[] 1. Cover 2. Table of contents சுற்றம் சூழ சுற்றம் சூழ   லாவண்யா ஸ்ரீராம்   lavanya.sriramprabhu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sutram_soozha மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/sutram_soozha This Book was produced using LaTeX + Pandoc பகுதி - 1 சென்னையின் முக்கிய பகுதியில் இருக்கும் பெரிய வீடு. சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோரும் பெரும்புள்ளிகள் என்பதால் அங்கே இருந்த மற்ற வீடுகளும் பெரியவையே. வீடுகளின் வெளிப்பகுதி அமைதியாகவே இருக்க தாமோதரன் வீடு மட்டும் கோலாகலமாக இருந்தது. பெரும் பரபரப்புடன் ஆட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார் மோகன், அந்த வீட்டின் மேலாளர். வீட்டிற்கு என்ன மேலாளர் என்று சந்தேகம் வரலாம். தாமோதரன் தொடங்கிய உணவகம் மற்றும் இனிப்பகம் மட்டுமல்லாமல், அவர் மகன் சுகந்தன் தொடங்கிய மசாலா பொடி, உடனடி சமையல் பொட்டலங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று எல்லாவற்றிலும் மோகனின் மேற்பார்வை இருக்கும். அது மட்டுமில்லாமல், வீட்டின் நிர்வாகத்தைக் கூட மோகன் பார்ப்பதுண்டு. அதற்காக வீட்டு மாதக் கணக்கெல்லாம் பார்ப்பார் என்றில்லை. வீட்டின் விசேஷ நேரங்களில் ஏற்பாடுகளை எல்லாம் மோகன் முன்னின்று செய்வார். இன்றும் அப்படித்தான். இன்னும் இரண்டு நாட்களில் அந்த வீட்டின் பேரப்பிள்ளையின் திருமணம். அலங்காரம், தோரணம், சமையல் என்று ஆட்களை ஏற்பாடு செய்வது, அதற்கான பொருட்கள் வந்துவிட்டதா என்று சரிபார்த்து, வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வது என்று எல்லாம் மோகனின் பொறுப்பு. மோகன் அலைந்து திரிந்து செய்ய வேண்டும் என்று இல்லை. அதற்கான ஒப்பந்ததாரர் எல்லாம் அவர் நன்கு தெரிந்து வைத்திருப்பார். அந்த ஒப்பந்ததாரர்களும், அவர்களின் வேலை ஆட்களும் சரியாகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். மோகனுக்கு உதவியாக இருவர் எப்போதும் இருப்பார்கள். கடைகளிலும் தொழிற்சாலையிலும் மேற்பார்வை செய்து, பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். மொத்தத்தில் தாமோதரனின் வீட்டு மனிதர்களுக்கும் மற்ற வேலையாட்களுக்கும் மோகன்தான் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லலாம். மதியம் மணி இரண்டைத் தாண்டியும் இன்னும் தோட்டத்தைச் சுத்தம் செய்ய ஆட்கள் வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மரங்களையும் செடிகளையும் சீராக வெட்டி, தோட்டத்தை நேர்த்தியாக வைப்பது வழக்கம். இன்னும் அதற்கான கெடு வரவில்லை என்றாலும் இரண்டு நாட்களில் விசேஷம் என்பதால் இன்றே செய்ய வேண்டும். நாளை விருந்தினர்களின் கூட்டம் சேர்ந்து விட்டால் அப்போது எதுவும் செய்ய முடியாது. அதற்கான ஆட்களுடன் தொடர்புகொண்டு பேசும்படி அவரின் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கமலம், தாமோதரனின் மனைவி, “மோகன், அந்தத் தோட்டத்தைக் கொஞ்சம் சரி செய்ய வேண்டும். நாளை ஆட்களை வரச் சொல். அப்படியே இந்த ஹோட்டல் அறைகளை எல்லாம் ஒரு முறை யாரையேனும் அனுப்பி சரிபார்க்கச் சொல். நாளை விருந்தினர்கள் சங்கடப் படக் கூடாது.” என்றார். “தோட்ட வேலைக்கு இப்போதே வந்து விடுவார்கள். நாளை வீட்டில் நிறைய ஆட்கள் இருக்கும்போது, ஆங்காங்கே வெட்டிய தளைகளும் இலைகளும் இருந்தால் நன்றாக இருக்காது என்று இன்றே வரச் சொல்லிவிட்டேன். ஹோட்டல் விஷயம் வீட்டுக்குப் போகும் முன் நானே பார்த்துவிடுகிறேன். வேறெதுவும் செய்யவேண்டுமா அம்மா?” என்றார் மோகன். வெறும் வார்த்தைக்காகவோ, இல்லை முதலாளி அம்மா என்ற முறையிலோ அப்படி அழைக்கவில்லை. மோகன் கமலத்தை அன்னையாகவே நினைத்தார். “உன்னிடம் சொல்ல வேண்டியது இல்லை. நீயே எல்லாம் செய்து விடுவாய்! வேறேதோ சொல்ல வந்தேன்…” என்று யோசித்துக் கொண்டிருக்க, சாந்தி, சுகந்தனின் மனைவி, தாமோதரன் கமலத்தின் மருமகள் வந்தாள்,“அண்ணா ! நாளை சில வாடகைக் கார்களை ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கும் ! நாளை திடீரென்று சொன்னால் சிரமம் என்று இப்போதே சொல்கிறேன்.” “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!” என்றார் கமலமும். ஏற்கனவே மூன்று கார்கள் அந்த வீட்டிலிருந்தும், உறவினர்களை அழைக்க இன்னும் சில கார்கள் தேவைப் படலாம். சிலர் ரயிலிலும், சிலர் விமானத்திலும் வருகிறார்கள். இந்த வீட்டு முக்கியமான உறவினர்கள் எல்லோரும் வந்து விட்டபோதிலும், சம்பந்தி வீட்டுக்காரர்கள் பலர் நாளைக் காலையிலிருந்து தான் வரத் தொடங்குகிறார்கள். ஓரளவு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார் மோகன். அதையே சொல்ல, அங்கே வந்த பானுமதி தாமோதரனின் மகள், “நாளை என் மகன் திருமணத்தில் எந்தக் குறையும் வந்து விடக் கூடாது. எல்லாம் சொகுசுக் கார்களாக இருக்க வேண்டும். நீ வெறும் டாக்ஸியை புக் செய்து வைத்திருக்கப் போகிறாய்?” என்றாள் ஏளனமாக. பானுமதியின் இளைய மகன் ரவீந்தருக்குத்தான் திருமணம். வீட்டில் மற்றவர்கள் எல்லோரும் மோகனை வீட்டில் ஒரு நபராகப் பார்த்தாலும், பானுமதிக்கு மோகன் அந்த வீட்டில் வேலை செய்பவர் மட்டுமே. “பெண், பெண்ணின் பெற்றோருடன் வருபவர்கள் ஏழு பேர். அவர்கள் வரும் வேளையில் நம் வீட்டுக் கார்களையே அனுப்பலாம். அவர்களை வாடகைக் கார் வைத்து அழைத்து வர வேண்டாம் என்று நினைத்தேன். பிறகு ரயிலில் மதியம் வரும் மற்ற ஐந்து பேருக்கு இன்னோவா. முடிந்த அளவுக்கு நம் காரைப் பயன்படுத்தும் படி திட்டம். வீட்டில் இருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் இரண்டு வாடகைக் கார்கள் தயாராக எப்போதும் நிற்கும். புக் செய்திருக்கும் எல்லா வண்டிகளும் நீங்கள் சொன்னது போல் ஆடம்பர சொகுசு வண்டிகள் தான்.” என்றார் பொறுமையாக. தாமோதரன் மகன் சுகந்தன் தொழிலுக்கு வரும் முன்னரே, மோகன் தாமோதரனின் ‘அன்னம்’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மோகனின் பொறுமை, செயல்திறன், சாமர்த்தியம் எல்லாம் தாமோதரனை மிகவும் கவர்ந்தது. அப்படியே, மோகனின் நற்பண்புகள், குடும்பத்தில் ஒருவராக எல்லோரையும் நினைக்கவைத்தது. மூன்று தலைமுறையினரும் மோகனிடம் குடும்ப உறுப்பினராகவே பழகினார்கள். பானுமதியைத் தவிர. மோகன் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் பானுமதி திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டாள். அவள் புகுந்த வீட்டில் ஆட்களின் நிலை பார்த்துப் பழகுவார்கள். பானுமதியும் அதையே செய்யத் தொடங்கினாள். அன்று செய்ய வேண்டிய எல்லா வேலைகளை முடிக்க இரவாகி விட்டது. தாமோதரனிடம் சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அவரை நாடிச் சென்றார் மோகன். சுகந்தனும் தந்தை தாமோதரனிடம் பேசிக்கொண்டிருந்தார். “என்ன! வேலை எல்லாம் முடிந்ததா?” என்று பெரியவர் கேட்க, முடித்த வேலைகளை எல்லாம் சொல்லிவிட்டு, நாளை செய்ய வேண்டியவற்றையும் பட்டியலிட்டார். “உன் வீட்டு விசேஷ வேலைகளைக் கூட இப்படிப் பார்த்திருக்க மாட்டாய். பல நாட்களுக்குப் பிறகு இங்கே நடக்கும் நல்ல காரியம். நீ இல்லை என்றால் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கும்.” என்றார் தாமோதரன். “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார்! நான் செய்யவில்லை என்றாலும், நம் நிறுவனத்தில் பணி செய்பவர்கள் எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு செய்திருப்பார்கள்.” என்றார் மோகன் தன்னடக்கத்துடன். “செய்திருக்கலாம்! ஆனால் நாங்கள் சொல்லும் முன் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் திறமை இங்கே உங்கள் ஒருவருக்கு தான் இருக்கிறது.” என்றார் சுகந்தன். “அப்படிச் சொல்! அப்படியே உன் குடும்பத்தில் எல்லோரையும் நாளையே அழைத்து வந்து விடு! வினோத் இங்கே தானே இருக்கிறான்?” என்றார் பெரியவர். “வினோத் பயிற்சிக்காக டெல்லியில் இருக்கிறான். இடையில் விடுமுறை கிடைக்கவில்லை என்றான். ஒரு நாள் விடுமுறையில் டெல்லியிலிருந்து வந்து செல்வது கடினமாக இருக்கும். இப்போது வேலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது அவனுக்கு.” “என்ன மோகன்! நம் வீட்டு விசேஷத்துக்கு இப்படிக் காரணம் சொன்னால் எப்படி?” என்று பெரியவர் கேட்க, “அப்பா! மோகன் என்ன செய்வார்? இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் வேலைகள் இப்படித்தான் இருக்கும்.” என்று தந்தையைச் சமாதானம் செய்தார் சுகந்தன். வினோத் வெளி நிறுவனத்திற்கு பணிக்குச் செல்வதாகச் சொன்னபோது முதலில் பெரியவருக்கு வருத்தமே! மோகனின் தந்தை இதே குடும்பத்தில் தான் கணக்கராக வேலை செய்தார். அவருக்குப் பின், தாமோதரன் மோகனுக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். பல வருடங்கள் இங்கே இருந்து படிப்படியாக மேலாளர் என்ற பொறுப்பை அடைந்த மோகன், மகனை வெளியே வேலைக்கு அனுப்புவார் என்று நினைக்கவில்லை. ஆனால் சுகந்தன் தான் ‘வழி வழியாக நம் வீட்டில் தான் அவர்கள் இருக்க வேண்டுமா? உலகில் மற்றதையும் தெரிந்து கொள்ளட்டும்!’ என்று தந்தையை சமாதானப்படுத்தினார். அதுவும் கல்லூரியில் படிக்கும்போதே தேர்வாகி, தந்தை முப்பது வருட அனுபவத்தில் வாங்கும் சம்பளத்தைப் பணியின் தொடக்கத்திலேயே வினோத் பெற்றிருந்தான். நமக்குக் கீழே இருப்பவன் மகன் இவ்வளவு சம்பாதிக்கிறான் என்ற வயிற்றெரிச்சல் எல்லாம் தாமோதரனுக்கு இருந்ததில்லை. அவரின் ஒரே எதிர்பார்ப்பு, தனக்கு மோகன் இருந்ததுபோல், சுகந்தனுக்கு வினோத் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். மற்றபடி வினோத்தின் திறமையைத் தன் பேரப்பிள்ளைகளிடம் சொல்லி, அவர்களையும் வினோத்தைப் போல் படிக்க வேண்டும் என்பார். மகன் வழி பேரப்பிள்ளைகளிடம் மட்டும் தான். மகள் பானுமதியின் இரு மகன்களும் வயதில் பெரியவர்கள். இருவரும் அவரவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். பெரியவன் சுரேந்தர் தந்தையின் தொழிலைச் செய்கிறான். அவனுக்குத் திருமணம் கூட முடிந்து சில ஆண்டுகள் ஆகின்றன. இளையவன் ரவீந்தர் அவனாக ஒரு தொழில் தொடங்கிச் செய்கிறான், சிறப்பாகவே! இப்போது அவன் திருமணம் தான் நன்றாக நடக்க வேண்டும் என்று வீட்டில் எல்லோரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பகுதி - 2 மோகன் வீட்டை அடையும் போதே மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. மனைவி நீலா இன்னும் தூங்காமல் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். மோகனின் வண்டிச் சத்தம் கேட்கவும், வாயில் கதவைத் திறந்து விட்டாள். “நீ இன்னும் தூங்கவில்லையா? நான் தான் தாமதம் ஆகும் என்று சொல்லியிருந்தேனே!” என்றார் மனைவியைப் பார்த்து. “தூக்கம் வரவில்லை! நீங்கள் வேலைப் பரபரப்பில் சரியாகச் சாப்பிட்டீர்களா? தோசை ஏதும் ஊற்றட்டுமா?”. “இல்லை! வேண்டாம்! இரவு உணவை முடித்துக்கொண்டு தான் வந்தேன்.” என்று உள்ளே வந்தவர், சோபாவில் அமர்ந்தபடி, மகள் சுரபி இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்க, “என்னடா இன்னும் தூங்கவில்லை? நாளை கல்லூரிக்குப் போக வேண்டாமா?” என்றார். “அப்பா! நாளை சனிக்கிழமை. எனக்குக் கல்லூரி விடுமுறை. உங்கள் வேலையில் என்னைப் பற்றி உங்களுக்கு எல்லாம் மறந்துவிடுமே.” என்றாள் மகள். “காலையிலிருந்து ஒரே வேலை! நாளையும் மறுநாளும் வேலை இருக்கிறதா! அதுதான் இன்று வெள்ளிக்கிழமை என்பதைக் கூட மறந்துவிட்டேன்.” மோகனுக்கு ஞாயிறு விடுமுறை தான். ஆனால் ஞாயிறு அன்று தான் திருமணம் என்பதால் மோகன் நிச்சயம் அங்கே சென்று தான் ஆக வேண்டும். இந்த ஒரு வார வேலைப் பரபரப்பில் மோகனுக்கு மற்றதெல்லாம் மறந்து தான் விட்டது. தந்தை சோர்வாக அமர்ந்திருக்க, அவர் தோள்களைப் பிடித்து விட அவர்பின் சென்று நின்றாள் சுரபி. மெல்ல அவர் தோள்களைப் பிடித்த படி, “உங்களை விட்டால் அங்கே வேலை செய்ய யாருமே இல்லையா? காலையில் ஏழு மணிக்குச் சென்றீர்கள். இப்போது மணி பதினொன்று முப்பது” என்றாள் மகள். அதற்குள் கணவனுக்கு ஒரு கிளாசில் பால் கொண்டுவந்து கொடுத்துவிட்டு," பேசியது எல்லாம் போதும், எல்லோரும் படுக்கலாம். நாளையும் உன் அப்பாவுக்கு வேலை அதிகமாக இருக்கும்." என்றாள் நீலா. “குட் நைட்” என்று மகள் உள்ளே செல்ல, கணவனும் மனைவியும் பேசிக்கொண்டனர். “காலையில் எப்போது கிளம்ப வேண்டும்?” “இன்றுபோல் தான். நாளை நீங்களும் வருகிறீர்கள் தானே!” “நாங்கள் எதற்கு? திருமணத்தின்போது வந்தால் போதாதா?” “பெரியவர் உங்களை நாளை அழைத்து வரச்சொன்னார். வினோத் வர முடியாது. நீங்களாவது வந்து அங்கே இருங்கள். கமலம் அம்மாவுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்கும். கல்யாணம், மண்டபத்தில் என்றால் வேலை கொஞ்சம் குறைந்திருக்கும். வீட்டிலேயே என்பதால் எல்லோரும் அலை மோதுகிறார்கள்.” என்றார் மோகன். கமலத்திற்கு உதவி என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லோரும் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்க, அருகில் ஒருவர் இருந்து, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அவருக்குப் பேச்சுத் துணையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். “அதுதான் எனக்கும் ஆச்சரியமே! இத்தனை வசதி வைத்துக் கொண்டு ஏன் வீட்டில் செய்ய வேண்டும்! அதுவும் பெரியவர் மகள் வழிப் பேரன் திருமணத்தை ஏன் இங்கே இவர் வீட்டில் எளிமையாக நடத்துகிறார்கள்.” “எல்லாம் ரவீந்தர் சொன்னதால் தான். ஆடம்பரத் திருமணம் கூடாது என்று விட்டான். முதலில் கோயிலில் திருமணம் செய்தால் போதும் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். பெண் வீட்டில் தான் மறுத்து விட்டார்கள். அவர்களுக்கு ஒரே மகள். நல்ல விமர்சையாகச் செய்ய வேண்டும் என்று விருப்பப்படவும், பெரியவர் வீட்டிலேயே கொஞ்சம் ஆடம்பரமாகச் செய்யலாம் என்று செய்கிறார். பெண் வீட்டார் இங்கே மதுரையில் இருக்கிறார்கள். பெரியவர் மகள் ஹைதராபாத்தில். இருவருக்கும் இங்கே சௌகரியமாக இருக்கும் என்று இங்கேயே எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள்.” “அந்த ரவீந்தர் ஏன் ஆடம்பரம் வேண்டாம் என்கிறான்? அவன் அண்ணன் திருமணம் வெகுவிமர்சையாகச் செய்தார்களே!” " அது தான் ரவீந்தரின் தனித்துவம். ஒரு நாள் கூத்துக்குக் கடனை வாங்கியேனும் விமர்சையாகச் செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் காலத்தில், கோடிக் கணக்கில் சொத்தை வைத்துக் கொண்டு, வீண் விரயம் கூடாது என்று விட்டான்." “நல்ல விஷயம் தான். சரி நீங்கள் சென்று படுங்கள். நாளை நாங்கள் வருவதானால் ஆடைகளை எல்லாம் இப்போதே எடுத்து வைக்க வேண்டும்.” என்று சொல்லிவிட்டு நீலா அவள் வேலையில் மூழ்கினாள். தாமோதரன் அவர்கள் குடும்பத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று நன்றாக அறிவாள் நீலா. கணவன் படிப்புக்கு உதவியது, நாத்தனாரின் திருமணத்திற்கு உதவியது. இப்போது அவர்கள் இருக்கும் வீடு இருக்கும் இடம் கூடத் தாமோதரன் கொடுத்ததே. பல ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்யும் குடும்பங்களுக்கு அவர் குடும்ப நிலத்தில் வீட்டு மனையாகப் பிரித்துக் கொடுத்தார். மோகனின் தந்தை தாமோதரனிடம் தான் வேலை செய்துவந்தார். அவர் பணியில் இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் பக்கவாதத்தால் படுக்கையில் விழுந்தார். கல்லூரியில் இறுதி ஆண்டில் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், வேறு வழியின்றி மோகன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஏற்கனவே மோகனின் ஒரு சகோதரிக்குத் திருமணம் முடித்திருந்தது. இன்னொருவருக்குத் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. மோகனால் எப்படிச் சமாளிக்க முடியும் என்று மலைத்திருந்தபோது, தாமோதரன் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். சொன்னதை செய்தாரும் கூட. மோகன் படிப்பைத் தொடரும் படி சொன்னார். அதுவரை வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுத்தார். மோகன் படிப்பை முடித்ததும், ஒரு வேலையைப் போட்டுக் கொடுத்தார். அவருக்கான நன்றியைத் தெரிவிக்க மோகன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவருக்கு இட்ட பணிகளை எல்லாம் நேர்த்தியாகச் செய்து முடிக்க, தாமோதரனுக்கு மோகன் மேல் உள்ள நம்பிக்கை பெருகியது. மோகன் வேலையில் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே தாமோதரனின் மகன் சுகந்தன் தொழிலைத் தொடங்கினார். சுகந்தனுக்கும் பல விஷயங்களில் மோகன் உதவியாக நின்றார். குடும்ப விஷயங்களைக் கூட மோகனிடம் கலந்து ஆலோசிக்கும் அளவுக்குக் குடும்பத்திற்கே நெருக்கமானார்கள். சுகந்தனின் பிள்ளைகள் அனு மற்றும் அர்ஜுன், மோகன் நீலாவை மாமா அத்தை என்று தான் அழைப்பார்கள். பகுதி - 3 தந்தையும் தாயும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டேதான் இருந்தாள் சுரபி. தந்தை ரவீந்தரைப் புகழ்ந்தது சுரபிக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ’அப்பா எப்போதும் அப்படித்தான். தாமோதரனின் குடும்பத்தில் யாரையும் குறை கூற மாட்டார். உலகிலேயே அவர்கள் சிறந்தவர்கள். அதை மறுக்கச் சுரபியிடமும் காரணம் இல்லை. ஆனால் இந்த ரவீந்தர் பற்றி அப்பா சொன்னது சந்தேகமே! ரவீந்தரை அவள் சிலமுறை தான் பார்த்திருக்கிறாள். ஆனால் அவன் அண்ணனை, அந்தச் சுரேந்திரனை நன்றாகவே தெரியும். அவன் பிள்ளைப் பருவம் இங்கே தாமோதரனின் வீட்டில் தான். வினோத்தும் சுரபியும் தாமோதரன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் சுரேந்தரைச் சந்தித்து இருக்கிறார்கள். திமிர் அவனுக்கு அதிகம். வீட்டில் எல்லோரும் மோகனை மரியாதையுடன் நடத்தும் போதும், சிறிய வயதிலேயே, இவர்கள் தந்தையை ‘மோகன்’ என்று பெயர் சொல்லியும், ஒருமையிலும் தான் அழைப்பான். இன்று வரை அது அப்படியேதான் தொடர்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் பானுமதி. சுரேந்தர், ரவீந்தரின் அன்னை. மோகனை ஒத்த வயதில் அல்லது சற்று சிறியவளாகக் கூட இருக்கலாம். அவள் எப்போதும் மோகனை நடத்தும் விதம் வேறு மாதிரிதான். அவள் சகோதரன் சுகந்தன், மோகனை நடத்துவது போல் இல்லாமல் பெரியவர் தாமோதரன் காட்டும் கம்பீரத்தை மோகனிடம் காட்டுவாள். தாமோதரன் வீட்டில் இருக்கும் மற்றவர்கள், வயதில் பெரியவர்களை ஏதேனும் உறவைக் கொண்டு அழைப்பார்கள். அது வேலை ஆட்களாக இருந்தாலும் சரி. ஆனால் அந்தச் சுரேந்தர் மட்டும் விதிவிலக்கு. அதைப் பானுமதியும் கண்டித்ததில்லை. அதுமட்டுமின்றி சுரேந்திரன் அத்தியாவசியம் கூட ஆடம்பரமாகவே இருக்கும். வீட்டில் பலவகை உணவு செய்து வைத்திருந்தாலும், சுவை பிடிக்கவில்லை என்று ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து உணவை வரவழைப்பான். ஒரு ஐஸ்கிரீமுக்குப் பல மணி நேரம் ஓட்டுநருடன் காரில் அலைவான். இதெல்லாம் என்றாவது நடக்கும் கூத்து இல்லை. வாரத்தில் இரண்டு முறையேனும் இதுபோல் செய்வான். பானுமதி பெரிய மகனைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு கணவருக்குத் தொழிலில் உதவி செய்துகொண்டிருந்தாள். பிள்ளை தாயைப் பிரிந்திருக்கிறான் என்று எல்லோரும் அவன் கேட்பதைத் தட்டாமல் செய்தார்கள். வளர்ந்ததும் அவன் மாறி விடவில்லை. இன்னும் அதிகமாகவே செய்தான். சுரபியே இதையெல்லாம் பார்த்திருக்கிறாள். பள்ளி விடுமுறையில் சுகந்தனின் பிள்ளைகளுடன் விளையாட என்று வினோத்தையும் சுரபியையும் மோகன் பெரியவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, அந்தச் சுரேந்தர் செயல்களைக் கவனித்திருக்கிறாள். திரும்பி வந்ததும் தந்தையிடம் கேட்டால், ‘சிறு வயதில் அப்படி இப்படி இருப்பதுதான். எல்லாம் பெரியவர்கள் ஆனால் சரியாகிவிடும்.’ என்பார். இதற்கெல்லாம் பானுமதி தான் காரணம் என்று நீலா சொல்வாள். “பெரிய இடத்துப் பிள்ளைகள் இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். சுரேந்தர் கொஞ்சம் ஆடம்பரமாக இருக்கப் பழகிவிட்டான். பெரியவர் வீட்டுப் பிள்ளைகள் நிச்சயம் நன்றாக வருவார்கள்” என்பார் மோகன். அந்தச் சுரேந்தரின் தம்பி எளிமையை விரும்புகிறானா? சந்தேகமே! ஏன் ஒருவர் செய்வதால், குடும்பத்தில் மற்ற எல்லோரையும் தவறாக எண்ண வேண்டும் என்று எண்ணினாள் சுரபி. என்ன யோசித்தாலும் அந்த ரவீந்தர் மீது மதிப்பு வர மறுத்தது. அதற்கு அவர்கள் சந்திப்பும் ஒரு காரணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அது. சுரபியின் பள்ளிப் படிப்பு முடிந்து விடுமுறை நாட்கள். மோகனுக்கு ஒரு சிறு விபத்தில் காலில் அடி பட்டுவிட்டது. பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் ஒரு பாதத்தில் தசை புரண்டு விட்டது. ஒரு வாரம் அதிகம் நடக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அப்போது ஏதோ ஆடிட்டிங் என்று மோகனுக்கு வீட்டில் இருக்க முடியவில்லை. பெரியவர் ஓய்வு எடுக்கச் சொன்னபோதிலும், சுகந்தனுக்கு மோகனின் உதவி தேவைப் பட்டது. அதனால் ஒரு இரண்டு தினங்கள் மட்டும் கணக்கு வழக்கைச் சரி பார்க்க வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். மோகனால் தன் வாகனத்தை ஓட்ட முடியாது என்று வீட்டிலிருந்து காரை அனுப்புவார் சுகந்தன். ஒருநாள் அப்படி அவரால் அனுப்ப முடியவில்லை. அதற்குக் காரணம் சுரேந்தர் என்பது வேறு விஷயம். நண்பர்களுடன் சுற்ற வீட்டிலிருந்த கார்களையும் எடுத்துச் சென்றுவிட்டான். வேறு வழி இல்லாமல் ஆட்டோ அல்லது டாக்ஸி பிடிக்கச் சென்றால், காலை வேளையில் அதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. வினோத் அப்போது கல்லூரி விடுதியிலிருந்து படித்துக்கொண்டிருந்தான். சுரபியை அவளின் இருசக்கர வாகனத்தில் கொண்டு விடும்படி கேட்டார். மகளும் அப்படியே செய்ய, வீட்டுக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் அவளை விடாமல் பிடித்துக் கொண்டார் கமலம். அனுவும் அர்ஜுனும் அவளுடன் விளையாட வேண்டும் என்று கேட்கவும், சரி என்று விட்டாள். அவ்வப்போது செய்வதுதான். அவர்களுடன் விளையாடுவது, படம் பார்ப்பது எல்லாம் சுரபிக்குப் பிடித்ததே. அப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது தான் ரவீந்தரைப் பார்த்தாள். தாமோதரனின் வீடு மிகப் பெரியது. இரண்டு தளங்கள். பெரிய ஹாலிலிருந்து செல்லும் படிக்கட்டுமேல் தளத்தில் இருக்கும் ஹாலில் முடியும். அந்த அறையைச் சுற்றி நிறைய அறைகள். மேல் தளத்தின் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள் மூவரும். ஏதோ விளையாடிக்கொண்டிருந்தபோது தான் ரவீந்தர் அவர்களைக் கடந்து சென்றான். யாரோ பின்னால் நிற்பது போல உணர்ந்து திரும்பியவள், ஒரு நெடிய கருப்பு உருவம்போல் தெரியவும் “ஐயோ” என்று அலறி விட்டாள். பேய் பிசாசு என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று நினைக்கும் சுரபிக்கு, அவள் எண்ணம் பொய்யோ என்று தோன்றும் வண்ணம் இருந்தது. அனுவும் அர்ஜுனும் “என்ன அக்கா! என்ன ஆச்சு?” என்றார்கள். ஐயோ! என்று அலறியபடி திரும்பியவளுக்கு மீண்டும் அந்த உருவம் நின்ற இடத்தில் பார்க்கப் பயம். இவள் பார்த்தது உண்மையா, இல்லை இவள் கற்பனையா? அந்த உருவம் இவள் கண்ணுக்கு மட்டும் தான் தெரிந்ததா என்று அறிந்துகொள்ள, “அங்கே சென்றது யார்?” என்று வினவினாள். “ரவி மாமா! ஏன்? நீங்கள் எதற்கு அலறினீர்கள்?” என்றான் அர்ஜுன். சுரபியை விட இரண்டு வயது குறைந்த அர்ஜுன் மற்றும் மூன்று வயது குறைந்த அனுவின் முன் அவள் பயத்தைச் சொல்லக் கூச்சமாக இருந்தது. ஆனால் பதில் சொல்ல வேண்டுமே! “ஒன்றும் இல்லை! திரும்பியபோது கழுத்து சுளுக்கி விட்டது.” என்று சமாளித்தாள் சுரபி. “ரொம்ப வலிக்கிறதா?” என்றாள் அனு. “இல்லை!” என்று தலையை லேசாகச் சுழற்றி விட்டு, “இப்போது சரியாகி விட்டது” என்று சமாளித்தாள். ரவி என்றதும் அவளுக்கு யார் என்று புரிந்துவிட்டது. பானுமதியின் இளைய மகன். ஆனால் அவன் ஏன் இப்படி இருக்கிறான்? ஒருவேளை இந்த வீட்டில் இல்லாமல் வேறு எங்கேனும் பார்த்தபோது இவனைப் பானுமதியின் மகன் என்று சொன்னால் அவள் நம்பி இருக்க மாட்டாள். பானுமதியின் கம்பீரம், உடையின் நேர்த்தி, எப்போதும் பளிச்சென்று தோற்றம் என்று ஒன்று கூட இவனிடம் இல்லை. பானுமதியின் கணவர் இறந்துவிட்ட போதும், அவர் செய்து வந்த தொழிலைத் தனியாக நின்று பல ஆண்டுகள் செய்தாள். சமீப காலமாகத் தான் சுரேந்தர் பாதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். இவன் அண்ணன் சுரேந்திரன் கூட, பானுமதியை அப்படியே பின்பற்றுவான். சிறு சுருக்கம் கூட இல்லாத ஆடை எப்போதும் பளிச்சென்ற முகம், படப்பிடிப்புக்குத் தயாராக இருக்கும் ஒரு கதாநாயகன்போல. அதற்காகச் சுரேந்தரைக் கதாநாயகன் என்றெல்லாம் சுரபி நினைக்கவில்லை. எப்போதும் செயற்கையாக ஒரு புத்துணர்ச்சியைக் காட்டுவதுபோல் இருக்கும் அவன் அலங்காரம். என்ன செய்தாலும் ஒரு சோர்வை அவன் கண்கள் காட்டிவிடும். இந்த ரவியின் முகத்தை அவள் பார்க்கவில்லை என்றாலும், அவன் கடந்து சென்றபோது தெரிந்ததே சற்றும் இந்த வீட்டிற்குப் பொருந்தாது, கலைந்த நீளமான முடி. ஒரு போனி டைல் கூடப் போடலாம். முகம் இருப்பதே தெரியாத தாடி மீசை. சற்றே மங்கி, பல சுருக்கங்களுடன் கசங்கிய இருந்த கருப்பு உடை. பேய் இப்படி இருக்கலாம் என்று உதாரணம் கூடச் சொல்லலாம். அதற்குப் பின் அவனைச் சந்தித்தாக நினைவில் இல்லை. அவனுக்கு இன்னும் இரு தினங்களில் திருமணமாம். இப்போதேனும் அந்தத் தலைமுடி, தாடியைச் சரி செய்திருப்பானா? என்று யோசித்தபடி உறங்கி விட்டாள் சுரபி. பகுதி - 4 காலையில் எழுந்ததும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அன்னை சொல்ல, சுரபி தயாராகிப் பெற்றோருடன் சென்றாள். அங்கே இருந்தவர்கள் பலரைத் தெரியும் அவளுக்கு. வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நீலா, சுரபி இருவரையும் கமலம் வரவேற்று, “இப்போது தான் வருவதா? நமது வீட்டு விசேஷம் என்றால் முன்பே வர வேண்டும் என்று தெரியாதா?” என்றார். அங்கே எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டு இருந்தார்கள். பார்லரிலிருந்து சில பெண்கள் வந்து மெஹந்தி இட்டுக்கொண்டு இருக்க, கையில் மருதாணி வைத்துக் கொண்டு இருந்த அனு சுரபியைக் கண்டதும், “ஹை! சுரபி அக்கா, நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்.” என்றாள். அவள் அருகில் அமர்ந்திருந்த சுரேந்திரன் மனைவி வித்யா, உதட்டை லேசாகப் பிதுக்கி, வேறெங்கோ பார்த்தாள். இதுபோல் வித்யா அலட்சியமாக நடந்து கொள்வது முதல் முறை இல்லை என்பதால் அவளைப் பொருட்படுத்தாமல் அனுவின் இன்னொரு பக்கம் சென்று அமர்ந்தாள் சுரபி. “எனக்கு முடிந்ததும், சுரபி அக்காவுக்கு” என்றாள் அனு. “இன்னும் நம் வீட்டு ஆட்களே நிறைய இருக்கிறார்கள்” என்றாள் வித்யா. வித்யாவுக்குச் சுரபியை அவர்கள் வீடு ஆளாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவளைத் தாழ்த்தி பேச வேண்டும் என்று அப்படிச் சொன்னாள். சுரபி எதுவும் பேசுமுன், சாந்தி -அனுவின் அன்னை, “அடுத்து பெரியவர்கள் தான். எங்களுக்கு ஏதாவது வேலை வரும். சுரபி நீ போட்டுக்கொள்ள.” என்றாள் சுரபிக்கே கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவள் அன்று அணிந்திருந்த சுடிதார் முழு கை கொண்டது. சற்றே வெளிர் நிறம். கொஞ்சம் கறை பட்டாலும் அப்படியே தெரியும். அதையே காரணமாகச் சொல்லி வேண்டாம் என்று மறுக்க, பார்லர் பெண் சுரபியின் கையைப் பார்த்து, “உங்கள் உடையில் கைப்பகுதியில் ஒரு சிறு கொக்கி இருக்கிறது. அதைக் கழற்றினால் பாதிக் கை வரை போடலாம். அதுவும் இது ஹென்னா என்பதால் ஒரு அரைமணி நேரத்தில் காய்ந்து விடும். தைரியமாகப் போட்டுக் கொள்ளுங்கள்.” என்றாள். அருகில் வந்த சாந்தி, “அதுதானே!” என்று அவள் உடையின் முழுக் கையை அரைக் கை ஆகும் வரை மடக்கிவிட்டாள். மணப்பெண்ணும் அவள் பெற்றோரும் தாமோதரன் வீட்டிலேயே தங்க ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். மதிய உணவு, பெண் வீட்டாருக்கும் தாமோதரனின் வீட்டில் தான். பெண் வீட்டார் வந்ததும் எல்லோரும் அவர்களைக் கவனிக்கப் பரபரப்புடன் வேலை செய்ய, மணப்பெண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்கள். சுரபியும் அனுவும் மேல்தளத்தில் இருந்த ஹாலில் நின்று அவர்களுக்குக் கொடுத்த வரவேற்பைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனு சொன்னாள் “ஆர்த்தி அக்கா ரொம்ப அழகு! இல்லையா அக்கா ! அவர்கள் உடை எல்லாம் வெகுநேர்த்தியாக இருக்கும். இப்போது கூடப் பாருங்கள்! அந்த ஆரஞ்சு வண்ண சுடிதார் அக்கா நிறத்திற்கு வெகு எடுப்பாக இருக்கிறது.” என்றாள். அந்த ஆர்த்தி அழகாகவே இருந்தாள். நல்ல உயரம், எடுப்பான நிறம், பார்க்கவும் களையான முகம். ஆனால் அந்த ரவி அவள் பக்கத்தில் எப்படி இருப்பானோ? இன்றேனும் பார்க்கச் சாதாரணமாக இருப்பானா இல்லை கருப்பு பூதம்போல் இருப்பானா? “கல்யாண பெண் நல்ல அழகுதான். உன் ரவி மாமா இன்றேனும் நன்றாக வருவாரா? இல்லை காட்டு வாசிபோல வந்து நிற்பாரா?” என்று கேட்டவள் அனுவின் ஆச்சரிய பார்வையைக் கண்டு, “சும்மா விளையாட்டுக்கு அப்படிக் கேட்டேன்!” என்று மழுப்பினாள். அதற்குள் கீழே உணவருந்த எல்லோரையும் அழைக்க, அனு சுரபியின் பேச்சை மறந்து, “வா அக்கா! போகலாம்” என்றாள். அதுவரை மேல் தளத்திலிருந்து கீழே பார்த்துக் கொண்டித்தவர்கள், திரும்பியபோது ரவி அங்கே நிற்பதைப் பார்த்தார்கள். பார்த்துப் பயப்படும் அளவுக்கு இல்லை. இன்று ரவீந்தர் சிகையைச் சரிசெய்து, தாடியை ட்ரிம் செய்திருந்தான். ஆடை கூடப் பொருத்தமாக அணிந்திருந்தான். இப்போது பார்த்துப் பயப்படும் அளவு இல்லை தான். பேசியதைக் கேட்டிருப்பானோ? என்று சுரபி யோசிக்க, “ஆர்த்தி அக்கா வந்தாயிற்று! நீங்கள் பார்த்தீர்களா?” என்றாள் அனு. “நீ போய்ப் பார்!” என்று சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு, சுரபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றான். சுரபிக்கு அவன் கேட்டிருப்பானோ என்பதை மறந்து, அவன் மணக்க இருக்கும் பெண்ணைப் பார்க்க ஏன் அவன் செல்லவில்லை என்று யோசித்தாள். அதற்குள் அனு அவளை உணவு உண்ண இழுத்துச் சென்றாள். புஃபே முறையில் உணவு ஏற்பாடு. எல்லோரும் மணப்பெண்ணையும் அவளுடன் வந்த உறவினர்கள் பக்கம் இருக்க, அனுவும் சுரபியும் ஒரு ஓரத்தில் அமர்ந்தார்கள். கையிலிருந்த மருதாணி உதிர்கிறது என்று அனு கலங்க அவளுக்கும் சேர்த்து உணவை எடுத்துத் தந்துவிட்டு சுரபியும் சாப்பிட்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் இருவர் அருகில் வந்து, "என்னடா! உணவு எல்லாம் இவ்வளவு சீக்கிரம் காலியாகிறது என்று நினைத்தேன். நீங்கள் இருவரும் தானா? என்றான். “சத்தமாகப் பேசாதே! இரு சிறு பெண்கள் உண்ணவே இங்கே உணவில்லை என்று வந்தவர்கள் நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்.” என்றாள் சுரபி. “சிறு பெண்களா! இரண்டு குட்டி யானைகள் உணவறையில் புகுந்துவிட்டது என்று பயப்படாமல் இருந்தால் சரி!” என்றான். “போடா! ஒட்டடைக் குச்சி” என்று கையை ஓங்கினாள் அனு. அவன் சொல்வது போல் இல்லையென்றாலும் அனு கொஞ்சம் கொழுகொழு என்று இருப்பாள். சுரபியும் முதலில் உருண்டையாகவே இருந்தாள். இப்போது அந்த அளவு இல்லை என்றாலும் கொஞ்சம் பூசினாற்போல இருப்பாள். எப்போதும் குச்சிபோல் இருக்கும் அர்ஜுன் இவர்களைக் கேலி செய்வது வழக்கம். நான் அப்படித்தான் என்று சுரபி இயல்பாக ஏற்றுக்கொண்டாலும், அனு அவ்வப்போது அழுது விடுவாள். அதற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி எல்லாம் எடுக்கமாட்டாள். மதிய உணவு முடிந்ததும் மறுநாள் காலையில் திருமணம் என்பதால், உறவினர்கள் எல்லோரும் கூட்டமாகப் பேச, நீலாவும் சுரபியும் கமலாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். மோகனுக்கு இன்னும் வேலைகள் இருந்ததால் தாமதமாகும் என்று விட்டார். பெண்கள் இருவரும் வந்து வீட்டில் அன்றைய நிகழ்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வம்பு பேசும் பழக்கம் இல்லை என்பதால், உணவு மற்றும் பூ அலங்காரம் பற்றிப் பேசினார்கள். அப்போது சுரபிக்கு ரவீந்தரின் தோற்றம் நினைவு வந்தது. அவனுக்குத் திருமணம் என்ற ஒரு பூரிப்பும் அவன் முகத்தில் இல்லை. இன்று கூட அவன் தாடியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போதைய புதுப்பாங்கு போல என்று எண்ணியவள், ஆனால் அவள் அண்ணன் வினோத் எப்போதும் இப்படி இருப்பதில்லை. சுரபிக்குப் பெரிதாக ஆண்களின் தோற்றம்பற்றி ஆராயும் பழக்கம் இல்லை என்றாலும், ஒரு ஆண் எப்போதும் சரியான சிகை மற்றும் கிளீன் ஷேவுடன் இருக்க வேண்டும். அவள் எப்போதும் அப்பாவையும் அண்ணனையும் அப்படித்தான் பார்த்திருக்கிறாள். எப்படியோ! அந்த ஆர்த்திக்கே ஒன்றும் இல்லை எனும்போது அவளுக்கு என்ன வந்தது. ஆனால் அவளின் வருங்கால கணவர் நிச்சயம் ரவீந்தரன் போல் இருக்கக் கூடாது என்று மட்டும் எண்ணினாள். ஆனால் நாளை என்ன நடக்கும் என்பதை அறியாமல் தூங்கப் போனாள். நடு இரவில் பேச்சுக் குரல் கேட்டு விழித்தாள். பலர் பேசும் சத்தம். கல்யாண வீட்டில் கேட்ட அதே சலசலப்பு கனவிலும் வருகிறது என்று புரண்டு படுத்தவள், பேச்சுக் குரல் இன்னும் கேட்க மெல்ல எழுந்து அமர்ந்தாள். தொலைக்காட்சி எதுவும் ஓடுகிறதா? அப்பாவின் பேச்சுக் குரல் கேட்கிறது என்று மணியைப் பார்த்தவள், மணி நள்ளிரவைத் தாண்டி இருந்தது. மெல்ல எழுந்து முன்னறைக்கு வந்தாள். கதவைத் திறந்தவள் வீட்டில் இன்னும் இருவர் அமர்ந்திருக்க, திரு திரு என்று விழித்தாள். தாமோதரன், சுகந்தன் அங்கே இருந்தனர். இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று அவள் யோசிக்கும்போதே, நீலா அருகில் வந்து அவளை அழைத்துக்கொண்டு எல்லோர் முன்னும் நிறுத்தினாள். குழப்பமாய் அவள் தந்தையைப் பார்க்க, “இவர்கள் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்கிறார்கள்! உனக்கு என்ன தோன்றுகிறதோ சொல்.” என்றார். சுரபியிடம் இவர்கள் என்ன கேட்க வேண்டும்? அதுவும் இந்த நேரத்தில்? என்று யோசித்துக்கொண்டிருக்க, “உனக்கு ரவீந்தரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?” என்றார் சுகந்தன். இரவு உணவில் உறவினர்கள் எல்லாம் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மணப்பெண்ணும் மணமகனும் பேசிக்கொண்டிருந்தனர். அதாவது ரவீந்தரும் ஆர்த்தியும். “நாளை மாலை என் ப்ரெண்ட்ஸ் சிலர் வருகிறார்கள். ஒரு சிறு ஈவினிங் சப்பர். ஒரு மணி நேரம் மட்டும். அத்தையிடம் கூடச் சொல்லிவிட்டேன். உங்களுக்கு ஓகேவா?” என்றாள் ஆர்த்தி. “அதுதான் காலையில் சந்திப்போமே! பிறகு மாலையில் என்ன தனியாக?” என்றான் ரவி. “அவர்கள் காலையில் வர முடியாது. மதியத்திற்கு மேல் தான் இங்கே வர முடியும். அதுதான் மாலை ஒரு ஏற்பாடு செய்தேன்.” “மாலை என்னால் முடியாது! ஏற்கனவே வேறொரு வேலை இருக்கிறது.” “திருமணத்தன்று என்ன வேலை? அவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். ஏற்கனவே அவர்களிடம் சொல்லி விட்டேன். இப்போது மாற்ற முடியாது!” “என்னாலும் முடியாது ஆர்த்தி. ஒரு கிளையண்ட் மீட்டிங். என் பார்ட்னர் செய்வதாக இருந்தது. அவருக்கு உடல் நிலை சரியில்லை. நான் தான் செய்தாக வேண்டும். இப்போது மற்ற முடியாது!” உண்மையாகவே ரவீந்தருக்கு வேலை இருக்கத் தான் செய்தது. அவன் கூட்டாளி செய்வதாகத்தான் இருந்தது. அந்த மனிதர் வைரஸ் காய்ச்சல் வந்து மூன்று நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறார். முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல். அதை ஒத்திப்போட மனம் இல்லாமல் அதை ரவீந்தர் செய்து விடலாம் என்று நினைத்தான். அதுவும் ஒருநாள் முன் மற்றம் செய்ய அவனுக்கு மனம் ஒப்பவில்லை. “உங்களுக்கு என்னைவிட அந்த மீட்டிங் தான் முக்கியமா?” "ஸ்டாப் திஸ் கிளீசெ டயலாக் ஆர்த்தி. நீ என்னிடம் முன்பே சொல்லி இருந்தால் மாற்றி இருக்கலாம். இப்போது வந்து சொல்கிறாய். முன்பே சொல்லாதது உன் தப்பு.“ “முன்பு சொல்லியிருந்தால் செய்திருப்பீர்களா? நமக்குத் திருமணம் நிச்சயமாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒருமுறையேனும் என்னுடன் பேசினீர்களா? நான் பேசும் போதேனும் சரியாகப் பேசினீர்களா? உங்களிடம் சொல்ல வேண்டியதை அத்தையிடம் சொன்னேன். இப்போது வந்து என்மேல் தப்பு என்கிறீர்கள்.” சற்றே யோசித்தவன் “நாளை மறுநாள் காலையில் வைத்துக்கொள்ளலாம்.” என்றான். “காலையில் எப்படி முடியும்! மறுநாள் அவர்களுக்கு வேறு ஏற்பாடுகள் இருக்கும்! நமக்காக அதை மாற்றிக்கொள்வார்களா?” “திருமணத்திற்குச் சரியான நேரத்திற்கு வர முடியாது! தாமதமாக வருவது மட்டுமில்லாமல் வேறு திட்டங்களுடன் பத்தோடு பதினொன்றாக உன்னைப் பார்க்க வருகிறார்கள். அந்த நண்பர்களுக்காக என் திட்டங்களை மாற்றச் சொல்கிறாய். முதலில் அவர்கள் உனக்கு நல்ல நண்பர்கள்தானா என்று யோசித்துக்கொள்.” “என் நண்பர்களைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” ஒருகணம் ரவீந்தரின் பார்வை கூர்மை ஆனது. அதிகம் வாக்குவாதம் வேண்டாம் என்று எண்ணி “இப்போது உன் நண்பர்களுக்காக நமக்குள் சண்டை தேவையா?” “இது நண்பர்கள் பற்றியே இல்லை! இது என்னைப் பற்றி! நீங்கள் எனக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி! இப்போதே என் நண்பர்களைத் தவறாகப் பேசுகிறீர்கள். முதல் முறை உங்களை ஒன்று கேட்கிறேன். அதைக் கூட உங்களால் செய்ய முடியவில்லை. இப்படி இருந்தால் வரும் நாட்களில் நம் உறவு எப்படி இருக்கும் என்று கவலையாக இருக்கிறது.” “இதை வைத்துத் தான் நமக்குள் இருக்கும், இல்லை வளரும் உறவை முடிவு செய்ய முடியும் என்று நினைத்தால், நீ என்னைத் திருமணம் செய்வது பற்றி மீண்டும் ஒருமுறை நன்கு யோசித்துக்கொள்.” இப்படியாகப் பேச்சு கொஞ்சம் காரசாரமாகச் சென்றது. சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் அவரவர் அறைக்குச் சென்று விட்டனர். ஆர்த்திக்கு முதலிலிருந்தே ரவீந்தரின் நடவடிக்கை பிடிக்கவில்லை. ரவீந்தரின் அன்னை பானுமதி வந்து பெண் கேட்டதும், ஆர்த்தியின் தந்தைக்கு ஏக சந்தோஷம். மகளைச் சம்மதிக்கவும் வைத்துவிட்டார். ஆனால் திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இன்றைய தலைமுறையினர் இடையே, ஒரு முறை கூட ரவீந்தர் அழைக்காதது ஏமாற்றத்தைத் தந்தது. இவளாக அழைத்தாலும் அவன் ஓரிரு வார்த்தைகளுடன் வைத்துவிடுவான். இன்னும் சொல்லப்போனால் இன்று தான் அவளுடன் கொஞ்ச நேரம் பேசினான். அப்போது கூட அவள் மனம் மகிழும் வண்ணம் பேசாமல், இப்படிப் பேசிவிட்டானே! ஆர்த்திக்கு ஏதோ பயம் தொற்றிக்கொண்டது. இன்று போல் தான் அவன் எப்போதும் நடந்து கொள்வானா? அறைக்கு வந்து மீண்டும் ரவிக்கு போன் செய்தாள் ஆர்த்தி. “நீங்கள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள். நாம் முதல் முறை பேசுகிறோம். எனக்காகக் கொஞ்சம் நல்லபடியே பேசக்கூடாதா? எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கக் கூடாது? இன்று நீங்கள் நடந்து கொண்டதை வைத்துப் பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. உங்களை நான் எப்படி நம்புவது. திருமணத்தன்றே என்னை இரண்டாம் பட்சமாகப் பார்க்கும் உங்களுடன் நான் எப்படி வாழ்வது? உங்கள் பழைய விஷயங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன். இன்று நீங்கள் நடந்து கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை. உங்கள் அம்மா வெளிப்படையாக எல்லாம் சொன்னார் என்று முதலில் சந்தோசப்பட்டேன். ஆனால் உங்கள் குணத்தைப் பற்றி அவர்கள் முழுமையாகச் சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது. உங்களுக்கு உண்மையில் இந்தத் திருமணத்தில் சம்மதமா?” இன்னும் பேசிக்கொண்டே போனாள். அவள் பேசி முடிக்கும் வரை பொருமையாகக் கேட்டவன், “ஆர்த்தி! நமக்குள் இருக்கும் புரிதல் மெல்ல மெல்லத் தான் வளரும். இப்போது நீ சொல்வதற்கெல்லாம் சரி என்று விட்டு, பின்னாளில் என் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனக்கு ப்ராக்டிகலாக இருப்பது தான் பிடிக்கும். நீ என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாய் என்று தெரியவில்லை.” “நான் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கொஞ்சம் என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.” இப்போது ஆர்த்தி எதிர்பார்த்தது, ‘இனிமேல் உன் விருப்பம்போல் செய்கிறேன்’ என்ற பதில். எல்லா பெண்களும் எதிர்பார்ப்பதுதான். மனைவியின் எல்லா விருப்பங்களையும் கணவன் நிறைவேற்ற வேண்டும் என்பதே. குறைந்த பட்சம் வருங்கால மனைவி கேட்கும் முதல் விருப்பத்தையேனும் நிறைவேற்ற வேண்டும். முடியவில்லை என்றால் கண்ணே மணியே என்று ஒரு கொஞ்சலும், மன்னிப்பு வேண்டி ஒரு கெஞ்சலும் வேண்டும். இது எதுவும் ரவி செய்யவில்லை. ஒருவேளை இருவரும் முன்பே பேசிச் சில நாள் பழகி இருந்தால் கூடக் கொஞ்சம் புரிதல் இருந்திருக்கலாம். அதுவும் இங்கே இல்லை. இப்போது அவன் என்ன சொல்லப் போகிறான்? “உன் ஆசை என்னைப் பாதிக்காதவரையில் நிச்சயம் செய்வேன். உன் விருப்பத்திற்குத் தேவை இல்லாமல் தடை சொல்லமாட்டேன்.” என்றான் ரவி. “இப்போது ஏன் மறுக்கிறீர்கள்?” “உன் ஆசை என்னைப் பாதிக்கக் கூடாது என்று சொன்னேனே!” “நமக்குள் எப்போதும் இப்படி இருந்தால்? நான் ஆசைப்படுவது எதுவும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்?” “அப்படி எப்படி இருக்கும்! நீ வீம்புக்கு ஏதும் செய்யாமல் இருந்தால், அப்படி எதுவும் வேறுபாடுகள் இருக்காது என்று நம்புகிறேன்.” “எனக்கு நம்பிக்கை இல்லை! இன்று இது என் விருப்பம்! அதையே நீங்கள் நிராகரிக்கிறீர்கள். இப்போதே எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எதிர்காலத்தில் எப்படித் தருவீர்கள்?” “இந்த ஒரு நிகழ்வை வைத்துத் தான், என்னைப் புரிந்துகொள்வாயா?” என்றான் ரவீந்தர். “உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா ரவி?” “உன் பாஷையில் பிடிப்பது என்றால் என்ன ஆர்த்தி?” “எனக்காக எதுவும் செய்ய விருப்பப்பட வேண்டும்.” ஆர்த்தியின் குரலில் ஒரு கோவம் தெரிந்தது. “அப்படியானால், இப்போது இல்லை. ஒருவரை ஒருவர் இன்னும் நன்கு புரிந்து கொண்ட பிறகு நான் அப்படி நினைக்கலாம். அதற்காக இருவரும் முயற்சி செய்ய வேண்டும். இது காதல் திருமணம் இல்லை. படங்களில் வருவது போல் ‘நீ இல்லாமல் நான் இல்லை’, ‘நீ தான் எனக்கு எல்லாம்’ என்று நான் இப்போது சொன்னால் அது வெறும் வார்த்தைகளாகத்தான் இருக்கும். உன்னைப் புரிந்து கொள்ள, உனக்கு முக்கியத்துவம் கொடுக்க நிச்சயம் முயல்வேன்”. ஆர்த்திக்கு ஏனோ அவன் பதில் பிடிக்கவில்லை. தொலைப்பேசியை வைத்து விட்டாள். சிறிது நேரத்தில் சலசலப்பு. எல்லோரும் தூங்கச் சென்றபிறகு, ஒரு அறையில் மட்டும் பேச்சுக் குரல் அதிகமாக இருக்க, ஏதும் பிரச்சனையா? என்று சாந்தி வந்தாள். மணப்பெண்ணுக்குக் கொடுத்த அறையில் தான் சத்தம் வந்தது. “என்ன உளறுகிறாய்? கொஞ்சம் யோசித்துப் பேசு. விடிந்தால் திருமணம். இப்போது இப்படிச் சொன்னால் எப்படி?” “எனக்குப் பிடிக்கவில்லை! நீங்கள் அப்பாவைக் கூப்பிடுங்கள்.” ஆர்த்தியின் ஆசைகள் வேறுமாதிரி இருந்தது. கணவன் தினமும் அவளின் அழகைப் புகழ வேண்டும். மனைவிக்கு எதுவானாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட அவளுக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும். அடிக்கடி பரிசுகள், அவ்வப்போது ஆச்சரியங்கள் என்றெல்லாம் அவள் கேட்காமல் தர வேண்டும். இன்னும் பல ஆசைகள். இதுவரை ரவீந்தர் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்றைய உரையாடலுக்குப் பிறகு இனிமேலும் அவனிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று தோன்றியது. அவனுடன் ஹைதராபாத் சென்றால், நண்பர்கள் வட்டமும் குறைந்துவிடும். அவனுடன் வாழ்க்கை எப்படி இருக்கும்? வீட்டில் அவனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டு காலத்தைத் தள்ள வேண்டும். வாழ்வில் எந்தச் சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. ஆர்த்திக்கு அதில் விருப்பமில்லை. சாந்தி கதவைத் தட்ட, ஆர்த்தியின் அன்னை வந்து கதவைத் திறந்தாள். “என்ன? ஏதும் பிரச்சனையா?” “இந்தப் பெண் ஏதேதோ சொல்கிறாள்! எனக்கு ஒன்றும் புரியவில்லை! நான் அவள் அப்பாவை அழைத்து வருகிறேன்” என்று சென்றாள். அதன்பின் யார் என்ன சொன்னாலும் ஆர்த்தி கேட்கவில்லை. பானுமதி முடிந்த வரை பேசிப்பார்த்தாள். இறுதியில் பெண் வீட்டார் எல்லோரும் அப்போதே கிளம்பி விட்டார்கள். தாமோதரன் குடும்பம் மொத்தம் இருண்டு போய் உட்கார்ந்து விட்டார்கள். மெல்ல சுகந்தன் ரவியை கேட்டார், “என்னப்பா இது. நீ கொஞ்சம் பக்குவமாகப் பேசி இருக்கலாம் தானே!” “மாமா ! விடுங்கள். இப்போது என்ன நடந்துவிட்டது! திருமணத்திற்குப் பின் இல்லாமல் இப்போதே எல்லாம் முடிந்தது.” என்றான் மிகச் சாதாரணமாக. பானுமதிக்கு ஆத்திரம் வந்தது. “எப்படிப் பேசுகிறான் பார்! இவனுக்கு ஏற்றப் பெண்ணைத் தேடிக் கொண்டுவந்தால், கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டான். இவனால் எனக்கு எப்போதும் நிம்மதி இல்லை.” “நம் முயற்சியெல்லாம் இவருக்கு ஒன்றுமே இல்லை அத்தை!” என்றாள் வித்யா. “அப்போதே இதெல்லாம் வேண்டாம். ‘இவனுக்காக நீங்கள் எதையும் செய்யாதீர்கள்’ என்றேன்! கேட்டீர்களா? இப்போது பட வேண்டியதுதான்.” என்றான் சுரேந்தர். எல்லோரும் ரவியின் மேல் குறை கூற, “போதும் நிறுத்துங்கள்! நன்றாகப் பார்த்தீர்கள் பெண்ணை. கல்யாணத்துக்கு முன் தினம், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்கிறாள். யார் பேச்சையும் புரிந்து கொள்ளாமல், பிடிவாதமாக எல்லாவற்றையும் செய்தது அந்தப் பெண். அவள் பெற்றவள் பேச்சைக் கூடக் கேட்கவில்லை. ஏதோ உலகில் இல்லாத பெண்ணைப் பார்த்து விட்டாய்! இதுவரை அவனுக்காக ஒன்றையேனும் சரியாகச் செய்திருக்கிறாயா?” என்று மகளைக் கடிந்தார் தாமோதரன். “நான் என்ன செய்யவில்லை?” என்றாள் பானுமதி. “எல்லோரும் முடிந்ததைப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். என் பேரன் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசியுங்கள்.” என்று பதறினார் கமலம். “பாட்டி, இந்தக் கல்யாணம் நின்றதால் எனக்கு ஒன்றும் ஆகிவிடாது.” என்றான் ரவி. “ஆமாம்! உனக்கு ஒன்றும் இல்லைதான். நாங்கள் தானே ஊருக்குப் பதில் சொல்ல வேண்டும். முன் நீ செய்த வேலையை எல்லோரும் மறக்க மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது நீ செய்தது இந்த ஜென்மத்தில் மறக்காது. இனி உனக்கு இன்னொரு பெண்ணைத் தேட எங்களால் முடியாது.” என்றான் சுரேந்தர். “யாரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். கல்யாணம் வேண்டாம் என்றுதான் நான் முன்பே சொன்னேன். என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். கடைசி வரை என்னால் தனியாக இருக்க முடியும்.” என்றான் ரவி கமலம் பதறிவிட்டார்.“அப்படிச் சொல்லாதே கண்ணா. பெரியவர்கள் எல்லோர் சந்தோஷமும் பிள்ளைகள் உங்கள் வாழ்க்கையில் தான் இருக்கிறது.” “பாட்டி ! நான் சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது கூட! ஆர்த்தி இப்படிச் செய்து விட்டாள் என்ற வருத்தத்தைவிட, எங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை உணர்ந்து இப்போதே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டோம். திருமண உறவு என்பது இல்லாமல் கூடச் சந்தோஷமாக இருக்க முடியும்.” தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்ததின் பலன். பானுமதி ரவீந்தரை கவனித்துக்கொள்ளத் தேவை இருந்ததில்லை. பள்ளி செல்லும் வயது வந்தபின் ரவீந்தர் அவன் வேலைகளை அவனாகச் செய்துகொள்ளத் தொடங்கினான். குளிப்பது, உணவருந்துவது, வீட்டு பாடம் செய்வது எல்லாம் தானாகச் செய்வான். பார்க்க அவன் வயதிற்கு மீறிய பக்குவமாகத் தெரிந்தது. எல்லோருக்கும் பெருமையாகக் கூட இருந்தது. எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் ஒருவனிடம் யாரும் குறை தேடவில்லை. எல்லா செயல்களிலும் நிதானம், தெளிவு, பொறுமை எப்போதும் இருக்கும். ஒரு கட்டத்தில் அவனுக்கு எது சரி என்று அவன் மட்டும் தீர்மானிக்க எண்ணினான். அதன் பின் யாரிடமும் அவன் ஆலோசனை கூடக் கேட்கவில்லை. எல்லாம் சரியாகவே நடந்தது. ஒன்றைத் தவிர. “இது சரி வராது! இப்போதே இவனுக்கு வயது இருபத்தி எட்டு ஆகிறது. முன்பு நடந்த கசப்பு மறைய வேண்டும் என்று இவனுக்கு அவகாசம் கொடுத்ததால் தான் இப்படி எல்லாம் வேதாந்தம் பேசுகிறான். இந்தத் திருமணம் உடனே நடக்க வேண்டும்.” என்றார் தாமோதரன். “சீக்கிரம் நமக்குத் தெரிந்த வேறு இடத்தில் பார்க்கலாம்” என்றார் சுகந்தன். “இவனுக்காக இனி எங்களால் அலைய முடியாது!” என்றான் சுரேந்தர். ரவீந்தரின் விஷயத்தில் எப்போது சுரேந்திரனுக்கு ஒரு சலிப்புதான். ஏதோ இதுவரை எல்லாம் அவன் செய்தது போல், இனிமேல் ‘செய்யமாட்டேன்’ என்றான். “நாம் சீக்கிரம் ஒரு இடம் பார்க்கலாம் அப்பா! இன்னும் ஒரு மாதத்தில் பார்த்துவிடலாம்.” என்று தந்தையைச் சமாதான படுத்த முயன்றார் சுகந்தன். “இல்லை! ஒரு மாதம் எல்லாம் இல்லை. நாளை இந்தத் திருமணம் நடக்க வேண்டும்.” என்றார் பெரியவர். எல்லோருக்கும் திகைப்பு. அப்படி எப்படி முடியும்? ஒரே நாளில் பெண்ணை எங்கே தேடுவது? அதுவும் பின்புலம், பழக்க வழக்கம் எல்லாம் விசாரிக்க வேண்டுமே! அதையே மகன் கூற," தெரிந்தவர்கள் வீட்டில் யாரேனும் இருப்பார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்! யாருக்கேனும் ஏதாவது கருத்து இருந்தால் சொல்லுங்கள்" என்றார். “அப்படி எப்படி உடனே முடிவு செய்ய முடியும்! மீண்டும் ரவியின் வாழ்க்கை சிக்கலாகி விடக் கூடாது!” என்றாள் பானுமதி. “நீயும் தான் ஆறு மாதமாக அவர்களுடன் பேசிப் பழகினாய். தினமும் அந்தப் பெண்ணும் உன்னுடன் பேசினாள். கடைசியில் என்ன நடந்தது?” என்றார் தாமோதரன். “தாத்தா! இப்போதைக்கு எதுவும் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்.” என்றான் ரவி. “உன்னிடம் நான் எதுவும் யோசனை கேட்கவில்லை. நான் சொல்லும் வரை நீ வாயைத் திறக்கக் கூடாது. சுகந்தன்! நீ சொல், உன் நண்பர்கள் மகள் யாரேனும் நமக்கு ஏற்றது போல் இருக்கிறார்களா?” “அப்பா! அப்படியே இருந்தாலும் அவர்கள் சம்மதிக்க வேண்டுமே! யாரையும் கட்டாயப்படுத்த முடியாது! இன்னும் ஒரு நாள் கூட இல்லாத பட்சத்தில் எங்கே தேடுவது? யாரைச் சம்மதிக்க வைப்பது! நீங்கள் ஏன் இப்படி அவசரப் படுத்துகிறீர்கள்?” என்றான் சுகந்தன். “திருமணம் நின்று போவது என்பது எவ்வளவு பெரிய அவமானம். ஊரில் என்ன என்ன பேசுவார்கள்? மீண்டும் நாம் பெண் கேட்டுச் சென்றால் எல்லோரும் இதைத்தான் விசாரிப்பார்கள்! சில நாள் எல்லாவற்றையும் மறக்க அவகாசம் கொடுத்தபிறகு நாம் ஒரு வீட்டுக்குச் சென்று நிற்கும்போது மீண்டும் இன்றைய சம்பவத்தைக் கிளறுவார்கள். அதனால் தான் உடனே வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிறேன்.” என்றார் பெரியவர். தந்தை அவசரப் படுத்துவதன் காரணம் நியாயமாக இருந்தாலும், அவர் சொல்வதைச் செயல்படுத்துவது கடினம் என்று கவலையுடன் அமர்ந்தார் சுகந்தன். மெல்லத் தந்தையிடம் பேசினார், “நீங்கள் சொல்வதும் சரிதான்! ஆனால் நாளைக் குறித்த முகூர்த்தத்தில் செய்வது கடினம். ஒரு இரண்டு மூன்று நாட்கள் என்றால் கூடச் செய்து விடலாம்.” என்றார். இது எதுவும் நடக்கப் போவதில்லை. சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை. அவர்களாகப் பேசிக் குழம்பட்டும் என்று எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தான் ரவீந்தர். “எனக்கு ஒரு யோசனை! சுரேந்தர் மனைவி வீட்டில் சில பெண்கள் திருமண வயதில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசிப் பார்க்கலாம்.” என்றாள் பானுமதி. சுரேந்தரின் மனைவி வித்யாவுக்கு அதில் விருப்பம் இல்லை. “அப்படி யார் அத்தை இருக்கிறார்கள்? என் சித்தப்பா மகள் ஒருத்திதான் ரவி வயதுக்கு ஏற்றவள். அவளுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. மற்றவர்கள் எல்லாம் வயது குறைந்தவர்கள்.” என்றாள். “உன் சித்தப்பா மகளுக்கு இன்னும் முடிவாகவில்லை என்று தானே அன்று சொன்னாய்!” என்று பானுமதி கேட்க, “இல்லை அத்தை! மாப்பிள்ளை வீட்டில் முன்பே சம்மதித்து விட்டார்களாம். சித்தி தான் யோசித்துக் கொண்டிருந்தார். இப்போது தேதி கூட முடிவு செய்து விட்டார்களாம்.” என்றாள். வித்யாவுக்கு அவள் உறவினர் வீட்டுப் பெண்களை ரவீந்தருக்கு பேச மனம் இல்லை. பின்னால் ஏதும் பிரச்சனை என்றால் எல்லோரும் அவளைத்தான் கேட்பார்கள். ரவீந்தரை நம்பி ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்து அதற்குப் பொறுப்பை ஏற்க அவள் தயாராக இல்லை. “இல்லை இதெல்லாம் சரி வராது! எனக்குத் தெரிந்த ஒரு இடம். நிச்சயம் சரி என்பார்கள். நாளையே திருமணத்தைக் கூட நடத்தி விடலாம்” என்றார் கமலம். எல்லோரும் கமலத்தை ஆச்சரியமாகப் பார்க்க, பெரியவர் மனைவியைக் கேட்டார், “அப்படி யார் இருக்கிறார்கள்?” “பெரிய வசதி இல்லை. ஆனால் நல்ல குடும்பம். பானுவுக்கு வசதியான குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வேண்டாம்.” என்றார் கமலம். “வசதியில் என்ன இருக்கிறது? அதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது. ரவியை அனுசரித்து குடும்பம் செய்தால் போதும்” என்ற தாமோதரன் மகளைப் பார்த்து, “இப்போதும் கோடீஸ்வர சம்பந்தம் தான் வேண்டும் என்று சொல்வாயா?” என்றார். அவள் என்ன சொன்னாலும் இப்போது யாரும் கேட்கப் போவதில்லை. அதுமட்டுமின்றி அந்தஸ்து, கௌரவம் என்று இப்போது பார்க்கவும் முடியாது. “உங்களுக்குச் சரி என்று பட்டால் செய்யுங்கள்” என்று விட்டாள் பானுமதி. “யாரம்மா அந்தக் குடும்பம்?” என்றார் சுகந்தன். “நம் மோகன் மகள் தான்”. எல்லோரும் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் பேசவில்லை. மோகனின் மகளா? முதலில் பேசியது சுரேந்திரன் தான். “பாட்டி! மோகன் இந்த வீட்டில் வேலை செய்பவர். அவரின் மகளா? அதுவும் நம் வீட்டிற்கு? வேண்டாம்.” தாமோதரன், “உன் அம்மாவே எங்கள் விருப்பம் என்று விட்டாள். ஆனால் உங்கள் விருப்பத்தைக் கேட்பது அவசியம் தான். சுரேந்தரன் அவன் முடிவைச் சொல்லிவிட்டான். பானு! நீ சொல்!” என்றார். “மோகனின் மகளைப் பற்றி எனக்குத் தெரியாது! அவள் என்ன படித்திருக்கிறாள்? எப்படிப் பழகுவாள்? எதுவும் தெரியாது தான். உங்களுக்கு அவள் ரவிக்குப் பொருத்தம் என்று தோன்றினால் சரி! நான் பார்த்துப் பார்த்து முடிவு செய்தது இப்படி ஆகிவிட்டது. இப்போது நான் எதுவும் முடிவெடுத்தால், தப்பாகி விடம். நீங்களே முடிவு செய்யுங்கள்.” என்றாள். “அண்ணி! சுரபி ரொம்ப நல்ல பெண். பொறுமை அதிகம். அப்படியே மோகன் அண்ணா போல்.” என்றாள் சாந்தி. “ஆனால் மோகன் சம்மதிக்க வேண்டுமே! சுரபி இன்னும் கல்லூரி படிப்பைக் கூட முடிக்கவில்லை. சுரபி மேலே படிக்கத் தேர்வு எல்லாம் எழுதி இருக்கிறாள்.” என்றார் சுகந்தன். தாமோதரன், “சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.” என்றவர் ரவியைப் பார்த்தார். சுரபி அவனுக்கு அறிமுகம் இல்லாதவள் அல்ல. இன்று மதியம் கூடப் பார்த்தான் தான். அனுவுடன் சேர்ந்து சிலமுறை பார்த்திருக்கிறான். அவளுக்கும் அனுவின் வயதுதான் என்று நினைத்திருந்தான். அந்தச் சின்னப் பெண்ணா? “சிறிய பெண்ணுக்குத் எப்படி திருமணம் செய்ய முடியும்?” என்று மனதில் நினைத்ததை வாய்விட்டுச் சொல்லிவிட்டான் ரவீந்தர். “சிறிய பெண்ணா? அவளும் கல்லூரியில் இறுதி ஆண்டில் படிக்கிறாள். எல்லாம் திருமண வயதுதான்.” என்றார் கமலா. “இம்முறை நான் உனக்காக முடிவெடுக்கிறேன். தாத்தாவை நம்பு!” என்றார் தாமோதரன் ரவீந்தரை பார்த்து. “நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு விசுவாசமானவர் என்று அந்தக் குடும்பத்தைக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் சரி. என் பழைய கதைகளையும் சொல்லி விடுங்கள்.” என்றான் ஒரு கசப்பான குரலில். தாமோதரன் பேரனை ஒரு பார்வை பார்த்து விட்டு மகனை அழைத்துக்கொண்டு மோகனின் வீட்டுக்குச் சென்றார். நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டுவது கேட்டது. மோகன் எழுந்து வந்து பார்த்தார். பெரியவர் அங்கே நின்று இருக்கப் பதறிப்போனார். “என்ன சார்! இந்த நேரத்தில்! வீட்டில் யாருக்கும் ஒன்றும் இல்லையே!” “அதெல்லாம் இல்லை. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.” “உள்ளே வாருங்கள்!” அவர்கள் உள்ளே வர நீலாவும் அங்கே வந்தாள். “இந்நேரத்தில்! ஏதும் பிரச்சனையா?” என்றாள் நீலா கணவனிடம். “ஒரு பெரிய பிரச்சனை. உங்களால் தீர்க்க முடியும் என்று வந்திருக்கிறோம்” என்றார் தாமோதரன். “எதுவாக இருந்தாலும் போன் செய்திருந்தால் நானே வந்திருப்பேனே!” என்றார் மோகன். “இந்த விசயத்தைப் பொறுத்தவரை, நான் வருவது தான் சரி!” என்றார் தாமோதரன். “என்ன விஷயம் சார்! உங்கள் முகமே சரியில்லை. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். என்னால் முடிந்தால் நிச்சயம் செய்கிறேன்.” “ரவீந்தருக்கு சுரபியைக் கேட்டு வந்திருக்கிறோம்.” என்று விஷயத்தைப் போட்டு உடைத்தார். மோகனும் நீலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தாமோதரன் மேலே பேசினார். “அந்தப் பெண் இப்போது வந்து திருமணத்தில் விருப்பம் இல்லை என்று விட்டாள். யார் சொல்லியும் கேட்கவில்லை. உடனே வேறு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கமலத்தின் விருப்பமும் இதுதான்! சுரபியைக் கேட்கலாம் என்று கமலம் சொன்னதும், அதுவே எனக்குச் சரி என்று பட்டது. நான் கேட்கிறேன் என்று நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் முடிவைத் தயக்கமின்றி சொல்லுங்கள்.” மோகனுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தயங்கி நிற்க, நீலா பேசினாள். “உங்கள் சங்கடம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் பேரனின் விருப்பமும் சுரபியின் விருப்பமும் முக்கியம். சுரபி இன்னும் படிப்பைக் கூட முடிக்கவில்லை. அவர் மேல்நாட்டில் எல்லாம் படித்தவர். பெரிய இடம். சுரபி சாதாரணமாக வளர்ந்தவள். இருவருக்கும் எப்படி ஒத்துப்போகும். சுரபியைப் பற்றி உங்களுக்கே தெரியும். இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறாள். அவளுக்குப் பக்குவமும் பத்தாது. இப்போதைக்குத் திருமணத்தை நடத்தி விட்டுப் பின்னாளில் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்றால் எல்லோருக்கும் தானே வருத்தம்.” “உன் எண்ணம் புரிகிறது நீலா! ஒருவேளை வேறொரு பெண்ணின் பெயரைக் கமலம் சொல்லியிருந்தால் நானும் இப்படி பலதும் யோசித்திருப்பேன். எனக்கு ரவியைத் தெரிந்த அளவுக்குச் சுரபியையும் தெரியும். இருவரும் எனக்கு வேறில்லை. என் பேரனின் மானத்தைக் காக்க உன் மகளைப் பலி கொடுப்பதாக எண்ணிவிடாதே. என் அனுபவத்தில் சொல்கிறேன். இருவரும் நன்றாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். உனக்கு வாக்கும் தருகிறேன். இந்தக் கிழவனின் பேச்சில் நம்பிக்கை இருந்தால் மேலே பேசலாம்.” என்றார். நீலாவுக்கு இன்னும் தயக்கமே. மோகன், “உங்கள்மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ரவீந்தருக்கு இதில் சம்மதமா?” என்றார். “அந்தப் பெண் ஆர்த்தி கூட எங்கள் தேர்வுதான். ரவி சம்மதித்தான். இப்போதும் எங்கள் விருப்பத்தை அப்படியே ஏற்பான். நின்ற திருமணத்தை இப்போதே நடத்த வேண்டும் என்று வீம்பில் யாரும் பேசவில்லை. இருவரையும் நன்கு அறிந்த அம்மாவின் எண்ணம் இது. அதனால் நீங்கள் தைரியமாக இருக்கலாம். சுரபியின் சந்தோஷமும் எங்களுக்கு முக்கியமே! நீங்கள் அவளிடம் கேட்டுச் சொல்லுங்கள்.” என்றார் சுகந்தன். சரியாகச் சுரபியும் தூக்கக் கலக்கத்தில் இவர்கள் முன் வந்தாள். முதலில், “இன்னுமா டிவி பார்க்கிறீர்கள்?” என்று கண்ணைக் கசக்கியவள், வீட்டில் மேலும் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அப்படியே நின்றாள். நீலா சுரபியை அழைத்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர்த்தினாள். எல்லோர் முகங்களையும் பார்த்துக்கொண்டிருக்க, மெல்ல சுகந்தன் கேட்டார், “சுரபி, நான் கேட்பதிற்கு உனக்கு என்ன தோன்றுகிறதோ சொல். யாரைப் பற்றியும் கவலைப் படாதே! சரியா?” நடு இரவில் எல்லோரும் இவளிடம் என்ன கேட்கப் போகிறார்கள். உண்மையில் இது கனவா நிஜமா என்று யோசித்துக்கொண்டிருக்க, “உனக்கு ரவியைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?” என்றார் தாமோதரன். சுரபியின் விழிகள் விரித்த விதத்தில் எல்லோருக்கும் அவள் குழப்பம் புரிந்துவிட்டது. “நாளை நடக்க இருந்த திருமணம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டது. பாட்டி நீ ரவிக்கு ஏற்றவளாக இருப்பாய் என்று நினைக்கிறார்கள். உன் விருப்பம் என்ன என்று சொல்.” என்றார் சுகந்தன். சுரபி இப்போது இன்னும் மிரண்டு போனாள். இப்போது என்ன சொல்ல வேண்டும். வேண்டாம் என்றால் எல்லோரும் என்ன சொல்வார்கள்? அந்த ரவியைப் பற்றி ஒன்றும் தெரியாதே! உண்மையில் அவளை விரும்பி ஏற்கிறார்களா? இல்லை அவசரத்துக்கு ஒரு பெண்ணைப் பிடித்துக் கட்டி வைக்க நினைக்கிறார்களா? அப்படியென்றால் இவளை ஏன்? திரைப் படங்களில் வருவது போல் அப்பாவை ஏதும் மிரட்டி இருப்பார்களா? என்று எண்ணக் குதிரை வேகமாக ஓட, அதைக் கட்டுப்படுத்த அவளுக்குச் சில கணங்கள் தேவைப் பட்டது. பிறகு தாமோதரன் குடும்பத்தின் இயல்பை உணர்ந்து ஒரு நீண்ட மூச்சை மெல்ல வெளியிட்டாள். நிமிர்த்து அமர்ந்தவள் எல்லோர் முகங்களையும் ஒரு முறை ஆராய்ந்தாள். “பெரியவர்கள் எல்லோருக்கும் இதில் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்” என்று சொல்லவும் எல்லோர் முகத்திலும் ஒரு ஆறுதல் தென்பட்டது. மேலும் ஏதோ சொல்ல வாய் எடுக்க, “அப்பாடியானால், காலையில் குறித்த நேரத்தில் எல்லாம் செய்து விடலாம்.” என்றார் சுகந்தன். “உங்கள் மகள் பானுமதிக்கு இதில் விருப்பம் தானே. அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லையே! அது தான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.” என்றாள் நீலா. “அக்காவைக் கேட்டு விட்டுத் தான் வந்தோம். ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலோ, இல்லை எல்லோரும் வந்து கேட்டதற்காக நீங்கள் சம்மதம் தெரிவிக்க நேருமோ என்று தான் எல்லாரையும் அழைத்து வரவில்லை. காலையில் வேண்டுமானால், அக்காவையும் அழைத்து வருகிறோம்.” என்றார் சுகந்தன். “அப்படியானால், நாளைக் காலையில் இங்கே வந்து நிச்சயம் போல் செய்து கொண்டு அங்கே எல்லாரையும் அழைத்துப் போகலாம். குறித்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம்.” என்றார் தாமோதரன். “காலையில் அங்கும் இங்கும் அலைவதை விட அக்காவை இப்போது அழைத்து வருகிறேன். எல்லோரும் நம் வீட்டுக்குச் சென்று விடலாம். நிச்சயம் கூட அங்கே வைத்துச் செய்யலாம்.” என்றார் சுகந்தன். “என்ன மோகன்! உனக்குச் சம்மதமா?” என்றார். “உங்கள் விருப்பம்” என்றார் மோகன். “காலையிலா! வினோத் டெல்லியில் இருக்கிறான்” என்று நீலா சொல்ல, எல்லோரும் ஒரு கணம் குழம்பிப் போனார்கள். “புரிகிறது! தங்கையின் திருமணத்தில் வினோத் இல்லை என்றால் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால் எங்கள் நிலைமை உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். வினோத் வருவதற்காகத் தள்ளிப்போட்டால், திருமணம் நின்றதாக ஆகிவிடும்.” என்றார் தாமோதரன். “அதிகாலை விமானத்தில் வினோத் வர ஏற்பாடு செய்துவிடலாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார் சுகந்தன். சுரபியின் இறுதி தேர்வுகள் இன்னும் பாக்கி இருக்க, படிப்பை மட்டும் முடிக்க வேண்டும் என்று மோகன் கேட்டுக்கொண்டார். அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்வதாகத் தாமோதரன் சொன்னார். நீலாவுக்கு இன்னும் தயக்கம் தீரவில்லை. எல்லாவற்றிற்கும் பதிலோடு வந்திருக்கும் பெரியவருக்கும் அவர் மகனுக்கும், நீலாவின் பயம் புரியவில்லை. சுரபி இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு திருமண வாழ்விற்குத் தயாராக வில்லை என்பது நீலாவின் எண்ணம். அதுமட்டுமின்றி இரு குடும்பங்களுக்கும் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள். ஒருவேளை மணமகன் சுகந்தனின் பிள்ளை என்றால் நீலா அதிகம் யோசித்திருக்க மாட்டாள். அவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் நன்கு தெரியும். ஆனால் பானுமதியின் பிள்ளை என்றால் தயக்கமாக இருந்தது. அவர்களைப் பற்றி நீலாவுக்கு முழுமையாகத் தெரியாது. முக்கியமாகச் சில ஆண்டுகளுக்கு முன் ரவீந்தர் சென்னையில் இருந்தபோது, சில விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தாள். அது உண்மையா என்று கூடத் தெரியாது. கணவன் மோகன் எப்போதும் தாமோதரன் வீட்டு ஆட்களைத் தவறாக ஒருவார்த்தை கூடப் பேசியதில்லை என்பதால் அவரிடமும் உண்மையைக் கேட்க நீலாவுக்குத் தயக்கமே. ஆனால் மகள் வாழ்க்கை என்று வரும்போது, எல்லாவற்றையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் என்று கணவனிடம் கேட்டாள். தாமோதரன் மற்றும் சுகந்தன் கிளம்பிய பின்பே, “அந்த ரவீந்தரை பற்றிப் பலரும் பலதும் பேசினார்கள். அதெல்லாம் உண்மையா?” “நீ எதைச் சொல்கிறாய்?” என்றார் மோகன். “முன்பு இங்கே இருந்தபோது ஒரே குடியாம். நேரம் காலம் பார்க்காமல் குடித்துவிட்டு வீட்டில் இருப்பாராம்.” இந்தப் பேச்சின்போது சுரபியும் அங்கே தான் நின்றிருந்தாள். அதிக வசதியுள்ள குடும்பங்களில், குடி, புகைப் பழக்கங்களை அவர்களின் சமூக அந்தஸ்து என்று கருதத் தொடங்கிவிட்ட காலம். ஆனால் பல நடுத்தர குடும்பங்களுக்கு அது தீய பழக்கமே. தாமோதரன் வீட்டில் இதுபோல் பழக்கங்கள் எல்லாம் தவறு என்று நினைப்பவர்கள். அப்படி ஒருவர் வீட்டில் திடீரென்று ஒருவன் மதுபானங்களைக் குடிக்கிறான் என்றால், வீட்டில் வேலை செய்பவர்கள் நிச்சயம் அதுபற்றிப் பேசுவார்கள். மது அருந்துகிறான் என்பது நான்கைந்து ஆட்களைத் தாண்டி வரும்போது, மது அடிமை என்று மாறிவிடும். நீலாவுக்கும் செய்தி அப்படி தான் வந்து சேர்ந்தது. “அப்போது தொழிலில் எதோ நஷ்டம் என்று சில நாள் அப்படி இருந்தார். ஆனால் நீ சொல்வது போல் கண்மண் தெரியாமல் குடிக்கவில்லை. நான் தினமும் அங்கே சென்று வருவேன் தானே! பணம் கொஞ்சம் அதிகம் இருந்தால், இதுபோல் சில பழக்கம் எல்லாம் இருக்கும்தான். அதைப் பெரிதுபடுத்தக் கூடாது. இப்போது எப்படி இருக்கிறான் என்றுதான் பார்க்க வேண்டும். அதுமட்டும் இல்லை பெரியவர் வந்து கேட்கிறார் என்றால் என்னால் எதுவும் மறுத்துப் பேச முடியவில்லை. அவர் நிச்சயம் சுரபியின் வாழ்க்கை கெடும்படி எதுவும் செய்யமாட்டார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று முடித்தார். நீலா சொன்ன விஷயங்கள் மோகன் அறிந்ததே. ஆனால் ரவீந்தரின் சில மாத நடவடிக்கையில், பெரியவர் தாமோதரன் விருப்பத்தை மறுக்க மோகனால் இயலாது. அதற்காக மகள் வாழ்க்கையைப் பெரிதாக எண்ணவில்லை என்று அர்த்தம் இல்லை. ரவீந்தரின் மாற்றத்தைக் கவனிக்கத் தவறாதது தான் மோகனுக்கு ஒரு தெளிவைத் தந்தது. எல்லாவற்றிற்கும் மேல் தாமோதரன் மேல் இருக்கும் நம்பிக்கை. பகுதி - 5 நள்ளிரவில் சுரபி வீட்டுக்குச் சென்ற சுகந்தன் மீண்டும் பானுமதியை அழைத்துக்கொண்டு சென்றார். மீண்டும் சிறிது நேரத்தில் சுரபியையும் அவள் பெற்றோரையும் அழைத்து வந்தார். திருமணம் பேசியது போல் நடக்கும் என்றார்கள். இப்போது ரவீந்தர் மறுப்பு தெரிவிக்கலாம் தான். ஏனோ அவனால் முடியவில்லை. அப்படிச் செய்தால் அந்த ஆர்த்தி செய்ததற்கும் இவன் செய்வதற்கும் பெரும் வித்தியாசம் இல்லாமல் போகும். என்ன காரணத்திற்காகவோ சுரபியின் வீட்டில் சம்மதம் தெரிவித்தார்கள். அவர்களை அவமானப்படுத்த ரவீந்தருக்கு மனம் வரவில்லை. ஒருமுறை சுரபியிடம் பேச வேண்டும் என்று நினைத்தான். ஆனால் சுகந்தன் வேண்டாம் என்றார். “இப்போது நீ என்ன பேசப்போகிறாய்? பேசி என்ன மாறப்போகிறது?” “அது… ஒருமுறை அவளிடம் சம்மதமா என்று கேட்க வேண்டும்” என்றவனை இடை மறித்து,“நாங்கள் கேட்டு விட்டோம். அவளுக்கு இதில் சம்மதமே. அது மட்டும் இல்லை. நாங்கள் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. போதுமா?” என்றார். ஒருவேளை ரவி பேசிச் சுரபியையும் விரட்டி விடுவானோ என்று பயம் கூடச் சுகந்தனுக்கு இருந்திருக்கலாம். சுரபியின் அண்ணன் வினோத்துக்குத் தகவல் சொன்னார்கள். சென்னையிலிருந்த மோகன் மற்றும் நீலாவின் உடன்பிறந்தோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. வினோத்தும் சரியான நேரத்துக்கு வந்து விட, திருமணம் நல்லபடியாக முடிந்தது. காலையில் அவன் அருகில் சுரபி அமரும்போது தான் மீண்டும் அவளைப் பார்க்க முடிந்தது. அவன் முகத்தை அவள் பார்க்கக் கூட இல்லை. கடைக்கண்ணில் அவ்வப்போது அவளை நோட்டம் விட்டான். அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவளுடன் அவன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறதோ என்று யோசிக்கத் தொடங்கினான். ஆங்காங்கே பல சலசலப்புகள் இருக்கத் தவறவில்லை. பெண் மாறிவிட்டாள் நிச்சயம் அது பலருக்குப் பேச நல்ல தலைப்பாக இருந்தது. ஏற்கனவே இரு வீட்டாரும் இதை எதிர் பார்த்ததால், யாரும் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. முகூர்த்த நேரம் முடிந்து சிறிது நேரத்தில் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வீட்டு ஆட்கள் தவிர வெளியாட்கள் யாரும் இல்லை. முன்பிருந்த திட்டப்படி திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் ஹைதராபாத்தில் வரவேற்பு ஏற்பாடு ஒன்றைத் திட்டமிட்டு இருந்தார்கள். அது இப்போது நடக்குமா? மோகன் வீட்டின் எல்லா விசயங்களையும் அறிந்தவர் என்பதால், முன்பு செய்திருந்த திட்டங்களில் ஏதும் மாற்றம் இருக்கிறதா? என்று கேட்டார். பானுமதி சொன்னாள், “எதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதற்குத் தான் திருமணம் கூட உடனே செய்தது. விமான டிக்கெட் எல்லாம் மாற்ற வேண்டும். பெரிய கூட்டம் இருக்காது என்றாலும் தொழில் முறை நண்பர்கள் மட்டும் வருவார்கள் என்பதால் அதிகம் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில் யார் யார் வரவேற்புக்கு வருவார்களோ, அவர்களுக்கு டிக்கெட் எடுத்து விடுங்கள். அவ்வளவு தான்” என்றாள் மோகனிடம். முன்னிரவு யாரும் உறங்கவில்லை. எல்லோரும் களைத்திருந்ததால் ஓய்வெடுக்க அவரவர் அறைக்குச் செல்ல, நீலா சாந்தியை அழைத்தாள். “நாங்கள் எந்த ஏற்படும் செய்யவில்லை. சுரபிக்குக் கொஞ்சம் ஆடைகள், நகை, சீர்வரிசை எல்லாம் வாங்க வேண்டும். எப்படிச் செய்வது?” என்று கேட்க, “இப்போது அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்! பிறகு அத்தையிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றாள் சாந்தி. “அப்படி எப்படி அனுப்புவது?” என்று வருந்தினாள் நீலா. சாந்திக்கும் சரியென்று பட, கமலாவைத் தேடிப் போனார்கள். கமலா பானுமதியுடன் பேசிக்கொண்டிருக்க, இருவரும் அறை வெளியே தயங்கி நிற்க, கமலா உள்ளே அழைத்தாள். நீலாவின் சந்தேகத்தைக் கேட்க, “இப்போது, அதெல்லாம் வேண்டாம்” என்றார் கமலா. நீலா மீண்டும் ஏதோ சொல்லத் தயங்க," உனக்கு… உங்களுக்கு ஏதும் விருப்பம் என்றால் தாராளமாக வாங்குங்கள். அதை இப்போதே செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. பொறுமையாகச் செய்யுங்கள். நாளை மாலை புறப்பட வேண்டும். அதற்குத் தயாராக வேண்டும்." என்றாள் பானுமதி. பானுமதி வேண்டாம் என்று சொன்னபோதிலும் அவளுக்காகச் சில உடைகள், சீர் வரிசைகள் என்று வாங்கி வர நீலா மோகனை அழைத்துக் கொண்டு செல்ல, சுரபிக்கு சாந்தி, பானுமதியின் வீட்டின் பழக்க வழக்கம்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். அப்படியே பானுமதியின் கணவர் வீட்டு உறவினர்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்க, அனுவும் அர்ஜுனும் வந்து சுரபியைக் கேலி செய்தார்கள். “ஒரு நாளில் சுரபி அக்கா திருமணம் முடிவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.” “ஆமாம்! நீங்கள் எப்படி ரவி மாமாவைக் கல்யாணம் செய்யச் சம்மதித்தீர்கள். அப்பாவும் தாத்தாவும் என்ன சொன்னார்கள்? இரவு தூங்கிவிட்டோம். காலையில் பார்த்தால் சுரபி அக்கா கல்யாணப்பெண்ணாக அமர்ந்திருக்கிறார்.” “ஆர்த்தி அக்கா ஏன் போனார்கள்? அந்த இடத்தில் சுரபி அக்கா எப்படி வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை.” “ஆனால் ரவி மாமா சுரபி அக்காவைத் திருமணம் செய்து கொண்டது இன்னும் நம்ப முடியவில்லை!” இருவரும் மாறி மாறிப் பேச, பிள்ளைகளை அனுப்பி விட்டு மீண்டும் சாந்தி பேசத் தொடங்க, “ஏன் ஆன்ட்டி என்னைத் தேர்வு செய்தீர்கள்? உங்கள் வசதிக்கு நீங்கள் உங்கள் அந்தஸ்தில் வேறு பெண்களைப் பார்த்திருக்கலாம். இன்றே திருமணம் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தீர்களா? அதனால் என்னைத் தேர்வு செய்தீர்களோ? இதை நான் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.” சுரபியின் குழப்பம் புரிய, “நீ நினைப்பது போல் இல்லை சுரபி. சீக்கிரம் செய்ய வேண்டும் என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். பாட்டி உன் பெயரைச் சொன்னதும் இங்கே யாரும் மறுப்பு சொல்லவில்லை. உன்னைப் பற்றி இங்கே பலருக்குத் தெரியும். நீ ரவீந்தருக்கு ஏற்றவளாக இருப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றாள். “உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர் வீட்டில்? அவர்கள் எப்படி என்னை மருமகளாக ஏற்றார்கள்?” “அவர்களுக்குப் பாட்டி தாத்தாவின் தேர்வின் மேல் இருந்த நம்பிக்கை. இங்கே எப்போதும் வசதியைப் பற்றி யாரும் பெரிதாக எண்ணியதில்லை. அப்படி இருந்தால் என்னை மருமகளாக ஏற்பார்களா? பானுமதி அண்ணியும் ஒருபோதும் என்னைக் குறைத்துப் பேசியது இல்லை.” என்றாள் சாந்தி. சாந்தி ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து தான் வந்தாள். தாமோதரனின் நண்பரின் மகள். எந்த யோசனையும் தயக்கமும் இல்லாமல் சாந்தியை ஏற்றார்கள். அதைத்தான் சாந்தி குறிப்பிட்டாள். சுரபிக்குப் பெரிய சமாதானம் கிடைக்கவில்லை என்றாலும் அதற்குமேல் சாந்தியிடம் கேட்கவில்லை. பானுமதியோ, வித்யாவோ சுரபியிடம் பேச வரவில்லை. ரவியும் சுரபியும் சந்திக்கும் வாய்ப்பு இரவில் தான் அமைந்தது. ரவி அவன் அறையில் தான் முழு பொழுதையும் கழித்தான். இரவு அவளை அவன் அறையில் விட்டுவிட்டு சாந்தி சென்றுவிட்டாள். ரவி யாருடனோ வீடியோ கான்பெரென்சில் பேசிக்கொண்டிருந்தான். கையில் ஒரு நாற்காலியைக் காட்டி அமரும்படி சொல்லிவிட்டுத் தொடர்ந்தான். சில நிமிடங்கள் கழித்து, அவள் முன் வந்து நின்றான். கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு அவளைப் பார்க்க, மெல்லச் சுரபி எழுந்தாள். “உன்னை யாரும் திருமணத்திற்குக் கட்டாயப் படுத்தவில்லையே?” என்றான். இல்லை என்று மறுப்பாய் தலை அசைத்தாள். அவன் ஒரு பெரிய மூச்சை வெளியிட்டான். “இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.” என்றவன் சுற்றிப் பார்த்துவிட்டு, “ஓகே! எனக்குத் தூக்கம் வருகிறது. உனக்கும் அப்படித்தான் என்று தெரிகிறது. படுத்துக்கொள்ள. குட் நைட்” என்று கட்டிலின் மறு புறம் சென்று படுக்கச் செல்ல, “உங்களை?” என்றாள் சுரபி. பேச்சு ஒரு வார்த்தையில் நிற்கவும், “என்ன கேட்டாய்?” என்றான். “பதில் தெரியும்போது கேட்கத் தேவையில்லை என்று தோன்றியது!” “அப்படி உனக்கு என்ன பதில் தெரியும்?” “உங்களைக் கட்டாயப்படுத்தி இருப்பார்கள். இல்லையென்றால் நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்திருக்க போகிறீர்கள்!” “ஹ்ம்ம்.” அதன் பின் அவன் பேசவில்லை. படுத்துவிட்டான். இதற்கு என்ன பொருள்? சுரபி சொன்னதுபோல் இவனைக் கட்டாயப் படுத்தினார்களா? அப்படி இல்லை என்று அவன் மறுக்க வில்லை. சுரபி எதிர்பார்த்தது தான் என்றாலும் ஒரு சிறு ஏமாற்றம் மனதில் உதித்ததைத் தவிர்க்க முடியவில்லை! மறுநாள் காலையிலிருந்தே எல்லோரும் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஹைதராபாத் செல்ல ஏற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள். சுரபிக்கு அங்கே பெரிய வேலை என்று ஒன்றும் இல்லை. அனுவுடன் அவள் அறையில் அமர்ந்திருந்தவள், பானுமதி வரவும் எழுந்து நின்றாள். “எல்லாம் எடுத்து வைத்து விட்டீர்களா?” என்று பொதுவாகக் கேட்டாள். “எல்லாம் ஆச்சு அத்தை” என்றாள் அனு. சுரபி பேசாமல் நிற்க,“உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டாயா? நாளை இரவு ரிசப்ஷன் ஆடைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்கவும். “எல்லாம் சரி பார்த்து விட்டேன்.” என்றாள். “வித்யா இப்போது வருவாள். உனக்கு எதுவும் தேவை என்றால் அவளிடம் சொல். இன்று போல் ஒப்பனை இல்லாமல் நாளை இருக்கக் கூடாது. புரிகிறதா?” என்றாள் பானுமதி. “சுரபி அக்கா, லிப்ஸ்டிக் கூடப் போட மாட்டார்கள்!” என்று சிரித்தாள். அறையிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தவள், திரும்பி “நாளை ஒரு நாள் போடச் சொல். அவளுக்கு ஒப்பனையில் நீயும் உதவி செய்” என்றாள் பானுமதி அனுவைப் பார்த்து. ஹைதராபாத்துக்கு, மோகன் நீலா தவிர வேறுயாரும் சுரபியின் பக்கம் செல்லவில்லை. பானுமதியின் தொழில் முறை நண்பர்கள் மற்றும் கணவன் வழி உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள ஒரு சிறு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் வீடு இருக்கும் பகுதியின் அருகிலிருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலில் விழா. கணவன் வழி உறவினர்கள் யாரும் சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வேலை இருந்ததாகப் பானுமதி சொல்ல, அப்போதே அவர்களுக்கு நெருக்கம் குறைவு என்று சுரபி புரிந்துகொண்டாள். வரவேற்புக்குச் சுரபி தயாராகிக் கொண்டிருந்தாள். வீட்டிலேயே தயாராகிச் செல்வதுதான் வசதி என்று சுரபிக்கு ஒரு அறையைக் கொடுத்தார்கள். வித்யாவின் வாடிக்கையான ஒரு பெண் ஒப்பனை செய்ய வந்திருந்தாள். சுரபி அதிகப்படி வேண்டாம் என்றாலும், அந்தப் பெண் ’உங்களுக்கு இது நன்றாக இருக்கும் என்று சொல்லி ஒப்பனை செய்து முடித்தாள். அதுவரை அதிக ஒப்பனை செய்து பழக்கம் இல்லாத சுரபிக்கு ஒரு அடுக்கு அவள் முகத்தில் அப்பியது போல் இருந்தது. அனு நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் சுரபிக்குப் பிடிக்கவில்லை தான். அப்போது பானுமதி உள்ளே வந்து, “நான் உன்னுடன் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யும்போது பொறுமையாக நலம் விசாரிக்க வேண்டும். இங்கே இருக்கும் உறவினர்களுடன் நல்ல கலகலப்பாகப் பேச வேண்டும். ஒரு வேளை ரவி பேசவில்லை என்றாலும் நீ கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.” என்று ஒரு பெரிய உரையை ஆற்றினார். எப்போதும் கம்பீரமாக இருக்கும் பானுமதியின் நடுக்கம் சுரபிக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. பானுமதியின் நடுக்கத்திற்குக் காரணம் விரைவிலேயே சுரபிக்குப் புரிந்தது. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, ரவீந்தருடன் வரும்படி மற்றவர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் பானுமதி. அவர்கள் சென்றதும் ரவீந்தர் சுரபி இருக்கும் அறைக்கு வந்தவன், அவளைக் கண்டதும் ஒரு புருவத்தை உயர்த்திய விதத்தில் சுரபிக்கு இப்போதே எல்லா ஒப்பனைகளையும் கழுவி விட வேண்டும் என்று தோன்றியது. ரவீந்தர் அருகில் வந்து, அவன் பங்குக்கு ஒரு உரையை ஆற்றினான். “எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். என் பின்னால் நான் செல்லும் இடத்திற்கு வந்தால் போதும்.” பானுமதி சொன்னதுக்கு ரவீந்தர் சொன்னதுக்கு நிறைய வேறுபாடுகள். இப்போது சுரபி யாருடன் இருக்க வேண்டும்? யார் சொல்வதைக் கேட்க வேண்டும்? அவள் யோசிக்கும்போதே “போகலாம்” என்று முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்தாள். தாய் மகன் இருவர் இடையே சிக்கிக்கொண்டு என்ன பாடுபடப் போகிறேனோ என்று சுரபி யோசித்துக் கொண்டே போனாள். வரவேற்பில் முதலில் தந்தைவழி உறவினர்களை அறிமுகப்படுத்திவிட்டுத் தான் இருவரையும் மேடைக்கு அனுப்பினாள் பானுமதி. அவர்கள் பின் தொழில் முறை நண்பர்கள். பெரிய கூட்டம் இல்லை என்பதால் எல்லோரும் மணமக்களை வாழ்த்தி விட்டு உணவு உண்ணச் சென்று விட்டனர். அப்போதுதான் சிக்கல் ஆரம்பித்தது. மேடைக்கு யாரும் வரவில்லை என்றானது, பானுமதி இருவரையும் மீண்டும் கணவன் வழி உறவினர் இருக்கும் இடத்துக்கு அழைத்தாள். “அது தான் வரும்போதே பார்த்து விட்டோமே! இப்போது எதற்கு?” என்றான் ரவி “அவர்கள் சுரபியிடம் பேச விரும்புகிறார்கள்” என்றாள் பானுமதி. “அவள் பேச விரும்பவில்லை என்று சொல்லுங்கள்” “என்ன பேச்சு இது! நம் வீட்டுப் பெரியவர்கள்! இருவரும் வாருங்கள். அதற்குப் பின் அவர்களை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாது!” “நான் வரமாட்டேன்! சுரபியும் வரமாட்டாள்.” “என் மானத்தை வாங்காதே! ஒருமுறை வாடா!” என்று கெஞ்சினாள் பானுமதி. இருவர் உரையாடலையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் நின்றாள். இருவரின் வாக்குவாதம் முடிவதாக இல்லை. அதற்குள் சுரேந்தர் வந்து, “ஒரு முறை நாங்கள் சொல்வதைக் கேள்” என்றதும், எதுவும் பேசாமல் நின்றான். “நான் வருகிறேன்! அவர்களிடம் ஏதாவது சொல்லிக் கொள்ளலாம்” என்றாள் சுரபி. மகன் வரப்போவதில்லை என்று தெரிந்ததும், “சுரபி, நீ என்னுடன் வா” என்று முன்னே நடக்கத் தொடங்கினாள் பானுமதி. ரவியின் முகத்தைப் பார்த்தால், அவன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. “அத்தை அழைக்கிறார்கள்!” “நான் வரவில்லை” என்றான். அதற்குள் பானுமதி,“நீ வா சுரபி” என்றாள். குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது. இன்னும் அங்கே நிற்க வேண்டாம் என்று பானுமதியை பின் தொடர்ந்தாள் சுரபி. பத்து பேருக்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். சுரபி அருகில் செல்ல, அவர்கள் பேச்சு காதில் விழுந்தது. பேசியது வித்யாதான். “என்ன செய்வது? எல்லாம் நேரம். தாத்தா தான் எங்களைப் பேசவிடலாம் முடிவெடுத்து விட்டார். அத்தை பேச்சுக்கும் யாரும் மதிப்பு தரவில்லை.” பேச்சு இந்தத் திருமணம்பற்றித் தான் என்று தோன்றியது. எதையும் கேட்காதவள் போல், நின்றாள் சுரபி. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார் பானுமதி. ரவியின் பெரியப்பாக்கள் மற்றும் அத்தை குடும்பம். அறிமுகம் முடிந்ததும் அவர்கள் கொண்டு வந்த பரிசைக் கொடுத்தார்கள். மூன்று குடும்பங்கள் ஆளுக்கொரு நகைப் பெட்டியை அவள் கையில் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிக்கவும், “எங்கள் வீடுகளுக்கு நிச்சயம் ஒரு நாள் இவர்களை அழைத்து வர வேண்டும். உன் மகன் வந்து கூடப் பல ஆண்டுகள் ஆகிறது.” என்றார்கள். பானுமதி ஒரு சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள். “பரிசைப் பிரித்துப் பார். உனக்குப் பிடித்திருந்தால் எங்களுக்குச் சந்தோசமா இருக்கும்” என்றார் அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி. ரவியின் அத்தை என்று அப்போதுதான் அறிமுகம் செய்துவைத்தார்கள். ரவியின் அத்தை என்றால் சுரபிக்குப் பெரியம்மா. அந்தப் பரிசுகளைப் பிரிக்காமலேயே, “நீங்கள் எங்களுக்காகத் தேர்வு செய்தது நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும் பெரியம்மா.” என்றாள் சுரபி. அங்கிருந்து எல்லோருக்கும் அவள் பதில் திருப்தி அளித்திருக்க “பரவாயில்லையே! உன் மருமகள் பெரியவர்களிடம் நன்றாகவே பழகுகிறாள். நல்ல பெண்ணைத் தான் தேர்வு செய்திருக்கிறார் உன் அப்பா! திடீர் மணப்பெண் என்றதும் எப்படியோ என்று நினைத்தோம். வசதியில் தான் குறை. மற்றபடி குணத்தில் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.” ஒரு வாக்கியத்தில் இத்தனை பொருளைக் கண்டுபிடித்து விட்டார்களா என்று சுரபி யோசிக்க, “அப்படியே ரவிக்கும் கொஞ்சம் நல்ல புத்தி வந்தால் நன்றாக இருக்கும்.” என்றார் இன்னொருவர். இது என்ன? மணமக்களை இவர்கள் வாழ்த்த வந்தார்களா? இல்லை குறைகளை ஆராய வந்தார்களா? எல்லோர் வீட்டிலும் இதுபோல் நிகழ்வுகள் நடக்கும் தான். ஆனால் திருமணம் முடிந்த ஒரே நாளில் இப்படிப் பேசுவார்களா? “அவனுக்காவது புத்தி வருவதாவது! நம்மை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. வந்து பேச வேண்டும் என்று இருக்கிறதா? நம்மை அவமானப் படுத்துவது அவனுக்கு வழக்கமாகி விட்டது.” இப்போது சொன்னது ரவியின் அண்ணன் முறை. பெரியவர்கள் அப்படி எதுவும் நினைக்காவிட்டாலும், இந்த மனிதர் பேச்சில் நினைக்க வைத்து விடுவார் போல! எல்லோரையும் உணவு உண்ண அழைத்துச் செல்லும்படி சுரேந்தரிடம் சொன்னாள் பானுமதி. எல்லோரும் உணவு உண்ணச் செல்ல, அவர்களில் ஒரு பெண், ரவியின் பெரியம்மா முறை, “எப்படியோ முட்டி மோதித் திருமணத்தை முடித்து விட்டாய். எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். பெண் வீட்டில் எல்லாம் சொல்லிவிட்டாயா? இல்லை ஏதும் மறைத்துத் திருமணம் செய்தாயா?” என்று சுரபிக்குக் கேட்கும் படி பேசினாள். பானுமதி, “அக்கா…” என்று சற்றே தயங்க, முதலில் சுரபி பயந்து போனாள். இவள் வீட்டுக்குத் தெரியாமல் ஏதேனும் மறைத்து விட்டார்களா? என்று யோசித்தவள், இது வெறும் வம்பு பேசும் பெண்ணின் கூற்று. அதை நம்பி யாரையும் தவறாக எண்ணக் கூடாது என்று எண்ணினாள். அந்தப் பெண் விடுவதாக இல்லை, “பின்னாளில் ஏதும் பிரச்சனை வரக் கூடாது. அதற்காகத்தான் கேட்டேன்” என்றாள். அங்கேயே நின்றால் சுரபி அதிகம் கேட்க நேரிடும் என்று அவளை அங்கிருந்து அனுப்பினாள் பானுமதி. “போய், ரவியை அழைத்து வா! சாப்பிட நேரம் ஆகிறது.” என்று விரட்டினாள். சுரபி அங்கிருந்து நகர்ந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அம்மா கேட்ட ரவீந்தர் பற்றிய சந்தேகங்கள் மீண்டும் மனதில் உதித்தது. அம்மா சொன்ன விஷயம் என்றால் கூடப் பரவாயில்லை. அப்பா அதைப் பற்றி அறிந்தது மட்டுமில்லாமல், மற்றவர்கள் சொல்வது போல் ‘ரவீந்தர் குடிக்கு அடிமை இல்லை’ என்று உறுதி அளித்துவிட்டார். அதைத் தவிர வேறு விஷயங்கள் ஏதும் இருக்குமோ? யோசித்த வண்ணம் பெற்றோரைத் தேடினாள். அவர்கள் இருவரும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்கள். அருகில் கமலம் மட்டும் இருந்தார். இப்படியொரு விழாவில் அவள் பெற்றோர் ஏன் ஒரு ஓரமாக நிற்கிறார்கள் என்று மனதில் ஒரு வலி தோன்றியது. ஒருவாறு எல்லோரும் கிளம்ப, ரவி அவர்கள் வழியனுப்ப வருவானா என்று பானுமதி மகனைத் தேட, ரவி அங்கே வந்தான். உடன் சுகந்தனும். “வந்ததற்கு நன்றி” என்றான் ரவி. “இருவரும் சந்தோசமாக இருக்க வேண்டும். ஒரு நாள் வீட்டிற்கு உன் மனைவியை அழைத்து வா” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். ரவி சுரபியை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான். அதன் பொருளைச் சுரபியால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்பே சொல்லி அழைத்து வந்தும், மனைவி அவன் உடன் நிற்காமல், பானுமதியின் பின் சென்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவன் வர முடியாது என்று சொல்லியபிறகு, அவனை உதாசீனப்படுத்தி விட்டுச் சென்றுவிட்டாள். வீட்டை அடையும்போது நள்ளிரவை நெருங்கிவிட்டது, எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்று விட, சுரபி ஒப்பனைகளைக் களைய நீலாவுக்கு கொடுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றாள். அவளுக்கு உதவி செய்தபடியே நீலா பேசினாள், “நாளைக் காலையில் நாங்கள் கிளம்ப வேண்டும். நீ பக்குவமாக நடந்து கொள். உன் ஆடைகள், உன் தோற்றம் எல்லாவற்றிலும் கவனமாக இரு. உன் அத்தை சொல்கிற படி கேள். பெரியவரும், கமலா பாட்டியும் இங்கே இருப்பார்கள். அவர்களிடம் இங்கே இருக்கும் பழக்கவழக்கம்பற்றித் தெரிந்துகொள். உன் கணவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து செயல்படு.” அன்னையின் அறிவுரை நீண்டு கொண்டே போனது. பொறுமையாகக் கேட்டு விட்டு, “இன்று உங்களிடம் எல்லோரும் எப்படிப் பழகினார்கள்?” என்றாள் சுரபி. மகளின் கவலை படிந்த முகத்தைப் பார்த்து, “நீ கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே பழகினார்கள். உன் வீட்டு உறவினர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எல்லோரும் நல்ல விதமாகப் பேசினார்கள். நீ எங்களைப் பற்றிக் கவலைப் படாதே. நீ சந்தோசமாக இருக்க வேண்டும்!” என்று நெற்றியில் முத்தமிட்டாள். சுரபிக்குக் கண்ணீர் புரண்டு ஓடியது. அன்னையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். “இன்னும் இரண்டு நாட்களில், நீயும் அங்கே வரப்போகிறாய். எதற்கு அழ வேண்டும்.” மகளைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். சுரபியின் இறுதி தேர்வுக்காக அப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். சில நாட்கள் இங்கே இருந்துவிட்டு, மீண்டும் சென்னை சென்று பரீட்சைகளை எழுதி முடித்து, பின் இங்கே வர வேண்டும். சுரபி அவளின் அறை அதாவது ரவியின் அறைக்குள் நுழைந்தாள். ரவி அவன் கணினியில் ஏதோ செய்துகொண்டிருந்தான். சுரபி வருவதை அறிந்து, “சுரபி இங்கே வா” என்றதும் அவன் அருகில் செல்ல, அவளைப் பார்க்காமல், “உட்கார், கொஞ்சம் பேச வேண்டும்” என்றான். மூன்று தனி ஒற்றை சோபா ‘ஃ’ வடிவில் போட்டு நடுவில் ஒரு டீப்பாயும் இருந்தது. நடுவிலிருந்த சோபாவில் அமர்ந்து அந்த டீபாயில் காலை நீட்டியபடி கணினியில் வேலை பார்த்தபடியே, “உன்னிடம் என்ன சொன்னேன்!” என்றான். சுரபி ‘இவன் எப்போது, என்ன சொன்னான்?’ என்று யோசிக்கையில், அவளிடமிருந்து பதில் வரவில்லை என்று அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்கள் சிவந்து வீங்கி இருக்க, “அழுதாயா?” என்றான் ஒற்றை வார்த்தையில். “இல்லை” கணிப்பொறியை மூடி வைத்து நிமிர்ந்து உட்கார்ந்தான். “யாரேனும் எதுவும் சொன்னார்களா?” “அதெல்லாம் இல்லை.” சற்று தயங்கி “அம்மா, அப்பா நாளை ஊருக்குப் போகிறார்கள்!” என்றாள். புருவங்களை உயர்த்தி,“ஓ” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினான். அவன் சிரிக்கிறானா என்று சுரபி அவன் முகத்தைப் பார்க்க, அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. அந்தத் தாடிக்குள் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. லேசாக உதடுகள் விரிவது, கன்னம் அசைவது எதுவும் தெரியவில்லை. பல்லை ஈ என்று காட்டவில்லை என்றால் இவன் சிரிக்கிறானா என்று கண்டறிவது கடினம். சுரபி தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்து, “போய்த் தூங்கு!” என்றான். “நீங்கள் ஏதோ கேட்டீர்களே!” “பிறகு பேசலாம்! போய்த் தூங்கு!” என்றான். மறுநாள் பெற்றோர்களை விமான நிலையம்வரை வந்து வழி அனுப்பினாள் சுரபி. ரவியும் தான். பெற்றோர்கள் கண் மறையவும், மீண்டும் அழுகை வந்தது. கடைக் கண்ணில் அவள் அழுவதைப் பார்த்தவன், வேறெங்கோ பார்ப்பது போல் நின்றான். சிறிது நேரத்தில் அவளாகப் போகலாம் என்றாள். ரவீந்தருக்கு ‘இப்படித்தான் எல்லாவற்றுக்கும் அழுவாளா!’ என்று எண்ணம் வந்தது. வீட்டிற்கு வந்தும் வெகுநேரம் சுரபி ஒரு மாதிரிதான் இருந்தாள். அவளை இயல்பாக வைக்க, கமலா பரிசுப்பொருட்களை எல்லாம் பிரித்துப் பார்க்கச் சொன்னாள். ரவி வருவானோ என்று பார்த்தாள் சுரபி. கமலா சொன்னது காதில் விழுந்தும் அவன் செய்தி தாளைப் புரட்டினான். சுரபி ரவியைப் பார்த்துக் கொண்டிருக்க, “அவன் இதை எல்லாம் பார்க்கமாட்டான். நீ வந்து பிரித்துப் பார்” என்றார் கமலா. நிறையப் பரிசுகள் திரு திருமதி ரவி என்றே எழுதியிருந்தது. ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சில நகைப் பெட்டிகளைப் பானுமதி கொண்டு வந்து தந்தாள். “எல்லாம் என்ன என்ன என்று பார்த்து, லாக்கரில் வை” என்றாள். லாக்கர்? வங்கி பெட்டகம் என்றால் அப்படி ஒன்றும் அவளுக்கு இல்லை. இந்த வீட்டில் ஏதும் பாதுகாப்பு பெட்டி இருக்கிறதா? என்று அவளுக்குத் தெரியவில்லை. “லாக்கர் எண் எல்லாம் இவளுக்குத் தெரியுமா?” என்றார் கமலா. “இப்போதைக்கு இவர்கள் அறையில் இருக்கும் லாக்கரில் வைக்கட்டும். ரவியிடம் சொல்லிச் சீக்கிரம் ஒரு வங்கி லாக்கரை ஏற்பாடு செய்யச் சொல்” என்றாள் பானுமதி. “நீங்கள் பார்த்தீர்களா?” என்றாள் சுரபி. “என்ன பார்ப்பது?” “நகைகளை! பெரியவர்கள் உங்களுக்கு என்ன என்ன என்று தெரிய வேண்டும் இல்லையா? இதுவரை நானாக எதையும் கையாண்டதில்லை.” என்றாள். நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்த பானுமதி கமலாவின் அருகில் அமர்ந்தாள். சுரபி சொன்னதை ஏற்றுக் கொண்டாள் என்று தோன்றவும், மற்றதை எல்லாம் விட்டுவிட்டு, நகைப் பெட்டிகளைத் திறந்து பெரியவர்கள் இருவருக்கும் காட்டினாள். ஏனோ தானோ என்று பார்க்காமல், எப்போது அணிந்து கொள்ளலாம் என்று ஒவ்வொன்றுக்கும் யோசனை சொன்னாள் பானுமதி. கடைசியாக ஒரு பெட்டியைக் கொண்டு வந்து நீட்டினாள் வித்யா, “இது என் பெற்றோர் தந்தார்கள்.” என்றாள். “உன் வீட்டு நகைகள் எல்லாம் எங்கே”, என்றாள் வித்யா. அவள் கேள்வி கேட்டதே, உன் வீட்டில் என்ன செய்தார்கள்? என்று குத்தலாகக் கேட்பது போல் இருந்தது. சுரபிக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது என்று இல்லை. அவளுக்காக அவ்வப்போது அம்மாவும் அப்பாவும் நிறையவே சேர்த்து வைத்தார்கள் தான். ஆனால் அதை இப்போது பட்டியலிட வேண்டுமா என்று யோசிக்கும்போது, பானுமதி சொன்னாள், “சென்னையில் இருக்கும் உன் நகைகளை இப்போதைக்கு அங்கேயே வைக்கும்படி உன் அம்மாவிடம் சொல்லி விட்டேன். உனக்காக இங்கே ஒரு லாக்கரை ஏற்பாடு செய்தபிறகு எடுத்துக்கொள்.” வித்யாவுக்கு இப்போது சொத்தென்று ஆகிவிட்டது. சுரபி சொல்வதை வைத்துத் வித்யாவின் செல்வாக்கை அவளிடம் சொல்லலாம் என்று நினைத்தால், பானுமதி அதைச் செய்ய முடியாத படி பண்ணிவிட்டாள். என்றாலும் வித்யா விடுவதாக இல்லை. “என் பெயரில் இரண்டு லாக்கர்கள் இருக்கிறது. ஒன்று என் அப்பா கொடுத்த நகைகள் வைக்க. இன்னொன்று இங்கே கொடுத்த நகைகள் வைக்க.” என்றாள் பெருமையாக. வித்யாவின் நோக்கம் சுரபிக்கு நன்றாகவே விளங்கியது. அவளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டாள் சுரபி. ரவியிடம் லாக்கர் விஷயம்பற்றிப் பானுமதி சொல்லி இருக்க வேண்டும். சுரபி தொடங்கும் முன், “அம்மா சொன்னார்கள். நாளை செல்லலாம்” என்றவன், அவன் அறையிலிருந்த லாக்கரைக் காட்டினான். குளியல் அறை அருகில் ஒரு சிறு அறை போல் மறைக்கப்பட்டிருந்தது. டிரெஸ்ஸிங் ரூம். அதிலிருந்த ஒரு ஆளுயர கண்ணாடியின் பிரேமில் ஒரு சிறு சாவி நுழையும் ஓட்டை. அதில் ஒரு சாவியைப் போட்டுத் திறந்தான். அதுவும் ஒரு கப்போர்டு போலத்தான் இருந்தது. அதன் பக்கத்தில் இன்னொரு சாவித் துவாரம். அதைத் திறந்தால் பெரிய பொந்து. அதில் வைக்கும்படி சொன்னான். எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு, அவன் சொல்லிக் கொடுத்தது போல் மீண்டும் பூட்டிவிட்டு சாவியை அவனிடம் கொடுத்தாள். “அதை நீயே வைத்துக்கொள். எனக்குத் தேவைப் படாது” என்றான். அது காலியாகவே தான் இருந்தது. இதுவரை அவன் அதை உபயோகிக்கவில்லை. இனியும் செய்யப்போவதில்லை என்கிறான். “கொஞ்சம் பேசலாமா?” என்றான். “ஹ்ம்ம்!” “உன்னிடம் ஒன்று சொன்னேன்! வரவேற்பில் என்னுடன் நின்றால் போதும் என்றேன். நீ ஏன் அதைச் செய்யவில்லை?” “அத்தை அழைக்கும்போது, அவர்களுடன் செல்ல வேண்டும் தானே! அதுவும் நம் உறவினர்களைச் சந்திக்க எப்படி முடியாது என்பது.” “உறவினர்களா? உறவு என்றதும் உன்மேல் பாசத்தைப் பொழிந்தார்களா? நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்று எடை போட உன்னிடம் பேசியிருப்பார்கள்? அவர்களுடன் பேசி நீ என்ன சாதித்தாய்?” சரியாகவே கணித்திருக்கிறான். “உறவு என்றால் அப்படித்தானே! அதற்காகப் பேசாமல் இருக்க முடியுமா? அதுவும் நம் வரவேற்புக்கு வந்திருப்பவர்களை எப்படி அவமதிப்பது?” உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம், சுரபி அவள் பெற்றோரிடம் கற்றுக் கொண்டது. பெற்றோர் இருவரின் உடன் பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் சில நாட்களில் எதுவும் நடக்காதது போல் இருவரும் அவர்களுடன் இயல்பாக இருப்பார்கள். விவரம் தெரிந்த பிறகு சுரபிக்கும் வினோத்துக்கு அது ஆச்சரியமாக இருக்கும். அதற்கு மோகன் தந்த விளக்கம் இன்னும் நினைவில் இருக்கிறது. விலகி நின்றால் விரிசல் பெரிதாகிவிடும். இப்படியே நம்மைச் சுற்றி இருப்பவருடன் விரிசல்களை ஏற்படுத்திவிட்டால், நாம் தனியாக நிற்க வேண்டும். மனிதனுக்கு பலம், சுற்றி இருக்கும் மனிதர்களால் தான் என்றார். “நான் சொன்னதைக் கேட்காமல், என்னையும் தான் அவமானப்படுத்தினாய்! அது சரியா?” என்றான் ரவீந்தர். சுரபி ஒரு நிமிடம் அதிர்ந்தாள். அவள் பேசாமல் இருக்க, “இப்போது புரிகிறதா?” எதுவும் பேசவில்லை என்றால் சுரபி செய்தது தவறு என்றாகிவிடும். ஆனால் அவள் செய்தது தவறு இல்லை என்பதை சுரபி நம்பினாள். “உங்களை நான் அவமானப்படுத்தியதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அத்தையிடம் உறவினர்கள் சொல்லி அனுப்பியும், அவர்களைப் பார்க்கச் செல்லவில்லை என்றால் அது தான் தவறாக இருந்திருக்கும். அழைத்த உறவினர்களை, அத்தையை எல்லோரையும் அவமானப்படுத்தியது போல் இருந்திருக்கும்.” “உனக்கு நான் முக்கியமா? அவர்களா?” இப்போது என்ன சொல்ல வேண்டும். “இதை வைத்துத் தான் நான் உங்களுக்குத் தரும் முக்கியாயத்துவதை முடிவு செய்யப் போகிறீர்களா?” ரவீந்தர் திகைத்தான். ஆர்த்திக்கு அவன் சொன்ன வார்த்தைகள். இப்போது அவன் பேச மறந்தான். ஒரு கணத்திற்குப் பிறகு, “கர்மா ஈஸ் எ பூமராங்” என்றான் தாழ்ந்த குரலில். “புரியவில்லை!” “ஒன்றும் இல்லை!” என்று நகர்ந்தான். பானுமதி ஏற்கனவே இருவரிடமும் சொன்னதுதான். ஒருநாள் ரவியின் பெரியப்பா வீடுகளுக்கு ஒரு முறை சென்று வர வேண்டும் என்று மீண்டும் அதை நினைவு படுத்தினாள். “பல முறை சொன்னார்கள்! இரண்டு பெரியப்பா வீடு மற்றும் அத்தை வீட்டுக்குப் போய் வாருங்கள். அடுத்த வாரம் அலுவலகத்திற்கு என்று சென்று விட்டால், அப்புறம் நேரமில்லை என்பாய். சுரபியும் இன்னும் இரண்டு நாளில் சென்னை சென்றுவிடுவாள்.” என்றாள் மகனிடம். “அங்கெல்லாம் போக முடியாது!” என்றான். “பெரியவர்கள் வரச்சொல்லிப் போகாமலிருந்தால் மரியாதையாய் இல்லை. ஒரே நாளில் மூன்று வீட்டுக்கும் போய் வந்து விடு.” என்றார் கமலம். “வேறு வேலை இருக்கிறது பாட்டி! அதெல்லாம் முடியாது!” என்றான் மீண்டும். “எந்த வேலை என்றாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாளை எல்லோர் வீட்டுக்கும் சென்று வா! வேறெதுவும் முக்கியமில்லை.” என்றார் தாமோதரன். “நாளை மாலை நான் மணாலி செல்லவிருக்கிறேன். ஏற்கனவே டிக்கெட் எடுத்து விட்டேன்.” என்றான் ரவி. எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். அதற்குள் தேனிலவு செல்லும் நெருக்கம் இவர்களுக்குள் வந்துவிட்டதா? என்று அனைவருக்கும் வியப்பு. சுரபிக்கு அதுவரை அவன் இதுபற்றிச் சொல்லவில்லை. ஒருவேளை அந்த ஆர்த்தியுடன் செல்லச் செய்த ஏற்பாடா? என்று எண்ணியவள் எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் இப்போது என்ன சொல்ல வேண்டும்? அவள் இறுதி தேர்வு இன்னும் இருவாரங்களில். இப்போது கேளிக்கை உலா தேவையா? அதைச் சொன்னால் யாரும் இவள் பேச்சைக் கேட்பார்களா? “சுரபியின் தேர்வு வருகிறது. மணாலி பயணத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்றார் தாமோதரன். “என் பயணத்தை மாற்ற முடியாது! சுரபி சென்னை செல்லட்டும்.” என்றான் ரவீந்தர். “என்ன பேச்சுடா இது! அவளை விட்டுவிட்டு நீ மட்டும் செல்லவேண்டுமா?” என்றாள் பானுமதி. “நான் தொழில் விஷயமாகச் செல்கிறேன். சுரபி வந்து என்ன செய்யப்போகிறாள்!” இப்போது எல்லோரும் திகைத்தனர். திருமணம் முடிந்து மலைப் பிரதேசம் செல்கிறேன் என்று ஒருவன் சொன்னால், அது தேன்நிலவு என்றுதான் எல்லோரும் எண்ணுவார்கள். “அதற்குள் வேலையைப் பார்க்கவேண்டுமா?” என்றார் கமலா. “ஆம் பாட்டி! இது மூன்று மாதங்களுக்கு முன் முடிவான ஒரு சந்திப்பு. வெளிநாட்டவர்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்ய இதை விட்டால் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்காது.” என்றான். “எல்லாம் சரிதான்! ஆனால் வேலைக்கு மட்டும் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்காதே! குடும்பத்தையும் பார்க்க வேண்டும்!” என்றார் தாமோதரன். ரவீந்தர் எதுவும் பதில் சொல்லும் முன், “அதெல்லாம் ரவி சிறப்பாகச் செய்வான்!” என்று கமலா பேரனுக்குச் சாதகமாகப் பேசினாள். ரவி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான். கமலா சுரபியை அழைத்துப் பேசினாள். “ரவிக்கு அவன் தந்தை வழி உறவினர்கள்மீது பெரிய ஈடுபாடில்லை சுரபி. அவர்கள் வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பழகுவது அவ்வளவாகப் பிடிக்காது. அப்படி விட முடியுமா சொல். எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கப் போவதில்லை என்றாலும், அவ்வப்போது கலந்து கொள்வது அவசியம். உனக்குப் புரியும். அவனுக்குப் புரியவைக்க எங்களால் முடியவில்லை. நீ பேசிப் புரிய வை.” என்றார். சுரபி என்ன பேசுவது? இவர்கள் எல்லோரும் சொல்லிக் கேட்காதவன், சுரபி சொல்லியா புரிந்து கொள்வான்? பகுதி - 6 சுரபி, தாமோதரன் கமலாவுடன் தேர்வுகளுக்காகச் சென்னை புறப்பட்டாள்! ரவியும் மணாலி புறப்பட்டான். பெற்றோர் வீட்டுக்கு வந்த சுரபிக்கு எல்லாம் பழைய மாதிரியே இருந்தது. முதல் சில நாட்கள் கல்லூரி செல்லத் தேவை இருக்க வில்லை. வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிருந்தாள். முதலில் மகளின் மகிழ்ச்சியான தோற்றம் கண்டு பெற்றோருக்குச் சந்தோஷமாகவே இருந்தது. ஆனால் சுரபிக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறாள் என்பதை நீலா அறிந்துகொண்டாள். முதலில் படிப்பில் கவனம் செலுத்துகிறாள் என்று நினைத்துப் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை நீலா. சுரபி கணவனிடம் பேசினாளா? என்று பொதுவாகப் பேசியபோதுதான், சுரபியின் பதில் பெற்றோருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. மதிய உணவின்போது, தாயும் மகளும், பேசிக்கொண்டிருக்க, “வந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. மாப்பிள்ளையிடம் பேசினாயா?” என்றாள் நீலா. “அவரிடம் என்ன பேசுவது?” முதலில் மகள் விளையாடுகிறாள் என்று நினைத்து, “என்ன பேசுவதா? அவர் நேரத்திற்குச் சாப்பிட்டாரா? பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா? என்றெல்லாம் கேட்க வேண்டாமா!” சலிப்புடன், “அதெல்லாம் முடியாது! எனக்குப் படிக்க வேண்டும்! கடைசி வாரம் நடந்த சில வகுப்புகளில் கூட நான் கலந்துகொள்ளவில்லை.” என்று எழுந்து சென்றாள். மகளின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டுவதா? இல்லை திருமண உறவின் உன்னதம் தெரியாமல் இருப்பதை எண்ணி வருந்துவதா? கணவனிடம் இதுபற்றிப் பேசினாள். ஆனால் மோகனின் பதில் நீலாவுக்குச் சமாதானமாக இல்லை! மாறாகப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. “ரொம்ப யோசிக்கிறாய்! அவர்கள் திருமணம் சாதாரணமாக நடக்கவில்லை. இருவரும் உடனே இயல்பான கணவன் மனைவியாக இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகப்படி. முதலில் அவள் தேர்வை முடிக்கட்டும். பிறகு நீ அவளிடம் பொறுமையாகப் பேசிப்பார்.” என்றார். தேர்வுகள் எல்லாம் முடிந்து நாளில் தான், தோழிகளுடன் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. சரியாகத் தேர்வு நேரத்துக்குக் கொண்டுவந்து விடுவது, முடியும் நேரத்திற்கு அழைத்துச் செல்வது என்று மோகன் சரியாய் செய்தார். அதற்குக் காரணமும் இருந்தது. சுரபியின் திருமணத்தை மோகன் சாமர்த்தியமாக நடத்திவிட்டார் என்று பலரும் பேசுவது, மோகனுக்குத் தெரிந்திருந்தது. அதில் கூட இரண்டு விதமாகப் பேச்சுக்கள். பெரிய இடம் என்று ஆசைப்பட்டு, மணமகனைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் மகளுக்கு மணம் முடித்துவிட்டார் என்று சிலர் பேசினார்கள். இன்னும் சிலர், தாமோதரன் மிரட்டலுக்குப் பயந்து மகளைச் சம்மதிக்க வைத்துவிட்டார் என்று பேசினார்கள். அவர் வயதிற்கு இதைப் பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லும் பக்குவம் இருந்தது. ஆனால் மகள் இதுபோல் பேச்சுகள் கேட்க வேண்டாம் என்று எண்ணினார். இறுதி தேர்வன்று மட்டும் சுரபி தோழிகளுடன் சிறிது நேரம் கழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். முற்றிலும் அவளைச் சிறை வைத்ததுபோல் நடத்தக் கூடாது என்று அவள் வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்தார். அதன் படி சுரபி இறுதி நாள், நெருங்கிய தோழிகள் மூவரை அழைத்துக்கொண்டு மதிய உணவு உண்ண ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார்கள். கேலியும் கிண்டலும் என்று பொழுதைச் சுகமாகக் களிக்கலாம் என்று எண்ணியவள், இறுதியில் பெரும் குழப்பத்துடன் வீடு திரும்பினாள். முதலில் எல்லோரும் திருமணத்தைப் பற்றிக் குதூகலமாகக் கேள்விகள் கேட்டார்கள். தோழிகளில் இருவர், சுரபியின் கணவனின் தோற்றம், சுரபியின் அலங்காரம் பிறகு பரிசுகள் என்று தொடங்கி, மெல்லச் சுரபியின் கணவன் தொழில்பற்றிக் கேட்டார்கள். சுரபிக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. சுரபியின் தயக்கத்தைப் பார்த்து, ஒரு தோழி சொன்னாள், “ஏய்! என்னப்பா சுரபிக்குச் சாதாரணமாகத் திருமணம் நடந்திருந்தால் பரவாயில்லை. இது திடீர் திருமணம். ஆனால் திருமணம் முடிந்து ஒருவாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னுமா தெரிந்துகொள்ளவில்லை.” என்றாள். உண்மைதான், சுரபிக்கு ரவீந்தர் பற்றி என்ன தெரியும்? மீண்டும் அடுத்தவள் கேட்டாள், “தினமும் போனில் பேசிக்கொள்வீர்களா? உன்னை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்?” சுரபி எதுவும் செல்லும்முன், தோழிகளே ஒருவருக்கொருவர் பதிலைக் கற்பனை செய்துகொண்டனர். தோழிகளின் கற்பனை பதில்கள் சுரபிக்கு மேலும் பல கேள்விகளை எழுப்பின. அன்று வீட்டை அடையும் போதே, சுரபி மீண்டும் ஹைதராபாத் செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டுகளுடன் வந்திருந்தார் மோகன். இன்னும் இரண்டு நாள் இங்கே இருக்கட்டும் என்று நீலா கேட்டதற்கு, “அவள் இங்கே வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. திருமணம் முடிந்ததும் இங்கே வந்து விட்டாள். இப்போது செல்லட்டும். ஒரு மாதத்திற்குப் பிறகு வேண்டுமானால், நாம் சென்று அவளை அழைத்து வருவோம்.” என்றார் மோகன். நீலா மகளின் நடவடிக்கைகுறித்து கமலாவிடம் பேச,“பார் ! நீயே சொல்கிறாய், அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று. நம் வீட்டில் வைத்துக்கொண்டால் இன்னும் சிறுபிள்ளையாகவே தான் இருப்பாள். அதற்குத்தான் உடனே அவளைக் கணவன் வீட்டுக்கு அனுப்புவது.” என்று நீலாவை சமாதானப்படுத்தினார். கிடைத்த அவகாசத்தில், மகளுக்குச் சில புத்தி மதியை சொல்லினாள் நீலா. மோகனும் தான் பங்கிற்கு சில அறிவுரைகளைக் கூறினார். “சுரபி, மாப்பிள்ளை உன்னை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்?” “அவர் என்ன என்னைக் கவனித்துக் கொள்வது? நானே என்னைப் பார்த்துக்கொள்வேன்.” என்றாள். லேசாகச் சிரித்துவிட்டு, “நீ அவருடன் பேசக்கூட இல்லை என்று அம்மா சொன்னாள். உனக்கு இது எல்லாம் புதிது. ஆனால் அவர் உன் கணவர். இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கலாம். அதைக் குறைக்க முயற்சி செய். இனிமேல் அதுதான் உன் வீடு. அவர் தான் உனக்கு எல்லாம். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். அவர்மேல் உனக்கு அக்கறை இருக்க வேண்டும். இதுவரை உன் அம்மா என்னை எப்படிப் பார்த்துக்கொண்டாளோ, நீ உன் கணவரை அப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். மாப்பிள்ளையும் அதே போல் தான். ஆனால் என்னால் அவருக்குச் சொல்ல முடியாது. நீ காட்டும் அக்கறை அவருக்கு உன்மேல் அன்பை அதிகப்படுத்தும். ஒருவேளை உனக்கு எதுவும் கஷ்டம் என்றால், அப்பாவிடம் தயங்காமல் சொல்ல வேண்டும். அப்பா வருந்துவார்! அம்மா கலங்குவார் என்றெல்லாம் உனக்குள் எதையும் மறைக்கத் தேவையில்லை.” ‘சரி’ என்பதுபோல் தலையாட்டினாள். டெல்லியிலிருந்து வினோத்தும் இம்முறை ஹைதராபாத் வந்தான். தன் பிரயாணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ரவீந்திரன், பானுமதியின் வீட்டிலிருந்து புறப்பட்டு அவனுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டான். சுரபியை அழைத்துவந்த மோகன் நீலாவுக்கு முதலில் இது அதிர்ச்சியாக இருந்தது. மகளுக்கும் இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. ரவீந்தரும் இதுபற்றி அவளுக்கு ஒன்றும் சொல்லியிருக்கவில்லை. உண்மை என்னவென்றால் ரவீந்தர் சுரபிக்கு இந்த இடைப்பட்ட நாளில் பேசவேயில்லை. முக்கியமான விஷயம், ஒருவரின் எண் மற்றொருவருக்குத் தெரியாது. பானுமதியிடம் இதுபற்றிச் சொல்லவோ கேட்கவோ நீலாவுக்கும் தயக்கம். மோகனும் எதுவும் பேச வேண்டாம் என்றுவிட்டார். ஆனால் அவர்களின் வாட்டத்தை பானுமதி கண்டிருக்க வேண்டும். மகனின் நடவடிக்கைபற்றி அறிந்திருந்த பானுமதி, இருவருக்கும் சமாதானம் சொன்னாள். “உங்கள் கவலை எனக்குப் புரிகிறது! ரவீந்தருக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். சுரபிக்கும் அப்படியே! திருமணம் முடிந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே சில நாட்கள் தேவைப்படும். ரவியிடம் நான் பேசுகிறேன். இன்று இரவு இங்கே தங்குங்கள். நாளைக் காலையில், அவன் வீட்டுக்குச் செல்லலாம்.” என்றார். மோகன் மெல்லக் கேட்டார், “அவர் எந்த ஊரில் இப்போது தங்கியிருக்கிறார்?” பானுமதி ஒரு கணம் குழம்ப, உடனே சுதாரித்தாள். சுரபியின் வீட்டில் ரவீந்தர் பற்றி அதிகம் தெரிந்திருக்க வில்லை. திருமணத்தின் பின் கேட்டு அறிந்திருப்பார்கள் என்று எண்ணினாள். அவர்கள் அப்படியெதுவும் யாரிடமும் கேட்கவில்லை. முக்கியமான காரணம், தாமோதரன் மேல் இருந்த மரியாதை. பானுமதிக்கு மோகன் பற்றித் தெரிந்திருந்ததால் அதிகம் யோசிக்கவில்லை. மேலும் தொடர்ந்தாள் பானுமதி, “ரவி இங்கேயே தான் இருக்கிறான். இங்கிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவில், அவனுக்கென்று ஒரு வீட்டை அவனாக வாங்கி அங்கே தான் இருக்கிறான். திருமணத்திற்கு முன்பும் அப்படித்தானே. அவனுக்குத் தனியே இருப்பதே பிரியம்.” என்றாள். “சுரபி இன்னும் சின்னப் பெண். அவள் எப்படி தனியே சமாளிப்பாள் என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.” என்று தயக்கத்துடன் நீலா சொல்ல, “நீங்கள் பயப்படத் தேவையில்லை. அம்மா நேற்றே சுரபி பற்றிச் சொன்னார்கள். இங்கே இருக்கும் பணிப்பெண், நம் குடும்ப வழக்கம் எல்லாம் தெரிந்த பெண். அந்தப் பெண்ணை, சுரபிக்கு எல்லாம் இயல்பாகும் வரை அங்கே அனுப்பிவைக்கிறேன்.” என்றாள் பானுமதி. கமலா, நீலாவின் கலக்கத்தைப் புரிந்துகொண்ட, பானுமதிக்கு விஷயத்தைச் சொல்லியிருந்தார். பானுமதி தன் பெற்றோருடன் இப்படிப் பேசுவாள் என்று சுரபி எதிர்பார்க்கவில்லை. தன் கம்பீரத்தைக் காட்டாமல், இயல்பாகப் பேசினாள். மருமகளின் பெற்றோர் என்று இப்படிப் பேசுகிறாளா? இல்லை மகனின் சங்கடத்தைப் போக்கிய குடும்பம் என்று மாறிவிட்டாளா? எதுவாக இருந்தாலும் சரி, முன்பு போல் பானுமதி நடந்துகொண்டால் அதுவேறு சுரபிக்கு கவலையாக இருந்திருக்கும். சுரேந்தர் அதிகம் பேசவில்லை என்றாலும் கூட, சுரபி வீட்டாரிடம் நல்ல மாதிரி நடந்துகொண்டான். மோகனை எப்போதும் ஒரு மேலாளர் என்று மட்டும் நினைத்திருந்த பானுமதிக்கு, இப்போது மோகனின் மேல் பெரும் மதிப்பு கூடியிருந்தது. ‘என் மகளைத் தர முடியாது’ என்று அவர் சொல்லியிருந்தால், இன்று ஒரு பெரிய தலைகுனிவுடன் தான் பானுமதி இருந்திருக்க முடியும். அது மட்டுமின்றி, பழைய ரவீந்தரை பற்றி நிச்சயம் மோகனுக்குத் தெரிந்துதான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல், மகளைப் பானுமதி வீட்டுக்கு அனுப்பினார். பானுமதி முன்பு மோகனிடம் நடந்த விதத்தைப் பெரிதாக யோசிக்காமல், இன்று வரை அதே இயல்பாக இருக்கிறார். மறுநாள் இவர்களாக ரவீந்தர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் சுரபியையும் பெற்றோரையும் அழைத்துச்செல்ல ரவீந்தர் வந்திருந்தான். வினோத்தையும் வரவேற்றான். முன்னே அவர்களை அனுப்பிவிட்டு, பணிப்பெண் பாக்யாவை அழைத்துக்கொண்டு பானுமதி அவளின் காரில் சென்றாள். ரவீந்தர் வீட்டை அடைந்ததும், தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கிளம்பிச்சென்றான். அதுவே நீலாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. மகளை ரவீந்தர் எப்படிக் கவனித்துக்கொள்வான் என்ற கலக்கம் பற்றிக்கொண்டது. பின்னோடு வந்த பானுமதி, வீட்டில் என்ன தேவைகள், சுரபிக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள். ரவீந்தரின் வீடு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்தது. வீடு ஐந்தாவது தளம். ஒரு தளத்தில் நான்கு வீடுகள் மட்டும் இருந்தது. அதேபோல் பத்து ப்ளாக்குகள். ரொம்பவும் விசாலமான வீடு. மூன்று படுக்கை அறை கொண்ட வீடு. வீட்டை முன்பே நன்றாக அமைத்திருந்தார்கள். ஹாலில் பெரிய சோபா, டிவி, பெரிய ஷோ கேஸ். டைனிங் ஹாலில் ஒரு சாப்பாடு மேசை. சமையல் அறையில் தேவையான எல்லா நவீன சாதனங்களும் இருந்தன. சமையல், பொழுதுபோக்கு, ஆடம்பரம் என்று எல்லாவற்றுக்கும் நிறைவே இருந்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு என்றாலும் அந்த வீடு இரண்டு தளங்களைச் சேர்ந்தாற்போல் இருந்தது. கீழே ஹால், டைனிங் ஹால், சமையல் அறை, ஒரு படுக்கை அறை. வீட்டின் ஒரு ஓரத்தில் மாடிக்குச் செல்லப் படிக்கட்டுகள். மேலே இரண்டு படுக்கை அறைகள் மற்றும் ஒரு பெரிய பால்கனி. வீட்டிற்கு தேவையானவை என்ன வேண்டும்? என்று பானுமதி கேட்க, சுரபி விழித்தாள். “பயப்பட ஒன்றும் இல்லை சுரபி! வீட்டில் உனக்கு இது இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதுவும் தோன்றினால் சொல். உன் பொழுது போக்கிக்கிற்கு, இல்லை உனக்குப் பிடித்தது ஏதாவது. மாற்றத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றாள் பானுமதி. அனைவரையும் பானுமதி அழைத்துச்சென்றாள். மாலைவரை உடன் இருந்தாள். மோகனும் நீலாவும் மாலை கிளம்பிச் செல்லும்வரை ரவீந்தர் வரவில்லை. முதலிலிருந்து கலங்கிக்கொண்டிருந்த நீலா, மேலும் பயந்தாள். கணவனிடம் சொல்லிப்பார்த்தாள். மோகன் எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாய், “சில நாட்கள் பார்க்கலாம்” என்றார். சுரபிக்கும் அதே கலக்கம். பானுமதி காட்டிய கனிவு கூட ரவீந்தரிடம் இல்லை. காலையில் வீட்டுக்கு அழைத்துவந்தவன், உடனே சென்றுவிட்டான். அவர்களிடம் பேசுவதற்கே தயங்குகிறான். சுரபிக்கு அவன்மேல் கோவம் கூட வந்தது. ஆனால் இப்போதும் ரவீந்தருக்கு பணிந்து பேசியது மோகன் தான். “உன்னை உன் மாமியாரிடம் தனியே விட்டால், நீ என்ன பேசுவாய்? அதுவும் இப்படியொரு திடீர் திருமணத்தில்! எங்களுடன் பேசவில்லை என்றாலும், காலையில் அந்த வீட்டுக்கு வந்து எங்களை அழைத்துவந்தாரே! அவர்களாக வரட்டும் என்று இல்லாமல் வேலைக்குச் செல்லும் பரபரப்பில் அவராக அதைச் செய்தார். அதுவே எங்களுக்குக் கொடுக்கும் மரியாதை தானே! சில நாட்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்! இதுபோல் சிறு விசயத்திற்கெல்லாம் சோர்ந்தால், இருவருக்கும் பெரிய ஓட்டுதல் ஏற்படாது. உன் அம்மா தான் தேவை இல்லாமல் எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கிறாள். நீயும் அதைச் செய்யாதே!” என்று அறிவுரை சொன்னார்." பெற்றோர்களை அனுப்பிவிட்டு, வீட்டை அடைந்த சுரபிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பணிக்கு வந்த பாக்கியா, இரவு நேரத்தில் அவள் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுத்தான். கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு, மேலே உள்ள பால்கனிக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மற்ற நகரங்களுக்கும் ஹைராபாதுக்கும் இருக்கும் வேறுபாட்டை அறிய முடியாதது போல் இருள் சூழ தொடங்கிவிட்டது. சென்னையின் இரவு நேரம் போலவே பல மின்விளக்குகள் நகரைத் தெளிவாகக் காட்டியபோது பரபரப்பான இன்னுமொரு நகரம் என்றே தோன்றியது. அவர்கள் குடியிருப்பின் பூங்காவில் சிலர் நடந்துகொண்டும், பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டும் இருப்பது தெரிந்தது. பிள்ளைகள் விளையாடப் பெரிய புல்தரை. அதில் சருக்கு, ஊஞ்சல், சீசா, மேரிகோ வட்டம், இன்னும் பல விளையாட்டுகள். யாரோ மிக அருகில் நிற்பதை உணர்ந்து பயத்துடன் திரும்பினாள். ரவீந்தர் தான் அருகில் நின்றான். “அம்மா அப்பா கிளப்பிவிட்டார்களா?” என்றான். “ஹ்ம்ம்!” என்று அங்கிருந்து நகர்ந்து முன்னறைக்குச் சென்றாள். பேசும்போது சுரபி நகர்ந்து சென்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. “உன்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தேன்! நான் பேசும்போது நகர்ந்து செல்வது எனக்குப் பிடிக்காது.” என்றான். அவள் பதில் பேசவில்லை. “இது உன்னுடைய.” என்று ஒரு வாலட்டை நீட்டினான். சுரபி அதை வாங்கி பார்க்க, வங்கி புத்தகம், ஒரு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் இருந்தது. ஒரு சாவியும். “அது வீட்டின் சாவி. கார்டுகள் எல்லாம் உன் பெயரில் இருக்கிறது. ஒரு சிம். இந்த ஊர் சிம். மாற்றிக்கொள்ள. அந்த வீடுபோல் இங்கே அதிக வேலை ஆட்கள் இல்லை. வாரம் மூன்று முறை ஒரு பெண் வந்து வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் போவார்கள். மற்றபடி உனக்கு வேறு ஆட்கள் வேண்டுமென்றால் சொல், ஏற்பாடு செய்துகொள்ளலாம். வீட்டில் எல்லாம் இருக்கின்றது. வேறேதும் தேவை என்றால் நாளை வாங்கிக்கொள்ளலாம்.” “அத்தை இன்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டார். சிலது நாளை வீட்டில் கொண்டுவந்து தருவார்கள். இப்போதைக்கு எதுவும் வேண்டாம்.” என்றாள். சில நொடிகள் எதுவும் பேசவில்லை அவன். ஒரு நீண்ட மூச்சை எடுத்து வெளிவிட்டான். “சுரபி! இம்முறை சரி! இனிமேல் வேறு யாரிடமும் எதுவும் கேட்காதே! மற்றவர்களிடம் உதவி என்று கேட்பது எனக்குப் பிடிக்காது. எதுவானாலும் என்னிடம் சொல்.” “நான் அத்தையிடம் தான் …” என்று சுரபி முடிக்கும்முன், “யாராக இருந்தாலும் சரி!” என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியில் அழைத்தான். ஆங்கிலம் கலந்த தெலுங்கில் பேசினான். சுரபிக்குப் புரிந்த வரை தினசரி வாங்கும் பால், செய்தித்தாள் போன்ற தேவைகள்பற்றிப் பேசினான் என்று புரிந்துகொண்டாள். “நாளைக் காலையிலிருந்து பால், தமிழ் புத்தங்கள் மற்றும் செய்தித்தாளைப் போட்டுவிடுவார்கள். வேறெதுவும் வேண்டுமா?” என்றான். “அத்தை, பாக்யா அக்காவை இங்கே எனக்கு உதவியாக அனுப்புவதாகச் சொன்னார்கள்.” என்றாள். சுரபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஒருவாரத்திற்கு மேல் அவர்கள் இங்கே வரக் கூடாது. உனக்கு உதவிக்கு ஆள் வேண்டும் என்றால், நான் ஏற்பாடு செய்கிறேன்.” “ஏன் ?” “அவர்கள் இங்கே வருவது சரிவராது! இங்கே இருந்து உளவு பார்த்து அம்மாவுக்குத் தகவல் சொல்வார்கள். நம் விஷயங்கள் நமக்குள் இருக்க வேண்டும். புரிகிறதா?” ஒரு வேளை அதற்குத் தான், பாக்யாவை பானுமதி அனுப்பினாளோ என்று தோன்றச் சுரபி சரியென்று தலையாட்டினாள். “வேறெதுவும் வேண்டுமா?” என்றான். “உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?” “ஹ்ம்ம்” “நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?” ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, “ஏன் கேட்கிறாய்?” “தெரிந்துகொள்ளத்தான்!” “உனக்குத் தெரியாதா?” “லண்டனில் படித்தீர்கள் என்று தெரியும். ஆனால் என்ன படித்தீர்கள் என்று தெரியாது” “தெரியாமலேயே திருமணம் செய்துகொண்டாயா?” இப்போது ஆம் என்பதுபோல் தலையாட்டினாள். “இப்போது ஏன் கேட்கிறாய்?” “யாரேனும் கேட்டால் சொல்வதற்கு! கல்லூரியில் தோழிகள் கேட்டபோது எனக்கு உங்களைப் பற்றித் தெரியவில்லை.” “ஊரிலிருந்தபோது யாரிடமேனும் கேட்டிருக்கலாமே!” ஒரு கேள்விக்கு எத்தனை பதில்கேள்வி கேட்கிறான். சுரபிக்குப் பொறுமை போனது. “உங்களுக்குச் சொல்ல விருப்பம் இல்லை என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். ஒரு பதில் சொல்வதற்கு எத்தனை கேள்விகள்.” என்று எழுந்தவளை, கையைப் பற்றி அமரவைத்தான். “இளங்கலை மேலாண்மை ஹைதராபாத்தில். முதுகலை மேலாண்மை லண்டன் யூனிவர்சிட்டி. வேறு என்ன கேட்க வேண்டும்?” என்றான். “என்ன தொழில் செய்கிறீர்கள்?” ரவீந்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சுரபி முகத்தை வெகுதீவிரமாக வைத்திருக்கவும், ஏதோ நேர்காணலில் இருப்பதுபோல் இருந்தது. இப்போதும் ரவீந்தர் சிரித்தானா? என்ற சந்தேகம் சுரபிக்கு இருந்தது. அவள் யூகிக்கும் முன், பதில் அளித்தான். ஒற்றை வரியில் “வெல்த் மேனேஜ்மென்ட்” என்றான். சுரபிக்கு புரியவில்லை தான். என்றாலும் மீண்டும் கேட்கத் தயக்கமாக இருந்தது. அதற்குமேல் அவள் ஒன்றும் கேட்கவில்லை. “அவ்வளவுதானா? வேறொன்றும் கேள்விகள் இல்லையா?” உண்மையில் சுரபிக்கு இருந்தது. ஆனால் இப்போது கேட்க மனம் வரவில்லை. ஆர்த்தியின் நிராகரிப்பு பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தாள். ஆனால் ஏனோ தயக்கம் தோன்றியது. “இப்போதைக்கு அவ்வளவுதான்.” “சரி நான் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் சொல்! என்னைப் பற்றி நீ ஏன் வேறு யாரிடமும் கேட்கவில்லை!” “முதலில் அதுபற்றி ஒன்றும் யோசிக்கவில்லை. வெளிநாட்டில் படித்திருக்கிறீர்கள் என்று அப்பா சொல்வார். ஆனால் தோழிகள் கேட்கும்போது மேலோட்டமாகப் பதில் சொல்லமுடியவில்லை. தாத்தா இல்லை சுகந்தன் அங்கிள் இடம் கேட்கலாம் என்றிருந்தேன். அதற்குள் இங்கே கூட்டிவந்து விட்டார்கள்.” என்றாள். மறுநாள் சுரபி எழும்போது, ரவி இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் சொன்னதுபோல் பால் மற்றும் செய்தித்தாள் வந்திருந்தது. முன்தினம் வாங்கிய சில பொருட்களை வீட்டிலேயே மறுநாள் கொண்டு தருவதாகச் சொன்னார்கள். அதில் முக்கியமாக இருந்தவை சாமி படங்கள் மற்றும் ஒரு பூஜை மண்டபம் இன்னும் சில சுவர் அலங்கார பொருட்கள். முன்தினம், அம்மா சொன்னது சுரபிக்கு நன்கு நினைவிருந்தது. குளித்து விளக்கேற்றலாம் என்றால் வீட்டில் ஒரு சாமி படம் கூட இல்லை. நல்லவேளையாக மற்ற பூஜை பொருட்களைப் பரிசாக, கமலா கொடுத்தனுப்பினார். சமையலுக்கு என்று இருந்த மஞ்சள் மட்டும் இருந்தது. அந்த மஞ்சளில் ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்தாள். பாலை காய்ச்சி படைத்துவிட்டு வணங்கிக் கொண்டிருந்தபோது அருகில் யாரோ வருவதுபோல் இருந்தது. கண் விழித்துப் பார்த்தாள். ரவிதான் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சுரபி அவனைப் பார்க்க, ஒரு புருவத்தை உயர்த்தி ‘என்ன செய்கிறாய்?’ என்பது போல் பார்த்தான். ரவி நின்ற இடத்திலிருந்து பார்த்தால் சுரபி வெறும் சுவரை வணங்குவதுபோல் தான் இருந்திருக்கும். “வீட்டில் சாமி படம் எதுவும் இல்லை. அதனால் …” “அதனால் சுவரை வணங்குகிறாயா?” என்றான். “இல்லை! பிள்ளையார் இருக்கிறார்”என்று மஞ்சளில் செய்த பிள்ளையாரை காண்பித்தாள். அவன் சிரித்தது போல் இருந்தது. அவன் சென்று செய்தித்தாளைப் புரட்டினான். சரியாகப் பணிப்பெண்ணும் வந்தாள். இருவருக்கும் காபி கலந்து தந்துவிட்டு, அவள் வேலையைச் செய்யத் தொடங்கினாள். ரவீந்தர் அந்தப் பெண்ணிடம் எதோ தெலுங்கில் பேசினான். சுரபிக்கு எதுவும் புரியவில்லை. அவள் விழிப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன?” என்றான். “ஒன்றும் புரியவில்லை!” என்றாள் சுரபி. “நேற்று உன்னிடம் சொன்னதுதான். ஒரு வாரத்துக்கு மேல் இங்கே இருக்க வேண்டாம் என்றேன். உனக்கு அருகில் இருக்கும் கடை மற்றும் இடங்களைப் பற்றிச் சொல்லச் சொன்னேன். வேலைகளை முடித்துவிட்டுச் சென்றுவிடச் சொன்னேன்.” அவன் குளிக்கச் சென்றதும், பாக்யாவுக்குப் பேச்சுக் கொடுத்தபடி இருவருமாய் சமைத்தனர். பூரியும் அதற்கு ஒரு காய்கறி குருமாவும் வைத்தாள் பாக்கியா. புது வீட்டில் முதல் நாள் என்பதால் கொஞ்சம் இனிப்பு செய்ய வேண்டும் என்று கேசரி கூடச் செய்துவைத்தாள். ரவீந்தர் வரும்போது தயாராக இருந்தது. உணவைப் பார்த்து, “காலையில், இதெல்லாம் எனக்குச் சரிவராது. ஒரு ஆம்லெட்டும் இரண்டு ரொட்டித்தூண்டும் போதும்.” “இன்று தான் பால் காய்ச்சினேன். இப்போது முட்டையா?” என்றாள் சுரபி. “ஏன்? முட்டை செய்தால் உன் சாமி கோவித்துக் கொள்ளுமா?” என்றான் கேலியான குரலில். அவனுக்குத் திருப்பிப் பதில் கொடுக்க வேண்டும் என்று துடித்த நாவை கட்டுப்படுத்திக்கொண்டு அப்படியே நிற்க, பாக்யா அவன் கேட்டதைத் தயார்செய்யத் தொடங்கினாள். அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், அதற்காக இப்படியா செய்ய வேண்டும் என்று முறைத்துக்கொண்டு நின்றவளைப் பார்த்துவிட்டு, “உனக்குப் பிடிக்காததை நீ செய்ய வேண்டாம். அதே போல் என் சௌகரியத்தை நீ மாற்ற நினைக்காதே! இந்த உப்மா, இட்லி, தோசை, பூரி எல்லாம் காலையில் எனக்குச் சௌகரியப்படாது.” என்றான். “அந்த வீட்டில் சாப்பிட்டீர்களே!” என்றாள் அவனை மடக்கிவிட்டோம் என்று நினைத்து. “மற்றவர்கள் வீட்டில் இருப்பதைச் சாப்பிட்டுக் கொள்வேன். என் வீட்டில் எனக்குப் பிடித்தபடி தான் இருப்பேன்” என்றான். மற்றவர்கள் வீடா? இவனிடம் மீண்டும் பேசினால் இப்படியேதான் பேசப்போகிறான். பேசாமல் இருப்பதே நல்லது. இருவரும் உண்டு முடிக்கவும், பாக்யா மற்ற வேலைகளைப் பார்க்கப் போனாள். “உனக்கு எதுவும் தேவை என்றால் சென்று வாங்கிக்கொள். கீழேயே ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டார் இருக்கிறது. அங்கேயே எல்லாம் கிடைக்கும். பொழுது போகப் படங்கள் இருக்கின்றது. அருகில் இரண்டு மூன்று மால்களும் இருக்கிறது. ஒருவாரம் கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது. அதுவரை இப்படித்தான்.” என்றுவிட்டுச் சென்றான். அவன் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும், “ஒரு வாரமா ! அதற்குப் பிறகு என்ன செய்யப்போகிறார்? படம் பார்ப்பதாம்! நாள் முழுவதும் படமா பார்க்க முடியும்? மாலுக்கு சென்று வா என்றால் எப்படிப் போவதாம்? இந்த ஊரில் பாஷையும் தெரியாது. நண்பர்களும் கிடையாது. இந்த வீட்டின் முகவரி கூடத் தெரியாது! பாக்யா அக்கா எல்லா இடங்களுக்கும் கூட வருவாரா? யோசனை சொல்லிவிட்டுப் போகிறார்.” என்று தனக்கு தானே பேசியபடி திரும்பியவள், ரவி இவளைப் பார்த்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். இவள் பேசியதை எல்லாம் கேட்டிருப்பானோ? “உனக்குப் பாஷை தெரியாது என்பதை மறந்துவிட்டேன்! ஆனால் ஆங்கிலமும் தெரியாதா?” என்றான் கைகளைக் குறுக்கே கட்டியபடி. “ஆங்கிலம் தெரியும்! ஆனால் ஆட்டோ ஓட்டுனரிடம் எந்தளவு பேசலாம் என்று தெரியவில்லை. பேருந்தில் செல்லும் அளவுக்கும் எனக்கு இந்த ஊர் பழக்கம் இல்லை” என்று பதில் கூறினாள். “ஆட்டோவா!” வியப்புடன் கேட்டவன் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான். வீட்டு விலாசம், இரண்டு செல் எண். “ஒன்று என்னுடையது, இன்னொன்று அந்த வீட்டு ட்ரைவர் உடையது. எங்காவது போக வேண்டும் என்றால் அவருக்கு அழைத்துச் சொல்.” “இப்போது அவர்களிடம் உதவி கேட்கலாமா?” என்று சட்டென்று வந்து விட்டது. அவளை முறைத்து விட்டு, எழுதிய காகிதத்தைக் கசக்கினான். அவனுக்குக் கோவம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, “சாரி !” என்றாள். “நீ வீட்டில் டிவி மட்டும் பார் !” என்று சொல்லிவிட்டு சென்றான். மன்னிப்பு கேட்ட பின்னும் எழுதிய காகித்ததை கசக்கி வீசிவிட்டு சென்றுவிட்டான். அவன் செல்வதை முறைத்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வந்து சோபாவில் விழுந்தாள். வீட்டிற்குள் எப்படி நாள் முழுவதும் தனியே இருப்பது. பாக்யா இருக்கிறாள் தான். ஆனால் அவளுடன் எந்த அளவு பேசலாம். ரவீந்தர் சொன்னதுபோல் அவள் உளவு பார்க்க வந்திருந்தால்? ஆனால் பானுமதி ஏன் உளவு பார்க்க வேண்டும்? மகன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ளவா? இல்லை சுரபி எப்படி நடந்து கொள்கிறாள் என்று கண்காணிக்கவா? யோசிக்கையில் எல்லாம் குழப்பமாக இருந்தது. பகுதி - 7 அன்னையை சமாதானப்படுத்தினாலும், தங்கை எப்படிச் சமாளிக்கிறாள் என்று வினோத் வெகுவாக யோசித்தான். தங்கைக்குத் தொலைப்பேசியில் அழைத்தான். முதலிலிருந்து ரவீந்தர் செய்ததை எண்ணிப் பொருமிக்கொண்டிருந்தாள். யாரிடம் எல்லாவற்றையும் கொட்டலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சரியாக வினோத் அழைத்தான். இருவரும் பொதுவாகக் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, தங்கையிடம் புது ஊர் எப்படி இருக்கிறது என்றான். அண்ணனிடம் எல்லாவற்றையும் கொட்டினாள். “எல்லாவற்றுக்கும் கட்டளைகள். சுர்ரென்று கோவம் வருகிறது. இவர் உலகமே தனி. எப்படிப் பொருந்துவேனோ?” என்றாள். முதலில் தங்கை பேச்சில் விளையாட்டு தெரிந்தாலும், வினோத்துக்கு அன்னை சொன்னதுடன் சேர்த்துப் பார்க்கத் தோன்றியது. முதலிலேயே குழம்பிக்கொண்டிருக்கும் நீலாவிடம் இதைச் சொன்னால் என்னவாகும். இப்போதே தந்தை மேல் அம்மாவுக்குக் கொஞ்சம் வருத்தம். மகள் ஏதும் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தால், நிச்சயம் தந்தையுடன் சண்டைபோடுவாள். வினோத் மெல்லத் தங்கையிடம் சொன்னான். “சுரபி! இதெல்லாம் நீ அம்மாவிடம் சொல்லாதே! அம்மா ரொம்ப பயப்படுவார்கள். எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல். அதுமட்டுமின்றி சின்ன விஷயங்களை எல்லாம் ஒரு குறை என்று பார்க்காதே.” என்றான். “போச்சுடா! நீயுமா? இங்கே வரும்போது அம்மா அப்பா ஒரு உரையாற்றினார்கள். நேற்று என் கணவர். இப்போது நீ! இதைச் செய்! இதைச் செய்யாதே! எல்லா கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டும் தானா?” என்றாள் சலிப்பாக. “சுரபி! நான் சொல்வதைப் பொறுமையைக் கேள்! முதலிலேயே அம்மா இது அவசர திருமணம் என்று பயந்துகொண்டு இருக்கிறார்கள். நீ என்னிடம் பேசியது போல் அம்மாவிடம் பேசினால், இன்னும் பயப்படுவார்கள்! அதுமட்டும் இல்லை, அப்பா மற்றும் தாமோதரன் தாத்தா மேலும் வருத்தம் வந்து விடும். அதற்காக எதையும் சொல்லாம் இருக்கத் தேவையில்லை. ஆனால் புகார் சொல்வது போல் சொல்லாதே. புகார் என்றால், முடிந்த அளவு நீ என்னிடம் முதலில் சொல். உன் கணவர் எப்படி என்று யாருக்கும் தெரியாது. எல்லோரும் தாத்தாவின் வார்த்தையைத் தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். உனக்கு என்ன வருத்தம் என்றாலும் உன் கணவனிடம் சொல். ஒருவேளை அவர் கேட்கவில்லை என்றால், பிறகு என்னிடம் சொல். சரியா?” சுரபிக்கு அண்ணனின் பேச்சு கொஞ்சம் கவலையைத் தந்தது. அப்பா வேறு சொன்னாரே! அண்ணன் சொல்வதும் சரியே! இனி வாழ்க்கை வேறுமாதிரி இருக்கப்போகிறது. இனி அம்மாவிடமும் அப்பாவிடமும் எல்லாம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. முக்கியமாக இங்கே வரும் மன வருத்தத்தை. அண்ணனுடன் பேசிவிட்டு, சிறிது நேரத்தில் அன்னைக்கு அழைத்தாள். அண்ணன் வினோத் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. அன்னையின் குரலில் படபடப்பு நன்றாகத் தெரிந்தது. “எப்படி இருக்கிறாய்! மாப்பிள்ளை எப்போது வந்தார்! உனக்குத் தனியாக இருக்கப் பயம் ஒன்றும் இல்லையே! வேலை ஆள் வந்தாளா? எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?” கேள்விகளை அடுக்கினாள். சுரபி பொறுமையாக, “எல்லாம் இங்கே சௌகரியமாக இருக்கிறது!” என்று சமாதானம் சொன்னாள். அன்று மாலைக்குள் அன்னையும் தந்தையும் மூன்று முறை அழைத்தார்கள். அவர்கள் சுரபியை எண்ணி, எப்படிக் கலங்கியிருக்கிறார்கள் என்று யூகிக்கமுடிந்தது. புதிதாக வாங்கிய பொருட்கள் எல்லாம் வந்துசேர, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த அன்றைய நாள் நன்றாகவே கழிந்தது. இரண்டு மூன்று நாள், பாக்யாவும் அருகில் உள்ள கடைகள், கோவில் என்று சிலவற்றைக் காண்பித்தாள். அவளிடமிருந்து சில அடிப்படை வாக்கியங்களையும் கற்றுக்கொண்டாள். ரவீந்தர் சொன்ன ஒருவாரக் கெடு முடிந்ததும் பாக்யா வருவதை நிறுத்திக்கொண்டாள். ரவீந்தர் ஏற்பாடு செய்திருந்த வேறொரு பெண் வேலைக்கு வரத் தொடங்கினாள். அந்தப் புது பெண் பாக்யா போல், சுரபியிடம் பேசவில்லை. அவள் வேலையை முடித்துவிட்டுச் சென்று விடுவாள். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரும். ஒருவாரத்துக்கு மேல் சுரபிக்கு நேரத்தைக் கடத்துவது பெரும் பாடாக இருந்தது. அப்படியே வெளியில் சென்று வரலாம் என்று நினைத்தாள். புது ஊர் என்று கொஞ்சம் பயமாக இருந்தது. இந்த ஒரு வாரத்தில் ஒருமுறை கூட ரவீந்தர் அலுவலகம் சென்றபின் அவளுக்கு அழைத்துப் பேசவில்லை. தந்தை சொன்னதுபோல் அவனுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாலும், ஆர்த்தி ஏன் திருமணத்தை வேண்டாம் என்றாள் என்று அவ்வப்போது யோசித்தாள். பொழுதைப் போக்க மாலை வேளையில், அந்தக் குடியிருப்பினுள் இருக்கும் பூங்காவிற்குச் செல்வாள். பலர் சுற்றினாலும், யாரும் அவ்வளவாகப் பேசவில்லை. ஒரு சிரிப்புடன் சரி. இன்று பேச்சுத் துணைக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார். அவர் கணவர் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், சுரபி அமர்ந்திருந்த மேடைமேல் அவரும் வந்து அமர்ந்தார். ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு தெலுங்கில் பேசினார். சுரபி தனக்குத் தெலுங்கு தெரியாது என்றது ஆங்கிலத்தில் சொன்னாள். பொதுவாக இருவரின் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் வேளையில், அந்தப் பெண்மணியின் கணவரும் வந்து பேசினார். பெற்றோர் மற்றும் பானுமதி தினமும் தொலைப்பேசியில் பேசுவார்கள் தான். ஆனால் மனிதர்களிடம் நேரில் பேசுவது நன்றாக இருந்தது. அப்படியே பேசிக்கொண்டு இருந்ததில் நன்றாக இருட்டிவிட்டது. இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். லிப்ட்டில் அவள் தளத்தை அடையும்போது, ரவீந்தர் அங்கே நின்றிருந்தான். சுரபியைக் கண்டதும் ஒரு மூச்சை வெளியிட்டு, “எங்கே சென்றாய்?” என்றான். “கீழே பார்க்கில் இருந்தேன்!” “போன் செய்தால் எடுக்கமாட்டாயா?” “எனக்கு அழைப்பு வரவில்லை!” என்று தன் அலைபேசியைப் பார்த்தாள். “ஸ்விட்ச் ஆப் செய்தால் எப்படி வரும்!” “இல்லையே! ஆணில் தான் இருக்கிறது” என்று அவனிடம் நீட்டினாள். பேசியபடி வீட்டிற்குள் வந்துவிட்டார்கள்! அவன் எண்ணிலிருந்து மீண்டும் அழைத்தான். அலைபேசி அணைத்திருப்பதாக வந்தது. “உங்கள் செல்லில்தான் கோளாறு” என்றாள். “அதைவிடு! வெளியே செல்லும்போது சொல்லிவிட்டுச் செல்வதுதானே! வீட்டில் உன்னைக் காணாமல் பயந்துவிட்டேன். முன்பின் தெரியாத ஊர்!” என்றான் கோவமாக. “ஒருவாரமாக இல்லாத அக்கறை இன்று மட்டும் ஏன்?” “ஒருவாரமாக நான் வரும்போது வீட்டிலிருந்தாய்! இன்று நான் வரும்போது இல்லை! போனில் அழைப்பு வேறு போகவில்லை. நான் என்ன நினைக்கட்டும்?” அவன் பேசிக்கொண்டிருக்க, அவள் அலைபேசி சிணுங்கியது. பானுமதி அழைத்திருந்தாள். அவள் அழைப்பை ஏற்றுப் பேசினாள். ரவீந்தரின் தந்தை வழி உறவினர் வீட்டுக்கு வார இறுதியில் செல்ல வேண்டும் என்றும் ரவீந்தருடன் பேச வேண்டும் என்று கேட்க, அலைபேசியை அவனிடம் நீட்டினாள். “யார்?” “அத்தை” என்றதும் அலைபேசியை வாங்கிப் பேசினான். பானுமதி தகவல் சொல்லியிருக்க வேண்டும். “முடியாது!” என்று ஒற்றை வார்த்தையில் இணைப்பைத் துண்டித்து, அலைபேசியை அவள் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தவனை “உங்களுக்கு இந்த உலகத்தில், யாரைத்தான் பிடிக்கும்?” என்று கேட்டு நிறுத்தினாள். அவன் புரியாதவன் போல் பார்க்க, “உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டேன்” என்றாள் மீண்டும். “எதற்குக் கேட்கிறாய்?” “உங்களுக்குக் கேள்விகள் கேட்க மட்டும்தான் பிடிக்கும் போல! பதில் சொல்லப் பிடிக்காதோ?” “நீ என்ன கேட்கிறாய் என்று தெளிவாகக் கேள்!” “எதுவும் இல்லை!” என்று அங்கிருந்து நகர முயன்றவளை, “சுரபி! இப்படி…” என்று முடிக்கும் முன், “இப்படிச் செல்வது, உங்களுக்குப் பிடிக்காது. அதுதானே! எனக்கும் உங்களோடு இப்போது பேசப் பிடிக்கவில்லை. விருப்பு வெறுப்பு உங்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால், உங்கள் எண்ணம் தவறு!” என்று அங்கிருந்து இரண்டடி எடுத்து வைத்தவள், நின்று அலைபேசியில் எதோ செய்தாள். அப்போது அவன் அலைபேசி ஒலித்தது. “இது தான் என் எண்! சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள்!” என்று அங்கிருந்து நகர்ந்தாள். ரவீந்தர் சுரபி எண்ணைப் பதிவிடும்போது கடைசி இரண்டு இலக்கங்களை மாற்றிப் பதிவிட்டு விட்டான். இத்தனை நாட்கள் என்ன செய்தாள் என்ற அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு, இன்று வந்து சொல்லாமல் சென்று விட்டாள் என்று கோவத்தைக் காட்டுகிறான் என்று சுரபிக்குத் தோன்றியது. பாக்யா இங்கே வருவதை நிறுத்திய பிறகு, சுரபி எங்கும் வெளியே செல்லவில்லை என்று அவனுக்குத் தெரியும். அவன் மாலை வரும் நேரம் வீட்டில் எதாவது செய்து கொண்டிருப்பாள். இன்று ரவீந்தர் உள்ளே வரும்போது, சுரபி வீட்டில் இல்லை. அவள் அலைபேசிக்கு அழைத்தால் அழைப்பு செல்லவில்லை. கொஞ்சம் கலக்கம் தோன்றியது. அன்னைக்கு அழைக்கலாம் என்று கூட யோசித்தான். எதற்கும் முன்பு இருக்கும் செக்யூரிட்டி இடம் கேட்கலாம் என்று சென்றால் சுரபி எதிரில் வந்தாள். அவனுக்கு இருந்த பதட்டத்தில் அவளிடம் கடுமையாகப் பேசிவிட்டான். இரண்டு நாட்கள் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ள வில்லை. இதற்கு முன்னும் அப்படித்தான் என்றாலும், உணவின்போது சுரபி ஏதாவது பேச முயல்வாள். இப்போது அவள் அதைச் செய்யவில்லை. காலையும் இரவும் அவனுடன் சேர்ந்து உணவு உண்பவள், இப்போது அவனுடன் கலந்து கொள்ள வில்லை. தனியே இங்கே வந்ததிலிருந்து, செய்தித்தாள், காலைக் காபி என்று அவனுக்குத் தகுந்தாற்போல் வைப்பது, அவனுக்கு உணவை எடுத்துவைப்பது, என்று எல்லாம் அவன் சொல்லுமுன் தயாராக வைப்பாள். இப்போது அது எதுவும் இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதானால், அவன் இருக்கும் இடத்தில் அவள் நிற்கவில்லை. ரவீந்தராகப் பேச முயன்றாலும் அவள் ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள். ரவீந்தருக்கு அந்த இரண்டு நாட்கள் வேலை ஓடவில்லை. சுரபியின் நடவடிக்கை ரவீந்தரை பாதித்தது. அவள் அவனிடம் எதுவும் கத்தவில்லை. அவள் இங்கே வந்ததிலிருந்து அவன் அமர்ந்து சரியாகப் பேசியது கூட இல்லை. இதைப் பற்றி அவள் எதுவும் கேட்கவில்லை. இருவர் இடையே உறவை வளர்க்க ரவீந்தர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதைப் பற்றி அவன் யோசிக்காமல் இல்லை. ஆனால் அவனுக்கு எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. நின்ற திருமணத்திற்கு விளக்கம் சொல்ல வேண்டுமா? அவன் குடும்ப விரிசல் பற்றிச் சொல்லவேண்டுமா? இல்லை எல்லாவற்றுக்கும் தொடக்கமான அவன் லண்டன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவேண்டுமா? இதில் சுரபிக்கு எதுவரை தெரியும்? ஒரு இரவில் அவள் சம்மதத்தை வாங்கினார்கள் என்றால், மேலோட்டமாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவன் மனைவிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா? இல்லை கடந்த காலம்பற்றி எதையும் யோசிக்காமல் புதிய வாழ்க்கையைத் தொடர வேண்டுமா? ஆனால் எல்லா விஷயங்களையும் அறியவில்லை என்றால் சுரபிக்கு எப்படி அவனின் செயல்கள் புரியும்? வெகுவாக யோசித்து அவளிடம் பேசலாம் என்று எண்ணினான். சரியாக அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. “வெளியே செல்கிறேன். மாலை தாமதமாகலாம்.” என்ற குறுஞ்செய்தி சுரபியிடம் வந்திருந்தது. உடனே அழைத்தான். “தனியாகவா செல்கிறாய்! டாக்ஸி ஏதும் பிடித்துக்கொண்டாயா?” என்றான். “வித்யா அக்காவுடன்! மாலை நீங்கள் வரும்போது திரும்பிவிடுவோமா என்று தெரியவில்லை!” “அவர்களுடன் எதற்குச் செல்கிறாய்?” “பிறகு அழைக்கிறேன்” என்று வைத்துவிட்டாள். வித்யாவாகத் திடீரென்று வந்து ‘வெளியே அழைத்துச்செல்கிறேன்’ என்று கேட்டபோது, முதலில் சுரபி மறுத்தாள். ஆனால் பானுமதி அழைத்து உன்னை ‘நான் தான் அழைத்துச் செல்லச் சொன்னேன்’ எனும்போது மறுக்க மனம் வரவில்லை. வீட்டையும் குடியிருப்பையும் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு தளர்வு தேவைப்பட்டது. வித்யாவுடன் செலவிடும் நாள் எப்படி இருக்கும் என்று ஒருவாறு யூகித்திருந்தாள். சுரபியின் யூகத்தை வித்யா தவறாக்கவில்லை. அவளின் சிறப்புகளைப் பற்றியே அதிகம் பேசினாள். ஒரு மாலுக்கு அழைத்துச்சென்று, பல உடைகளை வாங்கிக் குவித்தாள். பெரும்பாலும் மேற்கத்திய உடைகள். சுரபியை சில ஆடைகள் வாங்கும்படி கேட்டாள். திருமணத்திற்கென்று வாங்கிய பல ஆடைகளே இன்னும் பலது உடுத்தாமல் இருக்க, வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். “கவலைப் படாதே! என்னிடம் பணம் இருக்கிறது. நீ வாங்கிக்கொள். எனது பரிசு என்று வைத்துக்கொள்” என்றாள் பெருமையாக. “என்னிடம் பணம் இல்லாமல் இல்லை. தேவை இல்லாமல் வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை.” என்றாள் சுரபி. “நடுத்தர குடும்பங்களின் சிக்கன புத்தி” என்றாள் ஒரு ஏளன குரலில். சுரபிக்கு இவளுடன் ஏன் வந்தோம் என்று இருந்தது! வீட்டுக்குக் கிளம்பி விடலாமா என்று இருந்தது. ஆனால் முதல் முறை சந்திப்பிலேயே ஒரு விரிசலை உருவாக்க வேண்டாம் என்று பொறுமையைக் கடைபிடித்தாள். வித்யாவின் அடுத்த தாக்குதல் சுரபியின் உணவுப் பழக்கத்தைக் குறிவைத்திருந்தது. உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று வகுப்பெடுத்தாள். வேண்டியதை வாங்கி உண்ணும் படி சொல்லிவிட்டு, சுரபியின் உணவைக் கேலி செய்தாள். “இப்படிச் சாப்பிட்டால், நீ இன்னும் குண்டாகி விடுவாய்! நான் என் ஜிம்முக்கு அழைத்துச்செல்கிறேன். அங்கே நல்ல யோசனைகளைச் சொல்வார்கள்.” என்றாள். இப்போதும் சுரபி எதுவும் பேசவில்லை. அவளின் இறுதி ஆயுதத்தைத்தான் சுரபியால் பொறுத்துக்கொள்ளவில்லை. அது ரவீந்தரை பற்றி. “உனக்கு எதுவும் சொல்ல வேண்டும் என்றால் நீ என்னிடம் சொல்லலாம். அத்தையிடம் சொல்ல உனக்குத் தயக்கமாக இருக்கலாம். அதுமட்டுமில்லை அவர் எப்படியும் அவர் மகனுக்குச் சாதகமாகத் தான் பேசுவார். ரவீந்தர் முன்பு இருந்ததுபோல் இருந்தால், நீ தயங்காமல் என்னிடம் சொல்.” என்றவள் சற்றே நிறுத்தி, “ஓ! உனக்கு ரவீந்தர் பற்றித் தெரியாது என்பதை மறந்து விட்டேன்.” என்று நிறுத்தினாள். சுரபி ‘என்ன விஷயம்?’ என்று கேட்க வேண்டும் என்று வித்யா எதிர்பார்த்தாள். ஆனால் இப்போதும் சுரபி எதுவும் கேட்கவில்லை. சுரபிக்கு வித்யாவின் எண்ணம் நன்றாகப் புரிந்தது. உதவும் நல்லெண்ணம் சுத்தமாக அவளுக்கு இல்லை. ஒன்று சுரபியிடம் பழைய விவகாரம்பற்றிச் சொல்லி ரவீந்தரின் மதிப்பைக் குறைப்பது. இல்லை சுரபியின் வாயைப் பிடுங்கி எதாவது புகாரைத் தெரிந்து கொள்வது. ஒருவேளை வித்யா உண்மையில் ஒரு நல்ல தோழி என்று தோன்றியிருந்தால், ஏதாவது பகிர்ந்திருப்பாள். வித்யாவின் செயல்கள் பேச்சுகள் எதுவும் சுரபிக்கு அவளிடம் நம்பிக்கையை உருவாக்க வில்லை. வீடு வரும் வரை மிகவும் அமைதியாக இருந்தாள். சுரபி வீட்டை அடையும்போது, ரவீந்தர் அவளுக்காகக் காத்திருந்தான். அவன் பேச்சைத் தொடங்கும்முன், “உங்களுக்கு நான் உங்கள் அண்ணியுடன் சென்றது பிடிக்கவில்லை! அதுதானே! எனக்கே தெரியும்! முதலிலேயே ஏன்டா போனோம் என்று இருக்கிறேன்! தலை வெடித்துவிடும் போல் இருக்கிறது. நீங்கள் எதாவது சொன்னால், அங்கே காட்ட முடியாத கோவத்தை உங்களிடம் காட்டுவேன். என்னைத் தனியே விடுங்கள்!” என்று நேரே அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். முதல் சில தினங்கள் மிரண்ட குழந்தைபோல் அவன் பின்னால் சுற்றினாள் சுரபி. பிறகு இருவருக்கும் ஒன்றுமில்லை என்பதுபோல் பிறந்த வீட்டுக்குச் சென்றாள். மீண்டும் மிரண்ட குழந்தைபோல் அவன் முன் சில நாட்கள் பயந்து நின்றாள். அவன் இல்லை என்று எண்ணிச் சுட்டித் தனமான பேச்சுக்களைப் பேசுவாள். இந்தச் சில நாட்கள் தொட்டாற்சுருங்கி போல், பேசு முன் கோவித்துக் கொள்கிறாள். ரவீந்திரனுக்கு அந்தக் கணம் குழப்பமாக இருந்தாலும், சுரபியின் நடவடிக்கை சுவாரஸ்யமாகவே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அருகில் காபியின் மனம் வர, கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் பக்கத்திலிருந்த மேஜையில் ஒரு கப்பில் ஆவி பறக்கக் காபி இருந்தது. அருகில் ரவீந்தர் நின்றிருந்தான். “கொஞ்சம் குடி புத்துணர்ச்சியாக இருக்கும். அறையில் இருப்பதை விட, காற்றோட்டமாகப் பால்கணியிலிருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.” என்று சொல்லிவிட்டு ரவீந்தர் நகர்ந்தான். மெதுவாக எழுந்து சென்று பால்கணியில் அமர்ந்தாள். அவன் சொன்னது சரிதான். மாலை காற்று இதமாக அவளைத் தழுவிச்செல்ல, அவளுள் இருந்த கோவம் மெல்ல அந்தக் காற்றோடு, பறந்தது. மெதுவாகக் கீழே இறங்கிவர, “இப்போது பரவில்லையா?” என்றான் ரவீந்தர். ஆம் என்றால் அவனின் உரையைத் தொடங்குவானோ? என்று எண்ணும்போது, “உனக்குச் சரி என்றால், வெளியே சென்று வரலாம்!” என்றான். “இப்போதா!” என்றாள். “வெளியே சென்று உணவருந்திவிட்டு வரலாம்” ஏற்கனவே பணிப்பெண் இரவு உணவைச் சமைத்துவிட்டு சென்றிருந்தாள். அது வீணாகுமே என்று சுரபி தயங்க, “ஒரு மாறுதலாக இருக்கும். கிளம்பு” என்றான். சுரபிக்கும் செல்ல வேண்டும் போல் தான் இருந்தது. வித்யாவுடன் சென்று உணவை வாங்கி முன்னே வைத்ததும், அவள் கொடுத்த அறிவுரையில் பாதி கூடச் சாப்பிடவில்லை. ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். இருக்கையில் அமர்ந்ததும், “இந்த உணவகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்றான் ரவீந்தர். முதலில் ஒரு தோசை மட்டும் போதும் என்று சுரபி சொல்ல, “இங்கே இருக்கும் எல்லா சிற்றுண்டி வகைகளும் நன்றாக இருக்கும்.” என்று சொல்லிவிட்டு பல வகை உணவை ஆர்டர் செய்தான். “இத்தனையா?” என்று சுரபி கேட்க, “கவலைப் படாதே! இங்கே தரமும் சுவையும் நன்றாக இருக்கும். வரும் வாடிக்கையாளர்கள் எல்லாவற்றையும் சுவைக்க வேண்டும் என்று, அளவு கொஞ்சம் குறைவாகவே வைப்பார்கள். விலையும் அதற்குத் தகுந்தாற்போல் தான் இருக்கும்.” என்று அவன் சொல்லி முடிக்கும்போது சில உணவுகள் வந்தது. அவனுக்குப் பிடித்த உணவுகளை, முதலில் சுரபிக்கு வைத்தான். “இதெல்லாம் என் பேவெரேட். எப்படி இருக்கிறது என்று சொல்!” “கிட்டத்தட்ட தாத்தாவின் உணவகம்போல் சுவை. நன்றாக இருக்கிறது!” என்று ருசித்துச் சாப்பிட்டாள். உணவை முடித்துக்கொண்டு அருகில் ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். இவனுக்கு என்ன ஆயிற்று இன்று? என்று சுரபி யோசிக்க, “ஹைதராபாதின் முக்கியமான பொழுதுபோக்கு இடம்! ஹுசைன் சாகர் ஏரி” என்றான் ரவீந்தர். அந்த ஏரியில் வண்ண வண்ண மின் விளக்குகளின் பிரதிபலிப்பு வெகு அழகாக இருந்தது. சுரபி ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏரி நீரின் குளிர்ச்சியைக் கவர்ந்து வந்த குளிர்காற்று அவர்கள் வீட்டு பால்கணியில் வீசிய காற்றை விட நன்றாக இருந்தது. சில நிமிடங்கள் கண்களை மூடி ரசித்தபடி நின்றாள். ஏரியின் காற்று, நீரலையின் சத்தம், அருகிலிருந்த பூங்காவின் மலர்களின் மனம். இந்த இடம் மனதிற்கு இதமாய் இருந்தது. கொஞ்சம் சென்னை கடற்கரை அலையோசையை நினைவு படுத்தியது. அவள் நிற்பதைப் பார்த்துவிட்டு, ரவீந்தரும் அருகில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுரபியின் முகத்திலிருந்த சிறு புன்னகை, அவளின் ரசனையை அவனுக்கு உணர்த்தியது. மெல்லக் கண்களைத் திறந்தபோது, ரவீந்தர் அவளையே பார்த்துக்கொண்டு நிற்பது புரிந்தது. கூச்சம் தொற்றிக்கொண்டது. “அப்படியே கொஞ்சம் நடக்கலாமா?” என்றான். சரி என்று தலையாட்டினாள். மெல்ல இருவரும் நடக்க, ரவீந்தர் பேசினான். “சுரபி, முதலில் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உன்னிடம் கடுமையாக நடந்துகொண்டேன். என்னைப் பற்றி மட்டும் தான் யோசித்தேன். உன் நிலையை நான் அதிகம் நினைக்கவில்லை. கிட்டத்தட்ட இருவரின் நிலையும் ஒன்றுதான். இயல்பான ஒரு வாழ்க்கையைத் தொடர இருவரும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.” “ஹ்ம்ம்” “உனக்கு எதாவது கேட்க வேண்டும், இல்லை சொல்ல வேண்டும் என்றால், சொல்” “நீங்கள் கோவித்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால் கேட்கிறேன்” சுரபியின் பக்கம் பார்த்து, “என்மேல் அவ்வளவு பயமா?” “உங்களிடம் பயமெல்லாம் இல்லை! அதற்குப் பிறகு, இது எனக்குப் பிடிக்காது என்று உங்கள் பட்டியலில் இன்னும் ஒரு பாயிண்ட் கூடும். அதை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, இதற்கும் அவன் கோவித்துக்கொள்வானா என்று நாக்கை கடித்துக்கொண்டு, அவனைப் பார்த்தாள். அவன் சுரபியைப் பார்த்து முறைப்பதுபோல் இருந்தது. “சாரி” என்றாள். “பயமில்லை என்றாய்! முகம் வேறு சொல்கிறது!” மடக்கிவிட்டானே என்று யோசித்துக்கொண்டிருக்க, “என்ன கேட்க வேண்டும்?” என்றான். “நீங்கள் சொன்னதுபோல், இருவருக்கும் அவகாசம் வேண்டும்! ஒத்துக்கொள்கிறேன். ஆனால் … நீங்கள் எல்லோரிடமும் வெறுப்பைக் காட்டுவது…ஏன்? சென்னையில் சுகந்தன் அங்கிள் இடம் நீங்கள் நன்றாகப் பழகுகிறீர்கள். மற்றவர்களைப் பற்றிக் கூட ஒன்றும் இல்லை. ஆனால் அத்தையிடம் நீங்கள் பேசுவது நன்றாகயில்லை.” நடந்து கொண்டிருந்தவன் நின்றுவிட்டான். சில நிமிடம் மௌனம். “சுரபி! உன்னிடம் எல்லாம் தயக்கமின்றி பேசும் அளவுக்கு இன்னும் நான் தயாராகவில்லை. எங்கே தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. என் கடந்தகாலம் பற்றி முழுவதும் சொல்ல வேண்டும். தாத்தா உன்னிடம் சொல்லிருக்கலாம். ஆனால் என் செயல்களை நீ புரிந்துகொள்ள, என் பக்க கதையைச் சொல்ல வேண்டும். இப்போது என்னால் அது முடியாது.” தாத்தா என்ன சொன்னார்? அவளிடம் ஒன்றும் சொல்ல வில்லையே! ஒருவேளை பெற்றோரிடம் சொல்லியிருக்கலாம்! இப்போது இவனும் சொல்லப் போவதில்லை.பெற்றோரிடம் கேட்டால் இவனைப் பற்றி விசாரிப்பது போல் ஆகும். அம்மா அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை என்று நினைத்துவிட்டால்? வேண்டாம்! அவனாகச் சொல்லட்டும். “சரி! நான் இனிமேல் கேட்கவில்லை! நீங்கள் சொல்லும்போது சொல்லுங்கள்!” என்றாள். ரவீந்தருக்கு ஆச்சரியமே. சுரபியின் வயதுக்கு எப்படி அவளால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. “இன்று அண்ணி உன்னைக் கோபப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. உனக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் என்னிடம் சொல்.” “எனக்கும் அவர்களுடன் போக விருப்பம் இல்லை. ஆனால் எனக்காக வந்தவர்களை, வருத்தப்பட விடக் கூடாது என்று நினைத்துச் சென்று விட்டேன். அதற்காகப் பாடமும் கற்றுக்கொண்டேன்.” “மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், இப்படித்தான் ஆகும்.” “மீண்டும் அதை ஞாயபகப் படுத்தாதீர்கள். வீட்டுக்குப் போகலாம்.” “சரி நான் அதைப் பற்றிப் பேசவில்லை.” “நீங்கள் பேசவில்லை என்றாலும், வீட்டுக்குப் போகலாம். கால் வலிக்கிறது.” “அதற்குள்ளாகவா?” “மதியத்திலிருந்து பெரும்பாலும் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறேன்.” “ஓ! அதை மறந்துவிட்டேன். வா போகலாம்.” அன்றைய மாலைப் பொழுது இருவருக்கும் மனதைக் கொஞ்சம் லேசாக்கியிருந்தது. ஆனால் மறுநாள் இந்த மன நிம்மதியைக் குலைக்க பானுமதி ஒன்றைச் செய்தாள். பகுதி - 8 சுரபியை அழைத்துச்செல்ல ஒரு வாகனத்தையும் அவளுக்கு உதவி செய்ய ஒரு அலுவலக நபரையும் அனுப்பி இருந்தாள். முதலில் எதற்கென்று தெரியாமல் சுரபியும் சென்றாள். பானுமதி சுரபிக்கென்று ஒரு வங்கி கணக்கைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தாள். சுரபி எதற்கென்று கேட்டபோது, அவளை அழைத்துச்செல்ல வந்தவர், “மேடம் உங்களுக்காக ஒரு கணக்கைத் திறக்கச் சொன்னார். மற்றபடி வேறு எதுவும் தெரியாது.” என்றார். அதற்கு மேல் சுரபியும் ஒன்றும் கேட்கவில்லை. வெளியே செல்வது பற்றி ரவீந்தருக்கு தகவல் கொடுத்துவிட்டுத் தான் சென்றாள். ஆனால் மாலையில் ரவீந்தர் கோபமாக வரவும், சுரபிக்குக் காரணம் தெரியவில்லை. “அம்மாவிடம் என்ன சொன்னாய்? நேற்றுதான் பேசினோம். இப்போது என்ன? என்னைப் பற்றி எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல். அதை விடுத்து சின்னப் பிள்ளைபோல அம்மாவிடம் சென்று புகார் சொல்லி இருக்கிறாய்!” “நான் எதுவும் சொல்லவில்லை!” “சுரபி உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நேற்று நீ பேசியபோது எல்லாம் புரிந்து கொண்டாய் என்று எண்ணினேன்! ஒரு வேளை நேற்று நான் பேசியது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லி இருக்கலாமே. முதலில் கொஞ்சம் பெரியவர்கள் போல் நடந்துகொள்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான். ரவீந்தர் எண்ணுக்கு அன்று காலையிலிருந்து ஓயாமல் பானுமதி அழைத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் குறுஞ்செய்தியில் தான் அன்னையிடம் பேசுவான். இப்போதும் அப்படியே செய்ய, தனக்கு அழைக்கும்படி பானுமதி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். ரவீந்தர் அதைக் கண்டு கொள்ள வில்லை. மாலையில் நேரே வந்த பானுமதி, ரவீந்தரை திட்டித் தீர்த்தாள். “என் மானத்தை வாங்க வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறாயா?” என்றாள் உள்ளே வந்ததும். ரவீந்தர் பாதி பேசாமல் இருக்கவும், “உன்னிடம் தானே கேட்கிறேன். என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா? உனக்கு நான் என்னடா பாவம் செய்தேன்?” “எதற்கு இப்போது வந்து இப்படிக் கத்துகிறீர்கள்?” “காலையிலிருந்து எத்தனை முறை அழைப்பது? முக்கியமான விஷயம் என்றால் தான் அழைப்பேன் என்று கூடத் தோன்றாதா?” “வேலை இருந்தது. என்ன விஷயம் என்று சொல்லுங்கள்?” “ஒரு பெண்ணை உனக்குத் திருமணம் செய்து வைத்தது நினைவிருக்கிறதா? அவளைக் கவனித்துக் கொள்வது உன் பொறுப்பு என்று உனக்குத் தெரியுமா தெரியாதா? அன்று நம் குடும்ப மானத்தைக் காப்பாற்ற ஏதும் யோசிக்காமல், மோகன் அவர் மகளை உனக்குக் கட்டிக்கொடுத்தார். அவருக்கு நீ காட்டும் நன்றியா இது? அப்படி என்ன உனக்கு ஒரு வீம்பு! யாரையும் மதிக்காமல் உன்னை மட்டுமே முன் நிறுத்திக் கொண்டு இருப்பது. மற்றவர்கள்பற்றி எப்போதாவது யோசித்தாயா? என்னை விடு! சுரபி சிறிய பெண். வெளி உலகம் எல்லாம் அதிகம் தெரியாது! அவளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பார்!” என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தவள், ஒரு பெரிய மூச்சாய் உள்ளிழுத்து, “நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். உன்னை நம்பி வந்தவளை ஒழுங்காகக் கவனித்துக்கொள். அவளுக்கு என்ன தேவை என்று அறிந்து செய். அவளுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கு.” என்று வெளியே சென்றுவிட்டாள். அவன் வீட்டுக்குக் கிளம்பும்போது, அண்ணன் சுரேந்தர் அழைத்தான். “ரவி, அம்மா உன்னிடம் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்! உன் மனைவிக்குத் தேவையானதை நீ செய்வது தான் சரி! அம்மா அவர்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்! நீ உன் தவற்றைச் சரிசெய்துகொள்!” எதற்கு ஆளாளுக்கு அறிவுரை கூறுகிறார்கள்? ரவீந்தருக்கு பானுமதி, சுரேந்தர் மேல் இருந்த கோபம் சுரபி மேல் திரும்பியது. நேற்று தானே அவளிடம் பேசினோம். அப்போதெல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு இப்போது புகார் சொல்லி இருக்கிறாள். இல்லையென்றால் எதற்கு அம்மாவும் அண்ணனும் அவளுக்காகப் பேசப்போகிறார்கள். இருந்த கோபத்தில் சுரபியைக் கத்தி விட்டான். மீண்டும் ஒரு சண்டையா? இம்முறையும் சுரபி மேல் என்ன தப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை. இம்முறை இருவருக்குமான பனிப்போர் ஒருவாரம் தொடர்ந்தது. அவளின் வங்கிக் கணக்குக்கான, காசோலை மற்றும் அட்டைகள் வரும் வரை. ரவீந்தரின் போக்கு சுரபிக்கு பெரும் வேதனையாக இருந்தது. காரணம் சொல்லாமல் கோவித்துக் கொள்வது, சண்டை பிடிப்பது, அதன்பின் பேசாமல் இருப்பது. சண்டைகள் எல்லாம் கணவன் மனைவி இடையே சாதாரணமான ஒன்று தான். ஆனால் எப்போதும் அதுமட்டும்தான் என்றால் எப்படி? சுரபிக்கு இப்போது பெரும் மன உளைச்சல். இங்கே நடப்பதை யாரிடம் சொல்வது? யாரிடம் ஆலோசனை கேட்பது? அண்ணன் வினோத், பெற்றோரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று விட்டான். அவனிடம் பேசலாம் தான். ஆனால் அவனும் கூடத் தங்கையின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படத் தொடங்கிவிடுவானோ? என்று தயங்கினாள். எல்லோரும் இருந்தும் யாரும் இல்லை என்ற உணர்வு தோன்றியது. முதலில் இங்கிருந்து சென்று விடலாம் என்று எண்ணினாள். ஆனால் பெற்றோர் எப்படிக் கலங்குவார்கள் என்று யோசித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். இந்த மன நிலையில் நேரில் சென்றால் நிச்சயம் எல்லாவற்றையும் பெற்றோரிடம் உளறி விடுவாள். கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அவளைத் திசை திருப்ப என்று அவளின் தேர்வு முடிவுகள் வந்தது. அவளின் முதுகலை படிப்பிற்கு எழுதிய நுழைவுத்தேர்வின் முடிவுகள். அவள் விண்ணப்பித்திருந்த கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்படும் மதிப்பெண்ணும் வந்திருந்தது. ஆனால் சென்னை கல்லூரி. வேறு மாற்று என்ன செய்யலாம் என்று கல்லூரி தோழிகளிடம் பேசினாள். வேறுயாருக்கும் அதுபற்றித் தெரிவிக்காமலேயே! ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி சிலவற்றைப் பற்றியும் தகவல் சேகரித்தாள். நகரம் ஓரளவு பழகி விட்டதால், சில கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று வந்திருந்தாள். அவைகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு கடித உரையை அவள்முன் நீட்டினான் ரவீந்தர். அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு அருகில் வைத்தாள். ரவீந்தர் அங்கேயே நின்று அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். “இப்போது என்ன? உங்கள் பார்வையில் உங்கள் கேள்விகளைப் புரிந்து கொள்ளும் சக்தி எனக்கில்லை.” சுரேந்தர் பேசியதிலிருந்து சுரபியின் பணத் தேவைபற்றிக் குறிப்பிடுகிறானோ? என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஏற்கனவே அதற்காக ஏற்பாடுகளைச் செய்துவிட்டானே என்று அதை ஒதுக்கினான். ஆனால் இன்று சுரபியின் பேருக்கு வங்கியிலிருந்து ஒரு புது கணக்கிற்கான கடிதம் வரவும், முதலில் தவறாக வந்து விட்டது என்று எண்ணியவன், அன்னை மற்றும் அண்ணனின் பேச்சு நினைவுவர அதைச் சுரபியிடமே கேட்கலாம் என்று நினைத்தான். சுரபி எதுவும் கூறவில்லை என்றதும் அங்கேயே நின்றான். “புது வங்கிக் கணக்கின் அவசியம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?” என்றான். “எனக்கு என்ன தெரியும்? அத்தை ஏற்பாடுகளைச் செய்தார்கள்!” “நீ தேவை என்று சொல்லாமலா அம்மா செய்தார்கள்” " எனக்கு என்ன தேவை இருக்கப்போகிறது. அதுதான் நீங்களே சில கார்டுகள் தந்தீர்களே. அதையே நான் எடுக்கவில்லை! இது எனக்கெதற்கு? ஏதோ குடும்ப கணக்கு என்று புதிதாகச் செய்தார்களோ என்று எண்ணினேன்." “நீ அம்மாவிடம் பணம் கேட்கவில்லையா? என்னைப் பற்றிப் புகார் சொல்லவில்லையா?” “என்ன? அவர்களிடம் நான்… ஓ! நீங்களாக ஒன்றை முடிவு செய்துகொண்டு தான் அன்று கத்தினீர்களா?” ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு அவள் காகிதங்களை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள். சென்னையின் சிறந்த கல்லூரியில் அவளுக்குச் சீட்டு கிடைத்துவிட்டது. ஆனால் சேர முடியாது. இங்கே இருக்கும் சிறந்த கல்லூரிகள் எல்லாம் விண்ணப்பம் பெரும் நாள் முடிந்துவிட்டது என்றுவிட்டனர். சுரபிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எதையும் பெரிதாக நினைக்காமலிருந்தால், இவனாக ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு விசாரணை செய்கிறான். அதற்கு மேல் அவளுக்குப் பொறுமை இல்லை! மறுநாள் சென்னை செல்ல ஒரு பயணச் சீட்டை எடுத்தாள். ரவீந்தர் சில நிமிடத்திற்குப் பிறகு அறைக்குள் வந்தவன், சுரபி ஒரு பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துதான் போனான். “என்ன செய்கிறாய்?” என்றான். “சென்னை செல்கிறேன். அதற்குத்தான் பேக் செய்கிறேன்!” “சுரபி! எதுவானாலும் பேசலாம்! இப்போது நீ ஊருக்குப் போனால் எல்லோரும் பயப்படுவார்கள்” “என்ன பேசுவது! இதுவரை நீங்கள் அப்படி எத்தனை முறை செய்தீர்கள்? எல்லோரும் பயப்படுவார்களா? அதைப் பற்றி இன்று தான் உங்களுக்கு நினைவு வந்ததா? இது பிடிக்கும் இது பிடிக்காது என்று உங்களைப் பற்றி மட்டுமே யோசித்தீர்கள். இப்போது என்ன மற்றவர்களைப் பற்றி அக்கறை? உங்களுக்கு இப்போது திடீரென்று அக்கறை வந்திருக்கலாம்! ஆனால் உங்கள் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு போக என்னால் முடியாது.” “ஐ ஏம் சாரி! நீ சொல்வது முற்றிலும் சரி. எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.” “தாராளமாக உங்களுக்கு வேண்டிய அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை நான் சென்னையில் இருக்கிறேன். இங்கே நான்கு சுவருக்குள் என்ன தவறு செய்தேன் என்று தினமும் யோசித்துக் கொண்டே இருந்தால் எனக்குப் பைத்தியம் கூடப் பிடிக்கலாம்.” “சுரபி! ரியலி சாரி! நான் உன்னிடம் பேசி அடுத்த நாள், அம்மாவும் அண்ணனும் மாறி மாறி அறிவுரை சொன்னார்கள், உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்று. நீ என்னிடம் எதுவும் பேசாமல் அவர்களிடம் எதுவும் சொன்னாயோ என்று நினைத்துவிட்டேன். அதனால் தான்!” “நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை!” “நீ முன்பே சொன்னாய்! என் தவறுதான். இனிமேல் இப்படி ஒருபோதும் நடக்காது.” சில கணங்கள் இருவரும் பேசவில்லை. “உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது! ஆனால் எந்நேரமும் அதை முன்னிறுத்தி என்னால் யோசிக்கமுடியவில்லை. எனக்கும் இது திடீர் கல்யாணம். குறைந்தது உங்களுக்கு ஒரு மனைவி வரப்போகிறாள் என்று ஒரு எண்ணம் இருந்திருக்கும். ஆனால் எனக்கு… உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.” “புரிகிறது! நமக்குள் எது நடந்தாலும் அது நமக்குள் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இல்லை எனும்போதுதான் யோசிக்காமல் பேசி விடுகிறேன். இப்போது சொல்கிறேன். உனக்கு என்னிடத்தில் எது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அது நமக்குள்தான் இருக்க வேண்டும். இதில் மற்றவர் தலையிடுவது எனக்குப் பிடிக்கவில்லை!” சுரபி ஒரு சலிப்பான ஒரு மூச்சை வெளியிட்டு, ரவீந்தரை பார்த்தாள். “என்ன?” வேறுபுறம் திரும்பி “எனக்குக் கூடத்தான் உங்கள் தாடி சுத்தமாகப் பிடிக்கவில்லை” என்று முணுமுணுத்தாள். சுரபி ஏதோ பேசுகிறாள் என்று மட்டும் தெரிந்தது, தெளிவாகக் கேட்கவில்லை. “என்ன ?” மீண்டும் கேட்டான். “ஒன்றுமில்லை.” “சொன்னதில் தவறில்லை என்றால் கேட்கும் படி சத்தமாகச் சொல்லலாம்.” “எனக்குக் கூடத்தான் உங்கள் தாடி பிடிக்கவில்லை. சிரிக்கிறீர்களா? முறைக்கிறீர்களா என்று தெரியவில்லை.” “எதற்கும் எதற்கும் சம்பந்தப்படுத்துகிறாய்?” “நீங்கள் தானே பிடிக்காததைச் சொல்லச்சொன்னீர்கள்!” ரவீந்தர் சிரித்துவிட்டான். “இப்போது எதற்குச் சிரிக்கிறீர்கள்?” “பரவாயில்லையே, நான் சிரிப்பது உனக்குத் தெரிகிறது. அதனால் நான் கிளீன் ஷேவ் செய்யவேண்டியதில்லை.” அன்று வெகுநேரம் ரவிக்கு உறக்கம் வரவில்லை. மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு. அவள் பதிலுக்குப் பதில் பேசியவிதம் அவனுக்குக் கோவத்தை உண்டு பண்ணவில்லை. மாறாக அவள் செல்கிறாள் என்றதும் ஏனோ அவனுக்குப் பதறியது. இந்தப் பதற்றம் ஏன் ஆர்த்தி சென்றபோது வரவில்லை? இங்கே சுரபி வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் அவளின் செயல்கள் ஏன் அவனுக்கு இத்தனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவன் இயல்பாய் இருந்து பல நாட்கள் ஆகிவிட்டது. நாட்கள் இல்லை வருடங்கள். அவன் இயல்பை மாற்றிவிட்டுச் சென்று விட்டது அவன் முதல் காதல். அந்தக் காதல் தோல்விக்காக இன்று வரை அவனைக் குறை கூறும் பலர் இன்னும் அவனைச் சுற்றி இருந்துகொண்டே இருந்தார்கள். முக்கியமாக அவன் அன்னையும், சகோதரனும் அவ்வப்போது பேசுகிறார்கள். அவர்களில் குத்தல் பேச்சில் வந்த வெறுப்பும் சலிப்பும், எல்லோரையும் இன்று வரை அந்நியமாகத் தான் பார்க்க வைத்தது. புதிதாக வந்த சுரபியிடம் எப்படிப் பேச முடிகிறது? சுரபியின் சீரான மூச்சு அவள் நன்கு உறங்குவதைத் தெரிவித்தது. அவளைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப்போனான். பேச்சுக் குரல் கேட்டு மெல்ல எழுந்தான். மெல்லத் தயாராகி வரும்போது சுரபி சமையல் அறையில் ஏதோ செய்துகொண்டிருந்தாள் தொலைப்பேசியில் பேசியபடி. காலையில் பணிப்பெண் வர முடியாது என்று சொல்லவும், இன்றேனும் அவளுக்குப் பிடித்த வண்ணம் வெண்பொங்கல் செய்ய வேண்டும் என்றெண்ணி அன்னைக்கு அழைத்தாள். அளவு கேட்டுக்கொண்டு செய்யத்தொடங்கினாள். ரவீந்தர் தயாராகி வரும்போது உணவு முழுவதும் தயாராகவில்லை. “ஏன் நீ செய்கிறாய்? பணிப்பெண் வரவில்லையா?” “இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்!” சொல்லிக்கொண்டே குக்கரைத் திறந்து பார்த்த சுரபிக்குக் கண்கள் விரிந்தன. குக்கரில் அரிசியையும் பருப்பையும் வேகவைத்துவிட்டு விசில் அடங்கும் வரை காத்திருந்து, திறந்து பார்க்கும்போது, தண்ணீர் தனியாக மேலே நின்றது. அரிசியும் வேகவில்லை. உடனே அன்னைக்கு அழைத்துச் சந்தேகம் கேட்கத் தொடங்கினாள். அவள் பேசிமுடிக்கும் முன் ரவீந்தர் அவனுக்குத் தேவையானதைச் செய்துகொண்டு வந்து அமர்ந்தான். இவள் பேசுவதைக் கேட்டுவிட்டு, “நல்ல வேளை! நான் பிரட் ஆம்லட்டில் தப்பித்தேன்.” என்றான். அம்மாவிடம் கேட்ட குறிப்பின் படி இதை இப்போது செய்வது கடினம் என்று அப்படியே வைத்து விட்டு அவளும் ஒரு பிரட் ஆம்லேட்டுடன் வந்து அமர்ந்தாள். ரவி அப்போது சாப்பிட்டு முடித்திருந்தான். “டாடீஸ் லிட்டில் பிரின்சஸ்” என்றான். “என்ன?” “உனக்கு உண்மையில் சமைக்கத் தெரியுமா? உன் வீட்டில் உன்னைச் சமையல் அறைப் பக்கம் கூட விட்டிருக்க மாட்டார்கள் போல. ஒரு வெண் பொங்கல் செய்ய நீ போராடுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.” என்றான். “மாம்ஸ் லிட்டில் ப்ரின்சு, உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் திரும்ப. “தெரியுமே!” என்றான். “பொய்!” “உன்னிடம் நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன். லண்டனிலிருந்தபோது நம் உணவுகள் எல்லாம் சமைத்திருக்கிறேன்.” “பிறகு ஏன் எப்போதும் இந்தப் பிரட் ஆம்லெட்.” என்றாள். அவனின் காலை உணவு பெரும்பாலும் அதுதான். சில நாட்கள் தவிர. “இது தயாரிக்க ஒரு தோசைக் கல் போதும். காலையில் செய்ய எனக்கு இதுவே சுலபமாக இருக்கும்.” என்றான். “நான் வந்ததிலிருந்து நீங்கள் கூடச் சமைத்துப் பார்க்கவில்லை. ஏன்?” “நினைத்தேன்! இங்கே வந்து தான் நிற்கும் என்று! நான் கிளம்புகிறேன்.” “மாலையில், பேச்சு இதே இடத்தில் தொடரும்” என்றாள். அவன் சிரித்து விட்டுச் சென்று விட்டான். அவன் சென்றதும் பானுமதிக்கு அழைத்தாள் சுரபி. புதிய வாங்கி கணக்கைப் பற்றிக் கேட்டாள். “உனக்குத் தேவைகள் இருக்கும் என்று தான்.” “என் தேவைகளுக்கு உங்கள் பிள்ளை ஏற்கனவே ஒரு கணக்கைத் தொடங்கி, என்னிடம் அது சம்பந்தமாக எல்லாம் கொடுத்திருக்கிறார்.” “சுரபி! நீ ரவியை விட்டுக்கொடுக்காமல் பேசுவது எனக்கு மகிழ்ச்சியே! ஆனால் உன்னைக் கவனித்துக் கொள்வது அவன் பொறுப்பு. அவன் சரியாகச் செய்யவில்லை என்றால் அதை நான் தானே செய்ய வேண்டும்.” “நீங்கள் ஏன் அப்படி எண்ணினீர்கள்! நான் உங்களிடம் எதுவும் சொல்லாதபோது, உங்களுக்கு எப்படித் தெரியும்?” “சுரபி! உன் வயது என் அனுபவம்! கணவன் குறையை வெளியே சொல்லக் கூடாது என்று நம் வீட்டில் சொல்லித்தான், புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்கள். அதை மருமகளிடம் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் பிற்போக்கான பெண் கிடையாது! வித்யாவுடன் சென்றபோது நீ எதையும் வாங்கிக் கொள்ளவில்லை என்று வித்யா சொன்னாள். அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது. ரவியைப் பற்றி எனக்கும் தெரியும் தானே!” பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவள், “நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி. ஆனால் உங்கள் மகனைப் பற்றி இந்த விஷயத்தில் உங்களுக்குத் தெரியவில்லை என்று தான் சொல்வேன். இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளிலிருந்து, இன்று வரை எல்லாம் சரியாகவே செய்திருக்கிறார். இல்லையென்றால், இந்தப் புது ஊரில் நான் எப்படி இத்தனை நாள் உங்கள் உதவி கூடக் கேட்காமலிருந்திருப்பேன். வித்யாவுடன் செல்லும்போது எனக்குத் தேவை என்று படவில்லை. அதனால் வாங்கவில்லை. அவ்வளவுதான். உங்கள் இருவருக்கும் சில மன வருத்தம் இருக்கலாம். ஆனால் எங்களுக்குள் அப்படி எதுவும் இதுவரை இல்லை. நீங்கள் எங்களைப் பற்றி அதிகம் கவலைப் படாதீர்கள். ஒரு வேளை எதுவும் பிரச்சனை என்றால், நான் நிச்சயம் உங்களிடம் தான் சொல்வேன்.” சுரபியின் பேச்சு பானுமதிக்கு ஆறுதலாக இருந்தது, மாறாகச் சுரபிக்குக் கவலையாக இருந்தது. ஒரு நாள் வித்யாவுடன் வெளியே சென்று வந்ததற்கு இத்தனை குழப்பங்களா? இதுபோல் ஒரு குழப்பம் தானாக வந்திருக்க வாய்ப்பில்லை. வித்யா வீட்டுக்குச் சென்று அவளுக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்க வேண்டும். வித்யாவின் சுபாவத்திற்குக் கொஞ்சம் அதிகப்படியாகச் சொல்லியிருப்பாள். அதைக் கேட்டதும் பானுமதி மகனுக்கு அழைத்திருக்க வேண்டும். எப்போதும் போல் ரவீந்தர் பேசவில்லை என்றதும், பானுமதி சுரபிக்குப் பணத்தேவை வராத படி செய்ய ஒரு வாங்கி கணக்கைத் தொடங்க ஏற்பாடு செய்துவிட்டாள். பானுமதிக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, சுரபி இணைப்பைத் துண்டிக்கவும், சரியாக வினோத் அழைத்தான். “என்ன ? எங்கள் நினைவெல்லாம் இருக்கிறதா ?” என்றான் வினோத். “எல்லாம் நினைவு இருக்கிறது. அப்பா அம்மாவின் திருமண நாள் விழாவைப் பற்றி நீ தான் மறந்துவிட்டாய்!” “நான் மறக்கவில்லை. சென்னையில் நாங்கள் மூவரும் கொண்டாடப் போகிறோம்.” “நீங்கள் மூவரா? அப்போது நான் வர வேண்டாமா?” “உன்னால் வர முடியுமா தெரியவில்லையே!” “அதெல்லாம் வரலாம். சென்னையில் வைத்துக் கொள்வோம். சர்ப்ரைஸாகச் சென்று அசத்திவிடலாம்” என்றாள். “நீ உன் வீட்டில் கேட்டு விட்டுப் பிறகு எல்லாம் செய்!” என்றான் வினோத். மாலையில் ரவீந்தரிடம் சென்னைப் பயணம் பற்றிச் சொன்னாள். “நேற்று தானே வேண்டாம் என்று சொன்னேன். நீயும் சரி என்று விட்டாய்! இப்போது என்ன?” “இது வேறு! அம்மா அப்பாவின் திருமண நாள் வருகிறது. இது அவர்களுக்கு வெள்ளி விழா!” என்றாள். “ஓ! எப்போது?” என்றான். “அடுத்த புதன். அண்ணாவும் சென்னை வருகிறான். இருவரும் இருந்தால் அம்மா அப்பா சந்தோசப்படுவார்கள். அது மட்டும் இல்லை. என் சான்றிதழ்கள் கூட வாங்க வேண்டும்.” “என்ன சான்றிதழ்?” “என் இளங்கலை படிப்பு முடித்ததற்கான சான்றிதழ். பிறகு நுழைவுத் தேர்வுக்கான சான்றிதழ். முன்பு ஆசை இருந்தது! அதனால் தேர்வு எழுதினேன். இப்போது அது முடியாது என்று நினைக்கிறேன்!” என்று அவன் என்ன சொல்வானோ என்று பார்த்தாள். “ஏன்! உன்னை யார் படிக்க வேண்டாம் என்றார்கள்? உனக்கு விருப்பம் இருந்தால் படி.” “ஆனால் நான் ஹைதராபாத்தில் இருக்கும் கல்லூரிக்கு விண்ணப்பிக்க வில்லை! சென்னை மற்றும் பெங்களூர் கல்லூரிக்குத் தான் விண்ணப்பித்திருந்தேன். இன்னும் ஒருமாதத்தில் கல்லூரிகள் தொடங்கிவிடும். இப்போது நல்ல கல்லூரிகளில் விண்ணப்பம் ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். என் விருப்பப் பாடம் இருக்கும் கல்லூரிகளில் ஏற்கனவே இடங்கள் நிரம்பிவிட்டன.” “நீ என்ன படித்திருக்கிறாய்?” சுரபி விழிகளை விரித்துப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு, “இதுவரை கேட்கத் தோன்றவில்லை.”என்றான். “இயற்பியல்” “மேலே என்ன படிக்க வேண்டும் என்று இருக்கிறாய்?” “அடாமிக் பிசிக்ஸ். இப்போது ஏதோ ஒரு கல்லூரியில் சேரலாம்! இல்லை அடுத்த வருடம் மீண்டும் நுழைவுத்தேர்வு எழுதி இங்கே இருக்கும் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாமா என்று பேராசிரியர்களிடம் கலந்து பேச வேண்டும். வீட்டில் என்ன சொல்வார்கள் என்று கூடத் தெரியவில்லை!” “யார் வீட்டில்?” “என் வீ… அம்மா அப்பா என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.” சுரபி தடுமாறித் திருத்தியதும் ரவீந்தர் மெல்லச் சிரித்தான். அது சுரபிக்குத் தெரியாது. சுரபி ரவீந்தர் கலந்துரையாடல்கள் தினமும் நிகழ, மற்றவரின் விருப்பு வெறுப்பு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டார்கள். உணவு, பொழுதுபோக்கு, ஆர்வம் என்று பலதும் பேசினார்கள். சுரபியின் பெற்றோர் திருமண நாளிற்குச் சென்னை அனுப்பி வைத்தான் ரவீந்தர். அருகில் இருக்கும்போது அருமை தெரிவதில்லை. இரண்டு நாளில் வருவதாக இருந்தது. மேலும் சில நாட்கள் அவள் சென்னையில் தங்கிவிட்டாள், மீண்டும் ஒரு வெறுமை ரவீந்தரை சூழ்ந்தது போல் இருந்தது. லண்டன் வாழ்க்கை மீண்டும் அவனை வதைத்தது. லண்டன் வாழ்க்கை முழுவதும் கசப்பானது அல்ல என்றாலும், அவன் முன்னாள் காதலி அவன் வாழ்விலிருந்த நேரமெல்லாம் அவனுக்குக் கசந்தது. பல ஆண்டுகளாக ஒன்றாகப் படித்து, நல்ல நண்பர்களாகி, லண்டன் பல்கலைக் கழகத்தில் கூடவே ஒன்றாகவே திரிந்தார்கள். சாலினி. கல்லூரியில் இந்தியர்கள் மத்தியில் அவளைப் பலர் அறிவார்கள். அதற்குக் காரணம் அவளின் புத்திக் கூர்மை. அதில் அவள் பெற்றிருந்த உதவித்தொகை. அங்கே படித்த இரண்டு ஆண்டுகள் அவள் பெயர் உதவித் தொகை பட்டியலில் முதலிடம். நல்ல சாமர்த்தியசாலி. வெறும் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் இல்லை, அவளின் நிதானம், யோசனை, சிந்தனை எல்லாம் தெளிவாக இருக்கும். எந்த ஒரு சிக்கலுக்கும் சுலபமாக ஒரு தீர்வைச் சொல்லிவிடுவாள். பேச்சால் பலரை அவள் பக்கம் திருப்பிவிடுவாள். அவளிடம் பலருக்கு ஈர்ப்பு இருந்தது போல் ரவீந்திரனுக்கும் இருந்தது. ஒரு நாள், அவளாக வந்து காதலிப்பதாகச் சொல்லவும், மறுக்க ரவீந்தரிடம் எந்தக் காரணமும் இல்லை. இருவரும் முதல் ஒரு வருடம் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தார்கள். பிறகு அவர்களாக ஒரு தொழிலைத் தொடங்கினார்கள். அடுத்த ஆறு மாதத்தில், அவர்கள் தொழிலும் காதலும் வேகமாகவே வளர்ந்தது. எல்லாவற்றையும் மண்ணோடு மண்ணாக வந்தது புதிய ப்ராஜெக்ட். சாலினியின் ஏற்பாடு. ஒரே வருடத்தில் அவர்களின் தொழில் இருமடங்காக வளரும். ரவீந்தருக்கு அதில் ஒரு தயக்கம் இருந்தது. அவர்களுக்கு வேலை கொடுத்த வாடிக்கையாளர்களின் ஒரு உட்கூறு ரவிக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இவர்கள்குறித்த நேரத்தில் வேலையை முடிக்கவில்லை என்றால், இவர்களின் முழு நிறுவனமும் அவர்கள் பிடியில் சென்று விடும். இப்படியொரு சிக்கலான உட்கூறு ஒன்றை வைக்க ஒரு முக்கிய காரணம் இருந்தது. அதுவரை சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் இவர்கள் வேலையைப் பார்த்துக் கொடுத்தார்கள். இந்தப் புதிய நிறுவனம், பல கோடி வணிகம் செய்யும் நிறுவனம். அவர்களின் ப்ராஜெக்ட்-ஐ பெற அவர்களுக்கு ஒரு பெரிய தொகையை வைப்பு நிதியாக முதலில் செலுத்த வேண்டும். வேலை முடியும் தருணத்தில் அந்தத் தொகையைத் திரும்பத் தந்துவிடுவார்கள். அந்த வைப்புத் தொகையை அப்போதைய நிலைக்கு ரவீந்தர் குழுவால் செலுத்துவது கடினம். அதற்கு மாறாக அவர்கள் கொடுத்த சலுகை தான், நிறுவனத்தைக் கையகப் படுத்துதல். இவர்கள் நிறுவனம் அவர்கள் வசம் ஆவது மட்டுமில்லாமல், சில வருடங்கள் அவர்களிடம் இவர்கள் பணி செய்ய வேண்டும். கடைநிலையில். அதிக கையிருப்பு இல்லாதவர்களிடம் எதைக் கையகப்படுத்த முடியும் என்று யோசிக்கலாம். இவர்களின் யோசனைகள், திட்டங்கள் மற்றும் திறமைகள். இவை மூன்றும் தான் அந்த ஒரு பெரிய நிறுவனத்தை இவர்கள் பக்கம் திருப்பிப் பார்க்கவைத்தது. சலுகை கூட, சாலினியின் உறவினர் ஒருவர் அந்தப் புது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பிலிருந்தார் என்பதனால். ரவீந்தர் சாலினி உட்பட நால்வர் அந்த நிறுவனத்தின் கூட்டாளிகள் எல்லோரும் பல கலந்துரையாடலுக்குப் பிறகு, புது ஒப்பந்தத்தை ஏற்றனர். இடையில் ஒருமுறை அன்னையைப் பார்க்க ரவீந்தர் வந்தபோது சாலினியும் வந்தாள். வீட்டில் எல்லோருக்கும் இவர்கள் உறவை ஒளிவு மறைவின்றி தெரிவித்தான் ரவீந்தர். பானுமதியும் மகிழ்ச்சியாகவே ஏற்றாள். மீண்டும் லண்டன் சென்றதும் வெகுவாக உழைத்தார்கள். பல சிக்கல்கள், இடையூறுகள் எல்லாம் சமாளித்து வெற்றிகரமாக வேலையை முடித்துவிட்டார்கள். வேலை நேரம் வராத கருத்து வேறுபாடுகள், அதன் பின் வந்தது. இருக்கும் வேலைகளை முடிக்கும் பரபரப்பில் புதிய வேலைபற்றி அவர்கள் அதிகம் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். புதிய செயல்திட்டம் தேடி அலைய வேண்டி வந்தது. சாலினிக்கு அப்போது தான் சலிப்பு தொடங்கியது. “இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே அலைவது. நம்மைத் தேடி யாரும் வருவதாக இல்லை.” என்றாள். “அதற்குள் இப்படிச் சொல்கிறாய்! நாம் நிறுவனத்தைத் தொடங்கி ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது. அதற்குள் நம்மை யாருக்குத் தெரியும்.” என்றான் ரவி. “அதனால் தான் பேசாமல் என் அங்கிள் சொன்னதைச் செய்யலாம்!” என்றாள். வேலையைச் சரியாக முடித்துக் கொடுத்ததில் வெகுவாக மகிழ்ந்த வாடிக்கையாளர், ரவீந்தர் நிறுவனத்தை அவர்களுடன் இணைத்துக் கொள்வதாகவும், அவர்களே இவர்களுக்கான வேலையைத் தருவதாகவும் சொன்னார்கள். அவர்களுக்குச் சம்பளம் கூட நன்றாகவே வழங்கத் தயாராக இருந்தார்கள். சாலினிக்கு அந்தச் சலுகை பிடித்து விட்டது. அந்த நிறுவனத்தில் நுழைவது கடினமே. அதுமட்டுமின்றி இவர்களுக்கு ஆரம்ப நிலை ஊழியராக இல்லாமல், குழுத் தலைவர் பொறுப்பது தரத் தயாராக இருந்தார்கள். கேட்கும்போது பெரிய சலுகை என்றே தோன்றும். ரவீந்திரனுக்கு அது பிடிக்கவில்லை. “இன்னொரு முறை அதைப் பற்றிப் பேச வேண்டாம்.” என்றான். “ரவி! கொஞ்சம் யோசித்துப்பார். நம் நிறுவனம் பெரிய நிலை அடைந்து நாம் ஒரு நிலைக்கு வரப் பல வருடங்கள் ஆகும். ஆனால் என் அங்கிள் சொல்வதைச் செய்தால், இப்போதே ஒரு நிலையை அடைந்துவிடலாம்.” “உன் புத்திசாலித்தனத்தைத் தான் நான் வியந்து பார்த்தேனா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சம்பளம் இதுவரை நாம் கண்ட லாபத்திற்கு அதிக வித்தியாசம் இல்லை. ஆரம்ப நிலையிலேயே நாம் பார்த்த லாபம், ஆண்டுகள் செல்லச் செல்லப் பல மடங்காகும். அதை விடுத்து அவர்கள் கொடுக்கும் பதவியிலும் சம்பளத்திலும் மயங்கி நீ பிதற்றுகிறாய்.” “நான் ஒன்றும் பிதற்றவில்லை! நீ தான் ஆகாயத்தில் கோட்டை காட்டுகிறாய். இதுவரை நமக்குக் கிடைத்த ப்ராஜெக்ட் எல்லாம் நான் தேடிக் கொண்டு வந்தது. அதற்கு நான் எவ்வளவு சிரமப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். இனி என்னால் முடியாது. நான் செய்யவில்லை என்றால், உன்னால் ஒரு ப்ரொஜெக்டை கூடப் பிடிக்க முடியாது.” இந்த வாக்குவாதம் ரவீந்திரன் சுயகௌரவத்தை நன்றாகச் சீண்டி விட்டது. “சரி! அப்படியானால் நீ இனி எந்த ப்ராஜக்ட்டும் தேட வேண்டாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ, சொல்லும் வேலையை மட்டும் செய்!” என்றான். “உனக்குக் கீழ் என்னை வேலை செய்யச் சொல்கிறாய். நான் உனக்கு எந்த விதத்தில் குறைந்து விட்டேன்!” “நான் அப்படிச் சொல்ல வில்லை! ப்ராஜெக்ட் பிடிப்பது என்னுடைய வேலை என்றேன்” தினமும் இதுபோல் ஒரு பேச்சுவார்த்தை சண்டையில் முடிந்தது. அதிக நாட்கள் இல்லை. வெறும் அரை மாதம் தான். அடுத்த ப்ராஜெக்ட் ஒன்றை ரவீந்தர் அதற்குள் பிடித்துவிட்டான். ஆனால் அது மிகவும் சிறியது. இரண்டு மூன்று மாத வேலை மட்டுமே. அதற்குப் பின் இன்னொன்றைத் தேட வேண்டும். ரவீந்தர் எதிர்காலத்தில் எப்படிச் செய்யலாம் என்று பல திட்டங்களைத் தனியாக வகுத்து அவன் கூட்டாளிகள் முன் உரையாற்றினான். அதற்காகப் பல நாள் தூக்கத்தைத் தியாகம் செய்திருந்தான். அவன் பாடுபட்டது எல்லாம் சாலினியின் சலிப்பைப் போக்கி அவளை உற்சாகப்படுத்தத்தான். ஆனால் சாலினி வேறு செய்திருந்தாள். மற்ற கூட்டாளிகள் இருவரையும், அவள் பக்கம் இழுத்து விட்டாள். ரவீந்தர் முயற்சியை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. ரவீந்தரின் கோவம் சாலினியின் மேல் திரும்பியது. “நான் செய்த முயற்சிகளை எல்லாம் வீணடித்து விட்டாய். நான் தான் எல்லாம் பார்த்துக் கொள்வதாகச் சொன்னேனே!” “அப்படி என்ன பார்த்துவிட்டீர்கள்! ஒன்றுக்கும் ஆகாத ஒரு குப்பை வேலையைப் பார்த்துவிட்டு, ஏதோ மில்லியன் டாலர் சம்பாதித்த அளவுக்குப் பீற்றிக் கொள்கிறீர்கள். இதுபோல் வேலை செய்து நாற்பது ஐம்பது வரை என்னால் கஷ்டப்பட முடியாது. உங்களைப் போல் என் தாத்தா அப்பா சேர்த்த சொத்து எல்லாம் எனக்குக் கிடையாது. நான் வாழ்வில் சீக்கிரம் முன்னேற வேண்டும். எனக்கு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும். நீ அதில் தலை இட வேண்டாம்.” ரவீந்தருக்கு சாலினி வெகு அந்நியமாகத் தெரிந்தாள். சென்று கொண்டிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினான். “நீ செல்வது உன் இஷ்டம். மற்றவர்களையும் ஏன் மாற்றினாய்?” “அவர்களை நான் மாற்றவில்லை. நான் இங்கிருந்து வெளியேறிச் செல்வதைச் சொன்னேன். அவ்வளவுதான்.” முடிவே எடுத்துவிட்டாளா, அவனிடம் கேட்காமல். “என்னிடம் கேட்டுக்கூட இல்லை!” என்றான் அதிர்ச்சியுடன். “உன்னிடம் என்ன கேட்பது? கேட்டாலும் ஒரு வாக்குவாதம், ஒரு சண்டை. இதெல்லாம் எனக்குச் சலித்து விட்டது. நான் இன்னும் ஒருவாரத்தில் புது வேலையில் சேரப்போகிறேன். உனக்காக இப்போது அங்கே ஒரு வேலை காத்திருக்கிறது. முடிவை மாற்றிக் கொண்டால் சொல்.” சாலினி சொன்னது போல் ரவீந்தருக்கு பூர்வீக சொத்து இருக்கிறது தான். ஆனால் அவன் எப்போதும் அதை ஒரு தகுதியாக எண்ணியதில்லை. அதைப் பெரிதாக நினைத்திருந்தால், படிப்பை முடித்துவிட்டு தாயுடன் சேர்ந்து குடும்பத் தொழிலைப் பார்த்திருப்பான். புதிதாக ஒன்றைத் தொடங்கிச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான். அதைச் சரியாகவும் செய்தான். ஆனால் எல்லாம் பாதியில் முடிந்துவிட்டது. ஷாலினி சென்றது அவனுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் அவள் அவனுடன் இல்லை என்ற வருத்தம். பின் அவளை ஏன் விரும்பினேன் என்று அவன்மேல் கோவம். இப்படி பல குழப்பங்களில் தொழில் பெரிதாகச் சிறக்கவில்லை. மற்ற மூவரும் இல்லாமல் ரவீந்தரால் தனியாக எதையும் செய்ய முடியவில்லை. புதிதாக ஒரு குழுவை அமைக்க முயற்சி செய்தான். ஆனால் அவர்களின் எண்ணப் போக்கும் ரவீந்தரின் எதிர்பார்ப்பும் வேறாக இருந்தது. ரவீந்தர் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வேலையை மறுத்ததால், மிஞ்சியது சில ஆயிரம் பௌண்டுகள். இந்தியா மதிப்பில் சில லட்சங்கள். அவன் நிறுவனம் ஒன்றும் இல்லாமல் போனது. அதன் பின், சாலினி பணியில் சேர்ந்த நிறுவனத்திற்குச் செல்ல ரவீந்தருக்கு மனம் வரவில்லை. ரவீந்தர் வேறு வேலையில் சேர்ந்தான். பெற்றவளுக்கு அவன் நிலைமைபற்றி ஒன்றும் சொல்லிக் கொள்ள வில்லை. சாலினியின் வருகை, சந்திப்பு எல்லாம் படிப் படியாகக் குறைந்தது. தோல்வி ரவீந்தரின் மனதை வெகுவாகப் பாதித்தது. மீண்டும் இந்தியா திரும்பி விடலாம் என்று யோசித்தான். சாலினிக்கு சொன்னான். ஆனால் அவள் அவனுடன் வரத் தயாராக இல்லை. அவள் வாழ்க்கையில் ரவீந்தரை தவிர பல விஷயங்கள் முக்கியமாக இருந்தது. அதுவும் தோற்ற ஒருவனுடன் அவள் வாழ்க்கையைத் தொடர அவளுக்கு விருப்பமில்லை. இங்கிருக்கும் நிலையைப் பானுமதியிடம் தெளிவாகச் சொல்லிவிட்டாள் சாலினி. முதலில் ரவீந்தர் மீது உள்ள அக்கறை என்றே நினைத்தான். ஆனால் பிறகுதான் ரவீந்தருக்குச் சாலினியின் திட்டம் புரிந்தது. அன்னையுடன் இருக்கலாம் என்று வந்த ரவீந்தருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் பிடிவாதத்தால், லண்டனில் நல்ல வேலையையும், அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணையும் உதறித்தள்ளிவிட்டான் என்று இங்கிருந்த எல்லோரும் எண்ணினார்கள். ரவீந்தர் ஒரு முட்டாள், பேரினவாதி, குறுகிய மனப்பான்மை கொண்டவன் என்று பல சாயங்களைச் சாலினி பூசிவிட்டாள். சிறிய வயதில் தன் போக்கில் எல்லாம் செய்து கொண்டிருந்த மகனை, சாலினி சொன்னதுபோல் தானோ என்று சந்தேகித்தாள் பானுமதி. அந்தச் சந்தேகத்தில், பேசும்போது ரவீந்தரை குறைத்துப் பேசத் தொடங்கினாள். சுரேந்தருக்கு இது மிகவும் சாதகமாகத் தொடங்கியது. தன்னை மட்டும் தாத்தா வீட்டில் இருக்க வைத்ததிலிருந்து சுரேந்தருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. முக்கியமாக ரவீந்தரிடம். இரு பிள்ளைகளையும் தனியே சமாளிக்க முடியவில்லை என்று சில வருடங்கள் பெற்றோரிடம் சென்னையில் சுரேந்தரை விட்டாள். ரவீந்தரின் சுட்டித் தனத்தை தன்னால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று பானுமதி நினைத்து, அவளுடன் வைத்துக்கொண்டாள். எப்போதும் அருகில் இருக்கும் இளைய மகனின் பெருமையை அதிகம் பேசுவாள். அப்படி இருந்த அன்னை இப்போது தம்பியைக் குறை கூறுவது சுரேந்தருக்கு பிடித்திருந்தது. அதைப் பயன் படுத்தி அவன் பங்கிற்கு, அவனும் கொஞ்சம் சேர்த்துப் பேசுவான். “நீங்கள் அவனுக்கு அதிகம் இடம் கொடுத்து விட்டீர்கள். புத்திசாலி, திறமைசாலி என்றெல்லாம் சொல்லிச் சொல்லி இப்போது அவனுக்குத் திமிர் அதிகமாகி விட்டது.” என்பான். இப்போது கணவன் தொழிலைத் தன்னுடன் சேர்ந்து செய்யும் சுரேந்தரின் பேச்சு சரி தான் என்று பானுமதிக்குத் தோன்றத் தொடங்கியது. அதற்காக ரவீந்தரை வெறுத்து விட்டாள் என்ற அர்த்தம் இல்லை. ரவீந்தரை நல்வழிப் படுத்த வேண்டும் என்றெண்ணி, அறிவுரை மழையாய் பொழிந்தாள். பானுமதியின் பேச்சு ரவீந்தரின் தோல்வியைச் சுற்றிச் சுற்றி வந்தது. ரவீந்தர் வெகுவாக நொந்து போனான். யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறையினுள் முடங்கினான். குடிப் பழக்கமும் தொடங்கியது. ரவீந்தரின் நிலையைப் புரிந்து கொண்ட சுகந்தன் அவனைச் சென்னை அழைத்துச் சென்று விட்டார். இயல்புக்கு வரச் சில மாதங்கள் அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்குள் அன்னைக்கும் தனக்கும் தெரிந்த ரவீந்தர் பற்றிய விஷயங்களை, அவனின் பெருமையைப் பறைசாற்ற, சுரேந்தர் புது மனைவியான வித்யாவிடம் சொல்லிவிட்டான். ரவீந்தர் ரகசியங்கள் மெல்ல எல்லா உறவினியர்களிடமும் பரவியது. தந்தை வழி உறவினர்கள் எல்லோரும் ரவீந்தர் குடும்பத்தில் ஒரு களங்கம் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். ரவீந்தருக்கு அவன் அன்னையும் சகோதரனும் வேற்று மனிதர்களாகத் தெரிந்தார்கள். அவன் பிறந்து வளர்ந்த வீடு, நரகமாகத் தோன்றியது. இன்று அவனை உதாசீனப் படுத்தும் எல்லோர் முன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தான். அவனுக்கு இந்த உத்வேகத்தையும் தூண்டுதலையும் கொடுத்தது மாமா சுகந்தன் தான். சுகந்தனின் நிதி உதவியுடன் மீண்டும் ஒரு தொழிலைத் தொடங்கினான். இம்முறை அவன் செய்தது செல்வ மேலாண்மை. வெல்த் மேனேஜ்மென்ட். பெருக்காத அல்லது முதலீடு செய்யாமல் இருக்கும் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது எப்படி என்று திட்டமிடுவது. அந்த முதலீடு எதில் வேண்டுமானாலும் செய்யலாம். பங்குச்சந்தை, தங்கம், நிலம், இயற்கை வளங்கள் என்று பலவற்றில் செய்யலாம். அதை வைத்து முதலீட்டாளர்களுக்கும் லாபத்தைத் தர வேண்டும், அவனும் பணம் சம்பாதிக்க வேண்டும். சென்ற முறை செய்த தவறுகளை நினைவில் கொண்டு இம்முறை இன்னும் சிறப்பாகச் செய்யத்தொடங்கினான். அவனின் முதல் ஆண்டு லாபம் மட்டும் கொண்டு இன்று அவன் இருக்கும் நவீன ஆடம்பர குடியிருப்பின் முன் பணத் தொகையைச் சம்பாதித்திருந்தான். ரவீந்திரன் வாழ்க்கையில் அவன் நிறுவனம் மட்டுமே முக்கியமாக இருந்தது. மனிதர்களுடன் பற்று இல்லாதவன் போல் தான் நடந்து கொண்டான். தனிக்காட்டு ராஜா போல் வாழ்ந்தான். மகனின் போக்கை அப்படியே விட்டுவிடக் கூடாது என்று ஒரு திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்றே பானுமதி முடிவு செய்தாள். முன்பே ஒருமுறை ரவீந்தர் சாலினியை இங்கே அழைத்து வந்த வினை, அவர்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பலருக்கு ரவீந்தரின் காதல் முறிவு தெரிந்திருந்தது. மறைக்காமல் உண்மையைச் சொல்லிப் பெண் தேட முடிவு செய்தாள் பானுமதி. ஒரு வழியாக ஆர்த்தியுடன் திருமணம் நிச்சயமானது. ரவீந்தர் சம்மதித்தது மாமா சுகந்தன் வற்புறுத்துதல் காரணமாகத்தான். ஆனால் அதுவும் நின்று போனது. குடும்பமே புலம்பிய போதும், ரவீந்திரனுக்கு அதில் வருத்தம் இல்லை. ஏன் அப்படி என்று இன்று வரை அவனுக்கே தெரியாது. ஆனால் சுரபியின் இல்லாத நாட்கள் வெறுமையாக உணர்ந்தான். சில ஆண்டுகளாகத் தேவைப்படாத, உணர்ச்சி பூர்வமான பந்தத்தைத் தேட தொடங்கி விட்டானா? பகுதி - 9 சென்னையில் சுரபிக்குப் பொழுது இன்பமாகக் கழிந்தது. பெற்றோரின் திருமண நாள் கொண்டாட்டத்தை, சிறப்பாகச் செய்தார்கள். சுரபியின் வருகையின் காரணத்தை அறிந்த சுகந்தன், குடும்பத்தையே அழைத்து வந்தார். சுரபியின் கல்லூரி சான்றிதழ்களைப் பெறுவது கடைகளுக்குச் செல்வது என்று நாட்கள் வேகமாகச் சென்றது. சென்னையில் எல்லோரிடமும் தமிழில் பேசுவது ஆனந்தமாய் இருந்தது. ஹைதராபாத் போல் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வாய்ப்பு வரவில்லை. பேருந்தில் செல்வது, ஆட்டோ பிடிப்பது எல்லாம் சாதாரணமாக இருந்தது. இரண்டு நாள் குடும்பத்துடன் இருந்துவிட்டு வினோத் மீண்டும் டெல்லி செல்லத் தயாரானான். நீலாவும் மகனுக்குப் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சுரபி அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “அம்மா! அண்ணா என்ன இன்னும் சின்னப் பிள்ளையா? முதல் நாள் பள்ளிக்கு அனுப்புவது போல் செய்கிறீர்கள்” என்றாள். “உனக்கு என்ன வந்தது. என் அம்மா எனக்குச் செய்கிறார். போ! உன் வேலையைப் பார்!” என்றான். “அண்ணா உனக்கு நான்கு வயதில்லை, இருபத்தி நான்கு வயது” என்றாள். “என் பிள்ளை எனக்கு எப்போதும் குழந்தைதான். அவனுக்கு அறுவது ஆகும்போது, எனக்கு எண்பது. அப்போது கூட இப்படி தான் செய்வேன்” என்றாள் நீலா. “எல்லாம் உங்கள் பிள்ளைக்குத் தானா! எனக்கு?” என்றாள் சுரபி. “உனக்கும் அப்படித்தான்.” என்று மகளின் கன்னத்தைத் தட்டிவிட்டு மகனுக்காக அடுக்கத் தொடங்கினாள் நீலா. இதுபோல் ஒரு பிணைப்பு ஏன் ரவீந்தர் வீட்டில் இல்லை? என்று யோசிக்கத் தொடங்கினாள். அப்போது தான் ரவீந்தர் நினைவு வந்தது. இருவரும் தினமும் குறுஞ்செய்தியில் தான் அதிகம் பேசுவார்கள். காலையில் அல்லது மாலையில் ஒருமுறை பேசுவார்கள். அன்று காலையில் அவன் ‘வேலை இருக்கிறது, மாலையில் பேசலாம்’ என்று சொல்லிருந்தான். அவனுக்கு அழைத்தாள். “இப்போதுதான் என் நினைவு வந்தது போல” என்றான். “ஆமாம்!” என்றாள். சிரித்துவிட்டு, “உண்மை விளம்பி”என்றான். “புரியவில்லை!” “அப்படி எல்லாம் இல்லை. உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்று ஒரு பொய் சொல்லக் கூடாதா?” “அடுத்த முறை சொல்கிறேன். இப்போது என்ன செய்கிறீர்கள்?” “பெரிதாக ஒன்றும் இல்லை! நீ எப்போது வருகிறாய்?” “நாளை! சுகந்தன் மாமா அவர்கள் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார். நாளை அங்கே சென்று விட்டு மாலை கிளம்பி விடுவேன். உங்களுக்கு டிக்கெட் விவரம் அனுப்பி இருந்தேனே!” “பார்த்தேன்! திடீரென்று இன்னும் இரண்டு நாள் அங்கேயே இருப்பதாகச் சொல்லி விடுவாயோ என்று கேட்டேன்.” என்றான். “பேராசிரியர் ஒருவர் விடுமுறையில் சென்றிருந்தார். அவரிடம் சில விவரங்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் இருந்து விட்டேன்.” என்றாள். “வேலை முடிந்ததா?” “முடிந்தது!” பேச்சு அப்படியே ஒருமணி நேரத்திற்கு நீண்டது. வினோத் கிளம்பப் போவதாக அறைக் கதவைத் தட்டவும் தான் அவளுக்கு நேரம் தெரிந்தது. சுகந்தனின் வீட்டில் சுரபிக்குப் பெரிய விருந்தே காத்திருந்தது. எல்லோரும் அவளை அன்று போல் என்றும் வரவேற்றதில்லை. மதிய உணவுக்குப் பின் கமலம் சாந்தியுடன் பேசிக்கொண்டிருக்க, சுரபிக்கு வெகுநாள் குடைந்த கேள்வியைத் தயக்கத்துடன் கேட்டாள். “உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்று பொதுவாகக் கேட்க, “தாராளமாகக் கேட்கலாம், ரவியின் மனைவி கேட்டு இல்லை என்று இங்கே யாரும் சொல்ல மாட்டார்கள்” என்றாள் சாந்தி. லேசாகச் சிரித்துவிட்டு, “அவர் ஏன் அத்தையுடன் இயல்பாகப் பேசுவதில்லை. அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இல்லை. அத்தை பிரியமாக இருந்தாலும் இவர் அதைத் தவிர்க்கிறார். ஏன் அப்படி?” என்றாள் சுரபி. பெண்கள் இருவர் முகத்திலும் இருள் படர்ந்தது. அவர்கள் முகத்தைக் கவனித்து சுரபி, “சொல்லக் கூடாது என்றால் வேண்டாம்!” என்றாள். இருவரும் சில கணங்கள் தயங்கினார்கள். மெல்லச் சாந்தி தொடங்கினாள். “எப்படியும் உனக்கு ஒருநாள் தெரியத்தானே போகிறது. அது இன்றாக இருக்கட்டுமே” எனவும், கமலம் கொஞ்சம் பதறியதைச் சுரபி கவனிக்கத் தவறவில்லை. சாந்தி தொடர்ந்தாள். “லண்டனில் ரவி தொடங்கிய தொழிலில் ஒரு சறுக்கல். கூட்டாளிகள் எல்லோரும் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். ரவிக்கு விட மனம் இல்லாமல் மீண்டும் முயற்சி செய்துகொண்டு, கிடைத்த வேறு நல்ல வாய்ப்பை விட்டுவிட்டான். பானுமதி அண்ணிக்கு அதில் வருத்தம். அதனால் கருத்து வேறுபாடும் வந்தது. அப்போதிருந்து அண்ணி எது சொன்னாலும், ரவிக்குப் பிடிப்பதில்லை. ரவியின் விருப்பத்தை யாரும் மதிக்க வில்லை என்ற வருத்தம்.” என்று சுருக்கமாகச் சொன்னாள். ரவியின் முன்னாள் காதலைப் பற்றி முழுவதும் மறைத்து விட்டுச் சொல்லி முடித்தாள் சாந்தி. “அப்படியானால், அவர் கோவத்தில் நியாயம் இருக்கிறது. அன்னையே மகனின் முயற்சிகளைப் புரிந்து கொள்ள வில்லை என்றால் கஷ்டமாகத்தானே இருக்கும்” என்று கணவனுக்காகப் பரிந்து பேசினாள். முழு உண்மையைச் சொன்னால் சுரபி இப்படிப் பேசுவாளா என்ற சந்தேகம் கமலம், சாந்தி இருவருக்கும் தோன்றியது. ரவீந்தர் தான் வீம்பு பிடிக்கிறான் என்று நினைத்திருந்த சுரபிக்கு இப்போது பானுமதியின் மேல் வருத்தம் வந்தது. பேச்சைத் திசை மாற்ற, “உனக்குத் தனியா இருக்க எப்படி இருக்கிறது! எப்படி பொழுதைப் போக்குகிறாய்?” என்றாள் சாந்தி. “கொஞ்சம் கஷ்டம்தான். இப்போதுதான் சர்டிபிகேட் வந்து விட்டதே. ஏதாவது வேலை தேட வேண்டும்.” பேராசிரியர்களிடம் பேசியதில், அடுத்த முறை சிறப்பான கல்லூரியில் சேர்வதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் படிப்பை ஒரு ஆண்டு இடைவெளி விட்டுத் தொடரலாம் என்று முடிவெடுத்திருந்தாள். வினோத்திடம் மட்டும் சொன்னாளே தவிர, பெற்றோரிடம் கூடச் சொல்லவில்லை. “வேலை தேடுவதா? பானுமதிக்கு வேலையில் உதவி செய்யலாம் தானே!” என்றார் கமலம். “ஐயோ! பாட்டி இப்போதைக்கு அது முடியாது. அத்தையிடம் பேசினாலே அவர் பார்வையில் அனல் பறக்கும். இப்போது அவர்களுடன் வேலை செய்தால் அவ்வளவுதான்.” என்றாள். இதை வெறும் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. அவ்வப்போது சுரபி பானுமதியை அழைப்பதுவும், பானுமதி சுரபியை அழைப்பதும் நடப்பதுதான். பொதுவாக ‘ரவி என்ன செய்கிறான்’ என்று பானுமதி கேட்கப் பேச்சு ரவியைப் பற்றித் தொடரும். அவன் அருகிலிருந்தால் முறைத்துப் பார்ப்பதும், தொலைபேசியை வைத்ததும் “புகார், அறிக்கை எல்லாம் முடிந்ததா?” என்பான். “உங்களைப் பற்றி யாரும் புகார் சொல்லவில்லை. பொதுவாகப் பேசினோம்” “என்னைத் தவிரப் பேச உங்கள் இருவருக்கும் வேறெதுவும் இல்லையா?” “இப்போதைக்கு இல்லை” என்பாள். “அதுவும் சரிதான். இங்கிருந்தபோது பானுமதியிடம் நான் பேசினாலே என்னிடம் இரண்டு நாள் பேசமாட்டான். அவனைப் பற்றித்தான் குறை கூறினேன் என்று நினைத்துக்கொள்வான்” என்றார் கமலம். ரவீந்தரின் போக்கை எல்லோரும் அறிந்திருந்தும் ஏன் யாரும் மற்ற முயல வில்லை. ஒருவேளை முயன்று வெற்றி பெற முடிய வில்லையா? ஹைதராபாத் விமான நிலையம் வந்தது இறங்கியதும், சுரபியின் செல் ஒலித்தது. வெளியே அவளுக்காக நிற்பதாக ரவி சொன்னான். சுரபிக்கு ஏக சந்தோசம். சுரபி பெட்டிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வரும்போது ரவீந்தர் காருடன் நின்றுகொண்டிருந்தான். அவள் பெட்டிகளைப் பார்த்து, “ஒரு பெட்டி மூன்றாகி விட்டது! சென்னையையே இங்கே கொண்டுவந்து விட்டாயா?” என்றான். “கிட்டத்தட்ட!” என்று சிரித்தாள். இரவு உணவை முடித்துவிட்டு, அவளின் சான்றிதழ்களைக் காட்டினாள். “ஹ்ம்ம்! குட்” என்றான். "உங்கள் படிப்புக்கு முன் இது ஒன்றும் இல்லை தான். ஆனால் உங்களிடம் காட்ட ஒரு காரணம் இருக்கிறது என்று இன்னொரு தாளை நீட்டினாள். ஒரு பள்ளியின் ஆசிரியர் தேவை பற்றிப் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம். “இது எதற்கு?” என்றான். “படிப்பை அடுத்த ஆண்டு தொடரலாம் என்று இருக்கிறேன். கல்லூரியிலும் அதைத் தான் சொன்னார்கள். சும்மா இருக்கப் பிடிக்க வில்லை! அதனால் அருகில் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைத்தேன். நேற்று இந்தப் பள்ளிக்கு அழைத்தேன். நாளை மறுநாள் நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.” என்றாள். “ஓ! செய்” என்று எல்லாவற்றையும் அருகில் வைத்துவிட்டு எழுந்து சென்று விட்டான் ரவீந்தர். சுரபிக்கு அவன் கோபம் தெரிந்தது ஆனால் அதற்கான காரணத்தைக் கண்டறிய சில கணங்கள் தேவைப் பட்டது. அவனைத் தேடிச்சென்றாள். பால்கனியில் நின்று எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். அவன் புகைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சுரபிக்குப் பிடிக்காத வாடை. அவன் புகை பிடிப்பது வழக்கம் என்றாலும் அந்த நேரங்களில் அருகில் அவள் செல்வதில்லை. இப்போது அதுபற்றித் துளியும் எண்ணாமல் அவனருகில் செல்ல, மூச்சை அடைப்பது போல் இருந்தது. தன்னிச்சையாக அவள் கைகள் மூக்கை பற்றிக்கொள்ள, புகைப்பதை நிறுத்திவிட்டான். “உங்களிடம் கேட்காமல் முடிவு செய்தது தப்புதான். இல்லை …இல்லை. இன்னும் முடிவு கூடச் செய்யவில்லை. சும்மா அழைத்துப் பார்க்கலாம் என்று தான் நினைத்தேன். அவர்கள் உடனே வரச் சொல்வார்கள் என்று நினைக்கவில்லை. அண்ணாவிடமும் டாடியிடமும் மட்டும் வேலைக்குப் போக நினைப்பதாகச் சொன்னேன். இந்தப் பள்ளி வேலை பற்றி உங்களிடம் தான் முதலில் சொல்கிறேன்.” என்றாள். அவன் ஒரு கூர்மையான பார்வையை அவளிடம் செலுத்த, தலைக்குமேல் கை வைத்து “ப்ராமிஸ், இன்னும் ரெசுமே கூடத் தயாரிக்க வில்லை. நீங்கள் வேண்டாம் என்றால் வேண்டாம்.” என்றாள். அவன் சொல்லாமலே அவனின் வருத்தத்தைப் புரிந்து கொண்டாள் என்று அவனுக்குப் பூரிப்பாக இருந்தது. அவன் சொல்படி எல்லாம் மனைவி ஆட வேண்டும் என்று ரவீந்தர் நினைக்கவில்லை. ஒரு முடிவை எடுக்கும்போது அவனிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மட்டும் தான் எண்ணினான். அதற்குமேல் அவனின் கோவம் நிலைத்திருக்க வில்லை. “எப்போது இன்டெர்வியூ?” என்றான். “நாளை மறுநாள்” “சரி! போய் வா!” என்றான். அது மட்டுமில்லாமல், அவளின் தற்குறிப்பைத் தயாரிக்கவும் உதவினான். சுரபி தயக்கத்துடன் கேட்டாள், “இதுபோல் ஒரு வேலைக்குச் செல்வது உங்களுக்கு வருத்தம் இல்லையே!” இது வினோத்தின் அறிவுரை. அவள் வீட்டு மனிதர்களுக்கு அவள் வேலைக்குச் செல்வது சம்மதமா என்று தெரிந்துகொள்ள சொன்னான். “இதுபோல் வேலையா? நீ என்ன கொள்ளையடிக்கவா போகிறாய்?” என்றான். “இல்லைதான். உங்களுக்கோ இல்லை வேறுயாருக்கோ வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை என்றால் …” என்று முடிக்காமல் இழுத்தாள். “உனக்குச் செல்ல வேண்டும் என்றுதானே இருக்கிறது. பிடித்ததைச் செய்ய வேண்டும். யாரையும் ஏய்க்காமல் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.” என்றான். லேசாகக் கை தட்டிவிட்டு “நல்ல பிளாஸபி” என்றாள். “முதலில் உன் பேச்சைக் குறை. இப்படி கிண்டலும் கேலியும் செய்வது தெரிந்தால் உனக்கு ஆசிரியர் வேலை தரமாட்டார்கள்.” “கிண்டல் கேலியா? நான் உங்களைப் பாராட்டினேன்! மாணவர்களைப் பாராட்டி வேலை வாங்க வேண்டும் அல்லவா இங்கிருந்தே முயல்கிறேன்!” என்றாள். “நான் உனக்கு எந்த விஷயத்தில் மாணவன் என்று தெரியவில்லை?” சற்றே யோசித்து விட்டு, “நிச்சயம் இயற்பியலில் உங்களுக்கு ஆசிரியராக இருப்பேன்.” என்றாள். “இப்போதைக்கு அதை நம்புகிறேன்” என்றான். பகுதி - 10 சுரபியின் நேர்காணலுக்கு ரவீந்தர் அழைத்துச் சென்றான். அந்தப் பகுதியில் பெரிய பள்ளிதான். நேரமாகும் என்பதால் அவனைப் புறப்படும்படி சொல்லிவிட்டு சுரபி பள்ளியின் அலுவலகத்தில் காத்திருந்தாள். அவளைப் போல் பலர் வந்திருந்தனர். ஆங்கில பள்ளி என்பதால் பாஷை தொல்லை இருக்காது என்றுதான் நினைத்தாள். வகுப்பில் ஒரு பாடத்தை நடத்தும்போது கூட அவளுக்குச் சுலபமாக இருந்தது. ஆனால் மூன்று மூத்த ஆசிரியர்கள் தெலுங்கில் கேள்விகள் கேட்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் சென்றது. எல்லாம் சிறப்பாகச் செய்தாலும், அவளுக்கு மொழி தெரியாதது ஒரு பெரும் குறைபாடாக இருந்தது. பல சுற்றுக்குப் பின் இறுதிச் சுற்றுவரை எத்தியவர்கள் ஐவர் மட்டுமே. இறுதிச் சுற்றில் அவள்மேல் படிப்பு செய்யாததைப் பற்றியும், அதற்கான காரணத்தையும் கேட்டார்கள். எல்லாம் நல்ல படியே சென்றது. இரண்டு நாளில் சொல்வதாகச் சொன்னார்கள். நிச்சயம் எல்லாச் சுற்றிலும் சுரபி நன்றாகச் செய்ததாக உறுதியாக நம்பினாலும், அவள் இங்கே பணிக்கு வரப்போவதில்லை என்று தோன்றியது. ரவீந்தரிடம் இதுபற்றிச் சொன்னபோது, “ஏன்? உனக்கு அங்கே பிடிக்க வில்லையா? நேற்று கூட வெகு ஆர்வமாய் இருந்தாய்!” என்றான். “தெரியவில்லை! ஏதோ தோன்றுகிறது!” “முடிவு வரட்டும்! பிறகு பேசலாம்” என்று வேறு விஷயங்கள் பற்றிப் பேசினான். முடிவுகளும் வந்தது. ஒரு தொலைபேசி அழைப்புமூலம் முடிவைச் சொன்னார்கள். சுரபியைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் மாற்று ஆசிரியராக. எந்த வகுப்பையும் அவளுக்கென்று வழங்காமல், ஒரு ஆசிரியர் வராத நேரத்தில் இவள் வகுப்பை நடத்த வேண்டும். அதுவும் எந்தப் பாடமாக இருந்தாலும். முதல் வகுப்பு பிள்ளைகளே ஆங்கிலம் சரளமாகப் பேசும் பள்ளி தான் அது. உடன் தேர்வானவர்கள் கூட இவளைப் போல் இளங்கலை படித்தவர்கள் தான். எல்லோரும் இதே போல் மாற்று ஆசிரியராகவா தேர்வானார்கள்? ஆசிரியர்கள் பயிற்சிக்குப் இரண்டு நாட்களில் சேரச்சொன்னார்கள். அதற்கு முன் அவளின் சான்றிதழ்களை மூன்று ஆண்டுகளுக்கு, அவர்களிடம் தான் இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் சுரபிக்கு அடுத்த வருடம் முதுகலை படிப்புக்குச் சேரவேண்டுமே. மாலை ரவீந்தர் வந்தவுடன் இதுபற்றிப் பேசினாள். “உனக்கு ஒரு யோசனை சொல்லலாமா?” என்று முதலில் கேட்டான். “சொல்லுங்கள்!” “உனக்கு முன் அனுபவம் இல்லாதபோது, நீ அதிகப்படி எதிர்பார்க்கக் கூடாது. வருடத்தில் ஆசிரியர் மாறுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நீ நேர்காணலுக்குச் சென்ற பள்ளி சாதாரணமான பள்ளி இல்லை. உனக்குக் கற்பித்தல் தான் விருப்பம் என்றால், இந்த வேலையே நீ ஏற்க வேண்டும்.” என்றான். ரவீந்தர் சொல்வதை முற்றிலும் தவிர்க்க முடியாது தான். உடன் சேர்த்தவர்களுக்கெல்லாம் வகுப்புகள் ஏற்கனவே ஒதுக்கி இருப்பதாகவும், சுரபிக்கு மட்டும் வகுப்புகள் இல்லாமல், மாற்று ஆசிரியராகவும் பொறுப்பைக் கொடுத்தார்கள். அதற்கான விளக்கம் கேட்டாள். “என் செயல் திறன் உங்களுக்குப் பிடித்ததாகச் சொல்கிறீர்கள். ஒரு வேளை அதில் குறைபாடு இருந்தால் தாராளமாகச் சொல்லலாம்.” அவர்களிடமிருந்து தெளிவாகப் பதில் கிடைக்கவில்லை. அப்போதே சுரபிக்கு அந்தப் பணியை ஏற்க விருப்பமில்லை. ரவீந்தரிடம் வேலையை ஏற்காதது பற்றிச் சொன்னாள். “உனக்குப் பிடிக்க வில்லை என்றால் செல்ல வேண்டாம். ஆனால் நன்றாக யோசித்து முடிவெடு. முன் அனுபவம் இல்லாத ஒருவருக்கு, சில இடங்களில், வகுப்புகளை நியமிக்காமல் இருப்பது வழக்கம் தான்.” “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இதுவே வெகுநாட்களுக்கு தொடருமோ என்று தான் யோசனையாக இருக்கிறது. இன்னொன்று எனக்கென்று இருக்கும் வேலையே மற்றவர்கள் செய்யாமல் விட்ட வேலைதான். ஏனோ எனக்கு மனம் ஒட்டவில்லை. ஒருவருக்கு மாற்றாக இருக்கப் பிரியம் இல்லை.”என்றாள். அவளின் இறுதி வாக்கியம் ரவீந்தருக்கு தைத்தது. அவன் எதுவும் பேசாமல் அமர்த்திருக்க, “என்ன?”என்று கேட்டாள். “உன்னிடம் இதுவரை இதுபற்றிக் கேட்கவில்லை. என்னைத் திருமணம் செய்ததில் உனக்கு ஏதும் வருத்தமா?” என்றான். “இதுவரை இல்லை. இனிமேல் எப்படி என்பது நீங்கள் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.” என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் இறுகி இருப்பது கண்டு, “நான் சும்மா விளையாட்டாகப் பேசினேன். நீங்கள் தீவிரமாக யோசிக்கும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை.” என்றாள். “நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது. உன்னை யாரும் கட்டாயப் படுத்த வில்லையா? என்று மட்டும் கேட்டேன். ஆனால் நீ எப்படி, ஏன் சம்மதித்தாய் என்று இன்று வரை கேட்கவில்லை. இப்போது கேட்கிறேன்! சொல்” என்றான். என்ன சொல்வது என்று வெகுநேரம் யோசித்தாள். “ஏதுவாக இருந்தாலும் சொல். இருவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் வரை நம்மிடையே பெரிய பிணைப்பு வராது.” “எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் உங்கள் குழப்பத்தைத் தீர்க்கச் சொல்கிறேன். தாத்தாவும், சுகந்தன் மா… சித்தப்பாவும் கேட்டார்கள். சம்மதித்துவிட்டேன்.” “என்னைப் பற்றி அப்போது உனக்கு என்ன தெரியும்?” “ஒன்றும் தெரியாது!” “பிறகு என்ன நம்பிக்கையில் சம்மதித்தாய்?” “தாத்தாமேல் இருந்த நம்பிக்கை. வெறும் கௌரவத்திற்காகவும், பேரனுக்காகவும், என்னைப் பலி கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை.” என்றாள். ஒரு ஆழமான பார்வை பார்த்தான். “இன்னும் என்ன குழப்பம்?” என்றாள். “ஆர்த்தி ஏன் என்னை வேண்டாம் என்றாள் என்று தெரியுமா?” “இருவருக்கும் ஏதோ மன வேறுபாடு என்று சொன்னார்கள்” “என்ன என்று தெரிய வேண்டாமா?” பார்வையைச் சுருக்கி, “இல்லை என்று சொல்ல முடியாது! ஆனால் முடிந்தது பற்றிக் கிளறக் கூடாது என்று சொன்னார்கள்.” அன்று நடந்த உரையாடல்பற்றிச் சொன்னான். அவன் சொல்லி முடிக்கும்போது, சுரபியின் விழிகள் விரிந்திருந்தது. “இதற்காகவா திருமணத்தை நிறுத்தினாள்?” என்றவள், “ஆனால் ஆர்த்தி பாவம்! திருமணத்திற்கு முன் ஒன்றாக ஊரெல்லாம் சுற்றும் இந்தக் காலத்தில், பேசக் கூட வாய்ப்பில்லை. முதல் முறை பேசும்போதே உங்களைப் போலப் பேசினால், பெரும்பாலானோர் பயந்து விடுவார்கள்.” “அது என்ன பெரும்பாலானோர்? எல்லோரும் பயந்து ஓடி விடுவார்கள் என்று சொல்.” என்றான் “அப்படிச் சொல்ல முடியாது! கொஞ்சம் பக்குவமாக யோசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.” “நீ எப்படியோ?” “நான் நிச்சயம் பயந்திருப்பேன்!” என்றவளை வியப்பாகப் பார்த்தான். அவன் முகத்தின் மாற்றத்தைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு, “ஆனால் திருமணத்தை நிறுத்தி இருக்க மாட்டேன்.” என்றாள். “அதனால் தான் தாத்தா உன்னைத் தேர்வு செய்திருக்கிறார்.” என்றவன் சுரபியைக் கண்கொட்டாமல் பார்த்தான். அவன் பார்வையை நேராகச் சந்திக்க முடியாமல் அருகிலிருந்த ஏதோ ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு இங்குமங்குமாய் பார்க்க, சுரபியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவள் நெற்றியில் முத்தமிட்டான். சுரபியின் நாணச்சிவப்பை சில கணங்கள் ரசித்துவிட்டு ரவி பேச்சைத் தொடர்ந்தான். “அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்!” “மீண்டும் என் படிப்புக்குத் தேவையுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.” என்றாள். “என் அலுவலகத்தில் சேர்கிறாயா?” “உங்கள் அலுவலகத்தில் நான் என்ன செய்வது?” “வேலை தான். இரண்டு மூன்று மாத பயிற்சியில் கொஞ்சம் மூளை இருந்தாலும் நன்றாகவே செய்யலாம்.” “எப்போது இன்டெர்வியூ?” சிரித்துக்கொண்டு, “இப்போது வைத்துக்கொள்ளலாமா?” “ஓ! நான் தயார்” என்றாள். அருகிலிருந்த ஒரு காகிதத்தை நீட்டி, “ஐன்ஸ்டீன் சார்பியல் விதியை விளக்கு” என்றான். முதலில் அவன் கேலி செய்கிறான் என்று நினைத்தவள், ஒரு தாளை நீட்டவும், வியந்து பார்க்க, “என்ன மறந்துவிட்டதா?” என்றான். தாளை வாங்கி வேகமாக எழுதி நீட்டினாள். “மீதி?” என்றான். “என்ன மீதி?” “உன் விளக்கம் அவ்வளவுதானா? ஐன்ஸ்டீனின் விதியையை ஒரே தாளில் முடித்துவிட்டாய்.” என்று கேட்கவும் சுரபி வியந்தாள். அவனுக்கு அதிகம் தெரியாது என்று மேலோட்டமாக ஒரு பதிலை எழுதி நீட்டினாள். ஆனால் சரியாய் விளக்கம் என்றால் குறைந்தது பத்து பக்கங்கள் வேண்டும். “முழு விதி என்றால் நிறைய நேரம் வேண்டும்.” என்றாள். சிரித்துவிட்டு, “இப்போதைக்கு இது போதும்” என்று சொல்லிவிட்டு, ‘தேர்ந்தெடுத்தாயிற்று!’ என்று எழுதிக் கொடுத்தான். “நாளை என்னுடன் காலையில் கிளம்ப வேண்டும்.” “நாளையேவா?” “ஏன்! நல்ல நாள் பார்க்க வேண்டுமா?” “சரியாக நினைவு படுத்தினீர்கள்! நாளை சனிக்கிழமை. நாளை வேண்டாம்.” என்றாள். தலையில் அடித்துக்கொண்டு, “நீ அறிவியல் படித்திருக்கிறாய் என்று வெளியே சொல்லாதே! நாளைக் காலைக் கிளம்புகிறோம்.” என்றான். படிப்பிற்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று சுரபி நினைப்பதுண்டு. அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இந்த உலகில் இருப்பதாய் எண்ணுபவள் சுரபி. இவள் நேரம் காலம் என்று பெரிதாகப் பார்த்ததில்லை என்றாலும், வீட்டில் அம்மா எப்போதும் ஒரு நாள்காட்டியை வைத்துச் சொல்லும் நேரத்தில் தான் முக்கியமான விஷயங்களை அப்பாவும் செய்வார். அதை ரவீந்தரிடம் எதிர்பார்க்க முடியாது என்பதும் சுரபிக்குத் தெரியாமல் இல்லை. சரி என்று தலையாட்டினாள். ரவீந்தருடன் அலுவலகம் சென்றதும் சுரபியின் மனதில் ரவீந்தரின் நிலை பல படிகள் ஏறிவிட்டது. நாற்பது பேர் அவன்கீழ் வேலை செய்தார்கள். எல்லாப் பிரிவுகளிலும் ரவீந்தரின் பங்கு இருந்தது. அவனின்றி அங்கே ஒரு அணுவும் அசையாது என்பது நன்றாகத் தெரிந்தது. ரவீந்தர் சொன்னது போல் கொஞ்சம் மூளையை வைத்துச் செய்ய முடிகிற காரியமில்லை என்பதை இரண்டாவது நாளே உணர்ந்தாள். பயிற்சிக்கென்று வேறு யாரும் இல்லை என்பதால், சில குறிப்புகளைக் கொடுத்து மேலோட்டமாகச் சொல்லிக் கொடுக்கும்படி ஒருவனிடம் பணித்து விட்டு அவன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான். மீண்டும் மதிய உணவின்போது அவனே தொலைபேசியில் அழைத்தான். முக்கிய கூட்டாளி இன்னொருவன் இப்போது விடுமுறையில் இருப்பதாகச் சொல்லி, அவனுடன் தொலைபேசியில் பேச வைத்தான். அவளுக்குப் பயிற்சி கொடுத்தவன் நவீன். அவன் குழுவில் புதிதாக வந்தவர்கள் எல்லோரும் இருந்தார்கள். முதலில் எல்லோரும் தயங்கித் தயங்கி தான் சுரபியிடம் பழகினார்கள். அவர்களின் தயக்கத்தை மதித்துச் சுரபியும் அவர்களை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. முதல் நாள் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை சுரபிக்கு. முதல் நாளில் மேலோட்டமாகப் படித்தாள். ஆனால் இரண்டாவது நாள், மற்றவர்கள் செல்லும் வேகத்திற்குச் சுரபியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நம் மீது நமக்கே நம்பிக்கையில்லாதபோது, மற்றவர்கள் சாதாரணமாக ரகசியம் பேசினாலும், நம்மைப் பற்றித்தான் குறை கூறுவதாகத் தோன்றும். அவர்கள் பேசும் மொழியும் சுரபிக்குத் தெளிவாகப் புரியாவில்லை. குழு முழுவதும் ரகசியம் பேசுவார்கள். சுரபி அவர்கள் அருகில் சென்றால், அவர்கள் பேச்சு நின்று விடும். அவள் தேநீர் எடுக்கச் சென்று திரும்பி வரும்போது சிரிப்பொலி கேட்கும். சுரபி உள்ளே சென்றால் அப்படியே நின்று விடும். இதில் சுரபி ஏதும் சந்தேகம் கேட்டால், தயக்கமின்றி நவீன் தெளிவுபடுத்தினாலும், மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பது போல் இருந்தது. அது சுரபியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். அன்று கணிப்பொறியில் அவள் செய்த எதுவும் சரியாய் இல்லை. மாலை எல்லோரும் சென்றதும் ரவீந்திரன் அறைக்கு முன்தினம் சென்று விட்டாள். இன்று இன்னும் சுரபி அவன் அறைக்கு வராமல் இருக்கவும், ரவீந்தர் அவள் இருப்பிடம் வந்தான். அவள் இன்னும் கணிப்பொறியில் எதோ தட்டிக்கொண்டு இருக்க, சிறிது நேரம் அவள் செய்வதைப் பார்த்தான். “என்ன மேடம்? வீட்டுக்குப் போக வேண்டாமா?” “இரண்டு மணி நேரமாகப் போராடுகிறேன்! இன்னும் சரியாக வரவில்லை!” என்றாள் அவனைப் பார்க்காமலே! அவளிடம் இருந்த கீபோர்டை அவனுக்குச் சௌகரியமாக இழுத்து வைத்துக்கொண்டு, ஒருமுறை பார்த்தான். அவள் செய்திருந்த வேலையை அவன் மின் அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு, “வா வீட்டில் போய்ப் பார்க்கலாம்” என்று கணிப்பொறியை அணைத்துவிட்டு, அவள் கையைப் பற்றி இழுத்துச் சென்றான். “இன்னும் ஒரு ஐந்து நிமிடம்! முடித்திருப்பேன்!” என்றாள். “அதை வீட்டில் போய்ப் பார்க்கலாம்” என்றான். அவள் முடிக்காத வேலைப் பற்றியே யோசித்துக்கொண்டு, மாலை தேநீரில் சர்க்கரை கலக்காமல் எடுத்துவந்தாள். சர்க்கரை கலந்த பின்னும் அது குடிக்கச் சகிக்கவில்லை. சுரபி மீண்டும் புதிதாகத் தேநீர் போட எழுந்தபோது, “நீ போய்க் கம்ப்யூட்டரை ஆன் செய்! நான் டீப்போட்டு எடுத்துவருகிறேன். எப்படியும் அடுத்த முறையும் குடிக்க முடியாமல் தான் இருக்கப் போகிறது.” என்றான் ரவீந்தர். “அந்த வேலையே மண்டைக்குள் ஓடுகிறது. மற்றவர்களெல்லாம் மூன்று நிலை முடித்து விட்டார்கள். நான் மட்டும் இன்னும் இரண்டாவது நிலையிலேயே இருக்கிறேன். எல்லோரும் என்ன பேசுவார்கள்? நான் முட்டாள் என்று எண்ணுவார்கள்.” “ஓ!” “என்ன ஓ? உங்களையும் திட்டுவார்கள்.” “என்னையா? நான் என்ன செய்தேன்? நீ வேலையை முடிக்க வில்லை என்றால் என்னை ஏன் திட்ட வேண்டும்? நியாயப்படி உன்னைத்தான் திட்ட வேண்டும். ஆனால் ரவீந்தரின் மனைவியை யாரும் திட்ட மாட்டார்கள். அதனால் நீ தேவை இல்லாமல் கவலைப் படாதே!” என்றான். பேசிய படியே டீ போட்டு எடுத்து வந்தான். அதை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு, “சூப்பர்!” என்று முழுவதையும் குடித்துவிட்டு, “இப்படி வேலை தெரியாத ஒருத்தியை மனைவி என்ற ஒரே காரணத்துக்காக வேலையில் சேர்த்து விட்டீர்கள் என்று உங்களை வெளிப்படையாகத் திட்டவில்லை என்றாலும், மனதிற்குள் நினைப்பார்கள். விடுமுறையில் சென்ற உங்கள் நண்பர் திரும்பி வந்தால், அவர் கூட நினைக்கக் கூடும்.” என்று ரவீந்தரின் முகத்தைப் பார்த்தாள். யோசனை, சிரிப்பு எதுவும் அவன் முகத்தில் இல்லை. மாறாக ஒரு சிறிய தலை அசைப்பு மட்டும். “கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு அந்த நிலைமை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றாள். “நன்றி! இப்போது அதற்கான வேலையைப் பார்க்கலாமா?” என்றான். ரவீந்தரின் பயிற்சி வேறுமாதிரி இருந்தது. நவீனின் அனுகுமுறை கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. ஆனால் ரவீந்தர் இன்னும் ஆழமாகவே கற்றுத்தந்தான். அவள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவளின் பயிற்சியில் எங்கே தவறு என்று சொன்னான். ஒருவேளை நவீனுக்கு சுரபியின் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, இல்லை குறை சொல்லவோ தயக்கம் இருக்கலாம். சுரபி ஆர்வமாகக் கற்றது, ரவீந்தருக்கும் பிடித்திருந்தது. வெகுநேரம் இருவரும் விவாதித்தனர். இரவு உணவை மறந்து. பானுமதி அழைக்கும் வரை இருவருக்கும் நேரம் போவதே தெரியவில்லை. பானுமதி சுரபியைத்தான் அழைத்தாள். சுரபி ரவியின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது பற்றி முன்தினமே தகவல் சொல்லிருந்தாள் சுரபி. “இன்று வேலை எப்படி இருந்தது?” “எல்லாம் நன்றாக இருந்தது. கொஞ்சம் புரியாததை அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஓ! அப்படியானால் நீங்கள் தொடருங்கள். நான் நாளை அழைக்கிறேன். முடிந்தால் வீட்டுக்கு இருவரும் ஒருநாள் வாருங்கள்” என்று வைத்துவிட்டாள். தொலைபேசியை வைத்துவிட்டுச் சுற்றிப் பார்த்தால் ரவீந்தர் அங்கே இல்லை. சமையல் அறையில் ஏதோ உருட்டிக் கொண்டு இருந்தான். மூன்று நேர உணவையும் வீட்டைச் சுத்தம் செய்வதையும் பணிப்பெண் செய்து விட்டுச் சென்று விடுவாள். இடையில் பழங்கள் இல்லை சிறுதீனி என்று தேவைப்படும்போது இவர்களே செய்துகொள்வார்கள். “இருங்கள் நாள் செய்கிறேன்!” என்றவளைத் தடுத்து, “நீ முதலில் நான் சொல்லிக் கொடுத்ததை மீண்டும் ஒருமுறை படித்துப்பார். இங்கே நான் பார்க்கிறேன்.” என்று வேலையைத் தொடர்ந்தான். இரவு உணவின்போது பானுமதி வீட்டுக்கு அழைத்ததைக் கூறவும், “எனக்கு வேலை இருக்கிறது!” “அதைத்தான் நானும் சொன்னேன்! உங்களுக்கு வேலை இருக்கும். அதனால் நான் மட்டும் வருகிறேன் என்றேன்” என்றாள். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உனக்கு அங்கே என்ன வேலை?” “இங்கே மட்டும் என்ன வேலை இருக்கிறது?” “வேலை தானே நான் தருகிறேன்!” மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைக்க, கணவனுக்கு மனம் வராது. அது ஒரு போஸ்ஸசீவ்னஸ். ஆனால் ரவீந்தர் மனைவியை அவன் அன்னையை பார்க்கக் கூட அனுமதிக்காமல் இருப்பது சுரபிக்கு வியப்பாக இருந்தது. ரவீந்தர் எதுவும் தனியாகக் வேலை கொடுக்கத் தேவை இருக்க வில்லை. மற்றவர்களுடன் சமமாகச் செயற்படச் சுரபிக்கே அதிக பயிற்சி தேவைப் பட்டது. ஒன்றையே அதிக நேரம் செய்தால் சலிப்பு அல்லது அசதி வரும் என்று ரவீந்தர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் சுரபி கணினி முன் நாள் முழுவதும் அமர்ந்திருந்தாள். அதற்கான பயன் அந்த வாரமே தெரிந்தது. குழுவில் எல்லோரும் வியக்கும் வண்ணம் செயல்படத் தொடங்கிவிட்டாள். மெல்ல நாட்கள் நகர, எல்லோரும் வெகுசகஜமாகப் பழகவில்லை என்றாலும், சுரபியுடன் தயங்காமல் பேசினார்கள். அதுவே சுரபிக்கும் ரவிக்கும் சண்டை வரக் காரணமாக இருந்தது. அலுவலகத்தில் பல குழுக்கள் இருந்தன. அனைவருக்கும் ஒரே சமயத்தில் வேலை அதிகம் இருப்பதில்லை. இப்போது சுரபி இருந்த குழுவின் வேலை அதிகமாக இருந்தது. இரவு முழுவதும் அலுவலகத்தில் இருக்க வேண்டி இருந்தது. ரவீந்தர் சுரபியை அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றான். மற்றவர்கள் எல்லாம் அதிகம் உழைக்கும்போது, சுரபிக்கு சும்மா இருக்க முடியவில்லை. சுரபியுடன் மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் என்று எல்லோரும் செய்துகொண்டிருக்க, ஒரு பெண்ணுக்குச் சற்றே உடல் சரியில்லை என்று அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவள் வேலையையும் சேர்த்து, குழுத்தலைவன் என்ற முறையில் நவீன் செய்யத் தொடங்கினான். சுரபிக்கு அவன் செயல் மிகவும் பிடித்திருந்தது. எல்லோரின் நலனிலும் அக்கறையுடன் செயல் படுகிறான். நவீன் அதிக வேலை செய்கிறான் என்று அவள் வேலையை முடித்துவிட்டு சுரபி, அவனுக்கு உதவ முன்வந்தாள். மற்றவர்கள் ஓய்வாகத் தேநீர் அருந்தச் செல்லவும், நவீனுடன் சுரபி மட்டும் வேலை செய்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்துவிட்டு அவன் அறைக்குச் சென்ற ரவீந்தர், சுரபியின் வேலை ஏற்கனவே முடிந்துவிட்டதை உணர்ந்தான். அப்போது எதுவும் பேசாமல் விட்டான். அதிகாலை எல்லோருக்கும் வாகனம் ஏற்பாடு செய்துவிட்டு, சுரபியை அழைத்துக்கொண்டு புறப்படும்போது பேச்சை ஆரம்பித்தான். “உன் வேலையை மட்டும் நீ பார்த்தால் போதும். மற்றவர் வேலை எல்லாம் நீ செய்ய வேண்டியதில்லை.” “பாவம் நவீன்! தனியே எவ்வளவு செய்வார்? என் வேலையும் முடிந்தது. அதுதான் கொஞ்சம் நானும் உதவினேன்!” “அதுதான் வேண்டாம் என்றேன்” “இன்று டீமில் ஒருவர் இல்லை! அவர் வேலையையும் நவீன் மட்டும் செய்ய முடியுமா?” “செய்ய வேண்டும்! அவன் தான் லீடர். அப்படி முடியாது என்றால், அவனுக்கு எதற்கு அந்தப் பதவி?” “இது கொஞ்சம் அநியாயம். குழு என்றாலே எல்லோரும் சேர்ந்ததுதானே! எல்லோரும் வேலையைப் பகிர்ந்து தானே செய்ய வேண்டும்!” “தேவை இல்லாமல் தர்க்கம் செய்யாதே! சொல்வதைச் செய்!” “தர்க்கம் செய்கிறேனா? நீங்கள் அங்கே இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” “அவர்கள் வேலை முடிந்ததும் எழுந்து சென்றார்களே உன் மீதி குழு உறுப்பினர்கள், அதுபோல் நானும் போயிருப்பேன்!” “இப்போது நான் எதோ தவறு செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள்!” “நீ செய்தது பெரும் தவறு! நவீன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவன். அவனுக்கு முடியவில்லை என்றால், பொதுவாகக் குழுவில் கலந்து பேசி வேலையைப் பிரிக்க வேண்டும். இல்லை யாருக்கேனும் உதவுவதாக எண்ணினால் அதற்காக மற்றவர் தலையில் வேலையைக் கட்டக் கூடாது. முக்கியமாக உன்னிடம் அவன் வேலையைக் கொடுக்கக் கூடாது. அவன் இங்கே வேலை செய்பவன் என்பதை மறக்கக் கூடாது. புரிகிறதா!” சுரபிக்கு இதுவரை அவன் சொல்ல வருவதில் ஏதோ நியாயம் இருப்பதாக நினைத்தாள். ஆனால் இறுதியில் அவன் முடித்தது சுரபிக்கு ஆத்திரம் வந்தது. அதற்குள் வீடும் வந்து விட்டது. “இதுவே கடைசியாக இருக்கட்டும். நீ என் மனைவி என்ற நிலையிலிருந்து இறங்கி வேலை செய்யக் கூடாது. இப்போதிருந்தே அதைக் கடைப் பிடிக்க வேண்டும். நண்பர்களாக யாரிடமும் இயல்பாக இருக்க முயற்சிக்காதே! மீண்டும் ஒரு முறை நான் சொல்லும்படி நடந்து கொள்ளக் கூடாது!” சுரபி முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ‘என்ன? என்று’ கேட்க, “உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர் என்றால் உங்களுக்கு அப்படி என்ன ஏளனம்! அவர்களுடன் இயல்பாகப் பேசுவதில் பழகுவதில் உங்களுக்கு என்ன குறைந்துவிடும்? முதலாளி என்ற கர்வம் உங்களுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்தால் உங்கள் தாத்தாவிடம் வேலை செய்பவர் மகள் நான். என்னை ஏன் திருமணம் செய்தீர்கள்? உங்கள் கெளரவம் அப்போது குறைந்துவிட வில்லையா?” இவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் யோசிக்க, “ஓ! நீங்கள் ஒன்றும் விரும்பி மணக்கவில்லை தானே. வேறு வழி இல்லாமல், தாத்தா சொன்னார் என்று கல்யாணம் செய்தவராயிற்றே! ஒருவேளை இந்தத் திருமணம் நடக்காமலிருந்திருந்தால், நானும் அந்த நவீனும் ஒன்றுதான். இப்போது கூட அப்படித்தானே. ஏனென்றால் நான் தாமோதரன் அய்யா அவர்களிடம் வேலை செய்யும் மோகன் என்பவரின் மகள் என்ற அடையாளம் என்றும் மறையாது.” என்று நீளமாகப் பேசிவிட்டு காரை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கி விட்டாள். சில கணங்கள் ரவீந்தருக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சட்டென்று அவளைப் பின்தொடர்ந்தான். அதற்குள் அவள் லாபியில் லிப்ட்டில் ஏறி இருந்தாள். இவர்கள் ஏறிய நேரம் இன்னும் சிலர் இருக்க, இருவரும் எதுவும் பேசாமல், வீடுவரை சென்றனர். ரவீந்தர் கதவைத் திறக்க, வேகமாக உள்ளே செல்ல முயன்றவளை, கையைப் பற்றி நிறுத்தினான். சுரபி கையை உதறிவிட முயலவும், இன்னும் பலமாகப் பற்றினான். “கை வலிக்கிறது! விடுங்கள்” “அப்படியானால், நான் பேசும்வரை கோபப்படாமல் இங்கே உட்கார்.” என்று அவள் கையைவிட, அங்கே இருந்த சோபாவில் அவள் பையை வீசிவிட்டு அமர்ந்தாள். கதவைச் சாத்திவிட்டு வந்தான். அவள் எதிரில் அமர்ந்து, “மேடம் எப்போதிருந்து இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?” “இன்றிலிருந்து! நீங்கள் தான் யோசிக்க வைக்கிறீர்கள்” “அதுவரை சந்தோசம்! விளக்கம் சொல்வது எளிது!” என்று நிமிர்த்து அமர்த்தவன், “நீ பேசியது போல் எல்லாம் நான் நினைக்க வில்லை! எப்போதும் நீ அந்தக் குழுவில் இருக்கப் போவதில்லை. நாளை நீயாக ஒரு வேலையை மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலை வரலாம். அப்போது நண்பர்களாகப் பழகிய நினைவில் உன்னிடம் சலுகைகள் எதிர்பார்ப்பார்கள்! உனக்கும் அவர்களிடம் கண்டிப்பாக இருக்க மனம் வராது. அதனால் தான் மிகவும் நெருங்காமல், எப்போதும் கொஞ்சம் விலகி இருக்கச் சொன்னேன்.” சுரபி ஏதோ பேச வாயெடுக்க, “ஒருவேளை உன் நட்பை வைத்து, என்னிடம் சலுகைகள் எதிர்பார்க்கலாம்! நான் பேசியது வேலை சம்பந்தமாக மட்டும்! ஆனால் நீ இதில் ஏன் நம் திருமணத்தைக் கொண்டு வந்தாய்?” “முதலாளி தொழிலாளி என்று பாகுபாடு பார்க்கிறீர்கள் என்று நினைத்தேன். அப்படி என்றால், நானும் உங்கள் தாத்தா” என்று பேசிக் கொண்டிருந்தவளைத் தடுத்து, “மீண்டும் சொல்லத் தேவை இல்லை. நீ பேசியதை வைத்தே விளக்கம் சொல்கிறேன். தாத்தாவோ மாமாவோ, கடைநிலை ஊழியர் செய்யும் வேலையே ஏற்றுச் செய்வதில்லை. முக்கியமாக அவர்களால் முடியவில்லை என்றால் அவர்களுக்குப் பதிலாகச் சப்ளை செய்வதோ, பொட்டலம் போடுவதோ கிடையாது. ஒருவர் இல்லாத வேளையில் எப்படிச் செய்தால் முடிக்க முடியும் என்று யோசனை சொல்வார்கள். அவ்வளவுதான். அதற்காக யாரையும் யாரும் குறைவாக நினைக்கிறார்கள் என்று பொருள் இல்லை. எல்லோர் மேலும் அக்கறை இருக்கும். அதே சமயம் கண்டிப்பும் இருக்கும். அதைத் தான் பழகச் சொல்கிறான். பிறகு அங்கே உன் அப்பாவின் நிலை என்ன என்று உனக்கே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒரே நாளில் அவருக்கு அந்த அளவு தாத்தா இடம் கொடுத்துவிடவில்லை. முக்கியமான இன்னொரு விஷயம், எனக்குப் பிடிக்காததை யார் சொன்னாலும் செய்யமாட்டேன். தாத்தா சொன்னதற்காக மட்டும் நான் சம்மதிக்கவில்லை.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டான். அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தவள், சற்று நேரம் யோசித்தாள். மற்றதைவிட அவன் கடைசியில் சொன்னது தான் அவளை யோசிக்கவைத்தது. அவளையே அறியாமல் ஒரு சிறு புன்னகை எட்டிப்பார்த்தது. அதற்குள் மேல் அறையிலிருந்து ரவீந்திரன் குரல். “கண்டதை யோசிக்காமல், சீக்கிரம் தூங்கு. மீண்டும் மதியம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்” என்றான். காலை ஆறு மணிக்குத் தூங்கி மதியம் எழவேண்டுமா? சுரபிக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் இது ஒன்றும் புதிதில்லை. சுழற்சி முறை வேலைகள் பலகாலமாக எல்லா ஊர்களிலும் இருப்பதுதானே. சுரபிக்கு புதிது. சென்று படுத்துப்பார்த்தால் தூக்கம் வெகுநேரம் வரவில்லை. எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. ஆனால் மதியம் எழும்போது ரவீந்தர் கிளம்பிச் சென்று விட்டான். மெதுவாக எழுந்து கீழே சென்றால், உணவு இருந்தது. சுரபிக்கு உண்ண மனமில்லை. இரவு விழித்து, பகலில் தூங்கியதால் தலை வலித்தது. ஒரு காபியை மட்டும் குடித்துவிட்டு வெளியே பால்கனியில் சிறிதுநேரம் அமர்ந்தாள். காலையில் இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தை மெல்ல மனதிற்குள் ஓட்டிப்பார்த்தாள். ஆம் அப்படித்தானே என்று அவன் சொல்லியிருந்தால், சுரபியால் என்ன செய்திருக்க முடியும். வாழ் நாளில் என்றேனும் மறந்திருக்க முடியுமா? ஆனால் ரவீந்தர் அதைச் செய்யவில்லை. சுரபிக்கு மனதில் சந்தோசம் எட்டிப்பார்த்தது. ஆனால் அவனிடம் உடனே காட்டிவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள். அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் பாதி இரவுவரை வேலை இருந்தது. ஆனால் மீண்டும் ரவீந்தர் எச்சரிக்கும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்திருந்தாள் சுரபி. அதற்கான சந்தர்ப்பமும் வரவில்லை எனலாம். ஒருநாள் திரும்பி வீடு வரும்போது, மீண்டும் ரவீந்தர் தான் பேச்சை ஆரம்பித்தான். “பரவாயில்லை. நான் சொன்னதை ஏற்றுக்கொண்டாய் போல!” என்றான். “எதை?” “அனைவரிடமும் விலகி நிற்பது பற்றி.” “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே. எல்லோருக்கும் வேலை இருந்தது. அவரவர் வேலையைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. பேசக் கூட நேரமில்லை.” “அதுதானே! அதற்குள் நான் சொன்னதை எப்படி ஒப்புக் கொள்வாய்!” “இவ்வளவு யோசிக்கிறவர் முதலிலேயே இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.” “என்மேல் தப்பு சொல்லாமல் இருக்க முடியாதே!” அவள் விடுவதாக இல்லை.“வேறு டீமில் வேலை கொடுத்து அவர்களுடன் பேசாதே! பழகாதே! என்றால் எப்படிச் செய்வதாம். அதுவும் எனக்கு அடிப்படை மொத்தம் சொல்லிக்கொடுத்த நபரிடம் அதிகாரத்துடன் இருப்பது எப்படி? அதையும் நீங்கள் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள். எனக்குத் தெரியவில்லை”, என்றாள் சுரபி. “ஹ்ம்ம்” என்றதுடன் வேறெதுவும் சொல்லவில்லை அவன். புதிதாக அவன் எதையும் கற்றுத்தரவில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் செய்துவிட்டான். மறுநாளிலிருந்து ரவீந்தருக்கு உதவியாக அவளை நியமித்தான். முற்றிலும் புதிய வேலை. ரவீந்தர் பெரும்பாலும் வியாபாரம் சார்ந்துதான் வேலை பார்ப்பான். வாடிக்கையாளர் தேவைகளை, வாடிக்கையாளர்களுடன் கூட்டம், அடுத்த முதலீடு குறித்த ஆராய்ச்சி, பங்குச்சந்தை விவரம் என்று அலசி ஆராய்வான். அதில் எடுக்க முடியும் லாபம் என்று பெரும்பாலும் வர்த்தகம் சார்ந்து தான் இருக்கும். ஆனால் அலுவலகத்தில் இருக்கும் எல்லா பிரிவுகளின் வேலையும் அவனுக்கு அத்துப்படி. அவனளவுக்கு இப்போது சுரபியையும் தயார் செய்கிறானோ என்று தோன்றியது சுரபிக்கு. அதையே அவனிடமும் கேட்டாள். “உங்கள் அளவுக்கு என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நீங்களும் அதற்காக என்னைத் தயார் செய்கிறீர்கள் என்றால் பல வருடங்கள் ஆகலாம். எனக்கு இது எல்லாம் புதிது. இந்த வேலைகள் எல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. பயமாகக் கூட இருக்கிறது.” என்றாள். “சுரபி, பயம் தேவை இல்லை. நீ இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்றதுபோல் ஒரு வேகம் இருக்கும். என்னுடனோ இல்லை, இங்கே இருக்கும் இன்னொருவருடனோ போட்டி போட உனக்கு எந்த அவசியமும் இல்லை. நீ யார் அளவுக்கும் வேலை செய்ய வேண்டாம். உனக்குப் பிடித்த அளவு செய், போதும். இன்னொருவருடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடுவது திருப்தி அளிக்காது. நேற்றை விட நீ இன்று எவ்வளவு முன்னேறி இருக்கிறாய் என்பதுதான் முக்கியம். நீ அடுத்த ஆண்டு முதுகலை நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்பதையும் மறக்காதே! அதற்கு எப்போது இருந்து பயிற்சி செய்ய வேண்டும் என்று நீ பார்த்துக்கொள்.” என்றான். சுரபி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கவும், “தத்துவம், அறிவுரை எல்லாம் போதுமா! இன்னும் பேசினால் தூங்கி விடுவாய் என்று நினைக்கிறேன்.” என்றான். சுரபி சிரித்துக்கொண்டு, “சரியாகச் சொன்னீர்கள்! இப்போதே கொஞ்சம் தூக்கம் வருகிறது! எனக்கு ஒரு டீ வேண்டும்! உங்களுக்கு” என்று எழுந்து சென்றாள். பகுதி - 11 பானுமதி, ரவீந்தர் சுரபி இடையே உறவு நன்றாக இருக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினாள். முதலில் சுரபியை வேறு வழியின்றி தான் மருமகளாக ஏற்றாள் எனலாம். ஆனால் திருமணம் முடிந்துச் சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இருவருள் எந்தச் சண்டையும் விரிசலும் இல்லை, குறைந்த பட்சம் மற்றவர்கள் அறியும் வண்ணம் இல்லை என்று தெரிந்து மிகவும் திருப்திதான். இந்தச் சில மாதத்தில் ஒருமுறை கூட மகனும் மருமகளும் வீட்டுக்கு அவளைக் காண வரவில்லை என்ற கவலை பானுமதிக்கு இருக்கத்தான் செய்தது. மகன் எப்போதும் போல், பேசுவது கூட அபூர்வம். சுரபி அவ்வப்போது பேசினாலும், அவள் கூட பானுமதியைப் பார்க்க வரவில்லை என்று வருத்தமாக இருந்தது. அவர்களைப் பல முறை அழைத்தும் வராததால், பானுமதி இருவரையும் சந்திக்க வந்தாள். அவர்கள் வீட்டில் இருக்கும் நாள் பார்த்து வந்தாள். மதிய உணவு வேளை. அவள் வரும்போது இருவரும் அலுவலக வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுரபி பானுமதியை வரவேற்க, ரவீந்தர் எதுவும் பேசாமல் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான். " ஒரே ஊரில் இருக்கிறோம்! பார்த்து எத்தனை நாள் ஆயிற்று! ஒரு முறை கூட வந்து பார்க்க உங்களுக்கு நேரமில்லையா?" என்று பானுமதி கேட்க, “கொஞ்சம் வேலை அத்தை. அதனால் தான்!” “உன்னையும் அவனைப் போல் மாற்றிவிட்டானா!” “அப்படி எல்லாம் இல்ல அத்தை” பெண்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அவனுக்கும் பெண்கள் இருவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ரவீந்தர் அங்கேயே அமர்ந்திருந்தான். “மதியம் சாப்பிட்டீர்களா? இன்னும் இல்லையா?” “இனிமேல் தான் அத்தை! இன்று எங்களுடன் நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சுரபி சொல்ல, “நிச்சயம்! இதோ ரவீந்தருக்கு பிடிக்கும் என்று கத்திரிக்காய் கறி கூடச் செய்து வந்தேன்.” என்று ஒரு பாத்திரத்தை நீட்டினார். உணவிற்கு பின் சிறிது நேரம் அவர்களுடன் பொழுதைப் போக்கிவிட்டு புறப்பட்டாள் பானுமதி. பானுமதியிடம் முகம் கொடுத்துக் கூட ரவீந்தர் பேசாதது சுரபிக்கு வருத்தமாக இருந்தது. “அத்தையிடம் ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. நீங்கள் செய்தது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. வீட்டுக்கு வந்தவர்களுடன் பேசாமல் இருப்பது தவறு.” “நான் அவர்களை இங்கே வரச்சொல்லவில்லை.” “அது எனக்குத் தெரியும்! உங்களைப் பார்க்க வந்தவரிடம் பேசாமல் இருப்பது சரியில்லை. அதுவும் உங்கள் அம்மாவிடம் நீங்கள் நடந்துகொள்வது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.” “நீ சொல்வதாலோ, இல்லை உனக்குப் பிடிக்கவில்லை என்பதாலோ என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்!” என்றான். ஒரு சிறு இடைவெளி விட்டு, “இதுபற்றி மீண்டும் என்னிடம் பேசாமல் இருப்பது நல்லது. யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்லத் தேவையில்லை.” அதன் பின் அங்கே அவன் நிற்கவில்லை. சுரபிக்கு ரவீந்தரின் நடவடிக்கை பிடிக்க வில்லை என்றாலும் அதன் காரணம் அறிந்ததினால் அவன்மேல் கோவம் வரவில்லை. இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என்று மட்டும் எண்ணிக் கொண்டாள். “உங்களுக்கு நீங்கள் செய்வது சரி என்றால், நானும் அதை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் விளக்குங்கள். பிறகு இதுபோல் ஒரு வாக்கு வாதம் வராது.” “சுரபி நான் மறக்க வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களை நீ திரும்பவும் கேட்கிறாய்! அதைப் பற்றிப் பேசித்தான், உனக்கு என் நியாயங்களைப் புரியவைக்க வேண்டுமா? எனக்குப் பிடிக்க வில்லை என்றால் விடு”. “இதை நீங்கள் ஒரு நண்பரையோ இல்லை உடன் படித்தவரையோ, ஏன் உங்கள் அண்ணனைச் சொன்னால் கூட விட்டு விடுவேன்! உங்கள் அம்மாவிடம் நீங்கள் காட்டும் ஒதுக்கம் சரியில்லை. அவர்கள் என்ன செய்திருந்தாலும் சரி! நீங்கள் லண்டன் சென்று படிக்கும்வரை அவர்கள் உங்களுக்கு எவ்வளவோ செய்து இருப்பார்கள். ஒரு மூன்று ஆண்டுக்காலம் அவர்கள் நடவடிக்கையை வைத்து அவர்களை முற்றிலும் ஒதுக்குவது சரியா?” சற்றே தயங்கி “உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். லண்டனிலிருந்து திரும்பிய போது நான் எதிர்பார்த்தது அம்மாவின் ஆதரவை மட்டும் தான். அதுவே எனக்குக் கிடைக்க வில்லை. மற்றவர்கள் பேசுவது போல் அம்மாவும் என்னைத் தவறாக நினைத்து விட்டார். மற்றவர்களுக்கு என்னைப் புரியவில்லை என்று நான் வருந்த வில்லை. ஆனால் அம்மாவே… அதுவும் பெரியப்பா, அத்தை என் தோல்வியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நபர் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக்கொண்டு இங்கே எல்லோரும் என்னை ஒதுக்கினார்கள். அந்த வீடே எனக்கு நரகமானது. ஒருவேளை சுகந்தன் மாமாவும் தாத்தாவும் இல்லையென்றால், ஒரு அறையினுள் முடங்கிக் கொண்டே இன்று வரை இருந்திருப்பேன். எனக்குத் தேவையானபோது அவர்கள் துணையாக இல்லை. இப்போது எனக்கு அவர்கள் தேவை இல்லை.” என்றான் விரக்தியாக. “மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் காயத்தைக் கிளற வேண்டும் என்று நான் கேட்க வில்லை. உறவுகள் என்றால் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது போலவே நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது தானே.” “என் முடிவில் நான் தெளிவாக இருக்கிறேன்! நீ இதைப் பற்றி இன்னொரு முறை என்னிடம் பேசாதே! ப்ளீஸ்.” சுரபிக்கும் அதற்குமேல் பேசப் பயமாக இருந்தது. ரவீந்தரின் எண்ணத்தை ஒரே நாளில் மாற்ற முடியாது. மெல்லத்தான் செய்ய வேண்டும். மகனிடம் இல்லாத ஒட்டுதலை மருமகளிடமேனும் சம்பாதிக்க வேண்டும் என்று பானுமதி இவர்கள் வீட்டுக்கு வருவது அடிக்கடி நடந்தது. பணிப்பெண் செய்த உணவு மட்டுமின்றி மகனுக்குப் பிடித்த உணவைச் சமைத்துவைப்பாள். ஒரு சில நாள் சுரபியும் ரவீந்திரன் வரத் தாமதம் ஆனால், அவர்கள் வரும்வரை காத்திருந்து பார்த்துவிட்டுச் செல்வாள். பானுமதியின் பாசம் சுரபிக்குப் புரிந்தது. ஆனால் அவளுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. இடையில் ரவீந்தர் வெளிநாடு செல்லவேண்டி வந்தது. அவனின் பயணம் உடனே செய்ய வேண்டியதாயிற்று. சுரபியை அழைத்துச் செல்ல முடியவில்லை. அவளுக்கு விசா வரச் சிலநாட்கள் எடுக்கலாம். அவனின் பயணமும் ஒரு வாரம் தான் என்பதால், சுரபியும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அவன் சென்று வரும்வரை சுரபி பானுமதியின் வீட்டில் இருக்க முடிவெடுத்தாள். முதலில் ரவீந்தர், “இங்கே எந்தப் பயமும் இல்லை. நல்ல பாதுகாப்பு இருக்கிறது” என்றான். “இதுவரை நான் தனியாக எங்கும் இருந்ததில்லை.” என்றாள் சுரபி. வேறுவழி இல்லாமல் சம்மதம் தெரிவித்தான். ரவீந்தர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட போதிலும், தினமும் அலுவலகம் சென்று வருவதைச் சுரபி வழக்கமாகக் கொண்டாள். பானுமதி முடிந்த அளவு சுரபியுடன் நேரம் செலவழித்தாள். அவ்வப்போது ரவீந்திரன் நடவடிக்கைபற்றிச் சுரபியிடம் கேட்பாள். “ரவி! உன்னிடம் எப்படிப் பழகுகிறான்? உங்கள் திருமணம் நடந்த விதம் சாதாரணமானதாக இல்லை. உங்கள் இருவருக்கும் கொஞ்சம் சிரமமாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டதாக எனக்குத் தோன்றுகிறது!” சுரபி லேசாகப் புன்னகைத்தாள். பதில் எதுவும் சுரபி சொல்லாமல் இருக்க, பானுமதிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. நம்மிடம் பேசத் தயங்குகிறாளோ என்ற ஐயமும் வந்தது. “உனக்கு எதுவும் சிரமம் என்றால் என்னிடம் தயங்காமல் சொல்” “எனக்கு என்ன சிரமம்? அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை.” “ரவீந்தர் உன்னிடம் நன்றாக நடந்துகொள்கிறான் அல்லவா?” சுரபி லேசாகப் புருவத்தைச் சுளித்தாள். “நீங்கள் என் நலனை விசாரிக்கிறீர்களா? இல்லை உங்கள் பிள்ளையின் நடவடிக்கையில் சந்தேகப்படுகிறீர்களா?” என்றாள். பானுமதி கொஞ்சம் தடுமாறிப் போனாள். “இரண்டும்தான்” என்றாள் மெதுவாக. “உங்கள் பிள்ளைமேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” சுரபியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? “இருந்தது.” “இப்போது இல்லை! ஏன்?” “அவனின் செயல்கள் அப்படி. லண்டனில் அவன் செய்த மடத்தனத்தில் அவன்மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது.” “அவர் உங்களுடன் இருந்த இருபது ஆண்டுகளின் செயல்கள் தந்த நம்பிக்கையை, உங்களுடன் இல்லாத சில வருடச் செயல்கள் உடைந்துவிட்டது. வேறு யார் வேண்டுமானாலும் அவரைச் சந்தேகிக்கலாம். ஆனால் நீங்கள் ஏன் அவரை நம்பவில்லை?” சுரபி கேட்டதும் பானுமதிக்கு இவளிடம் எல்லாம் சொல்லலாமா? திருமணத்திற்கு முன் ஒரு இரவில் இவளிடம் என்ன சொல்லிருப்பார்கள் என்று தெரியாமல் அதிகம் பேசிவிடக் கூடாது என்று யோசித்தாள். அவனின் கடந்த காலத்தைச் சொல்லி இப்போதைய வாழ்க்கையைச் சிதறடித்துவிடக் கூடாது. “எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவனிடம் நெருங்கிப் பழகியவர்கள் சொன்னதைத் தவிர்க்க முடியவில்லை. உனக்கு என் நிலைமை பற்றி ஒன்றும் தெரியாது. ரவீந்தரின் தந்தை மறைவுக்குப் பிறகு, அவர் உடன் பிறந்தவர்களுடன், அவர்களுக்குச் சமமாக வர நான் படாதபாடு பட்டேன். அவர்கள் முன் எந்தத் தலைகுனிவும் வரக் கூடாது என்று போராடி வளர்த்த நற்பெயரை, ஒரே நாளில் சுக்கு நூறாக உடைத்துவிட்டான். இன்னும் என்னால் அவர்கள் முன் தலை நிமிர முடியவில்லை. மகனைச் சரியாக வளர்க்க வில்லை என்று இன்று வரை பேசுகிறார்கள்.” “அவர்கள் பேசுவதால், உங்கள் மகனை நீங்கள் ஒதுக்கி வைக்கிறீர்கள்!” “நான் அவனை ஒதுக்கினேனா? அவன் தான் என்னை ஒதுக்குகிறான்! அவன் என்ன தவறு செய்தலும் அவன் என் பிள்ளை! அவன் நல்லவனாக, சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆசைப்படுகிறேன். அதில் என்ன தவறு? ஒருவேளை அவன் அப்படி ஆகவில்லை என்றாலும் அவன் என் மகன் தான். ஆனால் மற்றவர்கள் கேவலமாக அவனை நினைத்துவிடக் கூடாது என்று எண்ணுகிறேன்.” என்று பேசும்போதே குரல் தழுதழுத்தது. “நீங்கள் அவரைத் தவறாக எண்ணவில்லையா?” என்றாள் சுரபி. “அவனுக்கே என்னைப் புரியவில்லை. நேற்று வந்தவள் உனக்கு எப்படிப் புரியும்?” “உங்களைக் காயப்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. எனக்குப் புரிந்தால் அவருக்கும் புரியவைப்பேன். உங்களிடம் அவர் நடந்து கொள்வது சரியென்று நான் எண்ணவில்லை. உங்களைப் பற்றி அவர் பேசுவது கூட இல்லை. அதைச் சரி செய்ய வேண்டும். தவறு உங்கள்மேல் மட்டும் இல்லை. நீங்கள் அவரை நம்பவில்லை என்று அவரும் எட்ட செல்வது சரியில்லை. ஒருவரேனும் என்னிடம் பேசாமல் நான் என்ன செய்ய முடியும்.” சுரபி அக்கறையுடன் கேட்கிறாள் என்று புரிந்ததும், பானுமதி சொன்னாள். “நீ சொன்னதே ரொம்ப சந்தோசம். அவனுக்குப் புரிய வைப்பது கடினம். அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட நான் எதிர்பார்க்க வில்லை. அவன் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். நீ அவனை நல்லபடியாகப் பார்த்துக் கொள்.” “அதுமட்டும் போதாது! அவருக்கு ஒருவர் இருந்தால் போதும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நான் அவருக்கு எல்லோரும் வேண்டும் என்று நினைக்கிறேன். மாமாவின் குடும்பத்தார் முன் தலை நிமிர்வது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள். ஒருவேளை அவருக்கு நீங்கள் தேவைப்பட்ட நேரத்தில் அவரைப் புரிந்து கொள்ள வில்லை என்ற வருத்தம், உங்களுக்குள் விரிசலை அதிகப் படுத்திவிட்டது என்று நான் நினைக்கிறேன். அவரின் பெரியப்பா அத்தையிடம் நீங்கள் அவருக்குச் சாதகமாகப் பேசவில்லை என்று எண்ணுகிறார். பதிலாக அவர்களுடன் சேர்ந்து குறை கூறினீர்கள் என்றார்” “நான் என்ன செய்ய முடியும் சுரபி! இங்கே இருக்கும் சொந்தங்களுக்கு எப்போதும் என்மேல் ஒரு அலட்சியம் இருக்கும். மாமா போனபிறகு எப்போதும் என்னிடம் குறைகளைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். நான் அப்படி இல்லை என்று புரிய வைக்க வெகுவாக வாதிடுவேன். பிறகு சலித்துவிட்டது. ‘நீங்கள் சொல்வது சரி தான். என்ன செய்வது? எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை’ என்று சொல்லத் தொடங்கினேன். அவர்களின் பேச்சு மெல்ல குறைந்தது. இவர்களைச் சமாளிக்க இது ஒரு வழி என்று எண்ணினேன். நான் அப்படி இல்லை என்று போராடுவதை விட, நான் அப்படித்தானே என்று ஒத்துக்கொண்டால், அவர்களின் பேச்சு குறைந்துவிடும். ரவீந்தர் விஷயத்திலும் அப்படி தான் செய்தேன். இவன் கல்லூரி நண்பன் ஒருவன், நம் உறவும் கூட. அவன் இங்கே எல்லோரிடமும் ரவீந்தர் நஷ்டத்தைப் பற்றிச் சொல்லிவிட்டான். அது ஏதோ பெரிய குற்றம் போல் பேசுவார்கள். நானும் அதை ஆமோதிப்பது போல் அப்போது பேசிவிடுவேன். என் மகனை நானே இப்படிப் பேசிவிட்டேனே என்ற கோவத்தை ரவியிடம் காட்டிவிடுவேன். அவனும் அதற்குத் தகுந்தாற் போல் அப்போது எப்படி இருந்தான் தெரியுமா? என்ன சொன்னாலும் கேட்காமல் குடித்துவிட்டு…” சுரபியின் முகத்தைப் பார்த்தாள் பானுமதி. அவள் முகம் சாதாரணமாக இருந்தது. “ஒருநாள் இல்லை இரண்டுநாள் இல்லை. வித்யா இந்த வீட்டுக்கு வந்த புதிது. வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாம், ரவீந்தரை பற்றித் தவறாகப் பேசுவார்கள். கேட்பார்கள். அவனுக்காக அவர்களிடம் பேசிவிட்டு, அந்தக் கோபத்தை ரவியிடம் காட்டிவிட்டேன்.” சுரபிக்கு இப்போது பானுமதியை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. பானுமதி தொடந்தாள் “ரவீந்தரை அதற்காக நான் எப்போதும் குறைவாக எண்ணியதில்லை. அவனின் திறமைகளை எல்லாம் வீணடிக்கிறானே என்ற ஆதங்கம். நான் வளர்த்த பிள்ளை இப்படி தவறாகப் போய்விட்டான் என்ற வருத்தம். அவனிடம் கடுமையாகத்தான் நடந்து கொண்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. கடுமையாக இருந்தால் சரியாகி விடுவான் என்று நினைத்தேன். அதுதான் நான் செய்த தவறு.” வித்யா சுரபியுடன் பேசுவதற்குக் கூட யோசித்தாள். ஒரு ஏளனமாகப் பார்வை பார்ப்பதுடன் சரி. சுரபிக்கு அதைக் கவனிக்க நேரம் இல்லை. ரவீந்தரும் அலுவலகத்தில் இல்லை என்பதால், சுரபி நிறைய வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தது. ரவீந்தரின் அனைத்து வேலைகளையும் செய்யவில்லை என்றாலும் அவன் வந்ததும் அவனிடம் சொல்ல வேண்டிய தகவல்களைக் குறித்துவைத்து, அவனுடன் தொலைபேசியில் அவ்வப்போது கலந்துரையாடி, அவன் சொல்வதை மற்றவர்களுக்குச் சொல்லி, சுரபிக்கு அதற்கே நேரம் போதவில்லை. ஆனால் ரவீந்தரை பற்றி அந்தச் சில நாட்களில் நன்கு தெரிந்து கொண்டாள். சுரபிக்கு இருந்த சிலமாத பயிற்சியில் அவளால் சிறப்பாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பல தவறுகளைச் செய்தாள். ரவீந்தரும் சிலமுறை திரும்பச் சொல்லவேண்டி இருந்தது. ஆனால் அவன் ஒருமுறை கூடச் சலித்துக் கொள்ளாமல் அவளுக்குப் புரியும்படி மீண்டும் விளக்கினான். ஒரு வேலை சரியாக நடக்க வில்லை என்றால், யாருக்காக இருந்தாலும் கோபம் வரும். குறைந்தது ஒரு சலிப்பு வரும். அதை எப்படியும் மற்றவர்களிடமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காட்டிவிடுவது பலரின் இயல்பு. ஆனால் ரவீந்தர் ஒருபோதும் பொறுமையை இழந்ததில்லை. அவனிடமும் கேட்டாள். “நான் இத்தனை தவறுகள் செய்கிறேன். உங்களுக்குக் கோவமே வரவில்லையா?” “கோவம் வந்தால் நீ சரியாகச் செய்வாயா?” என்றான். “அப்படி இல்லை! ஆனால் நான் செய்யும் தவறுக்கு கோவம் வர வேண்டும்தானே!” “வரவில்லையே!” என்றான். நாட்கள் இயல்பாகச் சென்றது. சுரேந்திரனின் ஒரு சிறிய செயல் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்வரை. ரவீந்தரின் தந்தை தொடங்கிய ஆடையகத்தின் பொறுப்புகளைப் பானுமதி பெரும்பாலும் சுரேந்தரிடம் ஒப்படைத்து விட்டாள். மேற்பார்வை மற்றும் ஆலோசனை தருவது மட்டும் பானுமதி செய்யத் தொடங்கினாள். ரவீந்தரின் திருமணம் முடிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளை மூத்தமகனிடம் ஒப்படைத்தாள் பானுமதி. தீபாவளி சமயம் என்பதால் புது ஆடைகளைக் கொள்முதல் செய்து, விலை நிர்ணயிக்கும் வேலையை முழுதும் சுரேந்தர் பார்த்துக் கொண்டான். தள்ளுபடி, சலுகை என்று வியாபாரம் நன்றாகவே நடந்தது. நல்ல லாபமும் வந்தது. தலைத் தீபாவளி என்று சுரபியும் ரவீந்தரும் சென்னை சென்று விட்டார்கள். உடன் பானுமதியும். சுரபியின் குடும்பத்தில் அதிக நேரம் ரவீந்தர் செலவவிடுவது முதல் முறை. சுரபியைத் தவிர மற்ற மூவரும் எட்ட நிற்க, ரவீந்தரும் விலகியே இருந்தான். ஒரு அறையில் அவன் மடிக்கணினியுடன் அமர்ந்துகொள்வான். “இதற்குத் தான் இங்கே வந்தீர்களா? எல்லோரிடமும் பேசலாம் தானே?” என்றாள் சுரபி. “என்ன பேசுவது?” என்றான் ரவீந்தர். “இனி நான் எழுதித் தான் தர வேண்டும். எல்லோரிடமும் இயல்பாக இருங்கள்!” “அதை உன் அம்மா அப்பாவிடம் சொல்! ஏதோ பேய் பிசாசு வந்துவிட்டது என்று பயந்துகொண்டு இருக்கிறார்கள்.” “உங்கள்மேல் இருக்கும் மரியாதை! பயம் இல்லை. முதன் முதலில் மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்ற பதட்டம்!” “அதனால் தான் நான் எதுவும் பேசவில்லை! நான் பேசினால் அதற்கும் பயப்படலாம். இல்லை பதட்டப்படலாம்.” ஒரு வழியாக வினோத்திடம் கொஞ்சம் பேசினான் ரவீந்தர். அவனின் வேலை பற்றியும், நிறுவனத்தைப் பற்றியும் பேசினான். சென்னையில் சில நாட்கள் தங்கலாம் என்று பானுமதி வந்திருந்தாள். தலை தீபாவளியை முடித்துக்கொண்டு, எல்லோரும் தாமோதரன் வீட்டில் கூடினார்கள். சுரேந்தர் வித்யா தவிர எல்லோரும் இருந்தார்கள். பெரும்பாலும் பண்டிகை நேரங்களில் தங்கள் ஆடையகத்தில் தான் பானுமதி இருப்பாள். இந்த வருடம் மகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, பெற்றோர் வீட்டுக்கு வந்த பானுமதிக்கு இரண்டு நாள் கூட இருக்க முடியவில்லை. விற்று முடித்த ஆடைகள் பலவற்றில் குறை இருப்பதாக நிறைய புகார்கள் வர, மேலாளர் பானுமதியை அழைத்தார். அப்போது தான் பானுமதிக்கு தெரியவந்தது, சுரேந்தர் மனைவியுடன் வெளியே சென்றுவிட்டான் என்றும், அழைப்புகளைக் கூட ஏற்கவில்லை என்றும். முதலில் சில புகார்கள் என்று நினைத்த மேலாளர், ஒரே நாளில் பலர் அழைத்தது மட்டுமில்லாமல், கடையிலும் கூட்டம் அதிகரித்தது. எப்போதும் பண்டிகைக்குப் பின் ஆடைகளைத் திரும்பப்பெறுவதில்லை. முக்கியமாகத் தீபாவளிக்கு பின்பு. பட்டாசுகளால் சிறிய சேதங்களை இருக்கும். சுரேந்தர் இப்போது அதையே சொல்லிவிட்டான். ஆனால் நிறைய ஆடைகள் பழைய துணியில் செய்ததால், நிறைய இடங்களில் கிழிசல் என்று வந்திருந்தனர். மேலாளர் என்ன செய்வதென்று அழைத்தார். இங்கிருந்து பானுமதி என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. தந்தையிடம் புலம்பினாள். உடனே ஹைதராபாத் செல்ல ஏற்பாடுகளைச் செய்தாள். மகளின் பதட்டத்தை பார்த்து, ரவீந்தரை உடன் செல்லும்படி தாமோதரன் கேட்டார். “நான் சென்று அங்கே என்ன செய்ய முடியும்?” என்றான். “நான் அத்தையுடன் செல்கிறேன்!” என்றாள் சுரபி. “உனக்கு மட்டும் என்ன தெரியும்? சுரேந்தர் பார்த்துக்கொள்வான்.” என்றான் ரவீந்தர் மனைவியிடம். “எனக்கு ஒன்று தெரியாதுதான். குறைந்தது பயணத்தில் அத்தையுடன் இருப்பேன். நீங்கள் வர வேண்டாம்! நான் தானே செல்கிறேன்.” என்றாள். ஆனால் மூவரும் தான் சென்றார்கள். அடுத்த விமானத்தில் புறப்பட்டார்கள். செல்லும் முன் சுரேந்தருக்கு அழைத்தாள் பானுமதி. வித்யா தான் எடுத்தாள். " அவர் தூங்குகிறார் அத்தை! பிறகு அழைக்கச் சொல்கிறேன்." என்று வைத்துவிட்டாள். பானுமதிக்கு ஆத்திரம் வந்தது. மேலாளர் அழைப்பையும் ஏற்கவில்லை. பானுமதி அழைத்தபோது என்ன விஷயம் என்று கூடக் கேட்கவில்லை. நேரே கடைக்குதான் சென்றார்கள். கடையில் கூட்டம் அலைமோதியது. நேரே அலுவலகத்திற்கு சென்றார்கள். ரவீந்தர் அவனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டு தன் கைபேசியை பார்த்தவண்ணம் இருந்தான். மேலாளர் வந்து நிலவரத்தைச் சொன்னார். ஒரே நாளில் நூறுகணக்கான புகார்கள். எல்லோரும் ஆடைகளுக்கான பணத்தை திரும்பத் தரும்படி கேட்கிறார்கள். அதுவும் பண்டிகை முடிந்த அடுத்த நாளில். பானுமதி பேசிக்கொண்டிருந்தபோது, ரவீந்தர் மெல்ல எழுந்து சென்று விட்டான். “வரும் ஆடைகளை எல்லாம் சரி பார்ப்பது கடினம். முழு பணத்தை திரும்பத் தருவதனால், பெரும் நஷ்டம் வரும். அதுமட்டும் இல்லாமல். பழுது உள்ள ஆடைகளைத் தவிர பிற ஆடைகளையும் வேண்டாம் என்கிறார்கள்.” யோசித்துக் கொண்டிருந்தாள் பானுமதி. “திரும்பப் பெற்றால் பெரும் நஷ்டம். திரும்பப் பெறவில்லை என்ற பெயர் கெட்டுவிடும்.” என்றார் மேலாளர். “இப்போது நஷ்டத்தைப் பொருட்படுத்த முடியாது. முதலில் எந்த வகை ஆடைகளில் குறை என்று பாருங்கள். அந்த ஆடைகளை மட்டும் திரும்பப் பெறுவதாகச் சொல்லுங்கள். ரசீது இருந்தால் மட்டும்.” என்றாள் பானுமதி. முதலில் தயங்கிய மேலாளர் மெல்ல சொன்னார், “மேடம்! இப்போதே பணத்தை திரும்பத் தருவதனால், வங்கியில் இருப்பு குறைவாகத்தான் இருக்கிறது.” என்றார். “அது எப்படி? அதற்குள் குறையும்!” “இரண்டுநாட்களுக்கு முன் தான் ஒரு புது ஆடைகள் இறக்குமதி செய்ய, பணத்தை வேறு கணக்குக்கு மாற்றிவிட்டார் சுரேந்தர்.” என்றார். “அதற்குள் என்ன புது இறக்குமதி? என்னிடம் யாரும் சொல்லவில்லையே?” சரியாகச் சுரேந்தர் உள்ளே வந்தான். பின்னோடு ரவீந்தரும். “என்ன செய்துவைத்திருக்கிறாய்? கையில் பணம் சேர்ந்தவுடன் புது இறக்குமதியா? கடை வியாபாரத்தில் சிக்கல் என்றால் முதலில் பார்க்காமல் எங்கே சென்று தொலைந்தாய்!” பானுமதி உரத்த குரலில் பேச, “சுரபி! வெளியே இரு. சார் நீங்களும் !” என்று மேலாளர், சுரபி இருவரையும் அறையின் வெளியே இருக்கும்படி சொன்னான் ரவீந்தர். இருவரும் சென்றதும், “முதலில் நீ உட்கார்!” என்று அண்ணனுக்குச் சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தான். “இப்படி எல்லோர் முன்னும் கத்தினால் எல்லாம் சரியாகி விடுமா? அடுத்தது என்ன என்று பார்க்கலாம்.” என்று அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சுரேந்தர் பக்கம் திரும்பினான். “இதுவரை திரும்ப வந்தது எல்லாம் ஆயத்த ஆடைகள். அதுவும் ஆண்களுக்கான பிரிவிலும், குழந்தைகளுக்கான பிரிவிலும் தான். அதுவும் ஒரே நிறுவனத்திலிருந்து வந்தது. துணியின் தரம் சுமாராக இருக்கிறது. தையல் பிரிதல் அல்லது, பட்டாசு பொறியால் ஓட்டை என்றால் தட்டி களிக்கலாம். ஆனால் எல்லாம் கிழிகிறது. அதை எல்லாம் ஏற்கத்தான் வேண்டும். அந்த ஆடைகள் தயாரித்த நிறுவனத்தில் பேச வேண்டும். அவர்கள் பதில் வரும் வரை காத்திருக்க முடியாது. அதுவரை திரும்பிவரும் ஆடைகளை எந்தப் பரிசோதனையுமின்றி திரும்பிப் பெற வேண்டும். அதற்காகப் பணத்தை வழங்காமல் முதலில், நம் கடையிலிலேயே வேறு ஆடைகள் அதற்கு நிகராக வாங்கும் வசதியைச் செய்வதாகச் சொல்லுங்கள். அதற்கு வாடிக்கையாளர்களை முடிந்தளவு சம்மதிக்க வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பணத்தை திரும்பத் தர வேண்டும். இப்போதே இல்லை என்றாலும் இன்னும் ஓரிரு மாதத்தில் வேறு ஆடைகள் வாங்கிக்கொள்ளலாம் என்று தெளிவாகச் சொல்லலாம். ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்கவில்லை என்றால், அவர்களின் பிராண்ட் பெயரை ஏற்பதில்லை என்று சங்கத்தில் அறிவுறித்தினால், அவர்களும் பதில் சொல்லலாம். முடிந்த வரை நஷ்டஈடை அவர்களிடம் பெற வேண்டும். அதில் ஏதும் சிக்கல் என்றால் பிறகு பார்க்கலாம்.” என்றான். சுரேந்தர் கொஞ்சம் பயந்துதான் விட்டான். முதலில் அவன் வரவழைத்த ஆடைகள் எல்லாம் முதலில் விற்றது என்று பெருமிதம் கொண்டான். இப்போது அது மொத்தம் பிழை என்று திரும்பிவந்தது மட்டுமில்லாமல் இவன் முதலில் தனியே செய்யும் வியாபாரம் பெரும் நஷ்டம் என்று அவனுக்கு மேலும் கலக்கம். அன்னையிடம் அதிகம் வாதிடத் தைரியம் இல்லாமல் அமைதியாக இருக்க, “அதற்குள் உன்னை யார் புது ஆடைக்குப் பணம் செலுத்த சொன்னார்கள்?” என்றாள் பானுமதி. “ஆண்கள் பிரிவில் அதிக ஸ்டாக் இல்லை. இது ஒரு வெளிநாட்டு ஆர்டர்! விட்டால் வேறு கடைக்குச் சென்றுவிடும் என்று உடனே முன்பதிவு செய்தேன்.” “ஒன்றையே ஒழுங்காகச் செய்யவில்லை! இப்போது புதிதாக ஒன்று! அதில் என்ன தலைவலியோ?” என்றாள் பானுமதி. “ஒரு தவறு செய்தால் எப்போதும் தவறுதான் செய்வார்களா? முதலில் பொறுமையாக யோசியுங்கள். உங்கள் கோவத்தை எல்லாம் முதலில் கொட்டி, மற்றவரைக் காயப்படுத்திவிட்டு, பிறகு நீங்கள் என்ன செய்தாலும் கொட்டிய வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. இப்போதைக்கு இதை முடியுங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம்.” என்று அன்னையை அடக்கிவிட்டு, “நீ முதலில் அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசு. தளத்தில் உள்ள சூப்பர்வைசர்களுடன் ஒரு கூட்டம் போட்டு என்ன செய்ய வேண்டும் என்று இப்போதே பேசிவிடு. எதுவும் தேவை என்றால் சொல். இப்போது நான் கிளம்புகிறேன்.” என்று ரவீந்தர் புறப்பட்டுவிட்டான். ஆனால் இருந்த சிக்கலில் பானுமதிக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகி எழுந்திருக்கவே முடியாமல் படுத்துவிட்டாள். சுரேந்தரால் தனியே சமாளிக்க முடியாமல், ரவீந்தர் உதவியை நாடினான். ரவீந்தரும் தயங்காமல் செய்தான். பெரிய நஷ்டம் இல்லாமல், ஓரளவு மீண்டும் வியாபாரம் பெரிய சறுக்கல் இல்லாமல் தொடர்ந்தது. பானுமதி அப்போது தான் தெம்பானாள். அதுவரை சுரபியும் ரவீந்தரும் பானுமதியுடன் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். ரவீந்தர் அண்ணனுடன் இணைத்துச் செய்யப்பட்டவிதம் சுரபிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் எட்ட நிற்கும் ரவீந்தர், குடும்பத்தில் ஒரு சிக்கல் என்றால் முழு ஈடுபாட்டுடன் உதவி செய்தான். எப்போதும் கணவன் வீட்டில் மற்றவருடன் இணையாக இருக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டே பானுமதியின் வாழ்க்கை ஓடியது. கணவன் இருக்கும் வரை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எப்போதும் குறையை மட்டும் தேடும் சுற்றம் முன், பானுமதி பெரும் முயற்சிகளைக் கொண்டே இதுவரை தாக்குப் பிடித்தாள். இடையில் ரவீந்தரின் செயல் ஒரு தலைகுனிவைக் கொடுத்தது. வெறும் தொழில் நஷ்டம் என்பது மட்டுமில்லாமல், சாலினி இங்கே ரவீந்தருக்கு தீட்டிய வண்ணம், வெகு மோசமானது. தலைக்கனம் கொண்டு நஷ்டம் ஆகவிருக்கும் தொழிலைச் செய்தது மட்டுமில்லாமல், பிடிவாதத்தால் கிடைத்த வேலையை உதறிவிட்டு, தன்னைவிட உயரும் காதலியை ஏற்க முடியாமல் மீண்டும் ஊருக்கு ஓடிவந்தவன் என்ற பிம்பத்தைத் தெளிவாக உருவாக்கினாள். அதைப் பொய்யாக்க இன்று வரை பானுமதியால் முடியவில்லை. இன்று என்னதான் ரவீந்தர் சிறப்பாக விளங்கினாலும், பழைய பிம்பத்தை உறவினர் யாரும் மறக்கவில்லை. இப்போது சுரேந்தர் வேறு புது பிரச்சனையைக் கிளப்பி விட்டுவிட்டான் என்று கோவம். கோவம் என்று கூடச் சொல்ல முடியாது. பயம். இதை எப்படி சரிசெய்வது என்று பயம். ஆனால் ரவீந்தர் எப்படி அதைக் கையாண்டான் என்று பார்த்தபோது, பானுமதிக்குப் பெருமையாகவே இருந்தது. சுரபி தேர்வுக்குத் தயாராக அதிக நேரம் வீட்டிலிருந்தாள். சில நேரங்களில் மட்டுமே அலுவலகம் செல்வாள். வெகுநாட்களுக்குப் பின் ஒருநாள் அலுவலகம் சென்றவள், ரவீந்தர் அறையில் அமர்ந்திருந்தாள். ரவீந்தரின் இருக்கையில் அமர்ந்து தேவையான சில விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த சுரபி, அருகிலிருந்த தொலைபேசி ஒலி எழுப்ப எடுத்துப் பேசினாள். ரவீந்தரை பார்க்க ஒருவர் வந்திருப்பதாகவும், முன்னேற்பாடு எதுவும் இல்லை என்று சொல்லவும், ரவீந்தரிடம் கேட்டாள். அவனும் உள்ளே அனுப்பும்படி சொன்னவன், சுரபி செய்துகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு அவள் அருகில் தான் நின்றான். கதவைத் திறந்து உள்ளே வந்தவர்களைப் பார்த்து ரவீந்தருக்கு அதிர்ச்சி. ஒருவருக்குப் பதில் இருவர் வந்திருந்தார்கள். அந்த இரண்டாவது நபர் சாலினி. அவள் பெயரைச் சொன்னால் பார்க்க மாட்டான் என்று ஒரு நண்பன் பெயரை மட்டும் சொல்லி உள்ளே வந்திருந்தார்கள். “ஹலோ! எப்படி இருக்கிறாய்?” என்றான் புதியவன். சுரபி அப்போதுதான் இருவரையும் பார்த்தாள். “பைன்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்!” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினான். வந்தவர்கள் அமரவும், சுரபியை அறிமுகம் செய்துவைத்தான். “என்னுடன் லண்டனில் படித்தவர்கள் கிரண், சாலினி. இது என் மனைவி சுரபி!” இருவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, “நீங்கள் பேசுங்கள்! நான் குடிக்க எதாவது கொண்டுவருகிறேன்!” என்று வெளியே சென்றாள். ரவீந்தர் சுரபி செல்வதைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அலுவலகத்தில் எல்லோரும் கிளம்பிவிட்ட வேளையில், வருவோரைக் கவனிக்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற காரணத்தால், சுரபியே ஏதேனும் குடிக்க எடுத்துவர அறையை விட்டு வெளியே சென்றாள். “என்ன திடீரென்று! பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. வீட்டில் எல்லோரும் நலமா?” என்று சாலினியுடன் வந்திருந்த இன்னொரு நண்பன், கிரணிடம் பேசினான். “எல்லோரும் நலம். சாலினி வெகுநாட்களுக்குப் பின்னால் இந்தியா வருகிறாள். எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அதுதான். ஆனால் உன் திருமணத்தைக் கூட எங்களுக்குச் சொல்ல வில்லையே!” என்றான். “யாரும் சிலவருடங்களாக என்னுடன் தொடர்பில் இல்லை.” அதுவரை பேசாமல் இருந்த சாலினி பேசினாள், “பழியை எப்படி நம் மேல் திருப்பினான் பார். அதுதான் ரவி” என்றாள். ரவீந்தர் கோபத்தைக் காட்டாமல் கிரணைப் பற்றி விசாரித்தான். அதற்குள் சுரபி வந்துவிட்டாள். “உனக்கு வேண்டியதைச் சரிபார்த்து விட்டாயா? கணிப்பொறியை அணைத்துவிடவா?” என்றான் ரவீந்தர். “இல்லை! பாதியில் நிற்கிறது. வீட்டுக்குப் போய்ப் பார்த்துக் கொள்கிறேன்.” என்றாள் சுரபி. “கணவன் மனைவி இருவரும் தொழிலைப் பார்த்துக் கொள்கிறீர்கள் போல! ரவி சொல்வதை அப்படியே செய்துவிடுவீர்கள் தானே! இல்லை என்றால் ரவிக்கு கோவம் வருமே!” என்றாள் சாலினி. மற்ற மூவரின் முகமும் மாறியது. முதல் முறை பார்க்கும்போதே அவள் கணவனைப் பற்றிக் குறை கூறுகிறாள் என்று சுரபிக்கும், சாலினியின் தவறான புரிதலை மனைவிக்குச் சொல்கிறாளே என்று ரவீந்தருக்கும், ரவீந்தர் சாலினியின் முன்னாள் விஷயங்கள் அறிந்த கிரணுக்கு சாலினியின் பேச்சு அதிகப்படி என்றும் தோன்றியது. ஆண்கள் இருவரும் அமைதியாக இருக்க, சுரபி சொல்லிவிட்டாள். “மற்றவர்களிடம் அவர் கோவித்துக்கொள்ளலாம்! என்னிடம் இல்லை.” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, ஷாலினியை பார்த்து, “நீங்கள் தவறுகள் செய்து என் கணவரிடம் நிறைய பேச்சு கேட்டிருக்கிறீர்களா?” என்றாள். ஷாலினியின் முகம் இப்போது இருண்டு விட்டது. எதையும் கவனியாதவன் போல். “அப்படியே கிளம்புவோமா!” என்றான் ரவீந்தர். “சாலினிக்கு ஒரு உதவி வேண்டும் என்றாள். உனக்கு நேரம் இருக்கும்போது சொல்! நாம் பேசலாம்” என்றான் கிரண். “அவளுக்கு நான் என்ன உதவி செய்துவிட முடியும்?” என்று எழுந்தவன், “என்னால் ஏதும் முடியும் என்று நீங்கள் நம்பினால், வார இறுதியில் பேசலாம்!” என்றான். ‘நான் கிளம்ப வேண்டும்’ என்று சொல்லாமல் சொன்னான். அதன் பின் அவர்கள் அமர்ந்திருக்க வில்லை. பகுதி - 12 வீடுவரும் வரை சுரபி, புதிதாக வந்த ரவீந்தரின் நண்பர்கள்பற்றித் தான் யோசித்துக்கொண்டிருந்தாள். இவர்கள் தான் ரவீந்தரின் பழைய கூட்டாளிகளோ! இவர்கள் தான் ரவீந்தரை ஏமாற்றி விட்டார்களோ? ஏமாற்றியவர்கள் எப்படி நண்பர்களாக இருக்க முடியும். அப்படி ஏமாற்றியவர்களைச் சந்திக்க ரவீந்தர் ஏன் சம்மதித்தான்? அதுவும் அந்தச் சாலினி. அவளின் பேச்சு சுரபிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளுக்கு ரவீந்தரை நன்கு தெரியும் என்பது போல் பேசியது இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது. அவள் முன்னாளில் ரவீந்தருடன் படித்திருக்கலாம். சுரபியை விட ரவீந்தருடன் அதிக நாள் நட்பாக இருந்திருக்கலாம். அதற்காக அதை இப்போது பறை சாற்ற வேண்டுமா? அதுவும் முதல் முறை பார்க்கும்போது. சரியாக ரவீந்தர் இறங்க, பெரும் சத்தத்துடன் காரின் கதவைச் சுரபி சாத்தினாள். அதுவரை வேறு யோசைனையில் மூழ்கி இருந்த ரவீந்தர், சுரபியை பார்த்து, “யார் மேல் கோபம்? அதற்குக் கார் என்ன செய்யும்!” என்றான். “வேறு யார் மேல் கோபம்! உங்கள் மேல்தான். உங்களிடம் காட்டாமல் காரிடம் காட்டுகிறேன்.” என்று வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டினுள் சென்றதும், “நான் என்ன செய்தேன்?” “இன்று வந்தவர்கள், உங்கள் லண்டன் நண்பர்கள் தானே. உங்களை ஏய்த்தவர்கள் தானே!” என்றாள். சுரபியின் முகத்தைப் பார்த்தான். ஷாலினியின் வரவைச் சுரபி தப்பாக நினைத்துவிட்டாளோ! அவன் பேசாமல் இருக்க, “அப்போது என் கணிப்பு சரிதான். அவர்களை ஏன் உள்ளே அனுமதித்தீர்கள்! பார்க்க முடியாது என்று முன்பே சொல்லிருக்கலாமே!” என்றாள். ரவீந்தரின் முகத்தில் இருக்கும் உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்றே நிதானித்து, “மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களுக்குச் சொல்லக் கூடாது! உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அப்படியே செய்யுங்கள்” என்று அங்கிருந்து நகர்ந்தாள். சுரபி, முன்பு பானுமதி விஷயத்தில் ரவீந்தர் ‘எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னதை நினைத்து விலகிச் சென்றாள். ரவீந்தர் வேறு நினைத்தான். சாலினி அவனின் முன்னாள் காதலி என்று சுரபிக்கு ஒரு பாதுகாப்பின்மை என்று எண்ணினான். மெதுவாக அவளிடம் சென்று, “நீ என்னிடம் எது வேண்டுமாலும் சொல்லலாம் சுரபி! உனக்கு என்னிடம் எல்லா உரிமையும் இருக்கிறது! கிரண் உடன் படித்தவன். அவன் என்னுடன் தொழில் செய்யவில்லை. சாலினியும் வேறு இருவரும் தான் என்னுடன் இருந்தார்கள். சாலினி கிரணுடன் வந்தது எனக்குத் தெரியாது. நீ தேவை இல்லாமல் கவலை படாதே!” “அவர்கள் உங்கள் நிம்மதியை கெடுக்கவில்லை என்றால் சரி!” “அப்படி எல்லாம் ஆகாது! நீ தேவை இல்லாமல் யோசிக்காதே!” சுரபியை புண்படுத்திவிடக் கூடாது என்று ரவீந்தர் எண்ணினான். அவன் மட்டும் எண்ணினால் போதுமா? ரவீந்தருக்கு எண்ணம் முழுவதும் சுரபியைப் பற்றித்தான். வார இறுதியில் சாலினியை அழைத்துக் கொண்டு மீண்டும் நண்பன் வருவதாகத் தெரிவித்தான். வெளியே ஒரு உணவு விடுதியில் சந்தித்தனர். சாலினி தான் இம்முறை பேசினாள். “நான் புதிதாக இங்கே ஒரு தொழிலைத் தொடங்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அதற்குச் சில முதலீட்டாளர்களைச் சந்தித்தேன். எதுவும் சரியாக வரவில்லை. அதனால் உனக்குத் தெரிந்த சிலரின் அறிமுகம் தேவை.” என்றாள். “என் வாடிக்கையாளர்களை உன் பக்கம் இழுக்க என்னிடம் யோசனை கேட்கிறாய்? பலே!” என்றான் ரவீந்தர். “உன் வாடிக்கையாளர்களைக் கேட்கவில்லை! உனக்குத் தெரிந்தவர்கள் வேறு யாராவது…” என்று சொல்லிமுடிக்கும் முன், “சாலினி! இது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறாய்? உனக்கு அறிமுகம் செய்பவர் என்னை நம்பி உன்னிடம் முதலீடு செய்வார் என்று வைத்துக் கொள்ளலாம். பின்னாளில் சிக்கல் என்றால், உன் தொழில் மட்டும் பாதிக்காது, என்னுடையதும் தான் பாதிக்கும்.” “ரவி! எனக்கு இப்போது வேலை இல்லை. நிறைய கமிட்மென்ட் இருக்கிறது. உன்னிடம் உதவி கேட்கிறேன். நீ வியாபாரம் பேசுகிறாய்?” என்றாள் சாலினி. லண்டனில் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட சாலினிக்கு, இப்போது பணத் தட்டுப்பாடு. அவள் வேலையையும் இழந்துவிட்டாகச் சொன்னாள். வருமானத்தைப் பெருக்க சில நண்பர்களின் உதவியை நாடினாள். ரவீந்தர் அந்த வரிசையில் கடைசி எனலாம். இப்போது ரவீந்தரும் முடியாது என்று சொல்லிவிட்டால், அவள் புதிய தொழில் தொடங்குவதே சிக்கல் என்று ஆகிவிடும். அவளின் நிலையை அறிந்து, சற்றே கவலை கொண்டாலும், அவளுக்கு உதவி செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள ரவீந்தர் தயாராக இல்லை. முற்றிலும் மறுக்கவும் முடியாமல், சில செல்வந்தர்களின் தொடர்பு எண்ணை மட்டும் கொடுத்தான். நேரடி அறிமுகம் செய்ய முடியாது என்று விட்டான். சாலினியை சந்தித்ததையோ, அவளுக்குச் செய்த உதவியையோ சுரபியிடம் சொல்ல வில்லை. ரவீந்தரின் உதவி ஷாலினிக்கு பயனுள்ளதாக இருக்க, அவனுக்கு நன்றி தெரிவிக்க அவனின் வீட்டுக்குச் சென்றாள். அதாவது பானுமதியின் வீட்டிற்கு. சில பழங்கள், இனிப்புகளையும் வாங்கி கொண்டு ஷாலினி சென்ற நேரம் வித்யா மட்டும் தான் வீட்டிலிருந்தாள். இருவருக்கும் அறிமுகம் தேவை இருக்கவில்லை. முதலில் சாலினியை கண்டதும், ‘இவள் எதற்கு இங்கே வருகிறாள்?’ என்று பேசாமல் அவள் முன்னே சென்று நிற்க, “நான் சாலினி! மறந்து விட்டீர்களா? லண்டனிலிருந்து…” என்று சொன்னவளைத் தடுத்து, “உன்னை இந்த வீட்டில் யாரும் மறக்க மாட்டார்கள். என்ன விஷயமாக இங்கே வந்தாய்?” என்றாள் வித்யா. “ரவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று வந்தேன்! ரவி எங்கே?” “ரவியா? அவர் அவர் வீட்டில் இருப்பார்! அவருக்கு நீ எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? அவனைப் பற்றி நீ தானே சில ஆண்டுகள் முன் வந்து என்னென்னவோ சொன்னாய்! இப்போது என்ன?” “எங்கள் இருவருக்கும் ஒத்து வரவில்லை. பிரிந்துவிட்டோம்! அவ்வளவுதான்! அதை எல்லாம் பெரிது படுத்தாமல் எனக்கு ஒன்று என்றதும், ரவி உதவி செய்தான். அதனால் தான் நேரில் நன்றி சொல்லலாம் என்று வந்தேன். அலுவலத்தில் இல்லை. அதனால் தான் இங்கே வந்தேன். இன்னும் இரண்டு மூன்று நாளில் மீண்டும் லண்டன் செல்கிறேன்!” என்றாள். அதுவரை வந்தவளை அமரக்கூடச் சொல்லவில்லை வித்யா. வித்யா பதில் ஏதும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, “ரவி இங்கே இல்லையா?” சரியாகப் பானுமதி உள்ளே வர, “நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்றாள். விஷயத்தைச் சொல்லவும், “நீ கிளம்பலாம்! நான் ரவியிடம் சொல்லிக் கொள்கிறேன்.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். சாலினி சென்றதும், “இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? ஏதோ ஒன்றை இழுத்து வைத்துக் கொண்டு என் நிம்மதியைக் கெடுக்கிறான்.” என்று புலம்பினாள். பானுமதி தொலைபேசியில் அழைத்தபோது வழக்கம்போல் அவன் அழைப்பை ஏற்கவில்லை. நேரில் செல்லலாம் என்றபோது சுரேந்தர் தடுத்துவிட்டான். “இப்போது வீட்டுக்குச் சென்றால் சுரபி முன் என்ன பேசுவது! நாளை அவன் அலுவலகத்தில் சென்று சந்திப்போம்!” என்றான் சுரேந்தர். “அதுவும் சரிதான்! நாளைக் காலை செல்கிறேன்” என்று பானுமதி சொல்ல, “சரி நானும் வருகிறேன்!” என்றான் சுரேந்தர். ரவீந்தரை பற்றி அலட்சியமாகப் பலமுறை நினைத்துப் பேசி இருந்தாலும், சுரேந்தர் தொழிலில் ஒரு சிக்கல் என்றதும், ரவீந்தர் முன்வந்து உதவி செய்தது சுரேந்தர் மனதைக் கொஞ்சம் மாற்றியது. மனைவியிடம் பலமுறை தம்பியைப் பற்றிக் குறைத்துப் பேசியிருக்கிறான். அவன் தோல்வியைச் சுட்டிக்காட்டிப் பேசி இருக்கிறான். ஆனால் பானுமதி, சுரபி மற்றும் மேலாளர் முன், சுரேந்தரை ஒரு சொல் கடுமையாகப் பேசியவுடன், தடுத்தது மட்டுமில்லாமல், உடனே மனைவியை வெளியே இருக்கும்படி சொன்னான். அன்னையை எப்படிச் சமாளிப்பது என்று பயந்து கொண்டிருந்தவன், தம்பி மனைவி முன் அசிங்கப்பட வேண்டுமே என்று மேலும் கலங்கிக் கொண்டிருந்தான். இரண்டிலிருந்தும் காப்பாற்றியது மட்டுமில்லாமல், தொழில் சிக்கலிலிருந்து வெளி வர அவனால் முடிந்ததை எல்லாம் செய்தான். இப்போது தம்பிக்காக ஒரு சிறு அறிவுரை வழங்க அன்னை செல்கிறாள் என்றாலே இருவருக்கும் சண்டையில் தான் முடியும். அதைத் தடுக்க சுரேந்தரும் உடன் செல்லலாம் என்று நினைத்தான். சுரபி வீட்டில் இருப்பாள் என்று நினைத்துப் பானுமதியும் சுரேந்தரும் ரவீந்தர் அலுவலகத்திற்குச் சென்றனர். “உன்னிடம் பேச வேண்டும்!” என்றாள் பானுமதி ரவீந்தரை பார்த்து. “என்ன பேச வேண்டும்?” “உனக்கு மூளை இருக்கிறதா? சாலினியுடன் உனக்கு என்ன சம்பந்தம்? அவளால் நீ பட்டது போதாதா? இப்போது என்ன திடீர் சகவாசம்? சுரபிக்குத் தெரியுமா? அவளைப் பற்றி நீ யோசித்தாயா?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “இப்போது என்ன நடந்தது என்று இப்படிக் கத்துகிறீர்கள்? உங்களுக்கு யார் சொன்னது?” “சாலினி நேற்று வீட்டுக்கு வந்திருந்தாள். உனக்கு நன்றி சொல்ல வேண்டுமாம். அவளுக்கு நீ ஏன் உதவி செய்தாய்? அவளை முதலில் ஏன் சந்தித்தாய்?” “நான் சந்திக்கவில்லை. அவளாக வந்தாள்! உதவி கேட்டாள், செய்தேன்” “அவள், உன்னைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாள் என்று மறந்து விட்டாயா? நம் உறவினர்கள் எல்லோரும் என்னவெல்லாம் பேசினார்கள்! எல்லாம் அவளால்! அவளுக்கு உதவி செய்தாய் என்றால், நான் என்ன நினைப்பது. உனக்கு மனைவி என்று ஒருத்தி வீட்டில் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே! பழைய காதலை எண்ணி சுரபியை” என்று பானுமதி பேசிக்கொண்டிருக்க, “அம்மா! போதும்! என்னிடம் விளக்கம் கேட்காமல், நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்தால், நான் என்ன செய்வது! நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை. சாலினி என்ன செய்தாள் என்று மறக்கவில்லை! ஒரு உதவி செய்ததால், அவளை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்படிச் சொல்ல முடிகிறது! ஒருமுறையேனும் என்னைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா?” “ரவி! அவளை வீட்டில் பார்த்தபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” “நீங்கள் தேவை இல்லாமல் பயப்பட வேண்டாம்! சுரபியை நான் காயப்படுத்திவிட மாட்டேன்!” “சுரபிக்கு சாலினியைப் பற்றி நீ சொன்னாயா?” என்றாள் பானுமதி. “நான் என்ன சொல்வது? நீங்கள் தான் சொல்லி விட்டீர்களே! அவளுக்குத் தெரிந்திருந்தது! இங்கே என்னைப் பார்க்க சாலினி வந்தபோது, சுரபியும் இங்கே தான் இருந்தாள். சுரபி பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவள் புரிந்து கொள்வாள்.” என்றவன் ஒரு சிறிய இடைவெளி விட்டு, “ஆனால் சுரபிக்கு நான் ஷாலினிக்கு உதவி செய்தது பற்றித் தெரியாது! தேவை இல்லாமல் மனதைக் குழப்பிக் கொள்வாளோ என்று சொல்ல வில்லை. மற்றப்படி வேறு எதுவும் இல்லை.” என்றான். “ஓ! சுரபிக்குத் தெரியுமா?” என்றான் சுரேந்தர். ரவீந்தர் குழப்பத்துடன், “முன்பே எல்லாவற்றையும் சொல்லித்தானே, பெண் கேட்டிருப்பீர்கள்!” என்றான். “ஆர்த்தி விஷயத்தில் நான் அப்படித்தான் செய்தேன்! ஆனால் சுரபி வீட்டில் நான் பேசவில்லையே! மாமாவும் தாத்தாவும் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது! உன் திருமணம் நடந்தால் போதும் என்று நினைத்தேன்!” என்றாள் பானுமதி. “ஆனால் சுரபிக்கு ஷாலினி பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.” என்று யோசித்தவன், “மாமாவிடம் பேசுகிறேன்” என்று தொலைப்பேசியை எடுத்தான். “இப்போது தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்! உங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கும்போது, கடந்தகாலம் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்! விடு.” என்றான் சுரேந்தர். சில நொடிகள் மௌனமாக அண்ணனைப் பார்த்தான். “என் மனைவிக்கு என் கடந்த காலம்பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.” “நீ தானே சொன்னாய்! சுரபி புரிந்துகொள்வாள் என்று! ஒரு வேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம். நீ தேவை இல்லாமல் குழம்பாதே. ஒருவேளை தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நீ சொல்லிப் புரியவை. சொல்லாமல் விட்டால் கூட அவளுக்குத் தெரியப் போவதில்லை. இனி வரும் நாட்களில் நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று மட்டும் யோசி.” என்றான் சுரேந்தர். ரவீந்தர் கண்களில் ஒரு சோகம் படர்ந்தது. அன்னையும் சகோதரனும் என்ன சமாதானம் சொன்னாலும் ரவீந்திரனுக்கு மனதில் ஒரு பெரும் பாரம் கூடியது. முதல் காதலை மறைத்துப் புது வாழ்க்கை வாழும் எல்லோரும் ஏமாற்றும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. தனக்கென்று வந்த புதுத் துணைக்கு ஒரு மனக்குழப்பத்தையோ இல்லை ஒரு ஏமாற்றத்தையோ தந்து விடக் கூடாது என்ற நினைத்து தான் சொல்லாமல் இருப்பார்கள். ரவீந்திரனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தோன்றியது, அவனால் சுரபியிடம் எல்லாவற்றையும் சொல்லாமல் நிம்மதியாக இருக்க முடியாது. ஒரு உண்மையை மனைவியிடம் மறைக்க ரவீந்தருக்கு மனமில்லை. இப்போதே சுரபிக்கு அவன் தகுந்தவன் இல்லை என்று அவ்வப்போது தோன்றுகிறது. ஒரு பொய்யில் வாழ்ந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதி இருக்காது. சுரபியிடம் நிச்சயம் சொல்ல வேண்டும். அது எப்போது? அதன் பின் என்ன? ஒருவேளை சுரபி அவனை விட்டுச் சென்றுவிட்டால். ஆர்த்தி சென்று விட்டபோது இந்தப் பதட்டம் அவனுக்குள் இல்லை. ஆனால் சுரபி விலகினால்? என்ற நினைப்பு அவனை வதைத்தது. திருமணம் முடிந்து இந்த ஆறு மாதத்தில், சுரபி அவன் வாழ்வில் முக்கியமானவளாகிப் போனாள். இல்லை சுரபி தான் அவன் வாழ்வு. பகுதி - 13 எப்போதும் சுரபியுடன் போட்டி போடும் வித்யாவுக்கு, இப்போது சுரபியை எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக சாலினியை பற்றி. மனிதனின் மனம் குரங்கு என்பார்களே! இப்போது ரவீந்தர் மனம் இன்னொன்றுக்குத் தாவிச் செல்ல நிறைய வாய்ப்பு இருக்கிறது. சுரபியை நாடிச் சென்றாள். புத்தகமும் கையுமாக வித்யாவை வரவேற்ற சுரபி, மனதில் இப்போது எதற்கு வித்யா இங்கே வந்தாள்? என்ற ஒரு சலிப்பு இருந்தது. சந்திக்கும் போதெல்லாம் நான், நான் என்று பேசிக் கொல்வாளே! “எப்படி இருக்கிறாய் சுரபி!” “நான் நன்றாக இருக்கிறேன்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். வீட்டில் எல்லோரும் நலமா?” “ஹ்ம்ம்! ஏதோ அந்நியரிடம் கேட்பதுபோல் கேட்கிறாய்! எங்களை விடு, அத்தை உனக்கு மாமியார்! அவரைப் பற்றிக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா?” என்று ஒரு சலிப்பைக் காட்டினாள் வித்யா. சுரபி புத்தகத்தைக் கையில் எடுக்க, “இப்போது என்ன படித்துக் கிழிக்கப்போகிறாய்? முதலில் குடும்பத்தைக் கவனி! அதை விட்டுவிட்டுப் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” வித்யா இப்போதும் குறைகூறத்தான் வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும், சுரபி பொறுமை இழந்தாள். முதலில் மாமியாரைக் கண்டுகொள்ளவில்லை என்றாள். இப்போது சுரபியின் மேல் படிப்பை எதற்குக் குறை சொல்ல வேண்டும். “நான் படிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிட்டது. ரவி என் படிப்பை ஆதரிக்கும்போது, மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன வந்தது!” வித்யா மனதில் என்ன ஓடியது என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். “அதுதானே! நல்லது சொல்ல வந்தால் இப்படித்தான் ஆகும். மற்றவராமே! உன் படிப்பை ஆதரிக்கிறானா? உன்னைப் படிக்கச் சொல்லிவிட்டு முன்னாள் காதலி பின்னால் சுற்றுகிறான். அதைப் பற்றி எச்சரிக்கலாம் என்று வந்தேன். எனக்குத் தேவை தான்.” “நீங்கள் தேவை இல்லாமல் பேசுகிறீர்கள்! தேவை இல்லாமல் எங்கள் மத்தியில் ஏன் குழப்பத்தை விளைவிக்கிறீர்கள்? எனக்கு அவரைப் பற்றித் தெரியும்.” “நான் தேவை இல்லாமல் பேசவில்லை! உனக்கு என்ன தெரியும்? ரவீந்தரின் முன்னாள் காதல் பற்றித் தெரியுமா? அவளைப் பிரிந்து வந்து தேவதாஸாகச் சுற்றியது தெரியுமா?” ஒருவேளை ஆர்த்தியைப் பற்றிச் சொல்கிறாளா என்று யோசித்த சுரபி, அடுத்த கணம் இல்லை என்று தெளிந்தாள். இப்போது யார் என்று கேட்டால், வித்யா இன்னும் என்னவெல்லாம் சொல்வாளோ? அப்படிக் கேட்டால் ரவீந்தர் சுரபியிடம் மறைத்ததை ஒப்புக்கொண்டதுபோல் இருக்கும் என்று, “எனக்குத் தெரியும்!” என்றாள். வித்யா விடுவதாக இல்லை. “ஓ! தெரியுமா! அவளுடன் இப்போது சுற்றுவது தெரியுமா?” கணவன் ஒருவேளை அவளைச் சந்தித்திருக்கலாம். அதைப் பெரிது படுத்தக் கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். “’நீ வேண்டாம்’ என்று உதறி விட்டுச் சென்றவளுக்கு இப்போது எதற்கு உதவ வேண்டும்! உன் அருமை கணவர் அதைத் தான் செய்திருக்கிறார். அந்தச் சாலினி வீடுவரை வந்து நன்றி சொல்கிறாள்! யாருக்குத் தெரியும் திருமணம் ஆனதை கூட அவளிடம் மறைத்திருக்கலாம்.” சாலினியா! அவள் தோழி என்றல்லவா நினைத்திருந்தாள்! தலை சுற்றுவது போல் இருந்தது. மெல்ல நிதானித்து, “சாலினியை அறிமுகம் செய்து வைத்தார்! நாங்கள் சந்தித்திருக்கிறோம்” என்றாள் சுரபி. “நன்றாகச் சமாளிக்கிறாய்! உன் முகமே உண்மையைச் சொல்கிறது! உன்னை எச்சரிக்கை செய்யத்தான் வந்தேன்! சாலினியுடன் நீ போட்டி போட முடியாது! தகுதி, படிப்பு, அழகு எதிலும். சாலினி தான் ரவீந்தருக்கு பொருத்தமானவள் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். அவள் தான் ரவீந்தரை நிராகரித்து விட்டாள். ஒருவேளை அவள் இன்று ரவீந்தருடன் மீண்டும் பழகினால் உனக்குத் தான் ஆபத்து. பார்த்து நடந்துகொள்!” என்று கிளம்பிச் சென்றுவிட்டாள் வித்யா. சுரபி வெகுநேரம் அமர்ந்திருந்தாள். தாமோதரன் வந்து பெண் கேட்டதிலிருந்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். கமலம் கூட ரவீந்தரின் லண்டன் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டபோது தடுமாறினார். பானுமதி அடிக்கடி மகனின் நடவடிக்கைபற்றிச் சந்தேகப்பட்டாள். ரவீந்தரின் காதல் ஊரறிந்த ரகசியம்! சுரபிக்கு மட்டும் தெரியவில்லை. சுரபியின் பெற்றோருக்குத் தெரியுமா? ஒருவேளை தந்தைக்கு மட்டும் தெரியுமா? தாமோதரன் தாத்தா ஏன் சொல்லவில்லை? ஒரு வேளை பேரனின் திருமணம் நடந்தால் போதும் என்று எல்லாவற்றையும் மறைத்து விட்டாரா? இல்லை தந்தை தான் இதை அவளிடமிருந்து மறைத்துவிட்டாரா? எல்லோர் மேலும் சந்தேகம் எழுந்தது. இந்தச் சில மாதங்களில் ரவீந்தர் பல விஷயங்களை அவளுடன் பகிர்ந்தான். அவனின் பள்ளி வாழ்க்கை, தந்தையைப் பற்றி, அவரின் இழப்பைப் பற்றி, கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள். ஆனால் அவன் லண்டனிலிருந்தது பற்றிய கதைகள் ஒருமுறை கூடச் சொன்னதில்லை. பாட்டி கமலா கூடத் தொழில் தோல்விபற்றி மட்டும்தான் சொன்னார். ஒருவேளை உண்மையைச் சொன்னால், சுரபி திருமண வாழ்வை மறுத்துவிடுவாள் என்று எண்ணி விட்டார்களா? ஒருவேளை சொல்லிருந்தால், சுரபி என்ன செய்திருப்பாள் என்று யோசித்தாள். எதுவும் செய்திருக்க மாட்டாள் தான். ஒரு காதல் தோல்வியால் ஒருவரை வெறுக்கும் அளவுக்குச் சுரபி பக்குவமற்றவள் இல்லை. அவள் அவளுக்கான முடிவை எடுக்கவில்லை. அப்பா சொன்னார். தாத்தா கேட்டார். அவர்களை இருவர் மீதும் நம்பிக்கை இருந்தது. அவர்கள் அவளுக்காக ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்தால், அதில் பிழை இருக்காது என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பினாள். ரவீந்தரை அவள் விரும்பித் திருமணம் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு ரவீந்தரை பிடிக்கவில்லை. அவனின் தோற்றம், பேச்சு, நடவடிக்கை எதுவும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அவனிடம் எதுவும் மாறவில்லை. சுரபியிடம் தான் மாற்றம். வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று இந்தச் சில மாதங்களில் புரிந்து கொண்டிருந்தாள். ரவீந்தர் அவளுக்காக என்னவெல்லாம் செய்தான் என்று யோசித்துப் பார்த்தாள். மனைவி தினமும் தனக்காகப் பணிவிடை செய்துகொண்டு அவள் விருப்பங்களை எல்லாம் விட்டுக்கொடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒருவேளை அவளிடம் எந்த ஈர்ப்பும் இல்லை என்பதால் தான் எதிர்பார்ப்பும் இல்லையா? ஆனால் அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொன்னானே! நன்றாகவே பழகினானே! எப்போதும் அவளை அருகில் வைத்துக்கொள்ளத்தான் நினைத்தான். படிப்பதற்கு என்று வீட்டில் இருப்பதாகச் சொன்னாலும், பலநாள் அவளை அவனுடன் அழைத்துச் சென்றுவிடுவான். அலுவலகத்தில் அவன் அறையிலிருந்து படிக்கச் சொன்னான். அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ஒரு வேளை சாலினியைப் பார்க்கவில்லை என்றால் எல்லாம் இயல்பாக இருந்திருக்குமோ? மனதில் பல கேள்விகள். அவளைச் சுற்றி இருள் பரவியது கூடத் தெரியவில்லை. தொலைபேசி ஒலிக்கச் சுற்றும் பார்த்தாள். மெதுவாக எழுந்து சென்று மின் விளக்குகளைப் போட்டுவிட்டு, வருவதற்குள் தொலைபேசி ஒலி நின்றது. அவள் நகரும்போது மீண்டும் ஒலித்தது. சென்னையிலிருந்து அழைப்பு. தாமோதரன் கமலாவின் சதாபிஷேகம் நடத்தத் திட்டமிடுவதாகவும், மறுநாள் எல்லோரும் ஹைதராபாத் வருவதாகவும் சொன்னார்கள். மறுநாள் பானுமதி வீட்டில் கூட்டம் போட்டார்கள். சென்னையில் கோவிலில் வைத்து விழாவை ஏற்பாடு செய்யலாம் என்று முடிவானது. எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, ரவீந்தர், சுரபி மட்டும் இதில் எதிலும் கவனம் இல்லாமல், உழன்று கொண்டிருந்தனர். இரண்டு நாட்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க, இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாகத் தோன்றியது. சதாபிஷேக விழாவிற்கு எல்லோரும் கொள்முதல் என்று அவ்வப்போது சுற்றினாலும், சுரபி எதிலும் கலந்துகொள்ளவில்லை. ரவீந்தரும் தான். ஒருமுறை பெற்றோரிடம் பேசிப்பார்க்கலாமா? என்று யோசித்தாள் சுரபி. ஆனால் வினோத் சொன்னது நினைவு வந்தது. ஒரு வேளை வீட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால், இப்போது சுரபி சொல்வதால் அவர்கள் நிம்மதி கெட்டுவிடும். என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள். ரவீந்திரன் செயல்களில் மாற்றம் இருக்கிறதா என்று முதலில் கண்காணிக்கத் திட்டமிட்டாள். அதன்பின் முடிவெடுக்கலாம் என்று யோசித்தாள். விடை சில நாட்களிலேயே கிடைத்தது. சுரபியிடம் அவன் அதிகப்படி ஒதுக்கம் காட்டினான். நாள் முழுவதும் இரண்டு மூன்று வாக்கியங்கள் பேசினால் அதிகம். காலையில் செல்பவன், மாலை வெகுதாமதமாக வந்தான். முகத்தில் ஒரு இருள். அவன் முகத்தை ஆராய்ந்ததில் சுரபிக்கு பதில் கிடைத்தது. எல்லாவற்றையும் மறக்க முயற்சி செய்திருக்கிறான் ரவீந்தர். ஆனால் சாலினியை பார்த்ததும் மீண்டும் மனம் அவளை நினைக்கத் தொடங்கிவிட்டது. சுரபியிடம் சொல்லத் தயங்குகிறான் என்று நினைத்தாள். வெகுவாக யோசித்து முடிவெடுத்தாள். ரவீந்தரை எண்ணி அவள் எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது. மேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வைச் சரியாக எழுத வேண்டும். சென்னை கல்லூரியில் சேர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று விட வேண்டும். எல்லாம் செய்யலாம். ஆனால் பெற்றோர் என்ன சொல்வார்கள்? அவர்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணி வருந்துவார்களா? அதையும் இல்லாமல் செய்ய வேண்டும். சுரபி தான் ரவீந்தரை விட்டு விலகிவிட்டாள் என்றால் பெற்றோர் வருந்தமாட்டார்கள். என்ன மடத்தனம்? மகளின் வாழ்க்கை வீணானது என்றால் எப்படி வருந்தாமல் இருப்பார்கள். இப்படி மனதில் ஆயிரம் விஷயங்கள் மனதிலிருந்தால் எப்படிப் படிப்பாள்? தேர்வு நேரம் நெருங்கி விட்டது என்று எந்நேரமும் புத்தகமும் கையுமாகச் சுற்றினாள். எப்படியாவது மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி தினமும் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு சென்றால், ஒன்று அவள் படிக்கிறேன் என்று சொல்வாள். இல்லை சோர்வு என்று படுத்துவிடுவாள். தேர்வுக்கு முன் எதையும் சொல்லி அவளைக் கலங்கடிக்க வேண்டாம் என்று இருந்தான். எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து, சுரபி அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று புரியவைக்க வேண்டும் என்று நினைத்தான். அதன் முன் சகஜமாகப் பேச முடியாது என்று நினைத்தான். ஒரே வீட்டுக்குள் இருந்துகொண்டு அதிகநேரம் பேசாமல் இருப்பதுவும் அவனால் முடியவில்லை. அதனாலேயே வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டான். இருவரும் அவரவர் மனப் போராட்டத்தில் இருந்தார்கள். தாமோதரன் கமலா சதாபிஷேக விழா ஏற்பாடுகளைக் கவனிக்க, பானுமதி சில நாட்களுக்கு முன் செல்ல, சுரபியையும் வித்யாவையும் உடன் அழைத்துச் சென்றாள். வித்யாவுடன் அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்க மனமின்றி பெரியவர்களுடன் இல்லாமல், அர்ஜுன் அனுவுடன் இருந்தாள். திருமணத்திற்கு முன்தினம் சென்னை வந்த ரவீந்தர், சுரபியைத்தான் தேடினான். இருவரும் இந்த நாட்களில் பேசிக்கொள்ளவில்லை. தொலைபேசியில் கூட. சுரபி முக வாட்டத்தை ரவீந்தர் கவனிக்கத் தவறவில்லை. ஒருவேளை அலைச்சல் அதிகமாக இருந்திருக்கும் என்று எண்ணினான். சதாபிஷேக விழா சிறப்பாக முடிய எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பானுமதி சொன்னாள். “எல்லோரும் இந்தக் கல்யாண விஷயத்தில் வேறொன்றை மறந்து விட்டீர்கள். நாளை ரவியின் பிறந்தநாள்!” என்றாள். “அட! நான் மறந்துவிட்டேன்!” என்றான் சுரேந்தர். “திருமணத்திற்குப் பின் முதல் பிறந்த நாள்! இருவரும் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்!” என்றாள் பானுமதி. “பிறந்த நாள் கொண்டாட நான் என்ன சின்னப் பிள்ளையா?” என்றான் ரவீந்தர். “சுரபி அக்கா! நீ என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறாய்?” என்றாள் அனு. “அது அவர்கள் இருவருக்கும் பர்சனல்! நீ என்ன விவஸ்தை இல்லாமல் கேட்கிறாய்!” என்றான் அர்ஜுன். மற்ற எல்லோரும் சுரபி ரவீந்தர் முகத்தைப் பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எல்லோரும் அதற்கும் கேலிசெய்ய, சுரபி லேசாகச் சிறிது சமாளித்தாள். இங்கே இருக்கும் யாருக்கேனும் உண்மையில் எங்கள் வாழ்க்கையில் அக்கறை இருக்கிறதா? என்று நினைத்தாள் சுரபி. தாமோதரன் அப்போது சொன்னார், “நான் சுரபியை தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரி என்று இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுவரை எப்போதேனும் ரவி நம்முடன் இப்படி எல்லாம் கலந்து இருக்கிறானா? எல்லாம் சுரபியால் வந்த மாற்றம்.” என்று பெருமையாகச் சொன்னார். “மாமாவைப் பற்றி எங்களுக்கு முன்பு ஒன்றும் தெரியாதுதான். ஆனால் சுரபியை பொறுத்துக் கொண்டார் என்றால், அவர் நிச்சயம் பொறுமைசாலிதான்.” என்று வினோத் தங்கையை வார, “நீ மாற்றிச் சொல்கிறாய்! ரவியைப் பொறுத்துக் கொண்ட பொறுமைசாலி சுரபிதான்!” என்றான் சுகந்தன். “எப்படியோ இருவருக்கும் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்கிறார்களே! அதுதான் பெரிய சந்தோசம்! எங்களைப் போல் என் பேரப்பிள்ளைகள் உங்களுக்குச் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.” என்று வித்யா சுரபி இருவரையும் பார்த்துச் சொன்னார் கமலா. லேசாகச் சுரபிக்கு கண்கள் கரித்தது. அவள் எடுத்திருக்கும் முடிவு தெரிந்தால் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் என்ன சொல்வார்கள். இப்போது இருக்கும் கலகலப்பு இருக்குமா? என்று யோசித்தாள். வெகுவாகச் சிரமப்பட்டு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, எல்லோரும் மெல்லக் கலைந்து சென்றார்கள். அறைக்குச் செல்கையில், ரவீந்தர் அங்கேதான் இருந்தான். பேசாமல் சென்று படுத்துவிடலாம் என்று உள்ளே வந்தவளை, “உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்!” என்றான். என்ன சொல்லப் போகிறான். அவன் வாழ்க்கையை விட்டு விலகிச் செல்லும்படி கேட்கப் போகிறானா? மீண்டும் கண்களில் நீர் திரை. ரவீந்தர் அவள் முகத்தைப் பார்க்காமலே பேசினான். “இப்படி உட்கார்!” என்று ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தான். “உன்னிடம் இதுபற்றிச் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் இனியும் என்னால் உன்னிடம் மறைக்க முடியது. சாலினியை பற்றி…” என்று அவன் முடிக்கும் முன், “தெரியும்” என்றாள். சட்டென்று, அவள் முகத்தைப் பார்த்தான் “உனக்கு எப்போது தெரியும்? யார் சொன்னார்கள்? முன்பே தாத்தா இல்லை மாமா சொல்லி விட்டார்களா?” என்றான். “எனக்குத் தெரியும். யார் சொன்னால் என்ன?” “கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது! உன்னிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். உனக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் நான் உன்னிடம் மறைக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்க வில்லை. உனக்குப் புரிகிறதல்லவா?” லேசாகத் தலையாட்டினாள். “என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி சுரபி” “உங்களுக்கு என்ன சொல்லவேண்டுமோ? கேட்க வேண்டுமோ? கேளுங்கள்” “நீ எனக்காக ஒன்று செய்வாயா?” பிரிந்து போ என்று சொல்லப் போகிறான். செய்ய முடியாது என்றால் என்ன செய்வான் என்று மூளை ஒரு நொடி யோசித்தாலும், “நாளை உங்கள் பிறந்தநாள். அதற்காக என் பரிசு என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்.” இப்போது ரவீந்தர் கண்களில் பிரகாசம் தெரிந்தது. முகத்தில் ஒரு புத்துணர்ச்சி. பல நாட்களுக்குப் பின் சுரபி அதைப் பார்க்கிறாள். “ப்ராமிஸ்? பின் பேச்சு மாறக் கூடாது!” குரலில் சிறுபிள்ளை போல் ஒரு உற்சாகம். அவளைப் பிரிவதில் அவனுக்கு இத்தனை உற்சாகமா? சாலினியை அவ்வளவு காதலித்தானா? ஒன்றாக இருந்து இருவரும் நிம்மதியின்றி வாழ்வதை விட, ஒருவர் சந்தோசமாக இருந்தால் அதுவே போதும் என்று எண்ணி, “ப்ராமிஸ்!” என்றாள் தரையைப் பார்த்தபடி. “அப்படியானால், எப்போதும் நீ என்னை விட்டுப் போகக் கூடாது! நமக்குள் என்ன சண்டை வந்தாலும் என்னுடன் பேசாமல் இருக்கக் கூடாது!” என்று ரவீந்தர் சொல்ல அவள் அவனைப் பார்த்தாள். “பாட்டி சொன்னார்களே! ‘சதாபிஷேகம் செய்ய வேண்டும்’ அதுபோல்…” என்று அவன் முடிக்கும் முன், சுரபி அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழவும் ரவீந்தர் பயந்துதான் விட்டான். “ஏய்! சுரபி! இதைக் கேட்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை! என் ஆசையைச் சொன்னேன்! உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இப்போதே சொல்லிவிடு. நீ இப்படி அழத் தேவையில்லை.” என்று அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான். அவள் முகத்தைப் புதைத்த படி எதோ சொல்ல, வார்த்தைகள் எதுவும் தெளிவாக விளங்கவில்லை. “சுரபி! நீ சொல்வது புரியவில்லை!” என்று வேகமாகத் தண்ணீர் கொண்டுவந்து அருகில் வைத்துவிட்டு, அவள் கைகளைப் பற்றினான். “இங்கே பார்! முதலில் அழுகையை நிறுத்து! நான் கேட்டது அதிகப்படிதான். அதற்காக நீ ஏன் இப்படி அழ வேண்டும்? உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்! எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்!” என்றான். “நீங்கள் என்னிடம் விவாகரத்து கேட்கப் போகிறீர்கள் என்று நினைத்தேன்!” என்று தேம்பிய குரலில் சொன்னாள். “என்ன?” என்று ஆச்சரியமாகப் பார்த்தான். “நீ ஏன் அப்படி நினைத்தாய்?” “நீங்கள் இன்னும் சாலினியை விரும்புகிறீர்கள் என்று நினைத்தேன்!” “வாட் நான்சென்ஸ்! உனக்கேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என்று சில நிமிடம் பேசாமல் இருந்தான். “நீ ஏன் அப்படி நினைத்தாய்?” “நீங்கள் எனக்குத் தெரியாமல், அவளுடன் வெளியே செல்லத் தொடங்கி விட்டீர்கள் என்று தெரிந்ததும்!” “நான் எப்போது அவளுடன் சென்றேன்?” “எனக்குத் தெரியாது! வித்யா சொன்னாள்!” “அண்ணி என்ன சொன்னார்?” “யாருக்கும் சொல்லாமல் நீங்கள் சாலினிக்கு உதவி செய்கிறீர்கள் என்றாள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள் என்று நினைத்தேன்.” “அப்புறம்?” “ஷாலினி பற்றி யாரும் என்னிடம் அதுவரை சொல்லவில்லை. திடீரென்று வித்யா அக்கா சொல்லவும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்களும் ஷாலினி வந்தபின் என்னோடு சரியாகப் பேசக்கூட இல்லை. அதனால்…” “அதனால் மனைவியை விட்டுவிட்டு, வேறு பெண்ணுடன் சுற்றுகிறேன் என்று நினைத்து விட்டாய்!” “நான் வேறு என்ன நினைக்கட்டும். வித்யா என்னிடம் பொய் சொல்ல என்ன அவசியம் இருக்கிறது.” “ஓ மை காட்! சுரபி சாலினி இஸ் மை பாஸ்ட். அவளைப் பற்றி நான் நினைக்கக் கூட விரும்பவில்லை.” “அப்படி என்றால் எதற்கு உதவி செய்தீர்கள்? அதுவும் என்னிடம் சொல்லாமல்?” “அவளுக்கு நான் என்ன உதவி செய்தேன் என்று தான் இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அவள் தொழில் தொடங்க முதலீட்டாளர்களைப் பற்றிக் கேட்டாள். நான் யாரையும் பரிந்துரைக்க முடியாது என்று விட்டேன். சில தொடர்பு எண்கள் மட்டும் கொடுத்தேன். அதைத் தவிர நான் அவளுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதற்கு அவள் நன்றி சொல்ல அம்மா வீட்டுக்குச் சென்று, இதுவரை வந்து நிற்கிறது.” “பிறகு ஏன் என்னிடம் பேசவில்லை!” “நீயும் தான் என்னிடம் பேசவில்லை. இங்கே வந்தால் நீ என்னை மறந்தே விடுகிறாய்!” என்றவன், “சாலினி வந்து சென்றபிறகு அம்மாவும் என்னிடம் வந்து அவளுக்கு எதற்கு உதவினாய் என்று சண்டை போட்டார்கள். அப்போது தான் உனக்கு எதுவும் தெரியாது என்று புரிந்துகொண்டேன். உன்னிடம் உண்மையை மறைத்து விட்டார்கள் என்ற குற்ற உணர்வு. சொல்லாமல் இருக்க முடியவில்லை. சொன்னால் நீ என்ன செய்வாய்? என்னை விட்டுச் சென்று விடுவாயோ என்ற பயம். ஆனால் அண்ணி உன்னிடம் சொன்னபோது நீ கேட்டிருக்கலாமே!” என்றான். “உங்கள் பயம் தான் எனக்கும்! நீங்கள் என்னைப் போகச் சொல்லிவிட்டால், அம்மா அப்பா என்ன செய்வார்கள்? தாத்தா பாட்டி என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் யோசித்தேன். நீங்களாகச் சொல்லும் வரை காத்திருக்கலாம் என்று நினைத்தேன். அதனால் தான் நீங்கள் பேச வேண்டும் என்று சொன்னதும் பயந்துவிட்டேன்.” “சாலினி வரும் முன் என்னைப் பற்றி உனக்குப் புரியவில்லையா?” “அப்போது புரியத்தான் செய்தது!” “பிறகு என்ன ஆனது?” “சாலினியை பார்த்து மனம் மாறி விட்டது என்று!” “ஓ! என்னைப் பற்றி வெகு உயர்வாக எண்ணியிருக்கிறாய்!” “ஒன்றை விடத் தகுதியான இன்னொன்றை மனம் தேடுவதில் என்ன தப்பு. அதுவும் பிடிக்காத ஒன்றை விடப் பிடித்த ஒன்றை மனம் நாடுவதில் தவறொன்றும் இல்லை!” “தத்துவம் எல்லாம் பிரமாதம்! நீ பேசாமல் இயற்பியலுக்குப் பதிலாகப் பிலாஸபி படி. சரியாக இருக்கும். ஆனால் எனக்குப் பிடித்தது, என் தகுதிக்கு மிஞ்சியதே என்னிடம் இருக்கிறது.” என்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளை அணைத்துக் கொண்டான். “சாரி! முதலில் நானும் உன்னிடம் கொஞ்சம் வேறுமாதிரி தான் நடந்து கொண்டேன். சுரபி எனக்குச் சில நாட்களுக்கு முன் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து, ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதெல்லாம் நமக்கு முன் இருந்த தலைமுறையுடன் முடிந்துவிட்டதாக நினைத்தேன். எனக்கு மனிதர்கள்மேல் இருந்த நம்பிக்கை அவ்வளவுதான். திருமணம் ஒரு ஒப்பந்தம் என்று மட்டும் தான் நினைத்தேன். எனக்கு இது பிடிக்கும், பிடிக்காது, என் விஷயத்தில் நீ தலையிடாதே, உன் விஷயத்திற்கு நான் வரமாட்டேன் என்று தான் இப்போது பெரும்பாலோனோர் வாழ்வதாக நம்பினேன். காதல், புரிதல் எல்லாம் வெறும் வார்த்தைகள் என்று நினைத்தேன். வாழ்க்கையில் பணம் இருந்தால் எல்லாம் கிடைக்கும் என்று எண்ணினேன். என் குறிக்கோளும் பணம் என்ற ஒன்றில் தான் இருந்தது. பணம் இல்லையென்றால் சொந்த வீட்டில் கூட யாரும் மதிக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் உன்னிடம் நான் பேசியதெல்லாம் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துத்தான். ஆனால் என் எண்ணங்கள், நம்பிக்கைகளையெல்லாம் மாற்றிக் கொள்ளத் தொடங்கினேன். உன்னால். இந்த மாற்றங்களுக்கு என்னைப் பழக்கப் படுத்திக்கொள்ளத் தான் எனக்கு அவகாசம் தேவைப் பட்டது. எல்லாம் சரியாகும் நேரத்தில் என் பழைய கதை உனக்குத் தெரியாது என்ற குழப்பம். இப்போது கூட எனக்குக் குற்ற உணர்வுதான். உன்னை ஏமாற்றி விட்டேனோ என்று. நான் என்ன செய்யட்டும்?” “நீங்கள் மாறி விட்டீர்கள் என்று தான் நினைத்தேன். ஒரு வேளை நான் உங்கள் வாழ்வில் இல்லையென்றால், நீங்கள் சாலினியுடன் சேர எந்த இடையூறும் இருக்காது என்று நினைத்தேன்.” “பெரிய தியாகி!” என்றவன் தொடர்ந்தான். “அவளை நான் பார்க்கக்கூட விரும்பவில்லை. அவள் எனக்குப் பொருத்தமா? ஒருவேளை நீ நினைத்தது போல் அவள்மேல் மீண்டும் மையல் கொண்டேன் என்றால் உலகில் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது!” அவள் சந்தேகத்துடன் பார்க்க, “ஏன்? என்னை நம்பவில்லையா?” “நம்ப வேண்டும் என்று தான் மனம் ஆசைப்படுகிறது.” “அப்படியானால் நம்பவில்லை. சரி! நான் சொல்வதைக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வா” என்று கல்லூரியில் காதலித்தது முதல், தொழில் தொடங்கி, பிறகு பிரிந்து சென்றதுவரை சொன்னான். “சாலினி மெல்ல விலகத் தொடங்கும்போதே இருவருக்கும் நிறைய வேறுபாடுகள்! எப்படி ஒருவரை ஒருவர் விரும்பினோம் என்று சந்தேகம் தோன்றியது. ஒருவேளை சாலினியின் வியாபார சிந்தனை என்னைக் கவர்ந்தது என்று நினைத்தேன். இருவரின் சிந்தனைகளும் ஒரே போல் இருக்கும். தொழில் தொடங்க அதுவே காரணம். ஆனால் வெற்றி, வாழ்க்கை, உறவு என்று வரும்போது இருவருக்கும் வேறு வேறு சித்தாந்தம். சிலமுறை நினைத்திருக்கிறேன், ஒரு வேளை சாலினி ஒரு ஆண் நண்பனாக இருந்திருந்தால் நட்புடன் முடிந்திருக்கும். வேறு பால் என்பதால் காதல் என்று நினைத்து விட்டேன். பின்னாளில் தோன்றியது, அவள் தொழிலில் ஒரு நல்ல கூட்டாளி. அவ்வளவுதான். அவள் என்னை விட்டுச் சென்ற சில நாள் வருத்தமாக இருந்தது. அதுகூட அவள் சென்றுவிட்டாள் என்பதை விட, அவளால் நான் செய்த தொழில் முடங்கிவிட்டது என்று தான். அவள் பிரிவைவிடத் தொழில் தான் முக்கியமா? இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அப்போது எனக்குக் காதலைப் பற்றி இருந்தது புரிதல் அவ்வளவுதான். இனி லண்டன் வேண்டாம் என்று இங்கே வந்தேன். சாலினி பெரும் புத்திசாலி. இருவருக்கும் நிறைய பொதுவான நண்பர்கள். மற்றவர்கள் அவளைக் குறை கூறக் கூடாது என்று எண்ணி, எல்லா தவறும் என்மேல்தான் என்று பரப்பிவிட்டாள். என் வீட்டிலிருந்தவர்கள் கூட அதை நம்பினார்கள்.” “உங்கள் பெயரைக் கெடுப்பதால் அவளுக்கு என்ன கிடைக்கும்?” லேசாகச் சிரித்துவிட்டு, “இருவர் வீட்டிலும் காதலிக்கிறோம் என்று முதலிலேயே சொல்லி விட்டோம். இருவரும் பிரிந்த சில மாதங்களில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அவளுடைய கணவன், தந்தை வழியில் தூரத்து உறவு! அப்போது அவளை யாரும் குறை சொல்லக் கூடாது என்று இங்கே பல வேலைகளைப் பார்த்திருந்தாள்.” “அவள் சொன்னதை அத்தை நம்பி விட்டார்கள் என்று உங்களுக்கு அவர்மேல் கோபம்!” “அதுமட்டும் இல்லை! இங்கே வரும்போது என்னிடம் அதிக சேமிப்பு எல்லாம் இல்லை. எதோ பரம்பரை சொத்தை எல்லாம் தொலைத்து விட்டேன் என்று எல்லோரும் பேசும்போது, அம்மா எனக்குச் சாதகமாக எதுவும் சொல்ல வில்லை. அத்தியாவசியத்திற்குத் தவிர நான் வீட்டிலிருந்து பணத்தை எடுக்கவில்லை. ஆனால் வீட்டிற்கு யார் வந்தாலும் என்னைப் பற்றிப் பேச்சு நடக்கும். அது என் வீடே இல்லை என்று தோன்றும் அளவுக்குப் பேசினார்கள். அம்மாவும் அதை ஆமோதிப்பதுபோல என்னைத் திட்டித் தீர்த்தார். இங்கே புதிதாகத் தொழிலை ஆரம்பிக்கலாம் என்றால் வங்கியின் கடன் கிடைக்க, ஏதாவது ஒரு சொத்தைப் பிணையில் வைக்க வேண்டும். நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்று அதிகம் குடிக்கத்தொடங்கினேன். குடிகாரன் என்ற பேச்சும் சேர்த்துக் கொண்டது. அதுவும் காதல் தோல்வியில் குடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டார்கள். அப்போது தாத்தாவும் மாமாவும்தான் இங்கே அழைத்து வந்தார்கள். எதோ ஒரு வெறி. எல்லோரும் வியக்கும் வண்ணம் முன்னேற வேண்டும் என்று! மூன்று ஆண்டுகள் இதோ இந்த அறை தான் என் உலகம். உன் பாஷையில் ஒரு காட்டுவாசி போல் இருந்தேன்.” சுரபி முன்பு பேசியதை கேட்டுவிட்டான் என்று சொல்லாமல் சொன்னான். “இந்த அறையை விட்டுச் செல்ல வேண்டும் என்றால் எனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று முடிவு செய்தேன். திரும்ப நான் ஹைதராபாத் செல்லும்போது, நம் வீட்டிற்குத் தான் சென்றேன். ஒரு பெருமிதம். தனியே இதுவரை வந்தேன் என்றால், இனி எல்லாவற்றையும் தனியே சமாளிக்க முடியும் என்ற தைரியம். எனக்கு யாரும் வேண்டாம் என்ற திமிர். நீ என் வாழ்வில் வரும் வரை அப்படியேதான் இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் யாரிடமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த நான், நீ எனக்குப் பிடித்தபடிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதற்கு ஆசைப்பட்டேன் என்று இன்றுவரை தெரியவில்லை. சாலினி ஒருமுறை சொன்னாள்.”நான் ஒரு ஆணாதிக்கம் பிடித்தவன், பேரினவாதி என்றெல்லாம் சொன்னாள். உன்னிடம் நான் நடந்துகொண்ட விதம், அவள் சொன்னதுதான் உண்மையோ என்று நினைத்தேன்." “நீங்கள் அப்படி எல்லாம் ஒன்றும் நடந்து கொண்டதில்லை!” என்றாள் சுரபி. மனைவியின் முகத்தைப் பார்த்து “தேங்க்ஸ் பார் தட்” இப்போது சுரபி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, “ஏதாவது சொல்! இப்போது என்மேல் நம்பிக்கை வந்ததா?” “ஹ்ம்ம்!” சில நொடிகளுக்குப் பிறகு, “நான் ஒன்று சொன்னால் கோவித்துக் கொள்ளக் கூடாது.” “அது நீ சொல்வதைப் பொறுத்து இருக்கிறது!” “நிச்சயம் கோவித்துக் கொள்வீர்கள்! ஆனால் இதை உங்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்களைத் தவறாகப் பேசியவர்கள் முன் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது சரி என்றால், மகன் மற்றவர்கள் குறை சொல்லும்படி இருக்கக் கூடாது என்று அத்தை நினைப்பதும் சரியே! அதற்காக உங்களைக் கோவித்துக் கொள்வதும், கடிந்து பேசியதும் சரியே!” “எங்கிருந்து எங்கு செல்கிறாய்?” “அத்தையிடம் நான் கேட்டபோது இதைத் தான் சொன்னார்கள். வீட்டுக்கு வந்தவர்களிடம் என் மகனைப் பற்றிப் பேசாதே என்று சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். மற்றவர்கள் பேசும் விதம் மகன் நடந்து கொள்கிறான் என்று அத்தை நினைத்திருப்பார்கள். இதில் எது தவறு? எது சரி?” “அவர்கள் எனக்கு உறுதுணையாக இல்லை. என்னை நம்பவில்லை. அது சரியா? ஒரு வேளை அம்மா எனக்குச் சாதகமாகப் பேசியிருந்தால், அனைவரும் என்னைக் கேவலமாக நினைத்திருக்க மாட்டார்கள். சாலினி சொன்னதை ஆமோதிப்பது போல் அம்மாவும் சில முறை பேசியிருக்கிறார்கள். பெரியப்பாக்கள் அத்தை கூடப் பார்க்கும்போதெல்லாம், குடும்ப கௌரவத்தை நான் கெடுத்துவிடதாகப் பேசத் தொடங்கினார்கள். உறவினர் வரும்போது என்னை அறையை விட்டு வர வேண்டாம் என்று கூட ஒரு முறை அண்ணன் சொன்னான். குடிக்க தொடங்கியது அதன்பின்தான். ஒரு தோல்வி என்னை அவ்வளவு மோசமானவனாக ஆக்கிவிட்டதா? அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? சில முறை சாலினியை பழிவாங்க வேண்டும் என்று கூட நினைத்ததுண்டு. இப்போது இருக்கும் தெளிவு அப்போது இல்லை. பிறகு தாத்தா இங்கே அழைத்து வந்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நான் இந்த அறையை விட்டு வெளியே கூடச் சென்றதில்லை. அதிக பட்சம், வீட்டு தோட்டம். இத்தனை நாட்களுக்குப் பிறகும், நான் மறக்க நினைக்கும் நாட்களைப் பற்றித்தான் அம்மா பேசுகிறார்கள். சாலினி உதவி வேண்டும் என்று கேட்டபோது முதலில் அவள்மேல் இருந்த வெறுப்பு கூட எனக்கு நினைவில் வரவில்லை. உனக்கு அவள் வருகை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தான் நினைத்தேன். உனக்குப் பெறும் பாதிப்பு இல்லை என்று நினைத்துதான் அவளுக்குச் சில முதலீட்டாளர்களின் தொடர்பைக் கொடுத்தேன். அதன் பின் தான் உனக்கு விஷயம் தெரியாமல் இருக்கலாம் என்று அம்மா சொல்லவும், வெகுவாகக் கலங்கினேன். இப்போது தான் இருவரும் ஓரளவு இயல்பாக இருக்கிறோம். அது கெட்டு விடுமோ என்று பயம். ஆனால் உன்னிடம் மறைக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். இந்த ஒதுக்கம் கூட அப்போது சொன்னதுபோல் ஒரு குற்ற உணர்வுதான்.” “சில நேரம் எல்லோரும் தவறு செய்வதுண்டு! அதற்காக ஒருவரை ஒதுக்குவது சரியில்லையே! இப்படி எல்லோரையும் நினைத்தால் யார் நம்முடன் இருப்பார்கள்? ஒருவேளை நீங்கள் இதை ஒரு நண்பனிடம் செய்திருந்தால், உங்களிடம் அடுத்த முறை பேசக்கூட மாட்டார்கள். உங்களிடம் அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டும் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அத்தை நீங்கள் என்ன செய்தாலும், பேசினாலும், உங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். அவருக்கு நீங்கள் மட்டும் பிள்ளை இல்லை. உங்கள் அண்ணன் இருக்கிறார். அவர் மனைவி ஒருத்தி வீட்டில் இருக்கிறாள். எல்லோரையும் தானே பார்க்க வேண்டும்.” “எல்லோரையும் பார்க்கட்டும்! எனக்கு ஒன்றும் இல்லை. நான் இப்படியே இருந்து கொள்கிறேன். என்னைப் பற்றி அம்மாவும் கவலைப் பட வேண்டாம்.” சிரித்துக்கொண்டு சொன்னாள், “நானும் என்ன அண்ணாவும் இதே போல் சண்டை போடுவோம்! அம்மா எப்போதும் அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுவார்கள். அதற்காக நான் அவர்களிடம் கோவித்துக் கொள்வேன். அதெல்லாம் சிறு வயதில். இப்போது கூடச் சிலமுறை உண்டு. ஆனால் அவர்களை வேண்டாம் என்று நினைத்ததில்லை.” “உனக்குப் புரியாது!” “புரிய வையுங்கள்” தலையை மறுப்பாய் அசைக்க, “எனக்குப் புரிகிறது! ஏமாற்றத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப் படுத்துவார்கள். அத்தை உங்களுக்குப் பிடிக்காத விதத்தில் வெளிப் படுத்துகிறார். உங்கள்மேல் அக்கறை இல்லாமலா, சாலினியை பார்த்ததும் உங்களை எச்சரிக்கை வந்தார். நீங்கள் தனியே இருக்க கூடாது என்று தானே உங்களுக்குத் திருமணத்தை நடத்தி வைக்க நினைத்தார். ஊருக்காகச் சிலதைச் செய்தாலும், மகன் எப்படியோ போகட்டும் என்று நினைக்க வில்லையே! ஒரு வேளை இன்று போல் எல்லோரும் ஒரு விழாவைக் கொண்டாடாமல் இருந்திருந்தால் இன்று நமக்கு இப்படி பேசும் வாய்ப்பு கூட இல்லாமல் போயிருக்கும். இந்த விழாவைச் சாத்தியமாக்கியது உறவும் குடும்பமும் தான். இன்றும் உங்கள் மாமாவுக்கும், உங்கள் அம்மாவுக்கும் இருக்கும் நெருக்கம் தான் தாத்தா பாட்டியின் சந்தோசம். பிறகு தான் மற்றது எல்லாம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லாமலா இருந்திருக்கும்.” என்று பானுமதியுடன் நடந்த உரையாடல்பற்றிச் சொன்னாள். “உங்களைப் போல் அத்தை ‘எனக்கு யாரும் வேண்டாம்’ என்று எண்ணவில்லை. உங்கள் தந்தைக்குப் பிறகும், அவர் உடன் பிறந்தவர்களுடன் இன்னும் உறவை முறித்துக்கொள்ளவில்லை. அதைச் செய்திருந்தால் அவர்களுக்கு இன்னும் எளிதாகக் கூட வாழ்க்கை அமைத்திருக்கும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் தந்தைக்கு அவர்கள் சிறுவயதில் செய்த உதவியை அவர் முன்னே வைத்துப் பார்க்கிறார். அதனால் அவர்களைப் பொறுத்துப்போக முடிகிறது. நீங்கள் அத்தை முன்பு செய்ததையெல்லாம் மறந்துவிட்டு, வேண்டாததை மட்டும் நினைக்கிறீர்கள்!” “இப்போது என்ன செய்ய வேண்டும்?” “எனக்கு யாரும் வேண்டாம் என்ற எண்ணத்தை விடுங்கள். இப்போது இருக்கும் சூழலில் கூட்டுக் குடும்பம் என்பதே அபூர்வம். இதில் மேற்கத்திய நாடுகள்போல் யாரும் வேண்டாம் எனக்கு! என்ற சிந்தனை குடும்ப அமைப்பைக் குலைத்துவிடும். தனியே திரியும் யானைக்குத்தான் மதம் பிடிக்கும் என்பார்கள். மனிதன் கூட அப்படித்தானே. ஒரு மனிதனை மனிதனாக வைப்பது, நல்ல உறவுகள் தான் என்று நான் நம்புகிறேன். தாத்தாவின் அரவணைப்பு உங்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுத்திருந்தால், அத்தையின் வெறுப்பு வேறு விதமாக உங்கள் முன்னேற்றத்துக்கு உதவி இருக்கிறது. ஒருமுறை கூடக் இன்னொருவரைக் காயப்படுத்தாமல் எந்த உறவும் இருந்ததில்லை. பிள்ளைக்கும் அன்னைக்கும் இடையே கூட அப்படித்தானே. மற்ற உறவுகள் சொல்லவே வேண்டாம்! எல்லா உறவுகளும் நரகத்தின் வழியாகச் செல்கின்றன, உண்மையான உறவுகள் மட்டுமே அதைக் கடக்கின்றன, என்று எங்கோ படித்தேன்.” ரவீந்தர் வெகுநேரம் எதுவும் பேசாமல் இருப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவள், அவன் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்ன?” என்றாள். இரு புருவங்களை உயர்த்தி, “உன்மையில் உன் வயதென்ன?” “என்ன?” “எந்த வகுப்பில் எத்தனை முறை தோல்வி அடைந்து மீண்டும் படித்தாய்?” குழப்பத்துடன், “ஒருமுறை கூட இல்லை! ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” “ஒரு இளங்கலை பட்டம் என்றால் அதிக பட்சம் இருபத்தி இரண்டு வயதிருக்கும். ஆனால் உன் பேச்சு நாற்பது வயது பெண்மணிபோல் இருக்கிறது.” அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, “எண்ணங்களில் என் வயது உங்களைவிட, குறைந்தது ஐந்து வருடம் அதிகம்.” என்றாள். “ரொம்ப சரி! மீண்டும் ஒருமுறை யோசித்துக்கொள் இயற்பியலா, இல்லை பிலாசபியா என்று.” என்று சிரித்தான். “நீ சொன்னதை பற்றி யோசிக்கிறேன். மாற முயற்சி செய்கிறேன்!” என்றான் அவள் கைகளைப் பற்றியபடி. மணி நள்ளிரவு பன்னிரெண்டை தொட்டது. “பிறந்த நாள் வாழ்த்துக்கள். இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நான் தான் முதலில் உங்களுக்கு வாழ்த்து சொல்வேன்.” என்றவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். மனைவியை அணைத்துக் கொண்டு சொன்னான். “இதுவரை யாரும் என்னைக் கட்டுப் படுத்தியதில்லை. அம்மாவும் சரி, தாத்தாவும் சரி. உன்னால் மட்டுமே சாத்தியம்!” என்றான். “நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?” “இப்படி நீ என் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டால், என்னால் எதையும் தட்ட முடியும் என்று தோன்ற வில்லை.” என்றான். “இத்தனை நாள், இது தெரியாமல் இருந்துவிட்டேனே!” என்று பொய்யாக வருந்தினாள். “அது தெரியாமலேயே என்னை உன் வசப்படுத்திவிட்டாய்!” சொன்னவன் சுரபியைப் பார்த்தான். அவனுக்கும் தெரியும் அவன் மனைவியை எப்படி அவன் வசப்படுத்துவது என்று! நன்றியுரை “Good things come from unexpected places.” இந்த வாசகத்தின் உண்மையைச் சமீபத்தில் உணர்ந்தேன். அப்படிக் கிடைத்தது, திரு. ராமசாமி ஐயா அவர்களின் அறிமுகம். இந்தக் கதையை வெளியிடும்போது அவருக்கான என் நன்றியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் அறிமுகம் கிடைக்கக் காரணமாக இருந்த Freetamilebooks.com-க்கும் எனது நன்றிகள். என்றும் அன்புடன் லாவண்யா ஸ்ரீராம். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.