[] []                                                                                                                                                             சேக்கிழார்                                                                                      டாக்டர். மா. இராசமாணிக்கனார்  நூல் : சேக்கிழார்  நூல் ஆசிரியர் : டாக்டர்  மா  ராசாமாணிக்கனார்    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.   நூல் மூலம – https://ta.wikisource.org/s/8uy0 நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org Cover image art by : Jagadeeswarann99 cover image source: https://commons.wikimedia.org/wiki/File:Periyapuranam_Author_Sekkizhar.jpg image license : Creative Commons Attribution-Share Alike 4.0 International   பொருளடக்கம் முகவுரை 6  1. தொண்டை நாடு 7  2. குன்றத்தூர் 12  3. சேக்கிழார் பிறப்பு 16  4. கல்வி கற்றல் 19  5. அக்காலச் சைவ சமய நிலை 22  6. அநபாயச் சோழன் 28  7. சேக்கிழார்-முதல் அமைச்சர் 30  8. சேக்கிழார் தல யாத்திரை 34  9. ஜீவக சிந்தாமணி 39  10. சேக்கிழார் அறிவுரை 43  11. பெரிய புராண அரங்கேற்றம் 47  முகவுரை   தமிழ்ப் புலவர் வரலாறுகள் நல்ல ஆராயச்சி முறையைத் தழுவி வெளிவருதல் அருமையாக இருக்கிறது. ஆராய்ச்சிக் காலமாகிய இக்காலத்தில் வெளிவரும் நூல்கள் கல்வெட்டு-சரித்திரம்-இலக்கியம் இவற்றை அடிப் படையாகக் கொண்டு வெளிவருதலே நல்லது. இந்த முறையில் அமைந்திருப்பதே இச்சிறு நூல்.  சேக்கிழார் ஒரு வேளாளர்; தமிழ்ப் புல்வர்; அரசியல் அறிஞர்; கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் பேரரசானாக இருந்த இரண்டாம் குலோத்துங்கனின் முதல் அமைச்சர் ஆவர். அப் பெரியார் நாயன்மார் வரலாறுகளைப் பெருங் காவியமாகப் பாடின. பெரும் புலவர். அக் காவியமே பெரிய புராணம் என்பது.  சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தமையால் ஸ்தல யாத்திரை செய்தார்; நாயன்மார் வரலாறுகள் பற்றிய மூலங்களைச் சேகரித்தார்; கல்வெட்டுகளை ஆராய்ந்தார்; கர்ண பரம்பரைச் செய்திகளை ஆராய்ந் தார்; இலக்கிய நூல்களைப் படித்தார்; இவை அனைத்தின் துணையைக் கொண்டும் அரிய காவியம்பாடினார்.  இச்சிறு நூலில் சேக்கிழார் வரலாறு அவர் அமைச்சராக இருந்தமை அழியாப் புகழ் பெற்ற பெரிய புராணம் பாடினமை என்பன எளிய நடையில் இள மாணவரை உளங்கொண்டு குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ்ப் புலவர் வரலாறும் இவ்வாறு தனித்தனி நூலாக வருதல் தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். திருவருள் துணை கூட்டுமாக ! .    சேக்கிழார் அகம்,                                                                                           மா. இராசமாணிக்கம் சென்னை.    1. தொண்டை நாடு   தமிழகம் தொண்டை நாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அதன் பிற பகுதிகள் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, கொங்கு நாடு என்பன. இந்த எல்லா நாடுகளும் வடக்கே வேங்கட மலைக்கும் தெற்கே குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில் இருப்பவை.  சேர நாடு சேர நாடு என்பது மலையாள மாவட்டங்கள், கொச்சி சமஸ்தானம், திருவாங்கூர் சமஸ்தானம் என்னும் மூன்றும் சேர்ந்த நிலப் பகுதி ஆகும். இது மலை வளம் மிகுதியாக உடையது. இதன் பழைய தலை நகரம் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பன இதன் துறைமுகப் பட்டினங்கள். இந்த நாடு பல நூற்றாண்டுகளாக அகில், சந்தனம், தேக்கு முதலிய மர வகைகளையும், யானைத் தந்தம், மிளகு முதலிய பொருள்களையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இச் சேர நாட்டைச் சேரர் என்பவர் ஆண்டு வந்தனர்.  பாண்டிய நாடு மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களையும் கொண்ட நிலப் பகுதியே பாண்டிய நாடு. இதனில் மலைகள் ஒரளவு உண்டு. இதனில் வையை, தாமிரபரணி என்னும் ஆறுகள் பாய்கின்றன. கொற்கை என்பது சிறந்த துறைமுகப் பட்டினம். அது பல நூற்றாண்டுகளாக முத்து வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற இடம் ஆகும். மதுரை பாண்டிய நாட்டின் தலை நகரம் ஆகும். இந்நாட்டு அரசர் பாண்டியர் எனப்பட்டனர்.  சோழ நாடு இது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியையும் கொண்டது. இது மிகச் சிறந்த சமவெளி, காவிரியாறு தன் கிளையாறுகளுடன் பாய்ந்து, இந்நாட்டைச் செழிப்பாக்கி வருகிறது. தமிழ் நாட்டுப் பகுதிகள் எல்லாவற்றிலும் மிக்க வளமுடைய நாடு இஃது ஒன்றே. எங்குப் பார்ப்பினும் பசிய வயல்களையும், வாழை, தென்னை, மா, பலா முதலிய மரங்களைக் கொண்ட தோட்டங் களையும், தோப்புகளையும் இங்குக் காணலாம் இந் நாடு சோற்றுப் பஞ்சம் இல்லாதது. அதனால் இது, சோழ வளநாடு சோறுடைத்து என்று பாராட்டப்பட்ட நாடாகும். இதன் பழைய தலை நகரங்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் என்பன. நமது சேக்கிழார் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்பது இதன் தலைநகராக இருந்தது. இந் நாட்டை ஆண்டவர் சோழர் எனப்பட்டனர்.  கொங்கு நாடு சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்கள் சேர்ந்த நிலப் பகுதி பழைய காலத்தில் கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது. கொங்கு என்பது ‘பொன்’ என்றும், ‘தேன்’ என்றும் பெயர் பெறும். இந்த நாட்டில் பொன் மிகுதியாகக் கிடைத்தது. இங்கு மலைகள் மிகுதி. ஆதலால் தேனும் மிகுதி உண்டு. கொங்கு நாடு என்பது ‘பொன்னாடு’ எனவும், ‘தேன் நாடு’ எனவும் பொருள் கொள்ளலாம். இந்நாடு சில காலங்களில் சேரர் கைப்படும்; சில சமயங்களில் சோழர் கைப்படும். ஆயினும் இந்த நாட்டைச் சிற்றரசர் பலர் ஆண்டு வந்தனர்.  நடு நாடு நடு நாடு என்பது தென் பெண்ணைக்கும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது. இதில் பொதுசா (புதுச்சேரியின் பழைய பெயர்), மரக்காணம் என்பன துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. இந்நாட்டில் திருக்கோவலூரைச் சுற்றியுள்ள பகுதியை மலையமான்கள் என்பவர் அரசாண்டு. வந்தனர். திருநாவலூரைச் சுற்றியுள்ள பகுதியை ‘முனையரசர்’ என்ற மரபினர் ஆண்டு வந்தனர்.   தொண்டை நாடு சேக்கிழார் பிறந்த தொண்டை நாடு, வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப் பரப்பு ஆகும். இதனில் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களும், தற்போது, ஆந்திரத்திலுள்ள நெல்லூர், சித்துார் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும்.  இந்த நாட்டில் மலைகள் உண்டு. அவை காளத்தி, திருப்பதி, திருத்தணிகை, வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன. இந்த நாட்டில் ஒரு காலத்தில் காடுகள் பல இருந்தன. இந்த உண்மையை ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு முதலிய இக்கால ஊர்ப் பெயர்களைக் கொண்டும் உணரலாம்.  இந்த நாட்டில் பொன் முகலி, பாலாறு, தென் பெண்ணை என்னும் ஆறுகள் பாய்கின்றன. எனினும் பெரும்பாலான நிலப் பகுதிக்கு இந்த ஆறுகள் பயன் தருவது இல்லை. அதனால் ஏரிகளே இங்கு மிகுதி. நிலம் மிக்க வளமுடையது அன்று. தொண்டை நாட்டில் மலைகளையும் சில காடுகளையும் ஒன்றுமே விளையாத பாலை நிலங்களையும் ஆங்காங்குப் பசிய வயல்களையும் காணலாம்.  பெயர்க் காரணங்கள் இந்த நாட்டிற்குத் தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு என்னும் பெயர் எப்படி வந்தது? இதைப் பற்றி அறிஞர் பல விதமாகக் கூறுகின்றனர்.  1. இந்த நாட்டில் முதலில் இருந்தவர் குறும்பர் என்பவர். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வந்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக (மாவட்டங்களாக)ப் பிரித்துக் கொண்டு சுகமாக இருந்தனர். ஆ தொண்ட சக்கரவர்த்தி என்பவன் அவர்களை வென்று இந் நாட்டைக் கைக்கொண்டான். அது முதல் இந்த நாடு அவன் பெயரால் தொண்டை நாடு எனப் பட்டது என்பது ஒரு கொள்கை.  2. தொண்டை என்பது ஒரு வகைக் கொடி. சோழ அரசனுக்கு நாகர் மகள் ஒருத்தி மனைவி. அவள் ஒரு தீவில் இருந்தாள். அவள் தான் பெற்ற ஆண் குழந்தையைத் தொண்டைக் கொடியால் சுற்றிக் கப்பல் மூலமாகச் சோழனுக்கு அனுப்பினாள். தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட அம் மகன் தொண்டைமான் எனப் பெயர் பெற்றான். அவன் சோழப் பிரதிநிதியாக இருந்து இந்த நாட்டை ஆண்டான். அதனால் இந்த நாடு தொண்டை நாடு எனப்பட்டது என்பது மற்றொரு கொள்கை.  கரிகாலன் ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட சோழ அரசருள் மிகச் சிறந்தவன் கரிகாலன். இவன் பல நாடுகளை வென்றவன். இவன் குறும்பரை வென்று தொண்டை நாட்டைக் கைப் பற்றிய முதல் சோழன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவன் தொண்டை நாட்டுக் காடுகளை அழித்து நாடாக்கினான்; வேளாண்மையை வளர்ப்பதற்காக நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றினான்.  கரிகாலனுக்குப் பின் அவன் மரபில் வந்த சோழர் சிலர் தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். அப்பொழுது காஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் தலை நகரமாக இருந்தது. மணிமேகலை என்ற பெண் கோவலன் மகள். அவள் பெளத்த பிக்ஷானி ஆகிக் காஞ்சியில் கோவிலும் மடமும் கட்டினாள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தாள்.  பிறகு இந்த நாடு பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பல்லவர் ஆட்சி ஏறக்குறைய அறுநூறு வருட காலம் இருந்தது[குறிப்பு 1]. அந்தக் காலத்தில் மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. காஞ்சியிலிருந்து மாமல்லபுரம் செல்லச் சிறந்த அகன்ற பாதை ஒன்று இருந்தது. அயல் நாட்டுக் கப்பல்கள் வந்து அங்குத் தங்கிச் சரக்குகளை இறக்குமதி செய்தன. உள்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்தன. மாமல்லபுரம் சிறந்த பெரியபட்டினமாக இருந்தது. அது ‘மாமல்லன்’ என்ற பல்லவ அரசனால் அழகு செய்யப்பட்டதால் “மாமல்லபுரம்” எனப் பெயர் பெற்றது. அப்பெயரே நாளடைவில் சிதைந்து, ‘மகாபலிபுரம் எனப்பட்ட்து.  காஞ்சி இந்த நகரம் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களாகவே சிறப்புப் பெற்ற நகரம் ஆகும். அசோகர் ஒரு பெளத்த ஸ்தூபியை இங்கு எழுப்பினார்; பெளத்த மத போதகரை இங்கு அனுப்பினார். அவர் காலத்தில் இங்கு ஒரு பெளத்த மடம் கட்டப் பட்டது. இங்கு இருந்து சீனம், வட இந்தியா முதலிய இடங்களுக்குப் பெளத்த அறிஞர் பலர் சென்று பெரும் புகழ் பெற்றனர்.  காஞ்சி பழைய காலத்தில் நான்கு சமயங்களுக்குப் பெயர் பெற்ற நகரமாக இருந்தது. அவை சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என்பன. காஞ்சியில் சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அக் கல்லூரியிற் படிப்பதற்காக வட நாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். அக் கல்லூரியில் வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாத்திரங்கள், இலக்கண நூல்கள், தர்க்க நூல்கள் முதலியன போதிக்கப்பட்டன.  பல்லவ மன்னர் பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர்; ஆங்காங்கு இருந்த காடுகளை அழித்துக் ‘காடு வெட்டிகள்’ என்று பெயர்பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர். அவர்கள் தமிழ் - வடமொழி என்னும் இரண்டு மொழிகளையும் வளர்த்தனர். சைவப் பெரியார்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியவர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார் வாழ்ந்த காலமும் பல்லவர் காலமே ஆகும்.  சோழ அரசர் பல்லவர்க்குப் பிறகு சோழர் மீண்டும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்; காஞ்சியில் பெரிய அரண்மனையைக் கட்டினர்; தொண்டை நாட்டில் பல புதிய கோவில்களை எழுப்பினர்; பழையவற்றைப் புதுப்பித்தனர்; தமிழையும் வடமொழியையும் வளர்த்தனர்; வைத்திய சாலைகளை அமைத்தனர். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவன் மகன் இராஜேந்திர சோழன் முதலியவர் காலங்களில் தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன. குடிகள் வாழ்வும் சிறந்து இருந்தது.      கி.பி. - 300 - 900 2. குன்றத்தூர்   புலியூர்க் கோட்டம் தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது என்பது முன் சொல்லப்பட்டது அல்லவா? அவற்றில் ஒன்று புலியூர்க் கோட்டம்[குறிப்பு 1] என்பது. இதன் தலைநகரம் புலியூர் என்பது. புலியூர், சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அதுவே புலியூர்க் கோட்டத்தின் தலைநகரம். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, கோவூர், குன்றத்தூர் முதலியன இக்கோட்டத்தைச் சேர்ந்தவை.  குன்றத்தூர் இது பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் இருப்பது; சென்னையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது. இதற்குச் சென்னையில் இருந்து நேரே பேருந்து போகிறது. இவ்வூரில் ஒரு சிறிய குன்று இருக்கின்றது. அதனால் இவ்வூர் குன்றத்தூர் எனப் பெயர் பெற்றதுபோலும்!  பிரிவுகள் குன்றத்துார் இப்பொழுது திருநாகேசுவரம், மணஞ்சேரி, நத்தம் என மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் கட்டிய திருநாகேசுவரம் என்னும் சிவன் கோவிலை உடையது. அக்கோவிலின் பெயரே நாளடைவில் அதன் சுற்றுப்புற ஊரின் பகுதியைக் குறிக்கலாயிற்று. சோழ நாட்டில் இவ்வாறே ஒரு கோவிலின் பெயர் ஊரின் பெயராக விளங்குகிறது. திருநாகேசுவரத்தில் நெசவுத் தொழில் செய்கின்ற செங்குந்த முதலிமார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் திருநாகேசுவரம் கோவிலில் சிறப்பாகத் திருவிழாச் செய்து வருகின்றனர்.  மணஞ்சேரி என்பது திருநாகேசுவரத்தை அடுத்து இருக்கும் பகுதி. அப்பகுதியில் மூன்று நான்கு தெருக்கள் இருக்கின்றன. அப்பகுதியில் சேக்கிழார் மரபைச் சேர்ந்த வேளாளர் சிலர் இருக்கின்றனர்.  இடையில் வயல்கள் திருநாகேசுவரத்திலிருந்து அரை மைல் தூரத்தில் முன் சொன்ன குன்று இருக்கின்றது. அதன் அடிவாரத்திலிருந்து இருக்கும் ஊர் நத்தம் என்று வழங்குகிறது. திருநாகேசுவரத்திற்கும் நத்தத்திற்கும் இடையில் உள்ள ஒரு கி. மீ. தூரம் கவனிக்கத்தக்கது. அந்தச் சாலையின் இடக்கைப் பக்கமாகச் சில தெருக்களும் இங்கும் அங்குமாகச் சில வீடுகளும் இருக்கின்றன. அவற்றின் எதிர்ப்புறத்தில் வயல்கள் காண்கின்றன. இந்த வயல்களில் அடிக்கடிப் பழைய பானை ஒடுகளும் வேறு சில புதை பொருள்களும் கிடைத்து வருகின்றன. சில இடங்களில் கட்டடத்துக்குரிய அடிப்படைச் சுவர்கள் இருக்கின்றன என்று உழவர்கள் உரைக்கிறார்கள். இந்த விவரங்களையும், இவ்வயல்களுக்கு அப்பால் நத்தம் இருப்பதையும் நோக்க, இந்த வயல்கள் உள்ள இடம் முழுவதும் பழைய காலத்தில் நகரப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை எளிதில் அறியலாம்.  நத்தம் இந்த வயல்களைத் தாண்டியதும் நத்தம் காணப்படுகிறது. அஃது ஐந்தாறு தெருக்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமாக இருக்கிறது. தெருக்களில் பல பாழடைந்த கட்டடச் சுவர்களும் மேடுகளும் பள்ளங்களும் அவ்வூரின் பழைமையை மெளனமாக உணர்த்தி நிற்கின்றன. நத்தத்தில் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அது மிகச் சிறிய கோவில். அக்கோவிலில் நாள்தோறும் பூசை நடைபெறுகின்றது. அக்கோவில் உள்ள இடமே சேக்கிழார் மாளிகை இருந்த இடமாகும் என்று அங்குள்ளவர் கூறுகின்றனர்.  சேக்கிழார் கோவிலுக்கு எதிரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. ஒன்று சிவன் கோவில்; மற்றொன்று பெருமாள் கோவில். பெருமாள் கோவில் முக்காற்பாகம் அழிந்து விட்டது. அக்கோவிலில் பெருமாளின் பெயர் திருவூரகப்பெருமாள் என்பது. சிவன் கோவில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு கோவில்களிலும் பழைய காலக் கல்வெட்டுகள் இருக்கின்றன. மலை மீதுள்ள முருகர் கோவில் சேக்கிழார்க்கு மிகவும் பிற்பட்டது.  பாலறாவாயர் குளம் சேக்கிழார் கோவிலை அடுத்து ஒரு குளம் இருக்கிறது. அதனை அமைத்தவர் பாலறாவாயர் என்பவர். அவர் சேக்கிழார்க்குத் தம்பியார் ஆவர். ‘பாலறாவாயர் குளம்’ என்பது இப்பொழுது ‘பல்லவராயர் குளம்’ என்று வழங்குகிறது. அக் குளம் இப்பொழுது கவனிப்பவர், இல்லாததால் சீர்கெட்டுக் கிடக்கிறது.  சேக்கிழார் மரபினர் சேக்கிழார் மரபினர் நத்தத்தில் இருக்கின்றனர். அவர்கள் சைவம்-வைணவம் ஆகிய இரண்டு சமயங்களையும் சார்ந்தவர்கள்; உழு தொழில் செய்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் முன்னோரான சேக்கிழார் சிறப்பை அறியத் தக்க நிலைமையை இப்பொழுதுதான் அடைந்து வருகிறார்கள்.  பழைய காலக் குன்றத்தூர் குன்றத்தூரைப் பற்றித் திருநாகேசுவரம் கோவிலிலும் நத்தம் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு சில செய்திகளை அறியலாம். ஏறக்குறையச் சேக்கிழார் காலத்தில் அவ்வூர் பெரிய நகரமாக இருந்தது. பல பெரிய தெருக்கள் இருந்தன. மாட மாளிகைகள் இருந்தன. கோவில்கள் நல்ல நிலையில் விளங்கின. திரு நாகேசுவரம் கோவிலில் தேவரடியார் பலர் இருந்து கோவில் பணிகளைச் செய்து வந்தனர்; இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோவிலை அடுத்து ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் சைவ அடியார்கள் தங்கியிருந்தனர். கோவிலை மேற்பார்க்க ஒரு சபையார் இருந்தனர்.  குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலை உடையது; செழுமையான வயல்களால் சூழப்பட்டது; சிறந்த மருத்துவர் ஒருவரைப் பெற்றிருந்தது. அம்மருத்துவர் குன்றத் தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.  குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர் கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.      சோழர் ஆட்சி காலம் கி.பி. 900-1300 மற்ற இருபத்து மூன்று கோட்டங்களின் பெயர்கள் இவை : 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4 செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்துார்க் கோட்டம் 10.செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13 பல்குன்றக்கோட்டம் கோட்டம் 14. இளங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17 படுவூர்க் கோட்டம், 18. கடிகர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேர்த்துார்க்கோட்டம் 3. சேக்கிழார் பிறப்பு   தொண்டை மண்டல வேளாளர் சேக்கிழார் வேளாளர் மரபினர். குன்றத்துனர் முதலிய தொண்டை நாட்டு ஊர்களில் இருந்த வேளாளர் தொண்டை மண்டல வேளாளர்: எனப்பட்டனர். அவர்கள் கரிகாலனால் தொண்டை நாட்டிற் குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் தங்கி வாழ்ந்தார்கள்; காடுகளை அழித்து விளை நிலங்களாகத் திருத்தினார்கள்; ஏறக்குறையக் கரிகாலன் காலம் முதல் சேக்கிழார் காலம் வரை தொண்டை நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்தார்கள்.  குடிப் பெயர்கள் ‘கிழார்’ என்பது வேளாளர்க்கு வழங்கிய பொதுப் பெயர். தொண்டை மண்டல வேளாளருள் பல குடிகள் இருந்தன. அக்குடிப் பெயர்கள் அவர்கள் குடியேறிய ஊர்களைக் கொண்டும் வழிபட்ட கடவுளர் பெயர்களைக் கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அமைந்திருந்தன. குளப்பாக்கம் என்ற ஊரிற் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'குளப்பாக்கக் கிழார் மரபினர்’ என்று பெயர் பெற்றனர். கூடலூர் என்ற ஊரில் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'கூடல் கிழார்க் குடியினர்' எனப்பட்டனர். இவ்வாறு இடம் பற்றி வந்த குடிப் பெயர்கள் பல.  சேக்கிழார் குடி ஆனால், சேக்கிழார் குடி இடம் பற்றி வந்தது அன்று. அஃது இரண்டு வகை பற்றி வந்திருக்கலாம். (1) சே - எருது; கிழான் - உரிமை உடையவன்; அஃதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன் (சிவன்) என்று சிவ பெருமானுக்குப் பெயராகும். அப்பெயரைக் கொண்ட வேளாள முதல்வன் சந்ததியார் ‘சேக்கிழார் குடியினர்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். (2) சேக்கிழான் என்பது எருதினைப் பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள் படும். ஆனால் இப் பொருளை விட முன் சொன்ன பொருளே பொருத்தம் உடையது.  சேக்கிழார் குடியினர் சேக்கிழார் குடியினர் பொதுவாகத் தொண்டை நாடு முழுவதிலும் பரவி இருந்தனர். வேளாளர் தமிழ் நாட்டில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்; பழைய சேர - சோழ - பாண்டியருக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்து வந்த குடியினர். ஆதலால் அவர்கள் நீண்ட காலமாக நாட்டு அரசியலில் பங்கு கொண்டு இருந்தனர்; அவர்கள் கல்வி கேள்விகளிலும் அரசியல் காரியங்களிலும் வழி வழியாகவே சிறந்திருந்தனர்.  இங்ஙனம் சிறந்த வேளாளருட் சேக்கிழார் குடியினர் முதல் வரிசையில் இருந்தனர். அவர்கள் பல்லவர்க்குப் பின் வந்த சோழர் ஆட்சியில் உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுச் சிறந்த நிலையில் வாழ்ந்தனர். நமது சேக்கிழார்க்கு முன்னரே அக்குடியினர் பலர் மாநிலத் தலைவர்களாகவும் பெரிய அரசியல் உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தார்கள் என்பது,  1. மணலிற் கோட்டத்து மேலப்பழுவூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சங்கர நாராயணன்  2. மேலுார்க் கோட்டத்துக் காவனூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்தி மலையன்  3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர்ச் சேக்கிழான் ஆடவல்லான்  என வரும் கல்வெட்டுக்குறிப்புகளால் அறியலாம்.  ‘சோழ முத்தரையன்’ என்பது சோழ அரசாங்க அதிகாரிகட்கு வழங்கப்பட்ட பட்டம் ஆகும். சேனைத் தலைவர், மாநிலத் தலைவர், அமைச்சர் இவர்கட்கே இப்பட்டம் பெரும்பாலும் வழங்கப்பட்டு வந்தது.  குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர் குன்றத்தூரில் தங்கி இருந்த சேக்கிழார் குடியினர் நமது சேக்கிழார் கால முதலே அரசாங்கத்தில் சிறப்புப் பெறலாயினர். நமது சேக்கிழார்க்கும் பிறகு அவர் தம்பியார்- பாலறாவாயர் முதலிய பலர் சிறந்த பதவிகளில் இருந்து சிறப்புப் பெற்றனர்.  சேக்கிழார் பிறப்பு நமது சேக்கிழார் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சிறந்த சிவ பக்தர்கள்; கல்வி கேள்விகளில் வல்லவர்கள்; நல்ல ஒழுக்கம் உடையவர்கள். அவர்கட்கு நெடுநாளாகப் பிள்ளை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமானை உருக்கத்தோடு வேண்டி வரம் கிடந்தனர்; பல தலங்கட்குச் சென்று தொழுது வந்தனர் ; பல தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் இறைவன் திருவருளால் அவர்கட்கு நமது சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் அந்த ஆண் குழந்தைக்கு அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். அருள்மொழித் தேவர் என்பது சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகும்.   பிள்ளை வளர்ப்பு பெற்றோர் இருவரும், வறியவன் தனக்குக் கிடைத்த செல்வத்தைப் பாதுகாப்பது போல, மிகுந்த கவலையுடன் குழந்தையை வளர்க்கலாயினர். குழந்தை நல்ல உடல் அமைப்பும் அழகும் கொண்டு வளர்ந்து வந்தது. பெற்றோர் அதனை நாளும் சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வள்ர்த்து வந்தன்ர். இரண்டு மூன்று ஆண்டுகட்குப் பிறகு, மற்றோர் ஆண் மகவும் பிறந்தது. பெற்றோர் அதற்குப் பாலறாவாயர் என்று பெயரிட்டனர். அது ஞானசம்பந்தர் பெயர்களில் ஒன்றாகும்.  4. கல்வி கற்றல்   அக்கால நூல்கள் பிள்ளைகளே, இப்பொழுது ஊர்களில் நடக்கின்ற பள்ளிக் கூடங்களைப் போன்றவை அக்காலத்தில் இல்லை. நீங்கள் படிக்கின்ற காகிதப் புத்தகங்கள்-அச்சடித்த புத்தகங்கள் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் பனை ஒலைகளே புத்தக ஏடுகள்; பனை ஒலைக்கட்டே புத்தகம். பனை ஓலைகள் இரண்டு முனைகளிலும் நன்றாக வெட்டப் பட்டு இருக்கும். அவ்ற்றின் இரண்டு பக்கங்களிலும் துளையிடப்பட்டு இருக்கும். ஏடு இரண்டு பக்கங் களிலும் கூர்மையான எழுத்தாணி கொண்டு எழுதப் படும். இவ்வாறு எழுதப்பட்ட பல ஏடுகள் கயிற்றில் கோக்கப்பட்டு, மேல் ஒரு மெல்லிய மரப் பலகை யும், கீழ் ஒரு மெல்லிய மரப் lഖങ്ങക്കു அட்டை களைப் போல வைக்கப்பட்டுக் கட்டப்படும். இவ்வாறு கட்டப்பட்டது ஒரு புத்தகமாகும்.  ஒவ்வொரு மாணவரும் இவ்வாறு தாம் படிக்க விரும்பும் நூல்களைப் பனை ஒலைகளில் எழுதித் தான் படிக்க வேண்டும். இஃது எவ்வளவு கடினமான வேலை, பாருங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நூல்களைத் தயார் செய்து கொள்ள வேண்டி இருந்ததால், பலர் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருத்தல் முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை அப்படி அன்று. அக்காலத்தில் பலர் கல்வி கற்றிருந்தனர். .  அக்காலப் பள்ளிக் கூடங்கள் அக்காலத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டுத் திண்ணையே பள்ளி. அங்குக் கிராமத்துப் பிள்ளைகள் காலையிலும் மாலையிலும் கூடுவார்கள். ஆசிரியர் முதலில் மணல் மீது எழுத்துகளை எழுதிக் கற்பிப்பார்; பிறகு சொற்களைப் போதிப்பார்; பின்னர் மனப்பாடம் செய்யத் தக்க சிறிய நீதி நூல்களைக் கற்பிப்பார், சொற்களுக்குப் பல பொருள் கூறும் அகராதிகள் மனப்பாடம் செய்யப்படும். இதுவே பழைய காலத்தில் போற்றப்பட்ட கல்வித் திட்டமாகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் - அவற்றின் பொருள் இவ்விரண்டையும் மனப்பாடம் செய்த மாணவர் சுவைபடப் பேசவும் பாடவும் தயாராயினர்.  அக்கால மாணவன் நிகண்டுகள் மனப்பாடம் செய்து வரும் பொழுதே சிறிய காவியங்கள், புராணங்கள் முதலியன கற்பிக்கப்படும். இத்தகைய கல்வி முறையினால் பழைய தமிழ் மாணவன் பத்து ஆண்டுகட்குள் கவி பாடும் ஆற்றல் பெற்றான்; நன்றாகப்பேசும் வன்மை பெற்றான்; அவனுக்கு நிகண்டுகள் எல்லாம் பாடமாக இருந்தன; திருக்குறள் போன்ற நீதி நூல்கள் மனப்பாடமாகத் தெரியும். அவன் பல நூல்களை மனப்பாடமாகவே ஒப்புவித்தான்.  கல்வியின் சிறப்பு கல்வி ஒன்றே உலகத்தில் நிலைத்த பெருமையைத் தருவது. செல்வம் நிலை இல்லாதது. அது கள்வரால் கொண்டு செல்லப்படும்; வெள்ளத்தில் அழிந்து விடும்; வேந்தன் சீறின் கவர்ந்து கொள்வான்; எடுக்க எடுக்கக் குறையும். ஆனால் கல்விக்கு இத்தகைய ஆபத்துகள் இல்லை, அது மனிதன் மூளையில் இருப்பது அள்ள அள்ள வளருமே தவிரக் குறையாது. கல்வி கற்ற வனையே அரசன் மரியாதை செய்வான். மன்னனுக்கு அவன் ஊரில்தான் மதிப்புண்டு. ஆனால் கற்றவன் சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெறுவான். கற்றவன் இழிந்த குலத்தவனாக இருப்பினும் பெருமை அடைவான். பெண்பாற் புலவர்  ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் எல்லா வகுப்பினரும் படித்திருந்தனர்; கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். குறவர் மறவர், பாணர் முதலிய வகுப்புப் பெண்களும் சிறந்த பாடல்களைப் பாடினர் ; சேர-சோழ-பாண்டியரால் நன் மதிப்புப் பெற்றனர். பெண் மணிகள் இருவர் செய்யுள் இலக்கண நூல்களைச் செய்தனர் எனின், அக்காலப். பெண்மணிகள் பெற்றிருந்த உயர்ந்த கல்வியை எண்ணிப் பாருங்கள்.  பல தொழிற் புலவர் நமது நாட்டில் நம் முன்னோர் அறிவுக்காகவே கல்வி கற்றனர். மருத்துவன் தாமோதரனார் என்பவர் ஒரு மருத்துவர். ஆனால் அவ்ர் சிறந்த புலவராக இருந்தார்; அரசர்களிடம் வரிசைகள் பெற்றார். பல வகைத் தானியங்களைக் கடையில் வைத்து விற்று வந்தவர் சாத்தனார் என்ற புலவர். அவர் மணிமேகலை என்னும் காவியத்தைப் பாடினார் : தமிழ் அரசர்களால் நன்கு மதிக்கப் பட்டார். இவ்வாறே கோவூர்க் கிழார்முதலிய வேளாளரும் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாக விளங்கினர்.  அரசப் புலவர் நாட்டை ஆளப் பிறந்த அரச மரபினரும் கல்வி கேள்விகளில் சிறந்து இருந்தனர். அது மட்டுமா? அவர்கள் கவிபாடும் சக்தி பெற்றிருந்தனர். சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் முதலிய முடி மன்னரும் பூதப்பாண்டியன் தேவியார் போன்ற அரச மாதேவியாரும் செய்யுள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். சிற்றரசர்களும் அவர் தம் ஆண் மக்களும் பெண் மக்களும் அவ்வாறே புலமை பெற்று விளங்கினர்.  சேக்கிழாரும் பள்ளி வாழ்க்கையும் சேக்கிழாருடைய பெற்றோர் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; நீராடுவார்கள்; கடவுளைத் துதிப்பார்கள். அதனால் சேக்கிழாரும் ஐந்து வயது முதல் அவர்களுடைய நல்ல பழக்கங்களை மேற்கொள்ளலானார். சேக்கிழாருடைய தகப்பனார் சைவ சமய ஆசாரியர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய அருட் பாடல்களைக் காலையிற் பாடுவது வழக்கம். சிறுவராகிய சேக்கிழார் அப் பாடல்களை ஆவலோடு மனப்பாடம் செய்தார்.  சேக்கிழார் ஐந்து வயது முதல் பள்ளிக்குச் செல்லலானார். அவர் திருநீறு அணியத் தவறுவதில்லை. அவர் தினந்தோறும் தந்தையிடம் பாடம் படிக்கலானார்; பள்ளி ஆசிரியர் முதல் நாள் சொல்லிய பாடங்களை மறுநாள் பிழையின்றி ஒப்புவித்து வந்தார்; ஆசிரியரைக் கண் கண்ட தெய்வமாக வணங்கி வந்தார். சேக்கிழாரிடம் குரு பக்தி, அடக்கம், ஒழுங்கு, உண்மையுடைமை முதலிய நல்ல இயல்புகளைக் கண்ட ஆசிரியர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; அவரது கூரிய புத்தி நுட்பத்தைப் பார்த்து வியந்தார். அதனால் அவர் தனிப்பட்ட முறையில் சேக்கிழார்க்கு வேறு பல் நூல்களையும் கற்பிக்கலானார்.  தாயாரிடம் பெற்ற கல்வி சேக்கிழார் தாயார் சிறந்த உத்தமியார். அவர் சிறந்த ஒழுக்கமும் சிவ பக்தியும் உடையவர். அந்த அம்மையார் சைவ சமய ஆசாரியர்களுடைய வரலாறுகளைச் சேக்கிழார்க்குச் சிறு கதைகள் போலச் சொல்லி வந்தார். அக்கதைகள் சேக்கிழார்க்குச் சைவ சமயத்தில் அழுத்தமான பக்தியை உண்டாக்கின : அப்பெரியார்களுடைய பாடல்களை மனப்பாடம் செய்வதில் ஊக்கத்தை உண்டாக்கின. ஆகவே, அவர்தம் ஒய்வு நேரங்க்ளில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலிய நால்வர் பாடல்களையும் மனனம் பண்ணலானார் ; அவற்றை இராகத்துடன் பாடவும் பழகிக் கொண்டார்.  புராணம் பாட விருப்பம் சேக்கிழார் சைவ சமய ஆசாரியர் பாடல்களை நன்றாகப் பாடுவதைக் கண்ட பெற்றோரும் ஆசிரி 'யரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அவர் மிகுந்த அறிவு நுட்பம் வாய்ந்தவர். ஆதலால் திருக்குறள் "முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். இவ்வாறு சேக்கிழார் பல நூல்களையும் நன்றாகப் படித்து வந்தார். அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயன்மார் வரலாறுகளை ஒரு நூலாகப் பாட வேண்டும் என்று எண்ணினார். அந்தச் சிறுவயதில் தோன்றிய எண்ணமே அவரை இறுதியாகப் பெரிய புராணம் பாடச் செய்தது.  5. அக்காலச் சைவ சமய நிலை   அநபாயன் முன்னோர் சேக்கிழார் காலத்துச் சோழ அரசன் அநபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன். அவன், பல்லவர்க்குப் பின் வந்து, தென் இந்தியா முழுவதையும் பிடித்தாண்ட சோழப் பேரரசர் வழி வந்தவன். பெயர் பெற்ற சோழ வீரர்களான இராஜராஜன், இராஜேந்திரன் என்பவர் அவன் முன்னோர் ஆவர்.  இராஜராஜன் இராஜராஜன் சிறந்த போர் வீரன். அவன் சேர, பாண்டிய நாடுகளை வென்றவன்; இலங்கைத் தீவைக் கைப்பற்றியவன்; குடகு, முதலிய மேல் கடற்கரை நாடுகளையும் மைசூர்ப் பிரதேசத்தையும் தெலுங்கு நாட்டையும் கைக் கொண்டவன். அவனே தென் இந்தியா முழுவதையும் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல் அரசன். அவன் வீரத்தில் சிறந்து இருந்தாற். போலவே, சிவ பக்தியிலும், சிறந்து விளங்கினான்.  அப்பெருமகன் தஞ்சாவூரில் பெரிய கோவில் ஒன்றைக் கட்டி அழியாப் புகழ் பெற்றான். அக்கோவிலே தஞ்சைப் பெரிய கோவில் என்பது. இராஜராஜன் முன் சொன்ன திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களைத் தேடி எடுத்தவன்; அவற்றை நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியவரைக் கொண்டு முறைப்படுத்தியவன்; அப் பதிகங்களைப் பல கோவில்களில் பாட ஏற்பாடு செய்தவன்.  இராஜேந்திரன் இராஜராஜன் செல்வ மைந்தன் இராஜேந்திரன். இவன் தந்தையைப் போலச் சிறந்த வீரன். இலங்கை முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன்; கங்கை வரை சென்று அரசர் பலரை வென்று புகழ் பெற்றவன்; கங்கை நீரைத் தோற்ற அரசர் தலை மீது வைத்துத் தன் தலைநகருக்குக் கொண்டு வரச் செய்தவன் ; தன் கங்கா விஜயத்துக்கு அடையாளமாகப் புதிய தலைநகரம் ஒன்றைக் கட்டி, அதற்குக் கங்கைகொண்ட சோழ புரம் என்று பெயர் இட்டவன்.  இப்பேரரசன் தன் கடற்படையைச் செலுத்தி நிக்கோபர் தீவுகள், மலேயா தீபகற்பம், சுமத்ரா, ஜாவாத் தீவுகள் முதலியவற்றை வென்றவன். இவன் சிறந்த சிவ பக்தன். இவன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன் ; கோவில்களில் தேவாரம் ஒதுபவரை மேற் பார்க்கவும் தேவாரத்தை நாடெங்கும் பரப்பவும் ஓர் அரசாங்க அதிகாரியை நியமித்தவன். அந்த அதிகாரிக்குத் தேவார நாயகம் என்பது பெயர். இராஜேந்திரன் பெரும் புலவன் ; புலவர் பலரை ஆதரித்தவன் ; பண்டித சோழன் என்ற பெயர் பெற்றவன்.  சமயத் திருப்பணிகள் பல்லவர்க்குப் பின் நமது அநபாயன் காலம் வரை இருந்த சோழ அரசரும் அரச மாதேவியரும் சைவ மதத்தை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அவர்கள் தேவார ஆசாரியர்கள் பாடிய திருக்கோவில்களைக் கருங்கற் களால் புதுப்பித்தனர்; அவற்றில் பூசை-விழா முதலியன குறைவில்லாமல் நடைபெறப் பல கிராமங்களை மானியமாக விட்டனர்; ஒவ்வொரு கோவில் மூர்த்தங்களுக்கும் ஆடை ஆபரணங்கள் அளித்தனர்; திருக் குளங்களைப் பழுது பார்த்தனர். ஒவ்வொரு பழைய கோவிலிலும் புதிய கோவிலிலும் தேவாரப் பாடல்களைப் பாட ஒதுவார்களை நியமித்தனர்.  மடங்கள் பல ஊர்களில் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அவற்றில் பலவகைச் சிவனடியார் தங்கி இருந்தனர். அவர்கள் கோவில்களைக் கண்காணித்து வந்தனர்; ஊரார்க்குச் சைவ சமய நூல்களைப் போதித்து வந்தனர் ; குளம், நந்தவனம், கோவில் இவற்றைத் தூய்மையாக வைத்திருந்தனர்; பூசைக்கு வேண் டிய மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்தனர்; அருட் பாடல்களைப் பாடினர்; வெளியூரில் இருந்து வரும் அடியார்களை உபசரித்து அன்னம் இட்டனர். மக்களுக்கு இலவச வைத்தியம் செய்தனர். இப் பெருமக்கள் தொண்டுகள் பொது மக்களை நல்வழிப் படுத்தின. மன அமைதியையும் பக்தியையும் ஊட்டின.  நாயன்மார் உருவச் சிலைகள் சோழ அரசர்கள் செய்த திருப்பணிகளால் நாட்டில் சைவம் வளரத் தொடங்கியது. சிவனடியார்கள் செய்த போதனையினால் மக்கள் அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறுகளையும் அறியலானார்கள்; அவர்களுள் மிகச் சிறந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களையும் தத்தம் ஊர்க் கோவில்களில் வைத்துப் பூசிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாயனார் உருவமும் அவர் பிறந்த ஊர்க் கோவிலில் வைத்து வழிபடப் பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலில் திருநாவுக் கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர், சண்டீசர் முதலியவர் உருவச் சிலைகள் வைக்கப் பட்டன. அவற்றுக்கு நாள் தோறும் பூசைகள் நடை பெற்றன. திருவாரூர்க் கோவிலில் தேவார ஆசிரியர் மூவர் சிலைகளும் வைத்துப் பூசிக்கப்பட்டன.  இவ்வாறு நாடு முழுவதும் நாயன்மார்க்குக் கருங்கற் சிலைகளும் செப்புச் சிலைகளும் உண்டாக்கப் பட்டன; மக்களால் பயபக்தியுடன் வழிபடப் பட்டன; திருவிழாக்கள் நடைபெற்றன. பிரசங்கங்கள் மூலமாக அவர்கள் வரலாறுகள் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.  சித்திரங்கள் சோழர்கள் கட்டிய பல கற்கோவில் சுவர்களில் நாயன்மார் வரலாறுகள் செதுக்கப்பட்டு இருந்தன. அச் சிற்பங்கள் பிராகாரம் சுற்றுவார் கண்ணையும் கருத்தையும் இழுத்தன. சில கோவில்களில் நாயன்மார் வரலாறுகளில் முக்கியமான பாகங்கள் சித்திர வடிவில் காட்டப்பட்டு இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் இன்னும் அச் சித்திரங்களைக் காணலாம்; சுந்தரர் திருமணத்தைச் சிவபிரான் கிழவர் வடிவில் சென்று தடுத்தல், சுந்தரர் வெள்ளை யானை மீது திருக்கயிலை செல்லுதல், சேரமான் குதிரை மீது ஏறிச் சுந்தரரைப் பின் பற்றிப் போதல், சிவபெருமான் யோக நிலையில் இருத்தல், முதலிய காட்சிகள் சித்திர ரூபமாகக் காட்டப் பட்டுள்ளன.  இவ்வாறு நாயன்மார் வரலாறுகள் சிற்பங்கள் மூலமாக விளக்கப்பட்டு இருந்தன; சித்திரங்கள் மூலமாக விளக்கப்பட்டன; திருவிழாக்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டன; பிரசார மூலமாகவும் பொது மக்கள் நாயன்மார் வரலாறுகளை அறிந்திருந்தனர்.  தேவாரம் நாயன்மார் பாடி வைத்த தேவாரப் பதிகங்களை இராஜராஜன் முறைப்படுத்தினான் அல்லவா? அந்தப் பதிகங்கள் பனை ஓலையில் இருந்தன. அதனால் பல ஏடுகள் நாளடைவில் அழிந்து விட்டன. இனி அவை அழியாதிருப்பதற்காக வேளாளர் தலைவன் ஒருவன் அவற்றைச் செப்பு ஏடுகளில் எழுதி வைத்தான். பல பெரிய கோவில்களில் தேவார ஏடுகள் பாதுகாக்கப் பட்டன. அவற்றை வைக்க ஒர் அறை, அவற்றைத் தினந்தோறும் எடுத்துப் பூசை செய்து பாட ஒரு மண்டபம் என்பவை பல கோவில்களில் கட்டப் பட்டன. இந்த வேலைகளைச் செய்ய ஒவ் வொரு கோவிலிலும் ஒருவர் அமர்த்தப்பட்டு இருந்தார்.  நாயன்மார் பெயர்கள்[குறிப்பு 1]  இவ்வாறு பொதுமக்கள் நாயன்மார்களைப் பற்றிய பல விவரங்களை அறியத் தொடங்கிய நாள் தொட்டு அவர்கள் தங்கள் பிள்ளைகட்கு நாயன்மார் பெயர்களை இடலாயினர். அக்காலக் கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆண்கள் ஆலாலசுந்தரன், திருஞான சம்பந்தன், திருநாவுக்கரசன், பரஞ்சோதி, கலியன், சிங்கன், கோட்புலி முதலிய (நாயன்மார்) பெயர்களை வைத்துக் கொண்டனர். பெண்கள் மங்கையர்க் கரசி, திருவெண்காட்டு நங்கை, பரவையார், திலகவதி முதலிய பெயர்களை வைத்துக் கொண்டனர்.  இவ்வாறு அக்கால மக்கள் தங்கள் பெயர்களை நாயன்மார் பெயர்களாக வைத்துக் கொண்டு வந்தனர் என்பதனால் அவர்கள் சைவ சமயத்தில் கொண்டிருந்த பற்றையும் நாயன்மார் வரலாறு களில் கொண்டிருந்த அன்பையும் நன்கறியலாம் அல்லவா ?     நாயன்மார் அறுபத்து மூவர் பெயர்கள் :-   1. கண்ணப்பர்,  2. கணம்புல்லர்,  3. அரிவாள் தாயர்,  4. நமிநந்தி அடிகள்,  5. தண்டி அடிகள்  6. கோச்செங்கணச் சோழர்,  7 புகழ்ச் சோழர்,   8. கூற் றுவர்,  9 எறிபத்தர்,   10. புகழ்த்துணை,  11. காரைக் கால், அம்மையார்,  12. மூர்த்தி,  13 ஐயடிகள் காட் வர் கோன்,   14. சண்டேசுவரர்,  15. திரு மூலர்,  16. சாக்கியர்,  17. அமர்நீதி,  18. திருநாவுக்கரசர்  19. திருஞான சம்பந்தர்,  20. சிறுத் தொண்டர்,  21. திருநீல கண்ட யாழ்ப்பாணர்,  22 நீலநக்கர்   23. நெடுமாறர்,  24. முருகர்,  25. குங்கிலியக்கலயர்,  26. மங்கையர்க்கரசியார்  27. குலச்சிறை,  28. அப்பூதி அடிகள்,  29. பூசலர்,  30. காரி,  31 அதிபத்தர்,   32. கலிக்கம்பர்,  33. கலியா,  34. சத்தியார்,  35. வாயிலார்,  36. முனையடுவார்,  37. இடங்கழி,  38. இயற்பகை,  39. நேசர்,  40. இளையான்குடி  41 மெய்ப்பொருள்,   42. திருநாளைப்போவார்,  43. ஏனாதிநாதர்,  44, ஆனாயர்,   45, உருத்திர பசுபதி,   46. திருக்குறிப்புத் தொண்டர்,  47. மூர்க்கர்,  48. சிறப்புலி,  49. கணநாதர்,  50. திருநீலகண்டர்,  51. சுந்தரர்,  52. சடையனார்,  53. இசைஞானியார்,  54. நரசிங்கமுனையரையர்,  55. கலிக்காமர்,  56. மானக் கஞ்சாற்ர்,  57. பெருமிழலைக் குறும்பர்  58. கோட்புலி,  59. கழற்சிங்கர்,  60. செருத்துணை,  61. சேரமான் பெருமாள்,  62. விறல்மிண்டர்,  63. சோமாசிமாறர்.    6. அநபாயச் சோழன்   விக்கிரம சோழன் இவன் நமது அநபாயச் சோழனுக்குத் தந்தை. இவன் கலிங்கம் வரை தன் வீரத்தைக் காட்டிய பெருவீரன். இவன் காலத்தில் சிதம்பரம் மிகவும் சிறப்புப் பெற்றது. இப் பக்திமான் தன் சிற்றரசர் ஒரு வருடத்திற்குக் கட்டிய பகுதிப் பண முழுவதையும் சிதம்பரம் கோவிலை அழகு படுத்துவதில் செலவழித்தான். கோவிலைச் சேர்ந்த பல மண்டபங்கள் புதுப்பிக்கப் பட்டன; கோபுரங்கள் பெரியவையாகக் கட்டப்பட்டன; நடன சபை அழகு செய்யப்பட்டது. நடராசர் தேர் தூய பொன்னால் செய்யப்பட்டது. விலை உயர்ந்த நவரத்தினங்கள் அங்கங்குப் பதிக்கப் பட்டன. விக்கிரம சோழன் தன் பெயரால் (விக் கிரம சோழன் திருவீதி) திருவீதி ஒன்றை அமைத் தான். அதனில் பெரிய மாளிகைகளை எடுப்பித் தான். இவ்வாறு இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் பலவாகும்.  ஒட்டக் கூத்தர் இவர் பெரிய தமிழ்ப் புலவர். இவர் விக்கிரம சோழன் மீது உலா ஒற்றைப் பாடியுள்ளார். விக்கிரம சோழன் மகனான அநபாயன் இவரிடமே கல்வி கற்றான். ஒட்டக்கூத்தர் அநபாயன் மீதும் ஒர் உலாப் பாடியுள்ளார். அவர் அநபாயன் மகனான இரண்டாம் இராஜராஜனுக்கும் ஆசிரியர் ஆவர். அவன் அரசனாக இருந்த பொழுது அவன் மீதும் உலாப் பாடியுள்ளார். இவை மூன்றும் மூவர் உலா எனப் பெயர் பெறும். அவர் தக்கயாகப் பரணி முதலிய பல நூல்களைப் பாடிய பெரும் புல்வர். அதனால் அவரிடம் கல்வி கற்ற அநபாயன் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான். இதனை,  “ஆடும் கடை மணி ந்ாவசையாமல் அகிலமெல்லாம்:  நீடும் குடையில் தரித்த பிசானென்று நித்தநவம் பாடும் பெருமான் கவி ஒட்டக்கூத்தன் பாதமயத்தைச் சூடும் குலோத்துங்க சோழனென்றே என்னைச் செப்புவரே” என்று அநபாயனே பாடிய பாட்டினால் அறியலாம்.  அநபாயன் அநபாயன் என்பது அவனது சிறப்புப் பெயர். இரண்டாம் குலோத்துங்கன் என்பது அவனது அபிஷேக நாமம். அவனைச் சேக்கிழார் தம் புராணத்தில் பத்து இடங்களில் "அநபாயன்" என்றே சுட்டியுள்ளார். அவனுடைய காலத்தில் செய்யப்பட்ட தண்டி அலங்காரம் என்னும் நூலிலும் அவன் ‘அநபாயன்’ என்றே குறிக்கப் பட்டான். ஒட்டக் கூத்தரும் இப்பெயரையே பல இடங்களில் ஆண்டுள்ளார். அவனால் கோவில்களுக்கு விடப்பட்ட ஊர்கள் ‘அநபாயச் சோழ நல்லூர்’, ‘அநபாய மங்கலம்’ என்று இப்பெயர் கொண்டே விளங்குகின்றன.  சிறந்த சிவ பக்தன் அநபாயன், தந்தையைப் போலவே, சிறந்த சிவ பக்தனாக இருந்தான். அவன் சிதம்பரத்தில் இருந்த அரண்மனையிலேயே பெரும் பொழுதைப் போக்கினான். நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டவன். ‘இவன் நடராஜருடைய திருவடிகள் - ஆகிய செந்தாமரையில் உள்ள அருளாகிய தேனைக் குடிக்கும் ஈப் போன்றவன்’ என்று அக்காலத்தார் அவனது பக்தியைப் பாராட்டினர்.  தில்லையில் செய்த திருப்பணிகள் அநபாயன் தன் தந்தை விட்டுச் சென்ற திருப் பணிகளைக் குறைவற நிறைவேற்றினான்; கோபுரங்கள், சிற்றம்பலம், பல மண்டபங்கள், பிராகார மாளிகை, அம்மன் கோவில் இவற்றை மேலும் அழகு செய்தான். அவனுக்கு முன் இருந்த சோழ அரசர் சிலர் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தனர். ஆதலால் அவன். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். ‘பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்’ என்ற பெயர் பெற்றான்; கோவிலை அடுத்த நான்கு வீதிகளையும் அழகு செய்தான். இவை யாவும் ஒட்டக்கூத்தர் கூறும் செய்திகள்.  அவன் திருவாரூர்க் கோவிலில் உள்ள தேவார ஆசிரியர் உருவச் சிலைகளுக்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்; சுந்தரர், அவர் தகப்பனாரான சடையனார், தாயாரான இசைஞானியார் உருவச் சிலை களைத் திருவாரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான். அப் பக்திமான் தன் பெயரால் பல கிராமங்களையும் நிலங்களையும் பல பெரிய கோவில்கட்குத் தானமாக அளித்தான்.  அமைதியான அரசியல் அநபாயன் காலத்தில் பிற நாட்டு அரசர் படையெழுச்சி இல்லை; உள் நாட்டில் குழப்பம் இல்லை. சோழப் பெருநாடு கிருஷ்ணை முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது. நாடு நல்ல நிலையில் இருந்தது. அரசாட்சி அமைதியாக நடைபெற்று வந்தது. அதனால் அநபாயன் தமிழ் நூல்களைப் படிப்பதிலும் கேட்பதிலும், சைவத் திருப்பணிகளிலும் தன் காலத்தை இன்பமாகக் கழித்து வந்தான்.  7. சேக்கிழார்-முதல் அமைச்சர்   அநபாயன் அரச சபை அநபாயச் சோழன் சிறந்த தமிழ்ப் புலவன் என்று முன் சொன்னோம் அல்லவா?. அவன் சபையில் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் எப்பொழுதும் கூடியிருப்பார்கள். அரசன் அவர்களோடு இலக்கியத் தொடர்பான பல விஷயங்களைப் பேசுவான். பல கேள்விகள் கேட்பான். புலவர்கள் விடையைக் கேட்டு மகிழ்வான். தமிழ்நாடு எங்கணும் இருந்த புலவர்கள் அவனைத் தேடி வருவர். தாம் தாம் பாடிய நூல்களையும் பாக்களையும் அவன் முன் பாடிக் காட்டுவர். அவன் கேட்டு, அவற்றில் தனக்குத் தோன்றிய ஐயங்களைக் கேட்பான்; அவரவர் தகுதிக்குத் தக்கவாறு பரிசில் தந்து அனுப்புவான். இவ்வாறு புலவர்களோடு அளவளாவித் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த புலமை மிகுந்த சோழர் சிலரே ஆவர்.  அரசன் கேள்விகள் ஒரு நாள் அநபாயன் தனது சபையில் இருந்தான். அவனைச் சுற்றிலும் புலவர் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பல நாட்டு விஷயங்களைப் பற்றி அவனிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தனர். அரசன் ஒவ்வொரு புலவருடைய ஊரைப் பற்றியும் நுணுக்கமாக விசாரிப்பது வழக்கம். அவர் ஊர் - நாடு - அரசன் பற்றிப் பல கேள்விகள் கேட்டு விஷயங்களை ஆவலோடு தெரிந்து கொள்வது அவனது இயல்பு. இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பொழுது, அவன் புன்னகையுடன் சபையோரைப் பார்த்து-  “புலவர் பெருமக்களே, நான் மூன்று கேள்வி களைக் கேட்கின்றேன். அவை நெடுநாட்களாக என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருக் கின்றன. நீங்கள் அவற்றுக்கு விடை கூற விரும்புகிறேன். உங்களால் முடியவில்லை ஆயின், உங்கள் ஊர்களில் உள்ள பிற புலவர்களைக் கொண்டேனும் விடைகளை விசாரித்து, அனுப்புங்கள்,” என்றான்.  அரசன் இவ்வளவு அடிப்படை போட்டுப் பேசியது கேட்ட புலவர். பயந்தனர் ; அவன் என்ன கேள்விகளை வெளியிடுவானோ என்று எண்ணினர்; அவற்றுக்கு ஏற்ற விடை கூறாவிடில் அவன் தங்களை இழிவாக எண்ணுவானோ என்று அஞ்சினர். ‘இவன் வெளியிடும் கேள்விகளைக் கேட்போம்’, என்று அவனை நோக்கினர்.  புலவர்களின் மனத் தடுமாற்றத்தை அவர்கள் முகக் குறிகளால் உணர்ந்த வேந்தன் புன்னகை காட்டி, “புலவர்களே, அம் மூன்று கேள்விகள் இவை,” என்று கூறினான். அவை கீழ் வருவன :  1. மலையிற் பெரியது எது?  2. கடலிற் பெரியது எது?  3. உலகிற் பெரியது எது?  புலவர் கலக்கம் இக் கேள்விகள் தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதைப் புலவர்கள் எண்ணவில்லை. இவை தம்மைத் திடுக்கிடச் செய்ய அரசன் கேட்ட கேள்விகள் என அவர்கள் எண்ணினார்கள் "மலையிற் பெரியது எது? கடலை விடப் பெரியது எது? உலகத்தை விடப் பெரியது எது? இக் கேள்விகட்கு யாரே பதில் சொல்ல முடியும்: முடியாது! முடியாது!” என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.  சேக்கிழார் விடை அநபாயன் கேள்விகள் தொண்டை நாட்டிற் பரவின. தொண்டை நாட்டுப் புலவர்கள் யோசித்து விடை காண முயன்ற்னர்; முடியவில்லை. இக்கேள்விகளை ஒர் உத்தியோகஸ்தன் மூலமாகச் சேக்கிழார் கேள்விப்பட்டார்; நகைத்தார். "திருக்குறளைப் படித்துப் பாக்களை நினைவிற் கொண்டவரே இவற்றுக்கு விடை கூற வல்லவா!' என்று தமக்குள் கூறிக் கொண்டார். பின்னர் அவர் ஒவ்வொரு கேள்வியையும் எழுதி, அதன் கீழ், அதற்குரிய பதிலையும் எழுதித் தக்கவ்ர் மூலமாக அரசனுக்கு அனுப்பினார். அக்கேள்விகளும் விடைகளும் பின் வருவனவாகும் :-  1. மலையிற் பெரியது எது?  விடை : நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்             மலையினும் மாணப் பெரிது.  2. கடலிற் பெரியது எது?  விடை : பயன் தூக்கார் செய்தஉதவி நயன்துக்கின்             நன்மை கடலிற் பெரிது.  3. உலகிற் பெரியது எது?  விடை : காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்             ஞாலத்தின் மாணப் பெரிது.  இம்முன்றின் பொருள் 1. தனக்கு உரிய வாழ்க்கையில் இருந்து கொண்டு, அடக்கமும் ஒழுக்கமும் உடையவனது உயர்ச்சி மலை உயர்ச்சியை விடப் பெரியதாகும்.  2. ஒரு பயனையும் கருதாமல் செய்யப்படும் உதவியினது சிறப்பு, யோசிக்கும் பொழுது, கடலினும் பெரியதாகும்.  3. தக்க காலத்தில் செய்யப்படும் உதவி, மிகச் சிறியதாக இருந்தாலும், அது செய்யப்படும் சந்தர்ப்பத்தை நோக்க, உலகத்தை விடப் பெரியதாகும்.  அநபாயன் மகிழ்ச்சி அரசன் இந்த மூன்று விடைகளையும் படித் தான். அவன் சிறந்த புலவன் அல்லவா? அதனால் சேக்கிழாரது. நுண்ணறிவினை வியந்தான் ; உடனே அவரைப் பார்த்து அளவளாவ ஆவல் கொண்டான். “உடனே வந்தருள்க!” என்று தொண்டை நாட்டுப் புலவர்க்கு ஒலை போக்கினான்.  சேக்கிழார் வருகை அரசர் பெருமானது ஒலையைக் கண்ட சேக்கிழார் மகிழ்ந்தார். அவர் அநபாயனுடைய தமிழ்ப் புலமையையும் அழுத்தமான சைவப் பற்றையும் கேள்விப் பட்டிருந்தார்; தமக்கு ஏற்ற மனப்பான்மையை உடைய அவனைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ந்தார். அவன் ஆதரவைப் பெற்றுச் சைவத்தையும் தமிழையும் வளர்க்க எண்ணினார்; அதனால் அப் பெருமானைக் காணப் புறப்பட்டார்.  அக்காலத்தில் மாட்டு வண்டிகளே மலிந்திருந்தன. அதனால் சேக்கிழார் பல நாள் பிரயாணம் செய்ய வேண்டியவர் ஆனார்; வழி நெடுக இருந்த ஊர்களில் தங்கினார்; ஆங்காங்கு இருந்த சிவன் கோவில்களில் நுழைந்து தரிசித்தார்; அங்கு இருந்த உருவச் சிலைகளையும் கல் வெட்டுகளையும் கவனித்தார். இவ்வாறு அவர் பல நாள் பிரயாணம் செய்து, அரசன் தலை நகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தார்.  சேக்கிழார் - முதல் அமைச்சர்  அநபாயன் சேக்கிழாரது சைவப் பொலிவைக் கண்டான்; அவருடைய உடற்கட்டு, அழகியதோற்றம், திருநீற்று ஒளி, பரந்த பார்வை முதலியன அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் அவரை வரவேற்று உபசரித்தான்; சிறிது நேரம் தமிழைப் பற்றியும் சைவ சமயம் பற்றியும் அவரிடம் பேசினான். தொண்டை நாட்டு அரசியல் சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றி அவரை விசாரித்தான்: முடிவில் அவர் அரசியல்-சமயம்-இலக்கியம் இவற்றில் சிறந்த அறிவுடையவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அப்பொழுது அப் பெருமகன். அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவன் தனது பேரவையில் இருந்த எல்லோரையும் பார்த்து- “தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்று முதல் நமது சோழப் பெருநாட்டு முதல் அமைச்சராக இருப்பார். நான் அவருக்கு உத்தம சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன்!”  என்று கூறி அவர் கழுத்தில் மலர் மாலை அணிவித்தான். அவையோர் அனைவரும் அரசன் பேச்சை வரவேற்று மகிழ்ந்தனர்.  8. சேக்கிழார் தல யாத்திரை   நல்லவர் நட்பு ‘நல்லவர் நட்பு நாள்தோறும் வளர்கின்ற சந்திரனைப் போல் வளரும்’, என்பது பெரியோர் வாக்கு. சிறந்த சிவ பக்தரும் பெரும் புலவரும் அரசியல் அறிஞரும் ஆகிய சேக்கிழார் அரச சபையில் இருந்த அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தார். அவரது நல்ல ஒழுக்கம், அடக்கமான பேச்சு, அருள் நிறைந்த பார்வை, அன்பு கனிந்த உள்ளம் முதலிய பண்புகள். சோழ அரசனைப் பெரிதும் கவர்ந்தன. அவன் அவரிடம் அளவற்ற மதிப்புக் கொண்டான்.  இளவரசன்-இராஜராஜன்  அநபாயன் தவ மைந்தன் இரண்டாம் இராஜ ராஜன். அவன் ஒட்டக்கூத்தர் மாணவன் அல்லவா? அவன் சேக்கிழாருடைய புலமையையும் பக்தி யையும் கண்டு மனம் களித்தான்; அவருடைய அரசியல் அறிவைக் கண்டு வியந்தான்; அவருடன் நெருங்கிப் பழகலானான். சேக்கிழாரும் இராஜ ராஜனுடைய நல்ல இயல்புகளைக் கண்டு, அவணுடன் நெருங்கிப் பழகினார். சோழ அரச பரம் பரை பற்றிய பல செய்திகளையும் அரசியல் செய்தி களையும் பற்றி அடிக்கடி அவனிடம் பேசுவார் ; திருக்கோவில்களைப் பற்றியும் சைவ சமய வளர்ச்சி யைப் பற்றியும் அவனிடம் விரிவாகப் பேசுவார்.  ஒட்டக்கூத்தர் அரசனான அநபாயச் சோழனுக்கும் இளவரசனான இராஜராஜனுக்கும் ஆசிரியரான பெரும் புலவர் யார்? ஒட்டக்கூத்தர் அல்லவா? சேக்கிழார் அமைச்சராக வந்தபொழுது ஒட்டக்கூத்தர் அவரினும் வயது முதிர்ந்தவராக இருந்தார். அப்பெருமான் சேக்கிழாரது பேரறிவைக் கண்டு மகிழ்ந்தார்; மற்ற நல்ல இயல்புகளைக் கண்டு பாராட்டினார். சேக்கிழாரும் அப்பெரியவரிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் காட்டி நடந்து வந்தார். இரு பெரும் புலவரும் மன மகிழ்ச்சியோடு பல செய்திகளைப் பற்றி விவாதிப்பது வழக்கம்.  சேக்கிழாரும் அரச சபையும் சோழப் பெருநாட்டில் சிற்றரசர் பலர் இருந்தனர். அவர்களுடைய பிரதிநிதிகள் அரச சபையில் நாள்தோறும் கூடுவது வழக்கம். அமைச்சர்கள்,சேனைத் தலைவர்கள், அரசாங்கப் பிரிவுகளின் உயர்ந்த உத்யோகஸ்தர்கள், நகரப் பெருமக்கள் முதலியவர் நாள்தோறும் அரச சபையில் கூடுவர். அவர்கள் அனைவரும் சேக்கிழாருடன் பழகி அவரிடம் மிகுந்த பற்றுக் கொண்டனர்; அவரது காலத்தில் சோழப் பெருநாடு மிக்க சிறப்படையும் என்று நம்பினர். இங்ஙனம் சேக்கிழார் அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த எல்லார் உள்ளத்தையும் தம் நல்ல இயல்புகளினால் கவர்ந்து மிக்க சிறப்புடன் முதல் அமைச்சராக இருந்து வந்தார்.  சோழ நாட்டுத் திருநாகேசுவரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்து திருநாகேசுவரம் என்னும் சிவத்தலம் இருக் கின்றது. அது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். அங்குள்ள கோவில் மிகப் பெரியது. சேக்கிழார் அக்கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசிப்பது வழக்கம். அக்கோவில் எவ்வாறோ அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவருடைய தாயார், தம்பியார் பாலறாவாயர் ஆகிய இருவரும் அக் கோவிலுக்குச் சென்று வழிபடலாயினர். இதற்கு அடையாளமாக அக் கோவிலில் அவர்கள் மூவர் சிலைகளும் இருக்கின்றன.  தொண்டை நாட்டு திருநாட்டுத் திருநாகேசுவரம் சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் கோவிலைப் போன்ற ஒன்றைக் கட்ட விரும்பினார்; சோழ நாட்டுத் திருநாகேசுவரத்தை எப்பொழுதுமே தரிசிக்க இயலாது அல்லவா? தமது ஊரில் அத்தகைய கோவில் இருந்தால் தமது ஓய்வுக் காலத்தில் அதனைத் தரிசித்துக் கொண்டு இருக்கலாம் என்று அவர் எண்ணினார். அதனால் அப் பெரியார் குன்றத்தூரில் இன்று நாம் காணும் ‘திருநாகேசுவரம்’ என்னும் சிவன் கோவிலைக் கட்டினார் ; அதில் பூசை, விழா முதலியன குறைவற நடக்கப் பல நிலங்களை மானியமாக விட்டார். சேக்கிழார் அக் கோவிலைக் கட்டினார் என்பதற்கு அடையாளமாக, அக் கோவிலில் அவருக்குத் தனிக் கோவில் எழுப்பப்பட்டு இருக்கிறது; ஆண்டு தோறும் அவருக்குச் சிறப்பான முறையில் திருவிழாச் செய்யப்படுகிறது.  சேக்கிழார் யாத்திரை பெரு நாட்டின் முதல் அமைச்சர் தமது பெரு நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லவா ? இக்காலத்தில் நமது மாநில அமைச்சர்கள் நமது மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார்கள் அல்லவா? சுற்றிப் பார்த்து, நாட்டு நிலவரங்களை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி அரசியல் நடவடிக் கைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆதலால் எல்லா அமைச்சர்களும் தம் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை நன்றாகப் பார்வையிடுதல் கடமை யாகும். அவர்கள் கிராமந்தோறும் செல்வார்கள்; விளைச்சல், நீர்ப் பாசனம், கிராம ஆட்சி முறை, கோவில் நிர்வாகம், விவசாய வரி, தொழில் வரி முதலிய பல பொருள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பர் ; மேற்பார்வை இடுவர் ; குறைகளை நீக்குவர். இத்தகைய அரசியல் விவரங்களை அறிவதற்காகவே சேக்கிழார் நாடு முழுவதும் சுற்றலானார்.  அக்காலப் பாதைகள் பிள்ளைகளே, இக்காலத்தில் நமது மாநிலத்தில் பல ஒழுங்கான பாதைகள் அமைந்திருக்கின்றன. சென்னை போன்ற பெரிய நகரங்களில் தார் போட்ட சாலைகள் இருக்கின்றன. சென்னையிலிருந்து வடக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் செல்வதற்கு அகன்ற பெரிய சாலைகள் ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன. அப்பாதைகள் வழியே லாரிகள், பேருந்துகள், பிற பிரயாண வண்டிகள் முதலியன பல நூறு கி.மீ. பிரயாணம் செய்கின்றன.  இத்தகைய ஒழுங்கான முறையில் அக்காலத் தில் பாதைகள் இருந்தன என்று கூறலாம். வடுக வழி கிழக்கு என்று ஒரு பெரிய பாதை தெலுங்க நாட்டுக்குச் சென்றது; வடுகல்ழி மேற்கு என்று ஒரு பெரிய பாதையும் வட மேற்குத் திசையில் சென்றது. காவிரி, கொள்ளிடம் முதலிய ஆற்றங்கரைகளை அடுத்துப் பெரிய பாதைகள் சென்றன. அப்பாதைகள் வழியாகத்தான் ஒரு நாட்டு மக்கள் பிற நாட்டு மக்களுடன் வாணிகம் செய்தனர் வாழ்க்கையில் உறவு கொண்டாடினர்.  உதாரணமாகக் காவிரியாற்றை எடுத்துக் கொள்வோம். அது மேற்கே குடகு மலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. அதன் கரை வழியே வரும் ஒருவன் குடகு நாட்டையும், மைசூர் நாட்டையும், பிறகு கொங்கு நாட்டையும், அதன் பிறகு சோழ நாட்டையும் எளிதில் அடையலாம் அல்லவா? வளமான இத்தகைய ஆற்றங்கரை களில்தான் நகரங்கள் அமைதல் இயல்பு. நாகரிக மக்கள் அங்குதான் மிகுதியாக வசிப்பார்கள்; எனவே கோவில்களும் ஆற்றங்கரையோரமே பலவாகக் கட்டப்படும்.  ஒர் ஆற்றுக்கும் மற்றோர் ஆற்றுக்கும் இடைப் பட்ட நிலப் பகுதியில் குறுக்குப் பாதைகள் உண்டாகும். மேலும், அக்காலத்தில் காசியில் இருந்து இராமேசுவரம் வரை யாத்திரை செய்யத் தக்க நல்ல பாதை இருந்தது. நம் தேவார ஆசிரியர் மூவரும் வடக்கே காளத்தி வரை தல யாத்திரை செய்து, பதிகங்களைப் பாடியுள்ளனர். இராஜ ராஜன், இராஜேந்திரன் முதலான சோழப் பேர்ரசர் படைகளைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதால், அப்படைகள் செல்லத் தக்க ஒழுங்கான பாதைகள் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா?  சோக்கிழார் யாத்திரை - குறிப்புகள் தயாரித்தல்  காவிரியாற்றின் இரண்டு கரைகளிலும் பல நகரங்கள் உண்டு. அவற்றில் சிவன் கோவில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள். சேக்கிழார் அரசாங்க அலுவலைக் கவனித்துக் கொண்டே பாடல் பெற்ற கோவில்களையும் நன்றாகக் கவனித்தார்; அவை இருந்த ஊர்கள் - நாடுகள் - ஊர்களின் வளமை இவற்றை ஆராய்ந்தார்; ஓர் ஊர் ஒரு நாயன்மார் பிறந்த ஊராக இருந்தால் அங்குத் தங்கி, அந்த நாயனாரைப் பற்றிய தல வரலாற்றைக் கேட்டு அறிந்தார்; அவ் விவரங்கள் எல்லாவற்றையும். குறிப்பு எடுத்துக் கொண்டார்.  சேக்கிழார் இவ்வாறு ஆற்றோரம் அமைந்திருந்த பெரிய பாதைகள் வழியே சென்று, இக் கரையில் இன்ன கோவிலுக்குப் பிறகு இன்ன கோவில் அமைந்திருக்கிறது. இக் கோவிலில் திரு நாவுக்கரசர் இன்ன பதிகம் பாடினார், திருஞான சம்பந்தர் இன்ன பதிகம் பாடினார், சுந்தரர் இன்ன பதிகம் பாடினார் என்பன போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டார்; நாயனார் பிறந்த ஊரில் அந்த நாயனார் வரலாறு கேட்டு அறிந்தார். அவ்வூர்க் கோவிலில் இருந்த அவரது உருவச் சிலையை ஆராய்ந்து குறிப்புகள் தயாரித்தார். அந்தக் கோவிலைப் பற்றிய பல செய்திகளையும் குறித்துக் கொண்டார். சிற்றரசர்  இந்த யாத்திரையில் சேக்கிழார் சோழ அரசலுக்கு அடங்கிய சிற்றரசர் பலரைச் சந்திக்க வேண்டியவர் ஆனார். அச்சிற்றரசருள் சிலருடைய முன்னோர்கள் நாயனாராக இருந்தவர். உதாரணமாகத் தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரை ஆண்டவர் மலையமான்கள் என்பவர். அவருடைய முன்னோரே மெய்ப் பொருள் நாயனார் என்பவர். அந்த அரச மரபினர் தங்கள் முன்னோர் வரலாற்றை நன்றாக அறிந்திருப்பார்கள் அல்லவா? அதனால் சேக்கிழார் அவர்களைக் கண்டு தம் அரசியல் விஷயங்களைப் பேசிய பிறகு, அவர்கள் மரபில் தோன்றி மறைந்த நாயனார் வரலாற்றை விசாரித் துக் குறிப்புகள் எழுதிக் கொண்டார். இவ்வாறு அந்தந்தப் பரம்பரையினரைக் கேட்டு எழுதுவது மிகச் சிறந்தது அல்லவா? வழிப்போக்கர் பேச்சைக் கேட்டுத் தாறுமாறாக எழுதாமல், தக்கவர் மூலமாக விஷயங்களை அறிந்து எழுதுதல் பாராட்டிடத்தக்க முறையாகும்.  இந்த முறையைப் பின்பற்றிச் சேக்கிழார் சேரர்-சோழர்-பாண்டியர் முதலிய அரச மரபில் வந்த நாயன்மார் வரலாறுகளுக்கு வேண்டிய குறிப்புகளைத் தயாரித்தார்; மற்ற நாயனார். களைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த ஊராரைக் கேட்டுத் தயாரித்தார். சேக்கிழார் அரசாங்க வேலைகளை முன்னிட்டுச் சோழப் பெரு நாட்டில் பலமுறை யாத்திரை செய்தார். அப்பொழுது அந்தந்த நாட்டு இயற்கை அமைப்பு- ஊர் அமைப்பு முதலிய பல விவரங்களைக் கூர்ந்து கவனித்துக் குறிப்புகள் தயாரித்துக் கொண்டார்.  இளமை எண்ணம் சேக்கிழார் இங்ங்ணம் அறுபத்து மூவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஏன் தயாரிக்க வேண்டும்? அவர் இளமையில் குன்றத்தூரில் படித்துக் கொண்டு இருந்த பொழுது என்ன எண்ணினார்? மக்களுக்குச் சமய உணர்ச்சியை ஊட்டிய சைவ சமய ஆசாரியர் வரலாறுகளைத் தாம் பாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் என்பது முன் கூறப்பட்டதன்றோ? அந்த எண்ணம் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. அமைச்சர் பதவி கிடைத்தது. யாத்திரை செய்ய வசதி உண்டானது ஆதலால், சேக்கிழார் தமது இளமை எண்ணத்தைச் செயலில் கொண்டு வர முயன்றார்.  9. ஜீவக சிந்தாமணி   அரசன் அவை அரச சபையில் அரசியல் விஷயங்கள் கவனிக்கப்பட்ட பிறகு, அரசன் மாலை நேரங் களில் புலவர்களுடன் பொழுது போக்குதல் வழக்கம். அநபாயன் முன்னிலையில் புலவர்கள் ஒரு தமிழ் நூலை எடுத்து முறையாகப் படித்து வருவார்கள்; அரசனுக்கு ஐயம் உண்டாகும் இடங்களை விளக்குவார்கள். அரசன் இவ்வாறு தன் காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்களைப் புலவர் படிக்கக் கேட்டு வந்தான். பெருமக்கள் பலரும் உடன் இருந்து கேட்பது வழக்கம்.  ஜீவக சிந்தாமணி இவ்வாறு அநபாயன் கேட்டு வந்த நூல்களுள் சீவக சிந்தாமணி என்பது ஒன்று. அது சமண சமய காவியம். அது வட இந்தியாவில் வாழ்ந்த சீவகன் என்ற ஒர் அரசன் வரலாறு. அது வட வடமொழியில் செய்யப் பட்டிருந்தது. அதனைத் திருத்தக்க தேவர் என்பவர் ஒரு காவியமாகத் தமிழில் பாடினார். அத் தமிழ் நூல் அநபாயனுக்கு ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முற்பட்டது. அந்நூல் நல்ல தமிழ்ப் பாடல்களால் இயன்றது; படிக்கப் படிக்கச் சுவை தருவது. அதனால் புலவர் நாள்தோறும் படித்து வர, அநபாயன் இன்பமாகக் கேட்டு வந்தான்.  சீவகன் வரலாறு சீவகன் பிறப்பு வட இந்தியாவில் ஏமாங்கத நாடு என்பது ஒன்று. அதனைச் சச்சந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் வேறோர் அரசன் மகளை மணந்து கொண்டான். அவன் அம் மணத்திற்குப் பிறகு அரசியல் காரியங்களைக் கவனிப்பதில்லை. அவன் தன் அமைச்சருள் ஒருவனான கட்டியங்காரன் என்பவனிடம் அரசியலை ஒப்பு வித்தான்; அவனை முழுவதும் நம்பி இன்பமாகப் பொழுது போக்கி வந்தான்.  கட்டியங்காரன் நயவஞ்சகன்; பேராசைக்காரன். அரசனைக் கொன்று அரசைக் கவர எண்ணினான்; படைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான்; மற்ற அமைச்சர் கூறிய நல்லுரை களையும் கேட்கவில்லை. அவன் ஒரு நாள் திடீரென்று அரண்மனையை நோக்கிப் படையெடுத் தான். சச்சந்தன் கர்ப்பவதியான தன் மனைவியை [குறிப்பு 1]மயில் வாகனம் ஒன்றில் ஏற்றி ஆகாய வழியில் அனுப்பி விட்டான். பிறகு அவன் தன் அரண்மனை வீரருடன் கட்டியங்காரனை எதிர்த்தான்; போரில் அந் நயவஞ்சகனால் கொல்லப் பட்டான். உடனே கட்டியங்காரன் வெற்றி முழக்கத்துடன் அரியணையேறினான்.  வானத்திற் பறந்து சென்ற இராசமாதேவி முரசொலி கேட்டாள்; தன் ஆருயிர்க் காதலன் மடிந்தனன் என்பதை உணர்ந்தாள். உடனே மூர்ச்சை ஆனாள். அதனால் வாகனம் மேலே செல்லும்படி முறுக்காணியைத் தக்கவாறு திருப்பத் தவறினாள். உடனே விமானம் கீழே இறங்கி விட்டது. அஃது இறங்கிய இடம் சுடுகாடு; அதுவும் தலைநகரத்தின் சுடுகாடே ஆகும்.  அரசமாதேவி மயக்கம் தெளிந்தாள்; உடனே ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அச் சுடுகாட்டில் அம் மகனை வைத்துக் கொண்டு செய்வது அறியாது புலம்பினாள். அப்பொழுது தெய்வம் ஒன்று அவளது தோழி போல் அங்குத் தோன்றி, இம் மகன் இந்நகர வணிகனால் சிறிது நேரத்தில் கொண்டு செல்லப் படுவான். அவனிடம் நின் மகன் வளர்ந்து வருவான். முடிவில் கட்டியங்காரனைக் கொன்று அரசினை அடைவான். கவலை ஒழிக,” என்றது.  சீவகன் வளர்ப்பு கந்துக்கடன் என்பவன் ஒரு வணிகன். அவன் தன் ஒரு மகவைப் புதைக்க அங்கு வந்தான். அவன் இளஞ் சூரியினைப் போல விளங்கிய சீவகனாகிய குழந்தையைக் கண்டான் உள்ளத்தில் உவகை கொண்டான்; தன் குழந்தைக்குப் பதிலாக இறைவன் தனக்கு மற்றொரு குழந்தை யைக் கொடுத்தான் என்று எண்ணி மகிழ்ந்தான்; அக் குழந்தையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அன்று முதல் சீவகன் அவ் வணிகனிடமே வளர்ந்து வரலானான்.  அரச மாதேவி சமணத் துறவிகள் வாழ்ந்து வந்த ஆசிரமம் ஒன்றை அடைந்தாள் அங்குப் பற்று அற்ற நிலையில் தவம் செய்து கொண்டு இருந்தாள்.   கல்வி கற்றல் ஐந்து ஆண்டுகள் ஆயின. சீவகன் பள்ளியில் விடப்பட்டான். ஒரு நாள் அச்சணந்தி என்ற முனிவர் வணிகன் வீட்டிற்கு வந்தார்; சீவகனைக் கண்டார்; அவன் தெய்வீகச் சிறுவன் என்று எண்ணினார். அவனுக்குக் கலைகளைப் போதிக்க விரும்பினார். சீவகன் வணிகனிடம் சென்ற பிறகு அவ் வணிகனுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து வளர்ந்தது. அப் பிள்ளையும் முனிவரிடம் கல்வி கற்கலானான்.  சீவகன் தரும சாஸ்திரங்களைக் கற்றான்; மற்போர், வாட்போர், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலிய பயிற்சிகளில் தேறினான். அடக்கம், பெரியோரிடம் மரியாதை, கற்றவரிடம் கனிவு, எளியவரிடம் அன்பு முதலிய நல்ல பண்புகள் அவனிடம் இருந்தன. அதனால் அவனுடன் பழகிய பிள்ளைகள் அவனைத் தங்கள் தலைவ னாகக் கொண்டாடினர். ஆசிரிய முனிவரும் வளர்த்த வணிகனும் அவனிடம் பேரன்பு காட்டினர்.  காளைப் பருவம் சீவகன் பதினெட்டு வயதுடைய காளை ஆனான். அதற்குள் அவன் அரசர்க்குரிய கல்வியையும் போர்த் துறைகளையும் நன்றாக அறிந்திருந்தான். ஒரு நாள் முனிவர் அவனுக்கு அவனது வரலாற்றை விளக்கமாகக் கூறினார். காளை உடனே கட்டியங்காரனைக் கொல்லப் புறப் பட்டான். முனிவர், “அவனைக் கொல்லக் காலம் வரும்; அவசரப்படாதே” என்று அடக்கினார்.  சீவகன் வீரச் செயல்களும் மண நிகழ்ச்சிகளும் கோவிந்தை-திருமணம்  தலை நகரத்தில் நந்தகோன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பசுக் கூட்டங்கள் செர்ந்தம். அவற்றைப் பக்கத்து மலை நாட்டு வேடுவர் கைப்பற்றிக் கொண்டனர்: கட்டியங் காரன் படைகள் சென்றும் அவற்றை மீட்க முடிய வில்லை. நந்தகோன் வருந்தி, "என் பசுக் கூட்டங்களை மீட்கும் வீரன் என் தவ மகளான கோவிந்தையை மணந்து கொள்வானாக!” என்று: பறை சாற்றினான். சீவகன் தன் தோழர்களுடன் சென்றான்; வேடுவரைத் தன் வில் வலியாலும் வாள் வலியாலும் புறங்கண்டான்; பசுக் கூட்டங் களை மீட்டுக் கொண்டு வந்தான்; அனைவரும் வாழ்த்துக் கூறக் கோவிந்தையை மணந்து கொண்டான்.  காந்தர்வதத்தை இவள் ஓர் அரசன் மகள். இவள் சீவகன் இருந்த தலை நகரத்திற்குக் கொண்டு வரப் பட்டாள். ‘இவளை யாழில் வெல்பவன் மணப்பானாக!’ என்று பறையறைவிக்கப்பட்டது. சீவகன் எல்லா இசைக் கருவிகளையும் மீட்டுவதில் புகழ் பெற்றவன். ஆதலால் அவன் தன் திறமையைக் காட்டிக் காந்தர்வதத்தையை யாழ்ப் போட்டியில் வென்று மாலை சூட்டினான்.  பட்டம் பெறுதல் இவ்வாறு சீவகன் தன் ஆற்றலைக் காட்டி மங்கையர் எழுவரை மணந்தான்; இறுதியில் கட்டியங்காரனைக் கொன்றான்; தந்தை இருந்த அரியணையில் அமர்ந்து இனிதாக அரசு செலுத்தினான். இவ் வரலாறு நூல் முதலிலுருந்து முடிவுரை வரை இன்பமாகவே இருக்கும்.  ---------------------------------------------------------------------------------------------------------------------------- 1.  மயில் உருவத்தில் செய்யப்பட்ட ஆகாய விமானம். 10. சேக்கிழார் அறிவுரை   சேக்கிழாரும் இராஜராஜனும் சேக்கிழார் சீவகசிந்தாமணியை நன்றாகப் படித்தவர்; அதன் காவியச் சிறப்பை நன்கு அறிந்தவர்; ஆயினும் அரச சபையில் அதனை மிகுதியாக வெளிக்காட்டவில்லை. அரசன் அக் காவியத்தில் தன் கருத்தைச் செலுத்தினான்; சில பகுதிகளை இரண்டு மூன்று முறை வாசிக்கச் சொல்லிக் கேட்டு இன்பப்பட்டான்.  ஒரு நாள் மாலை இளவரசன் சேக்கிழாரை அழைத்துக் கொண்டு உலவச் சென்றான். இருவரும் ஒரு பூஞ்சோலையில் எதிர் எதிர் அமர்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த அப் பூந்தோட் டத்தில் மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, முதலிய மலர்கள் விரிந்து நறுமணத்தை நாற்புறமும் பரப்பின. மெல்லிய காற்று அங்கு வீச, மலர்கள் அசைந்தாடின. அக் காட்சி அமைச்சரையும் இளவரசனையும் வரவேற்கும் காட்சி போலக் காணப்பட்டது.  உரையாடல் இளவரசன் : புலவர் பெருமானே, சீவகன் வரலாறு படிக்கவும் கேட்கவும் இன்பமாகவே இருக்கின்றது. அரசர் தினந்தோறும் அந் நூலினைத் தனியாகப் படித்தும் இன்பப் படுகிறார். நானும் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். இன்பமாகத்தான் இருக்கிறது.  சேக்கிழார் : இளவரசரே, அந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தரும்; கதாநாயகனான சீவகன் வீரச் செயல்களும் பல கலைகளில் அவன் காட்டிய திறமையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அந்த நூலினை நான் முழுவதும் வாசித்தவன். செய்யுட்கள் அழகானவை. அக் காவியத்தைப் பாடிய திருத்தக்க தேவர் சிறந்த புலவர் என்பது அக் காவியத்திலிருந்து புலப்படுகிறது. ஆனால்...  இளவரசன் : ‘ஆனால்’ என்ன? உங்கள் கருத்தைத் தெளிவாக்த் தெரிவியுங்கள். ‘ஆனால்’ என்னும் சொல், அந்நூலில் குறையுண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துவது போலக் காண்கிறதே. அன்பு கூர்ந்து உங்கள் எண்ணத்தை அறிவியுங்கள். உங்களைப் போன்ற பெரும் புலவர் கருத்தை அறிய வேண்டுவது அவசியம் அன்றோ?  சேக்கிழார் : இளவரசே, சீவகன் உங்களைப் போன்ற அரச மரபினன்; அரசன். அவன் வரலாறு படித்தறிய வேண்டுவது அவசியமே. அவன் வரலாறு தமிழ்க் கவியில் பாடப்பட்டிருப்பதால் காவிய நயத்துக்காக நூலை வாசிக்க வேண்டுவது நமது கடமை. ஆனால் அந்த வரலாறு இப்பிறப்பில் இன்பத்தைத் தருமே தவிர, ஆன்மாவிற்கு எவ்வகையில் துணை செய்ய வல்லது? நமது சைவ சமயத்தை வளர்க்க அஃது உதவி செய்யாது அல்லவா? ஆதலின் இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரத்தக்க வரலாறுகளே அரசர்களும் குடி களும் போற்றிப் படிக்கத் தகுவன ஆகும்.  இளவரசன் : புலவர் பெருமானே, நீர் கூறியது உண்மை. அங்ஙனம் இருமையும் பயக்கத் தக்க வரலாறுகள் எவை?  சேக்கிழார் : இராஜராஜரே, இந்த உலகில் துய வாழ்வு வாழ்ந்து, மக்களை நல்வழிப் படுத்தி, அவர்களுக்குத் தொண்டு செய்து மறைந்த பெருமக்களுடைய வரலாறுகளே நமக்கு ஏற்றவை. அங்ஙனம் தோன்றி மறைந்த பெருமக்களே திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியோர். அவர்கள் வடக்கே காளத்தி வரை கால்நடையாக நடந்து ஏறக்குறைய இருநூற்றுக்கு மேற்பட்ட கோவில்களைத் தரிசித்தவர்கள். அங்கங்கு இருந்த மக்கள் உள்ளத்தைக் கடவுள்பால் திருப்பத் திருப் பதிகங்கள் பாடினவர்கள்; பல அற்புத்ங்களைச் செய்தவர்கள். திருநாவுக்கரசர் தமது எண்பத் தோரு வயது வரை யாத்திரை செய்து மக்கட்கு அறிவுரை-சமயவுரைகளைப் பதிகங்கள் மூலமாகப் போதித்து வந்தவர் என்றால், அப் பெருமக்களுடைய வரலாறுகள் எத்தகையனவாக இருத்தல் வேண்டும் அவற்றைக் கேட்பதால் - படிப்பதால் நமது சமய முன்னேற்றத்துக்குரிய பல தொண்டுகளைச் செய்ய யோசனை உண்டாகும். நமக்கும் இம்மையில் இன்பமும் மறுமையில் நற்பயனும் கிடைக்கும் அல்லவா?  இராஜராஜன் : அமைச்சர் பெருமானே, உங்கள் கருத்தை உணர்ந்தேன். நீங்கள் கூறுவது முற்றும் உண்மையே.  அரசனும் இளவரசனும் அன்றிரவு இளவரசன். தன் தந்தையைக் கண்டு சேக்கிழார் கருத்தை விளங்க வுரைத்தான். அநபாயன் சிறந்த புலவன் அல்லவா? அவன் சேக்கிழார் யோசனையைப் பாராட்டினான்; சமண காவியமாகிய சிந்தாமணியைச் சைவர் படிக்கலாகாது என்று கூறாத அவரது பரந்த அறிவையும் பாராட்டினான்; மறுநாள் சேக்கிழாரைக் கண்டு பல ஐயங்களைப் போக்க விரும்பினான்.  அநபாயனும் அமைச்சரும் மறுநாள் காலை சேக்கிழார் அரசியல் விஷயமாக அரசனைப் பார்க்கச் சென்றார். அப்பொழுது அரசன் அவரை முக மலர்ச்சியோடு வரவேற்று உட்காரச் செய்தான். அவரை அன்புடன் நோக்கி, “புலவரே, நீங்கள் இராஜராஜனிடம் நேற்றுக் கூறியவற்றைக் கேள்வியுற்றேன். உங்கள் யோசனை பாராட்டுதற்கு உரியது. ஆனால் அத் தகைய பெரியோர் வரலாறுகள் காவிய ரூபத்தில் இல்லையே! அவற்றை நாம் எவ்வாறு அறிவது?” என்று கேட்டான்.    அமைச்சர், “அரசர் பெருமானே, தேவார ஆசிரியர் வரலாறுகளைப் பற்றி நம்பியாண்டார் நம்பி என்பவர் பல சிறு நூல்களைப் பாடியுள்ளார் அல்லவா? அவற்றுடன் அவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களையும் ஆராய்ந்தால் அவர்களுடைய வரலாற்றுச் செய்திகளைப் பெரிதளவு அறியலாம். மேலும் அப்பெரியார்கள் யாத்திரை சென்ற இடங்களிலும் பிறந்த ஊர்களிலும் அவர்களைப் பற்றி வழங்கும் கதைகளும் ஆராயத் தக்கவை. அவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டு இம்மூன்றையும் இணைத்து முறைப்படுத்தினால், அவர்கள் மூவருடைய வரலர்றுகளும் செவ்வையாகச் செப்ப முடியும். மற்ற அடியார்களுடைய வரலாறுகள் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிக்கப் புட்டுள்ளன அல்லவா? அவற்றோடு அவரவர் பிறந்து வாழ்ந்த ஊர்களில் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்தால் விளக்கமான வரலாறு கூற முடியும்,” என்றார்.  அநபாயன் வியப்புக் கொண்டான். அவன் அமைச்சரை நோக்கி, ‘ஐயனே, உமது யோசனை நல்லதே. ஆயின், இவ்வளவு அரும் பாடுபட்டு நாயன்மார் வரலாறுகளைத் தொகுப்பவர் யாவர்? இவ்வரிய வேலைக்குப் பல ஆண்டுகள் வேண்டும். பொறுமையும் சமயப் பற்றும் வேண்டும். தமிழ் நாடு முழுவதும் சுற்ற வேண்டுமே!’ என்று கூறினான்.  அமைச்சர், பெருமானே, நான் தங்களிடம் அமைச்சனாக வந்த நாள் முதல் இந்த வேலையில் ஈடுபட்டேன்; என்யாத்திரைகளில் எல்லாத் தலங்களையும் சுற்றிப் பார்த்தேன்; குறிப்புகள் சேகரித்தேன்; பின்னர் ஓய்வு நேரங்களில் அவற்றை முறைப்படுத்தி வைத்திருக்கிறேன்!” என்று பதில் உரைத்தார்.  நாயன்மார் வரலாறுகளைக் கேட்டல் அந்தப் பதிலைக் கேட்டு அநபாயன் ஆச்சரியம் கொண்டான். “என்ன, நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்து முறைப்படுத்தியிருக்கிறீர்களா? எங்கே, கூறுங்கள், கேட்போம்!” என்று மிக்க ஆவலுடன் கூறினான்.  சேக்கிழார் மாதிரிக்காக ஓர் அடியார் வரலாற்றை விளக்கமாக உரைத்தார். அரசன் ஆனந்தப் பரவசம் அடைந்தான். அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் அரும்பியது. அவன் மற்றவர் வரலாறுகளையும் கூறும்படி வேண்டினான். புலவர் பெருமான் நாள் தோறும் அவ் வரலாறுகளைக் கூறி வந்தார்.  புராணம் பாட வேண்டுதல் அரசன் உண்மைச் சைவன் அல்லவா? அவன் மனத்தில் பெரியதோர் மாறுதல் உண்டாயிற்று. சேக்கிழாரைக் கொண்டே நாயன்மார் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தான். ஆதலின் அவன் எழுந்து அமைச்சரை மார்புறத் தழுவி, “பெரியீர், உம்மை அமைச்சராகப் பெற்ற நான் பாக்கியம் செய்தவனானேன். நம் சைவ சமயத்துக்காக அரும்பாடு பட்ட பெரியோர் வரலாறுகள் ஒரு காவியமாக வர வேண்டும் என்று எனக்கு நெடு நாளாக எண்ண முண்டு. ஆனால் அதற்கு உரிய முயற்சியும் உழைப்பும் அதிகம் வேண்டுமே அப் புணியை மேற்கொள்பவர் யாவர் என்று எண்ணி ஏங்கினேன். என் பிறவி இன்று பயன் பெற்றது. தாங்களே அடியார் வரலாறுகளை ஒரு புராண மாகப் பாடித் தருதல் வேண்டும். சைவ உலகம் நல்வழிப்பட என்றென்றும் தங்கள் பெயர் இருக்கத் தக்கவாறு திருத்தொண்டர் புராணம் பாடி அருளுக!” என்று வேண்டினான்.   தில்லையை அடைதல் சேக்கிழார், "பெருமானே, நான் தில்லைப் பெருமான் அருளைப் பெற்றுப் பாட முயல்வேன். நான் தில்லையில் இருந்தே அவ்வேலையை முடிப்பேன்!” என்றார். உடனே அரசன் தில்லையில் இருந்த மாளிகை ஒன்றில் அமைச்சர்க்கு வேண்டிய வசதிகளைச் செய்வித்தான். நல்ல நாளில் சேக்கிழார் அரசனிடமும் இளவர்சனிடமும் விடைபெற்றுத் தில்லையை அடைந்தார். அரசன் தயாரித்து வைத்த அழகிய மாளிகையில் எல்லா வசதிகளுடனும் தங்கினார்.  11. பெரிய புராண அரங்கேற்றம்   தில்லைவாழ் அந்தணர் தில்லை, சைவ உலகத்தில், சிறந்த தலமாகக் கருதப் பட்டது. அந்தத் திருத்தலத்தில்தான் நடராஜப் பெருமானைப் பூசிக்க மூவாயிரம் குருக்கள் இருந்தனர். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்; சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள். சோழ அரசர்கள் அவர்களைக் கெளரவமாக நடத்தி வந்தார்கள். அவர்கள் தில்லைவாழ் அந்தணர் எனப் பெயர் பெற்றனர்.  தில்லை நகரம் தில்லை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாகச் சைவத்திற்குப் பெயர் பெற்ற தலம் ஆகும். பல்லவ அரசர் அதனை அலங்காரப் படுத்தினர். நகரத்தைச் சுற்றி மதில் எழுப்பப்பட்டு இருந்தது. அந்த நகரம் இன்றுள்ளதை விடப் பல கி. மீட்டர் சுற்றளவு உடையதாக இருந்தது. இராஜேந்திரன் அமைத்த கங்கைகொண்ட சோழபுரம் தில்லைக்கு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. அதனால் இராஜேந்திரன் காலம் முதல் தில்லை மிக்க சிறப்புப் பெற்றது. அநபாயன் பாட்டனான முதற் குலோத்துங்கன் காலத்தில் கடல்வரை நல்ல பாதை போடப்பட்டது. கடற்கரையில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. சுவாமி அங்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும்பாலும் நாள் தோறும் விசேஷமான பூஜைகள் நடைபெற்றன. அநபாயன் தந்தையான விக்கிரம சோழனும் அநபர்யனும் செய்த திருப்பணிகள் முன்பே கூறப் பட்டன அல்லவா? ஆகவே, சேக்கிழார் காலத்தில் தில்லை மெய்யாகவே ‘பூலோக கயிலாயம்’ என்று சொல்லத் தக்க முறையில் விளங்கியது.  சேக்கிழார் வேண்டுகோள் இத்தகைய தில்லையை அடைந்த அமைச்சர் பெருமான் நல்ல நேரத்திற் புறப்பட்டுக் கோவிலை அடைந்தார்; விதிப்படி வலம் வந்தார்; திருச் சிற்றம்பலத்தின் முன் நின்று நடராஜப் பெருமானைத் தரிசித்தார். தரிசித்து, “பெருமானே ! பெருமை பொருந்திய நின் அடியர் வரலாறுகளை அடியேன் எவ்வாறு பாடுவேன்! எனக்கு முதல் தந்து அருள்க!” என்று வேண்டி நின்றார்.  ‘உலகெலாம்’  அவ்வமயம் "உலகெலாம்" என்ற சொற்றொடர் அவர் காதிற் பட்டது. சேக்கிழார் அதனை இறைவன் தந்ததாக எண்ணி, அதனையே முதலாகக் கொண்டு, தமது நூலைப் பாடத் தொடங்கினார்.  “உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்  நிலவு வாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்பது கடவுள் வாழ்த்து.  நூல் பாடி முடித்தது சேக்கிழார் கடவுள் வாழ்த்தை முதலாகக் கொண்டு நூல் பாடத் தொடங்கினார். ஒரு வருட காலம் தில்லையில் தங்கி நூலைப் பாடி வந்தார். தமக்கு அவ்வப்பொழுது உண்டான சந்தேகங்களைத் தில்லை வாழ் அந்தணர் முதலிய பலவூர்ப் பெரியோர்கட்கு ஆட்களை அனுப்பித் தீர்த்துக் கொண்டார்; இராப்பகலாகப் புராணம் பாடுவதை மேற்கொண்டார்; ஓராண்டு முடிவில் திருத் தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார்.  நூல் அரங்கேற்றம் அமைச்சர் பெருமான் நூலைப் பாடி முடித்தார் என்பதை அரசர் பெருமான் கேள்விப்பட்டான், நூல் அரங்கேற்றம் செய்ய ஒரு நாளைக் குறிப்பிட்டான். தமிழ் நாட்டுப் புலவர்-சைவப் பெருமக்கள். சிற்றரசர் முதலியோருக்கு ஒலைகளைப் போக்கினான். அரங்கேற்றத்திற்கு உரிய நாளில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சபை கூடியது.[குறிப்பு 1]  நடராஜப் பெருமானது உருவச் சிலை அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மன்னர் மன்னனான அநபாயன் நடு நாயகமாக வீற்றிருந்தான். அவன் அருகில் இளவரசன் இராஜராஜன் இருந்தான். அரசனுக்கு மறு பக்கத்தில் அவைப் புலவரான ஒட்டக்கூத்தர் இருந்தார். ஒரு பக்கம் சைவப் பெருமக்கள் கூடி இருந்தனர். ஒரு பால் புலவர்கள் குழுமி இருந்தனர் ; ஒரு மருங்கில் சிற்றரசர் திரண்டு இருந்தனர்.  சேக்கிழார் பெருமான் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் ஒரு சிறிய மேசை இடப்பட்டிருந்தது. அதன் மீது திருத்தொண்டர் புராண நூல் வைக்கப் பட்டிருந்தது. அவரது சிவ வேடம் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தது. அப் பெருமான் குறித்த நேரத்தில் மேற்சொன்ன கடவுள் வாழ்த்தைப் பாடி, நூலை அரங்கேற்றம் செய்யலானார்.  அவர் தமக்கு முன் இருந்த நூல்களுடன், தம் காலத்தில் இருந்த பெரியோர்களைக் கேட்டுப் பல செய்திகளைச் சேகரித்தார் என்று முன் சொன்னோமல்லவா? அந்தப் பெரியோர்கள் தாம் சொன்ன குறிப்புகள் சேக்கிழார் பாடிய நூலில் இருந்ததைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். சேர- சோழ-பாண்டியர் வரலாறுகள் ஒழுங்காகப் பிழையின்றிக் கூறப்பட்டு இருந்ததால் அம் மரபுகளைச் சேர்ந்த அரசர்கள் மன மகிழ்ச்சி கொண்டார்கள். நூல் முழுவதும் சிவன் அடியார் பெருமையே பேசப்பட்டு இருந்ததால் சைவப் பெரியார் மனம் களித்தனர். காவிய இலக்கணம், செய்யுள் இலக்கணம் முதலிய இலக்கண-இலக்கியப் பண்புகள் நிறைவுற்று இருந்ததைக் கண்ட புலவர் பெருமக்கள் அந்நூலினைப் பாராட்டினார்கள். இங்ஙனம் பல வகைப்பட்ட தமிழ் நாட்டுப் பேரறிஞர் முன்னிலையில் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  அரச வரிசைகள் அநபாயன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் சேக்கிழாரையும் அவர் பாடிய புராணத்தையும் யானை மீது ஏற்றித் தில்லைப் பிரான் திருக்கோயிலை வலம் வரச் செய்தான். தான் சேக்கிழார் பின்னிருந்து கவரி வீசி மகிழ்ந் தான். அரண்மனையை அடைந்ததும் அவருக்குத் "தொண்டர் சீர் பரவுவார்" என்ற பட்டத்தையும் விலை மதிப்பற்ற ஆடை அணிகளையும் தந்தான். பல சிற்றுார்களை வழங்கினான்.  பாலறாடிாயர்க்குப் பதவி அரசன் அவரை நோக்கி, "சைவப் பெரியீர், சைவ உலகம் செய்த நற்பேற்றின் பயனாக வந்த புலவர் மணியே, தாங்கள் இன்று முதல் தவ முனிவராக இருக்க வேண்டுபவர் ஆயினீர். இனி உம்மை அமைச்சராக வைத்திருப்பது பாபம். யான் தங்களிடத்தில் வேலை வாங்குதல் தவறு. தங்கள் மரபு அரசாங்கத்தில் பெயர் பெற வேண்டும்; ஆதலால் தங்கள் அருமைத் தம்பியார் பாலறாவாயர் தொண்டை மண்டலத்தைக் காத்து வரும் மாகாணத் தலைவராக இருக்கக் கடவர். தாங்கள் சிவ ஸ்தல யாத்திரை செய்து கொண்டு, சைவ சமய வளர்ச்சிக்கும் தங்கள் ஆன்ம அமைதிக்கும் உரிய செயல்களில் ஈடுபடலாம்!” என்று அன்பும் பணிவும் தோன்றக் கூறினான்.  சேக்கிழார் தல யாத்திரை சேக்கிழார் பெருமான் அரசன் விருப்பப்படி அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். நாயன்மார் பாடல் பெற்ற ஸ்தலங்கட்கு யாத்திரை சென்றார். அங்கங்குப் பல திருப்பணிகள் செய்தார். தமது பிறந்த இடமாகிய குன்றத்துரில் தங்கித் திருநாகேசுவரப் பெருமானைப் பணிந்து தவம், கிடந்தார்.  சேக்கிழார் சிறப்பு சேக்கிழாரது திருத்தொண்டர் புராணம் இல்லாவிடில் நாயன்மார் வரலாறுகளை நாம் விளக்கமாக அறிய முடியாது; நாயன்மார் காலத்துச் சைவ சமய நிலைமையை நாம் அறிய வழியில்லை. அந்தக் காலத்தில் இந்த நாட்டில் இருந்த பெளத்த சமயத்தைப் பற்றியும் சமண சமயத்தைப் பற்றியும் தெளிவாக அறிய முடியாது. அக்கால உள்நாட்டு-வெளி நாட்டு வாணிகம்-நாட்டு நடப்பு-பலவகைப்பட்ட மக்களுடைய பழக்கவழக்கங்கள், பலவகைப்பட்ட நில வகைகள் முதலிய விவரங்களை உள்ளவாறு உணர முடியாது.  திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் நாயன்மார் காலம், நீங்கள் வரலாற்றில் படிக்கும் பல்லவர் காலம் ஆகும்.[குறிப்பு 2] அந்தக் காலத்துத் தமிழ் நாட்டுச் சைவ-பெளத்த-சமண சமயங்களின் நிலைமையைத் திருத்தொண்டர் புராணத்தைத் தவிர வேறு தமிழ் நூலில் விரிவாகக் காண இயலாது. அக்காலத் தமிழ் அரசர்களைப் பற்றிய ப்ல விவரங்களை இக் காவியத்திற் காணலாம், பல்லவர்-சாளுக்கியர் போர், பல்லவர்-தமிழ் அரசர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், அக்காலத்தில் உண்டான பெரும் பஞ்சங்கள் முதலிய சரித்திர சம்பந்தமான செய்திகளையும் இப்பெரிய நூலில் காணலாம்.  திருத்தொண்டர் புராணத்திற்குப் பெரிய புராணம் என்னும் பெயரும் உண்டு. இந்நூல் எளிய நடையில் பாடப்பட்ட 1253 செய்யுட்களை உடையது. இது தமிழ் மக்களது செல்வம் எனலாம். இது இலக்கியம்-வரலாறு-கலைகள்-சமயங்கள் முதலியவை பற்றிய விவரங்களைக் கூறும் பெருங்காவியம். ஆதலின் நாம் இப் பெரு நூலினைப் படித்து, இதனை மிக்க ஆராய்ச்சியோடு நமக்குப் பாடித் தந்த சேக்கிழார் பெருமானுக்கு நன்றி செலுத்துவோமாக!  சேக்கிழார் திருப்பெயர் வாழ்க செழித்து வாழ்க!!.    ------------------------------------------------------------------------------------------------------------------------------- 1. சிவபெருமான் உணர்தற்கு அருமையானவன; கங்கையையும் பிறைச் சந்திரனையும் முடியில் தரித்தவன்; சோதி வடிவானவன்; சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன்; அப்பெருமானுடைய மலர் போன்ற சிலம்பணிந்த திருவடிகளை வணங்குவோம்.