[] சில புத்தகங்கள்... புத்தக அறிமுகங்கள் சுப தமிழினியன் http://freetamilebooks.com/ சில புத்தகங்கள்... Copyright © 2013 This book was produced using PressBooks.com. 1 உரிமை [Creative Commons License] This ebook is licensed under a creative commons Attribution-ShareAlike 3.0 Unported (CC BY-SA 3.0) You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - Adapt — remix, transform, and build upon the material - for any purpose, even commercially. - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - ShareAlike — If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same license as the original. Contents - உரிமை - சில புத்தகங்கள்... - 1. சோளகர் தொட்டி - 2. நீதிக்கட்சி வரலாறு - 3. வால்காவிலிருந்து கங்கை வரை - 4. சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர் - 5. களை எடுக்க ஒரு மண்வெட்டி - 6. குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள் - 7. பாலஸ்தீனக் கவிதைகள் - 8. மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள் - 9. மனித குலமும் தமிழ்த் தேசியமும் - 10. ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி - 11. பிக்ஸார் ஸ்டோரி – எ ஸ்டோரி பை ஹாலிவுட் பாலா - 12. பேயோன் 1000 - 13. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - 14. மெட்ராஸ்-சென்னை - 15. மாயாவதி: ஒரு வாழ்க்கை - 16. அத்வானி - 17. 1857 சிப்பாய் புரட்சி - ஆசிரியர் பற்றி - Free Tamil Ebooks எங்களைப் பற்றி 2 சில புத்தகங்கள்... [Cover Image]   புத்தக அறிமுகங்கள் ஆசிரியர் : சுப தமிழினியன் thamiz@iniyan.in வலைத்தளம் : http://thamiziniyan.com படம்: http://retsamys.deviantart.com/art/Book-sleighing-wheeeee-GIF-animation-344715362   மின்னூல் ஆக்கம் ; இளஞ்சென்னி iamnikilan@gmail.com     [pressbooks.com] 1 சோளகர் தொட்டி சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம். இந்த அரசமைப்பு, அதிகாரத்தின் மீது கொன்டிருக்கிற தீராக்காதலால், அதற்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம் அடக்குமுறையைக் கையாள ஒரு போதும் தவறுவதில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் அந்த நாட்டின் சொந்தக் குடிகளா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அதற்கு அக்கறையில்லை. இதுவரை மனித குலம் கண்ட எல்லா அரசாட்சி முறைகளிலும் அரசு என்கிற இயந்திரம் அடக்குமுறையை தனது பிரதான கருவியாகவே பயன்படுத்தி வந்ததை வரலாறு நமக்கு சொல்கிறது. பண்டைய ரோம அரசாட்சியிலிருந்து இன்றைய கூடங்குளம் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் இதற்கு சான்றாய் பதிவுசெய்து பதிவுசெய்து நீட்சியடைந்த பெருத்த புத்தகமாய் இன்று உருவடைந்து நிற்கிறது. அப்படி, நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பதிவு செய்கிறது சோளகர் தொட்டி என்னும் நாவல். [சோளகர் தொட்டி] சோளகர் தொட்டி அரச வன்முறையை வரலாற்றில் பதிவு செய்த எல்லா புத்தகங்களோடு இதையும் ஒன்றாய் அடக்கி விடமுடியாதபடிக்கு இப்படைப்பை எடுத்துச் செல்வது சோளகர் தொட்டி பதிவு செய்திருக்கும் மக்களும், அவர்களின் வாழ்க்கையும் தான். நம்மால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத, நம்மால் புரிந்து கொள்ளமுடியாத இயற்கையோடு உறவு கொண்ட, நம்மிலிருந்து வித்தியாசப்பட்ட புவியியல் அமைப்பையும், வாழ்வியல் முறைகளையும் கொண்ட பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, அவர்கள் வாழ்வியலை பதிவு செய்வதோடு, அவர்கள் அரச வன்முறையில் சிக்கிச் சீரழிந்த ஒரு துயர வரலாற்றையும் இந்நாவல் பதிவு செய்கிறது. நாவலின் முன்பகுதி சோளகர்களின் (ஒரு பழங்குடிக் குலம்) மண்ணை, அவர்களின் சாமிகளை, சடங்குகளை, தொன்மங்களை, திருமன உறவுகளை, விதவைகளின் நிலையை, கொத்தல்லி, கோல்காரன் போன்ற அவர்களின் சமூக அமைப்பை, விவசாய முறையை, அவர்களின் இசைக்கருவிகளை, இசையையெல்லாம் கஞ்சாப் புகை திரண்டு நமக்கு நெடியேற்றும் படி பதிவு செய்திருக்கிறார். கஞ்சா வாடையின் சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த வாடை கலந்து, சோளகர்களின் தொட்டியெங்கும் கண்ணீரோடு ரத்த வாடை காற்றில் மிதக்கிறது. முதல் பாகம் முழுதும் கஞ்சா வாடை என்றால், இரண்டாம் பாகத்தில் இருட்டறையின் மூத்திர நெடியோடு கலந்த ரத்த, சீழ் நாற்றம்தான். நாவலின் இரண்டாம் பாகத்தின் துவக்கத்திலிருந்தே அரச வன்முறை இல்லாத பக்கமே இல்லை. அதிரடிப்படையினரிடம் சிக்கிய ஒவ்வொரு பழங்குடி ஆணும் அவர்கள் பார்வையில் வீரப்பனுக்கு அரிசியும், உணவுப்பொருட்களும் கடத்திப்போய் கொடுத்தவர்கள், அவர்கள் வீரப்பனை பார்த்ததாக பொய்யாவது சொல்லும் வரை அடி, உதை தான். பெருவிரலை திருப்பி மடக்கி மெல்லிய இரும்பு கம்பியால் கையோடு சேர்த்துக் கட்டுவது ஒரு வகை விசாரணை முறை, இதனால், அந்த நபர் இனி ஒரு நாளும் தன் கையால் எந்த பொருளையும் தூக்க முடியாது. காவலர்கள் இதற்கு தரும் விளக்கமோ, “இனி அவர்களால் துப்பாக்கியே தூக்க முடியாது”. அதேபோல அதிரடிப்படை கைது செய்த ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் வீரப்பனுடன் பாலியல் உறவு கொண்டவர்கள் என்ற நோக்கிலேயே விசாரணை இருக்கிறது. வீரப்பனுடன் உறவு கொண்டவர்கள் எங்களுடன் உறவு கொள்ள மாட்டீர்களா என்ற உப கேள்வியும் உண்டு. விசாரணை அறையில் பிறந்த குழந்தை வீரப்பனுக்கு பிறந்ததாய் கேலி பேசப்பட்டு முழுநாள் கூட உயிர்வாழ முடியாத நிலையை அடைகிறது. அதிரடிப்படை முகாமில் அடைபட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், வயது வித்தியாசமெல்லாம் இல்லை. அவர்களின் விசாரணை முறையில் பால் பேதம் கிடையாது, வயது பேதம் கிடையாது. காது மடல்களிலும், மார்பு காம்புகளிலும், பிறப்புறுப்புகளிலும் மின்சாரம் பாய்ச்சுவது. தலைகீழாக தொங்கவிடுவது, வலியை தாங்க முடியாமல் மலம் கழித்து விடுபவர்களை, அதை அருந்தச் செய்வது என்று உடல் ரீதியில் சிதைக்கும் வேலை ஒரு புறம் என்றால். தந்தையை மகனும், மகனை தந்தையும் லத்தியாலும், செருப்பாலும் அடிப்பதும், சிறுவயதுப் பெண்ணை நிர்வானப்படுத்தி, சங்கிலியிட்டு நிற்க வைத்து ஆண், பெண் என எல்லாக் கைதிகளையும் அவளைப் பார்க்கச் சொல்வது என மனரீதியாக சிதைவை உண்டாக்குவது மறுபுறம். இத்தகைய உடல்ரீதியான, மனரீதியான தாக்குதல்களோடு பாலியல் ரீதியான தாக்குதல்களை வன்முறை என்பதைவிட காட்டுமிராண்டித் தனமான வன்முறை என்றுதான் சொல்ல முடியும், தாயின் கண்ணெதிரில் மகளை, மகளின் எதிரில் தாயை, கணவனின் முன்னே மனைவியை, கர்ப்பினியை கூட்டாக புணர்வது என்பதையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? இப்படிப்பட்ட கொடூரமான விசாரணை முறைகளை கதை கதையாய் சொல்லும் இந்த அத்தியாயங்களை மனம் கனக்காமல் யாராலும் கடந்து சென்று விடமுடியாது. ஒருவரின் உடலையும், மனதையும் சிதைக்க எப்படி ஒருவரால் முடிகிறது, அதுவும் குதூகலத்தோடு? நான்கு பேரை உள்ளே அறைக்குள் அடைத்து வைத்து வதைப்பதன் மூலம் எதைச் சாதித்துவிட முடியும், அதிலும் ஒன்றும் தெரியாத சில அப்பாவிகளை? படித்த ஆசிரியர்களையும், நாகரிக மனிதர்களையுமே ஊடகங்களின் கண் முன்னே தாக்கத் துணிகிற அதிகாரம் கொண்ட காவல்துறை. படிப்பறிவற்ற, நம்மால் சொல்லிக் கொள்ளப்படும் நாகரிகமற்ற பழங்குடிகளின் மீது எத்தனை வெறியாட்டம் ஆடியிருக்கும் என்பதற்கான ஆவனம் இந்த சோளகர் தொட்டி. காட்டோடும், இயற்கையோடும் தங்களைப் பினைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பழங்குடிகளின் கலாச்சாரத்தை நாம் அறியாமலே இவர்களை காட்டு மிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்பவர்களாகவும் சித்தரித்து வருகிறோம். சீருடை அணிந்தவர்கள் நரவேட்டையாடியது இவர்களைத் தான். ஒரு கரடியோ, மானோ எதுவானாலும் தொட்டியிலுள்ள அத்தனை பேரும் பகிர்ந்து உண்ணும் இவர்களது காட்டுமிராண்டி கலாச்சாரத்தை நாம் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தப் பழங்குடிகள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இத்தனை கொடுமைகளை அனுபவித்த போதும் யாரும் தற்கொலைக்கு முயல்வதில்லை. கதையின் முக்கிய பாத்திரம் சிறையிலிருந்து தப்பிய பிறகு இனி அதிரடிப்படையினரிடம் சிக்கினால் தான் பலியிடப்படுவது உறுதி என்றான பிறகு, தொட்டிக்குச் செல்லமுடியாத நிலையிலும் தற்கொலை செய்வதில்லை, எதிர்த்து நின்று எவரையும் கொல்வதுமில்லை. தேவைக்கு அதிகமாக வேட்டையாடுவதையே எதிர்க்கிறார்கள். நாவல் முழுக்க எந்த சோளகனும் ஒருவனை கொல்லத் துணிவதே இல்லை, அவன் தன்னுடைய நிலத்தையே அபகரித்த போதும். ஒரே ஒரு இடத்தில் ஒருவன் இத்தனை அவமானங்களுக்குப் பிறகு தன் மனைவியைத் தற்கொலை செய்து கொள்ளும் படி ஆத்திரத்தில் கத்துகிறான், அதுவும் நடைபெறுவதில்லை. கொலையோ தற்கொலையோ எதுவுமில்லாத வாழ்க்கை முறை அவர்களுடய காட்டுமிராண்டி வாழ்க்கை முறை. நாவலின் ஒரேயொரு குறையாக நான் காண்பது, மொழிநடை. பல இடங்களில் செய்தி வாசிப்புத் தொனி என்றாலும், துயர காவியத்துக்கு மொழி நடையெல்லாம் தடை இல்லை. வட்டார வழக்கில் அமைந்திருக்கலாம். சதாசிவம் விசாரணை ஆனையத்தின் முன் சாட்சி கூறிய இத்தகைய மனிதர்களின் கதையைத் தான், மனித உரிமை ஆர்வலரான ச.பாலமுருகன் சோளகர் தொட்டி என்கிற இந்த இலக்கியப் படைப்பாகத் தந்திருக்கிறார். இலக்கியம் சாதாரன மனிதனையேப் பாடுகிறது. விசாரனை ஆனையம் அதிகாரத்தின் பக்கம் நின்று வரலாற்றை பதிவு செய்தது. (அது பதிவு செய்த விதம் இது) வரலாறு எப்போதுமே வென்றவர்களால் எழுதப்படும் என்பது தான் வரலாறு, அது சாதரனனைப் பாடுவதே இல்லை. [சோளகர் தொட்டி பாலமுருகன்] பாலமுருகன் இத்தகைய பழங்குடிகளைத்தான் தண்டகாருன்யாவிலிருந்து இடம்பெயர வற்புறுத்தி அதிகார வர்க்கம் முகாமிட்டிருக்கிறது. Armed Forces Special Power Act, போன்ற மனித தன்மையற்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும், ராணுவத்தின் விசாரணை முறைகள் இதை ஒத்ததாகவே இருப்பதால் தானே, சில மணிப்பூர் பெண்கள் நிர்வானமாக திரண்டு தங்களை கற்பழிக்குமாறு அரச வன்முறைக்கு எதிராக போராடினார்கள், பத்தாண்டுகளாகவே உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் சர்மிளாவும் அதே அரச வன்முறையைத்தான் எதிர்த்துதானே போராடி வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது போன்ற மனிதத் தன்மைக்கு விரோதமான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. வீரப்பனைக் கொன்று மன்னில் புதைத்தாகிவிட்டது. காவலர்கள் பதக்கங்களோடு தங்கள் பொழுதை ஓய்வாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். தொட்டியில் கொத்தல்லி சீரழிந்து போன தங்களையும் தங்கள் வாழ்விடத்தையும் பற்றி பொட்டிப் பொடுசுகளோடு துயரத்தோடு காட்டை நோக்கிக் கொண்டிருப்பார். (படம்: http://naathaarikalappiren.blogspot.com) http://thamiziniyan.com/solakar-thotti/ 2 நீதிக்கட்சி வரலாறு புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை பதிவு செய்தவர்களின் வரலாறு இன்று பயங்கரமாக சுருங்கிப் போய்விட்டது.தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றப் பெயர் கூட அவர்கள் நடத்திய பத்திரிக்கையின் பெயராலேயே நீதிக் கட்சி என்று சுருங்கிப் போய்விட்டது. தியாகராயர் நினைவாக பெயர் சூட்டப்பட்ட பகுதி இன்று சுருங்கி தி.நகர் ஆகிவிட்டது. பனகல் அரசரின் நினைவாக அமைக்கப்பட்ட பனகல் பூங்காவுக்கும் அவருக்கும் இன்றெதுவும் தொடர்பில்லாதது போன்ற நிலை நிலவுகிறது. இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.திராவிடர் கழகத் தோழர்கள் சிலரும், வாலாசா வல்லவன், க.திருநாவுக்கரசு போன்ற தோழர்களும் இன்னும் சிலரும் நீதிக்கட்சியின் வரலாறைத் தொகுத்துள்ளார்கள். ஆனால், பரவலாக நீதிக்கட்சியின் சாதனைகளும், வரலாறும் பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. இன்றைய நிலையில் (2011 இல்) நீதிக்கட்சியின் வரலாற்றை எழுதுவதென்றால் ஆழமான முன்னுரையோடு துவங்க வேண்டும், சில கூடுதல் தகவல்கள் தேவை. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் விவரம் அறிந்து வாழ்ந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்று யாரும் வாழ்ந்து வருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை, எத்தனை புரட்டோடும், திரித்தும் எழுதலாம். அந்த புரட்டுகளுக்கும் திரிபுகளுக்கும் யாரும் பதிலோ, மறுப்போ சொல்லப்போவதில்லை. திராவிடத் தேசியத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் சண்டை போடும் வேளையில் இந்த புரட்டர்களையெல்லாம் யாரும் கவணிக்கப்போவதில்லை, யார் வேண்டுமானாலும், எத்தனை திரிபுகளையும் மேற்கொள்ளலாம். நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்கு புறக்கடை வேலையெல்லாம் செய்துதான் ஆட்சிக்கு வந்தார்கள், என்ற பழைய பல்லவியை புதிய பாடகர்களையும், கருவிகளையும் கொண்டு பாடலாம். அவர்கள் ஆதிதிராவிடரை முதலமைச்சராக ஆக்கவில்லை, அவர்கள் நலனுக்கு எதையும் செய்யவில்லை என்று புதிதாகவும் பாடல் இயற்றலாம். எந்த மறுப்பையோ, வரலாற்று உண்மைகளையோ உரக்கச் சொல்லும் காலமும் இல்லை. ஆனால், ஒரு முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பு இப்படி பாடியவர்களுக்கெல்லாம், பதிலடி கொடுக்கும் ஒரு தலைமுறை இருந்தது. அந்த புரட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல நீதிக்கட்சியோடு தொடர்பிலிருந்த மூத்தவர் வீ.ஆர்.சந்திரன் “நீதிக்கட்சி வரலாறு” என்ற சுருக்கமான புத்தகத்தைத் தந்திருக்கிறார். நீதிக்கட்சியின் வரலாற்றை மேற்கொண்டு விரிவாய் படிக்க விரும்புவர்களுக்கு ஒரு அருமையான முன்னுரை இந்த புத்தகம், அல்லது வெறுமென நீதிக்கட்சி வரலாறு தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஏற்ற நூல் இது. இந்நூலைப் பதிப்பித்தவர் இன்றைய அப்துல்லாவும், நேற்றைய பெரியார் தாசனும். பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1982. மொத்தம் அய்ம்பது சொச்சம் பக்கம். []                           முன்பே கூறியது போல அன்றைய நிலையில் நீதிக்கட்சிக்கு பெரிதாக முன்னோட்டம் தேவையில்லாத நிலையிலும், அத்தகைய முன்கதை, சமூகச் சூழலைப் பற்றிய பெரிய அறிமுகமெல்லாம் இல்லாமல், தியாகராயர், மாதவன் நாயர் பற்றிய அறிமுகங்களோடு துவங்கி, நீதிக்கட்சியின் துவக்கத்தை சொல்லிச் செல்கிறார். இரு தலைவர்களுக்கும் இருந்த முரண், நட்பு என்று விளக்கும் போதே நீதிக்கட்சியின் துவக்ககால வரலாற்றையும் விவரித்து, அவர்களது ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளையும், சொல்கிறார். மாதவன் நாயர், தியாகராயர், பனகல் அரசர் இப்படி பல நீதிக்கட்சித் தலைவர்களையும், அவர்களுக்குக் கட்சியோடு இருந்த தொடர்பும், நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தின் கடைசி நிலையும், பின்னர் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவர் ஆவதும், நீதிக்கட்சி – திராவிடர் கழகம் – திமுக என்று நீதிக்கட்சியின் முழு வரலாறையும், குத்தூசி குருசாமி சொல்லியதைப் போல விறுவிறுப்பாக அய்ம்பது பக்கங்களில் எழுதியிருக்கிறார். அன்றைய நிலையில் நீதிக்கட்சியின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, பதிலும் விளக்கமும் அளிக்கிறார். உதாரணமாக வெள்ளையர்களின் அடிவருடிகள் என்ற விமர்சனத்துக்கு இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்கு அருகதையுள்ளதா என்பதில் ஆரம்பித்து அவர் சொல்லிச் செல்லும் விளக்கம் நீதிக்கட்சியின் முக்கிய கொள்கையை விவரிக்கும் போதே, தியாகராயரின் தனிப்பட்ட கொள்கைகளையும், அவர் உறுதியையும் விளக்குவது வரை செல்கிறது. நீதிக்கட்சி தோற்றத்துக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் அரசியல் சீர்திருத்தமா? சமூக சீர்திருத்தமா? என்ற கொள்கை வேறு பாட்டில் காங்கிரசில் அரசியல் சீர்திருத்தத்தக் குழு வென்றது, காங்கிரசின் சமூக சீர்திருத்தக் குழு தோற்று மறைந்து போனது. நீதிக்கட்சியோ சமூக சீர்திருத்தத்தை முன்வைத்தது, இது காங்கிரசிலிருந்து நீதிக்கட்சி முரன்பட்டு நின்ற முதல் இடம், 1920இலேயே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்கள், காங்கிரசு முதலில் தவறவிட்டு பின் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறு கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று காங்கிரசு அத்தனை முரண்பாடுகளையும், கோபங்களையும் நீதிக்கட்சி மீது கொண்டிருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பெரிய முரண்பாடாக விளங்கியது பிராமணர், பிராமணரல்லாதார் நலனில் நீதிக்கட்சியும் காங்கிரசும் கொண்டிருந்த வேறு வேறு பார்வைகள் தான். இப்படி காங்கிரசு – நீதிக்கட்சி, நீதிக்கட்சி – காந்தி என்று பல முரண்பாடுகளையும் பட்டியலிட்டுச் செல்லும் போதே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாதோர் நலனுக்காகவும், அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கியது, பல அரசு துவக்கப் பள்ளிகளைத் தொடங்கி தமிழகத்தில் கல்வியைப் பரவாலாக்க நடவடிக்கை எடுத்தது என்று நீதிக்கட்சியின் பல சாதனைகளை விளக்கி, பெரியார் நீதிக்கட்சியின் தலைமையை ஏற்று திராவிடர் கழகமாக மாற்றியதில் இந்த புத்தகத்தை முடிக்கிறார். இப்படி நீதிக்கட்சியின் முழுமையான வரலாறை இவ்வளவு சுருக்கமாக முடிக்கிறார். இந்த புத்தகம் இன்று பதிப்பிலிருக்கிறதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சி நசனுடைய தமிழத்திலும் இந்த நூல் மின்நூலாக இல்லை. இப்படி ஒரு நூலாவது இருந்ததே என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு. http://thamiziniyan.com/justice-party/ 3 வால்காவிலிருந்து கங்கை வரை வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் பற்றிய இக்கட்டுரை, செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரை விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இங்கு வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் (கதைச்) சுருக்கம் மட்டுமே எழுதியிருக்கிறேன்.இந்நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால், 20 பகுதிகளாக எழுத வேண்டும். வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல சாங்கிருத்யாயன் அவர்களால் 1944ல் எழுதப்பட்டது.இந்நூலை 1949ல் திரு கண.முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே மலர்ந்தது. இந்நூலின் மூலம் இந்தியில் ராகுல்ஜியால் எழுதப்பட்டது. வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சைன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் ஒரு சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது எனலாம். புத்தகச் சுருக்கம்: வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து,பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி.கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி1942ல் முடிகிறது. இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு(ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும்,கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும் முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் கதைகளாக வடித்திருக்கிறார். நிஷா, திவா மற்றும் அமிர்தாஸ்வான்: இந்த முதல் மூன்று கதைகளிலும் வால்கா நதிக்கரையிலிருந்து மத்திய ஆசியா வரை படிப்படியாக வந்த இனக்குழுவின் கதைகளை காணலாம். இந்த படிநிலையில், முதல்கதையில் தாய்வழிச்சமூகமாக இருந்த குழுவின் தலைமைப் பதவிக்கான போட்டியோடு முடிகிறது , இந்தக்கதையில் சமூகம் முழுக்கவே ஒரே குடும்பமாக, சொத்துடமை இல்லாத புராதணபொதுவுடைமை சமூகமாக இருக்கிறது.இரண்டாம் கதையில் ஒரே குடும்பமாய் இருந்த சமூகம் ஒரே குழுவாக மாறுகிறது, தாய் தலைமை பதவியை வகித்தாலும், அவள் அந்தப் பஞ்சாயத்தின் தலைவியாகவே இருக்கிறாள். மூன்றாவது கதையிலேயே பெண்ணின் தலைமை பிடுங்கப்பட்டு தந்தை வழிச் சமூகமாக மாறிவிடுகிறது,பெண்ணின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவளும் ஒரு பண்டமாகவே கருதப்படுகிறாள், ஆனாலும் ராகுல்ஜி பெண்ணின் வீரத்தை மதுரா என்ற பாத்திரத்தில் பறைசாற்றுகிறார். புருகூதன், புருதானன் மற்றும் அங்கிரா: இந்த மூன்று கதைகளில் புருகூதன் கதையில் செம்பும், வெண்கலமும் புழக்கத்திற்கு வருவதையும்,கற்கால கருவிகள் காலாவதியாகி புதுயுகத்திற்குள் புகுகிறார்கள். அதேபோல தங்கமும் ஆபரணமாக உருப்பெறுகிறது. மக்களைக் காத்து போரில் வழிநடத்தி எதிரிகளை வெல்லும் தலைவன் இந்திரன் எனப்படுகிறான், இந்த இந்திரனே அடுத்த கதையில் தேவர் குலத் தலைவனான இந்திரனாக மாற்றம் பெற்று வேதங்களால் புகழப்படுகிறான். புருதானன் மற்றும் அங்கிரா கதைகளில் சிந்து சமவெளி நகர மக்களுடன் ஆரியர்களுக்கு ஏற்பட்ட போரும் அந்த நகரங்கள் அழிக்கப்பட்ட வரலாறும் கூறப்படுகிறது. சுதாஸ், பிரவாஹன் மற்றும் பந்துலமல்லன்: மக்கள் சமூகமாய் இருந்த இனக்குழு அரசபதவியை உருவாக்கியபோது, அரசபதவியை சுரண்டலுக்கான கருவியாகப் பயண்படுத்தி பிரிவினையை உருவாக்கும் வேலையை விஸ்வாமித்திர,வசிஷ்டர், பரத்வாஜர் போன்றவர்களை வைத்து புரோகிதர்கள் செயல்பட்டதை சுதாஸ் கதையிலும்,ப்ரம்மசூத்திரம் உருவாக்கி முற்பிறவி, கரும காரியங்களை பயன்படுத்தி மீண்டும் மக்களை அடிமைப் படுத்தும் வேலையை பிரவாஹன் செய்ததையும் அதை யக்ஜவல்கியன் மேற்கொண்டு முன்னெடுத்து செலுத்தியதையும் பிரவாஹன் கதையிலும் சாட்டையடியாய் விளாசுகிறார் ராகுல்ஜி. பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததும் கூறப்படுகிறது. நாகதத்தன், பிரபா, சுபர்ணயௌதேயன் மற்றும் துர்முகன்: இந் நான்கு கதைகளிலும் மக்களின் பஞ்சாயத்து முற்றிலும் முழுதாக ஒழிக்கப்பட்டு சர்வாதிகாரமும் கொண்ட சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப்பட்ட காலகட்டம் பின்னணியாக வைக்கப்பட்டு குப்தர்களின் அரசாட்சி முறை விமர்சணத்துக்கு உள்ளாக்கப்படுகிறது, அதே சூழலில் பௌத்த தத்துவமும், பௌத்த ஜனசங்க ஆட்சிமுறையும், அஸ்வகோஷ் போன்றவர்கள் வாயிலாகவும் விளக்கப்படுகிறது. இந்திய கலை உலகத்துக்கு அஷ்வகோஷால் நாடகக் கலை, வடிவம் பெற்றதையும்,காளிதாசர், பானபட்டர் போன்ற படைப்பாளிகளும் தங்கள் படைப்புத்திறனை அரச துதி பாடுவதற்கு பயண்படுத்தியதையும் ராகுல்ஜி ஒரு பாத்திரமாக மாறி சாடுகிறார். சக்கரபாணி, பாபா நூர்தீன் மற்றும் சுரையா: இம்மூன்று கதைகளிலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வருகையையும், கொள்ளையையும் மற்றும் அவர்களது அரசாட்சியையும் அவர்களை ஒட்டுமொத்தமாய் எதிர்க்காத இந்திய அரசர்களையும் ராஜ புத்திரர்களின் வீரத்தையும், இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி முறையையும் கூறுகிறார். அக்பர்-பீர்பால் பற்றிய கதைகளை அக்பரும் பீர்பாலும் தோடர்மாலும் பேசிக்கொள்வதாகவும் அவர்களுடைய பேச்சு மதங்களை தாண்டிய மணிதத்தைப் பற்றியதாகவும் அதை நோக்கிய பயணத்தைப் பற்றியும் இருக்கிறது. ரேக்கா பகத், மங்கள சிங், சபதர் மற்றும் சுமேர்: இந்நான்கு கதைகளிலும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் கூறப்படுகிறது. ரேக்கா பகத் கதையில் ஜமீன்தாரி முறையின் தோற்றத்தையும், ஆங்கிலேய ஆதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும் அதன் தோற்றத்தை அலசி ஆராய்பவர்களில் ஒருவரான,ரேக்காபகத், ஜமீன்தாரி முறையால் என்ன ஆனார் என்பதும், அவர் ஜமீன்தாரி முறைக்கு எதிராக என்ன செய்தார் என்பதும் அடங்குகிறது. மங்களசிங் கதையில், சிப்பாய் கலகம் செய்தவர்கள்,கவணிக்கத் தவறிய,செய்யத் தவறிய ஆனால், செய்திருக்க வேண்டிய செயல்களை செய்யும் ஒரு வீரனான மங்கள சிங்கின் கதையைக்கூறி சிப்பாய் கலகத்தையும் அதை முன்நின்று நடத்தியவர்களையும் விமர்சிக்கிறார் ராகுல்ஜி. சபதர் மற்றும் சுமேர் ஆகிய இரன்டு கதைகளும் கி.பி1922 முதல் இரண்டாம் உலகப்போர் காலம் வரையிலான இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும், மகாத்மா காந்தியின் போராட்டமுறைகளையும் விமர்சிக்கிறார்.இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இக்கட்டான நிலையையும், பாசிச,நாசிசத்தால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும், பொதுவுடைமை மட்டுமே இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் என்பதையும், (எக்காலத்திலும்) நடுநிலை வகிப்பதாய் சொல்பவர்களையும் சாடுகிறார். ராகுல்ஜி அவருடைய பயணக்கட்டுரைகளுக்காக புகழ்பெற்றவர், வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தின் இருபது கதைகளிலும் அவரும் ஊர்சுற்றியாகவே அந்தந்த காலத்துக்குச் சென்று பார்த்ததைப் போலவும், கதைகளில் வரும் பாத்திரங்களின் பேச்சும் செய்கையும் இந்தப் பாத்திரங்கள் ராகுல்ஜியாகவோ அல்லது ராகுல்ஜி இந்த பாத்திரமாகவோ, வாழ்ந்திருப்பதை அறிய முடியும். இந்த நடையும், கதை சொல்லும் பாங்குமே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம். http://thamiziniyan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5/ 4 சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர் மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமானடி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது. “பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”என்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டதென்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே? சோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து-முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர். இந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல்,அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும்,அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள், 1. துருக்கிய-பாரசீகச் சான்றுகள் 2. முகமது காலத்திய சமணச் சான்றுகள் 3. சோமநாதபுரத்திலுள்ள் சமஸ்கிருதக் கல்வெட்டுகள் 4. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள் 5. தேசிய வாதிகளின் பார்வைகள் இந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷியா-சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார். சோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும்,கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார்.சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும்,மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ-சமண, சிவன்-மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது? இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா? ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து-முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம். மீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும்,அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார். ஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது,உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார். சோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும். நூல் : சோமநாதபுரம் கதையும் வரலாறும் ஆசிரியர் : ரூமிலா தாப்பர் தமிழில் : கி.இரா.சங்கரன் பதிப்பகம் : நியூ சென்சுரி புத்தக நிலையம் விலை : 15 ரூபாய் பக்கங்கள் : 30   வரலாற்றுத் துறை பேராசிரியர். பண்டைய இந்திய வரலாற்றில் அதிக கவணம் செலுத்தி அந்த துறையில் பேராசிரியராக பணி புரிந்தவர். மௌரியப் பேரரசின் வீழ்ச்சி, அசோகரது தம்மம் போன்ற பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டவர். 1992ல் ஒரு முறையும், 2005ல் ஒரு முறையும் இந்திய அரசு இவருக்கு பதமபூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதுகளை வேண்டாமென மறுத்தவர்.   http://thamiziniyan.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be/ 5 களை எடுக்க ஒரு மண்வெட்டி ”மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.” என்று எங்கெல்ஸ் தனது “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” நூலில் கூறியதை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்வதற்கு நம்மாழ்வாருடைய “களை எடு” புத்தகம் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதனே “கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் உருப்படியான வேளான் கொள்கை ஒன்று கூட இல்லை. காலங்கடத்தாமல் ஒரு சரியான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தப்படாவிட்டால் இந்திய வேளான்மை நொறுங்கிபோவதை யாராலும் காப்பற்றமுடியாது” என்கிறார். அவர் கொண்டு வந்த கொள்கை திட்டத்தை உருப்படியான கொள்கையாக அவராலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மகத்தான தோல்வித்திட்டம் தான் “பசுமை புரட்சி” என்பதை மிக எளிமையாகவே விளக்குகிறார் இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்ட நம்மாழ்வார். எம்.எஸ். சுவாமிநாதன் சொல்வதைப்போல ஒரு புதிய வேளான் கொள்கையை உருவாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கொள்கையில்லை, ஆனால் பழைய பசுமை புரட்சியில் லாப நோக்கத்துக்காக நிலத்தை பாழ்படுத்தவும் தயங்காத முதலாளித்துவ கொள்கையாளர்களின் நிழலை ஒரு துமியளவும் உள்ளே நுழைய விடாமல் தடுக்க வேண்டும். புதியக்கொள்கை இயற்கை விவசாயம் மூலம் முன்னெடுக்கப்படும் ஒரு உண்மையான பசுமை புரட்சியாக இருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமா என்பதை சத்தியமாக எதிர் பார்க்க முடியாது. ஏனென்றால், இயற்கை விவசாயம்  லாபத்தைத் தருவது மண்ணுக்குச் சொந்தக்காரனுக்குத்தானே தவிர மான்சாண்டோக்காரனுக்கு அல்ல, பிறகு எப்படி அது சாத்தியமாகும்? ”இயற்கை விவசாயத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள்” என்று கூறுமளவுக்குத்தான் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இயற்கை விவசாயம் பற்றிய அறிவு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு இந்திய அரசு எப்படி ஒரு பசுமைப் புரட்சியை செயல்படுத்தியது? இரண்டாம் பசுமைப் புரட்சியை செயல்படுத்தப் போகிறது? இவருக்கு உண்மையிலேயே இயற்கை விவசாயம் பற்றிய அறிவு இல்லையா? அல்லது நம்மாழ்வார் கூறுவது போல “…பிரச்சினைகளையும் அவைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்புகளையும், தள்ளிப்போடச் சொல்லப்படும் சாக்கு போக்குகளா…” என்பது சந்தேகம் தான்? ”இந்த உலகின் அனைத்து வகையான முன்னேற்றங்களும் தனக்கு ஏற்றபடி இந்த உலகை மாற்ற முயற்சிப்பவனை நம்பித்தான் உள்ளது, மாறாக இந்த உலகுக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்பவனை நம்பி அல்ல” என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னது போல, தனியனாய் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து இன்று அகில உலகத்துக்கே அதை போதிக்கும் “மசனோபு ஃபுகோகா” பற்றியும் அவர் செயல்படுத்திய வைக்கோல் புரட்சியையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நம்மாழ்வாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொல்லை தரும் பூச்சிகளை ஒழித்துக் கட்டி மகசூலைப் பெருக்குங்கள் என்று வாய்கிழிய கிழிய மூளைச்சலவை செய்து நிலத்தை மலடாக்கி தங்கள் வயிறை செழிப்பாக்கிக்கொள்ளும் நஞ்சு உற்பத்தி நிறுவனங்களுக்கு (பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள்) சவுக்கடி கொடுக்கும் விதமாய் ஒவ்வொரு பூச்சியின் செயல்பாடுகளையும் விளக்குகிறார் ஆசிரியர். பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக தன்னுடைய உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் பூச்சிகள் இந்த நஞ்சு தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்து பல்லிளிக்கின்றன. “பூச்சிமருந்து தெளிப்பதினாலேயே செடியுன்னும் பூச்சிகள் பெருகி விட்டன” என்ற நம்மாழ்வாரின் வரிகள் அந்த நிறுவனங்களுக்குத் தெரியாததா என்ன? இல்லை இந்த அரசாங்கத்துக்கும் , எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் தெரியாததா என்ன? தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் தோல்வி அடைந்ததை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது. இயற்கையோடே இனைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள், வானிலையை தாங்களே கணித்தார்கள், அவர்களுக்கு சாட்டிலைட்டுகளோ, சாட்டிலைட் தொலைக் காட்சிகளோ, குறைந்த பட்சம் ரமனனோ கூடத் தேவைப்படவில்லை, “தும்பி பறந்தால் தூரத்தில் மழை”, “தவளை கத்தினால் தானே மழை” என்று சுற்றியிருக்கும் பூச்சிகளையும் மற்ற உயிரினங்களையுமே நம்பினார்கள். இன்று தும்பியையே பார்த்தேயிராத ஒரு தலைமுறையும், டிஸ்கவரி சேனல்களிலும் தேவதைக் கதைகளிலும் மட்டுமே தவளையைப் பற்றி கேள்விப்படப்போகும் சூழலும் உருவாகி இருக்கிறது. தும்பிகளும் தவளைகளும் நிலத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்கப்பட்டதை நாம் அறிவோமா? பூச்சிக் கொல்லிகள் என்ற பெயரில் நஞ்சைத் தெளித்ததால் ஏற்பட்ட விளைவுகளை நாம் மறந்துவிட்டோம் இல்லை அவைகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டன, இதோ பக்கத்திலிலுள்ள பாலக்காட்டில் முந்திரிகாடுகளில் தெளிக்கப்பட்ட நஞ்சால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றியும் வெளி உலகுக்குத் தெரிந்ததா? இல்லை, அரசாங்கமும் அதன் தவறுகளை மூடி மறைக்க உதவும் ஜனநாயக நடவடிக்கையான விசாரனை கமிஷனும் கூசாமல் பொய் சொன்னதையும் நாம் அறிவோமா? குமரி முதல் இமயம் வரை என தேசியம் பேசுபவர்களில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு பிரச்னையைப் பற்றித் தெரியும்? எத்தனை விவசாயிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு இருந்தது? சாதாரனனின் வாழ்வியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இது போன்ற மக்கள் பிரச்னைகளில் கவணம் செலுத்தாத ஒரு அரசு எப்படி ஒரு மக்கள் நல அரசாக இருக்க முடியும்? இது போன்ற நிகழ்வுகளை வெளிக்கொண்டு வராத ஊடகங்கள் எப்படி மக்களுக்காக சேவையாற்றுவதாகச் சொல்லிக்கொள்ள முடியும்? இந்நிகழ்வுகளுக்காக குரல் கொடுக்காத ஒரு கட்சியின் தலைவன் எப்படி ஏழைப் பங்காளனாக இருக்க முடியும்? ஆனால் சாதரனனின் உலகம் அப்படி இல்லை என்பதைத்தான் நம்மாழ்வாரும், அவரின் களை எடு புத்தகமும் நமக்கு உரக்கச் சொல்லும் செய்தி. இப்புத்தகத்தின் நல்ல அம்சங்களாக எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்? பசுமை புரட்சியின் தீமைகளை, பசுமை புரட்சியின் நல்விளைவுகளை மேற்கோள் காட்டிக் கேட்கப்பட்ட கேள்விகளின் பதிலிலேயே நம்மாழ்வார் தெளிவுபடுத்தும் விதம் அருமையானது. இப்புத்தகத்தில் கண்ணைக் குத்தும் ஒரே அம்சம் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பலவும் சில பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை, அவை எந்த ஆண்டு எழுதப்பட்டவை என்ற குறிப்பை கட்டுரையின் இறுதியிலோ அல்லது துவக்கத்திலோ இனைத்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.   http://thamiziniyan.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ 6 குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள் திராவிட இயக்கத்திலும், அதன் வரலாற்றினூடேயும் கரைந்து போன மூத்தவர்களுக்கு குஞ்சிதம் குருசாமி என்ற பெயர் திராவிட இயக்கத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட தலைவர்களுள் ஒருவர் என்பது தெரியும். திராவிடம், திராவிடர் என்ற சொற்கள், அரசியல் கட்சிகளாலும், அவற்றின் அரைகுறைத் தலைவர்களாலும் கொச்சைப்படுத்தப்பட்ட, பொருளிழக்கப்பட்ட சொற்களில் ஒன்றாகிப்போன காலகட்டத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற இளம் தலைமுறையினர் பலரும் அறிந்தும் கூட இராத ஒரு தலைவர் குஞ்சிதம் குருசாமி அம்மையார். அவரைப்பற்றி இதற்கு முன்பு அறிந்ததெல்லாம், குத்தூசி குருசாமியின் துனைவியார் என்பதும்,பாரதிதாசன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக கொண்டு வந்தவர் என்பதும், இந்த இணையரின் மகள் கு.ரசியாவின் பிறப்பின் போதுதான் பாவேந்தர் தாலாட்டுப் பாடலை இயற்றினார் என்பதும்தான்.ஆனால், குஞ்சிதம் அம்மையாரின் ஆழ்ந்த அறிவுக்கும், அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் முன்னால், அவருடைய இந்த பிம்பங்கள் தூளாகிப் போகின்றன. []                       சொல் ஒன்று, செயல் வேறொன்றாக இல்லாமல், பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் வாழ்ந்து காட்டிய தம்பதிகளாக குத்தூசி குருசாமியும், குஞ்சிதம் அம்மையாரும் வாழ்ந்திருக்கிறார்கள்.பொட்டிடாததற்காகவும், தாலி அணியாததற்காகவும் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.இத்தகைய நடவடிக்கைகளால் குடும்பத்திலும், அவருடைய சமூகத்திலும் எட்ட வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இயக்கத்திலோ அவருடைய பங்களிப்பு பெரியளவில் இருந்திருக்கிறது. சுயமரியாதை திருமணங்களில் குஞ்சிதம் - குருசாமி அம்மையாரைப் போல் வாழ்க என்று வாழ்த்துமளவிற்கு வாழ்ந்திருக்கிறார்கள். அன்று, அவர் திராவிட கழக மேடைகளிலும், பிற மேடைகளிலும் பேசிய பேச்சுகள், “குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்” என்ற பெயரில் புத்தகமாகத் தொக்குக்கப்பட்டிருக்கின்றன.அவருடைய பேச்சுக்கள் பிற திராவிட இயக்கத் தலைவர்களின் சொற்பொழிவுகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல, அதேசமயம், இவரிடம் தீவிரமான ஆராய்ச்சிப் பார்வை இருந்திருக்கிறது. இந்தப் பார்வை இவரை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்தியும் காட்டுகிறது. நாம், நமது இயக்கமாக எந்த இடங்களில் பின் தங்கியிருக்கிறோம், அதை எப்படி சரி செய்வது, முழுமையை நோக்கிச் செல்ல செய்ய வேண்டியவை என்ன என்ன என்பதை தூர நோக்கிப் பார்க்கும் பார்வையைக் கொண்டவராகவும் இருந்திருக்கிறார். “நான், இப்போது உங்கள் முன் நின்று பேசும் விஷயங்களை ஒரு தலைவர் என்கிற முறையிலிருந்து பேசுவதாக கருதி விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.நான் சொல்லப்போகும் விஷயங்கள் கிருஷ்ண பகவான் கீதையில் சொன்னார், முகமது நபி திருவாய் மலர்ந்தருளினார், நாம் சொல்வதை நம்புங்கள் இல்லாவிட்டால் சாத்தான் பிடித்துக் கொள்வான், நரகத்தில் கொண்டு போய் தள்ளப்படுவீர்கள் என்று மதப்பிரச்சாரங்கள் சொல்வது போல் சொல்லி உங்கள் அறிவுக் கண்ணைக் கட்டி ஏமாற்றிவிட்டுப் போகாமால், என் அறிவுக்குச் சரியென்று பட்டதை, உங்கள் அறிவுக்குமுன் வைப்பதற்கே வந்துள்ளேன்.” அவருடைய சொற்பொழிவுகள் பெரும்பாலும் இத்தகைய முன் விளக்கத்தோடே துவங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர் எதைத் தாக்க வேண்டுமோ அதை வலுவாய்த் தாக்குகிறார். அவருடைய விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் முன்னால், எதிரில் தர்க்கம் செய்ய ஒருவர் நிற்க முடியாது என்ற அளவிலேயே அமைந்திருக்கின்றன.   நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மூடநம்பிக்கைகளிலும் குருட்டுத் தனமான பழக்க வழக்கங்களிலும் ஈடுபட்ட ஒரு ஜனசமூகத்திற்குக் கொஞ்சம் வேகமான மருந்து கொடுத்துதான் வியாதியைத் தீர்க்க வேண்டியிருக்கிறது.” என்கிறார்.அவருடைய சொற்பொழிவுகள் உண்மையிலேயே கடுமையான மருந்தைத் தான் கொடுத்திருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன.   இங்கு, பெரியாரையும் அவருடைய சொற்பொழிவுகளையும் விடுத்துப் பார்ப்போமானால், இத்தனை வீரியமான கருத்துகள் கொண்ட முன்னணித் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது உறுதி.ஏறக்குறைய பெரியாருடய அனுகுமுறைக்கு இனையானதாக அம்மையாருடைய கருத்துக்கள் இருக்கின்றன. கடவுளின் அருளாசி வாடகைக்கு தங்கியிருக்கும் வீடாக விளங்கும் கோயில்களை விபச்சாரவிடுதிகள் என்கிறார். ஒரு இனத்தினுடைய பெண்களையே சாத்திரத்தின் பெயரால்,சடங்குகளின் பெயரால் பொட்டுக்கட்டிவிடுதல், தேவதாசிகள் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களைச் சுட்டிக்காட்டி, இத்தகைய இடங்களை விபச்சார விடுதி என்றழைக்காமல் வேறு என்ன பெயரிட்டு அழைக்க முடியும் என்கிறார். குஞ்சிதம் அம்மையாரின் இந்த பேச்சு, தேவதாசி முறை,டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் ஒழிக்கப்படுவதற்கு முன் பேசப்பட்டது. தேவதாசி முறை ஒழிப்பில் முத்துலட்சுமி அவர்கள் ஈடுபட்டிருந்த போது, குறுக்குக் கயிற்றால் முதுகைச் சொரிந்து கொண்டே முட்டுக்கட்டை போட்ட சத்தியமூர்த்திக்கு முத்துலட்சுமி அம்மையார் அளித்த பதிலை விட வேறு சிறப்பான பதிலை யாராலும் தந்திருக்க முடியாது. கடவுளின் பெயரால்,மதத்தின் பெயரால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கேடு கெட்டத்தனத்தை ஆதரித்த அதே சத்தியமூர்த்திதான், தேசியவாதி வேடம் போட்டுக் கொண்டு பிரிட்டீஷாரின் அடிமைத்தனத்தை எதிர்த்தவர். இத்தகைய தேசியவாதிகளுக்கும் குஞ்சிதம் அம்மையார் பல இடங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார். “நானூறு வருட அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு முன்னால், 2000வருட அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியது அவசியம் என்கிறார்.” அது, நம்ம கலாச்சாரம்,இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருந்து வரும் பழக்கம், அது இம்மண்ணின் பண்பாடு என்றெல்லாம் கேட்ட கூச்சல்களை, அது பண்பாடும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை,உங்களின் கொழுப்பெடுத்த தடித்தோலின் திமிர்த்தனம், இதை ஒழிக்காமல் வேறெந்த விடுதலையும் சாத்தியமில்லை. இந்தத் திமிர்த்தனத்துக்கு, கொழுப்புக்கு நெய் ஊற்றி வளர்த்துக்கொண்டு இருக்கும் கோயில்களையும், அதன் அதிகாரங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்து தாழ்த்தப்பட்ட,ஆதிதிராவிட மக்களின் கல்விச் செலவுக்கும், பயன்படுத்த வேண்டும். இந்தக் கோவில்களின் பெயரால் செய்யப்படும் செலவினங்களை நிறுத்தி சுகாதாரத்துக்கும், நூலகங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் செலவிட வேண்டும். என்கிறார். மகாத்மா காந்தி உள்பட பல தலைவர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மிஸ் மேயோ என்னும் பெண்மனியால் எழுதப்பட்ட மதர் இந்தியா (Mother India) என்னும் புத்தகத்தை குஞ்சிதம் அம்மையார் வரவேற்கிறார். “மிஸ் மேயோவை இந்தியாவுக்கு அழைத்து வந்து இன்னும் பல கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் காட்டி மதர் இந்தியாவின் இரண்டாம் பாகத்தை எழுதச் சொல்லுவேன் என்கிறார். இன்னும் ஆயிரம் மிஸ் மேயோக்கள் வந்து துப்பினாலும்,புத்திமாறாத நிலையில் இருக்கிறோம்” என்றும் குறிப்பிடுகிறார். காந்தியாலும் பிற தேசியவாதிகளாலும் இந்நூல் எதிர்க்கப்பட காரணம், இந்நூலில் இந்தியாவில் பெண்கள் கடவுளைப் போன்றவர்கள், கடவுளாக மதிக்கப்படக் கூடியவர்கள். உயர்வான நிலையில் இருக்கின்றனர் என்று உண்மையை எழுதாமல், இளம் வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து விடுகிறார்கள், இளம் வயதிலேயே கர்ப்பமாகி அவஸ்தை படுகின்றனர் என்றெல்லாம் வதந்திகளையும் இட்டுக்கட்டியும் எழுதி, இந்தியாவிற்கே வராமல், இந்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றாமல், அதன் ஆழ்ந்த, அகன்ற விழுமியங்களை உணராமல், இந்திய இந்துப் பண்பாட்டின் மீது சேறு வாரி இறைத்துவிட்டார், என்பதெல்லாம் தான் காரணம். புத்தகம் வெளிவந்த போது,இந்தியாவில் மதர் இந்தியா புத்தகத்தை தீயிட்டு கொளுத்தினார்கள், மிஸ் மேயோவின் படத்தையும் சேர்த்து. இப்படித் தன் சக மணுஷியின் மீது நடக்கும் கொடுமைகளை எதிர்க்காத, அவர்கள்,விடுதலையைப் பற்றிக் கவலைப்படாத தலைவர்கள் தான் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக விடுதலைக் குரல் கொடுத்தனர். பெண்ணின் மீதான இக்கொடுமைகளைக் களைவதே முதல் தேவை,என்பதை அடிக்கடி பேசியிருக்கிறார். இப்படி இந்நூலில் குஞ்சிதம் அம்மையாருடைய சொற்பொழிவுகள், பல தரப்புகளில் விரிந்திருக்கிறது, இளவயது திருமனங்களைக் கண்டிக்கும் நேரத்தில், திருமன வாழ்வில் குடும்ப நலனையும், குடும்பத் திட்டமிடலையும் பற்றிப் பேசுகிறார். குத்தூசி குருசாமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் எழுதிய கட்டுரையும் தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலைப் படித்து முடிக்கும் போது, இவ்வளவுதானா என்று தோன்றுமளவுக்கு ஒரு ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் கருத்துக்கள் கொண்டதாக இந்நூல் உள்ளது. அம்மையார் பேசிய பேச்சுக்கள், எழுதிய கட்டுரைகள் மொத்தமும் தொகுக்கப்பட்டால், அது ஒரு சிறந்த கருத்துப் பெட்டகமாக விளங்கும்.   http://thamiziniyan.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae-2/ 7 பாலஸ்தீனக் கவிதைகள் எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் - பிரடெரிக் எங்கெல்ஸ் ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும், இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு இனத்தவன் கல்லெறிகிறான், இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடிக் கொண்டு அடக்குமுறையை காட்டுபவனிடம் தன்னாலியன்ற அத்தனை எதிர்ப்புகளையும் முள் வேலி முகாம்களுக்குள்ளிருந்து செய்கிறான். இன்னொரு இனமோ கண்ணுக்கு கண்ணையும் பல்லுக்கு பல்லையும் பிடுங்கிப்பார்த்தது, மக்களை ஒன்று கூட்டி ஓலமிட்டுப் பார்த்தது, கற்களை வீசிப்பார்த்தது. நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மனம் வந்தவர்களுக்கு ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இன்னமும் மக்களைத் துடிப்புடன் வைத்திருக்க அம்மண்ணின் கவிஞர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அம்மண்ணின் கவிஞர்களின் முக்கிய கவிதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். இன்று நேற்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. என்னை விட அதிக வயது கண்ட புத்தகம் இது. மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் புத்தகம் படித்த போது மஹ்மூத் தார்விஷ் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது பலஸ்தீனக் கவிதைகள் என்ற இந்நூல் மின்நூலாகக் கிடைத்தது. மஹ்மூத் தார்விஷ், பௌசி அல் அஸ்மர், ரஷீத் ஹூசைன், சலீம் ஜிப்றான், தௌபிக் சையத், அந்தொய்னா ஜபாறா, பத்வா துகான், சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ ஆகிய ஒன்பது பாலஸ்தீனக் கவிகளின் கவிதைகள் இந்நூலில் தொகுத்திருக்கிறார்கள். மஹ்மூத் தார்வீஷின் கவிதைகளிலிருக்கும் எதிர்ப்பும் தீர்க்கமான வார்த்தைப் பயண்பாடுகளும் ஏற்கனவே அறிந்தவை தான் என்றாலும். தன் மீதும் தன் இனத்தின் மீதும் அடக்குமுறைக்கெதிராக இவருடைய பசியெடுத்த வாய்கள் கவிதைகளைப் பாடிச் செல்கின்றன. என் கண்களும், உதடுகளும், என்னுடைய தன்னுணர்வும் இருக்கும் வரை எதிரிக்கு எதிராக நின்று, விடுதலைக்கான போரை நான் பிரகடனம் செய்வேன், என்னும் இவருடைய கவிதைகள், அடக்கு முறைக்கெதிராக மட்டுமே காற்றில் கரைந்து செல்கிறது,கேட்கும் உள்ளங்களில் விடுதலைக் கான குமுறலை கொதித்தெழச் செய்யும் விடுதலைக் கீதங்கள் இவருடையவை. இத்தொகுப்பிலிருக்கும் நம்பிக்கை என்னும் இவருடைய கவிதை பாலஸ்தீன மண்ணுக்கு மட்டுமல்ல, போராடும் ஒவ்வொரு மண்ணுக்கும் தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கச் செய்யும் உற்சாகப் பாணத்திற்கு ஒப்பானது. உனது பாத்திரத்தில் - இன்னும் சிறிது தேன் எஞ்சி உள்ளது. ஈயைத் துரத்து தேனைப் பேணு என்கிறார் மஹ்மூத் தார்ஷ்வி. தேன் என்றும் கெட்டுவிடாது, ஆனால் ஈக்களுக்கு இறையாக்காமல் பின் வரும் சந்ததிக்கு பத்திரப்படுத்தச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறார். இவர் இறந்த பின்னும், பாலஸ்தீனத்தில் குண்டடி பட்டு இடிந்து வீழ்ந்துவிடாத வீட்டின் ஒவ்வொரு பாத்திரத்திலும் ஈக்கு இறையாக்காமல் தேன் மிச்சம் உள்ளதுதான். ஈக்கள் ஏவுகணை ஏறி வந்தபோதும், தேன் மிச்சம் இருக்கிறது. எனது நண்பனைப் பற்றி எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். எப்படி அவன் சென்றான்… துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். நான் அவனது காயங்களைப் பார்த்தேன் அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் அன்புள்ள நண்பனே! அவன் எப்போது வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள். “நான் போராடத் துணிந்தவன், ஏனெனில் நான் அரேபியன்” என்று சொல்லும் பௌசி அல் அஸ்மாரின் கவிதைகளோ இன்னொரு வகையானவை. நான் என் ஆன்மாவை அடகு வைக்காத அராபியன் அதனால் தடுப்புக் காவலில் இருக்கிறேன் என்கிறார். அவருடைய நகரங்களிலும், வயல் வெளிகளிளும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்றை சுவாசித்தவர், அந்த சுதந்திரக் காற்றை மீண்டும் சுவாசிக்க தன் கவிதைகளை கூர் தீட்டியிருக்கிறார். சாத்தியமற்றதை என்னிடம் கேளாதே என் நண்பனே என்னை என் நாட்டை விட்டு போகுமாறு உன்னால் கேட்க முடியாது றஷீத் ஹூசைன், பாலஸ்தீனிய அரபுக் கவிதைகளில் அரசியலை புகுத்திய முன்னோடிகளில் முதலாமவர். அம்மக்களின் துயர நிலையைப் பாடும் இவர் கவிதைகள் தங்களுக்குள்ளிருக்கும் துரோகிகளையும் அதே நேரத்தில் சுட்டத்தவறுவதில்லை.இவருடைய கவிதைகள் கால, தேச வேறுபாடுகளைக் கடந்து ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இன மக்களையும் குறிப்பிட்டு பாடுகிறது. இருண்ட கூடாரங்களில் சங்கிலிகளில் எனது மக்களை சிறையிட்டுள்ளனர். வாய் மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர் அவர்களேதும் முறையிட்டால் இராணுவச் சவுக்கால் மரணத்தால் பசியால் அச்சுறுத்துகின்றனர். —————————————————————-   எங்கள் மத்தியில், இன்னும் ஒரு கும்பல் எஞ்சியுள்ளது. அவமானத்தை அது சாப்பிடுகின்றது. தலைகுனிந்து நடந்து செல்கின்றது. அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள் எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம். சலீம் ஜிப்ரானுடய கவிதைகள் தன்ன்னை அடிக்க வருபவனை நோக்கி ஒரு கணம் ஒரேயொரு கணம் உன் முதுகைத் திரும்பிப் பார் என்று சொல்வதைப் போல் அமைந்திருக்கின்றன. ஓ! நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே, தூக்கில் தொங்கும் இம்மனிதன் பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல தொங்கும் இம்மனிதன் என் போல் ஓர் அராபியன். உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர் சியோனில் வாழும்……….. உங்கள் நாசி நண்பர்கள். எங்கள் நம்பிக்கையை, எங்கள் போராட்டத்தை உன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது,எங்கள் தலைமுறைகள் போராடிக் கொண்டேயிருக்கும் நீ அடக்கும் வரை, எங்கள் பசி தீவிரமாகும் போது உன் பற்களுக்கிடையேயிருந்து கூட எங்களுக்கான உணவை நாங்கள் சேகரிப்போம், உன் மார்பின் மீது நாங்கள் ஒரு பெருங்சுவரைப் போல நீண்டு நிற்போம் என்னும் தௌபீக் சையதுவின் கவிதைகள் என்றென்றைக்கும் போராட்டத்தைத் உயிர்ப்போடு வைத்திருப்பவை.   ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம் பால்வீதியில் பொரித்தமீன் பிடிக்கலாம் முதலையைக் கூட மனிதனாய் ஆக்கலாம் இவையெல்லாம் உமக்கெளிது.   ஆயினும் சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை துன்புறுத்தி அழிக்கவோ எமது பயணத்தின் ஓர் அடியினைக் கூட தடுத்துவிடுவதோ உமக்கு சாத்தியமற்றது.   இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம் இங்கு எமக்கோர் பழைமை இருந்தது எதிர்காலம் ஒன்றும் இங்கெமக்குள்ளது வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே…   ஆகவே எனது வேர்களே! ஆழச் செல்க, ஆழச் செல்க! எத்தனை நம்பிக்கையை இவருடைய கவிதைகள் விதைத்துப் போகிறது. மூவாயிரம் மைல்கள் தொலைவிலிருப்பவர்களுக்கு நம்பிக்கையை விதைக்குமானால் களத்திருந்தவர்களுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும். அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், அத்தனை வீரியமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வெடிகுண்டுகளைப் போன்ற கவிதைகளைச் சமைக்கும் இவர்களது வார்த்தைகள் அடிமை விலங்குகளை அரித்தெடுக்கும் அமிலங்களாக பொங்கிக் கொண்டேயிருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு காயங்களைத் தந்த போதும், எங்கள் எலும்புகளை நொறுக்கிய போதும், நாங்கள் உங்களுக்கு எங்கள் நாட்டின் ரோஜாப்பூக்களையும் எங்கள் இசையை உங்களுக்கு இசைத்து காட்டவும் வந்துள்ளோம். ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டபோதும் பொறுமை காத்த நாங்களே உயர்ந்தவர்கள், அந்த பூக்களும்,இசையும் எங்களுக்கு சொந்தமானவையே, நாங்கள் காதலுடனும் அன்புடனும் பேசுவது இதுவே இறுதி முறை, என்று தங்கள் போராட்டம் அடுத்த கட்டமாக ஆயுதத்தை நோக்கித் திரும்பப்போவதை ஒரு போர் பிரகடணமாகவே ஒரு கவிஞர் போர்பறையை அறைகிறார்.அவர், அந்தோய்னா ஜபாறா.   இந்தியப் பெண்களை மதமும் அதன் மாயக்கரங்களும், சமையலறைக்குள் கட்டிபோட்டுவிட்டன, மதத்தின் மாயக்கரங்களைப் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருப்பவை ஆணின் அடிமனத்திலிருக்கும் அகோரப்பசி என்றால் மிகையாகாது,அங்கே, போராட்டம், பெண்ணின் புர்க்காக்குள்ளிலிருந்து வார்த்தைகளை வெளியே கொட்ட வைக்கிறது. இந்த வார்த்தைகள் இருபது ராணுவ வீரர்களுக்குச் சமமானது என்று எதிரியே பயந்தும், வியந்தும் பேசுகிற அளவுக்கு வீரியமான வார்த்தைகளை பத்வா துகானின் கவிதைகள் வீசிச் செல்கிறது. அவருடைய மூன்று கவிதைகள் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிதைவுகளிலிருந்து சித்திரவதையிலிருந்து ரத்தம் உறைந்த சுவர்களிலிருந்து வாழ்வினுடைய மரணத்தினுடைய நடுக்கங்களிலிருந்து புதிய வாழ்க்கை ஒன்று கிளர்ந்தெழவேச் செய்யும் நம்பிக்கையை தன் மக்களுக்கு விதைத்துச் செல்லும் போதே, தங்களின் வலிமையைச் சொல்லி அந்த வலிமையை எதிரிக்கும் உணர்த்துகிறார். அராபிய வேர்கள் இறப்பதே இல்லை அவை பாறைகளைத் துளைத்து ஆழமாய்ச் செல்பவை ஆழ நிலத்திலே தம் வழியினை கண்டறிபவை அவை போராடுபவனை மனிதனாகவும், ஒடுக்குபவனை மனிதகுலத்தின் எதிரியாகவும் சித்தரித்து புதிய விடியல்களை படைக்க அழைக்கும் கவிதைகளைப் பாடிச் செல்கிறார் சமீஹ் அல் காசிம். வாழ்க்கையின் சிறப்பு -என் சிறையிலேயே பிறக்கிறதென்று நான் நம்புகிறேன் அம்மா என்னை இறுதியில் சந்திக்க வருவது ஒரு குருட்டு வௌவாலாய் இருக்காதென்று நான் நம்புகிறேன் அம்மா. அது பகலாய்த்தான் இருக்கும் அது பகலாய்த்தான் இருக்கும் என்று சிறையிலிருந்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், அவருடைய சிறப்பான கவிதைகள் பலவும் சிறையிலேயே எழுதப்பட்டவை. தன் இனத்தின் ரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும் போது மௌனம் காத்த இந்த உலகையே ஒட்டுமொத்தமாய் சபிக்கும் ஒரு அராபிய கவிஞனின் வார்த்தைகள் உண்மையில் இதயமுள்ளோரை வாட்டவேச் செய்யும். நாங்கள் முள் கம்பியின் மீது கிடக்கும் வரைக்கும் இந்த உலகின் தலையணையின் கீழ் “டைனமைட்” ஒன்றை நாம் பொருத்தி வைப்போம் என்று சபிக்கும் நேரத்திலே, உண்மையான மனித மனத்தை, அதன் இயல்பையும் சுட்டிக்காட்டி மனிதனாக மாறுங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார். உலகின் ஆண்களே, உலகின் பெண்களெ, இப்போது நீங்களெம்முடன் இருங்கள் மனிதனுக்குரிய கௌரவம் என்பதை நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம் மனிதன் என்ற பெயரின் மதிப்பை நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம் இப்படி ஒட்டுமொத்த மனித இனத்தையும் அதன் மௌனத்தையும் குலைத்துப் போடும் இந்த குரலுக்குச் சொந்தக்காரர் மூயின் பசைசோ உண்மையில் ஒரு தேசம், மத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, வேறு எந்த பெயரால், அமைப்பால் அடக்கப்பட்டு கிடந்தாலோ, அடிமை விலங்கை இன்னும் தரித்துக் கொண்டிருந்தாலும், இந்த உலகின் எழுநூறு கோடி மனிதனுள் ஒருவனாவது அடிமை விலங்கை சுமந்து கொண்டு சுதந்திரக் காற்றுக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவும் நாம் விட்டால், நம்மை நாம் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருந்து விட முடியும்? “பரந்து கெடுக உலகியற்றியான்”என்றான் வள்ளுவன், பரந்து கெடுக இவ்வுலகு என்பது பொருத்தமாய் இருக்கும், ஒரு மனிதன் அடிமை விலங்கோடு இருக்கும் போது. எனது பேப்பரும், பேனாவும், எனது வீட்டின் இடிந்த சுவரின் கல்லும் என்னை “எதிர்த்து நில்” என்று சொல்கிறது என்கிறார் மூயின் பசைசோ. எத்தனை எளிமையான வார்த்தை எதிர்த்து நில், என்பது ஆனால், வீரியமான வார்த்தை. இந்த வார்த்தைக்குள் தான் அடக்குமுறைக்கெதிராய் நிற்கும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு தனி மனிதனையும் சுவாசிக்கச் செய்து கொண்டிருப்பது, அடக்குமுறையிலிருந்து மீண்ட ஒவ்வொரு தேசத்தையும் அடிமை விலங்கை உடைத்தெறியச் செய்தது.   http://thamiziniyan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1/ 8 மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள் கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும் ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும் எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க முடியாது ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு ~ நபில் ஜனாபி (ஈராக்கைச் சேர்ந்த கவிஞர். மேலே உள்ள கவிதையை குர்திஸ்தான் சுதந்திர தினத்தன்று அவ்விழாவில் பாடியதற்காகவும், அவ்விழாவில் கலந்து கொண்டதற்காகவும் தன் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்.) அணுகுண்டோ ஒரு முறைதான் வெடிக்கும்; புத்தகங்களோ திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் தன்மையுடையது.என்பது யாரோ எப்போதோ சொன்னது. எல்லா புத்தகங்களும் இப்படி திறக்கும் போதெல்லாம் வெடிப்பவையல்ல, சில புத்தகங்கள் அப்படிப்பட்டவை. அப்படி திறக்கும் போதெல்லாம் வெடிக்கக்கூடிய புத்தகங்களிலொன்று என் கைகளில் இப்போது இருக்கிறது. அது,மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள். எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்த பல கவிதைகள் அடங்கிய புத்தகம். [] மூன்றாம் உலகக் கவிதைகள் என்றதுமே, இந்நூல் எத்தகைய கவிதைகளைக் கொண்டது என்பது புரிந்திருக்கும்.இக்கவிதைகள், அடக்குமுறைக்கெதிரான கவிதைகளையும், அடிமைத்தனத்தின் கீழான நிலையையும், அதை எதிர்க்கும் வல்லமையையும், சமூக நீதிக்கான போராட்டங்களையும் உரக்க எதிரொலிக்கும் எதிர்ப்பின் கவிதைகள். எதிர்ப்பைப் பற்றிய கவிதைகள் எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலானதாக இருக்க வேண்டும். என்ற மஹ்மூத் தார்விஷின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அத்தகைய கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கின்றன. போராளிகள், புரட்சியாளர்கள், சிறைக் கைதிகள், கவிஞர்கள்,கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடைய கவிதைகள். ஆகத் தெரிந்த சே குவேரா முதல் பெயர் தெரியாத அடக்குமுறைக்கு எதிராக தன் சொற்களை உதித்த சிறைக்கைதிகள் வரை எல்லோருடைய எதிர்ப்பின் சொற்களும் கவிதைகளாக இந்நூல் முழுதும் கொட்டிக் கிடக்கிறது. கவிதையின் சிறப்பு அதன் இலக்கணத்தையும், அமைப்பையும் விட அதன் பொருளில் தான் இருக்கிறது, அதன் தீவிரத்தில் தான் இருக்கிறது என்ற என்னுடைய கருத்தாக்கத்துக்கு நெருங்கி வரும் கவிதைகள் பலவும் சொற்களாய், அம்மண்ணையும், அம்மண்ணின் வரலாற்றையும் சொல்கிறது. இடஒதுக்கீடுக்கெதிராய் குறுக்குக் கயிறு போட்டு குறுக்கே நின்ற பார்ப்பனர்களையும், அந்தப் பார்ப்பனீயத்தில் திளைத்தவர்களையும் எதிர்த்த ஒரு போராளியின் கவிதையும் இந்நூலில் இருக்கிறது. (அக்கவிதையை எழுதியவர் வரவர ராவ்) அம்மா, என் முடியை வளர விடு, அதை வெட்டாதே கிளைகள் வெட்டப்பட்ட மரம் பாடும் பறவைகளுக்கு உகந்தது அல்ல என்று ஆஃப்காணிஸ்தானின் பழங்குடிகளிடம் பாடப்பட்டுவரும், பெண்ணியக் கவிதையும் இந்நூலில் இருக்கிறது. ஏலாரான் - துட்டகமுனு சண்டை! துட்டகமுனுவுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி ஒரு யானையின் முதுகில் ஏலாரனின் பிணம் அந்தக் கைத்தட்டலை நிறுத்து அந்தக் கைத்தட்டலை நிறுத்து அந்தக் கைத்தட்டலை நிறுத்து கைத்தட்டுதல் நாசமாய் போக! அந்த பெயருக்கு ஒரே… ஒரு … கண்ணீர் துளியை வழங்கப் போவது யார்? அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்…! இக்கவிதைக்குச் சொந்தக்காரர், சிங்களரான பராக்ரமு கொடித்துவக்கு. புர்க்காக்களுக்குள்ளிலிருந்து பெண்ணியக் குரலெழுப்பாமல், அந்தப் புர்க்காக்களைக் கிழித்தெறிந்துவிட்டு குரலெழுப்பும் இஸ்லாமிய பெண்கவிகளின் கவிதைகளும் இருக்கிறது. இஸ்லாமிய கட்டுப்பெட்டித்தன ஆனாதிக்க அடாவடிக் கோட்பாடுகளைக் கொண்ட அத்தனை புனித நூல்களையும் கேள்விக்குள்ளாகும் சயீதா கஸ்தர் என்னும் பாக்கிஸ்தானிய பெண்ணியப் போராளியின் கவிதையும் இருக்கிறது. கிஷ்வர் நஹீத், என்னும் இன்னொரு பாக்கிஸ்தானிய பெண் கவியின் குரலோ முந்தையதுக்கு மாறானது ஆனால்,தீர்க்கமானது. ஒரு ஆடுகுதிரையின் மீது ஒரு குழந்தை ஆடுகிறது அது மரக் குதிரை குழந்தையின் ஸ்பரிசம் அறியாதது குழந்தை குதிரையை அடிக்கிறான் தனது திறமையைக் கண்டு தன்னையே மெச்சிக் கொள்கிறான் அவன் வளர்ந்து பெரியவனாகிறான் மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான் ஒரு சடங்கின் மூலம் தன் இளமையை அறிவிக்கிறான். இரவு கழிந்ததும் குதிரை உரு மாறுகிறது குதிரையை அடிப்பவன் தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன் மாறாமலேயே இருக்கிறான்: எஜமானனாக சவாரி செய்பவனாக கணவனாக அரபு நாடுகளுக்கிடையே, நல்லுறவை நாடும் கவிதைகள், நாஜிக்களின் முகாம்களிலிருந்து சவப்பெட்டியினுள் பினத்தோடு தப்பித்த ஒரு யூதனின் கவிதை, அந்த நாஜிக்கூடங்களிலிருந்து தப்பித்து, மதத்தின் பெயரால்,மதத்தின் புனிதப் பெயரால் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட “பசி கொண்ட பாலஸ்தீனியக் கவி“யின் கவிதை ஒன்று, நான் பசியால் துடிக்கும் போது எனது மண்னை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான் அச்சம் கொள் எனது பசியைக் கண்டு. நிற வெறிக்கெதிராய் போராடிய கறுப்பு பேனாக்கள் கவி வடிக்கின்றன. வெள்ளை நிறமோ விசேட நாட்களுக்குரியது கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும் சொற்கள் ஏ.கே 47களாக வேண்டும் சொற்கள் எப்போதும் போரட வேண்டும் நடு இரவில் திரும்பி பார்க்காமல் விட்டுப்போன, புத்தனின் மனைவி யசோதராவைக் கேட்கும் பெண் கவிகளும்,மரியத்தையும், பாத்திமாவையும் கேள்வி கேட்கும் பெண் கவிகள், முந்தைய சகோதர தேசமும், இன்றைய எதிரி தேசங்களுமான அண்டை நாடுகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒன்றைப் போலவே கேட்கிறார்கள் கேள்விகளாய், ஆணாதிக்கவாதிகளை. அது புத்தனாக இருந்தாலும் சரி நபியாக இருந்தாலும் சரி…   இன்றைய இந்துத்துவ சோதனைக் களத்தின் மைந்தன் ஒருவனுடைய “ஆர்யகுமாரனனின் பிரேதப் பரிசோதனைக்” கவிதை பாடிச் செல்கிறது இப்படி, அவனது தோலை உரித்த போது தங்கத் தகடு ஒன்றும் கிடைக்க வில்லை… அவனது பெரும் தொப்பையிலிருந்து நவமணிகளை எதுவும் எடுக்கவில்லை… (வாழ்நாள் முழுதும் அவன் இவற்றை உண்டதாகச் சொல்லப்பட்ட போதும்) அவனது நஞ்சேறிய இதயத்தில் புணிதச் செயல்கள் ஈட்டிய அமுதத்தைக் காண முடியவில்லை… ஓர் ஓநாயின் அழகான இதயமே சூலம் போன்ற கோரைப் பற்கள் அழகிய கண்களில் முதலைக் கண்ணீர் ஆசார நாளங்களில் உறைந்து போன சாரயம் ஆம் இதுதான் பாடம் போட்டு வைக்கப்பட்ட ஓர் ஆரிய குமாரனனின் பிரேத பரிசோதனை அறிக்கை (நீரவ் பட்டேலுடைய கவிதையின் சுருக்க வடிவம்) இப்படி நூல் முழுக்க, மஹ்மூத் தார்விஷின் வரிகளின் படியமைந்த கவிதைகளே, அந்த மண்ணையும், மக்களையும் சொற்களாய் விவரிக்கின்றன… இந்நூலின் ஒரு குறையாக நான் காண்பது, கவிதைகளுக்கெண் கொடுத்து பட்டியலிடாமலும், பொருளடக்கம் இல்லாமல் இருப்பதும் தான். நூல் : மண்ணும் சொல்லும் மூன்றாம் உலக கவிதைகள் வகை : கவிதைத் தொகுப்பு தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா விலை : ரூ.115 பதிப்பகம் : அடையாளம்   http://thamiziniyan.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e2%80%93-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/ 9 மனித குலமும் தமிழ்த் தேசியமும் சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார்,அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் வரிசையில் மூன்றாவது புத்தகம் “மனிதகுலமும் தமிழ்த் தேசியமும்“. இந்தச் சிறை மலரில் இன்னுமொரு முக்கிய புத்தகம் “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்“. பழநெடுமாறன் அய்யாவினுடைய புத்தகங்களில் மேலோட்டமான எந்தப் பொருளையும் காணமுடியாது, அதேபோல, அவருடைய புத்தகங்கள் தகவல் களஞ்சியங்களாகவே இருக்கும். புத்தகத் தகவல்களோடு பெட்டிச் செய்திகளாக தகவல்களைக் கொட்டித் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான். மனிதகுலமும் தமிழ்த் தேசியமும் என்னும் இந்நூல் அளவில் மிகச் சிறியதாகவும், பத்து அத்தியாயங்களையும் கொண்டிருந்தாலும் எளிமையான ஒரு அறிமுக நூலாகவும் அரிச்சுவடியைப் போலவும் இருப்பது இதன் சிறப்பு. முதல் அத்தியாயம் மனித இனத்தின் தோற்றத்தையும், பல்வேறு வகைப் பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடுகளையும் மிகச் சுருக்கமாக ஒரு கதைச்சொல்லியைப் போலச் சொல்லிச் செல்கிறார். அதே போல அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஏகாதிபத்திய அரசுகளின் தோற்றங்களையும், காலனியாதிக்க நாடுகளின் தோற்றத்தையும், குடியேற்ற நாடுகளின் நிலைப்பாட்டையும் விவரிக்கிறார். தேசிய இனங்களின் வரையறையோடு, இன உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ, மத ஆதிக்கமோ எந்த தேசங்களையும் ஒன்றாக பிணைக்கும் சக்தியாக இல்லாமல், சிதறுண்ட தேசங்களை பட்டியலிடும் அதே நேரத்தில், மொழி மட்டுமே தேசங்களை இணைக்கும் இணைப்புச் சக்தியாக இருப்பதையும், மதத்தைத் தாண்டியும் மொழியால் பிரிந்த தேசங்களையும், மொழியால் இணைந்த தேசங்களையும் பட்டியலிடுகிறார். இணைந்து பிரிந்த நாடுகளையும், பிரிந்து பின் ஒன்றாக இணைந்த நாடுகளையும்,கூட்டமைப்புகளையும் பட்டியலிடுகிறார். பட்டியல் எனும் போதே இன்னொன்றையும் சொல்லிவிடுவதே நல்லது. இப்புத்தகத்தில் பின்னிணைப்பாக உலக நாடுகளனைத்திலும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை பட்டியலிடுகிறார். மொழிவழித்தேசியம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் பேசும் அதே நேரத்தில் மத வழித் தேசியத்தின் பின்னாலிருக்கும் குறுக்குச்சால் ஓட்டும் புத்தியையும், இந்தியப் பிரிவினையின் பின்னாலிருந்த, தேசியவாதிகளின் குழப்ப மனநிலையையும் பதிவு செய்கிறார். அதேபோல ஒரு பெட்டிச் செய்தியில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தலைவர்களின் பிரபலமும், மக்கள் சக்தியும் உடைய தலைவர்கள் இன்று யாருமில்லை,இத்தனை சக்திகளும் படைத்திருந்த அன்றே அவர்களால் இந்திய தேசிய இனத்தை உருவாக்க முடியாமல் போனது, இப்போது எப்படி உருவாக்க முடியுமென்ற கேள்வியை முன்வைக்கிறார். என்னைப் பொறுத்தவரை, புத்தகத்தை இரு பாகமாக நான் பிரிக்கிறேன். முதல் பாகத்தில் பொதுவாக மனித குலம், தேசிய இனங்கள், ஏகாதிபத்தியம் போன்ற பொதுவான விஷயங்களை விளக்குவதாகத் துவங்கி, பின் பாகத்தில் தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசிய சிக்கல்களையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் விளக்குகிறார். தமிழ்த் தேசியம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகம் தந்தாலும், மொத்தத் தேவையை விளக்குவதற்காக எத்தனைச் செய்திகளைச் சொல்ல வேண்டுமோ அத்தனைச் செய்திகளையும் விளக்குகிறார், தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்த அந்தச் சிறு அத்தியாயம் ஒன்றே போதும், வேறு எந்த புத்தகங்களும் தேவையில்லை. இந்தியத் தேசியமெனும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் சிக்கல்களை மேலோட்டோமாக விவரிக்கிறார். அதேபோல அருகாமை தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசியத்துக்கான பிரச்னைகளையும் தருகிறார். கடைசி அத்தியாயத்தில் தமிழ்த் தேசியம் அமைய வேண்டிய தேவையையும், ஈழப் போராட்டத்தையும் தருகிறார். ஒட்டுமொத்தமாய், இப்புத்தகம் தேசிய இனங்கள் பற்றிய பார்வையையும், தேசிய இன கருத்தாக்கங்களின் தோற்றம் மற்றும் அதன் போக்கோடு, தமிழ்த் தேசியத்தைப் பொருத்தி விளக்குவதற்கான ஒரு வழிமுறைக்கையேடாகவும் இந்நூல் சிறந்து விளங்கும். நூல் கிடைக்குமிடம்: மனிதகுலமும் தமிழ்த் தேசியமும் - பழ.நெடுமாறன் வல்லினம், எண்9, Yபிளாக், அரசு குடியிருப்பு, இலாசுபேட்டை, புதுவை- 605008 0413-2257151 vallinam@sify.com விலை: ரூ50/ http://thamiziniyan.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a/ 10 ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி “அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும். “பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது அவர் உதவியாளருக்குக் கூட தெரியாது என்பது தான் வேடிக்கை. இதைப் போன்ற தகவல்களும், ஒரு பத்திரிக்கையாளன் எப்படி எப்படியெல்லாம் தன்னுடைய சோர்ஸ்களைப் பயண்படுத்திக்கொள்வான், அவர்களை எவ்வாறு காப்பாற்றுவான் என்பதையும் விளக்கும் கதைகளும் ஏராளமாய் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் குல்தீப் நய்யாரினுடைய ஸ்கூப் நூலில் தான். லொயோலாவில் படித்த காலத்தில் ஓசியில் வந்த டெக்கன் க்ரோனிக்களில் ஆங்கில ஸ்கூப் நூலின் விமர்சனம் வந்தபோது, அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டேன். இப்போதுதான் இந்நூலை தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, எடுத்த மூன்று மணிநேரத்தில் முழுதாய் படித்து விட்டேன். அந்தளவுக்கு விறுவிறுப்பான நடை, (மொழிபெயர்ப்பிலும் கூட) அதே சமயம் ஆஃப் த ரெக்கார்ட்டாக நடந்த விஷயங்களைப் படிக்க யாருக்குத்தான் கசக்கும்? எமர்ஜென்சிக் காலத்தில், நடந்த விஷயங்களும், அந்த எமர்ஜென்சியிலும் ஒரு சோர்ஸின் மூலமாய் கிடைத்த தகவலையும் ஸ்கூப் செய்தே தீருவேன் என்று 11மணிவரை பொறுத்து அதற்குப் பிறகு அச்சுக்கு அனுப்பும் சாமர்த்தியமும், கமல்நாத்திடம் கொக்கி போட்டு தகவலை வாங்கிய சாமர்த்தியமும், எச்.ஆர்.கன்னா விசாரணைக் கமிஷன் அறிக்கையை அசோக் சென்னிடம் வாங்கி, தனக்கு கொடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் படிக்க முடியாது என்பதால், அதை பக்கம் பக்கமாக பிரித்து தட்டச்சு செய்து விட்டு, அறிக்கையை அசோக் சென்னிடம் தந்துவிட்டு, தன்னுடைய நகல் அறிக்கையை அரசுக்குப் போட்டியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது என்று மனிதர் அந்தக் காலத்திலேயே செமையான ஆட்டம் போட்டிருக்கிறார். பாக்கிஸ்தான் அணுவிஞ்ஞானி ஏ.க்யூ கானுடனான சந்திப்பை குல்தீப் பயண்படுத்திக் கொண்டதாக நினைக்க, குல்தீப்பை பாக்கிஸ்தான் பயண்படுத்திக் கொண்டது ஒரு திருப்பு முனை, அப்போதும் குல்தீப் தோற்காமல், கானிடமிருந்து வரையறுக்கப்பட்ட எல்லையையும் தாண்டி, நோண்டி எடுத்ததில் குல்தீப்புக்கு வெற்றியே. அதேபோல, இந்திரா காந்தியின் காலத்தில் இரும்பாலை அமைக்கும் இடத்தைப் பற்றி குல்தீப் ஸ்கூப் செய்ய,அது ஒட்டு மொத்தமாய் சொதப்பிவிட, மண்ணிப்பு கேட்குமளவிற்கு குல்தீப் மண்ணைக் கவ்வ, அதற்கடுத்து, அந்த குல்தீப்பே அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதைப் போல எழுதியிருக்கிறாரே என்று இந்திரா கூறுமளவுக்கு மீண்டும் மீண்டும் ஸ்கூப்புக்காக அலைந்திருக்கிறார். இப்புத்தகத்துக்கு ஸ்கூப் என்று பெயர் வைக்காமல் இருந்திருந்தால்,என்னய்யா இந்த ஆள் இப்படி ஸ்கூப் ஸ்கூப் என்று இழுத்திருத்திருக்கிறாரே என்று சொல்லுமளவுக்கு ஒரே ஸ்கூப் மழை. நாற்பதாண்டு பழைய செய்தியில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்தால், அந்தச் செய்தியின் பின்னணியில் நின்று அந்தச் செய்தியை முன்னால் கொண்டு வர இவர் பட்ட பாடுகளோடு படிக்கும் போது நாற்பதாண்டு செய்திகளின் பின்னாலிருக்கும் உழைப்பும் நம் கண்முன்னால் படுகிறது.நிச்சயமாய் வரலாற்றின் பின்னணியைப் பற்றிய பின்னணித் தகவல்களை அளிக்கும் அருமையான நூல் தொகுப்பு இது. அதேபோல, ஒரு பெருங்கட்டுரையைச் சுருக்கி எழுதும் கலையில் குல்தீப் அடித்து விளையாடுகிறார். காந்தி இறந்த போது அவர் எழுதியக் கட்டுரையின் சுருக்கத்தையும்,இன்னும் இரு இடங்களிலும் சில கட்டுரைகளின் சுருக்கத்தை தந்திருக்கிறார், மொத்தக் கட்டுரையின் தகவலை இரு பத்திகளில் சுருக்கும் இக்கலை, உண்மையிலேயே பெரிய விஷயம். இக்கலை கைவரப்பெறாமல் நானெல்லாம் தவிக்கிறேன். இந்நூலிற்கு குல்தீப் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இறுதியாகத் தருகிறேன். “ஆள்பவர்களையும், மக்களையும் நேரடியாக இணைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சியும் இணையமும் இப்போது இதைச் சாத்தியமாக்கிவிட்டன. சாதாரண மக்களுக்கு அவர்கள் ஆட்சியாளர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஒரு அரசியல் செய்தியாளர் தேவையில்லை. தொலைக் காட்சியைப் பார்த்தே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். எழுத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர்களும், அதற்கு ஒரு அரசியல் செய்தியாளனைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமென்பதில்லை, இணையத்தில் நிறைந்து கிடக்கும் வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் செய்தி, ஆய்வு எல்லாவற்றையும் தருகிறார்கள். சில சமயங்களில் சில பெரிய செய்திப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை விட இவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். செய்தித் தாள்களின் காலம் முடிந்துவிட்டது என்று இதற்கு அர்த்தமில்லை. போட்டி கடுமையாயிருக்கிறது அவ்வளவுதான். இறுதி வெற்றி செய்தித் தாளுக்கோ,தொலைக்காட்சிக்கோ, வானொலிக்கொ, இணையத்திற்கோ இருக்கலாம். ஆனால், யார் ஸ்கூப் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மரியாதை” என்று இவர் திறமையை மட்டுமே மதிக்கிறார், பதிவர்களிடம் எலக்கியத்திறமை இல்லை, வாசிங்டனில், சிட்னியில்,அமைந்ஹகரையில், அயனாவரத்தில் கூட என்னுடையதைப் போல வந்ததில்லை, அதனால் என்னுடையதுதான் உசத்தி என்று பேத்தவில்லை. ஸ்கூப்புக்கு வணக்கம்.   http://thamiziniyan.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-2/ 11 பிக்ஸார் ஸ்டோரி – எ ஸ்டோரி பை ஹாலிவுட் பாலா ஹாலிவுட் பாலா தன்னுடைய அக்கரைச் சீமையில் தொடர்பதிவாக எழுதிய போது, கேபிளார் இந்த பிக்ஸாரின் கதையை ஒரு புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்றார். ஹாலிவுட் பாலா மறுத்தார்.நான் உட்பட பலரும் மின்நூலாகவாவது கொண்டு வாருங்கள் என்றோம், இத்தனை மாதம் இழுத்தடித்து, ஒரு அச்சுப் புத்தகத்தின் மின்வடிவம் போலவே இந்நூலைத் தந்திருக்கிறார் ஹாலிவுட் பாலா . A pixar story என்ற டாக்குமென்ட்டரியிலிருந்தும், இணையத்திலிருந்தும் எடுத்த தகவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன் என்று ஹாலிவுட் பாலா சொன்னாலும் அதில் அவர் ஒரு விஷயத்தைச் சேர்க்காமல் விட்டு விட்டார். அது அந்த மொழிபெயர்ப்பை, அவருடைய மொழி நடையில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், அந்த அவ்வளவுதான் முக்கியமே. எழுத படிக்க மட்டுமே தெரிந்தால், பதிவராவது சாத்தியமென்றாலும் கூட இந்த மொழிநடை முக்கியம். (அது கை வராமல் காணாமல் போனவர்களை எந்த எலக்கியவாதி பார்த்திருக்கிறாரோ இல்லையோ, இந்த பதிவுலகம் பார்த்திருக்கிறது.) ஹாலிவுட் பாலாவின் அந்த எழுத்து நடைதான் பலமே. சமீபத்தில் உஜிலாதேவி என்ற பதிவாசிரியர் கூட பாலாவின் இந்த எழுத்து நடையை புகழ்ந்ததை உலகமே அறியும். கேபிளார் இதை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். ஹாலிவுட் பாலாவும் எத்தனை நாளைக்குத்தான் பதிவராகவே இருப்பது அவரும் சீக்கிரத்தில் ரைட்டராகி, எலக்கியவியாதி ஆக வேண்டும். பதிவாக வந்த போதே நாம் எல்லாரும் பின்னூட்டங்களில் விமர்சித்துவிட்டோம், அதனால், ஹாலிவுட் பாலாவின் மொழிநடையையும், குறும்பையும் மட்டும் இங்கு மேற்கோளிடுகிறேன். - கம்பெனியை வாங்கிய பின் எதுவும் போணியாகாததால்… முறையே ஈ,எறும்பு, கொசு மற்றும் தேனீ என எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஓட்டுவதற்கு கடையில் எதுவுமில்லாமல், வேலையிலிருந்த முக்கால்வாசி பேரை வீட்டுக்கு ஓட்டிவிட்டார். - ஓரளவு முடிந்த படத்தை, மற்ற மக்களுக்கு போட்டுக் காட்ட… யாருமே எதிர்பாராத மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது …………………………….-ன்னு நினைச்சா… ஹையா… நீங்கOctober Fool! - நாம் இன்னும் 2005-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். முடிந்த வரை, இதே ஆண்டில் வைத்தே கதை சொல்லப் பார்க்கிறேன். டார்டாய்ஸை சுத்தியே ஆக வேண்டுமென்றால்….கொசுவர்த்தி அலர்ஜி இருப்பவர்கள் மன்னிக்கவும். - இனி நமக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவர் ஊதி விட்ட பிக்ஸார் புகை மட்டுமே இன்னும் இருந்தது. ஆனாலும்… அவருடைய பெயரை… ரப்பர் போட்டு… உங்க மெமரியில் இருந்து அழித்துவிடவும். ஆச்சா????? இங்கே இந்த புதுப் பெயரை… ஆளுக்கு, 100 தடவை…மனசுக்குள்ளயே… சொல்லி நியாபகத்துல வச்சிக்கங்க பார்ப்போம்!!! - ராபர்ட், இதற்கு முன் இருந்த டிஸ்னி CEO-க்கு (அதான் பேரை ரப்பர் போட்டு அழிச்சிட்டீங்க…இல்ல!), ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தவர். ‘இவராவது தன் குடும்ப நிறுவனத்தின் பெயரை காப்பாற்றுவாரா’ - என்பது ராய்(டிஸ்னி)-யின் கவலை. ‘இந்த குரங்காவது தன் பங்கு ரொட்டியை சரியாக பிய்த்துத் தருமா’ -என்பது ஜாப்ஸின் கவலை. - பிக்ஸார் அனிமேட்டர்கள், அவர்களின் மற்ற குல வழக்கங்களான…., ‘சுவற்றில் முட்டிக் கொள்ளுதல்’, ‘முடியை பிய்த்துக் கொள்ளுதல்’ போன்றவற்றை ஆரம்பித்தனர். மொழிநடையைச் சொல்ல இன்னும் அதிக உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும் என்பதால் இத்தோடு முடித்துக் கொள்ளலாம், இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கிறது,அதையும் சொல்லிவிடுகிறேன். பிக்ஸார் எப்படி, தன்னுடைய 3Dஅனிமேஷன் கேரக்டர்களுக்கு மெனக்கெட்டதோ,அதைப்போலவே பாலாவும், எளிமையாய் அவர்களின் தொழில்நுட்பங்களைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார், முக்கியமாக ரென்டரிங்கையும், ரே ட்ரேசிங்கையும், விளக்குவதற்காக படித்து அதைப் புரிந்து கொண்டு, புரிந்து கொண்டதை குறை வைக்காமல், விளக்கியெழுதி,வாய்ப்பேயில்லை, பிக்ஸாரின் டெடிகேஷனைப் பாலா சொன்னார், இதை என்னவென்று சொல்வது? அதே போல பதிவு எழுதி முடித்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு இதை மின்நூலாக்குவதால் வரும் ஒரு பிரச்னை, தகவல்களும் தரவுகளும் மாறிக்கொண்டேயிருப்பதுதான், அதைச் சரி செய்யும் பொருட்டு, அப்டேட்ஸ் என்று, அந்த காலவதி தகவல்களுக்குப் பக்கத்திலேயே சொல்லியிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு குறை, ஒரு இடத்தில் டாய் ஸ்டோரி3 க்கு இன்னும் 3மில்லியன் மட்டுமே தேவை எனக்குறிப்பிட்டிருக்கும் ஹாலிவுட் பாலா, பின்னால் டாய்ஸ்டோரி முதல் இடத்தைப் பிடித்ததையும் சொல்லியிருக்கிறார், அப்டேட்டுக்கு அப்டேட் போட மறந்துட்டார் (நான் இந்தக் குறையைச் சுட்டிக்காட்டவும் காரணம், விமர்சனமெல்லாம் போடாதீங்க,போட்டாலும், சென்ஷி மாதிரி புகழ்ந்துடாதீங்க, I feel shy You know…எனக் கேட்டுக்கொண்டதாலேயே. மற்றபடிக்கு இதெல்லாம் பெரிய குறையே இல்லை. இப்போதைக்கு இம் மின்நூலை, www.scribd.comல் நான் வலையேற்றியிருக்கிறேன், இங்கிருந்து நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.அதேபோல ஹாலிவுட் பாலாவும் கூகிள் டாக்சில் வலையேற்றீயிருக்கிறார், அங்கிருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.  http://www.scribd.com/doc/35965465/Pixar-Story-Hollywoodbala http://thamiziniyan.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf/ 12 பேயோன் 1000 எல்லோருடைய வாழ்விலும் ஒரு மொக்கைச் சாமியை, ஒரேயொரு முறையாவது சந்தித்திருப்போம், ஏன் நாமே கூட பலருக்கு மொக்கைச்சாமியாக இருந்திருப்போம். கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இந்த மொக்கைச் சாமிக் குழுவில் நானும் இருந்திருக்கிறேன், உலகமகா மொக்கையன் என்று பெயர் கொடுக்குமளவிற்கு ஒரு மொக்கைச்சாமி எங்கள் தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு மொக்கை போட்டுக்  எங்களை கடுப்பேற்றினான், உன்னை மொக்கை போடுவதில் மிஞ்சுவதற்கு ஒரு ஆளும் இல்லை என்று நானே சொல்லியிருக்கிறேன். அப்போது எனக்கு பேயோனைத் தெரியாது, ஏன் அப்போது பேயோனே கிடையாது. பேயோனுக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. ஆனால், இப்போது அந்த மொக்கைச் சாமியைப் பார்த்தால் சொல்வேன், உன்னை மிஞ்சவும் ஒரு ஆள் இருக்கார்யான்னு. இதற்கும் பேயோன் என்ன சொல்வார் தெரியுமா? உலக இலக்கியங்களை தமிழில் படைக்கும் என்னை மொக்கைச்சாமி என்கிறான் இவன், நான் மொக்கைச்சாமிகளுக்கெல்லாம் மொக்கைச்சாமி ஆயிற்றே என்பார். “இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறையாகும்” என்று பேயோன்1000 நூலின் பின்னட்டை சொல்கிறது. இதிலேயே தெரிந்து கொள்ளலாம் இவரின் குசும்பை. இப்படி நூல் முழுக்க 140 வார்த்தைகளுக்கும் குறைவாகவே இவரின் மொக்கைகள் ( இவருடைய எழுத்துக்களை மொக்கை என்பதில், பல சமயம் எனக்கு உடண்பாடில்லை, அதையும் தாண்டி நிற்பவை அவை), குசும்புகள் ஆச்சரியம் தருபவை, அதிலும் இவரே ஆச்சரியமானவர் தான். இவர் என்ன ஆச்சரியமானவர் என்பது பின்னால். இப்போது இவருடைய மரண மொக்கைகளிலிருந்து சில, இன்று ஆலிவர் ஸ்டீனின் பிறந்த நாள். குழந்தையாகப் பிறந்த அவர் உழைப்பால் வளர்ந்து,Born on the 5th july, platoon ஆகிய சிறந்த படங்களை இயக்கினார். நேற்று அரசி தொடர் பார்க்கவில்லை. மெகாஅப்லோடில் கிடைக்காது. இரவெல்லாம் கணினியை அடைத்துவிட்டு இருளில் அமர்ந்த படியே செயலற்று இருந்தேன். குரோசோவா Ran கதையை சேக்ஸ்பியரிடம் திருடியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சேக்ஸ்பியரே பெர்னாட் ஷாவிடம் அக்கதையைத் திருடியதால் விவகாரம் வளரவில்லை. 100டிவிடி அட்டைகள் தேவைப்படுகிறது. கதை, இயக்குனர் பெயர், வெளிவந்த ஆண்டு ஆகியன உள்ள அட்டைகள் போதும். உலக சினிமா பற்றி எழுத வேண்டும். என் புதிய நாடகம் தூக்கு கைதிகளுக்காக அரங்கேற்றப் பட இருக்கிறது. மரனத்தைவிட கொடியவை உண்டு என காட்டுவதற்காம். நல்ல விஷயத்திற்கு பயண்பட்டால் சரி. மொத்தமே 2660 வரிகள்தான் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்.இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும் இந்த எண்ணிக்கை மாறவில்லை. 12வயதில் என் மகன் டிவியில் கம்ப்யூட்டர் கேம் ஆடுகிறான். அந்த வயதில் நான் டிவியையே டிவியில் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. தற்காலிக உண்மைகளைப் பற்றிய நிரந்தர உண்மைகளை எழுதுபவனே எழுத்தாளன். இது நான் எழுதியதுதான். இருந்தாலும் யாரவது எனக்கு புரிய வைத்தால் நல்லது. காலை தெருவில் கொட்டாவி அடக்க கை தூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைப்பாட்டை தெளிவு படுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது. பேயோன்1000 நூலில் முன்னுரையே கிடையாது, முன்னுரைக்குப் பதிலாக என்னைப் போல பத்தி எழுதுவது எப்படி? என்று எழுதியிருக்கிறார். இதைப் படித்த பிறகு பல பெரிய எழுத்தாளர்களது பத்திகளை எல்லாம், சந்தேக கண் கொண்டே பார்க்கத் தோன்றுகிறது. முக்கியமாக எஸ்.ராவின் துணையெழுத்து, தேசாந்திரி நூல்களை. பேயோனுடைய ட்வீட்டுகளை சில சமயம் குறுஞ்செய்திகள் வழியாகப் பலருக்கும் அனுப்பி, எகனை மொகனையாக திட்டு வாங்கியிருக்கிறேன், அந்த அளவுக்கு மொக்கையாம். ஆரம்பம் முதலே மொக்கை மொக்கை என்று எழுதுவதால், இவர் சும்மா காமெடி பீஸ் என்று எண்ணிவிடாதீர்கள், 140 எழுத்துகளில் உலகசினிமாக்களை விமர்சிப்பதாகட்டும், மொழிபெயர்ப்பு கவிதைகளை மொழிபெயர்க்காததாகட்டும், இரவு வணக்கங்களாகட்டும் பேயோனை மிஞ்ச ஆள் இல்லை. ஏறக்குறைய இவருடைய ஒவ்வொரு ட்வீட்டுகளையும் படித்திருக்கிறேன். ஆனால், இவருடன் விவாதிக்க, வாதாட, எதிர் மொக்கை போட என்றே பலரும் இருக்கிறார்கள். ட்விட்டரின் முக்கியமான தமிழ் ஆளுமைகளில் இவர் முக்கியமானவர். பேயோன்1000 நூலில் 1000 ட்வீட்டுகளில் 1000 ட்வீட்டுகளுமே பேயோனே எழுதியது கிடையாது. அவர் வான்கோழி, ச்சீ வான்கோ, அய்யோ!!! வான்கா (யாரைய்யா இந்த ஆளுக்கு பெயர் வைத்தது) தங்கியிருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றிருந்த போது, பேயோனின் மொழிபெயர்ப்பாளர் லார்டு லபக்குதாஸ் கிட்டத்தட்ட இருபது ட்வீட்டுகளை அள்ளித்தெளித்திருக்கிறார். அதே போல பாஷோவின் கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்ததும் இவர் தான். அதனால், 1000 ட்வீட்டுகளும் பேயோனுக்குச் சொந்தமானது இல்லை. பேயோன் என்ற முகத்திரைக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு முகத்திரைதான், லார்டு லபக்குதாஸ். ஆம், பேயோன் இன்னொருவரின் முகத்திரைதான். ட்விட்டருக்காக அவர் போட்டுக்கொண்ட முகத்திரை தான் பேயோன். நான் தமிழின் மிகப்பெரிய எழுத்தாளன் என்பார், பல நாவல்கள், நூல்கள் எழுதியிருக்கிறேன் என்பார், பல திரைப்படங்களுக்கு வசணம் எழுதியிருக்கிறேன் என்பார், ஆனால் எங்குமே இதுவரை பேயோன் என்கிற பெயரையே பார்த்ததில்லை என்றால், சுய எள்ளலுடன் பதில் சொல்வார். இவருடைய எழுத்துக்கள் எஸ்.ரா வை பெரும்பாலும் ஒத்திருக்கும்,  அதனால் எஸ்.ரா தான் பேயோன் என்ற பெயரில் எழுதிகிறாரோ என்ற சந்தேகம் இருந்தாலும் வேண்டுமென்றே இவர் இப்படி எழுதுகிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். என்னைப் போல பதிவு எழுதுவது எப்படி என்னும் முன்னுரைக்கு பதிலான கட்டுரையில் இவர் எஸ்.ரா தானோ என்று எண்ணுவதற்கு கூடிய பல சாத்தியப்பாடுகளோடே எழுதியிருக்கிறார். குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகங்களை எழுதியிருக்கிறேன் என்கிறார், ஏழுதலை நகரம் நூலைச் சொல்கிறாரோ. “…அவர் என்னிடம் பேச விரும்பி கூச்சத்தால் தயங்கியது போல் தெரிந்தது. நானே அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். நான் அவரது பள்ளி ஆசிரியரைப்போல இருந்ததாகவும், ஆனால், அந்த ஆசிரியருக்கு ஏழு கண்கள் என்றும் அவர் கூறினார்.” என்றும் அவர் எழுதுகிறார். இதைப்போன்ற செய்திகளை ஏழுதலை நகரம் நாவல் முழுதும் காணலாம். அதேபோல பல இடங்களிலும் எஸ்.ராவையே நிணைவூட்டுகிறார். யுவகிருஷ்னா, (பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி: யுவகிருஷ்னாவைச் செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன். அருளெழிலன் இப்படி இருப்பார் என்று அவர் கற்பனை செய்து வைத்து ஏமாந்து போனாரோ, அதேபோல நான் லக்கியைப் பார்த்து ஏமாந்துவிட்டேன். அதிலும் பாலபாரதி பக்கத்தில் லக்கியைப் பார்த்ததும் இத்தனை குள்ளமாக, ஒல்லியாக [:-(] [:-(] [:-(] ) பேயோன் யார் என்று கண்டுபிடிக்க அதிதீவிரமாக இருக்கிறார். பாரா விடம் சென்று நீங்கள் தான் பேயோன் என்று ஒத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். பேயோன் தான் என் குரு என்று யுவகிருஷ்னா சொல்லுவதை வைத்து பாரா தான் பேயோனோ என்று நான் கூட யோசித்தது உண்டு. செம்மொழி மாநாட்டில் ஆழி நாகராஜனைப் பார்த்தும் நீங்கள் தானே பேயோன் என்று யுவ கிருஷ்னா கேட்டிருக்கிறார். பேயோனே அவருடைய ஒரு ட்வீட்டில் சொல்லியிருக்கிறபடி, (போனில் இணிய குரலில் என் முகவரி கேட்ட 20 வயது வாசகிக்கு என் வீட்டிற்கு வந்து சேரும் போது 55 வயதாகிறது. ஒரு ஆட்டோ பயணத்தில் 35 வயது ஏறிவிடுமா? ) யாரவது அழகிய குரலுக்கு சொந்தக்காரர் கேட்டால் தான் அவர் முகவரியைத் தருவாரோ? ஆனால் அந்த அழகிய குரலுக்குச் சொந்தக்காரர், ஒரே பயணத்தில் 35  வயது ஏறிவிடுவதைச் சம்மதிப்பாரா தெரியவில்லை. இப்படி எதாவது செய்து பேயோன் யார் என்று தெரிந்து கொண்டால் தான் உண்டு. பேயோன் எஸ்ரா வாக இருக்கட்டும் அல்லது பேயோனாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் இருக்கட்டுமே. ரோஜவை எந்த பெயரில் அழைத்தால் என்ன? பேயோனை ட்விட்டரில் பின் தொடர நூலினை வாங்க, பேயோன் 1000 – ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு, ஆழி பதிப்பகம் 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. விலை: ரூ60 என்னைப் போல பத்தி எழுதுவது எப்படி? என்ற கட்டுரையைப் படித்துச் சிரிக்க.   http://thamiziniyan.com/20100629%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8b-1000/ 13 நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் சித்தர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஓலைச்சுவடிகளிலும், (அன்றைய பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளில் தான் வாசம் புரிந்தன) சித்த மருத்துவ வல்லுநர்கள் செவிவழியாக தங்கள் வழிவந்தவர்களுக்கும் சொல்லியதுதான் சித்த மருத்துவ முறைகள். மூத்த தொல்குடிகள் தோன்றிய குமரிக் கண்டத்தில்தான் மூத்த மருத்துவமான சித்தமருத்துவமும் தோன்றியது. குமரிக் கண்டம் கடலில் போனபோதே சித்தமருத்துவத்தின் பெரும்பகுதியும் நம்மை விட்டொழிந்து போனது. யூதர்கள் வழக்கொழிந்து போன தங்கள் மொழியை மீள் உருவாக்கம் செய்ததைப் போல, சமஸ்கிருதம் அக்ரஹாரங்கள் மூலமாய் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல, சித்த மருத்துவமும் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. சித்த மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பாடத்திட்டமும் அதன் உள்ளடக்கமும் போதுமான அளவிலில்லை என்பது யாருமறிந்ததே. அதிலும் பாடத்திட்டங்கள் தொல்பொருள்துறையால் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது என்பதும் கவணத்திற்குரியது. சித்த மருத்துவத் துறை வளர்வதால் யாருக்கும் பெரிதொரு பயன் இல்லை என்பதால் எந்தக் கல்வித்தந்தைகளும் சித்தமருத்துவக் கல்லூரிகள் துவங்கப் போவதும் இல்லை. பெரிதளவிலான லாபமில்லாததால், மக்களுக்கான எளிய பயண்பாட்டுக்கான வழி என்பதாலும் எந்த முதலாளித்துவ நிறுவனங்களும் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கப் போவதுமில்லை, அரசுக்கும் இதிலெல்லாம் பெரிதாக கவணமும் குவியப் போவதில்லை, “மழைபெய்கிறது நான் குடைபிடிக்கிறேன்” என்ற கணக்காகத் தான் அரசின் முயற்சிகள் சித்த மருத்துவத் துறையில் இருக்கிறது. [] இந்நிலையில் சித்த மருத்துவம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் தெளிவின்மையை தெளிவாக்குவதும், அறியாமையை அகற்றுவதும், சித்த மருத்துவத்தின் சித்த மருந்துகளின் பயன்களை, பயன்படுத்தும் முறைகளை மக்களுக்குச் சொல்வது என பலவகைகளில் சித்த மருத்துவத்தை ஓரடி முன்னால் காலடி எடுத்து வைக்கச் செய்யும் முயற்சிகளாகும். அந்த வகையில் நலம் வெளியீடாக “நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பையா” என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகத்தில், குழந்தைக்கு கையைப் பிடித்து அன்னா ஆவன்னா எழுதக் கற்றுக்கொடுப்பதைப்போல, நாடிப்பிடித்து நாடிபிடிப்பதற்கு கற்றுக்கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அகத்தியர் கூறிய 62 வகையான அடிப்படை நோய்களின் பட்டியல், மனித உடலிலுள்ள மொத்த நாடிகளின் பட்டியல், சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புற்களின் பட்டியல், செடிகளின் பட்டியல், கொடிகளின் பட்டியல், மரங்களின் பட்டியல் என்று முதல் அத்தியாயத்தில் பட்டியலிட்டுவிட்டு பின்னால் வரும் அத்தியாயங்களில் மொத்தம் 200 வகையான சித்த மருந்துகளையும் பட்டியல் போடுகிறது, அந்தப் பட்டியல்களில் மருந்துக்குத் தேவையான பொருட்கள், அவற்றை கலந்து தயாரிக்க வேண்டிய விகிதம், தயாரிக்கும் வழிமுறை, அந்த சித்த மருந்துகளின் பயன் என்று சித்தமருத்துவ புத்தகங்களின் டெம்ப்ளேட் படி அமைந்துள்ளது. “உலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர், சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன? சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன? சித்த மருந்துகள் என்னென்ன? சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன? சித்த மருந்துகளை எப்போது, எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்? என்பது உள்ளிட்ட சித்த மருத்துவம், அதில் உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் சித்த மருந்துகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும், இந்த நோய்க்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள் என்று மட்டும் சொல்லாமல், அந்த மருந்து தயாரிக்கும் முறைகளையும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக எழுதி இருக்கிறார். “ இப்படித்தான் இந்த புத்தகத்தின் பின்னட்டையில் புத்தகம் பற்றிய குறிப்புச் சொல்கிறது. கிழக்கினுடைய புத்தகங்களில் சில இவ்வாறு பின்னூட்டியதை முன்னூட்டாமல் போயிருக்கின்றன. (அல்லது சொன்ன பில்ட்-அப்களை பொய்யாக்கும் விதமாக புத்தகம் அமைந்திருக்கும். உதாரணம்: மெட்ராஸ்-சென்னை) ஆனால், இந்த புத்தகம் அப்படியில்லை சொல்லியதை விடவும் சிறப்பாகவே இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. மிக எளிமையாக அதேசமயம் பயணுள்ள வகையில் 200வகையான சித்த மருந்துகளின் அறிமுகம் அளிக்கப்பட்டுள்ளது. 32 வகையான மருந்துகளில் எளிமையாக நம்மாலே வீட்டிலிருந்த படியே தயாரிக்கக் கூடிய “குடிநீர், சூரணம், மாத்திரை, நெய், மணப்பாகு, செந்தூரம், பற்பம், தைலம், லேகியம் மற்றும் க்ருதம்” போன்ற சித்த மருந்துகளை முன்பே கூறியது போல பட்டியலிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் மருந்துகளின் வகைகள்: குடிநீர் 12, சூரணம் 55, மாத்திரை 4, நெய் 6, மணப்பாகு 6, செந்தூரம் 7, பற்பம் 10, தைலம் 52, லேகியம் 23, க்ருதம் 9, சில எளிய லேகியங்கள் 10. உதாரணத்துக்கு இந்த புத்தகம் சொல்லும் சில முக்கிய சித்த மருந்துகள், திராட்சை மணப்பாகு: ஒரு லிட்டர் திராட்சைப் பழச் சாற்றில் ஒரு கிலோ சர்க்கரை, 50 மில்லி பன்னீர் கலந்து காய்ச்சி கொள்ளவும். அளவு: தினமும் 60மில்லி தண்ணீரில் 30 மில்லி மணப்பாகு கலந்து குடிக்கவும். பலன்: பித்தச்சூடு, கை கால் எரிச்சல் போன்றவை குணமாகும். எனக்குப் பயண்பட்ட ஒரு சித்த மருந்து: திப்பிலிச் சூரணம்: அரிசித் திப்பிலி, கடுக்காய் தோல், சுக்கு ஆகியவற்றை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும். அளவு: காலை மாலை இரு வேளையும், வயதுக்கு ஏற்ப இரண்டு சிட்டிகை அல்லது ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிடவும். பலன்: இருமல், வறட்டு இருமல் குணமாகும். இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல மருத்துவப் பொருட்கள் பொதுவாக எல்லா சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கிறது, சில பொருட்கள் மளிகை கடைகளிலேயே கிடைப்பது சிறப்பு. இப்படி பல மருந்துகள், பல நோய்களுக்கு தீர்வுகள் என புத்தகம் பக்கம் பக்கமாய் விரிந்து நமக்கு பல அறிய மருந்துகளை கொட்டிக் கொடுக்கிறது. மொத்தத்தில் சித்த மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பொது மக்களுக்கான புத்தகம் அல்லது கலஞ்சியம் இது. நூலின் பெயர் : நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் ஆசிரியர் : மருத்துவர் கே.எஸ். சுப்பையா (எழுத்து வடிவம்: ஆர். பார்த்தசாரதி) பக்கங்கள் :136 விலை : ரூ.65 பதிப்பகம் :நலம் வெளியீடு புத்தகத்தை ஆன்லைனில் வாங்க   http://thamiziniyan.com/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b0/ 14 மெட்ராஸ்-சென்னை என்சைக்ளோபீடியா போல சென்னையைப் பற்றிய பல (ஆன்மிகத்) தகவல்களை கொட்டிச் செல்கிறது “மெட்ராஸ்-சென்னை” புத்தகம் (ப்ராடிகி பதிப்பு). புராதனகாலத்திய சென்னையின் படிமங்களைச் சொல்வதோடு கூவத்தின் இன்றைய நாற்றத்தையும் பதிவு செய்கிறது. இன்றைக்கு கடற்கரை ஓரமாக ஒரே பகுதியில் சுருங்கிவிட்ட இந்த பாவப்பட்ட மக்கள் தான் சென்னையின் பூர்வகுடிகளாம். மொத்த தமிழகத்திலிருந்தும் இடம்பெயர்ந்த தமிழக அகதிகளாலும், ஐ.டி துறையைத் நாடி, தேடி வந்த அகில இந்திய அகதிகளாலும் சென்னை ஆக்கிரமிக்கப்பட சென்னையும் வளர்ந்துகொண்டே வந்தது, கட்டிடங்களின் அளவிலும் பரப்பளவிலும், உயரமான பனை மரங்களை அழித்து உயரமான, மிக உயரமான கட்டிடங்களைக் கட்டிவிட்டோம். சென்னையில் மிகுந்திருந்த பனைமரங்கள் தான், தமிழ்நாட்டின் மாநில மரமாம், இந்த தகவலையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. ஆனால் இன்று சென்னை என்று சொல்லப்படும் வட்டாரத்தில் ஒரேயொரு பனைமரத்தையாவது பார்க்க முடியுமா? முடியுமென்று சொல்கிறது இந்த புத்தகம். கிண்டி சிறுவர் பூங்காவிலும், ஐஐடியிலும், தியோஸபிக்கல் சொசைட்டியிலும் பார்க்கலாமாம். இப்படியே போனால் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளில் வரும் குழந்தைகளுக்கு அதிசய பொருட்களாக பனைமரங்களை காட்ட வேண்டி வரலாம். சென்னையிலுள்ள பல ஊர்களின் பெயர்க் காரணங்களை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. மயில்களின் நடமாட்டத்துக்கு பெயர் பெற்ற, பார்வதி ஒரு பெண் மயிலாக மாறி சிவனை வழிபட்டாளாம் இதனால் அந்த இடத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்ததாம். இப்படி பெயர் காரனத்தைச் சொல்லிவிட்டு மயிலாப்பூரின் பல புராதனச் சிறப்புகளைச் சொல்கிறது, அதாவது, கோயில் சிறப்புகளைச் சொல்கிறது. பேயாழ்வார் கினற்றடியில் கண்டெடுக்கப்பட்டதையும், மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் இடிக்கப்பட்டு சாந்தோம் தேவாலயமும் போர்த்துக்கீசிய குடியிருப்புகளும் அமைக்கப்பட்டதால், இப்போதைய கபாலீசுவரர் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதையும் கூறுகிறது. அப்படியே அந்தக் கோவிலின் கட்டமைப்பையும் கூறுகிறது. இப்படியே திருவல்லிக்கேணிக்கு, பல்லாவரத்துக்கு, திருவாண்மியூருக்கு என கோவில்கொண்ட தளங்களை பாடுகிறது புத்தகம். திருநங்கையாழ்வாரின் பெயரைக் கொண்டு ஆழ்வார்பேட்டை எனப் பெயர்பெற்றது. நன்கு பழுத்த மாம்பழங்களைக் கொண்டிருந்ததால் மாம்பலம். மாமரங்களின் காடிருந்ததால் மாங்காடு. இப்படி பல ஊர்களின் பெயர்க்காரணங்களைக் கூறுகிறது. தொண்டை மண்டல அரசனையும், பல்லவ வம்ச அரசர்களையும் மற்ற ஏனைய அரசர்களையும் கூறுகிறது. “…கி.பி இரண்டு, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துரு, கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. அதனால் அப்பொழுதே எழுதத் தெரிந்திருக்கிறது…” “சற்றேறக்குறைய கி.பி 200ஆம் நூற்றான்டில் தமிழின் சிறந்த கவிஞர் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார்.” இப்படி சில இடங்களில் வரலாற்றுப்பிழை தென்படுவதால் புத்தகத்தில் கூறப்படும் செய்திகளின் நம்பகத் தண்மை வெகுவாக குறைகிறது. ஆனால் புத்தகத்தில் பெரும்பாலும் ஆன்மிகச் செய்திகள் பரவிக்கிடப்பதால் வரலாற்று ஆதாரங்களையும், வரலாற்றுப் பிழைகலையும் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்று மண்டைக்குள் மணியடிக்கிறது. புத்தகத்தின் பெரும் பகுதி, சென்னையையும் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்கலையும் கோவில் சிறப்புகளையுமே சுற்றிச் சுற்றிச் சொல்கிறது. ஆனால், மற்ற பிற முக்கிய இடங்களைப் பற்றிச் சொல்ல ஒரு சில பக்கங்களே போதுமானதாக ஆசிரியருக்குப் பட்டுவிட்டது போலும். அதேபோல சென்னையின் நகர பெருக்கத்தாலும், மக்கள் நெருக்கத்தாலும் ஏற்பட்ட, ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்ல மூன்று பக்கங்களே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த பகுதி ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரையைப் போலத்தான் இருக்கிறது அந்தளவுக்கு கருத்து வறட்சி, எழுத்து வறட்சி. பல இடங்களில் மொழிபெயர்ப்பு பல்லிளிக்கிறது. பல இடங்களில் காலம் தடுமாறுகிறது. நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்துகட்டியடிக்கிறது. இதெல்லாம் வாசிப்போட்டத்தை தடுக்கிறது. ஒருவேளை இது குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால், இதிலெல்லாம் தீவிர கவனம் செலுத்தப்படவில்லையோ. குழந்தைகளுக்கான புத்தகத்தில் தான் இந்த தவறுகள் திருத்தப்பட வேண்டியது கட்டாயம். புத்தகத்தை ஆன்லைனில் வாங்க பெயர்: மெட்ராஸ்-சென்னை ஆசிரியர்: நந்திதா கிருஷ்ணா தமிழில்: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் பக்கங்கள்:96 விலை:25 பதிப்பகம்: ப்ராடிகி   http://thamiziniyan.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%b5/ 15 மாயாவதி: ஒரு வாழ்க்கை மேலவளவையும், பாப்பாபட்டியையும், கீரிப்பட்டியையும் பார்த்தவர்கள் நாம், ஒரு பஞ்சாயத்துக்குத் தலைவராவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ள வெற்றிகரமான இந்திய ஜனநாயகத்தின் குடிமக்கள் நாம். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு தலித் மாநில முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. அப்படிப்பட்ட மாயாவதியின் சாதனையையும் வாழ்க்கையையும் கொண்டாடும் விதமாக அவர் வாழ்க்கையை அலசுகிறது கிழக்குப் பதிப்பகத்தின்மாயாவதி: ஒரு வாழ்க்கை என்ற புத்தகம். []                     தந்தைபெரியாரின் ஐம்பது அறுபது ஆண்டு காலப் பிரச்சாரமும். அவருடைய வழிவந்த (வந்ததாகச் சொல்லிக் கொள்ளும்) கண்ணீர்த்துளிகளின் நாற்பது ஆண்டுகால ஆட்சியாலும் ஏற்படாத ஒரு மாற்றம் இவைகள், இல்லாத ஒரு மாநிலத்தில் நடந்திருக்கிறது என்றால் அதன் பின்னணியும் சற்று ஆராயப்பட வேண்டியதுதான். அதை இந்த புத்தகம் செய்யாமல் வெறுமனே மாயாவதியின் அரசியல் வளர்ச்சியையும் அவரையும் படம் பிடித்துக்காட்டுகிறது. சுதந்திர இந்திய ஜனநாயகம், இந்திய சுதந்திரத் தலைவர்களும் (அம்பேத்கர், மற்றும் சில தலைவர்கள் தவிர்த்து) தலித்துகளுக்கு வழங்கியதெல்லாம் ஹரிஜன் பட்டமும், கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடும், ஓட்டுரிமையும் (இவையாவும் அம்பேத்கருடைய இடையறாத போராட்டத்தால் பெற்றவை. அதற்கு அவர் பட்ட துயரங்களும், சந்தித்த சவால்களும் தனிவரலாறு.) மற்றபடி தலித்களின் வாழ்க்கைச்சூழல் மேம்பட்டது பிரிட்டீஷாரின் காலத்தில், கிழக்கிந்திய கம்பெணியின் ராணுவம் அவர்களுக்குத் தந்த வாய்ப்பு. அம்பேத்கருடைய தந்தை , இதே மாயாவதியின் பாட்டனார், தலித் உரிமைகளுக்காக முன்னால் நின்ற பலருடைய வம்சமும் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் தான். இந்திய சாதி இந்துக்கள் மனுவின் மந்திரத்தில் மயங்கி தலித்களுக்கு அரைவயிற்று உணவுடன் வாழமட்டுமே வகை தந்த போது, அவர்களுக்கு மதிப்போடு வாழவும் வகை தந்தது பிரிட்டீஷ் ராணுவம் தான். (அந்த மனுநேசர்களுடன் போராடியே வெளிவந்தவர்கள் தான் ஜோதிராவ் புலே, அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள்.) ஆனால் மாயவதியை இவர்களோடு ஒப்பிட முடியாது. மற்ற தலைவர்கள் தலித்களுக்காக செய்த முன்னேற்ற நடவடிக்கைகளைவிட மாயாவதியின் செயற்பாடுகள் குறைவுதான் இத்தனைக்கும் அவர்களிடம் இல்லாத ஆட்சியதிகாரம் இவரிடம் இருக்கிறது. ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல எதைச் செய்தால் அதிகாரம் நம் கைக்கு வரும் என்பதைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறவராக தன்னை மாற்றிகொண்டுவிட்டார். அவருடைய பிறந்த இடம், குடும்பச் சூழல், அவர் தந்தையின் ஆணாதிக்கத் தனம் போன்றவற்றை இந்த புத்தகம் சொல்லி, அவர் குடும்பச்சூழலை எவ்வாறு எதிர்கொண்டு வெளிவந்தார், அவர் தந்தையின் மனப்போக்குக்கு மாயவதி தன் செயல்களால் எவ்வாறு பதிலளித்தார் என்றெல்லாம் கூடவே சொல்கிறது. ஆனால் ஆங்காங்கே சில வார்த்தை விளையாட்டுகள் தென்படுகின்றன் (இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, அல்லது இந்தச் சமூகத்தின் பொதுபுத்தியில் சொல்லப்படும் சில பொய்களின் தாக்கம் நூலாசிரியரையும் பிடித்து ஆட்டுகிறதா என்று தெரியவில்லை.) அது, “மக்கள் ஆதரவு பெற்றவர்கள் யாராக இருந்தாலும், சாதி, மத, இன, மொழி, கலாச்சார அடையாளங்களையும் கடந்து அவர்களுக்கு சம அளவு வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசியல் அமைப்பு.அதற்கு வாழும் உதாரணம், மாயாவதி“. (பக்கம்: 15) இந்த வார்த்தைகள் தான் அவர்கள் முன்னேறிவிட்டார்கள், அவாள்ல நெறைய பேரு கலெக்டரா இருக்காங்க, வக்கீலா இருக்காங்க, அதுவா இருக்காங்க, இதுவா இருக்காங்க, அங்கே பாரு மாயவதி, இங்கே பாரு மீரா குமார், அப்டியே இன்னும் பாரு பாலகிருஷ்னன். என்று இவர்கள் அடுக்குவதெல்லாம், அதே அரசியல் சாசனம் தரும் உரிமையை எப்படியாவது பிடுங்க வேண்டும் எனும் நோக்கில் தான். ஆனால் இவர்கள் கண்களுக்கு அவர்கள் வாழும் ஊரில் உள்ள தலித்களின் நிலை தெரியுமா என்பது சந்தேகம் தான். வேறு மொழி பேசும் ஒரு பெண்/ஆண் தன் வீட்டு மருமகளாக/மருமகனாக வருவதை ஏற்றுகொள்பவர்கள் தன் மொழி பேசும் ஒரு தலித் பெண்ணை/ஆணை தன் வீட்டுக்கு மருமகளாக/மருமகணாக ஏற்று கொள்ள மாட்டார்கள். திருப்பூர் ஸ்ரீப்ரியாவுக்கு நடந்த கதைகள் இன்னமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. பிறகென்ன முன்னேறிவிட்டார்கள் தூக்கு, ஓட்டு என்ற கூச்சல்களெல்லாம். இடஒதுக்கீடும் அரசியல் சானம் வழங்கிய (அம்பேத்கர் பெற்று தந்த) சலுகைகள் எல்லாம் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால், இந்த சலுகைகளும் கிடைக்காமல் போயிருந்தால், ஊர் நண்டு சிண்டுகள் கூட இன்றும் வயதான தலித் பெரியவர்களை ஏய்! முனுசாமி, கருப்பசாமி என்று கூப்பிடும் நிலை தான் நிலவும். அவர்கள் கொஞ்சமாவது சுயமரியாதை பெற உதவி செய்தது ஓரளவு உண்மைதான். அப்படியிருந்தும் அந்த பொதுபுத்தியில் சமநிலை நிலவாத போதும் வெறும் ஒரு உதாரணத்தைச் சொல்லியிருப்பது உறுத்துகிறது. அதே சமயம் அரசு ஊழியர்களாக பணி பெற்ற தலித்கள், அலுவலகங்களில் மேல் சாதியினரின் பார்வையில் எப்படி படுகிறார்கள் என்றும், ஒரு தலித், உயர் அதிகாரியாக இருந்தாலும் அவருக்குக் கீழே வேலை செய்யும் உயர்சாதி இந்து பணியாளர்களிடம் அவர்கள் பெறும் ஒத்துழைப்பையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. மாயாவதியின் பாமரத்தனமான பேச்சும், முரட்டுத்தனமான பேச்சும் அவரை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தது. ஹரிஜன் என்று மேடையில் திரும்பதிரும்ப பேசிக்கொண்டேயிருந்த ராஜ் நரேன் என்ற மத்திய அமைச்சரை மேடையிலேயே போட்டு கிழிகிழியென கிழித்த சம்பவம் மாயாவதியை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மாயாவதி ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருமாறியதையும் புத்தகம் விளக்கிச் சொல்கிறது. அதேபோல கன்ஷிராம், மாயாவதி மீது கொண்டிருந்த நம்பிக்கையையும்(நம்பிக்கையின்மையயும்), மாயாவதி கன்ஷிராம் மீதுவைத்திருந்த மரியாதையையும், அவருடைய அந்திமக்காலத்தில் அவரை தன் வீட்டிலேயே வைத்திருந்து அவரது உறவினர்களை கூட அவரைச் சந்திக்க விடாமல் நடைபெற்ற சர்ச்சைகளை பதிவு செய்யும் போதே, அவரோடு ஒரு குழந்தையைப்போல அவர் உறவாடிய சம்பவங்களையும் பதிவு செய்கிறது. இன்று டாம் ஜெர்ரி போல மோதிக்கொள்ளும் மாயாவதியும் அவருடைய பகையாளிகளான முலாயம் , பாஜக, காங்கிரஸ் எல்லோருடனும் மாயாவதி கூட்டணி வைத்த அவர் வாழ்க்கையின் அத்தியாயங்கள், புத்தகத்தில் அத்தியாயம் அத்தியாயமாக விளக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அவர் ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும் யாருடனும் எந்தவித கொள்ளகைகளையும், கொள்கை வேறுபாடுகளையும் பார்க்காமல் கூட்டணி வைக்கக்கூடியவர். முதல்முறையாக அவர் வைத்த வித்தியாசக் கூட்டணியைப் பற்றி சொல்லும் போது, கட்சியின் பெயரில் “தலித்களுக்கான கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களுக்குமான கட்சி” என்ற கோஷத்தைக் கொண்டு வர்ணக்கலப்பை உருவாக்கிவிட்டார் என்று எல்லா பத்திரிக்கைகளும் கொண்டாடிய சம்பவத்தை இந்த புத்தகம் விமர்சிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் பார்ப்பனர்களும் தலித்களும் பங்குபெற்றாலும் பார்ப்பனர்கள் தனி குழுவாகவும் தலித்கள் தனி குழுவாகவும் தான் இருக்கிறார்கள், காங்கிரஸில் இருக்கும் கோஷ்டிகளைப் போல தனித்தனி குழுக்களாகத்தான் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பதை சொல்லி அவர்களிடையே ஒரு மாயத்திரை விழுந்திருக்கிறது என்று சொல்கிறது 2000 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் மாயத்திரை அது. அதை மாயாவதியால் இப்போதைக்கு கிழித்தெறிய முடியாது, அதை கிழித்தெறியும் முயற்சியிலும் அவர் இறங்க மாட்டார், அது அவருடைய நோக்கமும் அல்ல, அவருக்கு அந்த தொலைநோக்குப் பார்வையும் கிடையாது, அவருடைய இப்போதைய ஒரே நோக்கம் 2014ல் பிரதமர் கனவு தான். அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்ள அவர் எந்த விதமான வித்தியாசக் கூட்டணிகளையும் அமைப்பார். இந்த புத்தகத்தை வாங்க நூலின் பெயர் : மாயாவதி: ஒரு வாழ்க்கை ஆசிரியர் : சி.என்.எஸ் பக்கங்கள் : 168 விலை : ரூ. 80 பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்   http://thamiziniyan.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ 16 அத்வானி [அத்வானி] ” பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு நாங்கள் உறுதி…” இவ்வாறு தான் இந்திய அரசியல் சாசனம் (Constitution of India) துவங்குகிறது. அதாவது இந்திய அரசானது எந்த மதத்தையும் சாராத, எந்த மதத்துக்கும் சார்பானதாக விளங்காது என்பது பொருள். மேற்கூறிய வாசகம் தீவிரமாய் கடைபிடிக்கப்படுமானால், (உண்மையானால்) எந்த அரசு அலுவலகங்களிலும் வாசலில் பிள்ளையார் உட்கார்ந்துகொண்டு வாயிற் காப்பாளன் வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது, எந்த அரசு அலுவலகங்களிலும் ஆயுதபூஜையும் வெள்ளிக்கிழமை பூஜையும் நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ரம்ஜானுக்கு இஃப்தார் நோன்பு திறக்க முதலமைச்சர் குல்லா போடக்கூடாது, கிறிஸ்துமஸுக்கும், புத்தஜெயந்திக்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் குடியரசுத் தலைவர் முதல் முதலமைச்சர் அலுவலக பியூன் வரை வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நடைமுறை, அரசியல் சாசனத்தின் இந்த வரிகளைப் பார்த்து பல்லிளிக்கிறது. அரேபிய நாடுகளைப் போல, பாக்கிஸ்தானைப் போல, ஆஃப்கானிஸ்தானைப் போல. நேபாளத்தைப் போல நாங்கள் மதச்சார்பற்ற நாடு இல்லை என்று சொல்லிவிட்டு ஒபாமாவைப் போல நாடாளுமன்றத்தில் தீபாவளி கொண்டாடலாம். எந்த மதத்துக்கும் சார்பான அரசாக இல்லாமல் இருப்பது என்று பொருள் தரக்கூடிய வார்த்தையை மறைத்து எல்லா மதத்துக்கும் ஜால்ரா போடுவதுதான் மதச்சார்பற்ற அரசு என்று ஜல்லியடிக்கும் அரசியல்வாதிகளை ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோ (George Jacob Holyoake)[1] வின் பெயரால், தண்டிக்க வேண்டும். இப்படி பித்தலாட்டங்கள் எல்லாம் வேண்டாம், இது இந்துக்களின் தேசம், அதனால் இது இந்து தேசம், மதச்சார்பற்ற என்ற வார்த்தையை எல்லாம் தூக்கிப்போட்டுவிடலாம். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கலாம், அதாவது ”இந்து அரசியல் சாசனத்தை உருவாக்கலாம்” பொது சிவில் சட்டத்தைப்போல என்று சொல்லும் ஒரு கும்பலின், கட்சியின் தலைவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் ”அத்வானி” என்ற பெயரில். வாழ்க்கை வரலாறு எழுதுவதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று லிங்கன் வகை, மற்றொன்று புஷ் வகை. அதாவது, லிங்கனைப் பற்றி எழுதும் போது, சில பக்கங்கள் அவருடைய கருப்பு பக்கத்தை விளக்குவதாக இருக்கும், (ஹேபியஸ் கார்ப்பஸைத் தூக்கியது, உள்நாட்டுப் போர்) மற்ற பக்கங்கள் அவர் புகழ் பாடும். இன்னொரு வகை கலாய்ப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று தீர்க்கமாக முடிவு செய்து கொண்டு எழுதுவது, புஷ் வாழ்க்கை வரலாற்றைப் போல. (குறைந்தது எட்டாண்டு கால ஆட்சியாவது) இந்த புத்தகம் புஷ் வகையறா. அத்வானியின் இந்துத்துவத்தின் மீதும், அத்வானியின் மீதும் போகிற போக்கில் சாட்டையடியை விளாசிக் கொண்டு செல்கிறது, முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி வரி வரை.(அந்த இரு அத்தியாயங்களத் தவிர்த்து, இது பற்றி பின்னால்.) நூலாசிரியரின் குறும்பைக் கொஞ்சம் கூறவே வேண்டும்: - அத்வானியின் வேண்டுகோளுக்குப் பிறகு முன்பைக் காட்டிலும் அதிக கரசேவகர்கள் ஆயுதங்களுடன் வேகவேகமாக நகரத்தொடங்கினர்…. ஒருவேளை தலைவரின் குரலை தங்களுக்குக் கிடைத்த சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்களா? இருக்கலாம்….. - ரத்தப் பிரிவுக்கு அவரவர் விருப்பப்படி பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் போதும். அத்வானி துளியும் யோசிக்காமல் தன்னுடைய ரத்தப் பிரிவு ஆர்.எஸ்.எஸ் பாசிட்டிவ் என்று பகிரங்கமாக சொல்லிவிடுவார் - முழுக்க முழுக்க முற்படுத்தப் பட்டவர்களின் முன்னேற்றத்தில் அதிக கரிசனம் கொண்டவர் அத்வானி. பா.ஜ.கவும் தான் - ராமருக்கு ஆலயம் என்பது அத்வானியின் உயிர்மூச்சு. இப்போது ராமர் பாலமும் சேர்ந்து கொண்டது. - தேர்தல் அறிக்கை தயரானது. அதே பழைய பல்லவிகள். கொஞ்சம் புதிய ராகத்தில். ராமர் ஆலயத்தை வைத்துமட்டும் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்த பாஜக இந்தமுறை ராமர் பாலத்தையும் சேர்ந்த்து கொண்டுள்ளது. நல்ல வேளையாக தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லை, இருந்திருந்தால்… ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை கூறும் போது, அவருடைய சமகால சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அந்த சம்பவங்களோடு அந்த தலைவருக்கு உள்ள தொடர்பை கூறுவதாக அது இருக்க வேண்டும். ஆனால் இந்த புத்தகத்தைப் பொறுத்தவரை, இரண்டு அத்தியாயங்கள் எமர்ஜென்ஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அத்வானியைப் பற்றிய சம்பவங்கள் மருந்துக்கும் இல்லை. இதற்கு முந்தைய அத்தியாயத்தில் அத்வானியின் கைதில் நடந்த சட்டமுறைகேடுகளைச் சுட்டிக் காட்டியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் கூறப்பட்டுள்ளது. இது போல எமர்ஜென்ஸியில் அத்வானி சம்பந்தபட்ட செய்திகளை மேலும் கூட்டி, எமர்ஜென்ஸியின் நடைமுறைகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். எமர்ஜென்சியில் அத்வானி சிறையில் இருந்த போது அவருக்கு சமையல் செய்துபோட்ட சமையல்காரரைப் பற்றியும் சமையலைப் பற்றியும் இன்னும் எழுதியிருக்கலாம். பாரா வை விட்டிருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார். அதேபோல அத்வானியின் சமகால வரலாற்றினூடாக அவர் வாழ்க்கைக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய சொந்த வாழ்க்கை, குடும்பம், குட்டிகள் பற்றி ஒன்றும் இல்லை. அவருடைய அரசியல் வாழ்க்கையின் சில சம்பவங்கள் (அவரை புரட்டிப் போட்ட சம்பவங்கள் உட்பட) சில பக்கங்களில் சுருங்கியிருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். ஜின்னாவின் ஆவி வந்து அத்வானியை ஆட்டிய கதை சில வரிகள் முடிந்துவிட்டது. கந்தஹார் கடத்தல் அவரை ஆட்டிவிட்டது ஓட்டிவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே தவிர எப்படி ஆட்டிவைத்தது என்று சொல்ல அவருடைய மனஉறுதியையும் கடுமையையும் சொல்லி இருக்கலாம். கடைசி நேர அவசரம் உறுத்தலாய் துருத்திக் கொண்டு தெரிகிறது. இப்படிச் சில குறைகள் இருந்தாலும் அத்வானியை கலாய்ப்பவர்களுக்கு ஏற்ற புத்தகம். அய்! எங்க தலீவர் பத்தின புஸ்தகம் என்று யாராவது பார்த்தால், சாரி இது உங்களுக்கான புத்தகம் இல்லை. ------------------------------------------------------------------------ [1] ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோ – secularism என்ற வார்த்தையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்   ------------------------------------------------------------------------ இந்த புத்தகத்தை வாங்க   புத்தகத்தின் பெயர் : அத்வானி ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார் பக்கங்கள் : 184 விலை : 80 பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்.   http://thamiziniyan.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e2%80%93-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/ 17 1857 சிப்பாய் புரட்சி [1857 சிப்பாய் புரட்சி]   புரட்சி என்பது மார்க்ஸ் சொல்வதைப்போல “தலைகீழாகப் புரட்டிபோடுவதுதான்“. ஆனால், 1857ன் சிப்பாய் புரட்சி என்பது, இருக்கின்ற எந்த அமைப்பையும் புரட்டிப்போடவில்லை. அதிகாரத்தை வெள்ளையர் கைகளிலிருந்து சுதேச ராஜாக்களின் கைகளுக்கு மாற்றவில்லை. மாறாக, கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த இந்தியாவின் அடிமைவிலங்குக்கான பூட்டின் சாவியை பிடுங்கி இங்கிலாந்து மகாராணியின் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்தக் கொத்துச் சாவியில் சொருகியதைத்தான் செய்தது. ஆனாலென்ன நாம் இந்தியர் . அதனால் இதை வீரதீரமிக்க மாபெரும் புரட்சி என்போம் இந்த எண்ணம் தான் நம்மிடம் இதுநாள் வரை நிலவி வருகிறது. நம்முடைய பாட புத்தகங்களும் இதைத் தான் போதிக்கின்றன. கிழக்கு பதிப்பகத்தின் 1857 சிப்பாய் புரட்சி புத்தகமும் இந்த கருத்தைக் (புரட்சிதான் இது) கொண்டிருந்தாலும், அந்நிகழ்ச்சியின் அடுத்த பக்கத்தையும் விமர்சிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி நிலபிரபுக்களின் ஆதிக்கத்தையும் மாதாக்கோவில்களின் ஆதிக்கத்தையும் தகர்த்தெறிந்து முதலாளித்துவத்துக்கு ராஜபாட்டை போட்டுக்கொடுத்ததைப் போல, இங்கு நிலபிரபுத்துவத்தின், மதத்தின் ஆதிக்கத்தையோ அல்லது அவற்றில் ஏதோ ஒன்றையோ கூட தகர்த்தெறியவில்லை. மாறாக, இந்தக் கிளர்ச்சியே அத்தகைய சக்திகளால் தான் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை தோற்கடித்து நகரங்களை வீழ்த்தியவுடன் சிப்பாய்கள் அந்த [மகா]ராஜாக்களின் காலடியில் சமர்ப்பணம் செய்தனர், குடியரசு, மக்களாட்சி, மக்கள் சக்தி என்ற கருத்தாக்கங்களை எல்லாம் அறியாத, கொள்கைகளோ, வலிவான சித்தாந்தமுடைய தலைவனோ இல்லாததொரு கிளர்ச்சிதான் இந்த சிப்பாய் புரட்சி. ஆனாலும் முதுகெலும்பை மறந்து நத்தையோடு போட்டி போட்டுகொண்டு ஊர்ந்து செல்ல பழகிபோயிருந்த மக்களும் மகாராஜாக்களும் இது வீழ்த்தமுடியாத மாபெரும் கேடயம் அல்ல, அதனுள்ளே துரு பிடித்து, ஒரு நான்கடி அடித்தால் உடைந்து போகக் கூடிய தன்மையுடையதுதான் இது என்பதை உணர்த்தியது. தொண்ணூறு ஆண்டுகள் மற்றும் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு நடக்கவிருக்கிற ஒரு நிகழ்வுக்கு அடித்தளமிட்டது இப்புரட்சி என்றால் அது மிகையில்லை. பிரேவ் ஹார்ட் படத்தில் வாலஸ் வில்லியம்ஸை எதிர்த்து இங்கிலாந்து போரிடும் போது இங்கிலாந்து படையின் ஒரு பிரிவு வாலஸின் படையை தாக்க ஓடி வந்து வாலஸ் வில்லியம்ஸ் வாழ்க! என்று கோஷமிட்டு அவன் படையுடன் சேர்ந்து இங்கிலாந்து படையை எதிர்த்தது போன்றதொரு சம்பவம் டெல்லியில் மீரட்டின் சிப்பாய்களை எதிர்த்து கர்ணல் ரிப்லி தனது பறங்கிபடையுடன் வந்ததும் அவனது படையின் ஒரு பகுதி மீரட் சிப்பாய்களுடன் சேர்ந்து அவனையே கொன்ற சம்பவத்தை படம்பிடிக்கிறது. ஆகச் சொல்லப்படும் சிப்பாய் புரட்சி நடைபெற்றுகொண்டிருந்த காலத்திலேயே உள்நாட்டு உள்ளடி குழப்பங்களும், அரச பதவியை கைப்பற்றும் போராட்டங்களும், ஒருவரை மாற்றி ஒருவர் பழிவாங்கும் போராட்டங்களும் நடந்ததையும் இப்புத்தகம் பதிவு செய்கிறது. ஜான்சியில் கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய மாளிகையில் சமையல் செய்து சாப்பிட்டுகொண்டு தன் பச்சிளம் பாலகனுக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனுபாய், சிப்பாய் புரட்சி ஏற்பட்டதினால் நடைபெற்ற கொந்தளிப்பை பயன்படுத்தி (சில உள்ளடி வேலைகள் செய்து அரச உரிமைக்கு போட்டிக்கு வந்தவனை வீழ்த்தி) ஜான்சி ராணி ஆனாள். வாழ்வில் ஒரேயொரு போர்க்களத்தைக்கூட (பாபர், அக்பர், ஔரங்கசீப் வழிவந்த [:-(] [:-(] [:-(] ) பார்க்காத பகதூர்ஷா தன் முன்னால் குவிந்துகிடந்த லட்சோபலட்சம் வீரர்களை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தது சிப்பாய்புரட்சியின் பரிதாபகரமான தோல்விக்கு காரணம். நாடோடியாய் அலைந்து திரிந்த காலத்தில் தன் பின்னால் வந்த ஆயிரம் சொச்ச வீரர்களை வைத்து, காபூலைக் கைப்பற்றி, ஆஃப்கானிஸ்தானை விழுங்கி பின்னாளில் அசோகருக்குப் பிறகு பரந்த ஹிந்துஸ்தானை கட்டியாண்ட பாபரின் எள்ளு கொள்ளுப்பேரனின் இந்த செயல் பரிதாபமானதுதான். தன்னை பேரரசனாக பிரகடணம் செய்து தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சுதேசி சிப்பாய்களை, படை தேவைப்படும் இடங்களுக்கு பகிர்ந்தளித்து, கிழக்கிந்திய கம்பெனி படைகளின் கை ஓங்கும் இடங்களில் அவர்கள் கைகளை வெட்ட அந்த படைகளைப் பயன்படுத்தாமல், சில பல மாதங்களுக்குப் பிறகு மொத்தமாய் வெள்ளையர்களுக்கு பலிகொடுக்க படைவீரர்களை சேர்த்து வைத்திருந்தார் மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி பாதுஷா. (மொகல் வம்சத்தின் பரிதாப பேரரசர் ஹூமாயினின் கல்லறையில் இந்த பரிதாப பேரரசர் போய் ஒளிந்துகொண்டது விசித்திரமான சரித்திர திரும்பல்தான்.) தலைமையேற்க வேண்டிய பாதுஷா பாவாடை நாடாவுக்குள் தன்னைக் கட்டிக்கொண்டதை உணர்ந்து வேறுயாராவது ஒருவர் தளபதி பொறுப்பையாவது ஏற்றிருந்திருக்கலாம். ஆனால், மற்ற புரட்சித் தலைவர்களெல்லாம் தங்களை ஒரு பிரதேசத்துக்குள் சுருக்கிக் கொண்டது ஒரு சோகம்தான். நானா சாஹிப், தாந்தியா தோபே, ஜான்சிரானி, குன்வர் சிங், கான்பகதூர் கான் போன்றோர் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கிழக்கிந்தியக் கம்பனியின் படையை எதிர்க்காதது, படை பராமரிப்பு, படை பகிர்ந்தளிப்பு, சங்கிலித்தொடர் போன்ற தாக்குதல் ஆகியவை இல்லாமல் தங்கள் சக்தியை இழந்ததும் ஒரு பெரும் சோகமே. ஒரு வலுவான எதிரியை தாக்கச் செல்கையில் அவனுக்குச் சமமாக தன்னிடம் படை இல்லாமல் போனாலோ ஆயுதபலம் இல்லாமல் போனாலோ முன்னெடுக்க வேண்டிய கொரில்லப் போர்முறையை முன்னெடுக்காமல் போனது ஒரு தவறுதான். (தாந்தியா தோபே மற்றும் குன்வர் சிங் சில சமயங்களில் கொரில்லப்போர் முறையை முன்னெடுத்தனர்.) நீண்ட மலைகளும், கோட்டைகளும் கொண்ட வட இந்தியபிரதேசங்களில் கொரில்லபோர் முறை சாத்தியமானதே. இப்படியும் இன்னும் சில தோல்விக்கான காரணங்களையும் இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயம் சொல்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு மங்கள் பாண்டே படத்தை ஒரு முறை பார்த்தல் நலம். வார்த்தைகளில் பார்த்ததைக் காட்சியில் பார்க்கலாம் (சில அத்தியாயங்கள் மட்டும்) வழக்கமாக கிழக்கு புத்தகங்கள் non- linear ஆக படைக்கப்படுபவை. (அதாவது ஏழாவது அத்தியாயமாய் வர வேண்டியது முதல் அத்தியாயத்துக்கும் முதல் அத்தியாயம் இரண்டாம் அத்தியாயத்துக்கும் ஆறாவது அத்தியாயத்தில் முதலாவதான ஏழாவது அதிகாரமும் நினைவு கூறப்படுவது.) ஆனால், இந்த புத்தகம் அந்த வகையில் படைக்கப்படாமல் அமைந்திருப்பதில் கிழக்கின் டச் மிஸ்ஸிங். ஆசிரியரைப் பற்றிய எதுவுமே தெரியவில்லை, 240 பக்கம் புத்தகம் எழுதினவர் அவரைப் பத்தி ஒரு நாலு வரி எழுதாம விட்டுட்டாரே. இந்த புத்தகத்தைப் படித்த பிறகு புத்தகங்களில் முன்னுரை, பதிப்புரை போன்ற கொசுறு சமாச்சாரங்கள் மற்ற புத்தகங்களில் இருக்குமா என்று எனக்கு சந்தேகம்வந்துவிட்டது. புத்தகத்தினை ஆன்லைனில் வாங்க நூலின் பெயர் : 1857 சிப்பாய் புரட்சி ஆசிரியர் : உமா சம்பத் விலை : ரூ.100 பக்கங்கள் : 240 பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்     http://thamiziniyan.com/1857-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e2%80%93-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/ 1 ஆசிரியர் பற்றி [559713_10201067604744724_887548341_n] வெய்யில் காயாத  இரவொன்றில், செவ்வாயிலோ, வியாழனிலோ வாழ முடியாது என்பதைப்பற்றியெல்லாம் தெரியாமல், இந்தப் பூமியில் பிறந்துவிட்டேன். பள்ளிப் படிப்பெல்லாம் வீட்டின் சுவரைத் தாண்டி குதித்தாலோ அல்லது தடுக்கி விழுந்தாலோ அடைந்துவிடும் தூரத்திலிருந்த ஒரு பள்ளியிலேயே… வீட்டில் தனியாக விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்ல யோசித்துக்கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு போய் முதல் வகுப்பில் உட்காரவைத்த காரணத்தினால், முதல் வகுப்பையே இரண்டுமுறை படிக்கும் வாய்ப்பு. அந்தளவுக்கு படிப்பில் படு கெட்டித்தனத்துக்கான அடிப்படையை போட்டுவிட்டார்கள். மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு, இலயோலாவில் இயற்பியல் இளங்கலை படித்தேன். கல்லூரிக்குச் செல்லும் காலத்தில், டிவிடிக்களாகவும், பைட்டு பைட்டுகளாக எழுநூறு மெகா பைட்டுகளாக மாற்றிப் படம் பார்த்தோம். புத்தகங்களைக் கைமாற்றி அதிகம் வாசித்தோம், கணினிகளில் விளையாடினோம், ஆறுமாதங்களுக்கொரு முறை தேர்வுகளுக்காக படித்தோம். இப்படியாக கழிந்து கொண்டிருந்த கல்லூரிக் காலத்தில் விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாக ஓராண்டு பணி முடித்து வலைப்பதிவுகளிலும் சுட்டி விகடனிலும் இன்று வாசம் புரிந்து கொண்டிருக்கிறேன். கணினிகளை இயக்கக் கற்ற பிறகு, வின்டோஸின் கட்டுப்பாடுகள் நமக்கு ஒத்துவராது என்று மனதுக்குத் தோன்றிய நாள் முதல் திறந்த உலகத்தை நாடி வந்தேன். திறந்த மூல மென்பொருட்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க இடம் கொடுத்தது. அனுமதியளித்தது, அப்படி நோண்டி நோண்டி கற்றுக்கொண்ட விஷயம் வேர்ட்பிரஸ். இன்று பணி அந்த வேர்ட்பிரஸ்ஸில். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தன் போராட்டத்தைத் துவக்கிய கிழவனின் பிரச்சாரமும், போராட்டங்களும் விளைவித்த பயண்களின் விளை பொருள் நான் என்றால் அது மிகையில்லை, அதை ஏற்றுக்கொள்ள என்றும் தயங்காதவன் நான். ஈ.வே.ராமசாமி என்னும் பெரியார் தோன்றாமல் போய் புரையோடிப்போயிருந்த இந்தச் சமூகத்தை நான் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன், என்று கிளம்பாமல் இருந்திருந்தால் என் பாட்டன் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருந்திருப்பான் -இதை வார்த்தைக்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், வீட்டுக்குத் தெரியாமல் ஒரு மாட்டை விற்று அந்தக் காசை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப் போய் படித்து ஆசிரியரானவன். உன்னைப் போன்ற ஆசிரியர்கள் தான் இச்சமூகத்துக்குத் தேவையானவர்கள் என்று அந்த தந்தைப் பெரியாரே சொல்லுமளவிற்கு வளர்ந்தவன்.- அவனுடைய வாரிசுகளையும் படிக்க வைத்திருப்பானா என்பது சந்தேகமா? நானும் இன்று இருக்கும் இந்த இடத்திலிருந்திருப்பேனா என்பது சந்தேகமே? – என்னுடன் உடன் படித்த, என்னைச் சுற்றியிருந்த பலரை வைத்தே இந்த மதிப்பீட்டை உணர்ந்து சொல்கிறேன் - எனக்கும், என் பாட்டனுக்கும் சுயமரியாதையை உணரச்செய்தவனின் பாதையில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறேன். என் பாதை அவரிலிருந்தே துவங்குகிறது. http://thamiziniyan.com thamiz@iniyan.in 2 Free Tamil Ebooks எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள் : மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள் : ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள் : தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி ? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா ? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா ? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார் ? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர் /பதிவருக்கு என்ன லாபம் ? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா ? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது ? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் ? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை ? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். www.freetamilebooks.com  எனும் தளம் தயார் நிலையில் உள்ளதா ? தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் தயார்நிலைக்கு வந்துவிடும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி ? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் ? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/