[] 1. Cover 2. Table of contents சிறகு விரித்த சுகமும் சோகமும் சிறகு விரித்த சுகமும் சோகமும்   சிவகுமாரி ஆவுடையப்பன்   sivakumaritsa29@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/siragu_viritha_sugamum_sogamum மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஸ்டாலின் குருசாமி - knightbharathi@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Stalin Gurusamy - knightbharathi@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation முன்னுரை : அன்பானவர்களுக்கு வணக்கங்கள். freetamilebook மூலம் எனது 3 வது தொகுப்பு - கவிதைகள் - வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. என் எழுத்தைப் படிப்பவர்கள் பொதுவாக என்னிடம் கேட்பது : " ஏன் உங்கள் எழுத்தில் இவ்வளவு துயர இழை ஓடுகிறது ?" எதை அதிகமாக அனுபவிக்கிறோமோ அதுதானே எண்ணங்களில் அலைமோதும் ? அதுதானே சொற்களாக.. எழுத்துக்களாக வெளிப்படும் ? வீட்டில் என்று இல்லை.. நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொண்டு செய்த உண்மையான ஒரு தொண்டு நிறுவனத்திலும் வாழ்க்கையின் அவலம் நிறைந்த பக்கங்களைத்தான் அதிகம் வாசிக்க வைத்தான் எல்லாம் வல்ல இறைவன் ! பிரச்சனைகள்… அதற்கான தீர்வுகள் என்று ஓடிக்கொண்டே இருந்தவளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ? ஆனால் சோகமும் ஒரு சுகம் தான் இல்லையா அன்பர்களே ? சுகமும் இந்த உயிர்த் துளிக்குள் கொஞ்சம் இருக்கட்டும் என்று தான் அவ்வப்போது தன்னைப் பற்றியும் எழுத வைத்தான் போலும் அந்த ஆண்டவன் ! இந்தத் தொகுப்பில் உள்ள “விளக்கே திருவிளக்கே. வேந்தன் உடன்பிறப்பே..” என்று தொடங்கும் இந்த அருமையான பாடலை அடியாள் எழுதவில்லை. எங்கள் ஆச்சி எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அவர்களுக்கு அவர்கள் அம்மா சொல்லிக் கொடுத்ததாகச் சொல்வார்கள். அத்தனை பழமை வாய்ந்தது இந்தப் பாடல் . இது தங்களின் தகவலுக்கு. இந்தத் தொகுப்பை வாசித்துவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவிடுமாறு மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பர்களே ! தெய்வீகம் தேன்மதுரம் அருள்மிகு மாணிக்க விநாயகர் துதி மாமலை மாணிக்க விநாயகனே - உன் மலரடி தொழுது தினம் பணிவேனே (மா) கலை பல வளரும் காவிரிக் கரை வாழ நில பல கடந்து நிலையாய் அமர்ந்தவனே (மா) அழகன் மாலவனை வீடணன் கொண்டு செல்ல அந்தணச் சிறுவனாய் அவனை நீ எதிர் கொள்ள மாலைப் பூசை முடித்து மன்னவன் திரும்பு முன்னே மாலையாம் பொன்னியிடை மாமனைக் கோவில் வைத்தாய் (மா) கோபம் கொண்ட வீடணன் வேகமாய்த் துரத்த கோபம் தா ளாமல் உன் சிரந்தனில் குட்ட மாயவன் மருகன் நீயென்றே உணர்த்த அதனால் அவனும், இந்த உலகும் உய்ய (மா) அலைவாய்க் குமரனின் அன்னையவள் ஆலவாய் தனிலே அரசாள, அலையும் மனதை அய்யனவன் ஆனைக்காவில் அடக்கிடவே, கலையா அருளைத் தருவதிலே கடலாய் இருக்கும் கணபதியும் நிலையாய் அமர்ந்தான் மலைமீதில் நிம்மதிக்கு இனிமேல் குறைவில்லை ! விநாயகன் எங்கள் விநாயகன் வெள்ளெருக்கில் உறைவான்.. வெல்லத்திலும் அமர்வான்.. மஞ்சளிலும் ஒளிர்வான்.. பசுஞ்சாணத்திலும் மிளிர்வான் ! எளியோனுக்கு எளியோன்.. அரியோனுக்கு அரியோன்.. வலிமை எல்லாம் நல்கும் வரங்களின் நாயகன் ! சங்கடம் தீர்ப்பான் சங்கரன் மகனவன் பங்கஜம் கையில் ஏந்தும் பாலனவன் பொங்கிடும் அன்பைக் காணிக்கை ஆக்கினால் மங்களம் அருள்வான் மகேஸ்வரி மைந்தன் ! அருள்மிகு தாயுமானவர் துதி தாயும் ஆனாய்..! தந்தையுமானாய்..! வாயும் மணக்குதே.. ஐயனைப் பாடவே..( தா) தவித்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாய் தவிக்கும் எங்கள் குறையையும் தீர்ப்பாய்.. ( தா ) மகனுடன் அமர்ந்தாய் மாமலை மீதில் மகவெனைப் பாராய் மகிழ்ந்தே நீயும் புகழ் உனை நாடிப் புகழுடன் வாழும் - எம் இகழும் மறையும் இறை நீ வாழி….! சிவலிங்க தரிசனம் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ! சிவவழிபாடு அதிலும் லிங்க வழிபாடு மிகவும் தொன்மையானது என்கின்றனர் ஆன்றோர்.    https://tamil.samayam.com/religion/200000-year-old-shiva-linka-temple-in-usa-at-colorado-hill/amp_articleshow/60893089.cms மேலே உள்ள லின்க்கில் சிவலிங்க வழிபாடு உலகில் எங்கெங்கெல்லாம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வமான விளக்கம் உள்ளது. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள் நண்பர்களே ! புகழ்பெற்ற பலப்பல ஆன்றவிந்த.. அனுபவத்தில் அவனை உணர்ந்த மகான்களால் பாடப்பெற்ற தலங்கள் ஏராளம் ஏராளம். ஆயினும் அதையெல்லாம் தாண்டியும் குக்கிராமங்களில் அவனாகிய சிவன் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம்.. ஏராளம்..ஏராளம்.. அப்படிப்பட்ட சில ஊர்களில் உய்யகொண்டான் திருமலை.. ஊட்டாத்தூர்.. திருத்தேசமலை என்ற பெயர் மறுவி தற்போது திருத்தியமலை என்றழைக்கப்படும் ஊர். திருச்சி மலைக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு நாகநாதர் சுவாமி கோவில்.. இப்படிச் சில தலங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் சிவபெருமானைப் பற்றி அடியாள் அறிந்ததை எளிய பாடல்களாக எழுதி அனைவரும் அந்தச் சிவபெருமான் அருள் பெற வேண்டி அர்ப்பணிக்கிறேன்.     இந்த எளியவளையும் தன் புகழை எழுத வைத்த  எம்பெருமான் சிவனின் பாதங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள் !      எளிதாகப் புரிந்து கொள்ள கூடிய அளவில் இறைவன் பற்றிய பாடல்களுக்காக என்னை அணுகியவர்கள் ஏராளம். அவர்களுக்கு எழுதி எழுதி கொடுத்தவற்றை இப்போது பலருக்கும் பயன்படட்டும் என்று எண்ணியே இவற்றை எல்லாம் இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன்.      அடியாள் எழுதிய விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான், அன்னையே சரணம், மீனாட்சி அம்மை பத்து, திருவிளக்குத் தமிழ் அர்ச்சனை ஆகியவை  “எண்ணங்களின் சிதறல்கள்” என்ற கவிதைத் தொகுப்பாக கணியம் ஃபௌண்டேஷன் நடத்தும் freetamilebook ல் வெளியாகியுள்ளது.      தயவுசெய்து அந்த freetamilebook லின்க்கையும் பாருங்கள். அதில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்க முடியும்.      நன்றாகப் பாடக் கூடியவர்கள் இவற்றைப் பாடிப் பலருக்கும் பயன்படச் செய்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.    நான் பேரோ..புகழோ துளியும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பாடல்கள் பலருக்கும் சென்று சேர்ந்தால் அதுவே ஆண்டவனின் ஆசீர்வாதம் !   நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !  வாழ்க அருந்தமிழ் ! வாழ்க தமிழகம் ! வாழிய பாரத மணித்திரு நாடு ! தென்னாடுடைய சிவனை வணங்க எந்நாட்டவர்க்கும் இறைவனைப் பாட எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் அருளும் எங்கள் விநாயகா துணை வருவாயே ! அயனும் அரியும் வணங்கிடும் லிங்கம் அய்ந்து எழுத்துடனே திகழ்ந்திடும் லிங்கம் அகிலத்தில் முத்தொழில் புரிந்திடும் லிங்கம் அம்மையப்பனாய் அருளிடும் லிங்கம் ! (1) மகளுக்குத் தாயாய் மாறிய லிங்கம் மகப்பேறும் கூடப் பார்த்திட்ட லிங்கம் மகிழ்வுடன் சேயை அணைத்திட்ட லிங்கம் மட்டுவார் குழலி உடனுறை லிங்கம் ! (2) நாவல் மரத்தடி அமர்ந்திடும் லிங்கம் நாளும் அம்மையின் பூசை கொள் லிங்கம் ஆவும் வந்து வணங்கிடும் லிங்கம் அய்ந்தில் ஒன்றாம் அப்பு  லிங்கம் ! (3) அகிலாண்டேஸ்வரி உடனுறை லிங்கம் அண்டினோர் தம்மைக் காத்திடும் லிங்கம் ஆனையும், சிலந்தியும் ஆராதித்த லிங்கம் ஆனைக்கா அமர்ந்தருள் அழகிய லிங்கம் ! (4) ஆனையும், அரவமும் வணங்கிய லிங்கம் அன்புடன் சிலந்தியை அணைத்திட்ட லிங்கம் கேதுவின் தீமை விலக்கிடும் லிங்கம் சீகாளஹஸ்தியின் வாயு லிங்கம் ! (5) விழிகளில் உதிரம் கொட்டிய லிங்கம் விழிதனைத் தானமாய்ப் பெற்றிட்ட லிங்கம் வேடனைக் கண்ணப்பன் ஆக்கிய லிங்கம் வேண்டுவது அன்பெனவே விளக்கிய லிங்கம் ! (6) அனலின் உருவாய் எழுந்திட்ட லிங்கம் அயனும் அரியும் தேடிய லிங்கம் அடிமுடி காணா அதிசய லிங்கம் அருணாசலமாய் அருளிடும் லிங்கம்! (7) கருணை மழையைப் பொழிந்திடும் லிங்கம் கனிவுடன் நம்மைக் காத்திடும் லிங்கம் காமாட்சி உடனுறை கனிவுடை லிங்கம் காஞ்சி நகர் வாழும் ஏகாம்பர லிங்கம் ! (8) திருமூலநாதராய்த் திகழ்ந்திடும் லிங்கம் சிவகாமி உடனுறை சீரிய லிங்கம் திருவெல்லாம் செழிக்க உதவிடும் லிங்கம் தில்லை அம்பலம் காட்டிய லிங்கம் (9) வைகையில் வெள்ளம் பெருக்கிய லிங்கம் வயதான அம்மைக்கு உதவிய லிங்கம் பிரம்படி தன்மேல் தாங்கிய லிங்கம் பிரம்மம் தானென உணர்த்திய லிங்கம் ! (10) வளையல் வணிகனாய் உலவிய லிங்கம் வளையாத கலைஞனை வளைத்திட்ட லிங்கம் வறிய தருமிக்கு வழி காட்டிய லிங்கம் வடிவுடை மீனாட்சி உடனுறை லிங்கம் ! (11) நரிகளைப் பரிகளாய் மாற்றிய லிங்கம்.. பரிகளை  நரிகளாய் ஓட்டிய லிங்கம்.. நாரைக்கும் முக்தி அருளிய லிங்கம் நலமுடை மதுரையின் நாயக லிங்கம்! (12) ஆடல் பலவும் புரிந்திட்ட லிங்கம்..கல் ஆனைக்குக் கரும்பைப் புகட்டிய லிங்கம்.. அழகுக்கு அழகாய் அமர்ந்திட்ட லிங்கம்  ஆலவாய் அமர்ந்த சுந்தரேச லிங்கம் (13) நீள்விழி காந்திமதி உடனுறை லிங்கம்.. நீளவே நமக்குத் துணைவரும் லிங்கம்  நெல்லுக்கு வேலி அமைத்திட்ட லிங்கம் நெல்லையப்பனாய் அமர்ந்தருள் லிங்கம் ! (14) பிரமனுக்கு ஐந்து நிறம் காட்டிய லிங்கம் பிறப்பின் பாவங்களைப் போக்கிடும் லிங்கம் பஞ்சபூதத் தலங்களின் பயன்தரும் லிங்கம் பஞ்சவர்ணேஸ்வர சுயம்பு லிங்கம் ! (15) கருடனும் கார்க்கோடனும் வழிபட்ட லிங்கம் காந்திமதி உடனுறை ஐவண்ண லிங்கம் உதங்க முனிவரை உய்வித்த லிங்கம் உறையூர் தலமதில் உறைந்திடும் லிங்கம் ! (16) நாகத்தின் தோஷங்கள் நீக்கிடும் லிங்கம் நாளும் வழிபட வாழ்த்திடும் லிங்கம் ஆனந்தவல்லி உடனுறை லிங்கம் நாகநாதராய்த் திகழ்ந்திடும் லிங்கம் ! (17) மார்க்கண்டேயரைக் காத்திட்ட லிங்கம் மகவுகள் பாவங்கள் போக்கிடும் லிங்கம் அஞ்சனாக்ஷி உடனுறை உஜ்ஜீவ லிங்கம் உய்யகொண்டான் திருமலை உறைந்திடும் லிங்கம் ! (18) ஆதியோடந்தமாய்க் கலந்திட்ட லிங்கம் ஆதிநாயகி உடனுறை லிங்கம் ஆதிநாதராய் அருளிடும் லிங்கம் ஆதிவயலூர் அமர்ந்தருள் லிங்கம் (19) சுத்தரத்னேஸ்வரராய் ஜொலித்திடும் லிங்கம்.. சோழனால் கோவில்கொள் சுயம்பு லிங்கம் ஊட்டம் தரும் ஊற்று நீர் அருளிடும் லிங்கம்.. ஊட்டாத்தூர் உறைந்திடும் உயரிய லிங்கம் ! (20) திருமணத் தடைகளை நீக்கிடும் லிங்கம் தாயினும் நல்லாள் உடனுறை லிங்கம் ஏக புஷ்பம் விரும்பும் எங்களின் லிங்கம் திருத்திய மலைவாழ் திரன்மிகு லிங்கம் ! (21) எமதர்மராசனை உயிர்ப்பித்த லிங்கம் ஏழுகன்னியர் வணங்கிய லிங்கம்  நீள்நெடுங்கண் நாயகி உடனுறை லிங்கம் ஞீலிவனேஸ்வர சுயம்பு லிங்கம் ! திருப்பைஞ் ஞீலிவனேஸ்வர சுயம்பு லிங்கம் ! (22) வசிட்ட மாமுனி தரிசித்த லிங்கம் வழிதனை அப்பருக்குக் காட்டிய லிங்கம் வாழ்வாங்கு வாழ வரமருள் லிங்கம் திருப்பைஞ்ஞீலியில் திகழ்ந்திடும் லிங்கம் ! (23) நஞ்சுண்டு அமரரைக் காத்திட்ட லிங்கம் வஞ்சகம் அறுத்திடும் வலிவுடை லிங்கம்.. வெஞ்சினம், தாபம் போக்கிடும் லிங்கம் வெள்ளியங்கிரியில் வாழ்ந்திடும் லிங்கம் ! (24) ஜோதி ஸ்வரூபமாய் ஜொலித்திடும் லிங்கம்.. ஜோதியால் நல்லவை நடத்திடும் லிங்கம்.. ஜோதியால் அல்லவை அகற்றிடும் லிங்கம்.. ஜோதியால் உலகத்தைக் காத்திடும் லிங்கம்.. ஜோதியால் அண்டத்தைக் காத்திடும் லிங்கம் ! (25) பித்தனென்றும் பேயனென்றும் அழைத்தாலும் உன்னை.. பிரியமுடன் மனங்கனிந்து காத்தருள்வாய் எம்மை ! அத்தனே உனையன்றி ஆதரிப்பார் இல்லை.. அரி அவனின் மைத்துனா அரவணைப்பாய் எம்மை !   திருச்சிற்றம்பலம் ! திருமால் துதி அரங்கத்தில் வாழும் அழகு தேவா - என் மன அரங்கத்தில் வாழ விரும்பியே வா… வா..- (அ) உள்ளத்தில் உன்னை ஏற்றி வைக்க கள்ளத்தை ஒழித்தோம் கண்ணபிரானே.. - (அ) பாவனைத் துயில் கொண்ட பரந்தாமா - எமக்கு ஆவன செய்வாய் எம் பரமாத்மா …! சாவன , வாழ்வன அனைத்தும் உன் ஆத்மா " வா " வென நீ அழைத்தால் உய்யும் எம் ஆத்மா- (அ) வயலூர் முருகா வயல்கள் சூழும் வயலூர் முருகா வரங்கள் வேண்டும் தருவாயோ ? புயல்கள் சூழும் அடியார் வாழ்வின் இடர்கள் நீங்க அருள்வாயோ ? அண்ணல் அருணகிரி அருமைத் திருப்புகழை  அழகுடன் ஆக்கிடவே அருளைப் பொழிந்தயிடம்   வெண்ணீர் அணிந்த வேலன் உருவம் திகழும் அழகினையே  கண்ணீர் நிறைந்த கண்கள் உடனே காணுகின்ற கூட்டம் ! வந்து வந்து  நீளும் துன்பம் தீர்த்து வைக்கும் முருகா ! முந்து முந்து என்று சொல்லிக் காட்சி நல்கும் குமரா ! தந்து தந்து பேரருளில் மூழ்க வைக்கும் அழகா ! சிந்து சிந்தும் எந்தன் வாழ்வை செப்பனிடு அமரா ! கஷ்டமுடை மனதுடனே உன்னிடம் வந்தால் இஷ்டமுடன் எதிர்கொண்டு கண்ணீரும் துடைப்பாய்.. உன்னடியே சரணம், உடனே நீ வரணும்.. சண்முகனே ! சரவணனே ! சரவணனே ! வருகை தரவேண்டும் வயலூர் முருகா.. இருகை போதுமோ (போதாது) இளவலை வணங்க ! சலுகை நீ தந்தால் சஞ்சலம் தீரும் ! வலுவும் பெருகும்.. எம் வளமும் வளரும் ! வீணாம் ஆசைகளை விடுதல் வேண்டும், தேனாம் உன் புகழைத் தினம் பாட வேண்டும் .. காணும் பொருளெல்லாம் நீயாக வேண்டும்.. நாளும் என்னுள்ளம் நலம் காண வேண்டும் ! கந்தனை நாடிய பின் கிடைக்காததில்லை.. சிந்தனை ஆட்டுவிக்கும் சீர்மிகு பிள்ளை.. விந்தனை வணங்கியதால் விடிந்ததென் எல்லை ! நிந்தனை போனதினால் நீங்கியது தொல்லை ! வயலூர் முருகா வந்து நீ மக்களைக் காத்திடுவாய்.. வாயில் சொற்கள் உள்ளவரை வந்தே பணிவோம் ! அருமை அண்ணன் மலைமீதில்.. அம்மை அப்பன் ஆனைக்காவில் அழகு மாமன் அரங்கந்தனில் அன்பாய்ச் சூழ அமர்ந்திருக்கும் (வ) மனைவியர் இருவர் இருபக்கம், மயிலும் வேலும் ஒருபக்கம்.. மனம் நிறை அடியார் மறுபக்கம் - உன் மனமகிழ் அருளோ அவர் பக்கம் ! (வ) கண்ணில் மணியாய் உனைப் போற்றி(ற) கவலை அகற்றி மனம் தேற்றி(ற) மண்ணில் பாவம் தனை நீக்கி(க) விண்ணில் உந்தன் தாழ் போற்றி(ற).. (வ) பசுமை சூழும் வயல்பதியில்  செம்மை ஒளியாய்த் திகழ்கின்றாய்.. கருமை சூழ்ந்த எங்கள் மனம்  வெண்மை சிந்த அருள்வாய் நீ (வ) சமயபுரம் வாழும் மகமாயி சமயபுரம் வாழும் மகமாயி என்றும் சமயம் அறிந்தே எமக்கு அருள் தாயி.. உன் மகள் நானம்மா, உதவியில் மகவம்மா.. என் குறை கேளம்மா..ஏழைக்கு இரங்கம்மா ! பண்ணிய பாவங்கள் பாவி நான் அறிந்திலனே.. எண்ணிய எண்ணங்கள் ஏட்டில் வடித்திலனே.. புண்ணியம் உனக்கம்மா புவிவாழ் துயர் நீக்கு.. மண்ணில் வாழகில்லேன்.. மனங்கசிந்து அருள் நோக்கு ! எம்மேலே நீ வருவாய் எழிலான முத்தாய்.. ஏறியது போல் இறங்கி இரக்கத்துடன் செல்வாய்.. ஏற்றம் கொண்ட அந்த வேப்பிலை தான் மருந்து.. சீற்றம் நீ தணிவாய் சிறுவர் பிழை பொறுத்து ! புவியாளும் அரசி நீ..பூச்சொரியல் உனக்கு ! புவியாளும் அரசர்க்கும் காவல் உன் நோக்கு.. தவித்தாலும் அன்றி தளர்ந்தாலும் எமக்கு பவித்லிரமான உந்தன் பாதமொன்றே கணக்கு ! மையிலகு விழியாள், குயில் மொழியாள் ! மாமயில் தோகையாள்..தேன் தமிழாள் ! ஆயிரம் பேருடையாள்..அன்னபூரணி.. பாயிரம் பலபோற்றும் பார்வதி நீ ! பிள்ளைத்தமிழ் கொண்டாடும் மீனாட்சி - கருணை வெள்ளமாய்ப் பெருகும் காசி விசாலாட்சி.. கள்ளமில்லா அருள் நல்கும் காமாட்சி.. என்றும் உள்ளமெல்லாம் நிறையும் அவள் அருளாட்சி ! மகிஷனைக் கொன்றவள்.. மறங்கொண்ட மர்த்தினி ! விசிக்கும் மனந்தோறும் வினைகளைக் களைவாள்.. நசித்திடும் துயர் நீக்கி உளமதில் வசிப்பாள் ! அமுதென அருள் மழை பொழிந்திடும்  ஆனந்த நாயகி திருச்செல்வி ! ஆனந்தரூபிணி அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி முதற்செல்வி அன்புடன் அவளை அணுகினோர் வாழ்வில்  ஆனந்தம் பெருக்கிடும் அருட்செல்வி ! சுவாமியே சரணம் ஐயப்பா! கானகத்தே சென்றாலும், கடும்புலியே வந்தாலும், காவலாக வருவானாம், கருணைகொண்டு காப்பானாம்! கண்கள் மூன்று கொண்ட நீலகண்டனுக்கு மகனாம்! காலங்கள் மாறினாலும் மாறாது நிற்பவனாம்! மாலவன், மகேசன் மையலில் பிறந்தவன்; வேலவன் சோதரன், வினைகளைப் போக்குவான். காலங்கள் கடந்தவன், கணேசனுக்கு இளையவன் ஞாலத்தைக் காத்திடும் ஞானத்தில் உயர்ந்தவன்! தாயின் தாங்கா தலைவலி போக்கிட தாவியே தயங்காமல் புலிமேல் அமர்ந்தான்! தாயோ அரசி, தந்தையோ அரசன்! தானோ இருந்தான், தன்னந்தனியாக! மகிஷிக்கு மர்த்தனன்! மக்களுக்கு நர்த்தனன்! மகிமைகள் புரிந்தவன், மகிழ்ச்சிகள் தருபவன்! மனங்களில் நிறைந்தவன், மதியீனம் மாற்றுவான்! மனதினில் நினைத்தே மனதாரப் போற்றுவோம்! “வா”வென அழைத்தால், வாவரின் தோழன் வந்தே அருள்வான்! வளமையைத் தருவான்! வானகத் தேவரும், மண்ணக மாந்தரும் வாஞ்சையில் வணங்கும் வாத்சல்யம் மிகுந்தோன்! மோகினி பாலன் மோகங்கள் தவிர்ப்பான்; கோபங்கள் குறைப்பான், தாகங்கள் தடுப்பான். வேகத்தைக் குறைப்பான், விவேகத்தை நிறைப்பான்! யோகங்கள் அளிப்பான், பாவங்கள் அழிப்பான்! அனுதினமும் நாமும் துதித்திடுவோமே ! அரிஹரன் என்னும் நாமம் உடை ஐயப்பன் நாமம் போற்றிடுவோமே ! ஐயப்பன் நாமம் போற்றிடுவோமே ! சுவாமியே சரணம் ஐயப்பா! இறையோனுக்கு இனிய தாலாட்டு ! தாயுமானவன் தவப்புதல்வா தாலேலோ.. தலைமகளின் தலைமகனே தாலேலோ… தாயுமானாய் எங்களுக்கும் தாலேலோ… தாயாக்கினாய் எந்தனையும் தாலேலோ.. தாயாக்கித் தாலாட்டிட வைத்தாயே.. தாயாகித் தாலாட்டிட வந்தேனே.. (என் அன்புக் கண்மணி உனக்குத்) தாயாகித் தாலாட்டிட வந்தேனே.. இளங்குஞ்சரச் செழுங்கன்றே.. செந்தேனே.. இளமதியே.. வளர்பிறையே.. நறுந்தேனே.. அன்பால் உருவானவனே ஐங்கையனே.. ஆனைமுகனே அறுமுகனின் அருமை அண்ணனே.. கண்வளர்வாய் கண்மணியே களைப்பு நீங்கவே.. கண்ணயர்வாய் விண்மணியே ஓய்வு கொள்ளவே.. ஓய்வு கொள்வாய் ஓங்காரப் பொருளோனே.. சற்றே ஓய்வு கொள்வாய் ஓங்காரப் பொருளோனே ! தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. தாலேலோ…தாலேலோ… தாலேலோ… தாலேலோ…தாலேலோ…  தாலேலோ… முருகனுக்கு… நெற்றிக் கண்ணில் உதித்தவனே… தாலேலோ தாயின் வேலைக் கொண்டவனே.. தாலேலோ மாங்கனிக்காய் உலகை வலம் வந்தவனே… தேங்கும் எங்கள் தீவினைகள் தீர்ப்பவனே… தாலேலோ.. தாலேலோ … தாலேலோ ப்ரம்மனைச் சிறையிலிட்டாய்த் தாலேலோ சிவனுக்கும் குருவனாய் தாலேலோ சிக்கலிலே வேல் வாங்கினாய் தாலேலோ செந்தூரிலே பகை முடித்தாய்த் தாலேலோ சூரனையும் ஆட்கொண்டாய்த் தாலேலோ சீரும் பேரும் தந்தாயே தாலேலோ தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. கனிக்காகக் கோபம் கொண்ட  கதிரேசா ! “கனியே நீ” என்று அவ்வையைப் பாட வைத்தவா! பழம் கூட சுடும் என்று உணர வைத்தவா ! பழனிமலை மேல் நின்ற தண்டபாணியே ! தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. அன்பு வள்ளி கரம் பிடிக்க துடித்த போதிலே.. அண்ணன் அவன் துணை கேட்ட அழகுக்குமரனே ! அருணகிரியை தடுத்தாண்டாய் அருணையிலே.. அழகாகப் பாட வைத்தாய் வயலூரிலே.. தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. நான்முகனுக்கு காட்சி தந்தாய் எண்கண்ணிலே.. நல்லதொரு செங்கோட்டு வெற்பனுமானாய்.. இத்தனை நீ செய்திருந்தும்..இளையோன் என்றே என்றென்றும் துதிக்கின்றார் கண்மணி உன்னை.. எத்தனைபேர் கண்பட்டதோ எந்தன் பிள்ளையே.. அத்தனையும் பூவாகணும் உந்தன் பாதத்தில்.. தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. குன்றிருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவா ! - எங்கள் கோவிலாம் உள்ளமதில் குடியேறுவாய் ! தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ… தாலேலோ… தாலேலோ…. தாலேலோ !   சிவபெருமானுக்கு தாயுமானாய் எமக்கே நீ தாலேலோ தாயிலி நீ என்றாரே உன்னைத் தாலேலோ தாயாகித் தாலாட்டிட வந்தேனே தாயாக்கித் தாலாட்டிட வைத்தாயே! புனலாகிப் பொங்கினாய் நீ தாலேலோ  புனலுடனே அமர்ந்தவனே தாலேலோ  அனலாகி மின்னினாய் நீ தாலேலோ  அருணையிலே அமர்ந்தவனே தாலேலோ … கண்களிலே குருதி கொண்டாய் தாலேலோ கண்ணப்பனை ஆட்கொண்டாய் தாலேலோ விண்ணுயர விரும்பி நின்றாய் தாலேலோ எண்ணுதற்கு அரியோனே தாலேலோ ! தாயுமாகக் காவிரியைத் தாலேலோ… தானாகக் கடந்து வந்தாய் தாலேலோ.. தவித்திருந்த இளம் பெண்ணுக்கே.. தாலேலோ.. தாயுமாகி மகப்பேறு பார்த்தவனே தாலேலோ ! விளையாடல்கள் பல புரிந்தாய் தாலேலோ.. வியன் மிகுந்த மதுரையிலே தாலேலோ.. நெல்மணியைப் பாதுகாத்தாய்த் தாலேலோ..  திருநெல்வேலி நகரினிலே தாலேலோ.. ராமர் பூஜை ஏற்றுக் கொண்டாய்த் தாலேலோ.. ராமேஸ்வரம் தலத்தினிலே தாலேலோ… லவகுசர்கள் வழிபாட்டை ஏற்றிடவே தாலேலோ. குறுங்காலீசனானாய்த் தாலேலோ ! யானைத் தோலை உரித்தவனே தாலேலோ ! ஏக புஷ்பம் ஏற்றவனே தாலேலோ ! பாபநாசம் செய்பவனே தாலேலோ ! பணிந்தோரைக் காப்பவனே தாலேலோ ! ஓய்வெடுப்பாய் ஓங்காரப் பொருளோன - சற்றே ஓய்வெடுப்பாய் ஓங்காரப் பொருளோன.. ஓய்வெடுத்து முடித்த பின்னே தாலேலோ.. ஓடோடி நீ வருவாய் தாலேலோ.. உனக்காத்  தவமிருப்போம் தாலேலோ.. உய்ந்திடுவோம் நீ வந்தால் தாலேலோ… தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ தாலேலோ… அம்மாவுக்கு…. அகிலாண்ட நாயகியே தாலேலோ ! ஆதிநாயகி ஆனவளே தாலேலோ ! இகவாழ்வைத் தருபவளே தாலேலோ ! ஈசனின் பாதியானாய் தாலேலோ ! உண்ணாமுலைத் தாயும் நீ தாலேலோ ! ஊட்டாத்தூர் உறைபவளே தாலேலோ ! ஏகாம்பரன் உடனுறைவாய்த் தாலேலோ ! ஐங்கரனின் அன்னையே நீ தாலேலோ ! ஆறுமுகன் அன்னையும் நீ தாலேலோ ! அழகான வேல் கொடுத்தாய் தாலேலோ ! ஆழமான அறிவைத் தந்தாய்த் தாலேலோ ! அகன்றிடா வினைகள் தீர்த்தாய்த் தாலேலோ ! மீனாட்சி அம்மையும் நீ தாலேலோ வடிவுடை நாயகியும் நீ தாலேலோ.. காமாட்சி ஆனாய் நீ காஞ்சியிலே  கலைகள் பலவும் அருள்பவளே தாலேலோ.. அண்டங்களின் அன்னை நீயே தாலேலோ… ஆயினும் கன்னியானாய்த் தாலேலோ.!  ஆற அமர ஓய்வெடுப்பாய்த்  தாலேலோ.. ஆற அமர ஓய்வெடுப்பாய்த்  தாலேலோ.. தாலேலோ..தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ..தாலேலோ.. தாலேலோ..  தாலேலோ..தாலேலோ.. தாலேலோ..          ஶ்ரீரங்கநாதருக்கு… நீளுலகைக் காப்பவனே ஶ்ரீரங்கனே நீட்டி நிமிர்ந்து ஏன் படுத்தாய் தாலேலோ ? நீண்ட நெடுங் காலெடுத்து வைத்த களைப்போ நீள்விழியாள் சீதையினைப் பிரிந்த நினைப்போ ? மீனாகி வேதங்களை மீட்ட களைப்போ.. கூர்மமாகத் தாங்கியதால் பிறந்த களைப்போ.. வராகமாகிப் பூமாதேவியை மீட்ட களைப்போ.. காராகி மழை தன்னைப் பொழிந்த களைப்போ.. பரசுராமர் அவதாரம் தந்த களைப்போ.. பலராமனாய்க் கதாயுதனாய் நின்ற களைப்போ.. பாண்டவர்க்குத் தூதனாக நடந்த களைப்போ.. பார்த்தனுக்குக் கீதை தன்னை உரைத்த களைப்போ.. பாஞ்சசன்யம் ஊதியதால் வந்த களைப்போ.. பாரதப்போர் முடிந்ததனால் வந்த களைப்போ.. ஆநிரைகள் மேய்த்ததனால் வந்து களைப்போ.. ஆவும் மயங்கக் குழலூதியதில் வந்த களைப்போ.. ஆண்டாளை ஆட்கொண்ட ஆனந்தமோ.. ஆழ்வாரை சேர்த்தெடுத்த பேரின்பமோ.. திருப்பாணாழ்வாரைச் சேர்த்தெடுத்த பேரின்பமோ.. மதுராந்தகம் ஏரியைக் காத்த களைப்போ.. மீனாட்சி கல்யாணம் முடித்த களைப்போ.. ஓய்வெடுப்பாய் ஒப்பிலி அப்பனே - சற்றே.. ஓய்வெடுப்பாய் ஒப்பிலி அப்பனே.. ஓய்வெடுத்து முடித்த பின்னே எங்கள் ஐயனே.. ஓடோடி நீ வருவாய் எம்பெருமானே… பாவனைத் துயில் கொள்ளும் பரந்தாமனே - எங்கள் பாவங்களைப் போக்கிடவே பார்த்தருள்வாய்.. தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ… தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ… தாலேலோ.. தாலேலோ.. தாலேலோ… விளக்கே திருவிளக்கே ! திருச்சிற்றம்பலம்         ஒளி… வெளிச்சம் !  இது தருவது ஒரு தைரியம்..  ஒரு தன்னம்பிக்கை..  ஒரு மகிழ்ச்சி ! ஆகவே தான் நமது முன்னோர்கள் ஒளியை வழிபடுவதை ஒரு கடமையாகவே செய்தார்கள் !         தைப்பொங்கல் திருநாள் ஒளி நாயகனான சூரியதேவனுக்கு நன்றிகளைச் சமர்ப்பிக்கும் நாள் தானே நண்பர்களே ?         இதையே மகர சங்கராந்தி என்று வடநாட்டிலும் கொண்டாடுகிறார்கள்.         திருமணமான… திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் இளம் பெண்கள் முடிந்த போதெல்லாம் திருவிளக்கேற்றி திருவிளக்கு அன்னையை வாசமிகு மலர்களால் அர்ச்சித்து வாருங்கள் ! மன ஒருமைப்பாட்டுடன் அவளை வழிபட்டு வாருங்கள் ! உங்கள் வாழ்வில் ஏற்படும் மேன்மையினைச் சில காலத்திலேயே உணரத் தொடங்குவீர்கள் ! இந்தப் பதிவில் நமது ஆகப்பழமையான திருவிளக்கு வழிபாடு பற்றிச் சில விஷயங்களை உங்களுடன் பகிர ஒரு ஆவல். ஒளி ! வெளிச்சம் ! நமது பாரம்பரியத்தில் சூரிய உதயத்திற்கு முற்பட்ட ஒன்றரை மணி நேரமும்.. சூரியன் மறைந்த பின் உண்டான ஒன்றரை மணி நேரமும் மிகவும் முக்கியமான நேரம்.       அதிலும் மாலை 06.-7.30 ப்ரதோஷமான நேரம்… அதாவது கனத்த நேரம். அந்த நேரத்தில் விளக்கேற்றித் தூபதீபம் காட்டி மணியடித்து வழிபடும் போது எந்த வேண்டாத சக்திகளும் வீட்டினுள் நுழையாது.       எம்பெருமான் சிவன் ஒளிவடிவானவன்.     " சோதியே. சுடரே.. சூழொளி விளக்கே " என்பது தேவாரம்.      “இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே” என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு ! “விளக்கே திருவிளக்கே. வேந்தன் உடன்பிறப்பே..” என்று தொடங்கும் இந்த அருமையான பாடலை அடியாள் எழுதவில்லை. எங்கள் ஆச்சி எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அவர்களுக்கு அவர்கள் அம்மா சொல்லிக் கொடுத்ததாகச் சொல்வார்கள். அத்தனை பழமை வாய்ந்தது இந்தப் பாடல் . இளம்பெண்கள் இந்தத் திருவிளக்கு வழிபாட்டை மேற்கொண்டு… எல்லா நலன்களும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தும் இந்த அம்மாவின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பிள்ளைகளா ! Youtubeல் Maanilam Payanura Channel என்ற பெயரில் நான் பதிவுகள் இடுகிறேன். அதில் கடந்த ஒரு வருடத்தில் இந்த விளக்குப் பூசைப் பாடல் 12,000 views பெற்றுள்ளது என்பதில் எனக்கு ஒரு மன நிறைவு பிள்ளைகளா. திருச்சிற்றம்பலம் ! விளக்கே திருவிளக்கே.. வேந்தன் உடன்பிறப்பே.. சோதி மணிவிளக்கே.. சீதேவி லட்சுமியே.. அந்தி விளக்கே.. அலங்கார நாயகியே.. காந்தி விளக்கே.. காமாட்சித் தாயாரே.. பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத்திரி போட்டு.. குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்.. ஏற்றினேன் நெய் விளக்கு எங்கள் குடிவிளங்க… வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க… மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்.. மாங்கல்யப் பிச்சை.. மடிப்பிச்சைத் தாருமம்மா.. சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா.. பெட்டி நிறையப் பூஷணங்கள்  தாருமம்மா.. பட்டி நிறையப் பால்பசுவைத்  தாருமம்மா.. கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா.. புகலென்று வந்து விட்டோம் புகழுடம்பைத் தாருமம்மா.. அல்லும்பகலும் எங்கள் அண்டையிலே நில்லுமம்மா..! சேவித்து எழுந்திருந்தேன் சீதேவி வடிவம் கண்டேன் வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன் முத்துக் கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன் சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன் பின்னல் அழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன் கை வளையல் கலகலனெக் கணையாழி மின்னக் கண்டேன் காலிற் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன் மங்கள நாயகியை  மனம் குளிரக் கண்டு மகிழ்ந்தேன்.. கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான் ! அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா… வந்த வினையகற்றி மஹாபாக்கியம் தாருமம்மா தாயாகும் உந்தன்  தாளடியில் சரணம் என்றேன் மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் ! மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் ! திருச்சிற்றம்பலம். பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி ! போகமும் திருவும் புணர்ப்பாய்ப் போற்றி ! முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி ! மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி ! வரம்பில் இன்பமாய் வளர்ந்தாய் போற்றி ! வானமாய் அருள்மழை பொழிந்தாய் போற்றி ! இயற்கை அறிவொளி ஆனாய் போற்றி ! ஈரேழுலகமும் ஈந்தாய் போற்றி ! பிறர் வயமாகப் பெரியோய் போற்றி ! பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி ! ஊனானாய் உயிரானாய் உயிரில் ஊறும் உணர்வானாய் வானாதி ஐம்பூத வகையெல்லாம்   நீயானாய் தேனாறும் மலர்க் கொன்றைச் சிவம் என்னும் பொருளானாய் நானானாய் உயிர்க்குயிரே ஞானப் பேரொளி உமையே ! ஓம் எனும் சிற்பரத்தாளே நம: அபாயம் அறுக்கும் அறுகோணத்தி சொற்பவணத்திச் சூட்சும ரூபி சரணம் சரணம் தாள் பணிந்தேன் உன்னை பாவம் பொறுத்து பல பவுசும் தான் கொடுத்து விக்கினங்கள் வராமல் வேலிபோல் காத்து ஆதரித்து எனக்கு அருள் புரிவாயே  புவன சுந்தரி போற்றி வணக்கம் குரு வடிவாய் வந்து உன் உபதேசங்கள் கொடுத்துத் திருவடி தந்தருள்வாயே ! எங்கும் நிறைந்த இறையோனே ! எங்கும் நிறைந்த இறையோனே ! கல்லும்,முள்ளும், பூவும், புல்லும், நன்றும், அன்றும் காணும் உலகெங்கும் நீயே ! உலகெங்கும் நீயே… எங்கும் நீயே… உலகெங்கும் நீயே! வானமும் வில்லாகும்.. மணல் கூடக் கயிறாகும் வாழ்வில்(ன்) முன்னேற்றம் தெரியவில்லை… வானமும் வையமும் படைத்திட்ட வல்லவனின்  வாழ்த்துக்கள் இன்னும் கிடைக்கவில்லை…! வானவில்லைப் படைத்தோனே ! வண்ணம் பல காட்டுகின்ற  வானுலகத் தலைவனே… எங்கும் நீயே… உலகெங்கும் நீயே ! எங்கும் நீயே… உலகெங்கும் நீயே ! நினைவும் நீராகி..கனவாம் நெருப்பதனில் நிதமும் ஆவியாகும்  நியதி கண்டோம்… பனை போல் நிழல் தராத.. பணமொன்றே நினைத்திடும் பதர் போன்ற மனிதரை நாளும் கண்டோம்… போகும் இடம் அறியோமே… பொய்மை போக்க.. வாய்மை காக்க.. வந்தெமக்கு வழிகாட்டு.. எங்கும் நீயே ! உலகெங்கும் நீயே.. எங்கும் நீயே.. உலகெங்கும் நீயே ! இறைவா நீ வருவாய் என்றும் இனிமை நீ தருவாய்.. அணுவினுக்கு அணுவாய் இருப்பவனே - என்றும்  ஆர்ப்பரிக்கும் அலைகளில் தவழ்பவனே ! அசையா மலைகள் , அழகிய ஆறுகள்.. அண்டசராசரம் படைத்தவனே ! பூக்களின் மலர்வில் உறைபவனே! புன்னகை மழலையில் நிறைபவனே ! காக்கவே இருக்கின்றாய் நீ அதனால் கவலைகள் எம்மிடம் வருவதில்லை ! அன்னையின் ஆற்றாமை தேடாமல் நீ ஏன் வந்தாய் - எமை நாடாமல் நீ ஏன் சென்றாய்..? கேளாமல் பிறந்து விட்டாய் - துயர் தாளாமல் தவிக்க விட்டாய்.. ! முந்தைய பிறப்பின் முதிர்ந்த தவத்தால் இன்றைய பிறப்பில் கிடைத்தது என் தெய்வம் - அந்த தெய்வந்தான் உன் தந்தை … உனக்கேன் புரியவில்லை..? உடனே சென்று விட்டாய் - என் உயிர்த் தெய்வத்தின் ஓவியமே…! ஆறோட்டம் போல் ஆசைகள் வளர்த்தாய் ஆறோட்டத்தில் சென்றேன் கலந்தாய் அன்னை நெஞ்சின் ஆசைகளை அழித்தே மறைந்து விட்டாய்… அதில் அமைதியைக் கண்டு விட்டாய் - எந்தன் அமைதியையே பறித்து விட்டாய்… ஆனந்த வாழ்வின் அழகிய சின்னம் ஆண்டவன் வைத்தான் அதன் மேல் கன்னம் அவன் விருப்பம் அதுவென்றால் அவனைத் தடுப்பவர் யார் …? அவனே அன்று தந்தான்…அதை அவனே இன்று எடுத்துக் கொண்டான்…! ஆயிரம் விண்மீன் வானில் வரலாம் ஆயினும் அவைகள் வெள்ளி நிலவோ..? ஆயிரந்தான் மழலைச் செல்வம் என் ஆயுளில் தோன்றிடலாம் ஆயினும் அவையெல்லாம் என் ஆருயிரே நீ ஆகுமோ…. ? 15-07-1974 இளவேனில் கால இளந்தளிர் போல் பிறந்தாய் இலையுதிர் காலச் சருகது போல் உதிர்ந்தாய் இடி மழை மின்னல் இதயத்தில் வளர்த்தாய் இளகிய நெஞ்சில் ஏக்கத்தை விதைத்தாய்..! பூப்போலே நீ பிறந்தாய் மகிழ்ந்திருந்தேன் கண்ணே.. பூப்போலே உதிர்ந்து விட்டாய் வருந்தி நின்றேன் கண்ணே.. காய்க்காத மரமென்ற கடுஞ்சொல் நான் கேட்டிடவோ ? வாய்க்காத வாய்ப்பை எண்ணி வாழ்நாளில் சோர்ந்திடவோ ? வேண்டுமென்று கேட்கவில்லை விரைந்து வந்தாய் நீயும்.. வந்தது போல் மறைந்து விட்டாய் வருந்தி நின்றேன் நானும்.. வேண்டுமென்று கேட்டு இன்று விரதம் காக்கும் எந்தன் வேண்டுதலை என்று அந்த வேந்தனும் கேட்பானோ..? வேந்தனும் கேட்பானோ..? மலடி என்றே பேரெடுத்து மயங்கி நிற்கும் அன்னை.. மனதினிலே சுமையுடனே மருண்டு விட்டாள் உண்மை .. மலர்களிலே உயர்ந்து நிற்கும் மல்லிகையாய் உன்னை மனங்கசிந்து தேடுகிறாள்.. மகிழ்ந்து வாராய் கண்ணே.. மகிழ்ந்து வாராய் கண்ணே..! பிறருக்கென்று அளிப்பதன்றி பிறிதொன்றும் அறியார் -தந்தை உறவுக்கென்று உதவுதன்றி உள்ளொன்றும் ஒளியார்.. சிறிதேனும் அவர் துயரம் சிந்தையிலே கொண்டு உறவாக ஓடி வாராய்… உருகும் நிலை கண்டு… உருகும் நிலை கண்டு…! - " பூவாகிக் காயாகி." மெட்டு. 30-07-1974 காலத்திலே பெற்றெடுத்தாள் அன்னையடா அன்னை…. காலனுக்கே பறி கொடுத்தாள் உன்னையடா உன்னை… எதிர்பார்த்தாள் …ஏமாந்தாள்…பொன்னையடா பொன்னை.. ஏக்கத்திலே வாழு(டு)கின்றாள் காணாமல் உன்னை…! தேனினும் இனிய உன் குரல் கேட்கத் தந்தை தனித்திருக்க… மானினும் கரிய உன் விழி நோக்கத் தாயும் தவித்திருக்க… எங்களைப் பிரிந்து எங்கோ சென்றாய்.. என்ன குறை மகனே…? எங்கள் கண்கள் பொழியும் கண்ணீர் மழையைக் காணவே மனமில்லையோ…? காணவே மனமில்லையோ…? மழலைச் செல்வம் மாறாச் செல்வம் என்பார் உலகத்தார்… சுழலிடைத் துரும்பாய் எம்மை விடுத்தே மகனே ஏன் சென்றாய்…? அழலிடைத் தளிராய்.. புயலிடை மலராய் அன்னை எந்தன் நிலை… விழலிடை இறைத்த நீரோ கண்மணி உனக்கே எங்கள் விலை…? உனக்கே எங்கள் விலை…? - “காதலிலே பற்று வைத்தாள்.” மெட்டு. 05-08-1974 நினைத்ததொன்றும் நடக்கவில்லை.. நினைத்ததொன்றும் நடக்கவில்லை.. இறைவனின் ஆணை இதோ…? நடந்ததொன்றும் மறக்கவில்லை… இனிமை எங்கேயோ….? மறந்து விட்டால் மயக்கமில்லை… இறைவா கேட்கின்றேன் …! மயக்கத்தையே ஏன் படைத்தாய்…? இயம்பிடு இன்றே நீ…! மாயம் தானா பிறப்பு - சொல் ஞாயம் தானா இறப்பு …? இதுதான் முடிவு என்றால் இங்கே ஏன்தான் பிறந்திட வைத்தாயோ…? பல நாளில் பட்ட துன்பம் ஒரு நாளும் மறையவில்லை சில நாளில் கிடைத்த இன்பம்… சீக்கிரம் மறைந்ததும் ஏன்…? வாழ்க்கை என்பது தோட்டம் - அதில் வண்ண மலர்களின் கூட்டம்… வாடும் ஒரு நாள் தேடும் வண்டு வாடிய மலர்களைக் கண்டு…! மேடு பள்ளம் தாண்டி தினம் ஓடும் நதியினைப் போல் … நாடு அவன் நற்பதத்தை …. வீடு கிடைத்து விடும்…! " நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…" மெட்டு (முதல் குழந்தை மற்றும் அம்மா மறைந்த பாதிப்பு) 16-11-1974 முருகையா ! மனம் உருகையா… உருகையா மனம் முருகையா தினம் உருகிடுதே மனம் உன்னாலே குருவையா…. ஞான குரு ஐயா நீயும் ! ஜென்மம் எடுத்து நான் கண்டது என்ன… ! தினமும் தவிப்பதென்றி வேறென்ன..? வன்மம் தீரவில்லை , வழக்கும் முடியவில்லை வந்தே தீர்த்தருள் …. வயலூரா ! " என் பிள்ளை " என்றுரைக்க எனக்கோர் மகவில்லை தந்ததையும் பறித்தாய் தணிகாசலா… உன்றனையே நினைந்து உலவிடும் ஏழையிடம் ஒரு மகவாய் வருவாய் உரு அசலாய்..! சொல்லம்பு தாங்கவில்லை சுருண்டே விழுகின்றேன் சுடர் வடிவேலா கண் திறவாய் ..! வேலொன்று கை கொண்டு வினைகளை நீ களைவாய் ஏனென்று என்றைக்கு என்னை நீ கேட்பாய்..? 08 - 07 – 1979 புயலே வாராய் ! எங்கிருந்தோ வந்தாய்.. என்னவெல்லாம் நீ அழித்தாய்..பின் என்னென்னவெல்லாம் எமக்களித்தாய்…! வெள்ளமாக ஓடி வந்த பண நிதியென்ன..! கண்ணீரைத் துடைக்க வந்த  கறுப்புப் பண அழகென்ன..! அரசு அறிவித்த “அட்வான்ஸ்” தானென்ன…! அதை வாங்க நாங்கள் விட்ட “உட்டான்ஸ்” கதையென்ன…! உண்மையிலே இழந்தவர்கள் உருகி இன்னும் தவித்திருக்க பொய்யாகப் “பெட்டிஷன்” போட்டு P.F. “அட்வான்ஸ்” பெற்று விட்டோம்…! ஆட்டை , மாட்டை  அடித்துச் சென்றாய் என்று “அட்வான்ஸை” வாங்கி தேட்டை மிகப் போட்டு “டெரிவுல்” லும் வாங்கி விட்டோம்..! வீடே போயிற்றென்று வீணை வாங்கி விட்டோம்..! நாசந்தான் உன்னாலென்று நகைகள் வாங்கி விட்டோம்..! மோசந்தான் போனோமென்று மோதிரமும் வாங்கி விட்டோம்..! சேதம் மிக ஆச்சுதென்று Sareeகளும் வாங்கி விட்டோம்…! “டெரிபிள்” இந்தப் புயலென்று “டெரிலின் ஷர்ட்” வாங்கி விட்டோம்…! பேய்க்காற்று அடித்ததென்று “ஃபேனு” ம் வாங்கி விட்டோம்…! கடுமையான உன்னாலே கடனும் அடைத்து விட்டோம்..! கந்துவட்டி தீர்த்து விட்டு புதுக் கடனும் வாங்கி விட்டோம்..! இத்தனையும் எப்படி என்றா கேட்கிறாய்..? வரலாறு காணாத புயலாலே உன்னாலே வாராத மனமெல்லாம் வந்தே சேர்ந்ததுவே..! தாராத “அட்வான்ஸெ”ல்லாம் தானாகத் தந்தனரே..! இத்தனை நன்மையும் எமக்களித்த புயலே நீ இன்னும் ஒரு முறை வருவாயோ ? எங்கள் இன்னல் எல்லாம் தீர்ப்பாயோ ? எம்மை வாழ்விக்க வந்த ஏற்றமுடை புயலே ! என்றும் நீ வாழியவே ! எங்கும் பொங்கும்  வெள்ளமுடன் ! புயலாலே அவதியுற்றோர் இப் புல்லறிவை மன்னிப்பீர் -உங்கள் அடிபணிந்து கேட்கின்றேன் முடிந்தால்…முடிந்தால்.. நேத்திரம் திறவாய் ! வயலாலே இதுகாறும் சூழப்பட்டவனே கடும் புயலாலே இன்று நீயும் சூழப்பட்டாயோ..? - தண் (வ) ஈன்றமகவு நீரில் செல்லும் கொடுமையைக் கண்டார் சான்றஅறிவு  மழுங்கவே இன்று மயங்கியே நின்றார். ஈன்றவுடனே பாலைப் பொழியும் ஆவினம் அதுவும் ஈன்ற கன்றும் வெள்ளம் கொள்ள கலங்கியே நின்றார். அன்று அவுணர் நகரை அழித்து அமரரைக் காத்தாய்…! இன்று என்ன பிழை கண்டு எங்கள் நகரை அழித்தாய்…? நின்று போக இந்த வெள்ளம் நிர்க்குணனே நீ உந்தன் நின்று எமை என்றும் காக்கும் நேத்திரம் திறவாய். ஊழிக் காலம் இங்கு வந்து உற்றதோ ஐயா..? ஆழி நீரை அலுத்துத்தானும் விட்டதோ ஐயா…? சூழினும் துயரம் எம்மை இன்னும் சுப்பிரமணியனே - நீ வாழியவே! எமை என்றும் காக்கவே ஐயனே ..! உண்மையும் பொய்யும் உரைப்பவா.. நன்மையும் தீமையும் செய்பவா.. வளமையும் வறுமையும் வகுத்தவா.. வந்தனை செய்தோம் காக்க வா ! ஆழி சூழ்ந்த நிலமதிலே.. ஆழம் அறியா வாழ்வதிலே.. அமிழ்ந்து போனோம் ஐயாவே.. அழியா வண்ணம் காக்க வா ! (திருச்சியில் 1977 நவம்பர் மாதம் நடுவாரத்தில் பெருவெள்ளம் வந்து புயல் அடித்து பெருஞ்சேதம் ஏற்பட்டபோது எழுதியது. “புயலே வாராய்” என்று எழுதிய நானே தான் வயலூர் முருகனிடம் மக்களைக் காக்குமாறு மன்றாடுகிறேன். “புயலே வாராய்” satire… ஆனால் முருகனிடம் மன்றாடுவது உண்மையான மனிதாபிமானம். இரண்டின் கலவைதானோ மனிதன்…??) எனது ஆத்திச்சூடி  அடக்கம் பயில் ! ஆடம்பரம் விலக்கு ! இயல்பாக இரு ! ஈகை பழகு ! உணவே மருந்து ! ஊரை மறவேல் ! எண்ணத்தில் உயர் ! ஏரி நீராய் இரு ! ஐயம் தெளி ! ஒற்றுமை விடாதே ! ஓங்கு புகழ் பெறு ! ஔடதமே உணவு ! புதுக்கவிதை புதுக்கவிதை புனையச் சொன்னார் புத்தக ஆசிரியர் … எதுகையுடன் மோனையுடன் எழுதச் சொன்னார்…! விண்வெளியில் விரி கதிரில் எது புதுமை …? கண் விழியில் கரு முகிலில் எது புதுமை …? அலை கடலில் ஆழ் முத்தில் எது புதுமை …? மலை முகட்டில் மழைத்துளியில் எது புதுமை …? சிலை வனப்பில் , சிறு குறும்பில் எது புதுமை …? கலையழகில் , கருங்குழலில் எது புதுமை …? தண்ணிலவில் , கதிரொளியில் எது புதுமை …? பண்ணிசையில் , பயில் மொழியில் எது புதுமை …? புதுப் புனலில் பொங்கு நுரையில் எது புதுமை …? மது மலரில் , தேன் கொம்பில் எது புதுமை …? இயலிசையில் இன் சுவையில் எது புதுமை …? மயில் அழகில் , குயில் குரலில் எது புதுமை …? கயல் கண்ணில் , கனி மொழியில் எது புதுமை …? மயல் நோக்கில் , மனப்போக்கில் எது புதுமை …? வயல் வெளியில் வரும் காற்றில் எது புதுமை …? பயில் மொழியில் வரும் லயிப்பில் எது புதுமை …? உமி நெல்லில் , உறை பனியில் எது புதுமை …? குமிண் சிரிப்பில் , குழல் ஒலியில் எது புதுமை …? உதயத்தில் , புள்ளிசையில் எது புதுமை …? இதயத்தில் எழும் துடிப்பில் எது புதுமை …? செழுந் தமிழில் சேர் பொருளில் எது புதுமை …? கொடுங்கானில் படு (இருக்கும்) விலங்கில் எது புதுமை …? பைங்குதலை மழலையதில் எது புதுமை …? ஐந்தொழிலில் அருவியதில் எது புதுமை …? புதுமை என நாம் சொல்லல் பழமையதே…! ஆய்ந்தறிந்து பார்க்கையிலே அருமையதே…! அதை விடுத்தும் புதுமை எதோ..? அறிந்திலேனே…! புரியாமல் தவிக்கின்றேன்… புரிய வைப்பீர்… மழை வேண்டி மன்றாடல்… கூடும் மேகங்களே…குளிரவே பொழிவீரே வாடும் பயிர்களுக்கு வாழ்க்கையைத் தருவீரே..! நாடெங்கும் விவசாயி  நலிந்தே வாடுகின்றார்.. நல்ல பயிர் கருகிடவே  நஞ்சினைத் தேடுகின்றார்.. ஊருக்கு உணவளிப்போரே உயிரைத் துறந்து விட்டாலே யாரிங்கு பசி அழிப்பாரோ.. வருவாயோ… வருணனே… வந்து தருவாயோ.. நல் மழையே…???? மழை காணா நிலமெல்லாம் பிளவுண்டு வெடித்ததுவே.. உழைத்து நின்ற உழவர்களும் உயிர் வெறுத்துப் போயினரே… நீ வந்தால் தானே வாழ்வு.. இல்லை என்றாலோ சாவு..  ஏன் இந்த தாமதம் ஐயா.. அளிப்பாயோ..அழிப்பாயோ.. அது உந்தன் கைகளில் ஐயா ! நாடாளும் மனிதருக்கோ  நாட்டைப்பற்றிக் கவலையில்லை.. போராடும் மனிதருக்கோ போகிற வழிகள் தெரியவில்லை.. ஆளாளுக்கு என்று  ஆயிரம் திசைகள் இங்குண்டு… ஆயினும் நல்ல மனிதர்க்கென்று நல்லதோர் தலைவனே இந்த நாட்டினில் இல்லை இறைவனே ! (1960களின் மத்தியில் வரட்சி ஒன்று ஏற்பட்டபோது எழுதியது) மன ஓட்டத்தில் ஒரு சலனம்…. மன ஓட்டத்தில் ஒரு சலனம் - அதன் முடிவின் எல்லைதான் மரணம் ! தினத்தின் தொடக்கம் காலை, மனத் தினவின் தொடக்கம் கவலை ! கணமும் தொலையா வேதனை எக் கணமும் மறையா வாதனை ! ஏன் படைத்தாய் இறைவா என்றனை உன் குணமதோ சொல் ! ஏன் மறைத்தனை ? துன்பமில் வாழ்வா நான் கேட்கிறேன் ? இன்பமே நிறையவோ ஏங்கினேன் ? இன்முகப் பண்பு ஒன்றே இங்கு வேண்டினேன் ! நன்மைதான் செய்வயோ இறைவனே ? ஆடுவார் பாடுவார் அன்புடன் தினமும் கூடுவார் செல்வம் குன்றாய்க் கூடினால் தேடுவார் உறவினர் சேருவார் நான் நீயென வீடுதான் கொள்ளுமோ வியப்பார் வையத்தார் ! தெரியும் அவர்தம் தெளிவாம் எண்ணம் புரியும் அவர்தம் புன்மைக் கன்னம் எரியும் நெருப்பில் எண்ணெய் இடுதலாய் பிரிவர் துயரம் பிறிதின் நேரில் ! மீண்டும் இங்கே மீளாத் தனிமை ! யாண்டும் பொங்கும் யாழின் இனிமை ! வேண்டும் இறைவா ! விரும்பும் கனிவும்! யாண்டும் குறையா யானையின் பலமும் ! உலகத்தின் சுயரூபம் மெதுவே தெரியும் ! உண்மை என்னவென்று இப்போ புரியும் ! மாயத்தின் உருவம் இன்று மறையும் ! மனத்தின் உயிர்ப்பும் இனியே தெளியும் ! அனைத்தும் இங்கே ஒன்றாய்க் கூடும் ! ஆத்மா ஆண்டவனை இன்றே நாடும் ! பூத உடலம் இனி இங்கு அழியும் ! புனித உலகம் இனிதாய் விரியும் ! மன ஓட்டத்தில் ஒரு சலனம் - அதன் முடிவின் எல்லைதான் மரணம் ! 12-09-1969 நெஞ்சே ! மீளாமல் துயில் ! அன்பான சொந்தம், அழியாத பந்தம் அளவோடு நில்லாதது கண்ணாடி போலே கற் சிதறுண்டால் கணத்தில் பிரிந்திடுமோ - உயிரும் கணத்தில் பிரிந்திடுமோ…? கடலோர மணலில் கணக்காக அமர்ந்து கதை பேசி வளர்வதல்ல - காதல் உணர்வோடு உணர்வாய் உயிரோடு உயிராய் கனிவாக நெஞ்சில் மலரும்… கனவாகப் போய்விட்டாலும் கருகாமல் உயிரில் வாழும் கனிவோடு கனிந்த கனி போல நாளும் கருத்தினில் ஒளி வீசுமே என்றும் கருத்தினில் ஒளி வீசுமே …! உளமெல்லாம் நிறைந்த உண்மை அன்பால் உனக்கு நான் என்னைத் தந்தேன் உனதான உள்ளம் வளமோடு வாழும் என்றே நினைத்தருந்தேன்..! உண்மை கனவாகப் போனதென்ன.. உள்ளம் வெள்ளமாய் ஆனதென்ன..? இந்த நிலை என்று மாறும்.. சுகமென்று சேரும்.. உயிரும் மகிழ்ந்திடுமோ…. மீண்டும் உடலும் உயிர்த்திடுமோ…? மழை என்றால் நீரும்.. மலரென்றால் மணமும் மனிதர்க்குத் தெரிவதுண்டு…! ஏழையின் மனமும்.. இதயத்தின் குணமும் ஏனின்னும் தெரியவில்லை ? மனிதராய்ப் பிறப்பதிலும்.. பிறந்து மனிதராய் வாழ்வதிலும் பல கோடித் துயரம் பாரினில் உண்டு பேசவும் மொழியும் இல்லை - இங்கே பிதற்றவும் வழியும் இல்லை….. அழகான கானம்.. அழியாத தாளம் என்றெண்ணிய காலம் ஒன்று… பழியேற்ற நெஞ்சில் சுழித்தோடும் துயரம் தாளாத நாளும் இன்று…! கரைந்தோடும் காலத்திலே … கண்ணீரின் விலையுமென்ன. இந்த நிலை என்று மாறும்.. சுகமென்று சேரும்.. உயிரும் மகிழ்ந்திடுமோ…. மீண்டும் உடலும் உயிர்த்திடுமோ…? காலைக் கதிரால் தோன்றிடும் நிழலோ கணக்காகச் சுருங்கிவிடும்… மாலைக் கதிரால் உதித்திடும் நிழலோ மாலைபோல் நீண்டு விடும்.. என் நிலை காலை போல் ஆனதென்ன..? கண்ணீர் மாலையாய் ஆனதென்ன..? இந்த நிலை என்று மாறும்.. சுகமென்று சேரும்.. உயிரும் மகிழ்ந்திடுமோ…. மீண்டும் உடலும் உயிர்த்திடுமோ…? இனமென்ன பாராமல் குலமென்ன கேளாமல் உன் பின்னே நானும் வந்தேன்… கனவென்றே முடியும் , கனியாது காதல் இன்னும் புலம்புகின்றேன்…! நெஞ்சே உனக்காக யார் வருவார்..? மிஞ்சும் துயர் தீர்க்க யார் வருவார்..? பஞ்சின் மேல் நெருப்புப் பட்டது போலே விஞ்சும் நீ எரிவாய் ஒரு நாள்… கெஞ்சாதே…! துயிலே கொள்வாய்…! வானத்தில் நிலவும்..வையத்தில் நீரும் மறைந்தாலும் மறையாதது.. கானத்தின்(1) இனிமை கானத்தின்(2) கொடுமை அழிந்தாலும் அழியாதது…! அன்பனும் அருமருந்து .. அது இல்லையேல் பெருவிருந்து தூய விஷமாக மாறும்…உயிரைப் பருகும்… தடுப்பார் யாருமில்லை…போனபின் துடிப்பார் யாருமில்லை ! பசியாறும் பறவை பறந்தது போலே பழகிப் பிரிந்து விட்டார் - அந்தப் பண்பான மனிதர் அன்பான உலகை அறவே மறந்து விட்டார்..! பாலில் நீரினைக் கலப்பது போல் பண்பில் பகைமையைக் கலந்து விட்டார் பாரினைத் திருத்துதல் உன்னால் ஆகுமோ.. பாராமல் இருந்து விடு - நெஞ்சே மீளாமல் துயின்று விடு ! சுகுணா-கிராமத்துப் பணக்காரவீட்டுப் பெண் - பிராமின் என்னுடன் ரயிலில் வருபவள்.. கல்லூரித் தோழியும் கூட…. சாமுவேல் - எளிய குடும்பத்துப் பையன்-கிறிஸ்டியன் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவன்… இருவருக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டு உண்மைக் காதலென்று அவன் உருக…அவளுக்காக விட்ட படிப்பைத் தொடர அவள் பாதியில் “வீட்டில் சம்மதிக்கவில்லை” என்று பெற்றோர் பார்த்த பையனைக் கல்யாணம் செய்து கொண்டு போய்விட… கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்த்த போது அவன் கதறிய கதறலின் மிக ஆழ்ந்த வலியுடன் கூடிய பாதிப்பு இந்தக் கவிதை - நீண்ட நாட்கள் சாமுவேலின் கதறல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.. பின்னர் நானும் என் கணவரும் அவனைத் தேற்றி திருமணம் செய்ய வைத்தது…… வேறு கதை… நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த கல்லூரித் தோழி கண்ணம்மாவின் காதல் கல்யாணம் கனவாகப் போனதில் பாதித்த மனதின் புலம்பல். அவள் ஆண்டவனிடம் கேட்ட கேள்வியும்..அவளுக்கு நான் அளித்த பதிலும் கீழேயுள்ள கவிதைகள். 13 - 06 - 1985. நான் கேட்டேன்……நான் கேட்டேன்…… அன்பு என்றால் என்னவென்று ஆவல் என்றால் என்னவென்று இனிமை என்றால் என்னவென்று ஈதொன்றும் அறியாத……( நான் ) கண்ணிருந்தால் பார்வையில் ஒளி வேண்டும் கருத்திருந்தால் கோர்வையில் சுவை வேண்டும் நெஞ்செல்லாம் நெருப்பாகி நினைவெல்லாம் நீராகி ஆவியாய் ஆனபின்னும் அவளுடலம் வாழ்ந்திருந்தால் அதற்கு என்ன பெயரென்று….. ( நான் ) " நாளை உண்டு" எனவோர் உணர்வதனை நாளும் நானும் என்னுள் வளர்த்தேனே ! நாள் பல கடந்தனவே .. " அந்த " நாள் மட்டும் ஏனோ வரவில்லையே… நான்தான் என்ன செய்வேன் ? நாவுகளின் கொடுமைகளில் நாடி தளர்ந்து நின்ற… நான் கேட்டேன்…… நான் கேட்டேன்…… அன்பு என்றால் என்னவென்று ஆவல் என்றால் என்னவென்று இனிமை என்றால் என்னவென்று ஈதொன்றும் அறியாத நான் கேட்டேன்…… தளராதே தோழி …! அமைதி கொள்…! மனமொன்று நினைக்கும் : செயலொன்று நடக்கும்..! மாறாத யுகத்தில் புயலொன்று அடிக்கும்..! வாழ்வென்று நினைத்தாள் வதையென்று ஆச்சு… " மாள் " என்று முடிக்க தடை ஒன்று இருக்கு…!-(ஒரு குழந்தை இருக்கு ) நித்தம் ஒரு வாதனை…. நீங்காத சோதனை …! சிந்தனை ஒரு வாதனை… சீர் ஏது ( இனி ) பா அதனில் … கொண்டவன் மிதித்தால் கோழியும் மிதிக்குமாம்… உண்பது அவன் சோறு ஊடுதல் எவ்வாறு ….? வாழ்ந்ததுதான் போதாதோ..? வாழ்வரசி உனக்கு….! பேராசை எதற்கு…? பேதையே ஏன் வீம்புனக்கு…? நிஜத்தில் வாழ்ந்தாய்.. நிழலுக்கு ஏன் ஒதுக்கம்…? சுகத்தைப் பார்த்தாய்… சோகத்தையும் தான் பாரேன்…! எந்நாளும் இனிமை எவருக்குமே இல்லை.. முன் பின்னாய்த் துயரம் முனிவர்க்கும் உண்டு… கண்ணாக வைத்திருந்தான் .. " கண்ணா " என்றழைத்தான். கண்ணுக்குப் புண்ணாய் கண்ணனே இன்றானான்… விருந்தாக இருந்தான்.. மருந்தாக இருந்தான்.. பருந்தாகக் கொத்தும் பவிசென்று கற்றான்…? பிரிதல் துயரென்று பரிதவித்த காலமொன்று…! பிரிதலே நலமென்று துடித்திடும் நாளின்று…! எப்படிப்பட்ட வாழ்வு… எப்படித்தான் போச்சு…? செப்படி வித்தைக்காரன் தப்படி போலாச்சு….! காலந்தான் ஆற்றுமோ…? கோலம் தான் மாறுமோ..? ஞாலத்தில் இது புதிதல்ல..! ஞானம் பெறு… பாதை விடு…! உன்னாலே ஆவதொன்றில்லை.. உள்ளபடி எல்லாம் நடக்கும்… தன்னாலே முடிவு வரும்…. தளராதே….! அமைதி கொள்….! 1. Gaanam (பாட்டு) 2. கானம் அதாவது கானகம் …காடு வருத்தம் பொதுவாக வருத்தம் என்றால் நாம் நினைப்பது , யாராவது நம்மைத் தேவையில்லாமல் திட்டுவது.. சண்டை போடுவது.. நாம் நினைத்தது கிடைக்காமல் போவது போன்றவற்றால் ஏற்படும் உணர்ச்சி. ஆனால் சற்றே ஆழமாக யோசித்தோமானால் பல்வேறு விஷயங்கள் அல்லது நிகழ்வுகள் நமக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றன. அப்படி யோசித்த பொது எனக்குத் தோன்றியவைகளே இந்தக் கவிதை வரிகள். சரியா என்று சொல்லுங்கள் நண்பர்களே ! பிறந்தவர் மாண்டால் வருத்தம் பிழைத்தால்(1) வானொலியில் வருத்தம் சிறந்தவர் தாழ்வால் வருத்தம்   தாழ்ந்தவர்(2) உயர்வால் வருத்தம். பறந்தவர்(3) தவறால் வருத்தம்   சார்ந்தவர் மோதலால் வருத்தம் இரந்தவர் திமிரால் வருத்தம்   ஈந்தவர் கரந்தால் வருத்தம்.   கார்தனில் மழையால் வருத்தம் கோடையில் வெயிலால் வருத்தம் பார்தனில் நதியால்(4) வருத்தம்   பார்வையில் திரையால்(5) வருத்தம் சேர்தலில் தீதால் வருத்தம்   கார்வையில் குறைவால் வருத்தம் தேர்தலில் தோற்றால் வருத்தம்   தேர்ந்தவர் வீழ்ந்தால் வருத்தம்   காதலி ஊடலால் வருத்தம் தாயவள் சினந்தால் வருத்தம் சோதனை நாளினில் வருத்தம்   காயது கனியேல் வருத்தம் நோவதில் மெலிந்தால் வருத்தம்   சாதனை நலிந்தால் வருத்தம் சாவதில் எவர்க்கும் வருத்தம்   நானிதைச் சொன்னால் வருத்தம்.     சோற்றினில் கல்லால் வருத்தம் நாற்றினில் களையால் வருத்தம் பேற்றினில் வலியால் வருத்தம்   காற்றினில் கலப்பால் வருத்தம் போற்றலில் குறைந்தால் வருத்தம்   மாற்றினால் பொன்னில் வருத்தம் தூற்றலில் துயரால் வருத்தம்   சாற்றினால் எதிலுமே வருத்தம்…வருத்தம்.                                                     பி.கு. [1] பிழைத்தால் - பிழையாகப் பேசிவிட்டால்                      வானொலியில் வருத்தம் தெரிவிப்பர் . [2] தகுதி இல்லாதவர். [3] விமானம் பறக்கும்போது விமானி தவறு செய்தால் [4] நதியில் வெள்ளம் ஏற்படுதல் [5] கண் புரை (Cataract) களிப்போங்கும்   தாயின் அன்பினில், தாரத்தின் காதலில் தழைத்திடும் உறவினில் களிப்போங்கும் ; தூய நல் நெஞ்சினில், துளிர்த்திடும் உறவினில் ( நட்பினில் ) துயரமில் வாழ்வதில்  களிப்போங்கும்..! மாயவன் அழகினில், மங்கல விளக்கினில் மலர்ந்திடும் மகிழ்வினில்  களிப்போங்கும்; சேயதின் சிரிப்பினில், சேல்விழி நோக்கினில் சேர்ந்திடும் அன்பினில்  களிப்போங்கும்..!   பொன்னிற உடலினில், புதுமைக் கவியினில் பொங்கிடும் மனமதில் களிப்போங்கும்..; தண்ணொளி நிலவினில் தளிர்த்திடும் மனந்தனில் தங்கிடும் அமைதியில் களிப்போங்கும்..! பண்ணிடைத் தவழ்ந்திடும் பரவச நிலையினில் பண்புடை நடையினில் களிப்போங்கும்..; விண்ணிடைப் பறப்பதில்,விடிகின்ற வேளையில் வியன்மிகு கலைகளில் களிப்போங்கும்..!   கடலலை ஓசையில், கவினுறு காடினில், கயலுடை ஓடையில் களிப்போங்கும்..; மடல்விரி தாழையில் மயங்கிடும் வேளையில், மயல்மிகு முல்லையில் களிப்போங்கும்..!   விடலையர் வீரினில், விருப்புடை வேலையில், வியத்தகு அறிவினில் களிப்போங்கும்..; கடலுடை சொத்தினில், கள்ளமில் குணமதில், கானகத்தின் மழையதில் களிப்போங்கும்..!   ஓங்கிடும் மலையினில் உதித்திடும் அருவியில், ஓம் எனும் ஒலியினில் களிப்போங்கும்..; தேங்கிடும் நீரினில் தெள்ளலை வீச்சினில் தெரிந்திடும் வெண்மையில் களிப்போங்கும்..! உண்மை அன்பினில் உதவிடும் வேளையில் உருவாகும் நட்பினில் களிப்பொங்கும் ! நம் நலன் நினைத்து நண்பன் செய்திடும் நல்ல செயல்களில் களிப்பொங்கும் ! பாங்கி இடும் பணியினில், பாவையர் அணியினில் பார்த்திடும் பார்வையில் களிப்போங்கும்..; வாங்கிடும் பரிசினில், வயல்வெளி செழிப்பினில் வார்த்திடும் பரிவினில் களிப்போங்கும்..!   வேலவன் எழில்தனில், வென்றிடும் பொழுதினில் வேதத்தின் ஒலியினில் களிப்போங்கும்..; மாலவன் துயிலதில், மாசறப் பயில்வதில் மானமுள் வாழ்வதில் களிப்போங்கும்..! பால் அதன் வெண்மையில், பாசமுள் பெண்மையில் பாய்ந்திடும் நதியதில் களிப்போங்கும்..; சேல் அதன் துள்ளலில், சேர்கின்ற சேடியர் துணையதில் களிப்போங்கும்..! (எதெல்லாம் களிப்போங்க வைக்கும் என்று கால்லூரியில் எங்கள் தமிழாசிரியை துறைகளுக்கிடையே 1970ல் வைத்த போட்டியில் முதல் பரிசை வென்று தந்த எனது கவிதை.) மகனே நீ வாழ்க ! தேடித்தேடி நான் செய்த வழிபாட்டின் தேர்ந்தெடுத்த பலனாகும் மகனே நீ! தேய்ந்து ஓய்ந்து போய்விட்ட  எம் வாழ்வில் தேனாகத் தித்திக்கும் பொருளும் நீ! உன் எண்ணத்தில் மேன்மை என்றும்  நிறைந்திடவே  மகனே !                உன் சொல்லில் உண்மை  என்றும்   உறைந்திடவே… உன் செயலில் நேர்மை என்றும்  நிலைத்திடவே… உன் அன்னை வணங்குகிறாள் இறைவனையே !  ஈகை குணம் மாறாதிரு எம் மகனே - வெற்றி வாகை உனைத் தேடிவரும் திருமகனே ! அதில்  கிடைக்கும் மனநிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை நீ அறிவாய் எம் மகனே ! உன் உழைப்பால் உலகளவில் நீ உயர்ந்தாய்.. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பரிசளித்தாய்.. என்றென்றும் சீர்மை நலம் உற்றிடவே.. கன்றுன்னை வாழ்த்துகிறோம் உன் பெற்றோர் ! 17-05-2019 வாழ்வின் பொருள் நன்மை செய்து துன்பம் வாங்கும் வாழ்க்கையிலே.. நலிந்து என்றும் வருந்தவில்லை எம் மகனே… ! உடல் பலமெல்லாம் இழந்த பின்பும் திரு மகனே..எங்கள் பழக்கம் மட்டும் மாறவில்லை எம் மகனே ! ( 1 ) சொந்தங்கள்.. நண்பர்கள்.. பயன் கொண்டு..  எம்மைத் தூக்கி எறிந்து போன போதும் எம் மகனே.. சோர்ந்து நாங்கள் விழவில்லை நீ அறிவாய்.. செய்வதையும் நிறுத்தவில்லை நீ உணர்வாய் ! ( 2 ) அவமானம்..பழிபாவம் புதிதல்ல..! மகனே ! அவை யாவும் எம்மைப் புடம் போட்டிடவே..! என்றெண்ணும் நெஞ்சத்தைத் தந்து விட்டான்… என்றென்றும் துணை இருக்கும் ஆண்டவனே ! ( 3 ) சொத்து சுகம் தேடவில்லை திரு மகனே.. வாழ்வில் சுயநலமும் எமக்கு இல்லை எம் மகனே.. அத்தனையும் “அவன்” சித்தம் எனறெண்ணி.. சித்தமதைத் தேற்றிக் கொள்வோம் எம் மகனே ! ( 4 ) ‘எங்களுக்கு’ என்று நாங்கள் நினைத்ததில்லை அதனால் எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் போயினவோ…? திங்களைப் போல் நாங்கள் என்றும் தேய்ந்த போதும்.. தினகரன் போல் மீண்டெழுந்து ஒளி தருவோம் ! ( 5 ) உறவுகளைப் பிரித்து விடுதல் எளிதய்யா… மகனே ! ஒன்று கூட்டிக்  கொண்டு போதல் கடினமய்யா ! பாதிக்கு மேல் வாழ்நாளை அதில் கழித்த பாவி இவள் அனுபவம் இது புரிந்து கொள்ளய்யா ! ( 6 ) உண்மையான அக்கறைகள் கொண்ட நெஞ்சம்… மகனே கண்டிப்பும் கனிவுமாய்த்தான் இருக்குமய்யா…. நிஜமான நேசத்தைப் புரிந்த உள்ளம் நிலமை இதை அறிந்து கொள்ளும் நீ உணர்வாய் ! ( 7 ) அழகான பொய்களையே நம்பும் நெஞ்சம்… மகனே ஆழமான உண்மைகளை நம்புவதில்லை… அதை உணர்ந்து நாம் அதனைத் தேடும்போது… அது நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும் ! ( 8 ) உண்மை, நேர்மை, உளமார்ந்த நேசமதும்..  மகனே செய்நன்றி மறவாத தன்மையதும் நலிந்தோர்க்கு மனமிரங்கும் பண்பதுவும்.. நம் சந்ததிக்கு விட்டுச்செல்லும் நலங்கள் ஐயா ! ( 9 ) ஏழு வயதில் தொடங்கி விட்ட பழக்கமிது மகனே..! எழுபதிலும் தொடர்கிறது நீ உணர்வாய் ! இதில் வழுவாது இறுதி வரை திருமகனே! வாழும் “அருள்” கிடைத்துவிட்டால் போதுமய்யா ! ( 10 ) வேதனையின் வெளிப்பாடு என்று எண்ண வேண்டாம்…. ! மகனே விரக்தியின் வெடிப்பு என்றும் கருத வேண்டாம்….! வேதனையும் விரக்தியும் எப்போதும்  எம்மை  வெற்றி கொள்ள நாங்கள் என்றும் விடுவதில்லையே ! ( 11 )  உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும்…. உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்.. உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும் - நீ நலம் வாழ அது என்றும் தவமிருக்கும்! ( 12 ) (எங்கள் வீட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிள்ளை யார் பேச்சையோ கேட்டு விலகிப் போன போது (09 - 10 – 2019) எழுதியது. உண்மை உணர்ந்து அவன் வந்த போது என் கணவர் உலகில் இல்லை.) மகாத்மா காந்தியின் இழப்பு ! புத்தலி மைந்தன் போகின்றான் புண்ணிய ஜோதி போகின்றான் புண்ணிய பூமி அழைத்ததென்று புத்தலி மைந்தன் போகின்றான்.. வந்த வேலை முடியுமுன்னே.. புத்தலி மைந்தன் போகின்றான்.. அச்சம் கொண்ட அவனியிலே அஞ்சாமை என்னும் விதை விதைத்தான்.. அல்லும் பகலும் பாடுபட்டே.. அஹிம்சை ஒளியை ஏற்றி வைத்தான்..! ஆனமட்டும் ஆங்கிலேயர் அவரை அன்று ஆட்டுவித்தும் அருமை பாரதம் ஒளி பெறவே ஆருயிர்தனையும் ஈந்து விட்டான்..! காந்தம் இரும்பை இழுப்பது போல் தம்மைச் சார்ந்தவர்களை இழுத்த செல்வன்.. சாந்தம் என்ற சொல்லினுக்கே ஒரு ஆர்ந்த பொருளாய் நின்ற மகான் ! வீரமார்ந்த எண்ணத்தினால் இந்த வையம் அதனில் நிறைந்த மகன்.. காந்தி என்றே அழைக்கப்பட்டான்.. இன்று சாந்தியுடனே கலந்து விட்டான் ! கண்ணில் அடங்காப் பிரேமையுடன் அன்று காத்திருந்த பலபேரை… விண்ணில் அடங்கா ராமநாமம் கேட்க விழைந்திருந்த பல பேரை… பண்ணில் அடங்காப் பரமனையே அன்று பாடித் துதிக்கும் வேளையிலே… எண்ணில் அடங்காத் துயரத்திலே.. என்றும் இழையவிட்டுப் போய்விட்டான்.. ஒற்றுமை தன்னைப் போதித்தான்… ஒற்றுமை இன்றி அலைந்தனரே… தீவிரவாதம் எதிர்த்தவனை தீவிரவாதமே கொன்றதுவே…! புத்தலி மைந்தன் போய்விட்டான்…  புண்ணிய ஜோதி போய்விட்டான்…! அப்துல்கலாம் நீ போலி நடிகனல்ல ! பொய் சொல்லும் அரசியல்வாதியுமல்ல ! புரட்டுத் தொழிலதிபருமல்ல ! இவர்களெல்லாம் தான் Celebrities என்கிறார்களே ? இதைப் பொடிப்பொடியாக்கிய அறிவுக் கதிரவனே ! நீ காலமானாய் என்று கேட்டதும் நண்டாஞ்சுண்டான் முதல் நாடி தளர்ந்தவர் வரை.. நொந்து நொந்து.. வெந்து வெந்து.. கதறுகிறார்களே… கண்ணீரில் கரைகிறார்களே.. இதற்கு என்னய்யா பெயர் ? இதயம் ஒரு கலைக்கூடம் இதயம் ஒரு கலைக்கூடம் - அதில் எத்தனை எத்தனை மாடம் -  சில அழிந்த நினைவுகள் பாடம்..அவை அழியா நினைவின் வேடம் ! இதயத்தைக் காணவே எத்தனை பேர் வருகின்றார்.. இருந்துமே சில பேரே இறுதி வரையில் இருக்கின்றார் ! புதுப்புது நினைவை அளிப்போர் சிலர் பூத்த நினைவை அழிப்போர் சிலர் ! அந்த நினைவில் களிப்போர் சிலர்.. நினைவதால் கழிக்கப் படுவோர் சிலர்… பாதகத்தால் நிறைந்து விட்டப் பண்பு காணா இவ்வரிய பாரினில் பிறந்து விட்ட பாவத்தை நினைத்து வாடுகிற… இதயம் ஒரு கலைக்கூடம்.. அதில் எத்தனை எத்தனை… மாடம்…? உயிர்த் தோழியின் வருத்தம் ஓராயிரம் மேகங்களில்… ஒரு மேகம் தனித்திருக்கும்… அதன் காரணம் கேட்டாலே… அதன் கதையே விளங்கிவிடும் ! பிறந்தது எவ்விடமோ…. பேசிடத் தெரியவில்லை… வளர்ந்தது எங்கேயோ… வார்த்தையில் சொல்லவில்லை… அது ஓடும் பாதையிலே… அதற்குதவிடும் துணையுமில்லை… காலைக் கதிரொளியில் அது காதல் கொண்டு நிற்கும்… மாலை மதியினிடம் அது மனதை இழந்து நிற்கும்…  ஆனால் கதிரும்.. மதியுமோ அதைக் கருத்திலும் கொள்ளவில்லை… காலம் எல்லாமே… கவலையில் கரைந்ததாலே…  மேகம் பொலிவை இழந்ததுவே… மேனி கருமையாய் மாறினதே… அதன் பெருகும் விழித்துளியே மண்ணில் மழையாய் வீழ்ந்ததுவே…! பெண்ணாய்ப் பிறந்ததாலே பேதை வாழ்வே துயரந்தானே… மீட்சி எந்த நாளோ.. மீளுமோ நிம்மதியும்…? மனம் துடியாய்த் துடித்திடுதே… மகேசா.. பதில் சொல்வாய்… வாழ்க்கைப் பாதை மாற்றத்திலே வளமை ஏதுமில்லை… வாழ்வை வாழ்ந்து பார்க்க எனக்கோ மனமுமில்லை… வாழ்வில் நானிருக்கேன் என  எனக்கோர் துணையுமில்லை…! சிலசில நேரந்தான் வானவில் தோன்றி நிற்கும்.. ஆனால் சிறப்பான மகிழ்வை அது என்றுமே தந்து செல்லும்.. என்னால் எனக்கே இனிமையில்லை.. ஈன்றவரோ கலங்குகிறார்…! - எவ்வளவோ தேடியும் சரியான மாப்பிள்ளை அமையாமல் இருந்த எனது நெருங்கிய தோழியின் துயரத்தைக் கண்டு மனம் வெதும்பி எழுதிய பாடல்கள். 12-08-1993   மேலே முள்ளு , உள்ளே கள்ளு ! பாவ ’மிகு (1) கண்ணம்மாவைப்           பாடினான் பாரதி அன்று ! பாசமிகு காமாட்சி உனைப்         பாடுகிறேன் பாவை இன்று         பாதனில் காதல் கொண்டு…! அன்னையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.. அன்னைதான் முன்னறி மூத்தவளன்றோ ? அன்னையாய் நானிருக்க.. ஆருயிரே…அமுத ஊற்றே.. உன்னையும் மடியிலிட்டு ,           உவப்பெலாம் கனியவிட்டு , கன்னலும்.. கனியமுதும்          கண்மணியே ஊட்டிவிட்டுப் பின்னமே(2) காணாத          பேருவகை எய்தினேனே.. சொல்லியே மாளாத          சொர்க்கத்தைக் கண்டேனே ! தகப்பனாய் நானிருக்க         தவமகளாய் நீ பிறந்தாய் ! மகனவனின் கடமையையும்         மடமகளே நீ புரிந்தாய் ! பகலவனின் தனியொளி போல்         பார்வையிலே நீ நிறைந்தாய் ! சகமதனில் நீதானே         சத்தியத்தின் திருமகளே.. அகமதனில் அமைதி பூக்க         ஆர்வமுடன் பணி செய்தாய் ! தமையனாய் நானிருக்கத்         தம்பியென நீயும் வந்தாய் ! " தம்பி உடையான் படைக்கஞ்சான்."         தத்துவமே பேசவில்லை.. தரணி போற்றும் உண்மையிது !         தங்கம் போலும் மெய்மையிது !          காதலனாய் நானிருந்தால்…         காதலியும் நீதானே ! வேதனையைப் போக்கிவிடும்         வேர்ப்பலாவும் நீதானே ! சாதனைகள் பல செய்து..         சாகசங்கள் பல புரிந்தும் மாதுனையே அடைவதற்கு        மண்மீது வழியில்லையேல் சாதலொன்றே சாதனமாம்        சபிக்கப்பட்ட என் வாழ்வில் ! காதலியாய் நானிருக்கக்         காதலனும் நீயன்றோ ? கண்மணியே ,பொன்மணியே என்று        கதைபலவும் பேசியதும் பொய்யாமோ ? விண்மணியாய் நீயிருக்க        வியன்கலமும் நானாவேன் ! உண்மையான உவகைக்கு        உதாரணமும் நானாவேன் ! நான் வணங்கும் நல்லுளமே !       நல்லது நல்கும் நாட்டாமை நீ ! வான் நின்று பொழியும் வளமும் நீ !      வல்லமை காக்கும் வந்தியன் நீ ! கான் என்றும் வழங்கும் குளுமையும் நீ !       காடெல்லாம் ஓடும் காட்டாறும் நீ !               (காட்டாறு தீடீரெனப் பெருகி அழிக்கவும் செய்யும். மழை காணா பூமியில் பயிர் செழிக்க வைக்கவும் செய்யும்.) ஏடெடுத்தேன்…எழுத்தெடுத்தேன்.. எழுதத்தான் முடியவில்லை… “ஆசிய ஜோதி” நேருவுக்கு ஒரு       அன்னை இந்திரா ! பாசமிகு “நற்பணி நாயகி”க்கு ஒரு        “சேவைச் செல்வி”! ஆம் ! அன்னையின் பின்னால் அனவரதமும்       இந்த அன்புருவம் ! கண்ணையும் இமைத்திடாத       இந்தக்  கரும்புருவம் ! விண்ணையே மண்ணுக்கு    இழுத்தாலும்..       வியப்பதற்கு ஏதுமில்லை ! வியப்பையே வியக்க வைக்கும்       வியன்மிகு பெண்ணுருவம் ! அல்ல…அல்ல…பெண்ணரசி நீ !       பெருக்கெடுத்து ஓடும் கங்கை நீ ! பேணி எமைக் காக்கும் காவிரி நீ !       செருக்கோடு நிமிர்ந்து நிற்கும் இமயம் நீ ! செழுமையில் வளமை காண்      கன்னியாகுமரியும் நீ ! மேலே முள்ளு , உள்ளே கள்ளு ! 1. bhaavam 2. குறை (நான் என் கணவருடன் சேர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டு செய்த, ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திய இரண்டு நிறுவனர்களில் ஒருவரைப் பற்றி அவருடைய 75வது பிறந்த நாள் அன்று நான் எழுதிய கவிதை.) கொரோனா ! கொரோனா !! கொரோனாவைக் கண்டு பயந்தோடும்  கோழை மாந்தரே நில்லுங்கள்.. உங்களைச் சுற்றி நடப்பது என்ன ஒரு நொடி பாருங்கள்… கோழிக்கும் குருவிக்கும்  காக்கைக்கும் இங்கே கொரோனா பயமில்லையே.. கோடியில் காசு சேர்க்கும் மனிதனைக்  கொரோனா விடவில்லையே.. ஏனென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள் எந்தன் தோழர்களே.. இயற்கையை விட்டு விலகி வந்ததன் பரிசிது தோழர்களே.. காலன் யாரையும் விடுவதுமில்லை காசுகள் நம்மைக் காப்பதுமில்லை.. ஆச்சாரம் என்றால் ஆரோக்கியம் என்று பெரியோர் வகுத்தார்கள்.. ஆச்சாரம் என்றால் தீண்டாமை என்று சிறியோர் பிரித்தார்கள்.. உண்மையை அறியா மாந்தர்கள் அழகு வார்த்தையில் வீழ்ந்தார்கள்.. உள்ளதை இழந்து நலமெலாம் குலைந்து நலிந்தே போனார்கள்.. உங்கள் சுத்தம் உங்கள் வாழ்க்கை.. உங்கள் கையில்..வாழ்வதும் தாழ்வதும்  கை வாய் மூக்கு சுத்தம் என்பது மட்டும் போதுமா ? கட்டாயமாக அக்கம்பக்கச் சுத்தம் வேண்டாமா ? புகையிலை மதுவும் போதையும் நீங்கள் விலக்கிட வேண்டாமா ? பாரத நாட்டின் நலத்தை நீங்கள் நினைத்திட வேண்டாமா ? உங்கள் வீடு உங்கள் உரிமை ! உங்கள் நாடு உங்கள் கடமை ! பேரப் பிள்ளைகளின் பிரிவு பறந்து பறந்து  இனிய கூச்சல் போட்ட இளஞ்சிட்டுகள் கூட்டுக்குத் திரும்பிவிட்டன … நகர இயலா நல்ல மரங்கள் நினைவுளுக்குள்  ஒடுங்கிவிட்டன… ஆயின் இதுதான் நிதர்சனம் … (பேரப் பிள்ளைகள் வந்து ஒரு மாதம் இருந்து… ஊருக்குப் போன பின் எழுதியது) உன் கண்கள் ஒளி பெறும்.. இந்த எளியவள் 20 ஆண்டுகளுக்கு மேல் தொண்டு செய்த திக்கற்றப் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில், தாய் தந்தையற்ற ஒரு பெண் மூன்று வயது முதல் வளர்ந்து வந்தாள்.     பெயர் கனிமொழி.. ஆனால் அவள் கண்விழி ?      நன்றாகப் படிக்கும் அந்தப் பெண்ணிற்கு ஒருவகையான அரிதான பார்வைக் குறைபாடு. நாங்களும் சென்னை வரை போய் மருத்துவம் பார்த்தோம் : நிரந்தரமான பலனேதும் கிடைக்கவில்லை.   இறுதியில் "அது பரம்பரையாக வருவது.. ஒன்றும் செய்ய  முடியாது " என்று சொல்லி விட்டனர்.     12 ஆம் வகுப்புத் தேர்வில் 888 மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். அவளுக்கு ஆசிரியைப் பயிற்சி எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. அதில் சேர்த்து விட்டோம்.    ஆனால் விதி விளையாடியது. அங்கு அன்றாடம் செய்ய வேண்டிய எழுத்து மற்றும் வரைதல் ஆகியவற்றினால் இரண்டு மாதத்திற்குள்ளாகவே பார்வைத் திறன் மளமளவெனக் குறையத் தொடங்க அந்தப் பயிற்சிப் பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர்.      அடுத்து எங்கள் நிர்வாகம் கூடி ஒரு முடிவெடுத்தோம்.       அவளை எங்களுக்கு நீண்ட காலப் பழக்கமுடைய பார்வை இழந்தவர்கள்.. பார்வைக் குறைபாடு உடைய வசதி ஏதும் இல்லாதவர்களுக்காக உண்மையான தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்தில் சேர்த்து விடுவது என்று.. அந்த நிறுவனத்திடமும் பேசி அவர்கள் ஒப்புதலையும் வாங்கி விட்டோம்.     அவளிடம் மெதுவாக அதைச் சொல்லத் தொடங்கியபோது கதறினாள் பாருங்கள்…     எங்கள் அலுவலகத்தில் இருந்த அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்.  ( 2008 ஆகஸ்ட் மாதம் என்று நினைவு ) அந்த நாள் என் வாழ்வில் மறக்கவே முடியாத வேதனை பொங்கிய நாள்.     எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களின் நிறுவனர்கள் இருவரில் ஒருவர் ஏற்கனவே இறைவனடி சேர்ந்து விட்டார். இன்னொருவரும் 75+ பல்வேறு நோய்களுடன்…. அவர்களுடன் இணைந்து தொண்டாற்றிக் கொண்டிருந்த என்னைப் போல் ஓரிருவரும் 60+களில் இருக்கிறோம்.      எங்களுக்குப் பின் நிர்வாகத்திற்கு வருபவர்கள் எப்படி இருப்பார்களோ ?  அதனால் அந்தத் திக்கற்ற இளம் பெண்ணிடம் பேசி ஒருவழியாக அங்கு சேர்த்து விட்டோம்.           அந்தப்பெண் அழுத அழுகை எங்களை மிகவும் வருத்திவிட்டது. அன்றிரவு தூக்கமே வரவில்லை.     தொலைக்காட்சியே பார்க்காதவள்  மிகுந்த மன வேதனையுடன் அதன் முன் அமர்ந்த போது…. " நா கோயி உமங் ஹே…  நா கோயி தரங் ஹே.. மேரி ஜிந்தஹி ஹே க்யா.. ஹே கடிபதங் ஹே.. " என்ற பழைய ஹிந்திப் பாடல் ஓடுகிறது. எனக்கு அந்தப் பாடல் எப்போதுமே பிடிக்கும். மனதை உருக்கும் இசை.. அந்தப் பாடலின் பல்லவியின் இசையில் இந்தப் பாடலை மளமளவெனக் கண்ணீர் வழிய இரண்டு மூன்று நிமிடங்களில் இந்த அடியாள் எழுதிய கவிதை தான் இது நண்பர்களே !    அப்போது மணி நள்ளிரவு 2.35. உன் கண்கள் ஒளி பெறும்.. உன் கண்கள் உலகைப் பார்க்கும்.. இன்று நடக்கும் யாவுமே..  நாளை மாறுமே.. பார்வையற்றும் சாதித்தோர் பாரினிலே பலநூறு… பரமனை நீ சரணடை.. பாதை உனக்குத் தெரியுமே ! தளராதே என் கண்மணி.. தளர்வு சோர்வைத் தந்திடும்.. துணிவுடன் நீ முடிவெடு… தொடர்ந்து செல் உன் வழியினில் ! ஆண்டவனை நீ நம்பு.. அனுபவத்தில் சொல்கிறேன்.. அவன் தனது பிள்ளகளை  அணைத்து என்றும் காப்பவன் ! கடலோரக் கன்யாகுமரி ! குமரித் தாயின் மடியினிலே கொஞ்சியே ஆடிடும் அலைகளெல்லாம்.. குதித்தே ஆடி வருகின்றன.. குளிர்ந்த நினைவைத் தருகின்றன! பன்னிரு வயது சிறுமியைப் போல்  பார்ப்பவர் கண்களில் தெரிகின்றாள்… பன்னெடுங்காலமாய்த் தவமியற்றிப் பரமனை அடைய நினைக்கின்றாள் ! விரிந்தே தெரியும் கடல்பரப்பு.. விரிந்த மனதுக்கு உவமையிதோ ? பரந்தே கிடக்கும் பூமியிது.. நம் பாரத நாட்டின் எல்லையிது ! வாய்மையின் விளக்கம் பாபுவுக்கோர்.. சீர்மை நல்கும் ஒரு மண்டபம்.. தூய்மையாய் மின்னிடும் மடமல்லவா ? நேர்மை நிலைக்கும் இடமல்லவா ? கன்னங்கரிய நரேந்திரரோ கடலலையோரம் அமர்ந்துள்ளார் ! கண்ணுக்கு விருந்தாய் அமைகின்றார்.. காண்பவர் தம்மைக் கவர்கின்றார் ! ஆதிசங்கரர் தம் சீடருடன் அழகுச் சிலையாய்ப் பொலிகின்றார்.. அமைதியே தவழும்.. அவர் முகத்தில். அறிவோ ஒளிரும் அவர் விழியில் ! மடலிடை மலராய் மணம் வீசும் விடலையாம் வீர விவேகானந்தர்.. கடலிடைப் பாறையில் அமர்ந்தாரே.. கம்பீரம் மிக்க சிலை வடிவில் ! உயிருள்ளது போல் இலங்கிடுதே உயர் பரமஹம்சர் ஓவியமே ! உயிருள் உயர்வினைத் தூண்டிடுமே.. உயிருள்ளளவும் நிலைத்திடுமே ! கருணைப் பார்வை.. கனிந்த மனம் காருண்யம் தனக்கு ஓர் விளக்கம்.. பொறுமையால் அனைவர்க்கும் அன்னையான.. பெருமகள் சாரதை ஓவியமாம் ! கருமை செம்மைக் கற்களினால் காண்பவர் வியக்கக் கட்டியுள்ளார்.. கருமை இருளும் (இருள்தான்) விலகிடுதே.. கண்களில் ஒளியும் பெருகிடுதே ! அமைதி சூழ்ந்த இருண்ட இடம்.. அழகுப் பசுமையில் ஒளிரும் " ஓம் " ! அமைதி நாடும் மனிதர்கள் அமர்ந்து தியானம் செய்யும் இடம் ! கண்ணுக்கழகிய கதிர் உதயம்.. கடலிடை மறையும் அதன் உறக்கம்.. பண்ணுக்கழகாம் பால் நிலவும் உதித்தல்.. மறைதல் பேரழகாம் ! உள் வெளி நாட்டோர் மனதினிலே உவகை நிறைக்கும் சீரிடமே.. உள்ளொளி பெருக்க அனைவருக்கும்  உதவிடும் ஓங்கியதோர் இடமே ! சாதி சமயம் தனைக் கடந்தே சாதனை விளைத்திடும் ஓரிடமே ! ஆதி முதலே அமைதி தரும் ஆராதனைக்கோர் பேரிடமே ! (22-09-1979) தவத்தின் தபோவனம்  ** திருப்பராய்த்துறை கவினுறு மரங்கள் கவிந்த இடம் காணற்கரிதாம் தலைவர் இடம் கண்களுக்கு எட்டிய தூரம் வரை கழனிகள் அன்றி வேறில்லை ! வணக்கத்திற்குரிய பரமஹம்சர் வீரத் திருமகன் விவேகானந்தர் வீரரும் தொழுதிடும் சாரதையும் விருப்புடன் உறையும் பூஜையறை! அருகினிலே ஓர் அச்சுக்கூடம் அழகிய புத்தகங்கள் பிறக்கும் இடம்.. ஆயிரம் ஆயிரம் வெளியீடுகள்.. அவை விளக்கும் நம் பண்பாடுகள்! ஆன்ற அறிவை அளித்தே நல்ல சான்றோனாக்கப் பயிற்றுகின்றார்.. தோன்றும் உயர் குணம் தபோவனத்தில் சேர்ந்தே பயிலும் சிறுவரிடம் ! உடலைக் காக்க கைக்குத்தலரிசி உள்ளத்தினைத் தேற்றக் கலைமகள் புகழ்ச்சி ! உணர்த்தும் தியானம் உயிரின் உயர்வை.. பிணக்கும் மறையும் பேரின்பம் விரியும் ! வடதிசையில் ஒரு சாந்தி நிகேதன் தென்திசையில் ஒரு தபோவனம் கற்கச் சிறந்த கலைகளின் கூடம் நிற்கும் புவியில் எப்போதும் !  18-05-1970 ## உறவுகளின் உரசல்கள் குடும்பங்களுக்காகத் துளியும் சுயநலமின்றி நன்மைகளையே செய்தும்.. அடுத்தடுத்து சொல்லடி பட்ட போது எழுதிய பாடல்கள். ஆற்றாத மனதின் அல்லல் குரல்….                        ** மனதின் ஓசை நடுவினிலே…. மனதின் ஓசை நடுவிலே மயங்கும் மாங்குயில் வன விலங்கும் காணும் என்றும் நிம்மதி வாழ்வில் பிறந்த போது பிடித்த அழுகை மறையவில்லையே பிரிந்து போன மகிழ்ச்சி இன்னும் திரும்பவில்லையே உண்மைக்கென்று காலம் வரும் தெரியவில்லையே பொய்மை என்று புதைந்து போகும் புரியவில்லையே ஆணென்றும் பெண்ணென்றும் ஆட வந்தாரே அவர் வீணென்று தெரிந்த பின்னும் வீழ்ந்து விட்டாரே காணுகின்ற காட்சி யாவும் உண்மை என்றாரே பேணுகின்ற பெருமை தன்னைச் சிதைத்து நின்றாரே நாகரீகம் என்று உரைத்து நலத்தினைக் கெடுத்தார் போகும் இடம் அறியாது புகலிடம் இழந்தார் தாகந்தனைத் தீர்க்க எண்ணிக் கானல் அணுகினார் மோகந்தனைப் போக்க எண்ணி முள்ளை அணைந்தார் குடி கெடுக்கும் அதை உணர்ந்தும் குடியினை மறவார் வடிவெடுக்கும் வறுமையிலே வாடியே மடிவார் அடி எடுத்துத் தந்தாலும் அதனைத் தொடரார் விடிவேது வீணருக்கே.. நன் முயற்சி விடுவாய் உழைத்து என்றும் உண்டிடவே யோசனை செய்வார் உழைக்காமல் உணவு என்றால் ஓடியே வருவார் பிழைப்பாரே இவர் என்றும் பிச்சை எடுத்தும் தழைப்பாரே சலிக்காமல் லஜ்ஜை மறந்தும். (02 - 02- 1978) கொடுத்தான்.. கெடுத்தான் கொடுத்தானே… கொடுத்தானே அன்பை ஆண்டவன் கொடுத்தானே ! கெடுத்தானே.. கெடுத்தானே நிம்மதி இருந்த நெஞ்சினையே ! பிரித்தானே.. பிரித்தானே.. ஒன்றாய் இருந்த உறவினையே.. விரித்தானே.. விரித்தானே உலகில் வஞ்சனையை விரித்தானே ! உடன் பிறப்பாய் வந்து தோன்றிய மனிதர் பாதியில் பிரிந்து விட்டார்.. உடன் பிறப்பாய் வந்து பழகிய நண்பர்..தனிவழி நடந்து விட்டார்.. எங்கே போவேன்.. இறைவனைக் கேட்டேன்.. பாதையைக் காட்டவில்லை.. எங்கும் எதிலும் இருக்கும் இறைவன் பார்வையில் கிட்டவில்லை ! என்றோ போகும் உயிரே நீயும் இன்றே போனால் என்ன ? இருந்து இந்த உலகில் நீயும் சாதிக்கப் போவதென்ன ? காலமும் தேவையும் கடந்தே போனபின் கதறியே பயனுமென்ன ? காலத்தின் தேவன் கடவுளைச் சென்று அடையவே பயமும் என்ன ? தனிவழி போகத் துணைக்கு ஒருவரை அழைத்தே வருகின்றான்.. தனிவழியாகத் தானும் ஒருநாள் வந்ததை மறக்கின்றான்.. தன்னுடைத் தனித்துவம் என்ன என்பதைத் தரணிக்குக் காட்டாமலை.. தன்னந்தனியே இறுதியில் அவனும் தன்வழி போகின்றான் ! வாழ்வெனும் தீவினிலே… வாழ்க்கைப் பாதையிலே…வளமெல்லாம் கனவென்றால்.. வந்து இங்கு பிறந்த பின்னே வருந்துவதில் என்ன பயன் ? ஆசையெனும் வழியினிலே அல்லலுறும் வாழ்விலே.. அமைதி தேடி ஓடுகிறார்.. அடைவாரோ அதனையே ? காலமெல்லாம் கஷ்டமென்றால் காத்திருந்து என்ன பயன் ? காற்றடிக்கும் வேகத்திலே கை விளக்கும் உதவிடுமோ ? (கை விளக்கால் என்ன பயன்?) எண்ணம் பின்னும் மனதினிலே பின்னே வரும் துயரினிலே.. கண் என்பதும்.. கருத்து என்பதும் கரைந்ததம்மா நீரினிலே… தண்ணீரே வெள்ளமானால் தனக்குள்ளே பயம் தோன்றும்.. கண்ணீரே உள்ளமானால் கருத்தினிலே என்ன தோன்றும் ? நீரிருக்கும் நதியினிலே.. மீன் பிடிக்கப் பறவை வரும். நீரும் வற்றி.. மீனுமின்றி போன பின்னே என்ன வரும் ? இதயம் என்ற ஓடையிலே இனிமை என்னும் நீர் சுரந்தால்  உண்ண வரும் பறவை போல உறவுகளும் ஓடிவரும்.. இதயமது மரத்துப் போனால் இனிமை நீரும் சுரந்திடுமோ ? இந்நிலைக்கு வந்த பின்னே இதுவும் வாழ வேண்டுமோ ? மரமிருந்தால் நிழலைத் தரும் உன் உடலும் நிழல் தருமோ ? மரத்தினுடை பயன் கூட இல்லாமல் நீ வாழ்வதேனோ ? வாழ்வு எனும் தீவினிலே.. வந்து போகும் புயலினிலே.. யார் பிழைப்பார் ? யார் மரிப்பார் ? யாரறிவார் உலகிலே ? 19 - 07 – 1980 இறைவன் இருக்கின்றானா ? இறைவன் இருக்கின்றானா என்று இதுநாள்வரை தேடோ தேடென்று தேடிக் கொண்டிருந்தேன்…. கடைசியில் கண்டே பிடித்துவிட்டேன்… " இதோ எந்தன் தெய்வம் முன்னாலே …" என்ற பழைய திரைப்படப் பாடல் ஒன்று உண்டல்லவா…. அந்த ராகத்தில் பாடிப் பாருங்கள்….. "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…நான் பலப்பல தீர்ப்புகளில் கண்டேனே…. கொள்ளையடித்து வாழ்வோருக்குக் கூட்டாளி -அவன் கொலைகள் பல செய்வோரின் காவலாளி….. உன் நலம் நினைத்து நீ அடையும் பதவி ! பல கமிஷன் மூலம் நீ சேர்க்கும் செல்வம் ! உன் உடனிருப்போர்க்கு நீ செய்யும் துரோகம் -இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!!!! பல லட்சம் செலவினிலே பால்குடம் … பல லட்சம் செலவினிலே அன்னதானம் …. பல லட்சம் செலவினிலே காவடி …. பல லட்சம் செலவினிலே பூஜைகள்…. அத்தனையும் உந்தன் சுய வளர்ச்சிக்கு…. அத்தனையும் உன் குடும்ப நலத்துக்கு…. அத்தனையும் உன் எதிரியை ஒழித்திட… அத்தனையும் உன் வாழ்வை உயர்த்திட…. முடித்துவிட்டு எழுந்து பாரு உன் முன்னால் … அந்த மூவரும், தேவரும் உன் கண் முன்னால் …. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…நான் பலப்பல தீர்ப்புகளில் கண்டேனே ! (சமீப காலங்களில் நமது அரசியல் போகும் போக்கைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் எழுதியது.) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.