன் தனக்கு வேண்டுவது இன்னதென்று கருகாமலும், தான் இருக்குமிடத்திற் செல்லாமலும் அவ்விரவலன் ஓரிடத்திலிருக்க, அவனுக்கு வேண்டுவன யாவும் ஒருங்கே கொடுத்தலும், மற்றாெருவரை அவன் இனி இரவாமலும் அப்படிக் கொடுக்கும் பொருள் அந்த இரவலனது ஜீவதசைபரியத்தம் உதவும்படி கொடுத்தலுமேயாம். இத்தகைமை யுடையவனே தலைவள்ளல். ஒருவன் கொடுக்கும் தகைமை யுடையவனாயினும், தன் வலிக்குட்பட்டவைகளைக் கொடுக் கலாமன்றித் தன் வலிக்குட்படாப் பொருளை எவ்விதம் கொடுக்கக் கூடும்? ஆகையால் அப்பிரபுவினது ஐஸ்வரியம் இத்தன்மையுடைத்தென்று அறிய வேண்டும். — சோ. வீரப்ப செட்டியார் (1902)  (நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையில்)  திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய், திருவள்ளுவர் பிறந்தது, பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.  —கி. ஆ. பெ. விசுவாாதம்  இரண்டாவது உலகப் போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக் கொன்றது சரியான காரியம் என்று முன்பு சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்பதை உலகம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறது.  —இடி அமீன்  (உகாண்டா அதிபர்  குடிப்பதற்குக் குழாய்த் தண்ணீர், குளிப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர், துணி துவைப்பதற்குக் குளத்துத் தண்ணீர்-இப்படிச் சிலர் உபயோகிப்பார்கள். ஆனால், காவிரி நீர், குளிக்க, குடிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்குமே பயன்படும். காவிரி நீர் மாதிரி நமது எழுத்தும் இருக்க வேண்டும். அதாவது எளிமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும். நம் தமிழைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப் படக்கூடாது. கருத்தைப் புரிந்து கொள்வது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது.  —ராஜாஜி  மெய்யன்பர்களே! சரித்திரத்தோடு தத்துவங்களையும் உற்றுணர்தல் வேண்டும். தோன்றிய பொறிகள் ஆகாயம் எங்கணும் பரந்தன. ’சுடும்’ எனத் தேவர் அஞ்சிச் சிவனை அடைந்து அரற்றினர். ’நன்று’ என்று சிவபிரான் கூறி, அச்சித் (அறிவு மயமான) பரஞ்சோதியை ’வா’ என்றார். வந்து அடக்கமாக நின்றது. அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ’ஏன் அழைத்தீர்கள்’ என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே.  —ஞானியாரடிகள்  அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி, மேடைகளில் முழங்குவார். நானும்கூட தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. 'பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.  நடிகை கே. பி. சுந்தராம்பாள் (13-8 - 1972)   என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன்.  —இராஜாஜி (23-2-1963)  மனிதன், வாழ்க்கையில் முன்னேற்றங்காண வேண்டு மானால், சந்தர்ப்பமும், திறமையும் ஒன்றாக அமைய வேண்டும்.  —டாக்டர் ராதா கிருஷ்ணன் (5-8-1962)  குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவதால் குழந்தை தூங்குவது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் நல்ல தூக்கம் ஏற்பட்டதால் அல்ல. மனம் மயக்கமும் சோம்பலும் அடைவதால் குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. தொட்டிவில் இட்டு ஆட்டுவதால் குழந்தையின் மூளையும் ரத்த ஒட்டமும் பாதிக்கப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து வந்ததின் முடிவில் நான் உணர்ந்து கொண்டேன்.  —மேதி நவாஸ் ஜங் (18 - 3 - 1963)  (குஜராத் கவர்னர்)  அண்ணா ஏன் கவிதை எழுதவில்லை? என்று கேட்டுவிட்டு அண்ணா கவிதை எழுதினால் தமிழ் நாட்டில் வேறு யாரும் கவிதை எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு அண்ணாவின் கவிதை இருக்கும் என்று சிலர் என்னைப் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. உண்மையில் கவிஞர்களுக்குள்ள உளப்பாங்கு எனக்கில்லை. புகைப்படம் எடுக்கும் கருவியில் உள்ள லென்ஸ் போல காணுபவற்றை அப்படியே பதிய வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு கவிஞர்களுக்கு உண்டு. ஆனால் அது எனக்கில்லை.  —அறிஞர் அண்ணா (5 - 4 - 1953)  ஒரு சிறு கதை சொல்லுகிறேன். இராமன் என்றொருவனிருந்தான். அவனுக்கு ஆற்றருகில் அரை காணி நிலம் இருந்தது. பயிரிட்டான். நான்கு அங்குல அளவிற்குப் பயிர் வளர்ந்திருந்தது. மழை இல்லை. இந்திரன் மகிழ்ந்தான். அளவில்லா மழை பெய்தது. பெருவெள்ளம் வந்தது. ஆற்றில் வெள்ளம் நிறைந்தது. இராமன் நிலத்திலும் நீர் பாய்ந்தது. வெள்ளம் மேலும் மிகுந்தது. பயிர் முழுவதும் மூடப்பட்டது. வெள்ளம் வடிந்தது. நிலமிருந்த இடமே தெரியவில்லை. ஏன்? மணல் மூடிவிட்டது. ஆற்றிலிருந்த நீர் நேரே பாய்ந்ததால் உண்டாகிய கெடுதி இது. அங்ஙணமின்றி, வெள்ளத்தை அனைகோலித் தடுத்துப் பெருவாய்க்காலிற் செலுத்திப் பின்னர்ச் சிறு வாய்க் கால், கன்னி வாய்க்கால், மடை இவற்றின் வழிச் செலுத்தியிருந்தால் பயிரும் கெட்டிராது, நிலமுடையானுக்கு இழப்பும் நேர்ந்திராது, அன்பர்கள் இதனைக் கவனிக்க.  —ஞானியாரடிகள்  (கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)  நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.  —பாரதிதாசன்  என்னைப் புகழாதே. இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்.  —விவேகானந்தர்  நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன்.  —அன்பழகன்(4-7-1960)  பாரதத்தைப் போன்ற பசியால் பீடிக்கப்பட்ட நாட்டில் யோசனையின்றி, வசதியாகப் பராமரிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை முடிவில்லாத கஷ்டத்திற்குள்ளாக்கி, குடும்பத்தையும் கீழ் நிலைக்குக் கொண்டு வருதல் கொடுமையானதொரு குற்றமாகும்  —ரவீந்திரநாத் தாகூர்  குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்‌ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.  —வ. உ. சி. (3-3-1928)  கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது. ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள். நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும். அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல், அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள்.  - சுவாமி சகஜானந்தா (8-4-1928)  (கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில்)  இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம் மக்கள் தொகை அதிகமாய் விட்டதல்ல. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்தியாவைவிட மக்கள் தொகை அதிகமாய்க் கொண்டு வருகிறது. மிக சிக்கனமாகவும் முன் யோசனையுடனும் வேலை செய்து வரும் குடியானவனிடத்திலும் குற்றம் கூறுவதற்கில்லை. அவன் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருப்பதற்குக் காரணம் அவனுக்கு உண்பதற்கு ஒன்றும் கிடைக்காமலிருப்பதே. ஆளை அழுத்தக்கூடிய நிலத்தீர்வையும், இந்தியாவின் கைக்தொழில்கள் பாதுகாக்கப்படாமல் இங்கிலீஷ் யந்திரங்களுடன் போட்டி போட்டு அழிந்து போனதுமே இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம்.  —ரமேஷ் சந்த்ரதத்  (1899-ல் லக்ஷ்மணபுரியில் நடைபெற்ற 15-வது காங்கிரஸ் மாநாட்டில்)  நாட்டின் அரசியல், ஜாதி, மதம், மாகாணப் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் வரையில், எந்தவிதமான சட்டத்தைச் செய்தும் பயனில்லை.  —கிருபளானி (2-12-1960)  நாம் பேச்சு அளவில் வளர்ந்திருக்கிரறோம். இடித்தால் இரும்பு; வெட்டினால் வெள்ளி, தட்டினல் தங்கம், என்று அழகாகப் பேசலாம். ஆணால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவைகளை பூமியிலிருந்து எடுக்க ஆராய்ச்சி நடத்த வேண்டும்.  —அமைச்சர் வெங்கடராமன் (9.8-1960)  நமக்குத் தலைவலி என்றால் டாக்டர் வந்து மருத்து கொடுப்பார். தலைவலியை வாங்கிக் கொள்ளமாட்டார். அதைப்போல, போர்க்கருவி வரும். ஆனல் போராடுவது நாம்தான்,  —காமராசர் (9.12. 1962)  அரசியலே மோசமானது என்று சில தத்துவ மேதைகள் கூறுகிறார்கள். அரசியல் மோசமானது அல்ல. அரசியலை மக்கள்தான் மோசமாக ஆக்குகிறார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகியவையே அரசியல் என்று நாம் ஆக்கிவிட்டோம். ஆனல் உண்மையில் அரசியல் என்பது மக்களின் பொருளாதார சமுதாய நிலையை உயர்த்துவதற்கான பெரியதொரு இயக்கமாகும்.  —இந்திரா காந்தி (16-9-1970)  திறமையில்லாத ஒரு பெண் நடிகை ஆக முடியும் என்பதை எல்லாம் என்னல் நம்ப முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு படியிலுமே என்னுடைய உழைப்பு இருக்கிறது. நடிகைகளின் பகட்டில் மயங்கும் பலர் அதற்குப் பின்னல் இருக்கும் அவளுடைய உழைப்பை மறந்து விடுகிறார்கள்.  —நடிகை உஷா நந்தினி  புதிதாய் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு இயக்கமும், அதன் அடிப்படையான முக்கிய கொள்கைகள் உலகத்திலுள்ள சமூகத்தினர் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படுவற்கு முன்னல், இரண்டு பெரிய முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் முன் செல்ல வேண்டுமென்ற ஒரு கண்டிப்பான நியதி ஏற்பட்டிருப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. மக்களால் அக்கொள்கைகள் ஒழுங்கற்றவையென நிராகரிக்கப்படுவதும், பின் அவை மிகவும் சிறப்பானவை அல்லவெனக் கருதி கவனம் செலுத்தாது அலட்சியம் செய்யப்படுவதுமான இவ்விரண்டும் மேலே கூறப்பட்ட முட்டுக்கட்டைகளாகும்.  —சாரதா நந்த சுவாமிகள்((1-4-1926)  (கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேளூரில் நடைபெற்ற இராம கிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டில்)  நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ. 100-ல் இருந்து ரூ. 150 ஆக ஏற்படுத்திவிட்டேன். நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2, 3, பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்குப் பயன்படும்.  —தந்தை பெரியார் (16-6-1968)  நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன்.  —ராஜாஜி (5-3.1962)  நான் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. எந்த கடவுள் படத்தையும் பூஜிப்பதில்லை. கடவுள் கல்லிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. மனிதனே கடவுள். நானே கடவுள்  —பசவலிங்கப்பா (3-8-1973)  (மைசூர் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்)  என்னுடைய தாயாரின் முன்னோர்கள் 12-வது நூற்றாண்டில் நார்வேயிலிருந்து ஸ்காட்லண்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். என்னுடைய முன்னேர்களில் ஒருவர் கடற் கொள்ளைக்காரராய் இருந்தார். அவர் பிடிக்கப்பட்டு, 1174—ஆம் ஆண்டில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.  —டாக்டர் வில்லியம் மில்லர்  எவன் அதிக ஆச்சரியப்படுவதை நிறுத்திக் கொள்கிறானோ, அவன் சீக்கிரத்தில் புத்திசாலியாகிவிடுகிறான்.  —கவிஞர் சுரதா  அந்நிய கவர்ன்மெண்ட் எவ்வளவு உத்தமமானதாயினும், எவ்வளவு நல்லெண்ணமுடையதாயினும், மக்களின் வேண்டுகோளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு சிரத்தை காட்டின போதிலும், ஜாதி, மதம், நிறம், நாகரீகம் இவைகளில் முற்றிலும் அது வேற்றுமைப் பட்டதாயிருப்பதால் மக்களின் மனப்போக்கை யறிந்து அதன்படி நடப்பது இயற்கையாகவே அசாத்தியம். ஆகையால் சட்ட சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் அவசியம்.  —டாக்டர் ராஜேந்திரலாலா மித்ரா  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)  பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதீர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை. என்மகனைக் கூட நான், ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகிறாய்?‘ என்று தான் கேட்கிறேன். நான் கூடப் பள்ளிக்கூடம் போகவில்லை. நான் என்ன கெட்டா போய்விட்டேன்?”  —ஜெயகாந்தன்  (சிறுகதை எழுத்தாளர்)  எந்தக் காலத்திலும் சீனா தோற்கடிக்கப் பெற்றது கிடையாது. யாராலும் அதைத் தோற்கடிக்க முடியாது. போர் வந்து விட்டால், முப்பது கோடிப் பேரை பலி கொடுத்து மீண்டும் உலகில் பெரிய நாடாய் இருக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் சீனாவுக்கு உண்டு.  —மா. சே துங்  ஒரு தாஜ்மகாலைக் கட்ட அரசனின் முழு கவனமும், கஜானாவின் பணம் முழுவதும் செலவிட்டுக் கட்டி முடிக்க 14—ஆண்டுகள் முடிந்ததாகக் கூறும் போது, ஒரு பெரிய உபகண்டத்தின் முன்னேற்றம் அடைய நீண்ட காலம் ஆவது இயற்கையே.  —எம். ஏ. மாணிக்கவேலு  (சென்னை ரெவின் யூ மந்திரி)  ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் அனைவரும் அரசர்களைப் புகழ்ந்து எழுதினர்கள். அப்படி புகழ்ந்து எழுதினால்தான் அவர்களுக்கு வாழ்வு என்ற நிலை இருந்தது. அப்பேர்ப்பட்ட காலத்தில் கூட திருவள்ளுவர் போன்றவர்கள் மக்களுக்காக எழுதினர்கள். ஆனல் இப்போதைய எழுத்தாளர்கள், அரசர் காலத்து எழுத்தாளர்களின் நிலையிலே தான் இருக்கிறார்கள். நான் மனதில் பட்டதை அப்படியே சொல்பவன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால் தான் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும் என்று இன்றைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.  —மதுரை முத்து (28-10-1974)  (மதுரை மாநகராட்சி மேயர்)  திருமணம் ஆனபோது 7 பெண் குழந்தைகள் வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்போது என் ஆசை நிறைவேறவில்லை. நாட்டுப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தது தான் இதற்குக் காரணம்.  —மானேக்‌ஷா (15-7-1974)  (இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி)  நானே என்னைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். எந்த நிலையிலுள்ளவனும், பெரிய பதவியிலிருந்தாலும் சரி, சிறுபதவியிலிருந்தாலும் சரி, தன் செய்கையினலேதான் கெட்ட நிலையை அடைய முடியும். இந்த உண்மையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, நான் சொல்லுவதும் உண்மையே. இந்த நிமிடத்தில் மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். நான் இரக்கமற்று இந்தக் குற்றத்தை என் தலையிலே சுமத்திக் கொள்ளுகிறேன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்கு செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடிது.  —ஆஸ்கார் ஒயில்ட்  பக்கம் 81-90   இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பான? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! இழிநிலே அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப் பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லே. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப்போகிறேன். —அரவிந்தர்  முஸ்லிம் என்ற முறையில் இஸ்லாமிய மதத்திலும், பண்பாட்டிலும் எனக்குத் தனிப்பட்ட அக்கறை உண்டு. அவற்றுள் எவ்விதக் குறுக்கீட்டையும் நான் பொறுக்க மாட்டேன். ஆனால் இவைகளுடன் கூட வேறு சில கொள்கைகளும் எனக்கு உண்டு. அவை இன்றைய வாழ்க்கை நிலையும் தரமும் என் மேல் சுமத்தியவை. இஸ்லாமியப் பண்பு அவற்றை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. வழி காட்டியாக அவற்றில் முன்னேற எனக்குத் துணையாய் நிற்கிறது. ஒரு இந்தியன் என்பதில் நான் பெருமையடைகிறேன். இந்தியாவின் புனரமைப்பில் எனக்குள்ள முக்கியப் பங்கை நான் கைவிடத் தயாராயில்லை.  —மெளலான அபுல்கலாம் ஆசாத்  (1940—ல் ராம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசியது)  ஒரு சர்க்கார் மாறி இன்னெரு சர்க்கார் வருவது என்பது, புத்தகத்தில் 66-ஆம் பக்கம் மாறி 67-ஆம் பக்கம் வருவதுபோலவே தவிர, புதிதாக எழுதிய புத்தகம் மாறுவது போல அல்ல.  —அறிஞர் அண்ணா (21-3-1967)  சுலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்!  —அரு. ராமநாதன்  1946—ஆம் ஆண்டு. அப்போதுதான் திருமணம் செய்துகொண்ட என் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் தன் வீட்டிற்குப் புறப்பட்டார். அவர்களுடன் வந்த நானே வண்டியோட்டிக் கொண்டு கிளம்பினேன். எங்கள் எதிர் காலத்தைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு வந்தோம். அவரிடம் நான் சொல்லியதை இப்போது நினைவு கூர்கிறேன். நம் நாட்டில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டு எல்லாத் தொழில்களும் தேசியமயமாக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, என்னிடம் ஹெவி எண்டார்ஸ் மெண்ட் உள்ள மோட்டார் லைசன்சு இருக்கிறது. ஆக கம்யூனிச நாட்டிலும் வேலை கிடைக்கும் என்று கூறினேன்.  —நா. மகாலிங்கம்  (தொழிலதிபர்)  என் வாழ்க்கையில் ஆழ்ந்த பெருந்துன்பம் என்பது ஒரே ஒரு தடவைதான் வந்தது. அதாவது, என் மனைவி இறந்தபோது.  —டாக்டர் விஸ்வேஸ்வரையா    நான் சிறுவனாக இருந்தபோது தான் என் தகப்பனார் அல்லாமா ஆ, கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அரபு மொழியிலிருக்கும் குரானைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலையை எடுத்துக் கொண்டார். அவரோடு கூடவே இருந்ததனால் அதிலே எனக்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது. நாற்பது முறைகளுக்கு மேல் என் கையாலேயே குரான் முழுவதையும் எழுதியிருக்கிறேன்.  —முஸ்லீம் கட்சித் தலைவர் ஏ. கே. ஏ. அப்துல் சமத்  எனது ஊரில் இருந்து சினிமா பார்க்க மதுராந்தகமோ, அல்லது செங்கல்பட்டுக்கோ தான் வரவேண்டும். இரவோடு இரவாக சைக்கிளில் வந்துவிட்டு, இரவு காட்சியும் பார்த்தவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் வந்து படுத்துக் கொள்வேன். பார்த்த படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு பற்றியும் என் எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டு இருக்கும். உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, நாடகக்கதை ஆசிரியன் ஆகி சினிமா உலகுக்கு வந்தேன்.  —ஸ்ரீதர், திரைப்பட இயக்குநர் (14-1-1969)  என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால் திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையுமில்லை மூன்றாம் தேவையுமில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் சூம்பிப்போய், வயிறு மட்டும் பெருத்து வலுக்குறைந்து வாடியிருக்கும் தமிழ் நாடு வலுவடைய முடியும். திறமையற்றவர் களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதாவது செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் தூளாக்கிவிட அரசாங்கம் உத்திரவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், கட்டிடங்களிலிருந்த நிலத்தில் கலக்கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்கும் துணை செய்வதாகவுமிருக்கும்.  —கி. ஆ. பெ. விசுவநாதம்  1964 அல்லது 1965-ம் ஆண்டில் ஓய்வு பெற்று, ஐதராபாத்திலோ அல்லது வடக்கே எங்காவது ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றிருக்கிறேன்.  —கண்ணதாசன் (22-11-1962)  நான் அதிகமாகச் சொற்பொழிவாற்றுவதில்லை. நான் தலைவன் அல்லன். மனித சமுதாயத்தின் தொண்டன் நான்.  கான் அப்துல் கபார்கான் (8-10-1969)  இந்திய மண்ணிலிருந்து, 40 கோடி இந்தியர்களின் ஆதரவு இல்லாமலேயே தங்களுடைய எதிரிகளைத் தாக்கிப் போரிடப் போகிறோம் என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் நினைக்குமானால் அவர்களுக்கு அறிவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் போர் மக்களுடைய போர் என்ற எண்ணம் மக்களுடைய மனதில் உதிக்கவேண்டும். தங்களுடைய நாட்டுக்காகவும், தங்களுடைய சுதந்திரத்துக்காகவும் போரிடுவதாக அவர்கள் எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி மக்கள் நெஞ்சில் உண்டாகாத வரையில் எவ்வளவு தூரம் ரேடியோவிலும், பத்திரிகைகளிலும் பிரசாரம் செய்தாலும் பலன் இல்லை.  —சர்தார் வல்லபாய் பட்டேல் (8-8-1939)  (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசியது.)  அபிவிருத்தி அடையாத தேசங்களுக்கு உதவி செய்யும் கொள்கைகளுக்கு-மார்க்கிசம், லெனிலிசம், ஸ்டாலினிசம், காரணம் என்று சொல்வதில் தவறில்லை.  —சர். சி. பி. ராமசாமி ஐயர், (6-6-1960)  தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே!  —ராஜாஜி (30.12.1942)  (காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.  இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திரபோஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது.  —நேரு (20.5-1928)  (பம்பாயில்)  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள்; அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.  —எம். ஆர். ராதா (31.8-1961)  கவசமிடப்பட்ட சாதனங்களில் அமர்ந்து மனிதன் வான வெளியின் தனிமையினுள் பறந்து செல்லும் ஒருநாள் விரைவிலேயே வரும். அப்போது அவன் உலகைச் சுற்றி வந்து செய்திகளை அனுப்புவான். ரப்பரால் ஆன உடையணிந்து முகமூடி தரித்து அவன் இவ்வாறு வானவெளியினுள் ஊடுருவிச் செல்லும்போது அது மனித சமுதாயத்தின் தலைவிதியையே மாற்றியமைத்து விடும்.  —எச். ஜி வெல்ஸ்.  பல பெரியோர்களால் பன்முறையும் நந்தனார் கல்லூரி விஷயமாகக் கேள்வியுற்றிருக்கிறேன். பல நாட்களாக இக்கல்லூரியைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் இருந்தும் வந்தது. இப்பொழுது இங்கு வரவேண்டுமென சுவாமி சகஜானந்தர் அன்போடு கேட்டுக் கொண்டமையால் வர நேரிட்டது. நந்தனார் வகுப்பினராகிய இச்சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமானால் அறிவோடும், அமைதியோடும் சமாதான வகையில் முயற்சிக்க வேண்டும். ஈண்டு அவ்வாறு நடைபெற்று வருகிறதெனத் தெரிந்து சந்தோஷமடைகிறேன். ஒரு வகுப்பினர் முன்னேற்றத்திற்கு எனைய வகுப்பினர் முயற்சிகள் செய்வதிலும், அந்த வகுப்பில் தோன்றியவர்களே முயற்சித்தால் விரைவில் பெரிதும் பயன்படும் என்பது எனது துணிபு. சுவாமி சகஜானந்தரைப் போல் பலர் தோன்ற வேண்டும். தற்போது இக்கல்லூரி ஓலைக்கட்டிடமாக இருக்கிறது. யான் இங்கு வந்தது மிகவும் ஆச்சரியமெனக் கூறினர். பெரு மாளிகையாயினும், சிறு குடிலாயினும் அன்பிருந்தாலொழியச் சிறப்புறாது. இங்கு அன்பு கமழ்வதால் பெரு மாளிகையினும் சிறப்பாகக் கருதுகிறேன்.  —இராமநாதபுரம் மகாராஜா ராஜா ராஜேஸ்வர சேதுபதி  (4-4-1927) (சிதம்பரத்தில்)  அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டுமென்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடையார் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன். தமிழ் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும், அவற்றில் பழகல் வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல் தமிழரென்று வெளிக்குக் கூறிக் கொள்வோருக்கு வெட்கமில்லை யென்றே நான் கூறுவேன்.  — ஞானியாரடிகள்  (கந்தர் சஷ்டிச் சொற்பொழிவில்)  கவர்ன்மெண்டார் நமக்குச் செய்த நன்மைக்காக நாம் மிக்க நன்றி பாராட்டுகிரறோம். ஆனல் அவர்கள் எவ்வளவு நல்லெண்ணமுடையவர்களாயினும் அவர்களால் இராணுவ இலாகாவில் பயங்கரமானதும் சீர்ப்படுத்தக் கூடாததுமான தீங்கு நமக்கு ஏற்படும் பொழுது நாம் நன்றி பாராட்ட முடியாது. நம்முடைய சுபாவத்தைக் குறைத்து, வீர்யத்தை ஒடுக்கி க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த சூரர்களை குயில் பேனா ஓட்டும் ஆட்டு மந்தைகளாகச் செய்யும் பொழுது நாம் நன்றியுள்ளவர்களாயிருத்தல் அசாத்தியமானது.  —ராஜாராம்பல் சிங்கு  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாது காங்கிரஸ் மாநாட்டில்.)  பாரதத்தைப் போன்ற பெரியதொரு நாட்டில், அதிக உணவு உற்பத்திக்குத் திட்டமிடுவதைப் போன்றே, பிறப்பு விகிதத்திலும் ஒரு கண் வைத்திருப்பது அத்தியாவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.  —டாக்டர் ராஜேந்திர பிரசாத்  மூச்சுவிடுதலின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சாதாரணமாக நாம் அறிவதில்லை. தடையில்லாமல் சரிவர சுவாசித்துக் கொண்டிருக்கும் வரையில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை. ஆனல் ஏதோ கோளாறினால் மூச்சுத் தடைபடும்போது, அதனால் ஏற்படும் சங்கடத்தை உடனடியாக உணருகிரறோம். அது அடியோடு நின்றுவிடுமானல், வாழ்வே நசித்துவிடுவதைப் பார்க்கிரறோம்; “மனிதன்” என்ற பெயரே போய் பிணம் என்ற பெயர் அதற்கு வந்துவிடுகிறது. அப்போதுதான் மனித வாழ்வுக்கு உயிர் நாடியாய் விளங்கிய மூச்சின் பெருமை நமக்கு விளங்குகிறது.  —கே. ராஜாராம் நாயுடு  (சென்னை பார்லிமெண்டரிக் காரியதரிசி)  சகல சம்பத்தையும் உடையவனுக்குச் சம்பந்தன்னனென்றே பேர். பிரபுவென்ற பேரில்லை. வித்தையை உடையவனுக்கு வித்துவானென்றே பேர். விவேகியென்ற பேரில்லே. கொடுக்கும் தகைமை உடையவர்கட்கே தாதாவென்றும், பிரபுவென்றும், வள்ளவென்றும் பேர்.  —சோ. வீரப்ப செட்டியார் (1902)  (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)  கனவான்களே! என்னிடத்தில் எத்தனையோ பிழைகள் இருப்பினும், ஒரு சிறிது தைரியமும் இருக்கிறதென்று நினைக்கின்றேன். நான் இந்தியாவிலிருந்து மேற்றிசைக்கு ஒரு தூது மொழியுடன் சென்றிருந்தேன். அதை அமெரிக்கர் முன்னும் ஆங்கிலேயர் முன்னும் தைரியமாய் உரைத்தேன். இன்றைய விஷயத்தைத் துவக்குமுன் உங்கள் அனைவருக்கும் சில தைரியமான வசனங்களைச் சொல்ல விரும்புகிறேன். என்னை அதைரியப்படுத்தி, என் காரியவிர்த்தியை எதிர்த்து, கூடுமானல் என்னையும் நசுக்கி ஒழித்துவிட, சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இறைவன் திருவருளால் அவை ஒன்றும் சாயவில்லை. அத்தகைய முயற்சியின் பயன் எப்பொழுதும் அப்படித்தானே முடியும்.  —சுவாமி விவேகாநந்தர் (9–2–1897)  (சென்னை விக்டோரியா மண்டபத்தில்)  நான் ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக ஆறு டைரிகள் எழுதினேன். இப்போது ஒன்று தான் மிஞ்சி இருக்கிறது. டைரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால்தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்கு கிடைக்கவில்லை, திருவள்ளுவர் ஊர் எது என்று இன்னமும் தெரியவில்லை. திரு. வி. க., டாக்டர் வரதராஜுலு போன்றவர்களின் வரலாறு சரியாக கிடைக்கவில்லை.  — அறிஞர் அண்ணா (1 7-10-1967)  ஓணமும் தீபாவளியும் எனக்குப் பிடித்த பண்டிகைகள். அதற்கு அடுத்தபடி பொங்கல் நானே விமரிசையாகக் கொண்டாடுகிறேன். அதில், வேடிக்கை—உல்லாச அம்சங்கள் இல்லாததால், ஒரு தெய்வீகப் பண்டிகையாகக் கொண்டாடுகிறேன்.  —K. R. விஜயா  என்னுடைய பாட்டி, ஒரு மூட்டை நெல்லைக் குத்தி அரிசியாக்கிவிடுவார்கள். அவர்களுக்கு அவ்வளவு பலம் இருந்தது. ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் நோஞ்சான்களாக இருக்கிறார்கள். பின்னல் வேலைகள் செய்யும் அளவுக்குத்தான் அவர்கள் உடலில் பலம் இருக்கிறது. பெண்கள் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கடுமையாக உழைக்கவேண்டும். வீணாக அரட்டையடித்து நேரத்தை வீணக்கக்கூடாது. பக்தி புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிட வேண்டும்.  —முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் (29-12-1964  (சீர்காழியில் நடைபெற்ற மாதர் சன்மார்க்க சங்க மாநாட்டில்.)  மடங்கள் தம்முடைய நிலைமாறி வழக்குகளிலும் வியவகாரங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. அவைகளிலே அதிகமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவை வக்கீல்களின் பணப்பெட்டிகளாக இருக்கின்றன. நான் ஒரு மடத்து வக்கீலாக இருந்து கொண்டு மடத்து வக்கீல்களைக் குறை கூறுவது சரியில்லை யென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். மடங்களின் பழக்கம் ஏற்பட்டதனால் உண்மைகளை உணர்ந்து குறைகளை நீக்கிக் கொள்ளவேண்டும் என்றெண்ணியேதான் இதைச் சொல்கிறேன். மடங்கள் அறிவை விருத்தி செய்யும் விஷயங்களிலே பணத்தைச் செலவிடுவதுதான் நியாயம்.  —மதுரை மணி ஐயர் (1883-க்கு முன்)  (கும்பகோணத்திலுள்ள போர்ட்டர் டவுன் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)  எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.  — பெரியார் (1-1-1963)  சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நான், திரு. ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பாலமீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்து வந்தேன். காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துக்களையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களேப் போட்டிருக்கிறோம்.  — நடிகர் கே. சாரங்கபாணி (13-8-1972)  முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்சிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா? அல்லது வேறு ஏதேனும் சூழ்ச்சியினலா? என்றால், அருளும் அன்று; சூழ்ச்சியும் அன்று;முகமதியர் மட்டும் அல்லர், இந்துக்களும் திரெளபதை கோயில், முருகக் கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லே. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா. கையால் தீயை எடுக்கலாம்; ஆனல் அதனே வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும். காலில் தீயின் வெம்மை சிறிது தாழ்ந்தே சுடுமாதலின், அஃது இரண்டு மாத்திரை குடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம். தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.  — பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878-ஆம் ஆண்டில்)    பக்கம் 91-100   எனது பொதுத் தொண்டு வாழ்வில், நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள், அண்ணாதுரை, ராஜாஜி, கண்ணப்பர், ராமநாதன், கே. ஏ. பி. விசுவநாதன், பொன்னம்பலம், சவுந்தர பாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், குருசாமி ஆகியவர்கள்தான்.  — பெரியார் (19-9-1962)  மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும்.  —நேரு (6-5-1961)  மனிதர்களுக்காகக் குதிரையா? குதிரைகளுக்காக மனிதர்களா? மனிதர்களின் வாழ்வும் பணமும் குதிரைப் பந்தயத்திஞல் வீணாகக் கூடாது!  —அண்ணா (8-3-1967)  நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பாடிவிட்டேன். இன்றுள்ள பிரபல நடிகர்கள் எல்லோருக்கும் பாடிவிட்டேன். அதில் அமுதும் தேனும் எதற்கு? என்ற பாட்டே சிறந்தது. இந்தப் பாடல் கவிஞர் சுரதா எழுதியது.  — சீர்காழி கோவிந்தராஜன்  மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை  — சுபாஷ் சந்திரபோஸ் (20-5-1928)  (பம்பாயில்)  நான் முதன் முதலில் சென்னைக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் இசை உணர்ச்சி இல்லாதவர்கள் என்று தெளிவாகி விட்டது. தமிழ் நாட்டில்தான் மேளம், இசை அல்லது பரதநாட்டியம் இருக்கின்றன. பிற பாஷைகளில் கிடையாதெனச் சிலர் நினைக்கலாம். தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் இவைகள் தெலுங்கு பாஷையில் கிடையாது.  — ரசிகமணி டி கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1911)  (தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)  மனைவி, ஒரு நல்ல நிதிமந்திரி, எங்கிருந்தோ பணம் வந்து குவியப் போகிறது என்று மனக்கோட்டை கட்டாமல், கணவனின் வரவுக்குத் தக்கபடி செலவு செய்கிறாள். தன்னுடைய மக்களுக்குக் கல்யாணப் பேச்சு நடத்துகிறாள். இந்த விஷயத்தில் மனைவி நிதிமந்திரி மட்டுமல்ல, சரியான உள்நாட்டு மந்திரி கூட.  — வி. வி. கிரி (29.6.1960)  சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக் கடையின் முன்னல் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். நான் பாடிக் கொண்டிருந்த போதே கள்ளுக் கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் விடவில்லை நான். அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன். அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்.  — சித்துார் வி. நாகையா (13-1-1972)  எல்லாம் தெரியும், இனி உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களை விட, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அறிஞர்களால் நாடு அதிக பலன் அடைகிறது.  — சம்பத் (8-3-1962)  நல்ல ஆட்கள் பதவிக்கு வரமுடியவில்லை என்றால். பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்குப் புத்தியில்லை. அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லே என்றுதான் அர்த்தம்.  —ஈ. வெ. ரா. பெரியார்  புரட்சி வரும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை தான், ஆட்சியிலிருப்பவர்கள், வாயளவில் சோஷலிசம் என்றும் முற்போக்கு என்றும் பேசிக்கொண்டேயிருந்தால்—காரியமாற்றாமல் காலங் கடத்தினால் புரட்சி வரத்தான் செய்யும்.  — காமராசர் (17-10-1970)  குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.  — ம.பொ. சி. (17-3-1963)  மற்றவங்களைச் சின்னவங்களா நான் நினைக்கமாட்டேன். ஆனல் நான் என்கிற செருக்கு எனக்கு என்னைக்குமே உண்டு. எங்காவது ஃபங்ஷக்குப் போனல்கூட எனக்கு ஃப்ரன்ட்சீட் கொடுக்கவில்லை என்றால் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிடுவேன். இரண்டாந்தரமா இருக்கிற காம்ப்ளெக்ஸ் எனக்குக் கிடையாது.  — திரைப்படத் தயாரிப்பாளர் ஜி. உமாபதி  எழுத்தாளர்கள் தங்கள் பேனவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ‘மை’, கய'மை', அறியா'மை' போன்ற ‘மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது‘மை’, 'உண்மை’, பொறு'மை', வறு'மை', உரி'மை'; கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான்.  — கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றுடன் பல விதமான கிழங்குகளையும் இயற்கை ஏராளமாக வழங்கியிருக்கும் சென்னையைப் போன்ற ஒரு மாகாணத்தில், உணவுக்கான இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் மக்கள் அறிந்தால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றே நான் கூறுவேன்.  —காந்தியடிகள் (30-1-1948)  நான் நீண்ட காலம் எந்தவகை மருந்தும் சாப்பிட்டதில்லை. மருந்து சாப்பிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நோய் ஏற்பட்டதில்லை.  —நேரு (14-10-1962)    கடந்த காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போதெல்லாம் ஆயிரக் கணக்கில் ஏழைகள் செத்துப் போவார்கள். அதற்கு தலைவிதியை நொந்து கொள்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிப்போய் விட்டது. இன்று பட்டினிச்சாவு ஏற்பட்டால், பெரிய புரட்சியே தோன்றிச் சமுதாயச் சீர்குலைவு ஏற்படும்.  —சி சுப்பிரமணியம் (28-11-1966)  (மத்திய உணவு அமைச்சர்)  என்னுடைய இரண்டுமகன்களும் வளர்ந்துவிட்டார்கள் பிரதம மந்திரி என்ற அதிகாரியின் கெடுபிடிக்கெல்லாம் அவர்கள் பணிந்து விடுவதில்லை. அவர்கள் தங்களுடைய தனித்தன்மையைக் காத்து வருகிறார்கள்.  — இந்திரா காந்தி (20-11-1970)  ஒருமுறை படே குலாம் அலிகான் பாட்டுபோல நிறைய பிருகா எல்லாம் போட்டுப் பாட வேண்டிய பாட்டு ஒன்றை என்னிடம் கொடுத்துப் பாடச் சொன்னர்கள். பாட்டைப் பார்த்தேன். ‘இது என்னால் பாட முடியாது. என் சாரீரம் பிருகா சாரீரம் இல்லை. என்னே டிரை பண்ணுவதற்குப் பதிலாக சீர்காழி கோவிந்தராஜனிடம் கொடுங்கள். பிருகா போட்டு நன்றாகப் பாடுவார்,’ என்று சொன்னேன். என்னால் முடியாததை முடியாது என்று சொல்வேனே தவிர முடியும் என்று சொல்லி அவமானப்பட் மாட்டேன்.  —டி. எம். செளந்தரராஜன் (18-11-1971)  நான் உத்தியோகம் செய்த காலத்தில் என் சமுசாரத்திற்கு ஒருவிதமான நகையும் செய்து போடவில்லை. செய்து போட வேண்டுமென்று நினைக்கவுமில்லை. பணம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நினைவுமில்லை. கடவுளை நம்பினல் அவர் எல்லாம் கொடுப்பார் என்ற விசுவாசம் பலமாயிருந்தது. நான் சம்பாதித்த பணத்தில் மீதி ஏதாவது இருந்தால் என்னுடைய பிள்ளைகளின் படிப்புக்கே செலவழித்தேன். அதற்குச் செலவு செய்ய நான் பின் வாங்கவில்லை  —டிப்டி தாசில்தார் கதிர்வேல் நாயனார் (1918)  என் தொண்டில் எனக்கு உதவியாக இருந்தவர்கள் பலர் அவர்களால் கனவில்கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அடைந்தார்கள். அடைந்தும் வருகிறார்கள்.  —பெரியார்  நாம் பாவமும் செய்யவில்லை. புண்ணியமும் செய்ய வேண்டுவதில்லையென்று சிலர் சொல்லுவார்கள். அது கூடாது. அதேனென்றால், அரசனுக்குட்பட்ட குடிகள் அரசன் கட்டளைப்படி, செய்யும்படி சொன்னதையும் செய்ய வேண்டும். செய்யாதே என்றதையும் செய்யக் கூடாது. அந்த கட்டளைப்படி நடவாதவர்களைத் தண்டிப்பான். இந்த அசுத்த வஸ்துக்களைப் புசிக்காதே என்றபடி புசிக்கக்கூடாது. இந்தக் கிரகத்தை (வீட்டை) வெள்ளையடித்துச் சுத்தம் செய் என்றபடி சுத்தஞ் செய்ய வேண்டும். முன்னால் சொன்னதும் இவர்கள். நன்மைக்குத்தான். பின்னல் சொன்னதும் இவர்கள் நன்மைக்குத்தான். இரண்டில் ஒன்று தவறினலும் அரசன் தண்டிப்பான்.  —சோ. வீரப்ப செட்டியார் (1902-ல்)  (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)  ஞானியார் சுவாமிகளை யான் கால் நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின் கீழ் நின்று பேசும் பேறும் அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பலமுறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.  —திரு. வி. க. (18-11-1939)  (ஞானியார் மடத்தின் பொன் விழாவில்)    வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக் கூறுகிறேன். 1924-ஆம் வருடத்தில் மீண்டும் நான் வக்கீல் தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம் இருபது வக்கீல்களே என்னுடனிருந்தனர். இப்பொழுது நாற்பது வக்கீல்களிருக்கின்றனர். எனவே, இப்பொழுது மாதம் ரூபாய் நானூறு ஐந்நூறுதான் வருகின்றது. பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம்,  —வ. உ. சி. (3-3-1928)(காரைக்குடியில்)  குடும்பக் கட்டுப்பாடு மிக முக்கியமானதொரு விஷயம்; பாரதத்தின் தற்போதைய நிலைமைக்கும், தனிப்பட்ட குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இது ஒரு அத்தியாவசியமான சமுதாயக் கடமை. நம்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கும், மக்கட் பெருக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.  —ஜவாஹர்லால் நேரு  நான் பொருளாதார நிபுணர் அல்ல. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் பொருளாதார நிபுணர்கள் அல்ல என்பதே என் கருத்து.  —பிரதமர் இந்திராகாந்தி (4-9-1973)  அறிஞர் அண்ணாவுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக காரில் பாண்டிச்சேரி நோக்கி போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒரு டீ கடை முன் காரை நிறுத்தி, சில பலகாரங்களை பொட்டலமாகக் கட்டி வாங்கிக் கொண்டு போனோம். அப்படி பொட்டலமாக மடிக்கப்பட்ட காகிதத்தில் “கல்லைத் தான் மண்ணைத்தான் கரைத்துத்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்ற பாட்டு இருந்தது. இதில் ’தான்’ என்ற சொல் தேவையில்லாமல் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டேன். பிறகு பாவமன்னிப்பு படத்துக்கு பாட்டு எழுதும்போது எனக்கு இந்த ‘தான்’ நினைவுக்கு வந்தது. அத்தான் என் அத்தான் என்னைத்தான்’ என்ற பாட்டை எழுதினேன்.  —கவிஞர் கண்ணதாசன் (22-11-1962)  மனிதன் வளர வளர குனிய வேண்டும் என்பதுபோல், பாராட்டுக்களை எச்சரிக்கைகளாகக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பாராட்டை எச்சரிக்கையாகவே கருதுகிறேன்.  —சிவாஜி கணேசன் (30.4-1960)  நம்மவர்களில் பலர் இன்னும் பல இடங்களிலும் சமயம் நேர்ந்தால் நம் வீடுகளையும நமக்கு வசேஷ நன்மை செய்திருக்கும இக் கவர்ன்மெண்டையும் காப்பதற்காகப் போர் செய்து, தங்கள் உயிரையும் தியாகஞ் செய்யத் தயாராயிருக்கிறார்கள். நான் கடினமாய்ப் பேசக் கூடும். ஆயினும் நான் சொல்வது உண்மை. தங்களையும் தங்கள் தேசத்தைக்காக்கக்கூடிய ஆற்றலையும் அழித்துவிட்டால், வேறெந்தப் பரிகாரத்தையும் எந்த நாடும் தேட முடியாது.  —ராஜா ராம்பல் சிங்கு  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)  சாதரணமாக ஒருவன் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு புத்தகத்தைப் படிப்பு முடிந்து 10-ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாசிப்பானானால், அதன் உட்பொருள்களும்,இன்பமும் அப்பொழுதுதான் அவனுக்குத் தெரியவரும். அதன் பிரயோஜனத்தை அவன் பின்புதான் அடையக்கூடும். அதனால்தால் நாம் பள்ளிக்கூடத்தை விட்ட பின்பும் கல்வி கற்க வேண்டியது அவசியமெனக் கூறுகிறேன்.  —சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)  (Y. M. C. A. பட்டிமன்றத்தில்)  மாணவர்களாக இருக்கும் பொழுதே நீங்கள் பேசிப் பழக்கிக் கொள்வீர்களானல், அது உங்களுக்கு வருங்காலத்தில், மிகுந்த உதவியாயிருக்கும். ஒவ்வொருவரும் சுயேச்சையாகச் சிந்திக்க வேண்டும். கூட்டங்களில் வெளியிடப்படும் அபிப்பிராயங்களை உள்ளபடி திரும்பிக் கூறிவிடுவது உபயோகப்படாது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியிருத்தாலும் பாதகமில்லை. அதைப்பற்றி உங்களுடைய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.  —ஏ. ராமசாமி முதலியார் (16 - 1 - 1928)  சிந்தாதிரிப்பேட்டை மாணவர் சங்க ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தில்.)  சங்கீதத்தை நாம் நன்றாக ரசித்து, அநுபவித்து அதனால் உள்ளம் நெகிழுவதற்குப் பாஷை அவசியம். பாஷை தான் நாம் அதை அதிகம் அதுபவிக்கும்படிச் செய்கிறது. எனவே, கேட்பவரின் ஹிருதயத்தைத் தொடுவதற்கு அவருக்குப் புரியும் பாஷையிலேதான் பாட்டுகள் பாடப்பட வேண்டியது நியாயம்.  —ராஜாஜி (30-1-1942)  (காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)  இன்று பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் எங்களுக்கு அந்தக் காலத்தில் கார் கிடையாது! அப்போது நாங்கள் எல்லாம் வெறும் “பிளாட்பாரம் டிக்கட்டுகள்” ஆனால் அந்தக் காலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்தார், பாகவதர்! திருச்சியில் அரண்மனைபோல் வீடு கட்டி, ராஜாபோல் வாழ்ந்தார்.  —எம். ஆர்.ராதா (17 - 12 - 1959)  உண்மையைச் சொன்னல் எனக்கு சமைக்கத் தெரியாது. ஒருமுறை சமைக்க தெரியும் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை படித்து சமையல் செய்தேன். அப்போது பட்ட அவதி எனக்குத்தான் தெரியும். கையில் சூடுபட்டு படாதபாடு பட்டேன்.  —ராஜஸ்ரீ  பணம், காசு, பண்டம் முதலியவற்றில் எனக்குப் பேராசை உண்டு. இவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியம் காட்டியிருப்பேனே தவிர, அவைகளில் நாணயக் குறைவையோ, நம்பிக்கை துரோகத்தையோ நான் காட்டியிருக்க மாட்டேன். வியாபாரத்துறையில், பொய்பேசி இருந்தாலும், பொது வாழ்வில், பொய்யையோ மனம் அறிந்து மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன்.  —பெரியார் (1 - 1 - 1962)  கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.  —சார்லஸ் டார்வின்  எனக்கு என் அப்பாவின் பேரில் தனி ஈடுபாடுண்டு. அவரைப் பெரிதும் மதித்தேன். நான் பார்த்தவர் களெல்லோரிலும் அவர் மிகுந்த வலிமையும், ஊக்கமும் உடையவராகத் தோன்றினர். நானும் பெரியவனாக வளரும்போது அப்பாவைப் போலவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். நான் எவ்வளவுக்கெவ்வளவு அவரை மதித்தேனோ, நேசித்தேனோ அவ்வளவுக்கவ்வளவு அவரைக் கண்டு அஞ்சினேன்.  —நேரு  சங்கீதத்தை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்பதே இயக்கத்தின் நோக்கமாதலால் இதுபற்றி விவாதங்கள் செய்வது கேவலமான காரியம். இயக்கத்தின் கருத்தைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை. நான் சிதம்பரம் மகாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்கு நிறைவேறிய தீர்மானம் மிதமான முறையிலேயே இருந்து. தமிழர்களால் தமிழ் நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளில் பாட்டுகள் எல்லாமே தமிழில் இருக்க வேண்டுமென்று என் சொந்த ஹோதாவில் யோசனை சொல்கிறேன். அபிப்ராய பேதங்களை மறந்து ஒற்றுமையாக விருந்தால் எல்லாருக்கும் க்ஷேமம். அப்படிச் செய்வதன் மூலம் தேசிய வாழ்வு நலம்பெறச் சேவை செய்ததாக ஏற்படும்.  பக்கம் 101-110   குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக இந்திய அரசு செய்து வரும் விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், இரண்டானால் எப்பொழுதும் வேண்டாம் ” எனக் கூறுகிறதல்லவா? இந்த விளம்பரம் சரியல்ல. ஏனெனில் நம் நாட்டில் பலருக்கு ஒன்றுக்கு மேல் அதிக மனைவிகள் உண்டு. ஆகவே இந்த விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், எந்த மனவிக்கும் இரண்டுக்கு மேல் வேண்டாம்” என இருப்பதே மிகப் பொருத்தமாகும்.  —எம். சி. டாபர்  (அ. இ. கா. க. உறுப்பினர்)  இந்தியாவில் தற்காலம் எல்லாரையும் துன்புறுத்தும் பாபம் ஒன்று உள்ளதென்றால் அது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவனும் தலைவனாக இருக்க விரும்புகிறானே ஒழிய, கீழ்ப்படிந்து வேலை செய்ய ஒரு மனிதன்கூட விரும்பக்காணோம்.  —சுவாமி விவேகாநந்தர்  நம் நாட்டில் பெரும்பாலும் படிப்பற்றவர்களே வியாபாரம் செய்கின்றனர். மேல் நாடுகளில் நன்கு படித்தபின்னரே வியாபாரத்தில் இறங்குகின்றனர். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் 12-வயது வரையிலாவது படித்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும். புத்தி கூர்மையுள்ள இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டும்.  —எ. நாயனர், பி. ஏ. பி. எல். (8 - 7 - 1949)  (அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சாலியர் மகாஜன சங்க 2வது மாநாட்டில்)  குழந்தைகள் வாழக் குடும்பம் வாழும். இளமை நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றியெல்லாம் எழுதாமல், வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் குழந்தை நூல்கள் எழுத வேண்டும்.  —அன்பு கணபதி (5 - 12 - 1960)  உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்!  —டாக்டர் மு. வரதராசனார் (1962)  குடும்ப வருமானம் போதவில்லையானால், பெண்களும் அறவழியில் பொருளீட்டிக் குடும்ப நிலையைச் சீர்படுத்த முயலுவது இழுக்கல்ல. உத்தியோகத்திற்கு ஏற்ற கல்வி பெறாத பெண்கள் வீட்டில் ஓய்வு நேரங்களில் நூல் நூற்றல்’ தையல் வேலை செய்தல் போன்ற தூய தொழில்களைச் செய்து பொருள் தேடலாம்.  —திருமதி மரகதவல்லி சிவபூஷணம் B.A., B.T., (26-12-1953)  (சைவை மங்கையர் மாநாட்டு தலைமையுரையில்)  நமது தேசத்தில்-பொய்யான காரியங்களில் நம்பிக்கைக் கொண்டு மயங்கி ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றனர். அவசியமான காரியங்களுக்கு எவ்வளவோ பணம் தேவையிருக்கப் பொய்யானவற்றிற்குப் பெரும் பணம் செலவு செய்யப்படுவதை எண்ணும் பொழுது வருத்தம் உண்டாகிறது. இப்பணம் நம் நாட்டிலுள்ள எல்லா சாதியாருக்கும் பயன்படுகிற தென்றாலும் பாதக மில்லை. குறிப்பிட்ட வகுப்பாருக்கே இப்பணம் செல்லுகின்றது. இதுவரையில் லாபமடைந்து வந்தவர்கட்கு என் பேரில் வருத்தமுண்டாகலாம். நீங்கள் நீதியை உணர்ந்து அதன்படி செய்யுங்கள். வெகு காலமாக திதி கொடுத்தல் என்னும் வழக்கத்தை நம்மவர்கள் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு செய்ய வேண்டுமென்று நம்தமிழ் நாற்களில் காணப்படவில்லை.  —வ. உ. சி. (3 - 3 - 1928)  (காரைக்குடியில்)  எனக்குப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. பதவி வகிப்பது எனக்குப் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நான் தொடர்ந்து பதவியில் இருப்பதின்மூலம் நாட்டுக்குச் சிறிது சேவை செய்ய முடியும் என நினைக்கின்றேன்.  —நேரு (12 - 6 - 1963)  சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள்.  —இந்திரா காந்தி (8- 2 - 1969)  இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடிக்க வேண்டிய படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நான் கல்கத்தாவுக்குச் சென்று மடத்தில் சேரப் போகிறேன்.  —நடிகை சரோஜாதேவி (8 - 3 -1962)  வைத்தியன் கட்டளைப்படி ஜீவிக்கும் வியாதியஸ்தன் எந்த நிலைமையிலிருப்பானோ அதே நிலையில் நாமுமிருக்கிரறோம். பூலோகத்தில் சுதந்திரத்தை விசேஷமாய் விரும்பும் தேசங்களில் ஒன்றின் ஆதீனத்தின் கீழ் பரீக்ஷை நிலையிலிருந்து வருகிரறோம். இதுவரைக்கும் பரீக்ஷை செய்தது போதும். எங்கள் மூக்காங்கயிற்றை எடுத்து விடலாம். குழந்தைப் பருவத்தைத் தாண்டி, நாங்கள் பூரணவயதையடைந்து விட்டதால் எங்களுக்குச் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு பாகத்தையாவது நாங்களே நடத்திக் கொள்ளும்படி விடவேண்டும் என்று நாம் இப்பொழுது கேட்கிறோம்.  —சுரேந்திர நாத் பானர்ஜி  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியிடம் யோசனை கேட்க கணவன் ஓடத்தான் வேண்டியிருக்கிறது.  —வி. வி. கிரி (29 - 6 - 1960)  எந்த மனிதனும் தன் கையால் செய்யக்கூடியது கொஞ்சமே ஆனால், அவன் தன் வருவாய் மூலமாக பிறர் மனதில் புது எண்ணங்களைத் தோன்றச் செய்யலாம். விஞ்ஞான உணர்ச்சியையும் கிளறிவிட முடியும். இதுபோல் செய்தால் அவர்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவர்  —டாக்டர் வில் (மேயோ சகோதரர்கள்)  நான் எப்போதுமே திறந்த மனம் படைத்தவள்.கள்ளம் கபடம் எதுவும் என்னிடம் கிடையாது. என் மனதில் பட்டதை அப்படியே பேசுவேன். அதுபோல் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவேன். அதற்காக என்னை நானே வெகுளி பெண் என்று எப்படி சொல்ல முடியும்? மற்றவர்கள் அதை சொல்ல வேண்டும்.  —வெண்ணிற ஆடை நிர்மலா  விலங்குகளிடம் அன்பாயிரு என்றால், புலியை முத்தமிடு என்று அர்த்தமல்ல. அதுபோல, ஓர் இலக்கிய இதழ் என்றாலே. அவ்விதழில்-செத்துப்போன நூற்றாண்டுகளின் சிந்தனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதல்ல. இன்றைய உலகின் சத்தங்களும், இருட்டறை முத்தங்களும் அதில் இடம் பெறலாம்.  —கவிஞர் சுரதா    எனது இரு மகன்களுக்கும் திருமணம் நடந்தது. அதில் தீப அலங்காரங்கள் கிடையாது. எந்தவிதமான வரதட்சணைகளும் இல்லை. நாங்கள் பரிசுகள் வாங்கிக் கொள்ளவில்லை. மற்றும் பல ஆடம்பரங்கள் இல்லை. இத்தனையும் பிரசுரமாகியிருக்கின்றன. இதையெல்லாம் எத்தனை பேர்கள்தான் பின்பற்றினார்களோ தெரியாது.  —இந்திரா காந்தி (19-2-1976)  விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும்.  —நேரு (11-10-1962)  இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கி, அவ்வுரிமையை இந்துக்களுக்கும் மகம்மதியர்களுக்கும் இல்லை என்பதால் ஏற்படும் பாரபட்சமான விதிகள், இங்கிலாந்து இந்தியாவிற்குச் செய்த வாக்குறுதிகளையும் பிரதிக்ஞைகனையும் மீறி நடக்கின்றனவென்பதைப் பற்றியும், அம்மாதிரி நடப்பதால் நமக்கு ஏற்படும் அவமானத்தைக் குறித்தும் அநீதியைக் குறித்தும் நான் பேசக்கூடும். எல்லாருக்கும் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இராஜ பக்தியிலும்படிப்பிலும் பிரசித்தி பெற்ற படிப்பாளிகளுக்குத் தக்க நிபந்தனைகளுடனும் விதிகளுக்கடங்கியும் கொடுக்கப்பட வேண்டுமென்றே நான் கூறுகிறேன்.  —ராஜாராம்பல் சிங்கு  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)  நான் அனேக கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருந்தாலும், இந்த மாதிரி மத சம்பந்தமான கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்ததேயில்லை. அன்றியும் எந்த மதத்தைப் பற்றியும் நான் விசேஷமாக ஏதும் தெரிந்தவனல்ல என்பதோடு, இஸ்லாம் மதத்தைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்தவனல்ல. நான் பொதுவாகவே எல்லா மதங்களையும் பெருமையாய் நினைப்பதுடன் எல்லா மதப் பெரியார்களிடத்திலும் நான் மரியாதையும் பக்தியும் காட்டுகின்றவன்.  திவான் பகதூர் C. S. இரத்தின சபாபதி முதலியார்  (1931-ல் கோவையில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்)  நண்பர்களே! நான் சொல்ல விரும்பிய விஷயமெல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டேன். நமது மூதாதையர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். நாம் அவர்கள் செய்க காரியங்களை விட இன்னும் மேலான காரியங்களைச் செய்தல் வேண்டும். நீங்கள் வில்லிலிருந்து செல்லும் அம்புபோல் இருங்கள். பணையின் மேல் விழும் சம்மட்டிபோல் இருங்கள். தனக்கு இலக்காயுள்ள பொருளை பீறச் செய்கிற பட்டாக் கக்தியைப்போல் இருங்கள். குறி தப்பினால் அம்பு முணுமுணுப்பதில்லை. விழவேண்டிய இடத்தில் விழாவிட்டால் சம்மட்டி தன்னை வெறுத்துக் கொள்வதில்லை. பட்டாக்கத்தியானது அதனைச்சுழற்றுவோன் கையில் ஒடிந்துபோய் விட்டால் துக்கப்படுவதில்லை.இருந்தும் இவற்றைப் பயன்படுத்துவதனாலேயே ஒருவகை மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அவற்றை நீக்கி வைப்பதனாலும் அதே மகிழ்ச்சி உண்டாகின்றது.  —சிவானந்த சுவாமிகள் (1-4-1926)  (கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேலூரில் நடைபெற்ற இராமகிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டுத் தலைமையுரையில்.)  நான் சீட்டாடமாட்டேன். ஆனல் சீட்டாடுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நண்பர்களுக்காக எதையும் கொடுக்கவிடத் தயாராக இருப்பவர்கள்கூட, சீட்டாட்டத்தில், நண்பர்கள் சிறு பிழை செய்தாலும் சகிக்கமாட்டார்கள்.  —சி. சுப்பிரமணியம் (18-9-1952)    ஜனநாயகத்தின் முழுப்பலனையும், மக்கள் அனுபவிக்கவேண்டுமானல், நீதியும், நிர்வாகமும் தமிழில் செயல்பட வேண்டும்.  டாக்டர் ப. நடராசன், எம். எல். ஏ. (8-3-1962)    வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலையில்தான் “ராணுவ ஆட்சி” என்ற பிரச்னை தோன்ற முடியும். ஜனதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ முடிவு செய்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களே விரும்பி அவர்களை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் ராணுவ ஆட்சி வரமுடியும்.  —பி. பி. குமாரமங்கலம்  (இந்தியாவின் முன்னாள் தளபதி)  ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பு, பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் அடிப்படையிலான அரசியல் அமைப்பு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதார அமைப்பு ஆகிய மூன்றும் நீடிக்கும் வரையில் எந்த அரசாங்கத்தினாலும் ஊழலை ஒழிக்கமுடியாது. நமது வேதங்களும் உபநிஷத்துக்களும்கூட ‘சொத்து சேர்க்கக் கூடாது’ என்று கூறுகின்றன. ஆனல் உண்மையில் யார்தான் அதனைப் பின்பற்றுகிறார்கள்?  —தேவராஜ் அர்ஸ் (23-3-1975)  (கர்நாடக முதல்வர்)  தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான்.  —தாரகேஸ்வரி சின்கா (18-9-1960)  (மத்திய துணையமைச்சர்)  நான் வேதத்தைப் படித்திருக்கிறேன். அதில் நமது ஞானத்தை விருத்தியாக்குதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. மற்றும், நாம் தெரிந்து கொள்ளுதற்குரிய சிலாக்கியமான விஷயங்கள் ஒன்றுமேயில்லை என்றும் நான் தெரிந்து கொண்டேன்.  —சர். கே. வி. ரெட்டி (15-4-1927)  (கோவையில், மூன்றாவது அகில இந்திய நாயுடுமார் மாநாட்டில் பேசியது)  போதனா முறையென்பது சிறுவர்களுக்கு மட்டும் தானென்பது பழைய காலத்துச் சம்பிரதாயமாகும். பள்ளிக் கூடங்களில் வெகுவாய்ப் படித்தவர்களில் பெரும்பாலோர் நமது நாட்டில் தமது பிற்கால வாழ்வில் தமது கல்வியை அறவே மறந்துவிடுகிறார்களென்பது உண்மை. வயது வந்தவர்களுக்கும் கல்வியறிவூட்ட வேண்டியது கல்வி முறையின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாகப் பாவிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் கோடிக்காக்கான மக்கள் எழுத்து வாசனையறியாமல் இருப்பதற்குக் காரணம், வயது வந்தவர்களுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்ற கடமையை நாம் உணராததேயாகும். சில தொழிலாளர்களுக்கும், திண்டப்படாதார்களுக்கும் சிற்சில விடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெருவாரியான மக்களுக்கு சினிமா, பேசும் படக்காட்சி ஆகாசவாணி முதலிய நவீன சாதனங்களின் மூலம் கல்வி கற்பிக்க நாம் தீவிரமாக முன் வரவேண்டும்.  —S இராமநாதன் M.A.,B.L.,  (1931-ல்ஈரோட்டில் நடைபெற்ற மகாஜன உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கியக் கூட்டத்தில்.)  நான் முதன் முதலிலே கோயம்புத்தூர் மில் ஒன்றிலே 3 அணா கூலிக்கு பங்கா இழுக்கிற வேலைக்குத் தான் போனேன்.  — சின்னப்பத் தேவர் (23-12-1971))  மன நிறைவுக்கு ஒரு வழி. இப்பொழுது உம்மிடம் இருப்பவை எல்லாவற்றையும் நீர் இழந்து விட்டதாக நினைத்துக் கொள்ளும். அவை மீண்டும் கிடைத்து விட்டதாக நினைத்துப் பாரும். உமக்கு உண்மையாகவே மகிழ்ச்சி ஏற்படும்.  — லியோனாட் எம். லியோனாட்  அரசியல் வாதிகளைவிடக் கல்வி நிபுணர்களே அதிகப்படியான பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.  — நொ. து. சுந்தரவடிவேலு (1-12-1960)  வெற்றி என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.  —ஜார்ஜ் பெர்னார்ட்ஷா  சாதாரணமாக நம் வீட்டுக்குச் சும்மா வந்து போகிறவர்களுக்கும் கூட காபி தேயிலை கொடுத்து உபசரிப்பதே இக்காலத்துக்குரிய வழக்கமாய் விட்டது. தேனீர்ப்பான விருந்துகள் (டீ பார்ட்டிகள்) மூலைக்கு மூலை நாள்தோறும் நடைபெறும் காலமாயிருக்கிறது. அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து கரிசன் காலம் முதற்கொண்டு இந்தியாவில் தேயிலை விருத்தியாகிக் கொண்டே வருகிறது. அவர்தம் தூண்டுதலும், முயற்சியும் சேர்ந்து வீடுதோறும் தேனீர்க் குடிப்பது அதிகமாகிவிட்டது. நோயாளிகளுக்கும், கூடக் காப்பியையும், தேனீரையும் நல்ல தாது விருத்திக்குரிய ஆகாரம் என்று எண்ணிக் கொண்டு, குடிக்கும்படியான காலமும் வந்துவிட்டது. ஆனாலும், காப்பி, தேனிர், கொக்கோ முதலிய பானங்கள் எல்லாம் உடல் நலத்தைக் கெடுப்பவை என்று தீர்மானமாய்ச் சொல்லுவேன்.  — காந்தி (1927)  நிரந்தரமாய் அமைக்கப் பெற்றிருக்கும் சேனையின் அபாரமான செலவினால் இந்தியா உண்மையில் தரித்திர தசையை அடைந்திருக்கிறது. விரைவிலோ, நாட்கழித்தோ இப்பெரிய செலவு தேசத்தையோ அரசாங்கத்தையோ அழித்துவிடும். இப்பொழுது வாலண்டியர்களைச் சேர்த்து யுத்தப் பயிற்சி கொடுத்தால், தாங்க முடியாத இராணுவச் செலவைக் குறைப்பதுடன், தேச பாதுகாப்பில் தற்போதைய பலத்தைவிட அதிகமாகவும் செய்யக்கூடும்.  —ராஜா ராம்பல் சிங்கு  (1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)  சின்னஞ்சிறு வயதிலேயே நான் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கையிலே எனது வாத்தியார் எனக்கு வெகு அருமையான செய்திகளைக் கற்றுக் கொடுத்தார். அவைகளை ஒரு நாளும் மறக்காமல் நினைவிலே வைத்துக் கொண்டே இருப்பேன். நானும் என்னேடு வாசித்த என் இணைப் பிள்ளைகளும் வாத்தியாரைப் போன்ற அறிவாளி உலகத்திலேயே இல்லை என்று மிகப் பெருமையுடன் பேசிக் கொள்ளுவோம். எங்கள் வாத்தியார் கையில் பிரம்பு இருந்தாலும் அவர் எங்களை அடித்ததில்லை.  — கோவை கிழார் (1951)  எந்தக் காலத்தில், எந்த நாளில், எந்த நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களை மற்றையோரெல்லாம் வணங்கி மரியாதை செய்ய வேண்டுமென்று கட்டு திட்டம் செய்யப்பட்டதோ, அதே காலத்தில், அதே நாளில், அதே நிமிஷத்தில் இந்த நாட்டின் வீழ்ச்சியும், இந்திய நாட்டின் அடிமைத்தனமும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டது என்று நான் அபிப்பிராயப் படுகிறேன்.  — சர். கே. வி. ரெட்டி (15-4-1927)  (கோவையில், மூன்றாவது அகில இந்திய தாயுடுமார் மாநாட்டில் பேசியது.)  என்னைக் கவி அரங்க நிகழ்ச்சிகளுக்கோ, இலக்கியக் கூட்டங்களுக்கோ இசை நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திரையுலக விழாக்களுக்கோ தலைமை வகிக்கவோ, துவக்கி வைக்கவோ அழைக்கும்போது எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்வேன். பணத்துக்குத் துதி பாடும் மக்களின் அறியாமையையும் முகஸ்துதியையும் எண்ணிப் பார்ப்பேன். உருதுக் கவிதைகளும், இசையும் எனக்கு உயிர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இதைப் போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கிறார்கள்.  — ஹாஜி மஸ்தான் (1975)  (கடத்தல்காரர்)                                                            பக்கம் 111-120   கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோ தான் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள். —நடிகை செளகார் ஜானகி  அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் நான் துணைப் பேராசிரியர்தான். சிலர் என் பெயருடன் பேராசிரியர் எனப் போட்டு விளம்பரம் செய்துவிடுகிறார்கள். நான் பலமுறை வேண்டாம் கூறியிருக்கிறேன். பட்டதாரி கதை எழுதுகிறான் என்று தெரியப்படுத்திக் கொள்வதை அவர்கள் பெருமையாக நினைக்கும்பொழுது நான் தடுக்க முடியுமா?  — ஏ. எஸ். பிரகாசம்  (கதாசிரியர்-டைரக்டர்)  நான் பதவி மீது ஆசை வைத்ததில்லை. ஆசையிருந்திருக்குமானால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மததிரிப் பதவியை வகித்திருக்கக் கூடும். எர்ஸ்கின் பிரபு சென்னை கவர்னராக இருந்தபோது எனக்கு அழைப்பு அனுப்பி மந்தரிப் பதவியை ஏற்குமாறு வேண்டிக் கொண்டார். இரண்டு மணி நேரத்தில் பதில் அளிப்பதாகச் சொல்லிவிட்டு வந்து முக்கியமான ஒருவரிடம் கலந்தாலோசித்து மீண்டும் கவர்னரைப் பார்த்து மற்ற மந்திரிகளையும் நியமிக்கும் அதிகாரம் எனக்களித்தால் நான் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுவதாகச் சொன்னேன். அதை அவர்னர் ஒப்புக் கொள்ள மறுக்கவே நானும் மறுத்துவிட்டேன். எனக்கு வெறும் பதவிதான் குறிக்கோள் என்றால் நான் அப்படிச் சொல்லியிருக்கத் தேவை இல்லை.  —டாக்டர் P. வரதராஜூலு நாயுடு (1-6-1947)  (தமது 60-ஆம் ஆண்டு விழாவில்)  இந்தியக் காங்கிரஸ் ஐக்கிய இந்தியாவின் காங்கிரஸ், இந்துக்களும், முகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும், பார்சிகளும், சீக்கர்களும், சமூக வாழ்க்கையின் ஆசார சீர்திருத்தம் செய்வோரும், செய்யாதாரும் இதில் கலந்திருக்கிரறோம். நம் யாவருக்கும் பொதுவான சுதந்தரங்களும் கஷ்டங்களும் இருக்கின்றனவென்பதை அறிந்து கொள்வதற்கே நாம் இங்குக் கூடியிருக்கிறோம். நம் சுதந்தரங்களை விர்த்தி செய்வதற்கும் இடுக்கண்களைக் குறைப்பதற்கும் காங்கிரசை நாம் கூட்டியிருக்கிரறோம்.  —சுரேந்திரநாத் பானர்ஜி  (1885ல் புனாவில் நடைபெற்ற 11-வது காங்கிரஸ் மாநாட்டில்)  சமையல் ஒரு கலை. நான் மிகக்குறுகிய காலத்தில் சமையல் செய்யத் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் சமைத்த சாப்பாட்டைவிட நானே சமைக்கும் சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.  —பக்தவத்சலம் (8-12-1962)  கலை, மழையைப் போன்றது. வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை. ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அது போலத்தான் கலையும்.  —எம். ஜி. ஆர் (10-3-1962)  ஒரு பேராசின் துணையைப் பெற்றுப் போர் புரிதல், அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அரசாட்சிக்குச் செல்லும் வழி என்று சிலர் கூறுகின்றனர். அவ்வழிகள் தேசமக்கட்கும். பொருளுக்கும் அழிவும் கேடும் விளைவிப்பவை. நம் காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை. நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால், அவ்வழிகள் தாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும் நம் தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவை என நாம் தள்ளி விடுவோமாக.  —வ. உ. சி.  ஆங்கிலேயர் சுமார் 300 வருஷங்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்தபொழுது நம் கைத்தொழில் முன் போலவே சிறப்பாக நடந்து வந்தது. 1602 - ஆம் வருஷம் காப்டன் லங்காஸ்டர் துரை 20 கஜமுள்ள டாக்கா மஸ்லின் துணியைக் கைக்குட்டை போல் மடித்துத் தம் மகாராணி எலிசபெத் அம்மைக்குக் காணிக்கையாக அனுப்பியிருக்கிறார். இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு இது ஞாபகத்திலிருக்கிறது. ஏனெனில் நான் லண்டனிலிருந்தபோது, என்னிடம் ஆங்கில நண்பர்கள் ‘அழகான டாக்கா மஸ்லின் உன்னிடம் இருக்க வேண்டுமே அதைக் காட்டு’ என்றார்கள். என்னுடைய அறியாமைக்காக விசனப்பட்டேன்.  —டாக்டர் திருமதி அருள்மணி பிச்சமுத்து  (1930-ல், தூத்துக்குடி கதர்க் காட்சியைத் திறந்து வைத்த போது பேசியது.)  நான் முதலில் நாடகத்தில்தான் நடிக்க வந்தேன். என்றாலும், அப்பொழுது அதை நான் தொழிலாக மேற்கொள்ளவில்லை. மேலும் என் தகப்பனாருக்கு நாடகம் என்றாலே பிடிக்காது. நாடகம் சம்பந்தமாக நோட்டிசுகளைக் கையில் கண்டாலும் அவருக்குக் கோபம் வந்துவிடும். அப்படியிருந்தும் நான் அவருடைய செல்லப்பிள்ளை என்ற காரணத்தால் சிலசமயம் விட்டுக் கொடுப்பார்.  —தியாகராஜ பாகவதர் (14 - 1 - 1950)  பள்ளி நேரம் தவிர்த்த நேரங்களில் நான் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒரு புத்தக பைண்டர் வீட்டில் போய் அவர் செய்யும் வேலைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். கூடமாட உதவி செய்வேன்; பைண்டிங் செய்ய கற்றுக்கொண்டு நானே பைண்ட் செய்யவும் ஆரம்பித்தேன். முதன்முதலாக ஒரு புத்தகத்தை பைண்ட் செய்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிச்கு ஈடுகிடையாது.  —நா.மகாலிங்கம் (1 - 1 - 1975)  (தொழிலதிபர்)  தோழர்களே! ”தீண்டாமை விலக்கு” என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள்; மூடபக்தியால் வரும் கேட்டைத் தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள். சேரிக் குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள், தெருக்களைப் பெருக்குங்கள். ”குடியரசு” ”தமிழன்” ”சண்டமாருதம்” முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வகிக்கச் சொல்லுங்கள். மந்திர தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்துவரும் உபாயங்கள், நீங்கள் அவர்கள் கண்களைத் திறகச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும் சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதைவிட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா?  —மா. சிங்காரவேலு பி.ஏ. பி. எல்;  (1932-ல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்)  நான் எப்போதும் எதிலும் அவசரப்படாதவன். நான் பிறக்கும்போதுகூட அவசரப்படாதவன் என்று என் பெற்றோர்கள் சொல்லுவார்கள். என் தாயாருக்கு இடுப்பு வலி மூன்று நாட்களாக இருந்தும், மூன்று நாட்களுக்குப் பிறகு தான் நான் பிறந்தேன்.  —அறிஞர் அண்ணா (11-1-1967)  என்னிடம் நிறைந்த நினைவாற்றல் இருப்பது கண்டு அட்டாவதானி இராமலிங்கம செட்டியார் அவர்கள் அட்டாவதானப் பயிற்சியும், அதன் முறைகளும் சொல்லி வைத்தார்கள். 1953-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி என்னுடைய ஊராகிய சாலிச் சந்தைக்கு 5 மைல் தொலைவிலுள்ள அத்திப்பட்டி என்னும் ஊரில் எனது அட்டாவதான நிகழ்ச்சி முதன் முதல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  —திருக்குறள் தசாவதானி பெ.இராமையா(30-1-1976)  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி சங்கீதத்திற்கும் பொருந்தும். சிவாலயத்திற்கு முன்னல் இருந்து நந்தனார் கைகூப்பித் தொழும்போது பக்தி வெள்ளத்தினால் இயற்கையாகவே பண்ணும் பாட்டும் ஊற்றெடுத்துப் பெருகுவதுபோலப் பெருகும். அவ்விடத்தில் பக்திரசமான பாட்டுக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாடக்கூடும். அதைவிட்டு நந்தனார் வேதியரிடத்தில் உத்தரவு கேட்பதும், வேதியர் அவருக்கு விடை கொடுப்பதும் பாட்டாகப் பாடினல் நாமும், நம் நாட்டு நாடகதிலே இன்னும் இப்படி இருக்கிறதே என்று ஒப்பாரிப் பாடிப் புலம்பவேண்டியிருக்கிறது. நந்தனர் சரித்திரம் மட்டும் இப்படி நடிப்பதாக நான் சொல்லவில்லை. அநேக நாடக சபைகளில் ’எல்லப்பச் செட்டி லெக்க ஏகலெக்க’ என்றபடி எல்லா நாடகங்களும் இவ்விதமாகத்தான் நடிக்கப்படுகின்றன. ’தருக்கம்’ ‘ஸ்பெஷல்’ என்று விளம்பரம் செய்யும் நாடக சபைகள் எத்தனையோ இருக்கின்றன. இவ்விதமான குறைகளை நீக்குவதற்கு தனலட்சுமி விலாச சபையாரைப் போன்ற சில கெளரவ சபையார் முன் வந்திருப்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.  —எஸ். எஸ். அருணகிரிநாத முதலியார் (1919)  (சென்னை புரசைத் தனலட்சுமி விலாச சமாஜத்தில்)  சினிமா என்றால் இப்போது பேச்சும் பாட்டும் கலந்த திரைப்படத்தைத்தான் குறிக்கும். நம் நாட்டில் அது ஒரு காலத்தில் பேசாத படமாக, வெறும் நிழலாட்டம் போல இருந்து பேசும் சக்தியைப் பெற்ற வருடம் 1931. அந்த வருடத்திலேதான் முதன் முதலில் இந்தி பேசும் ”ஆலம் ஆரா” என்னும் படமும், தமிழ் பேசும் ”காளிதாஸ்” என்ற படமும் வெளியாயின. அந்த முதல் தமிழ்ப்படமான ”காளிதாஸ்” கதையில் நடிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பற்றி நான் பெருமைப்படுகிறேன்.  —டி. பி. ராஜலட்சுமி (1-1-1957)  இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது.  —கவிஞர் சுரதா (10-3-1958)  எனது முதுமைப் பருவம் வரை அவருடன் நான் வாழ்ந்திருக்கமுடியும் என்றும், அவருடனேயே எங்கள் குழந்தைகளும் பெரியவர்களாக வளருவதைப் பார்க்கமுடியும் என்றும் நான் கனவு காண்பது அளவுக்குமீறிய ஆசை என்பதை நான் உணராமல் போய்விட்டேன்.  —ஜாக்குலின் கென்னடி (22-11-1964)  (அமெரிக்க ஜனதிபதியும், தனது கணவருமான கென்னடியின் முதலாவது நினைவு நாள் கூட்டத்தில்.)  தவனை முறையை நாங்கள் கொண்டுவர முதலில் எங்களைத் தூண்டியது ஒரு கடிகார விற்பனைதான். செக்கோஸ்லேவிய கடிகாரமான அதை 16 ரூபாய்க்குகூட, எங்களிடமிருந்து மக்களால் வாங்க முடியவில்லை. பிறகு முதலில் நாலு ரூபாய் கொடுத்து, மீதியைத் தவணையில் கொடுக்கும்படி செய்தோம். தவணை முறை வேலை ஆரம்பமான கதை இதுதான்.  —வி. ஜி. சந்தோஷம் (15-1-1975)  (தொழிலதிபர்)  எனக்கு வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடியே நன்றாக அமைந்திருக்கிறது. எனக்கு வீடு, ஒரு மகன், கணவர், என் தொழில் எல்லாமே மனசுக்குப் பிடித்தபடி அமைந்திருக்கிறது. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் ஆசைப்பட்டது கிடைத்திருக்கிறது.  —சர்மிளா டாகூர் (15-12-1974)  (பிரபல இந்தி நடிகை)  ஒருவன் இறக்கும்போது கூறுவது எல்லாம் உண்மையாகவே இருக்கும். அதனால்தான் மரணவாக்கு மூலம் என்று வாங்குகிறார்கள்.  —பெரியார் (13-7-1961)  புதியவர்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவேண்டும். பாட்டெழுதும் திறமை நம் நாட்டுப்பெண்களில் பலருக்கு இருப்பதால், அவர்களையும் இத்துறையில் ஈடுபடச் செய்ய வேண்டும். குறிப்பாக, மதுரை தியாகராயா கல்லூரி, மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைத் தமிழ் மாணவர் மன்றம் போன்ற இடங்களில் இருந்து, திரைப்பாடல் எழுதுவதற்குத் தமிழ் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாடலுக்கும், நம் நாட்டுக்கும் புதிய சக்தியை ஊட்டவேண்டும்.  —கவிஞர் சுரதா (10-3-1958)  நாடகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிற்சி கொடுக்கும் வகையில் கல்லூரிப் பாடத்திட்டம் அமையவேண்டும். அனைத்துலகிலும் தமிழ் நாடகத்திற்கு ஈடில்லை என்று தமிழன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை வருவதற்கான வழி வகைகளை அரசும் கலைஞர்களும் இணைந்து காண வேண்டும். இதுவே எனது ஆவல்.  — -தி. க. சண்முகம் (18-4-1972)  (நாடகக் கலைஞர்)  என்னைக் காந்தி என்று நான் உங்களில் யாரையும் அழைக்கச் சொல்லவில்லை! என்னை அறிஞனாக உங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை! அன்பு மிகுதியால் தம்பிமார்கள் அவரவர் இஷ்டம் போல் என்னை அழைக்கின்ற அன்பு மொழியாகவே இவற்றை எல்லாம் நான் கருதுகிறேன்.  —அறிஞர் அண்ணா (1967)  (திருச்சி பொதுக்கூட்டத்தில்)  இளமையில் கோழி வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. என் தாய் பலரகமான கோழிகளை வாங்கியளித்துப் பராமரிக்கக் கற்பித்து உற்சாக மூட்டி வந்தார்கள். மாதத் தொடக்கத்தில் தாயுடன் கடை வீதிக்குச் சென்று கோழிகளுக்கு வேண்டிய இரை வாங்கி வருவேன். முட்டைகளை விற்றுக் கணக்கு வைத்திருப்பேன். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இதன் லாப நஷ்டக் கணக்கைத் தாய்க்கு அறிவிப்பேன். லாபத் தொகை தனியாக வைக்கப்பட்டு ஏதேனும் நல்ல காரியக்கிற்காகச் செலவிடப்படும். ஏழைப் பையன் ஒருவனின் பள்ளிச் சம்பளமாகவும் இது பயன்படுவதுண்டு.  —டாக்டர் ஜே. சி. குமரப்பா  நான் மேல் நாடுகள் சொல்லுவதற்கு முன் அங்கெல்லாம் நம்முடைய நாகரிகத்தைப் பற்றிக் கேவலமாகச் பேசுவார்கள், நம் நடனத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அங்குச் சென்ற எனக்கு என் எண்ணம் தவறானது என்று தெரிந்தது. பதினாறு முழம் சேலையும், நீண்ட கூந்தலும் அவர்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணும் என்று எண்ணிய என்னை அவர்கள் ஏமாற்றி விட்டனர். சேலைகளையம், நீண்ட கூந்தலையும் வரவேற்றனர். அவர்கள் சேலைமீது கொண்ட மோகத்தினால் என் சேலைகள் சிலவற்றைப் பரிசாக வாங்கிச் சென்றனர். நீண்ட கூந்தலிலிருந்த கொஞ்சம் சாம்பிள் கத்தரித்துக் கொண்டு போனார்கள்.  —நடிகை வசுந்தராதேவி (1950)  கவிஞர் பாடும் பாட்டை ரசிகர்கள் கேட்டு கை தட்டுவதோடு மட்டும் நிற்காமல், விருப்பமான காசுகளைப் போட வேண்டும். கவிதை வளர்ச்சிக்கு இது ஒரு தூண்டு கோலாக இருப்பதோடு, மக்களுக்குக் கவிதையின் மேல் காதல் ஏற்படும். இது வேடிக்கையல்ல. இனி வாடிக்கையாக இம்முறையை மேற்கொள்ள வேண்டும்.  —கவிஞர் சுரதா (9-7-1971)    எனக்கு எதாவது பொதுநிகழ்ச்சிகள் நினைவுக்கு வருமானால், புத்தர் இரவோடு மனைவியையும் பதவியையும் துறந்து வீட்டை விட்டுச் சென்றதும், ஏசுநாதர் தோளில் சிலுவை சுமந்து போனதும்தான் நினைவுக்கு வரும். இதை நான் கூற காரணம், பலர் எனக்கு மார்க்கத்தில் பற்று இல்லை என்று எண்ணுகிறார்கள். இந்தச் சம்பவங்களில் பற்று வைப்பவன் மார்க்கவாதி என்றால் நானும் மார்க்கவாதிதான்.  — அறிஞர் அண்ணா  ஒரு படம் வெளி வந்தால், உடனே அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றித் தமிழ் பயிலும் மாணவர்களும், முதிர்ந்த புலவர்களும், அப்பாடல்களைப் பற்றி விளக்கம் எழுதிச் சிறுசிறு புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபடு வார்களானல், அதன் மூலம் மக்களுக்கு விமரிசன வளர்ச்சி ஏற்படும்.  — கவிஞர் சுரதா (10.3-1958)  இன்று கச்சேரி செய்வது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனல் நாங்கள் ஆரம்பித்த காலத்தில், உயர்குலப் பெண்கள் எல்லாம் செய்யக்கூடாத காரியம் இது என்றே கருதப்பட்டது. இந்த கலைக்கு உள்ள இந்தப் பெயரை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடேயே நாங்கள் முழுதாகப் பாடுபட்டோம்.  — டி. கே. பட்டம்மாள்  நம் நாட்டிலே படித்துப் பட்டம் பெற்றவர்களின் தொகை அதிகமாக இருக்கிறது. அவர்களினால் எந்தப் பயனும் இல்லை பட்டம் பெறுவோர்க்குத் தங்களுடைய தொழிற்சாகைளில் தாங்களே நேரடியாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. படித்துவிட்டுப் பட்டம் பெற்ற பெருமையோடு வேலையில்லாமல் இருப்பவர்களே தவிர, தொழிற்சாலைகளில் உழைக்கும் உளளம் அவர்களுக்கு உண்டாவதில்லை.  — தொழிலதிபர் நா. மகாலிங்கம்  நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது.  — தொழிலதிபர் ஹென்றி போர்டு  எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார்.  — நேரு  இந்தியாவிலுள்ள தாழ்ந்த வகுப்பார்களெல்லாம் எனது குடும்பத்தினரே. கடந்த ஆறு ஆண்டுகளாக எனது மனைவி மக்களையோ, உறவினர்களையோ முற்றிலும் மறந்து விட்டேனென்பதை நீங்கள் அறியவேண்டும். ஒரு தினத்தில் ஒருமணி நேரமாவது நான் அவர்களோடு சகவாசமாய் இருந்தது கிடையாது. இதிலிருந்து எனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு நீங்கள் ஊகிக்கலாம். இது முற்றிலும் உண்மை என்பதையும், குடும்ப பராமரிப்பை உத்தேசித்துக் கட்டாயம் நடத்தவேண்டிய தொழிலையல்லாது. நான் ஆற்றவேண்டிய கடமைகள் பல உளவென்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.  —டாக்டர் அம்பேத்கார் (4-3-1932)  பக்கம் 121-128   முதல் தாரம் தப்பிப் போகவே என் தகப்பனர் இரண்டாம் தாரமாக வயது வந்த ஒருபெண்ணை விவாகம் செய்து கொள்ள விரும்பினார். அன்றியும் அப்பெண் சிவப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்று கூறினாராம். அப்படிப்பட்ட பெண்ணாகக் கிடைக்கவே என் தாயாரை விவாகம் செய்து கொள்ள நிச்சயித்தாராம். இவ்விவாகத்துக்கு இடையூறாக ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது. அதாவது அக்காலத்திய வழக்கத்தின்படி கலியாணப் பெண்ணின் ஜாதகத்தை வரவழைத்துச் சென்னையிலுள்ள இரண்டு மூன்று பெரிய ஜாதகத்தில் நிபுணர்களாகிய ஜோதிடர்களுக்குக் காட்ட, அவர்களெல்லாம் இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு குறைகள் இருக்கின்றன. ஒன்று அமங்கலியாய்ப் போவாள். இரண்டு, குழந்தைகள் பெறமாட்டாள். இதற்குக் கழுத்துப் பொருத்தமில்லை வயிற்றுப் பொருத்தமில்லை என்று சொன்னார்களாம். இதைக் கேட்டும் என் தாயாரையே மணக்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாய் மணம் செய்து கொண்டார். கழுத்துப் பொருத்தமில்லை என்றதற்கு நேர்விரோதமாக என் தாயார் என் தகப்பனுருக்கு ஷஷ்டி பூர்த்தி-அதாவது அறுபது வயது கலியாணம் ஆனபிறகு, ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கல்யங்களுடன் சுமங்கலியாகச் சொர்க்கம் சென்றனர். வயிற்றுப் பொருத்தமில்லை என்றதற்கு நேர் விரோதமாக என் தாயாருக்கு நாங்கள் எட்டு மக்கள் பிறந்தோம். நான்கு பிள்ளைகள், நான்கு பெண்கள். அதன் பிறகு எங்கள் விவாகத்திற்கெல்லாம் யாராவது எங்கள் ஜாதகத்தைக் கேட்டால் மேற்கண்ட கதையைச் சொல்லி ஜாதகமே வைப்பதில்லை என்று சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன். — நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்  நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள்.  —சாக்ரடிஸ் (கிரேக்க அறிஞர்)  நண்பனே நான் இறந்துவிட்டால், எனக்காகத் துக்கப் பாடல்களைப் பாடவேண்டாம். என் கல்லறை மீது ரோஜா செடி வேண்டாம். நிழல்தரும் மரங்களையும் நடவேண்டாம். ஆனால் பச்சைப் புல்லைப் பயிரிடுங்கள். அதன் பசுமை தங்களுக்கு என்னை ஞாபகப்படுத்தட்டும்.  — கிறிஸ்டியா தாருஸ்லெட்டி  நான் இயற்கையின் வரப்பிரசாதம் பெற்றவன் என்று இங்கே பாராட்டினார்கள். அப்படி நான் எண்ணவில்லை. உங்களில் ஒருவனாகவே நானும் பிறந்தேன். நாம் சொற்களிலும், வண்ணங்களிலும், இசையிலும், கலாசாரத்திலும், போற்றிப் புகழுகிறோமே அந்த இயற்கை, என் கனவுகளில் இல்லை! நாம் வியந்து போற்றும் அவ்வியற்கை, தனது வெப்பத்தாலும், வெள்ளத்தாலும். பூகம்பத்தாலும் வியாதியாலும் நம்மை வதைக்கிறது. இயற்கையில் குடி கொண்டிருக்கும் நமது எதிரிகள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். அப்படியானால், நான் இயற்கையின் அருள் பெற்றவன் என்று கூறமாட்டிர்கள்! பார்லி பயிரில் கூட அழகிய புல்லுருவிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள்.  —மாக்ஸிம் கார்க்கி  (1928-ல் திமிலிஸி நகரில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்)  என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.  —ஆபிரகாம் லிங்கன்  (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)  அரசியல் பாரம்பரியம் இருந்துதான் தீரவேண்டும் என்பதில்லை. ஒரு வகைக்கு அது இல்லாமல் இருப்பதுதான் நல்லது.  —ஈ. வி. கே. சம்பத் (1-9-1974)  உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.  —லார்டு மெக்காலே  (உலகப் புகழ்பெற்ற மேதை)  எனக்கு ஒரு தலைப்புத் தந்தால், அதை நான் இரவும், பகலும் ஆழ்ந்து படித்து விடுவேன். என் உள்ளமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். பிறகு என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து அனைவரும் ‘அறிவுப்பழம்’ என்று பாராட்டுவார்கள் ஆனால் அது அறிவின் பழமல்ல, உழைப்பிற்கும் சிந்தனைக்கும் விளைந்த கனியாகும்,  —எமில்டன்  (புகழ்பெற்ற பேச்சாளர்)  நான் எந்த மேடையிலும், எந்தச் சமயத்திலும் மனச் சோர்வடைவதில்லை; ஒரு காரியத்தைச் சாதிக்க முதலாவது வேண்டப்படுவது கடினமான உழைப்பு; இரண்டாவது தொடர்ந்து படித்தல்; மூன்றாவது பகுத்தறிவு.  —தாமஸ் ஆல்வா எடிசன்  (உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி)  நான் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நான்தான் மிக இளைய அங்கத்தினர் என்று உணர்ந்து கொண்டேன். அனுபவமற்ற, மற்ற இளைஞர்களைப் போல், “பேசுவதெப்படி?” என்பதை அறியாமல் திணறினேன். திக்குமுக்காடினேன். என் இளம் பருவத்தில், என் திறமைகளில் நம்பிக்கையற்றும், பேச தடுமாற்றமடைந்து கொண்டுமிருந்தேன். என் உள்ளத்தையும், ஆத்மாவையும் மிகுந்த அக்கறையோடு பண்படுத்திக் கொண்டேன்.  —ரூஸ்வெல்ட்  (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)  அந்தக் காலத்தில் நான் படித்த புத்தகங்களுள் என்னுடைய நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் ஒழுங்கு படுத்தியது பிர்டெளசி என்பவர் எழுதிய ஷானாமாவைத் தவிர, ஸொரோஸ்ட்ரியர்களுடைய கடமைகள் என்னும் குஜராத்தி புத்தகமுமேயாகும். மனம், வாக்கு, செய்கை ஆகிய இவைகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே நான் அவைகளிலிருந்து அறிந்து கொண்ட கற்பனைகளாகும். ஆனால் நான் அதிகமாய்ப் படித்து மகிழ்ச்சியடைந்தது ஆங்கில நூல்களே. வாட் என்பவர் எழுதியுள்ள ‘மன வளர்ச்சி’ என்னும் நூலைப் படித்ததில், எப்படி எழுதவேண்டும், எழுதுவதில் நடை எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கிற்று. அதாவது, ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் தேவையில்லாமல் பல சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, தெளிவாக எழுதுவது ஆகிய இவைகளே.  —தாதாபாய் நெளரோஜி (1904)  (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)  கடவுளைக் காரணமாக வைத்து இராசகோபாலன் என்று பெற்றாேர் எனக்குப் பெயரிட்டனர். நானோ, பாரதிதாசன் என்னும் கனக சுப்பு ரத்தினத்தைக் காரணமாக வைத்து சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டேன். இந்த நீண்ட பெயரை என் நண்பர்கள் யாரும் சுருக்கவில்லை. நானே சுரதா என்று சுருக்கிவைத்துக் கொண்டேன்.  —கவிஞர் சுரதா (10-3-1958)    கடவுளின் படைப்பில், முட்டை ஒன்றுதான் கலப்படம் செய்ய முடியாத ஒரு உணவு. அதற்கு அத்தகைய மூடி ஒன்று அமைந்திருக்கிறது,  — கிருஷ்ணப்பா (11-1-1958)  (யூனியன் உதவி உணவு அமைச்சர்)  1907-ஆம் ஆண்டு புதுச்சேரியில் கவி சுப்பிரமணிய பாரதியார் வீட்டில் என் அரசியல் வாழ்வு தொடங்கியது. அப்போது என் உடம்பிலிருந்த ரத்தத்தை எடுத்து ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டேன். அன்றைய தினம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அழித்தே தீரவேண்டுமென்று வைராக்கியம் செய்து கொண்டேன். அந்தக் கொள்கையிலிருந்து இதுநாள் வரையிலும் நான் நழுவியதே கிடையாது. அதுவே எனது ஒரே நோக்கமாகவும் இருந்திருக்கிறது.  —டாக்டர் P. வரதராசுலு நாயுடு (1-6-1947)  (தமது அறுபதாம் ஆண்டு விழாவில்)  தலைவலிக்கேகூட பல்வேறு மாருந்துகள் உண்டு. சில எரிச்சல் தரும்; சில குளிர்ச்சியாய் இருக்கும். மருந்து தடவுவதிலும் பலவகை உண்டே! வேண்டியவர்கள் தடவினால் வலியெல்லாம் பறந்துபோகும்! வேறு யாராவது தடவினால், பழைய வலியே பரவாயில்லை’ என்று சொல்லத் தோன்றும். என்னுடைய முறை, வலி பறந்து போகிற மாதிரி மெல்லத் தேய்க்கிற முறை!  —அறிஞர் அண்ணா (7-3-1967)  1865-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் நாள் சாயங்காலம், புகழ்பெற்ற காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரது பள்ளிக்கூட சபா மண்டபத்தில் கூடியசபைக்கு யானும் போயிருந்தேன். அவ்விடத்தில் அநேக கனவான்களும் பண்டிதரும் கூடி, சில நாளைக்குமுன் பெங்களூரில் ஒரு பிராம்மண சிரேஷ்டர் குடும்பத்தில் நடந்த புநர் விவாகத்தின் யுக்தா யுக்த முதலாகிய விஷயங்களைக் குறித்துப் பிரசங்கம் நடந்து கொண்டிருக்கப்பட்ட சமயத்தில், எனது புல்லறிவுக் கெட்டியிருக்கிற சங்கதிகளையும் அபிப்பிராயங்களையும் நான் அவ்விடத்தில் எடுத்துப் பேசமுடியாமல் போய்விட்டது.  சைதாபுரம் காசி விசுவநாத முதலியார் (1870)  நான் சிறு பையனாய் இருந்தபொழுது சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் குடிப்பது வழக்கம். ஒரு நாள் வீட்டில் சாராயம் இல்லை. எதிரிலிருந்த கடையில் போய்க் குடித்து வரும்படி என்னை அனுப்பினார்கள். எனக்கு அப்பொழுது அங்கே போனதில் ஏற்பட்ட அவமானத்தையும் வெட்கத்தையும், ஒரு பொழுதும் மறக்க முடியாது. அது போதும் போதுமென்று ஆய்விட்டது. பிற்பாடு சாராயக் கடையில் நான் கால் வைத்ததே கிடையாது.  —தாதாபாய் நெளரோஜி (1904)  (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)  நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வந்தேன். எனக்கு இஷ்டம் இருக்கிறதோ இல்லையோ சும்மா இருக்கமாட்டார்கள் என் அம்மா. என் தலையில் எண்ணெயைக் கொட்டிவிடுவார்கள்.அதனால் அப்போதெல்லாம் சரியாகவே தலைமுழுகி வந்தேன். ஆனால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்ட பிறகு, அப்படி முடியவில்லை.  —அறிஞர் அண்ணா (19-2-1966)  உயர்சாதிக்காரர்களே உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் நீங்கள் மாறவில்லையானல், எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் புத்த மதத்தில் சேரவேண்டிய நிலை ஏற்படும். என்னப் பொறுத்த வரையில் நான் புத்தமதத்தில் சேர வேண்டிய உரிய நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  —பசவலிங்கப்பா (1973)  எழுத்தாளர் உலகில் நான் யாரையும் விரோதித்துக் கொள்வதில்லை. என்னை யாராவது விரோதி என்று எண்ணிக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நான் என்ன செய்வது?  —கல்கி  இப்பொழுது இளைஞர்களாய் இருப்பவர்கள்தான் நாளை பெரியோர்களாக வேண்டியவர்கள். இவர்கள்தான் இன்னும் சிலவாண்டுகளுள் நாட்டை ஆளப் போகிறவர்கள். தலைவர்களாய்த் திகழப் போகிறவர்கள். கண்ணாடி தன்னை நோக்குவார் யாரோ,அவர்தம் முகத்தைக் கள்ளங்கபடின்றிக் காட்டுகின்றது. அத்தன்மைத்தேதான் இளைஞர்களும், அவர்களை நல்வழியில் திருப்ப வேணடுமென்றால் திருப்பலாம். தீயவழியில் திருப்ப வேண்டுமென்றால் திருப்பலாம்.அவர்களை அடிமை வாழ்க்கையில் அமிழ்த்த வேண்டுமென்றால் அமிழ்த்தலாம். விடுதலை வழியில் புகுத்த வேண்டுமென்றால் புகுத்தலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த நெப்போலியன் அறிவுள்ளவனானான். வீரன்னான், ஆனால் அவன் அண்ணன் ஜோசப்போ, கோழையானான். மூடளனான். காரணம் எண்ன? நெப்போலியன் கருப்பத்திலிருந்த காலத்து அவன் தாயார் வீரத்திறன் நிகழ்ச்சிகளைப் படித்து, அவ்வீரத்திறனைக் கருப்பத்திலிருந்த நெப்போலியனுக்கு ஏற்றினாள். ஆனால் ஜோசப் கருப்பத்திலிருந்த காலத்திலோ அவள் சோம்பேறியாய் இருந்தாள். ஆகையினாற்றான் நெப்போலியனுக்கும், ஜோசப்புக்கும் அத்துணை வேற்றுமை.  —ஜே. எஸ். கண்ணப்பர் (8-5-1927)  (மாயவரம் இளைஞர் மாநாட்டில்)  என் தாய் நிரம்ப தெய்வபக்தி உள்ளவர்கள் அமெரிக்கர்கள் சந்திரனில்போய் இறங்கிய செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கக் கேட்டு மிகவும் கவலைப்பட்டுப் போனார்கள். என்னைக் கூப்பிட்டு “தம்பி நாம் வணங்கும் சந்திரனை, ஈஸ்வரன் தலையில் உள்ள சந்திரனை,அமெரிக்கர்கள் பூட்ஸ்காலால் மிதித்து விட்டார்களே!” என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த என்னால் முடியவில்லை.  —தொழிலதிபர் நா.மகாலிங்கம்  நான் சிறு பையனாக இருந்தபோது ‘கிரிக்கெட்’ விளையாடுவேன். அவ்விளையாட்டில் மிகவும் கெட்டிக்காரன் என்று எனக்குப் பெயரும் உண்டு. நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, வெயிலைக்கூட கவனியாமல் மத்யானம் சாப்பாட்டிற்காக விடும் அரைமணி நேரத்தில்கூட நாள்தோறும் விளையாடுவது வழக்கம்.  —தாதாபாய் நெளரோஜி (1901)  (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)  நான் படவுலகில் முன்னுக்கு வர நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளே காரணம். அவர்தான் துணிந்து முதலாவதாகத் தம்முடைய பராசக்தி’ என்ற படத்தில் கதாநாயகனுக நடிக்க என்னை ஏற்பாடு செய்தார். எனக்குக் கூட அவருடைய துணிவுக்குத் தெம்பூட்ட முடியுமா என்ற கவலை உள்ளூர இருந்து வந்தது.  —நடிகர் சிவாஜிகணேசன் (1-1-1957)  ஆங்கிலேயரையடுத்து உறவாடாதிருந்த தமிழ்ச் சிங்கங்கள்; நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்து வீரக் கவிராயர். இவர்கள் கொஞ்சக் காலத்துக்கு முன்தான் தேகவியோகமாயினர். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முனிஷிகளாக இருக்கிறார்கள்.  —டேவிட் ஜோசப் (1897)  (ராஜமந்திரம் கல்லூரிப் பேராசிரியர்)  சமயப் படிப்பை ஆதரிப்பவர்களுள் நான் ஒருவன். டாக்டர் அன்னிபெசன்ட் தோற்றுவித்த கல்வி நிலையங்களில் நான் பயின்றவன். அங்கு சமயப் படிப்பு கட்டாய பாட்மாக இருந்து வந்தது. ஆகையால் சமய அறிவின் அவசியத்தை நான் நன்கறிவேன் இன்றும்அதன்தேவையை உணர்கிறேன்.  -ஸ்ரீபிரகாசா (27-10-1956)  (முன்னாள் தமிழக ஆளுநர்)