[] 1. Cover 2. Table of contents சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள்   குன்றக்குடி அடிகளார்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/sinthanai_thuligal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/sinthanai_thuligal This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Ramesh kaniyam - Guruleninn - Balajijagadesh - NAGANATHANJI - Arularasan. G - Fleshgrinder - Rocket000 - Mecredis - Patricknoddy-commonswiki - Be..anyone - HoboJones - Info-farmer - Vkalaivani - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. முன்னுரை திருவருள் திரு தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீனகர்த்தர் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 630 206 அருள் நெறித் தந்தை குருமகா சன்னிதானத்தின் பொன்மொழிகள் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தாரக மந்திரங்கள். சுழன்றடிக்கும் காற்று இல்லாத பொழுது சிறிய அளவு சூடம்கூட எரியும், காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடும். அதுபோல நெருக்கடியும் துன்பங்களும் இல்லாத பொழுது வேலையின் அளவும் தாமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது. நெருக்கடி நிறைந்துள்ள போழ் தில் கடுமையாக உழைத்தால் மீளமுடியும். உழைப்பு ஒன்றே ஆன்மாவை ஈடேற்றும் வழி என்பதை, இதைவிட அற்புதமாக வேறு எப்படி சொல்ல இயலும்? . இந்துக்கள் ஒருமைப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால், அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது. இந்த வைர வரிகள் இந்து சமயத்தில் சாதியத்தின் ஆதிக்கத்தை பறை சாற்றுகின்றது. இதற்குரிய தீர்வும் சொல்லப்படுகிறது. திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றாததால்தான், நம் நிலை தாழ்ந்தது, என்று அருள்நெறித் தந்தை அருமையாகக் கூறுகின்றார்கள். அருள் நெறித் தந்தையின் பாதை, மானுடத்தை தேவநிலைக்கு உயர்த்த வழிகாட்டும் பாதை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்ற நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்ற ஆன்மீகப் பாதை. சிறந்த ஆன்மீகப் பாதையில் பயணம் தொடர தமிழ் கூறும் நல்லுலகில் தாரகமந்திரமாய் அருள் நெறித் தந்தையின் அமுத மொழிகள் பயன்படும். இந்த அமுதமொழிகளைத் தொகுத்துத் தந்த நம் ஆதீனப்புலவர் திருமிகு மரு. பரமகுரு அவர்களுக்குப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள். அருள்நெறித்தந்தை, தமிழ்மாமுனிவர் குருமகா சந்நிதானத்தின் பொன்மொழிகளை அச்சில் கொண்டுவரும் அருமை கலைவாணி பதிப்பகக் கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நல்வாழ்த்துக்கள். குன்றக்குடி 11-7-97 என்றும் வேண்டும் இன்ப அன்பு, பொன்னம்பல அடிகளார். அணிந்துரை “வானொலி புகழ்” தென்கச்சி. கோ. சுவாமிநாதன் “அந்த ஆள் ரொம்பவும் திறமைசாலி! இந்த ஆள் ரொம்பவும் சாமர்த்தியசாலி!” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இரண்டு பேர்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு கேள்வியை உங்களைப் பார்த்து யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? “அவசரமா கொஞ்சம் வேலையிருக்கு… அப்புறமா வ்ந்து சொல்றேன்!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நழுவத்தான் தோன்றும் நம்மில் பலருக்கு! சிந்தனைத் துளிகள் புத்தகம் நம் கையில் இருந்தால் நழுவவேண்டிய அவசியம் ஏற்படாது. “சாமர்த்தியமும், திறமையும் ஒன்றல்ல” என்கிறார் தவத்திரு அடிகளார். “சாமர்த்தியம், எப்படியும் காரியத்தை சாதிப்பது” திறமை முறைப்படி சாதிப்பது" என்பது அவர் விளக்கம். . “நம்ம எதிரியோட பழகுகிறவன் நமக்கும் எதிரி!” என்பதுதான் நம்முடைய கண்ணோட்டம் என்கிறார். “எனக்கு நண்பராக இருந்தால் போதாது… எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத் தக்கதல்ல.” இப்படி எத்தனையோ அருமையான கருத்துரைகள் அவ்ற்றையெல்லாம் அழகான நூலாக்கித் தருகிறார்… தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அன்பிற்குரியவரான கவிஞர் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்கள். நல்வாழ்த்துக்கள் சென்னை-4 6-7-97 அன்புடன் தென்கச்சி கோ. சுவாமிநாதன் பதிப்புரை உலக உயிர்களில் உயர்ந்து செயலாற்றி மகிழும் பேறு, மனித குலத்திற்கு மட்டுமே இறைவன் அருளிய அருட்கொடை.. மனிதன், மனிதம் என்ற புனிதத் தன்மையுடன் வாழவும், வாழ்விக்கவும் மகான்களின் சிந்தனைகளே உறுதுணை. உலகம் உய்யத் தோன்றிய மகான்கள், சித்தர்கள் அருளிய அருட் சிந்தனைகள், வாழ்த்கைக்கு வளம் தருவன. உயிர்க்கும், உள்ளத்திற்கும் உறுதி சேர்ப்பன. இம்மை, மறுமை நலன்களை அளிப்பன. உண்பித்து உண், வாழ்வித்து வாழ், மகிழ்வித்து மகிழ் எனும் திருக்குறள் நெறி உலகெலாம் நிலவி மகிழ, நாளும் தன் தவானுபவத்தால் அப்பரடிகளாக வாழ்ந்து காட்டிய தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருளிய அருட்சிந்தனைகளின் தொகுப்பே இந் நன்னூல். இச்சிறந்த சிந்தனைச் செல்வத்தை வாழ்வில் கொண்டு ஒழுகுவதே தமிழ் மாமுனிவர் அடிகளாருக்குச் செய்யும் சிறந்த கைம்மாறாகும். தொண்டே வாழ்வாய், வாழ்வே தொண்டாய் வாழ்ந்தும், வாழ்வித்தும், என்றும் தோன்றாத் துணையாக அருளும் அடிகளாரின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். தமிழ் மாமுனிவர் அடிகளாரின் திருவுருவிலும் திருவுளப் பாங்கிலும் முழுமதியென உலா வந்தருளி முத்தான முன்னுரை வழங்கி அருளும் தவத்திரு. பொன்னம்பல குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கும், ஆதீனப் புலவர் மாமனிதர் மரு. பரமகுரு அவர்கட்கும், மகிழ்வுரை அளித்துள்ள “மனிதநேயச் செல்வர்” புலவர் வீ. செ. கந்தசாமி அவர்களுக்கும், அணிந்துரை வழங்கியுள்ள மனிதநேய மாமணி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கும் என் நெஞ்சுகந்த நன்றி. தியாகராயநகர் சென்னை-17 என்றும் அன்புடன் சீனி. திருகாவுக்கரசு மகிழ்வுரை வீ. செ. கந்தசாமி, எம்.ஏ., பி.லிட்., எல்.எல்.பி, தலைவர், திருக்குறள் பேரவை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணைய முதல் உறுப்பினர், துணைத் தலைவர், அ. இ. தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். ஆன்மிகவாதியாகவும், அரசியல் ஞானியாகவும், அறிவியல் சிந்தனையாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கி, இறையருளில் கலந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், மகேசனிடம் பக்தி பூண்டதோடு நில்லாமல், மக்களையும் உள்ளன்புடன் நேசித்தவர். அவர், காவியணிந்த பொதுவுடைமைவாதி. சமய வழியில் மக்களிடையே ஒப்புரவு காணமுடியும் என்று உறுதியாக நம்பியவர். மடமையையும், அறியாமையையும், மட்டுமல்ல வளர்ச்சிக்கு வகை செய்யாத பழமையையும் சாடிய சமுதாய சிற்பி. இனிவரும் உலகில், அறிவியல் துறையில் ஒரு மொழி வளர்ச்சியடைவதே அம்மொழி பேசும் மக்கள் மேம்பாடடைவதற்கு வழி என்றுரைத்த நுண்ணிய அறிவியல் சிந்தனையாளர். ஒரு சைவ மடத்தின் மகா சந்நிதானமாக விளங்கிய அவர்கள், திருக்குறள் பேரவை, அருள் நெறித் திருக் கூட்டம் போன்ற பல இலக்கிய, சமுதாய, சமய அமைப்புகளைத் தோற்றுவித்து நடத்தியதுடன், பல கல்வி நிலையங்களையும், ஏதிலியர் இல்லங்களையும் நடத்தினர்கள். தவத்திரு அடிகளாரே ஒரு இயக்கம்; அவர் ஒரு தனி மனிதரல்லர். அவர்கள் அருளிய கருத்து மணிகளில் பலவற்றைத் தேர்ந்து எடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ள நண்பர் சீனி. திருநாவுக்கரசு ஒரு கவிஞர். “ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது (1404); பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள் (862); தவறுகளை நியாயப்படுத்துவதே குற்றம். சமயங்கள் மாறுபடா; சமயவாதிகள் மாறுபடுவர் (533)”. இவை கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்கள் தேர்ந்து எடுத்து நமக்களித்துள்ள மணிகளில் சில. தவத்திரு அடிகளாரின் கருத்து மணிகள் செறிந்து மிளிரும் இந்த அரிய நூலைத் தமிழினம் ஏற்றுப் பயனடையும் என்பதில் நம்பிக்கை எனக்குண்டு. பழங்களைச் சுவைத்துப் பார்த்து, நல்ல பழங் களை மட்டுமே காவிய நாயகன் இராமனுக்கு நல்கி மகிழ்ந்த மாது சபரியைப் போல, நல்ல நூல்கள் எவை எனத்தேர்ந்தெடுத்து பதிப்பித்து நாட்டுக்களித்து வரும் அன்பு நண்பர் கவிஞர் சீனி. திருநாவுக்கரசு அனைவரின் பாராட்டுக்கும் உரியவர். - கலைவாணிப் பதிப்பகத்தின் மற்றுமோர் நல்ல முத்தான இதற்கு மக்களிடையே மாபெரும் வரவேற் பிருக்கும் என்பது திண்ணம். சென்னை.14 அன்பன், வீ. செ. கந்தசாமி 1-100 1. “புதிய கோடியில் பழைய துணியை ஒட்டுப் போட முடியாது” என்ற விவிலிய வாக்கு நினைவிற்கு வருகிறது. பழைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்வது என்பது நடைமுறையில் நடக்கக்கூடிய காரியமன்று. கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த புரட்சியை தோற்றுவித்துப் பக்குவப்படுத்திய பின்தான் மனிதனுக்கு பூரண சுதந்தரத்தை வழங்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் மக்களாட்சி பொருளுடையதாக அமையும்". 2. “தன்னலம் என்பது ஒரு வெறி. பாம்பின் நஞ்சினும் கொடியது. இந்நஞ்சின் வழிப்பட்டவர்கள் பெற்றுள்ள கல்வி, பக்தி-யாவும் பயனற்றவையே”. 3. “பெண்ணிடம் ஆசை கொள்ளுதலும், காதலும் ஒன்றன்று. இவை, தம்முள் முரண்பட்டவை”. 4. “இன்றைய சமுதாயத்திற்குப் பணத்தின்மீது மட்டுமே ஆசை. பணம் கிடைக்கக்கூடிய வழிகளில் அல்ல”. 5. “தாவர இனங்கள் மனிதனை விடச் சிறந்தவை என்று கூறுவது ஏன்? இன்றைய மானுடப் பிறவிக்கு இது பொருந்துமா?” பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தமது வளர்ச்சிக்குரிய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள தாவரங்களால் இயலாது. மானிடர் தாம் பெற்ற பகுத்தறிவால் பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தம்முடைய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளும் திறனுடையவர்கள். ஆனால், இன்றைய நம்முடைய தமிழ்ச்சாதி சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலுற்றிருக்கிறதா? இல்லை. இன்றைய தமிழ்ச்சாதி, சூழ்நிலைகளின் கைதிகளாக வாழ்கின்றது". 6. "ஒருவன் மரம் வைத்து வளர்த்தால் அது அவனுக்குப் பயன்படாது. அடுத்த தலைமுறைக்குப் பயன்படும் என்று சொல்லுவார்கள். இது தவறு. ஒருவன் ஒருமரம் வைத்தால் அவன் சில நாள்களி லேயே அந்த மரத்தின் பயனை அனுபவிக்கிறான். மரம், செடியாக இருக்கும்போதே சுவாசத்துக்கு அவனுக்குத் தேவையான உயிர்ப்புக் காற்றைத் தருகிறது. இன்றைய வேளாண்மை வளர்ச்சியின் போக்கில் கனிகளைக் கூடச் சில ஆண்டுகளில் பெற முடிகிறது". 7. “சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு என்பது பூத பெளதிகத் தூய்மை மட்டுமல்ல. சுற்றுப்புறத்தில் வாழும் சமுதாய மேம்பாடும் சேர்ந்ததேயாம்”. “கவனித்துப் பேணி வளர்க்காத மனித சமுதாயம் கொடுரமானதாக உருக்கொள்ளும் என்பதற்குப் பூலான்தேவி சான்று”. 8. “மனித குலத்திற்கு உழைத்தல் என்பது இயல்பான குணமானால்தான் மண்ணை விண்ணகம் ஆக்கலாம்”. 9. “பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப் பெறாவிடில் அவை தம்போக்கில் தீர்வு காண முயன்று சமூகத் தீமைகளை வளர்க்கும்”. 10. “மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர். அவர் வரலாற்றை-மனித வாழ்வியலை அணுகிய முறையை சமய நெறியினர் கற்று, அம்முறையில் அணுகினால் மண்ணுலகு விண்ணுலகமாகும்”. 11. “பயந்தாங்கொள்ளிகள் எதையும் குழப்புவார்கள்”. 12. “புகழ் என்றால் மகிழ்வதும், இகழ் என்றால் வருத்தப்படுவதும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. அதுவும் தொண்டு வாழ்க்கைக்கு முற்றாகக் கூடாது”. 13. “கூட்டுறவு சங்கம் கடன் வாங்குவதற்காக மட்டும் அல்ல. கூட்டுறவு இயக்கம் ஒரு பன்முனை வளர்ச்சி இயக்கம். அதாவது மனித இயல் பண்புகளையும் ஆட்சித் திறனையும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் இயக்கம”. 14. “கூடித் தொழில் செய்வதன் மூலம் குற்றம் குறையிலாத வகையில் தொழில் நடைபெறும் என்பது கருத்து. ஆனால் இன்றைய நடைமுறையில் பெறப்பட்டுள்ள உண்மை இதுவல்ல”. 15. “ஒரு பொருளின் மதிப்பை மேலும் கூட்டுவது எதுவோ, அதுவே உழைப்பு என்றழைக்கப்பெறும்”. 16. “தாழ்வான கூரை உள்ள வீட்டில் எளிதில் தீப்பிடிக்கும். அதுபோல தாழ்வான நோக்கங்கள் உடையவர்கள் எளிதில் பகை கொள்வர”. 17. “நம்பிக்கை என்பது நடைமுறையில் தோன்றி வளர்வதேயாம்”. 18. “தனி உடைமைச் சமுதாயம் இருக்கும் வரையில் அதற்கு இசைந்தாற் போல் பற்றாக்குறையும் இருக்குமானால் அழுக்காறும் அவாவும் மனிதனை ஆட்டிப்படைக்கும்”. 19. “பொறுப்புடன் கடமைகளைச் செய்கிற பொழுது கலந்து பேச வேண்டிய வாயில்கள் இயல்பாகவே தோன்றும். இவ்வாயில்கள் ஒருவருடைய பண்பை, திறமைகளை அறிமுகம் செய்து வைத்து உறவுகளை வளர்க்கும்”. 20. “தமிழ் மொழி ஆசிரியர்கள், சிற்றுார்கள், பேரூர்கள் தோறும் பரவி, பணியில் அமர்ந்த பிறகும் தமிழர்களிடையில் தமிழ் உணர்வும் குறைந்திருப்பது வருந்தத்தக்கது. இதனால், நம்முடைய மொழி உணர்வு கானல் நீரைப் போன்றது என்பது உறுதிப்படுத்தப்பெறுகிறது”. 21. “கருத்து வேற்றுமைகள் தவிர்க்க இயலாதன, ஆதலால் கருத்து வேற்றுமைகளைக் காழ்ப்புகளுக்குரிய முரண்பாடுகளாக எடுத்துக்கொண்டு வெறுப்பையும் பகையையும் வளர்த்தல் அறிவியல் முறையும் அன்று; நாகரிகமும் அன்று”. “கருத்து வேற்றுமைகள் வழி பகைமையை வளர்த்தல் எந்த சூழ்நிலையிலும் கருத்துக்களில் தெளிவு காண முடியாது போய் மானிட வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டுவிடும்”. 22. “கருத்து வேற்றுமைகள் நூற்றுக்கு நூறு எப்போதும் இருக்க இயலாது. ஆதலால், மனிதகுல ஒருமைப்பாடு கருதியும் அறிவு வளர்ச்சி கருதியும் உடன்பாடுடைய கருத்துக்களில் ஒன்றுபட்டு செயல் படத் தொடங்கினால் காலப் பேர்க்கில் உறவுகள் வளரும். தெளிந்த அறிவியல் முடிவுகளும் கிடைக்கும் இந்த முறையே நமது அணுகுமுறை”. 23. "பல்வேறு கருத்துடையவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில், தம் கருத்தை - மாறுபாட்டை தன் கட்சியை - சாதியை நினைவு கூரத்தக்க வகையில் பேசுவதும் மற்றவர் கருத்தை விமர்சனம் செய்வதும் பொதுமைக்கு முரணாக அமையும். பொது மேடைகளில் மாறுபாடுகளைத் தவிர்ப்பது தலைசிறந்த நாகரிகப் பண்பு". 24. “நமது வாழ்க்கையின் நோக்கங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆவேச உணர்வுடன் உழைக்க வேண்டும்”. 25. “ஒரு சமூகத்தை உதவிகள், சலுகைகள் மூலமே வளர்த்து விடமுடியாது. அந்தச் சமூகத்திற்கு வளரவேண்டும் என்ற உணர்வும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் மனப்பாங்கும் வேண்டும்”. 26. “விமரிசனத்தை ஏற்றுக் கொள்ள தவறான மனப்போக்குடையவர்கள் முன்வர மாட்டார்கள்.”என்னையா" என்று ஆத்திரப்படுவார்கள்". 27. “நாம் என்ன சொல்லுகிறோம்; எதற்காகச் சொல்லுகிறோம் என்பதல்ல முக்கியம். சொல்லப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே விளைவுகள் அமையும்”· 28. “உணர்ச்சி உடைய உறவுகள் மட்டுமே இருந்து, ஒத்துழைப்பு இல்லையானால் அது மகப்பேறு இல்லாத மனையறம் போன்றது”· 29. “வாத நோயினும் கொடியது, பழக்க வழக்கங்களில் வழிபட்ட மனம்”. 30. “குற்றங்களை மறைக்க விரும்புபவரின் சிறந்த கருவியே கோபமும், உரக்கப்பேசுதலுமாகும்”. 31. “காலம் சொல்லும்” என்பது பொறுப்பை வரலாற்றின் மீது சுமத்தி விட்டு வறிதே வாழும் இயல்பினரின் கூற்று". 32. “காணல், கலந்து பேசுதல் ஆகியன கடமைகளைச் செய்யும் மனிதனின் தேவைகள்; தவிர்க்க முடியாத தேவைகள்”. 33. “எந்தவொரு உண்மையான உழைப்பும், உணர்வும் கட்புலனுக்கோ அனுபவத்திற்கோ வாராமல் போகாது”. 34. “பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டுத் திறமைகளைக் கணக்கிட முடியாது. பணி செய்யும் பாங்கும் திறமையுமே அளவுகோல்கள்”. 35. “சாதாரண விதிமுறைகளைக்கூட, கடைப் பிடித்தொழுகுவதில் இடர்ப்படுவோர் ஏராளம்”. 36. “காரணங்களும் பயன்களும் இல்லாமலே கூட, தவறுகள் செய்பவர்கள் உள்ளனர்”. 37. “முறையாகச் செய்யப் பெறாத மருத்துவம் நோயை விடக் கொடியது”. 38. “தீவிர பற்றுக்கள் ஆய்வு மனப்பான்மையைத் தருவதில்லை”. 39. “பலரோடு கூடி வாழ்வது தொல்லையே! ஆனாலும் பண்பாட்டுப் பயிற்சிக்கு இதைவிட வேறு வழியும் இல்லை”. 40. “பழகிப் புதுக்கிக் கொள்ளப் பெறாத உறவுகள், பறிபோகும்”. 41. “தற்சார்பான பழக்கங்கள், பெரும்பாலும் கிழமை, காலம் தவறுவதில்லை. கடமைகள் மட்டுமே காலந் தவறுகின்றன”. 42. “காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது!” 43. “காலத் தவறிச் செய்யப் பெறும் பணிகள் பொருள் இழப்பைத் தரும்”. 44. “பெரும்பான்மை” என்ற எண்ணம் ஒரு வகையான தடிப்புணர்ச்சியையும் சிறுபான்மை என்ற எண்ணம் தாழ்வுணர்ச்சியையும் தருகிறது". 45. “பசி என்பது கடமையைச் செய்து வயிற்றின் அடுத்த பணிக்கேட்பின் செயற்பாடு”. 46. “வயிறு சோஷலிசத்தின் சின்னம். வயிற்றுக்கு இடப்பட்ட சோற்றின் பயன், உடம்பின் அனைத்து உறுப்புக்களுக்கும் கிடைக்கிறது.” 46. “சாதி வெறியர்கள், சுரண்டி வாழ்வோர் ஆகியோரிடமிருந்து கடவுளை, மதத்தைக் காப்பாற்ற வேண்டும்.” 47. “தகுதி, திறமை இவற்றை வளர்க்காமல் உரிமைகளையும் உடைமைகளையும் வழங்குதல் பயனன்று.” 48. “ஒருமைப்பாடு, மனித நேய அடிப்படையில் மட்டுமே உருவாகும்!” 49. “சலுகைகள், உரிமைகளா?” 50. “ஒருமைப் பாட்டுக்கு நாடு, மொழி, சமயம் முதலியன காரணங்களாதல் இல்லை. இவை அனைத்தும் குறுகிய பற்றுக்களையே வளர்க்கும்.” 51. “கலியுகம்-கிருதயுகம்என்பன கற்பனைகள். மாற்றங்களை யுகம் பிரளயம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.” 52. “செலவழிக்காமல் சிக்கனமாக இருப்பது எல்லோருக்கும் இயலக் கூடிய ஒன்று. வருவாயைத் தேடுதல் அங்ஙனமன்று.” 53. எதிர்மறை அணுகல் நலம் தராது. 54. “செல்வந்தர்களும் மதக் குருக்களும் எப்போதும் கூட்டாளிகள்; உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள்.” 56. “சமய வேற்றுமைகளைக் கடந்த நிலையிலேயே”எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற முழக்கம் தோன்றுகிறது." 55. “முறைகேடான அரசுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்தல் கேவலம்; அடிமைத்தனம்.” 56. சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும். 57. திறந்த வீட்டுக்கு நல்ல காவல் தேவை. அதுபோல காதுகளைத் தருவதில் கவனம் தேவை. 58. காலத்திற்குரிய கடமைகள், வேலைகள் இல்லாதிருப்போர் கெட்டுப் போதல் இயற்கை. 59. “தேவைக்குத் தேடுதல் என்பது வாழ்க்கை யல்ல. அறிவறிந்த ஆள்வினையால் தேடிச்சேர்க்கும் அளவுக்குப் பொருள் சேர்த்தல் வேண்டும். பின் நுகர்வுத் தேவைக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். இது வாழ்க்கை முறை.” 60. “அலுவலகத்தில் பல பதவிகள் இருப்பதன் பயன், பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதுதான். மேல்நிலைப் பதவியிலிருப்பவர்கள் தவறுகளுக்கு மற்ற வர்களையே குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, அவர்கள் பொறுப்பு தவறுகள் வராமல் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தலேயாம்.” 61. “உடனடியாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு ஊதியத்துடன் இணைந்த வேலைவாய்ப்புத் தேவை. அது இயலாதெனின் முறையான பொழுதுபோக்கிற் குரிய பணிகளிலாவது இவர்களை ஈடுபடுத்தியாக வேண்டும். இதற்கு, சாரணர் இயக்கம் துணை செய்யும்.” 62. “சாதாரணமான கோப்புகளையே குறித்த காலத்தில்-பயனுடைய வகையில் இயக்காதவர்கள் நிதி தொடர்பான அலுவல்களில் அவசரம், கட்டாயம் முதலியவற்றைக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” 63. “ஒரு காசில் முடியக்கூடிய வேலைக்கு இரண்டு காசு செலவழிப்பதும் ஊதாரித்தனமே!” 64. “பொதுமக்களிடத்தில் எளிதாகத் தலைவராக விரும்புகிறவர்கள் கிளர்ச்சிகளை விரும்புகின்றனர். இவர்களுக்குக் காரிய சாதனை நோக்கமன்று. தங்களால் காரியம் நடந்ததாக இருக்கவேண்டும் என்பதே இவர்களின் ஆசை”. 65. “திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது”. 66. “இன்றைய சாதாரண மக்கள் அரசினிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசுக்கு உதவியாக இருக்க விரும்புவதில்லை”. 67. “தம்மிடம் அசாதாரணமான திறமையிருக்கிறது என்று கூறுபவர்கள், கடமைகளைச் செய்து ஒத்துழைக்க விரும்பாதவர்கள் என்பதே உண்மை”. 68. “விநாடிகளைக் கணக்கிட்டு வேலைகளைச் செய்து முடிக்காதவர்கள் வேலைகளைப் பாக்கி போடுவர்”. 69. “காரணங்கள் சொல்ல முடியாத தவறுகள் தவறுகள் அல்ல. இது கடமைகளைச் செய்யும் விருப்ப மின்மையேயாம்”. 70. “கலைத்துறையில் ஈடுபட்டு மகிழும் வாய்ப்பில்லாத ஏழைகள் வீட்டிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்”. 71. “உயிர் வளர, வாழ களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. இந்த அடிப்படையிலேயே பால் வேறுபாட்டுடன் கூடிய படைப்பு”. 72. “தனி நபர்களிடம்கூட அரசுகள் அஞ்சுகின்ற அளவு குறை ஏற்பட்டுப் போய்விட்டது”. 73. “ஒரு பொருள் பற்றித் துணிந்து முடிவு எடுக்கவும் செயற்படுத்தவும் இயலாதவர்களில் பலர் வாய் வீச்சில் ஆர்ப்பரிப்பர் என்பது சமுகாயத்தில் கண்ட உண்மை”. 74. “சார்புகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றவர் கூறும் செய்திகளைத் திறந்த மனத்தோடு கேட்டு ஆராய முன்வர மாட்டார்கள்”. 75. “சார்புகளின்மீது இறுக்கமான பற்றுக் கொண்ட மனம் புகை படிந்த கண்ணாடி போன்றது. எதையும் காட்டாது”. 76. “சமயங்கள் தோன்றிய காலத்திலிருந்து நிலவிவரும் சிக்கல்களுக்கு சமயத் தலைவர்கள் இது வரை தீர்வு கண்ட பாடில்லை”. 77. “இந்து சமயத் தலைவர்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாதது மட்டுமன்றி மேலும் சமூகச் சிக்கல்களைக் கடுமைப்படுத்துகின்றனர்”. 78. “ஒரு நிறுவனமும் அதனுடைய கொள்கை அமைப்புமே மிகப்பெரிய கருவி. இதனை முறையாக இயக்கிப் பயனடைய ஆற்றலுற்றவர்கள் புதிய புதிய அமைப்புக்களை நாடிச் செல்வர்”. 79. "இந்து தர்மத்தினர் சாதிகளை ஒழித்தல், சமநிலைச் சமுதாயம் காணல் என்ற கொள்கைகளில் முரண்படுகின்றனர். திராவிடர் கழகமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடவுளை மறந்து விட்டு, கடவுள் தன்மைகளைப் படைக்க முயற்சி செய்கின்றனர். கடவுள் தன்மை சமுதாய அமைப்பில் நிலைபெற்றுவிட்டால் கடவுளை எளிதில் நினைவு கூரலாம்". 82. “இலக்கியங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்காகவே தோன்றின. ஆனால் நடைபெற்றிருப்பது உரை விளக்கமே”. 83. “இதுவரை தோன்றிய எந்த ஞானியின் அடிச்சுவட்டிலும் மனித உலகம் செல்லவில்லை. மனம் போன போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது”. 84. “நமது முன்னோர்களும் நாமும் சமுதாயத்தின் இழிவுகளை மாற்றித் தரும் கடமையில் வெற்றி பெறவில்லை. இதுவே உண்மை”. 85. “சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்!” 86. “வடபுலத்திற்கு மட்டுமின்றி உலகத்திற்கு ஒரு பொதுச் சமயம் தேவை என்றாலும் அதற்கு உரியது தமிழகத்தின் சைவ சித்தாந்தச் செந்நெறியேயாம்”. 87. “இந்து சமயம்” என்ற பெயரில் ஒரு புது தத்துவம் போல ஸ்மார்த்தத்தைத் திணிக்க முயற்சி செய்ததின் பலனாக இந்து தர்மங்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான புதிய சமயங்களே தோன்றின". 88. “வாக்காளர்களைத் தயாரிப்பது பண்புடை யோராக்குவது சுதந்தர நாட்டின் முதற்கடமை”. 89. “தனி மனித ஒழுக்கக் கேடுகள் பெரும்பாலும் சமூகத்தின் பொருந்தாப் பழக்க வழக்கங்களின் திணிப்பிலேயே உருவாகின்றன”. 90. “மாமுனிவர் மார்க்சின் நினைவாக இலாப நோக்கத்தை கைவிடுதல் நல்லது”. 91. “மாமுனிவர் மார்க்ஸ் நினைவாக பள்ளிக் கணக்குகளில் இலாப நட்டக் கணக்குப் பாடத்தை எடுத்துவிடுவது நல்லது”. 92. “தமிழ் இருக்கும் இடத்திலேயே தமிழர் இருப்பது என்று உறுதி எடுப்பாரானால் தமிழ் வளர்ந்து ஓங்கும்”. 93. “அசைவில் செழுந்தமிழ் வழக்கினைப் பேன வேண்டியவர்கள் அயல் வழக்கின் வழிச் செல்வது, அறம் கொல்லும் பாவமாகும்”. 94. “சோம்பல் தனமுள்ள யானையை சுறுசுறுப் பான எந்த உயிரும் எளிதில் வெற்றி கொள்ளும். அது போல, மொழியால் சமய நெறியால் வள்ர்ந்த தமிழின்த்தின் மதர்த்த சோம்பலை ஆரியம் வெற்றிகொள்ளத் துடிக்கிறது”. 95. “புதுப் பெரிய வாளின் சுறுசுறுப்பு ஏன் துறை சைக்கும், தருமைக்கும் வரவில்லை? நமது நல்லூழின்மையே!” 96. “குறைவான வேலை பார்ப்பவர்கள் கூட நிறைவாகப் பார்க்காது போனால் கடுமையான உழைப்புடையவர்களின் மீது மேலும் சுமையை ஏற்றும்”. 97. “பணத்தாசை-பிழைப்பு நோக்கத்தோடு தன்னை அண்டியிருப்பவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்காதே! காரியங்கள் கெட்டுவிடும்!” 98. “ஒரு காரியத்தைத் தொடர்ந்து குறித்த காலத்தில் குறித்த முறைப்படி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறவர்களுக்குத்தான் திருத்தொண்டர்களின் அருமை தெரியும்”. 99. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருவெடுக்க அனுமதிப்பது நாகரிகமன்று”. 100. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருப்பெற்றுவிட அனுமதித்து விட்டால் என்றுமே மாறுபாடுகள் நீங்கி ஒருமைப்பாடு தோன்றாது; உறவுகளும் கால் கொள்ளா”. 101-200 101. “இராமன், இராவணனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் தருமன், துரியோதனனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் இன்றைய சமுதாய வாழ்க்கையில் காண முடியவில்லையே!” 102. “தண்ணிரில் மிதந்து செல்வது தெப்பம் தண்ணிரின்மையால் நிலத்தொடு தொடர்பு கொண்டு நிற்கும் நிலைத் தெப்பம் என்று கூறினாலும் அது தெப்பமாகாது. அதுபோலத்தான் சாதி, மொழி, சமய வேறுபாடுகளால் பிணக்குண்டு வாழும் சமுதாயத்தில் ‘தேசியம்’ என்பது”. 103. “கவிஞனுக்குப் பெருமை அவன் தன் மாணாக்கனாலேயே என்பதற்கு கம்பன் பெருமை எடுத்துக்காட்டு”. 104. “துறவு” என்பது எல்லோருக்கும் உரியது. துறவின் வழிதுய்த்தல் நிகழும் பொழுதுதான் துய்த்தல் இன்ப மயமாகிறது". 105. “சமூக வாழ்க்கையின் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுக்குட்பட்டதே!” 106. “அரைகுறைகள் மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்கமாட்டார்கள்”. 107. “உரிமைகள் உறவின் அடிப்படையில் தோன்றும் பொழுது அருவெறுப்பைத் தருவதில்லை”. 108. “ஊராட்சி மன்றத்தின் நிதிகள் ‘ஊர்’ என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகின்றன”. 109. “வலிமையற்றோர் அனைவரும் சாதி உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்று ஓரணியாகத் திரளும்போதுதான் நேர்மை தவறிய வல்லாளர்களாகிய மேட்டுக் குடியினரைத் திருத்தி ஆள முடியும்”. 110. “பெரும்பாலும் பழக்கங்கள் என்பன முன்னேற்றத்திற்குத் தடையாய் அமைவனவேயாம்”. 111. “சிதம்பரம் திருச்சபையில் திருமுறை ஒதும் மரபல்லவாம். ஒதக்கூடாதாம். ஆனால் மனிதரைப் புகழ்தல், மாலை சூட்டல், காசுகள் பெறுதல் ஆகிய எல்லாம் சபையில் செய்யலாமாம். இது ஒரு வினோதமான மரபு”. 112. “ஒரு சிலராவது உன்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு ஆவேசமுடையவராக ஒத்துழைத்தால்தான் எண்ணங்கள் நிறைவேறும்”. 113. “காதல் மனைவி கிடைப்பதிலும் அருமை, நல்ல தோழர் கிடைப்பது”. 114. “காஞ்சிபுத்தில் இந்திய சமயக் கலைல விழாவாம். இந்து சமயத்திலிருந்து இந்திய சமயத்திற்கு மாறியுள்ளார்? ஏன்? ‘இந்து’ பெயர் வெறுப்பாளர்களுக்கு இஃது ஒரு வெற்றி!” 115. “காஞ்சிபுரம் புதுப் பெரியவாள் தொடங்கியுள்ள இந்திய சமய இயக்கத்தில் பெளத்தம் ஜெனம் சேர்கிறதா? இல்லையா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”. 116. “வலிமையற்ற மனம் எப்போது கெடும் என்று கூற முடியாது. எப்போதும் கெடலாம்”. 117. “பெண், தற்கொண்டானைப் பேணுதலே கணவனின் கற்புக்கு அரண்” என்னும் திருவள்ளுவம் வாழ்க்கையின் உண்மை". 118. “எந்த ஒரு கடமையையும் முறையாகக் காலத்தில் செய்யாதவர்கள் பலருக்குத் தொல்லைகளைத் தருவர்”. 119. “காலம்” என்ற உணர்வே இல்லாதவர்களின் உறவு, பல இழப்புக்களைத் தரும்". 120. “மனித குலத்தில் முதலில் தோன்றியது கடவுள் நம்பிக்கையே. கடவுள் நம்பிக்கையின் வழியாக மதங்கள்-மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தோன்றிய பிறகு கடவுள் சுரண்டும் சாதனமாக மாறியது. அதற்குப் பின்தான் நாத்திக நெறிகள் தோன்றுகின்றன. இது உலகாய மதத்திற்கு உரிய தன்று”. 121. “சாதாரண மக்களிடத்தில் இடம் பெற முடியாத சமய நெறி வரலாற்றில் நிற்காது. கடவுளை நினைந்து வழிபடக்கூடப் புறத்தே ஒரு வடிவம் சின்னம்-பெயர் தேவைப்படுவதால் பொருளை முதலாகக் கொண்டதுதான் வாழ்வியல் என்பது உண்மையாகிறது”. 122. “கொள்கை வழிப்பட்ட இயக்கங்கள், பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை”. “அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்கையில் தெளிவுள்ளவர்களாக விளங்குவதும் அக்கொள்கையைத் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவதுமே போதும்”. 123. “நமது சமயம் ஒரு காலத்தில் ஆற்றல் மிக்குடைய இயக்கமாக இருந்தது. காலப்போக்கில் அது அப்பட்டமான நிறுவனங்களாகி வலுவிழந்து போயின”. 124. “உலகின் பிற சமயங்கள் ஆசிரியர்மாரைப் பாராட்டுகின்றன. நாம் அதைச் செய்யாதது ஒரு பெரிய குறை”. 125. “வைணவ பட்டாசாரியர்கள், மதத் தலைவர்கள் ஸ்மார்த்தமாகிய புல்லுருவியைத் தம்முடைய சமயத்தில் அனுமதிக்கவில்லை. சைவத்தில் புல்லுருவிதான் மிச்சம்”. 126. “ஊருக்கு உதவி செய்ய முயன்று முறை மன்றத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று”. 127. “தமிழினம், நடுவணரசின் பொறுப்புகளுக்குப் போகாது போனால் வளம் சுருங்கி வாழ்விழக்கும்”. 128. “ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அந்தச் சமூகத்திற்கு முன்னேற வேண்டும் என்ற ஆசை வேண்டும்”. 129. “சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது”. 130. “பொது நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு ஊறு விளைவித்தவர்களை திருடர்களை-நடுத் தெருவில் கல்லால் அடித்துச் சாகடிக்கும் தைரியம் தேவை.” த-2 131. “கீழே விழுந்து விடுவது ஒரு பெரிய குற்றமல்ல; விமுந்த வேகத்திற்கு எழுந்திருக்க வேண்டாமா?” 132. “நன்றாக நடந்த தொழிற்சாலையைப் பொறுப்பில்லாமல் நடத்தி, மூடியவர்கள்-அதைப் பற்றிக் கவலைப் படாமலோ-வெட்கப் படாமல் இருந்தாலோ என்ன செய்வது?” 133. “பெருமை சிறுமை பற்றிக் கவலைப்படுகிறவர்கள் ஏன் பொறுப்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை”. 134. “ஒரு குற்றம் அல்லது ஒரு குறை விமர்சனம் செய்யப் பெறுவதற்குக் காரணம் வெறுப்பு என்று எடுத்துக் கொண்டால் குறைகளினின்று விடுதலை பெறும் முனைப்புத் தோன்றாது”. 135. “பங்குனி-சித்திரை கோடையில் உச்சி வேளையில் காலில் செருப்பு இல்லாமல் மண் அள்ளும் வேலை மிகவும் இரங்கத்தக்க நிலை”. 136. “காலத்தை நிறுத்த முயன்றால் பலர் தமது சோம்பலுக்குத் துணையாகக் காலத்தையும் நிறுத்திவிடுவர்”. 137. “தமிழினம் தம்முள் முரண்பட்டு நிற்றல் மரபுவழி வரும் குறை”. 138. “அவையத்து முந்தியிருத்தல்” என்ற வளளுவம் தமிழர் வாழ்வில் இடம் பெற்றுவிட்டது. ஆனால் வள்ளுவத்திற்கு முரணான காரியம் நடை பெறுகிறது". 139. “பாசம் மிகுந்தாலும் தொல்லைகள் வரும்”. 140. “பொறிகள் வாயிலாக உடலுக்கும், புலன்கள் வாயிலாக உயிருக்கும் உணவு கிடைக்கிறது. முன்னதற்கு உணவு என்றும் பின்னதற்கு உணர்வு என்றும் பெயர்”. 141. “பொறிகள் புலன்களின் அனுபவத்திற்குக் கிடைக்கும் செய்திகளைப் பொறுத்தே மனிதன் வளர்கிறான்; வாழ்கிறான்”· 142. “எரிந்த மெழுகுவர்த்திகள்” என்று பெண்களை வர்ணிக்கும் எழுத்தாளர்கள் “எரிந்த விறகுகள்” என்று ஆண்களை மாற்றி எழுதுவார்கள்". 143. “அந்தமான் அருண்” என்பவர் “திருட்டு நண்டு” என்று ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் படித்துப்பார்த்தோம். மிக நல்ல கட்டுரை. தமிழில் திருட்டு நண்டு என்று மொழி பெயர்த்துள்ளார். ஆனால் நண்டு உலகத்தில் உடைமைச் சமுதாயம் இல்லை". 144. “கவிஞர்கள் மிக உயரச் சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாயமோ மிகமிக அதல பாதாளப் பள்ளத்தில் கிடக்கின்றது. சமுதாய அமைப்பில் அடிப்படையான முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தாத வரையில் இக்கவிதைகள் பயனற்றுப் போய்விடும்”. 145. “விடுதலைப் போராட்டம் என்பது எவ்வளவு துன்பமானது என்பதை அந்தமான் செல்வோர் சிறைக் கூடத்தை ஒருதடவை பார்த்தாலும் அறிந்து கொள்ள இயலும். விடுதலைப் போராட்டத்தின் அருமைகளை உணர்ந்தவர்கள் சுதந்திரத்தின் வழிப்பட்ட உரிமை”. “களை சாதாரணமாகக் கருதி விளையாட மாட்டார்கள்”. 146. “சுழன்றடிக்கும் காற்று இல்லாதபொழுது சிறிய அளவு சூடம் கூட எரியும். காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடுகிறது! அதுபோல நெருக்கடிகளும் துன்பங்களும் இல்லாதபோது வேலையின் அளவும் தரமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது. ஆனால் நெருக்கடி நிறைந்துள்ள போழ்தில் கடுமையாக உழைத்தாலே மீளமுடியும்”. 147. “இறைவன் சந்நிதியில் எரியும் கற்பூரத்தைக் கொளுத்துவதன் பொருள் என்ன? ஞான நெருப்பை மூட்டு; எரிந்து கொண்டிருக்கக்கூடிய செயல் ஊக்கத்தியை மூட்டு என்பதன் விளக்கமேயாம்”. 148. “இறைவா! நீ கருணையால் அளித்த வாய்ப்புக்களை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆசை மட்டும் குறையவில்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய கருணையை, அருள் பாலித்தலை வேண்ட வந்து நிற்கின்றேன்! மன்னித்துக் கொள்: அருள் பாலித்திடுக”. 149. “மனிதன் தான் படைத்த பணத்தின் முன் ஏன் இப்படி சேவகம் செய்கிறான்? விநோதமான வாழ்க்கை”. 150. “தலைவனைத் தலைவன் என்று மக்கள் அறியவேண்டும், தலைவனுக்குத், தான் தலைவன் என்ற உணர்வு இருக்கக்கூடாது”. 151. “எந்த மனிதன் தன்னுடைய சொந்த ஆசா பாசங்களிலிருந்து விடுதலைப் பெற்று வருகின்றானோ அவனுக்கு அவனுடைய சுதந்தரம் தானே வந்து சேரும்.” 152. “ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.” 153. “உலகியற்கை - நியதி எதற்கும் அழிவில்லை. மாற்றங்களே ஏற்படும். குப்பைகள் கூட அழிவதில்லை. படைப்பாற்றல் உடைய உரங்கள்ாக உருமாற்றம் பெறுகின்றன.” 154. "நமது சமயம் ஒழுங்கமைவுகள் பெறாததற்குக் காரணம் அது மிகப் பழமையானது என்பது தான். 155. "இறைவனே! நீ இவ்வளவு கருணை கொண்டு என்னை வாழ்விக்க, கற்சிலையில் எழுந்தருளிக் கருவறையில் சிறைப்பட்டாய்! உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் திருவுருவத்தை ஆரத்தழுவி உச்சிமோந்து அழவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது! என்ன செய்ய? கண்ணப்பர் காலத்தில் இல்லாத தடைகள் தோன்றிவிட்டனவே! கடவுளே ஏன் இந்த நிலை? கதவைத் திற! வெளியே வா என்னைத் தழுவி முத்தமிடு வாழ்த்து!" 156. “இந்துக்கள் ஒருமைப்படவேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்குப் பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது.” 157. “ஒரு விருப்பம் புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொன்று திணிக்கப் பெறுமானால் அன்பும் ஆர்வமும் கலந்த ஒருமைப்பாடு உருவாகாது”. 158. “அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்கள். தமிழகத்தோடு உணர்வில்ஒன்றி வாழ்வது தவறில்லை, ஆயினும், எல்லா வகையிலும் தமிழகத்தைப் போல நடந்து கொள்வது நல்லதல்ல”. 159. “ஆரவாரம் செய்யும் கடலோரத்தில் முத்துக்கள் கிடைக்காது. ஆழ்கடலில் தான் முத்துக்கள் கிடைக்கும். ஆழமான மோனத்தில்தான் ஞானம் என்ற முத்து கிடைக்கும்”. 160. “ஐரோப்பிய இனம் (ஆங்கிலேயர்கள்) ஆரிய இனம், திராவிட இனம் என்ற உலகத்தின் தலை மூத்த இனத்தாரில் தம் நிலை தாழாது வாழ்வன ஆங்கில இனமும் ஆரிய இனமுமே. திராவிட இனம் அத்தகு பேறு பெறவில்லை. ஏன்? ஆர்ப்பரவம் செய்தல், அடிமைப் புத்தியிலிருந்து மீளாமை ஆகியவையே காரணங்கள்”. 161. “திருவள்ளுவரையும் வள்ளலாரையும் தமிழகம் பின்பற்றாததால்தான் நம்நிலை தாழ்ந்தது”. 162. “போர்ட் பிளேயர் அரசு மிருகக் காட்சி சாலையில் ஒரு பெண் குரங்குடன் வேறு ஒர் ஆண் குரங்கு சண்டைப் போட்டது. உடன் கடுவன் குரங்கு அந்தப் பெண் குரங்குக்காகப் பரிந்து சண்டைபோட வந்துவிட்டது. இன்று எத்தனை கணவன்மார்கள் தன் மனைவிக்காகத் தன் தாயிடத்தில் பரிந்து பேச முன் வருவர்? வந்தால் ஏன் ஸ்டவ் வெடிக்கிறது?” 163. “ஒரு தமிழ்ப் பெண் இந்தியை தாய் மொழியாகவுடைய ஆடவனை மணந்ததால் இந்திக்காரப் பெண்ணாக மாறிவிட்டார். இந்திக்கு உள்ள கவர்ச்சி என்னே! என்னே!” 164. “ஒரு மனிதனை, வேறு மனிதனிடமிருந்து வேற்றுமைப்படுத்திப் பிரித்துப் பார்ப்பதே தீமை. இத்தீமையைக் கடவுளின் பெயரால் செய்தாலும் பாபமே!” 165. “மனிதரை மனிதர் இழிவு செய்தல் அற மன்று. யாதானும் ஒருவகையில் தாழ்ந்தாராயினும் தாழ்மையிலிருந்து மீட்க வேண்டுமே தவிர, இழிவு செய்தல் கூடாது; ஒதுக்கக் கூடாது.” 166. “செல்வமும் மனிதரைக் கோழையாக்குதல் உண்டு. செல்வத்தை இழந்துவிடும் அச்சத்தில் கோழையாதல் உண்டு.” 167. “வாய்ப்புக்கிடைப்பின் பார்ப்பனர் யாரையும் பயன்படுத்திக் கொள்வர். தமிழர்க்கு இத்திறன் கிடையாது.” 168. “அறியாமை சுரண்டலுக்குப் பயன்படும் சாதனம்; அறிவை நல்க விரும்புபவர்கள் சுரண்ட மாட்டார்கள்.” 169. “தமிழர்கள் உழைப்பாளிகள். ஒருமையும் ஒழுங்கமைவுமிருப்பின் உலகத்தை வெல்வர்.” 170. “நத்தையில் முத்து பிறப்பதை நோக்கினால் நந்தனார் தோற்றம் வியப்பன்று. ஆனால் சொத்தைகளை முத்து என்று போற்றுவாரை என்னென்பது?” 171. “இயற்கையில் உள்ள அழகுக்கு உயிர் உண்டு. செயற்கைக்கு அது இல்லை”. 172. “எந்தப் பொருளையும் அதன் நிலையிலிருந்து மாற்றி அனுபவத்திற்கு நுகற்விற்குக் கொண்டு வரும் மனிதன் ஏன் மனிதக் குலத்தைப் பற்றி மட்டும் ஒதுக்கல் கொள்கையைக் கையாள்கிறான்? ஒதுக்கல் கொள்கையினர் அறிவிலிகள்; கோழைகள்!” 173. “இறைவா! உன்னுடைய எளிமை-பொதுமை-கருணை அளப்பரியது! ஆயினும் என்ன பயன்? வேலி போட்டுப் பழகும் மானிடச்சாதிக்குள் சிக்கிவிட்டாய் அவர்கள் உனக்குச் சாதி, குலம், இனம், மொழி, சமய வேலிகளை வைத்து நான் எளிதில் காண முடியாமல் தடுத்துவிட்டார்களே! இறைவா, ஏன் இந்த நிலை? என்னால் வேலிகளை கடந்து வரமுடியவில்லை. வந்தாலும் விடமாட்டார்கள்! நீயே வாயேன், வேலியைத் தாண்டி! உன்னைப் பார்த்து ஒரு அழுகை அழுவதற்கு சந்தர்ப்பம் கொடேன்!” 174. “இறைவா! உன்னோடும் நான்”கண்ணா மூச்சி’ விளையாட்டு விளையாடுகின்றேனே! உனக்குத் தெரியாதது என்ன? நீ என்றோ எங்களை விட்டு நீங்கிவிட்டாய்! கற்சிலை மட்டுமே கோயில்களில் உள்ளன! மீண்டும் வா! கற்சிலையில் எழுந்தருளி ஆட்கொள் வாயாக! நின் சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன்! இனி, உன் சந்நிதியில் பாவம் செய்யமாட்டேன். இது சத்தியம்!" 175. “ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!” 176. “ஒருமைப்பாட்டுணர்வு அருள் நிலைக்கு அழைத்துச் செல்லும்”. 177. “புறத்தே வளர்ந்துள்ள நம்மவர்கள் அகநிலை நாகரிகத்தில் மோசமாக உள்ளளர். புறத்தே வளராத ‘ஜரவாக்கள்’ அகநிலையில் நாகரிகமாய் உள்ளனர்.” 178. "அந்தமான் தீவு-பூர்வீக குடிகளாகிய ஜரவாக்கள்’மத்தியில் சண்டையில்லை. 179. "இறைவனே! உறுப்புக்களை மறைத்து, உடை உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்திவருகின்றேன்! ஆனால் உணர்வுகளை மறைத்துக்கொள்ள கற்றுக் கொண்டேனில்லை, ‘ஜரவா’ பழங்குடி மக்களோ உறுப்புக்களை மறைத்தார்களில்லை! ஆனால் உணர்வுகளை மறைத்து வாழ்கின்றனர். ‘நான்’ என்ற உணர்வு அற்ற நிலையில் உன்னை அடைவேன்’. 180. ஒவ்வொருவரும் தம்தம் நிலையில் சாமார்த்திய சாலிகளாகவே நடந்து கொள்வதாக நினைக்கின்றனர். ஆனால் அவலத்தின் மொத்த உருவம் அவர்கள் தான்!" 181. “சிறுபான்மையாக வாழும் பகுதியில் வாழ்வது ஒரு வசதி. எளிதில் பெருமை பெறலாம்.” 182. “பட்டுப் பூச்சிகள் கூட நேர்த்தியான பட்டு நூல்களை உற்பத்தி செய்கின்றன. ஏன், ஆறறிவு படைத்த மனிதர்கள் நேர்த்தியான காரியத்தைச் செய்வதில்லை?” 183. “வழிபாட்டுத் திருமேனிகளில் சிதைவு ஏற்பட்டால் உருவங்களை மாற்றுதல் தவறு.” 184. “ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும்பொழுது பிறிதொரு சிக்கல் தோன்றும் வகையில் தீர்வு காணுதல் கூடாது”. 185. “அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்ட சமூகம் தோன்றினால்தான் நாடு வளரும்”. 186. “மோசமான மனிதர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்”. 187. “மதங்கள் தோன்றிய பிறகுதான் சமூகம் சீரழிந்தது”. 188. “சாதி வேற்றுமைகள் நீங்கினாலே தீண்டாமை நீங்கும்”. 189. “இந்த உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் மொழிகளில் கடவுளைச் சுட்டிக்காட்டிய மொழி தமிழே!” 190. “ஒன்றை இழந்து விடுவோம் என்ற அச்சம் ஆர்வத்தைத்தூண்டி முயற்சியில் இறக்கி விடும்”. 191. “அக்கறையுடைய வாழ்க்கையே ஆளுமையைத் தரும்”. 192. “நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை” என்ற திருக்குறள் அனுபவ வாக்கு! காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த மக்களையும் வளர்த்துக் கொண்டால்தான் காரியங்கள் பயன்படும்". 193. “இறைவா! ஏன் இந்த நிலை? என்னை, இப்படி எல்லோரையும் கொண்டு ஏசவைக்கிறாய்? இறைவா! புரிகிறது உன் தந்திரம் ஏச்சுக்கள் மூலம்”. தான் புகழ் வேட்டையை நாடும் என்னை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய்! மற்றவர் ஏச்சின் மூலம்தான் மானம், அவமான உணர்ச்சி அறும் என்பது நின் திருவுள்ளம்! எல்லோரும் ஏசட்டும்! ஆனால் இறைவா, நீ ஏச மாட்டாயே! வாழ்த்தியருள்க!" 194. “நீ நம்பினால் போதாது! அவர்களும் வளர வேண்டுமே! இருபாலும் ஒத்த வளர்ச்சியில்லை யானால் எந்த விருப்பமும் விலை போகாது! பயன் தராது.” 195. “ஒரு இயல்பான கதவு அடைபடுவதின் மூலமே ஒழுக்கக் கேடுகள் தோன்றுகின்றன!” 196. “இறைவா! பற்றுக் கூடாது என்று சொல்கின்றனர். உன்னிடத்திலும் பற்றுக் கூடாதா? உன்னிடம் பற்று இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்? இல்லை, இல்லை. இறைவா! உன் மீது பற்றுக் கொள்ளலாம். எனக்கு தீமை இல்லை! நன்மையேயாம்! ஆனால் இறைவா! உனக்குத் தொல்லைதான்.” 197. “ஆதாயம் கருதித் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்! சிலர் எந்தவிதமான ஆதாயமும் இன்றித் தவறு செய்வார்கள். இந்த விநோதம் ஏன்? நன்மையில், ஒழுங்கில், ஒழுக்கத்தில் விதிமுறைகளில் ஊன்றிய கவனம் இன்மையேயாம்.” 198. "இறைவா! மூடர்களையும் படைத்துப் புத்திசாலிகளையும் படைத்து வேடிக்கை பார்க்கிறாய்! மூடர்களுடன் பேசவே முடியவில்லையே பேசுபவர்களை முட்டாளாக்கி விடுகிறார்களே! “மூடர்களுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்துவிட எனக்கு அருள் செய்! வேண்டவே வேண்டாம்: விவேகம் இல்லாதவர்களுடன் தர்க்கம்”. 199. “கோடி செங்கல்கள் கொட்டிக் கிடந்தால் கட்டிடமாகிவிடுமா? அவற்றை முறையாக அடுக்கினால் வீடு! அதுபோல கோடிக் கணக்கில் மனிதர்கள் இருந்தாலும் சமுதாயம் தோன்றி விடுவதில்லை. ஒருவரை ஒருவர் தழுவியும் தாங்கியும் ஒப்புரவு அறியும் பண்புடன் வாழ்ந்தாலே சமுதாயம் தோன்றும்”. 200. “பழகத் தொடங்கிய தலை நாளில் இருந்த விருப்பம் போலவே, என்றும் விருப்பம் குறையாமல் இருப்பதே நட்பு”. ##201-300 201. “ஒய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்”. 202. “இன்றைய சந்தையில் மனிதர்கள் கிடைக்கவில்லை”. 203. “எல்லா இனங்களும் வளர்கின்றன. தமிழினம், இருந்த புகழையும் இழந்து வருகிறது”. 204. “நொய்யரிசி கொதி பொறுக்காதது போல, அற்ப மனிதர்கள் சொல் பொறுக்கமாட்டார்கள்!” 205. “தமிழக வரலாற்றில் இன நலத்திற்காக வாழ்ந்த ஒரே தலைவர் அறிஞர் அண்ணாதான்”. 206. “மிகச் சிறிய செயல்களையும் கவனத்துடன் செய்து பழகினால் மிகப்பெரிய காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்”. 207. “நிர்வாகம்” என்ற சொல்லில் வளர்த்தல், பாதுகாத்தல், நீக்குவன நீக்குதல், பயன்படுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. 208. “உடம்பு நல்ல நிர்வாக முறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.” 209. “சதைச் சோம்பலில் சுகம் கான்பவர்கள் நுகர்வார்கள்; களிப்பார்கள். உழைக்கமாட்டார்கள் மகிழ்வாக இருக்கமாட்டார்கள்.” 210. “களிப்பும் மகிழ்ச்சியும் வேறு, வேறு. களிப்பு காரண காரியங்களுக்குக் கவலைப் படாமல் உன்மத்தனைப் போல் களித்திருத்தல், மகிழ்ச்சி, என்பது அறிவார்ந்த நிலையில் மகிழ்தலாகும்.” 211. “இனம்” என்ற பரந்த சொல் இன்று “சாதி’ என்ற அளவுக்குள் குறுகிவிட்டது.” 212. “பேய் பிடித்தவன் ஆடினாலும், குற்றம் பேய் பிடித்தவனிடம் இல்லை. பேயினிடமேயாம்.” 213. "இன்று தீண்டாமையைக் கடுமையாக அனுட்டிப்பவர்கள் பிற்பட்ட சமுதாயத்தினரேயாம். அதாவது தேவர், வன்னியர் முதலிய சமுதாயத்தினர். ஆனால், இந்தச் சாதி முறையைக் கற்பித்தவர்கள் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். 214. "பழகும் எல்லையின் பரப்பளவு அதிகம் ஆக ஆக குற்றம்-குறைகானும் மனப்போக்கு இருப்ப தில்லை. எல்லை குறுகல் அடையும்போது குற்றங்களே தெரியும். ஏரிகளின் தண்ணிரில் தூசி பார்ப்ப தில்லை; குவளைத் தண்ணிரில் பார்க்கிறோம் அல்லவா? 215. “திருடர்”கள் மான அவமானத்துக்கு அஞ்சிய சமுதாயத்திற்குத் தரும் தொல்லை அளப்பில". 216. “சீனாவைப் போல சராசரி மனிதனின் வருவாய்க்கு ஏற்ப, வாழ்க்கை நுகர்வுகள் அமையா தொழியின் ஒழுக்கங்களைக் காண்பது இயலாது”. 217. “இன்றையச் சூழ்நிலை திருடனைவிட, திருட்டுக் கொடுத்தல் அஞ்சச் செய்கிறது. இஃதொரு பரிதாபமான நிலை. ஆனால் இந்த நிலை தவிர்க்க இயலாதது. பொதுவுடைமைச் சமுதாயம் அமைந்தால் இந்த நிலை மாறலாம்”. 218. “ஏரியில் வீழ்ந்த துரும்பின் கதியே வஞ்சனை மனவலையில் வீழ்ந்த மனிதனின் கதியும்”. 219. “உடல் சுற்றிய ஆடையே உன் மானம் காக்குமா? உயர் ஒழுக்கமே உன் மானம் காக்கும்”. 220. “வாய் வேலை செய்யத் தவறியதில்லை. ஒயாது ஓவர்டைம் கூட வேலை பார்க்கிறது. காதுகள் இரண்டும் கடமையைச் செய்கிறது. அதனால் உடல் வளர்கிறது. ஊர் வம்பு வளர்கிறது. உணர்வு வளர்ந்தபாடில்லை”. 221. “நெஞ்சே நித்தம் நித்தம் கவலை ஏன்? கவலையில் மூழ்கி முதலை இழப்பானேன்? எழுந்திரு! உழைத்தால் கவலையைக் கடந்து வாழலாம்”. 222. “இறைவா! இந்த தடவை மட்டும் மன்னித்து விடு என்று எத்தனை தடவை உன்னிடம் மன்றாடிக் கேட்டிருப்பேன்? எத்தனை தடவை நீயும் மன்னித் தாய்? ஆனால் நான் எழுந்து நடப்பதாகத் தெரிய வில்லையே மன்னிபுப் பொருளற்றுப் போயிற்றே!” இறைவா! பொருளற்ற பொக்கையானேன்! எடுத்தாள்க!" 223. “நானிலத்தை இயக்குவது நன்றி. நன்றியில் வளரும் நட்பு. நன்றி நல்லதே படைக்கும், உளம் இழந்த உணர்விழந்த வாயினால் சொல்வதன்று நன்றி. வாழ்க்கையின் படைப்பாற்றலில் நிற்பது நன்றி.” 224. “ஒருவர் திரும்ப திரும்ப ஒரே தவறைச் செய்தால் அது வேண்டும் என்றே செய்யப் பெறுவதாகும். இத்தகையோர் உறவு பயனற்றது.” 225. “ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவர்களிடமிருந்து நீ தப்புவதே உன்னைச் காப்பாற்றிக் கொள்ளும் வழி.” 226. “சமய அனுபவங்களின் தரத்தை அளந்து காட்டும் அளவுகோல் நாகரிகமே” 227. “உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் எளிதான காரியமன்று. இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் மூவுலகையும் ஆண்டு அனுபவிக்கலாம்.” 228. “வாழ்க்கைக்குரிய விலை கொடுக்காமல் வாழ ஆசைப்படுவது விபசாரத்திற்குச் சமம்”. 229. “நல்லெண்ணம்” என்பது ஒருவழிப்பயணம் அல்லவே! இருபாலும்தானே!" 230. “ஒரு தடவை கெட்டவர்கள் கெட்டே போய்விட மாட்டார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆகலாம். ஆனால் தமது நிலையை எண்ணி வருந்துகிறவர்களாக இருத்தல் வேண்டும்” 231. “எந்த ஒன்றையும் அறிவோடு உணர்வோடு எடுத்துக்கொள்கிறவர்கள் தவறு செய்யமாட்டார்கள்”. 232. “மனிதனின் மேல்நிலைக் கருவியே மனம். இது மிகவும் சாதாரணமானது. மனத்தைக் கடந்ததாக உள்ள புத்தி, சித்தம் என்ற கருவிகள் வரையில் செய்திகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் தேவை. அப்போதுதான் குற்றங்கள் குறையும். வெற்றிகளையும் பயன்களையும் அடையலாம்”. 233. “இந்தியச் சமூகத்தில் சாதியே எல்லாம். அறிவுக்குக்கூட மதிப்பில்லை. நாலு செய்தி நன்றாகத் தெரியாதவர்கள் கூட பார்ப்பனராக இருந்தால் ’ஜகத்குரு’வாகி விடலாம்”. 234. “இன்னும் பார்ப்பனர்கள் பெயரளவில்தான் தமிழர்கள். கள்ளிக் கோட்டையில் வாழும் பார்ப்பனர்கள் மலையாளிகளுடனேயே இணைந்து வாழ்கின்றனர். தமிழர்களுடன் அல்ல. இது அவர்கள் இயக்கமாம்”. 235. “தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.” 236. "வாழ்க்கை இன்பத்திலோ, துன்பத்திலோ தேங்கி நின்று விடுதல் கூடாது. பகலும் இரவும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு முந்துவது போல வாழ்க்கை ஒடிக் கொண்டே இருக்கவேண்டும். 237. “வேலையைத் தேடுதல்-எடுத்துச் செய்தல் என்ற ஆர்வம் இல்லாதவர்களும் சோம்பேறிகளே!” 238. ‘சுகம்’-அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டாலே உழைப்பு ஒழுக்கம் எல்லாம் பறந்து போய்விடும்." 239. “பேய் உண்டோ, இல்லையோ சோம்பேறிக்கு உள்ள சுயநலம் பேயேயாம்.” 240. “நல்லதாக இருந்தால் மட்டுமே மக்கள் ஏற்பார்கள் என்பதல்ல. அந்த நல்லது அவர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதையும் பொறுத்ததே யாம்.” 241. “நல்லனவற்றைப் பழக்கங்களாகவும் வழக்கங்களாகவும் மாற்றியமைத்தல் கடமை”. 242. “உடலை வருத்திக் கொள்ளும் அளவுக்கு உறுதி இல்லையானால் முறையாகக் கடமைகளைச் செய்ய இயலாது.” 243. “எந்த ஒரு செயலையும் நோன்புபோல் பிடிவாதமாக எடுத்துக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.” 244. “ஒரு மூச்சு கொள்முதல், ஒரு மூச்சு விடுதல் இதைப் போல் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் கொள்முதலும் விடுதலும் இருக்கவேண்டும்.” 245. “காரியங்கள் நடைபெற வேண்டுமானால் உளப்பூர்வமான முயற்சி தேவை”. 246. “வேலை செய்வோரெல்லாம் முயற்சியுடையோர் அல்ல. முயற்சி என்பது தடைகளையும் இன்பங்களையும் பாராது, மூச்சடக்கி கருமமே கண்ணாகச் செயற்படுதலாகும்.” 247. “முயற்சி என்பது ஏற்றி வைத்த சுமையுடன் ஒரு மேட்டு நிலத்தில் ஏறும் எருதுகள் மூச்சடக்கி முழங்காலிட்டு முன்னேறுதலைப் போன்றது.” 248. “மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.” த-3 249. “மனித முயற்சிகள் படைக்க வேண்டிய நுகர் பொருளை-செயற்கையை-ஆன்மீகத்தால் ஈடு செய்யக்கூடாது. அதற்கு முயற்சியே தேவை. ஆன்மீகம் என்பது ஆன்மாவின் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.” 250. “இன்றைய ஆன்மீகம் ஆன்மாவைப் பற்றியே கவலைப்படவில்லை. கடவுளைப் பற்றியே கவலைப்படுகிறது; இது தவறு.” 251. “கடவுளைப் பற்றிய கவலை மனிதனுக்கு எதற்கு? முதலில் அவன் மனிதனைப் பற்றி கவலைப் படட்டும்.” 252. “சித்துக்களைக் காட்டி ஆன்மீகத்தை வளர்ப்பது-செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத்தான்.” 253. “ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.” 254. “நெடிய பகை கொள்ளுதல், என்றும் தோல்வியையே தரும் நெடிய பகையைத் தவிர்த்திடுக.” 255. “தமிழ் நாட்டில் சாமியார்கள் சண்டை மலிந்துவிட்டது. துவரத் துறத்தல் இன்மையால் வந்த விளைவு.” 256. “எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் தனி மனிதன், தனிமனிதன்தான் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களுக்குரிய பலன் கிடைக்காது.” 257. “சமூக அநீதிகளை எதிர்த்தே சமயம் தோன்றியது. பின் அதுவே சமூக அநீதியின் உருவமாக மாறிவிட்டது.” 258. “மற்றவர் பற்றிய இகழ்ச்சியை விரும்புகிறவன், புகழுக்குரியவன் அல்ல.” 259. “உடலுயிர் வாழ்க்கைக்குக் காற்றை இடையிடின்றி சுவாசிப்பது போல, உயிர் இறைவனை சுவாசித்தல் வேண்டும்.” 260. “அறிவுக்கு இசைந்து வராத வளர்ச்சிக்கு தொடர்பில்லாத வரையில் பற்றாக்குறை நீடிக்கும் வரையில் மனித உழைப்பு பயன் தரவில்லை என்றே பொருள்.” 261. “உழைத்தால் போதாது; பொருள் ஈட்டினால் போதாது. உழைப்பும் பொருளும் பயன் தரும் நிலையினை அவ்வப்பொழுது அளந்தறிதல் வேண்டும்.” 262. “மனிதர் பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக உண்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக யாதொரு கடமையையும் செய்வதில்லை. எதிலும் தொடர்ச்சி இல்லையேல் வெற்றி இல்லை.” 263. "வயிறு தேவையை அறிவித்துப் பெறுகிறது. இயற்கைக்கு வாழ்க்கையின் மீது இருந்த பற்றின் காரணமாக உடல் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்றை, உணவை தாமே பெறும் உறுப்புக்களைத் தந்துவிட்டன. ஆனால் அதுபோல் மூளையும் மனமும் செயற்படுவதில்லை. வாழ்வாங்கு வாழும் முயற்சி மனிதனுடையதே." 264. “பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.” 265. “உனது வருத்தத்தைக் கடுஞ்சொற்களால் காட்டாதே. சொல்லும் பாங்கில் காட்டு!” 266. யூகத்தின் அடிப்படையில் மற்றவர் மீது பழி பாவங்களைச் சுமத்துவதற்கு முட்டாள்கூட முயற்சிக்கிறான்." 267. “உடற்பயிற்சி வேலையாக மாறும் நாளே உண்மையாக வாழத் தொடங்கும் நாள்.” 268. சஞ்சித வினை; ஒழுக்கமின்மை; பிராரத்துவ வினை; ஆர்வமின்மை; ஆகாமிய வினை; வறுமை." 269. ஒரு நாள் கடனாளியாக வாழத்தலைப் பட்டுவிட்டால் எப்போதும் கடனாளிதான். 270. “பர்லாங்கு கற்களில் ஊர் பெயர் இருப்பதில்லை. ஆனால், மைல் கல்லில் ஊர்ப்பெயர் இருக்கும். அதுபோல, விநாடியில் செய்த வேலைகளில் வேண்டுமானால் பயன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாள் முழுதும் செய்த வேலையில் பயன்பாடு தெரியவேண்டும். அப்படி பயன்பாடு கட்புலனுக்கு வராதுபோனால் வேலை செய்ததாக கருத முடியாது.” 271. “ஒரு வேலையை எண்ணியபடி பயனுடையதாகச் செய்து முடிப்பதற்கே வேலை என்று பெயர்.” 272. “கால இழப்பு, பொருள் இழப்பு, மானிட இழப்பு ஆகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வழக்கம்போல உண்டு உடுத்து வாழ்கிறவன் உபயோகப்படமாட்டான்.” 273. “விதிகளைப் பின்பற்றினாலே பல சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம்.” 274. “காதலின்பம் என்பது கடவுள் நெறிக்கு மாறானதல்ல.” 275. “அன்று மணிமேகலை தொடங்கிய பசி நீக்கப்பணி, இன்னமும் நிறைவேறவில்லை.” 276. “இன்புறும் வேட்கை மிருக வேட்கை; இன்புறுத்தல் அருள் தழிஇய வேட்கை”. 277. “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வளரத் தூண்டி துணை செய்கின்ற நெம்புகோல்கள் போன்ற தோழர்கள் அவசியம் தேவை”. 278. “பெண்மைக்கு அனைத்துலகிற்கும் தாய்மை நிலை தாங்கும் பேருள்ளம் தேவை”. 279. “பொறுப்புக்களை உணராதவர்கள் ஒரு நூறுபேர் இருந்தாலும் பயன் இல்லை”. 280. “கீழ் மக்கள் கீழ் மக்களே! அவர்களைத் திருத்துதல் அரிது என்ற பழமொழி உண்மையே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வளரும் அறிவியல் உணர்வு மறுக்கிறது”. 281. “சாதாரணக் காலங்களில் நாடாதவர்கள் பணம் தேவைப்படும்பொழுது மட்டும் வந்துவிடுகிறார்கள்”. 282. “விதிகள், முறைகள் தவிர்க்க இயலாதவை இவைகளைத் தவிர்க்க விரும்புபவர்கள் ஒழுக்கக் கேடர்களாகத்தான் இருக்கவேண்டும்”. 283. “நாள்தோறும் காசுகளை எண்ணிக் கூட்டி வைத்துப் பழகினால் செல்வம் பெருகும்”. 284. “அறிவு, அன்பு, ஒழுக்கம் - இவை செயலாக்க வடிவம் பெற்றால்தான் பயன் உண்டு”. 285. “தனித்தமிழ் பேணுவதில் கொங்குநாடு புகழ்பெற்றது”. 286. “நாள்தோறும் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்”. 287. “ஆற்றலைத் தருவது ஆர்வம்: ஆர்வத்தைத் தருவது, வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும். இதுவே வாழ்வு”. 288. “துய்த்தலைத் தடுத்தல் வளர்ச்சியைக் கெடுக்கும்; துய்த்தற்குரிய பொருளைப் பெற முயலும் ஆர்வமின்மை, வறுமையைத் தரும். வறுமை, தலை விதியை நம்பத்துண்டும். இவையெல்லாம் முறை பிறழ்ந்த நிலை”. 289. “எந்த ஒன்றிலும் கைப்பிடியான பிடிப்பு இல்லையானால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது”. 290. “எதையும் முறையாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இல்லையானால் தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது”. 291. “திடீர்” என்ற வார்த்தை சோம்பேறிகளின் ஒழுக்கக் கேடர்களின் வார்த்தையாகும்". 292. “அலட்சியங்கள் கோடிக் கணக்கில் இழப்பைத் தரும்”. 293. “கடமைகளைச் செய்வதில் புத்துணர்ச்சி மிக்க ஆர்வம் தேவை”. 294. “அறிவுக்குத் தொடர்பில்லாத உடல் இயக்கத்தில் ஒழுங்கு மிகுதி. உதாரணத்திற்குச் சாப்பிட மறப்பதில்லை! ஒரு வேளை உணவும் தவிர்வது இல்லை! ஆனால், உயிரியக்கத்தில் அறிவோடு தொடர்புடைய உயிரியக்கத்தில் எத்தனை மறதிகள்! தவறுகள்!” 295. “தாமே வாழத் தெரியாதவர்களால் சமுதாயத்திற்கும் கேடு வரும்”. 296. “யாருக்கும் கடனாளியாக உரிமை இல்லை; மற்றவர்களையும் கடனாளியாக்கக்கூடாது”. 297. “மனிதன் ஏமாற்றுவதில் காட்டும் புத்தி கூர்மைகளைக் காரியங்களில் காட்டினால் உலகத்தை சொர்க்கமாக்கி விடலாமே!” 298. “புத்தி கெட்டு, காரியங்கள் செய்யாமல் விட்டதால் அழிவு ஏற்பட்டதை காரியங்கெட்டுப் போச்சு என்கிறோம்”. (அண்ணாமலை) 299. “பொருள் உற்பத்தி செய்யப் பெறுவது; படைக்கப் பெறுவது. பொருள் உற்பத்திக்கு அறிவு தேவை. அறிவு பெற விழிப்புணர்வு தேவை”. 300. “நம்முடைய இயலாமைகளை - இழிவு களை இயற்கை என தாங்கிக் கொள்ளும் மனோ நிலை இருக்கிறவரையில் முன்னேற்றம் இல்லை”. 301-400 301. “எல்லோரையும் திருப்திப்படுத்த முயல்கிறவன் பைத்தியக்காரனாகி விடுவான்”. 302. “எப்போதும் கடமைகளைச் செய்யும் ஆயத்த நிலையில் இருப்பவர்கள் எதையும் சாதிப்பார்கள்”. 303. “கடமைகளைச் செய்வதற்குரிய விதிமுறைகளை மேற்கொள்ளாதார் கடமைகளைப் பயனுறச்செய்தல் இயலாது”. 304. “வழியோடு போதல் உழைப்பைக் குறைக்கிறது. களைப்பைக் குறைக்கிறது. பயத்தை குறைக்கிறது. பயணத்தை எளிதாக்குகிறது. அதுபோலவே விதிமுறைகளின்படி கடமைகளைச் செய்து வாழ்தலும் பயன்பல கூட்டுவிக்கும்”. 305. “இப்போதுள்ள முறையில் இல்லற வாழ்க்கையின் மூலம் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்”. 306. “காதல் வளர்ந்தால்தான் இன்பம் தரும். காதல், திருமணத்தில் முற்றுப்பெறுவதையே பலர் வாழ்க்கையில் பார்க்கிறோம்”. 307. “கோப்புகள் நினைவுக்குரிய சாதனமே தவிர, பணிகளை நிறைவேற்றக்கூடிய சாதனமல்ல”. 308. “வளர்ச்சிப் பெறாத மக்களிடம் நன்றியை-கடப்பாட்டை எதிர்பார்ப்பது தவறு; கிடைக்காது”. 309. “விளம்பர வெளிச்சம்” விபசாரத்தைத் தவிர வேறென்ன?" 310. “தொழிலுக்குத் தகுந்த நபர்களும் கிடைப்பதில்லை: நபர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதும் தொல்லையே!” 311. “ஒரு பெண் தான் சம்பாதிக்கும் பணத்தில் கூட, தன் தாய்க்கு அனுப்பக் கணவன் சம்மதிப்ப தில்லை. இதுதான் இந்திய ஆடவர்களின் சர்வாதிகாரம்”. 312. “சுற்றத்தை மீறிக் காதல் செய்யும் துணிவுள்ள பெண்கூட மிருகத்தனமான கணவன் முன்னே கோழையாகி விடுகிறாள்”. 313. “நாளை எண்ணிச் சம்பளம் கொடுக்கும், வாங்கும் பழக்கம் உள்ள வரை வேலை செய்ய விருப்பம் வராது”. 314. “உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் என்பதே மனிதனை வளர்க்கும் நெறி”. 315. “பெட்டியில் வைக்காமல் எடுக்க முயற்சிப்பவர்கள் மூளைக் கோளாறு உள்ளவர்கள்”. 316. “பால் பிடித்த கதிர் தாழ்கிறது. பதர் தலை நிமிர்ந்தாடுகிறது. அற்ப மனிதர்கள் ஆர்ப்பரவம் செய்வர். பொருட்படுத்தாதே! அடக்கமானவர்களை அணுகுக; அமரத்துவம் பெறுக”. 317. “எவ்வளவுதான் நேசித்தாலும், நமது பணிகளில் பங்குபெற வராது போனால் பயனில்லை”. 318. “ஒப்புரவு இல்லாத உறவு, உப்புக்கும் பயனில்லாதது”. 319, “புறத்தே புதுமை காட்டி அகத்தே பழைமையை ஒளித்து வாழ்வோரும் உண்டு.” 320. நாலுபேர்’ நன்மைக்கு மட்டுமல்ல; தீமைக் கும் சேர்கிறார்கள்." 321. ‘உழைக்காமல் வாழ நினைப்பது மனித இயற்கை உழைத்து வாழ நினைப்பது அறிவுடமை யின் அழகு.’ - 322. பணத்தின் மீது ஆசை, மனிதனை மிருக மாக்குகிறது. பணம் செய்வதற்குரிய உழைப்பை விரும்புகிறவன் மனிதனாகிறான். 323, "தனிமனிதச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, சமுதாயத்தைத் திரட்டுவது தவறு’ 324. "நாட்டின் நலனில் கருத்தும், தொழில் செய்யும் மனப்பான்மையும் தோன்றாத வரையில் நாடு வளராது.’ - 325. பசு, தெய்வம் போலப் போற்றப்படுகிறது. ஏன்? பசுவின் உணவோ வைக்கோல். பசுவின் கழிவு கள் அனைத்தும் மனிதனுக்கு மருந்தாக-உணவாகப் பயன்படுகின்றன. இப்படி வேறு ஒரு வாழ்க்கை இல்லை, - - . 326. “உழைக்காமல் வாழ நினைப்போர் வேலை தேடுகின்றனர். உழைத்து வாழ விரும்புவோர் வேலைகளை எடுத்துக் கொள்கின்றனர்”. 327. “அரசுகளுக்கிடையில்கூட விளம்பர ஆசையில் ஒரு அரசின் பணியைப் பிறிதொரு அரசு மறைக்கிறது”. 328. “மேலாண்மை என்பது தரம் குறைந்த விமர்சனம் அல்ல. பணிகளை உடனிருந்து செய்வித்தல்”. 329. “ஒருமணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்த, பல மணி நேரம் படிக்கவேண்டும்”. 330. “அரசியல் ஒரு இயக்கம்; அரசாங்கம் ஒரு - நிறுவனம்”. 331. “ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னியத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன”. 332. “தனக்குரியதை விட்டுக் கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்”. 333. “தமிழக அரசியலுக்குத் திரைப்படம் காரணம் அல்ல; வேறு சில காரணங்களும் உண்டு”. 334. “இன்றைய உலகை தீமைகளே அலங்கரிக்கின்றன. தீமை என்ற பெயரில் அல்ல-நன்மை என்ற போர்வையில்”. 335. “இயற்கை மனிதனின் கழிவையே உணவாக ஏற்றுக் கொள்கிறது. இதைக்கூட மனிதன் முறையாக இயற்கைக்குத் தர முன்வருவதில்லை”. 336. மக்களுக்கு அவசியமானது நிகழாததால் எங்கும் தேநீர்க்கடை-லாகிரி பொருள்கள் விற்கும் கடை. இவை மனிதனுக்குரியன அல்ல." 337. நாட்டு மக்கள் மதர்த்த சோம்பலுக்கு இரையாகி பிச்சைக்காரர்களாகிவிட்டனர்." . . . 338. “நல்லதை நாடிச் செய்யும் மனிதன் நாளும் வளர்வான்.” 339. “ஆசை தீரக் கொடுப்பது இயலாத காரியம்.” ஆசையும் நன்றியும் முரண்பட்ட பண்புகள்." 340. “பழங்காலத் தமிழரசர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.” 341. “குழு மனப்பான்மை நீதியைக் காட்டாது.” 342. “அரசு நிர்வாகத்தின் மையப்பங்கு-அரசின் உரிமைகளை-அதிகாரங்களை யாரும் மீறக்கூடாது.” 343. பண வரவு இருந்தால் மட்டும் செல்வந்தராக இருக்க முடியாது. எண்ணிச் செலவழித்தால்தான் செல்வந்தராக இருக்கலாம்." 344. “எதையும் காலத்தில் முறையோடு செய்தால் எண்ணிலா நன்மைகள் வளரும்.” 345. “நிதி நிர்வாகம் திறறை இல்லாதுபோனால் பற்றாக்குறை மனப்பான்மை உருவாகும்.” 346. “பல பணிகள் இருந்தால் பலரை இயக்கி-பலமுனைகளில்-தொழிற்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.” 347. “வரவு இல்லாமல்-செலவை வரவழைத்துக் கொள்பவர்கள் யோக்கியர்களாக இருத்தல் அரிது, இயலாது.” 348. “எந்த ஒரு செயலுக்கும் பயன் என்ன என்று அளந்தறிதல் ஒழுக்கத்தினை வளர்க்கும். உழைப்பின் திறனை வளர்க்கும்.” 349. “இயற்கையும் விலங்குகளும் விவகாரமான மனம் இன்மையால் செயற்பாடுகளில் ஒழுங்கும் பயனும் மாறா நிலையினவாக உள்ளன.” 350. “மனிதனின் மனம் விவகாரத் தன்மையுடையதாக இருப்பதால் ஒழுங்கு, ஒழுங்கின்மை, பயன், பயனற்ற நிலை என்று கலந்துள்ளன. ஆனாலும் வளர்ச்சியிருக்கும்.” 351. “மனிதன் தீமையிலிருந்து விடுபட்டு ஒரு நிலையில் ஒழுங்கமைக்கப் பெற்ற உழைப்போடு கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வானாயின் எதையும் வெற்றி பெறலாம்.”இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்று வாழலாம்." 352. “ஐம்பூதங்களிலும் (நிலம், நீர், தீ, வளி, வான்) தண்ணிர் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியைத் தருகிறது.” 353. “ஐம்பூதங்களின் ஒருங்கிணைந்த-ஒத்திசைந்த செயற்பாட்டிலேயே உயிரியல் இயங்குகிறது.” 354. “ஒன்றுமே இல்லாதிருப்பர். ஆனால், ஒன்று கிடைத்தவுடன் மன அமைதி பெறார். பிறிதொன்றை அவாவுவர். இது மனித இயற்கை.” 355. "நிர்வாகம், பொருள் பொதிந்த சொல்; உயிர், உடலை நிர்வாகம் செய்கிறது. ஆனால் இந்த நிர்வாகத்தையும் நடைபெற வொட்டாமல் கிளர்ச்சி செய்ததடை செய்த குற்றவாளிகள் மருத்துவமனைக்கு தண்டனை கொடுத்து அனுப்பப்படுகிறார்கள், 356. “பொது அறிவு. இயற்கை அறிவு ஏற்புடையதே! ஆயினும் சோதித்தே ஏற்றல் வேண்டும்.” 357. “மனுக்கள் வெறிச்சோடிய விளம்பரத்தின் சின்னங்களே!” 358. “அரசியல் வேறு. அரசாங்கம் வேறு.” 359. “அரசியல் மாறுபடலாம்; அரசாங்கத்தின் நடைமுறையில் மாறுபடக் கூடாது.” 360. “வேலை செய்யும் விருப்பமே தேவை. விருப்பம் வந்துவிட்டால் வேலை கிடைத்துவிடும்.” 361. “பிழைப்புக்கு வேலை தேடுபவர்கள் பயனற்றவர்கள். வேலை செய்வதன் மூலம் பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் வாழ்பவர்கள்.” 362. “கடவுள், சோதனைக்காகத் துன்பத்தைத் தருவான் என்பதும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே.” 363. “நமது மக்கள் யாரையும் தங்களுக்குப் பயன்படுத்த நினைப்பார்களே தவிர, மற்றவர்களுக்குப் பயன்படமாட்டார்கள்.” 364. “அரசாங்கத்திடம் கேட்டதையெல்லாம் உரிமையோடு பெற விரும்புபவர்கள், அரசாங்கத்திற்குரிய கடமைகளை செய்ய முன்வருவதில்லை.” 365. “இந்திய நாட்டின் கலாச்சார மொழியாக இருக்க சமஸ்கிருதம் தகுதி உடையதன்று. சமஸ்கிருத கலாச்சாரம் வளர்ச்சியடையாதது; தமிழே தகுதியுடையது.” 366. “தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. தமிழே ஒரு நாகரிகமாகவும் சமயமாகவும் வளர்ந்துள்ளது.” 367. “நிதியியல் நாகரிகம் நுணுக்கமானது. அதனைக் கையாளத் தெரியாததே நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.” 368. “காலத்தில் செய்யும் எந்தப் பணியும் பயனுடையது.” பணிகளை முறையாகப் பயன்படும் வகையில் செய்வது உரிமையாகவும், உரிய ஊதியத்தினை எடுத்துக் கொள்வது கடமையாகவும் மாறுதல் வேண்டும். 369. “தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.” 370. “வாழ்க்கையின் இயக்கம் ஊக்கத்தின் விளைவே. ஊக்கமிலாதார் சாதனைகளுக்கு ஆகார்.” 371. “பெருமைக்குரிய யாதொரு இயல்பும் இல்லாமல் பெருமை பாராட்டுதல் கூடாது.” 372. “பணத்தின் மீது நேரிடையாக ஆசை காட்டுவது தீது, பணம் வரும் வாயில்களில் ஆர்வங் காட்டுவது அறிவுடைமை.” 373. “நாட்டில், எல்லாம் பணமாகிவிட்டது. இனி ஏது ஏழைகளுக்கு வாழ்க்கை?” 374. “இன்று பலர் வைக்கோல்போரில் நாய் போல வாழ்கின்றனர். அதாவது, தாமும் வாழார். மற்றவர்களையும் வாழ விடார்!” 375. "ஏழ்மைக்குத் தகுந்த அளவு சிறுமைகளும் இருக்கும், சிறுமை கண்டு சீறாமல் சிறுமையை வளர்த்த ஏழ்மையை அகற்றவேண்டும். 376. “மூன்றுகால் ஒட்டம் தொடர்ந்து ஓட முடியாது. பாண்டிச்சேரியாகிவிடும்.” 377. “ஆர்வம் மின்விசையின் ஆற்றலிலும் வலிமையானது. ஆர்வமே செயலூக்கத்தின் ஊற்றுக் களன்.” 378. “உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.” 379. “காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்க வேண்டும்.” 380. “உடலுக்கு, இன்புறுதலே இயற்கை நோய் இயற்கையன்று. நோய் வரவழைத்துக் கொண்டதே.” 381. "விலங்குகள் கூடக் காலந்தவறாமல் பழகிக்கொள்கின்றன. ஆனால் மனிதர்கள்…? 382. “கடமைகள் அழுத்தும் பொழுது அவலத்திற்கு ஆளாவோர்கள் கடமைகளைச் செய்யும் மனப் போக்கில்லாதவர்கள்.” 383. “அதிருப்தியைத் தருபவர்கள் திருப்தி பற்றிப் பேசும் உரிமை இல்லாதவர்கள்.” 384. “ஒழுங்குகள் - ஒழுக்கங்கள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும்.” 385. “காதல் வாழ்க்கையற்றோர் வீட்டில் குழந்தைகள் அதிகம் இருக்கும்.” 386. “முறைப்படுத்தப்பெற்ற செயல்கள் முழுப் பயன்தரும்.” 387. “விதிமுறைகளைப் பின்பற்றிக் காரியங்கள் செய்தலே விழுமிய பயனைத்தரும்.” 388. “ஏரிகளில், தானே நத்தைகள், மீன்கள் தோன்றிவிடுகின்றன. இதுபோலச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி வளம் அடைபவர்களே வாழ்பவர்கள்.” 389. “இனிப்புச்சுவை - சர்க்கரை சுவையாகவும் இருக்கிறது; அதுவே சுமையாகவும் மாறிவிடுகிறது.” 390. “விலங்குகளுக்கு அவைகளின் பசியே தெரியும். தன்பசி நீங்கிய விலங்குகள் மற்றவைகளின் பசியைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுபோலவே மனிதர்களிலும் பலர் வாழ்கிறார்கள்.” 391. “சிறப்புக்கும், பொருள் வளர்ச்சிக்கும் தொழில் காரணமல்ல. தொழிலைச் செய்வோரின் திறமையே காரணம்.” 392. “பெரிய மரத்தையும் மரத்தின் சுற்றுப் புறங்களை ஆழப்படுத்துவதன் மூலம் வீழ்த்திவிடலாம். அதுபோல் சமூகத்தின் எந்தத் தீமையையும் சுற்றுப் புறத்தை - சூழலைச் சரிப்படுத்துவதன் மூலம் அகற்றி விடலாம்.” 393. “சுகம்” என்பது வளத்தில் மட்டுமல்ல. வறுமையிலும் சுகம் அனுபவிப்பவர் உண்டு. இதற்கும் காரணம் உடற்சோம்பல்." 394. “கணவனின் அரசியலுக்கு மனைவி மக்களைத் துன்புறுத்துவது கயமைத்தனம்.” 395. "எதிர்க் கருத்துடையவர்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆத்திரத்துடன் பகைத்து அணுகுவது ஜனநாயக மரபன்று. 396. "கால்நடை எளிமை, காரில் செல்வது ஆடம்பரம் என்று கருதக் கூடாது. ஆகும் செலவின் அளவையும் பயனையும் கணக்கிட்டு நோக்கினால் இன்று சில கால்நடைகளுக்கு, காரில் செல்வதை விடச் செலவு கூடுதல். 397. “அரசியல் இன்னாருக்குத்தான் என்று வரை யறை செய்வது மக்களாட்சி.” 398. “விரோதிகளை விட வஞ்சகர்கள் மோசமானவர்கள்.” 399. “உலகின் சிறு சிறு நிகழ்வுகள் கூட திட்டமிட்டே நிகழ்கின்றன. ஆனால் மனிதன் திட்டமிட மறுக்கிறான்.” 400. “திட்டமிடாத வாழ்வு, காட்டாற்று வெள்ளம் போன்றது.” 401-500 401. “செலவுக்குப் பணம் என்ற மனப்போக்கு நிறைநல வாழ்க்கைக்குத் துணை செய்யாது. ஆக்கம் தேடுதல் வாழ்க்கையின் கடமைகளுள் ஒன்று.” 402. “பசிக்குச் சோறும் படுப்பதற்கு இடமும் அணைப்பதற்கு ஆயிழையும் கிடைத்தால் போதும் என்று முயற்சிப்பவர்கள் பிச்சைக்காரர்களே.” 403. “காலத்தையும் கடமையையும் இணைத்துப் பார்த்தால்தான் கடமைகளின் அளவும் தரமும் கூடும்.” 404. “வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் ஒயாது ஒழியாது கடமைகள் செய்தாலும் போதா மனமே பெறுவர். சோம்பேறிகள் செய்த சில காரியங்களையே பெரிதாக்கி மனத் திருப்தியடைவர்.” 405. “பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை,” 406. "சிலர் தாம் பெற்ற பதவிகள் காரணமாகவே நிறைய பேசுகின்றனர். ஏராளமான அறிவுரைகளை உபதேசங்களை அள்ளித் தருகின்றனர். மக்களும் த-4 தலைவிதியே என்று கேட்கின்றனர். இவர்களோ, மக்கள் தமது உரைகளை மதித்து கேட்பதாக நினைத்துக் கொள்கின்றனர். 407. “உரிமைகளுக்காக உறவுகளை அறுத்துக் கொள்ள நினைப்பதைவிட கட்டாயப்படுத்தி உரிமை கொண்டாடுகிறவர்கள் வரவேற்கத்தக்கவர்கள்.” 408. “காலம், கருத்து, செயற்பாடு மூன்றும் ஒன்றிவிடின் வெற்றியே!” 409. “விழாக்களில் கவனம் செலுத்துவோர் ஏன் வாழ்க்கையில் கவனம் செலுத்த மறுக்கிறார்கள்? விழா முயற்சிகள் ஒன்று முகமன், அல்லது பழக்கம் காரணமாக இருக்கலாம்.” 410. “ஆழ்கடலில் ஆழ மூழ்கிக் குளித்தால் முத்து எடுக்கலாம்; அதுபோலக் கடமைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டால் வெற்றி கிடைக்கும்.” 411. “பரம்பரைக் குணம் மாற, அதிகமான அளவில் சமூக மருத்துவம் செய்யவேண்டும்.” 412. “தாயோடு, அன்புடைய மாமனோடு மாமி யோடு ஒத்து வாழும் இயல்பில்லாதவர்கள் ஊர்ச்சேவைக்கு முன் வருகின்றனர்; பலன் எதிர்மறைதான்!” 413. “கட்புலனுக்குச் சான்றுகளைத் தராத பணிகள் நம்பத் தகுந்தவையல்ல.” 414. “நாள் மங்கல நாள் சடங்குக்குரிய ஒரு நாள் அல்ல. வடை பாயசத்திற்குரிய நாள் அல்ல. வாழ்க்கையின் மகசூலைக் கணக்கெடுத்து அதன் பயன்பாட்டைக் கண்டு உணர்வு பூர்வமாக மகிழும் நாள்! இன்று மகசூலே இல்லை! உபயோகமான காரியங்கள் நடவாதது மட்டுமல்ல. செய்ய வேண்டுவனவற்றைக் கூடச் செய்யாமல் துன்பம் விளைந் திருக்கிறது. கடன்சுமை வந்திருக்கிறது. இதற்குப் பிறகும் நாண்மங்கலம் கொண்டாட்டம் என்று கூறினால் அழத்தான் தோன்றுகிறது.” 415. “திருமணம் என்றால் பொன்னணி புத்தாடைகள் எல்லாம் மகிழ்ச்சியின் சின்னங்கள்! ஆனால் இவை இன்று மகிழ்ச்சியின் சின்னங்கள் அல்ல. கடன் சுமை. துன்பச் சுமை! ஏன் இந்தப் பைத்தியக் காரத்தனம் பொன்னணியும் புத்தாடையும் இல்லாது போனால் திருமணம் நடக்காதா? காதல் தோன்றாதா? களவியல் இன்பம் இருக்காதா?” 416. “தகவல்கள் தருவது என்பது தகவலுக்காக மட்டுமல்ல. செயற்பாட்டுக்குத்தான். அதனால் செயற்பாட்டுக்குரிய காலத்தில் தகவல் தருவது அவசியம்.” 417. “பனம் வரவு - செலவு செய்வதும் பண்பாட்டை வளர்க்கும் வாயில்களில் ஒன்றேயாம்.” 418. “எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்கிறவர்களை இலட்சிய வாழ்க்கைக்கு உழைப்பு வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளுதல் கூடாது.” 419. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கும் பழக்கமே செல்வத்தைச் சேர்க்க உதவி செய்யும்.” 420. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கத் தவறினால் ஊழல் ஏற்பட்டு நிதி அழியும்.” 421. “உணர்வுக்குச் சம்பந்தமில்லாமல் மலம் சலம் கழிந்தால் நோய். அது போன்றதே ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாத நிர்வாகமும் நோயே!” 422. “நாம் எப்படியும் வாழலாம் என்ற மனப் போக்கு விலங்குப் போக்கு. இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்புவது மனிதப்போக்கு.” 423. “நாள்தோறும் கழிப்பன கழிக்காது போனால் நோய். நாள்தோறும் மறக்கத்தக்கன மறக்கா விடில் சோர்வு தோன்றும்; பகை வளரும்.” 424. “சர்வ வல்லமைவாய்ந்த மேலாண்மையின் துணை இருந்தால்தான் சமுதாயத்தை திருத்த இயலும்.” 425. “புதிய சமுதாய அமைப்புக்கு சர்வாதிகாரம் தவிர்க்க இயலாதது” 426. “மேடு பள்ளங்களே இருக்கும், ஆனால் பள்ளம் மேட்டால் போஷிக்கப் பெறும். இது முதலாளித்துவ சமுதாய அமைப்பு. மேடு பள்ளங்களே உருவாகாது காப்பது சோஷலிச முறை.” 427. “அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகும் இந்தியா மாற்றமடையவில்லை. ஏன்? இந்தியாவின் பழையப்போக்குகளே காரணம்.” 428. “முரடனைத் திருத்திவிடலாம். பயந்தாங் கொள்ளியை-கோழையைத் திருத்தவும் முடியாது; உபயோகப்படுத்தவும் இயலாது.” 429. “முறைகளே, எளிய வழிகள். உழைப்பைச் சிக்கனப்படுத்துபவை. ஆனால், விரும்புவாரைத்தான் காணோம்.” 430. “விதிமுறைகளை முறையாகக் கடை பிடித்துக் கடமைகளைத் தவறாமல் செய்தால் வேலைகள் எளிதாக-ஆனால் நிறைவாக முடியும். பயன் களும் தப்பாமல் வந்து சேரும். இங்ஙனம் பணி செய்வோர் உள்ள நிறுவனத்தில் ஊழல் வரவே வராது செல்வமும் நிறையசேரும்.” 431. “காதல் வாழ்க்கையில் கலவி ஒரு பகுதியேயாம். கலவிக்காகவே காதல் வாழ்க்கையல்ல.” 432. “நிதி வரவு இருந்தாலும் நிதி நிர்வாகம் முறையில்லாதுபோனால் தரித்திரம் தாண்டவமாடும்.” 433. “கணக்கு எழுதுதல், பட்டியல் அனுமதித்தல் என்பன நிதியை நிர்வகிக்கும் கணிகளேயாம்.” 434. “விவாதித்துத் தெளிவுபடுத்த இயலாதவர் வசை வழியைக் கையாள்வர்.” 435. “வயதைப் பற்றிக் கவலைப்படுவோர் வயதுக்குரிய அடிப்படையான விநாடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு விநோதம்.” 436. “கூழைக் கும்பிடுகள், குற்றவியல் மனத்தின் வெளிப்பாடுகள்-நம்பக்கூடாதன.” 437. “நம்பிக்கையின் அடிப்படையில் நிர்வாக விதிமுறைகள் புறக்கணிக்கத் தக்கனவல்ல.” 438. “சமுதாய அமைப்பு சீராக அமைய நன்றி பாராட்டும் பண்பு தேவை.” 439. “உழைப்பாளிகள், பிறரைச் சார்ந்து இருந்தால் தமது உழைப்பையும் இழப்பர்.” 440. “குறிக்கோள் அடையத்தக்க வகையில் பணிகளைச் செய்யாதவர் நன்மையையும் செய்யவில்லை. மாறாகத் தீமையைச் செய்கின்றனர்.” 441. “சிலரைத் திருத்துதல் முயற்கொம்பே.” 442. “எந்தக் குடும்பமும் திட்டமிட்டு வாழுமானால் வறுமையை அடையாது.” 443. தாயன்பு பெரிதே! அந்த அன்புக்கு எதுவும் இணையல்ல." 444. “இழிவு மனப்பான்மையுடையோர், வீண் பெருமைக்கு ஆசைப்படுவர்.” 445. “பரம்பரைக்குணம் எளிதில் மாறாது. ஆனாலும் தொடர்ச்சியான முயற்சி மேற்கொண்டால் மாற்றமுடியும்.” 446. “கடமைகளைச் சரியாகச் செய்யாமல் ஏற்பட்ட இழப்புகளுக்கு அழத்தெரியாதவர்கள்-கடமைகளைச் சரியாகச் செய்யாமைக்குக் காரணம்-தெரியாமை, இயலாமை அல்ல. பொறுப்புணர்ச்சி யின்மை.” 447. “அறிவின் ஆக்கமும் பண்பட்ட உள்ளமும் சமூக மனப்பான்மையும் இல்லாத தலைமை மோசமானது.” 448. “எத்தகைய மனிதரையும் தலைமையின் வழி வந்து சாரும் உறிஞ்சிகள் கெடுத்துவிடுகின்றனர்.” 449. “செய்யச் சொல்வதைவிட செய்வது எளிது.” 450. “குடும்பம், சமூகம், ஊர், அரசு-இவை ஒத்திசைந்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்.” 451. “அப்பாவிகளாக இருப்பதும் ஆபத்தே.” 452. “தண்ணிரில் சுண்ணாம்பு கரைவதைப்போல பரசிவ வெள்ளத்தில் நனைந்து கரைவதே ஆன்மீக வாழ்க்கை.” 453. “ஆற்று வெள்ளம் மணலை தள்ளிச் செல்லும், ஆனால், மலைகளை எடுத்துச் செல்லாது. அதுபோல எளிய மனம் படைத்தவர்களை எளிதில் அழைத்துச் செல்லலாம். ஆனால், கடினச் சித்தம் உடையவர்களை அழைத்துச் செல்ல முடியாது.” 454. “மக்களிடத்தில் முன்னேற்றப் பசியைத் தோற்றுவித்துவிட்டால் காரியம் எளிது.” 455. “நிர்வாகம் கடினமானது. ஆனால் முற்காப்பு தற்காப்பு உணர்வு உடையவர்கள் நிர்வாகம் செய்வார்கள்.” 456. “செல்வம் என்ற சகடைக்கு ஈருருளைகள்-ஒன்று ஈட்டுதல்; மற்றொன்று சேமித்தல்.” 457. “மூடிவைக்காத பதார்த்தம் கெட்டுப் போகும். கண்காணிக்காத மனிதர்களும் கெட்டுப் போவார்கள்.” 458. “ஒரு வழக்கில் மாட்டிக் கொண்டவர்கள். நீதி வழங்க இயலாது.” 459. “வதந்திகளோடு வாழ்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.” 460. “சார்புள்ளம் நடுநிலை மனம் பெறுதல் அரிது. ஒரு சிலரே சார்புகளைக் கடந்தும் நடுநிலையில் நிற்பர்.” 461. “உடலுக்கு நோய் வந்தால் விரைந்து மருத்துவம் செய்துகொள்ளும் மனிதர்கள் உள்ளத்திற்கு வரும் நோய்களுக்கு மருத்துவம் செய்துகொள்ள முயலுவதில்லை.” 462. “கிராமப்புறத்துப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நலமில்லாதபோது, மருத்துவர்களை ஆர்வத்துடன் நாடுகின்றனர். அதுபோல குழந்தைகளின் அறியாமையை நீக்கும் ஆசிரியர்களை நாடுவதில்லை.” 463. “திருத்தம் காணும் முயற்சி இல்லாதவர்கள் கையாளும் யுக்தியே, தோல்விகளுக்கு-குற்றங்களுக்கு காரணங்கள் காட்டி அமைதிப்படுத்துதல்.” 464. “நல்ல ஊற்றுள்ள கிணறு, பெருமழைக் காலத்திலும் தம் அளவிலேயே நிற்கும். பொங்கி வழிந்துவிடாது. புதிதாக வரும் தண்ணிரை உள் வாங்கிக் கொள்ளும். அதுபோல அறிவும் செல்வமும் உடையவர்கள் எப்போதும் அளவோடு வாழ்வார்கள் ஆர்ப்பரவம் இருக்காது!” 465. “கிணற்றில் ஊற்றளவு சீராக இருக்குமானால் வந்து கலக்கும் புதுத் தண்ணிருக்கு ஏற்ப நிறம் மாறாது. அதுபோலச் சூழ்நிலைகளால் நல்ல திடமான மனிதர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.” 466. “கதிரவன் ஒளிபுகாத எதுவும் பயன்தராது. அதுபோல அறிவொளி பெறாத எந்த மனிதனும் பயன்படமாட்டான்.” 467. “ஒருவர் திட்டுவதால் வந்துவிடுவதல்ல, அவமானம் என்பது. அறிவும் ஆளுமையும் பெற்றிருந்தும் சமுதாய மாற்றம் காண முடியாத நிலையே அவமானம்.” 468. “வெளிப்பாடுகள் எல்லாம் அழுக்காற்றைத் தோற்றுவிக்கும். ஆதலால், வெளிப்பாட்டைத் தவிர்த்திடுக! பணிகளுக்குள்ளே ஒளிந்துகொண்டு உருப்படியாக எதையாவது செய்க.” 469. “காலம் வரும் என்று காத்திருப்பது கையாலாகாதவர்களின் செயல்; காலத்தை உருவாக்கிக் கொள்வது வாழ்வாங்கு வாழ்வோரின் செயல்.” 470. “சூழ்நிலை என்பது மாற்றமுடியாத ஒன்றல்ல. சூழ்நிலையை மாற்றுவதே மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவின் கடமை.” 471. “மனிதகுல வரலாற்றில் சூழ்நிலைகளை மனிதகுலம் மாற்றி வளர்ந்துள்ள சாதனையையே பார்க்கிறோம்.” 472. “தேர்தல் வெற்றி-தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் நல்ல வலிமையான அரசை அமைக்க முடியாது.” 473. “மனிதன் எப்போதும் போர்க்குணம் உடையனவாக விளங்கவேண்டும்.” 474. “வாழ்க்கையை எளிதாக நடத்திக் கொள்ளக் கூடிய துழல்களை உருவாக்காது பணத்தின் மூலம் மட்டும்தான் வாழ்க்கையை நடத்த இயலும் என்ற சூழ்நிலை உள்ளவரையில் லஞ்சத்தை ஒழிக்க இயலாது.” 475. “நமக்கு முன்னேற வாய்ப்புக் கிடைத்த பொழுது நாம் முன்னேறுவதுடன் நம்முடன் இருப்பவர்களையும் அழைத்துச் சென்றால்தான் அழுக்காறு தோன்றுவதைத் தவிர்க்கலாம்.” 476. “பிரிவினைகளால் அதிகாரம் வரலாம். பகை போய்விடாது.” 477. “ஒன்று எவ்வளவுக்கு அமுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு வேகமாக மீண்டும் எழும்பும்.” 478. “தாழ்வு மனப்பான்மை முன்னேற்றத்தின் எதிரி.” 479. “தன்னிச்சைப் போக்கு, சர்வாதிகாரத்திற்கு முன்னோடி.” 480. “நான் நேற்றுச்செய்ததை இன்று அனுபவிக்கிறேன். இஃது உலகியல் நியதி.” 481. “விஞ்ஞானம் துன்பத்தை நீக்குவது, மெய்ஞ் ஞானம் நிலைத்த உண்மையான அறிவு.” 482. “சலுகைகள் தொடக்கத்தில் பயன்தரும்; சலுகைகள் தொடருமானால் சண்டித்தனத்தையே பயக்கும்.” 483. “பலருக்குத் தனிமை, திணிந்த இருளை விடக் கேடு செய்யும். ஆனால், சிலருக்குத் தனிமை ஒளி பொருந்திய துழ்நிலையை வழங்கும்.” 484. “கூட்ஸ் வண்டியில் உள்ள பெட்டிகள்: இணைப்பும் உடையன. தனித்தனியேயும் உள்ளன.” 485. “இருளுடன் ஒளி, தொடர்பு கொண்டே நீக்குகிறது! அதுபோலத் தீமையை அகற்றுவதிலும் கூட எதிர்மறை முயற்சிகளை விட உடன்பாட்டு முயற்சிகளே பயனுடையன.” 486. “தண்ணீர் ஓட்டமில்லாமல் நின்றால் பாசி பிடிக்கிறது. அதுபோல வாழ்க்கையில் எந்த இடத்திலாவது இயக்கமின்றி நின்றுவிட்டால் தனிமனிதனும் கெட்டுப்போவான்! சமுதாயமும் கெடும்.” 487. “புதிய நீர் ஊற்று வராத கிணற்றின் தண்ணிர் தூய்மையற்றது. அதுபோலவே புதியக் கருத்துக்களை ஏற்காத பழமைவாதிகளும் தூய்மை யுடையோராய் இருத்தல் அரிது”. (இங்குத் தூய்மை என்பது, மனிதகுலத்தின் மாற்றத்தில் ஈடுபாடு.) 488. “பெய்யும் மழைநீர், முறைப்படுத்தப் பெறாது தன்போக்கில் ஒடுமானால் நில அரிப்பு ஏற்படுகிறது. அதுபோல், தோன்றும் எண்ணங்கள் எழுச்சிகள் முறைப்படுத்தப் பெறாது போனால் சமுதாய அரிப்புகளாகிய சுரண்டல், கலகம் தோன்றும்.” 489. “மிக எடுப்பான உடம்பில் கூட ஒரு சிறு நோய் வந்துற்றால் உடம்பு இயங்க மறுக்கிறது. அது போல மானிடச் சமுதாயத்தில் ஒர் உறுப்பு இயங்காது போனாலும், சமுதாய இயக்கம் முழுமையாகாது.” 490. “நோயுற்றால் காட்டும் அக்கறையை நோயுறாது வாழும் நெறியில் யாரும் காட்டுவதில்லை.” 491. “முன்னேற்றத்தன்மை உடைய வாழ்க்கை வேண்டும் என்ற விருப்ப ஆர்வம் இல்லாதாருக்கு வழங்கப்படும் எந்த உதவிகளும் பாழுக்கிறைத்தன வாகவே முடியும்.” 492. “வாழ்க்கையில் அறநிலைகளைப் பற்றிக் கவலைப்படாதார், கடவுள் வழிபாட்டில் காட்டும் ஆர்வம் பயன் தராது.” 493. “அமைதி என்றால் சண்டையற்ற தன்மை என்றுமட்டும் கருதக்கூடாது. நல்லெண்ணத்தின் அடையாளம் உடன்பட்ட கொள்கைகள் இணக்கமும், ஒத்துழைப்புத் தன்மையும் வாய்ந்த செயற்பாடுகள் பொருந்தினாலேயே அமைதியாகும்.” 494. “ஆன்மாவினிடத்தில் ஒளிரும் அறிவை, உடல் ஆதிக்கம் செய்ய அனுமதித்து விட்டால் அழிவு தானே வந்துவிடும்.” 495. “பழக்கங்கள் என்பன உயிரை அடிமைப் படுத்துகின்ற, உடலுக்கு வாய்ப்பான கருவிகள்.” 496. “உடல் அடம் செய்தால், அதனை அடக்க நோன்பிருக்கலாம்; கால்நடை யாத்திரை மேற்கொள்ளலாம். ஆனால் உடலை அடக்கும் சக்தியற்றவர்களும் அறிந்தே மோசடி செய்பவர்களும் பாட மறைப்பிற்காக யாத்திரை செய்கின்றனர். பாபங்கள் கடவுளால் மன்னிக்கப்படுபவையல்ல.” 497. “உணர்ச்சி, சூழ்நிலையின் ஆற்றலால் தோன்றுவது: அறிவொடு தொடர்பில்லாதது. உணர்ச்சி பெரும்பாலும் மிருகத்தன்மையுடையது. அறிவார்ந்த உணர்வுகளே வாழ்க்கைக்கும் பயன் தரும்.” 498. “இறைவன் பலதரம் அவதாரம் எடுத்ததன் நோக்கம், மனிதனை மீட்பதற்காக மட்டுமல்ல. மனிதனுக்கு வாழ்க்கையின் இயல்புகளை வாழ்ந்து காட்டிக் கற்பிப்பதற்காகவேயாம்.! அதுமட்டுமல்ல. அவனுக்கு மனிதர்களுடன் வாழ்வதில் அவ்வளவு ஆனந்தம்.” 499. "உணவில் பல்வகை பொருள் சேர்ப்பதற்குக் காரணம் ருசிக்காக மட்டுமல்ல. பல்வகை ஊட்டங்கள் உடலியக்கத்திற்குத் தேவைப்படுகின்றன. உணவுப் பொருள்களில் எந்த ஒரு உணவிலும் உடலைப் பூரணத்துவத்துடன் இயக்கப் போதிய சக்தியில்லை. அதனால் பல்வகை உணவு, தேவை. 500. “மனிதனை ஆட்கொள்ளும் நம்கடவுளுக்குப் பல உருவங்கள் தேவையில்லை. ஆனால் கடவுள் தன் விருப்பப்படி உலகை இயக்குவதில்லை. ஆட் கொள்ளப்படும் உயிர்கள் வேண்டுவதை வேண்டிய வாறு வழங்கி ஆட்கொள்ளும் இயல்பினன். ஆதலால், இறைவனுக்குப் பல வடிவங்கள் வந்தன.” 501-600 501. “பரிசுகளுக்காகக் காரியங்கள் செய்வது என்பது இரண்டாம் தரமே!” 502. “திறமைக்கு மாற்றாக நன்மை என்ற ஒன்றைக் காட்டாமல், தீமையை மட்டுமே கூறுவது, பழி துாற்றலாகும்.” 503. “உடைமைகள் பயனுடையனவாதல், உடைமை பெற்றோரின் செயல்திறத்தைப் பொறுத்தேயாம்.” 504. “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, காங்கிரஸ் எதிர்ப்பைத் தவிர, வேறு கொள்கையில்லை என்றாகி விட்டது.” 505. “கல்வியறிவில் கேள்வியறிவு உயர்ந்தது; கேள்வியறிவிலும் பட்டறிவு உயர்ந்தது.” 506. “ஒருவன் வீட்டுக்குக் கொள்ளி வைக்கிறான் இன்னொருவன் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏன்? கொள்ளி வைக்கப் பெறும் வீடு தனக்குப் பிடிக்காத கட்சிக்காரன் வீடு. இந்த அளவுக்குக் கட்சிப் பகை வளர்ந்துவிட்டது.” 507. “பரபரப்பு நிறைந்த வாழ்க்கை, காரிய சித்தியைக் கெடுக்கும்.” 508. “முகத்தில் மண்டியுள்ள வேண்டாத ரோமங்களைக் கூட, தண்ணீர் தடவி மெள்ள மழித்துத்தான் ஆகவேண்டும். அதுபோலத்தான் தீமையை மெள்ள மெள்ளப் பக்குவப்படுத்தித்தான் நீக்க வேண்டும்.” 509. “இன்று மத இயக்கங்களும் அரசியல் கட்சிகளைப் போல, கட்சி-பிரதி கட்சி மனப்பான்மையில் தான் இயங்குகின்றன.” 510. “செய்யும் வேலையைச் சுவைத்து கலை உணர்வுடன் பயனுணர்வுடன் செய்யாது போனால் அந்த வேலையில் குறையிருக்கும். போதிய பயன் இருக்காது.” 511. “எந்த ஒரு செயலிலும் அந்தரங்கமான ஆன்மாவின் முத்திரை பதியச் செய்தால் பொலிவு இருக்கும்.” 512. “தேரின் அச்சுக்கும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள தூரம் அளவாக இருந்தால் தேர் சீராக ஒடும். ஆன்மாவின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உடலின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் வாழ்க்கை என்ற தேர் சீராக ஒடும்.” 513. “திறமை மிகுதியும் இல்லாதாரே பெருமைக்குப் போட்டி போடுகின்றனர்.” 514. “திருக்கோயில் தேர் இழுவையில் உள்ள ஆர்வம்போல் சமுதாயத் தேரையும் இழுத்து, இன்ப நிலையில் நிறுத்த முயற்சித்தால் நல்லது.” 515. “வாழ்ந்து கொண்டிருக்கிறபோது, யாரும் ஆலோசனை கூறார். வீழ்ந்து படுத்துவிட்டால் ஆளுக்கொரு ஆலோசனை சொல்லிப் பைத்தியக்காரத் தனத்தை வளர்ப்பார்கள்.” 516. நூற்றுக்கணக்கான பேர் தேரிழுத்தாலும் ஒரு சிறு முட்டுக் கட்டையையும் சமாளித்து இழுக்க முடியாமல் தவிக்கின்றனர். அதுபோலத்தான் பலர் கூடி வாழ்ந்தாலும் பணி செய்யும் பாங்கில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்க மறுக்கின்றனர்." 517. “தொண்டும், துணிவும் இடைவிடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை.” 518. “ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளிகள் கண்டுபிடித்த பாதுகாப்பு முயற்சியே இனாம்; தருமம் முதலியன.” 519. “கடின உழைப்பே, உரிமையின் தாய்.” 520. “முறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் மேல், மாடி காட்டுவது எளிது. அதுபோல வளர்ந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியை எளிதாக்கும்.” 521. “பிரச்சாரம் வலிமையான கருவி. இந்த பிரச்சாரக் கருவியின்மையால் மானிடச் சாதிக்கு நலம் பயக்கும் இயக்கங்கள் தோற்று, மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்றுவிட்டன.” 522. “மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்று வருவதன் விளைவுகளை கொடிய வறுமையினாலும் கெட்ட போலி உலகத்தின் இயக்கத்தாலும் காண முடிகிறது.” 523. “கடவுளைக் கண்டது மாதிரி”-இது ஒன்று முகமன் அல்லது நடிப்பு அல்லது அறியாமையின் வெளிப்பாடு என்ற சூழ்நிலைகளில் சிக்கியவர்கள் கூறுவது." 524. “பெரியார்-கலைஞரின் கடுமையான பார்ப்பன எதிர்ப்பு-அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐக் கொடையாகத் தந்துவிட்டது.” 525. “துறத்தல் என்பது பெண்ணை மட்டுமல்ல; ஆணவத்தைக் கூர்மைப்படுத்தி வளர்க்கும் அனைத்தையும் துறத்தலே துறவு.” 526. “வாழ்விலேயே இயல்பாக”நான்" “எனது” என்ற முனைப்புக்கள் அற்று வாழ்தலே துறவு." 527. “இன்று நாட்டில் துறவிகள் இல்லை. ஆசையில் எல்லாம் மோசமான ஆசை”தனிமுடி கவித்து அரசாள்வது“-இந்த ஆசைக்கு அடிமையானவர்களே இன்றைய துறவிகள்; மடாதிபதிகள்.” 528. “சமயம், தத்துவமாக இருந்தவரையில் விபத்தில்லை. அது என்று நிறுவனமாக அமைந்ததோ அன்றே அது மனிதக் குலத்திற்குக் கெடுதல் செய்யத் தொடங்கிவிட்டது.” 529. “ஜனநாயக அரசுகள் கூட்டத்தையும் கூக் குரலையும் கண்டு அஞ்சுகின்றன.” 530. “நம்முடைய அரசுகள் மக்களுக்குத் தேவையானதைச் செய்வதற்குப் பதிலாக மக்கள் ஆசைப் படுவதையே செய்கின்றன.” 531. “திட்ட முதலீட்டுச் செலவுகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் வகையில் அரசுகள் ஊதாரித் தனமாக இருக்கக்கூடாது.” 532. “கோழைக்கு தைரியசாலி என்றும், முட்டாளுக்குத் தான் அறிஞன் என்ற எண்ணமும் வந்து விட்டால் அவனைத் திருத்த இயலாது.” 533. “சமயங்கள் மாறுபடா சமயவாதிகள் மாறுபடுவர்.” 534. “திருக்குறளைச் சமயச் சார்பான நூல் என்று கூறுவதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் அதனைச் சமயச் சார்பற்ற பொதுமை நூல் என்றே கூறி வரவேண்டும். இன்று பொதுமை உணர்வே தேவை.” 535. “மனத்திற்கு நல்ல பற்றுக் கோடு தராவிட்டால் அது சைத்தானைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொள்ளும்.”வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு." 536. “தவறுகள் செய்வது குற்றமன்று. தவறுகளை நியாயப் படுத்துவதே குற்றம்.” 537. “வெற்றிகள் பொருந்திய காரியங்களைச் செய்யாது தோல்விகளைத் தழுவி அதற்குச் சமாதானங்கள் சொல்லிக் கொண்டிருப்பது முறையன்று.” 538. “பொறிகள், அறிவின் வாயில்கள். அறிவின் வாயில்கள், தூர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” 539. “மண்ணிலிருந்து மனிதரை விண்ணுக்கு ஏற்றுவது சாதனையல்ல. மண்ணை விண்ணகமாக்குவதே சாதனை.” 540. “கடவுளின் விருப்பம்; தான் தொழிற்படுவது மட்டுமல்ல; மானுடம் வெற்றி பெறவேண்டும் என்பதே கடவுளின் திருவுள்ளம்.” 541. “தன்னை வென்ற போதே மானுடம் வெற்றி பெறும்.” 542. “விதியின் பிழை!” என்று இராமன் தன்னம்பிக்கையின் காரணமாக விதியின் மீது பழி சுமத்துகிறான்." 543. “புலால் வழியதான போர் வீரம் ஏற்பு உடையதல்ல. கற்ற, கேட்ட அறிவால் உருவாகும்.” த-5 அறிவும்; வீரமும் ஏற்புடையதல்ல. நீதியும் அருளும் சார்ந்த வீரமே வீரம் இதுவே ஏற்புடையது." 544. “இறைவனுக்கும் உயிருக்குமுள்ள இடை வெளியை நீக்கி இசைவிப்பது - இசை.” 545. “தமிழர்கள் விநோதமானவர்கள். பாராட்டுவதைப் பின்பற்ற மாட்டார்கள்.” 546. “சிந்தனை, நினைப்பு, சொல், செயல் - இவை ஒத்திருப்பின் அருள் பழுத்த வாழ்வு கிட்டும்.” 547. “பாட்டையும் பாட்டுடைப் பொருளையும் அனுபவித்துப் பாடும்பொழுது மனிதனின் நிலை உயர் கிறது.” 548. “வள்ளலார் ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவும் படிமுறையில் வளர்ந்ததாகும். இன்றைய உலகத்திற்குத் தேவையான வள்ளலார், கடைசியாக வளர்ந்த வள்ளலாரேயாம்.” 549. “பொது நெறிக்கும், மனித நேயத்துக்கும் வள்ளலார் செய்த தொண்டு போற்றத் தக்கது.” 550. “திட்ட முதலீடு இல்லாச் செலவுகள் நெடிய நோக்கில் வறுமையையே தரும்.” 551. “சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளும்; நிலப் பிரபுக்களும் கூட வயிற்றுக்குச் சோறு போடத் தவறுவதில்லை.” 552. “அறியாமையில் உழல்பவர்களுக்கு நன்றும் தீதும் பிரித்தறியத் தெரியாது.” 553. “தமிழினம், சிந்தனையால் உயர்ந்ததுதான். ஆனால், வாழ்க்கையில் அப்படியில்லை.” 554. “ஐ.நா.சபையில் பேசுவதே ஒரு அனுபவம். குற்றம் சாட்டப்படாத நாடுகளே இல்லை. ஆனால், நாகரிகப் பொலிவு இருக்கும்.” 555. “நான்கு திசையறிவும் கலக்கும் பொழுதே மனிதன் பூரணத்துவம் அடைகின்றான்.” 556. “கலை, கலைக்காக அல்ல; வாழ்க்கைக்காக.” 557. “உறவுகளைப் பராமரித்தல் ஒரு கடமை. இதைச் சரியாகச் செய்யாமையே பல இழப்புகளுக்குக் காரணம்.” 558. “காலதாமதமாக நிகழ்ச்சிகளுக்குப் போதல் தவறுமட்டுமல்ல, வெட்கப்படவேண்டிய ஒன்று.” 559. “செய்யவேண்டியவைகளை வரையறை செய்து கொள்ளாவிட்டால், செயல் பயன்தராது.” 560. “விவகாரப் புத்தியுடையவர்கள் தவறுகளுக்கு வருந்தமாட்டார்கள். சட்டங்களும் நியாயங்களும் பேசுவார்கள்.” 561. “முழுமையாக அனுபவிக்கப்படாதவை எல்லாம் மேலும் மேலும் ஆசைகளை வளர்த்து அலைக்கழிக்கும்.” 562. “வைத்தியர் ஆலோசனை நல்லதே. ஆனால் பின்பற்ற ஆரம்பித்தால் மனம், உடல் பக்கமே வேலை செய்யும்.” 563. “உடலுக்கு பயன்படாத கழிவுப் பொருள்களும்கூட நிறுவனத்திற்குத் தேவையே!” 564. “சுவையுள்ளன உடலுக்கு நலம் தருவதில்லை. அதுபோல, ஆசைகளுக்கு உகந்தனவும் மகிழ்ச்சியைத் தரா.” 565. “புதிய தடம் காண்பது எளிதன்று. ஆனால் காண்பதில்தான் மனிதனின் வெற்றி இருக்கிறது.” 566. “வாழ்க்கையை வென்றவர்களுக்கே தனிமை நல்லது. வாழ்க்கையில் வெற்றி பெறாதவர்களுக்கு தனிமை கேடே செய்யும்.” 567. பலருக்குத் தனிமை இருளை விடக் கேடு செய்யும். சிலருக்கோ ஒளி பொருந்திய சூழ்நிலையை வழங்கும். “இஃது அவரவர் வாழ்நிலையைச் சார்ந்தது.” 568. “வாழ்க்கையை வென்றவர்களுக்கு ஒய்வு பயன்தரும். மற்றவர்களுக்கு ஒய்வும் ஒரு உபத்திரவமே.” 569. “மற்றவர்களிடமிருந்து பெருமையால் உயர்ந்து விடுவதும் உபத்திரவமே. ஏனெனில்செய்யும் தவறுகளைக் கூட சுட்டிக் காட்ட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.” 570. “நோய் நீக்கக் கூடியதே. ஆனால் நோய் நீக்கத்திற்கு முயற்சியில்லாமல் படுக்கையில் கிடப்பவர் சோம்பலை விரும்புகிறார்கள் என்பது பொருள்”. 571. “மக்களுக்கு ஆரவாரத்தில் ’உள்ள விருப்பம் அமைதியில் இல்லை.” 572. “மக்களுக்குத் திருவிழாக்களில் உள்ள ஈடுபாடு வழிபாட்டில் இல்லை.” 573. “ஏழைகள், தன்னம்பிக்கையை இழந்து செல்வத்தை நம்புவார்கள்.” 574. “ஆபத்துக் காலத்திற்குக் கூட அரசுகள் ஏழைகளைப் பொறுத்தவரையில் கடினமாகத்தான் இருக்கின்றன.” 575. “மனிதனை வளர்க்காத எந்தச் செயல் முறையும் பயன்தருவன அல்ல.” 576. “தர்மம்-அறம் முதலியன நிலவுடைமைச் சமுதாயத்தின் பயனற்ற சொற்கள்.” 577. “ஒரு மனிதன் பிறிதொரு மனிதனுக்கு இயல்பிலேயே கடமைப்பட்டிருக்கின்றான் என்பதே உயர்வுள்ள சமயக் கருத்து.” 578. “பயத்திற்குக் கடவுளும், அன்புக்கு மனித குலமும்.” 579. “குறித்த கால எல்லையில் கடமைகளை முடித்துவிடுவது பலவகையில் நன்மை. காலத்தால் பண்டங்கள் மட்டும் கெடுவதில்லை. மனிதர்களும் கெடுவார்கள்.” 580. "மக்களாட்சியின் சின்னம் தேர்தல் மட்டு மல்ல. அரசின் செயற்பாடுகளில் மக்கள் தாமே வலிய மேற்கொள்வதுமாகும். 581. “மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாலே நல்லாட்சி அமையும்.” 582. “மக்களுக்காக அரசு அமைந்திருக்கிறது. அரசின் செயற்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்ற உணர்வும் மக்களிடத்தில் வளராது போனால் மக்களாட்சி முறை வெற்றி பெறாது.” 583. “படித்த பெண்களிடத்திலும் பயம் தெளியவில்லை.” 584. “வெற்றி பொருந்தியவாறு வாழ்ந்து முடிக்காது போனாலும் மற்றவர்கள் தயவில் கடைசிப் பயணத்திற்குக் கொட்டு முழக்கு கிடைக்கும்.” 585. “தொடர்ச்சியான செயற்பாடே காரிய சாதனை”. 586. “காலத்தின் அருமைக்கேற்ப செயற்படுதலே முதற்பணி. அதற்குபின்தான் வசதிகள்!” 587. “இன்பக் காதல் வாழ்க்கை உடலுறவில் மட்டும்தான் இருக்கிறது என்ற அறியாமை உள்ள வரையில், குடும்ப நலத்திட்டம் நிறைவேறாது.” 588. “ஆண் வர்க்கத்தின் எடுப்பான சமூகப் பின்னணி கொஞ்சம்கூடக் குறையவில்லை. அதனால் பெண்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை.” 589. “எதையும் நெறிமுறைப்படுத்தி இயக்கக் கூடிய இறைமைத் தன்மை உடைய அரசு, முறையானதாகவும் வலிமை உடையதாகவும் அமையாவிடில் எதுவும் சரியாக நடக்காது.” 590. “எல்லாப் பிரிவுகளையும் விட, அரசியல் பிரிவு அதிகத் தீமையைத் தரும்.” 591. “எந்த ஒன்றும் அதாவது, பேச்சு, எழுத்து, சமயம்-இவைகள் பிழைப்புக்கு என்ற நிலை வந்து விட்டால் அவை மக்களுக்குப் பயன்படாது.” 592. “இல்லறத்தில் வாழ்வோர் பற்றுக்கள் உடையோர் என்றும், துறவறத்தில் வாழ்வோர் பற்றற்றவர்கள் என்றும் கருதக்கூடாது. தன் சாதியைக் கூட துறக்காத துறவிகள் நமது நாட்டில் உண்டு.” 593. “புரோகித சமயத்தால் மனித உலகத்திற்கு ஒருபோதும் நன்மையில்லை.” 594. “இந்திய நாட்டை அடிமைப்படுத்தியதில் ஆங்கிலேயர்களுக்கு இருந்த பங்கைவிட, இந்திய மதப் புரோகிதர்களுக்குக் கூடுதலான பங்குண்டு.” 595. “நாட்டில் விஞ்சிய நிலையில் வளரும் பண ஆசை குறைந்தால்தான் அறிவு வளரும்; திறன் வளரும்.” 596. “பெரியவர்கள் செய்யும் தவறுகள் கட்டாயம் பாராட்டப் பெறும். இதுதான் இந்த உலகத்தின் விநோதமான போக்கு.” 597. “ஆபாசம் என்பது காணப்பெறும் பொருளில் இல்லை. காண்பவர் கருத்தில் உள்ள குறை பாடேயாம்.” 598. “தன்னம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு எதுவும் துணையில்லை.” 599. “உயர் குறிக்கோள் இல்லாத வரையில் தவறுகள் திருந்தா.” 600. “தாய்மொழி வழிக் கல்வி சிந்தனையைத் தூண்டி வளர்க்கும்.” 601-700 601. “தாய்மொழிக் கல்வி, கற்ற அறிவைப் பன்மடங்கு விரிவாக்கும்.” 602. “பழந்தமிழரின் கட்டுமானக் கலைக்கு, தஞ்சைப் பெருவுடையார் கோயில் எடுத்துக்காட்டு.” 603. “பழந்தமிழரின் வாழ்வில் தண்ணீர்நிர்வாக்க் கலை பொருந்தியிருந்ததற்கு, கரிகாலன் கட்டிய கல்லணை எடுத்துக்காட்டு.” 604. “தட்ப வெப்பங்களைச் சமநிலைப்படுத்தி வாழ்ந்தமைக்கு, சிலம்பில் வரும் ஏழுமாடக் கூடம் சான்று.” 605. “தன்னலம் சார்ந்த வாழ்க்கைக்கு தூண்டுகோல் தேவையில்லை.” 606. “நோயே படுக்க வைத்துவிடும். சோம்பேறிகளுக்கு நோய் வந்தால் எளிதில் போகாது; நோயும், சோம்பலும் உடன் பங்காளிகள்.” 607. “கடின உழைப்பும் .ெசல்வமும் கூட்டாளிகள்.” 608. “அற்பர்களிடத்தில் அவர்கள் தவிர்க்க முடியாது வேண்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் வர அனுமதிக்கக்கூடாது. அப்படி வந்துவிட்டால் அவர்கள் பெரிய மனிதர்களாகி விடுவார்கள்.” 609. “அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி இருத்தல்கூடாது.” 610. “அரசுக்குரிய வரியைக் கொடுப்பதை ஒரு அறவழிப் பணி என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாக வேண்டும்.” 611. “ஒழுங்கமைவுகள் இல்லாத எந்தப் பணியும் நிறைவான பயனைத்தராது.” 612. “முறைப்படுத்தப் பெற்ற பணிகள் ஒரு போதும் வெற்றியைத் தராது போவதில்லை.” 613. “தன்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் பயன்படமாட்டார்கள்.” 614. “நட்பு-உறவு என்பதும் நோய் வராமலும் மேலும் வளரத்தக்க வகையிலும் பராமரிக்கப் பெற வேண்டிய ஒன்றே!” 615. “தன்னை வளர்த்துக் கொள்வதே வெற்றி வாய்ப்புக்குரிய ஒரே வழி.” 616. “பிறர் தோளில் நின்று பிடிக்கும் வெற்றிகள் நிலையான பயனைத் தரா.” 617. “அகந்தை அறிவை மயக்கும்; அடக்கம் அறிவை விரிவாக்கும்.” 618. “வழி, செல்லும் வழியிலேயே செல்லும், அதுபோல, வரலாறு செல்லும் வழியிலேயே செல்வது அறியாமை. வரலாற்றை நெறிப்படுத்திச் செலுத்த வேண்டியது அறிஞர்களின் கடமை.” 619. “காதல் மனமக்கள் மகப்பேற்றினை விரும்புவதுபோல, அறிஞர்கள் சமுதாய மாற்றத்தினை விரும்ப வேண்டும்.” 620. “நிலஉடைமை மீதுள்ள பற்று, உற்பத்தி ஆவேசமாக மாற வேண்டும்.” 621. “மிகச் சாதாரணமான மனிதர்களே ஆர வாரம் செய்கின்றனர். இவர்கள் கரையோரக் கடலில் மிதக்கும் நத்தைகள்; முத்துக்கள் அல்ல.” 622. “செயல்கள் செய்வதைவிட, அச்செயல்கள் வழி, பயன் காண்பதே பெருமை.” 623. “அரசியல் அதிகாரப்பசி, மனிதனை கள்ளை விட கொடுமையாகக் கெடுக்கும், இந்தப் போதைக்கு ஆளாகக்கூடாது.” 624. “எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் ஏழைகளுக்குரிய பங்கை எடுக்க விரும்புவதில் பின்தங்கியதில்லை.” 625. “பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டால் தான் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.” 626. “உடலுறுப்புக்களில் கை, வயிறு என்பன தொடர் செயற்பாட்டினதாகத் தேக்கமில்லாமல் செயற் பட்டால்தான் உடல் நலம். அதுபோல ஒரு நிர்வாகத் தின் அனைத்துறுப்புக்களும் செயற்பட்டாலே நலம் வந்தமையும்.” 627. “மனதில் உறுத்தக் கூடிய எதையும் உரியவர்களிடம் சொல்லித் தீர்வு காண்பதே எதிர் விளைவு களைத் தீர்க்கும்.” 628. “தன்னை வளர்த்துக் கொள்ளாமல் மற்றவர்கள் வாழ்வதில் அழுக்காறு கொள்வது வாழும் நெறியன்று.” 629. “திட்டமிட்ட எந்தச் செயலும் நிறை நலன் தரும்.” 630. “படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களிடையே நாகரிகத்தில் பெரிய வேறுபாடில்லை.” 631. “ஒழுங்குகளை கடைப்பிடித்தலே வெற்றிகள் அனைத்திற்கும் அடிப்படை.” 632. “அவியலில் பல பொருள்கள் கலந்து தம் முள் சுவைகளைப் பரிமாற்றம் செய்துகொண்டு அதே போது தனித்தன்மையையும் இழக்காமல் இருப்பது போல் சமுதாய அமைப்பும் இருக்கவேண்டும்.” 633. “நேருஜி இருந்த இடத்தில் மற்றொரு வரை வைத்துப் பார்க்க இயலவில்லை.” 634. “சடங்குகளினால் விளையும் பயன்கள் யாதொன்றும் இல்லை. ஆனால், உணர்வைத் தூண்ட சடங்குகள் துணை செய்யும்.” 635. “மனிதர்களைத் திருத்தக் கட்டுப்பாடுகளால் இயலாது. மடை மாற்றங்கள் தேவை.” 636. “தொடர்ச்சியான செயற்பாடே பயனுடையது.” 637. “ஆண்களின் ஆதிக்கம் தலையெடுத்த பிறகு பெண்ணைப் பொருளாக்கினர்.” 638. “பெண்மை அருளும் தன்மையுடையது; அரவணைக்கும் தன்மையுடையது; பொறுப்பேற்கும் நெறியுடையது.” 639. “கருவை வளர்த்து உயர்நலம் சேர்த்து பிறப்பிக்கும் பெருந்தவம் பெண்பால் அமைந்ததே. அதுவே பெண் உயர்ந்தவள் என்பதற்குச் சான்று.” 640. “மனிதன் வாழ்க்கையின் கரையோரங்களைக் கடந்து ஆழ்நிலைப் பகுதிக்குச் சென்றாலே முழுமை யடைவான்.” 641. “தெப்பம் கையகத்ததாக இல்லாமல் போவதிலிருந்து பாதுகாக்கக் கரையில் நிற்பவர் கயிறு கட்டிப் பிடித்துக் கொள்வர். அதுபோல நாம் திசை தெரியாமல் போய்விடாதிருக்கக் கடவுளிடத்தில் நம்மை கட்டிப் போட்டுக் கொள்ளவேண்டும்.” 642. “தீய பழக்கங்களால் கெடுவதறிந்தும் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற முயலாதது இரங்கத்தக்கது.” 643. “தெப்பத்திற்கும், தெப்பக்குளத்தின் தண்ணீர் மட்டத்திற்கும் உள்ள இடைவெளி அளவை விட கம்பு நீளமாக இருப்பின் அக்கம்பு தெப்பத்தைத் தள்ளப் பயன்படாது. அதுபோல நிர்வாக அமைப்பை விட நிர்வாக இயந்திரம் பருத்துவிடின் நிர்வாகத்தை இயக்க உதவி செய்யாது.” 644. “ஒளி நிறைக் கதிரவனைக் கூட, நில உருண்டையின் நிழல் படிந்து மறைக்கிறது. அது போல, பேராற்றல்களும் கூட, தற்சார்பின் காரணமாக மறைந்து போகிறது.” 645. “நாதம்-இதயத்தினில் இயங்கும் மெல்லோசை, இதனை சுரப்படுத்துவது நாதசுரம்.” 646. “மணிவிழா இரண்டாவது சுற்றுக்கு ஆயத்தமாவது.” 647. “கண்ணால் பார்க்காத வேலை பயன் தராது.” 648. “இன்றைய இராம - இலக்குவர் வி.ஜி. பன்னிர்தாஸ், சந்தோஷம் சகோதரர்கள்.” 649. “ஆன்மா-உயிரே முதல். இந்த முதலைப் பெருக்கி வளர்க்கவே உடல் முதலிய அனைத்தும்.” 650. “மனிதகுலம் என்ற ஒருமை ஆத்மா. இந்த ஆத்மாவை அனைவரும் வளப்படுத்தவேண்டும்.” 651. “இழிவானது என்று கருதப்படுபவைகளை நாடகங்களில் காட்டக்கூடாது,” 652. “படித்தவர்களின் தவறுகளாலேயே வரலாறு கீழ்மைப்படுகிறது.” 653. “படித்தவர்கள் படிப்பிற்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொள்ளாது போனால் படிப்பினால் பயன் இல்லை.” 654. “தனிமனிதனை உருவாக்குவது அவனுடைய வாழ்காலத்தின் சமுதாய அமைப்பே.” 655. “முன்னேற வேண்டும் என்ற பசித்துடிப்பு இல்லாத சமுதாயம் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முன்னேறாது.” 656. “முன்னேற்றத்தின் முதற்படி ஆர்வத் துடிப்பே!” 657. “நடையில் வலக்கால் - இடக்கால் ஒத்திசைந்து நடப்பதுபோல, நிர்வாக அமைப்பு ஒத்திசைந்து இயங்கவேண்டும்.” 658. “செய்ய முடியவில்லை” என்று திட்ட மிடவே பயப்படுகிறவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்." 659. “பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு வழுக்கல் மரம். இதில் கவனமாக ஏறவேண்டும்.” 660. “வேலையைச் செய்யாதவர்கள், வேலை பறிபோவதை விரும்பமாட்டார்கள்.” 661. “உடலுக்குச் சலுகை தரலாம், உயிர்ப் பாதுகாப்புக்கு முரண் இல்லாமல்! அதுபோல, சமுதாய நலனுக்கு விரோதமில்லாமல் சலுகை காட்ட வேண்டிய அவசியமிருந்தால் சலுகை காட்டலாம்.” 662. “ஏழ்மை திடீரென வந்ததன்று. பலவித மான கேடுகள் முதிர்ந்த நிலையில் ஏழ்மை ஆகிறது.” 663. “பலவிதமான உணர்வுகளின் தொகுப்பே நல்வாழ்க்கை.” 664. “சிறியவர்கள் முரட்டுத்தனத்துக்கே கட்டுப்படுவார்கள்.” 665. “எதிர்மறை இயக்கங்கள் ஆக்கப்பணிகள் செய்ய இயலாது.” 666. “சட்டங்களில் உள்ள ஒட்டை வழித் தப்பித்து ஓடினால் ஓடுபவனைக் குறை சொல்லக் கூடாது. சட்டத்தையே குறை சொல்லவேண்டும்.” 667. “எப்படியோ மனிதர்கள் அவர்களைச் சுற்றியே வட்டமிடுகிறார்கள்! மற்றவர்களைப் பற்றிக்.” கவலைப்படுவதாகக் கூறுவதுகூட தன்னை வளர்த்துக் கொள்ளத்தான்!" 668. “வயிறாரச் சாப்பிட விரும்புகிறவர்கள் உடலார உழைக்க முன்வரவேண்டும்.” 669. “உழைக்காமல் உண்பவர்கள், மற்றவர் குருதியைக் குடிப்பவர்கள்.” 670. "காற்று அடிக்கும் திசையில் மரம் சாய்ந்தால் மரம் விழும். காற்றை எதிர்த்து நின்றால் வாழும். அதுபோல் சூழ்நிலைகளைச் சார்ந்தே வாழ்கிறவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். சூழ்நிலைகளை எதிர்த்து மாற்ற முனைபவர்களே வாழ்வார்கள். 671. “கவர்ச்சியில் மயக்குபவவை நன்மை செய்தல் அரிது.” 672. “குறிக்கோள் தழிஇய வாழ்க்கை இருந்தாலே திட்டமிடும் மனப்போக்கு தோன்றும்.” 673. திட்டமிடாத செயல்முறைகள் முழுப் பயனைத் தரா." 674. “செல்வத்தின் ஊற்று நிலமே!” 675. “பிறர் பணத்துக்கு, செலவுக்குத் திட்ட மிடுபவர்கள் எண்ணிக்கை மிகுதி.” 676. “காற்று வீசும்பொழுது தலை தெறிக்கச்சுற்றும் மரங்கள் பலமற்றவை. அதுபோல சோதனைகள் வந்துற்ற பொழுது அலமருகிறவர்கள் பலமற்றவர்கள்.” 677. கழிவுகளும்கூட, பொருளுற்பத்தி சாதனங்களே!" 678. “தன் முனைப்புடையவர்கள் காரியங்களை விட்டுவிடுவர்.” 679. “உயிர் வாழ்வில் உள்ள ஆசையே நோய்களை வளர்க்கிறது; பாதுகாக்கிறது.” 680. “காரியம் ஒன்றுபோலத் தோன்றும். ஆனால், அதன் காரணங்கள் ஒன்றல்ல; பலவேயாம்.” 681. “அழுக்காறு நுண்மை வடிவத்தில் இருந்தாலும் ஆற்றலைக் கெடுக்கும்.” 682. “மூளைச் சோம்பல் செயல்திறனைக் கெடுக்கும்.” 683. “காலத்தின் விளைவுகளையெல்லாம் அளந்து எண்ணி அனுபவிப்பவர்கள் காலத்தை அளந்து பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள்.” 684. “வளர்ச்சியில்லாத அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இன்று ஒழுக்கக் கேட்டை-முறைகேடான அதிகாரப் பிரயோகத்தை தேசீய மயப்படுத்தி விட்டார்கள்.” 685. “இன்றைய அரசியல் கட்சிகள்-தேர்தல் இயக்கங்களே! அரசியல் இயக்கங்கள் அல்ல!” 686. “இன்றைய சமுதாய அமைப்பில் உடல் வலிமைமே ஆதிக்கம் செய்கிறது. அறிவறிந்த ஆளுமையல்ல.” 687. “ஒரு நொடிப் பொழுது வாழ்க்கை நின்றாலும் பல நாள்களின் முன்னேற்றம் தடைப்படும்.” 688. “விரைவு மிக்க இயந்திர கதியில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியர்கள் ஆமை வேகத்தை மாற்றிக் கொண்டார்களில்லை.” 689. “அரசாங்கம் வேலைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமல்ல. மனிதர்களேதான் வேலைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.” 690. “ஆசைகாட்டி வாங்குவன எல்லாம் ஒரு வகையான சுரண்டலேயாம்.” 691. “வெள்ளாடு வேளாண்மைத் தத்துவம் சொல்வது போல, சில பத்திரிக்கைகளைப் படித்த அளவிலேயே சிலர் விமர்சனப் புலிகளாகிவிடு கின்றனர்.” 692. “அணைக்கப்படும் பாங்கைப் பொறுத்தே அதிகாரம் நிலைபெறும்; அடிப்பதில் அல்ல.” 693. “சுகத்தை அனுபவிக்கும் மனப்போக்கு வந்த பிறகு உழைப்பாளியாதல் அரிது.” 694. “விமர்சனத்திற்கு வெட்கப்படுபவர்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள்.” 695. “விமர்சனமும் வளர்ச்சியும் காரண காரியங்கள்.” 696. “இன்றைய அறிவு நல்கும் கருவிகள் அனைத்தும் அறிவு என்ற பெயரில் அறியாமையையே வளர்க்கின்றன.” 697. “நிலத்தினை முழுதும் பயன்படுத்தும் ஆற்றலே இன்னும் மனிதனுக்கு வரவில்லை.” 698. “இயற்கையை வெல்லும் முயற்சியில் மனிதன் ஈடுபடவில்லை. இயற்கையை ஒட்டித்தான் வளர்ந்து வருகின்றான்.” 699. “இன்று சாதாரணமானவை என்று கருதப் பெறுபவை அனைத்தும் உயர்ந்தவைகளேயாம்.” 700. “விதிகள் - அச்சமின்றி நடக்க உதவுவன. விதிகள் - அச்சமின்றிக் காரியங்கள் செய்ய உதவுவன.” 701-800 701. “இராமன் தனக்காக நடந்தான். கண்ணன் மற்றவர்களுக்காக நடந்தான்.” 702. “எனக்குத் தெரியும்” என்ற முடிவே அறியாமையின் முகடு." 703. “ஒருவரிடம் இல்லாத ஒன்றை, அவசியத் தேவை கருதிப் பெற்றால் கையூட்டு; கைமாற்று; தேவையில்லாத ஒன்றைப் பெற்றால் அது அன்பின் நடைமுறை.” 704. “பராமரிக்கப் பெறாத உறவுகள் பழுதுறும்.” 705. “பாஞ்சாலிக்கு - கடைசியில் அழைத்த பிறகு, கண்ணன் உதவி செய்ததற்குக் காரணம் பாஞ்சாலியின் தன்வினை முயற்சி முதிர்ச்சியடையட்டும் என்பதனாலேயாம்.” 706. “தன்வினை முயற்சி முதிர்வடையாதவர்களிடம் பிறவினை முயற்சிகள் தாக்கங்களை ஏற்படுத்திப் பயன்தராது.” 707. “தங்கள் மனைவி, மக்கள், சுற்றம் என்று சுற்றுபவர்கள் உயர்தரக் குணமுடையவராக இருத்தல் இயலாது.” 708. “என்ன-எதற்காகச் சொல்லியிருப்பார் என்று ஆய்வு செய்யாமலே ஒருவர் மீது ஆத்திரப் படுபவர்கள் அகம்பாவிகள். உதவி செய்வதைக் கடமையாக வைக்காமல் கட்டுப்பாடாக ஆக்குவார்கள்.” 709. “பயனுடையதாக ஒருவர் செய்யும் வேலை அமையாதுபோனால், அது விபசாரத்திற்குச் சமம்.” த-6 710. “ஒழுங்குப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் ஒன்று தவறு செய்பவர்கள். அல்லது சோம்பேறிகள்.” 711. “எந்த ஒன்றும் திருப்பித் தரப் பெறாது போனால் உலகில் வறட்சி தோன்றும்.” 712. “பணம் வருவதும் போவதும் போதாது. ஒவ்வொரு காசும் வரும்பொழுது நற்பண்புகளுடன் அதாவது அறிவறிந்த ஆள்வினை-அன்பு முதலியவற்றுடன் வந்தடைய வேண்டும்.” 713. “தமிழின ஒருமைப்பாடு காண்பதே சிலம்பின் நோக்கம்.” 714. “பெருமை வந்துறும்பொழுது சிலர் அடங்காமல் அகந்தை கொள்வர். இது உறவை, ஒருமைப்பாட்டைக் கெடுக்கும்.” 715. “வள்ளுவம், சிலம்பு முதலியன கூறும் உயர்ந்த நோக்கங்களைச் சமுதாயம் முறியடித்துவிட்டது.” 716. "சட்டங்களுக்குத் திருத்தங்கள்-சமுதாயத் .ேதவைகலளாக அமையவேண்டும். இதைக் கண்காணித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவர சட்ட ஆலோசனை ஆணைக்குழு தேவை. 717. “வாழ்க்கையின் துணை நலமாக அமையும் பெண், அனுபவப் பொருளாகவும் பயனாகவும் இருக்கிறாள்.” 718. ஞானம் இல்லாதபெண்கள் உள்ள சமுதாயம் சீர்கெடும்." 719. “மக்களைத் தகுதியுடையவர்களாக வளர்க்கும் வரை நம்பிக்கையும் கண்காணிப்பும் இணைந்தே இருக்கவேண்டும்.” 720. சமுதாய மாற்றங்களை, சீர்திருத்தங்கள் மூலமே செய்துவிட முடியாது. சீர்திருத்தம் என்பது புண் நாறாமலிருக்கப் புணுகு பூசுவது போலத்தான்; புண் ஆறாது." 721. “இந்திய சமூகம், நோய் நிறைந்த சமூகம். எந்த மருந்தாலும் நோய் தீரவே இல்லை. புரட்சியே தேவை.” 722. "ஆதி திராவிடர்களுக்கு என்று தனித் தொகுதி அமைப்பு தவிர்க்கப்பட்டது. இந்தியாவிற்கு நன்மையாயிற்று. 723. “காதல் செய்யும் வாய்ப்பு இருந்தாலே சமூகத்தில் எல்லாத் தீமைகளும் போய்விடும்.” 724. வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும். 725. “உத்தரவாதம் வழங்காத அரசு உள்ளவரை எந்த ஒரு ஒழுக்கமும் மக்கள் மன்றத்தில் கால் கொள்ளாது.” 726. படிப்பதனால் மட்டுமே நற்பண்புகள் வந்து விடுவதில்லை. சமூக நிகழ்வுகள் தாம் பண்பாட்டுக்குக் களன்." 727. “வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும்.” 728. “சமூகத் தகுதிகளே இன்றுள்ள பிரச்சினை. தீண்டாமையல்ல.” 729. “இந்திய சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே தீண்டாமை, சாதி வேற்றுமை முதலிய தீமைகள் படிந்துள்ளன. இந்தத் தீமைகளை புரட்சியின் மூலமே மாற்ற இயலும்.” 730. “நடந்து போனதற்குக் கவலைப் பட்டுப் பயனில்லை. இனி நடக்க வேண்டியதற்கே கவலைப் படவேண்டும்”. 731. “பிறப்பின் சார்பால் வரும் குணக்கேடுகளை நீக்கவே கல்வி-கேள்வி” 732. “ஏதாவது ஒர் உயர் நோக்கம் வாழ்க்கையை ஆக்கிரமிக்காதவரை குற்றங்களினின்று விடுதலை பெற இயலாது.” 733. “வேலை நடக்கும். ஆனால், நடந்த வேலைகளைக் கொண்டு பணி செய்தார் என்று முடிவு செய்யக்கூடாது. அவர் வாழும் காலத்தின் தேவை ஆற்றல்-வாய்த்த கருவிகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் அளவை செய்ய வேண்டும்.” 734. “ஏழைகளாக வாழும் மக்களை அறிவுணரச் செய்வது கடுமையான பணி.” 735. “இயற்கையின் நியதி வழி, கொண்டும் கொடுத்தும் வாழும் முறையே அமைந்துள்ளது. மரங்கள் மண்ணிலிருந்து தண்ணிர், உரம் எடுத்துக் கொண்டு வளர்கின்றன. பின் அவை பழுத்த இலை களை மண்ணுக்கு உரமாகத் தந்துவிடுகின்றன” 736. கொடுக்காமல் எடுக்கும் வாழ்க்கை சுரண்டல் வாழ்க்கை" 737. “வறுமையை அனுபவித்துப் பழகிப்போன வாழ்க்கை” 738. “வாழ்தல் வேறு வாழ்க்கையின் நோக்கம் வேறு. வாழ்தலுக்குரிய முயற்சிகள் நோக்கங்களைச் சார்ந்தவையாகா” 739. “ஒழுங்கு முறையில்லாத செயற்பாடுகள் பயனைத் தரா.” 740. “அறிவார்ந்த வாழ்க்கையில் பின்தங்கிய நிலை, பண்பாட்டுக் குறைவைக் காட்டும்.” 741. “ஆசைகள் நிறைவேறாமை, வாழ்க்கையின் தொடக்கங்களாக அமையும்.” 742. “செலவழிக்கப் பெறாத காசுகளும் வரவேயாம்.” 743. “பயமும் சமூகத் தீமையே.” 744. "பொதுமையில் உருவாகும் நன்மைக்கு ஈடு இல்லை. 745. “பெரும்பான்மை உணர்வின் வழிப்பட்ட ஆதிக்கநிலை உணர்வுநிலை எல்லாச் சமூகத்தினருக்கும் உண்டு.” 746. “எந்தப் பணிக்கும் முதற்பணி மக்களைப் படிப்பிக்கும் பணியேயாம்!” 747. “பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லர்; பழகாதவர்கள் எல்லாம் பகைவர்களும் அல்லர்.” 748. “உடல் நலத்திற்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை. அதுபோலவே உயிர் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை.” 749. “ஒருவருக்கொருவர் மாறிக் கவலைப் பட்டாலே புதிய சமுதாயம் தோன்றிவிடும்.” 750. “வாழத் தெரியாதவர்களுக்குச் செய்யப்படும் உதவி பாழுக்கிறைத்ததாகும்.” 751. “ஒருவரின் இருப்பு உணரப்படும் நிலையே வாழும் நிலை.” 752. “உழைத்துப் பெறாத செல்வம் அருமையாகக் கருதப் பெறமாட்டாது.” 753. சாக்கடை முதலியவற்றின் தேக்கத்தைக் காத்திருக்கும் கொசு போல, சமூக நிகழ்வுகளில் ஏற்படும் தீமைகளைக் காத்திருப்பர் கயவர்." 754. "கூட்டுக்கடை வைத்திருப்பவர் திடீரென்று கூட்டுக்காரருக்குத் தெரியாமல் தனிக்கடை வைப்பது ஐயத்திற்கு இடமளிக்கும். 755. “நாத்திகத்திற்கு வள்ளுவம் ஆணை நிற்காது.” 756. தாம் செய்யும் பணிகளை மதிப்பீடு செய்ய மறுப்பது, பணிகளைப் பயனுறச் செய்ய விரும்பாமையே யாகும்." 757. “பணிகள் பகிர்வே நிர்வாகம்; பகிர்வுகள் பொறுப்புடன் நிறைவேற்றப்படாது போனால் நொய்ம்மையே தோன்றும்.” 758. “நாட்டு மக்களைத் தொழிலாளர்களாகவே ஆக்கவேண்டும்; கடன்காரர்களாகவும் வியாபாரிகளாகவும் ஆக்கக்கூடாது.” 759. “உற்பத்தியொடு தொடர்பில்லாத எதுவும் புண்ணியமான கடமையாகாது.” 760. “நல்ல பணி, விளம்பரம் இல்லா மலர்த் தோட்டம்.” 761. “ஒழுங்குப்படுத்தப் படாத செயலால் ஒன்பது நடக்க வேண்டிய இடத்தில் ஒன்றுதான் நடக்கும்.” 762. “நிதானமற்றவர்கள், மற்றவர்களின் மானத்தை, கீர்த்தியைப் பழிக்கின்றனர்.” 763. “எந்த ஒன்றும் தவிர்க்க இயலாதது என்று ஆகிவிட்டால் அந்த அளவில் அடிமைத்தனம் வந்து விடுகிறது.” 764. “நல்லவர்களையே மெளனம் கவர்ச்சிக்கும், மற்றவர்களை ஆர்ப்பரவமே கவர்ச்சிக்கும்.” 765. “நாகரிகம் சீர்குலைந்த சமுதாயத்தில் பொய்ம்மையே வாய்மை.” 766. “உலகியல் பெயரால் அநீதிக்கும் உடன்பட வேண்டி வருகிறது.” 767. “பேய் அரசு செய்தால் பேரறமும் குன்று கிறது.” 768. “வாழ்க்கையின் தேவைகள் குறிக்கோள் ஆகா. வாழ்க்கையின் தேவைகளையும் கடந்தது குறிக்கோள்.” 769. “மனிதன் பழக்க வலையினின்று மீள மறுக்கிறான்.” 770. “பிரிவினைகளும் ஒரு வகையில் தீண்டாமையே.” 771. “பணம் கொடுப்பதைவிட, பணத்தை சம்பாதிப்பவனாக ஆக்குதல் உயரிய பணி.” 772. “மதம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனுட்டானத்தில் இருந்தால் எப்போதும் அழியாது.” 773. “நல்லவர்களுக்கு இருக்கும் ஆற்றல், படைக்கும் ஆற்றல். கெட்டவர்களுக்கு இருக்கும் ஆற்றல், அழிக்கும் ஆற்றல்.” 774. “நன்மையைச் செய்தால் மட்டும் போதாது. யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவர்கள் நன்மையை அறிந்துகொள்ள வேண்டும்.” 775. “எல்லாரும் புகழை-பெருமையை விரும்புகிறார்கள். அதைத் தாராளமாக மற்றவர்களுக்கு வழங்குக.” 776. “நல்லவண்ணம் மக்கள் முன்னேற்றத்திற்குப் பணி செய்யும் நிறுவனத்திற்கு ஆதரவு இருப்ப தில்லை.” 777. “அரிமா சங்கம், சுழற்குழுக் கழகம் போன்ற பொது அமைப்பில் இருப்பவர்கள், பிரிவினைகளை வளர்த்து உறவைக் கெடுக்கும் சாதிச் சங்கங்கள், மத அமைப்புகளில் பங்கு பெறுதல் கூடாது.” 778. “இன்று எல்லா வகையான பணிகளிலும் சிறந்தது, மக்களிடத்தில் வாழ்வு விருப்பங்களையும் உரிமைகளையும் உணர்த்துதல்.” 779. “விளம்பரத்தாலோ, சலுகைகளாலோ பேச்சாலோ வாக்குகள் வாங்கப்படும் வரை மக்களாட்சி முறை சிறக்காது.” 780. “பணத்தின் அருமை அறிதல் வேறு. பணத்தின் மீது ஆசை வைத்தல் வேறு.” 781. “பணத்தின் மீது விருப்பம் கொண்டு, ஈட்டி, முறையாகப் பயன்படுத்துதலே நல்வாழ்க்கை.” 782. “உலக ஒருமை, பூத பெளதீகங்களால் ஏற்பட்டிருக்கிறதே தவிர, ஆன்மீக ரீதியாக ஏற்பட வில்லை.” 783. “அறிவியல் உலகத்தை இணைத்தது. உயிர்க்குலத்தை இணைக்கவில்லை.” 784. “மதம் இயக்கமாக-வாழ்க்கை முறையாக இருந்த வரையில் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பயன்பட்டது. மதத்திற்குத் தலைவர்களும் புரோகிதர்களும் உருவானார்களே அன்றிலிருந்து மதம், மக்களுக்கு நன்மை செய்யவில்லை. தீமையே செய்தது: செய்துவருகிறது.” 785. “மறந்தும் சிற்றெல்லைகளில் மனிதன் விருப்பம் கொள்ளக்கூடாது; விருப்பம் காட்டக்கூடாது. இது வளர்ச்சியை-ஆன்மாவின் விடுதலையை தடுக்கும்.” 786. “பொல்லாத மனிதன் உருவாக்கிய எல்லைகளின்று விடுதலை பெறுதலே உண்மையான விடுதலை.” 787. “நமது இரு செவிகள் ஒன்றையொன்று நோக்காது எதிர்த்திசையில் அமைந்திருப்பதின் நோக்கமே இரு பக்கங்களையும் கேள்என்பதற்காகவே.” 788. “அறிவார்ந்த அன்பே, வாழ்க்கைக்குப் பயன்படும்.” 789. “உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் மனித வாழ்நிலை உயர்ந்தது.” 790. “போர்க் கருவிகளின் வளர்ச்சியால் மனித நாகரிகம் பாழ்பட்டது. மனிதகுலம் அழிவின் எல்லைக்குச் சென்று கொண்டிருக்கிறது.” 791. “நாடு, மொழி, இனம், மதம் ஆகியனவற்றைக் கடந்தது ஒருமைப்பாடு.” 792. “ஒருமைப்பாடு அமையாத நாட்டில் வளமான வாழ்க்கை அமையாது.” 793. “சட்டத்தின் சில விதிகளை அமுல்படுத்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திற்கு வழங்கக்கூடாது.” 794. “சில சட்ட விதிகளை நீக்குதல் இயலாது. ஆனால், பயன்படுத்துதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.” 795. “இன்றைய அரசியலை, தன்னல நயப்பும் உணர்ச்சியுமே இயக்குகின்றன.” 796. “இந்தியாவில் தவறுகளைப் பொறுத்தல்ல, எதிர்ப்பு, இயக்கங்கள். பாதிக்கப்பட்டவர்களின் கூச்சல் போடும் திறமையைப் பொறுத்தது.” 797. “இந்திய முதலாளிகள் பிரிவினை சக்திகளை வளர்க்கின்றனர், ஏழ்மையின் துன்பத்தால் துயருறுவோன் புரட்சியில் ஈடுபடாமல் இருக்க” 798. “இந்தியாவில் கட்சிகள் வளர்ந்துள்ளன. அரசியல் வளர வில்லை.” 799. “மனிதனை, மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.” 800. “ஒருமைப்பாட்டுணர்வு என்பது தவத்தின் தவம்.” 801-900 801. “சின்ன சின்ன செய்திகளில் காட்டப் பெறும் அக்கறையே பெரிய பெரிய சாதனைகளைச் செய்ய உதவி செய்யும்.” 802. “அதிகாரம் உடையவர்கள் நன்கொடை கேட்டால் கூட அது நிர்ப்பந்தான்.” 803. “தீமைகள் கொலுவிருந்து பாராட்டுக்கள் பெறும் யுகத்தில் நல்லன நிகழ்தல் அருமை.” 804. “மருந்தாகப் பயன்படும் கோபம், தீதன்று. வரவேற்கத்தக்கது.” 805. “ஒவ்வொருவரும் தம் ஆற்றல் முழுவதையும் உழைப்பாக மாற்றினால் வளம் பெருகும்.” 806. "கூட்டுறவு, பொருளாதார வளர்ச்சி இயக்கம் மட்டும் அல்ல. அஃது ஒர் ஆன்மீக வளர்ச்சி இயக்கமும் ஆகும். 807. “எங்கு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப் பெறவில்லையோ, அங்கு உழைப்பு முழுமையாகாது, காலக்கேடும் உழைப்புக் கேடும் இருக்கும்.” 808. “உழைப்பு, உழைப்புக்காகவே-வேலை, வேலைக்காகவே என்று செய்தலே ஒழுக்கம்.” 809. “ஒழுக்கத்தின் தாய் நல்ல உழைப்பு.” 810. “அழுக்காறு, ஆணவப் போட்டிகள் ஆக்கத்தைக் கெடுக்கும்.” 811. “நிலம் உழைப்புக்கேற்ற பயனை ஒளிக்காமல் வழங்குகிறது.” 812. “பயன்படுத்தாத நிலை பாழ். பயன்படாத மனிதனும் பாழ்.” 813. “அர்ப்பணிப்பு நிலையில் வாழும் தாவர இனங்கள் போற்றுதலுக்குரியன.” 814. “வேளாண்மையில் நமது முன்னோர் பின் பற்றிய முறைகள் தீமை பயவாது, நலம் செய்தன: அதாவது இயற்கை உரங்கள் எதிர் விளைவுகளை உண்டாக்காது.” 815. “பணம்-ஊக்கத்திலும் பண்பாட்டுக்குரிய அற ஊக்கம் உயர்ந்தது.” 816. “உற்பத்தி நுகர்வுக்கே இலாபத்திற்கு அல்ல.” 817. “நோயின்றி வாழ, காய்கனிகளே சிறந்த உணவு.” 818. “மண்ணில் குறை இல்லை! எந்த மண்ணையும் மனிதன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.” 819. “மண்ணில் விளையும் பொருள்களில் மனிதனுக்குப் பயன்படாத கழிவுகளையே மண் விரும்புகிறது. கழிவுப் பொருள்களையும் ஆக்கமாக மாற்றும் ஆற்றல் மண்ணுக்கு இருக்கிறது.” 820. “மனிதரில் கடையாய மனிதரை மேம்பாடுறச் செய்தலிலேயே ஞானியின் அருமை வெளிப்படும்.” 821. “நிலம் சமூகத்திலிருந்து குறைவாகப் பெற்றுக் கொள்கிறது. நிறைய திருப்பிக் கொடுக்கிறது. இதுவே நியதி. மனிதன் சமூகத்திலிருந்து நிறைய எடுத்துக் கொள்ளவே விரும்புகிறான்.” 822. “பேணப்படுபவள் பெண்; மற்றவர்களைப் பேணிப் பாதுகாப்பவள் பெண்.” 823. மனிதன் எளிதில் மறக்க மறுக்கிறான், ஆனால் பல நன்மைகளை மறந்து விடுகிறான். நன்றல்லாததை மறக்க மறுக்கிறான்." 824. “பெண்களுக்கே, பெண்ணைப் பெருமைப் படுத்தத் தெரியவில்லை.” 825. “பெண்கள், தம் இனப்பகை உடையவர்கள்.” 826. “மாப்பிள்ளைக்கு (ஆணுக்கு) வாய்க்கும் மாமியார் நல்லவள்! ஆனால் பெண்ணுக்கு அப்படிப் பட்ட மாமியார் வாய்ப்பது அரிது.” 827. “மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. காரண, காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” 828. “மனிதன் தன்னுடைய பெரிய தவறுகளைக் கூட நியாயப்படுத்துகிறான். மற்றவர்களுடைய சிறிய பிழையைக்கூட பெரிதுபடுத்துகிறான்.” 829. “ஜனநாயகம் வெற்றி பெற அரசியல் வாதிக்குக் கொள்கை, கோட்பாடு உறுதி ஆகியன தேவை.” 830. “பெண் பெருமைக்குரிய பிறப்பு.” 831. “எதிர்பார்த்துச் செய்தல் என்பதே சிறந்த செயற்பாடு.” 832. “வைதீகப் பூசனையை விட, ஆயிரம் மடங்கு பயனுடையது அன்புவழிபாடு.” 833. “செய்தித் தாள்கள் தரும் செய்திக்ளைக் கொண்டு நன்மை, தீமைகளை முடிவு செய்ய இயலாது; கூடாது.” 834. “குடியாட்சியின் சிறப்பு, குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள நெருக்கமான உறவுகளைப் பொறுத்ததேயாம்.” 835. “அரசாங்கத்தின் நிதியைப் போற்றத் தெரியவிட்டால் வலிமையான அரசாங்கம் அமையாது.” 836. “நன்மைகளே கூட பிறிதொரு காலத்தில் தீமையாக மாறி விடுவதுண்டு. விழிப்பு தேவை.” 837. “கூட்டுறவு இயக்கங்கள், பஞ்சாயத்துக்கள் நாட்டை உயிர்ப்பு நிலையில் வைத்துக் கொள்ள உதவி செய்வன.” 838. “விவசாயிகளுக்குக் கடன் வஜா! மறுபுறம் கள்ளுக்கடை வசூல்!” 839. “எளியர், உயர்வு பாராட்டுதலும், மிக உயர்வுடையோர் தம்மை எளியராக்கிக் கொள்ளுதலும் உலகத்தில் காணப்பெறும் காட்சி.” 840. “உறவை வளர்த்துப் பேணுதல் பெருவாழ் வினைத் தரும்.” 841. “புகழில் மயங்காத மானிடர் இல்லை. புகழ்வதில் தாராளமாக நடந்து கொள்வது உயர்வதற்கு வழி” 842. “உடலோடு முரண்பட்டு விளையாடினால் நோயினால் தண்டித்து விடுகிறது.” 843. “இழிவாக எண்ணி அலட்சியம் செய்தால், எதிர்விளையாக அறிவைத் தருகிறது, உடல்.” 844. “ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பயனைக் கணக்கிடல் உழைப்பினை ஊக்குவிக்கும்” 845. “இந்திய வாழ்க்கையமைப்பில் ஏற்பட்டுள்ள சாதிப் பிரிவினைகள் எளிதில் நீங்காது. பிரிவினை வழிப்பட்ட பகையைத் தணித்தாலே போதும்.” 846. “இன்று பரஸ்பர நம்பிக்கையற்றவர்களே கூட்டாளிகள்.” 847. “அவரவர் வினைவழி அவரவர்” என்ற விதி இம்மியும் பிறழாமல் நிகழ்வதை எஸ்.டி.எஸ்-எம்.ஜி.ஆர். மோதலில் உய்த்துணர முடிகிறது. 848. “தகுதி உடையவர்களைவிடத் தகுதியில்லாதவர்களே உயர விரும்புகின்றனர்.” 849. “ஒவ்வொரு பழக்கமாக நற்பழக்கங்கள் வாழ்க்கையில் உறுதிப்பட்டால்கூட எளிதில் வெற்றி பெறலாம்.” 850. “பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்.” 851. "பணத்தின் மதிப்பு, அல்லது விலை ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதித் திட்டமிடுதல் கூடாது. பண வீக்கம் கவனத்தில் இருக்கவேண்டும். 852. “உற்பத்தியாளனாக மாறினால் ஒழிய வாழ்க்கைத் தரம் நிலைத்து நிற்காது.” 853. "ஒருவரை மறைத்து ஒருவர் சொல்லும் சொற்களைக் கேளாதொழிக! 854. “தற்சலுகையற்ற சுயமதிப்பீட்டிலும் சிறந்த ஆசிரியன் இல்லை.” 855. “உணர்வு பூர்வமான செயல்முறைப்பட்ட சமூக வாழ்வு தோன்றினால் சமுதாயம் நன்றாக அமையும்.” 856. “ஆரவார அரசியலில் உள்ள கவர்ச்சி ஆக்கப் பணிகளுக்கு இருப்பதில்லை.” 857. “விநாடிகளைக் கணக்கிட்டுக் காரியங்கள் செய்தலே வாழும் முறை.” 858. “அன்றாட வாழ்க்கையில் திருக்கோயிலையும் சமூகத்தையும் இணைத்து வாழ்தலே சிறந்த வாழ்வு.” 859. “உயிர்ப்பும் உணர்வும் செயலில் கலக்குமானால் வெற்றி உறுதி.” 860. “திட்டமிடும் பொழுதே எதிர்கால வரலாற்றுப் போக்கை உய்த்துணர்ந்து திட்டமிடல் நல்லது.” 861. “தன் காரிய நோக்குடைய சுயநலமிகள், அடுத்தவர் வீட்டை இடித்துத் தன் வீட்டைக் கட்டுவர்.” 862. “நடைமுறைச் சில்லறைச் செலவுகளில் கவனம் மூலதனத்தைக் காப்பாற்ற உதவும்.” 863. “கண்ணுக்கும் கருத்துக்கும் வராது மறைந்து கொண்டிருக்கும் பணிகளைத் தேடிச் செய்வதேபணி.” 864. “உன்னிடமுள்ள பணிகளில் நீ செய்ய வேண்டிய நிலையானதைத் தேர்ந்தெடுத்து உடன் செய்.” 865. “பிறர் சொல்வதைக் கேட்டுச் சிந்திக்காதவர்கள் மூர்க்கர்களாகவே இருப்பர்.” 866. “நமக்கு வாய்ப்புக் கொடுக்காமலே நம்மீது பழி சுமத்துபவர்கள் உண்டு. விழிப்பாக இரு.” 867. “நமது செயற்பாட்டில் - மற்றவர்கள் உணர்வு பூர்வமாக ஈடுபாடு கொள்ளச் செய்வதிலேயே வெற்றி இருக்கிறது.” 868. “நல்லவர்கள் வல்லவர்களாக இருந்தால் தான், காரியம் நிகழும்.” 869. “சாதாரணமாக மக்கள் எளிதில் உண்மை நிலைக்கு வருவதில்லை.” 870. “சுவை, உண்ணும் கிளர்ச்சியைத் தருகிறது. ஆனால், நன்மை பயப்பதில்லை.” 871. “புலால் உணவைத் தவிர்க்கக் கூடிய வழிபிரான்னிகளை விருப்புடன் வளர்த்தலேயாம்.” 872. “ஊக்கத்துடன் செய்யப் பெறாத வேலை, அரை வேலை.” த-7 885. “ஏழைகள், எளிதில் எதையும் விற்பர்.” 886. “இன்றைய ஆசிரியர்களுக்குப் பொறுப்பு உணர்வு வந்துவிட்டால் நாட்டின் முன்னேற்றம் உறுதி.” 887. “ஜனநாயக அமைப்பு என்பது கலந்து பேசுவது என்பது. ஆனால், அந்த அமைப்பிற்க்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே பலர் உள்ளனர்.” 888. “இனியன பேசுதல் எல்லாவற்றையும் கூட்டுவிக்கும்.” 889. “காலத்தை ஒழுங்குப்படுத்தி - காலத்திற்குரிய பணிகளையும் ஒழுங்குப்படுத்தினால் நிறையப் பணிகளைச் செய்யலாம்.” 890. “படைப்பாற்றல் உடைய கல்வியே கல்வி.” 891. “கற்றுக் கொண்டே இருப்பது அறி ஆற்றினைத் துார்க்காமல் தந்து கொண்டிருக்கும்.” 892. “தொழிற் புரட்சி ஏற்படும் நாடே வளரும் - வாழும்.” 893. “புகழ்ந்தே காரியம் சாதித்துக் கொள்ளும் மக்கள் புத்திசாலிகள்.” 894. “தற்காலிகத் தேவைகளை ஒத்திப் போட்டால் நீண்ட காலத் தேவைகளை அடையலாம்.” 895. “செல்வத்தை முதலீடாக்கும் முயற்சியே முயற்சி.” 896. “சமூகத்தில் தாய்க்கு இருக்கும் பொறுப்பு உணர்வு, தந்தைக்கு வருவதில்லை.” 897. “அசட்டுத் துணிச்சல் - அவலத்தையே தரும். அறிவாராய்ந்த துணிவு வெற்றிகளைக் குவிக்கும்.” 898. “பிறருக்குக் கொடுக்காதே எனக்குக் கொடு என்பவன், தேவைக்குக் கேட்கவில்லை, அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே கேட்கிறான்.” 899. “விருப்பத்துடன் உழைத்தலே உயர் வாழ்வுக்கு அடித்தளம்.” 900. “சமுதாய மாற்றங்கள் நிகழ்த்தும் ஆற்றலே பயனுடைய ஆற்றல்.” ##901-1000 901. “இன்றைய தேர்தல் முறையில்-புத்தரால் கூட லஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது.” 902. “எந்த ஒரு தீமையும் - மருந்தெனத் தொடங்கிப் பழக்கமாகிவிட்டனவே யாம்.” 903. “வெளிப்படையாக நமது உறவைச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்கள் சுய லாபத்துக்காக மட்டுமே உறவு காட்டுகிறார்கள்.” 904. “ஆசிரியர், மாணாக்கரை அறிவால் வளர்க்கும் கடமை உடையவர்.” 905. “சூழ்நிலைகள் மீது பழி போடுகிறவர்கள் செயலற்றவர்கள்.” 906. “சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உத்தி.” 907. “பலன் எதிர்பார்க்காமல் செய்யும் பணியே பணியாகும்.” 908. “மூன்றுகால் ஒட்டம் என்று ஒன்று உண்டு. உடன்பாடில்லாதவரை அனைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது போன்றது.” 909. “வாழ்க்கையில் தடைகள் ஏற்படுவது வளர்க்கும் அருளிப்பாடேயாம்.” 910. “படித்தவர்களே சமூகநிகழ்விற்குப் பொறுப் பேற்கிறார்கள். இன்றைய சமூக நிகழ்வு நன்றாக இல்லை. ஆதலால், ஆசிரியர்கள் தம் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை.” 911. “ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பது உண்மையல்ல.” 912. “கடவுள் நம்பிக்கை, வாழ்க்கைக்குத் துணை செய்யாத பொழுது நாஸ்திகம் தோன்றுகிறது.” 913. “நாஸ்திகம் கடவுள் இல்லை என்பதில்லை. ஆரிய மத நூல்களை ஆராய்ந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம்.” 914. “மாணவர்களிடத்தில் தாயினும் இனிய பாசம் இல்லாதவர்கள் ஆசிரியப் பணியில் வெற்றி பெற இயலாது.” 915. “நல்ல நூல்களை கற்பது அவசியம்.” 916. “கீதை, வர்ண வேற்றுமைகளைக் காப்பாற்றும் நூல்.” 917. “பாரதம் ஆதிபத்திய சண்டையை விவரிக்கும் நூல்.” 918. “எரியாத வேள்வித் தீயை முயன்று எரிய வைத்து மனநிறைவு கொள்வது போல, சமுதாய சீர்திருத்தத்திலும் முயற்சி தேவை.” 919. “சடங்குகளால் எளிதில் மக்கள் கூடுகிறார்கள்.” 920. “காலந் தாழ்த்தி வருவது கெளரவம் என்றான பிறகு நாடு உருப்படாது.” 921. “இறையருளால் கூட்டுவிக்கும் மனம். ஆதலால் திருமணம்.” 922. “மாயா வாத, பெளத்த, சமணக் கலப்பிற்குப் பிறகே தமிழர் வாழ்க்கையில் வாழ்க்கையைப் பற்றிய இழிவு உணர்வு தோன்றியது.” 923. “தந்தை-தாயார் கொண்டாடுவது பிறந்த நாள். மனைவி கொண்டாடுவது திருமண நாள். சமுதாயம் கொண்டாடுவது பயன் கண்ட நாள் அல்லது பொதுவாக இறந்த நாள்.” 924. “அரசியல்வாதிகள் சுற்றுலா வராத கிராமங்களில் வேலை செய்வது எளிது.” 925. “அண்ணா கையில் புதிய அ.தி.மு.க. கொடி. எத்தனை கொடிகளைத்தான் அவர் பிடிப்பார்!” 926. “பயிற்சியில் வளர்வது பண்பாடு.” 927. “பெண்களால் ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.” 928. “ஆணுக்கு அன்புடைய மாமனும் மாமியும் வாய்த்து விடுகிறார்கள்! பெண்ணுக்கு அப்படி வாய்ப்பதில்லை.” 929. “காதல் மலர்வதற்குரிய வாயில்கள் இன்று இல்லை.” 930. "ஒரு நிலைப்பட்டு ஒருவருக்குத் துணையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வது கற்புநிலை. 931. “சென்னை நகரத்தில் மட்டும் 119000 ஏழைகள் வாழ்கிறார்கள்”. 932. “அழிவு - கழிவு உலகத்தியற்கையன்று. எதையும் படைப்பாற்றல் உடையதாக்கலாம்.” 933. “நம்மைச் சுற்றியுள்ள உற்பத்தி சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்தும் பாங்கு வந்து விட்டாலே வளம் கொழிக்கும்.” 934. “அகத்தின் வறுமையே புறத்து வறுமையைப் படைக்கின்றது.” 935. “தேர்தலில் வெற்றி பெறுவதையே நோக்கமாக உடைய அரசியல்வாதிகள் நாட்டை உயர்த்த மாட்டார்கள்,” 936. “சலுகைகள் சமுதாயத்தை வளர்க்கும் சக்தியாகா.” 937. “தமிழினம், என்றும் ஒருமைப்பட்டல்லை.” 938. “உடன்பிறப்பு, இரத்தத்தின் இரத்தம் ஆகிய சொற்களை நிகழ்வுகள் பொருளற்றதாக்கி விட்டன.” 939. “ஒழுங்குகள் நலம் பயப்பனவேயன்றித் துன்பம் தருவன அல்ல.” 940. “விதி விலக்குகள் வினை விளைக்கலன்களேயாம்.” 941. “பிறர் வருந்த வாழ்தல் அறமாகாது.” 942. “கீழான மனிதர்களைக்கூட அங்கீகாரம் அளிப்பதன் மூலம் திருத்தலாம்.” 943. “படித்தவர்களின் பண்பாட்டால் பார் முழுவதும் திருந்திவிடும்.” 944. “மனிதனுக்கு இயற்கை வழங்கிய முதல் மூலப்பொருள் காலமேயாம். முதல் உற்பத்திக் கருவி உடலேயாம்.” 945. “இன்று தீய பழக்கங்கள் மூச்சுக் காற்றாகி விட்டன.” 946. “செயல்கள் பயன்தரா. செயல்களுக்குரிய நோக்கங்களே பயன்தரும்.” 947. “உணர்ச்சிகள் நீரிற்குமிழி; உணர்வுகள் அலைகள்; ஆர்வம் ஊற்று.” 948. “மனிதனின் முதல் நண்பன் சுறுசுறுப்பே.” 949. “ஒன்றுமே செய்யாதவனை விட, பயனற்ற வைகளைச் செய்பவன் பரவாயில்லை.” 950. “சமூகத்திடம் போகாதே; போனபிறகு தயங்காதே” 951. “உன்னிடம் மற்றவர்களைப் பற்றி குறை கூறுகிறவர்களிடம் விழிப்பாயிரு. இடம் கொடுக்காதே.” 952. “செல்வத்தைச் செலவழித்த வகையும், அளவும், உடனுக்குடன் பார்ப்பது வீண் செலவைத் தவிர்க்கவும், செல்வத்தைச் சேர்க்கவும், துணை செய்யும்.” 953. “பொருளுற்பத்திக் குணம் வளர்ந்தாலே வையகம் வளரும்; வாழும்.” 954. “உடல் தேவையை ஈடு செய்யும் வாயும் வயிறும் உலகமெங்கும் ஒரே நிலையினவாக அமைந்திருப்பதே சோசலிச சமுதாய அமைப்பின் நியாயத்தினை வலியுறுத்துகிறது.” 955. “உழைப்பில் பாதியே நுகர்தற்கு உரியது என்பதால் இரண்டு கை; ஒரு வயிறு.” 956. “பொறுப்பை உணர்த்துகிறவர்கள் பொதியைச் சுமப்பார்கள்.” 957. “தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் பகைமையில் கூட ஒருவர் ஒருவரை அழிக்க வாய்ப்பில்லாமல் தடுப்பதே அரசு.” 958. “இருபதாம் நூற்றாண்டில் நெருக்கடிகளை அரசின் துணை கொண்டு மாயாவாதம் தமிழ் நெறியை முறியடிக்கிறது.” 959. “அவரவர் நலனில் உள்ள அக்கறை அளவுக்கு, அவரவர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் பொது நலனில் அக்கரை ஏற்பட்டால் உலகு செழிக்கும்.” 960. “மரத்திலிருந்து கொய்து எடுக்கக்கூடாது, கனி. கொய்யக்கனி’யாயிற்று.” 961. “ஒவ்வொருவரும் தனித்தனியே அவர்கள் வழங்கும் அன்பை அறியவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். காலம், ஒத்துழைப்பதில்லை.” 962. “எதிர்ப்பு நல்லது; எதிரி நல்லதன்று.” 963. “தீமை செய்ய வலிமை அவசியமில்லை. சின்னச் சின்னப் பூச்சிகள் கூட நோயை பெருக்கு கின்றன.” 964. “உடல் வருந்த உழைத்தாலே, நோய், அணுகாது.” 965. “ஆங்கில வைத்திய முறையில் பத்தியம். இல்லை. பத்தியமில்லா வைத்தியம் நோயைத் தணிக்கலாம். நோயின் காரணங்கள் நீங்கா.” 966. “ஏழைகளுக்குத் துன்பம் பழகிப் போனதால் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்.” 967. “பணம் சம்பாதிப்பவர்கள் தம் காரியத்திலேயே குறியாக இருப்பார்கள்; நாம் ஏமாறக் கூடாது.” 968. “செல்வத்தின் அருமை தெரியாதவர்கள் செலவினங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.” 969. “சொன்னதைச் செய்யவே நபர்களைக் கானோம். சுய சிந்தனையுடையவர்கள் எங்ஙனம் கிடைப்பார்கள்?” 970. “கடனைக் கழிப்பது என்ற உணர்வில் செய்யப் பெறும் வேலை பயன் தராது.” 971. “மருந்துமலை, மருத்துவரிடம் சென்றது போல் சிவாச்சாரியார்கள் மந்திர மாயங்களுக்குச் செல்கின்றனர்.” 972. “கவலை’க்கு இடம் தருவது அழிவுக்கு வழி.” 973. “கரு உற்றிருக்கும் தாய், பிரசவ வேதனைக்கு ஆளானாலே குழந்தை பிறக்கும்; அதுபோல முன்னேற விரும்புகிறவர்கள் போராட்ட உணர்வுடன் கடுமையாக உழைக்கவேண்டும்.” 974. “வேலை வாங்குவதைவிட வேலை செய்வது கடினம்.” 975. “பெண் வலியவே அடிமையாகிறாள்.” 976. “வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள்.” 977. “மற்றவர் தொல்லை அறியாதவர்கள் மூடர்கள்.” 978. “காலத்தை அளந்து செலவழிப்போரே பணத்தை எண்ணி வாங்கும் உரிமையுடையவர் ஆவர்.” 979. “காலங்கடந்த கடமைகள் சுமையாகி விடும்.” 980. “இன்று பட்டங்களுக்கும் பண்பாட்டுக்கும் உறவில்லை.” 981. “திட்டமிட்டப் பணிகளுக்குச் செலவழித்தலே முறையாகும்.” 982. “முந்திரிக் கொட்டை போல் துருத்திக்கொண்டு முன்வருபவர்கள், கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.” 983. “காரிய சாதனையே சாதனை.” 984. “தன்னுடலுக்கு, தானே மருத்துவர்.” 985. “ஆகாததை அறவே மறந்திடுதல் நன்று.” 986. “சாதாரண மனிதன்கூட உடலுழைப்புக்கு கூச்சப்படுகிறான்.” 987. “பள்ளிக் கூடம், திருக்கோயிலைப் போல் பேணப் பெறுதல் வேண்டும்.” 988. “ஆசிரியர்-மாணாக்கர்களின் கூட்டு முயற்சியிலேயே கல்வியின் திறன் அமையும்.” 989. “வாழ்க்கை முழுதும் நூல் படிக்கும் பழக்கம் தொடரின், இன்பம் பயக்கும்.” 990. “மனப்பாடம் மட்டுமே கல்வி என்ற நிலை அமையின், சிந்தனை ஊற்று, தூர்ந்து போகும்.” 991. “நேரிடையாகக் கல்வி போதிப்பதைவிட, செய்முறைகள் மூலம் படிப்பித்தல் நல்லது.” 992. “எழுச்சி நிறைந்த படைப்பாற்றல் மிக்கதே கல்வி.” 993. “ஆசிரியர்களின் பொறுப்பின்மையினாலேயே, சமூக வரலாற்றில் தரம் குறைந்து வருகிறது.” 994. “மனிதனின் முதலும், முடிவுமான தேவை அறிவே.” 995. “படிப்பறிவை விட, பட்டறிவு அதிகப் பயன் தரும்.” 996. “புத்தகங்களிலும் போதனாக் கருவிகள் விலை மதிப்புள்ளவை.” 997. “வகுப்பறைக்குள் போதிப்பதைவிட வகுப்பறைக்கு வெளியே நிறைய கற்பிக்கலாம்.” 998. “உண்மையைக் கண்டுபிடித்தல் எளிதன்று.” 999. “சூழ்நிலைக்கு இரையாதல் விலங்கு இயல். சூழ்நிலையைத் தனக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப் போராடுதல் மனித இயல்.” 1000. “உடம்பிற்கு உழைப்பின்மை, நோய். உறவுக்கு, அழுக்காறு நோய்.” 1001-1100 1001. “ஒற்றுமை நல்லதுதான்! ஆனால், எதற்காக ஒற்றுமை? அடுத்த சமூகத்தின் மீது தாக்குதல் செய்ய ஒற்றுமை உருவானால் நன்றன்று. நாடு, ஊர் அளவில் ஒற்றுமை உருவாதலில் ஒரளவு நன்மை உண்டு.” 1002. “துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளாதவன் அறிவில்லாதவன்.” 1003. “பாரதம்” தொடர்கிறது ஒத்திவைப்பதில்." 1004. “கையூட்டுகள் கொடுத்து காரியம் சாதிக்கும் வசதியுள்ளவர்கள் உள்ளவரையில், பூட்டினை ஒழிக்க முடியாது.” 1005. “அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்பாக இயங்கினால் கையூட்டைத் தவிர்க்கலாம்.” 1006. “தேர்தலில் பணம் விளையாடுவதைத் தவிர்த்தாலே, நாடு வாழும்.” 1007. “அரசியல்வாதிகள் வாங்கும் இலஞ்சமே, நாட்டில் இலஞ்சத்தை வளர்க்கிறது.” 1008. “விலைவாசி ஏற்றம் அரசின் செயலின்மையைக் காட்டுகிறது.” 1009. “அன்று இராவணன் சீதையைத் தூக்கியது போல், சட்ட மன்ற உறுப்பினர்கள் தூக்கப்படுகிறார்கள்.” இல்லை, இராவணன் தூக்கிய சீதை பதிவிரதை, “சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படியல்லவே!” 1010. “மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசு இயந்திரத்தை பலவீனப்படுத்தக் கூடாது; அரசு அலுவலர்கள் மதிக்கப்படுதல் வேண்டும்.” 1011. “இன்று இந்தியாவில் 90% பேருக்கு வாழ்தல் குறிக்கோள் அல்ல. பிழைப்பு நடத்தவே விரும்புகின்றனர்.” 1012. “தடைகளைக் கடந்தும் தொழில் செய்யும் உணர்வு நிறைந்த உழைப்புக்குப் பெயர் முயற்சி.” 1013. “இன்றைய நாட்டில் அரசுக்கு உந்துசக்தியாக விளங்குபவர்கள் வியாபாரிகளே! அதனால் விலை ஏறுகிறது.” 1014. “வாழ்நாள் முழுதும் படித்தல் வேண்டும், இடையீடின்றிப் படித்தல் வேண்டும்.” 1015. “பொறுப்பை ஏற்கத் தயங்குகிறவர்கள் யாதொரு பணிக்கும் பயன்படமாட்டார்கள்.” 1016. “ஒழுங்கமைவு பெற்ற வாழ்க்கை வெற்றி.” 1017. “சமூக நலனுக்காகத் தன்னை அழித்துக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்.” 1018. "கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாத சமுதாயம் காணும் முயற்சி தேவை. 1019. “விலை போகிறவர்கள் உள்ள வரை துரோகம் ஒரு தொடர்கதை.” 1020. “கெட்டிக்காரத் தனத்தில் நூறு காரியம் செய்வதைவிட ஒரு நல்ல காரியம் இயல்பாகச் செய்வது பெருமைக்குரியது.” 1021. “தமிழின வரலாற்றில் இன ஒருமைப் பாட்டுக்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா ஒருவர் தான்.” 1022. மற்றவர்களைப் புகழும்பொழுது தன்னையும் இணைத்துக் கொள்பவர்கள், மற்றவர்கள் புகழ வாழ இயலாது. 1023. “ஒரு தலைவனுக்குச் சிறந்த நினைவு அவர்தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.” 1024. “நோய் இயற்கையன்று; செயற்கையே.” 1025. “தீய எண்ணங்கள் காலப்போக்கில் உடலின் செங்குருதியையே நச்சுத் தன்மை அடையச் செய்துவிடுகிறது.” 1026. “அன்பினால் நிறைந்த இதயம் உள்ளவர்கள், சிரித்து மகிழ்ந்து வாழ்வார்கள்.” 1027. “கடவுளை நம்பாமையே ஒரு பாவமன்று. மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத ஆசைகளே பாவத்தின் பாற்பட்டவையாகும்.” 1028. “மலருக்குக் கேடு செய்யாமல், தேனி தேனை எடுக்கிறது. அதுபோலச் செல்வத்தை ஈட்டதல் வேண்டும்.” 1029. “மதம், தொழிலாகவும் பிழைப்பாகவும் மாறியதன் விளைவு நாஸ்திகம்.” 1030. “நாள்தோறும் வாழ்பவர்கள் எளிதில் முதுமையடைவதில்லை. பலர் நேற்று மட்டுமே வாழ்ந்தவர்கள்.” 1031. “நல்ல சுற்றம் அமைதல், புகழ் மிக்க வாழ்வுக்கு அடிப்படை.” 1032. “ஒராயிரம் ஆண்டுகளுக்கு கூடத் தமிழ் மரபுகள் பேணமுடியாத அளவுக்குப் பலவீனப் படுகின்றோம்.” 1033. “சங்கரமடம், சமுதாய அளவில் மேவி வருவது, தமிழ் மரபு வளர்ச்சிக்குத் துணை செய்யாது.” 1034. “கீதையும் திருக்குறளும் நமது மறை என்று கூறுவது பேதைமை.” 1035. “மக்கள், இலக்கியம், கலை, இசைஇவற்றை அனுபவிக்கக் கற்றுக் கொண்டால் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.” 1036. "குடும்ப நலத் திட்டத்திற்கு செலவழிக்கும் தொகையை, கலை வளர்ச்சிக்குச் செலவழித்தால் நல்ல குடும்பம் இயல்பாகவே அமையும். 1037. “வைதீக பார்ப்பனிய சமயத்தினர் தம் கொள்கைக்கு மாறாகிய தேவாரங்களை மூடி மறைத்து விட்டனர்.” 1038. “இராசராசன் திருமுறைகளை மீட்டதின் மூலம் தமிழ் நாகரிகத்தையே மீட்டுக் காத்தான்.” 1039. “தாஜ்மகால், காதலி நினைவில் தோன்றியது. தஞ்சைப் பெரிய கோவில் மாதேவன் நினைவில் தோன்றியது.” 1040. “செய்திப் பரிமாற்றங்கள் அறிவை வளர்க்கும், நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும்; இழப்புக்கள் வராது தடுத்துவிடும்.” 1041. “திட்டமிடுதல் என்பது காலம், பொருள், ஆற்றலை முறைப்படுத்தி வீணாகாமல் தவிர்க்கவே.” 1042. “முன்னே புகழவேண்டும் என்று விரும்புகிறவர்கள், உண்மையில் புகழுக்குரியவர்கள் அல்லர்.” 1043. “செல்வத்தைத் தொடர்ச்சியாக ஈட்டும் பாங்கில் நிர்வகிப்பதே நல்ல நிதி நிர்வாகம்.” 1044. “துழ்நிலைகூடத் தற்சார்பைத் தோற்று விக்கும். சூழ்நிலையைச் சார்ந்த தற்சார்பு தவிர்க்க இயலாதது.” 1045. “மற்றவர்களுடைய பலவீனம், தனது பலம் என்று நினைப்பது தவறு.” 1046. “தமிழரசர்கள் ஆட்சியமைப்பை வலிமைப்படுத்த, கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பினார்கள்.” 1047. “நுகரும் பொருள்களாக, ஊதியம் வழங்கப்பெற்றால் உற்பத்திப் பெருகும்; பணவீக்கமும் குறையும்.” 1048. “செல்வம், செல்வாக்கு இரண்டும் ஏராளமான நண்பர்களைக் கூட்டித் தரும். இதனால் பயனில்லை. துன்பத்தில் துணையாய் அமைவோரே நண்பர்கள்.” 1049. “பொறுப்புடன் பணியினை ஏற்காதவரிடம் பணிகளை ஒப்படைப்பது தற்கொலைக்குச் சமம்.” 1050. “பிறர் முயன்று பெற்ற படிப்பினையின் வழி, பாடம் கற்றுக் கொள்பவர் எண்ணிக்கையே மிகுதி.” 1051. “பொருளாதார ஏழ்மைக்குக்குத் தாய் உழைப்பின்மையே!” 1052. “நல்வாழ்க்கையின் தேவைகளைக்கூடத் திட்டமிட்டு அடைய முயற்சிப்பார் இல்லை.” 1053. “எல்லாருக்கும் சொந்த வீடு கட்டிக் கொள்ள ஆசையிருக்கிறது. ஆனால் பொருள் ஈட்டும் ஆர்வமில்லை!” 1054. “கடந்த காலம் கடந்ததே. கவலைப்பட்டு பயன் இல்லை. இனிவரும் எதிர்காலம் நமது கையில் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படுவது பொருளற்றது. ஆதலால் நமது வசத்தில் இருக்கிற நிகழ்காலத்தைப் பற்றிக் கவலைப்படுக.” 1055. “மக்களுக்குப் பொருளின்மேல் ஆசையிருக்கிறது. ஆனால், உழைப்பின் மேல் ஆசை இல்லை.” 1056. “எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.” 1057. “சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்பவர்கள் தீவிர கட்சி சார்புகளை மேற்கொள்ளுதல் கூடாது.” 1058. “தலைவர் காமராசர் அவர்கள் தோற்ற 1967க்குப் பிறகே நாம் அரசியல் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. பாராட்டுதலுக்குரிய டாக்டர் கலைஞர் நம்மை மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்வதில் ஆர்வம் காட்டி உதவியபோது கூட, அரசியல் பணிக்கு அழைத்தாரே தவிர, கட்சி அரசியலுக்கு ஈடுபடுத்த விரும்பவில்லை.” 1059. “குறிக்கோள் வழிப்பட்ட செயற்பாடுகள் ஆழப்படும்பொழுது அகலம் குறைகிறது. இது விருப்பு, வெறுப்பின் பாற்பட்டதல்ல. இதுவே இன்றைய நமது நிலை.” 1060. “புதியன காணும் ஆர்வமே வளர்ச்சிக்கு வித்து.” 1061. “தன்னைச் சேர்ந்தாரைத் திருத்த இயலாமல் மற்றவர்கள் மீது சினமுறுதல் தவறு. செயலாண்மையற்ற நிலை.” 1062. “மக்களை வளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்துதல் முதற்பணி.” 1063. “மக்களின் அறியாமையை எதிர் நோக்கில் திருத்துதல் இயலாது. அவர்கள் மகிழும் உணவு, உடை, முதலியன வழங்கிடும் உடன்பாட்டுப் பணிகள் மூலம்தான் இயலும்.” 1064. “தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்வதில் வெற்றியின் இரகசியம் பொதிந்துள்ளது.” த-8 1065. “ஆரவாரமாக பேசுவது” - சுறுசுறுப்பான வாழ்க்கை என்று கருதுவது தவறு. செயற்பாட்டில் தான், சோம்பலின்மையைக் காண இயலும்." 1066. “ஒன்றை, கொள்கையென விவாதத்திற்கு வைப்பதே தவறு என்றால், கருத்து வளர்ச்சி ஏற்படாது.” 1067. “குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள் நல்லவர்களாதல் அரிது.” 1068. “தான் கொண்ட முடிவுகளையே வற்புறுத்த நினைப்பவர்களின் செவிப் புலன் வேலை செய்யாது.” 1069. “கூட்டு வாழ்க்கை சிறப்புற, மற்றவர் சொல்லுவதைத் தடையின்றிக் கேட்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடையிலாச் செவிகள் அமைந்துள்ளன.” 1070. "சில கூறுதலும் பல கேட்டலும் வாழ்க்கைக்கு நல்லது. 1071. “பொதுவாக மானுடச் சாதியின் அறிவார்ந்த பொறிகள் புலன்கள் அறிவார்ந்த நிலையில் இயங்காமல் நுகர்வு நிலையிலேயே இயங்குகின்றன.” 1072. “சிந்தித்தல், ஆய்வு செய்தல், கூறுதல் முதலியன விரைந்து நிகழவேண்டும் என்பதனாலேயே உடலமைப்பில் அறிவுப் பொறிகள். நீண்ட இடைவெளி இவைகளுக்கிடையில் இல்லை.” 1073. “வயிறும் பாலுறுப்புக்களும் இயங்கும் அளவுக்கு மூளை இயக்கம் பெறாதது மனித குலத்தின் குறையே.” 1074. “தட்ப வெட்ப நிலைகள் உடல் நலமுடை யோருக்குத் தீங்கு செய்வதில்லை.” 1075. “பிரிவினைகளும் வேற்றுமைகளும் உள்ள வரையில், மனிதகுலம் அமைதியாக வாழஇயலாது.” 1076. “குறுகிய பாதைகள் பயணத்திற்கு ஏற்புடையன ஆகா! அதுபோலக் குறுகிய நோக்கங்கள் வாழ்க்கைப் பயணத்திற்குப் பயன்தரா.” 1077. “உரிமையியல் சட்டம் அனைவருக்கும் ஒன்றாதல் நல்லது.” 1078. “இந்து சமுதாயத்தில் நிலவும் பிரிவினைகள் வழி, சிலர் ஆக்கம் அடைகின்றனர். அதனால், ஒன்று படுத்தும் பணி எளிதன்று.” 1079. “நமது சமுதாயக் கட்டமைப்பில் அஸ்திவாரம் சந்தேகம்.” 1080. “மகளிர், தங்களுடைய வாழ்க்கையில் பெறற்கரியது உரிமை என்று கருதிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும்.” 1081. “கல்வித் திறனும் பொறுப்பும் உடைய மாணவர்கள் பள்ளிக்கு வராமலே கற்றுக் கொண்டு விடுவர்.” 1082. “சுற்றுப்புறச் சூழ்நிலை சரியில்லை என்று கூறுகிறவர்கள் பேராட்ட உணர்வில்லாமல் பிழைப்பு நடத்துபவர்கள்.” 1083. “எதற்கும் சமாதானம் சொல்லமுடியும். ஆனால், ஏற்றுக்கொள்ள இயலாது.” 1084. “இன்றைய ஆசிரியர்களைப்போல மூளைச் சோம்பேறிகள் என்றும் இருந்ததில்லை,” 1085. “ஒரு செயலைக் கடமை உணர்வுடன் செய்தால் அது அழகாகவும் பயன்தரத் தக்கதாகவும் அமையும்.” 1086. “எளிதில் செல்வம் கிடைத்தால் உயிர் வளராது; தகுதி: பெறாது.” 1087. “துன்பம் நிறைந்த செயற்பாடுகளே பயனும் பண்பாடும் நிறைந்த வாழ்க்கைக்கு அடிப்படை.” 1088. “முழுக் கவனத்துடன் செய்யப் பெறாத பணிகள் உரிய மகிழ்வைத் தருவதில்லை.” 1089. “ஒவ்வொருவரும் அவரவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டால் முன்னேறலாம்.” 1090. “தேடும் பழக்கம் அறிவை வளர்க்கும். ஆள்வினை ஆற்றலைத் தரும்.” 1091. “செல்வத்தைச் செலவுக்காக என்று தேடுதல் கூடாது. இருப்புக்கு என்று தேடுதல் வேண்டும்.” 1092. “கெட்ட மனிதர்கள் எரிமலை போல உள் புகைந்து கொண்டே இருப்பர்.” 1093. “உடல், உயிர், அறிவு மூன்றும் சமநிலையில் வளர்ந்தாலே மனிதகுலம் மேம்பாடு அடைய முடியும்.” 1094. “உலகில் வறுமைக்கு காரணம் உழைப்பின்மையும் உழைப்புக்கு உரிய பாங்கின்மையுமே யாகும்.” 1095. “உத்தரவாதமுள்ள வாழ்க்கையிலேயே காதல் சிறக்கும்.” 1096. “மற்றவர்களிடம் பொறுப்புக் கொடுப்பது எளிது. ஆனால் பொறுப்பு ஏற்பதே முறை.” 1097. “சாம்பிராணிப் புகையை நுகர்ந்தால் கேடு: புகையின் மனத்தை மட்டும் நுகர்ந்தால் நலம்.” 1098. “பகுத்தறிவு, பேச்சுப் பொருள் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.” 1099. “எப்போதும் உழைப்புக்குரிய ஆயத்த நிலையில் இருப்பதே-விழித்திருத்தல்.” 1100. “பல நாள் உழாத நிலம் பாறையாகிறது. பலநாள் அறிவால் உழப்படாத மனிதர் புலன்கள் கல்லாகிவிடுகின்றன.” 1101-1200 1101. “சட்டத்தை எளிதில் விமர்சனம் செய்யலாம்; ஆனால் ஏற்று ஒழுகுதல் கடினம்.” 1102. “சட்டங்கன் நன்மையை வளர்க்கும் தன்மை உடையன அல்ல; தீமையை தடுக்கும் நோக்க முடையனவேயாம்.” 1103. “பூட்டுக்களை நம்புகிறவர்கள். மற்றவர்கள் யோக்கியத் தன்மையை நம்புவதாக நடிப்பது ஏன்?” 1104. “அன்பும், அறனும் கலவாத வாழ்க்கையில் பிறக்கும் குழந்தைகளை வளர்க்க, சிறந்த பள்ளிகளும்-ஊரும் தேவை.”? 1105. “ஆசைப்படுகின்றனர்! ஆனால், ஆளுமைக்கு அஞ்சுகின்றனர்.” 1106. “உழைத்து வாழாத வாழ்க்கை, விபசாரம்.” 1107. “உடல் உறுப்புக்களில் ஒன்று குறைந்தாலும் சங்கடப்படுபவர்கள், திருந்த வேலை செய்கிறார்கள் இல்லையே!” 1108. “பொருளாதார ஆதிபத்தியப் போட்டிகள் உலகந் தழுவியதாக வளர்ந்து வருகின்றது.” 1109. “சார்ந்தே வாழ்பவர்கள், நடுநிலையாளர்களை வாழ அனுமதிக்க வேண்டும்.” 1110. “இந்திய அரசியல் வாதிகள் ஆதாயம் தேடும் மனப்போக்கு, சோரம் போகும் நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிற்கு ஜனாதிபதி ஆட்சி முறை தேவையாகிவிடும்.” 1111. “சாதாரண பயன்படாத குடிசையைக் கூட யாரும் இழக்கத் தயாராக இல்லை.” 1112. “பொறிகளை, இன்ப நுகர்வில் பக்குவப்படுத்துவது கலை.” 1113. “எவ்வளவு திறமையாகக் காரியம் செய் தாலும் தொடர்ச்சி இல்லையானால் பயன் இல்லை.” 1114. “காலமறிந்து செய்யாத கடமைகள் உரிய பயனை தாரா.” 1115. “ஒரு கருத்தில் ஊன்றாதவர்கள் சுற்றிச் சுற்றி வருவர்.” 1116. “இறைவன் வாழ்த்துப் பொருள் அல்ல. வாழ்வுப் பொருள்.” 1117. “இன்று வாழ்கின்றவர்கள், வரலாற்றுப் போக்கில் வந்தமைந்த வாழ்க்கை. அமைப்புக்களை அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே விட்டு வைத்தல் கடனாகும்.” 1118. “சைவத்திற்கு சிறப்பு சேர்க்க நால்வர் வழிபாடு தேவை.” 1119. “பகைமை பாராட்டாமல் வாழ்தல் ஒரு சிறந்த பண்பு.” 1120. “தலைமைக்கு ஆசைப்படாது மற்றவர்க்குத் தலைமையை விட்டுத்தரும் தைரியசாலிகள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு தடவைதான் பிறக்கின்றனர்.” 1121. “அன்றாடம் கணக்குப் பார்க்காதவன் ஆக்கம் பெற இயலாது.” 1122. “காலம் என்ற களத்தின் அருமையை இன்னமும் பலர் அறியாதது, இந்திய சமூக வாழ்க்கையின் தீமைகளுள் ஒன்று.” 1123. “அடையவேண்டும் என்ற முனைப்புடன் கூடியதே முயற்சி.” 1124. “காரியத் தேவைகள், மனிதனை நிர்வான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.” 1125. “மமதையின் முன்னால் சிறு தவறுகளும் பெரியனவாகத் தோன்றும்.” 1126. “நாம் ஆக்கி வைத்தால் போதாது. ஊட்டி விடவேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.” 1127. “சிந்தையில் அகந்தை உடையவர்கள் எளிதில் அணுகமாட்டார்கள்.” 1128. “முந்திரிப் பழத்தில் கொட்டை வெளியே துருத்திக் கொண்டிருப்பதால் பழத்திற்குச் சுவை குறைவு.” 1129. “மரியாதை’ என்ற பெயரால் விளையும் மனச்சங்கடங்களே மிகுதி.” 1130. “மன எழுச்சியுடன் பேசுபவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள்.” 1131. “சொன்னதைச் சொன்னபடி நிறைவேற்று பவர்களே உழைப்பாளிகள்.” 1132. ஒழுங்குமுறை ஆக்கத்திற்கு அடிப்படை." 1133. “பிரசவ வேதனை இல்லாமல் தாய் இல்லை. அதுபோல துன்பப்பாடு இல்லாமல் இன்பம் இல்லை.” 1134. பெரிய வேலைகள் நடைபெறத் தடையாயிருப்பவை, சின்ன சின்ன வேலைகள் முறையாகச் செய்யப் பெறாமையே!" 1135. தாயிடம் அன்பு பாராட்டுவதே ஒரு கலை தான்." 1136. “கொள்கைப் பிடிவாதம் வாழ்க்கையை வறட்சித் தன்மையுடையதாக்கிவிடும்.” 1137. “இல்லாமையால் உலகு அடையும் துன்பத்தை விட ஆசையால் படும் துன்பமே மிகுதி.” 1138. “உயிருடன் கொண்டு செல்லும் அறிவு, பண்புகளில் உள்ள ஆர்வத்தைவிட உடற்சார்பான ஆசைகளே உலகத்தை ஆட்டிப்படைக்கின்றன.” 1139. வேலையில் ஈடுபாடு, குறிக்கோள் இருந்தாலே வரும்." 1140. ஒரு காலத்தில் நன்மையாகக் கருதப் பெறுவது நிலைத்த நன்மையாகி விடுவதில்லை." 1141. “எனக்கு நண்பராக இருந்தால் போதாது. எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத்தக்க தல்ல.” 1142. “உணர்ச்சி நிறைந்த வேகத்தில் இருக்கும் பொழுது அறநெறி உபதேசம் பயன்படாது. அந்த நிலையில் மருந்தென உணர்ச்சிக்கு இரை போடுதல் பயன்தரும். ஆனால் ஆபத்தான பரிசோதனை.” 1143. “உடற்பயிற்சி காரணமாகவே பலர் வேலை செய்ய நினைக்கின்றனர். இவர்களுக்கு உழைப்பு நோக்கம் அல்ல.” 1144. “எதையும் பின் தொடர்ச்சியாகக் கவனிக்கத் தவறினால் கெடும்.” 1145. “நிறுவனங்கள், இயக்கநிலை எய்துதல் வேண்டும்.” 1146. “உடல் ஓயாது இயங்குகிறது. அதுபோல வாழ்க்கை ஓயாது இயங்குதல் வேண்டும்.” 1147. இயற்கை அமைத்துத் தரும் கனிகளிலும் மனிதன் சமைக்கும் உணவு நல்லன அல்ல." 1148. “உண்மையாக நடத்தல் என்பது அகமும் புறமும் ஒத்து நடத்தல் என்பதே!” 1149. “இந்திய சமூகப் பிரிவினைகள், தீமைகள் நீங்கியே யாகவேண்டும்.” 1150. “குறிக்கோளை அடையும் வாழ்க்கைக்குத் துன்பத்தைத் துணையாகக் கொள்ளும் துணிவு தேவை.” 1151. “நமது மக்களாட்சிமுறை மனு எழுதும் பழக்கத்தையே கற்றுத் தந்துள்ளது.” 1152. “உளம் நிறை ஈடுபாடே உழைப்புக்கு ஊற்று.” 1153. "கார்ல் மார்க்ஸ் மதத்தை எதிர்க்கும் பொழுது, அந்த இடத்தில் ஒரு புதிய மதத்தை வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார். அதனால் ஒரளவு வெற்றி பெற்றார். ஆனால், பெரியார் எதிர்ப்பை மட்டுமே செய்தார். அதனால் நிலைத்து நிற்கவில்லை. அவர் பாசறையில் வளர்ந்தவர்களேகூட கடவுள் வழிபாட்டுக்கு வந்துவிட்டனர். அது மட்டுமல்ல. மதத்தை எதிர்த்துப் பேசுதல் அறியாமையின் செயல் என்று எண்ணுகின்றனர். 1154. “சமயம், சமூகம், இரண்டும் இணைந்த நோக்கங்களே! இந்த இணைப்பு பராமரிக்கப் பெற்றாலே சமுதாயம் வளரும்” 1155. "இந்திய அரசியல் படுமோசமான நிலைக்குப்போய்க் கொண்டிருக்கிறது. வெறி நாய் நிலைக்கு வந்துவிட்டது. 1156. “எந்த ஒன்றிலும் இறுகப் பற்றிய சார்பு வந்துவிட்டால் நீதி புலப்படாது.” 1157. “உலக மானிட சாதி ‘சுதந்திர’ வரலாற்றை உணர்ந்தாலே சுதந்தரத்தை இழக்கத் துணியமாட்டார்கள்.” 1158. “செயலற்றவர்கள், செயலுள்ளவர்கள் மீது அழுக்காறு கொள்ளுதல் தவிர்க்க இயலாதது, கவலற்க.” 1159. “ஆளுமை என்பது ஒரு கலை. அதை நாள்தோறும் பயிலுதல் வேண்டும்.” 1160. “செயற்பாட்டுக்குரிய ஆயத்த நிலையில் இருக்கப் பழகியவர்கள் சிறந்த ஆளுமையைப் பெறுவார்கள்.” 1161. “அறிவியல், பொருளியல், ஆட்சியியல், அருளியல் அனைத்தும் வீட்டு வாசற்படிக்கு வந்தாலும் ஏற்க முன்வரா சில அபூர்வப் பிறவிகள் உண்டு.” 1162. “காமம்-அறிவார்ந்த இன்பம் வரவேற்கத்தக்கது. காமம் களியாட்டமாயின் தரம் குறையும்.” 1163. “ஒரு குழந்தைக்கும் பெற்றோராதல் பெறற் கரிய பேறு.” 1164. “மனவெழுச்சி அடங்கிய நிலையே பூசகர் ஆதலுக்குத் தகுதி.” 1165. “துழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே உய்திக்கு வழி.” 1166. "உலகந்தழிஇய ஒட்பம் பெறுதலே இன்று முதற்கடமை.(ஒட்பம்-மேன்மை) 1167. “நன்மைகளுக்கெல்லாம் நன்மை அழுக்கா றின்மையே.” 1168. “காமம்’-உயிர்களுக்கு விருப்பம் நிறைந்த வாழ்க்கையைத் தூண்டுவது.” 1169. “துய்த்தல் பாபம் இல்லை. துய்க்கும் பாங்கியல் தான் புண்ணிய, பாபம் கருக் கொள்கிறது.” 1170. “செய்யும் செயல்கள் பயன் தருவதில்லை. நோக்கங்களே பயனைத் தரவல்லன.” 1171. “வன்தன்மை’ - கொள்ளுதல் வாழ்க்கை வெற்றிகளைக் கெடுக்கும்.” 1172. “திருத்தமுறச் செய்பவர்கள் கிடைக்காது போனால் நாமே செய்துவிடுவது நல்லது.” 1173. “யார் இறந்தால் என்ன? சச்சரவு நிற்குமா?” 1174. “குடும்ப உறவுகள் செழித்து வளர்வதே நாகரிகத்தின் அடிப்படை,” 1175. உயிர்கள் மன விகாரமின்றிச் செழித்து வளர்தலே நாகரிகத்தின் அடிப்படை." 1176. “சுழலும் இராட்டையாகிவிட்டது இன்றைய மானுட வாழ்க்கை.” 1177. “கட்சி ஜனநாயகம் இல்லையானால் ஆட்சியில் அமர்பவர்கள் கெட்டுப் போவார்கள்.” 1178. “உணர்வு பூர்வமாக ஒன்றைச் செய்ய முன்வராதவர்களிடம் பணியை ஒப்படைப்பது தவறு.” 1179. “இன்றைய இளைஞர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அறிவறிந்த ஆள்வினையில் விருப்பமில்லை.” 1180. “உழைப்பால் ஆள உலகத்தில் உழைப்பினை விலையாகத் தராமல் வாழ நினைப்பது குற்றம்.” 1181. “குறைவாகச் செய்தாலும் முறையும் ஒழுங்கும் தழுவிய செயல்முறை தேவை.” 1182. “பணம் தேவையிருக்கிறது. பனம் வரும் வாயிலும் இருக்கிறது. ஆனால், எடுப்பாரைத்தான் காணோம்.” 1183. “பயிற்சி பெறாத உழைப்பாளிகள் செய்வார்கள். ஆனால் போதிய பயன் இருக்காது.” 1184. “கூட்டத்தைக் குறை! உழைப்பின் தரத்தை உயர்த்துக.” 1185. “விதிமுறைகள், சென்ற காலப் படிப்பினைகள் ஈன்ற குழந்தைகளேயாம்.” 1186. “தற்காப்பு உணர்வு” முனைப்பாக இருப்பவர்கள் கலந்து பேச மறுப்பார்கள்." 1187. “எந்த ஒன்றையும் தீர ஆய்வு செய்யாமல்-செய்வது இழப்பை தரும்.” 1188. “நிர்வாகப் போக்கில் ஆய்வு செய்வது-வளர்ச்சிக்குத் துணை செய்ய இந்த ஆய்வுக்கு ‘நம்பிக்கை’ என்ற தத்துவம் தடையாக அமைதல் கூடாது.” 1189. “ஒரு பணியில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்துதல்-கேட்டுக்கு வழி வகுக்கும்.” 1190. “தடை இல்லாத வண்டியும் ஆய்வு இல்லாத நிர்வாகமும் விபத்துக்களைத் தோற்று விக்கும்.” 1191. “ஆசை-ஆத்திரம் தகுதிகளின் அடிப்படையில் தோன்றுவதில்லை.” 1192. “இனம் - மொழியின் அடிப்படையில் தோன்றி நிலவும் வழக்கு-இது உலக வழக்கு சாதி மத அடிப்படையில், இனம் இருத்தல் இயலாது, கூடாது” 1193. “சாதி’ பிறப்பின்பாற்பட்டது. இது அயல் வழக்கு: தமிழ் வழக்கன்று. நீதிக்கும் வளர்ச்சிக்கும் புறம்பானது.” 1194. “குலம்’ வழி வழி வரும் மரபு. இது ஏற்புடையது. மரபு வழியும் சூழ்நிலையின் தாக்கமும் தவிர்க்க இயலாதன.” 1195. மதம்-மடம் ஆகிய அமைப்புக்கள் அப்பட்டமான சாதியமைப்புக்களே! இங்கெல்லாம் புதுமையை எதிர்பார்த்தல் இயலாது. I196. “மேய்ப்பார் இல்லாத மாடுபோல கண்காணிப்பு இல்லாத நிர்வாகக் கெடும்.” 1197. “ஒருவரிடமே பல காலத்துக்கு ஒரே பணி இருப்பது நற்பழக்கத்தைத் தூண்டுவதில்லை.” 1198. “தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் இல்லையானால் காரியக் கேடுவரும்.” 1199. “படித்தவர்களிடம் உள்ள தீயப் பண்புகள் அகன்றாலே-சமுதாயம் உருப்பட்டுவிடும்.” 1200. “மற்றவர்களின் பக்தி நம்முடைய பெட்டியைத் தீண்ட அனுமதிக்கக்கூடாது.” 1201-1300 1201. “மற்றவர் செவ்வி பார்த்து ஒழுகுதல் உயரியப் பண்பு.” 1202. “தேர்தலையே நோக்கமாகக் கொண்ட அரசியல், மக்களைப் பிச்சைக் காரராக்கிவிடும்.” 1203. “அரசு தர்மச்சாலையாக மாறிவிடக் கூடாது.” 1204. “எல்லாம் இருந்தும் காரியம் நடக்க வில்லை. ஏன்? இதுதான் மனிதரின் விபரீதமான போக்கு.” 1205. “பலநாள் பழகியவர்கள் பண்பில் தலைப் பிரியமாட்டார்கள்.” 1206. “இன்றைய ஆளுங்கட்சியினரின் அடித்தளத்தினர் நாடே தங்களுடையது என்ற முடிவுக்கு வந்து ஆட்டம் போடுகின்றனர். இந்தப் போக்கு எதிர் விளைவுகளை உருவாக்குவது இயற்கையின் நியதி! தவிர்க்க இயலாதது.” 1207. “தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர், முற்பட்டோர் பட்டியல் ஒரு நாட்டில் நிலையாக இருப்பின் அது நீதிக்கும் வளர்ச்சி என்ற நியதிக்கும் மாறுபட்ட சமுதாய அமைப்பாகும்.” 1208. “மதிப்பு, மதியாதை என்பது விலை கூடுதலுக்குரியது என்ற நிலை பொய்ம்மையை வளர்க்கும்” 1209. “காலம், உழைப்பு, பயன்படுத்தப்படும் பொருள்கள் இவற்றின் கூட்டு மதிப்புக்குரியன. திரும்பக் கிடைக்காத எதுவும் இழப்பையே தரும்.” 1210. “வாழ்க்கையும் ஒருவகை வியாபாரமே. வாழ்தலுக்குரிய செலவை விட அடைதல் கூடுதலாக வேண்டும். இதுவே ஊதியம் நிறைந்த வாழ்க்கை.” 1211. “பண்பாடில்லாதவர் அதிகாரம் பெறுதல், குரங்கு கையில் கொள்ளி பெற்றது போலாகும்.” 1212. “நிர்வாகம் என்பது காலம், இடம், பொருள், உழைப்பு இவற்றை முறைப்படுத்திப் பயன் படுத்திப் பயன் கொள்ளுதலாகும்.” 1213. “கோப்புகள் குறிக்கோளுடையனவாக இயக்கப் பெறாது போனால் இழப்பேயாம்.” 1214. “கண்ணால் காண்பது, காதால் கேட்பது ஆகியன மூலம் தொடர்ச்சியான செயலூக்கத்தைப் பெறாதவர்கள் இருந்தாலும் இறந்தவர்களேயாவர்.” 1215. “சரியான நேரத்தில் சரியான தகவலைத் தருதல் நிர்வாகத்திற்கு வலிமையைச் சேர்க்கும். ஆக்கத்தினைத் தரும்; இழப்புக்களைத் தவிர்க்கும்.” 1216. “முக்காலி மூன்றுகாலுடையது. இதில் ஒருகால் உடைந்தாலும் பயன் இல்லை. அதுபோலக் கூட்டமைப்பில் தனி ஒருவரின் பலவீனம் கூட பாதிப்புகளைத் தரும்.” 1217. “அறிவியல், உழைப்பை எளிமைப் படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் வாழ்க்கையை அருமைப்படுத்திக் கொண்டு வ்ருகிறது.” 1218. “மாக்கம், வியப்பு ஆகியவற்றிற்குரியன வாழ்க்கையை பூரணத்துவம் செய்யா.” 1219. “உரிமை உணர்வே நிலையான உறவுக்கு அடிப்படை.” 1220. “ஒருவர் வெறுக்கப்படுதலுக்குக் காரணம் அவர்தம் இயல்புகள் மட்டுமல்ல. மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளும் காரணம் ஆகும்.” 1221. “ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டால் யாருக்கும் இடர்ப்பாடு இல்லை.” 1222. “ஒரு சமூக மாற்றம் எளிதில் நிகழாது. தொடர்ச்சியான போராட்டம் தேவை.” 1223. “எந்த ஒரு தீமையும் தொடக்கத்தில் தயக்கத்துடன் தலைகாட்டுகிறது. பின் பழக்கத்தின் காரணமாகத் தீமையே இயல்பாகிவிடுகிறது.” 1224. “சாமார்த்தியமும் திறமையும் ஒன்றல்ல.” 1225. “சாமார்த்தியம் எப்படியும் காரியத்தை சாதிப்பது. திறமை, முறைப்படி சாதிப்பது,” 1226. “அப்பாவிகள் நல்லவர்களல்லர். தீமை செய்ய சக்தியற்றவர்கள்.” 1227. “நல்லவர்’-இது முழு நிறைச் சொல். ஆற்றலுடையவர்களே நல்லவர்களாக வாழ்தல் இயலும்.” 1228. “மானம் இல்லாதவர்கள் எந்த தவறுகளுக்கும் வருந்தமாட்டார்கள். திருந்தவும் மாட்டார்கள்.” 1229. “அடிக்கடி ஏற்படும் செலவுகளில் விழிப்பாக இருப்பது நிதி நிர்வாகத்திற்குத் தேவை.” 1230. “எண்ணெய் தேய்த்துக் கொண்டு பின் சீயக்காய் கொண்டு கழுவி விடுவது போல், துய்ப்பைத் துறவால் கழுவவேண்டும்.” 1231. “சித்தாடுகிறவர்கள் நாம் விரும்புவதைக் கொடுத்தால் நம்பலாம்.” 1232. “ஊக்கம் என்பது செயலூக்கங்களேயாம்.” 1233. “ஒன்றையொன்று பிரியாத நிலையில் பிணைக்கப்பெற்ற பிணைப்பே வாழ்வளிக்கின்றன. அதுபோல சமூகம் பிணைக்கப் பெற்றால் தான் வாழ்வு சிறக்கும்.” 1234. “தவறுகள் செய்வதும் விளையாட்டாகி விட்ட விபரீதம் வளர்ந்து வருகிறது.” 1235. “பொறுப்பு உணர்வு கடைச்சரக்கன்று. வாழ்வின் படிப்புகளால் பெறுவது.” 1236. “உயர்வற உயரும் நிலையே நிலை. இதுவே வரவேற்கத்தக்கது.” 1237. “படிப்பறிவிலும் பட்டறிவு சிறந்தது.” 1238. “காய்தல்-குளிர்தல் என்ற நியதிகளை பொருள்களை மாற்றுகின்றன. ஆதலால், காய்தலும் குளிர்தலும் வாழ்க்கையை வளர்ப்பன.” 1239. "ஒழுங்காக அமைக்கப் பெற்ற பற்களே உணவை அறைக்க உதவுகின்றன. அதுபோல ஒழுங்கமைவுபட்ட உழைப்பே உணர்வுகளை வளர்க்கும்; ஆக்கத்தினை நல்கும். 1240. "உடலமைவில் முதன்மை, இரண்டாம் நிலை என்ற நிலை எந்த உறுப்புக்கும் இல்லை. த-9 எதுவும் சரியாக இயங்காதுபோனால் தலையும் கெடும். ஆதலால், ஒவ்வொன்றும் முறையாக இயங்குதலே வேண்டும்." 1241. “உயிர்ப்புள்ள விழிப்பு நிலையில் சமுதாயம் இயங்கினால் வாழ்நிலை சிறக்கும்.” 1242. “பெண், ஒரு போகப் பொருள் என்ற கருத்து உள்ளவரையில் பெண்ணடிமைத்தனம் நீங்காது.” 1243. “சுற்றுப்புறச் சூழ்நிலை காரணமாக நல்லவர்களாக இருப்பதும் இயற்கை.” 1244. “தமிழர்கள் உயர் சிந்தனையாளர்கள்; ஆனால் செயலாளர்கள் அல்லர்.” 1245. “நிறைய ஈட்டல்; குறைவாகச் செலவழித்தல்-இதுவே நல்வாழ்க்கையின் நியதி.” 1246. “செல்வம் கிடைக்கும் பொழுது நுகர்வைக் கூட்டிக் கொண்டால், வருவாய் குறையும்போது இடர்ப்பாடு தோன்றும்.” 1247. “கடமைகள், உரிமைகள், பொறுப்புணர்வுகள் ஆகியன இசைந்த ஒரு பண்பே, கூட்டுறவு என்பது.” 1248. “சிறந்த கூட்டுறவாளன் சொல்வதற்கு முன்பு கேட்பான்; வாங்குவதற்கு முன்பு கொடுப்பான்; உண்பதற்கு முன்பு உழைப்பான்.” 1249. “ஆக்கம் தேடி, முடியும் என்ற நம்பிக்கையில்”பெறமுடியாதவர்கள் இழப்பில் பெரிதும் கவலைப்படுவர்." 1250. “தன்னைப் போல மற்றவர்கள் என்று நினைக்காதவர்கள் சமூகத்தில் வாழ்வது விரும்பத் தக்கதல்ல.” 1251. “தேவையில்லாமல் பேசுவது பயனில் சொல் கூறுதலே.” 1252. “கறையான் தானாக விரும்பி முயன்று உழைத்து வீடு கட்டுவதில்லை. ஆனால் கட்டிய வீட்டில் எளிதில் குடி புகுகிறது.” 1253. “கட்டிய வீட்டின் அருமை தெரியாத கறையான் அதை அழிக்கிறது. அதுபோல நன்மையறி யாதவர்கள் நன்மையை அழிப்பார்கள்”. 1254. “பயத்தினினும் கேடு பிறிதொன்று இல்லை.” 1255. “வாயினால் முடிக்கக்கூடிய காரியத்தை எழுத்தினால் செய்யக்கூடாது.” 1256. “தொழிலில் இழப்பு என்று கூறி, தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க மறுப்பது நல்ல நிர்வாகம் அல்ல.” 1257. “நிர்வாகம் என்ற அமைப்பே, சீருற நடத்தவே!” 1258. “எதையும் பொறுப்புடன் செய்ய முன் வராதவர்கள், மற்றவர்கள் மீது பழி போடுவர்.” 1259. “பலரோடு பழகுவதால் உதவிகள் செய்வதிலும் கொடையளிப்பதிலும்கூட சிக்கல் தோன்றும்.” 1260. “ஒவ்வொரு உறவும் பொறுப்புக்களையும் கடமைகளையும் கொண்டதேயாம்.” 1261. “உறவுகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளை உடையனவே. எதிர்பாாப்புகளைச் செய்ய இயலாத போது மனத்தாங்கல் ஏற்படும்.” 1262. “செய்யும் மனமிருந்தால் வாய்ப்புகள் தாமே வந்தெய்தும்.” 1263. “புகழ்-மேலாண்மை-செயல்திறன் ஆகிய நன்மைதரு துறைகளில்கூட அழுக்காறு தோன்றாமல் தடுக்க, தன்னடக்கம் தேவை.” 1264. “குறைந்த விலையுடைய உணவுப் பண்டங்களே நல்ல உணவுக்குப் பயன்படுகின்றன.” 1265. இயற்கையை ஒட்டிச் சென்றால் எதுவும் செய்யலாம். இயற்கையிலிருந்து மாறுபடும் வாழ் நிலை கூடாது." 1266. “செயற்கை, இயற்கையோடு பொருந்தாது.” 1267. “நல்ல சமையற்காரர் கிடைத்துவிட்டாலே ஆயிரம் காரியம் செய்யலாம்.” 1268. “நமது உடலைக் கவனிக்கவே உறவுகள்: ஆனால் நடப்பதுதான் இல்லை.” 1269. “தன்னை என்றும் இளமையுடையோனாகத் கருதிக் கொள்ளவேண்டும் என்பதற்காக-பொய்ம்மையாக உடலின் நிலையினை மறைத்து வாழ்தல் கூடாது.” 1270. “உடனுக்குடன் நோய்க்குரிய காரணத்தை மாற்றாது வாழ்வது, நோயை அதிகப்படுத்தும்.” 1271. “நோயின் காரணத்தை மாற்றாமல் நோய்க்கு மருந்துண்பவர்கள், நிரந்தர நோயாளிகள் ஆகிவிடுவர்.” 1272. “பெரிய மனிதர்களுக்கு நோய் வருவதே ஒரு சித்திரவதை! தண்டனை!” 1273. “பலநூறு துளிகள் சேர்ந்துதான் ஆழ்கடல்; காசுகளாகச் சேர்க்கப் பெற்றால் செல்வமும் கோடி யாகிவிடும்.” 1274. “சில்லறை உறவுகள் செல்வத்திற்குக் கேடு.” 1275. “ஏழைகளிடத்தில் உள்ள ஐயப்பாடே முன்னேற்றத்திற்கு முதல் தடை.” 1276. “வேண்டுவார் வேண்டுவதெல்லாம் இறைவன் வழங்கிவிட்டால் உலகம் விசித்திர விலங்கு கூடாரமாகிவிடும். அதனால்தான் இறைவன் வழங்கத் தக்கதையே வழங்குகிறான்!” 1277. “கல்லில் முளை அடிப்பதும் கல்லாதவருக்கு உபதேசிப்பதும் வீண்.” 1278. “ஆசைப்படுபவர்களும் நிர்வாண சாதுக்களும் வெட்கத்தை விட்டவர்கள்.” 1279. “பதவியில் சுகம் இருக்கிறவரை போட்டிகளைத் தவிர்க்க இயலாது.” 1280. “நிறுவனத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்காத ஊழியர்களைக் கொண்டு நிறுவனத்தைக் காப்பாற்ற இயலாது.” 1281. “அர்ப்பணிப்பு உணர்வில்லாத அமைப்பில் மேலாண்மை கல்வி ஏற்புடைய தக்கவராக அமைத்தல் வேண்டும்.” 1282. “தனக்கு இவர் உதவியவர் என்ற , நம்பிக்கையும் கூட வாழ்க்கையில் அலட்சியத்தைத் தோற்றுவிக்கிறது”. 1283. “சிறுசிறு பணிகளைக் கூட முறையாகச் செய்யாதவர்கள் கை நிறைய ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.” 1284. “ஒரு இனத்தின் ஒற்றுமை விருப்பமே இன்று ஐயப்பாட்டிற்கு உரியதாகிவிட்டது.” 1285. “மெய்ப்பொருள் உணர்தல் என்பது வேறு. கடவுள் வழிபாடு என்பது வேறு.” 1286. “மெய்ஞ்ஞானமும் மதமும் ஒன்றல்ல.” 1287. “மெய்ஞ்ஞானம் காண்பதுவே வாழ்க்கையின் குறிக்கோள்.” 1288. “விஞ்ஞானம் சுரண்டும் வர்க்கத்துக்குக் கூட, துணை போகிறது.” 1289. “விஞ்ஞானம் இயற்கையின் உள்ளீடுகளைக் கண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரும் அரியப் பணியைச் செய்கிறது.” 1290. “விஞ்ஞானம் ஏவலனாக இருப்பது நன்று.” 1291. “விஞ்ஞானம் தலைமையாக மாறக் கூடாது.” 1292. “ஒருவருடைய சமயம் தொடர்பான நம்பிக்கைகள் - அவர்களுடைய வாழ்க்கையையும் - அந்த நாட்டின் சமூக வாழ்வையும் பாதிக்கச் செய்யும்.” 1293. “இந்திய சமூக வாழ்க்கையின் வறுமைக்கு மிகுதியும் காரணம் ஊழ் தத்துவங்களேயாம்.” 1294. “வரிசைப்படுதல் என்ற மரபு நல்லது.” 1295. “அவன் - அவளுடன் அதனைப் (இயற்கையை) பயன்படுத்தி வாழ்தலே- வாழ்க்கை.” 1296. “வல்லாங்கு வாழ்தல் எளிது. வாழ்வாங்கு வாழ்தல் அரிது.” 1297. “வானவர் உலகம் வளம் நிறைந்தது: ஆனால், பண்பாடற்றது.” 1298. “மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது பண்பாடேயாம்.” 1299. “வாழ்க்கைக்கு மிகவுயர்ந்த குறிக்கோள் அமையாவிடில் வாழ்க்கை சிறத்தல் இயலாது.” 1300. “மற்றவர் வரம்பு உகந்த சுதந்திரத்தை எடுத்துக் கொள்வது வாழ்க்கையைக் கெடுக்கும்.” 1301-1400 1301. “தயவிலும் தவறுகள் நிகழ்வது உண்டு.” 1302. “அறிவொடும் - நடைமுறையொடும் பொருந்தாத் தயவு நன்றன்று.” 1303. “ஒவ்வொரு உயிரும் கடைசித் தருவாயிலும் கூட சுகித்திடவே விரும்பும்.” 1304. “மலைக்குப் பக்கத்தில் நிற்பதெல்லாம் மலையாகிவிடாது. அதுபோல பெரிய மனிதரைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை.” 1305. “ஒன்றை ஊக்கத்துடன் செய்தால் எளிதில் காரியம் முடியும்.” 1306. “செய்முறைகளுடன் பாடம் போதிக்கும் மரபு வழித் திருவுருவமே ஆலமர் கடவுள்.” 1307. “சட்டங்கள் வரையறையில் நிற்கும் அமைப்புக்கள் வழங்க இயலாது.” 1308. “நிதி மிகமிக உயர்ந்தது.” 1309. “ஒவ்வொரு இந்தியனும் மதச் சார்பற்ற தன்மையுடையவனாய் இருந்தாலே மதச் சார்பற்ற நாடு.” 1310. “பொறுப்புணர்ந்த நிலை, வாழ்க்கையை இயக்கமாக்கி விடும்.” 1311. “வாழ்க்கையில் உள்ள சோம்பலே பொறுப்பின்மைக்குக் காரணம்.” 1312. “இன்தென வேலை தெரிந்திருந்தும் அதைச் செய்யாது சுற்றுவது அலையும் மனத்தின் அடையாளம்.” 1313. “இறை வழிபாடு மட்டுமே வாழ்க்கை என்றால் மானுடப் பிறப்பை இறைவன் செய்திருக்க வேண்டியதில்லை.” 1314. “அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளுதலே ஆக்கத்தின் முதற்படி.” 1315. “செலவுகளில் முதற் செலவு சேமித்தல்” 1316. “கொடிய துன்பங்களையும்கூட மகிழ்வாக அனுபவிக்கலாம்-வாழ்க்கையில் வளரவேண்டும் என்ற உணர்விருந்தால்.” 1317. “சமுதாய அமைப்பின் சிற்பி ஆசிரியரே.” 1318. “ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு உபாசனா மூர்த்திதான் இருக்கவேண்டும். எந்தத் திருவுருவத் தினைக் கண்டாலும் தனது உபாசனா மூர்த்தியின் வண்ணமாக நினைப்பதே மரபு.” 1319. “மனசாட்சி” என்ற சொல், மனத்துக்குச் சாட்சியாக இருக்கும் கடவுளையே குறிக்கும்." 1320. “நாம் முற்றாகப் பொறுப்பேற்க இயலாத நிலையில், சத்தியம் செய்வது கூடாது.” 1321. “அறு கயிறு ஊசலென்று மனம் அலைதல் கூடாது.” 1322. “மரண வாயிலிலும் வன்கண்மை உள்ளம் மாறாதவர்கள் வளர்ச்சி யடையாதவர்கள்.” 1323. “நாம் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருந்தாலே பயன் உண்டு.” 1324. “மற்றவர்களிடம் மேலாண்மை கொணர்வதே சரியான நிர்வாகத்திற்கு உதவியாக அமையும்.” 1325. “அடிமைப் புத்தியுடையவர்கள் சுதந்தரத்தை அனுபவிக்கமாட்டார்கள்.” 1326. “பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள மாட்டார்கள்.” 1327. “காலத்தில் கண்காணித்தால் இழப்புக்களைத் தவிர்க்கலாம்: ஈட்டங்களைக் கூட்டலாம்.” 1328. “சிந்திப்பவன், சிந்திக்காதவன் சொல்லைக் கேட்பது பைத்தியக்காரத்தனம்.” 1329. “சிறு எல்லைகளைத்தான் சமாளிக்க இயலும்.” 1330. “காலம், பொன்-இரண்டையுமே அளந்து பயன்படுத்தி மிச்சம் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.” 1331. “மானிட உறவுகளைப் பராமரிப்பது பயன்களைத் தரும்.” 1332. “புகழை விரும்புகிறவர்களிடம், கஞ்சத் தனம் இல்லாமல் புகழ்ந்து பேசுக.” 1333. “வலிமையுடையார் தேடாது போனாலும் சென்று உறவு கொள்வர்.” 1334. “உழைக்காது உண்பவர்க்கு இயற்கை வழங்கும் தண்டனை தான் நோய்.” 1335. “சில தீர்மானங்கள் எடுத்தாலும், செயற்படுத்தப்படுவது நல்லது.” 1336. “பிழைபடச் செய்வார் வருந்தி மாற்றிக் கொள்ளாமைக்குக் காரணம், ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது அகந்தையாக இருக்க வேண்டும்.” 1337. “சிறிய சிறிய தவறுகளிலிருந்தே பெரிய தவறுகள் தோன்றுகின்றன.” 1338. “படிப்பிக்கும் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இருந்தால், நாடே சுறுசுறுப்பாக இயங்கும்.” 1339. “கடமைகளைவிட காப்பி, தேநீர் அருந்தல் முதன்மைப் பெற்றுவிட்டால் யார்தான் காப்பாற்ற இயலும்.” 1340. “வயிறு இல்லாது போனால் பலர் வேலை செய்யமாட்டார்கள்.” 1341. “அன்பு இல்லாத இடத்தில் மகிழ்ச்சி இல்லை!” 1342. “கருணைக்கு விஞ்சிய சிறப்புடையது இந்த வையகத்தில் இல்லை.” 1343. “ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டியதில் உருவானதே மாளிகை. அதுபோல ஒவ்வொரு செயலாகத்தான் புகழ்பூத்த வாழ்வு உருப்பெறுகிறது.” 1344. “ஒருவர் வாழ்வு, பிறிதொருவர் வாழ்வின் நலனுடன் பிணைந்துவிடின் வாழ்வித்து வாழும் பண்பு கால் கொள்ளும்.” 1345. “ஒழுங்குகள் பழக்கப்படும் வரையில்தான் தொல்லை. பழக்கத்திற்கு வந்து விடின் அது பாதுகாப்பான சாதனம்.” 1346. “ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது என்பது பிறப்பின் வழி அமைந்த கடமை.” 1347. “படித்தவர்கள் செய்த தவறுகளின் பயனே ஆட்சிமுறைகள்.” 1348. “சிறுநீரகம் சீராக இயங்காது போனால் விளையும் தொல்லையைப் போன்றே சிறியவர்கள் சீராக இயங்காவிடினும் துன்பம் ஏற்படும்.” 1349. “மலச்சிக்கலிலும் கொடியது மனச்சிக்கல். விரைவில் தீர்வு காண்பது நல்லது.” 1350. “தாம் செய்யாது விடும் காரியங்களால் உலகம் பெரிய துன்பத்திற்கு ஆளாவதை அறிக.” 1351. “வெற்று அரசியல், ஆர்ப்பாட்டத்தில் வெளிச்சம் போடுகிறது.” 1352. “நன்மையைக் கூட, நன்மைக்காகவே செய்யவேண்டும். நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செய்யக் கூடாது.” 1353. “பொருட் செல்வம் போற்றும் பண்பற்றவர்கள் பொருளுடையராதல் அரிது.” 1354. “மிகவும் தரத்தில் குறைந்த மனிதர்கள் மற்றவர்களையும் தம் அளவுகோலையே வைத்து அளப்பர்.” 1355. “சமூகச் சேவையில் எவ்வளவு மகிழ்வு இருக்கிறதோ அவ்வளவு நெருக்கடியும் இருக்கும்.” 1356. “நாளுக்கொரு தொழிற்கூடம் கண்டால் நலிவு நீங்கும்.” 1357. “நிர்வாகியைவிட உழைப்பாளரே உயர்ந்தவர்.” 1358. “இந்திய சமூக அமைப்பில் நிர்வாகிகளை விட, தொழிலாளிகள் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்.” 1359. “சுதந்தரம் என்பது அனுபவிக்கத் தக்கது. ஆனால் சுதந்தரத்தை அனுபவிக்கும் திறன் எளிதில் வருவதில்லை.” 1360. “அதிகாரத்தால் ஒன்றைச் செய்வதைவிட, அன்பான அணுகுமுறையால் செய்வது பயனுடைய பண்பாட்டு முறை.” 1361. “கூட்டுறவு என்பது, இருக்கும் பிரிவினைகளைக் கடந்து ஒன்றுபடுவது.” 1362. “இன்று கையூட்டு தேசியமயமாகி விட்டது.” 1363. “விருப்பம்-விழைவு இவற்றில் பிறந்து வளர்ந்த கையூட்டு இன்று கட்டாயமாகி விட்டது.” 1364. “மனிதர்கள் எடுத்த தீர்மானங்கள் செயலுருக் கொண்டிருந்தால் உலகம் சொர்க்கமாகி இருக்கும்.” 1365. “செயற்பாட்டுக்கு வராத, அரசு ஆணைகளே மிகுதி.” 1366. “தொடர்புடையார் கருத்தறியாமல் ஒரு கோப்பினை முடிப்பது தவறு.” 1367. “மனிதகுலம் ஒன்றே! இதுவே இயற்தை! பிரிவினைகள் இயற்கைக்கு மாறானவை.” 1368. “மனிதகுலம் முழுமையடைய முதற்பகை வறுமை.” 1369. “வறுமை ஏற்றத்தாழ்வு - இவைகளை வாயில்களாகக் கொண்டே பகை தோன்றுகிறது.” 1370. “வரலாறு தொடர்ந்து இயங்குகிறது. இந்த வரலாற்றியக்கத்தைக் கூர்ந்தறிந்து கற்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள்.” 1371. “இந்திய சிந்தனையாளர்கள் துறவு மனப் பான்மையுடையோராய், அரசுக் கட்டிலுக்கு வராமையினாலேயே நமது நாட்டுச் சிந்தனையாளர்கள் தோற்றார்கள்.” 1372. “புத்தர் கூட துன்ப நீக்கத்திற்கு வழி துறவென்றே கண்டார்.” 1373. “ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டுவது உழைப்பு.” 1374. “தங்கம் விலை மதிப்புடையதுதான். ஆனால், அத்தங்கத்தின் மதிப்பறிய, சாதா மதிப்புடைய மாற்றுக்கல் தான் பயன்படுகிறது. அதுபோல, உயர்ந்த சிந்தனைகள் கூட சராசரி மனிதரிடத்தில் தோற்றுவிக்கும் தாக்கங்களைப் பொறுத்தே மதிப்பிடப் பெறும்.” 1375. “வழிவழி வரும் பழக்கங்களுக்கு ஒரு அரசாங்கத்தைவிட அதிக செல்வாக்கு உண்டு.” 1376. “இந்திய சுதந்தரப் பிரசவமே பலவீனமான கஷ்ட நிலைதான்!” 1377. “ஆங்கிலேயர்கள் போய்விட்டாலும், அவர்கள் விதைத்த இன, மொழி, சமயப் பிரிவினை நச்சு விதைகள் செழித்து வளர்கின்றன.” 1378. “தீவிர சமயவாதிகளுக்கு இந்த உலகத்தை விட அடுத்த உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம்.” 1379. “பழக்கம் என்பது சேறு. இச்சேற்றில் சிக்கியவர்கள் எளிதில் கரையேற மாட்டார்கள்.” 1380. “தெரியவேண்டியன தெரியவும், துணிய வேண்டியன துணியவும் செய்ய வேண்டியன செய்யவும் தடையாக இருப்பவை எதுவும் தீமையேயாம்.” 1381. “செயலின்மையால் யான் அழிவதைவிட தாட்சண்யத்தால் அழிவதே மிகுதி.” 1382. “கூட்டுச் சமூக வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொள்ளாதவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனி மனிதரே!” 1383. “உலகம் முழுதும் சமநிலைச் சமுதாயம் தோன்றினாலே போரிடும் உலகம் திருந்தும்.” 1384. “வாழ்வோரினும் செத்தார் உண்டு; செத்தோரினும் வாழ்வோர் உண்டு.” 1385. “அக்கறை என்பது இடம் நோக்கிச் செயற்படும் பண்பன்று; இயல்பானது.” 1386. “காசுகளின் அருமை அறியாதார், எப்போதும் செல்வந்தர் ஆகார்.” 1387. “மேடைகள் அமைத்தலே இப்போது ஒரு பிழைப்பாகிவிட்டது.” 1388. “இருபாலும் ஒத்த, ஒன்றைக் கூறினாலும் ஏற்க முன் வராது போனால் அவர்கள் நியாயத்தை மறுக்கிறார்கள்.” 1389. “சிலருக்கு ஒன்றை எப்படியும் அடைந்து விடுவது என்ற மனத்தின் பின்னணியில் கரவும் வன்கண்மையும் இருக்கும். இவர்கள் உறவு ஆகாது.” 1390. “உழைக்காமல் சாப்பிடும் நிலப்பிரபுக்கள், படித்த அறிஞர்கள், பேச்சுக்குப் பணம் கேட்பதைக் குறை சொல்கிறார்கள்.” 1391. “ஒன்றைத் தொடர்ச்சியாகக் கண் காணிக்காது போனால், புதிய சிக்கல்கள் தோன்றும்.” 1392. “உழாத நிலம் கெடுவது போல, பழகாத உறவும் கெடும்.” 1393. “திறமையற்றவர்கள், நிர்வாகத் தலைமைக்கு ஆசைப்படுவது பயனற்றது.” 1394. “ஒன்றும் செய்யாதவர்களைவிட, செய்வது போல் பாவனை செய்கிறவர்கள் மோசமானவர்கள்.” 1395. “குழுக்களை உருவாக்க, சேர்க்க முயற்சிப்பவர்கள் ஏதோ ஒரு கொள்கைக்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பதே கருத்து.” 1396. “நாலுபேர் உட்கார்ந்து பேசும் இடத்தில் கூட்டுச் சிந்தனை நிகழும் போது தனித்தும் பிரிந்தும் எண்ணுதல் சைத்தானின் செயல்.” 1397. “தற்காலிகமான உழைப்புக்களைக் காட்டிச் சமாளிப்பவர்கள் சிறு தூறல்களைப் போலத் தரையை நனைக்கலாம். அவர்களால் வளத்தையும் வெற்றியையும் தரவியலாது.” 1398. “ஒரு பணியில் ஈடுபட்டுள்ள பலர், ஒருவரை ஒருவர் எண்ணத்தாலும் செயலாலும் உறவாலும் நெருங்கி வராது போனால் அந்தப் பணி சிறப்பாக நடவாது.” 1399. “ஏகாதிபத்திய அரசுகளின் செயற்பாடு நாகரிகமாக இல்லை. கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர். இனி இந்த உலகத்தை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.” 1400. “யாரை நம்புவத” என்ற வினா, மனித நாகரிகம் கெட்டு விட்டது என்பதன் அடையாளம்." 1401-1500 1401. “வேலியே பயிரை மேய்கிறது; பாது காவலனே கொல்கிறான்! கலியுகத்தின் யதார்த்த நிலை!” 1402. “ஒரு தலைமை உருவாவதற்கு எவ்வளவு காலம் செலவு ஆகிறது? ஒரு நொடியில் கொலை செய்து விடுகிறார்கள் பாவிகள்.” 1403. “அன்னை இந்திரா, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் செய்த பணிகள் நினைந்து நினைந்து போற்றத்தக்கவை.” 1404. “விளக்காத பாத்திரம் தூய்மையாய் இராது. ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது.” 1405. “கிராமச் சூழலில் குழந்தைகள் நன்கு வளர்க்கப்பட்டால் மேதைகள் வளர்வார்கள்; தோன்றுவார்கள்.” 1406. “அன்னை இந்திராவிடம் துணிவும் உறுதியும் இருந்தது! அதேபோழ்து நெகிழ்ந்து கொடுக்கும் மனப்போக்கும் இருந்தது.” 1407. “முதலாளித்துவம்” என்ற நஞ்சு உள்ள வரையில் நல்லவர்கள் வாழமுடியாது." 1408. “முதலாளி வேறு; செல்வந்தர் வேறு.” 1409. “செல்வம் இல்லாத ஏழைகளில் கூட முதலாளிகள் உண்டு. இது ஒரு குணம்.” 1410. “பல, சிறு கடப்பாடுகள் முறையாக நிகழ்ந்தாலே பெரிய கடப்பாடுகள் தாமே நிகழும்.” 1411. “எந்த ஒரு சிறு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வாழ்க்கையை இயக்குவது அறிவுடைமை.” 1412. “சில மனிதர்கள் தவறு செய்வதற்குக் காரணங்கள் கூற இயலாது. அது அவர்களுடைய சுபாவம்.” 1413. “உடுப்பது உண்பது இவற்றை எளிமைப் படுத்துவது அழுக்காற்றைத் தவிர்க்க உதவி செய்யும்.” 1414. “ஒருவரை அடியொற்றிப் பின்பற்றாமல் போற்றுவது ஒருவிதமான உணர்ச்சி. அதனால் பயன் இல்லை.” 1415. “இந்திய அரசியலில் ஜனநாயகப் பண்பு முழுமைத்துவம் அடையவில்லை.” 1416. “கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர்களே ஜனநாயகத்தில் கால் கொண்டு நிற்க இயலும்.” 1417. “இந்திய அரசியலில் நபர்களே முக்கியம். கொள்கை, கோட்பாடுகள் அல்ல.” 1418. “எந்த ஒன்றும் முறையாக நடவாது போனால் இழப்புக்களே வரும்.” 1419. “பாதுகாப்பு வேலைகள், வேலையாக மட்டும் அமையாமல் உணர்வு பூர்வமான கடமையாக அமைந்தால் நல்லது.” 1420. “ஜனநாயப் பண்புக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் இசைந்ததல்ல.” 1421. “கருத்து வேற்றுமைகள் கசப்புணர்ச்சியாக உருக்கொள்ளுதல் ஜனநாயக மரபுக்கு இசை வில்லாதது.” த-10 1422. “ஒரு எல்லை வரையில்தான் பொறுத்தாற்றும் பண்பு தீமை எல்லைக் கடக்கும் பொழுது கயமைத்தனமாகிவிடுகிறது! கொல்வதைத் தவிர வேறு வழியில்லை!” 1423. “பண்டும் இன்றும் என்றும் பரந்த மனப்பான்மை உலகியலில் அடைந்தது தோல்வியே!” 1424. "நல்லவர்களைவிட தீயவர்கள் நல்லவர்களாக நடிப்பது, கவர்ச்சியாக இருக்கிறது. மக்கள் மயங்குகின்றனர்.! 1425. “விடுப்பில் இருக்கும் விருப்பம், உழைப்பிலும் இருந்தால் உலகம் உருப்பட்டுவிடும்.” 1426. “உபதேசியாதல் எளிது. ஆனால் செய்வது கடினம்.” 1427. “மனம் ஒரு விந்தையான பொருள். முறையாகப் பழக்கினால் நாய்; இல்லையானால் புலி:” 1428. “நோய் வராது வாழ்தலே ஒரு கலை. ஆசைகள் இல்லாமற்போனால் நோய் இல்லை.” 1429. “நூல்களைப் படிப்பது சமைத்த சோற்றைச் சாப்பிடுவதைப் போன்றது.” 1430. “இன்று ஆசை, அரசியல் எல்லாம் வெறும் உள்ளீடில்லாத உணர்ச்சிகளேயாம்.” 1431. “தலைவரின் கொள்கைக்கு மொட்டை போடுகிறவர்கள், தலைவர் இறந்தாலும் தலை மொட்டை போடுகிறார்கள்.” 1432. “பலர் ஏற்றுக் கொள்ளும் ஒரு செயல் மக்களாட்சி முறை தழுவியதே.” 1433. “வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வளர்பவர்கள் சிலரே.” 1434. “கசப்புணர்ச்சியை வளர்த்தல் எளிது; அகற்றுதல் அரிது.” 1435. “இந்திய சமூக வாழ்க்கையில் வேரூன்றிய பிரிவினை எண்ணங்களை எளிதில் அகற்ற முடிய வில்லையே!” 1436. “நியாயமான ஒன்றை அடைய எளிய முயற்சிகளே போதும்!” 1437. “பிறர் பற்றி உன்னிடம் குறை சொல்பவர்கள் நிச்சயம் உன்னைப் பற்றியும் கூறுவார்கள். விழிப்பாக இரு.” 1438. “நற்பழக்கங்கள் மூலம் தான் தீயபழக்கங்களை அகற்ற முடியும்.” 1439. “வாழ்க்கை, களிப்புக்காக ஏற்பட்டதன்று களிப்பு, வாழ்க்கையில் ஒரு பகுதி.” 1440. “மற்றவர் கவலையை அறிந்து மாற்ற முயலுபவர்களின் கவலை தானே மறையும்.” 1441. “சம வாய்ப்புகள் இயற்கையாக அமையத்தக்க வகையில் சமுதாய நடைமுறை அமைந்தாலே நாடு வளரும்.” 1442. “பாவிகளையும்கூட நேசித்து கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ளல் புண்ணியம் செய்தற்கு உதவியாக இருக்கும்.” 1443. “ஒவ்வொருவ்ரும் அவர்களால் முடிந்த எல்லை வரையில் தனி நடைப்போக்கு. இயலாத எல்லையில் சமுதாயத்தை நாடுவர்.” 1444. “அற்ப மனிதர்கள்தான்” பெரிய மனிதர்களாகிக் கொண்டு வருகின்றனர்." 1445. “சிறுபான்மையினர்தான், பெரும்பான்மையினரை அடக்கியாள்கின்றனர். இந்த முரண் பாட்டுக்குக் காரணம் அறிவு பெறுதலுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு அமையாமையே யாம்.” 1446. “எப்படியாவது காரியத்தைச் செய்து முடித்தல் என்ற வாழ்க்கை முறை, நன்றன்று. இப்படித்தான் என்று திட்டமிட்டு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும்.” 1447. “தீமை செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்லர்; நன்மை செய்பவர்களே நல்லவர்கள்.” 1448. “உயிருக்கு இன்னல் விளைவிக்கும் பணியை மற்றவர்களிடம் செய்யக் கொடுப்பதே மனித இயற்கை.” 1449. “வேலை வாங்கும் உரிமையைப் போலவே வாழ்வளிக்கும் கடமையை மேற்கொள்ளவேண்டும்.” 1450. “காலம், ஆற்றல், பணி முதலியவற்றை முறைப்படுத்திச் செய்தால், பணிகளையும் நிறைய செய்யலாம்; மிகுதியும் பயனுடையதாகவும் செய்யலாம்; தப்பாமலும் செய்யலாம்.” 1451. “இப்படித்தான் வாழ்வேன் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் நமது மூளையும் உடலும் இயல்பாகவே ஒத்துழைக்கும்.” 1452. "பலவீனமானவர்களால் சமுதாயம் சீர் கேடடைவதைவிட, பலமானவர்களுடைய பலம், பலவீனத்தை ஈடுசெய்யக் கூடியதாக சமுதாய உணர்வுடன் வளரவில்லை. பழுதான இயந்திரத்தை, பழுதாகாத இயந்திரம் இழுத்துப் போகவில்லையே! 1453. “சிலர் நல்லவர்களே! திறமை இன்மையால் கெட்டவர்கள் போலத் தெரிவர்.” 1454. “விரைவு உணர்வு வேறு; அவசரப்படுதல் வேறு. விரைவு உணர்வு காரிய சாதனையைத் தரும். அவசரப்படுதல் காரியக் கேடுகளையே தரும்.” 1455. “சுறுசுறுப்பு வேறு, பரபரப்பு வேறு. சுறு சுறுப்பு நல்லது. பரபரப்பு நல்லதல்ல.” 1456. “இன்றைய குடும்பங்களில் பல, உடல் வயப்பட்டவை; உணர்வுவயப்பட்டவை அல்ல.” 1457. “சமமற்ற நிலையில் அன்பு தோழமை, சன நாயகம் சிறப்பதில்லை.” 1458. “ஒத்த நோக்கில்லாதார் நட்பினராய் இருத்தல் அரிது.” 1459. “கழுவாய் முறையாக அமைந்தால் நோய் இல்லை; பகை இல்லை!” 1460. “வல்லாங்கு வாழ்பவர் தொடர்ந்து மற்றவர் வாழ்க்கைக்குத் தீங்கு செய்வதைத் தடுக்க இயலாத அரசு, அரசல்ல.” 1461. “அநீதியை எதிர்க்காமல் ஒதுங்கி வாழ்பவர்களும் அநியாயக்காரர்களே!” 1462. “அரசாங்கப் பணிமனைகளிலும் எளிய உழைப்பாளிகளுக்கு உத்தரவாதம் இல்லை.” 1463. “சோவியத்தில் லஞ்சம் வாங்கினான்! இது எப்பொழுதோ நிகழ்வது. ஆனால் நம் நாட்டிலோ லஞ்சம் தேசியமயப்படுத்தியாயிற்று.” 1464. “பலரை மொட்டையடித்து வாழ்பவ்ர்கூட திருப்பதிக்கு மொட்டை போடுகின்றனர்! பாபக் கழுவாய் போலும்.” 1465. “இன்றைய அரசியலில் - வாழத் தெரியாதவர்களே பெரிதும் ஈடுபடுகின்றனர்.” 1466. “தேவைக்கு வாங்கியவர்கள், திருப்பித் தரும் பொழுது சங்கடப்படுவது அறமன்று.” 1467. “நாளை எண்ணி ஊதியம் கொடுக்கும் முறை உழைப்பைக் கெடுக்கும்.” 1468. “உழைப்பு, பொருளீட்டல் ஆகிய இரண்டிலும் மன நிறைவு கொள்ளுதல் கூடாது கொண்டால் தேக்கநிலை வரும்.” 1469. “ஆற்றல் இயற்கை; படைப்புப் பொருளன்று. ஆற்றலைப் பயன்படுத்துகிற முறையிலேயே மனிதன் வெற்றி பெறுகிறான்.” 1470. “உள்ளவர் பெறுவார் என்பது ஆன்றோர் நியதி. இன்று அதையும் அழுக்காறு கெடுக்கிறது.” 1471. “தன்னைவிட மற்றவர் குறைவாகவே பெறுதல் வேண்டும் என்ற எண்ணம் இன்று பலரைப் பிடித்தாட்டுகிறது.” 1472. “இன்று எங்கும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசிப் பெருந்துன்பத்தை விளைவிக்கின்றனர்.” 1473. “இன்றைய இந்தியாவை, வேந்தலைக்கும் கொல்குறும்பு வருத்துகிறது.” 1474. “அறிவு, ஆள்வினையில் விருப்பமில்லாதார் விழுமிய சிறப்புக்களைத் தேடி அலைகின்றனர்.” 1475. “சாவு, - இயற்கை: ஆனால் வாழாமல் வாழ்வதைவிடச் நாமாக சாவது மேல்.” 1476. “இந்த உலகம் வாழ்க்கையின் மேல் உள்ள ஆசையால் எந்தத் துன்பத்தையும் எளிதில் மறந்துவிடும்.” 1477. “விலங்குகள், தனக்கு உணவுக் கிடைத்து விட்டால் அமைதி கொண்டுவிடும்; மற்ற விலங்குகளைப் பற்றிக் கவலைப்படாது இந்த நிலைக்கு இன்று மனிதர்களும் வந்துவிட்டார்கள்.” 1478. “சமநிலை இல்லாத சமுதாயத்தில் சண் நாயக தத்துவம் வெற்றி பெறாது.” 1479. “செய்பணிகளில் போராட்ட உணர்வு இல்லையெனில் வாழ்க்கை எளிதில் வெற்றியைத் தழுவாது.” 1480. “இந்திய சமூக வாழ்க்கையில் முதுமை, போற்றப்பட்டதுண்டு. இன்று இல்லை.” 1481. “பண்டித ஜவஹாலால் நேரு அவர்களின் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி அறிவியல் சார்புடையது; சுதந்தரத் தன்மையுடையது.” 1482. “இன்று காலிஸ்தான் சிக்கலுக்குக் காரணம் பஞ்சாபை, பஞ்சாப், ஹாரியானா என்று பிரித்ததேயாம்.” 1483. “தற்காலிக வெற்றிகளுக்காக தீய சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் தவறு. பின் விளைவுகள் தீமையையே தரும்.” 1484. “காலில் முள் தைத்துவிட்டது என்று கேட்கும் நிலைக்கு இன்றைய சமூகம் வந்து விட்டது.” 1485. “காதல் வாழ்க்கையில் பெண்ணுக்குப் பேருழைப்பு: பெருஞ்சுமை! உழைப்பு வாழ்க்கையிலும் அப்படியே! இது நியாயமற்ற தன்மை!” 1486. “கடைவீதியில் நல்ல தூய்மையான” சத்துள்ள உணவு நியாய விலைக்குக் கிடைத்தால் நமது பெண்கள் வாழ்க்கையை மாற்றலாம்; வளர்க்கலாம்." 1487. “பயம்-கோழைத்தனத்துக்குத் தாய்! நரகத்தின் வாயில்!” 1488. “தவறுகளுக்கு அஞ்சுவது வேறு. தண்டனைகளுக்கு அஞ்சுவது வேறு. இன்று தண்டனைகளுக்கே அஞ்சுகின்றனர். தவறுகளுக்கு யாரும் அஞ்சுவதில்லை.” 1489. “ஒருவர்தம் உடற்கருவிகளை பூரணமாகப் பயன்படுத்தினால் இன்பமாக வாழலாம். இது சத்தியம்!” 1490. “வாங்குபவர் விலை பேசாதுபோனால், விற்பவர் விருப்பமே விலையாகிவிடும்.” 1491. “ஒரு நோக்குடைய அரசாங்கத்தில் பணி செய்வோரிடையில் ஒருங்கிணைப்பின்மையே. நோக்கமில்லாத வாழ்க்கையைக் காட்டுகிறது.” 1492. “தியாகம், நாகரிகம் முதலியன பற்றிக் கவலைப்படாது-ஆதாயம் பற்றியே கவலைப்படுதல் விபச்சாரத்துக்கு நேரானது.” 1493. “சமமற்ற நிலைகள் உள்ளவரையில் நற்பண்புகள் வளர்தல் அரிது.” 1494. “வாய்ப்புக்கள் தானாக வருவன அல்ல; உருவாக்கிக் கொள்ளப்படுபவை.” 1495. “தன் தவற்றை உணரும் திறனற்றவர்கள் மற்றவர்கள் தவறுகளைப் பெரிதுபடுத்துபவர்.” 1496. “அதிகாரத்தைச் சுவைத்தல் தீமையில் தீமை.” 1497. “பெரும்பான்மையோர்” முடிவெல்லாம் ஜனநாயகத் தன்மை உடையனவாகாது!" 1498. “விவகாரத்தில் உளப்பூர்வமான சமாதானம் கண்டால் ஒழிய-விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது.” 1499. “கெட்டிக்காரன் கிடைத்ததைச் சுருட்டுகிறான்; ஏமாளி வாய்ப் பறை அறைந்து கொண்டிருக்கிறான்.” 1500. “இந்திய சமுதாயத்தில் புதியன சிந்தித்தவர்கள் உண்டு. ஆனால் இந்திய சமுதாயம் புதியன வற்றை ஏற்கவில்லை.” 1501-1600 1501. “ஒருவர் செய்யும் தவறை அவருடைய சமுதாயத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் ஆகாது. நல்லதல்ல.” 1502. “இந்தியர் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டாலே-இந்தியா வளரும்.” 1503. “தகுதியில்லாதன்வற்றிற்கு ஆசைப்பட்டு அல்லல்படுதல் அறியாமை.” 1504. “மற்றவர் துன்பம் அறியாதார் மோசமான மனிதர்கள்.” 1505. “இந்திரா படுகொலையில் திட்டமிட்டவன் வெற்றி பெற்றதற்குக் காரணம் திட்டமிட்டவனின் புத்திசாலித்தனமல்ல. மற்றவர்களின் கடமையில் காட்டிய அலட்சியமே காரணமாகும்.” 1506. “நமது அரசாங்கத்திற்கு சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதும் ஒருகுறை.” 1507. “காரண காரியங்களை ஆராயாமல் பேசுவது பைத்தியக்காரத்தன்ம்.” 1508. “ஒன்றைச் செய்து முடிப்பதில் உள்ள தொல்லைகளை-மற்றவர்கள் உணர்வதில்லை.” 1509. “அவசர உணர்ச்சி அறிவைக் கொன்று விடுகிறது.” 1510. "புகை வண்டிப் பெட்டியின் மீது ஏறி இருந்துகொண்ட குருவி, புகைவண்டி போகும்போது தான் யாத்திரை செய்ததாகக் கூற இயலாது. குருவிக்கு ஏது அனுபவம்? 1511. “உயிரின் உணர்வுகளை, வாழ்க்கையின் இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்லும் கருவியே இலக்கியம்.” 1512. “உணவுக்கு உப்புப் போல இலக்கிய அனுபவத்திற்கு ரசனை.” 1513. “நுண்மைத் தன்மையுடைய உணர்வு நிலையில் அமைந்த அனுபவங்கள் இப்போது இல்லை.” 1514. “பகுப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கும் செய்திகளிலிருந்து சிந்தனைக்கும் செல்லும் பயிற்சி இப்போது இல்லை.” 1515. “நமது சமய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், சேக்கிழார் படைத்துக் காட்டும் குடும்பங்களைப்போல வாழ்ந்தாலே போதும். மிகுதியும் பயன் விளையும்.” 1516. “இருப்பதில் அமைதிபெறும்-சமாளிக்கும் இயல்பு இயலாமையின் விளைவேயாம். சமாளித்தலை விட-சாதித்தலே சிறந்தது.” 1517. “சகிப்புத் தன்மை என்பது ஒருவகைக் கோழைத்தனமேயாம்.” 1518. “நுகர்தல் வாழ்க்கையின் கடப்பாடுகளில் ஒன்று; உரிய விலை கொடுக்காமல் நுகர்தல் ஒழுக்கக் கேடு.” 1519. “மற்ற சமயங்களுக்கு வாய்த்திருப்பது போல, அயல் மூலதனங்கள் நமக்கு இல்லை. நமது மூலதனமும்கூட சுரண்டப்படுகிறதே தவிர-வளர்க்கப் பெறவில்லை.” 1520. “உழைக்காமல்- சமூக உழைப்பு இல்லாமல் வாழ்பவர்களும்கூட ஒருவகையில் சுரண்டல் செய்பவர்களேயாவர்.” 1521. “பூரணத்துவமான உழைப்பு தோன்றாத வரையில் வையகத்தை வறுமையிலிருந்து மீட்க முடியாது.” 1522. “கவனமாக - தொடர்ச்சியாகச் செய்யப் பெறும் பணிகளே பயன்தரும்.” 1523. “சுதந்தரம்-பலர் வாழ்க்கையில் ஒளியைப் பரப்பவில்லை.” 1524. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.” 1525. “குழந்தையின் அருமையையும், பொறுப்பையும் உணர்பவர்கள்-குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்வர்.” 1526. “இன்பம் என்பது கலவியொன்றில்தான் என்று வாழும் வாழ்க்கை மிருக வாழ்க்கை.” 1527. “ஒரு பெருங்கொலைக்குப் பிறகு கூட ஒரு இளைஞனைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்-இங்கு மருத்துவமனையில்தான் தலைவர் உள்ளார்-அதற்குள் சிண்டுபிடிச்சண்டை!” 1528. “ஒருமைப்பாட்டில் வடபுலத்தார் வளர்ந்திருப்பதைப் போல் தமிழர்கள் வளரவில்லை.” 1529. “இந்தியாவில் மதத்தின் பெயரால் நிகழும் நிகழ்ச்சிகள்-மத நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்கின்றன.” 1530. “உரிமைகள் பெறுவதற்கு பிரிவினை வேண்டும் என்பது பொருளற்றது.” 1531. “வாழ ஆசைப்படுகின்றனர்; ஆனால் முயற்சிதான் இல்லை.” 1532. “நன்றாக வாழ்தலுக்குத் தாய் அறிவறிந்த ஆள்வினைவே.” 1533. “ஒருவர் மீது பற்று என்பது அவர்களைப் பொறுத்தது இல்லை. அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்ததாக அமைதல் பயன்தரும்.” 1534. “இன்றைய அரசியலில் கொல் குறுப்புக் காரர்களே மேவி வருகின்றனர்.” 1535. “செயலின்மை நோக்கி வெட்கப்பட்டு வருந்தாதார்-ஒருபொழுதும் செயல் திறனுக்கு உரியவர் ஆகார்.” 1536. “நேற்றைய தவறுகளே அழிந்துவிடாது. இன்று அந்தத் தவறுகளை நியாயப்படுத்தும் முயற்சியிலேயே அழிவு தொடங்குகிறது.” 1537. “திறம்படச் செய்யாதார்-எதற்கு? வையகத்திற்குப் பொறையாக!” 1538. “பரிந்துரைச் செய்யும் உரிமை-காற்று போலப் பயன்படுவதற்கல்ல; மருந்தெனப் பயன் படுதலுக்கேயாம்,” 1539. “செல்வத்தை செலவழித்தலைவிட - செல்வாக்கை செலவழிப்பதில் கவனமும்-சிக்கனமும் தேவை.” 1540. “மனம்போன போக்கில் நிர்வாக இயந்திரத்தை இயக்கினால் விபத்துக்கள் தவிர்க்க இயலாதன வாகிவிடும்.” 1541. “சிலர் சில காரியத்தை காரியமாகக் கருதிச் செய்வதில்லை. விளம்பரத்துக்காகவே செய்கின்றனர்.” 1542. “ஆற்றொழுக்குப் போல-பழக்கங்களை நடைமுறைப் படுத்தினால் மக்கள் தெளிவடைவர்.” 1543. “லாபநோக்கும் மனித உலகத்தை மிருக மாக்கி விட்டது.” 1544. “செய்ய வேண்டிய வேலைகள் கண்ணுக்கு எதிரே இல்லை தேடிப் பிடித்துே செய்யவேண்டும்.” 1545. “உடல்-உயிரைப் புத்திரமாக வைத்திருப்பதுபோல கடமைகளைப் பத்திரமாக-கவனமாக செய்பவர்கள் நல்ல பணியாளர்கள்.” 1546. “பழக்கமாகிவிட வேண்டியவை கூட புதியனவாக இருப்பதின் காரணம் ஈடுபாடின்மையே” 1547. “இன்றைய மனிதனை தோலுரித்துப் பார்த்தால் ஒரு அசல் காட்டு மிருகமாகவே காட்சி அளிப்பான்.” 1548. “தலைமை” என்பது இன்றைய வரலாற்றில் தகுதியற்றது என்ற பொருள் பயக்கும் சொல்லாக உருமாறியுள்ள நிலை ஒர்ந்து உணரத்தக்கது" 1549. “வழிகாட்டுதலும்-வழிநடத்துதலும் தான் தலைமைக்குரியப் பண்புகள்.” 1550. “சிறந்த ஆளுமை வாயிலாகத் தலைமைக்கு வருதல் இயலும்”. 1551. “நம்முடைய ஆற்றல்-நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் ஆற்றல்-ஆகிய அனைத்தும் பயன்படுமாறு பெற்ற நிலையே ஆளுமை நிலை” 1552. “வருகைப் பதிவேட்டின் மூலமே வருவாய் வரும் வாழ்க்கையைப் பலர் விரும்புகின்றனர்.” 1553. “உடலின் நலத்திற்கே உடை; ஆனால் இன்றைய நிலை… அதுவல்ல.” 1554. “ஒவ்வொரு கிராமத்திலும் செல்வம் குவிந்து கிடக்கிறது. உழைப்பால் வெளிக் கொணர்வாரைத் தான் காணோம்.” 1555. “எங்கும் வேலை நிறைய இருக்கிறது. ஆனால் செய்வோரைக் காணோம்; ஆனாலும் வேலை தேடி அலைபவர்களும் இருக்கிறார்கள்.” 1556. “இயற்கை-ஆண்-பெண் உணர்வுகளில் வேறுபாட்டைப் படைக்காதபோது; ஏன் ஆணுக்கு ஒரு நீதி-பெண்ணுக்கு ஒரு நீதி?” 1557. “ஆண் மறுமணம் செய்யலாம்-பெண் மறுமணம் செய்யக்கூடாது என்பது-இயற்கை நியதிகளுக்கு முரணானது.” 1558. “நிதியை நிர்வகிப்பதில் கண்டிப்பும், கண்ணோட்டமும் வேண்டற்பாலன.” 1559. “அனைத்தும் இருந்தும், ஒன்றும் இல்லாத நிலை-நிர்வாகத் தாழ்ச்சியையே பறைசாற்றுகிறது.” 1560. “வீடு எப்படி இருக்கிறது என்பதில் அல்ல. வாழ்க்கை-வீட்டில் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்ததேயாம்.” 1561. “நம் தலைமுறையில்-புண்ணிய பாரத பூமியில் மதத்தின் பெயரால் இரண்டு படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன. இது வெட்கப்படவேண்டிய செய்தி.” 1562. “அருளும் தெய்வமே, அடிக்கவும் செய்கிறது. இது தவிர்க்க இயலாதது.” 1563. “திட்டமிட்டுச் செய்தால்; செல்வம் சேர்ந்துவிடும்.” 1564. “பணிகளை நாமே செய்வது நல்லது” 1565. “கால்பந்து விளையாட்டில் பலர்-மிகுதியான உழைப்பில்லாமல்-உருண்டுவரும் பந்தைத் தொட்டு உருட்டி மற்றவர்களுக்குத் தந்துவிடுவர். தாம் முயன்று கோல் போட மாட்டார். அதுபோல பணிகளைக் கடத்தி விடுபவர்கள் பலர்.” 1566. “விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் பந்தைக் கேட்டு வாங்குவார்கள்.” 1567. “தெரிந்த ஒரு செய்தியையும் பணியையும் திட்டமிட்டுப் பயனுறச் செய்யாமை இழுக்கு.” 1568. “பலநாள் பழகினாலே, பழக்கம் உறுதி பெறும்.” 1569. “கால்கள் இருந்தும் காலால் நடக்கும் துரத்துக்குக்கூட ஊர்தி தேடி அலைபவன் சோம்பேறி.” 1570. “வாழ்க்கையில் கை வகிக்கின்ற பங்கு அளப்பில.” 1571. “பலர் விவாதிக்கவே விரும்புகின்றனர். கலந்து பேச யாரும் முன்வருவதில்லை”. 1572. “சுமத்தப் பெறும் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமல் திரும்ப குற்ற்ச்சாட்டு வைப்பது குற்றம் செய்யவில்லை என்ற கருத்தை உருவாக்காது.” 1573. “வளர்ச்சியடையாதவர்கள் தான் வைத்த அதிகாரத்தில் மூழ்கிவிடுவர்.” 1574. “கழிவுப் பொருள்கள் பலநூறு பொருள் மதிப்புடையன.” 1575. “வேலை செய்யத் தெரிந்தவர்கள் வேலைக்காரர்களாகி விடுவதில்லை. வேலையைப் பயனுறச் செய்வதின் மூலமேயாம்.” 1576. “ஒன்றைப் பொறுப்புணர்வுடன் ஈடுபாட்டுணர்வுடனும் வாங்கிக் கொள்பவர் பலரின் அன்பைப் பெறுவர்.” 1577. “தீயவர்கள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பர். இவர்களை முயன்று மாற்றிவிட்டால் பயன்படுவர்.” 1578. “காரணம், காரியங்களைக் கடந்ததே உண்மையான அன்பு.” 1579. “அன்பு காட்டுதல் என்பது இயல்பான உயிர்க்கு குணமாகிவிடவேண்டும்.” 1580. “உழைத்தல் என்பதும் இயல்பான உயிர்க் குணமானாலே வாழ இயலும்”. 1581. “எந்த ஒரு நன்மையும் கூட திணித்தால் மனிதர்கள் ஏற்கமாட்டார்கள்.” 1582. “ஒருவர் தன்னுடைய செயலின்மை கருதி நொந்துகொள்ளாமல் சுட்டிக் காட்டுபவர்மீது வேதனையைக் காட்டுதல் திருந்தமாட்டேன். என்பதற்கு அடையாளம்.” 1583. “மிரட்டுபவர்களுக்குப் பணிவது சாவதற்குச் சமம்.” 1584. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.” 1585. “எண்ணி திட்டமிட்டு காரியங்கள் செய்யாது போனால் காரியக் கேடுகள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது.” 1586. “குறைகள் ஏராளம் மாற்றும் முயற்சியைத் தான், காணோம்.” 1587. “இந்திய நிர்வாக அமைப்பு, வழக்கமாகச் செல்வது. அதற்குமேல் உயிர்ப்பு இல்லை.” 1588. “மனிதன்-வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்து வாழத் தொடங்கும் நாளே அவன் உண்மையில் பிறந்த நாள்.” 1589. “ஆன்மீகம் என்பது ஆன்மாவின்-உயிரின் முதிர்ச்சிக்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையைக் குறிக்கும்.” 1590. “பழுத்தபழம் எல்லார்க்கும் சுவையாக இருப்பதுபோல ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்கள் யார் மாட்டும் அன்பு செய்வர்.” 1591. “மதம் கடவுளுக்காக ஏற்பட்டதல்ல-மனிதனுக்காகவே.” 1592. “தீயவர்களின் கருவியாக மதம் பயன்படுத்தப் பெறும்பொழுது - மதம் பழிப்புக்கு ஆளாகிறது.” 1593. “சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்வது ஒர் ஆன்ம திருப்தியே-ஆனால் வளர்ச்சியும் சிறப்பும் கிடைக்காது.” த-11 1594. “இந்திய சமூக வாழ்க்கையில்-வைதிகச் சடங்குகளுக்கு உள்ள செல்வாக்கு குறையவில்லை.” 1595. “கிறிஸ்தவர்களைப் போல அணி அணி யாக ஆர்வத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வோர் கிடைத்தாலே வளரலாம்.” 1596. “நன்றி-விசுவாசம் சொல்லால் காட்டப் பெறுவது அல்ல; செயற்பாடுகளின் மூலம் காட்டப் பெறுவது.” 1597. “ஒழுங்கமைவுடைய வாழ்க்கைக்குப் போராடாதவர்கள்-வெற்றி பொருந்திய வாழ்க்கையைப் பெற முடியாது.” 1598. “சாமார்த்தியசாலியான ஒருவன் தனக்கு சரிப்பட்டு வராததை எல்லாம் உலகத்திற்கே சரிப்பட்டு வராது என்று கூறிவிடுவான்.” 1599. “இன்று, கூட்டுறவு என்பது சாதாரண பணப்பரிமாற்றம் மட்டுமே செய்துவருகிறது. இது தவறு. இதனுடன் ஆளுமை, பண்பாடு ஆகிய பரிமாற்றங்களுக்கும்-வளர்ச்சிக்கும் கூட்டுறவு பயன்படும். பயன்படும்படி இயக்கவேண்டும்.” 1600. “பலர், கூடித் தொழில் செய்வது என்றால் ஒரே வேலையை பலர்செய்வது என்பதல்ல. அவரவர்க்குள்ள பொறுப்புகளை ஒத்திசைந்து செய்வது என்பது கருத்து.” 1601-1700 1601. “முறைப்படி செய்யாத நல்ல காரியம்கூட முழுப் பயனைத் தராதுபோகும்.” 1602. “பலர் நம்முடைய நோக்கத்திற்கு இசைந்து வராமல்; ஆனால் நமது படகிலேயே பயணம் செய்கின்றனர். இது ஒரு விசித்திரமான நிலை.” 1603. “செல்வம் இருப்பதும் தீது; இன்மையும் தீது-அதனால் செல்வம் தேடிப் பெறுவதாகவும்-தேவைக்குத் தேடுவதாகவும் இருத்தல்வேண்டும்.” 1604. “காலத்தவனை நிர்ணயம் இல்லாத எதுவும் பயன் தராது - முடியவும் முடியாது.” 1605. “விழுந்து - விழுந்து, தஞ்சாவூர் பொம்மை எழுந்திருக்கலாம். ஆனால், மனிதன் கூடாது.” 1606. “இந்திய நாட்டில் அரசியலை குடும்பச் சொத்தாக ஆக்கும் ஆர்வம் வளர்ந்து வருகிறது; இது நல்லதல்ல.” 1607. “வேறுபாடுகள் உடையனவற்றில் இன்பம் துய்த்து மகிழும் மனித உலகம், ஏன் கொள்கை வேறுபாடுகளையும், அப்படிக் கருதவில்லை.” 1608. “இயற்கையின் இயக்கமே ஒரு கூட்டமைப்புள்ள இயக்கம்.” 1609. “நிலத்தால் மனிதனுக்குப் பெருமை இல்லை; மனிதனால் நிலத்துக்குப் பெருமை.” 1610. “அரசியல் கட்சிகள், ஆட்சியமைப்பில் ஊடுருவிச் செயற்படும் வரையில் லஞ்சம் ஒழியாது.” 1611. “சார்புகள் வழிப்பட்ட அன்பு, வரவேற்கத் தக்கதல்ல.” 1612. “தெருவைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாதார்,”தேசியம்" பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர்." 1613. “எந்த ஒன்றும் வழிவழித் தடத்தில் சென்றால் நன்மை விளையாது.” 1614. “மாற்றங்கள், உறவை, வளர்ச்சியைப் பாதிக்காது.” 1615. “நன்மையிலும் வளர்ச்சியுண்டு.” 1616. “வளர்ச்சியில்லாத பண்புகள் கூடக் காலப் போக்கில் தரம் குறையும்.” 1617. “பணிகளை, எதிர்பார்த்துத் தொடங்கினால் சிறப்பாக நடக்கும்.” 1618. “ஒற்றுமை, தேவையின் அடிப்படையில் தோன்றியது.” 1619. “ஒருமைப்பாடு என்பது வேற்றுமைகளைக் கடந்த ஒரு பொதுவான உறவு.” 1620. “ஒன்றுதல், கலத்தல், - இது கூடாத ஒன்று.” 1621. “தனித்தன்மை” வறட்சித்தன்ைம உடையது." 1622. “வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தில் தான் ஒருமைப்பாடு கால் கொள்ள இயலும்.” 1623. “பொதுமக்கள் பல்வேறு குடிமைப்பண்புகளில் வளர்தல் அவசியம்.” 1624. “கடவுள் நம்பிக்கையே போதுமானது. மதங்கள் வேண்டியதில்லை.” 1625. “என்னுடைய பகைவனும் பலமாக இருந்து நான் மோதினால்தான் என் பலம் வளரும்.” 1626. “குறைந்த அளவு வாக்காளர்களை நான் சந்தித்து வாக்குப் பெற பிரசாரம் ஏன்? எல்லாம் வெளிச்சம்தான்!” 1627. “பதவிகளுக்கு ஏற்படும் நெருக்கடி, பணிகளுக்கு ஏற்பட்டால் நல்லது.” 1628. “சரியாகச் செய்யாதார், செய்யாமைக்குத் தாம் நோகும் இயல்பு வராத வரையில் திருத்தம் வராது.” 1629. “அலுவலக நடைமுறைகள், படிப்பினைகள் வழி வந்தவையே! இவை பின்பற்றப்படாது போனால் தோல்வியே வரும்.” 1630. “கணப் பொழுதும் மாறும் உலகியலின் மாற்றங்கள் தவிர்க்க இயலாதன.” 1631. “அரசு, வீட்டு வாசற் படிக்கு வந்தாலும் விழிப்பில்லாதவர் பலர் உண்டு.” 1632. “இன்றைய மனிதர் பலர் தேவைக்கு ஆட்பட்டு ஆசைப்படுவதைவிட அழுக்காற்றுக்கு ஆட்பட்டே ஆசைப்படுகின்றனர்.” 1633. “பழகும் பண்பு அறியாதவர்கள் மேலதிகாரிகளாக வந்து விட்டால் அவர்களோடு ஒத்திசைந்து பணி செய்தல் அரிது.” 1634. “அரசியல் வாதிகள் தங்களுடைய விருப்பங்களை மற்றவர்கள் மீது ஏற்றுவர்.” 1635. “உழைப்பில் பயன்படுத்தப் பெறாத ஆற்றல், நீரிழிவு நோயாகிறது.” 1636. “சிந்தித்துத் திட்டமிட்டால் சென்ற காலத்தில் செய்யப்படாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவு என்பது தெரியவரும்.” 1637. “ஆசைகள் அளவுக்கு முயற்சி இல்லை.” 1638. “சுதந்தரம் கற்றுக் கொடுத்திருக்கும் ஒரே காரியம் மனுக்கள் எழுதுவதுதான்.” 1639. “கிராமங்கள் தன்னிறைவுடைய குடியரசாக விளங்கவேண்டும்.” 1640. “செய்தவற்றைச் சரிபார்த்தல் என்பது தவிர்க்க முடியாதது.” 1641. “அரசியலில் உள்ள ஆர்வம் செயற்பாடுகளில் இல்லையே!” 1642. “பசுமைக்கு ஈடு எதுவுமில்லை.” 1643. “நமது நாட்டின் அரசியல் பொது வாழ்க்கை கொல்குறும்பு செய்யும் கயவர்கள் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.” 1644. “அநீதிகளைக் கண்டிக்கத்தகாதவர்கள் அநீதிகளுக்கு உடன்பட்டவர்கள் தாம்.” 1645. “நாம் மெள்ள மெள்ள பழக்க வசத்தால் தீமைகளுக்கு உடன்பட்டுவிடுகின்றோம்.” 1646. “கம்யூனிஸ்டுகள் உரியவகையில் இந்திய நாட்டுக்குச் சேவை செய்யவில்லை.” 1647. “இந்திய கம்யூனிஸ்டுகள் பெயரால்தான். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் அல்ல.” 1648. “எந்த நிலையிலும் யாதொன்றையும் விட்டுக் கொடுக்க முன்வராதவர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது.” 1649. “செலவுக்குப் பணம் தேடுதல், பணத்துக்குச் செலவு தேடுதல்; தேவைக்குப் பணம் தேடுதல்.” 1650. “மேற்றிசை நாடுகளில் சமூக நாகரிகம் வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில்”சமூகமே’ இன்னும் உருவாகவில்லை." 1651. “உதவி செய்தல் என்ற அறம், அறங்களில் எல்லாம் சிறந்த அறம்.” 1652. “உட்குழுக்கள் இல்லாத அமைப்புக்களால் தான், நாட்டுக்கு நல்லன செய்யமுடியும்.” 1653. “உடல் இயங்குகிறது; ஆனால் நாம் இயங்குவதில்லை.” 1654. “ஏதாவது ஒரு ஆவேசம் வந்தாலன்றி பணிகளின் தொடக்கம் வராது.” 1655. “நாமே செய்வது-நற்பயன் தரும்.” 1656. “மெதுவாகச் செய்தாலும்-தொடர்ச்சி இருந்தால் பயன் கிடைக்கும்.” 1657. “திட்டத்துக்காக வாழ்க்கையல்ல - வாழ்க்கைக்காகவே திட்டம் உருவாகிறது.” 1658. "ஆர்ப்பரவம் மக்களை ஈர்ப்பதால்-எங்கும் ஆர்ப்பரவம் நடைபெறுகிறது. 1659. “அரசியலில் புதுமுகம் காண்பதரிது.” 1660. “உன்னைப் புகழ்கிறவர்கள்-உனக்குக் கேடு செய்கிறார்கள்.” 1661. “கல்வெட்டுகள் மூலம் நினைவைப் பராமரிப்பு என்பது-அவர்களிடம் உண்மை இல்லை என்பதன் அடையாளம்.” 1662. “எதிர்மறை இயக்கங்கள் அழிக்கும்; ஆக்கம் செய்யா?” 1663. “எதிர்மறை இயக்கங்கள் எதிர்ப்புக்குரியன மறைந்துவிட்டால் ஒரு சூன்யத்தை உருவாக்கும்.” 1664. “எந்த ஒரு நன்மையும் தீமையும் ஒரு நாளில், ஒரு பொழுதில் தோன்றுவன அல்ல.” 1665. “வாழ்க்கையை வியாபாரமாக அனுமதித்தல் தற்கொலையாகும்.” 1666. “சாக்கை நனைத்துத் தூக்கிக் கொண்டு போதலை ஒக்கும், அறிந்தும் துன்பத்தைச் சுமத்தல்.” 1667. “ஒரு தமிழன் ஞானியாக விளங்குதலை பார்ப்பனர் மதத் தலைவர்கள் ஏற்கமாட்டார்கள்.” 1668. “சாதாரண வைக்கோல் கூட ஒரு மகிழ்வுந்துப் பயணத்தைத் தடுத்துவிடுகிறது. ஆதலால் கேட்டினைச் செய்ய சிறியோராலும் இயலும்.” 1669. “அரசியல் கட்சி ஊர்வலத்தை, கடமையை விட உயர்ந்ததாகக் கருதுபவர்களால் அரசியலுக்கும் பயன் இல்லை; கடமை உலகத்துக்கும் பயன் இல்லை.” 1670. “தூங்குதலும் உழைப்பாளிகளுக்கு ஒரு விதக் கடமையேயாகும்.” 1671. “சிக்கலே இல்லாத இடத்திலும் சிலர் விதி முறையை மீறுகின்றனர். ஏன், பழக்கத்திற்கு அடிமைப்பட்ட நிலை.” 1672. “எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஈடுபடுதல் பயனற்றவைகளையே வளர்க்கும்.” 1673. “முயற்சியின் வாயிலில் முதல் அடி கூட எடுத்து வைக்காதார் முடியவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத ஒன்று.” 1674. “கல்வியில் ஆர்வம் உடையார் கூழுக்கும் கஞ்சிக்கும் வெட்கப் படமாட்டார்.” 1675. “படித்தவர்களிடம் கூட சமூக வாழ்நிலை உணர்வுகள் கால்கொள்ளவில்லை.” 1676. “நமது நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களில் பாதிப்பேர் பதவிகள் - பெருமைக்கே! அரசியல் நடத்த அல்ல.” 1677. “சாதாரண மக்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்தால்தான் வளர்ச்சிப் பணிகள் பயன் தரும்.” 1678. “பொறுப்பற்ற நிலை என்பது நமது நாட்டுக்கும் பழக்கமாகிவிட்டது.” 1679. “காரண, காரியங்களை கடந்தததே உண்மையான அன்பு.” 1680. “தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள்-ஒளிதலம் தர இயலாதவை.” 1681. “ஒரு மனிதர் எவ்வளவு சின்னவராக இருந்தாலும் அவர் அளவுக்கு அகந்தை-அழுக்காறு கொண்டுள்ளனர்.” 1682. “தமிழ் நாட்டில் கிறித்துவர்கள்-இன்றும் வாழ்க்கையில் இந்துக்களே.” 1683. “இலஞ்சம் என்பது இன்றைய பழக்கங்களில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது.” 1684. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.” 1685. “பழகப் பழகத்தான் எந்தப் பழக்கமும் உறுதிபெறும்.” 1686. “சமயத் தலைவர்களுக்கு, செல்வந்தர்களிடம் பழக்கம் வந்துவிட்டாலே, அறநெறிப் போதனைகள் திசைமாறிவிடும்.” 1687. “இன்றைய அறநெறிகள் - சட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு எதிரானவையே.” 1688. “மங்கையர் பலர் அணிகலன்களை-அழகுக்காக அணிவதில்லை - மற்றவர்களுக்குக் காட்டவேயாம்.” 1689. “ஓராண்டு கடந்துவிட்டது, என்று ஊதிய உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஒராண்டில் நடந்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்.” 1690. “எல்லோருமே வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அப்படியானால் தோற்பது யார்?” 1691. “வெற்றி, தோல்வி மனிதர்களின் தரத்தை நிர்ணயிப்பது அல்ல. வெற்றி, தோல்வி அவர்களை எப்படி ஆக்குகிறது என்பதை பொறுத்துத்தான்!” 1692. “பல நாள்கள் சிந்தித்துத் தொகுத்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்த இயலும்.” 1693. “தெளிவான விபரங்கள், திட்டங்கள் இல்லாத செயற்பாடு அரங்கின்றி ஆடுவதை ஒக்கும்.” 1694. “தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப, காலத்தைப் பயன்படுத்துபவர்கள், கடமைகளைச் செய்பவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்குப் பயன்பட மாட்டார்கள்.” 1695. “ஒருங்கிணைப்பு மிக்க உணர்வு இல்லாத நிறுவனம் செயற்பாட்டில் பயன் கிடைக்காது. இழப்பும் ஏற்படும்.” 1696. “எதையும் காலக் கெடுவுடன் செய்து பழகாதார் நாட்களை இழந்துவிடுவர்.” 1697. “செயல் மாட்டாதாரிடம் கோடி கொடுத் தென்ன? யாதொரு பயனும் இரா!” 1698. “நோக்கத்தில் ஒன்றாதாரைப் பணியில் உடனுழைப்பாளர்களாக ஏற்பது கடினம்.” 1699. “பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபணம் செய்வதே வரலாறு.” 1700. “இந்தியா ஒரு நாட்டு” உண்மையேயாயினும் இன்றிருப்பது போல் ஒரு நாடு அமைப்பு இருக்கக் கூடாது." ஒரு நாடு ஒரே மாநிலம் ஆட்சி செய்கிறது; ஒரே மொழி ஆட்சி செய்கிறது; ஒரே மதம் ஆட்சி செய்கிறது. ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது. 1701-1800 1701. “சாமார்த்தியம் வந்தமையும் அளவுக்கு வாய்மை வந்து பொருந்துவதில்லை.” 1702. “எந்த ஒரு பணியும் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு உதவாவிடில் அது பணியல்ல; ஒரு வகையான வணிகமேயாகும்.” 1703. “சுய விருப்பத்தால் செய்யப் பெறும் பணியே அறம் சார்ந்த பணி.” 1704. “உயர் குறிக்கோளுக்கு உரிமையாக்கிக் கொள்ளாதோர் - தட்டச்சு இயந்திரம் போலப் பணி செய்பவர். பயன் இராது.” 1705. “உயர் குறிக்கோள் இலாதார் சிறப்புறும் பணிகளை செய்யார்; அதே போழ்து பிழைகளும் செய்வர்.” 1706. “உள் வளர்ச்சியும் அதாவது ஆன்மாவும் வளர்ந்தால்தான் - கல்வி - கேள்வி பயனுறும்.” 1707. “ஒருவருடைய கண்கள் - காதுகள் அறிவார்ந்த நிலையில் சுமூக உணர்வில் இயங்கினாலேயே ஏராளமான வரலாற்றுண்மைகள் கிடைக்கும். செயற்பாட்டுக்குரிய உந்து சக்திகளும் கிடைக்கும்.” 1708. “தன்னலம் என்பது பேயினும் கொடுமையானது.” 1709. “பிறர் நலம் பேணியதால் கெட்டார் யாரும் இல்லை”. 1710. “இந்தியாவில் மக்களாட்சி முறை இல்லை குழுக்களின் ஆட்சிமுறையே உள்ளது.” 1711. “அரசாங்க இயந்திரம் - ஒரு சரக்குந்து வண்டி, அதன் உயிர்ப்புள்ள செயற்பாடு இருக்காது.” 1712. “சிலரை எழுப்பவே இயலவில்லை; அவர்களை நொந்து காலங்கடத்துவதைவிட எடுத்துச் செய்வது நல்லது.” 1713. “முயற்சியுடைய வாழ்க்கையில் வரும் இடர்கள்-வெற்றியைத் தடுத்துவிடாது.” 1714. “இடர்கள் வேறு - இயலாமை என்பது வேறு.” 1715. இடர்களையே இயலாமை கருதுகிறவர்களால்-காரிய சாதனை செய்ய இயலாது." 1716. “செல்வம் பெறுதல் பெரிதல்ல-பேனுதலே அரிய கடமை.” 1717. “வாய்க்கும் காலத்திற்குரிய பணியிதுவென நிர்ணயித்து செய்க, இப்படிச் செய்க, இப்படிச் செய்தால் பணிகளின் சுமை குறையும்; காலம் மிஞ்சும் ஒரு போதும் நெருக்க வராது.” 1718. “ஆசிரியர்களுக்கு பள்ளியே திருக்கோயில்: மாணவர்களே விக்ரகங்கள்; அறிவே நிவேதனம்.” 1719. “அரிய கடமைகளைச் செய்பவர்களைவிட சோம்பேறிக்கு பொழுது எளிதில் போய்விடும். அவர்களுக்கு பொழுது போவது தெரியாததால்.” 1720. “ஒருநாட்டுமரத்தில் உயரிய இனத்தை ஒட்டுப்போட்டு உயரிய பழமரம் எளிதில் உருவாக்க முடிகிறது. ஆனால் எளிதில் மனிதர்களைப் படைக்க முடிவதில்லை.” 1721. “ஒன்றை ஒன்றால் ஈடுசெய்வது எளிது. பலவாக அனுமதித்தால் சுமையாகிவிடும்.” 1722. “கையாலாகாதவர்கள் - காலங்கடத்துபவர்களால், பிரச்சனைகளுக்குத் தீர்வு கான இயலாது.” 1723. “செயல்திறன் என்பது தாய். செயல்படுதலே தந்தை.” 1724. “உழைப்பும் - நுகர்வும் வாழ்க்கையை இயக்கும் இரண்டு உருளைகள்.” 1725. “சமூக அநீதிகள் - ஆட்சியிலமைந்து விட்டால் மக்களுக்கு விமோசனம் இல்லை.” 1726. “இந்திய நாட்டின் ஏழைகள் - அறிவும் தெளிவும் இல்லாதவர்கள், போராளியர்களும்,அல்ல; அறிவாளிகள் சுயநலவாதிகள் - சோம்பேறிகள்; அரசியல்வாதிகள் அதிகாரப் பசியினர்; செல்வந்தர்கள் நீரிழிவு நோயினர் ஆதலால் புரட்சி தடைப் படுகிறது.” 1727. “இந்திய மண்ணில் பொது உடைமை மலர நெடிய நாள் பிடிக்கும்.” 1728. “இந்தியாவில் கருத்துருவம் கொடுக்கும் கருவிகள் வலிமையாகவில்லை.” 1729. “கடமைகளின் வழி உரிமை பெறுவது - கற்பின் வழி மகப்பேறு பெற்றார் போல.” 1730. “கருப்புப்பணம் என்பது - கர்ணன் பிறந்தது போல - வாழ்ந்தது போல:” 1731. “வளர்ச்சிக்குரிய உணர்வுகளை நாள் தோறும் பெற்று வளர்ந்தால்தான் - வெற்றிகள் கிடைக்கும்.” 1732. “வாழ்க்கையில் தேக்கம் கூடவே கூடாது.” 1733. “பலர் வேலை செய்வதாகத் தெரிகிறது. ஆனால் கணக்குப் பார்த்தால் நல்ல விடை கிடைப்ப தில்லை. சரியான நேரத்தில்-சரியான முறையில் சரியான அளவுக்குச் செயற்படாததே காரணம்.” 1734. “நமது அரசு இயந்திரம் பெரும்பாலும் பழுதாகிவிட்டது.” 1735. “இன்று அரசு இயந்திரத்தை இயக்குவது இலட்சியங்கள் அல்ல-இலட்சங்கள்.” 1736. “நல்லவன் அறிவுரைக்கு ஆட்பட்டுச் செய்வான். கெட்டவன் தண்டனைக்கு ஆட்பட்டு செய்வான்.” 1737. “நமது நாட்டின் வரப்புக்களிலே ஆயிரக் கணக்கான ஏக்கர்கள்.” 1738. “செல்லாக் காசை யாரும் விரும்புவதில்லை. ஆனால், செல்வம் பெருகப் பயன்படாத-செலாவணியில்லாத வாழ்வை விரும்புகின்றனர்.” 1739. “உழைக்காதவன் வாழ்க்கை செல்லாக் காசு.” 1740. “தன்னலத் தீங்கில்லாத சிலர் சிறிய பிறர் நலப் பணிகளைக் கூடச் செய்வதில்லை. அந்த அளவுக்கு சமூக உணர்வு இல்லை.” 1741. “தைரியமாக நாட்குறிப்பு எழுதிக் காட்டி ஊதியம் வாங்குபவர்கள் வேசிகளிலும் கொடியர்.” 1742. “செய்த பணியின் அளவு கடுகு, கால தாமதம் மிகுதி. பயனோ எதிர்மறை. இப்படி வேலை பார்த்தால் எப்படி வளர்ச்சி தோன்றும்.” 1743. “தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடு.” 1744. “செவ்வி பார்க்கத் தெரியாதவர்-ஒன்று மூர்க்கர்; அல்லது சுயநலவாதிகள்.” 1745. “ஒருமுதல் வளர்ந்தால்தான் வளர்ச்சி.” 1746. “ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கால் வைத்து நடப்பது நடை. ஒன்றன்பின் ஒன்றாக செயற்படுவது நடை-ஒழுக்கம்.” 1747. “முட்டையிடும் வாத்தைக் கொன்றது, அன்று கதை; இன்று யதாரத்தமான வாழ்க்கை.” 1748. “மக்கள் மறப்பதில் வல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.” 1749. “ஒரு பணியை அறிவார்ந்த ஆய்வுடனும் முழுமையான பயன்பாட்டு நோக்குடனும் செய்தால் முழுமையான பயன் விளையும்.” 1750. “கால தாமதங்கள் பல இழப்புக்களைத் தந்துள்ளன.” 1751. ஆரியத் தினை அகற்றி அந்த இடத்தில் தமிழை வைக்கவேண்டும்-அப்படியல்லாது ஆரியம் போன்ற ஒன்றை தமிழில் செய்து வைப்பதில் என்ன பயன்." . 1752. "அன்பு-பக்தி-தொண்டு-பணி ஆகிய அனைத்துக்கும் அவ்வபொழுது கணக்கு முடித்து-கணக்கு பார்த்து புதுக்கணக்கு போடவேண்டும். 1753. “இறைவனுடைய திருவருள் நிறைந்த ஆற்றல்கள்; கம்பிகளிலும்-கயிறுகளிலுமா செல்லும்” 1754. சடங்குகளில் மீண்டும் வீழ்தல் கூடாது." 1755. “அன்று ஒரு சூரபதுமன்; இன்றோ ஆயிரம் ஆயிரம் சூரபதுமன்கள்.” 1756. “நயம்படப் பேசினால் மட்டும் போதாது - சூதில்லாமல் இரண்டு பொருள் படாமல் பேச வேண்டும்.” 1757. “என் மதம் உயர்ந்தது.” என்று கருதுபவர்கள், மதச் சண்டையை விலைகொடுத்து வாங்குகிறார்கள்." 1758. “கேட்காமல் பேசுகிறவர்களிடம் சிக்கிக் கொண்டால் மெளனமாக இருப்பதே வழி.” 1759. "இன்பத்தில் துன்பக் கலப்பில்லாததே இன்பம்-அந்தமில் இன்பம்-சுத்த இன்பம். சுத்த இன்பம். 1760. பிராரத்துவத்தை (நுகரும் வினை) மன நிறைவுடனும், மகிழ்வுடனும் அனுபவித்தால் புகைச்சல் இருக்காது-புழுக்கங்கள் இருக்காது." 1761. “நெருப்பினுடைய எரியும் அளவுக்கு விஞ்சிட, ஆகுதிப் பொருளைப் போட்டால் வேள்வித் தீ எரிவதில்லை-பெருந்தீனிக் காரனின் ஆன்மா எழுச்சியடைவதில்லை.” 1762. “சோஷலிசம் வளரும் நாட்டில், கல்வி கூட்டுறவு தொழில் ஆகியவையே முதன்மையுடையன நமது நாட்டிலே வருவாய் துறையும் (ஆட்சி), காவல் துறையும் பன்மடங்கு வளர்ந்துள்ளது. போலீசு இராஜ்யம் போல் தெரிகிறது.” 1763. “பொதுமக்களுக்கு வேலைக்கும், அதற்கேற்ற கூலிக்குமே உத்தரவாதம் வேண்டும்; சோற்றுக்கும் துணிக்கும் அல்ல.” 1764. “முன்னேற முடியும், முன்னேறவேண்டும் என்ற உணர்வே ஏழை மக்களிடம் இல்லை! விதி பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது.” 1765. “நிர்வாகம் பெரியதாக வளர வளர அந்த அமைப்பில் உள்ளவர்களிடம் பொறுப்புணர்வு இல்லாது போனால் வளர்ச்சி பாதிக்கும். ஊதிய பலூன் போல வெடித்துவிடும்.” 1766. “எவ்வளவுதான் நெருக்கமான பழக்கம் இருந்தாலும் இடையில் பணம் புகுந்து விளையாடினால் மனிதர்கள் கெட்டுப் போவார்கள்.” 1767. “பணத்தாசையால் பண்பாடிழப்பவர்கள் பணம் காலியானபிறகு தேடுவாரின்றி அலைவார்கள்.” 1768. “எந்த ஒரு பணியையும் தொடக்க நிலையிலேயே எளிமையாகக் கருதிவிடாமல் கடுமையானதாகக் கருதி நிறைந்த முயற்சியை மேற்கொள்வது காரிய சாதனைக்கு வழி.” 1769. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.” 1770. "ஒரு பெரிய நீளமான தேர்ச்சங்கிலியில்-இடையில் ஒரு கம்பி முறிந்தாலும் தேர்ச்சங்கிலி த-12 பயனற்றதாகிவிடுகிறது. ஒரு நிர்வாகத்தில் ஒருவர் பலவீனராக இருந்தாலும் பாதிக்கும்." 1771. “தேர் இழுவையின் பொழுது-தேர்வடத்தில் ஒரு பகுதி அறுந்துபோனாலும் ஆயிரக் கணக்கானவர்கள் கீழே வீழ்ந்துவிடுவர். அதுபோல விரைந்து வளரும் நிர்வாகத்தில் ஒருவர் பொறுப் பில்லாது நடந்து கொண்டாலும் ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும்.” 1772. “கணக்குப் பார்க்கும்பொழுது வேலையின் அளவும், பயனும் சரியாக இல்லாது போனால் வேலை செய்ததாகக் கூற இயல்ாது.” 1773. “வேலையின் பயனை அனுபவிக்க இயலாத நிலையில் வாயினால் வேலை பார்த்ததாகக் கூறுவது ஏற்புடையதன்று.” 1774. “தொடுதல், தொடர்தல், முடித்தல் இடையீடு இல்லாத பணிநிலை உடையன.” 1775. “நாள்தோறும், செல்வ வரவும், செல்வ வளர்ச்சிக்குரிய வாயில்களும் கண்காணிக்கப் பெறுதல் வேண்டும்.” 1776. “வரவுகள் கண்காணிக்கப் பெறுதலே செல்வப் பாதுகாப்புக்கு உரிய வழி.” 1777. “மாதவி, மணிமேகலையை, துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது, கோவலனின் புகழைப் பாதுகாப்பதற்காகவே!” 1778. “மாதவி, மணிமேகலையைத் துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது. கோவலனிடம் அடைந்த ஏமாற்றத்தின் விளைவே!” 1779. “நட்பு-காதல் அர்ப்பணிப்புத் தன்மையுடையன. அதனால், தன்னலம் பேணுதல் இருக்காது.” 1780. “தி.மு.கழகத்தினர், தங்களுடைய சுவரொட்டியில் எம்.ஜி.ஆரை வெற்றிபெறச் செய்து விட்டனர்.” 1781. “நகரத்தாரிடம் பெண்மையைப் பேணும் இயல்பு உண்டு.” 1782. “குறைவான இலக்கு நிர்ணயிப்பது உள்ளதையும் கெடுத்துவிடும்.” 1783. “பெரும் பொறுப்புக்களில் இருப்பவர்கள் எண்ணிக்கையில்”ஒருவர்" ஆனாலும் சமூகத்தின் மதிப்பீடு தருதல் வேண்டும்." 1784. “விளம்பரம் என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல.” 1785. “அரசாங்கம் குடிமக்கள் நிலையிலும், தனிப்பட்ட முறையிலும், சமுதாய நிலையிலும் செய்ய இயலாதனவற்றைச் செய்தல் வேண்டும்.” 1786. “வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்காத அரசுக்கு தண்டனை தர உரிமையில்லை.” 1787. “முன்னணியில் நிற்பது என்பது முந்திரிக் கொட்டை மாதிரி நிற்பதாகாது. முந்திரிக்கொட்டை மாதிரி நிற்பது முன்னணியில் இருப்பதாக ஆகாது.” 1788. “சுவைமிக்க பருப்பை உள்ளிடாக உடைய முந்திரிக் கொட்டை, பழத்தின் சுவை உடன்படாமையால் பழத்தினின்று பிரிந்து வெளியே வந்துவிட்டது. ஆனாலும் பிறந்த பாவத்திற்காக உறவு நிலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” 1789. “சமூகத்தை அனைத்து வளர்த்தல் கடுமையான பணி. இந்தப் பணிக்கு கோபமே ஆகாது; கூடாது.” 1790. “ஒருவர் தன் வாழ்க்கையில் பாதிக்கப் படும்பொழுது அரண் தேடுவர். ஆனால் அவர்கள் பாதிக்கும்படி காரியங்களைச் செய்வார்.” 1791. “அரசுகளின் அதிகாரங்களையும் விடக் கூடுதலான அதிகாரம் பெற்றது சமூகத்தின் மனப் போக்கும், பழைய பழக்கவழக்கங்களும்!” 1792. “கண்ணகியால் பாண்டிய அரசை எதிர்க்க முடிந்தது. ஆனால் பூம்புகார் நகர மக்களின் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.” 1793. “கணவன் - மனைவி சண்டையில் குழந்தைகளையும் கையில் கொடுத்து, விரட்டுவது என்ன நியாயம்?” 1794. “என்ன வேலை செய்தோம் என்பதைக் கூறியும் காட்டியும் நிரூபணம் செய்ய இயலாதவர்கள் கூலியை எண்ணிக் கேட்பது என்ன நியாயம்.” 1795. “எந்தவிதத் தகுதியும் இல்லாத ஒருவன் கணவனாகிவிட்டால் அவனுடைய மனைவியை அவன் அடிமையெனக் கருதி நடத்தும் மனப்போக்கில்தான் பெண்ணடிமைத்தனம் இருக்கிறது.” 1796. “தன்னுடைய செயல்களுக்கு விளக்கம் கூற இயலாதவர்கள் கோபப்படுவார்கள்.” 1797. “மருமகள் என்ற உறவு முறையை அமைத்தும் மாமியார்களின் மனம் இறங்கவில்லை.” 1798. “ஒரு எளியவனிடத்தில் கூட நான் அப்படித்தான் செய்வேன்” என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் சான்றோர் கொடுமை என்று பழி தூற்றுவர்." 1799. “மானம் என்பது கிஞ்சிற்றும் இல்லாதவர்கள்தான் அவமானம் பற்றி ஆர்ப்பரிப்பர்.” 1800. “காயம்பட்ட காலில் கூச்சம் இருப்பதால் வலிமையுடன் எடுத்து ஊன்றாததால் மேலும் இடிபாடு உண்டாகும். காயம்பட்ட காலில் உள்ள பொய்ம்மையான அக்கறையால் அந்தக் காலைப் பயன்படுத்தாமல் வாளாவிடுவதால் பயன்பாட்டு நிலை இழந்து போகிறது. பட்ட காலிலேயே படும்.” 1801-1905 1801.“ஒருவருக்குக் கேடு வந்ததெனில் - கேடு வந்தவுடன், கேட்டிற்குரிய காரணங்களைக் கண்டு அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு கேட்டினை நீக்கிக் கொள்ளாது வந்துள்ள கேட்டிற்குக் கவலைப் படுபவர்களை நோக்கிக் கூறியது” கெட்ட குடியே கெடும்’ என்பது. 1802. “மனம் கெட்டு உறவு கெட்டுப்போன குடியே கெடும். மற்ற கேடுகளால் அதாவது வறுமையால் பிணியால் ஒரு குடி கெட்டுவிடாது.” 1803. “செயலற்றுப் போன”-என்பதை விளக்குவது “படுட” என்ற சொல். உயிர்ப்பு குறைந்து செயலற்றுப் போன காலிலேயே மீண்டும் மீண்டும் பிணியும் செயலற்ற தன்மையும் தோன்றும் நல்ல உயிர்ப்புடன் செயலும் உள்ள காலில் பிணி வந்தாலும் நீங்கும். காலுக்கு உயிர்ப்பு உழைப்பால் வருவது." 1804. “பிறப்பின் காரணமும் சூழலும் நல்ல வகையினதாக அமையாவிடில் நீங்காத் துன்பம் வந்து பொருந்தும்.” 1805. “ஆசையில் விளைவது அனைத்தும் அவலமே.” 1806. “வன்மமும் வளரும் தன்மையதே. தோல்விகளாலும் அறிவுரைகளாலும் கூட வன்மமுடையவரை மாற்றுதல் அரிது.” 1807. “தீமையில் எல்லாம் தீமை’ வன் கண்மையே!” 1808. “இன்றும் பேச்சு, எல்லோருக்கும் சமநிலை வாழ்வு. நடப்பது வல்லாங்கு வாழ்வோருக்கு வாழ் வளித்தலே.” 1809. "இன்று கையூட்டு வாங்குபவர்கள் ஒளிவு மறைவுடன் வாங்குவதில்லை. வெளிப்படையாகவே விகிதம் விதித்து வரிபோலத் தண்டுகின்றனர். 1810. “இந்த நூற்றாண்டு செய்த மகத்தான சாதனை, கையூடுடை தேசியமயப்படுத்தியது.” 1811. “ஒத்த நோக்கு, ஒத்த செயல், ஒத்த திறன் உடையோராக நட்பு கிடைத்தல் அரிது.” 1812. “பரிவுணர்வுகள் தண்ணீரைப் போலத் தான், வளர்ச்சிக்குத் துணை செய்யும். பரிவு உணவாக அமைந்து உதவி செய்யாது.” 1813. “காரணங்களே இல்லாமல் மோதிக்கொள்ளும் அளவுக்கு அறியாமை வளர்ந்திருக்கிறது.” 1814. “படித்தவர்கள் கூட காரண காரியங்களை ஆராய்ந்து பிரச்சனையை, தீர்வுக்கு வழி காணாமல் வளர்த்துவிடுகிறனர்.” 1815. “இருவேறு அணியினர் என்ற நிலை உருவான பிறகு, நடுவுநிலை அணி ஒன்று இல்லாது போனால் வம்பு வளரும்.” 1816. “இம்! என்றால், சாதி, கடுசி அடிப்படையில் கூடுவது விரும்பத் தக்கதல்ல.” 1817. “இன்று மக்கள், வாக்க்ாளர்கள் குறை, நிறை பார்த்து வாக்களிப்பதில்லை. அவர்கள் விருப்பம் போல.” 1818. “கடந்த காலத் தவறுகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே பல அரசியல் தலைவர்கள் உலா வருகிறார்கள்.” 1819. “பச்சையாகச் சொல்வதுதான் பலருக்கும் புரியும். பண்பட்ட மொழியில் சொல்வது புரிவதில்லை. ஒரு வகையான பாமரத் தன்மை.” 1820. “ஒரு தீமையைக் கண்டிப்பது மட்டுமே போதாது. தீர்வும் காட்ட வேண்டும்.” 1821. “தீமையுடைய நபரைக் கண்டித்தால் வரவேற்கிறவர்கள், தீமையைக் கண்டித்தால் வரவேற்க முன்வருவதில்லை, இவர்கள் நபரைப் பற்றியே கேட்டுப் பழகியவர்கள்.” 1822. “முன்பே கேட்டு பழகிய செய்தியை மனத்தில் வைத்துக் கொண்டே கலந்து பேச முன்வருபவர்கள் ஆய்வு மனப்பான்மை இல்லாதவர்கள்.” 1823. "உச்சந்தலை உரோமம் முதல், உள்ளங்-கால் வரை உயிர்ப்பு நிலை இருக்கிறது. உள்ளங் காலில் எறும்பு ஊரினாலும் உடன் செய்தி தலைக்குப் போய் தலை கையை அழைத்து தள்ளு என்று அறிவுறுத்தும். அதுபோல ஒரு இயக்கம் அதன் கிளைகளிலும், இருக்கவேண்டும். 1824. “சமூக வாழ்க்கையில் மாறுதல் காண விழையாமல் புறத்தே சின்னங்கள் அமைப்பதிலேயே பலர் முனைகின்றனர். இது ஒரு உண்ர்ச்சி”. 1825. “இன்றைய தமிழர்களில்பலர் பெயரளவில் தமிழர். இவர்களுக்கு மொழி உணர்வு இல்லை.” 1826. “அரசியல் இயக்கங்களுக்கு பதவிசுகம், அதிகார ஆசை இருக்கும் வரை உருப்படியான சமூக மாற்றத்திற்குப் புரட்சி செய்ய மாட்டார்கள்.” 1827. “பல தவறுகள், பழக்கத்தை மாற்ற இயலாமையினாலேயே யாம்.” 1828. “தொழில் நுட்பத்துடன் கூடிய உழைப்பே பயன்தரும்”. 1829. “பணியார்வம் இல்லாமல் பிழைப்பைக் கருதுபவர்கள் பயன்பட மாட்டார்கள்.” 1830. “யார் மாட்டும் கடும்ப்கை கொண்டு அழிக்க முயன்றாலும் கேடு வரும்.” 1831. “இன்றைய உலகத்தில் சினவாமல் இருப்பதற்கு முயன்று, வெற்றி பெற்று விட்டால் அது ஒரு சாதனையே!” 1832. “விதிகள், முறைகள், நெறிகள் வாழ்க்கையின் படிப்பினைகளில் பிறந்தவை. அவற்றை நாம் ஏற்காது போனால் முன்னோர் பெற்ற தோல்விகளை நாமும் பெறுவோம்.” 1833. “பெரும்பாலும் அரிய சாதனைகளைச் செய்ய முயன்றோர் தனி மனித நிலையிலேயே செய்துள்ளனர். பந்திக்கு வருவது போல் அனைவரும் பணிக் களத்திற்கு வரமாட்டார்கள்.” 1834. “நாளது வரையில் உயரிய இலடுசீயங்களுக்காகப் போராடியவர்கள் சாகடிக்கப் பட்டே வந்துள்ளனர். அதில், அன்னை இந்திராகாந்தியும் ஒருவராகிவிட்டார்.” 1835. “வேதனை, ஊக்கமுடையோருக்கு படைக்கும் ஆற்றலையே தரும்.” 1836. “அனைத்தும் இருந்தும் சிறப்பாக வாழாதோர் கொடுத்து வைக்காதவர்கள் என்று சொல்லித் தான் அழவேண்டியிருக்கிறது.” 1837. “வரவுக்குள் செலவு” என்பது தற்காப்பு யுக்தி. ஆனால் வரவுக்கு எல்லை கட்டக்கூடாது." 1838. “நல்ல பணி வெளியே தெரிந்தவுடன் அவரவர் ஊருக்குச் செய்யும்படி கோருவார்கள்; அதன் அடிப்படையை அறியாமலே.” 1839. “வங்கியில் இட்டு வைப்பதும் இன்று அறமேயாகும்.” 1840. “வெப்பம் நிறைந்த நிலப்பகுதிகளில் எண்ணெய்க் குளியல் இன்றியமையாததே.” 1841. “உணவும் உழைப்பும் அளவாகக் கிடையா விடில் நோயேயாம்.” 1842. “வேலையைத் தேடிச் செய்யாமல் கையில் வந்த வேலையைச் செய்பவர்களால் உடனுறை எழுத்தர்களாக இருப்பது சாத்தியமில்லை.” 1843. “எந்த ஒரு பணியையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் விழைவு தேவை.” 1844. “விழித்திருத்தல் என்பது ஆயத்த நிலையில் இருப்பதையே குறிக்கும்.” 1845. “எப்போதும் ஆயத்த நிலையில் பிணிப்பு இல்லாதவர்களிடமிருந்து பலமணித் துளிகள் நழுவி விடும். காலத்தையும் செய்த வேலையையும் கனக்கிட்டுப் பார்க்க முடியாது.” 1846. “முற்றாக நல்லவர்களும் இல்லை; முற்றாக கெட்டவர்களும் இல்லை.” 1847. “ஏவவும் செய்கலான்தான் தேறான் அவ்வுயிர்க்கு போஒம் அளவும் ஒர் நோய்” என்ற திருக்குறள், வாழ்வின் படிப்பினையில் பிறந்த திருக்குறள். இன்னும் இந்தக் குறளுக்கு இலக்கியமாகப் பலர் உளர்." 1848. “தவறுகளை உணர்த்துகிற பொழுது, எதிர்ப்புணர்ச்சி காட்டுபவர் அல்லது பயப்படுகிறவர், யாதொரு உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆகிய மூவகையினரும் திருந்துதல் அரிது. மாறாக வருந்து தலையும் உணர்தலையும் புலப்படுத்துகிறவர்கள் திருந்துவர்.” 1849. “எண்ணிக்கை கூடுதல் இருந்தாலும் பணி கெடும்.” 1850. “நாம் செய்யத் தவறுகின்ற காரியங்களால் எத்தகைய இழப்புக்கள், கேடுகள் வருகின்றன என்று உய்த்துனரும் அறிவு இருந்தால் செய்ய வேண்டியன எதையும் செய்யாது இருக்கமாட்டோம்.” 1851. “தவறு”, ‘தப்பு’ என்று குற்றங்களையும் செய்யாமையையும் சொல்லுதல் கூடாது." 1852. “உடலிலிருந்து கழிவுகள் நீங்குவதில் ஏற்படும் சிக்கல் உடலைப் பிணிக்கு ஆளாக்கி விடுகிறது. அதுபோல, கெட்டப் பழக்கங்களிலிருந்து மீளத் தயங்குதல் பலவித இழப்புகளையும் இழிவுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.” 1853. “சிறுநீர், உடல் இயக்கத்தில் கெட்டுப் போனதுதான். அதுபோல் கெட்டப் பழக்கங்கள் வாழ்க்கையில் தோன்றுபவைதாம். அவை நற்பழக்கங் களாகத் தோன்றிக்கூடப் பின் காலப் போக்கில் கெட்டப் பழக்கங்களாகியிருக்கலாம்.” 1854. “பணத்தின் அருமை இன்றும் ஏழை களுக்குத் தெரியாது. கையில் ஐந்து ரூபாய் கொடுத்துப் பாருங்கள்.” 1855. “அன்னை இந்திராவின் ஆட்சிப் போக்கால் கடைக்கோடியில் நின்ற ஏழை மக்களுக்கு வாழ்வு கிடைத்தது.” 1856. “விசுவாசம் என்பதற்குரிய பொருளைக் கொச்சைப் படுத்தாமல் இருந்தால் ஒத்த மனத்துடன் பூரணமான ஒத்துழைத்தலையே குறிக்கும்.” 1857. “கூட்டுறவு இயக்க விழாவில், சுதந்திர தின விழாவில், குடியரசுத் தின விழாவில் ஆர்வம் காட்டாதவர்கள் எல்லாம் கட்சி அரசியல் விழாக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். அறியாமையே காரணம்.” 1858. “நாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்று சொன்னால் போதாது. ஒன்றாக இருப்பதற்குரிய காரணங்கள் வளர்ந்தாகவேண்டும்.” 1859. “அங்கீகரிக்கப் பெற்ற நிறுவனங்கள் சொல்வதை நம்பவேண்டும். அதைப் பொய் என்று சொல்லலாகாது. அப்படிச் சொன்னால் நிறுவனங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழக்கும். அரசின் மதிப்பு குறையும்.” 1860. “செயலற்ற நிர்வாக இயந்திரம் இருப்பதை விட அது இல்லாமல் இருப்பதே மேல்.” 1861. “எளியவர்கள் தொடக்க நிலையிலேயே யாதொன்றையும் கூறுவதில்லை. அதனால் எளிதில் களைய முடிவதில்லை.” 1862. “நிதியை, வரவு-செலவு செய்தால் மட்டும் போதாது. நிதி நிர்வாகம் வேண்டும்.” 1863. “நிதி நிர்வாகம் பொறுப்புள்ள ஒன்று.” 1864. “நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு நாமும் பொறுப்பு என்று உணர்தல் அவசியம். இப்படி உணர்தல் வேலைக்கு உந்து சக்தியாக உதவி செய்யும்.” 1865. “ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாலே போதும். நல்ல நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பார்கள்.” 1866. “பணம் இருப்பதைவிட, பெரிய ஆபத்து பணம் இருப்பதாகக் காட்டி நடந்து கொள்வது-” 1867. “செல்வம் உடைமையில் எளிமை, செல்வத்திற்குப் பாதுகாப்பு.” 1868. “தன்னிறைவுக்கு நிகரான வலிமை இல்லை.” 1869. “சொன்னதைச் செய்பவர்கள் கடைநிலை. அடி ஒற்றிச் செய்பவர்கள் மத்திமம். நினைப்பதை நினைந்து செய்து முடிப்பவர்கள் உத்தமம்.” 1870. “இந்திய நாட்டு ஏழைகளின் தோள்கள் மீது சுரண்டும் சக்தி, வலிமையாக உட்கார்ந்திருக்கிறது. சுரண்டும் சக்தியிடமிருந்து ஏழைகளை மீட்பது கடினம்.” 1871. “ஒழுங்கு முறைகளுக்கு சட்டம் இயற்றுவதற்காகச் சட்டசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலிலேயே சட்டத்திற்கு மரியாதை இல்லை.” 1872. “இன்று சட்டசபை உறுப்பினர் பதவி நாட்டுப் பற்றுக்கு உரியது அல்ல. அதிகார ஆசை, செல்வாக்குப் பெருமை ஆகியனவற்றுக்கேயாம்.” 1873. “இந்தியாவில் தேர்தலின் விலையும் உயர்ந்துவிட்டது.” 1874. “பிழைக்க மாட்டார் பிழைத்தாலும் வேலை செய்ய இயலாது என்று கூறுவதன் மூலம் எதிரியிடம் எவ்வளவு அச்சம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.” 1875. “ஆட்சி இயந்திரங்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கின்றன. இயங்குவதுதான் இல்லை.” 1876. “பொறுப்புள்ள வாழ்க்கை என்பது புனித மானது. அன்பை ஆழப்படுத்தும்; நட்பை உறுதிப் படுத்தும்; நலத்தைக் கூட்டும்; இன்பத்தை வளர்க்கும், அழிவைத் தடுத்து நிறுத்தும்.” 1877. “எந்த வகையான பிரிவினை எண்ணங்களும் குழந்தைகள் மனத்தில் பதியாவண்ணம் பார்த்துக் கொள்ளல் அவசியம்.” 1878. “நமது தலைமுறையில் நாம் கண்ட மாபெருந்தலைவர்களையடுத்து வந்த தலைமுறையினர் தலைவர்கள் பெயரை மட்டுமே உச்சரிக்கின்றனர். தலைவர்களுடைய கொள்கைகளை விட்டு விட்டனர்.” தலைவர்கள் பெயரைப் பயன்படுத்துவதற்குரிய காரணம் அத்தலைவர்கள் மக்களால் அங்கீகரிக்கப் பெற்றவர்கள். அத்தலைவர்களுக்கு மக்கள் வழங்கியுள்ள அங்கீகார நிழலிலேயே வாழ ஆசைப்படுகின்றனர்." 1879. “மக்கள் கூடித் தொழில் செய்யும் பொழுதெல்லாம் ஒன்றிரண்டு காவல்காரர்கள் அந்த இடத்தில் இருப்பது தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது.” 1880. “சாதி” உணர்ச்சி சராசரி மனிதனிடம் கூட இடம் பெற்று வருகிறது." 1881. “எந்த ஒரு பணிக்கும் திட்டமிடுதல் தவிர்க்க இயலாத தேவை.” 1882. “உழைப்பின் அடிப்படையில் ஊதியம் என்றால் பல அலுவலர்கள் பட்டினி கிடக்க வேண்டி வரும்.” 1883. “உழைத்தல், உழலுதல், என்ற சொற்களின் வழியில் பிறந்தது”உழைப்பு" என்ற சொல். அதாவது கடுமையான சோதனைகளைத் தாங்கி ஒரு பணியை முனைப்புடன் செய்து பயன் தரத்தக்க வகையில் முடித்தல் உழைப்பு ஆகும்." 1884. “தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது வாக்குகள் எண்ணி அறிவித்தப் பிறகு, கேட்கப்பெறும் செய்தியை வைத்தே முடிவு செய்யவேண்டும். அது வரையில் கேட்பது எல்லாம் அவரவர்களுடைய ஆசையையேயாம்.” 1885. “கிராமப்புறங்களில் புஞ்சையில் பாதிக்கு மேல் தரிசு. அதனாலேயே கிழக்கு இராமநாதபுரம் வறுமை நிறைந்த பிரதேசமாகக் காட்சியளிக்கிறது,” 1886. “உள்ளீடு இல்லாத மனிதர்கள் முரட்டுத் தனமாக நடந்துகொள்வார்கள். ஆனால் வஞ்சனை இருக்காது. உள்ளிடு உள்ளவர்களில் பலர் நாகரிகமாக நடந்துகொள்வர். ஆனாலும் வஞ்சனை இருக்கும்.” 1887. “வாழ்க்கையில் உன்னுடன் ஏதாவதொரு நோக்கத்தில் உடனுழைப்பவர்களாகப் பணியாளர்கள் அமைந்தால் நல்லது. வேலையை, வேலைக்காரர் என்ற மனப்பான்மையில் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு விதமான வேசைத்தனமாகும்.” 1888. “இன்னமும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை.” 1889. “புரட்சித் தலைவர் மதுவிலக்கைமட்டும் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் மக்களிடம் மிகப் பெரிய அன்பைப் பெற்றிருப்பார்.” 1890. “ஒத்துவராத செய்திகளில் தொடக்கத்திலேயே கண்டிப்பு இல்லாதிருத்தல் தவறு. பின் விளைவுகள் மோசமாகிவிடும்.” 1891. “செய்திகள், உண்மைக் கலப்புடையன. வதந்திகள்.பொய்மையும் புனைந்துரையும் கலந்தவை.” 1892. “அமெரிக்கா ஒதுங்கி விட்டாலே இலங்கைச் சிக்கல் தானே தீர்ந்துவிடும்.” 1893. “விலங்குகளுக்குள்ள உறவுணர்வு, மனிதர்களிடம் இல்லை.” 1894. “வேலை செய்பவர்கள் எல்லாம் உழைப்பாளிகள் அல்லர்.” 1895. “பலனைக் கணக்கிட்டுத்தான் உழைப்பின் மதிப்பைக் கண்டுபிடிக்க முடியும்.” 1896. “இந்திய வாக்கரளர்களிடம்”அகட விகடங்கள்" செல்லு படியாகவில்லை," 1897. “ராஜீவ் காந்தியின் பேச்சு, பழைய நாட்டுத் தலைவர்களை நினைவிற்குக் கொண்டுவருகிறது.” 1898. “ஒரு மாதமாக இரவு பகலாக உழைத்ததற்கு தமிழ் நாட்டு மக்கள் கொடுத்த பரிசு” இதுதான் என்றால் தமிழ் மக்களுக்காகவா உழைத்தார்கள்? தங்கள் கட்சிப் பதவிக்கு வரத்தானே உழைத்தார்கள். கட்சிக்கு உழைப்பதற்குப் பரிசு மக்கள் எப்படி தருவார்கள்?" 1899. “ஜனதாவில் சில உயர்ந்த மரபுகளுடைய பெரிய அரசியல் மேதைகள் உள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்திற்கு வராதது ஏமாற்றத்தைத் தருகிறது. பிரதமர் ராஜிவ் இவர்களை ராஜ்ய சபைக்கு வர ஏற்பாடு செய்தல் நல்லது.” 1900. “நமது நாட்டு மக்களுக்குப் பணத்தில் உள்ள ஆசையை, பொருள்கள் மீதாக மடை மாற்ற வேண்டும்.” 1901. “கிராமங்களின் வளம் முடங்கிக் கிடக்கிறது.” 1902. அரசியல் வெறியும் நல்லதல்ல. 1903. “நமக்கு வேண்டியவர்கள் நமது வளர்ச்சிக்குத் துணை செய்ய வேண்டுமே தவிர சலுகைகள் தரக்கூடாது.” 1904. “மிதமாக உண்டால், கடுமையாக உழைத்தால், ஆன்மா சமநிலையில் இருந்தால், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.” 1905. “நாம் நாகரிகமாக நடந்து கொள்வதால் தோற்கலாம். ஆனால் கொல்லைப்புற வெற்றிகள் தோல்வியையே தரும்.” FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.