[] 1. Cover 2. Table of contents சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகள் சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகள்   ஆலம்பட்டு. சோ.உலகநாதன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sindhanai_puthidil_sindhiya_thuligal} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/sindhanai_puthidil_sindhiya_thuligal This Book was produced using LaTeX + Pandoc நூற்குறிப்பு நூல் பெயர் : சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகள் ஆசிரியர் : ஆலம்பட்டு. சோ.உலகநாதன் தொகுப்பு : உ.இளமதி அறிவுடைநம்பி மின்னூல் பதிப்பு : ஏப்ரல் 2020 வெளியீடு : சன் கிரியேசன்ஷ், காரைக்குடி ISBN : 978-81-945878-1-1 பக்கங்கள் : 121 விலை : ரூ. 110 உரிமம் : CC-BY-NC-SA கமலா உலகநாதன் நினைவு திருக்குலக்கல்வி அறக்கட்டளை ஆலம்பட்டு, கல்லல் வழி, சிவகங்கை மாவட்டம் - 630 305 Design & Printed by [] Unit of SUN CREATIONS, Karaikudi sun_creations@ymail.com +91-9578078500 [] ஈன்றெடுத்த தாயும் ஈடுஇணையற்ற அறிவாசானும் அருமைமிகு தந்தையும், பெறற்கரிய பெற்றோருமான தெயவத்திரு. உலகநாதன் கமலா அவர்களுக்கும், என்னை கவிஞனாக்கி அழகுபார்க்க பயிற்சி தந்த சிறிய தந்தை தெய்வத்திரு. சோ.தமிழரசு அவர்களுக்கும், பேணிக்காத்து வளர்த்த பெரியம்மா… பெரியப்பா… தெய்வத்திரு வள்ளி - மூக்கையா அவர்களுக்கும் இத்தொகுப்பு.. சமர்ப்பணம்… வரலாற்றில் வாழும் ஐயா உலகநாதரே! -எக்ஸ்ரே P.மாணிக்கம் சிந்தனைப்புதிது-சிறப்பாசிரியர் சிந்தனைப் புதிது-ஐந்தாமாண்டு நிறைவு நாளில் புதுமலர் வெளியிட நினைத்தோம். ஐயா! ஆனால், இன்று உனது நினைவு நாள் மலராய் ஆயிற்றே ஐயா. உனது ஊர்மக்கள் ஒன்றுகூடி நீர் வாழுங்காலத்தே உன்னறிவைப் போற்றி ஊர்கூடி வாழ்த்தினதே. பிறந்த மண்ணில் பெருமை மட்டுமா? அயலகத்தில் ஆயிரமாயிரமாய் உன்னை போற்றுகின்றனரே நீ அறிவாயோ! இம்மலரை நீ பெற்ற மக்கள் உனக்கு காணிக்கையாக்கினரே. அயல் நாட்டில் பொருள் தேட சென்ற போதும் Dr.அம்பேத்கரை மறவாமல், அவரது வரலாற்றை அவனிதெரிய அறிவித்தாயன்றோ. இந்தியநாட்டு சுதந்திரத்தை பெற்றுத்தந்த காந்தயடிகளைப் போற்றி “சுதந்திரம் நடந்து வந்த பாதை” - என வரலாறு சமைத்தாயன்றோ. ஆதிதமிழாம் அறம் - புறம் எனும் தமிழரின் வாழ்வியலை அறியும் ஆவணம் ஒன்று! அதில் புரட்சியின் வீரமும், புகழ்சேர்த்த வாழ்வும், அறச்நெறியும், அறிவுசார் புலவர்களை தேர்ந்தெடுத்து புறநானூறு காவியத்தை புகழ்மிகு வரலாறாய் தமிழகத்திற்கு தந்தீர் அன்றோ! வரலாற்றில் வாழ்வது ஏதேன்றே அறிவாயய்யா. எதுவெனில் குயிலியின் வரலாற்றை ஆதாரமாய் ஷெட்யூல்ட் சமூக பெருமை கூட்டி குயிலிமை வரலாற்றில் வாழவைத்தாய். அது என்ன வரலாறோ! விவேகத்தோடு கூடிய வீரமாய் உடலில் நெய்பூசி ஆங்கிலேய அரசின் வெடிக்கிடங்கில் வீழ்ந்து சிவகங்கைச் சீமையை மீட்டாள் என நீ சமைத்த சான்றுகளே சாட்சியாய் காட்சி தருகிறது. அதற்கு சான்றாய் சிவகங்கை வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் குயிலியின் நினைவு ஸ்துபியோடு உணர்வால் நீ இருக்கின்றாய் ஐயா. சிந்தனைப் புதிதெனும் சீர்மிகு பத்திரிக்கை எப்படித் துவங்கினோமென இன்று நினைக்கையில் மெய் சிலிர்க்குதய்யா. பூர்வகுடிகளின் புகழ்மிகு வரலாறாய் ஆற்றல் மிகு எழுத்தால் ஆளும் திறம் பெற்ற நீவீர் என அறிந்து புரவலர்கள் உமை ஆசிரியராய் ஏற்றோம் ஐயா. நம் சமூக விடுதலையன்றி இந்திய நாட்டினர் அனைத்து விடுதலைக்கும் அறம் சார்ந்த வழியில் நெறிசார்ந்து கட்டுரைகள் பல தீட்டினீர். ஜனநாயக மரபை போற்றி அரசியல் அமைப்பின் வழிநின்று சமைத்திட்ட கட்டுரைகள் உம்மால் எழுதப்பட்டது ஏராளம்! ஏராளம்! அரசியல் அடிச்சுவடு முதல் வல்லாண்மை அரசியல் வரை எவ்வடிவில் செல்வதென்று எத்தணையோ எழுதினீரே! சமூக, அரசியல், மத, பொருளாதார பொருள் சொற்றொடராய் எழுதும் ஆற்றல் பெற்றோராய் திகழ்ந்தாய் ஐயா. கூட்டு முயற்சியாய் தொடர்ந்த நம் “சிந்தனைபுதிது” இன்றளவும் தொய்வின்றி பொதுவெளியில் வருவதற்கு சமூக கடமையே காரணமாகும். அடிக்கடி சொல்வீர் ஐயா “சமூகத்திற்கு நம்மால் இயன்ற அளவு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற அந்த மந்திரச் சொல்லை வழிநடத்தும் வாக்கியமாக கொள்கின்றோம். அன்புடன் [] திருச்செல்வம் அவர்கள் சிந்தனைப்புதிது - ஆசிரியர் வாரண்ட் ஆபிஸர் இந்தியவிமானப்படை (ஓய்வு) உலகநாதன்; பெயரிட்ட பெற்றோர்க்கு முதல் வணக்கம்! பெயருக்கு ஏற்ப சமுதாய உலகின் நாயகனாய் அன்பு, ஆர்வம், அக்கறை, அடக்கம், தொண்டு, தோழமை என்ற உயர்பண்புகளோடு அரசியல் முதல் தமிழார்வ இலக்கியம் வரை தன்னிகரற்று உலவி வந்தாயே! சாதி பெயரை சகலரும் பகிஸ்கரிக்க “திருக்குலம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்தாயே! சமுதாய சிந்தனையில் விழிப்புணர்வும், விவேகமும் மக்களிடையே பரப்பிட”சிந்தனை-புதிது" எனும் மாத இதழ் துவக்கி மகத்தான பணி செய்தாயே! இயற்கையே உனைஅடைய இறப்பை கொடுத்துனக்கு எம்மிடமிருந்து பிரித்துவிட்ட போதும் உன் நீங்காநினைவுகளில் நெஞ்சம் நிறைந்திருக்கு உன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் முத்தான நல் நினைவுமலர் தொடுத்த எல்லா நல் உள்ளங்கட்கும் நன்றியுடன் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்! அவர் தொட்ட சிகரங்களை தொட முடியா விட்டாலும் அவர் இட்ட வழித்தடத்தில் என்றும் அவர் வழியில் பயணிக்கலாமே! அன்புடன், [] மனம் ஏற்கா மரணம் கவிஞர் - மாங்கனி சந்தோஷ் M.Com., சிந்தனைப்புதிது படைப்பாளினி ஒரு சமுதாயம் வரலாறு தெரியாமல் வாழ்ந்துவிடக் கூடாது என்ற வகையில் மதிப்பிற்குரிய சிந்தனை புதிதின் ஆசிரியரும், சமுக சிந்தனையாளரும், வெண்மை உடையில் வலம் வந்து உண்மைகளைத் தன் சமூகத்திற்கு எடுத்துரைத்த எளிமைவாதி ஐயா ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்கள் தன் சமூக வரலாறு பற்றிய ஆணித்தரமான உண்மைகளையும் ஆதாரப்பூர்வமான விளக்கங்களையும் மறைந்த வரலாற்றை மீண்டும் உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார். வளர்ந்து வரும் நாகரீக உலகில் இன்னும் ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டு தான் உள்ளது. தேவகோட்டை அருகே உள்ள நாகாடியில் ஓர் உயிரை பலிவாங்கிய கொடூரம், அதன் தாக்கத்தை முழுமையான விளக்கத்துடன் தெரியப் படுத்தியதன் மூலம் சாமான்ய மக்களாலும் புரிந்து கொள்ள உதவியது. வாழ்க்கையில் சாதாரண விளிம்பு நிலையில் வாழும் மாணவர் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் “நீட்” போன்ற தேர்வுகளும் அதன் எதிரொலியான அனிதாவின் மரணமும் மீண்டும் நிகழவிடாமல் தடுக்க இதுபோன்ற தேர்வுகளை மாநில அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எல்லோரும் ஒன்றிணைந்து வெற்றி காண வேண்டும் என வலியுறுத்துகிறார். இது இளைய சமூகத்தின் மீது கொண்ட அக்கறையை உணர்த்துகிறது. சிவகங்கைச் சீமையை மீட்டெடுக்கத் தீக்கிரையான தியாகமங்கை குயிலி முதல், மொழிக்காக, தேசத்திற்காக, இனத்திற்காக, காதலுக்காக வரலாற்றில் நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் இன்னுயிர் நீத்த செம்மல்களை பட்டியலிட்டு ஆசிரியரும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஐயா ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் சமூகத்தொண்டும், பொதுநலப் பேரறிவும் நீண்ட நெடுங்காலம் இச்சமூகத்தில் பயணித்திருக்க வேண்டிய நிலையில் துரதிரிஷ்டவசமானது அவரின் மறைவு. இன்னும் மனம் ஏற்கா மறைவாகவே உள்ளது. சமூகத்தின் மீது கொண்ட பற்றும், அதற்கான சிந்தனை தேடல்களும், சமூகத்திற்கு ஆற்றிய பொதுநலத்தொண்டும், ஆண்டாண்டு காலம் காவியமாய் வாழும். வாழ்த்தவயதில்லை, நிச்சயம், வரப்போகும் சந்ததியும் பேசும் உங்கள் புகழை.. என்றும் நிலைக்கும் ! தமயந்தி சாமிநாதன் ஆசிரியை, காரைக்குடி ஆசிரியரின் கட்டுரைகள் அனைத்தும் நாட்டுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சாதி, மதம் கடவுளின் பெயரால் மக்களை மாக்களாக்கி ஏமாற்றி அடிமைப்படுத்துவதை தெளிவுபடுத்திய விதம் பாராட்டுக்குரியது. அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டாலும் மனித நேயத்தையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காக்கும் பண்பு வேண்டுமென தலித் இளைஞர்களுக்கு புகட்டியது தலையாய கருத்தாகும். ஊழலின் இன்றைய நிலையை ‘வேலியே பயிரை மேய்ந்தால்’ என்ற கட்டுரையில் காண முடிந்தது. உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை செயல்படும் முறையை விளக்கிக் கூறிய முறை அருமை. நாட்டு மக்களின் மனங்களின் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை பதித்த நம் ஆசிரியருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியரின் நற்குணமான மது அருந்தாமையை முன் உதாரணமாக வைத்து இளைஞர்களிடம் மதுவின் கெடுதல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறி இளைஞர்கள் மனதில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். எழுத்தாளரும், ஆசிரியருமான எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்புக்கும், பாசத்திற்குமுரிய எனது மாமா அவர்களின் தொகுப்பு நூலாம் ‘சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகளில்’ எழுதப் பணித்த இளமதி அறிவுடைநம்பிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில காலம் எங்களுக்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக விளங்குவார்கள் என நினைத்த வேளையில் மீளாத்துயில் கொண்டு எங்களை ஆறாதுயரில் ஆழ்த்திவிட்டீர்கள். மாமாவின் எளிமையும்… புகழும்… என்றும் நிலைக்கும். அன்புடன் தமயந்தி சாமிநாதன் புத்தகங்கள் பேசிக் கொண்டேயிருக்கும் தாத்தா நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழ்வது ? எனக்கு வழிகாட்டுவது யார் ? என்று பல கேள்விகள் எனக்குள். ஆனால், இன்றோ நீங்கள் இல்லாமல் ஒரு வருடம் உருண்டோடியது காலத்தின் கோலம். நீங்கள் அறிவுலக ஆசான். படைத்த புத்தகங்களோ ஏராளம். வாங்கிய விருதுகளோ பற்பல! ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் பாசம் மட்டுமே நிறைந்த தாத்தாவாகத் தான். கசங்காத வேட்டி சட்டை, கம்பீர நடை, எதையும் சந்திக்கும் துணிச்சல். போராட்டம் என்றால் உடனடியாக கிளம்புவீர்கள். ஏன் என்று கேட்டால் ’சமுதாயத்திற்காக’என்பதே உங்கள் பதில். பண்டிகை என்றால் உற்சாகம் என் அன்பு தாத்தாவுடன் கடைவீதி உலா. நீங்கா நினைவுகள். யாரையும் புண்படுத்தா சொற்கள். கோபம் வந்தால் மெளனம். எப்படி தாத்தா, ஆச்சரியமாக உள்ளது. நினைக்க நினைக்க வியப்பாக உள்ளது. அனைத்தும் முடிவிற்கு வந்துவிட்டது. தாத்தா, பாட்டி இருக்கும் வரைதான் மகிழ்ச்சியும், சந்தோசமும். எப்போது நீங்கள் பிரிந்தீர்களோ… உங்களோடு மறைந்துவிட்டது எங்களின் குழந்தைத் தனமும். உலகம் உள்ளவரை உங்கள் புத்தகங்கள் பேசிக் கொண்டேயிருக்கும். என்றும் உங்களின் நீங்கா நினைவில் அன்பு பேத்தி அ.வினோதினி அறிவுடைநம்பி தாத்தா… மதுமதி அறிவுடைநம்பி சிந்தினைப் புதிது படைப்பாளினி தாத்தா… நான் கண் திறந்து உலகை பார்த்த போது உன்னை பார்த்த எனக்கு - இன்று நீ கண்மூடி இவ்வுலகை பார்க்க மறந்ததை பார்க்க இயலவில்லை… தாத்தா… ஊரெல்லாம் என்னைப் பேசிவந்தாய் இன்று உங்களை நான் எழுதுகிறேன் காலத்தின் மாற்றத்தை ஏற்க இயலவில்லை தாத்தா… உங்கள் வழியை நான் தொடர வாழ்த்தும்படி வணங்குகிறேன்… என்னுரை மே 24ந் தேதி 2008ம் ஆண்டு அன்பின் முகவரி எங்கள் அம்மா கமலா உலகநாதன் இறந்த நாள். அந்த இழப்பை அப்பா ஈடுகட்டிக்கொண்டிருக்கையில் நவம்பர் 16ம் தேதி 2018ம் ஆண்டு எங்களுக்கு கருப்பு நாளாக அமைந்தது. அதிர்ந்து பேசாதவர், தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் கொட்டி வளர்த்த எங்களின் அன்பு அப்பா திரு.சோ.உலகநாதன் அவர்கள் மறைந்த நாள். 75-வயதென்றாலும் இவர் இளைஞரா- முதியவரா?! என வியக்க வைக்கும் அளவிற்கு சுறுசுறுப்பானவர். எப்போதும் சமூகம் - அரசியல் - இலக்கியம் இவற்றை மையமாக்கி இயங்கியவர். அஹிம்சாவாதி, " சிந்தனைப் புதிதின்" ஆசிரியர் சமுதாய முன்னோடியாய் விளங்கியவர். இப்பேரபட்ட ஐயா ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் “சிந்தனைப் - புதிதில்” வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து வெளியிடுங்களேன் என முதுபெரும் சமுதாய முன்னோடி தி.எக்ஸ்ரே மாணிக்கம் ஐயா என்னிடம் தனது கருத்தை முன்வைத்தார்கள். அப்பாவின் நினைவு நாளை வெறும் கண்ணீர்த்துளிகளால், நிரப்புவதைக்காட்டிலும், "சிந்தனைப் புதிதில் சிந்தியத்துளிகள் என்ற தொகுப்பு நூலை வெளியிடுவதே மிகச்சிறந்த கணிக்கையாகும் என உணர்ந்தேன். இந்த நூலுக்கு அழகு சேர்த்த " அம்பேத்கர் ஆய்வாளர்" திரு.எக்ஸ்ரே மாணிக்கம் ஐயா அவர்களுக்கும், திரு.எஸ்.ஆர்.பட்டிணம் திருச்செல்வம் அப்பா அவர்களுக்கும் திருமதி.சே.மாங்கனி சந்தோஷ், மகள் மதுமதி அறிவுடைநம்பி அவர்களுக்கும், திருமதி. தமயந்தி சாமிநாதன் அவர்களுக்கும் இந்நூல் வெளிவர உதவிய வேப்பங்குளம் திரு.அன்புதாசன் அண்ணனுக்கும், முனைவர் திரு.மோகன் அண்ணணுக்கும், சன்கிரியேஷன் அச்சகத்தார்க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உடனிருக்கும் அண்ணன்-அன்னி திருச்செல்வம் பிரேமலதாவிற்கும்- அக்கா, மைத்துனர் - வேப்பங்குளம் நீலமணி - பாண்டியன் அவர்களுக்கும், தம்பிகள் அகிலன், அரவிந்த், அமர்நாத்திற்கும், அப்பா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதித்த காலந்தொட்டு.. கடைசிப்பயணம் வரை எங்களுடன் உறுதுணையாய் நின்ற கல்லல் - அண்ணன் அன்பழகன், அண்ணி திருமொழி, அண்ணன் சங்கர், தம்பி - முத்தழகு மற்றும் நெடுமறம் கவிதாசன் அண்ணனுக்கும், விசலயன்கோட்டை அண்ணன் கருப்பையா, அன்னி அன்னபூரணம் அவர்களுக்கும், சண்முகம் அப்பா அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எப்போதும் இக்கட்டான சூழ்நிலையில் சிறிய தந்தையார் சோ.தமிழரசு அவர்களின் இறுதிச்சடங்கிலும், அப்பாவின் இறுதிச் சடங்கையும் சிறப்பாகச் செய்து எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் திரு.சங்கு தமிழ்மாறன் அப்பாவிற்கு நன்றி நன்றி! எனக்கு தோள்கொடுத்து, ஊக்கப்படுத்தும் என் அன்புக் கணவருக்கும், தாத்தாவிற்கு நம்மால் முடிந்த சிறப்பு செய்தே ஆக வேண்டும் அம்மா என உற்சாகப்படுத்திய மூத்த மகள் வினோதினி அறிவுடைநம்பி B.A.,LLB, க்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். இந்நூல் அச்சேறும் வேளையில் அப்பாவின் ‘சமத்துவத்தின் தூதுவர்கள்’ என்ற நூலை மேற்கோள் காட்டி ஜெர்மன் நாட்டு பேராசிரியர் ‘தி பறையா ப்ராப்ளம்’ என்ற நூலை படைத்திருக்கிறார் என்று சகோதரர் கல்லல் அன்பழகன் (அறவன் தேவநம்பியன்) அவர்கள் நூலைக் காட்டினார்கள். மிகுந்த பெருமையோடு அதன் நகலை இந்நூலில் இணைத்துள்ளோம். இனம் உள்ளவரை மொழிவாழும், மொழி உள்ளவரை எழுத்து வாழும். எழுத்து உள்ளவரை எழுத்தாளர் ஆலம்பட்டு சோ.உலகநாதன் என்றென்றும் வியந்து பார்க்க வைக்கும் அப்பா அவர்களும் வரலாறில் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. அன்புடன் உ. இளமதி அறிவுடைநம்பி [ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களுக்கு கா.வீ.ச. இந்துராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார். இடம் : ஆலம்பட்டு (பாராட்டு விழாவில்)] [ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களுக்கு விழாத் தலைவர் ரா.கணேசன் அவர்கள் விருது வழங்குகிறார். இடம் : ஆலம்பட்டு] [ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களுக்கு விருது வழங்கு விழா: சந்தன மாலையை சோமு நாச்சியப்பன் அவர்கள் உலகநாதனுக்கு அணிவித்தார். இடம்: ஆலம்பட்டு] மனிதனைத் தேடுகிறேன் -ஏப்ரல், 2015 ஒருவர் தன்னை உயர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது, அதற்காக முயற்சிப்பது அவரவர் விருப்பத்தின் பால் பட்டது. அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது படிப்பு, அறிவு, நாகரீகமான வாழ்க்கை முறை இவற்றை செப்பனிட்டுக் கொள்வதும் வரவேற்க வேண்டிய மனித போட்டிதான். ஆனால் அதையே ஆதிக்கம் செலுத்தும் மனப்போக்காக வளர்த்துக் கொள்வது கூட்டாக, சமுதாயமாக ஜாதியாக மாறி இன்னொரு சமுதாயத்தை அடிமைப்படுத்த முயற்சிப்பது மனிதநேயத்தை மீறும் செயல் அல்லவா? நாகரீகத்தின் விடியல் தெரியாத காலத்தில் கல்வி கானல் நீராக இருந்த காலத்தில் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பாணியில் பாமரர்களை அடக்கி அடிமைப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டு இருந்த மனநிலை இன்னமும் சிலரிடம் இருப்பது வியப்பாகவே உள்ளது. உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் மின்னல் வேக வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறான். அதற்கு ஜாதியோ, மதமோ கூட தடையாக இல்லை . அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிற கனிணி யுகத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினால் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி பார்ப்பது வெட்டி ஆபீசர்களின் வேலையாகிவிடும். கால விரயமும் ஆகும். ஆனால் இந்த ஜாதி ஆதிக்க உணர்வு முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு நிரந்தரமானதல்ல. பாசிசம் எப்போதுமே வெற்றிபெற்றதில்லை. பிராமண - சத்திரிய - வைசிய - சூத்திர இனங்களில் தனி மனித வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்காலத்தில் ஜாதி வேறுபாடுகள் அருகி வரும் இக்காலத்தில் ஒருசிலரின் செயல்பாடுகளை ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் என்பதா? கடலில் கரைத்த பெருங்காயம் என்பதா? உலகத்தில் அன்பால் மட்டும் தான் நிலையான சமாதானத்தை எட்ட முடியும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் திருவள்ளுவர். இதை வலியுறுத்த வேண்டியது சமுதாய சமாதான பிரியர்களின் கடமையாகும். படிப்பு என்பது பணம் சம்பாதிக்கும் கருவி. படிப்பறிவு என்பது உலகத்தை தெரிந்து கொள்ள உதவும் காலக் கண்ணாடி. எந்தச் சமுதாயமாக இருந்தாலும் படிப்பறிவை பகிர்ந்து கொள்ளும் பக்குவமான பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிற சமுதாயம்தான் சமத்துவமான சமுதாயத்தை படைக்கின்ற விடியலுக்கு வழிகாட்டுகின்ற எதிர்கால சமாதான உலகத்தை நிர்மானிக்கின்ற சமூகமாக விளங்க முடியும். இத்தகைய சக்தி படைத்த பெண்கள் எஸ்.சி அல்லாத சமூகங்களிலும் பரவிக் கிடப்பதை உணர முடிகிறது. அதனால் தான் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடை பெறுகின்றன. வன்முறைகளையும் கடந்து காதலர்கள் இணைகிறார்கள். இந்த உயிர்களோடு கலந்த சங்கமங்கள் தான் திருவேணி சங்கமத்தையும் விட புனிதமானது என்று தமிழ் இலக்கியங்களால் போற்றப்படுகிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிற போது ஏற்படுகின்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் உள்ளவர்களே, மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள். அறிஞர்கள் கூட்டத்தில் பட்டப்பகலில் ஒருவர் அரிக்கேன் விளக்கை பற்றவைத்துக் கொண்டு எல்லோருடைய முகத்துக்கு அருகேயும் கொண்டு சென்று உற்றுப்பார்த்தாராம். இந்தப் பட்டப்பகலில் விளக்கை பிடித்துக்கொண்டு பைத்தியக்காரன் போல எல்லோருடைய முகத்திலும் எதை தேடுகிறாய் என்று கேட்டார்களாம். அதற்கு அந்த மனிதர் நான் மனிதனைத் தேடுகிறேன்! என்று சொன்னாராம். ஆனால் இன்று வரை மனிதர்களை தேடுகின்ற பணி முற்றுப்பெறவில்லையே…! ஒரு கணம் சிந்திப்பீர் ! -ஜூன், 2015 தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களின் பூர்வீகக் குடிகளான அந்த மண்ணின் மைந்தர்களாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பஞ்சமர் என்கின்ற எஸ்.சி. மக்கள்தான். அவர்களின் வாழ்விடங்கள், சூரிய வழிபாடு, இயற்கையை வணங்குதல் மூதாதையர் வழிபாடு போன்ற கருவறை இல்லாத காவல் தெய்வங்கள் போன்றவை அம்மக்களின் பூர்வீகத்தை உறுதிப்படுத்துகின்றது. இதற்கு ஆதாரம் பல்வேறு கிராமங்களில் கிடைத்துள்ள செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் சாமி சிலைகள் வந்தடைந்த விதம் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள், வரலாற்றில் பதிக்கப்படாத ஆதாரங்களாக உள்ளன. அம்மக்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கிராமங்கள் முழுமை பெற்றதாக வேண்டுமானால் பல்வேறு விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அப்படி அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து கூட்டி வந்து குடியமர்த்தி முழுமை பெற்ற கிராமங்கள் ஆக்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வந்து 1 குடியேறிய சாதிக்காரர்கள் கூட்டிவந்தவர்களுக்கு நாட்டாண்மை ஆனார்கள். அவர்கள் கிராமத்தின் மையப் பகுதியில் தங்கள் குடியிருப்பை அமைத்து கிராமத்தின் சொந்தக்காரர்கள் ஆனார்கள். பாவம் 1 கூட்டி வந்தவர்கள் ஒதுங்கி வாழ்ந்தார்கள். அடிமைச் - சாதிகளாக! அவை சேரிகள் ஆக்கப்பட்டன. இந்தச் சமூகக் கட்டமைப்புதான் இன்றும் தொடர்கிறது. அந்தப் பூர்வீகக் குடிமக்களின் வாரிசுகள், "பாபாசாகேப் அம்பேத்கர், காந்தியாரிடம் நாங்கள் நாடற்றவர்கள்’’ என்று கூறியதைப் போல கிராமமற்றவர்களாகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தங்களின் பூர்வீகக் கிராமத்தைத் தங்களது கிராமம் என்று அதிகாரப்பூர்வமாக உரிமை கொண்டாட முடியாத நிலையே இன்றும் நீடிக்கிறது. ஏற்கனவே சேரி என்றழைக்கப்பட்ட பகுதிக்கு நாகரிகமாக மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வது ஒரு புரட்சிகரமான முற்போக்குச் செயல்தான் என்றாலும் அந்தப் புரட்சிக்கு பின்னே மிகப் பெரிய “உரிமை இழப்பு” மறைந்திருக்கிறது. அதனால் அந்தக் கிராமம் என்ற கட்டமைப்பிலிருந்து விலகி தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுவது போலாகிறது. நீ எந்த ஊர் என்று கேட்டால், நாம் வாழும் பகுதிக்குச் சூட்டப்பட்டுள்ள பெயரைச் சொல்ல முடியாதல்லவா? அந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தின் பெயரைத்தான் சொல்ல வேண்டும். எஸ்.சி. மக்கள் பகுதிக்குத் தனிப் பெயர் சூட்டிக் கொள்வது போல பிற சமுதாயத்தவர்கள் சூட்டிக் கொள்வதில்லையே ஏன்? பெரியாரின் புரட்சியால் முன்னேறி ஆதிக்க உரிமையையும், ஆளும் உரிமையையும் பெற்ற சமுதாயங்கள் கூட, பெரியார் பெயரை தங்கள் பகுதிக்கு வைத்துக் கொள்வதில்லையே ஏன்? அதைவிட, கிராமத்தின் உரிமையைக் கைப்பிடியில் வைத்திருக்க வேண்டும். பிறருக்கு, குறிப்பாக எஸ்.சி. மக்களுக்கு அந்த உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதிலே உறுதியாக உள்ளார்கள். அதற்கு, எஸ்.சி.க் குடியிருப்புகளின் தனிப்பெயர்கள் அங்கீகாரம் அளிக்கிறது. சரி! அதற்கு மாற்றுவழி என்ன? இப்போது அரசியல் கட்டமைப்பில் ‘பஞ்சாயத்து ராஜ்’ நடைபெறுகிறது. அந்த ஊராட்சி மன்ற நிருவாகத்தில் வார்டுகள் பிரிக்கப்பட்டு , அதனடிப்படையில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப்பட்டு, வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். நகர்ப்புறங்களைப் போல ஒவ்வோர் பகுதிக்கும் வார்டு எண்களை அப்பகுதியில் எழுதிவிட்டால், எளிதில் முகவரி கண்டுபிடிக்க ஏதுவாகும். அதில் சாதியோ- மதமோ அடையாளப்படுத்த முடியாது. இதனால் எந்தச் சமுதாயமும் ஊரின் பெயரை விட்டு விலகி சாதி சமயப் பெயரில் இயங்கும் நிலை மாறும். பரம்பரையாக தாம் வாழுகின்ற கிராமம், பட்டா-சிட்டா-அடங்கல் உரிமையுடன் வாழும் கிராம உரிமை எப்படி உனக்கில்லாமல் போகிறது! ஒரு கணம் சிந்திப்பீர்! ஜல்லிக்கட்டும் சமத்துவமும் ** -ஜனவரி, 2016** விலங்குகளை வதை செய்வதைத் தடுப்பதற்காக 1960ம் ஆண்டு பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘பிராணிகள் நலவாரியம்’ அமைக்கப்பட்டு, அதற்கென சில சட்ட திட்டங்களையும், அதிகாரங்களையும் வழங்கப்பட்டது. அதிகாரம் உள்ளது என்பதற்காக பாரம்பரிய விளையாட்டுக்கள் மக்களின், உணர்வுகளோடு ஒன்றிய விஷயங்களிலும், மதம் சம்பந்தப்பட்ட பாரம்பரிய உணவு, போன்றவற்றில் பிராணிகள் நலவாரியம் மூக்கை நுழைத்து சர்ச்சைக்குரிய வாரியமாக இருந்துவிடக்கூடாது. வதை செய்தல், தொந்தரவு கொடுத்தல் என்று ஆழமாக அடிப்படைகளில் அக்கறை காட்டி, நடவடிக்கையில் இறங்கினால் இந்த உலகத்தில் எதுவுமே நடக்காது. ஜனாதிபதிக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்காக அரசின் ஒவ்வோர் அசைவுக்கும் சட்டத்தைப் பிரயோகிப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயலிழந்து போய் விடும். பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்த 1960லிருந்து கடந்த சில ஆண்டுகள் வரை இத்தகைய கடுமையைக் காட்டவில்லை பிராணிகள் நலவாரியம். தனி மனித விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கூறப்படுகின்ற புகார்களை சமூகக் கண்ணோட்டத்துடனேயே விவாதிக்க வேண்டும். 2006ஆம் ஆண்டு மார்ச் 29ம் நாள் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த வழக்குகளில் தடை, தடை நீக்கம், அனுமதி, அனுமதி மறுப்பு போன்ற பரிணாமங்களையே ஜல்லிக்கட்டு கண்டுள்ளது. இப்போதுதான் மத்திய அரசு தலையிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டுள்ளது. அதுவும், விலங்குகள் காட்சிப் பட்டியலிலிருந்து ‘காளை’ நீக்கப்பட்டுள்ளது. சரி! இனி விஷயத்திற்கு வருவோம்! ஜல்லிக்கட்டு என்று பொதுவாகப் பேசப்பட்டாலும், ஆரம்ப காலக்கட்டங்களில் காளையின் கொம்பிலே பண முடிப்பைக் கட்டி அதனை அடக்குபவர் பரிசாகப் பெறுவர். சல்லிக்காசு என்பது அன்றைய பணத்திற்கு வழக்குச் சொல்லாக இருந்தது. மறுவி ஜல்லிக்கட்டு என்றாகியது என்றும் கூறப்படுகிறது. வாடி மஞ்சுவிரட்டு, தொழு மஞ்சுவிரட்டு, வடமாடு போன்ற பல பெயர்களில் இத்திருவிழா நடைபெற்றாலும் இன்று பிரபலமாகப் பேசப்படுவதும் அனுமதி வழங்கியுள்ளதும் ஜல்லிக்கட்டிற்கே! சரி! ஜல்லிக்கட்டும், மஞ்சுவிரட்டும் ஒன்றுதானா? இதில் மக்களால் பெரிதும் விரும்புவதும் நேரில் கண்டு ரசிப்பதும் நிச்சயமாக ஜல்லிக்கட்டு அல்ல! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அனுமதிக்கப்படுகின்றது. பரவலாக தமிழகம் அதாவது பாரம்பரிய விளையாட்டு என்று கூறப்படுகின்ற பகுதிகளில் குறிப்பிட்ட பிரமுகர்களை மட்டுமல்ல தங்களது ஆதிக்க பாரம்பரிய கவுரவத்தைக் காப்பாற்றுகின்றவர்களால் மட்டுமே வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அது வாடியில் தலைகாட்டும் போதே மாடுபிடி வீரர்களின் அச்சுறுத்தல் வேறு! அதையும் தாண்டின் அதன் திமில் தெரிந்தவுடனேயே வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்க வேண்டும். தற்போதைய அனுமதிப்படி 15 மீட்டர் தூரத்திற்குள் அடக்க வேண்டும். இதில் காளைகளுக்கு சுதந்திரம் என்பதே கிடையாது. அது தனது பாய்ச்சலை வெளிக்காட்டுவதற்கோ தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை ! அதன் பார்வைகளும் கூட வி.ஐ.பி.க்கள் மற்றும் சில நூறு பேர்கள் மட்டுமே கண்டுகளிக்க முடியும். பொறியில் அகப்பட்ட நிலையில்தான் காளைகளின் நிலை! இதில் இயல்பான முறையில் தான் காளைகள் அடக்கப்படுகின்றன. இதிலே மிருகவதை எங்கிருந்து வருகிறது? அது களத்தில் நிற்கும் அழகே தனிதான். ஆனால் மஞ்சுவிரட்டு என்பது வேலி விரட்டு என்றும் கூறுவார்கள். கிராமங்களிலே, காளைக் கன்றுகளின் கழுத்தில் வெல்லக்கட்டி, தேங்காய் மூடி, இரண்டுமொழிக் கரும்பு போன்றவற்றைக் கட்டி விரட்டிப் பிடிப்பதற்கு வெல்லக்கட்டி மஞ்சுவிரட்டு, தேங்காய் மஞ்சுவிரட்டு, கரும்பு மஞ்சுவிரட்டு என்றும் கூறுவர். பின்னர் அது துண்டுகள் மஞ்சுவிரட்டானது. அந்த வகையிலேதான் சல்லிக்கட்டும் ஆனது. மிகவும் அழகான வசகீரமான திமில்களுடன் காட்சி தரும் காளை மாடுகளின் தோற்றம், அது களத்தில் நின்று விளையாடும் அழகே அழகுதான். உண்மையிலேயே பாரம்பரிய வீர விளையாட்டு என்பது மஞ்சுவிரட்டில்தான் உள்ளது. சீறிப் பாய்கின்ற காளைகளிலிருந்து பழகும் காளைக் கன்றுக்குட்டிகள் வரையிலே தொழுவிலே அடைத்துத் திறந்து விடுவது. அதை பொதுமக்கள், தங்கள் பிள்ளைகுட்டிச் சகிதம் வந்து, ஓடுகின்ற மாடுகள், சீறிப் பாய்கின்ற மாடுகள் அனைத்தையும் கண்டுகளித்து மகிழ்ச்சியோடு வீடு திரும்புவார்கள். 15 மீட்டரில் காணும் ஜல்லிக் கட்டிற்கும் பல கி.மீட்டர் தூரம் ஓடி தனது திறமைகள், நின்று பாய்ந்து வீர தீரச் செயல்களைக் காட்டுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு உண்டு. இதில் அனுமதித்திருப்பது மஞ்சுவிரட்டா? ஜல்லிக்கட்டா? தென் தமிழக பாரம்பரியமிக்க வீரவிளையாட்டு என்றால் மஞ்சுவிரட்டுத்தான். அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை மஞ்சுவிரட்டில்தானே கண்டுகளிக்க முடியும். இதில் மிருகவதைத் தடுப்பு எங்கே தெரிகிறது. அப்படிப் பார்த்தால் காளை மாடுகளை ஏரில் பூட்டி நாளெல்லாம் உழுவதும், பார வண்டி இழுப்பதும், செக்கிழுக்கப் பயன்படுத்துவதும் வதைதானே? நமது நாடு விவசாய நாடு! விவசாயிகளை நம்பியுள்ள நாடு. விவசாயி அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை நம்பியுள்ளார்கள். அதன் உழைப்பில் அவர்களின் குடும்பங்கள் உயிர் வாழ்கிறார்கள். ‘மாடுகட்டிப் போரடித்தால், மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’ என்ற பழமொழி உண்டு! ஆக உழைப்பை எல்லாம் வதையாக எண்ணக்கூடாது. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ! என்றும் ஏர் பின்னது உலகம்’ என்றும் போற்றியவர் திருவள்ளுவர். காளை மாடுகளும், வளர்ப்பு பிராணிகளும் விவசாயிகளின் தோழர் என்று போற்றப்படுகிறது! யானை, மலைகளின் மேலிருந்து மரங்களை இழுத்து வரப் பயன்படுத்தப்படுகிறது. அது தொழில் சார்ந்தது. ஒட்டகங்கள் பாரம் சுமந்து செல்லப் பயன்படுத்தப்படுகிறது. கழுதைகள் பொதி சுமக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஏன் பசுமாடுகளிலிருந்து பால் கரக்க மிஷின்களைப் பயன்படுத்துகிறார்களே! இது இயற்கைக்கு மாறானதில்லையா? அதற்காகத்தான் கிட்டி மூலம் கறக்கும் பாலைக் குடிக்க மறுத்து ஆட்டுப்பால் சாப்பிட்டார் காந்தியார் என்று கூறப்படுகிறது. கன்றை இழந்த பசுமாடுகளின் முன்னே வைக்கோல் கன்றுக்குட்டிகளை நிறுத்தி பால் கரப்பது பாவமில்லையா? ஏமாற்றி கரக்கும் பாவப்பட்ட பாலை அருந்தமாட்டேன் என்று அகிம்சை வழிநடக்கும் காருண்யவாதிகள் உண்டா? ஆக! வதைகளை வகைப்படுத்த வேண்டும். விஷத்தன்மை கொண்ட பாம்புகள், பூரானைக் கூட வதைக்கக் கூடாது. கடித்தால் பிடித்துக் காட்டில் விடு என்கிறது வதைச் சட்டம். உலகில் எங்குமே காணாத காருண்யம் அஹிம்சை இங்குதான் உள்ளது. பாரம்பரியமாக உணவுக்காக வேட்டையாடினார்கள்! அதுவும் தடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனுபவிக்கும் வதை, துயரங்கள், தீண்டாமை கொடுமை கொலை போன்றவைகள் வதையாக தென்படுவதில்லை! அதையும் கண்டுகொள்வதில்லை! அதற்குரிய இலாகாக்கள் கடுமை காட்டுவதில்லை! ஜல்லிக்கட்டிற்காக வரிந்து கட்டிப் போராடிக் கொண்டிருக்கிறோமே. அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும், சாதி - மத வேறுபாடின்றி அனைத்து சாதி-மதத்துக்காரர்களும் போராடினோமே! அதற்குள் ஒரு சமூக நீதி மறைக்கப்பட்டிருக்கிறதே தெரிகிறதா? அதற்காக இப்படி ஒரு ஒருமித்த குரலை எழுப்ப முன்வருவார்களா? இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா, கிராமத் திருவிழாவா! கிராம தேவதைக்கோ, கிராமக் கோவிலுக்காகவோ நடத்தப்படுகின்ற ஜல்லிக்கட்டா? இல்லை, தங்கள் நாட்டாண்மையை நிலைநாட்டிட தனி மனிதரா? இல்லை ஆதிக்க உணர்வுள்ள சமுதாயங்களா? இதற்கு விடை தெரிந்தால், அந்த சமூக நீதி, சமூக உரிமை மறுக்கப்பட்டிருப்பதை உணர முடியும். கடவுளின் பெயரால் நடத்தப்படுகின்ற இத்திருவிழாவிற்கு, கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் பங்களிப்பு எப்படி உள்ளது? எல்லா சமுதாயக் குடிமகனுக்கும் வரி விதிக்கப்படுகிறதா? இல்லை நீங்கள் சாமிக்காக கூட்டப் பெருக்க மட்டும் வாங்க குலத் தொழில் செய்தால் போதும் என்று ஒதுக்கப்படுகிறார்களா? அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வித்திடுமா? தென்தமிழ்நாட்டின் வீர விளையாட்டிற்காகப் போராடிய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுத் தந்த மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் போன்றோருக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் எந்தக் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தவரிடமிருந்தும் புள்ளி வரி வசூலிக்க வேண்டும். மஞ்சுவிரட்டு சம்பந்தப்பட்ட அனைத்துத் திருப்பணிகளிலும் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளும் பங்கேற்கத் தடை கூடாது என்பன போன்ற சமூக சமத்துவத்திற்கும் வீரவிளையாட்டு தடையாக இருக்கக் கூடாது என்பதிலும் ஒருமித்த குரலை எதிர்பார்க்கிறது சிந்தனை புதிது’ மாத இதழ். ஜல்லிக்கட்டு ஆர்வலர்களாக மட்டுமல்லாமல் சமத்துவ ஆர்வலர்களாகவும் இருக்க வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் -பிப்ரவரி, 2016 2015 செப்டம்பர் 5ல் உலக தற்கொலை அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டிற்கு 2 லட்சத்து 45 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அதில் இளம் பெண்கள் தான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது . அதே நேரத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் எழுத்துபூர்வமான பதிலில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 7753 பேரும், யூனியன் பிரதேசத்தில் 315 பேருமாக மொத்தம் 8068 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1191 பேரும், அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்கத்தில் 209 பேரும் என்று புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் எது உண்மை என்றறிய முடியாவிட்டாலும், சமீப காலமாக தற்கொலைகள். கொத்துக் கொத்தாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதே உண்மை . ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா (26) தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மத்திய ஆட்சியையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அங்கு நடந்த மாணவர் அமைப்புத் தேர்தலில் நடந்த மோதல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் (தொழிலாளர்) பண்டாரு தாத்தாத்ரேயா. ரோகித் வெமுலா மீது நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார் என்பதும், அதனைத் தொடர்ந்தே எஸ்.சி. மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. ஐதராபாத் பல்கலையில் ஏ.பி.வி. பி. எனப்படும் பாரதிய ஜனதாக் கட்சி ஆதரவு மாணவர் இயக்கத் தலைவருடன் ஏற்பட்ட தகராறில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை என்ற செய்திகளில் நிறைய உள் அந்தரங்கங்கள் இருக்கலாம் என்றே யூகிக்கத் தோன்றுகிறது. சாதியத்தின் வேர் எங்கெல்லாமோ வேரூன்றியுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சாமியாருக்கும் சாதி அபிமானம் உண்டு என்று சொல்லுவதைப் போல் மத்திய அமைச்சர்களைக் கூட அந்த அபிமானம் விட்டு வைக்கவில்லை போலும். 26 வயது நிரம்பிய இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கடி சாதியத்தால் ஏற்பட்டதா? அரசியலால் ஏற்பட்டதா? பா.ஜ.க.வுடன் தொடர்புடைய அகில பாரத வித்யார்த்தி பரிஷத்திற்கும் ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அம்பேத்கர் மாணவர் இயக்கத்திற்கும் மோதல்கள் பல தடவை நடந்துள்ளது என்பதை அறியும் போது மத்திய பா.ஜ. கட்சி மத்திய அமைச்சர்கள் பண்டாரு தாத்தாரேயா, ஸ்மிருதி இராணி போன்றவர்களின் மேல் சந்தேகப் பார்வை படிவதில் அர்த்தமிருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்து ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்தார் என்பதிலும் அரசியல் இல்லாமலில்லை ! அவர் வந்ததன் மூலம் ஓர் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. ஐதரபாத் மத்திய பல்கலை ஆராய்ச்சி மையத்தில் இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் எஸ்.சி மாணவர்கள் 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அப்படியானால் எஸ். சி. ஆராய்ச்சி மாணவர்களுக்கு அங்கு தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிக் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது என்பது உண்மையெனத் தெரிகிறது. எனவே அப்பல்கலையில் எஸ்.சி. மாணவர்களுக்கு என்னதான் நடக்கிறது என்பதை உலகறியச் செய்ய வேண்டியது கடமை அதன் நிருவாகத்திற்கு உண்டு! மத்திய ஆட்சியாளர்களுக்கும் உண்டு. அந்த ரணம் ஆறும் முன்பு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பங்காரம் கிராமத்தில் (கள்ளக்குறிச்சி அருகில்) இயங்கி வந்த எஸ்.வி.எஸ். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த பிரியங்கா, சரண்யா மோனிஷா என்ற மூன்று இளம் மாணவிகளின் தற்கொலை மேலும் அதிர்ச்சி அலையை உண்டுபண்ணி உள்ளது. இந்த மாணவிகளின் மரணம். கொலையா, தற்கொலையா என்கின்ற சந்தேகம் விசாரணையில் உள்ளது. இந்த மாணவிகளின் மரணம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் துயரச் சம்பவம் ஆகும். அதற்கு , தரமற்ற கல்லூரி, பணம் கறக்கும் நிருவாகம், நிருவாகமே இல்லாத கல்லூரி, பாடமே நடத்தாத பேராசிரியர்கள் என்ற நிலையில் இயங்கிக் கொண்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதற்கும் அரசியலும் லஞ்சப் பணமுமே காரணம் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் அரசியலில் வஞ்சகமே லட்சியம் என்ற நிலைக்கு நாடு போய்விட்டது. இது எங்கு போய் நிற்குமோ தெரியவில்லை . இது தொடர்ந்தால் தமிழகப் பட்டா முழுவதும் ஒரு சிலரின் பெயரில் போடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! சரி விஷயத்திற்கு வருவோம் ! இந்த நாட்டை வழிநடத்திட வேண்டி, கல்லூரி வரை ஆய்வுகள் நடத்திடும் அளவு வளர்ந்த இளைஞர்கள், மாணவிகளின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல! "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என்று பாரதி கூறிச் சென்றது விழலுக்கிறைத்த நீராகப் போய்விடக்கூடாது. பழைய பாடமுறை மாற்றப்பட்டு . சுய சிந்தனைக்கும் முயற்சிக்குமான மாணவர்களை உருவாக்குகின்ற தன்னம்பிக்கையை ஊட்டும் பாடமுறை அமுலில் உள்ளது. என்றாலும் ஆரம்பப் பள்ளி முதலே பொது அறிவுக் கல்வியை, உலக நாயகர்களின் வரலாறுகளைப் பாடமாகக் கூட அல்ல கதைகளாகச் சொல்லி இளநெஞ்சங்களை உரமேற்ற வேண்டும். தன்னம்பிக்கை, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் போதிக்க வேண்டும். பெற்றோர் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். பிள்ளை பாசத்தை வீட்டோடு நிறுத்திக் கொண்டு , ஆசிரியர்களின் பார்வையில் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். பொய் - களவு - வன்முறைக் கலாச்சாரங்களினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை இளமையிலேயே அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்க வேண்டும். கோழைத்தனம் என்ற இருட்டறையில் இருந்து மாணவர்களை மீட்டெடுத்து எதையும் தாங்கும் இதயமுள்ளவர்களாக வார்த்தெடுக்க ஆசிரியர்களின் போதனை உதவ வேண்டும். அவசர முடிவுக்காரர்களால் எதையும் சாதிக்க முடியாது. பெற்று வளர்த்து பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு படிக்க வைத்து, தனக்கும் - சமுதாயத்திற்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் உதவுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். அவசரமான . கோழைத்தனமான முடிவால் ஒரு நொடியில் அவர்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கி தற்கொலை செய்துகொள்வது என்பது இதுவரை நாம் படித்துவந்த அறிவுசார்ந்த முடிவு அல்ல! அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது’ என்று அவ்வையார். சொன்னதை, தவறான முடிவெடுக்கும் முன்பு ஒரு கணம் சிந்தித்தால், ஆமாம்! மானிடராகப் பிறப்பது சாதனைகள் புரியத்தானே தவிர சாவதற்கு அல்ல என்ற மனமாற்றம் உங்களைச் சரித்திர நாயகர்கள் ஆக்கும்! மாணவிகளே! மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னாரே! அந்த மாதவ பிராட்டிகளே! புலியை முறத்தால், துரத்திய வீராங்கணைகளே! நாடும் வீடும் உங்கள் கையில்! தவறான கோழைத்தனமான முடிவுகளைத் தவிர்த்திடுங்கள். பெண்ணுரிமைக்காகப் போராடிச் செத்தவர்களின் தியாகத்தை வீணாக்கிய பாவத்தைச் செய்யாதீர்கள். வேலியே பயிரை மேய்ந்தால் - மார்ச், 2016 ஒரு நாடு வளமும் - நல மும் பெற வேண்டுமானால் அந்நாட்டின் நிருவாகம் நேர்மையானதாக இருக்க வேண்டும். நிருவாகிகள் அறிவுஜீவிகளாக மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் அப்பழுக்கற்ற தேசாபிமானிகளாக. கடமையுணர்வோடு பணியாற்றுகின்ற நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக் கட்டிலில் அமரலாம். ஆட்சிகள் மாறலாம். காட்சிகளும் மாறலாம். ஆனால் நிலையான நிருவாகத்தைத் தருவது அதிகாரிகள் மட்டுமே! அவர்களின் நேர்மையில் வேர் பூச்சி விழுந்துவிடக்கூடாது. ஒவ்வோர் அசைவிலும் பலனை எதிர்பார்க்கின்ற சபல குணம் குடிகொண்டுவிடக்கூடாது. அப்படிப்பட்ட பேராசை அரசு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிட்டால் வேலி பயிரை மேய்ந்த கதையாகிவிடும். இதைத்தான் நேர்மையின் சின்னமாக விளங்குகின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் ரத்தினச் சுருக்கமாக, எதிலும் தனக்கு என்ன லாபம் என நினைக்கும் அல்லது எதிர்பார்க்கும் பெரும்பாலான அதிகாரிகளே இன்றைய நிருவாகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்’ என்று கூறுகின்றார். பணம் பாதாளம் வரை பாயும் என்பது மட்டுமல்ல. வானத்தை எட்டிப் பிடிக்கும் மலைகளையும் சாய்க்கும். மண்ணோடு மண்ணாக்கும் என்பதும் பணத்தின் மகிமையே! கோயிலைக் காணோம், குளங்களைக் காணோம். நிலங்களைக் காணோம், ஏன் கிராமங்களையே காணோம் என்ற அளவிற்கு பணத்தின் திருவிளையாடல்கள் அரங்கேறி உள்ளன. இந்த அத்துமீறல்களைக் காக்க வேண்டிய அதிகார வேலிபயிரை மேய்ந்ததா? இளமையில் கல் என்ற நம் முன்னோர்களின் அறிவுரையின்படி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காமல் உண்மை , நேர்மை, நாட்டுப் பற்று போன்ற உயரிய போதனைகளைப் பயிற்றுவித்தால் லஞ்சமும், சுரண்டலும் இது சிம்மாசனத்தில் ஏறிக் கோலோச்சாது. அரசு அலுவலரான கணவர் வீட்டிற்கு வந்தால் மனைவி கணவன் முகம் பார்த்து வரவேற்பரதைவிட அவரது பையைப் பார்த்து வரவேற்கின்ற நிலை நீடிக்கிறது. ஆக மனைவியை மகிழ்விக்க வேண்டிய கட்டாயம் அலுவலருக்கு ஏற்படுகிறது. ஆக எங்கே ஆரம்பிக்கிறது. இந்த நேர்மையற்ற லஞ்சத்தின் ஆணிவேர்! அரசுகள் நல்ல நோக்கத்தோடுதான். பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதிகளை முறையாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்குத் தானே உண்டு! அதிலே கமிஷனை சதவிகிதம் போட்டுப் பிரித்துக் கொண்டால் வேலை எப்படி முழுமை பெறும். இடையில் கீழிருந்து உச்சி வரை பங்கு போய் சேர வேண்டும் என்று வேறு சொல்லி கமிஷனுக்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. இக்கட்டுரையில் அதிகாரிகளை மட்டுமே முன்னிலைப்படுத்துவதன் காரணம். ஆட்சிகள் மாறும்! ஆனால் அதிகாரிகள் தானே நாட்டை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் தடம் மாறிவிடக்கூடாதல்லவா! தோளில் இருந்து கொண்டு செவியைக் கடிப்பது என்று சொல்லுவார்கள். அந்தப் பாணி நிருவாகம் நாட்டைச் சீரழித்து விடுமல்லவா! வேலியை நம்பித்தானே பயிரிடுகின்றோம்! வேலியே பயிரை மேய்ந்தால்…! ஒரு திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கினால் அது கடைமடைப் பாசனம் போல வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசிந்து. பொந்துகளை நிரப்பி. மோட்டை போயி, சொட்டுத் தண்ணீராய் வயலுக்குப் பாய்கின்றது! அதுபோல திட்டத்திற்கு போய் சேருகின்ற போது உதவியாளர்களிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை, கிராம கமிட்டியிலிருந்து மாநிலத் தலைமைகள் வரை சதவிகிதப் பேரம் முடிந்து. 40 அல்லது 50 ஆயி ரமோ தான் பணி ஒப்பந்ததாரருக்கும், போய்ச் சேருகிறது. பிறகு எப்படி தரத்தை எதிர்பார்ப்பது அவருக்கும் லாபம் அதற்குள்ளேதான். அதிகாரிகள் ஆய்வுக்கு வருகின்ற போது அவர்களை நன்றாகக் கவனித்து, தேவைகள், அன்பளிப்புகள் கொடுத்து ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் பணியாளர்கள் அதற்கு ஆகும் செலவை யார் தலையில் கட்டுவது? எங்கள் சம்பளத்திலிருந்து செய்ய முடியுமா? நாடி வரும் ஏழைகளின் தலைகள் தானே எங்களுக்குத் தெரிகிறது? என்கிறார்கள் பணியாளர்கள். ஆக, ஊழலின் ஊற்றுக்கண் எங்கிருந்து பொசிகிறது என்பது புலனாகிறதல்லவா! யாருடைய அப்பன் வீட்டுச் சொத்து அரசுத் துறைகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது! அதனால் பணிகள் தேக்கமடைகின்றன. அதனை உடனுக்குடன் நிரப்பும் பொறுப்பில் உள்ள அரசு பாராமுகமாக இருக்கிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகின்ற நேரம் வருகின்ற போது அரசியல்வாதிகளின் பைகள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்றுகூடத் தெரியவில்லை ! வேலை காலியானவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரியப்படுத்துதல். அதற்குத் தகுதியானவர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியலை அனுப்புதல் என்பதெல்லாம் பழைய நடைமுறை! ஆனால் இன்று அரசியல்வாதிகள் தங்களின் அப்பன் வீட்டுச் சொத்துப் போல, அவர்களின்றி தேர்வு செய்ய முடியாத அவல நிலை அதிகாரிகளுக்கு. இதிலே அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் பணமும் தான் அந்த வேலைக்கான ஆட்களைத் தேர்வு செய்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுகிறது! பதிவு செய்தவர்கள் லட்சக்கணக்கில் தலைநரைத்து எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்டுத் திரிகிறார்கள்! சின்னவட்டம், பெரிய வட்டங்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்ற நிலைதானே நிலவுகிறது! நிருவாகம் சிவப்பு நாடா முறையாக தேங்கிக் கிடப்பதற்கும். முறைகேடுகள் நடப்பதற்கும் என்ன காரணம். போதிய பணியாளர்கள் இல்லை என்பதால்தானே! இங்கே அரசியல்வாதிகள் சட்டத்தையும் அல்லவா மேய்கிறார்கள்! இந்த லட்சணத்தில் தேர்தல் கூட்டணிகள். ஊழலற்ற நிருவாகம் லஞ்சம் வாங்காத அரசியல் அதிகாரவர்க்கத்தை உருவாக்குவோம் எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள் என்று தொண்டை கிழியக் கத்துகிறார்கள். தேன் பானைக்குள் கையை விட்டவன் விரலைச் சூப்பாமல் இருப்பானா? என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். வாய்ப்புக் கிடைத்தவர்கள் விரலை மட்டுமல்ல. பானையையே விழுங்குகிறார்கள். இதுவரை வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தங்களை நேர்மையாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிடிபட்டவன் மட்டும் தான் திருடன், பிடிபடாமலேயே திருட்டுத் தொழில் நடத்துபவர்கள் யோக்கியர்கள் என்று மக்கள் நம்பவேண்டுமாம்! திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாட்டு வரிகள் நிதர்சனமானவை! ஒவ்வொரு மனிதனின் மனச்சாட்சியும் நேர்மையாகச் சிந்திக்காதவரை, தனிமனிதன் திருந்தாதவரை. ஊழல் சேற்றிலிருந்து நாட்டையார்தான் மீட்பார்களோ? தெரியவில்லை. நாணயத்தின் தவறு தமிழர்கள். குறிப்பாக ஏழை எளிய மக்கள் நாணயமானவர்கள்! நன்றியுள்ளவர்கள். உப்பிட்டவரை உள்ளம் உள்ளவரை நினைப்பவர்கள்! மனசாட்சி உள்ளவர்கள். இந்த ஏழைகளின் நாணயத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் நாணயத்தைக் கொடுத்து, விலைபேச ஆரம்பித்ததன் விளைவு. கை நீட்டிக் காசு வாங்கிய பிறகு துரோகம் செய்யக்கூடாது என்ற மன உறுத்தலின் காரணமாக. இன்று ஜனநாயகம் விலை போய்விட்டது! பணத்திற்காக மனசாட்சியை விற்கக்கூடாது. நாநயம் முக்கியம், நாணயம் இல்லை என்பதை யார் உணர்த்துவது? மக்களை ஒன்றுபட விடாமல் சாதி-மதங்களைச் சொல்லி பிரித்தால் தான் அரசியல் பிழைப்பு நடத்த முடியும். அந்த வேற்றுமையில் குளிர் காயலாம் என்கின்ற தீய கனவோடு அரசியல் நடத்தும் சாதி-மதவாதிகளின் பிடியில் சிக்காமல் தமிழகத்தைக் காப்பாற்றுவது யார்? எல்லோரும் இந்தியர்கள்: நண்பர்கள் - தமிழர்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வை ஊட்டி. எல்லோரும் ஒன்றுபடுவோம் சகோதரர்களாய்! சமத்துவத்தை வென்று காட்டுவோம் சரிநிகராக! என்று தணியும் இந்த சாதீய பேதம் ? திருவள்ளுவர் சிலைக்குள்ளும் சாதியா ? - ஜூலை, 2016 உத்தரகாண்ட், ஹரித்துவாரின் கங்கைக்கரையில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க பா.ஜ. எம்.பி. தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக சிலையுடன் கன்னியா குமரியிலிருந்து பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவார் கடந்த வாரம் அடைந்தார். அங்கு கங்கைக் கரையில் ஹர் கி பவுடி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிலை வைக்கக் கூடாது என சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை சிலை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உத்தரகாண்ட் பா.ஜ. முதல்வர் ஹரிஷ் ராவத், விழாவை திடீரெனப் புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் சிலை அதிகார பூர்வமாக நிறுவப்படாமல் வேறிடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சாதிப் பிரச்சனையே காரணம் எனக் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக் கூறி கங்கைக் கரையோரத்தில் சிலை வைக்க சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ. ஆதிசங்கரர் மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தலித் புலவர் சிலைவைக்கக்கூடாது என்கின்றனர். திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய் தலித் மக்கள் சிலருடன் கோயிலில் நுழைய முற்பட்டபோது சமீபத்தில் தாக்கப்பட்டார். தினமலர் 2.07.2016ம் நாள்: இந்தச் செய்தியைப் படிக்கின்றபோது, இந்து மதவாதிகள் தங்களது சாதிய வெறியிலிருந்து மீளவில்லை என்பது தெளிவாகின்றது. அதற்கு அரசும் மறைமுக ஆதரவினைத் தருகின்றது என்றே தோன்றுகின்றது. சம்பூரண நந்தாவின் சிலையை, பாபு ஜெகஜீவன் ராம் ரிமோட்டில் திறந்து வைத்தார் என்றாலும், எஸ்.சி. ஜெகஜீவன் ராம் என்பதால், சிலை தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, பகுத்தறிவே இல்லாத , பரதேசிக் கூட்டம், கங்கா தண்ணீர் விட்டுச் சிலையைக் கழுவிய கொடுமை ஏற்கனவே நடந்தேறி இருக்கிறது. அரிசனங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரவேசம் செய்ததற்காக தீட்டப்பட்டு மீனாட்சி கோயிலைவிட்டே ஓடிவிட்டதாக அன்று பிரச்சாரம் செய்தார்கள் இந்து மத சாதி ஆச்சாரமூடர்கள் : உலக சமுதாயத்திற்கு அறம் - பொருள் - இன்பம் எனும் அதிகாரங்களில், அறிவு மறையை எழுதி, சாதி - மத - மொழி - நாடு - கண்டம் இவற்றையெல்லாம் கடந்து தந்த பேராசான் திருவள்ளுவரையே சாதிய நோக்கில் பார்க்கும் அறிவீனம் இந்துமத சனாதன வாதிகளுக்கு மட்டுமே உண்டு! திருக்குறள் கற்பனைக் கதையல்ல! கடவுளர்களின் காம விளையாட்டுக்களைக் கூறும் ஆபாசக் களஞ்சியம் இல்லை . அது அறவுரையும் - அறிவுரையும் அடங்கிய பொக்கிசம் அதை எழுதிய ஆசானுக்கே இந்தக் கதி என்றால் சாதியின் தாக்கம் எந்த அளவிற்கு புரையோடிப் போயுள்ளது என்று தெரிகிறதல்லவா? இது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல! தண்டனைக்குரியதும் கூட. வால்மீகி இன்று இந்துக்களால் போற்றிப் புகழப்படும் இராமாயணம் எனும் காவியம் எழுதிய வால்மீகியும் கூட எஸ்.சி. என்றுதானே வரலாற்றுச் சான்றுகள் பகர்கின்றன. முழுக்க முழுக்க கற்பனையும், பொய்யும், புனைந்துரையும் ஆன்மீகத்தின் பெயரால், பக்தியின் பெயரால் வால்மீகி எனும் எஸ்சி எழுதியதை இந்த இந்து மதம் சாதியவாதிகள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? மகாபாரதமும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வியாசர் எழுதியதுதானே! ஆரியர் அல்லவே! அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவரிததுத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவாழ் சடைக்கரந்தார்க் கன்றாகில் அவர் கண்டார் நான் வணங்கும் கடவுளரே! என்று திருநாவுக்கரசர் சொன்னாரே! அந்த பக்தி என்பதால் வால்மீகி எழுதிய இராமாயணம் சாதி ஆச்சாரத்தைத் தாண்டி அரங்கேறியிருக்கிறதோ! இதையெல்லாம் தாண்டி உயிரைக் கொடுத்தாவது திருவள்ளுவர் சிலையைத் திறப்பேன் என்று சபதமேற்றுள்ள பா.ஜ. எம்.பி. தருண் விஜய்யை பாராட்டுகிறோம். தீண்டாமை ஒழிந்தது (பா.ஜ. கட்சி தலைவி எஸ்.சி. வீட்டில் சாப்பிட்டதால்) இந்திய அரசியலில் ஏழை எஸ்.சி. மக்களின் வாக்குகளை பெறுவதற்காக எத்தனையோ நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன் உச்சகட்டமாக, பா.ஜ. கட்சியின் தேசிய தலைவர் அமிதஷாவின் உத்தரவின்படி தமிழக பா.ஜ. கட்சியின் தலைவி தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் எஸ்.சி. மக்களின் வீடுகளில் சாப்பிடுவதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் தமிழக எஸ். சி. மக்கள் இவர்களை சாதி- பேதம் பார்க்காத பகுத்தறிவு வாதிகளாக நம்பி வாக்களித்து விடுவார்களாம்! எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது எஸ்.சி. மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது அவர்களின் உரிமையும் சனநாயகக் கடமையுமாகும். ஆமா! எஸ்.சி. மக்கள் சாப்பிடுவதும் அரிசிச் சாதம்தானே! இல்லை அவர்களுக்கென்று வேறு உணவு தானியம் உள்ளதா? யாரும் சாப்பிடாத உணவுகளை அவர்கள் சாப்பிடுவதால் அதை நாங்கள் மனம் ஒப்பி அவர்களோடு சாப்பிடுவது சமத்துவமில்லையா? என்று நியாயம் பேச முடியாதே இப்படி விளம்பரப்படுத்துவதன் மூலம் எஸ்.சி. மக்களின் வாழ்வை- கீழ்மைப் படுத்துவது ஆகாதா? வாழ்க்கைத்தரம் - நாகரிகம் - சுத்தம் - பண்பாடு இதில் எதில் குறைந்தவர்களாக இந்த எஸ்.சி. மக்கள் இருக்கிறார்கள்? சரி! பா.ஜ. கட்சி தலைவிக்கு இதற்கு முன்பு அவர்களின் தேசிய தலைவரின் அறிவுரைக்கு முன்பு, எஸ்.சி. மக்களிடம் பழகி உடனிருந்து உணவருந்த வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டதில்லையா? இல்லை என்றால் இப்போது செய்வது போலித்தனம்தானே? ராஜீவ்காந்தி - ராகுல் காந்தி போன்றவர்கள் போகிற போக்கில் ஒரு குடிசைக்குள் நுழைந்து, அவர்களிடமிருக்கின்ற உணவை உடனிருந்து உண்ணுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதிலே உள்நோக்கம் எதுவமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாளை உணவு இன்னார் வீட்டில் என்று அறிவித்துவிட்டு, அவர்கள் பிரத்தியேகமாகச் சமைத்துப் பரிமாறுவது எந்த வகையில் சமத்துவம், சாதி பாராத்தனம்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்! இதை குறுகிய அரசியல் பார்வையில் பார்க்காதீர்கள். சமத்துவ சமூக சிந்தனையோடு பாருங்கள்! தலைவர்களே! முதலில் தீண்டாமையை ஒழிக்க போராடுங்கள்! இரட்டை டம்ளர் முறை டீக் கடையில் அப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகிறது! அதற்கு களத்தில் இறங்கிப் போராடுங்கள்! பாதிக்கப்பட்ட எஸ்.சி.க்களின் ஓட்டுக்கள் தானாக வந்துவிழும். சமத்துவத்திற்காக ஏங்கி நிற்கும் சவலைக் குழந்தைகளுக்கு உதவுகிறவர்களை ஏற்பார்கள். வாய்ச் சொல்லிலும் வசனப் பேச்சுக்களிலும் மேடைகளில் சாதி ஒழிப்பு முழக்கமிட்டவர்கள். நடைபெறுகின்ற ஆணவப் படுகொலைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சுவாதி படுகொலையா? கண்டனத்திற்குரியது. ஆனாலும் அதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம். நடந்த சாதி ஆணவப் படுகொலைகளுக்கு கொடுக்கவில்லையே ஏன்? தமிழகத்திலே அரசியல்வாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார்கள். ஆனால் சமுதாயச் சீர்திருத்தவாதிகள் யாருமில்லை? அதைப்பற்றி சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை ! ஓட்டு ….. ஓட்டு…. ஓட்டு…! சுதந்திர தினம் - ஆகஸ்டு, 2016 70வது சுதந்திர தினத்தை கோலாகலமாக இந்தியாவில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடிக்கு வணக்கம் கூறி மரியாதை செய்து கொண்டிருக்கிறோம். இருட்டில் கிடைத்த சுதந்திரத்தை விடியலில், விடியல் கிடைக்காதா என்ற ஏக்கப் பெரு மூச்சுடன் ’ சல்யூட் அடித்துக் கொண்டிருக்கின்றோம். சட்டமேதை அம்பேத்கர் அவர்களால் இரவிலும் கண்விழித்து எழுதப்பட்ட சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தின் மூலம் இந்தியா ஒரு சனநாயக நாடு என்று பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியது. சனநாயகம் என்பது வெறும் ஓட்டுப் போட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதோடு முடிந்து விடுவதில்லை. அந்த உறுப்பினர்களின் சனநாயகக் கடமை முக்கியமான. ஆளுகின்ற மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். இந்தியாவில் பிறந்த அனைத்து மக்களும் சாதி. சமய, மாநில, மொழி, கலாச்சாரங்கள் இடத்திற்கு இடம் மாறுபட்டாலும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகப் பாவிக்க வேண்டும். அனைவரும் இந்தியர்கள் என்ற மனப்பான்மை வளர வேண்டும். திருமண வரவேற்பு விருந்தில் அனைத்துப் பதார்த்தங்களும் இலை பார்க்காமல், பந்தி பார்க்காமல், முகம் பார்க்காமல் பாரபட்சமின்றி பரிமாறுவதுதான் விருந்தோம்பல், சமத்துவமானது. அதைப் போல, அரசுகளின் எல்லா உரிமைகளும். சலுகைகளும், சாதி - மதமாச்சரியமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மதங்களில் கூட சில மாறுபட்ட அணுகுமுறைகள் இருக்கலாம். ஆனால் ஒரே மத வழிபாட்டைப் பின்பற்றுகின்றவர்களிடையே மனித உரிமைகள் மாறுபடும் அதிசயம் இந்த பாரத புண்ணிய பூமியில் தான் நடக்கிறது. தனி மனித, சமூக உரிமைகளில் கை வைப்பதும். உடை உணவு போன்றவற்றில் கட்டுப்பாடு விதிப்பதும். சனநாயகம் ஆகாது. சமத்துவத்தைத் தேடி அடியெடுத்து வைக்கும் அரசின் செயலும் ஆகாது. இது ஒரு வித சர்வாதிகாரமே ஆகும். யார் யார் எதைச் சாப்பிடுவது, சாப்பிடக்கூடாது எப்படிப்பட்ட ஆடைகளை அணிவது, அணியக்கூடாது, எந்தெந்த வீதிகளில் நடப்பது, நடக்கக்கூடாது, எந்தெந்த ஆலயங்களில் பிரவேசிப்பது, பிரவேசிக்கக்கூடாது என்பன போன்ற தனிமனித உரிமைகளில் தலையிடுவதும், தடுப்பதும், உதைப்பதும், அவமானப்படுத்துவதும் சனநாயக நாட்டின் செயல்பாடுகள் அல்ல கண்டனத்திற்குறியது. அப்படி தனி மனித உரிமைகளில் தலையிடுவது. ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையாகும். அப்படிக் குழுக்களாக அடாவடித்தனம் செய்வோருக்கு மறைமுகமாக சட்ட பாதுகாப்பளிப்பதும் நிச்சயமாக ஒருதலைப்பட்சமானதுதான். துணைபோவது அதைவிடக் கொடுமையானது. அப்போது தனது உரிமை பாதிக்கப்பட்டு மறைக்கப்படும்போது அவனுக்கு சுதந்திர நாட்டில் தான் வாழுகின்றோமா என்கின்ற சந்தேக எண்ணம் ஏற்பட்டு, பிறந்த தாய் நாட்டின் மீதே வெறுப்பு ஏற்படத்தானே செய்யும். இதைத்தான் முதன் முதலாக மும்பையில் காந்தியடிகளைச் சந்தித்தபோது பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள், “பாபுஜி, எனக்கு தாய் நாடு கிடையாது” என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற காந்தியார். ’’உங்களுக்கு தாய் நாடு இருக்கிறது. நீங்கள் மதிப்பு மிக்க ஒரு நாட்டுப் பற்றாளர். என்பதை நானறிவேன்" என்றார். அதற்குப் பதிலடியாக பாபாசாகேப் அம்பேத்கர் . இங்கே நாங்கள் நாய்களை விட, பூனைகளை விட இழிவாக நடத்தப்படுகின்றபோது இதை எனது சொந்த நாடு என்று எப்படி அழைக்க முடியும். என் சொந்த மதம் என்று எப்படி எண்ண முடியும்? இந்த நாடு எங்கள் மீது எண்ணற்ற அநீதிகளையும் இழிவுகளையும் சுமத்தி உள்ளது. ஆகவே அறிந்தோ அறியாமலோ இந்த நாட்டின் மீது விசுவாசம் கொள்ளாத நிலைக்கு நாங்கள் இரையாகிட நேர்ந்தால் அதற்கான பொறுப்பு இந்த நாட்டையே சாரும்" என்று சுதந்திரம் கிடைப்பதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1931ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் காந்தியாரைச் சந்தித்த போது பதிவு செய்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். அதையே உறுதிப்படுத்துவது போல சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டில் சமீபகாலமாக நடந்தேறும் நிகழ்ச்சிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பசுமாட்டின் தோலை வைத்திருந்தார்கள் என்று கட்டி வைத்து காட்டுமிராண்டித்தனமாக தலித்துகளைத் தாக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, என்னைத் தாக்குங்கள். சுட்டுத் தள்ளுங்கள். தலித்துகளைத் தொல்லைப்படுத்தாதீர்கள் என்று பசு பாதுகாப்பு இயக்கத்தினருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கண்டனம் ஆறுதல் அளிக்கிறது. ‘மீன் செத்தால் கருவாடு நீ செத்தால் வெறும் கூடு என்று கவியரசு கண்ணதாசனும், பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்’ என்று கவிஞர் வைரமுத்துவும் எழுதிய கவிதை வரிகளை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம். ஆனாலும் சாதி மதத் தாக்குதல்கள் தீண்டாமைக் கொடுமைகள், ஒரு சமுதாயத்தின் மீது அச்சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் தாக்குதல், கற்பழிப்பு கொலைகள், இவற்றை எல்லாம் பார்க்கின்ற போது, திட்டமிட்டு நடத்தப்படும் சமுதாயத் தாக்குதல்களாகவே தெரிகிறது. எஸ்.சி. மக்களை அழிப்பது. அல்லது அச்சுறுத்துவது தொடர்ந்து நடக்கின்ற போது, எப்படி சுதந்திரத்தின் மீது நாட்டின் மீது பற்று ஏற்படும்? என்றாலும் கூட, அடிமை தனத்தையும், அவமானங்களையும், தாங்கிக் கொண்டு அம்மக்கள் இந்தியர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டுதானிருக்கின்றார்கள். இந்திய இறையாண்மையின் மீது உண்மையான நம்பிக்கை அம்மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாடு சமத்துவத்தை நோக்கி நகர்கிறது என்றாலும் அது எறும்பூறும் வேகத்திலே தான் நடக்கிறது. ஆட்சியாளர்கள் இதை முழு வீச்சில் முழுமனதோடு செயல்படுத்த முனைய வேண்டும். சுதந்திரக் காற்றைச் சுதந்திரமாக சுவாசிக்க வழி விடுங்கள்! மாட்டுக்கும் ஆட்டுக்கும் காட்டுகின்ற காருண்யத்தை மனிதர்களின் மீது காட்டுங்கள். பசு பாதுகாப்பு என்பது மனிதர்களைத் துன்புறுத்துதல் ஆகாது. பசு பாதுகாப்பு இயக்கம் ஒரு சமுதாயத்தைக் குறிவைத்துத் தாக்குவது தொடர்ந்தால் அவ்வியக்கம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். பசு பாதுகாப்பு இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை 70வது சுதந்திர தினத்தின் வேண்டுகோளாக, சிந்தனை புதிது’ மாத இதழ் முன் வைக்கிறது. வாழ்க சுதந்திரம் ! வளர்க சமத்துவம் ! வந்தே மாதரம்! இந்திய இறையாண்மை - செப்டம்பர், 2016 இந்திய நாடு என்பது ஒரு பரந்த பாரத பூமி. வேற்றுமையில் ஒற்றுமை காணும் உன்னதமான நாடு! ஒரு இனம், ஒரு மதம், ஓரே சாதி, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்றில்லாமல், முற்றிலும் மாறுபாடான கொள்கைகளைக் கொண்ட மக்கள், வழிபாட்டு முறைகள், உலகில் எங்குமே காணப்படாத, ஈரமிலலா நெஞ்சுடையோரால் கொண்டுவரப்பட்ட மனித நேயமற்ற தீண்டாமை’ அல்லது தீட்டு என்கின்ற மனிதத்தைக் கொல்லும் கொடுவாள். கொள்கையுடைய மதம் நீக்கமற நிறைந்துள்ள பூமி பல்வேறு கலாச்சாரங்களின் இருப்பிடமாக விளங்குகின்ற தேசமானாலும், இந்தியா இந்தியர்கள் என்ற உணர்வோடு காக்கப்படுகின்ற நாடு இந்தியா. இத்தகைய உன்னத உணர்வுக்கு உலை வைக்கின்ற செயல்கள் அவ்வப்போது மதம், சாதி உணர்வுகளோடு நடத்தப்படும் கொடுமைகளும் அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் ஆளும் அரசுகள், நடு நிலை தவறாமல் நடந்து கொண்டால்தான், அரசு இயந்திரத்தின் தராசு முள்’ நடு நிலை தவறாமல் நின்றால்தான் இத்தனை வேற்றுமைகளுக்கிடையே உள்ள மக்களின் மன உணர்வுகளை சமாதானப்படுத்த முடியும். அதற்காகத்தான் சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை , நலிந்த பிரிவினருக்கு சகல துறைகளிலும் முன்வைத்தார். அந்த பிரதிநித்துவத்திற்குப் பங்கம் ஏற்பட்டால், நாம் எதிர்பார்க்கும் ‘இந்தியா என்பது என் தேசம்’ என்ற கோஷம் பகல் வேஷமாகிவிடும். ஒரு மொழி ஆதிக்கத்திற்கு வழிவகுத்தால், இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும். மதம், மொழி, சாதி. இனம் இவைகள் எளிதில் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய தலைப்புகள். இதில் மத்திய-மாநில அரசுகள் மிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும். எல்லாத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் மறுக்கப்படக்கூடாது. அப்படி மறுக்கப்படும் போதுதான் ஒற்றுமை உணர்வு, வேற்றுமை வெறியாகி விடுகிறது. வெறி பரவலாகும் போது இறையாண்மை இரையாகிவிடும். அவரவர் மதத்தை , அவரவர் மொழியை வளர்த்துக் கொள்வதில் சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில் தவறில்லை . ஆனால் அது அடுத்தவர் மதத்தில் - மொழியில் சாதிகளில் கைவைக்கின்ற போதுதான் விபரீதங்கள் ஏற்படுகின்றன. நோயாளிக்கு க்ளுகோஷ் ஏற்றுவது அவருக்குத் தெம்பூட்டுவதற்காக! நோயின் கொடுமையை குறைப்பதற்காக! அதற்காக மருத்துவமனையின் நோயாளிகள் அனைவரும் எங்களுக்கும் க்ளுக்கோஷ் 3 ஏற்றுங்கள் என்று போராடுவது எவ்வளவு அறிவீனமோ, அத்துணை அறிவீனம், பன்னெடுங்காலமாக கல்வி மறுக்கப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு புலக்கடையில் தள்ளப்பட்டுக் கிடந்த சமுதாயங்களுக்கு சலுகைகள் காட்டி முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டுவதை குறை சொல்லுவதும் ஆகும். ஒரு குடும்பத்தில், அண்ணனோ, தம்பியோ, அக்காளோ தங்கையோ ஊனமாகப் பிறந்தால், அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி குணப்படுத்துவது அனைவரின் பொறுப்பல்லவா! அதில் போய் எங்களை விட, என் பெற்றோர் அந்த ஊனமானவருக்கே அதிகச் செலவு செய்கிறார்கள். அதிக அக்கறை காட்டுகிறார்கள். எங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்று கூறுவதும். காழ்ப்புணர்வு கொள்வதும் எத்துணை அறிவீனமோ, அத்துனை அறிவீனம் தான். எஸ்.சி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு எடுத்துக் கொள்ளும் அக்கறையைக் குறை கூறுவதும், அதனைச் சட்டப்படியாகச் செய்ய வேண்டும் என்று சட்ட அங்கீகாரம் வழங்கிய பாபாசாகேப் அம்பேத்கரைச் சாதித் தலைவராக்கி குறை சொல்லுவதும் ஆகும். அரசியல் சாசனம் ஒரு சாதி மக்களுக்காக எழுதப்பட்டதல்ல. எல்லா மத, சாதி, மொழி, இன மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து வழி காட்டுதலும் உலக நாடுகளின் உறவுக்கும் இந்திய இறையாண்மைக்குத் தேவையான அத்துனை பாதுகாப்பும். பெண்ணுரிமையைப் பேண வேண்டிய கட்டாயத்தையும் அதில் வலியுறுத்தியுள்ளார் என்பதை எப்போது மக்கள் உணருகிறார்களோ, அப்போதுதான் அவர்களின் அறியாமை இருள் நீங்கும்! சமத்துவ, சகோதரத்துவ எண்ணம் மேலோங்கும் நாடு அமைதிப் பூங்காவாகத்திகழும். முஸ்லீம் நீதிபதி இல்லாத சுப்ரீம்கோர்ட் உச்ச நீதி மன்றத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதின்றத்தில் 31 நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள மூன்று இடங்களைத் தவிர 28 நீதிபதிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை! பொதுவாக உச்சநீதிமன்றத்தில் 17 நீதிபதிகள் முஸ்லீம்களாகவும் இதில் நான்கு நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயமே ! இத்தகைய இடைவெளிகளும், செய்திகளும் கூட தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே பா.ஜ. அரசு மதசார்பானது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதை ஊர்ஜிதப்படுத்தக் காரணமாகிவிடக்கூடாது. தகுதி- திறமை என்ற பெயரால் உயர் பதவிகள் எஸ்.சி. மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்டே வருகிறது. படிக்க வசதியும், பதவிகளில் வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் மற்றவர்களைவிடச் சிறப்பாகவே எஸ்.சி. மக்கள் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. தகுதி - திறமை பற்றி ராஜாஜிக்கும் - காமராஜருக்கும் இடையே விவாதம் வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர் சொன்னார். நான் இந்த நாட்டை ஒன்பது ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும் தகுதி-திறமை பற்றி! எந்த எஸ்.சி. என்ஜினியர் கட்டிய பாலம் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்துள்ளது என்பதை யாராவது தகுதி - திறமை பேசுவோர் கட்டிக் காட்ட முடியுமா என்று கேட்டார் காமராஜர். ஏன்? அரசியலிலும் கூட லஞ்சமோ, லஞ்சம் என்று கூவித் திரிகின்ற நாட்டில், உள்துறை, அறநிலையத்துறை என்று எல்லாத் துறைகளையும் கவனித்த அமைச்சர் நேர்மையின் சின்னமாகத் திகழ்ந்தவர் தியாகி தக்கன்ஜி தானே! விரல் நீட்டிக் குறை சொல்ல முடியாத தியாகத் திருவுருவாம் கக்கன்ஜி அவர்கள் ஒரு எஸ்.சி. தானே? இருட்டில் வாழ்ந்த மக்களின் குடிசைகளிலும் இதயங்களிலும் ஒளி ஏற்றிய கக்கன்ஜி, தன் வாழ்வில் வறுமையெனும் இருட்டில் வாழ்ந்தார். வாய்ப்புக் கிடைத்தால் மிகத் திறமையாக எதையும் வழிநடத்தும் திறமை எஸ்.சி. மக்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக் காட்டவே கக்கன்ஜியின் தியாகத்தை இங்கே குறிப்பிடுகிறோம். உச்சநீதிமன்றத்து நீதிபதிகளில் எல்லா இந்திய சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே வருகிறது. ’சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களுக்கும்- மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். பல நாடுகளில் இதற்கான சிறப்பு ஒதுக்கீடே உள்ளது. அதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக முஸ்லீம் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என நம்புகிறேன் என்று கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.சி. நீதிபதிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பல முறை பல நீதிபதிகள் அரசியல் பிரமுகர்கள், நீதிபதி கிருஷ்ணய்யர், ஜனாதிபதி KR. நாராயணன், G.K. மூப்பனார் மற்றும் கலைஞர் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வன்முறை கலாச்சாரம் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வன்முறைக் கலாச்சாரங்கள் ஒவ்வொரு நாளும் அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது. உதாரணத்திற்கு காஷ்மீரில் நடைபெறும் கலவரம், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் நடைபெறும் கொலை கொள்ளை போன்றவற்றைக் கூறலாம். தமிழகத்தில் சாதி வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருவதையும் அதை அரசு கண்டும்- காணாமலும் இருப்பதாகவும் தமிழக பா.ஜ. கட்சித் தலைவி தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 2014ம் ஆண்டை விட 2015ல் சாதிக்கலவரம் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர் 2014ல் சாதி தகராறுகளில் பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை 2011 என்றும், கடந்த 2015 ஆண்டு முடிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 487 என்றும், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிககை 580 பேர் என்றும் கூறியுள்ளார். சாதி ரீதியிலான மோதல்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவையெல்லாம், சமத்துவ நடவடிக்கைக்கு எதிரான செயலாகவே உள்ளது. அரசும், அரசு காவல் துறையும். அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல், நேர்மையாகக் கடமையைச் செய்தால் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்புண்டு. சாதிக் கலவரங்கள் ஆணவக் கொலைகள் குறைய வாய்ப்புண்டு! தோளில் இருந்து கொண்டு செவியைக் கடிப்பது போல அரசு அதிகாரிகள் சாதியவாதிகளாக இருப்பதைக் கண்டறிந்து முதல்வர்களை எடுக்க வேண்டும். இத்தகைய சிறுசிறு சம்பவங்களே பல்கிப் பெருக்கெடுத்து இறுதியில் இந்திய இறையாண்மைக்கே உலை வைத்து விடும். சிறு சிறு குழுக்களின் தேசப்பற்றற்ற செயல்பாடுகளைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே தடுத்திட வேண்டும். பாரத பிரதமர் மோடி அவர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாகாடியில் கொலைவெறித் தாக்குதல் - நவம்பர், 2016 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் நாகாடி என்ற கிராமத்தில் இரண்டு தலித் குடும்பங்களே உள்ளன. அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கரிகாலன் என்பவருக்கு 2.11.2016ம் நாள் திருமணம்! அதற்கான மாப்பிள்ளைச் சடங்குகள் 1.11.2016 நாள் நடந்து கொண்டிருந்தது. அங்கே மாப்பிள்ளை வீட்டாருக்கு நெருங்கிய உறவினர்கள் வந்திருந்தார்கள். அதிலே கல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாகராஜனும் ஒருவர். அவர் ஒரு சமூகப் பற்றாளர். தலித் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர், ஆதிதிராவிட சமுதாயத்தின் தெனாலி நாட்டின் தலைவராக இருந்து பணியாற்றியவர். திருமணத்திற்கு முதல் நாளே விருந்துக்கு வந்திருந்தவர், வாசலில் இருந்தபடி திருமண மாப்பிள்ளைச் சடங்கிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, எப்போதுமில்லா வழக்கமாக அருகில் உள்ள வாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவி.ஜி. ஆனந்தன் உள்ளிட்ட மூன்று பேர் மிக வேகமாக திருமண வீட்டின் வழியாக பைக்கில் வந்தனர். திருமண வீட்டில் குழந்தைகள் அங்குமிங்குமாக விளையாடிக் கொண்டிருந்தன. இவர்கள் பைக்கை ஓட்டி வந்த வேகம், பல குழந்தைகள் பைக்கில் அடிபட்டு ஆபத்தை உருவாக்கி விடும் என்ற அச்சம் ஏற்படவே. பெரியவர் நாகராஜன் இராமநாதன் போன்றவர்கள் பைக்கை ஓட்டிவந்தவர்களிடம், மெதுவாக ஓட்டுங்கப்பா. திருமண வீடு என்று தெரிந்தும் இப்படிச் செய்கிறீர்களே? என்று கேட்டுள்ளார். நீயாரடா இதைக் கேக்க, உங்களுக்கெல்லாம் திமிர் ஏறிப் போச்சுடா! பறையன்களா என்று ஏக வசனத்தில் பேசியதோடு நில்லாமல், ஆதிக்க சாதி தெருவிலிருந்து பலரை 5 அரிவாள் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சைட்டு மேனிக்குத் தாக்கியுள்ளனர். அதில் மணமகன் கரிகாலன் உட்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் சமுதாயத் தலைவர் பெரியவர் நாகராஜன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிவகங்கை போன்ற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தத் தாக்குதல் ஏதோ கோபதாபத்தில் நடந்ததல்ல சாதிய நோக்கில் நடந்துள்ளது. அதுவும் திருமண வீட்டில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை PCR வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய காவல்துறை சாதாரணப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதுதான் ஆதிக்கத்தின் உச்சம். அதிகாரத்தின் கட்டளை. தகவல் தெரிந்ததும். விடுதலைச் சிறுத்தைகள் சிபிஎம் தோழர்கள் சம்பவ இடத்திற்கும் காவல்துறை அலுவலகத்திற்கும் சென்று தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர் மு. கந்தசாமி, அக்கட்சியின் தீண்டாமை ஒழிப்பு . முன்னணி செயலாளர் தோழர் பொன்னுச்சாமி போன்றோர் கண்டனமும், தொடர் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் உள்ள பெரியவர் நாகராஜன் அவர்களை சிபிஎம் தோழர்கள் முத்துராமலிங்க பூபதி ஏ. பொன்னுச்சாமி, ரவிக்குமார் போன்றோரும் நேரில் பார்த்து வந்துள்ளனர். விடுதலைச் சிறுத்தை கட்சியினரும். தலித்துகளை தாக்கிய கொடும் சம்பவத்தில் அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாரபட்சமற்ற நடவடிக்கை , வன்கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்தல், போன்றவற்றை அரசும் காவல்துறையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்துகிறார்கள். தலித்துகள் தாக்கப்படும் போதெல்லாம் அரசு கண்டும் காணாமல் இருப்பதும், வழக்குகளை திசை மாற்றுவதுமான பாரபட்சமான செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களில் யாரேனும் இறந்து போனால். அதைப் புள்ளு மடங்கிப் போச்சு’ என்றுதான் சொல்ல வேண்டும். இறந்துவிட்டதாகக் கூடச் சொல்லக்கூடாது என்று தீர்மானம் போட்ட பகுதியைச் சார்ந்த ஆதிக்க சாதிகளின் ஆதிக்கப் பகுதியாக்க. முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கின்றது. ஆனால் அதே பகுதியில், சுதந்திர போராட்ட காலத்தில், அரிசன முன்னேற்றத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பிற சமுதாயத் தலைவர்களும், வாழ்ந்தார்கள் என்பதையும் நினைவூட்டுவது தாக்குதல் நடத்தியவர்களை நல்வழிப்படுத்தும் என நம்புகிறோம். தலித் மக்களை அழித்தொழிக்கும் இத்தகைய முயற்சிக்கு அரசு துணை போகக் கூடாது. அரசியல்வாதிகளின் தலையீடும் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவம். திருமண வீட்டைச் சூறையாடிய சம்பவம், கலவரம் நடத்திய சம்பவம் சிவகங்கையை அடுத்த அரசனேயில் நடந்ததையும் நினைவூட்டுகிறோம். நாகாடியில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய செய்தி 6.11.2016 தீக்கதிரில் தான் வெளிவந்துள்ளது. மற்ற ஊடகங்களில் கருப்புத் திரையிடப்பட்டுவிட்டது. தலித் மக்கள் என்றால் ஏன் இந்தப் பாரபட்சம்? ஏன் இந்த மனித நேயமற்ற செயல்! ஊதி விடும் ஊடகங்களே உணருங்கள். மாட்டை நேசிக்கின்றவர்களே! மனிதர்களையும் நேசியுங்க! மேற்படி தாக்குதல் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்ட வடக்கு செயலாளர் திரு. உதயகுமார் அவர்கள், சம்பவம் நடந்த செய்தி அறிந்து காவல் நிலையம் சென்றும். காயம்பட்டவர்களைப் பார்த்தும் விசாரித்துள்ளார். மேலும் செ. பெரியசாமி (நில உரிமை மீட்பு இயக்கம், மாவட்ட துணைச் செயலாளர்), இளைய கவுதமன் (தேர்தல் பணிக்குழு மாவட்ட துணைச் செயலாளர்), அழகரசன் (கல்லல் ஒன்றியச் செயலாளர்) இராஜேந்திரன் (தேவகோட்டை ஒன்றியச் செயலாளர்), அமுதன் (தேவகோட்டை நகரச் செயலாளர்), வழக்கறிஞர் அய்யப்பன் (வி.சி.க. வழக்கறிஞர் பிரிவு). தளக்காவயல் சுப்பையா (தேவகோட்டை ஒன்றியப் பொருளாளர்) போன்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக களத்தில் பணியாற்றியும், காவல்துறை சரியான செக்க்ஷன்படிவழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் வாதிட்டு, திரு. உதயன் அவர்களின் தலையீட்டின் பேரில் முறையான செக்க்ஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிவகங்கை வடக்கு மாவட்ட வி.சி.க.வின் செயலாளர் கூறினார். ஆக. விடுதலைச் சிறுத்தைகளின் முயற்சியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தி வருகிறார்கள் என்பது ஆறுதலான விஷயமே! "வானை அளப்போம். கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலவியல் கண்டுதெளிவோம்!" என்றார் பாரதி! இளைஞர்களே! உங்களை பார்த்துத்தான் சொன்னார். அரிவாளும் கையுமாக அலைவது காட்டுவாசிகளின் செயல்! அதைவிட்டு ஆராய்ச்சி மனம் படைத்த மனிதர்களாக மாற வேண்டும் என விரும்பினார். சில சாமான்ய மக்களை அடித்துத் துன்புறுத்துவதும். அவர்களை கொல்லுவதும் ஐந்தறிவு படைத்த உயிரினங்களின் செயல் இளைஞர்களே! ஆறறிவு படைத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள். அதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? மனிதர்களையும் மனித நேயத்தையும் கொல்லுவதால் உங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன? கொலையாளிப்பட்டம் தானே! கொடு அரிவாளை விட்டொழித்து ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் திரும்புங்கள்! நாட்டின் மீதும் நாடுகளோடு போட்டி போடும் விஞ்ஞானத்தில் நாட்டத்தைச் செலுத்துங்கள். தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்தை நிறைவான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லுங்கள். நாட்டுக்காக. மொழிக்காக. சமுதாய சமத்துவத்திற்காக பாடுபடுங்கள்! அது ஒரு நிறைவான. நிம்மதியான வாழ்வைத் தரும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை -பிப்ரவரி, 2017 கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் நள்ளிரவில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து டிசம்பர் மாதம் 5ம் நாள் வரை அவரது மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட நாள் வரை தமிழக நிருவாகம் கேட்பாரற்றுக் கிடந்தது என்பது மிகவும் கவலைக்கிடமான நிலைப்பாடாகும். ஒரு சனநாயக நாட்டில் முதல்வர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை, தங்கள் பொறுப்புகளை உணராமல் அப்போலோ மருத்துவமனையிலேயே காத்துக் கிடந்தார்கள். அதனால் தமிழ் நாட்டு நிருவாகம் ஸ்தம்பித்தது. சனநாயக நாட்டில் நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்கும் போது குறைந்தபட்சத் தகுதியான கடமையுணர்வுள்ளவர்களை தேர்ந்தெடுக்காததன் விளைவுதான் இந்த நிருவாகச் சீரழிவு என்பதை காலங்கடந்து உணர்ந்து என்ன பயன்? சரி! முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் இருந்தார். ஆனால் அதில்தான் எத்தனை குளறுபடிகள், ஜெயலலிதா இறக்கும் வரை நடந்த மர்ம முடிச்சுக்கள் இன்னமும் அவிழ்க்கப்படவே இல்லை! காங். தலைவர் ராகுல் காந்தி முதல் மத்திய அமைச்சர்கள், ஆளுநர் போன்ற உயர் பொறுப்பில் யாருமே முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கண்ணாடி விண்டோ வழியாகக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை! கண்ணாடி விண்டோவையும் தாண்டி நோய் தொற்று. பார்க்க வந்தவர்களிடமிருந்து முதல்வரைத் தொற்றிவிடும் என்று அப்போலோ மருத்துவமனை நினைத்தது போலும்! ஆனால் அவ்வளவு பாதுகாப்பில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, பிறகு யாருடைய நோய்த் தொற்றுதலால் மரணித்தார் என்பதற்கு அப்போலோ மருத்துவமனை இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை ! சரி! இதெல்லாம் நடந்து முடிந்த இருண்ட காலம் அந்த 70 நாட்களும் தமிழக நிருவாகம் நிலைகுலைந்து நின்றது. ஆனால் ஒன்று தமிழகத்தில் நிரந்தரமாகவோ, பொறுப்பாகவோ, ஏதோ ஒன்று ஒரு ஆளுநர் இருக்கிறார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை ! அவர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் தமிழக நிருவாகம்……! தற்போது நடக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் குதிரை பேரத்திற்கு யார் காரணம்? பெருந்தலைவர் காமராஜர் சொன்னதைப்போல, அ.தி.மு.க.வின் முதல்வர் பன்னீர் செல்வமும், பொதுச் செயலாளர் சசிகலாவும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்றாலும், இவர்களது சண்டையால், தமிழகம் நிருவாகம் இல்லாத நிர்வாண நாடாகதவித்தது. பலமான தலைமையின் மறைவுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் குழப்பம் - பிளவுகள் ஏற்படுவதுண்டு. அரசியல் விழிப்புணர்வு குறைந்திருந்த காலத்தில் ஆள் கடத்தல், சொகுசுப் பேருந்துப் பயணங்கள், குளுகுளு பங்களா வசதியுடன் திறந்த வெளிச் சிறையில் கும்மாளம் போன்ற நிகழ்வுகள், யூனியன் பெருந்தலைவரில் இருந்து பெரும் பதவிகளுக்கு வரை தேர்தல்களின் போது நடைபெற்றதுண்டு! ஆனால் அவையெல்லாம் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற போர்வையில் கண்டும் காணாமல் விடப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை அதுவல்ல! அரசியல் விழிப்புணர்வு மிகச் சாதாரணமான கிராமங்களில் கூட விவாதிக்கின்ற மக்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. அமெரிக்க அதிபர் பதவி வரையிலே அவர்கள் சிந்தித்து விவாதிக்கிறார்கள்! எனவேதான் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்! சசிகலாவிற்கும் - பன்னீர் செல்வத்திற்குமிடையே நடக்கின்ற பதவிப் போட்டியால் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் சொகுசு பங்களாவில் ரம்மியமான இயற்கை வளமிக்கப் பகுதியில் திறந்த வெளியில் நடமாட வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக் கருத்துரிமையை அடைத்து வைத்திருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்ற விடுதி உள்ளது. சுதந்திரமாக இருப்பதற்கு சட்டமன்ற விடுதிகளில் என்ன தடை? அமைச்சர்களுக்கும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைச்சர் பங்களாக்கள் உள்ளன? அது இன்று வெறிச்சோடிக் கிடக்கிறதே ஏன்? இவர்களெல்லாம் ஓரிடத்தில் கும்பலாக இருந்தால்தான் ஆளுநர் ஆட்சி அமைக்கக் கூப்பிடும் போது ஓடிவர முடியும் என்று நியாயம் கூறப்படுகிறது! சட்டமன்றம் அருகில் எம்.எல்.ஏ. ஆஸ்டலில் கூப்பிட்ட குரலில் இருந்தால் வர முடியாதோ? கூவத்தூரில் கூட்டாஞ்சோறு பொங்குகிறார்களா? நிலாச் சாப்பாடு சாப்பிடுகிறார்களா? இப்படி கும்பலாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்படுவதும், அதற்குக் காரணமான சசிகலா அங்கே போய் பேசுவதும் எந்த வகையில் அவர்களின் சுதந்திரத்தைக் காப்பது ஆகும். இத்தகைய சனநாயகப் படுகொலைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா? ஆளுநர் சிந்திக்க வேண்டும். சரி! இன்று வரை நடந்த விஷயங்களே வேறு! இன்று உச்சநீதிமன்றம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டு நீதிபதிகளுமே பெங்களூரில் டி. குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளார்கள். தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 10 கோடி ரூபாய் அபராதமும், 4 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அல்ல மோட்டைகள் ஏதேனும் உண்டா? அது சட்ட வல்லநர்களுக்கே வெளிச்சம். எது எப்படி இருந்தாலும் சசிகலாவின் சிறைவாசத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு 18.2.2017ம் நாள் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற விரும்பத்தகாத செயல்கள். சபாநாயகரை முற்றுகையிட்டுத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவது சனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் சபாநாயகரின் இருக்கையில் அமர்வது சட்டையைப் பிடித்திழுப்பது ஏற்க முடியாத ஒன்று. எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகரும் தங்கள் சட்டைகள் கிழிக்கப்பட்டதாக பரஸ்பரம் குற்றம் சுமத்துவது வேடிக்கையானது. அதன் உச்சமாக, சபாநாயகரின் சாதியைச் சொல்லி திட்டியதாக, அவரே சட்டமன்றத்தில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் கிளைகளான திராவிடக் கட்சிகளில் இன்னமும் சபாநாயகர் சொன்னபடி சாதியைச் சொல்லிப் பேசியிருந்தால் அது மிகுந்த கண்டனத்துக்குரியது. எல்லா சாதிக்காரர்களுக்கும் தலித் சமுதாயம்தான் கிள்ளுக்கீரையா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு எதிர்க்கட்சிகளே இல்லாமல். அவர்களது இருக்கைகள் வெறிச்சோடிக் கிடக்க பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத்தின் முழு அதிகாரமும் சபாநாயகருக்கே உண்டு! அந்த வகையில், அவர் சார்ந்த கட்சியினர் வெற்றிபெற அவர் வியூகம் வகுப்பது இயல்புதான். என்றாலும் ஆளும் கட்சிக்கு இணையான பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க. அதன் ஆதரவுக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் கோரிக்கையில் நியாயம் இல்லாமலில்லை. சட்டசபையை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போயிருக்காது. இவ்வளவு பிரச்சனைகளைக் கொண்டுள்ள அரசியல் சூழ்நிலையில் உ.பி.யில் நடைபெற்றதைப் போல ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தால் நடு நிலையான முடிவு என்று மக்கள் பாராட்டியிருப்பார்கள். கைதூக்கிவாக்கெடுப்பு முறையில் உண்மையில் விருப்பமில்லாதிருந்தால் கூட நேருக்கு நேர் வெளிக்காட்ட முடியாத மனநிலைதான் இத்தனை நாளாக அவர்கள் பாதுகாப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும்! இது உளரீதியான பாதிப்புத்தான். சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல்வரை தேர்வு செய்துவிட்டார் . மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சிந்தனை புதிது வாழ்த்துகிறது. அதேநேரத்தில் சாதி - மத வேறுபாடின்றி, சிறுபான்மை சமூகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகாரத் தாக்குதல்கள் , ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். தலித் பெண்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிந்தனை புதிது’ மாத இதழ் சமர்ப்பிக்கிறது! தொடர்கதை ஆகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை - மார்ச், 2017 இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்குமிடையே எப்படி மத ரீதியிலான பகை தொடர்கதையாக உள்ளதோ, தாய்ப்பாலோடு மதம் கலந்த உணர்வு எப்படி ஊட்டப்படுகிறதோ அதைப் போல இந்தியா - இலங்கை, மக்களிடையே இனவேறுபாட்டு உணர்வு மேலோங்கி பகை வளர்க்கப்பட்டு வருகிறது. அதிலே சிங்கள ஆட்சியாளர்களின் பங்கு முன்னிலை வகிக்கிறது நீறுபூத்த நெருப்பாக பௌத்த மத பிக்குகள் திரைமறைவில் சிங்கள் ஆட்சியாளர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு விரோதமாக இந்திய வம்சாவளித் தமிழர்களாக இருந்தாலும் சரி இலங்கைத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும், அவர்களின் பார்வை ஒன்றாகவே இருக்கிறது! அதனால் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் அப்பாவி தமிழக மீனவர்கள் தான் தமிழகத்தில் ஒரு மாவட்ட அளவுகூட நிலப்பரப்பு இல்லாத குட்டி நாடான இலங்கை . உலக வல்லரசாக போவதாகக் கூறிக் கொள்ளும் மிகப் பெரிய நாடான இந்திய மீனவர்கள் மீது எந்த தைரியத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள். யார் தாக்குதல் நடத்துவது? இலங்கை மீனவர்களே, தமிழக மீனவர்களை அடிப்பதும் படகுகளைக் கடத்துவதுமாக உள்ளார்களே, சிறைப் பிடிக்கிறார்களே! சித்திரவதை செய்கிறார்களே எப்படி? அவர்களுக்கு அந்த நாட்டு அரசு தங்கள் நாட்டு , மீனவர்களைப் பாதுகாக்க ரோந்துக் கப்பல்களை துணைக்கு கடலில் மிதக்க விடுகிறார்களே! துப்பாக்கி சகிதமாக! இதில் நமது நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க இந்திய அரசு என்ன செய்கிறது? ஒவ்வோர் தமிழக மீனவர்களும் தாக்கப் படும் போது தமிழக அரசுக்கு பேனா மையும் பேப்பரும் தான் வீணாகிறதே . தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதுமில்லை !ஏன் இந்தியா துப்பாக்கியுடன் மீனவர் பாதுகாப்புக்கு விண்ணிலும் கடலிலும் களங்களை அனுப்பக்கூடாதா? இந்திய ரோந்துக் கப்பல்கள் என்ன செய்கின்றன? "கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ?’ என்ற கேள்விக்குக் கூட விடைகளைக் காணலாம். ஆனால் நிராயுத பாணியான தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கொடியவர்கள் தாக்குதல் நடத்தும் போது தற்காத்துக் கொள்ளவாவது இவர்களிடம் ஆயுதம் இருக்க வேண்டாமா? அதனை அனுமதிக்க தமிழக, இந்திய அரசுகளுக்கு திராணி இல்லையா? மீனவர்கள் பிரச்சனையில், இலங்கை சிங்கள அரசுடன் செய்துகொள்ளும் எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றுவதில்லை. பரஸ்பரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என இந்தியா- இலங்கையிடையே ஒப்பந்தம் இருக்கிறது. அதை மீறி நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ச்சப்பட்டுள்ளதே!எப்படி? கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். தமிழக மீனவர் பிரிட்ஜோ (21) வாடிக்கையான மறுப்பை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் படுகாயமடைந்த மீனவர் எஜரோன் (27) சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியும் கூடவே வருகிறது. கடந்த 8ம் தேதி 2017 மார்ச்சில் உயர்மட்ட அதிகாரிகளின் உரையாடல் வேறு. இவையெல்லாம் கூடிக் கலைகின்ற கூட்டமாகத்தான் இருக்கிறதே தவிர ஆக்கபூர்வமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்மானங்கள் கையெழுத்தாகிறதா எனத் தெரியவில்லை . நாணயமானவர்களுக்கு வாய் மூலம் உறுதி மொழியே போதும் ! அடாவடிக்காரனுக்கு பட்டயம் போட்ட உறுதிமொழி கூட நிலைக்காது! இலங்கை அரசு தொடர்ந்து இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஏர் உழவன் ஏமாளியாக இருந்தால் ஏரில் பூட்டிய எருதுகள் மாமன் மச்சான் முறை கொண்டாடும் என்பார்கள், இந்திய ஏமாளிகளிடம் இலங்கை மாடுகள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது பன்னெடுங்காலமாக! தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ அது என்ன குணம்? வீட்டிற்குள் வீரவசனம் பேசுவதா? அல்லது காலில் வீழ்ந்து கிடப்பதா?’ கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தியது! அது விளையாட்டு! ஆனால் இலங்கைக் கடற்படைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்தியாவின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத இலங்கைக் கடற்படையினர் பாக் - ஜலசந்திப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த விக்டஸ், மாரிமுத்து, ஜான்பால் அந்தோணிராஜ் ஆகியவர்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்! படுகொலை செய்யப்பட்ட விக்டஸின் உடல் யாழ்ப்பாணத்திலும், மாரிமுத்துவின் உடல் தலையில்லா நிலையில் கோட்டைப்பட்டினம் கடற்கரையிலும் , ஜான்பாலின் உடல் பாகில் பட்டினத்திலும் அந்தோணிராஜின் உடல் சோழியங்குடியிலும் கரை ஒதுங்கியது. இப்படி பல நூறு தமிழக மீனவர்கள் பாசிச சிங்கள வெறியர்களால் கொல்லப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நிரந்தரக் கொடுமைகளுக்கு மத்திய அரசுகள் நிலையான முடிவு எடுக்கவில்லை எனும் போது தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றே தோன்றுகிறது. சரி! இதற்கு எப்போதுதான் விடிவுகாலம்? மத்திய அரசுக்கு மாநில அரசு வெத்துப் பேப்பரில் எழுதிப் போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு, துப்பாக்கி, தற்காப்புக்காக வைத்துக் கொள்ளும் உரிமையை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். ரோந்துக் கப்பல்கள் 24 மணி நேரமும் தமிழக மீனவர்கள் மத்தியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட வேண்டும்! கடலில் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு தீர்வு கண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடல் எல்லையை விரிவுபடுத்த வேண்டும். மீனவர்கள் விஷயத்தில் இரு நாட்டு ஒப்புதல்களும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஒப்பந்தங்கள் ஏட்டுச் சுரைக்காய் ஆவதை பன்னாட்டுச் சட்டங்களின் மூலம் தடுக்க வேண்டும். சரி! இதெல்லாம் நம்முடைய தொடர் கோரிக்கைகள் தான்! ஆனால் மத்திய மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க மீண்டும் ஒரு மெரினா புரட்சியை ஏற்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்! தமிழகத்திற்கு தலைகுனிவு - ஏப்ரல், 2017 இந்தியா சுதந்திரம் பெற்று 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. 1957, 1962, 1969 ஆண்டு வரை பொதுத்தேர்தல்கள் நடந்து காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்றது. அப்போதெல்லாம், சட்டமன்றத் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டன. ஒரேநாளில் இரண்டு தேர்தல்கள் நடந்த போது மக்கள் மிக நிதானமாக பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் வாக்களித்தார்கள். அதில் எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. அடுத்து - 1967க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் கூட மிகத் தெளிவாக மேலே பாராளுமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கும், கீழே சட்டமன்றத்திற்கு மாநில கட்சிகளான தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.விற்கும் வாக்களித்து தமிழகத்திற்குப் பெருமையைச் சேர்த்தார்கள். தெளிவான சிந்தனையோடு ஒரே நாளில் நடந்த அந்த தேர்தல்களில் பணத்திற்காக ஓட்டை விற்காமல் தமிழக மக்கள் வாக்களித்து தெளிவான முடிவினை அளித்தார்கள் என்பதை உலகமே போற்றியது. ஆனால், மாநிலக் கட்சிகளின் போட்டியால் அரசியல் நாகரிகமும் உறவுகள் தகர்க்கப்பட்டு எதிரிகளாக்கப்பட்டார்கள். அண்ணன்-தம்பிகள் உறவு நிகழ்ச்சகளுக்குக் கூடப் போகப் பயந்து தலைவருக்குத் தெரிந்தால் கட்சியை விட்டு நீக்கி விடுவார் என்ற மனநிலை உருவானது. அதனால் அரசியல் நாகரிகம் தகர்க்கப்பட்டு தலைவரின் அடிமைகள் ஆனார்கள். எப்போது தலைவர்களின் அடிமைகள் ஆனோர்களே அன்றிலிருந்து தமிழக அரசியல் களம் சீர்கெட்டது! லஞ்சம் அன்பளிப்பு ஆனது. லட்சத்தில் காலடி வைத்து கோடிகளில் புரள ஆரம்பித்தார்கள். ஆசைகள் பேராசைகள் ஆனது. நாணயமும் நேர்மையும் சவக்குழி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து மக்களை பலவீனர்கள் ஆக்கினார்கள். அரசியல்வாதிகள் காசுக்கு அடிமையானார்கள். மக்களிடம் தங்களின் வெற்றிக்காகப் பணத்தாசையையும் விதைத்தார்கள். நாம் சும்மா ஓட்டுப்போட்டால் அந்தக் காலம் மாதிரி அவர் நேர்மையான பொதுத்தொண்டா செய்யப் போகிறார்கள்? சமூகப் பார்வையே இல்லாமல் பணத்தின் மீதே கண் வைத்து தேர்தலில் போட்டியிடும் போது நாம் அவர்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கினால் என்ன தவறு என்று சிந்தித்தார்கள் மக்கள் ! அந்த ஆசைகளை விதைத்து மக்களையும் நாணயமற்றவர்கள் ஆக்கியது திராவிடக் கட்சிகள்தான். இலவசங்களுக்காக கையேந்தி நிற்க வைத்தவர்களும் அவர்களேதான். இன்று எந்தத் தேர்தலும் பணப் பட்டுவாடா இல்லாமல் நடத்த முடியாது என்ற நிலையையும், காசு கொடுத்தால் தான் ஓட்டு என்று மக்களை முடிவெடுக்க வைத்தவர்களும் திராவிடக் கட்சிகள் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து! சாதாரண உள்ளாட்சித் தேர்தல் கூட பணத்திற்கு ஓட்டு பணத்தைக் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குவதில் தமிழக அரசியல்வாதிகள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் எதுவும் இருக்க முடியாது. கடந்த தேர்தலில் இதே காரணத்திற்காக , தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கடந்த இடைத்தேர்தல் இந்த இடைத்தேர்தலில், தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், விஜயபாஸ்கரன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் போன்றவர்களும், தங்கள் வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டார்கள் என்ற தேர்தல் கமிஷனின் குற்றச்சாட்டும். ஒரு வாக்கிற்கு ரூ. 4000 என்ற விகிதத்தில் பட்டுவாடா நடந்துள்ளது என்பதற்கான ஆவண ஆதாரணங்கள் கிட்டியதாக, தேர்தல் கமிஷன் உறுதி செய்து, ஏப்ரல் 12ம் தேதி நடக்க இருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்திருப்பது சாதாரணமானது அல்ல. இது தமிழகத்துக்கு வெட்கக் கேடான விஷயம். ஒரு வாக்குக்கு 4000 நான்காயிரம் ரூபாய் கொடுத்த பட்டியல் தினகரனின் பணம் என்பது நிரூபணமானதால், தினகரன் என்ற வேட்பாளரை தேர்தல் களத்திலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். மூட்டைப் பூச்சிக்காக வீட்டையே தீவைத்துக் கொளுத்தியிருக்கிறது. தேர்தல் கமிஷன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவித்த நாளிலிருந்து - 9.4.2017 நாள் இடைத்தேர்தல் ஒத்தி வைத்த நாள் வரை ஏற்பட்டுள்ள செலவு எத்தனை கோடிகள் ! 1.10 கோடி, ஒரு கோடியே 10 இலட்சம் இந்தச் செலவை எப்படி ஈடுகட்டுவது? இதற்கும் அப்பாவி மக்கள்தான் கிடைத்தார்களா? இத்தனைக்கும் காரணமான தினகரன் என்ற வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, தேர்தல் நடத்தியிருந்தால் இந்த வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாமல்லவா? தி.மு.க. அண்ணா தி.மு.க., பன்னீர் அணி வேட்பாளரும்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது உண்மையே! ஆனால் இதில் மிகப் பெரிய அளவில் 89 கோடி (என்பத்தி ஒன்பது கோடி) என்பது மிகப் பெரிய தொகையே! சரி! இந்தப் பணம் எங்கிருந்து தினகரனுக்கு வந்தது? மோடியின் பதுக்கல் பணம் ஒழிப்பு என்ன ஆனது? இப்படி புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் எத்தனை மோடீஸ்வரர்களிடம் உள்ளது என்பதை யாரறிவார்? மோடியின் கறுப்புப் பணம் ஒழிப்பு புதிய ரூபம் எடுத்திருக்கிறதே. அப்படியென்றால் மோடியின் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அறிவிப்பு தோல்விதானே? இதை மோடி ஒத்துக்கொள்கிறாரா? மோடியின் புதிய நோட்டுக்கும் அதுதானே கெதி! தேர்தல் கமிஷன் தைரியமான ரைடு நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம். ஒரு வேட்பாளருக்காக தேர்தலை ஒத்தி வைப்பதைவிட தினகரனை அரசியலில் எந்தத் தேர்தலிலும் நிற்கவிடாத தடையைப் போட்டிருந்தால், இனிவரும் வேட்பாளர்கள் அரசியல்வாதிகள் பயப்படுவார்கள் ! கொஞ்சமாவது சுருக்கென்று இருக்கும். அதே நேரத்தில், அந்த 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 6 அமைச்சர்கள் உதவியிருக்கிறார்கள் என்பதை அறியும் போது தமிழக அரசே தினகரனின் கையாளாக இருந்திருக்கிறது என்று அர்த்தம் தானே! தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய இந்த ஊழலை விட, இன்னும் பெரிய மெகா ஊழலை எதிர்பார்க்கிறார்களா? மிகத் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கின்ற தமிழகத்து வாக்காளப் பெருமக்கள் பணத்திற்கு அடிமையாகிவிட்டார்களா? தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது தரம் கெட்ட இந்த அரசியல் வாதிகளால். சிம்மாசனம் முதல் சிறைவாசம் வரை - ஜூன், 2017 தமிழகம் உள்ளிட்ட இந்திய நாடு, மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும், அரசியல் அதிகாரம், ஆட்சி அதிகாரம், ஆதிக்க சாதி அதிகாரம் மதவெறி அதிகாரம் கோலோச்சும் போது, நீதி, நேர்மை, உண்மை , நியாயம் எதுவுமே நிலைப்பதில்லை! “பிறர் என்னைத் துன்புறுத்தும்போது நான் ராமா, ராமா என்று அபயக்குரல் எழுப்புவேன். ஆனால் ராமா நீயே துன்புறுத்தும்போது நான் யாரிடம் போய் சொல்லி அழ” என்று தவளை சொன்னதான செய்தி ராமாயணத்திலே வருகிறது. அதைப் போல நீதியையும், தர்மத்தையும் காக்க வேண்டிய ஆட்சியாளர்களே இதற்கு விரோதமாக, மக்களைச் சுரண்டி பணம் சம்பாதிக்கும் நிலைப்பாட்டில் பல தலைவர்கள் அதிகார போதையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டுமிருக் கிறார்கள். ஆனால் எத்தனை குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், தான் பெற்ற கோடானு கோடி லஞ்சப் பணங்களால், குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. “பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்” என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள். ‘நாய்விற்ற காசு குறைக்கவா செய்யும்’ அதிகார போதையில் மோசடி செய்து ஊழலில் வரும் பணம், சிம்மாசனத்திலிருந்து சிறைவாசம் வரை வழிகாட்டுகிறது என்பதற்கு உலக அரசியல் வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு! - ஹாங்காங்கின் முன்னாள் அதிபர் டொனால்டு சாங் என்பவர் ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார் என்பதற்காக சிம்மாசனத்திலிருந்து சிறைவாசம் சென்றார். சவுத் கொரியா அதிபர் பார்க் கென்ஹை என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காக சிறை சென்றார். அண்டை நாடான பாகிஸ்தானில் அதிகார துஷ்பிரயோகம், பதவிக்காக பலர் கொல்லப்பட்டது, சர்வாதிகாரியாக மக்களைத் துன்புறுத்தியது போன்ற காரணங்களுக்காக பாகிஸ்தான் அதிபர் புட்டோ தூக்கில் தொங்கியது சிம்மாசன ஆசையால்தானே! அதே நாட்டில் சர்வாதிகாரியாகச் செயல்பட்டு ஊழல் குற்றவாளியாகிய முசாரப் சிறைவாசம் சென்றார். எகிப்த் அதிபர் ஹோஸ்னி முபாரக் 2015ல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்தார் என்ற காரணத்திற்காக காராக்கிரகக் கம்பிகளுக்கிடையே பூட்டப்பட்டார். பங்களாதேஷில் ஷேக் ஹசினா உசைன் முகமது எர்சாத் போன்ற அதிபர்கள் சிம்மாசனத்திலிருந்து சிறைவாசம் கண்டவர்கள்தான். இந்தியத் திருநாட்டில் தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தின் பிறப்பிடமான பாரத புண்ணிய பூமியில் ஊழல் என்பது தேசவுடமையாக்கப்பட்டுவிட்டதென்பதை நாடு பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பீகார் முதல்வராக சிம்மாசனத்தில் வீற்றிருந்த லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழலில் மூழ்கி சிறைவாசம் கண்டார். ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சௌடாலாவும் அதேவழியில் ஊழல் வழக்கில் சிம்மாசன்ததிலிருந்து சிறைவாசம் கண்டவர்தான். ஜார்கண்ட் முதலமைச்சர் மதுகோடா சுரங்க ஊழலில் மாட்டிக கொண்டு சிறைக்குச் சென்றார். அதே மாநில முதல்வர் சிபு சோரனுக்கும் சிறையே அடைக்கலம் கொடுத்தது. கர்நாடகாவில் முதல்வராயிருந்த எடியூரப்பாவுக்கும் ஊழல் குற்றச்சாட்டால் சிறையே கிடைத்தது. ஏன் தமிழகத்திலும் கூட முதல்வர் கருணாநிதியும், அவரது மந்திரிகளும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தேய்த்தவர்கள்தான்! இந்திய அரசியல் வானில் நீதிபதிகளின் தனி அதிகாரத்தால் எப்படி வேண்டுமானாலும் தன் இஷ்டப்படி தீர்ப்பு வழங்கலாம்! யாரும் தட்டிக் கேட்க முடியாது! ஏன்? மேல் கோர்ட்டுகளுக்கும் கூட ஒரு தலைப்பட்சமான தவறான தீர்ப்புச் சொல்லும் நீதிபதிக்கு தண்டனை வழங்க அதிகாரமில்லை ! கேட்டால் அவரது தனிப்பட்ட அதிகாரமாம்! அவர் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்புச் சொல்லலாமாம்! பணமிருந்தால் அப்பீல் செய்து கொள்! என்ற நிலைப்பாடே இந்தியாவில் அமுலில் உள்ளது. இதுதான் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமமாம்!” எப்படி? இதற்கு தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட பல்வேறுவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும், தீர்ப்புகளும் அப்பீல் விடுதலைகளும் இறுதித் தீர்ப்புகளுமே இதற்கு உதாரணமாக சாட்சியாக உள்ளது. அப்பீலின் இறுதித் தீர்ப்பு சின்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்து 4 ஆண்டு சிறை 100 கோடி அபராதத்தை உறுதி செய்தது. ஜெயலலிதாவின் அதிகார சிம்மாசனச் சிறகுகளால் அடைகாக்கப்பட்ட ஊழல்கள், அவர் மறைவால் வெளிவந்து சந்திக்கு வந்திருப்பதையும், தோழி சசிகலா அவரது உயிர் சிறைவாசமும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்தும், அவரது உயிர் மற்றும் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகர், இளவரசி ஓட்டுக்குப் பணம் 89 கோடி கொடுத்து தினகரன் உட்பட பல அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்ற செய்திகள் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு திருமங்கலம் பார்முலாதானே துவக்கம்! நாட்டுப் பற்றற்றவர்களால் நேர்மையான நிருவாகத்தைத் தர முடியாது. ’ பிடிபடாதவரை திருடனும் யோக்கியனே’ என்பதற்கிணங்க இன்று நாட்டிலே அதிகாரத்திற்கு வந்தவர்களில் பலர் இருக்கக் கூடும். அவர்கள் சிம்மாசனம் மட்டுமே வாழ்க்கை அல்ல! சிம்மாசனம், மக்களின் நல்வாழ்விற்குத் திட்டம் தீட்டத்தான். ஊழலற்ற, லஞ்சம் பேரம் பேசாத அதிகார வர்க்கத்தை உருவாக்கத்தான், தீட்டிய திட்டத்தில் ஆட்டையைப் போடாத அமைச்சர்களைத் தேர்வு செய்யத்தான் தேர்தல்! அந்தத் தேர்தல் களமே பணத்தில், லஞ்சத்தில் விளையாடும் போது நேர்மையான அரசியலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது! இதற்கு ஒரு முடிவே வராதா? ஆட்சிக்கு வந்துவிட்ட மிதப்பில் விடிந்தால் ஒரு சட்டம், இருட்டினால் மற்றொரு மாற்றுச் சட்டம் என்று பிரதமர் மோடி துக்ளக் தர்பார் நடத்தினால் அது சர்வாதிகாரமாக மாறிவிடும்! கோளோச்சும் சிம்மாசன வாய்ப்பும் நிரந்தரமானதல்ல! வெற்றிமேல் வெற்றியும் கூட நிலையானதல்ல! மக்களின் நிம்மதியைக் கெடுக்காத வாழ்வைத்தர வேண்டும்! “பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தம்பி” அதிகார போதையில் ஆட்டமும் பாட்டமும் போட்டால் அதிகாரம் போன பின்பு பாட்டம் இறக்கப்படும் என்பதற்கு இக்கட்டுரையில் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. சமுதாயப் பணி என்பது புனிதமானது. அதுதான் அரசியல் பணியும் கூட அதில் நேர்மை வேண்டும் மனிதர்களை நேசிக்கின்ற குணம் வேண்டும். நீதி காக்கப்பட வேண்டும். ஒரு தலைநீதியையும், சாதி-மதக் கலப்புள்ள சமுதாயப் பார்வையும் ஆட்சியாளர்களுக்கு அழகல்ல! ஆபத்தானது. இத்தகைய பார்வையுள்ளோர், சிம்மாசனத்திலிருந்து சிறைவாசம் நோக்கியே செல்ல நேரிடும்! இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற மமதையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்-சொல்லலாம்! அதனால் மக்கள் துயரப்பட்டால் என்ன? துன்பப்பட்டால் நமக்கென்ன என்ற பாணியில் செயல்படும் மத்திய தலைமை தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் சொல்வதுதான் வேதம் என்ற பாணியில் செயல்படுவதையும், தமிழக மக்களையும், தலித் மக்களையும் வஞ்சிக்கின்ற போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லா விளைவுகளுக்கும் எதிர்விளைவு உண்டு ! மனுதர்மத்தின் அடிச்சுவட்டை நோக்கி - ஜூன், 2017 பன்னெடுங்காலமாக மனித உரிமையும் சமூக சமத்துவமும், கல்வியும் மறுக்கப்பட்டு வந்த சமூகம் பேரறிஞர் அம்பேத்கர் மற்றும் பல தலைவர்களின் போராட்டங்களால் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தின் மூலம் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்தார் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள். ஆனால் மத்திய மாநில அரசுகளின் சமூகப் பார்வையில் ஏற்பட்ட கோளாறால் (ஜாதிய பார்வையால்) அதைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பின்னடைந்துள்ள சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி ஒன்றே பிரதானமானது மட்டுமல்ல, கல்வியால் மட்டுமே முடியும் என்பதால், பல்வேறு சலுகைகளின் மூலம் வாய்ப்புக்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. குளித்த குதிரை எப்படி திமிறி எழுமோ அப்படி படித்த சூத்திரனும் எழுவான் என்பதால், மனுநீதி என்றழைக்கப்படுகின்ற மனு அநீதியில் படித்த சூத்திரனும், குளித்த குதிரையும் சமம்’ என்று கூறப்பட்டுள்ளது. வருணாச்சிரம தர்மத்தின் அடிப்படையில், இந்துத்துவா கொள்கைகளில் சமூகத்தைப் பார்ப்பவர்களின் ஆட்சி நரேந்திர மோடியின் தலைமையில் அமைந்துள்ள பி.ஜே.பி.யின் ஆட்சிதான் அதைச் செயல்படுத்திட முனைப்புக் காட்டுவதாகவே தெரிகிறது. எங்கே கை வைத்தால், தலித் சமூகங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்திட முடியுமோ, அங்கே கை வைக்கிறார்கள் சனாதன தர்மவாதிகள் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இப்போது நம்மிடையே புரட்சியாளர்கள் ரெட்டைமலை சீனிவாசனார் இல்லை! – தலைவர் எம். சி. ராஜா இல்லை ! நிமிர்ந்து போராட புரட்சியாளர் அம்பேத்கரும் இல்லை ! எனவே ‘நமக்கு நாமே காவல்’ என்ற அடிப்படையில் இச்சமூக மக்கள் எழுச்சி பெறவேண்டும்! போராடாமல் எந்த உரிமையையும் மீட்டெடுக்க முடியாது என்பது வரலாறு! பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ. கட்சி அரசு படித்தால் தானே வாழ்க்கைத் தரத்தை உயரத்தி சரிநிகர் சமமானவர்களாக தலித்துகள் வளரமுடியும்? என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. ஆகவேதான் தலித்துகளுக்கான கல்வித் தொகை ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு வருகிறது. பெரும்பாலும் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் குறிப்பாக தலித் மாணவர்களின் வறுமை காரணமாக இடைநிற்றல் தொடங்குகிறது. அதனால் அச்சமூகத்தின் வளர்ச்சி தடைப்படுகிறது. எனவே தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை காலங்கடந்தேனும் 2012ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. அதனடிப்படையில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவருக்கு ரூ. 350/- உதவித் தொகையும், புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணத்திற்காக ரூ.1000/-மும் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவருக்கு ரூ.150தும், புத்தகம் முதலான இதர செலவுகளுக்கு ரூ.750தும் வழங்கப்பட்டது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பார்களே அதைப் போல உதவித் தொகை குறைவானாலும், அதன் நோக்கம் மகத்தானது. ஃபிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்காக மத்திய முன்னாள் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2013-14ல் ஒதுக்கிய தொகை 882 கோடி ரூபாய். ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் 2014-15 பட்ஜெட்டில் அதை 834 கோடியாகக் குறைத்தது. ஆனால் அந்தத் தொகை கூட முழுமையாகச் செலவிடப்படவில்லை . செலவு செய்ததோ 499 கோடி தான். 2015-16ம் ஆண்டுப் பட்ஜெட்டில் அது 663 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதிலும் கூட வெறும் 370.45 கோடி மட்டுமே செலவு செய்து விட்டு மீதம் வேறு திட்டங்களுக்குப் போய்விட்டது. 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மேலும் படுகேவலமாகக் குறைக்கப்பட்டது. பிச்சைக்காசாக வெறும் 50 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக சிந்தனையுள்ளோரே சிந்தியுங்கள்! இதில் சமூக நீதி எப்படியெல்லாம் சாகடிக்கப்படுகிறது என்பதை! 10ம் வகுப்போடு படிப்பை இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 19.36 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசின் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எஜுகேஷன் பிளானிங் அண்டு அட்மினிஸ்டிரேஷன் என்ற அமைப்பு வளியிட்ட ’ஸ்கூல் எஜுகேஷன் இன் இந்தியா என்ற அறிக்கை கூறுகிறது. மோடி அரசு அமைந்ததிலிருந்து மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை சரிவர அனுப்புவதில்லை. அதை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் 2015-16ம் ஆண்டு கல்லூரியில் படித்த 37089 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 2014-15ம் கல்வி ஆண்டிற்கு தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கென்று மத்திய அரசு தர வேண்டிய தொகையில் 1175.10 கோடி ரூபாய் பாக்கியுள்ளது. 2015 16ம் ஆண்டுக்கான பாக்கியும் உள்ளது. அதையும் சேர்த்து 1549.76 அனுப்பித்தர வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநில தலித் மாணவர்களுக்குக் கூட போதாத போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இந்தியாவில் உள்ள அனைத்துத் தலித் மாணவர்களுக்காகவும் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் 3347.89 கோடிதான் ஒதுக்கியுள்ளது பா.ஜ.க. ஆட்சி! இது யானைப் பசிக்கு சோளப் பொறி’ இதுதான் தலித்துகளின் முன்னேற்றத்தில் உள்ள அக்கறையா? சமூக ரீதியாக தலித்துகளை ஒடுக்கும் வன்கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக அங்கீகாரமற்ற அடியாட்களின் துணையோடு ஆட்சியாளர்களின் அரவணைப்போடு கொம்பு சீவிவிடப்பட்ட பசு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரால் ஆர். எஸ். எஸ். தொண்டர்களால் தலித்துகளின் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தைத் தடுக்காத அரசு எந்தவகையில் தலித்துகளுக்குச் சாதகமானது? பிரதமர் மோடி அவர்களே மனுதர்மத்தின் அடிச்சுவட்டை நோக்கி அரசை நகர்த்தாதீர்கள். அதில் மனித சமத்துவம் மாண்டுபோகும். அனிதாவின் மரணமும் நீட் தேர்வும் - செப்டம்பர், 2017 வெள்ளையர்களிடம் பறிபோன சிவகங்கைச் சீமையை மீட்டெடுப்பதற்காக, வீரமங்கை வேலு நாச்சியாரின் பெண்கள் படைத் தளபதியாகச் செயல்பட்டு ஆயுதக் கிடங்கில் குதித்து தன்னுடைய இன்னுயிரை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னே மாய்த்துக் கொண்ட முதல் வீராங்கனை எஸ்.சி. சமுதாயத்தைச் சார்ந்த குயிலி’யாகும். சென்னை ராஜதானியின் பிரதமராக ராஜகோபாலாச்சாரியார் இருந்தபோது 1937-38ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தாளமுத்து நடராஜன் என்ற மொழிப்போர் தியாகிகளில் நடராஜன் எஸ். சி. சமுதாயத்தைச் சார்ந்தவர். இப்படி, தேசத்திற்காக, மொழிக்காக, காதலுக்காக, தம் பணியில் நேர்மையாக நடந்து கொண்டதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் பட்டியலில் பெரியகுளம் கைலாசநாதர்கோயில் பூஜாரி நாகமுத்து 22 எஸ்.சி.க்களை திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா இளவரசன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது! நேர்மையில் தியாகி கக்கன் ஜிக்கு இணையான அரசியல் தலைவரை இதுவரை பிறக்கவில்லை . இனியும் பிறக்கப் போவதுமில்லை . இன்றைக்கும் தன் உயிரை பணயம் வைத்து அதிகார ஆதிக்கக் கும்பலுக்கு மத்தியிலே கிரானைட் ஊழலைத் தோண்டிக் கொண்டிருக்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஒரு எஸ்.சி. என்பதை நாடறியும்! வழிபாட்டு உரிமைக்காக தீக்கிரையாக்கப்பட்ட சைவ சமயத் துறவி ஆதனூர் நந்தனாரிலிருந்து கீழ உஞ்சனையில் வெட்டுண்ட ஐவர் வரையிலே எண்ணற்ற தியாகிகளை உள்ளடக்கியது எஸ்.சி. சமுதாயம் என்பது வரலாற்று உண்மை ! சரி! விஷயத்திற்கு வருவோம்! இன்று களமாடிக் கொண்டிருக்கிற ‘நீட்’ தேர்வும் அதனைத் தொடர்ந்து சமூக நீதியை சாகடித்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வும் அதற்குப் பலியான அரியலூர் மாவட்ட அனிதா சமூக நீதிக்கான விடியலை வித்தாக்கிச் சென்றிருக்கிறார். குலக் கல்வித் திட்ட நாயகர் ராஜகோபாலாச்சாரியார் தகுதி திறமை பற்றி வாய் திறந்தபோது, பெருந்தலைவர் காமராஜர் ராஜாஜியின் வாயை அடைத்த விதம் அலாதியானது. நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன். இந்த ஆண்டுகளில் எந்த அரிஜன் எஞ்ஜினியராக இருந்து கட்டிய பாலம் இடிந்து விழுந்துண்ணே ! டாக்டராக இருந்து போட்ட ஊசியால் செத்தது எத்தனை பேருண்ணே ! சொல்லு பார்க்கலாம்! படிக்க வாய்ப்பும், சந்தர்ப்பமும் மறுக்கப்பட்ட மக்கள் இப்போதுதானே படிக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்தார் பெருந்தலைவர் காமராஜர். அத்தகைய நேர்மையானவர்கள் இப்போது இல்லாதது தமிழகத்திற்குப் பெரிய பின்னடைவே! அதற்காக, சனாதனத்தின் கைப்பாவைகளாக ஆட்சியாளர்கள் இருந்தாலும் ‘நீட்’ தேர்வு என்பது விளிம்பு நிலை மக்களின் பிரச்சினை! 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற மாணவியின் டாக்டர் ஆகும் கனவை காவு கொண்ட இது நீட் தேர்வு, சமூக நீதிக்குப் புறம்பானது. எந்த ஏழையும், எத்தனை மார்க்குகள் பெற்றாலும் விளிம்பு நிலை மாணவர்கள் டாக்டர் ஆக முடியாமல் தடுப்பதே மத்திய ஆட்சியாளர்களின் நோக்கமும், நீட் தேர்வும் ஆகும்! அரசுக் கல்லூரியில் மார்க்கின் அடிப்படையில் டாக்டர் சீட் ‘பிரி சீட்’ கிடைத்திருக்க வேண்டிய நிலையில் 1976 மார்க்குகள் பெற்ற ’அனிதா’வுக்கு நீட் தேர்வு என்ற தடைக்கல்லை போட்டுச் சாகடித்தது யார்? நீட் தேர்வு என்பதே ஏழைகள் மருத்துவம் போன்ற உயர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜென்மத்திற்கும் டாக்டர் ஆகும் கனவை ஏழை, எளிய எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மறந்துவிட வேண்டும். என்பதுதானே இதன் நோக்கம். சாதாரண மக்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும், அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாடுபடுவதுதான் நல்ல அரசு! மக்கள் அரசு! மாறாக சாமான்ய மக்கள் உயர்ந்துவிடக் கூடாது என்று தடுப்பது மக்கள் அரசு தானா? இப்படி ஒரு மக்கள் விரோத அரசை சனாதன நாட்டில் தவிர எங்கும் காணமுடியாது. “நீட் தேர்வை புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்தியது. மாணவர்கள் செலுத்திய கட்டணம் இந்நிறுவனத்துக்குச் சென்றது. நுழைவுத் தேர்வால் வரும் வருவாய் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. மேக்கின் இந்தியா திட்டத்தைப் பற்றிப் பேசும் அரசு போட்டித் தேர்வுகளை நடத்திட அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அவமானமல்லவா?” (தி. இந்து 7.9.2017 ஜி.ஆர். இரவீந்திரநாத் கட்டுரையி லிருந்து) ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர் களுக்கு ஒரு கல்வி. பிறகு இருவருக்கும் ஒரேவிதமான தேர்வு என்பது மனித உரிமையை சமூக சமத்துவத்தை, மாணவச் செல்வங்களின் எதிர்காலக் கனவைச் சுட்டெரிக்கும் செயல் அல்லவா! இந்த நாட்டை மனுதர்ம காலத்திற்கு இட்டுசசெல்லும் முயற்சி அல்லவா? ’’நந்தனாரை நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா! என்று சொன்ன அந்தக் காலத்துத் தீண்டாமைக்கும் நிறையப் பணம் செலவழித்து, தனிக் கோச்சிங் எடுத்து நீட் போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றித் தகுதியை நிரூபித்து பிறகு கல்லூரியில் படிக்கவா! என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாம் இருக்கிறது. இது நவீன தீண்டாமை இல்லையா? (6.9.2017 தி இந்து திரைப்பட நடிகர் சூர்யா) இந்த நாட்டு மக்களை படித்து முன்னேற விடாமல் வைத்திருந்து பிறப்பின் அடிப்படையில் அமைந்துள்ள பரம ஏழை சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களை ஆரியத்திற்கு அடிமைப்படுத்திடச் செய்யும் உத்தியே மோடி அரசின் நீட் தேர்வு கட்டாயம் என்ற கட்டளையும் ஆகும். இந்தியா ஒரே நாடு என்றாலும் பல தரப்பட்ட கலாச்சாரம் மொழிகள், பண்பாடு நாகரிகங்களின் மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதை எப்படி உணர மறுக்கிறார்கள் மத்திய ஆர்.எஸ்.எஸ். பினாமி ஆட்சியாளர்கள்! தாமரை இலை தண்ணீரை ஈர்க்காது. ஆர்.எஸ்.எஸ். கொள்கை இந்தியர்களை இணைக்க முடியாது. ஆக நீட்தேர்வு போன்ற சாத்தான்களைத் துரத்திட கல்வியை மத்திய பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நாட்டு மக்களின் மீது அக்கரை கொண்ட அனைத்து சமுதாய மக்களும் ஓரணியில் திரண்டு போராடி வெற்றி பெற்றிட வேண்டும். அப்போதுதான் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அவர்களே நிர்மானித்துக்கொள்ள முடியும். அன்னைத் தமிழும், தமிழர்களின் தனித்துவமும் காக்கப்படும். தமிழர்களே இதிலாவது ஒன்றுபடுங்கள்! இதற்கும் முன்னோடியாக இருந்த அனிதாவின் மரணம் அணையா விளக்காக நின்று ஒளிபரப்பி வழிகாட்டும்! அதையும் முடக்கச் செய்யும் தந்திரம்தானே நீங்கள் பேசும் தகுதியும் திறமையுண்ணே ! ஒன்றினைவோம் -பிப்ரவரி, 2018 மனிதர்களுக்காக மதங்கள் உள்ள. வழிபாட்டு * முறை உள்ள எந்த நாட்டிலும் பிறப்பின் அடிப்படையில் சாதி நிர்ணயித்து. தீண்டாமை நிர்ணயித்து மனித உரிமைகள் மறுக்கப்பட்ட எந்த நாடும் இல்லை ! மனிதாபிமானமற்ற இந்த அரக்கக் குணம் எந்த மதத்திலும் இல்லை . ஆனால் இந்த மனித நேயமற்ற கொள்கைகள் வகுக்கப்பட்ட போதே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த மனிதர்களும் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள்! ஆனால் இயக்கமாக இணைந்த செயல்படவில்லை. அதிசயப் பிறவிகள் மனித உடம்பில் நான்கு இடங்களில் பிறப்புறுப்புக்களை கொண்ட அதிசயத்தை இந்து மதத்தில்தான் காண முடியும். தலையிலிருந்து ஒருத்தனையும் தோளில் இருந்து ஒருத்தனையும் வயிற்றிலிருந்து ஒருத்தனையும் காலிலிருந்து ஒருத்தனையும் பிறப்பித்த ஒரே மதம் இந்து மதம் தான். இது இயற்கைப் பிறப்பிற்கு அப்பாற்பட்ட அதிசயம். இதைச் சொன்ன வேதம் தான் மனுஷ்மிருதி என்கின்ற மனுதர்மம். பிரஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹுராஜன்ய க்ருத ஊருத்தஸ்யயத் வைஸ்ய பத் வியாக்தம் ஸுத்ரே அஜாயதா" என்கின்ற புருஷ சூக்தம் என்கின்ற சாதிகளின் தோற்றத்தில் மேற்கண்ட பிராமணர் தலையயிலிருந்தும் ராஜன்ய’ என்கின்ற சத்ரியர் தோளிலிருந்தும். ‘வைஸ்யா என்கின்ற வைஸ்ரியர் வயிற்றிலிருந்தும் ’ஸூத்ரே’ என்கின்ற சூத்திரர் காலிலிருந்தும் தோன்றினார்கள். சூத்திரர்கள் அசுரர்களின் வழி வந்தவர்கள் என்றும். சூன்யத்திலிருந்து வந்தவர்கள் தைத்ரேயர்கள் என்றும் பிரயாணம் தோன்றுவதற்கு முன்னமேயே சாதிச் சண்டைக்கு முகூர்த்தக்கால் ஊன்றிவிட்டார்கள் சனாதன வாதிகள் ! இயற்கை மரபோடு ஒன்றிப் பிறந்தவர்கள்தான் பஞ்சமர்கள்! அவர்கள் இயற்கைக்கு மாறாகப் பிறந்ததாகக் கூறப்பட்ட நான்கு வகை வருணத்தை மறுத்தவர்கள் அதாவது முறையான பிறப்பாளர்கள் அல்ல கூறியவர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள். அவர்கள் இந்து மத வேதத்தின் அதித கற்பனை தவறானது என்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்! தீண்டப்படாதவர்களாக்கப்பட்டார்கள்! அதை ஏற்று அதற்குப் புனிதத் தன்மை தந்தவர்கள் பார்ப்பனீயவாதிகள்! இந்து சனாதனவாதிகள்! இதில் எங்கே புனிதம் இருக்கிறது. அசிங்கத்திற்குப் பெயர்தான் புனிதமா? என்று கேள்வி கேட்டவர்கள் பகுத்தறிவுவாதிகளானார்கள்! ஆக பார்ப்பனீயம் என்பது அக்ரகாரத்தில் பிறந்தாலும் அனைத்துச் சாதிகளையும் தொற்றிக் கொண்ட வியாதியாகிவிட்டது. இனி இதற்குப் பெயர் திராவிட இயமா? பார்ப்பனியமா? தமிழரயியமா? பார்ப்பனீயம் ஒரு இனத்தின் சொத்து, பூணூல் போட்ட பார்ப்பனர்களிடம் மட்டுமே உள்ளது. என்பது மாயை! யார்? யார்? சாதியத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ, தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்களோ, இந்துத்துவாவாதிகள் உட்பட மற்ற சமுதாயத்தினரிடம் கூட அத்தணை பேரும். அத்தணை மதத்தாரும் பார்ப்பனீயவாதிகளே! சனாதனவாதிகளே ஆவர். ஆதிதிராவிடர்கள் அதில் விதிவிலக்கல்ல! அவர்களுக்குள்ளும் சாதி உண்டு. மேலே கீழே என்ற பாகுபாடு உண்டு. இதனை மிகச் சாதுர்யமாக ஆர். எஸ்.எஸ். இயக்கம் செய்து கொண்டிருக்கிறது! தன்மானமுள்ள தமிழர்கள் - திராவிடர்கள் அதற்கு அடிமையாகிப் போனார்கள்! ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தவுடன். அந்த சனாதன இயக்கம் வீறு பெற்றுக் கொண்டிருக்கிறது! சாதியின் பெயரால் தீண்டாமையின் பெயரால் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள் ! பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்! “பசு பாதுகாப்பு இயக்கமாம்!” இது இந்திய அரசியல் சாசனத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா? பாரதிய ஜனதா கட்சியின் ஆசி பெற்ற இயக்கம்தானே இது ஒரு சாராரைக் குறிவைத்து தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு புனிதம் என்பது என்ன? மாட்டிற்காக மனிதனைக் கொல்வதா? புனிதம். அந்தப் புனிதம் வேண்டாம் என்று சொல்லுபவன் தானே பகுத்தறிவு வாதி: உணவு தனிமனித உரிமை! அதில் தலையிட பிரதமர் மோடிக்கோ . ஆர். எஸ்.எஸ். இயக்கத்திற்கோ என்ன உரிமை இருக்கிறது? வீரம் செறிந்த தமிழர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஏன் கோழையானார்கள்? திராவிடர்கள் ஏன் மௌனியாக உள்ளார்கள்! எல்லாமே. ஆட்சி அதிகார ஆசைதானா? கேவலம்! மென்று துப்பும் எலும்புக்காக பாரம்பரியமிக்க தமிழின பண்பாடு, காதல் வீரம் - மானம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுவதா? சுயமரியாதை என்ற சொல் தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால் தமிழ்நாட்டில் பிரபலம் பெற்றது. பெரியார் இருந்தவரை நாமெல்லாம் சுயமரியாதை உள்ள இனம் என்று மார்தட்டி நின்றோம். ஆனால் இன்றோ சரணாகதி’ படலத்தில் அடிமைகளாக அல்லவா நிற்கிறோம்! தீண்டாமை என்பது இந்தியாவின் சாபக்கேடு! அதை ஒழித்தால் சமத்துவத்தின் சாயல் தெரியும்! மனிதனை மனிதன் மதிக்கின்ற சுவடு தெரியும்! சாதி என்று எதை அடையாளம் காட்டுகிறார்கள்? அறிவிலா? ஆற்றலிலா? படிப்பிலா? பண்பாட்டிலா? இல்லையே, இவையனைத்தும் இருந்தும் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தும். எப்படி அடையாளம் காட்டப்படுகிறார்கள்! தீண்டாமை! தீண்… மை! அதை ஒழித்து விட வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் செயலில் இறங்கினார். யாரால் தீண்டாமையும். சாதிகளின் இடைவெளியும் உருவாக்கப்பட்டதோ அதே பிராமணர்களை தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுத்தினார். காந்தியாரின் கட்டளையை பல பிராமணர்கள் பல எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றிக் காட்டினார்கள். நம்மில் பலர் தீண்டாதே! தீண்டாதே என்று ஓலமிடுபவர்களாகிவிட்டோம். நமது மதம் தற்போது சமையலறையில் அடங்கிவிட்டது. நமது கடவுள் சோற்றுப்பானையில் அடங்கிவிட்டார்! என்னைத் தொடாதே! நான் புனிதன் என்பதே தற்போது நமது மதமாகிவிட்டது. இன்றும் நூற்றாண்டு இவ்விதமே நடைபெற்றால் நாம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியவர்களாவோம்! - மானாமதுரையில் விவேகானந்தர் பேசியது. “பிராணர்களின் தனியுரிமைகளும் சலுகைகளும் அனுபவித்த காலம் மலையேறிப்போய்விட்டது என்பதை உணர வேண்டும்! ஒரு பாம்பு ஒருவனைக் கடித்துவிட்டால், அவன் பிழைக்க கடித்த அப்பாம்பே அதன் விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். அதுபோல தன்னால் உண்டான தீண்டாமை கெடுதலைத் தானே தீர்க்கப் பிராமணர்கள் முன்வரவேண்டும்” என்று சுவாமி விவேகானந்தர் அவர்கள் கும்பகோண சொற்பொழிவில் கூறியதைக் காந்தியார் செயல்படுத்திக் காட்டினார். காந்தியடிகளோ, தந்தை பெரியாரோ. அண்ணல் அம்பேத்கரோ எத்தனை முயற்சி செய்து பகீரதப் பிரயத்தனம் செய்திருந்தாலும், சம்பந்தப்பட்ட சமுதாயப் பிரிவுகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்காவிட்டால். முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரே ஆகும்! இப்போது நீருபூத்த நெருப்பாக அல்ல. அதுகூட அணைந்துவிடும். குமுறும் எரிமலையாய் சாதீய உணர்வுகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜந்தா கட்சியின் ஆட்சியில் கனன்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை ! அதை முறியடிக்க சாதித் தீண்டாமையற்ற சமுதாயத்தை உருவாக்க தோழர்களே! இதை உணர்ந்து ஒன்றிணையுங்கள் ! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! சிலை உடைப்பு மனிதநேயமற்ற செயல் - மார்ச், 2018 ஓரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம். போன்ற அடிப்படைத் தத்துவத்தின் அடையாளச் சின்னங்களாக. நிர்மானித்த சிற்பிகளின் நினைவச் சின்னங்களாகத் திகழ்வதுதான் அவர்களின் திருவுருவச் சிலைகள். அந்த தேசியச் சின்னங்களை அவமானப்படுத்துவதும். அழிக்க முயற்சிப்பதும் காட்டுமிராண்டித்தனமான செயல்! சூரியனை உள்ளங்கையால் எப்படி மறைக்க முடியாதோ அப்படியேதான் இந்தச் சரித்திர நாயகர்களின் சிலைகளை உடைக்கக் கடபாரையைத் தூக்கித் திரியும் சின்னத்தனமானவர்களின் அறிவிலித்தனமாகும்! இந்தியாவின் தந்தையாக காந்தியார் ஏற்கப்பட்டிருப்பதைப் போல. இந்திய அரசியல் சாசனத்தைத் தனி ஆளாய். உடல் நலம் குன்றியிருந்த போதும் இரவு பகல் பாராமல் எழுதி முடித்த சட்டமேதை அம்பேத்கர் அவர்களை சட்ட வரைவுக் குழுவின் உறுப்பினரான டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் இந்தியாவின் (இந்திய சனநாயகத்தின்) தாய் என்று பகழாராம் சூட்டினார். அந்தச் சிற்பிகளின் திருவுருவச் சிலைகள் நாடெங்கிலும் நிர்மாணிக்கப்பட்டிருப்பது சில இந்துத்துவாவாதிகளின் காமாலைக் கண்களை உறுத்திக் கொண்டிருப்பதில் வியப்பில்லை! தமிழகத்தின் தந்தையாக பெரியார் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டி. தன்மானமுள்ள மக்களாக மாற்றிய பெருமை தந்தை பெரியாருக்கே உண்டு: சாதியின் பெயரால் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த சனாதனத்தை மோதி மிதித்து. அவர்களை மனிதர்களாக்கி விட்டது இந்துத்துவாவாதிகளுக்கு பிடிக்கவில்லை . அதனால் அவர்களின் அதிகாரமும் சாதி அந்தஸ்தும் பறிபோய் விட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலையை உடைப்பதாகப் பிதற்றுகிறார்கள். அண்ணல் காந்தியடிகளோ, அறிவுலக மேதை அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ முதலமைச்சர் அந்தஸ்திலோ, பிரதம மந்திரி அந்தஸ்திலோ இருந்து. அதிகாரப் பிச்சை போட்டு அந்த அடிமைகளின் மூலம் தனது சிலையை கோயில் வளாகங்களில் வைத்து பூ ஜிக்கச் செய்தவர்கள் அல்ல! தன்னலமற்ற தொண்டால், பெரியாருக்கும். தன்நிகரற்ற அறிவால் அம்பேத்கருக்கும் உலகமே ஏற்றுக் கொண்ட அகிம்சை கொள்கையை அறிமுகம் செய்த சாதனையாளர் காந்தியாருக்கும் சிலை வைத்துப் போற்றுவது மனிதாபிமானமிக்க நன்றிக் கடனாகும். இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு வேண்டிய பகுத்தறிவைப் போதித்தவரே பெரியார். இதைப் பெரியார் சிலையை உடைக்க கடப்பாரையோடு திரியம் சகோதரர் ஹரிஹர ராஜா சர்மா புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் கொல்கொட்டாவில் ஒரு பூங்காவில் ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை நிறுவப் பட்டிருந்தது. அதை சில மாணவர்களாலும் ஒரு மாணவியாலும் சேதப்படுத்தப்பட்டதாகச் செய்தி தினமலரில் (8.3.2018) வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்ல. பிரதமர் நரேந்திர மோடியின் சிலை உ…பி.யில் ஒரு கோவிலில் நிறுவப்பட்டுள்ளதாகவும். அதன் மூக்கு உடைக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் செய்தி வந்துள்ளது. ஆக யாருடைய சிலையாக இருந்தாலும் சிலைகளைச் சேதப்படுத்தும் செயல் அறிவுடைமையாகாது. கடந்த ஜனவரி 2018ல் நடந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றியது. நான்கு முறை வெற்றி பெற்ற வாழும் காமராஜ் மானிக் சர்க்காரின் சிபிஎம் ஆட்சி தோற்கடிக்கப்பட்டது. அங்கே பிரிவினைவாதக் கட்சியான (இண்டிஜெனஸ் பீப்பிள்ஸ் பிரண்ட் ஆப் திரிபுரா) என்ற கட்சியோடு இணைந்து வெற்றி பெற்ற சில நாட்களிலேயே லெனின் சிலை தகர்க்கப்பட்டதும். 1000 வன்முறைச் சம்பவங்கள் 514 சிபிஎம் தொண்டர்கள் தாக்கப்பட்டதும், 19 வீடுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டதுமான வன்முறை சம்பவங்கள் நடந்தன . சனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள் பி.ஜே.பி. கட்சியினர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 20 ஆண்டுகள் ஆட்சியிலும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு சட்டமன்றத்திற்கு வந்த மாணிக்சர்க்கார் 2410 ரூபாய் கையிருப்பும். 1520 ரூபாய் வங்கியிலும் இருப்பதாகத் தாக்கல் செய்தார். ஆனால் அவர் தோற்றுப் போனவுடன் (காமராஜரை தமிழமக்கள் தோற்கடித்தது போல) அமித்ஷா, அவரைத் தங்குவதற்கு ஏதாவது இடம் தேடச் சொல்லிக் கிண்டலடிக்கின்றார். 2012 குஜராத் தேர்தலில் தனது பிரமாணப் பத்திரத்தில் 8 கோடியே 54 லட்சம் இருப்பு காட்டிய அமித்ஷா . 2017 குஜராத் தேர்தலில் 34 கோடியே 40 லட்சம் இருப்புக் காட்டினார். அந்த நேர்மையின் சின்னம் மானிக்சர்க்காரை கிண்டலடிக்கிறது. அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டாலும் மனித நேயத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காக்கும் பண்பு வேண்டும். சிலை உடைப்பு வன்முறையை சட்டத்துணையுடன் அடியோடு ஒழித்திட வேண்டும். சமூக நீதியை மறுத்த தீர்ப்பு - மே, 2018 நாடு என்பது பல சமூகங்களைக் கொண்டது. தட்ப வெப்ப நிலைக்கேற்ப பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் நாகரிகங்களைக் கடைப்பிடிப்பதைக் கொண்டிருப்பதைக் கொண்டிருப்பதுதான் நாடு அல்லது தேசம் என்பதாகும். அந்த வகையில் பரந்து விரிந்த பரத கண்டம், இனத்தால், மொழியால். கலாச்சாரத்தால் மட்டுமல்ல. மதத்தின் பெயரால். சாதி - தீண்டாமை எனும் தொழுநோயைப் பரப்பிய வேதங்களால் ஸ்மிருதிகளால் சூழப்பட்ட அதிசயமான நாடு. அசிங்கமான நாடு! இதை எத்தனை முறை சொன்னாலும் எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி உதுத்து விட்டுப் போகிறார்களே தவிர உணர்வள்ள மனிதர்களைக் காண முடியவில்லை ! அதிலே இந்தியாவில் படித்த மாமேதைகள். அறிவாளிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் மேதாவிகள், அரசியல்வாதிகள் அனைவருமே பதவி ஆசையால் வெட்கமிழந்து பகுத்தறிவை அடகு வைத்து தீண்டாமை சேற்றைச் சந்தனமாகப் பூசிக் கொண்டு சாதியத் தீர்த்தத்தில் புனித நீராடிக் கொண்டிருக்கிறார்கள்! இந்த அஞ்ஞானிகள்தான் இங்கே மதத்தின் பெயரால் மனிதத்தைத் தூக்கிச் சென்று சூறையாடிக் கொண்டிருக்கும் மேதாவிகள் ! ராமாவாதாரங்கள்! சரி விஷயத்திற்கு வருவோம்! கடந்த மாதம் இந்தியாவின் உச்சநீதிமன்றம் மனித நீதியைப் புதைக்கின்ற தீர்ப்புக்களை வழங்கி நாட்டில் ஒற்றுமைக் குலைவிற்கு வித்தூண்டி விட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் 10க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின என்பதும் தெரியும். சரி! அதன் சராம்சம்தான் என்ன? தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், சாதியின் பெயரால் மற்றவர் மனம் புண்படும்படியாக நடந்து கொள்வது. கேவலமாகப் பேசித் தற்கொலைக்குத் தூண்டுவது. பொது இடங்களில் சாதியின் பெயர் சொல்லி உரிமை மறுப்பது போன்ற செயல்களுக்கு. அது புகாராகத் தெரிவிக்கப்பட்டால் அந்த நபரை உடனடியாக, ஜாமீனில் விடமுடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது அல்லது தண்டிப்பது என்ற விதி இருந்தாலும் அது நூற்றுக்கு 90 விழுக்காடு நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. இதை அறிந்த அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி சமூக நீதிக்கு உதவிடும் சட்டங்களை அமுல்படுத்த நினைத்த போதுதான் அதன் தலையில் சனாதன இடிவிழுந்தது! இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சட்டமேதை அம்பேத்கர் அவர்களால் சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சாசனத்தில் பதிவு செய்தார். சர்க்கரை என்று காகிகத்தில் எழுதி நக்கினால் இனிக்காது என்பதற்கிணங்க செயல்படுத்தும் அதிகாரிகள் சனாதனவாதிகளாக இருப்பதால் செயல்படுத்தத் தவறினார்கள். அதனால் 1955ஆம் ஆண்டு தீண்டாமை குற்றம் பற்றி பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் 1976ம் ஆண்டு சிவில் உரிமைச் சட்டமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து சட்டங்கள் சனாதனவாதிகளால் நிறைவேற்றப்படாததால். தீண்டாமை, மனித உரிமைகள் மறுக்கப்படும் செயல்கள் இந்தியாவெங்கிலும் தொடர்ந்து, அதனால் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள்! கற்பழிப்பு கொள்ளை போன்ற வன்செயலுக்கு ஆட்படுத்தப்பட்டு தினமும் அச்சத்தில் உறைந்தே வாழ்ந்து கொண்டிருந்தார்கள் ! இதை அறிந்த காங்கிரஸ் மத்திய அரசு சிவில் உரிமைச் சட்டமும் செயல்படாத நிலையில் 1989ம் ஆண்டு , எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமாக்கியது. ஆக சட்டங்கள் பெயர் மாற்றம் பெற்றனவே தவிர ஆட்சியும் அதிகார வர்க்கமும். சனாதனக் கூட்டமும். தோளில் இருந்து கொண்டு செவியைக் கடிப்பது போல. சட்டங்களைச் செல்லறிக்கச் செய்து கொண்டிருந்தார்கள்! 2015ம் ஆண்டு எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்குக் கட்டாயமாக சாதியின் பெயரால் தீண்டாமையின் பெயரால் தலையை மொட்டையடித்தல் மீசை மழித்தல், எஸ்.சி./எஸ்.டி. பெண்களை வேண்டுமென்றே தீண்டி கேவலப்படுத்துதல் போன்ற வன்கொடுமைகளைத் தடுக்கும் விதத்தில். அதற்கு நஷ்ட ஈடு வழங்குதல் போன்ற திருத்தங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. நாளை மாற்று அரசு மத்தியில் அமைந்தால், இறுகிக் கொண்டே வரும் சட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் படலாம். சாதகமான அரசு இருக்கும் போது சம்மட்டியடி அடித்துவிட வேண்டும் என்று எண்ணிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல் மற்றும் யு.யு. லலித் இருவரும் சேர்ந்து நடைமுறையில் உள்ள வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே நீர்த்துப்போகும்படியான கீழ்க்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் உடனடி கைதோ, நடவடிக்கையோ இனி இல்லை ! அது ரத்துச் செய்யப்படுகிறது. முன் ஜாமீன் பற்றிய பேச்சுக்கும் இடமில்லை ! அரசு ஊழியர் எனில் அவருக்குப் பணி நியமனம் செய்த அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். மற்றவர் எனில் எஸ். பி. யிடம் முன் ஒப்புதல் பெற வேண்டும். ஒரு நாள் அவகாசத்தில் முன்ஜாமீன் பெறலாம். இப்படி ஒரு பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாகவும். குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்கைப் பிடிக்க வேண்டுமானால், கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி அதன் கண்களை மறைத்தவுடன் பிடித்து விடலாம் என்பது போல தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ஏ.கே. கோயல். யு.யு. லலித் சமூக நீதியின் சீரழிப்பார்கள் என்றால் மிகையாகாது. இறுதி அஸ்திரம் ஓய்வில்லா கால்களும், ஓய்வறியா கைகளும் இதுவே எழுத்துப் பயணத்தின் இறுதி அஸ்திரமென்பதை அறியாது எழுதிய ‘கலாச்சார சீரழிவு’ கட்டுரையே முற்றுப் புள்ளியாய்…! - உ. இளமதி அறிவுடைநம்பி கலாச்சாரச் சீரழிவு - அக்டோபர், 2018 ‘’மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம். கங்கையே சூதகமானால்’’ என்ற பழமொழி தமிழில் உண்டு. பல விரும்பத்தகாத சம்பவங்கள் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அதற்கு யாரும் நியாயம் கற்பிக்கவோ, அதற்கு சட்டப் காப்போ வழங்குவதில்லை. திருட்டும், கொள்ளையும், கொலையும், கற்பழிப்பும் தகாத உறவுகளும் எல்லா நாட்களிலும் நடந்து கொண்டு தான் உள்ளன. ஆனால் அதில் மேலை நாட்டுக் கலாச்சாரமும் அடங்கி இருக்கிறது. அதனால் பல நாடுகள் இந்த கலாச்சாரம் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. அந்தக் கலாச்சாரச் சீரழிவைத் தடுப்பதற்காக சட்டம் இயற்றி அத்தகைய திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் பழம்பெரும் தேசமான இந்திய தேசம், பல்வேறுவிதமான ஆன்மீகம், அகிம்சை போன்ற பண்பாடுகளின் பிறப்பிடமாக உள்ளதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். அதில் பெருமையும் படுகின்றோம். ஆனால் நிகழ்வுகள் எதிர்மறையாக உள்ளன. சட்டத்தை மீறிப் பல காரியங்கள் நடக்கின்றன. அதில் பண்பாடு, கலாச்சாரம், மனிதாபிமானம், பகுத்தறிவு போன்றவை மீறப்படுகின்றன. அதற்காக சட்டத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் அவைகளை நியாயப்படுத்துவது நமது கொள்கைப் பிடிப்பற்ற பலவீனத்தையே காட்டுகிறது. சட்டத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே அது நியாயமானது என்றால் நாடு சீரழிந்து போகும். ஆடு, மாடுகளைப் போன்ற கலாச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது போலாகும். சிறிது காலத்திற்கு முன்பு ஓரினச் சேர்க்கை ’ பற்றி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. ‘ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்பதே அந்தத் தீர்ப்பு. இதைக் கேட்கவும், சொல்லவுமே அருவருப்பாகத் தோன்றும் போது, நாட்டின் தலைமை நீதிமன்றமே சரி என்கிறதென்றால் இதை யாரிடம் போய் முறையிடுவது? இருந்தாலும் காலம் கடந்து 7.10.2018 தினமலரில் நமது நாட்டின் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது கருத்தினை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. ’ஓரினச் சேர்க்கை குற்றமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை. அதை அடிப்படை உரிமை என்று கூறினால், பள்ளி விடுதி, சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம்களில் நடைபெறும் ஓரினச் சேர்க்கை மற்றும் பாலியல் நடவடிக்கைகளை எப்படித் தடுப்பது என்ற கேள்வி எழுகிறது என்று கூறி இந்தக் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது செத்தவனுக்குச் சாதகம் பார்ப்பது போன்றது என்றாலும் வரவேற்போம். தகாத உறவு விஷயத்தில் ஆண், பெண் சமமாகப் பாவிக்கப்படுவதை விட்டுவிட்டு ஆண்களுக்கும் சாதகமான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை குறை கூறிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களின் தீர்ப்பும் ஏதோ பகுத்தறிவுச் சிந்தனையின் விளைவு . பெண்ணுரிமைப் போராளியின் குணம் என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதல்லவா? ஆணும், பெண்ணும் எல்லா வகையிலும் சமமானவர் என்பதில் சந்தேகமோ, ஆட்சேபணையோ இருக்க முடியாது. அப்படி சம உரிமை வழங்குவது மனிதத்துவத்தை பாலினம் பார்க்காமல் மதிக்கின்ற செயல். இதே சிந்தனை ஓட்டத்தை விரிவுப்படுத்தி மனிதர்களுக்குள் சாதி, தீண்டாமை காப்பதிலும் உள்ளது என்பதிலும் காட்ட வேண்டும். திருமண வாழ்க்கையை மீறி மற்றவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதைக் குற்றமாகக் கருதும் பழமையான இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா போட்ட அதிரடி உத்தரவைப் பார்த்தவுடன், மனுவின் மனுஷ்மிருதி காலத்திற்கு என்னை இட்டுச் சென்றது. அப்படி என்ன மனுஷ்மிருதிகாலத்தில் நடந்தது? பார்ப்பனரல்லாதார் வீட்டுத் திருமணம் முடிந்த மறுநாள் மணப் பெண் தனது கணவன் வீட்டிற்குப் போகக் கூடாது. மணக்கோலத்தோடு திருமணம் முடித்து வைத்த வேதியர் வீட்டிற்குச் சென்று அவருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சட்ட சம்பிரதாயம் அமுலில் இருந்த காலத்தை நினைவூட்டுகிறது. அதைத் தடுக்கின்ற பழமையான இந்திய தண்டனைச் சட்டத்தை 497வது சட்டத்தை, நீக்கயதன் மூலம் இந்திய கலாச்சாரம் சீரழிவை நோக்கிப் போகின்றது என்றால் தவறாகுமா? கல்யாணம் என்பது வெறும் சடங்குதான். சம்பிரதாயம் தான். நீ யாருடன் வேண்டுமானாலும் தகாத உறவு வைத்துக் கொள்ளலாம் என்றால் திருமணம் என்பது வேண்டாத ஒரு அர்த்தமற்ற சடங்குதானே! ஒரு ஆணும், பெண்ணும் குடும்பம் நடத்த சேர்ந்து வாழ திருமணச் சடங்கு தேவையில்லை. மிருகங்களைப் போல் எப்படியும் வாழலாம்! என்றும் கூறியிருந்தால்தான் மேற்கண்ட தீர்ப்பு முழுமை பெற்றதாக இருக்கும். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்குத்தான் சட்டங்கள், சம்பிரதாயங்கள், நடைமுறைகள், முன்னோர்களின் பாரம்பரியங்கள் தேவைப்படுகிறது. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு இப்படி சட்டப் பாதுகாப்பும் உள்ளபோது - குடும்பம், பிள்ளைகள், தன்னைப் பெற்றோர்கள், உறவுகள் எதற்குமே அர்த்தமே இல்லாத வெற்றிட வாழ்க்கையே எஞ்சி நிற்கும். ஒரு விஷயத்தின் மீது, தான் சரியென்று நினைக்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதுதான் சனநாயகம்! மனசாட்சி ஏற்காத விஷயத்தை பயந்து அடக்கி கருத்துக் கூற விடாமல் அஞ்ச வைப்பது சர்வாதிகாரம்! நாம் எதைக் கட்டளையாகப் பிறப்பிக்கின்றோமோ அதன் முன் - பின் விளைவுகளையும், கலாச்சாரத்தையும் கௌரவத்தையும் சீர்தூக்கிப் பார்த்தப் பின்பு பிறப்பிக்க வேண்டும். எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணினும் என்பது இழுக்கு’ -குறள் நாம் எதைச் செய்தாலும் அது விமர்சனத்துக்கு ஆளாகலாம்! ஆனால் அது கலாச்சார சீரழிவிற்கு ஆளாகிவிடக்கூடாது. ’தொட்டால் தீட்டு. நிழல் பட்டால் தோஷம் என்ற நிலைமாறி தொட்டால் கொலை. நிழல் பட்டால் உதை என்ற அளவிற்கு தீண்டாமையின் தீ நாக்கு. நீண்டு கொண்டிருக்கிறது என்பதை கீழ்வரும் தினமலர் 17.6.2015 நாளிதழில் வந்த செய்தியால் அறிய முடிகிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ. கட்சி ஆட்சி நடத்தும் மத்திய பிரதேசத்தில் சந்திராபூர் அருகே கணேஷ்புரா என்ற கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் தலித் சமுதாயத்தைச் சார்ந்த பெண் உயர் சாதி வகுப்பினர் வசிக்கும் பகுதியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக வந்தார். அப்போது அந்தப் பெண்ணின் நிழல் மேல் சாதியைச் சார்ந்த புரான் என்பவர் மீது படிந்தது. ஆத்திரம் அடைந்த அவர் தனது குடும்பப் பெண்களிடம் கூறி. அவர்கள் தலித் பெண்ணைக் கடுமையாகத் தாக்கினர். இந்தப் பக்கம் வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதையறிந்த பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் தந்தையார் காவல்துறையில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது செய்தி! "இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரால் இன்றிலிருந்து தீண்டைமை ஒழிக்கப்படுகிறது என்ற சட்டம் பிரகடனப் படுத்தி இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தீண்டாமை நித்திய ஜீவியால் நிலைத்தே நிற்கிறது! எதெற்கெல்லாமோ கடுமையான சட்டங்களைப் போடுகின்ற அரசும் - நீதிமன்றங்களும் தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் மட்டும் ஏன் மெத்தனம் காட்டுகிறது என்று தெரியவில்லை ! இத்தகைய செயல்கள் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியச் செய்யும் செயல் அல்லவா! அது மீட்டுமல்ல. சமூக விரோத செயல்களில் ஈடு சிறைத் தப்படலன். படற்றவர்களின் உரிமைகள், நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி உரிமைக் குரல் எழுப்பி அக்கறையோடு போராடும் மனித உரிமைகள் அமைப்புகள். பசுக்களுக்கும் - ஒட்டகங்களுக்கும் கருணை காட்டிடும் காருண்யவாதிகள் அதன் அமைப்புக்கள். சராசரி மனிதர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றபோது. சாதி - தீண்டாமையின் பெயரால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது மவுனம் சாதிக்கிறதே ஏன்? அவர்கள் கருணை காட்டக் கூடாத ஜீவன்களா? தலித் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படும் போது, பொது நல வழக்குத் தொடுப்பதற்கென்றே ஆளாய்ப் பறக்கின்ற அமைப்புகள் - தனி மனிதர்கள் தலித்துகள் விஷயத்தில் கண்டுகொள்வதில்லையே ஏன்? இவர்கள் பொது நலனுக்கு அப்பாற்பட்டவர்களா? தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய குளம் கைலாசநாதர் கோயில் பூஜாரி நாகமுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதீயத் தாக்குதல் நடந்துள்ளதே ! இதற்கு இந்து மதக் காப்பாளர்கள் அமைப்புகள் மவுனம் காப்பது ஏன்? தலித் பூஜாரி தானே என்ற நினைப்பா? கைலாசநாதர் இந்துக் கடவுள் இல்லையா? இந்த மனிதப்புழுக்கள் மண்ணில் நெளிந்து தீண்டாமைச் சேற்றிலே சிக்கி மடியத்தான் வேண்டுமா? அரசியல் வாதிகள் தன்னலவாதிகளாக. ஆட்சியாள்பவர்கள் அதிகார போதையில் தன்னிலை மறந்தவர்களாக, உள்ளபோது யாரிடம் சென்று நீதி கேட்பது? நீதி மன்றங்களின் மூலம் நீதி கிடைக்க வேண்டுமானால் உச்சநீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்ய வேண்டுமே? பண மூட்டைக்கு எங்கே போவது? மொத்தத்தில் அதிகாரம் என்ற தோளில் இருந்துகொண்டு எஸ். சி. மக்களின் உரிமைக் காதைக் கடிப்பவர்கள் உள்ளவரை நிழல் என்ன? காற்றுப்பட்டால் கூட எஸ். சி. மக்களின் உரிமைகளுக்கும் உயிர்களுக்கும் ஆபத்துதான்! ஏதோ! இன்று கிடைத்திருக்கின்ற கொஞ்ச நஞ்ச உரிமைகள் கூட பாவா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் புண்ணியத்தாலும், காந்தியார். பெரியார் போன்றோரின் கடுமையான பிரச்சாரங்களினாலும் கொஞ்சப் பேர் உணர்ந்து ஏற்றுக் கொண்டதால் கிடைத்தவையே! மற்றவர்களையும் உணர வைப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய தலைவர்கள் அரசியல் அதிகாரங்களைத் தேடி அலைகிறார்கள். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்கின்ற இளை ஞர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள். அதற்கு போலி பெரியார்வாதத் தலைவர்கள் துணை நிற்கிறார்கள். இவற்றையெல்லாம், அன்பாலும் அறிவாலும் முறியடிக்க வேண்டியவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு நீயா! நானா! என்ற போராட்டத்தை நடத்துகிறார்கள் ! அதுவும் கவைக்கு உதவாத கடவுளின் (சாமி) பெயரால் ! சமுதாயத்தின் ஒற்றுமையையும் உயர்வையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய இளைஞர்கள். வழிகாட்ட வேண்டிய சமுதாய முன்னோடிகள். நமது ஒற்றுமைக்கு இடையூறாக நிற்பது யாராக இருந்தாலும் சரி ஏன். சாமிகளும் - கடவுளும் சேர்ந்தே நின்றாலும் அவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு. ஒற்றுமையைப் பேண வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது ஆகும். நம் முன்னோர்களால் இதுவரை இழுத்து வந்த சமத்துவத் தேரை இழுத்துக் கரை சேர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ! சாய்த்துவிடாதீர்கள். சவால்கள் நிறைந்த இந்தச் சமூகங்களிடையே எதிர்மறையை விட இணக்கமான அணுகுமுறையே நிரந்தரமான தீர்வைத் தரும். இளைஞர்களே! மதுவுக்கு அரக்கக் குணம் உண்டு! அடிமையாகி விடாதீர்கள். முன்னோர்களின் லட்சியக் கனவுகளுக்கு எதிரானது மது! நீங்கள் வளர. மனித சமுதாயம் உயர நாடு முன்னேற மதுவைத் தீண்டாதீர்கள் ! . அடைந்த பெருமை இந்திய நாட்டில் சாதிகள் சாகவில்லை சரித்திரம் படைக்கிறது அயல்நாட்டிலும் அதுவே பேச்சாம்… - உ. இளமதி அறிவுடைநம்பி ஆதாரம் : THE PARAIYA PROBLEM [] [] ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் நினைவுச் சிறப்பிதழ் வரலாற்றோடு வரலாறாய் ஆனாய் ஐயா! ஆலம்பட்டு உலகநாதரே! சென்னையில் மருத்துவம் பார்த்து வந்தீர் நலமுடன் இருப்பதைக் கண்டு வந்தோம் இரண்டொருநாள் ஆன பின்னே இதயத்துடிப்பின்றி வேறொன்றில்லாத வாய்மூடி மௌனமாய் ஆனது என்ன? பார்த்தோர்கள் மீளாய் என சொன்ன போதும் மீண்டிடுவாய் என நம்பினோம் ! சிந்தனைமங்கியது செயலும் ஓய்ந்தது மூச்சு நின்றது முடிவும் வந்தது ! மானிட வாழ்வில் மதிப்புடன் வாழ்ந்தாய் குடும்பம் பேணிகொள்கை வழி நடந்து அயராது உழைத்திட்ட ஐயா ஆலம்பட்டு உலகநாதரே! குன்னங்கோட்டை நாடு ஐக்கிய சபை தலைவராய்; அம்பேத்கர் ஐக்கிய நாட்டுத்தலைவராய்; ஊரெல்லாம் மக்களைக் கண்டு வந்தாய்! ஐயோ எப்படி சொல்வது எதை எழுதுவது அத்தனை மக்களும் ஒரே நாளில் சிந்தும் கண்ணீரோடும் தேம்பி அழும் மூச்சோடும் ஒருசேர ஆயிரமாய் உன்னை காண வந்தார்களே ஏன் ஐயா பார்க்காத மௌனம் ஆனாய்! ஐயோ! கண்திறந்து காணாத காட்சியைக் கண்டோர் துக்கமௌனத்தில் உச்சியை அடைந்தனர்! உலக வரலாற்று பேரேட்டில் ஓரிருவரியேனும் கிடைக்காத என்றோரிடை வரலாற்றில் குயிலியை வடிவமைத்தாய்! வீரவிளைநிலமாம் சிவகங்கை சீமையை அந்நிய ஆங்கிலேயர் ஆட்சி செய்வதா? மீட்டிடும் போரில் வீரமங்கை வேலுநாச்சியாரோடு இணைந்து குயிலி போர் புரிந்ததும் ஆங்கிலேயர் படைக்கிடங்கில் எண்ணெய் தோய்த்ததன் சேலையில் தீவைத்து பாய்ந்திட்டாள்! கிடங்கின் ஊடே! ஆங்கில படைக்கருவி அழிந்தன முற்றும்! வெள்ளையர் வீழ்ந்தனர் வென்றது சிவகங்கைச் சீமை! செடியூல்ட்இன குயிலியின் வரலாற்றை மீட்டெடுத்த உலகநாதரே! நீயும் வரலாற்றோடு வரலாறு ஆனாய்! விடுதலை தந்த அம்பேத்கர் சரித்திரத்தோடு அழகு தமிழ் இலக்கியம் வடித்தாய் சிந்தனை புதிது சீர்மிகு மாதயேட்டில் புரவலர்கள் புடைசூழ ஒப்பற்ற ஆசிரியராய் உயர்ந்து நின்றாய்! உன் புகழெழுத இடம் போதா நானறிவேன்! காலம் வரும் இமயம் உயர எழுதுவேன்! -எக்ஸ்ரே மாணிக்கம் ஆசிரியர் ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்களுக்கு அவரின் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்ட நிகழ்வு நாள் : 17.11.2018 சிந்தனை புதிது மாத இதழின் ஆசிரியரும் அறிவுலகம் போற்றும் சமுதாயப் பெரியவரும் எங்களுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்தவருமான மறைந்த ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களுக்கு - சிந்தனை புதிது சிறப்பாசிரியர் மதிப்புமிகு எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களின் தலைமையில் துணை ஆசிரியர்களான சிவகங்கை பெரியார் ராமு, பொறியாளர் இரா.நா. திருச்செல்வம், பாவலர் பி. அன்புதாசன், நிர்வாகி பாகனேரி அழகேசன் மற்றும் புரவலர்கள் புடைசூழ ஆசிரியர் பெருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை பெரியார் ராமு முன்னிலை வகிக்க, அய்யா எக்ஸ்ரே மாணிக்கம் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திரு . தமிழ்மாறன் அவர்கள் நிகழ்வினை நெறிப்படுத்தினார். இரங்கல் தெரிவித்தவர்கள் : 1. திரு. KS M . மணிமுத்து - தலைவர், ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கம் 2. திரு. இரா.நா. திருச்செல்வம் - துணை ஆசிரியர், சிந்தனை புதிது 3. திரு. விஸ்வநாதன் கோபால் - பாரதீய ஜனதா கட்சி 4. திரு அழகுதாஸ் - புத்தர் அமைப்பு 5. கூமாச்சிப்பட்டி முனைவர் க.மோகன் - AARMS, செயற்குழு உறுப்பினர் 6. திரு.சங்கு உதயகுமார் - மாவட்டச் செயலாளர், வி.சி.க. 7. திரு KRV. இராஜேந்திரன் - மாவட்டத் தலைவர், காங்கிரஸ் (SC/Stபிரிவு) 8. திரு புரட்சித்தம்பி - அதிமுக, காரைக்குடி கிளை 9. திருகணேஷ்- விசாலயன் கோட்டை 10. பேரா.ஸ்டாலின் ராஜாங்கம் - பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. 11. மருத்துவர் ம.சண்முகம் - மேலச்செம்பொன்மாரி 12. திருமதி திருமொழி அன்பழகன் - மாவட்டச் செயலாளர், வி.சி.க. 13. பாவலர் அன்புதாசன் - துணை ஆசிரியர், சிந்தனை புதிது 14. திரு. சிவானந்தம் - வெற்றியூர் 15. திரு.பூ. செருவலிங்கம் - வருவாய் ஆய்வாளர், சிவகங்கை 16. திரு சிதம்பரம் - காரைக்குடி 17. இளைய கௌதமன் - மாநில துணைத்தலைவர், வி.சி.க. 18. திரு.சிம்சன் - சமூகப் போராளி, காரைக்குடி 19. பேரா.அரச முருகு பாண்டியன் - பேராசிரியர், பள்ளத்தூர். 20. பேரா. வேலுச்சாமி - பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம் 21. திரு. அரசு சோமன் - மாவட்ட அமைப்பாளர், ஆம் ஆத்மி காரைக்குடி - நிர்வாகக் குழு, சிந்தனை புதிது #3 அப்பா … அப்பாவுக்கு … நீங்கள் ஒரு அறிவுப் பெட்டகமென்று இருந்தபோது தெரியவில்லை ! இறந்தபிறகே புரிகிறது! அப்பா….. நீங்கள் எங்கள் மீது கொண்ட அன்பும் அக்கறையும் இருந்தபோது தெரியவில்லை ; இறந்தபின்பே புரிகிறது! அப்பா…. அரவணைப்பில் அம்மாவாகவும்; அரணில் அப்பாவாகவும் நீங்கள் இருந்தபோது தெரியவில்லை; இறந்தபின்பே புரிகிறது! அப்பா… தங்களின் நூல்கள் தமிழ்கூறும் நல்லுலகில் சாதனை என்றும் நிமிர்ந்த நடையுடன் இனப் போராளியாய் வாழ்ந்த சாட்சி என்பதும் இருந்தபோது தெரியவில்லை : இறந்த பின்னே புரிகிறது! நமது வீட்டின்…. ஆலமரமாகவும்; சமுதாயத்தின் போதிமரமாகவும்; தானத்தில் கருணையும், செயலில் நிதானமும் எல்லோரும் ஏற்கும் தலைமைப் பண்பும் கொண்ட உங்கள் வாழ்வுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க இருந்தபோது தெரியவில்லை : இறந்த பின்னே புரிகிறது! அப்பா … உங்கள் நிழலில் வாழ நினைத்தோம் இன்றோ உங்கள் நினைவில்…. - பிள்ளைகள் : இளமதி அறிவுடைநம்பி, ** நீலமணி , பாண்டியன், திரு - பிரேமா** யார் செய்த பிழையோ! தாத்தா… நீ என் கரம் பிடித்து சாலை கடக்கச் செய்வாய் இன்று அதே வழியில் தேடுகிறேன் தாத்தா உன்னை …! எங்கு சென்றாய் என்னைவிட்டு - நீ இருக்கும் தைரியத்தில் விழித்துக் கொள்ள நான் மறந்தேன்! இன்று கண்மூடித் துயில் கொண்டாய் நான் இங்குத் தவிக்கின்றேன்…! நான் எழுதும் கவிதைகட்குப் பிழை திருத்தம் நீ செய்வாய் யார் செய்த பிழையோ! இன்று நான் உனக்கு கவி புனைகிறேன்! வெறுமையாய் மனம் கணக்கிறது விளைநிலம் பாழ்பட்டதே என்றாலும் பொறுமையாய் உன்வழி செல்வோம் - நீ என் தாத்தா என்ற பெருமையோடு! -மதுமதி அறிவுடைநம்பி ஆலம்பட்டு அஞ்சலி** ஆலம்பட்டில் பிறந்த காலஞ்சென்ற திரு.சோ.உலகநாதன் அவர்கள், அரசியல், இலக்கியம் முதலியவைகளில் சிறப்பாக விளங்கியவர். அவர் செய்த சேவை ஆலம்பட்டுக்கு மட்டும் இல்லாமல் நமது சமூகத்திற்கே பெருமை சேர்க்கின்றது. நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் முதன்மையாக விளங்கியவர். அவருடைய மறைவுக்கு ஆலம்பட்டு கிராமம் வீரவணக்கத்தை செலுத்தி எங்களின் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம். தலைவர் : ச. தமிழ்மாறன் செயலாளர் : கா.செல்வராஜ் பொருளாளர் : வே. பூவேந்திரன் மற்றும் கிராம் பெரியோர்கள், இளைஞர்கள். வணங்குகிறேன் தாத்தா! சுயநலமில்லா சிந்தனை வாதியே…! தூயத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த வீரத் தமிழ்மகனே! சுயநலமில்லா பொதுநலத் தொண்டை சிந்தனையாய்க் கொண்ட சமூக சீர்திருத்த வாதியே…! புல்லரிக்கும் பேச்சும் புரட்சி வெறியூட்டும் எழுத்தும் புத்துணர்வூட்டும் சிந்தனையும் அழியாக் காவியமாய் பதித்துவிட்டுச் சென்ற இலக்கியவாதியே…! பெயருக்கேற்றார் போல் உலகை அன்பினால் ஆண்டு நாதனாய் வலம் வந்த அன்புக்கவியே…! அழியாப் புகழின் உச்சியை அடைந்தாலும் தலைக்கணம் ஒன்றை தலைக்கேற்றாத எதார்த்தவாதியே…! மண்ணுலகில் ஆற்றிய தொண்டு போதுமென்று விண்ணுலகத் தொண்டைத் தொடர சென்றீரோ…? தாத்தா! வாழ்த்த வயதில்லை, நீங்கள் விட்டுப் பிரிந்ததை ஏற்க மனமில்லை வணங்குகிறேன் தாத்தா ! - கண்ணீருடன் பேத்தி : மாங்கனி சேதுராமன் கல்லுப்பட்டி (இ) பெங்களூர் உன் பயணம் நிறைவாகும்! ஆலம்பட்டு தமிழில் ஆழங்காற்பட்டு தமிழுக்குத் தந்ததெல்லாம் இனிப்புப் புட்டு! - நீ இல்லாமல் போனதாலே போனதய்யா எங்கள் மனம் புண்பட்டு! சிதறிய எழுத்துக்களை எல்லாம் கூட்டி வந்து சிந்தனை புதிதில் இணைய வைத்தாய்! கதறிய உள்ளங்களை எல்லாம் இன்று கண்ணீரில் நனைய வைத்தாய்! தயக்கமின்றி தளர்வின்றி தானே செய்யும் உதவிகளால் என்னைத் திகைக்க வைத்தப் பண்பாளன்!- நான் தமிழ்க்கடலில் மூழ்கி மூச்சுத் திணறிய போதெல்லாம் எனக்கு முத்தெடுத்து தந்தவன் நீ! தமிழ்வானில் நான் பறப்பதற்குச் சிறகுகளாய் இருந்தவன் நீ! இன்று நீ இல்லாமல்… சிறகொடிந்த பறவையாய் மூச்சடைந்து நிற்கின்றேன்! சிரித்துப்பேசி சிந்தனையைத் தூண்டிய நீ கனத்த சுமையேற்றி கண்கலங்க வைத்துவிட்டு முன்பயணம் செல்வதெல்லாம் ஏனையா? ஆடை விலக்கி அலங்கார கவிதை எழுதும் அசிங்கக் கவிஞர்களுக்கு மத்தியிலே இளநெஞ்சன் என்ற பெயர்சொல்லி இனிய கவிதை தந்தவன் நீ! பிற்போக்குக் கருத்தின் களவாணிக் கைகள் சமூகம் முடமாகப் பள்ளங்கள் பறிக்கும்! - அச்சீரழிவத் தாக்குதல்கள் புறப்படும் முன்னே - உன் ஏவுகணை எழுத்து எதிர்முனை முறிக்கும்! உன் படைப்புகள் வெறும் காகிதம் தாங்கிய எழுத்துக்கள் அல்ல அத்தனையும் ஆயுதம் தாங்கிய எழுத்துக்கள்! நீ விட்டுச் சென்றதையெல்லாம் நாங்கள் விடாது செய்தலே உன் பயணம் நிறைவாகும்! - கொம்புக்காரன் விளங்கிடும் உந்தன் புகழ் விண்ணும் மண்ணும் உள்ளரை சமுதாய சேவைகளில் சாதனைகள் பல கண்டு முக்குளித்த அண்ணனுக்கு ; மெய்ப்பித்த மன்னனுக்கு இரங்கற்பா பாடவைத்த இரக்கமற்ற இயற்கையே இதயமே உனக்குண்டா ? என் இதயம் அழுகுதிங்கே! அரசியல் ஆளுமையும் சமுதாய சேவையிலும் அகமும் முகமும் மலர்ந்து அறம் நிறைந்து சாதித்தாயே இளமைக் காலந்தொட்டு இன்றளவும் இளம்நெஞ்சாய் களம்கண்டு சாதித்தவை கணக்கிலது அடங்காதே! தான் பிறந்த ஆலம்பட்டு கிராமத்தின் தலைவனாய் தாம் சார்ந்த நாடாம் குன்னங்கோட்டை தலைவனாய் ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத் தலைவனாய் திருக்குலப் பேரியக்கத் திருப்பெயரின் நிறுவனனாய்! மாவட்ட தம்மக்கள் உரிமைச் சங்கத் தலைவனாய் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவனாய் சீர்மிகுந்த எழுத்துலகில் நேர்வரிசை படைத்தோனாய் கடந்து வந்த பாதைகள் காலத்தால் அழியாதே! உன்னருமை அறிந்தேதான் உவகையுடன் முன்வந்து AARMS எனும் சமுதாய மேம்பாட்டுச் சங்கமது வாழ்நாள் சாதனையாளர் விருதுனக்கு வழங்கியது! வாழ்த்துப்பா பாடி தானும் வளர்ச்சியில் சிறப்புற்றது! குயிலி என்ற வீரத்தாயை குவளயம் உணர்ந்திடவே கூவிப்பாடி அரியதோர் காப்பியம் படைத்தாயே குவளயம் உள்ளவரை நீ படைத்த படைப்புகளும் கூவிச்செல்லும் உந்தன் புகழ் கூற்று இது சாத்தியமே! சமுதாயச் சேவைக்கென செய்தித்தாள் என்றபோது சாதுவாய் இருந்த நீ சதுரங்கம் ஆடினாயே சிந்தனை புதிது என்ற வந்தனைக்குரிய இதழ் மாதந்தோறும் மலர்ந்துவர மௌனமாய் உழைத்தாயே! துவங்கி நான்காண்டுகள் துயில் கொண்டிருப்பாயா? வடிவங்கள். பலவாக, வரைந்து நெஞ்சில் பதித்தாயே! எட்டுத்திக்கும் உன் எழுத்து ஏடுகொண்டு பறந்ததுவே கண்பட்டுத்தான் படுத்தாயோ காடு உனை கொண்டதுவே! மல்லிகை வெளுப்பினிலே மடங்கா வேட்டி சட்டைபோட்டு பௌவியமாய் நீ நடக்க நான் பார்பதினி எப்போதோ? மௌனமே உனது கோபம் முக மலர்ச்சியே உன் சுபாவம் எளிமையே உனது வாழ்க்கை மன வலிமையே உனது கொள்கை! இயற்கையும் உனை ரசித்தோ இறக்கச் செய்து ஏற்றுக் கொண்டாள் ! இறந்தாலும் வாழ்ந்திடுவாய் எங்கள் இதயங்களில் என்றென்றும் நீ கலங்கிய கண்களுடன் இடுகாட்டில் உனை விதைத்துவிட்டோம்! விளங்கிடும் உந்தன் புகழ் விண்ணும் மண்ணும் உள்ளவரை! - என்றும் உன் நினைவில் தம்பி இரா.நா.திருச்செல்வம் சிந்தனை புதிது துணை ஆசிரியர், வெளியீட்டாளர், சேது ரெகுநாத பட்டணம் (இருப்பு: காரைக்குடி) அழகப்பா பல்கலைக்கழகம் SC/ST ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நலச்சங்கம் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம். E-mail: scstassociationalu@gmail.com புகழ் அஞ்சலி அய்யா, ஆலம்பட்டு உலகநாதன் அவர்களின் நட்பும், அவரது தொடர்பும் நமது சமூக முன்னோடியும், முதுபெரும் அறிஞருமான எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கச் செல்லும் போதும், போதி இலக்கியச் சந்திப்பு கூட்டங்களிலும் சந்திக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். அய்யா மிகவும் குறைவாகப் பேசுவார். அதே நேரத்தில் அதிகமான பணிகளை பம்பரம் போல் சுழன்று சுழன்றுச் செய்து கொண்டே இருப்பார். என் போன்றோருக்கு அவரது சமூகச் சிந்தனையும், எழுத்தாற்றலும் செயல்படும் ஆற்றலைக் காணும் போது எல்லாம் பெரும் வியப்பாக இருக்கும். கல்லூரி, பள்ளிகள், அறிவுச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இயக்கவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மெச்சும் பண்பாளர் ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்கள் இழப்பு பெரும் துயரத்தை அளிக்கிறது. அவரது இழப்பால் வாடுகின்ற அவரது குடும்பத்தார்க்கும், அவரது நண்பர்களுக்கும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். - பேராசிரியர். முனைவர். வேலுச்சாமி அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காங்கிரஸ் சார்பில் அஞ்சலி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்டனர் குன்னங்கோட்டை நாடு இருபத்திரெண்டரை கிராமம் ஆதி திராவிடர் ஐக்கிய சபை (அரசு பதிவு எண்:57) குன்னங்கோட்டை நாடு இருபத்திரெண்டரை கிராமம் ஆதிதிராவிடர் ஐக்கிய சபையின் முன்னாள் தலைவரும், ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சிந்தனையாளரும், தேச வரலாற்றில் அம்பேத்கர், குயிலியின் தியாகத்தில் வேலுநாச்சியாரின் வெற்றி போன்ற பல்வேறு புகழ்மிக்க நூல்களின் ஆசிரியரும், இலக்கியவாதியும், யாரையும் கடுஞ்சொல் சொல்லாத மெல்லிய மனம் படைத்தவரும், அனைத்து மக்களாலும் பாசமுடன் போற்றப்பட்டவருமான எழுத்தாளர் ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் மறைவிற்கு நாட்டின் சார்பாக அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பு நமது சமூகத்திற்கு பேரிழப்பு என்ற வேதனையுடன் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆதிதிராவிடர் கிராமசபை, வேப்பங்குளம் குன்னங்கோட்டை நாடு இருபத்திரெண்டரை கிராமம் ஆதி திராவிடர் ஐக்கிய சபையின் முன்னாள் தலைவரும், ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சிந்தனையாளரும், எழுத்தாளரும், எல்லோருக்கும் இனிய வராகத் திகழ்ந்தவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்களின் மறைவிற்கு எங்களது கண்ணீர் அஞ்சலி… - ஆதிதிராவிடர் கிராமசபை டாக்டர் அம்பேத்கர் நகர் வேப்பங்குளம் கல்லல் வழி, சிவகங்கை மாவட்டம் ஆலம்பட்டார் கண் மறைந்தார் அயராது பாடுபட்ட ஆலம் பட்டார் அன்பான உலகநாதன் துயிலில் ஆழ்ந்தார் கயமையை ஒழித்திடவே பாடு பட்டார் அயராது சிந்தனைகள் புதிதாய் வேண்டி ஆசிரிய ராயிருந்து பணிகள் செய்தார் குயிலிதன்னை வரலாற்றில் எழுதி வைத்து குன்றிலிட்ட விளக்கானார் உலக நாதன்! - டாக்டர். மா. சண்முகம். இரங்கல் செய்தி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவரும், ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சிந்தனையாளரும், தேச வரலாற்றில் அம்பேத்கர், குயிலியின் தியாகத்தில் வேலுநாச்சியாரின் வெற்றி போன்ற பல்வேறு புகழ்மிக்க நூல்களின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான, சிந்தனை புதிது மாத இதழ் ஆசிரியருமான ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது இழப்பு நமது காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பேரிழப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - ப. சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சி, தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, சிவகங்கை உம் புகழ் நிலைத்து வாழும்! இளந்தளிர் போல் இதயம் கொண்டாய்! எழுத்துக்களால் எரிமலையாய் நின்றாய்! அண்ண லின் அறிவாயுதம், குயிலியின் தியாகம்! போற்றி எழுதி வைத்தாய், பொதுவெளியில் சமைத்து வைத்தாய்! வரலாறு இதுவென வகுப்பெடுத்தாய்! வளரும் தலைமுறைக்கு புரிய வைத்தாய்! உடையில் தூய்மை, உள்ளத்தில் நேர்மை ! அதிர்ந்து பேசா அன்புப் பெருங்கடல்! மாண்டு போனாய், உடைந்து போனோம்! தமிழ்ச் சமூகத்திற்கு, பேரிழப்பு! உம் புகழ் நிலைத்து வாழும்! விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்! - - சங்கு . உதயகுமார், S.SC., HDSE விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாவட்டச் செயலாளர், சிவகங்கை மாவட்டம் (வடக்கு) இரங்கல் செய்தி பல நூல்கள் எழுதியவர், சமூகப்பணியில் இறுதிவரை சளைக்காதவர், அரசியல் ஆர்வலர், சிந்தனை புதிது மாத இதழின் முதல் ஆசிரியர், பன்முக செயல்பாட்டாளர், மதிப்பிற்குரிய அய்யா ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. சிவங்கை (தெற்கு) மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கம். - திருமொழி அன்பழகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாவட்டச் செயலாளர், சிவகங்கை (தெ) மாவட்டம். இரங்கற் செய்தி மரியாதைக்குரிய அண்ணன் ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்கள் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தாலும் அவர் சமுதாய சிந்தனையாளர். எல்லோரிடமும் அன்பும், நேசமும் கொண்டவராகவும் தான் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்க தன் பெயரோடு ஊர். பெயரையும் சேர்த்துக் கொண்டார். ஆலம்பட்டு என்று சொன்னாலே அண்ணன் பெயரே நினைவுக்கு வரும். தான் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் திருக்குலத்தார் பேரவை அமைப்பை ஏற்படுத்தியவர். அதோடு டாக்டர் அண்ணல் அம்பேத்கர் வரலாற்று புத்தகத்தை படையல் செய்தவர். வீரத்தின் விளைநிலம் குலக்கொழுந்து குயிலியின் வரலாறு தந்தவர். தேசியம் என்ற ஒருமைப்பாட்டிற்கு இணங்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் பதவியை அலங்கரித்தவர். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பேசக் கூடியவர். அவரோடு பழகியவர்கள் இருக்கும் வரை அவரும் இருக்கிறார். அவர் படைத்த நூல்கள் இருக்கும் வரை என்றும் நிலைத்திருப்பார். இந்திய தேசிய காங்கிரஸ் (SC) துறை சார்பாக குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன். - KRV. ராஜேந்திரன் மாவட்ட காங்கிரஸ் தலைவர், (SC) துறை, சிவகங்கை இரங்கல்செய்தி அமரர். திரு. ஆலம்பட்டு சோ. உலகநாதன் காங்கிரஸ் கட்சியின் முன்னோடியாகவும், ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்க முன்னாள் தலைவர்களில் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பல நூல்களை எழுதியவர். ஒரு தந்தையின் இழப்பு அவர் பெற்ற பிள்ளைகளுக்குப் பெரிய இழப்பு தான். எனக்கும் அவரின் இழப்பு பேரிழப்பாகவே உள்ளது. - மணச்சை V. கருப்பையா, EX-CRPF(Retd) மாவட்ட காங்கிரஸ் தலைவர், (SC) துறை, சிவகங்கை அண்ணல் அம்பேத்கர் ரெட்டைமலை சீனிவாசனார் சமுதாய மேம்பாட்டுச் சங்கம், (AARMG) காரைக்குடி, www.aarms.in தோன்றிற் புகழோடு தோன்றுக! என்பது வள்ளுவம். நீ பிறந்த போது இருந்த சமூகம் ஒரு புள்ளி கூட மாறவில்லை என்றால் நீ பிறந்திருக்கவே வேண்டாம் என்றார் ஓர் அறிஞர். அவற்றிற்கிணங்க, இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சமூகச் சிந்தனையாளர், எழுத்தாளுமை அய்யா ஆலம்பட்டு சோ.உலகநாதன். ஆயுதப் போரளிகளைப் போல இந்தச் சமூகத்தில் புரையோடிப் போன சாதிய, மதவாத பிரிவினைகளை ஒழிப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் பேனா. குனிந்து எழுதி இந்தச் சமூகத்தை நிமிரச் செய்ய முயன்றீர்கள். மேட்டுக்குடிகள் மட்டும் சொந்தம் கொண்டாடிய பத்திரிக்கையை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு பத்திரிகை சிந்தனை புதிது நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய நீங்கள் இந்த சமூகத்தின் விடிவிளக்கு என்போம். நமது சமூகத்தில், மிகப் பெரும்பான்மையினர் கல்வி பயில ஆர்வம் இருந்தும், கல்வி பெற இயலாமல் வறுமையிலும், கல்வி பெற்ற நிலையில் வேலை வாய்ப்புப் பற்றிய வழிகாட்டுதல் அற்ற நிலையிலும் பொருளாதார மேம்பாடு அடைய இயலாத நிலையிலும் உள்ளனர். இதனை அடையும் பொருட்டு இவர்களுக்கு உரிய வழிகாட்ட தோன்றியது தான் அண்ணல் அம்பேத்கர் ரெட்டைமலை சீனிவாசனார் சமுதாய மேம்பாட்டுச் சங்கம் (AARMS). தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதர்கள் வாழும் உலகில், உங்களின் தன்னலமற்ற சேவையினைப் பெருமைப்படுத்தும் விதமாக உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்து மகிழ்ந்தோம். உங்களின் ஆசியோடு இடர் பல கடந்து, சுடர்விடும் நாங்கள் இத்தருணத்தில் அய்யா அவர்களுக்கு எங்களின் செம்மாந்த வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். AARMS சங்க சேவைகள் பற்றி அறிய www.aarms.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.